[] குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்     வெளியிடு : FreeTamilEbooks.com   அட்டைப்படம் : த.சீனிவாசன் - tshrinivasan@gmail.com  மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி- sraji.me@gmail.com    உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0  கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.                                                                                பொருளடக்கம் குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் 2  முதற் பகுதி 5  ஒருநாள் நிகழ்ச்சி 5  இரண்டாம் பகுதி 24   விருந்தோம்பல் 24  மூன்றாம் பகுதி 59  1. திருமணம் 59  2. அவள் அண்டையில் அவன் 61  3. தந்தையார் இருவருக்கும் சண்டை 67  4. எதிர்பாராத இடைஞ்சல் 69  5. பகை நண்பாயிற்று 70  6. மணமகன் வீட்டில் மணம் 73  7. மணமக்கள் கருத்துரைகள் 75  8. திருமண அழைப்பு 77  9. முதல்நாள் இரவு 78  10. மணவாழ்த்தும் வழியனுப்பும் 80  11. சோலையிற் காதலர் 83  12. இன்பத் துறை 84  நான்காம் பகுதி 85  மக்கட் பேறு 85  ஐந்தாம் பகுதி 117   முதியோர் காதல் 117                          []     Literary Works of Bharathidaasan ( Kanakasubbaratnam, 1891-1964) IV : kutumba vilakku (in Tamil Script, unicode/utf-8format) புரட்சி கவிஞர் பாரதிதாசன் (கனகசுப்பரத்னம், 1891 - 1964) படைப்புகள்   IV: குடும்ப விளக்கு    Etext Preparation (input) : Mr. Ben Arasu and Mrs. Suhitha Arasu, Chicago, USA Proof-reading: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India Etext Preparation (webpage) : Kumar Mallikarjunan This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding. To view the Tamil text correctly you need to set up the following:  i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha, Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer  and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).  ii)Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape >4.6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.  . In case of difficulties send an email request to kalyan@geocities.com © Project Madurai 1999 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.tamil.net/projectmadurai You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.  முதற் பகுதி ஒருநாள் நிகழ்ச்சி அகவல் காலை மலர்ந்தது இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை, இரவு போர்த்த இருள் நீங்கவில்லை. ஆயினும் கேள்வியால் அகலும் மடமைபோல், நள்ளிரவு மெதுவாய் நடந்துகொண் டிருந்தது. தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த கலப்பென இருள்தன் கட்டுக் குலைந்தது. புலர்ந்திடப் போகும் பொழுது, கட்டிலில் மலர்ந்தன அந்த மங்கையின் விழிகள். அவள் எழுந்தாள் தூக்கத் தோடு தூங்கி யிருந்த ஊக்கமும் சுறுசுறுப் புள்ளமும், மங்கை எழுந்ததும் எழுந்தன இருகை வீசி; தெளிவிலாக் கருக்கலில் ஒளிபடும் அவள்விழி குளத்து நீரில் குதிக்கும் கெண்டைமீன்! கோலமிட்டாள் சின்ன மூக்குத் திருகொடு தொங்கும் பொன்னாற் செய்த பொடிமுத் தைப்போல் துளிஒளி விளக்கின் தூண்டு கோலைச் செங்காந் தள்நிகர் மங்கை விரலால் பெரிது செய்து விரிமலர்க் கையில் ஏந்தி, அன்னம் வாய்ந்த நடையடு, முல்லை அரும்பு முத்தாய்ப் பிறக்கும், கொல்லை யடைந்து குளிர்புதுப் புனலை மொண்டாள்; மொண்டு, முகத்தைத் துலக்கி உண்டநீர் முத்தாய் உதிர்த்துப் பின்னும் சேந்துநீர் செங்கை ஏந்தித் தெருக்கதவு சார்ந்ததாழ் திறந்து, தகடுபோற் குறடு கூட்டி, மெருகு தீட்டிக் கழுவி, அரிசிமாக் கோலம் அமைத்தனள்; அவளுக்குப் பரிசில் நீட்டினான் பகலவன் பொன்னொளி! காலைப் பாட்டு இல்லத்தினிலே எகினாள்; ஏகி யாழின் உறையினை எடுத்தாள்; இசையில் 'வாழிய வையம் வாழிய' என்று பாவலர் தமிழிற் பழச்சுவை சேர்த்தாள். தீங்கிலாத் தமிழில் தேனிசைக் கலவைபோய்த் தூங்கிய பிள்ளைகள், தூங்கிய கணவனின் காதின் வழியே கருத்தில் கலக்கவே, மாதின் எதிர்அவர் வந்துட் கார்ந்தனர். அமைதி தழுவிய இளம் பகல், கமழக் கமழத் தமிழிசை பாடினாள். வீட்டு வேலைகள் பறந்தனள் பச்சைப் பசுங்கிளி; மாடு கறந்தனள்; வீட்டை நிறம் புரிந்தனள்; செம்பு தவளை செழும்பொன் ஆக்கினாள்; பைம்புனல் தேக்கினாள், பற்ற வைத்த அடுப்பினில் விளைத்த அப் பம் அடுக்கிக் குடிக்க இனிய கொத்து மல்லிநீர் இறக்கிப் பாலொடு சர்க்கரை இட்டு நிறக்க அன்பு நிறையப் பிசைந்த முத்தான வாயால் முழுநிலா முகத்தாள் "அத்தான்" என்றனள்; அழகியோன் வந்தான். கணவனுக்கு உதவி வந்த கணவன் மகிழும் வண்ணம் குளிர்புனல் காட்டிக் குளிக்கச் சொல்லி, துளிதேன் சூழும் களிவண்டு போல அன்பனின் அழகிய பொன்னுடல் சூழ்ந்து, மின்னிடை துவள, முன்னின் றுதவி, வெள்ளுடை விரித்து மேனி துடைத்தபின், குழந்தைகட்குத் தொண்டு " பிள்ளைகாள்" என்றனள்! கிள்ளைகள் வந்தனர்! தூய பசும்பொன் துளிகளைப் போன்ற சீயக் காய்த்தூள் செங்கையால் அள்ளிச் சிட்டுக் காட்டியும் சிறுகதை சொல்லியும் தொட்டுத் தேய்த்துத் துளிருடல் நலங்காது நின்ற திருக்கோலப் பொன்னின் சிலைகட்கு நன்னீ ராட்டி நலஞ்செய்த பின்னர் பூவிதழ் மேற்பனி தூவிய துளிபோல் ஓவியக் குழந்தைகள் உடலில்நீர்த் துளிகளைத் துடைத்து நெஞ்சில் சுரக்கும் அன்பை அடங்கா தவளாய் அழகுமுத் தளித்தே, "பறப்பீர் பச்சைப் புறாக்களே"என, அவர் அறைக்குள் ஆடைபூண் டம்பலத் தாடினார்.      காலையுணவு அடுக்களைத் தந்தி அனுப்பினாள் மங்கை; "வந்தேன் என்று மணாளன் வந்தான்; "வந்தோம் என்று வந்தனர் பிள்ளைகள். பந்தியில் அனைவரும் குந்தினர் வரிசையாய். தழைத்த வாழைத் தளிரிலை தன்னில் பழத்தொடு படைத்த பண்டம் உண்டனர்; காய்ச்சிய நறுநீர் கனிவாய்ப் பருகினர். தய்தான் வாத்திச்சி நேரம் போவது நினையா திருக்கையில் பாய்ச்சிய செங்கதிர் பட்டது சுவர்மேல்; அவள்கண்டு, காலை "ஆறுமணி" என உரைத்தாள்; கணவன், "இருக்கா" தென்றான். உண்டுண் டுண்டென ஒலித்தது சுவரின் அண்டையில் இருந்த அடுக்கும் மணிப்பொறி. பாடம் சொல்லப் பாவை தொடங்கினாள். அவள் வாத் திச்சி அறைவீடு கழகம்; தவழ்ந்தது சங்கத் தமிழ்ச்சுவை; அள்ளி விழுங்கினார் பிள்ளைகள்; "வேளையா யிற்றே! பள்ளிக்குப் பிள்ளைகள் எழுங்கள்" என்றனள், எழுந்தனர்; சுவடியை ஒழுங்குற அடுக்கி, உடை அணிவித்துப் புன்னை இலைபோல் புதையடிச் செருப்புகள் சின்னவர் காலிற் செருகிச் சிறுகுடை கையில் தந்து, கையடு கூட்டித் தையல், தெருவரை தானும் நடந்து, பள்ளி நோக்கித் தள்ளாடி நடக்கும் பிள்ளைகள் பின்னழகு வெள்ளம் பருகிக் கிளைமா றும்பசுங் கிளிபோல் ஓடி அளவ ளாவினாள் ஆள னிடத்தில்.  கடைக்குப்போகும் கணவன் கடைக்குச் செல்லக் கணவன், அழகிய உடைகள் எடுத்தே உடுக்க லானான். "கழுத்துவரை உள்ள கரிய தலைமயிர் மழுக்குவீர் அத்தான்"என்று மங்கை சொன்னாள். நறுநெய் தடவி நன்றாய்ச் சீவி முறுக்கு மீசையை நிறுத்திச் சராயினை இட்டிடை இறுக்கி எழிலுறத் தொங்கும் சட்டை மாட்டத் தன்கையில் எடுத்தான். பொத்தலும் கிழிசலும் பூவை கண்டாள்; தைத்தாள் தையற் சடுகுடு பொறியால். ஆண்டநாள் ஆண்டு மாண்ட செந்தமிழ்ப் பாண்டிய மன்னன் மீண்டது போல, உடுத்திய உடையும் எடுத்த மார்பும் படைத்த கணவனைப் பார்த்துக் கிடந்தாள். வெற்றிலைச் சுருள் ஒற்றி வைத்த ஒளிவிழி மீட்டபின், வெற்றிலைச் சுருள் பற்றி ஏந்தினாள்; கணவன் கைம்முன் காட்டி, அவன்மலர் வாயில் தரத்தன் மனத்தில் நினைத்தாள். தூயவன் அப்போது சொன்ன தென்னெனில், "சுருளுக்கு விலைஎன்ன? சொல்லுவாய்?" என்ன; "பொருளுக்குத் தக்கது போதும்" என்றாள். "கையிற் கொடுப்பதைக் காட்டிலும் சுருளை வாயிற் கொடுத்திடு மங்கையே" என்றான். சேயிழை அன்பாய்ச் செங்கை நீட்டினாள். குடித்தனப் பயனைக் கூட்டி எடுத்து வடித்த சுவையினை வஞ்சிக் களித்தல்போல் தளிர்க்கைக்கு முத்தம் தந்து, குளிர்வாய் வெற்றிலை குழைய ஏகினனே!  அறுசீர் விருத்தம் அவளின் காதலுள்ளம்  உணவுண்ணச் சென்றாள், அப்பம் உண்டனள், சீனி யோடு தணல்நிற மாம் பழத்தில் தமிழ்நிகர் சுவையைக் கண்டாள்! மணவாளன் அருமை பற்றி மனம்ஒரு கேள்வி கேட்க, 'இணையற்ற அவன் அன்புக்கு நிகராமோ இவைகள்' என்றாள். பிள்ளைகள் நினைவு பள்ளிக்குச் சென்றி ருக்கும் பசங்களில் சிறிய பையன் துள்ளிக் குதித்து மான்போல் தொடர்ந்தோடி வீழ்ந்தானோ, என்(று) உள்ளத்தில் நினைத்தாள்;ஆனால் மூத்தவன் உண்டென் றெண்ணித் தள்ளினாள் அச்சந் தன்னை! தாழ்வாரம் சென்றாள் நங்கை! வீட்டு வேலைகள் ஒட்டடைக் கோலும் கையும் உள்ளமும் விழியும் சேர்த்தாள்; கட்டிய சிலந்திக் கூடு, கரையானின் கோட்டை யெல்லாம் தட்டியே பெருக்கித் "தூய்மை" தனியர சாளச் செய்து, சட்டைகள் தைப்ப தற்குத் தையலைத் தொட்டாள் தையல்! தையல் வேலை ஆடிக்கொண் டிருந்த தையற் பொறியினை அசைக்கும் ஓர்கை; ஓடிக்கொண் டிருக்கும் தைத்த உடையினை வாங்கும் ஓர்கை! பாடிக்கொண் டேயிருக்கும் பாவையின் தாம ரைவாய்; நாடிக்கொண் டேயிருக்கும் குடித்தன நலத்தை நெஞ்சம்! மரச்சாமான்கள் பழுது பார்த்தல் முடிந்தது தையல் வேலை. முன்உள்ள மரச்சா மான்கள் ஒடிந்தவை, பழுது பார்த்தாள்; உளியினால் சீவிப் பூசிப் படிந்துள்ள அழுக்கு நீக்கிப் பளபளப் பாக்கி வைத்தாள். கொல்லூற்று வேலை இடிந்துள்ள சுவர் எடுத்தாள்; சுண்ணாம்பால் போரை பார்த்தாள். மாமன் மாமிக்கு வரவேற்பு நாத்தியார் வீடு சென்ற நன்மாமன், மாமி வந்தார். பார்த்தனள்;உளம் மகிழ்ந்தாள். பறந்துபோய்த் தெருவில் நின்று வாழ்த்திநல் வரவு கூறி வணக்கத்தைக் கூறி, "என்றன் நாத்தியார், தங்கள் பேரர் நலந்தானா மாமி" என்றாள். வண்டிவிட் டிறங்கி வந்த மாமியும், மாமனும், கற் கண்டொத்த மரும கட்குக் கனியத்த பதிலுங் கூறிக் கொண்டுவந் திட்ட பண்டம் குறையாமல் இறக்கச் சொன்னார். வண்டியில் இருந்த வற்றை இறக்கிடு கின்றாள் மங்கை. மாமி மாமன் வாங்கி வந்தவை கொஞ்சநாள் முன்வாங் கிட்ட கும்ப கோணத்துக் கூசா, மஞ்சள்,குங் குமம், கண்ணாடி, மைவைத்த தகரப் பெட்டி, செஞ்சாந்தின் சீசா,சொம்பு, வெற்றிலைச் சீவற் பெட்டி, இஞ்சியின் மூட்டை ஒன்றே, எலுமிச்சைச் சிறிய கோணி, புதியஓர் தவலை நாலு, பொம்மைகள்,இரும்புப் பெட்டி மிதியடிக் கட்டை,பிள்ளை விளையாட மரச்சா மான்கள்; எதற்கும்ஒன் றுக்கி ரண்டாய் இருக்கட்டும் வீட்டில் என்று குதிரினில் இருக்கும் நெல்லைக் குத்திட மரக்குந் தாணி; தலையணை, மெத்தைக் கட்டு, சல்லடை, புதுமு றங்கள், எலிப்பொறி, தாழம் பாய்கள்; இப்பக்கம் அகப்ப டாத இலுப்பெண்ணெய், கொடுவாய்க் கத்தி, இட்டலித் தட்டு, குண்டான், கலப்பட மிலாநல் லெண்ணெய்; கைத்தடி,செந்தா ழம்பூ; திருமணம் வந்தால் வேண்டும் செம்மரத் தினில்முக் காலி; ஒருகாசுக் கொன்று வீதம் கிடைத்த பச்சரிசி மாங்காய்; வரும்மாதம் பொங்கல் மாதம் ஆதலால் விளக்கு மாறு; பரிசாய்ச் சம்பந்தி தந்த பாதாளச் சுரடு, தேங்காய்; மூலைக்கு வட்டம் போட்டு முடித்தமே லுறையும், மற்றும் மேலுக்கோர் சுருக்குப் பையும் விளங்கிடும் குடை, கறுப்புத் தோலுக்குள் காயிதத்தில் தூங்கும்மூக் குக்கண் ணாடி, சேலொத்த விழியாள் யாவும்  கண்டனள் செப்ப லுற்றாள்: மருமகள் வினா "இவையெல்லாம் வண்டிக் குள்ளே இருந்தன என்றால் அந்த அவைக்களம் தனிலே நீவிர் எங்குதான் அமர்ந்திருந்தீர்? சுவைப்புளி அடைத்து வைத்த தோண்டியின் உட்பு றத்தில் கவர்ந்துண்ணும் பூச்சி கட்கும் கால்வைக்க இடமிராதே?" மாமி விடை என்றனள்; மாமி சொல்வாள்: "இவைகளின் உச்சி மீதில் குன்றுமேல் குரங்கு போல என்றனைக் குந்த வைத்தார்! என்தலை நிமிர, வண்டி மூடிமேல் பொத்த லிட்டார்; உன்மாமன் நடந்து வந்தார். ஊரெல்லாம் சிரித்த" தென்றாள்! மாமன் பேச்சு "ஊரெல்லாம் சிரிக்க வைத்தேன் என்றாளே உன்றன் மாமி! யாரெல்லாம் சிரித்து விட்டார்? எனஉன்றன் மாமியைக் கேள்; பாரம்மா பழுத்த நல்ல பச்சைவா ழைப்ப ழங்கள்! நேரிலே இதனை யும்பார் பசுமாட்டு நெய்யின் மொந்தை! வண்டியில் எவ்வி டத்தில்  வைப்பது? மேன்மை யான பண்டத்தைக் காப்ப தற்குப் பக்குவம் தெரிந்தி ருந்தால் முண்டம்இப் படிச் சொல்வாளா? என்னதான் முழுகிப் போகும் அண்டையில் நடந்து வந்தால்?" என்றனன், அருமை மாமன். மருமகள் செயல் மாமனார் கொண்டு வந்த பொருளெலாம் வரிசை செய்து, தீமையில் லாத வெந்நீர் அண்டாவில் தேக்கி வைத்துத் தூய்மைசேர் உணவு தந்து, துப்பட்டி விரித்த மெத்தை ஆம்,அதில் அமரச் சொல்லிக் கறிவாங்க அவள் நடந்தாள். கடையிலே செலவு செய்த கணக்கினை எழுதி வைத்தாள்; இடையிலே மாமன் "விக்குள் எடுத்தது தண்ணீர் கொஞ்சம் கொடு"எனக் கொடுத்தாள். பின்னர்க் கூடத்துப் பதுமை ஓடி அடுக்களை அரங்கில், நெஞ்சம் அசைந்திட ஆட லானாள். என்ன கறி வாங்கலாம்? கொண்டவர்க் கெது பிடிக்கும் குழந்தைகள் எதை விரும்பும் தண்டூன்றி நடக்கும் மாமன் மாமிக்குத் தக்க தென்ன உண்பதில் எவரு டம்புக்(கு) எதுவுத வாதென் றெல்லாம் கண்டனள், கறிகள் தோறும் உண்பவர் தம்மைக் கண்டாள்! பிள்ளைகள் உள்ளம் எப்படி? பொரியலோ பூனைக் கண்போல் பொலிந்திடும்; சுவை மணக்கும்! "அருந்துமா சிறிய பிள்ளை" எனஎண்ணும் அவளின் நெஞ்சம்; இருந்தந்தச் சிறிய பிள்ளை இச்சென்று சப்புக் கொட்டி அருந்தியே மகிழ்ந்த தைப்போல் அவள்காதில் ஓசை கேட்கும்! அத்தானுக்கு எது பிடிக்கும்? பொருளையும் பெரிதென் றெண்ணாள், பூண்வேண்டாள்; தனைம ணந்தோன் அருளையே உயிரென் றெண்ணும் அன்பினாள், வறுத்தி றக்கும் உருளைநற் கிழங்கில் தன்னை உடையானுக் கிருக்கும் ஆசைத் திருவுளம் எண்ணி எண்ணிச் செவ்விள நகைசெய் கின்றாள். எதிர்கால நினைவுகள் இனிவாழும் நாள் நினைத்தாள் இளையவர் மாமன் மாமி; நனிஇரங் கிடுதல் வேண்டும்; நானவர்க் கன்னை போல்வேன். எனதத்தான் தனையும் பெற்று வாழ்ந்தநாள் எண்ணும் போதில் தனிக்கடன் உடையேன், நானோர் தவழ்பிள்ளை அவர்கட் கென்றாள். கிழங்கினை அளியச் செய்வாள், கீரையைக் கடைந்து வைப்பாள் கொழுங்காய்ப்பச் சடியே வைப்பாள் கொல்லையின் முருங்கைக் காயை ஒழுங்காகத் தோலைச் சீவிப் பல்லில்லார் உதட்டால் மென்று விழுங்கிடும் வகை முடித்து வேண்டிய எலாம் முடித்தே. முதியவருக்குத் துணை தூங்கிய மாமன் "அம்மா தூக்கென்னை" என்று சொல்ல, ஏங்கியே ஓடி மாமன் இருக்கின்ற நிலைமை கண்டு, வீங்கிய காலைப் பார்த்தாள் "எழுந்திட வேண்டாம்!" என்றாள்; தாங்கியே மருந்து பூசிச் சரிக்கட்டிப் படுக்க வைத்தாள். அவளோர் மருத்துவச்சி நாடியில் காய்ச்சல் என்றே நன்மருந் துள்ளுக் கீந்தாள்; ஓடிநற் பாலை மொண்டு, மருவுலைக் கஞ்சி ஊற்றி, வாடிய கிழவர்க் கீந்தாள்; மாமிக்கோ தலைநோக் காடாம், ஓடிடச் செய்தாள் மங்கை ஒரேபற்றில் நொடிநே ரத்தில். அள்ளி அணைத்தாள் பிள்ளைகளை குழந்தைகள் பள்ளி விட்டு வந்தார்கள்; குருவிக் கூட்டம் இழந்தநல் லுரிமை தன்னை எய்தியே மகிழ்வ தைப்போல்; வழிந்தோடும் புதுவெள் ளத்தை வரவேற்கும் உழவரைபோல், எழுந்தோடி மக்கள் தம்மை ஏந்தினாள் இருகை யாலும்! உடை மாற்றினாள் பள்ளியில் அறிஞர் சொன்ன பாடத்தின் வரிசை கேட்டு, வெள்ளிய உடை கழற்றி, வேறுடை அணியச் செய்தே, உள்வீட்டில் பாட்டன் பாட்டி உள்ளதை உணர்த்தி, அந்தக் கள்ளினில் பிள்ளை வண்டு களித்திடும் வண்ணம் செய்தாள்! தலைவி சொன்ன புதுச்செய்தி அன்றைக்கு மணம் புரிந்த அழகியோன் வீடு வந்தான்; இன்றைக்கு மணம் புரிந்தாள் எனும்படி நெஞ்சில் அன்பு குன்றாத விழியால், அன்பன் குளிர்விழி தன்னைக் கண்டாள்; "ஒன்றுண்டு சேதி" என்றாள்; "உரை"என்றான்; "அம்மா அப்பா வந்தார்"என் றுரைத்தாள், கேட்டு "வாழிய" என்று வாழ்த்தி, "நொந்தார்கள்" என்று கேட்டு நோயுற்ற வகை யறிந்து, தந்தைதாய் கண்டு "உங்கள் தள்ளாத பருவந் தன்னில் நைந்திடும் வண்ணம் நீங்கள் நடந்திட லாமா? மேலும், முதியோர்க்கு ஒக்கநல் லிளமை கண்டீர் கல்விநல் லொழுக்கம் கண்டீர்; மெய்க்காதல் மணமும் பெற்றீர்; இல்லற வெற்றி பெற்றீர்; மக்களைப் பெற்றீர்;வைய வழ்வெலாம் பெற்றீர்; என்னால் எக்குறை பெற்றீர்? இன்னும் ஏனிந்தத் தொல்லை ஏற்றீர்? அதிர்ந்திடும் இளமைப் போதில் ஆவன அறங்கள் செய்து, முதிர்ந்திடும் பருவந் தன்னில் மக்கட்கு முடியைச் சூட்டி, எதிர்ந்திடும் துன்ப மேதும் இல்லாமல் மக்கள், பேரர் வதிந்திடல் கண்டு, நெஞ்சு மகிழ்வதே வாழ்வின் வீடு!" அறிவுக்குத் திருவிளக்கு என்றனன்; தந்தை சொல்வார்: "என்னரும் மகனே, மெய்தான் ஒன்றிலும் கவலை கொள்ளேன் உன்னைநான் பெற்ற தாலே! அன்றியும் உன்பெண் டாட்டி அறிவுக்கோர் திரு விளக்காம், இன்றுநான் அடைந்த நோய்க்கும் நன்மருந் திட்டுக் காத்தாள். செல்லப்பா உணவு கொள்ளச் சிறுவர்கள் தமையும் உண்ணச் சொல்லப்பா!" எனவே, அன்பு சொரிந்திடச் சொல்லி டுந்தன் நல்லப்பா மகிழும் வண்ணம் நல்லதப் பாஎன் றோதி, மெல்லப்பா வைபு ரிந்த விருந்தினை அருந்த லுற்றான். பிள்ளைக்கு அமுது குழந்தைகள் உடனி ருந்து கொஞ்சியே உண்ணு கின்றார் பழந்தமிழ்ப் பொருளை அள்ளிப் படித்தவர் விழுங்குதல் போல்! ஒழுங்குறு கறிகள் தம்மில் அவரவர் உளம றிந்து வழங்கினாள் அள்ளி அள்ளி, வழிந்திடும் அன்புள் ளத்தாள். பாடு என்றான் அனைவரும் உண்டார் அங்கே! கூடத்தில் அமர்ந்தி ருந்தார். சுனைவரும் கெண்டைக் கண்ணாள் துணைவனை அணுகி, "நீவிர் எனைவரும் படிஏன் சொல்ல வில்லை" என்றாள் சிரித்தே! 'தினைவரும் படிஇல் லார்க்கும் திருநல்கும் தமிழ்பா' டென்றான். யாழ் எடுத்தாள் குளிர்விழி இளநகைப் பூங் குழலினாள் குந்தினாள்; தன் தளிருடல் யாழ் உடம்பு தழுவின; இரு குரல்கள் ஒளியும் நல்வானும் ஆகி உலவிடும் இசைத்தேர் ஏறித் "தெளிதமிழ்" பவனி வந்தாள் செவிக்கெலாம் காட்சி தந்தாள். கவிதை பாய்ச்சினாள் உள்ளத்தில் கவிதை வைத்தே  உயிரினால் எழுப்பி னாள்;அவ் வெள்ளத்தில் சுவையைக் கோத்தாள்;  வீணையின் அளவிற் சாய்த்தாள்; தெள்ளத்தெ ளிந்த நீர்போல்,  செந்தமிழ்ப் பொருள்போல் நெஞ்சப் பள்ளத்தில் கோடைத் துன்பம்  பறந்திடப் பாய்ச்சி விட்டாள். உயிரெல்லாம் தமிழில் தொக்கின வீடெல்லாம் இசையே; வீட்டில்  நெஞ்செலாம் மெருகே; நெஞ்ச ஏடெலாம் அறிவே; ஏட்டின்  எழுத்தெலாம் களிப்பே; அந்தக் காடெலாம் ஆடும் கூத்தே;  காகங்கள் குருவி எல்லாம் மாடெல்லாம் இவ்வா றானால்  மனிதர்க்கா கேட்க வேண்டும்? கடையை மறந்தீரோ? இடையினில் தனை மறந்தே  இருந்ததன் கணவன் தன்னைக் "கடையினை மறந்து விட்டீர்  கணக்கர்காத் திருப்பார்" என்று நடையினில் அன்னம் சொன்னாள்;  நல்லதோர் நினைவு பெற்ற உடையவன் "ஆம் ஆம்" என்றான்;  ஆயினும் "உம் உம்" என்றான். மனைவியிடம் பிச்சை கேட்டான் "கண்ணல்ல; நீதான் சற்றே  கடைக்குப் போய்க் கணக்கர் தம்மை உண்பதற் கனுப்பி, உண்டு  வந்தபின் வா; என் னாசைப் பெண்ணல்ல" என்று சொல்லிச்  சோம்பலால் பிச்சை கேட்டான். கண்ணல்ல, கருத்தும் போன்றாள்,  "சரி"என்று கடைக்குச் சென்றாள். கடையின் நடைமுறை மல்லியை அளப்பார்; கொம்பு  மஞ்சளை நிறுப்பார்; நெய்க்குச் சொல்லிய விலை குறைக்கச்  சொல்லுவார்; கொள் சரக்கின் நல்லியல் தொகை கொடுப்பார்;  சாதிக்காய் நறுக்கச் சொல்வார் வெல்லம்என் றொருகு ழந்தை  விரல்நீட்டும் கடைக்கு வந்தாள். அவள் வாணிபத் திறமை களிப்பாக்குக் கேட்பார்க் கீந்து  களிப்பாக்கிக் கடனாய்த் தந்த புளிப்பாக்கி தீர்ந்த பின்பு  கடனாகப் புதுச்ச ரக்கை அளிப்பார்க்குப் பணம்அ ளித்தாள்;  அதன்பின்னர் கணக்கர் எல்லாம் கிளிப்பேச்சுக் காரி யின்பால்  உணவுண்ணக் கேட்டுப் போனார்.   