[] [cover image] குமரியின் மூக்குத்தி /சிறுகதைகள் கி.வா. ஜகன்னாதன் FreeTamilEbooks.com Public Domain - CC0 குமரியின் மூக்குத்தி /சிறுகதைகள் 1. குமரியின் மூக்குத்தி /சிறுகதைகள் 1. குமரியின் மூக்குத்தி /சிறுகதைகள் 2. Acknowledgements: 3. Source: 4. முகவுரை 2. குமரியின் மூக்குத்தி 3. தாயும் கன்றும் 4. கீரைத் தண்டு 5. குழலின் குரல் 6. உள்ளும் புறமும். 7. அவள் குறை 8. கொள்ளையோ கொள்ளை 9. உள்ளத்தில் முள் 10. குளிர்ச்சி 11. ஜடை பில்லை 12. பெண் உரிமை 13. திருட்டுக் கை 14. புதிய வீடு குமரியின் மூக்குத்தி /சிறுகதைகள் குமரியின் மூக்குத்தி /சிறுகதைகள்   கி.வா. ஜகன்னாதன்   தமிழாக்கம் -       மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : Public Domain - CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் - கு. மணிமாறன் - manimarankumar96@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/Kumariyin_mukkutti_short_stories} குமரியின் மூக்குத்தி /சிறுகதைகள் ஆசிரியர் - கி.வா. ஜகன்னாதன் kumariyin mUkkutti (short stories) of ki.vA. jekannAtan In tamil script, unicode/utf-8 format Acknowledgements: Our Sincere thanks go to the Tamil Virtual Academy (formerly Tamil Virtual University) for providing a scanned image/PDF version of this work for the etext preparation. This etext has been produced via Distributed Proof-reading Implementation and we thank the following volunteers for their assistance: Anbu Jaya, V. Devarajan, S. Karthikeyan, M. Gayathri, T Prakasam, R. Navaneethakrishnan, P. Thulasimani and B. Senthilkumar. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. © Project Madurai, 1998-2012. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact. குமரியின் மூக்குத்தி /சிறுகதைகள் ஆசிரியர் - கி.வா. ஜகன்னாதன் Source: குமரியின் மூக்குத்தி (சிறு கதைகள்) கி. வா. ஜகந்நாதன் அமுத நிலையம் பிரைவேட் லிமிடெட் தேனாம்பேட்டை – சென்னை - 18 உரிமை பதிவு : அமுதம்-154 முதற்பதிப்பு-டிசம்பர், 1957 விலை ரூ. 2-00 நேஷனல் ஆர்ட் பிரஸ், தேனம்பேட்டை, சென்னை-18 முகவுரை இந்தத் தொகுதியில் உள்ள கதைகள் யாவும் பல்வேறு சமயங்களில் பல்வேறு பத்திரிகைகளில் வெளியானவை. குமரியின் மூக்குத்தி, தாயும் கன்றும், கீரைத்தண்டு, அவள் குறை என்பன ஆனந்த விகடன் தீபாவளி மலர்களிலும், குழலின் குரல் என்பது சோஷலிஸ்ட் ஆண்டு மலரிலும், உள்ளும் புறமும், புதிய வீடு என்பவை தினமணி கதிரிலும், கொள்ளையோ கொள்ளை, உள்ளத்தில் முள், ஜடைபில்லை, திருட்டுக் கை என்பன கலைமகளிலும், குளிர்ச்சி, பெண் உரிமை என்பன தமிழ் நாட்டிலும் வெளியானவை. சேலம் மாவட்டத்தின் பேச்சும் வழக்கங்களும் வரவேண்டும் என்ற விருப்பத்துக்கிணங்க எழுதியது ‘புதிய வீடு’ என்ற கதையாதலின் அதில் அவ்விரண்டும் விரவியிருக்கும். சிறு கதைகள் வெள்ளம் போலப் பெருக்கெடுத்து வரும் இக் காலத்தில் பல துறைகளில் எழுத்தாளர்கள் புகுந்து தங்கள் படைப்பை அமைக்கிறார்கள். இந்தத் தொகுதியில் உள்ள கதைகளும் பல வகையில் அமைந்தவை. இதற்குமுன் வெளியான ஏழு சிற் கதைத் தொகுதிகளைப் போலவே இதுவும் தமிழ் மக்களின் ஆதரவுக்கு உரியதாகும் என்று நம்புகிறேன். ‘காந்தமலை’, கல்யாண நகர். கி. வா. ஜகந்நாதன் , 5-12-57 குமரியின் மூக்குத்தி 1 தேவி கன்னியாகுமரி அழகே வடிவமாகக் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தாள். பராக்கிரம பாண்டியன் அம்பிகையைக் கண் கொட்டாமல் பார்த்தபடியே இருந்தான். அர்ச்சகர் லலிதாஸஹஸ்ர நாமத்தைத் தொடங்கினார். பாண்டிய மன்னனுடன் வந்தவர்களில் சிலர் மட்டும் கோயிலின் அர்த்த மண்டபத்தில் நின்று கொண்டிருந்தார்கள். தேவியின் மூக்குத்தி விளக்கொளியில் சுடர்விட்டு ஒளிர்ந்தது. அப்பா! அந்த ஒளியைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டு நிற்க முடியாது போல் இருந்தது; அத்தனை ஒளி; கண்ணைக் கூசச் செய்யும் ஒளி! உள்ளே அர்ச்சகர், “ஓம் தாரா காந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுராயை நம!” (நட்சத்திரத்தினும் மிக்க ஒளி வீசும் மூக்குத்தியை அணிந்தவள்) என்ற நாமத்தைச் சொன்னார். பாண்டியனுடைய கண் அந்தச் சுடர் ஒளி ததும்பும் மூக்குத்தியில் லயிப்பதற்கும், அர்ச்சகர் அந்தத் திருநாமத்தைச் சொல்வதற்கும் பொருத்தமாக இருந்தது. பாண்டியனுக்குச் சிறிது உடம்பு குலுங்கியது. அர்ச்சகர் மேலே அர்ச்சனையை ஓட்டினார். பாண்டியனுக்கு மாத்திரம் கண் அந்த மூக்குத்தியில் நிலைத்துவிட்டது. அதன் சுடர் அலைகள் அவனுடைய உள்ளத்தில் ஒரு சிறிய ஆசை அலையை எழுப்பின. அவன் தன் மாதேவியை நினைத்தான். அவளுடைய மூக்கு அவனுடைய நினைவுக்கு வந்தது. கற்பனையினால் அம்பிகையின் மூக்குத்தியைத் தன் பட்டத்தரசியின் மூக்கில் பொருத்திப் பார்த்தான். அந்தச் சமயத்தில், ‘அகோ வரும் பிள்ளாய்! பாண்டிய மகாராஜனே!’ என்ற ஒலியைக் கேட்டு அம்மன்னன் திடுக்கிட்டுப் போனான். கன்னியாகுமரிக்கு முன் எரிந்து கொண்டிருந்த விளக்கைப் பிடிக்கும் பதுமை ஒன்றுதான் அவனை அழைத்தது. அது வாய் திறந்து பேசுவதை அவன் கண்ணாற் கண்டான்; காதால் கேட்டான். பதுமை பேசத் தொடங்கியது. ஹே பராக்கிரம பாண்டியனே! என்ன அபசாரம் செய்யத் துணிந்துவிட்டாய்! கன்னி பகவதி சொத்தைக் கொள்ளையிடலாமா? உன்னுடைய குடும்பத்தையே பாதுகாக்கும் தாயின் ஆபரணத்தின்மேல் உன் இச்சையை வீசினாயே! இது நியாயமா? அம்பிகை உன்னிடம் கருணை கொண்டவள்; ஆதலால் நீ இப்படி எண்ணியும் இங்கே நிற்கிறாய். இல்லாவிட்டால் உன் கண் இந்தக் கணத்தில் குருடாயிராதா? அது கிடக்கட்டும். ஸ்ரீ மாதாவாகிய அம்பிகையின் நாசிகாபரணத்தைப்பற்றிய கதை உனக்குத் தெரியுமா? தெரிந்திருந்தால் உனக்கு இந்த அடாத ஆசை தோன்றியிராது. ஆகையால், இப்போது அந்தக் கதையைச் சொல்கிறேன் கேள். ஈனம் இல்லாச் சிறப்புடைய மீனவர் குலத் தோன்றலே! கலிங்கத்து மகா யுத்தத்தைப்பற்றிக் கேட்டிருப்பாயே! கலிங்க அரசனான அனந்தபதுமன் சோழ நாட்டுக்குக் கப்பம் செலுத்தாமையால் குலோத்துங்க சோழன் அவனோடு போர் செய்து வென்றான் என்பது தமிழ் நாட்டினர் யாவருக்கும் தெரியும். சோழ சக்கரவர்த்தியின் மந்திரியாகிய கருணாகரத் தொண்டைமான் இந்தக் கலிங்கத்துப் போரில் வெற்றியடைந்த சிறப்பைக் கலிங்கத்துப் பரணி என்ற தமிழ்ப் பிரபந்தம் சொல்வதையும் நீ அறிந்திருக்கலாம். ஆனால் உலகம் அந்தப் போருக்கு உரிய உண்மையான காரணம் இன்னதென்பதை அறியாது. நீ எந்த மூக்குத்திக்கு ஆசைப்பட்டாயோ, அதுதான் கலிங்கப் போருக்கு மூல காரணம். அதைச் சொல்லுகிறேன் கேள். ஒரு சமயம் கலிங்க அரசனாகிய அனந்தபதுமன் தன் பட்டத்து ராணியோடு தேசாடனம் செய்யப் புறப்பட்டான். அப்போதெல்லாம் சோழனுக்கும் அவனுக்கும் பகைமை இல்லை. சோழனுக்குக் கப்பம் கட்டுபவன் அவன். ஆகையால், அவன் சோழ நாட்டுக்கு வந்தபோது தஞ்சை யில் சில நாட்கள் சோழ அரசனுடைய அரண்மனையில் தங்கியிருந்தான். கலிங்கத்து அரசி பூண்டிருந்த மூக்குத்தி எல்லோருடைய கண்களையும் கொள்ளை கொண்டது. அவர்களிலும் அந்தப்புரத்தில் உள்ள பெண்கள் அதைக் கண்டு கண்டு வியந்தார்கள். குலோத்துங்கனுடைய பட்டத்தரசிக்கு அதனிடத்தில் ஆசையே உண்டாகி விட்டது. அந்தமாதிரி வைரக்கல் எங்கே கிடைக்கும் என்று விசாரிக்கலானாள். எவ்வளவு பொன் கொடுத்தாவது அந்த மூக்குத்தியை வாங்கிவிட வேண்டும் என்ற பைத்தியக்கார ஆசை அவளுக்கு உண்டாயிற்று. கலிங்கத்து அரசனும் அரசியும் தேசாடனத்தை முடித்துக்கொண்டு ஊர் போய்ச் சேர்ந்தார்கள். சோழ மன்னனுடைய மாபெருந் தேவிக்கு அந்த மூக்குத்தியின் நினைவாகவே இருந்தது. முடியுடை மன்னனின் மாதேவியாக இருந்து அதை அணிவதற்கு இல்லையே என்று அங்கலாய்த்தாள். நாளுக்கு நாள் அந்தக் குறை அவள் உள்ளத்தளவில் நில்லாமல் உடலையும் வருத்தத் தொடங்கியது. தூங்கிக்கொண்டே இருப்பாள்; திடீரென்று எழுந்து, “அந்த வைர மூக்குத்தி!” என்று கத்துவாள். குலோத்துங்க மன்னன் என்ன என்னவோ சமாதானம் செய்தான். ஒன்றாலும் அவள் ஆறுதல் அடையவில்லை. தன் கீழ்ச் சிற்றரசானாக இருக்கும் ஒருவனிடம் உள்ள பொருளைத் தா என்று கேட்பது சக்கரவர்த்தியின் நிலைக்கு ஏற்ற‌ செயல் அல்லவே!அதனால் சோழ மன்னன் அந்த மூக்குத்தியைப் பெற என்ன வழி என்ற ஆலோசனையில் ஆழ்ந்தான். பட்டமகிஷி முக கமலம் வாட்டம் அடைந்தது. மன்னனுடைய முகத்திலும் வாட்டம் தன் ரேகையை நீட்டியது.அதைக் கண்ட கருணாகரத் தொண்டைமான் என்ற மந்திரி ஒருநாள் மன்னனைத் தனியே கண்டான். நெடுநாளாக மன்னன் எதையோ நினைத்து மனம் கவல்கிறான் என்பதை உணர்ந்து, அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நினைப்பு அவனுக்கு இருந்து வந்தது. இப்போது அவன் அரசனிடம்,“மகாராஜாவுக்கு ஏதோ கவலை உள்ளத்துக்குள் இருந்து வாட்டுகிறது போலத் தோன்றுகிறது. மந்திரிமார்களும் படைத் தலைவர்களும் சான்றோர்களும் மன்னர்பிரானுக்கு வேண்டிய ஆலோசனைகளைச் சொல்ல எப்போதும் ஆயத்தமாக இருக்கும்போது, அவர்களிடம் சொல்லாத கவலை என்னவென்று தெரியவில்லை. இதைப் பற்றி நினைத்தால் எனக்குத் தூக்கமே பிடிப்பதில்லை. மற்றவர்களுக்குத் தெரிவிக்கத் திருவுள்ள‌ம் இல்லாவிட்டால் அடியேனுக்குச் சொல்லலாமே. அடியேன் ஏதாவது செய்ய முடிந்தால் என் உயிரைக் கொடுத்தாவது செய்வேன்” என்றான். அரசன் சிறிது யோசித்தான்.பிறகு புன்னகையை வருவித்துக் கொண்டான். “நீ ஊகித்தது சரிதான். ஆனால் விஷயம் என்னவோ சிறியது. கவலைதான் பெரிதாக இருக்கிறது” என்றான். “எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லலாமே. மகாராஜாவின் திருவுள்ளத்தைத் தெரிந்துகொண்டு அதன்படி நடக்கும் கடமையை நான் எப்போதும் மேற்கொண்டிருக்கிறேன். அப்படி இருக்க, இதைத் தெரிந்து கொள்ளக் கூடாதபடி நான் என்ன அபராதம் செய்து விட்டேன்” என்றான் தொண்டைமான். “சொல்லக் கூடாது என்பது இல்லை. மிகச் சிறிய பண்டத்தைப்பற்றிய கவலை அது. பண்டம் சிறியது தானே என்று நான் அலட்சியமாக இருந்தேன். ஆனால் கவலை பெரிதாகி இப்போது விரிந்துவிட்டது.” “அப்படி என்ன, கிடைக்காத பண்டம் அது?” “சொல்கிறேன் கேள். நம்முடைய பட்டத்துத் தேவிக்குத்தான் அதிகக் கவலை. ஊணும் உறக்கமும் இன்றி அவள் படுகிற துன்பத்தைப் பார்க்க முடியவில்லை. இவ்வளவுக்கும் காரணம் ஒரு சிறிய மூக்குத்திதான்.” “என்ன வெறும் மூக்குத்திக்காகவா மன்னர் பெருமானும் மாபெருந் தேவியும் கவலைப்படுவது!” என்று திடுக்கிட்டுக் கேட்டான் கருணாகரத் தொண்டைமான். “மூக்குத்தி சிறியதுதான். ஆனால் அது கிடைக்க முடியாத இடத்தில் இருப்பதால் அதைப்பற்றிய கவலை அதிகமாக வளர்கிறது.” “நம்முடைய நாட்டில் கிடைக்காத வைரமா? அல்லது வேற்று நாட்டில் கிடைப்பதாக இருந்தாலும் இங்கே வருவிக்க முடியாதா?” “வைரத்தைச் சொல்லவில்லை. ஒரு பெண்மணியின் மூக்கில் இருந்து அது ஒளிர்கிறது. அது வேண்டுமென்று கேட்கிறாள் தேவி.” “இதில் என்ன ஆச்சரியம்? பட்டத்தரசி யாருக்கு இல்லாத மூக்குத்தி யாருக்கு வேணும்? அது எங்கே இருதாலும் தேடித் பிடித்து வாங்கி வந்து விடலாமே.” “கலிங்க அரசன் அனந்தபதுமனுடைய தேவியின் மூக்கில் இருக்கிறது அது. அவன் சில மாசங்களுக்கு முன்பு இங்கே வந்தபோது அவன் மனைவி பூண்டிருப்பதை நம் மாதேவி கண்டாள். எங்கும் இல்லாத ஒளியும் பூரிப்பும் உடைய அதில் அவள் உள்ளம சிக்கிக்கொண்டதாம்.” “ஆனந்தபதுமன் நமக்கு அடங்கிய சிற்றரசந்தானே? அவனுக்கு ஓலை போக்கினால் அதை மகாராஜாவின் காலடியில் காணிக்கையாகக் கொண்டு வந்து வைக்கிறான்” என்று உற்சாகத்துடன் கூறினான் தொண்டைமான். “முடியுடை மன்னனாகிய சோழ சக்கரவர்த்தி தன் கீழ் அடங்கிய சிற்றரசன் ஒருவனிடம் மூக்குத்தியை இரப்பதா? அவனாக அறிந்து கொடுப்பதாக இருந்தால் பெற்றுக் கொள்ளலாமே ஒழிய, நீ தா என்று கேட்டுப் பெற்றுக் கொள்வது எந்தத் தமிழ் மகனுக்கும் ஏற்ற செயல் அன்று.” “அதற்கு ஏதாவது வழி பண்ணுகிறேன். இதுபற்றி மகாராஜாவும் மாதேவியாரும் இனிமேல் கவலைப் பட வேண்டாம். எப்படியாவது அந்த மூக்குத்தியைக் கொண்டு வந்து மாதேவியாரின் மனசைக் குளிர்விப்பது அடியேனுடைய கடமை” என்று கருணாகரன் உறுதிமொழி கூறினான். “இளைஞனாகிய அவனுக்கு உலக இயல்பு நன்றாகத் தெரியாது. இதனால்தான் இப்படி வாக்களித்தான். ஆனால் அந்த வாக்கைக் காப்பாற்ற அவன் எவ்வளவு துன்பத்தை அடைந்தான் தெரியுமா? 2 கேளாய், மதுரை நகரிலிருந்து ஆட்சி புரியும் மகிபதியே! சோழ மன்னனுக்கு, எப்படியாவது அந்த மூக்குத்தியைக் கொண்டு வருவதாகச் சொல்லி உறுதி கூறிய தொண்டைமான் அன்றுமுதல் சோழ நாட்டில் உள்ள வைர வியாபாரிகளுடன் பழகினான். வைரங்களைப் பற்றியும் மற்ற மணிகளைப்பற்றியும் தெரிந்துகொண்டான். பலவிதமான மணிகளை வாங்கி வைத்துக்கொண்டான். அவனுக்குக் கொஞ்சம் தெலுங்கு பேசத் தெரியும். அதில் நன்றாகப் பேசத் தெரிந்துகொண்டான். எல்லாம் ஆறுமாத காலத்தில் நிகழ்ந்தவை. அப்போதப்போது அரசனிடம் எப்படியாவது மூக்குத்தியை போருவிப்பதாகச் சொல்லிக்கொண்டே வந்தான். ஒரு நாள் போருணாகரத் தொண்டைமான் ஒரு வைர வியாபாரியைப் போலக் கோலம பூண்டு, கையோல் நவமணிகள் அடங்கிய பையை எடுத்துக்கொண்டு கலிங்க நாட்ட நோக்கிப் புறப்பட்டான். அங்கே உள்ள செல்வர்களிடம் மிகவும் உயர்ந்த வைரங்கள் தன்னிடம் இருப்பதாகச் சொல்லி அவர்களுக்குக் காட்டினான். அரசனுடைய மந்திரிகளிடம் பழகினான். அவர்கள் வாயிலாக அரசனையும் அணுகினான். “எனக்கு வைரப் பரீட்சை நன்றாகத் தெரியும், மகா ராஜா. எந்த வைரத்தையும் கண்டு அதன் சரித்திரத்தையே சொல்லிவிடுவேன்” என்று சொன்னான். சோழ அரசனுடைய அரண்மனையில் உள்ள மணிகளை யெல்லாம் பார்த்திருப்பதாகச் சொன்னான். அப்போது அனந்த பதுமன் அவனை ஒரு கேள்வி கேட்டான். “என்னிடம் ஒரு வைரம் இருக்கிறது. அதற்கு ஒப்பானதை எங்கும் காணமுடியாது. நான் அதைக் காட்டுகிறேன். அதுபோல ஒன்றை நீ காட்ட முடியுமா?” என்று கேட்டான். “என்னுடைய வழிபடு தெய்வம் முருகன். அவன் வைரமணி வேலை உடையவன். அவன் அருளால் வைர சம்பந்தமான செய்திகளை முன் கூட்டியே நான் அறிவேன். மாதேவி மூக்குத்தியில் உள்ள வைரத்தை மன்னர் பெருமான் நினைத்துப் பேசுகிறார் என்று தெரிகிறது, நான் அதைப் பார்த்ததில்லை. பார்த்தால், அதற்குச் சமானம் என்ன, மேலான வைரத்தையே கொண்டுவந்து தருவேன்” என்றான் தொண்டைமான். அரசன் மூக்குத்தியை வருவித்தான். கருணாகரன் அதைப் பார்த்தான். யாராக இருந்தாலும் அதைக் கண்டால் சொக்கிப் போவார்கள். வைர லட்சணம் நன்றாகத் தெரிந்த தொண்டைமான் அதையே பார்த்துக் கொண்டிருந்தான். சோழ மன்னனுடைய அரண்மனையைச் சுடும் கவலைத் தீயை எழுப்பிய பொறியை அவன் தன் கண்ணை இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தான். “என்ன ஐயா, அப்படிப் பார்க்கிறீர்? உம்முடைய பார்வையே சொல்கிறது, இது போல உம்முடைய வாழ்விலே ஒன்றை நீர் கண்டதில்லை யென்று” என்று சொல்லி அனந்தபதுமன் நகைத்தான். உண்மையில் அந்தப் பேச்சைக் கேட்ட பிறகுதான் தொண்டைமான் தன் இயல்பான நிலைக்கு வந்தான். ஆனாலும் அறிவாளி அல்லவா? “மகாராஜா அப்படிச் சொன்னது ஓரளவு உண்மைதான். நான் இந்த மூக்குத்தியில் நவமணியில் ஒன்றாகிய வைரத்தைக் காணவில்லை. உள்ளத்தை வெதுப்பும் வைரத்தையே காணுகிறேன்” என்றான். “என்ன ஐயா உளறுகிறீர்?” என்று சிறிதே சினக் குறிப்போடு அரசன் கேட்டான். “மன்னர் பெருமான் சினம் கொள்ளக் கூடாது. இதைக் கண்ட மகளிர் எல்லாம் இத நாம் அணிவதற்கு இல்லையே என்று பொருமுவார்கள்; அதைத்தான் சொல்ல வந்தேன்.” “அப்படிச் சொல்லும், அது கிடக்கட்டும். இந்தமாதிரி வைரம் உலகத்தில் எங்காவது கிடைக்குமா?” என்று கேட்டான் கலிங்கத்தரசன். “நான் சொல்வதைக் கேட்டு அரசர்பிரான் சினம் கொள்வதில்லை என்று உறுதி கொடுத்தால் இதைப் பற்றிச் சில செய்திகளைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். இல்லையானால், உண்மையில் இதற்குச் சமானமான கல்லே உலகில் இல்லை என்று மாத்திரம் சொல்லி நிறுத்திக் கொள்கிறேன். மன்னனுடைய ஆவலைத் தொண்டைமான் தூண்டி விட்டான். “சொல்லுமே, என்ன சொல்லப் போகிறீர்? வைரத்தில ஏதாவது குற்றம் இருக்கிறதென்று சொல்வீர்? இது பரம்பரை பரம்பரையாக இந்த அரண்மனைச் சொத்தாக இருந்து வருகிறது. குற்றமற்றது என்று பரீட்சை செய்தே என் முன்னோர்கள் வாங்கியிருக்கிறார்கள். நீர் குற்றம் உடையது என்றால் இது குறைந்துவிடுமா?” என்றான் அரசன். “மன்னர்பிரான் சொன்னதில் உண்மை இல்லாமல் போகவில்லை. ஆனால் நான் சொல்லும் குற்றம் மற்றவர் சொல்வது போன்றது அன்று. இது வைரத்தை உண்டாக்கும் என்று முன்பு சொன்னேனே, அதைத்தான் மறுபடியும் சொல்லுகிறேன்.” “யாரிடம் வைரம் உண்டாகும்? ராணியின் மூக்குத்தியைக் கண்டு யார் வைரம் கொள்வார்கள்? இவ்வளவு காலமாக அப்படி ஒன்றும் நேரவில்லையே? “மகாராஜா, என்னுடைய துணிச்சலைப் பொறுத்தருள வேண்டும். இந்த மூக்குத்தியின் மேல் அயல் நாட்டுக் காற்று வீசாமல் இருக்கிற வரைக்கும் ஆபத்து ஒன்றும் இல்லை. அயல் நாட்டுக் காற்று வீசினால், அதாவது இதைப் போட்டுக்கொண்டு கலிங்க நாட்டின் எல்லையை விட்டுத் தாண்டினால், நான் சொன்னபடி வைரம் உண்டாகும்.” “என்ன ஐயா புரளி பண்ணுகிறீர்? உலகம் என்ன, கொள்ளைக்கார ராஜ்யமா? ஊரை விட்டுப் போனால் பறி போய் விடும் என்று சொல்கிரீரே! நாங்கள் சில மாதங்களுக்கு முன்புதான் சோழனாட்டுக்கும் பாண்டி நாட்டுக்கும் போய் வந்தோம். சுகமாகவே வந்து சேர்ந்தோம். நீர் சொன்ன வைரத்தை நான் காணவில்லையே!” “சோழ நாட்டில் தங்கினீர்களோ?” “ஆம், தஞ்சையில் சோழ மன்னருடைய அரண்மனையில் தங்கினேன்.” “சரி, வைரம் விதைத்தாகி விட்டது. இனி அறுவடையாக வேண்டிய காலம் எப்போது வருகிறதோ?” என்றான் கருணாகரன். “என்ன ஐயா, பயமுறுத்துகிறீர்?” “ஒருகால் இந்த மூக்குத்தியைச் சோழ மன்னர் விரும்பினாலும் விரும்பலாம். முடியுடை மன்னர்களின் அரண்மனையில் இருக்கும் தகுதி இதற்கு இருக்கிறது. மற்ற இடங்களில் இருந்தால் இது நெருப்புக்குச் சமானம். இதை அத்தகைய இடத்தில் சேர்ப்பித்து விடுவதே நல்லது” என்று தொண்டைமான் சொன்னபோது அரசனுக்கும் அவனைச் சார்ந்தவர்களுக்கும் வைர வியாபாரியிடமே சந்தேகம் பிறந்துவிட்டது. ஓர் அமைச்சன் தொண்டைமானை அழைத்துச் சென்றான். சோழ நாட்டிலிருந்து வந்த ஒற்றன் என்று எண்ணியதால் ஏவலரைக் கொண்டு எச்சரிக்கை செய்து அனுப்பினான். அடி படாமல் தப்பியது பெரிதாகப் போய்விட்டது. வெறுங் கையோடு வீடு வந்துசேர்ந்தான் கருணாகரன். அடிபட்ட புலிபோல அவனுக்கு அனந்தபதுமன்மேல் சினம் மூண்டது. சோழ அரசனுடைய ஒற்றன் தன்னை அவமதித்ததாக எண்ணிய அனந்தபதுமன், தான் கட்ட வேண்டிய கப்பத்தை அனுப்பவில்லை. கருணாகரத் தொண்டைமானின் அறிவுரையின்படி சோழனிடமிருந்து ஓர் ஓலை அவனுக்குப் போயிற்று. “உன் மனைவியின் மூக்குத்தியைக் கொடுத்தால் எப்போதுமே நீ கப்பம் கட்ட வேண்டியதில்லை” என்று சொல்லியது அந்த ஓலை. அது கண்டு அனந்தபதுமன் சீறினான். முடியாது என்று சொல்லி அனுப்பிவிட்டான். அப்புறந்தான் போருக்கு வேண்டிய ஆயத்தங்கள் நடைபெற்றன. தன்னை அவமதித்த அனந்தபதுமனைத் தன் கையாலே தண்டிக்க வேண்டுமென்ற ஆசை கருணாகரனுக்கு. அதனால் அவனே படைகளுக்கெல்லாம் தலைமை பூண்டு கலிங்கம் சென்று போரை நிகழ்த்தினான்; வெற்றி பெற்றான். போர் நிகழும் போதே அந்தப்புரத்தில் தக்க காவலைப் போட்டான். அவனுக்குக் கலிங்கத்து அரசியின் மூக்குத்தியிலே கண் அல்லவா! கலிங்கப் போரில் கருணாகரன் வெற்றி பெற்றான்; போரை எழுப்புவதற்க்குக் காரணமான மூக்குத்தியைக் கொணர்ந்து சக்கரவர்த்தி குலோத்துங்கன் திருவடியில் வைத்தான். “நீ கலிங்கத்தை வென்றது பெரிதன்று இதைக் கொண்டுவந்தது தான் மிகப்பெரிது” என்று சோழ மன்னன் அவனைப் பாராட்டினான். 3 “கேட்டாயா, பாண்டிய மகாராஜனே! கலிங்கப் போருக்கு மூல காரணம் ஒரு மூக்குத்தி என்பதைத் தெரிந்துகொண்டாயா? அது பின்னும் என்ன என்ன குழப்பங்களை உண்டாக்கியது என்பதை இன்னும் சொல்கிறேன், கேள்” என்று விளக்குப் பதுமை மறுபடியும் சொல்லத் தொடங்கியது. பட்டத்துத் தேவியின் மூக்கில் ஏறிக்கொண்ட மூக்குத்தி மற்ற ராணிகளின் மனத்தில் ஆசையும் பொறாமையையும் எழுப்பியது. குலோத்துங்கன் மனைவிமாரில் அவனுக்கு மிகவும் பிரியமுள்ளவள் ஒருத்தி அது தனக்கு வேண்டுமென்று கேட்டாள். தன அரண்மனைக்கு வந்த பிறகும் அந்த வைர மூக்குத்தி மன்னனுக்குக் கவலை கொடுத்து வந்தது. அந்தப்புரத்தில் புயல் குமுறியது; பூசல் எழுந்தது. வீரனாகிய குலோத்துங்கன் எல்லா மனைவிமாரையும் ஒருநாள் அழைத்துக் கூட்டி வைத்துக் கொண்டு அந்த மூக்குத்தியைப்பற்றிப் பேசினான். ராணிமார்கள் ஒவ்வோர் ஆண்டு ஒவ்வொருவராக அணிய வேண்டும் என்று சொன்னார்கள். பட்டத்துத் தேவி அதற்கு இணங்கவில்லை. “இப்போது மூக்குத்திக்கு வந்த வழக்கே பின்பு சிங்காதனத்துக்கும் வரும். ஒவ்வோராண்டு ஒவ்வொருவராகப் பட்ட தேவியாக இருக்கலாமென்று சொல்வார்கள். இந்த மூக்குத்தி விஷயமாவது அந்தப்புரத்துக்குள் அடங்கியிருப்பது; பட்டமகிஷிப் பதவி என்பது உலகமறிந்த செய்தி. இவர்கள் அதற்கும் உரிமை கொண்டாடி வருஷத்துக்கு ஒரு பட்டமகிஷி என்று வந்து விட்டால் உலகமே கைகொட்டிச் சிரிக்கும். ஆகையால் பட்டமகிஷி என்பதற்குரிய அடையாளமும், உரிமைகளும் சில உண்டு. அதை யாரும் மாற்றிக்கொள்ள முடியாது” என்று அவள் வாதிட்டாள். அதற்கு எதிர் கூற யாருக்கும் வாய் இல்லை. மற்ற ராணிகள் எல்லாம் வீண் ஆசைப்பட்டு இதை ஒரு வழக்கமாகக் கொண்டு வந்ததைக் கண்டு மகாராணிக்கும் கோபம் கோபமாக வந்தது. ‘மகாராஜா கொஞ்சம் அன்பாக இருக்கிராரென்றால்,அவர்களுக்குப் பேராசை பெருகி விடுகிறது. அவர்கள் ஆசையில் மண்ணைப் போட வேண்டும்’ என்று அவள் எண்ணமிட்டாள். மெல்ல மெல்லக் குலோத்துங்கனுக்குப் பொய்யும் மெய்யும் சொல்லி ஒரு கருத்தை அவனிடம் தெரிவித்தாள்; அதற்கு அவனை இணங்கவும் செய்துவிட்டாள். பட்டத்துத் தேவி அணியும் அந்த வைர மூக்குத்தியை அவள் தன மூத்த மகளுக்குச் சீதனமாகக் கொடுத்து விடுவதென்றும், இப்படியே மகளுக்குத் தாய் கொடுக்கும் சீதனமாகவே அது பரம்பரையாக இருந்து வரவேண்டு மென்றும் ஒரு சம்பிரதாயத்தை எற்படுத்திவிட்டாள். அம்பிகை கனவில் வந்து சொன்னதாகவும் வேறு காரணங்கள் இருப்பதாகவும் பட்டத்து ராணி சொல்லி இந்தத் தீர்மானத்துக்கு அரசனுடைய உடன்பாட்டைப் பெற்று விட்டாள். அதன்படி இந்த மூக்குத்தி அடுத்த தலைமுறையில் சோழன் மகளும் பாண்டிய அரசன் தேவியுமாகிய ஒருத்தியிடம் சென்றது. பெரும்பாலும் சோழ பாண்டிய குலத்தில் பெண் கொடுப்பதும் வாங்குவதும் தொடர்ச்சியாக வருவது உனக்குத் தெரிந்ததுதானே? அந்த வழக்கப்படியே இந்த மூக்குத்தி, சோழன் அரண்மனையிலும் பாண்டியன் அரண்மனையிலும் மாறி மாறித் தன் ஒளியை வீசத் தொடங்கியது. “கேளாய், சந்திரவம்சத்தில் தோன்றிய சக்கர வர்த்தியே! இனிமேல்தான் முக்கியமான கதையைச் சொல்லப்போகிறேன், கவனமாய்க் கேள்” என்று கூறிப்பதுமை தன கதையைத் தொடர்ந்து சொல்லலாயிற்று. 4 ஒரு சமயம் பராந்தக பாண்டியன் என்னும் அரசன் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான். அவனுடைய பட்டத்துத் தேவியாகிய உலக முழுதுடையாள் மூக்கில் அந்த மூக்குத்தி ஒளிவிட்டது. அவள் மதுரை மாநகரில் எழுந்தருளியிருக்கும் மீனட்சியம்மையை நாள்தோறும் தரிசிக்காமல் இருப்பதில்லை. மாதம் ஒரு முறை வெள்ளிக் கிழமையன்று இங்கே வந்து கன்னியாகுமரி யம்பிகையைத் தரிசித்துச் செல்வாள். அதுவரையில் இந்த மூக்குத்தி தாயிடமிருந்து பெண்ணுக்குத் தடையின்றி வந்து கொண்டே இருந்தது. இப்போது உலக முழுதுடையாளுக்கு மைந்தன் பிறந்தான். மறுபடி இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். அதற்குப் பெண்ணே பிறக்காமல் இருக்கவே அந்த மூக்குத்தி பல பேருடைய ஆசையைத் தூண்டியது. அவளுடைய மூத்த மகனாகிய அறிமர்த்தனனுடைய மனைவி அது தனக்குத்தான் கிடைக்கப் போகிறதென்று எண்ணியிருந்தாள். பட்ட மகிஷிக்குப் பெண் குழந்தை இல்லையாதலால், அந்த மூக்குத்தியைப் பெரும் உரிமை, அடுத்தபடி பட்டமகிஷி ஸ்தானம் வகிக்கப்போகும் தனக்குத்தான் என்று அவள் எண்ணியதில் நியாயம் இருக்கத்தான் இருந்தது. இந்த ஆசையை அவள் பேச்சுவாக்கில் ஒருநாள் அந்தப் புறத்தில் வெளியிட்டு விட்டாள். அதிலிருந்து தீப் பற்றிக் கொண்டது. பாண்டிய அரசர் காது வரைக்கும் அது சென்றது. உண்மையாகவே இது புதிய கலகத்துக்கு விதை என்று எண்ணி அவன் கவலைப்பட்டான். பட்டமகிஷிக்கு அடுத்த ராணிக்கு ஒரு மகள் இருந்தாள். “தாயிடமிருந்து மகளுக்குச் செல்வதுதான் சம்பிரதாயமே ஒழிய மருமகளுக்குப் போவது தவறு. மகாராணிக்குச் சொந்தப்பெண் இல்லாவிட்டாலும் பெண் முறையில் இருப்பவள் நான். என்னுடைய பெரியம்மாவுக்கு நான் பெண்தானே? ஆதலால், மூக்குத்தியைப் பெரும் உரிமை எனக்குத்தான்” என்றால் அவள். மற்றவர்கள் பார்த்தார்கள். தங்களுக்குக் கிடைக்காமல தங்களோடு இருக்கும் வேறு ஒருத்திக்குப் போவதாவது என்ற பொறாமை அவர்களுக்கு. அவர்கள் ஒரு கருத்தைச் சொன்னார்கள். “இந்த மூக்குத்தி ஒரே இடத்தில் இருக்கிறது. மூன்று சோழர் அரண்மனையிலும் பாண்டியர் அரண்மனையிலும் மாறி மாறி இருந்து வருகிறது. இங்கிருக்கும் பெண் அங்கே போனால் உடன் போயிற்று; அங்கிருக்கும் பெண் இங்கே வந்தால் உடன் வந்தது. இப்போது இங்கிருக்கும் பெண் அங்கே போக வழி இல்லை. பெண் இல்லையே ஒழிய மூக்குத்தி இருக்கிறது. அதனால், சோழ நாட்டு இளவரசனுக்கு யாரை மணம் புரிவிக்கிறார்களோ, அந்தப் பெண்ணுக்கே போக வேண்டியது இது” என்றார்கள். “கையில் இருப்பதை வேண்டாம் என்று கொடுத்து விடுவதா?” என்று உரிமை கொண்டாடியவர்களில் ஒருத்தி கேட்டாள். “அப்படி அன்று; அப்படிப் போனது மறுபடியும் அங்கிருந்து இங்கே பெண் வரும்போது இங்கேதானே வரப்போகிறது?” என்றால் மற்ற ராணிகளில் ஒருத்தி. “அப்படியானால் என்னையே சோழகுலத்தில் வாழ்க் காயப்படுத்தி மூக்குத்தியையும் கொடுத்துவிடுவது” என்று இரண்டாம் ராணியின் பெண் சொன்னாள். “உன்னைச் சோழ இளவரசன் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டுமே!” என்று மற்றவர்கள் சிரித்தார்கள். “ஏன், நான் முறையுடையவள் அல்லவா?” “நன்றாகச் சொன்னாய்! பட்டமகிஷியின் வயிற்றில் பிறந்தாலொழிய உனக்கு முறை எப்படி உண்டாகும்?” என்று கேட்டாள் ஒருத்தி. இப்படியாக மறுபடியும் அந்த மூக்குத்தி பாண்டியனுடைய அந்தப்புரத்தில் குழப்பத்தை விளைவித்தது. அரசி உலகமுழுதுடையாள் யோசனையில் ஆழ்ந்தாள். பராந்தக பாண்டியனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. “இப்போதே அதைப்பற்றிய கவலை எதற்கு?” என்று மேலுக்கு அவன் சொல்லிவிட்டான். ஆனாலும் நாளைக்கு இந்தச் சிக்கல் வந்தால் எப்படியாவது முடிவு காணத்தானே வேண்டும் என்ற கவலை மாத்திரம் அவன் உள்ளத்துள் இருந்தது. மகாராணி இந்தச் சிக்களைப்பற்றி யோசித்தாள். ஒரு முடிவும் அவளுக்குத் தோன்றவில்லை. ஒரு நாள், வெள்ளிக் கிழமை, இங்கே தேவி கண்ணியாகுமரியைத் தரிசிக்க வந்திருந்தாள். “தாயே, இதற்கு நீதான் ஒரு வழி காட்ட வேண்டும்” என்று அவள் பிரார்த்தித்தாள். அப்போது தேவியின் மூக்கில் இருந்த மூக்குத்தி பழையதாகப் போனபடியால் கீழே விழுந்துவிட்டது. தான் பிரார்த்தனை செய்யும்போது அது விழவே, மகாராணி அதையே தேவியின் குறிப்பாக ஏற்றுக்கொண்டாள். அவள் உடம்பு புளகம் போர்த்தது. கண்ணீர் தாரை தாரையாக வந்தது. கீழே விழுந்து வணங்கி எழுந்தாள். சரசர வென்று தன மூக்குத்தியைக் கழற்றினாள். கங்கை நீர் அங்கே அபிஷேகத்துக்கு வைத்திருந்தார்கள். அதைக் கொண்டு வரச் செய்து இதைக் கழுவினாள். “தாயே, இதை நீ ஏற்றுக் கொள். பாண்டிய குலத்தால் காப்பாற்றப் பெரும் குமரியென்று ஒரு வியாஜத்தை வைத்துக்கொண்டாலும் உண்மையில் நீ எங்களைக் காப்பாற்றுகிறாய். உலகத்துக் கெல்லாம் தாயாகிய நீ பாண்டியனுக்குக் குமரியாக அவதாரம் செய்தாய். இன்னும் குமரியாகவே இருக்கிறாய். நீ தான் இதை எற்றுக்கொள்ளுவதற்கு உரிய குமரி. என்னைப் போன்றவர்கள் நாசியில் இது இருந்தால் உலக மணத்தோடு இனைந்து காமக் குரோத லோப மோக மத மாச்சரியங்களை உண்டாக்கும். உன் நாசியில் இருந்தால் ஞான மணம் வீசும். அரண்மனையும் குலமும் நாடும் மாறி மாறிச் சென்று நிலையின்றி வாழும் இதற்கு இனிமேல் நிலையுள்ள வாழ்வு கிடைக்கட்டும். எவள் எப்போதும் குமரியோ அவளை அடைந்தால் இதற்கு ஊர் சுற்றுகிற வேலை இல்லாமற் போய்விடும். தாயே! எங்கள் கவலை ஓய்ந்தது; சிக்கல் தீர்ந்தது. உடம்பிலுள்ள ஆதாரங்களில் உள்ள கிரந்திகளாகிய முடிச்சைப் பேதிக்கும் லலிதாம்பிகை அல்லவா நீ? இந்த முடிச்சையும் பேதித்து விட்டாய். தாயே! எங்கள் குலத்துக்குக் குமாரியே! எனக்கும் நீதான் குமாரி. இந்தா! நீ கன்னியாக இருந்தபடியே இந்தச் சீதனத்தை ஏற்றுக் கொள்” என்று கங்கையால் கழுவிய அதைத் தன் கண்ணீராலும் கழுவி அர்ச்சகர் கையில் அளித்தாள். அவர் பிரமித்துப் போனார். என்றும் இல்லாதபடி அம்பிகையின் பழைய மூக்குத்தி இன்று விழுந்தபோது உண்டான ஏக்கம் இப்போது நீங்கிவிட்டது. அது அம்பிகையின் திருநாசியில் நட்சத்திரத்தைபோல் ஒளிவிடத் தொடங்கியது. பாண்டியன் இந்த முடிவை ஏற்றுக்கொண்டான். உலகமே ஏற்றுக்கொண்டது. அத்தகைய மூக்குத்தியை நீ உன் கண்ணாலும் கருத்தாலும் அழுக்கு ஆக்கலாமா? சொல். அது பாவம் அல்லவா? 