[] [sarojapattikathaigal ] sarojapattikathaigal சரோஜா பாட்டி கதைகள் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை Creative Commons Attribution-ShareAlike 4.0 International License You are free: to Share — to copy, distribute and transmit the work; to make commercial use of the work Under the following conditions: Attribution — You must attribute the work in the manner specified by the author or licensor (but not in any way that suggests that they endorse you or your use of the work). No Derivative Works — You may not alter, transform, or build upon this work. காப்புரிமை தகவல்: நூலில் எந்த ஒரு மாறுதலும் செய்ய அனுமதியில்லை என்ற நிபந்தனையின் கீழ் பதிப்புரிமை வழங்கப் படுகிறது. இதனை விலையில்லாமல் விநியோகிக்கவோ, அச்சிட்டு வெளியிடும் செலவினை ஈடுகட்டும் விதமாக கட்டணம் வசூலித்து விற்பனை செய்யவோ முழு உரிமை வழங்கப்படுகிறது. This book was produced using Pressbooks.com. Contents - சரோஜா பாட்டி கதைகள் - முன்னுரை - உள்ளடக்கம் - 1. சரோஜா பாட்டி கதைகள் - 2. ராஜா ராணி - 3. தண்டவாளம் - 4. சொல்லத்தான் நினைக்கிறான் - 5. ஈர முத்தம் - 6. சொல்லத்தான் நினைக்கிறான்........கதையின் தொடர்ச்சி ............ - 7. பாரதி கண்ணம்மா - 8. மல்லிகை மணம் - 9. காதல் அழிவதில்லை - 10. வியாபாரம் - 11. பேரழகி - 12. அல்வாவும் மல்லிகைபூவும் - 13. குலதெய்வம் - Free Tamil Ebooks – எங்களைப் பற்றி - உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். - கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம் 1 சரோஜா பாட்டி கதைகள் சங்கர் ஜெயகணேஷ் 2 முன்னுரை முதலில் தொடுவானத்தை (எனது முதல் புத்தகம்) தொட்டவர்களுக்கு நன்றி. நீங்களும் நானும்  என்றோ  அணுகிய / கேட்ட  ஒரு அணு துகளின் பிம்பங்களின் பிணைவு தான் இந்த சரோஜா பாட்டி கதைகள்.    வாழ்வின் யதார்த்தத்தை சிறுகதை என்னும் ஒரு மாய போர்வை வடிவில் இதில் தர முயற்சி செய்துள்ளேன்.  சமூக வாழ்வை புரிந்துகொள்வது அறிவியலுக்கு அப்பாற்பட்டதுதான். இந்த சரோஜா பாட்டி கதைகள் உங்கள் இலக்கிய பசியை போக்காவிட்டாலும், உங்கள் பசியை போக்கும் என்பதற்கு நான் உத்தரவாதம்.   இந்த சரோஜா பாட்டி கதைகள் மூலமாக சில விதைகளை தூவியுள்ளேன், இது மின்னூல் மூலமாக காற்றில் பரவி வாசிக்கும் உங்களிடம் நல்ல அறங்களை  ஏற்படுத்தும் என நினைக்கிறேன். என்னை போல இருப்பவர்களுக்கு எழுதவும் அதை மின்னூல் போல ஆக்கும் www.freetamilebooks.com  வலை தளத்திற்கும், அதில் பணிபுரியும் அனைவருக்கும் நன்றி.   இந்த புத்தகத்தில் உள்ள எழுத்து பிழை மற்றும் சொற்பிழைகளை களைய உதவி புரிந்த நண்பர்களுக்கு நன்றி.   உங்கள் விமர்சனங்களுக்காக காத்திருக்கும்.   சங்கர் ஜெயகணேஷ் sjayaganesh@gmail.com   3 உள்ளடக்கம் - ராஜா ராணி - தண்டவாளம் - சொல்லத்தான் நினைக்கிறான் - ஈர முத்தம் - பாரதி கண்ணம்மா - மல்லிகை மணம் - காதல் அழிவதில்லை - வியாபாரம் - பேரழகி - அல்வாவும் மல்லிகைபூவும் - குலதெய்வம் [pressbooks.com] 1 சரோஜா பாட்டி கதைகள் சங்கர் ஜெயகணேஷ் 2 ராஜா ராணி ராஜா வீட்டில் நிறைய பண வசதி இருந்தும் தினமும் காரில் ஆபீஸ் செல்லாமல் ரயிலில் தான் கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை எழும்பூர் வரை ஆபீஸ்க்கு செல்வான்.  அவனது அப்பாவும், அம்மாவும் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை.  பிறந்தது  முதல் இருபது வருடம் காரில் தானே சென்றேன், இப்பயாவது என்னை என் விருப்ப படி செயல் படவிடுங்கள் என்று கூறுவான். அன்று காலையில் அவசரம் அவசரமாக குளித்துவிட்டு வீட்டில் உள்ள சாமி படங்களை கும்மிட்டு விட்டு வழக்கம் போல அலுவலகம் செல்ல கிளம்பும் போது, ராஜாவின் அம்மா சாப்பிட்டு தான் போக வேண்டும் என சொல்லிக்கொண்டே தட்டில் மல்லிகைபூ இல்ல மல்லிகை பூ போல உள்ள இட்லிகளை வைத்தாள், வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே கட கட என சாப்பிட்டான். வேகமாக பைக்கை உதைத்து வீட்டில் இருந்து புறப்பட்டான், போகும் வழியில் நடக்க முடியாமல் ரோட்டில் சென்ற ஒரு பெரியவரை வண்டியில் ஏற்றி கொண்டு பேருந்து நிலையம் சென்று அவரை இறக்கிவிட்டு ரயில் நிலையம் வந்தான்.  ரயில் நிலையத்தில் வண்டியை காப்பகத்தில் நிறுத்திவிட்டு, வேகமா நடந்தான் இல்ல ஓடினான், கடைசியில் ஒரு வழியாக பிளாட்பாரத்தை அடைந்தான். ரயில் வழக்கத்தை விட கூட்டமாக வந்தது,  ஏதோ சொர்க்கத்திற்கு போகும் வாசல் போல எண்ணி ரயில் வாசலை எல்லோரும் சேர்ந்து அடைத்தனர், அந்த சமயத்தில் உள்ளே இருந்தும் சிலர் நரகத்தில் இருந்து வருவது போல கஷ்டப்பட்டு வந்தனர்.  இவன் பொறுமையாக அனைவருக்கும் வழி விட்டு கொண்டு இருந்தான், கடைசியில் கஷ்டப்பட்டு ரயில் நகரும் போது படியில் தான் இடம் கிடைத்தது.  ரயில் நகரும் போது வரும் காற்று இவனை தாலாட்டியது  இளையராஜா  பாடல்கள் போல. ரயில் தாம்பரம் வந்தவுடன் கூட்டம் சிறிது குறைந்தது. இவன் கொஞ்சம் உள்ளே சென்று நின்றான். முதலில் உலக வரைபடம், செய்தித்தாள் விற்பனை செய்யும் பையன் வந்தான், ஒவ்வொருவரிடமும் சென்று காட்டி விற்பனை செய்தான். அடுத்து பட்டாணி , சுண்டல் என்று ஒரு ஒலி மட்டும் கேட்டது, ஒரு வயசான தாத்தா கம்பீர குரலில் சுண்டலை விற்பனை செய்தார். அடுத்து வண்டி குரோம்பேட்டையில் வந்து நின்றது, அப்போது பெட்டியில் இருந்த சில கல்லூரி மாணவர்களும்,  மாணவிகளும் இறங்கினர். ராஜாவிற்கு அமர இடமும் கிடைத்தது அதுவும் ஜன்னல் ஓரத்தில்.   அடுத்து வண்டி பல்லாவரம், திரிசூலம் கடப்பதை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துகொண்டு வந்தான். ரயில் மீனம்பாக்கம் நிறுத்தத்தை அடையும் போது ஒரு பெண் கைகுழந்தையுடன் வந்து அனைவரிடமும் யாசகம் கேட்டாள். அனைவரும் தங்களால் முடிந்த ஒரு ரூபாய்  நாணயங்களை போட்டனர், ராஜாவும் அவன் பங்கிற்கு ஒரு ரூபாய் போட்டான்.  அடுத்து தன் பையை திறந்து ஒரு குமுதம் வாரஇதழை எடுத்து புரட்டினான், வழக்கம் போல அதுவரை அருகில் வேடிக்கை பார்த்தவர், இவன் படிக்கும் பக்கங்களை தனது காந்த பார்வையால் மேய தொடங்கினார்.  சிறிது நேரம் கழித்து, அவர் பார்ப்பதை பார்த்து விட்டு அவரிடமே வாரஇதழை  நீட்டினான்.  அவரும் சந்தோசமாக வாங்கி படிக்க ஆரம்பித்தார், ராஜா மீண்டும் ஜன்னலை நோக்கினான்.  வண்டி பழவந்தாங்கல் கடந்து கிண்டியை அடைந்தது.  கிண்டியில் ‘தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணம்மோ’  பாடலை இளையராஜா ஜானகியை விட அருமையாக இரு மாற்று திறனாளிகள் பாடிக் கொண்டே யாசகம் கேட்டு வந்து கொண்டு இருந்தனர்.  அனைவரும்  காது இருந்தும் கேட்காமல், சிலர் ஒரு ரூபாய் கூட போடாமல்  முகத்தை வேற வேற பக்கம் திருப்பினர், அவர்களுக்கு பார்வை தெரியாது என தெரியாமல். அடுத்து வண்டி சைதாபேட்டையை அடைந்தது, அப்போது சில திருநங்கைகள் அந்த பெட்டியில் ஏறினார்கள்,. ரோசாப்பு நிறத்தில் சாயத்தை இதழ்களுக்கும், மூன்றாம் பிறை நிலவு போல   மார்பகங்கள் தெரியும் படி ரவிக்கையும், உள்ளங்கை நெல்லிக்காயை போல தொப்புளும் தெரியும் படி, இல்ல மார்புக்கு நடுவில் விளக்கின் ஒரு திரியை போல கிடந்தது சேலை.   இந்த சமுதாயத்தில் எந்த வேலையும் கிடைக்காமல், தனது வயிற்று பிழைப்புக்காக எல்லோரிடமும் யாசகம் கேட்டனர். அதில் ஒரு வயசான திருநங்கை ‘மாமா காசு கொடு’, ‘மாமா காசு கொடு’ என அனைவரிடமும் கேட்டாள், ஒரு இளவயது திருநங்கை அண்ணா காசு கொடு, அண்ணா காசு கொடு என கை களை தட்டி தட்டி கேட்டாள்.  இதுவரை ரயிலில் வந்த யாருக்கும் காசு போடாதவர்களும் கூட திருநங்கைகளுக்கு காசு போட்டனர்.  ரயிலில் இருந்த சில பெண்கள் கூட நாணயங்களை போட்டனர்.  அவர்களில் இரு இளவயது திருநங்கைகள் ராஜா இருக்கும் இடம் நோக்கி வந்தனர். அதில் ஒரு திருநங்கை அண்ணா காசு கொடு, காசு கொடு என கைகளை தட்டி தட்டி கேட்டாள். உடனே  ராஜா தனது சட்டை பையில் கையை விட்டு  நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து கொடுத்தான்.  உடனே அதை வாங்கிய திருநங்கைகள் அவன்  தலையில் கை வைத்து ஆசிர்வதித்துவிட்டும், கண்ணத்தில் தட்டியும் சென்றனர்.  பின்பு அந்த வயசான திருநங்கைகளும் வந்து ஆசிர்வதித்துவிட்டு சென்றனர். ரயில் வண்டி அடுத்து நுங்கம்பாக்கம் வந்தவுடன், அனைத்து திருநங்கைகளும் இறங்கினர்.  ராஜாவின் பக்கத்தில் இருந்த பெரியவர் என்னப்பா தொப்புளை பார்த்தவுடன் நூறு ரூபாய் கொடுக்கிறாய் என கேட்டார். அதுக்கு ஒரு புன்சிரிப்பு மட்டும் பதிலாக கொடுத்தான்.  அடுத்து இவன் இறங்கும் எக்மோர் ஸ்டேஷன் வந்தது.  இறங்கி சுரங்க பாதையில் செல்லும் போது, அந்த பெரியவர் சொன்னது மட்டும் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது, ” என்னப்பா தொப்புளை பார்த்தவுடன் நூறு  ரூபாய் கொடுக்கிறாய்” “என்னப்பா தொப்புளை பார்த்தவுடன் நூறு  ரூபாய் கொடுக்கிறாய்” “என்னப்பா தொப்புளை பார்த்தவுடன் நூறு  ரூபாய் கொடுக்கிறாய்”   தனது பர்சை எடுத்து அதில் உள்ளே இருந்து ஒரு போட்டோவை எடுத்தான், அதை பார்த்தவுடன் கண்ணீர் வந்தது; அது திரு.ராஜா, திருநங்கை ராணியாக இருந்த போது எடுத்த போட்டோ,  நம் வீட்டில் மட்டும் வசதி இல்லாமல் இருந்தால் நாமும் இப்படித்தான் இருப்போம் என்று எண்ணி கண்ணீர் விட்டான்.     3 தண்டவாளம் ராம் ஒரு வெளிநாட்டு கம்பெனியில் வேலை செய்கிறான்; அடிக்கடி வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வான், அவனுக்கு குடும்பமோ  குட்டியோ கிடையாது.  சால்ட் அண்ட் பெப்பர் போல முடி எல்லாம் நரைத்து வயது 40 எட்டியுள்ளது. சீதா அவன் அலுவலகத்தில் அவனுக்கு  கீழ் வேலை செய்யும் ஒரு பெண்.  இப்ப இருவரும் ஓர் ப்ராஜெட் விசயமாக சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் அருகருகே அமர்ந்து பயணம் செய்கின்றனர். சீதா மடிகணினியை எடுத்து மறுநாள் சிங்கப்பூர் வேலைக்கு செய்ய வேண்டியதை செய்து கொண்டு இருந்தால், ராம் ஒரு பெக் வோட்காவை போட்டு விட்டு கண் அசந்து உறங்கினான்.  சிங்கப்பூர் வந்த உடன் தான் எழுந்தான், இருவரும் ஒரு டாக்ஸி பிடித்து அவர்கள் தங்கும் ஹோட்டல் சென்றனர். மறுநாள் மீட்டிங்கில் சீதா தயார் செய்து வைத்திருந்த பதிவுகளை இவனது மடிகணினியில் ஏற்றிக்கொண்டு அருமையாக விளக்கினான்; அனைவரையும் அவனது வசீகர பேச்சால் கட்டி போட்டன்.  முடிவில் அவர்களும் அவனது கம்பனிக்கு சம்மதம் தெரிவித்து உடனடியாக ஒரு ஒப்பந்தமும் தயார் செய்தனர்.  அதை வாங்கி கொண்டு, உடனடியாக அவன் உயர் அதிகாரிக்கு தெரிவித்தான், அவர்கள் இவனை பாராட்டியதோடு மட்டுமில்லாமல் மேலும் சில நாள் இருந்து சின்ன ஒப்பந்தங்களை முடிக்க சொன்னார். அவனும் அதற்கு சரி என சம்மதித்துவிட்டு ஹோட்டல் சென்றான். ஹோட்டல் அடைந்தவுடன், சீதாவிடம் ஒரு நாலு மணிக்கு சிங்கப்பூர் சென்று சுற்றி பார்போம் என்றான்.  அவளும் ஓகே சார் என்று சொல்லிவிட்டு தனது அறை சாவியை வாங்கிகொண்டு லிப்டை நோக்கி நடந்தாள். இருவரும் மாலை நாலு மணிக்கு டாக்ஸி பிடித்து அர்சிட் ரோடு சென்று ஒவ்வொரு கடைக்கா சென்று பார்வையிட்டனர்.  ராம் எல்லா ஆண்களையும் போல சில வாசனை திரவியங்கள் மற்றும் சில பாக்கெட் சிகரெட் வாங்கினான், சீதா சில மேக்கப் ஆயிட்டங்களுடன் ஒரு கை பை வாங்கினாள்.  இருவரும் புறப்பட்டு ஹோட்டல் வந்து அடைத்தனர்.  வந்தவுடன் ராம் சீதாவிடம் இரவு சாப்பிட இருவரும் மேலே உள்ள திறந்தவெளி  ரெஸ்டாரன்ட் செல்வோம் என்று சொன்னான். அவளும் ஓகே சார், ஒரு எட்டு மணிக்கு உங்க அறைக்கு வந்து விடுகிறேன் என்றாள். இரவுஎட்டுமணிக்குசீதாராம்அறைகதவைதட்டினாள், ராமும்தயாராஇருந்தான்.  இருவரும்ஒன்றாகசேர்த்துமேல்தளத்தைஅடைந்தனர். அங்கேஇருந்துபார்க்கும்போதுசிங்கப்பூர்அழகுஅருமையாகதெரிந்தது, இருவரும்சிலநிமிடங்கள்நின்றுரசித்துபார்த்தனர். பிறகுஇருவரும்சாப்பிட அமர்ந்தனர். முதலில்  மெனு கார்டை வாங்கி  பார்த்து விட்டு ஒரு லார்ஜ் ஜானி வால்கர் ஆர்டர் செய்தான், அவளுக்கு என்ன ஜூஸ் வேண்டும் என்று கேட்டான், அவள் அதற்கு ஆரஞ்சு என்றாள்.  இரண்டையும் ஆர்டர் செய்து விட்டு, பின்பு மறுபடியும் மெனு கார்டை பார்த்து சாப்பிட பட்டர் நான், சிக்கன் குருமாவும், ஒரு பிரியாணியும் ஆர்டர் செய்தான்.  சர்வீஸ் பாய் முதலில் ஆரஞ்சு ஜூஸ் மற்றும் ஜானி வால்கர் கொண்டு வந்து பரிமாறினான். இருவரும் எடுத்து cheers செய்தனர். சீதா முதலில் இன்று உங்கள் பேச்சு மிகவும் அருமையாக இருந்தது சார், என சொன்னாள்; பதிலுக்கு ராம் ரொம்ப நன்றி, நீ செய்த பிரசெண்டேசன் மிகவும் நல்லா இருந்தது, அதனால் தான் நமக்கு இந்த ஆர்டர் கிடைத்துள்ளது என சொன்னான். சில சிப்கள் ஜானி வால்கர் குடித்துவிட்டு; ஏன் இன்னும் நீ கல்யாணம் செய்யவில்லை என்று சீதாவிடம் கேட்டான். சீதா மற்ற பெண்களை போல சிரித்தோ, கால்களால் கீழே சுரண்டி வெட்கப்பட்டோ பதில் சொல்லாமல் நேரடியாகவே சொன்னாள் அதை பற்றி நினைத்தே  ரொம்ப வருஷம் ஆகுது.  எப்ப கண் கருவிழிகளுக்கு மை தடவாமல் தலைக்கு தடவ ஆரம்பிச்சேனோ, அப்பவே மறந்திட்டேன்.  அப்படியே இப்ப வயதும் 35 ஆயிருச்சி என சொன்னாள். எதுவும் மனசை பாதிக்கிற  மாதிரி கேட்டு இருந்தால் சாரி என்று சொல்லிக்கொண்டே  ஒரு மல்போரோ சிகரெட் எடுத்து பற்ற வைத்தான். அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல சார். இதுமாதிரி நிறைய பேர் கேட்டுவிட்டனர், என்று சொல்லி நிறுத்தினாள்.  இவன் உடனே சர்வீஸ் பாய்யை அழைத்து மற்றுமோர் ஜானி வால்கர் ஆர்டர் செய்தான், சீதா முதல் முறையாக அவள் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை சொல்ல ஆரம்பித்தாள்.  எங்க அப்பா இருக்கும் வரை எனக்கு அலைந்து திரிந்து வரன் பார்த்தார். அவரும் போய் சேர்ந்து இப்ப 5 வருடம் ஆச்சி.  எல்லோரையும் போல எனக்கும் எங்க அப்பா 25 வயதில் இருந்து வரன் பார்க்க ஆரம்பித்தார், ஒரு 28 வயதில் எனக்கு ஒரு கல்யாணம் முடிவாகி, கல்யாணத்திற்கு முதல் நாள் நின்று விட்டது. சர்வீஸ் பாய் ஜானி வால்கர் கொண்டு வந்து வைத்தான், உடனே அதை எடுத்து குடிக்க ஆரம்பித்தான்; ஒரு பாதி குடித்து விட்டு ஏன் கல்யாணம் நின்று விட்டது என்று கேட்டான். சீதா அதற்கு நான் அப்பொழுது ஒரு  பன்னாட்டு ஒரு நிறுவனத்தில் உதவியாளரா வேலை பார்த்து கொண்டு இருந்தேன்.   