இளகிய நெஞ்சத் தாளை இளகாத வெல்லம் கேட்பார்; அளவாக இலாபம் ஏற்றி  அடக்கத்தை எடுத்து ரைப்பாள்! மிளகுக்கு விலையும் கூறி  மேன்மையும் கூறிச் சற்றும் புளுகாமல் புகன்ற வண்ணம்  புடைத்துத்தூற் றிக்கொ டுப்பாள். கணவனிடம் கணக்கு ஒப்புவித்தாள்  கொண்டவன் வந்தான்; கண்கள்  குளிர்ந்திடக் கண்டாள்: "அத்தான் கண்டுள்ள கணக்கின் வண்ணம்  சரக்குகள் கடன்தந் தார்க்குத் தண்டலும் கொடுத்தேன்; விற்று  முதலினைத் தனியே வைத்தேன்; உண்டங்கு வேலை" என்றே  உரைத்தனள்; வீடு சென்றாள். வீட்டறை மருத்துவமைனை படுக்கையில் மாம னாரைப்  பார்த்தனள்; "காலில் இன்னும் கடுக்கை தீர்ந்திலதோ" என்று  கனிவோடு கேட்டு டுக்கும் உடுக்கையும் மாற்று வித்து,  மட்டான உணவு தந்து தடுக்கினி லிருந்து தூக்கிச்  சாய்வு நாற்காலி சேர்த்தாள். மற்றும் வீட்டு வேலை வரிசையாய்க் காய வைத்த  வடகத்தை, வற்றல் தன்னைப் பெரிசான சாலில் சேர்த்தாள்;  பிணைந்துள்ள மாடு கன்றுக்(கு) உரியநல் தீனி வைத்தாள்;  உறிவிளக் குகள்து டைத்தாள்; வரும்மக்கள் எதிர்பார்த் திட்டாள்;  வந்தனர்; மகிழ்ச்சி பெற்றாள். கடற்கரையில் சிற்றுண வளித்தாள்; பின்பு  திரைகடற் கரையை நாடிப்  பெற்றதன் மக்கள் சூழப்  பெருவீதி ஓர மாகப் பொற்கொடி படர்ந்தாள் தேனைப்  பொழிந்திடு பூக்க ளோடு! வற்றாத வெள்ளக் காட்டின்  மணற்கரை ஓரம் வந்தாள்! கடற்கரைக் காட்சி அக்கரை செலும்உள் ளத்தை  அளாவிடக் கிடந்த வில்லும், இக்கரை அலையின் ஆர்ப்பும்,  இவற்றிடைச் செவ்வா னத்தின் மிக்கொளி மிதக்கும் மேனி  விரிபுனற் புரட்சிப் பாட்டும், "ஒக்கவே வாழ்க மக்காள்"  என்பதோர் ஒலியும் கேட்டாள்; காட்சி இன்பம் குளிர்புனல் தெளிவி லெல்லாம்  ஒளிகுதி கொள்ளும்; வெள்ளத் துளிதொறும் உயிர்து டிக்கும்;  தொன்மைசேர் கடல், இவ் வைய வெளியெலாம் அரசு செய்யும்  விண்ணெலாம் ஒளியைச் செய்யும்! களியெலாம் காணக் காணக்  கருத்தெலாம் இன்பம் பொங்கும்! கடற் காற்று கடலிடைப் புனலில் ஆடிக்  குளிரினிற் கனிந்த காற்றை உடலிடைப் பூசு கின்ற  ஒலிகடற் கரையின் ஓரம் அடர்சிற கன்னப் புட்கள்  அணிபோல அலைந டக்கும் நடையடு நடந்து வீடு   நண்ணினாள் மக்க ளோடு. இரவுக்கு வரவேற்பு மேற்றிசைக் கதிர்ப்ப ழத்தை  விருந்துண்டு, நீல ஆடை மாற்றுடை யாய் உடுத்து  மரகத அணிகள் பூண்டு, கோற்கிளை ஒடுங்கும் புட்கள்  கோட்டிடும் இறகின் சந்தக் காற்சிலம் பசையக் காதற்  கரும்பான இரவு தன்னை; திருவிளக் கேந்தி வந்து  தெருவினில் வரவேற்கின்றாள். உருவிளக் கிடவீட் டுக்குள்  ஒளிவிளக் கனைத்தும் ஏற்றி ஒருபெருங் கலயத் துள்ளே   உயர்நறும் புகை எழுப்பிப் பெரியோரின் உள்ளம் எங்கும்  பெருகல்போல் பெருகச் செய்தாள். அத்தானை எதிர்பார்க்கின்றாள் கட்டுக்குள் அடங்கா தாடிக்  களித்திடும் தனது செல்வச் சிட்டுக்கள், சுவடிக் குள்ளே  செந்தமிழ்த் தீனி உண்ண  விட்டுப்பின் அடுக்க ளைக்குள்  அமுதத்தை விளைவு செய்தாள்; எட்டுக்கு மணி அடிக்க   அத்தானை எதிர்பார்க் கின்றாள் எண்சீர் விருத்தம் கட்டில் அழகு சரக்கொன்றை தொங்ககவிட்ட பந்த லின்கீழ்  தனிச்சிங்கக் கால்நான்கு தாங்கும் கட்டில் இருக்கின்ற மெத்தைதலை யணைகள் தட்டி  இருவீதி மணமடிக்கும் சந்த னத்தைக் கரைக்கின்ற கலையத்துட் கரைத்துத் தென்றல்  கலக்கின்ற சன்னலினைத் திறந்து, நெஞ்சில் சுரக்கின்ற அன்பினால், தெருவில் மீண்டும்  துடிக்கின்றாள் கணவனது வரவு பார்த்தே! அவன் மலை போன்ற செல்வம் பறக்கின்ற கருங்குயிலாள் மீண்டும் வீட்டில்  பழக்குலையைத் தட்டத்தில் அடுக்கிப் பாலைச்  சிறக்கின்ற செம்பினிலே ஊற்றி வைத்துச்   சிரிக்கின்ற முல்லையினைக் கண்ணி யாக்கி, நிறக்கின்ற மணிவிளக்கைச் சிறிது செய்து   நினைக்கின்ற இன்பத்தை நெஞ்ச வீட்டில்  மறைக்கின்ற படிமறைத்து மற்றும் சென்று  மலைபோன்ற செல்வத்தின் வரவு பார்த்தாள். பிள்ளைகட்குப் பரிசு கால்ஒடிந்து போகுமுன்னே அவனும் வந்தான்;  கதையன்று கேட்டாயா? எனவுட் கார்ந்தான். மேலிருந்து "பிள்ளைவளர்ப் புப்போ ட்டிக்கு  விடைவந்து சேர்ந்த" தென்றான்; எவ்வா றென்றாள். "ஆல்ஒடிந்து வீழ்ந்தாலும் தோள்கள் தாங்கும்  அப்படி நாம் பிள்ளைகளை வளர்த்த தாலே, பாலொடுசர்க் கரைகலந்த இனிய சொல்லாய்  பரிசுநமக் குத்தந்தார் பாராய்!" என்றான். பழங்காலக் கிழங்கள் அறையினிலே படுத்திருந்த பெற்றோர் காதில்  அதைப் போடத் துவக்கினான். "வளர்ப்புப் போட்டி அறியோமே எம்நாளில்" என்றார் பெற்றோர்.  அப்படி என்றாலின்ன தெனவி ளக்கிக் "குறையின்றி வளர்ப்பவர்கள் பரிசு கொள்ளல்"  கூறினான். "குழந்தைகளை விசாரித் துத்தான் அறிந்தாரோ?" எனக் கேட்டார் அக்கா லத்தார்;  அதன்விரிவும் கூறியபின் மகிழ்வு கொண்டார். அடுக்களையிற் பிள்ளைகள் பரிசுதனைப் பெற்ற பிள்ளை, ஓடி வந்தான்;  பலருமே சூழ்ந்தார்கள்; குருவிக் கூட்டம் பெரிசாக, இன்மொழிகள் செவிபி ளக்கப்   பெருமானும் பெருமாட்டி தானும், அன்பின் அரசாட்சி செலுத்தியபின், எல்லா ரும்போய்  அடுக்களையிற் கூடாரம் அடித்து விட்டார்; ஒருபெரும்போர்க் களம்புகுந்தார், உணவைத் தூக்கி  'ஓடிப்போ டா' என்றார்; "பசி"ப றந்தான். குழந்தைகள் தூங்கியபின் அவன்பாடிக் கொண்டிருந்தான் அறைவீட் டுக்குள்  அருமையுள்ள மாமனார் மாமி யார்க்கும், உவந்தருள உணவிட்டுக் கடன் முடித்தாள்;  உட்பக்கத் தறைநோக்கி அவரும் போனார்; குவிந்திருக்கும் சுவையுணவு தானும் உண்டாள்;  கொக்கரிக்கும் நெஞ்சுக்குத் துணிவு கூறி, அவிழ்ந்துவரும் நிலாஒளியால் இதழ்கள் மூடும்  அல்லிப்பூ விழிகள்குழந் தைகள் மூட. கதவைத் தாழிட்டாள் கண்டுபடுக் கைதிருத்தி உடைதிருத்திக்   காற்றில்லாப் போதினிலே விசிறி வீசி, வண்டுவிழி திறக்குமொரு குழந்தை, "தண்ணீர்  வை" என்னும்; ஒன்றுதலை தூக்கிப் பார்க்கும்; பண்டிதர்கள் பழங்கதையின் ஓட்டைக் கெல்லாம்  பணிக்கையிடல் போல்அனைத்தும் தணிக்கை செய்தே ஒண்பசு,நற் கன்றுக்கு வைக்கோல் ஈந்தே  உட்கதவு, வெளிக்கதவின் தாழ்அ டைத்தாள். கட்டிலண்டை மங்கை தொண்டையினில் ஒன்றுமே அடைக்க வில்லை;  துணைவனவன் சிறுகனைப்புக் கனைக்க லுற்றான்; அண்டையிலே மங்கைபோய் "அத்தான்" என்றாள்.  அத்தானா தூங்கிடுவான்? "உட்கார்" என்றான். திண்தோளில் சந்தனத்தைப் பூசு கின்றாள்;  சேயிழைக்கு முல்லைமலர் சூட்டு கின்றான். கண்டான்!கண் டாள்! உவப்பின் நடுவிலே,"ஓர்  கசப்பான சேதியுண்டு கேட்பீர்" என்றாள்! பொதுத்தொண்டு செய்தோமா? "மிதிபாகற் காய்கசக்கும்; எனினும் அந்த   மேற்கசப்பின் உள்ளேயும் சுவைஇ ருக்கும்; அதுபோலத் தானேடி! அதனாலென்ன?  அறிவிப்பாய் இளமானே" என்றான் அன்பன்; அதிகாலை தொடங்கிநாம் இரவு மட்டும்  அடுக்கடுக்காய் நமதுநலம் சேர்ப்ப தல்லால், இதுவரைக்கும் பொதுநலத்துக் கென்ன செய்தோம்?  என்பதைநாம் நினைத்துப்பார்ப் பதுவு மில்லை. வீட்டுத் தொண்டா பொதுத் தொண்டு? "இன்றைக்குக் கறிஎன்ன? செலவு யாது?  ஏகாலி வந்தானா? வேலைக் காரி  சென்றாளா? கொழுக்கட்டை செய்ய லாமா?  செந்தாழை வாங்குவமா? கடைச் சரக்கை ஒன்றுக்கு மூன்றாக விற்ப தெந்நாள்?  உன்மீதில் எனக்காசை பொய்யா? மாடு குன்றுநிகர் குடம் நிறையக் கறப்ப துண்டா?  கொடுக்கலென்ன? வாங்கலென்ன? இவைதாம் கண்டோம். தன்னலத்தால் என்ன நடக்கும்    "தமிழரென்று சொல்லிக்கொள் கின்றோம் நாமும்;  தமிழ்நாட்டின் முன்னேற்றம் விரும்பு கின்றோம்; எமதென்று சொல்கின்றோம் நாடோ றுந்தான்;  எப்போது தமிழினுக்குக் கையா லான  நமதுழைப்பை ஒருகாசைச் செலவு செய்தோம்?  நாமிதனை என்றேனும் வாழ்நாள் தன்னில், அமைவாகக் குந்திநினைத் தோமா? இல்லை;  அனைவருமிவ் வாறிருந்தால் எது நடக்கும்?" பெரும்படியான தொண்டு செய்துள்ளோம் கரும்படியின் சாறுநிகர் மொழியாள் இந்தக்  கனிந்தமொழி சொன்னவுடன் அவன்உ ரைப்பான்; "வரும்படிவீ தப்படிநான் தரும்ப டிக்கு  வாக்களித்த படிகணக்கர் திங்கள் தோறும் கரம்படி வீதித்தமிழர் கழகத் தார்கள்  கடைப்படியை மிதித்தவுடன் எண்ணி வைப்பார் பெரும்படியாய்ச் செய்ததுண்டு; படிக்க ணக்கைப்  பேசிவிட்டாய் கண்டபடி" என்று சொல்ல. தமிழ் படிக்க வேண்டும் எல்லோரும் "அப்படியா! அறியாத படியால் சொன்னேன்;  அந்தமிழர் படிப்படியாய் முன்னேற் றத்தை எப்படியா யினும்பெற்று விட்டால் மக்கள்  இப்படியே கீழ்ப்படியில் இரார்க ளன்றோ? மெய்ப்படிநம் அறிஞரின் சொற்படிந டந்தால்,  மேற்படியார் செப்படி வித்தை பறக்கும். முற்படில் ஆகாததுண்டா? எப்ப டிக்கும்  முதற்படியாய்த் தமிழ்படிக்க வேண்டும்" என்றாள். தமிழ்நாடு தலைதூக்க உயிரையும் தருவேன் "இழந்தபழம் புகழ்மீள வேண்டும் நாட்டில்,  எல்லோரும் தமிழர்களாய் வாழ வேண்டும். வழிந்தொழுகும் சுவைத்தமிழே பெருக வேண்டும்.  மாற்றலர்கள் ஏமாற்றம் தொலைய வேண்டும். விழுந்ததமிழ் நாடுதலை தூக்க என்றன்  உயிர்தனையே வேண்டிடினும் தருவேன்" என்றான். "பழம்இடுவேன் சர்க்கரைப்பால் வார்ப்பேன் உங்கள்  பண்பாடும் வாய்திறப்பீர் அத்தான்" என்றாள். அன்றன்று புதுமை "அன்றிலடி நாமிருவர் பழமும் பாலும்  ஆருக்கு வேண்டுமடி! என்றன் ஆசைக்  குன்றத்திற் படர்ந்தமலர்க் கொடியே, மண்ணில்  குவிந்திருக்கும் சுவையுள்ள பொருள்கள் எல்லாம் ஒன்றொன்றும் மறுநாளே பழமை கொள்ளும்;  ஒன்றொன்றும் சிலநாளில் தெவிட்டிப் போகும்; அன்றன்று புதுமையடி, தெவிட்ட லுண்டோ?  ஆருயிரே நீகொடுக்கும் இன்பம்" என்றான். இரவுக்கு வழியனுப்பு விழா நள்ளிரவின் அமைதியிலே மணிவி ளக்கும்  நடுங்காமல் சன்னலுக்குள் புகுந் தென்றல்  மெல்லஉடல் குளிரும்வகை வீசா நிற்கும்;  வீணையில்லை காதினிலே இனிமை சேர்க்கும்; சொல்லரிதாய். இனிதினிதாய் நாழி கைபோம்;  சுடர்விழிகள் ஈரிரண்டு, நான்கு பூக்கள், புல்லிதழிற் போய்ஒடுங்கும்; தமைம றந்து   பூரிப்பார் நலம்பாடி இரவு செல்லும்.                          இரண்டாம் பகுதி விருந்தோம்பல்   சிந்துக் கண்ணி தலைவன் கடைக்குச் சென்றான் அன்பு மணவாளன்  ஆன வுணவருந்திப் பின்பு, மனைவிதந்த   பேச்சருந்தித்-தன்புதுச் சட்டை யுடுத்துத்  தனிமூ விரற்கடையில் பட்டை மடித்த   படியணிந்து-வட்டநிலைக் கண்ணாடி பார்த்துக்  கலைந்த முடியதுக்கிக் "கண்ணேசெல் கின்றேன்  கடைக்"கென்றான்-பெண்வாய்க் கடைவிரித்துப் புன்னகைப்புக்   காட்டி "நன்" றென்றாள்; குடைவிரித்துத் தோள்சாய்த்துக்   கொண்டே-நடை விரித்தான். தலைவி விருந்தினரை வரவேற்றாள் தன்னருமை மக்கள்  தமிழ்க்கழகம் தாம்செல்லப் பின்னரும் ஐயன்செல்லப்  பெண்ணரசி-முன்சுவரில் மாட்டி யிருந்த   மணிப்பொறி "இரண்டென்று" காட்டி யிருந்ததுவும்  கண்டவளாய்த்-தீட்டிச் சுடுவெயிலில் காயவைத்த   சோளம் துழவி உடல்நிமிர்ந்தாள் கண்கள்  உவந்தாள்-நடைவீட்டைத் தாண்டி வரும்விருந்தைத்  தான்கண்டாள் கையேந்திப் பூண்ட மகிழ்வால்  புகழேந்தி-வேண்டி "வருக!அம் மாவருக!  ஐயா வருக! வருக! பாப்பா தம்பி"  யென்று-பெருகன்பால் பொன்துலங்கு மேனி  புதுமெருகு கொள்ள,முகம் அன்றலர்ந்த செந்தா  மரையாக-நன்றே வரவேற்றாள்; வந்தவரின்  பெட்டி படுக்கை அருகில் அறைக்குள்  அமைத்தாள்-விரைவாக  அண்டாவின் மூடி  அகற்றிச்செம் பில்தண்ணீர் மொண்டுபுறந் தூய்மை  முடிப்பிரென்று-விண்டபின் சாய்ந்திருக்க நாற்காலி  தந்தும்வெண் தாழையினால் வாய்ந்திருக்கும் பாய்விரித்தும்  மற்றதிலே-ஏய்ந்திருக்க  வெள்ளையுறை யிட்டிருக்கும்  மெத்தை தலையணைகள் உள்ளறையில் ஓடி  யெடுத்துதவி-அள்ளியே தேன்குழலும் உண்ணத்  தெவிட்டாத பண்ணியமும் வான் குழலாள் கொண்டுவந்து  வைத்தேகி-ஆன்கறந்த  பாலும் பருகும்  படிவேண்டி, வெற்றிலைக்கு நாலும் கலந்து  நறுக்கியகாய்-மேலுமிட்டுச் செந்தாழை, பல்பூக்கள்  பச்சையடு சேர்கண்ணி  வந்தாள் குழல்சூட்டி  மற்றவர்க்கும்-தந்துபின் நின்ற கண்ணாடி  நெடும்பேழை தான்திறந்(து) இன்று மலர்ந்த   இலக்கியங்கள்-தொன்றுவந்த  நன்னூற்கள் செய்தித்தாள்  நல்கி,"இதோ வந்தேன்" என்று சமைக்கும்   எதிர்அறைக்குள்-சென்றவளை விருந்தினர் வரவை மாமன் மாமிக்கு வந்தோர்கள் கண்டு  மலர்வாய் இதழ்நடுங்க, "எந்தாயே எந்தாயே  யாமெல்லாம்-குந்தி விலாப்புடைக்க வீட்டில்இந்த   வேளையுண வுண்டோம் பலாப்பழம்போல் எம்வயிறு  பாரீர்-நிலாப் போலும் இப்போதும் பண்ணியங்கள்  இட்டீர் அதையுமுண்டோம் எப்போதுதான் அமைதி"  என்றுரைக்க-"அப்படியா! சற்றேவிடை தருவீர்  தங்களருந் தோழர்தமைப் பெற்றெடுத்த என்மாமன்  மாமியர்பால்-உற்ற செய்தி சொல்லிவரு வேன்"என்று  தோகை பறந்தோடி மெல்ல "மாமா மாமி   வில்லியனூர்ச்-செல்வர்திரு மாவரச னாரும்  மலர்க்குழவி அம்மாவும் நாவரசும் பெண்ணாள்  நகைமுத்தும்-யாவரும் வந்துள்ளார்" என்றுரைத்தாள்  மாமனார் கேட்டவுடன், மாமன் மாமி மகிழ்ச்சி "வந்தாரா? மிக்க   மகிழ்ச்சியம்மா!-வந்தவரைக் காணவோ கண்டு  கலகலெனப் பேசவோ வீணவா உற்றேன்  விளைவதென்ன! நாணல் துரும்பென்றும் சொல்லவொண்ணா  என்றன் உடம்பை இரும்பென்றா எண்ணுகின்றாய்  நீயும்-திரும்பிப் போய்க் கேட்டுக்கொள் நான்அவரை  மன்னிப்புக் கேட்டதாய் வீட்டுக்கு வந்த  விருந்தோம்பு;-நாட்டிலுறு நற்றமிழர் சேர்த்தபுகழ்  ஞாலத்தில் என்னவெனில், உற்ற விருந்தை  உயிரென்று-பெற்றுவத்தல்; மோந்தால் குழையும்அனிச்   சப்பூ முகமாற்றம் வாய்ந்தால் குழையும்  வருவிருந்தென்(று)-ஆய்ந்ததிரு வள்ளுவனார் சொன்னார்  அதனைநீ எப்போதும் உள்ளத்து வைப்பாய்  ஒருபோதும்-தள்ளாதே! ஆண்டு பலமுயன்றே  ஆக்குசுவை ஊண்எனினும் ஈண்டு விருந்தினர்க்கும்  இட்டுவத்தல்-வேண்டுமன்றோ? வந்தாரின் தேவை  வழக்கம் இவைஅறிக  நந்தா விளக்குன்றன்  நல்லறிவே!- செந்திருவே! இட்டுப்பார் உண்டவர்கள்  இன்புற் றிருக்கையிலே தொட்டுப்பார் உன்நெஞ்சைத்  தோன்றுமின்பம்-கட்டிக் கரும்பென்பார் பெண்ணைக்  கவிஞரெலாம் தந்த  விருந்தோம்பும் மேன்மையினா  லன்றோ?-தெரிந்ததா?" என்றுரைக்க, மாமி  இயம்பலுற்றாள் பின்னர்; மாமி மருமகளுக்கு "முன்வைத்த முத்துத்  தயிரிருக்கும்-பின்னறையில் பண்ணியங்கள் மிக்கிருக்கும்  பழமை படாத  வெண்ணெய் விளங்காய்  அளவிருக்கும்-கண்ணே மறக்கினும் அம்மாவென்(று)  ஓதி மடிப்பால் கறக்கப் பசுக்காத்  திருக்கும்-சிறக்கவே சேலத்தின் அங்காடிச்   சேயிழையார் நாள்தோறும் வேலைக் கிடையில்  மிகக்கருத்தாய்-தோலில் கலந்த சுளைபிசைந்து  காயவைத்து விற்கும் இலந்தவடை வீட்டில்  இருக்கும்-மலிந்துநீர் பாய்நாகர் கோவில்  பலாச்சுளையின் வற்றலினைப் போய்நீபார் பானையிலே  பொன்போலே!-தேய்பிறைபோல் கொத்தவரை வற்றல்முதல்  கொட்டிவைத்தேன்; கிள்ளியே வைத்தவரை உண்டுபின்  வையாமைக்-குத்துன்பம் உற்றிடச்செய்-ஊறுகாய்  ஒன்றல்ல கேட்பாய்நீ; இற்றுத்தேன் சொட்டும்   எலுமிச்சை!-வற்றியவாய் பேருரைத்தால் நீர்சுரக்கும்  பேர்பெற்ற நாரத்தை மாரிபோல் நல்லெண்ணெய்  மாறாமல்-நேருறவே வெந்தயம் மணக்கஅதன்  மேற்காயம் போய்மணக்கும் உந்துசுவை மாங்காயின்  ஊறுகாய்-நைந்திருக்கும் காடி மிளகாய்  கறியோடும் ஊறக்கண் ணாடியிலே இட்டுமேல்  மூடிவைத்தேன்-தேடிப்பார் இஞ்சி முறைப்பாகும்  எலுமிச்சை சர்பத்தும் பிஞ்சுக் கடுக்காய்  பிசைதுவக்கும்-கொஞ்சமா? கீரைதயிர் இரண்டும்  கேடுசெய்யும் இரவில் மோரைப் பெருக்கிடு  முப்போதும்-நேரிழையே சோற்றைஅள் ளுங்கால்  துவள்வாழைத் தண்டில்உறும் சாற்றைப்போ லேவடியத்  தக்கவண்ணம்-ஊற்றுநெய்யை! வாழை இலையின்அடி  உண்பார் வலப்புறத்தில்  வீழ விரித்துக்  கறிவகைகள்-சூழவைத்துத் தண்ணீர்வெந் நீரைத்  தனித்தனியே செம்பிலிட்டு வெண்சோ றிடுமுன்  மிகஇனிக்கும்-பண்ணியமும் முக்கனியும் தேனில்  நறுநெய்யில் மூழ்குவித்தே ஒக்கநின்றே உண்டபின்பால்  சோறிட்டுத்-தக்கபடி கேட்டும் குறிப்பறிந்தும்  கெஞ்சியும் மிஞ்சுமன்பால் ஊட்டுதல்வேண் டும்தாய்போல்  ஒண்டொடியே!-கேட்டுப்போ; எக்கறியில் நாட்டம்  இவர்க்கென்று நீயுணர்ந்தே அக்கறியை மேன்மேலும்  அள்ளிவை-விக்குவதை நீமுன் நினைத்து  நினைப்பூட்டு நீர்அருந்த! ஈமுன்கால் சோற்றிலையில்  இட்டாலும்-தீமையம்மா பாய்ச்சும் பசும்பயற்றுப்  பாகுக்கும் நெய்யளித்துக் காய்ச்சும் கடிமிளகு  நீருக்கும்-வாய்ப்பாகத் தூய சருகிலுறு  தொன்னைபல வைத்திடுவாய் ஆயுணவு தீர்ந்தே  அவர்எழுமுன்-தாயே அவர்கைக்கு நீர்ஏந்தி  நெய்ப்பசை யகற்ற  உவர்கட்டி தன்னை  உதவு-துவைத்ததுகில் ஈரம் துடைக்கஎன   ஈந்து,மலர்ச் சந்தனமும் ஓரிடத்தே நல்கியே  ஒள்இலைகாய்-சேரவைத்து மேல்விசிறி வீசுவிப்பாய்  மெல்லியலே!" என்றுரைத்தாள். தலைவி விருந்தினரிடம் கால்வலியும் காணாக்  கனிமொழியாள்-வேல்விழியை மிக்க மகிழ்ச்சி  தழுவ விடைபெற்றுத் தக்க விருந்தினர்பால்  தான்சென்றே-"ஒக்கும்என் அன்புள்ள அம்மாவே  ஐயாவே, அம்முதியோர் என்பு மெலிந்தார்  எழுந்துவரும்-வன்மையிலார். திங்களை அல்லி  அரும்புவந்து தேடாதோ? தங்கப் புதையல்எனில்  தங்குவனோ-இங்கேழை? பெற்ற பொழுதன்பால்  பெற்றாள்தன் பிள்ளையினைப் பற்றி அணைத்துமுகம்  பார்க்கஅவா-முற்றாளா? தாய்வந்தாள் தந்தைவந்தான்  என்றுரைக்கத் தான்கேட்டால் சேய்வந்து காணும்அவாத்  தீர்வானோ-வாயூறிப் போனாரே தங்களது  பொன்வருகை கேட்டவுடன் ஊன்உறுதி யில்லை  உமைக்கானக்-கூனி வரஇயலா மைக்காக   மன்னிப்புத் தாங்கள் தரஇயலு மாஎன்று  சாற்றி-வருந்தினார்" என்றுரைத்தால் இல்லத்  தலைவி, இதுகேட்டு, தலைவிக்கு விருந்தினர் "நன்றுரைத்தீர் நாங்கள்போய்க்  காணுகின்றோம்"-என்றுரைத்தார். அன்பு விருந்தினர்கள்  அங்கு வருவதனைத் தன்மாமன் மாமியார்பால்  சாற்றியே-பின்னர் அறையை மிகத்தூய்மை  ஆக்கி, அமர  நிறையநாற் காலி  நெடும்பாய்-உறஅமைத்துச் "செல்லுக!நீர்" என்றுரைத்தாள்  செல்வி; விருந்தினர்கள் செல்லலுற்றார் சென்றே  வணக்கமென்று-சொல்லலுற்றார். விருந்தினரைக் கண்ட முதியோர் வந்த விருந்தினர்க்கு  வாழ்த்துரைத்துக் கையூன்றி நொந்த படியெழுந்தார்  நோய்க்கிழவர்-அந்தோ! விருந்தினர் முதியோர்க்கு "படுத்திருங்கள் ஐயா!  படுத்திருங்கள் அம்மா! அடுத்திருந்து பேசல்  அமையும்-கடற்கிணையாம் ஆண்டு பலவும்  அறமே புணையாகத் தாண்டி உழைத்தலுத்துத்  தள்ளாமை-ஈண்டடைந்தீர்! சென்றநாள் என்னும்  செழுங்கடலில் மாப்புதுமை ஒன்றன்பின் ஒன்றாய்  உருக்காட்டி-பின்மறையக் கண்டிருந்த தங்கள்  அடிநிழலில் காத்திருந்து பண்டிருந்த செய்தி  பருகோமோ-மொண்டு மொண்டு! வில்லியனூர் விட்டு  விடியப் புறப்பட்டோம் மெல்லநடக் கும்வெள்ளை  மாட்டினால்-தொல்லை! கறுப்புக்குத் தக்கதாய்க்  காளையன்று வாங்கப் பொறுப்புள்ள ஆளில்லை!  பூட்டை-அறுத்தோடி மூலைக் குளத்தண்டை  முள்வேலந் தோப்பினிலே  காலைப் பரப்பியது  கண்டுபின்-கோல்ஒடித்துக் காட்டிப் பிடித்துவந்து  வண்டியிலே கட்டிநான் ஓட்டிவந்தேன்; இங்கே  உயர்வான நாட்டுப் புடவைபல தேவை  அதனால் புதுவைக் கடைகளிலே வாங்கக்  கருதி-உடன்வந்தேன்" என்றுரைத்துப் பின்னும்  இயம்புகையில், அவ்விடத்தில் தலைவி விருந்துவந்த பெண்ணாளிடம் நின்றிருந்த வீட்டின்  நெடுந்தலைவி-நன்றே விருந்துவந்த பெண்பால்  விரும்பிய வண்ணம் இருந்தொருபால் பேசி  இருந்தாள்-பொருந்தவே. நாவரசும் நகைமுத்தும் நாவரசும் முத்தாள்  நகைமுத்தும் வீதியிலே  பூவரச நீழலிலே  போய்அமர்ந்தார்-மாவரசர் தம்சேதி கூறிப்பின்  தங்களுடல் முன்னைவிடக் கொஞ்சம் இளைப்பென்று  கூறிடவே-"மிஞ்சாமல் முதியவர்தம் பழைய நினைப்பு இன்னும் இருக்குமோ  இளமைப் பருவந்தான்?" என்று கிழவர் இயம்பலுற்றார்-இன்றைக்கு முன்புதைத்த சட்டைக்கு  மூன்றிலொன்று தான்உடம்பு முன்புதைத்த மூங்கில்தான்   என்என்பு-மின்னுதளிர் மாவிலைபோல் மேனி  வளவளத்துப் போயிற்றே பாவில் ஐந்துபாடி  மகிழுதற்கும்-நாவிலையே மாடிப் படியேறும்  வாய்ப்பில்லை பேரர்களை ஓடி அணைக்க   உறுதியில்லை-தேடிவரும் தங்களைப் போன்றோர்க்குத்  தக்கவர வேற்பளித்தே அங்கிங் கழைத்தேக   ஆர்வமுண்டு-நுங்கின் இளகல் உடலால்  இயலுமா? வில்லின் வளைவுதனை நாணால்  வகுப்பர்-வளைவுடலை நாளன்றோ ஆக்கிற்று  நாம்என்செய் வோம்அந்த  நாளில் இளமை   நலத்தைஇந்-நாளில் நினைத்தால் நமது  நெடுந்தோளோ இவ்வாறு அனைத்தும் புரிந்ததென   ஐயந்-தனைக்கொள்வேன். காட்டாறு காளைப்  பருவமன்றோ, கேளுங்கள் நீட்டாய் நிகழ்ந்த   சிலவற்றை-நாட்டிலுறு மற்றும் முதியவர் காவிரியில் என்றன்  கணையாழி தேடுகையில் பாவிரியப் பண்பாடிப்  பையன்ஓர்-ஆவினை ஆற்றில் குளிப்பாட்டும்  போதில் அதன்கால்கள் சேற்றிலே மாட்டித்  திகைத்தலைநான்-மாற்றுதற்குப் போய்முழுகி னேன்என்  புறமுதுகில் காலூன்றி மாய்வின்றி மாடு  கரையேறச்-சேய்நானும் மாட்டின்வால் பற்றியதால்  சேற்றினிலே மாயவில்லை; மேலும் முதியவர் கேட்டீரா இன்னும்   கிளத்துகின்றேன்-மாட்டுவண்டி முன்னிருந்த பிள்ளை  முடிய நெருங்கையில்நான் பின்னிருந்த கையால்  பிடித்திழுத்தேன்-என்ன  வலிவாய் எருதிழுத்தும்  ஓடவில்லை வண்டி! நலிவொன்றும் பிள்ளைக்கு  நண்ண-இலையன்றோ! இன்னும் முதியவர் நீட்டில்லை ஒன்று   நிகழ்த்துகின்றேன் நற்பழங்கள் ஊட்டி வளர்த்தாலும்  உரிமையெண்ணிக்-கூட்டில் இருக்கப் பிடிக்காத   கிள்ளைபோல் இல்லத் தெருக்கதவை மெல்லத்  திறந்தே-இருட்டில் அயலூரில் கூத்துப்பார்த்(து)  ஆலடியில் தூங்கி வெயில்வருமுன் வீட்டில்  புகுந்து-துயில்வதுபோல் காட்டிக் கலைக்கழகம்  சென்றேன் கதையில்வந்த  பாட்டை முணுமுணுத்துப்  பாடுகையில்-நீட்டுப் பிரம்பால் கணக்காயர்  பின்ஒன்று வைத்தார் 'அரம்பைவந்தாள்' என்றந்தப்  பாட்டில்-வரும்வரியை வாய்தவறிச் சொன்னேன்  கணக்காயர் வாய்ப்பறிந்து பாய்தலுற்றார் தந்தைக்கும்  பாக்குவைத்தார்-போய்வீட்டில் நான்பட்ட தாலையிலே  நற்பஞ்சு தான்படுமா? ஏன்பட்டான் என்றுதான்  யார்கேட்டார்!