[] 1. Cover 2. Table of contents கல்லும் சொல்லும் கல்லும் சொல்லும்   டாக்டர். இரா.நாகசாமி   tamilarts.academybooks@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA-NC கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/kallum_sollum மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com மெய்ப்புப் பார்ப்பு : விக்கிமூல பங்களிப்பார்கள் அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Proof Reader : Wikisource Constributors Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation This Book was produced using LaTeX + Pandoc கல்லும் சொல்லும் டாக்டர். இரா. நாகசாமி சேகர் பதிப்பகம் 1977 (Digitalized by Babu Nagaswamy — 2013) முன்னுரை இந்நூலில் தமிழகக் கலைகளைப் பற்றிய பல கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. தினமணி, சுதேசமித்ரன், கலைமகள், அமுதசுரபி, திருக்கோயில், கலாவல்லி முதலிய பல பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இக்கட்டுரைகளை வெளியிட்டுதவிய பத்திரிகை ஆசிரியர்களுக்கு என் நன்றி உரியது. இதில் உள்ள நிழற்படங்களை உதவிய தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு எமது நன்றி. தமிழகக் கலைகள் பற்றியோ, கல்வெட்டு வரலாறு பற்றியோ தமிழில் வெளியீடுகள் மிகக் குறைவு. குறிப்பாக நமது கலைச் செல்வங்களைப் பற்றி நூல் வெளியிட வேண்டுமெனில் பல படங்களை இணைத்தாலே சிறக்கும். படங்களோடு நூல் வெளியிடுதல் என்பதற்கு ஆகும் பொருட் செலவோ அதிகம். வாங்குவோரும் உண்டோ என்ற ஐயமும் உண்டு. இவ்வளவு இடுக்கண்களின் நடுவிலும் இந்நூலை வெளியிடும் நண்பர் வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்களது தைரியத்தைப் போற்றத்தான் வேண்டும். தைரியம் என்பதைக் காட்டிலும் அவரது ஆர்வத்தைப் பாராட்ட வேண்டும். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வரலாற்றிலும், கலையிலும் அவருக்குள்ள ஈடுபாட்டை நான் அறிவேன். அவரது ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். அவரது முயற்சியால் தமிழ்க்கலை பற்றிய பல நூல்கள் மேலும் வரும் என்பதில் ஐயமில்லை. 1962-ஆம் ஆண்டு இளையாத்தங்குடி என்ற இடத்தில் ஒரு பெரும் சபை கூடியது. அச்சபையில் நாட்டுப்புறக் கலைகளாகிய உடுக்கை, பொய்க்கால் குதிரை, கரகம், காவடி முதலியவற்றுக்கு எல்லாம் பெரும் மதிப்பு அளித்து மேடையில் ஏற்றி அக்கலையையும் போற்றவும் வகை செய்தார் ஒரு பெரியார். அது மட்டுமல்ல கிராமக் கோயில்களில் வழிபாடு செய்யும் பூசாரிகள், தேர் செய்பவர், கல்சிற்பிகள் இவர்களுக்கெல்லாம் பெருமையளித்து, நாம் ஒரு பெரும் பாரம்பரியத்தில் வருபவர்கள், கலையை வளர்த்தவர்கள் என்ற புத்துணர்ச்சியை ஊட்டியவர் அப்பெரியார். அவர் கூட்டிய அச்சபைக்கு நான் செல்லும் வாய்ப்புப் பெற்றேன். அங்குதான் கோயில்களைப் பற்றியும், கலைகளைப் பற்றியும், கல்வெட்டின் பெருமை பற்றியும் முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது. அச்சபையை அமைத்து அம்மாபெரும் இயக்கத்தைத் தோற்றுவித்த பெரியவர், காஞ்சியில் உலகம் உய்யத் தவமிருக்கும் சங்கராச்சார்ய சுவாமிகள் பெரியவர் அவர்கள். அப்பெரியவர் இளையாத்தங்குடியில் சுமார் நான்கு மனி நேரத்திற்கும் மேல் கல்வெட்டுகளைப் பற்றியும், கலை பற்றியும் எனக்குப் புகட்டியதை எண்ணுந்தோறும் மனம் உவகைப் பெருக்கால் பூரிக்கிறது. அப்பெருந்தகை, இந்நூலில் உள்ள கல்வெட்டுக் கூறும் வழிபாட்டுமுறை என்னும் கட்டுரையை முற்றிலும் படித்து, இதை ‘அச்சிடு’ என அருள் பாலித்தார்கள். அவர்களது அருள் ஆசியே என்னை இத்துறையில் ஈடுபாடுடையோனாக்கியது. அப்புண்ணியத் தவ முனிவரின் திருவடிகளில் இதை மலராக ஆட்டித் திருவடி தொழுகிறேன். இரா. நாகசாமி மக்கள் தெய்வம் மாகாளி உலக நாடுகள் அனைத்திலும் கண்கண்ட கடவுளாகப் போற்றப்படுபவள் தாய். நம் நாட்டில் நிலத்தைத் தாயாக வணங்குகிறோம். நீரை-ஆற்றைத் தெய்வமாகப் போற்றுகிறோம். இயற்கைத் தெய்வத்திற்குச் சக்தி எனப் பெயரிட்டு அழைக்கிறோம்; இயற்கையில் எவ்வளவு உயிர்கள் உள்ளனவோ, உருவம் உள்ளனவோ அவை அனைத்தும் அவளது தோற்றம்தான் என்பது நமது தத்துவம். ஆதலின் அன்னை அந்தந்த மக்களின் மனநிலைக்கு ஏற்பத் தெய்வமாக உருவாக்கப்படுகிறாள்; வணங்கப்படுகிறாள்; வாழ்த்தப்படுகிறாள். அவளுக்குப் பல பெயர்கள், பல உருவங்கள். சாந்த உருவமும் அவளது தோற்றமே. உக்கிர உருவமும் அவளது எழில் உருவே. இவ்வாறு கருதப்படும் சக்தி வழிபாடு, தமிழகத்தில் பல நிலைகளிலும் மலர்ந்திருக்கிறது. அம்மலர்களில் ஒன்றுதான், காளி வழிபாடு. காளியைக் கிராம தேவதை என்று பலர் கூறுவர். அவளைக் கிராம தேவதை என்பதைவிட, மக்களின் தெய்வம் என்று கூறுவது பொருந்தும். மக்களின் தலைவனாம் மன்னனும் போற்றும் மாபெருந் தெய்வம் அவள். அவளை மாகாளி என்றும் அழைக்கிறோம். பெண் தெய்வ வழிபாடு என்று கூறினேன். அது இரண்டு பெரும் பிரிவாகத் திகழ்ந்தது. துர்க்கை என்னும் கொற்றவை வழிபாடு ஒன்று; காளி வழிபாடு இரண்டு. இவற்றில் காளி வழிபாடு பல்லவர், சோழர் காலத்தில் எவ்வாறு இருந்தது எனக் காண்பது இக்கட்டுரையின் நோக்கம். பல்லவர் காலத்தில் அதாவது 7-8-ஆம் நூற்றாண்டுகளில் மகிஷாசுரனை அழித்த துர்க்கை, மிகவும் சிறப்பாகச் சிற்பங்களில் காணப்படுகிறாள். பல்லவர் கோயில்களில் துர்க்கை சிறப்பிடம் பெற்றிருப்பதைக் காணும்போது, மக்களிடத்தில் துர்க்கை வழிபாடு மிகவும் மேலோங்கி இருந்தது என்று கருதத் தோன்றுகிறது. ஊர்ப் புறங்களில் வடக்கே துர்க்கைக்குக் தனிக் கோயில்கள் கட்டி மக்கள் வழிபட்டுள்ளனர். அவளை “வடவாயில் செல்வி” என்று அழைத்து மகிழ்ந்தனர். மாமல்லபுரத்தில் துர்க்கையின் உருவம் பல்வேறு உருவங்களில் படைக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். திரெளபதி இரதம் என்று கூறப்படும் கோயில், அவளுக்காக எடுக்கப்பட்ட தனிக்கோயில். ஐந்து கோயில்களிலும் வடக்கே அது இருப்பது, அவள் ‘வடவாயிற் செல்வி’ என்பதை நினைவுறுத்துகிறது. அங்குள்ள அனைத்துத் துர்க்கை உருவங்களிலும் ‘மகிஷாசுரமர்த்தினி’ என்னும் மாபெரும் சிற்பம், உலகப் புகழ் பெற்றுள்ளது. மாமல்லபுரத்துச் சிற்பங்களிலேயே அதுதான் அற்புதமான படைப்பு. இவ்வுருவமே துர்க்கை வழிபாடு எவ்வளவு சிறப்புப் பெற்றிருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டு. பல்லவர் காலத்தில் காளி வழிபாடு இல்லை என்று கருதிவிடக்கூடாது. மாமல்லபுரத்திலேயே மிகவும் சிறந்த ஒரு காளி இருக்கிறது. அதைப்பற்றிக் கூறுவதற்கு முன்னர் சில கருத்துக்களை நினைவிற் கொள்ளுதல் நலம், துர்க்கைக்கும், காளிக்கும் என்ன வேறுபாடு? மகிஷாசுரனை அழித்த தெய்வீக அம்சம் துர்க்கை. சும்பன், நிசும்பன் என்ற அசுரர்களை அழித்த அம்சம் காளி. துர்க்கை, கையில் சங்கும் சக்கரமும் கொண்டு எருமைத் தலையில் நிற்பவள். காளி, பல சுரங்களை உடையவள்; சூலம், கபாலம், கத்தி, கேடயம் முதலியன தாங்குபவள். காலின் மீது அசுரனைக் கிடத்திச் சூலத்தால் அவன் மார்பில் அழுத்தி, அறம் புரப்பவள். காளி அமர்ந்த கோலம். இது தான் பெரும்பாலும் நாம் காண்பது. மேலும் வேறுபாடுகளும் உண்டு. மாமல்லபுரத்தில் ஓர் அற்புதமான காளியின் சிற்பம் இருக்கிறது. அதை அதிகமாக யாரும் சென்று பார்ப்பது கிடையாது. ஊர் நூலகக் கட்டிடத்திற்கு அருகில் அவள் சிற்பம் உள்ளது. தேவி அமர்ந்திருக்கிறாள். அறத்திற்கு அழிவு வரும் போது அவள் சீறுகிறாள். அவளது சீற்றம் அவளது தோற்றத்திலே தெரிகிறது. அவளது தலை மயிர்கள் பரந்து விழுகின்றன; பல்லை நறநறவென்று கடிக்கிறாள். கடைவாய்ப் பற்கள் வெளியே தெரிகின்றன. விழிகள் உருண்டு திரண்டு சீற்றத்தை வெளீப்படுத்துகின்றன. காளி நிமிர்ந்து அமர்ந்திருக்கிறாள்; நான்மு சுரங்கள் மேல் வலது கரத்தில் மணியைப் பிடித்திருக்கிறாள்; அறவொலி எழுப்ப அதைப் பயன்படுத்துவாள். கபாலம் பிடித்திருந்த இடக்கரம் சிதைந்துள்ளது. கீழ் இரு கரங்கலையும் இடுப்பில் வைத்து "ஜிங்’கென்று அமர்ந்திருக்கிறாள்; வலக்கரத்தில் குறுவாள் ஒன்றைப் பிடித்திருக்கிறாள்; இடது கரத்தில் ஒரு சிறு உருவத்தைப் பிடித்திருக்கிறாள்; இம் மூவுலகையும் துன்புறுத்திய மாபெரும் அசுரன் அவன். அவனைப் பூசிசியிப் பிடிப்பது போல் இடது கரத்தில் பிடித்திருப்பது, அவளது ஆற்றலைக் காட்டுகிறது. தேவியின் இடது கரத்தில் சிக்கி அவ்வசுரப் பூச்சியின் கரங்களும். கால்களும், தலையும் சக்தியுற்றுச் சவம்போல் தொங்குகின்றன. தேவி அசுரனோடு போரிடவே தேவையில்லை. கத்தியாலோ, சூலத்தாலோ போதும் என்பதுபோல் இருக்கிறது சிற்பம். அசுரனைப் பூச்சி போல் கண்பித்துத் தேவியைப் பெரும் உருவாகக் காண்பித்து, அவளது மாபெரும் ஆற்றலை வெளிப்பதித்தியிருக்கிறான் சிற்பி. மிகவும் கம்பீரமான தோற்றம். இச்சிற்பம் பல்லவர் காலத்தும் காளி வழிபாடு இருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டு. இருப்பினும் கி.பி. 9-ஆம் நூற்றாண்டிலிருந்துதான், காளி வழிபாடு தமிழகத்தில் மிகப் பெரும் நிலையை அடைந்தது என்று கூறலாம். கி.பி. 9-ஆம் நூற்றாண்டில், தஞ்சைக்கு அருகில் செந்தலை, நேமம் என்ற பகுதிகளை முத்தரையர் என்ற சிற்றரசர்கள் ஆண்டனர். இவர்கள் பெரும்பிடுகு முத்தரையர் என்ற பட்டம் பெற்றிருந்தார்கள். இவர்களில் சுவரன்மாறன் என்றும் பெரும்பிடுகு முத்தரையன் என்பவன் மிகச் சிறந்த வீரன். பல ஊர்களை வென்றவன். இவன் நியமத்தில் (இன்றைய நேமம்) காளிக்கு ஒரு பெருங்கோயில் எடுத்தான். இவனது புகழைப் பல புலவர்கள் பாடினர்! இவன் நியமித்துக் காளிக்குத் தான் வெற்றி கொண்ட ஊர்கள் அனைத்தையும் அளித்தான்; தன்னைப் பாடியவர்கள் பெயரையும் கல்லிலே பொறித்தான். இவை அனைத்தையும் கல்லிலே வெட்டி வைத்துள்ளான். இவன் அன்று என்ன நினைத்தான் என்பதை இவனது கல்வெட்டு இன்றும் நமக்குக் கூறுகிறாது. செந்தலை என்ற ஊறில் அக்கல்வெட்டு இருக்கிறது. இக்கல்வெட்டு, தேவியை நேமத்து மகாகாளத்துப் பிடாரி என்று கூறுகிறது. இம்மன்னனால் இவ்வளவு சிறப்பாக வழிபடப் பெற்ற காளி, மிகச் சிறப்பைப் பெற்றிருக்க வேண்டும். இவளது சிறப்பை அறிந்து தமிழகத்தை ஆண்ட இரண்டு பேரரசர்கள், இவ்வூருக்கு வந்து இத் தேவியை வணங்கினார்கள்; போற்றினார்கள். இவளுக்கு நிலையாக வழிபாடு நடக்கப் பெரும் பொருள்களை வழங்கினார்கள். இவ்வாறு வணங்கிய பேரரசர்கள் யாவர்? நந்திக் கலம்பகத்தில் புகழ் பெற்ற தெள்ளாற்றெறிந்த நந்திவர்மன் ஓர் அரசன். தெள்ளாற்றெறிந்த நந்தி இத்தேவியின் வழிபாட்டுக்குப் பொன் கழஞ்சுகள் அளித்தான். மற்ற பேரரசன் மாணிக்க வாசகரின் சம காலத்தவன், பாண்டிய மன்னன் மாறஞ்சடைன் என்னும் வரகுணன். அவனது ஆட்சியில் வழிபாட்டுக்குப் பொருள் கொடுக்கப்பட்டது. தமிழகத்தின் பேரரசர்களால் வழிபடப்பட்ட அந்த சிலை எங்கே? அதைக் கண்டுபிடிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் இதுகாறும் பயனளிக்கவில்லை. இந்நிலையில்தான் மெலிந்திருந்த சோழப் பேரரசை நிலைநிறுத்த விஜயாலய சோழன் தோன்றினான். விஜயாலயன் மாபெரும் வீரன். தன் உடல் எல்லாம் வுழுப்புண் ஏந்திப் பல போர்களில் வெற்றி கண்டவன். “……மீதெல்லாம் எண்கொண்ட தொண்ணூற்றின்மேலும் இருமூன்று புண்கொண்ட வென்றிப் புரவலன்” என்று உலாக்கள் புகழும் பேராளன். இவன் நிலை நிறுத்திய அரசு சுமார் 400 ஆண்டுகளுக்கு இந்திய நாடே கண்டிராத அளவுக்கு மாபெரும் பேரரசாகத் திகழ்ந்தது. இவ்வெற்றிக்கு அடிகோலாக விஜயாலயன் தஞ்சையை முத்தரையர்களிடமிருந்து கைப்பற்றினான். தஞ்சையைக் கைப்பற்ற அவன் பெற்ற இப்பெரும் வெற்றிக்கு அருள் பாலித்தவள், தேவி நிசும்பசூதனியாகிய மாகாளி. ஆதலின் தஞ்சையில் விஜயாலயன் நிசும்பசூதனியைப் பிரதிட்சை செய்து சோழப் பேரரசைத் தொடங்கி வைத்தான். அத்தேவியின் அருளாலேயே அவன் நானிலத்தை ஆண்டான் எனச் செப்பேடு கூறுகிறது. விஜயாலயனால் பிரதிட்டை செய்யப் பெற்றுச் சோழப் பேரரசின் ஆதிசக்தியகத் திகழ்ந்த அந்த ‘நிசும்பசூதனி’ சிலை இன்றும் உள்ளது. தஞ்சையில் ‘வட பத்ரகாளி’ என வழங்கப் பெறும் அத்தேவியை மெலிந்த குடும்பங்கள் இன்றும் வேண்டி வழிபடுகின்றனர். ‘நிசும்பசூதனி’ என்னும் பெயரே புதுமையான பெயர். அதே போன்று இங்கு உள்ள வடபத்ரகாளியின் சிற்பமும் புதுமையான அமைப்புடையது. பேரரசனால் பிரதிட்டை செய்யப் பெற்றது என்பதற்கிணங்க, சுமார் 6 அடி உயரமுள்ளதாக மிகவும் பெரியதான சிலை இது. தேவியின் உடலில் சதை என்பதே இன்றி எலும்புக் கூடாகவே காணப்படுகிறாள் காளி. அவளது காலின் கீழ் அசுரர்கள் எல்லாம் அடிபட்டு அங்குமிங்கும் ஓடுகின்றனர். தேவியின் முகத்தில் இருக்கும் சீற்றத்தைப் பார்க்கும்போது விஜயாலயன் எலும்புக்கூடு போல் இருந்த சோழகுலத்தை எவ்வாறு மாபெரும் சக்தியாக மாற்றினான் என்று நினைவூட்டுகிறது. வெற்றி வேண்டுபவன் தேவியை வணங்க வேண்டும் என்பது பண்டைய இந்திய மரபு. அன்று தொட்டுக் காளி வழிபாடு தமிழ் நாட்டில் மக்கள் வழிபாடாக வளர்ந்து வந்து இருக்கிறது. மணிமேகலையில் சக்தி பெளத்த தர்மத்தின் சிறப்பைக் கூற வந்த நூல், சீத்தலைச்சாத்தன் எழுதிய மணிமேகலை. இதில் சக்தி வழிபாடும் சிறப்பாகக் கூறபட்டுள்ளது என்பது பலருக்கு வியப்பை அளிக்கக்கூடும். இந்நூலில் சம்பாபதி, காடுகாள், விந்தியாவாசினி, சிந்தாதேவி என்னும் நான்கு சக்தி உருவங்கள் சிறப்பிடம் பெற்றவை. சம்பாபதி காவிரிப்பூம் பட்டினத்திற்குச் சம்பாபதி என்னும் பெயர் உண்டு. அப்பதியின் அதிதேவதை சம்பாபதி! இந்நூல் விவரிப்பதிலிருந்து இத்தெய்வம் கொற்றவையாகிய துர்க்கையே என்பதில் ஐயமில்லை. இத்தேவி இளஞ்சூரியனை ஒத்த நிறமுடையவள்; விரி சடை உடையவள்; உயர்ந்த மேருமலையில் தோன்றித் தென் திசை வந்த சம்புத் தீவின் தெய்வம்! கிளைகள் மிகுந்த சம்பு மரத்தின் (நாவல்) கீழ் நின்று நில உலகின் துயர் துடைக்கவும், அரக்கர்களை அழிக்கவும் தவமிருந்தவள் என மணிமேகலைப் பதிகம் சக்தியின் சிறப்பொடு தொடங்குகிறாது. இந்த சாத்த மரபு இப்பெளத்த நூலில் எந்த அளவுக்கு இடம் பெற்றுள்ளது என்பதற்குச் சான்றாகும். வேதங்களிலும், புராணங்களிலும் குறிக்கபட்டுள்ள துர்க்கையே இத்தேவி என்பது வெளிப்படை. இங்கு இவள் இளஞாயிறு போலப் பொன்னிறமானவள் எனக் கூறுகிறது. வேதங்கள் இவளை ‘அக்னிவர்னா’ என்றும், தவத்தால் ஜ்வலிப்பவள் என்றும் குறிக்கின்றன. “தாம் அக்னிவர்னாம் தபசா ஜ்வலந்தீம்” இவள் தவம் நோற்றாள் என்பது பார்வதி தவம் புரிந்ததை நினைவூட்டும். உலகின் துயர் துடைக்கவும், அரக்கர்களை அழிக்கவும் தேவி தோன்றினாள் எனத் தேவி மகாத்மியம் கூறும். அதே கருத்து மணிமேகலையில் குறிக்கப்பட்டு உள்ளதைக் காண்கிறோம். சம்பாபதி என்பவள் துர்க்கை என்பதும், அவளே அபட்டினத்தின் அதிதேவதை என்பதும் வெளிப்படை. கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்தே நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் அதிதேவதையாகத் துர்க்கை விளங்கியதற்குச் சான்றுகள் உண்டு. ஒரு இந்தோஸ்கிதிய அரசன் வெளியிட்டுள்ள தங்ககாசு ஒன்றில் புஷ்கலாவதி என்னும் நகரின் தேவதையின் பெயர் ‘புஷ்கலாவதி தேவதா’ எனப் பொறிக்கப்பட்டுள்ளது. சிலம்பில் குறிக்கப்பட்டுள்ள மதுராபுரித் தெய்வமும் இது போன்றதே. சம்பாபதியை மணிமேகலை ‘அருந்தவ முதொயோள்’ எனக் கூறும். அவளே அங்கு வந்த காவிரியின் பெயரால் காவிரிப்பூம்பட்டினம் எனப் பெயர் கொடுத்தாள். ஆறுகளுக்கும் மலைகளுக்கும் முந்திய முதியோளாகிய இவள் ஆதிசக்தி என்பது பொருள். சக்கரவளாக் கோட்டம் மணிமேகலை சக்கரவாளக்கோட்டம் என்னும் கோயிலைக் குறிக்கிறது. இது ஊரின் மேற்குப் புறத்தே இருந்தது. இதில் சம்பாபதி தெய்வம் உறைந்தாள். இதன் அருகில் ஈமப் புறங்காடு இருந்தது. ஆதலின் இதைச் சுடுகாட்டுக் கோட்டம் என்றும் அழைப்பர். சம்பாபதியின் ஆற்றல் அங்குத் தோன்ற எல்லாத் தேவர்களும் ஒருங்கு வந்தனர். ஆதலின் அங்கு அக்கோட்டம் மயனால் அமைக்கப்பட்டது. அதுவே சக்கரவாளம். முற்றிலும் கடல் சூழ, நடுவில் உயர்ந்ததாக மேருக்குன்றம் அமைக்கபட்டது. அதைச் சுற்றிலும் ஏழு வகைக் குன்றங்கள் அமைந்தன. அவற்றைச் சுற்றி நான்கு மகாத்வீபங்கள், அவற்றையும் சுற்றி இரண்டாயிரம் சிறு தீவுகள், ஆங்காங்கு வாழும் உயிர்கள், அவற்றின் இடங்கள் ஆகிய அனைத்தும் மண்ணீட்டால் அங்கு அமைக்கப்பட்டிருந்தன, என மணிமேகலை கூறுகிறது. இங்குள்ள குறிப்பை நோக்கும்போது இது ஒரு ‘மேருசக்கரம்’ என்பது தெளிவாகும். ஆளம் எனில் மண்டலம் என்பது பொருள். சக்கர ஆளம் என்பது சக்கர மண்டலத்தைக் குறிக்கும். ஆதலினால் இது சக்கரவாளம் எனும் பெயர் பெற்றது. சாத்த வழிபாட்டில் சக்கரம் எவ்வளவு சிறந்த நிலை வகிக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. லலிதா சகஸ்ர நாமத்தில் குறிக்கப்பட்டுள்ள பல கருத்துக்கள் இச்சக்கரவாளக் கோட்டத்தோடு ஒத்திருப்பது காணத்தக்கதாகும். லலிதா சகஸ்ரநாமம் ‘சுமேருகிரி மத்யஸ்தா’ என்று கூறும். மணிமேகலை ‘நடுவு நின்ற மேருக் குன்றம்’ என்று கூறுவது அதையே. லலிதா சகஸ்ரநாமம் ‘சுதா சாகர மத்யஸ்தா’ என்று கூறும். அமுதக் கடலின் நடுவில் உள்ளவள் என்பது பொருள். மணிமேகலை ‘சூழ்கடல் வளைய ஆழியங்குன்றம்’ என்று கூறும். லலிதா சகஸ்ரநாமம் ‘சக்ரராஜநிலயா’ என்று கூறுவதே சக்கரவாளக் கோட்டம் எனில் மிகையாகாது. பல சாக்தக் கோயில்களில் கர்ப்ப கிருஹத்தில் சக்கரம் மண்ணீட்டால் அமைக்கப்பட்டுள்ளதும் அதை மேரு என்று அழைப்பதும் தமிழகத்தில் இன்றும் உண்டு. சம்பாபதி, துறைகளையும் மன்றங்களையும், மரங்களையும், உறையிடங்களையும், கோட்டங்களையும் காப்பவள் என்றும், பொன்னிற் பொலிந்த நிறத்தாள் என்றும் கூறுவது இங்குக் குறிப்பிடத்தக்கது. காடுகாள் சம்பாபதியைக் குறித்துள்ளது போல மணிமேகலையில் காடுகாளைப் பற்றிய குறிப்பும் உள்ளது. காடுகாள் என்பது காடுகிழாள் என்பதின் திரிபு. அவளது கோயில் சுடுகாட்டுக்குள் இருந்தது. அக்கோயிலின் முன்னர் ஒரு பெரும் பலிப்பீடிகை இருந்தது. அங்குத் தங்களது தலையைத் தாங்களே அரிந்து பலிகொடுத்தோரின் தலைகள் தொங்குகின்ற நெடுமரங்கள் இருந்தன. சுடலை நோன்பிகள் வன்னி மரத்தின் கீழ்த் தீயிலிட்டுப் பொங்களிடுவர். இன்னம் சிலர் உடைந்த தலைகளைத் தொகுத்து மாலையாக்கி அணிந்து கொள்வர் என்று மணிமேகலை வருணிக்கிறது. காளி மயானவாசி என்றும், அவளது கோயிலில் பைரவ வேடதாரிகள் என்னும் காபாலிகர் சுற்றித் திரிவர் என்றும் அவளது முன்றிலில் தலையை அரிந்து கொடுப்போரும் இருப்பர் என்றும், தக்கயாகப் பரணியில் குறிப்புகள் உண்டு. மாலதி மாதவம் என்னும் வடமொழி நாடகத்தில் இதைப்போல் மயானத்தில் காளியின் கோயில் குறிக்கப்பட்டுள்ளது. காளி கையில் கபாலத்தை ஏந்திப் பேய்களுக்கு உணவு ஊட்டுவாள் என்பதி மணிமேகலையில் உள்ள செய்தியாகும். விந்தியாவாசினி சாக்த மரபில் தேவியை விந்தியாவாசினி என வணங்குவது மரபு. இம்மரபும் மணிமேகலையில் குறிக்கப்படுகிறது. அத்தேவி ‘அந்தரி’ என்று குறிக்கப்படுகிறாள். அவள் விந்தியமலைமீது அமர்ந்திருப்பவள்! அவளைக் கடந்து செல்வோர் இருந்தால் அவர்களது நிழலால் பிடித்திழுத்து விழுங்குபவள் அவள். அவள் விந்தா கடிகை என்றும் அழைக்கப்படுவாள். காயசண்டிகை என்பவள் இவ்வாறு விந்தா கடிகையால் விழுங்கப்பட்டாள் என்று இந்நூல் குறிப்பது விந்தியாவாசினியின் மரபை நமக்குப் புலப்படுத்துகிறது. சிந்தா தேவி மணிமேகலை சிந்தா தேவி என்னும் தெய்வத்தையும் குறிக்கிறது. அவளது கோயில் தக்கண மதுரையிலிருந்தது. அதை ‘சிந்தா விளக்கின் செழுங்கலை நியமம்’ என்று நூல் கூறுகிறது. அதன் முன்னர் அம்பலமும் பீடிகையும் இருந்தன. அவள் கலைமகளுடனும் ஒப்பிடப்படுகிறாள். ‘நந்தா விளக்கே நாமிசைப் பாவாய்’ என்று நூல் கூறுகிறது. இத்தெய்வம் வானோர் தலைவி என்றும், மண்ணோர் முதல்வி என்றும் அழைக்கப்படுகிறாள். சாக்த வழிபாட்டில் மகாலட்சுமி, மகாதுர்க்கா, மகா சரசுவதி ஆகிய அனைத்தும் ஒரே தேவி என்றும், அவளே முழு முதற் கடவுள் என்றும் வணங்குவது தத்துவமாகும். அதே கருத்து இங்கு குறிக்கப்பட்டுள்ளது காணலாம். சிந்தா தேவியை அனைவரும் ஏத்தினர். கடும் இருளையும் அஞ்சாது அவளது கோயிலுக்கு மக்கள் சென்றனர். மேலே குறித்த மணிமேகலை கூறும் சாக்த மரபுகள் நம் மனதில் பல கருத்துக்களை எழச் செய்கின்றன. பெளத்த சமயத்துக்கும் சாக்த மரபுக்கும் என்ன தொடர்பு என்பது சிந்தனைக்கு உரியது. பெளத்த சமயத்தில் தந்திர மார்க்கம் உண்டு. அதிக் சாக்தம் இடம் பெற்று உள்ளது. இது பிற்காலத்தில் மிகவும் பரவலாகக் காணப்பட்டது; நேபாளம், திபெத் போன்ற இடங்களில் பரந்து வளர்ந்தது. இருப்பினும் மணிமேகலையில் குறிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்திந்திய ரீதியில் மலர்ந்த சாக்தக் கருத்துக்களையே பிரதிபலிக்கின்றன.