இப்ப மாதிரியே அப்பவும் அடிக்கடி உயர் அதிகாரிகளுடன் வெளியூர் செல்வேன், அதை அவர்கள் தப்பாக நினைத்து விட்டு கல்யாணத்தை நிறுத்தி விட்டனர். சர்வீஸ் பாய் சாப்பாடு கொண்டு வந்து வைத்தான், அவனிடம் மற்று மோர் ரவுண்டு ஜானி வால்கர் ஆர்டர் செய்தான். எந்த வருடம் நடந்தது என கேட்டான், அவள் அதற்கு சிரித்து கொண்டே 2002 என சொல்லி கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.  ராம் சர்வீஸ் பாய் கொண்டு வந்த ஜானி வால்கரை கையில் எடுத்து கொண்டு எந்த மாதம் என்று கேட்டான், அவள் கையில் பட்டர் நானை பிய்த்து கொண்டு அதற்கு கார்த்திகை மாதம் என்றாள்.  உடனே வேகமாக ஜானி வால்கரை கையால் எடுத்து மட மட குடித்தான், குடித்து விட்டு ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்தான். அவள் சாப்பிட்டுக்கொண்டே சார் நீங்க சாப்பிடவில்லையா என்று கேட்டாள், இல்ல பசி இல்லை என்று மட்டும் சொன்னான். அவள் மறுபடியும் உங்களுக்கு காதல் தோல்வியா சார், இன்னும் கல்யாணம் ஆகாமல் இருக்குது என்று கேட்டாள்.  அந்த கேள்வியை கேட்டவுடன் அவள் கண்ணை உற்று பார்த்துவிட்டு ஒரு புன்முறுவல் செய்தான், அதை பற்றி நாளைக்கு சொல்கிறேன் என்று சொல்லி விட்டு சர்வீஸ் பாய்யை அழைத்து பில் கேட்டான், பில்லை பைசல் செய்து விட்டு இருவரும் லிப்ட்ல் இறங்கி அவர்களது அறைகளுக்கு சென்றனர். அறைக்கு சென்றவுடன் தொலைபேசியில் சர்வீஸ் பாய்யை அழைத்து  3 லார்ஜ் பெக் ஜானி வால்கர் ஆர்டர் செய்தான், ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்து புருவத்தை சுருக்கி யோசித்தான். ஒரு 10 வருடம் முன்பு தனக்கு நிச்சயம் செய்த பெண் உருவத்தை யோசித்தான். அவன்  கண் முன்னே சீதா தான் மறுபடியும் மறுபடியும் வந்தாள்.  உடனே சர்வீஸ் பாய் கொண்டு வந்த ஜானி வால்கரை எடுத்து மட மட குடித்தான். அப்ப இவன் இதுமாதிரியே அடிக்கடி வெளியூர் செல்வான், சில நேரம் உடன் வேலை பார்க்கும் பெண்களுடன் கூட செல்வான். அப்போது இவனுடன் சென்ற ஒரு பெண் இவனுடன் தவறாக நடக்க முயன்றாள்.  இவனும் பெயர்க்கு ஏற்ற மாதிரி இரண்டு நாள் பட்டும் படாமல் விலகி சென்றான், இறுதியில்  என்ன செய்வான், இவனும் மனிதன் தானே; கடவுள் ராமன் இல்லையே  என்ன செய்ய? அவள் விரித்த வலையில் விழுந்தான். அவளுடன் அடிக்கடி வெளியூர் செல்ல ஏற்பாடு செய்தான், இருவரும் வரம்பு எல்லை மீறினர்.  அவன் மூலம் அவள் தனக்கு பதவி உயர்வும் பெற்றாள், பதவி உயர்வு பெற்றவுடன் மற்றுமோர் அதிகாரியுடன் நெருங்கி பழகி அமெரிக்கா சென்று தனது முன்னால்  காதலனை திருமணம் செய்து வாழ ஆரம்பித்தாள்.  இந்த விஷயம் இவனை மிகவும் பாதித்தது,  அதனால்  தான் இந்த சீதாவை பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி கல்யாணத்தை நிறுத்தியது இவனுக்கு உரைத்தது. இதை நினைத்து நினைத்து வேகமாக குடித்து விட்டு கட்டிலில் படுத்தான், மறுநாள் காலையில் 10 மணிக்கு தான் எழுந்தான்.  எழுந்து தொலைபேசியை பார்த்தான், பல மிஸ்டு கால் சீதாவிடம் இருந்து வந்து இருந்தது. இந்த கற்புக்கரசியை சந்தேக பட்டு அவள் வாழ்க்கையை  அழித்தது மட்டும் இல்லாமல் நாமும் வாழ்க்கையை தவற விட்டு விட்டோம் என்று நினைத்து ஒரு சிகரெட் எடுத்து புகைத்து விட்டு, குளித்து முடித்து விட்டு, சீதாவிற்கு போன் செய்தான்.  சீதா நான் ரெடி, கிளம்பி கீழே வா என்று சொன்னான், அதற்கு அவள் ஓகே சார் என சொன்னாள். இருவரும் சேர்ந்து சிங்கப்பூர் முழுவதும் சுற்றினர், மதியம் சாப்பிட்டுவிட்டு சில அலுவலகம் சென்று இவர்கள் வந்த வேலைகளையும் செய்தனர். இரவு அறைக்கு திரும்பி வரும் போது சீதா சார் நீங்க நேற்று  சொன்னது போல உங்கள் கதையை எனக்கு சொல்ல வேண்டும் என சிறு குழந்தையை போல கேட்டாள். இவன் வழக்கம் போல சிரித்து பதில் கூறாமல் நடந்தான்.  இரவு மறுபடியும் திறந்தவெளி உணவகம் சென்று சாப்பிட அமர்ந்தனர்.  சர்வீஸ் பாய்யை அழைத்தவுடன் வழக்கம் போல ஜானி வால்கர் ஆர்டர் செய்தான், அவள் என்ன இவன் பொண்டாட்டியா இவனை கண்டிக்க; எதுவம் கூறாமல் இருந்தாள். மெதுவாக முதல் பெக்கை குடித்து முடித்து விட்டு சொன்னான், நான் என்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண்ணை தீவரமா காதலித்தேன், ஆனால் அவள் என்னை ஏமாற்றி விட்டு சென்று விட்டாள், அதற்கு பிறகு கல்யாணம் பற்றி யோசிக்காமல் ஒவ்வொரு கம்பெனியாக மாறி மாறி உலகம் முழுவதும் சுற்றி சுற்றியே வயது ஏறிபோச்ச, என்று கூறினான்.  உடனே மற்று மோர் பெக் ஆர்டர் செய்து குடித்தான், அவள் இவன் பெற்றவர்களை பற்றி கேட்டாள், அதற்கு ராம் இருவரும் சில வருடம் முன்பே இறந்து போயிட்டனர்,  இப்போ நினைத்தால் தான் எனக்கு மீதம் உள்ள நாட்களை பற்றி பயமாக உள்ளது என்று கூறினான்.  அதற்கு அவள் பதில் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தாள்.  மறுபடியும் ஒரு பெக் மட மட குடித்து விட்டு ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்து வேகமா இழுத்தான். அதற்குள் அவள் ஆர்டர் செய்த டிபன் வந்தது, உடனே இருவரும் சாப்பிட்டுவிட்டு அவர்களது அறைகளுக்கு சென்றனர். சீதா அவள் அறைக்கு சென்றவுடன், ராம் இன்று நடந்து கொண்ட விதத்தை பற்றி நினைத்தாள், அவளும் இதுவரை எத்தனையோ உயர் அதிகாரிகளுடன் வெளியூர் சென்று இருக்கிறாள், அதில் பெரும்பாலோர் இவளிடம் காமஉணர்வை தூண்டுவது போலவும், பேருந்து மற்றும் விமானத்தில் செல்லும் போது தெரியாமல் செய்வது போல தெரிந்தே இவளது உடம்பை உரசியும், உரசாமல் சில நேரம் பார்வையாலும் தொல்லை தருவதை பற்றி எண்ணினாள், இதை பற்றி யோசித்து யோசித்து தூக்கம் வராமல் எழுந்து ஜன்னல் வழியே வானத்தை பார்த்தாள், மறு நாள் பௌர்ணமி என்பதால் நிலா பிரகாசமா தெரிந்தது, நிலவை சில நேரம் ரசித்து விட்டு திரும்ப வந்து படுக்கும் போது மறுபடியும் ராம் பற்றிய சிந்தனை மேலோங்கியது. நம்ம கூட அடிக்கடி ரயிலில் செல்லும் போது, ஏன் இப்ப கூட விமானத்தில் வரும் போது, சிங்கப்பூர் முழுவதும் சுற்றும் போதும் கூட அவர் விரல் கூட நம் மீது படவில்லை. தினமும் நம் முன்னே அமர்ந்து தான் குடிக்கிறார், அவரை நம்மகிட்ட நல்லவரா காட்ட கூட முயற்சி செய்வது இல்லை; நம்மிடம் ஒரு தப்பான நோக்கத்தில் அலுவலகத்தில் கூட பேசுவது, நடப்பது  கிடையாது என நினைக்கும் போதே இவள் எதிரில் அமர்ந்து வேலை பார்க்கும் காமக்கொடூரன் ரமேஷ் தான் நினைவுக்கு வந்தான்.  இவளது பெயர்க்கு இராவணன் போல பலரும் கரை ஏற்படுத்த முயன்றுள்ளனர். இவளும் எதற்கும் இடம் தராமல் தனது பெயரை காப்பாற்றினாள்.  இதனால் அடிக்கடி வேலை மாறி கொண்டே இருந்தாள். அதானல் ராம் ஏதோ நம்மிடம் சொல்ல வருகிறார் என மட்டும் முடிவு செய்தாள். மறுநாள் இருவரும் காலையில் வெளியில் சென்று அலுவலக வேலையை முடித்து விட்டு சிங்கப்பூர் மாரியம்மன் கோவிலுக்கு இருவரும் சென்றனர், போகும் போது அருகில் இருந்த கடையில் மல்லிகை பூ வாங்கினான் சாமிக்கு, மறுபடியும் சில முலம் பூ கேட்டு வாங்கி சீதாவிடம் தந்தான். சீதா வாங்காமல் யோசித்தாள், கோயிலுக்கு போறோம், தலையில் வைத்துகொள் என்று சொன்னான், சரி சார் என்று சொல்லிவிட்டு  வாங்கிகொண்டாள். இருவரும் கோவிலுக்கு சென்று  சாமிதரிசனம் செய்து விட்டு ஹோட்டல் அறைக்கு திரும்ப வந்தனர்.  வழக்கம் போல மேல உள்ள திறந்தவெளி உணவகத்திற்கு சென்று அமர்ந்தனர். ராம் வழக்கம் போல ஜானி வால்கர் ஆர்டர் செய்யாமல் சாப்பாடு மட்டும் ஆர்டர் செய்தான்.  இருவரும் சாப்பிட்டு விட்டு ஐஸ்கிரீம் ஆர்டர் செய்து சாப்பிட்டு விட்டு மெதுவாக நடந்து சென்று மின்னொளியில் சிங்கப்பூரின் அழகையும், முழு நிலவின் பிரகாசத்தையும் ரசித்தனர்.  இருவரும் யார் முதலில் பேசுவது எப்படி பேசுவது என்று தெரியாமல் முதல் தடவையாக சந்திக்கும் காதலர்  போல பேசாமல் இருந்தனர். இறுதியாக இந்த விளையாட்டுக்கு சீதா ஒரு முற்று புள்ளி வைத்தாள், ஏன் இன்று நீங்க ஜானி வால்கர் ஆர்டர் செய்து குடிக்க வில்லை என்று கேட்டாள்.  இந்த கேள்வி கேட்டவுடன் சிறிது நேரம் சத்தம் வர சிரித்தான், சிரித்து முடித்துவிட்டு நான் இப்ப  உன்னிடம் ஒன்று  சொல்ல போகிறேன்.  பயப்படாமல் கேள் என்றான். ஒரு சிறு குழந்தை தனது பாட்டியிடம்   கதை கேட்பதை போல மிகவும் ஆவலானாள்.  சீதா மனதிற்குள் பல்வேறு கற்பனை கனவுகள் ஓடியது.  அதற்குள் ராம் நாளைக்கு சென்னை சென்றவுடன் நான் எனது வேலையை ராஜினாமா செய்ய போகிறேன் என்று மிகவும் அசால்டாக சொன்னான்,  அவள் இந்த பதிலை எதிர்பாரக்கவில்லை.   அவள் அதற்கு பதறி போய் ஏன் சார் என்று கேட்டாள். ஏற்கனவே எனக்கு மும்பையில் ஒரு கம்பெனியில் வேலை கிடைத்து உள்ளது, நான் இதுவரை ஏற்காமல் இருந்தேன், இப்ப தான் நான் அங்கு செல்ல முடிவு செய்துள்ளேன் என்று சொல்லிவிட்டு கம்பெனி பெயரையும் சொன்னான். சொன்னவுடன் ராம் கை பிடித்து குலுக்கி வாழ்த்துக்கள்  தெரிவித்துவிட்டு ஓகே சார் வேற என்ன ஒரு மாதிரி கேட்டாள். அவன் பதில் எதுவும் கூறாமல் இருந்தான், அவளே உங்க கூட  இருந்த இந்த மூன்று நாள் மிகவும் மகிழ்ச்சியாகவும் அதே நேரத்தில் பாதுகாப்பாகவும் இருந்தது சார்.  ரொம்ப நன்றி சார் என்று சொன்னாள். அவன் கன்னத்தில் மறுபடியும் மறுபடியும் யாரோ அறைவது போலவும் சீதைக்கு பதில் இவன் தீ குளிப்பது போலவும் இருந்தது. இருவரும் லிப்ட்ல் ஏறி தங்களது அறை நோக்கி சென்றனர்.  சீதா அவள் அறையை திறக்கும் போது, நீயும் ஒரு மாதத்தில் வேலையை ராஜினாமா செய்து விடு சீதா என்று சத்தமாக சொன்னான் ராம்.  இதை கேட்டவுடன் சீதா கதவை திறக்காமல் ராம் அறையை நோக்கி நடந்து வந்து;  பிறகு நானும் எங்க அம்மாவும் எப்படி சாப்பிட என்று கேட்டாள். நீயும் மும்பை வந்து என்னுடன் வாழ்; உங்க அம்மாவையும் கூட்டி கொண்டுவா என கூறி விட்டு அவனது அறை கதவை திறந்தான், சீதாவிற்காக இவனது மன கதவையும் சேர்த்து. சீதா நான் உன்னை கல்யாணம்  செய்து கொள்ள முடிவு செய்துவிட்டேன், அதற்கு நாம் இருவரும் வேலை பார்க்கும் அலுவலகம் ஒரு தடையாக இருக்கலாம், அதற்காக தான் நான் முதலில் ராஜினாமா செய்கிறேன், நீ ஒரு மாதம் கழித்து  ராஜினாமா செய்து விட்டு மும்பை வந்து விடு, நாம் இருவரும் மும்பையில்  இருந்து நமது புது வாழ்க்கையை    ஆரம்பிக்கலாம் என கூறினான். நா . முத்துக்குமார் வரிகளை போல தான்   வாழ்க்கையும் “ தண்டவாளம் பிரிந்து செல்வது தூரம் சென்று சேரத்தான் “       4 சொல்லத்தான் நினைக்கிறான் ரவி மதுரை செல்ல குருவாயூர் இரயிலில் முன் பதிவு செய்திருந்தான், ஆனால் வழக்கம்  போல வீட்டில் இருந்து லேட்டா கிளம்பினான்.   கிண்டி அருகில் சென்னை டிராப்பிக்கில் மாட்டினான், ஆனால் சந்து பொந்துகளில் வண்டி ஓட்டி ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட  சென்னை வாசி போல சுலபமாக தப்பித்து தாம்பரம் வந்து அடைந்தான்.  வேகமாக  சென்று வண்டியை பார்க்கிங் செய்யும் இடத்தை அடைந்தான். கஷ்டப்பட்டு ஒரு நிழலில் வண்டியை பார்க் செய்தான். டோக்கன் வாங்க சென்ற போது, அந்த உரிமையாளர் எல்லோரிடமும் சில்லறை கேட்டு கத்தி கொண்டு இருந்தார்.   அதனால் ரவி தன் பையில் இருந்த சில சில்லறை ரூபாய் கொடுத்து வேகமாக வண்டி டோக்கன் வாங்கி’ வெளியில் வந்து  ரயில்லை பிடிக்க ஓடினான்.  இந்த குருவாயூர் இரயிலுக்கு ஒரு விசேசம் உண்டு, அது என்னன்னா ரயில் சரியான நேரத்திற்கு தான் கிளம்பும்; ஆனால் சரியான நேரத்திற்கு சேரும் இடத்திற்கு செல்லாது. எப்படியோ கூட்டதில் புகுந்து பிளாட்பாரத்தை அடைந்தான்,  இவன் புக் செய்து வைத்திருந்த செகண்ட் கிளாஸ் ஏ/சி வகுப்பில் ஏறி பெட்டியை மேல வைத்து விட்டு தான் பார்த்தான் அந்த பெண்ணை, பார்த்ததும் மெய் மறந்து போனான். அந்த பெண் அவ்வளவு அழகு, தேவதை போல இருந்தாள்.  இதுவரை எத்தனையோ ரயில் பயணங்களில் இது போல எந்த ஒரு பெண்ணையும் பார்த்ததில்லை. உடனே அவன் அந்த பெண்ணிடம் ஒன்று  சொல்ல நினைத்தான்.  சரி உடனே சொன்னா அந்த பொண்ணு தப்பா நினைக்கும் என்று நினைத்து பிறகு சொல்லலாம் என்று முடிவு செய்தான். முதலில் அந்த பெண்ணிடம் நல்லா பழகுவோம் என்று நினைத்து பேச முடிவு செய்தான். முதலில் என் பெயர் ரவி, நான் மதுரை போகிறேன் என்று அந்த பெண்ணிடம் சொன்னான், அதற்கு அவளும் நானும் மதுரை தான் போகிறேன் என்று சொன்னாள்.  இருவரும் பல விசயங்கள் பேசிக்கொண்டு வரும் போது ரயில் செங்கல்பட்டு வந்து அடைந்தது. இவர்கள் வகுப்பில் மேலும் சில பேர் ஏறினர். அதனால் அவன் சொல்ல வந்ததை சொல்லாமல் விட்டு விட்டான்.  அடுத்து ரயில் விழுப்புரத்தை அடைந்தது, இவன் கிழே இறங்கிசென்று இரண்டு உளுந்தவடை வாங்கி வந்து அவளிடம் கொடுத்து பல வடைகளை  அவனை பற்றி சுட்டான், ஆனால் அவள் அதை பற்றி எல்லாம் கவனிக்காமல் அவனிடம் வடை சூடா இல்லை என்று கூறிவிட்டு அமைதியாக வடையை சாப்பிட்டாள். வண்டி திருச்சியை நோக்கி வேகமாக சென்றது, பகல் வெயிலும் அதிகமாக இருந்தது. ஏ/சி கோச் ஆனதால் உள்ளே வெயில் தெரியவில்லை, ஆனாலும் வாயில் உள்ள வார்த்தைகளை சொல்ல முடியாமல் இவனுக்கு வேர்த்தது. உடனே எழுந்து ரயிலில் உள்ள பாத்ரூம் சென்று கதவை மூடினான்.  ரயில் கதவில் உள்ள வார்த்தைகளையும், படங்களையும் பார்த்தவுடன் வந்த வார்த்தையும் வராமல் உள்ளே சென்றது. இறுதியாக பாத்ரூமில் இருந்த கண்ணாடியை பார்த்து பல முறை பேசி பார்த்து தைரியமாக வெளியே வந்தான். வெளியே வந்து அந்த பெண்ணிடம் உங்களை ————— என்று சொல்லும் போது ரயில் வண்டி திருச்சியை வந்து அடைந்தது.  அருகில் இருந்த எல்லோரும் இறங்க வேண்டி அவசரமாக எழுந்தனர். அதனால் இவனால் சொல்ல வந்ததை சொல்ல முடியவில்லை. உடனே அந்த பெண் அவனிடம் சாப்பிட எதாவது வாங்கி வர சொன்னாள். இவனும் அந்த பெண் சொன்னதை கேட்டு ஓடினான் வேகமாக, இறுதியாக சாப்பிட தயிர் சாதம் வாங்கி வந்தான்,  அவள் தயிர் சாதத்தை பார்த்தவுடன் ஆசையாக வாங்கி சாப்பிட்டாள். சாப்பிட்டு முடித்தவுடன் ரொம்ப நன்றி என்று கூ றினாள். அதை கேட்ட உடன் இது தான் சரியான தருணம் என்றும், தயங்காமல் சொல்லிவிடலாம் என்றும் நினைத்தான்,  ஆனால் இதுவரை வராத டிக்கெட் பரிசோதகர் அப்போது தான் இவர்கள் வகுப்பில் வந்து இவர்களிடம் டிக்கெட் கேட்டார். அப்போதும் அவன் சொல்ல வந்தது தடைபட்டது.  ரயில் பரிசோதகர் சோதனை முடித்து விட்டு சொல்லும் போது மதுரையும் வந்தது, இவன் சொல்லி முடிக்கும் முன்பே மதுரை வந்தது, அது தான் இருவரும் இறங்கும் இடம்… கதையை வாசித்த வாசகர்களே இந்த கதையின் முடிவு என்ன????? ரவி என்ன சொல்ல நினைத்தான்? உங்களுக்கு தெரிந்தால் சொல்லவும்……………………………………. ரவி சொல்ல வந்தது அடுத்த கதையின் முடிவில் ………………… 5 ஈர முத்தம் சங்கர் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு இரண்டு வருடம் கழித்து சொந்த ஊருக்கு வரும் சந்தோஷத்தில் ஒரு வாரமாக சரியாக தூங்கவில்லை, சாப்பிடவில்லை, தினமும் இந்த இரண்டு வருட வாழ்க்கையை கண் முன்னே நினைத்து கொண்டான்.  