-தேன்போலும் முதியவரின் மற்றொரு கதை பாப்புனைவார் ஓர்நாளில்  பாவைபல தந்து சென்னை போய்ப்புலவர்க் கீயஎனைப்  போக்கினார்-மாப்பாவை இட்டபெட்டி யைச்சென்னைச்  செட்டிகடை ஒன்றில்நான் இட்டங்கு குந்தி  இருக்கையிலே-'விட்டேனோ பாரடா!' என்றொருவன்  செட்டிமேல் பாய்கையிலே, 'ஆரடா நீ! யென்(று)  அதட்டிநான்-நீரோடைக்(கு) உள்ளே விழவுதைத்தேன்  ஓர்கை முறிந்தவனும் வெள்ளம்போல் தீயரையென்  மேல்விட்டான்-துள்ளிநான் ஓட்டம் பிடிக்கையிலே  ஓர்செல்வாக் குள்ளவரும் நீட்டும்என் கம்பி  நிறுத்திநிலை-கேட்கையிலே, பொல்லாதார் கூட்டம்  புடைசூழக் கண்டஅவர், எல்லாரும் ஊர்ச்சா  வடிவருவீர்-நில்லாதீர்; என்றுரைத்தார்! தீயவர்கள்  எல்லோரும் மறைந்தார்; அன்றே வினைமுடித்தேன்  சென்னையி-னின்றகன்றேன். மற்றும் ஒரு நிகழ்ச்சி ஆரும் அறியாமல்  அன்பான நண்பரைநான் சாரும் கடல்தாண்டிச்  சைகோனில்-சேரும்வணம் செய்யஒரு கட்டுமரம்  சென்றேறி னேன்கப்பல் கையெட்டும் எல்லையைநான்  காணுகையில்-எய்தும் உளவறிந்து தீயர்சிலர்  நீராவி ஓடம் மளமளென ஓட்டி   வருதல்-தெளிவுபடக் காணாத் தொலைவினிலே  கட்டுமரத் தைவிடென்றேன். ஊணோ உறக்கமோ  ஒன்றுமின்றிக்-கோணாமல் நட்ட நடுக்கடலில்  ஒன்றரைநாள் நான்கழித்தே எட்டு மணிஇரவில்  என் வீட்டைக்-கிட்டினேன் மற்றும் ஒரு நற்செய்தி நாடுதொழும் ஊழியரை  நான்காக்க ஓர்வீட்டு மாடியில்நின் றேகுதித்து  மான்போலும்-ஓடினேன் ஐயாயிர மக்கட்(கு)  ஆம்உரிமை காக்கநான் பொய்யர் தமையெதிர்த்த   போதென்னைப்-பொய்வழக்கால் சேர்த்த சிறைஎனக்கோர்  தென்றல்வரும் சோலையன்றோ! சீர்த்தித் தமிழர்க்குத்  தீமைவரப்-பார்த்திரேன்! மாயும்உயிர் என்றால்,  மருளாத காளைநான்! ஆயினும் என்செய்கை  அனைத்தையுமே-தீயவழிச் செல்லாது நாளும்  திருத்தமுறக் காத்த,பா வல்லாரை நானும்  மறப்பதே-இல்லை! இளமைப் பருவமோ  எச்செயலும் செய்யும் இளமை அறிவோ(டு)  இயைந்தால்-விளைவதெலாம் நாட்டுக்கு நன்றேயாம்  நாட்கள் விரைந்தோடும் கேட்டுக்கா ளாகாமல்  கீழ்மையின்றி-நாட்டமொடும் அன்பு மலிய   அனைத்துயிர்க்கும் தொண்டுசெய்தால் இன்பம் மலியும்!  இதுவன்றோ-என்றும் மறவாமல் மக்கள்   செயத்தக்க தென்றார்! "துறவாமல் இன்பமுண்டோ  சொல்க-அறப்பெரியீர்" என்றுரைத்தார் மாவரசர்,  இன்னும்உரைப் பார்கிழவர்: "நன்றுரைத்தீர் அத்துறவை   நான்வேண்டேன்-என்றுமே, இல்லறமே நல்லறம் தானே தனித்தின்பம்  கொள்ளத் தகுமோ?நல் தேனிதழாள் இன்றிஒரு  சேய்க்கின்பம்-ஆனதுண்டோ? ஞாலத் தொடர்பினால்  நல்லின்பம் காணலன்றி ஞாலத்துறவில் இன்பம்  நண்ணுவதும்-ஏலுமோ? "உற்றாரை யான்வேண்டேன்  ஊர்வேண்டேன் பேர்வேண்டேன் கற்றாரை யான்வேண்டேன்  கண்இனிக்கப்-பெற்றெடுத்த  தாய்தந்தை வேண்டேன்  தமிழ்வேண்டேன் தாய்நாட்டின் ஓய்வு தவிர்க்கும்  உரன் வேண்டேன்-தேய்வுற்றே கண்மூக்கு வாய்உடம்பு  காதென்னும் ஐந்து ஒண்வாயில் சாத்தி  உளம்மாய்ந்து-வண்ணவுடல் பேறிழத்தல் பேரின்பம்  அ·தோன்றே வேண்டு"மென்று கூறிடுவார் கூறுவதே  அல்லாமல்-வேறுபயன் கண்டாரோ அன்னவர்தாம்  'காட்டுவிரோ' என்றுரைத்தால், 'கண்டவர் விண்டிலர்  விண்டவர் கண்டிலர்' என்று மொழிந்தே  இலைச்சோற்றில் பூசனிக்காய் நன்று மறைக்க   நனிமுயல்வர்-இன்றுபல ஆச்சிரமம் ஆச்சிரமப் பேரால்  அறவிடுதி கண்டுநல்ல  பேச்சியம்பிச் சொத்தைப்  பெருக்கியே-போய்ச்செல்வர் கூட்டம் பெருக்கிக்  குடித்தனத்தை மேல்வளர்த்தார் ஈட்டும் பொருளுக்(கு)  இருபதுபேர்-ஏட்டாளர்! தோட்டங்கள் கொத்துதற்குத்  தொண்ணூறு பேர்,கறவை மாட்டுக்கு நல்ல   மருத்துவநூல்-காட்டிவோர் பத்துப்பேர், காதற்  பழங்கள் கடற்கரையில் ஒத்துப்போய் நெஞ்சம்  உவந்தளித்த-தொத்துகிளிப் பிள்ளைக்குப் பேர்வைக்க   நாலைந்து பேர்,அதனை உள்ளுளவாய் விற்றுவர   ஒன்பதுபேர்-வெள்ளைநிற  மின்னை வணங்க   இருபதுபேர் மின்னையுயிர்க்(கு) அன்னை எனச்சொல்ல   ஐம்பதுபேர்-தன்னைத் திருமால் பிறப்பென்று  தீட்ட, நூல் விற்க  வருவாய் விழுக்காடு   வாங்க-ஒருநரியார், வீட்டிலுறும் அந்நரிக்கும்  பொய்புரட்டு வேலைக்கோ ஆட்டுக்கண் ணன்சேய்  அவனொருவன்-நாட்டில் துறவோன் அறவீ(டு)  இ·தொன்றுமற் றொன்று; மலையடியில் துறவு நிறத்தை நிலைநிறுத்த   வந்த-வெறியன் ஒருவன் மலையடியில்  ஊரார் விழிக்குத்  தெரியும் இடந்தேடிச்   சென்று-பெரிதாக  வீடமைத்த தாலேதன்  வீட்டைத் துறந்தவனாய்க் கூடிந்த மெய்யென்றும்  கூட்டில்புள்-ஓடுமுயிர் பொன்றாத உண்மையிலை  போயழியும்! போயழியும்!! என்றும், இளமை  புனற்குமிழி-பொன்னோ புனல்திரை, யாக்கை  புனலெழுத்தே என்றும் அனைத்துலகும் பொய்யென்றும்  ஆன்மா-எனும் ஒன்றே மெய், அதனால் மெய்யுணர்தல்  வேண்டுமென்றும், அவ்வுணர்வை ஐயம் திரிபின்றி  ஐயர் உண்ணச்-செய்கின்ற  என்றன் அறவிடுதி   ஏற்படுத்தி வைக்குமென்றும், என்றும் உதவா(து)  இருந்தபழம்-பொன்பொருளை இங்கேகுவிப் பீர்என்றும்  என்தம்பி வாரிப்போய் அங்கே குவிக்கட்டும்  அச்செயலால்-தங்கிடும்நும் பற்றுக்கள் போம்என்றும்,  பற்றேபற் றுக்கோடாய் உற்று வரும்பிறவி  ஓடுமென்றும்,- புற்கைக்குப் போரடித்து மக்கள்  புழுவாய்த் துடிக்கையிலும் ஊரடித்துத் தின்னும்  உளவுதனை-யாரரிவார்? நாட்டுக்குத் தொண்டு இந்த நெறிகள்எலாம்  யார்க்கு நலம்விளைக்கும்? கந்தைக்கும், கண்ணுறங்கக்  கூரைக்கும்-அந்தோ தொழில்வேண்டு வார்க்குத்  தொழிலில்லை; கல்வி எழில்வேண்டு வார்கள்  எவர்க்கும்-கழகமுண்டோ? கல்வித் துறைக்குத்தான்  காசிலையாம்! செந்தமிழ்நற் செல்விக் குரிமைச்  செயலுண்டா?-'எல்லாரும் ஒன்'றென்னும் எண்ணம்  உயரவில்லை! ஒற்றுமைதான் நன்றென்னும் எண்ணம்  நடப்பதுவோ?-இன்று பெருநிலத்தில் நற்றமிழர்  வாழ்வு பிறரால் அருவருக்க லானதெனக்  கண்டும்-திருநாட்டில் சாய்பாபா வாற்பொருளைத்  தட்டிப் பறிப்பதுவும் மேய்பாபா ஏய்க்கின்ற  மெய்வழியின்-வாய்வலியும் பன்னும் இவைபோல்  பலப்பலவும் அன்பரே! உன்னுங்கால் அந்தோ!  உருகாதோ-கல்நெஞ்சம்? எந்த நெறிபற்றி  யாம்ஒழுகல் வேண்டுமெனில், அந்த முறையை  அறைகின்றேன்-அந்தமுறை எல்லார்க்கும் ஒத்துவரும்  ஏமாற்றம் ஒன்றுமில்லை செல்வம் அதனால்  செழித்துவரும்-கல்வி அனைவர்க்கும் உண்டாகும்  அல்லல் ஒழியும் தனிநலம்போம்! இன்பமே  சாரும்-இனிதாக இவ்வுலக நன்மைக்கே  யான்வாழ்கின் றேன்என்றே ஒவ்வொருவ ரும்கருதி  உண்மையாய்-எவ்வெவர்க்கும் கல்வியைக் கட்டாயத்  தால்நல்கி யாவர்க்கும் நல்லுடலை ஓம்ப   நனியுழைத்தால்-அல்லலுண்டோ? ஓம்புதல் வேண்டும்  ஒழுக்கம்; அழுக்காறு நாம்பெறுதல் நாட்டை  இழித்தலே-ஆம்! பொய்யா? மக்களிடைத் தாழ்வுயர்வு  மாட்டாமை வேண்டும்நீள் பொய்க்கதையில் பொல்லா  மடமையிலே-புக்குப் பிறர்க்கடிமை யுற்றும்  பெருவயிறு காத்தல் அறக்கொடிதென் றாய்ந்தமைதல்  வேண்டும்-சிறக்கப் படைப்பயிற்சி, நல்ல  பயனடையும் ஆற்றல், தடைப்பாடில் லாதெய்தில்  சாலும்!-நடைவலியாய் வையம் அறிதல்  மறிகடலை வானத்தை ஐயம் அகல  அளந்திடுதல்-உய்யும்வணம் பல்கலையும் பெற்றே  இளமைப் பருவத்தின் மல்குசீர் வாய்ப்புறுதல்  வேண்டும்பின்-நில்லாத காதல் வாழ்க்கை உள்ளம் கவர்ந்தாளின்  உள்ளத்தைத் தான்கவர்ந்து வெள்ளத்தில் வெள்ளம்  கலந்ததென-விள்ளும்நிலை கண்டு மணம்புரிதல்  வேண்டும் கடிமணமும் பண்டை மணமென்றும்  பார்ப்பானைக்-கொண்ட அடிமை மணமென்றும்  சொல்லும் அனைத்தும் கடிந்து பதிவுமணம்  காணல்-கடனாகும் அன்பால் அவளும்  அவனும் ஒருமித்தால் து ன்பமவ ளுக்கென்னில்  துன்புறுவான்-துன்பம் அவனுக்கெனில் அவளும்  அவ்வாறே; இந்தச் சுவைமிக்க வாழ்வைத்தான்  தூயோர்-நவையற்ற  காதல்வாழ் வென்று  கழறினார்; அக்காதல் சாதல் வரைக்கும்  தழைத்தோங்கும்-காதல் உடையார்தம் வாழ்வில்  உளம்வேறு பட்டால் மடவார் பிறனை  மணக்க-விடவேண்டும் ஆடவனும் வேறோர்  அணங்கை மணக்கலாம் கூடும்மண மக்கள்  கொளத்தக்க-நீடுநலம் என்னவெனில், இல்லறத்தைச்  செய்தின்பம் எய்துவதாம்! மக்கட் பேறு நன்மக்கட் பேறுபற்றி  நானுரைப்ப-தொன்றுண்டாம் ஈண்டுக் குழந்தைகள்தாம்  எண்மிகுத்துப் போகாமல் வேண்டும் அளவே  விளைத்து,மேல்-வேண்டாக்கால் சேர்க்கை ஒழித்துக்  கருத்தடை யேனும்செய்க போக்கருநோய் கொண்டால்  இருவரும்-யாக்கை ஒருமித்தால் ஐயகோ!  உண்டாகும் பிள்ளை இருநிலத்துக் கென்னநலம்  செய்யும்-அருமைத் பிறர் நலம் தலைவன் தலைவியர்கள்  தங்கள் குடும்ப அலைநீங் கியபின்  அயலார்-நிலைதன்னை நாடலாம் என்னாமல்  நானிலத்தின் நன்மைக்குப் பாடு படவேண்டும்  எப்போதும்-நாடோ ஒருதீமை கண்டால்  ஒதுங்கி நிற்றல்தீமை; எருதுமேல்ஈ மொய்த்த  போது-பெருவால் சுழற்றுவதால் துன்பம்  தொலையுமா?-ஈக்கள் புழுக்குமிடம் தூய்தாகிப்  போகுமா?-இழுக்கொன்று காணில் நமக்கென்ன  என்னாமல் கண்டஅதன் ஆணிவேர் கல்லி  அழகுலகைப்-பேணுவதில் நேருற்ற துன்பமெலாம்  இன்பம்! கவலையின்றிச் சேருவான் இன்பமெலாம்  துன்பமென்க!-நேரில் வறியார்க்கொன் றீந்தால்தன்  நெஞ்சில்வரு மின்பம் அறியா திரான்எவனும்  அன்றோ?-வெறிகொள் வலியாரால் வாடும்  எளியாரின் சார்பில் புலியாகிப் போர்தொடுக்கும்  போதில்-வலியோர்கள் எய்யும்கோற் புண்ணும்  இனிதாகும் அவ்வெளியார் உய்ய உழைத்ததனைத்  தானினைத்தால்-வையத்தே தன்னலத்தை நீத்தும்  பிறர்நலமே தான்நினைத்தும் என்றும் உழைப்பார்க்(கு)  இடரிழைப்போன்!-அன்றோ நடப்பார் அடியில்  நசுங்கும் புழுப்போல் துடிப்பானே தொல்லுலகி  னோரால்-இடமகன்ற வையத்து நன்மைக்கே  வாழ்வென் றுணர்ந்தவனே செய்யும் தொழிலில்  திறம்காண்பான்-ஐயம் அகலும்; அறிவில்  உயர்ந்திடுவான் அன்னோன் புகலும்அனைத் துள்ளும்  புதுமை-திகழுமன்றோ? சாதலின் இன்னாத  தில்லையென்று சாற்றிடினும் ஏதும்அவன் சாகுங்கால்  இன்பமே!-சாதல் வருங்கால் சிரிப்பான்  பொதுவுக்கே வாழ்வான் பொதுமக்கள் வாழ்த்தும்  பெறுவான்-ஒருநிலவு வானின் உடுக்களிடை  வாழ்தல்போல்-அன்னோரின் ஊனுடம்பு தீர்ந்தாலும்  உற்றபுகழ்-மேனி, விழிதோறும் மேலாரின்  நெஞ்சுதொறும் என்றும் அழியாதன் றோமேலும்  ஐயா-மொழிவேன் 'அறத்தால் வருவதே   இன்பம்'என் றான்றோர் குறித்தார்; குறிப்பறிக;   மேலும்-திறத்தால் 'தவம்செய்வார் தம்கருமம்  செய்வார்' எனவே அவரே உரைத்தார்  அறிக!-எவரும் தமைக்காக்க! தம்குடும்பம்  காக்க! உலகைத் தமர்என்று தாமுழைக்க  வேண்டும்-அமைவான இன்பம் அதுதான்  'இறப்புக்கும் அப்பாலே ஒன்றுமில்லை' என்ப  துணர்ந்திடுக-அன்றுமுதல் இன்றுவரைக்கும் பெரியோர்  செத்தவர்கள் எய்துவதாய்ச் சொன்னவற்றுள் ஒன்றையன்று  தூற்றுவன-அன்றியும் சாக்காடு நெடுந்தூக்கம் சாக்காடு பேரின்பம்  என்றுநான் சாற்றிடுவேன் தூக்கம் கெடலைத்  துயர்என்பீர்-வாய்க்கும்நல் தூக்கத்தை இன்பமென்றீர்  அன்றோ? நெடுந்தூக்கம் சாக்காடு இன்பம்" என்றார். அறுசீர் விருத்தம் தலைவி கூடத்துப் பேச்சு மாவர சோடிவ் வாறு  வயதானார் பேசும் போது கூவர சான இல்லக்  குயிலினாள் கூடந் தன்னில் பாவர சான தன்வாய்ப்  பைந்தமிழ் படைத்தி ருந்தாள் ஆ!அரி தென்று காதால்  மலர்க்குழல் அதைஉண் கின்றாள். "பெண்கட்குக் கல்வி வேண்டும்  குடித்தனம் பேணு தற்கே! பெண்கட்குக் கல்வி வேண்டும்  மக்களைப் பேணுதற்கே! பெண்கட்குக் கல்வி வேண்டும்  உலகினைப் பேணுதற்கே! பெண்கட்குக் கல்வி வேண்டும்  கல்வியைப் பேணுதற்கே! கல்வியில் லாத பெண்கள்  களர்நிலம்; அந் நிலத்தில் புல்விளைந் திடலாம்; நல்ல  புதல்வர்கள் விளைதல் இல்லை! கல்வியை உடைய பெண்கள்  திருந்திய கழனி; அங்கே நல்லறி வுடைய மக்கள்  விளைவது நவில வோநான்? வானூர்தி செலுத்தல் வைய  மாக்கடல் முழுத ளத்தல் ஆனஎச் செயலும் ஆண்பெண்  அனைவர்க்கும் பொதுவே! இன்று நானிலம் ஆட வர்கள்  ஆணையால் நலிவ டைந்து போனதால் பெண்க ளுக்கு  விடுதலை போன தன்றோ! இந்நாளில் பெண்கட் கெல்லாம்  ஏற்பட்ட பணியை நன்கு பொன்னேபோல் ஒருகை யாலும்  விடுதலை பூணும் செய்கை இன்னொரு மலர்க்கை யாலும்  இயற்றுக! கல்வி இல்லா மின்னாளை வாழ்வில் என்றும்  மின்னாள் என்றே உரைப்பேன். சமைப்பதும் வீட்டு வேலை  சலிப்பின்றிச் செயலும் பெண்கள் தமக்கேஆம் என்று கூறல்  சரியில்லை; ஆட வர்கள் நமக்கும்அப் பணிகள் ஏற்கும்  என்றெண்ணும் நன்னாள் காண்போம்! சமைப்பது தாழ்வா? இன்பம்  சமைக்கின்றார் சமையல் செய்வார்! உணவினை ஆக்கல் மக்கட்(கு)  உயிர்ஆக்கல் அன்றோ? வாழ்வு பணத்தினால் அன்று; வில்வாட்  படையினால் காண்ப தன்று; தணலினை அடுப்பில் இட்டுத்  தாழியில் சுவையை இட்டே அணித்திருந் திட்டார் உள்ளத்(து)  அன்பிட்ட உணவால் வாழ்வோம். சமைப்பது பெண்க ளுக்குத்  தவிர்க்கொணாக் கடமை என்றும், சமைத்திடும் தொழிலோ, நல்ல  தாய்மார்க்கே தக்க தென்றும், தமிழ்த்திரு நாடு தன்னில்  இருக்குமோர் சட்டந் தன்னை இமைப்போதில் நீக்க வேண்டில்  பெண்கல்வி வேண்டும் யாண்டும். சமையலில் புதுமை சமையலில் புதுமை வேண்டும்  சமையல்நூல் வளர்ச்சி வேண்டும் சமையற்குக் "கல்வி இல்லம்"  அமைந்திட வேண்டும் யாண்டும்; அமைவிலாக் குடும்பத் துள்ளும்  அகத்தினில் மகிழ்ச்சி வேண்டில் சமையலில் திறமை வேண்டும்  சாக்காடும் தலைகாட் டாதே! கெட்டுடல் வருந்து வோர்கள்  சமைக்கும்நற் கேள்வி பெற்றால் கட்டுடல் பெற்று வாழ்வார்!  கல்விக்கும், ஒழுக்கத் திற்கும் பட்டுள பாட்டி னின்று  விடுதலை படுவ தற்கும் கட்டாயம் சமைக்கும் ஆற்றல்  காணுதல் வேண்டும் நாமே. வறுமையும் தெரிவ துண்டோ  சமையலில் வல்லார் இல்லில்? நறுநெய்யும் பாலும் தேனும்  நனியுள்ள இல்லத் துள்ளும் கறிசமைத் திடக்கல் லாதார்  வறியராய்க் கலங்கு வார்கள்! குறுகிய செலவில் இன்பம்  குவிப்பார்கள் சமையல் வல்லார்! வீறாப்பு வாழ்வு தன்னை  மேற்கொண்டார் என்றால் அன்னார் சோறாக்கி கறிகள் ஆக்கிச்  சுவைஆக்கக் கற்றதால்ஆம்! சேறாக்கிக் குடித்த னத்தைத்  தீர்த்தார்கள் என்றால் தாறு மாறாக்கிக் கறியை எல்லாம்  மண்ணாக்கும் மடமை யால்ஆம். இலையினில் திறத்தால் இட்ட  சுவையுள்ள கறியும் சோறும் கலையினில் உயர்த்தும் நாட்டைக்  கட்டுக்கள் போக்கும்! வைய நிலையினை உயர்த்தும் இந்த   நினைவுதான் உண்டா நம்பால்? தொலையாதா அயர்வு? நல்ல  சுவையுணர் வெந்நாள் தோன்றும்?" விருந்து வந்தவள் தன் நிலை கூறுவாள் என்றனள் தலைவி! அந்த  எழில்மலர்க் குழலி சொல்வாள்; "நன்றாகச் சொன்னீர் அம்மா  நம்வீட்டின் செய்தி கேட்பீர்; 'இன்றென்ன கறிதான் செய்ய?'  என்றுநான் அவரைக் கேட்பேன்; நின்றவர் எனையே நோக்கி  'நேற்றென்ன கறிகள்?' என்பார்! 'பருப்பும் வாழைக்காய் தானும்  குழம்பிட்டேன் உருளைப் பற்றைப் பொரித்திட்டேன்' என்றால், அன்னார்  புகலுவார் வெறுப்பி னோடு 'பருப்பும்நீள் முருங்கைக் காயும்  குழம்பிட்டுக் கருணைப் பற்றைப் பொரிப்பாய்நீ' என்று கூறிப்  போய்விடு வார்வே லைக்கே. கீரைத் தண்டுக் குழம்பு  மேற்படி கீரை நையல் மோருந்தான் உண்டு நாளும்  மிளகுநீர் முடுக உண்டு; யாரைத்தான் கேட்க வேண்டும்  இவைகளே ஏறி ஆடும் ஊருள்ள இராட்டி னம்போல்  சுற்றிடும் ஒவ்வோர் நாளும்! முறையிலோர் புதுமை இல்லை;  முற்றிலும் பழைய பாதை! குறைவான உணவே உண்டு  குறைவான வாழ்நாள் உற்று நிறைவான வாழ்க்கை தன்னை  நடத்துவ தாய்நினைத்து மறைவதே நம்ம னோரின்  வழக்கமா யிற்றம் மாவே! சமையல்முன் னேற்ற மின்றித்  தாழ்தற்கு நமது நாட்டில் சமயமும் சாதி என்ற  சழக்கும்கா ரணம்என் பேன்நான்; அமைவுறும் செட்டி வீட்டில்  அயலவன் உண்பதில்லை; தமைஉயர் வென்பான் நாய்க்கன்;  முதலிநீ தாழ்ந்தோன் என்பான். ஒருவீட்டின் உணவை மற்றும்  ஒருவீட்டார் அறியார் அன்றோ? பெருநாட்டில் சமையற் பாங்கில்  முன்னேற்றம் பெறுதல் யாங்ஙன்? தெரிந்தஓர் மிளகு நீரில்  செய்முறை பன்னூ றாகும்! இருவீட்டில் ஒரே துவட்டல்  எரிவொன்று புகைச்சல் ஒன்று! ஆக்கிடும் கறிகட் குள்ள  பெயர்களும், அவர வர்கள் போக்கைப்போல் மாறு கொள்ளும்  புளிக்கறி குழம்பு சாம்பார், தேக்காணம் என்பார் ஒன்றே!  அப்பளம் அதனைச் சில்லோர் பாழ்க்கப் பப்படம் என்பார்கள்  பார்ப்பான் அப்பளாம் என்கின்றான். கல்வி அம்மையீர் சொன்ன வண்ணம்  அனைத்துக்கும் கல்வி வேண்டும்! செம்மையிற் பொருள்ஒவ் வொன்றின்  பண்புகள் தெரிதல் வேண்டும்! இம்மக்கள் தமக்குள் மேலோர்  இழிந்தவர் என்னும் தீமை எம்மட்டில் போமோ, நன்மை  அம்மட்டில் இங்குண் டாகும்". என்றனள் விருந்து வந்த   மலர்க்குழல் என்பாள்! அங்கு நன்றுபூ வரச நீழல்  நடுவினில் நகைமுத் தோடு நின்றுநா வரசன் என்னும்  இளையவன் நிகழ்த்து கின்றான்; சென்றுநாம் அதையும் கேட்போம்  தமிழ்த்தேனும் தெவிட்டல் உண்டோ? நாவரசன் நகைமுத்து உரையாடல் அகவல் ஆளிழுக் கின்ற அழகிய வண்டி இந்த வூரில் இருப்பதும், நமது வில்லிய னூரில் இல்லா திருப்பதும் ஏன்அக் காஎன இளையோன் கேட்டான். நகைமுத்து நகைமுத் தென்பவள் நகைத்துக் கூறுவாள்: "கல்வி தன்னிலும் செல்வந் தன்னிலும் தொல்லுல கோர்பால் தொலையா திருந்திடும் ஏற்றத் தாழ்வே இதற்குக் காரணம்; இழுப்பவன் வறியவன்! ஏறினோன் செல்வன்! இருவரும் ஒருநிலை எய்தும் நாளில் ஆளைஆள் இழுத்தல் அகலும்; அந்நாளில் தன்னி லோடிகள் தகுவிலங் கிழுப்பவை என்னும் வண்டிகள் எவரையும் இழுக்கும்." இழுப்பு வண்டி "அழகிய வண்டி அழகிய வண்டி நிழல்வேண்டு மாயின் நிமிர்த்துவர் மூடியை; வேண்டாப் போது விடுவர் பின்புறம்! காலைத் தொங்கவிட்டு மேலுட் காரலாம்! இதுநம் மூரில் எப்போ துவரும்? அதில்நாம் எப்போ தமர்ந்து செல்வோம்?" என்று பிள்ளை இயம்பி நின்றான். "நம்மூர் சிற்றூர் நமக்கென் பயன்படும்? பொதுமக் கள்தம் போக்கு வரவுகள் இங்கு மிகுதி; ஏதுநம் மூரில்? ஆயினும் வீண்பகட் டாளர் கூட்டம் பெருகிடில் நம்மூர்த் தெருவிலும் நுழையும்!" என்றாள் அன்றலர் கின்றபூ முகத்தாள். பகட்டு "பகட்டா ளர்கள் பலபேர் எப்போ(து) ஏற்படு வார்கள்" என்றான் இளையோன். "செல்வம் இல்லார் செல்வர் போலவும் அழகே இல்லார் அழகியர் போலவும் காட்டிக் கொள்ளக் கருதும் நிலைமை ஏற்படும் நாளில் ஏற்படு வார்கள்." என்று கூறினாள் இளநகை முகத்தினாள். "அந்நிலை எப்போ ததையுரை" என்றான். "வஞ்சமும் பொய்யும் வளர்ந்தால்" என்றாள். அழகிய வஞ்சமும் வேண்டாம் பழையஊர் நன்றெனப் பகர்ந்தான் பிள்ளையே. தலைவி பள்ளிக்குச் சென்ற பிள்ளைகளை எதிர்பார்த்தாள் ப·றொடை வெண்பா செங்கதிரை மேற்குத் திசையனுப்பி மாணவர்கள் பொங்கு மகிழ்ச்சியினால் வீடுவரும் போதாக வீட்டுக் குறட்டில்நின்ற நற்றலைவி வேல்விழிகள் பாட்டையிலே பாய்ச்சிப் பழம்நிகர்த்த தன்மக்கள் ஏனின்னும் வாரா திருக்கின்றார் என்றெண்ணித் தேனிதழும் சிற்றிடையும் ஆடா தசையாது அன்னை மகிழ்ச்சி நின்றாள்; சிரித்தாள்; நிலை பெயர்ந்தாள்; கானத்து மன்றாடும் மாமயிலாள் "வாரீர்" என அழைத்தாள். உள்ளம் பூரித்தாள் உயிரோ வியங்கள்நிகர் பிள்ளைகள் வந்தார்கள் பேச்சோடும் பாட்டோடும்! வீட்டாரும் விருந்தினரும் வீடு மலர்க்காடு; விருந்தினரும் வீட்டாரும் பாடுகளி வண்டுகள்தாம்; பார்க்கத் தகும்காட்சி! எல்லாரும் ஒன்றாய் இருந்து மகிழ்ந்துள்ளம் வல்லார் இலக்கியத்தை வாரி அருந்துதல்போல் சிற்றுணவுண் கின்றார்கள் தித்திக்கும் நீர்பருகி முற்றத்தில் கையலம்பி முன்விரித்த பாய்நிறையச் சென்றமர்ந்தார்! மூத்தார் அடைகாய் சிவக்கவே மென்றிருந்தார்! நல்லிளைஞர் மேலோரின் வாய்பார்த்து மொய்த்திருந்தார்! வீட்டில் விருந்துவந்த மூத்தவரோ "வைத்துள்ளீ ரேஅந்த மாணிக்கப் பொட்டணத்தைக் கொட்டிக் குவித்திடவும் மாட்டீரோ இப்போது! கட்டாணி முத்தங்கள் காட்சிதர மாட்டாவோ! பாட்டொன்று தின்னப் பழமொன்று தாரீரோ! கேட்கின்றேன் கண்களல்ல! பச்சைக் கிளிகளல்ல! வீட்டின் தலைப்பிள்ளாய் வேடப்பா பாடப்பா வாட்டுளத்தில் இன்பத்தை வாரப்பா" என்றுரைக்க மெத்த மகிழ்ச்சியுடன் வேடப்பன் பாடுவதாய் ஒத்துத் துவங்கினான் ஒன்று: வேடப்பன் திரவிடம் நமது நாடு-நல்ல திரவிடம் நமது பேச்சு! திரவிடர் நாம் என்று களித்தோம்! திரவிடர் வாழ்வினில் துளிர்த்தோம்! உரையிலும் எழுத்திலும் செயலிலும் பிறரின் உருவினை முழுமையும் ஒழித்தோம்! செத்தபின் தன்புகழ் ஒன்றே  சிறந்திட வேண்டுதல் கருதி ஒத்தவர் அனைவரும் எனச்செயல் செய்யும் உயர்திர விடரின் குருதி! மாவரசர் வேடன் தமிழ்க்கண்ணி வீசி நமதுளமாம் மாடப் புறாவை மடக்கிக் கவர்ந்ததற்கு நன்றி எனவுரைத்தார் மாவரசர். நற்றலைவி ஒன்றுபா டென்றாள் உவந்து: நகைமுத்து    கலையினிற் பெண்ணே இலகு-பல்  கலையினிற் பெண்ணே இலகு! நிலையினில் உயர வேண்டும் பெண்ணுலகு!  