[] []       சந்திரமோகன் (நாடகம் )   அறிஞர் அண்ணா    அட்டைப்படம் : க சாந்திபிரியா - gkpriya246@gmail.com  மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி -  sraji.me@gmail.com  வெளியிடு : FreeTamilEbooks.com    உரிமை : Public Domain – CC0  உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.                  பொருளடக்கம் காட்சி - 1 6  காட்சி - 2 7  காட்சி - 3 11  காட்சி - 4 13  காட்சி - 5 16  காட்சி - 6 20  காட்சி - 7 23  காட்சி - 8 25  காட்சி - 9 28  காட்சி - 10 31  காட்சி - 11 34  காட்சி - 12 37  காட்சி - 13 40  காட்சி - 14 43  காட்சி - 15 47  காட்சி - 16 49  காட்சி - 17 55  காட்சி - 18 56  காட்சி - 19 59  காட்சி - 20 63  காட்சி - 21 64  காட்சி - 22 68  காட்சி - 23 71  காட்சி - 24 72  காட்சி - 25 73  காட்சி - 26 84  காட்சி - 27 86  காட்சி - 28 88  காட்சி - 29 90                      []   சந்திரமோகன் ( நாடகம்) (சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்) அறிஞர் அண்ணா (கா. ந. அண்ணாதுரை)  cantiramOkan (play) by kA. na. aNNAturai  In tamil script, unicode/utf-8 format   Acknowledgements:  Our thanks also go to Archives.org for providing a PDF copy of this work.  The e-text has been generated using Google OCR and subsequent proof-reading.  Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. © Project Madurai, 1998-2018. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation  of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.  Details of Project Madurai are available at the website  http://www.projectmadurai.org/  You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.    சந்திரமோகன் ( நாடகம்) (சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்) அறிஞர் அண்ணா (கா. ந. அண்ணாதுரை)  Source  சந்திரமோகன் (சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்) விடுதலைப் பொன்விழா ஆண்டு வெளியீடு அறிஞர் அண்ணா (மணிவாசகர் பதிப்பகம் a/7 சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 600108. முதல் பதிப்பு : பிப்ரவரி, 1998 திருவள்ளுவர் ஆண்டு : 2029  விலை ரூ. 22 - 00 மணிவாசகர் வெளியீட்டு எண் : 6 எண் : 627 கிடைக்குமிடம் : மணிவாசகர் நூலகம் 12 - 6, மேல சன்னதி, சிதம்பரம் - 608 001 87,  ஒளி அச்சு : லட்சுமி லேசர், சென்னை - 600 108,  அச்சிட்டோர் : பாரி ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை - 600 013. ---------  சந்திரமோகன்  (சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் )  (இருண்ட நிலையில் குரல் ஒலி)  'பாரத் வர்ஷம், பரத கண்டம், புண்யபூமி' என்று புகழ்ந்தனர் புராணிகர்கள், புலவர்கள் சகலரும். எனினும் புண்ணிய பூமி அடிமைப்படுத்தப்பட்டது. எங்கும் காரிருள் சூழ்ந்து கொண்டது. எங்கும் திகைப்பு! கலக்கம். ஆனால் காரிருளைக் கிழித்துக் கொண்டு கிளம்பிற்று சுதந்திர ஜோதி. மராட்டியத்திலே ஏற்றி வைக்கப்பட்ட விடுதலை விளக்கு புதியதோர் எழுச்சியை உண்டாக்கிற்று. மாவீரன் சிவாஜி கிளம்பினான், சீறிப் போரிட, சிதறி ஓடினர் எதிரிகள். விடுதலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை பிறந்தது. ஆனால் சமூகம் ஜாதி பேதமெனும் சனியனுக்கு ஆளாகி அவதிப்பட்டது. வீரர்கள் விடுதலைப் போரை நடத்தினர். வீணர்கள் ஜாதியையும் மதத்தையும் காட்டிக் கொழுத்தனர். சமூகக் கொடுமை மராட்டியத்தை விட்டு ஒழியவில்லை. அந்த நிலையிலே……  ------------                                               காட்சி - 1 இடம்: குளக்கரை  உறுப்பினர்கள் : (கேசவப்பட்டர், பாலசந்திரப் பட்டர், பச்சை .) (பட்டர்கள் இருவரும் தடிகளைத் தூக்கிக் கொண்டு ஓடி வருகிறார்கள். பச்சை அடிபட்டு ஒடிவருகிறான்)  கேசவப்பட்டர் : அடடே! எவ்வளவு திமிருடா உனக்கு. அடி, உதை, எவ்வளவு மண்டைக் கர்வம் இவனுக்கு ?  பாலச்சந்தர் : வெட்டு, குத்து.  (பச்சை ஒடி வந்த வேகத்தில் கீழே விழுகிறான். அவனைத் தடியால் தாக்குகிறார்கள். அவன் எழுந்து கும்பிட்டபடி) பச்சை : ஐயோ! சாமி, சாமி கும்பிடுறேன்; அடிக்காதிங்க. தெரியாத்தனமா செய்துட்டேன். இந்தத் தடவை விட்டுடுங்க.  கேசவப் பட்டர் : (அடித்துக் கொண்டே திருக்குளத்தில் போயா குளிப்பது? எவ்வளவு திமிருடா உனக்கு சண்டாளா! பஞ்சாமப் பயலுக்கு ஆகுமோ இந்தப் பதட்டம்? பாவி புண்ணிய தீர்த்தத்தையே பாழாக்கிவிட்டாயே.  பச்சை : (உடம்பைத் துடைத்துக் கொண்டு) இல்லிங்க; இனிமே செய்யலிங்க , உயிர் போகுதுங்களே... ஐயையோ!  பாலசந்தர் : பிடித்துக்கட்டி சவுக்கால் அடிக்கணும் நீச்சப்பயல். அடுக்குமாடா நீ செய்த அக்ரமம்? அடே, மதத்துரோகி எந்தக் காலத்திலேயாவது நடந்தது உண்டா இந்த மாதிரி அக்ரமம்? உன் தோலை உறிச்சுப் புடுறேன் பார் ,  பச்சை : வேணாங்க, வேணாங்க! இந்தப் பக்கமே வரமாட்டேன்.  கேசவப்பட்டர் : (மிரட்டும் குரலில்) வந்தா?  பச்சை : (பயந்து) தோலை உறிச்சுடுங்க. கேசவப்பட்டர் : நடிப்போ ? நீச்சப்பயலே, இனி இந்தப் பக்கம் தலை காட்டவே கூடாது. தெரிஞ்சுதா. (பச்சை ஓடிவிடுகிறான். கேசவப்பட்டர் தனிமையில்) பயல்களுக்கு எவ்வளவு கர்வம். லோகம் என்ன ஆவது, இப்படி, இதுகள் நடக்க ஆரம்பித்தால்? ---------------               காட்சி - 2 இடம் : வீதி  உறுப்பினர்கள் : (பச்சை, பிச்சை, ஆண்டி , சாது)  (அடிபட்ட பிச்சை காயங்களைப் பார்த்துக் கண்ணீர் விடுகிறான்) பச்சை : ஆண்டவனே! வயலிலே வேலை செய்ததாலே உடலிலே அழுக்கு. அதைக் கழுவக் குளத்திலே இறங்கினேன். குளித்தது பாவமாமே பாவிப்பயல்க படுகொலை செய்துட்டானுங்க. குளிக்கப் போனவன் சேத்தப் பூசிக்கிட்ட கதை மாதிரின்னு ஊரிலே உலகத்திலே சொல்லுவாங்க என் கதி குளிக்கப் போயி ரத்தாபிஷேகமாச்சு. தெய்வமே! உனக்குக் கண்ணில்லையா. இந்த தேசத்திலே பிறந்தவன், இதிலேயே உழைக்கிறவன், இங்கேயே இருக்கிற குளத்திலே நான் குளிக்கக் கூடாதாம். எங்கப்பன் சொல்லுவார் முன்பெல்லாம் இந்தக் குளத்தை எங்கப் பாட்டன் வெட்டினானாம். இதுலே குளிச்சா புண்ணியமாம் இதோ, வழியுது புண்ணியம்.  (ரத்தக் கறையைத் துடைத்துக் கொள்கிறான். பச்சையின் கூக்குரல் கேட்டு ஆண்டி ஒடி வந்து...)  ஆண்டி : பச்சை ! நீயா ஐயோ, ஐயோன்னு கூவினது. என்னடப்பா நடந்தது. உடம்பெல்லாம் காயம், ரத்தம் என்ன அநியாயமிது.  பச்சை : ஆண்டி பார்த்தாயா இந்தக் கோரத்தை கேட்டியா இந்த அக்ரமத்தை? நீ என்னமோ நம்ம சாதியிலே யாரும் படிக்காத படிப்பு படிச்ச வேண்ணு ஊரு, நாடெல்லாம் உன்னைப் புகழுதே இந்த அக்ரமத்தைக் கேட்க வேண்டாமா நீ?  ஆண்டி : பச்சை ! என்ன நடந்தது? முரட்டு மாடு ஏதாவது இடித்துக் காயப்படுத்தினதா? வெறிநாய் மேலே விழுந்து கடித்ததா? கொள்ளைக்காரப் பசங்க தடியாலே தாக்கினாங்களா? அழாமே சொல்லு பச்சை .  பச்சை : ஆமாம் முரட்டு மாடுதான் மேலே விழுந்து முட்டுச்சி. வெறி நாய்தான் கடித்தது. கொள்ளைக்காரனுங்கதான் என்னைத் தடியாலே தாக்கினாங்க. ஆண்டி ; இப்படி ஜன்னி கண்டவன் போலப் பேசினா நான் என்னான்னு நினைக்கிறது. முரட்டு மாடான்னா அதுக்கும் ஆமாங்கிறே. வெறி நாயான்னா அதுக்கும் ஆமாங்கிறே! கொள்ளைக்காரனுங்காளன்னா அதுக்கும் ஆமாங்கிறேன் நான் என்ன செய்யறது? யார் செய்தா இந்த அக்கிரமத்தை  பச்சை : அந்தக் கும்பல்தான். ஆளை ஏச்சுப் பிழைக்குதே, அந்தக் கூட்டந்தான்.  ஆண்டி : யாரு? ஐயமாரா ?  பச்சை : அந்தப் பாழாய்ப்போன பட்டாச்சாரிக் கூட்டந்தான்.  ஆண்டி : ஏன்? நீ என்ன செய்தே?  பச்சை : நானா? குளிக்கப் போனேன்.  ஆண்டி : எங்கே? பச்சை : அவுங்க வீட்டுக்காப் போனேன் ; குளத்துக்குத்தான். அது புண்ணிய தீர்த்தமாம். அதிலே குளிக்கலாமான்னு பாவிப் பயலுங்க இந்த அநியாயம் செய்துட்டானுங்க.  பச்சை : நி ஏண்டப்பா அங்கே போகணும்? அதுவோ, ஐயமாரு கொளம்; நாம் ஈன சாதி.  ஆண்டி : (கோபத்துடன்) அடே முட்டாளே போனால் என்னடா குளத்திலே நாய் தண்ணீர் குடிக்கிறதேடா நாய். நாம் என்ன நாயை விடக் குறைவா? மலம் தின்னும் நாயடா நாம். அது உரிமையோடு தண்ணீர் குடிக்கிறது குளத்தில் பச்சை, நாய்க்கும் கேடு கெட்டவனா? சேற்றிலே புரளுகின்ற எருமை குளித்தால் விரட்டவில்லை. மனிதன் தலைமுறை தலைமுறையாக மற்றவர்க்குப் பாடுபட்டு மேனி கருத்துப் போன சாதி நாம். நாம் குளித்தால் குளம் தீட்டாகிவிடுமா? என்ன அகரமம்? அடுக்குமா இந்த அநீதி? பச்சை : அநீதியோ, அக்ரமமோ! இது இன்று நேற்று ஏற்பட்டதா? நம்ம பாட்டன் முப்பாட்டன் காலத்திலே இருந்து நடக்குது. நாம் என்ன செய்யலாம்.  ஆண்டி : என்ன செய்யலாம். இந்தக் கொடுமையாவது தொலைய வேண்டும். அல்லது நாமாவது ஒழிய வேண்டும்.  பச்சை : பதறாதே ஆண்டி. நாம பாவம் செய்தவங்க. அதனாலேதான் இந்தப் பாழான ஈனக் குலத்திலே பிறந்தோம். ஆண்டி மடையன் ஈன சாதி என்று எவனோ சொன்னால் அதை நம்பி நாசமாகிறாயே. நாம் எந்த விதத்திலே தாழ்வு? உழைக்கவில்லையா? நாம் மனிதரில்லையா? ஊரை ஏய்த்தா பிழைக்கிறோம்?  பச்சை : ஆண்டி! நீ நம்ம சாதியிலே படிச்சவன். என்னென்னமோ பேசறே. நீ சொல்றதை கேட்கிறபோது எனக்கென்னவோ தலை சுற்றுவது போல் இருக்கு.  ஆண்டி : உன்னைப் போன்ற ஜென்மங்கள் நம் சமூகத்தில் இருப்பதால் தான் இந்த இழிவு பச்சே! பாழான சமூகக் கொடுமையை நான் இப்போது பார்த்தது மட்டுமல்ல! அனுபவித்துமிருக்கிறேன். (சட்டையைக் கிழித்துப் பழைய தழும்புகளைக் காட்டி ) பார், தழும்புகளை! அந்தப்பாவிகள் செய்த அக்ரமம். என் பத்தாம் வயதிலே நேரிட்டது. இந்தத் தழும்பும் என் உடலை விட்டுப் போகாது. இந்த மமதையை அழிக்க வேண்டும் என்ற உறுதியும் என் உள்ளத்தை விட்டுப் போகாது. நம்மைப் படுத்துகிற பாடு இருக்கிறதே, இதற்கெல்லாம் ஒருநாள் அவர்கள் பதில் சொல்லித் தீர வேண்டும். வா போகலாம். (சாது பாடியபடி வருகிறார்... பாட்டு முடிந்ததும்)  சாது அப்பா, பாட்டாளி மக்களே! அண்டசராசரத்தைப் படைத்த ஐயன் உங்களைக் காற்றாற்றுவாராக.  பச்சை : ஐயா, சாமி நாங்க தீண்டாதவங்க  ஆண்டி : ஆம்; ஐயா! ஆம்! நாங்க தீண்டாதவர்கள் தான்! ஊரார் சொத்தைத் தீண்டியதில்லை. வஞ்சனையைத் தீண்டியதில்லை. சூது, சூழ்ச்சியை நாங்கள் தீண்டியதில்லை பாபத்தைத் தீண்டாதவர்கள் நாங்கள்.  சாது : தம்பி! உன் மதி கண்டு மகிழ்கிறேன். மகான் குலமானலும், பிரபு குலமானாலும், ராவ் குலமானாலும், எல்லோரும் மனிதர் குலம். பேதம் ஏது? நீ அறிவாளி.  ஆண்டி : அறிந்ததால் தான் என் அல்லல் அதிகமாகிறது. இதோ பச்சை! யாவும் தெய்வ சம்மதம் என்று நம்புகிறான். அதனால் அவனுக்கு ஜாதி வெறியரின் செயல் ஆத்திரமூட்டவில்லை.  சாது : ஆத்திரமல்ல! அநேக காலமாக இருந்து வந்த அக்ரமத்தைக் கண்டு சத்தியம் கோபிக்கிறது என்று பொருள். நீ சலிப்படையாதே. சமரசக் கீதத்தை இந்த மராட்டியத்திலே பல ஜீவன் முக்தர்கள் பரப்பிக் கொண்டு வருகிறார்கள். ஆண்டவன் சன்னிதானத்தின் முன்பு, அனைவரும் சமம், சாதி, மதம், உயர்வு தாழ்வெனும் தீது, சமரச ஞான மகான்களுக்கேது என்ற தத்துவம் தழைத்து வருகிறது.  ஆண்டி : ஐயா, சாது! உம்முடைய சமரச ஞானம் அத்தி பூத்தது போல் இருக்கிறது. சேற்றிலே ஒரு செந்தாமரை போல் இருக்கிறீர், ஆனால் என் மேல் கோபிக்காதீர். உம்முடைய முயற்சி உத்தமமானதுதான்; ஆனால் அது பலிக்காது. வேண்டுமானால் உம்மை ஒரு அவதார புருஷர் என்று கொண்டாடுவார்கள்; கோவில் கட்டுவார்கள், கூத்தாடுவார்கள். ஆனால் எல்லோரும் சமம்; பிறவியிலே உயர்வு தாழ்வு இல்லை என்று பேசுகிறீரே, அதை மட்டும் நடைமுறையிலே கொண்டு வரமாட்டார்கள். நான் பதட்டமாகப் பேசுவதாக எண்ண வேண்டாம். ஐயா! காவியும், கமண்டலமும் எங்கள் குலத்தின் கஷ்டத்தைப் போக்காது. முக்திக்கு வழிதரக்கூடும். உங்களுக்குள்ள இழிவைத் துடைக்காது; எங்கள் சமூகத்தை இந்தக் கொடுமை செய்கிறவர்கள் தங்களைக் கடவுள், உயர்ந்த சாதியராகப் படைத்ததாகக் கூறுகிறார்கள். அது கொடுமை. இதோ பச்சை. அதை உண்மைதான் என்கிறான். இது மடமை. இந்த மடமையும், அந்தக் கொடுமையும் ஒழிய வேண்டுமே ஐயா! கீதம் பாடினால் போதுமா?  சாது : அப்பா நெறியற்றவரின் வெறிச் செயலால் நீ மிகவும் வாடியிருக்கிறாய். கடவுளின் லட்சணமும், குணமும், அக் கயவரின் மொழிப்படியல்ல என்பதை அறிந்து கொள். கடவுள் என்றால் மனம், வாக்கு, காயம் என்பனவற்றைக் கடந்தவர் என்று பொருள். ஆண்டி : இருக்கலாம் அய்யா ! எதையும் கடந்தவராக இருப்பார். ஆனால் அந்த ஆரியர் போடும் கோட்டினை மட்டும் அவரால் கடக்க முடிவதில்லை . லோகம் மந்ராதீனம், மந்திரம் ப்ராமணாதீனம், ப்ராமணம் தேவதாதீனம் என்பது கீதையல்லவா! கடவுளுக்கே அவர்கள் எஜமானர்களாமே….?  சாது : வெறும் புரட்டு ; மமதை; அகம்பாவம் ; கடவுள் வாக்கல்ல அது ; கபட மொழி.  ஆண்டி: கண்ணன் காட்டிய வழியாமே?  சாது : இல்லை ; கயவர் வெட்டிய படுகுழி. அப்பா! மராட்டியத்திலே புதிய சக்தி பிறந்திருக்கிறது. மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. வர்ணாஸ்ரமம் வீழ்கிறது. சமரசம் பிறந்துவிட்டது. சண்டாளன், சர்மா என்னும் பேதம் இனி இராது. அனைவரும் சமம் அனைவரும் சமம்.  ஆண்டி : அழகான ஆரூடம். ஆனால் அது பலிக்காது. இன்பக் கனவு காண்கிறீர் ஐயா தங்களுடைய உபதேசத்தையும் ஒரு நூலாக்கி வைத்துக் கொள்வார்கள். ஏட்டுச்சுரை, காதுக்கு இனிப்பு, வாய்க்குப் பயனில்லை.  சாது : தம்பி! விதை தூவி வருகிறோம். விளையும் பயிர் முளையிலே என்பது போல, இப்போதே சமரச மணம் வீச ஆரம்பித்து விட்டது. நிச்சயம் மாறுதல் ஏற்படும் என் மொழி கேள். பொறுமை கொள்.  ஆண்டி : பொறுமை? ஐயா! பொல்லாங்கு ஏதும் செய்யாது, பிறருக்காக உழைத்துவிட்டு, உருமாறி, உள்ளங்குமுறி , ஒண்டக் குடிசையின்றி, ஒட்டாண்டியாகி ஓலமிட்டுக் கிடக்கிறோம். இன்று நேற்று முதல் அல்ல; பல தலைமுறைகளாகக் கொடுமைகளைச் சகித்தோம்; வறுமையால் வாடினோம். வஞ்சகரால் வீழ்ந்தோம். வாழ்வே பெரும் சுமை எங்களுக்கு? இம்சிக்கப்படும் நாங்கள், இழிவாக நடத்தப்படும் நாங்கள், ஊரிலே உரிமையோடு உலவ அனுமதிக்கப்படாத நாங்கள், மனித உரிமையும் தரப்படாது, குளத்திலே குளிக்கவும், உரிமையும் பெற முடியாத நாங்கள், பொறுமையாய் இருக்க வேண்டும் பொறுத்துக் கொள்ள வேண்டும்! காலின் கீழ் நசுக்கப்படும் நாங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். காலில் வெள்ளெலும்பு முளைத்த நாளாய் அடிமைக்காரனாக இருந்து பாடுபட்டுக் கிடக்கும் நாங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். அற்புதமான யோசனை, பாம்பின் வாயிலே சிக்கிய தேரைக்கும், புலியின் பிடியில் சிக்கிய மானுக்கும், போய்ச் செய்யும் இந்தப் போதனையை! பொறுமையாம் பொறுமை. பொறுத்ததெல்லாம் போதாதா? இவ்வளவு தாம் உம்மால் முடியும். எங்களிடம் பொறுமையின் அருமையைப் பற்றி உபதேசிப்பீர். எம்மை மிருகங்களினும் கேவலமாக நடத்தும் கொடியோருக்கு அன்பின் பெருமையைப் பற்றிப் பேசுவீர். இருவரிடமும் மறுமையின் மேன்மையைப் பற்றிப் பேசுவீர். ஆனால் உரிமைப் போருக்கான வழி உரைக்க அறியீர். அது அறிந்திருந்தால் இந்தக் காவியும், கமண்டலமும் கையிலிராது.  (போகிறான்.)  சாது : தம்பி கொஞ்சம் நில்!  (போனவன் திரும்பி வந்து சற்றுக் கோபத்துடன்)  ஆண்டி : ஆமாம் இன்னும் ஒன்று சொல்ல வேண்டும் உமக்கு . மிருகங்களிலே பொறுமையைப் பூஷணமாகக் கொண்ட கழுதையைக் கண்டவர் அடிப்பர். ரோஷத்துடன் உறுமும் புலியிடமோ கிலி கொள்வர். - அய்யா எங்களை பூதேவர்கள் என்ற புரட்டர்கள், தங்கள் ஆகமம் என்னும் அரக்கு மாளிகைக்கு அழைத்துச் சென்று கைகால்களைக் கட்டிப்போட்டு விட்டார்கள். தாங்கள் அந்த அரக்கு மாளிகையிவே ஒரு அகல் விளக்கு ஏற்றி வைக்கிறீர்கள்! ஆபத்துதான் உண்டாகும் அதனால், ஐயா சாது! சன்னியாசிக் கூட்டதவராகிய நீங்கள் உபதேசம் செய்கிறீர்கள். சகித்துக் கொள்ளப்பா சமரசம் உதயமாகும் பாரப்பா! சகலரும் சர்வேஸ்வரன் கண்முன் ஒன்றுதானப்பா என்று உபதேசம் செய்கிறீர்கள். நாட்டு விடுதலைப் போர் வீரர்களோ அடிமைத்தனம் அழிந்து பட்டதும், எதிரி விரட்டப்பட்டதும், சுய ஆட்சி கிடைத்ததும் ஏழையென்றும், அடிமையென்றும் எவனுமில்லை சாதியில் எல்லோரும் ஓர் குலம் ஒருவரை ஒருவர் தாழ்வாகக் கருதும் மடமையும், கொடுமையும் ஒழிக்கப்படும். உறுதியாக இதை நம்பு என்று நல்வாக்கு கொடுக்கின்றார்கள். உங்கள் உபதேசமும், அவர்கள் உறுதிமொழியும் இதோ இந்தக் கொடுமையைப் போக்கவில்லையே, அய்யா! நாடு விடுதலை பெற்று என்ன பயன்? என்ன பயனைக் காண்கிறோம்? அன்னிய ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு என்ன பயன்? என்ன பயனைக் காண்கிறோம் நாங்கள் ? எங்களுடைய இழிவு போகவில்லையே எங்கள் நிலை உயரவில்லையே. அய்யா !  (போகிறான்.) ---------                                       காட்சி - 3 இடம் : இந்துமதி வீடு  உறுப்பினர்கள் : இந்துமதி, சந்திரமோகன் (மோகன் வர, அவன் கழுத்தில் இந்து மாலை அணிவிக்கிறாள்.)  இந்து : கண்ணாளா இந்த ஆறு மாதங்களாக இருந்து வந்த மனவேதனை அவ்வளவும் இந்த ஒரு வினாடியில் ஒழிந்து விட்டது. அப்பப்பா... எவ்வளவு பயங்கரமான செய்திகள். போரிலே நமது படை சின்னாபின்னமாகி விட்டது. கோட்டையைச் சுற்றி எதிரிகள் சூழ்ந்து கொண்டார்கள்... ஆயுதச் சாலையைப் பிடித்துக் கொண்டனர் என்றெல்லாம் வந்து கூறுவார்கள். அப்போதெல்லாம் என் நிலை... அட்டா!  மோகன் : கலங்கித்தான் போயிருப்பாய் கண்மணி. களத்திலே கடும் போர்தான். ஆபத்துக்கள் நிறைய உண்டு. ஆனால் ஆற்றல் மிக்க நமது தலைவர் அளித்த தைரியம். எங்களுடைய பலத்தை பல மடங்கு அதிகமாக்கிற்று.  கண்ணே உன் காதலனும் கோழையல்ல; உன்னைக் கண்டதும் என் விழியிலே கனிவு வழியும். அதைக் கண்டு இந்தக் கண்களுக்கு இதுதான் இயல்பு என்று எண்ணி விடாதே. ஆபத்து என்ற உடனே இந்தக் கண்கள் நெருப்பைக் கக்கும். உன் மலர்க் கரத்தையும் மதுரம் தரும் அதரத்தையும் தொட்டு விளையாடும் இந்தக் கரத்திலே வாள் ஏந்தியதும், எதிரியின் தலை என் தாளிலே விழும் வரை புயலெனத்தான் சுற்றித் திரிவேன் களத்தில்.  இந்து : போதும், போர்க்களச் செய்திகள். இனிமேல் இந்த மாளிகையிலே ஆடிப்பாடி விளையாட வேண்டும் நாம். மராட்டிய சாம்ராஜ்யத்தை கிருஷ்டிக்கும் மாவீரன் என் காதலர் என்று ஊரெல்லாம் புகழ்கிறது.  மோகன் : ஊரெல்லாம் புகழ்ந்தாலும், உலகமே புகழ்ந்தாலும், உன் அப்பா மட்டும்...  இந்து : அவர் மட்டும் என்ன ? உங்கள் வீரதீரத்தைப் பழிக்கிறாரா? உங்கள் மீதுள்ள  அளவு கடந்த அன்பினால் போருக்குப் போக வேண்டாம் – ஆபத்து ஏற்படக்கூடும் என்று கூறுகிறார்.  மோகன் : வேடிக்கையான சுபாவம் உன் அப்பாவுக்கு வாள் ஏந்தும் கடமையை என் போன்ற வாலிபர்கள் மறந்தால் அனைவரும் சேர்ந்து எதிரியின் தாள் ஏந்த வேண்டுமே! தாயகம் அடிமையாகிவிடுமே! நாடு பரிபூரணவிடுதலை பெற்று நமது ஆட்சி நிலைநாட்டப்படும் வரையில் போரிட்டுத்தானே ஆக வேண்டும். மராட்டிய சாம்ராஜ்யம் கிருஷ்டித்தான பிறகுதான் நமது காதல் ராஜ்யம். ஆகா! இன்பமே! நமது காதல் ராஜ்யம் அமைந்து விட்டால்...  இந்து : அமைந்துவிட்டால்....  மோகன் : புயலும் தென்றலாகும். பொற்கொடியே! அந்த ராஜ்யத்திலே வாளும் வேலும் என்ன செய்ய முடியும்?  இந்து : உங்கள் அன்பு மொழியால் என்னைப் பைத்தியமாக்கி விடுகிறீர்கள் கண்ணாளா! மோகன் : என் மொழி உன்னை பைத்தியமாக்குவதாகச் சொல்கிறாய். இன்பவல்லி! உன் விழி என்னைப் பைத்தியமாக்கிவிடுகிறதே.  இந்து : போதும் போங்கள்! உங்களுக்கு எப்போதும் கேலிதானா? ---------------                                                                 காட்சி - 4 இடம் : வீதி உறுப்பினர்கள் : சந்திரமோகன், சாது.  (சாது நாட்டைப் பற்றி பாடி வருகிறார். மோகன் அதைக் கேட்டு விட்டு..)  மோகன் : பெரியவரே களிப்புக் கடலில் மூழ்கினேன். உமது கீதத்தைக் கேட்டு சாது இனிமையாக இருந்ததா தம்பி?  மோகன் : மதுரமாக இருந்தது மதிவாணரே!  சாது : இதைவிட இனிமை உண்டு , வானத்திலே வட்டமிடும் வானம்பாடியின் கீதத்தைக் கேட்டால். உற்றுக் கேட்டால் வீரனே! சிற்றருவிப் பாய்ந்தோடும் போது இனிமையான கானம் கேட்கவில்லையா? இயற்கை சதா நேரமும் இசைபாடிக் கொண்டுதான் இருக்கிறது.  மோகன் : உண்மைதான் பெரியவரே.  சாது : குழந்தையின் மழலை, குமரியின் கொஞ்சுமொழி. தென்றலிலே படும் கொடிகளின் அசைவு - இவைகளிலே இல்லாத இனிமை என் இசையிலே ஏதப்பா ?  மோகன் : அய்யா இனிமை மட்டுமே அந்தச் சமயங்களிலே காண்கிறேன். ஆனால், தங்கள் இசையிலேயோ இனிமையுடன் பொருளும் இருக்கக் கண்டு களித்தேன். சாது ; நல்லவனப்பா நீ! கீதத்தைக் கேட்டுவிட்டு கருத்தை கவனியாதிருப்பவரே அதிகம். நீ கவனித்தும் இருக்கிறாய்; ரசித்தும் இருக்கிறாய்!  மோகன் : ரசிக்காமல் இருக்க முடியுமா? புதுமணம் வீச வேண்டும், நாடு பொன்னாடாக வேண்டும், மக்களின் வாழ்வு மகிழ்ச்சியோடு துலங்க வேண்டும். மதிமிக வேண்டும் என்ற கருத்துக்களை நாட்டுப் பற்றுடைய யார்தான் ரசிக்காமல் இருக்க முடியும்? சாது; அதிலும் நாட்டை மீட்கப் போரிடும் மாவீரன் அல்லவா நீ. உன் மனம் மகிழத்தான் செய்யும்.  மோகன் : உயிரைத் துரும்பென்றெண்ணி எண்ணற்ற வீரர்கள். தாயகத்தின் விடுதலைக்காகப் போரிட்டனர். குருதியைக் கொட்டினர். வெற்றியும் கிடைத்திருக்கிறது.  சாது : வெற்றி மேல் வெற்றி கிடைக்கிறது வீரர்களுக்கு ….. மோகன் : பெரியவரே! என்ன, ஏதோ சிறு சஞ்சலம்?  சாது : வெற்றியைப் பெற்றுத் தருகிறார்கள். ஆனால் வீணர்கள் விதைத்த விஷப்பூண்டு இன்னும் அழியவில்லையே. ராஜ்யத்துக்கு எதிரிகளால் நாசம் ஏற்படாமல் தடுக்க வீரர்களின் தியாகம் தேவைப்படுகிறது. ஆனால் அந்த வீரத்தையும் தியாகத்தையும் விழலுக்கிறைத்த நீராக்கும் விபரீத காரியம் நடைபெறுகிறதே.  மோகன் : பெரியவரே! என்ன, ஏதாவது சாதி நடைபெறுகிறதா?  சாது : ரகசியமாக நடைபெறுவதல்லவா சதி? இது சதி அல்லப்பா, சாதி. அந்த சாதித் தொல்லை உள்ள மட்டும் சமூகத்துக்கு சதா ஆபத்துதானே? வீரப்போர் புரியும் போது தாய் நாட்டவர் என்ற பாசமும், எதிரி வெற்றி பெற்று விட்டால் என்ன செய்வது என்ற பயமும் மராட்டிய வீரர்களை ஒன்றாக்கி வைக்கிறது. பாசமும் பயமும் வெற்றிக் கொடி பறந்ததும், பறந்தே போய்விடும். பழையபடி ஜாதி தலைதூக்கும். அதை எண்ணித்தான் நான் சஞ்சலப்படுகிறேன்.  மோகன் : நாட்டு மக்களுக்கு ஜாதி கேட்டினைத்தான் செய்யும். அந்தக் கேட்டினை நாட்டை விட்டு ஒட்டிடலாம். அய்யா! ரத, கஜ துரக பதாதிகளையா கூட்டி வரும் இந்த ஜாதி?  சாது : அதற்கேனப்பா நால்வகைச் சேனை? அந்த ஜாதி சனியனால் தகப்பனே மகனுக்கு விரோதியாக்க முடியும். அண்ண னும் தம்பியும் போரிட்டு மடிவர், அது தூபமிட்டால், குடும்பம் கொலைக்களமாகும். ஊர் இரண்டு படும்! அது தூபமிட்டால், அந்த ஜாதித் சனியனுக்கு கோட்டைகள், மலைகள், மீதியிருந்தால் மாவீரர்கள் சென்று தாக்கித் தகர்த்துவிட முடியும். அந்த ஜாதிச் சனியனுக்குக் கோட்டைகள் நம்மவர் மனதிலேயே இருக்கின்றன.  மோகன் : பெரியவரே! இதுவரை இருந்தது போல் இனியும் இருக்கும் என்று எண்ணாதீர்கள். புதிய ராஜ்யம் ஏற்படுகிறது. புனிதப் போருக்குப் பிறகு ஏற்படும் ராஜ்யம் இது. இதிலே புல்லர்களுக்கு ஆதிக்கம் இருக்காது. ஒற்றுமை நிலவும்; தோழமை மலரும்; சமரச மணம் வீசும் ; சன்மார்க்கம் நிலைக்கும்; ஜாதி மடியும்.  சாது : நல்வாக்குக் கொடுக்கிறாய், நாடாள நீயே வந்தாலும் நடவாக் காரியங்களை மடமடவெனக் கொட்டிக் காட்டுகிறாய் ஆர்வ மிகுதியால்... நீயே நாளைக்கு ராஜா ஆகிவிடுகிறாய் என்று வைத்துக் கொள்.  (மோகன் திகைத்துப் பார்க்க) ஏனப்பா அப்படிப் பார்க்கிறாய்? அவலட்சணங்க ளெல்லாம் அரசர்களானபோது நீ ராஜா ஆகவா முடியாது? ஆளைப் பார்த்தால் ராஜா போலத்தான் இருக்கிறாய்; ராஜாவாகி விடுகிறாய் என்று வைத்துக் கொள். அப்போது நான் சொன்ன ஜாதிச் சனியனை விரட்டப் போரிடுவாயோ?  மோகன் : ஏன் முடியாது?  சாது : பைத்தியம் உனக்கு. நீ ராஜாவானால் உடனே உனக்கு ஒரு ராஜகுமரி வேண்டும். ரத, கஜ, துரக பதாதிகள் வேண்டும். அரண்மனை ஐஸ்வரியங்கள் வேண்டும். அந்தப்புரம் வேண்டும். அழகுள்ள ஆடும் பெண்கள் வேண்டும். ஆலவட்டம் வீச ஆட்கள் வேண்டும். யானை மீது அம்பாரி வேண்டும் என்று இவைகள் மீது அக்கரை பிறக்குமே தவிர ஜாதிபேதத்தை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் வராது. மோகன் : ஏன் வராது? கட்டாயம் வரும்.  சாது : வராதப்பா.  மோகன் : கட்டாயம் வரும்.  சாது : வராதப்பா வராது. வந்தாலும் ராஜா வேலை உனக்கு நிலைக்காது.  மோகன் : ஏன்?  சாது : ஏனா? உயர்ந்த ஜாதிக்காரர் என்பவர்கள் உன்னை எதிர்த்து ஒழித்தே விடுவார்கள்... சிவாஜியின் வீரத்தைக்கூட அந்த வீணர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்.  மோகன் : பெரியவரே! முன்பு நடந்தது போல் இனியும் நடக்கும் என்று வாதாடுவது முறையாகாது. சிவாஜியின் கண்களிலே இந்தக் கொடுமைகள் தென்படாமல் இல்லை. அவர் தனக்காக, தாய் நாட்டுக்காக உயிர் கொடுத்த உத்தமர்களை உயர்ந்த ஜாதி என்று உரிமை பேசுவோரிடம் அடிமைப்பட விடமாட்டார். அவர் குடி யானவர் வகுப்பு. குலப்பெருமை பேசும் கும்பலில் பிறந்த வரல்ல. அவர் சகலரையும் சமமாகவே நடத்துவார். சாது : ஆர்வம் ததும்புகிறது உன் பேச்சிலே. அனுபவமில்லாததால் ஆர்வம் அளவுக்கு மிஞ்சியிருக்கிறது. அனுபவம் பெறுவாயப்பா. நீ மராட்டியத்தின் மறுமலர்ச்சி துதூவன். போய் வா! -----------------                                                         காட்சி - 5 இடம் : நந்தவனம்  உறுப்பினர்கள் : சாந்தாஜி, இந்து, மோகன்  (இந்துமதி மாலை தொடுத்துக் கொண்டிருக்கிறாள். சாந்தாஜி வந்து...)  சாந்தாஜி : இந்து இன்னும் மாலை முடியவில்லையா?  இந்து : இதோ, முடிந்து விட்டதப்பா. (மாலையைத் தருகிறாள். சாந்தாஜி மாலையைப் பார்த்து விட்டு ...)  சாந் : என்ன இந்து மாலையில் மலரைவிட தழைதான் அதிகமிருக்கிறது. தேவனுக்கு இப்படியாமா மாலை சூட்டுவது?  இந்து : அப்பா நீங்கள் தினம் தினம் தேவனை தரிசிக்கிறீர்களே தவிர அவருடைய திவ்யமான குணத்தை தெரிந்து கொள்ளவில்லையே. பக்தியோடு பச்சை ஓலையை மாலையாகச் சமர்ப்பித்தாலும் பகவானுக்கு அதுவே பாரிஜாதமாயிருக்கும்.  சாந் : ஆமாம் பேசக் தெரிந்து கொண்டாய். என்ன இருந்தாலும், இந்து கோவிலுக்குக் கொண்டு போகிற மாலை இப்படி இருக்கக் கூடாது.  இந்து : ஆமாம் கோவிலிலேயே இருந்து விடப்போகிறது , நீங்கள் தேவனுக்கு என்று மாலையைத் தருகிறீர்கள். நீங்கள் தரும் போதே பட்டாச்சாரி அதைத் தன்னுடைய தேவதாசிக்குத் தர தீர்மானிக்கிறான்.  சாந் : துஷ்டப் பெண்ணடி நீ! இந்து : உம்... அப்பா! மாலையைத் தரும்போது தேவனிடம் சொல்லுங்கள். இது, இந்து தயாரித்தது என்று. ஆமாம்! நீங்கள் சொன்னால் எங்கே அவர் காதில் விழப்போகிறது. அர்ச்சகருடைய அபசுரத்தைக் கேட்டு கேட்டு காது செவிடாகி எவ்வளவோ நாளாகிவிட்டது.  (என்று கூறிவிட்டு ஓடுகிறாள். இன்னொரு மாலை கீழே விழுகிறது.)  சாந்: இந்து இந்த மாலை ஏது : இவ்வளவு கள்ளியாகிவிட்டாயா? நல்ல மாலையை ஒளித்து வைத்து விட்டு, இலையை மாலையாக்கி இறைவனுக்குத் தருகிறாய்! ஏன் இந்த மாலையை ஒளித்து வைத்தாய்? (இந்து மெளனமாயிருக்கிறாள்) பதில் சொல்! யாருக்கு இந்த மாலை? யாருக்காக இந்த மாலை சொல்லு? (சந்திரமோகன் வருகிறான். இந்த வெட்கத்துடன் தலைகுனிகிறாள். சாந்தாஜி அதைக் கவனியாமல் ) தேவனுக்கு மாலை தயாரிக்க சொன்னால் நீ இப்படி திருட்டுத்தனமா செய்கிறாய்? தேவனுக்குத் தழை! யாருக்கு இந்த மாலை? சொல்லு...  மோகன் : எனக்காக... (சாந்தாஜி திடுக்கிட்டுத் திரும்பிக் கோபமாக)  சாந் : என்ன! எனக்காக மாலை என்றா சொல்கிறாய்? (மோகன் பயந்தவன் போல் பாசாங்கு செய்து)  மோகன் : மாலையா? எனக்காக? ஏன்?  சாந்: என்னடா மோகன் என்னிடமா வேடிக்கை செய்கிறாய். நான் யாருக்கு மாலை என்று இந்துவைக் கேட்டால், நீ எனக்காக என்று சொல்லிவிட்டு... மோகன் ; ஓ.. அதுவா? நான் மாலை எனக்காக என்று சொல்லவில்லையே. எனக்காகத் தாங்கள் காத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான் சுந்தர், அதற்காக வந்தேன் என்று சொல்ல ஆரம்பித்தேன்.  (சாந்தாஜி மாலையை அவனிடம் வீசி எறிந்து)  சாந் : இந்தா! நீ கேட்டாயோ இல்லையோ! இந்து இந்த மாலையை உனக்காகத் தான் தயாரித்திருப்பாள். நான் தேவனுக்கு மாலை தயாரிக்கச் சொன்னால்.. (மோகன் மாலை அணிந்து கொள்ள, இந்த அவனை வணங்குகிறாள். சாந்தாஜி பார்த்து விடுகிறார். மோகன் அப்படியே பாம்பு போல கையை ஆட்டுகிறான்)  என்னடா மோகன் கையை ஆட்டுகிறாய்?  மோகன் : பாம்பாட்டம் காட்டுகிறேன்.  சாந் ; பாம்பாட்டமல்ல; நீங்கள் இரண்டு பேரும் வரவர . குரங்காட்டம் ஆடுகிறீர்கள்.  இந்து : அப்பா! பாதி ராமாயணமே அது தானே. (இந்துவை அடிக்க சாந்தாஜி ஒடுகிறார். இந்து ஒடிவிடுகிறாள். சாந்தாஜி சிரித்துக் கொண்டே ) சாந் : இந்து மகா குறும்புக்காரி. அவள் அம்மாவும் அப்படித்தான். சரி, சந்திரமோகன்! உன்னை ஏன் வரச் சொன்னேன் தெரியுமா?  மோகன் : தெரியாதே  சாந் : தெரிந்துக் கொள். இனி இந்துவை நீ பார்க்கக்கூடாது. அவளைப்பற்றி நினைக்கவும் கூடாது.  (மோகன் திகைத்து, பிறகு விளையாடுகிறார் என்று எண்ணி )  மோகன் : கனவிலே அவள் வந்தால்...? சாந் ; அது கனவாகவே போகும்! (மோகன் பயந்து) மோகன் : தாங்கள் என்ன பேசுகிறீர்கள்?  சாந் : பேசுவது புரியாத நிலை பிறந்து விட்டது உனக்கு... புரியும்படி சொல்லுகிறேன் கேள்! நீயும் இந்துவும்  மோகன் : நானும் இந்துவும் கண்ணும் ஒளியும் போல.  சாந் : பேசுவது நான் மோகன்... சகுந்தலையிடம் பேசும் துஷ்யந்தனாக இராதே இந்துவை நீ கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்க மாட்டேன்.  மோகன் : ஏன்?  சாந் : அவளுடைய தகப்பனாக நானிருப்பதால் மோகன் : குமரியைக் கொடுமை செய்வது தந்தையின் கடமைகளிலே ஒன்றா?  சாந் : கடமைகள் எனக்கு மறந்து போகாததால் தான் என் மகளை ... அவளை ரட்சிக்கக்கூடிய ஒருவனுக்குத் தாரமாக்கத் தீர்மானித்து விட்டேன்! உனக்கு எதற்கப்பா மனைவி ... மக்கள். குடும்பம்? எதுவும் உனக்கு வேண்டியதில்லை நீ வீரன் மகா வீரன் போர் வீரன் போர் வீரனுக்கு மனைவி எதற்கப்பா?  மோகன் : மராட்டிய மண்டலத்திலேயே யாரும் பேசாத மொழி பேசுகிறீரே! நான் போர் வீரன் என்பதற்காகவா எங்கள் புனிதக் காதலை தடை செய்கிறீர்கள்? தாங்கள் பூஜிக்கும் ராமன் ஓர் போர்வீரன்.  சாந் : நான் மட்டும் ஜனகனாக இருந்திருந்தால்; ராமனுக்குச் சீதையைக் கொடுத்திருக்கவே மாட்டேன். போர் வீரனை மணந்து கொண்டதால் ஜானகி கண்ட பலன் என்ன? ஆரண்யவாசம் இராவணனிடம் சிறைவாசம்! கர்ப்பிணியாகவே கானகவாசம். பிறகு பாதாளப் பிரவேசம். இதுதானே? இது தெரிந்துதான் சொல்கிறேன். இந்துவை உனக்குக் கல்யாணம் செய்து தர முடியாது என்று.  மோகன் : விசித்திரமான பேச்சாக இருக்கிறதே! – வீரர்கள் பிரம்மச்சாரிகளாகவே இருந்துவிட வேண்டுமா? கோழைகளுக்குத்தான் கோமளவல்லிகள் வேண்டுமா? தங்கள் சித்தாந்தமே எனக்குப் புரியவில்லையே.  (மோகன் அருகே சென்று, தோள் மீது கை வைத்து அமைதியாக)  சாந் : மோகன் கிழவன் நான். என் கிளி இந்து. அடேயப்பா! நீ சதா போர், போர் என்று போர்க்களத்திலேயே திரிய வேண்டும் என்கிறாயே. அவளை நான் உனக்குத் தந்துவிட்டு ஒவ்வொரு கணமும் உயிர் வேதனை அடைய வேண்டுமா?... நீயே சொல்லு! போர் வீரனுடைய வாழ்க்கை ஆபத்து நிறைந்தது. பயங்கரமானது. அவள், இந்து, பூங்கொடி நீ புயல் காற்று. அவள் மெழுகு ; நீ அனல் ...  மோகன் : அவள் மலர்; நான் மதி. அதையும் கூறிவிடுமே.  சாந் : கோபிக்காதே மோகன் நீ மந்தியா? மந்தகாசமான முகம். மராட்டிய தேஜஸ் உடையவன். இந்துவுக்கேற்ற இளவரசன் எல்லாம் சரிதான். ஆனால் நீ போரிடப் போய்விடுவாயே அதை நினைத்தால் நெஞ்சம் நடுங்குகிறதே.  மோகன் : வீணான பயம் வேண்டாம். நான் போர் வீரன் என்று தெரிந்த பிறகுதான் இந்து என்னைக் காதலித்தாள். அவளுடைய சுகத்திலே தங்களுக்கு அக்கரை இல்லையா? போர் வீரன் என்ற பட்டம் புகழின் சின்னம். அதைப் பெற எத்தனையோ குடும்பங்கள் தவம் கிடக்கின்றன. சாந் : என்னமோ, அப்பா உன் சொல் என் செவி புகாது. இந்துவின் தகப்பன் வீட்டோடு - குடும்பத்தோடு, சுத்தி கட்டாரி தூக்காத கண்யமாக வாழும் ஒரு மருமகனைத் தேடுகிறேன். அவ்வளவுதான் தெரியும் எனக்குப் பேச . நான் சொல்வதைக் கேளடா மோகன். சண்டாளத் தொழிலடா இந்தச் சண்டை போடும் தொழில், கொலை வேலை! ரத்தக்கறை படிந்த கையால் இந்த ரதியைத் தொடலாமா? போனது போகட்டும். அவளைத் தொட்டுத் தாலி கட்டிய பிறகாவது நீ இந்தத் தொழிலை விட்டு விடுகிறேன் என்று சத்தியம் செய்.  மோகன் : எந்தத் தொழிலை ?  சாந் : பட்டாளத்து வேலையை. மோகன் : அதுதான் தொழிலா? என் கடமை மராட்டியவாலிபன் மராட்டியப் படையிலே சேர்ந்து பணியாற்றுவது, தொழிலல்ல; அவன் பிறப்புரிமை. நாட்டுத் தொண்டு ; ராஜ சேவை, தேசபக்தி.  சாந் : அப்படியென்றால் இந்துவிடம் உனக்கிருக்கும் அன்பு வெறும் வேஷம். அவளுக்காக நீ வாளைத் துறந்து விடக் கூடாதா என்ன?  மோகன் : மராட்டிய நாட்டிலே இப்படி ஒரு முதியவர் இருப்பது தெரிந்தால் சிவாஜி ரத்தக் கண்ணீர் சொரிவார்.  சாந் : சொரிவார் சொரிவார் ஜீஜி பாயின் கண்களிலே . ரத்தக் கண்ணீர் சொரிந்ததை அவர் அறியார். என் போன்ற ஏக்கங்கொண்ட கிழவர்களின் கண்ணீரையும் அவர் பார்த்ததில்லை .  மோகன் : நல்ல வேளையாகப் பார்த்ததில்லை. எதிரியின் வாள் உண்டாக்கிய காயத்திலிருந்து ஒழுகும் ரத்தத்தைத் துடைக்கவும் நேரமின்றி போரிட்ட வீரர்களையே அவர் பார்த்தார். இந்துமதியைக் கேளுங்கள், வாளை நான் அவளுக்காகத் துறந்துவிட வேண்டுமா என்று? (சாந்தாஜி மகிழ்ச்சியுடன் இந்துமதியைக் கூப்பிட, அவள் வீரன் உடையை அணிந்து வருகிறாள், மோகன் சிரிக்க..) (கோபத்தோடு)  சாந் : இந்து ! இது என்ன கோலம் போ, உள்ளே .  மோகன் : மராட்டிய மாதாவின் போர்க்கோலம் அது.  சாந் : போதும்! நீயும் போ இருவரும் சேர்ந்து எனக்குப் பைத்தியம் உண்டாகும்படி செய்து விடுவீர்கள் போலிருக்கிறது .... மோகன் போ நான் கோவிலுக்குப் போகவேண்டும் நாளைக்கு வா நாளைக்கு வேண்டாம்; நான்கு நாள் பொறுத்து வா வேண்டாம்; நீ வரவே வேண்டாம். என் மகளை நான் போரில் ஈடுபட்டு சதா ஆபத்தோடு விளையாடும் உனக்குக் கண்டிப்பாய் தரமுடியாது.  இந்து : அப்பா!  சாந் : ஆமாம் யுத்த வெறியனுக்கு மனைவி மக்கள் மீது எப்படி அன்பு ஏற்படும்?  மோகன் ; சாந்தாஜி இந்துமதி உமது மகள். நீர் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டவள். நான் நாட்டு விடுதலைப் படையில் ஓர் வீரன். நீ வீரத்தைப் பழித்துப் பேசிக் கொண்டிருப்பதை என்னால் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. இந்துமதியின் பேரழகுக்காக நான் பேடியாகி விட வேண்டுமென்று எண்ணாதீர். அவளை எனக்குத் தாரமாக்கினால் என் மாளிகையில் வசிப்பாள். எங்கள் காதலை உணராமல் அவளை வேறு யாருக்கேனும் திருமணம் செய்து கொடுத்தால், இந்து என் மாளிகையில் உலவ முடியாது. அப்போதும் என் மன மாளிகையில் வேறு மங்கை உலவமாட்டாள். நான் வருகிறேன்.  (கோபமாகப் போகிறான்.) -----------                       காட்சி - 6 இடம் ; வீதி உறுப்பினர்கள் : கேசவப்பட்டர், பாலச்சந்திரப் பட்டர், தர்மன்.  (தர்மன் வருகிறான்)  கேசவ : யார், தர்மனா? சௌக்கியமாடா...?  தர்மன் : சுகந்தானுங்க. நீங்க சுகந்தானுங்களே! சுகமாத்தான் இருப்பீங்க; கேக்க வேணுமா? நம்ம ராஜ்யம் பூராவும்இப்ப சுகமாத்தானே இருக்கு.  பாலச் : ஒய், பார்த்தீரா, பிரபஞ்ச மாறுதலை! தர்மன் ராஜ்யம் பூராவும் அறிந்தவனாகி விட்டான்.  தர்மன் : என்னங்கா கேவலமாகப் பேசறிங்க. என் மகன் இப்ப சிவாஜி மகாராஜா பட்டாளத்திலே சேர்ந்து ஊர் நாடெல்லாம் சுத்தி வரான்லே. அவன் சொல்லித்தான் ஊர் க்ஷேமங்கள் தெரியுது. நான் என்னத்தக் கண்டேனுங்க. நான் உண்டு. ஏர் உண்டுன்னு இருக்கிறவன் தானுங்களே.  கேசவ : அது சரிடா தர்மா! உன் மகன் பட்டாளத்திலேயா இருக்கான்?  தர்மன் : ஆமாங்க!  பாலச் : கர்மம் யாரை விட்டது?  தர்மன் . ஏன் அப்படிச் சொல்றீங்க? அவன் பட்டாளத்திலே சேர்ந்து மராட்டிய ராஜ்யத்தை கீர்த்தி உள்ளதாக்கி வர்றான். நல்ல காரியந்தானே நடக்குது.  கேசவ : என்ன மகா நல்ல காரியம்? ஏண்டா தர்மா! தேச சேவை, ராஜ சேவை, வீரம் என்று என்ன தான் பெயர் வேண்டுமானாலும் வைக்கட்டும்; சண்டைன்னா அதிலே நடப்பது கொலைதானே... இல்லேன்னு சொல்லுவியா?  தர்மன் : அது சரிங்க!  கேசவ : என்ன சரி! இல்லெ தர்மா! யோசித்துப் பேசு. நம்ம ராஜ்யம். நம்ம ராஜா, நம்ம கீர்த்தி இதெல்லாம் இருக்கட்டும் ஒரு புறம். சண்டேன்னா அங்கே மனுஷாளை மனுஷாள் மிருகங்கள் போல எதிர்த்துண்டு சாக அடிக்கிற காரியந்தானே நடக்கிறது. இல்லேம்பியா?  தர்மன் : ஆமா! எவ்வளவோ பேரு மடிஞ்சு போறாங்க.  கேசவ : அப்படின்னா அது கொலைதானே? தர்மன் : கொலைன்னாலும் நோக்கம் பாருங்க. அது . நல்லதுதானே.  கேசவ : நோக்கம் இருக்கட்டும்டா தர்மா. கொலை நடக்கிறதா இல்லையா?  தர்மன் : ஆமாங்க!  கேசவ : உன் மகன் பட்டாளத்திலே சேர்ந்து, இந்தப் படுகொலையிலே சம்பந்தப்பட்டிருக்கிறான். ஆகையினால் பாவ மூட்டையை உன் குடும்பத்துக்குச் சேர்த்திருக்கிறான். நான் சொல்றேன்னு வருத்தப்படாதே. தர்மா! நீ எவ்வளவோ நல்லவன். இருந்தாலும் உன் மகனாலே உனக்கு நரகவாசம் சம்பவிக்கும்.  தர்மன் : அய்யோ ! அப்படிங்களா?  கேசவ : சாஸ்திரத்தைச் சொல்றேண்டா தர்மா. சாஸ்திரம்.  பாலச் : ஏன், ஒய்! பிரமாதமாகப் பேசுகிறீரே! அதே : - சாஸ்திரத்திலே, அதே சாபத்துக்கும் பிராயச்சித்தம் சொல்லியிருக்கே. கேசவ : யார் இல்லேன்னா? ஏன் ஒய் நேக்கு அது தெரியாதுன்னு நினைத்தீரோ? நான் என்ன சாஸ்திரத்தை சாங்கோபங்கமாகத் தெரியாதவனா? இல்லை; என்ன உமது நினைப்பு? ஒய்! நான் சாமான்யாளிடம் சிட்சை கேட்டவனல்ல ஒய்! சாட்சாத் காகப்பட்டரிடம் பாடம் கேட்டவனாக்கும்.  பாலச் : ஓய், கேசவப்பட்டர் சும்மா பேசாதேயும். நீர், மட்டுந்தானா காகப்பட்டரிடம் பாடம் கேட்டது. அவரிடம் பிரதம சிஷ்யராக இருப்பவர் யார் ? தெரியுமோ நோக்கு சொல்லும் பார்ப்போம்?  கேசவ : இது தெரியாதோ? ரங்கு பட்டர்.  பாலச் : அந்தரங்குபட்டர் யார் தெரியுமோ?  கேசவ : என்ன ஒய் இது? ரங்கு பட்டர் யார் என்றால் காகப்பட்டரின் சிஷ்யர்.  பாலச் : ரங்கு பட்டர் காகப் பட்டரின் சிஷ்யர். காகப்பட்டர் ரங்கு பட்டரின் குரு. இது தெரியாமதான் கேட்டேனாக்கும். ரங்கு பட்டர் யார் என்று கேட்கிறேன் ஒய்!  கேசவ : யார்? நீர்தான் சொல்லுமே...  பாலச் : போகட்டும், என் அத்தை தெரியுமோ நோக்கு ?  கேசவப் : நோக்கு ரெண்டு பேருண்டே அத்தைமார். நீர் - யாரைக் கேட்கிறீர்? பாலச் : சிகப்பா ஒல்லியா இருப்பாள் ஒரு அத்தை.  கேசவ : கொஞ்சம் வாயாடுதல்...  பாலச் : ஒய் வாயாடுதல் இல்லை அவள். அவ எதிரே சொல்லியிருந்தா தெரிஞ்சு இருக்கும் உம் பாடு. அவளுடைய பெயர் அலமு . நான் சொல்றது அவ இல்லை. இன்னொரு அத்தை. கரப்பா நெட்டையா இருப்பாள். காமுண்ணு பெயர். அவ ஆத்துக்காரருக்கு ரங்கு பட்டர் நேர் தம்பிங்காணும்.  கேசவப் : அப்படிச் சொல்லும் ஒய்! ஒரு நாள் ரங்கு பட்டர் தூக்கத்திலே பிதற்ற ஆரம்பித்தார். காமு . காமுண்ணு கூவிக்கிட்டிருந்தார். கங்கு பட்டர் கூட கோவிச்சிண்டு என்னடா உளறிண்டிருக்கேன்னு கேட்டான்.  தர்மன் : என்னங்க இது. சாஸ்திரம் பிராயச்சித்தம்னு ஆரம்பிச்சு எங்கேயோ போயிட்டிங்களே?  கேசவப் : போயிட்லேடா தர்மா. சாஸ்திரத்திலே சொல்லியிருக்கிற பிராயச்சித்தப்படி உன் மகன் யுத்தத்திலே செய்திருக்கிற பாப கிருத்தியங்களுக்கு ஒரு சுத்தி ஹோமம் செய்தால் நோக்கு விமோசனம் உண்டு.  தர்மன் : செலவு நிறைய ஆகுமோ? கேசவப் : பிரமாதமா ஆகாது. ஒரு அறநூறு வராகன் பிடிக்கும். தர்மன் : அடேயப்பா! ஆறு நூறு. அவ்வளவு ஏது எங்கிட்டே?  கேசவப் : தர்மா. அரை நூறு . அதாவது, ஐம்பது வராகன். ஆறு நூறு இல்லே .  தர்மன் : அப்படிச் சொல்லுங்க. நாள் பாருங்க.  கேசப் : ஏன், நாளைக்கே திவ்யமான நாள்.  பாலச் : ஒய்! ரொம்ப லட்சணங்காணும்! நாளைக்குக் கரிநாள் தெரியாதோ?  கேசவப் ; யாருங்காணும் சொன்னது நோக்கு ? பாலச் : தர்மா! நாளைக்குக் கரிநாள். கேசவப்பட்டர் அவசரப்பட்டு சொல்லிவிட்டார். நாளைக்கு மறுநாள் ஹோமம் நடத்திவிடலாம். சந்திரமோகன் தர்மன் : சரிங்க! நான் வர்றேனுங்க. (நமஸ்கரித்துப் போகிறான் )  கேசவப் : ஓய் இதென்ன வலிய வர்ற சீதேவியை உதைத்துத் தள்ளுறீர்? கரிநாளும், கத்தரிக்கா நாளும்னு சொல்லி …. பாலச் : கேசவப்பட்டரே! உம்ம மூளை வரவர வரண் டுண்டே போறது. நாமெ ரெண்டு பேரும் நாளைக்கு அடுத்த கிராமத்திலே சிரார்த்தத்துக்குப் போகணுமே, அது கவனமில்ல மெ, நாளைக்கு ஹோமம்ணு சொன்னீரே?  கேசவப் அட்டா நான் மறந்தே போனேன். நல்ல வேளையா நோக்காவது கவனம் வந்ததே.  பாலச் : வரவேதான் கரிநாள்னு ஒரு போடு போட்டேன். வாரும் போகலாம். (போகிறார்கள்) ---------------                               காட்சி - 7 இடம் : வீதி  உறுப்பினர்கள் : சாந்தாஜி, பாலாஜி. (சாந்தாஜியும், பாலாஜியும், எதிர் எதிரே வந்து சந்திக்கின்றனர்.)  பாலாஜி : நமஸ்காரம், சாந்தாஜி , நமஸ்காரம்.  சாந் : நமஸ்கார். நமஸ்கார்... (போகிறார்)  பாலாஜி : ஏது சாந்தாஜி கோபமாக இருக்கிறீர்கள்?  சாந் : (கோபத்துடன்) நான் கோபமாக இருப்பதாக யார் சொன்னார்கள்? அந்தப் பயல்தான் சொல்லியிருப்பான். சந்திரமோகன்தானே சொன்னான்?  பாலாஜி : ஆமாம் என்றுதான் வைத்துக் கொள்ளுங்களேன். சாந் : மகா யோக்கியன் போல் உன்னிடம் பஞ்சாயத்துக்கு வந்துவிட்டானா? அவன் யோக்கியதையைப் பார் நான் கிளிப்பிள்ளைக்குச் சொல்லுவதைப் போல் சொல்லுகிறேன். அடே, சுந்தர் என் பேச்சைக் கேளடா . இந்து என் ஒரே மகள். குழந்தையை நான் கண்ணைப் போல் காப்பாற்றுகிறேன். அவள் எப்படியோ உன்னிடம் மயங்கிவிட்டாள். நீ இந்தச் சண்டைக்கு மட்டும் போகாதே. நீ அவளைக் கல்யாணம் செய்து கொண்டு வீட்டோடு இரு என்று கெஞ்சுகிறேன். அவன் என்ன சொன்னான் தெரியுமா? வீரத்தைப் பழிக்காதே. நாட்டுக்கு நான் அடிமை. என் நாயகியும் நாட்டுக்குப் பணிப்பெண்' - என்று எதிர்த்துப் பேசினான். ஏழு லட்சம் வராகன் இருக்கிறது என்னிடம் அவன் என்னை எதிர்த்துப் பேசுகிறான். பாலாஜி : பேச்சோடு விட்டானேன்னு சந்தோஷப் படுங்க சாந்தாஜி. அவன் மகா கெட்டவன் ..  சாந் : அவனா அவன் கெட்டவனில்லையே. அவனுக்கு 'தேசம், தேசம்' என்று ஒரே பைத்தியம். அது தவிர அவனிடம் குறையே கிடையாது. என்ன செய்வதென்று தெரியவில்லை .  பாலாஜி ; ஏன் தெரியவில்லை ? இந்துமதிக்கு வேறு ஒரு ஆள் பார்க்க வேண்டியதுதான். மகாராஷ்டிரத்திலே மாப்பிள்ளைக்கா பஞ்சம்?  சாந் : மகாராஷ்டிரத்திலே ஒரே ஒரு சந்திரமோகன்தானே கிடைப்பான்.  பாலாஜி: தங்களுக்கு மோகன் மீது பற்று என்று சொல்லுங்கள்! சாந் : இல்லையென்றால்தான் தொல்லையில்லையே? விரட்டி  விட்டிருப்பேனே. அவன் இந்துவின் நெஞ்சிலேயும் புகுந்து கொண்டான். என் உள்ளத்தையும் கொள்ளை கொண்டு விட்டான். பாலாஜி : புத்தி சொல்லிப் பார்ப்பதுதானே?  சாந் : நான் ஏதாவது பேச ஆரம்பித்தால் அவன் அகோரக் கூச்சல் போட்டு அடக்கிவிடுகிறான்.  பாலாஜி : ஒரு யோசனை! இந்தக் காதல் இருக்கிறதே, அது ஒரு மாதிரியான வெறி வேறு ஒருவர் அந்தக் காதலைத் தட்டிப் பறித்து விடுவார்கள் என்று தோன்றினால் போதும், காதல் பித்துக் கொண்டவர்கள் காலடியில் விழுந்தாவது காரியத்தை முடித்துக் கொள்ள முயல்வார்கள்.  சாந் : விளங்கச் சொல்லப்பா?  பாலாஜி : இந்துமதியை வேறு யாரேனும் காதலிப்பதாகத் தோன்றினால் போதும்; தானாக வழிக்கு வருவான்.  சாந் : அது எப்படி சாத்தியமாகும்?  பாலாஜி : நான் ஏற்பாடு செய்கிறேன் ஒரு ஆளை. இந்துவைக் காதலிப்பது போல் நடந்து கொள்ளச் சொல்லுகிறேன். '  சாந் : விளையாட்டு வினையாகிவிட்டால்?  பாலாஜி : ஆகாது; ஆகாது. நான் கவனித்துக் கொள்கிறேன்.  சாந் : யாரை ஏற்பாடு செய்கிறாய்? அவன் யோக்கியனாய் இருக்க வேண்டும். சபலப் புத்தி கூடாது. இந்துவிடம் உண்மையாகவே காதல் கொண்டு விடக்கூடாது.  பாலாஜி : எனக்குத் தெரியாதா? உங்களுக்குப் பகதூரைத் தெரியுமா?  சாந் : அவனா? சுத்தப் பயங்கொள்ளிப் பயலாச்சே! பெண்களிடம் பேசவே தெரியாதே.  பாலாஜி : அப்படிப்பட்டவனை நம்பித்தான் இந்தக் காரியத்தில் இறங்க வேண்டும். எப்படி நடந்து கொள்வது என்று நான் அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறேன். என் தந்திரத்தைப் பாரும். ஒரு வாரத்தில் அவனைக் காதலன் வேஷத்தில் உமது மாளிக்கைக்கு அனுப்பி வைக்கிறேன். ம்... செலவுக்கு மட்டும்... (பணத்தை மடியிலிருந்து எடுத்து ) சாந் : ஒரு சல்லிகூடத் தர முடியாது. இந்த இருநூறு வராகனுக்குமேல்.  பாலாஜி : இதிலேயே முடித்து வைக்கிறேன். வெற்றி கிடைத்ததும் தாங்களாகவே இனாம் தராமலா போகப் போகிறீர்கள்.  சாந் : பார்ப்போம் போய்வாரும் ஜெயத்துடன்.  (சாந்தாஜி போகிறார்)  பாலாஜி : சரியான வேலை கிடைத்தது. நம்ம சாமர்த்தியம் இப்படி இருக்கு அவ என்னடான்னா நம்ம முட்டாள்னு நெனைக்கிறா, நினைக்கிறாளா? சொல்லவே சொல்றா.. ஆசையிலே ... ஆசையிலே... (போகிறான்) -------------               காட்சி - 8 இடம் ஆ : விருந்து மண்டபம்  உறுப்பினர்கள் : சிட்னீஸ், சிவாஜி, சர்தார்கள், நடனமாது. (நடனம் நடக்கிறது. ஆசனங்கள் வரிசையாகப் போடப்பட்டிருக்கின்றன. முகப்பில் பெரிய ஆசனம். சிட்னீஸ் உலவியப்படி இருக்க சர்தார்கள் வருகின்றனர்.) சிட்னீஸ் : வாருங்கள் வாருங்கள் மராட்டிய சர்தார்களே வந்து அமருங்கள். உங்கள் வருகையை மாவீரன் சிவாஜி " மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.  1. சர்தார் : சந்தோஷம் விருந்தை இந்த மண்டபத்திலேயே நடத்திவிட உத்தேசமா? சிட்னீஸ் : ஆமாம்! அந்தப் பெரிய மண்டபத்தை ஆயுதக் காட்சிச் சாலையாக்கிவிட்டார்.  2. சர்தார் : இருவரிசைகள் உள்ளன. சரி, அதோ ஒரு ஆசனம் இருக்கிறதே, முகப்பில் தனியாக. அது ஏன்? அது யாருக்கு?  சிட்னீஸ் : அந்த ஆசனத்தில்தான். அஞ்சா நெஞ்சன் சிவாஜி அமரப் போகிறார்.  1. சர்தார் : அமரட்டும். ஆனால் அந்த ஆசனம் இருவரிசைகளிலேயே ஏதேனும் ஒன்றோடு சேர்த்துப் போடப்படாமல் தனியாக, இரு வரிசைக்கும் மேலாக, உயரமாகப் போடப்படுவானேன்?  சிட்னீஸ் : விருந்துக்கு அவர் தலைமை தாங்குபவர் என்ற முறையிலே, இது போல் அமைத்தோம். 1. சர்தார் : அதை நாங்கள் ஆட்சேபிக்கிறோம்.  2. சர்தார் : இப்படி இருக்கும் என்று தெரிந்திருந்தால் விருந்துக்கு வரச் சம்மதித்திருக்கமாட்டோம்.  1. சர்தார் ஏன் இப்படி எங்களை வரவழைத்து அவமானம் செய்ய வேண்டும்?  சிட்னீஸ் : அவமானமா? இந்த ஆசன அமைப்பு முறையா உங்களை அவமானம் செய்கிறது?  1. சர்தார் : மானாபிமானம் விஷயமாய், மகானுபவரே! எங்களுக்குக் கொஞ்சம் அக்கரை உண்டு. அவ்வளவுதான்.  சிட்னீஸ் : மராட்டியத்தை வாழ்விக்க வந்த மாவீரனின் பேச்சுக்கு மறு பேச்சு பேசி அறியாத மராட்டிய சர்தார்களா, இப்படி ஆட்சேபனை கூறுவது?  2. சர்தார் : 'போ, இந்தக் களத்துக்கு; தாக்கு, அந்தப் படையை! அதன் அளவைப் பற்றி அத்தவேண்டாம். தாண்டும் அந்த அகழியை' என்று அவர் கட்டளையிட்டபோது ஏன் என்று கேட்டதில்லை. ஆகுமோ என்று யோசித்ததில்லை. சாம்ராஜ்யம் சிருஷ்டிக்க வேண்டும் என்ற ஒரே ஆர்வத்தால். ஆனால் சிட்னீஸ் சாம்ராஜ்யம் தர்ம சூன்ய ராஜ்யமாக இருக்கவுமா சம்மதிக்க முடியும்?  