[] 1. Cover 2. Table of contents காலம் மறந்த இடம் காலம் மறந்த இடம்   சு.சோமு   sundaram.somu@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA-NC கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/kalam_marantha_idam மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation முன்னுரை 1918 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ப்ளூ புக் மேகஸின் என்னும் பத்திரிக்கையில் மூன்று பகுதியாக வெளி வந்த புதினம் இது. எட்கர் ரைஸ் பர்ரோஸ் என்னும் எழுத்தாளர் எழுதிய கேஸ்பக் என்னும் பழைய உலகத்தில் நடந்த சம்பவங்களைப் பற்றி எழுதிய மூன்று நூல்கள் கொண்ட தொகுப்பில் முதலாம் கதை இது. முதலாம் உலகப்போர் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், அமெரிக்காவில் ஒரு மிகப் பெரிய கப்பல் கட்டும் தொழில் அதிபரின் மகன் ஒருவன் வேலை விஷயமாக பிரான்சிற்குக் கப்பலில் பயணம் செய்யும் போது ஜெர்மன் நாட்டுக் கப்பலால் தாக்கப்பட்டுத் தப்பிக்கிறான். பின் தாக்கிய அதே நீர் மூழ்கிக் கப்பலை மற்றோரு ஆங்கிலப் படகின் உதவியுடன் வளைக்கிறான். பின் அவர்கள் எதிரிகளுடன் எங்கெங்கோ அலைந்து திரிந்து புதியதோர் உலகிற்குப் பயணம் செய்கிறார்கள். அங்கு அவர்கள் கண்ட உலகம் மிகவும் வியப்படைய வைக்கிறது. அங்கு வாழும் விலங்குகள் தாவரங்கள் பறவைகள் என அனைத்தும் என்றோ பூமியில் வாழ்ந்து மறைந்தவை. அதற்கு நடுவில் பயணம் செய்ய வேண்டிய அவர்கள் இறுதியில் என்ன ஆனார்கள் என்பதைப் பலவிதத் திருப்பங்களுடன் மிக அருமையாக கதாசிரியர் புனைந்திருக்கிறார். மிகவும் விறு விறுப்பான பயணம். முடிந்தவரை தமிழ்ச் சொற்களைத் தேடிப்பிடித்துப் பயன்படுத்தி இருக்கிறேன். தமிழுக்கான ஆங்கிலப் பதங்களை இறுதியில் தொகுத்திருக்கிறேன். கடல் புறா போன்ற கதைகளைப் படித்திருந்தால் இன்னும் உதவியாக இருந்திருக்கும். ஏனெனில் அதுவும் கடல் பயணம் சார்ந்த தூய தமிழ்ச் சொற்களை எளிதாகப் பயன் படுத்த உதவி இருக்கும். இணையத்தில் இருக்கும் ஆங்கில தமிழ் அகராதிகள் பெரும்பாலும் ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான சரியான பொருள் தருவதில்லை. அத்தியாயம் : ௧ வெற்றிடக் குடுவை அந்தச் சம்பவம் நடந்த போது மத்தியானம் மூன்று மணி இருக்கும். அது ஜூன் 3, 1916 ஆம் தேதி மத்தியானம். நான் கடந்து வந்த சம்பவங்கள், அந்தக் கொடூரமான அனுபவங்கள் எல்லாம் இந்த மூன்று சிறிய மாதங்களில் தான் நடந்தனவா என்று நினைத்துப் பார்க்கும் போது என்னாலேயே நம்ப முடியவில்லை. இந்தக் குறுகிய காலங்களில் என் கண்களால் நான் கண்ட மாற்றங்களும் பரிணாமங்களும் பல யுகங்களைப் பார்த்து வந்தது போல் தோன்றுகின்றன. வேறு யாரும் இதுவரை பார்த்திராத காட்சிகள். ஒரு பழைய இறந்த உலகத்தின் காட்சிகள். கேம்பிரியன் யுகத்தில் கடைசியாகப் பிறந்த உயிரினத்தின் சுவடுகளே இன்று எஞ்சியிராத அளவு மிகப் பழமையான உலகம் அது. உயர் வெப்பத்தால் உருகும் உள் அடுக்கினுள் எனது விதியும் புதைக்கப்பட்டது மனித அறிவிற்கே எப்போதும் எட்டாமல். ஆக நான் இங்கிருப்பது உண்மை. இங்கேயேதான் இருக்கப் போகிறேன் என்பது சுடும் உண்மை. கையால் எழுதப்பட்ட அந்த விபரங்களைப் பார்க்கும் போதே தூண்டப்பட்ட என் ஆர்வம் இவ்வளவு தூரம் அதைப் படித்த பின் கொதி நிலையை நெருங்கிக் கொண்டிருந்தது. எனது மருத்துவரின் அறிவுரையின் படி நான் கோடை விடுமுறையில் கிரீன்லாந்து வந்திருந்தேன். படிக்கும் நினைப்பே இல்லாமல் நான் வாசிக்கும் புத்தகங்களை எடுத்து வர மறந்ததால் சிறிது நாட்களிலேயே போரடித்துக் கொன்று விட்டது. மீன் பிடிப்பதிலும் ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது. ஆனால் வேறு எந்த பொழுது போக்கும் இல்லாததால் கிரீன்லாந்தின் தென் முனையிலுள்ள கேப் பெர்வெல்லில் எந்தவிதமான வசதிகளும் இல்லாத இந்தப் படகில் என் உயிரையே பணயம் வைத்திருக்கிறேன். நிற்க. இந்தக் கதை என்னைப் பற்றியதோ கிரீன்லாந்தைப் பற்றியதோ இல்லை. ஆதலால் இவைகளை விரைவில் கடந்து செல்வோம். ஒரு வழியாக படகு பரிதாப நிலையில் இருக்கும் அந்தத் துறையை அடைந்தது. இடுப்பளவு நீரில் நின்று கொண்டு உள்ளூர் ஆட்கள் உதவியுடன் நான் இறங்கிக் கொண்டிருந்தேன். கரையை அடைந்த பின் இரவு உணவு தயாராகிக் கொண்டிருந்த வேளை நான் உடைந்த பாறைகளின் மேல் இங்கும் அங்கும் உலவிக் கொண்டிருந்தேன். அலைகள் வாரித் தூவிய மணலால் தேய்ந்த க்ரானைட் பாறைகள் கொஞ்சம் கொஞ்சமாக விரிசல் விட்டுக் கொண்டிருந்தன. மோதிக் கொண்டிருக்கும் அந்த அலைகளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் போதுதான் நான் அதை கவனித்தேன். அந்த இடத்தில் யாராவது ஒரு வங்காள புலியைப் பார்த்தால் எவ்வளவு ஆச்சர்யம் அடைவார்களோ அதை விட அதிகமான ஆச்சர்யத்தோடு நான் அதை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த அது என்னவென்றால் ஒரு லிட்டர் அளவுள்ள வெற்றிடக் குடுவை. கிரீன்லாந்தின் தென் முனையிலுள்ள கேப் பெர்வெல்லில் அலைகளினால் இங்கும் அங்கும் அல்லாடிக் கொண்டிருந்தது. ஓடிச் சென்று அதை எடுத்தேன். எடுக்கும் வேளையில் முழங்கால்கள் வரை நனைந்தேன். மணலில் அமர்ந்து அதைப் பிரித்தேன். அந்தி சாயும் வேளையில் அந்தச் சிறு வெளிச்சத்தில் இறுக்கமாக மடிக்கப்பட்ட அந்த அழகான கையெழுத்துக்களை வாசிக்க ஆரம்பித்தேன். அதன் முதல் பத்தியை நீங்கள் ஏற்கெனவே படித்து விட்டீர்கள். என்னைப் போல சிந்திக்கும் முட்டாளாய் நீங்களும் இருந்தால் மீதியையும் படிக்க வேண்டும் என்று நினைத்திருப்பீர்கள். அதனால் அதை அப்படியே இங்கு தருகிறேன் மேற்கோள் குறிகளை எல்லாம் நீக்கி விட்டு. அதை எல்லாம் நினைவில் வைத்துக் கொள்வது மிகவும் அரிது. இன்னும் இரண்டே நிமிடங்களில் நீங்கள் என்னை மறந்தாலும் மறந்து விடுவீர்கள். என் வீடு சாண்டா மாநகாவில் இருக்கிறது. என் அப்பாவின் நிறுவனத்தில் இளம் உறுப்பினராக இருக்கிறேன். இல்லை இருந்தேன் என்று சொல்வதுதான் சரி. நாங்கள் கப்பல் கட்டுபவர்கள். சமீப காலத்தில் நீர்மூழ்கிக் கப்பல் செய்வதில் தேர்ச்சி பெற்றிருந்தோம். ஜெர்மனி இங்கிலாந்து பிரான்ஸ் அமெரிக்கா போன்ற நாடுகளுக்காக நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டினோம். ஒரு தாய்க்குத் தன் குழந்தையின் முகத்தைப் போல நீர்மூழ்கிக் கப்பல்களை எனக்குத் தெரியும். சோதனை ஓட்டங்களில் நிறைய கப்பல்களுக்கு நான் தலைமை தாங்கி இருக்கிறேன். இருந்தாலும் எனக்கு விமானம் ஓட்டுவதில்தான் ஆர்வம் அதிகம். அதனால்தான் கர்டிஸ் கல்வி நிறுவனத்தில் பயின்று தேர்ச்சி அடைந்தேன். தந்தையிடம் மிகப் பெரும் போராட்டத்திற்குப் பின் லபாயேட்டே எஸ்கேடிரில்லில் சேர அனுமதி வாங்கினேன். அதன் முதல் படியாக அமெரிக்க ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைத்தது. அங்கிருந்து பிரான்ஸ் செல்ல வேண்டி இருந்தது. செல்லும் வழியில் அந்த மூன்று கிரீச்சென்ற ஊதல் சத்தங்கள் என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விட்டன. நான் எனது நாய் நாப்லர் என் கூட்டாளிகள் சிலருடன் கப்பல் தளத்தில் அமர்ந்திருந்தேன். அவர்களும் என்னுடன் அமெரிக்க ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்தில் சேர்வதற்காக பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்த முதல் ஊதல் ஒலி கப்பலின் அமைதியையும் பாதுகாப்பையும் நொறுக்கியது. நீர்மூழ்கிக் கப்பல் வளாகத்தை நெருங்கியதில் இருந்தே நாங்கள் சூழிட நோக்கி எங்கிருக்கிறது என்று தேடியபடியே இருந்தோம். நாளைக் காலையில் பத்திரமாக பிரான்சில் கொண்டு போய்ச் சேர்க்க இருந்த விதி இப்படி விளையாடுகிறதே என்று எண்ணி நொந்து போய் இருந்தோம். இளம் வயதாய் இருந்ததால் கப்பல் பயணம் சாகசம் நிறைந்ததாக இருக்கும் என்று எண்ணித்தான் வந்தோம். கடவுளாய்ப் பார்த்து அன்று ஒரு வாய்ப்பு வழங்கினார். ஆனால் அதன் பின் நடந்த நிகழ்வுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது அது வெறும் பொம்மலாட்டம் போலத்தான் இருந்தது. பாதுகாப்புக் கருவிகளை நோக்கிப் பாயும் பயணிகளின் வெளிறிப் போன முகங்களை என்னால் மறக்கவே முடியாது. இத்தனைக்கும் இன்னும் எதுவும் பயங்கரமானதாக நடக்கவும் இல்லை. நாப்ஸ் ஒரு மெல்லிய முனகலுடன் தலையை உயர்த்தியது. நானும் எழுந்து கப்பலின் பக்கவாட்டில் பார்த்தேன். இருநூறு காதத்திற்கும் குறைவான தொலைவில் இன்னொரு நீர்மூழ்கிக் கப்பலின் சூழிட நோக்கி தெரிந்தது. மேலும் கப்பலை நோக்கிச் சீறிப் பாய்ந்து வந்து கொண்டிருந்த வெடிக்கண்ணியின் வழித்தடம் ஒன்றும் தெளிவாய்த் தெரிந்தது. நாங்கள் பயணித்த கப்பல் அமெரிக்காவினுடையது. அதில் எந்தவிதமான போர்த் தளவாடங்களும் கிடையாது. தற்காத்துக் கொள்வது கூட எங்களால் இயலாது. இருந்தும் எந்தவிதமான முன்னெச்சரிக்கையும் இல்லாமல் எங்கள் கப்பலின் மீது வெடிக்கண்ணி ஏவப்பட்டது. நான் அசையாமல் மூச்சுப் பேச்சில்லாமல் நின்று கொண்டிருந்தேன். அது கப்பலின் வலப்பக்கம் கிட்டத்தட்ட நடுவில் மோதியது. அப்போது கப்பல் ஆடிய ஆட்டம் ஏதோ மிகப் பெரிய எரிமலை ஒன்று வெடித்துக் கடலைக் கிழித்து விட்டதைப் போல் இருந்தது. நாங்கள் கப்பலின் மேல் தளத்திற்குத் தூக்கி எறியப்பட்டோம். காயம்பட்டுத் திகைப்போடு பார்த்துக் கொண்டிருக்கும் போது நூறு அடிக்கும் மேல் ஒரு பெரிய அலை பலகைகள் இரும்புச் சாமான்கள் மற்றும் மனித உடல்களைச் சுமந்து சென்றது. வெடிக்கண்ணி வெடித்து முடித்த பின் ஏற்பட்ட மயான அமைதியும் அதைப் போலவே மிகவும் பயங்கரமானதாக இருந்தது. அது ஏறக்குறைய இரண்டு விநாடிகள் நீடித்திருந்தது. பின் காயம்பட்டவர்களின் முனகல்களும் கூக்குரல்களும் ஆண்களின் சாபக் குரல்களும் கப்பல் அதிகாரிகளின் கட்டளைகளும் மாறி மாறி ஒலிக்க ஆரம்பித்தன. அவர்கள் அற்புதமாய்த் தெரிந்தார்கள். அவர்களும் அவர்களது குழுவினரும். நான் பிறந்த நாட்டை எண்ணி இப்போது பெருமைப் பட்டது போல் வேறெப்போதும் நடக்கவில்லை. கப்பலில் மோதி வெடிக்கண்ணி வெடித்த பின் அவ்வளவு கூச்சல் குழப்பங்களுக்கு நடுவிலும் எந்த அதிகாரியும் குழுவினரும் தங்கள் சுய அறிவை இழக்கவில்லை. யாரும் சிறிதும் பயப்படவோ பீதியடையவோ இல்லை. நாங்கள் படகுகளை இறக்க முயற்சித்துக் கொண்டிருந்த போது கடல் நீரிலிருந்து வெளியே வந்த நீர்மூழ்கிக் கப்பல் எங்களை நோக்கித் துப்பாக்கிகளை நீட்டியது. அங்கிருந்த கப்பல் அதிகாரி எங்கள் கப்பலின் கொடியை இறக்கச் சொன்னார். ஆனால் அவர் மறுத்து விட்டார். அவர்களது கப்பல் எங்கள் கப்பலின் மிக அருகில் நின்று கொண்டிருந்ததால் படகுகளையும் இறக்க முடியாமல் இருந்தது. மேலும் பாதிக்கும் மேல் படகுகளும் வெடியினால் சேதமடைந்து இருந்தன. எஞ்சியிருந்த படகுகளில் முண்டியடித்துப் பயணிகள் ஏறிக் கொண்டிருக்கும் வேளையில் பக்கத்துக் கப்பலில் இருந்து எங்கள் மீது குண்டு போட ஆரம்பித்து விட்டார்கள். ஒரு குண்டு பெண்கள் குழந்தைகள் இருந்த பக்கத்தில் விழுந்ததைப் பார்த்த பின் நான் என் தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு கண்களை மூடிக் கொண்டேன். நான் பீதியோடு அதைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது என் உணர்ச்சியில் சிறிதே மாறி ஏமாற்றம் பீறிடுவதை உணர்ந்தேன். ஏனெனில் அந்தக் கப்பல் எங்கள் துறையில் இருந்து கட்டப்பட்டது. அதில் அறையப்பட்ட ஒவ்வொரு ஆணியும் எனக்குத் தெரியும். நான்தான் அதன் கட்டுமானப் பணிகளை மேற்பார்வை இட்டவன். நான் அதன் இயக்குனர் மனையில் அமர்ந்து இருக்கிறேன். கீழே வியர்வைக்கு நடுவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த வேலையாட்களுக்கு அவர்கள் செய்ய வேண்டிய பணிகளைச் சொல்லிக் கொண்டிருந்திருக்கிறேன். வெயில் காயும் கோடை காலத்தில் பசிபிக் கடலின் நீரை அது முதன் முதலாய் கிழித்துப் பாயும் போது அதனுடன் பயணம் செய்திருக்கிறேன். என் உடல் மற்றும் மூளையின் உழைப்பில் உருவான இந்தக் கப்பல் இன்று என் முன்னால் ஒரு அசுரனாகி நிற்கிறது என்னையே கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில். மேல் தளத்தில் இன்னொரு குண்டு வெடித்தது. அதிகமான ஆட்களை ஏற்றியிருந்த ஒரு படகு அபாயகரமான கோணத்தில் திரும்பியது. அதில் இருந்த பெண்களும் குழந்தைகளும் வாந்தி எடுத்தனர். இறுதியாக ஒரு முறை இங்கும் அங்கும் ஆடி விட்டு ஏற்கெனவே கடல் நீரில் தத்தளித்துக் கூக்குரலிட்டுக் கொண்டிருந்தவர்களின் மீது தொம்மென்று விழுந்தது. சில ஆண்கள் கடலுக்குள் குதித்தார்கள். கப்பலே இப்பொழுது வேறொரு கோணத்தில் திரும்ப ஆரம்பித்தது. நாப்ஸ் தன் நான்கு கால்களையும் ஒன்றோடு சேர்த்து தான் வழுக்கி உள்ளே விழுந்து விடாமல் இருக்க முயற்சி செய்து கொண்டிருந்தது. என்னை ஒரு கேள்வி கேட்பது போல் முனகிக் கொண்டே பார்த்தது. நான் குனிந்து அதன் தலையை தடவிக் கொடுத்தேன். இங்கே வா என்று கத்தி கொண்டே நான் பக்கவாட்டில் ஓடி தலை கீழாகக் குதித்தேன். நான் மேலே வந்து பார்த்த போது நாப்ஸ் சிறிது தூரத்தில் வித்தியாசமாக நீச்சலடித்து கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும் அதன் காதுகள் சிறிது மடங்கின. வாய் சிறிது கோணி மெல்லியதாய் முனகியது. அந்தக் கப்பல் தன் கடமையை முடித்தது போல வடக்கு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தது. படகுகளை நோக்கி அது குண்டுகளை வீசிக் கொண்டிருந்த போது மூன்று படகுகளில் நிறைய பேர் அமர்ந்து இருந்தனர். ஆனால் அவைகளைக் குறி வைப்பது மிகவும் கடினமாக இருந்திருக்கும். மேலும் ஜெர்மனிய படையில் குறி வைப்பவர்களின் திறமை இன்மையாலும் அந்தப் படகுகளில் இருந்தவர்கள் ஒருவாறு தப்பிக்க முடிந்தது. சற்று நேரத்தில் மிகப் பெரும் கரிய புகையைக் கிழக்கு அந்தி வானத்தில் உமிழ்ந்துவிட்டு அந்தக் கப்பல் கடலுக்கு அடியில் மூழ்கிச் சென்று விட்டது. இவ்வளவு நேரமும் மூழ்கிக் கொண்டிருந்த கப்பலை விட்டு சிறிய உயிர் காக்கும் படகுகள் எல்லாம் விசிறி அடிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. நான் உயிரை விட்டுக் கத்திக் கொண்டிருந்த போதும் ஒன்று அவர்களுக்கு காது கேட்டிருக்காது இல்லை அவ்வளவு கஷ்டப்பட்டு வந்து என்னைக் காப்பாற்ற வேண்டுமா என்று யோசித்திருக்கக் கூடும். அது ஒரு முறை புரண்டு முழுவதும் மூழ்கும் வேளை நானும் நாப்சும் சிறிது விலகிச் சென்றோம். நாங்கள் கொஞ்சம் உள்ளே இழுக்கப்பட்டு அதே அளவு தள்ளி விடப்பட்டோம். நல்ல வேளையாக அதற்கடியில் எங்களை இழுத்து விடவில்லை. பற்றிக் கொள்ள எதாவது கிடைக்குமா என்று என் கண்கள் அவசரமாகச் சுற்றிலும் துலாவின. நான் அந்தக் கப்பல் மூழ்கிய இடத்திலேயே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கே நீருக்குள் மழுங்கடிக்கப்பட்ட வெடிப்பின் சத்தம் கூட பலமாகக் கேட்டது. அந்த இடத்தில் தண்ணீர் அவ்வளவு சூடாகியது. பின் கடலின் பேற்பரப்பில் இருந்து மனித உடல்கள் உடைந்த படகுகள் நீராவி கரி எண்ணெய் கப்பலின் ஒரு தளம் என்று அனைத்தும் மேலெழும்பின. மிகப் பெரிய நீர்த் தூண் போன்ற அந்த இடம் ஒரு தற்காலிக மயானம் போல் ஆகி விட்டது. ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த கடல் சற்றுத் தணிந்த பின் உடைந்த பொருட்களையும் சடலங்களையும் தூக்கி எறிவது நின்ற பின் நான் எனது உடலையும் நாப்ஸின் உடலையும் தாங்குவதற்கு ஏற்றவாறு எதாவது கனமான பொருள் கிடைக்குமா என்று நீந்தித் தேட ஆரம்பித்தேன். நான் இடிபாடுகளுக்குப் பக்கத்தில் வந்த பொது திடீரன்று எனக்கு ஒரு பனிரெண்டு அடிக்கு முன்னால் ஒரு படகு எங்கிருந்தோ வந்து தொம்மென்று விழுந்து நீரை வாரி இறைத்தது. அதை ரொம்ப தூரம் கப்பல் இழுத்து சென்றிருக்க வேண்டும். அதனுடன் கட்டப்பட்டிருந்த ஒரே ஒரு கயிறும் கடல் நீரின் பலத்தால் ஒரு வழியாக அறுக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் இவ்வளவு தூரம் எழும்பிப் பறந்து வந்திருக்காது. எதுவாக இருந்தாலும் அந்த நல்ல சூழ்நிலைக்கு நான் மிக்க நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். இவ்வளவு களேபரங்கள் நடந்தாலும் அந்தச் சூழ்நிலையை நான் ஏன் நல்லதென்று சொல்கிறேன் என்றால், நான் செய்த அந்த நீர் மூழ்கிக் கப்பலை என்னால் காண முடிந்ததே. இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் வேறெப்போதும் நான் அதனைக் கண்டிருக்க முடியாது. அந்த ஒரு சந்தோஷமாவது கிடைத்ததே. கடல் கன்னி ஆயிரமாவது முறையாக நான் என் விதிக்கு நன்றி சொல்லிக் கொண்டேன் அந்தப் படகை என் முன்னால் வீசியதற்காக. கண் முன்னால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு பின் மேலே வெகு தூரம் தூக்கி எறியப்பட்டு அதனுள் இருந்த நீரை எல்லாம் துடைத்து விட்டு அழகாக என் முன்னே மிதக்க விட்டதற்கு எவ்வளவு பாராட்டினாலும் தகும். உடனே அவசரமாக நான் அதில் ஏறிக் கொண்டு நாப்ஸை தூக்கிக் கொண்டேன். வெறிச்சோடிக் கிடந்த பிணங்கள் சூழ்ந்த அந்தக் கடல் பரப்பைப் பார்த்தேன். கப்பலின் இடிபாடுகளுக்கு நடுவில் பெண்களும் குழந்தைகளும் அலங்கோலமாகக் கிடந்தார்கள். அவர்கள் அணிந்திருந்த பாதுகாப்பு வார்கள் சில கிழிந்திருந்தன. சில அவர்களுக்கருகில் கடல் நீரில் மிதந்து ஆடிக் கொண்டிருந்தன. சிலரது முகங்கள் மிகவும் அமைதியாக இருந்தன. பலரது முகங்கள் பேயறைந்தது போல் இருந்தன. என் படகின் மிக அருகில் ஒரு பெண்ணின் உருவம் தெரிந்தது. அவளது முகம் மேல் நோக்கி இருந்தது. கரிய கூந்தலின் மீது படுத்துக் கிடந்தது போல் இருந்தது. அவள் மிக அழகாய் இருந்தாள். அதைப் போல் ஒரு அழகான வடிவங்களை நான் கண்டிருக்கவில்லை. தேவ கன்னியைப் போல், ஆனால் முற்றிலும் மனிதனாய். அவள் முகத்தில் முழுப் பெண்மையும் குடி கொண்டிருந்தது. அன்பை பாசத்தைப் பரிமாறிக் கொள்வதற்காகவே படைக்கப்பட்டது போல். அவள் கன்னங்கள் உயிர்த் துடிப்போடு இருந்தன. ஆனால் அவளிடம்தான் உயர் இல்லை. துக்கம் தொண்டையை அடைப்பது போல் இருந்தது. இவள் மரணத்திற்குப் பழி வாங்க வேண்டும் என்று மனதில் சபதம் இட்டுக் கொண்டேன். நான் திரும்பவும் கடல் பரப்பின் மீது என் பார்வை பதித்த போது எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. இறந்து கிடந்த அந்த பெண்ணின் கண்கள் திறந்தன. சிறு முனகலோடு உதவிக்கழைப்பது போல் ஒரு கையைத் தூக்கினாள். அவளுக்கு உயிர் இருக்கிறது. அவள் இறந்திருக்கவில்லை. நான் உடனே அவள் கையைப் பற்றிப் படகினுள் தூக்கிப் போட்டேன். அவளது பாதுகாப்பு வாரைக் கழற்றி எனது மேலங்கியை எடுத்து அவளுக்குத் தலையணை செய்து அதன் மேல் அவளைக் கிடத்தினேன். அவள் கைகளையும் கால்களையும் நன்றாகச் சூடு பறக்கத் தேய்த்து விட்டேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேர முயற்சிக்குப் பின் ஒரு பெருமூச்சு விட்டாள். அதன் பின் அவளது கரிய பெரிய கண்கள் என் கண்களை ஊடுருவிப் பார்த்தன. எனக்கு மிகவும் தர்ம சங்கடமாகி விட்டது. நான் பெண்களிடம் அவ்வளவாகப் பழகியதில்லை. பயங்கரக் கூச்ச சுபாவம். லேலண்ட் ஸ்டான்போர்டில் படித்துக் கொண்டிருக்கும் போது கூடப் பிள்ளைகளிடம் பேச நான் தயங்குவது கண்டு என்னை அனைவரும் கிண்டல் செய்வார்கள். ஆனால் பசங்களுக்கு என்னை மிகவும் பிடிக்கும். அவள் கையை நான் தேய்த்துக் கொண்டிருக்கும் போது அவள் கண் விழித்தாள். உடனே அவள் கையை உதறி விட்டேன் நெருப்பைத் தொட்டது போல். மெதுவாக மேலிருந்து கீழ் வரை என்னையே பார்த்தாள். பின் அடிவானத்தைப் பார்த்தாள். நாப்ஸைக் கண்டு புன்முறுவல் பூத்தபின் திரும்பப் பலவிதமான கேள்விகளோடு என்னைப் பார்த்தாள். “நான். நான்…” என்று தடுமாறிக் கொண்டிருந்தேன். அவளிடமிருந்து சிறிது விலகிப் படகின் தள்ளாட்டத்தால் தடுமாறி விழப் பார்த்தேன். அவள் உடனே “அய் அய் சார்” என்று மெலிதாகக் கூறினாள். அவளது உதடுகள் சோம்பின. “உன் உடம்பு சரியாகி விட்டதென்று நினைக்கிறேன்” என்று இறுதியாக நான் சொன்னேன். “உங்களுக்கு ஒன்று தெரியுமா” என்று ஒரு சிறிய இடைவெளிக்கு பின் சொல்ல ஆரம்பித்தாள். “நான் ரொம்ப நேரமாக விழித்துக் கொண்டுதான் இருக்கிறேன். கண்களைத் திறப்பதற்கு பயமாக இருந்தது. நான் இறந்து விட்டேன் என்று நினைத்து பயந்து கொண்டே இருந்தேன். நான் சாவதற்குப் பயந்தவள். கப்பல் மூழ்கிய பின் என்னவாயிற்று” என்று கேட்டாள். அதற்கு முன் என்ன நடந்தது என்று எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் அதையெல்லாம் மறக்கவே நான் விரும்புகிறேன்." என்று சொல்லி அழ ஆரம்பித்தாள். “மிருகங்கள்” என்று சபித்தாள். “ஜெர்மன் கப்பல் படையில் ஒருவனைக் கல்யாணம் செய்து கொள்ளப் போவதை நினைத்தால்…” என்று தேம்பினாள் அவள் நிறுத்தாமல் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தாள். “நான் கீழே மேலும் கீழே சென்று கொண்டே இருந்தேன். இது எப்போது முடியுமோ என்று எண்ணிக் கொண்டிருந்தேன். திடீரென்று வேகமாக நான் மேலே இழுக்கப்பட்டேன். எனது நுரையீரல் வெடித்து விடும் போல் இருந்தது. எனது நினைவு அப்போது தப்பி விட்டதென்று நினைக்கிறேன். நான் கண் விழித்துப் பார்த்த போது என்னைச் சுற்றி இருந்தவர்கள் ஜெர்மன் நாட்டையும் ஜெர்மானியர்களையும் வார்த்தையால் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தனர். தயவு செய்து சொல்லுங்கள், அதன் பின் என்ன நடந்தது.” பின் நான் அவளுக்கு என்ன நடந்ததென்று என்னால் முடிந்தளவு சொல்ல ஆரம்பித்தேன். ஜெர்மன் கப்பல் நமது படகுகளின் மீது குண்டு போட ஆரம்பித்ததில் இருந்து அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தேன். இவ்வளவு சிறிய இடத்திலாவது நமக்கு இடம் கிடைத்ததே அதிசயம் என்றாள். அப்போது என் நாக்கு நுனி வரை வந்து விட்ட வார்த்தையைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன். அவ்வளவு தைர்யம் இல்லை என்னிடம். நாப்ஸ் வந்து அவளது மடியில் தன் மூக்கை வைத்து முட்டியது. அவள் குனிந்து தன் முகத்தை அதன் முகத்தோடு ஒற்றினாள். எனக்கு நாப்ஸை ரொம்பப் பிடிக்கும். இந்த நேரத்தில் நான் நாப்ஸ் ஆக இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்கினேன். நாப்ஸ் அதை எப்படி எடுத்துக் கொண்டது என்று எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் என்னைப் போலவே அதற்கும் பெண்களிடம் பழக்கம் இல்லை. ஆனாலும் அதன் செயல்பாடுகள் அது மகிழ்ச்சியாக இருப்பது போல்தான் தெரிந்தது. அந்த விஷயத்தில் என் குறைபாட்டை அது நிவர்த்தி செய்வது போல் இருந்தது. இன்னும் வேண்டும் என்பது போல் அது அவளையே பார்த்துக் கொண்டிருந்தது. எனக்குள் பொறாமை தீயாய் எரிந்து கொண்டிருந்தது. “உனக்கு நாய் என்றால் பிடிக்குமோ?” என்றேன். “இந்த நாயை எனக்கு மிகவும் பிடித்து விட்டது” என்றாள். அவள் என்ன நினைத்துச் சொன்னாள் என்று தெரியவில்லை. ஆனால் எனக்கு மிகவும் குதூகலமாக இருந்தது. அவ்வளவு விரிந்து பரந்த கடல் பரப்பின் மேல் தன்னந்தனியாக நாங்கள் இருவர் மட்டுமே இருந்ததால் நாங்கள் மனம் விட்டுப் பேசி மிகவும் நெருக்கமாகி இருந்தோம். எதாவது புகை எங்கிருந்தாவது கிளம்பும் என்று அடிக்கடி அடிவானத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தோம். ஆனால் சிறிது நேரத்தில் இருள் கவிழ்ந்தது. நீர் மேல் இருப்பதே தெரியாத வண்ணம் அனைத்தும் கன்னங்கரேலென்று ஆகி விட்டது. எங்களுக்குத் தாகமெடுத்தது. பசியெடுத்தது. குளிர் வாட்டியது. நிலைமை மோசமாகிக் கொண்டே சென்றது. எங்களது ஆடை காய்ந்து விட்டிருந்தது. ஆனால் அந்தப் பெண்ணும் மிகவும் துன்பப்பட்டிருப்பாள் இரவு முழுவதும் வசதிகள் ஏதுமில்லாத படகில் அரைகுறை ஆடைகளுடன் சாப்பாடே இல்லாமல். நான் படகில் இருந்த அத்துணை நீரையும் கைகளாலேயே அள்ளி வெளியேற்றி விட்டேன். மீதமிருந்ததைக் கைக்குட்டையால் ஒற்றி எடுத்துக் கடலில் பிழிந்து விட்டேன். மிகவும் மெதுவான முதுகை ஒடிக்கும் செயல் முறை. அதனால்தான் குறைந்த பட்சம் அந்தப் பெண்ணால் படகின் தாழ்வான பகுதியில் இருக்க முடிந்தது. கடல் காற்றிலிருந்து படகின் விளிம்புகள் கொஞ்சமாவது அவளைக் காப்பாற்றும் என்று நினைத்தேன். எனது ஈரமான கோட்டை அவள் மீது போர்த்தினேன். குளிரில் இருந்து காப்பாற்ற. ஆனாலும் அது பலனளிக்கவில்லை. நிலா வெளிச்சத்தில் அவளது இளம் உடல் நடுங்குவது தெரிந்தது. “ஏதாவது நான் உதவி செய்ய வேண்டுமா?” என்று நான் கேட்டேன். “இந்தக் குளிரில் இப்படியே உட்கார்ந்து இருக்க முடியுமா? எதாவது சொல்லேன்” என்று கேட்டேன். அவள் இட வலமாகத் தலையசைத்தாள். “நாம் கொஞ்சம் பொருமலோடு எல்லாவற்றையும் பொறுத்துதான் ஆக வேண்டும்” என்று சிறிது நேரம் கழித்துச் சொன்னாள். நாப்லர் எனதருகில் வந்து அமர்ந்தது. எனது காலின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டது. ஒரு முட்டாள் போல் நான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நாளை காலைக்குள் அவள் இறந்து விடுவாள் என்று என் மனம் பதைத்துக் கொண்டிருந்தது. எந்த ஒரு பெண்ணையும் அவ்வளவு எளிதில் கொன்றிருக்கக் கூடிய அதிர்ச்சியையும் கொடும் பருவ நிலைகளையும் அனுபவித்த அந்தப் பெண் இவ்வளவு தூரம் தாங்கியதே அதிகம் என்று தோன்றியது. சிறிய மென்மையான ஆதரவற்ற அவளை நான் பார்த்துக் கொண்டிருக்கும் போது மெதுவாக என் மனதில் ஒரு எண்ணம் முளை விட்டது. இதுவரை அந்த எண்ணம் அங்கே தோன்றவில்லை. இனிமேல் அது அணையாது. அவளது நாளங்களில் குளிர்ந்து கொண்டிருக்கும் குருதியை எப்பாடு பட்டாவது சூடேற்ற வேண்டும் என்ற முனைப்பு என்னுள் வெறி ஏற்றியது. என் உடலே குளிர்ச்சியாகத்தான் இருந்தது. நாப்லர் என் கால்களில் வந்து அமர்வதற்கு முன் எனக்கும் கூட அது தெரிந்திருக்கவில்லை. திடீரென்று அது என் உடலில் பட்ட இடம் சிறிது வெது வெதுப்பான பின் தான் எனக்கே தெரிந்தது. ஒரு பேரொளியைப் போல் ஒரு பெண்ணின் உடலை எப்படிச் சூடாக்க வேண்டும் என்ற அறிவு தோன்றியது. உடனே நான் அவளருகில் குனிந்து கொண்டிருக்கும் போது எனக்கே சிறிது அவமானமாகத் தோன்றியது. நானே சொன்னாலும் அவள் அதை ஏற்றுக் கொள்வாளா என்று சந்தேகம் கிளம்பியது. அப்படி நான் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே அவள் தேகம் நடுங்கியது. வலிப்பு வந்தது போல் அவள் உடல் இழுத்துக் கொண்டது. வேகமாகக் குளிர்ந்து கொண்டிருக்கும் அவள் உடலைக் கண்டு பயந்த நான் உடனே அவள் அருகில் படுத்துக் கொண்டு அணைக்க ஆரம்பித்தேன். அவள் உடனே சற்று விலகி பயத்தில் மெலிதாக அழுதாள். பின் என்னைத் தள்ளி விட முயன்றாள். “என்னை மன்னித்து விடு” என்று எப்படியோ உளறி விட்டேன். “இதுதான் ஒரே வழி. இல்லையென்றால் குளிரில் நீ இறந்து விடுவாய். நாப்ஸ் இல்லையென்றால் நான் இந்த இருவர் மட்டுமே இப்பொழுது உனக்குக் கதகதப்பைக் கொடுக்க முடியும்.” நான் நாப்ஸைக் கூப்பிட்டு அவள் பின் புறம் அமர்ந்து கொள்ளச் செய்தேன். நான் அவளை இறுக்கமாகக் கட்டிக் கொண்டேன். என்னைப் புரிந்த பின் அவள் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. இரண்டு மூன்று முறை திணறிய அவள் மெல்ல அழ ஆரம்பித்தாள். என் கைகளில் முகத்தைப் புதைத்து கொண்டு அப்படியே உறங்கி விட்டாள். அத்தியாயம் :௨ உதவி பொழுது புலர்ந்த நிலையில் நான் உறங்கியிருக்க வேண்டும். இப்படியே எத்துணை நாட்கள் இருந்தேன் என்றே தெரியவில்லை. அவை மணிக்கணக்காக இருக்கும் என்று தோன்றவில்லை. இறுதியில் என் கண்களை விழித்துப் பார்க்கும் போது பகல் வெளிச்சம் முகத்தில் அறைந்தது. அவள் கூந்தல் என் முகத்தை மறைத்திருந்தது. அவள் மூச்சு இயல்பாய் இருந்தது. கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டேன். அவள் முகத்தைச் சிறிது திருப்பி இருந்திருக்க வேண்டும் இரவில். இப்போது என் முகத்துக்கருகில்தான் அவள் முகம் இருந்தது. அவள் உதடுகளும் என் உதடுகளை தொட்டுக் கொண்டிருந்தன. நாப்ஸ்தான் கடைசியில் அவளை எழுப்பி விட்டது. அது எழுந்து தன் உடலை முன்னும் பின்னும் நீட்டி சோம்பல் முறித்தது. பின் அப்படியே படுத்துக் கொண்டது. அந்தப் பெண் கண் திறந்து என்னைப் பார்த்தாள். முதலில் கண்கள் அகல விரிந்தாலும் நடந்ததைப் புரிந்தவளாய் என்னைப் பார்த்து முறுவலித்தாள். “நீ ரொம்ப நல்லவன்” என்று என்னைப் பார்த்துச் சொன்னாள். நான் அவள் கையைப் பிடித்துத் தூக்கி விட்டேன். அவளை விட எனக்குத்தான் உதவி அதிகம் தேவைப் பட்டது. எனக்கு இடது புறமே செயல் இழந்தது போல் இருந்தது. அந்த ஒரு வாக்கியம் தவிர அவள் எதுவும் பேசவில்லை. அவள் நன்றியுணர்ச்சியோடு இருக்கிறாள் என்று மட்டும் எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. அந்தத் தர்ம சங்கடமான சூழல்தான் அவளை மேலும் பேச விடாமல் தடுத்திருக்க வேண்டும். பொழுது விடிந்த கொஞ்ச நேரத்திலேயே ஒரு புகைப் படலம் எங்களை நோக்கி வருவதைக் கண்டோம். அது ஒரு இழுவைப் படகு என்பதைக் கொஞ்சம் அருகில் வந்தவுடன் உணர்ந்து கொண்டேன். கடலைத் தன் பிடியில் வைத்திருந்த இங்கிலாந்துக் கடற்படையின் ஒரு அங்கம் அந்தப் படகு. ஆங்கில பிரான்ஸ் துறை முகங்களில் அனைத்துக் கப்பல்களையும் இழுத்து வரப் பயன்படுத்தப் படுவதுதான் இந்த இழுவைப் படகு. நான் ஒரு பலகையில் நின்று கொண்டு எனது ஈரமான மேலங்கியை எடுத்துச் சுழற்றினேன். நாப்ஸ் இன்னொரு பலகையில் ஏறிக் குறைத்தது. அந்தப் பெண் கண்களைக் குறுக்கி அந்தப் படகையே பார்த்துக் கொண்டிருந்தாள். “அவர்கள் நம்மைப் பார்த்து விட்டார்கள்” என்று இறுதியாகச் சொன்னாள். “ஒருவன் உனது சைகைக்கு பதில் சொல்கிறான்” என்றாள். எனக்காக இல்லாவிட்டாலும் அவளுக்காக நான் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். இன்னும் ஒரு நாள் அவளால் இதைப் பொறுத்துக் கொண்டு உயிரோடு இருந்திருக்க முடியாது. அந்தப் படகு எங்கள் படகுக்கு அருகில் வந்தவுடன் ஒருவன் ஒரு கயிறைத் தூக்கிப் போட்டான். அவர்கள் ஒவ்வொருவராக இழுக்க ஆரம்பித்தார்கள். நாப்ஸ் யாருடைய உதவியும் இல்லாமல் சட்டென்று தாவி விட்டது. கரடு முரடாய் அவர்கள் தெரிந்தாலும் அந்தப் பெண்ணிடம் ஒரு தாயைப் போல் கரிசனம் காட்டினார்கள். கேள்விகள் கேட்டு எங்களைத் துளைத்த அவர்கள் என்னைக் கொதி கலன் இருக்கும் அறைக்கும் அவளை மீகாமனின் அறைக்கும் அழைத்துச் சென்றனர். அவளது ஈரமான உடையைக் களைந்து விட்டு மீகாமனின் ஒதுக்கிடத்தில் அமர்ந்து கதகதப்பாக்கிக் கொள்ளச் சொன்னார்கள். கொதி கலன் அறையில் இருந்ததால் என் உடையின் ஈரத்தைப் பற்றி அவர்கள் கவலைப் படவில்லை. என்னுடைய உடை வெகு வேகமாகக் காய்ந்து விட்டது. என் உடலின் ஒவ்வொரு நுண் துளைகளும் அந்த அறையின் வெப்பத்தை உள் வாங்கிக் கொண்டிருந்தன. அவர்கள் எங்களுக்குச் சூடான சூப் காபி போன்ற பானங்கள் கொடுத்தார்கள். பணியில் இல்லாதவர்கள் எங்களிடம் பேச்சுக் கொடுத்தார்கள். கைஸரையும் அவனது சந்ததிகளையும் வறுத்தெடுக்க ஆரம்பித்தார்கள். எங்களது உடைகள் காய்ந்த பின் அணியக் கொடுத்தார்கள் திரும்பவும் எதிரிகளால் எந்தப் பிரச்சினையும் வந்து விடக் கூடாது என்பதற்காக. நேற்று மதியம் அந்த மூன்று ஊதல் சத்தங்களால் சிதறடிக்கப்பட்ட என் நிம்மதி இவ்வளவு நேரமாய் அவள் அனுபவித்த கொடிய துன்பங்கள் எல்லாம் ஒருவாறு நீங்கி அந்தப் பெண்ணுக்குக் கதகதப்பையும் பாதுகாப்பையும் உறுதி செய்த பின் தான் திரும்பவும் பரவியது. ஆகஸ்ட் 1914 முதல் அந்தக் கடல் பரப்பில் அமைதி என்பது நிலையற்றதாய் இருந்தது. இன்று காலையே அது மீண்டும் உறுதி ஆயிற்று. நான் உடை மாற்றிக் கொண்ட சிறிது நேரத்தில் மீகாமன் மிக வேகமாகப் படகைச் செலுத்துமாறு ஒரு உத்தரவை கத்திப் பிறப்பித்துக் கொண்டிருந்தார். அவர் சொல்லி முடித்த மறு நொடி ஒரு மந்தமான வெடிச் சத்தம் கேட்டது. உடனே நான் படகின் மேல் தளத்தில் ஏறிச் சென்று பார்த்தேன். இருநூறு அடி தூரத்தில் ஒரு நீர் மூழ்கிக் கப்பலைப் பார்த்தேன். அவர்கள் நிறுத்துமாறு சைகை காட்டியதை மீறி நமது மீகாமன் படகைச் செலுத்த உத்தரவிட்டதால் அவர்கள் துப்பாக்கியைத் தூக்கி விட்டார்கள் நம் மீது. அவர்களது இரண்டாவது குண்டு மீகாமனின் அறையை உரசிச் சென்றதால் மீகாமன் பணிந்து போக நினைத்தார். வேகத்தைக் குறைக்குமாறு உத்தரவிட்டார். பின் சுடுவது நிறுத்தப்பட்டது. எங்களைக் கப்பல் நோக்கி வருமாறு உத்தரவிட்டார்கள். எங்கள் படகின் உந்தத்தால் எதிரிக் கப்பலைச் சிறிது தாண்டிச் சென்று விட்டதால் வட்டவடிவில் திரும்பி அதன் அருகில் நிறுத்தினோம். நான் இந்த நடவடிக்கைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் போது என் முழங்கையை யாரோ தொடுவது போல் தோன்றியது. திரும்பிப் பார்த்தால் அந்தப் பெண் நின்று எதோ கேள்வி கேட்பது போல் பார்த்தாள். “அவர்கள் நம்மை அழிக்காமல் விட மாட்டார்கள் போல் தெரிகிறது” என்றாள். நேற்று நமது கப்பலை மூழ்கடித்த அதே கப்பல் போல்தான் தெரிகிறது என்றாள். “அதேதான்” என்றேன் நான். “எனக்கு மிகவும் நன்றாகத் தெரியும். நான்தான் அதை வடிவமைத்தேன். முதன் முதல் சோதனை ஓட்டத்தையும் நான்தான் செய்தேன்” ஒருவித ஏமாற்றத்துடனும் ஆச்சரியத்துடனும் அவள் என்னிடமிருந்து சிறிது விலகி நின்றாள். “நீ அமெரிக்கன் என்றல்லவா நினைத்தேன். நீ அவர்களில் ஒருவனாய் இருப்பாய் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை” என்றாள். “நிச்சயமாக இல்லை” என்றேன். “அமெரிக்கர்கள் ரொம்ப காலமாய் எல்லா நாடுகளுக்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த அசுரனை அவர்களுக்குக் கொடுப்பதற்குப் பதில் நாங்கள் ஓட்டாண்டியாகி இருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும்” நாங்கள் பாதி வேகத்தில் நீர்மூழ்கிக் கப்பலை நெருங்கிக் கொண்டிருந்தபோது அதன் மேல் தளத்தில் இருந்தவர்களை நன்றாக அடையாளம் காண முடிந்தது. ஒரு மாலுமி என் பக்கத்தில் வந்து குளிர்ந்த கனமான ஒரு பொருளைக் கையில் திணித்தான். நான் அதைப் பார்க்காமலேயே சொல்ல முடிந்தது அது ஒரு துப்பாக்கி என்று. எடுத்துப் பயன்படுத்து என்று மட்டும்தான் அவன் சொன்னான். எங்கள் படகின் முகப்பு நீர் மூழ்கிக் கப்பலை நோக்கி இருந்தது. இயந்திர அறைக்கு வேகமாகச் செல்லுமாறு ஆணை பிறப்பித்ததை என்னால் கேட்க முடிந்தது. துணிச்சலான அந்த மீகாமனின் தைரியமான முடிவு எனக்கு உடனே புரிந்து விட்டது. அந்த 500 டன் எடை கொண்ட கப்பலைத் துப்பாக்கி முனையில் மோத வேண்டும் என்று எடுத்த முடிவு. எனக்குள் பொங்கிய ஆர்வத்தை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஜெர்மன் வீரர்களால் எங்கள் மீகாமனின் முடிவை உடன் புரிந்து கொள்ள