மலைவிளக் காகுதல் வேண்டும்! நீ  மலைவிளக் காகுதல் வேண்டும்!£ புலமைகொள் கீழ்நிலை தனையுலகு தாண்டும்! என்று நகைமுத்தாள் பாடினாள்! என்ன இன்பம் என்று மகிழ்ந்தாள் எழிற்றலைவி! மற்ற இளையார் தலைக்கொன் றியம்பிடுவார், யாரும் களையாது காதுகொடுத் தார் தென்னை அறுசீர் விருத்தம் நாவரசு தலைவிரித்தாய் உடல்இளைத்தாய் ஒற்றைக்கா லால்நின்றாய் தமிழ்நாட் டார்க்குக் குலைவிரித்துத் தேங்காயும் குளிரிளநீ ரும்கூரைப் பொருளும் தந்தாய் கலைவிரித்த நல்லார்கள் தாம்பசித்தும், பிறர்பசியைத் தவிர்ப்ப தற்கே இலைவிரித்துச் சோறிடுவார் என்பதற்கோர் எடுத்துக்காட் டானாய் தெங்கே! பனை வீட்டுப்பிள்ளை(க) ஊர்ஏரிக் கரைதனிலே என்னிளமைப்  பருவத்தில் இட்ட கொட்டை நீரேதும் காப்பேதும் கேளாமல்  நீண்டுயர்ந்து பல்லாண் டின்பின் வாராய்என் றெனைஓலை விசிறியினால்  வரவேற்று நுங்கும் சாறும் சீராகத் தந்ததெனில், பனைபோலும்  நட்புமுறை தெரிந்தா ருண்டோ? மா வீட்டுப்பிள்ளை(உ) காணிக்குப் புறத்தேஓர் பதிவிட்ட  மாநட்டுக் கண்கா ணித்துக் கேணித்தண் ணீர்விடுத்தேன் பின்நாளில்  அதன்நிழலின் கீழ்இ ருந்தேன் மாணிக்க மாம்பழந்தான் மரகதத்தின்  இலைக்காம்பில் ஊஞ்ச லாடச் சேண்எட்டுக் கோலெடுத்தேன் கைப்பிடித்தேன்  வாய்வைத்தேன் தேன்தேன் தேனே. பலா நாவரசு பால்மணக்கக் கிள்ளுகின்ற பச்சையிலை  தங்கக்காம் படர்மி லார்கள் வான்மணக்க உயர்ந்தகிளை அடர்ந்தபலா  மரத்திற்சிற் றானைக் குட்டி போல்மணக்கும் பலாப்பழங்கள் அண்ணாந்த  பொழுதினிலே புதுமை கொள்ள மேல்மணக்கும் கிளையினிலே, நடுமணக்கும்  வேர்க்குள்ளும் மணக்கும் நன்றே. மாதுளை வீட்டுப்பிள்ளை(க) குவிப்புடைய விற்கோல்போல் புதல்எடுத்த  கோடெல்லாம் பூவும் பிஞ்சும் உவப்படையச் செய்கின்ற மாதுளையின்  உதவியினை என்ன சொல்வேன்? சிவப்புடைய மணிபொறுக்கிச் செவ்வானின்  வண்ணத்துச் செம்பில் இட்டுச் சுவைப்பார்கள் எடுத்துண்டால் சுறுக்கென்று  தித்திக்கச் செய்த தன்றோ! வாழை வீட்டுப்பிள்ளை(உ) தாயடியில் கன்றெடுத்துத் தரையூன்றி  நீர்பாய்ச்சத் தளிர்த்த வாழைச் சேயடியில் காத்திருந்தால் தெருத்திண்ணை  போற்பெரிய இலைகள் ஈயும்; காயடியில் பெரும்பூவும் கறிக்கீயும்;  கடைந்தெடுத்த வெண்ணெ யோடும் ஈயடித்தேன் கலந்துருட்டிப் பழத்தின்நற்  குலையீயும் இந்தா என்றே. களாச் செடி நாவரசு முட்கலப்பும் சிற்றிலையும் கோணலுறு  சிறுதூறும் முடங்கி மண்ணின் உட்புகுபூ நாகங்கள் மொய்த்திருத்தல்  ஒத்துபுதற் களாவே நீ,ஏன் வெட்கமுற்று வெண்மலர்ப்பல் வெளித்தோன்ற  நிற்கின்றாய் எளிய நண்டின் கட்சிறிய கனியெனினும் சுவைபெரிது  சுவைபெரிது கண்டோ மன்றோ! கொய்யாப் பழம் வீட்டுப்பிள்ளை(க) காட்டுமுயற் காதிலையும், களியானைத்  துதிக்கைஅடி மரமும் வானில் நீட்டுகிளைக் கொய்யாதன் நிரல்தங்கத்  திரள்பழத்தை நம்கண் ணுக்குக் காட்டுகின்ற போதுகொய் யும்பழம்என்  போம்கையில் கொய்து வாயில் போட்டுமென்ற போதேகொய் யாப்பழமென்  போம்பொருளின் புதுமை கண்டீர்! அறுசீர் விருத்தம் விருந்தினர் மக்கள் தாமும்  வீட்டினர் மக்கள் தாமும் பொருந்திடு கனிப்பாட் டுக்கள்  புகல,மா வரசர் தாமும்  மருந்துநேர் மொழிகொள் நல்ல  மலர்க்குழல் அம்மை யாரும் திருந்திய தலைவி தானும்  தேனாற்றில் உளம்கு ளித்தார். மாவரசர் தலைக்கொன்று பாட எண்ணித்  தொடங்கினீர் உளம்த ழைத்தே கலைக்கொன்றும் கணக்குக் கொன்றும்  கழறிட நேர்ந்த தன்றோ! இலைக்கொன்றும் வைத்த மற்ற  இன்சுவைக் கறிப டைக்க மலைக்கின்ற போதும் அன்போ  வழங்குக என்று கூறும். 'மலர்க்குழ லாளும் நானும்  கடைக்குப்போய் வருதல் வேண்டும் விலைக்குள பொருள்கள் வாங்கி  விரைவினில் மீள்வோம்; வீட்டுத் தலைவரை, என்றன் அன்பைக்   காணவோ தணியா ஆவல் அலைத்தது நெஞ்சே' என்றார்  மாவர சான நல்லார். நன்றென்று தலைவி சொன்னாள்;  நாவர சென்னும் பிள்ளை இன்றென்னை உடன ழைத்துச்  செல்வீர்கள் அப்பா என்றான்; என்றென்றும் உன்வ ழக்கம்  இப்படி யென்று கூறிச் சென்றனர் பெரியார்; பையன்  சென்றனன்; தாயும் சென்றாள். வேடப்பன் தனிய றைக்குள்  இலக்கியம் விரும்பிச் சென்றான்; கூடத்தில் தம்பி தங்கை  கதைபேசிக் கொண்டி ருந்தார்; மாடத்தை நடையை மற்றும்  வாய்ப்புள்ள இடங்கள் தம்மைச் சோடித்து மணிவி ளக்கால்  சோறாக்கத் தலைவி சென்றாள். நறுமலர்க் குழலாள் இன்ப  நகைமுத்தாள் ஒருபு றத்தில் சிறுவர்பால் எழுது கோலும்  சிறுதாளும் கேட்டுப் பெற்று நிறைமகிழ் நெஞ்சு கொள்ள  நினைவோஓர் உருவைக் கொள்ள உறுகலை அனைத்தின் மேலாம்  ஓவியம் வரைந்தி ருந்தாள். எண்சீர் விருத்தம் வேடப்பன் திறந்திருந்த சுவடியிலே வேடப் பன்தன்  திறந்தவிழி செல்லவில்லை; இதுவ ரைக்கும் இறந்திருக்கும் மங்கையரி லேனும் மற்றும்  இனிப்பிறக்கும் மங்கையரி லேனும் அந்த நிறைந்திருக்கும் அழகுநகை முத்தாள் போன்றாள்  இல்லையென நினைக்கின்றேன்! பேசும் பேச்சால் சிறந்திருக்கும் செந்தமிழ்க்கும் சிறப்பைச் செய்தாள்  சிற்பத்திற் பெரும்புரட்சி செயப் பிறந்தாள். காணுதற்குக் கருவியோ கயற்கண் இன்பக்  காட்சிதரும் பொருளன்றோ! வீழ்ந்தார் வாழ்வைப் பூணுதற்கே இதழோரப் புன்ன கைதான்!  பூவாத புதுக்காதல் பூக்க நோக்கி ஆணினத்தைக் கவர்கின்றாள்! நிலாமு கத்தாள்;  தனியழகை அணிமுரசம் ஆர்க்கின் றாளே! பேணுதற்குத் திருவுளங்கொள் வாளோ! என்றன்  பெற்றோர்பால் இல்லைஎனைப் பேணும் பெற்றி! அவள்மேற் காதல் அடுக்கிதழில் நகைதோன்றும் போதில் எல்லாம்  அறங்காக்கும் அவள்நெஞ்சம் வெளியில் தோன்றும்; மடுப்புனலைப் புன்செய்உழ வன்பார்த் தல்போல்  மங்கைஎனை நோக்குகின்றாள் எனினும், வாழ்வில் அடுத்திருக்கும் கருத்துண்டோ! யாதோ! ஐயோ!  அவள்எனக்குக் கிடைப்பாளோ! துயர்கொள் வேனோ! எடுத்தடிவைப் பாள்இடையோ அசையும் வஞ்சி  இன்பக் களஞ்சியம்நல் லழகின் வெற்றி. பொழிகதிரை மறைந்தொளிகொள் முகிலைப் போலப்  புனைஆடை பொன்னொளியைப் பெற்ற தென்றால் அழகுடையாள் திருமேனி என்னே! என்னே!  அடைவுசெயும் அன்னம்போல் நடையாள்! யாழும் குழலும்போய்த் தொழுகின்ற குரலால் பாடிக்  கொஞ்சினாள்! கருங்குயிலாள் திரும்புந் தோறும் மழைமுகிலின் கூந்தலிலே பலம லர்கள்  மந்தார வானத்து மின்னலாகும்! புதுநூலின் முதல்ஏட்டில் கயிறு சேர்த்தும்  பொன்னான தன்காதல் இலக்கி யத்தில் இதுவரைக்கும் உளஞ்செலுத்தி இருந்தான்; தந்தை  இல்லத்தில் புகுந்ததையும் உணரான்; மற்றும் அதிர்நடையார் மாவரசும், மனைவி தானும்  அங்குற்றார் என்பதையும் உணரான்; அன்னை எதிர்வந்தாள் "வேடப்பா" என்றாள், "அம்மா"  என்றெழுந்தான் உணவுபடைத் திருத்தல் கண்டான். நகைமுத்தாள் பசியில்லை யென்று சொன்னாள்;  நன்றென்று மலர்க்குழலி சொல்லிப் போனாள்: தொகைமுத்துக் குவித்தாலும் ஒன்றில் நெஞ்சைத்  தோய்த்தாரை மாற்றுவதே அருமை அன்றோ? அகத்தினரும் விருந்தினரும் அமர்ந்தி ருக்க,  அன்புள்ள இல்லத்தின் தலைவி பூத்த முகத்தினளாய் உணவுபடைக் கின்றாள்! இங்கே  முன்னறையில் நகைமுத்தாள் சென்றுட் கார்ந்தாள்! நகைமுத்து முதலேட்டில் சிலவரிகள் படித்துத் தீர்க்க  மூன்றுமணி நேரமா வேடப் பர்க்கே எதில்நினைவு செலுத்தினார்? எனவி யந்தே  எழில்நகைமுத் தாள் புனைந்த ஓவி யத்தை அதேசுவடி மேல்வைத்தாள், உற்றுப் பார்த்தாள்;  அவன்சிரித்தான்; அவள் சிரித்தாள் 'அன்ப ரேநீர் இதுவரைக்கும் யாரைநினைத் திருந்தீர்?' என்றாள்;  'உனை'யென்றான்; 'யான்பெற்றேன் பெரும்பே'றென்றாள். ஏதேதோ கேட்டிருந்தாள் வேடப் பன்பால்!  என்னென்ன வோசொன்னான் அவன்அ வட்கே! காதோடு 'நும்பெற்றோ ரிடத்தில் இந்தக்  கடிமணத்தின் முடிவுதனைக் கேட்பீர்' என்றாள். ஓதிவிட்டார் முடிவென்றான் வேடப் பன்தான்.  உளம்பூத்தாள்! வாய்பதறி விருந்த ருந்தித் தீதின்றிக் கையலம்பு வோர்கள் கேட்கத்  திருமணம்எந் நாளென்றாள்! பிழைக்கு நைந்தாள்! கைகழுவும் நினைப்பில்லை! சோற்றி லேனும்  கடுகளவு புசித்தானா இல்லை. காதற் பொய்கையிலே வீழ்ந்திட்டான்! கரைகா ணாமல்  புலன்துடித்தான்! நகைமுத்தாள் புறம்போய் ஓர்பால் வைகைநறும் புனலாடிக் கோடை வெப்பம்  மாற்றுவது எந்நாளென் றெண்ணி யெண்ணிச் செய்கைஇழந் தமர்ந்திட்டாள். "நாங்கள் ஊர்க்குச்  சென்றுவரு கின்றோம்"என் றுரைத்தார் தந்தை! தந்தைமொழி அதிர்வேட்டால் மங்கை நொந்தாள்;  தவித்திட்டான் வேடப்பன்! வீட்டுக் காரர் 'இந்தஇருள் நேரத்தில் செல்வ தென்ன?  இருந்துநா ளைப்பபோக லாம்'என் றார்கள். வந்தவர்கள் மன்னிப்பு வேண்டி னார்கள்.  வண்டிவந்து வீட்டெதிரில் நிற்கக் கண்டார். வெந்தனவாம் இரண்டுள்ளம். நன்றி கூறி  வெளிச்சென்றார்! வீட்டினரும் உடன்தொ டர்ந்தார்! பிரிந்தாள் நூறுமுறை அவள் பார்த்தாள் அவனை! ஆளன்  நூறுமுறை நோக்கினான், இனிது பெற்ற பேறுதனை இழப்பாள்போல் குறட்டி னின்று  பெயர்த்தஅடி கீழ்ப்படியில் வைக்கு முன்னர் ஆறுமுறை அவள்பார்த்தாள், அவனும் பார்த்தான்!  அவள்வண்டிப் படிமிதித்தாள், திரும்பிப் பார்த்தாள்! ஏறிவிட்டாள்! ஏறிவிட்டார் விருந்தி னர்கள்!  இனிதாக வாழ்த்துரைகள் மாற்றிக் கொண்டார். வண்டிநகர்ந் தது; மாடு விரைந்த தங்கே!  மங்கையவள் தலைசாய்த்து வேடப் பன்மேல் கெண்டைவிழி யைச்செலுத்தி மறைந்தாள்! நெஞ்சைக்  கிளிபறித்துப் போனதனால் மரம்போல் அங்கே தண்டமிழ்த்தேன் உண்டவர்கள் பொருளை எண்ணித்  தனிப்பார்போல் தனித்திருந்தான்; அவன்தாய் ஆன ஒண்டொடியாள் உட்சென்றாள், நகைமுத் தாளின்  ஓவியத்தில் தன்மகனின் உருவைக் கண்டாள்.                    மூன்றாம் பகுதி 1. திருமணம் வேடப்பனுக்கு மீண்டும் வாய்ப்பு  வில்லியனூர் மாவரசு, மலர்க்குழல், நாவரசு, நகைமுத்து ஆகியோர் மணவழகன் வீட்டுக்கு விருந்தினராய் வந்தபோது மணவழகன் மகனான வேடப்பனின் உள்ளங் கவர்ந்து சென்றாளன்றோ நகைமுத்து?-இங்கு…  ப·றொடை வெண்பா  புதுவை மணவழகன் பொன்னின் பரிதி எதிரேறு முன்னர் இனிய உணவருந்திப்  பட்டுக் கரைவேட்டி கட்டி,நீளச் சட்டையிட்டுச் சிட்டைமுண்டு மேல்துவளச் சென்று கடைச்சாவி  ஓர்கையால் தூக்கி ஒருகை குடையூன்றி ஆரங்கே என்றழைத்தான் தங்கம் அருகில்வந்தாள்.  'ஆளும் கணக்கருமோ அங்குவந்து காத்திருப்பார் வேளையடு சென்று கடைதிறக்க வேண்டுமன்றோ?  பாடல் உரைகேட்கப் பச்சைப் புலவரிடம் வேடப்பன் சென்றுள்ளான் வந்தவுடன், வில்லியனூர்  சின்னா னிடம்அனுப்பித் தீராத பற்றான ஐந்நூறு ரூபாயை அட்டியின்றிப் பெற்றுவரச்  சொல்' என்று சொல்லிநின்றான் தூய மணவழகன். 'நல்லதத்தான்' என்று நவின்றாள் எழில் தங்கம்! காலிற் செருப்பணிந்து கைக்குடையை மேல்விரித்து மேலும் ஒருதடவை மெல்லிமுகம் தான்நோக்கிச் சென்றான் மணவழகன். செல்லும் அழகருந்தி நின்றாள், திரும்பினாள் நெஞ்சம் உருகித்தங்கம்! கன்னலைக் கூவிக் கடிதழைத்தாள்! சின்னவனாம் பொன்னப்பன் மேல்முகத்தைப் போட்டணைத்தாள் ........................... அன்னவர்க்குப் பாங்காய் உடையுடுத்திப் பள்ளிக் கனுப்பிவைத்தாள். தாங்கா விருப்பால் தலைப்பிள்ளை வேடப்பன் இன்னும் வரவிலையே என்றே எதிர்பார்த்தாள். பொன்மலைபோல் வந்திட்டான் பூரிக்கின் றாள் தங்கம்! 'பச்சைப் புலவர் பகர்ந்தவை என்'என்று தச்சுக் கலைப்பொருளாம் தங்கம் வினவிடவே, 'நல்லபுற நானூற்றில் நான்கும், திருக்குறளில் 'கல்வி' ஒருபத்தும் கடுந்தோல் விலக்கிச் சுளைசுளையாய், அம்மா சுவைசுவையாய் உண்டேன். இளையேன்நான் செந்தமிழின் இன்பத்தை என்னென்பேன்? என்றுரைத்தான் வேடப்பன். 'என்னப்பா வேடப்பா  உன்அப்பா சொல்லியதை உற்றுக்கேள்' என்றாள்தாய்: 'சின்னானை வில்லியனூர் சென்றுநே ரிற்கண்டே ஐந்நூறு ரூபாயை அட்டியின்றி வாங்கிவா' என்றுபுகன் றார்தந்தை இப்போதே நீ செல்வாய்' என்றுதன் பிள்ளைக்கு இயம்பினாள் தங்கம். அகமும் முகமும் அலர்ந்தவனாய், "அம்மா மிகவும் மகிழ்ச்சி" என்று வேடப்பன் சென்றான். அமைய அவர்கட்கே ஆனகறி எண்ணிச் சமையலுக்குத் தங்கம்சென் றாள்.                                                    2. அவள் அண்டையில் அவன்   அறுசீர் விருத்தம் தன்கடை மீத மர்ந்து  சரக்குகள் நிறுத்தி ருந்த சின்னானை வணங்கி, என்ன  செய்திஎன் றினிது கேட்டுப் பின்; அவன் 'அமர்க' என்னப்  பேசாமல் ஒருபால் குந்திப் பன்மக்கள் அகன்ற பின்பு  வேடப்பன் பணத்தைக் கேட்டான். 'இளகிப்போ யிற்று நீவிர்  ஈந்திட்ட நல்ல வெல்லம்; புளிநல்ல தாய்இ ருந்தால்  பொதிஐந்து வேண்டும் தம்பி; மிளகென்ன விலை கொடுப்பீர்?  வெந்தயம் இருப்பில் உண்டோ? களிப்பாக்கு விலைஎவ் வாறு?  கழறுக' என்றான் சின்னான். 'இளகிய வெல்லம் மாற்றி  நல்லதாய் ஈவோம் இன்றே; புளியோகை யிருப்பி லில்லை;  பொதிக்கொரு நூறு ரூபாய் மிளகுக்கு விலைஏ றிற்று;  வெந்தயம் வரவே யில்லை; களிப்பாக்கு நிறம்ப ழுப்புக்  கணிசமாய் இருப்பி லுண்டு. 'சரக்குவந் தெடுத்துப் போவீர்  தவணைக்குத் தருகின் றோமே! இருக்கின்ற பற்றை மட்டும்  இன்றைக்குத் தீர்த்தால் போதும்; வரத்திய சரக்குக் காக   வாணிகர் வந்து குந்தி விரிக்கின்றார் கணக்கை' என்று   வேடப்பன் இனிது சொன்னான். ஐந்நூறு ரூபாய் எண்ணி  அளித்தனன் சின்னான்; யாவும் இன்னொரு முறையும் எண்ணி  இடுப்பினில் வாரிக் கட்டிச் சின்னானை வணங்கி, 'அண்ணா  சென்றுநான் வருவே' னென்று முன்னுற நடந்தான் அந்த  மொய்குழல் வீட்டை நோக்கி. மாவர சான தந்தை,  மலர்க்குழல் என்னும் அன்னை, நாவரச சான தம்பி,  உடன்வர நகைமுத் தென்னும்  பாவையும் விருந்தாய் வந்தாள்;  என்னுளந் தனிற்ப டிந்தாள்; ஓவியம் வல்லாள்; என்றன்  உருவையும் எழுதி னாளே! என்னையே தனியி ருந்து  நோக்குவாள்; யான்நோக் குங்கால் தன்னுளம் எனக்கீ வாள்போல்  தாமரை முகம்க விழ்ந்து புன்னகை புரிவாள்; யானோர்  புறஞ்சென்றாள் அகந்து டிப்பாள்; பின்னிய இரண்டுள்ளத்தின்  பெற்றியும் அறிந்தார் பெற்றோர். வீட்டைவிட் டகலு தற்கு  மெல்லியோ உள்ளம் நைந்தாள்! பூட்டிய வண்டி தன்னில்  பலர்ஏறப் புறத்தில் குந்தி வாட்டிய பசிநோ யாளி  வட்டித்த சோற்றி லேகண் நாட்டுதல் போல்என் மேல்கண்  நாட்டினாள் இமைத்த லின்றி! தலைக்குழல் மேற்செவ் வந்தி!  தாமரை, முகமும் வாயும்! மலைக்கின்ற மூக்கெள் ளின்பூ!  வாய்த்தசெங் காந்தள் அங்கை! குலுக்கென இடைகு லுங்கச்  சிரித்தென்னைக் கொல்லு முல்லை! மலர்க்காட்டை ஏற்றிச் சென்ற  வண்டியை மறந்தே னில்லை! என்நிலை அறிய வில்லை  என்பெற்றோர்; மங்கை நல்லாள் தன்னிலை அறிய வில்லை  தனைப்பெற்றோர்! ஏனோ பெற்றார் முன்நிலை வேறு நாங்கள்  முழுநீளக் குழந்தை அந்நாள்; நன்னிலை காண வேண்டும்  நான்அவள், மணவ றைக்குள்! வேடப்பன் நகைமுத் தாளின்  நினைவொடு விரைந்து சென்றான். வீடப்பு றத்தே தோன்ற  வீட்டுக்குப் பின்பு றத்தில் மாடப்பு றாவைக் கண்டான்  மாமர நீழ லின்கீழ்! தேடக்கி டைத்த தேஎன்  செல்வமென் றருகிற் சென்றான். பழந்தமிழ்ச் சுவடித் தேனைப்  பருகுவான் எதிரிற் கண்டாள்; இழந்ததன் பெருஞ்செல் வத்தை  'இறந்தேன் நான் பிறந்தேன்' என்றாள் 'தழைத்தமா மரநி ழற்கீழ்  எனக்கென்றே தனித்தி ருந்தாய் விழைந்தஉன் பெற்றோர் மற்றோர்  வீட்டினில் நலமோ' என்றான். 'தந்தையார் புதுவை சென்றார்;  தாயாரோ அண்டை வீட்டிற் குந்தியே கதைவ ளர்ப்பார்;  குப்பத்துப் பெருமாள் தாத்தா வந்தனர் அவர்தாம் வீட்டு  வாயிலில் தூங்கு கின்றார்; செந்தமிழ்ப் பள்ளி சென்றார்  சிறியவர்! ஆத லாலே; கருமணற் கடலோ ரத்தில்  பிறர்வரக் கண்ட நண்டு விரைந்தோடு வதுபோல் ஓட  வேண்டிய தில்லை, சும்மா இரும்;மணம், காற்று, நீழல்  இவற்றிடை ஒன்று கேட்பேன்; திருமணம் எந்நாள்? நாம்,மேல்  செயத்தக்க தென்ன?' என்றாள் 'நகைமுத்தை விரும்பு கின்றேன்  நாளைக்கே மணக்க வேண்டும் வகைசெய்க அப்பா என்று  வாய்விட்டு நானா சொல்வேன்? நிகரற்றாய் உன்பெற் றோர்பால்  நீசொன்னா லென்ன?' என்றான்; 'மகளுக்கு நாண மில்லை  என்பார்கள்; மாட்டேன்' என்றாள். இல்லத்துள் தாய்பு குந்தாள்;  'எங்குள்ளாய் நகைமுத்' தென்றே செல்வியை அழைத்தாள்; மங்கை  திடுக்கிட்டு வீடு சென்றாள். வில்லினின் றம்பு போல  வேடப்பன் கொல்லை நீங்கி நல்லபிள் ளைபோல் வீட்டு  வாயிலுள் நடக்கலானான். மலர்க்குழல் கண்டாள் 'ஓ!ஓ!  வேடப்பா வாவா' என்றாள். 'நலந்தானே அப்பா அம்மா?  நலந்தானே தம்பி தங்கை? அலம்புக கைகால் வந்தே  அமரப்பா சாப்பி டப்பா இலைபோட்டா யிற்று வாவா  வேடப்பா' எனப்ப கர்ந்தாள். 'தண்டலுக் காக வந்தேன்;  அப்படி யேஇங் கும்மைக் கண்டுபோ கத்தான் வந்தேன்;  கடைக்குநான் போக வேண்டும் உண்டுபோ என்கின் றீர்கள்  உண்கின்றேன்' எனவே டப்பன் உண்டனன்; உண்ணக் கண்ட  நகைமுத்தோ உவப்பை உண்டாள். 'குப்பத்துப் பெருமாள் தாத்தா  குறட்டைவிட் டுறங்கி னாரே; எப்படிச் சென்றார்? நீயிங்  கிருந்தாயே நகைமுத் தாளே! அப்படி அவர்சென் றாலும்  நீயன்றோ அழைக்க வேண்டும் தப்புநீ செய்தாய்' என்று  தாய்மலர்க் குழலி சொன்னாள். இவ்வாறு சொல்லும் போதே  கொல்லையி லிருந்த தாத்தா 'எவ்விடம் சென்று விட்டேன்  இங்குத்தான் இருக்கின் றேனே; செவ்வாழை தனில்இ ரண்டு  சிற்றணில் நெருங்கக் கண்டேன் அவ்விரண் டகன்ற பின்னர்  வந்தேன்நான்' என்று வந்தார். உணவினை முடித்த பின்னர்  'ஊருக்குச் செல்ல வேண்டும் மணிஒன்றும் ஆயிற்'றென்று  மலர்க்குழ லிடத்திற் சொன்னான். 'துணைக்குநான் வருவேன் தம்பி;  தூங்குவாய் சிறிது நேரம் உணவுண்ட இளைப்புத் தீரும்  உணர்'என்றார் பெருமாள் தாத்தா. 'இளைப்பாறிச் செல்க தம்பி'  எனமலர்க் குழலும் சொன்னாள். ஒளிமுத்து நகையோ, ஓடி  உயர்ந்தஓர் பட்டு மெத்தை விளங்குறு மேல் விரிப்பு,  வெள்ளுறைத் தலைய ணைகள் மளமள வென்று வாரி  வந்தொரு புறத்தில் இட்டாள். படுக்கையைத் திருத்தம் செய்து  வேடப்பன் படுத்தி ருந்தான்; இடைஇடை நகைமுத் தாளும்  இளநகை காட்டிச் செல்வாள்; சுடுமுகத் தாத்தா வந்து  'தூங்கப்பா' என்று சொல்வார்; கடைவிழி திறந்த பாங்கில்  கண்மூடிக் கிடந்தான் பிள்ளை.    3. தந்தையார் இருவருக்கும் சண்டை   எண்சீர் விருத்தம் மணவழகன், கடையினிலே வணிக ரோடு  வரவிருக்கும் சரக்குநிலை ஆய்ந்து பார்த்துக் கணக்கெடுத்துக் கொண்டிருந்தான். அந்நே ரத்தில்  கருப்பண்ணன் எனும்ஒருவன் குறுக்கில் வந்து 'மணவழக ரே,ஆயிரத்தைந் நூறு  மாவரசர்க் கேநீவிர் தருதல் வேண்டும் பணமுழுதும் வாங்கிவரச் சொன்னார்' என்றான்;  பதைத்திட்டான் மணவழகன் மானம் எண்ணி! 'சீட்டேதும் தந்தாரோ? உன்னி டத்தில்  செலுத்துவது சரியில்லை அறியேன் உன்னை; கூட்டத்தின் நடுவினிலே குறுக்கிட் டாயே  கூறுகநீ மாவரச ரிடத்தில்' என்றான்; 'கேட்கின்றோம் கொடுத்தபணம் எரிச்சல் என்ன?  கெட்டநினைப் புடையவர்நீர்' என்று கூறி நீட்டினான் தன்நடையைக் கருப்பண் ணன்தான்  நீருகுத்தான் மணவழகன் இருகண் ணாலும். வந்திட்டான் மாவரசன் எதிரில் நின்று  'வைகீழே என்பணத்தை' என்று சொன்னான்; நொந்திட்டான் மணவழகன்' நொடியில் எண்ணி  நூற்றுக்கு முக்காலாம் வட்டி போட்டுத் தந்திட்டான்; மாவரசன் பெற்றுக் கொண்டான்;  'தகாதவரின் நட்பாலே மானம் போகும்' இந்தமொழி சொன்னமண வழகன் தன்னை  ஏசிமா வரசன்தான், ஏக லானான். 'மாவரசன் தன்னைநான் பணமா கேட்டேன்  வைத்துவைப்பாய் என்றுரைத்தான் வாங்கி வந்தேன்; யாவரொடும் பேசிநான் இருக்கும் போதில்  எவனோவந் தெனைக்கேட்டான் பணங் கொடென்று நோவஉரைத் திட்டானே தீயன் என்னை  நூறாயிரம் கொடுக்கல் வாங்கல் உள்ளேன் நாவால்ஓர் வசைகேட்ட தில்லை என்று  நனிவருந்தி மணவழகன் அழுதி ருந்தான். மணவழகன் வழக்கறிஞ னிடத்திற் சென்றான்  மானக்கே டிதற்கென்ன செய்வ தென்று தணிவற்றுப் பதறினான்; பொய்வ ழக்குத்  தான்தொடங்க வழக்கறிஞன் சாற்ற லானான். இணங்கமறுத் தவனாகி நண்பர் பல்லோர்  இடமெல்லாம் இதைச்சொல்லி வருந்த லானான்; துணைவியிடம் சொல்வதற்கு வீடு வந்தான்;  தொடர்பாக நடந்தவற்றைச் சொல்லித் தீர்த்தான்.    