இவன் வெளிநாட்டிற்கு வரும் போது சந்தோசமாக வரவில்லை, இவன் தங்கச்சி கல்யாணம் மற்றும் இவன் கல்யாணத்திற்கு வாங்கிய கடன்தான் இவனை இங்கு கூட்டி வந்தது.  கல்யாணம் ஆன ஒன்றரை வருடத்தில் இங்கு வந்து விட்டான்; இவன் ஊரில் இருந்து கிளம்பும் போது இவன் மகளிற்கு 2 மாதம். பெற்ற மகள் வளர்ச்சியை கூட தொலைபேசி மூலம் தான் தெரிந்து கொண்டான். தினமும் சாப்பிடும் போது எல்லாம் வீட்டை பற்றி நினைத்து கொள்வான், ஏன் என்றால் இவன் எதையும் கழிக்காமல் சாப்பிடும் பழக்கம் இல்லாதவன். காய்கறிகளில் பல சாப்பிடமாட்டன், வெளிநாட்டிற்கு வந்து இங்கு கிடைக்கும் சாப்பாட்டுக்கு இவன் உடம்பு ஒத்துழைக்கவே ஆறு மாதம் ஆனது. தினமும் அலுவலகம் முடித்து வந்தவுடன் இவன் மனைவி இந்திராவிடம் தொலைபேசியில் பேசுவான், பிறகு அம்மாவிற்கு மற்றும் சில நாட்களில் தங்கைக்கும் கூட பேசுவான். ஊருக்கு போகும் காரணத்தினால் அதிக நேரம் அனைவரிடமும் தொலைபேசியில் பேசினான். அம்மாவிடம் கேட்டான் அம்மா வரும் போது உங்களுக்கு என்ன வாங்கி வர என்று, அதற்கு சங்கரின் அம்மா எனக்கு ஒன்றும் வேண்டாம்; வரும் போது எதாவது உன் தங்கச்சிக்கும், மாப்பிள்ளைக்கும் வாங்கி வா என்று மட்டும் சொன்னாள். இல்லமா எதாவது கேள் என்று மீண்டும் மீண்டும் வற்புறுத்த, இறுதியாக இவன் அம்மா வரும் போது எனக்கு ஒரு சால்வை வாங்கிவா அது எனக்கு போதும் என்று சொன்னாள்.    கண்டிப்பா வரும் போது ஒரு நல்ல சால்வை வாங்கி வருகிறேன் என்று கூறினான். அடுத்து தங்கையுடன் தொலைபேசியில் பேசினான், மாப்பிள்ளை மற்றும் மருமகன் பற்றி முதலில் விசாரித்து விட்டு, ஊருக்கு வரும் தகவலை சொன்னான்.  தங்கை முதலில் எத்தனை நாள் இங்க இருப்ப அண்ணா என்று கேட்டாள்? இல்லமா; இனிமேல் இங்க வந்து கஷ்ட பட விருப்பம் இல்லை; அங்க கடலூரில் ஏதாவது ஒரு வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றினா போதும் என நினைக்கிறேன். ஆம்மாம், நீ அங்க போய் சம்பாதிப்பதை இங்கேயே அண்ணி, குழந்தைகளுடன் இருந்து சம்பாதித்தால் போதும் அண்ணா என்று கூறினாள். சரிம்மா வரும் போது மருமகனுக்கு என்ன வாங்கி வர என்று கேட்டான்? அண்ணா நீ வரும் போது அவனுக்கு ஒரு கார் வாங்கி வா, எப்ப பார்த்தாலும் அவன் கார் வச்சி தான் விளையாடுகிறான். சரிம்மா கண்டிப்பா வாங்கிவரேன், உனக்கும் மாப்பிள்ளைக்கும் வரும் போது என்ன வாங்கி வர? எனக்கு ஒன்னும் வேண்டாம், அவருக்கு மட்டும் ஏதாவது உனக்கு தெரிஞ்சது வாங்கி வா அது போதும். சரிம்மா? நான் வரும் வெள்ளி கிழமை இரவு ஊருக்கு வந்து விடுவேன், வந்து நேரில் மிச்ச விசயத்தை பற்றி பேசலாம் என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தான். அடுத்து வழக்கம் போல தன் மனைவி இந்திராவுக்கு போன் செய்தான்,  அவளிடம் வழக்கம் போல நலம் விசாரித்துவிட்டு வரும் வெள்ளிகிழமை இரவு நான் ஊருக்கு வருகிறேன் என்று கூறினான். அடுத்த சில நிமிடங்கள் மிகவும் மௌனமாக இருந்தது. பிறகு முட்டையில் இருந்து வரும் குஞ்சை போல சிறுது அழுகை சத்தம்  மட்டும் இந்திராவிடம் இருந்து வந்தது.  நான் தான் அடுத்த வாரம் வந்து விடுவேன், இனிமேல் உன்னை  விட்டு எங்கேயும் போவதும் இல்லை என்று சமாதானம் கூறினான்.  அவள் சிறிது நேரம் கழித்து பிறகு சமாதானம் ஆகி இயல்பாக பேச ஆரம்பித்தாள். வரும் போது உனக்கு என்ன வாங்கி வர என கேட்டான். அதற்கு அவள் இந்த இரண்டு வருடம் நீங்கள் தொலைத்த அந்த இளமையை வரும் போது வாங்கி வர சொன்னாள்.  இதை கேட்டவுடன் சங்கருக்கு அழுகை வந்தது, அழுகையில் வார்த்தை வராமல் மௌனமாக இருந்தான். இல்லங்க சும்மா ஒரு பேச்சுக்கு தான் சொன்னேன், உங்க கஷ்டம் எனக்கு தெரியாதா என்ன? ஒவ்வொரு இரவுகளையும் ஒரு யுகமாக நீங்க கடத்தியது, ஆமா கண்ணம்மா?  சில நேரம் இவன் மனைவியை செல்லமாக கண்ணம்மா என்று அழைப்பான்.   எப்படியோ இந்த இரண்டு வருடம் தலையணையுடன் வாழ்க்கை  நடத்திவிட்டேன் என்று கூறினான். இதில் ஒரு நன்மையும் உள்ளது, அந்த மூன்று  நாள் விலக்கு  தலையணைக்கு கிடையாது மற்றும் ஒவ்வொரு நாளும் விடியும் வரை என் கூடவே இருக்கும் என்றும் கூறினான்.  சரி வரும் போது மறக்காமல் அந்த தலையணையை கொண்டு வாருங்கள் என கூறினாள். அது தான் என் நெஞ்சம் அங்கு இருக்கும் போது மஞ்சத்திற்கு தலையணை தேவையா? என்று மறுகேள்வி கேட்டான்.  இருவரும் இப்படியே வெகு நேரம் பேசிக்கொண்டே இருந்தனர்.  இறுதியாக ஊருக்கு வரும் போது என்ன வாங்கி வர என மீண்டும் கேட்டான். நீங்கள் என்ன பொருள் வாங்கி வந்தாலும்; என் விழி பார்த்து, கைகோர்த்து உங்கள்  மூச்சுக்காற்றை நான் உணர்ந்து நீங்கள்  தரும் ஒற்றை நெற்றி முத்தத்தை விட சிறந்த பொருள்  ஒன்று இருந்தால் வாங்கி வர சொன்னாள். கண்டிப்பா  வந்து தருகிறேன் அந்த முத்தத்தை உனக்கு பரிசாக, பதிலுக்கு நீ என்ன தருவாய் என கேட்டான். என் ஆயுள் மொத்தத்தின் காதல் நினைவாக உங்களுக்கு  பிடித்த ஈரமுத்தத்தை கோழி கூவும் வரை தருவேன் என்று கூரினாள்.  இறுதியாக தொலைபேசி வழியாக ஒரு அதிர்வு முத்தத்தை தந்து இணைப்பை துண்டித்தாள்.  இவன் அந்த அதிர்ச்சி முத்தத்தால் இரவு தூங்கினான். மறு நாள் அலுவலகம் சென்று தனது கணக்கு வழக்கு எல்லாம் முடித்து விட்டு கை நிறைய பணம் வாங்கி விட்டு சில நிமிடம் பேசாமல் அந்த பணத்தையும் அவன் இந்த இரண்டு வருடம் இழந்த வாழ்க்கையை மனதராசில் நிறுத்தி எடை போட்டான், முள் இழந்த வாழ்க்கை பக்கமே நின்றது.  மனசை சமாதானம் செய்து கொண்டு விமான டிக்கெட் வாங்கி கொண்டு அலுவலகம் முடித்து வெளியே வந்து அலுவலகத்தை ஒரு முறை பார்த்து விட்டு வெளியே வந்தான். பணத்தை எல்லாம் அவன் அப்பாவிற்கு அனுப்பி விட்டு தான் தங்கியிருக்கும் அறைக்கு வந்தான். இரவு இந்திராவிடம் மறுபடியும் வெகு நேரம் பேசிக்கொண்டு கடைசியாக தன் தலையாணியுடன் தூங்க சென்றான்.  அவள் தரும் ஈரமுத்தத்தை நினைத்து நினைத்து புரண்டு புரண்டு தூங்கினான். மறு நாள் சிறு பிள்ளை திருவிழாவுக்கு கிளம்புவது போல வேகமாக எழுந்து விமான நிலையத்தை அடைந்தான்.   டிக்கெட் வாங்கி கொண்டு கவுண்டர் அருகில் நின்று கொண்டு இந்திராவிடம் மறுபடியும் பேசினான்.  அவள் எப்ப இங்க வருவிங்க என்று  கேட்டாள்.  சரியாக 4 மணிக்கு வந்து விடுவேன் என்று கூறினான். மகன் வருவதை எண்ணி அவள் அம்மா மகனுக்கு பிடித்த நாட்டுக்கோழி வாங்கினாள், கடைகாரர் என்னம்மா வெள்ளிகிழமை அதுவுமாக கவுச்சி குழம்பு என்று கேட்டான், என் மகன் இன்று வருகிறான் என்று கூறினாள்.  அவன் குடும்பமே அவன் வருகையே எதிர் பார்த்து இருந்தனர். இந்திரா இரண்டு வருடம் கழித்து வரும் தன் கணவனுக்கு தன்னையே ஒரு பரிசாக தர தயாராக இருந்தாள்.  காலையிலே மலைமேல் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்துவிட்டு வந்தாள்.  மொத்தத்தில் அவன் குடும்பமே ஒரு தீபாவளி, ஒரு பொங்கலை எதிர் பார்ப்பதை போல காத்திருந்தனர். சூரியன் மறைந்தும் சங்கர் வரவில்லை, மெல்ல இருள் வர தொடங்கியது ஊரில் மட்டும் இல்லை, இவன் இன்னும் வராமல் வீட்டிலும் தான்.  எதிர்பாராத ஒரு விபத்தில் அவன் வந்த விமானம் கடலில் மூழ்கியது.  இதை கேட்டதும் இவன் குடும்பம் மட்டும்மில்லாமல் அந்த ஊரே கண்ணீரில் மூழ்கியது.   அவன் வரும் முன் அவன் அனுப்பிய பணம் மட்டும் வந்தது. அவனுக்காக வைத்த நாட்டுக்கோழி குழம்பு வாசனை அவன் நுகராமல் வீடெல்லாம் வீசியது. இவன் மருமகனுக்கு வாங்கி வந்த கார் வரவில்லை, கார் வாங்கியவனும் வரவில்லை. இந்திரா கேட்ட தலையாணியும் வரவில்லை, ஆனால் அவள் பரிசாக தர இருந்த ஈர முத்தம் மட்டும் அவளிடம் இருந்தது.  ஈர முத்தம் வாங்காமலே காற்றுடன் கலந்தான்.  அவன் கடைசியாக கேட்ட அந்த ஈரமுத்தங்கள் மட்டும் ஈரமில்லாமல் அவள் இதழுடன் இருக்கிறது. இந்திரா வள்ளுவன் சொன்னது போல; துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா இன்னும் இழத்தும் கவின். 6 சொல்லத்தான் நினைக்கிறான்........கதையின் தொடர்ச்சி ............ இவன் சொல்லி முடிக்கும் முன்பே மதுரை வந்தது, அது தான் இருவரும் இறங்கும் இடம்… மதுரை வந்தவுடன், இவன் முழு தைரியத்தை வர வைத்துக் கொண்டு உங்களை பார்க்க “எங்கபாட்டிசரோஜாபோலஇருக்குது” என்று கூறினான், அதற்கு அந்த பாட்டி இவன் கன்னத்தை தட்டி, படுவா என் வாக்கிங் ஸ்டிக்கை எடுத்துக் கொடு என்று கூறினாள்.   7 பாரதி கண்ணம்மா கவிதா அலுவலகம் முடிந்து காரில் வீட்டிற்கு போகும் போது தீடீரென காரின் முன்பக்க கண்ணாடியை பார்த்தாள், ஒரு போலீஸ் வண்டி இவள் காரை பின்தொடர்ந்து வந்து கொண்டு இருந்தது.  போலீஸ் கார் வேகமாக இவள் காரை முந்தி வந்து, இவள் கார் முன்னே வந்து நின்றது. அதில் இருந்து ஒரு இளமையான போலீஸ் அதிகாரி இறங்கினார். நீங்கள் கவிதாவா?  என்று கேட்டார். ஆம் என்றாள், என் பெயர் பாரதி, நான் இந்த ஏரியாவுக்கு புதுசா வந்த  இன்ஸ்பெக்டர், உங்களிடம் உங்கள் கணவர் இறந்ததை பற்றி ஒரு சின்ன விசாரணை உள்ளது, பக்கத்தில் இருக்கும் காபி ஷாப்பில் ஒரு காபி சாப்பிட்டுவிட்டு அப்படியே நான் உங்களை விசாரிக்கிறேன். கவிதாவும் சரி என சொல்லி அந்த போலீஸ் காரை பின் தொடர்ந்தாள்.  சிறிது நேரத்தில் இருவரும் காபி ஷாப் அடைந்தனர். கவிதா சரி விசயத்திற்கு வருவோம், நீங்கள் பயம்படும் படி ஒன்றும் இல்லை, ஒரு சாதாரண விசாரணை மட்டும் தான் இது, பயபடாமல் உங்களை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள். என்று சொல்லி விட்டு இரு ஐஸ் காபி ஆர்டர் செய்தார் நான் இந்த சென்னைக்கு வந்து பத்து வருடம் ஒரு பஞ்சை போல பறந்துவிட்டது.  முதலில் ஒரு சின்ன கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன், மாதம் சுமாரா அப்ப ஒரு பத்தாயிரம் சம்பளம் வாங்கினேன்.  தினமும் இந்த பஸ்சில் ஆண்களின் கூட்டத்தில் பிழிந்து பாதி கற்பை இழந்து அலுவலகம் சென்று வந்தேன். ஆனால் ஒரு வைராக்கியத்துடன் மென் மேலும் நிறைய கம்ப்யூட்டர் கோர்ஸ் மற்றும் இங்கிலீஷ் கோர்ஸ் படித்து எனது திறமையை வளர்த்து கொண்டேன். அது மட்டுமில்லாமல் இரண்டு வருட இடைவெளியில் ஒவ்வொரு கம்பெனியாக மாறினேன்.  எனது பதவியும் சம்பளமும் கூடியது. ஒரு இடத்தில் கூட எனது புற அழகை காட்டி நான் வேலைக்கு சேரவில்லை.  எல்லா இடத்திலும் எனது திறமையை மட்டும் காட்டி உயர்ந்தேன்.  சில அலுவலகத்தில் என்னிடம் தவறாக நடக்க நினைக்கும் நபர்களிடம் இருந்து நான் சிறிது விலகி இருக்க பழகி கொண்டேன் அல்லது அந்த அலுவலகத்தில் இருந்து வேறு ஒரு கம்பனிக்கு நல்ல சம்பளத்தில் பதவி உயர்வுடன் மாற்றம் ஆனேன். இப்ப கடந்த ஓராண்டாக ஒரு பன்னாட்டு  அலுவலகத்தில் உயர் பதவியில் இருக்கிறேன், மாதம் சுளையாக அறுபதாயிரம் சம்பளம். போன வருடம் தான் எனக்கு கல்யாணம் நடந்தது, என் அம்மா மட்டும் தனியாக திருச்சியில் இருக்கிறாள்.  எனது கணவரும்  ஒரு கம்ப்யூட்டர் பட்டதாரி, ஒரு அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்மராக பணியாற்றி கொண்டு இருந்தார்.  இருவரும் ஒரு ஆறு மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.  அவர் காதலிக்கும் போது எப்பவும் என் அம்மாவை பற்றி தான் அதிகம் கேட்பார், அது தான் நான் அவருடன் காதல் கொள்ளவும் ஒரு காரணமாக இருந்தது.  அந்த ஆறு மாதமும் அவருடன் சேர்ந்து பீச், சினிமா என்று வரம்பு மீறாமல் சுற்றினோம்.  முதல் மூன்று மாதம் கழித்து கொஞ்சம் கொஞ்சமாக அவர் என்னிடம் எல்லை மீற ஆரம்பித்தார். அப்பொழுது நான் கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு கல்யாண பேச்சை ஆரம்பித்தேன். நான் வாங்கிய சம்பளமும் ஒரு காரணம், சிறிது தயக்கத்திற்கு பிறகு ஒரு நாள் கல்யாணத்திற்கு சம்மதித்தார். அவர் அம்மா, அப்பா இப்போது உயிருடன் இல்லை, ஒரு அண்ணன் மற்றும் அண்ணன் குடும்பத்தினர் மட்டும் கல்யாணத்திற்கு வந்தனர்.  எளிமையாக வடபழனி முருகன் கோவிலில் எங்கள் கல்யாணம் நடந்தது, எங்கள் திருமண வாழ்க்கையும் அருமையாக ஓடின, என்று சொல்லி முடிக்கும் போது இரு ஐஸ் காப்பியை சர்வர் கொண்டு வந்து டேபிளில் வைத்தான். இன்ஸ்பெக்டர், கவிதா டேக் இட் என்று கூறினார்.  அதை மெதுவாக எடுத்து ஒரு மடக்கு குடுத்து விட்டு மறுபடியும் தொடர்ந்தாள். எங்களின் திருமண வாழ்க்கை நன்றாகவே ஓடின, சில மாதங்கள் கழித்து அவருடைய அலுவலகத்தில் எற்பட்ட ஒரு நட்டத்தின் காரணமாக அலுவலகம் யாருக்கும் மூன்று மாதம் சம்பளம் கொடுக்காமல் இழுத்து மூடினர்.  அவர் எவ்வளவு தேடியும் ஒரு வேலையும் கிடைக்கவில்லை,  வேலை கிடைக்காத விரத்தியில் கொஞ்சம் குடிக்க ஆரம்பித்தார். இதற்கிடையில் அலுவலக வேலை பளு காரணமாக எனது வயிற்றில் கரு நன்றாக வளரவில்லை, அதனால் போன மாதம் தான் இருவரும் மலர் மருத்துவமனை சென்று கருவை கலைத்தோம்.  வேலை மற்றும் கருகலைப்பு அவருக்கு அதிக மன கஷ்டத்தை தந்தன.   அன்று இரவு அதிகம் குடித்து இருந்ததால் அவருக்கு வந்த இருதய அடைப்பு கூட அவரால் உணர முடியாமல் இறந்துவிட்டார் என்று சொல்லி அழுதாள். ஓகே கூல்; கவிதா …….. என்று சொல்லிவிட்டு; உடனே இன்ஸ்பெக்டர் அந்த சர்வரை அழைத்து பணம் தந்து விட்டு, சரி கவிதா உங்க கணவர் மரணத்தை பற்றி முழுவதுமாக விசாரணை முடிந்து விட்டது, இனி தேவைபட்டால் உங்க நம்பர்க்கு நானே அழைக்கிறேன் என்று சொல்லி விட்டு விடை பெற்றார். அன்று இரவு முழுவதும் கவிதாவுக்கு தூக்கம் வராமல் அழுது கொண்டே இருந்தாள்.  மறுநாள் வழக்கம் போல காரை எடுத்து கொண்டு அலுவலகம் சென்றாள்.  நேற்று நடந்த விசாரணை பற்றி எதுவும் வெளியே காட்டி கொள்ளாமல் வேலையில் கவனத்தை திருப்பினாள்.  இரண்டு நாள் கழித்து  இன்ஸ்பெக்டர் தொலைபேசியில் அழைத்தார், நீங்க ப்ரீயா இருந்தால் கொஞ்சம் வரமுடியுமா என்று கேட்டார்.  எப்ப எங்க வரணும் என்று கவிதா கேட்டாள். இன்ஸ்பெக்டர் நேற்று நாம் சந்தித்த அதே காபி ஷாப் என்று கூறினார். உடனே வேகமாக அலுவலக வேலைகளை முடித்து விட்டு காரை எடுத்து கொண்டு காபி ஷாப் சென்றாள். இவள் போன போது இன்ஸ்பெக்டர் அங்கு வரவில்லை, சுமார் ஒரு அரை மணி நேர தாமதத்திற்கு பிறகு தான் வந்தார்.  வந்தவுடன் இங்கே வேண்டாம், நாம் கொஞ்சம் தூரம் நடந்து அருகில் உள்ள பீச்சில் சென்று பேசுவோம் என்று சொன்னார். இவளும் சரி என்று சொல்லிவிட்டு அவருடன் சென்றாள். இருவரும் பீச்யை அடைத்தவுடன், இன்ஸ்பெக்டர் ஏன் கவிதா உங்கள் கணவரை கொலை செய்தீங்க என்று கேட்டு அவள் கண்ணை பார்த்தார். அவள் என்ன சொல்லுறீங்க இன்ஸ்பெக்டர் அது தான் நான் அன்றைக்கே எல்லாத்தையும் ஒன்று விடாமல் உங்களிடம் சொல்லி விட்டேன் என்று கூறினாள். இன்ஸ்பெக்டர் ஆம்மாம் கவிதா நீங்க அன்று ஒன்னு கூட விடாமல் என்னிடம் எல்லாத்தையும் சொன்னீர்கள்.   