[] 1. Cover 2. Table of contents கல்விச் சிந்தனையாளர் மால்கம் ஆதிசேஷையா கல்விச் சிந்தனையாளர் மால்கம் ஆதிசேஷையா   ஏற்காடு இளங்கோ   yercaudelango@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - சத்யா - experimentsofme@gmail.com   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/malkam_aathishaeshaiya} மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம் : சத்யா - experimentsofme@gmail.com மின்னூலாக்கம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com Ebook Publisher: http://freetamilebooks.com Cover Design : Sathya - experimentsofme@gmail.com Ebook Creation: Lenin Gurusamy - aishushanmugam09@gmail.com This Book was produced using LaTeX + Pandoc என்னுரை தினமும் இரவில் 22 கோடி இந்தியர்கள் தண்ணீரைக் குடித்துவிட்டு, வெறும் வயிற்றுடன் பட்டினியாகப் படுக்கைக்குச் செல்கின்றனர் எனச் சுட்டிக் காட்டியவர் பொருளாதார மேதை மால்கம் ஆதிசேஷையா. மால்கம் அறிக்கைகளைத் தயாரிப்பதில் மிகவும் திறமைசாலியாக இருந்தார். யுனெஸ்கோவில் பணிபுரிந்த போது மிக முக்கியப் புள்ளியாக இருந்தார். மூன்றாம் உலக நாடுகளின் கல்வி மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தப் பாடுபட்டார். மால்கம் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மூன்று ஆண்டுகள் மட்டுமே துணை வேந்தராகப் பணிபுரிந்தார். இந்தக் குறுகிய காலத்தில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். பிற்காலத்தில் எழுத்தறிவு இயக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இந்தியாவில் சுமார் 50 கோடி பேர் கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்தனர். இது இந்தியாவுக்குக் கேவலத்தை ஏற்டுத்தியது. கல்லாமைக்கு எதிரான எழுச்சியாக அறிவொளி இயக்கம் தோன்றியது. அறிவொளி இயக்கத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார். மக்களுக்குக் கல்வியறிவு கிடைக்க பாடுபட்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மால்கம் ஆதிசேஷையாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு தகவல்களையும், புகைப்படங்களையும் கொடுத்து உதவிய சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்திற்கும், பேராசிரியர் எஸ். நீலகண்டன், கரூர் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு உறுதுணையாக இருந்த எனது மனைவி திருமிகு. E. தில்லைக்கரசி அவர்களுக்கும், புத்தகத்தைச் செழுமைப்படுத்திக் கொடுத்த நண்பர் திருமிகு. சு. சரவணமணியன் அவர்களுக்கும் நன்றி. புத்தகத்தைச் தட்டச்சுச் செய்து கொடுத்த திருமிகு. M . இலட்சுமி திருவேங்கடம் அவர்களுக்கும் நன்றி. மேலும் இந்தப் புத்தகத்தை வெளியிட்ட பாவை பதிப்பகத்திற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துக்களுடன் - ஏற்காடு இளங்கோ மால்கம் ஆதிசேஷையா ஒரு பொருளாதார நிபுணர்; சிறந்த நிர்வாகி, மிகச் சிறந்த கல்விச் சிந்தனையாளர். இவர் வாழ்ந்த காலத்தில் இவரின் பெயர் பத்திரிக்கைகளில் வெளிவந்து கொண்டே இருந்தது. இவர் இயற்கை விரும்பியாக இருந்தார். இவரின் வீடு செடி கொடிகள் நிறைந்து பசுமையாகக் காட்சியளிக்கும். இவர் கல்விக்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் தனது இறுதிக் காலம் வரை பாடுபட்டார். மால்கம் ஒரே சமயத்தில் 50க்கும் மேற்பட்ட பொறுப்புகளைக் கவனித்து வந்துள்ளார். அத்தனை பொறுப்புகளையும் திறம்படச் செய்தார். பல்வேறு நிறுவனங்கள் புத்துணர்ச்சியுடன் செயல்பட்டதற்கு உதவிகரமாக இருந்தார். இவர் மத்திய - மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களில் வழிகாட்டியாக இருந்துள்ளார். இவர் யுனெஸ்கோவில் பணிபுரிந்த போது 140 நாடுகளுக்கும் சென்றிருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களைச் சந்தித்திருக்கிறார். 120 திட்டங்களை வெவ்வேறு நாடுகளில் செயல்படுத்தியுள்ளார். இத்தனை பொறுப்புகளையும் எப்படி அவரால் திறம்படச் செய்ய முடிந்தது என பலர் ஆச்சரியம் அடைந்தனர். அதனாலேயே இவரை ஒரு சிறந்த நிர்வாகியாகக் கருதுகின்றனர். யுனெஸ்கோவில் பணிபுரிந்த காலங்களில் இவர் உலக நாடுகளின் வளர்ச்சிக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். மால்கம் கிராமப்புற மக்களைப் பற்றி அதிகம் கவலைப்பட்டார். குறிப்பாக கிராமப்புற மக்கள் அதிகம் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருந்தனர். இவர் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார். கல்விக்கும், சுகாதாரத்திலுக்கும் தனி கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தார். கிராமப்புறங்களில் வாழும் விவசாயிகளுக்கு முதியோர் கல்வியைக் கொடுப்பதன் மூலமே கிராமப்புறத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்பதை பல்வேறு ஆதாரங்களின் வாயிலாக வலியுறுத்தினர். முதியோர் கல்வியிலும் பின்னர் அறிவொளி இயக்கத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். இதனால் இவரைப் பலர் அறிவொளி இயக்கத்தின் தந்தை என்றும் அழைக்கின்றனர். மால்கம் ஆதிசேஷையா பாமர மக்களின் வாழ்வில் அறிவொளி தீபம் ஏற்றி வைத்தவர்களில் ஒருவர் ஆவார். உலகின் சிறந்த 100 பேர் கொண்ட பட்டியலில் இவர் பெயரும் இடம் பெற்றுள்ளது. மிகவும் பிரபலமான கல்வியாளர், தத்துவ அறிஞர்கள், ராஜதந்திரிகள், அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள், மனவியல் அறிஞர்கள், கவிஞர்கள், ஆன்மீகவாதிகள் போன்றோர் அடங்கிய பட்டியலில் இவரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீ அரபிந்தோ , காந்தி, தாகூர், விவேகானந்தர் ஆகியோரின் பெயர்களும் இதில் இடம் பிடித்துள்ளன. யுனெஸ்கோ அமைப்பு உலகில் சிறந்த 100 கல்விச் சிந்தனையாளர் பட்டியலை 1933 மற்றும் 1994ம் ஆண்டில் தயாரித்தது. இது 1997ம் ஆண்டில் கல்வி குறித்த சிந்தனையாளர்கள் (Thinkers on Education) என்கிற புத்தகமாக வெளி வந்தது. இந்தப் புத்தகத்தில் உலகப் புகழ் பெற்ற பல கல்வியாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. மிகவும் பழங்கால கல்விச் சிந்தனையாளர்கள் முதல் 20ம் நூற்றாண்டு வரை உள்ள கல்விச் சிந்தனையாளர்கள் இந்த புத்தகத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளனர். சீனாவின் கன்புயூஸியஸ், கிரேக்கத்தின் பிளாட்டோ, அரிஸ்டாட்டில், ஆஸ்திரேலியாவின் பிராய்டு, இத்தாலி நாட்டைச் சேர்ந்த கிராம்ஸி போன்றவர்களின் கல்விப் பணி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் ரூசோ, லோக்கி ஆகியவர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த புத்தகத்தில் இந்தியாவைச் சேர்ந்த 7 கல்வியாளர்களும் இடம் பெற்றுள்ளனர். மகாத்மா காந்தி, தாகூர், அரபிந்தோ, ஜே. கிருஷ்ணமூர்த்தி, ஜே.பி. நாய்க், விவேகானந்தர் மற்றும் மால்கம் ஆதிசேஷையாவும் இந்த புத்தகத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளார். பெற்றோர் மால்கமின் தந்தை பால் வாரனாளி ஆதிசேஷையா. ஆதிசேஷையா என்பது குடும்பத்தின் பெயர். பால் வாரனாஸி ஆதிசேஷையா உயர் இந்துக் குடும்பத்தில் பிறந்தார். பின்னர் கிறிஸ்துவராக மதம் மாறினார். உயர் ஜாதியைச் சேர்ந்த ஒருவர் கிறிஸ்துவராக மாறியதால் மிகப்பெரிய எதிர்ப்பு ஏற்பட்டது. ஆகவே இவர் இலங்கைக்குச் சென்று சிறிது காலம் தங்கினார். பின்னர் தமிழ்நாடு திரும்பிய பின்னர் வேலூரில் உள்ள ஊரிஸ் கல்லூரியில் பேராசிரியர் ஆனார். அதன் பின்னர் ஊரிஸ் கல்லூரியின் முதல்வர் ஆனார். ஊரிஸ் கல்லூரியின் முதல்வர் பதவி கிடைத்த முதல் இந்தியர் பால் வாரனாளி ஆதிசேஷையா ஆவார். மால்கமின் தாய் கிரேஸ் நேசம்மா. இவர் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர். இவரின் முன்னோர்கள் சென்னையில் உள்ள ஒரு சர்ச்சில் நான்கு தலைமுறையாக பணிபுரிந்து வந்தனர். இவரை ஆன்ட்டி நேசம்மா (Aunty Nesamma) என் அன்பாக அழைத்தனர். நேசம்மா வேலூர் முனிசிபாலிட்டின் முதல் பெண் கவுன்சிலராகப் பணியாற்றினார். அதுமட்டும் அல்லாமல் வேலூரில் பெண்கள் சங்கம் (Valore Ladies Club) ஆரம்பிப்பதற்குக் காரணமாக இருந்தார். இவர் பெண்கள் சங்கத்தின் தலைவியாக இருந்தார். தலைமைப் பண்பு கொண்டவராக இருந்தார். இசை மீது ஆர்வம் கொண்டவர், சிறப்பாகப் பாடுவார். நேசம்மா படிப்பறிவு உள்ளவர். அந்தக் காலத்திலேயே சீனியர் கேம்பிரிட்ஜ் படித்தவர். இவருக்கு 5 குழந்தைகள். ஐந்து குழந்தைகளையும் 10 வயது வரை தானே கல்வி கற்பித்தார். ஐந்து குழந்தைகளில் 4 பேர் முனைவர் பட்டம் பெற்றார்கள். பிறப்பு மால்கம் ஏப்ரல் 18, 1910ம் ஆண்டில் தமிழ்நாட்டில் வேலூரில் பிறந்தார். பால் வாரனாளி அதிசேஷையா - கிரேஸ் நேசம்மா தம்பதியருக்கு ஐந்து குழந்தைகளில் இரண்டாவதாகப் பிறந்தார். இவருக்கு மால்கம் சத்தியநாதன் ஆதிசேஷையா (Malcolm Sathianathan Adiseshiah) எனப் பெயரிட்டனர். கல்வி ஆரம்பக் கல்வியை தன்னுடைய தாய் நேசம்மாவிடம் கற்றார். பின்னர் வேலூரில் உள்ள ஊரிஸ் பள்ளியில் சேர்த்தனர். மால்கம் நன்கு படித்தார். படிப்பில் கெட்டிக்காரராக இருந்தார். பள்ளியில் படிக்கும் போது இரண்டு முறை இரட்டை உயர்வு (Double promotion ) பெற்றார். வயதிலேயே பள்ளி இறுதித் தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்றார். [] மால்கம் இரண்டு ஆண்டுகள் இன்டெர்மீடியட் படித்தார். 1917ம் ஆண்டுகளில் இன்பெர்மீடியட் கல்வி முறை இருந்தது. இன்டெர்மீடியட் தேர்ச்சி என்பது பல்கலைக் கழக நுழைவுத் தகுதியாகக் கருதப்பட்டது. மால்கம் ஊரிஸ் கல்லூரியில் இன்டெர்மீடியட் படித்து முடித்தார். பின்னர் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் பொருளியியல் படித்தார். இது மூன்று ஆண்டு பி.ஏ. ஹானர்ஸ் படிப்பாகும். அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கே பி.ஏ. ஹானர்ஸ் சேருவதற்கு இடம் கொடுக்கப்பட்டது. பி.ஏ. ஹானர்ஸ் சேர்ந்து படிப்பவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால் டிகிரி கிடைக்காது என்கிற சூழ்நிலை அக்காலக்கட்டத்தில் இருந்தது. மால்கம் சிறப்பாகப் படித்தார். மால்கமின் வகுப்பில் முன்னாள் ஜனாதிபதி திரு. வெங்கட்ராமனும் (R.Venkatraman) படித்தார். இருவரும் நண்பர்களாக இருந்தனர். அதே சமயத்தில் படிப்பில் யார் முதலிடம் பிடிப்பது என்பதில் கடும் போட்டி நிலவியது. பல்கலைக் கழகத் தேர்வில் மால்கம் முதலிடத்தைப் பெற்றார். தனது 18 வயதிலேயே பி.ஏ. ஹானர்ஸ் பட்டத்தைப் பெற்றார். கொல்கத்தா: மால்கம் கொல்கத்தாவில் உள்ள செயின்ட் பால்ஸ் கல்லூரியில் விரிவுரையாளராக 1930ம் ஆண்டில் சேர்ந்தார். தன்னுடைய 20வது வயதிலேயே விரிவுரையாளர் ஆனார். இவர் வகுப்பில் இவரின் வயதை விட மூத்த வயதுடைய மாணவர்களும் படித்தனர். மால்கம் தனது மாணவர்களை கிராமப்புறங்களுக்கு அழைத்துச் சென்றார். கிராமப்புறங்களின் வாழ்க்கை முறைகளை நேரடியாக அறிந்து கொள்ள அது உதவியது. மாணவர்களுக்கு நேரடி அனுபவம் கிடைத்தது. இதனைப்பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றும் பரிசோதனையை மேற்கொண்டார். ரவீந்திர நாத் தாகூரின் சாந்தி நிகேதனுக்கும் மாணவர்களை அழைத்துச் சென்றார். கிராமங்களுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று பெற்ற அனுபவத்தை “அறிவைக் கொடுத்து அறிவை எடுத்தல்” என்றார். முனைவர் : மால்கம் கொல்கத்தாவில் 1936ம் ஆண்டு வரை கல்லூரியில் வேலை செய்தார்.பின்னர் எம்.ஏ. படிப்பதற்காக இங்கிலாந்து சென்றார். இங்கிலாந்தில் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் எம்.ஏ. பொருளியல் பட்டம் பெற்றார். இங்கு பொருளாதாரத் துறையில் புகழ்பெற்ற ஜான்மேனார்டு 61611601610 (John Maynard Keynes) என்பவர் பேராசிரியராக இருந்தார். இதனால் மால்கம் பொருளாதாரத் துறையில் சிறந்த புலமை பெற்றவரானார். [] மால்கம் ஆதிசேஷையா இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வந்த லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் என்கிற கல்லூரியில் சேர்ந்தார். இங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டார். போதிய பண வசதி இல்லாத போதும் மிகவும் சிரமப்பட்டு தனது ஆராய்ச்சியினை மேற்கொண்டார். எளிய உணவையே எடுத்துக் கொண்டார். இரண்டாம் ஆண்டு லண்டனில் பகுதி நேர வேலை செய்து கொண்டு அதன் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டு படிப்பைத் தொடர்ந்தார். பல்வேறு பொருளாதாரப் பிரச்சனைக்கு இடையில் தனது முனைவர் பட்டத்தைப் (Ph.D) பெற்றார். பேராசிரியர் : மால்கம் 1940ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து தமிழகம் திரும்பி சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் பேராசிரியராகச் சேர்ந்தார். விரைவிலேயே பொருளியல் துறையின் தலைவரானார். அவருடைய காலத்தில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மார்செல்லியன் (Marshallian) பொருளாதாரக் கோட்பாடே பாடமாக மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வந்தது. மால்கம் கெயின்ஸன் (Keynesian) பொருளாதார கோட்பாட்டை முதன் முதலில் மாணவர்களுக்கு அறிமுகம் செய்தார். மால்கம் சென்னை கிறிஸ்துவக்கல்லூரியில் பல புதுமைகளைப் புகுத்தினார். பி.ஏ. ஹானர்ஸ் வகுப்பில் முதலாம் ஆண்டு வகுப்பில் வாரத்திற்கு 12 மணி நேரம் மட்டும் விரிவுரைக்கென்று ஒதுக்கினார். இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு வாரத்திற்கு 9 மணி நேரம் வகுப்பு எனக் குறைத்தார். கடைசி ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு 5 மணிநேர வகுப்பு என பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஒவ்வொரு மாணவரும் படிக்க வேண்டிய பாடத்திட்டத்திற்கு உரிய புத்தகங்களை நூலகத்திலிருந்து எடுத்துச் சென்று அவற்றைப் படித்துவிட்டு வந்து தாங்கள் படித்த பகுதிகளை கருத்தரங்கில் விவாதம் செய்தனர். இந்த கருத்தரங்கம் உயிரோட்டம் கொண்டதாக இருந்தது. மாணவர்களுக்கு உற்சாகம் ஊட்டுவதாக இருந்தது. ஒருவர் மற்றொருவருடன் கருத்து பரிமாறிக் கொண்டனர். பொருளாதாரத்தை எளிய கேள்விகள் மூலம் கேட்பதாக இருந்தது. இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களைத் தனது வீட்டிற்கு அழைத்து மாதம் ஒரு பொதுக்கருத்தில் விவாதம் செய்ய வைத்தார். நூலகத்தில் இல்லாத புத்தகங்களை தனது வீட்டில் இருந்த நூலகத்திலிருந்து மாணவர்கள் எடுத்துச் சென்று படிக்க உதவி செய்தார். எனது வீட்டில் நடக்கும் விவாதத்தின் போது மாணவர்களுக்கு விருந்தளித்து உபசரிப்பார். பொருளியலில் படித்த தத்துவங்கள் எந்தளவிற்கு நினைவில் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளவும், அதில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறது என்பதை மாணவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் மாணவர்களை கிராமப்புறங்களுக்கு அனுப்பி கவனிக்க வைத்தார். மாணவர்களை இரண்டு அல்லது மூன்று குழுக்களாகப் பிரித்து வெவ்வேறு கிராமங்களுக்கு அனுப்பி தகவல்களைச் சேகரிக்க வழி வகுத்தார். கிறிஸ்துவக் கல்லூரியைச் சுற்றியிருந்த கிராம மக்கள், மாணவர்களின் சந்தேகங்களுக்கு விடை தர வேண்டுமெனில், அவர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே நல்ல உறவு இருக்க வேண்டும் என்றார். ஆகவே மாணவர்கள் கிராமங்களுக்குச் செல்லும்போது மக்களுக்குத் தேவையான தலைவலி மாத்திரை, காய்ச்சல் மருந்து, மலமிலக்கிகள், புண்களுக்கு போடும் மருந்து போன்றவற்றை எடுத்துச் செல்ல வைத்தார். அது மட்டும் இல்லாமல் குழந்தைகளுக்கு மிட்டாய், சாக்லேட் போன்றவற்றை எடுத்துச் செல்ல வழிவகை செய்தார். இளம் பேராசிரியராக இருந்த மால்கம் ஆதிசேஷையா நுகர்வோர் மற்றும் மூலதனத்தைப் போடுவோர் ஆகியோருக்கு இடையே உள்ள உறவைப் பற்றியும், உற்பத்தியான பொருள் சந்தையில் எப்படி விற்பனை ஆகிறது என்பது பற்றியும் தனது ஆய்வுகளைச் செய்தார். தேவை மற்றும் பொருள் விநியோகம் அல்லது தேவைக்கும், விநியோகத்திற்கும் இடையே உள்ள காரணிகளைக் கண்டு செயல்படுதல் பற்றியும் தனது கவனத்தைச் செலுத்தினார். விவசாயம் சார்ந்த பொருளாதார வளர்ச்சி இந்தியாவில் எப்படி உள்ளது என்பதை அறிந்து கொள்வது இவருக்கு மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்தியது. பொருளாதார வளர்ச்சியில் போதிய திருப்தி இல்லை என்பதை உணர்ந்தார். இவர் தனது மாணவர்களை காக்கி அரைக்கால் சட்டையை (Shorts) அணிந்து கொண்டு கல்லூரியை ஒட்டி இருக்கும் கிராமத்திற்கு அழைத்துச் சென்றார். கைக்குத்தல் அரிசி, கையால் தயாரித்த காகிதம், கைத்தறித் துணி ஆகியவையும், பயிர் சுழற்சி முறையும் கிராமப்புற வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது என்பதை நேரடி ஆய்வு மூலம் அறிந்தனர். இவரின் மாணவர்கள் பொருளாதாரத்தில் சிறந்தவர்களாகவும், மரியாதைமிக்கவர்களாகவும் இதன் மூலம் மாறினார்கள். இவரின் மாணவர்கள் கூறும் போது இளம் வயதில் பொருளாதாரத்தில் மாணவர்களைச் சிறந்தவர்களாக மாற்றியதில் மால்கம் ஆதிசேஷையாவிற்கு பெரும் பங்கு உண்டு என்றனர். மாணவர்கள் தேர்வு எழுதும் போது அதனை கண்காணிப்பாளர் இல்லாமல் தேர்வு எழுத அனுமதித்தார். இது முற்றிலும் புதுமையாக அமைந்தது. இக்கல்லூரியில் 1946ம் ஆண்டுவரை பணிபுரிந்தார். திருமணம் : மால்கம் ஹெலன் பரஞ்சோதி (Helan Paranjothi) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு மோகன் ஆதிசேஷையா என்கிற மகனும், சோனா ஆதிசேஷையா என்கிற பெண்ணும் பிறந்தனர். 1946ம் ஆண்டில் மனைவிக்கும், மால்கமிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இவர் விவாகரத்து கோரினார். மால்கம் பாதிரியாராகவும் இருந்தார். பாதிரியாராக இருந்ததால் விவாகரத்து தர முடியாது என நிர்வாகம் கூறிவிட்டது. இருப்பினும் குடும்பம் பிரிந்தது. மால்கம் எலிசபெத் போத்தன் (Elizabeth Pothen) என்பவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இவர் சென்னை மகளிர் கிறிஸ்துவக் கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவரும் 1952ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். [] முதல் மனைவி ஹெலன் தனது இரண்டு குழந்தைகளுடன் இங்கிலாந்து சென்றார். அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் அருகில் இருந்த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். மால்கம் எலிசபெத் போத்தனுடன் இறுதி வரை சேர்ந்து வாழ்ந்தார். மால்கமின் தனிப்பட்ட வாழ்க்கை தனது வேலையில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் பார்த்துக் கொண்டார். யுனெஸ்கோ : ஐக்கிய நாடுகளின் சபையின் மூலமாக ஐக்கிய நாட்டுக் கல்வி, விஞ்ஞானம் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO) 1945ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த யுனெஸ்கோ அமைப்பானது உறுப்பு நாடுகளில் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதுமைகளையும், முன்னேற்றங்களையும் புகுத்தும் வகையில் பணியாற்றி வருகிறது. அனைத்து குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும், முதியோருக்கும் அடிப்படைக் கல்வி வழங்க வேண்டும் என்பதை யுனெஸ்கோ வலியுறுத்துகிறது. மக்களிடம் உள்ள வேறுபாடுகளை குறைக்க நிலையான தீர்வுகள் எடுக்கப்பட்ட வேண்டும் என்கிற குறிக்கோளைக் கொண்டிருக்கிறது. யுனெஸ்கோ உலகின் பல நாடுகளின் பள்ளிகளின் அறிவியல் கூடங்களுக்கு அறிவியல் சாமான்களை இலவசமாக வழங்கிவருகிறது. நம் நாட்டிற்கும் அறிவியல் சாமான்களை வழங்கியுள்ளது. யுனெஸ்கோவின் எண்ணம் கல்வியில் எந்தெந்தத் துறைகளில் நாடுகள் பின் தங்கியுள்ளன என்பதைக் கண்டறிந்து அந்நாடுகளின் தேவையை நிறைவேற்ற ஆவண செய்கிறது. வெளிநாடுகளில் மேல்படிப்பு படிப்பதற்கான உதவித் தொகையையும் வழங்குகிறது. யுனெஸ்கோவில் வேலை : மால்கம் கிறிஸ்வக் கல்லூரியில் ஏற்பட்ட மனப்பூசல் காரணமாக பேராசிரியர் பதவியிலிருந்து வெளியேறினார். பின்னர் ஸ்விட்சர்லாந்து சென்று உலக பல்கலைக்கழகப் பணியில் (World University Service) இணைப் பொதுச்செயலாளராக இரண்டாண்டுகள் வேலை செய்தார். ஐக்கிய நாடுகளின் சபையினால் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட யுனெஸ்கோவின் முதல் இயக்குனர் ஜெனரலாக (Director General) சர் ஜூலியன் ஹக்ஸ்லி (Sir Julian Huxlay) நியமிக்கப்பட்டிருந்தார். யுனெஸ்கோவில் பணியாற்றத் தகுதி பெற்ற இந்தியர் எவராவது இருப்பின் தன் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டுமென தன்னுடன் முன்பு ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் (Sarvepalli Radhakrishnan) கேட்டுக் கொண்டார். இவர் இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தவர். இவர் வேலூரில் ஊரிஸ் கல்லூரியில் படித்தவர். ஆகவே இவர் மால்கமின் தந்தை பால் வாரனாளி ஆதிசேஷையாவின் மாணவராக இருந்தவர். மால்கமின் அறிவுத்திறனை நன்கு அறிந்திருந்தார். அதன் காரணமாக மால்கமின் பெயரை யுனெஸ்கோவிற்கு சிபாரிசு செய்தார். அவர் சுட்டிக் காட்டியதன் பேரில் 1948ம் ஆண்டில் மால்கம் யுனெஸ்கோவின் மக்கள் பரிவர்த்தனைத் துறையில் உதவி இயக்குநராக நியமிக்கப்பட்டார். 1950ம் ஆண்டு மார்ச் மாதம் யுனெஸ்கோவில் தொழில் நுட்ப உதவித் துறை (Technical Assistance) துவங்கப்பட்டது. மால்கம் ஆதிசேஷையா இத்துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்தப் பதவி யுனெஸ்கோவின் ஆறு உயர் பதவிகளில் ஒன்றாகும். 