[] 1. Cover 2. Table of contents கொடை விளக்கு கொடை விளக்கு   வ.சுப.மாணிக்கனார்     பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/kodai_vilakku   This book was produced using https://pandoc.org/ மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ச. ஐஸ்வர்யா - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: S.Iswarya - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/kodai_vilakku This Book was produced using LaTeX + Pandoc மின்னூல் உரிமம் இந்த மின்னூலானது தமிழ்மண் பதிப்பகம், கணியம் அறக்கட்டளை, ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்கார்புரோ நூலகத்தின் எண்ணிமத் தமிழியல் திட்டம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டதாகும். மூல நூல்கள் தமிழ்நாடு அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் நூல்கள் பிரகடனத்தின் கீழ் பொதுவுடமையாக உள்ளன.1 இப்பதிப்பும் இதன் மூலங்களும் கிரியேட்டிவ் காமன்ஸ் - படைப்பாக்கப் பொதுமம் குறிப்பிடுதல் - அதே மாதிரிப் பகிர்தல் 4.02 உரிமத்தின் கீழ் பல்வேறு வடிவங்களில் தமிழ்மண் பதிப்பகத்தினாலும் கணியம் அறக்கட்டளையினாலும் வெளியிடப்பட்டுள்ளன. இது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு http://archive.org/download/thamizhmann-cc-declaration/Thamizhmann-cc-declaration-tamil.pdf என்ற இணைப்பில் காணவும். This ebook is the product of collaboration between ThamizhMann Publisher, Kaniyam Foundation and UTSC Library’s Digital Tamil Studies project. The original works are under public domain through the Tamil Nadu nationalized books public domain declaration.1 This edition and its sources and multiple formats have been released under Creative Commons Attribution Share Alike 4.0 Unported2 by ThamizhMann Publisher and the Kaniyam Foundation. For further information, please see: http://archive.org/download/thamizhmann-cc-declaration/Thamizhmann-cc-declaration-tamil.pdf மாணிக்க விழுமியங்கள் - 13 (நூற்றாண்டு நினைவு வெளியீடு) கொடை விளக்கு - முதல் பதிப்பு 1957 ஆசிரியர் : மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் பதிப்பாளர் : கோ. இளவழகன் தமிழ்த் தாத்தா வழியில் இளைஞர்கள்: freetamilebooks.com   உலகம் ஐம்பூதங்களால் ஆனது. இது தான் இயற்கை   ஆனால் இன்று ஆறுவது பூதமாக மின்னணு எழுந்துள்ளது. இது தனி உலகமாகவும் இயங்குகிறது. இந்த மின்னணு உலகத்தின் (electronic world : e-commerce e-learning …..) மிகப் பெரிய தனித்துவம் சிறப்பு, வெற்றி, ரகசியம் எல்லாமே இந்த மின்னணு உலகம் பெரும்பாலும் தன்னார்வலர்களின் பங்களிப்பால் இயங்குகிறது.          இந்த மின்னணு உலகம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்  ஒரு துறை புத்தக உலகம்.  மின்னணு புத்தக உலகில் தமிழ் மொழியும் பீடு நடை போடுகிறது.  தமிழ் மின் புத்தக உலகத்திற்கு பெருந்தொண்டனாகத் திகழ்வது freetamilebooks.com   எனும் அமைப்பு.   இது கணியம் அறக்கட்டளையின் துணை அமைப்பு. இந்த அறக்கட்டளையின் மின் தமிழ் பணிகள் அளப்பரியது.   freetamilebooks   அமைப்பினர் ஆறு ஆண்டுகளாக  காலத்தின் தேவையான மின் புத்தகங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். freetamilebooks.com  இவர்களது இணைய தளம்.  கடந்த ஆறு ஆண்டுகளில் 618 மின் நூல்களை வெளியிட்டுள்ளார்கள்.  இந்த இணைய தளத்திலிருந்து 75 லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளன.  இதனை 75 லட்சம் பிரதி புத்தகங்கள் விற்பனை எனக் கணக்கிடலாம்.  தமிழ் எழுத்தாளர்களுக்கு இது ஈடு இணையில்லாத வரம். சுமார் 20 தன்னார்வலர்களின் அளப்பரிய தமிழ்ப் பணி.        free tamil e books   அமைப்பினரின் முதல் நூல் அ. ரவிசங்கர் எழுதிய தமிழ் இன்று.  என் வேண்டுகோளை ஏற்று  இன்று வள்ளல் அழகப்பரின் 111வது பிறந்த நாளில் (06.04.2020) இவ்வமைப்பின் 619 வது நூலாக வ.சுப. மாணிக்கனாரின்  கொடை விளக்கு நூலை மின்னணு வடிவில் வெளியிடுகிறார்கள்.       கரையன்களிடமிருந்து அருந்தமிழ் நூல்களை மீட்டி அச்சில் கொண்டு வந்த தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்யர் பணியை   freetamilebooks   அமைப்பினரின் தமிழ் மின்னூல் உருவாக்கம் நினைவூட்டுகிறது.  அவர் தாத்தா இவர்கள் பேரன் பேத்தியர்.  அவருக்கு பலம் தமிழ்ப் புலமை.  இவர்களுக்குப் பலம் தொழில் நுட்பம். இவர்களை தலைமுறை இடைவெளியின்றி இணைப்பது என்றுமுள கன்னித் தமிழ் தான்.        இந்த அமைப்பின் தன்னார்வலர் என் இனிய இளவல் காரைக்குடி லெனின் தான் என்னை இந்த அமைப்பிற்கு அறிமுகம்  செய்து வைத்தார்.  அவரும் அழகப்பா பல்கலைக்கழகத்தில் பயின்றவர்.  இந்த அமைப்பினருக்கு என் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நலந்தா செம்புலிங்கம் 06.04.2020 நுழைவுரை தமிழ் மரபுகளைத் தலைமுறை தலைமுறையாகக் காத்து வரும் தமிழ்ச்சமூகங்களில் தலையாய சமூகம் நாட்டுக் கோட்டை நகரத்தார் சமூகம். இந்தச் சமூகம் ஈன்றெடுத்த அரும்பெரும் அறிஞரும், நாடு, மொழி, இனம், சமுதாயம், கல்வி, இலக்கியம், வாழ்வு முதலான பல்வேறு பொருள்களைப் பற்றித் தம் தெள்ளத் தெளிந்த சிந்தனைகளால் தமிழ் இலக்கிய வானில் சிந்தனைச் சிற்பியாக வலம் வந்தவர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் ஆவார். இப்பெருந்தமிழ் ஆசான் வாழ்ந்த காலத்தில் தமிழர்க்கு எய்ப்பில் வைப்பாக எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச்செல்வங்களைத் தொகுத்து மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் மாணிக்க விழுமியங்கள் எனும் தலைப்பில் 18 தொகுதிகளாக தமிழ்கூறும் நல்லுலகம் பயன் கொள்ளும் வகையில் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. “மூதறிஞர் மாணிக்கனார் தமிழ் ஆராய்ச்சி உலகில் தமிழ்ப் பேரொளியாய் விளங்கியவர்; அவருடைய ஆய்வு நெறி தமிழ் மரபு சார்ந்தது. தொல்காப்பியத்தின் புதுமைக் கூறுகளையும், பாரதியின் பழமைக் கூறுகளையும் கண்டு காட்டியவர். உரையாசிரியர்களைப் பற்றி நிரம்பச் சிந்தித்த உரையாசிரியர். தொல்காப்பியத்திற்கும், திருக்குறளுக்கும் தெளிவுரை கண்டவர். மரபுவழிப் புலமையின் கடைசி வளையமாகத் திகழ்ந்தவர், ஆய்வு வன்மைக்குத் ‘தமிழ்க்காதல்’, சிந்தனைத் தெளிவிற்கு ‘வள்ளுவம்’, புலமை நலத்திற்குக் ‘கம்பர்’ ஆகிய இவர் எழுதிய நூல்களைத் தமிழ்ச் சான்றோர்கள் இனம் காட்டி மகிழ்வர்.” என்று மணிவாசகர் பதிப்பகத்தின் நிறுவனர் அய்யா ச. மெய்யப்பன் அவர்கள் இப்பெருந்தமிழ் ஆசானின் அறிவின் பரப்பை வியந்து பேசுகிறார். வளர்ந்து வரும் தமிழாய்வுக் களத்திற்கு வ.சுப. மாணிக்கனார் பதித்த பதிப்புச் சுவடுகள் புதிய வழிகாட்ட வல்லன. தாம் எழுதிய நூல்களின் வழி தமிழின் தனித்தன்மையை நிலைநாட்டியவர். மறைமலையடிகளின் ஆய்வுத் திறனும் கொள்கை உறுதியும்; திரு.வி.க.வின் மொழிநடையும் சமுதாய நோக்கும் இவர் நூல்களில் மிகுந்து காணப்படுகின்றன. இத்தொகுப்புகளைப் பயில்வோர் இவ்வுண்மையை முழுதாய் உணர முடியும். தமிழ்மண் பதிப்பகம் தமிழ் - தமிழர்க்குப் பெருமை சேர்க்கும் பயனுள்ள நல்ல தமிழ் நூல்களை வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் தனித்தன்மையுள்ள நிறுவனம் என்பதை நிறுவி வருகிறது. இதன் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனாரின் அறிவுச் செல்வங்களை வெளியிடுவதன் மூலம் உவகையும், களிப்பும், பூரிப்பும் அடைகிறேன். இவர் நூல்களை நாங்கள் வெளியிடுவதை எங்களுக்குக் கிடைத்த நற்பேறாக எண்ணி எண்ணி மகிழ்கிறேன். நல்ல தமிழ் நூல்களைப் பதிப்பித்துத் தமிழ்கூறும் உலகிற்கு அளிக்கும் போதெல்லாம் என் சிந்தை மகிழ்கிறது; புத்துணர்வும், பூரிப்பும், புத்தெழுச்சியும் அடைகிறேன். தமிழ்ப் பதிப்பு உலகில் உயர்வுதரும் நெறிகளை மேற்கொள்ள உறுதி ஏற்கிறேன். நன்றிக்குரியவர்கள் மணிவாசகர் பதிப்பக நிறுவனர் அய்யா ச. மெய்யப்பன் அவர்கள் இவ்வருந்தமிழ் அறிஞர் எழுதிய நூல்கள் பலவற்றை வெளியிட்டுத் தமிழுக்கும் தமிழருக்கும் அருந்தொண்டு செய்தவர். இந்த நேரத்தில் அவரை நன்றி உணர்வோடு நினைவு கூறுகிறேன். பாரி நிலையம் மற்றும் காரைக்குடி செல்வி புத்தக நிலையம் ஆகிய இரண்டும் பெருந்தமிழ் அறிஞர் வ.சுப.மா. நூல்களை வெளியிட்டுத் தமிழ் உலகிற்கு வழங்கியுள்ளதையும் இந்நேரத்தில் நன்றி உணர்வோடு நினைவு கூறுகிறேன். பேரறிஞரின் மக்கள் அனைவரும் இந்நூல் தொகுப்புகள் எல்லா நிலையிலும் செப்பமுடன் வெளிவருவதற்கு உதவினர். இச்செந்தமிழ்த் தொகுப்புகள் வெளிவருவதற்கு மூல விசையாய் அமைந்தவர்கள் திருமதி. தென்றல் அழகப்பன், திருமதி மாதரி வெள்ளையப்பன் ஆகிய இவ்விரு பெண்மக்கள் மாணிக்க விழுமியங்கள் தமிழ் உலகம் பயன் கொள்ளும் வகையில் வெளிவருவதற்குத் தோன்றாத் துணையாக இருந்ததை நன்றி உணர்வோடு நினைவு கூறுகிறேன். மொழியை மூச்சாகவும், அறத்தை வாழ்வாகவும், இலக்கிய வேள்வியை வினையாகவும் ஆக்கிக் கொண்டவர் மூதறிஞர் வ.சுப.மா அவர்கள் என்பதை மேலைச்சிவபுரி, கணேசர் கலை அறிவியல் கல்லூரி தமிழ் உயராய்வு மையம் இனம் காட்டி உள்ளது. இது முதுமுனைவர் இரா. இளங்குமரனார் கூறிய புகழ் வரிகள். “மாணிக்கச் செல்வ மணித்தமிழ் அன்னைக்குக் காணிக்கை யாய்வாய்த்த கண்ணாள - பேணிக்கை வைத்த துறையெல்லாம் வாய்ந்த துறையாக்கி வைத்தநீ எங்களின் வைப்பு” இப்பாடல் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டிய நிறைதமிழ் அறிஞரின் அறிவுச் செல்வங்களை உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்குவதன் மூலம் நிறைவடைகிறேன். “தனக்கென வாழ்வது சாவுக்கு ஒப்பாகும் தமிழ்க்கென வாழ்வதே வாழ்வதாகும்” எனும் பாவேந்தர் வரிகளை நினைவில் கொள்வோம். கோ. இளவழகன் மூல நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் கணினி செய்தோர் : திருமதி கோ. சித்திரா திருமதி ப. கயல்விழி, திருமதி வி. ஹேமலதா திரு. டி. இரத்திரனராசு நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) முதல் திருத்ததிற்கு உதவியோர்: திருமதி. தென்றல் அழகப்பன் திரு. புலவர். த. ஆறுமுகம் திரு. க. கருப்பையா முனைவர். க. சுப்பிரமணியன் புலவர். மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் இறுதித் திருத்தம் : முனைவர் மாதரி வெள்ளையப்பன் நூலாக்கத்திற்கு உதவியோர்: இரா. பரமேசுவரன், கு. மருது, வி. மதிமாறன் அச்சடிப்பு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை. ‘மாணிக்க விழுமியங்கள்’ எல்லா நிலையிலும் செப்பமுற வெளிவருவதற்குப் பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கும் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கும் எம் நெஞ்சம் நிறைந்த நன்றியும் பாராட்டும். அறிமுகவுரை செம்மல் வ.