5 பராக்கிரம பாண்டியன் கண்ணைத் திறந்து பார்த்தான். பதுமை விளக்கு ஒளிர்ந்துகொண்டே யிருந்தது. லலிதா சஹஸ்ரநாமம் முடியும் தருவாயில் இருந்தது. 993-ஆம் நாமமாகிய “ஓம் அஞ்ஞான த்வாந்த தீபிகாயை நம:” (அஞ்ஞானமாகிய இருட்டைப் போக்கும் தீபம் போல் உள்ளவள்) என்பதைச் சொல்லிக் குங்குமத்தை அம்மையின் திருவடியில் இட்டார் அர்ச்சகர். பாண்டியன் கண்ணில் நீர் அரும்பியது. “ஆம், தாயே! நீ என்ன அஞ்ஞானத்தை இப்போது போக்கிவிட்டாய். இந்த விளக்குப் போக்கியதா? நீதான் போக்கினாயா? அல்ளது உன் திருநாசியிலுள்ள அணி மாயையை உண்டாக்கிப் பின்பு துடைத்துவிட்டதா?- எனக்கு ஒன்றும் விளங்க வில்லை. நான் மனசால் பாவியாகிவிட்டேன். இதற்குப் பிராயச்சித்தம் செய்யத்தான் வேண்டும்” என்று சொல்லிக் கன்னத்தில் அறைந்துகொண்டான். “ஓம் லலிதாம்பிகாயை நம:” என்று அர்ச்சகர் அர்ச்சனையை நிறைவேற்றினார். பிறகு பாண்டியன் தான் செய்த அபசாரத்துக்குப் பிராயச்சித்தம் செய்தான். பல அரிய வைரங்களைத் தொகுத்து ஆபரணங்கள் செய்து அம்பிகைக்குப் பூட்டினான். அவன் தான் நினைத்த பிழைக்கு இரங்கித் தன் கண்ணிலிருந்து முத்தை உதிர்த்து ஆரமாக்கின அப்பொழுதே அவனை அம்பிகைதான் மன்னித்துவிட்டாளே! தாயும் கன்றும் கன்றுக்குட்டிவர வர நோஞ்சலாகிக்கொண்டு வந்தது. ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்கு நடப்பதற்குள் அதைப் பத்துதடவை உந்தித் தள்ளவேண்டியிருந்தது. பால்காரப் பாலகிருஷ்ணன் அருமையாக வளர்த்த மாட்டின் கன்று அது. அவன் அருமையாக வளர்த்தது மாட்டைத்தான்; அதன் கன்றை அல்ல. கன்று மாடு சுரப்பு விடுவதற்காக உள்ள கருவி என்று எண்ணினானே ஒழிய, அதற்கும் உயிர் உண்டு என்பதை அவன் நினைத்துப் பார்த்ததே இல்லை. பால் கறக்கும் குவளை, தீனி வைக்கும் கூடை-இவைகளெல்லாம் அவனுடைய பால் வியாபாரத்திற்கு உதவி செய்தன. அவை பாலைக் குடிக்கின்றனவா? இல்லையே! கன்றுக்குட்டியும் அப்படியல்லவா இருக்க வேண்டும்? பசு மாட்டின் மடியை முட்டிப் பால் சுரக்கும் படி பண்ணிவிட்டுப் பேசாமல் வந்துவிடவேண்டும். அப்படி இல்லாமல் அது மடியை விடாமல் பற்றிக் கொள்கிறதாவது! இழுக்க இழுக்க வராமல் அது முரட்டுத்தனம் பண்ணினபொழுது பாலகிருஷ்ணனுக்குக் கோபம் கோபமாக வந்தது. “உன் தோலை உரித்துவிடுவேன்!” என்று அவன் கத்துவான். அந்தப் பேச்சைப் புரிந்து கொள்ளும் சக்தி அந்தக் கன்றுக்குட்டிக்குக் கிடையாது. பக்கத்து வீட்டுப் பால்காரன் உண்மையாகவே ஒரு கன்றுக் குட்டியின் தோலை உரித்து அதற்குள்ளே வைக் கோலை அடைத்துப் பால் குடிக்காத கன்றுக்குட்டி ஒன்றைச் சிருஷ்டி பண்ணியிருக்கிறானே; அதுபோல இவனும் செய்யலாமே என்று யோசித்துப் பார்க்கும் அறிவு அதற்கில்லை. அதானால் அது ஒவ்வொரு தடவையும் தன் தாயின் மடியை விடாப் பிடியாகப் பற்றிக்கொண்டு தான் இருந்தது. பசு மாட்டுக்குத் தீனி போடுகிறவன் அவன். பராமரிக்கிறவன் அவன். இப்போதெல்லாம், மாட்டுத் தீவனத்தின் விலை எவ்வளவு உயர்ந்துவிட்டது! இன்னும் தண்ணீருக்கு யாரும் விலை வைக்கவில்லை; அப்படி இருக்கிறதால்தான் பாலகிருஷ்ணன் பிழைக்கிறான். இல்லாவிட்டால் – அவனுடைய அம்மா, அவன், அவன் மனைவி மூன்று பேரும் உழைக்கிறார்கள்; மாட்டைப் பராமரிக்கும் உழைப்புத்தான். தன உறவில் நாட்டுப்புறத்திலிருந்து ஒரு பெண்ணை அவன் தன் வாழ்க்கைத் துணைவியாகப் பொறுக்கி எடுத்திருக்கிறான். பட்டணத்து வாயாடிகளைப் போன்றவள் அல்ல அவள்; நாலுபேர் செய்கிற வேலையை முகம் சிணுங்காமல் குதிரைக் குட்டியைப் போல் ஒருத்தியாகவே குதூகலத்துடன் செய்கிறாள். இவ்வளவு பேர் சேர்ந்து உழைக்கிற உழைப்பிலே கன்றுக்குட்டி ஒரு வேலையும் செய்யாமல் பாலைக் குடிக்கிறதென்றால் பாலகிருஷ்ணனுக்குக் கோபம் வருமா, வராதா? சொல்லுங்கள்! ஆனால் அந்த நாட்டுப்புறத்துப் பெண் இருக்கிறாளே அவன் மனைவி-அவள் பேர் நல்லம்மாள்- அந்த நல்லம்மாள் கிராமத்தில் வளர்ந்தவள். “கொழு கொழு கன்றே, கன்றின் தாயே” என்று குழந்தைகள் கதை சொல்லும் கூட்டத்தைச் சேர்ந்தவள்; கன்றுக்குட்டி கொழு கொழுவென்றிருப்பதைப் பார்த்துக் கழிக்கும் உழவர் வீட்டிலே பிறந்தவள். “இந்தக் காளைக் கன்று நாளைக்கு எந்த மகா ராஜனுடைய வில் வண்டியிலே பூட்டும் பெருமையை அடையப் போகிறதோ!” என்று கன்றுக் குட்டியைப் பார்த்துப் பெருமைப்படும் இயல்புடையவர்கள் அவர்கள். நல்லம்மாளுக்கு இந்தக் கன்றுக்குட்டியைக் காணும் போதெல்லாம், “ஐயோ, பாவம்!” என்று இருக்கும். அவள் இந்த வீட்டுக்கு வந்து நாலு ஆண்டுகள் ஆகிவிட்டன. கன்றுக்குட்டி பிறந்து ஆறு மாதங்களே ஆகின்றன. அவள் கண்முன்னாலே பிறந்தது அது. இப்போது அது தேய்ந்து மாய்ந்து கொண்டிருந்தது. “கன்றுக்குட்டிக்குப் பால் விடாமல் கறப்பது பாவம்!” என்று அவள் பாலகிருஷ்ணனிடம் சொல்லிப் பார்த்தாள். அவன், “சரிதாண்டி போடி; கன்றுக் குட்டிக்குப் பால் வாசனை போதாதோ? அதுதான் புல்லையும் தவிட்டையும் தினமும் ஒரு ரூபாய்க்கு மேல் திங்கிறதே!” என்று சொல்லிவிடுவான். அவல் அதற்குமேல் பேசமாட்டாள். கன்றுக்காகத்தான் பசுவினிடம் கடவுள் பாலை உண்டாக்கியிருக்கிறார் என்ற தத்துவத்தை எடுத்துச் சொல்ல, அவள் அரசியல்வாதி அல்லவே? அப்படி எடுத்துச் சொன்னாலும் பாலகிருஷ்ணன் கேட்கப் போகிறானா, என்ன? பாலகிருஷ்ணனுடைய தாய் பக்கத்து வீட்டுக்காரியோடு குறைப்பட்டுக் கொண்டாள். “என்னவோ, இந்தப் பெண் வண்டு நாலு வருஷ காலம் ஆகிவிட்டது. இன்னும் ஒரு பிஞ்சு விடவில்லை. எனக்கோ வயசாகி விட்டது. காடு வா வா என்கிறது. பசுமாட்டையும் கன்றுக் குட்டியையும் பார்க்கிறபோதேல்லாம் இந்த வீட்டிலே ஒரு குழந்தை விளையாடவில்லையே என்ற துக்கம் பொங்குகிறது” என்றாள். “என்ன அதற்குள்ளே அவசரம்? நல்லம்மாளுக்கு அப்படி என்ன வயசாகிவிட்டது? அவளுக்கு இனிமேல் குழந்தை பிறக்காமலே போய்விடுமா?” என்று கேட்டாள் அடுத்த வீட்டுக்காரி. “அவளுக்கு வயசாகவில்லை; அவசரமும் இல்லை. எனக்குத்தான் அவசரமாக இருக்கிறது. பேரனை மடியில் வைத்துக் கொஞ்சுவதற்குள்ளே நான் கண்ணை மூடிக் கொண்டால்-” அவள் பெருமூச்சுவிட்டாள். “அப்படி எல்லாம் பேசாதே! நீ விடு கொள்ளாத பேரன் பேத்திகளைப் பார்த்துச் சந்தோஷமாக இருக்கப் போகிறாய்” என்று ஆறுதல் கூறினாள் அடுத்த வீட்டுக்காரி. தனக்குப் பேரன் பிறக்கவேண்டும் என்ற ஆவல் அந்தக் கிழவிக்கு அதிகமாகத்தான் இருந்தது. அந்த ஆவலிலிருந்து நல்லம்மாள்மேல் கொஞ்சம் வெறுப்புக்கூட உண்டாகிவிட்டது. “மலட்டுப் பெண்ணைக் கட்டிக் கொண்டாயே!” என்று தன மகனிடம் சில சமயங்களில் அலுத்துக்கொள்ளும் அளவுக்கு அந்த வெறுப்பு வளர்ந்தது. ஒரு நாள் நல்லம்மாள் காதில் இது விழுந்தது. அன்று முழுவதும் அவளுக்கு ஒன்றுமே வேண்டியிருக்கவில்லை. இரவு அவள் புருஷன் அவளைச் சமாதானப்படுத்தினான். அப்போது அவளுக்கு ஆத்திரம் தாங்கவில்லை. “கன்றுக் குட்டிக்குப் பால் விடாமல் கறக்கிற கல் நெஞ்சக்காரர்களுக்குக் குழந்தை எப்படிப் பிறக்கும்?” என்று கேட்டு விட்டாள். இப்படி ஒருநாளும் அவள் பேசினதில்லை. பால கிருஷ்ணனுக்கு அந்த வார்த்தை சுருக்கென்றது. அவன் அவளைக் கோபிக்கவும் இல்லை; சமாதானப்படுத்தவும் இல்லை. எதிர்வீட்டு ராமனுடைய பெண் தன் கணவனுடன் பிறந்த வீட்டுக்கு வந்திருந்தாள். அவள் பிள்ளைப் பேற்றுக்கு இங்கே வந்து போனவள்தான்; இரண்டு வருஷமாக வரவில்லை. அவள் வந்ததில் ராமனுக்கும் அவன் மனைவிக்கும் அளவற்ற சந்தோஷம். அவள் குழந்தை இரண்டு வருஷத்துக்கு மிஞ்சின வளர்ச்சி பெற்றிருந்தது; தத்தித் தத்தி நடந்தது. அங்கங்களெல்லாம் உருட்டித் திரட்டி விட்டாற்போல் இருந்தன. அந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டு வீதியிலே வந்து நிற்பதிலே ஒரு தனி இன்பம் கண்டாள் ராமன் மனைவி. “எதற்காக அப்படிப் போய் நிற்கிறாய்? யார் கன்னாவது படப போகிறது!” என்று அவளுடைய மகள் குழந்தைக்குத் தாய்-கூவினாள். அந்தச் சமயம் பார்த்துத்தானா பாலகிருஷ்ணனனுடைய தாய் அந்தக் குழந்தையைப் பார்க்கவேண்டும்? எதிர்வீட்டுக்காரி தன் பேரானை இடுப்பிலே வைத்திருக்கும் கோலம் அவள் கண்ணிலே பட்டது. அதோடு சேர்ந்தாற்போல் அவள் பெண் பேசின பேச்சும் காதிலே பட்டது, ‘அட அதிசயமே!’ என்றுதான் முதலில் பாலகிருஷ்ணனுடைய தாய் நினைத்தாள். அடுத்த கணமே, ‘அதிசயந்தான்’ என்ற உண்மையான எண்ணம் உண்டாயிற்று. ‘இரண்டு வயசில் இவ்வளவு வளப்பத்தோடு ஊரில் உள்ள குழந்தைகள் இருக்கின்றனவா? பொட்டலங் கட்டும் காகிதத்தில் சில குழந்தைகளின் படம் வருகிறதே, அப்படியல்லவா இந்தக் குழந்தை இருக்கிறது..’ மறுபடியும் அந்தக் குழந்தையை நன்றாகப் பார்த்தாள். கொழு கொழுவேன்றிருந்த கோலத்தைக் கண்ணால் முகந்து முகந்து பருகினாள். ‘அதிசயமான குழந்தைதான். எந்தத் தாயும் பெருமைப்பட வேண்டிய குழந்தை’ என்ற தீர்மானத்துக்கு வந்தாள். “நமக்கு ஒரு நோஞ்சல் குழந்தைகூட அதிசயந்தான். இங்கே மலட்டு மரமல்லவா வளர்கிறது!” என்று அலுத்துக் கொண்டாள். “அம்மா, குழந்தையை உள்ளே கொண்டு வா; பால் கொடுக்க வேண்டும்” என்று குழந்தையின் தாய் சொன்னது இவள் காதில் விழுந்தது. தாய்ப்பாலின் ஊட்டந்தான் அந்தக் குழந்தைக்கு அவ்வளவு வளப்பத்தையும் பொலிவையும் கொடுத்திருக்கிறது என்பது அவளுக்கு நினைவு வந்தது. எதிர்வீட்டு ராமனுடைய பெண் தன் குழந்தையை எடுத்துக்கொண்டு பாலகிருஷ்ணன் வீட்டுக்கு வந்தாள். “குழந்தைக்கு என்ன அம்மா கொடுக்கிறாய்?” என்று கேட்டாள் பாலகிருஷ்ணனின் தாய். “என் பால்தான்” என்று அலட்சியமாகச் சொன்னாள் அந்தப் பெண். “பார்த்தாயா? நான் நினைத்தேன்” என்று சட்டென்று பாலகிருஷ்ணன் தாய் கூறினாள். அப்போது மற்றொரு குரலும் எழுத்து. பாலகிருஷ்ணன் மனைவி நல்லம்மாள்தான் பேசினாள். “அதன் அதன் தாய்ப் பால் வகையாக இருந்தால் குழந்தை நன்றாகத்தான் இருக்கும்” என்று அவள் சொன்னாள். அவள் பேச்சு அவள் மாமியாருக்கு எரிச்சலை உண்டாக்கியது, “ஆமாம், நீ ரொம்ப கண்டு விட்டாய்! தாய்ப் பாலைப்பற்றிப்பேச உனக்கு ஏது வாய்?” என்று சீறினாள். மூன்றாவது பேர்வழியை வைத்துக்கொண்டு அவள் அப்படிப் பேசினது நல்லம்மாளுக்குப் பிடிக்கவில்லை. “தாய் என்றால் எல்லாம் தாய்தான். அதன் பாலைக் கன்றுக் குட்டிக்குக் கொடுத்து வளர்க்கத் தெரியாதவர்களுக்கு மாத்திரம் தாய்ப் பாலின் அருமை தெரிந்துவிடுமா, என்ன?” - அவள் பேச்சில் சிறிது பலமாகவே வெறுப்புத் தொனித்தது. ரோசம் கொண்ட பேச்சு அல்லவா அது? இப்படிப் புயல் மூண்டவுடன் எதிர்வீட்டுப் பெண் நாகரீகமாக விலகிக்கொன்டாள். “கடைக்குப் போய்ச் சாமான் வாங்க வேணும். நான் நாளைக்கு ஊருக்குப் போகிறேன், அத்தை” என்று சொல்லி விடை பெற்றாள். வாசல் திண்ணையில் இத்தனையும் கேட்டுக் கொண்டிருந்தான் பாலகிருஷ்ணன்; அவனுக்குக்கூடத் தன் தாயிடம் கோபம வந்தது. அயலாருக்கு முன் அவள் நல்லம்மாளைப் பழித்தது அவனுக்கும் பொறுக்கவில்லை. * * * * “இல்லை அம்மா, கன்றுக்குட்டியை இன்னும் கொஞ்சம் விட்டுப் பிறகு பிடி, அம்மா!” “இது என்னப்பா புதிய பேச்சு?” “புதிசு அல்ல. கன்றுக்குட்டி நன்றாக இராவிட்டால் முநிசிபாலிடியில் அபராதம் போடுகிறார்களாம். பால் வியாபாரமே பண்ணக் கூடாதென்று தடுத்து விடுகிறார்களாம்” என்றான் பாலகிருஷ்ணன். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அனால் நல்லம்மாளுக்கு நன்றாக விளங்கிவிட்டது. “நீ இப்படி மணம் கசந்து கொள்கிறாய்? அந்தக் குழந்தையைப் பார்த்தது முதல் எனக்கே மனசு இறங்கிவிட்டது. நான் பண்ணுகிற அக்கிரமம் புரிகிறது. ஏதாவது தந்திரம் பண்ணி அம்மாவை ஏமாத்தலாம். அம்மா ஏமாந்தாலும் தப்பு இல்லை; கன்றுக் குட்டியும் நீயும் ஏமாந்து போகக் கூடாது” என்று அவன் தனிமையிலே சொன்ன வார்த்தை இப்போது செயலாக உருவாகிறது என்று விளங்கியது. அன்றுமுதல் கன்றுக் குட்டியின் பாடு குஷிதான். ஆறு மாதம் கழித்து எதிர்வீட்டுப் பெண் மறுபடியும் வந்திருந்தாள். அவள் தங்கைக்குக் கல்யாணம்; அதற்காக வந்தாள். பாலகிருஷ்ணன் வீட்டுக் கன்றுக்குட்டி வாசலில் வந்ததைப் பார்த்தாள். தன் வீட்டு வாசலில் இருந்தபடியே பாலகிருஷ்ணன் தாயை, “அத்தை, வேறே மாடும் கன்றும் வாங்கியிருக்கிறீர்களா?” என்று கேட்டாள். “இல்லை, இல்லை, பழைய மாடுதான்.” “பின்னே!” அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. “எல்லாம் நீ கற்றுத் தந்த வித்தை” என்று பதில் வந்தது. “மருமகள் சௌக்கியமா?” என்று அந்தப் பெண் கேட்டாள். அதுத்த கணம் பழைய காட்சி நினைவுக்கு வந்ததனால் ‘ஏன் கேட்டோம்’ என்று நாக்கைக் கடித்துக்கொண்டாள். ஆனால் அவள் எதிர்பார்த்த சீறல் தோன்றவில்லை. “அவள் பத்துநாள் பிறந்த வீட்டில் இருந்துவிட்டு வரப் போயிருக்கிறாள்” என்றாள் பாலகிருஷ்ணன் தாய், முகமலர்ச்சியுடன். “என்ன விசேஷம்?” “சாமி கண் திறந்து பார்த்திருக்கிறார்” என்று சொல்லிக்கொண்டே அருகில் வந்து நின்ற கன்றுக் குட்டியை அந்தக் கிழவி தடவி கொடுத்தாள். கீரைத் தண்டு 1 புதிய வீட்டில் சுற்றிலும் செடி கொடிகளைப் போட வேண்டும் என்பது விசாகநாதனின் ஆசை. கண்ட கண்ட செடிகளைப் போட்டால் யாருக்கு என்ன லாபம்? கறி வேப்பிலை மரம் அவசியம் இருக்க வேண்டும். பசலைக் கொடியும் அவசியந்தான்; எப்போதும் கொத்தமல்லி கிடைக்கும்படி இரண்டு பாத்திகள் இருக்க வேண்டும். மூலிகைகளுக்கென்று சில பாத்திகளாவது வேண்டும். அவனுடைய வீட்டுத் தோட்டத் திட்டத்தில் காய்கறி, கனி, மூலிகை, பூஜை மலர் எல்லாம் இருந்தன. வீடு கட்டிக்கொண்டு வந்தபோது சில சமயங்களில், ’இந்தத் திட்டம் உருவாகிவிடுமா? மண் எப்படியோ? பயிரிடும் முறை எதுவோ? என்றெல்லாம் தோன்றும். ஒன்றும் மாத்திரம் அவனுக்கு நன்றாகத் தெரியும். கீரைப் பாத்தி போடுவதில் அவன் கெட்டிக்காரன். இது வரையில் அவன் குடியிருந்த வீடுகளில் கையகலம் நிலம் இருந்தாலும் அங்கே கீரைப் பாத்தி போட்டுவிடுவான். கீரைத் தண்டில் அவனுக்கு அலாதிப் பிரியம்; அவனோடு பழகி வாழ்ந்த அவனுடைய மனைவிக்கும் கீரைத் தண்டிலே மோகம் ஏற்பட்டுவிட்டது. அவனுக்குத் தோட்டக்கலை தெரியாது. ஆனால் அந்தக் கலை தெரிந்த நண்பர்கள் இருந்தார்கள். ஒரு நண்பராக இருந்தால் திட்டமாக யோசனை சொல்வார். பல நண்பர்கள் அவனுக்கு இலவசமாகத் தம்முடைய அறிவுத் தானத்தைச் செய்யப் புறப்பட்டபொழுது அவன் எதையென்று வரையறையாக மேற்கொள்வது! “நீங்கள் எந்த மரம் வைத்தாலும் வையுங்கள். தென்னமரத்தை வைக்காதீர்கள். அதன் வேர் பரவலாகப் பாய்வது; உங்கள் வீட்டுச் சுவரைத் துளைத்துவிடும்.’ என்றார் ஒருவர். ‘வாழை மரம் உங்களுக்கு அவசியம். உங்கள் வீட்டுக்கு அடிக்கடி விருந்தாளிகள் வருவார்கள். இலை வாங்கிக் கட்டாது. காய்க்கென்று போடாவிட்டாலும், இலைக்கென்று நாலுமரம் வையுங்கள்’ என்பது ஒருவர் யோசனை. அதைக் கேட்டுக்கொண்டிருந்த வேறொரு நண்பர் அவர் போனவுடன் விசாகனை நெருங்கி வந்தார். ‘ஸார், நான் சொல்கிறதற்காகக் கோபம் கொள்ள வேண்டாம். கண்ட பேர் பேச்சைக் கேட்காதீர்கள். வாழை போட்டால் அது பேய் மாதிரி இலைகளை விரித்துப் படரும். அப்புறம் கீழே ஒரு செடி வளரமுடியாது.’ என்று இரகசியமாகச் சொன்னார். ‘முருங்கை மரம் வீட்டிலே வைக்கக் கூடாது என்று எங்கள் பாட்டி சொல்லுவாள்’ என்று ஒருவர் அவன் காதில் போட்டு வைத்தார். இவ்வளவு பேர்களுடைய அற்புதமான அறிவுரைகளுக்கிடையே விசாகனுடைய அநுபவ அறிவு வேலை செய்தது. அவனுக்குத் தெரிந்தது ஒன்றுதான்; அன்றும் சரி, இன்றும் சரி, இனியும் சரி அந்த ஒன்றைப்பற்றி அவனுக்குச் சந்தேகமே இல்லை: அதுதான் கீரைப்பாத்தி. மற்ற முயற்சிகளையெல்லாம் ஒத்தி வைத்துவிட்டு அவன் கீரைப் பாத்தி போட்டான். அவனுக்குத் தெரிந்த முறையிலே போட்டான். அதற்கு எங்காவது போய்ப் படிக்க வேண்டுமா என்ன? பாத்தி பச்சைப் பசேலென்றிருந்தது. செடி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்தது. ஒரு சாண் உயரம் முளைக் கீரை வளர்ந்தது. ஆறு மாசக் கீ,ஐத் தண்டு வேறு போட்டிருந்தான். அதுவும் வளர்ந்தது. இந்தச் சமயம் பார்த்து எதிரே குடிசை போட்டிருந்த சின்னத்தம்பி ஆட்டுக்குட்டி ஒன்றை வாங்கி வளர்க்க வேண்டுமா என்ன? விசாகனுடைய வீட்டின் மூன்று புறமும் திறந்தவெளி. மனையை வாங்கினவர்கள் இன்னும் வீடு கட்டவில்லை. முன் பக்கத்தில் ரோடு. ரோட்டுக்கு எதிரே யாருடைய மனையிலோ சின்னத்தம்பி குடிசை கட்டிக் கொண்டிருந்தான். ரிக்‌ஷா இழுக்கும் தொழிலில் வருமானம் போதவில்லை யென்று என்ன தொழில் செய்யலாம் என்று ஆராய்ந்து கொண்டிருந்தான். ஆட்டுக் குட்டி வாங்கி வளர்க்கலாம் என்று தோன்றியதும், அவன் வாங்கி வளர்த்ததும் நியாயந்தானே? விசாகன் கீரைப் பாத்தி போட்டுக் கீரையை வளர்த்த்து எவ்வளவு நியாயமோ, அவ்வளவு நியாயம் அவன் ஆடு வளர்த்ததும். ஆட்டுக்குட்டியும் வளர்ந்து வந்ந்து; கீரைத்தண்டுகளும் வளர்ந்து வந்தன. முதலில் ஆட்டுக்குத் தன் எசமானல் வீடு இன்னதென்று பழக்கிறவரைக்கும் சின்னத் தம்பியின் மகன் அதைக் கயிற்றால் கட்டித் தானே கொண்டு மேய்த்து வந்தான். ‘இதற்கு வீடு அடையாளம் தெரிந்துவிட்டது. எங்கே போனாலும் திரும்பி வந்துவிடும்’ என்ற நிலை வந்தது. சின்னத்தம்பி ஆட்டுக்குட்டியை அதன் மனம் போனவாறு அவிழ்த்துவிட்டான். இப்போதுதான் சங்கடம் தலைகாட்டியது. ஆட்டுக் குட்டிக்கு அல்ல; சின்னத்தம்பிக்கும் அல்ல. விசாகனுக்குத்தான்; உண்மையைச் சொல்லப் போனால் அவன் வீட்டுக் கீரைத் தண்டுக்கென்றே சொல்ல வேண்டும். நேர் எதிர் வீட்டில் தளதள வென்று வளர்ந்துவரும் கீரையின் மேல் ஆட்டுக் குட்டி கண் வைத்துவிட்டது. வாசல் பக்கத்தைத் தவிர மற்ற மூன்று பக்கங்களிலும் கம்பம் நட்டு முள் கம்பியால் வேலி கட்டியிருந்தார்கள். அந்தக் கம்பிகளுக்கு இடையே எதுவும் நுழைய முடியாது என்பது வேலி கட்டினவர்களின் எண்ணம். ஆட்டுக்குட்டியின் ஆசையும் முயற்சியும் வேறுவிதமாக இருந்தன. அன்று வெள்ளிகிழமை. நாளும் கிழமையுமாகப் பார்த்துத்தான் எதிர் வீட்டு ஆட்டுக்குட்டி விருந்து சாப் பிட்டிருக்கிறது! ஆட்டுக்குட்டி என்று அப்போது சொன்ன பேரையே இப்போது சொல்வது முறையாகாது. இப்போது அது சாட்சாத் ஆடு; குட்டிப் பருவம் தாண்டி விட்டது. எப்படியோ முண்டி அடித்துக்கொண்டு ஆடு கீரைத் தண்டைப் பட்சணம் செய்துவிட்டது. சரியாகப் பட்டப் பகல் பன்னிரண்டு மணி நேரத்தில் இந்தக் காரியத்தை அது செய்தது. விசாகன் காரியாலயம் போய்விட்டான். குழந்தைகள் பள்ளிக்கூடம் போய்விட்டார்கள். வீட்டில் உள்ள பெண்களுக்கு அது ஓய்வு நேரம். எல்லோரும் சுகமாகத் தூங்கிக்கொண்டிருந்தார்கள். முதல் நாள் இரவு கண் விழித்து என்னவோ வேலை செய்துகொண்டிருந்தார்கள். இன்று பன்னிரண்டு மணி வேளையில் பகலில்தான் உலகையே மறந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள். இந்தச் சுப முகூர்த்தத்தில் ஆடு எங்கெங்கோ முட்டி ஆராய்ந்து ஒரு குறிப்பிட்ட இடத்தின் நெளிவு சுளுவு தெரிந்து உள்ளே நுழைந்துவிட்டது. வாசலில் எல்லையடைப்பைப் பூட்டித்தான் இருந்தார்கள். அது மனிதர் நுழையாததற்காக அல்லவா? ஸ்ரீமான் ஆட்டையா தம்முடைய நாக்குக் கொண்ட மட்டும் கீரைத் தண்டை ருசி பார்த்துவிட்டார். அது வந்த சோடும் தெரியவில்லை; போன சோடும் தெரியவில்லை; பெண்மணிகள் மூன்று மணிக்கு விழித்துக்கொண்டு பார்த்தால் கீரைப் பாத்தி புயலடித்த தோப்புப் போல இருந்தது. “ஐயையோ!” என்று அலறினார்கள். விசாகன் வந்தால் அமர்க்களப்படும் என்று அஞ்சினார்கள். சின்னத்தம்பியின் ஆடுதான் கடித்திருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டார்கள். “இதோ பார், உன் ஆடு பண்ணின அக்கிரமத்தை!” என்று அவனைக் கூப்பிட்டுக் காட்டினார்கள்; திட்டினார்கள். அவனா ஒப்புக்கொல்வான்? “என்ன அம்மா அப்படிச் சொல்கிறீர்கள்? என் ஆட்டை எப்போதுமே கட்டி வைத்திருக்கிறேன். நாம் பையன் ஓட்டிக்கொண்டு மேய்த்து வருகிறான். அதைப் போய்ச் சொல்கிறீர்களே!” என்று சொல்லிவிட்டான். “இங்கே பார்; ஆடு கடிக்காமல் இப்படி ஆகுமா?” என்று கேட்டார்கள் பெண்கள். “இந்த ஊரில் நான் ஒருத்தந்தானா ஆடு வளர்க்கிறவன்? எத்தனையோ பேர்கள் வளர்க்கிறார்கள். எந்த ஆடு வந்து தின்றதோ?” என்றான். அவர்கள் அவனோடு வாய் கொடுக்கக்கூடாது என்று சும்மா இருந்துவிட்டார்கள். விசாகன் மாலையில் வீடு வந்து சேர்ந்தான். வந்தவுடனே சமாசாரத்தை அறிந்தான். சின்னத் தம்பியை இடிக் குரலில் அழைத்தான். அவன் ரிக்க்ஷா வண்டியில் அடிக்கடி போகிறவன் விசாகன். ஆகையால் கடுமையாகக் கோபித்துக்கொள்ளத் தீர்மானித்தான். சின்னத்தம்பி மெதுவாக வந்தான். “என்ன ஐயா இடி விழுந்ததுபோலக் கத்துகிறாய்?” என்று கேட்டுக் கொண்டே வந்தான். அவன் முன்பே திட்டம் போட்டுக் கொண்டு வருகிறவன் ஆயிற்றே! “அக்கிரமம் பண்ணிவிட்டு நான் கத்துகிறேனென்றா சொல்கிறாய்?” என்று விசாகன் கோபத்துடன் கத்தினான். “என்ன அக்கிரமத்தைக் கண்டுவிட்டாய்?” என்று சின்னத்தம்பியும் இரைந்து பேசினான். ஒன்றும் தெரியாதவனைப் போலல்லவா பேசுகிறான்? கீரைப் பாத்தியை உன் ஆடு நாசமாக்கிவிட்டதே! பார்க்கவில்லையா?" ‘கீரைப் பாத்தியையா? நீதான் கோட்டை மாதிரி வேலி கட்டியிருக்கிறாயே! அதைத் தாண்டி எப்படி ஐயா வரும்?’-இது யோசனையின்மேல் வரும் கேள்வி. ‘ஆடு வந்த அடையாளமும் அது கடித்த அடையாளமும் இருக்கிறபோது, நீ ஒன்றும் நடக்காததுபோலப் பேசுகிறாயே?’ ‘என் ஆடுதான் கடித்திது என்பதற்கு அடையாளம் இருக்கிறதா?’ ‘ஏ முட்டாள்! இங்கே கண் முன்னாலே உன் ஆடு தானேடா வளைய வருகிறது?’ என்று கோபம் தாங்காமல் பேசினான் விசாகன். இந்தா, முட்டாள், கிட்டாள் என்று பேசினால் அப்புறம் எனக்குக் கெட்ட கோபம் வந்துவிடும். உனக்குத்தான் பேசத் தெரியுமென்று எண்ணாதே…’ இதற்குள் விசாகன் மனைவி வந்து, ‘ஆபிஸிலிருந்து வந்ததும் வராததுமாக அவனோட என்ன பேச்சு? வாருங்கள் உள்ளே!’ என்று அழைத்தாள். விசாகன் மறுபடியும் கத்தினான். சின்னத்தம்பியும் இரைந்து பேசினான். விசாகன் மனைவி அவனை உள்ளே கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள். சின்னத்தம்பி மீசையை முறுக்கின படியே தன் குடிசைக்குப் போய்விட்டான். 2 சண்டையோ சாமாதானமோ, அதெல்லாம் ஆட்டுக்கா தெரியும்? அது எப்படியோ திருட்டுத்தனமாக்க் கீரைப் பாத்தியைத் துவம்சம் செய்து வந்தது. விசாகன் சின்னத் தம்பியின் ரிக்‌ஷாவில் ஏறவில்லை. வீட்டுக்கு எதிரே வா என்று அழைத்தால் வாசலில் நிற்கும் ரிக்‌ஷாவில் ஏறுவது எப்படி? நாமாகத் தேடிக்கொண்டு போவது எப்படி? இருந்தாலும் அந்தப் பயலுக்குப் புத்தி புகட்ட வேண்டும் என்றே அவனைக் கூப்பிடுவதில்லை. சின்னத்தம்பி இதனால் அயர்ந்தவனாகத் தோன்றவில்லை. ‘இவர் இல்லாவிட்டால் இன்னொருத்தர்’ என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. விசாகன் வேலியைப் பின்னும் செறிவாகப் போடத் தொடங்கினான். அங்கங்கே குறுக்கே குச்சியைக் கட்டினான். புதிய கீரைப் பாத்தி போட்டான். சில இடங்களில் வேலிக் காலில் முள்ளுச் செடியை வைத்தான். ஆட்டுக்குப் பயந்து வீட்டுக்கு அரண் போட்டான். ஆடோ அந்த அரணை எப்படிக் குலைக்கலாம் என்று ஆராய்ச்சி செய்து வந்தது. ஒரு மாசம் சென்றது. மேலும் இரண்டு வாரங்கள் ஆயின. பாத்தியில் ஒரு சாணுக்கு மேல் முளைக் கீரை வளர்ந்திருந்தது. அன்று சனிக்கிழமை. எப்படியோ ஆடு வேலியாகிற கோட்டையில் ஒரு நுழைவிடத்தைக் கண்டு பிடித்து விட்டது. பகல் இரண்டு மணி இருக்கும். உள்ளே நுழைந்து கீரையைப் பலகாரம் பண்ணிக் கொண்டிருந்தது. அப் போதுதான் காரியாலயத்திலிருந்து வந்து வீட்டுக்குள் நுழைந்தான் விசாகன். சனிக்கிழமையன்று பாதி நாள் வேலை என்று ஆட்டுக்குத் தெரியவில்லையே! நுழையும் போதே வீட்டுக்குப் பக்கத்தே கண்ணை ஓட்டும்போது அவனுக்குப் பகீரென்றது. நுழையும் இடத்தில் ஒரு கல் இருந்த்து. அதை எடுத்து ஆட்டின்மேல் ஆத்திரத்தோடு வீசினான். அது பாவம்! முளைக்கீரையின் சுவையிலே உலகையே மறந்திருந்தது. கல் சரியாக அதன் பின்னங்கால் ஒன்றைத் தாக்கியது. வேகமான தாக்குதல். மே என்று அலறிக்கொண்டு அது பாயத்தொடங்கியது. கால் ஒடிந்து விட்டது. முன்னங்காலானாலும் நொண்டி நொண்டி ஓடும். இப்போது பயத்தால் ஓடப் பார்க்கையில் நடக்க முடியாமல் விழுந்தது. சற்று அருகிலே போய்ப் பார்த்தான் விசாகன். பாவம், படுகாயம்! பின்னங்கால் துண்டுபட்டது போல் ஆகிவிட்டது ரத்தம்வழிந்தது. ரத்தத்தைக் கண்ணாலே கண்டபோது அவனுக்கு வயிறு புளிக்கரைத்தது. வாய்ப் பேச்சில் வீரமே ஓழிய அவன் மனசு கோழை மனசு. ஆடு திணறியது; நடுங்கியது. பேசாமல் அதை மெதுவாக இழுத்து வந்து வாசலில் விட்டு விட்டுக் ’கேட்’டைப் பூட்டிக்கொண்டு உள்ளுக்குள்ளே போய்விட்டான். அவன் நெஞ்சு படபடத்தது. ஆட்டுக்கு என்ன ஆகுமோ என்ற பயம். சின்னத்தம்பி சண்டைக்கு வந்து விடுவானே என்ற திகில். திருடனுக்குத் தேள் கொட்டினதுபோல ஒன்றையும் வெளியிடாமல், ஒன்றிலும் மனம் ஓடாமல் திருதிரு வென்று விழித்துக்கொண்டே இருந்தான். எதிர்க் குடிசையில் சின்னத்தம்பி கத்திக் கொண்டிருந்தான். எந்த அகரதியிலும் இல்லாத வார்த்தைகள் அவன் திருவாயிலிருந்து வெள்ளமாக வந்தன. ஆட்டை அடித்தவன் யார் என்று சொல்லுவது? எதிர் வீட்டு விசாகன் என்றால் அவன் வீட்டுக்குள் ஆடு நுழைந்ததா? அதை முதலில் ஒப்புக்கொண்டாக வேண்டுமே; ஒப்புக் கொள்வதானால் முன் குற்றங்களையும் ஒப்புக்கொள்ள வேண்டுமே! பொதுவாகவும் குறிப்பாகவும் வாய்க்கு வந்தபடி திட்டிக் கொண்டே யிருந்தான் அவன். வெளியிலே தலை காட்டாமல் வீட்டுக்குள் எவ்வளவு நேரம் கொட்டுக் கொட்டென்று உட்கார்ந்து கொண்டிருப்பது? எங்காவது பிரசங்கம் கேட்டுவிட்டு வரலாமென்று புறப்பட்டான் விசாகன். மயிலாப்பூர் கபாலி கோயிலில் அன்று முருகனைபெபற்றி யாரோ பேசினார்கள். முருகனைக் குல தெய்வமாக வழிபடுபவன் விசாகன். அவன் அங்கே போனான். பிரசங்கி ஒரு கட்டத்தில் அஹிம்சையைப்பற்றியும் புலால் மறுத்தலைப்பற்றியும் பேசினார். ‘சைவம் என்பதற்குச் சிவ சம்பந்தம் என்று பொருள். ஆனால் பொது மக்கள், சைவம் என்றால் புலால் உண்ணாமை என்று நம்புகிறார்கள். சைவ சமயம் அஹிம்சையைச் சிறந்த விரதமாகக் கொள்வது; புலால் மறுத்தலை முதல் கடைப்பிடியாக உடையது. சைவர்களிலும் முருகன் அடியார்கள் புலாலுணவைக் கண்ணெடுத்தும் பார்க்கக் கூடாது. ஆட்டையும் கோழியையும் கொலை செய்து தம் வயிற்றை இடுகாடாக்கும் மக்கள் முருகன் அருளைப் பெறமுடியாது. ஆடு முருகனுடைய வாகனம்; கோழி அவனுடைய கொடி. அந்த இரண்டுக்கும் தீங்கு புரிபவர்கள் எப்படி முருகன் அடியாராக இருக்க முடியும்?…..’ பிரசங்கி மேலே என்ன பேசினாரோ, விசாகன் உணரவில்லை. ‘ஆட்டுக்கு ஹிம்சை உண்டாக்கினவன் முருகன் அடியனாக இருக்க முடியாது’ என்ற சிந்தனையில் அவன் ஆழ்ந்து போனான். ‘நம்முடைய செயலைத் தெரிந்து கொண்டுதான் இப்படிச் சொல்கிறாரோ? பாவம்! அந்த ஆடு என்ன துடிதுடித்தது! அதன் காலில் ஒழுகின ரத்தம்! ஐயோ! அதை நினைத்தாலே குலை நடுங்குகிறதே. ஒரு கீரைப் பாத்தி போனால் மற்றொரு கீரைப் பாத்தி போடலாம். ஆடு இறந்து போய்விட்டால், அதன் உயிரை மறுபடியும் வாங்கி வர முடியுமா?