1955ம் ஆண்டில் உதவி இயக்குநர் ஜெனரலாகப் பதவி (Assistant Director General) உயர்வு பெற்றார். அதன் பின்னர் 1962ம் ஆண்டில் துணை இயக்குநர் ஜெனரலாக (Deputy Director General) பதவி உயர்வு பெற்றார். இந்த காலக் கட்டத்தில் இயக்குநர் ஜெனரலுக்கு அடுத்த படியில் இவர் ஒருவர் தான் இப்பதவியை வகித்து வந்தார். [][] மால்கம் ஆதிசேஷையா உலக வங்கியின் பணத்தைக் கல்விக்காக பயன்படுத்தினார். ஆனால் கல்விக்காக பணத்தைச் செலவு செய்ய உலக வங்கி சம்மதிக்கவில்லை . இருப்பினும் மால்கம் கல்விக்காக நிதி ஒதுக்குவதன் மூலமே பொருளாதார வளர்ச்சியையும், சமூக வளர்ச்சியையும் அடைய முடியும் என விளக்கம் கொடுத்தார். மால்கம் தினமும் 10 மணி நேரம் வேலை செய்தார். ஒரு நிமிடம் கூட காலத்தம் இன்றி வேலைக்குச் செல்வார். தினமும் காலை 9.00 மணிக்கே அலுவலகம் சென்றுவிடுவார். மதியம் 1.30 மணிக்கு வீட்டிற்குச் சென்று உணவு உண்ட பின் உடனே திரும்பி பணியைத் தொடருவார். இரவு 8.00 மணி வரை அலுவலகத்தில் வேலை செய்வார். இவரது மனைவி இதற்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்பவராக இருந்தார். மால்கமின் தந்தை ஆதிசேஷையா தனது வேலைகளில் சரியான நேரத்தைக் கடைபிடிப்பவராக இருந்தார். அவரிடமிருந்து சரியான நேரத்தைக் கடைபிடிக்கும் பழக்கத்தை மால்கம் கற்றுக் கொண்டார். இந்த பழக்கம் மால்கமிற்கு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது. மால்கமின் தந்தை 3 மாதங்கள் பாரிஸில் வந்து தங்கினார். அவர் தினமும் மதிய உணவை 12.30 மணிக்கு எடுத்துக் கொண்டார். மால்கம் அதற்காகத் தனது நேரத்தை மாற்றிக் கொள்ளவில்லை. எப்போதும் போலவே மதியம் 1.30 மணிக்கு வந்தே உணவு உண்பார். மால்கம் இந்திய உணவுகளையே உண்பார். மனைவி எலிசபெத் உணவைப் பரிமாறுவார். மதியம் மால்கம் உணவு சாப்பிட்ட பிறகே எலிசபெத் சாப்பிடுவார். ஆனால் இரவு நேரத்தில் இருவரும் சேர்ந்து ஒரே சமயத்தில் உணவு உண்ணும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். மால்கம் துணை இயக்குநர் ஜெனரலாக 12 ஆண்டுகள் பதவியில் இருந்து உலக நாடுகளுக்காக பாடுபட்டார். அப்போது மூன்றாம் உலக நாடுகளின் திட்டங்களுக்கு உதவி புரிந்தார். உலக அளவில் துவக்கக் கல்விக்கு உதவினார். எழுத்தறிவிற்கு முக்கியத்துவம் கொடுத்தார். முதியோர் கல்விக்காக கல்வி முறைகளையும், பாடத் திட்டங்களையும் உருவாக்கினார். துவக்கக் கல்விக்கான பாடத் திட்டம், அறிவியல் கல்வியின் தரத்தை உயர்த்துதல் இப்படி நூற்றுக்கணக்கான செயல்பாடுகளில் ஈடுபட்டார். கல்வி அமைச்சர்களின் மாநாடுகளில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வலியுறுத்தினார். கல்விக்காக 3 மில்லியன் டாலர் செலவிடுவதை 300 மில்லியன் டாலராக 1970ம் ஆண்டுகளில் மாற்றினார். யுனெஸ்கோ உலக அளவில் நன்கு வளர்ந்தது. இதற்கு அதிகக் கவனமும், அதிகப் பணமும் தேவைப்பட்டது. யுனெஸ்கோவின் டைரக்டர் ஜெனரலாக இருந்த ரெனி மோகூவ் (Rene Moheu) உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். ஓய்வு பெற்று சிறிது காலத்திலேயே 1960ம் ஆண்டில் இறந்தார். இதனால் மால்கமின் வேலைப்பளு அதிகரித்தது. அத்துடன் அவர் கவனித்து வந்த கோப்புகளையும் மால்கம் சேர்த்து பார்வையிட வேண்டி இருந்தது. மால்கம் அனைத்து வேலைகளையும் திறம்படச் செய்தார். இவர் யுனெஸ்கோவில் 23 ஆண்டுகள் பணிபுரிந்தார். இந்த 23 ஆண்டுகள் ஒரு நாள் கூட மருத்துவ விடுப்பு எடுத்தது கிடையாது. [] மால்கம் யுனெஸ்கோவில் பல்வேறு மிக முக்கியமான ஆவணங்களை உருவாக்க வைத்தார். இவரின் கையெழுத்து அவ்வளவு நன்றாக இருக்காது. மிக வேகமாக அறிக்கைகளைத் தயார் செய்வார். இவரின் இரண்டு செகரட்டரிகளும் இவரின் கையெழுத்தை நன்கு அறிந்திருந்தனர். இவர் விமானப் பயணத்தின் போதும் எழுதிக் கொண்டிருப்பார். யுனெஸ்கோவின் ஆவணக் காப்பகத்தில் 118 மால்கம் ஆதிசேஷையா கோப்புகள் இருக்கின்றன. இதில் சுமார் 48,000 பக்கங்கள் உள்ளன. அங்கு பணியாற்றிய 23 ஆண்டுகளில் அவருடைய சாதனைகளை அவை என்றென்றும் பறை சாற்றுவதாக விளங்குகின்றன. இதில் இருக்கும் தகவல்கள் இவர் யுனெஸ்கோவில் ஆற்றிய பணிகளைத் தெரிந்து கொள்ள உதவுகின்றன. இவரின் ஆரம்பக் காலப் பணிகள் மூன்றாம் உலக நாடுகளின் வளர்ச்சி சார்ந்த திட்டங்களாக இருந்தன. மால்கம் ஆதிசேஷையாவின் சேவைகளைச் சுருக்கிச் சொல்வது எளிதன்று. யுனெஸ்கோ தொடங்கப்பட்ட போது 37 உறுப்பு நாடுகள் இருந்தன. மால்கம் 1970ம் ஆண்டில் ஓய்வு பெற்றபோது 127 நாடுகள் யுனெஸ்கோவில் உறுப்பு நாடுகளாக பெருகியிருந்தது. அவற்றில் பெரும்பான்மையானவை அண்மையில் சுதந்திரம் பெற்ற, பொருளாதார வளர்ச்சியில் முன்னேறாத, வளர்ந்து வரும் நாடுகளாகும். வளர்ந்த நாடுகளிலிருந்து வளரும் நாடுகளுக்குக் கல்வி, நவீன தொழில் நுட்பம் ஆகியவற்றை இடப்பெயர்ச்சி செய்தத்தில் மால்கமின் பங்கு மிக அசாதாரணமானது. அப்போது அவர் ஒரு தலை சிறந்த கல்வியாளர் என இனம் காட்டப்பட்டார். புதிதாகச் சுதந்திரம் பெற்ற நாடுகளுக்குத் தான் கல்வி ஆலோசர்கள், புதிய தொழில்நுட்பம் அதிகம் தேவைப்பட்டது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். அந்த நாடுகளுக்கு அவைகளைக் கொடுத்தாலும் சரியான முறையில் முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய அளவுக்கு அங்கு கூட்டமைப்புகளும், நிர்வாக அமைப்புகளும் இல்லை. ஆகவே அவைகளுக்கு உதவுவதற்காக ஒவ்வொரு நாட்டிற்கும் தானே சென்றார். அங்கு சரியான திட்டங்களைத் தேர்ந்தெடுத்தார். அவைகளைச் செயல்படுத்த மால்கம் நோக்க வழிமுறை அறிக்கைகளை (Mission Reports) தயார் செய்தார். இந்த அறிக்கைகள் மிகவும் பிரபலமானதாகக் கருதப்படுகின்றன. ஜெட் விமானங்கள், நவீன போக்குவரத்து வசதிகள் இல்லாத உலகின் பல வளர்ந்து வரும் நாடுகளுக்குச் சென்று வந்தார். அங்கு இருக்கும் நிலைமைகளை ஆராய்ந்து அதற்குரிய முடிவுகளை உடனே எடுத்தார். அவர் உடனே பாரிஸில் உள்ள தலைமையகத்திற்கு வருவதற்கு முன்பே விமானத்திலும், பயணம் செய்த கார்களில் தனது கையெழுத்தால் அறிக்கைகளை எழுதி முடித்து விடுவார். இவருக்கு இருந்த அறிவுத் திறனாலும், இடைவிடாமுயற்சியாலும், தளராத உடல் வலுவாலும், வீண் பேச்சுப் பேசாத குணத்தாலும் இவரால் இந்தச் சாதனைகளைச் செய்ய முடிந்தது எனலாம். மால்கம் எந்தக் கருத்தரங்கத்திற்கு தலைமை வகிக்கச் சென்றாலும் அக்கருத்தரங்கில் வாசிக்கப்படும் ஒவ்வொரு கட்டுரைகளையும் உன்னிப்பாகக் கவனித்து குறிப்பெடுத்துக்கொள்வார். கருத்தரங்க முடிவில் அன்றைக்கு என்னென்ன கருத்துக்கள் சொல்லப்பட்டன என்பதைப் பட்டியலிடுவார். எடுத்துக்காட்டுக்காக அவரால் சொல்லப்படும் குறிப்புகள் எந்தப் புத்தகத்தில் யாரால் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதைக் கூறுவார். அது எந்தப் பக்கத்தில் உள்ளது என்பதைக் கூட துல்லியமாகக் குறிப்பிடுவார். குறித்த நேரத்தில் எந்த வேலையாக இருந்தாலும் செய்து முடித்து விடுவார். சரியான நேரத்தில் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார். யுனெஸ்கோவின் பட்ஜெட் தொகையை இதன் உறுப்பினர்களாக இருந்த 127 நாடுகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளித்தார். அது மட்டுமல்லாமல் 120க்கும் மேற்பட்ட தொலை நோக்குத்திட்டங்களையும் தயாரித்து செயலாற்றினார். ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்காவுக்கான கல்வி, அறிவியல் திட்டங்கள் இதில் முக்கியமானவை. எல்லாக் குழந்தைகளும் முழு எழுத்தறிவு பெற வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவராக இருந்தார். இது வளர்ந்து வரும் நாடுகளின் அடிப்படைத் தேவையாகும். வளரும் நாடுகளின் நாடு தழுவிய எழுத்தறிவு இயக்கங்கள் அனைத்திற்கும் யுனெஸ்கோ நிதி உதவி செய்வதில் அதிக அக்கறை காட்டினார். மால்கம் யுனெஸ்கோவில் பணியாற்றிய போது உறுப்புநாடுகளின் சந்தாத்தொகைகளைக் கொண்டுதான், நிதி உதவி செய்யப்பட்டது. பின்னர் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க உலக வங்கி, ஆசிய வங்கி மற்றும் இதர நிதி ஆதாரங்களைத் தேடி அவர்களிடமிருந்து நிதி உதவி பெற்ற இவர் பல முயற்சிகள் எடுத்தார். இவரின் முயற்சிக்கு நல்ல பலனும் கிடைத்தது. இந்தியாவிற்கு உதவி : மால்கம் முயற்சியால் உலகின் எல்லா நாடுகளுக்கும் பல நல்ல திட்டங்கள் கிடைத்தன. அவர் யுனெஸ்கோவில் பணியாற்றிய போது இந்தியாவிற்காக பல திட்டங்களைக் கொண்டு வந்தார். பண்பாட்டுச் சின்னமான அஜந்தா ஓவியங்களை வண்ணப் புகைப்படங்களாக எடுத்துத் தொகுத்து யுனெஸ்கோ வெளியீடாக கொண்டு வந்தார். டெல்லியில் என்.ஸி.இ.ஆர்.டி. (National Council Education Research and Training) தொடங்குவதற்குக் காரணமாக இருந்தார். கல்விக்காக முதன் முறையாக இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்ய வழிவகுத்தார். இந்திய திரைப்படக் கழகம் திருத்தி அமைத்து மேம்பாடு செய்யப்பட்டது. பொறியியலிலும், விஞ்ஞானத்திலும் மேதைகளை இந்தியக்கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு வரவழைத்தார். மும்பை, கராக்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப அமைப்புக்கு ஐ.ஐ.டி நவீன தொழில்நுட்ப சாதனங்கள் யுனெஸ்கோ மூலம் வழங்க ஏற்பாடு செய்தார். மால்கம் யுனெஸ்கோவில் பணியாற்றிய போது தமிழ்நாட்டிற்கும் பல நன்மைகளைச் செய்தார். திருக்குறளை ராஜாஜியைக் கொண்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அதனை பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன், ரஷியன் மற்றும் அரபி மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்தார். இதனை யுனெஸ்கோ வெளியீடுகளாகக் கொண்டு வந்தார் எனக்கூறப்படுகிறார். மால்கமிற்கு திருக்குறள் மீது அளவு கடந்த பற்று இருந்தது. ஆகவே அதனை உலக அளவில் பிரபலம் அடையச் செய்வதில் இவர் முனைப்பு காட்டினார். மால்கம் தமிழ்மொழி மீதும் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருந்தார். யுனெஸ்கோவின் அதிகார பூர்வ வெளியீடு கூரியர் என்கிற இதழாகும். இது யுனெஸ்கோவின் அங்கீகரிக்கப்பட்ட 5 மொழிகளான ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷியன், ஜெர்மன் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்தது. இவர் எடுத்துக் கொண்ட முயற்சியின் காரணமாக இந்தியில் வெளிவந்தது. பின்னர் தமிழில் வெளிவரக் காரணமாக இருந்தார். இதனை இவரின் சாதனை என்றே சொல்லலாம். திருவரங்கம் கோயிலின் வரலாற்றை ஒரு பிரெஞ்சுப் பேராசிரியை ஆராயச் செய்ய சொன்னார். ஆராய்ச்சி முடிவுகளை பிரெஞ்சு மற்றும் இங்கிலாந்தில் யுனெஸ்கோ வெளியீடாக வெளியிட்டார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவரங்கம், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் உள்பட ஏழுக்கும் மேற்பட்ட பெரிய கோயில்களைப் புனரமைக்க யுனெஸ்கோவின் நிதியுதவியைப் பெற்றுத்தந்தார். சென்னை தொழில்நுட்ப அமைப்பின் (Madras Institute of Technology) ஏரோநாட்டிக்கல் பொறியியல் துறை விரிவாகக்கத்திற்கு நிதி உதவி வழங்கினார். சென்னை அழகப்பா தொழில் நுட்பக் கல்லூரிக்கு வல்லுநர்களையும், சாதனங்களையும் வழங்கினார். பொருளாதாரம் : பொருளாதாரத்தைப் பற்றி விஞ்ஞான முறையில எண்ணத் தொடங்கியது. 18ம் நூற்றாண்டின் மத்தியில் தான். அதற்கு முன்பு பொருளாதாரத்தைப் பற்றி எண்ணிய சில எண்ணங்களும், சமய, அறிவியல் அல்லது அரசியல் சார்பிலேயே எண்ணப்பட்டன. அன்று மக்கள் எளிய வாழ்க்கையையே வாழ்ந்தனர். பொருளாசையை வெறுத்தார். அறிவியல் அரசியல் துறைகளில் மூழ்கிக் கிடந்தது. இக்காரணங்களால் பொருளாதார அறிவு, முறையாக வளரமுடியவில்லை. [] ஆடம் ஸ்மித் (1723 – 1790) என்ற ஸ்காட்லாந்துத் தத்துவ அறிஞர் பொருளாதாரத்தை ஒரு விஞ்ஞானமாக அமைத்தார். இவர் உண்மையிலேயே பொருளாதாரத்தின் தந்தை ஆவார். இவர் பொருளாதார நிகழ்ச்சிகளுக்கிடையே உள்ள தொடர்பை ஆராய்ந்தார். அறிவுக்கு உகந்த விளக்கங்கள் கூறிப் பொருளாதாரம் என்ற புதிய விஞ்ஞானத்தை நிறுவினார். கூலி, வேலை நிலைமைப் பிரச்சினைகளிலும், தொழிலாளர்களின் நிலைமைகளை ஆராய்வதிலும், மக்களின் வறுமை நிலைமைகளை ஆராய்வதிலும் கருத்து சொன்னார். இந்தியாவில் பொருளாதார ஆய்வு முறை என்பது வெளிநாடுகளிலிருந்து பெறப்பெற்றது. உள்நாட்டில் மேற்கூறிய வகையில் பொருளாதாரக் கருத்து வளர்ச்சி ஒன்றும் ஏற்படவில்லை. இந்தியாவின் பண்டைய தியோகிராஸிஸ்களில் (Theocracies) சில பொருளாதாரக் கருத்துக்கள் கலந்திருந்தன. ஆனால் வாழ்க்கைத் தத்துவம் பெரிதும் சமய, ஆன்மிகச் சார்புடையதாக இருந்தது. எளிய வாழ்வே உயர்ந்தது. பொருட்செல்வத்திலும் அருட்செல்வமே சிறந்தது. எதுவும் அவரவர் தலைவிதியைப் பொருத்தே நடைபெறும் என்னும் தத்துவங்கள் இந்தியாவில் நிலவி வந்தன. இக்காரணங்களால் பொருளாதாரக் கருத்து வளர்ச்சி ஏற்பட முடியவில்லை. பொருளாதாரம் என்பது மனிதனின் அன்றாட வாழ்க்கையைப் பற்றி அறிய முற்படும் அறிவியலாகும். ஒரு நாட்டின் மக்கள் நன்மை அடைவது என்பது உற்பத்தி முறையை மட்டும் அடிப்படையாகக் கொண்டதன்று. பகிர்வு முறையையும் பொருத்ததாகும். உற்பத்தியைப் பெருக்கலாம். ஆனால் அதனால் மட்டும் பெரும்பான்மை மக்களின் நலனை அடைய முடியாது. அவர்களின் நலனையடைய நியாயமான பகிர்வு முறை நிலவ வேண்டும். பொருளாதாரக் கோட்பாடு யாவும் தனிவுடமை (முதலாளித்துவம்), பொதுவுடைமை (கம்யூனிசம்) என்ற இரண்டு அடிப்படை முறைகளில் ஏதாவது ஒன்றைச் சார்ந்ததாக இருக்கின்றன. மனிதன் தனக்குத் தேவையான பொருட்களை உழைப்பின் மூலமே அடைய முடியும். ஆகையால் விரும்பிய பொருட்களை அடைய மனிதன் பொருளாக்க முயற்சியில் ஈடுபட வேண்டி உள்ளது. பொருளாதாரம் என்பது பொருளைப்பற்றியும், பொது நலனைப்பற்றியும், விளக்கும் இயல். உண்மையான நலம் பெருகுவதற்குரிய காரணங்களை அது ஆராய்கின்றது. உடல் நலம் பெற்றுக் கல்வியறிவு, பண்பாடுகள் சிறந்து, ஆடம்பரமற்ற வாழ்க்கையையும், உயர்ந்த நோக்கங்களையும் கொண்டுள்ள மக்கள் நிறைந்த ஒரு சமூகமே எல்லா வகையான நலன்களையும் பெறும். சாதாரணமாகக் செல்வம் ஒரு நாட்டில் பெருகப் பெருக, அதற்கிணங்கப் பொதுநலப்பெருக்கமும் நிகழ்தல் கூடும். ஆதிசேஷையா தனது கவனத்தைப் பொருளாதாரம் மற்றும் கல்வியில் செலுத்தினர். பொருளாதார வளர்ச்சிக்கும் கல்விக்கும் உள்ள தொடர்பை விளக்கினார். கல்வி என்பது பொருளாதாரத் தத்துவத்தை விட கடினமானதாகப்பட்டது. பொருளாதார வளர்ச்சிக்கு கல்வி மிகவும் அவசியமானது. கல்வி என்பதே முக்கியமான காரணியாக மற்ற அனைத்து பொருளாதார வளர்ச்சிக்கும் அடிப்படை என்பதை மால்கம் விளக்கினார். பொருளாதாரக் கோட்பாடு இல்லாதது தனி உரிமையாக வைத்து வழங்கும் பொருள் போன்றது என்றார். ஆதிசேஷையாவின் பொருளாதார கோட்பாடு என்பது அரசியல் ரீதியாகப் பார்க்கும் போது தவறாக கருதப்படுகிறது. இந்த வேறுபாடு எதை நோக்கிச் செல்கிறது . என்பதைப் பார்க்கும்போது இணக்கமின்மையைக் காட்டுகிறது. இவரின் ஆய்வுகளில் பார்க்கும் போது வளர்ந்த நாடுகளுக்கு நடுநிலைமையான கோட்பாடுகளை உருவாக்கித் தருவதாக இருந்தது. யுனெஸ்கோவில் இவரின் பங்களிப்புக் காரணமாக பல்வேறு மாதிரிகளையும், பொருளாதார வளர்ச்சிக் காரணிகளையும் உருவாக்கித் தந்தார். குறிப்பாகப் பார்த்தால் சமூக பொருளாதார முன்னேற்றம் சார்ந்ததாக இருக்கிறது. இவை அனைத்தும் ஆய்வுக்கு உட்பட்டவையாகும். மால்கம் அரசியல் மற்றும் பொருளாதார வடிவங்களைப் பொதுவுடைமைப் படுத்தினார். இதனை எளிதான சந்தை வியாபாரம் மூலம் அடையலாம். இது தவிர பல்வேறு திட்டங்கள் மூலமும் செயல்படுத்தலாம் என்றார். ஆதிசேஷையா யுனெஸ்கோவில் பணிபுரிந்த போது மிக திடமாக ஆர்வத்துடன் பொருளாதார வளர்ச்சியிலும் ஈடுபட்டார். அவரின் நோக்கம் எல்லாம் வளரும் நாடுகளைப்பற்றியும், சர்வதேச சமூகத்தைப்பற்றியுமே இருந்தது. அவர் கல்வி வளர்ச்சியை வரவேற்றார். கல்வி என்பது ஒரு காரணியாக பொருளாதார வளர்ச்சிக்கு இருக்கிறது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். இவர் கல்வி, உற்பத்தி, வருமானம் ஆகியவற்றிற்கு இடையே உள்ள ஒற்றுமைகளை விளக்கினார். அதேபோல் கல்விக்கும் சுகாதாரத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகளையும் விளக்கினார். மூன்றாம் உலக நாடுகளில் பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆகின்றனர். இங்கு ஏழைகளே மிகவும் அதிகமானவர்களாக இருக்கின்றனர் என்பதை இவர் சுட்டிக் காட்டினார். மனிதனின் அடிப்படைப் பொருளாதாரத் தேவைகள் நிறைவேற கல்வி உதவுதல் அவசியமாகும். நாட்டின் கல்வி வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும், நெருங்கிய தொடர்பு உண்டு. வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த மக்களின் கல்வி நிலை மிக உயர்ந்து காணப்படுகிறது. வளரும் நாடுகளில் கல்வி அறிவு குறைவாகவே உள்ளது. இதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு கல்வி ஒரு முக்கிய காரணி என்பது புலப்படுகிறது. நாட்டின் பொருளாதாரப் பிரச்சனை கல்வியின் வளர்ச்சியைப் பாதிக்கின்றன. நம் நாடு வளர்ந்து வரும் நாடு. நமது பொருளாதார வளம் வளர்ச்சியடைந்த நாடுகளை ஒப்பிடுகையில் குறைவு தான். நாட்டில் உருவாக்கப்படும் திட்டங்கள் வெற்றி பெறவும், இலக்குகளை அடையவும் கல்வி அதிகம் உதவுகிறது. வறுமையைப் பற்றியும் மால்கம் பல்வேறு தகவல்களைச் சேகரித்துள்ளார். வறுமை என்பது முக்கிய உற்பத்தியில் சமத்துவமற்று இருக்கிறது. தன்னிச்சையாகவே வறுமை என்பது ஏழைகளை அணைத்துக் கொள்கிறது. வறுமை ஏழைகளுக்கு மட்டுமே பரிசாகக் கிடைக்கிறது. வறுமை என்பது ஒரு குணமாகி விடுகிறது. வறுமை ஒரு குணம் என்பதால் அனைவருமே ஏழைகளாகவே இருக்கின்றனர். ஏழைகளுக்கு அது ஒரு தகுதியாக மாறிவிடுகிறது. இதனால் ஏற்படும் சமத்துவமற்ற சூழ்நிலை சமூகத்தைப் பாதிக்கிறது. சமத்துவமற்ற வளர்ச்சியானது மனிதாபிமானமற்ற காரணிக்கு காரணமாகிறது. வறுமை என்பது ஒரு மனிதனின் வாழ்க்கை உடல் நலம், திறமை ஆகியவற்றைப் பேணிப் பாதுகாப்பதற்கான குறைந்தபட்சத் தேவைகளைப் பெற இயலாத நிலையாகும். உணவு, உடை, உறைவிடம், கல்வி, சுகாதாரம் ஆகியவை மனிதனின் குறைந்த பட்சத் தேவைகளாகும். இத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கின்றவர்கள் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் எனவும், பூர்த்தி செய்ய இயலாதவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர். இந்திய மக்கள் தொகையில் சுமார் 48.3% வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர். பொருளாதார வளர்ச்சியடையாத நாடுகள் நூற்றுக்கும் மேல் உள்ளன. இவைகளில் குறிப்பிட்ட வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டி இருக்கிறது. யுனெஸ்கோவின் செயல்பாட்டால் இந்தியாவிலும் வளர்ச்சிக்கான மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவை மேற்கொள்ளுதல் அவசியமாக இருந்தது. பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல் அல்லது அதிகப்படுத்துதல் என்பது ஐக்கிய நாடு சபையின் குறிக்கோள் ஆகும். அடிப்படைத் தேவைகள் முதலில் கிடைக்கப் பெற வேண்டும். பொருளாதார வளர்ச்சி வறுமையை ஓட்ட வேண்டும். உழைக்கும் ஏழைகளுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் வளர்ச்சி என்பது சமூகத்தில் மாற்றத்தைக் கொடுக்கும் என் மால்கம் கூறிவந்தார். சில ஏழை நாடுகளில் ஒரு வகையான நாசமூட்டும் சமூகத் தத்துவங்கள் பரவிக்கிடப்பதால் வளரும் பொருளாதாரம் என்பது சமத்துவமின்மையாக இருக்கிறது. வருமானம் என்பதில் கவனம் செலுத்துவது என்பது சிலருடையகைகளில் உள்ளது. சேமிப்பும் அதிகம் சிலரிடம் உள்ளது. உண்மையான காரணம் பெரிய மற்றும் பொருளாதார வளர்ச்சி சமாதானமற்ற முறையில் உள்ளதால் அது வளர்ச்சியைத் தூண்டுவதாக இல்லை. அது உற்சாகமற்ற வளர்ச்சியாக இருக்கிறது. இதில் கிடைக்கும் மூலதனம் ஆடம்பரப் பொருட்களாகவும், ஊழல், வரி ஏய்த்தல் போன்றவைகளாக மாறுகின்றன. ஏழைகள் மத்தியில் ஈட்டப்படும் வருமானமானது சமாதானமற்ற முறையில் உள்ளது. ஏழை நாடுகளில் உணவு உற்பத்தியும் போதிய விகிதத்தில் உயருவதில்லை. உழைக்கும் ஏழைகளுக்கு வருமானத்தை உயர்த்தும் போது சிறு சேமிப்பானது வளரும் என்றார். சோசலிசம் : ஆதிசேஷையா சுதந்திரம் அடையாத இந்தியாவில் கொந்தளிப்பான காலக் கட்டத்தில் வளர்ந்தார். சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடினர். அடிமைத்தளையிலிருந்து விடுதலை வேண்டும் என்றனர். சுதந்திரம் அடைந்த பின்னர் புதியதாக உருவாக்கப்பட்ட சட்டம் சோசலித்தைக் கடைபிடிப்பதாக இருந்தது. சுதந்திரம் அடைந்த பின்னர் தலைவர்கள் தொழிற்சாலைகள் மூலம் வளர்ச்சியைக் கொண்டுவர விருப்பினர். இதன் காரணமாக பல தனியார் தொழிற்சாலைகள் உருவாயின. சிலர் மட்டுமே வசதி படைத்தவராகவும், உற்பத்தி செய்யும் முதலாளியாகவும், ஒட்டுமொத்த விற்பனை செய்பவராகவும் இருந்தனர். ஏகாதிபத்தியம் ஒரு கூட்டத்திற்கு மட்டும் உரிமையைக் கொடுத்து இருந்தது. விவசாயத்தை நம்பியே பெரும்பான்மை மக்கள் பிழைப்பை நடத்தி வந்தனர். ஒரு சிலர் மட்டும் இவர்களை அடக்கி ஆள்பவராக இருந்தனர். ஏகாதிபத்தியத்திற்கு மாற்று சோசலிசம் தான். இவர் யுனெஸ்கோவில் பணிபுரிந்த போது 1950 மற்றும் 1960 களில் புதிய நாடுகள் சுதந்திரம் பெற்றன. இந்த நாடுகளுக்கு சோசலிசம் மட்டுமே தீர்வு என மால்கம் கருதினார். மால்கம் சர்வதேச அரசியல் பிரச்சனைகளில் நடக்கும் சர்ச்சை சம்பந்தப்பட்ட விவாதங்களில் கலந்து கொள்வதோ, தலையிட்டதோ கிடையாது. நிலையான வளர்ச்சியின் மூலமே வறுமையை நிரந்தரமாக ஒழிக்க முடியும் என்றார். இவர் முழுக்க முழுக்க அமெரிக்காவைப் பின்பற்றி வால் பிடிப்பவராக இல்லை. நம்நாடு சுதந்திரமாக முடிவு எடுக்க வேண்டும் என்பார். மால்கம் சோசலிக் கருத்துக்கள் மீது நம்பிக்கை கொண்டவர். ஆனால் இடதுசாரி அல்ல. ஆனால் ஆதரிப்பவர். மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ராமமூர்த்தியை சந்தித்து உரையாடியுள்ளார். இந்தியாவில் ஏழ்மை ஒழிய வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். கல்வி மூலம் பொருளாதார வளர்ச்சி மால்கம் காலனி ஆட்சிக் காலத்தில் பிறந்தவர். அக்காலத்தின் கல்வியை மிகவும் தெளிவாகப் புரிந்து கொண்டார். கல்வி முக்கியமாக சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை என்பதை உணர்ந்தார். இரண்டாம் உலக யுத்தகத்திற்கு முன்பு கல்வியானது மிகவும் பிரகாசமாக இல்லை. அதன் பின்னர் கல்வி மிகவும் பிரபலம் அடைந்தது. உலக நிதி உதவியுடன் கட்டிடங்கள் கட்டப்பட்டன. நாட்டின் தலைவர்களும் கல்வியின் அவசியத்தை எடுத்துக் கூறினர். பொருளாதார நிபுணர்களும் கல்விக்காகக் குரல் கொடுத்தனர். வளர்ச்சிக்கு மனிதனின் பங்களிப்பு மிக முக்கியமாக இருந்தது, இருக்கிறது. கல்வி மூலம் பொருளாதார வளர்ச்சி என்பதில் மால்கம் ஆதிசேஷையா தனிக் கவனம் செலுத்தினார். ஒருவருக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை அடிப்படைத் தேவைகளாகும். கல்வியினால் இத்தேவைப் பூர்த்தி ஆகாது போனால் அத்தகையக் கல்வி, கற்பவனுக்குப் பயனற்றதாகிவிடும். மனிதனின் பொருளாதாரத் தேவைகளை எவரும் புறக்கணிக்க முடியாது. அவற்றை நிறைவேற்ற வேண்டிய தலையாய பொறுப்பு கல்விக்கு உண்டு. பொருளாதாரத் தன்னிறைவு பெற்ற மனிதனே நல்ல குடிமகனாக விளங்க வாய்ப்பு உண்டு. இதுமட்டுமே கல்வியின் நோக்கம் அன்று கல்வி ஒருவனுக்கு அறிவு, திறன், பண்பு, ஒழுக்க வளர்ச்சிக்கும் உதவுகிறது. கல்விக்காக அதிக நிதி ஒதுக்கி செலவு செய்யப்பட வேண்டும். கல்வியறிவு குறைவாக உள்ளதாலேயே வறுமையும், சமத்துவமற்ற நிலையும் நிலவுகிறது என்றார். கல்வியானது சிறந்தவர்களை உருவாக்குகிறது. மனநிறைவைக் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. விழிப்புணர்வுக் கல்வியானது ஊழலை ஒழிக்கும் என்றார். கல்வி வறுமையை ஒழிக்கும் ஒரு ஆயுதம். மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் என்றார் மால்கம். கல்வி மூலமே, பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வரமுடியும். கல்வி இல்லாமல் பொருளாதார வளர்ச்சி என்பது இருக்காது என்றார். கல்வி இல்லை என்றால் அது ஒரு போலியான வளர்ச்சியாகும். கல்வி அறிவு பெற்ற சமூகத்தின் மூலம் கிடைக்கும் வரவு என்பது அதிகமானதாக இருக்கும். மால்கம் மட்டும் பொருளாதாரத்திற்கும் கல்விக்கும் உள்ள தொடர்பைப் பற்றிய ஆய்வைச் செய்யவில்லை. அதற்கு முன்பும் பல பொருளாதார நிபுணர்கள் கல்விக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பை விளக்கியுள்ளனர். மால்கம் ஆதிசேஷையாவும் இது சம்பந்தமான ஆய்வை தான் முதலில் செய்ததாகவும் கூறிக்கொள்ளவில்லை. சோவியத் ரஷியாவில் லெனின் ஆட்சிக் காலத்தில் 1919ம் ஆண்டில் எஸ்.