முடியவில்லை. கடல் பிரயாணத்தில் அனுபவமில்லாதவர்கள் நடந்து கொள்வது போல் முதலில் அவர்கள் எங்களை நினைத்து விட்டார்கள். வேகத்தைக் குறைக்குமாறு திரும்பவும் கத்தினார்கள். இடது புறம் திரும்புமாறு மீகாமனிடம் கத்தினார்கள். நாங்கள் 50 அடி தூரம் அருகில் வந்த பிறகுதான் அவர்களுக்கு நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதே உறைத்தது. அவர்களது துப்பாக்கி சுடும் வீரர்கள் சுதாரித்துக் கொண்டு ஒரு குண்டை எங்கள் தலைக்கு மேல் அனுப்பினார்கள். நாப்ஸ் எம்பிக் குதித்து அதைப் பார்த்துக் கோபமாகக் குறைத்தது. “இதோ வாங்கிக் கொள்ளுங்கள்” என்று சொல்லி விட்டுக் கப்பலின் மேல் தளத்தில் இருந்த வீரர்களை நோக்கிச் சுட ஆரம்பித்தோம். அவர்களில் இரண்டு பேர் விழுந்து விட்டனர். மீதி இருந்தவர்கள் நீர்ப் பரப்பின் மீது குறி வைத்தார்கள். இன்னும் சிலர் எங்கள் படகோட்டி மீது குறி வைத்தார்கள். நான் அந்தப் பெண்ணை இயந்திர அறைக்குள் தள்ளினேன். பின் துப்பாக்கியை எடுத்து முதன் முறையாக ஒரு ஜெர்மன் வீரனை நோக்கிச் சுட்டேன். அடுத்த சில வினாடிகளில் என்ன நடந்தது என்பது எனக்கு நினைவில் இல்லை. நான் படகோட்டிக் கொண்டிருப்பவன் சக்கரத்தின் மேல் விழுந்ததைக் கவனித்தேன். அதனால் படகு தன் வழியை விட்டு வேகமாக விலகிச் சென்றது. நம் முயற்சி அனைத்தும் தோல்வி அடைவதாக உணர்ந்தேன். ஜெர்மன் கப்பலுக்குப் பதிலாக நமது படகின் மேல்தான் குண்டடி பட வேண்டும் என்று விதி இருக்கிறதோ என்று நினைத்துக் கொண்டேன். அவர்கள் எங்கள் மேல் எறிந்த குண்டு பயங்கர சத்தத்துடன் முகப்பில் வெடித்துச் சிதறியது. அப்போது ஏற்பட்ட அதிர்ச்சியை என்னால் உணர முடிந்தது. நான் படகு செலுத்துமிடத்துக்கு வந்து படகோட்டியின் உடலுக்குப் பக்கத்தில் இருந்த சக்கரத்தைப் பிடித்ததை எல்லாம் என்னால் உணர முடிந்தது. எனது ஆற்றல் அனைத்தையும் திரட்டி வலது புறம் திருப்ப முயன்றேன். மீகாமன் இட்ட கட்டளையை முடிக்க வேண்டி. நீர் மூழ்கியின் பக்கத்தை உரசிச் செல்ல மட்டும்தான் என்னால் முடிந்தது. இயந்திர அறையில் யாரோ ரகசியமான உத்தரவிடுவதைக் கேட்க முடிந்தது. படகு அதிர்ந்தது. பின் உடனே வேகமாகத் திரும்ப ஆரம்பித்தது. முதல் முயற்சி தோல்வி அடைந்ததால் அந்தப் பைத்தியக்கார மீகாமன் என்ன செய்ய முயற்சித்தான் என்பதைப் பார்த்தேன். நீர் மூழ்கிக் கப்பலின் ஈரமான வழுக்கும் தளத்தில் ஓங்கிக் கத்தியவாறே எங்கள் கப்பலின் மீகாமன் பாய்ந்தார். அவர் பின்னாலேயே அவரது முரட்டு மாலுமிகளும் பின் தொடர்ந்து ஏறினர். நானும் படகோட்டும் அறையில் இருந்து வெளியேறி அவர்களைப் பின் தொடர்ந்தேன். தனியாகக் குளிரில் வாடுவதை விட அது சிறந்ததாகத் தோன்றியது. இயந்திர அறையில் இருந்து பொறியாளர்களும் உலையில் வேலை செய்பவர்களும் ஒவ்வொருவராகச் செங்குருதி சிந்திக் கிடந்த ஈரமான கப்பல் தளத்தில் கைகலப்பில் ஈடுபடுவதற்காக அவர்கள் பின் சென்றோம். என் பின்னால் நாப்ஸ் வந்தது. இந்த முறை அமைதியாக இறுக்கமாக இருந்தது. கப்பலின் உள் இருந்த ஒரு அறையைத் திறந்து ஜெர்மானியர்கள் சண்டையில் ஈடுபட ஓடோடி வந்தார்கள். முதலில் துப்பாக்கிகள் வெடித்தன. இடையிடையே ஆட்கள் திட்டிக்கொண்டு இருந்தனர். அவர்களுக்கு இடையில் மீகாமனின் ஆணைகளும் பறந்த வண்ணம் இருந்தன. இப்போது எல்லோரும் நெருக்கமாகக் கலந்து விட்டதால் எங்கள் துப்பாக்கிகளைப் பயன்படுத்த அவகாசம் கிடைக்கவில்லை. அதனால் கைகலப்பில் மட்டுமே ஈடுபட்டுக் கொண்டிருந்தோம், யார், கப்பலைக் கைப்பற்றுவது என்று. எதிரிகளில் யாரையாவது ஒருவரைக் கடலில் தள்ளி விட வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் ஒரே நோக்கமாக இருந்தது. விதி வசத்தால் இன்று ஒரு ஜெர்மானியனுடன் நின்று சண்டை போட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அவன் முகத்தில் ஏற்பட்ட பயங்கரமான உணர்ச்சிகளை என்னால் என்றும் மறக்க முடியாது. குனிந்து கொண்டு ஒரு எருதைப் போல் கத்திக் கொண்டு வேகமாக என் மேல் பாய வந்தான். உடனே பக்கவாட்டில் சென்ற நான் அவனது விரிந்த நிலையில் இருக்கும் கைகளிலும் அகப்படாமல் தப்பினேன். அவன் திரும்பி என் மேல் பாய வந்த போது அவன் கடைவாய் ஓரமாக ஓங்கி ஒரு குத்து விட்டேன். அந்த அடியில் அவன் கப்பலின் ஈரத் தளத்தில் போய் விழுந்தான். அவ்வளவு முரடனாக இருந்ததால் அவன் உடனே சுதாரித்துக் கொண்டான். குடிகாரன் போல் எழுந்த அவன் ஒரு நொடி அந்தரத்தின் விளிம்பில் நின்றது போல் தெரிந்தது. பின் உரக்கக் கத்தி கொண்டே கடலில் வழுக்கி விழுந்தான். அதே நேரத்தில் இரு கைகள் என்னை அலேக்காக பின்னாலிருந்து தூக்கின. நெளிந்தாலும் உதைத்தாலும் அவனைத் திரும்பிப் பார்க்கவோ என்னை அந்த முரட்டுப் பிடியில் இருந்து விடுவிக்கவோ முடியவில்லை. கப்பலின் பக்கவாட்டுத் திசையை மரணத்தை நோக்கி வேகமாக முன்னேறிச் சென்றான். அவனைத் தடுப்பவர் யாருமே இல்லை. என் கூட்டாளிகளும் கிட்டத்தட்ட மூன்று எதிரிகளுடன் போராடிக் கொண்டிருந்தனர். ஒரு நொடி எனக்குள் பயம் வேகமாக பரவத் தொடங்கியது. பின் நான் கண்ட காட்சியால் என் பீதி இன்னும் அதிகமாகியது. இன்னமும் எங்கள் படகு கப்பலின் பக்கவாட்டிலேயேதான் மோதிக் கொண்டிருந்தது. அதில் மோதி என் உயிர் போகப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதுதான் அந்தப் படகின் தளத்தில் தனியாக நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்தேன். படகின் பின் பகுதி அந்தரத்தில் உயர்ந்து கொண்டிருந்தது. முன் புறம் தன் கடைசிப் பயணத்திற்குத் தயாராவது போல் முழுகிக் கொண்டிருந்தது. முழுவதும் அறிந்த நான் நேசிக்கும் அந்தப் பெண்ணின் சாவையும் தடுக்க முடியவில்லையே என்று என் மனம் கலங்கியது. அவளை விட ஒரு கணம் நான் அதிகமாக உயிர் வாழப் போகிறேன் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே என்னைத் தூக்கிக் கொண்டிருக்கும் முரடனின் பின்னால் வலியும் கோபமும் கலந்த ஒரு உறுமல் கேட்டது. உடன் அவன் தளத்தின் மீது ஏறி நின்று கையை வீசிய போது நான் விடுவிக்கப்பட்டேன். நான் தொம்மென்று கீழே விழுந்தேன். விழுந்த வேகத்தில் எழுந்து நின்றேன். அப்போது அவன் முகத்தைப் பார்த்தபோது இனி எப்போதும் என்னை மற்றுமில்லாமல் எவரையும் தொந்திரவு செய்ய மாட்டான் என்று புரிந்தது. ஏனெனில் நாப்ஸின் குரூரமான பற்கள் அவன் குரல் வளையில் அழுத்திக் கொண்டிருந்தது. உடனே நான் பக்கவாட்டிற்குச் சென்று மூழ்கிக் கொண்டிருந்த படகின் மேல் நின்று கொண்டிருந்த பெண்ணிற்கு மிக அருகில் சென்று கையை வீசினேன். “என் கையைப் பிடி” என்று கத்தினேன். என் கையை நீட்டி அவளைப் பிடிக்க எத்தனித்தேன். என் மேல் நம்பிக்கை உள்ளவளாய் உடனே அவள் படகின் பக்கவாட்டிற்கு வந்து கப்பலின் சாய்வான பகுதியில் தாவினாள். நான் மிகவும் பிரயாசைப்பட்டு அவளுக்குக் கையை நீட்டினேன். அதே நேரத்தில் படகின் பின் பகுதி செங்குத்தாக நின்று முழுவதுமாக கடலில் மூழ்கியது கண் முன்னே. என் கைக்கும் அவளது கைக்கும் ஒரு இன்ச் தொலைவே இருந்திருக்கும். அவளும் கடலுக்குள் விழ ஆரம்பித்தாள். அவள் கடல் நீரைத் தொடுவதற்கு முன்பே நானும் அவள் பின்னாலேயே குதித்து விட்டேன். மூழ்கிக் கொண்டிருந்த படகு எங்களை நீர் பரப்பிற்கு வெகு கீழே இழுத்துச் சென்றது. ஆனால் நீர்ப் பரப்பைத் தொட்டவுடன் நான் அவளைப் பிடித்து விட்டேன். அதனால் இருவரும் சேர்ந்தே மூழ்கிக் கொண்டிருந்தோம். பின் சேர்ந்தே மேலே வந்தோம். நாப்ஸ் முழு பலத்துடன் குறைத்ததுதான் எனக்கு முதலில் கேட்டது. என்னைக் காணாமல் தேடிக் கொண்டிருந்ததுதான் காரணம் என்று புரிந்தது. கப்பலின் தளத்தை பார்த்தவுடன் தெரிந்து விட்டது சண்டை முடிந்து நாம்தான் வென்று விட்டோம் என்று. எங்கள் கூட்டம் எதிரிகளைத் துப்பாக்கி முனையில் பிடித்து வைத்திருக்க உள்ளே இருந்து மற்றவர்களும் சரணடைய ஆரம்பித்து விட்டிருந்தனர். நரகமே துணை நான் கப்பலை நோக்கி அந்தப் பெண்ணுடன் நீந்திக் கொண்டிருக்கும் போது நாப்ஸின் இடைவிடாத குரைச்சலைக் கேட்டு எங்கள் ஆட்கள் சில பேர் எட்டிப் பார்த்துக் கைகளை நீட்டினார்கள். நான் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கேட்டேன் அடி ஏதும் பட்டிருக்கிறதா என்று. இரண்டாவது முறை கடலுக்குள் மூழ்கியது அவ்வளவு மோசமாக இருக்கவில்லை என்று உறுதி அளித்தாள். அதே போல் அவளுக்கு அந்த அளவுக்கு அதிர்ச்சியாகவும் இல்லை. இந்த மெலிதான மென்மையான பெண்ணுக்குள் ஒரு போர் வீரனின் இதயமும் திடமும் இருக்கின்றன என்பதை எனக்கு உணர்த்தி விட்டாள். நாங்கள் எங்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்த பிறகு ஒருவன் தப்பிப் பிழைத்தவர்களைக் கணக்கெடுக்க ஆரம்பித்தான். எங்களில் பத்து பேர்தான் மீதி இருந்தோம் அந்தப் பெண்ணைச் சேர்க்காமல். மீகாமனுடன் சேர்ந்து எட்டுப் பேரைக் காணவில்லை. மொத்தம் எங்களுடன் 19 பேர் இருந்தார்கள். ஜெர்மானியர்கள் 16 பேரில் ஒன்பது பேரைச் சிறைப் பிடித்து விட்டோம் மீகாமனுடன் சேர்த்து. அவன் உதவியாளன் கொல்லப்பட்டு விட்டான். “அவ்வளவு மோசமான நாள் இல்லை” என்று கணக்கை முடித்தவுடன் ப்ராட்லி சொன்னான். “மீகாமன் போனது மட்டும்தான் மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவர் ரொம்ப நல்ல மனுஷன். ரொம்ப.” என்று சொல்லிக் கெண்டே இருந்தான். எங்கள் படகில் பொறியாளனாக இருந்த ஓல்சன் எனக்கும் ப்ராட்லிக்கும் நடுவில் நின்று கொண்டிருந்தான். “ஆமாம். ஒரு நாள் வேலை முடிந்தது போல்தான் இருக்கிறது. நமக்கு இது கிடைத்தது மகிழ்ச்சிதான். ஆனால் இதை வைத்து என்ன செய்ய போகிறோம்” என்றான். “இதை நாம் அருகில் இருக்கும் ஆங்கிலத் துறைமுகத்திற்குக் கொண்டு செல்வோம்” என்றான் ப்ராட்லி. “பின் கரை திரும்பியபின் VC வாங்கிச் செல்வோம்” என்றான் கண்ணடித்துக் கொண்டே. “எப்படி ஓட்டப் போகிறீர்கள்” என்று கேட்டான் ஓல்சன். “இங்கிருக்கும் டச் நாட்டுக்காரர்களை நம்ப முடியாது” ப்ராட்லி தலையைச் சொறிந்தான். “நீ சொல்வது சரிதான்” என்று ஆமோதித்தான். “எனக்கும் நீர் மூழ்கியைப் பற்றி எதுவும் தெரியாது” “எனக்குத் தெரியும்” என்றேன் நான். “இதன் மீகாமனை விட எனக்கு இதைப் பற்றி நன்றாகத் தெரியும்” என்றேன். இரண்டு பேரும் என்னை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். அந்தப் பெண்ணிடம் சொன்ன அனைத்தையும் நான் அவர்களிடம் திரும்ப விளக்க ஆரம்பித்தேன். ப்ராட்லி ஓல்சன் இருவருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உடனே எனக்குத் தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. உடனே அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு வேறு எதாவது ஜெர்மானியர்கள் எங்கும் ஒளிந்து இருக்கிறார்களா கப்பலின் பாகங்கள் ஏதும் உடைந்திருக்கிறதா என்று பார்வை இட்டேன். யாருமில்லை. மேலும் கப்பல் பாகங்கள் எதுவும் சேதமடையவுமில்லை. பின் நான் சிறைப் பட்டவர்களின் கைகளைக் கீழிறக்கலாம் என்று சொல்லி விட்டு ஒருவனை மட்டும் அவர்களைக் கவனித்துக் கொள்ளச் சொன்னேன். சிறை பட்ட மீகாமனைத் தவிர்த்து எல்லோரும் கப்பலை ஆங்கிலத் துறைமுகத்திற்கு இட்டுச் செல்ல ஒத்துழைப்பு தருவதாக கூறினார்கள். ஆங்கிலச் சிறையில் இந்தப் போர் முடியும் வரை சவுகர்யமாக இருந்து கொள்ளலாம் என்று எண்ணி அவர்கள் ஒருவாறு நிம்மதி அடைந்ததால் எளிதாக எங்களுடன் உடன்பட்டார்கள். ஆனால் அந்த மீகாமன் மட்டும் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. அதனால் அவனைச் சிறையில் அடைப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. நாங்கள் அப்படி எண்ணிக் கொண்டிருக்கும் போது மேல் தளத்தில் இருந்து அந்தப் பெண் இறங்கி வந்தாள். அந்தப் பெண்ணும் அப்போதுதான் முன்னாள் மீகாமனைக் கப்பலில் ஏறியதில் இருந்து முதல் முறையாகப் பார்க்கிறாள். அவள் ஏணியில் இருந்து இறங்க நான் உதவி செய்து கொண்டிருந்தேன். அவளுக்கு உதவி தேவை இல்லாதபோதும் அவள் கைகளை நான் பற்றிக் கொண்டுதான் இருந்தேன். அப்போது அவள் அந்த ஜெர்மானியனை உற்றுப் பார்த்தாள். இருவரும் ஆச்சர்யத்தையும் கோபத்தையும் ஒரு சேர வெளிப்படுத்தினார்கள். “லிஸ்” என்று அழுதபடியே அவளை நோக்கி அடி எடுத்து வைத்தான். அவள் கண்கள் அகலமாக விரிந்தன. பின் கொஞ்சம் கொஞ்சமாக பயம் வந்து ஆக்கிரமித்துக் கொண்டபின் தன் உடம்பைக் குறுக்கி நின்றாள். பின் அவளது மெலிந்த தேகம் ஒரு ராணுவ வீரனைப் போல் விறைப்பானது. முகத்தை உயர்த்தி ஒரு வார்த்தையும் சொல்லாமல் திரும்பி நின்றாள். “இழுத்துச் செல்லுங்கள்” என்று நான் ஆணையிட்டேன். “சிறையில் தள்ளி விடுங்கள்” என்றேன். அவன் சென்ற பிறகு அந்தப் பெண் என்னைப் பார்த்துச் சொன்னாள் “நான் ஒரு ஜெர்மன் பற்றி உங்களிடம் சொல்லி இருந்தேனே. அது இவன்தான். அவன் பெயர் பரோன் வான் ஸ்சோன்வர்ட்ஸ்.” நான் என் தலையைக் குனிந்து கொண்டேன். ஒன்றும் சொல்லவில்லை. அவள் அவனை விரும்பி இருக்கிறாள். அடி மனதில் இருந்து அவனைத் தூக்கி எறிந்து விட்டிருப்பாளா என்று தெரியவில்லை. சட்டென்று எனக்கு மிக பயங்கரமாக பொறாமை தலை தூக்கியது. அவனை எந்த அளவு வெறுக்க ஆரம்பித்தேனோ அந்த அளவு மகிழ்ச்சியும் என் உள்ளத்தில் குடி கொண்டு விட்டது. அவன் மேல் உள்ள வெறுப்பைக் காட்டுவதற்கு எனக்கு அவ்வளவு நேரம் கிடைக்கவில்லை. ஏனெனில் சூழிட நோக்கி வழியாகக் கவனித்து கொண்டிருந்த ஒருவன் மிக அருகில் கீழ்வானத்தில் புகை வருவதாகக் கத்தினான். உடனே நான் மேல் தளத்திற்கு ப்ராட்லியுடன் சென்று பார்வை இட்டேன். “அவர்கள் ஒத்துழைத்தால் பேசுவோம். இல்லையேல் மூழ்கடிப்போம். என்ன மீகாமன்” என்று சொன்னான். “சரிதான் லெப்டினன்ட்” என்றேன். இந்த முறை அவன் சிரித்தான். நாங்கள் யூனியன் ஜாக் கொடியைக் கப்பலில் ஏற்றி விட்டுத் தளத்திலேயே இருந்தோம். ப்ராட்லியிடம் கீழிருக்கும் ஒவ்வொரு கூட்டாளிகளும் தங்கள் பணியைச் செய்யச் சொல்லி அனுப்பினேன். ஒவ்வொரு ஜெர்மானியன் தலை மேலும் ஒரு ஆங்கிலேயனைத் துப்பாக்கி வைத்துப் பிடித்திருக்கச் சொன்னேன். “பாதி வேகத்தில் செல்லுங்கள்” என்று ஆணை இட்டேன். மிக வேகமாக அதன் பக்கத்தில் சென்றோம். அதுவும் ஒரு ஆங்கில வர்த்தகப் படகு என்பது அவர்களின் சிகப்பு நிறக் கொடியில் இருந்தே தெரிந்து விட்டது. நாங்கள் எதிரிக் கப்பலைப் பிடித்து வைத்திருப்பதைக் கேள்விப் பட்டால் மிகவும் பெருமைப் படுவார்கள் என்று நினைக்கும் போதே எனது இதயம் பெருமையில் விம்மியது. அந்த வேளையில்தான் அவர்களும் எங்களைப் பார்த்திருக்க வேண்டும். அவர்கள் சட்டென்று வடக்குப் பக்கமாகத் திரும்பினார்கள். சிறிது நேரத்தில் அந்தப் படகின் புகை போக்கி வழியாகக் கரும் புகை பெரிய அளவில் வெளியேறியது. எதோ ப்ளேக் நோயைக் கண்டது போல் கோணல் மாணலாக வண்டியைத் திருப்பி ஓடி விட்டார்கள். நாங்கள் செல்லும் வழியில் இருந்து சிறிது விலகி அவர்களைப் பின் தொடரச் சொன்னேன். ஆனால் அந்தப் படகு வெகு வேகமாக எங்கள் பார்வையில் இருந்து தப்பி விட்டது. மிகவும் கவலையோடு நான் திரும்பவும் பழைய வழியில் செல்வதற்கு ஆணை இட்டேன். திரும்பவும் நாங்கள் மகிழ்ச்சியாக இங்கிலாந்தை நோக்கிச் சென்றோம். நாங்கள் கிளம்பி மூன்று மாதங்கள் ஓடி விட்டன. இன்னும் நாங்கள் ஆங்கிலக் கடற்கரையைத் தொடவில்லை. என்றாவது அடைந்து விடுவோம் என்ற நம்பிக்கையும் குறைந்து கொண்டே வந்தது. அந்தப் படகு தந்தியடித்து எச்சரிக்கை ஒன்றை அனுப்பி இருக்க வேண்டும். அது சென்ற அரை மணி நேரத்தில் மேலும் புகை கக்கியபடி இருந்தது அடி வானம். இம்முறை வெள்ளை நிறக் கொடியுடன் கப்பல் படையின் கப்பல் ஒன்று வந்தது துப்பாக்கிகளுடன். அது வடக்கு நோக்கியெல்லாம் இம்முறை திரும்பவில்லை. நேராக எங்களை நோக்கி மிக வேகமாக வந்தது. நான் அவர்களுக்குச் சைகை காண்பிக்க எத்தனிக்கும் நேரம் அந்தக் கப்பலின் முன் பக்கமிருந்து தீ மின்னியது. சிறிது நேரத்தில் எங்கள் முன் இருந்த கடல் நீர் வெடிச் சத்தத்துடன் மேல் எழும்பியது. ப்ராட்லி எனதருகில் வந்து நின்றான். “இன்னும் ஒன்றே ஒன்று இதே போல் வந்தால் நாம் அதற்கு இரையாகி விடுவோம்” என்றான். “நமது யூனியன் ஜாக்கைப் பார்த்த பின்னும் அவர்கள் நம்மை நம்பவில்லை” இன்னொரு குண்டு எங்களைக் கடந்து சென்றது. அதன் பின் வேறு திசையில் பயணிக்கலாம் என்று உத்தரவிட்டேன். ப்ராட்லியைக் கீழே சென்று கப்பலை மூழ்குமாறு உத்தரவிட்டேன். நாப்ஸை அவனுடன் அனுப்பி விட்டு நான் மேல் கதவை மூடி விட்டுக் கீழிறங்க ஆரம்பித்தேன். இவ்வளவு மெதுவாக எப்போதும் இந்தத் தொட்டிகள் நிரம்பி இருக்காது என்று நினைக்கிறேன். எங்கள் தலைக்கு மேலே வெடி வெடித்தது. கப்பல் பலமாக ஆடியதால் நாங்கள் மேல் தளத்திற்கருகில் தூக்கி எறியப்பட்டோம். உடனே கடல் நீர் எந்நேரமும் உள் புகலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கவில்லை. அப்படி இல்லாமல் நாங்கள் மேலும் கீழ் நோக்கிப் பயணப் பட்டுக்கொண்டே இருந்தோம். நாற்பதடி தூரம் அழுத்தக் கருவி காட்டிய பின் தான் நாம் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தேன். நான் கிட்டத்தட்ட புன்னகைக்க ஆரம்பித்தேன். கோபுரத்தில் இருந்த ஓல்சனை இறங்கி வந்து விடச் சொன்னேன். ஆங்கில நீர் மூழ்கிக் கப்பல்களில் ஏற்கெனவே அவன் பணி புரிந்திருந்ததால் அவனுக்கு இங்கு நடக்கும் விஷயங்கள் பரிச்சயமாக இருந்திருக்கும். ப்ராட்லி என் அருகில் இருந்தான். அவன் என்னைக் கேள்வி கேட்பது போல் பார்த்தான். “என்னதான் செய்யப் போகிறோம்?” என்று கேட்டான். “வணிகக் கப்பல் நம்மை விட்டு ஓடி விடும். போர்க் கப்பல் நம்மை அழிக்கும். யாரும் நமது நிறத்தை நம்பப் போவதுமில்லை. நமது நிலைமை என்னவென்று காது கொடுத்துக் கேட்கப் போவதுமில்லை. ஆங்கிலத் துறைமுகம் சுரங்கம் மீன் வலை எதன் பக்கம் சென்றாலும் நமக்கு மோசமான வரவேற்புதான் மிஞ்சப் போகிறது. நம்மால் முடியாது” என்றான். “நமது வாசனை போன பிறகு நாம் மீண்டும் முயற்சிப்போம்” என்று சொன்னேன். “நம்மை நம்பும் எதாவது ஒரு கப்பல் நிச்சயம் வரும்” மீண்டும் முயற்சி செய்தபோது ஒரு பெரிய சரக்குக் கப்பல் எங்கள் மீது கிட்டத்தட்ட மோதி விட்டது. இன்னும் கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் ஒரு போர்க் கப்பல் எங்கள் மீது சுட்டது. இரண்டு வணிகக் கப்பல்கள் எங்களை அடையாளம் கண்டு கொண்டு திரும்பி விட்டது. இரண்டு நாட்களாக நாங்கள் யாராவது செவி சாய்க்க மாட்டார்களா என்று அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தோம். நாங்கள் நண்பர்கள்தான் எதிரிகள் அல்ல என்று நிரூபிப்பதற்காக. யாரும் கேட்பதாகத் தெரியவில்லை. முதல் போர்க் கப்பல் எங்களைத் தாக்கிய பின் நான் தந்தி அடிக்கச் சொல்லி இருந்தேன். ஆனால் எங்களின் விதி அங்கும் விளையாடி விட்டது. செய்தி அனுப்பும் கருவிகளும் வாங்கும் கருவிகளும் மாயமாய் மறைந்து விட்டன. “உங்களால் இப்போது ஒரே ஒரு இடத்துக்குத்தான் செல்ல முடியும்.” என்று பழைய ஜெர்மன் மீகாமன் சிறையிலிருந்து செய்தி அனுப்பினான். “அது கீல் என்னும் நகரம். உங்களால் ஆங்கிலத் துறைமுகத்தில் எங்கும் கால் பதிக்க முடியாது. நீங்கள் விரும்பினால் நான் உங்களை அங்கு கூட்டிச் செல்கிறேன். நீங்கள் வந்தால் உங்களை மரியாதையாக நடத்த நான் உத்திரவாதம் தருகிறேன்” “இன்னொரு இடத்திற்கு நாம் செல்ல முடியும்” என்று நான் பதில் அனுப்பினேன். “ஜெர்மனி செல்லும் முன் நாம் அங்கு செல்வோம். அதன் பெயர் நரகம்” அத்தியாயம் :௩ துரோகி அந்தச் சில நாட்கள் ஏக்கத்துடனேயே கழிந்தன. லிஸ்ஸுடன் பேசுவதற்குச் சந்தர்ப்பங்கள் ஏதும் வாய்க்கவில்லை. அவளுக்கு மீகாமனின் அறையை ஒதுக்கி இருந்தேன். ப்ராட்லியும் நானும் மேல் தள அதிகாரியின் அறையை எடுத்திருந்தோம். கீழ் நிலை அதிகாரிகள் தங்கும் அறைகளில் ஓல்சன் மற்றும் இரு சிறந்த மாலுமிகளும் தங்கி இருந்தனர். நாப்ஸின் படுக்கையை லிஸ்ஸின் அறையில் போட்டிருந்தேன் அவள் தனிமையை உணராதிருக்க. ஆங்கிலக் கடல் பரப்பை விட்டு வந்தவுடன் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. கடல் பரப்பிலேயே வெகு தூரம் பயணம் செய்து கொண்டே இருந்தோம். முதல் இரண்டு படகுகள் எங்களைக் கண்டவுடன் வெகு வேகமாகச் சென்று விட்டன. இன்னொரு சரக்குக் கப்பல் எங்களைச் சுட்டதனால் நாங்கள் மூழ்க வேண்டியதாய்ப் போனது. இதன் பின்தான் எங்களுக்குச் சோதனைகள் வர ஆரம்பித்தன. டீசல் இயந்திரம் ஒன்று பழுதாகி விட்டது. அதை கவனித்துக் கொண்டிருக்கும் வேளையில் முன் பக்கத்தின் இடது புற தொட்டி ஒன்று நிரம்ப ஆரம்பித்து விட்டது. நான் அப்போது மேல் தளத்தில் இருந்ததால் உடனடியாக என்ன நடக்கிறது என்று கவனித்தேன். சட்டென்று மேல் கதவை மூடி விட்டுக் கீழே போனேன். இந்த நேரத்தில் கலம் இடது புறம் தலை கீழாக இறங்க ஆரம்பித்தது. அதனால் நான் வேறு யாருக்கும் உத்தரவிடாமல் நானே வேகமாகச் சென்று அந்தத் தொட்டியில் நீரை உள் விடும் அடைப்பானை நோக்கி ஓடினேன். அது நன்றாகத் திறந்திருந்தது. அதை மூடி விட்டு அந்தத் தொட்டியில் இருந்து நீரை வெளியேற்றும் எக்கியை இயங்கச் செய்வது ஒரு நிமிட வேலைதான். இருந்தாலும் கடைசி நிமிடத்தில்தான் செய்ய முடிந்தது. அந்த அடைப்பான் தானாகத் திறந்திருக்க வாய்ப்பே இல்லை. யாரோ ஒருவன் திறந்திருக்க வேண்டும், யாரோ ஒருவன் தானும் அழிந்து எங்கள் அனைவரையும் அவனோடு சேர்த்து அழிக்க வேண்டும் என்று நினைத்தவன். அதன் பின் அங்குக் காவல் புரிய ஒருவனை நியமித்தேன். இயந்திரத்தைப் பழுது பார்க்க மறு நாளில் இருந்து ஆரம்பித்தோம். கிட்டத்தட்ட ஒன்றரை நாள் ஆகி விட்டது. பெரும்பாலும் நீர்ப் பரப்பிலேயே சும்மா சுற்றிக் கொண்டிருந்தோம். நண்பகலில் மேற்கிலிருந்து புகை வருவதைப் பார்த்தோம். இந்த உலகில் எல்லோரும் எதிரியாய் இருப்பதால் அந்த இன்னொரு இயந்திரத்தை இயக்குவதற்கு உத்தரவிட்டேன் எங்களை நோக்கி வரும் படகில் இருந்து தப்பிக்க. அந்த இயந்திரம் ஆரம்பிக்கும்போது இரும்பு அரை படுவது போன்று ஒரு கர கர சத்தம் கேட்டது. அது நின்றவுடன் நாங்கள் என்னவென்று பார்க்கச் சென்றோம். யாரோ ஒரு குளிர்ந்த உளியை பல் சக்கரத்தில் செருகி வைத்திருந்தார்கள். பாதி சரி செய்து விட்டு நொண்டியடித்துக் கொண்டிருந்தோம். அதற்குள் இரு நாட்கள் சென்று விட்டன. பழுது முடிந்த அன்றிரவு காவலுக்கு வைத்தவன் என்னை வந்து எழுப்பினான். ஆங்கில நடுத்தர வர்க்கத்தின் ஒரு புத்திசாலியான அவன் மேல் எனக்கு மிகவும் நம்பிக்கை உண்டு. “சொல் வில்சன். என்ன நடந்தது?” என்று கேட்டேன். அவன் தன் ஆட்காட்டி விரலை மெதுவாக வாயில் வைத்து “இந்த சேட்டைகளுக்கெல்லாம் யார் காரணம் என்பதை நான் கண்டுபிடித்து விட்டேன்” என்று மெல்ல என் காதில் முணுமுணுத்தான். அந்தப் பெண்ணின் அறையை நோக்கித் தன் தலையை மேலும் கீழும் ஆட்டினான்.“அவளது அறையில் இருந்து பதுங்கிப் பதுங்கிச் சிறை வைக்கப்பட்ட மீகாமன் அறைக்குக் கொஞ்ச நேரத்திற்கு முன் சென்றாள். பென்சனும் நேற்றிரவு அவளை அங்கு பார்த்தான். ஆனால் இன்றுதான் என்னிடம் சொன்னான். பென்சனுக்குக் கொஞ்சம் மூளை கம்மி. இரண்டையும் இரண்டையும் கூட்டச் சொன்னால் கூட யாராவது எடுத்துக் கொடுத்தால்தான் நான்கு என்று சொல்வான்.” இதற்கு பதிலாக அவன் நேராக வந்து என் முகத்தில் ஒரு குத்து விட்டிருந்தால் கூட இவ்வளவு ஆச்சர்யப்பட்டிருக்க மாட்டேன். “இதைப் பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம். இனிமேலும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இரு. சந்தேகப் படும்படி யாராவது நடந்தால் உடனே எனக்குத் தகவல் தெரிவி” என்று கட்டளை இட்டேன். அவன் எனக்கு சல்யூட் வைத்துச் சென்றான். நான் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக என் அறையில் அமைதியில்லாமல் உலாவிக் கொண்டிருந்தேன். பொறாமையாலும் பயத்தாலும் பெரும் துயரத்திற்கு ஆளானேன். இறுதியில் ஒரு வழியாகக் கஷ்டப்பட்டுத் தூங்கினேன். நான் எழுந்திருக்கும் போது நன்றாக விடிந்திருந்தது. அரை வேகத்தில் செல்லுமாறு நான் உத்தரவிட்டிருந்ததால் கடல் பரப்பில் மெதுவாகச் சென்று கொண்டிருந்தோம். நமது நிலைமையை நாம் உணர்ந்து கொள்ளும் வரை இப்படியே இருப்பதுதான் நல்லது. நேற்றும் இன்று இரவும் கூட வானம் மூட்டமாகவே இருந்தது. மேல் தளத்திற்குக் காலையில் வந்து பார்த்தபோது கதிரவன் நல்ல வெளிச்சமாக ஒளிர்ந்து கொண்டிருந்தான். மாலுமிகளும் தெம்பாக இருந்தார்கள். அனைத்தும் சாதகமாக இருப்பது போல் தெரிந்தது. நேற்றிரவு நடந்த கொடுமையான சந்தேகங்கள் கூட மறந்து கடற் பரப்பைக் கவனிக்கச் சென்று விட்டேன். ஆனால் நிலைமையோ தலை கீழ். ஒரு கொடுமையான செய்தி காத்துக்கொண்டிருந்தது. கோணமானியும் காலக் கருவியும் முற்றிலும் சிதைக்கப்பட்டிருந்தன. இந்த இரவுதான் அவைகள் இரண்டுமே உடைக்கப்பட்டிருக்கின்றன. வான் ஸ்சோன்வர்ட்ஸிடம் லிஸ் பேசிக் கொண்டிருந்த அதே இரவில்தான் அவைகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. அதை நினைக்கும்போதே என் மனம் வலித்தது. எந்தவித ஆபத்துக்களையும் நான் தைரியமாக சமாளித்து விடுவேன். ஆனால் லிஸ் ஒரு துரோகி என்று அறியும் போதுதான் எனக்குள் பயம் ஊற்று எடுக்க ஆரம்பித்தது. ப்ராட்லியையும் ஒல்சனையும் மேல் தளத்திற்கு வரச் சொல்லி அவர்களிடம் நடந்ததைக் கூறினேன். ஆனால் வில்சன் நேற்றிரவு சொன்னதை மட்டும் என் வாழ்க்கையில் என்றும் யாரிடமும் கூறி விடும் தைரியம் எனக்கில்லை. யோசிக்கும் வேளையில் அவள் எங்களை எல்லாம் தாண்டி வான் ஸ்சோன்வர்ட்ஸை சந்திக்கச் சென்றிருந்தால் எப்படியும் நிறைய பேர் பார்த்திருக்கக் கூடும். ப்ராட்லி புரியாதது போல் தலையசைத்தான். “என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு ஜெர்மானியன் மிகவும் அறிவாளியாக இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறான். ஆனால் அவன் நினைப்பது போல் நம்மைத் துன்பத்திற்கு உள்ளாக்கவில்லை. ஏனெனில் நம்மிடம் இன்னும் உதிரி பாகங்கள் இருக்கின்றன.” இப்போது கவலை தோய்ந்த முகத்தை அசைப்பது என் முறை. “உதிரி பாகங்கள் நம்மிடம் இல்லை. தந்திக் கருவிகள் காணாமல் போன போதே அவைகளும் போய் விட்டன” என்றேன். இருவரும் என்னை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். “நமக்கு வழிகாட்டக் கதிரவனும் கவராயமும் துணை இருக்கின்றன” என்றான் ஓல்சன். எதாவது ஒரு இரவு அவர்கள் கவராயத்தைக் கூட களவாடலாம். ஆனால் பகலில் நம்மை எல்லாம் தாண்டிக் கதிரவனை அடைவது சுலபம் அல்ல" என்றான். அப்போது ஒருவன் நடுப் பாதை வழியாகத் தலையை நீட்டி என்னிடம் அனுமதி கேட்டு மேலே வந்தான் புத்தம் புதிய காற்றைச் சுவாசிப்பதற்காக. அவன் பென்சன் என்று புரிந்தது. லிஸ் வான் ஸ்சோன்வர்ட்ஸை அன்று இரவு சந்தித்ததைப் பார்த்ததாக வில்சன் சொன்ன அதே ஆள். அவனைச் சிறிது தூரம் கூட்டிச் சென்று எதாவது வித்தியாசமாக நடந்ததா நீ பணியில் இருக்கும்போது என்று கேட்டேன். அவன் தன் தலையைச் சொரிந்தான். பின் இல்லை என்றான். பின் ஏதோ யோசனை வந்தவன் போல் அந்தப் பெண் பழைய மீகாமனின் அறையில் நடு இரவு நின்று பேசிக் கொண்டிருந்ததாகவும் அதைத் தான் பெரிதாக எடுத்துக் கொள்ளாததால் யாரிடம் எதுவும் சொல்லவில்லை என்று கூறினான். எந்த சின்ன விஷயம் வழக்கத்துக்கு மாறாக நடந்தாலும் உடனே என்னிடம் சொல் என்று கூறி விட்டு அவனை அனுப்பி வைத்தேன். அவன் சென்ற பிறகு பணியில் இல்லாதவர்கள் ஒவ்வொருவராக மேலேறி வந்த வண்ணம் இருந்தனர். மேலே வந்து புகைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். அந்த இடமே மிகவும் குதூகலமாக இருந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் நான் காலைச் சிற்றுண்டி சாப்பிடலாம் என்று எண்ணிக் கீழே சென்றேன். சமையல்காரர் அப்போதுதான் தயாரித்துக் கொண்டிருந்தார் மின் அடுப்பில். நான் நடுப் பாதையில் இறங்கிக் கொண்டிருக்கும் போது லிஸ் நாப்ஸுடன் வந்தாள். அவள் மலர்ச்சியுடன் என்னைப் பார்த்துக் காலை வணக்கம் சொன்னாள். அதற்கு நான் பதில் வணக்கம் மிகவும் இறுக்கமாகக் கடுகடுப்புடன் சொன்னேன். “என்னுடன் சாப்பிட வருகிறாயா?” என திடீரென்று கேட்டேன். நாமே ஒரு விசாரணையை ஆரம்பித்து விடலாம் என்று கடமை உணர்ச்சியோடு எண்ணிக் கொண்டேன். அவள் மிக மகிழ்ச்சியாக ஒத்துக் கொண்டாள். நாங்கள் அதிகாரிகள் சாப்பிடும் உணவகத்தில் அமர்ந்தோம். “நீ நன்றாக உறங்கினாயா” என்று கேட்டேன். “இரவு முழுவதும்” என்றாள். “அற்புதமாகத் தூங்கினேன்” அவள் சொன்னது மிகவும் நேரிடையாக நேர்மையாக இருந்தது. கள்ளம் கபடு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அவளது துரோகத்தை வெளிப்படச் செய்து விட வேண்டும் என்ற நோக்கில் அதிரடியாகக் கேட்டேன் “காலக் கருவியும் கோண மானியும் நேற்றிரவு சிதைக்கப்பட்டு விட்டன. நமக்குள் யாரோ ஒரு துரோகி இருக்கிறான்.” ஆனால் அதெல்லாம் அவளுக்குத் தெரியும் என்பது போல் ஒரு முடியைக் கூட அவள் அசைக்கவில்லை. “யாராக இருக்கும்.” என்று அழுதபடியே கேட்டாள். “ஜெர்மானியர்கள் செய்திருந்தால் அவர்கள் பைத்தியக்காரர்களாகத்தான் இருக்க வேண்டும். அவர்களது உயிரும் இதில் அடங்கி இருக்கிறது.” “ஆண்கள் எதாவது ஒரு நல்ல காரணத்துக்காக உயிரை விடவும் தயங்க மாட்டார்கள். நாட்டுப்பற்றாக இருக்கலாம். தங்களைத் தியாகம் செய்வது போல் மற்றவர்களையும் தியாகம் செய்யத் தயாராக இருப்பார்கள் அவர்கள் அன்பு செலுத்துபவர்களையும் சேர்த்து. பெண்களும் கிட்டத்தட்ட அதே போல் தான். ஆனால் அவர்கள் தங்கள் மரியாதையை காதல் அனைத்தையும் கூட இழக்கச் சம்மதிப்பார்களா” என்று நான் சொன்னேன். நான் சொன்னபோது அவள் முகத்தைக் கூர்ந்து கவனித்தேன். அவள் கன்னம் மெலிதாகச் சிவப்பாயிற்று. முன்னுரை கொடுத்த பின் அப்படியே தொடரலாம் என்று எண்ணினேன். “ஒரு உதாரணத்திற்கு வான் ஸ்சோன்வர்ட்ஸை எடுத்துக் கொள். எதிரியிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றால் தான் சாவது மட்டுமல்லாமல் அனைவரையும் சாகடிக்கவும் தயங்க மாட்டான். அவன் யாரையும் தியாகம் செய்வான். உன்னையும் சேர்த்து. நீ இன்னும் அவனை காதலிப்பதாக இருந்தால் நீ கூட அவனது கருவியாக இருக்கலாம். புரிகிறதா” என்று விளக்கம் கொடுத்தேன். அவள் என்னை ஒரு திகிலாக பார்த்தாள் அகலத் திறந்த விழிகளோடு. அவள் முகம் மிகவும் பேயறைந்தது போல் வெளிறி விட்டது. பின் ஆசனத்தில் இருந்து எழுந்தாள். “ஆமாம்” என்றாள். எனக்கு முதுகை காட்டியவாறு விருட்டென்று கிளம்பி அவள் அறைக்குச் சென்று விட்டாள். அவள் மனதைக் காயப்படுத்தி விட்டதால் எனக்கும் உறுத்தலாக இருந்தது. அதனால் அவள் பின்னாலேயே சென்றேன். பணியாளர்கள் இருக்கும் அறைக் கதவு வரை சென்றேன். அப்போது வான் ஸ்சோன்வர்ட்ஸ் அவள் செல்லும்போது அவள் காதில் ஏதோ கிசு கிசுத்தான். அவள் தன்னை யாரோ கண்காணிக்கிறார்கள் என்று யூகித்ததால் கண்டும் காணாமல் சென்று விட்டாள். திசை மாறிய பயணம் அன்று மத்தியானம் மேக மூட்டமாயிருந்தது. காற்றின் வேகம் அதிகமாகிப் புயலாகிக் கொண்டிருந்தது. கப்பலைக் கவிழ்த்து விடுவது போல் கடல் பரப்பு ஏறிக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட அனைவருக்கும் உடம்பு சரியில்லாமல் போய் விட்டது. காற்றில் துர் நாற்றம் அடித்தது. இருபத்து நான்கு மணி நேரமும் நான் முறை கோபுரத்தை விட்டு இறங்கவில்லை ஓல்சன் ப்ராட்லி இருவருக்குமே பிணி ஏற்பட்டதால். இறுதியில் நான் கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும் என்று எண்ணினேன். யாராவது கிடைப்பார்களா என்று தேடினேன். பென்சன் ஒத்துக்கொண்டான். அவன் பாதிப்படையாமல் இருந்தான். இரண்டு வருடங்களுக்கு மேலாக அவன் நீர் மூழ்கிக் கப்பலில் இந்த வேலை பார்த்திருப்பதாகக் கூறினான். அவன் மேல் முழு நம்பிக்கையும் இருந்ததால் எனக்கு அவன் வந்தது மகிழ்ச்சியாகவே இருந்தது. அதனால் ஒரு பாதுகாப்புணர்வோடு நான் கீழே தூங்குவதற்காகச் சென்றேன். நான் பனிரெண்டு மணி நேரம் தொடர்ச்சியாக உறங்கினேன். எழுந்தவுடன் நான் என்ன செய்திருக்கிறேன் என்று புரிந்தவுடன் நேராக முறை கோபுரத்தை நோக்கிச் சென்றேன். பென்சன் அங்கு கொட்டக் கொட்ட விழித்திருந்தான். கவராயம் மேற்கு திசையை காட்டிக் கொண்டிருந்தது. புயல் இன்னும் ஓய்ந்த பாடில்லை. நாலாவது நாளாக அதன் கொட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தது. எப்போது மேல் சென்று தூய்மையான புதிய காற்றை சுவாசிக்கப் போகிறோம் என்று ஏங்கிக் கொண்டிருந்தோம். இந்த நான்கு நாட்களும் அவள் தன் அறையிலேயே இருந்தாள். வேறெந்த அசம்பாவிதமும் நடந்திருக்கவில்லை. அதனால் சூழ்நிலை காரணங்கள் அவள் மீது சந்தேகத்தை அதிகரித்த வண்ணம் இருந்தன. புயல் குறைந்து ஆறு நாட்கள் ஆகியும் பருவ நிலை இன்னும் மோசமாகத்தான் இருந்தது. கதிரவன் ஒரு தடவை கூட எட்டிப் பார்க்கவில்லை. ஜூன் மாத நடுவில் இந்தப் பருவ நிலை ரொம்ப மோசம்தான். தெற்கு கலிபோர்னியாவில் இருந்ததால் எனக்கு இதெல்லாம் சாதாரணம்தான். சொல்லப் போனால் உலகில் எல்லா இடங்களிலும் மோசமான வானிலை ஒரு வருடத்தின் எல்லாக் காலங்களிலும் இருக்கத்தான் செய்கிறது. நாங்கள் சீராக மேற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். இந்த U33 என்ற கப்பல்தான் நாங்கள் கட்டியதில் மிக வேகமானது. இந்நேரம் வட அமெரிக்கக் கடல் எல்லையைத் தொட்டிருக்க வேண்டும். கடந்த ஆறு நாட்களாக வேறெந்தக் கப்பலும் இதுவரை கண்ணில் படாததுதான் எனக்கு மிகவும் புதிராக இருந்தது. அட்லாண்டிக் கடலையே அமெரிக்கக் கடற்கரை ஓரமாக எந்தக் கப்பலையும் புகையையும் பார்க்காமலேயே கடந்து சென்று விடலாம் என்று எண்ணும் போது எனக்கு மிகவும் பிரமிப்பாக இருந்தது. இறுதியில் நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். உறுதியாக நாம் நம் வழியில் இருந்து விலகித்தான் செல்கிறோம். ஆனால் அது வடக்கு நோக்கியா இல்லை தெற்கா என்றுதான் புரியவில்லை. ஏழாவது நாள் அதி காலை கடல் மிகவும் அமைதியாக இருந்தது. ஆனால் விண் மீன்கள் தெளிவாகத் தெரியாத அளவு மூட்டமாக இருந்தது. ஆக நாளை எப்படியும் தெளிவாகி விடும் என்ற நம்பிக்கையை விதைத்தது. நான் மேல் தளத்தில் நின்று கதிரவன் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். துளைத்துச் செல்ல முடியாத பனி மூட்டத்தின் மேல் கப்பலின் பின் புறம் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். கிழக்கில் நான் தான் கதிரவன் ஒளிக் கீற்றை முதலில் பார்க்க வேண்டும் என்று ஆவலாய் இருந்தேன். அது உறுதி ஆனால்தான் நாம் சரியான