சுப.மாணிக்கனார் தமிழ்ச்சான்றோர் பெருமக்கள் முன்னோர் எடுத்து வைத்த அடிச்சுவட்டில் தாமும் கால் பதித்து எழுத்துக்களையும் ஆய்வுகளையும் செய்த காலத்தில் தனக்கென ஒரு தனி வழியை அமைத்துக்கொண்டவர் செம்மல் அவர்கள். தமிழகத்தில் பிறந்து இரங்கூனில் வளர்ந்து வாய்மைக் குறிக்கோளைத் தன் வாழ்வின் குறிக்கோளாக எண்ணிய பள்ளிப்படிப்பை நிறைவு செய்யாத ஒரு சிறுவனை அடையாளம் கண்டாள் தமிழன்னை. அச்சிறுவனைத் தமிழ்க்கொடையாக உலகிற்குத் தந்தாள். பண்டிதமணி கதிரேசனார் துணை கொண்டு தமிழைக் கசடறக் கற்றவர், வ.சுப. சொல்லும் செயலும் ஒன்றாக வாழ்ந்தவர். தமிழ்க்கொடையாக வந்த வ.சுப. தமிழுக்குச் செய்த கொடை மிக அதிகம். தமிழால் அடையாளம் காணப்பெற்ற அவர் கற்றோருக்கு முதன்மையராகவும் எல்லோருக்கும் தலைவராகவும் விளங்கினார். சங்க இலக்கியங்களை புதிய நோக்கில் ஆய்வு செய்தவர். இனி வரும் காலங்களில் சங்க இலக்கியம் கற்பாரின் நுழைவாயில் வ.சுப.வின் அகத்திணை ஆய்வு நூல் ‘தமிழ்க்காதல்’. இராமாயணத்தில் பற்றில்லாமல் இருந்தவர்களையும் ‘கம்பர்’ என்ற நூல் கம்பராமாயணத்தைக் கற்கத் தூண்டுகின்றது. சிலப்பதிகாரத்தின் பெயர்க்காரணத்தை ஆய்வு செய்தது ‘எந்தச் சிலம்பு’. திருக்குறளைப் புதிய கோணத்தில் ஆய்வு கண்டது ‘வள்ளுவம்’ மற்றும் ‘திருக்குறட்சுடர்’. திருக்குறளின் மூலமும் உரையும் ஒட்டிப்பிறந்த இரட்டையர் போல் காணும் ‘உரை நடையில் திருக்குறள்’. தொல்காப்பியத்தை வெளியுலகிற்குக் கொண்டு வந்து அறிஞர்களிடையே நிலைநிறுத்தியவர் வ.சுப. தமிழ்க்கொடை மட்டுமன்று ஒரு தமிழாசிரியனாலும் அறக்கொடை செய்ய முடியுமென்பதை நிலைநாட்டியவர். அறம் செய்ய பணம் வேண்டியதில்லை. மனம் தான் வேண்டும். அழைப்பு வேண்டியதில்லை. உழைப்புத்தான் வேண்டும். அறிவு கூட வேண்டியதில்லை. அன்பு கூட வேண்டும். என்பதை உணர்த்தியவர். செம்மல் வ.சுப. அவர்களின் புகழ் தமிழ் வாழும் காலமெல்லாம் நிலைத்து நிற்கும். அந்நிய மோகத்தில் அடிமைப்பட்டு, உரிமை கெட்டு, ஆட்சிஅதிகாரம் தொலைத்து அல்லலுற்றுக்கிடந்த இந்திய மண்ணில், அக்கினிக் குஞ்சுகளை வளர்த்தெடுத்த அண்ணல் காந்திக்குப் பாரதி பாடிய வாழ்த்துப் பா இது: “வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா! நீ வாழ்க வாழ்க!” இதைப் போலவே, தமிழ் மண்ணில் அந்நிய மொழிகளின் ஆதிக்கத்திற்குத் தமிழர் அடிபணிந்து, மொழி உரிமை இழந்து, தமிழ்க் கல்விக்குப் பெருங்கேடு நேர்ந்த போது, இந்த அவலத்தை மாற்றும் முயற்சியில் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் அண்ணல் வ.சுப.மா. அண்ணல் காந்தியை பாரதி பாடியதுபோல், அண்ணல் மாணிக்கனாரை, "வாழ்க நீ எம்மான், இங்கு வந்தேறி மொழிமோ கத்தால் தாழ்வுற்று உரிமை கெட்டுத் தமிழ்க்கல்வி தனையும் விட்டுப் பாழ்பட்டுப் பரித வித்த பைந்தமிழ் தன்னைக் காத்து வாழ்விக்க வந்த புதிய வள்ளுவமே வாழ்க! வாழ்க! என்று பாடிப் பரவத் தோன்றுகிறது. தென்றல் அழகப்பன் (வ.சுப. மாணிக்கனாரின் மகள்) மாணிக்கம் - தமிழ் வார்ப்பு வாய்மை வாழ்வைத் தன் உயிராகவும், திருவாசகம், திருக்குறள், தொல்காப்பியம் மூன்றினையும் போற்றிப் பாதுகாத்து பொய்யாமை, தூய்மை, நேர்மை, எளிமை என்ற நான்கு தூண்களையும் அடித்தளமாகவும் வரலாறாகவும் கொண்டு வாழ்ந்தவர் தமிழ்ச் செம்மல், மூதறிஞர் முது பேராய்வாளர், பெருந்தமிழ்க் காவலர், முதுபெரும் புலவர், தொல்காப்பியத் தகைஞர் எனது தந்தை வ.சுப. மாணிக்கனார். பெற்றோர்கள் இல்லாமலே வளர்ந்தாலும் தன்னை நற்பண்புகளாலும் நல்லொழுக்கத்தாலும் நற்சிந்தனைகளாலும் செதுக்கிக் கொண்டவர்கள். அவர்களின் மறைவிற்குப் பின் தாயார் திருமதி. ஏகம்மை மாணிக்கம் அவர்கள் தந்தை இட்ட புள்ளிகளைக் கோலமாக்கினார்கள். அப்பா தனது வாழ்நாளில் 50 ஆண்டுகட்கு மேலாக தமிழைப் போற்றினார்கள். தாயார் (தந்தையின் மறைவிற்குப் பிறகு) 20 ஆண்டுகட்கு மேலாக தந்தையின் குறிக்கோள்களைப் போற்றி நிறைவேற்றினார்கள். தமிழறிஞர்களும் ஆர்வலர்களும் இன்று தந்தையைப் போற்றுகிறார்கள். செம்மலின் அறிவுடைமை தமிழக அரசால் பொது வுடைமை ஆக்கப்பட்டது. என் தந்தையின் தொண்டுகள் பலதிறத்தன. மாணிக்கனாரின் நூற்றாண்டு விழாவின் நிலைப்பயனாக செம்மலின் நூல்கள் அனைத்தையும் மறுபடியும் பதிப்பித்து அவற்றை தமிழுலகிற்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டும் எனவும் செம்மலின் படைப்புக்களை வெளியிடுவது விழாவிற்கு உயர்வும் நூல்கள் வழிவழி கிடைக்கவும் தேடலின்றிக் கிடைக்கவும் வழி வகுக்க வேண்டும் என்றும் மக்கள் நாங்கள் எண்ணினோம். நூற்றாண்டு விழாப் பணியாக மாணிக்கனார் நூல்களை யெல்லாம் வெளியிடும் அமையத்து செம்மலின் தமிழ்மையை திறனாய்ந்து தமிழறிஞர்களின் முத்திரைகளும் நூல்களாக வெளிவருகிறது. இவ்வாண்டில் பொறுப்பெடுத்து வெளியிட்ட தமிழ்மண் பதிப்பகத்திற்கும் எம் தந்தையின் தமிழ்ப்பணிக் குறித்து பெருமை தரும் நூல்களாக எழுதியுள்ள நூலாசிரியர் கட்கும் தமிழினமே நன்றி கூறும். முனைவர். மாதரி வெள்ளையப்பன் (வ.சுப. மாணிக்கனாரின் மகள்) கோவை 11.8.2017 என் அன்புறை எட்டு வயது பாலகனாக இருந்தபோதே ஈன்றெடுத்த பெற்றோர்கள் விண்ணுலகு எய்திய சூழ்நிலை. இளம் வயதிலேயே “லேவாதேவி” என்று சொல்லப்படும் வட்டித் தொழிலைக் கற்றுக் கொள்ள பர்மா சென்று வேலைப்பார்த்த இடத்தில் முதலாளி, வருமானவரி அதிகாரியிடம் பொய் சொல்லும்படி அப்பாவை வற்புறுத்தியதால், திண்ணமாக மறுத்துவிட்டுத் தாயகம் திரும்பிய உத்தம மனிதர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பண்டிதமணி, கதிரேசனாரிடம் தமிழ் பயின்று, பிற்காலத்தில் காரைக்குடியில் தான் கட்டிய இல்லத்திற்கு “கதிரகம்” என்று பெயர் சூட்டி, ஆசானுக்கு மரியாதை செலுத்திய மாமனிதர். சிற்பி ஒரு கல்லை உளியைக் கொண்டு செதுக்கிச் செதுக்கி, சிறந்த சிற்பமாக்குவான். அதேபோல், தன் மனதை எளிய வாழ்வு, எதிர்கால நம்பிக்கை, தெளிவான சிந்தனைகள், வாழ்க்கைக்கான திட்டங்கள், உயர்ந்த குறிக்கோள், உன்னத மான செயல், வாய்மை, தூய்மை, நேர்மை, இறை வழிபாடு போன்ற எண்ணத் திண்மையுடன் தன்னைத்தானே பக்குவப் படுத்திக் கொண்டதால், உயர் பதவியான துணைவேந்தர் பதவி அப்பாவை நாடி வந்தது. திருக்குறள், திருவாசகம், தொல்காப்பியம் ஆகிய மூன்று தமிழ் மறைகளும், பண்புடன் வாழ்வதற்குரிய வழிகாட்டிகள் என்று நினைத்து வாழ்வில் கடைப்பிடித்து வெற்றி கண்ட உயர்ந்த மனிதர். அப்பா எழுதியுள்ள ‘தற்சிந்தனை’ என்னும் குறிப்பேட்டில் “நான் படிப்பிலும் எழுத்திலும் ஆய்விலும் பதவிப் பணியிலும் முழு நேரமும் ஈடுபடுமாறு குடும்பப் பொறுப்பை முழுதும் தாங்கியவள் ஏகம்மை என்ற என் ஒரே மனைவி” என்று எழுதியுள்ளதிலிருந்து அப்பாவின் முன்னேற்றத்திற்கு அம்மா முழு உறுதுணையாக இருந்துள்ளார்கள் என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே கல்விக்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் என் தாய்தந்தையர் இருவருக்கும் ஒருமித்தக் கருத்தாக இருந்ததால், தன் குழந்தைகள் அறுவரையும் பள்ளிப் படிப்போடு நிறுத்திவிடாமல், ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் பட்டப் படிப்புக்கள் வரை பயில வைத்து வெற்றி கண்டுள்ளார்கள். என் இளங்கலை வணிகவியல் சான்றிதழிலும், என் கணவரின் பொறியியல் சான்றிதழிலும் துணைவேந்தரின் கையொப்ப இடத்தில் என் தந்தையாரின் கையொப்பம் இருக்கும். இதை நான் பெற்ற பாக்கியமாக நினைக்கிறேன். நான் பெங்களூரில் இருந்தபோது, அப்பா எழுதிய ஒவ்வொரு கடிதத்திலும், “அவிநயன் திருக்குறள் சொல்லு கிறானா? புதிதாகச் சொல்லும் குறளுக்கு அய்யா காசு தருவார்கள் என்று சொல்” என்ற வரிகள் நிச்சயமாக இருக்கும். என் மகன் இளம் வயதிலேயே திருக்குறள் கற்க வேண்டும் என்பது என் தந்தையாரின் எண்ணம். இளஞ்சிறார்களுக்குப் பிஞ்சு நெஞ்சங்களிலேயே திருக்குறள், திருவாசகம் படித்தல், இறைவழிபாடு செய்தல் போன்ற விதைகளை விதைத்து விட்டால், முழுவாழ்வும் மிகவும் சிறப்பாக அமையும் என்பது தந்தையாரின் திண்மையான கருத்து. மிகச் சிறு வயதில் பெற்றோரை இழந்த சூழ்நிலையில், அடிப்படை பொருளாதாரம் இல்லாத நிலையில், அதிகமான உழைப்பாலும், முயற்சியாலும், நேர்மையான வழியில் தான் ஈட்டிய பொருளாதாரத்தில், அதாவது தன் சொத்தில் ஆறில் ஒரு பங்கை தனது சொந்த ஊரான மேலைச்சிவபுரியின் மேம்பாட்டுக்காக உயர்திணை அஃறிணை பாகுபாடுயின்றி செலவு செய்ய வேண்டும் என்று தன் விருப்பமுறியில் எழுதியுள்ளார்கள். தந்தையாரின் விருப்பப்படியே தாயார் அவர்கள் 20-4-1992 இல் அப்பாவின் பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து நடத்தி வந்தார்கள். இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்பா எழுதிய முப்பதுக்கும் மேலான நூல்களில் ‘வள்ளுவம்’, ‘தமிழ்க்காதல்’, ‘கம்பர்’, ‘சிந்தனைக்களங்கள்’ போன்றவை தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகச்சிறந்த ஆய்வு நூல்களாகக் கருதப்படுகிறது. உன்னத வாழ்க்கைக்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்துள்ள என் தந்தையாரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்பவர்களின் வாழ்விலும் நல்ல திருப்புமுனை ஏற்பட்டு வாழ்வு செம்மையாகும் என்பது உறுதி. பொற்றொடி செந்தில் வ.