……’ அவனுடைய பச்சாத்தாபம் வளர்ந்தது; விரிந்தது. வேறு ஞாபகமே உண்டாகவில்லை. ‘செய்தது செய்துவிட்டோம். இனிமேல் என்ன செய்வது? கடவுளே! வடிவேல் முருகா! அந்த ஆட்டை எப்படியாவது காப்பாற்று. நான் வேண்டுமென்று செய்ய வில்லையே! நீ காப்பாற்ற வேண்டும், அப்பனே!’-வழி நெடுக இப்படியே வேண்டிக்கொண்டு வீட்டுக்கு வந்தான். தான் பண்ணிய பிழைக்கு ஏதாவது பிராயச்சித்தம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தான். முதல் பிராயச்சித்தம் சின்னத்தம்பியுடன் சகஜமாக இருப்பது; அவன் ரிக்‌ஷாவில் பழையபடி ஏறுவது இரண்டு மூன்று நாட்கள் சும்மா இருந்தான். பிறகு பிராயச்சித்தத்தை ஆரம்பித்தான். முதலில் அவன் சின்னத்தம்பியின் மகனைக் கூப்பிட்டு ரிக்க்ஷா கொண்டு வரச் சொல்லி ஏறினான். பிறகு அவனையே கூப்பிட்டு மெல்ல ஆட்டின் நிலையை விசாரித்தான். அதன் காலில் மூலிகை வைத்துக் கட்டி வருவதாகத் தெரிந்துகொண்டான். எப்படியாவது அந்த ஆட்டுக்கு அபராதம் செலுத்த வேண்டுமென்ற எண்ணம் அவனுக்கு இருந்தது. அதற்கு என்ன வழி? “ஆட்டுக்கு என்ன தீனி அப்பா போடுகிறாய்?” என்று சின்னத்தம்பியைக் கேட்டான். “அரசிலை வெட்டிப் போடுகிறேன்” என்றான் அவன். “அது புல் தின்னுமா?” என்று கேட்டான் விசாகன். “புல் வாங்கக் காசு ஏது?” “நான் தருகிறேன்” என்று நாலணாவை எடுத்துக் கொடுத்தான் விசாகன். அன்று ராத்திரி அவனுக்கு நன்றாகத் தூக்கம் வந்தது. இரண்டு நாள் கழித்து அவனுக்கு ஒரு புது யோசனை தோன்றியது. அது மிகவும் பொருத்தமான பரிகாரம் என்று எண்ணினான். தன் வீட்டுப் பாத்தியிலிருந்து சில கீரத் தண்டுகளைப் பறித்துக்கொண்டு போய்த் தானே அந்த ஆட்டுக்குப் போட்டான். “கீரைத் தண்டு எதற்குச் சாமி ஆட்டுக்கு?” என்று கேட்டான் சின்னத்தம்பி. “நான் ஒரு சொப்பனம் கண்டேன். என் அம்மா சொப்பனத்தில் வந்து ஆட்டுக்கு கீரை வாங்கிப் போடடா என்று சொன்ன மாதிரி கண்டேன்” என்றான் விசாகன். முன்பே தீர்மானித்து வைத்திருந்த பதில். சின்னத்தம்பி ஏன் ஆட்சேபிக்கிறான்? அல்வாவைக் கொண்டு வந்து ஊட்டட்டுமே! அவன் ஆட்டுக்குத்தானே நல்லது! இரண்டு நாளைக்கு, மூன்று நாளைக்கு ஒருமுறை ஆட்டுக்குக் கீரைத்தண்டு கொடுப்பதை ஒரு விரதமாகவே மேற்கொண்டான் விசாகன். முருகனுடைய கோபத்துக்குப் பாத்திரமாகாமல் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் வழியல்லவா? ‘ஜீவஹிம்சை செய்துவிட்டோம், தெரியாமல். இப்போது இறங்குகிறோம். கடவுளே! என்னை மன்னிக்க வேண்டும்!’ - இப்படி என்னை என்னை ஆறுதல் பெற்றான். ஆட்டுக்கும் கால் ஆறி வந்தது. மெதுவாக நொண்டி நொண்டி நடக்கத் தொடங்கியது. இப்போதெல்லாம் விசாகன் வாரத்துக்கு ஒரு முறை, சனிக்கிழமையில் தவறாமல் கீரைத் தண்டு வாங்கி ஆற்றுக்குச் சமர்ப்பித்து வந்தான். இன்னும் மூன்று மாசம் இந்த விரதம். அவன் சங்கற்பம் அது. பாவம்! ஆடு பிழைத்துக் கொண்டது. நன்றாக ஓடியாடித் திரிய வேண்டும். இரண்டு மாதம் ஆயின. ஆடு பழையபடி திரியத் தொடங்கியது. அதற்குப் பயந்து விசாகன் கீரைப் பாத்தி போடவில்லை. ஆனால் சனிக்கிழமை விரதம் நடந்து வந்தது. அவன் கீரை வாங்கிக் கொணர்ந்து ஆட்டுக்குக் கொடுத்து வந்தான். ஒரு நாள் சனிக்கிழமை. எங்கும் கீரை கிடைக்காமல் கொத்தவால் சாவடிக்குப் போய் நாலு தண்டு வாங்கினான். அவையும் வாடிப்போன தண்டுகள். அவனும் அலைச்சலினால் முகம் வாடிப் போனான். ஆனாலும் உள்ளத்தில் மலர்ச்சி; தான் செய்த காரியத்தால் ஆடு கால் ஒடிந்து உயிரிழந்து போகாமல் பிழைத்துக்கொண்டதே என்ற நினைவு. வாடிய முகமும் வாடிய கீரைத்தண்டுமாக வந்தவன் வீட்டுக்குள் நுழையாமலே எதிரில் உள்ள குடிசைக்கு அருகில் சென்றான். “சின்னத்தம்பி!” என்று கூப்பிட்டான். “ஏன் சாமி!” என்று ஓடிவந்தான் அவன். “இன்று நல்ல கீரைத் தண்டு கிடைக்கவில்லை. பல இடங்களில் அலைந்தேன். இதுதான் கிடைத்தது. இந்தா! உண் ஆட்டுக்குப் போடு" என்று அவன் கையில் கொடுத்தான். சின்னத்தம்பி அதை வாங்கியபடியே, “இனிமேல் நீங்கள் கீரைத் தண்டு வாங்க வேண்டிய வேலை இல்லை, சாமி” என்று புன்னகை பூத்தபடியே சொன்னான். “ஏன்?” என்று கேட்டான் விசாகன். “அதை ராவுத்தருக்கு விற்றுவிட்டேன்.” “ராவுத்தரா? அது யார், அப்பா?” “கசாப்புக் கடை வைத்திருக்கிறாரே, அந்த ராவுத்தர்!” “ஹா!” விசாகன் இடிவிழுந்து போனான். குழலின் குரல் மலையைச் சார்ந்த சிறிய ஊர் அது. அங்கே இயற்கைத் தேவி தன் முழு எழிலோடு வீற்றிருந்தாள். மலையினின்றும் வீழும் அருவி எப்போதும் சலசல வென்று ஒலித் துக்கொண்டே இருக்கும். மலர், காய், கனி ஆகியவற்றுக்குத் குறைவே இல்லை. தினை, சாமை, வரகு முதலிய தானியங்களும் நன்கு விளைந்தன. இந்த அழகிய சூழ்நிலையில் அவர்களுடைய காதல் வளர்ந்தது. இளமையும் எழிலும் நிறைந்த இணையாக இருந்தார்கள்: அவன் பெயர் முருகன்; அவள் பெயர் மெல்லியல். அவன் அவளைக் கொஞ்சலாக மெல்லி என்றே அழைப்பான். நாகரிகம் முளைக்காத காலம் அது. நகரம் என்பதையே அறியாத காலத்தில் நாகரிகம் எங்கிருந்து உண்டாகும்? இலைகளையும் பட்டைகளையும் ஆடையாக உடுத்து மலரையும் வித்தையும் அணியாக அணிந்து மக்கள் இன்புற்றார்கள். புறத்தோற்றத்தில் இன்று காணும் விரிவான பண்டங்களும், அமைப்புகளும் அன்று இல்லை. ஆனால் இன்று மிக அருமையாக மக்களின் அகத்தே காணப்படும் அன்பும் அமைதியும் அக்கால மக்களின் உள்ளத்தில் விளங்கின. மேலே சொன்ன மலைச்சாரற் சிற்றூரில் அமைதியாக வாழ்ந்த மக்களிடையே கதிரவனையும் திங்களையும் போல அவ்விரண்டு காதலரும் வாழ்ந்தார்கள். அவர்களுக்குச் சுறுசுறுப்பாக மானையும் சிங்கத்தையும் போலத் துள்ளிக் குதித்து வேலை செய்தும், விளையாடியும் பொழுது போக்கத் தெரியும்; காதல் புரியத் தெரியும். கலகலவென்று சிரிக்கத் தெரியும். காலையும் மாலையும் அவர்கள் காட்டினூடே சென்று மலரையும் காய்கனிகளையும் தொகுத்து வருவார்கள். அருவி காலாக ஓடும ஓரிடத்தில் மூங்கில் அடர்ந்து வளர்ந்திருந்தது. அப்புதரின் அருகில் அருவிநீர் தத்திக் குதித்து நுண்டுளியை வீசும் பாறை ஒன்று உண்டு. அங்கே அவ்விருவரும் அமர்ந்து மலையையும் வானையும் கண்ணால் அளந்து பார்த்து இன்புறுவார்கள். அவர்களுக்கு அதிகமாகப் பேசத் தெரியாது. ஆனால் அவர்களுடைய கண்கள் தம்முள்ளே பேசிக்கொள்ளும். அந்தப் பார்வைக்குப் பொருளுரைக்க இன்று வளம் பெற்று விளங்கும் எந்த மொழியிலும் சொல் இல்லை. அவர்களுடன் வாழ்ந்தவர்களுக்கு அவ்விருவருடைய காதலையும் கண்டு பொறாமை உண்டாகவில்லை; வியப்புத்தான் உண்டாகியது. அவர்கள் தங்களினும் உயர்ந்தவர்கள் என்ற உணர்ச்சி தோன்றியது. அவர்களை வணங்க வேண்டும் என்பது போன்ற ஆசை எழுந்தது. ஆனால் அவர்களுக்குக் காலில் விழுந்து வணங்கத் தெரியாது. அவர்களை நெருங்காமல் நின்று கையைத் தூக்கிக் குவித்தனர். காமனும் ரதியும்போல அவ்விருவரும் வாழ்ந்தார்கள். ஆனால் காதலின் தெய்வங்களாகிய அவர்களைப்பற்றிய கற்பனையை அவர்கள் அறியார். நாள் ஓடிக்கொண்டிருந்தது. அருவியும் ஓடிக் கொண்டிருந்தது. அவர்கள் காதல் பாறைபோல உறுதியாக இருந்தது. என்றாவது காட்டுக்குள்ளே போகும்போது அவனும் அவளும் மரச்செறிவினூடே பிரிந்து போய்விடுவார்கள். அவன் மெல்லி என்று கூவுவான். அந்தக் குரல் மலையிலே பட்டு எதிரொலிக்கும். மான்களை விழித்துப் பார்க்கச் செய்யும். அவள் காதில் அந்தக் குரல் விழுந்தாள் அதற்கு எதிர்க் குரல் கொடுப்பாள். அதைச் சிள் வண்டின் ஒலியென்று சொல்லலாமா? சே! அதில் இனிமை இல்லையே! அவன் முழங்கிய குரல் சிங்கத்தின் கர்ஜனையைப் போல இருக்கும். அவள் எதிர் கூவிய குரலோ இருதயத்துக்குள்ளே சென்று புகும். அதில் ஓர் இனிமை நிலவும். இரண்டு குரலும் மலைச்சாரலில் ஒன்றை யொன்று தழுவி எதிரொலிக்கும். அது மறைவதற்குள் அவர்கள் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். அப்புறமும் ஓர் ஒலி- இரட்டை ஒலி-கேட்கும். அவளை அவன் தேடிக் கூவிய குரல் அன்று; இருவரும் இணைந்து ஒன்றுபட்டபோது உண்டாகும் சிரிப்பொலி. கச்சேரியின் இறுதியிலே தாள வாத்தியங்கள் சேர்ந்து ஓர் ஆவர்த்தம் வாசித்தது போல இருக்கும். அந்த இணைந்த ஒழி. அந்தச் சிரிப்பிலே தாளக் கட்டு இருக்கும்; ஒலியே நடனமிடும். அவர்கள் உள்ளம் ஒன்றி மகிழும் இன்ப நடனத்தின் புறத்தோற்றம் அது; ஒட்டும் இரண்டுளத்தின் தட்டு அது. அவன் கடித்த பாதிக் கனியை அவள் சுவைத்து உண்ணுவாள். அவள் கடித்த பாதிக் கனியை அவன் உண்ணுவான். ஒருநாள் இருவருக்கும் இடையே ஒரு விவாதம் எழுந்தது; சிறு பூசலாக மாறியது. அது இல்லா விட்டால் காதல் ‘கனியும் கருக்காயும்’ போன்றது அல்லவா? ஒரு பழத்தை அவன் வைத்திருந்தான். “நீ அதைப் பாதி கடித்துத் தின்றுவிட்டுத் தா” என்றாள் அவள். “நான் மட்டும் முழுப் பழத்தைக் கடிப்பேனா? நீ கடித்துத் தந்ததைத்தான் நான் தின்பேன்” என்றான் முருகன். அப்படி யானால் இருவரும் ஒன்றாகத் தின்போம் என்று முடிவு கட்டினார்கள். ஒரே சமயத்தில் ஒரு கனியை எப்படி இருவரும் கடித்துத தின்பது? எதிரும் புதிருமாக நின்று கடித்தார்கள். பறிக்காமல் மரத்தில் இருந்தபடியே கடித்துப் பார்த்தார்கள். அப்படியும் முடியவில்லை. உடனே ஒரு தந்திரம் செய்தான். பழத்தை எடுத்துக் கடித்தான். அவள் கையில் கொடுத்தான். ஆனால் தான் கடிதத்தைத் துப்பிவிட்டான். அவள் கடிக்காத பழம் அவனுக்கு இனிக்குமா? அவள் அந்தக் குறைக்கணியைக் கடித்துண்டு பின்னும் குறையாக்கினாள். அதை அவன் சட்டென்று பிடுங்கி உண்டான். இருவரும் காடே அதிரும்படி சிரித்தார்கள். தேவலோக வாசிகளுக்குக்கூட இந்த இன்பம் கிடைக்காதே! தேவர்கள் அவர்களைக் கண்டு கண் போட்டு விட்டார்களோ? மாசுமறுவற்று விளங்கிய அவளுடைய உடம்பில் ஏதோ கோளாறு உண்டாயிற்று. அவனோடு அவளால் வெளியே வர முடியவில்லை. இன்றியமையாத காரியங்களுக்கு மாத்திரம் அவன் வெளியே போய் வந்தான். அப் போதெல்லாம் அருவி முன்போலக் குளிர்ச்சியாக இல்லை. மலர்கள் மணம் வீசவில்லை. பறவைகளின் குரல் கவர்ச்சியாக இல்லை. உலகமே அவனுக்குச் சுவைக்கவில்லை. காய் கனிகள் கொண்டு வந்து மெல்லிக்கு ஊட்டுவான். அவள் சிறதளவு உன்பாள்.ஆனால் உடனே வாந்தி எடுத்து விடுவாள். அவளுக்கு என்ன நோய்? அவனுக்கு விளங்க வில்லை. கடைசியில்…! ஆம்; மெல்லத் தன் முருகனைப் பிரிந்து சென்றுவிட்டாள். அவள் மெலிந்த உடல் கீழே கிடந்தது. அதை அவன் புரட்டிப் புரட்டிப் பார்த்தான். கையை எடுத்தான். அது விறைப்பாக இருந்தது. அவள் கண் நட்டுப் போயிற்று. அது இருதயத்தை வெளிப்படுத்தும் மொழியைப் பேசவில்லை. இருதயமே நின்றுவிட்டபோது இனி எப்படி ஒலிக்கும்? அவன் அவள் உடம்பைக் கட்டிக் கொண்டு அழுதான். ஆயுளில் அப்போதுதான் அழுகிறான். முகத்தோடு முகத்தைத் தேயத்துக்கொண்டான். எத்தனை இன்பமாக, வெதுவெதுப்பாக அம்முகம் இருக்கும்! இப்போது அதில் ஒன்றுமே இல்லை; சில்லிட்டிருந்தது. அவனுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. அந்த உடம்பு இனி எழுந்திருக்காது. அவனோடு காட்டுக்கு வராது. அதன் தொண்டையிலிருந்து காட்டின் அந்தகாரத்தையும் கிழித்துக்கொண்டு வரும் இன்பக் கீச்சொலி எழும்பாது. கொடிபோல இருந்த உடல் மரமாகிவிட்டது. இனி என் செய்வது! இரண்டு மூன்று நாட்கள் உண்ணாமல் உறங்காமல் அவன் கதறினான். அந்தச் சோகக்களத்திற்கு வந்து பார்க்க யாருக்கும் தைரியம் இல்லை. ஆனாலும் தூரத்தில் எல்லோருமே கூட்டமாக வந்து நின்றுகொண்டு பார்த்தார்கள். முருகன் இப்போது பசியினாலும் சோகத்தாலும் மயக்கம் போட்டு விழுந்துவிட்டான். தூரத்தில் நின்றவர்கள், அவனும் பிணம்போலக் கிடப்பதைக் கண்டார்கள். மெல்ல நெருங்கிப் பார்த்தார்கள். அவன் மயங்கிக் கிடந்ததை அறிந்துகொண்டார்கள். மூச்சு மெல்ல வந்துகொண்டிருந்தது. தண்ணீரை முகத்தில் தெளித்தார்கள். அவன் கண்ணை விழித்தான். சிறிது கனியைத் தந்தார்கள். பாதி மயக்கத்தில் அதை உண்டான். பிறகு தெளிவு பிறந்தது. “ஏன் என்னை விழிக்கச் செய்தீர்கள்!” என்று அழுதான். அவர்கள் அவனிடம் பயந்துகொண்டே ஆறுதல் கூறினார்கள். அந்த உடம்பினால் இனி ஒன்றும் பயன் இல்லை என்று எடுத்துச் சொன்னார்கள். நாள் ஆக ஆக அவ்வுடல் உருவிழந்து நாற்றம் அடிக்கத் தொடங்கியது. அவன் அதை அனுகுவதற்குக் கூசினான். எப்படியோ ஆறுதல் கூறி மேல்லியின் உடலைக் கொண்டு போய்ப் புதைத்தார்கள். அவனுடைய விருப்பப் படியே நாள்தோறும் சென்று அமர்ந்துகொண்டு அளவளாவும் மூங்கிற்புதரின் அடியில் அடக்கம் செய்தார்கள். அன்று தொடங்கி அவன் மற்ற வேலைகைளை மறந்தான். அருவிக்கரையில் மூங்கிற் புதருக்கு அடியில் வந்து உட்கார்ந்து ஒரே யோசைனையில் ஆழ்ந்திருப்பான். மெல்லி நிலத்தைப் பிளந்துகொண்டு தன் நல்லுருவத்தோடு வந்து தன் முன் நிர்கப்போகிறாள் என்ற பைத்தியக்காரக் கற்பனை ஒன்று அவனுக்கு உண்டாயிற்று. ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் அங்கே சென்று நெடுநாழிகை அப்படியே அமர்ந்துகொண்டிருப்பான். காட்டிலே அவள் பிரிந்து சென்றுவிட்டால், “மெல்லி!” என்று கூவி அழைப்பானே, அப்படிக் கூவி அழைப்பான். அந்தக் குரலே எதிரோலிக்குமே யன்றி மெல்லியின் பெண்மைக்குரல் எழாது. ஒருகால் தான் புதைந்திருக்கும் இடத்திலிருந்து மெல்லி குரல் கொடுப்பாளோ! அவன் தன் காதை அவளைப் புதைத்த இடத்தில் வைத்துப் பார்ப்பான். அப்படியே நெடுநேரம் படுத்துக் கிடப்பான். பாவம்! ஏமாற்றத்தை யன்றி அவனுக்கு வேறு என்ன கிடைக்கும்? ஏதேனும் பறவை கீச்செனக் குரல் எழுப்பினால் அவள்தான் கூவுகிறாளோ என்று மயங்குவான். பிறகு உண்மை தெரிந்து விடுவான். மாதக்கணக்கில் அவன் இப்படியே பொழுது போக்கினான். மெல்லி கிடந்த நிலத்தில் பசுமை படர்ந்தது. அங்கிருந்த மூங்கில்கள் ஓங்கி வளர்ந்தன. அவன் துயரமும் வளர்ந்ததே யன்றிக் குறையவில்லை. 2 காதை நேரித்துக்கொண்டு கேட்டான்.“ஆம்! மெல்லியின் குரல்தான்!” என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான். அதில் சொற்களின் உருவம் தோன்றவில்லையே யன்றி அந்தக் குரல்-இனிய உயிரை உருவும் குரல்-அவளுடையதுதான் என்பதில் சந்தேகமே இல்லை. காற்று வீசிக்கொண்டிருந்தது. அதனோடு இடை விட்டுவிட்டு அந்தக் குரல் கேட்டது. அவன், “மெல்லீ” என்று கூவினான்; குதித்தான்; துள்ளி நாலுதிசையிலும் ஓடினான். குரல் எங்கிருந்து வருகிறது? பூமியிலிருந்து வரவில்லை. பூமிக்கு மேலிருந்து வந்தது. மெல்லி மரத்தின்மேல் ஏறிக் கொண்டிருக்கிறாளோ? உற்றுக் கவனித்தான்; கூர்ந்து மூச்சை அடக்கிக் கொண்டு கேட்டான். ஒலி மூங்கிற்புதரின் மேலிருந்து வருவதாக உணர்ந்தான். அண்ணாந்து பார்த்தான். ஆம்; நிச்சயமாக மெல்லி அந்த மூங்கிற் புதரின் மேலேதான் இருக்கிறாள். காற்று வேகமாக வீசியது; அந்தக் குரலும் சற்று உரத்துக் கேட்டது. அவனுக்கு ஒரே எக்களிப்பு. ‘மெல்லி, எங்கே இருக்கிறாய்?’ என்று எழுந்து அங்கும் இங்கும் சுற்றினான். அதன்மேல் ஏறிப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது. மறுபடியும் அந்தக் குரல். அவன் வேகமாக மரத்தின் மேல் ஏறினான். உடம்பை அதன் முள் கிழித்தது. அதை அவன் பொருட்படுத்தவில்லை. மேலே ஏறினான். அந்த ஒலி சற்றே நின்றது. ‘மெல்லி!’ என்று கூவினான். காற்று வீசியது; மீட்டும் குரல் கேட்டது. அவன் அந்தக் குரல் எங்கிருந்து வருகிறதென்று ஆராய்ந்தான். ‘மெல்லி எப்படி மூங்கிலுக்குள்ளே புகுந்துகொண்டாள்? ஏன் அவள் வார்த்தை பேசாமல் வெறும் ஒலியை மாத்திரம் எழுப்புகிறாள்?’ உண்மையை அவன் உணரவில்லை. அவன் தன் உள்ளத்தே மெல்லியை வைத்தவன். உலகம் முழுவதும் அவனுக்கு மெல்லியாகவே தோன்றியது. உண்மை இதுதான். நன்றாக உயர்ந்திருந்த மூங்கிலில் வண்டுகள் ஆங்காங்கே துளைத்திருந்தன. காற்று வேகமாக வீசி மூங்கிலினுள்ளே புகுந்து வெளிவரும்போது இனிய ஒலி எழுப்பியது. அந்த ஒலியையே மெல்லியின் குரலாக அவன் எண்ணி ஏமாந்தான். மூங்கிலிலிருந்துகொண்டு மெல்லி அழைப்பதாக முருகன் எண்ணினான். ஒலிவந்த மூங்கிலுக்கு அருகே சென்றான். காற்று வீசும்போதெல்லாம் அந்த ஒலி எழுந்தது. நிச்சயமாக மெல்லி அந்தச் சிறு மூங்கிலுக்குள்ளேதான் புகுந்து கொண்டிருக்கிறாள் என்று நம்பினான். அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தான். பசித்தபொழுது கீழே இறங்கிக் காட்டிற்குள் சென்று கனியையும், காயையும் பறித்து உண்டுவிட்டு வந்து, மறுபடியும் மூங்கிலின்மேல் ஏறி உட்கார்ந்து கொள்வான். ஒரு வாரம் ஆயிற்று. அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. இந்த மூங்கிலை ஒடித்துக்கொண்டு தன் குடிலுக்கே போனால் என்ன என்ற எண்ணம் உண்டாயிற்று. சில நாழிகை யோசனையில் ஆழ்ந்தான். கடைசியில் மளுக்கென்று அந்த மூங்கிலின் நுனிப்பகுதியை ஒடித்தான்; வீட்டுக்குக் கொண்டுபோனான். அதை வைத்துக்கொண்டு கொஞ்சினான். கண்ணில் ஒற்றிக்கொண்டான்; முத்தமிட்டான். குடிலுக்குக் கொண்டுபோன பிறகு அதில் ஒலி எழும்பவில்லை. ஒருகால் அந்த இடத்தில் இருந்தபடியேதான் குரல் எழுப்புவாளோ? மறுபடியும் அதை அருவிக் கரைக்குக் கொண்டுபோனான். அதில் ஒலி எழவில்லை. ‘ஐயோ! நான் அவளை ஓட்டிவிட்டேனே!’ என்று அழுதான். மறுபடியும் என்னவோ தோன்றிற்று. மூங்கிலை எடுத்து ஒரு துளையில் வாயை வைத்து முத்தமிட்டான். அப்போது ஒரு பெருமூச்சு வந்தது. அதனால் சிறிது ஒலி வந்தது. மறுபடியும் அவன் ஆராய்ச்சி செய்யத் தொடங்கினான். கடைசியில் வாயை வைத்து ஊதினால் அந்த ஒலி உண்டாவதை அறிந்தான். அதுமுதல் அதை ஊதிக் கொண்டே இருந்தான். அவன் காற்றாகப் பேசினான்; அவள் வெறும் ஒலியாகப் பேசினாள். குழலின் ஒலியைப் போன்ற குரல் மெல்லிக்கு இருந்தது. அவள் உயிரோடு இருந்த காலத்தில் அவள் குரல் ஒன்றுதான் அவனுக்குத்தெரியும்; குழலின் ஒலி தெரியாது. யாருக்குமே தெரியாது. ஒப்போது குழலின் ஒலியை அவள் முரலாக அவன் எண்ணினான்-அதை ஊதிக்கொண்டே உலாவினான். அவனுடைய சோககீதம் அதிலிருந்து வெளியாயிற்று. அவன் ஊதஊத அவனுக்கே ஒருவிதத் தேர்ச்சி உண்டாயிற்று. ஆனால் அது அவனுக்கே தெரியவில்லை. அவள்தான் வேறு வேறு வகையில் குரல் கொடுக்கிறாள் என்று நினைத்தான். ஊதிக்கொண்டே இருந்தான். அதுதான் உலகில் முதல்முதல் உண்டான குழல். அதைக் கண்டு பிற்காலத்தில் புல்லாங்குழலை உண்டாக்கினார்கள். தன் காதலியே குழலாக இருந்து குரல் கொடுக்கிறாள் என்ற மயக்க உணர்வோடு முருகன் வாழ்ந்தான். அவன் சோகத்தில் பிறந்தது புல்லாங்குழல். உள்ளும் புறமும். கடவுள் மறுப்புக் கட்சிக்கு ஆட்கள் சேர்ந்து கொண்டே இருந்தார்கள். மார்கழிமாதப் பஜனைக்கு எவ்வளவு பேர் கூடவார்களோ அந்தக் கணக்குக்கு மேல் ஜனங்கள் இந்த கூட்டத்தில் கூடினார்கள்; அதில் வேடிக்கை என்னவென்றால், மார்கழி பஜனையில் சேர்ந்து கொண்டு தாளம் போட்டவர்களே இந்தக் கூட்டத்திலும் சேர்ந்து கைதட்டினார்கள். அதைக் கண்டு க.ம.க-க்காரர்கள்; கடவுளையே வென்றுவிட்டதாகப் பெருமைப்பட்டார்கள். வெளிப்படையாகவும் பேசினார்கள். முருகேசன் இந்தக் கட்சியில் சேர்ந்துகொண்டான். அதற்கு இன்னதுதான் காரணம் என்று சுட்டிக் கூற முடியாது. காற்றடித்த வாக்கிலே சாயும் மரம் போல அவன் கருத்துச் சாய்ந்தது. கொஞ்சம் பத்திரிகைகளைப் படித்துப் படித்து நாலு வார்த்தை பேச அவன் கற்றுக்கொண்டிருந்தான். ஆதலால், அவன் நாளடைவில் ஒரு குட்டித் தலைவன் ஆனது ஆச்சரியம் அல்ல. முருகேசன் கடவுள் மறுப்புக் கட்சியில் சேர்ந்ததே அந்தக் கட்சிக்குப் பொரிய வெற்றி. அவனுடைய குடும்பம் சைவவேளாள மரபைச் சேர்ந்தது. பரம்மரை பரம்பரையாகச் சிவபூஜை செய்து வந்த குடும்பம். அவன் காலத்தில் அவ்வளவு விரிவான பூஜை இல்லாவிட்டாலும் படத் துக்கு விளக்கு ஏற்றி மாலை போடும் வழக்கம் மாத்திரம் தவறாமல் இருந்தது. கூடத்தில் சுவாமி படங்கள் வரிசையாக மாட்டப்பட்டிருந்தன. பூஜை யறையில் நடராஜர் படம் தலைமை பெற்று விளங்கியது. முருகேசன் புதுக்கட்சியில் சேர்ந்த பிறகு அந்தப் படங்களை யெல்லாம் எடுக்கவேண்டி வந்தது. கூடத்தில் படம் ஒன்றும் வேண்டாம் என்று தீர்மானித்துவிட்டான். சில போட்டோக்களை மாட்டலாம் என்று யாரோ நண்பர்கள் சொன்னபோது அவன் அந்த யோசனையை ஏற்கவில்லை. அவன் மனசுக்குள் ஏதோ ஒன்று அங்கே போட்டோக்களை மாட்ட வேண்டாமென்று சொல்லியது. வாசனை, வாசனை என்று சொல்கிறார்களே அதுதானோ இது? எவ்வளவு காலமாகக் கடவுளை வழிபடும் குடும்பம் அது. திடீரென்று அதைக் கைவிடுவது என்றால் பழக்க வாசனை விடுமா? ஆனால் படங்களை எடுக்காவிட்டால் நண்பர்கள் எளிதில் விட்டுவிடுவார்களா? மானத்தை வாங்க மாட்டார்களா? மனசுக்குள் உறுத்தல் இருந்தாலும் கூடத்தில் இருந்த படங்களையெல்லாம் எடுத்துவிட்டான். அவனுடைய வயசான அத்தை ஒருத்தி அவனை இதற்காக வைதாள். அதை அவன் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. படங்களை யெல்லாம் எடுத்த பிறகே கட்சித் தலைவர்களைத் தன் வீட்டுக்கு அழைத்துவந்து உபசரித்தான். ஒருநாள் க.ம. கட்சித் தலைவர் தோழர் நடராஜன் அவனுடைய வீட்டுக்கு வந்திருந்தார். அவர் முருகேசனுடைய கட்சிப்பற்றைப் பாராட்டினார். “உங்கள் குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாக வந்த மூடப் பழக்கங்களை இவ்வளவு விரைவில் விட்டொழித்ததற்கு ஈடும் எடுப்பும் இல்லை. உங்களைப்போல ஐம்பதுபேர் இருந்தால் தமிழ் நாடு முழுவதையும் ஒரு கலக்குக் கலக்கிவிடலாம்” என்று சிலாகித்தார். “தம்பி, அவர் யார்? எங்கே வந்தார்?” என்று அத்தை கேட்டாள். “அவரா? தமிழ்நாட்டில் இன்று அரசியல் தலைவர்களாக உலவும் பொம்மைகளைப் போலன்றி உண்மை உழைப்பும் அறிவும் உடைய எங்கள் தலைவர்” என்று பிரசங்க தோரணையில் சொன்னான் முருகேசன். “நீ என்னப்பா சொல்கிறாய்?” என்று அத்தை நிதானமாகக் கேட்டாள். “கடவுள் மறுப்புக் கட்சியின் தலைவர்” என்றான் முருகேசன். “நம்முடைய வீட்டில் உள்ள படங்களை யெல்லாம் எடுத்துவிடும்படி சொன்ன மகாநுபாவன் இவன்தானா?” என்று கோபத்தோடு கேட்டாள். “அப்படிச் சொல்லாதே, அத்தை; அவர் பெரிய அறிவாளி.” “தெய்வம் இல்லையென்று சொல்கிறதற்குப் பெரிய அறிவு வேண்டுமா?” என்று அத்தை கேட்டாள். “தெய்வம் உண்டு என்பதற்கு எவ்வளவு அறிவு வேண்டியிருந்தது? எவ்வளவு சாஸ்திரங்கள் வேண்டியிருந்தது? அவற்றையெல்லாம் கீழ்ப்படுத்தித் தெய்வம் இல்லை என்று சாதிப்பதற்கு இன்னும் பெரிய அறிவு வேண்டாமா அத்தை? யோசித்துப் பார்” என்று நியாயம் பேசினான் அவன். அவனுடைய வக்கீல் வாதம் அந்தக் கிழவிக்குப் புரிபடவில்லை. “இதெல்லாம் நல்லதுக்கு வரவில்லை!” என்று தன் வழக்கமான தீர்ப்போடே அவள் விலகிக் கொண்டாள். அத்தையிடம் வாயடி கையடி அடித்துப் பேசினாலும் முருகேசனுக்கு வேறு ஒன்று அடிக்கடி எதிர்நின்று கேள்வி கேட்டது. அதுதான் அவனுடைய மனச்சாட்சி. எதற்கெடுத்தாலும் கடவுள் என்றும், சாமியாரென்றும் தேடிச்சென்ற குடும்பம் அது. கோபுரத்தைக் கண்டால் கைகள் தாமே குவியும்; பெரியவர்களைக் கண்டால் தலை தானே தாழும். இந்தப் பண்பு முருகேசனுடைய உடம்பிலே ஒட்டியிருந்தது; உள்ளத்தில் ஊன்றியிருந்தது. ஆகவே, ஒவ்வொரு நாளும் அவனுடைய மனத்துக்குள் ஒரு பெரும்புயல் அடித்துக்கொண்டே வந்தது. க.ம. கட்சிக் கூட்டத்தில் இருக்கும் வரையில் அவனுக்குத் தான் தைரியமாகச் சீர்திருத்த நெறியில் நடப்பதாக ஒரு பெருமை தோன்றும். வீட்டுக்கு வந்தாலோ பல காலமாக வைத்திருந்த பொருள் ஒன்றை இழந்துவிட்டது போன்ற உணர்ச்சி ஏற்படும். வீதியில் ஏதேனும் தெய்வ ஊர்வலம் போனால் அவன் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வர மாட்டான். ஆனாலும் அவன் மனசு பக் பக்கென்று அடித்துக் கொள்ளும். வீட்டில் இருக்கிற படங்களை யெல்லாம் எடுத்து விட்டதோடு நின்றிருந்தால்கூட அவனுக்கு இத்தனை சங்கடம் உம்டாயிருக்காது. பூஜை அறை என்ற இடத்தை இப்போது படிப்பறை யாக்கிக்கொண்டான். அங்கே உள்ள நடராஜர் படத்தையும் எடுத்துவிட வேண்டும் என்ற முயற்சி தலைப்பட்டபோதுதான் அவனுக்கு விளங்காத வேதனை உள்ளத்தில் தோற்றியது. தன் கட்சிக்காரன் ஒருவனை ஒரு நாள் அந்த அறைக்குள் அழைத்து வந்தான். அந்த மனிதன் கண்ணில் நடராஜர் படம் பட்டு விட்டது. “என்ன, ஐயா, இது? வெளியிலே வேஷம் போடுகிறது போலக் கூடத்திலே இருக்கிற படங்களை மாத்திரம் கழற்றினாய். இந்த இடத்திலே இது தாண்டவமாடுகிறதே!” என்று பரிகாசம் செய்தான். " அதையும் எடுத்துவிடப் போகிறேன். ஆனால் உண்மையைச் சொல்லப் போனால் படங்கள் நிறைந்திருந்த வீட்டில் ஒரு படங்கூட இல்லாமல் இருந்தால் ஏதோ மாதிரி இருக்கிறது." " அதற்காக இந்தப் படத்தை வைத்திருக்கிறாயோ? யாராவது கண்டால் சிரிக்கப் போகிறார்கள்! அப்படிப் படம் வேண்டுமென்றால் இந்த நடராஜன் படம் எதற்கு? நம் அருமைத் தலைவர் நடராஜன் படத்தை இங்கே மாட்டி விடலாமே!" என்று வந்த நண்பன் யோசனை கூறினான். “சரியான யோசனை! உன் அறிவை மெச்சுகிறேன்” என்று சொல்லிக் குதித்தான் முருகேசன். முருகேசன் தன் வீட்டில் தலைவருடைய படத்தை மாட்டினான். பிரதிஷ்டை செய்தான் என்று சொல்வது வைதிக சம்பிரதாயம்; ஆதலால், அப்படிச சொல்லக் கூடாது. ஆனால் உண்மையில் அந்த நிகழ்ச்சி பிரதிஷ்டையைப் போலப் பெரிய நிகழ்ச்சியாகவே அமைந்தது. ’தலைவர் படத் திறப்புவிழா’வை மிக விமரிசையாக நடத்தினான். அதற்கு அந்தத் தலைவரும் வந்திருந்தார். அந்தப் படத்தைக் கூடத்தின் நடுவில் மாட்டி வைத்தான். முருகேசன். அன்று அவனுடைய கட்சி நண்பர்கள் பலர் வந்திருந்தார்கள். தூபதீப நைவேத்தியம் என்று சொல்லா விட்டாலும் படத்தைச் சுற்றி விளக்குப் போட்டிருந்தான். ஊதுவத்தி ஏற்றி வைத்தான். எல்லோருக்கும் சிற்றுண்டி வழங்கினான். படங்களையெல்லாம் எடுத்துவிட்டபோது அவனுக்கு இருந்த மனப்போராட்டம் இப்போது இல்லை. அந்தக் கூடம் சூனியமயமாக இருந்ததைக் காண அவனுக்குப் பொறுக்கவில்லை இப்போது தலைவர் படத்தை மாட்டிய பிறகு அவன் முகத்தில் மலர்ச்சி வந்துவிட்டது என்று அவனோடு நெருங்கிப் பழகினவர்கள் சொன்னார்கள். கடவுள் மறுப்புக் கட்சித் தலைவர் வீட்டில் சில நண்பர்கள் கூடியிருந்தார்கள். முருகேசன் வரவில்லை. எல்லோரும் எதை எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள். “முருகேசன் வீட்டுப் படத்திறப்பு விழா எவ்வளவு சிறப்பாக நடைபெற்றது!” என்று ஒருவர் கொண்டாடினார். “முருகேசனுக்குத் தலைவரிடம் உள்ள பக்தி…..” " என்ன, பக்தியா? அந்த வார்த்தையை எதற்கப்பா இங்கே கொண்டு வருகிறாய்?" “சரி, பக்தி வேண்டாம், அன்பு என்று வைத்துக் கொள்ளுங்கள். அவருக்குத் தலைவரிடம் உள்ள மதிப்பு, மரியாதை, அன்பு எல்லாம் ஒரு தனிரகம். தம்முடைய குடும்பத்துக்கு ஏற்ற முறையிலே அந்த அன்பைக் காட்டுகிறார். அவருடைய போக்கிலே பழமையும் புதுமையும் கலந்து விளங்குகின்றன.” “என்ன ஐயா, சும்மா அளக்கிறாய்? பழமையாவது, புதுமையாவது! மனிதன் தன் வீட்டுப் படங்களை யெல்லாம் அகற்றிப் பெரிய புரட்சி பண்ணிவிட்டான். அங்கே பழமை ஏது?” என்று ஒருவர் கேட்டார். " நாள் தவறினாலும் தலைவர் படத்துக்கு மாலை போடுகிறது தவறுகிறதில்லை. ஊதுவத்தி ஏற்றுவது தவறுவதில்லை. விளக்கு ஏற்றுவது தவறுவது இல்லை." " சரிதான். நமக்குக் கோயில் கட்டிக்கும்பிடுவதுதான் பாக்கி போல் இருக்கிறது!" என்று புன்முறுவலுடன் தலைவரே பேசினார். " அவருடைய அன்பை நாம் பாராட்டவேண்டும்" என்று இடையிலே தம் கருத்தை உரைத்தார் ஒருவர். " நான் அன்பு இல்லை என்றா சொல்ல வருகிறேன்? வெளி விளம்பரம் இல்லாமல் அந்தரங்க அன்போடு முருகேசன் இருக்கிறார் என்பதையே இந்தச் செயல் காட்டுகிறது. ஆனாலும்… தலைவர் மேலே பேசுவதற்குள், " ஆனாலும் இது பழைய பண்பாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? என்று ஒருவர் கேட்டார். " இல்லை, இல்லை. பழமை, புதுமை என்ற வேறுபாடு சிலவற்றிற்கு இல்லை. மலரால் அலங்காரம் செய்வது பழமை என்று தள்ளிவிட முடியுமா? ஊதுவத்திவைப்பது பழமை என்றால் நமக்கு நல்ல மணம் வேண்டாமா? ஆனால் இவற்றை யெல்லாம் கண்ணுக்குத் தெரியாத பேர்வழி ஒருவரைக் கடவுள் என்று சொல்லிக்கொண்டு, வாழும் மனிதருக்கு ஆகாமல் வீணடிப்பதுதான் தவறு…" நல்ல வேளை! தலைவர் தம்முடைய பிரசங்கத்தைத் தொடர்வதற்கு முன் மற்றொரு நண்பர் இடையிலே பேசினார். “எப்படியானாலும் முருகேசன் தம் மரியாதையைக் காட்டத் தாம் விரும்பும் முறையை மேற்கொள்ள அவருக்கு உரிமை உண்டு” என்று அவர் கூறினார். அன்று தலைவர் பிறந்த நாள் விழா. முருகேசன் வீட்டில் ஏகதடபுடல். அன்று ஆடி வெள்ளிக்கிழமை. வேறு சிலர் வீட்டில் சுவாமிக்கு ஆராதனை நடத்தினார்கள். முருகேசனோ தலைவர் படத்துக்கு அலங்காரம் செய்து, நண்பர்களைக் கூப்பிட்டு உபசாரம் செய்தான். இப்படி அடிக்கடி நடந்தது. ஒருநாள் கூட்டம் கூடியது. தலைவர் ஊரில் இல்லை. அந்தக் கூட்டத்தில் ஒரு சிறிய யோசனையை அவன் வெளியிட்டான். “வருகிற மாதம் திருவாதிரை வருகிறது. மற்ற ஜனங்கள் அன்று உற்சவம் நடத்திக் கொண்டாடுகிறார்கள். நாம் சும்மா இருக்கிறோம். நாமும் அன்று விழாக் கொண்டாடவேண்டும். குருட்டு நம்பிக்கையைத் தகர்க்க இது சரியான வழி. பகைவனை சரியான இடத்தில் சரியான காலத்தில் தாக்க வேண்டும் என்று சொல்வார்கள். அவர்கள் விழாக் கொண்டாடும் காலத்திலேயே நாமும் விழாக் கொண்டாடினால் பலரை நாம் இழுக்கலாம்” என்று தன் கருத்தைக் கூறினான். மற்றவர்கள் அது நல்ல யோசனை என்று ஒப்புக்கொண்டார்கள். திருவாதிரை யன்று தலைவர் நடராஜன் படத்துக்கு மாலையிட்டு விழா நடத்தினான், முருகேசன். அன்று களியே கிண்டி வந்தவர்களுக்கு வழங்கினான். “சரியான தந்திரம். இப்படித்தான் குறும்பாடுகளை வசமாக்க வேண்டும்” என்று க.