[] []               நூல் : சிகப்பு வட்ட மர்மம்    ஆசிரியர் : சு.சோமு     அட்டைப்படம் : லெனின் குருசாமி    லெனின் குருசாமி மின்னஞ்சல் : guruleninn@gmail.com    மின்னூலாக்கம் : முஹம்மது ஜீஹைர்   மின்னஞ்சல் : zuhairsms7@gmail.com    வெளியீடு : https://freetamilebooks.com/   உரிமை : Public Domain பொதுக்கள உரிமை, எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   முன்னுரை   ஷெர்லாக் ஹோல்ம்ஸ் பற்றித் தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகம். அவர் ஒரு தனியார் உளவாளி. அவரது உடன் வேலை செய்பவர் வாட்சன். அவர் ஒரு மருத்துவர். இவர்கள் இருவரும் உண்மையான மனிதர்கள் என்று எண்ணுபவர்கள் கூட இருக்கிறார்கள். ஷெர்லாக் ஹோல்ம்ஸ் தன் கூர்மையான ஆராய்ச்சி அறிவால் ஒரு விஷயத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்து விடுவார். சின்னச் சின்ன விஷயங்களையும் உற்று நோக்கும் பண்பு கொண்டவர்.  பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற ஆங்கில எழுத்தாளர் சர் ஆர்தர் கானன் டாயில் என்று சொன்னால் மிகையாகாது. 1911 ஆம் ஆண்டு “The Strand Magazine” என்னும் ஆங்கில இதழில் வெளியான ஒரு சிறுகதை இது. வாடகைக்கு விடப்பட்ட தன் வீட்டின் குத்தகைதாரர் பற்றிய புகாரை ஹோல்ம்ஸ் விசாரிப்பது பற்றிய சிறு கதை.    சிகப்பு வட்ட மர்மம்   "திருமதி.வாரன், நீங்கள் கவலை கொள்வது போல் எதுவும் எனக்குத் தோன்றவில்லை. எனது காலம் பொன் போன்றது. அதை இதில் செலவழிக்க வேண்டிய அவசியம் என்ன என்று எனக்கு ஒன்றும் புரியவும் இல்லை. எனக்கு வேறு வேலை இருக்கிறது" என்று சொல்லி விட்டு ஹோல்ம்ஸ் தனது பெரிய வெட்டிப்புத்தகத்தின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதில் தான் சமீப காலமாகச் சேகரித்த துண்டுக் காகிதங்களை நேர்த்தியாக அடுக்கி வரிசைப்படுத்தி வைத்திருந்தார்.  ஆனால் நில உரிமையாளரான அந்தப் பெண்மணி மிக உறுதியாய் இருந்தாள். பெண்ணுக்கே உள்ள பிடிவாத குணத்தினாலும் அவள் அங்கிருந்து சிறிதும் நகரவில்லை.  "நீங்கள்தான் என் வீட்டில் குடியிருக்க ஒருவரை ஏற்பாடு செய்தீர்கள், திரு.பேர்டேல் ஹாப்ஸ் என்பவர்--"  "ஆஹ், அது ஒரு சின்ன விஷயம்"  "ஆனால் அதை அவர் மறப்பதே இல்லை. அடிக்கடி நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார். நீங்கள் எப்படி இருட்டினுள் வெளிச்சத்தை ஏற்படுத்தினீர்கள் என்பதை அவ்வளவு சிலாகிக்கிறார்.   எனக்கே இருட்டில் இருக்கும்போது அந்த சந்தேகம் வரும்போதெல்லாம் அவர் சொன்னதுதான் ஞாபகம் வரும். நீங்களும் அதை அனுபவித்துப் பார்த்தால்தான் உங்களுக்குப் புரியும்"  ஹோல்ம்ஸ் புகழ்ச்சிக்கு மயங்குபவர். அதே போல் அன்பொழுகப் பேசினாலும் அவரை எளிதாகக் கவர்ந்து விடலாம். அந்த இரண்டு விசைகளும் சேர்ந்து அவரை மெதுவாக அவரது இருக்கையில் வேறு வழியில்லாமல் அமர வைத்து விட்டது.  "அப்ப சரி. என்ன நடந்தது என்று சொல்லுங்கள். கேட்போம். புகையிலைக்கு நீங்கள் தடை போட மாட்டீர்கள்தானே. நான் புகைப்பேன். நன்றி, வாட்சன் - இந்த தீப்பெட்டி! உங்களைப் பார்த்தால் கொஞ்சம் கலவரப்பட்டவர் போல்தான் தெரிகிறது. உங்களது வாடகைக்காரர் வீட்டிலேயே அடைபட்டிருப்பதால் உங்களால் அவரைச் சந்திக்க முடியவில்லை என்று நீங்கள் கவலைப் படுகிறீர்கள். நானும் கூட அப்படித்தான். தொடர்ச்சியாக வாரக் கணக்கில் கூட என்னைச் சில நேரம் பார்க்க முடியாது."  "சந்தேகமே இல்லை. அனால் இது சற்று வித்தியாசமாக இருக்கிறது. எனக்கு பயமாகவும் இருக்கிறது, ஹோல்ம்ஸ். பயத்தினால் எனக்கு உறக்கமும் வருவதில்லை. காலையில் இருந்து இரவு வெகு நேரம் வரை அவரது வேகமான காலடிச் சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனால் அவரை நேரில் பார்க்க முடியாதது எனக்கு மிகவும் கலக்கமாகவே இருக்கிறது. எனது கணவரும் என்னைப் போலவேதான் மிகவும் பயந்து போய் இருக்கிறார். ஆனால் அவர் பகலில் வேலைக்குப் போய் விடுகிறார். இந்த பயத்தினால் எனக்கு ஓய்வே கிடைப்பதில்லை. அவர் எதனால் ஒளிந்து கொண்டிருக்கிறார். என்னதான் செய்து விட்டார்? அந்த பெண்ணை விட்டால் நான் தனியாகத்தான் இருக்கிறேன். என்னால் இதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை"  ஹோல்ம்ஸ் தனது நீண்ட மெலிதான விரல்களை அந்தப் பெண்மணியின் தோளில் அழுத்தினார். அவருக்குக் கிட்டத்தட்ட ஒரு மனோதத்துவ முறையில் குணமாக்கும் சக்தி இருந்தது அவர் பேசும்போது. அந்தப் பெண்ணின் கண்களில் இருந்த பயம் நீங்கி விட்டது. அவளது வெகுண்டிருந்த அவயங்கள் எல்லாம் கொஞ்சம் அமைதி அடைந்திருந்தன. அவர் சுட்டிக் காட்டிய ஆசனத்தில் அமர்ந்தாள்.  "நான் இந்த வழக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் எனக்கு அனைத்தும் தெரிந்தாக வேண்டும்." என்றார் அவர். "மெதுவாக யோசித்துச் சொல்லுங்கள். சின்ன விஷயம்தான் ரொம்பவும் முக்கியமானதாக இருக்கும். அவர் பத்து நாளைக்கு முன் வந்து பதினைந்து நாட்களுக்கான வாடகையை முன்பே கொடுத்து விட்டார் என்று சொல்லி இருந்தீர்கள்"  "அவர் என்னுடைய நிபந்தனைகள் என்னவென்று கேட்டார். நான் ஒரு வாரத்திற்கு 50 ஷில்லிங்குகள் என்று கூறினேன். வீட்டின் மேலே ஒரு அமரும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன."  "நன்று!"  "தனது விதி முறைகளுக்கு ஒத்துக் கொண்டால் தான் ஒரு வாரத்திற்கு 50 பவுண்டுகள் தருவதாகச் சொன்னார். நான் ஒரு ஏழைப் பெண்மணி ஐயா. என் கணவருக்கும் சொற்ப சம்பளம்தான். அதனால் அந்தப் பணம் எனக்குப் பெரிதாகப் பட்டது. அங்கேயே ஒரு 10 பவுண்ட் தாளை எடுத்து நீட்டினார். இந்த நிபந்தனைகளுக்கு ஒத்துக் கொண்டால் இன்னும் நீண்ட காலத்திற்கு இதே போல் கிடைத்துக் கொண்டே இருக்கும் என்றார். இல்லை என்றால் தான் கிளம்பிப் போய்க் கொண்டே இருப்பேன் என்றார்"  "நிபந்தனைகள் என்னென்ன?"  "அவருக்கு ஒரு சாவி கொடுத்து விட வேண்டும். அது பரவாயில்லை. வாடைக்காரர்கள் எப்பவும் கேட்பதுதான். அவரைத் தனியாக விட்டு விட வேண்டும். எப்பொழுதும் எந்த காரணத்திற்காகவும் அவரைத் தொந்திரவு செய்யக் கூடாது."  "நிச்சயம், அதில் எதுவும் வினோதமாக இல்லை"  "காரணம் இல்லை, ஐயா. இதெல்லாம் எல்லாக் காரணங்களுக்கும் அப்பாற்பட்டது போல் தெரிகிறது. அவர் பத்து நாட்களாய் அங்கு இருக்கிறார். நானோ எனது கணவரோ பெண்ணோ ஒரு முறை கூட அவரைப் பார்க்கவே இல்லை. அவரது வேகமான காலடிச் சத்தம் மட்டுமே காலை மாலை இரவு என்று கேட்டுக் கொண்டே இருக்கிறது. வந்த முதல் நாளிரவைத் தவிர வேறெப்போதும் வெளியே செல்லவே இல்லை."  "ஆக முதல் நாளிரவு வெளியே சென்றார் இல்லையா?"  "ஆமாம், சென்றவர் வெகு நேரம் கழித்தே வீட்டிற்குள் நுழைந்தார் நாங்கள் அனைவரும் உறங்கிய பின். இதைப் பற்றி வீட்டிற்குக் குடி வந்த பின்னாடிதான் தான் அவ்வாறு செய்வேன் என்று சொன்னார். அதனால் கதவில் உட்புறம் சட்டமிட வேண்டாம் என்று கூறி இருந்தார். அவர் நள்ளிரவு தாண்டி மாடியில் ஏறுவதை நான் கேட்டேன்"  "அவருக்கு உணவு?"  "அவர் அறையில் இருந்து மணி அடித்த உடனே அறைக்கு வெளியில் இருக்கும் ஒரு ஆசனத்தில் வைத்து விட வேண்டும் என்று குறிப்பிட்டுச் சொன்னார். அவர் முடித்தவுடன் திரும்பவும் மணி அடிப்பார். நாங்கள் வந்து அதே ஆசனத்தில் இருந்து எடுத்துக் கொள்வோம். அவருக்கு வேறு எதாவது தேவை இருந்தால், ஒரு சிறிய காகிதத்தில் அச்சுப்பதித்து வைத்து விடுவார்."  "அச்சுப்பதித்தா?"  "ஆமாம். பென்சிலால் காகிதத்தில் அச்சுப்பதித்து வைப்பார். ஒரே ஒரு வார்த்தை மட்டும். தேவைப்படும் பொருளைப் பற்றி. உங்களிடம் காண்பிக்க வேண்டி இதோ ஒன்று கொண்டு வந்திருக்கிறேன் சோப்பு என்று இருக்கிறது பாருங்கள். இதோ இன்னொன்று, தீப்பெட்டி என்று. இதுதான் முதல் நாள் காலையில் வைக்கப்பட்டது -- தின கெசட். நான் தினமும் அந்த தினசரி செய்தித்தாளை அவரது காலை உணவுடன் சேர்த்தே வைத்து விடுவேன்"  "வாட்சன்." என்று அழைத்தார் ஹோல்ம்ஸ். மிகவும் ஆர்வத்தோடு அந்தப் பெண்மணி கொடுத்த காகிதங்களைப் பார்த்துக் கொண்டே "இது நிச்சயம் கொஞ்சம் விநோதமாகத்தான் இருக்கிறது. தனிமைப்படுத்திக் கொள்வதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஏன் அச்சுப்பதிக்க வேண்டும். அது மிகவும் நேரமெடுக்கும் வேலை ஆச்சே. ஏன் எழுதிக் கொடுக்கக் கூடாது? இதன் காரணம் என்னவாக இருக்கும், வாட்சன்?"  "அவர் தனது கையெழுத்தை மறைக்க முயற்சி செய்திருக்கலாம்"  "ஆனால், ஏன்? தனது வீட்டின் உரிமையாளரிடம் தனது கையெழுத்தை மறைக்க வேண்டிய அவசியம் என்ன? அது, நீங்கள் சொல்வது போல் இருந்தாலும், ஏன் ஓரிரு சொற்கள். அதன் காரணம் என்ன, வாட்சன்?"  "என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை"  "அறிவார்த்தமான பேச்சுக்கு ஒரு இனிமையான அடித்தளம் போட்டுக் கொடுத்து இருக்கிறது. இந்த வார்த்தைகள் ஒரு அகலமான நுனி கொண்ட வயலட் நிற பென்சிலால் எழுதப்பட்டிருக்கிறது. எழுதி முடித்த பின் இங்கே முனையில் ஒரு பகுதி கிழிக்கப்பட்டிருக்கிறது. முதல் எழுத்தின் ஒரு சிறு பகுதியும் அதனோடு சென்று விட்டது. இது எதோ சொல்வது போல் இருக்கிறது அல்லவா, வாட்சன்"  "கவனமாய் இருப்பதை"  "மிகவும் சரியானது. அந்த மனிதனின் அடையாளம் அறிவிப்பது போல் எதோ ஒரு தடயம் ஒரு கைவிரல் ரேகை எதாவது இருந்திருக்கலாம். திருமதி.வாரன், நீங்கள் அந்த மனிதன் நடுத்தரமாக இருந்தார் என்று சொன்னீர்கள், மாநிறமாய், தாடி வைத்துக் கொண்டு. என்ன வயதிருக்கும்?"  "இள வயது, முப்பதைத் தாண்டாது"  "வேறு எதுவும் குறிப்புகள் இருக்கின்றனவா?"  "அவர் நன்றாக ஆங்கிலம் பேசினார். ஆனால் அவரது உச்சரிப்பில் இருந்து அவர் வெளி நாட்டில் இருந்து வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது."  "அவர் நல்ல உடை அணிந்திருந்தார், அல்லவா"  "ஆம், ஒரு நன்மகனைப் போன்று அருமையான உடை உடுத்தி இருந்தார். கருப்பான உடைகள். வெளியில் எதுவும் தெரியாது"  "அவர் பெயர் எதுவும் சொல்லவில்லையா?"  "இல்லை ஐயா"  "இதுவரை அவருக்கு எதுவும் தொலைபேசி அழைப்புகள், தபால்கள் வந்ததா?"  "இல்லை"  "நீங்களோ உங்கள் பெண்ணோ காலையில் அவரது அறைக்குச் செல்வதில்லையா?"  "இல்லை. அனைத்தையும் அவரே செய்து கொள்வார்"  "மிகவும் அருமையான விஷயம். அவரது பெட்டிகள் எல்லாம்?"  "அவரிடம் ஒரே ஒரு பெரிய பழுப்பு நிறத்தில் பை இருந்தது. வேறெதுவும் இல்லை."  "நமக்குத் தேவையான விவரங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த அறையில் இருந்து வேறெதுவும் வந்ததாகத் தோன்றவில்லையா? ஒன்று கூடவா இல்லை?"  அந்தப் பெண்மணி தனது பையில் இருந்து ஒரு கடித உறை ஒன்றை வெளியே எடுத்தாள். அதில் இருந்து இரண்டு எரிந்த தீக்குச்சிகள் இரண்டும் ஒரு சிகரட் துண்டும் எடுத்து மேசை மீது வைத்தாள்.  "இன்று காலையில் அவரது தட்டில் இவைகள் இருந்தன. நீங்கள் சிறிய பொருளில் இருந்து கூட பெரிய விஷயங்களைக் கறக்க வல்லவர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் தான் இவற்றைக் கொண்டு வந்தேன்"  ஹோம்ஸ் தன் தோள்களைக் குலுக்கினார்.  "இதில் ஒன்றும் இல்லை." என்றார் அவர். "தீக்குச்சிகள் சிகரெட்டைப் பற்ற வைக்கப் பயன்பட்டிருக்கின்றன. அதன் எரிந்த நுனி சிறிதாக இருப்பதிலேயே அது நன்றாகப் புலப்படுகிறது. ஒரு சுருட்டோ பைப்போ பற்ற வைக்க அரை தீக்குச்சி செலவாகும். ஆனால் இந்த சிகரட் துண்டு விநோதமாய் இருக்கிறது. அவருக்கு மீசையும் தாடியும் இருந்தது என்று சொன்னீர்கள் அல்லவா?"  "ஆமாம், ஐயா"  "அதுதான் எனக்குப் புரியவில்லை. இதை வைத்துப் பார்க்கும்போது தாடியும் மீசையும் இல்லாதவர்தான் இதைப் புகைத்திருக்க முடியும். ஏன், வாட்சன், உங்களைப் போன்ற சிறு மீசை உள்ளவர்களைக் கூட அது சுட்டு விடுமல்லவா."  "ஒரு பிடிப்பான்?" என்று நான் சொன்னேன்.  "இல்லை, இல்லை. முனை மழுங்கி இருக்கிறது. திருமதி.வாரன், அவரது அறையில் இரண்டு பேர் இருக்க வாய்ப்பில்லையா?"  "இல்லை, ஐயா. அவர் மிகவும் கம்மியாகவே சாப்பிடுவார். அதைச் சாப்பிட்டு எப்படித்தான் உயிர் வாழ்கிறாரோ என்று கூட நான் எண்ணியதுண்டு"  "நன்று. இன்னும் சில விவரங்கள் வரும் வரை நாம் காத்திருப்பதுதான் சிறந்தது. உங்களைப் பொறுத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. உங்களது வாடகை வந்து விட்டது. அவரோ தொந்திரவு செய்யும் ஆளும் இல்லை. கொஞ்சம் விநோதமானவர் என்று நிச்சயம் சொல்லலாம். அவர் நன்றாகப் பணம் செலுத்தி விடுகிறார். அவர் தன்னைக் காட்டிக் கொள்ளக்கூடாதென்று நினைக்கிறார். அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அவரது அந்தரங்கத்தில் நாம் மூக்கை நுழைக்க முடியாது, அவரால் எதாவது பிரச்சினை என்று வரும் வரை. நான் இந்த வழக்கை எடுத்துக் கொண்டு விட்டேன். அது என் கண்களில் இருந்து தப்ப முடியாது. வேறு எதாவது புதிதாய் நடந்தால் உடனடியாக எனக்குத் தெரிவியுங்கள். என் உதவி தேவைப்பட்டால் நிச்சயம் நான் செய்வேன்"  "இந்த வழக்கில் ஒரு சில ஆர்வமூட்டுகிற செய்திகள் இருக்கின்றன, வாட்சன்." என்று அந்தப் பெண்மணி கிளம்பியதும் சொல்ல ஆரம்பித்தார். "அவை நிச்சயம் அற்பமானதாக இருக்கலாம் - ஒருவனின் பைத்தியக்காரத்தனம். இல்லையேல் வெளியில் தெரிவதை விட ஆழமானதாகவும் இருக்கலாம். முதன்முதலாய் அப்பட்டமாய்த் தெரிவது என்னவென்றால், வீட்டில் இப்பொழுது இருக்கும் மனிதன் அவர்களை ஏற்கெனவே சந்தித்த மனிதனாய் இருக்க வாய்ப்பில்லை."  "ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?"  "இந்த சிகரட் முனையைத் தவிர்த்து, அறை எடுத்தவுடனேயே அவன் ஒரே ஒரு முறை மட்டுமே வெளியே சென்றிருக்கிறான். அவன் மீண்டும் வந்தான்- அல்லது வேறு யாரோ வந்திருக்கிறார்கள். எல்லோரும் உறங்கிய பின். வெளியே சென்றவன்தான் உள்ளே வந்தான் என்பதற்கு நமக்கு எந்தவித சாட்சியும் இல்லை. இருந்தும், அறை எடுத்தவன் நன்றாக ஆங்கிலம் பேசக் கூடியவன். ஆனால், இன்னொருவன், தீக்குச்சிகள் என்றிருக்க வேண்டிய இடத்தில் தீக்குச்சி என்று அச்சிட்டிருக்கிறான். அந்த வார்த்தையும் ஒரு அகராதியில் இருந்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அது பெயர்ச் சொல்லைக் கொடுத்திருக்கும். பன்மையைக் கொடுத்திருக்காது. சுருக்கமாக எழுதியது தனது ஆங்கில அறிவின்மையை மறைக்க. தங்கி இருப்பவர்கள் இடம் மாற்றிக் கொள்ள."  "ஆனால் என்ன காரணத்திற்காக?"  "ஆஹ்! அதுதான் நமது பிரச்சினை. புலனாய்வு செய்ய எனக்குத் தெரிந்து ஒரு எளிதான வழி இருக்கிறது." லண்டனில் வெளியாகும் பத்திரிக்கைகளில் இருந்து தினமும் தான் சேகரித்த வாசகர்களின் சொந்த பிரச்சினைக்குத் தீர்வு சொல்லும் ஆசிரியர்களின் அறிவுரைகள் கொண்ட பிரமாண்டமான தொகுப்பைக் கைகளில் எடுத்தார். "எவ்வளவு கூக்குரல்கள், சலுகைகள், முனகல்கள், உளறல்கள். எவ்வளவு தனிமையான குப்பைப்பை நிரம்பும் அளவு நிகழ்வுகள். அசாதாரணமான நிகழ்வுகள் பற்றிப் படிக்கும் ஒரு மாணவனுக்கு நிச்சயம், இது ஒரு விலைமதிப்பற்ற வேட்டைக்களம். அவன் தனியாளாய் இருக்கிறான். அவனைக் கடிதத்திலும் ஒரு முழுமையான மர்மத்தை உடைக்காமல் அணுக முடியாது. வேறு எப்படித்தான் செய்திகளும் தகவல்களும் அவனை அடைய முடியும் எதுவுமே இல்லாமல். ஒரே ஒரு வழிதான். அது, செய்தித்தாள்களின் விளம்பரம். வேறெந்த வழியும் இல்லை. நல்ல வேளையாக நாம் கவனிக்க வேண்டியது ஒரே ஒரு நாளிதழ் மட்டுமே. இங்கே தின கெசட் நாளிதழின் போன இரு வாரங்களின் தொகுப்பு இருக்கிறது. 'இளவரசனின் பனிச்சறுக்குக் கழகத்தில் கருப்புக் கழுத்துப்பட்டிகை அணிந்த பெண்' -- அதை விட்டு விடலாம். 'ஜிம்மி நிச்சயம் தன் அம்மாவின் இதயத்தை உடைக்கமாட்டாள்' - இது நிச்சயம் சம்பந்தமில்லாதது. 'பிரிக்ஸ்டன் பேருந்தில் மயக்கமுற்ற பெண்' இவளும் என்னைக் கவரவில்லை. 'தினமும் என் இதயம் உருகுகிறது' - உளறல், வாட்சன். கட்டுப்படுத்த இயலாத உளறல். ஆஹ்! இது கொஞ்சம் ஒத்து வரும் போல் தோன்றுகிறது. கேளுங்களேன். 