1. சர்தார் : மிக மிக சாமான்யர்களுக்கும் விளங்கக் கூடிய கலாச்சாரத்தையே மறந்து விட்டார்களே இப்போதே. அவர் எங்கள் நெஞ்சுக்கு உரம் ஊட்டியவர்தான். ஆனால் எமது குலத்துக்குமா நஞ்சு ஊட்ட இடம் தரவேண்டும்?  2. சர்தார் : சிவாஜி வீரர், தீரர், தியாகி, தேசோத்தாரகர். எல்லாம் சரி. ஆனால் அவர் உயர்ந்த ஜாதியினரல்ல. குடியானவர் குலம். பிரபு, கோர்பாதி, நிம்பால்கர், சவாந்து போன்ற உயர்குல மக்கள் கூடியுள்ள இந்த இடத்திலே அவர் தலைமை வகிப்பது முறையாகாது. குலதர்மத்துக்கு இது தகாது.  1. சர்தார் : விருந்துக்குத் தலைமை தாங்க, அந்த உயர்ந்த ஆசனத்தில் அவர் அமர்வதற்கு நாங்கள் சம்மதித்தால், எங்கள் குலங்களை விட அவர் பிறந்த குலம் மேலானது என்று நாங்கள் ஒத்துக் கொண்டதாக அல்லவா அர்த்தப்படும்?  2. சர்தார் : அது எங்ஙனம் சாத்தியப்படும்? எப்படி அதை ஒப்புக் கொள்ள முடியும்? நாங்கள் அனைவரும் சிவாஜியினுடைய வீரத்தை ஒத்துக் கொள்கிறோம். போரிலே அவர் புலி; ஆட்சேபிப்பார் இல்லை. அவருக்காக வாள் ஏந்தி வையகத்தின் கோடி வரை சென்று போரிடவும் தயாராகவே இருக்கிறோம். ஆனால் எங்கள் குலத்தைவிட அவர் பிறந்த குலம் மேலானது என்று ஏற்றுக் கொள்ள முடியாது நான்.  1. சர்தார் : நானும் தான்! 2. சர்தார் : நானும் தான்! (சிட்னீஸ் கோபமும் சோகமும் கொண்டு)  சிட்னீஸ் : முடிவான பேச்சா இது?  1. சர்தார் : ஆமாம்! ஒரு நாளும் சம்மதிக்க மாட்டோம். குலதர்மத்தை இழக்க மாட்டோம். இது விருந்தல்ல ; விஷமூட்டுமிடம். எங்களுக்கு இங்கு வேலையில்லை.  (எல்லோரும் போகின்றனர். சிட்னீஸ் கோபத்தோடு தட்டுகளை வீசி எறிகிறான்)  சிட்னீஸ் : விருந்து மண்டபம் விவாத மண்டபமாகிவிட்டது. குதூகலிக்க வேண்டிய கூடத்திலே, கோபமும், கொந்தளிப்பும், மூண்டன. சிவாஜியின் வீர உருவம்  (சிவாஜி அப்போது சிட்னீஸ் அறியாவண்ணம் பின்புறமாக வந்து சிட்னீஸ் பேசுவதைச் சோகமாகக் கேட்டல்)  அவருடைய வெற்றிகள் . அவர் உருவாக்கிய புதிய மராட்டியம் எதுவுமே அந்தச் சர்தார்களின் கண்களுக்குத் தெரியவில்லை. அவர்களுடைய குலம் மட்டுமே தெரிகிறது. குலபேதமெனும் தேள் கொட்டிய குரங்குகள். விருந்து மண்டபத்திலே இந்த விபரீதம் நேரிட்டது தெரிந்தால் வீரத்தலைவன் விசாரத்தில் ஆழ்ந்து போவாரே.  (சிவாஜி வர, அவர் முன் மண்டியிடுகிறான்)  சிவாஜி விசாரம் எழாமல் இருக்க முடியுமா சிட்னீஸ்? எவ்வளவு அரும்பாடு பட்டிருக்கிறோம், சோர்ந்து கிடந்த " மராட்டியத்துக்குப் புத்துயிர் அளிக்க, விமோசனமில்லை. விடுதலை இல்லை என்று எண்ணி ஏங்கிக் கிடந்த நாட்டிலே, விட்டுக்கோர் வீரனைக் கூட்டினோம். விரோதிகளை முறியடித்தோம். வெற்றி மேல் வெற்றி பெற்றபோது எந்த சர்தார்கள் நம் கண் காட்டிய வழி செல்லக் காத்து கிடந்தனரோ அவர்களே அல்லவா இன்று விதண்டாவாதம் பேசுகின்றனர். நண்பா! விருந்து மண்டபத்திலே நடந்த விவாதத்தை நான் சற்று தொலைவிலிருந்து கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். விருந்து மண்டபத்திலே விஷப்புகையை மூட்டி விட்டனர். வீரன் தான், ஆனால் குலம் என்று கேட்கின்றனர். நிம்பார்க்கார் குலமாம்! கோர்பாத்குலமாம் - சவாந்து குலமாம்! இவைகளெல்லாம் நான் களத்திலே கடும் போரிடக் கிளம்பிய போது எங்கே போயின? குடியானவனுக்கு விடுதலைப் போரை நடத்த அனுமதியிருந்தது. ஒரு குடியானவனுக்கு விடுதலைப் போரை நடத்த அனுமதி இருந்தது. ஆனால் ஒரு விருந்துக்குத் தலைமை தாங்க. குல தர்மர் தடைவிதிக்கிறது. இந்த நிலையில் நாடு இருக்கிறது.  சிட்னீஸ் : வீரத் தலைவனே! விசாரத்தை விடுங்கள். அவர்களின் விதண்டா வாதத்தை முறியடிக்க முடியாமலா போகும், மலைகளைத் தூளாக்கிய நம்மால் ?  சிவாஜி : வீரம் பேசுகிறாய் சிட்னீஸ்? விஷத்தைக் கக்கி விட்டுச் சென்றிருக்கிறார்கள். பார்த்தாயே? நீதானே பார்த்தாய்?  சிட்னீஸ் : பார்த்தேன்; சிந்தித்தேன்; ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்.  சிவாஜி : என்ன?  சிட்னீஸ் : மராட்டிய மண்டலம் உருவாகி விட்டது. புதிய ஜீவன் ஏற்பட்டுவிட்டது. எனினும் தாங்கள் மட்டும் இன்னும் பழைய சிவாஜியாகவே இருக்கிறீர்கள். அதனால் தான் பழமையில் படிந்து போயுள்ள அந்த சர்தார்கள், குலதர்மம் பேசுகிறார்கள். அவர்களிடம் கோபித்துப் பயனில்லை. வாதாடியும் பயனில்லை. அவர்கள் புண்ணிய ஏடுகளை பொதி பொதியாகக் கொண்டு வந்து கொட்டுவர், தமது கட்சிக்கு ஆதரவு தேட. ஆகவே அஞ்சா நெஞ்சனே! தாங்கள் மகுடா பிஷேகம் செய்துக் கொண்டு மகாராஜாவாகிவிட வேண்டும்.  (சிவாஜியின் முகத்திலே லேசான மலர்ச்சி ஏற்படுகிறது)  மகாராஜா ஆன உடனே நிம்பால்கரும், கோர்பாது, சவாந்தும், பிரபுவும், காயஸ்தரும், பிறரும் சகல குலத்தவரும் தாமாகவே தங்களை மேலான குலம் என்று ஏற்றுக் கொள்வர். ஏனெனில் மகிடாபிஷேகமானால், தாங்கள் மாகராஜாவாகிறீர். க்ஷத்திரியர் ஆகிவிடுகிறீர். க்ஷத்திரிய குலமானதும், மற்ற குலத்தவர் ஒரு குறையும் கூறுவதற்கில்லை. இதுதான் சரியான வழி. இன்றைய சம்பவம் காட்டும் பாடம்.  சிவாஜி : பட்டம் சூட்டிக் கொள்ள வேண்டும்!  சிட்னீஸ் : ஆமாம்! குலப்பெருமை பேசுவோரின் கொட்டத்தை அடக்க அதுதான் வழி. தடை கூறாது எனக்கு அனுமதி தாருங்கள். பட்டாபிஷேகத்திற்கான ஏற்பாட்டைச் செய்கிறேன். பரத மண்டலமே பூரிப்படையும்; வம்பர்களின் வாய் தானாக அடையும்.  சிவாஜி : உன் யோசனைப்படியே செய்வோம். பலருக்கும் இந்த அபிலாஷை இருக்கிறது.  சிட்னீஸ் : செய்தி கேட்டதும் மராட்டியமே துள்ளி எழும் மகிழ்ச்சியால். நான் சென்று அந்தக் காரியத்தைக் கவனிக்கிறேன்.  (சிட்னீஸ் மகிழ்ச்சியுடன் ஒடுகிறான்) ----------------                               காட்சி - 9 இடம் : வீதி  உறுப்பினர்கள் : கேசவப்பட்டர், பாலச்சந்திரப்பட்டர், வீரர்கள்.  கேசவ : ஒய் ஒய்! வாரும் இப்படி காலம் எவ்வளவுதலைகீழா மாறிண்டு போறது பார்த்தீரோ?  பால் : என்ன! நேக்குப் புரியல்லையே? கேசவ : வேதம், சாஸ்திரம், ஆச்சாரம், அனுஷ்டானம், நேமம், நிஷ்டை எல்லாம் பாழ். பாழாகிப் போச்சுங்காணும். தலையை வெளியே நீட்ட முடியாது போலிருக்கு இனி.  பால : ஏன் ஒய்! விஷயத்தை விளக்கமா, சாவதானாமா, சாந்தமா சொல்லுமே! வறட்டுக் கூச்சல் போட்டுண்டே இருக்கறேள்?  கேசவ : ஆமாம், ஒய்! இனி நம்ம வேத சத்தமே இந்த மராட்டிய மண்டலத்துக்கு வறட்டுக் கூச்சலாகத்தான் தோணப் போறது. தலைக்குத் தீம்பு வர்றது . தெரியாமெ, சாஸ்திரம் அழிக்கப்படுகிறது. அறியாமெ அவாள் அவள் வயிறு நெறைஞ்சா போதும்னு இருந்தா என்ன ஆறது ஒய்? நம்ம குலம், கோத்திரம், பூர்வபெருமை சகலமும் பாழகிறது சர்வேஸ்வரா!  பால் : ஆத்திரமாப் பேசினா ஆயாசமாத்தான் இருக்கும். நிதானமாய்ப் பேசும் ஒய்!  கேசவ : முடியலை ஒய் நிசமாச் சொல்றேன். மனது பதறிண்டு இருக்கு. பதறாமலிருக்குமோ, மகாபாவம் நடக்க இருக்கும் போது நமக்குத் தெரியறது. தெரிந்தும் நாம் அதைத் தடுக்காமல் இருக்கிறதுண்ணா , ஒண்ணு , நாம் மரக்கட்டேண்ணு அர்த்தம். அல்லது நாமும் அந்தப் பாவத்துக்குச் சம்மதிக்கிற சண்டாளர்கள்ணு அர்த்தம். சம்மதிக்குமோ மனசு? சம்மதிக்குமோண்ணு கேக்கறேன்.  பால் : சம்மதிக்காது! சாஸ்திரம் அழிக்கப்படுவதைப்பார்த்துண்டு, சகிச்சிண்டு இருக்கத்தான் முடியாது.  கேசவ : முடியாதுண்ணு சொல்லிண்டு மூக்காலே அழுதுண்டிருந்தா போதுமா?  பால் : வேறே என்ன செய்யிறது? என்ன செய்ய முடியும் நம்மாலே..?  கேசவ : மண்டு மண்டு! ஏன் ஒய் முடியாது? ஏன் முடியாதுண்ணு கேக்கறேன். பால : சும்மா இரும் ஒய்! இது என்ன மாடா போ . மரமா போ, பூச்சியா போ, புழுவாய் போன்று சாபங் கொடுக்கிற காலமா? இல்லே. நம்ம கையிலே அக்கினி இருக்குண்ணு சொன்னா ஊரார் கேட்டு பயப்படற காலமா? காலத்தை அறிஞ்சுண்டு பேசும். கர்ச்சனை செய்யணும்னா சிங்கமா இருக்க வேணுமோ?  கேசவ : காலத்தை அறிஞ்சிண்டு மட்டுமில்லெ ஒய் காலம். இன்னும் வரவர எவ்வளவு கெட்டுப் போகப் போறதுண்ணும் தெரிஞ்சுண்டுதான் பேசறேன்.  (வீரர்கள் கொடி ஏந்தி முழக்கத்துடன் வருதல்)  அடே கொஞ்சம் நில்லு! என்ன, ஒரே கூச்சல் போட்டுண்டு போறேளே. என்ன விசேஷம்?  வீரன் : மகாராஷ்டிர வீரன், மாவீரத் தலைவன் சிவாஜி மகாராஜாவுக்குப் பட்டாபிஷேகம் நடைபெறப்போவது உங்களுக்குத் தெரியாதா?  கேசவ : ஆமாம்! கேள்விப்பட்டோம். என்ன அதுக்கு?  வீரன் : பட்டாபிஷேகத்தன்று சிவாஜி பவனி வருவதற்காக பாஞ்சாலத்திலிருந்து தருவிக்கப்பட்ட பஞ்சகல்யாணி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகிறது. நாங்கள் போகிறோம். சிவாஜி மகாராஜாவுக்கு ... ஜே.  கேசவ : எவ்வளவு துணிச்சல் இந்த சிவாஜிக்கு இவன் என்ன குலம்? இவன் குலத்துக்குக்கு சாஸ்திரம் என்னவிதமான தருமத்தைக் கூறியிருக்கிறது. என்பதைத் துளிகூட யோசிக்காமப்படிக்கு, இவன் ராஜ்யாபிஷேகம் செய்து கொள்ளப் போகிறானாமே. அடுக்குமோ! சாஸ்திரம் சம்மதிக்குமோ? (எதிரே மோரோபந்த் வருகிறார்)  பால : ஒய்! அதோ மோரோபந்த் வருகிறார். அவரிடம் கூறுவோம். கேசவ : எந்த மோரோபந்த்?  பால் : நம்மவர்தான் ஓய்!  கேசவ : நம்ம குலந்தான். ஆனால் அவர் இப்போ சிவாஜியினிடமல்லவா வேலை செய்துண்டிருக்கிறார்? முதன் மந்திரி ஸ்தானமல்லவோ வகிச்சிண்டிருக்கிறார். அவர் சிவாஜியின் சார்பாகத்தான் பேசுவார். அவன் பட்டாபிஷேகம் செய்து கொள்வது சாஸ்திர சம்மதமான காரியம்ணு பேசுவார்.  பால : அசட்டுத்தனமான முடிவுக்கு அவசரப்பட்டு வராதீர். மோரோபந்த் சிவாஜியிடம் பெரிய உத்தியோகம் பார்த்துண்டு வருபவரானாலும், நம்ம அவர் குலம். நம்மவா எங்கே இருந்தாலம் குல ஆச்சாரத்தையும், அவர் அந்த ஆச்சாரத்துக்கு ஆதாரமாய் இருக்கிற சாஸ்திரத்தையும் ஒருநாளும் அழிஞ்சு போகப் பாத்திண்டிருக்க மாட்டா. வேணுமானாப் பாரும். அதோ, அவரே வந்துவிட்டார். வரணும். வரணும்  மோரோ : ராம் ராம் என்ன பாலச்சந்திரபட்டர் வாள் . ஓகோ! கேசவப்பட்டரா? ஆமாம், என்ன கோபமாகப் பேச்சுக்குரல் கேட்டதே?  கேசவ ; பேச்சுக் குரல்தானே? இனி அதிக நாளைக்கு இராது. நிர்ச்சந்தடியாகிவிடும். ஸ்மசான சந்தடி இருக்கும். கவலைப்பட வேண்டாம்.  மோரோ : என்ன, கேசவப்பட்டரே! ஏதோ வெறுப்படைந்தவர் போலப் பேசறேளே?  கேசவ : வெறுப்பில்லை ஸ்வாமி, வெறுப்பில்லை! வேதனை தாங்க முடியாத வேதனை. வேதம் நாசமாகிறது. வேதியர்கள் வகுத்த விதிமுறைகள் நாசமாகின்றன. சாஸ்திரம் அழிகிறது; தர்மம் அழிகிறது, வேதனை யில்லாமலிருக்குமோ? மோரோ : எதைக் குறித்துப் பேசுகிறீர், இவ்வளவு ஆக்ரோஷத்தோடு?  கேசவ : ஆக்ரோஷமா? இதுவா? மோரோபந்த்! மோரோபந்து நீர் ஞானசூன்யரல்ல. நமது குலதர்மம், குலப்பெருமை அறியாதவரலல்ல.  மோரோ : அறிந்திருக்கிறேன். அதனால் என்ன ஸ்வாமி, அடேடே! அதைச் சொல்கிறீர்களா?  கேசவ : அதென்ன ஸ்வாமி, அவ்வளவு சாதாரணமாகப் பேசுகிறீர், சர்வ நாசம் சம்பவிக்கும் காரியமல்லவா அது. சிவாஜி என்ன குலம்? அந்தக் குலத்துக்கு என்ன கடமை? க்ஷத்திரிய குலமல்லவா அரசாளலாம். ராஜ்யாபிஷேகம் உண்டு.  மோரோ : க்ஷத்திரியனுக்குத்தான் சிவாஜி முயற்சிக்கிறான்.  கேசவ : நீர் பார்த்துக் கொண்டு இருக்கிறீர். மார்பிலே முப்பிரியும் இருக்கிறது. அறிந்து பயன்? செந்தாமரை நிறைந்த தடாகத்திலே முரட்டு எருதுகள் இறங்கி தாமரையைத் துவம்சம் செய்வதைப் பார்த்தும், அதைத் தடுக்காமல் இருந்து கொண்டே, தாமரையின் அழகு நேக்கு நன்னா தெரியுமேன்னு பேசிண்டிருந்தா போதுமா? புத்திமான் செய்கிற காரியமா இது?  மோரோ : நீர் எதைக் குறிப்பிடுகிறீர்?  கேசவ : உம் மகன் எதிரிலேயே நம்ம சாஸ்திரம் - நாசமாவதைத்தான் குறிப்பிடுறேன். சிவாஜி பட்டாபிஷேகம் செய்துக் கொள்ளப் போறானாமே?  மோரோ : பைத்தியக்காரர் பார்த்துக் கொண்டு சும்மாவா இருப்பேன்? நேக்கு தெரியாதா, வேதாச்சாரம் கெடக்கூடாது என்கிற விஷயம்.  கேசவ ; அப்படியானா தடுத்தீரோ? மோரோ : கண்டிப்பாக பட்டாபிஷேகத்தை சாஸ்திர விதிப்படி செய்துக் கொள்வது மகாபாவம். அந்தப் பாவகாரியத்துக்கு நான் உடந்தையாய் இருக்க முடியாது. தடுத்தே தீருவேன். எதிர்த்தே தீருவேன் என்று தெளிவாக, தீர்மானமாகக் கூறியாகிவிட்டது.  பாலச் : பார்த்தீரா, ஒய்... நான் சொன்னேனல்லவா. (கேசவப்பட்டர் மேரோவைத் தழுவி)  கேசவ : க்ஷமிக்கணும் ஸ்வாமிகளே! ஆத்திரமாகப் பேசிவிட்டேன். தங்கள் குலப்பெருமையை உணராமல். தடுத்தீரோ? ஆரிய குல ரட்சகர் நீர். வேதாகம பாதுகாவலர் நீர். மோரோ : இது கலிகாலம். கலிகால தருமப்படி இப்போது பூலோகத்திலே க்ஷத்திரிய குலமே கிடையாது என்று கூறினேன்.  கேசவ : ஆதாரம் என்ன கூறினீர்?  மோரோ : ஏன், அந்தக் காலத்திலேயே பரசுராமர் க்ஷத்திரியப் பூண்டையே அழித்து விட்டாரே . க்ஷத்திரியர் ஏது இப்போது என்று கேட்டேன். சிவாஜிக்குப் பட்டம் சூட்டுவது என்பதற்கு எந்த சனாதனியும் சம்மதிக்க முடியாது என்று கூறிவிட்டேன். ஆகையாலே ஆத்திரப்பட்டு ஏதேதோ கூவிண்டிருக்க வேண்டாம். நமது ஆரிய சோதராளிடம் பேசி இது விஷயமாக, அனைவரையும், ஒன்று திரட்டும். சிவாஜி சம்மதம் கேட்டு அனுப்புவான். முடியாது' என்று ஒரேயடியாய்க் கூறிவிடும். கேசவ : ஆஹா! இப்போதே கிளம்புகிறேன்! நம்ம சோதராளிடம் சொல்கிறேன் விஷயத்தை. சூட்சமமா இரண்டொரு வார்த்தை சொன்னாக்கூட புரிந்து கொள்வாளே நம்மளவா. மோரோ : செய்யும் ஸ்வாமி! முதலில் போய் அந்தக் காரியத்தைச் செய்யும். நான் பட்டாபிஷேகத்தை நடக்க ஒட்டாதபடி என்னாலான காரியமெல்லாம் செய்துண்டு இருக்கேன்.  கேசவ : மனம் நிம்மதியாச்சு. மனுமாந்தாதா கால ஏற்பாடு சாமான்யமா? நான் வர்ரேன். வாரும் ஒய், பாலச்சந்திரரே வாரும், போய்க் காரியத்தைக் கவனிப்போம். ------------------         காட்சி - 10 இடம் ; பாலாஜி வீடு  உறுப்பினர்கள் : பாலாஜி, பகதூர்.  (பாலாஜி ஒலைச்சுவடி புரட்ட பகதூர் தலையைச் சொறிந்து நிற்கிறான்)  பாலாஜி : பகதூர் பாடத்தைப் படிடா  பாலாஜி : ஏண்டா! நீ என்ன, சின்ன பாப்பாவா? கடாப் போல வளர்ந்திருக்க... ஏண்டா, பயத்துக்கு இடம் குடுக்கிறே?  பகதூர் : நானா இடம் கொடுத்தேன்? பயம் அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டதே. பாலாஜி : பிடிச்சுக் கொள்ளவுமில்லே; அடைச்சுக் கொள்ளவுமில்லே. வீண் பொழுது போக்காதே. ஆரம்பி, பாடத்தை. பகதூர் : நேற்றைய பாடத்தைத்தானே?  பாலாஜி : ஆமாம்! அதுக்கு ஏண்டா அழுது தொலைக்கிறே? ஐயா! உனக்கு எத்தனை தடவை சொல்றது. முகத்தை இப்படிச் சுளிக்கக் கூடாதுண்ணு . டேய்! கொஞ்சம் புன்சிரிப்பா இருண்டா, எங்கப்பா! (பகதூர் சிரிக்க)  அப்படியில்லேடா இப்படி - புன்சிரிப்பு)  பகதூர் : வரலியே பாலாஜி!... புன்சிரிப்பு வாண்ணா வரும்; போண்ணா போகுமோ? நான் புன்சிரிப்பா இருக்கத்தான் பார்க்கறேன்.. முடியலியே.  பாலாஜி : முடியலியா? அரை வீசை அல்வாண்ணா ஒரேயடியா விழுங்க மட்டும் தெரியுமா? (பகதூர் சிரிக்க) ம்... அதேதான். அதோன் புன்சிரிப்பு...  பகதூர் : இதா புன்சிரிப்பு...?  பாலாஜி : பாடத்தைச் சொல்லு.  பகதூர் : முக்கனியே! சக்கரையோ தேனே! பாலே!  பாலாஜி : ஏண்டா நிறுத்திட்டே?  பகதூர் : திரை இருக்கே. பாலாஜி : திரை இன்னும் எடுக்கல்லையா? (திரையை எடுத்ததும்) பகதூர் : உன்னை நான் பெறாவிட்டால் என் உயிர் போகும். பாலா : ஏண்டா உயிர் போகும்ணு சொல்லிக்கிட்டு 'மரம் போல நிண்ணா மங்கையோட மனசு இளகுமா? உயிர் போகும்னு சொல்லும் போதே உயிர் போயிட்டா மாதிரி ஆயிட வேணாமா?  பகதூர் : எங்கே ?  பாலாஜி : தோ பார்ரா! முக்கனியே! சக்கரையே! தேனே! பாலே! இப்படியே சொல்லிக்கிட்டே அருகே போகணும். நீ போகும் போது அவ விலகுவா. வெவகுற மாதிரி பதுமையைக் கொஞ்சம் கொஞ்சம் நகத்து. பகதூர் : சரி!  பாலாஜி : முக்கனியே! சக்கரையே! தேனே! பாலே! இது போலத்தான். இதிலே என்னடா கஷ்டம்?  பகதூர் : இது ஒண்ணும் கஷ்டமில்லே. ஆனா அதுதான்... பாலாஜி : எதுடா? பகதூர் : உயிர் போறது. பாலாஜி : அது ரொம்ப சுளுவுடா. பகதூர் : எங்கே போக்கிக் காட்டு!  பாலாஜி : உன்னைப் பெறாவிட்டால் என் உயிர் போகும். பகதூரார் : சுத்தணுமா!  பாலாஜி : சரி! பதுமை பாடம் போதும். காதல் பேச்சு எப்படி இருக்கணும்னு சொல்லித் தர்றேன்.  பகதூர் : சரி! பாலாஜி என்னை ஏன் இப்படி உற்றுப் பார்க்கிறீர்? இப்படி ஒரு பொண்ணு கேட்டா நீ என்ன பதில் சொல்லுவே?  பகதூர் : அப்படி ஒரு பெண் கேட்டால் பயத்தாலே ஊமையாகிவிடுவேன், பாலாஜி.  பாலாஜி : பெண்கள் அப்படித்தான் கோபிக்கிற மாதிரிப் பேசுவாங்க. அதுக்கெல்லாம் பயந்தா பயப்படக்கூடாது. ஒரு பெண் உன்கிட்ட பேச ஆரம்பிச்சா அவளிடம் ஏதாவது காதல் கதையைப் படிச்சுக் காட்டணும்; இடையிடையே புன்சிரிப்பா இருக்கணும்.  பகதூர் : காதல் கதையென்று சொன்னாலே காதைப் பிடித்து திருகிப்புடுவாங்களே ! பாலாஜி. - பாலாஜி : நீ ஏண்டா காதல் கதைன்னு சொல்றே? எந்த சாமிக் கதையாவது படிக்கிறேன்னு சொல்லேன். பகதூர் : சாமி கதைப் படிச்சா ?  பாலாஜி : நம்ம சாமி கதையே காதல் களஞ்சியண்டா ஒரு கதை படிக்கிறேன், கவனமாய்க் கேளு. கேக்கறியா? படிக்கட்டுமா?  பகதூர் : படி பாலாஜி .  பாலாஜி : ஒ.. மாதர் திலகமே.  பகதூர் : யாரைக் கூப்பிட்டே?  பாலாஜி : டே படிக்கிறேன். ஒ, மாதர் திலகமே! இந்த ஈரேழு பதினாலு லோகத்திலும் உன்னைப்போல் ஒரு அழகியைக் கண்டதில்லை. டேய், கேக்கறியா?  பகதூர் : ஒ கேக்கறேனே. பாலாஜி : என்ன சொன்னான்  பகதூர் : அவன் சொல்றான்  பாலாஜி : என்னடா சொல்றான்? பகதூர் : என்ன சொல்றான்?  பாலாஜி : இந்த ஈரேழு பதினாலு லோகத்திலும் உன்னைப்போல் ஒரு பெண்ணை, அழகியைக் கண்டதில்லைன்னு சொல்றான். இவன் போய்ப் பார்த்தானா ஈரேழு லோகத்தையும்  பகதூர் : நான் என்ன, அவன் கூடவா போனேன் என்ன வந்து கேக்கறியே! பாலாஜி : சும்மா புளுகுடா காதல் கதை படிக்கும் போது நெஜத்தைவிட புளுகுதாண்டா அதிகமா கலக்கணும்! பகதூர் : படி பாலாஜி !  பாலாஜி : ஓ மாதர் திலகமே! காந்த சக்தியால் இழுக்கப்படும் துரும்பு போல் ஆகிவிட்டேன். காந்தாமணி உன்னை நான் பெறாவிட்டால் பாம்புப் புற்றில் கைவிட்டோ, பாஷாணம் சாப்பிட்டோ, பட்டினி கிடந்தோ உயிரைப்போக்கிக் கொள்வேன். ஆகையால் நீ என்னை ஏற்றுக்கொள் ஏந்திழையே! (படித்துவிட்டுப் பகதூரைப் பார்க்க, அவன் தூங்குகிறான். அவன் காதைத் திருகி இழுத்துச் செல்லுதல்) ------------                                                 காட்சி - 11 இடம் : வீதி  உறுப்பினர்கள் : கேசவப்பட்டா, சிட்னீஸ்.  (கேசவப் பட்டர் போய்க் கொண்டிருக்கிறார். பின்னால் சிட்னீஸ் கூப்பிடுதல்)  சிட்னீஸ் : கேசவப் பட்டரே! கேசவப்பட்டரே! (காதில் விழாதுபோல் நழுவ சிட்னீஸ் கோபத்துடன்)  ஒய், கேசவப்பட்டரே.. (கேசவப்பட்டர் திரும்புகிறார்)  கேசவ : கூப்பிட்டேளா? காது கேக்கல்லே! கொஞ்சம் மந்தம்.  சிட்னீஸ் : பரவாயில்லை. பாட்டாச்சாரிஸ்வாமி, உம்ம தரிசனம் கிடைக்கிறது சாமான்யமா?  கேசவ : கேலி செய்றேளா?  சிட்னீஸ் : சேச்சே! நான் என்ன பிரமாணத் துவேஷியா?  கேசவ : யார் சொன்னது உம்மை அப்படி …. சிட்னீஸ் : உண்மையாகவே உம்ம தயவுக்காகத் தான் நான் வந்திருக்கிறேன்.  கேசவ : என் தயவா? என்ன சிட்னீஸ்! நான் ஒரு பஞ்சப் பிராமணன். உம்ம கீர்த்தியும் செல்வாக்கும் அமோகம். சிட்னீஸ் : உண்மையாகவேதான் சுவாமிகளே! உம்ம சகாயம் வேண்டும். விஷயம் உமக்குத் தெரிந்தது தான். வீணாக நாம் விவாதிக்கணுமா? சிவாஜி பட்டாபிஷேகம் சம்மந்தமாக தாங்கள் எதிர்க்கிறீர்களாம். நல்ல காரியத்தை, நாடு முழுதும் விரும்புகிற காரியத்தைக் கொடுக்கலாமா? சிவாஜி தர்மிஷ்டர்; உமக்கே தெரியும். வீரர் அதனால்தான் நாம் வாழுகிறோம். இப்போது நம் நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது. அப்படிப்பட்டவருடைய பட்டாபிஷேகத்தைத் தடுப்பது சரியா, தர்மமா, நியாயமா?  கேசவ : ஏம்பா சிட்னீஸ். எனக்கும் சிவாஜிக்கும் சொத்தில் ஏதாவது விரோதமா? அல்லது நான் எப்போதாவது சிவாஜியினுடைய குணம் கெட்டதுன்னு சொன்னேனா? இப்பவும் நான் சொல்வது நாடு நாசமாகப் படாதே என்ற நல்ல எண்ணத்தோடேதான்.  சிட்னீஸ் : சாஸ்திர விரோதம். இந்தப் பட்டாபிஷேகம் சிவாஜி சூத்திரர் என்று ஆட்சேபனை செய்கிறீராம்.  கேசவ : நானா செய்கிறேன். அதென்னப்பா, அப்படிச் சொல்றே? நான் சாஸ்திரத்தைத்தான் சொல்கிறேன். வேறொன்றுமில்லை.  சிட்னீஸ் : சாஸ்திரம் இருக்கட்டும். கேசவப்பட்டரே ! இந்தக் காரியத்தில் உம்ம ஒத்தாசை கிடைத்தால், நீர் என்ன கேட்டாலும் சரி. லட்ச வராகன் சன்மானம் வேண்டுமா? சரி! ஜாகீர் வேண்டுமா? சரி! அரண்மனைப் புரோகிதம் வேண்டுமா? சரி எது வேணுமானாலும் தருகிறேன்.  கேசவ : ஆசை காட்டி என்னை அதர்மத்திலே தள்ள முடியாது சீட்னீஸ். எங்களுக்குத் தெரிந்த ஞானப்படி, சாஸ்திரப்படி இந்தப் பட்டாபிஷேகம் நிச்சயமாய்ப் பாப காரியம்ணு தெரியுது. ஆனா எங்களைவிட சிரேஷ்ட மானவர், சாஸ்திரத்தை மேலும் ஆராய்ந்து பார்த்தவர் சம்மதம் கொடுத்தா எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. சிட்னீஸ் : கேசவப்பட்டரே! உம்மைவிட….  கேசவ : நான் சாமான்யனப்பா சிட்னீஸ். என்னை விட ஞானஸ்தா பிரபஞ்சத்திலே அநேகம் பேர் இருக்கா. உதாரணமா காசிச் க்ஷேத்திரத்திலே காகப்பட்டர்) ஒரு மகான் இருக்கார். அவர் வந்து சம்மதம் கொடுத்தால் நான் மட்டுமல்ல, பாரதவர்ஷத்திலே உள்ள பிராமணோத்தமர்கள் யாரும் ஒரு சொல் ஆட்சேபனை சொல்ல மாட்டா.  சிட்னீஸ் : பட்டரே! சிவாஜி முடிசூட்டிக் கொள்ளக் கூடாதுன்னு உமக்கொன்றும் வஞ்சகமான எண்ணம் கிடையாதே?  கேசவ : சத்தியமாச் சொல்றேன். நேக்குக் கிடையாது, கெட்ட எண்ணம்.  சிட்னீஸ் : எப்படியாவது காகப்பட்டரின் சம்மதம் கிடைத்து பட்டாபிஷேகம் நடைபெறுவதனால் உமக்கு ஆட்சேபனை இராதே? உம்முடைய ஒத்துழைப்பு இருக்குமல்லவா?  கேசவ : நிச்சயமா சந்தேகமா அதற்கு. சிட்னீஸ் : அப்படியானால் பட்டரே! காகப்பட்டரிடம் நீரே தூதுபோய்வர வேண்டும்.  கேசவ : நானா?  சிட்னீஸ் : தாங்கள்தான் போகவேண்டும். சிவாஜியிடம் உங்களுக்குக் கெட்ட எண்ணம் கிடையாது என்கிறீர்.  கேசவ : ஆமாம் சிட்னீஸ் ; ஆகவே தாங்களே சென்று எப்படியாவது காகப்பட்டருடைய சம்மதம் பெற்றுக் கொண்டுவர வேண்டும். கேசவப்பட்டரே! ஒரு பெரிய ஜாகீர் உமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. துணைக்குப் பாலச்சந்திரப்பட்டர், சோமனாதப்பட்டர், யாரை வேண்டுமானாலும் அழைத்துச் செல்லும், தடை கூறவே கூடாது. தடை கூறினால் சிவாஜியிடம் உமக்குத் துவேஷம் இருக்கிறது கெட்ட எண்ணம் இருக்கிறது என்றுதான் பொருள். குழந்தைகூடச் சொல்லுமே, இதை.  கேசவ : சரி போய் வருகிறேன்; ஆட்சேபனை என்ன?  சிட்னீஸ் : மற்ற இருவரையும் கலந்து கொண்டு தயாராய் இருங்கள் புறப்பட. நான் பல்லக்குப் பரிவாரங்கள் தயார் செய்துவிட்டு, பிறகு வந்து பார்க்கிறேன்.  (போகிறான்) ---------------                   காட்சி - 12 இடம் : தர்பார்  உறுப்பினர்கள் - சிவாஜி, தளபதிகள்.  சிவாஜி : மராட்டிய மாவீரர்களே இந்த மண்டலத்தைக் காக்கும் தளபதிகளே நீங்கள் சிந்திய ரத்தம் வீண் போகவில்லை. வீரம் விழலுக்கிறைத்த நீராகவில்லை . நமது மனக்கண் முன் தோன்றித் தோன்றி நம்மை ஆவேசமுறச் செய்து மகாராஷ்டிரம் உதயமாகிவிட்டது. சாம்ராஜ்யம் உருவாகிறது. வீரர்காள்! உங்கள் சிருஷ்டி அந்த ராஜ்யம் மங்கிக் கிடந்த மண்டலம் சிங்கங்களாகிய உங்களால் மணிக்கொடியை இனி பறக்கவிடும். மலைக்கு மலை தாவிய நாம், கோட்டைக்குக் கோட்டை குத்து வெட்டு நடத்திவந்த நாம், பரத கண்டத்திலே ஒரு பரந்த ராஜ்யத்தை ஸ்தாபித்து விட்டோம். சாத்பூரா மலைச் சாரல் சச்சரவுக்கு உறைவிடம் என்பது மாறி, செளந்தர்யமான ஒரு சாம்ராஜ்யமாகிவிட்டது.  (வீரர்கள்)   மராட்டிய மண்டலாதிபதிக்கு ஜே!  மாவீரர் சிவாஜி மகாராஜாவுக்கு ஜே! சாத்பூரா சாம்ராஜ்யாதிபதிக்கு ஜே!  