அ துர்க்கை, காளி பற்றிய கருத்துக்கள் இந்து சமய சாக்தக் கருத்துக்களே. சாக்த சமயம் அனைத்திந்திய வரலாற்றில் இவ்வளவு மேலோங்கின நிலையை எப்பொழுது பெற்றது? ஒரு பெளத்த நாலிலும் கூட இவ்வளவு செல்வாக்குப் பெற்றதாகத் திகழ வேண்டுமென்றால், அதன் காலமென்ன? இவை சிந்திக்க வேண்டியவைகாகும்! திருமகள் ‘திரு’ என்ற அழகிய தமிழ்ச் சொல், செல்வம், அழகு என்ற பொருள்களில் வரும். இன்று நேற்றல்ல, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகவே இதே பொருள்களில் இச்சொல் வழங்கி வருகிறது. எனவே திருமகள் செல்வத்தின் கிழத்தி என்பது தெளிவு. திருமகளின் தத்துவத்தை ஆன்றோர் பல இடங்களில் குறித்துள்ளனர். அதை உருவப்படுத்தி பல நிலைகளில் போற்றி வழிபட்டும் வருகின்றோம். அவற்றில், ஓரிரண்டு கருத்துக்களையும் உருவங்களையும் இங்கு கவனிப்போம். மனிதன் தோன்றிய நாள் முதல், படிப்படியாக அறிவின் பாதையிலே முன்னேறியிருக்கின்றான் என்பது விஞ்ஞானம் கண்ட உண்மை. அவனுக்குப் பகுத்தறிவும் நிலை ஏற்பட்டதிலிருந்தே இயற்கைச் சக்திகளைப் பல உருவங்களில் தெய்வங்களாக வழிபட்டு வந்திருக்கின்றான். அவற்றில் அன்னைத் தெய்வத்தின் வழிபாடு சிறந்ததாக இருந்திருக்கிறது. அன்னைத் தெய்வம் என்றால் என்ன? நிலமகள் அவனுக்கு அனைத்தையும் கொடுப்பவள். அவளே அவன் வாழ்விற்கு ஆதாரம். எனவே தாயை எவ்வாறு போற்றுவானோ, அவ்வாறு நிலமகளைப் போற்றினான். அவளுடைய உருவை மண்ணிலே செய்து வழிபட்டான். இவ்வழிபாடு, உலகில் எல்லா இடங்களிலும் நிலவி வந்தது. பண்டைய மனிதன் வாழ்ந்த பகுதிகளில் எல்லாம் இவ்வுருவங்கள் கிடைத்துள்ளன. கருவை உள்ளடக்கிய பெண்ணாகவே இவ்வுருக்கள் சில இடங்களில் காணப்படுகின்றன. தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதிச்ச நல்லூர் என்ற இடத்தில் அகழ்வராய்ச்சி நடத்தியபோது அங்கு பண்டைய மக்களின் புதை தாழிகளில் ஏராளமாகக் கிடைத்தன. அங்கு கிடைத்த பொருள்களில், மிகச் சிறிய அளவில் ஒரு செப்பு உருவம் கிடைத்துள்ளது. அது நில மகளின் அன்னை உருவாயிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். தமிழகத்தில் கிடைத்துள்ள செப்புத் திருமேனிகளில் மிகவும் தொன்மையானது இது தான். திருமகளைப் பற்றிக் குறிக்க வந்து நிலமகளைக் பற்றிக் குறிப்பானேன் என்று தோன்றும்! இந்தியாவின் மிகவும் பழமையான நூல்கள் வேதங்கள், முக்கியமாக ருக்வேதத்தில் மிகவும் பழமையான குறிப்புகள் உள்ளன. அதில் ‘அழகு’, ‘காட்சிக்கு உகந்தது’, ‘செல்வம்’ என்ற பொருள்களில் ஸ்ரீ என்ற சொல் உபயோகப்பட்டுள்ளது. லக்ஷ்மீ என்ற சொல்லும் ருக்வேதத்தில் ‘மங்களம்’, ‘இனிய குணங்கள்’ என்ற பொருள்களில் காணப்படுகிறது. பிரஜாபதியின் தவத்திலிருந்து எழில்மிமும் தெய்வப் பெண்ணாக ஸ்ரீ தோன்றினாள், என்று சதபதப் பிராமணம் கூறுகின்றது. ஸ்ரீயை உருவகப்படுத்திக் குறிப்பது இதுவேயாகும். மேகும் புத்த பிரானின் காலத்திற்கும் முந்திய ஸ்ரீ சூக்தத்தில் ஸ்ரீயும் லக்ஷ்மியும் ஒரே தெய்வமாகக் குறிக்கப்பட்டுள்ளனர். இராமாயணம், பாரதம் என்ற இதிகாசங்களில்தான் ஸ்ரீ-லக்ஷ்மி, விஷ்ணுவின் தேவியாகக் குறிக்கப்படுகின்றான். அதற்கும் முன்னர் ‘அதிதி’ என்ற பெண் தெய்வம்தான் விஷ்ணுவின் தேவியாக யாகத்தில் இடும் பொருள்களைப் பெற்றுக் கொள்கிறாள்‘, என்று ’தைத்ரீய சம்ஹிதை’ கூறுகின்றது. ‘அதிதி’ உலகை ஆள்பவள். விஷ்ணுவின் தேவி பால் நிரம்பப் பெற்றவள் ஆதித்யர், மித்ரன் வருணன் முதலிய தெய்வங்களின் தாய். தாய்த் தன்மையின் உருவே அவள். உலகிலே தோன்றியுள்ள பொருள்கலும், இனி தோன்றப்போகும் பொருள்களும் அவளே. ‘உலகச் சக்தியின் தோற்றமே அதிதி’ என்று அவளைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. பிற் காலத்தில் அதிதிக்குக் கூறப்பட்ட குணங்கள் ஸ்ரீ லக்ஷ்மிக்கும் குறிக்கப்பட்டன. அதேபோன்று நிலமகளும் போற்றப்படுவதைக் காணலாம். நிலமகள் “வசுந்தரா” என்றும், பிருத்வி என்றும் புகழப்பட்டாள். இவள் எண்ணற்ற தான்யங்களைக் கொடுக்கக் கூடியவள்; தன்னுள்ளே பல ரத்தினங்களைக் கொண்டுள்ளவள். அதர்வ வேதத்தில் பிருத்வி சூக்தத்தில் செல்வத்திற்கு உரியவளாகக் கீழ் கண்டவாறு போற்றப்படுகின்றாள்: நிதிம் பிப்ரதி பகுதா குஹா வசு மணிம் ஹிரண்யம் பிருத்வீ ததாதுமே வசூனி மே வசுதா ராஸமானா தேவீ ததாது சுமனஸ்ய மானா திருமகளைத் தாய் என்று வணங்கினர் என்று கண்டோம். அவள் பால் நிரம்ப உடையவள் என்றும் குறிக்கப்படுகின்றாள். வட இந்தியாவில் ‘பார்குத்’ என்ற இடத்தில் பெளத்த ஸ்தூபம் ஒன்று இருந்தது. அதை அலங்கரித்த சிற்பங்கள் கிடைத்துள்ளன. அவை கிறித்துவுக்கு ஓர் நூற்றாண்டுக்கு முந்தியவை. அவற்றில் சில தெய்வத்தின் சிற்பங்கள் உள்ளன. ஒரு சிற்பத்தில் ஸ்ரீ அன்னை (ஸ்ரீ மாதேவதா) என்ற எழுத்துக்கள் உள்ளன. இச்சிற்பத்தில் அன்னை உருவில், நிற்கும் நிலையில் அழகிய பெண்ணாக பல அணிகளுடன இவன் சித்தரிக்கப்படுகின்றாள். பிற்காலத்தில் மேலும் சில சிற்பங்களும் கிடைத்துள்ளன. அவற்றில் அழகிய பெண்ணாக தன்னுடைய தனத்தை அழுத்தி பாலின் பெருக்கத்தைக் காட்டுவதாக சித்தரிக்கப்பட்டுள்ள சிற்பமொன்றைக் காண்கிறோம். சிலப்பதிகாரத்தில் மனையறம்படுத்த காதையில் ‘திருமுலைத்தடம்’ என்ற சொல்லுக்கு அடியார்க்கு நல்லார் ‘திரு என்றால்-முனைமேல் தோன்றும் வீற்றுத் தெய்வம்’ என்று குறித்துள்ளார் என்பதும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இது தாய்மைத் தன்மையைக் குறிக்கும். திருமகளாக பண்டைய சிற்பங்கள் பல விதங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். கையில் தாமரை மலரைப் பிடித்து நிற்கும் தெய்வ உரு (பத்ம ஹஸ்தா) தாமரை மலரே இருக்கையாக அதில் அமர்ந்து விளங்குவாள் (பத்மவாசினி). தாமரை மலரில் வீற்றிருந்து கொடிகள் சூழ இரு கைகளிலும் தாமரை மலரைக் கொண்டு விளங்கும் நிலை. இந்தியாவின் வடபகுதியில் இந்துசமயம், பெளத்த சமயம். சமண சமயம் என்ற முப்பெரும் சமயங்களிலும் திருமகளின் சிற்பங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்திலுமே திருமகள் தாமரை மலரில் அமர்ந்து காணப்படுகின்றாள். அவளுடைய இடப்புறமும், வலப்புறமும் இரண்டு யானைகள் காட்டப்பட்டுள்ளன. அவை திருமகளின் மீது பொற்குடங்களிலிருந்து நீரை ஊற்றுவதாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. பார்குத், சாஞ்சி, மதுரா முதலிய இடங்களில் உள்ள பல சிற்பங்களில் இந் நிலையைக் காண்கிறோம். இச் சிற்பத்தின் உட்கருத்து என்ன? தாமரை, நீரில் தோன்றும் மலர்; தூய்மையின் சின்னம். திருமகள், அலைமகள் எனவே, தாமரை அவளுடைய இருக்கையாகக் காணப்படுகின்றது. வேத காலத்தில் வசுந்தரா, பிருத்வீ என்று குறிக்கப்பட்ட நிலமகளே செல்வத்தின் கிழத்தி என்று கண்டோம். நிலத்தின் செழுமை மழையால் உண்டாகிறது. நீருண்ட மேகங்கள் மழையைப் பெய்விப்பதால் நிலம் செழுமையடைகின்றது. நீருண்ட மேகங்களைக் கருமையான யானைகளுக்கு உவமையாகக் கூறுவது வழக்கம். எனவே நீருண்ட மேகங்கள் நிலமகளின் மீது நீரை ஊற்றுவதையே இவ்வுருவம் குறிக்கின்றது என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். தமிழகத்தில் சங்க இலக்கியங்களில் திருமகள் குறிக்கப்படுகின்றாள். பரிபாடலில் ‘திருமறு மார்பின் உறவோன்’ என்று திருமால் குறிக்கப்படுகிறார். பரிபாடல் திருமாலை’ ‘திருமறுச் செய்யோள் சேர்ந்தது நின்மாசில் அகலம்’ என்றும், ‘பொன்னிற்தோன்றிய புனைமறு மார்ப’ என்று குறிக்கும் திருமாலின் மார்பில் உள்ள மறுவே, செய்யோள் என்றும், அதுவே ஸ்ரீவத்சம் என்றும் அறியலாம். தமிழகத்தில் தெய்வங்கள் ஆடிய பதினோரு ஆடல்கள் குறிக்கப்பட்டுள்ளன. அவுணர்கள் வெவ்விய போர் செய்தற்கு சமைந்த போர்க் கோலத்தோடு மோஹித்து விழும்படி கொல்லிப் பாவை வடிவாகச் செய்யோளாகிய திருமகளால் ஆடப்பட்ட கூத்துக்குப் ‘பாவைக் கூத்து’ என்ற பெயர் தமிழ் நாட்டில் வழங்கப்படுவதாகும். காவிரிப்பட்டினத்தில் புத்தபாதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் ஸ்ரீவத்சம் என்ற சின்னம் காணப்படுகிறது. இதுவே தமிழகத்தில் கிடைத்துள்ள ஸ்ரீயின் மிகப் பழைய உருவாகும். அடுத்து சென்னைக்கு அருகில் மணிமங்கலம் என்ற கிராமத்தில் மிகச் சிறிய அளவில் ஒரு சிற்பம் கிடைத்துள்ளது. அதில் உமாமகேசுரர், நரசிம்மர் முதலிய பல உருவங்கள உள்ளன. இதில் நரசிம்மருக்கு அருகில் ஓர் உருவம் உள்ளது. இதில் தாமரை மலர் ஒன்று உயர்ந்த தண்டில் காணப்படுகிறது. அதன் மேல் கிரீடம் தரித்த ஓர் உருவம் காணப்படுகிறது. இதன் கைகளும் கால்களும் இயற்கையாக இல்லாமல் உருட்டிவிட்ட பந்துபோல் இருப்பதைக் காணலாம். இதுவே திருமகளின் உருவமாகும். மிகவும் பழைமையான சிற்பங்களில் திருமகள் இவ்வாறுதான் சித்தரிக்கப்பட்டுள்ளான். இதேபோன்று திருமாலின் வலது மார்பில் பண்டைய சிற்பங்களில் திருமகள் காணப்படுகிறாள். திருமாலை சங்க இலக்கியங்கள் ’திருமறு மார்பன்" என்று குறிக்கின்றன என்று கண்டோம். எனவே இவ்வுருவத்தைத் திருமறு என்று குறிக்கலாம். மணிமங்கலம் சிற்பத்தில் திருமறு (ஸ்ரீவத்சம்) ஸ்ரீ நரசிம்மரின் உருவுக்கு அருகில் உள்ளது ஒரு சிறந்த அம்சமாகும். இது லக்ஷ்மி நரசிம்ம மூர்த்தியின் உருவைக் குறிக்கிறது. இச்சிற்பம் கி.பி. 6-ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும். கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் பின் பகுதியில் ஆண்ட முதல் பரமேச்சுர பல்லவன் காலத்திய சிற்பம் ஒன்று காஞ்சிக்கு அருகில் உள்ள கூரம் என்ற ஊரில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதில் திருமகளில் உருவம் திருமறு (ஸ்ரீவதசம்)வாகவே காணப்படுகிறது. மேலும் இவ்வுருவின் இருமருங்கிலும் யானைகள் நிற்கின்றன. இவை உயர்ந்த தண்டில் உள்ள தாமரை மீது நின்று திருமகள் மீது நீரை ஊற்றுகின்றன. இன்னும் காவேரிப்பாக்கம் என்ற ஊரில் கிடைத்துள்ள ஒரு சிற்பத்திலும் இது போன்ற உருவத்தைக் காண்கிறோம். தஞ்சை மாவட்டம் ஏனாதி என்ற இடத்தில் இதே போன்று சிறிய செப்பு உருவம் ஒன்று கிடைத்துள்ளது. அடுத்து இராஜசிம்ம பல்லவன் காலத்தில் தோற்றுவித்த மாமல்லபுரம் குகைகளில் இரண்டு இடங்களில் திருமகளின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இரண்டிலும் திருமகள் எழில் மிகும் மங்கையாக இருகைகளிலும் தாமரை மலரைத் தரித்து அமர்ந்திருக்கிறாள். இருமருங்கிலும் தாதியர் நிற்கின்றனர். மேற்புறத்தில் இரண்டு யானைகள் காட்டப்பட்டுள்ளன. ஒன்று திருமகள் மீது நீராட்டுகிறது. இச்சிற்பங்களில் ஒன்று வராஹ குகையிலும் மற்றொன்று ஆதிவராஹ குகையிலும் உள்ளன. பரமேசுவரவர்மனுக்குப் பின்னர் வந்த நந்திவர்மன் பல்லவமல்லன் என்ற மன்னனுடைய செப்பேடு காசக்குடி என்ற இடத்தில் கிடைத்துள்ளது. அதில் கடவுள் வாழ்த்தாகப் பல செய்யுட்கள் சமஸ்கிருதத்தில் உள்லன. அவற்றில் ஒரு செய்யுள் திருமகளைப் போற்றுகிறது. “பத்மா, தாமரையில் அமர்ந்தவள், தன்னிரு கைகளிலும் தாமரை மலரைத் தாங்கி விளங்குபவள், யானையின் துதிக்கையிலிருந்து தங்கமயமான குடத்திலிருந்து நீராட்டிக் கொள்பவள் நம்மை அன்போடு கடைக்கண்ணால் பார்க்கட்டும்” என்று காணப்படுகிறது. இச்செய்யுள் மாமல்லபுரத்துச் சிற்பங்களைப் பார்த்து எழுதப்பட்டதுபோல் தோன்றுகிறது. காஞ்சிக்கு அருகில் உத்தரமேரூர் என்ற இடத்தில் நந்திவர்மன் என்ற பல்லவ மன்னன் காலத்தில் கட்டப்பட்ட சுந்தரவரதப் பெருமாள் கோயில் என்று ஒன்று உள்ளது. அதில் திருமகளின் உருவம் காணப்படுகிறது. அவ்வுரு மாமல்லபுரச் சிற்பங்களைப் போலவே உள்ளது. ஆயினும் பணிப் பெண்களுக்குப் பதிலாக கீழே இரு அடியார் அமர்ந்துள்ளதைக் காண்கிறோம். மேலே யானைகள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றின் உடல் மேகம் போல் இருப்பது சிறந்ததாகும். இத்தேவியின் மேலிருசுரங்களில் அக்ஷமாலையும் கெண்டியும் உள்ளன. கீழிடக்கரத்தில் ஓலைச்சுவடிகள் உள்ளன. இத்தேவி வாக்தேவியாகிய கலைமகள் ஆவாள். கஜலக்ஷ்மி போலவே கலைமகளும் காண்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாம். வரலாற்றில் முருகப்பெருமான் தமிழ்நாட்டின் தனிப்பெருங் கடவுள் முருகவேள், தமிழ் தந்த கடவுளாகிய அவரை நாம் போற்றி வணங்குகிறோம். வரலாற்றில் முருகப் பெருமானது நிலை மிகச் சிறந்ததாகும். சங்க காலத்தில் நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப் படையும், பரிபாடலில் வரும் செவ்வேளின் திறனும் யாருடைய மனத்தைத்தான் கவரா? “சீர்கெழு செதிலும் செங்கோடும் வெண்குன்றும், ஏரகமும் நீங்கா இறைவன்” என்று சிலப்பதிகாரத்தில் வரும் இளங்கோவடிகளின் வாக்கு. பக்திப்பெருக்கை ஊட்டும். இதன் அடிப்படையில் தான் சுப்பிரமணிய சுவாமியின் வழிபாடு தமிழ்நாட்டு வரலாற்றில் பின்பு இடம் பெற்றுள்ளது. கி.பி. 5,6-ம் நூற்றாண்டுகளில் தமிழகத்தின் வட எல்லையில் பேரரசை நிறுவிய பல்லவர்கள் முருகப் பெருமானின் பக்தர்கள்தாம். பல்லவ அரசர்களில் முந்தியவர்கள் அனைவரும் தங்களைப் பரமப் பிரம்மண்யர்கள் என்று செப்பேடுகளில் கூறிக்கொள்கின்றனர். பிரம்மணயத்தின் தெய்வம்-அதுவும் நல்ல பிரம்மண்யத்தின் தலைவர்-சுப்ரமண்யர். அதனால்தான் ஏரகத்து உறையும் எம்பெருமானை, அந்தணர் போற்றிய முறையைத் திருமுருகாற்றுப்படை, “இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல” என்று குறிப்பதைக் காணலாம். ‘இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி’ என்ற இத்தமிழ்த் தொடரையே பல்லவ மன்னர்கள் ‘உபயகுல பரிசுத்தர்கள்’ என்று தங்களை அழைத்துக் கொள்ளும்போது ஆள்கின்றனர். பல்லவர்களில் காஞ்சிக் கயிலாயநாதர் கோயிலைக் கட்டியவன் இராஜசிம்ம பல்லவன். இவன் காஞ்சிக் கல்வெட்டில் தங்கள் மூதாதையர்களைக் குறிக்கும்போது பிரம்மண்யர்கள் என்றே குறிக்கிறான். அப்பெருமன்னன் அடுத்துத் தன்னைக் குறிக்கும் போது ‘பரமேசுவரிடத்திலிருந்து எவ்வாறு குகன் குமாரனாகச் சுப்பிரமணியனாகத் தோன்றினானோ அவ்வாறு நான் என் தந்தையான பரமேசுவரனிடமிருந்து சுப்ரம்மண்யம் உடைய குமாரனாகப் பிறந்தேன்’ என்று கூறிக் கொள்கிறான்; கூறிப் பெருமைபடுகிறான். இதிலிருந்து இம்மன்னனுக்கு முருகப்பெருமானிடம் உள்ள ஈடுபாடு நன்கு விளங்கியது. பல்லவர்களைப் பலகாலம் எதிர்த்து வந்த சாளுக்கியர் தங்களை மகாசேனருடைய அடியை எப்பொழுதும் தொழுபவர்களாகக் கூறிக்கொள்கிறார்கள். இதுபோன்று மன்னர்கள் போற்றிய கலையிலே முருகப் பெருமானுடைய உருவங்கள் இலக்கியத்துக்கு ஏற்பப் பல நிலைகளில் படைக்கப்பட்டன. இராஜசிம்ம பல்லவன் தோற்றுவித்த மாமல்லபுரத்துத் திரிமூர்த்தி குகை என்று வழங்கும் குகைக்கோயில் முதல் கருவறையில் முருகப் பெருமானின் அழகுத் திருவுருவம் உள்ளது. இங்கே சுப்பிரமணியர் நின்ற நிலையில் நான்கு கை உடையவராகச் ‘சன்ன்வீரம்’ பூண்டு விளங்குகிறார். மேலிரு கைகளில் அக்ஷமாலையும் குண்டிகையும் பூண்டு விளங்குகிறார். கீழிரு கைகளில் இடக்கையைத் துடையிலும் வலக்கையை அபயமாயும் வைத்துள்ளதைக் காணின், “விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒருகை; உக்கம் சேர்த்தியது ஒருகை; நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசை இயது ஒரு கை” என்ற திருமுருகாற்றுப்படையின் அடிகளே நினைவுக்கு வரும். பெரும்பாலும் பல்லவர் காலத்தில் சுப்பிரமணியப் பெருமானின் திருக்கோலங்களில் மேலிரு கைகள் அக்ஷமாலையும் குண்டிகையும் கொண்டு விளங்குவதையும், மார்பில் வீரச்சங்கிலி தரித்து விளங்குவதையும் காணலாம். திரிமூர்த்தி குகையில் உள்ளவாறே, காஞ்சிக் கயிலாயநாதர் கோயிலிலும், மற்றப் பல்லவர் கோயில்களிலும் காணலாம். சிவாலயங்களில் தேவகோஷ்டங்களில் லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி முதலிய உருவங்களைப்போல், சுப்பிரமணியர் திருவுருவமும் விளங்கி வந்ததைப் பல்லவர் கோயில்களில் காணலாம். உதாரணமாக, காஞ்சி முக்தேசுவரர், மாதங்கேசுவரர் ஆலயங்களில் முருகப் பெருமானின் உருவங்களை வடபுறச் சுவரில் காணலாம். இவ்வாறே பிற்காலங்களில் தேவகோஷ்ட மூர்த்திகளாகச் சிற்சில இடங்களில் சுப்பிரமணியரின் சிலையுருவத்தை வைத்தார்கள். திருவொற்றியூர் ஒற்றிமூதூர் உடையார் ஆலயத்தில், பல்லவர் காலத்திய பிள்ளையார், சுப்பிரமணியர் உருவங்கள் உள்ளன. இம்மூர்த்தியைக் கல்வெட்டுகள் குமாரசுவாமித் தேவர் என்று குறிக்கின்றன. பல்லவர் காலத்தில் மற்றொரு விசேஷ உருவமும் தலை சிறந்து விளங்கியது. அதுதான் முருகனின் குழவிப் பருவத்து நிலை. சோமஸ்கந்த உருவாகக் கருவறையின் உள்ளே லிங்கத்தின் பின்னர் இது உள்ளதைக் காணலாம். இங்கே முருகப்பெருமான் உமையன்னையின் மடியில் அழகே உருவாக அமைந்துள்ளதைப் பார்த்தால், அந்தக் குழந்தையைத் தொட்டுப் பார்த்து ஆனந்தபரவசம் அடையத்தான் விருப்பம் எழும். அக்காலத்தில் சிவபெருமனுக்கு எடுத்த ஆலயங்கள் அனைத்திலும் இந்த அற்புத உருவத்தைக் காணலாம். கல்வெட்டுக்களிலும், ‘சிவபெருமான் குகனுடன் கூடியே இங்கு எந்நாளும் வாசம் செய்யட்டும்’ என்று பொறித்துள்ளனர். இத் திருவுருவங்களைக் காண்போர், “ஆல்கெழு கடவுட் புதல்வ! மால்வரை மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே! வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ! இழை அணி சிறப்பிற் பழையோன் குழவி” என்று போற்றித் துதிபாடிச் சென்னிமேல் கைகூப்பி, மெய்மறந்து கூத்தாடுவர் என்பது உறுதி. திருச்சி மலையின் கீழேயுள்ள குடைவரைக் கோயிலிலும், குன்றக்குடிக் குடைவரைக் கோயிலிலும், பரங்குன்றிலும் முருகனின் திருவுருவங்களைக் காணலாம். குன்றக் குடியில் உள்ல திருவுருவம் ஒரு கையில் கோழி பூண்டு விளங்குகிறது. மதுரைக்கு அருகில் உள்ள ஆனைமலையில் லாடன் கோயில் என்று தற்போது கூறப்படும் குடைவரைக் கோயில் ஒன்று உள்ளது. அது முருகப்பெருமானுடையது. அங்கு இரண்டு கை மட்டும் பூண்டு தேவசேனையுடன் மட்டும் அமர்ந்து முருகன் காட்சியளிப்பதைக் காணலாம். இது ஓர் சிறப்பு வாய்ந்த அம்சமாகும். “செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை மறுவில் கற்பின் வாணுதல் கணவன்” என்ற அடிகளே இவ்வுருவுக்கு அடிப்படையோ? நெல்லூர் மாவட்டத்துக் கூடூர்த் தாலூகாவில் மல்லம் என்ற சிற்றூர் உள்ளது. அங்கே சுப்பிரமணியருக்கு ஓர் ஆலயம் நந்திவர்ம பல்லவனின் காலத்துக்கு முன்னரே இருந்தது என்று அறிகிறோம். அங்குள்ள கல்வெட்டில் நந்திவர்மன் காலத்தில், சுப்பிரமணிய தேவர்க்கு ஐம்பது கழஞ்சு பொன் பரிசு கொடுத்தது குறிப்பிடப்பட்டுள்ளது. பல்லவர்களுக்குப் பின்பு தமிழ்நாடு முழுவதையும் விஜயாலயன் வழிவந்த சோழர்கள் கைப்பற்றினர். அவர்களில் ஆதித்தன், பராந்தகன், ராஜராஜன் முதலியோர் மிகச் சிறந்தவர்கள். இவர்கள் காலத்தை முந்திய சோழர் காலம் என்பர். இக்காலத்தில் பல கோயில்கள் எழுந்தன. அவற்றில் முருகப் பெருமானுடைய திருவுருவங்கள் உள்ளன. திருச்சியிலிருந்து அரியலூர் செல்லும் வழியில், முப்பது கல் தொலைவில் கீழையூர் என்ற ஊர் உள்ளது. அங்கு இரண்டு கோயில்கள் உள்ளன. ஒன்று அகத்தீசுவரம் என்றும், மற்றது சோழீசுவரம் என்றும் குறிப்பிடப்படுகின்றன. அகத்தீசுவரம் என்ற கோயிலில் பின்புறக் கோஷ்டத்தில் சுப்பிரமணியர் உருவம் நின்ற நிலையில் உள்ளது. நான்கு கைகள் பூண்டுள்ள இச்சிலையில் மேலிரு கைகளில் வஜ்ரமும் சக்தியும் காணப்படுகின்றன. சக்தியின் அடிப்பகுதி மணிபோல் விளங்குகிறது. தலையின்மேல் ஓர் கொற்றக்குடை உள்ளது. மற்றொரு முக்கியமான அம்சம், முருகப்பெருமானின் சென்னி, அழகிய முடியின் அடியில் மலர்க் கண்ணிகள் உள்ளன. இது முருகவேளுக்கு உகந்த காந்தள் கண்ணி. “சூரர மகளிர் ஆடும் சோலை மந்தியு மறியா மரன் பயில் அடுக்கத்துச் சுரும்பும் மூசாச் சுடர்ப்பூங் காந்தன் பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்” என்று குறிப்பிடப்படும் காந்தள் கண்ணிமாலை, தமிழ் நாட்டுப் பண்டைய செவ்வேளின் சிற்பங்களில், முடியை அலங்கரிக்கும் காந்தள் கண்ணியை காணலாம். முருகவேளின் உருவம் என அறிவதற்கு உதவும் முக்கிய ஏதுவாக இது திகழ்கிறது. அகத்தீசுவரத்து முருகவேள் தலையில் இந்தக் காந்தள் மாலை மிகவும் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதன் அருகிலுள்ள சோழீசுவரத்திலும், பின்புறக்கோஷ்டத்தில் முருகப்பெருமான் அமர்ந்த திருக்கோலத்தில் காணப்படுகிறார். மேல் கைகளில் சக்தியும் வஜ்ரமும் கைமாறி விளங்குகின்றன. இவர் தலையின் பின்புறம் சோதி வடிவாகக் காட்டப்பட்டுள்ளது. செவ்வேள் சோதி உருவுடையவன் அல்லவா? திருமுருகாற்றுப்படை, “பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாங்கு ஓவற இமைக்கும் சேண்விளங் கவிரொளி” என்றுதானே அவனைப் போற்றுகிறது? இவ்விரு சிற்பங்களும் சமகாலத்தவை. இக்காலத்தில் பல செப்புத் திருமேனிகள் ஆலயங்களில் செய்து வைக்கப்பட்டன. இவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. காவிரிப்பூம்பட்டினத்து பல்லவனீச்சரத்தில் ஓர் அற்புதமான செப்புத் திருமேனி உள்ளது. அதில் முருகப் பெருமான் உமாதேவியின் அருகில் குழந்தையாக மலர்களைக் கையில் ஏந்திப் பீடத்தின் மேல் அமர்ந்துள்ளார். அவர் குழந்தையாக இருந்த போதும், பிறந்த ஞான்றே இந்திரனின் தருக்கழித்தார் அல்லவா? “பதுமத்துப் பாயற் பெரும்பெயர் முருகநிற் பயந்த ஞான்றே அரிதமர் சிறப்பின் அமரர் செல்வன் எறியுமிழ் வச்சிரங் கொண்டு வந்தெறிந்தென அறுவேறு துணியும் அறுவ ராகி ஒருவனை வாழி ஓங்குவிறற் சேஎய் ஆரா உடம்பின்நீ அமர்ந்துவிளை யாடிய போர்” என்ற பரிபாடல் அடிகளுக்கு ஒப்ப, வளராத குழந்தைத் தோற்றத்தை யுடையவனாய் இருந்தபோதிலும், இந்திரனின் தருக்கைத் தடிந்த சீற்றம் இந்தச் செப்புத் திருமேனியில் திகழ்வதைக் காணலாம். கும்பகோணத்துக்கு அருகில் உள்ள தண்டந் தோட்டம் என்ற ஊறில் சுப்பிரமணியரின் மிக அழகிய திருமேனி ஒன்று உள்ளது. பிந்திய சோழர் காலத்திலும் பல நிலைகளில் முருகப் பெருமானின் உருவம் உள்ளதைக் காணலாம். இவற்றில் முக்கியமாக கோபுரங்களில் கோஷ்டங்களை அலங்கரித்தவைகளைக் குறிப்பிடலாம். தில்லைக்கோயிலில் நான்கு