சுப. மாணிக்கனாரின் மகள் மும்பை 21-7-2017. கொடை விளக்கில்….. கம்பனொளி 1. வெண்பா எண் 84 நம்ப முடியவில்லை நாற்பத்தெட் டாண்றிக்குள் கம்பனும் காணக் கலைநகராய்த் - தம்பொருளால் எல்லோரும் கல்வியெழிலைப் பெறவைத்தான் பல்லாரும் வாழப் பகுத்து. கண்ணைக் குளமாக்கும் சுடரொளிகள் 2. வெண்பா எண் 113 சாய்ந்த படுக்கையன் சாரா உணவினன் ஓய்ந்த உடலன் உளம்வலியன்: - வாய்ந்தவோர் ஆயிர மாணவரை அங்கழைத்துப் பேசினான் சேயர் பலருடையான் சீர் 3. வெண்பா எண் 121 அரித்துக் குடையும் அழிநோய் வருந்தச் சிரிக்குக் குலுங்கும் திறத்தன்: - திரித்தும் இறைபழியா அன்பன்: இருந்தும் கொடாஅர்க் குறைபழியாச் சான்றோன் குணம் கொடையொளிகள் 4. வெண்பா எண் 54 பாரும் உறங்கும் படுயாமம் தில்லியில் நேருவைக் கண்டு நிதியளித்தாள் - யாரும் மடித்துத் தொகுக்கின்ற மண்ணுலகில் ஏனோ துடித்துக் கொடுத்தான் தொகை 5. வெண்பா எண் 55 எண்ணாத் தமிழிசைக்கு ஏற்ற உயிர்கொடுத்த அண்ணா மலையான் அமைத்தபெருந்த – திண்ணார் கலைப்பல் கழகம் கலைப்பொறி காண்பான் நிலைப்பல் நிதியளித்தான் நேர் புரட்சியொளி 6. வெண்பா எண் 146 மறப்பின்றிக் கல்வி வளர்த்தானை ஈண்டுப் பிறப்பில்லை என்றமதம் பேசேல்; - சிறப்பின்றி நாம்பிறத்தல் காறும் நலஞ்செய் அழகனைத் தாம்பிறக்க வேண்டல் தகும் கடமையுரைத்தல் கொடைவிளக்கு நூலில் பாயிரத்தைத் தொடர்ந்து 10 அலகுகள் உள்ளன. இறுதி (10 ஆம்) அலகின் தலைப்பு: உலகக் கடன். இதில் மாணவர் நன்றி, மாணவர் ஒழுக்கம், மாணவர் குறிக்கோள், ஆசான்கள், வணிகர், இந்திய மக்கள், புள்ளினங்கள், இளம்பெண்கள் என ஓரோருர் வகையினர் எப்படி அழகப்பருக்கு நன்றி பாராட்ட வேண்டுமென வ.சுப.மா வகுத்துள்ளார். அதில் இளம்பெண்கள் என்ற தலைப்பில் வரும் வெண்பா: 7. வெண்பா எண் 156 ஊரார் குழந்தையை ஊட்டி வளர்த்தானைக் கூரார் குவிமுலையீர் கூப்புமினோ – சீரார் அழகனைக் போலவொரு அள்ளிக் கொடுக்கும் குழகனைப் பெற்றுக் கொள இறை வணக்கம் போன்ற வெண்பாக்கள் 8. வெண்பா எண் 73 இலக்கியம் கற்றான்: இயல் சட்டம் கற்றான்: கலக்கியல் வாணிகமும் கற்றான்: - இலக்கம் அடுக்கப் பயின்ற அழகப்பன் எங்கோ கொடுக்கப் பயின்றான் கொடை 9. வெண்பா எண் 95 படித்தான் பறந்தான் படைத்தான் நினைத்தான் கொடுத்தான் சிறந்தான் குறித்தான் - துடித்தான் எடுத்தான் முடித்தான் இனித்தான் அழகன் படுத்தான் விடுத்தோம் பணிந்து. தமிழ்த் தவம் (இத்தலைப்பு வ.சுப.மா வின் தலைப்பு) 10. வெண்பா எண் 31 வள்ளற் றமிழ்ச்சொல் வணங்கித் தவஞ்செய்து கொள்ளப் பிறந்த கொடையழகன் - உள்ள உடைமை அனைத்தும் ஒழித்தான் ஒழியார் மடமை தொலைக்கும் மகன் கொடை விளக்கு முதற் பதிப்பு 1957 இந்நூல் 1969இல் பாரிநிலையம் வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகின்றன பாயிரம் உள்ளம் உவப்ப உடைமை யெல்லாம் பள்ளிகள் நிறுவிப் பண்பியல் வளர்க்க அள்ளி வழங்கிய அழகன் கொடையினை நீடும் புகழென நினைத்தே னாயினும் பாடுங் குறிப்புப் பண்டெனக் கில்லை. ஆவி தனித்த அண்ணல் மேனியைக் கூவிக் கொடுந்தீ குறைக்குங் காலை வண்ணத் தமிழனை வள்ளல் அழகனைத் தண்ணந் தமிழில் தலைவனாய்ப் பாடும் எண்ணம் முகிழ்ப்ப எழுந்ததிப் பாட்டு. பழுதறு நம்பியின் பார்புகழ் வாழ்க்கையை முழுதுற விரிக்கும் முழுப்பெருங் காப்பியம் எழுதும் புலமை என்னள வன்றுகாண்; அன்னைத் தமிழின் அணிவிரல் மோதிரம் என்னப் புனைந்த இளஞ்சிறு காப்பியம் தொடைக்குப் பொருளாய்த் தோன்றிய அழகனைக் கொடைக்கு விளக்கெனக் கூறப் பெறுமால் முன்னை வள்ளியோர் மூவாத் தமிழணிந்து என்றும் வாழ்வர் இவனும் வாழ்வன் அரிய பொருளால் அறிவு பரப்பிய பெரிய கொடையான் பிறப்பினை உரிய நெறியால் உள்ளுவம் நாமே. வ.சுப. மாணிக்கம் அன்புறை அழகப்பா கல்லூரி முன்னாள் முதல்வர் திரு. அ. நா. தம்பி அவர்களுக்கு நாடாளுந் தமிழ்ச்சிறப்பு வகுப்புக் கண்டான் நாவளர்க்கும் கலைக்கழகம் நடக்கக் கண்டான் வீடாளும் முத்துசிவன் மலரும் கண்டான் விருந்துதமிழ்க் கலைவிழா விளங்கக் கண்டான் ஏடாளுங் கொடையழகன் இனித்த வள்ளல் எடுத்தமுதற் கல்லூரி முதல்வ னாகி நீடாளும் ஏழாண்டு வளர்ச்சி கண்டான் நிறைகுணத்தன் பெருந்தம்பி நீடு வாழ்க. கொடை விளக்கு தலைவன் பெருமை கம்பனும் இல்லை கபிலனும் இல்லையே தம்பொன் துறந்தான் தகைபாட; - நம்பன் நிலையைப் புகழ நினைத்தேன்மன்; யானை வலையிற் படுத்தும் வகை.(1) முத்துசிவனார் பேறு முன்னைத் தமிழாசான் முத்துசிவன் சொல்லாளன் தன்னைப் புகழ்பாடத் தான்கேட்டான்; - நின்னை இறந்தபின் பாடும் இதனைத் தமிழிற் பிறந்துநீ கேட்பாயோ பேசு.(2) மக்கள் புலம்பல் தலைவன் மறைவு வள்ளல் அழகப்பா வாழ்ந்தார் மறைந்தாரென்று உள்ளம் இனியேனும் ஒப்புமோ? - வெள்ளம் புரண்டனைய மக்கள் புழுதிமே லாடித் திரண்டு வருதல் தெரிந்து (3) கையறு நிலை துக்கத் துணிதாங்கித் தொய்யும் மனந்தாங்கி நெக்கு வடிகின்ற நீர்தாங்கி - எக்கால் இனியோர் அழகப்பா எங்கட்கு எனாஅ நனிசோர்வர் மக்கள் நலிந்து. (4) கடையடைப்பு காரை வணிகர் கடிதிற் கடையடைத்து வேரை யிழந்த விழுத்தளிர்போல் - நீரை முகஞ்சொரிய விம்மி முதிர்ந்தபே ரன்பை அகஞ்சொரிய வந்தார் அதிர்ந்து.(5) கதியின்மை பாரத ரத்தினங்கள் பாராட்டுஞ் செந்தமிழா! தேரதிர வந்தாய்நீ செத்தாயோ? - காரதிர விண்ணே விழினும் வினையே கருதுகின்ற கண்ணே இனியார் கதி?(6) காரைக்குடி வளம் காரைக் குடியெல்லாம் கல்விப் பயிர்வளரக் கூரைக் குடியெல்லாம் கூனிமிர - நீரைப் புழங்கினால் என்னப் பொருட்செல்வம் எல்லாம் வழங்கினான் வாழ்க வழி.(7) கடைப்பெருக்கம் உடையில் உணவில் உறுப்புத் தொழிலில் கடைகள் பலபெருகக் கண்டோம்; - தடையென்ன கல்லூரி தோன்றாதேல் காரைக் குடியென்றோ புல்லூரும் பாம்பூரும் புற்று.(8) தொழுகை விட்ட களரெல்லாம் வேண்டும் விலைசொரிந்து கட்டும் மனைகளாய்க் காண்கின்றோம்; - தொட்ட அழகன்கை வண்மையே வண்மை; அவனைத் தொழுதகை மாறார் துடித்து.(9) அழுகை நிறையப் படித்தவன் : நெஞ்சத்தின் மாசு குறையப் படித்தவன் : கொள்கை - உறையப் படித்தவன் ஒன்றோ; படியாத நோயால் துடித்தவன் என்பர் துளித்து.(10) திருவழகன் கல்வி யழகன் கலங்கா மனவழகன் : செல்வி விழையும் திருவழகன் : - நல்ல கொடையழகன்: ஆங்கிலச் சொல்மாரி பெய்யும் தொடையழகன் என்பர் தொடுத்து.(11) அறிவழகன் பல்லார் புகழும் பணவழகன்; ஈயாத செல்லார் அழுங்கும் சிறப்பழகன் :- கல்லார் மடங்கொல் அறிவழகன் வாழ்ந்து துயிலும் இடங்கொல்லோ என்பார் இது.(12) இனி யார் கொடுக்க நினைத்தான் கொடுத்தான் எனும்பேர் எடுக்க உரியான் இவனே:- விடுத்தப் படுக்க நினைத்தான் பகுக்க நினைத்தான்; கொடுக்க இனியாரே கூறு.(13) அழுகையும் தொழுகையும் நேரு வருகையினும் நீண்ட பெருங்கூட்டம் தேரு வருகைக்குத் தேம்பிற்று:- பாரும் அழாஅமை யாரே அறிந்தார்காண்; வானும் தொழாஅமை கண்டாரைச் சொல்.(14) பொது இழப்பு எதுவுடைமை எண்ணாது இறுகப் பிடிப்பின் பொதுவுடைமை தோன்றாதுபோமோ?- புதுவுடைய பன்னிலைக் கட்சியும் பற்றோ டழுதனவே இன்னிலை கண்டான் இழப்பு.(15) அருட்பா ஓதல் வாரங்கள் பாடவும் வாசகம் ஓதவும் ஆரங்கள் தாங்கவும் ஆயினான்;- தீரங்கள் எந்நாளும் வல்ல இயற்றினாள்; யாரறிவார் இந்நாளும் செய்வான் எழுந்து.(16) ஊரதிர்ச்சி ஆக்கும் வழியே அறியும் உலகத்துப் போக்கும் வழியும் புரிந்தபெரு - நோக்கனெனப் பாரத ரத்தினம் பண்பிசைக்க வாழ்ந்தவன் ஊரதிர வீழ்ந்தான் உழைத்து.(17) மக்கள் வேட்கை இன்னும் சிலவாண்டு இரானோ? இருந்தானேல் என்ன குறைகள் எமக்கிருக்கும்?-அன்னோ அழிநேய் அணுகா அணிபிறவி தாங்கி எழுவானோ எங்கள் இடத்து.(18) தமிழ் வேட்கை மீண்டும் பிறப்புண்டேல் மேனி நலஞ்சிறந்து ஈண்டே பிறக்க இவனென்று - வேண்டுவாள் அன்புத் தமிழன்னை; ஆராத் தமிழிசையால் என்பு குளிர்ப்பாள் இனிது.(19) பேரிழவு பெரிய குடும்பத்தைப் பேணுமோர் தந்தை பிரியக் கலங்குறூஉம் பெண்போல் - உரிய அழகன் இழந்த அணிநகரம் உற்ற இழவுக்கு மீள்வே இலை.(20) அழகப்பர் கொடைச் சிறப்பு கரிகாலன் காடு கெடுத்துக் கரிகால் வளவனார் நாடு படைத்தமை நாமறிவோம்; - கூடும் வரிப்பொருளைக் கொண்டு வரிமிகுக்கக் செய்தான்; உரிப்பொருளே ஈந்தான் உழைத்து?(21) பாரி ஊர்கொடுத்தான் கற்றார்க்கு; உரையாதமுல்லைக்குத் தேர்கொடுத்தான் என்று திறம்பாடப் - பேர்கொடுத்த பாரியும் வாழ்ந்த பறம்பு கொடுத்தானோ? ஆரிலும் தந்தான் அழகு.(22) மாரி நீர்பெய்யும் மாரிக்கு நீரை வழிப்படுத்தி ஏர்செய்யும் ஆற்றல் இயல்பில்லை;–சீர்செய்யும் செல்வநீர் பெய்து சிறுமக்கள் நெஞ்சத்துக் கல்வியேர் பூட்டினார் கற்று.(23) முவ்வென்றி பாரியை வென்றான் மனைக்கொடையால்; பாரிநகர் மாரியை வென்றான் மதிக்கொடையால்;-நீரியைந்த ஏரியை வென்றான் இடக்கொடையால்; காலவாட் கூரினை வெல்லான் கொடுத்து.(24) சுந்தரன் பாட்டு பாரியை விஞ்சிய பல்கொடையால்வ சுந்தரன் பேரியல் பாட்டிற் பெயர்மாற்றம்:-நீரியல் செல்வ அழகப்பச் சீரோன்நீ என்றிசைத்தும் ஒல்வ கொடானென் றுரை.(25) பேகன் பேகன் கொடையைப் பெருமடம் என்றுமுன் வேகம் படமொழிந்தார் மேலோரார்;-பேகன் மடம்பட் டெறிந்தான் மயிற்போர்வை; கல்லார் மடம்பட ஈந்தான் மதி.(26) குமணன் காட்டுக் குமணன் கருந்தலை கொள்ளெனப் பாட்டுப் பெருந்தலையைப் பார்த்துரைத்தான்:-நாட்டு வளர்ச்சி கருதியோ வாளீந்தான்? வந்தான். தளர்ச்சி கருதியோ தான்?(27) கல்வி வள்ளல் 28 பாடும் புலவோர்க்குப் பண்டெழு வள்ளியோர் நாடும் பிறவும் நயந்தளித்தார்;-ஒடுகின்ற கல்லா இளைஞர்க்குக் கல்விப் புலமளித்தான்; எல்லாரும் வாழ இனிது.(28) சான்று வள்ளல் தான்பிறந்து செய்த தனிக்கொடையால் நம்முன்னோர் தான்துறந்த வண்மைக்குச் சான்றானான்;-வான்கறந்த மாரியோ ஒப்பான்? மழைப்பின் அடிவருடும் ஏரியோ ஒப்பான் இவன்?(29) வள்ளல் புகழ்ந்த வள்ளல் அள்ளும் புகழாளன் அண்ணா மலையரசன் வள்ளல் எனச்சொல்ல வந்தமகன்;-பள்ளும் பறையும் முதலாப் பழந்தமிழ் மக்கள் அறையும் புகழான் அழகு.(30) தமிழ்த் தவம் வள்ளற் றமிழ்ச்சொல் வணங்கித் தவஞ்செய்து கொள்ளப் பிறந்த கொடையழகன்- உள்ள உடைமை அனைத்தும் ஒழித்தான்; ஒழியார் மடமை தொலைக்கும் மகன்.(31) தமிழன் கொடை தமிழன் கொடையே தனிக்கொடை என்ன இமிழ்கடல் ஞாலத்தார் ஏத்த - உமிழ்கின்ற எச்சிலைப் போலவ உடைமை எதனையும் துச்சமா விட்டான் தொகுத்து.(32) அழகப்பர் கொடைகள் கல்லூரிப் பிறப்பு அன்னை பெசண்டினார் ஆண்டு நிறைவிழவில் சென்னைத் துணைவேந்தர் செல்சொல்லால்- இன்னேயோர் கல்லூரி காண்பனெனக் கையொலிக்கக் கூறினான்; நல்லூறும் வாயான் நமக்கு.