பாதையில் பயணிக்கிறோம் என்பது தெளிவாகும். ஆகாயத்தில் மெல்ல ஒளி படர்ந்தது. ஆனால் கப்பலின் பின் புறத்தில் இருந்து திரளான ஒளிக் கற்றை தென்படவே இல்லை. அப்படி வந்தால்தான் கதிரவன் வருவதற்கான அடையாளம். ப்ராட்லி என் அருகில் இருந்தான். என் கையைத் தொட்டபடிச் சொன்னான். “அங்கே பாருங்கள் மீகாமன்.” என்று தெற்குப் பக்கம் கையை நீட்டினான். எனக்கு அதைப் பார்த்தபின் ஒரு கணம் மூச்சே நின்று விட்டது. சரியாக இடது புறத்தில் மூட்டத்தின் உள்ளிருந்து கதிரவனின் மேல் புறம் எழுந்து கொண்டிருந்தது. நான் உடனே கோபுரத்தை நோக்கி ஓடிச் சென்று கவராயத்தைப் பார்த்தேன். அது நாங்கள் மேற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்ததாய்க் காட்டியது. கதிரவன் தெற்கில் உதித்திருக்க வேண்டும் இல்லையேல் இந்தக் கவராயத்தை யாரோ பழுதாக்கி இருக்க வேண்டும். இரண்டில் எதுவென்று சொல்லவே தேவை இல்லை. நான் ப்ராட்லியிடம் சென்று கண்டுபிடித்ததைக் கூறினேன். “இன்னும் ஒரு 500 காதம் கூட செல்வதற்கு எண்ணெய் இல்லை. சாப்பாட்டுப் பொருட்களும் தண்ணீரும் கூட பற்றாக்குறைதான். தெற்கு நோக்கி நாம் எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.” “இப்போதே செய்வதற்கு ஒன்றும் இல்லை. நம் பாதையை மேற்குப் பக்கம் மாற்றுவதைத் தவிர வேறு வழி இல்லை நமக்கு. நாம் தரையை சீக்கிரம் பார்த்தாக வேண்டும். இல்லையேல் காணாமல் போய் விடுவோம்.” என்றான் ப்ராட்லி. அப்படியே செய் என்று கட்டளை இட்டேன். பின் கோணமானியைச் சரி செய்யக் கிளம்பினேன். நம்பவில்லை என்றாலும் அதிலிருந்துதான் கடைசியாக நாங்கள் திசையைக் கணித்து வைத்திருந்தோம். ஒருவழியாக அதைச் சரி செய்த பிறகு இன்னும் அது எவ்வளவு தூரம் சரியாக இருக்கும் என்று தெரியவில்லை. அது 20 நொடி வடக்கு 30 நொடி மேற்கு என்று காட்டியது. கிட்டத்தட்ட 2500 மைல் விலகிச் சென்றிருக்கிறோம். இது சொல்வது ஏறக்குறைய சரியாக இருந்தாலும் கடந்த ஆறு நாட்களாக நாம் பாதையில் இருந்து விலகிச் சென்று இருக்கிறோம். ப்ராட்லி இப்போது பென்சனை அனுப்பி விட்டான். இரவுப் பணியை இப்போது ஓல்சனும் பென்சனும் பார்த்துக் கொள்கிறார்கள். நானும் ப்ராட்லியும் பகலில் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொள்கிறோம். நான் ஓல்சன் பென்சன் இருவரிடமும் கோணமானியை உடைத்தது யார் என்று தீவிர விசாரணை நடத்தினேன். ஆனால் இருவரும் மறுத்தார்கள். பென்சன் மட்டும் தெரிந்தது போல் புன் முறுவல் செய்தபடியே சொன்னான். “உனக்கும் எனக்கும் தெரியும் யார் உடைத்தது என்று.” இருந்தாலும் அவள்தான் செய்திருப்பாள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. மேற்குப் புறமாகவே நாங்கள் பல மணி நேரம் சென்று கொண்டிருந்தோம். அப்போது ஒருவன் இன்னொரு கப்பல் தென்படுவதாகக் கத்தினான். உடனே நான் கப்பலைத் திருப்புமாறு சொன்னேன். நாங்கள் அந்த அந்நியனைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். அதுதான் தற்போதைய தேவை என்றும் தெரிந்தது. அட்லாண்டிக் கடலின் நடுவில் சாப்பிடாமலேயே உயிரை விட மனம் இல்லை. அந்தக் கப்பலும் எங்களைக் கண்டு கொண்டது மிகவும் தூரமாக இருந்தாலும். ஏனென்றால் அவர்களும் தப்பிச் சென்று விடத்தான் முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். காற்றும் எப்போதாவதுதான் அடித்தது. இருந்தும் அவர்களால் தப்பிக்க இயலவில்லை. அதனால் நாங்கள் பக்கத்தில் சென்று நிறுத்துமாறு சைகை செய்ததும் அதிலிருந்து இறக்கி விடப்பட்ட பாய் மரத் துணி காற்றில் மெதுவாகப் படபடத்தது. நாங்கள் மிகவும் அருகில் சென்று பார்த்தோம். அது பிரேசிலில் இருந்து ஸ்பெயினுக்குச் சென்று கொண்டிருக்கும் சரக்குக் கப்பல் ஹாம்ஸ்டட்இன் பால்மேன், ஸ்வீடன். நான் அவர்களின் மீகாமனிடம் எங்கள் சூழ்நிலையை விளக்கிச் சொன்னேன். உணவு தண்ணீர் மற்றும் எண்ணெய் கொடுத்து உதவுமாறு. நாங்கள் ஜெர்மானியர்கள் இல்லை என்று தெரிந்ததும் அவன் கடும் கோபத்திற்கு உள்ளானான். திட்டிக் கொண்டே எங்களிடமிருந்து விலகிச் செல்ல ஆரம்பித்தான். ஆனால் இதை எல்லாம் சகித்துக் கொள்ளும் மன நிலையில் நான் இல்லை. முறை கோபுரத்தில் இருந்த ப்ராட்லியை நோக்கி “துப்பாக்கிகளை மேல் தளத்தில் இருந்து கடலில் குதிக்கும் இடத்திற்கு உடனே அனுப்பு” என்றேன். பயிற்சி எடுப்பதற்கு நேரமில்லை. ஒவ்வொருவருக்கும் பணி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மானியர்களுக்கும் தெரியும் ஒத்துழைக்கவில்லை என்றால் மரணம் என்று. ஏனென்றால் ஒவ்வொருவரையும் கவனிக்கவும் எங்கள் ஆள் ஒருவன் துப்பாக்கியுடன் இருக்கிறான். பெரும்பாலும் அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு கொடுக்கவே மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்கள். ப்ராட்லி என் கட்டளையைக் கீழே உள்ளவர்களிடம் சொன்னான். உடனே துப்பாக்கிகள் ஏந்தியவாறு அந்த ஒடுங்கிய ஏணியில் ஏறி வந்தார்கள். நான் சொன்னவுடன் அனைவரும் மெதுவாகச் செல்லும் அந்த ஸ்வீடன் கப்பலைக் குறி வைத்தார்கள். கப்பலின் முகப்பில் சுடுமாறு உத்தரவிட்டேன். அந்த ஸ்வீடன் கப்பல் மீகாமனுக்குத் தான் செய்த தவறு உடனே புரிந்திருக்க வேண்டும். அதனால் சிவப்பும் வெள்ளையும் கலந்த கொடியை கம்பத்தில் பறக்க விட்டான் புரிந்து கொண்டதற்கு அடையாளமாக. திரும்பவும் அவர்களது பாய் மரத் துணி காற்றில் படபடத்தது. அவர்கள் படகு ஒன்றைக் கீழிறக்கி அனுப்புமாறு சொன்னேன். ஓல்சன் மற்றும் இரு ஆங்கிலேயர்களை என்னுடன் அழைத்துச் சென்று அவர்களது கப்பலில் ஏறினேன். அங்கு எங்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டோம். பின் நாங்கள் எடுத்தவைகளுக்கு ஒரு ரசீது எழுதி அந்த மீகாமனிடம் கொடுத்தேன். ப்ராட்லி ஓல்சன் நான் அதில் கையொப்பமிட்டோம். எப்படி இந்த U 33 கப்பல் எங்களுக்குக் கிடைத்தது என்றும் அவசரத் தேவைக்காக இவைகளை எடுத்திருக்கிறோம் என்று சின்னதாக ஒரு குறிப்பு எழுதினேன். இரண்டையும் ஒரு ஆங்கில அதிகாரிக்கு என்று எழுதி இருந்தோம். பால்மனின் சொந்தக்காரர்களுக்கு இழப்பீடு கொடுத்து விடவும் என்று சொல்லி இருந்தேன். கிடைக்குமா கிடைக்காதா என்று எனக்குத் தெரியவில்லை. குடி தண்ணீர் உணவு மற்றும் எண்ணெய் எல்லாம் கிடைத்தவுடன் போன உயிர் திரும்பி விட்டது போல் இருந்தது. எங்கே இருக்கிறோம் என்று தெளிவாகத் தெரிந்தவுடன் நான் ஆங்கில கயானாவில் உள்ள ஜார்ஜ் டவுன் சென்று விடலாம் என்று முடிவெடுத்து விட்டேன். ஆனால் விதி வலியது. வேறோர் உருவத்தில் மீண்டும் ஒரு ஏமாற்றம் அளித்தது. லிஸ்ஸின் உதவி விசுவாசமான ஆறு பேர் மேல் தளத்திற்குத் துப்பாக்கிகளோடு வந்திருந்தனர் ஸ்வீடன் கப்பலைச் சமாளிப்பதற்கு. நடுவில் இருக்கும் ஏணி வழியாக ஒவ்வொருவராக இறங்கிக் கொண்டிருந்தோம். நான்தான் கடைசியாக இறங்கினேன். கீழே வந்த பிறகுதான் தெரிந்தது. வான் ஸ்சோன்வர்ட்ஸ் நீட்டிக் கொண்டிருந்த துப்பாக்கி முனையைத் தான் பார்க்க நேர்ந்தது. எங்கள் கூட்டாளிகள் அனைவரும் வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள். ஜெர்மானியர்கள் அவர்களுக்குக் காவலாக இருந்தனர். எப்படி நடந்ததென்று நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. ஆனால் அதுதான் உண்மை. பின்னால் எனக்குத் தெரிந்தது முதலில் உறங்கிக் கொண்டிருந்த பென்சனிடம் இருந்து துப்பாக்கியைப் பறிமுதல் செய்தார்கள். அதை வைத்து சமையல்காரனிடம் உள்ள துப்பாக்கியையும் பறித்தார்கள். பின் மிச்சமிருந்த இரண்டு ஆங்கிலேயர்களை வீழ்த்தினார்கள். ஏணியில் இறங்கும் போது ஒவ்வொருவரையும் துப்பாக்கியைக் காட்டிக் கைது செய்து விட்டார்கள். வான் ஸ்சோன்வர்ட்ஸ் முதலில் என்னைக் கூப்பிட்டு அனுப்பினான். கடற் கொள்ளையன் என்று அறிவித்து நாளை காலை முதல் வேளையாக என்னைச் சுட்டுத் தள்ளுமாறு உத்தரவிட்டான். பின் இந்த நீர்மூழ்கிக் கப்பல் இந்தக் கடலிலேயே பயணிக்கும் என்றும் நடுநிலையில் இருக்கும் கப்பல்களையும் எதிரிக் கப்பல்களையும் சரமாரியாகச் சுட்டு வீழ்த்துமாறு கட்டளை இட்டான். இந்தப் பக்கத்தில் இருக்க வேண்டிய மற்றொரு ஜெர்மன் போர்க்கப்பலைத் தேடுமாறும் சொன்னான். அவன் சொன்னபடி மறு நாள் என்னைச் சுடவில்லை. எனக்கு விளங்கவே இல்லை ஏனவன் தள்ளி வைத்தான் என்று. அதற்கு பதில் என்னைக் கம்பிகளுக்குப் பின் தள்ளினான் அவனை நான் செய்தது போலவே. பின் ப்ராட்லியை எனது அறையில் இருந்து வெளியே தள்ளி விட்டு முழுவதும் அவனே எடுத்துக் கொண்டான். நாங்கள் வெகு நாட்களாக பயணித்துக் கொண்டே இருந்தோம். இடையில் தென்பட்ட அனைத்துக் கப்பல்களையும் மூழ்கடித்தோம். ஒன்றே ஒன்றை மட்டும் சுட்டு வீழ்த்தினோம். ஆனாலும் ஜெர்மன் கப்பலை மட்டும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. பென்சனுக்கு மட்டும் அவன் அவ்வப்போது தலைமைப் பொறுப்பு கொடுத்தது ஆச்சர்யமாக இருந்தது. இங்கிருக்கும் எந்த முட்டாள் ஜெர்மனியனைக் காட்டிலும் பென்சனுக்கு இதில் அனுபவம் இருப்பதால் இருக்கும் என்று சமாதானம் ஆனேன். ஓரிரு முறை லிஸ் என்னைக் கடந்து சென்றாள். பெரும்பாலும் அவள் தன் அறையிலேயே இருந்தாள். ஒரு முறை என் பக்கத்தில் என்னிடம் பேச வேண்டி இருப்பது போல் தயங்கி நின்றாள். ஆனால் நான் என் தலையை உயர்த்தவே இல்லை. அதனால் அவள் அங்கிருந்து சென்று விட்டாள். பின் ஒரு நாள் ஒரு செய்தி வந்தது. வான் ஸ்சோன்வர்ட்ஸ் தன் மரமண்டையை எடுத்துக் கொண்டு பசிபிக் கடல் வழியாக வட அமெரிக்கக் கடற்கரையில் பயணித்துக் கொண்டு வணிகக் கப்பல்கள் அனைத்தையும் தாக்கத் திட்டமிட்டிருந்தானாம். “நான் அவர்களுக்குக் கடவுள் மேலும் கைஸர் மேலும் பயம் வரும் படி செய்வேன்” என்று சூளுரைத்தான் வான். தெற்கு பசிபிக் கடலில் நுழைந்த முதல் நாளே எங்களுக்குச் சாகசமாகத்தான் இருந்தது. இதுவரை கடந்து வந்த சாகசங்களைக் காட்டிலும் அது மிகவும் உற்சாகம் ஊட்டுவதாக இருந்தது. இதுதான் நடந்தது. காலையில் எட்டு தடவை மணிச் சத்தம் கேட்டது. பின் மேல் தளத்தில் ஆலங்கட்டி மழைச் சத்தம் கேட்டது. பின் கப்பலின் அனைத்துப் பரிவாரங்களின் காலடிச் சத்தம் கேட்டது. ஏணியில் இருப்பவர்களின் காலடிச் சத்தம் அவ்வளவு இருந்ததால் சொல்கிறேன். மேல் தளத்தை இன்னும் வந்தடையாத யாரோ ஒருவனிடம் ஒருவன் உரத்த குரலில் சொன்னான். “அது ஜெர்மன் போர்க் கப்பல். ஜெர்மன் போர்க் கப்பல் கெயர்” என்று. பின்னர் கீழே எந்தவிதமான சத்தமும் கேட்கவில்லை. யாரும் இல்லை. பின்னர் ஒரு கதவு திறக்கும் சத்தம் கேட்டது. நாப்ஸ் பாய்ந்து வந்து கொண்டிருந்தது. அது என் முகத்தை நக்கியது. பின் கீழே விழுந்து புரண்டு என்னை நோக்கிக் கால்களை நீட்டியது. பின் வேறொரு காலடிச் சத்தம் கேட்டது. அது யாரென்று எனக்கு நன்றாகவே தெரியும். நான் திரும்பி நேராகத் தரையைப் பார்த்தேன். அந்தப் பெண் வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தாள். உடனே என் பக்கத்தில் நெருங்கி வந்தாள். “இதோ” என்று கத்தினாள். “சீக்கிரம்” என்று சொல்லி விட்டு அந்தக் கையில் ஒரு சின்னப் பொருளைத் திணித்தாள். அது ஒரு சாவி. என் சிறையின் சாவி. அவள் எனக்கு ஒரு துப்பாக்கியும் நீட்டினாள். பின் நடுவழிக்குச் சென்றாள். அவள் சென்ற போது பார்த்தேன் அவள் கையிலும் ஒரு துப்பாக்கி இருந்தது. எனது பூட்டைத் திறக்க வெகு நேரம் ஆகவில்லை. உடன் நான் அவளைப் பின் தொடர்ந்து சென்றேன். “நான் உனக்கு எப்படி நன்றி சொல்லப் போகிறேன்” என்று ஆரம்பித்தேன். அவள் சொன்ன ஒரு வாக்கியம் என் வாயை மூடி விட்டது. “நன்றி சொல்ல வேண்டாம்” என்று மிகவும் இறுக்கமாகச் சொன்னாள். “உனது நன்றியோ இல்லை எந்தவித உணர்ச்சியைப் பற்றி எனக்கு எந்தவித அக்கறையும் இல்லை. என்னைப் பார்த்து கொண்டே இருக்காதே. எதாவது செய்ய உனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறேன். இப்போதே செய்.” அவள் கடைசியாகச் சொன்ன வார்த்தைகள் ஒரு ஆணை போல இருந்ததால் உடனே குதித்தோடினேன். மேலே பார்க்கும்போது கோபுரத்தில் யாருமில்லை. நான் உடனே மேலே ஏற ஆரம்பித்தேன். ஒரு நூறடி தூரத்தில் ஒரு போர்க் கப்பல் நின்று கொண்டிருந்தது. அதன் மேல் ஒரு ஜெர்மன் போர் நாயகன் கொடி பறந்து கொண்டிருந்தது. ஒரு படகு அப்போதுதான் இறக்கப்பட்டிருந்தது. அதிகாரிகளும் மற்றவர்களும் அதில் ஏறிப் பயணம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். எதிரிலேயே நின்று கொண்டிருக்கிறது அந்தக் கப்பல். “கடவுளே. எவ்வளவு அருமையான இலக்கு” நான் சிந்திப்பதையே நிறுத்தி விட்டேன். கீழிருக்கும் அவளை ஏக்கமாகப் பார்த்தேன். அவளை நம்பலாமா. ஏன் என்னை இந்த நேரத்தில் விடுவித்தாள். கட்டாயம் செய்ய வேண்டும். கட்டாயம் செய்ய வேண்டும். வேறெதுவும் வழி இல்லை. நான் திரும்பவும் கீழிறங்கி வந்தேன். “ஓல்சனை தயவு செய்து இங்கே வரச் சொல். நீ அவனிடம் பேசுவதை யாரும் பார்க்கக் கூடாது” என்று கேட்டுக் கொண்டேன். அவள் என்னை ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் புதிராகப் பார்த்தாள். பின் திரும்பி ஏணியில் ஏற ஆரம்பித்தாள். சில நேரத்தில் ஓல்சன் இறங்கி வந்தான். அவனைப் பின் தொடர்ந்து அவள் வந்தாள். “சீக்கிரம்” என்று அந்த பெரிய ஐரிஷ்காரனிடம் கிசுகிசுத்தேன். பின் அவனைக் கப்பலின் முகப்புப் பகுதியில் இருந்த வெடிக்கண்ணி ஏவும் இடத்திற்கு அழைத்துச் சென்றேன். அவளும் எங்களைப் பின் தொடர்ந்து வந்தாள். நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதை அறிந்தவுடன் அவளும் எங்களுக்கு ஒரு கை கொடுத்து வெடிக்கண்ணியைப் பொறுத்த உதவி செய்தாள். பின் நான் முறை கோபுரத்திற்குச் சென்று கவனித்தேன். எங்கள் கப்பல் அதே நிலையில் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டே சென்றேன். நல்ல வேளையாக இரையின் மேல் பாய்வதற்கு ஏதுவாகத்தான் இருந்தது. இலக்கு இதைவிட உண்மையாக எப்போதும் இருந்திருக்காது. நான் ஓல்சனுக்குச் சைகை காண்பித்தேன். “அனுப்பு” என்றேன். அந்த வெடிக்கண்ணி பாயத் தொடங்கியதும் நீர் மூழ்கிக் கப்பலே அதிரத் தொடங்கியது. எதிரிக் கப்பலை நோக்கி வெள்ளையாகக் கடல் நீர் நுரைத்து ஓடுவதை என்னால் பார்க்க முடிந்தது. எங்கள் கப்பலின் மேல் தளத்தில் இருந்தே பலர் ஒரு சேர கரகரப்பாய்க் கத்துவதைக் கேட்க முடிந்தது. எங்களை நோக்கி வந்து கொண்டிருந்த படகில் இருந்த அதிகாரிகள் உடனே விறைப்பானதைப் பார்க்க முடிந்தது. எதிரிக் கப்பலில் இருந்து கத்தல்களும் திட்டல்களும் கேட்க ஆரம்பித்தது. பிறகு நான் எடுத்த வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். கப்பலின் மேல் தளத்தில் இருந்த அனைவரும் செயலற்று வெடிக்கண்ணியைப் பார்த்த வண்ணம் இருந்தனர். ப்ராட்லி முறை கோபுரத்தில் என்னைப் பார்த்தான். நான் தளத்தில் பாய்ந்து வந்து அவனை நோக்கி ஓடினேன். “அவர்கள் ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் நாம் அவர்களை முறியடிக்க வேண்டும்” ப்ராட்லிக்கு முன் புறம் ஒரு ஜெர்மன் நின்று கொண்டிருந்தான். ப்ராட்லி உடனே அவன் கழுத்தில் வெறி கொண்டு ஓங்கி ஒரு குத்து விட்டான். அவன் சரிந்து கொண்டிருக்கும்போதே அவனது துப்பாக்கியை உரையில் இருந்து எடுத்து விட்டான். வான் ஸ்சோன்வர்ட்ஸ் தனது முதல் அதிர்ச்சியில் இருந்து மீண்டு விசாரணை செய்யக் கிளம்பினான். நான் அவன் தலையில் துப்பாக்கியை வைத்து அழுத்தும் அதே வேளையில் வெடிக்கண்ணி எதிரிக் கப்பலின் மீது பெரும் சத்தத்துடன் மோதி அவர்களைக் கடலில் மூழ்கடித்தது. ப்ராட்லி ஒவ்வொரு ஆங்கில மாலுமிகளிடமும் ஓடியபடி இருந்தான். ஜெர்மன்காரர்கள் அதைக் கவனித்தாலும் இன்னும் அதிர்ச்சியில் இருந்து விடுபடவில்லை ஆதலால் அவர்கள் எந்தவிதச் சலனமும் இல்லாமல் இருந்தார்கள். ஓல்சன் கீழே இருந்தான். அதனால் நாங்கள் 9 பேர் அவர்கள் 8 பேர். ப்ராட்லியால் அடிபட்டவன் மேல் தளத்தில் இன்னும் விழுந்து கிடந்தான். எங்கள் இருவரிடம் மட்டும்தான் துப்பாக்கி இருந்தது. ஜெர்மானியர்களிடம் மனசே இல்லை. அவர்கள் பாதியளவில்தான் எதிர்ப்புக் காட்டினார்கள். வான் ஸ்சோன்வர்ட்ஸ் மட்டும்தான் மோசமாக நடந்து கொண்டான். அவன்தான் கோபத்திலும் ஏமாற்றத்திலும் வெதும்பி இருந்தான். ஒரு வெறித்தனமான காளையைப் போல் என்னை நோக்கிப் பாய்ந்து வந்தான். அப்படி வரும்போது துப்பாக்கியால் சுட்டான். நின்று கொண்டு சுட்டிருந்தால் கட்டாயம் என்னைக் கொன்றிருப்பான். கோபம் தலைக்கேறி என்ன செய்வதென்று தெரியாமல் சுட்டுக் கொண்டே வந்ததால் என்னை ஒரு குண்டு கூடத் தொடவில்லை. பின் அவன் கைகளைப் பிடித்துக் கட்டிப் புரண்டதில் எங்கள் துப்பாக்கிகள் கீழே விழுந்து விட்டன. அவைகளை உடனே எனது ஆட்கள் எடுத்து விட்டனர். அவன் கைகலப்பில் சுத்த மோசம். எளிதாக அவனைக் கட்டிப் போட்டு விட்டேன். ஒரு அரை மணி நேரத்திலேயே எல்லாம் முடிவுக்கு வந்து விட்டது. கைதிகள் கலவரம் செய்வதற்கு முன் எப்படி இருந்ததோ அதே நிலைமைக்கு வந்து விட்டது. வான் ஸ்சோன்வர்ட்ஸ் மேல் இன்னும் கூடுதல் கவனம் பதிக்க வேண்டி இருந்தது. நாங்கள் இங்கு சண்டை போட்டுக் கொண்டிருக்கும் வேளையில் கேயர் முழுவதும் மூழ்கி விட்டது. ஓல்சன் வெடிக்கண்ணியை அனுப்பிய போது அவர்கள் கீழிறக்கிய ஒற்றைப் படகை உயிர் பிழைத்தவர்களுக்காக விட்டுவிட்டு நாங்கள் வடக்கு நோக்கிச் செல்ல ஆரம்பித்தோம். அந்தப் பரிதாபமான சைத்தான்கள் கரை சேரும் வரை பிழைத்திருக்கப் போவதில்லை. ஒரு வேளை தப்பிப் பிழைத்தாலும் கரையில் கடுங்குளிரில் விறைக்கப் போவது உறுதி. ஆனால் அவர்களை எனது கப்பலில் நிச்சயமாக ஏற்ற மாட்டேன். ஏனெனில் எங்களிடம் இருக்கும் ஜெர்மானியர்களே போதும். அன்று சாயந்திரம் அந்தப் பெண் மேல் தளத்திற்குச் செல்ல அனுமதி கேட்டாள். கீழே அடைத்து வைக்கப்பட்டது போல் இருக்கிறது என்றாள். நான் உடனே அனுதித்தேன். என்னால் அவளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவளிடம் பேசும் வாய்ப்பு திரும்பவும் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்தேன். அவள் மனதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் நான் அவளைப் பின் தொடர்ந்து ஏணியில் ஏற ஆரம்பித்தேன். அன்றைய இரவு தெளிவாக குளிராக அழகாக இருந்தது. கடல் அமைதியாக இருந்தது. கப்பலின் முகப்பில் கடல் நீர் நுரைத்துக் கொண்டிருந்தது. கப்பலின் பின் புறத்தில் இருந்து முற்செலுத்திகள் கடல் நீரில் பரப்பிக் கொண்டிருந்த அலைகள் ஒரு பெரிய ஆங்கில எழுத்தான v போல் இருந்தது. பென்சன் கோபுரத்தில் இருந்தான். நாங்கள் சான் டியாகோ நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். எல்லாம் சரியாக இருந்தது. லிஸ் ஒரு கனமான போர்வையைத் தனது மெல்லிய தேகத்தில் போர்த்தி இருந்தாள். நான் அவளை நெருங்கியதும் திரும்பி என்னைப் பார்த்தவள் உடனே விலகிச் சென்றாள். “நான் உனக்கு நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன்” என்றேன். “உன் வீரத்திற்கும் விசுவாசத்திற்கும். எல்லாம் அற்புதம். நான் உன்னை சந்தேகித்ததாக நீ நினைத்ததற்குக் காரணம் இருக்கிறது என்று அறிந்து நான் வருத்தப்பட்டேன்.” “நீ என்னை சந்தேகப் பட்டாய்.” அவள் உறுதியாக பதில் சொன்னாள். “பாரன் வான் ஸ்சோன்வர்ட்ஸிற்கு உடந்தையாய் இருந்ததாக என்னைக் குற்றம் சாட்டினாய். இதை என்றும் மன்னிக்க மாட்டேன்” அவளது வார்த்தையிலும் தொனியிலும் ஒரு தெளிவான முடிவு இருந்ததைக் கவனிக்க முடிந்தது. “என்னால் நம்ப முடியவில்லை.” என்றேன். “எனது கூட்டாளிகள் இருவர் நீ வான் ஸ்சோன்வர்ட்ஸை இரண்டு இரவுகள் சந்தித்ததாக சொன்னார்கள். அதை அடுத்த இரண்டு காலைகளிலும் பெரிய சேதங்கள் ஏற்பட்டன. நான் உன்னை சந்தேகிக்க விரும்பவில்லை. ஆனால் எனக்கு பெரிய பொறுப்பு இருக்கிறது. என் மாலுமிகள் உயிர் இந்தக் கப்பலின் பாதுகாப்பு, என் உயிர் உன் உயிர் எல்லாம் என் கைகளில்தான் இருக்கிறது. நான் உன்னை கவனித்தாக வேண்டி இருந்தது. நீ செய்த பைத்தியக்காரத்தனங்களுக்கு எதிராக உன்னை கவனிக்க ஆள் ஏற்பாடு செய்ய வேண்டியதாய்ப் போயிற்று.” அவளது கரிய பெரிய வட்ட வடிவமான கண்களை வைத்து என்னைப் பார்த்தாள். “யார் உன்னிடம் சொன்னது நான் வான் ஸ்சோன்வர்ட்ஸைப் பார்த்ததாக.” என்று கேட்டாள். “அதை என்னால் சொல்ல முடியாது லிஸ். ஆனால் இரண்டு பேர் தனித்தனியாக என்னிடம் சொன்னார்கள்.” “அவர்கள் இருவரும் பொய் சொல்லி இருக்கிறார்கள்.” என்று கோபப்படாமல் பொறுமையாகச் சொன்னாள். “முதன் முதலில் இந்தக் கப்பலில் ஏறும் போது உன் முன்னிலையில் மட்டுமே அவனிடம் பேசினேன். வேறு எப்போதும் அவனிடம் பேசியதே இல்லை. பின் இன்னொரு விஷயத்தையும் ஞாபகம் வைத்துக் கொள். என்னைக் கூப்பிடும் போது மற்றவர் போல் செல்வி லா ர்யூ என்றுதான் கூப்பிட வேண்டும்” முற்றிலும் எதிர்பாராத நேரத்தில் யாராவது உங்கள் மூஞ்சியில் அறைந்திருக்கிறார்களா? இல்லையா? பின் நான் அப்போது என்ன உணர்ச்சியில் இருந்தேன் என்று உங்களுக்குப் புரியாது. எனக்குள் கொதிக்கும் ரத்தத்துடன் தசைகள் மேல் எழுந்து கன்னங்கள் தடவிக் காதுகளில் பாய்ந்து உச்சி மண்டையில் கிர்ரென்று சிதறடித்தது. அதனால் அவள் மேல் காதல் இன்னும் அதிகமாயிற்று. உள்ளுக்குள் ஆயிரம் முறை ஓதிக் கொண்டேன். அவளை நான் ஜெயித்தே ஆக வேண்டும் என்று. 1916 ஆம் ஆண்டு ஜூலை இறுதியில் கப்பல் செய்தியில் ஒன்று தென்பட்டது. ஜூன் மாதத்தில் ஜெர்மன் போர்க் கப்பலால் மூழ்கடிக்கப்பட்ட பால்மன், ரியோ டீ ஜெனிரோ, என்ற கப்பலில் இருந்து ஒரே ஒருவர் உயிர் தப்பிக் கரை ஒதுங்கினார் என்றும் அவர் எதுவும் சொல்லாமலேயே இறந்து விட்டார் என்றும் அந்தச் செய்தி சொல்லியது. அத்தியாயம் : ௪ வஞ்சகன் பிடிபட்டான் அதே வழியிலேயே வெகு நாட்களாகப் பயணித்துக் கொண்டிருந்தோம். நான் உடைந்த கோணமாணியை வைத்து எங்கள் இடத்தை அறிய முயற்சி செய்து கொண்டிருந்தேன். அது கொடுக்கும் முடிவுகள் நம்பத் தகுந்ததாக எப்போதும் இருந்ததில்லை. உறுதியாக நாங்கள் வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்று தெரிந்தாலும் அது மேற்கு நோக்கியே காட்டிக் கொண்டிருந்தது. நான் அதை நொந்து கொண்டிருந்தேன். பின் ஒரு நாள் மத்தியானம் அந்தப் பெண் வந்தாள். “மன்னிக்கவும்.” என்று சொன்னவள் “நானாக இருந்தால் இந்த பென்சன் மேல் ஒரு கண் வைத்திருப்பேன். அதுவும் அவன் பணி முறை வரும்போது.” என்றாள். என்ன சொல்ல வருகிறாய் என்று கேட்டேன். வான் ஸ்சோன்வர்ட்ஸின் தூண்டுதலால் நான் பெரிதும் நம்பும் ஒருவனைச் சந்தேகிக்கிறாளோ என்று தோன்றியது. பென்சன் பணி செய்ய ஆரம்பித்த அரை மணி நேரத்தில் கப்பல் செல்லும் திசையை கவனித்தால் உங்களுக்கே நான் சொல்ல வந்தது புரியும். அவன் ஏன் எப்போதும் இரவு நேரப் பணியை மட்டுமே தேர்ந்தெடுக்கிறான் என்பதும் உங்களுக்கு புரியும். மேலும் கப்பலில் நடந்த வேறு விஷயங்களுக்கான காரணங்களும் உங்களுக்குத் தெரிய வரலாம்." என்றாள். அதன் பின் அவள் தன் அறைக்குச் சென்று விட்டாள் எங்கள் உரையாடலுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்து விட்டு. பென்சன் தன் வேலையை ஆரம்பித்த அரை மணி நேரம் வரை நான் பொறுமையாகக் காத்திருந்தேன். அதன் பின் மேல் தளத்தை அடைந்தேன். முறை கோபுரத்தைக் கடந்து செல்லும் போது அவன் திசைகாட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அது வடக்கில் சிறிது மேற்குப் பக்கம் வளைந்து காட்டியது. வடக்கில் இருந்து ஒரு புள்ளி மேற்கு நோக்கிக் காட்டியது. அதுதான் நாங்கள் செல்ல வேண்டிய வழி. சரியாகத்தான் இருந்தது. தவறுதலாக ஏதும் இல்லை என்று பார்த்ததும் எனக்கு பெரும் நிம்மதியாக இருந்தது. ஆனால் அவள் சொன்னதை எண்ணி மிகவும் கவலைப் பட்டிருந்தேன். நான் என் அறைக்குச் செல்ல எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் ஒரு சிறிய சிந்தனை என் மனதில் தோன்றியது. அதனால் என் எண்ணத்தை மாற்ற எத்தணிக்கும் அந்த வேளை என்னை மரணப் படுக்கைக்குப் பக்கத்தில் அழைத்துச் சென்று விட்டது. முறை கோபுரத்தில் இருந்து கிளம்பிய அரை மணி நேரத்தில் கடல் நீர் கப்பலின் முன் புறத்தின் இடது பாகத்தில் விழுந்து நொறுங்கியது. அதே போல் வலது பக்கமும் கடல் இவ்வளவு பெரிதாக வந்து மோதுவதற்கு வாய்ப்பே இல்லை. காற்று சட்டென்று தடம் மாறும். அதற்காக இப்படி நீளமாக கனமாகவா. இதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும். நான் கோபுரத்தில் இருந்து திரும்பியதும் கப்பல் 8 புள்ளிகளாவது திருப்பப் பட்டிருக்க வேண்டும். நான் உடனே திரும்பி கோபுரத்திற்குச் செல்ல ஆரம்பித்தேன். ஆகாயத்தைப் பார்த்த மறு நொடியே எனக்குப் புரிந்து விட்டது. எனக்கு நேராக இருக்க வேண்டிய விண் மீன்கள் எல்லாம் வலது பக்கம் இருந்தன. நாங்கள் மேற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். ஒரு கணம் அங்கு நான் நின்று கொண்டிருந்தேன் எனது கணக்கு சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதற்காக. பென்சனைக் குற்றவாளி என்று சொல்வதற்கு முன் நாம் சொல்வது மிகச் சரியாக இருக்க வேண்டும். ஆனால் இறுதியாக நான் உறுதி செய்ய நினைத்தது எனது மரணம்தான் என்று எனக்கு அப்போது தெரியவில்லை. ஆனால் அதிலிருந்து எப்படித் தப்பித்தேன் என்று இன்னும் எனக்கு விளங்கவில்லை. முறை கோபுரத்தின் விளிம்பில் நான் நின்று கொண்டிருக்கும் போது ஒரு கனமான கை தோள்பட்டையில் அழுத்தி என்னை உள்ளே தள்ளியது. கோபுரத்தைத் தாண்டிய முக்கோண வடிவிலான அந்த மேல் தளத்தில் விழுந்த நான் எளிதாக என் கால்களை உடைத்திருப்பேன். இல்லையேல் வழுக்கிக் கடலில் விழுந்திருப்பேன். ஆனால் விதி என் பக்கமிருந்தது. எனக்கு லேசான சிராய்ப்புதான். நான் எழுந்து நிற்கும் போது கோபுரத்தின் கதவு அறைந்து சாத்தப்பட்டது. தளத்தில் இருந்து கோபுரத்திற்கு ஒரு ஏணி இருந்தது. அதில் ஏறி வேக வேகமாக கோபுரத்தை நோக்கி வந்தேன். ஆனால் பென்சன் அதற்கு முன் கதவை அழுத்தமாகப் பூட்டி விட்டான். ஒரு கணம் முட்டாளைப் போல பீதியில் உறைந்து நின்றேன். அவன் ஏன் அப்படிச் செய்தான். கீழே என்ன நடந்து கொண்டிருக்கிறது. பென்சன் ஒரு துரோகி என்றால் வேறு சிலரும் அவனுடன் இருக்கக் கூடும். அவர்களை இதுவரை அறியாமல் எப்படி நான் இருந்தேன். என் தவறுக்காக என்னையே நான் கடிந்து கொண்டேன். மேல் தளத்திற்குத் தனியாக வந்து மாட்டிக் கொண்டதற்காக. பின் இந்த சிந்தனை மற்றோரு பயங்கரமான கேள்வி எழுப்பியது. உண்மையில் இதற்குப் பின்னால் இருப்பவன் யார். கலத்திற்குள் இருப்பவர்களின் கவனத்தைப் பெறுவதற்கு ஏணியில் இருந்து வேகமாக இறங்கி வந்தேன். கோபுரத்தின் இரும்புச் சாளரத்தின் கதவுகளும் இழுத்து மூடப்பட்டிருந்தன. இப்படி ஒரு முட்டாள் போல் வந்து தேடியதை எண்ணி என்னை நானே சபித்துக் கொண்டு அப்படியே கோபுரத்தின் மீது முதுகை வைத்துச் சாய்ந்து கொண்டேன். நான் கப்பலின் முன் புறத்தைப் பார்த்தேன். கடல் கனமாகிக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு அலையும் கீழ் தளத்தை முழுவதும் நனைத்தது. ஒரு கணம் அதை நான் பார்த்தேன். பின் என் உடல் முழுவதும் திடீரென்று குளிரால் நடுங்கியது. என் நனைந்த உடைகளோ என் முகத்தில் அறையும் அலைகளோ அதற்குக் காரணம் அல்ல. மரணத்தின் பிடி என் இதயத்தை இறுக்கியதால் ஏற்பட்ட நடுக்கம் அது. அந்த ஒரு நொடியில் வாழ்க்கைப் பாதையின் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கடவுளை மிக அருகில் கண்டது போல் இருந்தது. ஆம் கப்பல் மெதுவாக மூழ்கடிக்கப் பட்டுக் கொண்டிருந்தது. அப்போது தோன்றிய என் எண்ணங்களை எழுத்தில் வடிப்பது நிச்சயம் கடினம். கிட்டத்தட்ட முடியாது என்றும் சொல்லலாம். ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் நிச்சயம் நினைவில் இருந்தது. நான் அப்போது சிரிக்க ஆரம்பித்தேன். பைத்தியம் பிடிக்கவில்லை. சாதித்த வீரனாகவும் எண்ணிக் கொள்ளவில்லை. எனக்குப் புகைக்க வேண்டும் போல் தோன்றியது. கடவுளே. நான் எப்படிப் புகைக்க நினைத்தேன். அந்தக் கேள்வியே அபத்தமாய்த் தோன்றியது. நான் நின்றிருந்த அந்தச் சிறிய மேடை முழுகியபோது நான் கவனித்துக் கொண்டிருந்தேன். உடனே நான் திரும்பவும் கோபுரத்தில் ஏற முயற்சி செய்தேன். மிக மெதுவாக மூழ்குவதை பார்க்கும் போது பென்சன் இதைத் தனியாகவே செய்வது போல் தோன்றுகிறது. தொட்டியில் நீர் தானாக நிறைக்க விட்டுள்ளான். சுக்கான்களைப் பயன்படுத்தவில்லை. கப்பல் இயந்திரத்தின் துடிப்பு நின்று மின் இயக்கியின் சீரான அதிர்வு ஆரம்பித்தது. முறை கோபுரத்தைப் பாதியளவு தண்ணீர் மூழ்கடித்து விட்டது. எனக்கு இன்னும் கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் மட்டுமே இருக்கும். நீர் என்னை இழுத்துச் செல்லும் போது என்ன செய்ய வேண்டும் என்று எண்ணிப் பார்க்க ஆரம்பித்தேன். என் உடலின் ஆற்றல் தீரும் வரை நீந்திக் கொண்டே இருப்பதா. இல்லையேல் மூழ்கடித்தவுடனே விட்டுக் கொடுத்து என் வேதனையை நீக்கி விடுவதா. கீழிருந்து மழுங்கடிக்கப்பட்ட இரண்டு சத்தங்கள் கேட்டது. துப்பாக்கி வெடிக்கும் சப்தங்கள் போல் அவை இருந்தன. பென்சனை யாரும் எதிர்த்து நிற்கிறார்களோ? இருந்தாலும் அதனால் எனக்கு எந்த ஒரு நன்மையும் இல்லை. எதிரியை என் அணியினர் வீழ்த்தி விட்டாலும் என் கதி அவர்களுக்குத் தெரிவதற்குள் நான் உயிரோடு இருக்க மாட்டேன். கோபுரத்தின் நுனியும் இப்போது மூழ்கி விட்டது. பின் தந்திக் கம்பத்தைப் பிடித்துக் கொண்டேன். அப்போது ஏற்பட்ட பேரலை என்னை முழுவதும் மூழ்கடித்தது. முடிவு நெருங்கி விட்டதென்று உறுதியாகத் தெரிந்து விட்டது. அப்போது அனிச்சையாய் நான் ஒரு காரியம் செய்தேன். சிறு வயது முதல் செய்யாத ஒரு காரியம். கடவுளைக் கும்பிட ஆரம்பித்தேன். அதன் பின் கொஞ்சம் ஆசுவாசமானேன். நான் அதைக் கட்டியபடியே இருந்தேன். இப்போது நீர் அதற்கு மேல் செல்லவில்லை. அதற்கு மாறாக விலகிச் சென்றது. கோபுர உச்சி இப்போது பெரிய அலையின் உச்சி கூடத் தொட முடியாத உயரம் சென்றது. கப்பலின் முக்கோண மேடை தெரிய ஆரம்பித்தது. உள்ளே என்னதான் நடந்தது. என் கதை முடிந்தது என்று பென்சன் அதற்குள் நினைத்து விட்டானா? இல்லை. அவனையும் அவனது கூட்டாளிகளையும் எங்கள் ஆட்கள் பிடித்து விட்டனரா? கடலில் கரையக் காத்திருக்கும்போது நான் அனுபவித்ததை விட இந்த மர்மம் என்னை மிகவும் அரித்தது. முதலில் கப்பலின் முக்கிய தளம் தெரிந்தது. அதன் பின் கோபுர வாசல் திறந்தது. அங்கே ப்ராட்லியின் முகமும் அந்தப் பெண்ணின் முகமும் தெரிந்தது. என்னைப் பார்த்ததும் அவன் முகத்தில் நிம்மதி படர்ந்தது. “கடவுளுக்கு நன்றி சொல். மகனே.” என்று சொல்லிக் கொண்டே என்னை இழுத்து உள்ளே போட்டான். என் உடல் முழுவதும் குளிர்ச்சி அடைந்து மரத்துப் போய் இருந்தது. உள்ளே வந்ததே பெரிய சந்தோசமாய் இருந்தது. இன்னும் சில மணித்துளிகளில் என் வாழ்வு முடிந்திருக்கும். உள்ளே வந்தவுடன் அந்தக் கதகதப்பில் என்னை உயிர்ப்பித்துக் கொண்டிருந்தேன். ப்ராட்லி கொடுத்த பிராந்தி என் தொண்டையில் இறங்கி உடம்பைச் சூடாக்கியது. அந்த பிராந்தி ஒரு சடலத்தையே உயிர்ப்பித்து இருக்கும். மைய வழியில் இறங்கிக் கீழே சென்ற போது ஜெர்மானியர்கள் எல்லாம் ஒரு வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். எங்கள் அணியின் இருவர் கைகளில் துப்பாக்கியோடு நின்றிருந்தார்கள். வான் ஸ்சோன்வர்ட்ஸும் அதில் இருந்தான். பென்சன் கீழே விழுந்து கிடந்தான் முனகிக் கொண்டு. அவன் அருகில் அந்தப் பெண் கையில் துப்பாக்கியோடு நின்று கொண்டிருந்தாள். நான் ஆச்சர்யத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன். “இங்கே என்ன நடந்தது. சொல்.” என்று கேட்டேன். ப்ராட்லி அதற்கு பதில் அளித்தான். “நாடகத்தின் முடிவை நீங்களே பார்க்கிறீர்கள் சார்.” என்றான். “செல்வி லா ர்யூ இல்லாவிட்டால் இது வேறு மாதிரி இருந்திருக்கும். நாங்கள் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தோம். பென்சன் சாயந்திரம் சீக்கிரமே பணிக்கு வந்து விட்டான். அவனைக் கண்காணிக்க யாரும் இல்லை செல்வி லா ர்யூவைத் தவிர. அவள் கப்பல் மூழ்குவதை உணர்ந்து அதன் காரணத்தைத் தெரிந்து கொள்ள அறையில் இருந்து வெளியே வந்தாள். பென்சன் தொட்டியில் நீர் விடும் சுக்கான்களுக்கு அருகில் இருக்கும் நேரத்தில் சரியாக அவனைப் பார்த்தாள். அவளைப் பார்த்ததும் அவன் துப்பாக்கியை எடுத்து நேரடியாகச் சுட்டான். அவன் குறி தப்பியது. ஆனால் அவள் சுடும்போது தப்பவில்லை. அந்த இரண்டு குண்டு சத்தங்கள் எல்லோரையும் எழுப்பி விட்டன. நமது ஆட்கள் துப்பாக்கி வைத்திருந்ததால் முடிவு இதோ உங்களுக்கே தெரிந்ததுதான். செல்வி லா ர்யூ இல்லாவிட்டால் எல்லாம் தலை கீழாக மாறி இருக்கும். அவள்தான் நீர்த் தொட்டியை மூடி விட்டு ஓல்சனையும் என்னையும் எழுப்பி எக்கியை ஓட்டி விட்டுத் தொட்டியைக் காலி செய்ய வைத்தாள்.” அவளது சூழ்ச்சியினால்தான் நான் மேல் தளத்திற்குச் சென்று என் விதியைத் தேடிக் கொண்டதாக அல்லவா நினைத்திருந்தேன். நான் அவள் முன் மண்டியிட்டு என்னை மன்னித்து விடு என்று கெஞ்சி இருப்பேன் நான் ஒரு ஆங்கிலேயனாக இல்லாமல் இருந்திருந்தால். அப்படி இல்லை என்பதால் என் நனைந்த தொப்பியைக் கழற்றித் தலையைக் குனிந்து பாராட்டுக்களை முணுமுணுத்தேன். அவள் ஒன்றுமே சொல்லாமல் அவள் அறைக்கு வேகமாகச் சென்று விட்டாள். நான் கேட்டது சரியானதுதானா? அந்த யூ 33 இன் குறுகிய பாதையில் தவழ்ந்து வந்து என் காதுகளில் விழுந்தது விசும்பல் சத்தம்தானா? பென்சன் அன்றிரவு இறந்து விட்டான். அவன் இறுதி வரை அழுத்தமாகவே இருந்தான். ஆனால் இறப்பதற்குச் சற்று முன் என்னிடம் எதோ சொல்ல வேண்டும் என்பது போல் சைகை செய்தான். நான் குனிந்து அவன் மெதுவாகக் கிசுகிசுத்த வார்த்தைகளைக் கேட்டேன். “நான் தனியாகத்தான் செய்தேன்.” என்று ஆரம்பித்தான். “எனக்கு உன்னைப் பிடிக்காது. அதனால்தான் இதைச் செய்தேன். உங்கள் இனத்தையே நான் வெறுக்கிறேன். சாண்டா மாநகாவில் உள்ள உங்கள் கப்பல் கட்டும் துறையில் இருந்து என்னை விரட்டி விட்டார்கள். கலிஃபோர்னியாவில் இருந்தே என்னைத் தூக்கி விட்டார்கள். நான் ஒரு ஜெர்மன் ஒற்றனாக மாறினேன். எனக்கு அவர்களைப் பிடிக்கும் என்பதால் அல்ல. அவர்களையும் எனக்குப் பிடிக்காது. ஆனால் நான் அமெரிக்கர்களை அழிக்க நினைத்தேன். அவர்களைத்தான் அதிகம் வெறுக்கிறேன். தந்திக் கருவியைக் கடலில் தூக்கிப் போட்டேன். காலம் காட்டி கோணமாணி இரண்டையும் நான்தான் உடைத்தேன். திசை காட்டும் கருவியையும் என் ஆசைப்படி வளைக்க ஒரு