நீங்கள் கடந்து வந்த பாதை பற்றி மறைக்காமல் சொன்னீர்கள், உங்கள் காதல் மற்றும் கல்யாணம் நடந்த விபரத்தை சொன்னீர்கள்; இவ்வளவு ஏன் உங்கள் கணவர் வேலை இழந்ததை; குடிபழக்கத்தை   மற்றும் உங்கள் கரு கலைப்பை கூட மறைக்காமல் சொன்னீர்கள்; ஆனால் நீங்கள் மலர் மருத்துவமனையில் வாங்கிய விஷம் பற்றி ஏன் ஒன்றும் சொல்லவில்லை  கவிதா என்று கேட்டுவிட்டு சத்தமாக சிரித்தார். இன்ஸ்பெக்டர் சொன்னதையும் அவர் சிரிப்பதையும் பார்த்து கவிதா ஓவென அழுதாள். இப்ப அழுது ஒன்றும் ப்ரோஜனமில்லை, நீங்கள் உண்மையை தயவு செய்து ஒப்புக்கொள்ளுங்கள் கவிதா என்று கூறினார். கவிதா கண்ணீரை துடைத்து விட்டு மறுபடியும் அவள் கதையை சொல்ல ஆரம்பித்தாள். முதல் மூன்று மாதம் திருமண வாழ்க்கை நன்றாகவே இருந்தது, அதற்கு அப்பறம் அவர் சரியாக வேலைக்கு செல்வது இல்லை.  வாரத்திற்கு ஒரு முறை குடிக்க ஆரம்பித்தார். அவர் குடிக்கும் நாள்களில் என்னிடம் மிகவும் கேவலமாக நடந்து கொள்வார்;  ஆனால் காலையில் அப்படி எதுவும் நடக்காதது போல என்னிடம் ஒரு மன்னிப்பு கேட்டு விட்டு வெளியே செல்வார்.  சரிவர சம்பளமும் வீட்டிற்க்கு கொடுக்க மாட்டார். என்னுடைய சம்பளம் முழுவதையும் வாங்கி கொள்வார்.  நான் ஒரு பன்னாட்டு கம்பெனியில் வேலை செய்வதால் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டி இருக்கும், எனக்கு ஒரு புது டிரஸ் எடுத்தால் கூட அதற்க்கும் கணக்கு கேட்பார். இப்படியே ஒரு ஆறு மாதம் கழிந்தது.  இருந்த வேலையும் இரு மாதங்களுக்கு முன்பு விட்டு விட்டார்.  வாரத்திற்கு ஒரு முறை எனது ATM card  எடுத்து பாரில் சென்று நல்ல உயர்தர சரக்கை வாங்கி கொண்டு வந்து வீட்டை நிரப்புவார்.  தினமும் குடித்து விட்டு ஒரு விலைமாதை  போல என்னை பல கோணங்களில் படம் பிடிப்பார். காலையில் எழுந்தவுடன் அதை தினமும் நான் அளிப்பேன்.  முன்பு வாரத்திற்கு ஒரு முறை என்ற குடிப்பழக்கம் தினம் தினம் என்று மாறியது. கடந்த ஒரு வார காலமாக மிகவும் அதிகமாக குடித்து என்னை மிகவும் கேவலமாக நடத்தினர். போன மாதம் எங்க அம்மாவிற்கு ஒரு பத்தாயிரம் அனுப்பினேன், அதற்க்கு யாரை கேட்டு பணம் அனுப்பினாய் என்று என்னை அடித்தார்.  அடுத்த இரண்டு நாள்களில் எங்கள் அலுவலகத்தில் இருந்து ஒரு ப்ராஜெக்ட் விசயமாக நான் ஒரு பத்து நாள் பெங்களூர் சென்றேன்.  நான் வரும் வரை அவர் முழுவதும் குடித்து எனது பாதி சம்பள பணத்தை காலி செய்து இருந்தார்.  இதற்கிடையில் நான் போன மாதம் கர்ப்பம் அடைந்தேன்,  அதை என் கணவரிடம் ஆசையாக சொன்னேன், ஆனால் அதற்கு அவர் பெங்களூரில்  யாருடன் ————– என்று  கேட்டதும் மட்டுமில்லாமல் கருவை கலைக்க வற்புறுத்தினார்.  அதை கேட்டதும் என் இதயமே நொறுங்கியது என்று சொல்லி விட்டு வாய்விட்டு அழுதாள். கவிதா கண்ட்ரோல் யுவர் ஸெல்ப் என கூறினார் இன்ஸ்பெக்டர்.  . இவன் பிள்ளையை வயிறில் சுமப்பது பாவம் என எண்ணி நானும் சம்மதம் தெரிவித்தேன்.  போன வாரம் மலர் மருத்துவமனை சென்று கருவை கலைத்தோம். கரு கலைப்புக்கு முந்தய நாள் என் கணவர் அதிகம் குடித்து விட்டு என்னை பல முறை படம் பிடுத்து என்னை சித்திரவதை செய்தார், வழக்கம் போல காலையில் வேகமாக எழுந்து நான் அளிப்பதற்கு அவர் போன் எடுத்தேன், அப்போது தான் பார்த்தேன் அவர் பல நண்பர்களுக்கு அதை பகிர்வு செய்தார் என்பதை எனக்கு வந்த கோபத்தை என்னுள் பூட்டி வைத்து கொண்டு அவருடன் மருத்துவமனை சென்றேன்.  அங்கு அங்கும் இங்கும் விளையாடிய சின்ன குழந்தைகளை பார்த்து என்னுள் இருந்த தாய்மை குணம் மேல வந்தது, கருவை கலைப்பது சரியா என என் மனதுக்குள் ஒரு பட்டிமன்றம் நடந்தது. ஆனால் என் அருகில் இருக்கும் இந்த கீழ்த்தரமான மனிதனுடன் சேர்த்து குழந்தை பெற்று கொள்ள விரும்பாமல் மருந்து வாங்கும் போது எலி மருந்தையும் வாங்கினேன். அவர் குடிக்கும் முன்பே அவர் வைத்திருந்த சரக்கு பாட்டிலில் அந்த மருந்தை கலக்கினேன்.  அதை அறியாமல் அவர் அதை குடித்து இறந்துவிட்டார்.   காலையில் அவர் இறப்பை உறுதி செய்து கொண்டு  நான் தான் போலீஸ்சை அழைத்தேன்.  முதலில் போலீஸ் வரும் வரை குற்றத்தை ஒப்பு கொண்டு சிறை சொல்ல முடிவு செய்தேன், அந்த நேரத்தில் என் அம்மாவிடம் இருந்து போன் வந்தவுடன் என் முடிவை மாற்றினேன் என கூறி  அழுகையுடன் தனது வாக்குமூலத்தை முடிவு செய்தாள். நீங்கள் செய்த ஒரே தவறு உங்கள் கணவன் இறந்தவுடன் போலீஸ் ஸ்டேஷன்க்கு போன் போட்டது தான், அவர்கள் வந்து உங்கள் கணவரின் உடலை பிரேதபரிசோதனை செய்து பார்த்த போதே தெரிந்து விட்டது அவர் பாய்சன் சாப்பிட்டு இறந்து போனது. பிரேதபரிசோதனை முடிவு வந்தவுடன் ஒரு நாள் உங்களை பார்க்க நான் உங்கள் வீட்டிற்கு வந்தேன், ஆனால் நீங்கள் வீட்டில் இல்லை, உடனே போகலாம் என்று முடிவு செய்து கிளம்பும் போது என் கார் நின்ற இடத்தில ஒரு எலி செத்து இருந்தது, அதை பார்த்தவுடன் என் போலீஸ் புத்தி வேலை செய்ய ஆரம்பித்தது. உடனே உங்க வீட்டை சுற்றி பார்க்கும் போது தான் அந்த விஷ பாட்டிலை பார்த்தேன், அதில் விலையும்; மலர் மருத்துவனை பெயரும் போட்டு இருந்தது. நீங்கள் என்னிடம் சொன்ன கருகளைப்பிலும் அதே மலர் மருத்துவனை வந்தவுடன் அங்கு சென்று அங்கு இருந்த கம்ப்யூட்டர்ல் உங்கள் பெயர் பதிவு செய்ததும் நீங்கள் உங்களுக்கு வாங்கிய மருந்துடன் தான் இந்த விஷம் வாங்கியது உறுதியானது.  கேமராவில் அன்று வாங்கிய நபர்களை பார்க்கும் போது மேலும் உறுதியானது நீங்கள் விஷம் வாங்கியது என்று சொன்னார். இதை கேட்டதும் அவள் மேலும் மேலும் அழுதாள். இன்ஸ்பெக்டர் பலமாக சிரித்து கைதட்டி மகிழ்ந்தார், கவிதாவுக்கு ஒன்னும் புரியவில்லை.   நீங்கள் உங்கள் கணவருக்கு கொடுத்த தண்டனை மிக சரியானது, ஆனால் உன் கணவர் விஷம் குடித்து தான் இறந்துள்ளார், இருதய வலியால் இல்லை. உன்  கணவர் வேலை இல்லாமல்  இருந்த காரணத்தாலும் மேலும் நீங்கள் ஆசையாக உருவாக்கிய கரு கலைந்ததாலும் அவர் அதிக மனஉளைசல்களுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார், இது ஒரு கொலை இல்லை இன்று இந்த விசாரணையை இத்துடன் முடித்து கொள்கிறோம்.  நீங்கள் வழக்கம் போல உங்கள் வேலையையும் உங்கள் அம்மாவையும் பாருங்கள் என்று கூறி விடை பெற்றார். தேங்க்ஸ் என கூறினாள். இதற்கு எதற்கு தேங்க்ஸ்; இந்த பாரதி கண்ட புதுமை பெண் நீங்கள் என்று கூரியது மட்டுமில்லாமல் அவளுக்கு ஒரு மரியாதை வணக்கம் செய்து விட்டு நகர்ந்தார். கற்பு நிலையென்று சொல்ல வந்தார், இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்; வ்ற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும் வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம் பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்; எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி!     – பாரதியார் 8 மல்லிகை மணம் ரயிலை பிடிப்பதற்க்கு சென்னை போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஒரு வழியாக கஷ்டப்பட்டு எக்மோர் வந்து சேர்ந்தேன்; தற்செயலாக  போன் செய்யலாம் என்று நினைத்து எடுத்து பார்த்தால் 15 மிஸ்டு கால் இருந்தது.  உடனே வீட்டிற்கு போன் செய்தேன், எனக்கு பையன் பிறந்திருப்பதாக மாமனார் சொன்னார், உடனே மஞ்சுளா எப்படி இருக்கா மாமா என்று கேட்டேன்.  இருவரும் நலம், நீங்கள் பயப்படாமல் வாருங்கள் என்று மட்டும் சொன்னார்.  உடனே அருகில் உள்ள அடையார் ஆனந்தபவன் சென்று நிறைய சாக்லேட் மற்றும் சுவீட் வாங்கி கொண்டு ரயில் நிற்கும் பிளாட் பாரத்தை அடைந்தேன். ஒரு சில நிமிடங்களில் ரயிலும் வந்தது, உடனே ஒரு சிறுவனை போல ஆசைப்பட்டு  ஏறி  சீட்டில் அமர்ந்தேன்.  உடனே போன் மூலம் எனக்கு குழந்தை பிறந்ததையும், ஏதோ இந்த உலகத்தில் ஒரு பெரிய வெற்றி பெற்றவன் போல அறை கூவல்களை முகநூல், மெயில் மற்றும் ட்விட்டர் மூலம் உலகுக்கு பறைசாற்றி கொண்டு இருந்தேன் ரயில் புறப்பட்டதை கூட அறியாமல்.  தீடீர் என்று வண்டி நிற்கும் உணர்வு வந்தவுடன் லேசாக கண்ணாடி வழியாக வெளியில் பார்த்தேன். ஆம் ரயில் நின்று கொண்டு தான் இருந்தது, அது தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன். தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்டவுடன் ஒரு மங்கை எதிரில் நின்றாள்.  அவள் முகத்தை நான் பார்க்கவில்லை, முதலில் பார்த்தது அவள் எலுமிச்சை நிறம் உள்ள சின்ன இடையை தான்.  என்ன ஒரு கலர், நான் மட்டும் வைரமுத்து மாதிரி கவிதை எழுதுபவனாக இருந்தால் இந்த நேரத்தில் ஒரு பத்து கவிதையாவது எழுதியிருப்பேன் என மனதில் நினைத்து கொண்டேன்.  ஆனால் அப்படியும் எனக்கு ஒரு கவிதை தோன்றியது. கற்பனையில் கவிதை எழுதுவது அழகு நிஜத்தை கற்பனையில் எழுதுவது பேரழகு ஆம் இவள் பேரழகு தான் – மடியாத உடம்பில் நாம் அழகு மடியாத இடையில் இளமை அழகு இந்த கவிதை என் மனத்திரையின் முன் வந்து போனது, அப்போது தான் அவள் முகத்தை பார்த்தேன், நல்லா ரோஸ் கலர் பவுடர் போட்டு, உதடுக்கு சாயம் பூசி அதுவும் ஒரு செர்ரி பலம் போல சிவந்தும் இருந்தது.  அவள் சேலை தான் கட்டி இருந்தால், ஆனால் உடம்பில் உள்ள அங்கங்கள் அனைத்தும் கண்ணாடி போல எதிரில் உள்ளவர்களுக்கு தெரிவது போல இருந்தது.  ஒரு முறை அவள் மொத்த அழகையும் பார்த்து விட்டு ஒரு சின்ன சந்தேகம் வந்தது.  உடனே சந்தேகத்தை வெளியே காட்டாமல் ஒரு சுவீட் எடுத்து அவளுக்கு தந்து எனக்கு ஆண் பிள்ளை பிறந்த விசயத்தை அவளிடமும் கூறினேன். அவளும் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டு சுவீட்டை எடுத்தாள். அவளிடம் மெதுவாக கேட்டேன், நீங்க எங்க வேலை பார்க்கிறீர்கள்  என்று?  ஒரு நீண்ட சிரிப்புடன் நீங்களே கண்டுபிடியுங்கள் என்று கூறினாள். உடனே நான் ஒரு கம்பெனி பெயரை சொல்ல, அவள் இல்லை என பதிலளித்தாள், மறுபடியும் விமான பணி பெண் என கூற, நான் என்ன அவ்வளவு அழகா என எதிர் கேள்வி கேட்டாள்.  நீங்கள் ஒரு டாக்டர்? நான் டாக்டரா?? நல்லா இருக்குது உங்க வியூகம்.  ஓகே உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை, நான் என்னை பற்றி சில குறிப்புகளை தருகிறேன். அதை வைத்து நான் செய்யும் வேலையை உங்களால் கண்டு பிடிக்க முடியுதா என்று பார்க்கலாம் என்று கூறினாள்?   உடனே நான் சம்மதம்  என்று சொல்வது போல தலையை மட்டும் அசைத்தேன். உலகத்தில் உள்ள ஒரு மூத்த தொழில்; மாதவி செய்த தொழில், கற்பை பற்றி கலங்காத தொழில், இளைஞர் முதல் கிழம் வரை வரும் இடம், நான் ஒரு துறவி இல்ல, ஆனால் ஒரு துறவியால் கூட கொடுக்க முடியாத சந்தோசத்தையும், மன அமைதியையும் எங்களால் தர முடியும்.  நான் ஒரு டாக்டர் இல்ல, ஆனால் அடிக்கடி டாக்டரிடம் சென்று மருத்துவ பரிசோதனை செய்யும் ஒரு நோயாளியும் கூட; பெருத்த பண முதலைகள் முதல் அறிஞர் வரை என்னிடம் வந்தால், என் அழகிடம் சிறைதான் என்று கூறி விட்டு வாய்விட்டு சிரித்தாள். இன்னுமா கண்டுபிடிக்கவில்லை என்று கேட்டு விட்டு, எனது  பதிலை கூட எதிர்பார்க்காமல், அவளே அடுத்த குறிப்புக்கு சென்றாள்,  போலீஸ்க்கு பிடிக்காத வேலை, இளமை  உள்ள வரை மட்டும் செய்ய முடிந்த வேலை, அந்த காலத்தில் ராஜவீதிகளில் நடந்த தொழில், இன்று சில சிவப்பு நிற விளக்கு உள்ள வீடுகளில் மட்டும் யாருக்கும் தெரியாமல் ஆனால் தெரிய வேண்டியவர்க்கு மட்டும் தெரிந்து சில அழுகைகளுடன், சிலரின் தேவைகளுக்குமாக நடக்கும் தொழில் எது என்று கேட்டாள். ஓ அப்படின்னா நீ     நீ…..நீ…… நீ………….. நீங்க என்று ஒரு நீண்ட   இழுவை இழுத்து ஒரு பாலியல்  தொழிலாளியா? என்று கேட்டேன்.  ஆம் என்று சொல்லிவிட்டு கல கலவென்று சிரித்தாள்.  நீங்க எப்படி இந்த தொழிலில் என்று கேட்டேன்.  எல்லாரையும் போல நான் மட்டும் என்ன விதி விலக்கா? எதோ வெளிச்சத்தை தேடி வந்து வாழ்க்கையை முடிக்கும் ஈசல் போல தான் என் வாழ்க்கையும்.  சென்னையில் ஒரு வீட்டில் வேலை என்று சொல்லி அழைத்து வந்து இந்த கிணற்றில் விழுந்து விட்டேன். சரி ஒரு நாளைக்கு  எவ்வளவு நேரம் வேலை என்று கேட்டேன்?, அது கணக்கிட்டு சொல்ல முடியாது.  வாரக்கடைசியில் அதிகம் வேலை இருக்கும்.  வாரநாட்களில் கொஞ்சம் கம்மியாகவே இருக்கும்.  சில நேரம் சில அரசியல்காரர்கள் பங்களா சென்றால் இடைவிடாமல் வேலை இருக்கும், நிறைய அதிகாரிகள் வருவார்கள். ஆனால் நல்ல சாப்பாடு கிடைக்கும், சில அதிகாரிகள் என் கையிலும் கொஞ்சம் பணமும் தருவார்கள். வார இறுதியில் குடிகாரர்கள் தான் அதிகம், டார்ச்சர் தாங்க முடியாது என சொன்னாள். சே! உங்களுக்கு லீவே கிடையாதா என்று கேட்டேன்? ஏன் கிடையாது அது தான் கடவுளே பார்த்து மாதத்திற்கு மூன்று நாள் லீவு கொடுத்துள்ளார் என்று விரத்தியுடன் பதில் கூறினாள்; பதிலை கேட்டவுடன் என்னால் எதுவும் பேச முடியவில்லை.  ஒரு அரை  மணி நேரம் அமைதியாக இருந்தேன்; பின் எழுந்து சென்று ஒரு தம் போட்டுவிட்டு மறுபடியும் வந்தேன். என்ன ஒன்னும் பேசாமல் அமைதியாக வருகிறீர்கள் என்று மீண்டும் என்னை பேச்சுக்கு இழுத்தாள்; எனக்கு மனசு சிறிது லேசானது. அப்படி ஒன்னும் இல்லை என்று சொல்லிவிட்டு ஒரு மாதம் எவ்வளவு கிடைக்கும் என்று கேட்டேன். என்ன மிஞ்சி மிஞ்சி போனா ஒரு எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை கிடைக்கும் என்று கூறினாள். என்ன இவ்வளவு தானா என்று கேட்டேன்? இல்லை கிட்டதட்ட ஒரு முப்பதாயிரம் கிடைக்கும், புரோகர் கமிசன், போலீஸ் மாமுல், ஆட்டோ செலவு, மேக்கப் செலவு, மருத்துவ செலவு என உங்கள் வீட்டு மளிகை சாமான் லிஸ்டை போல ஒரு பெரிய லிஸ்டே உள்ளது என சலிப்புடன் கூறினாள். அதுவும் சில நேரம் போலீஸ் கேசில் பிடித்துவிட்டால் ஒரு சில ஆயிரம் தண்டமாபோகும், அது மட்டுமில்லாமல் ஒரு இரண்டு நாளைக்கு வேலையும் பார்க்கமுடியாமல் அந்த போலீஸ்காரர்கள் செய்யும் இம்சையை யாருக்கிட்ட சொல்ல என கோபத்துடன்  சொன்னாள். ஏன் இதை எல்லாம் நீங்க ஒரு பத்திரிகைகாரர்கள் கிட்ட சொல்ல கூடாது என்று கேட்டேன்?. ஓ! அது ஒன்று தான் குறைச்சல், நிறைய  பத்திரிகைகாரர்கள் வந்து எங்க வாழ்க்கையை கேட்டும் படம் பிடித்தும் அவர்கள் டிவியிலும் பேப்பரிலும் எழுதி பணம் சம்பாரிக்க தான் எங்க வாழ்க்கை கதை உதவுது என்று ஒரு வெறுப்புடன் சொன்னாள். இருவரும் தூங்கமல் பேசி கொண்டே இருக்கும்போது வண்டி திருச்சியை அடைந்தது, நான் மெதுவாக எழுந்து கீழே இறங்கி டீ வாங்கினேன், அவளும் பின்னாடியே கீழே இறங்கி வந்தாள்.  இருவரும் டீ வங்கி கொண்டு திரும்பும் போது ஒரு சிறுவன் பேப்பர் பேப்பர் என்று அந்த குளிரிலும் விற்று கொண்டு இருந்தான்.  அவனிடம் ஒரு பேப்பர் வாங்கி கொண்டு மீண்டும் ரயிலில். ஏறினோம்.   