ஜி. ஸ்ட்ருமிலின் (S.G Stumilin) என்பவர் பொருளாதார மேதையாக இருந்தார். சோவியத்தில் தொழிற்சாலைகள் அதிக அளவில் கொண்டுவரமின் நிலையம் கட்டுவதும், அதன் மூலம் மின்சார/மின்சார விநியோக அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றார். தொழிற்சாலை, விவசாயத்தில் நவீனக் கருவிகளைப் பயன்படுத்துதல், இயந்திரங்களை அதிகளவில் உற்பத்தி செய்வது போன்றவைகளால் மட்டும் உற்பத்தி பெருகிவிடாது. கல்வியறிவும் மிக மிக அவசியம். அப்போதுதான் உற்பத்தியானது பெருகும் என்றார் ஸ்ட்ருமிலின். சோவியத் ரஷியாவில் துவக்கப்பள்ளி கல்வி 70 சதவீதமாக உயர்ந்தது. இரண்டாம் கட்ட கல்வி நிலை 235 சதவீதமாகவும், கல்லூரி, பல்கலைக் கழகம் 320 சதவீதமாகவும் முன்பு இருந்த நிலையை விட உயர்ந்தது. கல்வியில் ஏற்பட்ட வளர்ச்சியின் பலனான உற்பத்தியிலும், வரவிலும் உயர்ந்தது. 1950 மற்றும் 1960 களில் அமெரிக்காவில் ஆரம்பக்கட்ட அளவில் அதன் வளர்ச்சி அதிகரித்திருந்தது. சர்வதேச அளவில் கல்விக்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் உள்ள தொடர்பை மால்கம் ஆதிசேஷையாகணக்கிட்டார். பல நாடுகளில் முறையான கல்வி மற்றும் முறைசாராக் கல்விக்காக அதிக அளவில் பல நாடுகள் நிதி ஒதுக்கியுள்ளது என்பதைக் கண்டார். யுனெஸ்கோவில் இது சம்பந்தமான ஆராய்ச்சிமேற்கொள்ளப்பட்டது. புள்ளி விபரங்களைச் சேகரித்து யுனெஸ்கோவின் வருடாந்திரப் புத்தகத்தில் குறிக்கப்பட்டது. இவர் பள்ளியில் சேர்ந்தோர்களின் விகிதம், கல்விக்காக செலவு செய்த தொகை, நாட்டில் ஏற்பட்ட வளர்ச்சி, பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சி அல்லது வருமானம் ஆகியவற்றை உலகளவில் 1950 முதல் 1965 வரை தொகுத்தார். பொருளாதார வரவிற்கும், கல்வியின் வளர்ச்சிக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை ஒப்பிட்டுப்பார்க்கப்பட்டது. பொருளாதார வளர்ச்சியையும் கணக்கிட முடிந்தது. மால்கம் யுனெஸ்கோவில் பணியாற்றிய போது 1950 மற்றும் 1960களில் பொருளாதார விளைவால் கல்வியில் ஏற்படும் மாற்றம் பற்றி ஆராய்ந்தார். பொருளாதாரம் பற்றி பல்கலைக் கழத்திலும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. பள்ளிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் ஒதுக்கப்பட்ட தொகையால் ஏற்படும் வளர்ச்சி விகிதம் பற்றியும், முதியோர் கல்விக்காக, வேலை வாய்ப்பு கல்விக்காக ஒதுக்கப்படும் தொகையால் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் மால்கம் ஆராய்ந்தார். கல்வியும் சுகாதாரமும் கிராமப்புறத்தில் மிகவும் அவசியம் என்பதை இவர் சுட்டிக் காட்டியுள்ளார். இதன் மூலமே கிராமப்புற வளர்ச்சி அதிகரிக்கும் என்றார். கல்வி என்பது பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு சாவி போன்றது. முக்கியக் காரணியாக உள்ளது என்பதை திரும்பத் திரும்பச் சொன்னார். வளரும் நாடுகள் குறைந்த வருமானம், குறைந்தளவில் மூலதன முதலீடு, குறைந்த உற்பத்தி ஆகிய பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றன. மால்கம் ஆதிசேஷையா தேர்ந்தெடுத்தது ஒரு பொருளாதார நிபுணராகவும், கல்வியாளராகவும், இதற்கு தயாரானது ஆகஸ்ட் 14, 1949 ஆகும். ஐக்கிய நாடுகள் சபை ஒரு தீர்மானத்தை விரிவுபடுத்துவதற்காக தொழில்நுட்ப உதவியாளரை உருவாக்கியது. இது ஒரு புதிய சகாப்தத்தை சர்வதேச அளவில் வளரும் நாடுகளுக்கு உதவுவதாக அமைந்தது. ஆதிசேஷையா கல்வி வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் வளரும் நாடுகளுக்கு நிதி கிடைக்க ஏற்பாடு செய்தார். 1,075,454 டாலர் பணத்திலிருந்து யுனெஸ்கோ ஒரு பங்கு வளர்ச்சிக்காக 10, 143,861 பாலராக கொடுத்தது. இது மேலும் 26,073,904 டாலர் சிறப்பு நிதியானது ஆதிசேஷையா யுனெஸ்கோவிலிருந்து 1970ம் ஆண்டில் வழங்கினார். கல்விக்காக உலக வங்கியின் நிதியைப் பெறுதல் என்பது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. இதன் கவர்னர் கல்விக்காக நிதி ஒதுக்குவதில் விருப்பமற்றவராக இருந்தார். உலக வங்கி அலுவலக செயல்பாடு என்பது 1946ல் துவங்கியது. அது சாலை போக்குவரத்து, தொழில் நுட்பம், மின்சாரம் ஆகியவற்றின் மீதே கவனம் செலுத்தியது. பின்னர் விவசாயம் மற்றும் தொழிற்சாலைக்கு உதவியது. இருபது ஆண்டுகளாக உதவி செய்தும் வறுமை என்பது ஒழிந்தபாடு இல்லை. கல்விக்கு உலக வங்கி உதவி செய்ய முன்வரவில்லை. ஆதிசேஷையா யுனெஸ்கோ மூலம் நேரடியாக உலக வங்கியுடன் தொடர்பு கொண்டு கல்விக்கு உதவுவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை நாடுகளில் கொண்டு வரலாம் என்பதை எடுத்துக் கூறினார். இறுதியாக வங்கி நிர்வாகம் இதற்கு சம்மதம் தெரிவித்து கல்விக்காக நிதி வழங்க ஒத்துக்கொண்டது. முதன் முதலாக கல்விக்காக 1962ம் ஆண்டில் டுனிசியா (Tunisia) நாட்டிற்குக் கொடுத்தது. பின்னர் கல்விற்காக பணம் கொடுப்பது ஒரு முக்கிய செயல்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. வளர்ந்த நாடுகள் கல்வியின் அவசியத்தை நன்கு உணர்ந்திருக்கின்றன. அங்கு மக்களுக்கு முதலில் கல்வி கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் அந்நாடுகள் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளன. வளரும் நாடுகளில் வேலையின்மை என்பது இருக்கிறது. அங்கு நிலவும் நிலவுடமை என்பது உற்பத்தியைக் குறைக்கிறது. சர்வதேச அமைப்பானது மிகவும் துரிதமாகச் செயல்படுவதன் மூலம் இயற்கையான வளர்ச்சி ஏற்பட்டாலும் அது மனித வளத்திற்கு ஏற்ற உற்பத்தி என்பது இல்லை என ஆதிசேஷையா தெரிவித்தார். நிலையான வளர்ச்சி என்பது கல்வி பெறுவதன் மூலமே நிகழ்த்த முடியும். கல்வி என்பது தனிநபர் பொருளை நுகர்வதற்கு உதவுவது என்றார். கல்வி என்பது சமூக மாற்றத்திற்கான ஒரு காரணியாக உள்ளது. தொழில் நுட்ப வளர்ச்சிக்கும் உதவுகிறது. சமூகத்தில் தனி மனிதனை உயர்த்துகிறது. அதே சமயத்தில் கல்வி என்பது தொடர்ந்து வயதான காலம் வரை சிறந்த குண நலன்களை உருவாக்குகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவு, பயிற்சி, மனிதாபிமானம், நீதி, கலாச்சாரம் ஆகியவற்றிக்கும் கல்வி மிகவும் உதவுகிறது என்பதை மால்கம் கூறி வந்தார். கல்வி ஒரு சமூகத்தின் அச்சாணி என்பதை மால்கம் அறிந்திருந்தார். கல்விக்கு என்று சில குறிக்கோள்களும், கோட்பாடுகளும் உள்ளன. அதுவே சாதனைகளைப் புரிகிறது. ஒரு குறிப்பிட்ட சமூகம் கல்வியறிவு பெற்று வளர்கிறது என்பதையும் மால்கம் உணர்ந்திருந்தார். 1950 மற்றும் 1960 களில் ஆதிசேஷையா பல நாடுகளின் அரசுகளுக்கு உதவினார். சமூக மற்றும் அரசியல் முக்கியத்துவத்தை வேறுபடுத்திப் பார்த்தார். இரண்டாம் உலக யுத்தம் முடிந்த பின்னர் 15 வருடத்தில் 60 நாடுகள் சுதந்திரம் அடைந்தான். அங்கு அரசியல் மாற்றம் ஏற்பட்டது. தொழில் துறையில் ஈடுபடத் துவங்கின. வறுமையை ஒழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பிரிட்டிஷ் காலனி நாடாக இந்தியா இருந்த போது கல்வி முறையில் பல மாற்றங்கள் செய்தனர். ஆனால் சமத்துவமற்ற நிலையே நீடித்தது. பிரிட்டிஷ் அரசு உயர்ந்த கல்வி நிலையங்களையும், பல்கலைக் கழகங்களையும் நிறுவிய போதும் வசதி படைத்தவர்களே படிக்க முடிந்தது. கிராமத்தில் செயல்பட்ட பள்ளியானது கல்வி கொடுத்தாலும் அங்கு எழுத்தறிவு இல்லாதவர்களை அதிகப்படுத்தியது. பிரெஞ்சு பேசும் நாடுகளில் கல்வி என்பது அடிப்படை உரிமை எனக்கோரப்பட்டது. 1960ம் ஆண்டுகளில் சுதந்திரம் பெற்ற நாடுகளில் பல்கலைக் கழகப் படிப்பை முடித்தவர்கள் 10 சதவீதம் பேர் மட்டுமே இருந்தனர். மால்கம் வளரும் நாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய யுனெஸ்கோ மூலம் உதவினார். ஓய்வற்று உழைத்தார். இவர் இரண்டு முறை உலகின் பல நாடுகளுக்குச் சென்று வந்தார். செல்ல முடியாத இடங்களுக்கு ஜீப்பில் சென்று வந்தார். பள்ளிக் கூடங்களைப் பார்வையிட்டார். பல புதிய ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டார். பல நாட்டு மந்திரிகளைச் சந்தித்து விளக்கினார். பல சமயங்களில் ஓய்வு, உறக்கமின்றிப் பணிபுரிந்தார். பல புதிய யுக்திகளையும், திட்டங்களையும் உருவாக்கினார். கல்வியில் திட்டமிடல் மால்கம் ஆதிசேஷையா யுனெஸ்கோவின் மிக பொறுப்பு வாய்ந்த மனிதராக இருந்தார். பல நாட்டு கல்வி மந்திரிகளைச் சந்தித்துப் பேசினார். அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். கல்வி கொடுப்பதன் சிரமங்களைப் பற்றியும் விவாதித்தார். மூன்றாம் உலக நாடுகளின் கல்வி, நிலவளத்தன்மைக்கு ஏற்ப அந்நாடுகளின் எதிர்காலம் பற்றியும் அவை தானே திட்டமிட்டு வளர வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறி வந்தார். கல்விக்கான ஒரு இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்றார். பின்னர் அதனை அடையத் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றார். கல்வி என்பது தேசியக் கொள்கையாகவும், தேசிய வளர்ச்சிக்கான திட்டமாகவும் இருத்தல் வேண்டும் தேசியக்கொள்கையை அடைவதற்கு திட்டமிடுதல் வேண்டும் என்றார் மால்கம். இதனை அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்டன. கல்வித்திட்டம் ஒரு புதிய இடத்தை நோக்கி 1960களில் சென்றது. தனக்கு இருந்த பொருளாதார அறிவைக் கொண்டு கல்வி என்பது ஒரு நீண்ட கால போதனையாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினார். மால்கம் ஆதிசேஷையா கல்வித்திட்டத்திற்கு ஆலோசனை வழங்குபவராகவும், உதவி புரிபவராகவும் இருந்தார். முதன் முதலாக 1959ம் ஆண்டு கராச்சியில் மண்டல அளவிலான திட்டத்தை கொண்டு வந்தனர். இவர் ஆப்பிரிக்காவில் தேசிய அளவிலான மாநாட்டை நடத்தினர். இதில் கல்வி அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இது யுனெஸ்கோவின் திட்டமாக இருந்தது. ஒவ்வொரு 4 ஆண்டுக்கு ஒரு முறை இது போன்ற மாநாடுகளை நடத்தி கல்வியின் தரம், வளர்ச்சி, சிரமம் பற்றி பேசப்பட்டது. ஆதிசேஷையாவின் தலைமையில் யுனெஸ்கோ பன்னாட்டு கல்வி திட்டமிடும் அமைப்பை (IIEP) பாரிஸில் 1963ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான நிதி உதவியை உலக வங்கி வழங்கியது. இந்த பன்னாட்டு கல்வி திட்டமிடும் அமைப்பானது கருத்தரங்கம், பயிற்சி முகாம்கள் போன்றவற்றைத் தேசிய அளவில் நடத்தின. புத்தகங்கள், அறிக்கைகள், ஆய்வுக் கட்டுரைகள் ஆகியவை சுற்றறிக்கையாகவும், வெளியீடுகளாகவும் கல்வித் திட்டத்திற்குக் கொடுத்து உதவியது. யுனெஸ்கோவிலிருந்து ஓய்வு : மால்கம் தனக்கு 60 வயதானவுடன் 1970ம் ஆண்டில் ஓய்வு பெற முடிவு எடுத்தார். அப்போதைய இயக்குநர் ஜெனரல் ரெனி மாஹியூ அதை விரும்பவில்லை. அவரை தொடர்ந்து பணிபுரிய வேண்டினார். மால்கம் மறுத்து விட்டார். மால்கம் ஓய்வு பெற்ற பிறகு அதுவரை அவர் செய்து வந்த பணிகளைச் செய்ய அவருக்கு பிரதியாக இரண்டு துணை இயக்குநர் ஜெனரல்களை நியமனம் செய்தனர். இதன் மூலம் மால்கமின் தன்னிகரில்லாத உழைப்பின் பெருமையை அறிய முடிகிறது. மால்கம் பணி ஓய்வு பெற்ற பின்னரும் யுனெஸ்கோ இவரது ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் கேட்டுப் பெற்றது. யுனெஸ்கோ அவரைப் பெருமையுடன் பயன்படுத்திக் கொண்டது. யுனெஸ்கோ அதன் பல்வேறு அமைப்புகள், குழுக்களுக்கு தலைவராகவும், ஆலோசகராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் ஆக்கிக் கொண்டது. யுனெஸ்கோவின் பன்னாட்டுக் கல்வி திட்டமிடும் அமைப்பின் (International Institute of Educational Planning) தலைவராக 1981ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் நியமித்திருந்தது. இதனால் இவரை இதன் தந்தை (Founding Father) என அழைக்கின்றனர். சுற்றுச் சூழல் பற்றிய பன்னாட்டு ஆலோசனைக் Glofloor (UN International Committee of Consultants on Environment) அங்கத்தினராக்கியது. யுனெஸ்கோவின் நவீன பன்னாட்டு பொருளியல் ஏற்பாட்டின் வேலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக்கி (Co-coordinator of the UNESCO Working Group on the New International Economic Order) கெளரவித்தது. 1987, 1991, 1992ம் ஆண்டுகளுக்கான பன்னாட்டு படிப்பறிவுப் பரிசு வழங்கத் தகுதியானவர்களைத் தேர்தெடுக்கும் ஜீரிப்பேரவைத் தலைவராக்கியது. மால்கம் இறங்கும்வரை அவருடைய ஆலோசனைகளையுனெஸ்கோ வேண்டிப் பெற்றுக் கொண்டது. மால்கம் இந்தியாவிற்கு மட்டும் சொந்தக்காரராக இல்லாமல் யுனெஸ்கோவிற்கும் சொந்தமானவராக இருந்தார். உலகத் தமிழ் மாநாடு உலகத் தமிழ் மாநாடு முதன் முதலில் தமிழ்நாட்டில் நடத்தப்படவில்லை. முதல் உலகத் தமிழ் மாநாடு 1966ம் ஆண்டில் மலேசியாவில் நடந்தது. இந்த மாநாட்டில் மால்கம் ஆதிசேஷையா கலந்து கொண்டார். முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 1. முதல் மாநாடு - 1966 - கோலாம்பூர் (மலேசியா) 2. இரண்டாவது மாநாடு - 1968 - சென்னை (இந்தியா) 3. மூன்றாவது மாநாடு - 1970 - பாரிஸ் (பிரான்ஸ்) 4. நான்காவது மாநாடு - 1974 - யாழ்ப்பாணம் (இலங்கை) 5. ஐந்தாவது மாநாடு - 1981 - மதுரை (இந்தியா) 6. ஆறாவது மாநாடு - 1987 – கோலாம்பூர்(மலேசியா) 7. ஏழாவது மாநாடு - 1989 - மொரீசியஸ் 8. எட்டாவது மாநாடு - 1995 - தஞ்சாவூர் (இந்தியா) மால்கம் 1970ம் ஆண்டில் யுனெஸ்கோவின் இயக்குநர் ஜெனரலாக இருந்த போது மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு பாரிஸ் நகரில் நடந்தது. இந்த மாநாடு நடப்பதற்குப் பேருதவி செய்தார். அவர்தான் அதன் வரவேற்புரையை ஆற்றினார். அவர் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய மூன்று மொழிகளில் பேசினார். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டில் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து சென்னையில் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தரமணியில் 1970ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யுனெஸ்கோ நிறுவனத்தின் முடிவின் படி உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் (International and Institute of Tamil Studies) உருவாவதற்கு மால்கம் ஆதிசேஷையா உறுதுணையாக இருந்தார். மால்கம் இந்த நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் இருந்து இதன் வளர்ச்சிக்கு உதவினார். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் : மால்கம் ஆதிசேஷையா யுனெஸ்கோவிலிருந்து ஓய்வு பெறும் போது 1970ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இவரும், இவர் மனைவி எலிசபெத் ஆதிசேஷையாவும் சேர்ந்து சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (Madras Institute of Development Studies) என்பதைத் தொடங்க ஒரு டிரஸ்டைப் பதிவு செய்தார்கள். மால்கம் ஆதிசேஷையா பதவி ஓய்வு பெற்ற பின்னர் ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தை நடத்த வேண்டும் என ஏற்கனவே அவர் முடிவு செய்து வைத்திருந்தார். சமூக, பொருளாதார வளர்ச்சி, அரசியல் மாறுதல்களைப் பற்றி, அதிலும் குறிப்பாகத் தமிழ் நாட்டின் மாறுதல்களைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்வதற்கு இந்த நிறுவனம் முயல வேண்டும் என்கிற இலக்கை அவர் கொண்டிருந்தார். இந்த அமைப்பை நடத்தும் திறமை அவருக்கு இருந்தது. இவர் தனது சொத்தில் அடையாறு காந்தி நகர் இரண்டாவது பிரதான சாலையில் எம்.ஐ.டி. எஸ் (MIDS) பணியை ஜனவரி 1971ம் ஆண்டிலிருந்து தொடங்கினார். இதன் முதல் இயக்குநராக இருந்து செயல்பட்டார். மால்கம் ஆரம்பித்த எம். ஐ. டி. எஸ் இந்தியாவின் சிறந்த சமூகவியல் ஆய்வு நிறுவனங்களில் ஒன்றாக மாறியது. இந்திய அரசின் சமூகவியல் ஆய்வு கவுன்சில் (Indian Council of Social Science Research - ICSSR) ஒரு மிஷனை (Mission) 1976ம் ஆண்டு அனுப்பி MIDSஐ ஆராயச் செய்தது. இந்த மிஷனின் பரிந்துரைப்படி 1977ம் ஆண்டு மார்ச் முதல் MIDS தேசிய நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டது. இதற்கு நிதி உதவியை மத்திய - மாநில அரசுகள் வழங்கின. இதனைக் கொண்டு கட்டிடம், நூலகம், மேஜை, நாற்காலிகள், உபகரணங்கள் ஆகியவற்றுடன் MIDS செயல்படத் துவங்கியது. ரிசர்வ் வங்கியும் 1985ம் ஆண்டில் ஒரு பங்கை கொடுத்து மண்டல அளவில் பொருளாதாரத்தைப் பற்றி ஆய்வு செய்ய கேட்டுக் கொண்டது. இதன் அடிப்படையில் பொருளாதார ஆய்வு செய்யப்பட்டது. ரிசர்வ் வங்கி இதனை 5 ஆண்டுகள் நீடித்தது. 1991ம் ஆண்டில் மீண்டும் நீடித்தது. தொடர்ந்து மதீப்பீடு (Review) செய்தது. 1993ம் ஆண்டில் ரிசர்வ் வங்கி MIDSல் ஆராய்ச்சியில் (Ph.D) ஈடுபடும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கியது. தமிழகத்தின் சமூக, பொருளாதாரப் பிரச்சனைகள் பற்றி ஆய்வு செய்வதற்கென ஓர் உயராய்வு அமைப்பு வேண்டுமென நினைத்த மால்கம் தம் உழைப்பையும், உடைமைகளையும், செல்வத்தையும், நூலகத்தையும் இந்த நிறுவனத்திற்காக முழுமையாகக் கொடுத்தார். சென்னையில் உள்ள சிறந்த நூலகங்களில் MIDSல் உள்ள நூலகத்தையும் ஒன்றாக மாற்றினார். ஆண்டு தோறும் பல்துறை ஆய்வு வழிமுறைப்பட்டறைகளை நடத்தினார். தென்னிந்தியாவின் சமூகவியல் ஆய்வாளர்கள் கருத்தரங்கை நடத்தினார். மாதந்தோறும் ஆய்வாளர்களும், பொது மக்களும் கலந்து கொள்ளும் கருத்தரங்கம் நடத்தினார். MIDS நிறுவனம் தமிழிலும், ஆங்கிலத்திலும் சமூகவியல், பொருளியல் சார்ந்த நூல்களை வெளியிட்டது. ஆராய்ச்சி முறைகளுக்கு வழிகாட்டி ஒன்றையும் வெளியிட்டது. மால்கம் 1978ம் ஆண்டு முதல் வாழ்நாள் முழுவதும் MIDSன் சேர்மேன்னாக இருந்து பணிபுரிந்தார். ஆய்வாளர்கள் அவரவர் துறைகளில் சுதந்திரமாகத் தங்கள் கருத்துக்களைத் தக்க ஆதாரங்களுடன் வெளியிட வழிகோலிய நிறுவனமாக MIDS ஐ வளர்த்தார். இந்தியா பற்றி ஆராய வந்த பல வெளிநாட்டு ஆய்வாளர்களையும் MIDSல்தொடர்பு ஆய்வாளர்களாகக் (Attiliates) சேர விரும்ப வைத்ததும் இவரது சாதனையாகக் கருதப்படுகிறது. அந்த அளவுக்கு MIDSன் தரத்தை உயர்த்திக் காட்டினார். ஆதிசேஷையாகிராமப்புறத்தின் வளர்ச்சியில் ஏன் பின்னடைவு ஏற்படுகிறது என்பதைப் பற்றிய ஆய்வினைச் செய்தார். MIDS ஆரம்பித்த முதல் ஆண்டில் நிறைய ஆய்வுகளை தமிழ்நாடு கிராமப்புறங்களில் மேற்கொண்டார். பொருளாதாரம், வறட்சி, நிலம், நிலச் சீர்திருத்தம், நீர் பாசனம், கிராமப்புற வேலை வாய்ப்பு, கிராமப்புற வீட்டு வசதி போன்றவைகளைப் பற்றியும் ஆய்வு செய்தார். குறிப்பாக ஏழைகள் இந்திய சமூகத்தில் புறக்கணிக்கப் படுபவர்களாக இருக்கின்றனர் என்பதை அவர் தனது ஆய்வின் மூலம் கண்டறிந்தார். மால்கம் வறுமையைப் பற்றியும் ஆய்வு செய்தார். கூலியாக வழங்கப்படும் பொருட்களைப் பற்றியும் தமிழ் நாட்டில் ஆராய்ந்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் சமூகத்தின் பொருள் ஈட்டும் திறன் மற்றும் சமூக அந்தஸ்து பற்றியெல்லாம் ஆராய்ந்தார். தாழ்த்தப்பட்ட பழங்குடி மற்றும் மீனவர்கள், பெண்கள் சமூகம் ஆகியோரின் வாழ்க்கை நிலையையும் ஆராய்ந்து பல உண்மைகளைக் கண்டறிந்தார். மால்கம் தனது கால் பகுதி வாழ்க்கையை MIDSல் கழித்தார். சமூக விஞ்ஞானத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்கு இந்த நிறுவனம் உதவியாக இருந்தது. முதலில் இவர் தென் இந்தியாவில் உள்ள மாணவர்களான சீனியர் சமூக விஞ்ஞானிகளைச் சந்தித்து MIDSன் எதிர்காலம் பற்றி விளக்கினார். இவர் இந்திய சமூகவியல் ஆய்வு கவுன்சிலின் கூட்டு ஒத்துழைப்புடன் 6 வாரங்கள் பயிற்சி நடத்தினார். இதில் தென் இந்திய பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் முனைவர் பட்டத்திற்காக எப்படி ஆய்வு செய்வது என்பதற்கான வழி முறைகளைக் கூறினார். இவர் முனைவர் ஆய்வு செய்பவர்களின் கண்காணிப்பாளர்களுக்கான சிறப்பு பயிற்சியையும் கொடுத்தார். இதன் செயல்பாடாக ஆராய்ச்சிக்கான வழிகாட்டி புத்தகம் ஒன்றை உருவாக்கினார். இந்தப் புத்தகம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பல்கலைக் கழகத்திலும் இருக்கிறது. மால்கம் ஆதிசேஷையா மாதம் ஒரு கருத்தரங்கம் நடத்தினார். அது ஒரு பொது செயல்பாடாக இருந்து சமூக பொருளாதார பிரச்சனைகளை ஆய்வதாக இருந்தது. அது அவ்வப்போது நிலவும் கொள்கைகளைப் புரிந்து கொள்ள உதவியது. இந்நிறுவனத்தின் மூலம் வருடத்திற்கு ஒரு முறை பி.