4. எதிர்பாராத இடைஞ்சல்   அகவல் "நண்புளார் தீமை நாடினும் அதனைப் பண்புளார் பொறுப்பர்; பகைமை கொள்ளார் தாவுறும் உங்கள் தகைமையை அந்த  மாவர சாலோ மாற்ற முடியும்? தீதுசெய் தார்க்கும் நன்மை செய்வர் மூது ணர்ந்தவர் முனிவு செய்யார்; அத்தான் மறப்பீர்; அகம்நோ காதீர்" என்று தேறுதல் இயம்பினாள் தங்கம். மகன்வே டப்பன் வந்து சேர்ந்தான்; தந்தை யாரிடம் சாற்று கின்றான்; "சின்னான் தந்தான் ஐந்நூறு ரூபாய் மணிபத் தாகிற்று மாவர சில்லம் அருகில் இருந்ததால் அங்குச் சென்றேன்; மலர்க்கு ழலம்மையார் வற்புறுத் தியதால் உண்டேன்; சற்றே உறங்கினேன்; என்னுடன் பெருமாள் தாத்தா வருவா ரானார்." மகன்சொல் கேட்ட மணவழ கன்தான் முகங்கன லாக "முட்டாள்! முட்டாள்! செல்ல லாமோ தீயன் வீடு? மதியார் வீடு மிதியார் நல்லார்! பொல்லாப் பிள்ளை நில்லா தேஎதிர் போபோ!" என்று புகல லானான். தங்கம் மகனைத் தன்கையால் அணைத்து "மாவர சின்று மதிப்பிலா வகையில் நடந்ததால் அப்பா நவின்றார் அப்படி; கடைக்குப் போயிரு கண்ணே" என்றாள்; அடக்க முடியாத் துன்பம் படைத்த வேடப்பன் சென்றான் பணிந்தே.    5. பகை நண்பாயிற்று   ப·றொடை வெண்பா தாழ்வாரந் தன்னிலொரு சாய்வுநாற் காலியிலே வாழ்வில் ஒருமாசு வந்ததென எண்ணி மணவழகன் சாய்ந்திருந்தான். மாற்றுயர்ந்த தங்கம் துணைவனுக்கோர் ஆறுதலும் சொல்லி அருகிருந்தாள். தங்கம்என்று கூவித் தடியூன்றி அப்பெருமாள் அங்குவர லானார்; அகமகிழ்ந்தார் அவ்விருவர். சாய்ந்திருக்க நாற்காலி தந்தார்; பருகப்பால் ஈந்து, நலங்கேட்டே எதிரில் அமர்ந்தார்கள். "வேடப்ப னோடுதான் வில்லிய னூரினின்று வாடகை வண்டியிலே வந்தேன்; கடைத்தெருவில் வெண்காயம் என்ன விலையென்று கேட்டுவந்தேன் சுண்டைக்காய் வாங்கிவரச் சொன்னாளென் பெண்டாட்டி. வில்லிய னூரில்ஓர் வேடிக்கை கண்டேன்உம் செல்வனைப் பற்றிய செய்திஅது! சொல்லுகிறேன்: 'பத்து மணிஇருக்கும் பாவை நகைமுத்தாள் புத்தகமும் கையுமாய் வீட்டுப் புறத்தினிலே உள்ளதொரு மாமரத்தின் நீழலிலே உட்கார்ந்து தெள்ளு தமிழில் செலுத்தியிருந் தாள்கருத்தை; வேடப்பன் வந்தான் விளைந்தவற்றை என்சொல்வேன்! 'தேடக் கிடைத்தஎன் செல்வமே' என்றான். மறைந்துநான் கேட்டிருந்தேன் வஞ்சியின் பேச்சை! 'இறந்தேன் நான்இன்று பிறந்தேன்' எனப் புகன்றாள் அன்பின் பெருக்கத்தை அன்னவர்பால் நான்கண்டேன்; 'என்று மணம் நடக்கும்?' என்றுகேட் டாள்பாவை. 'பெற்றோர்பால் நீநமது பேரன்பைக் கூறிமணம் இற்றைக்கே ஈடேற ஏற்பாடு செய்'என் றாள். 'நீதான்சொல்' என்றுரைத்தான் வேடப்பன்! நேரிழையாள், 'ஓதுவேன். நாணமில்லா ஒண்டொடிஎன் பார்'என்றாள். இவ்வாறு பேசி இருந்தார்கள் அன்னவற்றை அவ்வாறே சொல்ல அறியேன்; அதேநேரம் வீட்டினின்று தாயழைத்தாள் மெல்லி மறைந்தாளே. ஓட்ட மெடுத்தானே வேடப்பன் உட்சென்றான். 'வா'என் றழைத்தாள் மலர்க்குழலி சோறிட்டாள், பாவையவள் வேடப்பன் பார்க்க உலவியதும், மெத்தையைத் தூக்கிவந்து தாழ விரித்ததுவும், முத்துச் சிரிப்பை முகத்தில் பரப்பியதும் வேடப்பன் தூங்குவது போலே விழிமூடி ஆடுமயில் வந்தால் அழகைப் பருகுவதும், எவ்வாறு ரைப்பேன்காண் யானோர் கவிஞனா? இவ்வேளை இந்தநொடி ஏற்பாடு செய்திடுக! இன்றே செயத்தக்க இன்பமணத் தைநாளைக் கென்றால், துடிக்கும் இளமைநிலை என்னவாகும்?" என்றார் பெருமாள். இவையனைத்தும் கேட்டிருந்த குன்றொத்த தோளானும் தங்கக் கொடியும் மயிர்கூச் செறிய மகிழ்ச்சிக் கடலில் உயிர்தோயத் தங்கள் உடலை மறந்தே கலகலென வேசிரித்தும் கைகொட்டி ஆர்த்தும் உலவியும் ஓடியும் ஊமை எனஇருந்தும் பேசத் தலைப்பட்டார் "எங்கள் பெரியபிள்ளை யின்காதல் நெஞ்சினிலே வாழுகின்ற வஞ்சியைஎம் சொத்தெலாம் தந்தேனும் தோதுசெய மாட்டோமா? கத்தினான் மாவரசன் கண்டபடி ஏசிவிட்டான். என்பிள்ளை தன்மகள்மேல் எண்ணம்வைத்தான் என்னில், அவன் பொன்னடியை என்தலைமேல் பூண மறுப்பேனா? என்பிள்ளை உள்ளம், அவன் ஈன்றகிளிப் பிள்ளையுள்ளம் ஒன்றானால் எங்கள் பகையும் ஒழியாதோ!" என்றான் மணவழகன், ஏதுரைத்தாள் தங்கம்எனில், "இன்றேநீர் வில்லியனூர் ஏகுகதாத் தாதாத்தா! எங்கள் மகன்கருத்தை எம்மிடம்சொன் னீர்அதுபோல் திங்கள்முகத் தாள்கருத்தை அன்னவர்பால் செப்பி மணத்தை விரைவில் மணமகன் வீட்டில் பணச்செலவு நேர்ந்தாலும் பாங்காய் நடத்த உறுதிபெற்று வந்தால்எம் உள்ளம் அமையும். அறிவுடையீர் உம்மால்தான் ஆகும்இது" என்றாள். சிற்றுண வுண்டு சிவப்பேறக் காய்ச்சியபால் பெற்றே பருகிப் பெரியதொரு வண்டியிலே ஏறினார் தாத்தா 'இசைவார் அவர்' என்று கூறிச்சென் றார்மகிழ்ச்சி கொண்டு.    6. மணமகன் வீட்டில் மணம்   அகவல் "காயா பழமா கழறுக" என்றாள். "கனிதான்" என்று கழறினார் தாத்தா. வண்டிவிட் டிறங்கி வந்தார் உள்ளே தங்கம் "நடந்ததைச் சாற்றுக" என்றாள். "என்மேல் மாவரசுக் கெரிச்சல் இருந்ததா? மறைந்ததா?" என்றான் மணவழ கன்தான். "ஒப்பி னாரா? ஒப்பவில் லையா? செப்புக" என்று செப்பினாள் தங்கம். "இருந்தா ரன்றோ வீட்டார் எவரும்? கொல்லையில் காதலர் கூடிப் பேசிய எல்லாம் அவரிடம் இயம்பி னீரா? மறந்தீரா?" என்றான் மணவழ கன்தான். "குறுக்கே பேச்சேன்? பொறுக்க வேண்டும். உரைக்க மாட்டேனா? உட்கா ருங்கள்" என்றார் தாத்தா. இருவரும் அமர்ந்தார். "நான் கிளம்பினேன் நாலு மணிக்கே ஐந்து மணிக்கெல்லாம் அவ்விடம் சேர்ந்தேன். மாவர சிருந்தான். மலர்க்குழல் இருந்தாள். நகைமுத் திருந்தாள். நடந்ததைச் சொன்னேன். "வேறே எவனையும் விரும்பேன்" என்றும், "வேடப் பனைத்தான் விரும்பினேன்" என்றும், சட்ட வட்டமாய்ச் சாற்றினாள் மங்கையும். "திருமண முடிவு செப்புக" என்றேன். ஒருபேச் சில்லை, ஒப்புக் கொண்டார். "மணமகன் வீட்டில் மணம்நடக் கட்டும்" என்றேன் 'சரிதான்' என்றார் அவர்களும். "கருப்பண்ணன் என்பவன் கடைக்கு வந்து வெறுப்பாய்ப் பேச வேண்டிய தில்லை. ஆயினும் அவன்என் அன்புறு நண்பன் நம்பலாம் அவனை, நம்ப வில்லை; மணவழ கவனை மதிக்க வில்லை; அதனால் என்மனம் கொதித்த துண்டு. மணவழ கன்தன் மகனும், என்றன் இணையிலா மகளும் இணைந்தார் என்றால் பெற்றவர்க் கிதிலும் பேரின்ப மேது? நாளைக் கவர்களை நான்எதிர் பார்ப்பேன். மணவழகு, தங்கம், மைந்தன், மக்கள் அனைவரும் வரும்படி அறிவிக்க வேண்டும்!' மாவரசு, மலர்க்குழல், வாயால் இப்படி ஆவலோடு கூறினார். அறிக" என்று பெருமாள் தாத்தா பேசி முடித்தார். பெரும கிழ்ச்சி! பெரும கிழ்ச்சி! இரவெல்லாம் பயண ஏற்பாடு செய்தனர். விடியுமா? இரவின் இருட்டு விடியுமா? காலை மலர்கஎன் றனரே.    7. மணமக்கள் கருத்துரைகள்   நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா திண்ணையிலே மாவரசன் சிற்றானைக் குட்டிபோல் கண்ணை எதிர்அனுப்பிக் காத்துக் கிடக்கின்றான் வண்ண மலர்க்குழலி வந்திடுவாள் உட்செல்வாள் பெண்ணாள் நகைமுத்தோ பேசா துலவினளே. கழுத்து மணிகள் கலகலெனக் கொஞ்ச  இழுக்கும் எருதுகள் எக்களித்துத் தாவப் பழுப்புநிற வண்டியன்றும் பச்சையன்றும் ஆக முழுப்பளுவில் வீட்டுக்கு முன்வந்து நின்றனவே! மணவழகன், தங்கள் மகன், சிறுவன், தாத்தா தணியா மகிழ்ச்சி தழுவும் முகத்தால் அணியாய் இறங்கிவர மாவர சங்கே பணிவாய் வரவேற்கப் பாங்காய்உட் சென்றாரே. 'அம்மா வருக;என்று அன்புமலர்க் குழலும் கைமலர் தாவக் கனிவாய் வரவேற்றாள். செம்மைநகை முத்தும்எதிர் சென்று 'வணக்கம்' என்றாள். மெய்மை, மகிழ்ச்சி, அன்பு வீடெல்லாம் ஆர்த்தனவே! தூய்மைசெய நீரளித்துக் கூடத்தில் சொக்கட்டான் பாய்விரித்து நல்லாவின் பாலும் பருகவைத்து வாய்மணக்கும் வெள்ளிலைகாய் வட்டில் தனிலிட்டே ஓய்வாய் நலம்பேசி உள்ளம் மகிழ்ந் தாரங்கே. "வேடப்பன் உள்ளம் நகைமுத்தை வேண்டிற்றே ஆடும் மயிலும் அவன்மேல் உயிர்வைத்தாள். நாடு நகரறிய நாளன்றில் இங்கிவரை நீடூழி வாழ்க" என்றார் நெஞ்சார வேதாத்தா! ஈன்றார் கருத்தென்ன? இன்பத் திருமணத்தை மூன்றுநாட் பின்னே முடிக்க நினைக்கின்றேன். ஆன்ற பெரியோர்க் கழைப்பனுப்ப வேண்டுமன்றோ தோன்றியஉம் எண்ணத்தைச் சொல்வீர்"என் றார்தாத்தா. மகிழ்ச்சியுடன் ஒப்புவதாய் மாவரசன் தானுரைத்தான். புகழ்ச்சியுறும் "வேடப்பன் பூவை மணத்தை  இகழ்ச்சியா செய்திடுவேன்?" என்றாள் மனைவி. நகைப்போடு நன்றென் றுரைத்தான் மணவழகே! அன்புநகை முத்தின் அருகில் அமர்ந்திருந்த தன்துணைவி யானஎழில் தங்கத்தை நோக்கியே 'உன்கருத்தைச் சொல்'என் றுரைத்தான் மணவழகன். இன்ப நகைமுத்தும் ஏங்கிமுகம் பார்க்கையிலே; 'நானோ மறுப்பேன் நகைமுத்தே? என்மகனைத் தேனே, உயிரென்றாய்; சேயவனும் அன்புகொண்டான். மானே மயிலே மருமகளே என்வீட்டு வான நிலாவே மகிழ்"வென்றாள் தங்கமுமே! "இன்ப நகைமுத்தே உன்கருத்தை யானறிவேன். என்றாலும் இங்கே இருப்பார் அறிந்திடவே அன்பால் உரைத்திடுவாய் ஆணழகும் அப்படியே பன்னுதல் வேண்டு"மென்று தாத்தா பகர்ந்தனரே. "கட்டழக னைமணக்கக் காத்திருக்கின் றேனேநான் அட்டியில்லை அட்டியில்லை ஆனால் ஒருதிட்டம் மட்டமாய்ச் செலவிடுக எங்கள் மணமுடித்துத் தட்டா மல்ஈக தனியில்லம்" என்றனளே. மேலும் நகைமுத்து விண்ணப்பம் செய்கின்றாள் "ஏலுமட்டும் எங்கள் குடித்தனத்தை யாம்பார்ப்போம் ஏலாமை உண்டானால் என்மாமி யார்உள்ளார்!" சேல்இரண்டு கண்ணானாள் செப்பினாள் இப்படியே! "யானுமதை ஒப்புகிறேன்; என்கருத்தும் அன்னதுவே! நானோ கடையினிலே நன்றிருப்பேன் அப்பா, ஏ தேனும்ஒரு நூறுரூ பாய்மாதம் ஈந்திடட்டும். தேனோடை எம்வாழ்க்கை." என்றுரைத்தான் செம்மலுமே! "மாமிகொடு மைக்கு வழியில்லை. மைத்துனர்கள்  தாமொன்று சொல்லும் தகவில்லை. தன்துணைவன் ஏமாற்றி னான்தன் இளையவனை என்று சொல்லும் தீமையில்லை. தக்கதென்று" செப்பிமகிழ்ந் தார்தாத்தா. பெண்ணுக்குச் சொத்துரிமை இல்லைஎன்பர் நான்தருவேன், கண்ணை இமையிரண்டு காப்பதுபோல் என்மருகர் பண்ணும் குடித்தனத்தை மேலிருந்து பார்த்திடுவேன். உண்மை" என்றான் மாவரசன்; பெற்றவளும் ஒப்பினளே! "நகைமுத்தின் எண்ணத்தை நான்ஒப்பு கின்றேன். மிகஓர் 'குடும்ப விளக்கேற்றல்' நன்றே! தகும்"என்றாள் தங்கம்! மணவழகன் தானும் மகனுக்கு மாதமொரு நூறுதர ஒப்பினனே! மூன்றாநாள் நன்கு மணத்தை முடிப்ப தென்றும் ஏற்றுக்கொண்டார் எல்லோரும். சாப்பா டினிதுண்டார். வான்தோய்ந்த வெண்ணிலவில் வண்டி புறப்படுமுன் தேன்சுரக்கச் "சென்று வருகின்றோம்" என்றனரே.    8. திருமண அழைப்பு அகவல் "விடிந்தால் திருமணம்! விண்ணின் நிலவு வடிந்தஇன் றிரவு மணப்பெண் வருவதால், வாழ்த்தி நீங்கள் வரவேற் பதற்கும், காலை மலர்ந்ததும் கவின்மண வறையில் மாலை யிட்ட மணமக் கள்தமை வாழ்க என்று வாய்மலர்ந் திடவும், உடன்யாம் பரிந்திடும் உணவுண் ணுதற்கும், வந்தருள் புரிக, வந்தருள் புரிக!" என்று, தங்கம் மணவழகு நின்று வீடுதொறும் நவின்றனர் பணிந்தே!    9. முதல்நாள் இரவு   கட்டளைக் கலித்துறை அன்றிர வொன்ப தடிக்க முரசம் முழங்குமணி முன்றிலில் வாழை கமுகுதெங் கின்குலை முத்தின்ஈந்து நன்று சிறக்க நடுப்பகல் போல விளக்கெரியப் பொன்துகில் பூண்ட தெருமாதர் ஆடவர் போந்தனரே! விருப்பந் தரத்தக்க வெண்துகில் கட்டி விளக்கிலகும் தெருப்பந்தல் வாயிலிற் செந்தூக் கிலேமணித் தேர்இரண்டும் *இருப்பங் கெனத்தங்கம் செம்மல் இவர்நின் றிருந்தபடி வரத்தம் கைகூப்பி வருவார் தமைவர வேற்றனரே! (*இருப்பு அங்கு எனப் பிரிக்க)  மாடப் புறாக்கள் மயில்குயில் மான்நிகர் மங்கையர்கள் ஆடவர் பிள்ளைகள் எள்ளிட மின்றி அமர்ந்திருந்தார். வீடப் படித்தெருப் பந்தலில் அப்படி! மாடியின்மேல் வேடப்பன் பார்த்துநின் றான்மங்கை யாள்வரும் வேடிக்கையே! இசைவந் ததுபொம்பொம் என்றே! விழிகூச வந்ததொளி! மிசைவண் ணமெருகு கண்ணாடிச் சன்னல்கள் மின்விளக்கம் அசைகின்ற ஊசலின் முன்பின் இருக்கைகள் ஆகியதோர் விசைவண்டி வந்தது வந்தாள் நகைமுத்து மெல்லியலே! மாவர சன்பான மக்கள் மலர்க்குழல் மற்றவர்பின் ஏவலர் பெட்டிகள் பட்டுப் படுக்கைகள் ஏந்திவரப் பூவி லிருந்து பெடையன்னம் ஒன்று புறப்படல்போல் பாவை இறங்கினள் வண்டிவிட் டேதெருப் பந்தல்முன்னே! 'வாழி மணப்பெண் நகைமுத்து நல்லபெண்! வாழிஎன்றே ஆழி முழக்கென யாரு முழக்க, அடியெடுத்தே யாழின் நரம்பிசை ஏழும் சிலம்பும் சிலம்ப உடன் தோழி நடத்த நடந்தாள்இல் நோக்கிஅத் தூய்மொழியே! வானில் துவைத்த முழுநில வேமுகம் வண்கடலின்  மீனில் துவைத்தநீள் மைவிழியாள்அவள் வேடப்பனின் ஊனில் துவைத்தும் உயிரில் துவைத்தும்தன் வாயில்உண்ணத் தேனில் துவைத்தநற் செவ்வித ழாள்வீடு சேர்ந்தனளே! பாலும் பழமும்அப் பாவைக்க ளித்தனர்! பற்பலரும்  மேலும் கமழுநீர் தோளும் கமழ்மாலை வெள்ளிலைகாய் ஏலும் படிஎய்தி ஏகினர்! வேடப்பன் இங்குமங்கும் காலும் கடுகத் திரிவான் நகைமுத்துக் கண்படவே! அம்மா துயின்றன ரோ'என வேடப்பன் அவ்வறைக்குள் சும்மா வினவித் தலைநீட்ட அங்கொரு தோழி சொன்னாள்: "எம்மா தரும்துயின் றா"ரென வே! இது பொய்ம்மைஎன்றே செம்மா துளைஇதழ் சிந்தின ளேவெண் நகைமுத்துமே! மூடிய கண்களும் மூடாத நெஞ்சுமாய் முன்னறைக்குள் ஆடிய தோகை அடங்கினள்! அப்படி வேடப்பனும் பாடிய யாழ்போல் கிடந்தனன் ஓர்புறம்! பால்இரவோ ஓடிய தே,எதிர் உற்றது கீழ்க்கடல் ஒண்கதிரே!    10. மணவாழ்த்தும் வழியனுப்பும்   அகவல் எழுந்தது பரிதிக் குழந்தை கடலின் கெழுநீ லத்தில் செம்பொன் தூவி! கரிய கிழக்குவான் திரையில், வெளுப்பும் மஞ்சளும் செம்மணி வண்ணமும் ஒளிசெயும்! எழும்வளைந்து நெளிந்து விழும்கடல் அலையே. அழகிய தென்பாங் காடற் கலையே! புதிய காலையில் புதிய பரிதியின் எதிரில் அடடா சதிர்க்கச் சேரி! கிழக்கில் திராவிடற்குக் கிடைத்த கடல்முரசு, முழக்குவோன் இன்றி முழங்கும் இசையரசு! திரைகடல் முழக்கெனத் திருமண வீட்டின் பெருங்கூட் டிசையரங்கு செய்த இசைமழை தெருத்தொறும் இல்லந் தோறும் தென்றல் திருத்தேர் ஏறிச் சென்று காதெலாம் "வருக மணத்துக்" கென்று பெருகிற்று! மணவீடு நோக்கி வந்தனர். என்னே! அணிஅணி யாக அணியிழை மங்கைமார் துணையோடு நன்மலர் முக்கனி சுமந்து! நகைமுத்தை மலர்பெய்த நன்னீ ராட்டிக் குறைவற நறும்புகை குழலுக் கூட்டி மணக்குநெய் தடவி வாரிப்பூப் பின்னி மணியிழை மாட்டி, எம் கண்ணாட் டிக்கு ஏலும் சேலை எதுவென எண்ணி நிலாமுகத் திற்கு நீலச் சேலை நேர்த்தி ஆக்கி நிலைக்கண் ணாடி பார்க்கச் சொன்னார்; பார்த்த நகைமுத்தோ கண்ணாடியில்தனைக் கண்டாள்; தன்மனத்  துள்நாடி வேடனுக் கொப்பு நோக்கினாள். காலுக் குச்சிராய், மேலுக்குச் சட்டையடு சேலுக்கு நிகர்விழித் தெரிவை காணத் தென்னாட் டுச்சேர சோழபாண் டியரில் இந்நாள் ஒருவனோ என்ன நின்றான். 'வருக திருமண மக்கள்!' என்று திருந்து தமிழப் பெரியார் அழைத்தனர். திருமணப் பந்தலின் சிறப்புறு மணவறை, இருமண மக்களை ஏந்தித் தன்னிடை, முழுநில வழகொழுகு முகமும், மற்றும் எழுந்த பரிதிநேர் ஆணழகு முகமும் இருப்பது காட்டி இறுமாப் புற்றது! நிறைமணமன் றெலாம் நறுமணம், இன்னிசை  அறிஞர் பெண்டிர், ஆடவர் பெருங்கடல்! உதிரிப் புதுமலர் எதிருறு மன்றின் நிறைந்தார் கையில் நிறையத் தந்தனர். பெரியவர் ஒருவர், "பெண்ணே நகைமுத்து! வேடப் பனைநீ விரும்பிய துண்டோ?" வாழ்வின் துணைஎனச் சூழ்ந்த துண்டோ?" என்னலும், நகைமுத் தெழுந்து வணங்கி, "வேடப்பனை நான் விரும்பிய துண்டு; வாழ்வின் துணைஎன்று சூழ்ந்தேன்" என்றாள். "வேடப் பாநீ மின்நகைமுத்தை மணக்கவோ நினைத்தாய்? வாழ்க்கைத் துணைஎன அணுக எண்ணமோ அறிவித் திடுவாய்" என்னலும் வேடன் எழுந்து வணங்கி "மின்நகை முத்தை விரும்பிய துண்டு; வாழ்வின் துணையாய்ச் சூழ்ந்தேன்" என்றான். மணகமள் நகைமுத்து வாழ்க வாழ்கவே! மணமகன் வேடப்பன் வாழ்க வாழ்கவே!" என்றார் அனைவரும் எழில்மலர் வீசியே! தன்மலர் மாலை பொன்மகட் கிடவும் பொன்மகள் மாலையை அன்னவற் கிடவும் ஆன திருமணம் அடைந்த இருவரும், வானம் சிலிர்க்கும் வண்டமி ழிசைக்கிடை மன்றினர் யார்க்கும், அன்னைதந் தையர்க்கும் நன்றி கூறி வணக்கம் நடத்தி நிற்றலும், "நீவிர் நீடு வாழிய! இற்றைநாள் போல எற்றைக்கும் மகிழ்க! மேலும்உம் வாழ்வே ஆலெனச் செழித்து அறுகுபோல் வேர்பெற! குறைவில் லாத  மக்கட் பேறு மல்குக" என்று, மிக்கு யர்ந்தார் மேலும்வாழ்த் தினரே! அமைந்தார் எவர்க்கும் தமிழின் சீர்போல் கமழும்நீர் தெளித்துக் கமழ்தார் சூட்டி வெற்றிலை பாக்கு விரும்பி அளித்தார். மற்றும் ஓர்முறை 'வாழிய நன்மணம்' என்று, வந்தவர் எழுந்த அளவில், எழில்மண மக்களும், ஈன்றார் தாமும் "நன்றி ஐயா! நன்றி அம்மா! இலைபோட்டுப் பரிமாறி எதிர்பார்த் திருக்கும் எம்அவா முடிக்க இனிதே வருக! உண்ண வருக, உண்ண வருக" என்று பன்முறை இருகை ஏந்தினர் நன்மண விருந்துக்கு நண்ணினர் அனைவரும். மணமகள் மணமகன் மகிழ்வொடு குந்தினர்; துணையடு துணைவர் இணைந்திணைந்து குந்தினர்; வரிசையாய்ப் பல்லோர் வட்டித் திருந்தனர். விருந்து முடித்து, விரித்த பாயில் அமர்ந்தார்க்குச் சந்தனம் அளித்துக் கமழ்புனல் அமையத் தெளித்தே அடைகாய் அளிக்க மணமக் கள்தமை வாழ்த்தினர் செல்கையில் எழில்மண மக்கள் ஈன்றோர் வழிய னுப்பினர் வணக்கம் கூறியே.    11. சோலையிற் காதலர்   எண்சீர் விருத்தம் நகைமுத்து வேடப்பன் மகிழ்ச்சி யோடு  நாழிகையை வழியனுப்பிக் காத்தி ருந்தார்; மிகநல்ல மணிப்பொறியும் ஐந்த டிக்க   விசைவண்டி ஓட்டுபவன் வந்து நின்று "வகைமிக்க அரசினரின் பூங்கா விற்கு  வருகின்றீரோ?" என்று வணங்கிக் கேட்டான்; தகதகெனத் தனியறைக்கோர் அழகைச் செய்யும்  தையலினாள் வேடப்பன் "ஆம்ஆம்" என்றார். விசைவண்டி ஏறினார் இரண்டு பேரும்;  விரைகின்ற காவிரியின் வெள்ளம் போல இசைஎழுப்பிச் சோலைக்குள் ஓடி நிற்க  இறங்கினார் மணமக்கள் உலவ லானார்; அசையும்அவள் கொடியிடையை இடது கையால்  அணைத்தபடி வேடப்பன் அழகு செய்யும் இசைவண்டு பாடுமலர் மரங்கள் புட்கள்  இனங்காட்டிப் பெயர்கூறி நடத்திச் சென்றான். வளர்ப்புமயில் நாலைந்து மான்ஏ ழெட்டு  மற்றொருபால் புறாக்கூட்டம் பெருவான் கோழி வளைகொண்டை நிலந்தோயக் குப்பைத் தீனி  வாய்ப்பறியும் நிறச்சேவல் கூட்டுக் கிள்ளை விளைக்கின்ற காட்சியின்பம் நுகர்ந்தே ஆங்கோர்  விசிப்பலகை மேலமர்ந்தார்; வெள்ளைக் கல்லால் ஒளிசிறக்கும் இரண்டுருவம் காணு கின்றார்;  ஒருபெண்ணின் அருள்வேண்டி ஒருவன் நின்றான். "இரங்காதோ பெண்ணுளந்தான் இந்நே ரந்தான்  இன்பத்தில் ஒருசிறிதே ஒன்றே முத்தம் தரவேண்டும் எனக்கெஞ்சி நிற்கக் கூடும்;  தந்திட்டால் கைச்சரக்கா குறைந்து போகும்? சரியாக ஆறுமணி, மாலைப் போது  தணலேற்றும் தென்றலினை எவன்பொ றுப்பான்? தெரிந்தனையோ? எனக்கேட்டான் எழில்வே டப்பன்!  தெரிந்ததென்றாள்." வீட்டுக்குச் செல்ல லுற்றார்.  12. இன்பத் துறை எண்சீர் விருத்தம் கட்டிலிட்டார் மெத்தை,தலை யணைகள் இட்டார்  கண்கவரும் வெண்துகிலும் விரித்தார் மேலே பட்டுப்போர் வைமடித்துப் பாங்கில் வைத்தார்  பட்ட இடம் கமழ்கின்ற பன்னீர் வீசித்  தட்டுகின்ற காம்பகற்றி மலர்கள் இட்டுச்  சந்தனம்பன் னீர்,அடைகாய்த் தட்ட மைத்து மட்டின்றி முக்கனி,பால் பண்ணி யங்கள்  வைத்தெங்கும், விளக்கங்கள் ஏற்றி னார்கள். மிகச்சிறப்புச் செய்திட்ட தனிய றைக்கு  வெளிப்புறத்துத் தாழ்வாரம் நிறையக் கூடி நகைத்தாடும் குழந்தைகளில் ஒருவன் கேட்டான்  'நாங்கள்விளை யாடும்அறை இதுவோ' என்று "புகவேண்டாம், புதுமணப்பெண் புதுமாப் பிள்ளை  புலவர்தரு திருக்குறளின் பொருளாய் தற்கு வகைசெய்து வைத்தஇடம், வாழ்வில் இன்பம்  வாய்க்கும்இடம்!" மணமக்கள் வாழ்க நன்றே..                  நான்காம் பகுதி மக்கட் பேறு அறுசீர் விருத்தம்  "நகைமுத்து வேடப் பன்தாம்  நன்மக்கள் பெற்று வாழ்க! நிகழுநாள் எல்லாம் இன்பம்  நிலைபெற! நிறைநாட் செல்வர் புகழ்மிக்கு வாழ்க வாழ்க!" எனத் தமிழ்ப் புலவர் வாழ்த்த நகைமுத்து நல்வே டப்பன்  மணம்பெற்று வாழ்கின் றார்கள். *மிகுசீர்த்தித் தமிழ வேந்தின்  அரசியல் அலுவற் கெல்லாம் தகுசீர்த்தித் தலைவ னான  வள்ளுவன் அருளிச் செய்த தொகுசீர்த்தி அறநூ லின்கண்  சொல்லிய தலைவி மற்றும் தகுசீர்த்தித் தலைவன் போலே  மணம் பெற்றின்புற் றிருந்தார்! *"மிகுசீர்த்தி........வள்ளுவன்" என்றது எதற்கு எனில் வள்ளூவன் என்பது  அந் நாளில் அரசியல் அலுவலகத்தின் தலைவனுக்குப் பெயர் என்பதைக் குறிப்பதாகும். நாளெலாம் இன்ப நாளே!  