ம. கட்சிக்காரர்கள் பேசிக் கொண்டார்கள். முருகேசன் கூட்டம் கூட்டி விழா நடத்துவது மாத்திரம் அல்ல; தனியாகவே தலைவர் படத்தின் முன் அமர்ந்து தியானம் செய்தான். கண்ணீர் வடித்தான். இந்த விசித்திரத்தைக் கண்டவர்களுக்கு அவன் மனநிலை ஒன்றும் விளங்கவில்லை. தலைவர் நடராஜனுக்கு இந்தச் செய்திகள் காதில் பட்டபோது அவருக்கு உடம்பு பூரித்தது. ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. எதிர்பாராத விதமாக ஒருநாள் தலைவர் படத்துக்குக் கண்ணாடி உடைந்துபோயிற்று. அப்போது முருகேசன் வருந்தினான். விம்மி விம்மி அழுதான்: ‘இனிமேல் இந்த வேஷம் போதும். என் மனச்சாட்சி என்னை அறுக்கிறது’ என்று வாய்விட்டுப் புலம்பினான். வீட்டில் உள்ளவர்களுக்கு அவன் ஏன் அப்படிக் கதறவேண்டுமென்பது விளங்கவில்லை. படத்துக்குக் கண்ணாடி போடுகிறவனை அழைத்து வரச் செய்தான். அந்தப் படத்தின் உடைந்த கண்ணாடிகளை எடுக்கச் சொன்னான். “பின்னாலே தகரம் உறுதியாக இருக்கிறது. சட்டத்தை மாற்றிவிடட்டுமா?” என்று படக்காரன் கேட்டான். “சட்டம், தகரம் எல்லாம் இருக்கட்டும். முதலில் மேலே இருக்கும் படத்தை எடு” என்றான் முருகேசன். “வேறு படம் போடப் போகிறீர்களா?” “இல்லை; இந்தப் படத்தை மெதுவாக எடு; கீழே உள்ள காகிதம் குலையாமல் இந்தப் படத்தை மாத்திரம் ஜாக்கிரதையாக எடு.” படக்காரன் மேலிருந்த தலைவர் நடராஜன் படத்தை மெல்ல எடுத்தான். என்ன ஆச்சரியம்! உள்ளேயும் நட ராஜன் படம். க. ம. கட்சித் தலைவர் நடராஜன் அல்ல; முருகேசனுடைய குலதெய்வமாகிய நடராஜன். ஆம்! அப்படியானால் இத்தனை காலமும் நடந்த விழாக்கள்-? அடுத்த நாளே முருகேசன் கடவுள் மறுப்புக் கட்சியினின்றும் விலகிக்கொண்டான். அவன் வீட்டுக் கூடத்தில் மறைந்து நின்று அவனுடைய பூஜையை ஏற்ற நட ராஜப் பெருமான் வெளிப்பட்டுவிட்டார்! இதோ முருகேசன் வாயாரப் பாடுகிறது காதில் கேட்கிறது: ’தன்மை பிறரால் அறியாத தலைவா! பொல்லா நாயான புன்மை யேனை ஆண்டுஐயா புறமே போக விடுவாயோ? என்னை நோக்கு வார்யாரே? என்நான் செய்கேன் எம்பெருமான்? பொன்னே திகழும் திருமேனி எந்தாய் எங்குப் புகுவேனே?" - திருவாசகம். அவள் குறை 1 ‘உங்கள் பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணினால்கூட இவ்வளவு சிரத்தை இருக்காது போல் இருக்கிறது. விழுந்து விழுந்து செய்கிறீர்களே!’ என்று வேடிக்கையாகப் பேசினாள் ராஜாராமின் மனைவி. ‘ஆமாம். பாவம்! நல்ல பிள்ளை. நம்மை வந்து அண்டினான். குடியும் குடித்தனமுமாக இருப்பதைப் பார்த்துச் சந்தோஷப் படலாமே என்றுதான். நாய்க்குட்டி மாதிரி உழைக்கிறான். இந்தக் காலத்தில் எசமான விசு வாசத்தோடு வேலை செய்கிறவன் எவன் இருக்கிறான்?’ என்றார் ராஜாராமன். வேலுவுக்கு கோடம்பாக்கத்திலே கல்யாணம். அது நன்றாக முடியவேண்டுமே என்று அவருக்குக் கவலை. சென்னையில் ஒரு கண்ணாடிக் கடை வைத்திருந்தார் அவர். மயிலாப்பூரில் அவருக்கு வீடு இருந்தது. வியாபாரி என்றாலும் அவர் தாராள மனசு உடையவர். வீட்டில் இருந்தபடியை டெலிபோன் மூலம் கடையைக் கவனித்துக்கொள்வார். அங்கே நிர்வாகம் செய்யும் ஊழியரோ, மற்றவர்களோ யாரானாலும் அவரிடத்தில் அன்போடு பழகினார்கள். மொத்த வியாபாரி. நல்ல முகராசி உள்ளவர். வருகிற வாடிக்கைக்காரர்களிடத்திலும் வேலைக்காரர்களிடத்திலும் அன்பு காட்டி உபசாரம் செய்வார். ஒருகணம் சும்மா இருக்க மாட்டார். ஏதாவது செய்து கொண்டே இருப்பார். எதையும் திருத்தமாகச் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் கோபம் வந்துவிடும். வீட்டில் தச்சன் வந்து ஏதோ சில்லறை வேலை செய்தான். அடுத்த மாதம் தச்சு வேலைக்குரிய சாமான்களை வாங்கிவிட்டார். தாமே மரவேலையைச் செய்யலானார். கண்ணினால் கண்டதைக் கையினால் செய்துவிடுவார். அவர் வீட்டில் தினமும் விருந்துதான். அவர் முருக பக்தர். ‘முருகா’ என்று சொல்லிக்கொண்டு யார் வந்தாலும் அவர்களுக்குச் சாப்பாடு போட்டுவிடுவார். அந்தப் பஜனை, இந்தச் சபை, இந்தக் கோயில் என்று தினந்தோறும் அவரிடம் வந்து நோட்டை நீட்டுகிறவர்களுக்கு இல்லை என்னாமல் ஐந்தோ பத்தோ கொடுத்து அனுப்புவார். அவர் வீட்டில் அடைவாகச் சமயற்காரன் யாரும் நிலைப்பதில்லை. மற்ற வேலைக்காரர்களிடம் அன்பாகப் பழகும் அவரிடம் சமையற்காரன் நிலைக்கும் ராசிமாத்திரம் இல்லை. அதற்கு இரண்டு காரணம்: ஒன்று அவர் வீட்டுக்கு யார் எப்போது வருவார் என்று தெரியாது. ராத்திரி ஒன்பது மணிக்கு ஒரு சாமியார் வருவார். அவருடன் நாலு அடியார்கள் வருவார்கள். எல்லோரும் சேர்ந்து பன்னிரண்டு மணிவரையில் திருப்புகழ் பாடுவார்கள். அதற்கு மேல் அவர்களுக்கு பிரசாதம் கொடுக்கவேண்டும். பிரசாதம் என்றல் சுண்டல் அல்ல. புளியோதரை, வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், ததியோதனம் எல்லாம் வக்கணையாக இருக்கவேண்டும். மற்றொன்று: சாப்பாட்டு விஷயத்தில் நொட்டைச் சொல் சொல்வதற்குத் துரை அஞ்சமாட்டார். ‘இதில் உப்பு இல்லை; இதில் காரம் இல்லை; உங்கள் தாத்தா வீட்டுச் சரக்கோ? இன்னும் கொஞ்சம் தாராளமாக நெய் விடக்கூடாது?’ என்று இரைவார். இந்த இரண்டு காரணங்களாலும் சமையற்காரன் சலித்துப்போய், நாலுமாசம் இருந்துவிட்டுப் போய்விடுவான். போனல் என்ன? அவரே சமையல் செய்வார். அவருக்குத் தெரியாத தொழிலே இல்லை! எந்தத் தொழிலும் அவருக்கு அகௌரவமானது அன்று. அவரிடம் வேலு பதினைந்து பிராயத்தில் வந்து சேர்ந் தான். அவன் பேரைக் கேட்டபோதே அவருக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. முருக பக்தர் அல்லவா? முதலில் தோட்ட வேலை செய்தான். அவர் வீடு சின்னதும் அல்ல; பெரியதும் அல்ல. சுற்றிப் பூச்செடிகளும் காய்கறியும் போட்டிருந்தார். வேலு கொத்துவான்; தண்ணீர் பாய்ச்சுவான்; குழந்தைகளைப் பள்ளிக்கூடத்தில் கொண்டுபோய் விடுவான். எந்தச் சில்லறை வேலையையும் செய்வான். கடையிலிருந்து வரும் கடிதங்களை ஒழுங்குபடுத்தி வைப்பான். மேஜையைத் துடைத்துச் சுத்தமாக வைப்பான். நாளடைவில் டெலிபோனில் கூப்பிடுபவர்களுக்குப் பதில் சொல்லவும் கற்றுக்கொண்டான். அவனுக்கு இரண்டு வேளைச் சாப்பாடு கிடைக்கும்; ’காப்பித் தண்ணி’யும் உண்டு; சம்பளத்தில் பாதி கையில் கிடைக்கும்; பாக்கிப் பாதியை அவன்பேரில் பாங்கியில் போட்டிருந்தார் ராஜாராம். அவனுக்கு நன்றாக எழுதப் படிக்கத் தெரியும்; ஏழாவது வகுப்பு வரையில் வாசித்தவனாம். வீட்டுப் பிள்ளையைப் போல இருந்து வந்தான் வேலு. எப்போதும் நிழல் போலத் தொடர்வான். எங்கே போனாலும் ராஜாராமுக்கு அவன் மெய்க்காப்பாளனைப் போல இருப்பான். ராஜாராம் ஒரி கார் வாங்கினார். வேலுவைக் கார் ஓட்டப் பழகிக்கொள்ளச் சொன்னார். அவனையே கார் ஓட்டியாக வைத்துக்கொண்டார். இப்போது வேலுவுக்கு வயசு இருபத்தைந்து. அவரிடம் வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. காரை நன்றாக ஓட்டத் தெரிந்துகொண்டிருக்கிறான். சில்லறை ரிப்பேர்களைக்கூடச் செய்வான். “வேலு இப்போது பெரிய டிரைவர் ஆகிவிட்டான். ஏதாவது கம்பெனிநில் வேலைக்குப் போனானானால் இரு நூறு ரூபாய் சம்பளம் கிடைக்கும்” என்பார் ராஜாரம். அவன் சிரித்துக்கொள்வான். “உனக்கு வேறு வேலை கிடைத்தால் தாராளமாகப் போகலாம். நான் தடையாக நிற்க மாட்டேன்” என்பார். “போங்கள், எசமான்” என்ற போலிக் கோபம் காட்டுவான் அவன். அவனுக்கு இப்போது கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தார் ராஜாராம். அவன் பேரில் இருந்த பணத்தில் கொஞ்சம் வாங்கச் சொல்லித் தாம் பாக்கிப் பணத்தைக் கொடுத்துக் கல்யாணத்தைப் பண்ணி வைத்தார். அவன் மாமனார் மாமியார் கோடம்பாக்கத்தில் இருந்தார்கள். அவர்கள் வீட்டோடே அவன் இருக்கட்டும் என்பது ராஜாராம் அபிப்பிராயம். தினமும் சைக்கிளில் வீட்டுக்குப் போகலாம் என்று திட்டம். இப்போதெல்லாம் வேலு தோட்ட வேலை செய்கிறதில்லை. அதற்கு வேறு ஆள் வைத்தாகிவிட்டது. கார் வாங்கினதற்காக வேலை மிகுதியாயிற்றோ, வேலை மிகுதியானமையால் கார் வாங்கினாரோ தெரியாது; எப்போதும் சுற்றுவதுதான் வேலை. அந்தக் கம்பெனி, இந்த ஆபீஸ் என்று தினம் காரில் ராஜாராம் சுற்றுவார். மனைவி மக்களுடன் வாரத்துக்கு இரண்டு முறை எங்கேயாவது கோயிலுக்குப் போய் வருவார். இன்ன நேரம் வெளியில் போவார் என்ற திட்டம் இல்லை. இருபத்துநாலு மணி நேரமும் காத்திருக்க வேண்டும். வேலு கார் ஓட்டத் தொடங்கியது முதல் சம்பளம் உயர்ந்தது. கல்யாணம் பண்ணிக்கொண்ட பிறகு பின்னும் உயர்ந்தது. ஆனால்? 2. “எல்லாம் தெரிந்தவர்களுக்கு முக்கியமான காரியங்கள் தெரிவதில்லை” என்று பேச்சை ஆரம்பித்தாள் ராஜாராமின் மனைவி. “இன்றைக்கு எந்த விஷயத்தில் எனக்கு முட்டாள் பட்டம் கட்டப் போகிறாய்?” என்று கேட்டார் ராஜாராம். ‘வேலு விஷயத்தில்தான்.’ ‘வேலு விஷயமா? அவனுக்கு இப்போதுதானே செலவு செய்து கல்யாணம் பண்ணி வைத்தேன்? சம்பளமும் கூடப் போட்டிருக்கிறேன். அவனுக்கு என்ன குறை?’ ‘அவனுக்கு அல்ல; அவளுக்கு!’ ‘அது யார் அவள்?’ ‘அவனைக் கட்டிக்கொண்டாளே, அந்தப் பெண்தான்.’ ராஜாராம் தம் மனைவியைக் கூர்ந்து பார்த்தார். “சொல்லுவதைத் தெளிவாகச் சொல்” என்றார். “நேற்று அந்த பெண் இங்கே வந்திருந்தாள். நவராத்திரிக் கொலுவைப் பார்க்க வந்தேன் என்றாள். பிறகு யோகக்ஷேமம் விசாரித்தேன்; அவள் மனசுக்குள் இருக்கிறது குறிப்பாக எனக்குத் தெரிந்த்து.” “வேறு எங்கேயாவது கணவன் வேலைக்குப் போக வேண்டும் என்ற இருக்கிறதோ, அவளுக்கு?” என்று ராஜாராம் கேட்டார். “அவசரப்படாமல் கேளுங்கள்; சொல்கிறேன்.”அம்மா, எனக்கு உங்கள் வீட்டோடே ஒரு குடிசை போட்டுத் தந்து விடுங்கள்; நான் இங்கே வந்து விடுகிறேன். உங்கள் வீட்டில் ஏதாவது வேலை செய்கிறேன்" என்றாள். அவள் தகப்பன் ஏதாவாது சொன்னானா என்று கேட்டேன். அவள் பேச்சில் உண்மையை வெளிவிடவில்லை. நானும் பெண்தானே? தெரிந்துகொண்டேன்." “தெரிந்ததைச் சட்டென்று சொல்” என்றார் ராஜாராம். “வேலுவுக்கு கல்யாணம் செய்து வைத்தீர்கள். அது நல்ல காரியந்தான். கல்யாணம் பண்ணுவதற்கு முன்னால் அவன் ராத்திரியும் பகலும் இங்கேயே கிடந்தான். அப் போதெல்லாம் அப்படி இருந்தது சரிதான். இப்போது அவனுக்கு ஒரு பெண்டாட்டி வந்துவிட்டாள். நீங்கள் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு மணி, ஒரு மணி என்ற ராத்திரியில் அவனை வீட்டுக்கு அனுப்புகிறீர்கள். ஆறி ஆவலாய்ப் போன சாப்பாட்டை அவனுக்குப் போட வேண்டியிருக்கிறதாம்…..” இதைச் சொல்லிட்டு அவள் சிரித்தாள். தொடர்ந்து, “அவன் சில நாள் இங்கேயே தங்கி விடுகிறான். அங்கே சோறு வீணாகி விடுகிறதாம்” என்றாள். இப்போது ராஜாராமும் புன்னகை பூத்தார். இரண்டு நாள் சென்றன. ராஜாராம் வேலுவிடம், “வேலு, நானும் கார் ஓட்டக் கற்றுக்கொள்ளப் போகிறேன்” என்றார். “கற்றுக்கொள்ளுங்கள், எசமான். உங்களுக்கு எதுதான் வராது?” என்றான் வேலு, “அன்றைக்கு வந்தானே சின்னசாமி, அவனை தினமும் ராத்திரி வரச் சொல்லியிருக்கிறேன். அவன் கற்றுத் தருவான். கொஞ்சம் பழகினால் பகல் நேரத்தில் உன்னிடம் கற்றுக்கொள்கிறேன்.” “ஏன், நானே கற்றுத் தருகிறேனே!” என்றான் வேலு. “பகலெல்லாம் உழைத்துவிட்டு ராத்திரியும் அகாலத்தில் உனக்கு வேலை வைக்கலாமா?” மறுநாள் முதல் ராஜாராம் கார் ஓட்டக் கற்றுக் கொள்ளலானார். விரைவிலே கற்றுக்கொண்டார். இப்போது அவரே நன்றாக விடலானார். வேலுவை அருகில் வைத்துக்கொண்டு காரை அவரே ஓட்டினார். குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்குக் கொண்டுபோய் விடுவது, அம்மாவைக் கோயிலுக்கு அழைத்துச் சென்று வருவது - இப்படியான காரியங்களுக்கு வேலு காரை விட்டுக்கொண்டு போய் வருவான். ராஜாராமுடன் போகும்போதெல்லாம் பெரும்பாலும் காரை அவரே ஓட்டுவார். அதோடு அவர் மற்றொரு காரியமும் செய்தார். சரியாக மணி ஏழு அடித்ததானால், “நீ வீட்டுக்குப் போ” என்று சொல்லிவிடுவார். “அதற்குள் என்ன அவசரம்? நான் இருந்துவிட்டுப் போகிறேன்” என்பான். “இல்லை, எங்கே யாவது போனால் நானே போய் வருகிறேன். எனக்குத்தான் நன்றாக ஓட்டத் தெரிந்து விட்டதே!” என்பார். இப்போதெல்லாம் பகலில்கூட ராஜாராம் வண்டியைத் தனியே எடுத்துக்கொண்டு சென்றார். வேலு அவர் வீட்டில் ஏதாவது வேலை பார்த்துக்கொண் டிருப்பான். மாலை ஏழு மணி அடித்தால் வீட்டுக்குப் போய்விட வேண்டுமென்று அவனுக்குக் கண்டிப்பான உத்தரவு. வேலுவின் மனைவி கருவுற்றிருக்கிறாள் என்ற செய்தியைக் கேட்டு ராஜாராம் மனைவிக்கு அளவற்ற மகிழ்ச்சி. “ஜாக்கிரதையாக இருக்கச் சொல். யாராவது டாக்டரிடம் கொண்டுபோய்க் காட்டு” என்பாள். “எங்க மாமியாரைவிடப் பெரிய டாக்டர் யாரும் இல்லை, அம்மா” என்பான் அவன். சில நாளாகவே வேலுவுக்கு முகத்தில் பொலிவு இல்லை. உள்ளூற அவனை ஏதோ வேதனை அரித்துக் கொண்டிருந்தது. ராத்திரியும் பகலும் ராஜாராமுடன் நிழலைப் போல் இருந்த வேலு, சில சமயங்களில்தான் அவரோடு சென்றான். மாலை ஏழு அடித்ததும் வீட்டுக்குப் போனான். 3 கருவுற்றிருந்த வேலுவின் மனைவி ஒருநாள் ராஜாராம் வீட்டுக்கு வந்துவிட்டுப் போனாள். அன்று இரவு ராஜாராமிடம் அவர் மனைவி பேசினாள். “கொஞ்ச நாளாகவே வேலு உற்சாகம் இல்லாமல் இருக்கிறானே; நீங்கள் கவனித்தீர்களா?” “இன்று என்ன புதிய வழக்குத் தொடுக்கப் போகிறாய்?” என்று கேட்டார் ராஜாராம். “மனிதர்களுடைய மனசை நினைக்கிறபோது விசித்திரமாக இருக்கிறது!” என்றாள் அவர் மனைவி. “என்ன விசித்திரத்தைக் கண்டுவிட்டாய்?” “நீங்கள் வேலுவை வேலையை விட்டு நீக்கப் போகிறீர்களாமே?” ராஜாராம் நிமிர்ந்து உட்கார்ந்து அவளை விழித்துப் பார்த்தார். “என்ன உளறுகிறாய்?” என்று கேட்டார்; அதில் கோபத்தின் நிழல் இருந்தது. “இன்று அந்தப் பெண் வந்திருந்தாள். அவள் ஒரு பாட்டம் என்னிடம் அழுதாள். அவளைத் தேற்றி அனுப்பினேன்.” “என்ன விஷயம்?” “நீங்கள் கார் ஓட்டக் கற்றுக்கொண்டு விட்டீர்களாம். வேலுவின் உதவி உங்களுக்குத் தேவை இல்லையாம். அவனை வேறே எங்காவது வேலைக்குப் போகும்படி முன்பே சொன்னீர்களாம். இப்போது அவனுக்கு வேலையே கொடுக்காமல் தண்டத்துக்குச் சம்பளம் தருகிறீர்களாம்; என்றைக்காவது ஒரு நாள்,‘இங்கே உனக்கு வேலை இல்லை. எங்காவது போ’ என்று சொல்லப் போகிறீர்களாம். இதை நினைத்து நினைத்து அவன் வேதனைப் பட்டுச் சாகிறானாம். ‘இந்தப் பிள்ளை வயிற்றில் வந்ததிலிருந்து ஒன்றும் சுகமில்லையம்மா. பழையபடி தோட்ட வேலை செய்துகொண்டாவது இருப்பேனே என்று அவர் அழுகிறார். நீங்கள் தான் ஐயாவிடம் சொல்லிக் காப்பாற்ற வேண்டும்’ என்று அழுதாள். அவனை அனுப்பிவிட வேண்டும் என்று உங்களுக்கு எண்ணம் உண்டா?” “நான் அவனுடைய நன்மைக்காகத்தான் கார் ஓட்டப் பழகிக்கொண்டேன். ஏழு மணிக்கு வீட்டுக்குப் போடா என்று சொன்னேன். அவன் எப்போதும் கார் ஓட்டினபோது அவள் வந்து அழுதாள். அவனுக்குச் சௌகரியமாக அதிக வேலை கொடுக்காமல் நான் கார் ஓட்டும் போதும் அவள் அழுகிறாள். அவன் நம்வீட்டுப் பிள்ளை. அவனை அனுப்புகிறதாவது!” என்றார் சிரித்தவாறு. 4 ஒரு வாரம் கழித்து ராஜாராம் வேலுவுக்கு ஒரு புது உத்தரவு போட்டார். “பகல் முழுவதும் நீதான் கார் ஓட்ட வேண்டும்; எனக்கு அலுத்துவிட்டது. வழியிலே குறுக்கே போகிற கிழவியையும் எதிரே வருகிற வண்டியையும் முன்னே போகிற லாரியையும் சபித்துக்கொண்டே கார் ஓட்ட வேண்டியிருக்கிறது. போதும், இந்த வேலை. இனிமேல் கார் உண்டு, நீயுண்டு. நீ எங்காவது ஓட்டிக் கொண்டு போனால் நான் வருகிறேன்!” “எசமான்!” வேலுவுக்குப் பேச்சு வரவில்லை. “ஆனாலும் எனக்குப் பழக்கம் விட்டுப்போகக்கூடாது பார். ராத்திரி எங்கேயாவது அவசரமாகப் போக வேணுமானால் நானே ஓட்டிக்கொள்கிறேன். அப்போது மாத்தி ராம் காரை என்னிடம் கொடுக்க வேண்டும். என்ன, உனக்குச் சம்மதமா?” “எசமான்!” அவன் கண்ணில் நீர் துளித்தது. அவருக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டான். வேலுவின் மனைவிக்கு ஆசுபத்திரியில் குழந்தை பிறந்தது. ராஜாராமும் அவர் மனைவியும் போய்ப் பார்த்தார்கள். “அம்மா, நீங்கள் இட்ட பிச்சை!” என்று நன்றியறிவுடன் வேலுவின் மனைவி அவளுக்குக் குழந்தையை எடுத்துக் காட்டினாள். “என்ன பேர் வைக்கப்போகிறாய்?” என்று கேட்டாள் எசமான் மனைவி. “அது - அவங்க - ஐயா பேரைத்தான் வைக்க வேணுமென்று சொல்றாங்க!” என்று நாணிக் கொண்டாள் அப்பெண். “அந்தப் பேரைச் சொல்லி நான் கூப்பிட முடியாதே!” என்றாள் அம்மாள். “நாங்கள் மாத்திரம் கூப்பிடுவோமா? பள்ளிக்கூடத்துப் பேர் அது; கூப்பிட வேறு பேர் நாங்கள் முடிவு பண்ணவிட்டோம்: முருகா என்று கூப்பிடுவோம்” என்றாள் அந்தப் பெண். இவ்வளவு நேரம் சும்மா இருந்த ராஜாராம், “பேஷ்!” என்று குதூகலத்தோடு சொன்னார். அவர் முருகபக்தர் அல்லவா? கொள்ளையோ கொள்ளை காட்டுக்கோட்டை ராஜாங்கம் சின்னதானாலும் கெடுபிடிக்குக் குறைவு இல்லை. ராஜா, மந்திரி, சேனாபதி சட்டசபை எல்லாம் வக்கணையாகவே இருந்தன. சேனாபதி போலீஸ்காரர்களுக்குத் தலைவர்; சட்டசபை என்பது நகர சபையைப் போலிருக்கும். ஆனாலும் அதற்குச் சட்டசபை என்று பெயர். அதில் காட்டுக்கோட்டை ராஜ்யத்துக்குரிய சட்டங்களை இயற்றுவார்கள். ஆனால் எல்லாச் சட்டங்களுக்கும் அரசருடைய உடம்பாடு வேண்டும். அரசர் தனியே ஒரு சட்டம் செய்யவேண்டுமென்று தாமாகவே விரும்பினால் மூச்சுப் பேச்சு இல்லாமல் அத்தனை பேரும் கையைத் தூக்கி அந்தச் சட்டத்தை நிறைவேற்றிவிடவேண்டும். இல்லையானால் சட்டசபை முழுவதையும் கலைத்துவிடும் உரிமை அரசருக்கு இருந்தது. எப்படியோ எல்லாச் சட்டங்களும் சட்டசபையின் மூலமாகவே நிறைவேறி வந்தன. அந்தச் சட்டசபையைப் பொம்மைச் சபை என்று கூற யாருக்குத் தைரியம் வரும்? அரசாங்கத்தில் செலவு மிகுதியாகிவிட்டது. குடிமக்களுக்காக ஏதோ பெரிய காரியங்களைச் செய்து இந்தச் செலவு ஏற்பட்டதென்று சொல்ல முடியாது. எல்லாம் அரசருடைய சொந்தச் செலவுதான். அரசர் சௌக்கியமாக இருந்தால்தானே அரசாட்சி நன்கு நடைபெறும்? மன்னனே நாட்டுக்கு உயிர் என்பது உண்மையாக இருந்தால், அவனைக் காப்பது - வேண்டிய சுகங்களைப் பெற்று வாழும்படி செய்து காப்பது - நாட்டு மக்களுக்கு உரிய கடமை என்பதும் உண்மையாகத்தானே இருக்க வேண்டும்? அரசருக்குரிய செலவு, அரசாங்கச் செலவு என்று வேறு பிரித்துப் பார்க்கும் கெட்ட வழக்கம் காட்டுக் கோட்டை அரசில் இல்லை. ஆதலின், அரசாங்கச் செலவு மிகுதி யாகிவிட்டதென்பதைக் குடிமக்களுக்கு அறிவித்து, மேற்கொண்டு அரசாங்கத்தின் வரவை அதிகப்படுத்தும் வழி துறைகளை ஆராயும் அவசியத்தையும் தெளிவாக வற்புறுத்த மந்திரிமார்கள் முன்வந்தனர். மந்திரிகளும் சேனாதிபதியும் அரசரும் அந்தரங்க ஆலோசனை செய்தார்கள். “என் சம்பளத்தை வேண்டுமானால் குறைத்துக்கொள்கிறேன்” என்று முதல் மந்திரி விண்ணப்பித்துக் கொண்டார். “சே சே! அது கூடாது. உங்களுக்கு இப்போது கொடுக்கும் சம்பளம் போதாது. மற்ற இராஜ்யங்களின் வெறும் மந்திரிக்கே ஆயிரக்கணக்கில் சம்பளம் தருகிறார்கள். நாமெல்லாம் மிகவும் அவசியமான தேவைகளுக்குக் குறைவாகவே பொருளை எடுத்துக் கொள்கிறோம் என்பதை நம்முடைய விசுவாசமுள்ள குடி மக்கள் நன்றாகத் தெரிந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியாமல் ஒன்றும் செய்வதில்லையே! எல்லாம் சட்ட சபையின் மூலமாகவேதான் நடைபெறுகின்றன. இனிச் சம்பளக் குறைவைப்பற்றியே பேசக்கூடாது” என்று அரசர் ஒரு பிரசங்கமே செய்து விட்டார். “நாங்களும் அப்படிச் செய்யலாமென்று எண்ணியிருந்தோம். ஆனால் மன்னர்பிரானின் திருவுள்ளாம்…” என்று இழுத்தார் ஒரு மந்திரி. “அதைப்பற்றி இனிப் பேசுவதில் பயன் இல்லை. அரசர் பெருமானுக்கு உவப்பில்லாத ஒன்றை நாம் செய்யக்கூடாது” என்று முதல் மந்திரி கூறினார். “சரி, சரி; நாம் மேலே பொருள் வருவாய்க்கு வழி என்ன என்று ஆலோசனை செய்யலாம்” என்று அரசர் நினைவுறுத்தினார். “புதிய வரிகள் போடலாமா?” “அது யோசனை செய்து, பிறகு செய்ய வேண்டியது” என்றார் மன்னர். “எல்லாருக்கும் வரி போடுகிறதை விடக் குறிப் பிட்ட சிலருக்குக் கணிசமாக வரி போடலாம்” என்று ஒருவர் யோசனை கூறினார். அப்போது சேனாபதி ஒரு நல்ல யோசனையை உந்தித் தள்ளினார். “இப்போது குற்றவாளிகளில் சிலருக்கு அபராதம் போடுகிறோம்; சிலரைச் சிறையில் தள்ளுகிறோம்; சிலருக்கு அபராதம், சிறைவாசம் என்று இரண்டும் விதிக்கிறோம்; இதை மாற்றினால் வருவாய் கிடைக்க இடமுண்டு” என்றார். “எப்படி மாற்றுவது? என்று ஆவல் தோன்றக் கேட்டார் அரசர். “மிக மிகப் பெரிய குற்றத்துக்கு சிறைதண்டனை கொடுப்பது; மற்ற எல்லாவற்றிற்கும் அபராதமே விதிப்பது; இப்படிச் செய்தால் அபராதத் தொகை நிறையக் கிடைக்கும்” என்று சேனாபதி தம் திட்டத்தை விரித்துரைத்தார். “குற்றவாளிகளில் பலர் அபராதம் செலுத்த இயலாத நிலையில் இருக்கிறார்களே! அவர்களிடம் அபராதம் எப்படி வசூல் செய்வது?” என்று ஒருவர் கேள்வி கேட்டார். சேனாபதி அதற்கு விடை தயாராகவே வைத்திருந்தார். “அப்படிப்பட்ட ஆசாமிகளை யாரிடமாவது வேலை செய்யச் சொல்கிறது. கிடைக்கும் சம்பளத்தை அபராதத் தொகையாக வசூல் செய்கிறது” என்று அவர் சொன்னவுடன், “சபாஷ்! நல்ல யோசனை” என்று அரசர் ஆமோதித்தார். அதற்குமேல் தடைகூற அங்கே யாருக்கும் துணிவில்லை. “திருடர்களிடங்கூட அபராதம் வசூலித்துவிடுவதா?” என்று அரசர் கேட்டார். “ஆம்; அதுதான் முக்கியம். திருடிய பொருளிலிருந்து எளிதில் அபராதம் செலுத்திவிடுவார்கள். திருட்டுக் கொடுத்தவர் சொல்லும் செய்தியை வைத்துக்கொண்டு நூற்றுக்கு இவ்வளவு என்று அபராதம் போடலாம்.” “பலே! அபராதம் வசூலிக்கும் கடமை உங்கள் தலையில்தான் விழும் என்பதை நினைத்துப் பார்த்தீர்களா? “அதனால்தான் இத்தனை தைரியத்தோடு பேசுகிறேன். எப்படியாவது பணத்தை வசூலிக்க முடியும்; மகாராஜா உத்தரவு கொடுத்தால் போதும்.” “மகாராஜாவா! எல்லாம் சட்டசபையின் மூலமே வரட்டும்.” சட்டசபையில் ஒரு புதிய சட்டம் எழுந்தது. ‘அரசருடைய தனி அனுமதியின்றி எந்தக் குற்றத்துக்கும் சிறைத் தண்டனை விதிக்கக்கூடாது; எல்லாவற்றிற்கும் அதனதன் கடுமைக்கு ஏற்றபடி அபராதம் போடவேண்டும்’ என்று அந்தச் சட்டம் கூறியது. இதனால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று அரசியலார் எதிர்பார்த்தனர். சிறைவாசத் தண்டனை மிகமிகக் குறைந்துவிடுவதனால் சிறைகளையும் சிறைப்பட்டோர்களையும் பாதுகாக்கும் செலவு குறைந்துபோகும்; முன்னையினும் அதிகமாக அபராதத் தொகை அரசாங்க பொக்கிஷத்திலே சேரும். சட்டம் வந்த முதல் மாதத்தில் அரசாங்க வருவாய் முன்னையினும் இருமடங்கு ஆயிற்று. அபராதம் செலுத்த இயலாதவர்களை முதலில் அரசாங்க வேலையில் வைத்துக் கொண்டு அபராதத் தொகையை ஈடு செய்தார்கள். ’குற்றவாளிகளை வேலைக்கு வைத்துக்கொள்ளலாமா? அவர்கள் ஒழுங்காக வேலை செய்வார்களா? என்ற கேள்விகளைச் சட்டசபையிலே கேட்க எதிர்க்கட்சி என்ற ஒன்று அந்த அரசாங்கத்தில் இல்லை. நாளாக ஆக அபராதம் செலுத்த முடியாதவர்கள் தொகை அதிகமாயிற்று. அவர்கள் யாவருக்கும் வேலை கொடுக்க அரசாங்கத்தில் வேலை இல்லை. ராஜ்யத்தில் உள்ள பெரிய வியாபாரிகளிடம் சிலரை அனுப்பினார்கள். “குற்ற வாளிகளை நாங்கள் வேலைக்கு வைத்துக்கொள்ள மாட்டோம்” என்று சொல்ல அவர்களுக்குத் தைரியம் இல்லை. ஆகையால் வேலைக்கு எடுத்துக்கொண்டதாகப் பாவித்து அவர்களுக்குரிய சம்பளத்தை மாத்திரம் கஜானாவில் கட்டிவந்தார்கள். குற்றவாளிகள், “வேலை கொடுங்கள்” என்றபொழுது, “வேலையே செய்யவேண்டாம். உங்கள் விருப்பப்படி எங்கே வேண்டுமானாலும் போங்கள்” என்று சொல்லிவிட்டார்கள். இந்தக் கட்டணங்களால் அரசாங்க வருவாய் அதிகமாயிற்று.