திட்டம் தீட்டினேன். வான் ஸ்சோன்வர்ட்ஸை அந்தப் பெண் பார்த்துப் பேசியதாக வில்சனிடம் சொன்னேன். அவனே அதைப் பார்த்ததாக அந்த மடையனையும் நம்ப வைத்தேன். என் திட்டங்கள் எல்லாம் தோல்வி அடைந்து விட்டன. இருந்தாலும் உன்னை நான் வெறுக்கிறேன்.” அதன் பின்னும் அரை மணி நேரம் வரை அவன் சாகவில்லை. அதன் பின் அவன் பேசவும் இல்லை, சத்தமாக. அவனைப் படைத்தவனைச் சந்திக்கச் செல்வதற்குச் சில வினாடிகளுக்கு முன் அவன் உதடுகள் அசைந்தன. மெலிதான முனகலில் சில வார்த்தைகள் விழுந்தன. “என்னை உறங்க விடுங்கள்.” அவ்வளவுதான். பென்சன் இறந்து விட்டான். அவனைத் தூக்கிக் கடலில் போட்டு விட்டோம். புதிய நிலம் அன்றைய இரவின் காற்று மிக மோசமான வானிலையை அறிவித்தது. கார் மேகங்கள் சூழ்ந்தது. வெகு நாட்களாக அவைகள் போகவே இல்லை. நாங்கள் எந்தப் பாதையில் பயணிக்கிறோம் என்பது தெரியவில்லை. திசைகாட்டியை முழுவதும் நம்ப முடியாமல் போனதால் எப்படிக் கண்டுபிடிப்பதென்றே தெரியவில்லை. பென்சன் அதில் என்ன செய்தான் என்றும் தெரியவில்லை. அதனால் அடுத்துக் கதிரவன் எழும் வரை எங்காவது ஊர்ந்து செல்வதென்று முடிவெடுத்தோம். அந்த நாளையும் அது கொடுத்த ஆச்சர்யங்களையும் என்றும் மறக்க முடியாது. பெருவின் கடற்கரையின் அருகில் இருப்பதாகக் கணக்கிட்டோம் இல்லை உத்தேசமாக எண்ணினோம். கிழக்கில் இருந்து வந்த காற்று திடீரென்று திசை மாறித் தெற்கு நோக்கி வீசியது. அப்போது முகத்தில் குளிர்ந்த காற்று அறைந்தது. “பெரு” என்று கத்தினான் ஓல்சன். “பெருவில் எப்போது நீ பனிமலையை முகர்ந்திருக்கிறாய்?” “பனிமலையா? அப்படி ஒன்றும் இங்கு தெரியவில்லையே” என்று ஒருவன் சொன்னான். “ஏன். வடக்கில் பதினான்கு புள்ளிகளில் இந்தக் கடலிலா?” என்று அதிசயித்தான். “அப்படி என்றால் நாம் தெற்கில் பதினான்கில் இருக்கலாம்.” என்றான் ஓல்சன். அவன் அதிகப்படியாகப் பேசுகிறான் என்று நினைத்தோம். ஆனால் அப்படித் தெரியவில்லை. அன்று மத்தியானம் தெற்கில் ஒரு பெரிய பனிமலையைப் பார்த்தோம். சில நாட்கள் வடக்கு நோக்கியே சென்று கொண்டிருப்பதாக நாங்கள் நினைத்தோம். ஆனால் ஏமாந்துதான் போனோம். மறுநாள் காலை ஒரு மெலிதான இன்ப அதிர்ச்சி கிடைத்தது. “நிலம் தெரிகிறது. வட மேற்கில் இருந்து வடக்கிற்குள்” என்று கோபுரத்தில் இருந்த திறந்திருந்த மைய வாயில் வழியாக. நிலத்தைப் பார்க்க வேண்டும் என்றுதான் எல்லோரும் தவம் இருந்தோம். உறுதியாக நான் அப்படித்தான் இருந்தேன். ஆனால் கப்பலில் இருந்த மூன்று ஜெர்மானியர்கள் திடீரென்று உடல் நலமில்லாமல் ஆனவுடன் அந்த மகிழ்ச்சியும் உடனே கரைந்து விட்டது. கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் மூவரும் வாந்தி எடுக்க ஆரம்பித்தனர். என்ன நடந்ததென்று அவர்களுக்கும் தெரியவில்லை. அவர்கள் என்ன சாப்பிட்டார்கள் என்று நான் கேட்டேன். எல்லோருக்கும் சமைக்கப்பட்ட உணவைத் தவிர எதுவும் இல்லை என்றார்கள். “எதாவது குடித்தீர்களா” என்று கேட்டேன். ஏனெனில் அங்கு மது புட்டிகள் இருந்தன சில மருந்துகளும் இருந்தன. “தண்ணீர் மட்டும்தான்” என்று ஒருவன் முனகினான். “நாங்கள் மூவரும் இன்று காலை ஒரே நேரத்தில் தண்ணீர் குடித்தோம். புதிதாக ஒரு தொட்டியைத் திறந்தோம். அதுதான் காரணம் என்று நினைக்கிறேன்” நான் உடனே அதை ஆராய ஆரம்பித்தேன். அதைப் பார்த்ததும் திகிலான ஒரு உண்மை தெரிய ஆரம்பித்தது. யாரோ ஒருவன், பென்சனாக இருக்கலாம், கப்பலில் இருக்கும் அனைத்து நீரிலும் நஞ்சு கலந்திருக்கிறான். கரை வந்திருக்காவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும். கரையைப் பார்த்தவுடன் எங்களுக்கு நம்பிக்கை துளிர் விட ஆரம்பித்தது. நாங்கள் பாதையைத் திருப்பினோம். செங்குத்தான குன்று போல் இருந்த அந்த நிலத்தை நோக்கி நாங்கள் வேகமாக சென்று கொண்டிருந்தோம். கப்பலின் இரு புறமும் பனி மூட்டத்திற்கு நடுவில் கடலுக்குள் இருந்து எழும்பிய செங்குத்தான பாறைகள் தோன்றி மறைந்தன. எங்களுக்கு முன் தெரிகின்ற இந்த நிலம் ஒரு பெரிய கண்டமாக இருக்க வேண்டும். அதனுடைய கரை அவ்வளவு பெரிதாக இருந்தது. அருகில் இருக்கும் மேற்கு நில பரப்பான ஆஸ்திரேலியா நியூஸிலாந்தில் இருந்து குறைந்த பட்சம் ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் இருப்போம் என்பது மட்டும் நிச்சயம். எங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டோம் உடைந்த கருவிகளையும் சேர்த்து. விளக்கப் படத்தில் தேடினோம். மண்டையைப் போட்டு உடைத்தோம். இறுதியாக ப்ராட்லி ஒரு யோசனை சொன்னான். கோபுரத்தில் இருந்து திசை காட்டும் கருவியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அவன் என்னைக் கூப்பிட்டு அதைக் காட்டினான். அதன் முள் நேராக அந்த நிலப்பரப்பைக் காட்டியது. ப்ராட்லி சுக்கானை வலது புறமாகத் திருப்பினான். யூ33 உடனே அதற்குக் கட்டுப்பட்டுத் திரும்பியது. ஆனால் திசை காட்டும் கருவி அப்படியே நேராக நின்றது. “இதில் இருந்து என்ன தெரிகிறது” என்று கேட்டேன். “கேப்ரோனி பற்றி என்றாவது கேள்விப் பட்டு இருக்கிறீர்களா?” என்று கேட்டான். “பழைய இத்தாலிய மாலுமிதானே” என்றேன். "ஆம். அவரேதான். அவர் 1721 ஆம் ஆண்டு கடல் பயணத்தை ஆரம்பித்தார். அவர் காலத்து வரலாற்று ஆசிரியர்கள் கூட அவரைப் பற்றி அதிகமாகக் குறிப்பிடவில்லை. அவர் இத்தாலிக்குத் திரும்பி வரும்போது அரசியல் சூழல் அவருக்குச் சாதகமாக இல்லாததால் இருந்திருக்கலாம். அவரது கண்டுபிடிப்பைக் கேலி செய்வது அந்தக் கால வழக்கமாய் இருந்தது. அவரது புத்தகம் ஒன்றை, ஒன்றே ஒன்றுதான் என்று நினைக்கிறேன், படிக்க நேர்ந்தது. தென் கடல்களில் அவர் ஒரு கண்டத்தைப் பற்றிச் சொல்லி இருக்கிறார். ஒரு வினோதமான உலோகத்தால் ஆன ஒரு கண்டம் திசை காட்டும் கருவியைப் பற்றி இழுக்கக் கூடியது. பாறைகளால் சூழ்ந்த யாரும் வசிக்க முடியாத துறை முகமோ கடற்கரையோ இல்லாத ஒரு கண்டம். நூற்றுக்கணக்கான மைல் தொலைவு நீண்டது. அவரால் அங்கு கப்பலை நிறுத்தவே முடியவில்லை. அங்கிருந்த பல நாட்களில் ஒரு உயிரினத்தையும் அவர் பார்க்கவில்லை. அதை அவர் கேப்ரோனா என்று பெயர் வைத்து விட்டுக் கிளம்பி விட்டார். இப்போது நாம் பார்த்துக் கொண்டிருப்பது கேப்ரோனா கடற்கரை தான். இதுவரை யாரும் தொடாத 200 வருடங்கள் மறந்த ஒரு நிலம். “நீ சொல்வது சரி என்றால், இரண்டு நாட்களாக நமது திசைகாட்டி ஏன் அப்படி வேலை செய்தது என்பது புரிகிறது. கேப்ரோனாதான் நம்மை அதனுடைய மரணப் பாறைகளுக்கு இழுத்து வந்திருக்கிறது. நாம் அதனுடைய சவாலை ஏற்றுக் கொள்வோம். கேப்ரோனாவில் தரை இறங்குவோம். இவ்வளவு பெரிய கரையில் நமக்குத் தோதான இடம் கட்டாயம் இருக்கும். அதைக் கண்டுபிடிப்போம். அதே போல் நமக்கு நீரும் தேவை. தண்ணீரைக் கண்டுபிடிக்கவிட்டால் நாம் இறந்து விடுவோம்.” அதனால் யாருமே இதுவரை கண்டிராத அந்தப் பெரு நிலப்பரப்பின் கரையை நோக்கி நாங்கள் சென்றோம். கடலின் ஆழத்தில் இருந்து செங்குத்தாக மலைகள் எழும்பி இருந்தன. பழுப்பு நீலம் பச்சை என்று பல வண்ணங்கள் சூழ்ந்திருந்தன. உலர்ந்த பாசிகள் செடிகள் தாமிரத்தின் துரு படர்ந்திருந்தன. எங்கு பார்த்தாலும் துருப் பிடித்த காவி நிறத்தில் இரும்பு கந்தகக்கற்கள் நிறைந்திருந்தன. அந்தப் பாறைகளின் நுனிகள் உடைந்து போய் இருந்தாலும் எல்லாம் ஒரே சம உயரத்தில் ஒரு சமவெளியின் எல்லைகள் போல் அமைந்திருந்தன. பாறைகளின் சரிவுகளில் அவ்வப்போது பசுமையான தாவரங்களையும் கண்டோம். அதையெல்லாம் காணும்போது கேப்ரோனாவின் கரைகள் மோசமானதாக இருந்தாலும் இங்கிருந்த காடுகள் உள்வாங்கி நிலப் பரப்பிற்குள் சென்று விட்டது போலிருந்தது. ஆனால் உவமானங்கள் எவ்வளவு கவித்துவமாக இருந்தாலும் அவை வறண்ட தொண்டையை நனைக்காது. கேப்ரோனாவின் அழகை வர்ணிக்க வேண்டுமென்றால் எங்களுக்குத் தண்ணீர் தேவை. அதனால் கரையை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தோம். நாங்கள் அருகே செல்லச் செல்ல ஆழம் தெரியாத பள்ளங்கள் தெரிந்தன. அதே செங்குத்துப் பாறைகள் எங்கும் வரவேற்றன. இருட்டிய நேரத்தில் கரையில் இருந்து சற்று ஒதுங்கியே கப்பலை நிறுத்தினோம். தண்ணீர் பற்றாக்குறை எங்களை இன்னும் முழுமையாகத் தாக்க ஆரம்பிக்கவில்லை. ஆனாலும் அதற்கு வெகு நேரம் ஆகி விடாது. அதனால் வானத்தின் முதல் வெளிச்சக் கீற்று தெரிய ஆரம்பித்தவுடனேயே நான் அந்த பயங்கரக் கரையை அளவெடுக்க ஆரம்பித்தேன் நம்பிக்கை இல்லாமல். நண்பகல் நேரத்தில் நாங்கள் முதன்முதலாய் ஒரு மணல்பரப்பைக் கண்டோம். அது ஒரு குறுகலான மணல் திட்டு. ஒரு மலையின் அடியில் இருந்தது. இதுவரை கண்ட மலைகளிலேயே சிறிதாக இருந்தது. அதன் அடியில் பாதி புதைந்த நிலையில் பெரிய பாறைகள் சிதறிக் கிடந்தன. ஏதோ ஒரு காலத்தில் கேப்ரோனாவின் தடுப்புச் சுவர்களை இயற்கை சூறையாடியதற்கான ஊமையான ஆதாரங்கள். வித்தியாசமான பொருள் ஒன்றை ப்ராட்லிதான் முதன் முதலில் காண்பித்தான் அந்தப் பாறையின் மேல் அலைகள் பின் வாங்கிய நேரத்தில். “ஒரு மனிதன் போன்று இருக்கிறது.” என்று சொல்லிவிட்டு இருவிழிநோக்காடியை என்னிடம் கொடுத்தான். நான் அதை நீண்ட நேரம் பார்த்து ஆராய்ந்து விட்டு உறுதியாக அது கிடத்தி வைக்கப்பட்ட ஒரு மனித உருவம்தான் என்று சொல்லி இருப்பேன். லா ர்யூவும் எங்கள் அருகிலேயே மேல் தளத்தில் இருந்தாள். நான் திரும்பி அவளைக் கீழே போகச் சொன்னேன். நான் சொன்னவுடன் மறு வார்த்தை சொல்லாமல் அப்படியே கீழே சென்று விட்டாள். நான் உடனே என் சட்டையைக் கழற்றினேன். நாப்ஸ் என்னைக் கேள்வி கேட்பது போல் பார்த்தது. அது என்னுடன் அலைகளில் விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டது. அதனால் மறக்காமல் என்னை உற்று நோக்கியது. “என்ன செய்யப் போகிறீர்கள். சார்.” என்று கேட்டான் ஓல்சன். “கடற்கரையில் இருக்கும் அந்தப் பொருள் என்னவென்று பார்க்க போகிறேன். அது மனிதனாய் இருந்தால் ஒன்று கேப்ரோனாவில் மனிதர்கள் இருக்கக் கூடும். இல்லையேல் யாருடைய கப்பலாவது கரை ஒதுங்கி இருக்க வேண்டும். அதன் உடையைப் பார்த்து ஒரு முடிவுக்கு வரலாம் என்று நினைக்கிறேன்” என்று பதில் அளித்தேன். “சுறா மீன்கள் இருக்காதா. எதற்கும் கத்தி ஒன்றை எடுத்துச் செல்லுங்கள்” என்றான். “இதோ பிடியுங்கள்” என்று ஒருவன் கத்தினான். அது ஒரு நீளமான மெலிதான கத்தி. அதை என் பற்களுக்கு நடுவில் எளிதாக வைத்துக் கொண்டு செல்லலாம் அதனால் அதை வாங்கிக் கொண்டேன். “கூர்ந்து கவனித்துக் கொண்டிரு” என்று ப்ராட்லியிடம் சொல்லிவிட்டுக் கடலில் குதித்து அந்தக் கரையை நோக்கி நீச்சல் அடிக்க ஆரம்பித்தேன். நான் விழுந்தவுடன் என் பின்னால் இன்னொரு சத்தம் உடனே கேட்டது. திரும்பிப் பார்த்தால் நம்பிக்கையான நாப்ஸ் ஒரு வீரனைப் போல் பின் தொடர்ந்தது. அலைகள் அவ்வளவு வேகமில்லை. அதே போல் கடல் நீரோட்டமும் அவ்வளவாக இல்லை. அதனால் எங்களால் எளிதாகக் கடக்க முடிந்தது. அந்தக் கரை முழுவதும் சிறு கூழாங்கற்கள் நிறைந்திருந்தன. அலைகள் அவைகளை வழவழப்பாக மாற்றி இருந்தன. மணல் மிகக் குறைவாகவே இருந்தது. கப்பலில் இருந்து பார்க்கும் போது எல்லாமே மணலாகத் தெரிந்தது. நண்டுகள் நத்தைகள் பொதுவாக எல்லாக் கடற்கரையிலும் இருக்கும். ஆனால் இங்கு அவைகள் தென்படவே இல்லை. கரை சின்னதாக இருப்பதாலும் சுற்றி இருக்கும் கடல் வெகு ஆழமானதாக இருப்பதாலும் கேப்ரோனா மிகத் தொலைவில் இருப்பதாலும் காரணமாய் இருக்கலாம். படுத்துக் கிடக்கும் அந்த உருவத்தை நானும் நாப்ஸும் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளை என் மூக்கை வைத்தே கண்டுபிடித்து விட்டேன். அது மனிதனோ இல்லை எதுவோ ஆனால் நிச்சயமாக ஒரு உயிரினம்தான். உயிரோடு இருந்தது. இப்போது செத்துக் கிடக்கிறது. நாப்ஸ் சிறிது நின்று முகர்ந்து உறும ஆரம்பித்தது. சிறிது நேரம் கழித்துச் சற்று உட்கார்ந்து வாயை மேலே தூக்கி வானத்தைப் பார்த்துப் பயங்கரமாக ஊளையிட ஆரம்பித்தது. நான் ஒரு சிறு கல்லை அதன் மேல் தூக்கிப் போட்டு அமைதியாக இரு என்று அதட்டினேன். அதனுடைய வினோதமான சத்தம் எனக்குக் கலவரமாய் இருந்தது. நான் அந்த உருவத்தின் அருகில் வந்து பார்த்த பின்னும் அது மனிதனா இல்லை மிருகமா என்று முடிவுக்கு வர முடியவில்லை. அந்தப் பிணம் வெகுவாக வீங்கி இருந்தது கொஞ்சம் சிதைந்தும் இருந்தது. அதன் உடம்பிலோ கீழோ உடை உடுத்தி இருந்ததற்கான எந்தவித அடையாளமும் இல்லை. சின்னதாய்ப் பழுப்பு நிறத்தில் முகத்தில் நெஞ்சில் வயிற்றில் முடிகள் இருந்தன. உள்ளங்கால்கள் கைகள் தோள்பட்டைகள் முதுகு வேறெங்கும் முடி இல்லை. அந்த உயிரினம் கிட்டத்தட்ட மனிதனின் உயரத்தில் இருந்தது. அதன் அமைப்புகளும் மனிதன் போலவே இருந்தன. ஆனால் அது மனிதன் தானா? என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. மனிதக் குரங்கு போலத்தான் இருந்தது. அதன் கால் விரல்கள் பக்கவாட்டில் நீட்டிக் கொண்டிருந்தன பிலிப்பைன்ஸ் நாட்டின் போர்னியோவில் உள்ள மரத்தில் வாழும் மனிதர்கள் போல். இதே போல் இன்னும் விலங்குகள் வேறு நாடுகளிலும் இருக்கின்றன. முக வெட்டைப் பார்க்கும் போது ஜாவாவின் மனிதக் குரங்கிற்கும் பில்டவுன் என்னும் புராதன சஸ்ஸேக்சில் இருந்த விலங்கிற்கும் பிறந்த குழந்தை போல் இருந்தது. அதன் அருகில் ஒரு மரத்தாலான வளைந்த தடி ஒன்று இருந்தது. அந்த விஷயம் என்னைச் சிந்திக்க வைத்தது. இங்கே சுற்றுப்புறத்தில் மரங்கள் எதுவும் இல்லை. சிதைந்த கப்பலும் எதுவுமில்லை. கடல் பிரயாணம் சென்று வந்த உயிரினம் என்று சொல்வதற்கு எந்தவிதமான அறிகுறிகளும் தென்படவில்லை. பரிணாமத்தில் மனிதனுக்குக் கீழே விலங்கினத்தின் மேலே இருக்கக் கூடிய ஒரு உயிரினத்தின் உடல்தான் அது. எப்படி இருந்தாலும் கடல் வழியே சென்றிருக்க வாய்ப்பில்லை. ஆக அது கேப்ரோனாவின் உயிரினம்தான் என்று முடிவுக்கு வந்தேன். உள்நாட்டில் இருந்து வந்து அந்தச் செங்குத்துப் பாறைகளில் இருந்து கீழே விழுந்திருக்கலாம். அப்படி இருந்தால் கேப்ரோனாவில் மனிதர்கள் இல்லாவிட்டாலும் ஏதோ உயிரினங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் எப்படி அந்தப் பகுதிக்குள் செல்வது. அதுதான் கேள்வி. இந்தச் செங்குத்துப் பாறைகளைப் பக்கத்தில் வந்து பார்த்தபின் எனக்கு ஒரு உண்மை தெளிவாகத் தெரிந்தது. எந்த ஒரு உயிருள்ள மனிதனும் இவ்வளவு பெரிய பாறைகளைத் தாண்டி வந்திருக்க முடியாது. விரல்களின் தடங்கள் எதுவும் இல்லை. ஒரு குழப்பத்தினுடனேயே நான் திரும்பி விட்டேன். கப்பலுக்கு திரும்பும் வேளையிலும் எங்களுக்கு சுறா மீன்கள் எதுவும் தென்படவில்லை. நான் கண்டவற்றை விளக்கியவுடன் எல்லோரும் தங்கள் அனுமானங்களையும் கதைகளையும் சொல்ல ஆரம்பித்தார்கள். ஆனாலும் புது நம்பிக்கையும் உறுதியும் கொடுத்தது இந்த ஆராய்ச்சி. நான் நினைத்தது போலவே அவர்களும் நினைத்தார்கள். முடிவு தெரிந்ததுதான். தண்ணீர் இல்லை. எங்களின் தாகம் இன்னும் அதிகமாகியது. மீதி நாளில் மிக நுணுக்கமாக அந்த ஆளில்லாத கரையை அலசிக் கொண்டிருந்தோம். வேறு எந்தவிதமான தடயமும் கிடைக்கவில்லை. கூழாங்கற்களுடன் கூடிய இன்னொரு மணல் திட்டு எதுவுமில்லை. கதிரவன் மறைந்த அந்த நேரத்தில் எங்கள் ஆர்வமும் மங்க தொடங்கின. அந்தப் பெண்ணிடம் பேச நினைத்தேன். அவள் பிடி கொடுக்கவேயில்லை. தாகம் ஒரு பிரச்சினை என்றால் என் இதயத்தை நொறுக்கி சோகமும் சேர்ந்தே வாட்டியது. அன்றைய தூங்கா இரவின் சாபத்தை மறு நாள் விடியல் நீக்கியது வெளிச்சம் பரப்பி. வழி கிடைத்தது காலையில் தேடியபோதும் நம்பிக்கை அளிப்பது போல் எதுவும் நடக்கவில்லை. கேப்ரோனாவிற்குள் நுழையவே முடியாது என்றே எல்லோரும் முடிவெடுத்தோம். இருந்தாலும் நாங்கள் விடவில்லை. மத்தியானம் அடித்த இரண்டு ஊதல் ஒலிக்கு பின் ப்ராட்லி என்னிடம் கடலைக் காண்பித்தான். அங்கே ஒரு மரத்தின் கிளை இலைகளுடன் மிதந்து கொண்டிருந்தது. அதை ஆற்று நீர் அடித்துக் கடலில் சேர்த்திருக்கலாம் என்று சொன்னான். “ஆம். அந்த செங்குத்துப் பாறைகளின் மேலிருந்து கடலில் விழுந்திருக்கலாம்.” என்றேன் நான். ப்ராட்லியின் முகம் சுருங்கி விட்டது. “நானும் அதை நினைத்தேன். இருந்தாலும் நான் சொன்னதை நம்பவே நினைக்கிறேன்” என்றான். “நீ சொல்வதுதான் சரி” என்று கத்தினேன். “ஒரு விஷயத்தை நிரூபிக்கும் வரை எதுவும் சொல்ல முடியாது. நாம் எந்தக் கோணத்தையும் விட்டு விட முடியாது. இது ஆற்று நீரில்தான் வந்தது. அந்த ஆறு எங்கே என்று கண்டுபிடிப்போம்” என்று ஒரு கை விரல்களை மடக்கிக் காற்றில் மெலிதாகக் குத்தினேன் உறுதியின் அடையாளமாக ஆனால் நம்பிக்கை இல்லாமல். “அங்கே பார்” என்று திடீரென்று கத்தினேன். கரைக்குப் பக்கத்தில் உள்ள ஒரு இடத்தைக் காண்பித்தேன். அங்கே சில பூக்கள் புற்கள் மற்றும் சிறு இலைகளுடன் கூடிய கிளையும் மிதந்து எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தன. நாங்கள் அந்தத் தண்ணீரையும் கடற்கரையையும் அளந்து கொண்டிருந்தோம். ப்ராட்லி இறுதியில் ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்தான். அல்லது அப்படி நம்பினான். ஒரு வாளியும் கயிறும் கேட்டான். வந்தவுடன் வாளியைக் கீழே இறக்கித் தண்ணீரை மொண்டான். அதைச் சுவைத்துப் பார்த்து நிமிர்ந்தவுடன் நேராக என் கண்களை நோக்கி மிகவும் மகிழ்ச்சியாகச் சொன்னான் “நான் அப்போதே சொன்னேனே” என்றான். “இந்தத் தண்ணீர் கொஞ்சம் வெதுவெதுப்பாகவும் புத்தம் புதியதாகவும் இருக்கிறது” என்றான். நானும் அதை வாங்கிக் குடித்துப் பார்த்தேன். மிகவும் வெதுவெதுப்பாகவும் புதிதாகவும் இருந்தது. அதே வேளை ஒரு கெட்ட சுவை இருந்தது. “நீ எப்போதாவது தலைப்பிரட்டைகள் நிரம்பிய குட்டையில் இருக்கும் தேங்கிய நீரைக் குடித்துப் பார்த்ததுண்டா” என்று ப்ராட்லி கேட்டான். “அதே தான்.” ஆச்சர்யத்தோடு கத்தினேன். “அதே சுவைதான். சின்ன வயதில் நான் அனுபவித்திருக்கிறேன். இருந்தாலும் ஓடக்கூடிய நீரோடையின் நீர் எப்படி இவ்வாறு இருக்க முடியும். ஆனால் எந்த பூதம் இவ்வளவு சூடாக்கியது. இந்தத் தண்ணீர் எப்படியும் 70, 80 பாரன்ஹீட் வெப்பமாவது இருக்கும் அல்லவா. அதைவிடக் கொஞ்சம் அதிகமாகக் கூட இருக்கும்.” “ஆம்.” என்று ஒத்துக் கொண்டான் ப்ராட்லி. “அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் எங்கிருந்து வருகிறது.” “இப்போது புரிந்து விட்டதால் அதையும் எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்.” என்று சொன்னேன். “கடலில் இருந்து வர வாய்ப்பில்லை. அதனால் நிலத்தில் இருந்துதான் வந்திருக்க வேண்டும். அதைப் பின் தொடர்ந்தால் போதும் நிச்சயம் கண்டுபிடித்து விடலாம்.” நாங்கள் ஏற்கெனவே கரைக்கு மிக அருகில்தான் கப்பலை நிறுத்தி இருந்தோம். இருந்தாலும் கப்பலின் முன் பகுதியை கரைப் பக்கம் திருப்பி நிறுத்துமாறு உத்தரவிட்டு மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தோம். போகும்போது தண்ணீரை எடுத்துச் சுவைத்துக் கொண்டே சென்றோம் அந்த நன்னீர் உற்பத்தி ஆகும் இடத்தை விட்டு வேறு வழியில் சென்று விடக்கூடாது என்ற ஆர்வத்தில். கடற்கரையில் ரொம்ப மிதமான காற்று வீசியது. எப்பொழுதாவது வேகம் எடுக்கும். கரையை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம் இருந்தும் இன்னும் தரை தட்டவே இல்லை. கரைக்கு அருகில்தான் இருந்தோம். ஆனாலும் கரையில் எந்தவிதமான பள்ளமும் இல்லை எதாவது ஒரு சின்ன ஊற்றாவது வருவதற்கு. கரையின் ஒரு 200 அடியில் இருந்தும் கூட கடல் நீரில் சுத்தமான குடி நீர் கலக்குமாறு ஒரு ஆற்றின் பெரிய முகவாய் இல்லை. அலை குறைந்து கொண்டே வந்தது. அத்துடன் சேர்த்து நன்னீர்ச் சுழலின் வேகம் நாங்கள் பாறைக்குச் செல்வதைத் தடுத்து இருக்கும் கப்பல் இயங்காமல் இருந்தால். நாங்கள் இருந்த இடத்தில் நிற்பதற்கே ரொம்பச் சிரமமாய் இருந்தது. ஒரு சுவருக்கு 25 அடிக்குப் பக்கத்தில் வந்து விட்டோம். அதற்கு ஒரு முடிவே இல்லாதது போல் நீண்டு கிடந்தது. நாங்கள் தண்ணீரையும் சுவரையும் பார்த்துக் கொண்டே வந்த போது ஓல்சன் சொன்னான் இந்தத் தண்ணீர் கடலுக்கடியில் இருக்கும் ஊற்றிலிருந்து வருகிறது என்று. அதனால்தான் சூடாக இருக்கிறது என்றான். அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரு புதர்ச் செடி அடர்த்தியான இலைகள் மற்றும் பூக்களுடன் வெளி வந்து கப்பலின் பின் புறத்திற்குச் சென்றது. “பூக்கள் பூக்கும் புதர்ச் செடிகள் நீருக்கடியில் இருக்கும் குகைகளில் இருக்கும் ஊற்றுக்கள் ஊறும் பகுதியில் முளைப்பதில்லை.” என்று ப்ராட்லி சொன்னான். ஓல்சன் தலையசைத்தான். “ரொம்ப ஆச்சர்யமாக இருக்கிறது” என்றான். “எனக்குப் புரிந்து விட்டது” என்று மகிழ்ச்சியாகக் கத்தினேன். “அங்கே பாருங்கள்.” என்று எங்களுக்கு நேராக இருந்த பாறையின் விளிம்பில் ஒரு இடத்தைக் காட்டினேன். நான் காட்டிய இடத்தை எல்லோரும் உற்று நோக்கினார்கள். அங்கே ஒரு கரிய பாறைத் திறப்பில் இருந்து கடலுக்குள் நீர் கொட்டிக் கொண்டிருந்தது. “நிலத்தில் இருக்கும் ஆற்றின் புதையுண்ட ஒரு நீரோட்டம்.” என்று கத்தினேன். அது செடி கொடிகள் வளர்ந்த நிலப்பரப்பின் மீது பாய்கிறது. ஆக அங்கே கதிரவன் ஆசி பெற்ற ஒரு நிலப்பரப்பு இருக்கிறது. எந்தவொரு பூமிக்கடியில் இருக்கும் குகையும் நாம் பார்த்தது போன்ற தாவரங்களை வளர்க்காது. இந்தப் பாறைகளின் பின் ஒரு வளமான நிலம் நிச்சயம் இருக்கிறது தண்ணீரும் இருக்கலாம்." “ஆம். சார்.” என்றான் ஓல்சன். “நீங்கள் ஒரு உண்மையைச் சொல்லி இருக்கிறீர்கள். பாறையின் பின்னால் என்று” ப்ராட்லி சிரித்தான் வருத்தத்தோடு. “நீங்கள் இன்னொரு விஷயத்தையும் கூட சொல்லலாம். அறிவியல் செவ்வாய் கிரகத்தில் கூட தண்ணீரும் தாவரங்களும் இருப்பதாகச் சொல்கிறது.” “நிச்சயம் இல்லை.” என்று திரும்பவும் நான் சேர்ந்து கொண்டேன். “இந்த யு33 கப்பல் வானத்தில் செல்வதற்கு உருவாக்கப்படவில்லை. நிச்சயம் நீருக்கடியில் செல்லும்” “அந்த வெறுமையான இடத்திற்குள்ளா நீங்கள் கப்பலைச் செலுத்தப் போகிறீர்கள்” என்று கேட்டான் ஓல்சன். “நிச்சயம் செய்வேன், ஓல்சன்” என்று பதில் சொன்னேன். “லட்சத்தில் ஒரு தடவை கூட நாம் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பு கேப்ரோனாவின் மேல் இல்லை உணவும் நீரும் அங்கு இல்லை என்றால். அந்தப் பாறையில் இருந்து வரும் இந்த நீர் உப்பானது இல்லை. இருவரும் குடித்திருந்தும் குடிக்க உகந்ததாகவும் இல்லை. நிலத்திற்குள் இந்த தண்ணீர் சுத்தமாக இருக்கும் என்று நிச்சயம் நம்பலாம். பழங்கள் மூலிகைகள் மற்றும் தேவையான அனைத்தும் கிடைக்கும். நாம் இங்கேயே இருந்து தாகத்தினாலும் பசியினாலும் இறந்து போகலாம் வெறும் சில நூறு அடிகளில் எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு. ஆற்று நீரிலும் பயணிக்கும் வழி நமக்கு இருக்கிறது. நமக்கு அதைப் பயன்படுத்துவதில் என்ன பயம்?” “நிச்சயம் அதன் பின் செல்வோம்” என்றான் ஓல்சன். “நானும் அதைப் பார்த்துவிட எண்ணுகிறேன்” என்று சம்மதித்தான் ப்ராட்லி. “பிறகென்ன. கீழே செல்வோம். வாழ்த்துக்கள். சொர்க்கமா நரகமா என்று பார்த்து விடுவோம்” என்று ஒருவன் கீழிருந்து கத்தினான். “எல்லோரும் கீழிருக்கும் இடத்திற்குச் செல்லுங்கள்” என்று உத்தரவிட்டேன். ஒரு நிமிடத்தில் மேல் தளமே காலியாகி விட்டது. கோபுரத்தின் வாசலையும் அடைத்தாகி விட்டது. பின் மெதுவாக நீரில் மூழ்க ஆரம்பித்தது. அதுதான் கடைசித் தருணம் என்று தோன்றியது. அங்கு இருந்த எல்லோரும் அப்படித்தான் எண்ணி இருப்பார்கள். கீழே இறங்கும் போது கோபுரத்தில் நான் அமர்ந்து இருந்தேன். கோபுரத்தின் மேலிருந்த பாவொளி விளக்கைப் போட்டுவிட்டு அதன் மங்கிய ஒளி பரவுவதை நீரில் பார்த்துக் கொண்டிருந்தேன். நாங்கள் ரொம்ப மெதுவாகக் கீழிறங்கிக் கொண்டிருந்தோம் எந்த முன்னேற்றமும் இல்லாமல் கப்பலின் முன் பகுதி மட்டும் சரியானபடி இறுத்தி விட்டு. கீழே இறங்க இறங்க நான் அந்தப் பாறை மீதிருந்த கருப்புத் திறப்பைப் பார்த்தேன். அந்தப் பிளவினுள் ஒரே நேரத்தில் அரை டஜன் யூ கப்பல்களை அனுப்பலாம். கிட்டத்தட்ட ஒரு உருளை போல இருந்தது. ஆனால் நரகம் போல் ஒரே கருமை நிறம் அப்பி இருந்தது. என் உத்தரவைத் தொடர்ந்து கப்பல் மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தது. எனக்குள் ஒரு விசித்திரமான உள்ளுணர்வு தோன்றியது. ஆனால் அவை எதுவும் நல்லதாக இருக்கவில்லை. நாம் எங்கே போகிறோம்? இந்த பெரிய அகண்ட வாய்க்கால் நம்மை எங்கே இட்டுச் செல்லும். கதிரொளிக்கும் வாழ்க்கைக்கும் நாம் நிரந்தரமான விடை கொடுத்து விட்டோமோ. இப்பொழுது நாம் பார்த்ததை விட இன்னும் பெரிய அபாயங்களைச் சந்திக்க இருக்கிறோமோ. தேவையற்ற எண்ணங்களில் என் மனம் அலை பாயாமல் இருக்கக் கீழே நடக்கும் விஷயங்களைக் காது கொடுத்துக் கேட்டேன். இந்தக் கப்பலின் அணைத்து மாலுமிகளுக்கும் நான்தான் கண் போன்றவன். அவர்களைச் சரியாக வழிநடத்த என்னால் முடிந்த அனைத்து வழிமுறைகளையும் நான் கடைபிடிக்கிறேன். ஒரு நூறு அடி போயிருப்போம். முதல் ஆபத்து அப்போது வந்து கண் சிமிட்டியது. அந்தக் குகை வழி செங்குத்தாகத் திரும்பியது. ஆற்றின் மீது மிதந்து வரும் குப்பைகள் சட்டென்று அந்தப் பாறையின் மீது ஆற்றின் வலிமையான நீரோட்டத்தில் மோதி இடது புறம் திரும்புவதை என்னால் பார்க்க முடிந்தது. இப்படி ஒரு மோசமான சூழ்நிலையில் செங்குத்தாகத் திரும்ப வேண்டியதால் கப்பலின் பாதுகாப்பை எண்ணி நான் மிகவும் பயந்து கிடந்தேன். ஆனால் முயற்சி செய்வதைத் தவிர வேறெதுவும் முடியாது. ஆபத்து வருவதைப் பற்றி யாரையும் நான் எச்சரிக்கவில்லை. அதனால் தேவையற்ற பயம் மட்டுமே மிச்சம். ஒரு வேளை அந்தப் பாறையில் மோதினாலும் சட்டென பறி போய் விடும் அனைத்து உயிர்களையும் இந்த உலகத்தின் எந்தவித சக்தியாலும் காப்பாற்ற முடியாது. முழு வேகத்தில் செல்ல உத்தரவிட்டு ஒருவித வெறியோடு அந்த ஆபத்தை எதிர் கொள்ளக் காத்திருந்தேன். அங்கே திரும்ப வேண்டும் என்றால் இடது புறம் திரும்பும் அந்தச் சுவரை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது. எங்களைப் பாதுகாக்கக் கப்பலின் மின் விசைப் பொறிகளின் சக்தியைத்தான் அப்போது முழுவதும் நம்ப வேண்டி இருந்தது. ஒருவழியாக நாங்கள் அதைக் கடந்து விட்டோம். ஆனால் அது மயிரிழையில் தப்பிய தருணம். அப்படித் திரும்பிய போது நீரோட்டத்தின் வேகத்தினால் கப்பலின் பின் பகுதி சுவரில் தொம்மென்று இடி வாங்கியது. கப்பல் முழுவதும் ஒரு பேரதிர்ச்சி பரவியது. இரும்பினால் ஆன கப்பலின் உடற்பகுதி பாறையைத் தேய்த்ததால் நாராசமாக சத்தம் காதைப் பிளந்தது. ஒரு கணம் சட்டென்று நீர் பரவி நம்மைச் சமாதி கட்டி விடும் என்று நினைத்தேன். ஆனால் கீழிருந்து எல்லாம் சரியாக இருக்கிறது என்று குரல் கேட்டது. இன்னொரு ஐம்பதடி தூரத்தில் இரண்டாவது திருப்பம் வந்தது. இப்போதும் இடது புறம் திரும்பியது அந்த வளைவு. அது மிகவும் எளிதான வளைவாக இருந்தது. அதனால் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் கடந்து விட்டோம். அதன் பின் வெண்ணையில் வழுக்கியது போன்ற எளிதான பயணமாக இருந்தது. இருந்தாலும் என் உள்ளுணர்வு பயம் கக்கியபடியே இருந்ததால் ஒவ்வொரு நொடியும் என் நரம்புகள் வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தன. அதன் பின் ஒரு நூற்றைம்பது இருநூறு அடி வரை அந்தக் கால்வாய் நேராகச் சென்றது. தண்ணீரும் கொஞ்சம் லேசானது என் மனதும் கூட. நான் கீழிருப்பவர்களிடம் கத்தினேன் பகல் வெளிச்சத்தைப் பார்த்ததாக. உடனே திருவிழா வந்தது போல் அனைவரும் கூச்சலிட ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்தில் நாங்கள் கதிரவன் ஒளியில் நனைந்த நீரில் எழ ஆரம்பித்தோம். உடனே நான் சூழிட நோக்கியை உயர்த்தி அந்த வினோதமான நிலப்பரப்பைப் பார்த்தேன். வினோத உலகம் நாங்கள் இப்போது ஒரு அகலமான மெதுவாகச் செல்லும் ஆற்றின் நடுவில் இருந்தோம். அதன் இரு கரைகளிலும் 150 முதல் 200 அடி வரை கிளைகள் பரப்பி பிரமாண்டமான மரங்கள் வளர்ந்து இருந்தன. கப்பலுக்கு அருகில் எதோ ஒன்று வந்து சூழிட நோக்கியில் மோதியது. அகலமாய் விரிந்த வாய் ஒன்று தெரிந்தது. பின் தெறித்த நீர் வழிந்தோடியது. கோபுரமே நடுங்கியது அந்தப் பொருள் பக்கத்தில் வந்த போது. சிறிது நேரத்தில் சென்று மீண்டும் திரும்பியது. மரங்களின் மேல் என் பார்வை திரும்பியது. அங்கே எதோ ஒன்று வவ்வாலின் இறக்கையுடன் இருந்தது. திமிங்கிலம் போன்று பெரிதான ஒரு உயிரினம் ஆனாலும் அது ஒரு பெரிய பல்லி போன்று இருந்தது. திரும்பவும் சூழிட நோக்கியின் மீது எதோ ஒன்று மோதி நீரைத் தெளித்தது. நான் கப்பலை மேலேற்றுவதற்கு உத்தரவிடும் போது எனக்கு வேர்த்து விட்டது. என்ன மாதிரியான ஒரு வினோதமான உலகத்திற்கு விதி எங்களை அழைத்து வந்திருக்கிறது என்று வியந்தபடியே மேலேறினோம். மேல் தளம் நீரில் இருந்து வெளியே தெரிந்ததும் நான் கோபுரத்தின் கதவைத் திறந்து வெளியே வந்தேன். மைய வழியின் கதவைத் திறந்து பணியில் இல்லாத அனைவரும் ஏணியில் ஏறி வந்தனர். ஓல்சன் நாப்ஸை ஒரு கையில் ஏந்தி வந்து கொண்டிருந்தான். சில நேரங்களாய் யாரும் எதுவும் பேசவில்லை. ஒவ்வொருவரும் என்னைப் போல் ஆச்சர்யத்தில் உறைந்து விட்டனர். ஏதோ வேற்று கிரகத்தில் நுழைந்து விட்டது போல் இருந்தது அங்கே இருந்த மரம் செடி கொடிகளைப் பார்க்கும்போது. அங்கே இருக்கும் புல் கூட நமது பூமியைச் சார்ந்தது போல் இல்லை. செழிப்பாக உயரமாக வளர்ந்திருந்தது. ஒவ்வொரு புல்லின் நுனியிலும் பளிச்சென்று ஒரு பூ பூத்திருந்தது. ஒவ்வொன்றும் ஒரு நிறத்தில் ஊதா மஞ்சள் கருஞ்சிவப்பு நீலம் என்று அனைத்தும் மனிதனின் கற்பனைக்கே எட்டாத அளவு மனதைக் கொள்ளை கொள்ளச் செய்தன. ஆனால் உயிரினங்கள்? அவை எல்லாம் கூட்டம் கூட்டமாய் இருந்தன. உயர்ந்த பெரணி போன்ற மரங்களில் குரங்குகள் பல்லிகள் மற்றும் பாம்புகள் இருந்தன. பெரிய பூச்சிகள் இங்கும் அங்கும் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. பிரமாண்டமான உருவங்கள் அந்த அடர்ந்த காட்டினுள் உலாவிக் கொண்டு இருந்தன. ஆற்றினுள் ஏகப்பட்ட உயிரினங்கள் நெளிந்து கொண்டிருந்தன. வானத்தில் பெரும் உயிரினங்கள் இறக்கை அடித்துப் பறந்து கொண்டிருந்தன. இவை எல்லாம் எத்தனையோ காலங்களுக்கு முன்னால் அழிந்து விட்டதென்று நாம் பாடத்தில் படித்திருக்கிறோம். “அங்கே பாருங்கள்” என்று ஓல்சன் கத்தினான். “ஒரு ஒட்டகச் சிவிங்கி மேலே எழும்புகிறது. எங்கிருந்து என்றால்…” என்று அவன் சுட்டிய திசையை நோக்கிப் பார்த்தோம். அங்கே கண்ணாடி போன்று பளபளப்பாய் நீளமான கழுத்தின் மேல் ஒரு சின்ன தலையுடைய ஒரு மிருகம் நீரினுள் இருந்து எழுந்தது. இப்போது அதன் முதுகுப்புறமும் தெரிந்தது. அதன் மேலிருந்து நீர் சொட்ட எழுந்தபோது அது பழுப்பு நிறத்தில் பளபளப்பாய் இருந்தது. அது எங்களைத் திரும்பிப் பார்த்தது. பல்லி போன்ற அதன் வாயைத் திறந்து ஒரு பெருத்த சீற்றத்தை வெளியிட்டது. அது ஒரு 16 அல்லது 18 அடி நீளம் இருக்கும். அது கிட்டத்தட்ட கீழ் ஜுராசிக் காலத்திய ப்லீஸியோசாரஸின் படிமம் போன்று இருந்தது. எங்களைப் பார்த்ததும் கோபம் கொண்ட எருமையைப் போல் வேகமாகப் பாய்ந்து வந்தது. அது வந்த வேகத்தைப் பார்த்தால் எங்களையும் கப்பலையும் நொறுக்கிச் சாப்பிட்டு விடும் போல் இருந்தது. அந்த உருவம் வாயை அகலத் திறந்து கொண்டு எங்களைத் துரத்திய போது நாங்கள் ஆற்றில் மெதுவாகச் சென்று கொண்டிருந்தோம். அதன் நீண்ட கழுத்து ரொம்ப உயரமாய்த் துருத்திக் கொண்டிருந்தது. அதனுடைய நான்கு துடுப்புகள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தன. அதனால் மிக வேகமாக அதனால் நீந்த முடிந்தது. அது கப்பலின் பக்கவாட்டிற்கு அருகில் வந்தபோது அதன் பற்கள் கோபுரத்தின் மேலிருந்த ஒரு கம்பத்தில் பதிந்தது. அது ஏதோ பல் குச்சி எடுக்கப்பட்டது போல் சட்டென்று உடைந்து வெளியேறி விட்டது. இவ்வளவு பெரிய வலிமையைப் பார்த்தவுடன் எல்லோரும் ஒரே நேரத்தில் ஒரு அடி பின் வாங்கினோம். ப்ராட்லி தன் துப்பாக்கியை எடுத்துச் சுட்டான். குண்டு அதன் கழுத்தில் பட்டது. அதனால் அது சுருண்டு விடும் என்று பார்த்தால் அதன் கோபம்தான் அதிகமாகியது. அதனுடைய சீற்றம் இப்போது கர்ண கொடூரமான சத்தமாக அதிகரித்தது. பின் அது பாதியளவு நீரினுள் இருந்து எழுந்து மேல் தளத்தின் சாய்ந்த பகுதியில் ஏறி எங்கள் அனைவரையும் முழுங்கி விடப் பார்த்தது. ஒரு டஜன் குண்டுகளாவது சுட்டிருப்போம் எங்களில் துப்பாக்கி வைத்திருந்தவர்கள் அனைவரும் சேர்த்து. எவ்வளவு சுட்டாலும் அது அடங்குவது போல் தெரியவில்லை. மென்மேலும் எங்களை நெருங்கிக் கொண்டே இருந்தது. அந்தப் பெண் மேல் தளத்தில் என் பின்னால் நின்றிருந்தாள். ரொம்ப தூரம் இல்லை. எங்களுக்கு நேர்ந்த பேராபத்தைப் பார்த்த பின் நான் அவளை மைய வழியின் கதவை நோக்கித் தள்ளினேன். நாங்கள் இருவரும் சில நாட்களாகப் பேசிக் கொள்ளவில்லை. இப்போதும் பேசவில்லை. அவள் என்னை அலட்சியமாகப் பார்த்தாள். அந்தப் பார்வையே பல அர்த்தங்கள் கற்றுக் கொடுத்தது. வெடுக்கென்று என் கையை உதறி விட்டாள். பலவந்தத்தைத் தவிர அவளிடம் செய்வதற்கு ஒன்றும் இல்லை. அதனால் அவளை மறைத்து நின்று கொண்டேன் ஒருவேளை அந்த மிருகம் மேல் தளத்திற்கு வந்து விட்டால் அவளுக்குப் பாதுகாப்பாக இருக்கலாம் என்றெண்ணி. அப்படி இருக்கும் போது அந்த மிருகம் சடாரென்று தன் கையை வைத்துப் பக்கவாட்டில் இருந்த இரும்புக் கம்பியைப் பிடித்துத் தன் தலையை நீட்டி ஒரு ஜெர்மனைக் கவ்விக் கொண்டது. நான் ஓடிச் சென்று என் துப்பாக்கியால் அதன் உடம்பில் சுட்டு எப்படியாவது அவனைக் காப்பாற்றி விட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் கதிரவனைக் கூடச் சரியாகச் சுட்டிருக்கலாம். பெரும் அலறல் சத்தத்துடன் அந்த ஜெர்மனை அது கப்பலில் இருந்து இழுத்துச் சென்றது. கப்பலில் இருந்து இறங்கியதும் ஆற்றினுள் அவனைக் கவ்விக் கொண்டு நீந்த ஆரம்பித்தது. அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்தோம். ஓல்சன்தான் மவுனத்தைக் கலைத்தான். இப்போது யார் பக்கம் அதிக பேர் இருக்கின்றார்கள் என்று குறிப்பிட்டான். பென்சன் இறந்து விட்ட பிறகு இப்போது நாங்கள் ஒன்பது பேரும் ஜெர்மானியர்கள் எட்டு பேரும் இருந்தோம். அந்தப் பெண்ணை யார் பக்கமும் இது வரை சேர்க்கவில்லை. அவள் பெண்ணாய் இருந்ததால். இப்போது நிச்சயம் அவள் எங்கள் பக்கம்தான் என்று தெரியும். ஓல்சன் சொன்னது அனைவருக்கும் புரிந்திருக்கும். அதன் பின் நாங்கள் ஆற்றையே பார்த்துக் கொண்டிருந்தோம். எங்களைச் சுற்றி