நகைமுத்தைத் தழுவும் வேடன் தோளெலாம் இன்பத் தோளே:  துணைவியும் துணைவன் தானும் கேளெலாம் கிளைஞர் எல்லாம்  போற்றிட இல்ல றத்தின் தாளெலாம் தளர்தல் இன்றி  நடத்துவர் தழையு மாறே! பெற்றவர் தேடி வைத்த  பெருஞ்செல்வம் உண்டென் றாலும், மற்றும்தான் தேட வேண்டும்  மாந்தர்சீர் அதுவே அன்றோ? கற்றவன் வேடப் பன்தான்  கடல்போலும் பலச ரக்கு விற்றிடும் கடையும் வைத்தான்  வாழ்நாளை வீண்நாள் ஆக்கான்! இனித்திட இனித்தி டத்தான்  எழில்நகை முத்தி னோடு தனித்தறம் நடாத்து தற்குத்  தனியில்லம் கொண்டான்! அன்னோன் நினைப்பெல்லாம் இருநி னைப்பாம்:  கடைநினைப் பொன்று; நல்ல கனிப்பேச்சுக் கிள்ளை வாழும்  தன்வீட்டின் கருத்தொன் றாகும். மூன்றாந்தெ ருவில மைந்த  பழவீட்டில் அன்பு மிக்க ஈன்றவர் வாழு கின்றார்.  இடையிடை அவர்பாற் சென்றே தேன்தந்த மொழியாள் தானும்  செம்மலும் வணங்கி மீள்வார்; ஈன்றவர் தாமும் வந்தே  இவர்திறம் கண்டு செல்வார். நல்லமா வரசும், ஓர்நாள்  நவில்மலர்க் குழலாள் தானும் வில்லிய னூரி னின்று  மெல்லியல் நகைமுத் தைத்தம் செல்வியை மகளைப் பார்க்கத்  திடும்என்று வந்து சேர்ந்தார். அல்லிப்பூ விழியாள் தங்கம்  வேடப்பன் அன்னை வந்தாள். இங்கிது கேள்விப் பட்டே  எதிர்வீட்டுப் பொன்னி வந்தாள். பொங்கிய மகிழ்ச்சி யாலே  நகைமுத்தாள் புதிதாய்ச் செய்த செங்கதிர் கண்டு நாணும்  தேங்குழல், எதிரில் இட்டே மங்காத சுவைநீர் காய்ச்ச  மடைப்பள்ளி நோக்கிச் சென்றாள். அனைவரும் அன்பால் உண்டார்.  மலர்க்குழல், பொன்னி தன்னைத் தனியாக அழைத்துக் காதில்  சாற்றினாள் ஏதோ ஒன்றை! நனைமலர்ப் பொன்னி ஓடி  நகைமுத்தைக் கலந்தாள்! வந்தாள்! 'கனிதானா? காயா?' என்று  மலர்க்குழல் அவளைக் கேட்டாள். முத்துப்பல் காட்டிப் பொன்னி  மூவிரல் காட்டி விட்டுப் புத்தெழில் நகைமுத் தின்பால்  போய்விட்டாள்; இதனை எண்ணிப் பொத்தென மகிழ்ச்சி என்னும்  பொய்கையில் வீழ்ந்தாள் அன்னை; அத்தூய செய்தி கேட்ட  தங்கமும் அகம்பூ ரித்தாள். மலர்க்குழல் தன்ம ணாளன்  மாவர சிடத்தில் செய்தி புலப்பட விரல்மூன் றாலே  புகன்றனள். அவனும் கேட்டு மலைபோலும் மகிழ்ச்சி தாங்க  மாட்டாமல் ஆடல் உற்றான்! இலாதவர் தமிழ்ச்சீர் பெற்றார்  எனஇருந் தார்எல் லோரும். 'நகைமுத்து நலிவு றாமல்  நன்றுகாத் திடுங்கள்' என்று மிகத்தாழ்ந்து கேட்டுக் கொண்டாள்  மலர்க்குழல்! 'மெய்யாய் என்றன் அகத்தினில் வைத்துக் காப்பேன்  அஞ்சாதீர்' என்றாள் தங்கம். நகைமுத்துச் சுவைநீர் தந்தாள்.  நன்றெனப் பருகி னார்கள். மாலையாய் விட்ட தென்றும்  மாடுகன் றுகளைப் பார்க்க வேலைஆள் இல்லை என்றும்  விளம்பியே வண்டி ஏற மூலைவா ராமல் மாடு  முடுகிற்றே! அவர்கள் நெஞ்சோ மேலோடல் இன்றிப் பெண்ணின்  வீட்டையே நோக்கிப் பாயும். "இன்றைக்கே நம்வீட் டுக்குத்  திரும்பிட ஏன்நி னைத்தாய்?" என்றுமா வரசு கேட்டான்;  "எனக்கான பெண்டிர்க் கெல்லாம் நன்றான இந்தச் செய்தி  நவிலத்தான் அத்தான்" என்றாள். "என்தோழ ரிடம்சொல் லத்தான்  யான்வந்தேன்" என்றான் அன்னோன். தங்கமோ மகனை விட்டுத்  தன்வீடு வந்து சேர்ந்தாள்; அங்குநாற் காலி ஒன்றில்  அமர்ந்தனள்; உடன்எ ழுந்தாள் எங்கந்தச் சாவி என்றாள்?  ஈந்தனர் இருந்த மக்கள் செங்கையால் திறந்தாள் தோட்டச்  சிறியதோர் அறையை நாடி. எழில்மண வழகன் வந்தான்  தங்கத்தின் எதிரில் நின்றான். "விழிபுகா இருட்ட றைக்குள்  என்னதான் வேலை? இந்தக் கழிவடைக் குப்பைக் குள்ளே  கையிட்டுக் கொள்ளு வானேன்? மொழியாயோ விடை எனக்கு?  மொய்குழால்" என்று கேட்டான். அறையினில் அடுக்கப் பட்ட  எருமூட்டை அகற்றி, அண்டை நிறைந்திட்ட விறகைத் தள்ளி  நெடுங்கோணி மூட்டை தள்ளிக் குறுகிய இடத்தி னின்று  குந்தாணி நீக்கி அந்தத் துறையிலே கண்டாள் பிள்ளைத்  தொட்டிலை எடுக்க லானாள். "நகைமுத்தாள்" என்று கூறி  நடுமூன்று விரலைக் காட்டித் "துகள்போகத் துடைக்க வேண்டும்  தொட்டிலை" என்றாள் தங்கம். மகிழ்ந்தனன்! எனினும், 'பிள்ளை  மருமகள் பெறவோ இன்னும் தொகைஏழு திங்கள் வேண்டும்  இதற்குள்ஏன் தொட்டில்?" என்றான். "பேரவா வளர்க்கும் என்பார்  பேதமை! அதுபோல் நீயும் பேரனைக் காண லான  பேரவாக் கொண்ட தாலே, சீருற மூன்று திங்கட்  கருக்கொண்ட செய்தி கேட்டுக் காரிருள் தன்னில் இன்றே  தொட்டிலைக் கண்டெ டுத்தாய்". எனமண வழகன் சொன்னான்   ஏந்திழை சிரித்து நாணி இனிதான தொட்டி லைப்போய்  ஒருபுறம் எடுத்துச் சார்த்தித் தனதன்பு மணாள னுக்குச்  சாப்பாடு போடச் சென்றாள்; தனிமண வழகன் வந்து  தாழ்வாரத் தேஅ மர்ந்தான். உணவையும் மறந்து விட்டான்;  தெருப்பக்கத் தறையின் உள்ளே பணப்பெட்டி தனிலே வெள்ளிப்  பாலடை தேடு தற்குத் துணிந்தனன்; அறையில் சென்றான்.  பெட்டியைத் தூக்கி வந்து கணகண வெனத்தி றந்தான்.  கைப்பெட்டி தனைஎ டுத்தான். அதனையும் திறந்தான் உள்ளே  ஐந்தாறு துணி பிரித்து முதுமையாற் சிதைந்து போன  மூக்குப்பா லடையைக் கண்டான். எதிர்வந்து நின்றாள் தங்கம்.  "பார்த்தாயா இதனை!" என்றான். மதிநிகர் முகத்தாள் "யானும்  மணாளரும் ஒன்றே" என்றாள். நகைமுத்தாள் மூன்று திங்கள்  கருவுற்ற நல்ல செய்தி வகைவகை யாகப் பேசி  மகிழ்ச்சியில் இரவைப் போக்கிப் பகல்கண்டார். மாம னாரும்  நகைமுத்தைப் பார்த்து மீண்டார். அகல்வாளோ தங்கம்? அங்கே  நகைமுத்தோ டிருக்க லானாள். "சூடேறிற் றாவெந்நீர் தான்?  விளவிடு சுருக்காய்" என்று வேடப்பன் சொன்னான், அன்று  விடிந்ததும் நகைமுத் தின்பால்! கூடத்தில் இருந்த தங்கம்  "கூடாது கூடா தப்பா வாடவே லைவாங் காதே  வஞ்சிமுன் போலே இல்லை". எனக்கூறித் தானே சென்று  வெந்நீரை எடுத்து வந்தாள்; மனமலர் சிறிது வாட  விழிமலர் அவன்மேல் ஓட நனைமலர்க் குழலாள் ஆன  நகைமுத்தாள் தன்ம ணாளன் இனிதாகக் குளிப்ப தற்கே  இயன்றவா றுதவச் சென்றாள். "நகைமுத்து முன்போல் இல்லை  நலியச்செய் யாதே" என்று புகன்றனர் அன்னை யார். ஏன்  புகன்றனர்? எனத்த னக்குள் புகன்றனன். எனினும் தன் கைப்  புறத்துள்ள நகைமுத் தாளைப்  புகல்என்றும் கேட்டா னில்லை  பொழுதோடக் கேட்போம் என்றே. பொழுதோட, இரவு வந்து  பொலிந்தது மணிவி ளக்கால்! எழுதோவி யத்தாள் அன்பால்  எதிர்பார்த்தாள்! கடையைக் கட்டி முழுதாவ லோடு சாவி  முடிப்புடன் வேடன் வந்தான்; தொழுதோடி 'வருக' என்ற  சொல்லோடு வரவேற் றாள்பெண். பிள்ளையின் வரவு கண்டு  சிலசில பேசித் தங்கம் உள்ளதன் நகைமுத் தின்பால்  சொல்லென உரைத்துச் சென்றாள்; "கிள்ளையே! நகைமுத் தாளே!  கிட்டவா; என்றன் தாயார் துள்ளிப்போய் தாமே வெந்நீர்  தூக்கிவந் தார்கள் அன்றோ? "நகைமுத்து முன்போல் இல்லை  நலிவுசெய் யாதே, என்று புகன்றனர் அன்றோ?" என்றான் " பொன்னே அ·தென்ன?" என்று மிக ஆவலோடு கேட்டான்.  தன்மூன்று விரல்கள் காட்டி முகநாணிக் கீழ்க்கண் ணாலே  முன்நின்றான் முகத்தைப் பார்த்தாள். 'கருவுற்றுத் திங்கள் மூன்று  கண்டாயா?' எனவே டப்பன் அருகோடித் தழுவிப் "பெண்ணே  அறிவிப்பாய்" என்றான்; "ஆம் ஆம் இருநூறு தடவை கேட்பீர்!"  எனக்கூறி அடுக்க ளைக்குப் பரிமாறச் சென்றாள்! காளை  மகிழ்ச்சியிற் பதைத்தி ருந்தான். நான்சிறு பையன் அல்லேன்  நான்தந்தை! என்ம னைவி தான்மூன்று திங்க ளாகக்  கருவுற்றாள்! தாய்மை உற்றாள்! வான்பெற்ற நிலவைப் போல  வந்தொரு குழந்தை என்னைத் தேன்பெற்ற வாயால் அப்பா  எனத்தாவும் திங்கள் ஏழில். பெற்றதாய் மடியின் மீது  யாழ்கிடப் பதுபோல் பிள்ளை உற்றிடும்; அம்மா என்னும்;  அவ்விசை, அமிழ்தின் ஊற்றாம்! கற்றார்போல் அக்கு ழந்தை  கண்டுதாய் கைப்பு றத்தில் நற்றமிழ்ப் பால் குடிக்க  நகர்த்தும்தன் சிவந்த வாயை. அணைத்துக்கொண் டிடுவாள் அன்னை  அமிழ்தச்செம் பினையும், தன்பால் இணைஇதழ் குவிய உண்ணும்  இளங்குழந் தையையும் சேர்த்தே அணிமேலா டையினால் மூடி  அவள்இடை அசைப்பாள்! அன்பின் பணிகாண்பேன் வையம் பெற்ற  பயனைக்கண் ணாரக் காண்பேன். எனப்பல வாறு வேடன்  எண்ணத்தின் கள்அ ருந்தி மனைநல்லாள் அழைக்கத் தேறி  உணவுண்ண மகிழ்ந்து சென்றான்; இனிதான உணவு நாவுக்  கினிதாகும்; கருக்கொண் டாளின் புனைமேனி காணு கின்றான்.  புத்துயிர் காணு கின்றான். அகவல் மகள்கரு வுற்ற மகிழ்ச்சிச் செய்தியை மாவரசு தானும் மலர்க்குழல் தானும் வில்லிய னூரில் சொல்லா இடம்எது? நகைமுத்துக் கருவுற்ற நல்ல செய்தியை அறிந்தோர் அனைவரும் வந்து வந்து தத்தம் மகிழ்ச்சியும் வாழ்த்தும் தந்து சென்றார்; அவர்கள் திண்ணையில் தன்னுடன் அதையே பேசி அமர்ந்திரா ததுதான் மாவர சுக்கு வருத்தம் தந்தது! தெருவிற் செல்லும் மகளிரை அழைத்துக் "கருவுற் றாள்என் கண்ணிகர் பெண்ணாள்; காணச் சென்றேன் காலையில்; கண்டே உடனே திரும்பினேன்; உடல்வலிக் கின்றதே என்ன செய்யலாம்" என்பாள் மலர்க்குழல்; வேலைக் காரிகள் வேறெது பேசினும் பெண்கரு வுற்ற பெருமையே பேசுவாள். "இந்த வூட்டில் முந்திமுந் திஒரு பேரன் பொறக்கப் போறான். ஆமாம் இஞ்சி மொளைக்கப் போவுது. நல்ல எலுமிச் சம்பழம் பழுக்க இருக்குது. நல்ல வூட்டில் எல்லாம் பொறக்கும் குடுகுடு குடுகுடு குடுகு டுகுடும்" என்று குடுகுடுப்பைக் காரன் இயம்பினான்! வழக்கம் போல்அவன் வந்து சொன் னாலும் மலர்க்குழ லுக்கும் மாவர சுக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சி இயம்பவோ முடியும்? அழுக்குப் பழந்துணி அவன்கேட்டு நின்றான். புதுவேட்டி தந்து, 'போய்நா டோறும் இதுபோல் சொல்லி இதுபோல் கொள்"என்று மாவரசு சொன்னான்; மலர்க்குழல் சொன்னாள்; எழில்வே டப்பனை ஈன்றோர் தாமும் நகைமுத் தாளின் நற்றந்தை தாயாரும் கருவுற் றாள்மேல் கண்ணும் கருத்துமாய் நாளினை மகிழ்ச்சியோடு நகர்த்தி வந்தனர். பாளைச் சிரிப்பினாள் பசும்பொற் பலாப்பழம் மடியிற் சுமந்தபடி, "பத்தாம் திங்களின்" முடிமேல் தன்மலர் அடியை வைத்தாள். வில்லிய னூரை விட்டுத் தன்னருஞ் செல்வி யுடனிருந்து மலர்க்குழல் செய்யும் உதவி உடலுக்குயிரே போன்றது! மாவரசு நாடோறும் வந்து வந்து நாவர சர்களின் நல்ல நூற்களும் ஓவியத் திரட்டும், உயர்சிற் றுணவும், வாங்கித் தந்து, மகள்நிலை கண்டு போவான், உள்ளத்தைப் புதுவையில் நிறுத்தி; நீடு மணிப்பொறி ஆடுங் காய்போல் தங்கம், தன்வீடு தன்மகன் வீடு நாடுவாள் மீள்வாள் மணிக்குநாற் பதுமுறை. அயலவர் நாடும் அன்னை நாடும் இனிப்பில் இருநூறு வகைபடச் செய்த அமிழ்தின் கட்டிகள், அரும்பொருட் பெட்டிகள் வாங்கி வந்து மணவழ கன்தான் "இந்தா குழந்தாய்" என்றுநகை முத்துக்கு ஈந்து போவான், இன்னமும் வாங்கிட! கறந்தபால் நிறந்திகழ் கவின்உடை பூண்ட மருத்து வச்சி நாடொறும் வருவாள். நகைமுத் தாளின் உடல்நிலை நாடித் தகுமுறை கூறித் தாழ்வா ரத்தில் இருந்தபடி இருப்பது கூடா தென்றும் உலாவுக என்றும் உரைத்துச் செல்கையில், வீட்டின் வெளிப்புறத்து நின்று வேடப்பன், "நகைமுத் துடம்பு நன்று தானே? கருவுயிர்ப் பதில்ஒரு குறை யிராதே? சொல்லுக அம்மா, சொல்லுக அம்மா!" என்று கேட்பான்; துன்பமே இராதென நாலைந் துமுறை நவின்று செல்வாள். அயலகத்து மயில்நிகர் அன்புத் தோழிமார் குயில்மொழி நகைமுத்தைக் கூடி மகிழ்ந்து கழங்கு, பல்லாங் குழிகள் ஆடியும் எழும்புகழ்த் திருக்குறள் இன்பம் தோய்ந்தும் கொல்லை முல்லை மல்லிகை பறித்தும் பறித்தவை நாரிற் பாங்குறத் தொடுத்தும் தொடுத்தவை திருத்திய குழலிற் சூடியும் பாடியும் கதைகள் பகர்ந்தும் நாழிகை ஓடிடச் செய்வார் ஒவ்வொரு நாளும்; நன்மகளான நகைமுத் துக்குப் பிறக்க இருப்பது பெண்ணா ஆணா என்பதை அறிய எண்ணி மலர்க்குழல் தன்னெதிர் உற்ற தக்கார் ஒருவர்பால் என்ன குழந்தை பிறக்கும் என்று வீட்டு நடையில் மெல்லக் கேட்டாள்; பெரியவர் "பெண்ணே பிறந்து விட்டால் எங்கே போடுவீர்?" என்று கேட்டார். "மண்ணில் பட்டால் மாசுபடும் என்றுஎன் கண்ணில் வைத்தே காப்பேன் ஐயா" என்று மலர்க்குழல் இயம்பி நின்றாள். "ஆணே பிறந்தால் அதைஎன் செய்வீர்?" என்று கேட்டார் இன்சொற் பெரியவர். "ஆணையும் அப்படி ஐயா" என்று மலர்க்குழல் மகிழ்ந்து கூறி நின்றாள். "பெண்ணே ஆயினும் ஆணே ஆயினும் பிறத்தல் உறுதி" என்றார் பெரியவர். இதற்குள் உள்ளே இருந்தோர் வந்தே குறிகேட்ட மலர்க்குழல் கொள்கை மறுத்துச் சிரித்தனர்! வீட்டினுள் சென்றார். வருத்தியது இடுப்புவலி நகைமுத் தையே. எண்சீர் விருத்தம் பறந்ததுபார் பொறிவண்டி சிட்டுப் போலப்  பழக்கமுள மருத்துவச்சி தனைஅ ழைக்க! உறவின்முறைப் பெண்டிர்பலர் அறைவீட் டுக்குள்  ஒண்டொடியாள் நகைமுத்தைச் சூழ்ந்தி ருந்தார்; நிறைந்திருந்தார் ஆடவர்கள் தெருத்திண் ணைமேல்;  நிலவுபோல் உடைபுனைந்த மருத்து வச்சி பொறிவண்டி விட்டிறங்கி வீட்டுட் சென்றாள்;  புதியதோர் அமைதிகுடி கொண்ட தங்கே. பேச்சற்ற நிலையினிலே உள்ளி ருந்து  பெண்குழந்தை! பெண்குழந்தை!! என்ப தான பேச்சொன்று கேட்கின்றார் ஆட வர்கள்;  பெய்என்ற உலகுக்குப் பெய்த வான்போல் கீச்சென்று குழந்தையழும் ஒலியும் கேட்டார்;  கிளிமொழியாள் மலர்க்குழலும் வெளியில் வந்து "மூச்சோடும் அழகோடும் பெண்கு ழந்தை  முத்துப்போல் பிறந்ததுதாய் நலமே" என்றாள். அச்சமென்னும் பெருங்கடலைத் தாண்டி ஆங்கோர்  அகமகிழ்ச்சிக் கரைசேர்ந்தார்! கடையி னின்று மிச்சமுறக் கற்கண்டு கொண்டு வந்தார்;  வெற்றிலையும் களிப்பாக்கும் சுமந்து வந்தார்; மெச்சிடுவா ழைப்பழத்தின் குலைகொ ணர்ந்தார்;  மேன்மேலும் வந்தார்க்கும் வழங்கி னார்கள்; பச்சிளங் குழந்தைக்கும் தாய்க்கும் வாழ்த்துப்  பாடினார் மகளிரெல்லாம் தாழ்வா ரத்தில். அறுசீர் விருத்தம் ஈரைந்து திங்க ளாக  அகட்டினில் இட்டுச் சேர்த்த சீரேந்து செல்வந் தன்னை  அண்டையிற் சேர்த்துத் தாய்க்கு நேரேமெல் லாடை போர்த்து  நிலாமுகம் வானை, நோக்க ஓராங்கும் அசையா வண்ணம்  கிடத்தியே ஒருபாற் சென்றார். சென்றஅம் மகளிர் தம்மில்  தங்கம்போய்த் தன்ம கன்பால் "உன்மகள் தன்னைக் காண   வா" என அழைக்க லானாள்; ஒன்றும்சொல் லாம லேஅவ்  வேடப்பன் உள்ளே சென்றான்; தன்துணை கிடக்கை கண்டான்;  தாய்மையின் சிறப்புக் கண்டான். இளகிய பொன்உ ருக்கின்  சிற்றுடல், இருநீ லக்கண், ஒளிபடும் பவழச் செவ்வாய்  ஒருபிடிக் கரும்பின் கைகால் அளிதமிழ் உயிர்பெற் றங்கே  அழகொடும் அசையும் பச்சைக் கிளியினைக் காணப் பெற்றான்  கிடைப்பருஞ் செல்வம் பெற்றான். "நகைமுத்து நலமா" என்றான்  "நலம்அத்தான்" என்று சொன்னாள். "துகளிலா அன்பே! மிக்க  துன்பமுற் றாயோ!" என்றான். "மிகுதுன்பம் இன்பத் திற்கு  வேர்" என்றாள். களைப்பில் ஆழ்ந்தாள். "தகாதினிப் பேசல், சற்றே  தனிமைகொள்" என்றான்; சென்றான். சிற்சில நாட்கள் செல்ல  நகைமுத்து நலிவு தீர்ந்தாள்; வெற்பினில் எயில்சேர்ந் தாற்போல்  மேனியில் ஒளியும் பெற்றாள். கற்பாரின் நிலையே யன்றிக்  கற்பிப்பார் நிலையும் உற்றாள்! அற்றைநாள் மகளும் ஆகி   அன்னையும் ஆனாள் இந்நாள். பெயர்சூட்டு விழாந டத்த  அறிவினிற் பெரியோர் மற்றும், அயலவர் உறவி னோர்கள்  அனைவர்க்கும் அழைப்புத் தந்தார். வெயில்முகன் வேடப் பன்தன்  வீடெலாம் ஆட வர்கள் கயல்விழி மடவார் கூட்டம்  கண்கொள்ளாக் காட்சி யேஆம். ஓவியப் பாயின் மீதில்  உட்கார்ந்தோர் மின்இ யக்கத் தூவிசி றிக்காற் றோடு  சூழ்பன்னீர் மணமும் பெற்றார். மூவேந்தர் காத்த இன்ப  முத்தமிழ் இசையுங் கேட்டார். மேவும்அவ் வவையை நோக்கி  வேடப்பன் வேண்டு கின்றான். "தோழியீர் தோழன் மாரே,  வணக்கம்!நற் றூய்த மிழ்தான் வாழிய! அழைப்பை எண்ணி  வந்தனிர்; உங்கள் அன்பு வாழிய! இந்த நன்றி  என்றும்யாம் மறப்போம் அல்லோம். ஏழையோம் பெற்ற பெண்ணுக்கு  இடுபெயர் விழாநன் றாக! இவ்விழாத் தலைமை தாங்க  இங்குள்ள அறிவின் மூத்தோர் செவ்விதின் ஒப்பி எங்கள்  செல்விக்குப் பெயர் கொடுக்க! எவ்வெவர் வாழ்த்தும் நல்க!  இறைஞ்சினோம்" என்ற மர்ந்தான். "அவ்வாறே ஆக" என்றே  நகைமுத்தும் உரைத் தமர்ந்தாள். அங்குள்ள அறிவின் மூத்தோர்  அவையிடைத் தலைமை பெற்றே, "இங்குநம் நகைமுத் தம்மை  வேடப்பர் இளம்பெண் ணுக்கே உங்களின் சார்பில் நான்தான்  ஒருபெயர் குறிப்பேன்" என்றார். "அங்ஙனே ஆக" என்றார்  அவையிடை இருந்தோர் யாரும். அப்போது நகைமுத் தம்மை  அணிமணி ஆடை பூண்டு முப்பாங்கு மக்கள் காண  முத்துத்தேர் வந்த தென்னக் கைப்புறம் குழந்தை என்னும்  கவின்தங்கப் படிவம் தாங்கி ஒப்புறு தோழி மார்கள்  உடன்வர அவைக்கண் வந்தாள். கரும்பட்டு மென்மயிர் போய்க்  காற்றொடும் ஆடக் கண்டோர். விரும்பட்டும் என்று சின்ன  மின்நெற்றிக் கீழ்இ ரண்டு சுரும்பிட்ட கருங்கண் காட்டி  எறும்புகொள் தொடர்ச்சி போலும் அரும்பிட்ட புருவம் காட்டி  அழகுகாட் டும்கு ழந்தை! எள்ளிளஞ் சிறிய பூவை  எடுத்துவைத் திட்ட மூக்கும் வள்ளச்செந் தாம ரைப்பூ  இதழ்கவிந் திருந்த வாய்ப்பின் அள் இரண் டும்சி வப்பு  மாதுளை சிதறச் சிந்தும் ஒள்ளிய மணிச்சி ரிப்பும்  உவப்பூட்டும் பெண்கு ழந்தை. அன்னையி னிடத்தி னின்று  வேடப்பன், அருமைச் செல்வி தன்னைத்தன் கையால் வாங்கித்  தமிழ்ப்பெரி யார்பால் தந்தான். "என்அன்பே இளம்பி ராட்டி"  எனவாங்கி அணைத்து, மற்றும் முன்னுள்ளார் தமக்கும் காட்டி,  முறைப்பட மொழிய லுற்றார்; "வானின்று மண்ணில் வந்து  மக்களைக் காக்கும்; அ·து தேன்அன்று; கரும்பும் அன்று;  செந்நெல்லின் சோறும் அன்று; ஆன்அருள் பாலும் இன்றே;  அதன்பெயர் அமிழ்தாம்! தொன்மை ஆனபே ருலகைக் காக்க   அமிழ்வதால் மழைய· தேயாம். தமிழரின் தமிழ்க்கு ழந்தை  தமிழ்ப்பெயர் பெறுதல் வேண்டும். அமையுறும் மழைபோல் நன்மை  ஆக்கும்இக் குழந்தைக் கிந்நாள் அமிழ்தென்று பெயர் அமைப்போம்  அமிழ்தம்மை நாளும் வாழ்க! தமிழ்வாழ்க! தமிழர் வாழ்க!"  என்றனர் அறிவில் மூத்தார். "அமிழ்தம்மை வாழ்க!" என்றே  அனைவரும் வாழ்த்தி னார்கள். அமிழ்தம்மைப் பெயர்ப்பு னைந்த  அன்புறு குழந்தை தன்னை எமதன்பே எனவே டப்பன்  இருகையால் வாங்கி யேதன் கமழ்குழல் நகைமுத் தின்பால்  காட்டினான் கையால் அள்ளி. அமிழ்தம்மா எனஅ ணைத்தே  அழகிக்கு முத்தம் தந்தாள்! தமிழர்க்கு நன்றி கூறி  வெற்றிலை பாக்குத் தந்து தமிழ்பாடி இசைந டத்தி  வேடப்பன் தன்கை கூப்ப "அமிழ்தம்மை நாளும் வாழ்க",  எனச்சென்றார் அனைவர் தாமும். இருகாலைச் சப்ப ளித்தே  இடதுகைப் புறத்தில், அன்பு  பெருகிடத் தலையை ஏந்திப்  பின்உடல் மடியில் தாங்கி மருவியே தன்பாற் செப்பு  வாய்சேர்த்து மகள்மு கத்தில் ஒருமுத்து நகைமுத் தீந்தாள்.  