எச்.டி. (Ph.D) ஆய்வு மாணவர்களுக்கு என் கருத்தரங்கம் நடத்தினார். தென்னகப் பல்கலைக் கழக சமூக ஆராய்ச்சியாளர்களின் கூட்டம், தென்னக சமூக அறிவியல் ஆராய்ச்சி மையங்களின் புள்ளிவிவரங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து நடத்தி வந்தார். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் முக்கிய நோக்கம் என்பது வளர்ச்சி சம்பந்தமான ஆய்வுகள் செய்வதாகும். குறிப்பாக தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு உதவுவதாகும். MIDS செமினார், கருத்தரங்கம், மாநாடு போன்றவைகளை தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் நடத்தியது. நான்கு தென் மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகத்தின் சமூக விஞ்ஞானிகளுக்கு இடையே ஒரு நட்புறவை ஏற்படுத்திக் கொடுத்தல் இதன் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. மேலும் இவர்களுக்கு இடையே ஆய்வுகளின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் உதவி செய்கிறது. MIDS சிக்கலான பொருளாதார வளர்ச்சியில் தனது கவனத்தைச் செலுத்துகிறது. தனது சேவையை மத்திய மற்றும் மாநில துறைகளுக்கும், தன்னிச்சையாக செயல்படும் நிறுவனங்களுக்கும், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், அரசு சாராத அமைப்புகளுக்கும் உதவுகிறது. சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு என்று ஒரு இயக்குநர் உள்ளார். இங்கு பேராசிரியர்களும் பணி புரிகின்றனர். இவர்கள் அனைவரும் MIDSன் உறுப்பினர்கள். முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சியில் ஈடுபடுகிறவர்கள் சுழற்சி முறையில் இங்கு வேலை செய்கிறார்கள். 5 சமூக விஞ்ஞானிகள் மற்ற பல்கலைக் கழகத்திலிருந்து இதன் அகடமிக் கவுன்சிலில் (Academic Council) உறுப்பினர்களாக இருக்கின்றனர். இந்த கவுன்சில் வருடத்திற்கு இரண்டு முறைக் கூடி பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. MIDS ஆரம்பித்த தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. மால்கம் ஆண்டு விழாவின் போது உரையாற்றுவார். அத்தினத்தின் போது சிறந்த ஆசிரியர்களுக்கு மால்கம் ஆதிசேஷையா விருது வழங்கப்படுகிறது. இந்த நிறுவனம் வறுமை, நிலச் சீர்திருத்தம், சிறார் தொழிலாளர் நிலை, தொழில் வளர்ச்சி, நீர் வளம், பாசன மேலாண்மை, மக்கள் தொகையியல், எழுத்தறிவு, இட ஒதுக்கீடு, உள்ளாட்சி, ஊரக ஆய்வுகள், சமூக பண்பாட்டு வரலாறு, பாலினம், உலக வர்த்தகம் முதலானவை பற்றிய முன்னோடியான், சீரிய ஆய்வுகளை இந்நிறுவனம் நிகழ்த்தியுள்ளது. இது சென்னைப் பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற பி.எச்.டி. (Ph.D) ஆய்வு மையமாகவும் விளங்குகிறது. முனைவருக்கான ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு தகுதி அடிப்படையில் (Merit) உதவித் தொகை வழங்கப்படுகிறது. இது நல்ல தரமான ஆய்வை தமிழகத்தில் செய்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. உதவித் தொகை ஒரு மாணவருக்கு மூன்று ஆண்டுகள் வழங்கப்படுகிறது. மால்கம் பல நிறுவனங்களில் தனது பணியை ஆற்றினார். ஆனால் இவரின் விருப்பமான குழந்தையாக MIDS இருந்தது. இவர் தனியாக இதனை ஆரம்பித்தார். அது ஒரு தனக்கு என்று ஒரு இடத்தை வரலாற்றில் பிடித்துக் கொண்டது. பொருளாதாரம், சமூகம், அரசியல் பற்றிய ஆய்வை ஊக்குவித்தது. தனது வாழ்நாள் முழுக்க மால்கம் ஆதிசேஷையா MIDSற்காக பாடுபட்டார். MIDS மால்கம் ஆதிசேஷையாவின் நினைவுச் சின்னமாக விளங்குகிறது. MIDS தமிழ்நாட்டளவில் மட்டும் முக்கியமான ஒன்றாக கருதப்படவில்லை . அது தேசிய அளவிலும், ஆசிய மற்றும் சர்வதேச அளவிலும் முக்கியத்துவம் பெற்ற ஒரு நிறுவனமாக விளங்குகிறது. புல்லட்டின் : சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் செயல்படத் துவங்கிய அடுத்த மாதத்திலிருந்து பிப்ரவரி 1971ம் ஆண்டில் புல்லட்டின் (Bulletin) என்கிற மாத இதழை துவக்கினார். இது Bulletin - Madras Development Seminar Series என்கிற ஆங்கில மாத இதழாக வெளிவந்தது. புல்லட்டின் இதழின் ஆசிரியராக மால்கம் இருந்தார். இதில் 25 பக்கம் வரை ஆதிசேஷையா தலையங்கம் எழுதினார். இதனை தனது வாழ்நாள் முழுக்க செய்து வந்தார். இது ஒரு ஆய்வுப் பகுதியாகவே இருந்தது. தலையங்கமானது பொருளாதார நிலை, கல்வி மற்றும் சமூகக் காரணிகள் ஆகியவை தமிழகம் சார்ந்ததாக இருந்தது. இந்தியா மற்றும் சர்வதேச அளவில் கூட தலையங்கமாக எழுதினார். இவர் தனது தலையங்கத்தில் பன்னாட்டு, இந்திய மற்றும் தமிழ்நாட்டில் அந்த மாதத்தில் நிகழ்த்த பொருளியல் மாறுதல்களின் சுருக்கத்தையும், அவற்றைப் பற்றிய திறனாய்வுகளையும் அதில் செய்திருந்தார். இந்த இதழ் தொடர்ந்து குறிப்பிட்ட நேரத்தில் வெளிவரக் காரணமாக இருந்தார். இந்த இதழ் அவர் இறக்கும் வரை தொடர்ந்து 24 ஆண்டுகளாக வெளிவந்தது. ஒவ்வொரு மாதமும் இவர் நடத்திய கருத்தரங்கிற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அரசு செயலர்கள், ஆய்வாளர்கள், பொது மக்கள் அனைவரும் இவருடைய கருத்தை அறியவும், திறனாய்வை பெறவும் விரும்பிக் கலந்து கொண்டனர். நடைபெற்ற கருத்தரங்கத்தின் சுருக்கத்தை புல்லட்டினில் வெளியிட்டு வந்தார். திட்டக்குழு மால்கம் தன்னுடைய MIDS பணியைத் தவிர புதியதாக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் திட்டக்குழுவின் வைஸ் சேர்மேனாக 1972ம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். அவர் தனக்கே உரிய வழக்கமான வேகத்தில் தமிழ்நாட்டின் வெவ்வேறு துறைகளுக்கும் நீண்ட கால முன்னேற்றத்திற்கான தொலைநோக்குத் திட்டங்களை (Perspective plans) தயாரித்தார். அதில் கல்விக்கடன் தொலை நோக்குத் திட்டமும் அடங்கும். இதே காலக் கூட்டத்தில் அவர் மத்திய திட்டக்குழுவின் வழிகாட்டும் ஸ்டீரிங் கமிட்டியின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். அப்போதிருந்தே மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் திட்டங்களில், நடவடிக்கைகளில் அவருக்கு ஏதாவது ஒரு வகையில் தொடர்பு இருந்து கொண்டேயிருந்தது. துணை வேந்தர் மால்கம் ஆதிசேஷையா சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக (Vice Chancellor) 1975ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதியில் பொறுப்பேற்றார். துணைவேந்தர் பொறுப்பு ஏற்றவுடன் முதல் நிகழ்ச்சியாக கும்பகோணத்தில் உள்ள மீனாட்சி பெண்கள் கல்லூரி துவக்க விழாவில் ஆகஸ்ட் 4, 1975ம் ஆண்டில் கலந்து கொண்டார். உடனேதான் பல்கலைக்கழகத்தில் சாதிக்க விரும்பும் செயல் திட்டத்தைப் பட்டியலிட்டார். அவர் அடுத்த 15 ஆண்டுகளுக்கான சென்னைப் பல்கலைக் கழகத்தின் வளர்ச்சித் திட்டங்களை வகுத்தார். அதுவரை பல்கலைக் கழகம் தான் பள்ளிகளுக்கான மெட்ரிகுலேஷன் பாடத் திட்டத்தைத் தயாரித்து கொடுத்து வந்தது. அது மட்டுமல்லாமல் தேர்வுகள் நடத்துதல் முதலியவற்றையும் கவனித்து வந்தது. பள்ளிப் படிப்பு, பல்கலைக் கழகத்தின் உயர்நிலைப் படிப்பிலிருந்து தனித்தியங்க வேண்டும் எனக் காரணம் காட்டி அதைப் பிரித்து விட்டார். அறிவியல், கலையியல் மற்றும் மொழிக்கென்று பல்கலைக் கழகத்தில் தனித்தனிப் பள்ளிகள் அமைத்து அவற்றிற்குத் தனித்தனி டீன்களை நியமித்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் கல்வியல், ஆன்த்ரோ பாலஜி, எக்னோமெட்ரிக்ஸ், மாலிகுளர் பயாலஜி, டிபன்ஸ் ஸ்டடீஸ், பாலிமர் சைன்ஸ் போன்ற பாடங்களை அறிமுகப்படுத்தி பல புதிய துறைகளைத் துவக்கினார். பல்கலைக்கழகத்தில் அதுவரை மிகப்பெரும்பாலான துறைகள் ஆராய்ச்சியில் மட்டுமே ஈடுபட்டிருந்தன. அவைகளிலும் கற்பிக்கப்பட வேண்டும் என் கட்டாயமாக்கினார். ஆய்வில் மட்டுமே ஈடுபட்டிருந்த துறைகளில் கற்பித்தல் கட்டாயமாக்கப்பட்டதால் அத்துறைகளில் புதிய ஆசிரியர்கள் நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் நியமித்த பல ஆசிரியர்கள் பிற்காலத்தில் அந்த துறைக்கும், பல்கலைக்கழகத்திற்கும் புகழ் சேர்த்தார்கள். துறைத்தலைவர் பதவியை சுழற்சி முறைக்கு கொண்டுவந்தார். இதனால் சில துறைகளின் தலைவர்களின் சர்வாதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டது. பல்துறை தழுவிய ஆய்வுகளின் முக்கியத்துவத்தை உணர்த்திருந்த மால்கம், எல்லாத் துறைத் தலைவர்களும், பேராசிரியர்களும் அடங்கிய பல்துறை அடங்கிய கவுன்சில் (இன்டர் டிபார்ட்மென்டல் கவுன்சில்) ஏற்படுத்தினார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற்ற கல்லூரிகள் சுயமாகவே முதுநிலைப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க வழிவகை செய்தார். திருச்சியிலும், கோயம்புத்தூரில் இயங்கிய பல்கலைக் கழக முதுகலைப் பட்ட மையங்கள் இரண்டிற்கும் தன்னாட்சி உரிமை வழங்கினார். மேலும் அவைகளே தேர்வுகளை நடத்தி பட்டங்கள் வழங்கவும் வழிவகுத்தார். பின்னர் அவை புதிய பல்கலைக்கழகங்களாக மாறுவதற்கு நல்ல பயிற்சியாக அது அமைந்தது. கோத்தாரி கமிஷன் சிபாரிசின் அடிப்படையில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் வரம்புக்கு உள்பட்ட சில மேன்மையான கல்லூரிகளுக்கும் தன்னாட்சி வழங்கினார். செமஸ்டர் முறையை கல்லூரிகளில் முதன்முதலில் அமுல்படுத்தியவர் மால்கம் ஆதிசேஷையா ஆவார். இந்த முறையானது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே ஒரு சுறுசுறுப்பை ஏற்படுத்தியது. மால்கம் தேர்வு முறைகளிலும் மாற்றத்தைக் கொண்டுவந்தார். விடைத்தாள்களில் நீண்ட கட்டுரை மாதிரி விடை தேவைப்படும் கேள்விகள், குறுகிய பத்திகள் அள்வு விடை தேவைப்படும் கேள்விகள் மற்றும் புறவயத்தன்மைக்கேள்விகள் (Objective type) ஆகிய மூன்றும் கலந்த கலவையாக்க கேள்வித்தாள்கள் தயாரிக்க செய்தார். இது முழுக்க மாற்றம் கொண்டதாக இருந்தது. மாணவர்களின் தேர்வில் அதிகம் தேர்ச்சி பெற இது வழிவகை செய்தது. படிப்பின் மீது ஆர்வத்தையும் உண்டு பண்ணியது. தேர்வு முறையை மாற் கல்லூரிகளில் பாடங்கள் நடத்தும் ஆசிரியர்களின் அகமதிப்பீட்டிற்கு (Internal Assessment) 40 விழுக்காடு மதிப்பெண்களும், புற மதிப்பீட்டிற்கு 60 விழுக்காடு மதிப்பெண்களும் தரும் முறையை அறிமுகப்படுத்தினார். அதற்காக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் கொடுக்க ஏற்பாடு செய்தார். அக மதிப்பீட்டு முறையைக் கொண்டு ஆசிரியர்கள் மாணவர்களை மிரட்டக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. ஆகவே இது காலப்போக்கில் கைவிடப்பட்டது. மால்கம் விடைத்தாள்களை ஒரே மையத்தில் திருத்தும் முறையை அறிமுகப்படுத்தினர். தேர்வு முடிவுகள் வருவதில் இருந்த காலதாமதத்தைக் குறைத்தார். அதே சமயத்தில் மதிப்பெண்களைக் கணினியில் உள்ளீடு செய்யும் முறையையும் அறிமுகப்படுத்தினர். மாணவர்கள் அதற்கான கட்டணத்தைச் செலுத்தி தங்கள் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்யக் கேட்கும் உரிமையை முதன் முறையாக வழங்கினார். விடைத்தாள்கள் திருத்துவதை வெளிப்படையாக்கினார். இதனால் மாணவர்கள் பலன் அடைந்தனர். செமினார் முறையை அறிமுகம் செய்தார். வகுப்பு நேரத்தைக் குறைத்து. மீதி நேரத்தில் மாணவர்கள் நூலகத்திற்குச் சென்று தகவல்களைப் படித்து தெரிந்து கொள்ளச் செய்தார். பல புத்தகத்தைப் படித்த மாணவர்கள் ஆசிரியர்களிடம் கேள்வி கேட்டனர். இதன் மூலம் பாடம் சம்பந்தமான விவாதம் ஏற்பட்டது. இதன் மூலம் மாணவர்கள் அறிவு பெற்றவர்களாக மாறினர். மால்கம் கல்லூரிப் பேராசிரியராக இருந்த போது வெற்றிகரமாகப் பரிசோதனை செய்த கிராமப்புற மறுசீரமைப்பு, சமுதாய முன்னேற்றத் திட்டங்களைப் பல்கலைக் கழகத்தின் அனைத்துக் கல்லூரிகளிலும் அறிமுகப்படுத்தினார். இது பின்னர் தேசியப் பணித் திட்டமாக (NSS) விரிவடைந்தது. தமிழ்நாடு அரசு அங்கீகாரம் தர யோசித்த போதிலும், சென்னைப் பல்கலைக் கழகத்தில் யு.ஜி.சி. (UGC) சம்பள விகிதங்களை ஆசிரியர்களுக்கு வழங்கினார். இதன் மூலம் பல்கலைக் கழகத்தின் தன்னாட்சி உரிமையை நிலை நாட்டினார். பல்கலைக் கழக ஊழியர்களுக்கு பாலவாக்கம் வீட்டு வசதித் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஆரம்பக் கல்வி, உயர் கல்வி, தொழில் கல்வி மட்டுமல்லாது தொலைதூரக் கல்வி, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்விக்காவும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயலாற்றினார். இக்கல்விக்கு பயிற்று விக்கும் பாடங்கள், அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அறிமுகங்கள், கல்லூரிப் பாடத்திட்டங்கள், தேர்வு முறை, பயிற்றுவிக்கும் முறை, சமூக, பொருளாதார ஆராய்ச்சி மற்றும் தரவுகள் போன்றவற்றையும் தனது திட்டங்களில் திறம்பட அமைத்துத் தந்தார். மால்கம் துணை வேந்தராக இருந்த 3 ஆண்டு காலத்தில் 30 சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். அவர் 1978ம் ஆண்டு துணைவேந்தர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அவர் பொறுப்பேற்றுக் கொண்ட போது வகுத்த 15 வருடாந்திற்கான தொலைநோக்குத் திட்டத்தில் எத்தனை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன, இன்னும் செய்ய வேண்டியவை என்னென்ன என்பதை மறுபரிசீலனை செய்தார். கவர்னர் : மத்திய அரசு இவருக்கு இரண்டு முறைகவர்னர் பதவி கொடுக்க முன் வந்தது. 1979ம் ஆண்டில் காபினட் அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் இவரைத் தொடர்பு கொண்டு கோவா மாநிலத்தின் கவர்னர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். தான் MIDSஐ விட்டு வர முடியாது என மால்கம் கூறிவிட்டார். அதன் பின்னர் மத்திய அரசு தன்னுடைய மரபை மீறி தமிழ்நாட்டின் கவர்னர் பதவியை வழங்க முன் வந்தது. ஒருவரை அவர் பிறந்த மாநிலத்தின் கவர்னராக நியமிக்கும் வழக்கும் இதுவரை நடைமுறையில் இல்லை. மால்கம் தனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். மால்கம் தினமும் காலையில் நடை பயிற்சி மேற்கொள்வார். தமிழகத்தின் அமைச்சராக இருந்த திரு. நெடுஞ்செழியன் இவரின் நெருங்கிய நண்பர். இருவரும் காலை 5 மணி கடற்கரை வரை நடந்து சென்று திரும்புவார்கள். ஆனால் இருவரும் அரசியல் பேசிக் கொள்ளமாட்டார்கள். உலக விசயங்களை மட்டும் பேசுவார்கள். அன்று நடந்து சென்றபோது தனக்கு தமிழ்நாட்டின் கவர்னர் பதவி கொடுக்க முன் வந்ததைக் கூறி அவரின் கருத்தைக் கேட்டார். ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு கவர்னரும் தேவை இல்லை என்கிற கருத்தை கொண்டவர் நெடுஞ்செழியன். கவர்னர் பதவி என்பது ஒரு ஆபாரண பதவி. அது தங்களுக்கு பொருந்தாது என தனது கருத்தைத் தெரிவித்தார். மால்கம் முக்கியமான செய்தியைக்கூட தனது ஓட்டுனரிடம் விவாதிப்பார். தனக்கு கவர்னர் பதவி தருவதாக மத்திய அரசு முன் வந்துள்ளதை ஏற்றுக் கொள்ளலாமா, வேண்டாமா என தனது ஊழியர்களிடமும் விவாதம் செய்தார். கவர்னர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு ஊழியர்கள் கூறினர். இன்று அரசியல் என்பது ஊழல் நிறைந்ததாக இருக்கிறது என தனது ஓட்டுனரிடம் தெரிவித்தார். ஆகவே நான் கவர்னர் பதவியை ஏற்றுக் கொள்ள தயங்குகிறேன் எனத் தெரிவித்தார். நண்பர் நெடுஞ்செழியன் கூறிய கருத்து இவருக்கு ஏற்புடையதாக இருந்தது. ஆகவே தனக்கு கவர்னர் பதவி வேண்டாம் என மத்திய அமைச்சரிடம் மறுநாள் கூறிவிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் : மால்கம் ஆதிசேஷையா கல்வியிலும், பொருளாதாரத்திலும் சிறந்து விளங்கியதால் இவரை 1978ம் ஆண்டில் ராஜ்ய சபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இவர் 1984ம் ஆண்டு வரை 6 ஆண்டுகள் ராஜ்ய சபா உறுப்பினராக இருந்தார். இவர் எந்தக் கட்சியையும் சாராதவராக எல்லோருக்கும் பொதுவானவராக இருந்தார். ஒரு ராஜ்ய சபா உறுப்பினர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக விளங்கினார். மால்கம் மேலவையில் இருந்த போது ஆட்சி செய்த கட்சியில் மாற்ற மேற்பட்டது. அவர் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவராக நடந்து கொண்டார். அவருடைய நிபுணத்துவம், அனுபவம் பேச்சாற்றல் அனைத்திற்கும் சபையில் மரியாதைக் கிடைத்தது. இவர் மேலவையில் ஆற்றிய உரைகள் தொகுத்து நூலாக வெளியிடப்பட்டுள்ளது. மால்கம் பேசிய பேச்சுக்களில் பொருளாதாரத்துக்கும், கல்விக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. தனியார் துறையில் நலிவடைந்த ஆலைகளை நாட்டுடைமையாக்குவதை அவர் எதிர்த்தார். மத்திய, மாநில அரசுகளின் திட்ட கமிஷன் களிடையே நல்ல ஒருங்கிணைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தினார். மேலவையில் ஆசிரியர்களுக்காகவும் குரல் கொடுத்தார். நாட்டின் சுற்றுச் சூழல் மேலாண்யைச் சீர்செய்ய வேண்டுகோள் விடுத்தார். முறைசாராக் கல்வி விரிவாக்கத்தை ஆதரித்தார். கிராமப்புற ஏழ்மையிலிருந்து மக்களை விடுவிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். அதற்கான தீர்வையும் எடுத்துக் கூறினார். அவர் எப்போதும் அரசுக்கு ஆதரவாக நடந்து கொள்பவராக இல்லை. தேவைப்பட்ட போது அரசின் அறிவிக்கப்பட்ட கொள்கைகளை எதிர்ப்பதற்கு தயங்கியதும் இல்லை. கல்வியாளர்: மால்கம் தனது வாழ்நாள் முழுக்க ஒரு சிறந்த கல்வியாளராக விளங்கினார். அவர் யுனெஸ்கோவிலிருந்து பணி விலகிய ஆண்டில் நாட்டின் முன்னேற்றத்திற்கு கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டின் பங்களிப்பைத் தெளிவுபடுத்த சில வெளியீடுகளை யுனெஸ்கோ வெளியிட முடிவு செய்தது. மால்கம் முந்தைய பத்து ஆண்டுகளில் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், வாஷிங்டன், டோரண்டோ போன்ற புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஆற்றிய சொற்பொழிவுகள் சிறந்தவை என யுனெஸ்கோ தீர்மானித்தது. அவற்றைத் திரட்டி யுனெஸ்கோ வெளியீடாக்கியது. அது Let My Country Awake என்பதாகும். இது 1970ம் ஆண்டில் யுனெஸ்கோ வெளிகொண்டு வந்தது. மால்கம் யுனெஸ்கோவிலிருந்து இந்தியா திரும்பிய பின்னரும் கல்வியாளராகவே தனது பணியைத் தொடர்ந்தார். ஆரம்ப, நடுநிலை, உயர் கல்வி, கல்லூரிக் கல்வி, மரபு சாராக் கல்வி, முதியோர் கல்வி, தொழில் சார்ந்த கல்வி, பொதுத் தேர்வு சீர்திருத்தம், கல்வி பற்றிய தரவுகள், புள்ளி விபரங்கள் சேகரித்தல் ஆகிய கல்வியின் பல உட்பிரிவுகளையும் அவர் ஆழ்ந்த புலமையோடு பெற்றிருந்தார். அவைகளின் மேம்பாட்டுக்காக அரசு மற்றும் தனியாரின் பல்வேறு அமைப்புகளிலும் இணைந்து பணியாற்றியுள்ளார். 1970ம் ஆண்டின் இறுதியில் தமிழ்நாட்டின் பள்ளிப்படிப்பு பற்றிய ஒரு முக்கியமான சர்வேயை மேற்கொண்டார். இவரின் முயற்சியால் டில்லியில் ஏசியன் சோஷியல் ரிசர்ச் கவுன்சில் நிறுவப்பட்டது. அதன் முதல் தலைவர் மால்கம் தான். இந்தியன் கவுன்சில் ஆப் சோஷியல் ஸைன்ஸ் ரிசர்ச், நேசனல் கவுன்சில் ஆப் எஜுகேஸனல் ரிசர்ச் அண்டு டிரெயினிங், நேசனல் கவுன்சில் ஆப் டீச்சர் எஜுகேஸன், நேசனல் கமிஷன் ஃபார் கோ ஆபரேசன் வித் யுனெஸ்கோ, மத்திய அரசின் கல்விக்கான ஆலோசனைக் குழு ஆகியவற்றில் அங்கத்தினராக இருந்தார். இந்திய கவுன்சில் ஆப் சோஷியல் ஸைன்ஸ் ரிசர்ச் அதனுடைய பணிகளை மதிப்பீடு செய்யுமாறு அவரை வேண்டிக் கொண்டதன் அடிப்படையில் அதுவரை நிகழ்ந்தவை, இனி நடக்க வேண்டியவை என இரண்டு அறிக்கைகள் அளித்தார். இது அதன் வருங்கால வளர்ச்சிப் பாதையை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்காற்றின . மும்பையின் டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் ஸைன்ஸின் பணிகளை மதிப்பீடு செய்த கமிஷனின் தலைவராக இருந்தார். ஆந்திரப் பல்கலைக் கழகத்தின் சமூகவியல் துறைகளின் செயல்பாடுகளைப் பரிசீலனை செய்தார். கொடைக்கானலின் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம் நிறுவுவதற்காக ஆலோசனை கூற நியமிக்கப்பட்ட கமிட்டியின் தலைவராக இருந்தார். கல்வி பயிலும் சமுதாயத்தை நோக்கி: கல்வி, விஞ்ஞானம், தொழில் நுட்பம் பற்றிய செயல் அணி ஒன்றை தமிழக அரசு 1971ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி அமைத்தது. இந்த அணியானது 1972 முதல் 1984 வரை பல்வேறு தகவல்களைத் திரட்டி தனது முடிவினை ஒரு அறிக்கையாக தயாரித்தது. கல்வி, விஞ்ஞானம், தொழில் நுட்பம் ஆகியவற்றிற்குப் புத்துயிர் அளிக்கும். திட்டத்தினை இந்த அறிக்கை எடுத்துரைக்கிறது. தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் வேலை வாய்ப்பு உரிமைக்கு ஏற்ற வகையில் கல்வி உரிமை சரிபடுத்தப்பட வேண்டும் என்பதே இவ்வறிக்கையின் அடிப்படைக் கருத்தாகும். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும், விவசாய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் புதிய முனைப்பான விஞ்ஞான ஆராய்ச்சி, தொழில் நுட்ப மேம்பாடு திட்டம் குறித்தும் அறிக்கையில் எடுத்துரைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கல்வி முறைகள் அனைத்திலும், கல்வி நிலைகள் அனைத்திலும் தமிழ் மரபு, தமிழ்ப் பண்பாடு ஆகியவைகளைப் பேணுவதிலும், தமிழ் வளர்ச்சிக்கு ஊக்கமூட்டுவதிலும் தனிக்கவனம் செலுத்தப்பட்டது. கல்வி, விஞ்ஞானம், தொழில் நுட்பம் பற்றிய செயல் அணியின் உறுப்பினர்கள் : 1. திரு. கே. திரவியம் 2. டாக்டர் வி. சண்முக சுந்தரம் 3. பேராசிரியர் எம்.வி. மாதூர் 4. செல்வி. இ. மாத்யூஸ் 5. டாக்டர். ஏ. ராமச்சந்திரன் 6. பேராசிரியர் ஜி. ஆர். தாமோதரன் 7. திரு. வி. டி. டைட்டஸ் 8. திரு. எஸ். வி. சிட்டிபாபு 9. திரு. பி. சிவலிங்கம் 10. திரு. கே. வெங்கடேசன் 11. திரு. கே. வெங்கட சுப்பிரமணியம் (உறுப்பினர் செயலாளர்) 12. டாக்டர். மால்கம் ஆதிசேஷையா இவர்கள் தயாரித்த ஆய்வறிக்கையை மால்கம் எஸ். ஆதிசேஷையா தொகுத்து அறிக்கையாக மாநில அரசுக்கு சமர்பித்தார். அப்போது மாநிலத் திட்டக்குழுவின் தலைவராக டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் இருந்தார். இந்த அறிக்கையை கலைஞர் திரு. மு. கருணாநிதியிடம் மால்கம் சமர்ப்பித்தார். கல்வி, விஞ்ஞானம், தொழில் நுட்பம் பற்றி செயல் அணியின் அறிக்கையை “கல்வி பயிலும் சமுதாயத்தை நோக்கி” என திரு. சி. க. ராமசாமி அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார். இந்த அறிக்கையின் மிக முக்கியமான கருத்துகளை சுருக்கமாக கொடுத்துள்ளேன். வளர்ந்து வரும் கல்வித் தேவைகளை நிறைவு செய்வது மூலம் மக்கள் ஒவ்வொருவருக்கும் கல்வி அறிவு கிடைக்கச் செய்தல், மாநில மக்கள் தொகையில் பெரும்பகுதியினரான ஏழை மக்களின் நிலையை உயர்த்தச் சமூக ஈடுபாடு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறது. பள்ளி நிலை : ஆண்டு தோறும் பள்ளியில் சேர்க்கப்படும் பிள்ளைகளில் சரிபாதிக்கு மேற்பட்டவர்கள், மாநில வயது வந்த எழுதப்படிக்கத் தெரியாமல் இருக்கிற 60 சதவீதம் உள்ள கூட்டத்தில் இவர்களும் போய்ச் சேருகிறார்கள். நமது பள்ளிக் கல்வி முறை, எழுதப்படிக்கத் தெரியாதவர்களின் கூட்டத்தைப் பெரிதாக்கவும் உதவுகின்றது என்பது ஒரு விந்தையான நிலைமைதான் என ஆய்வு குறிப்பிடுகிறது. இதனால் ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்காமல் போகிறது. துவக்கப் பள்ளியில் சேர்ந்த குழந்தைகளில் 51.2 சதவீதம் பேர் 5வது வகுப்பினை அடையுமுன்பே படிப்பை விட்டுவிடும் நிலை உள்ளது. 15 சதவீதம் பேர்கள் மட்டுமே 11வது வகுப்பு வரை தாக்குபிடிக்கும் நிலையும் உள்ளது. இது இடையில் விட்டு விடுவோர் என்ற பதப்பிரயோகம் கூட அவ்வளவு சரியானதல்ல. பள்ளி அல்லது படிப்பு முறை அவர்களுடைய கவனத்தை ஈர்த்து படிப்பில் ஈடுபடுத்திக் கொள்ளத் தவறிவிட்டது. என்பது தான் உள்ள நிலை. எனவே விட்டு விடுவோர் என்பதற்குப் பதிலாக விலக்கப்பட்டோர் என்பதே அதிகப் பொருத்தமானது ஆகும். காலத்துக் கொவ்வாத பாடத்திட்டம் : மாணவர்களின் ஆர்வம், நலன்கள் ஆகியவைகளுக்கு ஈடு கொடுக்கக் கூடியதாகப் பாடத்திட்டம் இல்லை. தொடர்ந்து பெருகி வரும் அறிவியல் வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமூகத்தின் விவசாயம், தொழில், பணி வசதி, பண்பாடு ஆகியவற்றின் தேவைக்கும் ஏற்ற பாடத்திட்டம் உருப்பெறவில்லை. கல்வி என்பது தேர்வை மையமாகக் கொண்டே இருக்கிறது. இதனை தேர்வு மயக் கல்வி (Examination dominated) என்று வர்ணிப்பது பொருத்தமே, மாணவர்களின் பொது அறிவு, மதி நுட்பம், கற்கும் ஆற்றல், சமாளிக்கும் சக்தி ஆகியவைகளை மதிப்பிடுவதற்கு இத்தேர்வு முறை பயன்படவில்லை. கல்வியும் வேலை வசதியும்: படித்த பட்டதாரிகள் வேலை கிடைக்காமலும், வேலை பெற இயலாமலும் உள்ள நிலை, கல்வி, வீணடிப்பில் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. பொது நூலகப் பிரச்சனைகள்: நூலகங்களுக்கான ஒதுக்கீட்டில் பெரும்பகுதி அலுவலர்களுக்கும், நிருவாகப் பணிகளுக்கும் செலவாகி வருகிறது. புதிய நூல்கள் அவ்வப்போது வாங்கப் பெறுவதில்லை. நூல்கள் வாங்குவதில் ஒரு முறையான ஏற்பாடு வகுக்கப்படவில்லை. புத்தக வியாபாரிகளிடையே போட்டியினால் நிலைமை மிகவும் மோசமாகிறது. புத்தகங்கள் வாங்குவதற்கு என ஒதுக்கப்பட்ட பணம் பெரும்பாலும் செய்திப் பத்திரிக்கைகளும், கருத்திதழ்களும் வாங்குவதற்குச் செலவிடப்படுகிறது. நூலகர் பதவிகள் சில மாவட்டங்களில் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருக்கின்றன. கல்வியின் நோக்கங்கள் : குழந்தைகளின் ஆற்றலை மேம்படுத்த வேண்டும் என்பதே தமிழகத்தின் அப்போதைய கல்வி, விஞ்ஞானம், தொழில் நுட்பம் இவற்றின் நோக்கமாக இருந்தது. கீழ்கண்டவை முக்கிய கொள்கைகளாகும். - 5 முதல் 14 வயது வரை அனைவருக்கும் முழுமையான இலவசக் கல்வி. - 4 ஆண்டு பள்ளிக் கல்விக்கு ஈடான படிப்பின் மூலம் குறைந்த பட்சத் திறன்கள் எய்தச் செய்தல். - பெண்களை அதிக அளவில் பள்ளிகளில் சேர்த்தல். - நடுவில் படிப்பைக் கைவிடுவதைக் குறைத்தல். - எல்லா நிலைகளிலும் கல்வி, விஞ்ஞானம், இவற்றின் தரத்தை உயர்த்துதல். - வேலை கருதி படிப்பை நடுவில் விட்டவர்களைத் திரும்பச் சேர்ந்து படிக்க வசதி செய்தல். - சமூகத்தில் வசதிக் குறைவான பிரிவு மக்களுக்கு ஈடான கல்வி வசதிகள் அளித்தல். கல்வி கால அமைப்பு : பள்ளிப் படிப்பு 11 ஆண்டுகளாகவும், கல்லூரியில் படிப்பு 6 ஆண்டுகளாகவும் இருந்து வருகிறது. பள்ளி மட்டத்தில் 1 முதல் 5 வகுப்புகள், 6 முதல் 8 வகுப்புகள், 9 முதல் 11 வகுப்புகள் என்ற 3 நிலைகள் உள்ளன. கல்லூரிப் படிப்பு வகுப்புகள் 1+3+2 என்ற மூன்று நிலைகள் இருந்து வருகின்றன. பள்ளிப் படிப்புக் காலத்தை மற்ற மாநிலங்களில் உள்ளது போல் 10 ஆண்டுகளாக ஆக்குதல். பத்தாம் வகுப்பு வரை இலவசக் கல்வி என அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வியும், வயது வந்தோர் கல்வியும்: கல்வி முறை பொருள் பொதிந்தாகவும், இலட்சிய நோக்குடனும் இருக்கச் செய்யும் வகையில் அதன் கட்டுக் கோப்பைத் திருத்தியமைத்தல்; கல்வி வாய்ப்புகளையும், சாதனைகளையும் சமன்படுத்துதல், பள்ளி படிப்பை இடையில் விட்டவர்களுக்குப் பள்ளிக்குப்புறம்பாக கல்வியும், தொடர்ச்சிக் கல்வியும் அளிக்க வகை செய்தல், கல்வியை விஞ்ஞான அடிப்படையில் அமைத்தல், உயர்நிலைப் பள்ளிக் கல்வியைத் தொழில் சார்பு உடையதாக ஆக்குதல், பள்ளிப் பாடத் திட்டத்தைத் திருத்தியமைத்து அதனைச் செறிவுடைய தாக்கல், பணிச் சார்பான கல்வித் திட்டம் மூலம் முதியோரிடையே எழுத்தறிவின்மையைப் போக்குதல் போன்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கல்வி வாய்ப்புகளில் சமத்துவம்: நடுவில் படிப்பை விட்டவர்களுக்கு பள்ளிக்குப் புறம்பான கல்விப் பணியை ஏற்பாடு செய்வதற்காக மற்ற ஆசிரியர்களின் உதவியுடன் பணியாற்ற ஒவ்வொரு கிராமப் பள்ளியிலும் கூடுதலாக ஒரு ஆசிரியர் நியமிக்கப்படுவார். வீட்டிலோ, வயலிலோ அல்லது தொழிற்சாலையிலோ வேலை செய்வதற்காகப் படிப்பை விட்ட அல்லது தேர்வுகளில் தவறிய 52 சதவிகிதம் பிள்ளைகள் 4 ஆண்டுப் பள்ளிப் படிப்புக்குச் சமமான கல்வி பெற இதன் மூலம் வழி ஏற்படும். பல்வேறு நிகழ்ச்சிகளில் மால்கம் ஆதிசேஷையா [] [] [] [] [] [] [] [] [][] [] [] [] [] [] [] [] [] [] [] [] பெண் கல்வி: பள்ளிகளில் சிறுமிகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளவும், பள்ளிகளின் மொத்தப் பிள்ளைகளில் சிறுவர் அளவுக்குக் கிட்டத்தட்ட சிறுமியர் அளவும் இருக்கும் வழி செய்யப்படும். இதற்காக பள்ளிப்பாடத் திட்டத்தை பணிச் சார்புள்ளதாகவும், பெண் கல்வி முன்னேற்றத்தைத் தடுக்கும் வகையில் உள்ள சமூகப் பழக்க வழக்கங்களை மாற்றவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு இலவச உடைகள் வழங்க வேண்டும். சமூகத்தில் முற்போக்கான எண்ணங்களை வளர்க்கும் வகையில் பெருமளவிலான கலாச்சார வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும். கல்வித் தர மேம்பாடு கல்விச் சாதனைகளில் நிறைவு , பாடத்திட்டத்தைப் புதுப்பித்தல், விஞ்ஞானத்தை நவீனப்படுத்துதல், தேர்வு முறை சீர்திருத்தம், ஆசிரியர் கல்வி மேம்பாடு, பள்ளிக்கு புறம்பான கல்வி வளர்ச்சி, பயிற்சி ஆகியவை கல்வித்தர மேம்பாட்டிற்குரிய வழிமுறைகளாகும். பள்ளிக்கல்வி, பள்ளிக்குப் புறம்பான கல்வி இவற்றின் தரத்தை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும். மாணவர்களிடையே சிந்தனை, சோதனை, புதுமை, ஆர்வம் ஆகியவைகளை ஊக்குவிக்கும் முறையில் பள்ளிப் பாடத்திட்டங்களை அவ்வப்போது புதுப்பித்தல் அவசியமாகும். நகர்ப்புற, கிராமப்புற வாழ்க்கை முறைகளுக்குப் பயன்படும் வண்ணம் பாடத்திட்டத்தைச் செயல் சார்புள்ளதாக்கல் வேண்டும். தமிழ்நாட்டில் கல்விக் கட்டுக் கோப்பிற்கு அடிக்கல்லாக விளங்கும் ஆசிரியர் பயிற்சியை மேம்படுத்துவதும் அவ்வகையில் தொடர்ந்து ஆராய்ச்சிகள் செய்வதும் அவசியமாகும். பள்ளிப் பருவத்துக்கு முற்பட்ட கல்வி (Pre-Primary) முறையான குழந்தைக்கான பள்ளிகளான மாண்டிசோரி, கிண்டர் கார்டன், குழந்தைகள் காப்பகம் போன்ற வகைகளில் பள்ளிகள் இருக்கின்றன. இவற்றை அதிகப்படுத்த வேண்டும். உயர் கல்வி : அறிவு வளர்ச்சிக்கும் அதே நேரத்தில் பொருளாதார சமூக முன்னேற்றத்துக்கும் துணை புரியக்கூடிய வகையிலும் தேர்ந்த தொழில்நுட்ப நபர்களுக்குப் பயிற்சி தரும் முறையிலும் மாநிலத்தில் உயர்தரக் கல்வியின் குறிக்கோள் இருந்து வரும். நாட்டின் பொருளாதாரத்துக்குத் தேவைப்படும் அளவில் பட்டப்படிப்புக்குக் கீழ்ப்பட்ட பொதுக்கல்வியும், தொழில் நுட்பக் கல்வியும் அதில் இடம் பெறும். பண்பாட்டைப் பேணுவதிலும், உயர்தரக் கல்விக்குப் பங்கு இருக்கும். சமூக மரபுகளுக்கு உட்பட்ட முறையிலும், நாட்டிலும், மாநிலத்திலும் வேகமான முறையில் ஏற்பட்டுவரும் மாறுதல்களின் தேவைக்கு ஏற்பவும் இக்கல்வி அமையும். சமயச் சார்பற்ற பண்பாட்டை வளர்க்கவும் இக்கல்வி உதவும். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிலையம்: தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு குறித்த ஆராய்ச்சிக்களை ஊக்குவிக்கும் வகையிலும், மற்ற மொழிகளுடன் தொடர்பை ஆராய்ந்து வளர்க்கும் வகையிலும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மேலும் வலுப்படுத்தப்பட்டு, மேம்படுத்தப்பட்டு விரிவாக்கப்படும். இந்நாட்டு, அயல்நாட்டுத் தமிழ் மொழி அறிஞர்கள் பயிற்சி பெறத்தக்க வகையில் நிறைவுடையதாக இது அமையும். தமிழ் ஆராய்ச்சி இதழ் ஒன்றையும் இந்நிலையம் வெளியிடும். விஞ்ஞான, தொழில் நுட்ப ஆராய்ச்சி: அண்மைக் காலத்தில் விஞ்ஞானமும், தொழில் நுட்ப அறிவும் பல பழைய கருத்துக்களைத் தகர்த்துள்ளன. தமிழ்நாடு விஞ்ஞானத் தொழில் கூடம் (Hall of Science and Industry in Tamil Nadu) அமைக்கப்படும். தொழில் வளர்ச்சிக்கும், மக்கள் நலத்துக்கும் விஞ்ஞானம் பயன்படும் முறைகள் எடுத்துகாட்டப்படும். நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் மாணவர்களிடையேயும் பொது மக்களிடையேயும் விஞ்ஞான, தொழில் நுட்பக் கருத்துக்கள் பரப்பப்படும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விஞ்ஞானம் கல்விக்குத் துணையாக சயன்ஸ் பொருட்காட்சிகள் அமைக்கவும், விஞ்ஞானக் கருவிகளை மேம்படுத்தவும் உதவுவது ஆகும். விஞ்ஞானம், தொழில் நுட்பம் இவற்றின் வரலாறு குறித்து ஆராய்ச்சி, விஞ்ஞானம், தொழில் நுட்பம், தொழில் ஆகியவற்றின் வளர்ச்சியில் முக்கிய கட்டங்களைக் குறிக்கும் பொருட்களையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களையும் திரட்டிப் பாதுகாக்கும் பணியைச் செய்வது. மேலும் விஞ்ஞானத்தைப் பரப்பும் முறையில் மன்றங்கள் அமைப்பது, விரிவுரைகள், திரைப்படக்காட்சிகள் ஆகியவைகளுக்கு ஊக்கமளிக்கும். பின்னர் மண்டல வாரியாக விஞ்ஞான நிலையங்களை ஏற்படுத்தவும், நடமாடும் சயின்ஸ் கருவிகள் பொருட்காட்சி நடத்தவும் இது ஏற்பாடு செய்கிறது. மதிய உணவு : மதிய உணவைப் பொருத்த வரை, ஒருமுகப்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது அளிக்கப்படும் உணவுக்குப் பதிலாக ஊட்டச் சத்துள்ள உணவு தரலாம். பள்ளிக் குழந்தைகளுக்கு குறைந்த செலவில் ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்க வழி செய்யப்படும். பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவச் சோதனையும், ஊட்ட உணவும் மிக முக்கியமானவை. ஆனால் தற்சமயம் இவை உரிய இடம் பெறவில்லை. ஒழுங்கான மருத்துவ சோதனை, தொற்று நோய்த்தடுப்பு, ஊட்ட உணவுப் பொருள் வசதி ஆகியவைகளில் மக்கள் நல்வாழ்வுத் துறை, கல்வித் துறை பணிகளையும் இணைத்துக் கொண்டு, பள்ளிப் பிள்ளைகளுக்கு இவ்வசதிகளைச் செய்யும். வகுப்பில் மதிப்பீடு மற்றும் செமஸ்டர் முறை: கல்வியில் தேவைக்கு ஏற்ப சீர்திருத்தங்களைச் செய்யலாம். இந்தச் சீர்திருத்தங்கள் எந்தளவிற்கு பலன் தருகின்றன என்பதை மாணவர்களின் சாதனையை வைத்துத்தான் மதிப்பிட முடியும். கல்வி நிறுவனங்களில் படிப்பைப் பொறுத்தவரை மாணவர்களின் தேர்ச்சி நிலையை அளவிட்டுக் கணக்கிடுவதற்கு எழுத்து முறைத் தேர்வுதான் அளவு கோலாக இருக்கின்றது. செமஸ்டர் முறை: ஐரோப்பா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் பல நாடுகளில் தேர்வுக்கு செமஸ்டர், டிரிமெஸ்டர் அல்லது குவார்ட்டர் முறைகள் நல்ல ஏற்பாடாக இருந்து வருகின்றன. செமஸ்டர் என்பதற்கு ஆறு மாத காலம் என்பது பொருளாகும். மாணவர்களிடையே லட்சிய நோக்கம், ஒழுங்கான படிப்பு முறை, ஆண்டு முழுவதிலும் ஒரே விதமான சுறுசுறுப்பாக இருத்தல், தானே கற்று அறிதல் ஆகிய பண்புகளை இது வளர்க்கின்றது. ஆசிரியர் சுய மதிப்பீட்டிற்கும் இது உதவி செய்கிறது. அதன் மூலம் போதனையை மேம்படுத்த வழி செய்கின்றது. இந்த முறையில் தேர்வு வரும்போது, தேர்வையும் படிப்பிலே ஒரு பகுதியாக மாணவன் கருதி நல்ல முறையிலே மிகுந்த அளவு திறனுடையது ஆகின்றன. பல்கலைத் தேர்வு முறைகள் கல்வி ஆண்டின் இறுதியில் நடப்பதை செமஸ்டர் முறைக்கு கொண்டுவரப்பட்டது. சாதி, மொழி, சமயம் இவைகளின் அடிப்படையில் சொந்த விருப்ப வெறுப்புக் காரணமாகவும், ஓர வஞ்சனையும், பழிவாங்குதலும் நேர்ந்து விடக் கூடாது. கல்வியின் நோக்கம் அறிவை வளர்ப்பதே என்பதையும், ஆண்டு முழுவதையும் மாணவர்கள் ஒழுங்காகப் படித்துவர வகை செய்ய வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். கல்வி, விஞ்ஞானம், தொழில் நுட்பம் பற்றி செயல் அணியின் அறிக்கை இவ்வாறு பல யோசனைகளை முன் வைத்தது. இவற்றில் உள்ள ஆலோசனைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதா இல்லையா என்பதை நாம் படிக்கும் போதே தெரிந்துகொள்ள முடிகிறது. கல்வி முறை : நாம் வாழும் சமுதாயத்தில் மாற்றத்தையும், மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் கல்விக்கு உண்டு. கல்வி என்பது வாசித்தல், எழுதுதல், கணிதப் பயிற்சி என்ற மூன்றில் அடங்கும் என்று இது வரை கொள்கையாக கருதி வந்தனர். ஆனால் இப்போது அறிவு வளர்ச்சி, உணர்ச்சி வளர்ச்சி, கையாற் செய்தல், ஆரோக்கியம் என்று நான்கு பிரிவுகள் உடையதாகக் கருதப்படுகிறது. ஆரம்பப் பள்ளி தரும் கல்வி, குழந்தைகளின் உள்ளத்தில் நீடித்து நிற்குமாறு செய்யும் பொருட்டுப்பள்ளியை விட்டுப் போன பிறகும் படிப்பதற்கு ஆசை உண்டாக்கும் வகையில் இருக்க வேண்டும். கல்வி பாடப் புத்தகங்களைப் படிக்கவும், பத்திரிக்கைகளைப் படிக்கவும் ஏற்றவாறு இருத்தல் வேண்டும். கல்வி அறிவு வளர்ச்சிக்கு உதவும் கருவியாக இருக்க வேண்டும். கல்வி பிள்ளைகளுக்கு சிறந்த பலனை அளிக்கும் வகையில் இருப்பதை கல்வி முறை என்கின்றனர். ஒவ்வொரு காலத்திலும் எது சிறந்த முறை எனக் கருதுகிறார்களோ அதையே பின்பற்றி வந்தனர். புத்தகம், எழுத்து இல்லாத காலத்திலும் கற்பித்தல் என்பது இருந்தது. பாடங்களைச் சரியாகப் படிக்காத குழந்தைகளைக் கொடுமையான தண்டனைக்கு உட்படுத்தினர். பிள்ளைகளை அடித்தல் என்கிற முறை நீண்டகாலமாக இருந்தது. இன்றைக்கு பிள்ளைகளை அடித்தலோ, தண்டனையோ வழங்கக் கூடாது என அரசு ஆணை இருக்கிறது. இக்காலத்தில் பள்ளிகள் இருப்பது போல் முற்காலத்தில் இல்லை. படிக்க விரும்புவோர் ஒரு குருவை நாடிச் செல்ல வேண்டும். குருவின் வீட்டில் இருந்து வீட்டு வேலைகள் செய்து கொடுத்து, மீதி நேரத்தில் கல்வி கற்றனர். கல்வி என்பது உயர் ஜாதியினருக்கு மட்டுமே வழங்கப்பட்டது. சூத்திரர்களுக்கு கல்வி கற்கும் உரிமை என்பது மறுக்கப்பட்டு இருந்தது. பல இடங்களில் மடங்கள் கல்வி போதிக்கும் நிலையங்களாக இருந்து வந்திருக்கின்றன. எல்லா மக்களுக்கும் கல்வி மிகவும் அவசியம் என்கிற நிலை ஏற்பட்ட பின்னரே கல்வி நிலையங்கள் தோன்றின. குழந்தைகளின் உள்ளங்கள் பற்றி ஆராய்ச்சி செய்தனர். அதன் மூலம் கல்வி கற்பிக்கும் முறை வளர்ந்தது. கல்வியின் மூலம் சிறுவர்களின் மனப்பான்மையை வேண்டியவாறு அமைக்க முடியும். சமூகத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைகளும் கல்வி வசதி கொடுக்கப்பட வேண்டும். இது அரசாங்கத்தின் பொறுப்பு. ஏழை, பணக்காரன் என்கிற பாகுபாடு இன்றி எல்லாக் குழந்தைக்கும் இலவசக் கல்வி வழங்கப்பட வேண்டும். கல்வியானது சுதந்திரத்தோடு கூடியதாக இருக்க வேண்டும். வாசித்தல், எழுதுதல், கணக்குச் செய்தல் என்ற மூன்று பாடங்கள் முன்னர்ச் சிறப்பாகக் கற்பிக்கப் பெற்றன. இவற்றைக் கற்றாலே எதிர்காலத்திற்கு போதுமானது என கருதப்பட்டது. இப்போது குழந்தைகளின் பருவம், ஆர்வம், ஆற்றல் முதலியவற்றை ஒட்டியும், சமூகத்தின் தேவைகளை ஒட்டியும் பாடவிசயங்களைத் தெரிந்தெடுத்துக் கற்பிக்கின்றனர். செயல் மூலம் கற்றல் என்பது குழந்தை இயல்புக்கு உகந்ததாகையால் கல்விப் பொருள் திட்டம் (Curriculum) செயற்போக்குடையதாக இருக்க வேண்டும் என்பது நிபுணர்களின் கருத்தாகும். கற்றல் என்பது குழந்தை பிறந்தது முதலே தொடங்குகிறது. குழந்தை ஐந்து வயதுக்குள் கற்றுக் கொள்ளும் திறமை, அறிவு, பண்பு முதலியன வேறு எந்த ஐந்து ஆண்டுகளிலும் கற்றுக் கொள்ளும் அளவை விட அதிகம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். பிள்ளைகள் ஐந்து வயதுக்குப் பின்னர் பள்ளிக்குச் செல்லும்போது குழந்தைகள் தாமே கற்ற நிலை மாறி, ஆசிரியர் கற்பிப்பதைக் கற்கும் நிலை உருவாகிறது. கிண்டர் கார்டன், மாண்டிசோரி போன்ற கல்வி முறைகளில் ஆசிரியர் என்ற பெயரைக் கூட கையாள்வதில்லை. இது ஓரளவிற்கு நன்மை பயக்கிறது. குழந்தைகள் செய்து கற்றல் மூலம் நல்ல அனுபவத்தையும், அறிவையும் பெறுகின்றனர். அனுபவம் என்பது எல்லாவற்றிலும் பெரிய பள்ளிக் கூடம். சிறுவர்களின் இயல்பு எந்நேரமும் ஏதாவது செய்து கொண்டிருத்தல் ஆகும். ஐரோப்பாவில் செயல் மூலம் கல்வி, விளையாட்டு வழிக் கல்வி, அமெரிக்காவில் முன்னேற்றக் கல்வி, தன்னோக்க முயற்சி முறைக்கல்வி (Project Method) என்றும் பெயர் பெறுகின்றன. குழந்தைகளுக்கு பொதுவாக சில இயல்புகள் இருக்கின்றன. வேற்றுமைகளும் இருக்கின்றன. இதனால் கற்கும் அளவு குழந்தைக்கு, குழந்தை வேறுபடும். ஆகவே வகுப்பு குழந்தைகளை ஒன்றாக பாவிப்பதை விடுத்து, ஒவ்வொருவரையும் தனித்தனியாக கவனிக்க வேண்டும். குழந்தைகளின் அறிவு, ஆற்றல், அனுபவம் ஆகியவற்றிற்கு ஏற்ப நடத்தப்பட வேண்டும். பள்ளியானது குழந்தைகளின் முழு வளர்ச்சிக்குப்பொறுப்பேற்க வேண்டும். இந்தியாவின் கல்வி வரலாறு : கல்வி வரலாற்றைப் பண்டைக் காலம், இடைக் காலம், நவீன காலம் என மூன்று பகுதிகளாக பிரிக்கின்றனர். வேத, இதிகாச, உபநிஷத காலம் : இக்காலத்தில் வேதங்களையும், இதிகாசங்களையும் படிப்பதற்கும், கேட்பதற்கும் போதுமான அளவு தேவை இருந்தது. நாளடைவில் சாதி முறை தோன்றியது. பிராமணர்கள் வழிமுறையாக ஆசிரியர்களானார்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் இல்லங்களில் தங்கி கல்வி கற்றனர். இது குருகுல முறை என்று சொல்லப்படுகிறது. சமயமே கல்வியின் நோக்கமாக இருந்தது. இன்றைய வழிபடுதல், மறைகளை ஓதுதல், யாகம் வளர்த்தல் போன்ற சமயச் சடங்குகளை மாணவர்கள் கற்றறிந்தனர். சோதிடம் உள்பட கற்றுக் கொடுக்கப்பட்டது. பௌத்த காலம் : பௌத்த மடங்கள் கல்விக் கழகங்களாயின். மடங்களில் ஆசிரியர்களும், மாணவர்களும் ஒன்று சேர்ந்து வாழ்ந்தனர். அத்தகைய மடத்திற்கு துறவுப் பள்ளிகள் சங்காராமங்கள் என அழைக்கப்பட்டன. போல்கள் (Tols) என்ற பள்ளிகள் தொடக்கக் கல்வி கற்குமிடங்களாக இருந்தன. சங்காராமங்களில் சாதி வேறுபாடு காட்டப்படவில்லை. எல்லோரும் ஒரு குலம் எனப் பல சாதியினரும் ஒன்றாக வாழ்ந்தனர். முஸ்லிம் காலம் : முஸ்லீம் காலம் என்பது 1192 முதல் 1739ம் ஆண்டு வரை குறிப்பிடப்படுகிறது. மசூதிகள் கல்விக் கூடங்களாக செயல்பட்டன. அக்பர் ஆட்சியில் 1556 - 1605) கல்வி பெருஞ்சிறப்புப் பெற்றது. அக்பர் கல்வியின் பெருங்காப்பாளராக இருந்தார். பெரிய நூல் நிலையத்தை நிறுவுவதில் ஆர்வம் காட்டினார். நவீன காலம் : போர்ச்சுகீசியர்கள் 1510ம் ஆண்டில் இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் குடியேறினர். அதன் பின்னர் ரோமன் கத்தோலிக்கப் பாதிரிமார்கள் ஏழைக் குழந்தைகளுக்காக அறப்பள்ளிகளை நிறுவினர். 1600ல் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் நிறுவப்பட்டது. டச்சு சமயப் பிரச்சார சங்கம் என்ற முதல் பிராட்டெஸ்டெண்டுதாரங்கபாடியில் 1706ல் கல்விப் பணியில் ஈடுபட்டது. இச்சங்கம் இந்தியாவில் முதல் முதலாகத் தமிழ் அச்சகம் ஒன்றை நிறுவியது. முதன் முதலாக ஆசிரியர் பயிற்சிப் பள்ளியையும், பல அறப் பள்ளிகளையும் நிறுவியதும் இச்சங்கமே. ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் : 1813ம் ஆண்டில் ஆங்கிலேயர் கம்பெனி கல்விப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. இது அரசாங்கக் கல்வி முறை அமைப்புகளுக்கு அடிகோலியது. ஆங்கிலக் கல்விக்காக பல பள்ளிகள் தோன்றின. மேனாட்டு அறிவை ஆங்கிலத்தில் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று மெக்காலே பிரபுவலியுறுத்தினார். கிழக்கிந்தியக் கம்பெனியார் சார்லஸ் உட் (Charles Wood) என்பவரின் தலைமையில் ஒரு கமிஷனை இங்கிலாந்து அனுப்பிவைத்தனர். சார்லஸ் உட் கல்விக்கான ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையானது வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக அமைந்தது. இந்தியர்களுக்குக் கல்வி வழங்க வேண்டியது ஆங்கில அரசின் கடமை என அவரின் அறிக்கை கூறியது. பொதுக் கல்வி இயக்கம் நிறுவப்பட வேண்டும். பல பொதுப் பள்ளிகள் தொடங்கப் பட வேண்டும் என அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருந்தன. இது மட்டுமல்லாமல் நல்ல பாட நூல்கள் எழுதப்பட வேண்டும். தொழிற்கல்விக்கும், பெண் கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அவரின் அறிக்கையில் கூறப்பட்டது. இக்கமிஷன் 1854ம் ஆண்டில் தற்காலக் கல்வி முறையின் அமைப்பை உருவாக்கியது. மெக்காலேயின் கருத்து இக்குழுவினரின் அறிக்கையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. கல்வி இலாகா நிறுவப்பட்டது. பள்ளிகள் பல தொடங்கப்பட்டன. ஆங்கில நாட்டு மொழிக் கல்வி நிலையங்களும், நாட்டு மொழித் தொடக்கப் பள்ளிக்கும் அரசாங்கம் பண உதவி செய்தது. 1854 முதல் 1900 ஆண்டு வரை மேனாட்டு கல்வி முறை விரைவாகப் பரவியது. ஆங்கிலக் கல்வி கற்றவர்களுக்குத் தான் அரசாங்க வேகைகள் கொடுக்கப்பட்டன. [] உட் அறிக்கையில் பல குறைபாடுகள் இருந்தன. அவற்றைப் போர்க்க ஹண்டர் தலைமையில் 1882ம் ஆண்டில் ரிப்பன் பிரபு ஒரு கல்விக் குழுவை நியமித்தார். ஹண்டர் குழு அறிக்கையானது தனியார் பள்ளிக்கு ஊக்கமளித்தது. தொடக்கப் பள்ளிகளில் தாய் மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும். தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி கொடுக்கப் பயிற்சி நிறுவனங்கள் தொடங்க வேண்டும் என்பன இவரின் அறிக்கையில் குறிப்பிடத்தக்கவை ஆகும். ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் இந்திய மக்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பது அவர்களின் நோக்கமாக இருக்கவில்லை. அவர்களின் ஆட்சிப் பணிகள் சிறப்பாக நடக்க உதவும் வகையில் அறிவுத்திறன் பெற்றவர்களை உருவாக்குவதே அவர்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. பிறப்பால் உயர்ந்தோரே கல்வி பெறும் உரிமையைப் பெற்றிருந்தனர். ஆங்கிலேயர் கல்வித் திட்டம் பிறப்பின் அடிப்படையில் கல்வி என்ற நிலையைத் தகர்த்தது. ஆனால் இவர்களின் நோக்கம் மக்களின் அறியாமையை போக்குவதன்று உயர்மட்டத்தில் இருந்த ஆட்சியாளர்களைப் பாதுகாப்பதற்காக இருந்தது. இந்திய சுதந்திரத்திற்குப் பின்பு கல்வியில் பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. 6 வயது முதல் 14 வயது வரை அனைவருக்கும் கட்டாயக் கல்வி எனச் சட்டம் இயற்றப்பட்டது. சுதந்திர இந்தியாவில் கல்வி மேம்பாட்டிற்காக பல கல்விக் குழுக்கள் போட்ட போதிலும், கோத்தாரி கல்விக்குழு சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாக அமைந்தது எனலாம். பொதுப் பள்ளிக் கல்வி முறை என்ற கருத்தாக்கத்தை முன்னிலைப்படுத்திய முதல் கல்விக்குழு இதுவாகும். கோத்தாரி கல்விக்குழு: இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் கல்வியின் வளர்ச்சியை அதிகப்படுத்த பல கல்விக் குழுக்கள் அமைக்கப்பட்டன. பாக்டர். ராதாகிருஷ்ணன் குழு (1948 – 49), முதலியார் குழு (1952-53) தேசியக் கல்விக்குழு அல்லது கோத்தாரிக் கல்விக்குழு (1964-66) தேசியக் கல்வி கொள்கை (1986) முதலியன மூலம் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டது. டாக்டர் கோத்தாரி (Daulat Singh Kothari) குழுவின் தலைவராக இருந்து தனது குழுவின் அறிக்கையை சமர்ப்பித்தார். ’’இந்தியாவின் எதிர்காலம் வகுப்பறைகளில் உருவாக்கப்படுகிறது" என்பது இக்குழுவின் அறிக்கையின் புகழ்மிக்க முதல் தொடராகும். இந்த அறிக்கை 1500 பக்கங்களைக் கொண்டதாகும். [] 1. கல்வி பெறுவோர் எண்ணிக்கையைப் பெருக்குதல். 2. தேசிய, சமூக ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்துதல். 3. மக்களாட்சியை உறுதிப்படுத்துதல். 4. நவீன மயமாக்குதலை விரைவுபடுத்துதல். 5. சமூக, ஒழுக்கம், ஆன்மிக வளர்ப்பதன் மூலம் நன்னடைத்தை யுடையோராக்குதல். 6. உயர்நிலைப் பள்ளிக்கல்வி, தொழில் கல்வி கற்பதாக இருக்க வேண்டும். மாணவ, மாணவியருக்கு முழு நேரக் கல்வியும், பகுதி நேரக் கல்வியும் பெறும் வாய்ப்பளிக்கப்படவேண்டும். 7. கற்கும் போது அனைவருக்கும் சம வாய்ப்பளிக்கப்பட வேண்டும். 8. சிறந்த மாணவர்களாக விளங்குவோருக்கு இலவசக் கல்வி அளிக்கப்பட வேண்டும். கட்டணச் சலுகைகள், ஸ்காலர்ஷிப் ஆகியவை பெருமளவில் அளிக்கப்பட வேண்டும். 9. கற்பிக்கும் முறைகள் சிறப்பாக அமைய வேண்டும். 10. பள்ளிகளில் மேற்பார்வை செய்தல் நல்ல முறையில் நடக்க வேண்டும். சாதி, இனம், இடம், பால் மற்றும் எந்தக் குறையும் கருதாது அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கல்வி வழங்கப்பட வேண்டும். தேசியக் கலைத் திட்டத்தில் தேசியப் போராட்ட வரலாறு, அரசியல் சாசனத்தில் இன்றியமையாத பகுதிகள், தேசிய அடையாளத்தைக் காட்டக் கூடிய பிற கூறுகள் அடங்கி இருக்க வேண்டும். இவை தவிர தொடக்கக் கல்வியை அனைவருக்கும் வழங்குவதற்கான செயல் முறைகள், முதியோர் கல்வி, அறிவியல், தொழில் நுட்பத்தில் ஆராய்ச்சி, சமத்துவம், வாழ்க்கை முழுவதுக்குமான கல்வி ஆகியவை குறித்துக் கருத்துரை வழங்கியுள்ளது. இது போன்ற முக்கியமான பரிந்துரைகள் இந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்தன. பேராசிரியர் கோத்தாரி தனது கல்வி நிலையைப் பற்றிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அவர் இருந்த குழுவின் பரிந்துரையில் உள்ள குறைபாடுகளைச் சுய விமர்சனம் செய்துள்ளார். இவர் எழுதிய இந்தப் புத்தகத்திற்கு மால்கம் ஆதிசேஷையா முன்னுரை எழுதியுள்ளார். தேசியக் கல்விக் கொள்கை - 1986 : சுதந்திர இந்தியா ஜனநாயக சோசலிச குடியரசு ஆட்சி முறையை ஏற்றுக் கொண்டது. இந்திய அரசியல் சட்டத்தின் (1950) கீழ், 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் கல்வி கற்றே ஆகவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பள்ளி வீடுகளியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் அமைந்திருக்க வேண்டும். இடைநிலைப் பள்ளிகள் 3 கிலோ மீட்டர் தூரத்திற்குள் அமைந்திருக்க வேண்டும். தேசியக் கல்வி அறிக்கை 1968ல் வெளியிடப்பட்டது. ஆரம்பக் கல்வி பற்றி கூறியதாவது - அரசியல் நிர்ணயச் சட்டத்தில் நெறிமுறைக் கோட்பாட்டினை 45வது கிளைச் சட்டப்படி 14 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயமாக ஆரம்பக் கல்வி, இலவசமாக வழங்கப்பட வேண்டும். பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்பட்ட அனைத்துக் குழந்தைகளும் முறையாகப் பயின்று தொடக்கக் கல்வியினால் பயன்பெற வேண்டும். 1979ம் ஆண்டில் வெளியிடப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையிலும் தொடக்கப்பள்ளி பற்றிக் கூறப்பட்டுள்ளது. 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் எழுத்தறிவு புகட்டல் வேண்டும். முறைசாராக் கல்வி, பகுதி நேரக்கல்வி ஆகிய இவற்றின் மூலம் 13 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குக் கல்வி கற்றுத் தர வேண்டும் என்று கூறுகிறது. 14 வயது வரையிலான எல்லாக் குழந்தைகளுக்கும், கல்வி அளிக்கப்பட வேண்டும் என்னும் அரசியல் சாசன இலக்கை நாம் இன்று வரை அடையவில்லை என்பது வருத்தத்திற்கு உரியதுதான். 1986ம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்ட கல்விக் கொள்கை நமது தேசியக் கண்ணோட்டத்தில் அனைவருக்கும் கல்வி என்பது நமது கொள்கை. இந்தக் கொள்கைதான் நமது பொருளாதார ஆன்மீக வளர்ச்சியின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு அடிப்படையாகும். அரசியல் சட்டத்தில் மாறுதல் ஏற்படுத்தப்பட்டு, கல்வி என்பது மக்களின் அடிப்படை உரிமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் கல்விக்கு அரசியல் நோக்கங்கள் உண்டு என்பதை உணரலாம். தேசியக் கல்விக் கொள்கையில் பல ஆலோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன. தொழிற்கல்வி, பொருளாதார வளர்ச்சிக்கு உயிர் நாடியாகும். இதன் வளர்ச்சிப் பரவலுக்கும், புதிய கருத்துக்களையும் தொழில் திறன்களையும் தோற்றுவிக்கவல்ல உயர்கல்வி நிலையின் புத்தமைப்பிற்கும் புதிய கல்விக் கொள்கை வழி செய்தல் வேண்டும். கல்வி இலக்குகளை அடைய நிதி நிலைமை தடையாக அமைகிறது. ஆனால் கல்வியில் தேவையான மாற்றங்களைச் செய்யாமல் வாளாவிருப்பதனால் ஏழக் கூடிய சமுதாய விளைவுகளை எண்ணிப்பார்க்க வேண்டும். இன்றைய கல்வி முறை சிறந்த ஒரு சிலரை மட்டுமே உருவாக்கி உள்ளது. எனினும் பெரும்பான்மையினருக்குப் பயனுள்ளதாக அமையவில்லை என்பதனை மறுக்க முடியாது. பட்டங்கள் பெறுதலைத் தேவைக்கு அதிகமாக வலியுறுத்தல், தேர்வு முறையில் அளவுகடந்த நம்பிக்கை போன்றன அகற்றப்பட வேண்டும். தேசிய அறிவியல் மையங்கள், அருங்காட்சியங்கள் போன்றவை இதற்கு உதவும். புதிய கல்வி ஏற்பாட்டினை (Curriculum) உருவாக்குதலுடன் புதிய கற்பித்தல் முறைகளும், ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, ஆசிரியப் பயிற்சியினை மாற்றியமைத்தல் பலன் தரும். அனைவருக்கும் கல்வி என்னும் குறிக்கோளை அடையவில்லை . கல்வியின் தரமும் விரும்பிய உயர் எல்லையை எய்தப்படவில்லை . எழுத்தறிவின்மையை போக்குவதில், குறிப்பாக பெண்கள் முழு வெற்றி பெறவில்லை. வாழ்க்கை நெடுகத் தொடர்ந்து கற்றல் (Continuing Education) வலியுறுத்தப் பெறுகிறது. ஒதுக்கப்படும் நிதியில் 90 சதவிகிதம் ஊதியம் மற்றும் நிர்வாகச் செலவுகளில் கரைந்து போகிறது. கல்வி வளர்ச்சிப் பணிகளுக்கு நிதியே இல்லை என்ற நிலைமை உள்ளது. கல்வி வளர்ச்சியில் பொதுமக்களுக்கு ஈடுபாடு குறிப்பிடத்தக்க அளவில் இல்லை . முறைசாராக் கல்வி, பகுதி நேரக் கல்வி ஆகியன ஏழை மக்கள் முழுக்கல்வி பெற்று இன்றியமையாதவையாம். தேசியக் கல்விக்கொள்கை 1986ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்று செயல்பட்டு வருகிறது. ஆதிசேஷையா குழு அறிக்கை : 1986ம் ஆண்டில் தேசியக் கல்விக் கொள்கை வகுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் பின்பற்றப்பட்டு வந்த கலைத் திட்டம் பரிசீலனை செய்யப்பட வேண்டிருக்கிறது. இதற்காகத் தமிழ்நாடு அரசு 1986ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மால்கம் ஆதிசேஷையாவின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. கலைத் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் : தமிழ்நாட்டில் 12 ஆண்டு நிதர்சன நோக்கு கல்வித் திட்டத்தில் (Perspective Plan for Education) கூறப்பட்டுள்ள கருத்தின்படி வளர்ந்து வரும் அறிவியல், தொழில் நுட்ப அறிவுக்கேற்ற நமது கலைத் திட்டம் அமையவில்லை. வேளாண்மை, தொழில் துறைகளிலும் சமுதாய கலாச்சாரத்துறைகளிலும் வேகமாக நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப நமது கலைத் திட்டம் அமையாததால் தேக்கம், விரயம் ஏற்படுகிறது. அறிவியல் ரீதியாக அறிவு பெறுவதை விட்டு மனப்பாடம் செய்யும் முறைக்கும், தேவையற்ற விவரங்களை நினைவுபடுத்திக் கொள்ளும் முறைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நமது வகுப்பறையில் பின்பற்றப்படும் முறைகளும், கற்றல் சூழ்நிலையும், மாற்றம் செய்யப்பட வேண்டும். நமது சமுதாயத்தில் நாம் விரும்பும், மாற்றங்களைச் செய்ய, கலைத்திட்டம் எல்லா நிலைகளிலும் மாற்றம் செய்யப்படவேண்டும். மாநில அரசுகள், தனியார் நிறுவனங்களால் நடத்தப்படும் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்படும் பாடங்களும், முறைகளும் மாணவர்களின் சூழ்நிலைக்கும், தேவைக்கும் ஏற்ப அமையவில்லை. கணிதம், அறிவியல் பாடங்கள் கற்பிப்பதில் புதிய முறைகள் கையாளப்படுவதில்லை. இக்குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கான காலத் திட்டத்திலும், அணுகு முறைகளிலும் செய்ய வேண்டிய மாறுதல்களை வரையறுக்க ஆதிசேஷையாகுழு கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆதிசேஷையாக் குழுவின் பரிந்துரைகள் : 1. 5 முதல் 14 வயது வரை எல்லாக் குழந்தைகளுக்கும் முழுமையான கல்வி அளித்தல் (Complete Education), எல்லோருக்கும் கல்வி வாய்ப்பளித்தல். பெண்களின் சேர்க்கையை அதிகரித்து பள்ளியை விட்டு இடையில் நிற்கும் போக்கைக் குறைத்தல். அறிவியல் போதனையை எல்லாக் கல்வி நிலைகளிலும் மேம்படுத்துதல். கல்வித் தரத்தை உயர்த்துதல். சமுதாயத் தேவைக்கேற்ப, தனி மனிதனின் திறமைகளை வளர்த்தல். 2. முறையான கல்வி, பள்ளிசாரக் கல்வி, பயிற்சி இவை ஒருங்கிணைந்த ஒரு கல்வி முறையை உருவாக்குதல். 3. சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்ட, வசதி குறைந்த பிரிவினருக்குத் தனிக்கவனம் செலுத்திக் கல்வி பெற வாய்ப்பளித்தல். 4. தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் இன்றும், நாளையும் உதவும் வகையில் செயலாக்க முறையில் கல்வி முறையையும் அறிவியல் போதனையையும் வகுத்தல். 5. மாநில, மத்திய அரசு, பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் எல்லா வழிகளிலும் கல்விக்காகப் பெறும் நிதிகளை ஒருங்கிணைத்து எண்ணிக்கை அளவில் எல்லோருக்கும் கல்வி கிட்டுவது மட்டுமன்றித் தரமான கல்வி கிடைக்கவும் வாய்ப்பளித்தல், உற்பத்தி நோக்குடனும் கல்வி அமைய வேண்டும். 6. நான்கு வகுப்பு கூட படித்து முடிக்காத குழந்தைகளுக்கும், மாநிலத்திலுள்ள 143லட்சம் எழுத்தறிவற்ற முதியோருக்கும் கல்வி அளிக்க வேண்டும். 7. பள்ளிகளில் பெண்கள் சேர்க்கப்படுவது, ஆண்டுகளுக்குச் சமமாக இருக்கவும், பள்ளியை விட்டு இடையில் நின்றுவிடாமல் இருக்கவும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்காகக் கலைத் திட்டத்தில் பயனுள்ள மாறுதல்களைச் செய்ய வேண்டும். கிராமப் புறங்களில் பெண் ஆசிரியர்களுக்குத் தகுந்த வீட்டு வசதி செய்து தர வேண்டும். வசதி குறைந்த பெண் குழந்தைகளுக்குச் சீருடை அளிக்க வேண்டும். 8. படிப்படியாகப் பள்ளிசார் கல்விக்கும், பள்ளிசாராக் கல்வி முறைக்கும் இணைப்பு ஏற்படுத்தி ஒன்றிலிருந்து மற்ற முறைக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். இதற்காக இரண்டு முறைக்கும் பொதுவான கலைத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். இதற்காகப் பணியிலிருக்கும் ஆசிரியர்கள், கட்டிடங்கள் மற்ற எல்லா வசதிகளையும் இரண்டு முறைக்கும் பயன்படுத்துவதோடு வேலை அனுபவக் கல்விக்கும் வழி செய்யப்பட வேண்டும். 9. கலைத் திட்டம், போதனை முறைகள், கற்றல் உத்திகள் தகுந்த முறையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார, கலாச்சார நிலைகளுக்கக் கேற்ப, செயலாக்கும் திறன் கொண்ட மாணவர்களை உருவாக்கும் முறையில் இவை அமைய வேண்டும். இத்திட்டத்தில் : 1. பள்ளிக் கல்வி முறை, ஆசிரியர்களுக்குப் பணியிடைப் பயிற்சி இவற்றை மாற்றியமைத்தல். 2. எல்லோருக்கும் கல்வி வசதி கிடைக்கச் செய்தல். a. பள்ளியிலிருந்து இடையில் நீங்கியவர்களுக்கும் பள்ளிசாராக் கல்வி அளித்தல். b. பெண்களுக்கான சிறப்புக் கல்வி வசதி. 3. செயல் முறை எழுத்தறிவுத் திட்டம். 4. இடைநிலைக் கல்வியில் தொழில் கல்விக்கு முக்கிய இடம். 5. பொது நூலக முறையை உருவாக்குதல். 6. கல்வித் தரத்தை உயர்த்துதல் - கலைத் திட்டத்தில் மாறுதல். அறிவியல் போதனையில் செயல்முறைகளைக் கையாளுதல் - தேர்வு முறைச் சீர்திருத்தம் ஆசிரியப் பயிற்சி முறைகளில் முன்னேற்றமான மாற்றங்கள் - பள்ளிச்சாராக் கல்வி. மூடநம்பிக்கைகளுக்கு உட்படாமல் சிந்தித்து வாழ்க்கைப் பிரச்சனைகளை அறிவியல் பார்வையுடன் தீர்க்க வேண்டும். மக்களிடம் அறிவியல் மனப்பான்மை வளர்க்கப்பட்டு நாட்டு வளர்ச்சியை ஊக்குவித்தலுக்கு கல்வி உதவிட வேண்டும். பயனுள்ள கல்வி முறை மக்களிடையே அறிவியல் மனப்பான்மை வளரத் துணை செய்ய வேண்டும். கல்வியிலே சம வாய்ப்புகளை (Equal Facilities for Education) எல்லோருக்கும் அளித்தல் குடியாட்சியின் அடிப்படை இது மக்களது உரிமை. ஆனால் பல்வேறு சமூக - பொருளாதாரக் காரணங்களின் விளைவாக இது செயல்படாமல் போகக் கூடும். முறைசாராக் கல்வி: மால்கம் கல்வி மீது தனி கவனம் செலுத்தி வந்தார். உயர்கல்வி மீதும், பள்ளிக்கல்வி மீதும் எப்படி அக்கறை செலுத்தினாரோ அதே போல் முறைசாராக் கல்விக்கும் (Non-formal education) தன்னை அர்ப்பணம் செய்து கொண்டார். கல்வி நிலையங்களை முறைப்பட்டவை (Formal), முறைபடாதவை (Informal) என் இரண்டு வகையாக பிரிக்கின்றனர். முறைசாராக் கல்வி என்பது 15 முதல் 25 வயது வரையிலான பள்ளியில் சேராதோர், முதியோர், பெண்கள் ஆகியோருக்காக இது செயல்படுகிறது. கல்வி வாய்ப்பினைப் பெற்றிராத மக்களது கல்விக்கு வழி வகுக்க வேண்டிய தேவையை இது பூர்த்தி செய்கிறது. முறைசாராக் கல்வியானது பள்ளிப்படிப்பைத் தொடராமல் நடுவில் விடுவோர்க்கும் உதவும் வகையில் உள்ளது. முறைசாராக் கல்வி, முறையான பள்ளிக்கல்வியுடன் இணைந்து செயல்படுதல் புதிய கல்விக் கொள்கையில் வலியுறுத்தப்படுகிறது. நாட்டு மக்களிடையே கல்வி வாய்ப்புகளைப் பெருக்குவதற்கு முறைசாராக் கல்வி இன்றியமையாதது ஆகும். முறைசாராக் கல்விக்கும் அவர் மிகுந்த முக்கியத்துவம் நல்கினார். 1976ல் தமிழ்நாடு தொடர்கல்வி வாரியத்தை (Tamilnadu Board of Continuing Education) அவர் தொடங்கினார். அதன் தலைவராக நான்கு பருவங்கள் பணியாற்றினார். முறையான கல்வி: திட்டம், ஒரு பள்ளி, ஒரு திட்டமிடப்பட்ட பாட அட்டவணை, ஆசிரியர், மாணவ - மாணவியர் வருகை, பள்ளிகள் ஆகியனவற்றைக் கொண்டது முறையான கல்வியாகும். இது ஒரு குறிப்பிட்ட குறிக்கோளை அடிப்படையாகக்கொண்டு செயல்படும். பள்ளிகளில் வரையறுக்கப்பட்ட ஒரு முறையான வடிவில், வகுப்புகளில் செயல்படுத்தப்படுவது முறை சார்ந்த கல்வியாகும். இங்கு பாடத்திட்டங்களும், பாட நூல்களும், வயதும் குறிப்பிடப்பட்டு இருக்கும். இது 4 சுவர்கொண்ட வகுப்பறையின் உள்ளே நடத்தப்படும். பள்ளி சாராக் கல்வி : வருகை பதிவு, வகுப்பறைக் கற்பித்தல் கண்டிப்பானதில்லை. தானே கற்பதற்கு வழியுள்ளது. கற்றல் என்பது தான் ஊக்கத்தாலேயே நடைபெறுவதாகும். பள்ளி சாராக் கல்வியானது சற்று முறை சார்ந்தும், பெருமளவு முறைசாராமலும் நடைபெறுகிறது. இங்கு வயது வரம்பில்லை. முதியோர் கல்வியானது பள்ளி சாராக் கல்வியில் முக்கியத்துவம் பெறுகிறது. நூறு சதவீகிதம் எழுத்தறிவு அடைவதென்பது மிகவும் முக்கிய பிரச்சனையாக நம் நாட்டில் உள்ளது. இச்சூழலில் கல்லாமைக்கும், முறையான கல்விக்குமிடையே ஒரு பாலத்தை முறைசாராக் கல்வி ஏற்படுத்தியுள்ளது. இது அனைவருக்கும் கல்வித் திட்டத்தினை அடைவதற்காக ஒரு புதிய அணுகுமுறையாக உள்ளது. முறையான கல்வி பயில முடியாதவர்களுக்கு இம்முறையின் மூலம் கட்டாய் மற்றும் இலவசக் கல்வியினைக் கொடுப்பது மத்திய மற்றும் மாநில அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையுமாகும். பள்ளி சாராக் கல்வியானது ஒதுக்கப்பட்ட மற்றும் கீழ்நிலையில் உள்ள மக்களுக்கு கல்வி கொடுப்பது, அவர்களுயை வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கு உதவி புரிகிறது. மாநில பள்ளி சாரா கல்வி கருவூலம் : மாநில பள்ளி சாரா கல்வி கருவூலம் (State Rosource Centre - SRC) என்பது 1975-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இது மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இதில் முதியோர் கல்வி, தமிழ்நாடு அரசின் தொடர் கல்வி, பல்கலைக் கழகம், தொண்டு நிறுவனங்கள், கல்வியாளர்கள் ஆகியோர்களை உறுப்பினராகக் கொண்டது. இதன் முதல் தலைவராக ஆதிசேஷையா இருந்தார். இதன் துவக்க விழாவில் ஆதிசேஷையா கலந்து கொண்டு தமிழில் உரையாற்றினார். [] கல்விச் சிந்தனையாளர் மால்கம் ஆதிசேஷையா தமிழ்நாட்டில் உள்ள மாநில பள்ளிசாரா கல்வி கருவூலம் தமிழ்நாடு, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களுக்காகச் செயல்படுகிறது. இது தொழில்நுட்ப உதவியாக முதியோர் கல்வி மற்றும் தொடர்கல்விக்கு உதவி செய்கிறது. எழுத்தறிவு, மற்றும் தொடர் கல்விக்காக குறிப்பாக செயல்படுகிறது. இந்த அலுவலகம் "ஆதிசேஷையா பவன்’’ என்கிற பெயரில் ஏப்ரல் 18, 1992 முதல் செயல்பட்டு வருகிறது. முதியோர் கல்வி கல்வி என்பது ஒரு கருவி . அது பிரச்சனைகளுக்குத் தீர்வு கொடுக்கும். விவாதத்தைத் துவக்கி விடும். கல்வி ஒவ்வொரு மனிதனையும் சிந்திக்க தூண்டுகிறது. கல்வி கற்றால் இந்த பிரபஞ்சத்தையே அறிந்து கொள்ளலாம். நமது உரிமைகள் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். கண்மூடித்தனமாக எதையும் ஏற்றுக் கொள்வதைத் தடுக்கும். வறுமைக்கான காரணத்தை உணரமுடியும். தனது சக்தியையும் வெளிப்படுத்த முடியும். குடும்பத்தின் அளவைத் திட்டமிட முடியும். வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். தன்மைபிக்கையை ஏற்படுத்தும். கல்வி சமத்துவத்தை ஏற்படுத்தும் என்ன மால்கம் ஆதிசேஷையா கூறினார். ஆதிசேஷையா முதியோர் கல்வித் திட்டத்தில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டார். கிராமப்புற இந்தியாவில் முதியோர் கல்விக்காக (Adult Education) தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். முதியோர் கல்வி என்பது வெறும் எழுத்தறிவு மட்டுமன்று. தொழிலாளர்கள், விவசாயிகள் போன்றோருக்கான தொடர் கல்வியும் இதில் அடங்கும். கல்வியறிவு பெற்றவர்கள் தொடர்ந்து படிக்க நூல்கள் உருவாக்குவதும் இன்று அரசு கவனம் செலுத்தி வருகிறது. நாட்டு வளர்ச்சிக்கும், வறுமையைக் குறைப்பதற்கும் முதியோர் கல்வி முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. வளரும் நிலையிலுள்ள நம் நாட்டிற்கான கல்வித் திட்டங்களில் முதியோர் கல்விக்கு ஒரு முக்கிய இடத்தினை அளிப்பது இன்றியமையாததாகும். கல்வி என்பது பள்ளிக் காலத்துடன் முடிவடையும் செயலன்று. பல்வேறு தொழில்களில் ஈடுபடுவோர் அத்துறைகளில் மேலும் முன்னேற உதவுவதும் இதனுள் அடங்கும். இதனால் தான் முதியோர் கல்வி எனப்படுவது இன்று சமூகக் கல்வி (Social Education) என்று குறிப்பிடப்படுகிறது. இந்தியாவில் வயது வந்த எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு எழுத்துச் சொல்லிக் கொடுப்பதை மட்டுமே முதியோர் கல்வி என்கின்றனர். இது மிகக் குறுகிய பொருளாகும். உண்மையில் வயது வந்த அனைவருக்கும் தங்கள் திறமைக்கும் விருப்பதற்கும் ஏற்றவாறு தங்கள் அறிவை வளரச் செய்து கொள்ள உதவும் முறைகள் அனைத்தும் முதியோர் கல்வியாகும். யுனெஸ்கோ முதியோர் கல்வியைப் பற்றி 1974ம் ஆண்டில் கூறும் போது ஒட்டு மொத்த கல்வி நிறுவனத்தின் செயல் முறையாகும் என்கிறது. தங்களின் திறமையை வளர்க்கவும், அறிவினை விரிவடையச் செய்யவும், தொழில் மற்றும் நுட்பவியலில் தங்களை முன்னேற்றிக் கொள்ளவும், சிந்தனை மாறுதல்களைக் கொண்டு வரவும், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்காகச் சமமான, சுதந்திரமானப் பங்களிப்பைக் கொடுக்கும் வகையில் மாறுதல்களைக் கொண்டுவருவதுமேயாகும். கிராமப் புறங்களில் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது எழுத்தறிவின்மையாகும். இதற்கு முன்னுரிமை கொடுத்து, கல்வி மற்றும் சுகாதாரத்தைக் கிராமப்புறத்தில் கொண்டு வர வேண்டும் என்பதை மால்கம் ஆதிசேஷையாவும் வலியுறுத்தினார். முதியோர் கல்வி கிராமப்புற விவசாயி, கூலித் தொழிலாளி ஆகியோருக்கு ஒரு கருவியாகும். இதன் மூலம் உற்பத்தியைப் பெருக்கலாம். ஒட்டு மொத்த இயக்கமாக முதியோர் கல்வித் திட்டம் செயல்படுத்தினால் இந்திய கிராமப்புற பொருளாதாரத்தில் மேன்மையடையும் என மால்கம் கருதினார். நம் நாட்டிற்கான கல்வித்திட்டங்களில் முதியோர் கல்விக்கு ஒரு முக்கிய இடத்தினை அளிப்பது இன்றியமையாததாகும். கல்வி என்பது பள்ளி காலத்துடன் முடிவடையும் செயலன்று. முதியோர் கல்வி எனப்படுவது எழுத்தறிவின்மையைப் போக்குவது மட்டுமன்று. சிறிதளவு கல்வி கற்றவர்களுக்கும் தொடர்ந்து அறிவை வழங்கும் செயலாகும். கல்விச் சிந்தனையாளர் மால்கம் ஆதிசேஷையா நாடு முழுவதும் இணைந்த வகையில் முதியோர் கல்விக்கான திட்டம் ஒன்றை உருவாக்க கோத்தாரி கல்விக் குழு வலியுறுத்தியது. எழுத்தறிவின்மையைச் சிறிது காலத்திற்குள் போக்குவது இதன் முதல் பணியாகும். 