கோபுரங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் உட்புறத்து வலப்புறம் சுப்பிரமணியர் திருவுருவம் உள்ளதைக் காணலாம். மேற்குக் கோபுரத்தே மட்டும் இருமருங்கிலும் சுப்பிரமணியர், உருவம் உள்ளது. இதில் இடப்புறம் உள்ளது, அணிமுகங்கள் ஓர் ஆறும், ஈராறு கையும் பூண்டு மயில்மேலமர்ந்து சூர்மாத்தடிந்த அற்புதத் தோற்றம்; முருகப்பெருமான் சூரனைப் போரில் வெற்றிக்கண்ட காட்சியைச் சித்திரிக்கும் சிற்பம். சோழர் காலச் சிற்பங்களில் இதுதான் மிகச் சிறந்தது. மற்றப்பக்கம் உள்ள முருகன் உருவத்தின் மேல் கல்வெட்டு உள்ளது. இது சுப்பிரமணியப் பிள்ளையார் என்றே முருகனைக் குறிக்கிறது. இதிலிருந்து 12-ஆம் நூற்றாண்டுவரை சுப்பிரமணியரைப் பிள்ளையார் என்று குறிக்கும் வழக்கம் இருந்தது என்பதை அறியலாம். நச்சினார்கினியார் தம் உரையில் முருகப் பெருமானைப் பிள்ளையார் என்றே குறிப்பிட்டுள்ளதைக் காணலாம். இதுபோன்று இன்னும் எவ்வளவோ திருவுருவங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தமிழ் இல்க்கியத்தையும் தமிழ் மரபையும் அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டவை. இத்தகைய அரிய பெருமானைத் தமிழகம் தலைமேல் தாங்கி வணங்குவதைக் காணலாம். முருகப்பெருமானின் உருவைத் தலைமேல் தாங்குதல் இன்று நேற்றல்ல, தமிழகத்தின் பண்டை மரபு என்பதைக் காட்டத்தானோ என்னவோ, ஒரு சிற்பி திருவொற்றியூரில் சிறந்த சிற்பம் ஒன்றைச் செய்துள்ளான். இவன் இராஜேந்திர சோழனின் கட்டளைப்படி இக்கோயிலைத் தோற்றிவித்தவன். இவன் பெயர் ரவி என்ற வீர சோழப்பெருந்தச்சன். இவன் செய்துள்ள ஆச்சரியமான துவாரபாலகர் உருவம் கோயில் வாயிலை அலங்கரிக்கிறது. அதன் முடியைப் பார்க்கவேண்டும். முருகப்பெருமானின் திருவுருவம் ஒரு புறமும், பிள்ளையாரின் உருவம் மற்றொரு புறமும், நெற்றிப் பட்டையில் நடமாடும் ஆடவல்லாரின் உருவமும் உள்ளன. இவை மிக மிகச் சிறியவை. துவாரபாலகர் முடியிலுள்ள இவை ஓர் அங்குல நீளந்தான் இருக்கின்றன. இருந்தபோதிலும் என்ன அற்புதமான அமைப்பு! முருகப்பெருமானின் உருவம் நின்ற நிலையில் உள்ளது. இதுபோன்ற படிமங்களைப் பல முறை கண்டும் காணாத கண்ணினராய்ச் செல்கின்றோம். புறக்கண் மட்டும் போதுமா? ஒளிப்பிழம்பான தெய்விக வடிவுகளைக் காண அகக்கண் ஒன்றும் வேண்டும்! அது இருந்தால் போதுமே! போகும் ஆலயங்களில் எல்லாம் முருகப் பெருமானின் திவ்யத் திருமேனியைக் காணலாமே! தமிழ்ப் பெருமன்னன் அளித்த தமிழ்த் தெய்வம் கடவுள் படிமம் எழுவதற்காக இமயம் வரைச் சென்று கல்கொண்டு, கங்கையில் நீராட்டித் தமிழகத்தில் கோயில் எடுத்தான் சேரன் செங்குட்டுவன். அவனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு பெருந் தமிழ் மன்னன் தோன்றினான். கப்பல் படையை முதன் முதலாகச் செலுத்திக் கடாரம்வரைச் சென்று கைபிடித்த பெருந்தமிழ் மன்னன் அவன்தான். அவனுக்குத் தானும் ஓர் சிறந்த கோயில் கட்டவேண்டும் என்று ஆவல் தோன்றியது. அதற்குக் கங்கையிலிருந்து நீர் கொண்டு வந்து கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என்று கிளம்பினான். பெருவேந்தனல்லவா? கங்கைவரைக் கைப்பற்றி, கங்கை கொண்டான் எனப் புகழ் பெற்றான். இவனைக் ‘கங்கா நதியும் கடாரமும் கைக்கொண்டு சிங்காதனத்திருந்த செம்பியர் கோன்’ என்று புலவர் போற்றினார். கங்கை கொண்ட சோழபுரத்தை ஏற்படுத்திக் கங்கை கொண்ட சோழீச்சரத்தை ஏற்படுத்தினான் இம்மன்னன், இவன் பரகேசரி இராஜேந்திர சோழன் என யாவரும் அறிவர். தமிழ் மரபைப் போற்றிய இம்மன்னன் கடலில் சென்று ஜயித்தவன் அல்லவா? இவன், கடலில் ஒளிந்த சூரபன்மாவை வென்ற தமிழ்த் தெய்வத்தின் உருவைத் தன் கோயிலில் செய்து வைத்தான். இது திருவிழாக் காலங்களில் வெளியே உலாவாக எடுத்துச் செல்லும் செப்புத் திருமேனியாக விளங்கிற்று. தமிழ் இலக்கியங்களூக்கு ஏற்பவே இத்திருமேனியைச் செய்தளித்தான் இம்மன்னன். அவனால் செய்தளிக்கப்பட்ட உருவந்தான் இங்கே படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியத்தில் சஞ்சரித்தால்தான் இதன் அழகையும், உருவையும் போற்ற முடியும். முக்கியமாக பரிபாடல், திருமுருகாற்றுப்படை இரண்டும் முருகனின் அழகை மிக அழகாகப் போற்றுகின்றன. முருகப் பெருமானின் திருவடிகள் அதை அடைந்தோர்களைத் தாங்கும் வன்மையுடையவை, மதத்தை உடைக்கும் வலிமை உடையவை என்பதை “உறுநர்த்தாங்கிய மதனுடை நோந்தாள்” என்று கூறுகிறது முருகாற்றுப்படை. அழகிய திருவடிகளை உடையை இப்பெருமான் வீரக்கழலினன். சிவந்த மேனியையுடையை இவன், இடுப்பில் கச்சையணிந்தவன்; அழகிய துகிலாடை அணிந்தவன். கண்ணுக்குக் குளிர்ச்சியாகவும், நல்ல மணம் வீசுவதாகவும் அமைந்த இந்தத்துகில் நிலம்வரை நீண்டு விளங்கிற்று இது, “குறும்பெறி கொண்ட நறுந்தண் சாயல் மருங்கில் கட்டிய நிலன்நேர்பு துகிலினன்” என்று முருகாற்றுப் படையில் குறிக்கப்படுகிறது. ஆரம் தாழ்ந்த வம்பகட்டு மார்பையும், தொடி அணி தோளையும் உடைய இந்நெடியன்’ பிறந்த ஞான்றே இந்திரன் தருக்கழிந்தான். ’இவ்வாற்றலை உடைய இவரே தம் சேனைக்குத் தலைவர்" என அனலன் இவனுக்கு வாரணச் சேவலளித்தான். “அனலன் தன்மெய்யிற் பிரித்துச் செல்வ வாரணங் கொடுத்தான்” கங்கை கொண்ட சோழபுரத்தில் முதல் இராஜேந்திர சோழன் செய்தளித்த முருகப் பெருமான் என பரிபாடல் கூறுகிறது. இடக்கையில் இதனையும் மற்றக் கையிலே சக்திப் படையையும் பூண்டுள்ளான். மற்ற இரண்டு கைகளில் இடக்கை வட்டவடிவமான அழகிய கேடயத்தையும், வலக்கை சூர்மா தடிந்த சுடரிலை வேலையும் கொண்டுள்ளன. “இருகை ஜயிரு வட்டமொடு எஃகு வலந்திரிப்ப…..” என்று இக்காட்சி குறிக்கப்படுகிறது. இவ்விரு கைகளும் அந்தணர் வேள்வி காக்கும் முகத்திற்கேற்பத் தொழில் புரிந்தன. இவனது முகம் திசைகளை விளக்கும் திங்கள் போன்றது. அருகில் வள்ளியம்மை இருப்பதால் நகை யமர்ந்தது. பொன்னால் செய்யப்பட்ட மகரக் குழல்கள், இந்ந ஒளி வாய்ந்த முகத்தை அழகு செய்கின்றன. இதி நீலவானில் விளங்கும் நிலவின் அருகிலே ஒளிவீசும் மீன்களை ஒத்திருக்கிறது. “நகை தாழ்பு துயில்வரூஉம் வகையமர் பொலங்குழை சேண்விளங் கியற்றை வான்மதி வைகி, அகலா மீனி னவிர்வன விமைப்ப…” என்று திருமுருகாற்றுப்படை கூறுகிறது. அழகிய முடியுடைய இப்பெருமான் பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன். இவ்வாறு மைந்தரின் ஏறாக, அந்தணரின் வெறுக்கையான சுப்பிரமணியனாக, வேல் கெழு தக்கைசால் பெருஞ்செல்வனாக, பரிசிலர் தாங்கும் உருகெழு நெடுவேளாக, திருவடி முதல் சென்னி வரையில் தியானித்தான் இராஜேந்திர சோழன். இந்தத் தமிழிலக்கிய மரபை அப்படியே உருவகப்படுத்த விரும்பி, உத்தரவும் இட்டான். தமிழ் மரபிலே வந்த சிற்பி அரசனின் ஆணைக்கு இணங்க அழகே உருவான செப்புத் திருமேனியாய்ச் செவ்வேளைச் செய்து கொடுத்தான். கங்கை கொண்ட இராஜேந்திர சோழன் ஓராயிரம் ஆண்டுகளுக்கும் முன் செய்தளித்த திருமேனி, இன்றும் இனிய முகத்தோடு இருக்கிறது. கையிலே வேளும், கேடயமும் பூண்டு விளங்கும் செப்புத்திருமேனிகளில் மிகவும் சிறந்ததும், பழமையானதும் இதுதான். முன் கூறிய இலக்கிய மரபு அனைத்தையும் இவ்வழகிய திருமேனியில் காணலாம். தமிழ்ப் பேரரசன் அளித்த தமிழ்த் தெய்வ உருவில் தமிழிலக்கியமே தியான சுலோகமாக விளங்குகிற போற்றத்தகும் உருவம் இது. இந்தச் சுப்பிரமணியன் உருவை எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். தாராசுரம் கோயிலில் மகாமாயா சக்தி கும்பகோணத்தின் அருகில் உள்ள தாராசுரத்தில் (இராஜராஜபுரத்தில்) இரண்டாம் இராஜராஜசோழன் எடுப்பித்த அழகிய கோயில் உள்ளது. வரலாற்றுச் சிறப்பும், கலைச் சிறப்பும் வாய்ந்த அக்கோயிலை மனதிற் கொண்டு தான் ஒட்டக்கூத்தர் ‘தக்கயாகப்பரணி’ என்னும் ஒப்பரும் நூலை இயற்றியுள்ளார். தக்கயாகப்பரணி அக்கோயிலில் கூத்தாகப் படைக்கப்பட்டிருக்க்ககூடும். தாரசுரம் கோயிலில் இன்னும் பல சிறப்புகள் உண்டு. தமிழக சமய வரலாற்றை அறிய இச்சிறப்புகள் பெரிதும் உதவுகின்றன. இவற்றில் இரண்டு எழில் சிற்பங்களை இங்குக் காண்போம். ஒன்று இராஜகம்பீரன் மண்டபம் என்னும் பெயர் பெற்ற மண்டபத்தில் ஒரு வெளிக் கோட்டத்தை அழகு செய்கிறது. இவ்வுருவம் மூன்று தலைகளுடன் அர்த்த நாரீசுவரர் போல் தோற்றமளிக்கின்றது. மூன்று தலைகளிலும் கரண்டமகுடம் என்னும் முடி அலங்கரிக்கிறது. தலையின் பின்னே சூரியமண்டலம் போன்ற ஜோதி மண்டலம். எட்டு கரங்கள். வலக்கரங்களிலே ருத்ராக்ஷ மாலை, கத்தி, கட்வாங்கம், தாமரை ஆகியவை விளங்குகின்றன. இடக்கரங்கள் பாசம், அபயம், தண்டம், கபாலம் தாங்கியுள்ளன. வலப்பாகம் ஆண் உருவமும், இடப்பாகம் பெண் உருவம். இடப்புறத்தே உள்ள மார்பகமும், கணுக்கால் வரை நீண்ட ஆடையும் இதைத் தெளிவாக்குகின்றன. நம்முன் உள்ள கேள்வி இது என்ன உருவம் என்பதே? அர்த்தநாரீச்சுவர உருவங்களின் முடியில் வலப்புறம் சடை முடியும் இடப்புறம் கரண்டமகுடம் காணப்படும். முழுவதும் கரண்டமகுடமாகவே இங்கு விளங்குவதால் இது முற்றிலும் தேவியின் வடவையே அடிப்படையாகக் கொண்டது. அதேபோன்று வலக்கரத்தில் தாமரை மலர் ஏந்தியிருப்பதும் இது தேவியின் வடிவே என்பதை நிலைநிறுத்துகிறது. ஆதலின், இது சக்தியை-முழுமுதலைத் தெய்வமாகக் காட்டும் உருவம். சக்தியின் அங்கமாக வலத்தே ஆண் உருவம் (சிவபிரான்) காட்டப்பட்டுள்ளது. 11, 12-ஆம் நூற்றாண்டுகளில் சக்தி வழிபாடு மிகுந்த சிறப்பைப் பெறத்துவங்கியது. குலோத்துங்கன் காலம் முதல் சிவாலயங்களில் தேவிக்குத் தனியாகக் கோயில், காமக்கோட்டம் என்னும் பெயரில் எடுக்கப்பட்டன. காளி வழிபாடு மேலோங்கி வருகிற நிலையைத்தான் கலிங்கத்துப்பரணியும், தக்கயாகப்பரணியும் சுட்டுகின்றன. யோகயாமளம் என்னும் சாக்த தந்திரத்தின் அடிப்படையில் சக்தி வழிபாடு மகோன்னத நிலையை எய்தியது. ‘யோகயாமளத்தினாள்’ என்றே தக்கயாகப் பரணி தேவியைப் புகழ்கிறது. ஆதலின் அக்கால சாக்த மரபை, அறிய தக்கயாகப்பரணி நமக்குப் பெரிதும் உதவுகின்றது. பிரும்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் இணைந்த சக்தியாக தேவி திகழ்கிறாள். இவளே பைரவி என்றும் சிறப்பிக்கப்படுகிறாள். இவ்வாறு விளங்கும் தேவியை மார்க்கண்டேய புராணம் மகாலக்ஷ்மி, மகா சரஸ்வதி, மாகேச்வரீ என்று முப்பெருந்தெய்வங்களும் இணைந்த வடிவாகக் கூறும். இச்சிற்பத்தின் கரத்தில் உள்ள அக்கமாலை, தாமரை, கட்வாங்கம், கபாலம், பாசம் முதலியன சாக்த தந்திரத்தின் அடிப்படையில் படைக்கப்பட்டுள்ள பரமேச்வரீயாக இவளைக் காட்டுகின்றன. தக்கயாகப் பரணியில் உள்ள ஒரு செய்யுள் கணவரை ஒரு பாதியிலே கொண்டு மகிழ்கின்ற தேவி என இவளை, “வழியு நீறு வேறார மகிழும் ஓரோர் கூறும் அறம்அறாத வானாள மடம் அறாத மானாள ஒழியும் ஓரோர் கூறும் ஒருவராகி நேராகி உடைய கேள்வர் ஒர் பாதி உருகு காதல் கூர்வாளே”. எனப்பாடுகிறது. இங்கு தேவிக்குச் சிறப்பு அவளின் அங்கமாக சிவன் விளங்குகிறார் என்பதே, ஆதலின் இச்சிற்பம் யோகயாமளையான பராசக்தியைக் குறிக்கிறது என்னில் தவறாகாது. தமிழகத்தில் வேறு எங்கும் இது போன்ற சிற்பமே இல்லை எனலாம். அந்த அளவுக்குச் சிறப்பு வாய்ந்த இச்சிற்பத்தை அறிந்து கொள்ள நமக்கு உதவும் நூல் தக்கயாகப் பரணி. இச்சிற்பத்தை மனத்தே கொண்டுதான் மேற் கொன்ன பாடலைப் பாடினாரோ என எண்ணத் தோன்றுகிறது. மற்றொரு சிற்பம் ராஜகம்பீரன் மண்டபத்தின் உள்ளே சுவரில் ஒரு கோட்டத்தில் இருக்கும் எழில்மிகும் சிற்பமாகும். இதழ்களில் புன்னகை தவமும் அருள் உருவான பெண் தெய்வம்; இரண்டு கரங்கள். வலக்கரத்தில் தாமரை மலர் தாங்கி தேவி விளங்குகிறாள். இடக்கரத்தில் கலசம். தாராசுரத்தில் உள்ள அனைத்து உருவங்களிலும் பெண்மையின் அழகு முழுவதையும் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தவல்ல இவ்வுருவை ‘அன்னபூர்ணா’ என்று கூறி வருகின்றனர். இது அன்னபூர்ணா இல்லை. இடச்சுரத்தில் பாத்திரமும் வலக்கரத்தில் ஒரு கரண்டியும் ஏந்தி அன்னம் பாலிக்கும் தேவியாக விளங்குபவளே அன்னபூர்ணா. இத்தேவி வலக்கரத்தில் தாமரையும் இடக்கரத்தில் கலசமும் தரித்துள்ளார். ஆதலின் இவள் யார்? முன்னர் குறிப்பிட்டது போல் இக்கோயில் எடுக்கப்பட்ட காலம், சாக்த தந்திரம் மேலோங்கி நின்ற காலம்; தேவியை சக்தியாக, அகிலலோக மாதாவாக உருவகித்து வணங்கிய காலம். அன்னையை, பரமேச்வரி என்றும், மாலவர்க்கு இளையவள் என்றும் குறிப்பது போலவே வைஷ்ணவி சக்தியாகவும் வணங்குவது உண்டு. அதையே ‘மாயோள்’ என்ற பெயரில் குறிப்பர். மாயவன் புரிந்த அருஞ்செயல் எல்லாம் தேவியின் செயலே எனச் சாக்தர் குறிப்பர். மாயவன் புரிந்தவற்றுள் ஒன்று அமுதம் கடைந்தபோது தேவர்களுக்கும் அமுதத்தை மோஹிணி வடிவிலே பகிர்ந்து கொடுத்ததாகும். அமரர் அமுதம் பெற்றனர், அசுரர் ஏமாந்தனர் என்ற கதை அனைவரும் அறிவர். விஷ்ணு மாயாவன தேவி மோகினி வடிவில் வந்தவள் என தக்கயாகப்பரணியில் ஒட்டக்கூத்தர் குறிக்கிறார். “தமர நூபுராதார சரணியாரனாகாரி தருண வணிலா வீசு சடில மோலி மாகாளி அமரர் வாழ்வு வாழ்வாக அவுணர் வாழ்வு பாழாக அருளும் கோகினியாகி அமுதபாலும் யருளாளோ”, இதிலிருந்து இங்குள்ள சிற்பம், ஒரு கரத்தில் தாமரை மலரும், மறு கரத்தில் அமுத கலசமும் ஏந்தி மோஹிணி வடிவில் காணும் ‘விஷ்ணுமாயா’ வான சக்திதான் என்பதில் ஐயமில்லை. தாராசுரம் கோயிலும் ஒட்டக்கூத்தரின் தக்கயாகப் பரணியும் தமிழக வரலாற்றுக்கு ஒப்பரும் பொக்கிஷங்களாகும். தாராசுரம் கோயிலும் தக்கயாகப் பரணியும் விக்ரமசோழன், குலோத்துங்கன், இராஜராஜன் ஆகிய மூன்று பெரும் சோழ மன்னர்களைப் பற்றியும் அழகிய உலாக்கள் பாடிய கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றியது தக்கயாகப் பரணி என்பது அனைவரும் அறிந்ததாகும். ஒட்டக்கூத்தருக்கு சுமார் 60 அல்லது 70 ஆண்டுகளூக்கு முன்னர் ஜெயங்கொண்டார் குலோத்துங்கன்மீது கலிங்கத்துப்பரணி பாடியுள்ளார். கலிங்கத்துப்பரணி ஒர் அரசனின் வெற்றியைச் சிறப்பிக்கும் வகையில் அரசனின் புகழ்பாட எழுதப்பட்ட நூல். தக்கயாகப்பரணி சிவபெருமானின் ஏவலால் வீரபத்திரக் கடவுள் தருக்கோடு தக்கன் புரிந்த யாகத்தை அழித்த புராணக் கதையைப் பாடுவதற்கு எழுதப்பட்ட நூல் போலத் தோற்றம் அளிக்கிறது. ஆனால் உண்மையில் இந்நூலைச்சற்று ஆழ்ந்து படிக்கும் போது இரண்டாம் இராஜராஜ சோழனையும், அவனால் தோற்றுவிக்கப்பட்ட தாராசுரத்திலே இருக்கின்ற இராஜராஜேச்சுரம் உடையாரையும் சிறப்பிக்க எழுதிய நூல் இது என்று அறியலாம். எல்லாவற்றிற்கும் தலைவனாகிய இராஜராஜபுரத்தி ஈசர் இருக்க அவரைப் புறக்கணித்து விட்டுத் தக்கன் யாகம் செய்யத் தொடங்கினான் என்று தக்கயாகத்தை ஒட்டக்கூத்தர் தொடங்குகிறார். “எல்லை நாயகன் ராஜராஜபுரேசர் ஈசர் இதற்கெனும் தொல்லை நான்மறை நிற்க கேள்வி வேள்வி தொடங்கியே” வேள்வி அழிக்கப்பட்ட பிறகு அமரர்கள் எல்லாம் பேய்களாகக் கிடப்பதை இறைவிக்குக் காட்ட இறைவன் களத்திற்கு வருகிறான். அவன் இராஜராஜபுரீசன் என்று கூத்தர் பாடுகிறார். “ஒரு மருங்குடைய உலகநாயகியொடு ஒற்றை வெள்ளைவிடை ஊர்திமேல் இருமருங்கும் மறை தொழ எழுந்தருளி ராஜராஜபுரி ஈசரே” என்று இச்செய்யுள் வருகிறது. தொடக்கத்திலிருந்து இறுதி வரையில் தக்கனைத் தண்டித்து அருள் புரிந்த இறைவனாகப் படைக்கப்பட்டுள்ளார் தாராசுரம் கோயிலில் உறைகின்ற இராஜராஜேச்சுரம் உடையார் என்பது இதனால் தெளிவாகின்றது. இராஜராஜேச்சுரம் என்பதே இப்பொழுது தாராசுரம் என்று மருவி வழங்குகிறது. இந்நகருக்கும் இராஜராஜபுரம் என்று பெயர் என்று கல்வெட்டுகளினின்று அறியலாம். தக்கயாகப் பரணியில் காளிக்குக் கூழிட்டுப் பேய்கள் வாழ்த்துகின்றன. அவை காளியையோ, முக்கண் இறைவனையோ அல்லது தக்கன் யக்ஞம் தகர்த்த வீரபத்திரக் கடவுளையோ வாழ்த்தவில்லை. தாராசுரத்தில் இராஜராஜேச்சுரம் அமைத்த இரண்டாம் ராஜராஜனையே வாழ்த்தின. “தாராக அண்டம் தொடுத்தணிந்தார் தமக்கிடம் போதத் தமனியத்தால் சீராச ராசீச்சரஞ் சமைத்த தெய்வப் பெருமாளை வாழ்த்தினவே” எனவே, இந்தக் காப்பியத்தின் தலைவன் ராஜராஜபுர ஈசன். (தாராசுரம் கோயிலில் உறைகின்ற பரம்பொருள்). அவ்விறைவனைப் போற்றும் முகத்தால், அவ்விறைவனுக்குப் பெருங்கோயில் எழுப்பித்த இரண்டாம் இராஜராஜ சோழனையும் இந்நூலில் புகழ்கிறார் ஒட்டக்கூத்தர். அரசனின் போர் வெற்றியைப் புகழ்ந்து அவனது பெருமையைப் பாடியது கலிங்கத்துப்பரணி. இதுவும் அரசனின் சிறப்பைப்பாடுகின்ற நூல்தான். ஆயினும் தெய்வத்தின் சிறப்பைப்பாடி அதற்கு அங்கமாக அரசனின் புகழை அமைத்துள்ளது இந்த நூல். ஆதலின் இதை தெய்வப்பரணி என்று அழைக்கிறோம். அந்த அமைப்பில் கலிங்கத்துப் பரணியிலிருந்து மாறுபட்டது தக்கயாகப்பரணி. தனக்கென ஒரு தனி வழி வகுத்துக் கொண்டு, ஒப்பற்ற காப்பியமாக கலிங்கத்துப் பரணியை ஜெயங்கொண்டார் படைத்த பிறகு அதே முறையில் அரசனைப் புகழ்வதைக் காட்டிலும் ஒரு புதிய முறையிலே பரணியை அமைத்துப் புகழ் கொண்டுள்ளார் ஒட்டக்கூத்தர். ஜெயங்கொண்டார், வரலாற்றை மையமாகக் கொண்டு நூல் இயற்றியது போலவே, ஒட்டக்கூத்தரும் வரலாற்றின் அடிப்படையிலேயே முழுவதும் எழுதப்பட்ட மூன்று உலாக்களைப் படைத்து அதிலும் ஒரு புதுமையைக் கண்டுள்ளார். அவரது உலாக்களுக்கு ஈடாக வேறு உலாக்களைக் கூற இயலாது. தக்கயாகப்பரணியில் கடைத்திறப்பு என்னும் பகுதியில் ‘பெண்களே கதவுகளைத் திறவுங்கள்’ என்று கூறுவதாகப் படைப்பது இலக்கிய மரபு. அந்த வகையில் இராஜராஜபுரத்தில் உள்ள பெண்களைக் கதவு திறக்குமாறு பாடல்கள் பல பாடியுள்ளார். இதிலிருந்து ராஜராஜபுரத்திற்கு அவர் எவ்வளவு சிறப்பு அளித்திருக்கிறார் என்று அறியலாம். தாராசுரம் கோயிலில் மற்றொரு சிறப்பும் உண்டு. ஒரு கோட்டத்தில் தக்கனது யாகம் தகர்த்த சீற்றம் முழுவதும் கல்லிலே காட்டும் வீரபத்ரக் கடவுளின் தோற்றம் உள்ளது. அச்சிற்பம் மிகவும் சிறப்பாக, போற்றத் தகும் வகையில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு முன்னர் கட்டப்பட்ட தஞ்சை இராஜராஜேச்சுரத்திலோ, கங்கை கொண்ட சோழேச்சுரத்திலோ வீரபத்திரர் உருவம் இவ்வளவு சிறப்பாக இடம் பெறவில்லை. தாராசுரத்தில் மட்டும் வீரபத்திரக் கடவுளுக்கு உள்ள சிறப்பை நோக்கும் போது இவ்வுருவத்தை மனத்தில் இருத்திக் கொண்டுதான் வீரபத்திரக் கடவுளின் வீரச் செயல்களைப் பாடும் தக்கயாகப் பரணியைக் கூத்தர் பாடினாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. தக்கயாகப் பரணியில் மற்றொரு சிறப்பும் உண்டு. தக்கயாகத்தோடு தொடர்பில்லாத திருஞானசம்பந்தர் வழிபாடு இந்நூலில் இடம் பெற்றுள்ளது. அவர் சமணரோடு வாதிட்டதும், பாண்டிமன்னனின் பிணி தீர்த்ததும் இந்நூலில் இடம் பெற்றது ஏன் என்று சிலர் வியப்படையலாம். தாராசுரம் கோயிலின் திருச்சுற்றில் தேவாரம் பாடுகின்ற ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களுடைய உருவச் சிலைகளும், அவர்களுடைய பெயர்களும் உள்ளன. இதிலிருந்து தேவாரப் பதிகங்கள், தாராசுரம் கோயிலில் மிகச் சிறந்த இடம் பெற்றிருந்தன என்பதும், அவற்றைப் பாடியவர்களில் முதல்வராக குறிக்கப்படும் ஞானசம்பந்தரின் வரலாறு தாராசுரம் கோயில் இறைவனைப் பாட வந்த நூலில் இடம் பெற்றதில் வியப்பில்லை என்பதும் அறியப்படும். சோழப் பெருங்கோயில்களான, தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கும், கங்கை கொண்ட சோழீச்சுரத்திற்கும் கருவூர்த்தேவர் பாடிய திருவிசைப்பாக்கள் உண்டு. ஆனால் அவற்றை மையமாகக் கொண்டெழுதப்பட்ட முழுநூல்கள் ஏதும் இதுகாறும் கிடைக்கவில்லை. தாராசுரம் கோயிலைப் பற்றிய முழு நூலாகத் தக்கயாகப் பரணி கிடைத்திருப்பது தமிழகத்தின் நற்பேறு என்றே கருதலாம். தஞ்சையில் ராஜராஜன் கோயிலில் இராஜராஜேச்சுரம் என்று ஒரு நாடகம் நடிக்கப்பட்டதாக கல்வெட்டுகளில் இருந்து அறிகிறோம். அது இராஜராஜனின் புகழையும், அவன் தோற்றுவித்த கோயிலையும், அதில் இனிது உறைகின்ற ராஜராஜேச்சுரத்து இறைவனையும் போற்ற நாடகமாக நடிக்க இயற்றப்பட்ட நூலாக இருக்க வேண்டும். ஆனால் அது இதுகாறும் நமக்குக் கிட்டவில்லை. ஆயினும் தக்கயாகப் பரணியைப் பார்க்கும்போது ராஜராஜேச்சுர நாடகம் போலவே தாராசுரம் கோயிலில் இது கூத்தாகப் படைக்கப்பட்டதோ என்னும் எண்ணம் தோன்றுகிறது. தாராசுரம் கோயிலைக் கட்டும் பொழுதும், கட்டி முடித்த பொழுதும் அதிலேயுள்ள வழிபாடினையும், திருவிழாக்களையும், இசையையும் கூத்தையும் ஏற்படுத்தியபோது உடனிருந்து கண்டு களித்த கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தரால் இந்நூல் இயற்றப் பெற்றது என்று எண்ணும்போது உளம் பூரிக்கிறோம். திருவானைக்கா வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கோயில்கள் தமிழகத்தில் பல உண்டு. அவற்றில் திருவானைக்காவில் உள்ள கோயில் சிறப்புப் பெற்றது. கோயிற் கலையில் சிறப்பெய்தியது சோழவளநாடு. அந் நாட்டின் தலைநகராகச் சங்க காலத்தில் திகழ்ந்து வந்தது உறையூர். உறையூரைத் தலைநகராக சோழப் பேரரசன் கரிகால் பெருவளத்தான் தோற்றுவித்தான் என இலக்கியங்களிலிருந்து அறிகிறோம். "காடுகொன்று நாடாக்கி குளம் தொட்டு வளம் பெருக்கி கோயில் கொண்டு குடிநிறீ இ…..