ஆருயிர் தோழர்களே என் ஜெயம் உங்கள் உடைவாளின் விளைவு. என் கீர்த்தி உங்கள் தேசத்திலே உண்டான புண்களிலே பூத்தது . உங்கள் ரத்தமே, மகாராஷ்டிர பூமியைப் புனித பூமியாக்கிறது. நீங்கள் வாழ அன்னை அருள் புரிவாள். பவானியின் பரிபூரண கடாக்ஷம் உமக்குக் கிடைக்கட்டும்.  1. தள : மகராஜ்  சிவாஜி ; அன்பால் அர்சிக்கிறீர்கள், அந்த வார்த்தையை. ஆனால் அந்தப் பட்டதை நான் இன்னும் பெறவில்லை. பட்டாபிஷேக காரியத்துக்குத் தங்கள் அனுமதியைத் தான் எதிர்ப்பார்க்கிறோம். 2. தள : நம் நாட்டுப் பொற்கொல்லர் சித்திர வேலைப்பாடுள்ள சொர்ண சிங்காதனம் தயாரித்துவிட்டார்.  3. தள : அரண்மனைக்கு அலங்கார வேலைகள் இரவு பகலாக நடந்தேறி வருகிறது.  4. தள : ஆரணங்குகள் வாழ்த்துக் கீதங்களைப் பாடியப்படி உள்ளனர் மகராஜ்.  1. தள : கவிவாணர்கள் புதுப்புது கவிதைகளை இயற்றியப்படி உள்ளனர் காவலா.  2. தள - சத்திரபதி சிவாஜிக்குப் பொன்னாடையும் நெய்தாகிவிட்டது.  3. தள ; பொற்குடங்களிலே புனித நீர் நிரப்பி யானைமீது கொண்டு வர ஏற்பாடாகி இருக்கிறது.  4. தள் : நகரெங்கும் விழாக் கொண்டாட மக்கள் துடிக்கிறார்கள்.  1. தள : புகழ்மிக்க நமது படைகள் பூரிப்புடன் பவனிவர தயாராகியுள்ளது. 2 தள : பட்டாபிஷேகம் நடைபெறுவது டில்லி பாதுஷாவுக்கும் தெரியும்.  3. தள : பரதகண்டம் முழுவதுமே பெருமையடைகிறது. பாழடைந்த மாளிகை புதுப்பிக்கப்பட்டது கேட்டு, அணைந்து போக இருந்த சுதந்திர விளக்கு கூடர்விட்டெரிய தியாக நெய் ஊற்றி இருப்பது கேட்டு மராட்டிய மண்டலாதிபதிக்கு ஜே .  சிவாஜி : உன்மைத் தோழர்களே! ஊராரின் உள்ளத்தை நான் அறிவேன். உங்கள் உவகையும் தெரிந்ததே. உங்கள் ஆதரவை அரணாகக் கொண்டுதானே அரசபீடம் ஏறத் துணிந்திருக்கிறேன். போரிலே நான் உங்களில் பலரைக் கடிந்து உரைத்திருப்பேன். மனதில் குறையிருப்பின் பொறுத்திடுக.  4. தள : மன்னா ! இது என்ன பேச்சு? உமது ஏவலர் நாங்கள். / உமது மொழியே எமது வாழ்க்கைக்கு வழி. சிவாஜி : இந்த சாம்ராஜ்யத்தைக் காண மராட்டியர் காட்டி இருக்கும் வீரம், தியாகம், சேவை, அபாரம். சரித்திரத்திலே பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டியவை. உங்கள் சேவைக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்?  1. தள; மராட்டிய மன்னர் மன்னனாகி, முடி தரித்து, எம் கண்முன் நின்று, எங்கள் மனதை குளிரச் செய்யுங்கள் . மகராஜ். அதுவே கைம்மாறு, வாழ்க்கையில் நாங்கள் எதிர் பார்க்கும் பேறு.  (தளபதிகள் போகிறார்கற் சிட்னீஸ் சோர்ந்த முகத்துடன் வருகிறான்).  சிவாஜி : சிட்னீஸ்! என்ன முகவாட்டம்?  சிட்னீஸ் : ஒன்றுமில்லை. வேலைத் தொந்தரவுதான்.  சிவாஜி : இல்லை, இல்லை விசாரம் இருக்கிறது உனக்கு. சிட்னீஸ் : பிரமாதமான விசாரமில்லை; சுலபத்திலே போய்விடக் கூடியதுதான்.  சிவாஜி : ஒளியாமல் பேசு. பட்டாபிஷேகம் சம்மந்தமாக ஏதேனும்...  சிட்னீஸ் : ஆமாம்; சிற்சில இடங்களிலே எதிர்ப்பு.  சிவாஜி : யாருடைய எதிர்ப்பு? முன்புதான் நாம் கீறின கோட்டைத் தாண்டாதிருக்க சர்தார்கள் சங்கநாதம் செய்தனர். இப்போது எதிர்ப்பவர் யார்?  சிட்னீஸ் : வாழ்த்திய பூசுரரெல்லாம் வாதாடுகிறார்கள். ஏடுகளைப் புரட்டி வைத்துக் கொண்டு பட்டாபிஷேகம் செய்துக் கொள்வதை சாஸ்திரம் அனுமதிக்காதாம். க்ஷத்திரிய குலமே இப்போது கிடையாதாம்.  சிவாஜி : அதனால் .. சிட்னீஸ் : ஏதேதோ வகையான பேச்சு எல்லாம் அடிபடுகிறது!  சிவாஜி : யார் இந்த எதிர்ப்புக்கு முக்கியமாக முன்நின்று வேலை செய்பவர்?  சிட்னீஸ் : பல பேர் குறிப்பிட்டுச் சொல்வதற்கில்லை. ஆனால் … சிவாஜி : எதையோ மறைக்கிறாய். வேண்டாம் சிட்னீஸ்! உண்மையைக் கூறு. என் உள்ளம் நோகுமோ என்று பயந்து படுகுழியை மறைக்காதே. யார் இந்த எதிர்ப்புக்குத் தலைமை தாங்குவது?  சிட்னீஸ் : நமது முதலமைச்சர் மோரோபந்த்.  சிவாஜி : மோரோபந்த் மோரோ அவரா எதிர்க்கிறார்? என்னிடம் எவ்வளவு அன்பு கொண்டவர்.  சிட்னீஸ் : உம்மிடம் அவருக்கு இப்போதும் வெறுப்பில்லை. சாஸ்திரம் கெடுகிறதாம். வீணான பயம் அவருக்குக் கூட. ஆனால் எல்லாவற்றிற்கும் புதிய ஏற்பாடு செய்திருக்கிறேன். எதிர்ப்பு, சந்தேகம், கோபம். எல்லாம் ஒழிந்துவிடும். எல்லா எதிர்ப்புகளும் அடங்கிவிடும். அவருடைய அனுமதி கிடைத்தால், இவர்கள் காட்டும் சாஸ்திரங்களை, சந்தேகங்களை, வாதங்களை அவர் தவிடு பொடியாக்கிவிடுவார். அவ்வளவு திறமைசாலி  சிவாஜி : யார் அந்தத் திறமைசாலி?  சிட்னீஸ் : காகப்பட்டர், காசிவாசி, வேத வேதாந்தத்தின் உபன்யாசகர். வியாக்யானத்திலே அவரை மிஞ்சுபவர் கிடையாது. இன்று இங்கு எதிர்ப்பு செய்பவர்கள் எல்லாம் அவர் வந்து விளக்கம் கூறினதும் வாயை மூடிக் கொள்வர். சந்தேகங்களை சம்ஹரிப்பார். எதிர்ப்புகளைத் துவம்ஸம் செய்வார். அப்படிப்பட்ட காகப்பட்டரையே இந்தப் பட்டாபிஷேகத்தை நடத்திக் கொடுக்க இங்கு வரும்படி தூது அனுப்பத் திட்டம் போட்டுள்ளேன்.  சிவாஜி : அவர் இருக்குமிடம்?  சிட்னீஸ் : காசி  சிவாஜி : காசி காசி க்ஷேத்திரம். கங்ககைக் கரை மராட்டிய மண்டலத்திலே இருக்கிறது. அவர் அங்கு இருக்கிறார்.  சிட்னீஸ் : இன்றே புறப்படுகிறார்கள்.  சிவாஜி : தூதுவர்களை, மூன்று பூசுரர்களை அனுப்புகிறேன். அவர்கள் இங்கு எதிர்ப்பு செய்தவர்கள்.  சிவாஜி : சம்மதித்தார்களோ போக?  சிட்னீஸ் : அவர்கள் காகப்பட்டரின் சம்மதம் கிடைத்து விட்டால் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று கூறுகிறார்கள்.  சிவாஜி : செய்! அனுப்பிப்பார் (போகிறார்கள்) ---------------                           காட்சி - 13 இடம் : வீதி உறுப்பினர்கள் : பட்டர்கள், சிட்னீஸ்  (பட்டர்களைத் தூது அனுப்புவது) சிட்னீஸ் : பிராமணோத்தமர்களே நீங்கள் மேற்கொண்டுள்ள காரியம் மிகமிக முக்கியமானது ; மகத்தானது; புனிதமானது; மராட்டிய மண்டல ஏட்டிலே தனி இடம் பெறும் சிலாக்கியமான காரியம். பாலச்சந் : பூர்ண சந்திரனைப் பார்த்து ரசிக்கும்படி விளக்கு கொண்டு வந்து தருவது போல் இருக்கிறது தங்கள் பேச்சு. சிவாஜி மகாராஜனாக முடிதரித்துக் கொள்ள வேண்டுமென்பதில் எங்களுக்கு அக்கரை இல்லையா என்ன ?  கேசவ : நாங்கள் மராட்டிய மண்ணிலே பிறக்கவில்லையா? எங்களுக்கு அந்த எண்ணம் ஏற்படாமல் இருக்குமா?  பாலச்சந் : சிவாஜியின் உப்பைத் தின்று வாழும் நாங்கள் இந்த உதவிகூடச் செய்யாமல் இருப்போமா?  சிட்னீஸ் : பூரிப்படைகிறேன் பூசுரரே உங்கள் மொழி கேட்டு மகிழ்கிறேன். மராட்டியத்துக்குப் புது வாழ்வு அளிக்கும் பொறுப்பு உங்களிடம் இருக்கிறது. கேசவப் பொறுப்பை மறந்துவிடக் கூடியவர்களா நாங்கள்? சிட்னீஸ் : பொற்காலம் தோன்றப் போகிறது. உங்கள் பேருதவியால்.  பாலச்சந் : தோன்றாமல் என்ன?  சிட்னீஸ் : பிராமணோத்தமர்களே! மாவீரர் தலைவன் மணி முடி தரித்துக் கொள்வது கூடாது. ஏனெனில் அவர் சூத்திரர் என்று இங்கு சில சூது மதியினர் பேசினரே! பாலச்சந் : சூதுமதியினர், சூழ்ச்சித் திறத்தினர் என்றெல்லாம் ஏன் அவர்களைத் தூஷிக்கிறீர் சிட்னீஸ்? அவர்கள் சாஸ்திரத்தை தானே எடுத்துக் காட்டுகிறார்கள்.  சிட்னீஸ் : இப்பேர்ப்பட்ட சமயத்திலா? இப்படிப்பட்ட காரியத்துக்கா?  கேசவப் : சமயம், சந்தர்ப்பம், தயவு , தாட்சண்யம், இவைகளை எல்லாம் பார்த்து நடந்துண்டால் சாஸ்திரம் நிலைக்குமோ சிட்னீஸ், சத்தியம் தழைக்குமோ?! தேவதாப்ரீதி முக்கியமான கடமையாயிற்றே. மற்றவர்களுக்கு எப்படியோ - முப்பிரிவினரான எமக்கு தேவதாப் ரீதிதான் முக்கியமான கடமை.  பாலச்சந் : வீண் விவாதம் ஏன் சிட்னீசிடம்? சாஸ்திரத்தைப் பற்றி சம்வாதம் செய்கிறீரே, கேசவப் பட்டரே, அவருக்கு என்ன தெரியும்? வேதாகம விசேஷாதி களைப்பற்றி, அவர் உம்மைப் போல் வேத பாராயணம் செய்தவரா? வீரர். அவரிடம் பேசுவதானால் ரத, கஜ, துரக, பதாதிகளைப்பற்றிப் பேசலாம்.  சிட்னீஸ் : அது உங்களுக்குப் புரியாதே. கேசவப் : எங்களுக்கு அது ஏன் சிட்னீஸ்? நமக்குள் வீண் விவாதம் செய்வது சரியா? சத்ரபதி சிவாஜிக்குச் சாஸ்திரோத்தமாக மகுடாபிஷேகம் நடந்தாக வேண்டும் என்று விரும்புகிறீர். அனைவருக்கும் அதே ஆசைதான். எங்களுக்கும் தான் இதற்கான சம்மதம், ஆதரவு, உத்தரவு பெற்றுக் கொண்டு வரவேண்டும் காசிவாசி காகப்பட்டரிடமிருந்து அவ்வளவுதானே?  சிட்னீஸ் : அவ்வளவுதான்.  கேசவப் : செல்கிறோம் காசி நோக்கி..  சிட்னீஸ் : சென்று கூறுங்கள் - காகப் பட்டரிடம், நமது வீரத் தலைவனின் குண விசேஷங்களை ஆற்றல் மிக்க நமது தலைவர் அடிமைத்தனத்தை ஒட்ட அரும்பாடுபட்ட வீரத்தை விளக்குங்கள். அவருடைய ஆற்றலைக் கண்டு பாரத் வர்ஷத்தை அடிமைப்படுத்திய பாதுஷாக்க ளெல்லாம் பயந்து போனதைக் கூறுங்கள். அவருடைய சொல் கேட்டால் சோர்ந்த உள்ளங்களிலேயும் புது எழுச்சி சேரும் என்பதைக் கூறுங்கள். ஏழை ஜாகிர்தாரின் மகன், ஏவல் செய்து பிழைத்தாக வேண்டியவன், உழவன். இவனால் என்ன சாதிக்க முடியும்' என்று பலர் பலவிதமாகப் பேசிய போதிலும் சுதந்திரப் போரை நடத்தி மலைமலையாக வந்த எதிர்ப்புகளைத் தூள்துாளாக்கி மராட்டியத்தை மற்றாரிடமிருந்து மீட்ட மாண்பை எடுத்துச் சொல்லுங்கள்.  கேசவப் : சொல்கிறோம். சொல்கிறோம்... சொல்லாமலா இருப்போம்.  சிட்னீஸ் : கூடுதலாகக் கூற வேண்டாம் மறையவரே! உண்மையை உரைத்தால் போதும். நமது நாட்களிலே நாம் மராட்டியத்திலே கண்ட காட்சியைக் கூறினால் போதும். சிவாஜியைக் காசிவாசி சாமான்யர் என்று எண்ணிவிடக்கூடாது. ஒரு சாம்ராஜ்யத்தின் சிருஷ்டிகர்த்தா நம் சிவாஜி என்பதை அவர் அறிய வேண்டும். அஞ்சாநெஞ்சனின் அறிவாற்றலைக் கூறுங்கள். அறநெறி கொண்டவர் என்பதைக் கூறுங்கள்.  கேசவப் : தாராளமாக! பசு, பெண்டீர், பிராமணர் எனும் மூன்று சிரேஷ்ட ஜீவன்களிடமும் பக்தி கொண்ட சனாதனி சிவாஜி என்பதையும் கூறுகிறோம்.  பாலச்சந் : கூறவேண்டும் கேசவப்பட்ட ரே ! சிவாஜியின் வீர தீர பராக்கிரமத்தை மட்டும் கூறினால் போதாது. அப்படிச் சொன்னால் இணையில்லா வீரர் அனேகரை அறிவேன் என்று ஒரே வார்த்தையில் கூறிவிடுவார். கேசவப் : அப்படிச் சொல்லும். பாலச்சந்திரரே! நாம் அதிகமாக விளக்க வேண்டியது சிவாஜியின் வீரத்தைப் பற்றி அல்ல. அவருடைய பகவத் பக்தி. சனாதன சேவா உணர்ச்சி, பிராமண பக்தி இவைகளை விரிவாகக் கூறினால் தான் காகப்பட்டரின் மனதை மகிழ்விக்க முடியும்.  சிட்னீஸ் : மறைவல்லோரே, எம் முறையில் பேசினால் ஜெயம் நிச்சயமோ, அம்முறையில் பேசி காகப்பட்டரின் சம்மதம் பெற்று வாருங்கள். மராட்டியத்துக்குப் புதிய ஜீவன் அளியுங்கள். போய் வாருங்கள்.  (சொல்லிவிட்டு சிட்னீஸ் போகிறான். பாலச்சந்திரப்பட்டர் அவன் போன திசையைப் பார்த்து முறைத்து நிற்க)  கேசவப் : ஒய், புறப்படும் புறப்படும்! என்ன ஒய் அவன் போன திசையை நோக்கி ஏன் அப்படி பார்க்கிறீர்?  பாலச்சந்: முட்டாள், முடிதரிக்க வேண்டுமாம் சிவாஜி. அதற்கு போக வேண்டுமாம்! சூத்ரனுக்கு ராஜாபிஷேகம்! அதற்கு நாம். பிராமணாள் சேவை செய்ய வேண்டுமாம். அவ்வளவு மண்டைக்கர்வம் ஒய்! யுத்தத்திலே ஏதோ ஜெயம் கிடைத்துவிட்டதாலேயே இந்த வீரர்களெல்லாம் கொக்கரிக்க ஆரம்பிச்சுட்டா .  கேசவப் : ஏன் ஒய்! போக சம்மதம் இல்லேன்னா அதை அப்பவே அவனிடம் சொல்லிவிடுவது தானே?  பாலச்சந் : மந்த புத்தி ஒய் உமக்கு போக இஷ்டமில்லேன்னா வேறு ஏவனாவது போஜன பிரியனாகப் பிடித்து அனுப்பிவிடமாட்டானா நாம் போனால் தானே நல்லது. இந்தக் காரியத்தை எந்த விதமாக முடிக்க வேண்டுமோ அவ்விதம் செய்ய காகப் பட்டரிடம் சம்மதம் அல்லவா வேண்டுமாம் பட்டாபிஷேகத்துக்கு. வாரும் ஒய் காகப் பட்டரிடம் சென்று கூறுவோம். மராட்டியத்தின் நிலையை மட்டம் தட்டுவோம். இந்த மாவீரர்களை ... கேசவப் : ஒய்! நீர் பேசுவதைப் பார்த்தால் விபரீதமாக இருக்கிறதே. சிவாஜி பட்டாபிஷேகம் செய்து கொள்வதற்குக் காகப்பட்டரின் சம்மதத்தை எப்படியாவது பெற்று வருவதாகக் கூறினீர் அவனிடம்.  பாலச்சந்: ஆமாம் அவனிடம் சொன்னேன். அசடு ஒய் நீர் சொன்னால்?  கேசவப் : அப்படி என்றால்?  பாலச்சந் : ராஜ்யம்... பூஜ்யம் ஒய்! பூஜ்யம். அவா ஆசையிலே மண் விழச் செய்கிறேன். வாரும்.  (போகிறார்கள்) ------------------                                               காட்சி - 14 இடம் : ஆஸ்ரமம்.  உறுப்பினர்கள் : காகப்பட்டர் - ரங்குபட்டர் - சிஷ்யர்கள்.  (சிஷ்யர்கள் வேதம் ஓதிக் கொண்டிருக்கின்றனர். காது கொடுத்துக் கேட்க முடியாத நிலையில் ரங்கு வந்து..)  ரங்கு : ஏண்டாப்பா பிரகஸ்பதிகளே! காது குடையறது! போதும், நீங்க போட்ட கூச்சல். அரிதுயில் செய்யும் ஸ்ரீமன் நாராயணமூர்த்தி காதில் கூட விழுந்திருக்கும். போதும், நிறுத்திவிட்டுப் போய் சமையல் காரியத்தைக் கவனியுங்கோ. சதா சர்வ காலமும் ஆகா ஊகூண்ணு கூவிண்டிருக்கிறது போதும்... போங்கள்... சிஷ்யன் : குரு பாடம் படியுங்கள் என்கிறார்... ரங்கு : இப்போ இந்த குரு சொல்றார்; போதும், நீங்கள் பாடம் படிச்சதுண்ணு . எழுந்திருங்கள். மகா பெரிய ஞானஸ்தாள் தான். (சீடர்கள் போக)  தலைவலி வந்துடறது இங்கே. காலை முதல் மாலை வரை ஒரே காது குடைச்சல். இந்தப் ப்ரகிருதிகள் ப்ராணனை வாட்டிண்டிருக்க இந்தக் கருமம் எப்பத்தாந் தருமோ தெரியல்லே நமக்கு. இந்தக் குருவுக்கோ ...  (காகப்பட்டர் வருகிறார்)  காகப் : ரங்கு என்னடாப்பா குருவுக்கு அர்ச்சனை?  (ரங்கு அவர் காலில் விழுந்து)  ரங்கு : நான் ஒண்ணும் அபசாரமா பேசிடலே ஸ்வாமி  காகப் : ரங்கு இந்த உபசாரமெல்லாம் வேண்டாம். நெடு நாட்களாக நோக்கு விசாரம் இருக்கு என்பது தெரியும் நேக்கு.  ரங்கு : என் மனசை அறிஞ்சிண்டிருக்கேன். மகான் அல்லவோ தாங்கள் விசாரம் இருப்பது உண்மைதான். ஆனால்...  காகப் : ஆனால் என்ன?  ரங்கு : அந்த விசாரம் என் பொருட்டல்ல. சகல சாஸ்திர சம்பன்னராகிய தங்கள் பொருட்டுத்தான் விசாரப் படுகிறேன்.  காகப் : என் பொருட்டு என்னடாப்பா விசாரம்?  ரங்கு : ஏனிராது குரு சாமான்யளெல்லாம் எவ்வளவோ சம்பத்துக்களுடன் வாழறா. அரண்மனைகளிலே வாசம் செய்துண்டு. நந்தவனங்களிலே அப்சரஸ் போன்ற ஸ்திரீ ரத்னங்களோடு உலாவிண்டு.  (இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டு ஒரு சீடன் நிற்பதைக் கவனித்த ரங்கு அவனைப் பார்த்து) டேய், மண்டு நாங்கள் ஏதாவது பேசிண்டிருந்தா நீ கேட்டிண்டிருக்கணுமோ? போடா உள்ளே... (சீடன் போகிறான்) கேட்டேளோ அப்சரஸ் போன்ற ஸ்திரீ ரத்னங்களோட உலாவிண்டு ஆனந்தமா காலம் கழிக்கிறா... காகப் : ஆமாம்... அதனால் என்ன? அதற்குத்தான் ராஜயோகம் என்று பெயர். ரங்கு : பெயர் எதுவானாலும் இருக்கட்டும் ஸ்வாமி. அவ்விதமான ஆனந்தம் கிஞ்சித்தேனும் என் போன்ற வாளுக்குத் தேவையில்லை. நான் சாமத்துக்கும் யஜுருக்கும் வித்யாசம் தெரியாத மண்டு. ஆனால் நாலு வேதத்தையும் நாற்பத்தெட்டுவித பாஷ்யத்தோடு உபதேசிக்கக்கூடிய தங்களைப் போன்ற தன்யாளுக்கு இந்த ராஜபோகத்திலே ஆயிரத்திலே ஒரு பங்கு இருக்கப்படாதோ? இல்லையே என்பதுதான் நேக்குள்ள விசாரம். . . காகப் : டே, ரங்கு. உன் குரு பக்தி இருக்கே. அது கேட்க நேக்கு ப்ரம்மானந்தமா இருக்கு. இருக்கட்டும்; ராஜபோகம் இருக்கே, அது என்ன பிரமாதம்..  ரங்கு : என்ன ஸ்வாமி இது. சாமான்யாளுக்குச் சொல்றதையே நேக்கும் சொல்றளே நானுங்கூடத்தான் தங்கள் உபதேசத்தின்படி லோகம் மாயை, ஆனந்தம் என்பது அநித்யம், போக போகாதிகள் வீண் சொப்பனம், இந்திரியச் சேட்டைகள் ஆகாது என்றெல்லாம் பாமராளுக்குக் கூறுகிறேன். அதே விஷயத்தை நேக்கும் சொல்றேளே ! மாயா வாதம் மனத் திருப்தி தருமா?  காகப் : நான் மாயைப் பற்றித் சொல்லவில்லை. ராஜபோகம் நிலையானதுதான்; சந்தோஷமானதுதான். ஆனா ப்ர மாதமில்லே. ஏன் அப்படிச் சொல்றேன் என்கிறியோ? அந்த ராஜபோகத்துக்கு லவலேசமும் குறைந்தல்ல நமக்கு இருப்பது...  ரங்கு : இந்தப் பர்ணசாலையை அரண்மனையாகவும், இந்தச் சீடர்களைச் சேடிகளாகவும் நினைத்துக் கொள்ள வேண்டுமென்கிறீராக்கும்.  காகப் : இல்லை. ஒரு ராஜாவுக்கு ஒரு ராஜ்யம் நமக்கோ எல்லா ராஜ்யங்களும் சொந்தம். அரசனுக்கு ஒரு அரண்மனை. அத்தனை அரண்மனைகளிலும் நாம் கம்பீரமாகச் செல்லலாம். ஒரு ராஜா மற்றொரு ராஜாவிடத்திலே அன்பு காட்டுவான் மேலுக்கு. உள்ளே பகை புகையும். சமயம் வாய்த்த போது சத்ரு ஆவான். நமக்கோ எல்லா ராஜாக்களும் நமஸ்காரம் செய்வா. ஒரு ராஜாவும் நம்மைத் சத்ருவா கருதமாட்டான். ஒரு ராஜாவுக்கு ராஜபோகம் இருப்பது போலவே ரணயோகமும் உண்டு. அதாவது சண்டை வந்துவிடும். ஆபத்து வரும் நமக்கோ ராஜாதி ராஜாக்கள் ரணகளத்திலே மண்டை பிளக்க சண்டை போட்டுக் கொண்டாலும் கவலை இல்லை. யுத்தம் நமக்குக் கிடையாது. யுத்த சமயத்திலே வெட்டு, குத்து யார் யாருக்கோ இருக்கும். நம்மை அண்டாது. எவன் ஜெயித்தாலும் தோற்றாலும் நமக்குக் கவலை கிடையாது. சண்டைக்குக் கிளம்பும்போது ராஜன் நம்முடைய ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டுதான் போவான். அவன் யுத்த களத்திலே மாண்டு போகிறான் என்று வைத்துக் கொள். ஜெயித்த ராஜா முதலில் நம்மை நமஸ்கரித்து, நம்முடைய ஆசிர்வாதம் பெற்ற பிறகுதான் மகுடம் புனைவான் பைத்தியக்காரா! ராஜபோகம் ஆனந்தத்துக்கு மட்டுமல்லடா ; ஆபத்துக்கும் அது இருப்பிடம்  (புலித்தோலைக் காட்டி) இதோ பார் இது என்ன?  ரங்கு : என்ன ஸ்வாமி இது! என்னை முட்டாள் என்று எண்ணிக் கொண்டாலும் பரவாயில்லை. கேவலம் குருடன் என்று தீர்மானித்து விட்டீர் போலிருக்கிறதே இது என்னவென்று கேட்கிறீரே இது புலித்தோல் இது கூடவா தெரியாது.  காகப் : இது தெரிகிறதே தவிர இது உபதேசம் செய்கிற பாடம் தெரியவில்லையே நோக்கு.  ரங்கு : என்ன புலித்தோல் உபதேசம் செய்கிறதா? காகப் : ஏன் செய்யவில்லை? அரச போகத்துக்கும், ஆரிய யோகத்துக்கும் உள்ள தாரதம்யத்தைத்தானே புலித் தோல் உபதேசம் செய்கிறது.  ரங்கு : என்ன ஸ்வாமி இது வேடிக்கை பேசுகிறீர்.  காகப் : ரங்கு வேடிக்கை இல்லை. புலித்தோலைப் பார். இது நமக்கு ஆசனம். சொர்ண சிங்காதனத்தின் மீதிருந்து செங்கோல் செலுத்துகிற மகாராஜனும் கூட இந்தப் புலித்தோல் ஆசனத்தில் அமரும் நமக்கு மரியாதை காட்டுவன். இது கேவலம், மிருகத்தின் தோல். ஆனால் மன்னாதி மன்னரும் இதன் முன் மண்டியிடுகிறார்கள். இல்லையா?  ரங்கு : ஆமாம் குருவே  காகப் : இப்போது யோசித்துப்பார். தங்க சிம்மாசனத்தில் அமர்ந்தாலும் நமது திருப்பாதத்தை வணங்கும் ராஜனுடைய யோகம் பெரிதா? தோலின் மீதமர்ந்து - அரசர்களுடைய முடியைக் காலிலே காணும் நம்முடைய யோகம் பெரிதா?  ரங்கு : உண்மைதான் குருவே ! காகப் : அதுமட்டுமல்ல அரசர்களை அஞ்சலி செய்யச் சொல்லும் இந்த அற்புதமான ஆசனம் இருக்கிறதே இது ஒரு காலத்தில் ஆரண்யத்திலே உலவிக் கொண்டி ருந்தது. அந்த சமயத்தில் நாம் அதன் அருகே கூட செல்ல முடியாது. முடியுமோ ?  ரங்கு : எலியைக் கண்டாலே சில சமயம் மிரள்கிறோமோ புலியிடம் பயமில்லாமல் இருக்குமா ஸ்வாமி? காகப் : அப்படிப்பட்ட புலியின் தோல் மீது நாம் உட்கார்ந்திருக்கிறோம். பூபதிகள் நமக்குப் பூஜை செய்கிறார்கள். முட்டாளே இது உண்மையான யோகமா? ராஜபோகம் உண்மையா?  ரங்கு : விஷயம் பிரமாதமாய் இருக்கிறதே ! காகப் : இன்னமும் கேள்! இவ்வளவு திவ்யமான ஆசனத்தை நாம் அனாயாசமாகப் பெற்றோம். இல்லையா? காட்டிலே புலி உலாவிற்று. அதை வேட்டையாடியது நாமல்ல. புலியின் பற்களால் கடியுண்டவர்கள். நகங்களால் கீறுபட்டவர்கள். ஏன், புலிக்கே இரையானவர்கள் வேறு வேறு. கடைசியில் புலியை எவனோ கொன்றான். எவ்வளவோ கஷ்டத்துக்குப் பிறகு. யாரவன்? - தெரியாது. புலியைக் கொன்ற வீரனை மக்கள் மறந்துவிடுவார். ஆனால் அந்தப் புலித்தோல் நமக்குத் தானமாகத் தரப்பட்டதும் அதன் மீது அமரும் நமக்கு மக்களும் மன்னரும் மரியாதை செய்கின்றனர். பார்த்தாயா, நமக்கிருக்கும் யோகம் எப்படிப்பட்டது என்பதை . ராஜபோகம் ரமணீயமானது தான். ஆனால் அது படமெடுத்தாடும் நாகம் போன்றது. எந்தச் சமயத்தில் விஷப்பல் பதியுமோ என்ற பயத்தோடு தான் எந்த அரசனும் இருக்க வேண்டும். நமக்கு இருக்கும் யோகம் அப்படியல்ல. துன்பமில்லாத இன்பம். மாசு இல்லாத மாணிக்கம். முள்ளில்லாத ரோஜா - இந்த மகத்தான வித்தியாசத்தைத் தெரிந்துக் கொள். ராஜாவாக இருப்பதைவிட ரிஷியாக இருப்பதே மேல். அரச வாழ்வை விட ஆஸ்ரம வாழ்வு அனந்த கோடி தடவை மேல், அசடே! ஆரியனாகப் பிறந்தும் அரச போகத்திலே ஆசை வைக்கிறாயே. ஆரியம் விதைக்காது விளையும் கழனி. வெட்டாது ஊற்றெடுக்கும் தடாகம்...  ரங்கு : குருவே! உணர்ந்து கொண்டேன். உண்மையிலேயே நான் ராஜ போகம் சிலாக்கியமானது என்று தான் எண்ணிக் கொண்டிருந்தேன். தாங்கள் செய்த உபதேசத்தால் தெளிவு பெற்றேன். அரச போகம், ஆரிய யோகத்துக்கு ஈடாகாது.  காகப் : உணர்ந்து கொண்டாயா ? ஆரிய யோகம் எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொண்டாயல்லவா?  ரங்கு : ஆகா! நன்றாகத் தெரிந்து கொண்டேன். ஆரிய யோகம் சாமான்யமானதல்ல. தாங்கள் கூறியபடி, அது முள்ளில்லாத ரோஜாதான். காகப் : ரோஜா மட்டுமல்ல. அது வாடாத மல்லி.  ரங்கு : பொருத்தமான உபமானம். அது வாடாத மல்லிகை தான்.  காகப் : அதுவும் நாம் தேடாதது.  ரங்கு : ஆமாம்! அதைப் பெற நாம் அலைத்து தேடி அலுப்ப தில்லைதான்.  காகப் : அப்படிப்பட்ட ஆரிய வாழ்வை அற்பமென்று கருதினாயே!  ரங்கு : நான் அசடன் குருவே. அண்ட சராசரங்களிலும் ஆரிய யோகத்துக்கு ஈடேதும் கிடையாது என்பதை இப்போது அறிந்து கொண்டேன்.  காகப் : தன்யனானாய் ரங்கு! தலைமுறை தலைமுறையாக நமக்குக் கிடைத்துள்ள இந்த வாழ்வு சாமான்ய மானதல்ல; சகலருக்கும் சித்திக்கக் கூடியதுமல்ல..  ரங்கு : குருதேவா! அதிக உபதேசம் ஏன்... ஆரியம் சாமான்யமானதல்ல. அது விலையில்லா மாணிக்கம்; முதலில்லா வியாபாரம்.  காகப் : டேய், ரங்கு! அசடோ! முதல்லா வியாபாரம் என்று சொல்லாதே. அர்த்தம் அவ்வளவு நன்னா இராது.  ரங்கு : வெளியே சொல்வேனா குரு. நமக்குள் கூறிக் கொண்டதுதானே. -------------------                                       காட்சி - 15 இடம் : பாலாஜி வீடு  உறுப்பினர்கள் : பாலாஜி, பகதூர்.  பாலாஜி : பகதூர்! பாடங்களை விரைவாய் கற்றுக் கொள்ளணும், தெரிந்ததா? இப்படி நெட்டை மரம் போல் நின்று கொண்டிருந்தாயோ, இந்துமதியை அவன் தட்டிக்கிட்டுப் போய்விடுவான். பகதூர் : பாலாஜி ; எனக்குச் சில சமயங்களிலே இந்துவைக் பார்க்கக்கூட பயமா இருக்கு,  பாலாஜி : என்னடா பயம்? அவ பொம்பளைதானே?  பகதூர் ; அவ பார்வை ஒரு விதமா இருக்கு பாலாஜி.  பாலாஜி : எப்படிடா இருக்கு ஏமாளி?  பகதூர் : டேய், பகதூர் உன் சேஷ்டைகளைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஜாக்கிரதையாக நடந்து கொள்' அப்படின்னு பயங்காட்டுவது போல் இருக்கு பாலாஜி.  பாலாஜி ; அது வெறும் பாவனைடா, பாவனை அவளுக்கு அந்தப் பய மோகன் மேலே கொஞ்சம் அன்பு. அவனோ ராஜ்ய காரியங்களிலேயே மூழ்கிக் கெடக்கிறான். ஆகவே அவனிடத்திலே ஆசை குறையும். நீ மட்டும் கொஞ்சம் சமார்த்தியமாக நடந்து கொண்டால் ஜெயம் நிச்சயம்.  பகதூர் : சண்டையிலே கூட சீக்கிரமா ஜெயிச்சுடலாம் போல இருக்கு. இந்தக் காதல் விஷயம் அவ்வளவு சுலபமா இல்லியே.  பாலாஜி: சரி சரி பேசிக்கிட்டே பொழுதை ஒட்டாதே, ஆரம்பி, பாடத்தைக் கடைசி வரை பதுமையாவே பேசிக்கிட்டிருந்தா போதுமா? பதுமை பாடம் முடிச்சதும் நிஜமாகவே ஒரு பெண்ணிடம் இந்தப் பாடத்தை நடத்த வேண்டும். அந்தப் பாடம் முடிந்த பிறகு இந்து மதியிடமே உன் திறமையைக் காட்ட வேண்டும்.  பகதூர் : சரி, பாலாஜி ஆரம்பிக்கிறேன். முக்கனியே! சக்கரையே! பாலாஜி : பகதூர்! அந்தப் பாடம் வேண்டாம். காதல் சம்பாஷணை நடத்துவோம். நான் பதுமைக்குப் பின்புறமிருந்து பேசுவேன். ஆம் அதாவது நீ காதலன்; நான் காதலி .  பகதூர் : அய்யோ நீ காதலியாகிவிட்டால் எனக்குக் காதலே வேண்டாம்டா பாலாஜி.  பாலாஜி : போதும், வாயை மூடிக்கொண்டு பேசு.  பகதூர் : வாயை மூடிக்கொண்டு எப்படிப் பேசுவது?  பாலாஜி : ம்…. நேரமாகிறது.  