1978ம் ஆண்டில் தேசிய முதியோர் கல்வித் திட்டம், (National Adult Education Programme) தொடங்கப்பட்டது. இந்திய முதியோர் கல்விச் சங்கத்தின் தலைவராக மால்கம் ஆதிசேஷையா நியமிக்கப்பட்டார். முதியோர் கல்வியின் நோக்கங்கள் : ஒவ்வொரு தனி மனிதனும் சமூகத்தில் தன்னுடைய பணியினை அல்லது கடமையை உணர்ந்து செயலாற்றும் வகையில் ஒரு சமூகத்தை உருவாக்குவதே இதனுடைய முக்கிய நோக்கமாகும். அதாவது கல்வி பயில வாய்ப்பில்லாதவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாகும். [] வேற்றுமைகளைக் களைவதே இதன் நோக்கங்களில் ஒன்றாகும். இது ஒருவரை ஒருவர் சமமாக மதிக்கும் தன்மையினை ஊக்குவித்துச் சிறந்த ஜனநாயக வாழ்க்கை முறையினை வாழ வழி வகுக்கிறது. நாட்டின், உலகின் பிரச்சனைகளை அறிந்து கொள்ளலாம். கல்வியறிவில்லாத மக்கள் கல்லாமையினாலும், மூட நம்பிக்கையினாலும் ஊரிஸ் போய் இருக்கின்றனர். முதியோர் கல்வியானது இனம், மதம், சமூகம் மற்றும் வகுப்பு சம்பந்தமான அனைத்து விதமான வேற்றுமைகளைக் களைவதன் மூலம் ஒற்றுமை உணர்வை மக்களிடையே வளர்ப்பதே இதனுடைய நோக்கமாகும். முதியோர் கல்வி மற்றும் வளர்ச்சி சம்பந்தமான கருத்தரங்கம் நடக்கும் போது ஆதிசேஷையா அவர்கள் தனது 80வது வயதில் வாழ்த்துத் தெரிவித்து துவக்கிவைத்தார். 8 கருத்தரங்கம் நடைபெற்றது. இவர் ராஜ்ய சபாவின் உறுப்பினரான போது முதியோர் கல்வித் திட்டங்களை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தினார். அவர் விஷ்வயுகக் கேந்திராவின் தலைவராகத் தேர்வு பெற்றார்.யூ.ஜி.சி.யின் (UGC) முதியோர் கல்வி பற்றிய ஸ்டாண்டிங் கமிட்டியின் அங்கத்தினராக இருந்தார். பெண் கல்வி முதியோர் கல்வியில் பெண்களுக்கு கல்வி கொடுப்பது என்பது மிக முக்கியமானதாகும். பெண்களுக்கு கல்வி கொடுப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை இப்பொழுதும், எதிர் காலத்திலும் உயர்த்துகிறது. கல்வியானது பெண்களுக்கு வேலை வாய்ப்பையும், வாழ்க்கைக் சூழலையும், தரத்தையும் உயர்த்துகிறது. பெண் கல்வி தங்கள் குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அவர்களுக்கு நல்லதொரு வாழ்வினை அமைத்துத் தரவும் வழி காட்டுகிறது. பெண் கல்வியானது அவர்களுக்கு பயணளிப்பதோடு, அவர்களைச் சுற்றியுள்ள குடும்பத்தையும், சமூகத்தையும் பயனடையச் செய்கிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பெண் குழந்தைக்குக் கல்வியளிப்பது அந்த நாட்டிற்கே கல்வியளிப்பதாகும். தேசியக் கல்விச் சங்கங்களின் வரையறை : இதன் நோக்கம் 1988ம் ஆண்டு இந்திய அரசாங்கத்தினால் இத்திட்டத்தின்கீழ் கல்வியறிவு கிடைக்காத நம் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் கல்வி கிடைக்கப் பெறச் செய்தலாகும். கல்வியறிவு இல்லாதவர்கள் 15 வயது முதல் 35 வயது வரை அதிகம் உள்ளனர். இவர்களுக்கு கல்வியறிவு வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். எழுத்தறிவு ஒரு மனிதன் பெற்றுவிட்டான் என்பது பற்றிக் குறிப்பிடும் போது சாதாரண உச்சரிப்போடு, சத்தமாக ஒரு நிமிடத்தில் 30 வார்த்தைகளைப் படித்தல் ஆகும். எளிமையான மொழியில் உள்ள சிறு பத்தியினை அமைதியாக 35 வார்த்தகளைப் படித்தல். சாலைக் குறியீடுகளைப் புரிந்து கொள்ளவும், எளிய கட்டளைகளையும், சுவரொட்டிகளையும், செய்தி தாள்களைப் படிக்கவும், ஒருவருடைய வாழ்க்கை மற்றும் வேலைத் தொடர்புடைய வாக்கியங்களைப் படித்து தெரிந்து கொள்வதுமாகும். முழு எழுத்தறிவு எல்லோருக்கும் கல்வி என்கிற முழக்கம் 1980ம் ஆண்டுகளில்தான் வெகுவாக உலக நாடுகளிடையே எழுப்பப்பட்டது. குறிப்பாக ஆசிய நாடுகளில் கல்லாமையை இல்லாதொழிக்க இது முழங்கப்பட்டது. யுனெஸ்கோவும் எல்லோருக்கும் கல்வி என்னும் குறிக்கோளைக் கொண்டிருந்தது. பொருளாதார மேம்பாடு, சமூக வளம் ஆகியவற்றுக்கு உதவும் எழுத்தறிவு புகட்டும் கல்வியை வாழ்க்கைக்குப் பயன்படும் எழுத்தறிவு (Functional Literacy) என்று குறிப்பிடலாம் என்கிறது. யுனெஸ்கோ அமைப்பு நூற்றுக்கு நூறு சதவீதம் பொதுமக்கள் யாவரும் கல்வியறிவு பெற்று விளங்க இன்னமும் சிறிது காலம் தேவைப்படும். எழுத்தறிவு இல்லாதவர்களை இன்றும் காணலாம் என யுனெஸ்கோ கூறுகிறது. [] வயது வந்தோர் எழுத்தறிவின்மைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு பல விதமான முன் மாதிரிகள் சுதந்திரத்திற்குப் பிந்தையாக காலத்தில் மேற்கொள்ளப்பட்டது. முழு எழுத்தறிவு இயக்கம் (National Literacy Mission) நவம்பர் 5, 1988-ல் துவங்கப்பட்டது. முந்தைய நிலைகளிலிருந்து பல வழிகளிலும் இது வேறுபட்டிருந்தது. இத்திட்டத்தின் புதிய வடிவமாக கலைப்பயணங்கள் மூலம் மக்கள் மத்தியில் கல்வியின் முக்கியத்துவம் எடுத்துக் கூறப்பட்டது. இதற்காக மாவட்ட நிர்வாகத்தின் அனைத்துப் பிரிவுகளும், கல்வி அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும் ஒன்றிணைக்கப்பட்டன. பாரத் கியான் விஞ்ஞான் சமிதி (Bharat Gyan Vigyan Samithi - BGVS) என்ற தொண்டு நிறுவனம் ஆகஸ்ட் மாதம் 1989ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைவராக மால்கம் ஆதிசேஷையா நியமிக்கப்பட்டார். இந்த இயக்கத்தின் முழு பொறுப்பாளர்களாக அந்த அந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இருந்து செயல்பட்டனர். இதே ஆண்டில் தேசிய எழுத்தறிவு இயக்க ஆணையம் (NLM) துவங்கப்பட்டது. அறிவொளி இயக்கம் : வெகு விரைவில் எழுத்தறிவற்ற மக்களே இல்லை என்னும் நிலையினைத் தோற்றுவிக்க அறிவொளி இயக்கம் வந்தது. இதற்கென ஒரு குறுகிய காலகட்டம் சுமார் 3 மாதங்களில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கற்பித்தல் பொருள்கள் பாடநூல்கள் போன்ற எல்லா வசதிகளும் அரசினால் இலவசமாக அளிக்கப்படுகின்றன. 1988 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கேரளா மாநிலம் கோட்டயம் நகரில் முதன்முதலில் அறிவொளி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. கோட்டயம் இந்தியாவிலேயே அதிக எழுத்தறிவு கொண்ட நகரமாக இருந்தது. அந்த நகரில் 2000 பேர்களே 6 முதல் 60 வயது வரை எழுத்தறிவு இல்லாதவர்களாக இருந்தனர். மகாத்மா காந்தி பல்கலைக் கழக தேசிய மாணவர் தொண்டர் படையினர் 100 நாட்களில் முழு எழுத்தறிவு பெற்ற நகரமாக ஆக்கினார்கள். சில மாதங்கள் கழித்து ஆகஸ்ட் மாதம் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவொளி இயக்கம் தனது மாவட்டத்தில் துவக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். தேசிய எழுத்தறிவு இயக்கம் இதனை ஆதரித்தது. அறிவொளி இயக்கம் அரசு சாரா நிறுவனமான கேரள சாஸ்திர சாத்திய பரிஷத் என் (KSSP) என்கிற மக்கள் அறிவியல் இயக்கத்தால் துவக்கப்பட்டது. தன்னார்வத் தொண்டர்கள் மூலம் எழுத்தறிவு கற்பிக்கப்பட்டது. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களோடு அறிவொளித் தொண்டரும் சென்று எழுத்தறிவைக் கொடுத்தனர். மாவட்டம் முழுவதும் முழு மூச்சுடன் அறிவொளி வழங்கப்பட்டது. இதன் விளைவாக பிப்ரவரி 4, 1990ல் எர்ணாகுளம் இந்தியாவின் முதலாவது எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இம்மாவட்டத்தில் எழுத்தறிவு சதவீதம் 77லிருந்து 98 சதவீதமாக உயர்ந்த து. எர்ணாகுளம் மாவட்டம் அனைவரும் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்கப்பட்ட போது அதற்கான அடிப்படைகளை அமைத்துத் தந்த மால்கம் ஆதிசேஷையாவின் திட்டங்களை, சாதித்துக் காட்டிய அதிகாரிகள் தங்கள் உரையில் நினைவு கூர்ந்தனர். அறிவொளியால் கிடைத்த வெற்றி நாடு முழுவதும் பரவியது. அறிவொளி பிற மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டது. அறிவொளித்திட்டம் முந்தைய தேசிய வயது வந்தோர் கல்வித் திட்டத்திலிருந்து வேறுபடுகிறது. தேசிய வயது வந்தோர் கல்வித்திட்டம் (N.A.E. P.) மக்கள் இயக்கமாக 10 கோடி மக்களுக்கு 5 ஆண்டு காலத்தில் 1979லிருந்து 1983க்குள் எழுத்தறிவைக் கற்பிக்க வேண்டும். இத்திட்டம் மதிப்பூதியம் சார்ந்ததாகவும், படித்த, வேலை வாய்ப்பு சார்ந்ததாகவும், அரசால் கட்டுப்படுத்துப்படுவதாகவும் இருந்தது. குறிப்பாக அரசு அலுவலர்கள் மற்றும் கற்போரிடம் உற்சாகமோ, ஊக்கமோ இல்லை. உலகின் பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்பட்ட எழுத்தறிவு இயக்கமானது முழு எழுத்தறிவு இயக்கத்திற்கு மாறுபட்டது. ஏனெனில் முழு எழுத்தறிவுத் திட்டம் நிர்வாக வளர்ச்சி மற்றும் மக்கள் அறிவியல் இயக்கத்தின் விளைவாகும். பல்வேறு காரணங்களால் பெண்கள் இத்திட்டத்தின்பால் ஈர்க்கப்பட்டனர். முழு எழுத்தறிவு இயக்கம் அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து மக்கள் இயக்கமாக செயல்பட்டதே இந்த இயக்கத்தின் சிறப்பாகும். எர்ணாகுளத்தில் முழு எழுத்தறிவு அடைந்த பின்னர் கேரளா மாநிலம் முழுவதும் முழு எழுத்தறிவு இயக்கம் அமுல்படுத்தப்பட்டது. பின்னர் பாண்டிச்சேரி, கோவா, சித்தூர், நெல்லூர், மிட்னாப்பூர், பர்த்வான், பிஜாப்பூர், தக்சின் கன்னடா, சிந்து பர்க், வார்தா பாவன் நகர், புதுக்கோட்டை, பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர், விருதுநகர், கான்ஜம், சுந்தர்ஹர், ரவுர்கேளாசிட்டி, பாணிபட், துர்கா, பிலாஸ்பூர், ராய்பூர், டாங்கர்பூர், சிக்கார், மதுபாலி மற்றும் மாஜ்ஜிபுரா ஆகிய மாவட்டங்களிலும் உடனே அறிவொளி இயக்கம் துவங்கப்பட்டது. குறுகிய காலத்திலேயே மக்கள் எழுத்தறிவு பெற்றனர் என்பது அறிவொளி இயக்கத்தின் சாதனையாகும். பாரத் கியான் விஞ்ஞான் சமிதி (BGVS) புதுமையான முறைகளைக் கண்டுபிடித்து செயல்படுத்திய கலைப்பயணங்கள் மூலம் கற்பதற்கான சூழலை உருவாக்கியது. BGVS அமைப்பு அக்டோபர் 2, 1990 முதல் நவம்பர் 14, 1990 வரை பல்வேறு கலைப் பயணங்களை நடத்தியது. இதில் 721 பெரிய கலைப் பயணங்கள் மற்றும் 1971 சிறிய கலைப் பயணங்கள் மூலம் 332 மாவட்டம், 31000 கிராமங்களில் நடத்தப்பட்டன. பல லட்சக்கணக்கான தொண்டர்கள் எழுத்தறிவிக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இந்த கலைப் பயணம் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியது. இக்கலைப் பயணங்கள் எழுத்தறிவைத் தனி மனிதன் சார்ந்ததாகவும், பல லட்சம் மக்களுக்கான பொது அமைப்பாகவும் விளங்கிற்று என நிபுணர்குழு அறிக்கை 1994ல் கூறியது. எர்ணாகுளம் அறிவொளி இயக்கத்தின் அடிப்படையில் முழு எழுத்தறிவு இயக்கம் ஆகஸ்ட் 1994ல் 275 மாவட்டங்களில், அறிவொளி இயக்கத்தையும், எழுத்தறிவுக்கு பிந்தைய காலகட்டத்தில் 100 மாவட்டங்களிலும் துவக்கியது. எழுத்தறிவு இயக்கத்தின் மையமாக மாவட்ட எழுத்தறிவுக்குழு இருந்தது. அறிவொளி இயக்கம் சாதி, இன தடைகளுக்கு சவாலாகவும், சமூக மேம்பாட்டிற்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் உதவிகரமாகவும் இருந்தது. புதுக்கோட்டை மற்றும் நெல்லூர் ஆந்திரா மாவட்டங்களில் பெண்கள் உற்சாகமாக கற்பவர்களாக விளங்கினர். எழுத்தறிவு பெறுவது சமூக அந்தஸ்தைத் தருவதாக இருந்தது. கற்பவரின் சொந்த அனுபவத்தின் வழியில் சிரமமின்றிப் படிக்கும் திறனை ஏற்படுத்துவதே அறிவொளி இயக்கத்தின் நோக்கமாகும். ஒரு நிமிடத்தில் ஏழு சொற்களை எழுதவும், 1 முதல் 100 வரை எண்ணவும், எழுதவும், மூன்றுஸ்தான் எண்களை கழிக்கவும், இரு ஸ்தான் எண்களை பெருக்கவும், வகுக்கவும் கூடுதல் திறன்களாக நோக்கப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் ஓராண்டு காலத்தில் புதுக்கோட்டை மாவட்டம் முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. புதுக்கோட்டையில் அறிவொளி இயக்கத்தின் சார்பாக பெண்களுக்கு சைக்கிள் ஓட்டக் கற்று கொடுக்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவரின் ஈடுபாடும், மாவட்ட நிர்வாக இயந்திரமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் முழுமையாகச் செயல்பட்டது இத்திட்டத்தின் வெற்றிக்குக் காரணமாகும். பல ஆயிரக்கணக்கான பெண்கள் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டனர். தேசிய எழுத்தறிவு இயக்கம் அறிவொளி இயக்கத்தைக் கண்டது. அறிவொளித் தொண்டர்கள் மக்களைத் தேடிச் சென்றனர். கற்பிப்பவர்கள் கற்பவர்களைத் தேடிச்சென்றனர். அவர்களுக்கு உகந்த நேரத்தில் கற்பித்தனர். முழு எழுத்தறிவு இயக்கத்தின் தாக்கம் என்னவென்றால் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்ததே ஆகும். குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது பெண்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. 1991ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. அப்போது கடந்த 10 ஆண்டுகளை விட படிப்பறிவு பெற்றவரின் சதவீதம் கூடி இருந்தது. பெண்கள் எழுத்தறிவு முன் எப்போதையும் விட அதிகரித்து இருந்தது. கடந்த பல கணக்கெடுப்பின் போது 5 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். எழுத்தறிவு ஆண்டு : உலக எழுத்தறிவு ஆண்டாக யுனெஸ்கோ 1990ம் ஆண்டை அறிவித்தது. மால்கம் ஆதிசேஷையா ஜனவரி 22, 1990 அன்று சர்வதேச எழுத்தறிவு ஆண்டாக புது டெல்லியில் அறிவித்து பேசினார். இந்தியா சுதந்திரம் அடைந்த போது 6.6 சதவீதமாக இருந்தது. ஆனால் அறிவொளி இயக்கம் வெற்றி பெற்றதானால் எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை கூடியது. 2000ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் அடிப்படைக் கல்வியை வழங்கிட வேண்டும் என்பது யுனெஸ்கோ அறிவித்துள்ளது. அதை இந்தியாவிலும் நிறைவேற்றுவோம் என அவர் குறிப்பிட்டார். புத்தக பயணம் : கிராமப் புறங்களுக்கு பேருந்தில் புத்தகங்களை எடுத்து செல்லும் புத்தகப் பயணம் (Book Journey) என்கிற முறை ஒன்று நடைமுறைக்கு வந்துள்ளது. புத்தகங்கள் நீளமான கண்ணாடிக்குள் இருந்தன. உள்ளே என்ன என்ன புத்தகங்கள் இருக்கின்றன என்பது வெளியே தெரியும்படி இருந்தது. இந்த பேருந்தில் புத்தகப் பயணம் என் எழுதப்பட்டிருந்தது. மக்களுக்கு புத்தகத்தைப் படிக்கும் ஆர்வத்தை தூண்டுவதற்காகவும், அனைவருக்கும் கல்வி என்பதற்காகவும் மாநில மையத்திலிருந்து இயக்கப்பட்டது. இந்த ஆலோசனையை அரசுக்கு மால்கம் ஆதிசேஷையா 1977ம் ஆண்டில் கூறினார். இதனை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு கல்வி வளர்ச்சி கழகம் (Tamil Nadu Educational Development Board) ஆரம்பிக்கப்பட்டது. இதன் பின்னர் தேசிய அளவில் தேசிய எழுத்தறிவு இயக்க ஆணையம் இளைஞர்களுக்காகவும், வயதானவர்களுக்காகவும் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் பேருந்தின் மூலம் புத்தகப் பயணம் நடந்தது. இந்த திட்டத்தின் மூலம் கல்வி மற்றும் தொழில் நுட்ப அறிவு கொண்டு வருவது. இது பள்ளியில் இருந்து இடையில் விலகிய (Drop - outs) மாணவர்களுக்கும், எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கும், மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பது ஆகும். புத்தகங்களை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதாகும். இதனை மத்திய அரசு உருவாக்கியது. இந்த புத்தகப் பயணத்தின் போது புத்தகங்களும் விற்பனை செய்யப்படுகிறது. குழந்தைகள் புத்தகம் முதல் ஐ . ஏ . எஸ் . (IAS) புத்தகம் வரை இவற்றில் இடம் பெறுகின்றன. புத்தகங்கள் மாநில பள்ளி சாரா கல்வி கருவூலம் மூலம் தயாரிக்கப்படுகின்றன. இதனை நேசனல் புக் டிரஸ்ட் விற்பனை செய்கிறது. இத்திட்டம் ஆதிசேஷையா மறைவிற்கு பிறகே தொடங்கியது. ஆனால் நல்ல வெற்றியை தருகிறது எனக் கூறுகின்றனர். படிக்கும் பழக்கம் என்பது இன்றைக்கு அறவே அற்றுப்போகும் நிலை உருவாகியுள்ளது. மக்கள் தங்களது நேரத்தை தொலைகாட்சிப் பெட்டி முன்பு கழிக்கின்றனர். அதுவும் நெடுந்தொடர்களில் பொழுதைக் களிக்கின்றனர். படிக்க வைக்க வேண்டும் என்கிற கடமை அரசுக்கு உண்டு. புத்தகங்களை விலை கொடுத்து வாங்க வைக்கவும், படிக்கும் ஆர்வத்தை ஊட்ட வேண்டி இருக்கிறது. புத்தகப் பயணம் பள்ளிகளுக்கு செல்லும்போது சில பள்ளிகளில் மாணவர்கள் ரூபாய் 3500/- வரை புத்தகங்களை வாங்கியுள்ளனர். குழந்தைகள் கதை புத்தகம், உடல் நலம் சார்ந்த குறிப்பு, நோய்க்கான தீர்வு, பொது அறிவு புத்தகங்கள் அதிகம் விற்பனை ஆகின்றன. எப்பொழுதெல்லாம் பஸ்ஸை தெருக்களில் நிறுத்துகிறார்கள். அப்பொழுதெல்லாம் மக்கள் 5 நிமிடத்தில் கூடிவிடுகின்றனர். புத்தக பயணத்திற்காக ஒரு பேருந்து மட்டுமே உள்ளது. ஆனால் இது ஒன்றே மக்களை சென்றடைய முடியாது. அதே சமயத்தில் இந்த பேருந்து செல்லுமிடமெல்லாம் புத்தகங்களை வாசிக்கும் ஆர்வம் உண்டாகிறது. கண்பார்வை குறைபாடு கொண்டவர்களுக்காக பிரைய்லி (Braille) முறையில் உருவாக்கப்பட்ட புத்தகங்களும் இந்தப் பயணத்தில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடும் படியானது ஆகும். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அடுத்ததாக 10 முதல் 19 வயது கொண்டவர்களுக்கு கவனம் செலுத்தப்படுகிறது. மக்களை எழுத்தறிவு பெற்றவர்களாக மாற்றுவதற்காக பல்வேறு வேலைகள் செய்யப்படுகின்றன. கால்நடை வளர்ப்பு, காளான் வளர்ப்பு போன்றவை கூட மக்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு வருமானம் கிடைப்பதற்கும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் எழுத்தறிவு இயக்கம் வழி காட்டுகிறது. இயங்கும் இந்த நூலகம் சமூகக் கல்விப் பணிப்பிரச்சார ஊர்தி போன்றவையும், சமூக முதியோர் கல்வியின் வளர்ச்சிக்கும் இன்றியமையாதவையாகும். கற்பித்தல், கற்றலுக்கான பொருட்களைத் தயாரித்தல், ஆசிரியர் பயிற்சி, விளைவுகளை சீர்தூக்கிப் பார்த்து மதிப்பிடுதல் ஆகியவையும் எழுத்தறிவு இயக்கத்தால் மேற்கொள்ளப்பட்டன. நூலகம் : மால்கம் தனியாக பல புத்தகங்களைக் கொண்டு நூலகம் அமைத்திருந்தார். எங்கு சென்றாலும் புதிய நூல்களை வாங்கி கொண்டு வந்து சேர்த்தார். தனது வாழ்நாள் முழுவதும் ஆதிசேஷையா அறிவைப் பகிர்ந்து கொள்பவராக இருந்தார். இவரைச் சுற்றி ஏராளமான புத்தகங்கள் இருக்கும். குறிப்பாக பொருளாதாரம் மற்றும் கல்வி சார்ந்த புத்தகங்களே இருக்கும். அதே சமயத்தில் அவற்றினை ஒழுங்காக முறையாக அடுக்கி வைத்திருப்பார். இவர் யுனெஸ்கோவிற்கு வேலைக்குச் சென்ற போது புத்தகங்களை எடுத்துச் சென்றார். யுனெஸ்கோவைவிட்டு திரும்பி வந்த போது நிறைய புத்தகங்களைக் கொண்டு வந்தார். சென்னையில் தான் ஆரம்பித்த MIDSல் நூலகத்தை அமைத்தார். அந்த நூலகம் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. தகவல்களைத் தெரிந்து கொள்ள பலர் இவரின் நூலகத்திற்கு வந்து செல்கின்றனர். எழுத்துப் பணி: மால்கம் ஆதிசேஷையா தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய தொழிகளில் ஏராளமாக எழுதியிருக்கிறார். அவற்றில் பெரும் பங்கு ஆங்கிலத்தில் தான் எழுதப்பட்டது. 