ஒரே கூப்பாடு போட்டுக் கொண்டு பயங்கரமான ஜந்துக்கள் உலவிக் கொண்டிருந்தன பயம் என்பதே இல்லாமல் வெறும் பசி கோபத்துடன். அவைகள் கப்பலின் மேல் ஏறி நெளிந்து கொண்டிருந்தன. அதனால் பின் வாங்கிக் கொண்டே இருந்தோம். அதனால் ஒவ்வொரு முறையும் நாங்கள் அதன் மேல் துப்பாக்கியை எடுத்துச் சுட்டுக் கொண்டே இருந்தோம். அங்கே எல்லாவிதமான கோரமான பயங்கரமான பெரிதான உருவங்கள் இருந்தன மேஸோசோயிக் காலத்திய பயங்கரங்கள். அந்தப் பெண் சட்டென்று உள்ளே சென்று விட்டதைக் கவனித்தேன். ஆவலுடன் நாப்ஸையும் உடன் எடுத்துச் சென்றாள். நாப்ஸ் குலைத்துக் குலைத்து மிகவும் களைப்பாகி இருந்தது. அது குட்டியானதில் இருந்து இப்போதுதான் அதன் முகத்தில் பயத்தை நானும் பார்க்கிறேன். அதை ஒன்றும் சொல்ல முடியாது. அவள் சென்ற பிறகு ப்ராட்லி மற்றும் அனைவரையும் கீழே அனுப்பி விட்டேன். வான் ஸ்சோன்வர்ட்ஸ் இன்னும் சிறையிலேயே இருந்தான். மைய வழியின் கதவை அடைக்கு முன் அந்த மிருகங்கள் மிகவும் அருகில் வந்து விட்டன. அதன் பின் கோபுரத்திற்குச் சென்று முழு வேகத்தில் கப்பலைச் செலுத்துமாறு உத்தரவிட்டேன் எப்படியாவது அந்த மிருகங்களின் கோரப் பிடியில் இருந்து தப்பித்து விடலாம் என்று எண்ணி. ஆனால் அது பயனில்லாமல் போய் விட்டது. அவைகள் எளிதாகக் கப்பலை முந்த முடிவது மட்டுமில்லாமல் ஆற்றில் மேலும் போகப்போக அதைப் போன்ற உயிரினங்களின் எண்னிக்கை மிக அதிகமாய் இருந்தது. அதில் மேலும் அதே வேகத்தில் பயணிக்க மிகவும் பயமாய் இருந்தது. அதனால் வேகத்தைக் குறைத்து அந்தச் சீறும் உயிரினங்களின் நடுவில் மெதுவாகப் போகுமாறு சொல்லி விட்டேன். கேப்ரோனாவின் நிலத்தில் வந்து இறங்குவதற்கு வேறெந்த கலத்தைக் காட்டிலும் நாங்கள் நீர்மூழ்கியில் வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதற்கு முன் உலகைப் பிடிக்கும் எண்ணத்துடன் யாராவது கேப்ரோனாவிற்குத் தெரியாமல் படை எடுத்து வந்திருந்தால் அவர்கள் உயிருடன் திரும்பி இருப்பார்கள் என்பது சந்தேகமே. ஆனால் எனக்கு இப்போது தெரிந்து விட்டது இந்த இடத்தை ஒரு நீர்மூழ்கியைத் தவிர வேறு எந்தக் கருவியாலும் நெருங்க முடியாது. கதிரவன் மறையுமுன் இன்னொரு 40 மைல்களாவது நாங்கள் பயணித்திருப்போம். நீரில் மூழ்கி இரவைக் கழிப்பதற்கும் பயமாக இருந்தது. ஏனெனில் ஆற்றின் அடியில் இருக்கும் களி மண்ணில் கப்பல் சிக்கி விடும் அபாயமும் இருக்கிறது. நங்கூரம் பாய்ச்சி நிறுத்தவும் சிரமமாய் இருந்தது. அதனால் கரையோரம் சென்று அந்தப் பல்லிகளின் தொல்லைகளுக்கு நடுவில் சட்டென்று ஒரு பெரிய மரத்தில் நங்கூரத்தைப் பதித்தேன். கொஞ்சம் தண்ணீரையும் மொண்டு குடித்துப் பார்த்தோம். நல்ல சூடாக இருந்தது. முன்னைக் காட்டிலும் இனிப்பாக இருந்தது. தேவையான உணவு ஏற்கெனவே இருந்தது. இப்போது தண்ணீரும் கிடைத்து விட்டதால் புத்துணர்ச்சியோடு இருந்தோம். இருந்தாலும் புத்தம் புதியதாய் மாமிசம் கிடைக்கவில்லை. பல வாரங்கள் ஆகி விட்டன கறி சாப்பிட்டு. இந்த விலங்குகளைப் பார்த்ததும் எனக்கு ஒரு திட்டம் உருவானது. அதன் கறி கிடைத்தால் சாப்பாடு ஒன்றும் அவ்வளவு மோசமாக இருக்காது என்றே தோன்றியது. மேல் தளத்தில் இருபது துப்பாக்கிகள் இருந்தன. அதில் இருந்து ஒன்றை எடுத்தேன். என்னைப் பார்த்ததும் ஒரு பெரிய உருவம் மேல் தளத்தில் ஏறியது. நான் கோபுர உச்சிக்குச் சென்றேன். மேல் தள உயரத்திற்கு தன் பிரமாண்டமான உடம்பைத் தூக்கியதும் நான் துப்பாக்கிக் குண்டுகளை அதன் இரு கண்களுக்கு நடுவில் அனுப்பினேன். அது ஒரு நிமிடம் என்னைப் பார்த்து என்னிடம் எதோ பேசியது போல் இருந்தது. “இவனிடம் என்ன கொடுக்கா இருக்கிறது. கொஞ்சம் கவனமாகத்தான் இருக்க வேண்டும்”. அதன் பின் தன் நீண்ட கழுத்தை நீட்டிப் பெரிய வாயைப் பிளந்து கொண்டு என்னை விழுங்க வந்தது. ஆனால் நான் அந்த இடத்தில இல்லை. கோபுரத்தின் பின்னால் விழுந்து விட்டேன். விழுந்த வேகத்தில் இறந்தே போயிருப்பேன். அதன் பின் அதன் சின்னத் தலை திரும்பவும் என்னை நோக்கி வேகமாக வந்தது. இப்போது நான் மைய வழியின் கதவுக்கருகில் வந்து விழுந்தேன். யார் மேல் தளத்தில் வந்து குத்துகிறார்கள் என்று ஓல்சன் மேலே பார்த்தான். உடனே ஒரு கோடரியை எடுக்க ஓடினான். அதை எடுத்து வந்தவுடன் சற்றும் தாமதிக்கவில்லை. ஏணியில் வேகமாக ஏறி வந்து அதன் முகத்தில் அறைய ஆரம்பித்தான். அதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ளும் அளவுக்கு மூளை இல்லை என்று நினைக்கிறேன். வெட்டப்பட்டுக் குத்தப்பட்டுக் கண்களுக்கு நடுவில் துப்பாக்கிக் குண்டு பதிந்த நிலையிலும் அது ஓல்சனை நோக்கி ஊர்ந்து அவனை எப்படியாவது விழுங்கி விட வேண்டும் என்று எண்ணியது. இத்தனைக்கும் அதன் உடம்பு மைய வழியின் கதவைக் காட்டிலும் பன்மடங்கு பெரிதாக இருந்தது. ஓல்சன் அதன் தலையை வெட்டும் வரை அது தன் முயற்சியை விடவே இல்லை. பின் இரண்டு பேர் கதவைத் திறந்து மேலே வந்து ஒருவன் கவனித்துக் கொண்டிருக்க இன்னொருவன் பின்னாலிருந்த ஒரு பாகத்தை வெட்டி எடுத்தான். ப்ராட்லி அதற்கு ப்ளீசியோசாரஸ் ஓல்சானி என்று பெயர் வைத்தான். அதற்குள் ஓல்சன் அதன் நீண்ட கழுத்தை வெட்டினான். அதில் இருந்து அருமையான வடிசாறு செய்யலாம் என்று சொல்லிக் கொண்டே. கோபுரத்தின் மீது படிந்த ரத்தக் கரையையும் அழுக்கையும் துடைத்து முடிப்பதற்குள் அருமையான கறியும் கொதிக்கும் குழம்பும் தயார் செய்து வைத்து விட்டார் எங்கள் சமையல்காரர். அங்கிருந்து எழுந்த அருமையான வாசம் அந்த மிருகத்தின் மேலும் அதன் வகையறாக்கள் மேலும் ஒரு நன்மதிப்பை எங்கள் அனைவர் மனதிலும் நிறைத்தது. அத்தியாயம் :௫ கரை தேடல் அன்றிரவு கறியை உண்டோம். மிகவும் அருமையாக இருந்தது. மறு நாள் காலை வடி சாறு சாப்பிட்டோம். புதைபடிமவியலின் எல்லா நியதிகள் படியும் இறந்து பல லட்சம் ஆண்டுகள் ஆகி விட்ட இந்த உயிரினங்களின் கறியைச் சாப்பிடுகிறோம் என்று நினைக்கும் போதே வித்தியாசமாக இருந்தது. புதுமையான அனுபவமாக இருந்தாலும் கொஞ்சம் சங்கடமாகவும் இருந்தது. ஆனால் எங்கள் வயிற்றுக்கு அது சங்கடமாக இருக்கவில்லை. ஓல்சன் சாப்பிட்டதைப் பார்த்தால் அவன் வயிறு வெடித்து விடும் என்று நினைத்தேன். அந்தப் பெண் அன்று இரவு எங்களுடன் வெடிக்கண்ணி அறைக்குப் பின் புறம் உள்ள சிறிய அதிகாரிகள் அறையில் சாப்பிட்டாள். அந்தக் குறுகலான சாப்பாட்டு மேசை விரிக்கப்பட்டது. நான்கு முக்காலிகள் இடப்பட்டன. வெகு நாட்களுக்குப் பின் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டோம். சில வாரங்களாக இருப்பதைப் பிரித்துக் குறைத்துச் சாப்பிட்டதில் இருந்து ஒரு பெரிய விடுதலை. நாப்ஸ் அந்தப் பெண்ணிற்கும் எனக்கும் இடையில் அமர்ந்தது. அதுவும் ப்லீஸியோசாரசின் கறியைச் சுவைத்தது. அதுவும் பாவம் கறி சாப்பிடாமல் ஏங்கி இருக்கும். அதுவும் அவ்வப்போது என்னை வெறுமையாக பார்த்து கொண்டே இருந்தது. ஏனெனில் நல்ல முறையில் வளர்க்கப்பட்ட ஒரு நாய் மேசையில் அமர்ந்தெல்லாம் சாப்பிடாது. ஆனால் இதுநாள் வரை அதுவும் சரியாகச் சாப்பிடாததை நினைத்து எனக்கும் சாப்பாடே உள்ளே செல்லவில்லை. பரவாயில்லை. அந்தப் பெண் அதற்கு ஊட்டி கொண்டிருக்கிறாள். அது போதும். லிஸ் என்னிடம் இறுக்கமான பணிவைக் காண்பித்தாள். ப்ராட்லி ஓல்சன் இருவரிடமும் இனிமையாகவும் அன்பாகவும் பேசினாள். அவள் மிகுந்த ஆர்வக்கோளாறு உள்ளவள் அல்ல. அதனால் அவளிடம் பெரிதாக நான் எதிர்பார்க்கவுமில்லை. அவள் என்னிடம் காட்டிய மிகச் சிறு கவனங்களுக்காக நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். ஓல்சன் சொன்ன ஒரே ஒரு விஷயம் தவிர அந்தச் சாப்பாடு மிகவும் அருமையாக இருந்தது. நாம் சாப்பிட்ட அந்த மிருகம்தான் அந்த ஜெர்மனியனையும் சாப்பிட்டிருக்கக் கூடும் என்றான். அவன் அப்படிச் சொன்ன பிறகு அந்தப் பெண்ணைச் சாப்பிட வைக்கச் சில நேரம் ஆகியது. இறுதியில் ப்ராட்லிதான் சமரசம் செய்தான். அந்த விபத்து நேர்ந்த இடத்தில் இருந்து நாம் நாற்பது மைல் தொலைவு வந்து விட்டோம். அதன் பின் அதே போல் ஆயிரக்கணக்கான மிருகங்களைப் பார்த்து விட்டோம். அதனால் நாம் சாப்பிட்டது அதுவாக இருக்க வாய்ப்பு மிகவும் கம்மி என்றான். “எனக்கென்னவோ ஓல்சன் அனைத்தையும் தானே ஆட்டையைப் போடுவதற்குச் செய்த தந்திரம் என்றே நினைக்கிறேன்” என்று சொல்லி முடித்தான். பிறகு நாங்கள் எதிர்காலத்தைப் பற்றி விவாதித்தோம். நாம் இனி என்ன செய்யப் போகிறோம் என்பதைப் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்தோம். வெறும் தத்துவங்கள் தவிர்த்து யாருக்கும் எதுவும் தோன்றவில்லை. இந்த நிலம் பூராவும் இதே போல் கொடூரமான விலங்குகள் நிறைந்து இருந்தால் அங்கே யாரும் வாழ முடியாது. அதனால் நமக்குத் தேவையான தண்ணீர் பழங்கள் மற்றும் சில கறிகளும் பாதுகாப்பாக எடுத்துக் கொண்டு செங்குத்துப் பாறைகள் தாண்டித் திறந்து பரந்த கடலுக்குள் சென்று விட வேண்டியதுதான். அப்படியே எண்ணிக் கொண்டு சிறிய பொந்து போன்ற எங்கள் படுக்கைகளில் படுத்துக் கொண்டோம் நாளைய விடியல் இதே போல் நம்பிக்கையாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டு. இரவு எங்களுக்கு நிம்மதியாகக் கழிந்தது. பின்னால்தான் புரிந்தது அந்த மிருகங்கள் காலை மிகவும் நேரம் கழித்துதான் சாப்பிட ஆரம்பிக்கும் என்று. பகல் பனிரெண்டு மணியில் இருந்து இரவு பனிரெண்டு வரை அவைகள் மிகவும் துடிப்பாக இருக்கும் நேரம். விடிந்ததில் இருந்து ஒன்பது மணி வரை சும்மா இருக்கின்றன. சொல்லப் போனால் நாங்கள் கீழிருக்கும் நேரம் ஒன்று கூட வந்து எங்களைத் தாக்கவில்லை. இருந்தாலும் பீரங்கியில் குண்டு பொருத்தி ஒருவனைத் தயார் நிலையில் வைத்திருக்கிறேன். பீரங்கிக் குண்டுக்காவது அவை பயப்படும் என்று நம்புகிறேன். அந்த மரங்களில் குரங்குகள் பல்வேறு விதமாய் இருந்தன. காட்டுக்குள் இருந்து மனித வடிவுடைய யாரோ எங்களை உற்று நோக்குவது தெரிந்தது. நாங்கள் மேல் நோக்கி ஆற்றில் செல்ல ஆரம்பித்த சிறிது நேரத்தில் தெற்கில் மற்றோரு சிறிய ஆற்றைப் பார்த்தோம். அதுவும் இதே கால்வாயில்தான் கலந்தது. அது எங்களுக்கு வலது புறம் இருந்தது. அங்கிருந்து உடனே ஒரு பெரிய தீவு தென்பட்டது. ஐந்தாறு மைல் நீளம் இருக்கும். அங்கிருந்து ஒரு 50 மைல் தொலைவில் அதை விடப் பெரிய ஆறு வடமேற்கில் இருந்து வந்தது. கால்வாயின் திசை இப்போது தென் மேற்கில் இருந்து வடகிழக்காக மாறி விட்டது. இங்கே அந்த பல்லி போன்ற ஜந்துக்கள் எதுவும் இல்லை. இங்கே இருந்த தாவரங்கள் கிட்டத்தட்ட திறந்த வெளியாய் பூங்கா போல் இருந்தது. யூகலிப்டஸ் மற்றும் வேல மரங்களுடன் பெரணி போன்ற மரங்களும் சிதறிக் கிடந்தன. இரு வேறு நிலவியல் கால கட்டங்கள் ஒரு புள்ளியில் ஒன்று சேர்ந்தது போல் இருந்தது. புற்களில் பூக்கள் இல்லை. இருந்தாலும் அவைகள் மேல் வண்ணத்துப் பூச்சிகள் போல் புள்ளிகள் தெளிக்கப்பட்டு மிக ரம்மியமாக இருந்தன. விலங்கினங்களும் பெருவாரியாக இல்லை. ஆறேழு மைல் தாண்டிய பிறகு ஆறு மிகப் பிரமாண்டமாக விரிந்தது. எங்களுக்கு முன்னால் பெரிய கடல் போன்ற பரப்பு விரிந்தது அடிவானம் வரை. அதன் பின் நிலங்கள் சூழ்ந்த ஒரு கடலுக்குள் கப்பலைச் செலுத்தினோம். அதுவும் மிகப் பெரிதாக இருந்தது. எங்கள் பக்கம் இருந்த அதனுடைய ஒரு கரை மட்டுமே தெரியும் அளவுக்கு அது விரிந்து பரந்திருந்தது. அங்கே இருந்த நீர் உயிரினங்களால் நிறைந்து ததும்பியது. அந்தப் பல்லிகள் சில இருந்தாலும் மீன்கள் ஆயிரக் கணக்கில் லட்சக் கணக்கில் இருந்தன. அந்தக் கடலின் தண்ணீர் மிகவும் சூடாக இருந்தது. அதன் சுற்றுப்புறமும் சூடாகவும் பாரமாகவும் இருந்தது. கேப்ரோனாவின் அந்தப் பிரமாண்ட சுவர்களுக்குப் பின்னால் பனிமலை இருந்தது மிக வித்தியாசமாக இருந்தது. தெற்கில் இருந்து வந்த காற்றும் தந்தியடிக்க வைத்தது. ஆனால் இந்தக் கடல் காற்று ஒரு தென்றல் போல தாலாட்டியது. அது ஈரமாகவும் கதகதப்பாகவும் இருந்தது. நாங்கள் அனைவரும் மேலாடைகளைக் கழற்றி விட்டோம். கதிரவன் அவ்வளவு காயவில்லை என்றாலும் அது ஒரு நீராவி அறை போல்தான் இருந்தது. அடுப்பின் வெப்பம் போல் தாக்கவில்லை. வடமேற்கு திசையில் அந்த ஏரியில் பயணித்துக் கொண்டிருந்தோம் ஒலி எழுப்பிக் கொண்டே. அது மிக ஆழமாக இருந்தது. அதன் அடியில் பாறைகளாய் இருந்தன. மையப் பகுதியை நோக்கிக் குழிகள் நிறைந்திருந்தன. கரையில் சிறிது தூரம் சென்ற பின் வேறெங்கும் அடிப்பகுதியே தெரியவில்லை. கரையின் சில விளிம்புகளில் இருந்து பார்த்தால் தூரத்தில் செங்குத்துப் பாறைகள் தெரிந்தன. கேப்ரோனாவின் கடற்கரை ஓரத்தில் இருந்த செங்குத்தான பாறைகளைப் போல் இல்லமால் இவைகள் கொஞ்சம் வேறுபட்டன. நான் என்ன நினைக்கிறேன் என்றால், கேப்ரோனா வெகு காலத்திற்கு முன்னால் ஒரு பெரும் மலையாய் இருந்திருக்க வேண்டும். உலகின் மிகப் பெரிய மலையாக இருந்திருக்க வேண்டும். அதன் பின் ஒரு மிகப் பெரிய எரிமலை வெடிப்பினால் அந்த மலை சிதறி ஆயிரக்கணக்கான அடிகள் அதைச் சுற்றி உள்ள கண்டத்தில் தூக்கி எறியப்பட்டிருக்க வேண்டும். அதனால் பெரும் பள்ளங்கள் உருவாகி இருக்கும். அதன் பின் அந்தக் கண்டம் மூழ்கி இருக்கக் கூடும். அந்தக் காலங்களில் கண்டங்கள் நகரும் என்று நாம் படித்திருக்கிறோம் அல்லவா. கேப்ரோனாவின் மேல் பகுதி மட்டும் வெளியில் தெரியுமாறு கடல் மூடி இருக்கும். அதைச் சுற்றியுள்ள தடுப்புச் சுவர்கள் நடுவில் உள்ள ஏரி அதற்குச் சூடான நீர் தரும் சுனைகள் எல்லாம் அதையே நிரூபிக்கின்றன. இங்கிருக்கும் விலங்குகளும் தாவரங்களும் இது ஒரு பெரு நிலப் பரப்பாக இருந்ததைத்தான் காட்டுகிறது. கரையோரமாக நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கும் போது ஒரு திறந்த காடு போல் தான் அந்த நிலப்பரப்பு இருந்தது. இங்கும் அங்கும் சிற்சில இடங்களில் திறந்த வெளி இருந்தன. அங்கே சில மிருகங்கள் புற்களை மேய்ந்து கொண்டிருந்தன. இருவிழி நோக்காடியை வைத்து நான் பார்க்கும் போது ஒரு பெரிய சிவப்பு நிற மான், இன்னொரு வகையான மானினம் மற்றும் குதிரை போன்ற ஒரு உயிரினம் ஆகியவற்றைப் பார்த்தேன். பின் ஒரு கரடுமுரடான பெரிய எருமை போன்ற ஒரு மிருகம் தென்பட்டது. கேப்ரோனாவில் பட்டினியால் சாவதற்கு வாய்ப்பு மிகவும் கம்மி என்றே தோன்றியது. ஆனால் அந்த மிருகங்கள் மிகவும் எச்சரிக்கையாய் இருந்தன. அவைகள் எங்களைப் பார்த்தவுடன் தலையையும் வாலையும் ஆட்டிக்கொண்டு வேகமாய் ஓடிக் காட்டிற்குள் ஒளிந்து கொண்டன. அவைகளைப் பார்த்த உள்ளிருந்த மற்ற விலங்குகளும் ஓடிச் சென்று மறைந்தன. அந்த எருமை மாடு மட்டும் அப்படியே நின்றது. தலையைச் சற்று குனிந்து நாங்கள் அந்த இடத்தைக் கடக்கும் வரை எங்களையே பார்த்தது. பின் அதன் பாட்டுக்கு மேய ஆரம்பித்து விட்டது. ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்து 20 மைல் தூரத்தில் சிறிய மணற்பாறைகள் இருந்தன. கேப்ரோனாவை ஒரு காலத்தில் கொந்தளிக்க வைத்ததன் நினைவுச் சின்னங்களாய் அவை இருந்தன. இந்தப் பாறை படிவங்கள் பல் வேறு காலங்களில் உருவானவை. ஆனால் ஒரே தளத்தில் இன்று இருக்கின்றன. சில இடங்களில் சேர்ந்தும் சில இடங்களில் தனித்தனியாகவும். அதன் அருகிலேயே நாங்கள் கிட்டத்தட்ட பத்து மைல் தொலைவு பயணம் செய்திருப்போம். அதன் பின் ஒரு அகலமான பிளவு ஒன்று இன்னொரு ஏரியில் எங்களை விட்டது. நாங்கள் குடி நீர் தேடி பயணம் செய்து கொண்டிருந்ததால் எந்த ஒரு இடத்தையும் விட்டு வைக்க விரும்பவில்லை. அந்த இடம் ஆழமாக இருந்ததால் நான் யூ33 கப்பலை இரு நிலப் பரப்பிற்குள் செலுத்தினேன். இந்த மாதிரியான ஒரு இடம்தான் எல்லா கப்பலோட்டிகளும் விரும்பும் ஒரு அருமையான துறைமுகம் கைக்கெட்டும் தூரத்தில் நல்ல தண்ணீருடன். நாங்கள் மெதுவாகச் சென்று கொண்டிருக்கும் போது ஜெர்மானியர்களில் இருவர் அந்த மனிதன் போன்ற உருவத்தைக் கரையில் இருந்த ஒரு மரத்தின் பின் நூறடி தூரத்தில் பார்த்தார்கள். அதன் பின் சற்று நேரத்தில் ஒரு சின்ன நீரோடை அந்த விரிகுடாவில் கலந்ததையும் பார்த்தோம். அந்த நதியைக் கடந்த பின் நாங்கள் பார்த்த முதல் நீரோடை இதுதான். உடனே அந்த தண்ணீரையும் சோதித்துப் பார்க்க நான் ஆயத்தமானேன். கப்பலைத் தரை இறக்க வேண்டுமென்றால் கரைக்கு மிக அருகில் சென்றாக வேண்டும். ஏனெனில் இந்த நீரிலும் அந்த மிருகங்களின் தொந்தரவு இருக்கக் கூடும் அதிகமில்லை என்றாலும். ஒரு அடி மூழ்க வேண்டிய அளவுக்கு நீரைத் தொட்டியில் நிரப்பினேன். கப்பலை மெதுவாகக் கரையை நோக்கி ஓட்டினேன். கப்பல் தரை தட்டினாலும் நம்மை விடுவிப்பதற்குத் தேவையான உந்து சக்தி கொடுப்பதற்குத் தொட்டியில் இருக்கும் நீர் உதவும். ஆனால் கப்பலின் முன் பகுதி சரியாகச் சென்று கரையின் மேலிருக்கும் நாணல்களுக்கு இடையில் சென்று கரையைத் தொட்டது. கப்பலின் அடிக்கட்டை இன்னும் நீருக்குள் அமிழ்ந்தே இருந்தது. எனது ஆட்கள் அனைவரும் கைத் துப்பாக்கியையும் சுழல் துப்பாக்கியையும் ஏந்தி இருந்தார்கள். ஒவ்வொருவரிடமும் தேவையான அளவு குண்டுகளும் இருந்தன. நான் ஒரு ஜெர்மன்காரனைக் கீழிறங்கச் சொன்னேன். பின் அவனைத் தொடர்ந்து எனது ஆட்கள் இருவரை அனுப்பினேன். கேப்ரோனாவின் நிலப் பகுதியில் நமக்கு ஏற்பட்டிருக்கும் கொஞ்ச நஞ்ச அனுபவங்களைப் பார்க்கும்போது எப்போது வேண்டுமானாலும் புதிதாக ஆபத்துகள் நேரலாம். சிறிய மரத்தின் பக்கத்தில் அவர்கள் வரிசையாய் நிற்கும் போது நான் நங்கூரத்தை இறக்கினேன். உடன்படிக்கை அவர்கள் திரும்பவும் கப்பலில் ஏறிய பிறகு, நான் அனைவரையும் மேல் தளத்திற்கு வரச் சொன்னேன் வான் ஸ்சோன்வர்ட்ஸையும் சேர்த்து. இரு குழுக்களாய் எதிரிகளாய் இருந்து கஷ்டப்படுவதை விட நமக்குள் ஒரு உடன்பாடு ஏற்பட வேண்டும் என்று நான் விளக்க ஆரம்பித்தேன். நாம் ஒற்றுமையாய் இருந்தால்தான் இங்கு உயிர் வாழவே முடியும். நமது உலகத்தின் போரில் இருந்து வெகு தூரம் பயணித்து வந்திருக்கிறோம். லட்சக்கணக்கான மைல் தூரமும் பல யுகங்களையும் கடந்து வந்தது போல் வந்திருக்கிறோம். அதனால் இந்தப் புதிய உலகில் நாம் நுழைவதற்கு ஒரு காரணம் நோக்கம் நிச்சயம் இருக்கும். “நாம் ஏன் நமது இன மற்றும் அரசியல் வெறுப்புகளைக் கேப்ரோனாவிற்குள் எடுத்து வர வேண்டும்.” என்று வற்புறுத்தினேன். “இங்கிருக்கும் ஜெர்மானியர்கள் ஆங்கிலேயர்கள் அனைவரையும் கொன்று விடலாம். இல்லையேல் ஆங்கிலேயர்கள் ஜெர்மானியர்களைக் கொன்று விடலாம். இதனால் மேற்கில் நடக்கும் ஒரு சின்னக் கலவரமும் பாதிக்கப்படாது. அதே போல் ஒரு எதிரி நாட்டிலோ அல்லது நட்பு நாட்டிலோ இருக்கும் எந்தவொரு தனி மனிதக் கருத்தினையும் இது மாற்றிவிடப் போவதுமில்லை. அதனால் உங்களிடமே நேரடியாக விட்டுவிடுகிறேன். கேப்ரோனாவில் இருக்கும் காலங்களில் நாம் நம்முடைய பகை மறந்து ஒன்றாய் வேலை செய்வோம். இல்லையேல் இப்படியே பிரிந்து பாதி பேர் ஆயுதங்களுடன் கடைசி ஒருவன் சாகும் வரை தொடரலாம். உங்களுக்கு ஏற்கெனவே புரியவில்லை என்றால் நான் இப்பொழுது விளக்கிச் சொல்கிறேன். இங்கிருந்து உயிருடன் வெளியே செல்வதற்கான சாத்தியம் ஆயிரத்தில் ஒன்றுதான். உணவும் தண்ணீரையும் பொறுத்த அளவு நாம் பாதுகாப்பாக இருக்கிறோம். நமக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு மீண்டும் கப்பலில் பயணம் செய்யலாம் என்று நினைத்தாலும் நமக்கு எரிபொருள் தேவை. அது இல்லாமல் கடலுக்குள் இறங்க முடியாது. ஏனெனில் இந்தச் செங்குத்துப் பாறைகளைத் தாண்டுவதற்கு நீர்மூழ்கியால் மட்டுமே முடியும். என்ன சொல்கிறாய்” என்று வான் ஸ்சோன்வர்ட்ஸிடம் திரும்பினேன். அவன் சந்தேகக் கண்களுடன் என்னைப் பார்த்து கேட்டான். ஒரு வேளை யூ33 கப்பல் செயல்பாட்டிற்கு வந்து விட்டால் அதன் பின் நமது நிலை என்ன என்று கேட்டான். நாம் நமக்குள் விசுவாசமாக இருந்தால் நாம் கேப்ரோனாவில் இருந்து சேர்ந்தே வெளியில் செல்லலாம். கப்பலை எடுப்பது சாத்தியமானால் அருகில் இருக்கும் ஒரு நடுநிலைமையில் உள்ள ஒரு நாட்டின் கடற்கரையில் ஒதுங்கி அந்த நாட்டின் அதிகாரிகளிடம் சரணடைவோம். போர் முடியும் வரை நாம் அங்கிருக்க நேரலாம். அவன் சரியென்று சொன்னது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. இந்த நிபந்தனைகளை எல்லாம் ஒத்துக் கொண்டு அனைவரின் நன்மைக்காக விசுவாசமாகச் செயல்படலாம் என்று உறுதி அளித்தான். அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு நான் ஒவ்வொருவரையும் தனித்தனியாகக் கூப்பிட்டுப் பேசினேன். அனைவரும் நான் சொன்னதை ஒத்துக் கொண்டார்கள். மேலும் நாங்கள் ஒரு ராணுவமாகக் கட்டுப்பாடுகளுடன் செயல்பட வேண்டும் என்றும் ஒத்துக் கொண்டோம். நான் இதற்குத் தலைமைப் பொறுப்பு வகிப்பேன். எனக்கு முதல் துணை அதிகாரியாக ப்ராட்லியும் ஓல்சன் இரண்டாவதாகவும் இருப்பார்கள் ஆங்கிலேயர்களை வழி நடத்த. வான் ஸ்சோன்வர்ட்ஸ் கூடுதலாக இரண்டாவது துணை அதிகாரியாக அவனது ஆட்களை வழி நடத்தலாம். இந்த 4 பேரும் ஒரு ராணுவ நீதிமன்றமாகச் செயல்படுவோம். விதிகளுக்கும் ஒழுக்கத்திற்கும் கட்டுப்படாதவர்களுக்குத் தண்டனை வழங்குவோம் மரண தண்டனை உட்பட. அதன் பின் ஜெர்மானியர்களுக்கும் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் வழங்கினேன். ப்ராட்லியுடன் ஐந்து பேரை யூ33 ஐப் பாதுகாக்க வைத்தேன். மீதி இருந்த அனைவரும் நிலத்திற்குள் சென்றோம். முதலில் அந்த ஓடையின் நீரைத்தான் சுவைத்தோம். அது மிகவும் சுவையாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தது. இதில் அந்த மிருகங்கள் ஒன்று கூட இல்லை. எழுபது டிகிரிக்குக் கொஞ்சம் குறைந்தாலும் அவைகள் சோர்ந்து விடும் என்பது பின்புதான் புரிந்தது. அவைகளுக்குக் குளிர்ந்த நீர் பிடிக்காது. அதனால் அதில் இருந்து எவ்வளவு தூரம் தள்ள முடியுமோ அவ்வளவு தூரம் தள்ளியே இருந்தன. அங்கே குளத்து மீன்கள் ஏகப்பட்டவை இருந்தன. மிக ஆழமான பள்ளங்களும் இருந்தன. அவைகளைப் பார்த்தவுடன் அதில் இறங்கிக் குளிக்க வேண்டும் என்ற ஆர்வம் எங்களுக்குத் தலை தூக்கியது. கரையோரம் நிறைய மரங்கள் இருந்தன. அவைகள் சாம்பல் நிறத்தில் புங்க மரத்தையும் கருவாலி மரத்தினையும் நினைவு படுத்தின. அவைகள் இந்தக் குளிர்ந்த நீரின் மேல் இருக்கும் குளிர்ந்த காற்றினால்தான் அப்படி இருக்கின்றன. அவைகளின் வேர்களுக்கு இந்தக் குளிர்ந்த நீரோடையில் இருந்துதான் நீர் பாய்கிறது. அந்தச் சுடு நீர் சுனை இதன் மேல் படுவதில்லை. அதே போன்ற சுனைகள் கேப்ரோனா முழுவதும் நிறைந்து இருந்தன என்பதைப் பின்னர் கண்டுபிடித்தோம். எங்கள் முதல் கவலை கப்பலில் குடி நீரை நிரப்புவதுதான். அது முடிந்தவுடன் வேட்டைக்குச் செல்ல ஆயத்தமானோம். நிலப்பரப்பிற்குள் சிறிது தூரம் சென்றோம். ஓல்சன் வான் ஸ்சோன்வர்ட்ஸ் இவர்களுடன் இரண்டு ஜெர்மானியர்களும் இரண்டு ஆங்கிலேயர்களும் என்னுடன் வந்தனர். அதனால் இப்போது 10 பேர் கப்பலையும் அந்தப் பெண்ணையும் பாதுகாப்பதற்காக இருந்தனர். நாப்ஸை விட்டுச் செல்லலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அது மிக்க மகிழ்ச்சியுடன் எங்களுடன் வந்து ஒட்டிக் கொண்டது. அதனால் அதைத் திருப்பி அனுப்ப மனம் வரவில்லை. கிட்டத்தட்ட ஒரு 5 மைல் தூரம் கரையை ஒட்டியே நாங்கள் அழகிய அந்த நிலத்தில் பயணித்துக் கொண்டிருந்தோம். அதன் பின் அந்த ஓடை உற்பத்தி ஆகும் பாறாங்கற்கள் பரவி இருக்கும் இடத்தை அடைந்தோம். அந்தக் கற்களுக்கு நடுவில் ஒரு இருபது பனி போல் குளிர்ந்த சுனைகள் உற்பத்தி ஆகிக் கொண்டிருந்தன. அந்தப் பாறைகளின் வடக்கில் சுமார் 50 முதல் 75 அடி வரை மணல் கற்பாறைகள் இருந்தன. அதன் அருகே நெடிது உயர்ந்த மரங்கள் அவைகளை மறைத்து வளர்ந்திருந்தன. மேற்கில் இந்த நாடு சமவெளியாக மரங்கள் கம்மியாக இருந்தன. இங்குதான் எங்கள் முதல் விளையாட்டு ஆரம்பமானது. ஒரு பெரிய செந்நிற மானைப் பார்த்தோம். அது புல் மேய்ந்து கொண்டிருந்தது. எங்களில் ஒருவன் சுட்டிக் காட்டியபோது அது எங்களைப் பார்க்கவில்லை. அமைதியாக இருக்கும்படி சைகை செய்தபின் அனைவரையும் அமரச் சொன்னேன். விட்லியை மட்டும் கூப்பிட்டுச் சற்று முன்னேறினேன். நாங்கள் அதற்கு ஒரு 100 அடி தூரத்தில் வந்தோம். அப்போது திடீரென்று தன் கொம்புள்ள தலையைத் தூக்கிப் பார்த்துத் தன் பெரிய காதுகளைக் குத்தியது. நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் அதனைச் சுட்டோம். அது கீழே விழுந்ததில் எங்கள் இருவருக்குமே மகிழ்ச்சி. பின்னர் கத்தியை எடுத்துக் கொண்டு அதனை முடித்து விடப் பாய்ந்தோம். அந்த மான் ஒரு சின்ன இடத்தில் கள்ளிச் செடிகளுக்குப் பக்கத்தில் கிடந்தது. ஒரு சில அடிகளுக்குப் பக்கத்தில் அதை நெருங்கிய போது சட்டென இருவரும் ஒரே நேரத்தில் நின்றோம். நான் அவனைப் பார்த்தேன் அவன் என்னைப் பார்த்தான். நாங்கள் இருவரும் மான் இருக்கும் திசையைப் பார்த்தோம். “என்ன சார் அது” என்று கேட்டான் விட்லி. “அது எனக்கு ஒரு பிழை போல் தெரிகிறது.” என்றேன். “கடவுளின் உதவியாளர் யானை செய்யும் நேரத்தில் பல்லி செய்யும் வேலைக்கு மாற்றப்பட்டுவிட்டார் போல் தெரிகிறது” “அப்படிச் சொல்லாதீர்கள் சார்.” என்றான் விட்லி. “அது தெய்வ குற்றம் ஆகி விடும்” “நமது உணவை அந்த உருவம் சாப்பிடுகிறதே அதை விடவா பெரிய தெய்வ குற்றம் ஆகி விடப் போகிறது.” என்று பதில் அளித்தேன். பெயர் என்னவென்றே தெரியாத அந்த உயிரினம் நாங்கள் சுட்டு வீழ்த்திய மானின் மேல் பாய்ந்து அவசரம் அவசரமாகக் கடித்து மெல்லாமல் அப்படியே விழுங்கிக் கொண்டிருந்தது. அந்த உருவம் ஒரு பெரிய பல்லி போல் 10 அடி உயரத்தில் இருந்தது. அதன் உடம்பைப் போல் பெரிதாக பலம் வாய்ந்த வால் இருந்தது. பின்னங்கால்கள் பெரிதாகவும் முன்னங்கால்கள் சின்னதாகவும் இருந்தன. காட்டில் இருந்து வெளியே வரும்போது ஒரு கங்காரு போல பாய்ந்து வந்தது அதன் பின்னங்கால்களையும் வாலையும் வைத்து. பின் நேராக நின்ற போது அதன் வாலைப் பயன்படுத்தி நின்றது. அதன் தலை தடியாகவும் நீளமாகவும் இருந்தது. அது வாயைத் திறக்கும்போது கிட்டத்தட்ட அதன் கண்களுக்குப் பின்னால் வரை சென்றது. அதன் பற்கள் மிகவும் கூர்மையாக நீளமாக இருந்தன. செதில்கள் நிறைந்த அதன் உடல் கருப்பும் மஞ்சளுமாய் புள்ளிகள் ஒரு அடி விட்டமுடையவை ஒழுங்கில்லாமல் சிதறியவண்ணம் இருந்தன. அந்தப் புள்ளிகளை செந்நிற எல்லைக் கோடு ஒரு இன்ச் அளவு சுற்றி இருந்தது. அதன் நெஞ்சுப் பகுதியும் வாலின் கீழ்ப் பகுதியும் வெளிர் பச்சை நிறத்தில் இருந்தன. “இப்பொழுது என்ன செய்வது சார்” என்று கேட்டான் விட்லி. நான் சொல்லும் வரை பொறுமையாய் இரு என்றேன். பிறகு ஒரே நேரத்தில் சுடலாம். நீ அதன் இதயத்தை நோக்கிச் சுடு. நான் அதன் முதுகெலும்பில் சுடுகிறேன் என்றேன். “என்ன இதயமா. சரிங்க சார்.” என்று பதில் அளித்தவன் அவனது துப்பாக்கியைத் தூக்கித் தோளில் போட்டான். எங்கள் தோட்டாக்கள் ஒரு சேரப் பாய்ந்தன. கண்கள் எங்களுக்குச் சம தளத்தில் வரும்வரை அது தன் தலையைத் தூக்கியது. பின் ஒரு பயங்கரமான சீற்றத்தை வெளிப்படுத்தியது. பின் கொடூரமான ஒரு சத்தத்துடன் எங்களை நோக்கிப் பாய்ந்தது. “அதனை அடி விட்லி.” என்று கத்தினேன் ஓடுவதற்குத் திரும்பிக் கொண்டே. எங்கள் ஆட்களிடம் இருந்து ஒரு கால் மைல் தூரத்தில்தான் இருப்போம். அவர்கள் உயரமாய் வளர்ந்த புற்களின் பின்னால் மறைந்து எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதனால் உடனே அவர்கள் எழுந்து எங்களை நோக்கி ஓடி வந்தார்கள். அவர்களுடன் நாப்ஸும் ஓடி வந்தது. எங்கள் பின்னால் ஓடி வந்த விலங்கு எங்களை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது நாப்ஸ் ஒரு விண்கல் போல அந்த விலங்கை நோக்கிப் பறந்து வந்தது. அதனைத் திரும்ப அழைத்தேன். ஆனால் அது என் பேச்சைக் கேட்பதாய் இல்லை. நாப்ஸைப் பறிகொடுக்க விரும்பாததால் நானும் நின்று திரும்பி அந்த விலங்கை எதிர் கொள்ளத் தயாரானேன். அது நாப்ஸைப் பார்த்ததும் எங்களை மறந்து விட்டது. நாப்ஸ் அதனை முறைத்துக் கொண்டு பற்களைக் கடித்துக் கொண்டு அதன் முன் நின்றபோது அந்த விலங்கு ஒரு கணம் நின்றது. பின் தன் கூரிய பற்களால் ஆக்ரோஷமாய்க் கடிக்க முயற்சித்தது. மின்னல் வேகத்தில் பறக்கும் நாப்ஸை அந்த மெதுவாக யோசித்துச் செய்யும் விலங்கினால் எதுவும் செய்ய முடியவில்லை. தன் எதிரியின் தாக்குதலில் இருந்து சட்டென்று விலகியது. பின் நாப்ஸ் அதன் பின் புறம் சென்று அதன் வாலைக் கவ்விக் கொண்டது. அங்குதான் நாப்ஸ் தன் வாழ்வின் மிகப் பெரும் தவறைச் செய்தது. புள்ளிக் கோலம் போல் இருந்த அந்த உறுப்பில் ஓர் அசுர பலம் இருந்தது. ஒரு டஜன் பிரமாண்டமான கவண் போன்ற ஆயுதங்களின் பலம் அதில் இருந்தது. ஒரு சின்ன திருப்புதலால் நாப்ஸை அது ஒரு நூறடி உயரத்தில் காற்றில் வீசியது. அந்த மிருகம் காட்டினுள் இருந்து வந்த அதே இடத்தில் சென்று நாப்ஸ் விழுந்தது. அதன் பின் பார்த்தால் அந்தக் கோரமான மிருகமும் தடாலென்று கீழே விழுந்தது. அது நடந்த ஒரு நிமிடத்தில் ஓல்சன் வான் ஸ்சோன்வர்ட்ஸ் இருவரும் தங்கள் ஆட்களுடன் அங்கு வந்து சேர்ந்தனர். பிறகு மெதுவாக அந்த மிருகத்தை நோக்கி அடி எடுத்து வைத்தோம். அது இறந்துதான் போய் இருந்தது. ஆராய்ந்து பார்த்தபோதுதான் தெரிந்தது. விட்லியின் குண்டு அதன் இதயத்தைத் துளைத்திருந்தது. எனது குண்டு அதன் முதுகெலும்பை உடைத்திருந்தது. “பின் ஏன் அது உடனே சாகவில்லை” என்று ஆச்சர்யமாகக் கேட்டேன் நான். “ஏனெனில்” என்று வழக்கமான வெறுக்கத்தக்க பாணியில் ஆரம்பித்தான் வான் ஸ்சோன்வர்ட்ஸ். “இந்த மிருகம் மிகப் பெரிது. அதனுடைய நரம்பு மண்டலம் மிகவும் மட்டமானது. அதனால் அதன் சாவுச் செய்தி அதன் சின்ன மூளைக்கு எட்டுவதற்கு இவ்வளவு நேரம் ஆகி இருக்கிறது. இது உங்கள் குண்டுகள் பாய்ந்தவுடன் இறந்து விட்டது. ஆனால் சில நேரம் கிட்டத்தட்ட ஒரு நிமிடம் கழித்து தான் அதற்கு விளங்கி இருக்கிறது. இது மேல் ஜுராசிக் காலத்தைச் சேர்ந்த ஆலோசராஸ் என்ற மிருகம் என்று நினைக்கிறேன். நியூ யார்க் நகரத்தில் உள்ள மத்திய வயோமிங் என்னும் இடத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் அது காட்சிப் பொருளாக இருக்கிறது.” இடைப்பட்ட நேரத்தில் நான் நாப்ஸைத் தேட ஆரம்பித்தேன். எனக்கு ஒரே பயமாய் இருந்தது. பாவம் அந்தச் சின்ன உருவம் கள்ளிச் செடிகளுக்கிடையில் கூழாகிக் கிடக்குமோ என்று அஞ்சியபடியே தேடினேன். ஆனால் அது திடீரென்று ஒரு மரத்தின் அடியில் இருந்து எழுந்து வந்தது. அதன் காதுகள் விறைப்பாய் இருந்தன. அதன் வால் கால்களுக்கு நடுவில் தொங்கியது. அதன் உடம்பு லேசாக வளைந்திருந்தது. சிறு காயங்கள் தவிர வேறெதுவும் இல்லை. எனக்குத் தெரிந்து மிகவும் தண்டிக்கப்பட்ட நாய் இதுவாகத்தானிருக்கும். அந்தச் சிவப்பு மானின் மிச்சம் மீதியைச் சேகரிக்க அதனை நோக்கிச் சென்றோம். அதன் தோலை உரித்துச் சுத்தப்படுத்தியபின் அதை எடுத்துக் கொண்டு எங்கள் கப்பலை நோக்கிச் சென்றோம். செல்லும் வழியில் நான் ஓல்சன் ஸ்சோன்வர்ட்ஸ் மூவரும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று விவாதித்துக் கொண்டே சென்றோம். நமக்கென்று நிரந்தரமான ஒரு கூடாரம் இந்தக் கரையில் அமைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று முடிவெடுத்தோம். இப்படி ஒரு வெது வெதுப்பான பருவத்தில் சூடான நீர் இருக்கும் போது கப்பலின் உள்ளே இருப்பது இயலவே இயலாது. அதனால் ஒரு வேலி சூழ்ந்த கூடாரம் அமைக்கலாம் என்று முடிவெடுத்தோம். அத்தியாயம் :௬ ஸ்சோன்வர்ட்ஸின் கோபம் கப்பலை நோக்கி மெதுவாக நாங்கள் நடந்து கொண்டிருந்தோம். அதைப் பற்றி விவாதித்துக் கொண்டும் திட்டமிட்டுக் கொண்டும் சென்று கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று ஏற்பட்ட பெரிய சந்தேகமே இல்லாத ஒரு வெடிச் சத்தத்தினால் கலவரமடைந்தோம். “யூ33 கப்பலில் ஏற்பட்ட வெடிதான் அது.” என்றான் வான் ஸ்சோன்வர்ட்ஸ். “எப்படி நடந்திருக்கும்” என்று கேள்வி எழுப்பினான் ஓல்சன். “அவர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள்.” என்று பதில் சொன்னேன் நான். “நாம்தான் அவர்களைக் காப்பாற்ற வேண்டும். அந்த மானைக் கீழே போடுங்கள்.” என்று அவர்களுக்கு உத்தரவிட்டு “என்னைப் பின் தொடருங்கள்” என்று கூறி விட்டு வேகமாக துறை முகத்தை நோக்கிச் சென்றேன். கிட்டத்தட்ட ஒரு மைல் தூரம் ஓடினோம். அதுவரை வேறெந்தச் சத்தமும் கேட்கவில்லை. அதன் பின் வேகத்தைக் குறைத்து மெதுவாக நடக்க ஆரம்பித்தேன். கூண்டிலடைத்தது போல் அந்தக் கப்பலின் குறுகிய இடத்தில் அவ்வளவு நாட்கள் இருந்ததால் எங்களுக்கு உடம்பில் தெம்பு குறைந்து விட்டது. மூச்சிரைக்க வேகமான நடையில் முன்னேறிக் கப்பலுக்கு ஒரு மைல் தொலைவில் நாங்கள் பார்த்த காட்சி எங்களை அப்படியே குத்துக்கற்களாய் நிற்க வைத்தது. இந்தப் பகுதிக்கு சம்பந்தம் இல்லாத சில கனமான மூங்கில்களைக் கடந்து சென்றோம். பின் சட்டென்று ஒரு சமவெளிக்குள் நுழைந்தோம். அதன் நடுவில் நாங்கள் கண்ட ஒரு கூட்டம் எவ்வளவு தைரியமான ஆளையும் ஒரு நிமிடம் யோசிக்க வைத்து விடும். அங்கே கிட்டத்தட்ட ஒரு 500 மனிதர்களைப் போன்ற பல உயிரினங்கள் நின்று கொண்டிருந்தன. மனிதக் குரங்குகளும் கொரில்லாக்களும் இருந்தன. அவைகளை எனக்கு அடையாளம் காண்பது ஒன்றும் சிரமம் இல்லை. ஆனால் இன்னும் நிறைய தெரியாத உயிரினங்கள் இருந்தன. அவைகள் மனிதர்களா இல்லை குரங்குகளா என்று சொல்வது மிகவும் கடினமாக இருந்தது. சில விலங்குகள் நாங்கள் கேப்ரோனாவின் கடல் சுவரில் பார்த்த இறந்த உடல் போன்று இருந்தன. இன்னும் சில அவைகளுக்குத் தாழ்ந்தவை. கிட்டத்தட்ட மனிதக் குரங்குகள் போல் இருந்தன. இன்னும் சில அப்படியே மனிதனைப் போன்று இருந்தன. நேராக நிமிர்ந்து நின்று முடி கம்மியாக நல்ல அமைப்பான தலைகளுடன். அந்தக் கூட்டத்தில் ஒன்று மட்டும் தனித்துத் தெரிந்தது. அதன் தலைவனாக இருக்கக்கூடும். அது கிட்டத்தட்ட நியாண்டர்தால் மனிதன் போலவே இருந்தது. அதே போன்ற குண்டான உடம்பு. அதன் மேல் முன்னோக்கி முதுகைப் போலவே வளைந்த பெரிய தலை. கால்களை விடச் சிறிய கைகள். கால்கள் இன்றைய மனிதர்களை விடச் சிறியதாய் இருந்தன. முழங்கால்கள் வளைந்திருந்தன எப்போதும் நிமிராமல். இந்த உருவமும் இதை விடத் தாழ்ந்த ஆனாலும் மனிதக் குரங்குகளுக்கு மேலான இன்னும் ஒன்றிரண்டு உயிரினங்களும் கைகளில் கனமான உருட்டுக் கட்டைகள் வைத்திருந்தன. மற்றவைகள் தங்கள் உடல் வலிமையை மட்டுமே நம்பி இருந்தன. எல்லோருமே ஆண்கள்தான். அனைவரும் ஆடை உடுத்தி இருக்கவில்லை. தலைவனிடம் கூட ஆபரணம் போன்ற