பகதூர் : சரி கண்ணே கனிரசமே! உன்னை நான் காதலிக்கிறேன்.  பாலாஜி : என்னையா?  பகதூர் ஆம். உன்னைத்தான் உல்லாசி! உன்னைத்தான் உயிரே!  பாலாஜி : உண்மையாகவா?  பகதூர் : ஆம். இந்தச் சோலையிலே, அதோ, கொஞ்சி விளையாடும் கிளிகள் சாட்சி. கூவும் குயில்கள் சாட்சி. உன்னை நான் உண்மையாகவே காதலிக்கிறேன்.  பாலாஜி : டேய், பகதூர்! இவ்வளவு உருக்கமா பேசிட்டாயோ, இந்துமதி உனக்குத்தான் சம்மதித்து விடுவாள். உன்பாடு அதிர்ஷ்டம்தான். வா, போவோம். ---------------                                                         காட்சி - 16 இடம் : ஆஸ்ரமம்.  உறுப்பினர்கள் : கங்கு, ரங்கு, கேசவப்பட்டர், பாலச்சந்தரர்.  (காகப்பட்டர் சுவடியைப் பிரித்துப் பார்த்து விட்டுப் – பிறகு) காகப் : டே ரங்கு! இங்கே வாடா!  ரங்கு : ஸ்வாமி கூப்பிட்டேளா?  காகப் : ஆமாண்டா முன்பு உனக்கு ஒரு பைத்தியக்காரச் சந்தேகம் மனதை குடைஞ்சிண்டிருந்துதே. ரங்கு : அதுவா ஸ்வாமி? தங்களுடைய வியாக்யானத்தைக் கேட்ட பிறகு சந்தேகம் பஞ்சு பஞ்சாய்ப் பறந்தே போச்சு.  காகப் : போய்விட்டதல்லவா? அப்படிப்பட்ட மேன்மையான, மகிமையான வாழ்வு நம்முடையது என்பதைத் தெரிந்து கொள்ளாதவா நம்ம குலத்திலே அத்தி பூத்தது போலத் தான். உன் போல மண்டுகள் அதிகம் கிடையாதுடா.  ரங்கு : ஸ்வாமி! அடிக்கடி மண்டூ, மண்டூண்ணு என்னைச் சொல்லி …  காகப் : கேலி செய்கிறேனேன்னு கோபமா? பைத்தியக்காரா! உன் மேலே உள்ள அபாரமான ஆசையினாலே அது போலச் சொல்றேண்டா. வேறொண்ணுமில்லே. அது சரி! நம்ம சாஸ்திராதிகளைப் படிக்கிறியே, அது புரியறதோ நோக்கு. ரங்கு : என்ன ஸ்வாமி இது? சாட்சாத் காகப் பட்டருடைய பிரதம சீடனாக இருக்கேன். என்னைப் போய் சாஸ்திரம் புரியறதான்னு கேட்கறதுன்னா..  காகப் : மத்தவா கேட்டா சொல்லுடா இதை இப்ப கேட்கறது நானல்லவோ. சாஸ்திராதிகள் புரியறதோ?  ரங்கு : ஆஹா ! நன்னா புரியறது. மத்தவாளுக்குப் புரியவைக்கவும் முடியறது.  காகப் : சம்சயங்கள் ஏற்பட்டால் விளக்க முடியுமோ?  ரங்கு : ஏதோ எனக்குத் தெரிந்த அளவிலே...  காகப் : சரி பதி பக்தியின்னா அதற்கு என்னடா பொருள் ?  ரங்கு : தன்னுடைய பதியிடம் பக்திப் பூர்வமாக நடந்து கொள்வது என்று பொருள். காகப் ; அதுதானே?  ரங்கு : ஆமாம் ஸ்வாமி! அதுதான்! ஏதேனும் விசேஷமான பொருள் உண்டோ ஒரு சமயம் ?  காகப் : பதிபக்தி தன்னுடைய புருஷனிடம் மாறாத குறையாத பக்தியுடன் நடந்து கொள்வதுதான். இதோ பார். துரோபதைக்குப் பதிகள் ஐவர். பதிபக்தி தத்துவத்தின்படி துரோபதை ஐவருக்கும் கட்டுப்பட்டு - பய பக்தியுடன் விஸ்வாசதோடு நடந்து கொள்ள வேண்டும் அல்லவா ! ரங்கு : ஆமாம்  காகப் : இப்படி ஒரு சம்பவம் நேரிட்டிருந்தா என்ன ஆதியிருக்கும்னு யோசித்துப்பார். தர்மன் தன்னோடு தேவாலயம் வரும்படி அழைக்கிறான்; அர்ச்சுனனோ ஆரணங்கே! ஆடிப்பாடி மகிழலாம் வா , நந்தவனத்துக்கு என்று அழைக்கிறான்; பீமனோ அருமையான காய்கறிகளைக் கொண்டு வந்து எதிரே கொட்டி விட்டு, பதிசொல் கடவாத பாவாய்! உடனே சமைத்துப்போடு , அகோரமான பசி எனக்கு என்று வற்புறுத்துகிறான். நகுலன் நாட்டியம் பார்க்கக் கூப்பிடுகிறான். சகாதேவன் சொக்கட்டான் ஆடக் கூப்பிடுகிறான் என்று வைத்துக் கொள். துரோபதை பதிபக்தியைக் காப்பாற்றியாக வேண்டும். பதிகளோ ஐவர் . என்னடா செய்வது?  ரங்கு : சிக்கலாக இருக்கே ஸ்வாமி ! காகப் : என்னடா செய்யலாம். ஒரு புருஷனை மணந்து கொண்ட நிலையிலே உத்தமிகள் மொத்தக் கஷ்டப்படுவதைப் பார்க்கிறோம். துரோபதைக்கோ..  ரங்கு : ஐவர் கணவர். அவர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரியம் செய்யச் சொல்லி தேவியை அழைக்கிறா. காகப் : இதிலே துரோபதை பாரபட்சம் காட்டக் கூடாது.  ரங்கு : ஆமாம் பதி பக்தி கெட்டு விடும்.  காகப் : தன் பர்த்தாவிலே யாருடைய பேச்சையும் தட்டி நடக்கக் கூடாது.  ரங்கு : ஆமாம் கஷ்டமாய் இருக்கே ஸ்வாமி?  காகப் : என்னடா இது! இவ்வளவு காலத்திற்குப் பிறகு, இந்தச் சம்பவத்தைக் காதாலே நீ கேட்கற போதே கலக்கமடையறே. அந்தப் புண்ணியவதி இப்படிப்பட்ட சிக்கல்களை எவ்வளவோ வாழ்க்கையில் கண்டிருப்பா? எல்லாவற்றையும் சமாளித்தாக வேண்டும்.  ரங்கு : ஆமாம் எப்படி முடிந்தது?  காகப் : நீயே யோசித்துச் சொல் புத்தி தீட்சண்யம் இருக்க வேணுமடா. ரங்கு! சதுப்பு நிலத்திலே நடந்து செல்பவனுக்குக் காலிலே திடம் இல்லாவிட்டால் என்ன ஆகும். அது போலத்தான். நமது சாஸ்திர புராணாதிகளிலே உள்ள சம்சயங்களைப் போக்க நமக்குத் தெரியாவிட்டால் நமது பாடும் …. ரங்கு : ஆமாம் ஸ்வாமி! திண்டாட்டமாத்தான் இருக்கும்.  காகப் : எவனாவது ஒரு விதண்டாவாதி, நான் கேட்ட இதே கேள்வியை உன்னைக் கேட்கிறான் என்று வைத்துக் கொள்.  ரங்கு : கேட்பா ஸ்வாமி கேட்பா. இப்பவே பலபேர் கேட்டுண்டுதான் இருக்கா.  காகப் : நீ என்ன பதில் சொல்வே? ரங்கு : நானா?  காகப் : ஆமாம்? பதில் சொல்லாது ஊமையாகி விடுவாயோ? உன்னை யார் பிறகு மதிப்பா ? ரங்கு : குருதேவா! நமது புராண சாஸ்திரங்களை நிறைய கரைத்துக் குடித்தவன் என்று கர்வம் கொண்டிருந்தேன். நிஜமாச் சொல்றேன்..... என்னாலே நீங்க கேட்ட சம்சயத்துக்குச் சமாதானம் கூறச் சக்தியில்லே .  காகப் : ஐவருக்கும் பத்தினி பதிபக்தியும் தவறக் கூடாது.  ரங்கு : ஆமாம்! பழச் சாறும் பருக வேணும்; பழமும் கெடக்கூடாது என்பது போல சிக்கலாக இருக்கே.  காகப் : பைத்தியக்காரா இப்படிப்பட்ட சிக்கலான சமயத்திலே துரோபதை 'ஏ' கண்ணா உன்னையன்றி வேறு கதி ஏது . என் கற்பும் கெடலாகாது; ஐவருக்கும் மனம் கோணலாகாது என் செய்வேன் என்று பஜித்தாள். அந்த சமயத்திலே கோபால கிருஷ்ணன் குழலை ராதையின் கிரகத்திலே வைத்து விட்டு , ருக்மணியின் இல்லம் வந்திருக்க, ருக்மணி, நாதா தங்களுடைய மதுரமான குழலைக் கேட்க வேண்டும் என்று வற்புறுத்துகிற சமயம் பரந்தாமன் சிரித்தார். சிரித்துவிட்டு, கீழே கிடந்த மலரை எடுத்து ஐந்து பாகமாக்கி ஆகாயத்திலே வீசினார். உடனே ஐயனின் அற்புதத்தை என் னென்பது? தருமருடன் தேவாலயம் செல்ல துரோபதை அர்சுனனுடன் நந்தவனத்தில் துரோபதை. பீமனுடன் சமையலறையில் துரோபதை. சகாதேவனுடன் துரோபதை. இவ்விதமாக ஐந்து பேருடனும் ஏக காலத்திலே துரோபதை சென்ற அற்புதம் நிகழ்ந்தது.  ரங்கு : ஆஹா, அருமை அருமை குருதேவர்.  காகப் : பதிபக்தியும் நிலைத்தது; சிக்கலும் தீர்ந்தது அல்லவா?  ரங்கு : ஆமாம் காகப் : எப்படி ?  ரங்கு : கண்ண ன் அருள்! காகப் : புத்திக்கூர்மை வேண்டுமடா புத்தி தீட்சண்யம் வேண்டும். நமது புராணதிகளிலே ஏதேனும் சந்தேகம் எவனுக்கேனும் பிறந்தால், உடனே புத்தி தீட்சண்யத்தை உபயோகித்து, இப்போது நான் சொன்னது போல ஒரு விளக்கக் கதை கட்ட வேண்டும். உடனே தயங்காமல்.  ரங்கு : ஸ்வாமி! இது தாங்கள் கட்டிய கதைதானா?  காகப் : ஆமாம்! கட்டப்படாதோ? என்னடா இது? வியாசர் பாரதம் செய்தார். நான் துரோபதம் எனும் புதிய காவியத்தைச் செய்து காட்டினேன். தவறோ?  ரங்கு : தவறோ, சரியோ ஸ்வாமி. பிரமாதமா இருக்கு வியாக்யானம். விசித்திரமானதா இருக்கு..  காகப் : நமது பூர்வீக ஏடுகளிலே உள்ள விசித்திரங்கள் அனந்தம். அவைகளிலே ஏதேனும் எவருக்கேனும் சந்தேகங்கள் ஏற்பட்டு பழிச்சு பேசினா, ரங்கு! அவளிடம் வீணான விவாதம் பேசிண்டிருக்கப்படாது. ஆண்டவனுடைய லீலைகள், விசித்திரம் அனந்தம். சாமான்யாளாகிய நம்மால் அவைகளின் முழு உண்மையை, ரகசியத்தின் மகிமையைத் தெரிந்துக் கொள்வது முடியாத காரியம் என்று சொன்னால் தீர்ந்த து.  ரங்கு : ஆமாம்! புண்ணிய ஏடுகளைச் சந்தேகிப்பது பாபம் என்பதிலே பாமரனுக்கு நம்பிக்கை இருக்கிற வரையிலே . ..  காகப் : நமது யோகத்துக்கு ஈடாக வேறெதுவும் இராது ! ரங்கு : ஸ்வாமி! யாரோ வரா. நம்மவா போலயிருக்கு. யாரா இருக்கும்? (கேசவப்பட்டர், பாலச்சந்திரப் பட்டர் வருதல், காகப்பட்டரிடம் ஒலையைத் தர, அதைப் படித்தான பிறகு...)  காகப் : மராட்டிய மண்டலத்து மறையோர்களே! மட்டற்ற மகிழ்ச்சி உமது தூதால் எனக்கு உண்டாகிறது. கேசவ : நாங்கள் வந்திருக்கும் காரியத்தைப் பற்றியல்ல ஸ்வாமி நாங்கள் மகிழ்வது; எப்படியோ. ஒன்று, தங்களைத் தரிசிக்கும் பாக்யம் கிடைத்ததே, தன்யாளானோமே என்பதைப் பற்றியே பரம சந்தோஷம் எங்களுக்கு. பாலச் : ஆரியகுலத் தலைவரின் ஆஸ்ரமத்தைக் கண்டு தரிசிக்கும் பாக்யம் கிடைக்க வில்லையே என்று ஆயாசப்படும் ஆரிய சோதராள் மராட்டிய மண்டலத்திலே அனந்தம்.  காகப் : அப்படியா? மெத்த சந்தோஷம்.  கேசவப் : ஸ்வாமி! எங்கு பார்த்தாலும் அகாரியாளுடைய செல்வாக்கே பரவிண்டு இருக்கும் இந்தச் சமயத்திலே, அகாரியாளுடைய ராஜ்யங்களே தலை தூக்கிண்டு ஆடும் இந்தக் காலத்திலே, புனிதமான கங்கைக் கரையிலே, கைலாயமோ, வைகுந்தமோ என்று யாவரும் வியந்து கூறத்தக்க வகையிலே இந்த மகோன்னதமான ஆஸ்ரமத்தை அமைத்துண்டு ஆரிய தர்மத்தை அழியாது பாதுகாத்து வரும் தங்களைக் கலியுக பிரம்மா என்றே நாங்களெல்லாம் கொண்டாடுகிறோம்.  காகப் : நமக்குள்ளாகவோ இவ்வளவு புகழ்ந்து கொள்வது? நாம் ஒரே குலம், ஒரே சதை, ஒரே ரத்தம்.  கேசவப் : அப்படி சொல்லிவிடலாமோ? ஆரிய குலம் தான் நாங்களும், இன்னும் அநேகர். ஆனால் என்ன கெதியில் இருக்கிறோம் மராட்டிய மண்டலத்திலே? எமக்கு மதிப்பு உண்டோ மார் தட்றா ! மராட்டிய ராஜ்யம் ஸ்தாபித்தாளாம். அவாளுடைய வீரத்தால் தான் விடுதலை கிடைத்ததாம்.  பால : விதண்டாவாதிகள் நமது சாஸ்திரத்தைக் கேலி செய்றா.  காகப் : அப்படியா அவ்வளவு மூடுபனியா அங்கு? அஞ்ச வேண்டாம், அங்குள்ள அஞ்ஞானத்தைப் போக்குவோம். மேலும் கேசவப்பட்டரே தாங்கள் கொண்டு வந்துள்ளது ஓலை அழைப்பு அல்லவா? ரங்கு நம்மை அழைக்கிறார்கள், மராட்டிய மண்டலத்துக்கு வந்து போகும்படி. ரங்கு : நம்மையா ஸ்வாமி உபன்யாசங்க புரியவா?  காகப் : அசடே அதற்கல்ல. மராட்டிய மண்டல மாவீரன் சிவாஜி மகுடாபிஷேகம் செய்து கொள்ள வேணுமாம். அதனை நடத்திக் கொடுக்கும்படி நம்மை அழைக் கிறாளடா.  ரங்கு : நம்மை காசியிலிருந்து மராட்டியத்துக்கு! தங்கள் கீர்த்தி, குருஜீ அவ்வளவு தூரம் பரவி இருக்கிறதா?  கேசவ : கொஞ்சம் தீர்க்கமாக யோசிக்கணும். இது விஷயமா ஆனந்தப்படுறதும் பெருமையா நினைக்கிறதும் மட்டும் போதாது.  காகப் : டே, ரங்கு பேசாம இருடா பெரியவா சூட்சமம் இல்லாம பேசமாட்டா.  கேசவப் : மராட்டியத்துக்கு இப்ப உங்களை அழைக்கிறதிலே ஒரு சூட்சமம் இருக்கத்தான் செய்கிறது. சிவாஜி மாவீரன் சந்தேகமில்லே. இருந்தாலும் நாமோ வில்வீரன் ஸ்ரீராமச்சந்திரன் காலம் முதற்கொண்டே ஏன், அதற்கு முன்னாலே இருந்தே கெளரவிக்கப்பட்ட குலம்.  காகப் : ஆமாம் அதிலே என்ன சந்தேகம். யுகயுகமாக நிலைத்து நிற்கும் உண்மையல்லவோ அது!  காகப் : அப்படித்தான் ஐதீகம். ஆமாம்; மராட்டியத்திலே எமக்கு இப்போ மதிப்பு கிடையாது.  காகப் : அப்படியா? கேசவப் : ஆமாம் சில பேர் நாம் ஆதிக்கம் செலுத்துவது கூடாதுங்கறா! ஏன் என்றால் யுத்தத்திலே சேர முடியாதவாண்ணு கேலியும் பேசறா.  காகப் : அப்படிப்பட்ட அஞ்ஞானிகளும் அங்கே இருந்திண்டிருக்காளோ? ரங்கு ; தாங்கள் போனால் சூரியனைக் கண்ட பனி போல் அஞ்ஞானிகள் இருக்குமிடம் தெரியாம போயிடுவா.  கேசவ : மராட்டிய வீரர்களிலே ஒரு தந்திரசாலி தான் எங்களைத் தூது அனுப்பியவன். பெயர் சிட்னீஸ். காயஸ்தகுலம் அவன். எப்படியாவது காகப்பட்டரை வரவழைக்க வேண்டுமென்று திட்டம் போட்டவன்.  காகப் : ஏன்? கேசவப் : சிவாஜியின் பட்டாபிஷேகம் தாங்கள் வராவிட்டால் நடைபெறாதே.  காகப் : எதிர்ப்போ ? கேசவப் : ஆமாம்.  காகப் : பக்கத்து அரசனோ ?  கேசவ : இல்லை உள் நாட்டிலே நாங்கள் தான் எதிர்த்தோம். சிவாஜி சூத்திரன். அவன் எப்படி க்ஷத்திரிய தர்மப்படி ஜொலிக்க ஆசைப்படலாம்? சாஸ்திரம் சம்மதிக்குமோ? வேதவிதிப்படியா? என்றெல்லாம் எதிர்த்தோம்.  காகப் : ஓகோ! இந்த ஓலையிலே அது பற்றி ஒன்றையும் காணோமே?  கேசவப் : எப்படி இருக்கும்? நாங்கள் தான் எதிர்த்தோம். எங்களையே தூது அனுப்பிவிட்டான். அந்த தந்திரசாலி. தங்கள் சம்மதம் கிடைத்து விட்டால் எங்கள் எதிர்ப்புகளை மட்டம் தட்டிவிடலாம் என்ற நினைப்பு.  காகப் : அப்படிப்பட்ட ஆசாமியா? ரங்கு கொண்டுவா ஏடு.  ரங்கு : ஸ்வாமி நாம் போயி நம்மளவாளுக்கு வேண்டிய சகாயம் செய்து... .. .  காகப் : மண்டு மராட்டியத்துக்கு நாம ஏண்டா போகணும்? கேசவப்பட்ரே! விஷயம் விளங்கிவிட்டது. மராட்டிய மண்டலத்துக்கு சிவாஜி மகுடாபிஷேகம் செய்து கொள்வது பாப காரியம். நான் அதற்குச் சம்மதிக்க முடியாது. வரமுடியாது என்று கூறிவிடும்.  கேசவப் : ஓலையே அது போலத் தீட்டினால் … காகப் : ஆகா! தருகிறேன். கொண்டு போய் வீசும், அவன் முகத்திலே! நமது ஆசியும் ஆதரவும் இல்லாமல் என்ன செய்ய முடியம். ஆனால்.  கேசவப் : அதுமட்டுமில்லை. ஸ்வாமிகாகப்பட்டரே முடியாது பட்டாபிஷேகம் ; பாப காரியம் என்று சொல்லி விட்டார் என்பது தெரிந்தால்..  காகப் : பிறகு அவன் பட்டம் சூட்டிக் கொள்ள முடியவே முடியாது.  கேசவப் : பரத கண்டமே அவனைப் பாபி என்று சபிக்கும்.  காகப் : படட்டும்.... ஆரியர்களை அலட்சியப்படுத்தும் அஞ்ஞானிகள் தெரிந்து கொள்ளட்டும் நமது ஆதிபத்தியத்தை ஒலை தயாரானதும் நீர் புறப்படலாம். இதற்குள் டேய், ரங்கு அவாளுக்குப் பாலும், பழமும் கொடு, சிரமப்பரிகாரம் செய்து கொள்ளட்டும். --------------                                                        காட்சி - 17 இடம் : வீதி உறுப்பினர்கள் : சிட்னீஸ், பட்டர்கள்  சிட்னீ : வாருங்கள், வாருங்கள் போன காரியம் ஜெயந்தானே! (பட்டர்கள் கடிதம் கொடுக்கக் கண்டு ) என்ன இது! வர முடியாது என்று எழுதியிருக்கிறாரே.  கேசவப் : நாங்கள் என்ன செய்வது?  சிட்னீ : மூன்று பேர் சென்றீர்களே? கேசவப் : நயமாக வினயமாக, பவ்யமாக விஷயத்தை எடுத்துச் சொன்னோம். சிட்னீ சொன்னதின் பலனா இது? கேசவப் : அவர் வயிறு குலங்கச் குலுங்கச் சிரிக்கிறார்.  சிட்னீ : மக்களின் மனநிலை, மண்டலத்தின் மனநிலை. கேசவப் : எல்லாம் சொன்னோம். சிவாஜியின் வீர தீரத்தைப் பற்றிச் சொன்னோம். அவர் கோதண்டத்தில் ஒரு ஸ்லோகம் சொல்லி எங்களைத் திணற அடித்துவிட்டார்.  சிட்னி : ம்.. சரி.. சரி... என் புத்திப் பிசகு. உங்களை அனுப்பினேன். சதிகாரர்களே போங்கள்.  கேசவப் : ஆத்திரம் கூடாதென்று ஆகமம் அலறுகிறது; வேதம் முழங்குகிறது.  சிட்னி : எங்காவது ஆற்றோரத்தில் போய்ப் பேசிக்கொண்டிருங்கள் இதுபோல. இப்படி அடுத்துக் கெடுக்காதீர்கள். (போகிறார்கள்)  நிச்சயமாக இவர்கள் சதிதான் செய்துவிட்டு வந்திருக்கிறார்கள். இவர்கள் அந்தக்காகப் பட்டரின் குலமாயிற்றே என்று அனுப்பினேன். குலத்தின் குணத்தைக் காட்டி விட்டார்கள். சூதுக்காரர்களே! உங்கள் சூட்சி வெற்றி பெற விடுகிறேனா, பாருங்கள். ------------------                      காட்சி - 18 இடம் : தர்பார்  உறுப்பினர்கள் : சிவாஜி, தளபதி , வீரர்கள், மோகன்.  1. தளபதி : மகராஜ் புதிய மாளிகை கட்டியதும் அதற்கு என்ன பெயரிட உத்தேசம்? சிவாஜி : நீயே சொல்லு, என்ன பெயரிடலாம்? 1. தளபதி : சலவைக்கல்லால் கட்டப் போவதால் வெள்ளை மாளிகை என்று பெயரிடலாமே?  2. தளபதி : அப்படி பார்த்தால் மாளிகையின் கொலு மண்டபத்திலே தங்கத் தகடு போடப்படுவதால் சொர்ண மாளிகை என்ற பெயர் பொருத்தமாக இராதோ?  1. தளபதி : நமது சிவாஜி மகாராஜாவுக்கு ஜெயச் சின்னமாக அந்த மாளிகை இருக்கப் போகிறது. அதனால் ஜெயவிலாசம் என்ற பெயர் பொருத்தமாக இருக்கும். நாம் கூறிக் கொண்டே போவானேன்? அவருடைய உத்தரவு எப்படியோ?  சிவாஜி : நான் அதைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்க வில்லை, மகுடாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பே தாங்க ளெல்லாம் மகாராஜா என்று அழைக்கிறீர்களே, எவ்வளவு ஆழ்ந்த அன்பு உங்களுக்கு என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன். (மோகன், வீரர்கள் ஒடிவருகின்றனர்)  ஏன், என்ன செய்தி எதிரிப் படைகளா?  மோகன் : எதிரிகளிடம் படையில்லை , மகராஜ் ... தடை விதித்திருக்கிறார்கள்  சிவாஜி : தடையா? என்ன? யார்?  வீரன் ; மகராஜ் பட்டாபிஷேகம் நடக்கக்கூடாதாம்.  சிவாஜி : சொன்னவன் யார்? மோகன் : பிணமாகாமல்தான் இருக்கிறார்கள். அந்தப் பித்தர்கள்.  சிவாஜி : அமைதியாகப் பேசுங்கள். பட்டாபிஷேகத்தைப் பாதுஷாவின் ஆட்கள் தடுக்கின்றனரா?  மோகன் : அவர்கள் துணியவில்லை மகராஜ் அவர்களுக் கில்லை அந்தக் கெடுமதி. மொகலாயர் வீரத் தலைவனை மதிக்கின்றனர். ஆனால் … சிவாஜி : ஆனால்! என்ன அது ஆனால் ? வீரன் : முகூர்த்தம் குறிக்கும்படி புரோகிதரைக் கேட்டோம். சிவாஜி : நாள் சரியில்லை. நட்சத்திரம் சரியில்லை என்று கூறியிருப்பார்.  வீரன் : இல்லை மகராஜ் விபரீதமாகப் பேசுகிறார்கள்.  சிவாஜி : விபரீதமாகப் பேசுகிறார்களா? என்ன உளறுகிறீர்கள்?  மோகன் : அப்படிக் கேட்டிருக்க வேண்டும். அந்த உலுத்தர்களை வாயை மூடிக் கொண்டு வந்து விட்டீர்கள் வகையற்று..  சிவாஜி : சந்தர். மோகன் : மகராஜ் மன்னிக்க வேண்டும்.  வீரன் : புரோகிதர் பட்டாபிஷேகம் கூடாதென்று … 4. தளபதி : கூடாதென்று..?  வீரன் : கூறிவிட்டனர்.  4. தளபதி : ஏன்? என்ன காரணம்?  வீரன் : நமது தலைவர் சூத்திரராம் சூத்திரருக்கு ராஜ்யா பிஷேக உரிமை கிடையாதாம். அது சாஸ்திர விரோதமாம். (சிவாஜி 'ஆஹா' என்று வாளை உருவ, மற்றவர்களும் வாளை உருவுகின்றனர். பாலச்சந்திரப் பட்டர். கேசவப்பட்டர் வருகின்றனர்)  கேசவப் : எங்களைக் கொல்ல இத்தனை ஆட்களும் வாட்களும் தேவையா? வீரர்களே! உங்களுடைய கோபப் பார்வையாலேயே எங்களைச் சுட்டுச் சாம்பலாக்கி விடலாமே. பொறுங்கள் பொறுங்கள்! பொறுத்தார் பூமியாள்வார்.  பாலச் : பொங்கினவர் காடாள்வார்.  சிவாஜி : சரி! இவர்களை அழைத்துக் கொண்டு நந்தவனம் சென்று. என்ன சேதி என்று விசாரித்துத் தகவலை பிறகு வந்து கூறுங்கள் என்னிடம். என் முன் நிறுத்த வேண்டாம். இவர்களைக் கொண்டு போங்கள். (தளபதி பட்டர்களை அழைத்துப் போக , மோகனும் போகிறான்.)  சிவாஜி : சந்தர்! வா இங்கே நீ போகாதே இங்கேயே இரு. (சிறிது மெளனமாய் இருந்துவிட்டு)  நான் எப்போதும் இப்படித் திகைத்த்தில்லை. எதிரியின் படைகள் நான்கு பக்கமும் சூழ்ந்து கொண்ட போதும் எனக்கு ஏற்பட்டதில்லை இந்தக் கலக்கம். நான் நாடாளத் தகுதியற்றவன் சிவாஜி சூத்திரன் சூத்திரன் நாடாளக் கூடாது? இது சாஸ்திரம்.  மோகன் : சாஸ்திரமல்ல மகராஜ்! நமது இருதயத்திலே வீசப்படும் அஸ்திரம்.  சிவாஜி : உண்மைதான். எதிரியின் வாளுக்கும், வேலுக்கும் என் மார்பு அஞ்சியதில்லை. இந்த அஸ்திரம் ...  மோகன் : மகராஜ் என்னால் தாங்க முடியவில்லை பொறுக்க முடியாது. ஒரு வார்த்தை சொல்லுங்கள், தங்களைத் தடை செய்யத் துணிந்தவர்களை … சிவாஜி : கண்ட துண்டமாக்குவாய். பயன் என்ன? வாள் கொண்டு அவர்களைச் சிதைக்க விரும்புவாய். அவர்கள் வாள் எடுக்காமலே என்னைச் சித்திரவதை செய்துவிட்டார்களே. முகலாயச் சக்கரவர்த்தி முயன்று பார்த்து தோல்வி பெற்றான். சண்டமாருதம் போன்ற எதிரிப் படையினால் ஏன் சித்தத்தைக் குறைக்க முடியவில்லை. சாத்பூரா முழுவதும் ரத்தக் காடான போது என் மனம் குலையவில்லை . உற்றார் உறவினரும், ஆருயிர்த் தோழர்களும், களத்திலே பிணமான போதும் என் உறுதி குலையவில்லை. போர் போர் போர் என்றே கர்ஜித்தேன். இதோ, என்னை நாடாளத் தகுதியற்றவன் என்று கூறிவிட்டார்கள். நான் சூத்திரன். சூத்திரனுக்கு சாஸ்திரம் அனுமதி தரவில்லையாம். ராஜ்யம் ஆள! மோகன் : சூதான வார்த்தை அது.  சிவாஜி : ராஜ்யம்! யார் சிருஷ்டித்த ராஜ்யம்? எவ்வளவு கஷ்டங்களுக்குப் பிறகு சிருஷ்டித்த ராஜ்யம்? சந்தர்! எத்தனைத் தாய்மார்கள், தங்கள் குமாரர்களை இதற்கு அர்ப்பணம் செய்தனர். எத்தனை காதலிகள் தங்கள் காதலர்களை இதற்குக் காணிக்கை செலுத்தினர். ராஜ்யம் ஆள சிவாஜிக்கு உரிமையில்லையாம். சூத்திரன் ராஜ்யம் அமைக்கலாம். ரணகளத்திலே உழைக்கலாம். ஆனால் அவன் ஆளக் கூடாது. இது சாஸ்திரம் சந்தர்! இந்த சாஸ்திரம்?  மோகன் : சாம்பலாகட்டும் மகராஜ் கட்டுச் சாம்பலாக்குவோம். புறப்படுங்கள்.  சிவாஜி : சந்தர்! என் மனம் குழம்பிவிட்டது. மோகன் : மகராஜ் மகராஜ்!  சிவாஜி : மோகன் விலகிநில் ! விசாரம் நிறைந்த என்னை விட்டு விலகும். அப்பா சந்தர்! அஞ்சாநெஞ்சன், அசகாய - சூரன், ஆற்றல்மிக்கோன் என்றெல்லாம் மராட்டிய மண்டலம் புகழ்ந்ததோ அந்த மாவீரனுடைய நிலையைப் பார். மகாராஷ்டிரம் மயக்கத்திலே சிக்கி விட்டது. உன்னையும் அந்த நோய் பிடிக்கா முன்பு விலகிச் செல்.  மோகன் : மகராஜ் ! வீணான மனக்கலக்கம் கூடாது! உமது ஆத்திரத்தை மீறும் ஆற்றல் கொண்ட ஆண்மகன் எவனும் இங்கே இருக்க முடியாது. என் கையில் வாள் இருக்கும் வரை, தங்கள் தாள் பணிகிறேன். ஒரு வார்த்தை சொல்லுங்கள்.  சிவாஜி : நாளைக்கு வா! இன்று என்னை இம்சிக்காதே! வேதனை வெள்ளம் போலாகிவிட்டது. நான் அதைத் தாண்டி கரை ஏறுவேனோ அல்லது அதிலேயே அமிழ்ந்து போவேனோ யார் கண்டார்கள்? மகாராஷ்டிர மண்டலமே! உன் கதி என்னவோ...  --------------                         காட்சி - 19 இடம் - : விருந்து நந்தவனம்  உறுப்பினர்கள் : சாந்தாஜி, இந்துமதி, மோகன், பாலாஜி, பகதூர்.  (இந்துமதி சோர்ந்து நிற்க, சாந்தாஜி வந்து)  சாந் : இப்படி வைத்துக் கொண்டிராதே முகத்தை என் பேச்சைக் கேளம்மா, உன் நன்மைக்குத்தான் இந்த ஏற்பாடு.  இந்து : என் நன்மை? தேள் கொட்டுவது தேக ஆரோக்யத்துக்கா அப்பா? எதற்காகப்பா என்னை இப்படி வாட்டுகிறீர்கள்?  சாந் : பைத்தியக்காரப் பெண்ணே ! நானும் கிளிப் பிள்ளைக்குச் சொல்லுவது போல் சொல்லிவிட்டேன். அவன் கேட்கவில்லை .  இந்து : அதற்காக?  சாந் : அதற்காகத்தான் இந்த ஏற்பாடு. பகதூர் வருவான்; அவனிடம் சிரித்துப் பேசு. அவன் உன்னைக் கல்யாணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று கேட்பான். கேட்பான். இந்து : ஆஹா! அதற்கென்ன சம்மதிக்க வேண்டும்? அதுதானேயப்பா உமது கட்டளை?  சாந் : ஏனம்மா இப்படிக் கோபித்துக் கொள்கிறாய்? பகதூர் . துஷ்டனல்ல. கெளரவமான குடும்பம். அடக்கமானவன். கொஞ்சம் அசடு. அவ்வளவுதான். மேலும் ...  இந்து : என்னமோ அப்பா! எனக்கு இந்தப் பேச்சே வேதனையாக இருக்கிறது.  சாந் : என்ன , மகா வேதனை? நான் என்ன , உன்னை பகதூரைக் கல்யாணம் செய்து கொள் என்றா கூறுகிறேன்? பாவனைக்கு ஒப்புக்கு ஒரு வார்த்தை அப்படிச் சொல். பிறகு பாரேன் அந்த முரட்டு மோகன் அலறி அடித்துக் கொண்டு என்னிடம் வருவான். வாளைத் தொடுவதில்லை என்று சத்தியம் செய்து தருவான். நான் கொஞ்ச நேரம் பிகு செய்துவது போல் செய்துவிட்டு, பிறகு சம்மதிப்பேன். பயல் பெட்டிப் பாம்பாகி விடுவான். இந்தத் தந்திரத்தால் தான் மோகனை நம் வழிக்குக் கொண்டு வர முடியும்?  இந்து : தந்திரம் கூட எனக்குக் கசப்பாகத்தான் இருக்கிறது. நான் ஒப்புக்குக் கூட எப்படி பகதூரைக் கல்யாணம் செய்துக் கொள்வதாக கூறுவேன்?  சா : கூறித்தான் ஆக வேண்டும். உனக்குத் தெரியாது. இந்தக் காதல் இருக்கிறதே அது ஒரு மாதிரியான வெறி. வேறு ஒருவன் அந்தக் காதலை தட்டிப் பறித்துக் கொள்வான் என்று தெரிந்தால் போதும். காதலால் தாக்குண்டவன் காலடியில் விழுந்தாவது காரியத்தைச் சாதித்துக் கொள்ள முயல்வான். இது, பாலாஜி சொன்னது.  இந்து : பாலாஜி சொன்னது பாழாய்ப்போன பாலாஜி நல்ல யோசனை சொன்னான் உமக்கு சரி. கொஞ்ச நேரம் நெருப்பிலே நிற்கிறேன். வேறு வழியில்லை...  சாந் : அப்படிச் சொல். நீ எப்போதும் நல்ல பெண். அதோ யாரோ வருகிறார்கள். நீ போ! உடைகளை அணிந்து கொண்டு வா. (பாலாஜியும் பகதூரும் வருகின்றனர்)  பாலாஜி : நமஸ்காரம் சாந்தாஜி! நமஸ்காரம்.  சாந் : நமஸ்காரம்.  பாலா : இவர்தான் நான் சொன்ன பகதூர் (பகதூரை அங்குள்ள ஆசனத்தில் அமரச் செய்துவிட்டு ) நான் தங்கள் பூஜை அறையைப் பார்க்க வேண்டும் சாந்தாஜி.  