இப்ப தான் அவள் கிட்ட முதன் முதலா பெயர் என்ன என்று கேட்டேன்.  அவள் கல்பனா என்று கூறினாள்.  இங்கபாரு கல்பனா நான் இதுவரைக்கும் யாருக்கும் எந்த ஒரு அறிவுரையும்  சொன்னது கிடையாது. இப்பவும் உனக்கு சொல்லபோவதும் இல்லை.  ஆனால் நம்ம செய்கின்ற குற்றத்திற்கு இந்த சமுதாயத்தை குறை சொல்ல கூடாது.  இந்த பேப்பர் விற்கும் பையன் மட்டும்  சமுதாயத்தை குறை சொல்லி கொண்டு ஒரு திருட்டு தொழிலில் ஈடுபடலாம், ஆனால் அவன் அப்படி செய்யவில்லை. அவனுக்கும் அவன் குடும்பத்தில்  ஆயிரம் பிரச்னை இருக்கலாம்.  கடைசியாக ஒன்னு மட்டும் சொல்லுகிறேன்,  மறதியை போல ஒரு மாமருந்து இல்லை இந்த உலகத்தில், காலங்களை போல நம்ம காயத்திற்கு ஒரு களிம்பும் கிடையாது, ஒரு சினிமா பாடல் போல “காலங்கள் ஓடும்; இது கதையாக கூடும்; கண்ணீர் துளியின் ஈரம் காயும்” என்று சொல்லி விட்டு நிறுத்திவிட்டேன். ஒரு அரை மணி நேரம் அவள் எதுவும் பேசவில்லை, சில கண்ணீர் துளிகள் அவள் கண்களில் இருந்து வரமட்டும் காத்து கொண்டு இருந்தன.  கண்ணீர் துளிகள் வரும் முன் அவள் இறங்கும் மதுரை ஸ்டேஷன் வந்தது. அவள் தனது உடமைகளை எடுத்து  கொண்டு இறங்கும் போது மிக்க நன்றி என்று மட்டும் சொல்லி கொண்டு  கை குலுக்கினாள், கை குலுக்கிவிட்டு கையில் ஒரு முத்தம் இட்டு இறங்கி சென்றாள். அவள் தந்த அந்த ஒரு முத்தம் எனக்கு என் தங்கையிடம் இருந்து கிடைத்தது போல இருந்தது, அப்போதே நினைத்தேன் அவள் பரிசுத்தம் ஆகிவிட்டாள் என்று ஏனென்றால் அவள் இப்பொழுது தந்த முத்தம் சுத்தமாகவும், பரிசுத்தமாகவும் இருந்தது. அவள் இறங்கி சென்றவுடன் வாங்கி வந்த பேப்பரை முழுவதுமாக படித்து முடிப்பதற்குள் ஊர் வந்துவிட்டது. ஊருக்கு சென்றவுடன் எனது குழந்தைக்கும், மனைவிக்கும் மாறி மாறி முத்தம் தந்தேன்.  ஒரு நாலு நாள் ஊரில் இருந்து விட்டு மறுபடியும் சென்னை வந்தேன். சென்னை வரும் போது தான் யோசித்தேன், அவளிடம்  போன் நம்பர் கூட வாங்கவில்லை என்று. மறுபடியும் ஒரு மாதம் கழித்து மனைவியை அழைத்து வர ஊருக்கு சென்றேன், ஆனால் இந்த முறை நான் ஆபீஸ் வேலை விசயமா பெங்களூர் சென்று விட்டு  ஊருக்கு வந்தேன். பெங்களூர்லில் இருந்து எனது ஊருக்கு டைரக்ட் வண்டி எதுவும் கிடையாது, அதனால் மதுரை வரை புக் செய்து வந்து கொண்டு இருந்தேன். இந்த முறை என்னுடன் வந்தது ஒரு கல்லூரி பெண், வண்டி கிளம்பிய நேரத்தில் இருந்து ஒரே போன் மற்றும் மெசேஜ் தான், ஒரே சினுகல் வேற இதுல.  எதுவும் பேசாமல் எழுந்து சென்று ஒரு தம் அடித்து விட்டு மறுபடியும் பார்த்தேன், அதே சினுகல் தான்.  உடனே லைட் ஆப் பண்ணிவிட்டு தூங்க முயற்சி செய்து சிறிது நேரத்தில் உறங்கினேன். உறங்கியதில் பயண களைப்பு தெரியாமல் மதுரை வந்து சேர்ந்தேன்.   மதுரை வந்ததும் பெட்டிகளை எடுத்து கொண்டு ரயில்வே ஸ்டேஷன்க்கு வெளியே வந்தேன். நிறைய பெண்கள் மதுர மதுரமல்லி  மதுரமல்லி என்று கூவி கூவி அழைத்தனர்.  அதில் ஒரு பெண் தட்டு நிறைய மதுரை மல்லி வைத்து நடுவில் ஒரு ஆதி பராசக்தி போட்டோ ஒன்றும் வைத்திருந்தாள்; அது என்னை ஈர்த்தது. ரொம்ப நாளைக்கு அப்பறம் வீட்டுக்கு போறோம், அதுவும் மனைவிக்கு பிடித்த மதுரை மல்லி என்று நினைத்து கொண்டு ஒரு இரண்டு முழம் பூ தாமா? என்று கேட்டேன்; உடனே அந்த பெண்மணி நிமிர்ந்தாள், அவள் கழுத்தில் ஒரு சிவப்பு கயிறில் ஆதி பராசக்தி படம் இருந்தது; கொஞ்சம் நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தேன். அதே கல்பனா …….. ஆனால் கரிய முகத்துடன்; அவளிடம் எதுவும் பேசாமல் பூ வங்கி விட்டு வேகமாக நடந்தேன், மல்லிகையை விட அவள் செய்கை மணம் வீசியது. 9 காதல் அழிவதில்லை காவ்யா எழுந்திரு, நான் உனக்காக எவ்வளவு நேரம் காபி வைத்து கொண்டு காத்து கொண்டு இருக்கேன் தெரியுமா?  சண்டே அதுவுமா என்ன ஏழு மணி வரை தூக்கம்.  நேற்று நைட் சரக்கு அடித்த நானே கலையில் 6 மணிக்கு எழுந்து, பால் டிப்போ வரை சென்று  பால் வாங்கி வந்து காபி போட்டு முடித்து விட்டேன், உனக்கு என்ன தூக்கம். ஏன் ராகவா சண்டே ஒரு நாள் தான் கொஞ்சம் 10 மணி வரை தூங்க முடியும் அதுவும் உனக்கு பிடிக்கவில்லையா??  தினமும் காலையில் 7 மணிக்கே எழுந்து வேகமாக ஆபீஸ் போக வேண்டியுள்ளது, இந்த ஒரு நாள் கொஞ்சம் தொல்லை பண்ணாம இரு  என்று சொன்னாள். சரி நீ நல்லா தூங்கு மதியம் உனக்கு நான் இன்று என்ன சமைக்க என்று கேட்டான், வழக்கம் போல நீ காரம் அதிகம் இல்லாமல் வைக்கும் சிக்கன் செட்டிநாடு வை என்று சொல்லி விட்டு மறுபடியும் உறக்கத்திற்கு சென்றாள். ராகவன் வெளியே சென்று சிக்கன் வாங்கி வந்து வைத்து விட்டு, அவளை மெதுவாக எழுப்பினான்.  அவள் அப்போது  தான் கொஞ்சம் உறக்கத்தில் இருந்து எழுந்தாள்;  சிக்கன் வாசனை இப்பவே இழுக்குது என்று சொல்லி விட்டு  குளிக்க சென்றாள், ராகவன் பின்னாடியே சென்று பாத்ரூம் வாசலில் நின்று கொண்டு நானும் உள்ளே வரவா என்று கேட்டான், அவள் எதற்கு என்று கேட்டாள், சும்மா சோப்பு போடத்தான் என்று கூறினான்.  ஒன்னும் வேண்டாம் என்னக்கு சோப்பு போட தெரியும் என்று கூறிவிட்டாள்.  அவள் குளித்து முடித்தவுடன், நல்ல ஒரு சாப்பாட்டை அவளுக்கு பரிமாறினான்.  சாப்பிட்டு முடித்து விட்டு மதியம் நம்ம இரண்டு பேறும் ஒரு படத்துக்கு  போகலாம் என்று சொல்லி விட்டு, இன்டர்நெட்-ல் தேடி பிடித்து இரண்டு  டிக்கெட் சத்யம் தியேட்டர்லில் புக் செய்தான். 3 மணிக்கு தனது பைக் ஸ்டார்ட் செய்தான், எதிர் விட்டு அம்மா, ராகவா என்ன லீவு அன்றுமா வெளிய கிளம்பிட்ட என்று கேட்டாள்? இல்ல சும்மாதான் என் பொண்டாட்டியை ஒரு சினிமாவுக்கு கூட்டிபோறேன் என்று சொல்லி விட்டு, இரு காவ்யா என்று சொல்லி விட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான். எதிர் விட்டு அம்மா ஒரு சின்ன அழுகையுடன் இவனை கடந்து சென்றார்கள், காவ்யா; இந்த அம்மா எப்ப நான் வண்டியை ஸ்டார்ட் செய்து வெளியே கிளம்பும் போது என்னை பார்த்து அழுகிறார்கள், ஏன் என்று தெரியவில்லை என்று சொல்லிவிட்டு வண்டியின் வேகத்தை கூட்டினான். ஏய் இடுப்பில் இருந்து முதலில் உன் கையை எடு, எனக்கு ஓட்ட கஷ்டமா இருக்கு இல்ல; நாம் இரண்டு பேரும் எங்கயாவது விழுந்து விடுவோம்; சொன்னா கேளு காவ்யா ப்ளீஸ் காவ்யா என்று சொல்லி கொண்டே  ஒரு வழியாக சத்யம் தியேட்டர் வந்து அடைந்தான். ஏற்கனவே இன்டர்நெட்டில் தேடி பிடித்து ஒரு கார்னர் சீட் புக் செய்து இருந்தான், படம் முடியும் வரை அவள் பேசாமல் படத்தில் முழு கவனத்தோடு இருந்தாள், ஆனால் இவன் அவளிடம் மொத்த சில்மிசத்தை காட்டி கொண்டு இருந்தான். படம் முடித்தவுடன் இருவரும் புறப்பட்டு வீட்டை நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.  குளிரில் அவள் இவனை கட்டிகொண்டதால் ராகவன்  வண்டி ஓட்ட தடுமாறினான். ஒரு வழியாக வீட்டை வந்து அடைந்தான். வழக்கம் போல அந்த அம்மா வெளியில் தான் உட்கார்ந்து இருந்தது, என்னமா சாப்பிட்டாசா என்று கேட்டு கொண்டு காவ்யா என்ன இருந்தாலும் அந்த படத்தோட முடிவை மட்டும் என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை, அந்த டைரக்டர் ஏதோ புதுசா செய்ய முடிவு செய்து உயிருக்கு உயிரா காதலிச்ச அந்த இருவரையும் படத்தின் முடிவில் பிரித்து வைத்து இருக்ககூடாது, என்று சொல்லி கொண்டே கதவை திறந்தான். மறுநாள் காலையில் வேலைக்கு போகும் போது கதவை மூடிவிட்டு மாடி படியில் இருந்து இறங்கினான். என்னப்பா ராகவா வேலைக்கு கிளம்பியாச்சா என்று அந்த அம்மா கேட்டது, அதற்க்கு ஆம்மாம், காவ்யாவுக்கு தான் கொஞ்சம் உடம்பு சரியில்லை, கொஞ்சம் பார்த்துக்கோங்க என்று சொல்லி விட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான். அவன் சென்றவுடன் அந்த அம்மா வீட்டில் உள்ள கருமாரி படத்தின் முன்பு சென்று ஏன் இப்படி அந்த பையனை சித்திரவதை செய்கிறாய், அந்த பொண்ணு விபத்தில் இறக்கும் போதே இவன் உயிரையும் எடுத்து இருக்கலாமே என்று ஓவென அழுதாள். ஆம் காவ்யா இறந்து ஆறு மாதம் ஆகிவிட்டது.   10 வியாபாரம் ராம் தனது தந்தையுடன் மளிகை கடையில் வியாபாரம் பார்த்து வந்தான், வார இறுதி நாள்களில் இருவரும் சேர்ந்து கடையை அடைத்து விட்டு அருகில் உள்ள சின்ன ஊர்களில் போய் சந்தை போடுவார்கள். மகன் தந்தையிடம் கேட்டான், ஏன்பா நம்ம கடையில  இருந்தே விற்றால் நமக்கு லாபம் தானே, ஏன் இந்த வேகாத வெயிலில் வந்து சந்தை போட வேண்டும் என்று கேட்டான். இல்லப்பா நம்ம ஊரில் இருந்து கடை நடத்தி வந்தால் நமக்கு உலக பொருளாதாரம் பற்றி தெரியாமல் போகும், அது மட்டும்மில்லாமல் நமது வியாபார வட்டம் நம்ம சின்ன ஊரிலே முடிந்து போய்விடும், அதனால் தான் நான் வெயில், மழையை பொருட்படுத்தாமல் ஒவ்வொரு சனி கிழமையும் இங்கு வந்து கடை போடுகிறேன்.  அதுமட்டும்மில்லாமல் நம்ம கடைகளில் உள்ள சில உயர்ந்த தர பொருள்களை இந்த சந்தையில் விற்கும் போது அந்த பொருள்களை சின்ன ஏழையும் பயன்படுத்துவான், நமக்கும் அந்த பெரிய கம்பெனி பொருள் விற்பதால் அதிக லாபம் கிடைக்கும் என பேசிக்கொண்டே சந்தையை அடைந்தனர். இருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கடையை போட்டனர். வெயில் இறங்க இறங்க கூட்டம் சந்தையில் கூடியது, கிராம மக்கள் என்பதால் பலரும் பொருளை பேரம் பேசித்தான் வாங்கினார்கள்.  ராமுவிற்கு ஒன்றும் புரியவில்லை, நம்ம ஊரில் அப்பா ஒரு பைசா கூட குறைக்கமாட்டார், இங்க மட்டும் ஏன் குறைக்கிறார் என்றும் புரியவில்லை?  பிறகு கூட்டம் சிறிது குறைந்த பிறகு மெதுவாக தனது தந்தையிடம் கேட்டான், ஏன் அப்பா அவர்கள் கேட்கும் குறைந்த விலைக்கு பொருள்களை  விற்கிறீர்கள்? என்று கேட்டான். அதற்கு ராமுவின் அப்பா, இன்றைக்கு இதுவரை நமக்கு மொத்த வியாபாரம் சுமார் 2000 ரூபாய், இதுவே நம்ம ஊரில் இருந்தால் வெறும் 500 ரூபாய் மட்டும் தான் வியாபாரம் நடக்கும்.  இங்கே நான் 15% லாபம் வைத்து பொருள்களை விற்பேன், ஆனால் நமது கடையில் நான் 30% லாபம் வைத்து விற்பேன்.  நமக்கு ஒரே நாளில் வியாபாரம் 2000 ரூபாய் வியாபாரம் மற்றும் நிகர லாபம் 300 ரூபாய்;   அதுவே நமது ஊர் என்றால் 500 ரூபாய் வியாபாரமும் 150 லாபமும் தான் கிடைக்கும் என்று வியாபார நுணுக்கங்களை சொல்லி கொண்டு இருந்தார். இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது ஒரு பெரியவர் அங்கு வந்து தம்பி, அடுத்த மாதம் பொண்ணுக்கு கல்யாணம் வைத்திருக்கேன், அதற்கு தேவையான சமையல் பொருள்களை கொஞ்சம் குறைந்த விலையில் நீங்க தான் எற்பாடு  செய்து தரனும் என சொல்லிக்கொண்டு ஒரு ஆயிரம் ரூபாய் முன்பணமும் தந்தார். ராமுவின் அப்பா இருக்கட்டும் அய்யா, முதலில் நீங்கள் தேவையான பொருள்களை சொல்லுங்கள், நான்  பொருள்களை முதலில் எற்பாடு செய்கிறேன், பணம் பிறகு பெற்று கொள்கிறேன் என சொல்லிவிட்டார். ராம் வழக்கம் போல அப்பாவிடம், ஏன் அப்பா முன்பணம் வாங்கவில்லை என கேட்டான், ராம் உனக்கு ஒரு வியாபார தந்திரமும் தெரியவில்லை, அவர் இந்த ஊரில்லே உள்ள ஒரு பெரிய மனிதர், அவர் சொன்னா இந்த ஊரில் உள்ள அனைவரும் அவர் சொல்லுக்கு கட்டுபட்டு தான் நடக்கணும். எனக்கும் உனக்கு ஒரு சொந்த கடையை இந்த ஊரில் வைத்து கொடுக்க ரொம்ப நாள் ஆசை, அது தான் இன்று நான் முன்பணம் கூட வாங்கவில்லை.  ஒவ்வொரு வாரமும் நாம் இங்கு வந்து சந்தை போட்ட பயன் இது தான். அந்த பெரியவரை வைத்தே நமது சின்ன கடையை இந்த ஊரிலும் திறப்போம் என்று கூறிய தந்தையை வியப்புடன் பார்த்தான். அவன் வியப்பதை பார்த்துவிட்டு; ஒரு வியாபாரி எந்த நேரத்திலும் லாப நோக்கத்துடனும், வியாபார தந்திரதுடன் தான் சிந்திக்க வேண்டும் என்று கூறி விட்டு இருவரும் வியாபாரத்தை  முடித்துவிட்டு   நடந்தனர். அவர்கள் இருவரும் வேகமாக வண்டியை தள்ளி கொண்டு நடந்தனர், அப்போது அந்த ஊரில் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம் அப்பாவிடம் வந்து வணக்கம் சொல்லிவிட்டு, ஒரு நன்கொடை புத்தக்கத்தை நீட்டினர், உடனே ராம் அப்பா எதற்கு என்று கேட்டார். எங்கள் பள்ளி மழை காலத்தில் அதிகம் ஒழுகுகிறது, அதற்கு ஊரில் உள்ள வியாபாரிகள், முக்கியபுள்ளிகள், பண்ணையார் அவர்களை பார்த்து நன்கொடை வசூல் செய்து புதிய கீற்று மேய முடிவு செய்துள்ளோம் என்று கூறினார். உடனே தனது பையில் இருந்து ஒரு 500 ரூபாய் எடுத்து நன்கொடையாக கொடுத்தார்.  தலைமை ஆசிரியர் நன்றியுடன் பெற்று கொண்டார். சிறிது நேரம் நடந்தவுடன் ராம் அப்பாவை பார்த்து சொன்னான், அப்பா நீங்க நன்கொடை கொடுத்தது பின்னாளில் பள்ளியில் உள்ள சத்துணவு சமையல் பொருள்களில் சப்ளே செய்ய தானே என்று சிரித்து கொண்டே எல்லா தொழில் ரகசியமும் தெரிந்தது போல சொன்னான். இதை கேட்டதும் ராம் அப்பா கோபத்துடன் சொன்னார், வியாபாரத்தில் தர்மம் பார்க்க கூடாது; தர்மத்தில் வியாபாரம் பார்க்க கூடாது. ராம் வியாபாரம் என்பது ஒரு நாளில் கற்று கொள்வது கிடையாது என்று ஒரு முடிவுக்கு வந்தது மட்டும்மில்லாமல்  வியாபாரம் என்பது ஒரு அனுபவம்  எனவும் உணர்ந்தான். 11 பேரழகி ரவி தனது நண்பர்களுடன் ஷாப்பிங் மால் சென்றான், நண்பர்கள் அங்கு சென்றவுடன் ஒரு மொக்க படத்துக்கு போக எண்ணினார்கள், இவன் வர மறுத்து விட்டான்.  ஏற்கனவே அந்த மொக்க படத்தை நான் பார்த்துவிட்டேன், மறுபடியும் பார்ப்பது என்பது தெரிந்தே தற்கொலைக்கு முயற்சிப்பதற்கு சமம் என்று சொல்லிவிட்டு நான் இங்கேயே கொஞ்ச நேரம் சுற்றி கொண்டு இருக்கேன், மதியம் எல்லோரும் சேர்ந்து சாப்பிட போகலாம் என்று சொன்னான், அவர்களும் சரி என்று சொல்லிவிட்டு படம் பார்க்க சென்றனர்.  முதலில் கொஞ்ச நேரம் சுற்றிவிட்டு, ஒரு பர்கர் மற்றும் கோக் ஆர்டர் செய்து சாப்பிட்டு விட்டு மறுபடியும் ஒரு துணிக்கடையில் நுழைந்தான். கடைக்குள் சென்றவுடன்  ஒரு பிங்க் நிற சுடிதார் அவனை மிகவும் ஈர்த்தது, காரணம் அந்த பிங்க் நிற சுடிதாருடன் இவனுக்கு ஒரு பந்தமும், ஒரு கொசுவர்த்தி சுருள் போல ஒரு மெல்லிய வண்ண கதையும் உள்ளது. ரவியின் முன்னாள் காதலி திவ்யாவிற்கு பிங்க் நிறம் என்றால் மிகவும் பிடிக்கும்.  இருவரும் கல்லூரியில்  படிக்கும் போதே காதலித்தனர்.  பிறகு இருவரும் இந்த பெங்களூரில்  ஒரே கம்பெனியில் தான் வேலை பார்த்தனர், அப்பவும் இருவரும் காதலித்தனர்.  ஆனால் இருவரும் ஒரே மாதிரியான சம்பளத்தில் வேலை பார்த்தனர்.  