உறந்தை போக்கி எனப் பத்துப் பாடல் கூறும். கரிகாலனுக்குப் பிறகு ஆண்ட சோழர்களில் சிறந்தவன் கோச்செங்கண்ணான். இவனது வாழ்க்கை ஆனைக்கா வரலாற்றுடன் இணைந்துள்ளது. செங்கண்ணான் சிலந்தியாகத் திகழ்ந்து ஆனைக்கா அண்ணலிடம் அளவிலா பக்தி பூண்டதால், காவிரிசூழ் சோழநாட்டில், சோழர்தம் குடியில் பிறந்தான் என அப்பர் பெருமான் கூறுவர். “எண்தோளீசர்க்கு எழில் மாடம் எழுபது செய் துலகாண்டசெங்கணான் கோச்சோழன்” என்று செங்கண்ணானைத் திருமங்கை ஆழ்வார் போற்றுகிறார். அம்மன்னன் காலத்தில் கோயில்கள் முழுமையும் கல்லாலேயே கட்டப்பெறும் வழக்கம் இல்லை. அதிட்டானம் கல்லாலும், மேல் பகுதி செங்கல், சுதை, மரம் முதலியன கொண்டும் எடுக்கப் பெறுவது மரபு. செங்கண்ணானுக்கும் பின்னர் ஆனைக்கா அண்ணலுக்கு அருள் பெற்றோர் பலர் அவ்வப்போது திருப்பணிகள் நடத்தியிருக்க வேண்டும். அதன் பயனாக அழகிய மலர்போல இன்று தோன்றும் ஆனைக்கா கோயிலில் மூலத்தான விமானம், இந் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாட்டுக் கோட்டை நகரப் பெருமக்களால் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. அதற்கும் முன்னர் அண்ணலுறைந்த கோயில் யாரால் கட்டப்பட்டிருந்தது, எவ்வாறு இருந்தது என்று வினாவுக்கு ஒருவாறு ஊகித்துத்தான் பதில் சொல்ல முடியும். காரணம் அன்று திகழ்ந்த கோயிலின் வரைபடமோ, நிழற்படமோ இல்லை. ஆனைக்கா கோயிலின் உள் சுற்றில் தரையில் மதுரை கொண்ட பரகேசரி, பராந்தக சோழனின் கல்வெட்டுத் துண்டு ஒன்று பாவப்பட்டுள்ளது. இதிலிருந்து பரந்தகன் காலத்தில் கற்கோயில் ஒன்று இங்கு இருந்தது என அறியலாம். செங்கண்ணானுக்குப் பிறகு பராந்தகன் காலத்திலோ அதற்கும் முன்போ இது கற்கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. அப்பெரும் பணி எக்காலத்தில் நடந்தது? இக்கேள்விக்கு விடையளிக்கும் வகையில் திருச்சுற்றில் ஏழு சிற்பங்கள் உள்ளன. எழில் வாய்ந்தவை இச்சிற்பங்கள்; பார்ப்போர் மனதில் பக்திக் கனலை ஊட்டுபவை; வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவையுங்கூட. இவற்றில் மூன்று சிற்பங்கள் சற்றுப் பெரியவை; நின்ற நிலையில் உள்ளவை. ஒன்று நான்முகனின் உருவம். கமண்டலம், அக்கமாலை, அபயம், தொடைமீதமர்ந்த கரங்களுடன் காட்சியளிக்கிறார். இது கோயிலின் வட புறக்கோட்டத்தை அலங்கரித்த உருவம். மற்றொன்று உமையொரு பாகனாம் அர்த்தநாரீச்வர உருவம். இடப்புறம் அன்னையின் உருவும் கொண்டது. வலப்புறம் மழு, தொடைமீதமர்ந்து விளங்கும் இரு கரங்கள், இடப்புறம் வளைபூண்டு, தாமரை மலர் தாங்கி நிற்கும் அன்னையின் ஒரு கரம்; வலப்புறம் மகரக்குழை; இடப்புறம் தோடு, வலப்புறம் ஆடை, இடப்புறம் துகில் புடவை. எழிலே உருவான அற்புதத் திருமேனி. இவ்வுருவம் மூலத்தான விமானத்தில் பின்புறக் கோட்டத்தை அலங்கரித்திருக்க வேண்டும். உமையொரு பாகன் அக் கோட்டத்தை அலங்கரிப்பதை கி.பி. 9,10-ஆம் நூற்றாண்டுகளில் கட்டப் பெற்ற சில கோயில்களில் இன்றும் காணலாம். மூன்றாவது நின்ற நிலையில் உள்ள சிவபிரானின் உருவம், கேசம் சுழல் முடி, நான்மு கரங்கள், வலக்கரங்கள் சூலமும் அபய முத்திரையும் கொண்டுள்ளன. கீழ் இடைக்கரம் குரக்கம் சேர்ந்துள்ளது. மேற்கரத்தில் உள்ளது தெளிவாக இல்லாவிடினும் தீ போலத் தெரிகிறது. இது நிலையில் மெய்ஞானம் புகட்டும் தட்சிணாமூர்த்தி. ஆம், நின்ற நிலையிலும் ஞானம் புகட்டும் வள்ளலைப் படைப்பது ஒரு மரபுதான். பழுவூரில் 10-ஆம் நூற்றாண்டில் தோற்றிவிக்கப்பட்ட கோயிலில் இவ்வமைப்பை இன்றும் காணலாம். ஆதலின் இவ்வுருவம் தென்புறக் கோட்டத்தை அலங்கரித்த தெக்கணாமூர்த்தி உருவம். இம் மூன்று சிற்பங்களைத் தவிர அமர்ந்த நிலையில் இருக்கும் நான்கு சிற்பங்களில் ஒன்று முருகப்பெருமான் உருவம். மற்றது உமாமகேசுவரனின் அழகுத் திருமேனி. இதில் அன்னை அமர்ந்துள்ள நிலை அனைவரையும் கவரும். மூன்றாவது ஆலின் கீழமர்ந்த பெருமானின் எழில் உருவம். நான்காவதும் சிவபிரானின் உருவமே. இவை நான்கும் மூலத்தான விமானத்தின் கிரீவம் என்ற பகுதி (விமானத்தின் மேல் கழுத்து என்னும் பகுதி)யை அலங்கரித்த சிற்பங்கள். இச் சிற்பங்களின் அமைதிகளிலிருந்து ஒன்று தெளிவாகக் கூறலாம். இவை கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் ஆதித்தன், பராந்தகன் ஆகிய இரு சோழர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கோயில் சிற்பங்களை ஒத்து உள்ளன. இவை தவிர இக் கோயிலில் ஆடவல்ல பெருமானின் சிற்றாலயத்தின் சுவரின் புறத்தில் இரண்டு சிறிய சிற்பங்கள் உள்ளன. இவை மிகவும் எழில் வாய்ந்தவை. ஒன்று அன்னை, காவிரி உருவில் நிசும்பாசுரனுடன் வீரச்சமர் புரியும் அழகிய உருவம். இது போன்ற சிற்பங்களும் 10-ஆம் நூற்றாண்டுக் கோயில்களை அலங்கரிக்கின்றன. இதிலிருந்து மூலத்தான விமானம், இன்றுள்ள விமானம் போன்றே சிறிய அளவில் கற்றளியாகக் கட்டப்பெற்றிருந்த சோழர் கோயிலாகும் எனத் துணியலாம். இச்சிற்பங்களில் ஒன்றிரண்டு பின்னம் அடைந்துள்ளதால், திருப்பணியின் போது திருச்சுற்றாலையில் வைக்கப்பட்டு உள்ளன. திருவானைக்கா செல்லும் பேறு பெற்றோர் இத்திருவுருவங்களைக் காணத் தவறாதீர்கள். இருக்குவேளிர் அளித்த ஈடிலாச் செல்வம் திருச்சியிலிருந்து மதுரை மாநகர் செல்லும் வழியில் கொடும்பாளூர் என்னும் ஓர் ஊர் உள்ளது. இன்று இது மிகவும் சிறிய ஊர்தான். ஆனால் தமிழக வரலாற்றில் இன்றியமையாக நிலை வகித்த பழம் பெரும் ஊர் இது. இதைத் தலைநகராகக் கொண்டு இருக்குவேள் என்ற வேளிர் குலத்தவர் ஆண்டு வந்தனர். சங்க காலத்திலேயே இவர்கள் புகழ் மேம்பட ஆண்டனர் என்று அறிகிறோம். வள்ளல் பாரி இறந்த பின்னர் அவரது இரு மகளிரையும் கபிலர் இருங்கோ வேளிடம் அழைத்துச் சென்றார். இருங்கோவேளைப் புகழ்ந்து பாடும் கபிலர் இக் குடிவந்தோர் வடபக்கத்து ஒரு முனிவருடைய ஓமகுண்டத்தில் தோன்றியவர் என்றும், நெடிய மதிலை உடைய துவராபதி என்னும் படை வீட்டை ஆண்டவர் என்றும், கொடையாளிகளில் சிறந்தோர் என்றும் பாடுகிறார். இருங்கோவேளை, 49-ஆவது தலைமுறையைச் சேர்ந்தவர் என்றும் “வேளிர்களில் வேள்” என்றும் புகழ்கிறார். இருங்கோவேளுக்குப் புலிகடிமால் என்னும் பெயரும் இருந்தது. இதிலிருந்து இவர்கள் யாதவர் குடியைச் சேர்ந்த வராகச் சங்க காலத்திலேயே கருதப்பட்டனர். என்பது தெளிவாகிறது. பிற்காலத்திலும் இவர்களது கல்வெட்டுகள், இவர்களது ‘யதுகுலத் திலகர்கள்’ என்று குறிக்கின்றன. உறையூரிலிருந்து மதுரை செல்லும் பெரு வழியில் கொடும்பை மாநகர் இருந்தது என்று சிலப்பதிகாரம் குறிக்கிறது. இதன் பின்னரும் இந்நகர் சிறப்புற்றிருந்தது என்பது திண்ணம். சைவப் பெரியோர்களில் இடங்கழிநாயனார் என்பவர் இந்நகரை ஆண்டவர். இந்நகரின் அழகைச் சேக்கிழார் பெருமான் சிறப்பாகப் போற்றுகிறார். முறுகுறு செங்கலமலமது மலர்துதைந்த மொய்யளிகள் பருகுறுதென் திரைவாவிப் பயில்பெடையோ டிரையருந்தி வருகுறுதண் துளிவாடை மறையமா தவிச்சுழல் குருகுறங்கும்கோணாட்டுக் கொடிநகரம் கொடும்பாளூர் என்று பாடியுள்ளார். இதிலிருந்து இப்பகுதி கோணாடு என அழைக்கப்பட்டது என்பதும், அந்நாட்டின் கொடி போன்றது கொடும்பாளூர் என்பதும் அறியலாம். அந்நகரத்திலிருக்கும் வேளிர் குலத்தரசு என இடங்கழியாரைக் குறிப்பர். அவராட்சியில் அரசருக்குரிய நிலைக்கொட்டாரம் ஒன்று இருந்தது. அதில் நெல் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இருக்குவேளிர் சிறந்த சிவபக்தர் என்று அறிகிறோம். இதுகாறும் வாழ்ந்த இருக்குவேளிரின் வரலாறு இலக்கியங்களிலிருந்துதான் அறிய முடிகிறது. கி.பி. 9-ஆம் நூற்றாண்டிலிருந்து அவர்களைப் பற்றிய பல கல்வெட்டுகளிலிருந்து அறிகிறோம். 7, 8, 9-ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தின் வடபகுதியைப் பாண்டியரும் ஆண்டனர். இருபெரும் பேரரசுகளின் இடையே வாழ்ந்தவராதலின் சில காலங்களில் பாண்டியரின் நண்பராகவும், சில காலம் பல்லவரின் நண்பராகவும் இவ்வேளிர் ஆண்டனர். கொடும்பாளூரில் விக்ரமகேசரி என்னும் பட்டம் ஏற்ற பூதி என்ற வேளிரின் கல்வெட்டு, இவ்வழி வந்த முன்னோர் பலரைக் குறிக்கிறது. இவர்களில், பல யானைக் கூட்டங்களைப் போரில் கைப்பற்றிய ஒரு மன்னன் முதலில் குறிக்கப்பட்டுள்ளான். அவன் வழியில் பரவீரஜித், மழவரை வெற்றிகண்ட வீரதுங்கன், அதிவீர அனுபமன், சங்ககிருத், நிருபகேசரி, வாதாவியை வெற்றிகண்ட பரதுர்க்கமர்தனன், அதியரைய மங்கலத்தில் சாளுக்கியரை வெற்றிகண்ட சமராபிராமன் என்பவர்கள் பூதிக்கு முன் ஆண்டவர்களாகக் கூறப்பட்டுள்ளனர். இவ்வரசர்களில் இருவர் சாளுக்கியரை வெற்றி கண்டுள்ளனர். ஒருவர் வாதாபி நகரையும் மற்றவர் அதியரைமங்கலத்தில் (திருவதிகை) சாளுக்கியரையும் வெற்றி கண்டனர். இவை பல்லவர்களுடன் இணைந்து அடைந்த வெற்றியாய் இருக்கலாம். பாண்டிய மன்னன் தேர்மாறன் என்பவன் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனின் சமகாலத்தவன். தேர்மாறன் கொடும்பாளூர் மன்னனை வெற்றி கண்டான் என்று வேள்விக்குடிச் செப்பேடு கூறுகிறது. இதிலிருந்து கொடும்பாளூர் வேளிர் பல்லவனுக்கு உதவினர் என்பது தெளிவாகிறது. பல்லவன் தந்தியின் மகன் மூன்றாம் நந்திவர்மனின் சிற்றரசர்களாக இரு வேளிர்கள் இருந்தனர். ஒருவர் மாற்பிடுகு இளங்கோவேளார் என்றும் மற்றவர் விடேல் வுடுகு இளங்கோவேளார் என்றும் பெயர் பெற்றிருந்தனர். விடேல் விடுகு என்பதும் மாற்பிடுகு என்பதும் பல்லவர்களின் பட்டங்களாகும். இவர்கள் பல்லவர் கீழாண்டபோது, பல்லவரின் பட்டங்களையும், பாண்டியர் கீழாண்டபோது பாண்டியர் பெயர்களையும், சோழர் கீழ் வந்தபோது சோழரின் பெயரையும் தங்களது பெயர்களுடன் இணைத்து வைத்துக் கொண்டனர். கொடும்பாளூரில் உள்ள கல்வெட்டில் குறிக்கப்படும் விக்ரமகேசரி என்னும் பூதி, மிகவும் சிறப்பு வாய்ந்தவர். இவரது காலத்தைப்பற்றி ஆராய்ச்சியாளர்கள் இடையே கருத்து வேறுபாடு உண்டு. சிலர் இவன் முதல் பராந்தக சோழன் காலத்தவன் என்றும், சிலர் சுந்தர சோழன் காலத்தவன் என்றும் கருதுகின்றனர். தென்னவன் இளங்கோவேளாயின மறவன் பூதி என்பவரே கொடும்பாளூரில் குறிக்கப்பட்டுள்ள விக்ரம கேசரியாகிய பூதி என்பது பல ஆராய்ச்சியாளரின் கருத்து. தென்னவன் என்ற பெயரிலிருந்து இவர் பாண்டியர் கீழ் இருந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது. பின்னர் சோழரின் உறுதுணையாக நின்றிருக்கிறார். இவருடைய தாய் அனுபமா என்னும் பெயர் பெற்ற ஈடிணையில்லாச் சோழர் குலப்பெண் என்று அறிகிறோம். பூதி, பல போர்முனைகளில் வெற்றி பெற்றிருக்கிறார். வீரபாண்டியன் என்பவனை வெற்றி கண்டார்; பல்லவர் படையைக் குலைத்து அவர்களின் குருதியால் காவிரியாற்று நீரைச் சிவந்ததாகச் செய்தார் என்று கல்வெட்டு குறிக்கிறது. இவர் ஆதித்த சோழரின் ஆட்சியின் பிற்பகுதியில் சிறந்திருக்க வேண்டும். இவருக்குக் கற்றளி என்றும், வரகுணா என்றும் இரு தேவியர் இருந்தனர். இவர்களில் கற்றளிப் பிராட்டியாருக்கு பராந்தகன் என்றும், ஆதித்தன் என்றும் இருமக்கள் இருந்ததாகக் கொடும்பாளூர்க் கல்வெட்டு கூறுகிறது. விக்ரமகேசரியான பூதி, கொடும்பாளூரில் தன் பெயராலும் தன் இருதேவியரின் பெயராலும் மூன்று கோயில்களை எடுப்பித்தார். அக்கோயில்களையே மூவர் கோயில் என்று இப்பொழுது அழைக்கின்றனர். இவற்றில் ஒரு கோயில் சிதைந்து வீழ்ந்துவிட்டது. மற்ற இரண்டும் இன்னும் நிற்கின்றன. தமிழகக் கட்டடக் கலையில் இம்மூவர் கோயில்கள் சிறப்பான நிலை வகிக்கின்றன. இவை அதிக உயரமான கோயில்கள் அல்ல. சாதாரணமான உயரமுள்ளவைதான். ஆனால் அழகில் மிகவும் உன்னதமானவை. பார்த்துப் பலர் பரவசம் அடைந்த அமைப்புடையவை. கட்டட அமைப்பில் மட்டுமின்றி இதை அலங்கரிக்கும் சிற்பங்களும் எழிலே உருவானவை. அவற்றில் உமையொருபாகன், காலனைக் காலால் காய்ந்த எம்மான், கற்றைச் சடை முடியான், உமையின் ஊடலைத் தவிர்த்தபிரான், வீணையேந்திய வித்தகன், கதிரவன் முதலிய பல சிற்பங்களின் எழிலைத்தான் எவ்வாறு வர்ணிப்பது! ஆடியைக் கையிலேந்தி அலங்கரித்துக்கொள்ளும் ஆரணங்கின் சிலை ஒன்றும் அங்கு உண்டு. அதுபோல் இன்னும் பல சிலைகள் உடைந்தும் சிதைந்தும் ஆங்காங்கே கிடந்தன. இவற்றை ஒரு கலைக்கூடமாக அமைத்து வருகிறார்கள். முப்புரம் எரித்த முதல்வனும், அவரது முதல்வியும் ஒப்பற்ற உருவங்கள். அவை இப்பொழுது சென்னை அரசினர் கலைக்கூடத்தில் உள்ளன. இலக்கியத்திற்கு எடுத்துக்காட்டான பல சிற்பங்களில் ‘கொடுகொட்டி’ என்னும் ஆட்டத்தைக் குறிக்கும் சிலை ஒன்றுள்ளது. சிவபிரான் முப்புரம் எரித்ததும் இது ஆடியதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. அந்நிலையில் வில்லேந்தித் தாண்டவமாடும் சிலையை இங்குத்தான் காணலாம். இவ்வெழில் கோயிலுக்கு விக்ரமகேசரீச்சுரம் எனப் பெயர் இருந்தது என்று அறிகிறோம். இவ்வெழில் படைப்பைத் தோற்றுவித்த பூதி சிறந்த கலைஞராயிருத்தல் வேண்டும். இது தவிர இங்கு முசுகுந்தேச்வரர் கோயில் என்று ஒரு கோயில் உள்ளது. இதைப் பராந்தக வீரசோழன் ஆகிய மஹிமாலய இருக்குவேள் என்பவர் கட்டியதாக அறிகிறோம். இதன் பெயர் முதுகுன்றம் உடையார் கோயில் எனக் கல்வெட்டு கூறுகிறது. சோழமன்னன் பராந்தகன் காலத்தில் இக்குடியைச் சேர்ந்த பலர் அவருக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றனர். செம்பியன் இருக்குவேள், செம்பியன் இளங்கோவேள், வீரசோழ இளங்கோவேள், மும்முடிச்சோழ இளங்கோவேள் முதலிய பலர் குறிக்கப்படுகின்றனர். இவர்களது பெயர்களைக் கவனிக்கும்போது குடியில் பிறந்த மூத்தவர் இருக்குவேள் என்றும், இளையவர் இளங்கோவேள் என்றும் பெயர் ஏற்றனர் என்றும் தெரிகிறது. இவர்கள் சோழ குலப்பெண்களை மணந்தனர். இவர்களது பெண்களைச் சோழப்பேரரசர் மணந்தனர். இக் குலத்தில் பிறந்த பூதி ஆதிச்சகோயிலைக் கற்கோயிலாக எடுத்துப் பல தானங்கள் அளித்திருக்கிறாள். அக்கோயிலைப் பார்த்தால் கொடும்பாளூர் கோயிலைப் போலவே தோற்றமளிக்கும். கொடும்பாளூர் இருக்குவேளின் உதவி கொண்டுதான் சோழர் தங்கள் பேரரசை நிறுவினார்கள் எனில் மிகையாகாது. அவர்கள் விட்டுச் சென்றுள்ள கலைச் செல்வங்களையாவது கண்டுகளிக்க நான் கற்க வேண்டாவா? கொங்கிற் கொடுமுடியார் செந்தமிழ் நாட்டில் செய்யப்பட்டுள்ள செப்புத்திருமேனிகளைக் கண்டு உலகம் வியக்கிறது; கண்டு இன்பப் பரவசம் அடைகிறது. ஒன்றா, இரண்டா. ஏராளமான செப்புத் திருமேனிகள். இவ்வளவு எழில் வாய்ந்த சிலைகளைத் தோற்றுவித்தவர்களின் கலைத்திறன் என்னே! என்னே! என்று பெருமிதமடைகிறது. இவ்வெழிற் சிலைகளில் பெரும்பாலானவை சோழப் பெருமன்னர்களால் செய்விக்கப்பட்டவை; சோழ மண்டலத்திலே ஏராளமாகக் காணப்படுபவை. கொங்கு நாட்டில் இக்கலை சிறந்து விளங்கியதுண்டா? அங்கு செப்பரும் செப்புச் சிலைகள் உண்டா? அது தனக்கே உரிய தனித்தன்மை கொண்டுள்ளதா என்று கேட்கத் தோன்றும். உண்டு, உண்டு - இது கொங்கு நாட்டுக் கலை என்றே அனைத்து நாட்டினரும் போற்றும் அளவுக்குத் தனித்ததொரு கலையாகவே பரிணமித்துள்ள செப்புத்திருமேனிகள் இங்கு உண்டு. இவை ஒரு சிலவே ஆயினும் உன்னதப் படைப்புகளாக மிளிர்கின்றன, ‘கொங்கிற் கொடு முடியார்’ என்ற ஆன்றோர்கள் போற்றுகின்ற கொடுமுடி அப்பரின் ஆலயத்தில் உள்ள சில செப்புச் சிலைகளே இவற்றில் மிகச் சிறந்தவையாகும். பொன்னியாற்றின் புனிதக் கரையிலே, பூம்பொழில்கள் நடுவில், அமைந்துள்ளது பாண்டிக் கொடுமுடி என்னும் எழில் மூதூர். இதற்கு ஏன் கொடுமுடி என்று பெயர்? சங்க காலத்தில் சேரமன்னர்களில் கொடுமுடி என்னும் சேனைத் தலைவன் ஒருவன் இருந்திருக்கிறான். அவன் ஆண்ட பகுதிதான் கொடுமுடியோ என்னவோ தெரியாது. ஆனால் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து இவ்வூரின் வரலாறு சிறப்பாகத் தெரிகிறது. அப்பர் பெருமான், ஆளுடைய பிள்ளை, தம்பிரான் தோழராம் சுந்தரமூர்த்தி ஆகிய அனைவரும் வந்து இவ்வூர் உறையும் செழும் சோதியைப் பணிந்து பாமாலைச் சூட்டியுள்ளனர். "கானமர் மஞ்ஞைகள் ஆலுங் காவிரிக் கோலக்கரை’ என்றும், ‘மருவலி மென் மலர்ச்சந்து வந்திழி காவிரி மாடே மருமணி நீர்த்துறை’ என்றும் ஞானசம்பந்தப் பெருமான் இவ்வூரைப் போற்றுகின்றார். கொம்பின் மேல் குயில் கூவும் மாமயில் ஆடும் பாண்டிக் கொடுமுடி என்று சுந்தரர் பாடும் பழம் பெரும் ஊர். இங்கு உறை நஞ்சனைப் பாவைமார் குடைந்தாடுகின்றனர் என்றும், குரும்பை மென்முலைக் கோதைமார் குடைந்தாடுகின்றனர் என்றும், வட்ட வாசிகை கொண்டு ஆடிதொழுது ஏத்துகின்றனர் என்றும் சுந்தரர் பாடுகிறார். இவ்வூர் சிட்டனை செழுஞ்சோதியை, கற்றவர் தொழுதேத்தும் நற்றவர் என்றும், நல்லவர் தொழுதேத்தும் வல்லவர் என்றும் புகழ்கிறார். இங்குள்ள புனிதன் கோயில் சுந்தரமூர்த்தின் மனதைப் பெரிதும் கவர்ந்தது. அவர் இங்குற்றதையும் நமச்சிவாயத் திருப்பதிகம் இசைத்ததையும் சேக்கிழார் பெருமான் தம் திருத்தொண்டர் புராணத்தில் அழகாகப் போற்றியுள்ளார். ‘கொங்கினில் பொன்னியின் தென்கரையிலிருந்து கொடுமுடி கோயிலின் முன் சென்று, வலம் வந்து அன்பு மேலிட தாழ்ந்து வேட்கை பொங்கிடத் தொழுது புனிதர் திருமேனியைக் கண்டு இவர்தமை மறக்கவும் ஒன்ணுமோ எனப் பாடினார்’ எனப் போற்றும் சேக்கிழார் பெருமானின் செழுந்தமிழ்ப் பாக்களைக் காண்போம். கொங்கினில் பொன்னித் தென்கரைக் கறையூர்க் கொடுமுடிக் கோயில்முன் குறுகிச் சங்கவெண் குழையார் உழைவலம் செய்து சார்ந்தடி அன்பினில் தாழ்ந்து பொங்கிய வேட்கை பெருகிடத்தொழுது புனிதர் பொன்மேனியை நோக்கி இங்கிவர்தமை மறக்கவொண்ணா தென் றெழுந்தமெய் குறிப்பினில் எடுப்ப அண்ணலால் அடிகள் மறக்கினும் நாம அஞ்செழுத் தறியஎப் பொழுதும் எண்ணிய நாவே இச்சுவை பெருக இடையறா தியம்பும் என்றிதனை. “மற்றுப்பற்றிலேன்” எனச் செழுந்தமிழால் நவின்றார் எனக் கூறுகிறார். “கொடுமுடி நாவலா; உன்னை நான் மறக்கினும் சொல்லும் நா ‘நமச்சிவாயவே’ என்னும் இப்பதிகம்,”உலகெலாம் உய்ய உறுதியாம் பதிகம்" என்பது சேக்கிழார் வாக்கு. உலகெலாம் உய்ய நின்ற அக்கொடுமுடி பகவன் கோயிலில்தான் உலகே வியக்கும் கொங்குநாட்டுச் சிலைகள் உள்ளன. நாரணன் பிரமன் தொழும் காரணன் கோயிலால், நாரணனுக்குத் தனிச் சன்னிதி உண்டு. அலைகடலில் அரவின் மீது துயில்கின்ற அம்மானாக, பள்ளி கொண்ட பெருமானாக, அவர் திகழ்கின்றார். நான்முகனுக்கும் இக்கோயிலில் தனித்ததொரு இடம் உண்டு. வன்னி மரத்தின் கீழ் அமர்ந்துள்ளார் அவர் ஆதலின், இப்பதியை முன் மூர்த்தி தலம் என ஆன்றோர் வணங்குவர். இக்கோயிலில் சிவபிரானின் சில செப்புச்சிலைகளும், திருமாலின் ஒரு செப்புச் சிலையும் உலகவர் கவனத்தை கவர்ந்துள்ளன. இவை அனைத்திலும் மிகவும் தொன்மையானது திருமாலின் திருவுருவே, திருமாலை துகிலணிந்து அணிகலன்களால் ஆண்டு விளங்கும் அழகராகப் போற்றுவதால்தான் நாம் இவ்வளவு இன்பமுறுகிறோம், அணியழகர் இவர். இவருடைய நீலமேனி அழகே உருவெடுத்தது போன்று செப்புத் திருவுருவாகத் திகழ்கிறது. இத்திருமேனியின் அழகை எவ்வாறு போற்றுவது! அவர் எழிலாக நிற்கும் அழகும், அவர் அணிந்துள்ள பட்டாடையின் அழகும், அங்கங்களிலே திகழ்கின்ற அணிகளின் அழகும், மேலிருகரங்களில் ஆழியும் சங்கமும் தோன்றும் அழகும், வலக்கரத்தால் அபயமளிக்கும் அழகும், “அன்பனே, மடுக்களூம் கொடும் மகரங்களும் நிறைந்த ஆழ்கடலென இவ்வுலகை எண்ணிடாதே. தொடையளவு ஆழமே உள்ள நீர்நிலைதான். இனிமையே கடந்திடலாம்” எனக் குறிப்பார் போல, இடக்கரத்தை குரக்கின் மிசை சேர்த்திய அழகும், வைர நீள்முடியின் அழகும், அகத்தாலும் புறத்தாலும், முன்னும், பின்னும், எங்கும் அழகாகவே வியாபித்து நிற்கும் அற்புத அழகும் எடுத்துரைக்க வல்லன் அல்லேன். இந்திய நாட்டுச் செப்புத்திருவுருவங்களில் இதற்கு ஈடே கிடையாது என மேலைநாட்டார் தங்கள் நூலில் இதைக் குறித்து இன்புற்றுள்ளனர். இவ்வெழில் உருவம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. சிவபிரானின் உருவங்களில் குஞ்சித்த திருவடியாய், சதுரதாண்டவம் புரியும் நிலை ஒன்று சிறந்தது. காலின் கீழ் முயலகன் இன்றி, தாமரை இருக்கை மீது திருவடிகளை சதுரித்து ஆடும் அம்மானின் உருவம் கலைச் செழுமை நிறைந்தது. இதைச் சுற்றி விளங்கும் திருவாசி கைத்திறன் காட்டும் கலையாகும். இந்நிலையைத்தான் ‘சதுர நடம் ஆட்டுகந்த சைவர்’ என்று ஆன்றோர் போற்றினர் போலும்! இங்குள்ள மற்றைய திருமேனி முப்புரம் எரித்த முதல்வராகத் திகழும் உருவம். இடதுகாலைச் சற்றே மடித்து, வலது அடியை ஊன்றி ஏற்றமாக நிற்கும் எம்பிரான் நாற்கரங்கள் பூண்டு விளங்குகிறார். இருகரங்களில் மழுவும் அனலும் தாங்கும் நிலை. மற்ற இருகரங்கள் வில்லும் அம்பும் ஏந்தும் நிலை. மார்பை அலங்கரிக்கும் பூணூல் வலக்கரத்தின்மீது செல்கிறது. சடைமுடியில் வெள்ளெருக்கம் பூவும், பிறையும் அரவும் மிளிர்கின்றன. பெருமானின் முகத்தில்தான் என்ன கம்பீரம்! பொன்னார்ந்த திருமேனி முப்புரம் எரித்த முக்கண்ணன் அருகில், மூவுலகிற்கும் அன்னை எழிலே உருவாக, திரிபுரசுந்தரியாக விளங்குகிறாள். கொடி போன்ற உடல், வலக்கரத்தில் மலர். இடக்கரத்தின் அருகிலிருக்கும் அணுக்கியின் தலையில் அமர்த்தி விளங்கும் தேவியின் அணிகள் எளிமையானவை. அவை தேவியின் உடலை அணி செய்வதால் அழகு பெறுகின்றன. தலையை அலங்கரிக்கும் முடி தக்க வடிவில் உள்ளது. இவ்விரண்டு சிலைகளும் கொங்கு நாட்டிற்குத் தனித்ததொரு பெருமை தேடித் தந்த சிலைகளாகும். சோழர்களது கலைபோன்று இல்லாமல் தனித்ததொரு கலையாக, கொங்கு நாட்டுக் கலையாக மிளிர்கின்றன. இச்சிலைகளை முதன் முதலில் உலகிற்கு அறிமுகம் செய்யும் பேறு இவ்வாசிரியருக்குக் கிட்டியது. இப்பொழுது மேலை நாடுகளில் எழுதப்படும் இந்தியக் கலைபற்றிய நூல்களில் ‘கொங்கு நாட்டுக்கலை’ என்றும், அதன் சிறந்த எடுத்துக்காட்டு இவை என்றும் இவை போற்றப்படுகின்றன. இவை கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. இவை தவிர, இங்கு ஆடவல்ல