(33) இடப்பரப்பு விரிந்த மனத்தன்: விரைந்த செயலன்: தெரிந்த பொருளியல் தேர்ந்தோன்:-கரிந்த நிலமென்று தள்ளாதே ஆயிரநீள் ஏக்கர் வலமென்று சேர்த்தான் வளைத்து.(34) இடக்காவல் நிலமகள் கைவிட்ட நீள்சுரத்தை வீட்டுக் குலமகள் போலக் குறித்தான்;- வலமகள் தன்னையே காமுறக் தானோ கொடுத்தற்குப் பொன்னையே காமுற்றான் போந்து.(35) ஆடுகளம் நரியிசைத்த காடு நகராய்ச் சிலம்பின் வரியிசைக்கப் பள்ளி வகுத்தான்;-உரியசைத்துப் பாம்பா டிடமெல்லாம் பந்தா டிடமாகும்; தாம்பாடு கன்னியர்க்குத் தாம்.(36) மாணில் கள்ளரும் புக்கஞ்சும் காட்டழுவம் கல்விக்குத் தள்ளரும் மாணவர் தங்கில்லம்:-முள்ளுறும் இட்டிடை யெல்லாம் இளங்காலார் துள்ளிவரும் கட்டிடம் ஆயிற்றே காண்.(37) கல்வித் திருவிளக்கு ஒருவிளக்கு இல்லா உதிகாட்டில் கல்வித் திருவிளக்கு ஏற்றிய செய்யன்;- பெருவிளக்கு மின்னொளி ஆயிரம் வீதிக்கு நாட்டினான்; தன்னொளி கண்ட தகை.(38) விருந்து விழா பருந்தும் பறவாப் படுசுரத்து நாளும் விருந்து தலைவர்க்கு வேட்டான்;-மருந்தினை ஊணாக வாங்கி உடலைக் கெடுத்தொழிந்தான்; பூணாகக் கொண்டான் புகழ்.(39) கல்லூரிக் கோயில்கள் புகையூர்தி ஏறிவழிப் போவார்க்குத் தோன்றும் பகையாரும் எண்ணான் படைத்த-தொகையான குன்றன்ன கல்லூரிக் கோயில்கள்; நாமகள் நின்றன்ன காட்டு நிலத்து.(40) கல்விப்பேறு பள்ளி நுழைபையன் பட்டமும் பெற்றுவந்து வெள்ளி பெறூஉம் வினைபெறுவான்-உள்ளி ஏனைவகைக் கல்லூரி ஈண்டே அமைத்தான்; புனைவகை யன்று; புகழ்.(41) இளம்பள்ளிகள் ஆயத்தப் பள்ளியோடு ஆதாரப் பள்ளிகள்: மேய தொடக்கத்து மேம்பள்ளி:- தூய இசைப்பள்ளி கண்டான் இளஞ்சிறார் கற்க; வசைப்புள்ளி இல்லா மகன்.(42) மாண்டிசோரிப் பள்ளி மறந்தபாற் பிள்ளையரை மாணாக்கும் தாயர் கறந்தபால் உண்பித்துக் காக்கும் - சிறந்தபால் மாண்டிசோர் பள்ளி வகுத்தான்; மதிநெஞ்சே காண்டிசோர் வில்லான் கதை.(43) தாயழகன் எங்குப் பறந்தாலும் இம்மக்கள் ஆடவென அங்குச் சிறந்த அரும்பொருளைத் - தங்கு தடையின்றி வாங்கிவரு தாயழகன் வாழ்வில் எடையின்றிக் கொண்டான் இசை.(44) பகலுணவுக்கொடை படிக்கும் குழந்தை பகலுணவு கொள்ள அடுக்கும் இலக்கம் அளித்தான்; - நடுக்கும் கொடையாளி: நாளிழக்கும் கோடியர்க்கு நல்ல விடையாளி காட்டும் விளக்கு.(45) கலைக்குழந்தை நாட்டின் உயிர்ச்செல்வம் நல்ல அறிவுபெறும் வீட்டின் கலைக்குழந்தை மெய்யேகாண்; - பாட்டின் இனிய இசையன் : இள மக்கள் கற்க எனைய நலஞ்செய்தான் ஈந்து.(46) கல்விக்குழுத் தலைமை சென்னை அரசு சிறுகல்வித் திட்டத்தை நன்னர் அழகன்பால் நாடிற்றால்;-என்னை? பலவகையாற் பள்ளிகள் பாலார்க்குக் கண்ட நலவகையான் என்று நயந்து.(47) கோட்டையூர்க் குழந்தை கோட்டையூர் பெற்ற குறும்பிள்ளை இந்திய நாட்டையே ஊராக நாடிற்றால்; - வீட்டேயும் கல்லூரி கண்டான் கனிமொழியார் கல்விக்கு நல்லாரும் கற்பதுவே நாடு.(48) உடற்கல்விக் கல்லூரி வல்ல உடம்பின்றேல் வாழ்வு நலிவறிந்தான் நல்லவுடற் கல்லூரி நாட்டினான்; - சொல்லும் அகத்தும் புறத்தும் அணிநலஞ் செய்ய மிகத்தான் உழைத்தான் மெலிந்து.(49) பல்வகைக் கல்லூரிகள் சுட்டிச் சிறுவர் தொடைமுடியாக் கூந்தலர் கட்டுக் கடங்கிவரு காளையர் - பட்டம் அடுத்த முதியர் அனைவரும் கற்க எடுத்தான் பலபள்ளி ஈங்கு.(50) ஆண்டோ? கல்லூரியோ? ஆண்டு தவறாது அடுத்தடுத்துக் கல்லூரி யாண்டும் நிறுவ அயர்ந்திலனால்; - வேண்டும் இறையுணர்ச்சி மிக்கான்: இயலும் வினையிற் குறையுணர்ச்சி கொள்ளான் குறி.(51) தொழிற் கல்வி தொழிலோடு கல்வி தொடர்புற்றால் அன்றோ எழிலாடு நாடாகும் என்பான்;- பொழிலாடு காரைக் குடியாக் காடு திருத்தினான்; நீரைக் கொணர்ந்தான் நிலத்து.(52) மின்சார வேதியல் ஆராய்ச்சிக் கழகம் நீரார் இடஞ்சுட்டி நின்ற தடைவிலக்கி ஆராயும் மின்சார ஆய்வுக்குச் - சீராய மூவைந் திலக்கமும் முந்நூறாம் ஏக்கரும் நாமுந்தி ஈந்தான் நயந்து.(53) யாமக்கொடை பாரும் உறங்கும் படுயாமம் தில்லியில் நேருவைக் கண்டு நிதியளித்தான்;- யாரும் மடித்துத் தொகுக்கின்ற மண்ணுலகில் ஏனோ துடித்துக் கொடுத்தான் தொகை.(54) அண்ணாமலைப் பல்கலைக் கழகம் எண்ணாத் தமிழிசைக்கு ஏற்ற உயிர்கொடுத்த அண்ணா மலையான் அமைத்தபெருந் - திண்ணார் கலைப்பல் கழகம் கலைப்பொறி காண்பான் நிலைப்பல் நிதியளித்தான் நேர்.(55) கொடையழைப்பு அழைத்துக் கொடுத்தானோர் ஐயிலக்கம் என்ப உழைத்துக் கொடுக்கும் ஒருவன்; - தழைத்துப் பொறிவளங்கள் நாடு பொலிய அமைத்தான்; அறிவினங்கள் கற்ற அவன்.(56) சென்னைப் பல்கலைக்கழகம் அன்னைக் கழகமென் ஆன்றோர் புகழ்பாடும் சென்னைக் கழக்ச் செயல்பெருகப் - பின்னரும் ஐயிலக்கம் ஈந்த அழகன் கொடைதனக்கே கையிலக்கம் ஆனான் கனிந்து.(57) திருவிதாங்கூர்ப் பல்கலைக் கழகம் சிலம்பு பிறந்த திருநாடென் றெண்ணிக் கலங்கு தமிழியலைக் காண - இலங்கும் இலக்கதொன் றீந்தான்; இடும்பை தனக்கும் கலக்கமொன் றீந்தான் களித்து.(58) மதுரை டோக் கல்லூரி தாயாம் மகளிர்க்குத் தானுமோர் கல்லூரி வாயாகத் தோற்றி வளர்ப்பவன் - சேயான பெண்பாலார் பள்ளிக்குப் பேரா நிதியளித்தான் மண்பாலோர் காணா மகன்.(59) பேறு மருத்துவசாலை உள்ளாடு பிள்ளை உருவ நலங்கண்டு தள்ளாடு தாயர் தனியுவப்பக் - கள்ளாடு கூற்றைத் தடுக்கக் குறித்தான்; மருத்துவ ஏற்ற நிலையம் இவர்க்கு.(60) சேவாசதனம் சேவா சதனமெனும் சேயிழையார் இல்லிற்கத் தாவா இலக்கம் தகவளித்தான்; - ஆ ஆ எனைவகை பெண்ணின் இயல்வளர்ச்சி யுண்டோ அனைவகை செய்தான் அழகு.(61) தக்கர் பாபா கல்விச்சாலை அன்றாடு கூலி அரிசனத்தார் வாழ்வுயர ஒன்றோடு காலிலக்கம் ஒப்பித்தான்;- நன்றோடும் நெஞ்சழகன் காந்தி நிலையத்துக் கல்நாட்டக் கொஞ்சமோ பெற்றான் குளிர்ப்பு.(62) இராமானுசம் கணக்கு நிலையம் பிணக்கில் அனுசன் பெயராற் சிறந்த கணக்கு நிலையத்தைக் கண்டான்:- மணக்கும் இசையாளன்; தக்காரை என்றும் மதிக்கும் நசையாளன் காட்டும் நடப்பு.(63) சண்முக நூல் நிலையம் பண்முக நல்லிசைக்குப் பண்டைப் புகழ்காத்த சண்டுக நூல்நிலையம் சாற்றினார்; - உண்முகம் ஈந்து மகிழ்ந்தான்; எனைய துயர்வரினும் சோர்ந்து கிடவான் துணிவு.(64) வீரப்ப அம்மான் விடுதி ஒன்று குணத்துள் உயர்ந்த குணமென்னும் நன்றி யுணர்வில் நனிபெரியன்:- நின்றுயரும் வீரப்ப அம்மான் விடுதியெனக் கட்டினான்; தீரப்பன் ஈகைத் திறத்து.(65) தென்னிய கல்விக் கழகம் தில்லைத் தலைநகரில் தென்னாடு கண்டவொரு கல்விக் கழகக் கல்நீங்க - நல்ல இருபத்தை யாயிரம் ஈந்தான்; தனக்கென்று ஒருபத்தும் கொள்ளான் உயர்வு.(66) இந்தியக் கொடை தில்லி முதலாத் திருவனந்தை ஈறான கல்விக் கழகங்கள் கைகொடுத்தான்;- நெல்லி குடிக்க இனிக்கும்; கொடையழகன் வாழ்வு படிக்க இனிக்கும் பகுத்து(67) கொச்சி கொச்சித் திருநாடு கோடா வளம்பெருக மெச்சும் நிலையங்கள் மேவினான்; - நச்சித் தொழில்செய் யிடத்தினும் தொண்டுகள் ஆற்றும் எழில்செய் வணிகன் இவன்.(68) மலேயா மாணப் பொருள்சேர் மலேயா வளநாட்டும் காணவோர் கல்லூரி கட்டுரைத்தான்;- சேணும் அழகப்பா பேர்விளங்க அன்புருவாம் அய்யா கழகத்தைக் காண்பார் கடிது.(69) சென்னை வணிக்க் கழகம் சென்னை வணிகத் திருநிலையக் கட்டிடம் என்னை இடமளிக்க ஏறிற்று;- நன்னர்த் தொழிலைப் படிப்பைத் துணியைத் தமிழை எழிலைப் பெருக்கினான் ஈந்து.(70) பலகொடை புயலுக்குத் தந்தான்; புதைபொருளைக் காணும் வயலுக்குத் தந்தான்; வழக்கில் - செயலுக்கு நல்ல தெனக்கொண்ட நாட்டு மருத்துவக் கல்விக்குத் தந்தான் கதி.(71) கணக்கில் கொடை பத்தாக நூறாகப் பத்துநூ றாயிரமாய் எத்தனையோ ஈகை இவனளித்தான்; - அத்தனையும் சொல்லக்கணக்கறியேன்;சொல்லுமோர் சொல்லறிவன் எல்லாங் கொடுத்தவன் என்று.(72) பிறவிக்குணம் இலக்கியம் கற்றான்; இயல்சட்டம் கற்றான்; கலக்கியல் வாணிகமும் கற்றான்; - இலக்கம் அடுக்கப் பயின்ற அழகப்பன் எங்கோ கொடுக்கப் பயின்றான் கொடை.(73) மாணவக்கொடை உடன்கற்கும் மாணோர் உறுதுயர் கண்டு கடன்கொடான் கைமாற்றும் தாரான்;- மடம்படச் சென்று கொடுப்பான் திரும்ப ஒருசிறிதும் என்றும் தரவேண்டாம் என்று.(74) கொடை ஞானி கல்லாக் கொடையான்: கடலகமே பெற்றாலும் நில்லாப் பொருளான்: நிலைப்புகழான்:-எல்லாம் நிலையாமை கண்டுணர்ந்த நெஞ்சழகன் ஞானி அலையாமே ஈந்தான் அனைத்து.(75) புகழுடைமை பிறந்தபின் வந்த பெரும்பொருளை ஈயாது இறந்தபின் வைத்தல் இயல்போ? - அறிந்தபின் ஒன்றுமைமை வையா தொழித்தான்; புகழென்னும் நன்றுடைமை கொண்டான் நயம்.(76) கோடிக் கொடைஞன் கோடி கொடுத்த கொடைஞன்; குடியிருந்த வீடுங் கொடுத்த விழுச்செல்வன்:- தேடியும் அள்ளிக் கொடுத்த அழகன்: அறிவூட்டும் வெள்ளி விளக்கே விளக்கு.(77) அழகப்பர் வாழ்வியல் உழைப்பு இன்ன பெருவள்ளல் ஏலாத் துயருறுகை முன்னை விதியென்றால் முற்றுமோ? - என்னையோ ஊணும் உறக்கமும் ஓய்வும் மறந்து நாம் காண உழைத்த கதி.(78) யார் விதி? முன்னை விதியென்பார் முன்னாரோ? பிள்ளைபெறும் அன்னை விதியென்று அவள்சாதல்;- பின்னையென்? வள்ளல் விதியன்று; வாழக் கொடாஅநாம் கொள்ளும் விதியே கொடிது.(79) அன்பில் நோய் கற்றுநோய் தீரவே கல்வி அளித்தானைப் புற்றுநோய் தீண்டல் பொருந்துமோ? - சற்றுநோய் நின்றுபோம் என்று நினைத்தோமன்; சென்னையில் கொன்றுபோம் சூழ்ச்சித்தே கூற்று.(80) அறிவில் நோய் ஆளிலையோ பற்றுதற்கு; அன்னவனைப் பற்றுதற்கும் நாளிலையோ? என்புருக்கும் நன்னோயே! - வாளிலையே? கண்ணுக்குத் தோன்றாக் கடுநோய்க் கொடியாயை மண்ணுக்குள் மாய்க்கும் பொருட்டு.(81) சாபம் இன்று குமரிமுனை நாளை இமயமலை என்று பறந்த இவனுக்கோ - தின்றுபோம் நோய்ப்புற்று வந்ததுகாண்; நோயுட் கொலையாயை வாய்ப்புற்றுக் கொல்லாதோ வந்து.(82) குற்றிளமை நூறாண்டு கொள்ளும் நுவலரிய பல்வினைகள் ஆறாண்டிற் செய்த அழகனோ - கூறாண்டாம் ஐபத்தும் வாழான்: அறமும் தனித்திரங்க மெய்பற்று விட்டான் விரைந்து.(83) கலைநகர் நம்ப முடியவில்லை நாற்பத்தெட் டாண்டிற்குள் கம்பனும் காணாக் கலைநகராய்த் - தம்பொருளால் எல்லாரும் கல்வி யெழிலைப் பெறவைத்தான் பல்லாரும் வாழப் பகுத்து.(84) அருவக்காட்சி பென்னம் பெரியவன் பித்துக் கொடையாளன் சின்னம் சிறுகாலைத் தேரேறி - முன்னம் வருவானைக் கண்டேனும் வாழ்த்தினோம்; இன்றோ அருவானான் எங்கள் அழகு.(85) மெய்யுணர்வு தீராத நோய்களெனத் தேர்ந்தோர் முடித்திட்ட பேராத நோய்க்குப் பிறப்பளித்தான்; - சாராத துன்பத்தான் இன்பத்தான் தொண்டால் துயர்மறக்கும் அன்பத்தான் எங்கள் அழகு.