1976க்குப் பிறகு அவர் எழுதியிருக்கும் கட்டுரை, நூற்பட்டியலை எம். ஐ. டி எஸ். புல்லட்டின்னின் கடைசி இதழில் வெளியிட்டுள்ளனர். அது மட்டும் 22 பக்கங்களை நிரப்பியுள்ளது. இவர் 97 கட்டுரைகள் எழுதியுள்ளார். 1976ம் ஆண்டுக்கு முன்பும் கட்டுரைகள் எழுதியுள்ளார். 1976ம் ஆண்டுக்கு முன்பும் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவை எத்தனை என்பது சரியாகத்தெரியவில்லை . இவர் 29 புத்தகங்களை எழுதியுள்ளார். 27 புத்தகங்கள் பதிப்பு செய்துள்ளார். ஆகவே இவர் 40க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் 24 ஆண்டுகள் எம். ஐ. டி. எஸ். புல்லட்டின்னில் எழுதியுள்ளார். இவர் கல்வி, எழுத்தறிவு, பள்ளி, உயர்கல்வி, முதியோர் கல்வி, பெண் கல்வி, அறிவியல் கல்வி, முறைசாரா கல்வி, ஆய்வு முறைகள் போன்றவைகளை எழுதியுள்ளார். இவர் எழுதிய புத்தகம் மற்றும் கட்டுரைகளில் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்தவையே அதிகம். மனிதவள மேம்பாடு, பஞ்சாயத்துராஜ் தரிசு நில மேம்பாடு, சுற்றுச் சூழல், தொழில் வளர்ச்சி, வெளிநாட்டு வர்த்தகம், வரி மற்றும் விலைக்கொள்கை, நீடித்த வளர்ச்சி, பொதுத்துறை மற்றும் தொழிலாளர் நலன் குறித்த பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். மால்கமின் எழுத்துக்கள் தெளிவாக துல்லியமாகக் கருத்துச் செறிவுடன் இருக்கும். எதிர்பார்ப்பது போலவே அவர் எழுத்துக்களில் கல்விக்குத் தான் முதலிடம் கிடைத்தது. கல்வியின் பல்வேறு அங்கங்களைப் பற்றியும் ஆழமாகவும், விரிவாகவும், அனுபவபூர்வமாகவும் அவர் எழுதியிருந்தார். கல்வி மனித மூலதனத்தின் ஒரு முக்கியக் கூறு என்றும், நாட்டின் வளர்ச்சிக்கு இயந்திர முதலீட்டையும் விட கல்வி முதலீடு முக்கியமானது என்றும் அவர் கருதினார். ஏழ்மை குறிப்பாக கிராமப்புற ஏழ்மை, வருவாய் ஏற்றத்தாழ்வுகள் ஆகியவை பற்றி அவர் நிறைய எழுதியிருக்கிறார். சுற்றுப்புறச் சூழல் பற்றி பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அந்தத் தலைப்பில் ஒரு புத்தகத்தையும் தொகுத்திருக்கிறார். அணுசக்தியின் சாதக பாதகங்களைப் பற்றியும் எழுதியிருக்கிறார். உலக மயமாக்கல், புதிய பன்னாட்டுப் பொருளாதார அமைப்பு, விலைக் கொள்கை, புள்ளி விவரங்கள் சேகரிப்பு, தரவு மையங்கள், திட்டமிட்ட பொருளாதாரம் போன்றவை பற்றியும் எழுதியுள்ளார். தமிழில் அவர் கட்டுரைகள் கூரியர், சக்தி மற்றும் தமிழ் நாளிதழ்களில் வெளிவந்துள்ளன. அவர் பிரெஞ்சில் எழுதிய புத்தகமொன்றையுனெஸ்கோ வெளியிட்டுள்ளது. மால்கம் ஆண்டிடை மறுபார்வை விரிவுரை (Mid year review) ஒவ்வொரு ஆண்டிலும் புத்தகமாக வெளிவந்தது. எல்லா வகை அச்சு ஊடகங்களிலும் அவர் எழுதியிருக்கிறார். மால்கம் எழுதிய Let my country Awake (1970), It is time to Begin (1972) ஆகிய இரண்டு புத்தகங்களை யுனெஸ்கோ ஆங்கிலத்திலும், பிரெஞ்சு மொழியிலும் வெளியிட்டுள்ளது. இவரின் எழுத்துக்கள் அனைத்தும் உலக மக்களின் கல்வி, பொருளாளதார முன்னேற்றத்துக்கான வழிகாட்டியாக இருக்கின்றன. தற்காலத்து திட்டங்களுக்கு மட்டுமல்லாமல் தொலைநோக்கு திட்டங்களுக்கும் உதவக் கூடிய வகையில் இருக்கின்றன. பொருளாதாரக் கழகம் : மால்கம் இந்தியப் பொருளாதாரக் கழகத்தின் (Indian Economic Association) தலைவராக இருந்தார். இவரை விசாகப்பட்டிணத்தில் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். இவர் கூட்டத்தை நடத்துவதில் தனித்திறமை பெற்றிருந்தார். தமிழ்நாட்டின் புள்ளி விபரவியல் உருவாகக் காரணமாக இருந்து அதனை வளர்த்து விட்டார். 1974ம் ஆண்டு இந்தியப் பொருளாதாரச் சங்கத்தின் தலைமை உரையை ஆந்திரப் பிரதேசத்தின் வால்டேரில் வழங்கினார். அதன் தலைவர் என்ற முறையில் மூத்த பேராசிரியர்களான பி. என். கங்கூலியையும், பபுதோஸ் தாத்தாவையும் இந்தியப் பொருளாதார எண்ணங்களின் வளர்ச்சி பற்றிய நூல்களை எழுத ஊக்குவித்தார். அதன் முன்னாள் தலைவர் என்கிற முறையில், சங்கத்தின் நிதிகளைச் சீர்படுத்தி, அதிகரிக்கவும் வழிகோலினார். அவர் இங்கிலாந்தின் ராயல் எக்னாமிக் சொஸைட்டியின் உறுப்பினராகவும் இருந்தார். பொருளாதார மதிப்பீடு : மால்கம் ஆதிசேஷையா ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு ஒரு பொருளாதார மதிப்பீடு (Tamil Nadu - An Economic Appraisal) என்கிற அரசு வெளியீட்டைத் திறனாய்வு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அரசு தரவுகளைச் சேகரிக்கும் முறைகளைப் பற்றியும், புள்ளி விரங்களின் நம்பகத்தன்மை, அவற்றிலிருந்த சிக்கல்கள் பற்றியும் அவர் தலைமையில் விவாதங்கள் நடத்தப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டின் புள்ளி விவரங்கள் சேகரித்து ஆய்வு செய்யும் வழிகளில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டன. இவர் 1976ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு பொருளாதார மதிப்பீடுகளை ஆய்வு செய்து வந்தார். வகித்த பதவிகள் : மால்கம் ஆதிசேஷையா திருவனந்தபுரம் வளர்ச்சி ஆய்வுகள் மையத்தின் (Centre for Developmental Studies) ஆட்சிக்குழு அங்கத்தினராக 1980லிருந்து 1986 வரை இருந்தார். அதன் சேர்மனாக 1986 லிருந்து 1992 வரை இருந்தார். இவர் காலத்தில் தான் ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நடவடிக்கைகள் நிதியிலிருந்தும், மத்திய அரசிலிருந்தும் மையத்தின் மக்கள் தொகை பற்றிய ஆய்வுகளுக்காக நிரந்தரமாக நிதி கிடைக்க வழிவகைகள் செய்தார். 1990களில் மால்கம் டெல்லியின் சமுதாய அறிவியல்கள் நிறுவனத்தின் (Institute of Social Sciences) சேர்மனாக நியமனம் பெற்றார். 1994 நவம்பர் திங்கள் 11ம் தேதி அதன் ஆட்சிக்குழுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியதுதான் அவர் டெல்லியில் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி. கிராமப் பஞ்சாயத்துக்களின் செயல்பாடுகள் பற்றிய ஆய்வுகளில் அந்த நிறுவனத்தை முன்னிறுத்த ஊக்கமளித்தார். டெல்லியின் சமுதாய முன்னேற்ற கவுன்சில் (Council for Social Development), மும்பையின் டாடா சமுதாய அறிவியல்கள் நிறுவனம் (Tata Institute of Social Sciences) ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார். 1978லிருந்து 1993 வரை ரீடர்ஸ் டைஜஸ்ட்டின் இயக்குநர்கள் குழுவின் சேர்மனாகவும், டாடா, மெக்ரா ஹில் புத்தக வெளியீட்டாளர்களின் சேர்மனாகவும் இருந்திருக்கிறார். 1976ம் ஆண்டில் இந்திய பன்னாட்டுமைத்தீஸ் (India International Centre) அங்கத்தினராக மால்கம் இருந்தார். பின்னர் 1978ல் அதன் செயற்குழு உறுப்பினரானார். அதன் பின்னர் 1980ம் ஆண்டில் ஆயுள் காலடிரஸ்டீயாக்கப்பட்டார். டெல்லியில் மால்கம் இருக்கும் போது இந்தியப் பன்னாட்டு மையம் தான் அவரின் செயலகமாக விளங்கியது. அதன்நிதிகளைச் சீர்படுத்தியதில் மால்கம் ஆதிசேஷையாவிற்குப் பெரும் பங்கு உண்டு. [] 1984லிருந்து அவர் மறைவு வரை, தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்பக் கவுன்சிலின் (Tamil Nadu Council of Science and Technology) தலைவராக இருந்தார். இவையெல்லாம் மால்கம் ஆதிசேஷையா வகித்த பொறுப்புகளில் சில மட்டுமே. இது தவிர பல்வேறு நிறுவனங்கள், குழுக்களிலும் இவர் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். மால்கமின் அறிவாற்றலையும், கடின உழைப்பையும் கண்ட சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள், அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவை இவருக்குப் பதவிகளைக் கொடுத்தனர். இவர் தனது ஆலோசனைகள் மூலம் அந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவி புரிந்தார். இத்தனை பொறுப்புகளை வகித்த இவர் தான் வகித்த ஒவ்வொரு பொறுப்பிலும் மிகவும் கவனம் செலுத்தி சிறப்பாகச் செயல்பட்டார். இவர் நேரம் தவறாமல் செயல்பட்டார். அவர் தலைமை வகிக்கும் எந்தக் கூட்டம் அல்லது குழுக் கூட்டத்தைச் சரியான நேரத்தில் தொடங்கி விடுவார். தாமதமாக வரும் எந்த முக்கியப் பொறுப்பாளருக்காவும் காத்திருக்க மாட்டார். மந்திரிகளும், அரசியல்வாதிகளும் சரியான நேரத்தில் வந்து விடுவார்கள். மால்கம் பொது வாழ்வில் ஒரே சமயத்தில் பல பொறுப்புமிக்க பதவிகளை வகித்தார். அவர் வகித்த பதவிகள் ஒவ்வொன்றிலும் சிறப்பாகப் பணிபுரிந்து தனி முத்திரையைப் பதித்தார். பொறுப்பு மிக்கவர் : எப்போதும் வேலை செய்து கொண்டிருப்பது அவரின் பழக்கமாகும். வேலை செய்யாமல் அவரால் இருக்க முடியாது. தனக்கென்று தினமும் ஒரு கடினமான வேலைத் திட்டத்தை ஏற்படுத்திக் கொண்டவர். அவர் வேலைகளை மிக வேகமாகச் செய்வார். எந்த வேலையையும் தள்ளிப் போடமாட்டார். தினந்தோறும் வரும் கடிதங்களுக்கு உடனுக்குடன் பதில் எழுதிவிடுவார். விரைவில் முடிவுகள் எடுத்து விடுவார். அவர் தலைமை வகித்த எந்தக் கூட்டமாயினும், அதன் குறிப்புகளை ஒன்றிரண்டு நாட்களுக்குள் எழுதிவைத்துவிடுவார். எந்தக் கூட்டத்திற்குப் போவதாயினும் அதன் நிகழ்வு ஆவணங்களை (Agenda Papers) முதலிலேயே படித்து விட்டுத்தான் வருவார். கருத்தரங்களில் முதலில் பேசியவர்களின் எண்ணங்களைச் சுருக்கமாகப் பட்டியலிட்டு விட்ட பிறகு அதன் நிறை குறைகளைச் சுட்டிக் காட்டுவார். மேற்கோள் காட்டப்படும் புத்தகங்கள், சஞ்சிகைகள் ஆகியவற்றின் பக்க எண், பத்தி அல்லது வரியையும் சேர்த்துக் குறிப்பிடுவார். தன் முடிவுகளை ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைப்படுத்திச் சொல்லுவார். அவர் தலைமை வகித்தால், நாள் முடிவு அமர்வில் அன்றைய நாளின் நிகழ்வுகளில் முக்கியமானவற்றை ஒன்று கூட விடாமல் சுருக்கமாகத் தொகுத்துச் சொல்லுவார். மால்கம் நேரத்தை வீணடிக்க அனுமதிக்க மாட்டார். அவரைப் பார்க்க வருபவர்கள் முன் அனுமதி பெற்றுக் கொள்ளச் சொல்லி வலியுறுத்துவார். அவர்களோடு பேச வேண்டியதைப் பேசி முடித்தவுடன், தான் முன்பு படித்துக் கொண்டிருந்த புத்தகத்தையோ, செய்தித்தாளையோ படிக்க ஆரம்பித்து விடுவார். அவர் வீணாக பொழுதைப் போக்கியது கிடையாது. சரியான வேலைக்குச் சரியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதில் வல்லவர். ஒருவரிடம் ஒரு வேலையை ஒப்படைத்துவிட்டால் அதைச் செயல்படுத்தும் போது அவர் தலையிட மாட்டார். அந்த வேலையை அவர் திருப்திகரமாகக் செய்யவில்லை என்றால், அவரைத் தனியே அழைத்து அதைத் தெரிவித்துப் பின் வேலையை விட்டு நீக்குவதற்குத் தயங்க மாட்டார். ஒரு ஆய்வு மாணவர் தன் கட்டுரையை மதிப்பீடு செய்யச் சொல்லிக் கேட்டால் கூட மறுக்காமல் செய்து கொடுப்பார். ஆங்காங்கே கட்டுரையின் ஓரத்தில் தன் சுருக்கமான விமர்சனங்களை எழுதி இருப்பார். முக்கியமான கருத்துக்களை அடிக்கோடிட்டிருப்பார். குணம் : தன்னிடம் வேலை பார்த்த அனைவரையும் ஒரே குடும்பமாகப் பாவித்தார். தனது பிறந்த நாளின் போது கேக் வெட்டி ஒவ்வொருவரிடம் தானே சென்று பரிமாறுவார். அனாவசியமான பந்தா எதுவும் இல்லாதவராக இருந்தார். பல்வேறு திறனும் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகள் தெரிந்து இவர், ஏழை மக்களிடம் அவர்களுக்குத் தெரிந்த மொழியிலேயே உரையாடினார். எவ்வளவு உயர் பதவியில் இருந்த போதும் சாதாரண ஏழைகளை மதித்தார். அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர பல திட்டங்களை உருவாக்கினார். மால்கமை சந்திக்க முன் அனுமதியை தொலைபேசி மூலம் கூட பெறலாம். முன் அனுமதி பெற்றவருக்கான நேரத்தில் வேறு எந்த பாராளுமன்ற உறுப்பினரோ, மிக முக்கிய புள்ளிகளோ மாவட்ட ஆட்சித் தலைவர், அதிகாரிகள் யாராக இருந்தாலும் இவரை முன் அனுமதி பெறாமல் சந்திக்க விரும்பினால் எவ்விதத் தயக்கமுமின்றித் திருப்பி அனுப்பிவிடுவார். மால்கம் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக இருந்த போது முதியோர் கல்வித் திட்டத்தின் மூலம் எழுத்தறிவு பெற்ற ஒரு விவசாயி இவரைச் சந்திக்க அனுமதி பெற்றிருந்தார். அந்த விவசாயி எழுத்தறிவு பெற்றதற்கு காரணமாக மால்கம் இருந்தார் என்பதற்காக அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வந்திருந்தார். விவசாயிக்கு ஒதுக்கிய நேரத்தில் உலக வங்கியிலிருந்து வி.ஐ.பி. ஒருவரும் அவரை சந்திக்க திடீரென அனுமதி கோரினார். ஆனால் மால்கம் அந்த விவசாயியைச் சந்தித்து பேசிய பின்னரே அந்த வி.ஐ.பி.யைச் சந்தித்துப் பேசினார். மால்கம் ஆரம்பக் காலத்தில் உடைகளை சிறப்பாக அணிந்தார். டிப் பாப்பாக இருந்தார் எனச் சொல்லலாம். மேற்கத்திய உடைகளை அணிந்தார். இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணிபுரிந்த சமயத்தில் இந்திய உடைக்கு மாறினார். உடை முக்கியமல்ல. சொல்லக் கூடிய கருத்து தான் முக்கியம் என்கிற எண்ணம் கொண்டவராக மாறினார். ஜிப்பா அணியத் துவங்கினார். உடைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிட்டார். பழைய ஜிப்பாவைக் கூட அணிந்தார். மால்கம் ஒருமுறை டில்லி செல்ல விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது விமான நிலைய பாதுகாவலர் இவரை யார் என்று அவருக்குத் தெரியவில்லை. இவர் மிகவும் எளிமையாக இருந்தார். ஆகவே அவரை வி.ஐ.பி. அமரும் இடத்தில் உட்கார அனுமதிக்கவில்லை . அதே சமயத்தில் முதலமைச்சர் எம். ஜி. ஆர். மற்றும் கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் அவர்களும் டில்லி செல்ல அங்கு அமர்ந்திருந்தனர். மால்கமை பார்த்த அவர்கள் இருவரும் தங்கள் அருகில் உட்கார அழைத்துச் சென்றார். மால்கம் எளிமையான மனிதராக மட்டும் அல்லாமல், சிறந்த மனித நேயமிக்கவராகவும் வாழ்ந்தார். பல துறை அறிவு பெற்ற சிறந்த வல்லுநராக திகழ்ந்தார். பொதுச்சேவையிலும் அதிக நாட்டம் கொண்டிருந்தார். விருது: மால்கம் ஆதிசேஷையாவிற்கு 1976ம் ஆண்டில் இந்திய அரசு பத்ம பூஷண் விருது வழங்கி கெளரவித்தது. இந்தியா மற்றும் உலக நாடுகளில் உள்ள 15க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் இவருக்கு கெளரவ டாக்டர் பட்டங்கள் வழங்கின். இவருக்கு 40 நாடுகளின் கௌரவ விருதுகளும் வழங்கப்பட்டன. சொற்பொழிவு : மால்கம் ஆதிசேஷையா சிறப்பாக உரையாற்றுவார். அவரின் சொற்பொழிவானது மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமையும். அவர் செப்டம்பர் 8, 1994ம் ஆண்டில் சென்னையில் உள்ள புனித இருதயக் கல்லூரி (Sacred Heart College) யில் உரை நிகழ்த்தினார். அந்த உரையானது மிக சிறப்பாக இருந்தது. இதுதான் அவர் கடைசியாக ஆற்றிய உரையாகும். இறப்பு : மால்கம் ஆதிசேஷையா ஆரோக்கியமாகவே வாழ்ந்தார். உடல் நல பாதிப்பால் நீண்டகாலம் மருத்துவமனையில் அவர் தங்கி சிகிச்சை எடுத்தது கிடையாது. ஆனால் அவரின் முடிவு காலம் விரைவில் வந்தது. ஒரு வார காலம் மட்டுமே மருத்துவமனையில் இருந்தார். தனது வாழ்நாள் முழுவதும் உலகப் பொருளாதாரம், கல்வி வளர்ச்சி, பண்பாடு மற்றும் ஏழ்மை ஒழிப்பிற்காக அயராது பாடுபட்ட மால்கம் சத்தியநாதன் ஆதிசேஷையா அவர்கள் 1994ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் தேதி இயற்கை எய்தினார். அவரின் உடல் கீழ்பாக்கம் கல்லறையில் 1986ம் ஆண்டில் இறந்த அவர் மனைவி எலிசபெத்தின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. [] உயில் : மால்கம் தான் குடியிருந்த வீட்டை சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு எழுதிக் கொடுத்து விட்டார். நகைகளை தனது மகளுக்குக் கொடுத்திருக்கிறார். மீதம் இருந்த சொத்துக்களை மால்கம் மற்றும் எலிசபெத் ஆதிசேஷையா டிரஸ்ட் ஏற்படுத்துமாறு எழுதி வைத்தார். இந்த மால்கம் & எலிசபெத் டிரஸ்ட் (Malcolm & Elizabeth Adiseshiah Trust) மார்ச் 8, 1996ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது. இதன் மூலம் பொருளியல் கற்பிப்பதற்கும், ஆய்வுகள் மேற்கொள்வதற்கும் நிதி உதவிகள் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு உதவித் தொகை, பொருளியலில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது. மால்கம் விருது : ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் யுனெஸ்கோ 1945ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. யுனெஸ்கோவின் முதல் கூட்டம் 1946ம் ஆண்டில் நடந்தது. 1965ம் ஆண்டில் யுனெஸ்கோ உலகளவில் ஒரு மாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டில் உலக நாடுகளைச் சேர்ந்த கல்வி அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கல்லாமையை இல்லாமையாக்குவோம்; எழுத்தறிவின்மையை முற்றிலும் ஒழிப்போம் என அறைகூவல் விடப்பட்டது. இதன் அடிப்படையில் செப்டம்பர் 8 உலக எழுத்தறிவு தினமாக அறிவிக்கப்பட்டது. இத்தினம் 1966ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. 1967ம் ஆண்டில் சர்வதேச எழுத்தறிவு தினத்தில் பரிசுகள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இந்த பரிசானது 1970ம் ஆண்டு முதல் வழங்கி வந்தனர். 1997ம் ஆண்டில் 5வது சர்வதேச முதியோர் கல்வி சம்பந்தமான மாநாடு ஜெர்மனியில் நடத்தப்பட்டது. உலக நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். யுனெஸ்கோவின் 154வது ஆலோசனைக் கூட்டம் 1998ம் ஆண்டில் நடத்தப்பட்டது. எழுத்தறிவின்மைக்கு எதிராக மிகவும் சிரமப்பட்டு முழு எழுத்தறிவு கிடைக்க இந்தியாவில் பாடுபட்டார். ஆகவே அவரின் பணியை போற்றும் வகையில் ’’மால்கம் ஆதிசேஷையா சர்வதேச எழுத்தறிவுப் பரிசு" (Malcolm Adiseshiah International Literacy Prize) என்கிற பெயரில் யுனெஸ்கோ ஒரு பரிசினை அறிவித்தது. [] மால்கம் சர்வதேச சமூகத்திற்காக தன்னை அர்ப்பணம் செய்து கொண்டதன் நினைவாக இப்பரிசு அறிவிக்கப்பட்டது. குறிப்பாக ஆதிசேஷையா கல்விக்காக செய்த வேலைக்காக அவரின் பெயரால் சர்வதேச அளவில் கல்விக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு இந்தப் பரிசு அளிக்கப்படுகிறது. இப்பரிசு கல்வியல் சிறப்பான பணிபுரிந்த, மெச்சத்தக்க நபருக்கு வழங்கப்படுகிறது. முழு எழுத்தறிவு இயக்கம் மூலம் கல்வியறிவு அற்ற சமூகத்தை எழுதப்படிக்கத் தெரிந்த சமூகமாக மாற்றப்பாடுபட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் முதியோர் கல்விக்கு சிறப்பான சேவை புரிந்தவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. இந்தப் பரிசு வழங்குவதன் நோக்கம் என்பது வாழ்க்கை முழுவதும் கல்வி கிடைத்திட கல்விக்காக சேவை செய்தல் ஆகும். இதற்காகப் பாடுபடுபவர்களை ஊக்கப்படுத்த பரிசு வழங்கப்படுகிறது. இந்தப் பரிசு பெறுபவர் பொதுமக்களிடையே ஆதரவு பெற்றதோடு, கல்வி இயக்கத்தைச் சிறப்பாக கொண்டு சென்றவராக இருத்தல் வேண்டும். பரிசுத்தொகை எவ்வளவு என்பது ஆண்டுதோறும் வழங்கப்படும்போது தெரிவிக்கப்படுகிறது. பரிசுக்குத் தேர்வு என்பது நிறுவனம், அமைப்பு மற்றும் தனி நபர்களுக்கு என வழங்கப்படுகிறது. இந்தப் பரிசு பெறுவற்கான தகுதி என்பது கல்வியில் சாதனை மற்றும் தொடர்கல்வியில் சாதனை புரிந்தவர்களாக இருத்தல் அவசியம். நேரடியாக போதித்தல் அல்லது அமைப்பு மூலம் கற்பித்தல், பொது மக்களின் ஆதரவு, கல்வி போதித்தலின் போது கையாளப்படும். புதிய, புதிய யுக்தி ஆகியவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அந்தந்த நாட்டு அரசுகள் யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்ய வேண்டும். சாதனையாளர்கள் பற்றி 5 பக்கத்திற்கு குறிப்புகள் அனுப்ப வேண்டும். அதில் எந்த மாதிரியான நடவடிக்கைகள் செய்தார். அதன் பலன் ஆகிய தகவல்கள் இருக்க வேண்டும். மேலும், தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டவராக இருத்தல் வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மே 31ந் தேதிக்குள் யுனெஸ்கோவின் டைரக்டர் ஜெனரலுக்குத் தெரிவித்து விட வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர் சர்வதேச எழுத்தறிவு தினமான செப்டம்பர் 8ம் தேதி அன்று அறிவிக்கப்பட்டு அவருக்கு விருதும், பரிசும் வழங்கப்படும். இதே போல் தமிழ்நாட்டில் முறைசாராக் கல்வியில் அதிகம் முதியோருக்குக் கல்வி தந்திருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஆண்டுதோறும் மால்கம் விருது வழங்கப்படுகிறது. Reference 1. Malcolm Adiseshiah - Eric brabhakar. 2. Bulletin - MIDS 3. மால்கம் ஆதிசேஷையா உலகின் கல்விநாயகன் - பேரா. எஸ். நீலகண்டன், தீராந்தி ஆகஸ்ட் 2009 4. டாக்டர் மால்கம் ஆதிசேஷையா - ஆ. அறிவழகன் கல்வி டுடே நவம்பர் - 2009 5. கலைக்களஞ்சியம் 6. கல்வி பயிலும் சமுதாயத்தை நோக்கி - சி. க. ராமசாமி 7. கல்வியின் தத்துவமும் மேலாண்மையும் - வி. கணபதி 8. இன்றைய கல்வியின் புதுமைப்போக்குகள் - முனைவர் மும்தாஜ் பேகம், பேரா. த. சம்பத்குமார், பேரா. மு. கண்மணி [] அதிசயத் தாவரங்கள் என்ற தன்னுடைய முதல் நூல் வெளியான 2000ம் ஆண்டில் இருந்து இன்று வரை 43 நூல்களை எழுதி முடித்து தொடர்ந்து எழுதியும் வரும் ‘ஏற்காடு இளங்கோ’ தமிழில் எழுதும் அறிவியல் எழுத்தாளர்களில் முக்கியமானவர். 1999 முதல் 2006 வரை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றி மக்களிடம் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் முக்கியப் பங்காற்றியவர்; பங்காற்றி வருபவர். இவரின் எழுத்துப் பணியைப் பாராட்டி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேலம் மாவட்டக் குழு டிசம்பர் 2009ம் ஆண்டில் ‘எழுத்துச் சிற்பி’ என்கிற பட்டத்தையும் வழங்கியுள்ளது. இவர் மக்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் பணிக்கு தன்னை அர்ப்பணித்துள்ளார். FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.