திவ்யா கொஞ்சம் நல்ல வாழ்க்கை தரத்துடன் வாழ நினைத்தாள், இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு மற்றும் சிறு சிறு சண்டைகளும் நடந்தது. அப்பொழுது ரவியின் பொருளாதாரம் கொஞ்சம் தாழ்ந்து இருந்தது, திவ்யா எந்த நேரமும் பணம் மற்றும் ரவியின் வசதியை பற்றி ஒப்பீடு செய்து பேசுவது ரவிக்கும் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை, ஆனாலும் அவன் காதலை இழக்க தயராகவும்  இல்லை, மனதார காதலித்தான்; ஏனென்றால் இவன் மனதில் திவ்யா ஒரு பேரழகி. ஆம் திவ்யா ஒரு பேரழகி தான், நல்ல எலுமிச்சை கலர், அழகான மற்றும் நீளமான கூந்தல், வசீகரிக்கும் புன்னகை,  இஞ்சி இடையழகு, அளவான ஒப்பனை அடிக்கடி பேசும் நுனி நாக்கு இங்கிலீஷ் இது எல்லாம் சேர்ந்து அவளை ஒரு பேரழகியாக தான் காட்டியது. பேரழகி திவ்யாவிடம் இருந்து ஒரு நாள் இவனுக்கு பேரதிர்ச்சி  வந்தது,  காலையில் ஆபீஸ் வந்ததும் இவனிடம் தனது கல்யாண பத்திரிக்கையை தந்தாள்.  இவன் வாங்கி பார்த்தவுடன் சினிமாவில் பார்ப்பது போல பல மின்னல்களும், இடியும் இவன் இதயத்தை தாக்கியது போல உணர்ந்தான்.  எதுவும் பேசாமல் பத்திரிக்கையை வாங்கி கொண்டு மாலையில் உன் கூட கொஞ்சம் நேரம் பேச வேண்டும் என்று மட்டும் கூறினான். அவள் அதற்கு சரி, நாம் வழக்கம் போல சந்திக்கும் பீச் ரெஸ்டாரன்ட் வந்துவிடு என்று சொல்லி விட்டு சென்றுவிட்டாள். மாலையில் அவள் வந்தவுடன், ஏன் இந்த முடிவு என்று கேட்டான்.  நீ நல்ல சம்பளம் வாங்கவில்லை, கல்யாணத்திற்கு  பிறகு நான் வேலைக்கு வர விருப்பமில்லை.  நீ வாங்கும் சம்பளத்தில் எனது கனவுகளுக்கு நீர் ஊற்ற முடியாது, அதனால் தான் இந்த முடிவை எடுத்தேன் என்று கூறினாள்.  இவன் பதில் ஏதும் கூறாமல் இருந்தான், அவளே மறுபடியும் தொடர்ந்தாள், நீ மட்டும் உனக்கு வரக்கூடிய மனைவி நல்ல அழகான பெண்ணாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் போது நானும் அவர் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தது தப்பு இல்லை என்றும் நாம் நல்ல நண்பர்களா இருப்போம் என்று சொல்லிவிட்டு சென்றாள். அந்த வேதனையில் குடிக்கவும் புகைக்கவும் ஆரம்பித்தான், அந்த அலுவலகத்தில் இருந்து வெளியேறி பல கம்பெனி மாறினான். சம்பளம் மட்டுமில்லை ரவியின் வயதும் ஏறியது, ஒருவழியாக அவன் குடும்பத்தாரின் தொடர் நச்சரிப்புகளுக்கு முடிவாக 33 வயதில் கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்தான். இவன் எதிர்பார்த்த அளவுக்கு எந்த வரணும் அமையவில்லை, இறுதியில் ஒரு கிராமத்து பட்டதாரியான ஒரு பெண்ணை ரவியின் வீட்டில் முடிவு செய்தார்கள்.  இறுதியில் வேண் டா விருப்பாக ரவியும் சம்மதம் தெரிவித்தான்.   ரவியின் மனைவி  ஒன்றும் அவ்வளவு கலர் இல்லை, நுனி நாக்கு ஆங்கிலமும் இல்லை,  நீள கூந்தலும் இல்லை, எப்பொழுதும் மிடுக்கான உடைகள் உடுத்துவதும் இல்லை.  எப்பொழுது வீட்டிற்கு சென்றலும் ஒரு நைட்டி அல்லது சீலையை இடுப்பில் ஏற்றி கட்டி அடுப்படியில் வேலை செய்வது என இருப்பாள்.  ஆனால் ரவியிடம் எந்த ஒரு சண்டையும் போடாமாட்டாள். ரவி வாரம்  ஒருமுறை வீட்டில் வைத்தே குடிக்கவும், புகைக்கவும் செய்வான், அவள் ஒரு வார்த்தை கூட கேட்கமாட்டாள்.  ஒவ்வொரு நாளும் ரவிக்கு பிடித்த உணவுகளை சமைத்தும், இரவில் தன்னையே பரிமாறியும் அவனை சந்தோசமாக வைக்க முற்பட்டாள், ஆனால் ரவியின் மனதில் அவள் எந்த ஒரு தாக்கத்தையும் எற்படுத்தவில்லை. ஒருவழியாக வருடங்கள் ஓடின, இவன் மறுபடியும் பெங்களூரில் வேலை கிடைத்து வந்தான்,  ஆனால் ரவி இன்னுமும் அவன் மனைவி  மற்றும் குழந்தைகளை வெளியே அழைத்து செல்வது கிடையாது.   எப்பொழுதும் தனியாக நண்பர்களுடன் தான் வாரவிடுமுறைகளை களி(ழி)ப்பான், தனது மனைவிக்கு வெளியே தனியாக செல்ல அனுமதியும் காசும் மட்டும் கொடுத்துவிடுவான். ஒரு வழியாக சுருள் படம் முடிந்தது, இவன் ஒவ்வொரு சுடிதாரா  பார்த்துகொண்டு இருக்கும் போது ஒரு பெரிய உருவம் இவன் தோளில் தட்டி ரவி நீ எப்படி பெங்களூர்? என்று கேட்டது. இவனுக்கு மிகவும் பழக்கமான குரல் ஆனால் உருவம் பொருந்தாத காரணத்தினால் சில நிமிடம் பேசாமல் நின்றான்.  என்ன ரவி யாபகம் இல்லை நான் தான் உன் திவ்யா என்று அவள் சொல்ல. நீ கொஞ்சம் சதை போட்டதால் அடையாளம் தெரியவில்லை என்று சொன்னான். மனதிற்குள் நீ என் திவ்யா இல்லை, பொதிமுட்டை திவ்யா என்று மட்டும் சொல்லிகொண்டான். ஆமா ரவி வீட்டில்  வேற வேலை இல்லை; அதனால் சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கி விடுவேன், அது தான் கொஞ்சம் வெயிட் போட்டுவிட்டேன். இதுவா கொஞ்சம் வெயிட்; பேரழகி திவ்யாவை, பொதிமுட்டை  திவ்யாவுடன் மனதிற்குள் ஒரு ஒப்பீடு செய்தான், நல்ல வேலை நான் தப்பிச்சேன் என்றும் நினைத்து கொண்டான். இருவரும் தங்கள் திருமண வாழ்க்கையை  பற்றி கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தனர், அவள் விடைபெறும் போது இந்த பணக்கார வாழ்க்கை எனக்கு மிகவும் சலிப்பாக உள்ளது என்று சொன்னாள், இவன் அதை பற்றி எதுவும் சொல்லாமல் ஒரு புன்னகை தந்து விட்டு மறுபடியும் சுடிதார் பார்க்க முடிவு செய்தான். இப்பொழுது மறுபடியும் அந்த பிங்க் நிற சுடிதார் பார்த்து வாய் விட்டு சிரித்தான். அவள் மனைவிக்கு  ஒரு சந்தன நிறத்தில் ஒரு சுடிதார் தேர்வு செய்து கற்பனை செய்து பார்த்தான், இப்பொழுது ரவியின் மனைவி ஒரு பேரழகியாக  தெரிந்தாள், நம்ம குடிப்பதை பற்றி ஒன்னும் கேட்பது இல்லை, கோபப்பட்டு திட்டும் போதும் ஒரு வார்த்தை மறுத்து பேசுவது இல்லை, எங்கேயும் வெளியே அவளை அழைத்து செல்வதும் இல்லை,  தனக்கு வேண்டியதை சரியான நேரத்தில் தருவது, கல்யாணமாகி இரண்டு பிள்ளை பெற்றபின்னரும் இன்னும் வெயிட் போடாமல், வீட்டு வேலை எல்லாம்  செய்து குழந்தைகளையும்  நன்றாக பராமரித்து கொள்ளும் தனது  மனைவி ஒரு பேரழகி என்று முடிவு செய்து நண்பர்கள் வருகைக்காக காத்து இருக்காமல்,  புறஅழகை விட அக அழகே முக்கியம் என நினைத்து, புது சுடிதாருடன் வீட்டிற்கு விரைந்தான் தன் பேரழகியை காண. 12 அல்வாவும் மல்லிகைபூவும் ராஜாவுக்கும் சுகந்திக்கும் கல்யாணம் ஆகி சுமார் ஒன்றரை வருடங்கள் இனிதே ஓடின.  இரண்டு ஆண்டுகள் சந்தோசமாக புதுமண வாழ்வை அனுபவித்த பிறகு குழந்தை பெற்று கொள்ள இருவரும் முடிவு செய்தனர்.  எப்ப விசேசம் என்று ஆறு மாதம் சென்ற பின்பு, மெதுவாக இருவர் வீட்டிலும் கேட்க ஆரம்பித்தனர்.  இந்த சமூகத்தில் திருமணம் என்பது இருமணம் சார்ந்த வாழ்க்கை முறை என்பதை தாண்டி தலைமுறை விருச்ச ஆணிவேரே இந்த திருமண பந்தம் என புரிய இருவருக்கும் ஒருவருடம்  ஆனது. சுகந்தி கருவுறும் வரை அவள் மாமியாரும், நாத்தனாரும் அவளை குடும்ப உறுப்பினராவே ஏற்று கொள்ளவில்லை. ஒரு வருடம் கழித்து அவள் கருவுற்ற செய்தி கேட்ட பின்பு தான் மாமியாரும், நாத்தனாரும் சுகந்தியின் மீது பாச மழையை பொழிந்தனர்.  அப்போது தான் சுகந்தி தாய்மையின் அங்கீகாரம் மற்றும் தலைமுறை விருத்தி முக்கியத்துவத்தை உணர்ந்தா ள். இருவரும் எதிர்பார்த்த அந்த நாளும் நெருங்கியது, அது தான் சுகந்தியின் பிரசவ நாள், எல்லோரும் நல்ல படியாக தாயும், சேயும் பிறக்க பிராத்தனை செய்யும் போது சுகந்தியின் மாமியார் மட்டும் நல்ல அழகான ஆண் குழந்தை பிறக்க பிராத்தனை செய்தாள்.  ஆண்டவன் நமக்கு கொடுக்க முடிவு செய்திருப்பதை, யார் பிராத்தனை மூலம் மாற்ற முடியும்?? எதுவாக இருந்தாலும் அது ஆண்டவன் கொடுக்கும் பரிசு என்பது சுகந்தியுன் எண்ணம். இதில் இவர்கள் ஆண்டவனை வேறு தொந்தரவு செய்து கோரிக்கைகளை வைக்கிறார்கள் என எண்ணிகொண்டாள். சுகந்திக்கு விதிக்கப்பட்டதோ பெண் குழந்தை முதலில் மாமியார் ஒரு மாதிரியாக முகத்தை வைத்தாள், சுகந்தியின் மாமனார் தான் ஆதரவுகரத்தை முதலில் நீட்டினார், ஏன்னென்றால் பிறந்த குழந்தையின் நட்சத்திரமும், அவரின் அம்மாவின் நட்சத்திரமும் ஒன்றாக இருந்தது.  அதுமட்டுமில்லாமல் தனது பேத்திக்கு தனது அம்மா பெயர் வருகின்ற மாதிரி அமிர்தஸ்ரீ என்று பெயரும் அவரே வைத்தார்.  வேற வழியில்லாமல் மாமியார், நாத்தனார் அனைவரும் அமிர்தஸ்ரீயை ஏற்று கொண்டனர்.  பிரசவ வலி, மாமியார் நாத்தனார் குடசல்களை மறக்கவே சுகந்திக்கு சில வருடங்கள் ஓடின.   அமிர்தஸ்ரீ 2 வயதை கடந்தவுடன் மறுமடியும் மாமியார், நாத்தனார் அவர்களின் வேலைகளை ஆரம்பித்தனர்.  இன்னுமோர் பிள்ளை  பெற்றுகொடு அதுவும் ஆண் பிள்ளையாக என்று தினமும் ஜாடை மாடையாகவும், சில நேரங்களில் நேரிடையாகவும் கேட்க ஆரம்பித்தனர். சுகந்திக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, தினமும் இரவில் இருவரும் இதை பற்றியே தீவரமாக பேசினர், நம்ம தாத்தா பாட்டி காலத்தில் வீட்டுக்கு 12 பிள்ளைகள் என்பதுகூட சகஜமான விஷயமாக இருந்தது, ஆனால் இப்ப நம்ம அப்பா அம்மா தலைமுறையில் நான்கு முதல் இரண்டு குழந்தைகளாக குறைந்துவிட்டது.  இப்ப நம்ம காலத்தில் இன்றைய பொருளாதாரச் சூழலில் ஒன்றை வளர்ப்பதே பெரிய விஷயம் என்று நினைக்கும் படி உள்ளது. ராஜாவுக்கு இன்னொரு குழந்தை பெற்றுகொள்ள கொஞ்சம் கூடவிருப்பமில்லை.  அவன் எல்லாதுக்கும் பேப்பர்ல கணக்கு எழுதியே பேனா மையை காலி செய்பவன், அவன் இன்னொரு குழந்தை என்றவுடன் இரண்டு வருடமாக செலவு செய்த பால்பவுடர் தான் அவன் நினைவுக்கு முதலில் வந்தது.  வேண்டவே வேண்டாம் என்று முடிவு செய்தான். பிரச்சனை முற்றி கொண்டே போனது, பாசமாக இருந்த மாமியார் மருமகள் இப்ப வீட்டில் பேசுவது கிடையாது, நாத்தனாரும் அப்படியே.  இவளுக்கு எப்போதும் ஆதரவு கரம் நீட்டும் மாமனாரும் ஒரு மருந்துக்கு கூட சுகந்திக்கு ஒரு ஆறுதல் கூட சொல்லவில்லை.   ஏதோ குடும்பத்தில் ஒரு இறப்பு நிகழ்ந்தது போல ஒரு மயானஅமைதி நாள் முழுவதும் நிலவியது. பிறகு மாமியாரும், மாமனாரும் கொஞ்சம் கொஞ்சமாக அமிர்தஸ்ரீயிடம் இருந்தும் விலக ஆரம்பித்தனர்.   இப்போது தான் இருவருக்கும் கொஞ்சம் கொஞ்சம் பயம் வர ஆரம்பித்தது. ராஜா ஒரு நாள் மாலையில் அவன் அப்பா செல்லும் பார்க்கிற்கு சென்றான், அங்கு அவன் அப்பா அப்பொழுது அவர் நண்பருடன் நடை பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். ராஜாவை பார்த்தவுடன் இருவரும் குசலம் விசாரித்துவிட்டு அவர்களது நடை பயிற்சியில் கவனத்தை திருப்பினர்.  ராஜா பொறுமையிழந்து அவர்கள் நடை பயிற்சியையும், குழந்தைகள் விளையாடுவதையும் பார்த்துகொண்டு இருந்தான்.   எல்லா பிள்ளைகளும் இந்த உலகத்தை மறந்து சந்தோசமாக விளையாடி கொண்டு இருந்தனர்.  ஒவ்வொரு குழந்தையும் மகிழ்ச்சியாகவும் அதே நேரத்தில் மற்ற குழந்தைகளுடன் விட்டு கொடுத்து  விளையாடுவதையும் பார்த்தான். அப்பா நடைபயற்சி முடித்தவுடன் அவரிடம் சென்று, ஏன் இன்னொரு பிள்ளை பெற்று கொள்ளாதற்கு எங்களுடன் நீங்கள் பழகாமல் விலகுகிறீர்கள் என்று கேட்டான். ராஜா உனக்கு அப்பறம் நம்ம தாத்தா விசுவநாதன் தலைமுறை முடித்து போக கூடாது, அதற்கு தான் நான் கொஞ்சம் கடுமையாக இருக்கேன்.  உங்க சித்தப்பாவுக்கு இரண்டும் பெண் பிள்ளைகள், உங்க பெரியப்பாவிற்கும் நான்கும் பெண் பிள்ளைகள், எனக்கு மட்டும் தான் நீ ஒரு ஆண் பிள்ளை, இப்ப நீயும் ஒத்த பெண் பிள்ளையோடு நிறுத்திவிட்டால் நம்ம தலைமுறை எப்படி விருச்சம் அடையும், என் கண் முன்னே நம் தலைமுறை வேர் அழிவதை எப்படி என்னால் தாங்கிக்கொள்ள முடியும் என்று கூறிவிட்டு கண்ணீரை துடைத்தார்.  நம்ம குலம் விருத்தி அடைவது உன் கைகளில் மட்டும் தான் உள்ளது, யோசித்து ஒரு நல்ல முடிவு எடு என்று சொன்னார். இதில் யோசிக்க என்ன இருக்கிறது அப்பா, எந்த குழந்தை பிறக்கும் என்பது என் கையிலோ அல்லது சுகந்தி கையிலோ இல்லை.  இந்த  கம்ப்யூட்டர் காலத்தில் போய் ஆண் பிள்ளை வேண்டும் என்பது ஒரு மடத்தனம், என்னை பொருத்தவரை ஆண் பிள்ளையோ, பெண் பிள்ளையோ இரண்டுமே குடும்ப சொத்தும் வாரிசும் கூட. இந்த பார்க் வந்த பிறகு தான்  எனக்கு ஒன்னு மட்டும் புரிந்தது, அமிர்தஸ்ரீ கூட விளையாட ஒரு குழந்தை அவசியம் என்று, அவளுக்காக நான் ஒரு குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்துவிட்டேன், அவளும் எத்தனை நாள் தான் உங்களிடம் அன்பை எதிர்பார்த்து காத்து கிடக்க முடியும், அவளுக்கும் இங்கு உள்ள சிறுவர்கள் போல வீட்டில் விளையாட ஒரு குழந்தை வேண்டும் என தீர்க்கமாக சொன்னான்.  ராஜாவின் அப்பா ஒரு வார்த்தை கூட பதில் பேசாமல் வீட்டை நோக்கி நடந்தார். ராஜா பால்பவுடர் கணக்கு எதுவும் மனசில் போடாமல் கடைத்தெருவுக்கு சென்று அல்வாவும் மல்லிகைபூவும் வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்தான், அவன் கையில் உள்ள அல்வா மற்றும் மல்லிகைப்பூவை பார்த்து ராஜாவின் அப்பா சந்தோசப்பட்டார்.   13 குலதெய்வம் கடந்த ஒரு வருடமாவே சரவணன் நடத்தி வந்த பலகார கடை, பாத்திர கடை அனைத்தும் நட்டத்தில் நடக்க ஆரம்பித்தன; சரவணன் உடல்நிலையும் சரியாக இல்லை, சர்க்கரை வியாதி, கால் வலி என்றும் அவதி பட ஆரம்பித்தான்.  அது மட்டுமில்லாமல் குடும்பத்தில் நிறைய சண்டைகள் இவனுக்கும் மனைவிக்கும் இடையே, இது எல்லாம் போதாது என்று பூர்வீக சொத்து ரூபத்தில் பங்காளி பிரச்சனை வேறு வந்தது.  சரவணன் பல பிரச்சனைகளால் திக்கி திணறினான். என்ன செய்யலாம் என்று யோசித்த போது தான் அவன் குடும்ப ஜோசியர் ஜோதிட சிகாமணி சிங்காரம் நினைவுக்கு வந்தார், அவரிடம் சென்று தன் ஜாதகத்தை காட்டி பரிகாரம் கேட்கலாம் என்று முடிவு செய்தான். அவர் இவன் ஜாதகத்தை அலசி பார்த்துவிட்டு உனக்கு இப்ப கேது திசை நடக்குது; ராகுவும் சரியான இடத்தில் இல்லை, அதனால் எந்த ஒரு காரியம் செய்யும் முன் பல தடவை யோசித்து செய்ய வேண்டும்.  ஒரு முறை உங்க குலதெய்வ கோவிலுக்கு சென்று வந்தால் கொஞ்சம் பிரச்சனையில் இருந்து தப்பலாம், ஆனால் முழுவதும் தப்ப முடியாது என்று கூறிவிட்டார். சரி என்று சொல்லிவிட்டு, ஏற்கனவே குடும்ப சூழ்நிலை சரியில்லை, இதுல அவளை  எல்லாம் கூட்டி கொண்டு போக முடியாது என மனதில் நினைத்து கொண்டு தனியாக போக முடிவு செய்தான்.  அய்யனார் இவன் குலதெய்வம்; அதுவும் திருநெல்வேலி அருகில் உள்ளது. இவன் கோவில்லுக்கு சென்று சுமார் ஒரு ஐந்து வருடம் ஆயிற்று.  சரி ரொம்ப நாள் கழித்து போகிறோம், வருகின்ற அம்மாவாசை பூஜைக்கு போக முடிவு செய்தான். மாதந்தோறும் அம்மாவாசை  இரவில் அங்கு பெரிய படையில் இட்டு அய்யனாருக்கு ஒரு பூஜை நடக்கும், தாயாதிகள் சில பேர் மட்டும் இந்த பூஜையில் கலந்து கொள்வார்கள்.  மகாளய அம்மாவாசை பூஜை தான் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். மதுரையில் இருந்து பஸ்சில் திருநெல்வேலிக்கு போகும் போது  பழைய நினைவுகள் இவன் நினைவுக்கு வந்தன. ஒருவழியாக  திருநெல்வேலியை அடைந்து மதியம் சாப்பிட்டுவிட்டு, ஒரு டவுண்பஸ் பிடித்து குலதெய்வ கோவிலுக்கு சென்றான்.  பஸ்சில் இருந்து இறங்கி வயக்காட்டு பக்கமாக நடந்தான், போகும் போது  இவன் பால்ய நண்பன் குமாரை பார்த்தான்; பார்த்தவுடன் வியப்படைந்தான்.  