சாந் : ஆஹா அதற்கென்ன? வா, உள்ளே காட்டுகிறேன்.  (பாலாஜியும், சாந்தாஜியும் போக பகதர் பாடத்தை ஆரம்பிக்கிறான்.)  பகதர் : மயிலே! குயிலே மானே! தேனே!- மதிமுகவதி கலர்முகவதி...  இந்து : இது என்ன அஷ்டோத்திரமா? சகஸ்ரநாமமா?  பகதுர் : இல்லை .... வந்து ...  இந்து : என்ன இல்லை. பாலாஜி கற்றுக் கொடுத்த பஜனையோ? ஏன் மறைக்கிறீர்? எனக்கும் இஷ்டம்தான் கூறும்.  பகதூர் : இந்து!  இந்து : ஏன்?  பகதூர் : ஒன்றுமில்லை .  இந்து : அவர்கள் போய்விட்டார்கள் என்று பயமா? பயப்படாதீர்கள். நான் பகலிலே இப்படியே தானிருப்பேன். பாதி ராத்திரியிலேதான் …  பகதூர் : பாதி ராத்திரியிலே என்ன இந்து அது?  இந்து : ஏன் உங்களுக்குத் தெரியாதா? பாலாஜி சொல்லவில்லையா?  பகதூர் : என்ன இந்த விஷயம் எனக்கு ஒன்றும் தெரியாதே  இந்து : தெரியாதா? விளையாடுகிறீர். தெரியாமலா இருக்கும். தெரிந்துதான் இருக்கும். பாலாஜி சொல்லி இருப்பாரே.  பக : அந்தப் பாழாய்ப்போன பாலாஜி ஒன்றுமே சொல்லவில்லையே. பாதி ராத்திரியிலே என்ன நடக்கும்? சொல்லேன்..  இந்து : சொல்ல முடியாது. சொன்னால் நீங்களும் என்னைக் கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லி விடுவீர்கள். பக : எனக்கொன்றும் விளங்கவில்லையே!  இந்து : நான் அழகாக இருக்கிறேனா, இல்லையா? பக : எது போல இருக்கிறாய் இந்த ; இருக்கிறேனல்லவா? நடுஜாம் மணி அடித்ததும் … பக : அடித்ததும்  இந்து : ஊகூம்.. நான் சொல்ல மாட்டேன்.  பக : நான் சாந்தாஜியைக் கூப்பிடுகிறேன். எனக்கு இங்கிருக்கப் பிடிக்கவில்லை.  இந்து : ஏன் வந்தீர்கள்?  பக; அதுவா இந்து? நான் உன்னைக் காதலிக்கிறேன்.  இந்து : காதலியுங்களேன். அதனால் என்ன?  பக: உன்னுடைய அழககைக் கண்டு...  இந்து : மயங்கிவிட்டிருப்பீர்கள்.  பக : இல்லை ! அழகைக் கண்டு, அன்பு கொண்டு, உன்னைத் தவிர வேறொரு மங்கையைக் கனவிலும் கருதுவ தில்லை என்று தீர்மானித்து விட்டேன். முக்கனியே! சக்கரையே! தேனே பாலே! உன்னை நான் என் உயிர் போலக் காதலிக்கிறேன். இந்து இவ்வளவுதானா? இன்னும் ஏதாவது உண்டா? பக: இந்தச் சோலையிலே இந்து மாலையிலே உலாவுகிறோம். பக , என்னைக் கணவனாக ஏற்றுக் கொள்ளச் சம்மதமாக் கண்ணே ?  இந்து : எனக்குச் சம்மதந்தான். வேறு யார் இவ்வளவு தைரியமாக என்னைக் கல்யாணம் செய்து கொள்ள முன்வருவார்கள்? பக : சுந்தரி ! சுகுந்தா சுகுணவதி சுப்ரதீபா! உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள மன்னாதி மன்னர்கள் மண்டியிடுவார்களே. அப்படியிருக்க தைரியம் என்ன தேவைப்படுகிறது?  இந்து : மறந்துவிட்டீரோ? பாதி ராத்திரியிலே...  பக : ஐயோ! பாதி ராத்திரியிலே என்ன?  இந்து : என்னவா? பாதி ராத்திரியிலே, நான் பாதி உடல் புலியாக மாறுவேன்.  பக : ஐயையோ! இந்து : அது தெரிந்துதான் என்னை யாரும் கல்யாணம் செய்து கொள்ள முன்வரவில்லை. நானும் உம்மைக் காதலிக்கிறேன். (பகதூர் பயந்து 'புலி, புலி' என்று ஒட, மோகன் வர, சாந்தாஜி, பாலாஜி வருதல்)  இந்து : விருந்து முடிகிற நேரத்திலே வந்தீரே.  மோகன் : இந்து! பகதூர் பாக்யசாலி! மராட்டிய மண்டலத்திலேயே இப்போது இப்படித்தான் யார் யாருக்கோ எதிர்பாராத யோகம் அடிக்கிறது. மந்தியிடம் மலர் மாலையைத் தருகிறார்கள். தாமரைத் தடாகத்திலே எருமை தாண்டவமாடுகிறது.  சாந் : மோகனா! என்னடாப்பா, சந்தோஷமான நாளிது. சச்சரவு செய்யாதே.  மோகன் : சச்சரவா? சேச்சோ எப்படிப்பட்ட இன்ப நாளிது. ஸ்ரீமதி இந்துமதிக்கும் ஸ்ரீஜத் பகதூருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படும் நன்னாள். வீர, தீரமுள்ள பகதூரை விவேக சிந்தாமணியாம் இந்துமதி அம்மையார் பராக்கிரமம் மிகுந்த பாலாஜியின் முன்னிலையில், சகல கலா பண்டிதர் சாந்தாஜி ஆசிர்வாதத்துடன் மணாளராகத் தேர்ந்தெடுக்கும் மங்களகரமான மாலை ; சுயம்வர வேளை. இந்து : கேலி செய்தது போதும். உங்களுக்கு ஒரு துண்டு இரும்பினிடம் இருக்கும் பற்றை விட இது ஒன்றும் கேலிக்கிடமான விஷயமில்லை.  சாந் : அப்படிக் கேள் இந்து, அப்படிக் கேள். இன்னொரு தடவை கேள். ஒரு பெண்ணின் பிரேமைக்காக ஒரு வாளைத் துறந்துவிடக் கூடாதா என்று கேள்.  மோகன் : இந்து உன்னை இதுவரை அறிந்து கொள்ளாதது என் குற்றம் தான். பகதூருக்கு ஏற்றவள் தான் நீ. அவன் வாள் ஏந்தமாட்டான். வாள் ஓர் இரும்புத் துண்டு அல்லவா? பேஷ் இந்து சுதந்திரப் போருக்காக நான் ஏந்தும் வாள் ஒரு இரும்புத்துண்டு அல்லவா? எவ்வளவு அற்புதமான அறிவு உனக்கு. வலியோர் எளியோரை வாட்டும் போது, நீதியை நிலைநாட்ட நான் வீசும் வாள் ஒரு இரும்புத்துண்டு . வீழ்ச்சியுற்ற இனத்தை மீண்டும் எழுச்சி பெறச் செய்வதற்காக விளங்கும் வாள் ஒரு இரும்புத்துண்டு. வீரம், நாட்டுப்பற்று இரண்டு மற்ற நீ, இத்தனை நாட்களாக என்னிடம் உண்மையான காதல் கொண்டதாக நடித்து, ஆயிரம் தடவை 'அன்பரே! அன்பரே!' என்று அர்ச்சித்து என்னிடம் இருக்கும் பிரேமைக்காக எந்தக் கஷ்ட நஷ்டத்தையும் ஏற்றுக் கொள்ளத் தயார் என்று சத்தியம் செய்து கொடுத்து, உன் வஞ்சகத்தால் என்னைப் பித்தனாக்கி, இன்று பணத்தாசை கொண்டு படாடோபத்தில் ஆசை வைத்து, பகதூரைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்த நீ, ஒரு மாமிசப்பிண்டம். இதோ, ஒரு எலும்புக்கூடு . உனக்கேற்ற மணாளன். இவன் கையிலே அந்த இரும்புத்துண்டு இல்லை ; இவனுடன் கூடி வாழ்.  (போகிறான். பகதூரும் பாலாஜியும் போகின்றனர்.)  இந்து : அப்பா! உங்களால் வந்தது இவ்வளவும், அவர் இனி என்னை ஏறெடுத்துப் பார்க்கமாட்டார். ஐயோ! நீங்கள் இந்த விபரீதமான விளையாட்டை ஏன் ஏற்பாடு செய்தீர்கள்? அவருக்கு என் மீது வீணான சந்தேகம் ஏற்பட்டு விட்டதே. நானும் துடுக்குத் தனமாகப் பேசி விட்டேன். அவர் எவ்வளவு கோபமாகப் போய்விட்டார் பார்த்தீர்களா? நான் என்ன செய்வேன். சாந் : கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது போல் ஆகிவிட்டது. இனிமேல் நான் என்ன செய்வேன்? அந்தப் பாலாஜி யோசனையால் கெட்டேன்.  இந்து : அப்பா! ------------                         காட்சி - 20 இடம் : : இந்துமதி தனிஅறை உறுப்பினர்கள் : இந்துமதி.  இந்துமதி தனிமையில் சோகமாய்ப் பாடுகிறாள்) -----------------                                                        காட்சி - 21 இடம் : தர்பார்  உறுப்பினர்கள் : சிவாஜி, மோகன், தளபதிகள், வீரர்கள்.  (கோட்டை உடைத்தல்)  1. தள : காகப் பட்டரின் மறுமொழி கிடைத்துவிட்டதாமே? சாஸ்திர சம்மதம் பெற்ற மார்க்கம் இருக்கிறதாமே?  சிவாஜி : ஆமாம்! சூத்திரனை க்ஷத்திரியனாக்குகிறாராம். அதற்கு ஒரு சடங்கு இருக்கிறதாம்.  மோகன் : பறவைக்கு இறக்கையை ஒட்டிவிடப் பார்க்கிறார்கள். சூட்சி பலித்துவிட்டது.  சிவாஜி : இதிலே சூட்சி என்ன இருக்கிறது? அவர்கள் சாஸ்திரத்தைத் தானே கூறுகிறார்கள்?  மோகன் : ஆமாம்! சாஸ்திரத்தை தான். ஆனால் யாருடைய சாஸ்திரம்? எதிரிகளிடம் இந்த நாடு சிக்கிய போது, அந்த சாஸ்திரம் உதவவில்லையே? யாரும் அதன் துணையைத் தேடவில்லையே? கங்கைக் கரைக்கா ஓடினோம். களத்திலே என்ன செய்வது, எப்படிப் போரிடுவது என்று கேட்க ? மராட்டியரின் தோள் வலிமையும், அவர்கள் ஏந்திய வாளின் கூர்மையும், அப்போது தேவைப்பட்டது. இப்போது மன்னர்களை மண்டியிட வைத்த மாவீரனுக்கு சாஸ்திரத்தைக் காட்டுகிறார்கள். சாஸ்திரத்தை ! 1. தள : அதைத் தவிர வேறு வழி காணோமே?  மோகன் : எங்கே போக வழி வேண்டும் தோழரே? வீரபுரிக்கு மார்க்கம் வெகு தெளிவாக இருக்கிறது. விவேக புரிக்கும் அப்படித்தான். ஆனால் வைதீகபுரிக்குத் தான் - வளைந்த பாதை இருக்கிறது. 1. தள : காகப்பட்டர் நமது தலைவரை க்ஷத்திரியராக்க இசையும் போது, நமக்கென்ன கஷ்டம்? சிக்கல் தீர்ந்து விட்டது என்றல்லவா தெரிகிறது.  மோகன் : அதை நான் மறுக்கிறேன் மாதவரே! பலமாக மறுக்கிறேன். சிக்கல் தீரவில்லை ; சிக்கல் பலமாகிறது. வீர சிவாஜியின் வெற்றிகள் அத்தனையும் வீண் என்பதை நாம் பிற்காலச் சந்ததிக்குச் சாசனமாக்கு கிறோம். போரிலே புலியாக இருந்தார். ஆனால் வைதீ புரியிலே சிக்கினார் சிவாஜி என்று வருங்காலத்தில் மக்கள் கூறத்தான் போகின்றனர். நெடுங்காலத்துக்குப் பிறகும் போரிடவோ, ஆளவோ, உழைக்கவோ, ஊருக்கு உதவி செய்யவோ, வீரமோ, தீரமோ , தகுதியோ, திறமையோ அற்றக் கூட்டம் பெருமையுடன் தலை நிமிர்ந்து கூறத்தான் போகின்றது. மாவீரன், மராட்டியம் பெற்றெடுத்த தீரன், களத்திலே சூரன் சிவாஜி. ஆனால் எமது காக்கப்பட்டரிடம் அடைக்கலம் புகுந்த பிறகே அரியாசனம் ஏற முடிந்தது. எமது ஆதிபத்தியத்தைப் பாரீர் என்று பேசத்தான் போகிறது. வீரத் தலைவனே! வேண்டாம் வேண்டாம். இந்த விபரீத காரியம். மராட்டியத்தின் மானத்தைக் காக்கத் தயங்காதீர். மணிமுடி தரிக்க உமக்கு எந்த ஜடாதரியின் தயவும் தேவையில்லை  சிவாஜி : தயவல்ல! ஆசீர்வாதம் தானே அது! அதைப் பெறுவதிலே இழிவு என்ன?  1. தள : சாஸ்திரப் பலத்தைத் தான் தேடுகிறோம்.  மோகன் : மகனை இழந்தாலும் மனம் தளராத மாதர்கள் மராட்டியத்திலே இருக்கிறார்கள். வீரர்கள் ஏராளமாக உள்ளனர். தியாகப் புருஷர்கள் இருக்கிறார்கள். இவர்களால் வரும் பலம் உங்களுக்குப் பலமாகத் தோன்றவில்லை. மகராஜ்! பச்சிளங் குழந்தைக்குப் பாடுவது போல் இருக்கிறது தங்களுடைய வாதம். காகப்பட்டர் தங்களைச் க்ஷத்திரியராக்குகிறார். தாங்கள் தோன்றிய திருக்குலத்தையல்ல. அந்தக் குலம் என்றும் சூத்திரக் குல மாகவே இருக்குமே. தங்களை எங்களிடமிருந்து பிரித்து விடுகிறார். தாங்கள் பிறந்த குலம் தாழ்ந்தது. நாடாளத் தகுதியற்றது என்று தாங்களே ஒத்துக் கொள்ளும்படி சொல்கிறார்.  பெற்ற தாயைப் பிச்சைக்காரியாக்கிவிட்டு, மகன் பெருநிதி பெற்று வாழ்ந்தால் அவனை பெரியோன் என்று பேதையும் கூறானே. குடியானவர் குலத்துக்கு என்ன மாசு? நமது குலத்தைக் குறை கூறும் ஏட்டை நாம் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும், இன்று அவர்கள் காட்டும் ஏட்டின் துணைகொண்டு, நாம் நாட்டை மீட்டிருந்தால் அதற்கு நாம் மதிப்பளிக்கலாம். எதிரிகள் நம்மைத் தாக்கிய போது அந்த ஏடு கேடயமாக இல்லை, வாளாக இல்லை, வாளையிடும் உறையாகக் கூடப் பலனளிக்க வில்லையே! ஏன் அந்த ஏடு மகராஜ்?  சிவாஜி : சந்திரமோகன்! ஆரியர்களின் அபிப்பிராயப்படி நடப்பதால் நீ இவ்வளவு அதிருப்தி கொள்ளலாமா? நானும் முதலிலே கோபித்துக் கொண்டேன். ஆனால் இப்போது காக்கப்பட்டரின் யோசனை இருதரப்பா ருக்கும் திருப்திகரமாக இருக்கிறது என்றே எண்ணுகிறேன். சாஸ்த்திர சம்பிரதாயமும் நிலைக்கும். உன் போன்ற உள்ள தோழர்களின் அபிலாஷையும் நிறைவேறும்.  மோ : மராட்டியத் திலகமே மன்னிக்க வேண்டும். நான் வெற்றி வீரன் சிவாஜி ஆவதை விரும்பி வந்தேனே ஒழிய, ஆரிய தாசனான பிறகு அரியாசனம் ஏறும் துர்ப்பாக்கிய காட்சியைக் காண வரவில்லை. மகராஜ் ஆரிய சிரேஷ்டர் என்று அர்ச்சிக்கிறீர், ஒரு ஆற்றலற்ற கூட்டத்தை பார்ட்டாரி தேசத்துப் புரவிகள் மீதமர்ந்து. தகதகவெனும் கவசம் பூண்டு, பளபளக்கும் கடகம் ஏந்தி, போர்க் குணம் படைத்த மக்கள் இங்குப் புயலெனக் கிளம்பிய பொழுது, காய்ந்த புல்லைக் கையிலேந்தி திரிந்த கூட்டம் என்ன செய்தது? தாங்கள் யார்? தங்களுடைய வீர தீரம் எத்தகையது? தாங்கள் எங்கள் கண்களுக்கு மராட்டிய நாட்டிலே மார்தட்டி நின்று, மகத்தான போராட்டங்களை நடத்திய மாவீரராக காட்சியளிக்கிறீர். கட்கமெடுத்து, புரவி மீதேறி, காடு மலை கடந்து சென்று, கடும் போரிட்ட வீரன். ஆனால் அவர்கள் கண்களுக்கு ஒரு சூத்திரராகத் தெரிகிறீர். கண்ணிலும், கருத்திலும் கடும் விஷம் இருக்கிறது காவலா! மராட்டிய மண்டலத்தைக் கமண்டல நீர் தெளித்து அவர்கள் உண்டாக்கவில்லை. மராட்டியரின் ரத்தத்தைச் சிந்தி இந்த மண்டலத்தைப் பெற்றோம். யாக . குண்டத்தின் விளைவல்ல மராட்டியம். தியாகத் தயிலே தோன்றிய தேசம். இந்த வேலையை வேதம் ஓதும் அவர்கள் செய்யவில்லை. நாம் செய்தோம்; நம்மை நிந்திக்கிறார்கள், சூத்திரர்கள் என்று. அதை நாம் ஏற்றுக் கொள்வதா, மன்னா! இது நமது வீழ்ச்சியின் அறிகுறி என்பேன்.  2. தள : தளபதிகளே ! மராட்டிய மண்டலத்திற்கு ஒரு மன்னன் தேவை. மக்களின் விருப்பம் மட்டுமல்ல, பரத கண்டம் முழுவதும் இதே பேச்சாக உள்ளது. ஆகவே நாம் சில்லறை விஷயங்களைப் பேசிக்கொண்டு சிக்கலை வளர்த்துக் கொள்வது நல்லதல்ல. காகப் பட்டரை வரவழைத்து, அவர் கூறும் சடங்கு செய்து, நமது தலைவரை முடிசூட்டிக் கொள்ளச் செய்வதே முறை.  மோ : தளபதிகளே! மிக மிக சாமான்யக் குடியிலே பிறந்த சிவாஜி. ஒரு பெரிய அரசை, மராட்டிய சாம்ராஜ் யத்தைத் தன் தோள் வலிமையால் கண்டார். அவரது மின்னும் வாள் ஒளி வீசாத இடமில்லை . அவருடைய படையின் பரணி கேட்காத நாளில்லை. அவருடைய கண்ணோட்டம் அடிமைத்தனத்தைப் போக்கிற்று காடுகளிலே கூடாரங்கள், மலைகளிலே கோட்டைகள், குகைகளிலே பாசறைகள். யாரால் ஏற்பட்டன? நமது இனத்தின் பங்கத்தைப் போக்கிய சிங்கத்தால், அந்தச் சிங்கம் சிலந்திக் கூட்டிலே பக்குவதா? ஈட்டிக்கு மார்பு காட்டுகின்ற இணையில்லா வீரன், உலர்ந்த சருகு கண்டு உடல் துடிக்க நிற்பதா? மார்பு வாள் வடுவுடன் விளங்க, மராட்டியத்திலே மண்ணோடு குருதி கலந்து குழைய, மராட்டியக் குடும்பங்களிலே தாய்மார்கள் கோவெனக் கதற, போரிட்டு நிறுவியது மராட்டிய சாம்ராஜ்யம். மலை, காடு, நதி, படை எதுவும் தடுக்கவில்லை சிவாஜியை! ஆனால் ஆரியர்கள் தடுக்கின்றனர். எவ்வளவு விசித்திரம். வேதனை தரும் விசித்திரம். கூண்டிலே சிக்கிய புலி, தூண்டிலிலே சிக்கிய மீன், வலையிலே வீழ்ந்த மான், வர்ணாஸ்ரமத்திலே வீழ்ந்த வீரன் - இந்த வேதனை தரும் காட்சியையா நான் காணவேண்டும்? ஐயோ, மராட்டியமே! உன் நிலை இப்படியா குலைய வேண்டும்? ஒரு சிறு கூட்டத்திடம் சிக்கிச் சீரழிகிறாயே. சிவா : மக்களின் மனப்போக்கைக் கவனிக்க வேண்டாமா?  மோ: மக்களின் மனம்! தாங்கள் வீரமாகக் கிளம்புவதற்கு முன்பு மக்களின் மனம் இனி என்றென்றும் நாட்டிற்கு விடுதலை கிடையாது; விடுதலை பெற முடியாது என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தனர். போரிடக் கிளம்பிய நீர், புதுமையைக் கண்டீர். கோழையும் வீரனானான் ; கோட்டைகள் தூளாயின; கொட்டினோம் வெற்றி முரசு, பறக்கிறது, சுதந்திரக் கொடி கொடி. சிவா : மோகனா! காகப் பட்டரின் யோசனையை மறுத்தால், என்ன நேரிடும் என்பதை எண்ணிப் பார்க்காமலே பேசுகிறாய் .  மோ : என்ன நேரிடும்? காகப்பட்டர் தமது ரத, கஜ, துரக பதாதிகளுடன் மராட்டியத்தின் மீது படையெடுத்து விடுவார். நாம் அவரது அசகாய சூரர்களால் தோற்கடிக்கப் பட்டு விடுவோம்! அதுவா சத்திரபதி தங்கள் சிந்தை கலங்குவதற்குக் காரணம்?  சிவா : மோகன்! நீ என்னைக் கேலி செய்கிறாய்! நான் நெடுநேரமாக உனது பேசுக்கு இடமளித்து வந்தேன். இனி வாதிடப் போவதில்லை. நான் காகப்பட்டரை வரவழைப்பதென்று தீர்மானித்து விட்டேன். தீர யோசித்துத்தான் இந்த முடிவுக்கு வந்தேன். இனி நீ போகலாம்; காகப்பட்டரை வரவழைக்க ஏற்பாடுகள் தயாராகட்டும். (மோகன் தலை குனிந்து நிற்கிறான். சபை கலைகிறது. மோகன் போகிறான். சிவாஜி உலவியப்படி) சந்திரமோகன் கூறுவது அவ்வளவும் உண்மைதான்!  (கோட்டைகளைப் பார்த்து) அதோ தோர்ணா, அந்தக் கோட்டையைப் பிடிக்க நடந்த பயங்கரச் சண்டையை நினைத்துக் கொண்டால், ஆபத்தைத் துரும்பாக எண்ணிய சிவாஜியின் நிலைமையை இன்றைய நிலையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்.....? எனக்கே வெட்கமாகத்தான் இருக்கிறது. சத்திரபதி இந்தக் கணவாயின் பக்கம் போகக்கூடாது. ஏன்? எதிரியின் படை பலம் அதிகம். கோழைகள் விலகட்டும், வீரர்கள் பின் தொடரட்டும். கொட்டு முரசு என்று உத்தரவிட்டுப் பாய்ந்து சென்று வெற்றி பெற்ற புரந்தர். எதிரியே ஆச்சரியம் அடையும்படியான அபார வீரத்துடன் வெற்றி பெற்ற ராஜகிரி, மராட்டிய கீர்த்தியின் உறைவிடம் போலுள்ள கல்யாண்... கோட்டைகள் வெற்றியின் சின்னங்கள் : வீரத்தின் அறிகுறிகள்; அந்த சிவாஜியா நான்? அஞ்சா நெஞ்சன் எங்கே? பஞ்சையிடம் பணியப்போகும் நான் எங்கே ? ஒழிந்தது. அந்த சிவாஜி மங்கிவிட்டான். எதற்கும் அடிபணியும் சிவாஜி உலாவுகிறான். தோர்ணா! புரந்தர்! ராஜகிரி! என் கண்முன் இருக்க வேண்டாம். (கோட்டைகளை உடைத்து )  சிதறுகின்றன சிறுசிறு துண்டுகளாக. வீரத்தின் சின்னங்கள். என் மனக்கோட்டை பொடிப் பொடியாகிறது.  (மெளனமாக உலவிவிட்டு) சந்திரமோகா! நீ எல்லாம் அறிந்திருக்கிறாய் வெட்டு ஒன்று; துண்டு இரண்டாகப் போகிறாய்; வீரன். ஆனால் என் நிலையை மட்டும் உணரவில்லை. ஒரு வினாடியில் காகப் பட்டர் வேண்டாம், மகுடாபிஷேகம் இன்று நடக்குமென்று உத்தரவு பிறப்பித்து விடலாம். மராட்டியம் மறுக்காது. ஆனால் மறுகணம் முதல் என்ன நடைபெறும்? இந்த மண்டலத்திலும், வேறு பல மண்டலங்களிலும் ஆஸ்ரமவாசிகள் ஆரம்பிப்பார் தமது பிரச்சாரத்தை. 'மராட்டிய மண்டலாதிபதி சாஸ்திர விரோதி! சம்பிரதாய வைரி! சனாதனத்தைக் கெடுத்தவன்! அவனுடைய ராஜ்யம் பாவ பூமி!'என்று கூறுவர். அவர்கள் பூதேவர்கள்! மக்கள் அப்படித்தானே எண்ணுகிறார்கள். அந்த மக்கள் பிறகு மராட்டிய மண்டலத்தை உள்ளிருந்து கெடுத்துவிடுவர். நான் இன்று பட்டாச்சாரிக்குப் பணியாவிட்டால், அந்தப் பாதகர்கள் பாமரரை நாளை என் மீது ஏவிவிடுவர். மராட்டியனைக் கொண்டே மராட்டியனை அழிப்பர். பரத கண்டம் முழுவதும் 'சிவாஜி நீச்சன், சாஸ்திர சம்மதமில்லாது ராஜ்யம் ஸ்தாபித்தான். அவனுக்குச் சர்வ நாசம் சம்பவிக்கும். - இமயம் முதல் குமரி வரை எனக்கு எதிர்ப்பு, ஏளனம் கிளம்பும். என்ன செய்வேன்? மராட்டியத்தை அவர்கள் சும்மா விட மாட்டார்களே. ஒருபுறம் வெளிநாட்டார் எதிர்ப்பு ; வேறொரு புறம் வேறு வேந்தர்களின் எதிர்ப்பு! மராட்டியத்திலேயே எதிர்ப்பு. எத்தனை கணைகளைத்தான் மராட்டிய மாதா தாங்குவாள். மோகன் நான் பணிந்துதான் ஆகவேண்டும்; வீழ்ச்சிக்குத் தான்! ஆனால் வேறு வழியில்லை; வேறு வகையில்லை. ----------                                                      காட்சி - 22 இடம் : ஆஸ்ரமம்  உறுப்பினர்கள் : காகப்பட்டர், ரங்கு பட்டர்.  காகப் : காடு, மேடு என்று பாராமல் களத்திலே நின்று போரிட்டான். ஆனால் நமது காலடியில் வீழ்ந்தால் தான் ராஜ்யம் அவனுக்கு ரங்கு என்னடா சொல்றே இப்போ?  ரங்கு : சொல்றதா? ஆனந்தத் தாண்டவமாடலாமான்னு - தோன்றது, குருதேவா. நினைக்க நினைக்க நேக்கு ஆச்சர்யமாய் இருக்கு. புனா எங்கே இருக்கு ? காசி எங்கே இருக்கு? மண்டலம் அங்கே இருக்கு. ஆனா அதை ...  காகப் : பரிசுத்தமாக்க இங்கே நம்மிடமிருக்கும் கமண்டல தீர்த்தம் தேவைப்படுகிறது.  ரங்கு : ஆச்சர்யமா இருக்கு ஸ்வாமி!  காகப் : ஆரிய யோகத்தின் அற்புத சக்தியைப் பாரடா அசடே  ரங்கு : ராஜ்யம் சம்பாதிக்க அவன் பட்டபாடு எவ்வளவு? கொட்டிய ரத்தம் எவ்வளவு?  காகப் : மாவீரன்! மராட்டியத்தைப் பிழைக்க வைத்த வீரன் என்று மண்டலமெல்லாம் புகழ்கிறதாம் அவனை . அவன், அசட்டு ரங்கு அந்த வெற்றி வீரன் இந்த வேதிய குலத்தினிடம் தஞ்சம் புகுந்தாக வேண்டி வருகிறது. தெரிந்து கொள்ளடா தெளிவற்றவனே. ரங்கு : ஆமாம் ஸ்வாமி! அவன் வீராதி வீரனாகத் தான் இருக்கிறான். என்றாலும் அவனை நம்முடைய ஆரிய சோதறாள் எதிர்க்கிறாளே, தெரியுமா!  காகப் : ஏண்டா தைரியம் வராது? பைத்தியமே! எவ்வளவு பெரிய வீராதி வீரனாக இருந்தாலும், சிவாஜியாகட்டும், வேறே எந்த ஜீயாகட்டும் மனிதன்தானே? நாம் பூதேவாடா பூதேவா! மனிதர்களுக்கு மேம்பட்டா . அதுதானே சாஸ்திரம். அந்த சாஸ்திர பலம் இருக்கும் போது எப்படிப்பட்ட சூராதி சூரனையும் ஏன் நாம் எதிர்க்க முடியாது?  ரங்கு : சூட்சம பலம் இருக்கு ஸ்வாமி நம்மிடம்.  காகப் : சந்தேகமென்ன? நால்வகைச் சேனைகள் உண்டு, அவனிடம், சிவாஜியிடம் ; நம்மிடம் நாலு வேதங்கள். அஸ்திர சாஸ்திரம் அவனிடம் ; ஆகம சாஸ்திரம் நம்மிடம் . வாள் ஏந்துகிறான் அவன்! கூர்மையான வாள்; கேவலம் புல்லைத்தான் ஏந்துகிறோம் நாம். உலர்ந்து போன புல்லடா, புல். ஆனால் பாரடா மண்டூ ! புல் ஏந்தியின் ஆசி கிடைத்தால்தான் அவன் பூபதி ஆக முடியும். பூகரரிடம் ஒலையனுப்பினேன் முதலில், சம்மதம் தர முடியாது பட்டாபிஷேகத்திற்கு என்று.  ரங்கு : ஆமாம் நானும் கூட கொஞ்சம் பயந்துதான் போனேன். உம்முடைய சம்மதம் கிடைக்கப் போனா என் தலையிலே கிரீடம் ஏறாமலா போகும்னு கோபமாகப் பேசிவிட்டு, எங்கே அவர் மகுடாபிஷேகம் செய்துண்டுடறாளோன்னு நினைச்சேன்.  காகப் : முடியுமா? அப்படி அவர் துணிஞ்சி செய்றதுன்னு ஆரம்பிச்சா நம்ம படைகள் சும்மா இருக்குமா? ஏண்டா, பேந்தப் பேந்த விழிக்கிறே? நமக்கு ஏது மராட்டியத்தில் படையின்னு விழிக்கிறியா? படைன்னா நான் நம்ம ஆரியச் சோதராளைச் சொல்றேண்டா. அவா சும்மா விட்டு விடுவாளோ? பாவி நீசன் சண்டாளன் அப்படி இப்படின்னு கூச்சலைக் கிளப்பினான்னா, பரத கண்டமே பயத்தாலே கிடுகிடுண்ணு ஆடும்டா ஆடும் !  ரங்கு : அதனாலேதான் மறுபடியும் தூதுவனை அனுப்பினா உம்மிடம். காகப் : நானும் இதற்குள் கொஞ்சம் தீர்க்கமா யோசித்துப் பார்த்தேன். இந்தப் பட்டாபிஷேகத்திற்குச் சம்மதம் தந்து, கூட இருந்து காரியத்தைச் செய்தா விஷேசமான பலன் இருக்கு. பரத கண்டம் முழுவதும் நம்ம கீர்த்தி பரவும். அது சாதாரணம். நம்மவர் எங்கே இருந்தாலும் தலை நிமிர்ந்து நடப்பாளோண்ணோ ? மதிப்பு எவ்வளவு அதிகமாகும். அதைக் கணக்கிட்டுப் பார்த்ததாலே தான் நானும் சரி! பட்டாபிஷேகத்துக்குச் சம்மதிக்கிறேன்னு புதிய தூதுவன் நீலோஜியிடம் சொல்லி அனுப்பினேன். தெரிகிறதா?  ரங்கு : தெரிகிறது ஸ்வாமி தெரிகிறது. ஆனால் திகிலும் பிறக்கிறது.  காகப் : திகிலா? ஏண்டா மண்டு, ஏண்டா திகில் ? ரங்கு : இந்தச் சூட்சமம் அவாளுக்கும் தெரிந்துவிடுமானால், நம்ம கதி என்னங்கிற திகில்தான். காகப் : வீண் பயம்டா உனக்கு நமது புராண, இதிகாசாதிகளை , நீ சாமான்யமானவைன்னு எண்ணிண்டிருக்கே. டே ரங்கு அவைகளுக்கு ஜீவன் உள்ள மட்டும், நாம் என்ன சொன்னாலும் இவர் கேட்பா என்ன செய்தாலும் தகும். டே, ரங்கு சொன்னா உடனே காதிலே கேட்கப் பிடிக்காத, சகிக்க முடியாத விஷயங்கன்னு சில உண்டோ , இல்லையோ.  ரங்கு : சிலவா? பல உண்டு ஸ்வாமி!  காகப் : உதாரணமாக... பஞ்சமா பாதகம் இருக்கு.  ரங்கு : ஆமாம்! கொலை, களவு, கட்குடி, சூதாட்டம். காகப் : ஆமாண்டா என்னடா நேக்குப் பாடம் சொல்ல ஆரம்பிக்கிறே? இவைகளைக் கேட்டாலே பதறுவா. பழிப்பா, இகழுவாளோண்ணோ ?  ரங்கு : ஆமாம் நம்ம சாஸ்திராதிகளும் பஞ்சமா பாதகங்கள் கூடாதுண்ணுதான் சொல்லிண்டு வர்றது.  காகப் : சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. சாமான்யருக்கும் தெரியும். ஆனா டே, ரங்கு குரு பத்தினியைக் கெடுத்த சந்திரன். ரிஷி பத்தினியைக் கெடுத்த இந்திரன், விருந் தையைத் தேடிக் கொடுத்த விஷ்ணு, சப்த ரிஷிகளின் பத்தினிமார் மீது மோகம் கொண்ட அக்கினி, மகளை மனைவியாக்கிக் கொண்ட பிரம்மா, தாரகா வனத்து ரிஷிப் பத்தினிகளைக் கொடுத்த சிவன் - இப்படித் தேவர் மூவரைப் பற்றிக் கூறப்பட்டிருக் கேல்லோ – பஞ்சமா பதாகத்திலே லேசானவைகளா இவை?  ரங்கு : ஆமாம், ஸ்வாமி! சில சமயம் நேக்கு நெசமாகச் சொல்றேன். அதையெல்லாம் நெனைச்சுண்டா, சகிக்க முடியறதில்லே. நாக்கைப் பிடுங்கிண்டு சாகலாமான்னு தோன்றது.  காகப் : உனக்குத் தோன்றதுடா அப்படி. ஆனா மகா ஜனங்க என்ன சொல்றா? ஏதாவது பதைக்கிறாளா? பதற்றாளா? சேச்சோ இப்படிப்பட்ட பஞ்சமா பாதகம் செய்ததாகவா பகவானைப் பத்தின சேதிகள் இருப்பதுண்ணு கேக்கறாளா? கொஞ்சமாவது கூசறாளா?  ரங்கு : இல்லையே ஸ்வாமி அதுதானே ஆச்சர்யமா இருக்கு.  