'பொறுமையாய் இருங்கள். தொடர்புக்குச் சரியான வழிமுறை நிச்சயம் கண்டுபிடித்து விடலாம். அதுவரை இதே பத்தியில். ஜீ.' அது வாரனின் வீட்டிற்கு வாடகைக்கு வந்த இரண்டாவது நாள். அது கொஞ்சம் நம்பும்படியாக இருக்கிறது. இல்லையா? அந்த மர்ம மனிதனுக்கு ஆங்கிலம் தெரியும்.   அவனுக்கு அதை அச்சுப் பதிக்கத் தெரியாத போதிலும். மீண்டும் அதன் தொடர்ச்சி இருக்கிறதா என்று பார்க்கலாம். ஆம், இதோ மூன்று நாட்கள் கழித்து. 'நான் வெற்றிகரமாக ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறேன். பொறுமை, விவேகம். மேகங்கள் விலகும். ஜீ.' பின் ஒரு வாரமாக ஒன்றும் இல்லை. அதன் பின் திட்டவட்டமாக ஒன்று வருகிறது. 'பாதை தெளிவாகிறது. எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் செய்தி அனுப்பு சங்கேத வார்த்தைகள் ஞாபகம் இருக்கட்டும். ஒரு எ இரண்டு பி, அதே போல. மீண்டும் தொடபு கொள்வேன். ஜீ.' இதுதான் நேற்றைய செய்தி. இன்றைய செய்தி ஒன்றும் இல்லை. இது அனைத்தும் திருமதி.வாரனின் வீட்டில் இருப்பவனுக்கு நன்றாகப் பொருந்துகிறது. நாம் கொஞ்சம் பொறுமையாக இருந்தால், வாட்சன், இது இன்னும் கொஞ்சம் தெளிவாகும் என்று தோன்றுகிறது"  அது நிரூபிக்கப்பட்டது. ஏனெனில் எனது நண்பன் காலையில் கணப்படுப்பிற்கு முன் மன நிறைவான ஒரு புன்னகையோடு நின்று கொண்டிருந்தார்.  "இது எப்படி, வாட்சன்?" என்று கத்தினார் அன்றைய செய்திதாளைக் கையில் எடுத்துக் காட்டியபடி. "'பெரிய சிவப்பு வீடு வெள்ளைக் கற்கள் முன்புறம். மூன்றாவது மாடி. இரண்டாவது சாளரம் இடது. கதிரவன் மறைந்த பின். ஜா.' இது போதும். காலை உணவிற்குப் பின் நாம் திருமதி.வாரன் வீட்டிற்கருகில் சென்று கவனிக்க வேண்டும். ஆஹ். திருமதி.வாரன், இந்தக் காலை வேளை என்ன செய்தியுடன் வந்திருக்கிறீர்கள்?"  எங்கள் கட்சிக்காரர் சட்டென்று ஆக்ரோஷமாக அறையில் நுழைந்தார். அதைப் பார்த்தவுடன் தெரிந்து விட்டது. அவர் எதோ ஒரு புதிய முக்கியமான செய்தியுடன் வந்திருக்கிறார் என்று.  "இது ஒரு காவல்துறை சம்பந்தப்பட்ட விஷயம், திரு.ஹோல்ம்ஸ்." என்று கத்தினாள். "இதற்கு மேலும் பொறுமையாய் இருக்க முடியாது. அவன் இன்றே வீட்டைக் காலி செய்து கிளம்ப வேண்டும். நான் நேரடியாக அவனிடம் சென்று சொல்லி இருப்பேன். ஆனால் உங்களிடம் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் என்று நினைத்தே இங்கு வந்தேன். ஆனால் நான் பொறுமையின் விளிம்பில் நிற்கிறேன். அதுவும் என் கணவனைத் தாக்கும் போது--"  "திரு.வாரன் தாக்கப்பட்டாரா?"  "அவர் முரட்டுத்தனமாக நடத்தப்பட்டார்"  "யார் அதைச் செய்தது?"  "ஆஹ்! அதைத்தான் கண்டுபிடிக்க வேண்டும். அது இன்று காலை நடந்தது ஐயா. டோட்டன்ஹாம் நீதி மன்ற சாலையில் உள்ள மார்ட்டன் மற்றும் வேலைட் என்னும் நிறுவனத்தில் நேரத்தை ஆவணப்படுத்துபவராக வேலை செய்கிறார். அவர் வீட்டில் இருந்து காலை ஏழு மணிக்கே கிளம்பி ஆக வேண்டும். இன்று காலை அவர் ஒரு பத்து அடி கூட நடந்திருக்க மாட்டார். அப்பொழுது அவர் பின்னால் இருவர் வந்து போர்வையைப் போர்த்தி ஒரு வாடகைக்காரில் அவரை ஏற்றிக் கடத்திச் சென்று விட்டனர். ஒரு மணி நேரம் அவரைக் காரில் சுற்றி விட்டு வெளியே தள்ளி விட்டுச் சென்று விட்டனர். மிகவும் கலவரப்பட்டுக் கட்டுண்டு கிடந்ததால் அதன் பின் அந்தக் காருக்கு என்ன ஆனது என்று அவரால் சொல்ல முடியவில்லை. நினைவு வந்த பின் எழுந்து பார்த்தால் அவர் காம்ப்ஸ்டேட் ஹீத் என்னும் இடத்தில் இருந்திருக்கிறார். அங்கிருந்து ஒரு பேருந்தில் ஏறி வீட்டிற்கு வந்து விட்டார். இப்பொழுது வீட்டில் இருக்கிறார். நான் உடனே உங்களுக்குச் செய்தி சொல்லக் கிளம்பி வந்து விட்டேன்"  "மிகவும் சுவாரசியமாக இருக்கிறது." என்றார் ஹோல்ம்ஸ். "அவர்களது தோற்றங்களை அவரால் அடையாளம் கண்டு பிடிக்க முடிந்ததா? அவர்கள் எதாவது பேசினார்களா?"  "இல்லை, அவர் முற்றிலும் மயக்கம் அடைந்து விட்டார். எதோ ஒரு மாயக் கரம் அவரைத் தூக்கியது போலவே இறக்கி விட்டது மட்டுமே அவருக்குத் தெரிந்திருக்கிறது. இருவர் குறைந்தது இருக்க வேண்டும். இல்லையேல் மூன்று"  "இது உங்கள் வீட்டில் இருப்பவர்தான் செய்தார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?"  "நாங்கள் அந்த வீட்டில் பதினைந்து ஆண்டுகளாக இருக்கிறோம். இது போல் எப்போதும் நடந்ததில்லை. பொறுத்தது போதும் என்று முடிவெடுத்து விட்டேன். பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. இன்றே அவனை வீட்டை விட்டு வெளியேற்றினால்தான் நிம்மதி."  "கொஞ்சம் பொறுமையாய் இருங்கள் திருமதி.வாரன். அவசரப்பட்டு எதுவும் செய்து விடாதீர்கள். முதலில் தெரிந்ததை விட இது மிகவும் முக்கியமானதாக இருக்கும் போல் தெரிகிறது என்று நான் நினைக்கிறேன். உங்களது வாடகைக்காரருக்கு எதோ ஒரு ஆபத்து இருக்கிறது என்பது மட்டும் நன்றாகப் புரிகிறது. அவரது எதிரிகள் உங்கள் வீட்டுக்கு அருகிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. பனி மூட்டத்தில் உங்கள் கணவரைத் தவறுதலாகக் கடத்தி விட்டார்கள். தங்கள் தவறு புரிந்து விட்டதால் அவரை உடன் விட்டு விட்டார்கள். அது தவறுதலாக நடக்கவில்லை என்றால் அவருக்கு இந்நேரம் என்ன ஆகி இருக்கும் என்று சொல்ல முடியாது."  "சரி. நான் என்னதான் செய்வது, திரு.ஹோல்ம்ஸ்?"  "உங்களது வீட்டில் குடி இருப்பவரைக் காண வேண்டும் என்று மிக ஆவலாய் இருக்கிறது திருமதி.வாரன்"  "கதவை உடைக்காமல் அது எப்படிச் சாத்தியம் என்பது எனக்குப் புரியவில்லை. அவர் நான் தட்டை வைத்துத் திரும்பியவுடன் கதவைப் பூட்டி விடுகிறார்."  "அவர் அந்தத் தட்டை எடுத்த பின் தான் உள்ளே செல்ல முடியும் அல்லவா. நாம் மறைந்திருந்து அவரைக் கவனிக்கலாம்."  அந்தப் பெண்மணி ஒரு கணம் யோசித்தாள்.  "நன்று ஐயா. அதன் எதிரில் ஒரு சின்ன அறை இருக்கிறது. என்னால் ஒரு இரு விழி நோக்காடியை ஏற்பாடு செய்ய முடியும். அதன் பின் நீங்கள் அந்த அறையில் இருந்து கவனிக்கலாம்"  "அபாரம்!" என்று கத்தினார் ஹோல்ம்ஸ். "எப்பொழுது அவர் மதிய உணவு சாப்பிடுவார்?"  "ஒரு மணிக்கு"  "நானும் வாட்சனும் சரியான நேரத்திற்கு அங்கு வந்து விடுவோம். இப்போதைக்கு நீங்கள் செல்லலாம்"  நண்பகல் 12.30 மணி அளவில் பெரிய ஓர்மீ சாலையில் உள்ள அவரது வீட்டின்- அது ஒரு பெரிய மஞ்சள் நிற கற்களால் கட்டிய மாளிகை- மாடிப்படியில் இருந்தோம். பிரித்தானிய அருங்காட்சியகத்தின் வட கிழக்கு வாயிலின் அருகே உள்ள ஒரு சிறிய சந்தில் அமைந்துள்ளது அந்த வீடு. சாலையின் ஒரு முனையில் அமைந்துள்ளதால் அதில் இருந்து ஹோவி தெருவில் உள்ள ஆடம்பரமான வீடுகளெல்லாம் தெரிந்தன. ஒரு நமட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே வரிசையாய் அமைந்திருந்த வீடுகளில் ஒன்றைச் சுற்றிக் காட்டினார். அது நம் கண்களில் படாமல் போகவே போகாது. அப்படி அது மேல் எழும்பி இருந்தது.  "அங்கே பாருங்கள், வாட்சன்" என்றார் அவர். பெரிய சிவப்பு வீடு, கற்களால் கட்டிய முகப்புடன்.அங்கு சமிக்ஞை கொடுக்கும் நிலையமும் இருக்கிறது. நமக்கு இடமும் தெரிந்து விட்டது. குறியீடும் தெரியும். அதனால் நமது வேலையும் எளிதாகி விட்டது. அந்த வீட்டின் சாளரத்தில் 'வாடகைக்கு' என்ற பலகையும் தொங்குகிறது. அது யாருமில்லாத வீடு என்றும் இந்தக் குழுவினர் உள்ளே சென்று வர வழி வகை தெரிந்த வீடு என்பதும் தெளிவாகப் புரிகிறது. திருமதி.வாரன், இப்பொழுது என்ன செய்யலாம்?"  "நான் அனைத்தையும் தயாராக வைத்துள்ளேன். நீங்கள் இருவரும் காலணிகளைக் கழற்றி விட்டு மேலே வந்தால் சரியாக இருக்கும்"  அந்தப் பெண்மணி ஏற்பாடு செய்த அறை மிகவும் அருமையான மறைவிடமாக இருந்தது. அந்தக் கண்ணாடியும் எதிரில் இருக்கும் அறைக் கதவு துல்லியமாகத் தெரியும் அளவு சரியான கோணத்தில் அமைந்திருந்தது. நாங்கள் அமர்ந்து தயார் நிலைக்கு வந்த சிறிது நேரத்தில் அந்த அம்மா கிளம்பியவுடன் அவர் தனது சாப்பாட்டிற்காக மணி அடித்தார். இப்பொழுது அந்தப் பெண் சாப்பாட்டுத்தட்டை எடுத்துக் கொண்டு மேலே வந்தார்கள். பூட்டிய கதவின் முன் அதை வைத்தார்கள். அதன் பின் பெருத்த ஓசையுடன் அவர்கள் கீழே சென்றார்கள். நாங்கள் ஒளிந்து கொண்டே கண்ணாடியின் மேல் பார்வை பதித்த வண்ணம் இருந்தோம். அந்தப் பெண்ணின் காலடிச் சத்தம் மறைந்தவுடன் கதவைத் திறக்க சாவியைத் திருகும் சத்தம் கேட்டது. கைப்பிடி சுழன்றது. கதவைத் திறந்து இரண்டு மெல்லிய கரங்கள் ஆசனத்தின் மேலிருந்த தட்டை எடுத்தன. சில நிமிடங்களில் அது உடனே திருப்பி வைக்கப்பட்டது. அப்பொழுது நான் அந்த கருமையான அழகான பயந்த முகத்தைப் பார்த்தேன் சிறு பெட்டி போன்ற அறையின் குறுகிய ஓட்டையின் வழியே. அதன் பின் கதவு சாத்தப்பட்டது சாவி மறுமுறை திருகியது. அதன் பின் அமைதி தவழ்ந்தது. ஹோல்ம்ஸ் என் சட்டையைப் பிடித்து இழுத்தார். அதன் பின் நாங்கள் இருவரும் படியின் வழியாகக் கீழே செல்ல ஆரம்பித்தோம்.  "நான் சாயந்திரம் செய்தி சொல்கிறேன்." என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் சொன்னார் ஹோல்ம்ஸ். "இதை நமது வீட்டில் ஆலோசிப்பதுதான் சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன், வாட்சன்"  "நான் நினைத்தது சரி என்றே தோன்றுகிறது, நீங்களும் கண்டது போல்." என்று சொன்னார் தனது சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டே. "வாடைக்காரர்கள் தங்கும் வீட்டை இடம் மாற்றுகிறார்கள். ஆனால் அது ஒரு பெண்மணியாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதுவும் சாதாரண பெண்மணி அல்ல, வாட்சன்"  "அவள் நம்மைப் பார்த்து விட்டாள்."  "ஆம், அது அவளைக் கலவரப்படுத்தி விட்டது. நிச்சயமாக. பொதுவாக அனைத்து நிகழ்வுகளும் பொருந்தி வருவது போல் தோன்றுகிறது. இல்லையா? இருவர் ஒரு பெரிய ஆபத்தில் இருந்து தப்பிக்க வேண்டி லண்டனில் மறைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எவ்வளவு தூரம் மறைந்து வாழ்கிறார்கள் என்பதே அவர்கள் எவ்வளவு பெரிய ஆபத்தில் சிக்கி இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. அந்த ஆணுக்கு வெளியில் வேலை இருப்பதால் அவளை வீட்டில் பாதுகாப்பாக விட்டுக் கிளம்ப வேண்டிய சூழலில் இருக்கிறான். இது சுலபமான விஷயம் அல்ல. ஆனாலும் அதை அவன் தனது சுய புத்தியுடனே சமாளித்து விட்டான். சாப்பாடு கொடுக்கும் அந்த வீட்டின் உரிமையாளருக்கே தெரியாமல் மறைத்து விடும் அளவு திறம்படச் செய்து விட்டான். அச்சுப்பதித்தது தனது பாலினம் கையெழுத்தில் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக என்று இப்பொழுது தெரிந்து விட்டது. அந்த ஆணும் அவளுக்கு அருகில் இருக்க முடியாது. ஏனெனில் அவர்களது எதிரிகள் அவனைத் தொடர்ந்து வந்து விடுவார்கள். ஆவலுடன் நேரடித் தொடர்பு செய்ய முடியாததால் செய்தித்தாள் மூலம் தகவல் பரிமாறிக் கொள்கிறார்கள். இதுவரை நடந்தது எல்லாம் புரிகிறது."  "ஆனால் எதற்காக இவை எல்லாம் நடக்கின்றன?"  "ஆஹ்! வாட்சன். எப்பொழுதும் போல் நடைமுறையான விஷயம்தான். இதன் அடிநாதம் என்ன? "திருமதி.வாரனின் கற்பனையான பிரச்சினையை நாம் தொடர்ந்து செல்லச் செல்ல இப்பொழுது விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். இது ஒன்றும் சாதாரண காதல் ஜோடிகள் வீட்டை விட்டு ஓடி வந்த கதையல்ல. ஆபத்துக்கான அறிகுறி தெரிந்ததும் அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்தாய் அல்லவா. நமக்கு அந்த வீட்டு உரிமையாளர் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் பற்றியும் தெரியும். அதுவும் அந்த வீட்டில் குடியிருப்பவரை நோக்கித்தான் தொடுக்கப்பட்டது என்றும் நன்றாக விளங்குகிறது. இவ்வகையான எச்சரிக்கைகளும் மறைந்து வாழ்வதற்கு இவ்வளவு முயற்சிகள் நடப்பதும் ஒரே ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்துகின்றன. இது ஒரு வாழ்வா சாவா என்ற போராட்டம். திரு.வாரன் தாக்கப்பட்டதில் இருந்து பகைவர்களுக்கு இந்த வீட்டில் ஆணுக்குப் பெண்ணை மாற்றி இருக்கிறார்கள் என்ற விவரமும் இன்னும் தெரியவில்லை என்றுதான் படுகிறது. இது மிகவும் சிக்கலானது மேலும் ஆர்வமூட்டுவதாயும் இருக்கிறது, வாட்சன்"  "நீங்கள் ஏன் இதில் இன்னும் முன்னேறிச் செல்ல நினைக்கிறீர்கள். இதில் இருந்து உங்களுக்கு என்ன கிடைத்து விடப் போகிறது?"  "என்னவா? கலையைக் கலைக் கண்களால்தான் பார்க்க வேண்டும், வாட்சன். நீங்களும் மருத்துவம் கற்கும் போது நோயாளிகளிடம் இருந்து பணம் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டா இருந்தீர்கள்?"  "அது எனது படிப்பிற்காக, ஹோல்ம்ஸ்"  "படிப்பு என்றுமே முடிவில்லாதது, வாட்சன். அது ஒரு தொடர்ச்சியான பாடங்கள். அதன் முடிவில் சிறந்ததே கிடைக்கும். இது எனக்குப் போதனை தரக்கூடிய ஒரு வழக்கு. இதில் பணமோ கவுரவமோ கிடைக்கப் போவதில்லை. இருந்தாலும் இதை நான் சரி செய்ய வேண்டும். மாலைக்குள் ஒரு படி நமது புலனாய்வில் நாம் முன்னேறி இருப்போம்."  நாங்கள் திருமதி.வாரனின் அறைக்குத் திரும்பி இருந்தபோது லண்டனின் இருள் நிறைந்த ஒரு குளிர் கால மாலைப் பொழுது சாம்பல் நிறமுடைய சாளரத்தின் திரைச் சீலையாகச் சுருங்கிப் போய் இருந்தது, மாறுதலற்ற ஓர் இறந்த நிறம், எரிவாயு விளக்கினால் ஏற்பட்ட நிழல்கள் மற்றும் தெளிவான மஞ்சள் நிற சதுர வடிவான சாளரத்தினால் மட்டுமே குறுக்கிடப்பட்டது. அவரது வீட்டின் இருட்டான அந்த அறையில் இருந்து நாங்கள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தபோது இன்னொரு மங்கலான விளக்கு இருளைக் கிழித்துக் கொண்டு மேலிருந்து ஒளிர்ந்தது.  "அந்த அறையில் ஆள் நடமாட்டம் தெரிகிறது!" என்றார் ஹோல்ம்ஸ் அடிக்குரலில். அவரது மெலிந்த ஆர்வமுள்ள முகம் சாளரத்தின் சட்டத்தில் பதிந்தது. "ஆம், நான் அவரது நிழலைப் பார்க்க முடிகிறது. அதோ மீண்டும் வருகிறான்! அவனது கையில் ஒரு மெழுகுவர்த்தி இருக்கிறது.   இப்பொழுது அவன் குறுக்கே பார்த்தான். அவளும் பார்க்கிறாளா என்று அவன் உறுதிப் படுத்த வேண்டுமல்லவா. அவன் இப்பொழுது ஒளியைப் பளிச்சிட வைக்க ஆரம்பித்தான். அவனது செய்தியையும் குறித்துக் கொள்ளுங்கள், வாட்சன். அதன் பின் நாம் அதை உறுதிப் படுத்திக் கொள்ளலாம். ஒரே ஒரு பளிச்சிடல் - அது நிச்சயம் 'ஏ' தான். அதன் பின், நீங்கள் எத்தணை கணக்கு வைத்திருக்கிறீர்கள். இருபது. நானும் அதேதான் எண்ணினேன். அதன் பொருள் 'டீ'. 'ஏ டீ' புரிந்து கொள்ளக் கூடியதுதான். இன்னுமொரு 'டீ'. இது நிச்சயம் அடுத்த வார்த்தையின் தொடக்கமாக இருக்கும். இப்பொழுது 'டீ ஈ என் டீ ஏ'. அதன் பின் நீண்ட மவுனம். நிச்சயம், இது மட்டுமே இருக்க முடியாது, வாட்சன். 'ஏடீடீ ஈ என் டீ ஏ' என்பதில் எந்தவிதப் பொருளும் இல்லையே. அதை மூன்று சொற்களாக 'ஏ டீ, டீ ஈ என், டீ ஏ' எடுத்துக் கொண்டாலும் ஒத்து வராது. கடைசிச் சொல்லான 'டீ ஏ' வை ஒருவர் பெயரின் எழுத்துச் சுருக்கமாக எடுத்துக் கொண்டாலொழிய அதுவும் சரியாக இருக்காது. மீண்டும் ஆரம்பித்து விட்டான். என்னவாக இருக்கும்? ''ஏ டீ, டீ ஈ--' ஏன் திரும்பவும் அதே செய்தி. ஆர்வமாக இருக்கிறது, வாட்சன். மிகவும் ஆர்வமாக இருக்கிறது. திரும்பவும் ஆரம்பித்து விட்டான். 'ஏ டீ' - ஏன் மீண்டும் அதே எழுத்துக்கள் மூன்றாவது முறையும். 'ஏ டீ, டீ ஈ என், டீ ஏ' மூன்று முறை. இன்னும் எத்துணை முறை தொடர்வானோ? இல்லை, இதுதான் இறுதியானது போல் தெரிகிறது. அவன் சாளரத்தின் கதவைப் பூட்டி உள்ளே சென்று விட்டான். இதில் இருந்து எதாவது புரிகிறதா? வாட்சன்."  "சங்கேதச் செய்தி, ஹோல்ம்ஸ்"  எனது நண்பர் புரிந்து விட்டது போல் நமட்டுச் சிரிப்பு சிரித்தார். "இது ஒன்றும் அவ்வளவு தெளிவற்ற சங்கேதச் செய்தி இல்லை, வாட்சன்" என்றார். "ஏன்? நிச்சயமாக அது இத்தாலிய மொழி. அவ்வளவுதான். அதில் உள்ள 'ஏ' அது ஒரு பெண்ணிற்கான செய்தி என்பதைத் தெளிவுபடுத்துகிறது.'கவனம், கவனம், கவனம்' எப்படி, வாட்சன்."  "நெற்றிப் பொட்டில் அடித்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்"  "அதில் சந்தேகமே இல்லை. அது ஒரு மிகவும் அவசரமான செய்தி. மூன்று முறை அனுப்பப்பட்டிருப்பதில் இருந்தே அதன் அவசரம் தெரிகிறது. ஆனால் எதில் கவனம் தேவை? கொஞ்சம் பொறுங்கள், அவன் மீண்டும் சாளரத்தின் அருகில் வருகிறான்."  மீண்டும் பதுங்கிக் கொண்டு வரும் மனிதனின் மங்கிய நிழல் ஒன்று தெரிந்தது. செய்திப் பரிமாற்றம் தொடங்கியதால் சாளரத்தில் இருந்து விளக்கின் வேகமான வெளிச்சக் கீற்று மின்னத் தொடங்கியது. இப்பொழுது மிக வேகமாக வரத் துவங்கியது. அவ்வளவு வேகமாக வந்ததால் அதைப் பின்பற்றவே இயலவில்லை.  "'பி ஈ ஆர் ஐ சி ஓ எல் ஓ' என்றால் என்ன வாட்சன்? ஆம் அது ஆபத்து, இல்லையா? ஆம், ஜோவ் என்பவனால் அனுப்பப்படும் அபாய எச்சரிக்கை. திரும்பவும் அனுப்புகிறான். 'பி ஈ ஆர் ஐ', ஆஹ், என்னதான் நடக்கிறது அங்கே?"  விளக்கு சட்டென்று அணைந்து விட்டது. சாளரத்தின் வெளிச்சச் சதுரம் மறைந்து விட்டது. அந்தப் பெரிய வீட்டின் மூன்றாவது தளம் ஒரு கறுப்புத் துணி சுற்றியது போல் காணப்பட்டது பல அடுக்குகள் கொண்ட ஒளிரும் சாளரங்களுக்கு மத்தியில். அந்த இறுதியான எச்சரிக்கை அழுகை திடீரென்று இடையில் நிறுத்தப்பட்டது. எப்படி, யாரால்? அதே சிந்தனை எங்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் ஏற்பட்டது. ஹோல்ம்ஸ் ஒளிந்திருந்த இடத்தில் இருந்து சட்டென்று எழுந்தார்.  "இது மிகவும் தீவிரமானது, வாட்சன்." என்று கத்தினார். "எதோ ஒரு பெரிய அசம்பாவிதம் அங்கே நடந்து கொண்டிருக்கிறது. அப்படியொரு செய்தி ஏன் சட்டென்று நிற்க வேண்டும். நான் உடனே ஸ்காட்லாந்து யார்டு காவல் துறையை உடனே வரச் சொல்கிறேன். இருந்தாலும் இங்கிருந்து கிளம்பவே மனம் இடம் கொடுக்கவில்லை."  "நான் வேண்டுமானால் காவல் நிலையம் செல்லட்டுமா?"  "சூழ்நிலை என்னவென்று நாம் சரியாக அவர்களுக்கு விளக்க வேண்டும். வேறு எதாவது அப்பாவித்தனமாகக் கூட எதுவும் நடந்து கொண்டிருக்கலாம். வாருங்கள், வாட்சன். நாமே அங்கு சென்று என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்."  ஹோவீ தெருவில் வேகமாக நாங்கள் நடந்து கொண்டிருக்கும் போது நான் கிளம்பிய வீட்டைத் திரும்பிப் பார்த்தேன். அங்கே மேலே இருந்த சாளரத்தின் மெல்லிய வெளிச்சத்தில் ஒரு தலை, ஒரு பெண்ணின் தலை தெரிந்தது. அது மிகக் கலவரத்தோடு இரவில் கூர்மையாகத் தன் பார்வையை வீசிக் கொண்டிருந்தது. பாதியில் நிறுத்தப்பட்ட செய்தி மீண்டும் தொடரும் என்று எதிர்பார்த்துக் கொண்டு மூச்சுவிடாமல் காத்திருந்தது. ஹோவீ தெருவின் அடுக்கு மாடிக் குடியிருப்புகளின் நுழைவாயில் கதவினருகில் கழுத்துப்பட்டியும் நீண்டதொரு கோட்டும் அணிந்திருந்த ஒரு மனிதன் இரும்புக் கிராதியில் சாய்ந்து கொண்டிருந்தான். எங்கள் முகங்களின் மேல் வெளிச்சம் விழுந்ததும் அவன் எங்களை நோக்கி வந்தான்.  "ஹோல்ம்ஸ்" என்று கத்தினான்.  "கிரெக்சன்!" என்று எனது நண்பனும் அழைத்தான். பின்னர் அவன் ஸ்காட்லாந்து யார்டு துப்பறிவாளனின் கைகளைக் குலுக்கினான். "பயணங்கள் காதலர்களின் சந்திப்புகளில் முடிகிறது. என்ன விஷயமாக இங்கு வந்திருக்கிறீர்கள்?"  "நீங்கள் என்ன விஷயமாக இங்கு வந்திருக்கிறீர்களோ, அதேதான் என்று நினைக்கிறேன்." என்றார் கிரெக்சன். "நீங்கள் எப்படி இதில் சம்பந்தப்பட்டிருக்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை."  "இரு வேறு இழைகள், ஆனால் ஒரே முடிச்சை நோக்கி. நான் அந்த சைகைகளை நோக்கி வந்தேன்."  "சைகைகளா?"  "ஆம், அந்த சாளரத்தில் இருந்து. ஆனால் அது பாதியில் நிறுத்தப்பட்டு விட்டது. எதனால் என்று கண்டுபிடிக்கவே நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம். நீங்கள் இறங்கி விட்டதால் இனி எனக்கு இதில் வேலை ஒன்றும் இருக்காது என்று நினைக்கிறேன்."  "சற்றுப் பொறுங்கள்." என்று கிரெக்சன் ஆவலுடன் கத்தினார். "நான் உங்களுக்கு இந்த நன்மையாவது செய்கிறேன், திரு.ஹோல்ம்ஸ். நீங்கள் எங்கள் பக்கத்தில் இருப்பதனால் நான் வலிமையாக இருப்பதாக உணர்கிறேன். இப்படிப்பட்ட ஒரு வழக்கு இதுபோல் இதுவரை எனக்கு அமைந்ததில்லை. இந்தக் குடி இருப்புகளுக்கு ஒரே ஒரு வாயில்தான் இருக்கிறது. அதனால் அவனை நாம் பத்திரமாகப் பிடித்து விடலாம்."  "யாரவன்?"  "நன்று. திரு.ஹோல்ம்ஸ். இந்த முறை நாங்கள் உங்களை விட ஒரு படி மேலே இருக்கலாம். நீங்கள் எங்களுக்கு உங்களது மிகச் சிறந்ததான உதவியைச் செய்ய வேண்டும். அவரது கைத்தடியை நிலத்தில் அடித்தார். அதைப் பார்த்து ஒரு வாடகைக் கார் ஓட்டும் ஓட்டுநர் ஒருவர் கையில் தன் சாட்டையுடன் தெருவின் மறு முனையில் நிறுத்தி வைத்திருந்த தனது நான்கு சக்கர வாகனத்தில் இருந்து மெதுவாக நடந்து வந்தார். "நான் உங்களை திரு.ஷெர்லாக் ஹோல்ம்ஸ் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கலாமா?" என்று அந்த ஓட்டுனரிடம் கேட்டார். "இது பின்கேர்ட்டன் அமெரிக்க நிறுவனத்தில் பணி புரியும் திரு.லெவெர்ட்டன்."  "லாங் தீவு குகை மர்மத்தின் கதாநாயகன்." என்றார் ஹோல்ம்ஸ். "உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, சார்"  அந்த அமெரிக்கர் அமைதியான வியாபாரத் தொழில் செய்யும் இளைஞர் போல் தெரிந்தார். நன்கு மழிக்கப்பட்ட கூர்மையான முகம். புகழாரம் சூட்டியதால் மெல்லிய புன்னகையோடு இருந்தார்.   "நான் எனது வாழ்வின் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறேன், ஹோல்ம்ஸ்." என்றார் அவர். "கோர்கியானோ எனக்குக் கிடைத்தால்--"  "என்ன? சிவப்பு வட்டத்தின் கோர்கியானோவா?"  "ஓ! அவரது பெயர் ஐரோப்பா வரை பிரபலமா? நன்று. நாங்கள் அவரைப் பற்றி அமெரிக்காவில் அறிந்திருக்கிறோம். அவர் ஒரு ஐம்பது கொலைகளிலாவது சம்பந்தப்பட்டிருக்கிறார். இருந்தும் அவரைப் பிடிக்க ஒரு சின்ன தடயம் கூட சிக்கவில்லை. நான் அவனை நியூ யார்கிலிருந்து தேடி வந்திருக்கிறேன். லண்டனில் கிட்டத்தட்ட ஒரு வாரமாகத் தேடி அலைந்து விட்டேன். எதாவது ஒரு தடயம் கிடைத்து அவனைக் கைது செய்து விட மாட்டோமா என்று ஏங்குகிறேன். நாங்கள் அந்த வாடகை வீடு வரை அவனைத் துரத்தி வந்து விட்டோம். அதற்கு ஒரே ஒரு கதவுதான் இருக்கிறது. அதனால் இந்த முறை அவன் தப்பிக்க முடியாது. அவன் உள்ளே சென்ற பின் மூன்று பேர் வெளியே சென்றிருக்கிறார்கள். எனக்கு உறுதியாகத் தெரியும் அதில் இவன் இல்லை என்று."  "திரு. ஹோல்ம்ஸ் சைகைகள் பற்றிச் சொன்னார்." என்று கிரெக்சன் பேச ஆர்மபித்தார். "எப்பொழுதும் போல் அவருக்கு நம்மை விட அதிகம் தெரிந்திருக்கும்"  ஹோல்ம்ஸ் சில வார்த்தைகளில் நாங்கள் அனுபவித்ததைத் தெளிவாக எடுத்துரைத்தார். அந்த அமெரிக்கன் தனது கையால் இன்னொரு கையில் ஓங்கி அடித்துக் கொண்டார் வெறுப்பில்.  "அவன் நம்மைக் கண்டு பிடித்து விட்டான்." என்று கத்தினார்.  "ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?"  "அப்படித்தான் தோன்றுகிறது. இல்லையா. அவனது கூட்டாளிக்கு செய்தி அனுப்பிக் கொண்டிருக்கிறான். அவனுடைய கூட்டத்தில் பல பேர் லண்டனில் இருக்கிறார்கள். உங்கள் கூற்றுப்படியே எதோ ஒரு அபாயம் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறான். அதைப் பாதியில் வேறு நிறுத்தி விட்டிருக்கிறான். ஏனெனில் அந்தச் சாளரத்தில் இருந்து நம்மைக் கவனித்திருக்கக்கூடும். இல்லையேல் அபாயம் எவ்வளவு அருகில் இருக்கிறதென்று தெரிந்திருக்கக்கூடும். அதனால் அதில் இருந்து தப்பிக்க உடனே செயல்பட்டிருக்க வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், ஹோல்ம்ஸ்?"  "நாம் உடனே மேலே சென்று பார்க்கலாம் என்று நினைக்கிறேன்"  "ஆனால் அவனைக் கைது செய்ய நமக்கு ஆணை எதுவும் இல்லை"  "அவன் யாரும் வசிக்காத ஒரு இடத்தில் சந்தேகிக்கக் கூடிய சூழ் நிலையில் இருக்கிறான்." என்றார் கிரெக்சன்.   "இப்பொழுது அது போதும். அவனை மண்டி இட வைத்ததும் நியூ யார்க் நமக்கு உதவி செய்ய முடியுமா என்று தெரிந்து கொள்கிறேன். இப்பொழுது நான் அவனைக் கைது செய்யும் பொறுப்பை எடுத்துக் கொள்கிறேன்."  