உடம்பெல்லாம் மகிழ்முத் தானாள். அமிழ்துண்ணும் குழந்தை வாயின்  அழகிதழ் குவிந்தி ருக்கும் கமழ்செந்தா மரைய ரும்பு  கதிர்காண அவிழ்மு னைபோல்! தமிழ்நலம் மனத்தால் உண்பார்  விழிஒன்றிற் சார்வ தில்லை; அமிழ்துண்ணும் குழந்தை கண்ணும்  அயல்நோக்கல் சிறிதும் இல்லை. உண்பது பிறகா கட்டும்  உலகைப்பார்க் கின்றேன் என்று துண்ணென முகம்தி ருப்பித்  தூயதாய் முகமே காணும்; கண்மகிழ் திடும்செவ் வாயின்  கடைமகிழ்ந் திடும்;இவ் வையம் உண்மையாய்த் தன்தாய் என்றே  உணர்வதால் உளம்பூ ரிக்கும். விரிவாழைப் பூவின் கொப்பூழ்  வெள்விழி யின்மேல் ஓடும் கருவண்டு விழியால் சொல்லும்  கதைஎன்ன என்றாள் அன்னை; சிரித்தொரு பாட்டுச் சொல்லித்  திரும்பவும் மார்ப ணைந்து பொருட்சிறப் பையும்வி ளக்கும்  பொன்னான கைக்கு ழந்தை. "மண்ணாண்ட மூவேந் தர்தம்  மரபினார் என்ம ணாளர் பெண்ணாளுக் களித்த இன்பப்  பயனாய்இப் பெருவை யத்தார் உள்நாண அழகு மிக்க  ஒருமகள் பெற்றேன்" என்றே, எண்ணியே அன்னை தன்'பால்'  உண்பாளின் முகத்தைப் பார்த்தாள். மணிவிழி இமையால் மூடி  உறக்கத்தில் நகைம றைத்துத் தணிவுறும் தமிழர் யாழ்போல்  தன்மடி மேல்அ மைந்த  அணியுடல் குழந்தை கண்டாள்  அன்புடன் இருகை ஏந்திப் பணியாளர் செய்த தொட்டிற்  பஞ்சணை வளர்த்த லானாள். ப·றொடை வெண்பா தன்மகளின் பெண்ணைத் தனிப்பெருமைப் பேர்த்திதனை இன்ப அமிழ்தை இணையற்ற ஓவியத்தைத் தங்கம் எடுத்துத் தலையுச்சி தான்மோந்து மங்கா மகிழ்ச்சியினால் மார்போ டணைத்திருந்தாள்! அங்கந்த வேளையிலே அன்பு மகள்பெற்ற திங்கட் பிறையைச் செழுமணியைப் பேர்த்திதனைக் காண மலர்க்குழலும் வந்தாள் கடிதினிலே! பாட்டிமார் வந்தார் பழம்பாட்டுப் பாடிடுவார் கேட்டு மகிழலாம் என்று கிளிப்பேச்சுத் தோழிமார் தாழ்வாரத் தொட்டிலண்டை வந்தமர்ந்தார். உள்ளவர்கள் எல்லாரும் தங்கத்தின் கைப்புறத்தில் உள்ள குழந்தை யுடன்கொஞ்ச முந்துவதைத் தங்கம் அறிந்தாள் தனதிடத்தில் உள்ள ஒரு பொங்கும் அமிழ்தைப் பொன்னான தொட்டிலிலே இட்டாள் நகைமுத்தை இன்னிசையால் தாலாட்ட விட்டாள் விளைந்த தொருபாட்டு. தாயின் தாலாட்டு பொன்னே மணியே புதுமலரே செந்தேனே மின்னே கருவானில் வெண்ணிலவே கண்ணுறங்கு! தன்னே ரிலாத தமிழே தமிழ்ப்பாட்டே அன்னைநான்; உன்விழியில் ஐயம் ததும்புவதேன்? என்பெற்ற அன்னையார் உன்பாட்டி இன்னவர்கள் உன்தந்தை அன்னை உயர்பாட்டி இன்னவர்கள்! என்னருமைத் தோழிமார் உன்தாய்மார் அல்லரோ? கன்னற் பிழிவே கனிச்சாறே கண்ணுறங்கு! சின்னமலர்க் காலசையச் செங்கை மலர்அசைய உன்கண் உரைப்பதென்ன என்கண்ணே கண்ணுறங்கு! தோழிமார் தாலாட்டு தொகைமுத்துத் தொங்கலிட்ட தொட்டிலிலே அன்பே நகைமுத்தின் பெண்ணான நன்முத்தே மானே! தகையாளர் வையத்தில் தந்த திருவே தொகைபோட்டு வாங்க ஒண்ணாத் தூய்அமிழ்தே கண்வளராய்! கன்னங் கரிய களாப்பழத்தின் கண்ணிரண்டும் சின்னஞ் சிறிய ஒளிநெற்றித் தட்டிலிட்டே இன்னும் எமக்கே இனிப்பூட்டிக் கொண்டிருந்தால் பொன்"உறக்க நாடு" புலம்பாதே கண்மணியே! தங்கத் திருமுகத்தின் தட்டினிலே உன்சிரிப்பைப் பொங்கவைத்தே எம்உளத்தைப் பொங்கவைத்துக் கொண்டிருந்தால் திங்கள் முகத்துன் சிரிப்போடு தாம்கொஞ்ச அங்"குறக்க நாட்டார்" அவாமறுத்த தாகாதோ? செங்காந்த ளின்அரும்போ சின்னவிரல்? அவ்விரலை அங்காந்த வாயால் அமிழ்தாக உண்கின்றாய்! கொங்கை அமிழ்து புளித்ததோ கூறென்றால் தெங்கின்பா ளைச்சிரிப்புத் தேனை எமக்களித்தாய்! பஞ்சுமெத்தைப் பட்டு பரந்த ஒரு மேல்விரிப்பில் மிஞ்சும் மணமலரின் மேனி அசையாமல் பிஞ்சுமா விண்விழியைப் பெண்ணே இமைக்கதவால் அஞ்சாது பூட்டி அமைவாகக் கண்ணுறங்காய்! தங்கத்துப் பாட்டி தாலாட்டு ஆட்டனத்தி யான அருமை மணாளனையே ஓட்டப் புனற்கன்னி உள்மறைத்துக் கொண்டுசெல்லப் போதுவிழி நீர்பாயப் போய்மீட்டுக் கொண்டுவந்த ஆதிமந்தி கற்புக் கரசியவள் நீதானோ? செல்வத் தமிழ்வேந்தர் போற்றும் செந்தமிழான கல்விக் கரசி கலைச்செல்வி ஔவை இனியும் தமிழ்காத்தே இந்நாட்டைக் காக்க நினைத்துவந்தாள் என்னிலவள் நீதானோ என்கிளியே? நாட்டு மறவர்குல நங்கையரைச் செந்தமிழின் பாட்டாலே அமிழ்தொக்கப் பாடிடுவாள் நற்காக்கைப் பாடினியார் நச்செள்ளை பார்புகழும் மூதாட்டி கூடி உருவெடுத்தார் என்றுரைத்தால் நீதானோ? அண்டும் தமிழ்வறுமை அண்டாது காக்கவந்த எண்டிசையும் போற்றும் இளவெயினி நீதானோ? தக்கபுகழ்ச் சோழன் தறுகண்மை பாடியவள் நக்கண்ணை என்பவளும் நீதானோ நல்லவளே! கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முற்றோன்றி மூத்த குடியின் திருவிளக்கே! சற்றேஉன் ஆடல் தமிழ்ப்பாடல் நீநிறுத்திப் பொற்கொடியே என்னருமைப் பொன்னேநீ கண்ணுறங்காய்! மலர்குழல் பாட்டி தாலாட்டு உச்சி விளாம்பழத்தின் உட்சுளையும் கற்கண்டும் பச்சைஏ லப்பொடியும் பாங்காய்க் கலந்தள்ளி இச்இச்சென உண்ணும் இன்பந்தான் நீ கொடுக்கும் பிச்சை முத்துக் கீடாமோ என்னருமைப் பெண்ணரசே! தஞ்சைத் தமிழன் தரும்ஓ வியம்கண்டேன் மிஞ்சு பலிவரத்தின் மின்னும்கல் தச்சறிவேன் அஞ்சுமுறை கண்டாலும் ஆவலறா உன்படிவம் வஞ்சியே இப்பெரிய வையப் படிவமன்றோ முகிழாத முன்மணக்கும் முல்லை மணமும் துகள்தீர்ந்த சந்தனத்துச் சோலை மணமும் முகநிலவு மேலேநான் உன்உச்சி மோந்தால் மகிழ மகிழ வருமணத்துக் கீடாமோ? தமிழர் தனிச்சிறப்பு யாழின் இசையும் குமிக்கும் ஒருவேய்ங் குழலின் இசையும் தமிழின் இசையும் சரியாமோ, என்றன் அமிழ்தே, மலர்வாய்நீ அங்காப்பின் ஓசைக்கே; இன்பத்து முக்கனியே என்னன்பே கண்ணுறங்கு தென்பாண் டியர்மரபின் செல்வமே கண்ணுறங்காய்! பிள்ளையைத் தூக்கும் முறை அகவல் நடுப்பகல் உணவுக்கு நல்வே டப்பன் இல்லில் நுழைந்தான் "என்கண் மணியே என்றன் அமிழ்தே" என்று கூவியபடி! மைப்புரு வத்து மங்கை நகைமுத்துக் கைப்புறத் தில்தன் கட்டழகு சுமந்து வந்துதாழ் வாரத்தில் மணவாளனிடம் காட்டி நின்றாள்! கண்டவே டப்பன் அடங்கொணா மகிழ்ச்சியால் அருமை மகளை எடுக்க விரைந்தான். "அதுதான் இயலாது! கொள்அன்று; கொத்த மல்லி அன்று; பிள்ளை அத்தான்" என்றாள் பெற்றவள். "பிள்ளையைத் தூக்கும் பெருந்திறம் தானும் கொள்ளவே சொல்லிக் கொடு"வெனக் கேட்டான். வேடப்ப னுக்கு விளக்குவாள் துணைவி: "ஆழியில் உருவமான அழகுமட் கலத்தை இயற்றி யோர்க்கே எடுப்பது முடியும்; சுட்டமட் கலத்தை எவரும் தூக்கலாம்! இறுகா அமிழ்தின் இளகல் உடம்பை உறுத்தாமல் தூக்க ஒருதிறம் வேண்டும். இன்னும் சொல்வேன் நன்று கேட்க: குளநீர்த் தாமரை குழந்தையின் இளந்தலை! அம்மலர்த் தண்டே அழகிய 'மெல்லுடல்' தண்டுடல் மலர்த்தலை தாங்குமோ அத்தான்? தலைஉடல் இரண்டையும் ஒருங்கு தாங்கி உலைஅமிழ்தை வறியவள் ஒருத்திதூக் கல்போல் தவறாது தூக்குவது தலையா கியகடன் தெரிந்ததா அத்தான்" என்றாள் தெரிவை; "கற்றேன் கணக்கா யரேகற் றபடி நிற்கும் படியும் நிகழ்த்துக" என்றான். தூக்கிக் காட்டினாள் தோகை தூக்கினான். "சரி" எனச் சொன்னாள் துணைவியே. தந்தையின் தவறு அறுசீர் விருத்தம் வேடப்பன் உணவ ருந்தி  மகளோடு விளையா டற்குக் கூடத்தில் வந்து பார்த்தான்  தூங்கிடும் குழந்தை கண்டான்! தேடக்கி டைத்தல் இல்லாச்  செல்வமே என்றெ டுத்தான் வாடப் புரிந்த தாலே  மகள்வீறிட் டழுதல் கண்டான். நகைமுத்து விரைந்து வந்தாள்  "குழந்தையின் நலிவு நீங்கத் தகும்படி தொட்டில் தன்னில்   தாலாட்டித் தூங்கச் செய்தேன்; அகத்தினில் அன்பு கொண்டீர்  ஆயினும் குழந்தை தன்னை மிகத்துன்பம் அடையச் செய்தீர்;  விலக்கஇச் செய்கை" என்றாள். "குழந்தைதான் தூங்கும் போது  எழுப்பினால் குற்ற மென்ன? அழுதிடும் குழந்தைக் கான  ஆறுதல் தூக்கந் தானோ? ஒழுங்கோடு குழந்தை ஓம்பல்  உனக்குத்தான் தெரியும் போலும்! முழங்காதே பேச்சை வாயை  மூடென்றான்" வேடப் பன்தான். அன்புள்ள துணைவன் ஆங்கே  இதுசொல்லிக் கடைக்குச் சென்றான்; துன்புற்றாள் நகைமுத் தாளும்  துணைவரின் சினமே எண்ணி; என்பெற்ற குழந்தைக் காகத்  துணைவரின் வெறுப்பை ஏற்றேன்; அன்பரைத் திருத்து தற்கும்  அன்புதான் தூண்டிற் றென்னை. இப்படி நினைத்தா ளாகி  இல்லத்துப் பணிமு டித்தும் கைப்புறக் குழந்தை தன்னைத்  தோளிலே போட்டுக் காத்தும் அப்புறம் பகலைத் தள்ளி  இரவினில் அன்ப னுக்கே ஒப்புறத் துணைபு ரிந்தும்  இரவினில் உறங்கச் சென்றாள். படுக்கையின் விரிப்பு மாற்றிப்  பக்கத்தில் குழந்தைக் கான துடைக்கின்ற துணிகள் தேடித்  தூயபல் விரிப்பும் தேடி விடிவி ளக்கும் திருத்தி  விலாப்புறத் திற்கு ழந்தை குடித்தபால் எடுத்தல் கண்டு  குட்டையால் தூய்மை செய்தே; உடலினை ஒருக்க ணித்தே  குழந்தையை மார்போ டொட்டித் தடமலர் வலக்கை தன்னைத்  தலைக்கணை மீது வைத்தும் இடதுகை குழந்தை மேலே  வில்லைப்போல் வளைய இட்டும் கடுகள வசைதல் இன்றிக்  கண்வளர் கின்றாள் அன்னை! தாய்மையின் ஆற்றல் அன்றுநள் ளிரவில் வேடன்  விழித்தனன்; அருகில் உள்ள தன்மனை தன்கு ழந்தை  நிலைமையை நோக்க லானான்; "என்மனை ஒருக்க ணித்தே  இடக்கையைக் குழந்தை மீதில் சின்னக் கூடார மாக்கிச்  சேல்விழி துயில்கின் றாளே. ஒருநூலே புரண்டா ளேனும்,  தெருவினை ஒக்கச் செய்யும் உருளையின் கீழ்ம லர்போல்  ஒழியுமே பெற்ற பிள்ளை! தெரியவே இல்லை இ·து  தெரிவைக்கே" எனவே டப்பன் அருகிலே அமர்ந்தி ருந்தான்  அகன்றிட மனம்வ ராமல்! மங்கையை எழுப்பு தற்கு  வழியன்று கண்ட றிந்தான்: அங்கவள் களைந்தெ றிந்த  மலர்கண்ணி யைஅன் னாளின் திங்களின் முகத்தில் போட்டான்!  சேயிழை விழித்தா ளில்லை. இங்கினிக் குழந்தை தன்னை  எழுப்புவேன் என நினைந்தே; மலர்கண்ணி தனில்அ விழ்ந்த   மலரிதழ் ஒன்றைத் தூக்கம் கலைத்திடக் குழந்தை மீது  போட்டனன்! தாயின் கைதான் மலரிதழ் தனைத் துடைத்து   மற்றும்தன் இடம்போ யிற்றே! தலைவனோ இதனைக் கண்டான்;  தாய்மையின் ஆற்றல் கண்டான். தலைவிக்கு மதிப்புச் செய்தான்;  தாய்மைக்கு வணக்கம் செய்தான். இலைஎன்பால் குழந்தை காக்கும்  ஆற்றல்எட் டுணையும் என்றான்; தலைமட்டும் இரண்டென் றாலும்  குழந்தையும் தாயும் ஒற்றைக் குலையேயாம்; உயிரும் ஒன்றே!  உள்ளத்தின் கூறும் ஒன்றே! எனக்கென்ன தெரியும் தாய்க்கும்  இளங்குழந் தைக்கு முள்ள மனத்திடத் தொடர்பு? மற்றும்  வாயினாற் பேசார்; தாயும் தனதரும் குழந்தை தானும்  கண்ணாலும் மனத்தி னாலும் தனித்துப்பே சிக்கொள் கின்றார்  என்றுபோய் தான்து யின்றான். ஓராண்டு வான்பார்த்துக் கிடந்த மேனி  மண்பார்த்துக் கவிழ்ந்தும், பின்னர் தேன்பார்த்த மலர்க்கை யூன்றிச்  செம்மையாய்த் தவழ்ந்தும் நின்றும் தான்பார்க்க அங்கும் இங்கும்  தள்ளாடி நடந்தும், கெண்டை மீன்பார்த்த கண்ணாள் பெண்ணாள்  ஓராண்டு மேவல் உற்றாள். பட்டுப்பா வாடை கட்டிப்  பச்சைப்பூச் சட்டை இட்டுக் கட்டிய முல்லைக் கண்ணி  கரும்பாம்பின் பின்னல் தன்னில் நெட்டுறச் சூட்டி, நெற்றி  நேர்உறச் சுட்டி வைத்து, விட்டனள் அமிழ்தை ஆடத்  தாழ்வார மீதில் அன்னை! ஓடி வா சிந்து கண்ணி அமிழ்தே அமிழ்தே ஓடிவா-என் அன்பின் விளைவே ஓடிவா தமிழின் சுவையே ஓடிவா-என் தங்கப் பாப்பா ஓடிவா கமழும் பூவே ஓடிவா-என் கண்ணின் மணியே ஓடிவா குமியும் புகழே ஓடிவா-என் குத்து விளக்கே ஓடிவா பச்சைக் கிளியே ஓடிவா-என் பாடும் தும்பி ஓடிவா அச்சுப் பெண்ணே ஓடிவா-என் ஆடும் கொடியே ஓடிவா  மெச்சும் குயிலே ஓடிவா-என் விரியும் சுடரே ஓடிவா தச்சுத் திறமை ஓடிவா-என் தங்கப் புதையே ஓடிவா வள்ளத் தேனே ஓடிவா-என் வானம் பாடி ஓடிவா வெள்ளப் பாலே ஓடிவா-என் வீட்டு விளக்கே ஓடிவா துள்ளும் கன்றே ஓடிவா-என் தோகை மயிலே ஓடிவா அள்ளும் சுளையே ஓடிவா-என் அன்பின் கனியே ஓடிவா முத்து நிலாவே ஓடிவா-என் மும்மைத் தமிழே ஓடிவா கத்தும் கடலே ஓடிவா-என் கட்டிக் கரும்பே ஓடிவா தொத்தும் கிளியே ஓடிவா-என் தூண்டா விளக்கே ஓடிவா கொத்துப் பூவே ஓடிவா-என் குழந்தை அமிழ்தே ஓடிவா செல்வப் பொருளே ஓடிவா-என் செந்தா மரையே ஓடிவா கல்விப் பொருளே ஓடிவா-என் காவிரி ஆறே ஓடிவா முல்லைக் கொடியே ஓடிவா-என் மூசைத் தங்கம் ஓடிவா அல்லிப் பூவே ஓடிவா-என் அன்பின் அமிழ்தே ஓடிவா தென்றற் காற்றே ஓடிவா-என் செவ்விள நீரே ஓடிவா குன்றாச் சுவையே ஓடிவா-என் கொள்ளா அழகே ஓடிவா ஒன்றா உணர்வே ஓடிவா-என் ஓவியக் கனவே ஓடிவா மன்றின் மணியே ஓடிவா-என் மல்லிகை மலரே ஓடிவா பாடும் சிட்டே ஓடிவா-என் பருகும் சாறே ஓடிவா நாடும் திருவே ஓடிவா-என் நடைஓ வியமே ஓடிவா சூடும் தாரே ஓடிவா-என் சோலை நிழலே ஓடிவா வாடா மலரே ஓடிவா-என் வஞ்சிக் கொடியே ஓடிவா தண்டை குலுங்க ஓடிவா-என் சங்கத் தமிழே ஓடிவா கெண்டை விழியே ஓடிவா-என் கிள்ளை மொழியே ஓடிவா பெண்டிர்க் கரசி ஓடிவா-என் பேறே உயிரே ஓடிவா ஒண்டொடியாளே ஓடிவா-என் ஓடைப் புனலே ஓடிவா அறுசீர் விருத்தம் வேடப்பன் வந்தான் அங்கே  விளையாடும் குழந்தை கண்டான்; ஓடச்செய் கின்றாய் காலும்  ஓயாதோ குழந்தைக் கென்றான்; கோடைக்குக் குளிரே 'நான் ஓர்  குதிரை, நீஅரசி' என்றான்; கூடத்தில் மண்டி போட்டான்  குழந்தையை முதுகில் கொண்டான். அப்பாக் குதிரை சிந்துக் கண்ணி அப்பாக் குதிரை ஆட்டக் குதிரை அஞ்சாக் குதிரை ஏய் ஏய் ஏய் தப்பாக் குதிரை தாவும் குதிரை தளராக் குதிரை ஏய் ஏய் ஏய் சப்பைக் குதிரை இல்லை இல்லை தமிழக் குதிரை ஏய் ஏய் ஏய் ஒப்பும் குதிரை ஓயாக் குதிரை ஒற்றைக் குதிரை ஏய் ஏய் ஏய்! பேசும் குதிரை பெருத்த குதிரை பிழையாக் குதிரை ஏய் ஏய் ஏய் தோசைக் குதிரை சோற்றுக் குதிரை சோராக் குதிரை ஏய் ஏய் ஏய் மீசைக் குதிரை வெற்றிக் குதிரை வேட்டைக் குதிரை ஏய் ஏய் ஏய் தேசுக் குதிரை தெற்குக் குதிரை சேரன் குதிரை ஏய் ஏய் ஏய்! சோறூட்டல் அகவல் உருக்கிய நெய்யும் பருப்பும் இட்ட சோற்றுடன் மிளகுநீர் துளியள வூற்றிச் சிறிய வள்ளத்தில் சேர்த்தெ டுத்துக் குழந்தைக்குக் காக்கை காட்டி விழுங்க வைப்பாள் மென்னகை முத்தே. சிந்து கண்ணி காக்கா காக்கா கண்ணாட்டி கைப்பிள் ளைக்குச் சோறூட்டி பாக்கியை நீஅள் ளிக்கொண்டே பறந்து போஎன் கற்கண்டே. ஆக்கிய சோறென் சிட்டுக்கே அதுவா வேண்டும் எட்டிப்போ தூக்கிக் கொண்டா போய்விடுவாய்? சுருக்காய் வாங்கும் இன்னொருவாய். உன்வாய் பெரிய ஒளிவாயாம் ஒண்டொடி வாய்தான் கிளிவாயாம் தன்னால்உண்ணும் என்தங்கம் தண்ணீர் குடிக்க வா அஞ்சும்? சொன்னால் கேட்கும் என்பட்டும் சோற்றை உண்ணும் இம் மட்டும் இன்னும் காக்கா நெருங்கிவா இதையும் உண்டு பறந்துபோ. நிலாக் காட்டல் அறுசீர் விருத்தம் மேற்றிசை ஒளிவெள் ளத்தில்  வீழ்ந்தது செங்க திர்போய்த் தூற்றிய முத்துக் கொல்லை  முழுநிலாத் தோற்றம் கண்டார் காற்றிலோர் குளிரும் கண்டார்  மாடியில், நிலாமுற் றத்தில் ஏற்றினார் அமிழ்தைப் பெற்றார்  எழில்நிலாக் காட்டு கின்றார். சிந்துக் கண்ணி நிலா நிலா வாவா-ஒளி நிறைவி ளக்கே வா வா உலா வினாய் விண்ணில்-நீ ஒளிபு ரிந்தாய் கண்ணில் குலா வலாம் நாட்டில்-இனிக் கொஞ்ச லாம்என் வீட்டில் பலா மரம் உண்டு-நற் பழமெ லாம்கற் கண்டு நிலா நிலா வாவா-ஒளி நிறைவி ளக்கே வாவா அழகெ லாம்எ னக்கே-என் அன்பெ லாம்உ னக்கே முழுநி லாஎன் பூவே-உன் முத்த மொன்று தேவை பழக லாம்இ றங்கு-நற் பைந்த மிழுண் டிங்கு விழியி லேஒ ளிர்ந்தாய்-என் மெய்யி லேகு ளிர்ந்தாய் நிலா நிலா வாவா-ஒளி நிறைவி ளக்கே வாவா வானம் நீலத் தோப்பு-நீ மங்கா தமத் தாப்பு கூனி மீன்கள் மின்னும்-ஒளிக் குட்டை நீஎன் றெண்ணும் சீனத் துப்பால் கோப்பை-நீ சிரிப்பு முகத்தையும் சாய்ப்பை கானல் வெளியும் குளிரும்-கண் காண மனமும் ஒளிரும் நிலா நிலா வாவா-ஒளி நிறைவி ளக்கே வாவா விண்ணக் கடலில் தெப்பம்-நீ விரித்த இலையில் அப்பம் உண்ணக் குவித்த தளியல்-நீ உரித்த கிழங்கின் அளியல் பண்ணும் வெள்ளித் தட்டு-நீ பச்ச ரிசியின் பிட்டு வெண்பட் டான குடையே-நீ விழுங்கி டும்பா லடையே நிலா நிலா வாவா-ஒளி நிறைவி ளக்கே வாவா பேச்சு அகவல் மரப்பா வைகள் வைத்துவிளை யாடும் அமிழ்தொடு நகைமுத் தமர்ந்தி ருந்தாள்; மாவரசும் வந்தான்; மகள்வர வேற்றாள் அமிழ்தை நோக்கி"நான் யாரம்மா?" என்றான். அமிழ்தம் "ஐயா" என்றாள். அதனால் குன்றி யதுமுகம் கொதித்தது நெஞ்சம் மாவர சுக்கு! மகளை நோக்கி 'யான் அயலானா? ஏன்என்னைத் தாத்தா என்று சொல்ல வில்லை' என்றான். அதுகேட்டுத் "தாத்தா" என்றாள் அமிழ்து. முகமும் மலர்ந்தது! மாவரசுக்(கு) அகமும் மலர்ந்தது! நகைமுத்தும் அங்ஙனே! தேவை அகவல் காலை உணவுண்டு கடைக்குப் புறப்படும் வேடன் "என்ன வேண்டும்" என்றான்; அமிழ்துதன் தேவையை அறிவிக் கின்றாள்; "கோழி" "நாயிக் குட்டி" "அம்மா" இதுகேட்டு நகைமுத் தியம்பு கின்றாள்; "அத்தான் குழந்தை, 'அம்மா' என்றால் என்போல் இன்னுமோர் அம்மா அன்று கேட்டது! பொம்மை அம்மாவே." குறளில் கோயில் இல்லை அகவல் நாடி முத்து வேடப் பனிடம் "இன்றி யமையா ஒன்றுக் காகக் கடன்பத்து ரூபாய் கொடு"வென்று கேட்டான்; வேடன் கொடுப்பதாய் விளம்பினான்.அதற்குள் அமிழ்து, திருக்குறள் ஒன்றை அங்கையில் தூக்கி வந்து தொப்பென்று போட்டுக் "கோவிலு காட்டுப்பா" என்று கூறினாள். "குறளில் கோயிலே இல்லை யம்மா" என்றான் வேடன். இதனைக் கேட்ட நாடி முத்து நவிலு கின்றான்: "தில்லைக் கோயிலுக்குச் செல்ல எண்ணியே பத்து ரூபாய் பணம்உன்னைக் கேட்டேன். கோயில் இல்லையா குறளில்? ஆயில்என் பணத்துக் கில்லை அழிவே!" சேறும் சோறும் தேன் அகவல் அறையில் தூங்கி யிருந்த அமிழ்து, சிறகுவிரித் துதறிச் செங்கா லன்னம் நடைதொடங் கியதென நடந்து, தாழ்வாரத்(து) இடையி லிருந்த மைக்கூட்டை எடுத்து கொல்லையில் முல்லைக் கொடியின் அடியில் சாய்த்து நீலம் சார்ந்த சேற்றால் சிற்றில் ஒன்று செய்து முடித்தபின் தந்தை உண்ணும் தயிரின் சோற்றை அங்கையால் அள்ளி ஆஆ என்றாள்! அப்பனும் வாய்திறந் ததைவாங்கி உண்டான்; தொடர்ந்து நடந்த திந்தத் தொண்டு, சின்னவள் அன்னை யான திறத்தை நகைமுத்துக் கண்டு மிகமகிழ்ந் திருந்தாள். சேறும் சோறும் தந்தைக்குத் தேனே! நீலத் தயிரும் நிலாநிறத் தயிரே! "அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்"எனச் செப்பிய வள்ளுவர் வாய்ச்சொல் பொய்என விள்ளுவர் உளரோ விரிநீர் உலகிலே! அன்பு பெருகுக அகவல் அன்னை தங்கம் அமிழ்தொடு பேசித் தலைக்கடை அறையில் நிலைக்கண் ணாடியின் முன்னின்று தன்எழில் முகம்பார்த் திருந்தாள். தனித்துவே டப்பன் தாழ்வாரத் திருந்தான். இனிக்க அமிழ்தும் எதிர்வந்து நின்றாள்! சுவரி லேதன் உருப்படம் தொங்கியது கண்ட அமிழ்து கனிவாய் திறந்து "இதில்நான் சின்னவள். இப்போது பெரியவள்" என்றாள், "ஆம் ஆம்" என்றான் தந்தை! "எப்படிப் பெரியவள் ஆனேன்" என்றாள். "உருப்படம் எடுக்கையில் ஓராண் டுனக்கே. இப்போது மூன்றாண் டாயின" என்றான். "ஆண்டுகள் எப்படித் தாண்டும்" என்றாள். "நேரம் போகப் போக நேரே ஆண்டும் போகும் அல்லவா" என்றான். "நேரம் போவதை நேரில் பார்க்கக் கூடுமோ" என்று கூறினாள் அமிழ்து; "பார்இதோ மணிப்பொறி நேரம்ஓ டுவதை இருமுள் ஓடிக் காட்டும்" என்றான். "முள்ஓட வில்லையே" என்று மொழிந்தாள். "ஓடுவது தெரியாது ஓடுகின் றதுநாள், வளர்வது தெரியாது வளர்கின் றாய்நீ" என்றுவே டப்பன் இயம்பு கின்றான். தங்கமும் தனது தலைமுடி நோக்குவாள், "நரைப்பது தெரியாது நரைக்கின் றதுமுடி" என்று தனக்குள் இயம்புகின்றாள். "பழுப்பது தெரியாது பழுக்கின் றதுபழம்" என்று கொல்லையில் இருந்து நகைமுத்தும் பத்துத் திங்கள் நிறைந்த பலாப்பழம்* தாங்கி நடந்து, தன்இடை நோவதாய் ஏங்கி மாமியிடம் இசைக்க லானாள். "பெருகுவது தெரியாது பெருகுகின் றதுஉயிர்" என்பதும் உண்மை போலும்! அன்பு பெருகுக வைய அமைதிக்கே! (*பலாப்பழம் - கருநிறைந்த வயிறு) நடந்து வந்த கரும்பு அகவல் நல்வே டப்பனின் இல்லம் நிறைந்தது. மாவரசு மலர்க்குழல் வந்திருந் தார்கள்; மற்றும் இவர்களின் மக்களும் இருந்தனர். வேடப் பன்ஓர்பால் வீற்றிருக் கின்றான். எழில்நகை முத்தும் ஈன்றதன் நீலப் பூவிழிச் செவ்விதழ்ப் புதுஇள மைந்தனை "இளஞ் சேரன்"வாஎன இருகையில் ஏந்தி ஒருபுறம் மயிலென உலவு கின்றாள். புகைப்படம் எடுக்கும் புலவரும் வந்தார் முற்றத்தில் இருக்கை வரிசையில் முடித்தார் யாவரும் வரிசையில் இருக்க லுற்றார்! அமிழ்தம் எங்கே அனைவரும் எழுந்தார். அறையெல்லாம் பார்த்தார் அங்கெல்லாம் இல்லை. கொல்லையில் நிலவுசெய் முல்லைக் கொடியும் சின்னஞ் சிறிய செங்கதிர் போல மன்னிய சாமந்தி மலர்ந்த செடியும் குலுங்கு நீலாம்பரக் குள்ளச் செடியும், முத்துச் சிரிப்பு முழுப்பொன் னாடை கருவிழி இவைபூத்த கட்டிக் கரும்பும் அங்கே கூடி அழகுசெய் திருப்பதைக் கண்டனர்; கண்ணே என்றுகை யேந்தினர்; நீலாம்பரம் அங்ஙனே நின்றி ருந்தது! முல்லைக் கொடியும் நல்ல சாமந்தியும்  அங்ஙனே நின்றி ருந்தன ஆயினும், கைதூக்கி 'அப்பா' என்று கனிதமிழ்க் கட்டிக் கரும்பு மட்டும் கலகலத் தண்டை பாடத் தாவி வந்தாள். புகைப்படப் புலவர், வகைப்பட எவரையும் முற்றத்தில் உட்கார வேண்டினார் உற்று நோக்கினார் உருக்கவர் பெட்டியே!* (*உருக்கவர் பெட்டி - காமிரா) புகைப்படம் அகவல் நடுநாற் காலியில் நகைமுத்துக் கைப்புறம் அன்பிளஞ் சேரன் அண்டையில் அமிழ்து வேடன் முதலியோர் பீடுற அமைந்தார். பொருந்திய வண்ணம் புறத்தின் அழகைப் புகைப்படம் எடுத்தே; அகத்தின் மகிழ்ச்சியை வான்படம் எடுக்க விட்டே. திராவிட மக்கள் வாழிய அகவல் அமிழ்து சரியாய் ஆறாண் டடைந்தாள்; தமிழ்தரும் தனித்தமிழ்ப் பள்ளி சென்றே அதோவரு கின்றாள் அங்கைச் சுவடியோடு; வேடன் நகைமுத்து வீட்டில் அப்போதில் இளஞ்சே ரனைநீ யார்என்று கேட்டுப் பதிலை எதிர்பார்த் திருந்தார். அவனோ தன்மார்பு காட்டி 'நான் தம்பி' என்றான். "தமிழன் என்றுநீ சாற்றடா தம்பி" என்றே இயம்பி அமிழ்து வந்தாள். வாழிய தமிழ மக்கள்! வாழிய நற்றமிழ் வையகம் இனிதே!   ஐந்தாம் பகுதி முதியோர் காதல் அறுசீர் விருத்தம் மூத்த பிள்ளை முதியவரோடு வேடப்பன் தம்பி யான  வெற்றிவேல், மனைவி யோடு வேடப்பன் வாழ்ந் திருந்த  வீட்டினில் வாழு கின்றான், வேடப்ப னோ,தன் தந்தை  வீட்டினிற் குடும்பத் தோடு பீடுற வாழு கின்றான்.  