(86) பகை வென்றி அறப்பகை வொன்ற அறிவன் முடிவில் புறப்பகை கொல்லப் பொடிந்தான்; - திறப்பகை உள்ளத்தின் மாசோ? உடலின் நலக்குறைவோ? எள்ளும் பகையோ எது?(87) வானச் செலவு வானூரக் கற்றான் மடிந்தபின் தாழாது தானூர என்றோ தமிழ்வள்ளல்; - மீனூரும் நேருக்கா கண்டான்; நெடுமூச்சு நின்றவரை ஊருக்கா வாழ்ந்தான் உயிர்.(88) திருக்குறள் விளக்கம் செயலுக்கு உரிய திருக்குறள் என்று மயலுக்கு இடமின்றி வாழ்ந்தான்; - உயலுக்கு நாடா மருந்தறைந்த நல்ல திருக்குறளைக் கோடாது விட்டான் கொடைக்கு.(89) மருந்தூண் மக்கள் உளதே வரையப் பெருங்கருத்துத் தக்கநற் றாளெனத் தானறிந்தான்; - ஒக்க விருந்துண்ண வைப்பான் விழாக்கள்; உடலை மருந்துண்ண விட்டான் மறந்து.(90) துன்பமாலை தில்லியிற் காலொடிந்தான்; தென்னாலை மாடிமேல் வெல்லும் அயிவயர்ந்து வீழ்வுற்றான்;- கொல்லுகின்ற புற்றுநோய்ப் பட்டான்; பொழுதுபடா ஈகையாற் சற்றுநோய் வென்றான் தணித்து.(91) கொடைத் தொழில் நூலை நெசவாக்கும் நுட்பத் தொழில் புகுந்து ஆலை பலவமைத்தான் ஆயினுந்தன் - வேலை கொடையாகக் கொண்ட குறிக்கோளி வாழ்க்கை தடையாகக் கண்டோம் தவித்து.(92) தற்பேணாமை வேலை புரண்டனைய மேலாம் பணங்கொழிக்கும் ஆலை முதலாளி யானாலும் - மாலை வளிவாங்கச் செல்லான்: வயிறதைக்கச் சாயான்; அளிதாங்கும் கோளான் அழகு.(93) காட்டுப்பள்ளி காட்டினை நாடாகக் கண்டவன் இன்றுதனிக் காட்டினை வேறாகக் கண்டானால்;-வீட்டினைப் பள்ளிக்கு விட்டான்; பலவாண்டு இராஅது கொள்ளிக்கு விட்டான் குடர்(94) வாழ்க்கை ஓட்டங்கள் படித்தான் பறந்தான் படைத்தான் நினைத்தான் கொடுத்தான் சிறந்தான் குறித்தான் - துடித்தான் எடுத்தான் முடித்தான் இனித்தான் அழகன் படுத்தான் விடுத்தோம் பணிந்து.(95) அழகப்பர் பெருமைகள் விரைந்த கொடை பணந்தான் நிலையாமை பார்த்தோ கொடுக்கும் குணந்தான் நிலையாமைகொண்டோ - கணந்தானும் மெய்தான் நிலையாமை மேவியோ வாழ்நாளிற் செய்தான் விரைந்து செயல்(96) விரைந்த செயல் வெள்ளி விடியுமுன் வீறுசால் கட்டிடங்கள் உள்ளும் உயரம் உயர்த்துவான் - நள்ளிரவும் மின் விளக்கம் வைத்து மிகவிரைந்து கட்டினான்; பொன்விளக்கங் கண்ட புதிர்.(97) வடிவழகன் நெற்றித் திலகன் நிவந்தசெம் மேனியன் கற்றை முடியன் கவின்வகுப்பன் - முற்றும் அரிய உழைப்பன் அணியில் எளியன் பெரிய கொடையன் பிறப்பு.(98) அறிஞன் கூர்த்த மதியன்: கொடையால் நிலமகளைப் போர்த்த புகழன்: புது நோக்கன்:- தீர்த்த துணிவுடையான்: நட்டோரைத்தோள் தழுவிப்பேசும் பணிவுடையான் வாழ்க்கைப் பதிவு.(99) தமிழ்ப் பொழிவு சேயான ஆங்கிலத்தைத் தேர்ந்த அறிவுடையன் தாயான செம்மொழியைத் தாங்குமவன் - வாயான பேச்சுத் தமிழில் பிறமொழி நுண்மைகளை நீச்சின் உரைப்பான் நிறுத்து.(100) திருக்குறட்கல்வி பன்னூற் கடலனைய பண்டித நன்மணிபால் தொன்னூற் குறளைத் தொடங்கினோன்;- நன்னூற் கலையார் களஞ்சியம் காணத் தமிழில் தலையார் நிதிதொடுத்தான் தந்து.(101) குறள் உவமை திறனாக யாரும் தெளிக்குந் திறத்தைக் குறள் போல என்று குறிப்பான்;- மறனாக யார்க்கும் பொருளால் நலியான்; கனவினும் வேர்க்குங் கொடையான் வெறி.(102) அருள் நூற்கல்வி ஆயசோர் வின்றி அருந்தமிழைக் கற்றுரைக்கும் ராயசொ நண்பன்: நறுந்தமிழன்:- தூயசொல் தேவாரம் அன்ன திருநூல் பலதெளிந்தோன் பூவாரம் பூண்டான் பொலிந்து.(103) அப்பர் கொள்கை ஆர்க்குங் குடியலமென்று அப்பர் துணிபுரைக்கும் சீர்க்குந் தமிழ்ப்பாத் திறனறிந்தான்;- தேர்க்கிடை அன்று தமிழ்க்கல்வி பட்ட அவலத்தை நன்று மொழிவான் நகைத்து.(104) தமிழ்க் குறிக்கோள் முன்னைக் கலைப்பள்ளி மூத்த குறிக்கோளைக் கன்னித் தமிழ்ச்சொலாற் காதலித்தான்;- நன்னீர் அன்பும் பணியும் அறமும் எனமூன்றும் இன்பிற் குறித்தான் எழுத்து.(105) தமிழ்ச் சொல்லாக்கக்குழு ஆக்கக் குழுவொன்று அமைத்தான்; தமிழ்வளர்வில் ஊக்கம் உடையான்: உறுத்துடையான் - நோக்கரிய நோக்கம் உடையான்; நொடியில் அதைமுடிக்கும் ஏக்கம் உடையான் இவன்.(106) பெரியாரைத் துணைக்கோடல் நாட்டுப் பெரியோரை நல்லுலக வாழ்க்கைக்குக் காட்டாகக் கொண்டான்; கவிஞர்க்குப்-பாட்டாகத் தானும் விளங்கினான்; தன்னாட்டு மக்கட்கு வானும் கொடுப்பான் வரின்.(107) காந்தி பாராட்டு காந்தி முதலாக் கருதரிய பல்புகழ் ஏந்தியர் எல்லாம் இவற்புகழ்ந்தார்;- போந்தபெருஞ் செல்வ வுடைமையைச் சீராய்ப் பொழிகின்ற கல்வி முகிலெனக் கண்டு.(108) கொடைப்பெருமை சாதுவும் நேருவும் தன்னில்லம் வந்தாரேல் யாதுங் கொடுத்த கொடையன்றோ;-ஏதும் தனக்கென்னத் தேடாத் தனியிலி மாய்ந்தால் எனக்கென்ன என்பார் இலர்.(109) தாமரையணி வேற்றரசு தந்த விலைமதியாச் சர்ப்பட்டம் மாற்றரசு நீங்க வழக்கொழித்தான்;- போற்றரசு நன்னர் மதித்தளித்த நற்றா மரையணிந்தான்; இன்ன பெரியன் இவன்.(110) டாக்டர் பண்ணார் தமிழகத்துப் பண்பார் இரண்டென்னும் கண்ணார் கலைப்பல் கழகங்கள்- எண்ணார் பெரும்பட்டம் தந்து பிறசிறப்புச் செய்த அருந்திட்டம் இட்ட அவற்கு.(111) மக்கட்பேறு ஒருமகள் செல்வ உமையாள் மணத்தைத் திருமகள் கண்களிப்பச் செய்தான்;- வருமகன் இல்லை தனக்கென் றினையாள்; எவர்மகவும் சொல்ல மகிழ்வான் சுவைத்து.(112) மக்கட் செல்வன் சாய்ந்த படுக்கையன் சாரா உணவினன் ஓய்ந்த உடலன் உளம்வலியன்;- வாய்ந்தவோர் ஆயிர மாணவரை அங்கழைத்துப் பேசினான்; சேயர் பலருடையான் சீர்.(113) அணைப்பியல் உருத்துச் சினந்தாலும் ஊழியர்கள் தம்மைப் பிரித்து விடாத பெரியன்;-திருத்தும் நெறியாளன்: வாழி: நிரம்பக் கொடுக்கும் குறியாளன் கொண்ட குறிப்பு.(114) நட்பியல் அல்லற் பொழுதில் அணைத்துக் கிடந்தாரைச் செல்வப் பொழுதிற் சிறப்பித்தோன்;-ஒல்வ உடம்பால் அறிவால் உயிராற் பொருளால் திடம்படச் செய்தான் திறம்.(115) கல்விப்பயன் அரிய கருத்தினைக் கற்றால் அதனைத் தெரியப் பிறர்க்குத் தெரிப்பான்;- பெரிய தனக்கொரு நூல்நிலையம் கண்டான்; தமிழ்பாடு எனக்கொரு நூலானான் இன்று.(116) அறிவுபரப்பல் பல்பொருட் காட்சி பரப்பி அறிவென்னும் கல்பொருள் மக்கட்குக் கற்பித்தான்;- நில்பொருள் ஈகையான் வந்த இசையென எண்ணினான்; வாகையான் வாழ்ந்த வழி.(117) அன்பியல் வேட்ட பரிசெல்லாம் வேண்டியார்க்கு ஈந்தவன் தோட்டப் பரிசுத் தொகைபெற்றான்;- வீட்டுப் பயிர்புரக்கும் பண்பன்: படியாத மக்கள் உயிர்புரக்கும் அன்பன் உயர்வு.(118) துணிபு தொலைபேசி கொண்டு துளைக்கும் அறிவு வலைவீசிக் கல்வி வளர்த்தான்;- விலைபேசிப் பம்பை விடுதியைப் பள்ளிக்கு வாங்கினான் தும்மை யுடையான் துணிவு.(119) மனத்திட்பம் பட்டப் படிப்பினன்; பார்கடந்து பெற்றபெருஞ் சட்டப் படிப்பினன்; சால்வணிகன்; - நட்டம் மலைபோல் அழுத்தினும் மாமல் புரத்துச் சிலைபோல் இருப்பன் சிரித்து.(120) இடுக்கண் அழியாமை அரித்துக் குடையும் அழிநோய் வருந்தச் சிரித்துக் குலுங்குந் திறத்தன்;- திரித்தும் இறைபழியா அன்பன்; இருந்தும் கொடாஅர்க் குறைபழியாச் சான்றோன் குணம்.(121) நடுநிலைமை நக்கீரன் போலும் நடுவுடையான் நஞ்சிவனார்க்கு ஒக்குமோ என்பான் உதைத்தமை; - தக்கவிதிக் காலம் முடிந்தமார்க் கண்டனை ஊரொப்பக் காலன் கவர்ந்தான் கடன்.(122) சிவனடியான் நன்றி யுணர்வொடு நாளும் இறைவனை ஒன்றி வணங்கும் ஒருமையன்;- என்றும் நலிவிலும் வாழ்விலும் நாயனார் போல வலிய மனத்தன் வழக்கு.(123) மெய்யறிவு செய்ஞ்ஞானம் பெற்றுச் சிறந்த தொழில்பெருக விஞ்ஞானக் கல்லூரி வித்திட்டான்;- எஞ்ஞான்றும் மெய்ஞ்ஞானம் வேண்டினான் மேலோரை நாடினான் பொய்ஞ்ஞானம் தீர்தற் பொருட்டு.(124) பெருஞானி தன்னைத் துயிற்றுந் தனியிடஞ் சுட்டிய பின்னர்த் துயின்ற பெருஞானி; - கொன்னே இறப்பினுக்கு அஞ்சான் எடுப்பின் கொடாஅப் பிறப்பினுக்கு அஞ்சும் பெரிது.(125) அழகப்பர் அறிவுரை இருபெருஞ் சொற்பொழிவுகள் பட்டப் பொழிவும் பலர்புகழ் நேருமுன் திட்டப் பொழிவும் திறக்குமே:- சட்டச் செறிவும் துணிபும் செயலும் தெளிவும் அறிவும் உடையான் அகம்.(126) பட்டம் அளிப்புவிழா ஆண்டில் இளைஞன் அறிவில் முதியனாய் நீண்ட அவைமுன் நிகழ்த்தினான்;- வேண்டும் கலைமைசால் சென்னைக் கழகத்துக் கல்விப் புலமைசால் பட்டப் பொழிவு.(127) மாணவர்க்கு கற்ற பெரும்பட்டம் காதலிக்கும் மாணவர்காள்! வெற்றி பெறுவீர்; வினை செய்வீர்; - உற்ற பெரியோர் உரைமறவீர்; பெற்றநன் னாட்டுக்கு உரியோராய் வாழ்வீர் உயர்ந்து.(128) உரிமை வளம் உரிமைக்கு முன்னர் ஒருவளமும் ஒவ்வா அரிய முடிபை அறைந்தான்; - தெரியப் பலநாடு சுற்றிப் பகுத்துணர்ந்தான்; செல்வக் கலைநாடி வாழ்ந்தான் கலித்து.(129) இந்தீயம் எண்ண விடுதலையே இந்தீயம் ஆமென்று திண்ணம் அறியத் தெளித்தானால்; - உண்ணும் உணவும் உரிமையும் ஒன்றாகா என்று குணமாகச் சொன்னான் குறிப்பு.(130) தனிப்பண்பு கல்வி வழியால் கருத்துக் கருவியைக் கொல்ல நினைத்தல் கொடிதென்றான்; - வல்ல இறைவன் படைப்பில் எவர்க்கும் தனிப்பண்பு உறையக் கிடத்தலை ஓர்ந்து.(131) வேற்றுமை வளர்ச்சி ஒன்றுபோல் எண்ணும் ஒருகல்வி நல்கினால் நன்றுபோம் என்று நலிவுரைத்தான்; - சென்ற இடைக்காலப் பேதைமை இன்றொழிக என்றான் கொடைக்காலங் கண்டான் கொதித்து.(132) ஆராய்ச்சி எல்லையே ஆய்வுக்கு இலையென்றான்; இவ்வுலகத் தொல்லையே வாழ்வுக்குத் தூணென்றான்;- கல்லையும் பொன்னுக்கு வாங்கிப் பொறிக்கோயில் கட்டினான்; என்னுக்கு மாய்ந்தான் இவன்.(133) அழகப்பர் கனவுகள் நனவுக் கனவு நனவில் ஒருநாள் நடக்கும் பெரிய கனவினைச் சோராது காண்பான்;- நினைவில் உருக்கொண்ட வெல்லாம் உரைப்பான்; கொடையில் மருக்கொண்டான் போலும் மகன்.(134) மருத்துவக் கல்லூரி மருத்துவக் கல்லூரி வைக்க நினைந்தான் கருத்து நிறைவேறக் காண்மின்;- திருத்தினும் முள்வளருங் காட்டில் முதிர்ந்த மடமைபோய் உள்வளர வைத்தான் ஒளிர்ந்து(135) தமிழ்விழா பண்ணார் தமிழ்விழாப் பார்க்க நினைத்தான்தன் எண்ணணம் செயலாக எண்ணுமினோ; - திண்ணம் வழிதெரியாக் காட்டில் வருகின்ற பெண்ணின் விழிதெரிய வைத்தான் விருந்து.(136) தமிழ் ஆராய்ச்சிக்கழகம் ஆயுந் தமிழ்க்கழகம் ஆக்க நினைத்தான்தன் தூய பணியைத் தொடங்குமினோ; - காயும் வெயிலாடு காட்டில் விளங்கிழை நல்லார் மயிலாட வைத்தான் மகிழ்ந்து.(137) அழகப்பா பல்கலைக்கழகம் பல்கலை தேர்கழகம் பற்றாய் நினைத்தான்தன் நல்ல குறிக்கோளை நாட்டுமினோ;- தொல்லைச் செடிநின்ற காட்டகத்துச் சில்லென்று பூக்கும் கொடிநிற்க வைத்தான் குறித்து.