காகப் : எப்படிடா அவா பதற முடியும்? பகவானுடைய லீலா விநோதங்கள்ணு இவைகளைப் பத்தி புராணம் சொல்றது . புராணங்களை சிரவணம் செய்தாலே போற கதிக்கு நல்லதுண்ணா சாஸ்திரம் சொல்றது. அப்படி இருக்கும் போது எப்படிடா மகாஜனங்க இவைகளை ஏற்றுக் கொள்ளாமலிருப்பா? பார்த்தாயோ நமது புராணாதிகளுக்கு உள்ள சக்தியை. பஞ்சமா பாதகம் ததும்பும்டா கதைகளிலே ஆனா அவைகளைப் பஞ்சாமிர்தமா எண்ணிப் பருகுறாளோண்ணோ மகாஜனங்க? பார்க்கிறாயோண்ணோ .  ரங்கு : ஆமாம் ஸ்வாமி!  காகப் : அப்படி இருக்க, நம்ம புராணம், இதிகாச சாஸ்திரம் இவைகளெல்லாம் இப்படி இருக்கும் போது மராட்டிய மண்டலத்துக்கு மகாராஜனாக சிவாஜி நம்முடைய சம்மதம் கேட்காமல் இருப்பானோ? ஒவ்வொரு கோட்டையைப் பிடிக்கிற போதும் கொக்கரிச்சிருப்பா ஜெயவிஜீ பவ என்று. ஊர்களைப் பிடிக்கும் போது உற்சவம் நடத்தி இருப்பா. அந்தக் களிப்பினிலே களத்திலே பிணமான மகனைக் கூட தந்தை மறந்திருப்பான். ரத்தத்தை ஆறுபோல் ஓடவிட்டு, பிணங்களை மலை மலையாகப் போட்டு வெற்றி முரசு கொட்டியிருப்பார் சங்கம் ஊதியிருப்பா, ஜெயம் ஜெயம்ணு. அந்தப் பெரிய சாம்ராஜ்யத்தை ரங்கு, உன் குரு, படை எடுக்காமலே, இருந்த இடத்திலிருந்தே ஜெயித்து விடுகிறதைப் பாருடா. இது தானடா மண்டு ஆரிய யோகம்.  ரங்கு : இந்த அண்ட சராசரங்களிலே இதற்கு ஈடு கிடையாது குருதேவா.  காகப் : ஒரு பெரிய சாம்ராஜ்யாதிபதியை நான் விரும்பினால் பூபதியாக்க முடியும். எனக்கு இஷ்டமில்லேன்னா அவனையே பாபியாக்க முடியும். நீ. இந்த ஆரிய வாழ்வை அற்பமென்று கருதி ராஜயோகம் கேட்ட்டா யோடா ராஜயோகம் எத்தனை ராஜாக்கள் வேண்டுமடா, உனக்குப் பணிவிடை செய்யா? புறப்படு ரங்கு, மராட்டி யத்தின் மீது படையெடுப்போம். கட்டு மூட்டையை கொட்டு முரசை ; ஒஹோ இங்கே இல்லையா? அது சரி வா அங்கே போய் அவன் அரண்மனையிலேயே உள்ள முரசையே கொட்டுவோம். நம்ம ஜெயத்தைத் தெரிவிக்க நாம் சிரமப்பட்டுக் கொட்டுவானேன். அவர்களையே விட்டுக் கொட்டச் செய்வோம் புறப்படு.  -----------                                 காட்சி - 23 இடம் : வீதி உறுப்பினர்கள் : சிட்னீஸ், வீரர்கள்  சிட்னீஸ் : வீரர்களே! காசிவாசி காகப்பட்டருக்கு அமோகமான வரவேற்பு நடத்த வேண்டும், திருவிழா போல் இருக்க வேண்டும்; எங்கு பார்த்தாலும் மகர தோரணங்கள். கொடிகள் அசைந்தாடியபடி இருக்க வேண்டும் அவரை வரவேற்பு செய்வதைப் போல ஆலயங்களில் எல்லாம் பூசை! சத்திரம், சாவடிகளில்லெல்லாம் சமாராதனை நடத்த வேண்டும்.  1. வீர : தேவேந்திர பட்டணம் போல சிங்காரித்து வைத்திருக்கிறோம் நகரத்தை . சிட் : காகப்பட்டரின் வரவேற்பு வைபவத்திலே சங்கீத வித்வான்கள் இருக்க வேண்டும். கவிவாணர்கள் - இயற்றும் புதிய கவிதைகளை அவர்கள் இனிய இசையுடன் சேர்த்துப் பாட வேண்டும்.  2. சீர : குறைவில்லாதபடி ஏற்பாடு செய்துவிடுகிறோம்.  சிட்: முக்கியமான விஷயம். பிராமணர்களிடம் மிகவும் பயபக்தி விசுவாசத்துடன் மக்கள் நடந்துக் கொள்ள வேண்டும். அவர்கள் மனம் கோணும்படி யாரும் நடந்து கொள்ளக் கூடாது. வருகிறவன் காகப்பட்டர். ஆரியகுலத்தலைவர் ஆகவே ஆரியர்களிடம் தனியான அக்கரை அவருக்கு இருக்கும். அதை அறிந்து நடந்த கொள்ள வேண்டும்  1. வீர : ஆகட்டும் எங்களால் ஒரு தகராறும் வராது.  சிட : காகபட்டரின் மனம் மகிழ வேண்டும். மகுடாபிஷேகம் நடைபெற்று மாவீரன் சிவாஜி மகாராஜனானால்தான் மராட்டியமும் மகிழும் பரதகண்டமும் பூரிப்படையும். ஆகவே இந்த வரவேற்றைப் பொருத்திருக்கிறது. மராட்டியத்தின் எதிர்கால வாழ்வு. இதையறிந்து காரியங்களைக் கவனியுங்கள். போய்வாருங்கள். ---------------                          காட்சி - 24 இடம் : வீதி  உறுப்பினர்கள் : காகப்பட்டர், ரங்குப் பட்டர், வீரர்கள். கேசவப்பட்டர், பாலச்சந்திரப் பட்டர் வாத்திய கோஷ்டி  (கேசவப்பட்டரும், பாலச்சந்திரப்பட்டரும் எதிர் கொண்டு அழைக்கின்றனர். சீடர்கள் சாமரம் வீசுகின்றனர்) காசி வாசி காகப்பட்டருக்கு ஜே! குரு மகாராஜன் குணசீலன் காகப்பட்டிருக்கு ஜே சகல சாஸ்திர விற்பன்னர், வேத விற்பன்னர், வேதியகுல வேந்தர் காகப்பட்டருக்கு ஜே!' என்ற கோஷம்.  தளபதிகள் மாலை மரியாதையுடன் வருகின்றனர். மாலைகளிலே ரங்குப் பட்டர் கங்கா தீர்த்தம் தெளித்து, பிறகு? பிறகு ஏற்றுக் கொள்கிறார். தளபதிகள் பல்லக்கு அருகே சென்று வீழ்ந்து பணிகிறார்கள். ரங்கு அவர்களை விலக்கிச் செல்கிறார். தளபதிகள் பயபக்தியுடன் பின்னால் செல்லுகிறார்கள். மீண்டும் கோஷம் - ஊர்வலம் செல்லுகிறது. ஊர்வலத்தின் கடைசியிலே பதிகள் செல்கின்றனர். ---------------                                           காட்சி - 25 இடம் : தர்பார் உறுப்பினர்கள் : காகப்பட்டர், ரங்கு, பட்டர்கள், : தளபதிகள், வீரர்கள், சிவாஜி, மோரோபந்த், சிட்னீஸ்  (தளபதியிடம் )  காகப் : நாம் நமது சீடருடன் பேச வேண்டும். நீங்கள் போய் வெளியே இருக்கலாம்; பிறகு அழைப்போம். (தளபதி சென்ற பிறகு)  ரங்கு : இப்ப என்ன சொல்றே! நமக்கு நடக்கும் இந்த ராஜோபசாரத்தைப் பார். நமது பாதத்திலே வீழ்ந்து வணங்கினவா ஒவ்வொருவனும் சாமான்யனில்லை. அசகாய சூரர்கள். யுத்தத்திலே ஜெய வீராளா இருப்பவர். அவாளுடைய அதிகாரமும் கீர்த்தியும் அமோகம். ஆனால் நமது அடி பணிந்தார் பார்த்தாயல்லவா?  ரங்கு : தேவ தேவனைத் தொழும் பக்தனைப் போல் அல்லவா ஸ்வாமி அவர்கள் நடந்து கொண்டார்கள் ! காகப் : இதில் என்னடா ஆச்சரியம்? நாம் யார். பூதேவா! அவர்கள் சூத்திரர்கள். மனுவின் வாக்கியப்படி நமக்குச் சேவை செய்யவே பூலோகத்தில் பிறந்தவர்.  ரங்கு : மனு நமக்காகச் செய்திருக்கும் ஏற்பாடு மகா மகத்துவம் வாய்ந்தது.  காகப் : சந்தேகமென்ன. சரி இனி இந்தப் பிராயச்சித்தக் காரியப்படி இரண்டு முக்கிய விஷயங்கள் பூர்த்தியாக வேண்டும்.  ரங்கு : அவைகள்?  காகப் : ஒன்று வீராதி வீரனானாலும் விற்பன்னருக்கு அடங்கியே தீர வேண்டும் என்ற கொள்கையை நிலை நாட்ட வேண்டும். சிவாஜி என்னிடம் ஆசி பெற்று, அனுமதி பெற்று, அடிபணிந்த பிறகே சிம்மாசனம் ஏறுவான். ஆகவே அந்த அபிலாஷை சித்தியாகும்.  ரங்கு : மற்றொன்று?  காகப் : நமது ஆரியச் சோதறாளுக்கு இந்தச் சமயத்திலே கூடுமான சகாயம் செய்ய வேண்டும்.  ரங்கு : எப்படி ஸ்வாமி, அது சாத்தியமாகும்?  காகப் : எப்படி ஆகாமல் போகிறது பார்ப்போம். நீ போய் வெளியே இரு. அந்தத் தளபதியை வரச்சொல் (ரங்கு போகிறான்) (சிவாஜி வரக்கண்டு காகப்பட்டர்) அமருக! அஞ்சாநெஞ்சுடைய ஆரிய சேவா சிம்மமே, (சிவாஜி அமருகிறார்) நமது கட்டளையை ஏற்றுக் கொண்டது கண்டு சித்தம் களித்தோம். ஏனெனில் அந்தக் கட்டளையை மீறினால் இம்மையில் இம்சையும், மறுமையில் மாபாவமும் சம்பவிக்கும் என்று மாந்தாதா திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார்.  சிவா : ஆரியவர்த்தனா! என் பட்டாபிஷேக சம்பந்தமாக ஆட்சேபனை கிளம்பிய போது கிளம்பிய புயல் இன்னும் அடங்கவில்லை.  காகப் : புயலா? சனாதன சத்காரியத்தை எதிர்த்திட எந்தச் சண்டமாருதத்தாலும் ஆகாதே.  சிவா : தாங்கள் அறியமாட்டீர்கள். அந்தப் புயலின் வேகத்தை சூத்திரருக்கு நாடாள ஏன் உரிமையில்லை ? சாஸ்திரம் தடுப்பது ஏன் என்று கேட்கிறன்றனர். என்னோடு தோளோடு தோள் நின்று போரிட்ட வீரர்கள்.  காகப் : வீரர்கள் கேட்டனரா? பாவம்! அவர்கள் வீரர்கள் தானே? விவேகிகள் அல்ல பார்! சிவா : சூத்திரருக்குத் தாழ்நிலை தான் தர்ம சாஸ்திரத் தீர்ப்பா?  காகப் : இன்று நேற்று ஏற்பட்டதல்லவே. இகபர சுகம் இரண்டுக்கு மல்லவோ சாஸ்திரம். அது மனு, பராசரர், பாக்கிய வல்கியர் போன்ற ரிஷி ஸிரேஷ்டர்களின் பாஷ்யங்களோடு ஜொலிக்கின்றன.  ரங்கு : விளக்கமாகக் கூற வேண்டுகிறேன். சூத்திரருக்கு ஏன் தாழ்நிலை?  காகப் : (புன்சிரிப்புடன்) குழந்தாய்! நீ ஆகமத்தின் அடிச்சுவடையும் அறியவில்லையே. சிருஷ்டிகளின் கர்த்தா பிரம்மதேவன், பிரம்மதேவன் பிரபஞ்சத்தை கிருஷ்டித்தான். அயன் படைப்பு நாலு ஜாதி. நான்முகனுடைய முகத்திலே தோன்றியோர் முப்பிரி தரித்த பூசுரர். தோளிலே தோன்றியோர் க்ஷத்திரியர். வைசியர் தொடையிலே தோன்றினர். பிரம்மனனின் பாதத்தில் தோன்றியோர் சூத்திரர். பிரமகுலம் தேவ தாதராகவும், க்ஷத்திரிய குலம் அரச சேவை செய்துக் கொண்டும், வைசிய குலம் செல்வத்தைச் சேகரிக்கும் சேவை செய்துக் கொண்டும் வாழ வேண்டும். சூத்திர குலம் பிரம்ம குலத்துக்குத் தாசராகி சேவை செய்து வரவேண்டும். இது பிரம்மன் கட்டளை.  சிவா : காலிலே தோன்றியதாலா இந்தக் கடும் தண்டனை? காடு, மேடு திருத்திக் கழனியாக்கி நாடு வாழ நற்பணி புரியும் எங்களுக்கு?  காகப் : தண்டனை என்று கூறுவது தவறு; தீர்ப்பு! தேவ கட்டளை; ஆண்டவன் ஆணை; தேவ சாஸ்திர விதி ; குலதர்மம் . சிவா : நல்ல தர்மம்! நல்ல கட்டளை நல்ல ஆணை!  காகப் : சிவாஜி என்னிடம் தர்க்கிக்கவா துணிகிறாய்?  சிவா : நான் தர்கிக்கவில்லை; சந்தேக விளக்கம் கேட்டேன்.  காகப் : சாஸ்திரத்தை சந்தேகிப்பதே பாவம். தெரியுமா உனக்கு? அது கேவலம் நாஸ்திகாளின் செயல். நாஸ்திகளுக்கு என்ன நேரிடும் தெரியுமா? ரெளரவாதி நரகம் சம்பவிக்கும்.  சிவா : அது இறந்த பிறகுதானே?  காகப் ஆமாம் இங்கேயும் உண்டு இம்மை.  சிவா : நான் பாடுபட்டேன். அதன் பலனை அனுபவிக்க நினைப்பது தவறா? பாவமா? அரசு அமைத்தேன், வாள் பலத்தால் ஆள்வதற்கு மட்டும் ஆரிய பலம் வேண்டுமா என்று கேட்கின்றனர். காகப் : நீயேதான் கேளேன் அதனால் என்ன? சிவாஜி வீரன்தான், போர் பல கண்டவன் தான். எதிரியின் மண்டைகள் சிதற, மலைகள் அதிரபோரிட்டவன் தான். ஆயினும் என்ன? அவன் பூசுரனல்லவே. நமது மதக் கோட்பாட்டின் படி க்ஷத்திரியனே மன்னனாக முடியும். சூத்திர சிவாஜி எங்ஙனம் முடிசூட முடியும் என்று நான் கேட்டதாக நீ கேள்.  ஆட்சிக்கு வருவதென்பது அவ்வளவு கடினமானதல்ல. சதிபல் புரிந்து, வாரிசுகளைச் சிதைத்துப் பலர் மன்னராயினர். மன்னரை மயக்கி ஒழித்து, மந்திரிகள் பலர் முடி சூடினர். மன்னரையும், மந்திரியையும் ராணுவத்தைக் காட்டி மிரட்டி, படைத்தலைவன் பீடத்தில் அமர்ந்திருக்கிறான்.  சிவா : நான் சதி செய்தல்ல ராஜ்யம் பெற்றது. வீர வெற்றிகள் பெற்றிருக்கிறேன்.  காகப்: நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆகவே தான் சூத்திர குலத்தில் பிறந்தாலும் உன்னை க்ஷத்திரியனாக்கத் தீர்மானித்திருக்கிறேன். உனக்குப் பெருமை தந்தேன்.  சிவா : அந்தப் பெருமையை என் தளபதிகள் உணரவில்லை.  காகப் : சிவாஜி நீ க்ஷத்திரியனாக்கப்பட்டால் தான் பரத கண்டம் முழுவதும் உள்ள பிராமணோத்தமர்கள் உன்னை ஆசீர்வாதம் செய்வர். அந்த ஆசிர்வத பலம் இல்லாத அரசு ஆண்டவனால் அழிக்கப்பட்டு விடும். இதற்கு ஆதாரம் சாஸ்திரம். மூலம் வேதம், வேதம் அனாதி காலத்தது. தேவன் தந்தது. அதன் பாஷ்யம் கூறும். அருகதை பெற்றவரே ஆரியர். ஆரியர் தேவர். (சிவாஜி உல்லவ )  சிவாஜி சாஸ்திரத்தின்படி நடக்கச் சம்மதம் இல்லாவிட்டால் கூறிவிடும். என் காலத்தை வீணாக்காதே. எனக்கு வேலை இருக்கிறது.  சிவா : உமது யோசனையை ஏற்க மறுத்தால்? காகப் : யோசனையல்ல, கட்டளை ! சிவா : சிவாஜிக்கு கட்டளை பிறப்பிக்கும் துணிவு .. ! காகப் : ஆரியருக்கு உண்டு, அவர்கள் பூதேவரானதால்.  சிவா : கட்டளையை மறுக்க முடியும் என்னால். காகப் : முடியாது. மறுத்தால் முடி கிடையாது.  சிவா : முடியாதா? என்னால் முடியாதா? காகப்பட்டரே உற்றுப்பாரும், யார் என்று பாரும் ! காகப் : வீராதி வீரன் அதனால் என்ன? நீ சாஸ்திரத்துக்குச் சம்மதித்தே ஆகவேண்டும்.  சிவா : முடியாது என்றால் என்ன செய்வீர்?  காகப் : நானா! என்ன செய்வேன்? சரி என்று கூறி விட்டுப் போய்விடுவேன். ஆனால் முடியாது என்று சொல்லி வாய்மூடுமுன் தெய்வத்தின் சாபம் உன்னைத் தீண்டும்.  சிவா : என்னை மிரட்டுவது முடியாத காரியம். என் ராஜ்யத்திலே என் இஷ்டப்படி நடக்க எனக்கு உரிமை உண்டு.  காகப் : உண்மை உதாரணமாக நீ என்னைக் கொன்றுவிடக்கூட அதிகாரம் உண்டு. செய்து பார்.  சிவா : காகப்பட்டரே! சிவாஜியின் சித்தம் கலக்கத்தை அறியாதது. கொன்றால் என்ன நடந்துவிடும்?  காகப் : என்ன நடக்கும் என் உயிர் போகும். ஆனால் என் பிணம் வேகுமுன் உன் ராஜ்யம் சாம்பலாகும்.  சிவா : எவ்வளவு ஆணவம்? காகப் : யாருக்கு? (சிவாஜி மெளனமாக)  சிவா : என்னென்ன சடங்குகள் நடைபெறவேண்டும்? காகப் : பரத கண்டத்திலே பல பாகங்களிலிருந்து பிராமணோத்தமர்களை வரவழைத்துச் சமாராதனை நடத்தி தட்சணை தர வேண்டும்.  சிவா : சாஸ்திர விதிப்படிதானா அதுவும்?  காகப் : ஆம் தானாதி காரியமூலம் ஆசிர்வாதம் பெற உன் பாவத்தை நீ கழுவிக் கொள்ள வேண்டும்.  சிவா : பாவமா? எனக்கா? நான் வஞ்சிக்க வில்லையே. பொய்யனல்லவே. புரட்டனல்லவே?  காகப் : நீ பஞ்சமா பாதகத்திலே மிஞ்சியதாம் கொலை பாதகத்தைச் செய்தவன்.  சிவா : யாரை?  காகப் : களத்திலே பலரை.  சிவா : சரி! பிறகு நடக்க வேண்டியதைக் கூறும்.  காகப்: ஹோமம்,  சிவா : விறகு, நெய்.  காகப் : மலை உயரம் விறகு; மடு ஆழம் நெய்.  சிவா : பிறகு?  காகப் : துலாபாரம்  சிவா : துலாபாரமா?  காகப் : ஆம் உன் எடைக்கு எடை நவரத்தினங்கள், தங்கம், வெள்ளி முதலிய உலோகங்கள், பட்டு முதலியன நிறுத்தி தானம் செய்ய வேண்டும்.  சிவா : யாருக்கு? ஏழைகளுக்கா?  காகப் : இல்லை ... பிராமணர்களுக்கு.  சிவா : மராட்டியர் ராஜ்யம் சம்பாதிக்க உழைத்தனர்; பிராமணர்கள் பட்டாபிஷேக வைபவத்திலே உண்டு களிப்பதா? இது எந்த வகையான நியாயம்? காகப் : சாமான்யாளுக்கும் தெரியாத நியாயம் இது. இது நியதி. சாஸ்திரம்.  சிவா : இவைகளுக்குப் பிறகு?  காகப் : பூணூல் தரிக்கப்படும். பூபதி ஆகலாம். (ஆட்களை அழைத்து)  சிவா : இவர் கட்டளைப் படி நடவுங்கள்.  காகப் : சிவாஜி! நீ இன்றே புறப்பட்டுப் போய் திவ்ய க்ஷேத்திரங்களைத் தரித்து, ஆங்காங்கு அர்ச்சனைகள் செய்துவிட்டு வரவேண்டும். அதற்குள் நான் இங்கு ஆக வேண்டிய ஆரம்பச் சடங்குகளைச் செய்து வைக்கிறேன்.  சிவா : அவ்விதமே செய்கிறேன். திவ்ய க்ஷேத்திரங்களிலே என்னென்ன வகையான பூஜைகள் செய்ய வேண்டும்?  காகப் : பூஜைகள் இஷ்டம் போல் செய்யலாம். அந்தந்த திவ்ய க்ஷேத்திரங்களிலும் அனுஷ்டிக்க வேண்டிய பொதுவான ஒரு பூஜை முறை இருக்கிறது.  சிவா : என்ன ஸ்வாமி அது?  காகப் : பிராமணனுக்குத் தானம் செய்வது விட்டலன் கோயிலானாலும், விநாயகர் ஆலயமானாலும், வேலேந்தி கோயிலானாலும், திரிசூல் கோயிலானாலும், கோயிலுள்ள மூர்த்தியாக இருப்பினும் பிராமணனுக்குத் தானம் தர வேண்டும். கோயிலைப் பற்றிய வித்தியாசம் பார்க்காமல்,  சிவா : சென்று வருகிறேன். குருஜி...  காகப் : போய் வா போ போ , புண்ணியத்தைத் தேடு (சிவாஜி போகிறான்)  (சிவாஜி போன பிறகு ரங்கு வருதல்)  ரங்கு : குருதேவா! இந்த மண்டலத்துக்கு முதல் அமைச்சராம்! நம்மளவராம். தங்களைக் காண ... காகப் : அழைத்து வாயேண்டா நம்மவா வருவதற்குமா தடை? போடா! போய் அழைத்து வா! அப்படியே அங்கு - மிங்கும் உலவிக் கொண்டிருக்கும் வாள் தூக்கிகளை, சந்தடி செய்யாமல் சற்று தூரமாகவே இருக்கச் சொல்லு. அவர் ஏதோ அந்தரங்கமான விஷயந்தான் பேச வருவார்.  (ரங்கு மோரோபந்த்தை அழைத்துவர)  மோ : நமஸ்தே, குருஜீ! நமஸ்தே ! காகப் : வருக பிரதம மந்திரியாரே! அமருக இப்படி அருகில், அடே, ரங்கு! பாலும் பழமும்.  மோ : வேண்டாம் ஸ்வாமி! நான் வந்திருப்பது...  காகப் : முக்கியமான விஷயமாகத்தான் இருக்கும் என்று யூகிக்கிறேன்.  மோ : குருதேவா! இவர்?  காகப் : நமது சீடன்! பரம சீடன் தாராளமாகப் பேசலாம். மோ : தாங்கள் தயவு செய்து கோபியாமல் என் வார்த்தையைக் கேட்டருள் வேண்டும். சிவாஜியை க்ஷத்திரியனாக்க , மகுடாபிஷேகம் செய்ய தாங்கள் வந்திருப்பது அவ்வளவு உத்கிருஷ்டமான காரியம் அல்ல என்பது என் அபிப்பிராயம்.  காகப் : தீர்க்க ஆலோசனைக்குப் பிறகே வரச் சம்மதித்தேன். மோரோ பண்டிதரே ஏன் தாங்கள் கலங்கக் காரணம்?  மோ : இந்தப் பட்டாபிஷேகம் பாவ காரியம் என்று சொல்லி இந்த முயற்சியைப் பலமாக எதிர்த்தவன் நான்.  காகப் : அப்படியா, ஏன் ? மோ : சாஸ்திர விரோதம், புது சம்பிரதாயம் எதிர்கால ஆபத்து இந்த ஏற்பாடு என்பதால் தான். தாங்கள் அறியமாட்டீர்கள், மராட்டியத்தில் நடைபெற்று வரும் செயல்களை, பழைய ஐதீகங்களைப் பாழ்படுத்தும் ஓர் பயங்கர முயற்சியை சாது சன்யாசிகள் என்று பெயர் வைத்துக் கொண்டிருப்பவர்கள் செய்து வருகிறார்கள். இப்போது ஜாதி ஆச்சாரம், மத ஆச்சாரம் யாவும் நாசமாகும். அவர்கள் எண்ணத்தின்படி காரியம் நடைபெற்றால், தாங்கள் சூத்திர சிவாஜியை க்ஷத்திரிய சிவாஜியாக்கினால், அவர்கள் வீசும் வலையில் நாடு விழுகிறது என்றுதான் அர்த்தம். வைதீக மார்க்கம் மங்கி மடியும். ஆரிய குலோத்தமா! இந்த அக்கிரமத்துக்குத் தாங்கள் சம்மதிக்கலாமா?  காகப் : மோரோ பண்டிதரே என் சிந்தனையைக் குழப்பி விட்டீரே! நான் சிவாஜிக்கு முடி சூட்டுவதுதான் நமது சனாதன மார்க்கத்துக்குப் புதிய பலம் என்று எண்ணியல்லவா இதற்குச் சம்மதித்தேன். கற்பாதித்தேன். மோ : பொதுப்படையாகப் பார்க்கும் போது தாங்கள் சொல்வது சரி. ஆனால் மராட்டியத்தின் இன்றைய நிலையை மட்டுமல்ல; எதிர்காலத்தையும் பற்றிக் கவனிக்கும்போது –  காகப் : கவனித்தாக வேண்டுமே மோரோ பண்டிதரே! நாம் செய்கிற காரியம் காலா காலத்துக்கும் பலன் அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டுமே. ஆமாம், அவசரக் கோலத்தில் நாம் நடந்துக் கொள்ளக் கூடாதே. தாங்கள் சொல்லியிருப்பது புதியதோர் சிக்கல். நான் எதிர்பாராதது. மோ : சிவாஜி ராஜனாகட்டும். அதாவது, ராஜா வேலை பார்க்கட்டும். குருதேவா! ஆனால் அது அவனுடைய ஆற்றலுக்குக் கிடைத்த பரிசாக இருக்க வேண்டும். உரிமையாக்குவதும், தருமமாக்குவதும், வேத ஆகமச் சம்மதம் தருவதும், சாஸ்திரமுறைப்படி மகுடாபிஷேகம் செய்விப்பதும் க்ஷத்திரியனாக்குவதும் தான் ஆபத்து என்று கருதுகிறேன். சிவாஜியைச் க்ஷத்திரியனாக் கினால் குருஜீ, ஒரு புதிய பரம்பரையை உருவாக்குகிறார் என்றல்லவா பொருள். சிவாஜியின் மகன், பேரன், அவன் மகன் இப்படிப் பரம்பரையாய் ராஜாக்கள் ஆவர்; க்ஷத்திரியராவர்.  காகப் : புரிகிறது, மோரோ பண்டிதரே! நன்றாகப் புரிகிறது. இதற்காகத்தான் என் சம்மதம் பெற இவ்வளவு துடித்தனரோ? தந்திரக்காரர்கள். மோரோபந்த்! கவலைப்படாதீர். என் தீர்ப்பை மாற்றிக் கொள்கிறேன். பட்டாபிஷேகத்திற்குச் சம்மதிக்க மாட்டேன் என்று கூறிவிடுகிறேன்.  மோ : ஏதோ எனக்குத் தெரிந்ததைக் கூறினேன். க்ஷமிக்கணும். மகா பண்டிதரான தங்களிடம் தர்க்கித்ததாக எண்ணிவிடக்கூடாது.  காகப் : மோரோபந்து நமக்குள் ஏன் இந்த வித்தியாசம்? உபச்சாரம் இருவருக்கும் ஒரே அபிலாஷை என்று இப்போது சொல்லுகிறேன். எந்தக் காரியத்தைச் செய்தாலும் அது ஆரிய தர்மத்துக்கு லாபகரமானதா குலதர்மத்துக்கு ஏற்றதா என்பதைக் கவனித்துதான் செய்வேன். செய்வேன்.  மோ : அதிலென்ன சந்தேகம்? ஆரிய தர்ம ரட்சகராகிய தங்களுக்குத் தெரியாததும் உண்டோ . நான். காகப் போய் வாரும் சிவாஜிக்குப் பட்டமில்லை. போய்வாரும்.  மோ : எப்படிச் செய்தால் யுத்தம் என்று தங்களுக்குத் தோன்றுகிறதோ அவ்விதம் செய்யுங்கள் ஸ்வாமி. நான் வருகிறேன். (மோரோ போகிறார்) ரங்கு : என்ன ஸ்வாமி இது கிணறு வெட்ட புதுப்புது பூதங்களாகக் கிளம்பிண்டே வர்றதே . சிவாஜிக்குப் பட்டாபிஷேகம் கூடாதுன்னு இந்தப் பண்டிதர் சொல்றார். சிவாஜியிடமோ பேசி வாதாடி ஒரு முடிவுக்கு வந்தாச்சு. ஊர் பூராவும் அமர்க்களப்படறது, மகுடாபிஷேக வைபவ விஷயமா!  காகப் : அதனாலே நம் தலையிலேயே நாம் மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதா? மோரோ பண்டிதர் சொன்னதைத் தள்ளிவிட முடியுமா?  ரங்கு : அப்படியானா சிவாஜிக்கும், சிட்னீசுக்கும் கொடுத்த வாக்கு?  காகப் : வேதவாக்கு மிஞ்சியாடா இதெல்லாம். மோரோ பண்டிதர் சொல்றார் பட்டம் கூடாதுண்ணு. தகுந்த காரணமும் காட்டறார்.  ரங்கு : விபரீதமாகிப் போகும் ஸ்வாமி இப்போது நாம் மாத்திப் பேசினா.  காகப் : விபரீதமும் ஆகாது; வினாசமும் நேராது; தீர்க்கமாக யோசிக்க வேண்டும். ரங்கு : ஆமாம் ஸ்வாமி நம்மவர் சொன்னா என்பதற்காக அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வரப்படாது பாருங்கோ .  காகப் ; எது செய்தாலும் சிலாக்கியம்? சிவாஜிக்கு முடிசூட்டுவது நல்லதா? மோரோ பண்டிதர் சொல்கிறபடி பட்டாபிஷேகத்தைத் தடுத்தால் நல்லதா என்பதை யோசிக்க வேணும். சாங்கோபாங்கமாக. நம்ம தர்மம் பாழாகக் கூடாது.  ரங்கு : ஸ்வாமி நாம் சொன்ன எல்லா நிபந்தனைகளுக்கும் சிவாஜி சம்மதித்து விட்டார். ஹோமம், சமாராதனை, பிராமணாளுக்குத் தானம், துலாபாரம், சகலத்துக்கும் - சம்மதிக்கிறார். பாடம் உண்டு!  காகப் : பாடம் இருக்கோன்னோ ? இருந்தும் சமாராதனை செய்யறானே! தட்சணை தருகிறானேண்ணு பூரிச்சுப் போறே. என்னடா பிரமாதம் இதிலே. ஸ்ரீராமச் சந்திரருக்குப் பட்டாபிஷேகம் ஏற்பாடு ஆச்சேன்னோ ? ரங்கு : ஆமாம். ஏற்பாடாச்சு.  காகப் : கைகேயி செய்த காரியத்தாலே தடைப்பட்டு, ஸ்ரீராமச்சந்திரர் கானக வாசத்துக்குக் கிளம்ப நேரிட்டு விட்டதே! அப்போ அவரோடு கூடவே போயா கணும்னு சீதாப் பிராட்டியாரும், கிளம்பற போது, என்னடா நடந்தது?  ரங்கு : ஸ்ரீராமச்சந்திரர் வைதேகி கானகத்திலே கொடிய துஷ்ட மிருகங்களெல்லாம் உலவும். நீ வரப் படாதுண்ணு .. காகப் : மண்டு அந்தக் கட்டத்தைத் தாண்டுடா ! சீதாப்பிராட்டியாரைத் தன் கூட அழைச்சிண்டு போக ராமபிரான் சம்மதித்து விடுகிறார். பிறகு அதற்குப் பின்னாலே...  ரங்கு : ஊர் முழுதும் புலம்பறது.  காகப் : தேசம் பூராவும் தானே அழறது. எவ்வளவு சோகமான கட்டம். பட்டத்துக்கு வர வேண்டிய இளவரசன் ராமபிரான். அதே நாளிலே, அரண்மனை நந்த வனத்திலே உலவ வேண்டிய ராணியை அழைச்சுண்டு ஆரண்யம் போறதுண்ணா அதைவிடச் சோகமான - துக்கமான சம்பவம் வேறே இருக்க முடியுமா?  ரங்கு : முடியாது ஸ்வாமி முடியாது. இப்ப கூட பக்தா இந்தச் சம்பவத்தைப் படிச்சா கதற்றாளே.  சாகப் : அப்படிப்பட்ட சமயத்திலே ஸ்ரீராமச்சந்திரர் சீதாப்பிராட்டியாரைப் பார்த்து, திருவாபரணங்களை எல்லாம் கழற்றி பிராமணாளுக்குத் தானம் செய்துட்டு வாண்ணு சொன்னாரடா. எப்படிப்பட்ட சமயம்! ஊரே புலம்பிண்டிருக்கு. சீதாப்பிராட்டியாருக்கும் ராம பிரானுக்கும் பதினான்கு ஆண்டு கானக வாசம். அப்படிப்பட்ட கஷ்ட காலத்திலேயும் பிராமணாளுக்குத் தானம் கொடு, ஆபரணங்களைக் கழற்றிக் கொடுண்ணு சீதாப்பிராட்டியாருக்கு ராமபிரான் சொன்னதாகவும், சீதாப்பிராட்டி அது போலவே செய்ததாகவும் ராமாயணம் சொல்றது அசட்டு ரங்கு! நீ ராமாயணத்தைப் பாராயணம் செய்ததாகவும் சொல்றே. இந்த சிவாஜி செய்த தானாதிகளைப் பார்த்து, ஒரே ஆனந்தக் கூத்தாடுகிறாயே. ஆரண்யம் போகும் பொழுது அழுத கண்ணோடு இருந்த சீதா தேவியே பிராமணாளுக்குத் தானம் செய்திருக்கா. பட்டத்துக்கு வரப்போகிற சிவாஜி தானம் கொடுக்கிறதிலே என்னடாப்பா ஆச்சரியம் சமயம் எதுவாக இருந்தாலும், ஆனந்தமோ, துக்கமோ, எப்படிப்பட்ட சமயமானாலும் பிராமணாளுக்குத் தானம் தர வேணுமடா. அதுதானே சாஸ்திரம் சந்தோஷமான சமயத்திலே தானம் தருகிறாண்ணா அவாளோட சந்தோஷம் பல மடங்கு அதிகமாக வேணும்னு அர்த்தம். இதெல்லாம் நம்ம சாஸ்திரத்திலே இருக்குடா.  ரங்கு : இருக்கு ஸ்வாமி, இருக்கு.  காகப் : ரங்கு ஒரு யோசனை. அபூர்வமான யோசனை உதிச்சிருக்கு. எடு , சுவடிகளை கொடு இப்படி. (ரங்கு சுவடிகளைக் கொடுக்க, காகப்பட்டர் அதை வீச, ரங்கு எடுக்க) டேமண்டு! அவைகள் அங்கேயே கிடக்கட்டும். ஒடு! போய் அந்த சிட்னீஸை வரச்சொல் உடனே.  (ரங்கு போதல், சிட்னீஸ் வருதல்)  வாப்பா சிட்னீஸ் சிட் : குருஜி ஏன் முகவாட்டமாய் இருக்கிறீர்! ஏடுகள் ஏன் இப்படி ?-  காகப் : ஏடுகள் என்னை வாட்ட, அவை போதும்டப்பா சிட்னீஸ்! தேடித் தேடிப் பார்க்கிறேன். தெளிவு இல்லை; திகைப்புத்தான் அதிகமாயிண்டிருக்கு.  சிட் : எதற்கு ஸ்வாமி? காகப் : எதற்கா? சிட்னீஸ் விஷயத்தை வீணாக வளர்த்த இஷ்டப்படவில்லை. பட்டாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் எல்லாம் நடைபெற்றுவிட்டனவா?  