அரசருக்குச் சேனாபதியினிடம் அபாரத் தயை உண்டாயிற்று; சம்பளத்தை இரட்டிப்பாக்கினார். மந்திரிகளுடைய சம்பளத்தையும் கூட்டினார். அவரும் தம் அந்தப் புரத்தை விரிவாக்கினார். மறுபடியும் செலவுக்குப் பணம் போதாது என்ற நிலை வந்தது. மந்திராலோசனை நடந்தது. இப்போதெல்லாம் சேனாபதியின் வார்த்தைக்குத்தான் செலாவணி அதிகம். “என்ன செய்யலாம்?” என்று அரசர் கேட்டார். “திருடுகிறவர்களைக் கையும் மெய்யுமாகப் பிடித்து அவர்கள் கையிலுள்ள பொருள்களை வாங்கி உரியவர்களிடம் கொடுத்துவிடும் வழக்கம் இப்போது இருக்கிறது. அதற்குமேல் திருடனுக்கு இப்போது அபராதம் போடுகிறோம். இந்த முறையைச் சிறிது மாற்றினால் வருவாய் அதிகமாகலாம்” என்று சேனாபதி சொன்னார். “எப்படி மாற்றுவது?” “நம்முடைய முதல் மந்திரி முதலிய பெரியவர்களுக்கு நான் சொல்வது பொருத்தமாகத் தோன்றினால் எடுத்துக் கொள்ளட்டும். இல்லாவிட்டால் தாட்சண்யமில்லாமல் வேண்டாமென்று சொல்லட்டும். என்ன இருந்தாலும் நான் சின்னவன்தானே?” முதல் மந்திரிக்கு எரிச்சலாக வந்தது; ஆனாலும், “உங்களுடைய அற்புதமான புத்திசாலித்தனத்தை மகா ராஜாவே மெச்சும்போது நாங்களெல்லாம் தனியே அதைப்பற்றிச் சொல்லவேண்டுமா?” என்று அதை வெளிக்காட்டாமல் பதில் சொன்னார். “என்ன மாறுதல் செய்யவேண்டும்? அதைச் சொல்லுங்கள்” என்று மன்னர் அவசரப்படுத்தினார். “இதோ சொல்கிறேன்: திருடினவனை நாம் போய்ப் பிடிக்கக்கூடாது; பொருளை இழந்தவர் அழைத்துவந்து முறையிட்டால் விசாரித்து இழந்த பொருளுக்கு ஒரு மதிப்பு வைத்து அதில் பாதியை அபராதமாக வசூலித்து விடலாம்.” “பொருளை இழந்தவனுக்கு அந்தப் பொருளைத் திரும்பத் தரவேண்டாமா?” என்று முதல் மந்திரி கேட்டார். “அதைப்பற்றி நமக்கு ஏன் கவலை? திருடன் குற்றம் செய்தால் அவனைத் தண்டிப்பது நம் கடமை; அதைத்தான் செய்கிறோம்; அபராதம் வாங்குகிறோம்” என்று வியாக்கியானம் செய்தார் சேனாபதி. அதன்படியே சட்டசபையில் பழைய சட்டத்திற்குத் திருத்தம் வந்து நிறைவேறியது. அதை நிறைவேற்றி வைத்த பிறகு முதல் மந்திரி அரசரிடம் ஒரு விண்ணப்பம் செய்து கொண்டார். தாம் பல காலமாகத் தலயாத்திரை செய்வதாகப் பிரார்த்தனை செய்துகொண்டிருப்பதாகவும் தம் வேலையிலிருந்து ஓய்வு பெற்று அவ்வாறு செய்ய அநுமதிக்க வேண்டுமென்றும் பணிவுடன் வேண்டினார். அரசர் முதலில் சிறிது யோசித்தாலும், பிறகு அவர் விருப்பப்படியே அவரை முதல் மந்திரிப் பதவியிலிருந்தும் விடுதலை செய்தார். அடுத்தபடி சேனாபதியே முதல் மந்திரியாகிவிட்டார். இரண்டு வேலையையும் அவரே பார்த்துக் கொண்டார். புதிய சட்டத்தின்படி திருடர்கள் அபராதம் செலுத்தத் தொடங்கினார்கள். எல்லாருடைய வீட்டிலும் திருட்டுப் போயிற்று. திருட்டுக் கொடுத்தவர்கள் தம் பொருள்கள் இன்ன மதிப்புடையன என்று சொல்லிப் புலம்புவதோடு சரி; அதற்குமேல் இழந்த பொருளுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை. திருடர்கள் பாதிப் பங்கை அபராதமாகச் செலுத்தி வந்தார்கள். முன்னிலும் அதிகமாகப் பொக்கிஷத்தில் பணம் சேர்ந்தது. சேனாபதியாகிய முதல் மந்திரிக்குப் பெரிய மாளிகையை அரசாங்கத்தில் கட்டிக்கொடுத்தார்கள். அவர் தாமாக அதில் ஒரு சிறிய அந்தப்புரத்தையும் கட்டிக் கொண்டார். சேனாபதிக்கு இப்போது அரசரைவிட அதிகாரம் மிகுதியாயிற்று. அவர் ராஜபோகம் அநுபவித்தார். ஆகவே, அவருடைய சொந்தச் செலவு கணக்கு வழக்கு இல்லாமலே வளர்ந்து வந்தது. அதைச் சரிக்கட்ட அரசாங்கத்திலிருந்து வரும் வருவாய் போதுமா? அதனால் வேறு வகையில் வருவாயைப் பெருக்கிக்கொள்ள எண்ணினார். ஓர் அரசாங்கத்தின் முட்டுப்பாட்டைப் போக்க வழிகண்ட அவருக்குத் தம் செலவுக்குப் பணம் தேடுவது பெரிய காரியமா? முன்பே அபராதம் செலுத்தின திருடர்களை அந்தரங்கமாக அழைத்தார். “உங்களுக்கு உபகாரமாக ஒரு காரியம் செய்யலாமென்றிருக்கிறேன். பொருளை இழந்தவர்கள் தாம் இழந்ததை அப்படியே சொல்லி விடுகிறார்கள். அதில் பாதியை நீங்கள் அரசாங்கத்துக்குக் கொடுக்க வேண்டி வருகிறது. நான் முதலாளிகளை அழைத்து ஓர் ஒப்பந்தம் செய்து வைக்கலாம் என்று நினைக்கிறேன்” என்று தம் கருத்தை விளக்கினார். அவர்கள் ஒப்புக்கொண்ட பிறகு, திருட்டுக் கொடுப்பவர்களைத் தனியே அழைத்துப் பேசினார். “உங்கள் வீடுகளில் திருட்டுப் போகும் சொத்தின் மதிப்பைக் குறைவாகச் சொல்லுங்கள். அதனால் திருட்டைத் தொழிலாக நடத்துபவர்களுக்கு லாபம் உண்டு. உங்களுக்கும் அதில் பங்கு தரச் சொல்லுகிறேன்” என்றார். அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். ஒன்றும் இல்லாததற்குக் கொஞ்சமாவது கிடைக்குமல்லவா? இந்த ரகசிய ஏற்பாட்டால் அரசாங்கத்தின் வரும்படி குறைந்தது. மறுபடியும் மந்திராலோசனை நடை பெற்றது. “திருட்டுத் தொழிலை நடத்துகிறவர்கள் அபராதம் செலுத்துகிறார்கள். அபராதம் என்று சொல்வதனால் சமுதாயத்தில் அவர்களைச் சற்றே தாழ்வாகக் கருதுகிறார்கள். இனி அதைக் கட்டணம் என்று சொல்வது நல்லது. அதற்கு ஏற்றபடி சட்டத்தின் வாசகத்தைத் திருத்துவது எளிது” என்று காமதேநுவாகிய சேனாபதி தந்திரம் கூறினார். அப்படியே நடைபெற்றது. மறுபடியும் அந்தரங்க ஆலோசனை நடந்தது. சேனாபதிதான் தந்திரம் சொன்னார். மற்றவர்களுக்கு என்ன தெரியும்? “இப்போது திருட்டுத் தொழிலாளர்கள் கட்டணம் செலுத்துவதால் நாலு பேர் காண வீதியில் உலவுகிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு ஊக்கம் போதாது.” “எப்படி ஊக்கம் உண்டாக்குவது?” “அரசாங்கத்தில் விளம்பரப் பகுதி ஒன்றை நிறுவ வேண்டும். திருட்டுத் தொழில் செய்யும் கனவான்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.” “அற்புதமான யோசனை! உம் மூளையின் பெருமையை எப்படிப் பாராட்டுகிறது?” என்று குதூகலத்தால் துள்ளினார் அரசர். “இந்த நாய்க்கு ஒன்றும் தெரியாது. எல்லாம் மகா ராஜாவின் அன்பு விசேஷம்” என்று தம் பணிவைக் காட்டினார் சேனாபதி. அடுத்த வாரமே நகரின் மூலை முடுக்குகளிலெல்லாம் சுவரொட்டிகள் பளபளத்தன. “திருட்டுத் தொழில் புரியும் கனவான்களே! உங்கள் தொழிலை ஊக்கத்தோடு செய்யுங்கள். அரசாங்கத்துக்கு நீங்கள் செலுத்தும் கட்டணங்களில் ஒரு தொகைக்கு மேற் பட்டுப் போனால் சலுகை உண்டு. தொழில் வன்மை உடையவர்களுக்கு ஆதரவு தருவதில் அரசாங்கம் என்றும் பின் வாங்காது.” இந்த விளம்பரத்தைக் கண்ட வியாபாரிகளும் முதலாளிகளும் நகர மாந்தர்களும் ஒருவரை ஒருவர் விழித்துப் பார்த்துக் கொண்டார்கள். ஏதோ முணுமுணுத்தார்கள். “கொள்ளையோ கொள்ளை!” என்று அவர்கள் அந்தராத்மா அலறியது. அடுத்த வாரம் அரண்மனைக் கஜானாவே திறந்து கிடந்தது. பெட்டிகளில் ஒரு செப்புக் காசு இல்லை. பட்டத்தரசியின் நகைப் பெட்டி காலியாக கிடந்தது. அரசர் வந்து பார்த்தார். அரசி அவரைப் பார்த்தார். அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. கோபத்தால் வந்த சிரிப்புத்தான். “உங்கள் அற்புதமான சேனாபதியின் திட்டத்தால் வந்த விளைவு இது. அரண்மனை முழுவதும் குற்றவாளிகளையும் பழைய கைதிகளையும் வேலைக்குக் கொண்டு வந்து வைத்தால் இது மாத்திரமா நடக்கும்? இன்னும் என்ன என்ன நடக்கப் போகிறதோ!” அதற்குமேல் அவளால் பேச முடியவில்லை. திடீரென்று அழத் தொடங்கிவிட்டாள். அடுத்த நாளே சேனாபதியைச் சிறையில் அடைக்கும்படி உத்தரவு போட்டார் அரசர். சட்டத்தை மாற்றி, யாராவது திருடினால் ஏதாவது ஓர் அங்கத்தை வெட்டி விடுவது என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வந்தார். தேசாடனம் போயிருந்த பழைய முதல் மந்திரி அந்தச் சமயத்துக்கென்று எப்படியோ வந்து சேர்ந்துவிட்டார். உள்ளத்தில் முள் 1 நவராத்திரி அணுகிக்கொண்டிருந்தது. அவரவர்கள் வீட்டில் புதிய புதிய பொம்மைகளை வாங்கி வாங்கிச் சேர்த்தார்கள் பெண்மணிகள். குழந்தைகளுக்குத்தான் எத்தனை குதூகலம்! நாளுக்கு ஒரு கோலம் புனைந்துகொண்டு வீடு வீடாகப் புகுந்து அழைத்து வருவதற்கு அவர்கள் தயாரானார்கள். இந்த ஆண்டு விசுவநாத ஆசாரியாருக்கு வியாபாரம் அதிகம். அவர் முன்பே பல மூர்த்திகளைச் செய்து வைத்திருக்கிறார். வெறும் மண் பொம்மையா அவை? கருங் காலியிலும் சந்தன மரத்திலும் செய்த தெய்வங்கள்! அவரிடம் வாங்கின உருவங்களிற் பல, அஷ்டோத்தரமும் சகஸ்ர நாமங்களுமாகப் பெற்றுக் கர்ப்பூர ஆரத்தி வாங்கிக் கொண்டு தெய்வமாக விளங்குகின்றன. எத்தனையோ காட்சிகளில் அவருக்குப் பரிசும் பாராட்டும் கிடைத்திருக்கின்றன. அவ்வளவுக்கும் காரணம்? நன்றியறிவோடு அந்தப் பெரியவரை நினைந்து பெருமூச்சு விட்டார் ஆசாரியார். அவர் கை வேலை செய்து கொண்டிருந்தது. எதிரே மிக மிக வியத்தற்குரிய ராஜராஜேசுவரியின் பிம்பம். அதைப் பார்த்துப் பார்த்து வேலை செய்து கொண்டிருக்கிறார். சிற்றுளி கொண்டு செதுக்குகிறார்; இழைக்கிறார். முன்னாலே இருக்கிறதைப் போலவே செய்ய வேண்டும் என்பது அவருடைய ஆசை. அப்படியானால் முன் உள்ளது வேறு யாரேனும் செய்ததோ? இல்லை, இல்லை. அதுவும் அவர் செய்ததுதான். அதை எதற்காக அடிக்கடி பார்க்கிறார்? அதே அச்சாக அமைய வேண்டும் என்பது அவர் எண்ணம். கலைஞனுக்குத் தான் படைக்கும் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தனி யழகு பொலியும்; தொழிலாளியோ எல்லாவற்றையும் ஒன்று போலச் செய்வான். தான் செய்ததையே பார்த்து மறுபடியும் அதே அச்சாகச் செய்யும்போது கலைஞனுக்கு அலுப்புத் தட்டிவிடும். வெறும் கைவேலை மட்டுந்தானே? புதிய கற்பனைக்கு இடம் இல்லாமற் போய்விடுகிறதல்லவா? விசுவநாத ஆசாரியார் நிலையும் அப்படித்தான் இருந்தது. புதியதாக மற்றொரு மூர்த்தியைச் செய் என்றால் மிகவும் எளிதில் மகிழ்ச்சியோடு செய்து விடுவார். இப் போதுஒரு நிர்ப்பந்தத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார். இம்மி பிசகாமல் அதே மாதிரி அமைய வேண்டும். ஏன்? அவராகவே வருவித்துக்கொண்ட சங்கடம் அது. விசுவநாத ஆசாரியாருக்குத் தச்சு வேலைதான் இளமையில் அவர் தகப்பனார் சொல்லித் தந்தார். ஆனால் அவர் கையில் வெறும் தச்சுத் தொழிலாளியின் நரம்பு ஓடவில்லை. சிற்பக் கலைஞனுடைய ஆற்றல் அதற்கு இருந்தது. நாய், யானை, மனிதன் என்று உருவங்களை இளம்பிராயத்தில் செதுக்கத் தொடங்கினார். பிறகு தேரில் பதிக்க வேண்டிய உருவங்களில் பெரும்படியான வேலைகளைச் செய்தார். அப்பால் நுட்பமான வேலைகளையும் செய்யத் தெரிந்துகொண்டார். அவருடைய பால்யசிநேகிதர் பரமசிவ சாஸ்திரியார். ஒரே பள்ளிக்கூடத்தில் நாலு வகுப்பு வரையிலும் ஒன்றாகப் படித்தார்கள்; அதற்குமேல் இருவரும் அந்தப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள். சாஸ்திரி யாருடைய தகப்பனார் பெரிய ஜோசியர்; வடமொழியிலும் மந்திர சாஸ்திரங்களிலும் வல்லவர். அவர் தம்முடைய பிள்ளைக்கு, மிலேச்ச பாஷை வேண்டாமென்று நிறுத்திக் கொண்டு தம்முடைய வித்தைகளைச் சொல்லிக் கொடுத்தார். பரம்பரை வித்தை எளிதிலே பரமசிவ சாஸ்திரியாருக்கு வந்துவிட்டது. பையன் எப்படியாகிலும் பிழைத்துக் கொள்வான் என்ற முழு நம்பிக்கையுடன் அவருடைய தந்தையார் கண்மூடினார். இப்போது பரமசிவ சாஸ்திரியார் மந்திர சாஸ்திரத்தில் வல்லவர் என்று பெயர் எடுத்தார். என்ன எடுத்து என்ன பிரயோசனம்? ஜோசியத்தையும் மந்திரத்தையும் கட்டி அழுகிறவர்களைத்தான் சனிபகவான் அடைக்கலம் புகுந்து நிரந்தரமாக அவர்களிடம் இருந்துவிடுகிறானே! சாஸ்திரியார் குழந்தை குட்டிகளோடு வறுமையையும் வளர்த்து வந்தார். தம்முடைய நண்பர் விசுவநாத ஆசாரியார் இப்போது ஓரளவு செயலாக இருப்பது தெரிந்து அவருக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. இரண்டு நண்பர்களும் அடிக்கடி கலந்து பேசுவார்கள். ஆசாரியார் ஏதோ தம்மாலான உபகாரத்தைச் சாஸ்திரியாருக்குச் செய்வதுண்டு. நேரே கொடுத்தால் அவர் வாங்கிக் கொள்ளமாட்டார் என்று, ஏதோ தகடென்றும் தாயித்தென்றும் பேர் சொல்லி வாங்கிக் கொண்டு பொருள் கொடுப்பார். ஒருநாள் சாஸ்திரியார் தம் நண்பருக்கு ஒரு யோசனை கூறினார். “நீ இந்த மாட்டையும் குதிரையையும் யானையையும் செய்து விற்கிறாயே! உனக்கோ திறமை இருக்கிறது. உன் உளி நீ நினைக்கிறதையெல்லாம் உருவாக்கி விடுகிறது. நல்ல தெய்வ பி்ம்பங்களாகச் செய்தாயானால் உனக்குப் புண்ணியமும் லாபமும் அதிகம் ஏற்படும்” என்றார். “என்ன செய்யவேண்டும்? அதைச் சொல்லுங்கள்: செய்து பார்க்கிறேன்.” “ராமன், கிருஷ்ணன், முருகன் என்று பல மூர்த்திகளைச் செய்யலாம். எவ்வளவோ அருமையான மூர்த்திகளின் தியான சுலோகங்கள் இருக்கின்றன. அவற்றில் உள்ளபடி நீ மூர்த்திகளைச் செய்தாயானால் பலர் விரும்பி வாங்கிக் கொள்வார்கள்.” “எனக்கு அந்த மூர்த்திகளின் லட்சணங்கள் தெரிய வகை இல்லையே!” என்று அங்கலாய்ப்புடன் சொன்னார் ஆசாரியார். “அதைப்பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்? நான் அந்தத் தியான சுலோகங்களின் பொருளை விளக்கமாகச் சொல்கிறேன். நீ அதன்படியே விக்கிரகங்களைச் செய்யலாம்” என்று சாஸ்திரியார் கூறினார். அது முதல் விசுவநாத ஆசாரியார் முழுக்க முழுக்கத் தெய்வத் திருவுருவங்களையே சமைத்து வந்தார். பலர் அவருடைய பிரதிமைகளை வாங்கத் தொடங்கினார்கள். சந்தனத்தாலே செய்த திருவுருவங்களை வாங்கிப் பூஜை செய்தார்கள். இதனால் ஆசாரியாருடைய வருவாய் மிகுதியாயிற்று. தமக்கு இந்த வருவாய் வருவதற்குக் காரணம் சாஸ்திரியார் என்பதை அவர் மறக்கவே இல்லை. சாஸ்திரியார் நவராத்திரியில் சிறப்பாகப் பூஜை செய்வார். அவருக்கு நல்ல சந்தன மரத்தில் ஸ்ரீ ராஜராஜேசுவரியின் உருவத்தைச் செய்து கொடுத்துப் பூஜை செய்யச் சொல்ல வேண்டும் என்பது விசுவநாதருக்கு ஆசை. அவர்கள் ஊராகிய துத்திகுளம் கொல்லிமலை அடிவாரத்தைச் சார்ந்திருந்தது. கொல்லி மலையில் காட்டினிடையே சந்தன மரங்கள் வளர்ந்திருக்கும். அரசாங்கத்தாரின் கட்டுக் காவலுக்கு உட்பட்டிருந்தாலும் விறகு வெட்டி வருகிறவர்கள் சந்தனக் கட்டையையும் யாருக்கும் தெரியாமல் வெட்டிக்கொண்டு வந்து விற்றுவிடுவார்கள். விசுவநாத ஆசாரியார் நியாயமான முறையில் சந்தனக் கட்டைகளைக் கடைகளில் வாங்கி வேலை செய்தாலும், விறகு வெட்டிகளிடம் சில சமயம் மிகவும் அருமையான வைரம் ஏறின கட்டை கிடைக்கும். அதனால் அவர்களிடமும் வாங்குவார். தவறுதான்; ஆனாலும் வேறு வழி இல்லாமல் வாங்குவார். அதிகாரிகள் அவரைப் பொறுத்தமட்டில் ஒன்றும் செய்யாமல் இருந்தார்கள். ஒரு சமயம் ஒரு விறகுவெட்டி மிகவும் பெரிதாக, வைரம் பாய்ந்ததாக ஒரு சந்தனக்கட்டையைக் கொண்டு வந்து கொடுத்தான். நல்ல பவுன்நிறம் என்று சொல்ல வேண்டும். அதைக் கண்டவுடன் அவருக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. அவனிடம் ஒன்றும் கேட்காமலே ஐம்பது ரூபாயைத் தூக்கிக்கொண்டு வந்து கொடுத்து விட்டார். அவன் பிரமித்துப் போனான். நெடுநாட்களாகத் தாம் பட்ட கடனைத் தீர்த்து விடலாம் என்ற ஆர்வம் அவருக்கு. இந்த நவராத்திரி வருவதற்குள் மிகவும் அழகாக, பூஜைக்கு உரியதாக ஸ்ரீ ராஜ ராஜேசுவரியின் திருவுருவத்தைச் செய்துவிட வேண்டும் என்ற ஆசை. அவர் தம் அகக் கண்ணில் அம்பிகையையின் திருக்கோலத்தைப்பற்றித் தெளிவாகக் கேட்டு அறிந்திருக்கிறார் அல்லவா? “உன்னுடைய மற்ற வேலைகளையெல்லாம் கெடுத்துக் கொண்டு இதை ஏன் செய்கிறாய்? ஒழிந்தபோது செய்து தரலாமே!” என்று சாஸ்திரியார் சொன்னபோது விசுவ நாதர் கேட்கவில்லை. “முன்பே செய்து தந்திருக்க வேண்டியது. இவ்வளவு நாள் நல்ல கட்டையாகக் கிடைக்கவில்லை. இப்போதுதான் கிடைத்தது. இந்தச் சமயத்தை விடலாமா? எப்படியும் இந்த நவராத்திரிக்கு அம்பாள் உங்கள் கையில் பூஜையை ஏற்றுக்கொள்ள எழுந்தருளுவாள்” என்று சொன்னார். சாஸ்திரியார், “எல்லாம் அம்பிகையின் கிருபை” என்று பேசாமல் இருந்துவிட்டார். புரட்டாசி மாதம் பிறந்துவிட்டது. விசுவநாதர் ஒருவாறு உருவத்துக்கு எல்லை கோலி வேலை செய்துவந்தார். அவயவம் அவயவமாக நுட்பமாக வடித்தெடுத்தார். சாஸ்திரியார் ஒவ்வொரு நாளும் தம் நண்பர் வீடுவந்து பார்த்துப் போவார். அவருக்கும் அது நன்றாக நிறைவேறவேண்டும் என்ற ஆசை. அம்பிகை உருவாகி வந்தாள். “உன் கை விசுவகர்மனுடைய கை, அப்பா. இந்த விக்கிரகத்துக்கு ஒரு லட்சார்ச்சனை பண்ணிவிட்டேனானால் இந்தச் சந்நிதானத்தில் பேய்கள் கூத்தாடும். எத்தனை கச்சிதமாக இருக்கிறது உன் வேலை!” என்று சாஸ்திரியார் பாராட்டுவார். “எல்லாம் நீங்கள் காட்டும் வழிதான்” என்பார் நண்பர். ஒருவாறு திருவுருவம் பூர்த்தியாயிற்று. சாஸ்திரியார் அதைப் பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போனார். நவராத்திரிக்கு இன்னும் எட்டே நாட்கள் இருந்தன. இடையில் சாஸ்திரியார் வெளியூர் செல்லவேண்டி நேர்ந்தது. “அந்த விக்கிரகத்தை இப்போதே கொடுத்துவிடு. நான் வீட்டில் வைத்திருக்கிறேன். நவராத்திரி ஆரம்பத்தில் ஆவாகனம் முதலியவை செய்யலாம்” என்றார். “இல்லை, இல்லை, சில்லறை நகாசு வேலைகள் இருக்கின்றன. அவற்றைச் செய்துவிட்டு நீங்கள் ஊரிலிருந்து வந்தவுடன் தந்துவிடுகிறேன்” என்றார் விசுவநாதர். “என்னவோ அம்பாள் தான், உனக்கு மேன்மேலும் நன்மையை உண்டுபண்ண வேணும். எவ்வளவோ வேலைகளைக் கெடுத்துக்கொண்டு, வரும்படியை விட்டுவிட்டு எனக்காக இதைச் செய்ய ஆரம்பித்தாய். இவ்வளவு நாளும் மெனக்கெட்டது போதாதென்று இன்னமும் வேலை இருக்கிறதென்கிறாய். உனக்கு நான் என்ன செய்யப் போகிறேன்!” “அந்தக் கேள்வியை நான் கேட்க வேண்டும். நீங்கள் அல்லவா இந்தப் புதிய வழியை எனக்குக் காட்டி என்னை முன்னுக்கு வரச் செய்தீர்கள்? அதற்கு என் உடம்பைச் செருப்பாகத் தைத்துப் போட்டாலும் போதாதே!” “சரி, சரி; போதும், போதும் உன் பேச்சு. நான் ஊருக்குப் போய்விட்டு வருகிறேன்.” அவர் ஊருக்குப் போயிருந்தபோதுதான் விசுவநாதருக்கு அந்த சோதனை நேர்ந்தது. யாரோ ஒரு நண்பர் அவர் வீட்டுக்கு வந்திருந்தார். அவர் தம்முடன் ஒரு செல் வரையும் அழைத்து வந்தார். அவர் வீட்டில் அம்பிகை பூஜை செய்கிறவராம். அப்போது ராஜராஜேசுவரி முழுப் பொலிவோடு உருவாகி விட்டாள். அந்தத் தெய்வ உருவைத் தம் நண்பருக்கும் அவருடன் வந்த செல்வருக்கும் காட்டினார் மரச் சிற்பி. அதைக் கண்டவுடன் செல்வர் வியப்பே வடிவமானார். அதைப் பார்க்கப் பார்க்கத் தம் கண்ணை வாங்க முடியவில்லை. “இது என்ன விலையாகும்?” என்று கேட்டார். “விற்பதற்குச் செய்தது அல்ல இது” என்றார் ஆசாரியார். “ஏன் விற்கக்கூடாது?” என்று செல்வர் கேட்டார். ஆசாரியருக்கு என்னவோ தோன்றிற்று; “இதற்குப் பணம் கொடுக்கிறவர் யாரும் இல்லை” என்று கூறினார். “என்ன அப்படிச் சொல்கிறீர்கள்? அப்படி என்ன விலை ஆகப்போகிறது? எவ்வளவு விலை ஆனாலும் நான் கொடுத்து விடுகிறேன்.” ஆசாரியார் உடனே,“ஆயிர ரூபாய்” என்றார். அந்தத் தொகையை அவர் கொடுப்பதாவது என்று எண்ணினார். ஆனால் செல்வரோ சளைக்கவில்லை. “இவ்வளவு தானா? இந்தாருங்கள், இருநூறு ரூபாய் முன்பணம். பாக்கியை ஊருக்குப் போய் அனுப்பி இந்த மூர்த்தியை வாங்கிக் கொள்கிறேன்” என்று சொல்லி இரண்டு நோட்டை நீட்டினார். விசுவநாதருக்கு இப்போது திகைப்பு உண்டாகி விட்டது. ஆயிர ரூபாய்! விட மனசு வரவில்லை. இதைக் கொடுத்துவிட்டு, இதே மாதிரி வேறு ஒன்று செய்து விட்டால் போகிறது. ’நவராத்திரிக்கு இன்னும் மூன்றே நாட்கள் இருக்கின்றன. அதற்குள் எப்படிச் செய்வது? ஏதோ பைத்தியக்காரத்தனமாகப் பேசி அகப்பட்டுக் கொண்டோமே!" என்று ஓர் எண்ணம் அவருக்குத் தோன்றியது. ஆயிர ரூபாய் என்ற நினைவு அவரைச் சற்றே சபலத்துக்கு உள்ளாக்கியது. “என்ன யோசிக்கிறீர்கள்?” என்று செல்வர் கேட்டார். அதற்குள் கலைஞர் ஒருவிதமாக முடிவுக்கு வந்துவிட்டார். “இந்த ரூபாயை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். நவராத்திரிக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கின்றன. நவராத்திரியன்று காலையில் பணத்துடன் ஆளை அனுப்புங்கள். விக்கிரகத்தைக் கொடுத்தனுப்புகிறேன். அதற்குள் உங்கள் மனசு மாறினால் நீங்கள் இதை வாங்கிக்கொள்ள வேண்டாம்” என்று சிற்பி சொன்னபோது, “இல்லை, இல்லை, இப்போதே எடுத்துக் கொண்டு போகிறேன். இந்த நண்பர் எனக்குப் பிணையாக இருப்பார். ஊர் போனவுடன் பணத்தை அனுப்பிவிடுகிறேன்” என்று பரபரப்பாகப் பேசினார் செல்வர். “இன்னும் சில சில்லறை வேலைகள் இருக்கின்றன; அவற்றைச் செய்து அனுப்புகிறேன். நீங்கள் கவலை இல்லாமல் ஊருக்குப் போங்கள்” என்று சொல்லி அவரை அனுப்பினார் கலைஞர். அவருக்கு இந்த மூன்று நாட்களில் அதேமாதிரி வேறு ஒன்றைச் செய்துவிடலாம் என்ற தைரியம். சாஸ்திரி யார் நவராத்திரி ஆரம்ப நாள் காலையில்தான் வரப் போகிறார் என்று தெரிந்தமையால் அதற்குள் செய்து விடலாம் என்ற துணிவு ஏற்பட்டது. செய்யத் தொடங்கி விட்டார். இரவும் பகலும் செய்தார். ஒன்று போலவே ஒன்று செய்வது எளிதென்று நினைத்தார்; ஆனால் அது எவ்வளவு கடினமானது என்று அந்தக் கலைஞருக்கு இப் போது தெரிந்தது. அது உயிர் இல்லாத யந்திரத்தின் வேலையல்லவா? நடுநடுவே தர முடியாது என்று செல்வருக்குச் சொல்லி அனுப்பிவிடலாமா என்று தோன்றியது. ஆயிர ரூபாய் நினைவு அதை மாற்றியது. “நான் அதை விற்று விட்டேன். அடுத்த நவராத்திரிக்கு வேறு செய்து தருகிறேன்” என்று தம் நண்பரிடம் சொல்லலாமே என்று நினைத்தார். அப்படிச் செய்வதனால் சாஸ்திரியார் சிறிதும் வருத்தப்பட மாட்டார். நல்ல விலைக்கு விற்றது பற்றி மகிழ்ச்சியே அடைவார். ஆனால் - அந்த மகோபகாரியை ஏமாற்றலாமா? அது தருமமாகுமா? அவரைவிட ஆயிர ரூபாய் பெரிதா? அவருடைய சகாயம் இல்லாவிட்டால் இந்தப் பொருள் ஏது? புகழ் ஏது? - அலைமோதும் உள்ளத்தோடு அவர் வேலை செய்து வந்தார். கடுமையான வேலை. அதைவிட அவர் உள்ளத்தில் உண்டான போராட்டம் பின்னும் கடுமையாக இருந்தது. எப்படியாவது மற்றொரு திருவுருவத்தைச் செய்து இந்தத் தர்மசங்கடத்தினின்றும் விடுதலை பெற வேண்டும் என்று தீவிரமாக உழைத்து வந்தார். 2 அவர் கை வலித்தது. கண் வலித்தது. எல்லாவற்றிற்கும் மேலாக நெஞ்சு வலித்தது. மார்பு அன்று; அவர் உள்ளந்தான் வலித்தது. பணப்பேயின் ‘வலைப்பட்ட பாவி’ என்று தம்மையே திட்டிக்கொண்டார். இரண்டு நாட்கள் ஆயின. இன்னும் இருபத்துநான்கு மணி நேரத்தில் இரண்டாவது ராஜராஜேசுவரி உருவாக வேண்டும். வெறி பிடித்தவரைப் போல வேலை செய்தார். வீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் அவர் நிலையைக் கண்டு அஞ்சினார்கள். “என்ன இது? சரியாகச் சோறு தின்னாமல், கண்ணை மூடாமல் வேலை செய்தால் உடம்பு எதற்காகும்?” என்றார்கள். அவர் ஒன்றையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. மூர்த்தன்யமாக அவர் ராஜராஜேசுவரியை உருவாக்கிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு மணியாகக் காலம் கழிந்து கொண்டிருந்தது. அவர் வேலையின் வேகம் அதிகமாயிற்று. அன்றைக்கு மறுநாள் நவராத்திரி. மாலை ஆறு மணி ஆயிற்று. ஒருவிதமாக உருவம் வந்து விட்டது. கொஞ்சம் நுட்ப வேலைகள் பாக்கி. அவற்றைச் செய்ய மூன்று மணி நேரம் பிடித்தது. எல்லாம் ஆன பிறகு இரண்டு திருவுருவங்களையும் அருகருகே வைத்துப் பார்த்தார் கலைஞர். இரண்டும் ஒன்றாக இல்லை. மற்றவர்களின் கண்ணுக்கு வேறுபாடு தோன்றாது. ஆனால் அவர் கண்ணுக்கு - நுட்பமான கலைக்கண்ணுக்கு - வேறுபாடு தோன்றியது. ஒன்று அசல்; மற்றொன்று நகல். ஒன்று உயிரின் படைப்பு; மற்றொன்று கையின் படைப்பு. ஒன்றுக்கு அன்பு விலை. மற்றொன்றுக்கு அழியும் பணம் விலை. இதுவரையில் அவர் எதை யாருக்கு அளிப்பது என்பதைச் சிந்திக்கவே இல்லை. பணம் கொடுக்க முன் வந்தவர் பார்த்தது முதல் திருவுருவத்தை. அதேயே கொடுத்து விடுவதாகத்தான் அப்போது எண்ணியிருந்தார். ஆனால் இப்போது - இதைத் தர ஒப்புக்கொண்ட பாவத்தை விட மகா பாவம் மூலத்தைக் கொடுப்பது! மறுநாள் நவராத்திரி ஆரம்பம். கலைஞர் இரண்டையும் தனித் தனியே மறைத்து வைத்தார். செல்வருடைய ஆள் ஆயிர ரூபாயுடன் வந்தார். இரண்டாவது செய்த உருவை அவனிடம் அனுப்பினார். அதுவரையில் அவருக்கு ஒன்றும் ஓடவில்லை. அவன் கையில் அதைக் கொடுத்த பிறகு பெருமூச்சு விட்டார். அவன் கொடுத்துச் சென்ற ஆயிர ரூபாய் அவர் முன் கிடந்தது. அவருக்கு இப்போது அதைத் தொடவும் அரு வருப்பாக இருந்தது. எப்படியோ அதை எடுத்து வைத்தார் பெட்டியில். சாஸ்திரியார் வீட்டுக்கு ஆள் அனுப்பி வந்துவிட்டாரா என்று விசாரித்தார். வந்தது தெரிந்து தம்முடைய அன்புக் காணிக்கையை எடுத்துக்கொண்டு அவர் வீட்டை நோக்கிப் புறப்பட்டார். சாஸ்திரியார் வீட்டுக்குப் போய் அட்டைப் பெட்டியிலிருந்து அம்பிகையை ஒரு பீடத்தில் எடுத்துவைத்தார் கலைஞர். அதைக் கண்டவுடன் சாஸ்திரியாருக்கு உடம்பு புல்லரித்தது. சாஷ்டாங்கமாக விழுந்து அதை நமஸ்கரித்தார். எழுந்தவர், என்ன தோன்றிற்றோ, கலைஞர் காலில் விழப் போனார். “என்ன சாமி இது! நான் பாவி! எனக்கா நமஸ்காரம்?” என்று சொல்லிக்கொண்டே அவர் காலில் விழுந்தார் கலைஞர். “நீ தெய்வாம்சம் பெற்றவன், அப்பா. அம்பிகையை உன் அகக்கண் தரிசித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்படி அமையாது” என்று சொல்லும்போதே சாஸ்திரியார் கண் நீரைக் கக்கியது. எழுந்த கலைஞருக்கு ஏதோ படபடவென்று வந்தது. விடை பெற்றுக்கொண்டு வீடு சென்றார். சென்று படுத்து விட்டார். ஜுரம் வந்துவிட்டது. மூன்று நாள் அகாத ஜுரம். அப்போது,’ரூபாய், பாவி; பணப்பேய்!" என்று என்ன என்னவோ பிதற்றினார். சாஸ்திரியார் அவரை வந்து பார்த்துப் போனார். வீட்டில் உள்ளவர்கள்,“அப்போதே சொன்னோமே! கேட்டீர்களா?” என்று அங்கலாய்த்தார்கள். நான்காவது நாள் அவருக்குச் சிறிதே குணமாயிற்று. எழுந்தார்; சாஸ்திரியார் வீடு சென்று பார்த்தார். அங்கே அம்பிகை உலக மாதா, சாஸ்திரியாருடைய பூஜையில் கொஞ்சி விளையாடிக்கொண் டிருந்தாள். “உன் படைப்பைப் பார்த்தாயா?” என்று கேட்டார் அந்தப் பெரியவர் “அப்படிச் சொல்லாதீர்கள். நீங்கள் இதற்குத் தெய்வக் களையை ஊட்டிய மகா முனிவர்; நான் ஆசாபாசத்தில் அகப்பட்டு உழலுபவன்.” “அப்படிச் சொல்லாதே, அப்பா. நீ அவதார புருஷன்.” மேலே அவர் புகழுரையைக் கேளாமல் புறப்பட்டு விட்டார் கலைஞர். அன்று அவர் யார் சொல்லியும் கேளாமல் அவசர காரியமாக வெளியூர் புறப்பட்டுப் போனார். 3 அன்று வெள்ளிக்கிழமை, நவமி, சரஸ்வதி பூஜை. வழக்கம்போல் பூஜைக்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்தார் சாஸ்திரியார்; அவருடைய மனைவி அருகில் இருந்து புத்தகங்களை அடுக்கினாள். “அம்பிகை எவ்வளவு மூர்த்திகரத்துடன் இருக்கிறாள்! லட்ச ரூபாய் கொடுத்தாலும் இப்படிக் கிடைக்குமா? அரண்மனையில் ராஜ ராஜாக்களிடம் இருக்க வேண்டியவள் இந்த ராஜராஜேசுவரி. இந்த ஏழையிடம் அகப்பட்டுக் கொண்டிருக்கிறாள். அங்கே இருந்தால் அழகான மண்டபம் ஒன்று செய்து அதில் எழுந்தருளச் செய்து பூஜிப்பார்கள். பரம தரித்திரனாகிய நான் எங்கே போவேன்! என்று சொல்லி வாய் மூட வில்லை;”சாமி!" என்ற குரல் கேட்டது. குரலோடு விசுவநாத ஆசாரியார் ஓர் ஆளின் தலையில் ஒரு பெரிய அட்டைப் பெட்டியை வைத்துக்கொண்டு வந்தார். “என்ன அப்பா, புதிய சீர்?” என்று கேட்டார் சாஸ்திரியார். “அம்பாள் உத்தரவு பண்ணினாள்” என்று சொல்லிக் கொண்டே அட்டைப் பெட்டியைக் கீழே வைக்கச்செய்து பிரித்து உள் இருப்பதை எடுத்து வைத்தார். என்ன ஆச்சரியம் இது! வெள்ளியும் தங்கமும் இழைத்துச் செய்த அற்புத மணிமண்டபம்; அம்பிகை எழுந்தருள்வதற்கு இல்லையே என்று ஏங்கினாரே, அந்த மண்டபம். “அம்பிகை இந்த மண்டபத்தில் எழுந்தருளியிருக்கட்டும்” என்று சொல்லும்போது கலைஞர் தொண்டை கரகரத்தது. “இது கனவா?” என்றார் சாஸ்திரியார். “இல்லை, நனவுதான். இதை ஏற்றுக்கொண்டு என்னை மன்னித்துவிடுங்கள்.” “மன்னிப்பா!” சாஸ்திரியார் விழித்தார். தம் உள்ளத்தில் முள்ளாகக் குத்திய ஆயிர ரூபாயைக் கொண்டு இந்த மணிமண்டபத்தை வாங்கி வந்து கொடுத்த பிறகே இலை போட்டுச் சோறு சாப்பிடுவது என்ற விரதத்தை அந்தக் கலைஞர் மேற்கொண்டிருந்தார் என்பதை அவர் உணர்ந்தால் இன்னும் எப்படி விழிப்பாரோ! குளிர்ச்சி 1 “ஏ அழகு, இத்தனை நேரம் என்ன செய்தாய்? இராத்திரிச் சோறு சமைக்க நேரம் ஆகவில்லையா?” என்றான் மாணிக்கம். அழகு சிரித்தபடியே உள்ளே விரைந்தாள். “என்ன சிரிக்கிறாய்? ஏழாய் விட்டது. இதுவரையிலுமா வேலை இருந்தது.” “இல்லை, அப்பா, எனக்குக் கூலி கொடுக்கும் மேஸ்திரி, தனியே பேசவேண்டும் என்றார். நான் செய்த வேலைக்காக இஞ்சினீர் ஐயர் இன்னும் ஒரு ரூபாய் சேர்த்துத் தரச்சொன்னாராம்.” “உனக்கு மட்டுமா? வேறு பெண்களுக்கும் உண்டா?” “மற்றவர்களுக்கு இல்லையாம். நான்தான் ஓர் ஆண் பிள்ளை அளவு வேலை செய்கிறேனாம்.” “ஆமாம், ஆண் பிள்ளையாகத்தான் பிறந்திருக்க வேண்டும். தப்பிப் பெண் பிள்ளையாகப் பிறந்துவிட்டாய். பெண்ணாகப் பிறந்ததனால்தான் உன்னுடைய அம்மா போனாலும் எனக்குச் சோற்றுக் கவலை இல்லாமல் செய்கிறாய். பகலிலும் உழைக்கிறாய். இரவிலும் இங்கே வேலை செய்கிறாய்!” “ஆண்டவன் எப்படி நினைக்கிறானோ, அப்படித்தானே அப்பா எல்லாம் நடக்கும்?” மாணிக்கம் எங்கேயோ பராக்குப் பார்க்க ஆரம்பித்தான். அவன் வாழும் சின்னஞ்சிறு குடிசையைச் சுற்றித் தென்னமரங்கள். அவற்றின்மேல் பார்வையைச் செலுத்திக் கொண்டு நின்றான். இருட்டில் என்ன தெரியும்? அவன் பார்த்தது என்னவோ வெளியில்தான். உண்மையில் அவன் பார்வை காலத்தைக் கடந்து பார்த்தது. வருங்காலத்தைப் பார்த்தது. தன் எதிர் காலத்தையும், அழகுவின் எதிர்காலத்தையும் ஒருங்கே பார்த்தது. அவனுடைய மனைவி இந்தப் பெண்ணையும் இரண்டு இளைய ஆண் குழந்தைகளையும் விட்டுவிட்டு வந்த வழிக்குப் போய்விட்டாள். குழந்தைகளைக் காப்பாற்றும் பொறுப்பு மாணிக்கத்துக்கு வந்தது. அவன் தந்தைக்குத் தந்தையாய், தாய்க்குத் தாயாகக் காப்பாற்றினான். அப்போது அழகுவுக்குப் பத்துப் பிராயம்; அவள் தம்பிகளுக்கு ஐந்தும் மூன்றும். அந்த வயசிலேயே அவள் சுறுசுறுப்பாக இருந்தாள். தம்பிகளுக்கு நீராட்டிச்சோறு போட்டுப் படுக்கவைப்பாள். தன் தகப்பன் சமையல் செய்யும்பொழுது கூட இருந்து உதவி புரிவாள். பகல் வேளையில் சிற்றாளாகக் கட்டிடம் கட்டும் இடங்களில் வேலை செய்து நாலு காசு சம்பாதிப்பாள். பேர் அழகு; ஆனால் அதற்கும் அவள் தோற்றத்துக்கும் தொடர்பேயில்லை. காக்கை போன்ற கறுப்பு. உடம்பு ஆணின் முறுக்கேறியது. முகத்தில் ஒரு முரட்டுத் தோற்றம். வேலையிலும் அப்படித்தான். குரலிலும் குழைவு இராது. வேலை செய்யும் இடங்களில் அவளுக்கு என்ன பெயர் தெரியுமோ? காக்காய்! அவளுடைய தம்பிகளுக்கு அவள் அக்கா. மாணிக்கத்துக்கு அவள் அழகு. மற்ற எல்லோருக்குமே அவள் காக்காய்தான். பத்துவயசுப் பெண்ணாக இருந்தபோது அந்தப் பேரைக் கேட்டுப் பொறுத்துக் கொண்டிருந்தாள் என்று சொல்லலாமா? பின்பும் அவள் அந்தப் பெயரைக் கேட்டு, “ஏன்” என்று குரல் கொடுத்தாள். அவர்கள் அழைப்பதற்கு ஏதேனும் பொருள் இருப்பதாகவே எண்ணவில்லை. கொத்தனார் யாவரும் அவளைப் பரிகாசம் செய்வார்கள். “நீ ஆண் பிள்ளையாகப் பிறந்திருக்க வேண்டும்; ஒரு நிமிஷம் முந்தியே பிறந்து விட்டாய்” என்று சொல்வார்கள். “அப்படிப் பிறந்திருந்தால் நானும் இரண்டு ரூபாய் கூலி வாங்குவேன்” என்று உடனே அவள் விடை கூறுவாள். “உன் குரலால் காக்காய் என்று பெயர் வந்ததா? உன் அழகால் வந்ததா? என்று கேட்பார்கள். “இரண்டாலுந்தான்” என்று சொல்லி அவர்கள் மேலே பேச வகையில்லாமல் செய்துவிடுவாள். அவளுக்கு வயசு ஆகி வந்தது. மங்கைப் பருவம் அடைந்தாள். ஆனால் என்ன? பழைய காக்காய்தான். பழைய சிற்றாள் தான். அவள் வேலையில் மட்டும் எந்திரந்தான். மூன்றாள் வேலையை அவள் செய்து விடுவாள். நாணமோ, கோழைத்தனமோ அவளிடம் இருப்பதாகத் தெரியவில்லை. யார் என்ன சொன்னாலும் பளிச்சுப் பளிச்சென்று விடை கூறி விடுவாள். அதனால் வாய்த் துடுக்குக்காரி என்று அவளிடம் அதிகமாகப் பேச்சுக் கொடுப்பதை நிறுத்தலானார்கள். அவளுடைய அப்பனுக்கு அவள் வாய்த்துடுக்குப் பொறுப்பதில்லை. “இந்த வாயைக் கொண்டு நீ எப்படிப் பிழைக்கப் போகிறாய்?” என்று அவன் கூறி வருத்தப்படுவான். “நான் பிழைக்காமல் செத்துப் போய்விட மாட்டேன், அப்பா. வாய் இல்லாவிட்டால் உலகம் நம்மை மண்ணுண்ணிப் பூச்சியாக எண்ணி ஏறி மிதித்துவிடும்” என்பாள். “நீ காளி அவதாரம்; உன்னோடு பேச்சுக் கொடுக்கக்கூடாது” என்று சொல்லி மாணிக்கம் பேச்சை நிறுத்திவிடுவான். ‘இவள் குடியும் குடித்தனமுமாக இருந்து அடங்கி ஒடுங்கி வாழ வேண்டுமே! வாய்த்துடுக்கும் முரட்டுத்தனமும் இருந்தால் நாலு நாளைக்குப் பெயர் சொல்ல முடியாதே!’ இதுதான் மாணிக்கத்தின் கவலை. இருளிடையே தென்ன மரத்தின்மேல் விழுந்த பார்வை இருட்டைத்தான் பார்த்தது. பகலிலும் அவன் சிந்தனையில் ஆழ்ந்து பார்க்கும்போது இருட்டைத்தான் பார்த்தான். ஒளியின் ஒரு சிறு கீறல்கூட அவனுக்கு புலனாகவில்லை. அவள் பெண்ணாகப் பிறக்காமல் இருந்தால் - அது இனி நடக்கிற செயல் அன்று; நடந்து போனதை மாற்ற நாம் யார்? 2 அன்று கூலிவேலை செய்யும் பெண்களும், ஆண்களும் கொத்து வேலைக்காரர்களும் அதைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். “அந்தப்பெண், எவ்வளவு அடக்க ஒடுக்கமாக இருந்தாள்! மான்குட்டி போல அல்லவா நடந்தாள்?” என்றான் ஒருவன். “அந்த மானை வேடன் வலை போட்டுப் பிடித்துக்கொண்டு போய்விட்டான்” என்று சொல்லிச் சிரித்தான் மற்றொருவன். “பூ அழகாக இருந்தால் பறிக்கக் கை நீளுவது இயற்கைதான்” என்றார் ஒரு கொத்தனார். அப்போது அவர் தம்மிடம் செங்கல்லை நீட்டிக்கொண்டிருந்த பெண்ணைக் கடைக்கண்ணால் பார்த்துச் சிரித்தார். “தூ!” என்று காரி உமிழ்ந்தான் பெரியசாமி. அவனும் அங்கே கொத்துவேலை செய்துகொண்டிருந்தான். “இருந்தாலும் அந்தப் பயல் பொல்லாதவன். மூன்றாம் பேருக்குத் தெரியாமல் கூட்டிக்கொண்டு போய்விட்டானே!” என்றான் மற்றொரு கொத்தன். “பின்னே நீயும் வா என்று உன்னையும் கூட்டிக் கொண்டுப் போகச் சொல்கிறாயோ?” என்றான் வேறு ஒருவன். “என்ன மோசமான பேச்சு?” என்று மறுபடியும் காறித் துப்பினான் பெரியசாமி. அங்கே கொத்துவேலை செய்துகொண்டிருந்த பெருமாள் என்பவன், சிற்றாள் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான். இந்தச் செய்தியே அவர்கள் பேச்சில் அடிபட்டது. வேலை நடந்துகொண்டிருந்தது. நடுநடுவே அந்தச் சுவையான செய்தியும் சிரிப்பை உண்டாக்கியது. “இந்த அபாயம் காக்காய்க்கு வரவே வராது” என்று குப்பன் கூறியவுடனே எல்லோரும் கொல் என்று சிரித்தார்கள். “இருட்டும் திருட்டும் கோழைகள் சொத்து. எனக்கு அந்த அவமானம் ஏன் வருகிறது? எந்தப் பயல் என்னை ஏறெடுத்துப் பார்ப்பான்?” என்று பட்டாசு வெடிபோல வந்தது அழகுவின் பேச்சு. “ஆ! உன் அழகை உலகமே பார்த்துக் கண் பூத்துப் போகாதா?” என்றான் ஒருவன். “ஏன், நான் சினிமாக்காரியா?” பெரியசாமி இப்போது பேசினான். “அழகு! அந்தச் சோம்பேறிகளுடன் என்ன பேச்சு? கொண்டா சாந்தை இங்கே.” அவன் ஒருவன் தான் அவளை அழகு என்று கூப்பிடுகிறவன். கட்டிடம் பெரியது. ஆதலால் மாதக் கணக்கில் வேலை நடந்தது. எத்தனையோ புதிய வேலைக்காரர்கள் வந்தார்கள். அவர்களிடையே தெரிந்தும் தெரியாமலும், முறையாயும் முறையில்லாமலும் உறவுகள் நெளிந்தன. அழகுமட்டும் எப்போதும்போல் வேலை செய்தாள். அவள் வேலையை எஞ்சினீயர் பாராட்டினார். கட்டிடம் முடிகிற சமயம். அப்போது அதற்கு உடையவர் வேலை செய்கிறவர்களுக்குப் பரிசு தர எண்ணினார். பெரியசாமி அவரைத் தனியே பார்த்துத் தனக்கு இன்ன பரிசு வேண்டும் என்று தெரிவித்தான். உடனே அவர் மாணிக்கத்தைக் கண்டு, அந்தப் பரிசு அவனுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்தார். என்ன பரிசு? அழகுதான். மாணிக்கம் அந்தக் கட்டிடக்காரருடைய காரியாலயத்தில் வேலைக்காரன். செய்தியைக் கேட்டு மாணிக்கம் அயர்ந்து போனான். உண்மை யென்று நம்ப முடியவில்லை. அழகுவுக்கும் ஒரு கணவனா? பெரியசாமி அழகுவை மணம் செய்ய விரும்புவது கட்டிடக்காரருக்கு வியப்பாக இருந்தது. “இவளை ஏன் அப்பா கேட்கிறாய்?” என்று கேட்டார். “எனக்கு நல்ல மனைவி வேண்டும்” என்று அவன் சுருக்கமாக விடை கூறினான். திருமணம் ஆயிற்று; மாணிக்கம் ஆனந்தக் கண்ணீர் சிந்தினான்; அதில் துயரமும் கலந்திருக்கலாம். அழகு ஒரு வாரமாகக் குடித்தனம் செய்தாள். மாணிக்கம் போய்ப் பார்த்து வந்தான். அந்த ஒரு வாரமும் பெரியசாமி வேலைக்குப் போகவில்லை; அழகுவும் போக வில்லை. ஒரு வாரம் ஆயிற்று. அழகுவும் அவள் கணவனும் மாணிக்கத்தை வந்து பார்த்தார்கள். “மாமா, என்னுடைய ஆசையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்” என்றான் பெரியசாமி. “என்ன அப்பா வேண்டும்?” “நீங்களும் குழந்தைகளும் என்னுடனே வந்து இருக்க வேண்டும்.” மாணிக்கம் யோசித்தான். “நீங்கள் ஒன்றும் யோசிக்க வேண்டாம். நான் உங்களுக்கு மூத்த பிள்ளை.” மாணிக்கம் தென்ன மரத்தைப் பார்த்தான். குடிசைக்குள் இருந்தாள் அழகு. “நீயும் சொல்லேன்” என்று குரல் கொடுத்தான் பெரியசாமி. “அப்பா, இங்கே வா” என்றாள் அழகு. அவன் உள்ளே போனான். “ஆமாம்; அவர் சொல்கிறபடி எங்களுடன் வந்துவிடு. இனிமேல் சமைத்துச் சாப்பிட வேண்டாம்” என்றாள் அவள். பேச்சில் புதிய குழைவு ஒன்று கலந்திருந்தது. “நீ அவனுக்குப் பிரியமாக இருந்து வாழ்வது முதல் காரியம். அடக்க ஒடுக்கமாக நீ வாழ்ந்தால் அதுவே போதும்.” அவள் தலையைக்கவிழ்த்துக்கொண்டாள். சட்டென்று பேச்சு வரவில்லை. கண்ணைத் துடைத்துக்கொண்டாள். “ஏன் அம்மா அழுகிறாய்? என்று தழுதழுத்த குரலோடு கேட்டான். “இப்போதுதான், அப்பா, நான் பெண் என்பதை உணர்ந்தேன். நான் வேலைக்குக்கூடப் போகப் போவதில்லை. அவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.” அதற்குள் வாசலிலிருந்து பெரியசாமி, “என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டான். மாணிக்கம் வெளியே வந்தான்; “அப்படியானால்…..” “நீங்கள் எங்களோடு இருந்து எங்களைப் பாதுகாக்க வேண்டும்.” மாணிக்கம் தென்னமரத்தைப் பார்த்தான். தென்னங் குலைகள் பச்சைப் பசேலென்று காட்சி அளித்தன. தென்ன மட்டை சலசலத்தது. தென்ன மட்டைகளினூடே தெரிந்த வானம் நீலநிறம் காட்டிக் குளிர்ச்சியை ஊட்டியது. உலகமே குளிர்ச்சி மயமாக ஆகிவிட்டதோ! ஜடை பில்லை 1 பொழுது போகவில்லை யென்று என் பெட்டியை ஒழித்துக்கொண்டிருந்தேன். அந்தப் பெட்டியில் ஒடிந்த நகைகளும் தங்கக் காசுகளும் கிடந்தன. அப்போதுதான் அந்த ஜடைபில்லையைக் கண்டேன். அதை எங்கே வைத்திருந்தேனோ என்று யோசித்துக்கொண்டிருந்தாலும், இந்தப் பெட்டியை மேலே இருந்து இறக்கிப் பார்க்கச் சோம்பல் இடங் கொடுக்கவில்லை. இப்போதுதான் ஒழிந்தது. அவன் - பிள்ளையாண்டான் - காலேஜுக்குப் போயிருந்தான். அவர் எங்கேயோ வியாபார விஷயமாக வெளியூர் போயிருந்தார். இந்த நேரத்தில் வழக்கமாக வந்து பேசிக்கொண்டிருக்கும் சொக்கநாயகி இன்று என்னவோ வரவில்லை. அவர்களுக்கும் வேலை இல்லையா? அவருடைய கடையில், நாகரிகமாகச் சொன்னால் கம்பெனியில், முக்கியமான வேலைக்காரர் நாகநாத ஆசாரியார். சாதிப்பட்டத்தை விட்டுவிட்டு நாகநாதன் என்று கூப்பிட அவர் விரும்புவதில்லை. “எங்கள் தொழிற் சிறப்பைக் காட்டும் பட்டும் அது” என்று பெருமையோடு சொல்லிக் கொள்வார். ஆனால் அவர் என்னவோ குலத்தொழிலை விட்டு விட்டுக் கம்பெனி குமாஸ்தாவாகத்தான் இருக்கிறார். அவருடைய மனைவி சொக்கநாயகி. அவளுக்கு இந்தக் காலத்து நாகரிகம் அவ்வளவாகத் தெரியாது. சாது; உபகாரி. பக்கத்துத் தெருவில் குடியிருந்தபடியால் அடிக்கடி வந்து கவனித்துக்கொள்வாள். எங்கள் வீட்டு வேலைக்காரி மகா ராங்கிக்காரி. எதிலும் வெட்டு ஒன்று. துண்டு இரண்டு தான். பற்றுப் பாத்திரம் தேய்க்கிறது, வீடு பெருக்குகிறது இவற்றைத் திட்டமாகச் செய்வாள். அதற்குமேல் எது செய்யச் சொன்னாலும் காசைக் கீழே வை என்பாள். விறகுக் கடையிலிருந்து விறகு கொண்டுவர வேணுமா, தனியே இரண்டணாக் கொடுக்கவேண்டும்; கோதுமை அரைத்து வரவேணுமா, அரையணாவாவது கொடுக்க வேணும்; ஏதாவது அரைக்கச் சொன்னால் தனிக் கூலி. கடை கண்ணிக்குப் போய் வா என்று சொல்லிவிட்டால் போதும்; அவள் முணுமுணுப்பைச் சொல்லி முடியாது. கம்பெனியில் வேலை செய்யும் வேலைக்காரர்களிடம் நான் ஒரு வேலை சொல்லக்கூடாது. அப்படி அவர் திட்டம் பண்ணியிருந்தார். இப்படியானால் வேலை எப்படி நடக்கும்? இந்த நிலையில் எனக்குச் சமய சஞ்சீவியாகச் சொக்கநாயகி வந்து சேர்ந்தாள். கலகலவென்று பெசுவாள். அவளுக்கு ஒளிவு மறைவு என்பதே இல்லை. ஒருநாள், “உன் புருஷர் ஏன் பொன் வெள்ளி வேலையை விட்டுவிட்டார்?” என்று கேட்டேன். “விடுகிறதாவது, அம்மா? அவர் அதைத் தொடவே இல்லையே! அவர் தகப்பனார் அவரைப் பள்ளிக்கூடத்தில் படிக்கவைத்தார். அப்போதிலிருந்தே அவருக்குத் தொழில் என்றால் வெறுப்பாம். ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை. தொழிலுக்குக் கௌரவம் உண்டு என்று அடிக்கடி சொல்லிக்கொள்கிறார். ‘நான்கூடத் தொழில் பழகி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்’ என்றுகூடச் சில சமயம் வேதனைப்பட்டுக்கொள்வார்” என்றாள் அவள். அந்தச் சொக்கநாயகி இன்று வரவில்லை. ஏதோ நினைத்துக் கொண்டேன். மேலே இருந்து பெட்டியைக் கீழே கூடத்துக்குக் கொண்டுவந்து வைத்துக்கொண்டு திறந்து பார்த்தேன். எங்கே வைத்துவிட்டேனோ என்று கவலைப் பட்டுக்கொண்டிருந்த ஜடைபில்லையைக் கண்டேன். அதைக் கண்டவுடனே அம்மா ஞாபகந்தான் வந்தது. எத்தனை அன்பாக அதை எனக்குக் கொடுத்தாள்! “சுந்தரி, இந்த ஜடைபில்லை ஆகி வந்தது. இதை ஜாக்கிரதையாக வைத்துக்கொள். இந்தச் சிவப்புக் கல் எங்கும் கிடைக்காது. இதை நான் தலையில் வைத்துக்கொண்டு நவராத்திரி ஜோத்திரைக்குப் போனேன். அப்போது உங்கள் அப்பா என்னைக் கண்டார். அப்புறம் கல்யாணம் ஆயிற்று. இதைப் பிரித்துவிடாதே! கல் நன்றாக இருக்கிறதென்று பிரித்து மோதிரம், கடுக்கன் என்று செய்யத் தோன்றும். இதைப் பிரிக்காமலே வைத்திரு. உன் மூத்த பெண்ணுக்கு இதைச் சூட்டி அழகு பார். அவளுக்கே பிற்காலத்தில் கொடுத்துவிடு…” அவள் என்ன என்னவோ சொன்னாள். வரும் காலத்தை ஒவ்வொருவரும் தம் கையில் வைத்துக் கொள்ளத்தான் ஆசைப்படுகிறார்கள்; திட்டம் போடுகிறார்கள். ஆனால் இது நம்மிடம் அகப்படுவதில்லையே! என்னுடைய மூத்த பெண்ணுக்கு கொடு என்று அம்மா உபதேசம் செய்தாள். மூத்த பெண்ணா? எனக்கு ஒரே ஒரு பெண்தான் பிறந்தாள். அம்மாவுக்கு அது தெரியும். ஆனால் அந்தக் கடன்காரி பன்னிரண்டு வருஷம் வளர்ந்து தன் கடனை வாங்கிக்கொண்டு போய்விட்டாள். அப்புறந்தான் எத்தனையோ தவம் பண்ணிச் சிவகுமாரன் பிறந்தான். ஆமாம். அவள் போகிறபோது இவன் வயிற்றில் இருந்தான். ஜடைபில்லையை எந்தப் பெண்ணுக்குக் கொடுப்பது? சுவாமி என்னை வாழைமரத்தைப்போல வைத்துவிட்டார். ஒரு குலை தள்ளியதோடு நிற்கிறதல்லவா வாழை? சே சே! எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தார்களே! இருந்தாலும் உருப்படியானது - முருகா, சண்முகா, குழந்தை தீர்க்காயுசாக இருக்கவேண்டும். என்னவோ சொல்லவந்தேன்; மனசு எப்படி எப்படியோ தாவுகிறது. அம்மாவுக்கு ஜோசியம் தெரிந்திருந்தால் அப்படி எல்லாம் சொல்லியிருக்க மாட்டாளோ என்னவோ! இந்த ஜடைபில்லையைப்பற்றிச் சொல்லும்போது அவள் எவ்வளவு மகிழ்ந்துபோனாள்! சேந்தமங்கலத்தில் இதைச் செய்த ஆசாரி வரப்பிரசாதியாம். தெய்வங்களுக்குத் திருவாபரணம் செய்வதில் மிகவும் கெட்டிக்காரனாம். அவனிடம் மனுஷர்களுக்கு நகை செய்து தரும்படி கேட்கவே பயப்படுவார்களாம். யாருடைய இஷ்டத்துக்கும் வசப்பட மாட்டானாம். தானே மனசு இசைந்து யாருக்காவது ஏதாவது செய்துகொடுத்தால் அவர்கள் அமோகமாக வாழ்வார்களாம்! அம்மா வக்கணையாகத்தான் சொன்னாள். ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை. அம்மாவுக்கு முன்னாலே அப்பா போய்விட்டார். ஜடைபில்லை அவளுக்கு நீண்ட மாங்கிலிய பலத்தைத் தரவில்லையே! அது கிடக்கட்டும். நான் வாங்கிக் கொண்டேனே! எனக்கு ஒரு பெண் பிறந்தாளே; அவள் இருந்தாளா? இந்த எண்ணங்களை யெல்லாம் அந்தக் காலத்தில் நான் எண்ணவில்லை. அம்மா தந்ததை ஆசையோடுதான் வாங்கி அணிந்துகொண்டேன். ஜடைபில்லை என்னவோ அழகான வேலைப்பாடு உள்ளதுதான். அன்னம் தன் மூக்கில் ஒரு கொடியைப் பிடித்துக்கொண்டிருக்கிறது போல உள்ளே ஒரு சிற்பம். அந்தக் காலத்தில் பழைய சிவப்புக்கு மோஜு அதிகம்; எந்த வீட்டுக்குப் போனாலும் அந்த வீட்டு அம்மாள் என்னை நிறுத்தி என் தலையைக் குனியச் செய்து அதைப் பார்ப்பாள். அப்போதெல்லாம் எனக்கும் பெருமை தாங்காது. ஹூம்! அதெல்லாம் பழைய கதை. நான் புக்ககத்துக்கு வந்த பிறகும் அதை அணிந்து கொண்டேன். நாளடைவில் சிவப்புக்கு மதிப்புக் குறைந்தது. வைரம் எங்கும் டாலடிக்க ஆரம்பித்துவிட்டது. போலி வைரங்களும் வந்துவிட்டன. விலையிலே எவ்வளவு உயர்ந்ததானாலும் பழைய சிவப்பைத் தீண்டுவார் இல்லை; மட்டமான ரங்கூன் வைரத்துக்கு முன்புகூட அதற்குச் செலவாணி இல்லாமற் போயிற்று. நான் எப்போதாவது இதைத் தலையில் வைத்துக் கொள்வேன். பெண் பிறந்த பிறகு அவளுக்கு வைத்தேன். “என்ன அம்மா இது, கர்நாடகம்!” என்று அவள் சொல்வாள். ஆனாலும் எனக்காக வைத்துக்கொள்வாள். ஆமாம், நான் சொன்னால் அது அவளுக்கு வேதம். எதற் கெடுத்தாலும், ‘அம்மா அதைச் செய்யட்டுமா’. ‘அம்மா அதை வாங்கட்டுமா’, ‘அம்மா எனக்கு அது வாங்கித்தா’- இப்படியே ஒரு நாளைக்கு நூறு தரம் அம்மாவைக் கூப்பிட்டுவிடுவாள். அவள் அழகும் சூட்டிகையும் அறிவும் என்னிடம் உள்ள அன்பும் - எதைக் கண்டாலும் ஆசை! எதற்காகத்தான் அப்படி ஆசைப்பட்டாளோ! ‘நான் சீக்கிரம் போய்விடுவேன்; அதற்குள் எல்லாம் பார்த்துவிட வேண்டும்’ என்றுதான் அப்படி ஆசைப்பட்டாளோ? பாவி எனக்கு அப்போது ஒன்றும் தெரியவில்லை. ஹூம்! மறுபடியும் எங்கேயோ போய்விட்டேனே! இந்தப் பாழும் மனசு எத்தனை நாளானாலும் மறக்காது போல் இருக்கிறது. அன்றைக்கு அவளைக் கட்டையிலே வைத்துவிட்டு இதைப் பெட்டியிலே போட்டதுதான். சரியாகப் பதினெட்டு வருஷங்கள் ஓடிவிட்டன. இதைப் பார்த்தால் அம்மா ஞாபகம் வருகிறது. அதோடு அவள் நினைவும் வருகிறது. சிந்தனையிலே என்னை மறந்து பெட்டியைத் திறந்து வைத்தபடியே உட்கார்ந்து கொண்டிருந்தேன். “அம்மா!” என்று கூப்பிட்டபடியே சொக்கநாயகி வந்தாள். “ஏண்டி இன்றைக்கு இவ்வளவு நேரம்?” என்று கேட்டேன். “அவர் சாப்பிட்டுவிட்டு உடனே போகிறவர், கொஞ்ச நாழிகை தங்கிப் பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்துக்கு முன் தான் கடைக்குப் போனார்” என்றாள். எத்தனைதரம் நான் கம்பெனி என்று சொல்லித் தந்தாலும் அவள் கடை என்று தான் சொல்கிறாள். அது புத்தகக் கடைதானே? “இருந்திருந்து இந்த வயசில் என்ன அப்படி இங்கிதமான பேச்சு?” என்று புன்னகை பூத்தபடியே கேட்டேன். “போங்கள், அம்மா! என் மகள் மீனாட்சியின் கல்யாணத்தைப் பற்றிப் பேசினார். யாரோ தூரத்து உறவில் சேலம் ஜில்லாவில் சேந்தமங்கலம் என்ற ஊரில் ஒரு பையன் இருக்கிறானாம். அவன் தொழிலில் கெட்டிக்காரனாம். இப்போதுதான் இவருக்குத் தொழிலில் மதிப்பு வந்திருக்கிறதே. அவன் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவனாம். அவனுக்கே மீனாட்சியைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிடலாம் என்று சொன்னார்.” “ஓஹோ! கல்யாணம் கூடுகிறது. நல்லது; சுவாமி நல்லபடியாகக் கல்யாணம் நடத்தவேண்டும்” என்றேன். “இதென்ன, பெட்டியைத் திறந்து போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்களே!’ என்று சொக்கநாயகி கேட்டாள். “நீ வரவில்லை. இதில் எதையோ தேடுவதற்காக எடுத்து வைத்துக்கொண்டேன்; என்ன என்னவோ ஞாபகம்!” “எதைத் தேடினீர்கள்?” பழைய கதையை அவளுக்குச் சொல்ல நாக்கு எழுந்தது. ஆனால் அடக்கிக்கொண்டேன். அவள் கல்யாணச் செய்தியைச் சுபமாக வந்து சொல்கிறாள்; இந்தச் சமயத்தில் நாம் நம் அழுகையைச் சொல்வதாவது! ஆனாலும் அந்த ஜடை பில்லையை எடுத்து அவளுக்குக் காட்டினேன். அதை அவள் கையில் வாங்கிப் பார்த்தாள். நான் பெட்டியை மூடி உள்ளே வைத்துவிட்டு வந்தேன். “ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறதே!” என்றாள் அவள். “எங்கள் அம்மா கொடுத்தது. ஒன்றரைப் பவுன் தங்கம் போட்டுச் செய்ததாம். இதை அழிக்கக்கூடாதென்று வைத்திருக்கிறேன்… வந்து … அந்தப் பிள்ளையாண்டான் எந்த ஊர்க்காரன் என்று சொன்னாய்?” “சேந்தமங்கலமாம்.” “அடே, அதே ஊர்தான் போல் இருக்கிறது!” “என்ன அம்மா சொல்கிறீர்கள்? உங்களுக்கு அந்த ஊர் தெரியுமா?” நான் சற்றுச் சிந்தனையில் ஆழ்ந்தேன். “சேந்தமங்கலந்தானே? இந்த ஜடைபில்லையைக்கூட அந்தச் சேந்தமங்கலத்தில்தான் யாரோ பண்ணினார்களாம்” என்றேன். “அப்படியா, ஆச்சரியமாக இருக்கிறதே, அம்மா! இது நல்ல சகுனமாகக்கூடத் தெரிகிறது. நான் சேந்தமங் கலத்துப் பிள்ளையைப்பற்றிச் சொல்லவந்தேன். நீங்கள் சேந்தமங்கலத்து ஜடைபில்லையைக் காட்டுகிறீர்கள்!” அவள் காணாததைக் கண்டது போல ஆச்சரியத்தில் மூழ்கிப் போனாள். ஐயோ பாவம்! இதன் பூர்வ கதையை அவள் அறிந்தால்? அவளுக்கு எதற்கு அது தெரியவேணும்? அவள் அடைகிற சந்தோஷத்தை நாம் அதிகமாக்க முடியாவிட்டாலும் அதைக் கெடுப்பானேன்? 2 ஒரு வாரம் கழித்துச் சொக்கநாயகி வந்தாள். “ஏதாவது வேலை இருந்தால் சொல்லுங்கள்; சீக்கிரம் செய்து விட்டு வீட்டுக்குப் போகவேண்டும்” என்றாள். என்னிடம் உள்ள அன்பினால் எனக்கு உதவி செய்வது அவள் இயல்பு. கடைக்குப் போய் ஏதாவது வாங்கி வருவாள்; சாமான்களை ஒழுங்கு பண்ணி வைப்பாள். “ஏன் இந்த அவசரம்?” என்று கேட்டேன். “நாளைக்கு அந்தப் பிள்ளை வருகிறார். பெண்ணைப் பார்க்க வேண்டுமாம்; மீனாட்சியைப் பார்த்துவிட்டு வேண்டாமென்று சொல்ல ஆள் இருக்கிறானா? வருகிறவர்களுக்கு உபசாரம் செய்ய வேண்டும்; அது சம்பந்தமான வேலை இருக்கிறது. அதோடு…” என்று அவள் இழுத்தாள். “என்ன தயங்குகிறாய்? சொல்” என்றேன். “அவர்கள் வரும்போது இவளுக்கு அலங்காரம் பண்ணிக் காட்ட வேண்டாமா? அதற்கு ஏதாவது நகை இருந்தால் கொடுங்கள். பிறகு திருப்பித் தந்துவிடுகிறேன். முக்கியமாக அந்த ஜடை பில்லையை…” “அது எதற்கடி பைத்தியம்? கர்நாடக நகையல்லவா அது?” என்றேன். அதன் கதை தெரிந்தால் அவள் கேட்பாளா? “இல்லை, அம்மா, அது ரொம்ப அழகாக இருக்கிறதம்மா. இவளுக்குப் புதுச் சிவப்பில் அப்படி ஒன்று பண்ணிப் போடவேண்டுமென்று ஆசையாக இருக்கிறது. எங்கள் ஜாதியில் ஜடைபில்லை யென்றால் மதிப்பம்மா” என்று கெஞ்சினாள். அவள் எனக்குச் செய்துவரும் உபகாரத்துக்கு இது எம்மாத்திரம்! ஆனால் நான் செய்வது உபகாரமாக இல்லாமல் - கடவுளே, முருகா! நீதான் காப்பாற்றவேண்டும், இந்த ஜடைபில்லையினால் ஒன்றும் நேராமல் நீ துணையிருக்க வேண்டும். மனசு தர்மசங்கடத்தில் மாட்டிக்கொண்டு தவித்தாலும், அவ்வளவு ஆசையாகக் கேட்கும்போது மறுக்க முடியவில்லை. முருகனை நினைத்துக்கொண்டு கொடுக்கத் துணிந்துவிட்டேன். “உனக்கு இல்லாமல் எதற்கு வைத்திருக்கிறேன்? ஏதோ இருக்கிற நகைகளைக் கொடுக்கிறேன். ஆண்டவன் அருளால் மீனாட்ச்சிக்கு நல்ல இடம் கிடைத்துச் சௌக்கியமாக வாழட்டும்.” “நல்லதம்மா, நாளைக்குக் காலையில் வந்து வாங்கிக் கொள்கிறேன்” என்று சொல்லி அவள் போய்விட்டாள். மறுநாள் ஓர் ஒற்றைவடம் சங்கிலி, ஒரு ஜோடி வளை, அந்த ஜடை பிள்ளை, ஒரு மோதிரம், எல்லாம் வாங்கிக் கொண்டு போனாள். அதற்கு மறுநாளே பத்திரமாக எல்லாவற்றையும் கொண்டுவந்து கொடுத்துவிட்டாள். என்னடி சமாசாரம்? மாப்பிள்ளை எப்படி இருக்கிறான்? அவனுக்குப் பெண் பிடித்திருக்கிறதா? கல்யாணம் எப்போது எங்கே நடக்கிறது?" என்று கேட்டேன். “பிள்ளை தங்கமானவர். என்ன அமரிக்கையாகப் பேசுகிறார்! நிறம் கொஞ்சம் மாநிறந்தான். ஆனால் மூககும் முழியுமாக இருக்கிறார். அநேகமாகக் கல்யாணம் தீர்மானம் ஆனபடிதான். அதைப்பற்றி இனிமேல்தான் இவர் எழுதித் தெரிந்துகொள்ளவேணும். வந்தவர்கள் நேற்றே ஊருக்குப் போய்விட்டார்கள்.” “மீனாட்சிக்கு அவனைப் பிடித்திருக்கிறதா?” “அதெல்லாம் எங்களுக்குத் தேவை இல்லை. அவளுக்கு என்று தனியே ஒன்று உண்டா, அம்மா? எங்களுக் குத் தெரியாததை அவள் என்ன காணப் போகிறாள்? நாங் கள் நல்லதைத்தான் செய்வோம்?” “என்னடி சொக்கு, பத்தாம் பசலிப் பேச்சைப் பேசுகிறாய்? இந்தக் காலத்தில் பெண்ணும் பிள்ளையும் ஒருவரோடு ஒருவர் பேசித் தெரிந்துகொண்டு கல்யாணம் செய்வதல்லவா நாகரிகம்?” “அதெல்லாம் எங்களுக்கு வேண்டாம், அம்மா. அந்த நாகரிகம் இல்லாமல் நாங்கள் ஒன்றும் கேட்டுப் போக வில்லை. நீங்கள் உங்கள் வீட்டு ஐயாவோடு முன்னாலே பேசித்தான் கல்யாணம் பண்ணிக்கொண்டீர்களோ?” துப்பாக்கியை என் பக்கமே திருப்பிவிட்டாள். “அது பழைய காலம்!” என்று சிரித்துக்கொண்டே சொன்னேன். “அது போதும்” என்று அவள் சொல்லிவிட்டுப் புறப்பட்டாள். “என்ன, விஷயத்தைச் சொல்லாமல் போகிறாயே! கல்யாணம் எப்போது வைத்திருக்கிறீர்கள்?” “அதெல்லாம் இனிமேல் தான் தெரிய வேண்டும். உங்களுக்குத் தெரியாமல் நடந்துவிடுமா, அம்மா?” அவள் போய்விட்டாள். ஜடை பில்லை அணிந்த நேரம் தீய நிமித்தமின்றிக் கல்யாணம் சுபமாக முடிய வேண்டுமே என்று நான் ஆண்டவனைப் பிரார்த்தித்துக் கொண்டேன். 3 கல்யாணம் நிச்சயமாகிவிட்டது. இந்தத் தையிலேயே நடத்திவிடுவதாகத் தீர்மானம் செய்தார்கள். எங்கள் எசமானர், நாகநாத ஆசாரியாருக்கு - சொக்கநாயகியின் கணவர்தாம் - வேண்டிய உதவி செய்வதாக ஒப்புக் கொண்டார். கல்யாணத்தைப் பெண் வீட்டிலே செய்வதாக ஏற்பாடு. ஆகையால் நாகநாதருக்குப் பொறுப்பு அதிகமாயிற்று. சொக்கநாயகி விழுந்து விழுந்து வேலை செய்தாள். அடிக்கு ஒரு தரம், “நீங்கள் நகை கொடுத்த நேரம் இந்தக் கல்யாணம் நடக்கிறது!” என்று சொன்னாள் அவள். “கல்யாணம் நிறைவேறட்டும்” என்று நான் சொன்னேன். கல்யாணத்துக்கும் நான் இரவல் தந்தேன். அவர்களும் புதிய நகைகளைச் செய்திருந்தார்கள். முக்கியமாகப் புதிய சிவப்பில் ஒரு ஜடைபில்லை செய்து போட்டிருந்தார்கள். ஆகையால் இந்த ஜடைபில்லையைக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போயிற்று. ’நல்ல வேளை!" என்று நான் ஆறுதல் பெருமூச்சு விட்டேன். குறிப்பிட்ட சுப முகூர்த்தத்தில் மீனாட்சிக்கும் சேந்தமங்கலம் வரதப்பனுக்கும் கல்யாணம் நடைபெற்றது. கல்யாணத்தின்போது நானும் இவரும் சிவகுமாரனும் நாகநாத ஆசாரியார் வீட்டிலேயே இருந்தோம். முகூர்த்தம் முடிந்தவுடன் நான் தாம்பூலம் வாங்கிக் கொண்டு வந்துவிட்டேன். “ஏதாவது வேணுமானால் சொல்லியனுப்பு” என்று சொக்கநாயகியிடம் சொல்லி வந்தேன். சாயங்காலம் ஆறு மணி இருக்கும். சுவாமிக்கு முன் விளக்கேற்றி வைத்து நமஸ்காரம் செய்தேன். சொக்க நாயகி வெகு வேகமாக வந்தாள். படபடப்புடன் வந்து கையைப் பிசைந்துகொண்டே, “அம்மா, அம்மா! நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று கவலைக் குறியோடு சொன்னாள். “என்னடி வந்து விட்டது?” என்று கேட்டேன். “அம்மா நான் எதைச் சொல்லட்டும்? நீங்கள் முன்பு கொடுத்தீர்களே, அந்த ஜடைபில்லை வேண்டும். எங்களுக்கே வேண்டும். அதன் விலை எவ்வளவு ஆனாலும் தந்துவிடுகிறேன்.” எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. அந்த ஜடைபில்லை காரணமாக ஏதோ குழப்பம் நேர்ந்திருக்கிறது என்பதை ஊகித்துக்கொண்டேன். என் வயிறு பகீரென்றது. “என்னடி சொல்கிறாய்? நிதானமாகச் சொல்லேன்” என்றேன். அவள் சொன்னாள். கல்யாணம் எல்லாம் ஆனபிறகு மாப்பிள்ளை வரதப்பன் மீனாட்சியைத் தனியே அழைத்தானாம், ஏதோ பேச வேண்டுமென்று. அவள் வெட்கப்பட்டாளாம். “உன் அம்மாவையும் அழைத்துக்கொண்டு வா” என்றானாம். அம்மாவுக்கும் வெட்கம். கடைசியில் நாகநாத ஆசாரியும் மீனாட்சியும் போனார்கள். “அந்த ஜடைபில்லை எங்கே?” என்று கேட்டான். நாகநாதருக்கு ஒன்றும் விளங்கவில்லை. மறைவில் இருந்தபடியே கவனித்த சொக்கநாயகி அங்கிருந்தபடியே பதில் சொன்னாளாம். “அது ஐயா வீட்டது” என்றாளாம். மாப்பிள்ளை எப்படியாவது அது வேண்டும் என்றானாம். " அது கிடைக்கும் என்றுதான் உங்கள் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள ஒப்புக் கொண்டேன்" என்றானாம். இப்படியும் உண்டோ? இதை அவள் சொல்லி அழாக் குறையாகக் கெஞ்சினாள்; “என்ன விலையானாலும் கொடுத்துவிடச் சொல்கிறேன்” என்று சொல்லும்போது அழுகையே வந்து விட்டது. “என்ன இது? அசடே! அழாதே. இது என்ன பிரமாதம்? இல்லாததைக் கேட்காமல் இருக்கிறதைக் கேட்டானே, அதற்குச் சந்தோஷப்படு. அதைப் போய் எதற்காக அவ்வளவு ஆசையாகக் கேட்கிறான்?” “அவர் கல் வேலையில் கெட்டிக்காரராம். அது நன்றாக இருக்கிறதாம்…” அவளால் பேச முடியவில்லை. நான் சிறிது யோசித்தேன். ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். விறுவிறுவென்று உள்ளே போனேன். அந்த ஜடை பில்லையைக் கொண்டு வந்து முருகன் சந்நிதானத்தில் வைத்து நமஸ்காரம் செய்தேன். “இந்தா சொக்கு, நீயும் நமஸ்காரம் செய்து இதை எடுத்துக்கொள்” என்றேன். அவள் நமஸ்காரம் செய்துவிட்டு, “நீங்களே உங்கள் கையால் தாருங்கள்” என்றாள். நான் முருகனைத் தியானித்துக்கொண்டே அதை எடுத்தேன்; “சொக்கு, ஆண்டவன்தான் இப்படி ஒரு திருவிளையாடலைச் செய்திருக்கிறான். இந்த ஜடைபில்லையை மீனாட்சிக்குக் கல்யாணச் சீதனமாக நான் கொடுக்கிறேன். அவள் என் பெண். என்னுடைய அம்மா தந்தது இது. அவள் பேரும் மீனாட்சி. தன் பேரையுடைய பேத்திக்கு இது உரிமையாவதில் அவள் ஆத்மா சாந்தி அடையும். எடுத்துப் போய் மீனாட்சிக்குக் கொடு. அவள் மகராஜியாய் வாழட்டும்.” நான் ஆவேசம் வந்தவளைப் போலப் பேசினேன். “என்ன அம்மா இது? விலைக்கு வாங்கிக்கொள்ளத்தான்….” “அதைப்பற்றிப் பேசாதே. போய் முதலில் காரியத்தைக் கவனி.” 4 மீனாட்சி கருவுற்றிருந்தாள். அவளை வரதப்பன் அழைத்துக்கொண்டு வந்திருந்தான். “அம்மா, உங்கள் பெண் நாளைக்கு உங்கள் மருமகப் பிள்ளையோடு வரப் போகிறாள்” என்று முதல் நாளே சொக்கநாயகி சொன்னாள். ஆம், என் நிபந்தனைகளை அவள் ஒப்புக்கொண்டு விட்டாள். ‘என் பெண்’ மீனாட்சி வந்தாள். வரதப்பனுடன் பேசிப் பழகினேன். நல்ல பிள்ளை; சாமர்த்தியசாலி. ஒருநாள் வீட்டுக்கு வந்திருந்தான். பேசிக் கொண்டிருந்தான். “ஏன் அப்பா, அந்த ஜடை பில்லையை ஜாக்கிரதையாக வைத்திருக்கிறாயா?”