(138) அழகப்பர் வாழ்த்து மொழிவழி வாழ்வு குணமாய்ப் பிறந்தானோர் கோடி கொடுத்தான் பிணமாய் எனயாரும் பேசேல்;- மணமாய் வருதமிழ்ப் பாட்டிலும் வாழ்வான்; உமையாள் தருவழியும் வாழ்வான் தழைத்து.(139) நிலைவாழ்வு பத்தடுத்த கல்லூரி பாங்காய் நிறுவியவன் செத்தடுத்தான் என்றல் சிறக்குமோ;- முத்தெடுக்கும் தாய்நாடு வாழ்நாளும் தக்கோன் பெயர்சொல்ல வாய்நாடும் அன்றோ வழி.(140) நல்லிளமை எல்லாங் கொடுத்தான் இளமையில் ஏகினான் பொல்லா வினையென்று போற்றற்க; - கல்லாத பேயாரும் ஈயாரும் பேராண் டிருந்தென்ன நாயாரச் சாவார் நசித்து.(141) வாழ்வுநயம் தாயாங் கொடையாளி சான்ற படிப்பாளி நோயாய் இறந்தான் எனநொடியேல்; - காயாத மெய்யாற் பயனென்? விறகுக்கும் ஆகாது பொய்யாய்க் கழிவார் புகைந்து.(142) உயிர்மணம் சாந்த விறகடுக்கித் தக்க மணம்பூசிப் போந்த உடலைப் புதைத்தாலென்? - வாழ்ந்த உயிர்மணக்கச் செய்தான்; உறுகொடையால் மக்கட் பயிர்மணக்கச் செய்தான் படித்து(143) எதிரிலி மாந்தரை யெல்லாம் மதிபெற வைத்தானைச் சாந்தரை பூசித் தகித்தாலென்? - வேந்தரை ஈகையான் வென்ற எதிரிலி; இவ்வெல்லாம் நாகைப்பின் வந்த நடப்பு.(144) இறவாப் பிறவி இறந்தான் எனச்சொல்ல ஏதில்லை; என்றோ மறந்தான் உடலை மதியான்; - சிறந்தான் பிறந்தான் எனநான் அறிவன்; பிறிதொன்று அறந்தான் அறியும்; அறி.(145) மறுபிறப்பு மறப்பின்றிக் கல்வி வளர்த்தாளை ஈண்டுப் பிறப்பில்லை என்றமதம் பேசேல்; - சிறப்பின்றி நாம்பிறத்தல் காறும் நலஞ்செய் அழகனைத் தாம்பிறக்க வேணடல் தகும்.(146) வேண்டல் மீண்டும் பிறப்பாய்: மிகப்பலவாய் நீபடைத்த ஈண்டு படிப்பாய்; இசைபெறுவாய்;- வேண்டும் நிதியை அளிப்பாய்: நினைமறந்த எங்கள் விதியை நகுவாய் வியந்து.(147) காந்தி வாழ்த்தல் அண்ணலார் காந்தி அழகனார் வாழ்கவென எண்ணினார் மாலை இறைதொழுதார்; - திண்ணம் அழகப்பா மாட்சி அரியவை யேனும் பழகப்பார் நெஞ்சே பகுத்து.(148) உலகக் கடன் மாணவர் நன்றி வள்ளலின் மெய்த்தேரை வாழ்த்திப் பிடித்துவந்த எள்ளலில் நன்றி இளைஞர்காள்! - உள்ளுதிர் ஞாலத்தை வாழ்வித்தான் நல்ல குறிக்கோளான் காலத்தை வென்றான் கதை.(149) மாணவர் ஒழுக்கம் பொற்குன்றம் அன்ன பொருளை அறிவூறும் கற்குன்றம் ஆக்கினான் காண்மினோ; - சொற்குன்ற என்றும் ஒழுகாரே ஈண்டுப் படிக்கவரும் நன்றுசால் மாணோர் நயந்து.(150) மாணவர் குறிக்கோள் தந்தை மறுக்கவும் தானே படித்தானை வந்தனை செய்ம்மினோ மாணவரீர்;- சிந்தை அழிநூல் தொடாஅது அரியகுறள் போலும் மொழிநூல் படிக்க முனைந்து.(151) ஆசான்கள் புத்தம் புது நூல்கள் புகுந்து படிப்பானை மெத்தநல் லாசான்கள் வேண்டுமினோ; - நித்தமும் ஊதியம் எண்ணாது உயரவரும் மாணவர் பேதைமை நீக்கப் பெரிது.(152) செல்வர்கள் நன்று கொடுத்தானை நாடிக் கொடுத்தானைச் சென்று தொழுமினோ செல்வரீர்; - இன்றுவரை இம்மி கொடாரும் இவனைத் தொழுதபின் வம்மென ஈவர் வலிந்து.(153) வணிகர் பாழ்த்த நிலையிலும் பண்பிற் றிரியானை வாழ்த்துமினோ நல்ல வணிகரீர்; - ஊழ்த்த பொருளைக் குவிக்குங்கால் போயொழியும் என்ற தெருளை நினைக்கத் தெளிந்து(154) துன்பர் வந்த இடும்பையெலாம் வாழப் பிறந்தானை நொந்த மனத்தீர் நுவலுமினோ;- கந்தை உடுத்து நிலையிலும் உள்ளச் சிறப்பை அடுத்து நிலைத்தல் அணி.(155) இளம்பெண்கள் ஊரார் குழந்தையை ஊட்டி வளர்த்தானைக் கூரார் குவிமுலையீர் கூப்புமினோ; - சீரார் அழகனைப் போலொருநாள் அள்ளிக் கொடுக்கும் குழகனைப் பெற்றுக் கொள.(156) தமிழ் மக்கள் சங்கப் பெருங்கொடைக்குச் சான்றாகி நின்றானைப் பொங்கற் றமிழகத்தீர் போற்றுமினோ; - எங்கும் வறனிலைத்த காட்டில் வழிகாட்டுங் கல்வி அறநிலையம் கண்டான் அழகு.(157) இந்திய மக்கள் பூத்திரை கொண்டான் புதிய தலம்நாடி யாத்திரை செய்ம்மினோ நாட்டவரீர்;- தீத்திரை கொள்ள இறவான்; கொடுத்த பசும்பொன் போல் உள்ளம் ஒளிர்வான் உயர்ந்து.(158) உலக மக்கள் கல்லாரும் கற்றாரும் காளையரும் கன்னியரும் எல்லாரும் இன்றுமுதல் ஏத்துமினோ;- வல்லவரை ஆக்குவோம் காப்போம் அழகப்பன் போலொருநாள் போக்குவோம் கல்விப் பொருட்டு.(159) வழுத்து முறை பழுத்த கொடையாற் பரந்தானை மக்காள் வழுத்து முறையால் வழுத்தீர்;- உழுத்தும் கொடுக்க நினையார் கொடுப்பவர் கையைத் தடுக்கப் புகாமை தலை.(160) கல்விப் பூசனை காசினை விட்டானைக் கல்லூரிக் காதலனைப் பூசனை தொண்டாற் புரிமினோ;- பேசிலென்? பிள்ளைகள் கற்கப் பிறந்தநும் ஊர்தொறும் பள்ளிகள் வைத்தல் பயன்.(161) பூக்கள் தொண்டாடும் நெஞ்சால் துயரம் மறந்தான்பால் வண்டாடும் பூக்காள் மணம்பெறுவீர்;- திண்டாடும் மக்கட் பசிக்கு மருந்தளித்தான்; வாயூறும் மிக்க புகழ்மணத்தான் மீது.(162) புள்ளினங்கள் ஊனோடு நாளும் உறுகொடை செய்தானை வானோடு புள்ளினங்காள் வாழ்த்துமினோ;- தேனொடு சோலை அமைத்தான்; தொழில்வழங்கித் தீயார்தம் கோலைப் பறித்தான் குணம்.(163) குருவிகள் பொட்டுத் திகழும் புகழ்சான்ற நெற்றியனைச் சிட்டு குருவிகாள் சேர்மினோ;- வட்டினால் நொந்தாடி நும்மை நொடிப்படுத்தும் பிள்ளையாரைப் பந்தாடச் செய்தான் படித்து.(164) கிளிகள் ஆண்டுக் கணக்காக ஆயுள் முடித்தான்பால் ஈண்டுங் கிளிகாள் இரமினோ;- மீண்டிவண் கற்கும் மகளிர்க்குக் காதலந் தோழியராய் நிற்கும் மறுபிறவி நேர்ந்து.(165) குயில்கள் பாலுங் கொடுத்துப் பயிற்றும் அழகனை ஏலுங் குயில்காள் எழுப்புமினோ;- சாலுங்காண் இங்ஙன் அமைத்த எழுபள்ளி காணாதே எங்ஙன் உறங்கும் இவன்.(166) வண்டு நானோதும் செல்வனை நாடும் உலகோர்க்குத் தேனூது வண்டே தெரிப்பாயால்;- தானூது இயற்கை யிசையோ இனியபிறர் சொல்லும் செயற்கை யிசையோ சிறப்பு.(167) நாட்டுடைமை ஈண்டுநீர் ஞாலத்தார் இக்கோயில் காக்கவெனப் பாண்டியன் சொன்ன பரிசேபோல் - வேண்டுதும் பாட்டுக்கு உரியான் படைத்த நிலையங்கள் நாட்டுக்கு உடைமை நனி.(168) பெரியபடைப்பு உடைப்பிற் புனல்போல் ஒருங்கு துறந்தான் நடைப்பின் சிறிதும் நடப்போம்;- தடைப்பென்? படைப்பிற் பெரியானைப் பாடினேம் பண்பை நடப்பிற் பழக நயந்து.(169) கொடைநன்றி காதற்ற வூசியும் வாராமை கற்றுணர்ந்த தீதற்ற ஞானி திருவுளத்தை - ஓதுற்றுக் கூட்டிய செல்வத்துள் கூடும் கொடைசெய்து காட்டுவோம் நன்றிக் கடன்.(170) பகுத்துவாழ் நீள எழுதும் நினைப்பிலேன் செல்வத்தை ஆளப் பிறந்தான் அணிகதையை;- மீள வழிகாட்டுந் தோன்றல் வரலாறு கேட்பார் பழியோட்டி வாழ்வார் பகுத்து.(171) பின்குறிப்பு 2.திரு. ஆ. முத்துசிவனார் அழகப்பா கல்லூரி தமிழ்ப் பேராசிரியர், அசோக வனம், மேடைக்கலை, அசலும் நகலும், கவிதையும் வாழ்க்கையும் முதலான திறனாய்வு நூல்கள் எழுதியவர். இவர் மிக்க இளமையில் மறைவு எய்தினார். இவர் தம் வாழ்க்கை வரலாற்றை அழகப்பா கல்லூரி வெளியிட்ட ‘முத்துசிவனார் நினைவு மலர்’ என்னும் நூலிற் காணலாம். டாக்டர் அழகப்பா ஐரோப்பிய நாடுகள் சென்று திரும்பி வந்தபோது 1-9-1951இல் பேராசிரியர் தமிழ்ப் பாராட்டிதழைப் பெருமிதத்தோடும் கணீர்க் குரலோடும் படித்துக் கொடுத்தார். ஆங்கிலப் பாராட்டை முன்னரே கேட்ட அழகப்ப வள்ளல் ’எது மூலம் எது மொழிபெயர்ப்பு என அறியேன்’என்று ஆ.மு. வின் தமிழ்நடையைக் கூட்டத்தே புகழ்ந்தனர். 3.மக்கள் அழுவதால் அழகப்பா இறந்துவிட்டார் என்ற செய்தியை இனி நம்பத்தான் வேண்டும். 5.காரைக்குடி வணிகப் பெருமக்கள் இரண்டுநாள் கடையடைத்தனர். 6.அழகப்பாவைப் பாராட்டிய பாரத ரத்தினங்கள்:- ச. இராசகோபாலாச்சாரி, பண்டித சவகர்லால் நேரு, ச. இராதாகிருட்டினன், சி.வி. இராமன், மோ. விசுவேசரய்யா தேர் - அழகப்பா உடலைத் தாங்கி வந்த ஊர்தி 12.செல்லார் - செல்லாத காசு உடைய செல்வர் 13.வள்ளல் என்ற கொடைப் பெயருக்குத் தக்கவன் அழகப்பனே என்றபடி உயிரைவிட்டு நிலையாகப் படுக்க நினைத்தவன் யாரெனின், வாழ்நாளில் எல்லாவற்றையும் பகுத்துக் கொடுக்க நினைத்தவன். 14.25-7-1948இல் மின்சார வேதியல் ஆராய்ச்சி நிலையத்துக்குக் கால்கோள் செய்ய முதலமைச்சர் நேரு காரைக்குடி வந்தார். அன்று பல்லாயிரமக்கள் கூடினர். அக்கூட்டத்தினும் மிகுதியான மக்கட்கூட்டம் அழகப்பாவின் மெய்த்தேரைக் காணக் குழுமிற்று. எல்லா மக்களும் அழுதனர்; தொழுதனர். ஆதலால், நிலம் அழுததையும் வானம் தொழுததையும் காண்பதற்கு யாரும் இல்லை. 17.25-10-1952இல் பாரத ரத்தினம் ச. இராசகோபாலாச்சாரியார் அழக;பபா கல்லூரிப் பேரவையில் சொற்பொழிவாற்றுங்கால், “பணம் சேர்க்கின்ற ஒரு வழியே பலருக்குத் தெரியும். சேர்த்த பணத்தை எல்லார்க்கும் பகுத்துக் கொடுக்கின்ற மறுவழி ஒருவர்க்கும் தெரியாது. இருவழியும் தெரிந்தவர் அழகப்பா” என்று போற்றினார். 21."காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம்பெருக்கி" - பட்டினப்பாலை. கரிகாலன் வரிப்பொருளால் அன்றித் தானே உழைத்து ஈட்டிய பொருளால் நாட்டு வளர்ச்சி செய்யவில்லை. அழகப்பன் தன் பொருளால் காட்டையழித்து நாடாக்கினான். 22."யாமும் பாரியும் உளமே குன்றும் உண்டுநீர் பாடினிர் செலினே" (புறம்.110) இதனால் பாரி தான் இருந்த பறம்புமலையைக் கொடுக்க வில்லை என்பது பெறப்படும். அழகனோ தான் வாழ்ந்த கோட்டையூர் மாளிகையையும் கல்லூரிக்குக் கொடுத்து விட்டான். ஆரில் - அரியமனை, மாளிகை 24.இடக்கொடை - ஆயிரத்துக்கு மேலான ஏக்கர் கல்லூரிக்கு வழங்கினான். 25.“கொடுக்கிலாதானைப் பாரியே யென்று கூறினு கொடுப்பாரிலை” இவ்வாறு சுந்தரர் பாரியின் வண்மையைப் பாடினாலும் வீட்டையும் வழங்கிய அழகப்பர் வண்மை பாரியின் வண்மையினும் பெரிது. ஆதலால் இனி அழகப்பன் என்னோ அழைப்பினும கொடுப்பாரிலை என்று சுந்தரன் பாட்டினை புதுப்பிக்க வேண்டும் என்பது கருத்து. 26 "கடாஅ யானைக் கழற்காற் பேகன் கொடைமடம் படுத லல்லது" (புறம். கசஉ. பரணர்.) "உடாஅ போரா ஆகுதல் அறிந்தும் படாஅம் மஞ்ஞைக்கு ஈந்த எங்கோ" (புறம். கசக. பரணர்.) உடுத்துக் கொள்ள மாட்டா, போர்த்துக் கொள்ள மாட்டா என்று அறிந்தும் பேகன் தன்னறிவு மயங்கி மயில்களுக்குப் போர்வைகள் வழங்கினான். அறிஞர் அழகனோ மயங்காது தன்னறிவைக் கல்லாதவர் அறியாமை தொலைக்க வழங்கினான். 27.தம்பி இளங்குமணன் நாட்டைப் பறித்துக் கொள்ள, அண்ணன் குமணன் காட்டில் வாழ்ந்தான். அங்கும் புலவர் பெருந்தலைச் சாத்தனார் பரிசு பெறச் சென்றார். தன் தலையை வெட்டிக் கொண்டு போய்த் தம்பியிடம் கொடுத்துப் பரிசு பெறுக என்று குமணன் புலவர் கையில் வாளைக் கொடுத்தான் என்பது வரலாறு., (புறம். ககூரு) 28.