ஐந்து வருடம் முன்பு பார்க்கும் போது கஞ்சிக்கு வழியாமல் ஒரு கிழிந்த சட்டை போட்டு ஊர் சாவடியில் படுத்து கிடந்தவான் தான் இந்த குமார்.  இப்ப பார்த்தால் வெள்ளையும் சொள்ளையும் மட்டும் இல்லாமல், கழுத்து நிறைய தங்க சங்கலியும் மின்னியது. என்ன குமாரு ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்ட என்று கேட்டான். என்ன சரவணா இந்த பக்கம் என்று இவன் கேள்விக்கு பதில் கூறாமல்  மறு கேள்வி கேட்டான்? ஏன் நான் உன்னை பார்க்க வர கூடதா? அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை?  ஒரு ஐந்து வருடமா நீ கோவில் திருவிழாவுக்கு கூட வரவில்லை அதனால் தான் என இழுத்தான். வியாபாரம் ஒன்னும் சரியில்லை, குடும்பத்திலும் ஆயிரம் பிரச்னை, அது தான் இந்த பக்கம் தலை வைக்க முடியவில்லை. உனக்கு வியாபாரம் எப்படி என்று கேட்டான். எதோ ஆண்டவன் புண்ணியத்தில் இப்ப வியாபாரம் நல்ல போகுது.  அக்கம் பக்கம் யாரும் வருகிறார்களா என்று பார்த்து விட்டு, எல்லாம் இந்த ஒரு மோதிரத்தால் தான் என்று சொல்லிவிட்டு தன் கையை கட்டினான். இது என்ன ராசிக்கல் மோதிரமா என்று கேட்டான் சரவணன் ஆம் இது ஒரு விலை உயர்ந்த ராசிக்கல் மோதிரம், இதற்க்கு பெயர் நாகரத்தினம் என்று கூறிவிட்டு மறுபடியும் அக்கம் பக்கம் சுற்றி பார்த்து விட்டு ஒரு ரகசியம் சொல்றேன் என்று இவன் காதில் ஒன்றை சொன்னான்.   பாம்புகளிடத்தில் நாகரத்தினம் என்னும் ஒரு சிவப்புக் கல் இருக்கும், அதுக  அம்மாவாசை போன்ற நாள்களில் இரவுநேரத்தில் இரை தேடுவதற்கு வசதியாக இதைப் வெளியில் வைத்து விட்டு அந்த வெளிச்சத்தில் இரை தேடும்.  ஒரு நாள் அம்மாவாசை அன்று இரவு குளத்துக்கு போகும் போது எனக்கு ஒரு பெரிய நாகரத்தினகல் கிடைத்தது இதை யாரிடமும் சொல்லாதே என்றும் கூறினான்.   அதுமட்டுமில்லாமல் அந்த கல்லை நான் அதிக விலைக்கு விற்று விட்டேன், ஒரு சிறிய அளவு கல்லை என் விரலில் மோதிரமாக போட்டு கொண்டேன். நாகரத்தினத்தை அணியும் ஒருவனுக்கு விஷத்தினாலோ நோய்களினாலோ ஆபத்து வராது. அவனது வீட்டில் குபேரன் காசு  பொழிந்து வளம் குவிப்பான். இந்த நாகரத்தினத்தின் மகத்தான சக்தியால் எதிரிகளிடம் இருந்தும் தப்பிக்கலாம் என்றும் கூறினான்.  இருவரும் கொஞ்சம் நேரம் வேற வேற விசயங்களை பேசிக்கொண்டு இருந்துவிட்டு இறுதியில் நான் குலதெய்வ கோவிலுக்கு வந்தேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினான். இரவு அம்மாவாசை பூஜையில் கலந்து கொண்டு, மனமுருக அய்யனாரை பிராத்தனை செய்தான், பூஜை முடியவே இரவு 2 மணி ஆனதால் கோவிலில் தூங்கினான். அதிகாலையில் எழுந்து வயக்காட்டு பக்கம் நடந்து வரும் போது தான் பார்த்தான் குமார் இறந்துகிடப்பதை; ஊரே அதிகாலையில் கூடி நின்று வேடிக்கை பார்த்தது, குமாரின் காலுக்கடியில் ஒரு பாம்பும் அடிபட்டு இறந்துகிடந்தது.  குமார் கைகளில் சாணியும் ஒரு பாம்பை அடித்த ஒரு கம்பும் இருந்தது.   வாரம் வாரம் தவறாமல் பாம்பு புற்றுக்கு பால் வார்பார்; அது மட்டுமில்லாமல் நாகரத்னகல் வேற கையில் போட்டு இருந்தார், இருந்தும் பாம்பு அவர் உயிரை பலிவாங்கிவிட்டது என்று ஊர்காரர்கள் பேசிக்கொண்டு இருந்தது அவன் காதில் கேட்டது, உடனே அவனுக்கு நேற்று குமார் சொன்ன நாகரத்தினகல் நினைவுக்கு வந்தது. குமார் இறந்த இடங்களை சுற்றி சுற்றி நோட்டம் விட்டான், ஒரு இடத்தில் ஒரு சிறிய கல் போன்ற சாணிகுவியலை பார்த்தான்.  உடனே யாருக்கும் தெரியாமல் அந்த சாணி குவியலை எடுத்து பையில் போட்டு கொண்டான். நண்பனின் இறுதி சடங்கில் கூட கலந்து கொள்ளாமல் உடனே ஊருக்கு திரும்பினான்.   திருநெல்வேலி வந்து அடைந்ததும் அந்த சாணியை கழுவினான்; நாகரத்தினகல் மின்னியது, அவன் கண் கூசியது.  உடனே திருநெல்வேலியில் உள்ள ஒரு பொற்கொல்லர், வீட்டிற்கு சென்று அந்த கல்லை கொடுத்து விலை பேசினான்; ஒரு வழியாக அந்த கல்லை பல லட்சங்களுக்கு விற்றான்.  இவனுக்கும் அதில் ஒரு சின்ன மோதிரமும் செய்து கொண்டான், ஒரு நாள் முழுவதும் சந்தோசமாக இருந்துவிட்டு மறுநாள் ஊருக்கு கிளம்பினான். ஒரு சில மாதங்கள் முதலில் கொஞ்சம் பழைய கடன்களை அடைத்தான், வேறு சில தொழில்களிலும் சிந்தனையை திருப்பினான்.  மோதிர ராசியோ என்னவோ இவன் மனைவியும் இப்போது சண்டை சச்சரவு இல்லாமல் பழக ஆரம்பித்தாள். இவனது பண செழிப்பை பார்த்து இவன் மனைவி எந்நேரமும் பாச மழையும் பொழிந்தாள்.  ராசிக்கல் வந்த நேரம் கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியது.  இவனும் கையில் இருந்த பணத்தில் புது புது வியாபாரங்களை தொடங்கினான்.  அனைத்திலும் இவனுக்கு வெற்றியே கிடைத்தது. புதிதாக சில வீடு மற்றும் தோட்டங்களை வாங்கினான், இவன் ஊரில் இருக்கும் ஒரு பாம்பு புற்றுக்கு ஒவ்வொரு வெள்ளி கிழமையும் சென்று பால் ஊற்றி வழிபடுவான். அது மட்டும்மில்லாமல் ஒவ்வொரு மாதமும் அன்னதானமும் செய்தான்.  வியாபாரம் பல மடங்கு பெருகியது, மறு வருடம் குடும்பத்துடன் குல தெய்வ கோவில் சென்று வழிபாடு செய்து விட்டு, கோவிலுக்கு ஒரு மணியும், அய்யனாருக்கு ஒரு வேலும் சாத்திவிட்டு வந்தான். குலதெய்வ வழிபட்டால் மன நிறைவு அடைந்ததாக மனைவியிடம் சொன்னான்; ஆனால் ஒரு முறை கூட தப்பி தவறி கூட ராசிக்கல் மோதிரம் பற்றியோ நாகரத்தினம் பற்றியோ யாரிடமும் இவன் சொல்லவில்லை; அதை ஒரு தெய்வ ரகசியமாகவே அவன் மனதிற்குள் மட்டும் வைத்து கொண்டான். இப்படியே இரண்டு வருடம் ஓடியது, பணம் பெருக பெருக இவன் ஒரு துறவி போலவே மாறினான்; எந்த நேரமும் ஏதாவதொரு கோவிலுக்கு செல்வதும், ஒவ்வொரு கோவிலுக்கும் நன்கொடை வாரி வழங்குவதும் என இருந்தான். மறுவருடம் குலதெய்வவிழா கொடை கொடுக்க மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனது காரில் திருநெல்வேலியை நோக்கி வண்டியில் சென்று கொண்டு இருந்தான், போகும் வழியில் கோவில்பட்டி அருகில் மதிய உணவை முடித்துக்கொண்டு சர்வருக்கு 50 ரூபாய் டிப்ஸ் தந்து விட்டு மறுபடியும் பயணத்தை தொடர்ந்தனர்.     புறவழி சாலை வழியாக திருநெல்வேலியை நெருங்கும் போது; சாலையில் கிடந்த ஒரு கயிறை பாம்பு என நினைத்து போட்ட தீடிர் பிரேக்கால் வண்டி நிலை குலைந்து மிக பெரிய விபத்தில் முடிந்தது.  விபத்தில் வண்டி ஓட்டிய டிரைவர் தவிர அனைவரும் சம்பவ இடத்தில் இறந்தனர்.  ராசி கல் மோதிரத்தால் விபத்தை…… ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் 1 Free Tamil Ebooks – எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948 நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? - Shrinivasan tshrinivasan@gmail.com - Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org - Arun arun@fsftn.org -  இரவி Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/ 2 உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம் http://www.kaniyam.com/introduction-to-creative-commons-licenses/ http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி ! 3 கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம் 1. பதிப்புரிமை பதிப்புரிமை (Copyright) என்பது ஓர் எழுத்தாளருக்கோ, கலைஞருக்கோ தமது அசலான படைப்புகளைப் பாதுகாக்க சட்டத்தினால் அவருக்கு அளிக்கப்பட்ட தனிப்பட்ட உரிமையாகும். இவ்வுரிமையானது அப்படைப்புகளை நகலெடுத்தல், பரப்புதல், பயன்படுத்துதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்துதலையும் உள்ளடக்கியதாகும். இவ்வுரிமை உரிமையாளருக்குப் படைப்பின் மீதான கட்டுப்பாட்டினையும் இலாபமீட்டும் உரிமையையும் தருகிறது. சில சந்தர்ப்பங்கள் தவிர இப்படைப்புகளைப் பயன்படுத்த உரிமையாளரின் அனுமதி பெறுவது அவசியம். இந்த அனுமதி தற்காலிகமானதாகவோ, நிரந்தரமானதாகவோ இருக்கலாம். பதிப்புரிமை பாதுகாப்பது ஒருவரின் எண்ணத்தின் வெளிப்பாடுகளை; எண்ணங்களை அல்ல. எடுத்துக்காட்டாக, ஒருவர் காப்புரிமை பெற அவர் மனதில் அழகிய கதைக்கரு உருவாவது மட்டும் போதாது. அக்கரு ஒரு கதையாகவோ, ஓவியமாகவோ அல்லது எதாவது ஒரு வடிவமாக வெளிப்பட வேண்டும். காப்புரிமை பெற வெளிப்பாடே போதுமானது. பல நாடுகளில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. முந்திய காலங்களில் பதிப்புரிமைச் சட்டம் புத்தகங்கள் நகலெடுப்பதற்கு எதிராக மட்டுமே பயன்பட்டது. காலம் செல்லச்செல்ல மொழிப்பெயர்ப்பு மற்றும் பிற சார்ந்த ஆக்கங்களிலும் இச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது நிலப்படம், இசை, நாடகம், புகைப்படம், ஒலிப்பதிவு, திரைப்படம், கணினி நிரல் ஆகியவையும் இதில் அடக்கம். பதிப்புரிமையின் சாதக பாதகங்கள் பதிப்புரிமையின் முக்கியமான சாதக அம்சம் பொருளாதார ரீதியில் எழுத்தாளர்களுக்கு பயன் கிடைப்பதனை உறுதி செய்வதே ஆகும். அதாவது ஒரு நூல் எத்தனை பிரதிகள், எந்தப் பதிப்பகத்தால், எப்போது வெளியிடப்படலாம் என்ற முடிவுகளை எழுத்தாளர் எடுக்க முடிகிறது. விற்பனையாகும் நூல்களின் இலாபத்தில் சிறு பகுதியினை எழுத்தாளர் பெற்றுக் கொள்ளவும் முடியும். பதிப்புரிமையின் மூலம் இலாபம் பெறுவதற்காக வழிவகை செய்யப்பட்டுள்ள போதிலும் அறிவு பரவுதலும் அறிவு விருத்தியும் பெருமளவில் தடுக்கப்படுகின்றன. இதற்கான காரணம் பதிப்புரிமையின் இறுக்கமான கட்டுப்பாடுகளே ஆகும். ஓர் எழுத்தாளர் இறந்து 60 ஆண்டுகளின் பின்னரேயே அவரது படைப்புக்கள் பொதுவெளிக்கு வருகின்றன. அதுவரை அப்படைப்புகள் மறுபதிப்புச் செய்யப்படாவிடினும் அல்லது படைப்புக்கு உரிமை கோர எவரும் இல்லாவிடினும் கூட வேறெவரும் பயன்படுத்த முடியாத நிலையே காணப்படுகிறது. சமூக நலன் கருதிய படைப்புக்கள் கூட – அவை சென்று சேர வேண்டிய மக்களைச் சென்றடையாமல் – பதிப்புரிமையின் பெயரால் தடுக்கப்படுகின்றன. எழுத்தாளர்களை மையமாகக் கொண்டு அச்சமூகங்களில் உருவாகவேண்டிய சிந்தனைப் பள்ளிகள் தோன்றாமலேயே போய்விடுகின்றன. தமது சிந்தனைகள் மூலமாக – அவை அவர்களுக்கு பின்பான தலைமுறைகளால் கடத்தப்படுவதனூடாக வரலாற்றில் தொடர்ச்சியாக வாழ வேண்டிய சிந்தனையாளர்கள் பதிப்புரிமையினால் கட்டுப்படுத்தப்படுவது கவலைக்குரியது. அறிவின் பல்கிப்பெருகும் தன்மையே சமூகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கக்கூடியது. சமூகம் உயிர்ப்புடன் இருப்பதற்கு சமூக அறிவு சகலராலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் பதிப்புரிமையின் கட்டுப்பாடுகள் அதற்கு இடம் தருவதில்லை. தற்போதைய பதிப்புரிமை வடிவத்தின் பாதகமான அம்சங்களை எவ்வாறு சாதகமான அம்சமாக மாற்றுவது? படைப்பாளியின் நலன் பாதுகாக்கப்படவும் வேண்டும் அதேவேளை அப்படைப்பாளியின் கருத்துக்களாலும் சிந்தனைகளாலும் அச்சமூகமும் பயன்பெற வேண்டும். சமூகத்தின் மீது அக்கறையுள்ள ஒவ்வொருவரும் இப்புள்ளியில் நின்று சிந்தித்து அதற்கான தீர்வைப் பெற வேண்டும். இதற்காக உருவாக்கப்பட்டதே கிரியேட்டிவ் காமன்ஸ் – Creative Commons – படைப்பாக்கப் பொதும உரிமங்கள் ஆகும். இந்த உரிமங்கள் கொண்டதாக வெளியிடப்படும் நூல்களின் இலாபமீட்டும் உரிமை படைப்பாளியிடமே இருக்கும். அதேநேரம் படைப்புகளை யாவரும் பகிர்தல், அறிவைப் பரவலாக்குதல், விருத்தி செய்வதற்கான வழிகள் திறக்கப்படுகின்றன. படைப்பாளியின் உரிமையில் எதுவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது, அறிவு விருத்தியில் மக்கள் சார்ந்து நிற்பதற்கு இவ்வுரிமங்கள் வழிவகை செய்துள்ளன. இவ்வுரிமங்களில் ஒன்றினைப் பயன்படுத்துவதன் மூலம் ஆவணப்படுத்தல், அறிவுவிருத்தி, கல்வி மேம்பாடு ஆகிய சமூகநல நோக்குகளுடன் இயங்கிவரும் நூலக நிறுவனம், விக்கிபீடியா போன்ற அமைப்புக்களும் தொடர்ச்சியாக இயங்கக் கூடியதாக இருக்கிறது. 2. கிரியேட்டிவ் காமன்ஸ் – படைப்பாக்கப் பொதுமங்கள் கிரியேட்டிவ் காமன்ஸ் – Creative Commons – படைப்பாக்கப் பொதுமங்கள் என்பது ஆக்கங்களை சட்டப்படி மற்றவரோடு பகிர்ந்துகொள்ளலை ஊக்குவிப்பதையும் விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக்கொண்டு இயங்கும் இலாபநோக்கற்ற அறக்கட்டளை ஆகும். இது 2001 இல் லோறன்ஸ் லெசிக் என்பவரால் தொடங்கப்பட்டது. http://creativecommons.org இது படைப்பாளர்களுக்கும் பயனர்களுக்கு இடையேயான ஒரு பாலமாக அமைகிறது. கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமங்கள் அனைத்து உரிமைகளையும் கட்டுப்படுத்தாமல், அளிப்புரிமையை ஊக்குவிக்கின்றன. எந்த உரிமையை அளிப்பது என்பது (அதாவது முழுவதையும் காப்புரிமைக்கு கட்டுப்படுத்தலில் இருந்து முழுமையாகப் பொதுவில் விடுதல் வரையான பல்வேறு தெரிவுகள்) படைப்பாளர்களுக்குச் சாத்தியமாகின்றது. இது முழுமையான கட்டற்ற படைப்பு உரிமங்களுக்கும் முழுமையான காப்புரிமை உரிமங்களுக்கும் இடைப்பட்ட ஒரு மிதவாதத் தீர்வாகப் பார்க்கப்படுகிறது. தற்போது எல்லாப் படைப்புகளுக்கும் அனைத்து உரிமைகளும் காப்புடைமையானவை என்ற சட்டம் தீவிரவாத நிலைப்பாட்டை உடையதாகும். பெரும்பாலான நேரங்களில் பயனர்களின் சமூகத்தின் நியாயமான பயன்பாட்டிற்கு இது தடையாக அமைந்து விடுகிறது. பல சந்தர்ப்பங்களில் ஆக்கர்களே அவ்வாறு தமது படைப்புக்களை கட்டுப்படுத்த விரும்புவதில்லை. ஆகவே இந்த தடையை நடைமுறையில் தளர்த்துதவற்காக உருவாக்கப்பட்டதுதான் படைப்புப் பொதும உரிமங்கள் என்று லோறன்சு லெசிக் கூறுகிறார். இந்த நிறுவனமானது இதற்கென பல்வேறு வகையான காப்புரிமை உரிம ஒப்பந்தங்களை உருவாக்கி வெளியிட்டுள்ளது. இவ்வுரிம ஒப்பந்தங்கள் கிரியேட்டிவ் காமன்ஸ் (படைப்பாக்கப் பொதுமங்களின்) உரிமங்கள் என அறியப்படுகின்றன. இந்த உரிமைகள் படைப்பாளர்கள் அவர்கள் தெரிந்தெடுக்கும், அவர்களுக்கு ஏற்ற உரிமங்களோடு தமது படைப்புக்களை வெளியிடுவதைச் சாத்தியமாக்குகின்றன. பல்வேறு தேவைகளுக்கும் பயன்படக்கூடிய வகையில் வெவ்வேறு வகையான கட்டுப்பாடுகளுடன் ஆறு உரிம ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கிரியேட்டிவ் காமன்ஸ் – படைப்பாக்கப் பொதும உரிமங்கள் ஒருவருடைய படைப்புகளை இணையத்திலும் வேறு வடிவங்களிலும் பகிர்வதற்காக கிரியேட்டிவ் காமன்ஸ் அமைப்பினால் உருவாக்கப்பட்ட உரிம ஒப்பந்தங்கள், கிரியேட்டிவ் காமன்ஸ் (படைப்பாக்கப் பொதும) உரிமங்கள் எனப்படுகிறன. கிரியேட்டிவ் காமன்ஸ் அமைப்பானது பல்வேறு தேவைகளுக்கும் பயன்படக்கூடிய வகையில் வெவ்வேறு வகையான ஆறு உரிம ஒப்பந்தங்களை தயாரித்து வழங்கியிருக்கிறது. மூல உரிமங்கள்     Attribution குறிப்பிடுதல் / Attribution (by) ஆக்கங்களை படியெடுக்க, விநியோகிக்க, பகிர, காட்சிப்படுத்த, இயக்க, வழிபொருட்களை உருவாக்க ஆகிய உரிமைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் தகுந்த முறையில் அல்லது வேண்டப்பட்ட முறையில் படைப்பாளிகள் குறிப்பிடப்படுதல் வேண்டும். மூல படைப்பாளி மற்றும் மூல படைப்பு கிடைக்கும் இடம் போன்ற தகவல்களை அளித்தே பகிர வேண்டும்.     