எதுவும் இல்லை. அவைகள் எங்களைப் பார்த்ததும் தங்கள் கூரிய கோரைப் பற்களைக் காட்டி மெலிதான உறுமலோடு முறைத்துப் பார்த்தன. நான் அவைகளின் மேல் துப்பாக்கிகளை ரொம்ப அவசியம் என்றால் தவிர பயன்படுத்த விரும்பவில்லை. அதனால் அவைகளைக் கடந்து செல்ல முயற்சித்தேன். என் எண்ணத்தைப் புரிந்தது போல் நியாண்டர்தால் மனிதன் அதனை எங்களின் கோழைத்தனம் என்று எண்ணி விட்டான் போல் தெரிந்தது. காட்டுச் சத்தத்துடன் எங்களை நோக்கி ஓடி வந்தான் அவனுடைய தடியை தலை மேல் சுத்திக் கொண்டே. அனைவரும் அவனைப் பின் தொடர்ந்து ஓடி வந்தனர். ஒரு நிமிடத்தில் எங்களைச் சூழ்ந்து விட்டிருப்பார்கள். அதனால் அவர்களைச் சுட உத்தரவிட்டேன். முதல் சூட்டிலேயே ஆறு பேர் சாய்ந்து விட்டனர் அந்த நியாண்டர்தால் மனிதனையும் சேர்த்து. மற்றவர்கள் அனைவரும் ஒரு கணம் யோசித்து மரங்களை நோக்கித் தெறித்து ஓடினர். சில உயிரினங்கள் வெகு லாவகமாக கிளைகளில் ஏறின மற்றைய உயிரினங்கள் மரத்தின் அடியில் சுருண்டு விழுந்தன எங்கள் குண்டுகளுக்கு பலியானதால். வான் ஸ்சோன்வர்ட்ஸ் நான் இருவருமே கவனித்தோம். கிட்டத்தட்ட மனிதன் போலிருந்த சில உயிரினங்களும் லாவகமாகக் கிளைகளில் குரங்குகள் போல் ஏறின. இன்னும் சில மனிதன் போன்று இருந்த உயிரினங்கள் கொரில்லாக்கள் போல் தரையிலேயே பாதுகாப்புத் தேடின. நாங்கள் ஆய்ந்து பார்த்ததில் 5 எதிரிகள் இறந்திருந்தனர். நியாண்டர்தாலைத் தவிர. அவனது தடித்த மண்டை ஓட்டில் சிராய்த்ததால் அவன் அதிர்ச்சியாகி இருக்கிறான். நாங்கள் அவனை எங்களுடன் கப்பலுக்கு எடுத்துச் செல்லலாம் என்று எண்ணினோம். அதனால் அவனது கைகளை வார்களினால் பின் புறமாகக் கட்டினோம். அவன் கழுத்தில் ஒரு பட்டையைக் கட்டினோம். அவன் சுய நினைவு திரும்புவதற்குள். இவர்களை எல்லாம் திசை திருப்புவதற்காகத்தான் கப்பலில் இருந்தவர்கள் சுட்டிருக்கிறார்கள் என்று புரிந்து விட்டதால் நாங்கள் விட்டு வந்த மானின் உடலை நோக்கிச் சென்றோம். ஆனால் அங்கு மானைக் காணவில்லை. திரும்பிச் செல்லும் வழியில் நானும் விட்லியும் மற்றவர்களை ஒரு நூறடி தூரம் முந்திச் சென்றோம் எதாவது இரை மாட்டாதா என்றெண்ணி. எங்கள் முதல் வேட்டை எங்களுக்குக் கிடைக்காத ஏமாற்றத்தில் வெறுத்துப் போய் இருந்தோம். நானும் விட்லியும் மிக கவனமாக அடியெடுத்து வைத்து முன்னேறினோம். மற்றவர்கள் எங்களுடன் இல்லாததால் நாங்கள் இரண்டு பெரிய மறிமான்களை வேட்டை ஆடினோம் கப்பலுக்கு ஒரு அரை மைல் தூரம் இருக்கும் போது. எங்கள் வேட்டைப் பொருட்கள் மற்றும் கைதி கிடைத்த மகிழ்ச்சியில் கப்பலுக்குத் திரும்பினோம். அங்கு எல்லோரும் பாதுகாப்பாக இருந்தார்கள். கரையின் வட திசையில் கிட்டத்தட்ட இருபது காட்டு உயிரினங்களின் சடலங்கள் கிடந்தன. அவைகள் நாங்கள் இல்லாதபோது ப்ராட்லி மற்றும் அவனது கூட்டாளிகளைத் தாக்கிய கூட்டமாகும். அதன் மீதிக் கூட்டத்தைத்தான் நாங்கள் ஏற்கெனவே விரட்டி இருந்தோம். நாங்கள் அந்தக் காட்டு மனிதக் குரங்குகளுக்கு ஒரு பாடம் கற்பித்து விட்டோம் என்றுதான் எண்ணி இருந்தோம். அதனால் பிற்காலத்தில் பாதுகாப்பாக இருப்போம் என்று நினைத்திருந்தோம். குறைந்த பட்சம் அவைகளிடம் இருந்தாவது ஆபத்து வராது என்று நினைத்திருந்தோம். இருந்தாலும் எங்கள் கவனத்தை ஒரு மயிரிழை கூடக் குறைத்து விடக் கூடாது என்றும் முடிவெடுத்து இருந்தோம். ஏனெனில் இந்தப் புதிய உலகில் இன்னும் தெரியாத ஏகப்பட்ட பயங்கரங்கள் நிறைந்துள்ளன. மறு நாள் காலை நாங்கள் எங்கள் கூடார வேலைகளை ஆரம்பித்தோம். ப்ராட்லி நான் வான் ஸ்சோன்வர்ட்ஸ் ஓல்சன் மற்றும் லா ர்யூ முதல் நாள் இரவில் அதைப் பற்றி விவாதித்து தேவையான திட்டங்களை வரைந்திருந்தோம். அதற்காக எங்கள் ஆட்களை வேலை செய்ய முடுக்கி விட்டோம் மரங்களை வெட்டுவதற்கு. ஜர்ரா எனப்படும் எந்தவித பருவத்தையும் தாங்கக்கூடிய கடினமான காட்டு மூங்கில்களை இதற்காகத் தேர்ந்தெடுத்தோம். அவைகள் அங்கு நிறைய வளர்ந்திருந்தன. பாதிப் பேர் வேலை பார்க்க மீதிப் பேர் காவல் காத்தனர். ஒவ்வொரு மணி நேரமும் மாற்றிக் கொண்டோம். நண்பகல் ஒரு மணி நேரம் ஓய்வெடுத்துக் கொண்டோம். ஓல்சன் இப்போது எங்களை மேற்பார்வை பார்க்க நான் ப்ராட்லி வான் ஸ்சோன்வர்ட்ஸ் லா ர்யூ அனைவரும் மூங்கில்களை அடுக்கிக் கூடங்களின் வெளிப்புறச் சுவர்களையும் மேற் கூரைகளையும் உருவாக்கினோம். பகல் பொழுது முடிந்த பின் நிறைய மூங்கில் கழிகளைப் பிணைத்திருந்தோம் மறுநாள் கூடாரங்கள் செய்யத் தயாராய். நாங்கள் மிகவும் களைத்திருந்தோம். கூடாரங்கள் அடுக்கப்பட்டவுடன் கிட்டத்தட்ட விழுந்து விட்டோம். வான் ஸ்சோன்வர்ட்ஸ் தவிர. அவனுக்கு இந்த மாதிரி உடல் உழைப்பெல்லாம் பழக்கமில்லை. ஏன் என்று கேட்பதற்கும் நான் விரும்ப வில்லை. ஏனெனில் இது முழுக்க முழுக்க சுய விருப்பத்தின் பேரில்தான் நடந்தது. அவன் மத்தியானம் முழுவதும் ஜர்ரா மரத்தில் இருந்து கத்தி செய்து கொண்டிருந்தான். பின் லா ர்யூவிடம் பேசிக் கொண்டிருந்தான். ஆனால் அவனை இவள் ஒரு மனிதனாகக் கூட மதிக்கவில்லை. நேற்றுப் பார்த்த காட்டு மனிதர்களை நாங்கள் இன்று பார்க்கவில்லை. ஒரே ஒரு முறை மட்டுமே கேப்ரோனாவின் குடிகளால் ஆபத்து வந்தது. ஒரு பயங்கரமான பறவை வட்டமிட்டுக் கொண்டிருந்தது. சில குண்டு மழை பொழிந்தவுடன் பறந்து சென்று விட்டது. அது டெரோடாக்ட்டில் போல இருந்தது. அதன் பிரமாண்ட தோற்றமும் மூர்க்கமான விதமும் மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இன்னொரு சம்பவமும் நடந்தது. ஆற்றில் எங்களைத் தாக்கிய பல்லிகளை விட மோசம் என்றுதான் நான் சொல்வேன். இரண்டு ஜெர்மானியர்கள் விழுந்து கிடந்த மரத்தின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார்கள். வான் ஸ்சோன்வர்ட்ஸ் அவனுடைய கத்தி வேலையை முடித்திருந்தான். நாங்கள் இருவரும் அவர்கள் அருகே சென்றோம். அதில் ஒருவன் தான் வெட்டிய கிளையின் பகுதியைத் தூக்கிப் பின் புறம் எறிந்தான். அவனது போறாத காலம். அது நேராக வான் ஸ்சோன்வர்ட்ஸின் மூஞ்சியில் அடித்து விட்டது. நிச்சயம் அவனுக்கு வலித்திருக்காது. ஏனெனில் சிறு காயம் கூட ஏற்படவில்லை. இருந்தாலும் அவன் பயங்கர கோபத்தோடு கத்தினான். “இங்கே பாருங்கள்” என்று பலமாகக் கத்தினான். அந்த மாலுமிகள் உடனே விறைப்பானார்கள். அவர்களது அதிகாரியை நோக்கினார்கள். குதி கால்களை ஒன்றாக்கி சல்யூட் வைத்தார்கள். “பன்னி” என்று கர்ஜித்தான் வான். பின் அவனது மூஞ்சியில் ஓங்கி ஒரு குத்து விட்டான். அவன் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. நான் உடனே வான் ஸ்சோன்வர்ட்ஸை பிடித்துக் கொண்டேன். இன்னொரு அடி கொடுக்கு முன் அவனை அங்கிருந்து இழுத்துத் தள்ளி நிறுத்தினேன். ஆனால் அவன் என்னை ஒரு குச்சியை எடுத்து அடிக்க ஓங்கினான். அது இறங்கு முன் நான் அவனது வயிற்றில் எனது துப்பாக்கி முனையை அழுத்தினேன். நான் அந்தத் துப்பாக்கி விசையை அழுத்த எந்தக் காரணத்தையும் தேட மாட்டேன் என்பதை அவன் என் கண்களில் கண்டு கொண்டான். அவன் ஆட்கள் போலவும் எல்லா ரௌடிகள் போலவும் அவன் மனதளவில் கோழையாய் இருந்தான். அவன் குச்சியைக் கீழே போட்டுவிட்டுத் திரும்பிச் செல்ல எத்தனித்தான். ஆனால் நான் அவனைப் பிடித்து இழுத்து இது போல் இனி எப்போதும் நடக்கக் கூடாது என்று எச்சரித்தேன் அவனது ஆட்கள் முன்பே. யாரும் அடிபடக் கூடாது. நாம் ஏற்படுத்தி இருக்கும் நீதிமன்றத்தைக் கூட்டாமல் சட்டங்களைப் பின் பற்றாமல் யாரும் தண்டிக்கப்படக் கூடாது. அவ்வளவு நேரமும் அந்த ஜெர்மன் மாலுமி அப்படியே அசையாமல் விறைப்பாக நின்றான். அவனது முக பாவங்களில் இருந்து அவனுக்கு மிகவும் பிடிக்காதது எது என்று கண்டு பிடிக்க முடியவில்லை. அவனது அதிகாரி அவன் முகத்தில் அறைந்ததா இல்லை நான் அந்த கைசர் சந்ததிக்கு எடுத்துக் கொண்டிருக்கும் போதனையா? நான் சொல்லும் வரை அவன் அசையவே இல்லை. “நீ உனது அறைக்குச் சென்று உன் காயத்திற்கு மருந்து இட்டுக் கொள்.” என்றேன். பின் எனக்கு சல்யூட் அடித்து விட்டு அதே விறைப்புடன் யூ33 கப்பலை நோக்கிச் சென்றான். பொழுது சாயும் நேரத்திற்கு முன் வளைகுடாவில் இன்னும் உள்ளே போய்க் கரையில் இருந்து நூறடி தள்ளி நங்கூரம் பாய்ச்சினேன். அங்குதான் இன்னும் பாதுகாப்பாக இருக்கலாம் என்று நான் நினைத்தேன். ஆட்கள் இரவு முழுவதும் பாதுகாப்புப் பணியில் இருக்க வேண்டும் என்று விவரித்தேன். ஓல்சனை அந்த இரவுப் பணியின் தலைமை அதிகாரியாக நியமித்தேன். அவனது போர்வைகளையும் தேவையான அனைத்தையும் மேல் தளத்திற்கு எடுத்து வரச் சொன்னேன். அன்றிரவு நாங்கள் முதல் கேப்ரோனா மறிமானின் கறியைச் சுவைத்தோம். பச்சைக் காய்கறிக் கலவையும் சாப்பிட்டோம். சமையல்காரர் ஓடைக்குப் பக்கத்தில் கிடைத்தவை என்று சொன்னார். வான் ஸ்சோன்வர்ட்ஸ் முழுவதும் அமைதியாகவும் கடுகடுப்பாகவும் இருந்தான். சாப்பாடு முடிந்ததும் நாங்கள் அனைவரும் மேல் தளத்திற்குச் சென்று கேப்ரோனா இரவின் பழக்கமில்லாத காட்சிகளைக் கண்டோம் வான் ஸ்சோன்வர்ட்ஸ் தவிர. கேட்பதை விடக் காண்பது குறைவாகவே இருந்தன. நிலத்தின் உள் இருந்த பெரிய ஏரியின் பின்னால் இருந்து மிருகங்களின் சீற்றங்களும் கூக்குரல்களும் கேட்டபடி இருந்தன. எங்களுக்கு மேலே பிரமாண்டமான இறக்கைகளின் சிறகடிக்கும் சத்தங்கள் கேட்டன. கரையில் இருந்து வெப்ப மண்டலக் காடுகளின் பலவகையான குரல்கள் கேட்டவண்ணம் இருந்தன. அவைதான் பேலியோசோயிக் மீசோசோயிக் காலங்களில் இதே போன்ற கதகதப்பான வெப்ப மண்டலத்தில் ஒலித்திருக்க வேண்டும். ஆனால் இங்கே அந்தக் காலங்களைத் தாண்டிய குரல்களும் கலந்திருந்தன. சிறுத்தையின் சீற்றம் சிங்கத்தின் கர்ஜனை நரியின் ஊளை இடி போன்ற உறுமல் இவை அனைத்தும் என்றுமே பூமியில் கேட்கப்படாதவை. ஆனால் இன்று நாங்கள் இவைகளைச் சந்திக்கும் தருணம் வந்திருக்கிறது. எண்ணெய் ஊற்று ஒவ்வொருவராகத் தங்கள் அறைக்குச் செல்ல ஆரம்பித்தனர். இறுதியில் நானும் அவளும் மட்டுமே தனித்திருந்தோம். நான் மேலே இருப்பதால் ஓல்சனையும் சிறிது நேரம் நான் கீழே செல்ல அனுமதித்திருந்தேன். லா ர்யூ மிகவும் அமைதியாய் இருந்தாள். பதில் தேவைப்படும் என் அனைத்துக் கேள்விகளுக்கும் பொறுமையாய்ப் பதில் சொல்லியவண்ணம் இருந்தாள். அவள் நன்றாக இருக்கிறாளா என்று கேட்டேன். “ஆம்” என்று பதிலளித்தாள். ஆனால் இங்கு நிலவும் மோசமான நிகழ்வுகளால் நான் மிகவும் கலங்கி போயிருக்கிறேன். நான் மிகவும் சிறுமையாக உணர்கிறேன். இங்கு உலவும் பல்வேறு விதமான மூர்க்கத்தனமான கொடூரமான உயிரினங்களின் முன்னே நான் ரொம்பச் சின்னதாக உணர்கிறேன். உயிர் என்பது எவ்வளவு மலிவானது மதிப்பற்றது என்பதை இங்கு உணர்கிறேன். வாழ்க்கை என்பது ஒரு நகைச்சுவை, ஒரு கொடூரமான இறுக்கமான, நகைச்சுவை போல் இருக்கிறது. நீங்கள் ஒரு சிரிக்கத்தக்க பொருளாகவோ பயமுறுத்தும் பொருளாகவோ நீங்கள் சந்திக்கும் உயிரின் வலிமையைப் பொறுத்து இருக்கிறீர்கள். ஆனால் எந்தக் கணமும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. தொட்டிலில் இருந்து சுடுகாட்டுக்குத் தவ்வக்கூடிய ஒரு சின்ன சிரிக்கத்தக்க உயிர் நீங்கள். ஆம், அது நம் தவறுதான். நாமே நமக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்துக் கொள்கிறோம். ஆனால் கேப்ரோனாதான் அதற்கு நல்ல மருந்து கொடுக்க முடியும்." அவள் சற்று நிறுத்திச் சிரிக்க ஆரம்பித்தாள். “நீ ஒரு அழகான தத்துவத்தைச் சொல்லி இருக்கிறாய்” என்றேன் நான். “மனித நெஞ்சுக்குள் ஒரு ஏக்கத்தை நிறைக்கிறது. அது மிகவும் திருப்திகரமாகவும் முழுமையாகவும் இருக்கிறது. மேன்மை அடையச் செய்கிறது. முதல் மனிதன் இவைகளை எல்லாம் தாண்டி வெற்றிகரமாக வந்திருந்தான் என்றால் எவ்வளவு உன்னதமான நிலையை அடைந்திருப்பான்.” “எனக்கு முரண் பிடிக்காது” என்றாள். “அது ஒரு சின்ன உயிரைக் குறிக்கிறது” “‘தொட்டிலில் இருந்து சுடுகாட்டுக்குத் தவ்வக்கூடிய ஒரு சின்ன சிரிக்கத்தக்க உயிர்’ இதிலிருந்து வேறென்ன மாதிரியான உயிர் வரும் என்று நீ எதிர் பார்க்கிறாய்” என்று வினவினேன். “அப்படியே இருந்தாலும் பெரிய வித்தியாசமில்லை. உனக்கு என்ன பிடிக்கும் அல்லது பிடிக்காது? நீ இங்கு இருக்கப்போவது கொஞ்ச காலம்தான். நீ ரொம்பக் கவலை படக் கூடாது.” அவள் ஒரு சின்னப் புன்னகையோடு என்னைப் பார்த்தாள். “நான் ரொம்பப் பயந்திருக்கிறேன் சோகமாயிருக்கிறேன் என்று நினைக்கிறேன். எனக்கு வீட்டைப் பற்றிய நினைப்பாகவே இருக்கிறது. தனிமையாக உணர்கிறேன்.” அவள் அதை முடிக்கும் போது கிட்டத்தட்ட அழுது விட்டாள். அப்படி அவள் என்னிடம் பேசியது இதுதான் முதல்முறை. என்னையும் அறியாமல் நான் கம்பியில் வைத்திருந்த அவள் கை மீது என் கையை வைத்தேன். “உன் நிலைமை எவ்வளவு துன்பமானதென்று எனக்குத் தெரியும். ஆனால் நீ தனியாய் இருக்கிறாய் என்று எண்ண வேண்டாம். இங்கு ஒருவன் இருக்கிறான் இந்த உலகில் உனக்காக எதையும் செய்வதற்கு.” என்றேன் அப்பாவியாக. அவள் கையை விடுவிக்கவில்லை. கன்னங்களில் வழியும் கண்ணீரோடு என்னைப் பார்த்தாள். அவள் உதடுகள் உச்சரிக்கத் துடித்த நன்றிகளை அவள் கண்களில் காண முடிந்தது. பின் நிலவொளி வீசும் வினோதமான அந்த நிலப்பரப்பைப் பார்த்துப் பெருமூச்சு விட்டாள். அவளது புதுவிதமான தத்துவங்கள் அவள் காதுகளில் ரீங்கரிக்க அவள் தனக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விட்டாள் என்பது தெரிந்தது. நான் அவளை என் கைகளில் எடுத்து எவ்வளவு தூரம் காதலிக்கிறேன் என்பதைத் தெரிவிக்க நினைத்தேன். அதனால் அவளது கையைக் கம்பியில் இருந்து மெதுவாக எடுத்து அவளை என் பக்கம் இழுக்க ஆரம்பித்த அந்த நொடியில் தான் ஓல்சன் தனது படுக்கை மற்றும் விரிப்புகளை எடுத்துக்கொண்டு மடத்தனமாக மேல் தளத்தில் நுழைந்தான். மறுநாள் காலை நாங்கள் வெகு மும்முரமாக வேலை செய்ய ஆரம்பித்தோம். வேலை ரொம்ப நன்றாக முன்னேறியது. அந்த நியாண்டர்தால் மனிதனை ரொம்பவே கவனிக்க வேண்டியதாய் இருந்தது. அவனை எப்போதும் கம்பிகளுக்குப் பின்னே வைக்க வேண்டி இருந்தது. அவனை நெருங்கும் போதெல்லாம் அவன் மிகவும் காட்டானாகி விடுகிறான். ஆனால் கொஞ்ச நாள் கழித்து அவனும் பழகி விட்டான். அவனுக்கு ஏதேனும் மொழி இருக்கிறதா என்று கண்டுபிடிக்க முயற்சி செய்தோம். லிஸ் அவனுடன் பேச ரொம்ப நேரம் செலவழித்தாள். அவனுக்கு வரைந்து காண்பித்தாள். ஆனால் அதில் எந்தவித முன்னேற்றமும் கிட்டவில்லை. எங்களுக்குக் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் ஆகியது எல்லாக் கூடாரங்களையும் கட்டி முடிக்க. அவைகளை ஒரு குளிர்ந்த நீரோடைக்கு அருகில் கட்டி இருந்தோம் துறை முகத்தில் இருந்து இரண்டு மைல் தொலைவில். வேலி கட்டுவதில் ஒரு சின்ன மாற்றம் செய்தோம். அருகில் ஒரு கடல் பாறை கண்டோம். அதிலிருந்து நிறைய தட்டையான கட்டுமானக் கற்கள் கிடைத்தன. எனவே கூடாரங்களைச் சுற்றிலும் கற்சுவர்களை எழுப்பினோம். அது ஒரு சதுர வடிவில் இருந்தது. ஒவ்வொரு மூலையிலும் ஒரு கோட்டையும் கோபுரமும் இருந்தது. அங்கிருந்து எந்தப் பக்கமும் சுடுவதற்கு வசதியாக இருந்தது. அது வெளிப்புறத்தில் 135 சதுர அடியாக இருந்தது. மூன்றடி அகலமுள்ள கீழ்ச் சுவர். மேலே அது ஒன்றரை அடி அகலமாக இருந்தது. பதினைந்தடி உயரம் இருந்தது. அந்தச் சுவரைக் கட்ட நீண்ட நாட்கள் ஆயிற்று. நாங்கள் அனைவரும் அதைக் கட்ட உதவி செய்தோம் வான் ஸ்சோன்வர்ட்ஸ் தவிர. எங்களுக்குள் துப்பாக்கி முனையில் ஒப்பந்தம் ஏற்பட்ட அந்தச் சம்பவத்திற்குப் பின் அவன் என்னிடம் ஒரு வார்த்தை பேச வில்லை வேலை சம்பந்தமான பேச்சைத் தவிர. நாங்கள் தற்போது வேலையை முடித்திருந்தோம். இறுதிக் கட்ட வேலை இன்று நடந்து கொண்டிருந்தது. நான் கட்டட வேலையை ஒரு வாரத்திற்கு முன் விட்டுவிட்டு எங்களுக்கு நடந்த வினோதமான அனுபவங்களைத் தொகுத்து எழுதிக் கொண்டிருந்தேன். அதில் ஒரு சில சின்னத் தவறுகள் இருக்கலாம். ஏகப்பட்ட நிகழ்வுகள் நடந்து விட்டதால் என்றென்று நடந்தன என்பதில் சில குழப்பங்கள் வந்தன. இருந்தாலும் அவை மிகவும் சிறு தவறுகள்தான். நான் எழுதிய கடைசிச் சில பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருக்கும் போது லிஸ் நியாண்டர்தால் மனிதனுக்கு மொழி இருப்பதைக் கண்டுபிடித்து விட்டாள் என்பதை எழுத விட்டுவிட்டது தெரிந்தது. அவள் அதைப் பேசவும் தெரிந்து கொண்டாள். ஓரளவு நானும்தான். அவன் பெயர் யாம் என்று அவன் சொன்னான். இந்த நாட்டின் பெயர் கேஸ்பக் என்று சொன்னான். இது எவ்வளவு பெரிது என்று கேட்டதற்கு தன் இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி எல்லாவற்றையும் அடக்கியது என்பது போல் காட்டினான். அது கிட்டத்தட்ட இந்த அண்டம் முழுவதும் அடங்கும். அவன் இப்போது சொல்வதை புரிந்து கொள்வதால் நாங்கள் அவனை விட்டு விடலாம் என்று நினைத்தோம். அவன் தங்கள் ஆட்கள் எங்களை இனிமேல் தாக்க விட மாட்டேன் என்று சொன்னான். அவன் எங்களை காலுக்கள் என்று அழைத்தான். அவனும் இன்னும் கொஞ்ச காலத்தில் ஒரு காலுவாகி விடுவேன் என்றும் சொன்னான். அவன் என்ன சொல்ல வருகிறான் என்று முற்றிலும் புரியவில்லை. வடக்கில் இன்னும் நிறைய காலுக்கள் இருக்கிறார்கள் என்றும் அவனும் ஒரு காலு ஆனபின் அவர்களோடு சேர்ந்து இருக்கப் போவதாகச் சொன்னான். யாம் எங்களோடு நேற்று வேட்டையாட வந்தான். நாங்கள் சுட்ட மான்கள் வெகு எளிதாக கீழே விழுவதைப் பார்த்து மிகவும் ஆச்சர்யமடைந்தான். நாங்கள் மிகவும் செழிப்பான இடத்தில் வாழ்ந்து வந்திருக்கிறோம். யாம் எங்களுக்குப் பழங்கள் கிழங்குகள் மூலிகைகள் அனைத்தும் காண்பித்தான். வாரத்திற்கு இருமுறை புத்தம் புது இறைச்சியை நோக்கிச் சென்றோம். அதில் கொஞ்சமே கொஞ்சம் சேமித்து வைத்தோம். ஏனெனில் நாளை என்ன நடக்கும் என்று தெரியாது. எங்களுக்குத் தெரிந்த ஒரே உலர்த்தும் முறை புகைதான். இரண்டு தானிய வகைகளில் நிறைய அளவு உலர்த்தி வைத்திருந்தோம். அவைகள் சில மைல் தொலைவில் தெற்கில் நிறைய விளைகின்றன. அதில் ஒன்று பெரிய இந்திய மக்காச் சோளம். ஆண்டு முழுவதும் விளையக் கூடிய பெரிய தானியம். ஐம்பது அறுபது அடிகள் கூட வளரும். அதன் கருதுகள் கிட்டத்தட்ட ஒரு மனிதனின் உடம்பைப் போலவும் அதன் மணிகள் உள்ளங்கை அளவு இருக்கும். அதைச் சேமித்து வைக்க எங்களுக்கு இரண்டாவது கிடங்கு தேவை பட்டது. செப்டம்பர் 3, 1916: இன்றிலிருந்து சரியாக மூன்று மாதங்களுக்கு முன்னால் இதே கப்பலில் இருந்து வந்த ஒரு வெடிக்கண்ணி அமைதியாகப் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்கக் கப்பலில் இருந்த என் வாழ்வை இப்போது கேஸ்பக் கொண்டு வந்து விட்டிருக்கிறது. எங்களது விதியை ஏற்றுக் கொண்டு நாங்கள் எங்கள் வாழ்வைத் தொடர்ந்து கொண்டிருந்தோம். வெளி உலகை இனிமேல் எவரும் பார்க்க முடியாது என்ற முடிவுக்கு அனைவரும் வந்து விட்டோம். எங்களைப் போன்ற மனிதர்கள் இருக்கிறார்கள் என்று யாம் திரும்பத் திரும்ப வலியுறுத்தியதால் எங்களில் சிலருக்குத் தேடிப் பார்க்க வேண்டும் என்று தீராத ஆவல் ஊற்றெடுத்தது. ப்ராட்லியின் கீழ் சில பேரை நான் சென்ற வாரம் அனுப்பினேன். யாம் ஒரு சுதந்திர மனிதன் ஆகி விட்டபடியால் அவனும் அவர்களுடன் சென்றான். அவர்கள் மேற்கில் 25 மைல் தூரம் சென்றார்கள். செல்லும் வழியில் கொடூரமான விலங்குகளும் பல்லிகளும் குறுக்கிட்டன. ஆனால் மனிதர்கள் போன்ற உயிரினங்கள் எதுவும் தென்படவே இல்லை. ப்ராட்லியின் வாக்கு மூலம் இங்கே: முதல் நாள் பதினைந்து மைல் தூரம் சென்றோம். தெற்கு நோக்கிப் பாயும் ஒரு பெரிய நீரோடையின் கரையில் தங்கினோம். வேட்டைக்கு நிறைய விலங்குகள் இருந்தன. இதற்கு முன் அவைகளை கேஸ்பக்கில் பார்த்ததில்லை. கூடாரம் அமைக்க ஆரம்பிக்கு முன் முடி நிறைந்த காண்டா மிருகம் ஒன்று எங்களைத் தாக்க வந்தது. ப்ளெஸ்ஸர் அதை ஒரே குண்டில் வீழ்த்தி விட்டான். எங்களுக்கு மாலைச் நேர சிற்றுண்டியாக காண்டாமிருகக் கறி கிடைத்தது. யாம் அதை ஏடிஸ் என்றான். கோட்டையை விட்டுக் கிளம்பியதில் இருந்து கூடாரம் வரும் வரை எங்களுக்கு ஒரே தொடர்ச்சியான சண்டைதான். ஒரு மனிதனின் மனதில் இவ்வளவு எண்ணற்ற மாமிசம் உண்ணும் விலங்குகளைக் காண்பதரிது. அதே போல் அவைகளின் உணவுகளும் கணக்கிலடங்கா. இரண்டாவது நாள் அந்தப் பாறை அடிவாரத்தில் 10 மைல் தூரம் நடந்தோம். அடிவாரத்தில் இருக்கும் அடர்ந்த காடு வழியாகப் பயணித்தோம். மனிதன் போன்ற உயிரினங்களைப் பார்த்தோம். ஒரு கூட்டத்தில் கீழ் நிலையில் இருக்கும் மனிதக் குரங்குகள் இருந்தன. அதில் ஒரு வெள்ளை மனிதன் இருந்தான் என்று நமது ஆட்களில் சிலர் அடித்துச் சொன்னார்கள். முதலில் அவர்கள் எங்களைத் தாக்க நினைத்தார்கள். ஆனால் நமது துப்பாக்கிக் குண்டுகள் பொழிந்ததைப் பார்த்ததும் மனதை மாற்றி விட்டார்கள். அந்த மலைப்பாதையை எங்களால் முடிந்த அளவு அளந்து விட்டோம். மலை உச்சி மிகவும் செங்குத்தாக இருந்தது. கை பிடிக்கும் அளவோ இல்லை கால் வைக்கவோ உடைந்தோ துருத்திக் கொண்டோ எதுவும் கிடைக்கவில்லை. நாங்கள் அனைவரும் ஏமாந்துவிட்டோம். கடல் பரப்பையும் வெளி உலகையும் பார்க்கலாம் என்ற எங்கள் எண்ணத்தில் மண் விழுந்து விட்டது. அந்தப் பக்கம் எதாவது கப்பல் வந்தால் அவர்களின் கவனத்தை ஈர்க்கலாம் என்றும் எண்ணி இருந்தோம். எங்கள் தேடல் ஒரே ஒரு விஷயத்தைக் கண்டுபிடிக்க உதவியது. அதன் மதிப்பு மிகவும் கம்மிதான். இந்தப் பள்ளம் ஒரு காலத்தில் முழுவதும் தண்ணீர் சூழ்ந்திருந்தது. அதற்கான அசைக்க முடியாத காரணம் அந்த மலைப் பாறைகளின் முகங்களிலேயே இருக்கிறது. திரும்பி வருவதற்கு இரண்டு நாள் ஆகியது. வரும் வழியும் அதே போன்ற சாகச அனுபவங்கள் கிடைத்தன. நாங்கள் அனைவரும் சாகசங்களுக்குப் பழகி விட்டோம். அது கிட்டத்தட்ட சலித்து விட்டது. எங்களுக்கு எந்தவித இழப்போ இல்லை சுகவீனமோ ஏற்படவில்லை. ப்ராட்லியின் அறிக்கையைப் படித்தவுடன் எனக்குப் புன்னகைக்கத் தோன்றியது. அந்த நான்கு நாட்களில் ஒரு ஆப்பிரிக்க வேட்டைக்காரனின் வாழ்நாள் அனுபவங்களை விட அதிகமாய் அனுபவித்து விட்டான் என்பதில் ஐயமில்லை. இருந்தும் அவைகளைச் சில வரிகளில் சொல்லி விட்டான். ஆம் எங்களுக்குச் சாகசங்கள் பழகி விட்டன. யாராவது ஒருவராவது ஒரு தடவையாவது சாவைச் சந்திக்காமல் ஒரு நாள் கூடக் கழிவதில்லை. யாம் எங்களுக்குச் சில வித்தைகள் கற்றுக் கொடுத்தான். அது மிகவும் லாபகரமானதாக இருந்தது. எங்கள் குண்டுகளையும் சேமிக்க உதவியது. அதனால் அதை உணவிற்கோ அல்லது தற்காப்பிற்கோ மட்டுமே பயன்படுத்தலாம். பறக்கும் பெரிய பல்லிகள் தாக்கினால் பெரிய மரங்களின் அடியில் ஒளிந்து கொள்கிறோம். நிலத்தின் விலங்குகள் துரத்தும் போது மரத்தின் மேல் ஏறிக் கொள்கிறோம். டைனோசர்களின் மூளையிலோ தண்டுவடத்திலோ சுட்ட இரண்டு நிமிடமும் இதயத்தைச் சுட்ட ஐந்து நிமிடங்களும் அவைகளைத் திரும்பவும் சுடுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதையும் புரிந்து கொண்டோம். அவைகள் இறந்து விழுவதற்கு நேரம் ஆகிறது. வேறெந்த இடத்திலும் அவைகளைச் சுடுவது பயனற்றது. அவைகள் அதைக் கண்டு கொள்வதுமில்லை. அந்த அடிகள் அவைகளைக் காயப்படுத்துவதுமில்லை. கொல்வதுமில்லை. செப்டம்பர் 7, 1916: நான் கடைசியாக எழுதிய பின் நிறைய நடந்து விட்டது. ப்ராட்லி இன்னொரு தேடுதல் வேட்டைக்குக் கிளம்பி விட்டான் மலைப்பாறை நோக்கி. அவன் திரும்பி வரப் பல வாரங்கள் ஆகுமாம். அந்த அடிவாரத்தில் இருந்து மலையை அளப்பதற்கு வேறெதாவது வழி இருக்கிறதா என்று பார்க்கப் போயிருக்கிறான். அவனுடன் சிங்க்ளர் ப்ராடி ஜேம்ஸ் டிப்பெட் ஆகியோரும் சென்றார்கள். யாம் திடீரென்று காணவில்லை. அவன் சென்று மூன்று நாட்கள் ஆகி இருக்கும். ஆனால் மிகவும் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் ஸ்சோன்வர்ட்ஸும் ஓல்சனும் ஒரு 15 மைல் தூரத்தில் மணற் கல் பாறைகள் தாண்டி ஒரு இடத்தில் எண்ணெய் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். ஓல்சன் சொன்னான் அங்கு ஒரு எண்ணெய் ஊற்று இருக்கிறது என்று. ஸ்சோன்வர்ட்ஸ் அதைச் சுத்திகரிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறான் என்றும் சொன்னான். அவன் அதில் வெற்றி கண்டுவிட்டால் நாம் கேஸ்பக்கை விட்டு வெளியேறி நம் உலகைக் காண ஒரு வழி கிடைத்து விடும். அதை என்னால் நம்ப முடியவில்லை. சுவர்க்கத்தை கண்டது போல் நாங்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தோம். நாம் ஏமாறக் கூடாது என்று கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள். நான் லிஸ்ஸிடம் என் காதலைப் பற்றிப் பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுத்து கூற முயற்சி செய்தேன். ஆனால் அவள் காது கொடுத்துக் கேட்கவில்லை. அத்தியாயம் :௭ காதல் நெருப்பு அக்டோபர் 8, 1916: இதுதான் இந்தக் குறிப்பில் நான் எழுதவிருக்கும் கடைசிப் பதிவாக இருக்கும். இது எதாவது ஒரு நாகரிக மனிதன் கையில் கிடைக்கும் என்று வேண்டிக் கொள்கிறேன். என் உள் மனது என்ன சொல்கிறது என்றால் இதைத் என்னை தவிர வேறு யார் கண்ணிலும் படாது என்கிறது. அப்படியே பட்டாலும் அது எனக்குப் பயன்படாமலேதான் போகும். பறந்து விரிந்த பசிபிக் கடலை ஒட்டிய மலைப் பாறைகளின் மேல் நான் தனித்து இருக்கிறேன். குளிர்ந்த தென் காற்று என் எலும்பை உறைய வைக்கிறது. எனக்கு வெகு கீழே கேஸ்பக்கின் வெப்ப மண்டலத் தாவரங்கள் ஒரு பக்கமும் அண்டார்க்ட்டிக் கடலின் பனி மலைகள் இன்னொரு பக்கமும் இருப்பதைக் காண முடிகிறது. இப்பொது இந்தக் குறிப்புகளைக் கோட்டையில்டைனோசர் கோட்டை என்று பெயர் வைத்திருக்கிறோம் இருந்து கிளம்பும் வேளை நான் இதற்கென எடுத்து வந்த இந்த வெற்றிடக் குடுவையில் வைத்து அடைத்து இங்கிருந்து வெகு தூரத்திற்குப் பசிபிக் கடலில் வீசி எறிய முடியும். எந்தக் கடல் நீரோட்டம் கேஸ்பக் கரையை நனைக்கிறது என்று எனக்குத் தெரியாது. எனது குடுவையை யாராவது எடுப்பார்களா என்று என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. நாங்கள் எங்கிருக்கிறோம் என்ன கொடூரங்களை அனுபவிக்கிறோம் என்பதை வெளி உலகிற்குத் தெரியப்படுத்த ஒரு மனிதன் என்ன செய்ய முடியுமோ அதை அனைத்தையும் நான் செய்து விட்டேன். செப்டம்பர் 8 வாக்கில் நான் ஓல்சன் வான் ஸ்சோன்வர்ட்ஸ் மூவரும் எண்ணெய் ஊற்றுக்குச் சென்றோம். லிஸ்ஸும் எங்களுடன் வந்தாள். ஒரு அடிப்படைச் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் நாங்கள் எடுத்துச் சென்றிருந்தோம். நாங்கள் ஆற்றில் இன்னொரு 10 12 மைல் தூரம் சென்று அந்த எண்ணெய் ஓடையின் முகத் துவாரத்திற்கு அருகில் கப்பலை நிறுத்தினோம். அந்த ஓடை பெருமளவு எண்ணையைக் கடலில் கொட்டிக் கொண்டிருந்தது. இந்தப் பெரிய ஏரியை வேறு எப்படி அழைப்பதென்பது எனக்குப் புரியவில்லை. பின் நாங்கள் கரை ஏறி ஒரு 5 மைல் தொலைவு சென்றோம். அங்கு ஒரு சின்ன எண்ணெய் ஏரி இருந்தது. அதன் நடுவில் எண்ணெய் ஊறிக் கொண்டிருந்தது. அந்த ஏரியின் கரையில் ஒரு சிறிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வான் ஸ்சோன்வர்ட்ஸிற்கு நாங்கள் உதவினோம். அது நன்றாக இயங்கும் வரை அவனுடன் இரு நாட்கள் வேலை செய்தோம். அதன் பின் டைனோசர் கோட்டைக்குத் திரும்பினோம் ப்ராட்லி எங்களைக் காணாத கவலையுடன் தேடி வந்து விடுவானோ என்ற அச்சத்தில். கோட்டையில் எங்களை இறக்கி விட்டு யூ33 எண்ணெய்க் கிணறுக்குத் திரும்பி விட்டது. ஓல்சன் விட்லி வில்சன் லா ர்யூ நான் எல்லோரும் இறங்கி விட்டோம். வான் ஸ்சோன்வர்ட்ஸ் மற்றும் அவனது ஜெர்மன் கூட்டாளிகள் அனைவரும் எண்ணெய் சுத்திகரிப்பு செய்யக் கிளம்பி விட்டார்கள். மறு நாள் பிலெஸ்ஸர் மற்றும் இரண்டு ஜெர்மானியர்கள் கோட்டைக்கு வந்தார்கள். காட்டு மனிதர்கள் தங்களைத் தாக்கியதாகவும் பதில் தாக்குதலில் நிறைய குண்டுகள் செலவழிந்து விட்டதால் தங்களுக்கு குண்டுகள் தேவைப் படுவதாகவும் பிலெஸ்ஸர் சொன்னான். அதே போல் தங்களுக்கு உலர்ந்த இறைச்சியும் சோளமும் வேண்டும் என்றான் அவர்கள் சுத்திகரிப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருப்பதால் வேட்டையாட முடியவில்லை என்பதால். அவன் கேட்டதை எல்லாம் நான் கொடுத்து விட்டேன். அவன் செய்கைகளில் எந்தவித சந்தேகமும் படாமல். அதே நாள் அவர்கள் சுத்திகரிப்பு நிலையத்திற்குத் திரும்பி விட்டார்கள். முகாம் வாழ்வின் பல்வேறு கடமைகளில் நாங்கள் மூழ்கி விட்டோம். மூன்று நாட்கள் எந்த விதமான பெரிய மாற்றங்களும் நிகழவில்லை. ப்ராட்லி திரும்பவில்லை. வான் ஸ்சோன்வர்ட்ஸிடம் இருந்தும் எந்தவித பதிலுமில்லை. சாயந்திரம் நானும் லிஸ்ஸும் ஒரு கோட்டையின் மீது ஏறி இறுக்கமான மோசமான பழங்காலத்தின் கொடூர இரவு வாழ்வினைக் கவனித்துக் கொண்டிருந்தோம். ஒருமுறை கத்தி போன்ற பற்களையுடைய ஒரு மிருகம் கிட்டத்தட்ட அருகில் கத்தியது. உடன் அவள் என் அருகில் பயத்துடன் வந்தாள். அவள் உடல் என் மீது பட்டதும் இந்த மூன்று மாதங்களாய் அடக்கி வைத்திருந்த என் காதல் கட்டுக்களை உடைத்தது. அவளை என் கைகளில் சாய்த்து முகத்திலும் உதடுகளிலும் சரமாரியாக முத்த மழை பொழிந்தேன். அவள் தன்னை விடுவிக்க முயற்சி செய்யவில்லை. மாறாக அவளின் அன்புக் கரங்கள் என் கழுத்தைச் சுற்றி என் முகத்தை அவள் முகத்துக்கருகில் இழுத்துச் சென்றது. “நீ என்னை காதலிக்கிறாயா, லிஸ்?” என்று அழுது கொண்டே கேட்டேன். ஆமாம் என்பது போல் அவள் தலை என் நெஞ்சில் மோதியது. “சொல். லிஸ். வார்த்தையில் சொல். நீ எவ்வளவு தூரம் என்னை காதலிக்கிறாய் என்று சொல்.” என்று கெஞ்சினேன். இனிமையாக மெலிதாக சன்னமான குரலில் சொன்னாள். “எண்ணிப் பார்க்க இயலாத அளவுக்கு உன்னைக் காதலிக்கிறேன்” அப்போது என் இதயம் பேரானந்தத்தில் நிறைந்தது. அதை ஒவ்வொரு முறை நினைத்துப் பார்க்கும் போதும் அதே போல் நிறைக்கிறது. என் உயிர் பிரியும் வரையும் இதே போல் தொடரும். இனிமேல் நான் அவளைக் காணாமல் போக கூடும். நான் அவளை எவ்வளவு தூரம் நேசிக்கிறேன் என்பது அவளுக்குத் தெரியாமலும் இருக்கலாம். அவள் அதைக் கேள்விக்குள்ளாக்கலாம். சந்தேகப்படலாம். ஆனால் உண்மையாக சீராக காதல் நெருப்பில் என் இதயம் “எண்ணிப் பார்க்க இயலாத அளவுக்கு உன்னைக் காதலிக்கிறேன்” என்று சொன்ன அவளுக்காக எப்போதும் துடித்து கொண்டே இருக்கும். பாதுகாவலர்க்காக போடப்பட்டிருந்த அந்தச் சிறிய பலகையில் நாங்கள் நீண்ட நேரம் அமர்ந்திருந்தோம். ஒரு கோட்டைக்கு ஒருவர்க்கு மேல் காவல் தேவைப்படாது என்று நினைத்திருந்ததால் அந்த இருக்கை காலியாக இருந்தது. ஒரே நேரத்தில் கடலில் விசிறி அடிக்கப்பட்ட நேரத்தில் இருந்து கடந்த மூன்று மாதங்களாக நாங்கள் பழகிய போது ஏற்பட்ட புரிதலை விட அந்த இரண்டு மணி நேரத்தில் நாங்கள் எங்களை முழுமையாகப் புரிந்து கொண்டிருந்தோம். முதலில் இருந்தே அவள் என்னைத்தான் காதலித்ததாகவும் வான் ஸ்சோன்வர்ட்ஸை விரும்பவில்லை என்றும் சொன்னாள். அவளது அத்தையினால்தான் தங்களது நிச்சயதார்த்தம் சமூக காரணங்களுக்காக நடத்தப்பட்டது என்றும் தெரிவித்தாள். அதுதான் என் வாழ்வின் மிக மகிழ்ச்சியான மாலைப் பொழுது. இதே போல் வேறெதுவும் அமையாது. மகிழ்ச்சியின் உண்மையான குணத்தைப் போல அன்றும் அது முடிவுக்கு வந்து விட்டது. கோபுரத்தில் இருந்து இறங்கி அவளது அறைக்கு செல்லும் முன் மீண்டும் ஒரு முத்தம் கொடுத்தேன். பின் அவளது அறைக் கதவை பூட்டி கொண்டாள். கோட்டைத் தகர்ப்பு நான் என் அறைக்குச் சென்றேன். அங்கு நாங்கள் கொன்ற ஒரு மிருகத்தின் கொழுப்பில் இருந்து தயாரித்த மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் அமர்ந்து கொண்டேன். இறுதியில் உறக்கம் என்னைத் தழுவியது. மகிழ்ச்சியான கனவுகள் வந்தன. அதில் எதிர்காலம் பற்றிய திட்டங்கள் தீட்டிக் கொண்டிருந்தேன். இந்த காட்டுமிராண்டித்தனமான கேஸ்பக்கிலும் என்னவளை நான் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டுமே. நான் எழுந்தபோது நன்றாக விடிந்திருந்தது. இன்று வில்சனுக்குத்தான் சமையல் பொறுப்பு. அதனால் அவன் சமைத்துக் கொண்டிருந்தான். மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். நான் அந்த ஓடையில் குளிக்கலாம் என்றெண்ணி நாப்ஸுடன் சென்றேன். எப்போதும் போல் துப்பாக்கி மற்றும் சுழல் துப்பாக்கி இரண்டையும் எடுத்துச் சென்றேன். ஆடை களைந்து எந்தவிதத் தொந்தரவும் இல்லாமல் நன்றாகக் குளித்தேன். அப்போது ஒரு கழுதைப் புலி வந்தது. முகாமிற்கு வடக்கில் உள்ள மணல் பாறைகளுக்குப் பக்கத்தில் இதே போல் நிறைய இருக்கின்றன. இந்த மிருகங்கள் மிகப் பெரியவை. மிகவும் மூர்க்கமானவை. அவைகள் வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் இருந்த குகைக் கழுதைப் புலி போலவே இருந்தன. அது நாப்ஸைத் துரத்தியது. கேப்ரோனாவின் அனுபவங்களில் இருந்து பலத்தை விடப் புத்தியை பயன்படுத்தத் தெரிந்திருந்தது அதற்கு. அதனால் நாப்ஸ் உடன் ஆற்றுக்குள் தவ்வி விட்டது எனதருகில். அது பின்னர் கோபமாகக் குரைத்துத் தன் வெறியைத் தீர்த்துக் கொண்டது. ஆனால் அது ஒரு பெரிய மத யானையைப் பார்த்துச் சிரிப்பது போன்றதாகும் அந்தக் கழுதைப் புலியைப் பொறுத்தவரை. அதன் பின் அந்த மிருகத்தை நான் சுட்டேன். நாப்ஸ் அதன் கறியைச் சுவைத்துக் கொண்டிருந்தது நான் உடை மாற்றிக் கொண்டிருக்கும் வேளை. அது பச்சைக் கறியை உண்ணப் பழகி இருந்தது எங்களுடன் பல முறை வேட்டையாடிய பழக்கத்தில். எப்போதும் அதற்கு மிச்சம் மீதியைக் கொடுப்போம். நாங்கள் திரும்பி வந்தபோது விட்லியும் ஓல்சனும் எழுந்து ஆடை மாற்றி இருந்தனர். நாங்கள் அனைவரும் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டோம். லிஸ் ஏன் இன்னும் வரவில்லை என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். ஏனெனில் அவள்தான் எப்போதும் முதலில் எழுபவள் இந்த முகாமிலேயே. அவளுக்கு எதாவது உடல் நலமில்லையோ என்ற பதட்டத்தில் ஒன்பது மணிக்கு அவள் அறைக் கதவைத் தட்டினேன். எந்தப் பதிலும் இல்லை. பிறகு என் முழு பலத்துடன் அறைக் கதவில் மோதினேன். கதவு உடைந்ததும் உள்ளே சென்று பார்த்தால் அவளைக் காணவில்லை. அவளது உடை நேற்றிரவு படுக்கைக்கு செல்லுமுன் போடப்பட்ட அதே இடத்தில இருந்தன. ஆனால் அவள் இல்லை. நான் பயந்து விட்டேன் என்று சொல்வது மடத்தனம். அவள் இந்த முகாமில் இல்லை என்பது புரிந்தாலும் ஒவ்வொரு சதுர அடியையும் அலசினேன். இருந்தாலும் பயனில்லை. விட்லிதான் முதல் குறிப்பைக் கண்டுபிடித்தான். ஒரு பெரிய மனிதன் போன்ற கால் தடம் ஓடைக்கருகில். அந்தச் சகதியில் சிறு சண்டை நடந்ததற்கான தடயங்களும் இருந்தன. பின் ஒரு சின்ன கைக்குட்டை