பழைய வள்ளல்கள் கற்றார்க்குப் பொருள் வழங்கினார்கள். வள்ளல் அழகன் கல்லார்க்குக் கல்விப் பொருள் வழங்கினான். 29.சங்ககாலத் தமிழ் வள்ளல்கள் செய்த பெருங்கொடைகளைத் தன் கொடையால் நம்பும்படி செய்தவன் என்பது கருத்து. 30.பத்தாண்டுகட்கு மன் கோட்டையூரில் நிகழ்ந்த ஒரு பாராட்டுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய அண்ணாமலையரசர் அழகப்பாவுக்கு ‘வள்ளல்’ என்று பெயர் சூட்டினர். அவ்வமயம், பணிவு நிரம்பிய அழகப்பர் நீங்கள் இருக்கும் போது ‘குட்டி வள்ளல்’ என்றுதான் என்னைச் சொல்ல வேண்டும் என்று பல்கலைக்கழகம் கண்ட அண்ணாமலையாரைப் புகழ்ந்து கூறினர். இக்குறிப்பை 15-2-1957 ஆம் நாள் கோட்டையூரில் நடந்த பாராட்டுக் கூட்டத்தில் அழகப்பாவே நினைவுகூர்ந்து சொல்லக் கேட்டோம். 31.வள்ளல் என்ற தமிழ்ச்சொல் செய்த தவத்தால் பிறந்தவன் அழகப்பா. 32.தனிக்கொடைகள்:- முல்லைக்குத் தேர் ஈந்தது, மயிலுக்குப் போர்வையளித்தது, கல்விக்கு மனைவழங்கியது. 33.3-7-1947 இல் அடையாற்றில் பெசண்டு அம்மையார் நூற்றாண்டு விழாவிற்குத் தலைமை தாங்கிய சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் ஆ. இலட்சுமண சாமி முதலியார் ‘புதிய கல்லூரிகள் நிறுபப் பலர் முன்வரவேண்டும்’ என்று ஆர்வத்தோடு வேண்டுகோள் செய்தார். உடனே டாக்டர் அழகப்ப எழுந்திருந்து ‘இராமநாதபுர மாவட்டத்தில் ஒரு கல்லூரி நிறுவுவேன்’ என்று உரைத்தார். ஒரு திங்களுக்குள் காரைக்குடியில் கல்லூரி தோன்றிற்று. 36.சிலம்பின் வரி- சிலப்பதிகாரத்தின் வரிப்பாட்டுகள். 39.பல துறையிலும் சிறந்த பெரியவர்களை அழகப்பா காரைக்குடிக்கு அடிக்கடி அழைத்துவருவார். இரவிலும் மாலையிலும் விருந்துகள் வைப்பார். இவ்விருந்துகள் பவநகர் முற்றத்தும் நேருக்காவிலும் நிகழும். 40.புகைவண்டி ஏறிக் காரைக்குடி வழியாகச் செல்லும் மக்கள் அழகப்பா நிறுவிய கல்லூரிக் கட்டிடங்களை அணி அணியாகக் காணலாம். 41.இங்கு தொடக்கப் பள்ளியில் வந்து சேர்ந்த ஒரு குழந்தை எல்லாக் கல்வியும் பெற்றுத் தொழிற்படிப்பும் தேர்ந்து நன்றாக வாழும் தகுதியோடு வெளியேறலாம். அவ்வளவு படிப்பிற்கும் ஏற்ற பள்ளிகள் இங்கு உள்ளன. இந்நூலில் ‘ஈண்டு’ எனவரும் இடமெல்லாம் காரைக்குடியைக் குறிக்கும். 43.மாண் ஆக்கும் தாயர் - கல்வி கற்பிக்கும் ஆசிரியச் செவிலிகள். 45.நாள் இழக்கும் கோடியர் - கொடுத்துப் புகழ் ஈட்டாது வாழ்நாளைக் கழிக்கும் கோடிப்பெருஞ் செல்வர். 47.4-12-1954 சென்னை அரசின் தொடக்கக் கல்விச் சீரமைப்புக் குழுவிற்கு டாக்டர் அழகப்பா தலைவரானார். நாடெங்கும் சுற்றிப் பல பள்ளிகளின் செயல்களை நேரிற் கண்டார். புதிய திட்டங்கள் அமைந்த தம் அறிக்கையைச் சென்னை அரசிடம் (2-10-1955) கொடுத்தார். 48.பட்டம் அடுத்த முதியர் - அழகப்பா ஆசிரியப்பயிற்சிக் கல்லூரி மாணவர்களும், உடற்கல்விக் கல்லூரி மேல் நிலை மாணவர்களும். 53.ஆராய்ச்சிக் கழகத்தைக் காரைக்குடியில் அமைப்பதற்கு அங்குப் போதிய நீர்வசதியில்லை என்று ஒரு தடை உண்டாயிற்று. பெருங்கிணறுகள் தோண்டி நீருண்மை காட்டினார் அழகப்பா. 54.எத்தடையையும் விலக்கிக் காரைக்குடியில் ஆராய்ச்சிக் கழகத்தை நிறுவத் துணிந்தார் அழகப்பா. பொருட்கொடையால் ஆகாததில்லை என்று அறிந்த அழகப்பா காரைக்குடியில் ஆராய்ச்சிக் கழகம் நிறுவுவதாயின் முந்நூறு ஏக்கரும் பதினைந்து இலட்ச நிதியும் தருவேன் என்று ஆர்வத்தோடு முதலமைச்சர் நேருவை நள்ளிரவில் கண்டு வாக்களித்தார். 55.அழகப்பா தாமே ஆள்மூலம் சொல்லிவிட்டு ஐந்து இலட்சத்தை நேரடியாகக் கொடுத்தார். 56.பொறிவனங்கள் - பொறியியல் தொடர்பான நிறுவனங்கள். 57.மைசூர், திருவிதாங்கூர், ஆந்திரம், அண்ணாமலை, வேங்கடேசுவரர் பல்கலைக் கழகங்கள் சென்னைப் பல்கலைக் கழகத்தினின்றும் தோன்றியவை; ஆதலின் ‘அன்னைக் கழகம்’ எனப்பட்டது. 62.சென்னை தக்கர் பாபா வித்தியாலயத்தில் அழகப்பா மண்டபத்துக்குக் காந்தியடிகள் கல்நாட்டினார். 64.இந்தியக் குடியரசின் முதல் நிதியமைச்சராகவும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகவும் இருந்த டாக்டர் சண்முகஞ் செட்டியார் நினைவாக இந்நூல் நிலையத்தை அழகப்பா தோற்றினார். 65.அழகப்பா கல்லூரி விடுதி நான்கினுள் இவ்விடுதியும் ஒன்று. வீரப்ப அம்மான் என்று நாம் சொல்வது போலவே முறைப்பெயர் திகழ இவ்விடுதிக்குப் பெயரிட்டார். 69.மலேயா வாழ் செட்டியார்கள் அங்கு ஒரு கல்லூரி அமைத்துக் கல்வித் தொண்டு செய்ய வேண்டும் என்று மலேயா சென்றிருந்தபோது அழகப்பா வேண்டுகோள் விடுத்தார். அதன்படி பெருநிதி சேர்க்கப்பட்டது. திரு. க.வீ. அழ. மு. இராமநாதன் செட்டியார் அவர்கள் (ஐயா என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர்கள்) அக்கல்லூரியை அழகப்பா பெயரால் அழைப்பதென்றும், விரைவில் அதனைத் தொடங்குவதென்றும் நன்றியுணர்வொடு அறிவித்துள்ளனர். 79.பழவினை எனின் அது நம்வினையே என்து கருத்து. 81.அருவப் பொருளாகிய நோயை அழிக்க ஒரு வாளில்லையே என்று வருந்தியபடி. 84.பிறப்பு 6-4-1909 இறப்பு 5-4-1957 85.1957 பிப்ரவரியில் கல்லுரி வட்டத்துக்கு அழகப்பா வந்தார். இருசக்கரம் அமைந்த சிறுவண்டியில் சாய்ந்தவண்ணம் எல்லாவற்றையும் பார்வையிட்டார். கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றினார். மக்கள் எல்லோரும் அவரை வணங்கி முழுநலம் பெற்று வருக என்று வாழ்த்திச் சென்னை செல்ல விடையளித்தனர். கல்லூரி வட்டத்துக்கு இதுவே அவருடைய கடைசி வருகை என்று அன்று யாரும் கருதவில்லை. 88.லண்டணில் வானூர்தி இயக்கப்பயின்று சான்றிதழ் பெற்றார். நேருக்கா-சவகர் சோலை. இது அழகப்பா கல்லூரி வட்டத்தில் உள்ளது. இங்கு மாலை விருந்துகள் நடக்கும். 89.கொடை செய்யும் ஒரே நினைவால், ‘மருந்தென வேண்டாவாம்’ என்பது போன்ற திருக்குறள்களைக் கைக்கொள்ள மறந்துவிட்டான் என்பது கருத்து. 90.உயர்ந்த கருத்துக்களை எழுதுவதற்கு ஏற்ற தாள் மக்கள் மனங்களே என்று தெளிந்து கல்வி நிலையங்கள் கட்டினான் என்பது கருத்து. 91.தென்னாலை - கண்ணனூர் உமையால் நெசவாலை. 94.அழகப்பா கோட்டையூரில் பிறந்தவர். இறந்தபின் அவ்வூர் இடுகாட்டில் தம்மை அடக்கஞ் செய்வதை அவர் விரும்பவில்லை. தம் எண்ணத்தை, அறிவை, பொருளை யெல்லாம் பணிகொண்ட கல்லூரி வட்டத்திலேயே தம்மைச் சமாதி செய்ய வேண்டும் என்று விரும்பினார். இறப்பதற்கு இனி நெடுநாள் இல்லை என்று உணர்ந்த அழகப்பா, கல்லூரி வட்டத்துத் தமக்கு உரிய இடம் இது என்று முன்னரே காட்டியிருந்தார். இறந்தபின் அவர் விருப்பப்படி, உடல் அவ்விடத்திலேயே எரியூட்டி அடக்கம் செய்யப்பட்டது. 97.அழகப்பா கல்லூரியின் அறிவியற் கட்டிடங்கள் இங்ஙனம் கட்டப்பட்டன. 101.பண்டிதமணி மகாமகோபாத்தியாய மு. கதிரேசச் செட்டியார் அவர்கள் அண்ணாமலையரசர் கோட்டையூரில் தலைமைவகித்து அழகப்பரைப் பாராட்டிய கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். அதுமுதல் நட்பு வளர்ந்தது. பண்டிதமணியவர்களைச் சென்னை வேப்பேரி மாளிகைக்கு அழைத்துத் திருக்குறட் பகுதிகளை ஓரளவு அழகப்பா கற்றுக் கொண்டனர். தமிழில் கலைக்களஞ்சியம் தொகுப்பதற்குத் தமிழ்வளர்ச்சிக் கழகத்துக்கு ரூபாய் பதினாயிரம் முதற்கண் கொடுத்தார். 102.திரு. இராசகோபாலாச்சாரியார் அவர்கள் எழுதிய ஒரு கடிதத்தைக் ‘குறள் போல’ என்று அழகப்பா குறிப்பிட்டார். 103.அமராவதிபுதூர் தமிழ்க்கடல் ராய. சொக்கலிங்கம் அவர்கள் அழகப்பாவொடு நெருங்கிப்பழகிய ஒரு பெருந்தமிழ்ப்புலவர்; அழகப்பாவுக்குத் தமிழில் நல்ல ஈடுபாட்டை உண்டாக்கியவர்; தமிழ் இலக்கியத்தின் சிறப்பை நன்கு அறியச்செய்தவர்; அழகப்பா நலத்தோடு இருந்த போதும் நலங்குன்றிய காலத்தும் உடனிருந்து தமிழமுது ஊட்டியவர்; ‘என் ஆசிரியர்’ என்று அழகப்பாவால் அழைக்கப் பெற்றவர். 104.சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்புச் சொற்பொழிவில் உரிமைவேண்டும் என்ற கொள்கையை அழகப்பா விரித்து ரைக்கும்போது ‘நாமார்க்கும் குடியல்லோம்’. என்ற திருநாவுக்கரசர் பாடலை மேற்கோளாகக் காட்டினார். காரைக்குடி கம்பன் திருநாளில் பேசுங்கால் தாம் இளமையில் பெற்ற தமிழ்க்கல்வியைப் பற்றிக் குறிப்பிட்டார். 105.முதலில் தோன்றிய அழகப்பா (கலைக்) கல்லூரியின் குறிக்கோள் அன்பு, அறம், பணி என்பது. இக்குறிக்கோளைத் தமிழில் அமைப்பதற்குப் பெருந் தூண்டுதலாக இருந்தவர் திரு. சா. கணேசன் அவர்கள் ஆவர். 106.திரு ச. இராசகோபாலாச்சாரியார் வேண்டுகோட்படி தமிழ்ச் சொல்லாக்கக்குழு அழகப்பா கல்லூரியில் 30-1-1954இல் நிறுவப்பட்டது. 109.14-8-1956 இல் குடியரசுத்தலைவர் டாக்டர் இராசேந்திரப் பிரசாதும், 30-1-1957இல் முதலமைச்சர் சவகர்லால் நேருவும் வள்ளல் அழகப்பாவை அவர்தம் வேப்பேரி மாளிகைக்கு வந்து நலம் உசாவினர். 110.தாமரையணி இந்திய அரசு வழங்கிய ‘பதும பூசணம்’ என்னும் பட்டம். 111.1943இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் டி.லிட். பட்டமும் 1944இல் சென்னைப் பல்கலைக்கழகம் எல்.எல்.டி. பட்டமும் அழகப்பாவுக்கு வழங்கின. பிற சிறப்பு:-அழகப்ப செட்டியார் தொழில் நுணுக்கக் கல்லூரி தோற்றியது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பொறியியற் கல்லூரிக் கட்டிடங்களுக்கு அழகப்பாவின் பெயரைப் பொறித்தது. 112.அழகப்பருக்கு ஆண் மகவு இல்லை. உலக வழக்கம்போல ஒரு மகனைத் தமக்குக் கூட்டிக்கொள்ளவும் விரும்பவில்லை. 113.நோய்வாய்ப்பட்ட அழகப்பா 27-8-1956 இல் உடற்கல்விக் கல்லூரித் துவக்க விழாவிற்குப் படுத்த படுக்கை நிலையிலேயே சென்னை யிலிருந்து கல்லூரி வட்டத்துக்கு வந்தார். சிறு பள்ளி முதல் கல்லூரிகள் வரை படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களை அருகே அழைத்துத் தனித்தனி கண்டு படிப்பு நலம் முதலியவற்றை வினவினார். 117.17-11-1955இல் அழகப்பா கல்லுரி வட்டத்துள்ள பல்துறைக் கல்லூரிகள் பொருட்காட்சி நிகழ்த்தின. ஐம்பதினாயிரமக்கள் ஆண்களும், பெண்களும் அக்காட்சிகளை வரிசையாகவும் அமைதியாகவும் நின்று பார்த்து அறிவு பெற்றனர். 118.சென்னை வேப்பேரி மாளிகைப் பூந்தோட்டத்துக்குப் பரிசு பெற்றார் அழகப்பா. 119.பம்பாய் விடுதியை வாங்கிய வரலாறு:- பம்பாய் ரீட்சு விடுதி மேலாள் அழகப்பர் தங்குவதற்கு அறை காலியில்லை என்றார். எத்தனை அறைகள் இந்த விடுதியில் உண்டு? என்றார் அழகப்பர். விலைக்கு வாங்குபவர் போலக் கேட்கிறீரே? என்றார் மேலாள். ஆம் என்று விடையிறுத்து உடனே முன்பணம் கொடுத்தார். பின்னர் அவ்விடுதியை விலைக்கு வாங்கிக் கல்லூரிக்கு நிதியாக வைத்தார் என்ப. 122.