Non-commercial இலாபநோக்கமற்ற / NonCommercial (nc) ஆக்கங்களை படியெடுக்க, விநியோகிக்க, காட்சிப்படுத்த, இயக்க, வழிபொருட்களை உருவாக்க ஆகிய உரிமைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இலாப நோக்கமற்ற நோக்கங்களுக்கு மட்டுமே. விற்பனை செய்யக்கூடாது.     Non-derivative வழிப்பொருளற்ற / NoDerivatives (nd) ஆக்கங்களை படியெடுக்க, விநியோகிக்க, காட்சிப்படுத்த, இயக்க ஆகிய உரிமைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் வழிபொருட்களை உருவாக்குவதற்கான உரிமை தரப்படவில்லை.     Share-alike அதே மாதிரிப் பகிர்தல் / ShareAlike (sa) வழிபொருட்களை முதன்மை ஆக்கத்துக்குரிய அதே உரிமங்களோடே விநியோகிக்க முடியும். ஆறு முதன்மை உரிமங்கள் ஆக்கப்பணி ஒன்றினை படைப்பாக்கப் பொதுமங்கள் உரிமைப்படி வழங்கும்போது தெரிவு செய்யப்படக்கூடிய முதன்மையான ஆறு உரிம ஒப்பந்த வகைகளும் கீழே பட்டியலிடப்படுகின்றன. குறைந்த கட்டுப்பாடுகள் கொண்ட உரிமத்தில் இருந்து கூடிய கட்டுப்பாடுகள் கொண்டது வரை இவை வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 1. Creative Commons Attribution BY – குறிப்பிடுதல் (CC-BY) [] படைப்பாக்கப் பொதுமங்கள் வழங்கும் ஒப்பந்தங்களில் இதுவே கட்டுப்பாடுகள் குறைந்த ஒப்பந்தமாகும். இவ்வொப்பந்தத்தின் படி நீங்கள் உங்கள் ஆக்கத்தினை வழங்கும்போது, உங்கள் ஆக்கத்தில் மாற்றங்கள் செய்ய, பயன்படுத்த, அதனை அடிப்படையாகக்கொண்டு புதிய ஆக்கங்களை உருவாக்க அனைவருக்கும் உரிமை உண்டு. அத்தோடு உங்கள் ஆக்கத்தினை அல்லது மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய ஆக்கத்தினை வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்தவும் அனுமதி உண்டு. உங்கள் ஆக்கத்தினை எது வேண்டுமானாலும் செய்யமுடியும். ஆனால் என்ன செய்தாலும் உங்கள் பெயரை குறிப்பிட்டாகவேண்டும். அதுவே இந்த ஒப்பந்தத்தின் ஒரேயொரு கட்டுப்பாடு. சுருக்கமாக ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும். மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழவேண்டும் என்றில்லை. மாற்றங்கள் செய்த பின் பயனர் வேறு உரிமத்திலும் பகிரலாம். 2.Creative Commons Attribution-ShareAlike குறிப்பிடுதல் – அதே மாதிரிப் பகிர்தல் (CC-BY-SA) [] இந்த ஒப்பந்தமானது உங்கள் ஆக்கப்பணியினை மாற்ற, திருத்த, அதனை அடிப்படையாகக்கொண்டு புதிய ஆக்கங்களை உருவாக்க என்று சகலதிற்கும் மற்றவரை அனுமதிக்கிறது. புதிய ஆக்கத்தினை வர்த்தக நோக்கங்களுக்காகவும் பயன்படுத்த முடியும். ஆனால், அவ்வாறு பகிரப்படும் வேளையில் உங்கள் ஆக்கமோ அல்லது அதனை அடிப்படையாககொண்டு உருவாகும் புதிய ஆக்கமோ உங்கள் பெயரை கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்தோடு நீங்கள் பயன்படுத்திய உரிம ஒப்பந்தத்தை அப்படியே பயன்படுத்தவேண்டும். சுருக்கமாக ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும். மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழவேண்டும். 3. Creative Commons Attribution-NoDerivs குறிப்பிடுதல் – வழிப்பொருளற்ற (CC-BY-ND) [] உங்கள் ஆக்கப்பணியில் எந்த மாற்றமும் செய்யாமல், உங்கள் பெயரை காட்டாயம் குறிப்பிடும் வரைக்கும் வர்த்தக ரீதியான அல்லது வர்த்தக நோக்கம் அல்லாத எந்த தேவைக்காகவும் உங்கள் ஆக்கத்தினை மீள விநியோகிக்க, பகிர்ந்துகொள்ள இவ்வொப்பந்தம் அனுமதியளிக்கிறது. சுருக்கமாக ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும். மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்படவில்லை. வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழவேண்டுமென்றில்லை. 4. Creative Commons Attribution-NonCommercial குறிப்பிடுதல் – இலாப நோக்கமற்ற (CC-BY-NC) [] இந்த உரிமம் வர்த்தக நோக்கம் தவிர்ந்த தேவைகளுக்காக உங்கள் ஆக்கத்தினை திருத்த, வடிவம் மாற்ற, மீள்சுழற்சிக்குட்படுத்த அனுமதிக்கிறது. இந்த ஒப்பந்தத்திலும் உங்கள் ஆக்கத்தினை அடிப்படையாகக்கொண்டு புதிதாக உருவாக்கப்படும் ஆக்கத்தில் உங்கள் பெயர் குறிப்பிடப்பட வேண்டும், வர்த்தக நோக்கங்களுக்கு பயன்படுத்த முடியாது. ஆனால் ஒரேயொரு வித்தியாசம், உங்கள் ஆக்கம் தாங்கியுள்ள உரிம விதிகளுக்கு அமைவாகத்தான் புதிதாக உருவாக்கப்படும் ஆக்கத்தையும் விநியோகிக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சுருக்கமாக ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும். மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்பட்டுள்ளது வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்படவில்லை. இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழவேண்டுமென்றில்லை. 5. Creative Commons Attribution-NonCommercial-ShareAlike குறிப்பிடுதல் – இலாப நோக்கமற்ற – அதே மாதிரிப் பகிர்தல்(CC-BY-NC-SA) [] இந்த ஒப்பந்தம், மற்றவர்கள் உங்கள் ஆக்கத்தை மீள்சுழற்சிக்குட்படுத்த, மாற்றங்கள் செய்ய, தொகுக்க, உங்கள் ஆக்கத்தினை அடிப்படையாக வைத்து புதிய ஆக்கங்களை செய்ய அனுமதிக்கிறது. ஆனால் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படும் புதிய ஆக்கம், உங்கள் பெயரை குறிப்பிட வேண்டும் அத்தோடு இதே அனுமதிகளை அப்புதிய ஆக்கமும் வழங்க வேண்டும். மற்றவர்கள் உங்கள் ஆக்கத்தினை தரவிறக்கவும் பகிர்ந்தளிக்கவும் முன்னைய ஒப்பந்தம் போன்றே இதுவும் அனுமதிக்கிறதென்றாலும், உங்கள் ஆக்கத்தில் மாற்றங்கள் செய்ய அனுமதிப்பதே இவ்வொப்பந்தத்தின் சிறப்பு. உங்கள் ஆக்கத்தினை அடிப்படையாகக்கொண்டு புதிதாக உருவாக்கப்படும் ஆக்கங்களும் நீங்கள் வழங்கிய உரிமத்தினடிப்படையிலேயே அமைய வேண்டும் என்பதால் புதிய உருவாக்கங்களையும் வர்த்தகத் தேவைகளுக்காக பயன்படுத்த முடியாது. சுருக்கமாக ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும். மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்படவில்லை. இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழும். 6. Creative Commons Attribution-NonCommercial-NoDerivs குறிப்பிடுதல் – இலாபநோக்கமற்ற, வழிப்பொருளற்ற (CC-BY-NC-ND) [] இதுவே முதன்மையான ஆறு உரிம ஒப்பந்தங்களிலும் கட்டுப்பாடுகள் கூடியதாகும். இது மீள் விநியோகத்தை அனுமதிக்கிறது. இவ்வுரிம ஒப்பந்தம் “இலவச விளம்பர” ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், உங்கள் ஆக்கவேலையை தரவிறக்கவும், மற்றவரோடு பகிர்ந்துகொள்ளவும் இது எல்லோரையும் அனுமதிக்கிறது. ஆனால் பகிரப்படும்போது உங்களது பெயர், உங்களுக்கான தொடுப்பு போன்றவற்றையும் வழங்க வேண்டும். பகிர்பவர்கள் உங்கள் ஆக்கப்பணியில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்தவும் முடியாது. மாற்றங்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதால் இயல்பாகவே உங்கள் ஆக்கத்தினை பகிரும்போது இதே உரிம ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே விநியோகம் நிகழும். சுருக்கமாக ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும். மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்படவில்லை. வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்படவில்லை இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழும். இந்த ஆறு உரிமங்களில் ஒன்றை உங்கள் படைப்புகளுக்கு அளிப்பதன் மூலம், அவை பலரால் பகிரப்பட்டு சாகாவரம் பெறுகின்றன. உங்கள் வலைப்பதிவுகள், கட்டுரைகள், புகைப்படங்கள், காணொளிகள் என எந்த படைப்பையும் இந்த கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமைகளில் வெளியிடலாம். இந்த இணைப்பின் மூலம், உங்களுக்கு தேவையான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையை தெரிவு செய்யலாம். http://creativecommons.org/choose/ உங்கள் படைப்புகளை பலரும் பகிரும் போது, உங்கள் அறிவு பலரையும் சென்றடைகிறது. எழுத்தாளருடைய பதிப்புரிமை எப்போதும் அவரிடமே இருக்கும். படைப்பாளியின் பதிப்புரிமையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல், குறித்த படைப்பாளியின் கருத்துக்களையும் சிந்தனைகளையும் சகல மக்களுக்கும் கொண்டு சென்று சேர்த்து புதிய சிந்தனைப்போக்குக்கள் உருவாக்கத்திற்கான அறிவுப் பரவலாக்கத்தை மாத்திரமே கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை செய்கின்றது. இந்த அனுமதியின் நன்மைகள் படைப்பாளர்களுக்கு படைப்பாளரது படைப்பு, வாசகர் அனைவருக்கும் பகிரும் உரிமை உள்ளதால், உலகெங்கும் உள்ள வாசகர்களைச் சென்றடைகின்றது. இதன் மூலம் படைப்பாளருடைய அறிவும் கருத்துக்களும் சிந்தனைகளும் வளர்ந்து வரும் படைப்பாளர்கள் மத்தியிலும் தமிழ்ச்சமூகத்தின் மத்தியிலும் சென்றடைகின்றன. ஒரு படைப்பாளரைப் பொறுத்தவரை அவருடைய கருத்துக்கள் சிந்தனைகள் பரந்துபட்ட மக்களைச் சென்றடைவதே அவருடைய முதன்மை நோக்கம் என்ற வகையில் அவருடைய எண்ணம் நிறைவேறுகின்றது. பல்வேறுபட்ட நாடுகளில் உள்ளவர்களையும் படைப்புக்கள் சென்றடைவதன் மூலம் அவர்களது கருத்துக்களிலும் சிந்தனைகளிலும் தாக்கத்தைச் செலுத்தும் நிலமை தோற்றுவிக்கப்படுகின்றது. ஒரு படைப்பாளருடைய படைப்பு/கருத்து/சிந்தனை வாசகர்கள் மத்தியில் தாக்கத்தைச் செலுத்தும் போதும் வாசகருடைய வாழ்வியலிலும் சமூகம் சார்ந்த நிலைப்பாடுகளிலும் தாக்கத்தைச் செலுத்தும் போதும் அப்படைப்பாளி சாகாவரம் பெற்று தொடர்ச்சியாக உயிர்வாழ்கின்றார். வாசகருக்கு வாசகர் தாம் படிக்கும் நூல்களை நண்பருடன் பகிர்ந்து கொள்ளலாம். தமது வலைப்பதிவில் பகிரலாம். தாம் விரும்பிய புகைப்படத்தை தமது அலுவலக பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம். சமுக வலைத்தளங்களில் பகிரலாம். மின்னூலாக்கி பல கருவிகளில் படிக்கலாம். மாற்றங்கள் செய்யும் உரிமை இருந்தால், விரும்பியவாறு மாற்றயும் பகிரலாம். வணிக உரிமை இருந்தால், விற்பனையும் செய்யலாம். பகிர்தல் என்பது மனித குலத்தின் அடிப்படைப் பண்பு. நாம் விரும்பும் எதையும் பகிர்வது நம் உரிமை. புகைப்படங்கள் Flickr.com, commons.wikimedia.org போன்ற தளங்களில், நீங்கள் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் பகிரலாம். கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் பகிரப்பட்ட படைப்பகளை தேடி, அவற்றை உங்கள் நூல்களில், வலைப் பதிவுகளில் பயன்படுத்தலாம். கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் உள்ள படங்களுக்கான தேடுபொறி இதோ. http://search.creativecommons.org/ அடுத்த முறை உங்களுக்கு ஒரு படம் தேவைப்படும் போது, சும்மா கூகுள் தேடுபொறியில் தேடி, உங்களுக்கு உரிமை இல்லாத படத்தை பயட்படுத்துவதை விட, இங்கே தேடி, பகிரும் உரிமை உள்ள படங்களை பயன்படுத்துங்கள். கல்யாண் வர்மா என்ற புகழ்பெற்ற வன விலங்கு புகைப்பட நிபுணர், தமது அரிய புகைப்படங்கள் யாவையும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் வெளியிட்டதால், தாம் பெற்ற சிறப்புகளையும், பயன்களையும் பற்றி இந்த காணொளியில் பேசுகிறார். http://www.inktalks.com/discover/117/kalyan-varma-free-art-is-profitable மின்னூல்கள் – FreeTamilEbooks.com திட்டம் பல தளங்களிலும், வலைப்பதிவுகளிலும் ‘காப்புரிமை உள்ளது’, ‘எங்கும் நகலெடுத்து பகிரக் கூடாது’ என்று பார்த்திருப்பீர்கள். இதனால் வாசகருக்கு எந்த உரிமையும் இல்லை. இணைய செலவை சேமிக்க, நீங்கள் அந்த வலைப்பதிவுகளை சேமித்து வைத்து, பிறகு படிக்கலாம் என்று நினைப்பது முடியாது. ODT, PDF, DOC கோப்புகளாக மாற்றக் கூடாது. சில ஆண்டுகளில் அந்த வலைத்தளம் மூடப்பட்டால்,அவ்வளவுதான். அதில் இருந்த தகவல்களை யாரும் வைத்திருக்க முடியாது. கூடாது. இதுபோல் அழிந்த வலைத்தளங்கள் ஏராளம். தமிழில் புகழ்பெற்று விளங்கிய ‘அம்பலம்’ மின்னிதழ் போல, காப்புரிமை கொண்டு, அழிந்த பின் Backup கூட இல்லாத தளங்கள் பல. இவ்வாறு காப்புரிமை கொண்டுள்ளதால், எழுதியவருக்கு நட்டம் அதிகம். பல வாசகரை அடைய எழுதிய படைப்புகள், வலைத்தளம் தவிர வேறு வடிவங்களில் வாசகரை அடைய முடிவதில்லை. இப்போது, படிப்பதற்கென கிண்டில், டேப்லட் என பலவகை கருவிகள் உள்ளன. இவற்றில் யாரும் வலைத்தளங்களை படிப்பது கடினம். ஆனால் இவற்றில் படிப்பதற்கேற்ப epub, mobi, PDF என பல வகை கோப்புகள் உள்ளன. வலைத்தளங்களை இது போன்று மின்னூலாக்கினால், வாசகர்களை எளிதில் படிக்க வைக்கலாம். ஆனால் இது போன்று மின்னூலாக்கி பகிர்வதை ‘காப்புரிமை’ தடுக்கிறது. ஆனால், சிலர் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் தமது வலைப்பதிவுகளையும், நூல்களுயும் வெளியிட்டுள்ளதால், FreeTamilEbooks.com திட்டக் குழுவினர், அவற்றை மின்னலாக்கி வெளியிடுகின்றனர். இந்த நூல்களை யாவரும், படிக்கலாம். பகிரலாம். இதுவரை சுமார் 100 மின்னூல்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு மின்னூலும் குறைந்தநு 100 பதிவிறக்கங்கள், சில மின்னூல்கள் 15,000 பதிவிறக்கங்கள் என உலகெங்கும் உள்ள தமிழ் வாசகர்களை இந்த மின்னூல்கள் அடைகின்றன. கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையால் மட்டுமே இது போன்ற புது முயற்சிகள் சாத்தியமாகின்றன. இது போல, மேலும் புது வகை முயற்சிகளுக்கும் வாய்ப்பளிக்கின்றது. ஏட்டில் இருந்து அச்சு நூலுக்கு வந்ததே, அதிகம் பேரே சென்றடைய. அச்சிலிருந்து இணைய வடிவிற்கு மாறியது உலகெங்கும் சென்றடைய. ‘காப்புரிமை’ கொண்டு இந்த பரவலை தடுக்காதீல்கள். கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் உங்கள் படைப்புகளை வெளியிட்டு, உங்கள் வாசகருக்கும் பகிரும், மாற்றங்கள் செய்யும் உரிமை கொடுங்கள். வாசகர்கள் உங்களை வாழ்த்திக் கொண்டே படிப்பர். பகிர்வர். உங்கள் படைப்புகளும் சாகாவரம் பெறும். மேலும் படிக்க. https://creativecommons.org/licenses/ http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 http://creativecommons.org/videos/get-creative http://www.slideshare.net/DonnaGaudet/creative-commons-32865734 http://www.assortedstuff.com/stuff/?p=413 http://thepowerofopen.org/ நன்றி – நூலக நிறுவனம் வெளியிட்ட கையேடு ‘படைப்பாக்கப் பொதுமங்கள் – எழுத்தாளர்களுக்கான அறிமுகம்’ உரிமை – Creative Commons Attribution/Share-Alike License http://creativecommons.org/licenses/by-sa/3.0/