நமது உளவுத்துறை துப்பறியும் விஷயத்தில் சொதப்பலாம் ஆனால் வீரத்தில் என்றும் சோடை போனதில்லை. ஸ்காட்லாந்து யார்டின் அலுவலக மாடிப்படிகளில் ஏறும் அதே மிடுக்குடன் அமைதியாக தோரணையோடு கிரெக்சன் அந்தக் கொலைகாரனைக் கைது செய்ய மாடிப்படிகளில் ஏறினார். அந்த பின்கேர்ட்டன் அவரைக் கடந்து செல்ல முயற்சித்தான். ஆனால் அவர் அவனைத் தன் முட்டியால் தடுத்து நிறுத்திப் பின்னே செல்லச் சைகை செய்தார். லண்டனில் நேரும் அபாயங்களை எல்லாம் தெரிந்தவர்கள் லண்டன் காவல்துறை மட்டுமே.  இடது புற குடியிருப்பின் கதவு மூன்றடி எடுத்து வைத்த போது பாதி திறந்த நிலையில் இருந்தது. கிரெக்சன் அதை மெதுவாகத் திறந்தார். அதற்குள் முழுமையான அமைதி தவழ்ந்தது. கும்மிருட்டு படர்ந்திருந்தது. நான் ஒரு தீக்குச்சியைக் கிழித்து அந்தத் துப்பறிவாளனின் விளக்கைப் பற்ற வைத்தேன். நான் அவ்வாறு செய்யும்போது அதன் திரி பற்றிச் சரியாக எரிய ஆரம்பிக்கும் நேரம் எங்கள் அனைவரின் கண்களும் ஆச்சர்யத்தால் விரிந்தன. கம்பளம் இல்லாத அந்தத் தளத்தில் புத்தம் புதிய ரத்தக் கோடுகள் தெரிந்தன. அதன் மேல் உள்ள சிவந்த காலடித் தடங்கள் உள்ளே இருந்த ஒரு அறையின் உள்ளேயும் வெளியேயும் எங்களை வழி நடத்திச் சென்றன. அதன் கதவு மூடப்பட்டிருந்தது. கிரெக்சன் அதன் கதவைத் திறந்து தன் விளக்கின் வெளிச்சத்தைப் பாய்ச்சினார். நாங்கள் அனைவரும் ஆர்வத்தோடு அவரது தோளின் மேல் எட்டிப் பார்த்தோம்.  அந்த அறையின் நடுவில் ஒரு பெரிய மனிதனின் உருவம் சுருண்டு கிடந்தது. அவனது நன்கு மழிக்கப்பட்ட கருப்பான முகம் மிக மோசமாக கோணலாய் இருந்தது. அவனது தலையைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் போல் சிவப்பு நிறத்தில் இரத்தம் வட்டமடித்திருந்தது. அவனது முழங்கால்கள் மேலே எழும்பி இருந்தன. அவனது கைகள் விரிந்திருந்தன அதீத வலியினால். மேல் நோக்கி இருந்த அவனது அகன்ற பழுப்பு நிற கழுத்தின் நடுவில் இருந்து வெள்ளை நிற பிடி கொண்ட கத்தி நீண்டு கிடந்தது. எவ்வளவு பெரிதாக இருந்தாலும் கோடரியால் வெட்டப்பட்ட ஒரு மாட்டினைப் போல் அந்த அடி அவனை வீழ்த்தி இருக்க வேண்டும். அவனது வலது கைக்குப் பக்கத்தில் பயங்கரமான இரு முனையும் கூரான கத்தி ஒன்று தரையில் கிடந்தது. அதன் அருகில் கருப்பு நிறத்தில் குழந்தைக் கையுறை இருந்தது.  "ஆஹ், இது கோர்கியானோ அல்லவா." என்று பதறினான் அந்த அமெரிக்கன். "யாரோ நம்மை முந்தி விட்டார்கள்"  "இங்கே இருக்கிறது அந்த மெழுகுவர்த்தி, திரு.ஹோல்ம்ஸ்" என்றார் கிரெக்சன். இதோ நீங்கள் என்ன வேண்டும் என்றாலும் செய்து கொள்ளுங்கள்."  ஹோல்ம்ஸ் அவரை நோக்கி அடி எடுத்து வைத்து, மெழுகுவர்த்தியைப் பற்ற வைத்தார். சாளரத்தின் முன்னும் பின்னும் அசைத்து விட்டு இருட்டில் பார்த்தார். அதன் பின் அணைத்து விட்டுக் கீழே எரிந்து விட்டார்.  "அது உதவியாய் இருக்கும்" என்றார். பின் அவர் வந்து ஆழ்ந்த யோசனையில் இருக்கும்போது அந்த இரு துப்பறிவாளர்களும் அந்த உடலை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். "நீங்கள் கீழே காத்துக் கொண்டிருக்கும் போது மூன்று பேர் உங்களைக் கடந்து சென்றார்கள் என்று சொல்லி இருந்தீர்கள்." என்றார் இறுதியில். "நீங்கள் அவைகளைச் சரியாகக் கவனித்தீர்களா?"  "ஆம்"  "ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க கருப்பு தாடி வைத்துக் கொண்டு நடுத்தர பருமனில் ஒருவன் சென்றானா?"  "ஆம், அவன்தான் கடைசியாகச் சென்றான்"  "அதுதான் நீங்கள் தேடக் கூடிய ஆள் என்று நினைக்கிறேன். நான் அவனது விவரங்களைக் கொடுக்கிறேன். அவனது பாதங்கள் பற்றிய மிகச் சிறந்த விவரம் இருக்கிறது. அது உங்களுக்குத் போதும் என்று நினைக்கிறேன்"  "பற்றாது என்று நினைக்கிறேன், திரு.ஹோல்ம்ஸ். லட்சக்கணக்கான லண்டன் மக்கள் தொகையில் அவனை இதை வைத்துக் கண்டு பிடிப்பதென்பது இயலாது"  "இருக்கலாம். அதனால்தான் உங்கள் உதவிக்கு இந்தப் பெண்மணியையும் அழைக்கலாம் என்று நினைக்கிறேன்"  நாங்கள் அனைவரும் அவரை நோக்கினோம் அந்த வார்த்தைகளை அவர் உதிர்த்தபோது. அங்கே வாசல்கதவில் உயர்ந்த அழகான ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். அவள்தான் ப்ளூம்ஸ்பர்ரியின் மர்மமான பெண். அவள் மெதுவாக முன்னே வந்தாள். அவளது முகம் வெளிறிப் போய் இருந்தது. பயத்தால் விரிந்து இருந்தது. அவளது கண்களின் பயந்த பார்வை தரையில் இருந்த அந்தக் கருத்த உடலின் மேல் பதிந்திருந்தது.  "நீங்கள் அவனைக் கொன்று விட்டீர்கள்." என்று முணுமுணுத்தாள். "கடவுளே, நீங்கள் அவனைக் கொன்று விட்டீர்கள்!" பின் அவள் அழுத்தமாக வேகமாக மூச்சை உள்ளிழுத்தாள். அதன் பின் வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல் தரையில் இருந்து ஆனந்தத்தில் குதித்தாள். அந்த அறையில் சுற்றிச் சுற்றிப் பம்பரம் போல நடனமாடினாள்.   அவள் கைகளை விட்டு விட்டுத் தட்டிக் கொண்டே ஆடினாள். அவளது கரிய விழிகள் ஆச்சர்யத்தில் மின்னின. அவளது உதடுகளில் இருந்து ஆயிரமாயிரம் இத்தாலிய உணர்ச்சிகள் கொப்பளித்துக் கொண்டே இருந்தன. இப்படியொரு நேரத்தில் இப்படியொரு பெண் ஆனந்தத்தில் ஆடுவதைக் காணச் சகிக்கவில்லை. சட்டென்று நிறுத்திய அவள் கேள்வி கேட்பது போல் எங்களைப் பார்த்தாள்.  "ஆனால் நீங்கள் காவல் துறை இல்லையா? நீங்கள் கியோசேப்பி கோர்கியானோவைக் கொன்று விட்டீர்கள். இல்லையா?"  "நாங்கள் காவலர்கள்தான்"  அவள் நிழல் படிந்த அறை முழுவதும் சுற்றிப் பார்த்தாள்.  "ஆனால், கென்னரோ எங்கே?" என்று கேட்டாள். "அவர் என் கணவர், கென்னரோ. என் பெயர் எமிலியா லூக்கா. நாங்கள் இருவரும் நியூ யார்க்கில் இருந்து வருகிறோம். கென்னரோ எங்கே? இப்பொழுதுதான் அவர் என்னைக் கூப்பிட்டார். நான் வேகமாக ஓடி வந்தேன்."  "நான்தான் உங்களைக் கூப்பிட்டேன்." என்றார் ஹோல்ம்ஸ்.  "நீங்களா. நீங்கள் எப்படி என்னை அழைத்திருக்க முடியும்"  "உங்கள் சங்கேத மொழி அவ்வளவு கடினம் இல்லை. நீங்கள் இங்கு வந்தது நல்லது. எனக்கு நன்றாகத் தெரியும், 'வீ ஐ ஈ என் ஐ" என்று சைகை அனுப்பினால் போதும் நீங்கள் இங்கு வந்து விடுவீர்கள் என்று."  அந்த அழகான இத்தாலியப் பெண், எங்களது நண்பரை ஆச்சர்யத்தோடு பார்த்தாள்.  "உங்களுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும் என்று எனக்கு ஒன்றும் விளங்கவில்லை." என்றாள் அவள். "கியூசெப்பி கோர்கியானோ- எப்படி-" என்று சொல்லி நிறுத்தினாள். அதன் பின் அவளது முகம் மின்னியது ஆனந்தத்திலும் பெருமிதத்திலும். "இப்பொழுது புரிந்து விட்டது. என் கென்னரோ! எனதருமை கென்னரோ இதுவரை எல்லாத் தீமைகளில் இருந்தும் என்னைக் காப்பாற்றிய கென்னரோதான் அவரது வலிமையான கைகளால் இந்த அரக்கனைக் கொன்றிருக்கிறார்! ஓ கென்னரோ. எவ்வளவு அருமையானவன் நீ. உன்னை அடைவதற்கு நான் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்."  "நன்று. திருமதி.லூக்கா." என்று அவளது கையைப் பிடித்து எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் நாட்டிங் மலைத் திருடனிடம் பேசுவதைப் போல் கவி நயம் இல்லாத க்ரெக்சன் பேச ஆரம்பித்தார். "நீங்கள் யார் என்னவென்று எனக்கு இன்னும் தெரியவில்லை.   ஆனால் நீங்கள் இவ்வளவு பேசியதில் இருந்து நீங்கள் யார்டு காவல் நிலையத்தில் நிச்சயம் தேவைப்படுவீர்கள் என்று புரிகிறது"  "ஒரு நிமிடம் க்ரெக்சன்" என்றார் ஹோல்ம்ஸ். "இந்தப் பெண்மணி சொல்வதைப் பார்த்தால் நாம் கேள்வி கேட்பதில் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறோமோ அந்தளவு ஆர்வம் அவர்களுக்குப் பேசுவதில் இருப்பது போல் தெரிகிறது. உங்களது கணவர் இங்கு கொலையுண்டு கிடைக்கும் மனிதரின் கொலைக் குற்றத்திற்காக விசாரிக்கப்படுவார் என்பது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். நீங்கள் சொல்வதெல்லாம் சாட்சியங்களாக மாறும். ஆனால் அவர் குற்றம் புரிய வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல் இந்தக் காரியத்தைச் செய்திருப்பதாக நீங்கள் நினைத்தால் தயவு செய்து முழுக் கதையையும் சொல்ல வேண்டும்."  "கோர்கியானோ இப்பொழுது இறந்து விட்டதால் இனி எந்தவிதக் கவலையும் எனக்கில்லை." என்றாள் அந்தப் பெண். "அவன் ஒரு அரக்கன், சாத்தான். அவனைக் கொன்றதால் உலகில் எந்த நீதிபதியும் என் கணவருக்குத் தண்டனை தரப் போவதில்லை."  "அப்படி இருக்கையில்" என்றார் ஹோல்ம்ஸ். "எனது வேண்டுகோள் என்னவென்றால், நாம் இந்த அறையைத் தாளிட்டு இந்தப் பெண்ணின் அறைக்குச் செல்வோம். அவள் சொல்வதைக் கேட்டுவிட்டு நமது கருத்தைப் பதிவு செய்வோம்."  அரை மணி நேரம் கழித்து நாங்கள் நால்வரும் அவளது வீட்டில் உள்ள ஒரு சிறிய அறையில் அமர்ந்தோம். அவளது அருமையான கதை சொல்லும் திறமையில் லயித்து அவள் விவரித்த அந்தக் கொடுமையான நிகழ்வுகளைக் கேட்டுக் கொண்டிருந்தோம். அதன் முடிவைத்தான் இப்பொழுது நாங்கள் கண்டிருக்கிறோம். அவள் வேகமான நடையில் தங்கு தடை இல்லாமல் ஆங்கிலம் பேசினாள். ஆனால் வழக்கத்திற்கு மாறான ஆங்கில மொழியாய் இருந்தது அது. தெளிவாய்ப் புரிய வேண்டும் என்பதற்காக நான் அதை இலக்கணப் பிழை இல்லாமல் தருகிறேன்.  "நேபிள்ஸ் அருகில் உள்ள பொசிலிப்போ என்னும் ஊரில் நான் பிறந்தேன்." என்றாள் அவள். "அகஸ்டோ பாரெல்லி என்பவரின் மகள். அவர் தலைமை நீதிபதியாக இருந்தார். முன்னொரு முறை அவர் அந்தப் பகுதியில் உதவி கலெக்டர் ஆகவும் பணியாற்றியவர். கென்னரோ எனது அப்பாவின் அலுவலகத்தில் வேலை பார்த்தார். அவரை நான் காதலித்தேன். எந்தப் பெண்ணுக்கும் அவர் மேல் ஆசை வரும். எனக்கு வந்ததில் வியப்பேதுமில்லை. அவரிடம் பணமும் இல்லை பதவியும் இல்லை. அவரது அழகும் திறமையும் வலிமையையும் தவிர அவரிடம் வேறொன்றும் இல்லை. அதனாலேயே எனது அப்பாவிற்கு அவரைப் பிடிக்கவில்லை.   அதனால் நாங்கள் இருவரும் ஓடிப் போய் பாரி என்ற ஊரில் திருமணம் செய்து கொண்டோம். எனது நகைகளை விற்று அமெரிக்கா செல்வதற்குப் பணம் தயார் செய்தோம். இது நடந்து நான்கு வருடங்களாயிற்று. அன்று முதல் நாங்கள் நியூ யார்க்கில்தான் வசிக்கிறோம்.  "விதி எங்களுக்கு முதலில் நன்றாக இருந்தது. ஒரு இத்தாலியரிடம் கென்னரோ வேலை பார்த்தார். போவெரி என்னும் ஊரில் சில கயவர்களிடம் இருந்து என் கணவர் அவரைக் காப்பாற்றினார். அதனால் அவர்களிருவரும் நெருக்கமான நண்பர்களாயினர். அவரது பெயர் டிட்டோ காஸ்டலோட்டே. அவர் காஸ்டலோட்டே சாம்பா என்னும் பெரிய நிறுவனத்தில் மூத்த பங்குதாரராக இருந்தார். அவர்கள் நிறுவனம் பழங்கள் இறக்குமதி செய்வதில் நியூ யார்க்கில் தலை சிறந்த நிறுவனமாக விளங்கியது. திரு. சாம்பா அவர்கள் அங்கு மதிப்பில்லாமல் போய் விட்டார். நமது புதிய நண்பர் காஸ்டலோட்டேவுக்கு முழு அதிகாரமும் வந்து விட்டது. அந்த நிறுவனத்தில் முன்னூறு பணியாளர்களுக்கு மேல் வேலை செய்கிறார்கள். அங்கு எனது கணவரை ஒரு துறையின் தலைமைப் பணிக்கு அமர்த்தினார். தினமும் அவர் என் கணவரை நல்ல விதமாகவே நடத்தினார். திரு.காஸ்டலோட்டே திருமணம் செய்யவில்லை. அதனால் கென்னரோவைத் தன் மகனைப் போலவே நினைத்தார். நாங்கள் இருவரும் அவரை எங்கள் தந்தை போலவே நினைத்துப் பழகி வந்தோம். புரூக்ளின் என்னும் ஊரில் நாங்கள் ஒரு சிறு வீட்டை எடுத்து வசித்து வந்தோம். அதன் பின் எங்களது எதிர்காலம் உறுதி அளிக்கப்பட்டது போல் இருந்தது. திடீரென்று ஒரு நாள் அந்தக் கார்மேகம் எங்களது வானை மறைத்து இருளைப் பரப்பும் வரை.  "ஒரு நாள் இரவு கென்னரோ பணியில் இருந்து திரும்பும்போது எங்கள் ஊர்க்காரன் ஒருவனை உடன் அழைத்து வந்தார். அவன்தான் கோர்கியானோ. அவனும் பொசிலிப்போவில் இருந்துதான் வந்திருக்கிறான். அவன் மிகவும் உடல் பருத்தவன் நீங்கள் இப்பொழுது பார்ப்பது போல். அவன் உடல் மட்டுமல்ல, அவன் சம்பந்தப்பட்டது அனைத்துமே விகாரமாய் பெரிதாய் பயமுறுத்துவது போலவே இருக்கும். அவனது குரல் எங்களது சிறிய வீட்டில் இடி போல் கேட்கும். அவன் கைகளை வீசிப் பேசும்போது அந்தச் சிறிய வீட்டில் இடமே பத்தாது. அவனது எண்ணங்கள் உணர்ச்சிகள் பொழுது போக்குகள் எல்லாமே பெரிதும் மிகைப்படுத்தப்பட்டவை மிகவும் பிரமாண்டமானவை. அவன் அவ்வளவு ஆற்றலோடு பேசும்போது, இல்லை உருமும்போது, மற்றவர்களுக்கு வெறுமனே அந்த வலிமையான வார்த்தைப் பிரவகங்களைக் கேட்டுப் பயந்து அமர்ந்து கேட்கத்தான் தோன்றும். அவனது கண்கள் தீப்பொறி போல் பிரகாசிக்கும். அதைக் கண்டு மயங்கி நீங்கள் அவன் சொல்வதைக் கேட்கும் அடிமையாகிப் போவீர்கள். அவன் மிகவும் பயங்கரமாக இருந்தாலும் ஆச்சர்யப்படத்தகுந்த மனிதன். அவன் இறந்ததை எண்ணிக் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்"  "அவன் மீண்டும் மீண்டும் வந்தான். ஆனால் கென்னரோவுக்கு அவன் வருவது பிடிக்கவில்லை என்பதை நான் அறிந்து கொண்டேன். என் கணவர் பாவம் முகம் வெளிறிப் போய் அலட்சியமாய் அமர்ந்திருப்பார்.   எங்களது விருந்தினரின் உரையாடல்களில் இருக்கும் அரசியல் பற்றி சமுதாயக் கோபங்கள் பற்றி அவனது முடிவில்லா பிதற்றல்களை கேட்டுக் கொண்டிருப்பார். கென்னரோ எதுவும் பேசவில்லை. இருந்தாலும் எனக்கு என் கென்னரோவைப் பற்றி நன்றாகத் தெரியும். அதனால் அவர் முகத்தில் இதுவரை காணாத உணர்ச்சியை நான் கண்டேன். முதலில் அது ஒரு வெறுப்புதான் என்று நினைத்தேன். ஆனால் மெதுவாக அது வெறுப்பையும் தாண்டிய ஒரு உணர்ச்சி என்று புரிந்தது. அது பயம்-ஆழமான மர்மமான மனதை அழுத்துகின்ற ஒரு பயம். அன்றைய இரவு-அவரது பயத்தை உணர்ந்த அன்றிரவு-நான் அவரிடம் கெஞ்சிக் கேட்டேன் என்னிடம் எதையும் மறைக்க வேண்டாம் என்று. என் மேல் வைத்திருந்த காதல் உண்மையானால் அந்தப் பிரமாண்டமான மனிதன் ஏன் உங்களைப் பரிதவிக்க வைக்கிறான் என்பதை ஒளிக்காமல் சொல்லுங்கள் என்றேன்."  "அவர் சொல்லச் சொல்ல எனது இதயமும் இறுகி பனிக்கட்டி போலாகி விட்டது. எனது கென்னரோ கட்டிளம் காளை போல் துள்ளித் திரிந்த தனது இளமைக் காலத்தில் உலகமே தனக்கு எதிராக இருந்த நேரத்தில் வாழ்வில் தனக்கு நேர்ந்த கொடுமைகளால் மனம் வெம்பிப் போய் இருந்த நேரத்தில் நியோபாலிடன் சங்கமான சிவப்பு வட்டத்தில் சேர்ந்திருந்தார். அது பழைய கார்போனேரி சங்கத்துடன் தொடர்பில் இருந்தது. அவர்களுடைய உறுதி மொழிகளும் மர்மங்களும் மிகவும் பயங்கரமானவை. ஒரு முறை உள்ளே சென்று விட்டால் வெளியேறுவது கனவிலும் முடியாதது. நாங்கள் நியூ யார்க் சென்றபோது அனைத்தையும் உதறி விட்டோம் என்றுதான் கென்னரோ நினைத்திருந்தார். நேபிள்ஸ் நகரில் என் கணவரை அறிமுகப்படுத்திய அதே மனிதனை நியூ யார்க் நகர வீதியில் ஒரு மாலைப் பொழுது காணும் பொழுது அவர் முகம் பேயறைந்தது போலாகி விட்டது. தென் இத்தாலியில் அந்த அரக்கன் கோர்கியானோவின் பட்டப்பெயர் 'மரணம்' என்பதாகும். இத்தாலியக் காவல்துறையிடம் இருந்து தப்பிக்கவே அவன் நியூ யார்க் வந்தான். ஆனால் இங்கு வந்ததும் தனது அச்சமூட்டும் மர்ம சங்கத்தின் கிளையை பரப்பி வைத்து விட்டான். இதெல்லாம் சொல்லி விட்டு அதே நாளில் அவருக்கு வந்த அழைப்பாணையையும் காண்பித்தார். அதன் முகப்பில் சிவப்பு வட்டம் இருந்தது.   அதன் பொருள் என்னவென்றால் ஒரு வாடகை இடம் ஒரு குறிப்பிட்ட நாளில் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் நிச்சயம் வரவேண்டும் என்றும் ஆணையிடப் பட்டிருந்தது.  "அதுவே மிகவும் துயரமானது என்று நினைத்திருந்தோம். ஆனால் அதைவிடக் கொடுமை இனிமேல்தான் வரப்போகிறது என்பதை நாங்கள் அறியவில்லை. நான் சில நேரங்களில் கவனித்ததுண்டு. அவன் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவான். வரும்போதெல்லாம் என்னிடம் அதிகமாகப் பேச்சுக் கொடுத்தான். என் கணவரிடம் பேசும் சமயத்திலும் அவனது கோரமான பளீரிடும் முறைத்துப் பார்க்கும் காட்டு விலங்கின் கண்கள் என்னை நோக்கியே இருந்தன. ஒரு நாள் இரவு அந்த மர்மமும் வெளியே வந்து விட்டது. நான் அவனுக்குள் இருந்த அவன் சொன்ன காதலை-ஒரு காட்டுமிராண்டியின் காதலை-உசுப்பி விட்டிருக்கிறேன். கென்னரோ அவன் வரும்போது வீட்டில் இல்லை. கதவைத் திறக்குமுன் தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தான். அவன் என்னைத் தன் பிரமாண்டமான கரங்களில் எடுத்துக் கரடி போன்ற தன் உடல் மேல் அணைத்தான். என்னை முத்தங்களால் நிறைத்தான். தன்னுடன் வந்து விடுமாறு கெஞ்சினான். நான் போராடிக் கொண்டு அலறிக் கொண்டிருக்கும் போது கென்னரோ உள்ளே நுழைந்தார். அவனைத் தாக்கினார். அவன் கென்னரோவை அடித்து மயக்கமடையச் செய்து விட்டு வெளியேறியவன் பின் என்றுமே வரவில்லை. அந்த இரவு நாங்கள் ஒரு கொடூர எதிரியைச் சம்பாதித்து விட்டோம்."  "சில நாட்கள் கழித்து அந்தச் சந்திப்பு வந்தது. கென்னரோ அதில் இருந்து திரும்பி வந்ததும் அவர் முகத்தில் இருந்தே எதோ மிக பயங்கரமான விஷயம் நடந்திருக்கிறது என்பது தெரிந்து விட்டது. நாங்கள் நினைத்ததை விட அது மிகவும் பயங்கரமானதாகவே இருந்தது. அந்தச் சங்கத்திற்குத் தேவையான பணம் அனைத்தும் அமெரிக்காவில் உள்ள இத்தாலிய பணக்காரர்களை மிரட்டியே வாங்கப்பட்டன. எங்களது நண்பரான காஸ்டலோட்டேவும் இதே போல் ஒருமுறை சங்கத்தால் அணுகப்பட்டார். அவர் மிரட்டலுக்குப் பணியவில்லை. அவர் அந்தத் தகவலை காவல்துறையிடம் பகிர்ந்து விட்டார். இதே போல் இனி நடந்து விடக் கூடாது என்றும் இது போல் யாரும் நம்மை எதிர்க்கத் துணியக் கூடாது என்றும் முடிவெடுக்கப்பட்டது. அதனால் அவரது வீட்டோடு சேர்த்து அவரையும் வெடி குண்டுகளால் தகர்ப்பது என்று முடிவாயிற்று. அந்தச் செயலை யார் நடத்துவது என்று தீர்மானிக்க குலுக்கல் முறையில் தேர்வு நடந்தது. கென்னரோ தனது எதிரியின் குரூர கண்களைக் கவனித்தார் அவன் தன் கையை அந்தப் பைக்குள் விடும்போது. எதோ ஒரு விதத்தில் அது முன்பே தீர்மானிக்கப்பட்டு விட்டது என்பது நன்றாகப் புரிந்து விட்டது. ஏனெனில் அவன் எடுத்தது மரண சாசனமான சிவப்பு வட்டம் பொறிக்கப்பட்ட அந்தத் தட்டேதான். கொலை ஆணை, அவரது கைகளில் விழுந்தது. தனது உற்ற நண்பனைக் கொலை செய்ய வேண்டும்.   அல்லது தனது கூட்டாளிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். இது அவர்களது குரூர சதித் திட்டத்தின் ஒரு பங்கு. அவர்களுக்குப் பிடிக்காத நபரைப் பழி வாங்க அந்த நபர்களை மட்டுமல்லாது அவர்கள் விரும்புபவர்களையும் சேர்த்துத் தாக்குவதுதான் அவர்களது வழக்கம். இது தெரிந்ததால்தான் அது ஒரு பயங்கரமாக அவர் தலைக்கு மேல் தொங்கியது. பீதியினால் அவருக்குப் பைத்தியம் பிடித்தது போலாகி விட்டது."  "அன்று இரவு முழுவதும் நாங்கள் கட்டிப்பிடித்துக் கொண்டே அமர்ந்திருந்தோம். ஒருவரை ஒருவர் பிரச்சினைகள் வரும்போது தைரியமாய் இருக்க வேண்டும் என்று தேற்றிக் கொண்டிருந்தோம். மறு நாள் இரவே நாள் குறித்தாயிற்று அந்தக் காரியத்தை முடிக்க. நண்பகல் நானும் எனது கணவரும் லண்டன் புறப்பட ஆயத்தமானோம்.  எங்கள் நண்பருக்கும் இந்த ஆபத்தைப் பற்றி முன்னெச்சரிக்கை கொடுத்து விட்டுச் சென்றோம். அதே போல் காவல் துறைக்கும் ஒரு செய்தியை அனுப்பி விட்டோம் இனிமேல் எந்தவித சிக்கலும் அவருக்கு வராதவண்ணம்."  "மீதி அனைத்தும் உங்களுக்கே தெரியும். எங்களுக்கு நன்றாகத் தெரியும் எங்கள் எதிரிகள் எங்கள் நிழல்களைப் போலவே எங்களைச் சுற்றுவார்கள் என்று. கோர்கியானோவுக்கு எங்கள் மேல் தனிப்பட்ட விரோதமும் காரணமாய் இருந்தது. என்ன இருந்தாலும் அவன் எவ்வளவு கொடூரமானவனாய் குள்ள நரியாய் களைப்பே இல்லாமல் இருப்பான் என்றும் தெரியும். அமெரிக்காவும் இத்தாலியும் அவனது கொடூரங்களைக் கதை கதையைச் சொல்லும். இப்பொழுதுதான் அவர்கள் நிம்மதி அடைந்திருப்பார்கள். எனக்கு எந்தவிதத் தொந்தரவும் நேராதவண்ணம் என்னவர் ஒரு இடத்தைத் தேர்வு செய்து தங்க வைத்தார் எங்களுக்குக் கிடைத்த சில நாட்களில். அமெரிக்க இத்தாலியக் காவல்துறைகளுக்குத் நேரம் கிடைக்கும் போது தகவல் சொல்ல விரும்பினார். அவர் எங்கிருக்கிறார் என்று எனக்கே தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் தினசரி செய்தித்தாள் மூலம் வரும் செய்திகள் மட்டுமே. ஒரு நாள் நான் சாளரத்தில் இருந்து பார்க்கும் போது இரு இத்தாலியர்கள் என் வீட்டை வேவு பார்ப்பதைக் கண்டேன். எப்படியோ கோர்கியானோ எனது இருப்பிடத்தைக் கண்டுபிடித்துவிட்டதை அறிந்தேன். இறுதியில் கென்னரோ ஒரு குறிப்பிட்ட இடத்தில இருந்து சைகை செய்வதாக செய்தித்தாள் மூலம் சொன்னார். அந்தச் சைகைகள் வெறும் எச்சரிக்கைகளாக மட்டுமே இருந்தன. அதுவும் திடீரென்று நிறுத்தப்பட்டுவிட்டது. இப்பொழுது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது கோர்கியானோ தன்னை நெருங்கி விட்டதை அவர் தெரிந்து கொண்டு விட்டார். அதனால், கடவுளே, நல்ல வேளை அவன் வரும்போது தயாராக இருந்திருக்கிறார். இப்பொழுது சொல்லுங்கள், நாங்கள் சட்டத்திற்கு எதுவும் பயப்பட வேண்டுமா? இவ்வுலகில் உள்ள எதாவது ஒரு நீதிபதி கென்னரோ செய்த குற்றத்திற்குத் தண்டனை எதுவும் அளித்து விடுவாரா?"  "திரு.க்ரெக்சன்" என்று ஆரம்பித்த அமெரிக்கன் அந்த அதிகாரியைப் பார்த்து "எனக்கு ஆங்கிலச் சட்டத்தின் பார்வை பற்றித் தெரியாது. ஆனால் நியூ யார்க்கில் இவரது கணவர் செய்த செயலுக்கு நன்றி மட்டுமே தெரிவிப்பார்கள்."  "இந்தப் பெண் வந்து எனது உயர் அதிகாரியைச் சந்திக்க வேண்டியிருக்கும்" என்றார் க்ரெக்சன். "இவள் சொன்னதை உறுதிப் படுத்தி விட்டால் இவளுக்கும் இவளது கணவருக்கும் எந்தவித தண்டனையும் கிடைக்காது. ஆனால் எனக்குத் தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை ஹோல்ம்ஸ், இந்த வழக்கில் நீங்கள் எப்படி உள்ளே வந்தீர்கள் என்று"  "படிப்பு, க்ரெக்சன், படிப்பு. இன்றும் நான் பழைய பல்கலைக்கழகத்தில் அறிவைத் தேடிக் கொண்டிருக்கிறேன். வாட்சன், உங்களது கொடூரமான விகாரமான சேகரிப்பில் சேர்ப்பதற்கு இன்னுமொரு மாதிரி கிடைத்து விட்டது. இப்பொழுது மணி எட்டு கூட ஆகவில்லை. கோவென்ட் தோட்டத்தில் வாக்னர் இரவு நடக்கிறது. இப்பொழுது கிளம்பினாலும் இரண்டாவது காட்சியைக் காண நேரம் இருக்கிறது."      https://freetamilebooks.com/ - எங்களைப் பற்றி   மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம்.   தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர்.   அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும்.   ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது.   வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள் நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும்.   வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம்.   மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.   இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும் எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com  2. www.badriseshadri.in  3. http://maattru.com  4. kaniyam.com  5. blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop, ebook readers like kindle, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம்.   இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.   e-mail : freetamilebooksteam@gmail.com   FB: https://www.facebook.com/FreeTamilEbooks   G+: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலை freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். email : freetamilebooksteam@gmail.com   Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – https://freetamilebooks.com/meet-the-team/   Supported by : Free Software Foundation TamilNadu, www.fsftn.org Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/  அருஞ்சொற்கள் வெட்டிப்புத்தகம் – scrapbook  பிடிப்பான் – holder  கணப்படுப்பு – fireplace  இரு விழி நோக்காடி – binocular  அழைப்பாணை – summon