சிவன் அளித்த பதினாறு ஆண்டு முடிந்தபின் மார்க்கண்டனை இயமன் கவர்ந்தது முறை என்றும், சிவன் உதைத்தது முறையன்று என்றும் அழகப்பா சொல்வார். புராணக் கருத்தையும் இங்ஙனம் அலசிப் பேசுவது அவர் பண்பியல். 126.18-8-1954இல் சென்னைப் பல்கலைக் கழகப் பட்டம் அளிப்பு விழாச் சொற்பொழிவு நிகழ்த்தினார் அழகப்பர். 25-7-1948 இல் மின்சார வேதியல் ஆராய்ச்சி நிலையத்துக்கால்கோள் செய்ய முதலமைச்சர் நேரு காரைக்குடி வந்தார். அன்று அழகப்பா தம் வரவேற்புரையில் தாம் மேல் நிறுவ எண்ணியிருக்கும் திட்டங்களை வெளியிட்டார். 129.மனிதன் உரிமையாக எண்ணவும், உரிமையாகப் பேசவும், சில வரம்புக்கு உட்பட்டு உரிமையாகச் செய்யவும் வேண்டும். இவ்வுரிமைக்குத் தக்க செவ்வியை என்றும் காத்துக் கொள்ள வேண்டும். எனையளவு செல்வமும் உரிமை கொடுக்கும் ஒரு சூழ்நிலைக்குச் சமம் ஆகாது என்று அழகப்பா பட்டப்பொழிவில் அறுதியிட்டுரைத்தார். 130.எண்ணும் உரிமையை எங்ஙனம் நம் முன்னோர் வளர்த்தார்கள் என்பதை இந்திய வரலாற்றிலிருந்து பலபட எடுத்துக்காட்டினார். 131.மனிதன் சொந்த எண்ணத்தை அழிப்பதே பிழை. இன்றோ அவ்வெண்ணத்தை அழிப்பதோடு நில்லாது. கல்விப் பெயரால், எண்ணுதற்குரிய மூலநெஞ்சினையே குழந்தை நிலைமுதல் கெடுத்துவிடுகின்றோம் என்று உரிமையழிவு பற்றி வருந்திக் கூறினார். 132.அரசியலிலும் பிறதுறைகளிலும் ஒருசார்பான கோட்பாடுகளையே மாணவர் அறியும்படி மேற்படிப்புத் திட்டங்களை அமைத்தல் முடிவில் நாட்டிற்குக்கேடு என்றும், பிற நாட்டவரின் நல்ல கருத்துக்களைத் தழுவிக்கொள்ளாது நமக்குத் தெரியாது என்ன இன்று இடைக்கால இந்தியர் போலத் தற்பெருமை பேசல் அறிவீனம் என்றும் அழகப்பர் பட்டப்பொழிவில் அறிவுறுத்தினார். 135.காரைக்குடியில் மருத்துவக் கல்லூரி ஒன்று நிறுவ வேண்டும் என்பது அழகப்பாவின் திட்டங்களுள் ஒன்று. அதனை நிறைவேற்றுவதற்கு வேண்டும் தொடக்கமுயற்சிகளையும் செய்தார். இதற்கென அரசியலார் அமைத்த குழுவும் அழகப்பாவின் திட்டத்தை உடன்பட்டது. இப்பகுதிச் செல்வர்கள் மருத்துவக்கல்லூரியின் நலத்தை அறிந்து பெருநிதி அளித்து அழகப்பாவோடு ஒத்துழைத்திருப்பின், இக்கல்லூரி இதுகாறும் தோன்றியிருக்கும். இனியேனும் தோன்ற ஆவன செய்ய வேண்டும். 136.சென்னை தமிழ்வளர்ச்சிக் கழகத்தின் சார்பாகப் பேரூர்களில் நடத்தப்படும் தமிழ்விழாவை அழகப்பாகல்லூரி வட்டத்து 1955 செப்டம்பரில் நடத்த அழகப்பா முடிவு செய்திருந்தார். அவர் அண்ணனின் மறைவாலும், இப்பகுதியில் எழுந்த பெரும்புயலாலும், பின்னர் அழகப்பரின் நோயாலும் இவ்விழா நிகழ்ச்சி கைகூடாது போயிற்று. 137.திரு. ராய. சொ. அவர்களை ஆராய்ச்சிப் பேராசிரியராக அமர்த்தி 1956 சூலையில் ஓர் ஆராய்ச்சித் தமிழ்க்கழகம் அழகப்பா கல்லூரி வட்டத்து நிறுவ எண்ணியிருந்தார். 138.அழகப்பாவின் தலையான வேட்கை தாம் நிறுவிய பல கல்லூரிகளையும் ஒள்றுபடுததி ‘அழகப்பா பல்கலைக்கழகம்’ என ஒரு தலைமைக்கழகம் அமைப்பது. அவர்தம் இவ் விருப்பத்தை எல்லோரும் அறிவர். தாம் வாழ்ந்தகாலத்தே இந்திய அரசோடு கடிதப் போக்குவரத்துச் செய்து அடிப்படை கோலி வைத்திருக்கிறார். அவர் முயற்சியை மேலும் தொடர்ந்து அழகப்பா பல்கலைக் கழகத்தைக் காண்பது தமிழர் கடனாகும். 140.1. அழகப்பா கல்லூரி, 2. அழகப்பா ஆசிரியப் பயிற்சிக்கல்லூரி, 3. அழகப்பா பொறியியற் கல்லூரி, 4. அழகப்பா மகளிர் கல்லூரி, 5. அழகப்பா பல்தொழிற் கல்லூரி, 6. அழகப்பா உடற் கல்விக் கல்லூரி, 7. அழகப்பா நகர் பல் தொழிற் கல்லூரி, 8. அழகப்பா தொழில் நுணுக்கக் கல்லூரி,(சென்னை) 9. காரைக்குடி மின்சார வேதியல் ஆராய்ச்சிக்கழகம், 10. அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பொறியியற் கல்லூரியும் அழகப்பாவின் பெருங்கொடையால் தோன்றியவை. 144.நாகைப்பின் வந்த நடப்பு :- சிறுவயதிலேயே அழகப்பாவுக்குப் பெரும் படிப்புப் படிக்க வேண்டும் என்று ஆசையிருந்தது. தந்தை சொற்படி, உயர்நிலைப்பள்ளிப் படிப்புக்கூட முடிக்காது 1925இல் மலேயா செல்லப் புறப்பட்டார். சென்னைத் துறைமுகத்து மலேயாவுக்குக் கப்பல் ஏறினார். கப்பலில் இவருக்கு அம்மை நோய் தோன்றிற்று. அம்மை என அறிந்த வெள்ளைக்காரக் கப்பல் தலைவன் நாகப்பட்டினத் துறைமுகம் வந்ததும் அழகப்பாவை இறக்கி விட்டுவிட்டான். இந்நிகழ்ச்சிக்குப்பின்தான் அழகப்பா டாக்டர் அழகப்பாவாகவும் வள்ளல் அழகப்பாவாகவும் சிறந்து விளங்கினார். 145.இருந்த காலத்தே உடலை மறந்த ஒருவனை இறந்தான் என்று எங்ஙனம் சொல்வது? அழகப்பா படைத்த கல்வி அற நிலையங்கள் இருக்கும்போது அவனை இறந்தான் என்று அறமும் சொல்லாது என்பது கருத்து. 147.அழகப்பா இப்பிறப்பில் காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியிலும் சென்னை மாகாணக் கல்லூரியிலும் படித்தார். இனிப் பிறந்து தாமே படைத்த மாண்டிசோரி, தொடக்கப்பள்ளி, மாதிரி உயர்நிலைப்பள்ளி, கலைக்கல்லூரி முதலியவற்றில் கல்வி கற்க வேண்டும் என்பது கருத்து. 148.அழகப்பாக இளவயதில் தொழுநோய்க்கு உள்ளானார். இவர் கொடைக் குணத்தைக் கண்டறிந்த காந்தியடிகள் ‘அழகப்பா நோய்நீங்கி வாழ்க’ என்று ஒருநாள் மாலைத் தொழுகையில் இறைவனை வழுத்தினார். இக் குறிப்பை இந்திய நல்வழித்துறை அமைச்சி இராசகுமார் அமிர்தகௌர் 3-8-1954-ல் அழகப்பா கல்லூரி வட்டத்து உமையாள் மருத்துவ சாலைக் கால்கோள் விழாவில் வெளிப்படுத்தினார். 149.அழகப்பாவின் உடலைத் தாங்கிய ஊர்தியை வடந்தொட்டு எல்லாக் கல்லூரி மாணவர்களும் கோட்டையூரிலிருந்து கல்லூரி வட்டத்துக்குக் கொண்டு வந்தனர். 157.தாம் நிறுவிய நிறுவனங்கள் பலவற்றையும் வழிவழிக் காப்பதற்கு ‘டாக்டர் அழகப்ப செட்டியார் கல்வி அறநிலையம்’ என ஒரு பெருநிலையத்தை வள்ளல் அழகப்பா அமைத்துள்ளார். இந் நிலையத்தின் செயலாளர் பெருந்தகை க.வெ. சித. வேங்கடாசலஞ் செட்டியார் அவர்கள் ஆவர். 165.அழகப்பா 6-4-1909இல் பிறந்து 5-4-1957இல் இறப்பெய்தினார். கணக்காக நாற்பத்தெட்டாண்டுகள் வாழ்ந்தார். 166.நோய்வாய்ப்பட்ட துயர் நிலையிலும் மும்முறை கல்லூரி வட்டத்துக்கு வந்து தம் நிறுவனங்களைக் கண்டு மகிழ்ந்தார். 168.சடையவர்மன் பராக்கிரமபாண்டியன் (கி.பி. 1422-63) தென்காசிப் பெருங்கோயிலைக் கட்டினான். அக்கோயில் திருப்பணி முழுதும் முடிவதற்குமுன் இறந்துபோனான். இறப்பை உணர்ந்த பாண்டியன் பாடல் சில பாடி அவற்றைத் தென்காசிக் கோயிலின் கோபுரத்தில் வெட்டச் செய்தான். அத்தமிழ்ப் பாடல்களை இன்றும் காணலாம். அவற்றுள் ஒன்று:- சேலே றியவயற் றென்காசி யாலயந் தெய்வச்செய லாலே சமைந்ததிங் கென்செய லல்ல வதனையின்னம் மேலே விரிவுசெய் தேபுரப் பாரடி வீழ்ந்தவர்தம் பாலேவல் செய்து பணிவன் பராக்ரம பாண்டியனே. 169.“காதற்ற வூசியும் வாராது காணுங் கடைவழிக்கே” என்ற பட்டினத்தார் பாடல் அடியை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமக்கு டாக்டர் பட்டம் வழங்கிய விழாவில் (1943) அழகப்பா எடுத்துக் காட்டினார். அழகப்பாவின் கொடைவளம் --------------------------------------------------------------------------- அழகப்பாவின் கொடைவளம் தொகை ---- ---------------------------------------------------------- ----------- 1 அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பொறியியற் கல்லூரிக்கு ரூ. 500,000 2 சென்னைப் பல்கலைக்கழகத் தொழில் நுணுக்கத் கல்லூரிக்கு ரூ. 500,000 3 திருவிதாங்கூர் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் நிலைக்கு ரூ. 100,000 4 காரைக்குடி மத்திய மின்சார வேதியல் ஆராய்ச்சிக் கழகத்துக்கு ரூ. (இத்தொகையோடு முந்நூறு ஏக்கர் இடமும் ) 15,00,000 5 சென்னை தக்கர் பாபா வித்தியாலயத்துக்கு ரூ.17,000 6 சென்னை சேவாசதனத்துக்கு ரூ. 75,000 7 சென்னை தென்னிந்திய வணிகக் கழகத்துக்குக் கட்டிடம் கட்ட இடம் வழங்கியமை 8 மதுரை டோக் மகளிர் கல்லூரிக்கு ரூ. 25,000 9 புதுதில்லி தென்னிந்தியக் கல்விக் குழுவுக்கு ரூ. 25,000 10 தமிழ்க் கலைக்களஞ்சிய வெளியீட்டுக்கு ரூ. 10,000 11 கொச்சிப் புயலுதவி நிதிக்கு ரூ. 10,000 12 திருவிதாங்கூர் அரசின் நிலவாராய்ச்சி நிதிக்கு ரூ. 20,800 13 கொச்சி மாணவர்களின் வெளிநாட்டுப்படிப்புக்கு ரூ. 100,000 14 எர்ணாகுளம் மகாராசர் கல்லூரியின் நாட்டு மருத்துவ ரூ. 80,000 ஆராய்ச்சிக்கு 15 கொச்சி நாட்டு குழந்தைகள் பகலுணவுக்கு ரூ. 1,50,000 16 கொச்சி அழகப்பா நகர் பேறுமருத்துவ சாலைக்கு --------------------------------------------------------------------------- இவை பெரும்பாலும் வெளிப்படையாகச் சொல்லப் பெறும் கொடைச்செயல்கள். ஆயிரம் ஐயாயிரம் பதினாயிர மாக நண்பர்கட்கும் உறவினர்கட்கும் நிலையங்கட்கும் அளித்த கொடைகள் பலவுள என்று அறியவேண்டும். அழகப்பா தம்பெயரால் காரைக்குடியிலும் பிறவிடத்தும் நிறுவிய பல்வகைக் கல்லூரிகளும் பள்ளிகளும் பல. அவற்றிற்கு வழங்கிய இலட்சக்கணக்கான தொகை கணக்குக்கு உட்படுவதன்று. கணியம் அறக்கட்டளை [] தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழலை உருவாக்குதல். பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். எமது பணிகள் - கணியம் மின்னிதழ் - kaniyam.com - கணிப்பொறி சார்ந்த கட்டுரைகள், காணொளிகள், மின்னூல்களை இங்கு வெளியிடுகிறோம். - கட்டற்ற தமிழ் நூல்கள் - FreeTamilEbooks.com - இங்கு யாவரும் எங்கும் பகிரும் வகையில், கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில், தமிழ் மின்னூல்களை இலவசமாக, அனைத்துக் கருவிகளிலும் படிக்கும் வகையில் epub, mobi, A4 PDF, 6 inch PDF வடிவங்களில் வெளியிடுகிறோம். - தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கம் - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல். மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். https://github.com/KaniyamFoundation/Organization/issues இந்த இணைப்பில் செயல்களையும், https://github.com/KaniyamFoundation/Organization/wiki இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account