சிட் : ஆகா! தாமதம் இராது குருஜி. நூற்றுக்கணக்கானவர்கள் . பணி செய்தபடி இருக்கிறார்கள்.  காகப் : பாபம் குழந்தை மனசு அவாளுக்கு  சிட் : கொற்றவனிடத்தில் அவர்களுக்கு அவ்வளவு பக்தி குருதேவா!  காகப் : பரிதாபம் எல்லாவற்றையும் பாழ் செய்கின்றன இந்த ஏடுகள்.  சிட் : ஸ்வாமி! தாங்கள் சொல்லுவது?  காகப் : புரியவில்லையா சிட்னீஸ் பட்டாபிஷேக ஏற்பாட்டை நிறுத்திவிடு.  சிட் ; நிறுத்திவிடுவதா? ஏன்?  காகப் : பட்டாபிஷேகம் பாப காரியம் சாஸ்திரம் சம்மதம் இல்லை துளியும் துருவி துருவிப் பார்த்தும் பலனில்லை. நான் சம்மதிக்க முடியாது சிட்னீஸ்.  சிட் : ஏன்? ஏன் சம்மதிக்க முடியாது? தாங்களே கூறினீரே, சாஸ்திர முறைப்படி பட்டாபிஷேகம் செய்யலாம் மென்று. இப்போது தாங்களே மறுக்கிறீரே! மராட்டியரின் களிப்பைச் சிதைக்கிறீரே!  காகப் : சாஸ்திரத்தை மீண்டும் பார்த்தேன். சாங்கோ பாங்கமாக தீர்க்கமாக யோசித்தேன். என் செய்வேன் சிட்னீஸ். சிவாஜிக்கு மகுடாபிஷேகம் செய்வது பாபகாரியம் என்றே தோன்றுகிறது. நான் சம்மதிக்க முடியாது.  சிட் : வீணையைக் காட்டி நரம்பை ஒடிக்கிறீரே!  காகப் : ஆர்வம் மிக்கவனே ராஜபக்தி, சினேக பக்தி, உனக்கு முக்கியமான குணங்கள் அவை. ஆனா தேவ பக்தியை நான் இழக்கலாமோ? இவ்வளவு ஏடுகளும் கூறுகின்றனவே பாப காரியம். பாப காரியம் என்று. நான் என்ன செய்ய?  சிட் : இந்த ஏடுகளையெல்லாம் நாடு, ஏற்காது ஸ்வாமி. மராட்டிய மணிமுடியை அவர் தரித்தே ஆக வேண்டும். கண் இருக்கும் போதே அதைக் காண வேண்டும் என்று துடிக்கிறது மராட்டியம்.  காகப் : பரிதாபமாகத்தான் இருக்கு. நான் என்னத்தைச் செய்ய? பாலைவனத்திலே புகுந்த பிறகு தாகவிடாய் ஏற்பட்டால் கஷ்டந்தான்.  சிட் : உவமை கூற இதுவா ஸ்வாமி சமயம்? காகப் : என்னை என்ன செய்ய சொல்கிறாய்? உன் நாட்டு மக்களை மகிழ்விப்பதற்காக என்னைப் பாபி ஆகும் படி சொல்கிறாயா? என் தவம், ஞானம், நேமம், நிஷ்டை , அருள் இவைகளையெல்லாம் நாசம் செய்து கொள்ளச் சொல்கிறாயா? சிட்னீஸ்! நீ காகப்பட்டரை நன்னா அறிய மாட்டாய். சாஸ்திர சம்மதமற்றக் காரியத்தைச் செய்யச் சொல்லி சர்வேஸ்வரனே வந்து சொன்னால் கூடச் செய்ய மாட்டேன். ஆகமாதிகளை மேலும் ஆராய்ந்த பிறகுதான் இந்த முடிவுக்கு வந்தேன். மேலும் இந்த மண்டலத்தின் முதன் மந்திரி. முதல் மந்திரி முறையிலே இருக்கிற மோரோ பண்டிதர் என்னும் பிராமணோத்தமர் கூட இதை எதிர்த்தாராமே?  சிட் : ஓஹோ! அவருடைய வேலையா இது? மோரோ பண்டிதரைச் சந்தித்ததின் விளைவா இது? காகப் : பைத்தியக்காரா? ஏண்டா வீணா அவர் மேலே சந்தேகப்பட்டு பாபத்தை தேடிக் கொள்றே இதோ பார்! டே ரங்கு கொஞ்சம் வெளியே போய் இரு. யாரும் இங்கே வரப்படாது. ஜாக்கிரதை, போ! இதோ பார், சிட்னீஸ் நீ காயஸ்த குலம், க்ஷத்திரியனாகலாம். சிவாஜி க்ஷத்திரியனாக முடியாது. இப்போது சம்மதம்னு சொல்லு. ராஜ்யாபிஷேகம் செய்து வைக்கிறேன். உனக்கு முடி தரித்துக் கொள். மராட்டியத்துக்கு மகாராஜனாக்குகிறேன். (பதறி)  சிட் : என்ன, என்ன? எனக்குப் பட்டமா? சிவாஜி சிருஷ்டித்த ராஜ்யத்துக்கு நான் ராஜ்னாவதா?  காகப் : நான் ஆக்றேண்டா ராஜனா? (ஆத்திரமடைந்து ) சிட்: சாஸ்திரம் இதற்குச் சம்மதிக்கிறதா? நியாயம், நீதி இதிலே இருக்கிறதா? ஆகமம் இந்த அக்கிரமத்துக்கு ஆதரவு தருகிறதா? ஸ்வாமி! என்னைப் பரீட்சிக்கிறீரா?  காகப் : பைத்தியக்காரா? உண்மையைத் தாண்டா சொல்றேன். உனக்குப் புத்தியிருந்தா பூபதியாகலாம். முறையல்ல, நெறியல்ல, தர்மமல்ல என்றெல்லாம் தயங்கினா பலன் இல்லையே. தர்மம் எது? அதை நான் கவனித்துக் கொள்கிறேன். உனக்குச் சம்மதமா?  சிட் ; இந்தச் சதிக்கா? சண்டாளச் செயலுக்கா?  காகப் : மந்த மதியடா உனக்கு.  சிட் : நொந்து கிடக்கும் மனதிலே தீ மூட்டாதீர். சிவாஜிக்கு. மகுடாபிஷேகம் செய்ய வந்து, சிவாஜியின் மாளிகையிலே இருந்து கொண்டே, சிவாஜிக்கு உரிய ராஜ்யத்தை, சிவாஜிக்கு சேவை செய்யும் எனக்கு, ஆஹா என்னால் கேட்டுச் சகிக்கவும் முடியவில்லை. இந்தச் செயலால் சிட்னீஸைத் துரோகியாகும்படிச் சொல்கிறீர். தூபமிடுகிறீர். இவ்வளவு ஏடுகளும் உமக்கு இந்த அநீதியையா காட்டுகின்றன?  காகப் : சிட்னீஸ்! சித்தத்திலே சீற்றம் குடிபுகுந்தால் பலன் என்ன? கலக்கம், குழப்பம். இப்படிப்பட்ட சமயத்திலே வரத்தான் செய்யும். தர்மமா? அதர்மமா? பாபமா? புண்ணியமா? என்றெல்லாம் எண்ணிக் குழப்பம் அடையறே. சிவாஜி நம்முடைய உயிர்த் தோழனா யிற்றே, அவனுக்குத் துரோகம் செய்யலாமான்னு எண்ணித் திகைப்பு அடையறே குருக்ஷேத்திர பூமியிலே இதே நிலை அர்ச்சுனனுக்கு ஏற்பட்டது. காண்டீபத்தைக் கீழே போட்டோவிட்டான். பரந்தாமன் சொன்னார் 'பார்த்திபா அண்ணன் தம்பிகள் என்றும், பந்து மித்திரர்கள் என்றும் எண்ணிக் கலங்காதே, என் மேலே பாரத்தைப் போட்டுவிடு ஆரம்பி யுத்தத்தை என்று. கீதா வாக்கியம் தெரியுமா சிட்னீஸ் உனக்கு? என் மீது பாரத்தைப் போட்டுவிட்டு தைரியமாகச் சம்மதித்துவிடு.  சிட் : வேதியரே! எனக்கு உம்மைப் பார்க்கவும் கூசுகிறது.  காகப் : முட்டாளே! முடியடா முடி மராட்டிய மண்டலத்தின் மணிமுடி . சாம்ராஜ்யம், செங்கோல் , சிம்மாசனம். ராஜயோகம் மன்னனாக வேண்டிய சிவாஜியும், அவனைச் சேர்ந்தவாளும் எதிர்ப்பாரே என்ற பயமா? நானிருக்கப் பயமேன்? நாட்டு மக்களைக் கூட்டி உன் பக்கம் நிற்கச் செய்கிறேன்.  சிட்: போதுமையா உமது போதனை. சிங்கத்தின் உண்வைத் திருடும் சிறு நரி என்று எண்ணினீரோ என்னை?  காகப் : நரிக்குப் புத்தி உண்டு நீ மகா மண்டு போடா.  சிட் : உன் எதிரே நிற்பது கூடப் பாபம். என் வாழ் நாளில் நான் இப்படிப்பட்ட வஞ்சகத்தைக் கண்டதே இல்லை. (போகிறான்; ரங்கு வருதல்)  ரங்கு : என்ன ஸ்வாமி இது? புயல் கிளப்பி விட்டீரோ?  காகப் : புயல் என் கோபம் ; தென்றல் என் சிரிப்பு ; மண்டலம் நம் கமண்டலத்துக்குள் அடக்கம்.  ரங்கு : ஸ்வாமி சிட்னீஸ் உம்முடைய திட்டத்தை ஏற்றுக் கொள்ளமாட்டேன்னு பிடிவாதமா சொல்லி விட்டானே? காகப் : ஆமாம் அவனுக்கு என்ன ஆத்திரம், அழுகை வந்தது தெரியுமோ? சரியான பயல்களெல்லாம் கிடைத் திருக்காண்டா இந்த சிவாஜிக்கு.  ரங்கு : இப்ப அவன் இருக்கிற நிலையை கவனிச்சா அவனாலே ஏதாவது வம்பு வருமோன்னு தோன்றது ஸ்வாமி.  காகப் : நானும் கூடத்தான் அப்படி எண்றேன். இனி நாமும் முடிவுக்கு வந்தாகணும்.  ரங்கு : ஆமாம் ஸ்வாமி இப்படிச் சதா ஊஞ்சல் ஆடுகிற மாதிரி இருந்தா ......  காகப் : திடீர்னு அறுந்து போனாலும் போகும்.  ரங்கு : ஆமாம் சிட்னீஸ் சீறினதைப் பார்த்தா இனித் தங்களுடைய சம்மதத்தைக் கேட்காமலே கூட பட்டாபிஷேகத்தை நடத்திவிடுவான் போல இருக்கு.  காகப் : அப்படிச் செய்யமாட்டான்! சரி, எதற்கும் இனி கால தாமதம் செய்யக்கூடாது. நீ சென்று மோரோ பந்தைக் கண்டு அவரிடம் சொல்லிவிடு . குரு பலமான சாஸ்திர விசாரணைக்குப் பிறகு சிவாஜிக்குப் பட்டம் சூட்டிவிடுவதுண்ணு தீர்மானித்து விட்டார். ஆரிய தர்மத்தைக் காப்பற்ற அதுதான் சிறந்த மார்க்கம் என்று குரு நம்பறார். உம்மிடம் சொல்லச் சொன்னார். விசாரப்பட வேண்டாம்; பயமும் வேண்டாம்ணு. அவரிடம் வினயமாய்ச் சொல்லிவிடு. டே ரங்கு என் ஏற்பாட்டிற்கு அவரையும் சம்மதிக்கச் சொல்லு.  ரங்கு : ஆகட்டும். இதோ போகிறேன்.  காகப் : அங்கு எங்காவது அழுது கொண்டிருப்பான். அந்த அசட்டுச் சிட்னீஸ். அவனிடம் சொல்லு. உன் ராஜ் விசுவாசத்தையும், திடமனதையும் உத்தம் குணத்தையும் மெச்சிண்டிருக்கிறார். உன்னைக் குரு சோதிச்சுப் பார்த்தார். நீ துளி கூட சத்தியத்திலே இருந்து தவறாமல், துளி கூட மனமயக்கமே காட்டாததைப் பார்த்து பூரிச்சுப் போனார். பட்டாபிஷேகத்துக்கான காரியத்தைத் துரிதப்படுத்தப் சொன்னார். அப்படீன்னு சொல்லுடா.  ரங்கு : ஸ்வாமி! இப்ப முடிவான தீர்மானமாயிடுத்துன்னு அர்த்தமோ?  காகப் : ஆமா! சிவாஜிக்குத்தாண்டா பட்டாபிஷேகம்.  ரங்கு : குருதேவர் முதலில் முடியாது என்றீர். பிறகு சம்மதம்ணு சொன்னீர். மறுபடியும் முடியாதுண்ணு சொல்லி விட்டீர். இப்படி மறுபடியும் சம்மதம்ணு சொல்றா.  காகப் : நாலு முறை கர்ணம் அடித்தேன்னு சொல்றியோ! ரங்கு : கர்ணம் போட்டதாகச் சொல்வேனா குரு  காகப் : சீடனல்லவா சொல்லமாட்டோ டே ரங்கு! நாலு கர்ணம்தான் அடித்தேன். அதிலேதப்பு என்னடா? நமக்கு இருப்பது நாலு வேதம்டா, நாலு. தெரியுமோ? போ, போ போய்ச் சொன்னதைச் செய்யடா.  (போகிறான்) -------------                   காட்சி - 26 இடம் : வீதி  உறுப்பினர்கள் : கேசவப்பட்டர், பாலச்சந்திரப்பட்டர், குடியானவன். பால : கேசவப்பட்டரே உம்முடைய பந்துக்களெல்லாம் வந்து விட்டாளோ?  கேசவ : ஆகா! சகலரும். பால ஏறக்குறைய பத்தாயிரம் குடும்பங்கள் இருக்கும் போல இருக்கு சமாராதனையில்.  கேசவ : பத்தாயிரத்து நூறுவோய். பால : சிவாஜி தர்ம தாதா அவன் நீடூழி காலம் வாழ வேண்டும்.  கேசவ : அந்த தர்ம தாதா கெடக்கட்டும் ஒய். இப்படிப்பட்ட தர்ம தாதாக்களை நமக்குத் தருகிற நமது குல குருமார்களைப் போற்றும் ஒய். இவ்வளவு சுக போகத்தை நமக்குத் தரும் சாஸ்திரம் குலையாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். அதிலே நாம் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும்.  பால : காகப்பட்டர் இங்கு பிரவேசித்ததும் நமது குலத்துக்கே யோகம் பிறந்துவிட்டது. அட்டா கேசவப்பட்டரே. இந்த மராட்டியா யுத்தத்திலே ஜெயித்தபோது, எவ்வளவு ஆர்ப்பரிச்சா தெரியுமா? இப்ப பொட்டிப் பாம்பாகி விட்டா . நாம் இப்போத்தான் தலை நிமிர்ந்து நடக்க முடியறது. நமது கெளரவம் தாகப்பட்டரால் நிலைத்தது. அவரே நமது குல ரட்சகர்.  (குடியானவன் வருதல்) கேசவ : வா பாப்பா, வா!  குடி : கும்பிடுறேன் சாமி!  கேசவ : ஊர் எவ்வளவு ஜெகஜோதியாயிருக்கு பார்த்தியோ?  பால : எங்கு பார்த்தாலும் வேத ஒலி , பிராமண சேவை. இப்படிப்பட்ட காட்சியைக் காணக் கொடுத்து வைத்தோமே..  குடி : மழையே காணுங்களே.  கேசவ : நம்முடைய நாட்டிலே வந்திருக்கிற புண்ணிய புருஷாளைத் தரிசிச்சிண்டிருக்கா வர்ண பகவான். அவாள் சந்தோஷமா இருக்கச்சே , கண்ணீர் விடப்படாது பாரு.  குடி: சாமி என்ன கதை வேணுமானாலும் சொல்லுங்க. மழையில்லாத்தாலே வயக்காடெல்லாம் வெடிச்சப் போச்சு. மாடு கண்ணெல்லாம் எலும்பும் தோலுமாப் போச்சுங்க.  பால : ஏன் ஒய் இவன் இந்த சாது சன்னியாசி கூட்டத்தைச் சேர்ந்தவனா இருப்பானோ?  குடி : ஏங்க, அவுங்க சொல்றதிலேயும் தப்பு ஒண்ணும் இல்லிங்களே இப்ப பபாருங்க, பத்தாயிரக் கணக்கான பிராமணா போஜனத்துக்கு வந்திருக்காங்களே, இவுங்கள்ளாம் பட்டாளத்துக்கு ஆள் எடுத்தப்ப எங்க போனாங்கண்ணு கேக்கறாரு பண்டாரத்தையா. நியாயந்தானுங்களே! அப்போ காணுங்களே இவுங்க ளெல்லாம். சமாராதனைண்ணு சொன்ன உடனே, அடேங்கப்பா புத்திலே யிருந்து ஈசல் கிளம்புற மாதிரியும், பழத்தோட்டத்திலே இருந்து வெளவால் கிளம்புற மாதிரியும் வந்துட்டாங்களே.  பால : டே பிராமணாளைத் தூஷிக்காதேடா . இதிகாசத்தை, சாஸ்திரத்தைப் பழிக்காதே  குடி : என்னமோ போங்க வரவர எங்களுக்கு இந்தப் புராணம் இதிகாசம் இதிலெல்லாம் சந்தேகம் வலுத்துக் கிட்டுத்தான் வருது.  பால ; சந்தேகம் வலுக்கிறதா. அட, சர்வேஸ்வரா! இந்தப் பாபிகளுக்கு என்ன தண்டனை தருவாயோ?  கேசவ : ஏண்டா விதண்டாவாதி ! விதண்டாவாதம் பேசிண்டிருக்கே அஞ்ஞானி.  குடி : அடே! நீங்கதான் பெரிய மெய்ஞானியா இருங்களேன். நாழியானாலும் ஆகட்டும். ஒரு சந்தேகம். இந்த அண்டசராசரங்களை எல்லாம் ஆயிரம் தலை படைத்த ஆதிசேஷன் தாங்குகிறதாதானே சொல்றீங்க..  கேசவ ; அதிலே உனக்கென்னடா சந்தேகம். ஏண்டா ஒரு வஸ்து நிக்கணும்னா, அதுக்கு ஒரு ஆதாரம் வேணுமோ, இல்லையோ? குடி : ஆமாம் ! கேசவ. அதுபோல இந்த அண்டத்தை ஆயிரம் தலை படைத்த ஆதிசேஷன் தாங்குகிறதா பெரியவா சொல்றா ! இதிலென்னடா தப்பு?  குடி : அப்படி வாங்க வழிக்கு. இப்ப நீங்க சொன்னீங்களே, இது நியாயமான பேச்சு. ஏனுங்க, அண்டத்தை ஆதிசேஷன் தாங்கினபோது, ஆதிசேஷனை எது தாங்குச்சி? அதுக்கும் ஒரு ஆதாரம் வேணும்ங்களே?  கேசவ : போடா போ விதண்டாவாதி!  குடி: கோவிக்காம சொல்லுங்க. தெரியாம கேக்கறேன். நான் பட்டிக்காட்டான். நீங்கள்ளாம் எல்லாம் படிச்ச மெய்ஞானிண்ணு பேசுறிங்களே. எங்க சந்தேகத்தை போக்கணுமில்லே. அண்டத்தெ ஆதிசேஷன் தாங்குறாருண்ணு சொல்றிங்க ஒரு சமயம். அப்புறம் சொல்றிங்க, பார்வதி சிறு விரல்லே மோதிரமா இருக்கிறார்ன்னு சொல்றிங்க. இன்னொரு சமயம் என்ன டாண்ணா பார்க்கடலிலே பள்ளி கொண்டிருக்கார்னு சொல்றிங்க. அது எப்படிங்க முடியும்? ஒரே ஆதிசேஷன் பார்வதி விரல் லெ . மோதரமா இருக்காரு பரந்தாமனுக்குப் படுக்கையா இருக்காரு. இந்த அண்டத்தையும் தாங்கறார்ணா இது நம்பற சேதிங்களா? என்னமோ போங்க. ஒங்களுக்கே தெரியாது... எனக்கு எங்கே சொல்லப் போறீங்க? --------------                   காட்சி - 27 இடம் : தர்பார்  உறுப்பினர்கள் - சிவாஜி, காகப்பட்டர், மோகன், தளபதி, பட்டர்கள்.  காகப் : சிவாஜி அன்று சூத்திரனாகப் பிறப்பிக்கப்பட்டாய். ஆனால் ஆகம விதிப்படி இன்று நீ ஷைத்திரியனாக்கப் பட்டாய். அரசாளும் தகுதி பெற்றாய், அந்தணரின் ஆசி பெற்றாய்.  மராட்டியப் பிரமுகர்களே! சாஸ்திரோத்தமாக செய்யப்பட்ட யாகாதி காரியங்களின் விசேஷ பலனால் சத்திரபதி சிவாஜி க்ஷத்திரியராகிவிட்டார். ஆரிய ஆசிர்வாதம் பெற்ற அவர். ஆண்டவனின் ஆதரவைப் பெற்று விட்டார். இனி அவரே உங்களுக்கு மன்னன்.  மன்னா! மன்னன் மக்களின் தலைவன் மகான்கள் மன்னருக்குத் தலைவர். ஆண்டவன் மகானின் தோழன். இதுவே வேதாசாரம். வேதம் உள்ளளவும், கார் உள்ளளவும், கடல் நீர் உள்ளளவும் மராட்டிய மண்டலம் ஜெகஜோதியாய் விளங்கும். சிவாஜி இனியாகிலும் நீ திரவியத்தை கோட்டைக் கொத்தளங்கள் கட்டுவதற்கும் அகழி , அரண் அமைப்பதற்கும், ஆயுதங்களுக்கும் வீணாக்காமல் பகவத் பக்திக்கும், பிராமண சேவைக்கும் செலவிடு, உத்தமனே! உன் ராஜ்யம் சனாதன பூமியாக விளங்கட்டும். சர்வ மங்களம் உண்டாகட்டும். (ஆசிர்வதிக்கிறார். சிவாஜி வணங்க, மோகன் ஆவேசமாய் ஒடிவந்து)  மோக ; மராட்டியமே, மண்டியிடாதே வீரமே வீழ்ச்சியுறாதே மராட்டிய மாவீரர்களே மன்னன் சிவாஜியை மாற்றான் முன் மண்டியிடச் செய்த கோழைகளானீர். கொடுமை, கொடுமை இது. அறிவுலகத்திலே அனைவரும் இதைக் கண்டித்தே பேசுவர். முடி நமது சிவாஜி மன்னனிடம், பிடி இந்த வேதம் ஓதியிடம்.  காகப் : யார் இந்த துஷ்டன்? போக்கிரித்தனமாகப் பேசுகிறான்.  மோக : போதும் நிறுத்தடா உன் மோசடிப் பேச்சை . (சிவாஜி மோகன் கன்னத்தில் அடித்தல்)  வேந்தே! தாங்கள் மண்டியிட்ட போது உண்டான வேதனையை விட இது சற்றுக் குறைவாகத்தான் இருக்கிறது. காகப் : சிவாஜி உன்னுடைய ஆட்சியிலே இப்படிப்பட்ட அவலட்சணங்கள் இருக்கவே கூடாது... எவ்வளவு போக்கிரித்தனமாகப் பேசுகிறான்.  மோக : நாலு ஜாதி அதில் பிராமணர் அடக்கி ஆளவும், மற்றவர்கள் அடிமையாகவும் பிறக்கின்றனர் என்ற கொள்கையை எதிர்ப்பதால் போக்கிரித்தனம்? ஆண்டவன் அருள்பெற அறநெறி தேவையே ஒழிய, ஆரியரின் காலைக் கழுவி, நீரைப் பருகுவது வழியல்ல என்று எடுத்துக் கூறுவதா போக்கிரித்தனம்? எது போக்கிரித்தனம்?  காகப் : ஏது , இவன் போக்கிரி மட்டுமில்லை ; விதண்டா வாதக்காரனாகவும், இருக்கிறானே! ஏ, பாபஸ்வரூபமே பிராமணோத்தமர்களை நிந்தனை செய்யாதே. மீளா நரகம் போவாய்.  மோக : நரகம் மேல். அங்கு நயவஞ்சகர் காலிலே நாடாள்வோர் வீழ்வார்கள் என்ற கதை இல்லை. மமதை பிடித்தவனே! உன் மனம் களிப்பது எனக்குத் தெரியும். மராட்டியரின் மாவீரத் தலைவனை மண்டியிடச் செய்து விட்டோமே என்ற செருக்குடன் இருக்கிறாய். ஆனால் … காகப் : துஷ்டனே முன்னம் ஒரு நாள் மாபலி என்ற மன்னர், தன் முடி மீது பரமனின் அடிவைக்க இடமளித்தான். சிவாஜி மன்னன் புத்திமான், சனாதனி. ஆகவே, பிராமண பக்தியோடு இருக்கிறார். பண்டைப் பெருமையை நிலைநாட்டுகிறார்.  சிவா : மோகன் இந்த சபையிலே இனித் துடுக்குத்தனத்துக்கு இடமளிக்கப் போவதில்லை .  மோக : அது தெரிகிறது மகராஜ்! இனி இங்கு வீரருக்கு வேலை இல்லை என்பது நன்றாகத் தெரிகிறது.  காகப் : அடே, விஞ்ஞானி கேள்! வேத, புராண, சாஸ்திர, இதிகாசங்களுக்கு மேன்மையும், மகிமையும் அவைகளிலே நம்பிக்கையும் மக்கள் உள்ளத்திலே இருக்கும் மட்டும், உன் போன்ற வீரர்கள் கூவினாலும், கொக்கரித்தாலும், எம்மை அசைக்க முடியாது. வாளை வீசுவதாலேயே வெற்றி கிடைத்துவிடும் என்று எண்ணாதே வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.  மோக : காகப்பட்டரே மண்டியிடும் மன்னர்கள் மட்டுமே மாநிலத்தில் உள்ளனர் என்று எண்ணாதீர். மக்கள் மனமயக்கம் வெகு விரைவிலே தெளியப் போகிறது. அப்போது உங்கள் அட்டகாசம் அடியோடு ஒழியும். மாவீரர்களே! மன்னன் சிவாஜியின் சபையிலே வரம்பு மீறி பேசினேன் என்று என்னைத் தண்டிக்கட்டும். ஒரு வார்த்தை உங்களுக்கு. ஆரியருக்கு அடிப்பணியாதீர். அரசியலில் அவர்களுக்கு ஆதிக்கம் அளிக்காதீர். அறமும் தழைக்காது. அரசும் நிலைக்காது. அவர்கள் எதற்கும் அஞ்சாதவர்கள். ஆறு. பத்து, இருபது தலையுடன் ஆமை வராக முகமுடையான், அண்ணன் தம்பி மகனுடையான், அந்தப்புரத்திலே அறுபதி னாயிரம் பேருடையான் என்று கூறி, கடவுளையே நிந்திக்கும் கயவர்கள் அவர்கள். அவர்களுடைய கபட வேடத்தை நம்பி மோசம் போகாதீர்.  சிவா : மோகனா! தோழமையின் எல்லையையும் தாண்டி விட்டாய். நில்  1 தள : இதுவரை மன்னர் முன் இப்படி எதிர்த்துப் பேசியவர் யாருமில்லை . 2. தள : மகராஜ் சினங்கொண்டு சீரழிவாகப் பேசிய இச் சிறுமதியாளனைச் சிறையிலே அடையுங்கள். காக : துஷ்டன் துராத்மா வேத நிந்தகன் நாஸ்திகன். (மோகன் வாளை உருவ)  சிவா : மோகன் வாளைக் கீழே போடு. (வாளை போட) மோக : மகராஜ்! சிவா : அரச சபையை அவமதித்த உன்னை நமது மெய்ப் பாதுகாவலர் வேலையின்றும் நீக்கிவிட்டோம்.  மோக : மகராஜ் எனக்கா இந்தத் தண்டனை?  சிவா : தண்டனையின் முழு விவரமும் கூறியாகவில்லை. நாளை சூரியோதயத்துக்குள் நீ தலைநகரைவிட்டுப் போய் விடவேண்டும்?  மோக : தேசப்பிரஷ்டமா?  சிவா : அரச சமூகத்திற்கு நீ தகுதியற்றவன்! போ. வீரர்கள் நெருங்க வீரர்களே விலகி நில்லுங்கள். அவன் போவான்! சர்தார் ! (போகிறான்) ----------------     காட்சி - 28 இடம் : வீதி உறுப்பினர்கள் : சாது, ரங்கு. (சாது பாடிக்கொண்டு வர, ரங்கு எதிரே வந்து)  ரங்கு : இது யாருடைய பாடல்?  சாது : ஐயனுடைய பாடல்?  ரங்கு : அது யாருடா அவன் ஐயனும் மெய்யனும்?  சாது : கோபமாகப் பேசும் தங்களையும், சாமான்யனான என்னையும் எவன் படைத்தானோ அவனே சர்வ லோகங்களிலும் நடக்கும் காரியத்துக்குக் கர்த்தா. அவன் அருளால் இந்தக் கீதம் பாடினேன். ஆகவேதான் தாங்கள் யாருடைய பாடல் என்று கேட்டவுடன் ஐயனுடைய பாடல் என்று சொன்னேன்.  ரங்கு : ஏண்டா நீ பெரிய வாயாடியா இருப்ப போல இருக்கே. சமஸ்கிருதம் தெரியுமோ, நோக்கு ?  சாது : தெரியாது.  ரங்கு : காயத்திரி தெரியுமோ? சாது : தெரியாதய்ய. ரங்கு : டே ஐயா பட்டம் போடாதே. இனி என்னை ஸ்வாமி என்று அழைக்கணும்.  சாது : ஐயன் கட்டளையோ?  ரங்கு : இந்த ஐயன் கட்டளை. ஏன் கேக்கப்படாதோ? இந்த ஐயனின் குரு பிறப்பித்த கட்டளையைக் கேட்டு இந்த மண்டலாதிபதி அதன்படி நடந்தான் தெரியுமோ நோக்கு. நான் யார் தெரியுமோ? சாட்சாத் காகப்பட்டருடைய சீடனாக்கும்.  சாது : ஐயா! சாதிப் பித்தம் உள்ளவரிடம் இதைப் போய்க் கூறும்.  ரங்கு : நீ மகா மேதாவியோ? சாதி ஆச்சாரத்தை ஒழிக்கப் போறியோ? அட, மண்டு மன்னாதி மன்னர்கள் ளெல்லாம் இந்த மடி சஞ்சியிடம் பயபக்தியுடன் இருக்கா. நோக்கு ஏண்டா இந்த மண்ட கெர்வம்?  சாது : மன்னாதி மன்னர்களெல்லாம் தனது மண்டலங்களையும் மற்ற மண்டலங்களையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஆசைக்கும், அச்சத்துக்கும் அடிமைப்பட வேண்டியிருக்கிறது. எனக்கு அவ்விதமில்லை. இந்தப் பூலோகம் முழுவதும் என் ராஜ்யம். எனக்கு யாரும் அடிமையில்லை. நான் யாருக்கும் அடிமையில்லை.  ரங்கு : ஓஹோஹோ அந்தப் பயல் ஒருவன் இது போலத்தான் கொக்கரிச்சான்.  என்ன நடந்தது தெரியுமோ? தேசப்பிரஷ்டம்.  சாது : யாரோ தங்களை ஏமாற்றியிருக்கிறார்கள்.  ரங்கு : இந்த ரெண்டு கண்ணாலேயும் பார்த்தது.  சாது : உண்மை அதுதான். சந்திரமோகனை அறிவுப்படை திரட்டி வரும்படி மன்னர் அனுப்பியிருக்கிறார். சமரசத்தின் தூதுவனாக அவன் விளங்க அனுப்பியிருக்கிறார்.  ரங்கு : பித்தன்! ஏதோ உளறிண்டிருக்கான். (போகிறான்) --------------                                                               காட்சி - 29 இடம் : மன்றம் உறுப்பினர்கள் : சிவாஜி, மோகன், இந்து, சாந்தாஜி.  இந்து : அப்பா வாள் ஏந்தக் கூடாது. வாள் ஏந்தக் கூடாது என்று கூவினார். தண்டனையும் அதுபோலவே ஆகிவிட்டது.  மோக : இந்து அவர் உன் க்ஷேமத்தைக் கருதி அவ்வாறு கூறி வந்தார். நீயும் ஒரு நாள் வாள் - கேவலம். ஒரு இரும்புத்துண்டு என்று கூறினாய். நிலைமையும் அப்படித்தான் ஆகிவிட்டது. நான் மராட்டியத்தின் மானத்தை மீட்கப் போர் புரிய வாள் ஏந்தி நின்றேன். மன்னன் ஆரிய குருவுக்கு அடி பணிந்துவிட்டார். இனி யார் வாளேந்தி என்ன பயன்? மராட்டிய வீரனுக்கு வாள் இருப்பது புகழ் தரும். ஆரிய ஏவலராக மராட்டியர் ஆன பிறகு வாள் எதற்கு?  (இந்து போக, மன்னர் வருதல் மோகன் தாள் பணிந்து)  மகராஜ் மகராஜ்! தாங்களா? (மண்டியிட்ட மோகனைத் தூக்கி)  சிவா : மங்காத மராட்டியமே எழுந்திரு உன்னை நான் இழக்க வேண்டிய அளவுக்கு என் நிலை ஆகிவிட்டது. தோழா! உன்னை நான் தண்டித்தேன். என்றுதானே கருதிக் கொண்டாய்? தண்டனையல்லடா தம்பி அது. சாந்தாஜி யின் மகளை நீ அடைய, உனக்கு விடுதலை தந்தேன். என் பொருட்டு அல்லவா இந்துவை நீ இழக்க இருந்தாய்.  மோக: மகராஜ் என்ன இது என் தண்டனை ரத்தாகிவிட்டதா? இனி நான் வாள் ஏந்தலாமா?  சிவா : இனி நீ வாள் ஏந்திப் பலன் என்ன? மோகனா! பழமையின் தாள் ஏந்திய மன்னனிடம் இனி வாள் ஏந்துவோர் இருந்து பலன் இல்லை. ஆம் இவ்வளவு வயது வரை போரிட்டுப் போரிட்டு சிருஷ்டித்த ராஜ்யத்தை நான் ஆசி பெறாமல் ஆள முடியாத அளவுக்கு மக்களிடம் மனமயக்கம் இருக்கிறது. மோகன், நாம் மன்னர்களை எதிர்க்கலாம்; எதிரிகளை அடக்கலாம்; ஆனால் நம் மக்களையே என் மீது ஏவி விட முடியும் அவர்களால், இன்றைய நிலையிலே. ஆகவேதான் நான் பணிந்தேன்.  மோக: ஆகா, மகராஜ் நான் எதிர்ப்பார்த்தபடியே இருக்கிறது.  சிவா : மோகன் நான் ஏற்படுத்திய ராஜ்யம் நிலைக்கும் என்று நான் நினைக்கவில்லை. சந்தர்! மராட்டிய மண்டலத்திலே ஏரி, குளம், குட்டை , ஆறு, மடு எல்லாம் வறண்டுவிட்டன. வயல்கள் வெடித்து கிடக்கின்றன. போர் செயலினால் மக்கள் ஏழைகளாயினர். இந்த நிலையிலே - வறுமை தாண்டவமாடும் இந்த நேரத்திலே பதினோராயிரம் பிராமணர் குடும்பங் களுக்கு நான்கு மாதங்கள் சமாராதனை, தங்கள் உயிரை எனக்காக அரசுக்காக அளித்த மராட்டிய வீரருக்கு , என்னால் விருந்திட முடியவில்லை. என் செலவில் வீணர்கள் உண்டு. கொழுத்தனர். துலாபாரம், அதனால் வேறு செலவு. சந்திரமோகன்! என் அரசு ஆரம்பமாகும் போதே பொக்கிஷம் சூன்யமாகிவிட்டது. ஒரு கோடியே நாற்பத்து எட்டு லட்சமடா நான் கொட்டி அழுதேன். நம் தரணி இப் பாரத்தைத் தாங்காது. ஆகவே வீரனே! அஞ்சா நெஞ்சு படைத்த நீ. மக்களிடம் பரவி இருக்கும் மயக்கத்தைப் போக்கு, வாளால் அரசுகளை அமைத்து விடலாம். ஆனால் அது நிலைக்க அறிவு தேவை. அந்த ஆயுதத்தை வீசு . நாடு முழுவதும் வீசு . பட்டித் தொட்டிகள் ளெல்லாம் வீசு, மக்களை வீரர்களாக்கும். சந்திரமோகனா சகலரையும் சந்திரமோகன்களாக்கு போய் வா! ஜெயம் பெறுவாய். (சிவாஜி போக, சாந்தாஜி, இந்து வருதல். சாந்தாஜி மோகனிடம் மாலையைத் தருதல் இந்துவும் மோகனும் மாலை மாற்றிக் கொண்டு பாட்டு) --------------------------