வெளிப்புறச் சுவரில் இருந்தது. லிஸ் களவாடப்பட்டிருக்கிறாள் என்பது தெளிவாகப் புரிந்தது. மனிதக் குரங்குக் கூட்டத்தில் எதோ ஒன்று கூடாரத்தில் நுழைந்து லிஸ்ஸைக் கடத்திச் சென்று இருக்கிறது. கிடைத்த ஆதாரங்களை எல்லாம் பார்த்துத் திகைத்துப் பயந்து போய் இருந்த பொழுது, பெரிய ஏரியின் திசையில் இருந்து மெல்லக் கூடிக் கொண்டே செல்லும் ஒரு ஒலி கிரீச்சென்று முடிந்தது. நாங்கள் அனைவரும் மேலே பார்த்தோம் ஏனெனில் அந்த ஒலி எங்களுக்கு மேலேதான் வந்தது. சிறிது நேரத்தில் ஒரு பெரிய வெடிச் சத்தம் கேட்டது. எங்களைத் தூக்கி போட்டது. எழுந்து பார்க்கும் போது மேற்கு வாயிலின் பெரும்பகுதி சிதறிக் கிடந்தது. ஓல்சன்தான் தன் தூக்கக் கலக்கத்தில் இருந்து மீண்டு அங்கு என்ன நடந்தது என்பதை விளக்கினான். “வெடிகுண்டு” என்று கத்தினான். கேஸ்பக்கில் வேறெங்கும் வெடிகுண்டு கிடையாது நமது யூ33 ஐ தவிர. அந்தக் கேவலமான ஜெர்மன் நாய்கள் நம் கோட்டையைத் தாக்கிக் கொண்டிருக்கின்றன. வாங்க போகலாம்" என்று கத்தினான். பின் சுழல் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு ஏரியை நோக்கி ஓடினான். இரண்டு மைல்களுக்கு மேல் இருக்கும். இருந்தாலும் துறைமுகம் வரும்வரை நாங்கள் நிற்கவே இல்லை. அங்கு வந்த பின்னும் எங்களால் ஏரியைப் பார்க்க முடியவில்லை பாறைகள் நடுவில் இருந்ததால். வேகமாக துறை முகத்தின் கீழ் விளிம்பை நோக்கி ஓடினோம். தட்டுத்தடுமாறிப் பாறைகளில் ஏறி இறுதியில் ஏரியின் முழு வடிவமும் தெரியும் வரை சென்றோம். கரைக்கு மிக தூரத்தில் ஆற்றில் அதன் வழியாகத்தான் இந்த ஏரியை அடைந்தோம் யூ33 இன் மேல் புறம் தெரிந்தது. அதன் மேலிருந்து கரும்புகை எழுந்தது. எண்ணெய்ச் சுத்திகரிப்பில் வெற்றி கண்டுவிட்டான் வான் ஸ்சோன்வர்ட்ஸ். அந்தக் கீழ்த்தரமான நாய் அவன் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையையும் மீறி விட்டது. இங்கு நம் விதியின் வழிக்கு விட்டு விட்டது. விட்டுச் செல்லும் வேளையில் நமக்குக் கொடுத்த அன்புப் பரிசுதான் இந்த வெடிகுண்டுத் தாக்குதல். இதை விட வேறு என்ன எதிர்பார்க்க முடியும் இந்த பிரஷ்யன் வான் ஸ்சோன்வர்ட்ஸிடமிருந்து. ஓல்சன் விட்லி வில்சன் நான் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நின்று கொண்டிருந்தோம். அவன் இவ்வளவு நம்பிக்கைத் துரோகியாய் இருப்பான் என்று கொஞ்சம் கூட நினைத்திருக்கவில்லை. ஆனால் இப்போது அவன் செய்ததை எங்கள் கண்களாலேயே கண்டு கொண்டு விட்டோம். கோட்டைக்குத் திரும்பியவுடன் உடைந்த சுவர்கள் அதை நிரூபித்த வண்ணம் இருந்தன. லிஸ்ஸைக் கடத்தியது யாராக இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தோம், எவனாவது பிரஷியனா இல்லை மனிதக் குரங்கினமா? வான் ஸ்சோன்வர்ட்ஸ் பற்றித் தெரிந்து விட்டதால் அவன் செய்திருந்தால் கூட நாங்கள் ஆச்சர்யப்பட்டிருக்க மாட்டோம். ஆனால் ஓடைக்குப் பக்கத்தில் இருக்கும் காலடித் தடங்களை வைத்துப் பார்க்கும் போது என்னவளைக் கடத்திச் சென்றது கேப்ரோனாவின் வளர்ச்சி அடையாத மனிதன் ஒருவன்தான் என்பது கண் கூடாகத் தெரிகிறது. அதுதான் நடந்திருக்கிறது என்று முழுமையாக நம்பிக்கை வந்தவுடன் நான் அவளைப் பின் தொடர்ந்து சென்று காப்பாற்றுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தேன். ஓல்சன் விட்லி வில்சன் மூவரும் என்னுடன் வருவதாகச் சொன்னார்கள். ஆனால் அவர்கள் இங்கே தேவைப்படுவதாக நான் சொன்னேன். ப்ராட்லியும் அவனது ஆட்களும் காணவில்லை. ஜெர்மானியர்களும் சென்று விட்டனர். அதனால் நமது படையை முடிந்த அளவு பாதுகாக்க வேண்டும் என்றேன். அத்தியாயம் :௮ கோடரி மனிதர்கள் மிகவும் சோகமாகப் பிரிய வேண்டிய சூழல். அதனால் அந்த மூவரிடமும் அமைதியாகக் கை குலுக்கினேன். நாங்கள் மதில் சுவர் தாண்டிக் காலடித் தடத்தை நோக்கிச் சென்ற போது பாவம் நாப்ஸ் கூட மிகவும் மனம் உடைந்திருந்தது. அதன் பின் ஒரு கணம் கூட டைனோசர் கோட்டையைத் திரும்பிப் பார்க்கவில்லை. அதன் பின் பார்க்க வாய்ப்பு கிடைக்கவேயில்லை. அந்தத் தடங்கள் வடமேற்குத் திசையை நோக்கிச் சென்றது. கோட்டையின் வடக்கில் இருக்கும் மணல் கல் பாறைகளின் மேற்கு அடிவாரத்தில் முடிவடைந்தது. அங்கிருந்து பாதை மிகத் தெளிவாக இருந்தது. வளைந்து நெளிந்து வடக்கு நோக்கிப் பயணித்தது. இதுவரை நாங்கள் பார்த்திராத ஒரு நாட்டின் வழியே சென்றது. அது மிகவும் அழகாக அருமையாக இருந்தது. அங்கங்கே எப்போதாவது குறுக்கிடும் மணல் கற்பாறைகள் இருந்தன. பின் அடர்ந்த காடுகள் பார்த்துச் சலித்த நேரத்தில் பூங்காக்கள் உதயமாகி இருந்தன. அதனுள் பெரிய புல் வெளிகள் அதில் ஏகப்பட்ட விலங்குகள் மேய்ந்து கொண்டிருந்தன. சிவப்பு மான்கள், காட்டு ஆடுகள், மறி மான்களின் எண்ணற்ற வகைகள், குறைந்தது மூன்று வகையான குதிரை இனங்கள். குதிரைகள் கிட்டத்தட்ட நாப்ஸ் உயரத்தில் இருந்து 15 கைகள் உயரம் வரை இருந்தன. இவை அனைத்தும் நட்புடன் அங்கே மேய்ந்து கொண்டிருந்தன. நாப்ஸும் நானும் வரும் நேரத்தில் கூட அவை எந்தவித பயமும் கொள்ளவில்லை. எங்களுக்கு வழி விட்டு ஒதுங்கி நாங்கள் கடந்த பின் எங்களைத் திரும்பிப் பார்த்தன. பின் அவைகள் தங்கள் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டன. அந்த வழி இன்னொரு காட்டுக்குள் சென்றது. எதோ வெள்ளை நிறத்தில் இருந்த ஒரு இடத்தின் விளிம்பில் இருந்தது. அந்தச் சுற்றுப்புறத்தைக் காட்டிலும் மிக வித்தியாசமாக இருந்தது. அதை ஆராய்ச்சி செய்வதைச் சற்று நிறுத்தியவுடன் தெரிந்தது அது ஒரு மஸ்லின் துணி என்று. ஆடையின் விளிம்பைத் தைக்கப் பயன்படுத்தும் ஒரு துணி. அதைப் பார்த்தவுடன் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஏனெனில் லிஸ் இந்தப் பக்கமாகத்தான் கொண்டு செல்லப் பட்டிருக்கிறாள் என்பதற்கான தடயம் கிடைத்து விட்டது. அது நேற்றிரவு அவள் அணிந்திருந்த ஆடையின் ஒரு கிழிந்த துண்டு. அதைச் சுருட்டித் தூக்கி எறிந்து விட்டு முன்பை விட வேகமாகச் செல்ல ஆரம்பித்தேன். ஏனெனில் நான் சரியான பாதையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்பது உறுதி. மேலும் அவள் இதுவரை உயிரோடுதான் இருந்திருக்கிறாள். அன்று இருபது மைல் தூரம் நடந்து விட்டேன். நெடுந்தூரம் மலை ஏறவும் பழகி விட்டேன். அதனால் களைப்பே என்னைப் பார்த்து பயந்து விட்டது. முகாமிற்குப் பக்கத்தில் நிறைய வேட்டையாடிய அனுபவமும் கை கொடுத்தது. ஒரு டஜன் முறை அன்று எனக்குக் கொடூரமான விலங்குகளால் ஆபத்து ஏற்பட்டது வானிலும் நிலத்திலும். வடக்கு நோக்கிச் செல்லச் செல்ல டைனோசர்கள் கம்மியாகிக் கொண்டே வருவது நன்றாகத் தெரிந்தது. இருந்தாலும் ஒன்றிரண்டு அங்கங்கே இருந்தன. அசை போடும் விலங்குகளும் மாமிசங்களை உண்ணும் விலங்குகளின் எண்ணிக்கையும் மிக அதிகரித்தன. ஒவ்வொரு சதுர மைலிலும் கேஸ்பக் தனது திகிலைச் சேமித்து வைத்திருந்தது. அதன் பின் கொஞ்சம் விட்டு விட்டு மஸ்லின் துணியின் துண்டுகள் அங்கங்கே கிடைத்தன. அவைதான் எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தன. இரு பாதைகள் சேரும்போதும் ஒன்று இரண்டாய்ப் பிரியும் போதும் வழியில் மிகுந்த சந்தேகங்களை ஏற்படுத்தின. இரவு கவியும் வேளை நெருங்கிக் கொண்டிருந்தது. நான் இதுவரை பார்த்ததிலேயே மிகப் பெரிய மலைகளின் தெற்கு முனையை அடைந்து விட்டேன். அதை நெருங்கும் போது மரப்புகையின் வாசனை என் மூக்கைத் துளைத்தது. என்னவாய் இருக்கும்? என் மனதில் தோன்றியது ஒன்றே ஒன்றுதான். மனிதர்கள் பக்கத்தில் இருக்கிறார்கள். யாம் எனும் நியாண்டர்தால் மனிதனை விட மேலிருக்கும் இதுவரை பார்த்திராத இன்னொரு மனித இனமாக இருக்க வேண்டும். யாமாக இல்லாவிட்டால் வேறு யார் கடத்தி இருப்பார்கள் என்று இதுவரை பலமுறை நான் யோசித்திருக்கிறேன். மலையின் பக்கவாட்டில் மெதுவாக கவனமாகச் சென்றேன். மலையின் ஒரு பெரும்பகுதியை மிகப் பலம் வாய்ந்த யாரோ ஒருவன் உடைத்துப் பூமியில் போட்டது போல் இருந்த ஒரு பகுதியில் அது சட்டென்று முடிவடைந்தது. இப்போது மிகவும் இருட்டி விட்டது. பாறையின் விளிம்பில் நான் முன்னேறிக் கொண்டிருந்தேன். அப்போது கொஞ்ச தூரத்தில் ஒரு பெரும் நெருப்பு எறிந்து கொண்டிருந்தது. அதைச் சுற்றி நிறையப் பேர் இருந்தனர் மனிதர்கள் போன்று. நாப்ஸை அமைதியாக இருக்கச் சைகை செய்தேன். கேஸ்பக்கில் நுழைந்ததில் இருந்து என்னிடம் அது கீழ்ப்படிதலின் மகத்துவதில் மிகப் பெரும் பாடங்களைக் கற்றிருந்தது. அது சற்றுப் பதுங்கியது. ஒரு புதரின் பின்னால் மறைந்து கொண்டு பார்க்கும் போது அங்கு நெருப்பைச் சுற்றி யார் இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. அவைகள் மனிதர்கள் தான் ஆனாலும் இன்னும் மனிதர்களில்லை. யாமை விடச் சிறிது பரிணாம வளர்ச்சி அடைந்தவர்கள். நியாண்டர்தால் மனிதர்களுக்கும் க்ரிமால்ட்டி இனத்திற்கும் நடுவில் இருப்பவர்கள். கறுப்பினத்தவர்களின் உடம்பு வாகு இருந்தாலும் தோல் வெள்ளை நிறத்தில் இருந்தது. உடம்பிலும் கைகளிலும் பெரும்பாலும் சின்ன முடி வளர்ந்திருந்தது. அவர்கள் பெரும்பாலும் மனிதக் குரங்கு போலவேதான் இருந்தார்கள் யாமைப் போல் இல்லை. நியாண்டர்தால் மனிதர்களை விடக் கைகள் நீளமாக இருந்தன. மேலும் முதுகு நிமிர்ந்து இருந்தது. நான் அவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது அவர்கள் பேச்சில் இருந்து அவர்களுக்கு ஒரு மொழி இருப்பது தெரிந்தது. நெருப்பு பற்றிய புரிதல் இருந்தது. கையில் யாம் வைத்திருந்தது போன்று ஒரு கழி வைத்திருந்தார்கள். அது கிட்டத்தட்ட ஒரு கோடரி போல் இருந்தது. பரிணாமத்தில் மனித இனத்திற்கு வெகு கீழே இருந்தாலும் இதுவரை கேஸ்பக்கில் பார்த்த இடங்களை விட இவர்களே ஒரு படி மேலே இருந்தார்கள். ஆனால் என்னை அங்கு அதிகம் கவர்ந்த ஒரு உருவம் என்றால் அந்த மெலிந்த அழகான பெண்தான். ஒரு மெல்லிய மஸ்லின் துணி உடுத்தி இருந்தாள். அவளது முழங்கால்களைக் கூட அது மறைக்கவில்லை. கொஞ்சம் துணி கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. அவள் லிஸ். உயிரோடு இருக்கிறாள். எந்தவித பாதிப்பும் இல்லாமல். நீண்ட தாடையுடன் பெரிய உதடுகளுடன் கூடிய ஒரு பெரிய முரட்டு உருவம் அவள் தோளுக்கருகில் நின்று கொண்டிருந்தது. ரொம்பச் சத்தமாகப் பேசியது. அப்படிப் பேசும்போது காட்டுத்தனமாக உடம்பு குலுங்கியது. அவன் பேசியது கேட்கும் அளவு நான் அருகில் இருந்தேன். அந்த மொழி யாம் பேசியது போலவே இருந்தது. ஆனால் செறிவுள்ளதாக இருந்தது. நிறைய வார்த்தைகள் எனக்குப் புரியவில்லை. அவன் பேசியதன் நோக்கம் புரிந்தது. இந்தக் காலுவை நான்தான் பார்த்தேன். சிறைப் பிடித்தேன். அதனால் இவள் எனக்குத்தான். வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது. அதன் பிறகுதான் எனக்குப் புரிந்தது. அங்கு நடந்து கொண்டிருப்பது ஒரு எளிமையான திருமணச் சடங்கு என்பது. அங்கு கூடி இருந்தவர்கள் அதில் எந்தவித அக்கறையும் காட்டாமல் மந்தமாய் அவனைப் பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஏனெனில் அங்கிருப்பதிலேயே அவன்தான் மிகுந்த பலசாலியாய் இருந்தான். அவன் பேச்சிற்கு மறு பேச்சுச் சொல்ல அங்கு யாருமில்லை. அதனால் இடி போல் முழங்கினான். “நான் திசா. இது எனது அவள். திசாவை விட யாருக்கு அவளைப் பிடிக்கும்.” “எனக்கு” என்று யாமின் மொழியில் சொன்னேன். அதன் பின் நெருப்பின் வெளிச்சத்தில் அவர்கள் முன் வந்து நின்றேன். லிஸ் ஆனந்தத்தில் சிறிது அழுது கொண்டே என்னை நோக்கி ஓடி வந்தாள். ஆனால் திசா அவளது கையைப் பிடித்து இழுத்தான். “யார் நீ?” என்று கத்தினான் திசா. “நான் கொல்வேன். நான் கொல்வேன். நான் கொல்வேன்.” “இந்த அவள் எனக்குச் சொந்தம்” என்று நான் பதில் சொன்னேன். “அவளைக் கூட்டிச் செல்லத்தான் நான் இங்கு வந்தேன். அவளை அனுப்பாவிட்டால் நான் கொல்வேன்.” என்று சொல்லிவிட்டு எனது துப்பாக்கியை எடுத்து அவனது இதயத்தைக் குறி வைத்தேன். நான் எடுத்து நீட்டிய அந்த வினோதமான கருவியை அவன் அறிந்திருக்க நியாயமில்லை. அவன் எழுப்பிய ஒலி பாதி மனிதனாகவும் மீதி ஒரு காட்டு மிருகத்தின் உறுமல் போலவும் இருந்தது. அவ்வாறு கத்திக் கொண்டே அவன் என் மேல் பாய்ந்தான். அவன் இதயத்தைப் பார்த்து நான் சுட்டேன். அவன் அப்படியே சுருண்டு விழுந்தான். அதைப் பார்த்த அவன் இன மக்கள் பயத்துடன் மலைப் பக்கமாகத் தெறித்து ஓடினார்கள். லிஸ் கைகளை விரித்துக் கொண்டு என்னை நோக்கிப் பாய்ந்து வந்தாள். அவளை அப்படியே கட்டி அணைத்துக் கொண்டு இருக்கும் வேளையில் எங்களைச் சுற்றிப் பயமுறுத்தும் கூக்குரல்களும் உறுமல்களும் ஊளைகளும் கேட்கத் தொடங்கின. இந்தக் காட்டின் இரவு வாழ்க்கை ஆரம்பித்து விட்டது. கேஸ்பக்கின் இரவுகளைப் பயமுறுத்தும் கொடிய காட்டு விலங்குகள் தங்கள் இரையைத் தேட ஆரம்பித்து விட்டன. லிஸ் பெரிதாக அதிர்ந்து விசும்ப ஆரம்பித்தாள். “கடவுளே” என்று அழுதாள், “இவனுக்காக இதையெல்லாம் தாங்கிக் கொள்ளும் வலிமையை எனக்குக் கொடு!” அவள் உடைந்து விடுவாள் போல் தெரிந்தது. அன்று நடந்த பயங்கரங்களை எல்லாம் நினைத்து அழுதவளை என்னால் முடிந்த அளவு நான் தேற்றிக் கொண்டிருந்தேன். ஆனால் எனக்கே எதிர்காலம் நம்பிக்கைக்கு உரியதாக இல்லை. எங்களுக்கு அருகிலேயே சுற்றிக் கொண்டிருக்கும் அந்த பயங்கர இரவின் வேட்டைக்கார விலங்குகளிடம் இருந்து எவ்வளவு தூரம் தப்பிப் பிழைப்பது. அந்த மனிதக் கூட்டம் எங்கே என்று நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தப் பிரகாசமான நெருப்பின் ஒளியில் நன்றாகவே தெரிந்தது. அந்த மலையில் இருக்கும் பெரிய ஓட்டைகளின் மீது ஏறி இருந்தனர். “வா. லிஸ். நாம் அவர்களைப் பின் தொடர்வோம். இங்கு ஒரு அரை மணி நேரம் கூட நம்மால் இருக்க முடியாது. நாம் ஒரு குகையைக் கண்டுபிடிக்க வேண்டும்.” பசியால் வாடும் இரவு நேர அந்த மிருகங்களின் மின்னும் பச்சை நிற கண்களை ஏற்கெனவே காண முடிந்தது. எறிந்து கொண்டிருக்கும் நெருப்பில் இருந்து ஒரு குச்சியை உருவி இரவில் தூர எறிந்தேன். அந்த மிருகங்கள் ஒரு சேரக் கத்துவது கேட்டது. கொஞ்ச நேரம்தான் அவை அடங்கி இருந்தன. இருவரும் ஒரு தீப்பந்தத்தை எடுத்துக் கொண்டு மலைப் பாறையை நோக்கிச் சென்றோம். அங்கே அவர்கள் எங்களைக் கோபத்துடன் மிரட்டினார்கள். “அவர்கள் நம்மைக் கொன்று விடுவார்கள்” என்றாள் லிஸ். “வேறு எதாவது இடம் தேடுவோம்” “அங்கு வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் விலங்குகளை விட இவர்கள் நம்மை உறுதியாய்க் கொல்வார்கள் என்று சொல்ல முடியாது.” என்று பதிலளித்தேன். “இந்தக் குகையில் ஒன்றில் நான் தங்குமிடம் கேட்கிறேன். யாரும் அதைத் தடுக்க போவதில்லை” என்று சொல்லிக் கொண்டே மலை அடிவாரத்தை நோக்கி முன்னேறினேன். அங்கிருந்த ஒரு குகை வாசலில் இருந்த ஒரு பெரிய உருவம் கோடரியை உயர்த்திக் காட்டியது. “வா. நான் உன்னைக் கொன்று அவளை எடுத்துக் கொள்கிறேன்.” என்று உறுமியது. “திசாவுக்கு என்ன ஆனது என்று நீ பார்த்தாய் அல்லவா.” என்று அவன் மொழியிலேயே சொன்னேன். “இந்த இரவு பாதுகாப்பாக இருக்க அமைதியாக எங்களுக்கு இடம் கொடுக்கவில்லை என்றால் அது போலத்தான் எல்லோருக்கும் நடக்கும்.” “வடக்கே போ.” என்று கத்தினான். “காலுக்களுடன் சேர்ந்து வடக்கிற்குச் செல். நாங்கள் உன்னை ஒன்றும் செய்ய மாட்டோம். நாங்கள் ஒரு நாள் காலுவாகி விடுவோம். இப்பொழுது அல்ல. நீ எங்கள் இனத்தவன் கிடையாது. போகவில்லை என்றால் கொன்று விடுவேன். அவளுக்கு பயம் என்றால் அவள் வேண்டுமானால் இங்கே இருக்கலாம். நாங்கள் அவளை வைத்துக் கொள்கிறோம். ஆனால் அவன் கிளம்ப வேண்டும்” "இந்த அவன் கிளம்ப மாட்டான் என்று பதில் அளித்துக் கொண்டே சற்று முன்னேறினேன். கரடு முரடான வழித் தடங்கள் இயற்கையிலேயே உருவாகி இருந்தன. அவை மேலே உள்ள குகைகளுக்கு இட்டுச் சென்றன. யாரும் தடுக்கவில்லை என்றால் ஒரு மனிதன் மேலே செல்லலாம். ஆனால் காப்பாற்ற ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு இந்த அரை மனிதர்களை எதிர்த்து மேலே ஏறுவதென்பது முடியாத காரியம். “எனக்கு உன்னைப் பார்த்துப் பயமில்லை” என்று கத்தினான் அவன். “நீ திசாவுக்குப் பக்கத்தில் இருந்தாய். நான் மிக தூரத்தில் இருக்கிறேன். அவனைக் கொன்றது போல் என்னையும் உன்னால் கொல்ல முடியாது. ஓடிப் போய் விடு” கடைசிப் படியில் நின்று கொண்டு சிறிது மேலே ஏறினேன் லிஸ்ஸையும் என் பக்கத்தில் இழுத்துக் கொண்டு. ஏற்கெனவே பாதுகாப்பாக உணர்ந்தேன். இன்னும் சற்று நேரத்தில் அந்தக் கொடூர விலங்குகளிடம் இருந்து முற்றிலும் விடுதலை கிடைத்து விடும். கோடரியைத் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு எங்களுக்கு மேலிருந்த மனிதன் சற்று எட்டிப் பார்த்தான். அவனது இடம் அவனுக்கு மிக பாதுகாப்பாக இருந்தது என்று அவன் நினைத்தான் போலிருக்கிறது. அதனால் ஒவ்வொரு அடியையும் அவன் நம்பிக்கையோடு எடுத்து வைத்தான். எனக்கு விருப்பமில்லை. இருந்தாலும் வேறு வழி தெரியவில்லை. அதனால் திசாவைச் சுட்டது போல் அவனையும் சுட்டேன். “பாருங்கள்” என்று அவர்களிடம் கத்தினேன். “நீங்கள் எங்கிருந்தாலும் என்னால் கொல்ல முடியும். பக்கத்தில் இருந்தாலும் தூரத்தில் இருந்தாலும் ஒன்றுதான். நாங்கள் அமைதியாகவே உங்களிடம் வருகிறோம். நீங்கள் எங்களை ஒன்றும் செய்யவில்லை என்றால் நானும் ஒன்றும் செய்ய மாட்டேன். நாங்கள் மேலே இருக்கும் ஒரு குகையை எடுத்துக் கொள்கிறோம். சொல்லுங்கள்” “சரி. வாருங்கள்.” என்று ஒருவன் சொன்னான். “நீ எங்களைத் துன்புறுத்தவில்லை என்றால் வரலாம். திசாவின் குகை உனக்கு மேலே இருக்கிறது. எடுத்துக் கொள்.” அந்த உருவம் எங்களுக்கு ஒரு கருங்குகையின் வாயிலைக் காண்பித்தது. அப்படிக் காட்டும்போதும் எச்சரிக்கையாய்த் தள்ளியே நின்றது. உள்ளே ஊர்ந்து சென்று ஆராய்ந்து கொண்டிருக்கும் போது லிஸ்ஸும் பின்னாடியே வந்தாள். நான் தீக்குச்சி வைத்திருந்தேன். அதில் ஒன்றைப் பொருத்திப் பார்த்தபோது தட்டையான கூரையும் தரையும் உடைய ஒரு சின்ன குகை தெரிந்தது. வெகு காலத்திற்கு முன் கூரையின் ஒரு பகுதி உடைந்து விழுந்திருந்தது. அங்கு குவிந்திருந்த கற்கள் அதற்குச் சாட்சியங்களாய் இருந்தன. மேலோட்டமாகப் பார்த்தாலே நன்கு விளங்கும் அந்த குகை வாழ்வதற்கு ஏற்றார் போல் மாற்றுவதற்கு யாரும் மெனக்கெடவே இல்லை என்று. அதைக் கூட்டிச் சுத்தம் செய்ய வேண்டும் என்று கூடத் தோன்றி இருக்கவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு உடைந்த பாறைகளில் பெரிதான கற்களை எடுத்து வாயிலின் முன் வைத்து அடைத்தேன். அப்படிச் செய்தபின் முற்றிலும் இருட்டு பரவியது. அதன் பின் லிஸ்ஸுக்கு ஒரு உலர்ந்த இறைச்சியைக் கொடுத்தேன். குகை வாயிலுக்குள் அமர்ந்து கொண்டு மனித இனம் தோன்றிய முதல் காலத்தில் எங்கள் மூதாதையர்கள் சிலர் உண்பது போல் உண்டு கொண்டிருந்தோம். கீழே வெகு தொலைவில் அந்த இரவின் கொடூர சத்தங்கள் எங்கள் காதுகளைக் கிழித்துக் கொண்டிருந்தன. இன்னும் எரிந்து கொண்டிருந்த அந்தப் பெரு நெருப்பின் ஒளியில் பதுங்கிக் கொண்டிருக்கும் உருவங்களைப் பார்க்க முடிந்தது. கருப்பான பின் புறத்தில் எண்ணற்ற வெளிச்சம் நிறைந்த கண்கள். கல்லறை லிஸ் பெரு மூச்சு விட்டாள். நான் அவளது கழுத்தில் என் கையை சுற்றி என் பக்கத்தில் இழுத்து அணைத்துக் கொண்டேன். அப்படியே அந்த வெப்பமான இரவு முழுவதும் அமர்ந்திருந்தோம். அவள் தன்னைக் கடத்தியது பற்றிப் பயத்துடன் சொல்லிக் கொண்டிருந்தாள். இருந்தாலும் பாதுகாப்பாக வந்து சேர்ந்ததற்காக இருவரும் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டோம். அந்தப் பெரிய முரட்டு மிருகமும் ஆபத்து நிறைந்த வழிகளில் பயணிக்கப் பயந்ததால்தான் எல்லாம் நல்லபடியாக முடிந்திருக்கிறது. நான் வந்து சேர்ந்த நேரத்தில்தான் அவர்களும் அங்கு வந்து சேர்ந்தார்களாம். ஏனெனில் வரும் வழியில் பல முறை அவன் மரத்தின் மேல் ஏறித் தங்க நேர்ந்ததாம் பசியோடு சுற்றிக் கொண்டிருந்த சிங்கம் மற்றும் பட்டாக்கத்திப் பல் வைத்த புலியிடமும் மாட்டிக் கொள்ளாமல் இருக்க. இருமுறை வெகு நேரம் காத்திருக்க வேண்டியதாய்ப் போயிற்று அந்த மிருகங்கள் செல்லும் வரை. நாப்ஸ் மிகவும் கஷ்டப்பட்டு ஒன்றிரண்டு முறை உயிரைக் காப்பாற்றிக் கொண்டு எப்படியோ எங்களைப் பின் பற்றி வந்து விட்டது. இப்போது எங்களுக்கருகில் உறங்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் ஒரு சின்ன இறைச்சித் துண்டைச் சாப்பிட்டது மிகவும் மகிழ்ச்சியாக. அதுதான் முதலில் தூங்க ஆரம்பித்தது. நாங்களும் அதன் பின் உறங்கி இருப்போம் என்று எண்ணுகிறேன். ஏனெனில் எங்களுக்கும் மிகவும் களைப்பாக இருந்தது. துப்பாக்கியையும் குண்டுகள் பொருத்திய வாரையும் கழற்றி வைத்தேன். இரண்டும் என் அருகிலேதான் இருந்தன. துப்பாக்கியை என் தொடைக்கு அருகில் கைக்கெட்டும் தூரத்தில் வைத்துக் கொண்டேன். இருந்தாலும் எங்களுக்கு இரவில் எந்தத் தொந்தரவும் இல்லை. நான் எழுந்த போது தூரத்தில் தெரியும் மரங்களில் கதிரவன் கதிர்கள் மின்னியது. லிஸ்ஸின் கழுத்து என் நெஞ்சில் சரிந்திருந்தது. என் கை அவள் கழுத்தை சுற்றியே இருந்தது. சிறிது நேரத்தில் அவளும் எழுந்து விட்டாள். ஒரு கணம் சூழ்நிலையைப் புரிந்து கொள்ளவே சிரமப் பட்டாள். என்னைப் பார்த்தாள். என் கை அவள் மேல் இருப்பதைப் பார்த்தாள். அதன் பின் மிகவும் குறைவாக உடுத்தி இருந்த அவளது ஆடைகளைப் பார்த்ததும் சட்டென்று பின் வாங்கினாள். முகத்தை மூடிக் கொண்டு பயங்கரமாக வெட்கப்பட்டாள். அவளைத் திரும்பவும் இழுத்து முத்தமிட்டேன். பின் அவள் என்னை அணைத்துக் கொண்டு சின்ன விசும்பலோடு அழ ஆரம்பித்தாள் எதுவும் செய்ய இயலாத தன் இயலாமையை நினைத்து. ஒரு மணி நேரம் கழித்துத்தான் அந்த இன மக்கள் எழ ஆரம்பித்தார்கள். நாங்கள் எங்கள் மாளிகையில்லிஸ் அப்படித்தான் அந்த குகையை அழைத்தாள் இருந்து அவர்களைப் பார்த்தோம். ஆண்களோ பெண்களோ யாரும் உடைகளோ அணிகலன்களோ அணிந்திருக்கவில்லை. எல்லோருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான் இருக்கும். அங்கே குழந்தைகளே இல்லை. அது மிகவும் விநோதமாகவும் புரிந்து கொள்ள முடியாததாகவும் இருந்தது. கேஸ்பக்கின் இதை விட வளர்ச்சியடையாத மனிதக் கூட்டங்களைப் பார்த்திருக்கிறோம். எல்லா கூட்டத்திலும் முதியவர்களோ குழந்தைகளோ இல்லை என்பது இப்போதுதான் புரிந்தது. கொஞ்ச நேரத்தில் அவர்கள் எங்களைப் பார்த்துச் சந்தேகப்படுவது குறைந்திருந்தது. அந்த முரட்டுத்தனத்திலும் அவர்கள் எங்களிடம் நட்பாகவே இருந்தனர். எங்கள் ஆடைகளைத் தடவிப் பார்த்தார்கள். அவர்களுக்கு அது ரொம்பவும் பிடித்திருந்தது. எனது கைத்துப்பாக்கி சுழல் துப்பாக்கி மற்றும் இடுப்பு வாரில் இருந்த குண்டுகளை எல்லாம் ஆராய்ந்து பார்த்தார்கள். அவர்களிடம் வெற்றிடக் குடுவையைக் காண்பித்தேன். அதில் இருந்து தண்ணீரை ஊற்றியதும் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். நான் ஒரு ஓடையையே அதில் அடக்கி விட்டேன் என்று நினைத்தார்கள். எப்போதும் அதில் இருந்து நீர் வரும் என்று எண்ணி விட்டார்கள். அவர்களின் மற்றைய குணாதிசயங்களுக்கு நடுவில் நாங்கள் ஒன்றைக் கவனித்தோம். அவர்கள் எப்போதும் சிரிக்கவோ புன்னகைக்கவோ இல்லை. பிறகு யாம் கூட அப்படியேதான் இருந்தான் என்பதும் நினைவுக்கு வந்தது. யாமை இவர்களுக்குத் தெரியுமா என்று கேட்டேன். அவர்களுக்குத் தெரியாது என்று சொன்னார்கள். அதில் இருந்து ஒருவன் சொன்னான். “அங்கிருக்கும் போது ஒருவேளை தெரிந்திருக்கலாம்”. அவன் தன் தலையை தெற்குப் பக்கமாக திருப்பினான். “நீ அங்கிருந்துதான் வந்தாயா?” என்று கேட்டேன். அவன் ஆச்சர்யமாக என்னைப் பார்த்தான். “நாம் எல்லோருமே அங்கிருந்துதான் வருகிறோம்.” என்றான். “கொஞ்ச காலம் கழித்து நாம் அங்கு போகிறோம்.” என்று சொல்லிவிட்டு வடக்குப் பக்கமாகத் தலையைத் திருப்பினான். “காலுவாகலாம்” என்று முடித்தான். பல முறை கேட்டாயிற்று இதுவரை இந்தக் காலுவாகுவது பற்றி. யாம் நிறைய தடவை சொல்லி இருக்கிறான். இது ஒரு மத நம்பிக்கை என்று நானும் லிஸ்ஸும் நினைத்திருந்தோம். அவர்கள் தங்கள் சுயத்தைக் காப்பதற்காகவும் அடுத்த புனிதமான நிலைக்குச் செல்ல வேண்டியும் இப்படி ஒரு நடைமுறை வைத்திருக்கிறார்கள் என்று தோன்றியது. அது ஒரு அற்புதமான சடங்குதான். ஆனால் மொத்தமும் தவறு. இப்பொழுது எனக்குத் தெரிந்து விட்டது. அழகான அற்புதமான பெரிய உண்மையினைக் கண்டுபிடிக்க எவ்வளவு தூரத்தில் இருக்கிறோம் என்று தெரியவில்லை. பிரிக்கும் இந்த ஒரு விஷயத்தை. பிரமாண்டமான மலைப் பாறைகளால் சூழப்பட்டு யாருமே நுழைய முடியாதபடி நிலப்பரப்பில் பிரிக்கப்பட்டிருந்தாலும் மற்ற நாடுகளையும் கேஸ்பக்கையும் வேறுபடுத்தக் கூடிய அந்த உண்மையை இப்போதும் என்னால் யூகிக்கத்தான் முடியும். நாகரிக உலகிற்கு நான் திரும்ப முடிந்தால் அந்த மத குருமார்களுக்கும் மற்ற சாதாரண மனிதர்கள் அனைவருக்கும் பரிணாமவாதிகளுக்கும் வெகு காலம் சாப்பிடுவதற்கு நான் நிறைய இறைச்சியைக் கொண்டு வந்து கொடுத்திருப்பேன். காலை உணவை முடித்ததும் வேட்டையாடச் சென்றோம். பெண்கள் அனைவரும் ஒரு பெரிய குட்டைக்குச் சென்றனர். அதில் சூடான நீர் இருந்தது. பச்சை நிறத்தில் அழுக்கு படர்ந்திருந்தது. கோடிக்கணக்கில் தலைப்பிரட்டைகளும் இருந்தன. ஒரு அடி ஆழம் வரை சென்று சகதியில் நின்று கொண்டார்கள். அங்கே ஒரு இரண்டு மணி நேரம் வரை நின்று விட்டு மலைக்குத் திரும்பி விட்டனர். நாங்கள் அங்கிருந்த நாட்களில் தினமும் காலையில் இதே போல் நடந்தது. ஏன் அப்படி என்று கேட்டதற்கு அவர்கள் கூறிய பதில் எங்கள் அறிவுக்கு எட்டவே இல்லை. அவர்கள் உறுதிப் படுத்திய ஒரே வார்த்தை ‘அட்டா’ என்பது மட்டுமே. லிஸ்ஸையும் அவர்கள் அழைத்தனர். ஆனால் அவள் ஏன் மறுத்தாள் என்று புரியவில்லை அவர்களுக்கு. முதல் நாள் வேட்டைக்குச் செல்லும் போது கைத் துப்பாக்கியையும் நாப்ஸையும் லிஸ்ஸிடம் விட்டுச் சென்றேன். ஆனால் அவள் அதைப் பயன்படுத்தத் தேவை ஏற்படவே இல்லை. அந்தப் பெண்கள் அங்கு சென்றிருக்கும் போது எந்தவித மிருகங்களும் எப்போதும் தொந்தரவு செய்யவில்லை. எந்தக் காட்டு மிருகங்களின் கால் தடங்களும் அந்தக் குளக்கரையில் பதிந்திருக்கவில்லை. அந்தத் தண்ணீரும் குடிப்பதற்கு உகந்ததுமில்லை. அவர்கள் முழுவதும் ஒருவித சிறிய விலங்குகளை நம்பித்தான் வாழ்க்கை நடத்தினார்கள். பெரிய வட்டவடிவில் நின்று கொண்டு தங்களது கோடரியை எடுத்துக் கொண்டு விரட்டி வேட்டையாடுகிறார்கள். சிறிய குதிரைகளையும் மறிமான்களையும் நிறைய வேட்டையாடுகிறார்கள். பலவகையான பழங்கள் மற்றும் காய்கறிகளையும் உண்கிறார்கள். தேவைப்படும் அளவுக்கு மேல் எப்போதும் அவர்கள் எடுத்து வருவதில்லை. ஏன் கஷ்டப் பட வேண்டும். அங்கு வாழ்பவர்கள் உணவைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதே இல்லை. நான்காவது நாள் லிஸ் திரும்பிச் செல்ல வேண்டும் என்று நினைத்தாள். அதனால் மகிழ்ச்சியோடு வேட்டைக்குச் சென்றேன். எனக்கும் கோட்டையைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. ப்ராட்லி மற்றும் அவனது கூட்டாளிகள் தங்கள் தேடுதலில் இருந்து திரும்பி விட்டார்களா என்று அறிய வேண்டும் போல் இருந்தது. நாங்கள் இறந்து விட்டோம் என்று அவர்கள் முடிவெடுத்து இருப்பார்கள் இந்நேரம். அதனால் அந்த எண்ணங்களில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும். மேக மூட்டமாய் இருந்தாலும் வெப்பமாக இருந்தது எப்போதும் கேஸ்பக்கில் இருப்பது போல். சில மைல் தொலைவில் புயல் அடிக்கும் கடலில் குளிர் வாட்டும் என்று நினைக்கும் போதே விநோதமாய் இருந்தது. கேப்ரோனாவில் பனி பெய்து கொண்டிருக்கும். ஆனால் இந்த ஈரமான வெப்பம் மிகுந்த சூழ்நிலையைக் கொண்ட பெரும் பள்ளத்தைத் தாண்டி எந்தவிதப் பனியும் வந்து விடாது. மறிமான்களை வளைக்க வேண்டும் என்றால் வழக்கத்துக்கு மாறாகக் கொஞ்சம் அதிக தூரம் செல்ல வேண்டும். அவைகளை விரட்டுவதற்கு உதவி செய்து கொண்டிருந்த வேளை என் பின்னால் ஒரு இருநூறு அடி தூரத்தில் ஒரு செந்நிற மானைப் பார்த்தேன். அது நீண்ட புல் வெளிகளில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்திருக்க வேண்டும். என்னைப் பார்த்து எழுந்து வினோதமாக பார்த்தது. நான் எனது துப்பாக்கியை எடுத்துச் சுட்டேன். அது விழுந்தவுடன் ஓடிச் சென்று எனது மெல்லிய கத்தியை எடுத்துக் கொல்லச் சென்றேன். நான் அருகில் வந்தவுடன் அது எழுந்தது இன்னும் ஒரு இருநூறு அடி ஓடி இருக்கும். அதன் பின் இன்னொரு முறை சுட்டேன். திரும்பவும் அதே போல் ஓடியது. இறுதியில் அதன் கழுத்தை அறுத்துக் கொன்றேன். பின் நான் திரும்பி எனது கூட்டாளிகளைத் தேடினேன். அவர்கள் தூக்கிச் செல்வார்கள் என்ற நம்பிக்கையில். ஆனால் அவர்கள் யாருமே இல்லை. எனக்கு வெறுப்பாகி விட்டது. என்னால் தூக்கிச் செல்ல முடிந்தளவு வெட்டி எடுத்துக் கொண்டேன். பின் மலைப் பாறை நோக்கிச் செல்ல ஆரம்பித்தேன். ஒரு மைல் தூரம் சென்றவுடன் எனக்கு ஒரு உண்மை புலப்பட்டது. எனக்கு வழி தெரியவில்லை. முற்றாகத் தொலைந்து விட்டேன். வானம் இன்னும் முழுவதும் மேக மூட்டமாகத்தான் இருந்தது. வேறெந்தக் குறியீடுகளும் கண்களுக்குப் புலப்படவில்லை அதை வைத்து வீடு செல்வதற்கு. தெற்கு என்று நினைத்துக் கொண்டு ஒரு திசையில் சென்றேன். ஆனால் அது வடக்காகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் ஒன்று கூட பரிச்சயமானதாகத் தோன்றவில்லை. அந்த அடர்ந்த காட்டில் நான் ஒரு பொருளைப் பார்த்தேன். அதைப் பார்த்ததும் முதலில் ஒரு நம்பிக்கை வந்தது. பின் பெருத்த ஏமாற்றமும் விரக்தியும் வாட்டியது. அங்கு புதிதாய்த் தோண்டி மூடப்பட்ட ஒரு மணல் மேடு இருந்தது. அதன் மேல் தூவப்பட்ட பூக்கள் எல்லாம் வாடிப் போய் இருந்தன. அதன் ஒரு முனையில் ஒரு தட்டையான மணல் கல் பதிக்கப்பட்டிருந்தது. அது ஒரு கல்லறை. மனிதர்கள் வாழும் ஒரு இடத்தைக் கண்டுபிடித்து விட்டேன் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். நான் அவர்களைக் கண்டுபிடிப்பேன். அவர்கள் மலைப் பாறைகளுக்கு எப்படிச் செல்வது என்று சொல்லலாம். என்னை அவர்களுடைய இடத்திற்கும் கூட்டிச் செல்லலாம். அவர்கள் என்னைப் போலவே இருக்கலாம். அந்த ஒற்றைக் கல்லறையை அடைய நடந்து கொண்டிருக்கும் அந்தச் சில அடிகளில் எனது எண்ணங்கள் பறந்து விரிந்தது. அந்தக் கல்லில் எழுதப்பட்ட வாசகத்தைப் படித்ததும் தூக்கி வாரிப் போட்டது. இதுதான் அதில் எழுதி இருந்தது. டிரான்னோசாரசால் கொல்லப்பட்ட ஜான் டிப்பெட் இங்கு இருக்கிறான். 