பெற்றவர் முதுமை பெற்றார்! முதியோருக்கு மருமகள் தொண்டு வேடப்பன் மனைவி யான  நகைமுத்து மிகவும் அன்பாய் வேடப்பன் தந்தை தாய்க்கு  வேண்டுவ தறிந்தே அன்னார் வாடுதல் சிறிதும் இன்றி  வாய்ப்புறத் தொண்டு செய்வாள்; ஆடிய பம்ப ரங்கள்   அல்லவா அம்மூத் தோர்கள்? தலைக்கடை அறையில் மணவழகர் தங்கம் தலைக்கடை அறைக்குள் அந்தத்  தளர்மண வழகர் ஓர்பால் இலக்கியம் படிப்பார்! இன்பத்  துணைவியார் கேட்டி ருப்பார்! உலர்ந்தபூங் கொடிபோல் தங்கத்(து)  அம்மையார் ஒருபால் குந்திப் பலஆய்வார்; துணைவர் கேட்பார்;  துயிலுவார்; பழங்கா லத்தார். மணவழகர் உடல்நிலை மணவழ கர்க்கு முன்போல்  வன்மையோ தோளில் இல்லை! துணைவிழி, ஒளியு ம் குன்றக்  கண்ணாடித் துணையை வேண்டும்; பணையுடல், சருகு! வாயிற்  பல்லில்லை! மயிர்வெண் பட்டே! உணவெலாம்! பாலின் கஞ்சி;  உலவுதல் சிறிதே ஆகும். தங்கத்தம்மையார் உடல்நிலை நன்னிலாக் கதிர்போல் கூந்தல்  நரைத்தது. கொண்டை யிட்டு முன்னிலா முகில்உண் டாற்போல்  முகத்தொளி குறைய லானார்! அன்புடல் அறத்தால் தோய்ந்த  ஆயிரம் பிறைமூ தாட்டி மன்னுசீர் அன்னாள் மெய்யோ  வானவில் போற்கூ னிற்றே! முதியோர் அறைக்கு மக்கள் பேரர் வந்து போவார்கள் இருபெரு முதியோர் தம்மைத்  தலைக்கடை அறைசு மந்து பெரும்பேறு பெற்ற தன்றோ!  பிள்ளைகள், அவர்ம னைமார் வருவார்கள்; அறங்கேட் பார்கள்.  மற்றுள பேர்த்தி பேரர் வருவார்கள் அளவ ளாவி  மணியோடு பள்ளி செல்வார். இரு முதியோர் நிரம்பிய உள்ளம் மைந்தர்க்குக் கல்வி சேர்த்தோம்  மகள்மார்க்கும் அவ்வா றேயாம் எம்தக்க கடன்மு டித்தோம்  இனிதாக வாழு கின்றோம்; முந்துறச் சுற்றத் தார்க்கும்  செய்வன முழுதும் செய்தோம்; இந்தநாள் வரைக்கும் வாய்மை  இம்மியும் மறந்த தில்லை. நாட்டுக்கு நலம் செய்தோம் இந்நாட்டின் நலனுக் காக  நல்லறம் இயற்றி வந்தோம். எந்நாளும் பிறர்க்குத் தீமை  எங்களால் நடந்த தில்லை. சின்னதோர் நன்று செய்தார்   திறம்மறந் தறியோம் என்றே இன்னிசை பாடும் அன்னார்  இரண்டுள்ளம் இன்பம் கொள்ளும். முதியோளே வாழ்கின்றாள் என் நெஞ்சில் விதைத்திட்டேன் அவளின் நெஞ்சில்  என்றனை! நேற்றோ? அல்ல; இதற்குமுன் இளமை என்ப  தென்றைக்கோ அன்றைக் கேநான்! கதையாகிக் கனவாய்ப் போகும்  நிகழ்ந்தவை; எனினும் அந்த முதியோளே வாழு கின்றாள்  என்நெஞ்சில் மூன்று போதும். இருக்கின்றாள் அது எனக்கின்பம் புதுமலர் அல்ல; காய்ந்த  புற்கட்டே அவள்உ டம்பு! சதிராடும் நடையாள் அல்லள்  தள்ளாடி விழும் மூதாட்டி! மதியல்ல முகம்அ வட்கு  வறள்நிலம்! குழிகள் கண்கள்! எதுஎனக் கின்பம் நல்கும்?  "இருக்கின்றாள்" என்ப தொன்றே! நினைக்கின்றாள் நினைக்கின்றேன் நான் இனிக்கின்ற தமிழை அன்னாள்  இசைக்கின்ற ஆற்றல் இல்லை. தனித்துள்ளேன் ஒருபால்! அன்னாள்  தனித்துள்ளாள் மறுபு றத்தே! எனைக்கண்டும், என்னைத் தொட்டும்  பயில்கிலாள்; எனினும் என்னை நினைக்கின்றாள், நினைக்கின் றேன்நான்;  நிலைக்கின்ற தென்பால் இன்பம்! அன்புள்ளம் காணுகின்றேன் அகத்தின்பம் காணுகின்றேன் என்பும்நற் றோலும் வற்ற,  ஊன்றுகோல் இழுக்கி வீழத் தன்புது மேனி, காலத்  தாக்கினால் குலைய லானாள். என்முது விழிகா ணற்கும்  இயலாதே! எனினும் அன்னாள் அன்புள்ளம் காணு கின்றேன்!  அகத்தி ன்பம் காணு கின்றேன்! பேரர் அம்மாயி என்றழைப்பர் அது கேட்பேன் இன்பம் செய்யும் செம்மா துளைபி ளந்து  சிதறிடும் சிரிப்பால் என்னை அம்மாது களிக்கச் செய்வாள்  அதுவெலாம் அந்நாள்! இந்நாள் அம்மணி நகைப்பும் கேளேன்  ஆயினும் பேரர் ஓர்கால் "அம்மாயீ" என்பார்! கேட்பேன்  அமிழ்தினில் விழும்என் நெஞ்சம்! அன்னை என்றழைப்பர் மக்கள் இன்புறும் என்றன் நெஞ்சம் இன்னிழை பூண்டி ருப்பாள்  அத்தான்என் றழைப்பாள் என்னை நன்மொழி ஒன்று சொல்வாள்  நான்இசை யாழே கேட்பேன்! அன்னவை அந்நாள்! இந்நாள்  அன்னவள் தன்னை நோக்கி, 'அன்னாய்' என் றழைப்பார் மக்கள்  அதுகேட்பேன்; இன்பம் கொள்வேன்! அவள் உள்ள உலகம் எனக்கு உவப்பூட்டும் உயிர்ப்பினை நிலைநி றுத்தும்  நன்மழை; உலக நூலைச் செயிர்ப்பற நீத்தார்* செய்வார்;  செவ்வேஅவ் வறநூல் தன்னை முயற்சியிற் காப்பார் மன்னர்.  எனக்கென்ன இனி?அம் மூதாட்டி உயிர்வாழ்வாள் ஆத லற்றான்  உவப்பூட்டும் எனக்கிவ் வையம்! (*நீத்தார் - துறந்தார்) அவர் வாழ்வது அவள்மேல் வைத்த காதல் வாழாது வாழ்ந்து மூத்த  மணவழ குள்ளம் இ·தே! ஆழாழிப் புனல்அ சைவை,  ஆர்ப்பினை எண்ணி டாது வீழுற அதனில் வீழ்த்தும்  இருப்பாணி போல்அ வள்மேல் காழுற மனத்தில் வைத்த  காதலால் வாழு கின்றார்! என் நெஞ்ச மெத்தையில் துயிலுகின்றான் காம்பரிந் திட்ட பூவைக்  கட்டிலில் பரப்பி, மேலே பாம்புரி போலும் மேன்மைப்  பட்டுடை விரித்துப் போட்டால், தீம்பாலைப் பருகி அன்பன்  சிறக்கவே துயில்வான் இன்றும் மேம்பாட்டிற் குறைவோ? நெஞ்ச  மெத்தையில் துயிலு கின்றான். நெஞ்சக் காட்டில் உலவும் மான் பாங்குற மணியும் பொன்னும்  பதித்தபாண் டியன்தேர் போல ஈங்கிந்தத் தாழ்வா ரத்தில்  எழிலுற உலவா நிற்பான்; ஏங்குமா றில்லை இன்றும்  என்னிரு கண்நி கர்த்தோன் நீங்காமான் போல்என் நெஞ்சக்  காட்டினில் உலவு கின்றான். என் நெஞ்சில் தேன்மழை அவன் மெய்யுற வாய்சு வைக்க  விழி,அழ குண்ண, மூக்கு வெய்யசந் தனத்தோள் மோப்ப,  விளைதமிழ் காது கேட்க, ஐயன்பால் புலன்கள் ஐந்தால்  அமிழ்தள்ள வேண்டும்! இந்நாள் பெய்கின்றான் என்நெஞ் சத்தில்  தேன்மழை, பிரித லின்றி! அவனைச் சுமக்க மனம் ஓயாது அறம்செய்த கையும் ஓயும்  மக்களை அன்பால் தூக்கிப் புறம்போன காலும் ஓயும்!  செந்தமிழ்ப் புலவர் சொல்லின் திறம்கேட்ட காதும் ஓயும்!  செயல்கண்ட கண்ணும் ஓயும்! மறவனைச் சுமக்கும் என்றன்  மனமட்டும் ஓய்த லில்லை. அயலவன் கண்படாமல் காத்து வந்தேன் வெயில்பட்டால் உருகிப் போகும்  மெழுகினால் இயன்ற பாவை! பெயும்மழை பட்ட போதே  கரையும்கற் கண்டின் பேழை! புயல்பட்டால் நிலைகொள் ளாத  பூம்பொழில்! என்ம ணாளன் அயலவள் கண்பட் டால்சீர்  அழியும்என் றன்பால் காத்தேன். தப்பொன்றும் இன்றி என் தமிழனைக் காத்தேன் தொப்பென்ற ஓசை கேட்டால்  துயருறும் என்றும், சாற்றில் உப்பொன்று குறைந்தால் உண்ணல்  ஒழியுமே என்றும், ஒன்றை ஒப்பெனில் ஒப்பா விட்டால்  உடைபடும் உள்ளம் என்றும் தப்பொன்றும் இன்றி என்றன்  தமிழனை அன்பாற் காத்தேன். எத்தீமை நேருமோ? என்று நினைப்பாள் மூதாட்டி தற்காத்துத் தற்கொண் டானைத்  தான்காத்துத் தகைமை சான்ற சொற்காத்துச் சோர்வி லாளே  பெண்என்று வள்ளு வர்தாம் முற்சொன்ன படியே என்றன்  முத்தினைக் காத்து வந்தேன். எத்தீமை மனக்கு றைச்சல்  எய்துமோ எனநி னைப்பேன்! எனக்குக் கொடுப்பதைத் தாத்தாவுக்குக் கொடு அகவல் பாட்டியே, சிறுமலைப் பழங்கள் இந்தா என்று பேரன் ஈய வந்தான். தம்பியே உன்றன் தாத்தா வுக்குக் கொடுபோ! என்று கூறிக் கொடுக்கப் போவதைக் கூர்ந்துநோக் குவளே! பொரிமாத் தந்தார் உண்டாள் நாணிப்போனார் தம்மிடம் வலக்கால் குத்திட்டும், இடதுகால் மடித்தும், உட்கார்ந் திலக்கியம் உற்று நோக்கிடும் மணவழ கர்தம் மனையாள் நினைவாய்க் கணுக்கால் கையூன் றியபடி ஊன்றுகோல் துணையடு தம்,தலை யணைக்கீழ் வைத்த பொதிந்த பொரிமாப் பொட்டணம் தூக்கி எழுந்தார். விழிப்புடன் விழுந்து விடாமே நடந்து,தம் துணைவியை நண்ணினார்.அப்போது மருமகள் நகைமுத்து வந்து, "மாமா என்ன வேண்டும்? ஏன் வந்தீர்கள்? என்னிடம் கூறினால் யான்செய் யேனா?" என்றாள். பொரிமா இடையில் மறைத்தும் தன்துணை மேலுள்ள அன்பை மறைத்தும் ஒன்று மில்லை ஒன்று மில்லை என்று சொல்லொணாத் துன்பம் எய்தினார்! மருகி போனாள். கிழவர் துணைவியின் அருகுபோய்ப் பொரிமா அவளிடம் நீட்டி உண்ணென்று வேண்டி நின்றார்! உண்டாள்; நாணிப் பிரிந்தார் உவந்தே! அவள் தனிச்செல்ல  மணவழகர் பொறார் தங்கம் கொல்லைக்குத் தனியே செல்வதை மணவழகு நோக்க மனது பொறாராய் மருகியை அழைப்பார்; மருகி வந்து,தன் துணைவிக்குத் துணைசெயக் கண்டால் தணிவார் தமது தணியா நெஞ்சமே. அவனுக்குத் தொண்டு செய்தலே அவளுக்கின்பம் மணவழ கர்தாம் மறுபுறம் நகர்ந்தால் அணிமையிற் சென்றே அன்பன் படுக்கையைத் தட்டி, விரிப்பு மாற்றித் தலையணை உறைமாற் றுவாள் அவள்; மணந்தநாள் பெறுவதைப் பார்க்கிலும் பெறுவாள் இன்பமே. முன்னாள் நடந்ததை மூதாட்டி இந்நாள் நகைமுத்திடம் இயம்புவாள் ஒருநாள் மாலைப் பெருமூ தாட்டி நடந்த ஒன்றை நகைமுத் தாளிடம் மிகுமகிழ்ச் சியுடன் விளம்ப லுற்றாள்; செம்பில் எண்ணெயும் சீயக் காயும் ஏந்தி மணாளரை எழுந்திரும் என்றேன். "உனக்கேன் தொல்லை உன்றன் பணிச்சியை எண்ணெய் தேய்க்க அனுப்புக" என்றார். "நானே அப்பணி நடத்துவேன்" என்றேன். "மானே, மெல்லிடை வஞ்சியே, நீபோய்க்  கிளியுடன் பேசியும் ஒளியாழ் மிழற்றியும் களியுடன் இருப்பாய் கவலைஏன்?" என்றார். அறவே மறுத்ததால் அறைக்குச் சென்றேன். பின்னர்ஓர் பணிச்சி என்மணா ளர்க்கே எண்ணெய் இட்டுத் தண்சீ யக்காய் தேய்த்து வெந்நீர் சாய்த்துத் தலைமுடி சிக்கறுத் திருந்தாள். திடும்என அங்கே என்றன் மாமியார், "என்னன்பு மகனே, ஏதுன் மனைவி இப்ப ணிச்சியை உனக்கு முழுக்காட்ட ஒப்பிய"தென்றார். அதற்கென் மணாளர், "ஆம்அவள் என்னை எண்ணெய்இட் டுக்கொள எழுந்திரும் என்றாள். ஒப்பேன் என்றேன். உடனே உட்சென்று இப்ப ணிச்சியை அனுப்பினாள்" என்றார். அப்படி யாஎன் றன்புறு மாமியார் இப்புறம் திரும்பி எதிரில் நோக்க, முக்கா டிட்டே முகம்மறைத் தபடி சிக்கறுத் திருந்த சிறிய பணிச்சியைத் "தங்கத் திடத்தில் சந்தனம் கொடுத்தே இங்கே அனுப்படி" என்றார். பணிச்சி அகலும் போது முக்கா டகன்றது. தங்கமே பணிச்சி என்பதை அங்கென் மாமியார், அன்பர்கண் டனரே! மணிமொழியாரிடம் மணவழகர் மனத்தில் மாசு வராமையே அறம்எனும் வள்ளுவர் வாய்மொழி மறந்தறி யேன்நான்; அறம்எனல் இல்லறம் துறவறம் ஆக இருவகை என்பதை ஒருகாலும் ஒப்பேன்; அறம்எனப் பட்டதே இல்வாழ்க் கைஎன்றார் வள்ளுவர் ஆதலால்! உள்ளம் கவர்ந்த ஒருத்தி உளத்தை உரிமையாய்க் கொண்டேன். அதுதான் மணமென அறிஞர் கூடிப் புதுவாழ்வு பெறுகெனப் புகன்றனர் வாழ்த்தே. இடும்பை தீர்ப்பவள் என்மனை! அவள்என் குடும்ப விளக்கு! வேறேது கூறுவேன்? என்பால் அன்பை நிரம்ப ஏற்றவள் நன்மக்க ளீன்று நலமுறக் காத்தாள்; நவையறு கல்வியால் நன்மக் கள்தமை அவையினில் முதன்மை அடையச் செய்தேன்; அறவழி யாலே நிறைபொருள் ஆக்கினேன். நெஞ்சினில் உற்றிடும் நிலைவேறு பாட்டால் நொடிதொறும் நொடிதொறும் நூறுநூ றாயிரம் இறப்பும் பிறப்பும் எய்தும் அன்றோ?  எய்தவே இன்பம் ஏகலும் மீளலும் அடையும் அன்றோ? அவ்வா றின்றி அலைகடல் சூழ்நில வுலகில் இந்நாள் நிலைத்த இன்பம் பெற்றதென் நெஞ்சம்!" எனமண வழகர் இயம்பிய அளவில்,  "இதற்குமுன் நிகழ்ந்த இன்ப நிகழ்ச்சிகள் உண்டெனில் அவற்றில் ஒன்று கூறுக!" எனமணி மொழியார் இனிது கேட்டார். நன்றென அழகர் நவில லானார்: இளமையில் நடந்த இன்ப நிகழ்ச்சி "படித்தும் கேட்டும், பாடியும் ஆடியும் இருந்த நண்பர் பிரிந்து போகவே, என்றன் அறையில் யான்தனிந் திருந்தேன். நிலாமுகத் தாள்என் நெஞ்சைத் தொட்டாள். தனிமையை நெஞ்சு தாங்க வில்லை. தனித்திருக் கின்றிரோ தக்க நண்பருடன் இனித்திருக் கின்றிரோ என்றுபார்த் துவர என்னை அனுப்பினாள் என்றன் தலைவி என்றாள் தோழி என்னெதிர் வந்து! போய்ச்சொல் என்றேன், போனாள்; மீண்டும் வந்து, தலைவனே, வஞ்சி சோறுகறி ஆக்கு கின்றாள். அடுப்பில் சோறு கொதிக்கின்ற தெ"ன்று கூறினாள். "இங்கே குளிர்கின்றதோ" எனக் கூறி அனுப்பினேன். "இறக்கும் நேரம்" என்றாள் வந்து! "வாழும் நேரமோ இங்கு மட்டும்?" என்றேன். சென்றாள். உடனே என்றன் இனிய அமிழ்து தனிஎனை அடைந்தாள். "அத்தான் பொறுப்பீர் அடுப்பில் வேலை  முடித்தோடி வருவேன்" என்று மொழிந்தாள். "தோழிபார்க் கட்டும் சோறாக் கும் பணி" என்றேன். அதற்கவள், என்முகம் தாங்கி "தலைவர் விருப்பம் தலைவி அறிவாள்; பொறுப்பிலாத் தோழி அறிவ துண்டோ?" என்றாள். "மாமியார் இல்லையா?" என்றேன். "அந்தோ அந்தோ?" என்றுதன் அங்கையால் தன்வாய் மூடித் "தளர்ந்த கிழவியை அடுப்பில் விட்டுத் தடித்த மருமகள் கொழுந னோடு கொஞ்சினாள் என்று வையம் இகழுமே" என்று, வஞ்சி தொடக்க மருத்துவ மாகமுத் தமொன்று கொடுத்துக் குடுகுடென்று கடிதே ஓடிச் சமையல் முடித்துத் தமிழோ அமிழ்தோ எனச்சோ றிட்டழைத் தாளே! மணிமொழியார் நிலைத்த இன்பமாவ தெப்படி என்றார் "உண்பது நாழி உடுப்பது நான்குமுழம் எண்பது கோடிநினைந் தெண்ணுவ" என்று மூத்தாள் ஔவை மொழிந்த வண்ணம் என்றும் மக்களின் எண்ணம் பலவாம்; எண்ணம் தோற்பதும் ஈடே றுவதும் ஆகும். அதனால், அகத்தின் நிலைமை நல்லதும் ஆகும்; நலிவதும் ஆகும். இவற்றையே நொடிதோறும் ஏற்படு கின்ற ஆயிரம் ஆயிரம் பிறப்பிறப் பென்றீர். இவைகளே நிலையா இன்பதுன் பங்கள்! "நிலைத்த இன்பம் நேர்ந்த தென்றீரே  வழுத்துவீர் அதை"என மணிமொழி கேட்டார்; அதுகேட் டழகர் அறிவிக் கின்றார்; "செம்மலர் பறிக்கச் செல்வதும் இலைநான்! சேறும் பூசித் திரும்பலும் இல்லை. பற்றில்லை; தீமை உற்றதும் இல்லை. தீமையில் லாவிடம் இன்பம் திகழும், என்ன என்னிடம் மீதி என்றால். ஒன்றே! ஒன்றே! அதன்பெயர் உயிர்ப்பாம். அவ்வு யிர்ப்போ அன்பி ருப்பதால் இருக்கின் றதுவென இயம்புவர் வள்ளுவர்; 'அன்பின் வழிய துயிர்நிலை' அறிக. என்றன் அன்புக் குரியவர் எவரெனில் மனைவி, மக்கள், பேரர், உறவினர். ஆயினும் மனைவி,என் அன்புக் கருகில் இருப்பவள், என்மேல் அன்புவைத்(து) இருப்பவள்" என்றார் மணவ ழகரே மணவழகர் இரவு நன்றாகத் தூங்கினையோ என்றார் அறுசீர் விருத்தம் சேவல்கூ விற்று; வானம்  சிரித்தது; நூற்றைந் தாண்டு மேவிய அழகர் கண்கள்  விரிந்தன! கிழவி யாரின் தூவிழி மலர்ந்த! ஆங்கே  துணைவனார் துணையை நண்ணிப் "பாவையே தூக்கப் பொய்கை  படிந்தாயோ இரவில்" என்றார். அயர்ந்து தூங்கியதாகத் தங்கம் சாற்றினாள் குடித்தோமே பாலின் கஞ்சி;  குறட்பாவின் இரண்டு செய்யுள் படித்தோமே, அவற்றி னுக்கு  விரிவுரை பலவும் ஆய்ந்து முடித்தோமே! மொணமொ ணென்று  மணிப்போறி சரியாய்ப் பத்தும் குறித்தது துயின்றேன்;இப்போ(து)  அழைத்தீர்கள் விழித்தேன் என்றாள். தம் தூக்க நலம் சொல்வார் தள்ளாத கிழவர் நிறையாண்டு நூறும் பெற்ற  நெடுமூத்தாள் இதனைக் கூற குறைவற்ற மகிழ்ச்சி யாலே  அழகரும் கூறு கின்றார்: நிறுத்தினோம் நெடிய பேச்சை  பொறி,மணி பத்தே என்று குறித்தது துயின்றேன் சேவல்  கூவவே எழுந்தேன் என்றார். கிழவர் உடனிருப்பதில் கிழவிக்கு நாணம் புதுக்காலை; குளிர்ந்த காலைப்  போதிலே உனைநெ ருங்கி இதுபேசும் பேறு பெற்றேன்  என்றனன் கிழவோன்! அன்னாள் எதிர்வந்த அமிழ்தே, அன்பே  யான்பெற்ற இன்பம் போதும் அதோ நகைமுத்து வந்தாள்  நமைக் காண்பாள் அகல்வீர் என்றாள். நூற்றைந்து ஆண்டுவரை நீவிர் வாழக் காரணம் என்ன? எண்சீர் விருத்தம் மற்றொருநாள் காலையிலே மணிமொழியார் வந்தார்;  மணவழகர் அன்போடு வரவேற்புச் சொன்னார். "இற்றைநாள் நூற்றைந்தா ண்டாயின உமக்கே  இத்தனைநாள் உயிர்வாழக் காரணந்தான் என்ன? சற்றதனை உரைத்திடுக!" எனக்கேட்டார் மொழியார்.  "எந்தைதாய் நல்லொழுக்க முடையவர்கள்; என்னைக் கற்றவரில் ஒருவன்என ஆக்கிவைத்தார்; நானும்,  கருத்தினிலும் சேர்த்தறியேன் தீயழுக்கம் கண்டீர். நன்மனைவியுடையார் எல்லாம் உடையார் இவையன்றி நானடைந்த மனைவியோ என்றால்  எனக்கினியாள்! என்னிரண்டு கண்களே போல்வாள்; நவையில்லாள்; நான்வாழத் தன்னுயிரும் நல்கும்  நாட்டத்தாள்; அவளாலே என்வாழ்க்கை காத்தேன்; அவளாலே நல்லொழுக்கம் தவறாமை காத்தேன்;  அவளாலே என்குடும்பம் மாசிலதாய்ச் சற்றும் கவலையிலா தாயிற்று; நன்மனைவி உடையார்!  கடலுலகப் பெரும் புகழும் வாழ்நாளும் உடையார்! உலக அமைப்புக்கு இலேசு வழி இவ்வுலகில் அமைதியினை நிலைநாட்ட வேண்டின்  இலேசுவழி ஒன்றுண்டு பெண்களைஆ டவர்கள் எவ்வகையும் தாழ்த்துவதை விட்டொழிக்க வேண்டும்.  தாய்மையினை இழித்துரைக்கும் நூலும்ஒரு நூலா? செவ்வையுற மகளிர்க்குக் கல்விநலம் தேடல்  செயற்பால யாவினுமே முதன்மைஎனக் கொண்டே அவ்வகையே செயல்வேண்டும்! அறிவுமனை யாளால்  அமைதியுல குண்டாகும் என்ன இதில் ஐயம்! மகளிர் ஒழுக்கம் பூண்டால் மருத்துவ நிலையமே வேண்டாம் மகளிரெல்லாம் கல்வியறி வொழுக்கமுள ராயின்  மருத்துவமே வேண்டாவாம்; பிணிமூப்பு வாரா. மகளிரெல்லாம் அரசியலைக் கைப்பற்றி ஆண்டால்  மாநிலத்தில் போரில்லை; சாக்காடும் இல்லை; துகளில்லா ஒருசிறிய உலகுண்டு கேட்பீர்  தொல்லையில்லா அவ்வுலகம் யான்வாழும் இல்லம். பகையில்லை. அங்கின்மை இல்லை,பிணி இல்லை  பழியில்லை, என்துணைவி அரசாண்ட தாலே". உங்கட்குப்பின் உங்கள் குடும்பம் எப்படி நடக்கும்? என்றுரைத்தார் மணவழகர்; இதைஎல்லாம் கேட்ட  எழிலான மணிமொழியார்" உங்கட்குப் பின்னர் நன்றுகுடித் தனம்நடக்கக் கூடுமோ?" என்றார்  "நான்நல்லன், என்மனைவி நனிநல்லள்; நாங்கள் என்றும்மன நலம்உடையோம். ஆதலினால் அன்றோ,  எம்மக்கள் நல்லவர்கள்; எம்மக்கள் கொண்ட பொன்னுறவைப் பெற்றோரும் நல்லர்நனி நல்லர்  பொலியும்இனி யும்குடும்பம்" என்றுரைத்தார் அழகர். தள்ளாத கிழப்பருவத்தில் இன்பம் எய்துதல் உண்டு "கையிலே வலிவில்லை காலில்வலி வில்லை;  கண்ணில்ஒளி இல்லைநாச் சுவையறிய வில்லை; மெய்யூறும் இல்லைஒலி காதறிய வில்லை;  விலாஎலும்பின் மேற்போர்த்த தோலுமில்லை; நீவிர் செய்வதொரு செயலில்லை; இன்பமுறல் ஏது?  தெரிவிப்பீர்" என்றுமணி மொழியார்தாம் கேட்கத் துய்யமுது மணவழகர் உடல்குலுங்கச் சிரித்துச்  சொல்லலுற்றார், முதியோளும் நகர்ந்துவந்துட் கார்ந்தாள். இன்புறும் இரண்டு மனப்பறவைகள் "வாய்மூக்குக் கண்காது மெய்வாடி னாலும்  மனைவிக்கும் என்றனுக்கும் மனமுண்டு கண்டீர் தூய்மையுறும் அவ்விரண்டு மனம்கொள்ளும் இன்பம்  துடுக்குடைய இளையோரும் படைத்திடுதல் இல்லை. ஓய்வதில்லை மணிச்சிறகு! விண்ணேறி, நிலாவாம்  ஒழுகமிழ்து முழுதுண்டு பழகுதமிழ் பாடிச் சாய்வின்றிச் சறுக்கின்றி ஒன்றையன்று பற்றிச்  சலிக்காதின் பங்கொள்ளும் இரண்டுமனப் பறவை. இருமனம் இரு மயில்கள்; தேன்சிட்டுகள்; கிளிகள்; அமிழ்தின் கூட்டு "அருவியெலாம் தென்பாங்கு பாடுகின்ற பொதிகை  அசைதென்றல் குளிர்வீசும் சந்தனச்சோ லைக்குள் திரிகின்ற சோடிமயில் யாமிரண்டு பேரும்;  தெவிட்டாது காதல்நுகர் செந்தேன்சிட் டுக்கள்! பெருந்தென்னங் கீற்றினிலே இருந்தாடும் கிளிகள்!  பெண்இவளோ ஆண்நானோ எனவேறுவேறாய்ப் பிரித்துணர மாட்டாது பிசைந்தகூட் டமிழ்து!"  பேசினார் இவ்வாறு; கூசினள் மூதாட்டி. அவள் தூங்கவில்லை இரவுமணி பத்தாகியும் அறுசீர் விருத்தம் மாநில மக்கள் எல்லாம்  தூங்கும்நள் ளிரவில், தங்கம் ஏனின்னும் தூங்க வில்லை?  இருநுனி தொடவ ளைக்கக் கூனல்வில் போலே மெய்யும்  கூனிக்கி டந்த வண்ணம் ஆனதோ மணிபத் தென்றாள்  மணிப்பொறி அடிக்கக் கேட்டே. அவனிடம் நகர்ந்து செல்லுகிறாள் "அவன்துயின் றானோ?" என்னும்  ஐயத்தால் தான்தூங் காமல் கவலைகொள் வாளை எங்கும்  காண்கிலோம் இவளை அல்லால்! துவள்கின்ற மெய்யால் தன்கைத்  துடுப்பினால் தரைது ழாவித் தவழ்கின்றாள் தன்ம ணாளன்  படுக்கையைத் தாவித் தாவி. ஒரு தலையணையில் அருகருகு கிடந்தார்கள் "வருகின்றா யோடி தங்கம்  வா"என்றோர் ஒலிகேட் கின்றாள். சருகொன்று காற்றால் வந்து  வீழ்ந்தது போலே தங்கப் பெரியாளும் பெரியான் அண்டைத்  தலையணை மீது சாய்ந்தாள். அருகரு கிருவர்; மிக்க  அன்புண்டு; செயலே இல்லை! இருவர் களிப்பும் இயம்பு மாறில்லை ஒளிதரும் அறைவி ளக்கும்!  ஒளிக்கப்பால் இவர்கள் வாழ்வார்! வெளியினை இருளும் கௌவும்  இருட்கப்பால் விளங்கு கின்றார்! எளிதாகத் தென்றல் வீசும்  என்பயன்? அவர்அங் கில்லை களித்தன மனம்இ ரண்டும்  கழறுமா றில்லை அ·தே. மனவுலகில் இருவர் பேச்சுக்கள் இருமனம் அறிவு வானில்  முழங்கின இவ்வா றாக "பெரியோளே என்நி னைப்பால்  தூங்காது பிழைசெய் கின்றாய்" "உரியானே, எனையே எண்ணி  உறங்காது வருந்து கின்றாய்" "பெருந்தொல்லை தூக்க மின்மை"  "நற்றூக்கம் பெரிய இன்பம்!" என் நினைவைவிட்டுத் தூங்குக அரைநாளின் தூக்க மேஇவ்  வாறின்பம் அளிக்கு மானால் ஒருநாளின் முழுதும் தூங்கல்  ஒப்பிலா இன்பம் அன்றோ? "அரிவையே என்றன் நெஞ்சை  அள்ளாதே தனியே தூங்கே." "உரியானே என்ம னத்தைப்  பறிக்காதே உறக்கங் கொள்வாய்" நெடிய தூக்கம் நீடிய இன்பம் தூங்கினார் கனவும் அற்ற  தூக்கநல் லுலகில்! பின்னர் ஏங்கினார் விழித்த தாலே!  இன்பமே விரும்ப லானார்! தூங்குவோம்! நிலைத்த இன்பம்  துய்ப்போம்நாம் என்றார்! நன்றே தூங்குகின் றார்நல் லின்பம்  தோய்கின்றார் வாழ்கின் றாரால்! முற்றும்.