பெருமானின் அற்புதச் சிலை ஒன்றும், அம்மையைத் தழுவிய ஆலிங்கனதேவரின் திருமேனி ஒன்றும் உள்ளன. அவை எழில் வாய்ந்த திருவுருவங்கள். தமிழக ஆலயங்களுல் இன்னும் எவ்வளவு அற்புத திருமேனிகள் இருக்கின்றன! திறனான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும் என்று பாரதி பாடினான், விஞ்ஞானத்தில் மேம்பட்டு விளங்கும் வெளிநாடு அனைத்தும் போற்றும் வகையில், நமக்குக் கலைச் செல்வங்களை வடித்தளித்து, நமக்குப் பெருமை தந்துள்ளனர் நம் முன்னோர். இவற்றைக் கண்டுகளிக்க, போற்ற, காப்பாற்ற நாம் அறிதல் நலமன்றோ? வெற்றி தந்த கலை காஞ்சியை ஆண்ட பல்லவன், மாமல்லன், புலிகேசியை வென்று வாதாபியைத் தூளாக்கினான். ஆதலின், அவன் நாட்டின் மீது வஞ்சம் தீர்க்க புலிகேசி வழிவந்த மூன்றாம் விக்ரமாதித்தன் காஞ்சி மீது பெரும் சீற்றத்துடன் படையெடுத்தான். அவன், மாமல்லன் குலத்தையே வேறறுக்க வேண்டும். வாதாபிக்கு ஏற்பட்ட நிலை காஞ்சிக்கும் ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் சீறிப்பாய்ந்தான். விக்ரமாதித்தன் இளைஞன். அவனது சீற்றத்தின் முன்னர் பல்லவர் படை எதிர்த்து நிற்க முடியவில்லை. விக்ரமாதித்தன் வெகுவேகமாக முன்னேறினான். காஞ்சிவரை அவன் படை வெற்றி வாகையோடு வந்தது. காஞ்சியைத் தூளாக்கி வாதாபிக்கு ஏற்பட்ட இழுக்கைத் துடைக்க வேண்டும் என்ற துடிதுடிப்போடு விக்ரமாதித்தன் அவனது படையை நடத்தி வந்தான். காஞ்சியின் காவல் சடசட என வீழ்ந்தது. படைத் தலைவர்களைப் புறத்தே நிறுத்தி விக்ரமாதித்தன் தானே முதலில் உள்ளே நுழைந்தான். அவன் கண்ணில் முதலில் பட்டது பல்லவன் இராஜசிம்மனால் கட்டப்பட்ட கயிலாயநாதர் கோயில். அக்கோயில் கட்டி இருபது அல்லது முப்பது ஆண்டுகளே இருக்கும். எழிலார்ந்த சிற்பங்கள் ஒப்பரும் ஓவியங்கள். கயிலயங்கிரியில் சிவபெருமான் புரிகின்ற லீலையையும் தோற்கடிக்கும் வண்ணம் ஒரு பெரும் கோயிலாக இதை நான் தோற்றுவித்தேன் என இராஜசிம்மன் கூறியுள்ளபடி, கல்லிலே படைக்கப்பட்ட ஒப்பரும் இக் காப்பியம் முதன் முதலில் விக்ரமாதித்தன் கண்ணில் பட்டது. விக்கிரமாதித்தனுடன் அவன் தேவி லோகமாதேவியும் உடனிருந்தாள். இருவரும் இக்கோயிலின் அழகைக் கண்டு மெய்மறந்து நின்றனர். காஞ்சியை நிருமூலமாக்க வேண்டும் என்று வந்த மன்னன், அதன் கலையில் தன்னை மறாந்தான். இவ்வளவு ஒப்பரும் கலை நிறைந்த காஞ்சியையா அழிப்பது? விக்ரமாதித்தன் பெரும் போர்த்தலைவனே ஆயினும் கலையுள்ளம் மிகுந்தவன். காஞ்சியின் ஒவ்வொரு அங்கத்தையும் தூள்தூளாக்கத் துடித்துக் கொண்டு புறத்தே நின்ற தன் படைத் தலைவர்களுக்கு ஓர் ஆணை பிறப்பித்தான் அவன்: ‘காஞ்சிக்கு எவ்வித கேடும் விளைவிக்காமல் உள்ளே நுழையுங்கள்’ என ஆணையிட்டான். நாட்டை வென்ற அம்மன்னனை இந்நாட்டுக் கலை வென்றுவிட்டது. அவனது மனைவி இங்கு பணிபுரிந்த சிற்பிகளைத் தன்னாட்டுக்கு அழைத்துச் சென்று அங்கு ஒரு கோயிலை இதே போன்று எழுப்பினாள். லோகமாதேவீச்சரம் என்னும் பெயர் பெற்ற அக்கோயில் இன்றும் ‘பட்டக்கல்’ என்னும் இடத்தில் உள்ளது. சாளுக்கியர்களை இராஷ்டிரகூடர்கள் தோற்கடித்தார்கள். அவர்களில் கிருஷ்ணன் என்பவன் புகழ்பெற்றவன். அவன் ‘பட்டக்கல்லில்’ இருந்த லோகமாதேவிசுரத்தைப் போல் எல்லோராவில் மலையைச் செதுக்கி ஒரு பெரும் கோயிலைத் தோற்றுவித்தான். அழகாலும் சிற்பச் செழுமையாலும் சிறந்த அக்கோயிலை நிர்மாணித்த சிற்பி, ‘நானா இக்கோயிலை நிர்மாணித்தேன்’ என ஆச்சரியப்பட்டானாம். அக்கோயிலே இன்று உலகப் புகழ் பெற்றுள்ள எல்லோராக் கயிலாயநாதர் கோயில். அதற்கு அடிப்படையாக இருந்தது தமிழகத்துக் காஞ்சி கயிலாயநாதர் கோயில். தமிழகத்துக் கலைகளுக்கும் ஊக்கம் அளிப்பதாய் இருந்ததை இது காட்டுகிறது. இதை ஒரு வழித் தொடர்பாக யாரும் கருதிவிடக்கூடாது. இதே போன்று சாளுக்கியர், நுளம்பர், கலிங்கர், வங்காளர் ஆகியோர் கலைகள் தமிழ் நாட்டுக் கலையை வளப்படுத்தியுள்ளன. எவ்வாறு சாளுக்கிய விக்ரமாதித்தன் தமிழகக் கலையிலே தன்னை மறந்தானோ அதே போன்று பல தமிழக மன்னர்கள் அண்டை நாடுகள் மீது வெற்றி கண்டபோது அந்நாட்டுக் கலை அழகில் தங்களை மறந்து போற்றியுள்ளனர். அதுதானே பண்பாட்டின் உச்சி. சிறப்பாக தமிழகத்தில் அண்டை நாடுகளின் மீது வெற்றி கண்ட அரசர்களில் சோழர்களே தலையானவர்கள். அவர்கள் வடக்கே வங்கம் வரையிலும், தெற்கே ஈழம் வரையிலும் வெற்றி கண்டுள்ளனர். சிறப்பாக இராஜராஜன், இராஜேந்திரன், இராஜாதிராஜன், குலோத்துங்கன் முதலிய பெரு மன்னர்கள் பல பெரும் பகுதிகளை வென்றனர். இவர்கள் வென்றபோது அங்கு இருந்த கலைசெல்வங்களில் ஈடுபட்டு சிலவற்றை வெற்றிச் சின்னங்களாகக் கொண்டு வந்துள்ளனர். தஞ்சைப் பெருங்கோயிலைத் தோற்றுவித்த இராஜராஜன் நுளம்ப பாடியை வென்றான். நூளம்பர்கள் அனந்தபூர் மாவட்டத்தில் ஹேமாவதியைத் தலை நகராகக் கொண்டு ஆண்டவர்கள். தஞ்சை இராஜராஜேச்வரர் கோயிலில் நூளம்பநாட்டுக் கலை ஒன்று இன்னும் உள்ளது. கல்லால் செதுக்கப்பட்ட இது ஒரு ஜன்னலாகும். தஞ்சையில் காணப்படும் இது, இராஜராஜனின் வெற்றியின் விளைவால் இங்கு வந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. சோழர்களில் மாபெரும் வெற்றிகளைக் கண்டவர்கள் முதல் இராஜேந்திரனும் அவனது மகன் இராஜாதிராஜனும் கங்கை வரை கொண்ட வெற்றியின் நினைவாக இராஜேந்திரன் கங்கை கொண்ட சோழபுரத்தை நிறுவினான். சோழர்களது ஆட்சியின் இறுதிவரை அது அவர்களது தலைநகராயிருந்தது. ஆதலின் வெற்றி பெற்றபோது இப்பெருமன்னர்கள் வென்ற நாடுகளின் கலைகளில் ஈடுபட்டு அவற்றைக் கொண்டுவந்த போது, அவை கங்கை கொண்ட சோழபுரத்திலும் அருகிலும் இடம் பெற்றன. இவ்வாறு காணப்படும் பல கலைப்பொருள்களை இன்றும் கங்கை கொண்ட சோழபுரத்திலும் அருகில் உள்ள ஊர்களிலும் காணலாம். கங்கை கொண்ட சோழபுரம் கோயிலிலேயே பிற நாட்டுச் சிற்பங்கள் பல உள்ளன. இவற்றில் சிறந்தது நவக்ரஹம் என்று இப்பொழுது வழங்கப்படும் சூரிய பீடம். இது சாளுக்கியரது சிற்பமாகும். மலர்ந்த தாமரை வடிவில் அமைந்துள்ள சூரியனைத் தேர் போல் உருவகித்து ஏழு குதிரைகள் இழுத்துச் செல்வது போல் அமைக்கப்பட்டுள்ள இச்சிற்பம் இந்தியச் சிற்பங்களிலேயே ஒரு தனிச் சிறப்பு வாய்ந்தது. இக்கோயிலில் கொற்றவைக்குத் தனியாக ஒரு சிறு ஆலயம் உண்டு. அதில் உள்ள கொற்றவை சிலையும் சாளுக்கியர் மரபில் உள்ளது. கங்கை கொண்ட சோழபுரத்தின் ஒரு பகுதி வீராரெட்டித் தெரு என இப்பொழுது அழைக்கப்படுகிறது. அங்கு சுமார் 5 அடி உயரமுள்ல ஓர் ஒப்பரும் துர்க்கைச் சிலை உள்ளது. எட்டு கரங்கள் கொண்டவளாகக் காட்சியளிக்கும் இத்தேவியின் காலடியில் மண்டியிட்டு ஒரு கரத்தால் கேடயம் தாங்கி மறுகரத்தால் கதையைக் கீழே ஊன்றி நிற்கிறான். மகிஷாசுரன். அவனது நிலை புறமுதுகிட்டு ஓடுகின்றவனாக உள்ளது. தேவியின் சூலம் அவன் முதுகில் பாய்ந்துள்ளது. இடக்கரத்தால் அசுரனது நாக்கை பிடித்துக் கொண்டிருக்கும் தேவியும் அன்னையின் வலக்காலின் அருகே நிற்கும் சிம்மமும் கண்டு இன்புறத் தக்கவை இது சாளுக்கிய நாட்டுச் சிற்பம். இராஜேந்திரனும், முதல் இராஜாதிராஜனும் அவனுக்குப் பின் வந்த இரண்டாம் இராஜேந்திரன், வீரராஜேந்திரன் ஆகியோரும் சாளுக்கியருடன் கடும்போர் புரிந்து வெற்றி கண்டனர். அதன் எடுத்துக்காட்டே இச்சிலை. மகிஷாசுரனது அமைதியிலிருந்து ஒன்று தெளிவாகிறது. தில்லையில் இரண்டாம் குலோத்துங்கன் காலம் முதல் தோற்றுவிக்கப்பட்ட நான்கு கோபுரங்களிலும் நான்கு துர்க்கை சிலைகள் உள்ளன. இவற்றின் அமைதியும், மகிஷாசுரனின் அமைதியும், இங்குள்ள வீராரெட்டித் தெரு துர்க்கையின் அமைதியைப் போல் காணப்படுகின்றன. சாளுக்கியக் கலை தமிழகக் கலைக்கு அடிப்படையாக அமைவதை இங்கு காண்கிறோம். கங்கை கொண்ட சோழபுரத்தில் மண்மேடு என்று ஒரு பகுதி உண்டு. அங்கும் ஒரு துர்க்கை சிலை உள்ளது. அது கீழைச் சாளுக்கியர்களது சிற்பம். இராஜேந்திரனது மகள் அங்கம்மாதேவி, கீழைச் சாளுக்கிய மன்னன் இராஜராஜ நரேந்திரனை மணந்திருந்தாள். அவர்களது மகனே முதல் குலோத்துங்கன். கீழைச் சாளுக்கிய சிற்பம் கங்கை கொண்ட சோழபுரத்தில் காணப்படுவதில் வியப்பில்லையே. கங்கை கொண்ட சோழபுரத்தில் மற்றும் ஒரு பகுதியில் செங்கமேடு என்னும் இடத்தில் மூன்று சிலைகள் உள்ளன. இரண்டு வைரவர் சிலைகள். ஒன்று வைரவியின் சிலை. இம்மூன்றும் கலிங்க நாட்டுச் சிற்பங்கள். அந்நாட்டில் கிடைக்கும் சிவப்புக் கல்லால் அந்நாட்டுப் பாணியில் செய்யப்பட்டவை. முதல் இராஜேந்திரன் கலிங்கத்தை வெற்றி கண்டான். கலிங்க நாட்டில் வைரவ வழிபாடும், வைரவி வழிபாடும் சிறந்திருந்தன. யோகேச்வரர் என்றும் யோகினி என்றும் போற்றப்பட்டு அங்கு வழிபடப்பட்டன. இராஜேந்திரன் சோழர் காலத்தில் கோலாரில் யோகினிக்கு ஒரு கோயில் எடுக்கப்பட்டது. அதிலிருந்து யோகினி வழிபாடு தமிழகத்திற்கு வந்தது எனலாம். முதல் குலோத்துங்கனும் கலிங்கம் வரை வெற்றி கண்டான். ஆதலின் அவன் மீது கலிங்கத்துப் பரணி பாடப்பட்டது. கலிங்கத்துப் பரணியில் யோகினிகளைப் பற்றிய குறிப்புகள் நிறைந்துள்ளதும் இத்தொடர்பைக் காட்டுகின்றன. இங்கு கிடைத்துள்ள மூன்று சிலைகளும் இராஜேந்திரனின் வெற்றியால் வந்திருக்கக்கூடும். அழகில் மிகச் சிறந்த இச்சிலைகள் பார்க்கத் தெவிட்டாத எழில் நிறைந்தவை. இதன் காரணமாகவே இவை இங்கு கொண்டு வரப்பட்டன போலும்! முதல் இராஜேந்திர சோழன் வங்காள தேசம் வரை வெற்றி கண்டான். “தன்மபாலனை வெம்முனை அழித்து வண்டுறை சோலை தண்டபுக்தியும் இரணசூரனை முரணுகத் தாக்கி திக்கனைக் கீர்த்தி தக்கண லாடமும் கோவிந்த சந்திரன் மா இழந்து ஓட தங்காத சாரல் வங்காள தேசமும் தொடுகடல் சங்கோடடல் மஹிபாலனை வெஞ்சமர் வளாகத்து அஞ்சுவித்தருளி ஒண்திறல் யானையும் பெண்டிர் பண்டாரமும் நித்தில நெடுங்கடல் உத்திர லாடமும் செறிமலர்த் தீர்த்தத்து எறி புனல் கங்கையும்” கொண்டான் என அவன் மெய்க்கீர்த்தி கூறுகிறது. வங்காள தேசத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வென்ற அப்பெருந்தகை அங்கிருந்த சில கலைப்பொருள்களில் ஈடுபட்டு சிலவற்றைக் கொணர்ந்துள்ளான். அவற்றில் ஒன்று இப்பொழுது தில்லைக்கருகில் மேலைக் கடம்பூர் என்னும் கோயிலில் உள்ளது. நத்தியம் பெருமானின் முதுகின் மீது தாண்டவமாடும் நிருத்தப் பெருமானும், அவரைச் சுற்றி ஆடுகின்ற கணங்களுமாக கண்கவர் மேனியாக செப்புத் திருவுருவாக உள்ள இவ்வுருவம் வங்கத்துப் பாலர்களது கலையாகும். குடந்தையில் நாகேச்சுரர் கோயிலில் ஒரு அழகிய கணபதியின் சிலை உண்டு. வழவழ என்ற கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ள இச்சிலையைப் பார்த்தாலே இது தமிழ் நாட்டாரது அல்ல, வங்கப் பகுதியில் ஆண்ட பாலர்களது சிலை என்பது தெரியும். கணபதி கரத்தில் சிங்கம் பூண்டு மோதகம் கொண்டுள்ளதே அழகாயிருக்கும். இச்சிலையைப் பார்த்துத் தமிழகத்துச் சிற்பி ஒருவன் 12-ஆம் நூற்றாண்டிலேயே ஒரு கணபதியைச் செம்பில் வடித்திருக்கிறான். அது இப்பொழுது திருவானைக்கா கோயிலில் இருக்கிறது. வங்கத்துக் கலை தமிழகக் கலைக்கு அடிப்படையாக அமைந்தவை இங்கே காண்கிறோம். கங்கை கொண்ட சோழபுரத்திற்கு அருகில் திரிலோகி என்னும் ஒர் ஊர் இருக்கிறது. இதை திருப்பனந்தாளில் இருந்து சென்றடையலாம். இங்கு இரு கோயில்கள் உள்ளன. உமாமகேசுவரர் கோயிலில் இரண்டு சிலைகள் உள்ளன. ஒன்று நுளம்பர் சிலை. அமர்ந்திருக்கின்ற நந்தியின் மீது உமாமகேச்சுவரராக அம்மை அப்பன் அமர்ந்துள்ள நிலை மிகவும் சிறந்தது. மற்றொரு சிலை முருகனும் அருகில் தேவசேனையும் நிற்பதைக் காட்டும் எழில் மிகுந்த ஒப்பரும் சிற்பமாகும். இது சாளுக்கியரது கலை. இவை இரண்டும் இங்கே உள்ளதிலிருந்து, வெற்றிக் கலையாக இவை இங்கு வந்துள்ளன என்பதில் ஐயமில்லை. இதே போன்று திருவையாற்றுக் கோயிலில் பல நுளம்பர் தூண்கள் உள்ளன. தாராசுரத்தில் ஒரு துவாரபாலர் சிலை இருந்தது. அது இப்பொழுது தஞ்சைக் கலைக்கூடத்தில் உள்ளது. அதை முதல் இராஜாதிராஜன், சாளுக்கியரது கல்யாணபுரத்தை வென்று கொண்டுவந்தான் என்று அதில் உள்ள கல்வெட்டு கூறுகிறது. சோழர்களது வெற்றியால் தமிழகத்துக் கலைக்குக் கிடைத்த செல்வம்போல், 13-ஆம் நூற்றாண்டில் மைசூர் பகுதியை ஆண்ட ஹோய்ச்சாளர்களாலும் பல கலைத் தொடர்புகள் ஏற்பட்டுள்ளன. தமிழகத்தில் கிடைத்த பல செப்புத் திருமேனிகள் ஹோய்ச்சாளர் மரபில் உள்ளன. அதே போன்று 15, 16-ஆம் நூற்றாண்டுகளில் விஜயநகரப் பாணியில் உள்ள ஒப்பரும் ஒரு அனுமனின் செப்புத் திருமேனி இதற்கு எடுத்துக்காட்டு. சென்னைக்கு அருகில் சதுரங்கப்பட்டணத்தில் இவ்வுருவம் உள்ளது. ஒரு நாட்டின் கலை, காலத்தையும் தேசத்தையும் கடந்து, பிறவற்றோடு தொடர்பு கொண்டு, தானும் செழித்து, பிறவற்றையும் செழிக்கச் செய்து மலரச் செய்வதைக் காட்டுகின்றன இக்கலைச் செல்வங்கள். இருதனிப் பெருங் கோயில்கள் இமயம் வரைப் படையெடுத்து, அங்கிருந்து ஓர் கல்லெடுத்து, தன்னை எதிர்த்த மன்னர் தலையிலே ஏற்றி வெற்றியோடு திரும்பி, பத்தினிக் கடவுளாம் கண்ணகிக்குச் சிறந்த கட்டிட வல்லுநர் கொண்டு கோயில் எடுப்பித்தான் சேரச் செம்மலான செங்குட்டுவன். இப்பெரும் கதையைக் காப்பியமாக்கி அழியாப் புகழ் அடைந்தான் இளங்கோ. தமிழ் நாட்டின் கோயில் எடுப்பது அவ்வளவு புனிதமாகக் கருதப்பட்டது கோயில்கள் எழுப்புவதற்குச் சிறந்த கட்டிடக்கலைஞர்கள் இருந்தனர் என்பது, மேலோர் நுழையும் நூனெறியால் பெற வகுத்த… என்ற சிலப்பதிகார அடிகளிலிருந்து தெளிவாக விளங்குகின்றது. அறம் செய்தலையும், பொருளீட்டலையும், இன்பம் பயத்தலையுமே தங்களது நெறியாகக் கொண்டு தமிழ் மக்களின் வாழ்க்கை அமைந்திருந்தது என்று வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். அவ்வப்போது ஆண்டு வந்த பேரரசர்களும் சிற்றரசர்களும் கோயில்கள் எடுத்து திருவிழாக்கள் நடப்பதற்கும், நாள்தோறும் வழிபாடு தொடர்ந்து நடைபெறவும் பல நிலங்கள் வழங்கினர். வணிகப் பெருமக்கள் பல ஆடுகளையும், மாடுகளையும் வழங்கி, நெய்விளக்கெரிக்கவும், வெளியூர்களிலிருந்து திருவிழாக்களுக்கு வரும் மக்களுக்கு உணவளிக்கவும் வகை செய்தனர். கோயில் ஓர் கலைக்கூடமாகத் திகழ்ந்தது. கோயில்களிலுள்ள மண்டபங்களில் கதை வல்லுனர்கள் ஆண்டவனின் கதையை எடுத்துக் கூறினர். ஆடலழகிகள் ஆண்டவனின் பல நடனங்களை அபுநயித்து மக்களை மகிழ்வித்தனர். இது மட்டுமின்றி சமுதாயத்தின் அமைப்புக் கூட சில கோயில்களில் கல்வெட்டுக்களில் பதிக்கப்பட்டுள்ளன. உத்திரமேரூரிலுள்ள கல்வெட்டுக்களிலிருந்து அக்காலத்திய நாட்டாண்மைக் கழகங்களுக்கு அங்கத்தினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழியையும் அவர்களது நாட்டாட்சி முறையையும் அறிந்து கொள்ள இயலுகின்றது. இவ்விதம் தமிழ் மக்களின் வாழ்க்கையில் மிகப் பெரும் பங்கு கொண்ட கோயில்கள் பல நம் நாட்டில் இருந்திருக்க வேண்டும். எனினும் மிகப் பழமையான கோயிலென்று கூறத் தக்கவைகள் தற்போது ஏதுமில்லை. சுமார் கி.பி. 600-இல் தமிழ் நாட்டில் தலை சிறந்த அரசனாக ஆண்ட மகேந்திர பல்லவனது காலத்திலிருந்து தோற்றுவிக்கப்பட்ட கோயில்கள்தாம் இன்றும் எஞ்சியுள்ளன. இக்காலத்திற்கு முந்திய கோயில்கள் எல்லாம் மறைந்துவிட்டன என்பது ஆராய்ச்சியாளர்கள் துணிபு. இதற்குக் காரணம் இக்காலத்திற்கு முந்திய கோயில்கள் செங்கல், மரம், போன்ற விரைவில் அழிந்துபடும் பொருள்களால் கட்டப் பெற்றவை என்றும், வெப்பத்தாலும் காலப்போக்கிலும் இவை மறைந்துவிட்டனவென்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இது ஓரளவு உண்மையேயாயினும் இவ்விதம் மறைந்துபட வேறொரு முக்கிய காரணமும் உண்டு. சைவ வைணவப் பெரியார்களால் பாடப்படும் பாழடைந்த கோயில்களைப் பல மன்னர்கள் திரும்பத் திரும்ப புதுப்பித்ததே இதற்கு முக்கிய காரணம் எனக் கொள்ளலாம். இவ்விதம் சில ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வழிபாடு நடந்துவரும் கோயில்கள் தென்னகத்தில் எங்கும் உண்டு என்பது பெருமைப்படத்தக்க விஷயம். எனினும் பழமையின் சுவடே தெரியாமல் அழிந்து போன கோயில்களில் பல கலைச் செல்வங்கள் மறைந்து பட்டன. நம் நாட்டு மக்களின் சரித்திரச் சம்பவங்களும் அத்துடன் மறைந்து போய்விட்டன என்பது வருந்ததக்க விஷயம். மகேந்திர பல்லவனது காலத்திற்குப் பின்பு தோன்றிய பல குடைவரைக் கோயில்களும், பல கற்றளிகளும் இன்றும் எஞ்சியுள்ளன என்று கூறினோம். இவையனைத்திலும் இரு கோயில்கள் தமிழ் நாட்டின் தனி பெருங் கோயில்களாகத் திகழுகின்றன. இன்று பல்லவ மன்னர்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த ராஜசிம்மனால் தோற்றுவிக்கப்பட்ட காஞ்சி கயிலாயநாதர் கோயில், மற்றாது சோழப் பெருந்தகையான முதலாம் ராஜராஜனால் கட்டப்பட்ட ராஜராஜேசுவரம் என்றும், பிரகதீசுவரம் என்றும் அழைக்கப்படும் தஞ்சைப் பெரிய கோயில். இவற்றைக் கல்லிலே தோற்றுவிக்கப்பட்ட அழியாத காவியங்கள் எனலாம். கி.பி. சுமார் 600 லிருந்து 850 வரை காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தமிழகத்தில் மிக பலம் பொருந்தி விளங்கிய பல்லவ மன்னர்களில் இராஜசிம்மன் என்று பட்டம் பூண்ட இரண்டாம் நரசிம்மனது ஆட்சி மிகவும் குறிப்பிடத்தக்கது. மற்றைய எல்லா பல்லவ மன்னர்களும் போர் செய்வதில் விருப்பம் கொண்டனர். அவர்கள் காலங்களில் பல போர்கள் நடந்தனவென்று கல்வெட்டுகளும் செப்புப்பட்டயங்களும் கூறுகின்றன. சாளுக்கிய மன்னனான புலிகேசியின் மீது போர் தொடுத்து, வாதாபி நகரைக் கைபற்றி ஜயஸ்தம்பம் நாட்டிய மாமல்லன் முதலாம் நரசிம்மனைப் பற்றி யாவரும் அறிவர். இவ்விதம் போர்கள் தொடர்ந்து நடத்திய பல்லவ வமிசத்தில் போர் என்பது இன்றி சமாதானம் நிலவியது ராஜசிம்மனது காலத்திலே தான். இம்மன்னன் தன்னை, தானப்பிரியன் என்றும் ஏழை எளியவர்களது துக்கங்களைக் கண்டு வருந்துபவன் என்றும், மக்களுக்கு மழை போல் தானமளிப்பவன் என்றும் கூறிக் கொள்கின்றான். காஞ்சி கயிலாயநாதர் கோயிலில் உள்ள இவனது பட்டங்கள் இவனது உள்ளக் கிடக்கையைத் தெள்ளெனத் தெரிவிக்கின்றான. போரிலே இராமனுக்கும், அருச்சுனனுக்கும் தன்னை ஒப்பிட்டுக் கொள்ளும் இவன், போரால் ஏற்படும் அழிவிற்கு அஞ்சியே சமாதானத்தை விரும்பினான். கல்வியின் ஆற்றலிலும், கலைப்பண்பிலும், கவிதா ரசனையிலும், தெய்விக வாழ்விலும், மக்கள் நலத்தின் ஈடுபாட்டிலும் இம்மன்னனுக்கு ஈடாக, இந்தியச் சரித்திரத்திலேயே எவரும் இலர் என்பது திண்ணம். தமிழக வரலாற்றில் இவ்வரசனது பெயர் பொன்னேடில் பொறிக்கத் தக்கது. இவன் தென்னாடுடைய சிவன் மீது தீரா பக்தி பூண்டவன். சிவனது தூளியை எப்போதும் தலை மேல் தாங்கும் இவன், தன்னைச் சிவசூடாமனி என்றும், ஈசான பக்தன் என்றும், தேவதேவ பக்தன் என்றும் பெருமையாகக் கூறிக்கொள்கிறான். இவனுக்குப்பின் வந்த அரசர்களின் சாசனங்கள் இவனைப் பரமசிவ பக்தன் என்றும், நாடெங்கும் சிவன் கோயில் எழுப்புவதிலும், ஏழை மக்களுக்கும் கற்றோர்களுக்கும் தானம் வழங்குவதிலுமே தன் காலத்தைச் செலவிட்டான் என்றும் கூறுகின்றன. இவனுக்கு அத்யந்த காமன் என்றும், கலாசமுத்திரம் என்றும் பெயருண்டு. இவனது கோயில்களில் மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோயிலும், பசுமை வாய்ந்த வயலின் நடுவே பெருமிதத்துடன் நிற்கும் காஞ்சி கயிலாயநாதர் கோயிலும், மலை உச்சியில் எழில் மிகு வண்ண ஓவியங்கள் கொண்ட பனமலைக் கோயிலும் குறிப்பிடத்தக்கவையாகும். இவற்றுள், கட்டிட அமைப்பாலும், சிற்பங்களின் சிறப்பாலும், கல்வெட்டுகளில் உள்ள காவிய நயத்தாலும் சிறப்பு வாய்ந்தது கயிலாயநாதர் கோயிலே ஆகும். இக்கோயிலை ராஜசிம்மன் தான் கட்டுவித்ததாக அங்குள்ள கல்வெட்டுக்களில் பொறித்து வைத்துள்ளான். அக்கடவுளுக்கு ராஜசிம்மேச்சுரம் என்று பெயரிட்டு குறிப்பு வரைந்துள்ளான். கயிலையிலே சிவனின் லீலைகளையும் தோற்கடிக்கும் வண்ணம் இக்கோயிலை எழுப்பியதாக ராஜசிம்மன் குறிப்பிடுகிறான். இங்குள்ள சிற்பங்களைக் கண்டால் இதன் உண்மை விளங்கும். சிவனது பல லீலைகளை வேகமும், எழிலும் நிரம்பிய சிற்பங்களாகப் படைத்திருப்பதைக் காணலாம். கோயிலைத் திருச்சுற்று மாளிகை சிறுசிறு கோட்டங்களைத் தொடர்ச்சியாக அமர்த்தி அவற்றிலே சீர்மிகு சிற்பங்களைத் தோற்றுவித்த பெருமை இம்மன்னனைச் சாரும். இது போன்ற அமைப்பும் எழிற் சிற்பங்களும் இந்நாட்டில் எங்கும் இல்லை. இங்கு, காலை மடித்து, இடது முழங்காலை ஊன்றி, வலது கையை வீசி, பல புயங்களுடன் ஆடும் சிவனின் தாண்டவம் மிகப் புகழ் வாய்ந்தது. இக் கோயிலில்தான் மன்னன் ராஜசிம்மன், தான் சைவ சித்தாந்த மார்க்கத்தை நல்குபவன் எனக் கூறிக் கொள்கிறான். இம்மன்னனால் இக்கோயிலுக்கு அளிக்கப்பட்ட செல்வங்கள் கணக்கிலடங்கா. இக்கோயில் கட்டி முடிந்ததும் பூசலாரின் மனக் கோவிலைக் காண்பதற்கு இதன் கும்பாபிஷேகத்தை நிறுத்தி அந்நாயனாரை மன்னன் தேடிச் சென்றதாக ஒரு வரலாறு உண்டு. இவனுக்குப் பின்னர் பல்லவர் பலம் சிறிது குறைந்து சாளுக்கிய மன்னனாகிய இரண்டாம் விக்கிரமாதித்தியன் காஞ்சியைக் கைப்பற்றினான். காஞ்சியின் சிறப்பும் கயிலாய நாதர் கோயிலின் வனப்பும், ராஜசிம்மனின் கலைப் படைப்புக்களும், விக்கிரமாதித்தனது மனதைக் கவர்ந்தன. காஞ்சியை அழிக்காமல், கோயிலுக்கு ராஜசிம்மன் விட்டுச் சென்ற செல்வங்களைப் பார்வையிட்டு, தானும் அதற்குப் பல தானங்கள் அளித்ததாக இக்கோயிலிலேயே உள்ள ஓர் கல்வெட்டில் விக்கிரமாதித்தன் கூறுகிறான். அது மட்டுமின்றி இங்குள்ள சிறந்த சிற்பிகளைத் தன்னாட்டிற்கு அழைத்துச் சென்று பட்டக்கல் என்ற இடத்தில் கயிலாயநாதர் கோயிலைப் போலவே விரூபாஷர் கோவிலை எழுப்பினார் என்று அறிகிறோம். தஞ்சைப் பெரிய கோயிலைப் பற்றி அனைவருக்கும் தெரியும். இதைத் தோற்றுவித்த ராஜராஜ சோழனைப் பற்றி அறியாதவரே இந்நாட்டில் இலர் எனலாம். இவனால் காந்தளூர்ச் சாலையில் வெற்றி கண்ட வேங்கை நாடும், கங்கபாடியும், தடிகைபாடியும், நொளம்பாடியும், குடமலை நாடும், கொல்லமும், கலிங்கமும் கைப்பற்றப்பட்டன. ஈழமண்டலம், இரட்டப்பாடி, ஏழரை இலக்கமும் இவன் வசமாயின, இவ்விதம் எண்திசையிலும் புகழ் பெற்று விளங்கிய அருள் மொழித் தேவன் என்றும், இராஜராஜன் என்றும் பெயர் பெற்ற இவ்வரசன் தோற்றுவித்தது தான் ராஜராஜேசுவரம் என்னும் மிகச் சிறப்பு வாய்ந்த தஞ்சைப் பெரிய கோயில். “பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர் கூற்றத்து தஞ்சாவூர் நான் எடுப்பித்த திருக்கற்றளி ஸ்ரீ ராஜராஜேசுவர முடையார்க்கு” என்னும் இவன் கல்வெட்டுக்களிலிருந்து இக்கோயில் இவனால் கட்டப்பட்டது என்றும், இதற்கு ராஜராஜேச்சுரம் என்று மன்னன் பெயரே வைக்கப்பட்டது என்றும் அறிகிறோம். இந்திய நாட்டின் கட்டிடக் கலையிலேயே மிகச் சிறந்த அமைப்புடையது தஞ்சைக் கோவில் என்று இதனைப் புகழ்கின்றனர். எழில்மிகும் சிற்பங்களைக் கொண்ட அடிப்பகுதியும், விண்ணளாவும் விமானமும் அதற்கு மேல் சுமார் என்பது டன் நிறைக்கு மேல் உள்ள ஸ்தூபி என்ற உருண்டையான கல்லும் அதன் மேல் அனைத்தையும் அழகுபடுத்தும் கலசமும் ராஜராஜனின் பக்தி சிறப்புக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இந்த செப்புக் குடத்தின் மேல் தங்கத்தாலான தகடு (உருக்குவதற்கு) போர்த்துவதற்கு மட்டும் 2926 பொற் கழஞ்சுகள் அளிக்கப்பட்டன என்று அறிகிறோம். இக்கோயிலில் மிகச் சிறப்பான அம்சங்கள் பல உண்டு. கி.