10 செப்டம்பர் 1916. RIP என்னால் நம்பவே முடியவில்லை. டிப்பெட் இந்த இருண்ட கானகத்தில் உறங்குகிறான் என்பதை என்னால் எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. அவன் இறந்து விட்டான். அவன் ஒரு நல்ல மனிதனாக இருந்திருக்கிறான். அவனது இழப்பு மட்டும் என்னை பாதிக்கவில்லை. ப்ராட்லியும் கூட இவ்வளவு தூரம் தனது தேடுதலில் வந்திருக்கிறான். அவனும் கூட காணாமல் போயிருக்கலாம். அவன் காணாமல் போக வேண்டும் என்பது எங்கள் விருப்பமல்ல. ஒருவனது கல்லறை இங்கு இருக்கிறதென்றால் மற்றவர்களது எலும்புகளும் இங்கே அருகிலேயே கிடைக்கக் கூடும். அத்தியாயம் :௯ ஈட்டி மனிதர்கள் அவ்வாறு நான் அந்த ஒற்றைக் கல்லறையின் முன் மண்டியிட்டுப் பயங்கரமான யோசனைகளில் ஆழ்ந்திருந்த போது நான் பின்னாலிருந்து பிடித்துத் தூக்கி நிலத்தில் வீசப்பட்டேன். அப்படி விழும்போது ஒரு கதகதப்பான உடம்பு என் மீது அமர்ந்து என் கை கால்களை முறுக்கியது. நான் பார்க்க முடிந்தபோது பெரிய உருவங்கள் சில என்னைப் பற்சக்கரத்தில் நசுக்குவது போன்று அழுத்திக் கொண்டிருந்தன. அவைகள் இன்னும் சற்று வித்தியாசமான மனித இனங்கள். இப்போது விட்டு வந்தவைகளை விடச் சற்றே உயர்ந்த பரிணாமத்தைச் சேர்ந்தவை. அவர்கள் உயரமானவர்களாகவும் இருந்தார்கள். அவர்களது கபாலங்களும் சிறந்த முறையில் இருந்தன. புத்திசாலித்தனமான முகங்கள் கொண்டதாகவும் இருந்தன. மனிதக் குரங்குகளின் அம்சங்கள் கம்மியாகவும் கறுப்பினத்தவர்களின் அம்சங்களும் கம்மியாக இருந்தன. அவர்கள் ஆயுதங்கள் வைத்திருந்தனர். கற்கள் பொறுத்தியிருந்த நீண்ட கம்புகள் கல்லாலான கத்திகள் கோடரிகள் வைத்திருந்தனர். அவர்கள் ஆபரணங்களும் அணிந்திருந்தனர். கோவணம் உடுத்தி இருந்தனர். சிலர் சிறகுகளைத் தலையில் அணிந்திருந்தனர். கோவணங்கள் ஒற்றைப் பாம்பின் தோலால் செய்தது. இறந்த பாம்பின் தலை கூட அவர்கள் முழங்கால் வரை தொங்கிக் கொண்டிருந்தது. இவ்வளவு நுணுக்கங்களும் அவர்கள் என்னைச் சிறை பிடிக்கும் போதே நான் கவனித்திருக்கவில்லை. அப்போது நான் வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி இருந்தேன். அவர்களில் மூன்று வீரர்கள் என் மேல் அமர்ந்திருந்தனர். அவர்களது உடல் பலத்தாலும் தடுமாற்றத்தாலும் என்னைப் பிடிக்க முயற்சி செய்தனர். அவர்களது கைகள்தான் முழுமையாக இதற்குப் பயன்பட்டது என்று உறுதியாக என்னால் சொல்ல முடியும். நான் பெருமைக்காக சொல்லவில்லை. ஆனால் என் பலத்தை நினைத்து நான் நிச்சயம் கர்வம் கொள்கிறேன். அதை உபயோகிப்பதற்கு நான் கற்று வளர்த்த அறிவியலை எண்ணியும் பெருமைப் படுகிறேன். அதுவும் குதிரை ஏறும் என் திறமையை நினைத்தும் எனக்குள் எப்போதுமே கர்வம்தான். இவ்வளவு மணி நேரங்களாய் அவர்கள் என்னை கவனித்து கொண்டிருக்கும் நேரத்தில் நான் எடுத்த பயிற்சி எனக்கு மூன்றே நிமிடங்களில் என் முதலீட்டின் முழு பலனையும் கொடுத்து விட்டது. கலிபோர்னியா மக்களுக்குப் பெரும்பாலும் ஜூஜிட்சு தற்காப்புக் கலை தெரியும். நான் அதில் பல வருடங்கள் படித்திருக்கிறேன் பள்ளிக் கூடத்திலும் லாஸ் ஏஞ்சல்ஸ் உடற்பயிற்சிக் கழகத்திலும். சமீபத்தில் ஒரு ஜப்பானியர்தான் என் குருவாக இருந்தார். அதில் அவர் மன்னர். அதில் ஒருவனின் முழங்கையை உடைப்பதற்கு எனக்கு 30 வினாடிகளே போதுமானதாய் இருந்தது. இன்னொருவனைக் கீழே தள்ளி அவர்களது ஆட்களுடன் சேர்ந்து விழ வைத்தேன். இன்னொருவனை கிட்டத்தட்ட என் தலைக்கு மேலே தூக்கி விசிறி எறிந்தேன். அவன் கீழே விழும்போது அவன் கழுத்து ஒடிந்து விட்டது. அவர்கள் ஆச்சர்யத்தால் வாயடைத்து நிற்கும்போது நான் எனது சுழல் துப்பாக்கியை எடுத்தேன். அது என் முதுகில் சாதாரணமாக வைத்திருந்தேன். எழுந்தவுடன் மீண்டும் தாக்க வருவார்கள் என்று நினைத்தது போலவே வந்தார்கள். அதனால் அதில் ஒருவனது நெற்றியில் சுட்டேன். அவர்கள் ஒரு கணம் நின்றார்கள். அவன் இறந்து விழுந்ததால் அல்ல. இதுவரை கேட்டிராத துப்பாக்கிச் சத்தம் கேட்டதால். இருந்தாலும் சமாளித்துக் கொண்டு திரும்பவும் தாக்க யத்தனித்தார்கள். அப்போது அவர்களது தலைவன் உரத்த குரலில் சொன்னான். அவன் பேசியது தெற்கு மனிதர்களின் மொழியை விட வளர்ச்சி அடைந்த மொழி. அவர்கள் பேச்சு யாம் பேசியதில் இருந்தும் வேறுபட்டிருந்தது. அவர்களைத் தள்ளி இருக்கச் சொல்லிவிட்டு என்னருகில் வந்து பேசினான். நான் யார் எங்கிருந்து வந்தேன் எதற்காக வந்தேன் என்று கேட்டான். நான் கேஸ்பக்கிற்குப் புதியவன் என்றேன். நான் வழி தவறி விட்டேன். என் நண்பர்களைக் கண்டுபிடிப்பது மட்டுமே என் நோக்கம் என்றேன். அவர்கள் எங்கே என்றான். நான் தெற்கில் எங்கேயே என்றேன் கேஸ்பக்கின் ஒரு வாக்கியத்தில். “ஆதியில் இருந்து” என்பதுதான் அதன் அர்த்தம். அவன் சொல்வதற்கு முன்பே அவனது ஆச்சர்யம் அவனது முகத்தில் தெரிந்தது. “அங்கே காலுக்களே கிடையாது” என்றான். “நான் சொல்கிறேன்” என்று கோபமாகச் சொன்னேன். “நான் வேறொரு நாட்டில் இருந்து வருகிறேன். கேஸ்பக்கில் இருந்து ரொம்ப தூரம் அது. இந்தச் செங்குத்துப் பாறைகளில் இருந்து மிக மிக தூரத்தில் இருந்து வந்திருக்கிறேன். எனக்கு காலு என்றால் யாரென்றே தெரியாது. நான் அவர்களைப் பார்த்ததே கிடையாது. வடக்கில் இவ்வளவு தூரம்தான் நான் வந்திருக்கிறேன். என்னைப் பார். எனது உடையையும் ஆயுதங்களையும் பார். எதாவது ஒரு காலுவோ அல்லது எந்த கேஸ்பக்கின் உயிரினமோ இதே போல் வைத்திருப்பதை நீ பார்த்திருக்கிறாயா?” அவன் பார்க்கவில்லை என்று ஒத்துக் கொண்டான். அவனுக்கு என் மேல் மிகுந்த ஈடுபாடு வந்துவிட்டது. எனது துப்பாக்கி, பின் மூன்று ஆட்களை நான் கையாண்ட விதம். நான் சொன்னதில் பாதி வரை நம்பி விட்டான். தலைக்கு மேல் தூக்கி வீசியது எப்படி என்று தனக்குச் சொல்லிக் கொடுத்தால் எனக்கு என் நண்பர்களைத் தேடுவதில் உதவி செய்வதாகவும் சொன்னான். “அடிக்கும் ஈட்டி” என்று அவன் சொன்ன ஒரு ஆயுதத்தைஎன் துப்பாக்கியை தனக்குப் பரிசளிக்க வேண்டும் என்றும் சொன்னான். எனது துப்பாக்கியை அவனுக்குக் கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டேன். சரியான பாதையை காட்டினால் அந்த விதையை மட்டும் கற்றுக் கொடுப்பதாக வாக்களித்தேன். அவன் அதை நாளை பார்க்கலாம் என்று கூறினான். இன்று மிகவும் தாமதமாகி விட்டதென்றும் நான் அவர்களின் கிராமத்திற்கு வந்து தங்க வேண்டும் என்றும் சொன்னான். எனக்கு அவ்வளவு நேரம் பிரிந்திருக்க விருப்பமில்லை. ஆனால் அவன் மிகவும் பிடிவாதமாய் இருந்தான். அதனால் அவனுடன் சென்றேன். இறந்து கிடந்த அந்த இருவரையும் அவர்கள் கொஞ்சம் கூட சீண்டவேயில்லை. கேஸ்பக்கில் உயிரின் மதிப்பே அவ்வளவுதான். இந்த மனிதர்களும் குகையில் வாழ்பவர்களாகவே இருந்தார்கள். ஆனால் அவர்களது குகைகள் புத்திசாலிகள் இடம்போலவே தெரிந்தது. "ஆதியில் இருந்து’ வந்தவர்களை விட கிட்டத்தட்ட நாகரிகம் அடைந்தவர்களாக இருந்தனர். குகையின் உட்புறத்தில் இருந்த குப்பைகள் எல்லாம் அகற்றப்பட்டிருந்தன. இருந்தாலும் சுத்தம் என்பதற்கு அருகில் கூட வர முடியாது. காய்ந்த புற்களைக் கொண்டு ஒரு மெத்தை போல் செய்திருந்தனர். அதன் மேல் சிறுத்தை காட்டுப் பூனை கரடிகளின் தோல்கள் பரப்பப்பட்டிருந்தன. வாயிலை மறைத்துச் சின்னச் சின்ன கற்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒரு சிறு வட்டவடிவில் கல்லால் ஆன அடுப்பும் இருந்தது. சுவற்றில் மணல் பாறையில் செய்யப்பட்ட ஓவியங்கள் இருந்தன. அதில் சிவப்பு மான்கள் பெரிய மிருகங்கள் புலிகள் மற்றும் சில மிருகங்களின் வடிவங்கள் இருந்தன. இதற்கு முன் பார்த்த இனங்களைப் போலவே இங்கும் குழந்தைகள் முதியவர்கள் இல்லை. ஆண்களின் பெயர் இரண்டாய் இருந்தது. அல்லது இரண்டு அசைச் சொற்கள் இருந்தன. அவர்களின் மொழியும் இரண்டு அசைச் சொற்கள் கொண்டிருந்தன. திசாவின் மொழியில் ஒரே அசை தான் இருந்தது. ஏடிஸ் காலு போன்ற சொற்களைத் தவிர எல்லாமே ஈரசைச் சொற்கள்தான். தலைவன் பெயர் தோஜோ. அவன் வீட்டில் ஏழு பெண்கள் இருந்தார்கள். அவர்கள் திசாவின் இருப்பிடத்தில் பார்த்தவர்களைக் காட்டிலும் அழகாய் இருந்தார்கள். அருவருப்பு கம்மியானவர்கள் என்று சொல்வதுதான் சரி என்று நினைக்கிறேன். அதில் ஒருத்தி கிட்டத்தட்ட அழகு என்றே சொல்லலாம். முடி கம்மியாக இருந்தாலும் தோல் நன்றாக இருந்தது. அவர்களுக்கு என்னை மிகவும் பிடித்து விட்டது. என்னிடம் இருந்த ஒவ்வொரு பொருளையும் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து விட்டார்கள். தடவிப் பார்த்தார்கள். மோந்து பார்த்தார்கள். அவர்களது மனிதர்கள் பாண்ட்லு என்று அழைக்கப்பட்டார்கள். ஈட்டி மனிதர்கள் என்று அர்த்தமாம். திசாவின் மனிதர்கள் ஸ்தோலு அல்லது கோடரி மனிதர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். பரிணாமத்தில் அதற்குக் கீழே போலு கழி மனிதர்கள், அதன் முன் ஆலுக்கள். அவர்களுக்கு ஆயுதங்களுமில்லை மொழியுமில்லை. அவர்கள் சொன்ன அந்த கடைசி வார்த்தைதான் கேப்ரோனாவில் நான் கண்டுபிடித்த மிகப்பெரிய விஷயம். தற்செயலானதா என்று தெரியவில்லை. பல லட்சக்கணக்கான வருடங்களாய்ப் பூமியின் மீது பேசப்பட்ட முதல் மொழியில் இருந்து வந்த அந்த வார்த்தையை நான் கேட்டேன். அது சிறிதாய் மாற்றம் அடைந்திருக்கலாம். கேப்ரோனா ஒரு பயங்கரமான மலையாய்ப் பலவிதமான உயிரினங்கள் செழித்து இருக்கும்போது அதன்மீது விடிந்து கொண்டிருக்கும் ஒரு புதிய இனத்தின் பழங்கால பாவின் மீதி இருக்கும் ஒரு நூலிழை அந்த வார்த்தைதான். கற்பனை செய்ய முடியாத அந்த நாட்களை இன்றோடு முடிச்சுப் போடுவது அதுதான். இவ்வளவு இருந்தாலும் அது வெறும் தற்செயலாகக் கூட இருக்கலாம். எனது உள் மனதும் அது தற்செயல் என்றுதான் நம்புகிறது. கேஸ்பக்கில் பேசாத முதல் மனிதன் ஆலு என்று சொல்லப்படுவது. வெளி உலகில் அவர்களை ஆலாலுக்கள் என்று சொல்கிறோம். நான் பேசிய அந்த அழகியின் பெயர் சோடா. அவள் என் மீது அவ்வளவு அன்பைக் கொட்டினாள். அதனால் தோஜோ அவளைக் கடிந்து கொண்டான். அவளைக் கீழே தள்ளி விட்டுக் குகையின் ஒரு ஓரத்தில் எத்தி விட்டான். அவளை உதைத்துக் கொண்டிருக்கும் போதே நான் அவர்களுக்கு நடுவில் சென்று நின்று கொண்டேன். சட்டென்று நான் அவனைப் பிடித்துக் கொண்டே தள்ளினேன். அதனால் அவன் கத்திக் கொண்டே வெளியே வந்தான். அவன் அவளை இனிமேல் எந்தக் காரணம் கொண்டும் துன்புறுத்தக் கூடாது என்று சத்தியம் வாங்கினேன். இல்லையென்றால் பெரும் தண்டனையாக இப்படியொரு வலிதான் மிச்சம் என்றேன். சோடா என்னை நன்றியோடு பார்த்தாள். ஆனால் மீதி இருக்கும் பெண்களும் அவனும் கடுகடுப்புடன் பார்த்தார்கள். சாயந்திர வேளை சோடா என்னிடம் வந்து சொன்னாள் அவள் இந்தக் குடியை விட்டுக் கிளம்பப் போகிறேன் என்று. “சோடா கூடிய சீக்கிரம் க்ரோலு” என்று மெதுவாகக் கிசுகிசுத்தாள். க்ரோலு என்றாள் என்னவென்று கேட்டேன். அவள் விளக்கம் கொடுத்தாள். ஆனால் அது என்னவென்று இன்னும் எனக்குப் புரியவில்லை. அவளின் சைகைகள் படி பார்த்தால் க்ரோலு என்பவர்கள் வில் அம்பு ஏந்தியவர்கள் என்றும் சமைப்பதற்குப் பாத்திரங்கள் வைத்திருப்பவர்கள் என்றும் குடிசையில் விலங்குகளுடன் வாழ்பவர்கள் என்றும் தெரிந்தது. அவள் சொன்னது மிகவும் துண்டு துண்டாகத் தெளிவற்றதாகத் தெரிந்தது. இருந்தாலும் சுருக்கமாகச் சொன்னால் க்ரோலுகள் பாண்ட்லுகளை விட வளர்ச்சி அடைந்தவர்கள். நான் கேட்டதை எல்லாம் நீண்ட நேரம் அசை போட்டுக் கொண்டே தூங்கி விட்டேன். இங்கிருக்கும் இனங்களுக்குள் இருக்கும் தொடர்பை அறிய முயன்று கொண்டிருந்தேன். ஒவ்வொரு இனமும் என்றோ ஒருநாள் காலுவாக ஏங்கிக் கொண்டிருக்கும் அந்தக் கனவின் விடையைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தேன். சோடா ஒரு யோசனை சொன்னாள். ஆனால் அதன் முடிவு ரொம்பக் கேவலமாய் இருக்கும் என்பதால் அதைக் கைவிட்டு விட்டேன். ஆனால் அது யாமின் நம்பிக்கையை ஒத்தே இருந்தது. கேஸ்பக்கில் நான் சந்தித்த வெவ்வேறு இனங்களில் நான் கண்ட பரிணாமத்தின் பல படிகள் ஒவ்வொரு இனத்திலும் இருக்கும் பல்வேறு நிலைகளுடன் ஒத்திருந்தது. ஒரு சிறு உதாரணமாக பாண்ட்லுகளுக்கு நடுவில் சோடா போன்றவர்கள் இருக்கிறார்கள். அவள் பரிணாமத்தில் மேலே இருக்கிறாள். தோஜோ கிட்டத்தட்ட மனிதக் குரங்கின் சாயலில் இருக்கிறான். இன்னும் சிலர் தட்டையான மூக்குகள் நீண்ட தாடை கொண்ட முகங்கள் முடிகள் அதிகமுள்ள உடம்புகள் என்று பல்வேறு தரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். இந்தக் கேள்வி மிகுந்த குழப்பத்தை உண்டாக்கியது. பூமியில் எங்கோ ஒரு மூலையில் இதற்கான பதில் கிடைக்கலாம். யாருக்குத் தெரியும். எனக்கு நிச்சயம் தெரியாது. மற்றொரு கல்லறை ஒரு பைத்தியக்காரன் அல்லது கஞ்சா அடித்தவன் பற்றிய கனவு கண்டு கொண்டே நான் உறங்கி விட்டேன். எழுந்த போது என் கை கால்கள் நன்றாகக் கட்டப்பட்டு இருந்தன. என் ஆயுதங்கள் எடுக்கப்பட்டு இருந்தன. என்னை எழுப்பாமலேயே எப்படி இதைச் செய்தார்கள் என்று என்னால் சொல்ல முடியாது. அது ரொம்ப அவமானாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. தோஜோ என் மேல் நின்றிருந்தான். காலைக் கதிர் மெல்லக் குகையில் ஊடுருவியது. “எப்படி ஒரு மனிதனை என் தலை மேல் தூக்கி வீசி எறிந்து அவன் கழுத்தை உடைப்பது என்று சொல். அதே போல் நான் உன்னைக் கொல்ல வேண்டும். அதற்கு முன் அதைச் சொல்லி விடு” என்று முழக்கமிட்டான். இதுவரை கேட்டிருந்த வெகுளியான பிரகடனத்தில் எல்லாம் இதுதான் மிகச் சிறந்தது. அது அவ்வளவு கேவலமாய் இருந்ததால் சாகப் போகும் நேரத்திலும் எனக்குச் சிரிப்பாய் வந்தது. இங்கே சொல்லியே ஆக வேண்டும். சாவு எனக்கு இப்போதெல்லாம் அவ்வளவு பயத்தைக் கொடுப்பதில்லை. மதிப்பில்லா மனிதர்களைப் பற்றிய லிஸ்ஸின் நிலையில்லா தத்துவத்திற்கு நான் அடிமை ஆகி விட்டேன். அவள் சொன்னது மிகவும் சரியென்பதை நான் உணர்ந்து விட்டேன். நாமெல்லாம் தொட்டிலில் இருந்து கல்லறை தாவும் நகைச்சுவையான உருவங்கள். நம்மையும் நமக்குப் பிடித்த சிலரை விட நமக்கு வேறு யாரிடமும் அவ்வளவு ஆர்வம் இருப்பதில்லை. தோஜோவின் பின்னல் சோடா நின்றிருந்தாள். அவள் தன் வலது உள்ளங்கையை விரித்தவாறு கையை நீட்டினாள். அது கேஸ்பக்கில் தலையை எதிர்மறையாகத் திரும்புவதாக அர்த்தமாம். “எனக்கு யோசிக்க நேரம் கொடு” என்று நேரம் கடத்த முயற்சி செய்தேன். தோஜோ அன்றிரவு வரை கெடு விதித்தான். ஒரு நாள் அதைப் பற்றி யோசிக்க அனுமதித்தான். அதன் பின் அவன் கிளம்பி விட்டான். அவனது பெண்களும் கிளம்பி விட்டார்கள் ஆண்கள் வேட்டையாடவும் பெண்கள் ஸ்தோலுவின் பெண்கள் போல் சூடான குளத்தில் குளிக்கவும். “ஆட்டா” என்றாள் சோடா. இந்தக் காலைச் சம்பிரதாயத்திற்கு என்ன அர்த்தம் என்று அவளிடம் கேட்டேன். அதைப் பின் சொல்கிறேன். அங்கே நான் இரண்டு மூன்று மணி நேரம் அப்படியே கட்டுண்டு கிடந்தேன். அதன் பின் சோடா குகைக்கு வந்தாள். அவளிடம் ஒரு கூர்மையான கத்திஎன் கத்தி இருந்தது. அதை வைத்து எனது கட்டை அறுத்தாள். “வா போகலாம்.” என்றாள். “காலுவோடு சேர்த்துவிட நான் வருகிறேன். பாண்ட்லுவை விட்டு நீங்கும் நேரம் சோடாவிற்கு வந்து விட்டது. இருவரும் சேர்ந்து க்ரோலுவிடம் செல்வோம். அதன் பின் காலுவிடம் செல்வோம். தோஜோ இன்றிரவு உன்னைக் கொன்று விடுவான். அவன் என்னையும் கொன்று விடுவான் உனக்கு நான் உதவி செய்தது தெரிந்தால். அதனால் இருவரும் சேர்ந்தே சென்று விடுவோம்.” “நான் உன்னுடன் வருகிறேன் க்ரோலுவிடம் சேர்வதற்கு.” என்றேன். “அதன் பின் நான் என் மக்களைச் சந்திக்க ‘ஆதியினை நோக்கி’”. “நீ திரும்பிப் போக முடியாது. அது தடை விதிக்கப்பட்டது. அவர்கள் கொன்று விடுவார்கள். இவ்வளவு தூரம் வந்து விட்டாய். திரும்பிச் செல்ல முடியாது” என்றாள். “நான் போயே ஆக வேண்டும்” என்று வற்புறுத்தினேன். “என் மக்கள் அங்கே இருக்கிறார்கள். நான் அங்கே சென்று அவர்களை இங்கே வரவழைக்க வேண்டும்” நான் வற்புறுத்த அவள் வற்புறுத்த பின் இருவரும் சமாதானமானோம். க்ரோலுவின் நாட்டு எல்லை வரை அவளை நான் கூட்டிச் செல்வதென்றும் அதன் பின் நான் என் மக்களைத் தேடிச் சென்று வடக்கில் பாதுகாப்பான இடத்தில் கொலை பாவம் செய்யாத மக்களைத் தேடிச் செல்வதென்றும் முடிவெடுத்தோம். என்னிடம் இருந்து பறிக்கப்பட்ட பொருட்களை எல்லாம் அவள் என்னிடம் திரும்பிக் கொண்டு வந்து கொடுத்தாள். துப்பாக்கி கத்தி குண்டுகள் வெற்றிடக் குடுவை அனைத்தும். அதன் பின் இருவரும் கைகோர்த்துக் கொண்டு மலைப்பாறையில் இருந்து இறங்கி வடக்கு நோக்கிச் சென்றோம். மூன்று நாட்களாய் நாங்கள் அதே வழியில் பயணித்துக் கொண்டிருந்தோம். அதன் பின் வேயப்பட்ட குடிசைகள் நிறைந்த ஒரு கிராமத்தில் விடியும் வேளை வந்து சேர்ந்தோம். சோடா தனியாகச் செல்வதாகக் கூறினாள். நான் அங்கிருக்க விருப்பம் இல்லை என்றால் உடனே சென்று விட வேண்டும் என்று கூறினாள். இல்லை என்றால் திரும்பிச் செல்வது தடை செய்யப்பட்டதென்று கூறினாள். அதனால் அவள் சென்று விட்டாள். அவள் மிகவும் அன்பானவள். அவள் மிகவும் விசுவாசமானவள் உறுதி மிக்க போராளி. ஒரு ஆண் போன்றவள். அவள் காட்டுமிராண்டியாக இருந்தாலும் கொஞ்சம் பக்குவப்பட்டவள். பரிசுத்தமானவள். தோஜோவின் மனைவியாக இருந்தவள். கேஸ்பக்கின் வினோத வழக்கத்தில் க்ரோலுகள் நடுவில் வேறொரு கணவனை தேர்ந்தெடுத்துக் கொள்வாள். ஆனால் நான் திரும்பி வரும்போது அவள் அவனை விட்டுவிட்டு என்னிடமே வந்து விடுவதாகச் சொன்னாள். ஏனெனில் என்னைத்தான் அவளுக்கு மிகவும் பிடித்திருப்பதாகச் சொன்னாள். ரொம்ப காலமாக வெட்கப்பட்டுக் கொண்டிருந்த நான் இன்று ஒரு பெண்கள் விரும்பும் மனிதனாகி விட்டேன். அந்த ஊரில் எந்த மாதிரி மனிதர்கள் வசிக்கிறார்கள் என்று கூடப் பார்க்காமல் எல்லையிலேயே அவளை விட்டுவிட்டு நான் இருள் குவிந்திருந்த தெற்கு நோக்கித் திரும்பி விட்டேன். பாண்ட்லு நாட்டின் எல்லையைத் தொட்டு விடக் கூடாது என்பதால் மேற்குப் பக்கமாகச் சிறிது விலகிச் சென்றேன் மூன்றாம் நாளன்று. தோஜோவைச் சந்தித்து அவனது சிறைப் பறவையாக மாற நான் விரும்பவில்லை. ஆறாவது நாள் ஸ்தோலுகள் இருந்த அந்த மலைச் சிகரத்தை நோக்கி வந்தேன். அதை நெருங்க நெருங்க என் இதயம் வேகமாக அடிக்கத் தொடங்கியது. ஏனெனில் அங்குதான் என் கண்மணி லிஸ் இருக்கிறாள். விரைவில் அவள் கரங்களை நான் கெட்டியாகப் பிடித்துக் கொள்வேன். அவளது சூடான உதடுகள் என் உதடுகளுடன் கலக்கும். ஏற்கெனெவே அந்த மகிழ்ச்சியையும் காதலையும், என்னை மீண்டும் கண்டதும் அவளது கண்களில் இருந்து மின்னும் ஒளியையும், நான் மனதில் கற்பனை செய்து பார்க்க ஆரம்பித்து விட்டேன். கடைசியில் இருந்த அந்த மரத்தைத் தாண்டி மலைச் சரிவை நோக்கி ஓடினேன். விடிந்து வெகு நேரம் ஆகி இருந்தது. பெண்கள் எல்லாம் குளத்தில் இருந்து திரும்பி இருக்க வேண்டும். இருந்தாலும் அருகில் செல்லச் செல்ல உயிர்கள் வாழ்வதற்கான தடயமே தெரியவில்லை. “அவர்கள் அதிக நேரம் அங்கே இருக்கிறார்களோ” என்று நினைத்தேன். மலைச் சரிவில் மிக அருகில் வந்தபோது நான் பார்த்த காட்சி என் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஒரு சேர உடைத்து நொறுக்கி விட்டது. நான் இல்லாத நேரம் அங்கு என்ன நடந்தது என்பதற்கான மோசமான மற்றும் மௌன சாட்சியங்களாய் அவை இருந்தன. சதைகள் நீக்கப்பட்ட எலும்புகள், மனிதர்கள் போன்ற உருவங்களின் எலும்புகள், அங்கு வாழ்ந்த ஸ்தோலு இன மக்களின் எலும்புகள் சிதறிக் கிடந்தன. எந்தவொரு குகையிலும் யாரும் இருந்ததற்கான அறிகுறி இல்லை. அந்தக் கொடூரமான தடயங்களுக்கு நடுவில் என் வாழ்நாளின் மகிழ்ச்சியை சுக்கு நூறாக்கும் ஒரு மெலிந்த எலும்பு தென்படுகிறதா என்று நுணுக்கமாகத் தேடிப் பார்த்துக் கொண்டே இருந்தேன். வெகு கவனமாகத் தேடிப் பார்த்ததில் மனிதக் குரங்கில் இருந்து சிறிது வித்தியாசப்படுகின்ற எந்தவொரு மண்டை ஓடும் அந்த இருபது எண்ணிக்கையில் இருக்கும் எலும்புகளில் இல்லை. நம்பிக்கை இன்னும் உயிர் வாழ்ந்தது. இன்னொரு மூன்று நாட்கள் கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு என்று நான்கு திசைகளிலும் தேடிப் பார்த்து விட்டேன் கேஸ்பக்கின் கோடரி மனிதர்களை. ஆனால் ஒரு சிறு தடயமும் கிடைக்கவில்லை. இப்பொழுதெல்லாம் மழை நிறையப் பெய்து கொண்டே இருந்தது. கேப்ரோனாவில் குளிர் காலம் ஆரம்பித்து விட்டிருந்தது. தேடுவதை ஒரு கட்டத்தில் நிறுத்தி விட்டு டைனோசர் கோட்டை நோக்கிச் சென்றேன். ஒரு வாரம் புராதனமான உலகத்தின் பயங்கரங்கள் நிறைந்த ஒரு வாரம் தெற்கு என்று நினைத்த திசை நோக்கிச் செல்ல ஆரம்பித்தேன். கதிரவன் அதன் பின் வரவே இல்லை. மழை விடுவதற்கான வாய்ப்பே தெரியவில்லை. நான் எதிர்கொண்ட விலங்குகள் எல்லாம் மிகவும் கம்மியாகவே இருந்தன. ஆனாலும் மிகவும் கோபம் கொண்டவை. இருந்தாலும் நான் உயிர் பிழைத்தேன். முழுவதும் தொலைந்து விட்டேன் என்று புரியும் வரை நடந்தேன். இனி ஒரு வருடம் முழுவதும் கதிரவன் ஒளி வீசினாலும் என் உடமைகளை நான் கண்டே பிடிக்க முடியாது. இந்த பயமுறுத்தும் உண்மை எனக்குப் புரிந்த போது, லிஸ்ஸை இனி கண்டே பிடிக்க முடியாது என்று புரிந்த போது நான் இன்னொரு கல்லறையைக் கண்டேன். அது வில்லியம் ஜேம்ஸின் கல்லறை. ஒரு சின்னக் கல்லில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் அவன் செப்டம்பர் 13 அன்று ஒரு பட்டாக்கத்திப் புலியினால் கொல்லப்பட்டு இறந்ததாகக் குறிப்பிட்டது. அதன் பின்தான் நான் உண்மையிலேயே கைவிட்டு விட்டேன் என்று எண்ணுகிறேன். வாழ்வில் எப்போதும் இது போல நம்பிக்கை இழந்ததும் இல்லை. விரக்தியானதும் இல்லை. தனி மரமாய் நின்றதும் இல்லை. நான் தொலைந்து விட்டேன். என் நண்பர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்று கூடத் தெரியவில்லை. அந்த நம்பிக்கையை என்னுள் விதைக்கக் கூட என்னால் முடியவில்லை. நானே செத்து விடலாம் என்று நினைத்தேன். இருந்தாலும் உயிர் வாழ்கிறேன். யாருக்கும் பயன்படாமல் நம்பிக்கை இல்லாமல் பயமுறுத்தும் ஒரு பொருளாய் ஆகி விட்டேன். எனது முன்னோர்களில் ஒன்றான பழங்கால ஊர்வன விலங்கு ஒன்று உயிர் வாழ்ந்து காலங்காலமாய் கடத்தி வந்து எனக்குத் தந்த அதன் சிறு மூளையை வழிகாட்டிய மிகவும் சக்தி வாய்ந்த ஒரு நோக்கம் தன்னைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கம். இறுதியில் நான் அந்தப் பெரிய செங்குத்துப் பாறைகளை அடைந்தேன். மூன்று நாட்களின் பைத்தியக்கார முயற்சியில் நான் உச்சியை அடைந்தேன். ஏணி போன்ற பொருட்களை உருவாக்கினேன். குறுகலான ஓட்டைகளில் குச்சிகளைச் செருகினேன். அதன் மேல் கை கால் வைப்பதற்கான தடங்களை வெட்டினேன். ஓரு வழியாக மேலே ஏறினேன். உச்சிக்குப் பக்கத்தில் ஒரு பெரிய குகை இருந்தது. அது ட்ரியாசிக் காலத்திய ஒரு பெரிய பறவையின் இருப்பிடமாக இருந்தது. இப்போது என்னுடையதாகி விட்டது. அதை வெட்டி வீழ்த்தி விட்டு எனது இருப்பிடமாக மாற்றினேன். உச்சிக்குச் சென்று அகண்ட சாம்பல் நிற பயங்கரமான பசிபிக் பெருங்கடலின் தூரத்தில் தெரியும் தென் குளிர் காலத்தைப் பார்த்தேன். அங்கே குளிராக இருந்தது. இன்று இங்கேயும் குளிராக இருக்கிறது. இருந்தாலும் இங்கே அமர்ந்து நான் பார்க்கிறேன் பார்க்கிறேன் பார்த்துக் கொண்டே இருக்கிறேன் வராது என்று தெரிந்தும் எதாவது ஒரு படகு வரும் என்று. அத்தியாயம் - ௧௦ திருமணம் ஒரு நாளைக்கு ஒரு முறை நான் அடிவாரத்திற்கு இறங்கி வந்து வேட்டையாடுவேன். அங்கிருக்கும் குளிர்ந்த ஓடையில் வயிறு முட்டத் தண்ணீர் அருந்துவேன். என்னிடம் இருந்த மூன்று குடுவைகளில் இரவு நேரத்தில் குடிப்பதற்காக நீரை எடுத்துச் செல்வேன். கல்லில் இருந்து ஒரு ஈட்டி உருவாக்கினேன். வில் அம்புகளும் உண்டாக்கி வைத்தேன், துப்பாக்கிக் குண்டுகள் தீர்ந்து விடும் என்பதால். எனது உடைகள் நூல் நூலாகப் பிரிந்து விட்டன. நாளை அதனை எறிந்து விட்டுச் சிறுத்தையின் தோலால் செய்யப்பட்ட உறுதியான கதகதப்பான ஆடையை உடுத்திக் கொள்வேன். அதை நான் பதப்படுத்தித் தைத்து வைத்திருக்கிறேன். இங்கு மிகவும் குளிராக இருக்கிறது. நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. அதன் முன் குனிந்து உட்கார்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். இங்கு பாதுகாப்பாக இருக்கிறது. எந்தவொரு உயிரினமும் இந்தக் குளிர்ந்த மலை உச்சிக்கு வருவது கிடையாது. பாதுகாப்பாக தனியாக இருக்கிறேன் என்னுடைய கவலைகளுடன். சில நேரம் மகிழ்ச்சியான தருணங்களை எண்ணிக் கொண்டு. ஆனால் சிறிதும் நம்பிக்கை என்பதே இல்லாமல். நம்பிக்கைதான் பலம் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் எனக்கு அது சிறிதும் இல்லை. கிட்டத்தட்ட முடித்து விட்டேன். இதை எல்லாம் மடித்து வைத்து அந்த வெற்றிடக் குடுவையில் அடைத்து விடலாம். பின் அதனை நன்றாக மூடி எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் தூக்கிக் கடலில் எறிந்து விடலாம். காற்று அவ்வளவாக இல்லை. அலைகளும் குறைவாகவே இருந்தன. கடலில் இருக்கும் பலவித நீரோட்டங்களில் ஒவ்வொரு கம்பத்திற்கும் கண்டத்திற்குமாக இது அடித்துச் செல்லப்பட்டு எதாவது ஒரு மக்கள் வாழும் கரையில் சேர்க்கப்படலாம். விதிக்கு என் மேல் கருணை இருந்தால் இது நடந்தால் தயவு செய்து வாருங்கள் என்னை விடுவிக்க. முந்திய பத்தியை நான் ஒரு வாரத்திற்கு முன் எழுதினேன். அத்துடன் கேப்ரோனாவில் எனது வாழ்க்கையின் எழுதப்பட்ட # அத்தியாயம் முடிந்து விடும் என்றுதான் நினைத்திருந்தேன். அதில் ஒரு புள்ளியை இடுவதற்கு முன் சற்று நிறுத்தி மையைக் கலக்கிக் கொண்டிருந்தேன். அந்த மை பெர்ரி பழங்களைக் கசக்கி நீரிட்டு நானே தயாரித்திருந்தேன். அதன் பின் கையொப்பம் இடலாம் என்று எண்ணி இருந்தேன். அப்போது வெகு தொலைவில் மலையின் கீழிருக்கும் பள்ளத்தாக்கில் சந்தேகமில்லாமல் ஒரு சத்தம் மெலிதாகக் கேட்டது. அதைக் கேட்டதும் ஆனந்தத்தில் நடுக்கத்துடன் எழுந்து நின்றேன். எனது இருப்பிடத்தில் இருந்து கீழே எட்டிப் பார்த்தேன். அந்தச் சத்தம் என் வாழ்க்கையில் எவ்வளவு அர்த்தம் கொடுத்திருக்கும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அது ஒரு வெடிச் சத்தம். அந்த நிலப் பரப்பை முழுவதுமாகக் கண்களால் அளந்து கொண்டிருந்தேன். அப்போது நான்கு உருவங்கள் மலை அடிவாரத்தில் தெரிந்தன. ஈயோசீன் காலத்திய மூன்று ஹையநோடான் எனும் ரத்தம் குடிக்கும் கொடூரமான காட்டு நாய்கள் ஒரு மனிதனைச் சுற்றி வளைத்திருந்தன. நான்காவதாக ஒரு மிருகம் கீழே இருந்தது. இறந்திருக்கலாம் அல்லது இறந்து கொண்டிருக்கலாம். என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை மேலிருந்து பார்த்ததால். இருந்தாலும் அது லிஸ்ஸாக இருக்குமோ என்றெண்ணி ஒரு இலையைப் போல் நடுங்கினேன். எனது குருட்டு நம்பிக்கை உண்மை என்று நிரூபிக்கப்பட்டது. அந்த உருவத்தின் கையில் துப்பாக்கி இருந்தது. அதாவது என் லிஸ் ஆயுதம் ஏந்தி இருந்தாள். சட்டென்று முதலில் ஏற்பட்ட அந்த மகிழ்ச்சியும் வடிந்தது. ஏனெனில் அவளின் விதியும் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. ஒரு மிருகத்தை அவள் கொன்றது 100 சதம் அதிர்ஷ்டம்தான். எவ்வளவுதான் கனமாக இருந்தாலும் என் துப்பாக்கி கேஸ்பக்கின் சிறிய மாமிச பட்சிணியைக் கொல்வது கூடக் கடினம்தான். இன்னும் சற்று நேரத்தில் அந்த மூன்று விலங்குகளும் அவள் மேல் பாயும். அவள் பக்கத்தில் வரும்போது பலனில்லாத ஒரு சூட்டினால் எதாவது ஒரு விலங்கைக் கோபப்படுத்த மட்டுமே முடியும். பின் அந்த மூன்று விலங்குகளும் அவளைக் கூறு போட்டு விடும். அது லிஸ்ஸாக இருக்கலாம். என் இதயம் அப்படியே நின்றது அதை நினைக்கும்போது. ஆனால் மனதும் உடலும் உடனடியாக நான் எடுத்தாகவேண்டிய முடிவைச் செயல்படுத்தக் களத்தில் இறங்கின. ஒரே ஒரு சிறு நம்பிக்கை மட்டுமே இருந்தது. ஒரே ஒரு வாய்ப்பு. அதை நான் எடுத்தேன். எனது சுழல் துப்பாக்கியைத் தோளில் மாட்டினேன். கவனமாகக் குறி பார்த்தேன். நீண்ட தூரச் சுடல்தான். ஒரு ஆபத்தான சுடல். அதில் அனுபவம் இல்லை என்றால் நீண்ட தூரச் சுடல் என்பது ஒரு ஏமாற்று வேலையாகி விடும். எனது குறிவல்லமையில் எதோ ஒன்று இருக்கிறது. அதை எந்தவித அறிவியிலாலும் விவரிக்க இயலாது. வேறெந்தக் கோட்பாடுகளாலும் விவரிக்க இயலவில்லை அப்போது என் குறிவல்லமையை. மூன்று முறை என் துப்பாக்கி பேசியது. மூன்று சிறிய வேகமான மரண அசைகள். முற்றிலும் முழுதான தன் உணர்வோடு நான் சுடவில்லை. இருந்தாலும் ஒவ்வொரு சூட்டிலும் ஒரு மிருகம் கீழே விழுந்தது. என்னுடைய குகையில் இருந்து கீழே செல்ல ஆயிரம் அடிகளுக்கு மேல் ஆபத்தான பயணம் செய்ய வேண்டும். முதல் மனிதக் குரங்கு அதன் இடையில் இருந்து உருவாகிய என் வம்சம் அதனை விட வேகமாக இறங்கினேன். கரடுமுரடான செங்குத்தான சரிவில் கிட்டத்தட்ட நான் விழுந்தேன். கடைசி இருநூறு அடிகள் சின்னச் சின்னக் கற்களால் ஆன செங்குத்தான மலை. அதை அடைந்து கொண்டிருக்கும் அந்த வேளை எனக்கு ஒரு அபயக் குரல் கேட்டது. “போவென், போவென், சீக்கிரம் என் காதலே, சீக்கிரம்” கீழிறங்குவதில் இருக்கும் ஆபத்துகளில் எனது முழு கவனமும் இருந்ததால் தலைகுனிந்து கீழே பார்க்க முடியவில்லை. ஆனால் அந்த அழுகைச் சத்தம் நிச்சயமாக அது லிஸ்தான் என்று உறுதி செய்தது. அவள் இன்னும் அபாயத்தில் இருக்கிறாள் என்பதால் சட்டென்று அவளைப் பார்த்தேன். நிறைய முடிகள் கொண்ட பருத்த ஒரு முரட்டு மிருகம் அவளை இழுத்துக் கொண்டு காட்டுக்குள் நுழைந்தது. ஒரு ஆடு போல் ஒவ்வொரு பாறையிலும் தாவித் தாவிக் காட்டுக்குள் லிஸ்ஸைத் தேடிச் சென்றேன். அது என்னை விட மிகவும் பெரிதாக இருந்தது. அது தூக்கிச் சென்ற கனத்தில் இழுக்கப்பட்டதால் நான் அதைச் சுலபமாக எட்டிப் பிடிக்க முடிந்தது. ஒரு வழியாக உறுமியபடியே அது என்னைத் திரும்பிப் பார்த்தது. அது திசாவின் இனத்தைச் சேர்ந்த கோ, ஒரு கோடரி மனிதன். அவன் என்னை அடையாளம் தெரிந்து கொண்டான். லிஸ்ஸை எறிந்து விட்டு என்னிடம் வந்தான். “அவள் எனக்குச் சொந்தம்.” என்று கத்தினான். “நான் கொல்வேன். நான் கொல்வேன்” என்று கத்தினான். நான் மேலிருந்து கீழே விழும்போது எனது துப்பாக்கியை விட்டுவிட்டு வந்தேன். இப்போது என்னிடம் வேட்டையாடும் ஒரு கத்தி மட்டுமே இருந்தது. அதை உறையில் இருந்து உருவினேன் அவன் என் முன் பாயும்போது. அவன் பெரிய மிருகம் போலிருந்தான். பூமியில் முதல் உயிரினம் தோன்றிய காலத்தில் இருந்தே ஆண்களைச் சண்டை போட வைக்கும் உந்து சக்தி அவனின் குருதி முழுவதும் பரவியது ரத்தம் குடிக்க உயிரைக் கொல்ல. அதே உந்து சக்திதான் எனது குருதியிலும் கலந்திருந்தது. நிகழ் கால மனிதனும் பழங்கால மனிதன் போன்ற ஒன்றும் காலத்தின் தொடக்கத்தில் இருந்து வழி வழியாக மாறாமல் கொண்டு வரப்பட்ட முடிவில்லாத ஒரு முடிவு வரை நீளும் சாவே இல்லாத அதே முனைப்புடன் இரண்டு மிருகங்கள் உலகின் மிகப் பழமையான மலைச் சாரலில் அடுத்தவன் கழுத்தைக் குதறிடத் தயாராய் இருந்தன, அந்தப் பெண், உயிரின் அழிவில்லாத அ ஆ போன்ற அந்தப் பெண்ணுக்காக. கோ என் பக்கத்தில் வந்து என் தொண்டையை அவன் நீண்ட பற்களால் பதம் பார்க்க வந்தான். காட்டு ஆட்டுத் தோலில் செய்யப்பட்ட அவன் இடையில் இருந்த உறையில் அவன் வைத்திருந்த கோடரியை மறந்து விட்டிருந்தான் கோ. நானும் என் கையில் இருந்த கத்தியையும் மறந்திருந்தேன். இது போன்ற ஒரு சண்டையில் கோ நிச்சயம் என்னை வென்று விடுவான் என்று நானும் ஒத்துக் கொள்கிறேன், லிஸ் எனக்குச் சட்டென நினைவு படுத்தாமல் இருந்திருந்தால். அவள் கூச்சல் ஒரு கணம் மரத்துப் போயிருந்த என் மூளையை உலுக்கித் தர்க்க அறிவுள்ள ஒரு மனிதனின் தந்திரத்தையும் திறமையையும் வெளிக் கொணர்ந்தது. “போவென்” என்று கத்தினாள். “உன் கத்தி உன் கத்தி” அது போதும். மறந்து போயிருந்த ஒரு யுகத்திற்குச் சென்ற என் மூளைக்குச் சட்டென நினைவு திரும்பி மீண்டும் ஒரு தற்கால மனிதனாகி விகாரமான பயிற்சி இல்லாத ஒரு மிருகத்திடம் சண்டையிட வைத்தது. நான் அவனது முடி நிறைந்த தொண்டையைக் கடித்தேன். பின் சட்டென எனது கத்தி அவனது இதயத்திற்கு அருகில் இருந்த இரண்டு விலா எலும்புகளுக்கு நடுவில் பாய்ந்தது. கோ ஒரே ஒரு முறை பயங்கரமாக அலறினான். பிறகு வலிப்பு வந்தது போல் விறைத்துக் கீழே விழுந்தான். உடன் லிஸ் ஓடி வந்து என்னைக் கட்டிக் கொண்டாள். கடந்த காலத்தின் சோகங்களும் பயங்களும் துடைக்கப்பட்டு விட்டன. திரும்பவும் நான் மகிழ்ச்சியான மனிதனாகி விட்டேன். நான் மேலே இருந்த எனது குகையின் முன் இருந்த நிலையற்ற வழியின் மேல் கண் பதித்தேன். அந்தப் பயங்கரமான பாதையில் ஏறுவதற்கு லிஸ் போன்ற ஒரு மெலிந்த பெண்ணால் முடியுமா என்று யோசனை செய்தபடி இருந்தேன். அவளிடம் கேட்டேன் உன்னால் இந்த மலையில் ஏற முடியுமா என்று. அதற்கு அவள் சிரித்து விட்டாள். “கவனி” என்று கத்திக் கொண்டே மலை அடிவாரத்தை நோக்கிச் சென்றாள். ஒரு அணில் போல் வேகமாக மேலே ஏறத் தொடங்கினாள். அவள் பின்னால் அவளுக்கு ஈடு கொடுத்து ஓட வேண்டியதாகி விட்டது. முதலில் என்னைப் பயமுறுத்தி விட்டாள். பின் என்னைப் போல் அவளும் இங்கே பாதுகாப்பாக இருப்பதை உணர்த்தி விட்டாள். இறுதியில் எனது குகைக்கு வந்தவுடன் திரும்பவும் அவளது கரங்களைப் பற்றி கொண்டேன். அதன் பின் அவள் பல வாரங்களாக அந்தக் கோடரி மனிதர்களுடன் குகையில் வாழ்ந்ததைப் பற்றி எண்ண ஆரம்பித்தாள். இன்னொரு மனித இனம் அங்கே வந்து பலரைக் கொன்று பாதிப் பெண்களைக் கவர்ந்து வேறொரு இடத்துக்குச் சென்றது. அந்த மலை இன்னும் செங்குத்தாக இருந்ததால் வேறு வழியில்லாமல் தான் மலையேற்றம் கற்றுக் கொள்ள வேண்டியதாய்ப் போய் விட்டது என்று சொன்னாள். அவனுடைய அத்தனை பெண்களும் களவாடப் பட்டதால் கோவின் விருப்பத்தை என்னிடம் சொன்னாள். அவளது வாழ்க்கை தினந்தோறும் அந்த மிருகத்திடம் இருந்து தப்பிக்க எப்படி நரகமாய்க் கழிந்தது என்று சொன்னாள். கொஞ்ச காலம் நாப்ஸ்தான் தனக்குத் துணை இருந்ததாகத் தெரிவித்தாள். ஒரு நாள் அதுவும் காணவில்லை. அதன் பின் எங்கும் அது தென்படவேயில்லை. அதையும் யாரோ வேண்டும் என்றே கொன்றிருக்க வேண்டும் என்று சொன்னாள். அதை நானும் மறுக்கவில்லை. எங்கள் இருவருக்கும் தெரியும் அது எப்போதும் எங்களை விட்டுச் செல்லாது என்று. அவளது பாதுகாப்பு முழுவதும் சென்ற பிறகு கோடரி மனிதர்களின் கதியில்தான் அவள் இருந்தாள். இந்த மலை அடிவாரத்தில் சில மணி நேரங்களுக்கு முன்தான் அவளை அவன் கைப்பற்றி இருந்தான். அவன் வெற்றிகரமாக அவளைத் தூக்கிச் சென்று கொண்டிருந்த போது எப்படியோ அவனிடம் இருந்து தப்பித்து விட்டாள். “மூன்று நாட்களாக அவன் என்னைத் தொடர்ந்தான்.” என்றாள். “இந்தக் கொடூரமான உலகில். எப்படித்தான் தப்பித்தேன் என்றே எனக்குத் தெரியவில்லை. எப்போதும் அவனை முந்திச் சென்றதும் எப்படி என்று தெரியவில்லை. எப்படியோ செய்து விட்டேன் நீ என்னைப் பார்க்கும் வரையில். விதி நம்மிடம் அன்பாய் இருக்கிறது, போவென்” என்றாள். நான் ஆமோதிப்பது போல் தலை ஆட்டி அவளை இறுக்கி அணைத்தேன். அதன் பின் பேசிக் கொண்டே அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று திட்டமிட்டுக் கொண்டே நான் இருக்கும் நெருப்பில் மறி மானின் இறைச்சியைச் சுட்டுக் கொண்டிருந்தேன். இங்கிருந்து நம்மைக் காப்பாற்ற யாரும் வர மாட்டார்கள். கேப்ரோனாவில் வாழ்ந்து மடியத்தான் வேண்டும் என்று இருவரும் ஒத்துக் கொண்டோம். இல்லை, அதை விட மோசம்தான். இங்கே லிஸ்ஸுடன் வாழ்வதே சிறந்தது அவள் இல்லாமல் வேறெங்கும் வாழ்வதை விட. அவளும், என் காதலும், அதையேதான் சொல்கிறாள். ஆனால் அவள் இங்கு வாழும் வாழ்வை நினைத்து எனக்கு பயமாகத்தான் இருக்கிறது. இது கடினமான மோசமான ஆபத்தான வாழ்க்கை. நான் எப்போதும் அதில் இருந்து மீண்டு விட இறைவனைப் பிரார்த்தித்தபடி இருப்பேன் அவளுக்காக. அன்றிரவு வானம் கிழிந்தது. எங்களது சின்னக் குகையில் நிலவு மின்னியது. அங்கே இருவரும் கைகோர்த்தபடி எங்களது நிச்சயதார்த்தத்தைக் கடவுளின் முன் வானத்தை நோக்கியபடி தெரிவித்தோம். எந்தவொரு மனித நிறுவனமும் எங்களுக்கு இதைவிடப் புனிதமாகத் திருமணம் செய்து வைத்திருக்க முடியாது. நாங்கள் இருவரும் கணவன் மனைவி. அதில் எங்களுக்கு முழு சந்தோசம். கடவுள் விரும்பினால் நாங்கள் இங்கேயே வாழ்வோம். அப்படி இல்லையென்றால் கடலின் பிரமாண்ட ஆற்றலிடம் ஒப்படைக்கப்பட்ட எனது இந்தச் சரித்திரம் யாராவது நல்லவர் கைகளில் கிடைக்கும் என்று நம்புகிறேன். இருந்தாலும் எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. இந்தச் செங்குத்துப் பாறைகளுக்குப் பின்னால் இருக்கும் உலகத்திற்கு இந்த இறுதிச் செய்தியின் மூலம் விடை சொல்கிறோம். கையொப்பங்களை இட்டவர். போவென் ஜே டைலர் ஜூனியர், லிஸ் லா ர்யூ டைலர். அருஞ்சொற்கள் கேம்பிரியன் யுகம் - Cambrian period. 541 million years ago. வெடிக்கண்ணி - Torpedo சூழிட நோக்கி - Periscope எக்கி - Pump யூ 33 - ஜெர்மானிய நீர் மூழ்கிக் கப்பல் இரும்பு கந்தகக்கற்கள் - Iron Pyrites இருவிழிநோக்காடி - Binocular பாவொளி - Search light படிமம் - Fossil வடிசாறு - Soup புதைபடிமவியல் - Paleontology மறிமான் - Antelope வெற்றிடக் குடுவை - Thermos flask மீகாமன் - Captain யூனியன் ஜாக் - British flag கணியம் அறக்கட்டளை [] தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழலை உருவாக்குதல். பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். எமது பணிகள் - கணியம் மின்னிதழ் - kaniyam.com - கணிப்பொறி சார்ந்த கட்டுரைகள், காணொளிகள், மின்னூல்களை இங்கு வெளியிடுகிறோம். - கட்டற்ற தமிழ் நூல்கள் - FreeTamilEbooks.com - இங்கு யாவரும் எங்கும் பகிரும் வகையில், கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில், தமிழ் மின்னூல்களை இலவசமாக, அனைத்துக் கருவிகளிலும் படிக்கும் வகையில் epub, mobi, A4 PDF, 6 inch PDF வடிவங்களில் வெளியிடுகிறோம். - தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கம் - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல். மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். https://github.com/KaniyamFoundation/Organization/issues இந்த இணைப்பில் செயல்களையும், https://github.com/KaniyamFoundation/Organization/wiki இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account