என்றேன். “ஜாக்கிரதையான இடத்தில் இருக்கிறது” என்றான். “ஆமாம், அதைக் கொண்டுவந்து கொடுத்தால்தான் மறுகாரியம் என்று அன்று தடபுடல் பண்ணி விட்டாயாமே! அப்படிச் செய்யலாமா?” என்று கேட்டேன். “செய்யக் கூடாதுதான். ஆனால் நான் அதற்கு ஆசைப் பட்டதற்குக் காரணம் உண்டு. அது ஒரு கதை.” சேந்தமங்கலம் வரதப்ப ஆசாரியார் பொற்கொல்லர்களில் சிறந்தவர். சாஸ்திரம் தெரிந்தவர. ஆலயங்களுக்கு வேண்டிய நகைகளைச் செய்கிறவர். அவருடைய பேரன்தான் இந்த வரதப்பன். வரதப்ப ஆசாரியார் ஒரு சமயம் அந்த ஊர் வரதராஜஸ்வாமி கோயில் தாயாருக்கு ஒரு ஜடை பில்லை செய்தார். ஒரு ஜமீன்தாருடைய பிரார்த்தனை அது. அவர் நல்ல சிவப்புக் கல்லாக வாங்கிக் கொடுத்தார். உறுதியான கட்டடமாக இருக்க வேண்டுமென்று சொன்னார். ஒன்றரைப் பவுனுக்கு மேலே தங்கம் போட்டு மிகவும் நன்றாக அன்னமும் கொடியுமாகச் சிற்பம் அமைத்துச் செய்தார். மிகவும் அழகாக இருந்தது நகை. அதைக் காணும்போது அவருக்கே அதில் ஆசை விழுந்தது. அப்போது அவர் புதிதாகக் கல்யாணம் செய்துகொண்டிருந்தார். தம் மனைவிக்கும் அப்படி அதே அச்சில் ஒன்று செய்து அணிய வேண்டும் என்று ஆசைப் பட்டார். கோயிலுக்கு நகையைச் செய்து கொடுத்துவிட்டார். சில வருஷங்களாகக் கல் சேர்த்துத் தம் மனைவிக்கும் அதே அச்சில் ஒன்று செய்து அணிவித்தார். ஆனால் அதை அணிந்த மறுவருஷம் அவர் மனைவி காலமாகி விட்டாள். தாயாருக்குச் செய்த நகையில் ஆசை வைத்ததற்குத் தண்டனை என்று எண்ணி அவர் வருந்தினார். இரண்டு குழந்தைகள் இருந்தமையாலும் வயசு நாற்பத்தைந்து ஆகிவிட்டபடியாலும் அவர் வேறு கல்யாணம் செய்துகொள்ளவில்லை. அதுமுதல் ஒரு விரதம் எடுத்துக்கொண்டார். ‘இனிமேல் நகை செய்வதானால் ஆலயங்களுக்குத்தான் செய்வது’ என்று அவர் தீர்மானித்தார். அவரிடம் கோயிலுக்குப் பின் கோயிலாக வந்துகொண்டே இருந்தது. தம் மனைவி அணிந்திருந்த ஜடை பில்லையை அவர் யாருக்கோ விற்றுவிட்டார். அதைக் கண்டாலே அவருக்குப் பிடிக்கவில்லை. “இந்தக் கதையை என்னுடைய தகப்பனார் எனக்குச் சொன்னார். ’நான் அம்மா அணிந்திருந்த ஜடை பில்லையைப் பார்த்திருக்கிறேன். கோயிலில் தாயாருடைய ஜடை பில்லை எப்படியோ அப்படியே இருக்கும். என்ன அழகான கல்! என்ன அற்புதமான வேலைப்பாடு!” என்று அப்பா அடிக்கடி சொல்வார். நான் கோயிலில் பெருமாளையும் தாயாரையும் தரிசிக்கும்போது என் கண் அந்த ஜடை பில்லையைத் தேடும். உற்சவ காலங்களில்தான் அலங்காரம் பண்ணுவார்கள். அப்போதெல்லாம் நான் தாயாருக்குப் பின்னாலே போய் ஜடை பில்லையைப் பார்ப்பேன். ’எங்கள் தாத்தா பண்ணின இரண்டு ஜடை பில்லைகளில் ஒன்று மனிதரை அடைந்தது. மற்றொன்று தெய்வத்தை அடைந்தது. தெய்வத்தை அடைந்த இது நித்திய அழகோடு எவ்வளவு சிறப்பாக இருக்கிறது! மற்றொன்று யார் தலையில் ஏறியதோ? எப்படி இருக்கிறதோ? இப்போது அதை யார் அணியப் போகிறார்கள்? பிரித்துக் குலைத்திருப்பார்கள் என்று எண்ணமிடுவேன். “அன்று தை வெள்ளிக்கிழமை. பாவி நான் கண் போட்டதனாலோ என்னமோ தாயார் கோயிலுக்குள் எழுந்தருளியபோது விக்கிரகம் கீழே விழுந்துவிட்டது. மல்லாக்க விழுந்தமையால் விக்கிரகம் சேதமில்லாமல் பிழைத்தது. ஆனால் ஒரு கல்லின்மேல் தாக்கியமையால் ஜடை பில்லை சிதறிப் போயிற்று. நானே அதைக் குலைத்தது போன்ற அங்கலாய்ப்பு ஏற்பட்டுவிட்டது. அந்த ஜடை பில்லையின் முழு உருவமும் அப்படியே என் அகக் கண்ணில் நின்றது. “இந்த வேதனையைப் போக்கியது உங்கள் ஜடை பில்லை. அதே அச்சு. நிச்சயம் இது பழைய ஜடை பில்லைதான் என்று தெரிந்துகொண்டேன். எனக்குக் கண் நோட்டம் தெரியும் அல்லவா?” “இது உன் தாத்தா செய்ததுதான் என்று எப்படித் தெரியும்?” என்று கேட்டேன். “தொழிலாளிக்கு அடையாளம் நன்றாகத் தெரியும், அம்மா. இதைக் கண்டவுடன் மீனாட்சியைக் கட்டிக் கொள்வதென்று தீர்மானம் செய்துவிட்டேன்.” “அப்படியானால், மீனாட்சியை நீ பார்த்துப் பிரியப் படவில்லை. இந்த ஜடை பில்லைக்காகத்தான் கல்யாணம் பண்ணிக்கொண்டாய் என்று சொல்.” “அப்படி இல்லையம்மா. இவள்தான் என்னை முதலில் கவர்ந்தாள். பிறகு குலம், கோத்திரம், சீர் , செனத்தி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் ஜடைபில்லை செய்து விட்டது.” “அப்புறம்?” ”அப்புறம் என்ன? கல்யாணத்தன்று பார்த்தால் இவள் தலையில் காகிதப்பூ மாதிரி புதுக் கல் பில்லை ஒன்று உட்கார்ந்திருந்தது. எனக்குப் பெரிய ஏமாற்றமாகி விட்டது. எப்படியாவது அதை அடையவேண்டுமென்ற ஆத்திரத்தில் தடபுடல் படுத்திவிட்டேன். நீங்கள் மனசு வைத்தீர்கள்” :அந்த ஜடைபில்லை எங்கே?” “அதைத்தான் சொல்ல வருகிறேன், அம்மா. கல்யாணம் ஆனவுடன் நேரே வரதராஜப் பெருமாள் கோயிலுக்குப் போனேன். நகையை அழுக்கெடுத்துச் சுத்தம் பண்ணி மெருகேற்றியிருந்தேன். தாயார் இழந்த ஜடைபில்லை மறுபடியும் கிடைத்துவிட்டது போல யாவரும் மகிழ்ந்தார்கள். நான் தாயாருக்கே அதைச் சமர்ப்பித்துவிட்டேன். அது இனி தெய்வீக நகை ஆகிவிட்டது. அம்மா, புண்ணியமெல்லாம் உங்களைச் சேர்ந்த்து.” அவன் இதைச் சொல்லி விட்டு ஒரு பெருமூச்சு விட்டான். அதன் எதிரொலி போல என்னிடமும் நீண்ட பெருமூச்சு எழுந்தது. பெண் உரிமை 1 “கல்யாணி, உனக்கு இன்னும் பள்ளிக்கூடத்துக்கு நேரம் ஆகவில்லையா? எவ்வளவு நாழிகை அப்படியே உட்கார்ந்திருப்பாய்? எப்போது குளிக்கிறது, எப்போது சாப்பிடுகிறது?” “இன்றைக்குத்தான் பள்ளிக்கூடம் இல்லையென்று சொன்னேனே, அம்மா. எங்கள் பழைய தலைமை ஆசிரியர் இறந்து போனார். அதற்காக விடுமுறை.” “மனிதர்கள் தினமுந்தான் இறந்து கொண்டிருக்கிறார்கள். அதற்காக விடுமுறை விட்டுக்கொண்டே இருந்தால், இருக்கிறவர்கள் படித்து முன்னுக்கு வரவேண்டாமா?- இந்தக் கிழங்கு வேண்டாம் வேண்டாம் என்று முட்டிக் கொண்டேன். கேட்கிறாரா? கழற் கோடி கழற்கோடியாக எதையோ வாங்கிக்கொண்டு வந்து உருளைக் கிழங்கு என்று கொடுக்கிறார் உங்கள் அப்பா. பாதிக்குமேல் தோல்!… இன்னும் உன் மாமா கடிதமே போடவில்லை…” கல்யாணியின் அம்மா இப்படிச் சமையல் அவசரத்தில் தன் பேச்சை அவியலாக ஆக்கிக்கொண்டிருந்தாள். “ஏன் அம்மா, லொடலொட என்று கத்திக்கொண்டே இருக்கிறாய்? இந்தக் கதையைப் படித்து முடிக்கிற வரையும் உன் திருவாயை மூடிக்கொண்டு இருக்க மாட்டாயா? என்று கோபத்தோடு சொன்னாள் கல்யாணி. “என்ன கதை அது, அப்படி என்னை வாயடைக்கும்படி செய்ய?” “உன் வாயை அடக்கும் கதைதான் இது. படிக்கிறேன், கேட்கிறாயா? சதா கல்யாணம், கல்யாணம் என்று இரவும் பகலும் ஜபிக்கிறாயே, அது கூடாது என்பதை எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார், இந்த எழுத்தாளர்!” “அவனுக்கு நான் சொல்கிறது எப்படியடி தெரியும்?” என்று அம்மா கேட்டாள். கல்யாணி, “ஐயோ, அம்மா!” என்று சொல்லிச் சிரித்தாள். “கதையில் உன்னைப்பற்றி வரவில்லை, அம்மா; பெண்கள் அவசியம் கல்யாணம் பண்ணிக்கொள்ளத்தான் வேண்டும் என்று உன்னைப் போன்ற கர்நாடகங்கள் சொல்கிறார்களே, அதற்குத் தக்க பதில் இந்தக் கதையில் வருகிறது. அதைத்தான் சொல்கிறேன்” என்றாள். “அது என்னடி அதிசயம்? பெண்களுக்குக் கலெக்டர் உத்தியோகம் கொடுக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறானா? இல்லை, கன்யாமாடம் கட்டவேண்டும் என்று எழுதியிருக்கிறானா? “கவர்னர் உத்தியோகம் கொடுக்க வேண்டுமாம்!” “எழுதினது ஆண்பிள்ளையா? பெண்பிள்ளையா?” “யாராக இருக்கும் என்று உனக்குத் தோன்றுகிறது?” “யாரோ போது போகாமல் புக்ககத்தில் விழுந்து தத்தளிக்கிற பைத்தியக்காரப் பெண்ணாக இருக்க வேண்டும்…” என்றாள் அம்மா. அவள் சோதிடம் பொய்த்துவிட்டது. “இல்லை, அம்மா, இல்லை. சாட்சாத் ஆண்சிங்கம் ஒன்று எழுதியிருக்கிறது. சுந்தரேசன் என்று கொட்டை எழுத்தில் பெயர் போட்டிருக்கிறது.” “என்ன எழுதியிருக்கிறான்? படி, பார்க்கலாம்.” கல்யாணி கதையில் வரும் பகுதியைப் படிக்க ஆரம்பித்தாள். அம்மா ஏதோ கேள்வி கேட்கவே, கதையில் வரும் சந்தர்ப்பத்தை விளக்கினாள். “இதிலும் கல்யாணி என்ற பெண்ணை வைத்துத்தான் கதை எழுதியிருக்கிறார். சீக்கிரம் அவளைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று அவளுடைய மாமா பிள்ளை சொல்கிறான். அவளோ மேலும் மேலும் படித்து, விஞ்ஞான ஆராய்ச்சியிலே ஈடுபட வேண்டுமென்று சொல்கிறாள். அப்பா அவளிடம் கல்யாணம் பண்ணிக்கொள் என்று சொல்கிறார். அப்போது அந்தக் கல்யாணி சொல்கிறாள்: அதைப் படிக்கிறேன், கேள்….." “சரி, சரி, வாசி.” “அந்தப் பெண் சொல்கிறள்: ’அப்பா, நான் ஆண் பிள்ளையாகப் பிறந்திருந்தால் என்னை இப்படித் தொந்தரவு செய்வீர்களா? பெண்ணாகப் பிறந்ததாலே பிறர் சொன்னபடிதான் நடக்க வேண்டுமென்று நீங்கள் சொல்லும் பிரமதேவன் தலையில் எழுதிவிடுகிறானா? அவளுக்குப் படிக்க வேண்டும் என்ற ஆவல் இல்லையா? அறிவு இல்லையா? சுதந்திரம் இல்லையா? பெண்ணுக்கு இன்பம் வேண்டும் என்று கல்யாணம் செய்து வைக்கிறீர்கள். அதை இன்பம் என்று விரும்புகிறவர்களுக்கு நீங்கள் குசாலாய்க் கல்யாணம் செய்து வையுங்கள். அறிவுலகத்திலே நட்சத்திரமாக, சந்திரனாக, ஏன்-சூரியனாகவே ஒளிர வேண்டும் என்று ஆசைப்படுகிற பெண்களை அவர்கள் போக்கிலே விட்டால் ஆணுலகத்துக்கு அவமானம் உண்டாகி விடுமா?” “போதும், போதும் இந்தப் பிரசங்கம்! யாரோ பொழுது போகாதவன் எழுதியிருக்கிறானாம்! இவள் வாசிக்கிறாளாம்! காலம் கலிகாலம்!” “ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. அந்தக் கல்யாணி எக்கேடு கெட்டால் எனக்கு என்ன? இந்தக் கல்யாணி கல்யாணம் செய்துகொண்டு என் கண்முன் குடித்தனம் பண்ணிக் குழந்தை குட்டிகளோடு வாழப் போகிறதைக் கண்ட பிறகுதான் நான் செத்துப் போவேன்!” இப்படி இவர்கள் சொல்லிக்கொண்டிருக்கும்போது கல்யாணியின் தந்தை ராமசாமி வெளியிலிருந்து வந்தார். “இங்கே கல்யாணி படுத்துகிற பாடு என்னால் சகிக்க முடியவில்லை. ஊரிலே இருக்கிற சோம்பேறிகளெல்லாம் கதை எழுதுகிறார்களாம்! நல்லதாக எழுதக் கூடாதோ?” என்று அந்த அம்மா சொல்வதைக் கெட்டு, “கல்யாணி, இன்றைக்கு என்ன சொற்பொழிவு ஆயிற்று?” என்று கேட்டார் ராமசாமி. “நான் சொற்பொழுவு செய்யவில்லை அப்பா; இந்தக் கதையில் ஒரு கல்யாணி வருகிறாள். அவள் என் கருத்துக்கு இணங்கச் சுதந்தர வாழ்வு வாழ்கிறவள். அவள் பேசுவதாகக் கதையில் ஒரு பகுதி வருகிறது. அதைத்தான் வாசித்துக் காட்டினேன்.” “நீ முதலில் படித்து இந்தப் பரீட்சையில் தேறு; பிறகு பார்த்துக் கொள்ளலாம் உன் சுதந்தர வாழ்வை. இப்போதே அதைப்பற்றி ஏன் வீண் வாதங்கள்?” என்று சொல்லிவிட்டு ராமசாமி குளிக்கப் போனார். சிறிய ஆரம்பப் பாடசாலையின் தலைமை உபாத்தியாயராகிய ராமசாமியின் மூத்த பெண் கல்யாணி எஸ்.எஸ். எல்.ஸி படித்துக்கொண்டிருந்தாள். முதல் குழந்தை ஆகையால் அவளுக்குச் சின்னஞ் சிறு பிராயத்திலே படிப்பிலே உற்சாக மூட்டினார் ராமசாமி. அவளும் சுறுசுறுப்பாகப் படித்து வந்தாள். ஒவ்வொரு வகுப்பிலும் அவள் நிறையப் புள்ளிகள் பெற்றுத் தேர்ச்சியும் பரிசும் பெற்றாள். கல்யாணி இளம் பெண். ஆனாலும் புத்திசாலி. அவளுக்குச் சிட்டுக் குருவி மேல் ஆசை. அதைப் போல விட்டு விடுதலையாகி நிற்பதில் ஆசை. ‘நாமும் படித்து உத்தியோகம் செய்ய வேண்டும்; காசும் சம்பாதிக்க வேண்டும்; புகழும் சம்பாதிக்க வேண்டும்’ என்பது அவள் கட்சி. “சம்பாதித்துக்கொண்டே இருக்கிறாய்; பிறகு?” என்று அம்மா கேட்பாள். “பிறகு என்ன? அப்படியே வாழ்கிறது.” “ஆண் துணை வேண்டாமோ?” “உலகத்து மக்களெல்லாம் துணையாக இருக்கிறார்களே.” “போடி பைத்தியம்! யாராவது கேட்டால் சிரிப்பார்கள். ஓர் ஆடவன் துணை வேண்டாமாம்! கன்னியாகவே காலம் கழித்து விட்டால் உடம்பு பளரும்போது யார் உதவி செய்வார்கள்?” “அண்ணன், தம்பி இல்லையா?” “அவரவர்கள் குடும்பம் என்று ஏற்பட்டால் உன்னை யார் கவனிப்பார்கள்?” “ஆடவர்களை யார் கவனிக்கிறார்கள்?” “அவர்களுக்குப் பெண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்; கவனித்துக்கொள்கிறார்கள்.” கல்யாணி சிறிது மௌனமானாள். தானும் ஆடவர்களைப் போல இருந்து உத்தியோகம் செய்ய வேண்டுமென்று அவளுக்கு ஆசை. ஆடவர்களை எதிர்பாராமல் தன் சொந்த உழைப்பாலே வாழ வேண்டும், அதுதான் சுதந்திர வாழ்வு என்று எண்ணினாள். ஆனால் ஆடவர்கள் கல்யாணம் பண்ணிக்கொள்கிறார்கள்; பிள்ளைக்குட்டி பெறுகிறார்கள்; முதுமைப் பிராயத்தில் பிள்ளைகள் அவர்களைக் காப்பாற்றுகிறார்கள். பெண்கள் கல்யாணம் பண்ணிக் கொண்டால்தான் உடனே அடிமையாகி விடுகிறார்களே! இதை நினைக்கும்போது அவளுக்கு ஆடவர் உலகத்தின்மேல் கோபம் கோபமாக வந்ந்து. “எல்லோரும் சுயநலப் புலிகள்!” என்று முணுமுணுத்தாள். அப்படியே சந்தனையில் ஆழ்ந்தாள். திடீரென்று சிந்தனையினின்றும் விழித்துக் கொண் டாள் கல்யாணி: அவளுக்கு இப்போது தெளிவு உண்டாயிற்று. சுதந்தரமாகவும் இருக்க வேண்டும்; குடும்பமும் நடத்த வேண்டும். பொருந்தாத இந்தச் சிக்கலைப் பொருந்தும்படி செய்ய ஒரு வழி கண்டுபிடித்து விட்டால். “அம்மா, கணவன் மனைவி இரண்டு பெரும் உத்தியோகம் பார்த்தால் என்ன?” என்று கேட்டால். “கிறிஸ்தவர்கள் அப்படித்தான் பார்க்கிறார்கள்.” “அவர்களும் மனிதர்கள்தாமே? நான் ஒன்று சொல்கிறேன், கேள் அம்மா. நான் என் விருப்பப்படி படிப்பேன். படித்து உத்தியோகம் கிடைத்த பிற்பாடுதான் கல்யாணம் செய்துகொள்வேன். நான் உத்தியோகத்தில் இருப்பதைத் தடுக்கத கணவனாக இருந்தால்தான் கல்யாணம் செய்து கொள்வேன்.” “அவன் உனக்குச் சமைத்துப் போடா வேண்டுமாக்கும்!” “அது அவன் இஷ்டம். அவன் உத்தியோகம் செய்வதை நான் தடுக்கப் போவதில்லை. அவனும் என்னைத் தடுக்கக் கூடாது…” “என்ன, இன்னும் தர்க்கம் முடிந்த பாடு இல்லையா?” என்று கேட்டுக்கொண்டே ராமசாமி வந்தார். சாப்பிட்டு விட்டுப் பள்ளிக்கூடம் போய்விட்டார். பரீட்சை முடிந்தது. மிகவும் நன்றாக எழுதினாள் கல்யாணி. அதுத்தபடி கல்லூரிக்குப் போய்ப் படிக்க வேண்டும். எப்படியும் அவளுக்கு அரசாங்கத்தாரின் உபகாரச் சம்பளம் கிடைக்கும். திருச்சிராப்பள்ளியா, சேலமா, எங்கே படிக்கப் போவது என்ற யோசனையில் அவள் ஈடுபட்டிருந்தாள். ராமசாமியின் தங்கை கணவர் திருச்சியில் இருந்தார். விடுமுரைக்குக் கல்யாநியைத் திருச்சிக்கு அனுப்பும்படி அவளுடைய அத்தை, ராமசாமியின் தங்கை, எழுதியிருந்தாள். அதன்படி அவரே அவளைக் கொண்டு போய் விட்டு வந்தார். கல்யாணிக்கும் அங்கே போய்க் கல்லூரிகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்று ஆசை. கல்யாணி திருச்சிக்குப் போனாள். அவளுடைய அத்தை பெண் கமலம் அவளுடன் ஒட்டிக்கொண்டு பழகி னாள்; கல்யாணியைவிட இரண்டு வயசு சின்னவள். கல்யாணியைவிட இரண்டு வயசு சின்னவள். கல்யாணியைப் போலக் கமலமும் நிறையப் பத்திரிகை படிக்கிறவள். ஒரு தொடர்கதை விடாமல் படித்துவிடுவாள். இரண்டு பேரும் கதைகளையும் நாவல்களையும் பற்றிப் பேசிப் பேசிப் பொழுது போக்கினார்கள். சுந்தரேசன் என்ற எழுத்தாளர் எழுதி வரும் தொடர் கதையில் கல்யாணி என்ற பெண் சுதந்தர உணர்ச்சியுள்ளவளாக இருப்பதைப்பற்றி இருவரும் பேசினார்கள். “அவர் எப்போதுமே பெண்களின் கௌரவத்தைக் குறைக்காமல் எழுதுகிறார். யாரோ பெண்தான் ஆணின் புனைபெயரோடு எழுதுகிறாலோ என்று சந்தேகப்படுகிறேன்” என்றாள் கல்யாணி. “அதென்ன புதுமையாகச் சொல்கிறாயே?” என்று கேட்டாள் கமலம். “அது தெரியாதா உனக்கு? சில பேர் அரசாங்க உத்தியோகத்தில் இருப்பார்கள். கதை எழுதுவார்கள். அவர்கள் எழுதுவதாகத் தெரிந்தால், கதையின் மொழி பெயர்ப்பு, அதனால் கிடைக்கும் லாபம், எந்தப் பத்திரிகை இல அது வருகிறது, அதன் ஆசிரியர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்-என்றெல்லாம் மேலதிகாரிகள் கேட்பார்களாம். அந்தத் தொல்லைக்குப் பயந்துகொண்டு புனை பெயர் போட்டுக்கொள்வார்கள். சிலர் தம்முடைய மனைவியின் பெயரில் எழுதுவார்களாம். பெண்களின் உரிமையை வற்புறுத்தும் இந்தப் பேர்வழி, நிச்சயமாக ஒரு பெண்ணாகவே இருக்க வேண்டும். பெண்கள் பேரை ஆண்கள் உபயோகித்துக் கொள்ளும்போது ஏன் நாம் ஆண் பெயரை வைத்துக்கொள்ளக் கூடாது என்று தோன்றியிருக்கும். யாரோ சுந்தரி என்ற பெயர் உள்ளவளே சுந்தரேசன் என்று எழுதுகிறாள் போலிருக்கிறது” என்று கல்யாணி உற்சாகத்தோடு சொன்னாள். இப்படியே பொழுது போய்க் கொண்டிருந்தது. ஒரு நாள் சென்னையிலிருந்து ஓர் இளைஞன் திருச்சிக்கு வந்தான். அவன் கமலத்தின் தகப்பனார் நாராயணனுடைய நண்பர் ஒருவருடைய பிள்ளை; அக்கௌண்டன்ட் ஜெனரல் காரியாலயத்தில் வேலை பார்க்கிறவன். ராமகிருஷ்ணன் என்பது அவன் பேர். ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் இரண்டையும் பார்த்து விட்டுப் போகலாம் என்று நாலு நாள் விடுமுறை பெற்றுக்கொண்டு வந்தான் ராமகிருஷ்ணன். நாராயணன் வீட்டில்தான் தங்கினான். கமலமும் கல்யாணியும் வழக்கம்போல் தொடர் கதை கலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். புனை பெயரைப்பற்றிய பேச்சும் வந்தது, “நீங்கள் பத்திரிகை கலைப் படிக்கிறது உண்டோ?” என்று கேட்டான் சென்னையிலிருந்து வந்த இளைஞன் ராமகிருஷ்ணன். “அதைத் தவிர வேறு வேலையே கிடையாது?” என்று சொல்லிச் சிரித்தார் நாராயணன். “யாருடைய கதைகள் உங்களுக்குப் பிடிக்கும்?” என்று கேட்டான் ராமகிருஷ்ணன். “உங்களுக்கு யார் கதை பிடிக்கும்?” என்று கமலம் கேட்டாள். “எனக்கு எழுத்தாளர் எல்லோருமே நண்பர்கள். அதனால் எல்லோருடைய கதையும் பிடிக்கும்” என்றான் அவன். “அப்படியானால்-” கல்யாணி இழுத்ததை ஊகித்துக் கொண்ட கமலம், “உங்களுக்குச் சுந்தரேசன் என்ற எழுத்தாளரைத் தெரியுமோ?” என்று கேட்டாள். “நன்றாகத் தெரியும்” என்று பதில் வந்தது. “இவள் சொல்கிறாள்; அது அவருடைய சொந்தப் பெயராக இருக்காது என்கிறாள்” என்று கமலம் சொன்ன பொது, “அட! அது எப்படி உனக்குத் தெரிந்தது?” என்று கல்யணியையே கேட்டான் ராமகிருஷ்ணன். அவன் ஆச்சரியத்துள் மூழ்கினான். “அவர் எழுத்திலிருந்து ஊகித்தேன்” என்றாள் கல் யாணி. தன ஜோசியம் பளித்ததைப் பற்றி அவளுக்கு உள்ளூர மகிழ்ச்சி பொங்கியது. “அப்படியானால் அவளுடைய சொந்தப் பெயர் என்ன?” என்று கமலம் கேட்டாள். “அவனுடைய பெயரைத்தானே கேட்கிறாய்?” “அவன் ஏது?” “நீ கேட்பது எனக்கு விளங்க வில்லையே!” “கல்யாணியின் ஊகம உங்களுக்குப் புரிந்ததோ? யாரோ ஒரு பெண்தான் அந்தப் புனைபெயரில் எழுதுகிறாள் என்றல்லவா அவள் சொல்கிறாள்?” என்று கமலம் விஷயத்தை விளக்கினாள். அதைக் கேட்டவுடன், “பெண்ணா?” என்று ராமகிருஷ்ணன் இடிஇடி யென்று சிரித்தான். “நல்ல ஜோசியம்! ஏன் அப்படி எண்ணினாய்?” என்று கல்யணியைக் கேட்டான் அவன். கமலமே கல்யாணியின் கட்சியை விளக்கினாள். பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த ராமகிருஷ்ணன், “இன்று எனக்கு ஒரு லாபம் கிடைத்தது” என்றான். “என்ன லாபம்?” “இனிமேல் நான் சுந்தரி என்ற புனைபெயரில் எழுதலாம் என்று தோன்றுகிறது.” “நீங்கள் கதை எழுதுவீர்களா?” என்று கல்யாணி ஆவலோடு கேட்டாள். “மாமா அறிந்த ராமகிருஷ்ணனும், பத்திரிகையில் எழுதும் சுந்தறேசனும், நீ ஊகித்த சுந்தரியும் அடியேன் தான்!” என்று சொல்லி அவன் சிரித்தான். “அடடே, அப்படியா சமாசாரம்?” என்று நாராயணனும் கூடச் சிரித்தார்; கமலமும் சிரித்தாள். கல்யாணி மாத்திரம் சிரிக்கவில்லை. கல்யாணி தன்னுடைய எழுத்தில் எவ்வளவு மோகம் கொண்டிருக்கிறாள் என்பதை ராமகிருஷ்ணன் உணர்ந்து கொண்டான். தன கருத்தை அவன் எவ்வளவு அழகாகக் கதைகளில் எழுதுகிறான் என்று அவள் ஆச்சரியப் பட்டால். அவளை அறியாமலே அவள் மனம் அவனிடம் தாவியது. ராமகிருஷ்ணன் சென்னைக்குப் போனான். கல்யாணி நாமக்கல் போனாள். கல்யாணி இப்போது அம்மாவுடன் வாதம் செய்வதை நிறுத்தி விட்டாள். அப்பாவிடம், “கல்லூரிப் படிப்பில் வீண் செலவாகும்; அதனால் உங்களுக்கும் கஷ்டம்” என்று மாத்திரம் சொன்னாள். அறிவாளியாகிய அவர் தம மகளின் மனமாற்றத்தைத் தெரிந்து கொண்டார். மேலே விசாரணை செய்தார். திருச்சிக்குப் போய்த் துப்பறிந்தார். கல்யாணிக்குக் கல்யாணம் செய்யும் முயற்சியைத் தொடங்கினார். ராமகிருஷ்ணனுக்கும் கல்யாணிக்கும் ஒரு சுப முகூர்த்தத்தில் கல்யனமாயிற்று. அவள் சென்னை வாசியானாள். கல்யாணியும் ராமகிருஷ்ணனும் நாமக்கல்லுக்கு வந்திருந்தார்கள். அவள் இப்போது தாய்மைப் பருவத்தை அடைந்திருந்தாள். அவள் தாய் அவளைக் கண்டு பூரித்துப் போனாள். அவள் விரும்பியது நிறைவேறிவிட்டது. பக்கத்து வீட்டுக்காரியோடு கல்யாணியின் தாய் பேசிக் கொண்டிருந்தாள். ஏதோ பேச்சு வந்தது. “அப்படித்தான் சிறு பெண்ணாக இருக்கும்போது தோன்றும். வயசு வந்நால் மாறிவிடும். எங்கள் கல்யாணி எவ்வளவு லூட்டி அடித்தாள்! கல்யாணமே பண்ணிக்கொள்ளப் போவதில்லை என்று பிடிவாதமாகச் சொன்னாள். அப்படிப் பண்ணிக்கொண்டாலும் உத்தியோகம் பார்ப்பேன் என்று வீறாப்புப் பேசினாள். இப்போது…” என்று அவள் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்த கல்யாணி அங்கிருந்தபடியே, “இப்போது நான் உத்தியோகம் பார்க்கத்தான் பார்க்கிறேன்” என்று சொன்னாள். திடுக்கிட்ட தாய் அவளைப் பார்த்து, “அது என்ன கூத்து? என்ன உத்தியோகம் பார்க்கிறாய்?” என்று கேட்டாள். “குமாஸ்தா உத்தியோகம்.” “எங்கே?” “வீட்டிலேதான். அவர் கதை சொல்கிறார்; நான் எழுதுகிறேன். அவருக்கு நான் குமாஸ்தா!” என்று சொலிலிவிட்டுப் புன்னகை பூத்தாள் கல்யாணி. திருட்டுக் கை வழக்கம்போல அன்று தங்கவேலன் தன் எசமானர் குழந்தைகளைப் பக்கத்துத் தெருவில் இருந்த பள்ளிக் கூடத்துக்கு அழைத்துக் கொண்டுபோய்விட்டான். சரியாகப் பத்து மணிக்கு அவன் நாள்தோறும் சாமிநாத முதலியாருடைய- அவர்தாம் தங்கவேலனுடைய எசமானர் - அவருடைய ஏழு வயசுப் பையனையும் அவன் தங்கையையும் பள்ளிக்கூடத்துக்கு கொண்டுவந்து விட்டுப் போவான். அடுத்த தெருவுக்குப் போகக் கார் எதற்கு என்று குழந்தையைத் தங்கவேலனுடன் அனுப்பினார்கள். அன்றும் அப்படிப் போனவன் ஒரு புதிய அநுபவத்துக்கு உள்ளானான். அவனுடைய பருவம் அன்று தலை காட்டியது. அந்தப் பள்ளிக்கூடத்துக்கு வரும் மற்றக் குழந்தைகளையும் அந்த அந்த வீட்டு வேலைக்காரனோ, வேலைக்காரியோ கொண்டுவந்து விட்டார்கள். யாரோ ஒரு குழந்தையை அழைத்துக்கொண்டு ஒரு பெண் - பதினெட்டு வயசு இருக்கும்-வந்தாள். வந்தவள் தங்கவேலனுடன் இரண்டு குழந்தைகளைப் பார்த்ததும், " என்ன துரை?, சௌக்கியமாக இருக்கிறாயா? " என்று கேட்டாள். “பொன்னம்மா!” என்று பையன் ஆச்சரியத்தோடு சொல்லிக்கொண்டே பார்த்தான் அவன் பார்த்தது கிடக்கட்டும்; தங்கவேலனும் அவளைப் பார்த்தான்; பிரமித்துப் போய்விட்டான். அவன் கண்ணுக்கு அவளுடைய அழகிலே வசியமருந்து இருந்தது. அவள் குறுகுறுத்த முகமும், வளப்பமான மேனியும் அவன் உள்ளத்திலே பதிந்துவிட்டன. " நீ ஏன் எங்கள் வீட்டுக்கு வருகிறதில்லை?" என்று கேட்டான் துரை. “வரமாட்டேன்” என்றாள் அவள். “ஏன்?” என்று குழந்தை மறுபடியும் கேட்டான். “ஏனோ!” என்று அவள் சொன்னாள். அவளை அவன் இதற்குமுன் பார்த்ததில்லை. அவள் எசமானர் வீட்டுக்குப் பழக்கமானவளா? பின், ஏன் அவள் இந்த இரண்டு மூன்று மாசகாலமாக வரவே இல்லை? குழந்தை கேட்ட கேள்வியைத் தானே கேட்கவேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான். அவள் சொன்ன, “ஏனோ!” என்ற பதிலை விண்டு விளக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ள எண்ணினான். முன்பின் முகம் அறியாத இளம்பெண்ணோடு துணிந்து பேசலாமோ? ஆனால் ‘இவள் யார்?’ என்றதை மாத்திரம் தெரிந்து கொள்ளத் துணிந்தான். “துரை, அது யார்?” என்று கேட்டான். அதற்கு விடை கிடைப்பதற்குமுன் அந்தப் பெண் ஒரு பார்வையினால் அவனை ஒரு வெட்டு வெட்டிவிட்டு பள்ளிக்கூடத்துக்குள் போய்விட்டாள். அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்த தங்கவேலன் மறுபடியும் துரையை, “இவள் யார்?” என்று கேட்டான். குழந்தை பதில் சொன்னான். அதைக் கேட்டவுடன் தங்கவேலுவுக்குப் பெருத்த ஏமாற்றம் உண்டாகிவிட்டது. குழந்தை என்ன சொன்னான் தெரியுமா? “பாக்கியத்தின் பெண்” என்றான். அதைக் கேட்டவுடன் தங்கவேலன் முகம் வாடியது. எதையோ பறிகொடுத்தவன் போல் ஆகிவிட்டான். ஏன்? ஒரு மாசத்துக்கு முன் நடந்த நிகழ்ச்சிதான் காரணம். * * * “திருட்டுக் கை நிற்குமா? தவிட்டுக்கு வருகிற கைதான் தனத்துக்கு வரும். இன்றைக்கு இந்தச் சின்னப் பொம்மையைத் திருடின கையே நாளைக்கு ஏதாவது துணிமணியை எடுக்க நீளும்!” என்று இரைந்தான் தங்கவேலன். “நீ இங்கே வருவதற்கு முன்பே நான் பழகுகிறேன். அம்மாவிடம் நல்ல பேர் எடுத்திருக்கிறேன். நீ இன்றைக்குப் பெரிய திருட்டைக் கண்டுபிடித்தாயாக்கும்! இத்தனை பொம்மைக் குவியலில் இந்த ஒன்று குறைந்தால் என்ன குடி முழுகிப் போய்விடும்? நீதான் இந்த வீட்டுச் சொத்தைக் காப்பாற்றப் பிறந்திருக்கிறாயோ?” என்று கேட்டாள் பாக்கியம். “இல்லை; இல்லை. நீதான் இந்த வீட்டுச் சொத்துக்கு மகளாகப் பிறந்திருக்கிறாய்! இவ்வளவு வயசாகியும் உனக்குப் புத்தி இல்லையே! எனக்கு முன்பிருந்தே இங்கே இருக்கிறாய் என்று சொல்கிறாயே! அம்மாவிடம், எனக்கு இது வேண்டும் என்று சொல்லி வாங்கிக் கொள்ளக்கூடாதோ? அதை எடுத்துப் பையில் எதற்காக ஒளித்து வைக்க வேண்டும்?” “சொல்ல வேண்டும் என்று தான் நினைத்தேன். அதற்குள் நீதான் போலீஸ் புலிபோலத் திருட்டைக் கண்டு பிடித்துவிட்டதாகத் தடபுடல் பண்ணுகிறாயே!” “இந்தா அம்மா, அதிகமாகப் பேசாதே. செய்த தப்பை ஒப்புக்கொள். அம்மாவிடம் கேட்டு வாங்கிக் கொள்பவளாக இருந்தால் உன் பையில் எடுத்து மூலையிலே மறைவாக வைத்திருக்க வேண்டியதில்லை. திருடினது போதாதென்று, அது சரி என்று சமாதானம் வேறு சொல்ல வந்துவிட்டாய். இன்னும் என்ன என்ன சாமானை முன்பு எல்லாம் எடுத்துக்கொண்டு போனாயோ?” “என்ன அது? இனிமேல் பேசினால் எனக்குக் கெட்ட கோபம் வரும். நேற்றுப் பிறந்த பயல். நீ என்னை அதிகாரம் பண்ணுவதாவது!” என்று அவள் சீறினாள். வார்த்தைகள் தடித்தன. பேச்சுப் பலமாயிற்று. அதைக்கேட்டு, “என்னடா அங்கே ரகளை?” என்று சொல்லிக்கொண்டே எசமானியம்மாள் வந்தாள். “ஒன்றும் இல்லை அம்மா! சின்னச் சமாசாரம். இந்த நாய் எனக்குத் திருட்டுப் பட்டம் கட்டுகிறது” என்று ஆத்திரத்துடன் பேசினாள் பாக்கியம். " நீங்களே பாருங்கள் அம்மா, இந்த அம்மாள் பேசுகிரதை. நாய் என்று சொல்லுகிறாள். திருட்டைக் கண்டு பிடித்துவிட்டேன் என்ற ஆத்திரம்!" தங்கவேலன் அந்தப் பங்களாவுக்கு வந்து இரண்டு மாதங்களே ஆகியிருந்தன, பங்களாத் தோட்டத்தைப பராமரிக்கவும் மற்ற ஏவல்களைச் செய்யவும் அவனை நியமித்திருந்தார்கள். இருபத்திரண்டே வயசான அவன் வாட்டசாட்டமாக வளர்ந்திருந்தான். எந்த வேலைக்கும் அஞ்சாதவன். நாலு கோணல் எழுத்துத் தெரிந்திருந்தால் அவன் இருக்க வேண்டிய இடமே வேறாக இருந்திருக்கும். சிறுசுறுப்பு, நேர்மை, கண்டிப்பு உடையவன் தங்க வேலன். அந்த இரண்டு மாதத்தில் அவன் ஐயாவினுடைய அபிமானத்தைப் பெற்றான், எசமானியம்மாளும் எடுத்ததற்கெல்லாம் அவனைத்தான் கூப்பிடுவாள்,. அந்த வீட்டிலேயே சாப்பிட்டுக்கொண்டு அங்கேயே தங்கினான் அவனுக்குத் தாய் தகப்பன் யாரும் இல்லையாம். பாக்கியம் ஒரு வருஷமாக அந்த வீட்டில் வேலை செய்கிறாள். நல்லவள்தான். ஏதோ இன்று போதாத காலம். அவள் மனசுக்குள் சனிபகவான் புகுந்தான். அவள் கையை நீளச் செய்தான். நவராத்திரி முடிந்துவிட்டது. அந்தப் பங்களாவில் கொலு வைத்திருந்தார்கள். இன்றைக்கு அதைக் கலைத்து எல்லாவற்றையும் பெட்டியில் எடுத்து வைத்தார்கள். அப்படி எடுத்து வைத்தபோது ஒருவரும் இல்லாத சமயம் பார்த்துப் பாக்கியம் ஒரு பொம்மையை எடுத்துத் தான் கொண்டு வந்திருந்த பழம் பையில் போட்டு ஒரு மூலையில் பத்திரப்படுத்தினாள். இதை எப்படியோ தங்க வேலன் தெரி்ந்துகொண்டுவிட்டான். அவளைத் தனியே அழைத்துக் கேட்டான். அவள் பணிந்து போகவில்லை. திருடினவள் வீறாப்புடன் பேசுவதைக் கண்டு அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது. கடைசியில் எசமானி யம்மாளுக்கே விஷயம் தெரிந்து விட்டது. " ஏண்டி பாக்கியம், அவன் சொல்கிறமாதிரி உனக்கு வயசாகியும் புத்தி இல்லையா? திருடுகிறதையும் திருடிவிட்டு இத்தனை பேசுகிறாயே?" என்று அவள் கேட்டாள். இந்த ஆங்காரப் பேச்சின் பலனாகப் பாக்கியத்தை வேலையை விட்டுத் தள்ளிவிட்டார்கள். " கையும் வாயும் படைத்த உனக்கும் நமக்கும் இனிச் சரிப்படாது" என்று எசமானியம்மாள் கம்டிப்பாகச் சொல்லிவிட்டாள். பாக்கியம் அந்த வீட்டை விட்டுப் புறப்பட்டபோது " இரு, இரு; உன்னை விட்டேனா பார்!" என்று தங்கவேல னைக் கறுவிக்கொண்டே போனாள். ஒரு மாசத்துக்கு முன்னால் நிகழ்ந்த இந்த நிகழ்ச்சி இப்போது நினைவுக்கு வந்ககு தங்கவேலனுக்கு. " அவளுக்கு இவ்வளவு அழகான மகளா!" என்று எண்ணினான். ‘ஏன் இருக்கக் கூடாது ஏன் அவளைக் கோபித்துக் கொண்டோம்?’ என்ற இரக்கமும் கூடவே தோன்றிற்று. அவள் வேலையை விட்டுப் போகாமல் இருந்தால் இந்தப் பெண்ணை அவன் அடிக்கடிப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். " ஏன் துரை, இன்னும் உள்ளே போகவில்லையா?" என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தான் தங்கவேலன். அவளேதான். பள்ளிக்கூடத்துக்குள் தான் அழைத்து வந்த குழந்தையை விட்டுவிட்டு அவள் வந்துவிட்டாள். தங்கவேலன் இன்னும் படிக்கட்டுக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தான். அவனுக்கே வெட்கமாகப் போய்விட்டது. அந்தப் பெண்ணை ஒருமுறை பார்த்துவிட்டு உள்ளே விடு விடு வென்று நுழைந்தான். மற்றொரு நாள் தங்கவேலன் கடைக்கு ஏதோ சாமான் வாங்கிவரப்போனான். நடுவிலே ஓர் ஆள் அவனைச் சந்தித்தான். “தம்பி, நீதான் அந்தக் கீழ்க்கோடிப் பங்களாவில் வேலைக்கு வந்திருக்கிறாயோ?” என்று கேட்டான். “ஆம், நீங்கள் யார்?” என்று தங்கவேலன் கேட்டான். " நான் ஓர் அச்சாபீஸில் காவல்காரனாக இருக்கிறேன். சும்மாதான் கேட்டேன். இதற்குமுன் இருந்த தோட்டக்காரக் கிழவனை எனக்குப் பழக்கம் உண்டு. ஏன் தம்பி, உனக்குச் சொந்த ஊர் எது?" “ஆரணி.” “சாதிசனம் எல்லாரையும் விட்டுவிட்டு இந்தப் பட்தணத்துக்குப் பிழைக்க வந்துவிட்டாயா?” " சாதி சனம் சோறு போடுவார்களா? பட்டணத்திலே தான் உழைப்புக்குப் பலன் கிடைக்கிறது" என்று தங்கவேலன் சொன்னான். இப்படியே அவ்விருவரும் பேசி ஒருவரை ஒருவர் அறி முகம் செய்துகொண்டார்கள். அவனுக்கு முனிசாமி என்று பெயர். ஓர் அச்சு நிலையத்தில் காவலாளி. இரண்டு பேரும் ஒரே சாதி. ஒருவிதத்தில் பார்த்தால் முனிசாமிக்கும் தங்க வேலனுக்கும் பாத்தியம்கூட இருக்கும்போல இருந்தது. . தெருவிலே உண்டான இந்தப் பழக்கம் நீடித்தது. முனிசாமி அடிக்கடி தங்கவேலனோடு பழகினா ன். ஒருநாள் அவன் மெல்ல ஒரு கேள்வியைக் கேட்டான். " தம்பி, உன் வயசிலே நான் ஒரு பெண் குழந்தையைப் பெற்று விட்டேன். நீயும் ஒரு கல்யாணம் பண்ணிக்கொண்டு வாழக்கூடாதா?" என்று கேட்டான். " அதற்குள்ளேயா?" என்று தங்கவேலன் ஆச்சரியம் அடைந்தவனைப் போல எதிர்க்கேள்வி கேட்டான். " ஏன் தம்பி, உனக்கு இருபத்தைந்து இருபத்தாறு வயசு இருக்கும்போலே இருக்கிறது. இந்த வயசில்தான் கல்யாணம் கட்டிக் கொள்ளவேண்டும். வெட்கப்படாமல் சொல். நான் ஒன்று கேட்கிறேன். எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். பதினெட்டு வயசு ஆயிற்று. கண்ணுக்கு நன்றாக இருப்பாள். உன்னைக் கண்டது முதல் நீ நல்ல உழைப்பாளி என்றும், கண்டிப்பானவன் என்றும் தெரிந்து உன்னிடம் அபிமானம் ஏற்பட்டு விட்டது. அதனால் சொல்கிறேன். கட்டிக் கொள்கிறாயா? இல்லை, ஏதாவது முறைப்பெண் ஊரில் இருக்கிறதா?" தங்கவேலனுக்கு அப்படி முறைப்பெண் ஒருத்தியும் இல்லை. ஆனால் அவன் மனசுக்குள் பாக்கியத்தின் மகள் வந்து நின்றாள். ‘என்ன பைத்தியக்காரத்தனம் இது? சண்டை போட்ட வீட்டில் உள்ள பெண்ணைப் பற்றி நினைக்க நமக்கு என்ன உரிமை?’ என்ற நினைவு அடுத்து வந்தது. முனிசாமி எப்படியாவது தன் காரியத்தைச் சாதித்துக் கொள்வதாகத் தீர்மானம் செய்துவிட்டான். மெல்ல மெல்லத் தங்கவேலனை வழிக்குக் கொண்டுவரலானான். “உனக்கோ அப்பன், அம்மா, உறவு ஒட்டு இல்லை. நீ கல்யாணம் பண்ணிக்கொண்டால் நம் வீட்டிலேயே இருக்கலாம். எனக்கும் மகன் யாரும் இல்லை. என் வீட்டுக்கு வருகிறாயா?” என்று கேட்டான். “பார்க்கலாம்” என்று தங்கவேலன் சொன்னான். இரண்டு நாட்களில் பார்த்தேவிட்டான். பார்த்தது மாத்திரம? பார்த்தபோது அவனுக்கு இருந்த மனநிலையை என்னவென்று சொல்வது! திடுக்கிட்டான் என்று சொல்லலாமா? பிரமித்துப் போனான் என்பதா? வெட்கப்பட்டான் என்பதா? ஐயோ, இப்படி ஏன் செய்தோம் என்று இரங்கினானா? இது என்ன உண்மைதானா என்று சந்தேகப்பட்டானா?- இந்த உணர்ச்சிகள் யாவும் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. அவன் உள்ளத்தில் ஒரு பெரும் புயல் அடித்தது. இந்த உணர்ச்சிகள் மாறி மாறிப் பிரசண்ட மாருதமாக வீசின என்று சொல்லலாம். அவன் முன்னே நின்றவள் பொன்னம்மாள்! பாக்கியத்தின் பெண்ணாகிய பொன்னம்மாள்! அவனைக் கொஞ்ச நேரம் பள்ளிக்கூட வாசலிலே நிற்க வைத்தாளே அந்தப் பொன்னம்மாள் தான். ஆனால் வேலையை இழந்தாளே அவளுடைய மகளாகிய பொன்னம்மாள்; திருட்டுக் கையால் வளர்க்கப்பெற்ற பொன்னம்மாள். இவளா இவன் மகள்! “நீங்கள்…” மேலே பேச முடியாமல் அசட் வழிய விழித்தான் தங்கவேலன். “நீ நினைக்கிறது தெரியும், தம்பி. பாக்கியத்தோடு சண்டை போட்டதும் எசமானியம்மாள் அவளை வேலையை விட்டுத் தள்ளினதும் நன்றாகத் தெரியும், தம்பி; அதைப் பற்றித்தானே நீ யோசிக்கிறாய்?” “இல்லை…”" மறுபடியும் அவன் என்னவோ மாதிரி ஞெஞ்ஞெ முஞ்ஞெ என்றான். “அதையெல்லாம் மறந்துவிடு தம்பி. அவள் பண்ணின தப்புத் தப்புதான். அதற்கு இது பிராயச்சித்தம் என்று வைத்துக்கொள்ளேன்” என்று சிரித்தான் முனிசாமி. கல்யாணம் நடந்துவிட்டது. “அவர் முகத்தில் நான் எப்படி விழிக்கிறது? நான் எப்படிப் பேசுகிறது?” என்று கேட்ட பாக்கியத்திற்கு, “நீ அவன் முன்னாலே நின்று பேச வேண்டாமே. மாமியார்க்காரி பேசாமல் மரியாதையோடு இருக்கிறதுதானே நியாயம்?” என்று சொன்னான் முனிசாமி. பங்களாவிலே ஒரு மூலையில் குடிசை போட்டுக் கொண்டு இல்வாழ்வைத் தொடங்கினான் தங்கவேலன். முனிசாமி எப்படி விரோதத்தை மறந்து தனக்குப் பெண் கொடுக்க முன் வந்தான் என்ற புதிரை அவனால் விடுவிக்கவே முடியவில்லை. அவனையே கேட்டுவிடலாம் என்று கூடச் சில சமயம் தோன்றியது. ஆனால் அவன் கேட்கவில்லை. பொன்னம்மாதான் இருக்கிறாளே. அவளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று பொறுத்திருந்தான். குடியும் குடித்தனமுமாக மனைவியோடு வாழத் தொடங்கிய அன்றே அவன் அவளைக் கேட்டு ரகசியத்தைத் தெரிந்து கொண்டான். “அது ஒரு பெரிய கதை!” என்று பீடிகை போட்டுக் கொண்டு அவள் ஆரம்பித்தாள். நடந்தது இதுதான். வேலையை விட்டு விட்டு ஆத்திரத்தோடு வீட்டுக்குப் போனாள் பாக்கியம். அன்று மாலை முனிசாமி வீட்டுக்கு வந்தான். வந்தவுடன், “அந்தப் பயலுக்குச் சரியானபடி புத்தி புகட்டவேண்டும்” என்று அவனிடம் சொன்னாள். அவன் நடந்ததைக் கேட்டான். ஆனால் கோபம் அடைய வில்லை. “உனக்கு வேலை போய்விட்டதே என்று கோபம் வருகிறதா? நீ பண்ணினது தப்புத்தான் என்று எனக்குத் தோன்றுகிறது. தப்புச் செய்தது நீயாக இருக்க, அவனைக் கோபிக்கிறதில் பிரயோசனம் என்ன?” என்று கேட்டான். “நீங்களும் அந்தப் பயலோடு சேர்ந்து கொண்டீர்களா?” என்று ஆத்திரம் பொங்கக் கேட்டாள் பாக்கியம். “இந்தா, வீண் ஆத்திரம் வேண்டாம். உன் சமாசாரம் இருக்கட்டும். நான் சொல்கிற சந்தோஷ சமாசாரத்தைக் கேள்.” “என்ன புதையல் கிடைத்திருக்கிறது?” என்று கோபத்தோடு பேசினாள் அவள். “நிதானமாகக் கேட்டால் சொல்கிறேன். எனக்கு ஐந்து ரூபாய் சம்பளம் உயர்த்தி இருக்கிறார்கள்.” “ஹூம்!” “எங்கள் ஆபிஸில் ஒரு பைண்டர் இருக்கிறான். அவன் புத்தகத்தைத் திருடிக் கொண்டே வந்தான். அதை நான் கண்டுபிடித்து எசமானிடம் சொன்னேன். அவனை வேலையை விட்டே நிறுத்திவிட்டார்கள்; எனக்குச் சம்பளம் கூட்டிப்போட்டார்கள்.” " அதுதான் அப்படிப் பேசுகிறீர்களோ?" என்று அவள் கோபம் குறையாமல் கேட்டாள். அவள் அடிபட்ட புலிபோலச் சீறினாள். தன் கணவனுடைய நேர்மையை நினைத்துப் பார்க்கவில்லை. அவனுக்குச் சம்பள உயர்வு கிடைத்ததை அவள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. தனக்குத் திருட்டுப் பட்டம் கட்டி ஓட்டியவனுக்குத் தண்டனை கொடுக்கவேண்டும் என்ற உணர்வே மேலோங்கி நின்றது. முனிசாமிக்கு இப்போது கோபம் வந்தது. " உனக்கு இப்போது ஒன்றும் விளங்காது. திருட்டுத் தொழில் கேவலமானது. நான் ஆபீஸிலே ஒரு திருடனைக் கண்டுபிடித்தேன். வீட்டிலோ ஒரு திருடியை வைத்துக்கொண்டிருக்கிறேன். அங்கே எனக்குச் சம்பள உயர்வு கிடைக்கிறது. இங்கே வசவு கிடைக்கிறது! நீ புத்தியுடன் தான் பேசுகிறாயா?" பேச்சு வளர்ந்தது. முனிசாமி வளர்த்தவில்லை. வெளியில் எழுந்து போய்விட்டான். ஒரு வாரம் அவர்கள் இருவரும் பேசவில்லை. கணவன் மனைவியருள் இது இயல்பு தானே? பிறகு பாக்கியம் தன் பிழையை உணர்ந்தாள். கணவனிடம் நயமாகப் பேசினாள்; தான் செய்ததற்காக அழுதாள். " ஆத்திரத்திலே ஒன்றும் தெரியவில்லை. உங்களுக்கு உங்கள நேரமையினால் அஞ்சு ரூபாய் உயர்ந்தது. எனக்கு என் திருட்டுத்தனத்தால் வேலையே போய்விட்டது. நான் பொல்லாதவள். உங்கள் அருமையைத் தெரிந்து கொள்ளாத பேய்" என்று சொல்லி வருந்தினாள். அவள் வேறு வீட்டைப் பிடித்துக்கொண்டு வேலை செய்யத் தொடங்கினாள். அந்தவீட்டுக் குழந்தையைத்தான் பொன்னம்மா அன்று பள்ளிக்கூடத்துக்கு அழைத்து வந்தாள். இந்தக் கதையைக் கேட்டான் தங்கவேலன். “உன்னுடைய அம்மா மனசு மாறினதைத்தானே சொன்னாய்? உன் அப்பா என்மேல் வலை வீசினது ஏன்?” என்று கேட்டான். “அதுவா? என் அப்பாவே சொன்னார். அதையும் சொல்கிறேன்” என்று அந்த வரலாற்றையும் சொன்னாள் பொன்னம்மா. * * * திருட்டைத் தான் கண்டு பிடித்தமையால் தனக்குச் சம்பள உயர்வு கிடைத்த நினைவோடு, தங்கவேலன் செய்கையையும் நினைத்தபோது முனிசாமிக்கு அந்த இளைஞனிடம் மதிப்பு உண்டாயிற்று. ஒரு நாள் அவன் அந்தப் பங்களாவின் வாசலில் நின்று, தங்கவேலனைப் பார்த்தான். அப்போது தங்கவேலன் தோட்டத்தில் ஒரு பாத்தியை வெட்டிக்கொண்டிருந்தான். உடம்பில் வேர்வை வழிய அவன் உழைப்பில் ஈடுபட்டிருந்தபோது முனிசாமி கவனித்தான். அந்தக் கோலத்தில் அவனுடைய சுறுசுறுப்பும் உடல்வன்மையும் உழைப்பும் முனிசாமிக்குப் புலப்பட்டன. அவனிடம் பின்னும் மதிப்பு உண்டாயிற்று. அதற்குப் பிறகுதான் மெல்ல மெல்ல அவனைச் சிநேகிதம் செய்துகொண்டான். அவன் மனைவியிடமும் தங்கவேலனைப் பற்றி உயர்வாகப் பேசித் தன் எண்ணத்திற்குச் சம்மதிக்கச் செய்தான். “அதெல்லாம் சர்; அன்றைக்குப் பள்ளிக்கூடத்து வாசலில், அது ஏனோ என்று சொல்லிவிட்டு ஓடினாயே! அப்போது என்னைப் பார்த்தாயோ?” என்று பழங்கதையைச் சொன்ன பொன்னம்மாவைக் கேட்டான் தங்க வேலன். “நீங்கள்தாம் வெட்கம் கெட்டுப்போய் என்னை விழித்து விழித்துப் பார்த்தீர்களே! வயசுப் பெண்ணை அப்படிப் பார்க்கலாமா? அதற்குப் பயந்து கொண்டுதான் நான் ஓடினேன்.” “என்மேல் உனக்கு அப்போது கோபம இல்லையா?” “நான் எப்போதும் அப்பாவினுடைய கட்சி!” என்று தன் வழியைச் சுருட்டினாள் அந்த மடமங்கை. எசமானி அம்மாள் அவனைத் தனியாகச் சந்தித்த பொது வேடிக்கையாகக் கேட்டாள். “எண்டா, தங்கவேல், திருட்டுக்கை என்று சொல்லி வேலையை விட்டுத் தள்ளின வள் மகளைக் கட்டிக் கொண்டாயே! உனக்கு வெட்கமாக இல்லை? திருடி மகள் திருடியாக இருக்கமாட்டாளா?” எசமானியம்மாளுக்குப் பிரியமான வேலைக்காரன் அவன். அந்த அபிமானத்தினாலேதான் அவள் அப்படி வேடிக்கை யாகக் கேட்டாள். அதற்குத் தங்கவேலன். “ஆமாம் அம்மா, இவளும் பெரிய திருடிதான்!” என்றான். “என்ன! எதைத் திருடினாள்?” “என் மனசை!” என்று சொல்லித் தங்கவேலன் சிரித்தான். புதிய வீடு “என்ன பளமை அடிச்சுக்கிட்டே இருக்கியே; நாளைக்கு ஆடிப் பதினெட்டு; கொமரீசுபரரை மறந்துட்தியா, புள்ளே? அரிசி, பருப்பு, காய் எல்லாம் வச்சிருக்கியா?” என்று கேட்டான் மாரப்பக் கவுண்டன். “இன்னிக்குத்தான் புதுமை பேசறியே. எல்லாத்தையும் பாக்குக் கடிக்கிற நேரத்திலே சேத்துடமாட்டேனா?” என்று பெருமிதத்துடன் கூறினாள் பழனியாயி. வருஷத்துக்கு ஒரு முறை அவர்கள் காவேரிக்கு நீராடச் செல்வார்கள். கொங்கு வேளாளக் கவுண்டர்கள் அவர்கள். காவிரியாறு அவர்கள் ஊரிலிருந்து இருபத்திரண்டு மெயில் தூரத்தில் இருக்கிறது. மோகனூர் என்ற ஊருக்குப் போய், அங்குள்ள காவிரியில் நீராடிவிட்டுக் காவிரிக்கரையில் இருக்கும் அசலதீபேசுவரரையும் மதுகரவேணி யம்மையையும் தரிசித்து வருவது அவர்கள் வழக்கம். அசலதீபேசுவரர் என்றா சொன்னேன்? அது, அந்த ஊர்க்காரர்களும் புராணமும் சொல்லும் பேர். ஆனால் நம்முடைய கவுண்டருக்கு அவரைக் குமரீசுவரர் என்று சொன்னால்தான் தெரியும். ஆராய்ச்சிக்காரர்கள் அதைக் கேட்டு ஒரு புதிய விஷயத்தைக் கண்டுபிடித்தார்கள். “மோகனூருக்குக் குமரி என்பது பழம் பெயர். அதனால் சுவாமிக்குக் குமரீசுவரர் என்ற பெயர் வந்திருக்கிறது. ‘கொங்குதண் குமரித்துறை’ என்று அப்பர் சுவாமிகள் பாடியிருப்பது இந்தக் குமரித் துறையைத்தான்” என்று தங்கள் அறிவுப் பயணத்தைத் தொடங்கினார்கள். அதைப்பற்றிய கவலை இங்கே நமக்கு எதற்கு? கொங்கு வேளாளர்கள் வேட்டையாடி முயல்களையும் நரிகளையும் கொன்று அவற்றைக் கையில் பிடித்துக் கொண்டு கூட்டமாக வருவார்கள். பல ஊர்களிலிருந்து வருவார்கள். வண்டிகளில் மனைவி மக்களை ஏற்றிவிட்டு ஆடவர்கள் நடந்தே வருவார்கள். வந்து ஆடிப் பதினெட்டன்று காவிரியில் நீராடிக் குமரீசுவரரைத் தரிசித்து இன்புறுவார்கள். காவிரிக் கரையிலேயே வண்டியை நிறுத்தி விட்டு, அருகில் மூன்று கல்லைக் கூட்டி அவர்களுடைய வீட்டுப் பெண்கள் சமையல் செய்வார்கள். அந்த உணவை உண்டு அன்று இரவு அங்கே தங்கி மறுநாள் விடியற் காலையில் வண்டியேறிப் போய்விடுவார்கள். சிலர் குடத்தில் காவிரி நீரை எடுத்துக்கொண்டு அதன் மேல் மாவிலைக் கொத்தைச் செருகித் தலையில் வைத்துக் கொண்டு கூட்டமாகச் செல்வார்கள். காவிரிக்கு வர இயலாமல் ஊரிலே தங்கினவர்களுக்கும் காவிரி நீராடும் புண்ணியம் கிடைக்கவேண்டும் அல்லவா? ஆடிப் பதினெட்டன்று மோகனூர் வீதிகளில் எள் போட்டால் எள் விழாது; அவ்வளவு கூட்டம். வீதியோரத்தில் எல்லாம் கடைகள் வந்திருக்கும்; காதோலை கருகு மணி ஒருபக்கம் குவியலாக இருக்கும்; தேங்காய்பழம் ஒரு புறம; கடலைபொரி ஒரு பக்கம். அன்று ஒரே கோலா கலந்தான். அன்றன்று கூலிவாங்கிப் பிழைக்கும் ஏழைப் பெண்களும் நெடுந்தூரத்திலுள்ள பட்டிக்காட்டிலிருந்து வருவார்கள். வாரந்தோறும் ‘சந்தைக் கெடுவில்’ கூலிவாங்கும்போது ஓரணா, இரண்டணாவைத் தனியே ஒரு மண்குடுவையில் போட்டுவைப்பார்கள்; ஆடிப் பதினெட்டுக்குக் காவிரியில் முழுகத்தான். அப்போதெல்லாம் மேட்டூர் அணை வராத காலம். ஆடி மாதம் இருகரையும் புரண்டு வெள்ளம ஓடும். மோகனூர்க் கோயில் ஆற்றங்கரையிலேயே இருக்கிறது. அங்கே பதினெட்டுப் படிகள் அமைந்திருக்கிறார்கள் பதினெட்டாம் பெருக்கன்று வெள்ளம பதினெட்டாம் படியைத் தொட்டுக் கொண்டு போகும். மாரப்பக் கவுண்டன் நல்லி பாளையத்தில் நாட்டாண்மைக்காரன்; பெரிய பண்ணைக்காரக் கவுண்டன்; அந்த ஊர் ராஜா அவன்தான். அவனைக் கண்டால் ஊராருக்கு ஒரு தனி மரியாதை. யாராவது பேசிக்கொண்டிருப்பார்கள். “என்னப்பா லவுஸூ போடறே?” என்று அவன் குரல் கொடுப்பான். பேச்சுக் கப்சிப் என்று அடங்கிவிடும். அவனுக்கு முன் யாரும் சக்காந்தம் பண்ணமாட்டார்கள். யார் வீட்டில் மொய் எழுதினாலும் அவன் அஞ்சு ரூபாய்க்குக் குறைவாக எழுதமாட்டான். அவனுக்குக் குமரீசுவரிடமும் காவிரித் தாயிடமும் அளவில்லாத அன்பு. வருஷத்துக்கு ஒரு தடவை பதினெட்டாம் பெருக்குக்கு மோகனூர் போவதோடு அவன் நிற்பதில்லை. மற்ற நாட்களிலும் நினைத்தால் போய்க காவிரியில் ஒரு முழுக்குப் போட்டுவிட்டு வருவான். காலையில் எழுந்தால் காட்டுக்குப் போவான். சரியானபடி மழைபெய்து விளைந்தால் கரைவழி விளைச்சல் என்னத்துக்கு ஆகும்? “காட்டு வெள்ளாமை எக்கச்சக்கமாக வெளைஞ்சால் கரைவழி வெள்ளாமை என்ன செய்யும்?” என்பான் கவுண்டன். புன்செய் நிலங்களைக் காடு என்று சொல்வது அந்தப் பக்கத்து வழக்கம். யாரோ தஞ்சாவூர்க்காரர் ஒரு நாள் நல்லிபாளையம் வந்திருந்தார். அவருக்கு அந்த ஊர்ப் பேச்சு விளங்கவில்லை. “கவுண்டர் எங்கே?” என்று கேட்டார். “காட்டுக்குப் போய்விட்டார்” என்று பதில் கிடைத்தது. ‘காடு வா வா என்கிறது, வீடு போ போ என்கிறது’ என்ற பழமொழி அப்போது அவர் நினைவுக்கு வந்தது. ‘காட்டுக்கா? இந்த அம்மாள் என்ன சொல்கிறாள்?’ எனத் தயங்கினார். மறுபடியும், “எங்கே?” என்று கேட்டார். “காட்டுக்கு” என்றே விடை வந்தது. அவர் நின்று நிதானித்து, மேலும் சில கேள்விகளைக் கேட்டு விடை தெரிந்துகொண்ட பிறகுதான் காடு என்பது சுடுகாடு அல்ல என்று தெளிந்தார்! “வருவதற்கு நேரமாகுமா?” என்று கேட்டார். “நீச்சத் தண்ணியைக் குடிச்சுட்டுப் போச்சு. உருமத்துக்கு முந்தி வந்துவிடும்.” அவருக்குப் பேச்சுப் புரியவில்லை. தமிழ் மொழிக்குள்ளே எத்தனை வேறுபாடு! ஊருக்கு ஊர் வித்தியாசம். மாரப்பக் கவுண்டன் காலையில் காட்டுக்குப் போவதைப் பற்றிச் சொல்லும்போது இந்தப் பேச்சு விசித்திரம் ஞாபகத்துக்கு வந்தது. அது கிடக்கட்டும். மாரப்பனுடைய மனைவியான பழனியாயி அவனுக்கு ஏற்றவள். அவள் வெகுளி. கண்டதை அப்படியே நம்பி விடும் வெள்ளை உள்ளம் படைத்தவள். கல்யாணம் ஆகி ஆறு வருஷமாகியும் இன்னும் குழந்தை இல்லை. “உனக்குக் குமரீசுவரரிடம் பக்தி இல்லை. இருந்தால் உன்னைக் கண் திறந்து பார்ப்பார். உன் வயிறு திறக்கும்” என்று அவன் சொல்வான். “நான், என்ன செய்யட்டும்?” என்று அவள் கேட்பாள். “நான் மோகனூர் போகும்போது எல்லாம் நீயும் வா. காவிரியில் முழுகினால் கர்மம் தொலையும்” என்பான். வீட்டிலே வேலையை வைத்துக்கொண்டு திடீரெனப் பெண் பிள்ளை ஊர்ப் பிரயாணம் புறப்படமுடியுமா? காட்டில் இருந்து வேலை பார்ப்பாள். சாளையிலே சமையல் பண்ணிச் சாப்பிடுவதும் உண்டு. 2 ஒரு சமயம் மாரப்பன் குமரீசுவரரைத் தரிசனம் செய்ய வந்திருந்தான், அப்போது நவராத்திரி காலம். கோயிலில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருடைய மண்டகப்படி அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அலங்காரம் செய்தார்கள். சாமண்ணா குருக்கள் மகாகெட்டிக்காரர். வருகிறவர்களிடம் நயமாகப் பேசி மேலும் மேலும் ஈசுவர கைங்கரியத்தில் ஈடுபடும்படி செய்து விடுவார். அடிக்கடி வரும் மாரப்பக் கவுண்டனுக்கும் அவருக்கும் பழக்கம் உண்டாயிற்று. கவுண்டன் ஒரு நல்ல புள்ளி என்று அவர் தெரிந்துகொண்டார். “என்ன கவுண்டரே, நீங்கள் நவராத்திரி உற்சவத்தைப் பார்த்ததில்லையே? ராத்திரி இருந்து அம்பிகையின் அலங்காரத்தைப் பாருங்கள்” என்று குருக்கள் சொன்னார். அன்று இரவு மாரப்பன் அங்கே தங்கினான். என்ன அலங்காரம்! என்ன அழகு! அவன் அந்தக் கோலாகலத்தில் மெய்மறந்து நின்றான். அந்தக் காலத்தில் கோயிலில் சின்ன மேளம் பிரமாதமாக இருக்கும். நவராத்திரியில் சதிர்க்கச்சேரி நடைபெரும்; பாரதநாட்டியந்தான். அதைப் பார்ப்பதற்காக நெடுந்தூரத்திலிருந்து ஜனங்கள் வருவார்கள். கரூரிலிருந்தும் நாமக்கல்லிலிருந்தும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் வருவார்கள். மாரப்பக் கவுண்டன் சதிர்க் கச்சேரியைக் கண்டு கண்டு வியந்தான். அதுவரையில் சதிரையே அவன் பார்த்ததில்லை. மறுநாள் மோகனூரை விட்டுப் புறப்படவே அவனுக்கு மனசு வரவில்லை. அன்றும் இருந்து, நவராத்திரி உற்சவத்தைப் பார்த்துக்கொண்டு புறப்பட்டான். ஊரில் உள்ள காடு அவனை வா, வா, என்று அழைத்தது! ஊருக்குப்போய் அங்கு உள்ளவர்களிடமேல்லாம் அந்தக் ‘கங்காட்சியைப்’ பற்றிச் சொன்னான். தாசி ஆடுவதை வருணித்தான். “பொம்பளையா வெட்கங் கெட்டுப்போய் வந்து ஆடினா?” என்று பழனியாயி கேட்டாள். “சாமிக்கு முன்னாலேதானே ஆடறாள்?” என்றான் மாரப்பன். பழனியாயிக்கு ஆது சம்மதமாகவே படவில்லை. மானத்தை விட்டு ஆடுவதாவது! “நீ வந்து பாத்தாத் தெரியும்” என்றான் கவுண்டன். அடுத்த வருஷம் மாரப்பன் தன் மனைவியையும் அழைத்துக்கொண்டு போயிருந்தான். இரண்டு மூன்று நாள் தங்கினான். சாமியைப் பார்த்துப் பார்த்து இன்புற்றாள் பழனியாயி. ஆனால் சதிர்க்கச்சேரியைக் கண்டபோது அது அவளுக்கு ரசிக்கவே இல்லை. ‘என்ன மானங்கெட்ட வேசம்!’ என்றே அவளுக்குத் தோன்றியது. பூங்காவனம் என்பவள் அன்று நடனம் ஆடினாள். ஊர்ப் பெரிய தனக்காரர்கள் அவளுக்கு அவ்வப்போது வெற்றிலையில் பணம் வைத்து நீட்டினார்கள். அவள் ஒய்யாரமாக நடந்து வந்து, தன் கை அவர்கள் கையில் படும்படி குனிந்து வாங்கி ஒரு புன்சிரிப்பை அவர்கள்மேல் வீசிவிட்டுப் பின்நோக்கி நடந்து சென்றாள். “என்ன கவுண்டரே, சும்மா இருக்கிறீரே. இந்தாரும் வெற்றிலைபாக்கு!” என்று குருக்கள் தூண்டி விட்டார். அவருக்கு நாலுபேர் உற்சவத்தில் உற்சாகமாகக் கலந்துகொள்ள வேண்டுமென்ற ஆசை. பூச்சுற்றி முகஸ்துதி செய்து காரியத்தைச் சாதித்துக் கொள்வதில் பெரிய பேர்வழி. மாரப்பனுக்குத் தைரியம் உண்டாகவில்லை. அவன் உள்ளத்தில் ஏதோ ஒரு வகையான அருவருப்புத் தட்டியது. “பெரியவர்கள் இருக்கும்போது, நான் எதற்கு?” என்று மெல்ல இழுத்தான். குருக்கள் விடவில்லை. “என்ன ஐயா, ஏமாற்றுகிறீர்? ஊரில் பெரிய பண்ணைக்காரர். அஞ்சு ரூபாயாக வைத்துக் கொடும்” என்றார். அவருக்கும் கவுண்டருக்கும் இப்போது பழக்கம் அதிகம் அல்லவா? தர்மசங்கடமான நிலையில் மாட்டிக்கொண்டான் மாரப்பன். அடுத்த ஐந்து நிமிஷத்தில் யந்திரம்போல அவன் கைகள் வேலை செய்தன. குருக்கள் வெற்றிலை பாக்கைத் தந்தார். மாரப்பன் இரண்டு ரூபாயை எடுத்து அதில் வைத்துக் கொண்டான். பூங்காவனம் அன்ன நடை போட்டு வந்தாள். மாரப்பனிக்கு முன் குனிந்தாள். குஷிப் பேர்வழியாகிய குருக்கள் அந்தச் சமயம் பார்த்து, “அவரை விடாதே; சரியான புள்ளி!” என்று வேடிக்கையாகச் சொன்னார். பூங்காவனம் மாரப்பன் கையில் உள்ள வெற்றிலையைவாங்கக் கையை நீட்டினாள். கையும் கையும்….! வீல் என்று குரல் கேட்டது; பெண்கள் இருந்த இடத்திலிருந்துதான். பழனியாயி ஆவேசம் வந்தவளைப் போலக் கத்தினாள். அந்த அப்பாவி, தன் கணவனைத் தன்னிடமிருந்து பறித்துக் கொள்வதற்காகச் சூழ்ச்சி நடப்பதாக எண்ணிக்கொண்டாள், பாவம்! நாகரிகம் தெரியாதவள்! ஒழுக்கமே உயிர் என்று எண்ணி வளர்ந்தவள்! வெற்றிலையும் பணமும் கீழே விழுந்தன. பூங்காவனம் திடுக்கிட்டுப் பின்னே பார்த்தாள். அங்கிருந்தவர்கள் யாவரும் பழனியாயியையே பார்த்தார்கள். எல்லோரும், “என்ன? என்ன?” என்று கேட்டார்கள். அவள் மலங்க மலங்க விழித்தாள். மாரப்பன் எழுந்து அவளிடம் சென்று என்ன என்று கேட்டான். “உடனே ஊருக்குப் புறப்படவேண்டும்” என்று அவள் சொன்னாள். குருக்கள் விபூதியும் குங்குமமும் கொண்டுவந்து கொடுத்தார். “ஏதவது பயந்த கோளாறாக இருக்கும். இங்கே அம்பிகை மதுமரவேணிக்குச் சக்தி அதிகம். எந்தப் பேயாக இருந்தாலும் இங்கே ஆட்டம் போட்டாக வேண்டும்” என்றார். பாவம்! அங்கே எல்லோருக்கும் முன்பு ஆடிய ஒரு பேயைக் கண்டுதான் அவள் பயந்துபோனாள் என்பதைக் குருக்கள் உணரவில்லை; மற்றவர்களும் உணரவில்லை! மறு நாள் காலையில் இருவரும் ஊர்போய்ச் சேர்ந்தார்கள். சேர்ந்தவுடன் பழனியாயி மாரப்பன் காலில் விழுந்து அழுதாள். “நீ எவுத்துக்கிட்டுப் போனாலும் ரவைக்கு இங்கே வந்துவிடவோணும். குமரீசுபரன் சாக்கியாகச் சத்தியம் பண்ணித் தா!” என்று கேட்டாள். “பைத்தியமே, உனக்கு ஏன் இந்தச் சந்தேகம் எல்லாம். நான் உன்னை விட்டு எங்கே போகப் போகிறேன்?” என்றான் மாரப்பன். “ஆம்பிள்ளைகளை மயக்க வெக்கங்கெட்ட பொம் பிள்ளைகள் செய்யற மோசடியைக் கண்ணாலே கண்டப்பறம் எனக்குப் பயம் பிடிச்சுக்கிட்டுது” என்று அவள் அழுதாள். அவன் அவளுக்குச் சத்தியம் பண்ணித் தந்தான். நாம் நினைக்கிறபடியே எல்லாம் நடக்கின்றனவா? அடுத்த முறை மாரப்பக் கவுண்டன் மோகனூர் போயிருந்தபோது எதிர்பாராதபடி அங்கே தங்கநேர்ந்தது. அங்கு கோயிலில் ஒரு விசேஷமும் இல்லை. குருக்கள் பெண்ணுக்குக் கல்யாணம். மாரப்பக் கவுண்டனுக்கும் அழைப்பு அனுப்பியிருந்தார். கவுண்டன் முகூர்த்த நேரத்துக்கு வர முடியவில்லை. பின்புதான் வந்தான். குருக்கள், “ராத்திரி இருந்து, சாப்பிட்டுவிட்டுத்தான் போகவேண்டும்” என்று வற்புறுத்தினார். சாப்பிட்டுவிட்டுப் போக முடியுமா? இரவு தங்கிவிட்டு மறுநாள்தான் போகவேண்டும். இரவு தங்குவதா? பழனியாயிக்குச் செய்து கொடுத்த சத்தியம் என்ன ஆவது? அவனுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. குருக்களிடம் இந்த ரகசியத்தை அம்பலப்படுத்துவதா? ‘இன்று ஒரு நாளில் என்ன வந்துவிடப் போகிறது?’ என்று ஒருவிதமாகச் சமாதானம் செய்துகொண்டு அங்கே தங்கினான். மறு நாள் ஊர்போய்ச் சேரும்போது காலை மணி பத்துக்குமேல் ஆகிவிட்டது. பழனியாயி தரையில் படுத்துக் கொண்டிருந்தாள். இரவில் தூக்கம் இல்லை. அவனுக்காகக் காத்திருந்து காத்திருந்து சாப்பிடவும் இல்லை. ஊனும் உறக்கமும் ஒரு வேளை இல்லாமற் போவதால் ஒன்றும் ஆபத்து வந்துவிடாது. அவள் மனத்தில் இருந்த சந்தேகப் பேய் ஒவ்வொரு கணத்தையும் ஒவ்வொரு யுகமாகப் பெருக்கிக் காட்டியது. அதோடு இப்போது மற்றொரு கவலையும் அவளுக்கு உண்டாகிவிட்டது. குமரீசுவரர் ஆணையாகச் சத்தியம் செய்து கொடுத்தானே? அதை யல்லவா இப்போது மீறிவிட்டான்? சாமி குற்றம் வேறு; அவனுக்குத் தண்டனை கிடைக்குமே! எல்லாம் சேர்ந்து அவளை ஒரே திகிலுருவாக்கி விட்டன. மாரப்பன் வீட்டுக்குள் நுழைந்தானோ இல்லையோ, அவன் காலடியில் வந்து விழுந்தாள்; அப்படியே மூர்ச்சையாகி விட்டால். வெள்ளையுள்ளம்! சைத்தியோபசாரம் செய்து அவளை எழுப்புவதற்குள் அவனுக்கு என்ன என்னவோ நினைவுகள் வந்துவிட்டன. இனி இவளை விட்டுப் பிரிவதே இல்லை, பகலிலுங் கூட’ என்று தீர்மானம் செய்து கொண்டான். அப்படியானால் காவிரி நீராட்டு? குமரீசுவரர் தரிசனம்? மாரப்பக் கவுண்டனுக்குப் புதிய யோசனை தோன்றியது. தானும் அந்தக் கரை வழிக்கே போய் இருந்துவிட்டால்? மோகனூரில் கொங்குவேளாளர் யாரும் குடியிருக்கவில்லை. வெளியூர்களில்தான் இருந்தார்கள். அயலில் சிறிய கிராமங்களில் இருந்தார்கள். தானும் அருகே ஓரிடத்தில் இருக்கலாம். உறவினர் இல்லாத இடத்தில் ஒரு பெண் பிள்ளைக்காகப் போய் இருந்து கொண்டு, பழைய ஊரை மறப்பதா? அவன் உள்ளத்தே போராட்டம் எழுந்தது. பழனியாயிடம் அவன் தன் விருப்பத்தைத் தெரிவித்தான். மோகனூருக்குக் கிழக்கே ஒரு மைல் தூரத்தில் தனியே வீடு கட்டிக்கொண்டு வாழலாம் என்று தீர்மானித்தான். வேறு யாரவது உறவினர் வந்தாலும் வீடு கட்டிக் கொடுத்து விடலாம் என்றும் சொன்னான். பழனியாயிருக்குத் தன் ஊரை விட்டுச் செல்ல விருப்பம் இராதென்றுதான் அவன் நினைத்தான். ஆனால் அவள் உடனே ஒப்புக்கொண்டுவிட்டாள். “எனக்கும் இனிமேல் காட்டுக்குப் போய் வேலை செய்ய முடியாது. தனியாக உன்னோடு இருப்பது நல்லதுதான். அம்மாவை ஊரிலிருந்து வரவழைத்துக்கொள்கிறேன்” என்று அவள் சொன்னபோதுதான் மாரப்பக் கவுண்டனுக்கு உண்மை விளங்கியது. அவளை அனாவசியமாகப் பீதியடையச் செய்துவிட்டோமே என்று வருந்தினான். பண்ணைக்காரர் ஊரை விட்டுப் போகப் போகிறார் என்பதை அறிந்த ஊர்க்காரர்கள் மிகவும் வருத்தம் அடைந்தார்கள். “நான் அடிக்கடி இங்கே வருகிறேன். இங்கே ஆறு மாசம், அங்கே ஆறு மாசம் தங்கினால் போகிறது” என்று கவுண்டன் சொன்னான். 3 மோகனூருக்கு அருகில் ஒரு பெரிய வெளி இருந்தது. அதை விலைக்கு வாங்கினான். வீட்டைக் கட்டிக் கொண்டான். உடன் வந்த இரண்டு மூன்று பேர்களுக்கும் வீடு கட்டிக் கொடுத்தான். அந்த இடத்துக்கு ஒரு பேர்வைக்க எண்ணியபோது பழனியாயி, “குமரிப்பாளையம் என்று வையுங்கள்” என்றாள்; “குமரீசுவரன் கண்கண்ட சாமி; அவன் பேர் இருக்கணும்” என்று விளக்கினாள். ஒரு மாதம் ஆன பிறகு அவள் தன் தாய் வீட்டுக்குப் போனாள். “ஆம்பிளைக் குளந்தையோடு பெத்துப் பொளைச்சு வா” என்று பெரியவர்கள் ஆசீர்வாதம் செய்தார்கள். மாரப்பக் கவுண்டன் அவளைத் தன் மாமியார் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு நல்லிபாளையம் போனான். மனைவி வந்த பிறகு குமரிபாளையம் போகலாமென்று தன் பழைய வீட்டிலேயே தங்கியிருந்தான். பழனியாயிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குமரிப்பாளையத்தில் இப்போது வர வர வீடுகள் அதிகமாகிக் கொண்டு வருவதாகக் கவுண்டன் சொன்னான். வேறு ஊர்க் கவுண்டர்கள் சிலரும் அந்த இடத்தில் வீடு கட்டிக் கொண்டார்கள். குழந்தைக்கு ஆறு மாதம் ஆகும் வரையில் கவுண்டன் மாமனார் வீட்டுக்கும் நல்லிபாளையத்துக்கு மாகப் போய் வந்துகொண்டிருந்தான். குமரீசுவரரைத் தரிசித்து விட்டு நல்லிபாளையம் போவான். குமரி பாளையத்தில் உள்ள வீட்டில் யாரோ வேலைக்காரனை வைத்திருந்தான். குழந்தையும் கையுமாகப் பழனியாயி வந்தாள். முதலில் குமரீசுவரரைத் தரிசித்துக் கொண்டு குமரிபாளையாம் அழைத்துப் போனான் மாரப்பன். அவள் போன அன்று அங்கே கொட்டுமேளம் பிரமாதமாக இருந்தது. யாரோ புதிதாக வீடு கட்டிக்கொண்டு குடி வந்தார்களாம். “யார் அது? எந்த ஊர்க்காரர்?” என்று கேட்டன மாரப்பக் கவுண்டன். “மோகனூர்த் தாசி பூங்காவனமாம். இந்த ஊருக்குக் குடி வந்து விட்டாளாம்” என்றான் வேலைக்காரன். மாரப்பன் அப்படியே பிரமித்து நின்றுவிட்டான்! ------------------------------------------------------------------------ This file was last updated on 15 June 2012. Feel free to send corrections to the webmaster.