பி. 600லிருந்து 1200 வரை தமிழ்நாட்டுக் கோயில்கள் அனைத்துமே கர்ப்பகிருகத்தின் மேல் உள்ள விமானத்தை முக்கியமாகக் கொண்டவை. கி.பி. 1200க்குப் பின்னர் கோபுரங்களின் உயரம் குறைந்துபட்டது. தற்காலத்துக் கோயில்களில் கோபுரம் மிக வளர்ந்து விமானங்கள் சிறியனவாகவே காணப்படுகின்றன. தமிழ்நாட்டுக் கோயில்களில் மிக உயர்ந்தும் மிக உன்னதமானதுமான அமைப்பும் வாய்ந்த விமானம் தஞ்சைப் பெரிய கோயில் விமானமே. இக்கோயிலைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள திருச்சுற்றில் இந்திரன், அக்னி, யமன், வருணன், வாயு, ஈசானன் போன்ற எண்திசைக் காவலர்களுக்கும் அவரவரது திக்குகளில் சிறு கோயில்கள் அமைந்துள்ளது மிகச் சிறாப்பான அம்சமாகும். தமிழ் நாட்டில் வேறெந்தக் கோயிலிலும் இவ்வமைப்பில்லை. வியக்கத்தக்க நந்தியும் பிரஹதீசுவரர் என்ற பெயர் வழங்கும் மிகப் பெரிய லிங்கமுக் சிறப்பு வாய்ந்தவை. ராஜராஜனால் இக்கோயிலுக்கு லட்சக் கணக்கில் பொற்காசுகள் அளிக்கப்பட்டன. தஞ்சை அழகர் தட்சிண மேருவிடங்கள் என்ற சிறப்புப் பெயர்கள் கொண்ட பல செப்புத் திருமேனிகள் ராஜராஜனாலும் அவனது தமக்கையரான குந்தவையாலும் அவனது மனைவியாராலும் அதிகாரிகளாலும் அளிக்கப்பட்டன. ராஜராஜனைப் போன்றே குந்தவையாரும் சிறந்த சிவபக்தி கொண்டவள், ராஜராஜனின் பெரும் மதிப்பிற்குப் பாத்திரமானவர்கள். “ராஜ ராஜேஸ்வரமுடையார்க்கு நாம் கொடுத்தனவும் நம் அக்கன கொடுத்தனவும், பெண்டுகள் கொடுத்தனவும் கொடுத்தார் கொடுத்தனவும் கல்வெட்டினபடி” எம்பதனின்றும் தமது தமக்கையாரிடம் ராஜராஜனுக்குள்ள அன்பு வெளிப்படுத்தப்படுகிறது. உலகமெங்கும் கலைகளின் உன்னத வடிவராகப் போற்றிப் புகழப்படும் நடராஜ வடிவைத் தோற்றுவித்தது தமிழ் நாடு. அதற்கு ஆடவல்லான் என்று அன்புப் பெயர் சூட்டி புகழ் பெறச் செய்த பெருமை ராஜ ராஜனையே சாரும். இம்மன்னனுக்கு நடமாடும் அண்ணலிடம் உள்ள பக்திப்பெருக்கு ஒப்பிடமுடியாதது. இம்மன்னனது காலத்திற்குப் பிறகுதான் கோயில்களில் நடராஜ வடிவங்கள் அதிகமாக சிற்பங்களில் காணப்படுகின்றன. இக்கோயிலில் உள்ள அழியாத வண்ணப் படைப்புக்களில் திரிபுராந்தகர், சுந்தரமூர்த்தி முதலிய ஓவியங்கள் இம்மன்னன் காலத்தவை என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனனர். இவ்வித, சிறப்பு வாய்ந்த தனிப் பெருங்கோயில்கள் இவையிரண்டும், ஒன்று சிவசூடாமணி என்று பெயர் கொண்ட ராஜசிம்மனால் கட்டப்பட்டது, மற்றது சிவபாதசேகரன் என்று என்று பெயர் பெற்ற ராஜராஜனால் கட்டப்பட்டது. ஒன்று பல்லவர்களது சிறப்புக் கோயில். மற்றது சோழர்களது சிறப்புக் கோயில். மிக அழகிய விமானத்தை உடையது ராஜசிம்மேச்சுரம். மிக உன்னத விமானத்தையுடையது ராஜராஜேச்சுரம். ஒன்று தொண்டை நாட்டிலுள்ளது. மற்றது சோழவள நாட்டிலுள்ளது. இவ்விரண்டிற்கும் அளிக்கப்பட்ட செல்வங்களையும் இவற்றில் நடைபெற்ற திருவிழாக்களையும் எண்ணிடில் வியப்பதிகரிக்கும். இவ்விரு கோயில்களையும் காண, மேலை நாடுகளிலிருந்தும் கீழை நாடுகளிலிருந்தும் அறிஞர்களும், கலைஞர்களும் வந்து செல்கின்றனர். இவற்றின் கலைச் சிறப்பினைப் போற்றிப் புகழ்கின்றனர். எனினும் இக்கோயில்களுக்கு அளிக்கப்பட்ட செல்வமனைத்தும் அழிந்துபட்டன. இங்கு திருவிழாக்கள் மற்ற பல கோயில்களில் நடைபெறுவதைப் போலச் சிறப்பாக நடைபெறுவதில்லை. வணிகப் பெருமக்கள் தலை சிறந்த இக்கோயில்களுக்குத் தானம் அளிக்க வேண்டும். தமிழ்ப் பெருமக்கள் தமிழ் நாட்டில் கலைச் செல்வங்களாம் இக்கோயில்களில் திருவிழாக்கள் நன்கு நடைபெற ஆவன செய்தல் வேண்டும். அப்பொழுதுதான் இரு பெரும் மன்னர்களின் பக்திப் பெருக்கினால் தோன்றிய கலைப் படைப்புகளைப் போற்றியவர்களாவோம். பல கலைக் கோயில்கள் அழிந்துவிட்ட போதிலும் முன்னோர்களின் கலைத்திறனுக்கு எடுத்துகாட்டான இவ்விரு கோயில்களையாவது நமது பின் தோன்றல்கட்காகக் காப்பது நமது கடமையாகும். இரட்டைக் கோயில்கள் திருச்சியிலிருந்து அரியலூர் செல்லும் வழியில் மேலைப் பழுவூர் என்று ஓர் ஊர் உள்ளது. இவ்வூரிலிருந்து இரண்டு கல் தொலைவில் கீழைப் பழுவூர் என்று மற்றும் ஓர் ஊர் உள்ளது. இவ்விரண்டும் அக்காலத்தில் தெய்விகச் சிறப்பும், வரலாற்றுச் சிறப்பும் பொலிந்து திகழ்ந்தன. மேலைப் பழுவூர் “மன்னு பெரும்பழுவூர்” என்றும், கீழைப்பழுவூர் ‘சிறு பழுவூர்’ எனவும் அக்காலத்தே வழங்கின என்று அறிகிறோம். பழுவூரைத் தலைநகராகக் கொண்டு சேரர்வழி வந்த பழுவேட்டரையர் என்னும் வேளிர் ஆண்டிருக்கின்றனர். இவர்கள் எப்பொழுது பழுவூரைத் தலைநகராக்கி ஆனத்தலைப்பட்டனர் என்று தெரியவில்லை. ஆயினும் 1300 ஆண்டுகளுக்கும் முன்பே பழுவூருக்கும் சேர நாட்டுக்கும் தொடர்பு இருந்தது என்று ஞானசம்பந்தரின் பாடல்களிலிருந்து அறிவதால் இவர்களும் அக்காலத்திலேயே வந்திருத்தல் கூடும். ஆளுடைய பிள்ளையார் அரத்துறை அடிகளை வணங்கிப் பெரும் பழுவூர் வந்தடைந்ததைச் சேக்கிழார் பெருமான் சிறப்பாகக் குறித்துள்ளார். பிள்ளையார் வரும்போது, “மறைமு ழங்கின தழங்கின வண்தமிழ் வயிரின் குறைந ரன்றன முரன்றன வளைக்குலம் காளம் முறைஇ யம்பின இயம்பல ஒலித்தன முரசப் பொறைக றங்கின பிறங்கின போற்றிசெய் அரவம்” என்று பாடுகிறார். வரும் வழியெல்லாம் அப்பதியில் உள்ளோர் இரு மருங்கிலும் கொடுகள் எடுத்துப் பூந்துகிலால் விதானம் கட்டி, சாலை முழுவதும் தோரணங்களும் கதலி மரங்களும் கொண்டு அலங்கரித்து, மாலை நிறைகுடங்களும் விளக்குகளும் எடுத்து ஆளுடையபிள்ளையை வரவேற்றனர். பிள்ளையார் பழுவூர் மேவிய பெருமானின் எழில் கோபுரம் தொழுது, விமானத்தைச் சூழ்ந்து வந்து உள்புகுந்து பெருமானின் பங்கயச் சேவடி பணிந்தார். “மண்ணினிற் பொலிகுல மலையர் தாந்தொழுது கண்ணில் சீர்ப்பணிகள் செய்து ஏத்தும் …நாதரைப் பணிந்தார்” என்று சேக்கிழார் பாடுகின்றார். சம்பந்தப்பெருமான் தம் திருப்பதிகத்தில் ‘அந்தணர்களான மலையாளரவ ரேத்தும், பந்தமலிகின்ற பழு வூர்னை’ என்று இவ்வூரிப் பெருமானைப் பாடியுள்ளார். அவ்வளவு சிறப்பு வாய்ந்த புண்ணியத் தலம் இது. ‘வேதமொழி சொல்லி மறையாளர் இறைவனின் பாதம் ஏத்தினர்’ என்றும், ‘நான்மறையும் ஆறங்கமும் அறிந்த பெரியோர்கள் மன்றினில் மகிழ்ந்தனர்’ என்றும், இந்நகரில் நிறைந்து நின்ற மாட மாளிகைகளின் குளிகைகளில் ஏறிப் பாவையர்கள் இசைக்கின்ற இசை எப்பொழுதும் நிறைந்து ஒலித்தது என்றும் சம்பந்தப் பெருமான் பாடும் பேற்றைப் பெற்றது இந்த நகர். இந் நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பழுவேட்டரையர் வரலாறு கி.பி. 9-ம் நூற்றாண்டு வரையில் தெளிவாகத் தெரியவில்லை. தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழப் பேரரசர்களுக்கு இவர்கள் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள், இவர்கள் வழிவந்த பெண்கள் சோழப் பேரரசிகளாக விளங்கும் பேறு பெற்றிருந்தனர். கி.பி. பத்தாம் நூற்றாண்டில் சோழப் பேரரசனாகிய முதல் பராந்தகனுக்கும் பாண்டியன் இராசசிம்மனுக்கும் நடந்த போரில், பழுவேட்டரையன் கண்டன் அமுதன் என்பவன் சோழனுக்குப் படைத்தலைவனாக நின்று பாண்டியனைத் தோல்வியுறச் செய்தான். பராந்தக சோழனின் தேவியரில் பழுவேட்டரையருடைய மகளும் ஒருத்தி. அவளுக்குப் பிறந்த மகவே, சிவஞானச் செம்மல் கண்டராதித்தருக்குப் பின் அரியணை ஏறிய அரிஞ்சய சோழர் ஆகும். முதல் இராசராச சோழனின் தேவிகளில் நக்கன் பஞ்சவன் மாதேவி என்பவள், பழுவேட்டரையரின் மகளாவாள். இவ்வூரில் வாழ்ந்த பழுவேட்டரையர்களில் கண்டன் அமுதன், மறவன் கண்டன், கண்டன மறவன், கண்டன் ஏறியான், கண்டன் சுந்தரசோழன், குமரன் மறவன் என்பவர்கள் சிறந்து திகழ்ந்திருக்கிறார்கள். இவர்களை மகரிஷி வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், க்ஷத்திரியர் என்றும் கல்வெட்டுகள் குறிக்கின்றன. வடுகன் என்றும் மறவன் என்றும் பொதுகன் என்றும் அழைக்கப்படுகின்றனர். இம்மன்னர்களுக்கும் கொங்கு நாட்டின் வடபகுதியை ஆண்ட கலிங்க மன்னர்களுக்கும் தொடர்பு இருந்திருக்க வேண்டும். இவர்களில் ஒரு பழு வேட்டரையன் கங்க மார்த்தாண்டன் என்று வழங்கப்படுகிறான். கலியுக நிர் மூலன் என்றும், மறவன் மானதனன் என்றும், அரையகன் அரையுளி என்றும் இவனுக்குப் பட்டங்கள் உண்டு. இவனுக்கு அவனிகந்தர்வன் என்ற சிறந்த பட்டமும் அமைந்திருக்கிறது. இவன் காலத்தில் பெரும் பழுவூர் சிறந்த நிலையை அடைந்திருக்க வேண்டும். இவ்வூருக்கு அவனிகந்தர்வபுரம் என்று மற்றொரு பெயரும் தெரியவருகிறது. பெரும் பழுவூர் குன்ற கூற்றத்தைச் சார்ந்திருந்தது. பழுவேட்டரையர்கள் சோழப் பேரரசர்களைப் போன்றே சிறந்த சைவர்களாகத் திகழ்ந்து சிவபெருமானுக்குக் கலைச் சிறப்பு வாய்ந்த பல கோயில்களை இவ்வூரில் எழுப்பிப் பல காணி நிலங்களை வழிபாட்டிற்காகத் தானமாக அளித்திருக்கிறார்கள். மிகப் பெரிய நகராகத் திகழ்ந்த இது இப்போது மூன்று பெயர்களுடைய மூன்று வேறு ஊராகத் திகழ்கிறது. மேலைப் பழுவூர் என்றும், கீழையூர் என்றும், கீழைப்பழுவூர் என்றும் அவை வழங்குகின்றன. மூன்று இடங்களிலும் பழுவேட்டரையர்கள் தோற்றிவித்த சிறந்த கோயில்கள் இருக்கின்றன. மேலைப் பழுவூர் இங்கே சுந்தரேசுவரர் கோயில் என்பது கிழக்குப் பார்த்த கோயிலாக உள்ளது. இந்தக் கோயிலுக்குப் பகை விடை ஈச்வரக்கிருகம் என்றும், இங்கு உறையும் பெருமானுக்குப் ‘பழுவூர் நக்கன்’ என்றும் கல்வெட்டில் பெயர்கள் வருகின்றன. பழுவூர் நக்கரைத் ‘திருத்தோற்றமுடைய மகாதேவர்’ என்றும் இராசராசனின் கல்வெட்டுக் குறிக்கிறது. இக்கோயிலைப் பழுவேட்டரையன் கண்டன் மறவன் என்பவன் எடுப்பித்தான் என்று அறிகிறோம். அப்போது கோயில் செங்கல்லால் அமைந்திருந்தது; எழில்வாய்ந்த சிற்பங்கள் பலவற்றை உடையது. அவற்றில் தாய்மார் எழுவர்களான சப்த மாதாக்களின் வடிவங்கள் மிகவும் போற்றத் தக்கவை. இவற்றில் வாராகியின் கரம் ஒன்றில் கலப்பை உள்ளது. இந்தப் பகுதிகளில் இன்னும் இதே போன்ற கலப்பை வழக்கில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இங்கே அக்கினிதேவரின் உருவமும், முருகனின் உருவம் ஒன்றும் எழிலாய் அமைந்துள்ளன. எல்லாவற்றைக் காட்டிலும் பெருமானின் முன் மண்டியிட்டு ஏற்றமாக அமர்ந்திருக்கும் நந்தியின் உருவத்தில் உயிர்த் துடிப்பைக் காணலாம். தமிழ்க் கோயில்களை அலங்கரிக்கும் நந்தியின் உருவங்களில் மிகமிக எழில் வாய்ந்த வடிவம் இது. இக்கோயில் முதற் குலோத்துங்கன் காலத்தில் பழுதடைந்திருந்தது. ஆதலில் இதை வாணகோவரையன் உத்தமசோழன் ஆன இலங்கேசன் என்பவன் குலோத்துங்கனின் நன்மைக்காகத் திருத்தியமைத்தான் என்றும், இதற்குக் குலோத்துங்க சோழீச்சுரம் என்று பெயரிடப்பட்டது என்றும் அறிகிறோம். இக் கோயிலின் வாயிலை அலங்கரிக்கும் கோபுரமும் பழமையானதே. கீழையூர் இப்போது கீழையூர் என வழங்கும் பகுதியே ‘மன்னு பெரும்பழுவூர்’ என்னும் பகுதி. இங்கு அவனிகந்தர்வன் என்று பட்டம் பூண்ட மறவன் மானதனன் என்பான் இரண்டு எழிலார்ந்த கற்கோயில்களை ஒரே திருச்சுற்றுக்குள் எடுப்பித்திருக்கிறான். இரண்டும் மேற்குப் பார்த்த கோயில்கள். கல்லிலே காவியம் என்று சொல்வார்களே அதை இங்கே காணலாம். சிறியவை ஆயினும் அழகாலும் புகழாலும் பெரியவை. இரு கோயில்களும் எழில்மங்கையர் இருவர் முன்னே நிற்பது போன்ற தோற்றமுடையவை. இவற்றில் எதன் அழகப் போற்றுவது என்று பிரமிப்புத்தட்டும். ஒன்றின் சிகரம் உருண்டையானது; மற்றது சதுர வடிவு கொண்டது. இவற்றை அலங்கரிக்கும் சிற்பங்கள் மிகச் சிலவே ஆயினும் யாவும் கலைத் திறனில் ஒப்பற்றவை. மேற்குப்புறம் பார்த்த கோயில்கள் ஆதலின் கீழ்ப்புறக் கோபுரத்தில் முருகப்பெருமான் காட்சி அளிக்கிறார். ஒன்றிலே நின்ற கோலம். காந்தள் கண்ணி மிலைந்த சென்னியன் என்பதைக் காண வேண்டுமா? இங்கே வந்து பாருங்கள். மற்றது அமர்ந்த நிலை. தென்புறக் கோபுரம் ஒன்றில் தட்சிணாமூர்த்தி. மற்றதிலும் தட்சிணாமூர்த்தி தான். ஆனால் நின்ற நிலையில் சந்திரசேகரர் உருவில் ஞானம் போதிக்கும் பெருந்தகை. வடப்புறக் கோஷ்டங்களில் இரண்டிலும் நான்முகன். மேலே தளங்களிலும் சிகரங்களிலும் வனப்புடைய சிற்பங்கள்! ஒரு கோயிலின் பெயர் வடவாயில் ஸ்ரீகோயில். மற்ற தன் பெயர் தென்வாயில் ஸ்ரீகோயில். கோயில் முழுமைக்கும் திருச்சுற்று உள்ளடங்கப் பெயர் அவனிகந்தர்வ ஈச்வரக் கிருகம் என்பது. தென்வாயில் ஸ்ரீகோயிலின் முகமண்டபத்தை அற்புதமான வியாளத்தூண்கள் தாங்கி நிற்கின்றன. இவற்றில் சில இக் கோயிலைத் தோற்றிவித்த பழுவேட்டரையனின் பட்டங்கள் காணப்படுகின்றன. இங்கே கதிரவன், கங்காதரர் ஆகியவர்களின் சிற்ப வடிவங்கள் உள்ளன. திருச்சுற்றில் உரிய இடங்களில் ஐங்கரன், முருகன், ஜ்யேஷ்டை, கதிரவன், சப்தமாதர் ஆகிய பரிவார தேவதைகளின் சிற்றாலயங்கள் உள்ளன. இவற்றில் சப்தமாதர்களின் உருவங்கள் அற்புதமானவை. ஐங்கரனைத்தான் பருங்களேன்! அவர் தம் துதிக்கையைச் சுழற்றி விட்டுக்கொண்டிருப்பதே அழகாக இல்லையா! இக் கோயிலுக்குத்தான் எவ்வளவு தானங்கள் அளித்திருக்கின்றனர்! முதல் ஆதித்தன், பராந்தகன், சுந்தர சோழன், உத்தமசோழன், இராசராச சோழன், இராசேந்திரன் ஆகிய பெருமன்னர்களின் கல்வெட்டுக்கள் இங்கு உள்ளன. உழாமல் கிடந்த பூமிகளைத் திருத்தி இரண்டு பூ விளையும் நிலமாக்கி, அதிலிருந்து வரும் வருவாய்களைக் கொண்டு, இரண்டு தளிகளிலும் நுந்தா விளக்கு எரிப்பதற்கும், திருவிழாவுக்கும், வழிபாட்டுக்கும் வகை செய்துள்ளதை இக்கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. இப் பரிசுகளைக் காத்து வர இந் நகரத்தார் உறுதி பூண்டனர். இக் கோயிலில் நாவலூர் உடையான் கண்டன் தேவடி என்பவனும் சிறியப்பி மழபாடி என்பவனும் ஸ்ரீகாரியமாகப் பணிபுரிந்திருக்கின்றனர். இக் கோயிலில் உள்ள இரண்டு நந்திகளின் வடிவமும், வாயிற்கோபுரத்தைக் காக்கும் துவாரபாலர் வடிவமும் சிறப்பு வாய்ந்தவை. ஊரின் வடபுறக் கோடியில் காளி ஒன்று உள்ளது. அங்குள்ள காளியின் உருவம், அப்பப்பா! அழகே உருவாக வந்த தோற்றம்! ஆயினும் அறியாமையை அழிக்கும் சீற்றம்மிக்கது. இத் தேவியின் உருவம் அக்காலத்ததுதான். கீழைப் பழுவூர் கீழைப் பழுவூரில் இரண்டு கோயில்கள் உள்ளன. ஒன்றின் பெயர் மறவனீச்வரம் என்பது. இப்போது பசுபதீசுவரம் என்று வழங்கப்பெறுகிறது. பழுவேட்டரையன் மறவன் கண்டன் என்பவனால் கட்டப்பெற்றிருக்க வேண்டும் எனக் கருதுகின்றனர். இது இப்போது சிறப்புக் குன்றிக் காணப்படுகிறது. இங்கே சிறப்பாகத் திகழ்வது திரு ஆலந்துறை மகாதேவர் கோயிலே. இதுவும் கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் கட்டப்பெற்ற கட்டிடந்தான். மறவன் கண்டன என்ற பழுவேட்டரையரே இதையும் எடுப்பித்திருக்கிறார். இக்கோயிலின் கோஷ்டங்களைக் கங்காளர், கல்யாணசுந்தரர், அர்த்தநாரி, கஜசம்ஹாரர், கணபதி, துர்க்கை, லிங்கோத் பவர் ஆகிய சிற்பங்கள் அழகுபடுத்துகின்றன. இங்குத் திருவுண்ணாழியின் வாயிற்புறத்தைக் காக்கும் துவாரபாலர் சிலைகள் ஈடு இணையற்றவை. சோழ வரலாற்றோடு பிணைந்து கிடக்கும் பல அரிய செய்திகளை இக்கோயில் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. இங்கு அரும்பெரும் செப்புத் திருமேனிகள் பல உள்ளன. ஞானசம்பந்தப் பெருமான் பாடிய தலம் இதுவே என இப்போது கருதுகின்றனர். பார்த்தறிய வேண்டிய பதி கீழைப்பழுவூர். இரகுநாதன் எடுத்த இராமன் கோயில் படபடப்புடன் நின்ற தூதன் தன் மன்னனை நோக்கினான். வயிரம் பாய்ந்த சரீரம். வலிமை மிகுந்த தோள்கள். அகன்ற மார்பு. திண்மை மிகுந்த கால்கள். எதையும் எளிதில் செய்து முடிக்க முடியும் என்னும் உறுதியைப் பிரதிபலிக்கும் முகம். கரத்தில் தாங்கிய அந்த நீண்டவாள், அவன் சிறுவனாக இருக்கும்போதே போர்க்காலங்களில் சுழன்று வெற்றி வாகை வாங்கித் தந்த வீரவாள். தன் முன் நிற்பவரின் உள்ளத்து உணர்ச்சியையும் உடன் அறியும் ஆற்றல் வாய்ந்த கண்கள். சமநிலையில் நின்று அறத்தை நிலை நிறுத்துவதே அவற்றின் பணி எனத் தோன்றும் அவற்றின் ஒளி. தன் மன்னன் தஞ்சை ரகுநாதன் பிறந்ததிலிருந்து இப்பொழுது பெரும் வீரனாக நிற்பதுவரை உடனிருந்து கண்டவன் அத்தூதுவன். அவன் பிறந்தபோது அவன் தந்தை அச்சுதப்பன் கூறியது தூதுவன் காதில் இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தது. ‘நான் பிறந்து என் பெற்றோர்களுக்கு எந்தப் புகழ் கொடுத்தேனோ அறியேன். ஆனால் இவன் பிறந்ததாலேயே நான் பெரும் புகழ் பெற்றேன்’ என்று அச்சுதப்பன் கூறியது முற்றிலும் பொருந்தும். அச்சுதப்பன் அன்று தன் குழந்தையை விஜய ரகுநாதன் என்று அன்போது அழைத்து அளவளாவியது தூதன் கண்முன் தோன்றியது. ரகுநாதன் சிறு குழந்தை. அப்பொழுதே அவனுக்கு கல்வி கற்பிக்கத் தொடங்கினான் அச்சுதப்பன். ‘அவன் சிறு குழந்தை ஆயிற்றே, இன்னும் இரண்டு ஆண்டுகளாவது சொல்லட்டுமே!’ என்றாள் அவன் தாய். அவளுக்கு அவ்வளவு விரைவில் தன் மகனை கல்விக்கு அனுப்ப விருப்பமில்லைதான். ஆனால் அச்சுதப்பன் தன் மகளின் சுறுசுறுப்பையும் புத்திக் கூர்மையையும் கண்டு தன் அமைச்சர் கோவிந்த தீக்ஷசதரிடம் கல்வி கற்க அனுப்பினான். ரத்தினங்கள் பதித்த பலகையில் அக்குழந்தை எழுத முதலில் ஆரம்பித்தது இப்பொழுதுதான் நடந்தது போல் தோன்றியது தூதனுக்கு. தன் மன்னனின் வளர்ச்சியில் ஆழ்ந்திருந்த தூதனுக்கு இப்பொழுது தோன்றியுள்ள நெருக்கடி ஒரு பெரும் மலை எனத் தோன்றியது. அந்த நெருக்கடி ரகுநாதன் ஆழ்ந்த சிந்தனையில் முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்தான். அவன் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் அவன் மனதில் தோன்றும் எண்ண அலைகளாகத் தோற்றமளித்தன. “மேலும் என்ன நடந்தது?” என்றான் மன்னன். தூதன் சொல்லத் தொடங்கினான். ‘வேங்கடபதி மகாராயர் தன் கருத்துப்படிதான் நடப்பார் என்பதில் ஐக்கராயனுக்கு ஐயமே இல்லை. அவன் தங்கை வேங்கடபதியின் தேவி, அவள் அழகிலும் பேச்சிலும் சிரிப்பிலும் வேங்கடபதி எப்பொழுதும் மெய்மறந்து கிடப்பார். அவள் அருகே வந்து நின்றால் போதும், அவருக்கு வேறு எதுவும் உலகில் தேவை இல்லை. அவள் இன்றி ஒரு கணம்கூட அவரால் இருக்க முடியாது. அப்பெண்ணுக்குப் பிறந்த குழந்தைதான் அந்த மகவு’ என்று கூறி, அம் மகனுக்கே வேங்கடபதி பட்டம் கட்ட வேண்டும்’ என்பது ஜக்கராயனின் விருப்பம், தன் தங்கைக்கு இதைத் தெளிவாகக் கூறியிருந்தான். அவள் மட்டும் என்ன சாதாரணமானவளா? ஏகச் சக்ராதிபதியான வேங்கடபதியைத் தன் கடைக்கண்ணாலேயே வென்றுவிடும் ஆற்றல் படைத்தவள். அரசனிடத்தில் அக்குழந்தையைக் காட்டி ’இதோ என் வயிற்றில் உதித்த உங்கள் மகன். இவன்தானே பட்டத்துக்குரியவன்! என்றாள். அறமா, இன்பமா? வேங்கடபதி குழந்தையைப் பார்த்தார். அப்பெண்ணின் முகத்தைப் பார்த்தார். அவளது அழகும் சிரிப்பும்…! கண்ணை மூடிக் கொண்டார். பரதனுக்கு முடி சூட்ட வேண்டும் என்று கேட்ட கேகயன் மகள் போல், தான் இருப்பதாக நினைத்துக் கொண்டாள் அத் தேவி. வேங்கடபதியும் தசரதன் நிலையில்தான் இருந்தார். ஆவி போய் விடுமோ என்ற நிலைதான். அவளைப் பொறுத்த மட்டில் “உன் மகனுக்குத்தான் பட்டம்” என்று கூறிவிட்டால் போதும்; துடித்துக் கொண்டிருந்தாள் அந்த பதிலுக்காக. அரசன் பேசவில்லை. ஸ்ரீரங்கனையும் அமைச்சர்களையும் பிரதானிகளையும் கூட்டி வா என்றான் அரசன். அவன் குரலிலே ஒரு நடுக்கம்; அனைவரும் வந்து நின்றனர். அரசன்கட்டிலில் படுத்திருந்தான். அவன் அருகிலே அப்பெண்ணைக் கூட்டி அமர்த்திக் கொண்டான். அவள் மடியில் அக்குழந்தையும் இருந்தது. அவளை தடவிக் கொடுத்தான். அரசன் அருகில் நின்று கொண்டிருந்த ஐக்கராயனின் முகம் மலர்ந்தது. அருகில் நின்றவர்கள் அறம் தழைக்குமா, இன்பம் தழைக்குமா என்று எண்ண வேண்டிய தேவையே இல்லை. அரசன் அருகில் அப்பெண் அமர்ந்திருப்பதே அவன் இன்பத்தில் நிறைந்துள்ளான் என்பது போல் இருந்தது. ஸ்ரீரங்கனை அருகில் அழைத்தான். ஒரு விநாடியில் முடிந்து விட்டது. யாரும் எதிர்பார்க்கவில்லை. தனது தலையிலிருந்த மணி மகுடத்தை ஸ்ரீரங்கன் தலையில் சூட்டினான். அடுத்த கனம் வேங்கடபதி அரசன் இறந்தே விட்டான். அத்தேவியின் குழந்தைக்கு முடிகிட்டவில்லை. ஸ்ரீரங்கனுக்கு முடி சூட்டி இறந்து விட்டான் அரசன். ஐக்கராயனின் கண்கள் நெருப்பைக் கக்கின, தன் திட்டம் சூழ்ச்சியெல்லாம் ஒரு கணத்தில் சிதறியதைக் கண்டபின் தன் தங்கையையும் குழந்தையையும் இழுத்துக் கொண்டு வெளியேறினான் ஜக்கராயன். மற்ற பிரதானிகள் எல்லாம் ஆவி பிரிந்த அரசன் வேங்கடபதியின் முகத்தைப் பார்த்தனர். அறத்துக்கே முதலிடம் கொடுத்த அம்மன்னன் தர்மமகாராஜன் தான். அந்தப் பெரும் சாந்தியில் மூழ்கியிருபப்து போல் தோற்றமளித்து அவன் முகம். வந்தது ஆபத்து காலம் சுழன்றது. ஒரு சில மாதங்கள் ஓடிவிட்டன. அதற்கிடையில் ஜக்கராயன் தனது மறு திட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டான். பல பிரதானிகளையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டு ஸ்ரீரங்கனையும் அவனது தேவியரையும், மக்களையும் சிறையில் தள்ளினான். தன் தங்கையின் குழந்தையையே அரசன் என முடி சூட்டினான். தானே உண்மையில் ஆட்சியாளனாகத் திகழ்ந்தான். பலர் அவன் பக்கம் சேர்ந்தனர். இன்னும் ஒருவந்தான் அவன் பக்கம் சேரவில்லை. அவன்தான் யாசம நாயக்கன். அவனையும் தன் பக்கம் சேர்த்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் சிறையில் இருந்த ஸ்ரீரங்கன் தப்பித்துச் செல்ல முயற்சிக்கிறான் என்ற செய்தி எட்டியது. சிறைக் கதவுகள் வலுவாகப் பூட்டப்பட்டன. காவல் அதிகரித்தது. காவலர் கண்ணிலிருந்து ஏதும் தப்ப முடியாது என்ற நிலை. மிக மிகத் தேவை என்பவையே அனுமதிக்கப்பட்டன. உணவு எடுத்துச் செல்பவர்கள், நீர் கொடுத்தவர்கள், துணி வெளுப்பவர்கள் இவர்கள் தாம் சிறைச்சாலைகளுக்குள் செல்ல முடியும். அதுவும் ஓடவோ, சண்டையிடவோ முடியாத வயது முதிர்ந்தவர்களே அனுமதிக்கப்பட்டனர். துணி மூட்டையைத் தாங்கிச் செல்ல முடியாத அந்த வண்ணானையும் உணவு அளிப்பவர்களையும் பார்த்துக் காவலர்கள் நகையாடுவார்கள். அந்நிலையில் திடீரென ஜக்கராயன் ஒருநாள் சிறைச்சாலை முன் தோன்றினான். காவலர் கதி கலங்கினர். ‘இது எவ்வாறு நடந்தது?’ என்று சீறினான் ஜக்கராயன். ‘இங்கு எதுவும் நடக்கவில்லையே’ என்றனர் சிறைக் காவலர். ‘நாள்தோறும் துணி வெளுக்க வரும் வண்ணான்கூட நான்கு நாட்களாக வரவில்லையே’ என்றனர். ‘மடையர்களே’ என்றன் ஜக்கராயன். அடுத்த கணம், பதில் கூறிய காவலர் தலை தரையில் உருண்டது. ‘வண்ணான் தன் மூட்டையில் கட்டி, ஸ்ரீரங்கனின் மகன் ராமனை கடத்தி சென்று விட்டான் அந்த யாசமன். பளு தாங்க முடியாமல் தாழ்ந்து நடந்த அந்த வண்ணான் தான் துணி மூட்டையில் கடத்திச் சென்றுவிட்ட பின் நீங்கள் இங்கு காவல் காத்து நிற்கிறீகள்!’ என்று கத்திய ஜக்கராயனின் சொல்லில் தீப் பறந்தது. கொன்றே தீர்த்தான் உள்ளே நுழைந்தான் ஜக்கராயன். மறுகணம் அங்கே அலறல் சத்தம்தான் கேட்டது. விஜயநகரச் சக்கரவர்த்தி ஸ்ரீரங்கராயர் சிறையில் துண்டு துண்டாகக் கிடந்தார். அவர் மட்டுமல்ல. அவர் குடும்பமே துண்டு துண்டாக இரத்த வெள்ளத்தில் மிதந்தது. ‘இனி அந்த ஒரு சிறிவனால் என்ன முடியும் என்பதையும் பார்த்து விடுகிறேன்’ என்று உறுமிக்கொண்டே ஜக்கராயன் சிறையிலிருந்து வெளியே போந்தான். இந்நிகழ்ச்சிகளைத் தூதன் ரகுநாதனிடம் கூறும்போது அவன் முகமும் கண்களும், தோள்களும் ‘தான் அங்கு இல்லையே’ என்று கூறத் துடிப்பவைபோல் காட்சியளித்தன. தூதன் தொடர்ந்தான். "ஜக்கராயனின் கொடுமையையும், அவன் பக்கம் சேர்ந்திருந்த பிரதானிகளின் எண்ணிக்கையையும் படை பலத்தையும் எதிர்த்து நிற்க எவரால் முடியும் என்ற நிலையிலும் நன்றி உள்ளத்தோடு, அஞ்சா நெஞ்சத்தோடு எழுந்தான் யாசமநாயகன். ‘ஸ்ரீரங்கராயனின் மகன் சிறுவன் ராமனே விஜயநகரப் பேரரசன்’ என்று கூறி, ஒரு சிறு படையுடன் போர் முரசு கொட்டினான். இப்பொழுது அங்கே பெரும் போர் நடந்து கொண்டிருக்கிறது. யார் வெற்றி பெறுவர் என்று சொல்ல இயலவில்லை. ஆனால் ஜக்கராயனுக்கு உதவியாக செஞ்சி நாயக்கனும், மதுரை நாயக்கனும் நிற்பார்கள்போல் தோன்றுகிறது’ என்றான் தூதன். அதைக்கூறி முடிக்கும் முன்னர் மற்றொரு தூதன் ரகுநாதன் முன் ஓடி வந்தான். ‘அரசே, சோழகன் நமது நாட்டில் புகுந்து கொள்ளையிடுகிறான்’ என்றான். முதலைக்கு இட்ட ஆனை ‘யார் இந்தச் சோழகன்?’ “கொள்ளிட ஆறு கடலில் சேருமிடத்து இருந்த தேவி கோட்டையின் தலைவனான அவன் கொடுமையின் அவதாரம்!” அவன் தனது ஆற்றில் பல முதலைகளை வளர்த்து விட்டிருக்கிறான். தன் நாட்டு மக்களைக் கடிக்கக்கூடாது. பிற நாட்டு மக்களையே கடித்துக் குதறவேண்டும் என்பது அவற்றிற்கு அவன் இட்ட கட்டளை. அவற்றில் ஒரு முதலை அவன் நாட்டு ஆள் ஒருவனைக் கடித்துவிட்டதாம். ஆதலின் அதைச் சங்கிலியால் கட்டி வெளியே இழுத்து வந்து வருவோர் போவோர் எல்லாரும் அதக் கல்லால் அடித்துக் கொல்வதை வேடிக்கைப் பார்த்தவன். ‘அக்கொடூரமானவன் இப்பொழுது நம் நாட்டு எல்லையில் புகுந்து நம் மக்களைக் கடத்திச் செல்கிறான். அவர்களை சாக்கில் கட்டி, பாறாங் கற்களைக் கொண்டு அடித்து குற்றுயிராக்கி முதலைகளுக்கு இறையாக்குகிறான்’ என்று தூதன் சொல்லி முடிகவும் ரகுநாதன் பாய்ந்து வெளிப்போந்து வாயிலில் இருந்த குதிரையில் ஏறி உருவிய வாளுடன் தீப்பொறி பறக்கும் விழியுடன் தன் நாட்டு மக்களைக்காக்க தனியொருவனாகவே கிளம்பிவிட்டான். அது கண்டு அவனது படைத் தலைவர்களும், படை வீரர்களும் பின் விரைந்தனர். வாணிகர்களாக வந்து சூழ்ச்சி செய்யத் தொடங்கிய போர்த்துகீசியர் உதவினர். கடுமையான போர். ரகுநாதன் தானே முன்னின்று போரை நடத்தினான். தேவி கோட்டை ரகுநாதனின் ஆற்றலுக்கு அடிபணிந்தது. சோழகன் உயிரோடு பிடிக்கப்பட்டான். ரகுநாதன் அவன் தலையைச் சிதைக்கவில்லை. சிறையில் தள்ளினான். ரகுநாதன் பெற்ற பெரும் வெற்றி அது. அப்போர் அதோடு முடிந்து விடவில்லை. போர்த்துகீசியர்கள் யாழ்ப்பாணத்தைத் தங்களது இடமாகக்கொண்டு கடல் வழியில் தொல்லை கொடுக்கத் தொடங்கினர். யாழ்பாணத்தில் ஆபத்து ரகுநாதன் தேவி கோட்டையிலிருந்து நேரே யாழ்ப்பாணத்துக்குப் படை நடத்திச் சென்றான். அவனது கலங்கள் அவனது படைகளை ஏற்றிக்கொண்டு கடல்மிசைச் சென்றன. ரகுநாதனே இப்படையையும் நடத்திச் சென்றான். போர்த்துகீசியரில் கடல்வலி உச்ச நிலையிலிருந்த காலம் அது. ரகுநாதனின் நெஞ்சு உரமும், வீரமும் அவனுக்கு உறுதுணையாய் நின்றன. பல இடர்களுக்கும் இடையில் அவனது கடற்படை முன்னேறியது. போர்த்துகீசியர் படை சிதறி ஓடியது. வலிமை மிகுந்த மாற்றான் படையை, நவீன சாதனங்கள் கொண்டு போரிட்ட மேலை நாட்டுப் படையை தூளாக்கி வெற்றி கொண்ட தமிழ்ப் பேரரசன் ரகுநாதன். வெற்றிமாலை புனைந்து தமிழகம் திரும்பிய அம்மன்னனுக்கு திடுக்கிடும் செய்தி ஒன்று கத்திருந்தது. விஜயநகரப் பேரரசுக்காக நடக்கும் போர் மிகவும் பெரிதாகி நாட்டையே கலக்கிக் கொண்டிருந்தது. யாசமநாயக்கனுக்கும் ஜக்கராயனுக்கும் நடந்த போரில் யாசமன் கை சற்று ஓங்கியது. ஆதலின் ஜக்கராயன் தென்னாடு நோக்கி வந்தான். மதுரை, திருநெல்வேலி, செஞ்சி, அரசர்கள் அனைவரும் ஜக்கராயனுடன் சேர்ந்து எண்ணற்கரிய பெரும்படையைத் திரட்டினர். திருச்சிராப்பள்ளியிலிருந்து அவர்கள் தங்களது போர் ஆயத்தங்களைச் செய்தனர். அவர்களை முறியடிக்க யாசமநாயக்க தென்னாடு வந்து கொண்டிருந்தான். அவனுடன் ஸ்ரீரங்கன் மகன் சிறுவன் ராமனையும் அழைத்து வந்து கொண்டிருந்தான். யாசமனின் ஒரே புகலிடம் தஞ்சை நாயக்கன் ரகுநாதனே, அவனோடு இணிந்துவிட்டால் போரின் இறுதியைக் கண்டு விடலாம். யாழ்ப்பாணத்தில் வெற்றி சூடி வருகிற ரகுநாதன் விஜயநகரத்தில் யார் முறைப்படி முடி சூட்ட வேண்டுமோ அவர் பக்கம்தான் நிற்பான் என்பது யாசமனின் உறுதி. கல்லனை புரண்டது ஜக்கராயனும், அவன் உடன் சேர்ந்த மற்றோரும் ஒரு சூழ்ச்சி செய்தனர். ரகுநாதன் படை யாசமன் படையொடு சேர முடியாமல் தடுத்துவிடவேண்டும். பின்னர் இருவரையுமே தனித்தனியாக தங்கள் பெரும் படையால் வென்று விடலாம். இதற்கு ஒரு வழி காவிரியாற்றின் குறுக்கே உள்ள கல்லணையைத் தகர்த்தெறிந்தால் வெள்ளப்பெருக்கெடுத்தோடும்; இருபடையும் சேர இயலாது என்று இச்சூழ்ச்சி செய்தனர். இதை எண்ணினார்களோ இல்லையோ அடுத்த நிமிடமே கல்லணை இடிக்கப்பட்டது. மடமட வென்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இந்தச் செய்திதான் யாழ்ப்பாணத்திலிருந்து வெற்றியோடு திரும்பிய ரகுநாதனுக்குக் கிடைத்தது. ரகுநாதனின் கோபமும் கரை புரண்டது. அவன் ஒரு வீர சபதம் எடுத்தான். ‘யார் காவிரியாற்று அணையை உடைத்தார்களோ அவர்களது தலையைக் கொண்டே மீண்டும் அவ்வணையைக் கட்டுவேன்’ என்று பயங்கரமான சபதம் செய்தான். ரகுநாதன் வெறும் பேச்சாளியல்ல; செய்தே விடுவான் என்பது தெரியும். ஜக்கராயனின் சூழ்ச்சி பலிக்கவில்லை. ரகுநாத நாயக்கன், யாசமனை ஆதரவோடு அணைத்தான். ராமராயனுக்குமுடி சூட்டாது நில்லேன் என்று அச்சிறுவனுக்குப் புகலிடம் அளித்தான். இரு படைகளையும் ஒன்று சேர்த்தான். தஞ்சையிலிருந்து கிளம்பிய படை திருக்காட்டுப்பள்ளி வழியாக முன்னேறியது. முன்னின்று நடத்திச் சென்றவன் ரகுநாத நாயக்கன். அவனது ஆற்றல் அமைச்சர் கோவிந்த தீக்ஷ¢தர் நாட்டுக் காரியங்களைக் கவனித்துக் கொண்டார். ரகுநாத நாயக்கன் தினந்தோறும் தனது அமைச்சருக்குத் தனது படையின் முன்னேற்றம் குறித்து ஓலை அனுப்பினான், நாள் குறிப்பு போல. தலைகள் உருண்டன பெரும் வெள்ளமும் பெரும் வெள்ளமும் கலப்பது பொல பெருங்கடலும் பெருங்கடலும் கலப்பது போலவும், ஜக்கராயன் படையும் ரகுநாதன் படையும் திருச்சிக்கு அருகில் தொப்பூர் என்ற இடத்தில் மோதின. தமிழகமே அதுவரை கண்டிராத பெரும் போர் அது. பல்லாயிரக் கணக்கான வீரர்கள் மாண்டு மடிந்த போர். வெற்றிமங்கை யாரைத் தழுவுவாள் என்று அறிய இயலாத அந்த ரண களத்தில் ஜக்கராயனின் தலையைத் துண்டித்து தரையில் உருண்டோடச் செய்தான் விஜயரகுநாதன். மதுரை, செஞ்சி, மற்ற அரசர்கள் எல்லாம் திரும்பினால் தாமும் வீழ்வோம் என்று திரும்பிக்கூட பாராது ஓட்டம் எடுத்தனர். அறத்தின் முன்னர் அறமில்லாதது எப்படு ஓடும் என்பதற்கு அது எடுத்துக்காட்டு போல் திகழ்ந்தது. ராமனுக்குப் பட்டாபிஷேகம் யாசமனோடும் சிறுவன் ராமராயனாடும் கும்பகோணம் அடைந்த ரகுநாதன் சிறுவன் ராமனுக்கு அங்கு பட்டாபிஷேகம் அறத்தின் மூர்த்திக்கு செய்த பட்டாபிஷேகமாகத் தோற்றமளிதது. மானுடம் பெற்ற வெற்றியேயாயினும் தெய்வத்தின் அருளால் பெற்ற வெற்றியே எனக் கருதினான் இரகுநாதன். ராம கதை என்னும் அமுதம் ரகுநாதனிடத்தில் ஒரு பண்பு உண்டு. அப் பண்பு அறத்தின்பாற் பட்டது. "அறவழி நிற்பதே குறிக்கோள்’ என அவன் கருதியமைகுக் காரணம், இந்திய பண்பில் உயர் துடிப்பான இராமகாதை என்னும் அமுதத்தில் இவன் என்றும் திளைத்ததுதான். அயோத்தி அண்ணல், அறத்தின் மூர்த்தி ராமனது காதையை தினந்தேறும், ஏன் எப்பொழுதுமே கேட்டுக் கொண்டிருப்பதில் அவனுக்குப் பேரின்பம். இராம காதை எங்கெல்லாம் பேசப்படுகிறதோ, அங்கெல்லாம் உச்சி சேர்த்திய கரத்தனாகக் கண்ணீர், வெள்ளம் என பெருக்கெடுத்து ஓட, பக்திப் பரவசத்தில் நின்ற அஞ்சனைக்குமரன் என அவன் திளைப்பான், “அநவரத ராமகாதம்ருத சேவகன்” என்று தன்னைக் கூறுக் கொள்கிறான் ரகுநாதன். அன்று, அறம் வளர்த்த நம்பிக்கு பட்டாபிஷேகம் செய்ய அரும் துணை நின்றவன் அனுமன். இன்று விஜய நகர அரசன் இராமன் பட்டாபிஷேகத்திற்குக் காரணமாய்த் திகழ்ந்தவன் இவன். இந்த எண்ணம் இரகுநாதன் மனத்திலும் திகழ்ந்திருக்க வேண்டும். அதே இடத்தில் கும்பகோணத்தில் அயோத்தி இராமனுக்கு ஒரு பெருங்கோயில் எடுப்பித்தான் விஜய ரகுநாதன். அது இன்றும் அவன் பெற்ற வெற்றியின் மலராகத் திகழ்கிறது. அக் கோயிலினுள்ளே அண்ணல் இராமன் அறத்தை, பரம தத்துவத்தை எடுத்துரைக்கும் ஆசானாகத் திகழ்கிறான். ஆம் கோதண்ட ராமனாக இல்லை; பட்டாபிஷேகம் புனைந்த இராமனாக இல்லை’ இவை அனைத்தும் இறுதியில் அறத்தின் உருவகமே என்னும் தத்துவத்தை எடுத்துரைக்கும் பரம்பிரும்மமாகத் திகழ்கிறான். அவரையும் அவரது அருகில் அருள் பாலித்து அமர்த்திருக்கும் மிதலைச் செல்வியும், விநயமே உருவாக, நிற்கும் இளவல் இலக்குவனையும், கொற்றக்குடை ஏந்தி நிற்கும் பரதனையும், வெண்கவரி வீசும் சத்ருக்கணையும் ஆயிரங்கண் கொண்டு காணினும் ஆற்றலெவே என்பது உண்மை. அது மட்டுமா? இராகவனது கதையை எடுத்துரைக்க வேண்டும் எனின் அனுமன் இன்றேல் இயலுமோ? அனுமனே ஓலைச் சுவடி கொண்டு எதிரில் அமர்ந்து வாசிப்பதோடன்றி யாழ் இசைப்பவனாகவும் படைக்கப் பட்டுள்ள பாங்கை அனைவரமும் கண்டு களிக்கலாம் இக்கோயிலில் பல பட்டாபிஷேகக் காட்சிகள் சிற்பங்களாகப் படைத்து மகிழ்ந்துள்ளார், இரகுநாதன். சுக்ரீவ பட்டாபிஷேகம், வீடண பட்டாபிஷேகம் எனப் பல உள்ளன. தஞ்சை நாயக்க மன்னனிலேயே சிறந்த இந்த இரகுநாதன் இசையில் ஈடுபாடு கொண்டவன் தானே இசை நூல்களை இயற்றியவன், இரகுநாதேந்திர வீணை என்ற ஒரு புது வீணையையே உண்டாக்கிக் களித்தவன். அவன் இசையில் கொண்ட வல்லமையை எல்லாம் பிரதிபலிக்கின்றன இராசாமி கோயில் சிற்பங்கள். சேர மன்னர்களில் செங்குட்டுவன் எவ்வாறோ, சோழர்களில் இராஜராஜ பெருந்தகை எவ்வாறோ, பல்லவர்களில் இராஜ சிம்மன் எவ்வாறோ, பாண்டியர்களில் பராந்தக நெடுஞ்சடையன் எவ்வாறோ, விஜய நகர அரசர்களில் கிருஷ்ணதேவராயன் எவ்வாறோ, மதுரை நாயக்கர்களிலே திருமலை நாயக்கர் எவ்வாறோஅவ்வாறு தஞ்சசை நாயக்கர்களில் வாணளாவும் புகழ் பெற்ற வீரனாகத் திகழ்ந்தவன் விஜய ரகுநாத நாயக்கன். கி.பி. 1600 முதல் 1630 வரையிலாண்ட அம் மன்னன் தஞ்சை மாவட்டத்தில் பல பெரும் கோயில்களுக்கு செய்துள்ள கலைப்பணி ஈடு இனையற்றது. இவையணைத்துக்கும் முடி சூட்டியதுபோல் திகழ்வது கும்பகோணம் ராமசாமி கோயில். இராமனுக்கு முடி சூட்டியது அனைத்து மக்களும் தங்களுக்கே முடி சூட்டப்படுவதாக நினைத்து மகிழ்ந்தனராம். அதுபோல் விஜய ரகுநாதன் தஞ்சை நாயக்கர் கலைக்கே இங்கு முடி சூட்டியிருக்கிறான். அவ்வளவு சிறந்த மன்னன் இக் கோயிலில் தன் தேவிமார் சூழ கரம் கூப்பி நிற்பது சிற்பமாக உள்ளது. இக் கோயிலைப் பார்த்திருக்கிறீர்களா? இல்லையேல் இன்றே சென்று பாருங்கள். அங்கே அவ்வீரன் விஜயரகுநாதனைப் பார்ப்பீர்கள் பணியின் சிகரம் அறத்தின் நாயகனையும் பார்ப்பீர்கள். சயாமில் சிவனும் திருமாலும் மலேயா நாட்டின் வடகோடியில் பினாங் இருக்கிறது. அதற்கும் வடக்கே உள்ள நாட்டைச் சயாம் என்று குறிப்பர். இந்த நாடுகளுடன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகம் வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்தது. இந்த நாட்டின் மேற்கிலும் கிழக்கிலும் கடற்பகுதி. அதன் மேற்குக் கரையில் ‘தகூபா’ என்ற துறைமுகம் இருக்கிறது. தகூபா என்ற நதி வங்கக் கடலில் புகும் முகத்தில் இந்த நகர் இருக்கிறது. தகூபா எந்பது இக்காலத்தில் வழங்கும் பெயர். அதன் உண்மைப் பெயர் தக்கோலம் என்பது. இது தமிழ்ப் பெயர். அதுவே மக்களின் வழக்கில் தகூபா என்று மாறியது. சங்க காலத்தில் உலக வாணிகத்தில் ஒருபங்கு தமிழ் மக்கள் கையில் இருந்தது. மேலை நாடுகளிலிருந்து வந்த வாணிகார்கள் தமிழகத்தோடு திரும்பிவிடுவர் என்றும், தமிழக மாலுமிகளே கீழை நாடுகளுக்குச் செல்வர் என்றும் அறிகிறோம். வங்கக் கடல் கடந்து சயாம் செல்லும் தமிழ்க்கலங்கள், முதன் முதலில் தக்கோலத்தில்தான் தங்கும். அதனால் அது அக்காலத்தில் சிறந்து விளங்கியது. அதற்குத் தலத்தக்கோலம் என்ற பெயர் இருந்தது. முதல் இராசேந்திர சோழன் இதைக் கைப்பற்றிநான் என்று அவன் கல்வெட்டிலிருந்து அறிகிறோம். இந்த நகரிலிருந்து பத்து கல் தொலைவு, நதிக் கரையூடே உள்நாட்டில் சென்றால் ஒர் இடத்தை அடையலாம். அங்கே நதியின் வடகரையில் ஒரு மேடு. அந்த மேட்டில் சில சிற்பங்களும், ஒரு கல்வெட்டும் இருக்கின்றன. அவற்றை அவ்வூர் மக்கள் ‘பிர நராய்’ என்பர். இவற்றில் முக்கியமன மூன்று சிலைகளின் மேல் ஒரு மரமே வளர்ந்திருக்கிறது. வேர்களின் இடையில் இந்தச்சிலைகள் நன்கு தெரிகின்றன. இவை இப்போது இருக்கும் இடத்துக்கு நேர் எதிரே நதியின் தென்கரையில் சிறிய குன்று உள்ளது. அது இப்போது மூங்கிற் புதர்களும் மற்ற கொடி மரங்களும் அடர்ந்த காடாக இருக்கிறது. அங்கு ஒரு கட்டிடம் இருந்த தடயங்கள் காண்கின்றன. இந்தச் சிலைகளும் கல்வெட்டும் அங்கு இருந்ததாகவும், பின்னர் இப்போதுள்ள இடத்துக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் அவ்வூர் மக்கள் கூறுகி்ன்றனர். இந்த மூன்று சிலைளில் சிறப்பாக உள்ளது திருமாலின் சிலை. நான்கு கரங்களை உடைய இந்தப் பெருமாளின் மேல் இடக் கரம் உடைந்துள்ளது. வலக்கரத்தினால் அபயம் அளித்து இடக்கரத்தைத் தொடைமீது அமர்த்திப் பெருமான் விளங்குகிறார். இந்தச்சிலையைப் பார்த்தவுடன் பல்லவர் சிற்பங்கள் நினைவுக்கு வரும். இதன் அருகில் தேவியின் சிலையும் கிடக்கிறது. மூன்றாவதாக ஒர் ஆண் தெய்வத்தின் சிலைவேர்களுக்கு இடையில் சிக்கிக் கெண்டுள்ளது. அது சிவபிரானுடையதாக இருக்கலாம். இவை தவிர, முடிவடையாத ஒரு சிலையும், இன்னும் சில சிதைந்த சிற்பப் பகுதிகளும் கிடக்கின்றன இதன் அருகிலுள்ள கல்லில் நல்ல தமிழில் ஒரு சாசனம் உள்ளது. அது கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டைச்சார்ந்த தமிழ் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு, சயாம் நாட்டில் எப்படி வந்தது? அதைக் கவனிப்பதற்கு முன், கல்வெட்டு என்ன கூறுகிறது என்று பார்ப்போம். கல்வெட்டில் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டுள்ளது:- …. ய வர்மருக்கு…. மாந்தாந் நாங்கூருடையான் தொட்டகுளம், பேர் ஸரி அவனி நாரணம் மணிக் கிராமத்தார்க்கும் சேனா முகத்தார்க்கும் ….பதார்க்கும் அடைக்கலம் நாங்கூருடையான் அங்கு ஒரு குளம் தோண்டி அதற்கு ‘அவனி நாரணம்’ என்ற பெயரையும் இட்டிருக்கிறான், அதை மணிக்கிராமத்தாரும், சேனா முகத்தாரும், இன்னும் யாரோ ஒரு குழுவும் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளான். அந்தக் கல்வெட்டு வர்மன் என்ற பெயரில் முடியும் ஒரு மன்னன் காலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. வர்மன் என்று பெயர் கொண்ட பல மன்னர்கள் அங்கு அண்டிருக்கிறார்கள். எனவே அந்தப் பகுதியில் ஆண்ட ஒரு மன்னனை இது குறிக்கிறது. நாங்கூர் என்பது தமிழகத்தில் காவிரிப்பூம்பட்டினத்தின் அருகில் உள்ள ஒர் ஊர். அவ்வூரைச் சேர்ந்தவன், கடல் கடந்து சயாமுக்கு வந்து திருமாலுக்குக் கோயில் எழுப்பி அவனி நாரணம் என்ற ஏரியையும் தோண்டியிருக்கிறான். காவரிப்பூம்பட்டினம், சங்க காலத்திலிருந்தே சிறந்த துறைமுகமாக இருந்தது. அங்கு இன்றும் வணிகர்கள் வாழ்ந்த மணிக்கிராமம் என்ற பகுதி இருக்கிறது. எனவே கடல் கடந்து சென்று வாணிபம் புரிந்த தமிழ் வணிகர்கள் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து கலங்களில் செல்வர் என்பது தெளிவு. அவ்வாறு அவர்கள் செல்லும்போது கடல் கொள்ளைக்காரர்களிடமருந்து தங்களைக் காத்துக்கொள்ளச் சேனா வீரர்களை அழைத்துச்செல்வது வழக்கம். காவரிப்பூம் பட்டினத்தில் மணிக்கிராமம் இருப்பதனாலும், அருகில் நாங்கூர் இருப்பதனாலும், சயாம் நாட்டில் குறிக்கப்படும் மணிக்கிராமத்தாரும் நாங்கூருடையானும் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து சென்றிருக்கிறார்கள் என்பது தெளிவு. நாங்கூரில் சிறந்த வீரர்கள் வாழ்ந்ததாகக் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் திருமங்கையாழ்வார் பாடியிருக்கிறார். சங்க காலத்திலேயே கரிகால் பெருவளத்தான், நாங்கூர் வேளிர் மகளை மணந்தான் என்று அறிவோம். எனவே கடல்கடந்து வாணிகம் செய்த தமிழ் மக்களுக்கு, நாங்குர் வேளிர்கள் உறுதுணையாகச் சென்றிருக்க வேண்டும். அவர்களே சேனா முகத்தார் என்று கல்வெட்டில் குறிக்கப்பட்டவர்களாக இருக்கலாம். காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து சென்ற தமிழ்க்கலங்கள் சயாம்நாட்டில் தக்கோலத்தில் தங்கியிருந்தன. அங்கு மணிக்கிராமம் ஏற்படுத்தப்பட்டுச் சிறந்த வாணிகம் நடைபெற்றிருக்கிறது. என்பது இந்தக் கல்வெட்டினால் தெளிவாகிறது. நாங்கூர் சிறந்த வைணவத் தலம். எனவே அங்கே சென்ற நாங்கூருடையான், திருமாலைப்பிரதிட்டை செய்து, குளத்தையும் தோண்டியிருக்கிறான். அவனிநாரணம் என்ற பெயர் அந்தக் குளத்துக்கு இடப்பெற்றதும் சிறப்பாகும். தமிழகத்தில் அப்போது ஆண்ட பல்லவ மன்னன் தெள்ளாறெறிந்த நந்திவரிமன். அவன் மீது நந்திக்கலம்பகம் என்ற சிறந்த நூல் பாடப் பெற்றுள்ளது. அதில் நந்திவர்மன் சிறந்த கடற்படையின் தலைவன் என்றும், கடற்படை அவனிநாரணன் என்னும் பட்டம் பெற்றவன் என்றும் குறித்திருக்கிறது. அவன் ஆட்சியின் கீழ்க் காவிரிப்பும்பட்டினம் இருந்தது. ‘காவிரி சூழ் திருநாடுடை’ என்று கலம்பகம் குறிக்கிறது. எனவேதான், காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து சென்ற நாங்கூருடையான், தன் மன்னனாகிய நந்தியின் பெயரால் அந்தக்குளத்துக்கு அவனி நாரணம் என்று பெயரிட்டிருக்கிறான். அவனிநாரணன் என்பதே ‘பிரித்வீ நாராயணன்’ என்று வரும். இந்தப் பெயர்தான் மருவி இப்போது அந்த நாட்டு மக்கள் மொழியிலே ‘பிர நராய்’ என வந்துள்ளது போலும். இங்கு கிடைத்துள்ள சிலைகள் பல்லவர் காலச் சிலைகளைப்போல் இருப்பதற்குக் காரணமும் இதுவே. கடல் கடந்து வாணிகம் செய்த தமிழ் மக்கள் பல நாடுகளில் தங்கி, அங்குள்ள மக்களோடு ஒன்றித் தங்கள் பண்பையும் போற்றியிருக்கின்றனர் என்பதற்கு இது ஒரு சான்று. கல்வெட்டுகள் கூறும் சமயநிலை தமிழகத்தில் இதுகாறும் கிடைத்துள்ள கல்வெட்டுகளில் மிகவும் தொன்மையானவை பல்வேறு குன்றுகளில் இயறக்கையாக அமைந்த குகைத்தளங்களில் காணப்படுபவையாகும். சமணப் பெரியார்களுக்கு வணிகர்களும், அரசர்களும் பள்ளி அமைத்ததை இக்கல்வெட்டுகள் குறிக்கின்றன. தமிழகத்தின் வடபகுதியில் காஞ்சிக்கு அருகிலிருந்து தென் குமரி வரை இவை காணப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை மதுரைக்கு அருகில் உள்ள குன்றுகளில் உள்ளன. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் சமண சமயத்துக்கு ஆதரவு அளித்திருக்கின்றனர் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. மதுரைக்கு அருகிலுள்ள பல கல்வெட்டுகளில் மீனாட்சிபுரம் என்ற ஊருக்கு அருகில் உள்ள மலைத்தொடரில் காணப்படும் கல்வெட்டு ‘வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.’ இது சமண சமயத்தைச் சார்ந்த ‘கணிநந்தன் சிரியகுவன்’ என்பவருக்கு நெடுஞ்செழியன், பணவன், கடலன், வழுதி என்பவன் பள்ளி அமைத்ததைக் குறிக்கிறது. கடலன், வழுதி, பணவன், செழியன் என்ற பெயர்கள் பாண்டியர்களுடைய குலப்பெயர்கள் என்பதை அனைவரும் அறிவர். இக்கல்வெட்டுகள் கி.மு.முன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தவை. இங்கேயே திருவெள்ளறை நிகமத்தைச் சார்ந்த காவிதி ஒருவர் பள்ளி அளித்ததையும் இது குறிக்கிறது. நிகமம் என்பது நகரத்தையும் வணிகக் குழுவையும் குறிக்கும். மணிவாசகப்பெருமான் பிறந்து புகழ் பெற்ற திருவாதவூரிலும் அண்மையில் சமணப் பெரியார்கள் வாழ்ந்த தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மதுரைக்கு அருகில் உள்ள கொங்கர்புலியன்குளம், அரிட்டாபட்டி, அழகர்மலை, மேட்டுப்பட்டி, முத்துப்படி, விக்கிரமங்கலம், கருங்காலக்குடி முதலிய பல குன்றுகளில் சமணப் பெரியார்கள் வாழ்ந்த யாழிகளும், கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. ஞானசம்பந்தப் பெருமானால் ஆனைமாமலை என்று புகழப்பெற்ற குன்றில் கிறிஸ்துவின் சமகாலத்திய கல்வெட்டு ஒன்று உள்ளது. அங்கு சில படுக்கைகளும் உள்ளன. அக்கல்வெட்டில் அம்மலை ‘இவகுன்றம்’ என்று குறிக்கப்படுகிறது. ‘இவம்’ என்பது யானையைக்குறிக்கும். ‘இவமாகி’ என்று வினாயகப்பெருமானை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளது அனைவரும் அறிந்ததே. ஆகக் கிறிஸ்துவின் சற்றேறக்குறைய சமகாலத்திலேயே இக்குன்றை ஆனைக்குன்று என்று மக்கள் அழைத்துள்ளனர் என்று அறிகிறோம். அக்காலத்திலிருந்து ஞானசம்மந்தர் காலமான கி.பி. எழாம் நூற்றாண்டு வரை, இக்குன்று சமணப்பெரியார்கள் வாழ்ந்த புண்ணியத் தலமாகத் திகழ்ந்தது என்று அறியலாம். இவ்வாறு பாண்டிய மன்னர்களின் ஆதரவைப் பெற்றது போல சமண சமயம் சங்ககால சேர மன்னர்களுடைய ஆதரவையும் பெற்றுத் திகழ்ந்தது என்று கருவூருக்கு அருகிலுள்ள வேலாயுதம் பாளையத்து ஆறுநாட்டார் மலைக் கல்வெட்டால் அறியலாம். இயற்கையாக அமைந்த இரு குகைத் தளங்கள் தெற்கிலும் வடக்கிலுமாக உள்ளன. இங்கு தென்புறத்தே உள்ள குகைத் தளத்தில் சேர மன்னன் ஒருவன் ஆற்றூரைக்கோ ஆதன் சேரன் இரும்பொறை மகன் பெருங்கடுங்கோன் மகன் இளங்கடுங்கோன் என்று குறிக்கப்படுகிறான். இரும்பொறை என்பது சேர மன்னர்களுடைய குலப்பெயர் என்பதை அறிவோம். ஆதலின் இங்கே குறிக்கப்பட்டுள்ளவர்கள் சேரர் வழியில் வந்த மூன்று அரசர்கள் என்பது தெளிவு. இதில் இளங்கடுங்கோன் என்பவன் இளங்கோவான காலத்து இப்பள்ளியை அமைத்துக்கொடுத்தான் என்று இக்கல்வெட்டிலிருந்து அறிகிறொம். வேலாயுதம் பாளையத்திலிருந்து பத்து கல் தொலைவில் கருவூர் இருக்கிறது. இக்கருவூர் சங்ககாலச் சேரர்களின் தலைநகருள் ஒன்றாக இருந்தது என்று சங்க இலக்கியங்களிலிருந்து அறிகிறோம். ஆதலின்,இங்கு ஆண்ட சேர மன்னர்களும், மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் போலவே சமண சமயத்திற்கு ஆதரவு அளித்திருக்கின்றனர் என்று தெளிவாக அறியலாம். சேர மன்னர்கள் சிறந்த சைவர்களாகத் திகழந்தனர் பதிற்றுப்பத்தால் அறியலாம். சைவர்களாயினும் சமண சமயத்தை இவர்கள் போற்றிருப்பது அக்காலத்தமிழ் மன்னர்கள், பிற சமயங்களையும் எவ்வாறு போற்றினார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுகளாகும். காஞ்சிக்கு அருகில் மாமண்டூர் என்ற இடத்தில் இயற்கையாக அமைந்த குகைத்தளம் ஒன்று உண்டு. அங்கும் சமணப் பெரியார்கள் வாழ்ந்த தடயங்கள் இருக்கின்றன. கல்வெட்டுகளும் உள்ளன. இக்கல்வெட்டுகளும் கிறிஸ்துவுக்கு காலத்தால் முற்பட்டவை ஆதலின் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னர்களும் அக்காலத்தில் திரையர்கள் இப்பகுதியை ஆண்டுள்ளனர் சமணசமயத்தைப் போற்றியுள்ளனர் என்று அறியலாம். திருச்சி மாநகரின் ஒரு பகுதியே உறையூர் என்பது அனைவரும் அறிந்த விஸயம்.திருச்சிராப்பள்ளி மலையில் இயற்கையாக அமைந்த குகைத்தளம் ஒன்றில் சமணப்பெரியார்கள் வாழ்ந்த படுக்கைகள் உள்ளன.சித்தன்னவாசல் குகைகள் கூட அக்காலத்தே சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருக்கக்கூடும். ஆதலின் சேரரையும், பாண்டியரையும் போல சங்ககாலச் சோழப்பெரு மன்னர்களும் சமண சமயத்துக்கு ஆதரவு அளித்துள்ளனர் என்று அறியலாம். இதற்குப்பிறகு காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவர்களில் ஆறாம் நூற்றாண்டில் ஆண்ட சிம்மவர்மன் என்ற மன்னனின் செப்பேடு ஒன்று கிடைத்துள்ளது. அது வஜ்ஜிரநந்தி என்ற சமணப் பெரியாருக்குப் பள்ளிச் சத்தம் அளித்ததைக் குறிக்கிறது. பல்லவ அரசன் சிம்ம விஸ்ணுவின் தாய், தன் கணவரின் குலச்சீர்த்திக்கும், தன் நன்மைக்குமாக அறம் பெருக, அருக தேவ ஆலயத்திற்கும், யாபனீய சங்கத்திற்கும் நிலம் தானம் அளித்தாள் என்று ஹோசகக் கோட்டைச் செப்பேடுகள் கூறுகின்றன. ஏழாம் நூற்றாண்டில் ஞானசம்பந்தப் பெருமானுடைய முயற்சியாலும், அப்பர் பெருமானுடைய தொண்டாலும், சமண சமயம் சற்றுத்தளர்வு கண்டது என்று பெரும்பாலானோர் கருதுகின்றனர். ஆனால் ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலும், எட்டாம் நூற்றாண்டிலும் பல்லவர் ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளிலும், பாண்டியர் ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளிலும் சமண சமயம் மிகச் சிறந்த நிலையை வகித்து வந்திருக்கின்றன என்று அங்குள்ள சிற்பங்களாலும் கல்வெட்டுகளாலும் அறிய முடிகிறது. மதுரைக்கு அருகில் உள்ள பல்வேறு குன்றுகளிலும் சமணப்பெரியார்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதற்குச் சான்றாக அங்கு சமண தீர்த்தங்கரர்களின் சிற்பங்களும், வட்டெழுத்துக் கல்வெட்டுகளும் பரவாலாகக் காணப்படுகின்றன. நெல்லை மாவட்டம் கழுகுமலை என்ற இடத்தில் வெட்டுவான் கோயில் என்று புகழ்பெற்ற சிவபெருமானுக்கு எடுக்கப்பட்ட கோயில் அருகில் ஏராளமான சமணச்சிற்பங்கள் காணக் கிடைக்கின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்த சமணச்சார்பு உடையவர்கள் அங்கு சிற்பங்களையும் கல்வெட்டுகளையும் விட்டுவைத்துள்ளனர். பல்லவர் நாட்டில் திருமலை, சாந்தமங்கலம் முதலிய இடங்களில் சமணப்பெரியார்களுக்கு அளிக்கப்பட்ட இடங்களும் சிற்பங்களும் உள்ளன. இவை சற்றேறக்குறைய எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவை. இவற்றிலிருந்து தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் தாங்கள் ஒரு குறிப்பிட்ட சமயத்தைப் பின் பற்றிய போதிலும் நம் நாட்டில் வாழ்ந்த சமண சமயத்தாரது கோட்பாடுகளுக்கும் பேராதரவு அளித்திருக்கின்றனர் என்பதற்கு அவ்வரலாற்றுச் சின்னங்கள் சான்று பகர்வனவாக இன்றும் உள்ளன என்பதை அறியலாம். கல்வெட்டுக் கூறும் ஆலய வழிபாடு தமிழகத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆலய வழிபாடுகள் எவ்விதம் நடந்து வந்தன என்பதை சில சாசனங்களிலிருந்தும், தாம்ர சாசனங்களிலிருந்தும் அறிய முடிகிறது. நம் நாட்டை பண்டைக் காலத்தில் சேரர், சோழர், பாண்டியர் என்ற மன்னர்கள் ஆண்டார்கள் என்று சங்க கால இலக்கியங்கள் கூறுகின்றன. இவ்விலக்கியங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தவை. இவ்விலக்கியங்களில் கடவுள் வழிபாடுகளும், கடவுளர் உருவங்களும் கூறப்பட்டுள்ளன. ஆனால் அக்காலத்திய சாசனங்கள் வழிபாட்டு முறையைப் பற்றி ஏதும் கூறவில்லை. அவை பெரும்பாலும் இயற்கை குகைத்தளங்களில் வசித்து வந்த சமணப் பெரியார்களுடையவையாக காணப்படுகின்றன. கி.பி. 600ல் கச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட முதலாம் மகேந்திரன் என்ற பல்லவ மன்னர் காலத்திய சாஸனங்கள் ஹிந்துக்களது ஆலயங்களைப் பற்றி கூறுகின்றன. கி.பி. 600 லிருந்து கி.பி. 850 வரை சுமார் 250 வருட காலம் பல்லவர்களது ஆட்சி தமிழ்நாட்டில் மேலோங்கியிருந்தது. இக்காலத்திய சாசனங்களிலிருந்து தாம் பெரும்பாலும் ஆலய நிர்மானம் முதல், நித்திய வழிபாடு, திருவிழாக்கள், திருப்பணிகள் முதலியவை பற்றி அறிய முடிகிறது. பொதுப்படையாகப் பார்த்தோமானால் இன்று நம் ஆலயங்களில் நடைபெறும் வழிபாட்டு முறைகள் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் எவ்விதம் இருந்தனவோ அதேபோல் தான் இன்றும் உள்ளன. ஆலயங்களை மன்னர்களும் பொது மக்களும் பொது ஜனங்களின் நலனுக்காகவும் உலக க்ஷேமத்திற்காகவும் கட்டி வைத்தனர். பிரஜைகளின் இஷ்டங்கள் பூர்த்தியடைவதன் பொருட்டு இக்கொயிலைக் கட்டினேன் என்று பல்லவ மன்னன் ராஜசிம்மனது சாசனங்கள் கூறுகின்றன. இவ்விதமே அரசமாதேவியரும் பல கோயில்களை எழுப்பியுள்ளனர். கோயில்களைத் தோற்றுவித்த பெரியார்கள் தங்களது பெயர்களையே கோயில்களுக்கு இட்டனர். திருச்சி மலையில் மேல் மகேந்திரவர்மனால் தோற்றுவிக்கப்பட்ட குகைக் கோயிலுக்கு லலிதாங்குர பல்லவேஸ்வர கிருஹம் என்று பெயர். ராஜசிம்மனால் கட்டப்பட்ட கோயில்களுக்கு ராஜசிம்மபல்லவேஸ்வரம் என்றும், அதிரணசண்ட பல்லவேஸ்வர கிருஹம் என்றும், அத்யந்தகாம பல்லவேஸ்வர கிருஹம் என்றும் பெயர்கள் காணப்படுகின்றன. அது போன்று பரமேஸ்வரவர்மனால் கட்டப்பட்ட கோயிலுக்கு பரமேஸ்வர மஹாவராக விஷ்ணுகிருஹம் என்றும், பரமேஸ்வர விண்ணகரம் என்றும் பெயர்கள் சாசனங்களில் காணப்படுகின்றன. இது தவிர நமக்கு முன்னர் இறந்த பெரியவர்களுக்கு நினைவுக் கோயில்கள் கட்டப்பட்டன. இக்கோயிலுக்கு பள்ளிப்படை என்று பெயர். காளஹஸ்தியில் முதலாம் ஆதித்திய சோழர் இறந்த பின்னர் அவர் நினைவாக அவரது மகனான பராந்தக சோழனால் ஆதித்தேஸ்வரம் என்று கோயில் எழுப்பப்பட்டது என அறிகிறோம். கோனேரிராஜபுரத்தில் கண்டராதித்தியரின் உடைய பிராட்டியார் செம்பியன் மஹாதேவியார் தனது கணவரின் பெயரால் திருக்கற்றளி எடுப்பித்தார் என அவ்வூரிலுள்ள சாசனம் கூறுகிறது. பல்லவ மன்னனான நிருபதுங்கவருமன் காலத்தில் நார்த்தாமலையில் ஒரு குகைக் கோயில் குடைவிக்கப்பட்டது. அது அவரது மகளால் பெரிதாக்கப்பட்டது. “விடேல்விடுகு முத்தரையன் மகன் சாத்தன் பழியிலி குடைவித்த ஸ்ரீகோயில். இச்சிரி கோயிலுக்கு முகமண்டகமும் இஷவமும், இஷவக் கொட்டிலும், பலிபீடமும் செய்வித்தாள் சாத்தன் பழியிலி மகள் மீனவன் தமிழதியரையன் பல்லன் அனந்தன் புக்க பழியிலி சிறியநங்கை” என்று அச்சாசனம் கூறுகிறது. இவ்விதம் தோற்றுவித்த கோயில்களில் தெய்வத்தை பிரதிஷ்டை செய்யவும் ஜலஸம்ப்ரோக்ஷணம் செய்வது பற்றியும் சாசனங்கள் கூறுகின்றன. கண்டராதித்ய சோழர் காலத்தில் உள்ள சாசனங்கள் “இக்கோயிலில் யாங்கள் ஸ்ரீகோயில் எடுப்பித்து பிரதிஷ்டை செய்வித்த கணபதியாருக்கு” என்று சொல்வதிலிருந்து எடுப்பித்த கோயிலிலே மூலவிக்கிரஹத்தை பிரதிஷ்டை செய்வது என்பது வழிவழி வந்த வழக்கம் என்று தெரியவருகிறது. “அந்த வந்தநல்லூர் நாட்டு திருவாலந்துறை பரமேஸ்வரருக்கு செம்பியன் இருக்குவேளிர் ஆன பூதிபராந்தகன் கற்றளி எடுத்து ஜலசம்ப்ரோக்ஷணம் செய்தான்” என்று மற்றொரு சாசனம் கூறுகிறது. கட்டுவித்த கோயிலின் மேல் விமானத்தில், செம்பினாலான கலசத்தை வைப்பதை தஞ்சைப் பெரிய கோயிலை எடுத்த ராஜராஜனின் சாசனம் கூறுகிறது. ஸ்ரீவிமானத்துச் செம்பின் ஸ்தூபத்தறியில வைக்கக் கொடுத்த செப்புக் குடம். இச்செப்புக் குடத்தின் மேல் தங்கத்தகடு போற்றப்பட்டது. நித்திய வழிபாடு முறை பற்றி பல கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. கி.பி. 670 ல் அதாவது சுமார் 1300 வருடங்களுக்கு முன்னர் ஆண்ட பல்லவ மன்னனான பரமேஸ்வரவர்மனது செப்பேடுகள் மிக அழகாக பூஜைக்கிரமத்தை கூறுகின்றன. வித்யாவினீத பல்லவ பரமேஸ்வர கிரஹத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பகவானும் பரமேஷ்டியும் ஆன பினாகபாணிக்கு, பூஜை, ஸ்நபனம், குசுமம், கந்தம், தூபம், தீபம், அவிஸ், உபகாரம், பலி, சங்கம், படகம் முதலியவைகளுக்கும், தண்ணீருக்கும், அக்கினிக்கும், பாரதம் வாசிப்பவருக்கும் ஆன நிபந்தங்களென்று கூறுகிறது. இதற்கு “தேவகர்மம்” என்றும் திருப்பணி செய்வதற்கு “நவகர்மம்” என்றும் பெயர். இதையே தமிழில் “கூரத்துத் தளிக்கு தேவகர்ம நவகர்மம் செய்வதாகவும், கூரத்து மண்டகத்துக்கு தண்ணீருக்கும் தீக்கும் ஒரு பங்காகவும், இம்மண்டகத்துக்கு பாரதம் வாசிப்போனுக்கு ஒரு பங்காகவும்” என்று உள்ளது. இதற்கு முந்திய பல்லவ சாசனம் கோவிஜயசிம்மவர்மன் என்ற மன்னன் காலத்தியது. அதில் திரிகாலமும் ஆராதித்தல், திரிகாலமும் அமிர்திடுதல், நந்தா விளக்கெரித்தல் முதலிய பற்றி குறிப்புள்ளது. பெரும்பாலும் மூன்று சந்திகளில் பூஜை நடந்ததாக சாசனங்கள் கூறுகின்றன. இதை முச்சந்திகள் என்றும் சிறுகாலைச் சந்தி, உச்சியம்போதைச் சந்தி, இராச் சந்தியென்றும் அவை குறிப்பிடுகின்றன. சில இடங்களில் அர்த்தயாம சந்தியும் குறிக்கப்பட்டுள்ளது. திருப்பள்ளியெழுச்சியைப் பற்றி பல சாசனங்கள் கூறுகின்றன. இதிலிருந்து காலையில் பூஜை பள்ளி எழுச்சியிலிருந்து தொடங்கிற்று என அறியலாம். ஸ்ரீரங்கத்திலுள்ள குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டு இக்கோயிலில் ஆழ்வாருக்கு திருப்பள்ளியெழுச்சி திருவாய்மொழி விண்ணப்பம் செய்யக்கூடவோமாக என்று கூறுவதிலிருந்து நாயன்மார்களும், ஆழ்வார்களும் பாடிச்சென்ற திருப்பதிகங்களைப் பாடி கடவுளுக்கு திருப்பள்ளி எழுச்சி செய்தனர் என அறியலாம். சைவக் கோயில்களில் அபிஷேகம் விசேஷமாக நடைபெற்றது என்பதை ராஜசிம்ம பல்லவனுடைய சாஸனத்திலிருந்து அறியலாம். முச்சந்திகளிலும் ஒன்றிலோ, இரண்டிலோ, அல்லது மூன்றிலோ ஆண்டவனுக்கு திருமஞ்சன நீராட்டல் வழக்கத்திலிருந்து வந்தது. மூலஸ்தானத்துப் பெருமானுக்கு மும்முறையும், உற்சவத் தினத்தன்றும் ஒரு சந்தியும் திருமஞ்சன நீராட்டல் என்பதும் பழக்கத்திலே இருந்து வந்தன. திருமஞ்சன நீருடன், தண்ணீரும் அபிஷேகத்திற்கு தனியாக உபயோகிக்கப்பட்டது என அறிகிறோம். பேரரசன் இராஜராஜன் தான் கட்டுவித்த தஞ்சைப் பெரிய கோயில் மூலஸ்சுவாமிக்கும் உத்சவருக்கும் வேண்டிய திருமஞ்சனத்திற்கு என ஒரு தனிச் சாசனமே செய்து வைத்துள்ளான். “ராஜராஜேச்சுவர முடையார் ஆடியருளும் திருமஞ்சன நீரிலும், தண்ணீர் மீதிலும் இட பெரும்செண்பக மொட்டுக்கும், ஏலவரிசிக்கும், இலாமச்சத்துக்கும் வேண்டும் நிபந்தம்” என்று அக்கல்வெட்டு கூறுவதிலிருந்து திருமஞ்சன நீரிலே செண்பக மொட்டு, ஏலவரிசி, இலாமிச்சவேர் முதலியவை போடப்பட்டன என்று அறிகிறோம். சில வைணவக்கோயில்களில் மூன்று சந்தியும் நீராட்டல் வழக்கத்திலிருந்தது வந்தது. மற்ற இடங்களில் சில விசேஷதினங்களில் எண்ணெய் காப்பு சாத்துவது பழக்கத்தில் இருந்து வந்தது என்று அறிகிறோம். இராஜேந்திரன் மகனான இராஜாதித்தனின் கல்வெட்டு “மதுராந்தக விண்ணகராழ்வாருக்கு அக்கோயிலில் காணிக்கையுடைய வைகானசன் ஆளி ஆராவமுது ஆளி தாமோதரனான வேங்கடவன் நித்தம் ஒரு திருமஞ்சனக்குடம் அபிஷேகம் பண்ணி திருமாலை சாத்த பழங்காசு” என்று கூறுகிறது. இதிலிருந்து வைகானச ஆகமம் பத்தாம் நூற்றாண்டிற்கு முன்தியது என்றும், ஆகம வைகானச முறைப்படி சில வைணவக் கோயில்களில் வழிபாடு நடைபெற்றது என்றும், அக்கோயில்களில் திருமஞ்சன நீராட்டல் நித்தமும் இருந்து வந்தது என்றும் அறிகிறோம். திருவரங்கத்திலுள்ள ஒரு சாஸனம் “திருஅரங்கத்து பெருமானடிகளுக்கு திருமஞ்சனம் புக்கு அருள சகஸ்ரதாரை ஒன்றினால்” என்று மதுரை கொண்ட கோப்பரகேசரிவர்மனின் சாஸனம் கூறுவதிலிருந்து திருவரங்கப் பெருமானுக்கு திருமஞ்சன நீராட்டல் நடைபெற்றது என்று அறிகிறோம். திருமஞ்சன நீரை பிராமணன் ஒருவன் பக்கத்திலுள்ள நதியிலிருந்து கொண்டு வருவதுண்டு. சைவ ஆலயங்களில் எண்ணெய் காப்புக்களுக்கு பல நிபந்தங்கள் கொடுக்கப்பட்டன. எண்ணெய்க்காப்பு சில கோயில்களில் தினந்தோறும் இருந்து வந்தது. சில கோயில்களில் வாரத்தில் இரு நாட்களோ அல்லது ஒரு நாள் மட்டுமோ இருந்து வந்தது என்று சாஸனங்கள் கூறுகின்றன. பஞ்சகௌளவியம் ஆடியருளல் என்றும் அப்பஞ்சகெளவியத்திற்கு வேண்டிய பொருளும் அவற்றின் அளவும் ஒர் சாசனத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. “கோமூத்திரம் உழக்கு, கோமயம் அழாக்கு, பால் நாழி, உழக்கு தயிர், நாழி உரி நெய்” என்று அது கூறுகிறது. நெய்யாடியருளல், பாலாடியருளல், திருசாந்து ஆடியருளல் என்பதும் சாஸனங்களில் வருகின்றன. கோவை மாவட்டத்தில் ஈரோட்டில் உள்ள ஒரு கல்வெட்டு “அமுதுபடி சாத்துப்படி திருமேற்பூச்சு சந்தியாதீபம் திருவிளக்கு திருப்பணி திருநாட்தேவை அக்னி பலி அர்ச்சனை நித்தகர்மம் பலமடி நிபந்தம்” என்று பூஜை முறைகளை கூறுகிறது. ஸ்ரீரங்கத்தில் சந்தானச்சாத்து, புழுகுநெய், கஸ்தூரி, கற்பூரம் உள்ளிட்ட சாத்துப்படி திருவரங்கப் பெருமானுக்கு இடப்பட்டது என்றும், கார்த்திகை மாதத்து திருகார்த்திகை திருநாளில் பெரியபெருமாளுக்கு புழுகுநெய் சாத்தியருள" என்றும் ஒரு கல்வெட்டு கூறுவதிலிருந்து புழுகுநெய் சாத்துவது வைணவக் கோயில்களில் வழங்கி வந்த முறை என்றும் அறிகிறோம். அதே கோயிலிலுள்ள மற்றொரு சாஸனம் எண்ணெய் காப்பு, நெல்லிக் காப்பு, மஞ்சக்காப்பு, சந்தனக்காப்பு, திருப்பள்ளி தாமம், திருமாலை திருப்பறிச்சட்டம் உள்ளிட சாத்துப் படிகள் என்று கூறுகிறது. திருப்பள்ளிதாமம் பறித்து ஆண்டவனுக்கு சாற்றினர் என்றும் பெருமக்கள் திருமலர் மாலைகளைத் தங்களது பெயரால் செய்து தினமும் சாத்துவதற்கு நிபந்தம் செய்தனர் என்றும் அறிகிறோம். இதற்கு செங்கழுநீர் புஷ்பம் உபயோகப்பட்டது என்று சில இடங்களில் சாஸனங்கள் கூறுகின்றன. அரைத்த சந்தனத்தையே ஆண்டவனுக்கு இட்டனர் என்பதற்கும் சான்றுகள் பல உள்ளன. “திருச்சந்தனம் தேய்க்கும் பிராமணன் ஒருவனுக்கு கப்படம் முட்பட நிசதம்” என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது. இவ்விதம் அபிஷேகங்களால் பூஜிக்கப்பட்ட ஆண்டவனுக்கு பரிசட்டம் சாத்துவது வழக்கத்திலிருந்தது. கோனேரிராஜபுரத்தில் உள்ள செம்பியன் மாஹாதேவியாரின் சாஸனம் கோயிலில் வழிபாட்டு முறை பற்றி மிகவும் வியக்கத்தக்க முறையில் பல செய்திகளைக் குறிக்கிறது. அதில் “திருநமனிகைக்கும் திருவிதானத்துக்கும் திருமேற்கட்டிக்கும் ஜலபவித்திரத்துக்கும் திருஒற்றாடைக்கும்” என்று கூறுவதிலிருந்து இவை வழிபாட்டுக்கு பயன் படுத்தப்பட்டன என்று அறிகிறோம். அதே கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டு “இவர்க்கே சாத்தும் திருபரிசட்டத்துக்கு காசு இருபத்தாறும் திருநமணிகை நாலுக்கு காசு இரண்டும் திருப்பாவாடை பதினாலுக்கு காசு நாலும்” என்று கூறுகிறது. சில இடங்களில் சிறந்த பட்டினாலான பறிசட்டங்கள் கூறப்பட்டுள்ளன. இவ்விதம் கூறும் சாஸனங்களில் புலியூர்பட்டு, பச்சைப்பட்டு முதலியவை கூறப்பட்டுள்ளன. இவை அடிக்கடி மாற்றப்பட்டு புதிய பட்டுகள் கொடுக்கப்பட்டன. மூலஸ்தானத்து பட்டாரகருக்கு ஆபரணங்கள் சாற்றவதும் ஐந்தலைநாகம் சாற்றுவதும் சாஸனங்களில் குறிக்கப்பட்டுள்ன. நைவேத்தியங்களைப் பற்றியும் பல கல்வெட்டுகள் கூறுகின்றன. இவற்றிலிருந்து சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் எவை எவை படைக்கப்பட்டனவோ அவையே இன்று வரையிலும் திருஅமிர்தாக இடப்படுகின்றன என்று அறிகிறோம். அநேகமாக எல்லாக் கல்வெட்டுகளிலும் கூறும் அமுதுபடி பல்லவர் காலம் தொட்டு இக்காலம் வரை ஒரே மாதிரியாக இருப்பது மிகவும் சிறப்பாகும். பல முறை குத்தப்பட்ட பவளம் போன்ற அரிசியால் அமுது படைக்கப்பட்டது. இந்தத் திருவமுதின் மீது நறுநெய் ஊற்றப்பட்டது. இதை “அவிஸ்” அல்லது “சரு” என்று சாஸனங்கள் கூறுகின்றன. இத்துடன் உபகாரம், பொரிக்கறியமுது, புளிங்கறியமுது கறியமுது, அப்பமுது முதலியவையும் இடப்பட்டன. இவை ஒவ்வொன்றும் புதிய மண்கலயங்களில் அமைக்கப்பட்டன. இவற்றிற்கென நித்தமும் கலயங்களிடும் குயவனுக்கு பல நிபந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஒவ்வொரு சந்தியிலும் இவ்வமுதுகள் செய்யப்பட்ட பொருள்களும் அவற்றிற்கு வேண்டிய அளவுகள் முதலியவை அனைத்தும் வியக்கத்தகும் வகையில் குறிக்கப்பட்டுள்ளன. நிருபதுங்கவர்மன் என்ற பல்லவ மன்னன் காலத்தில் திருவெற்றியூரில் எழுதப்பட்ட ஓர் சாஸனம் “செந்நெற்குத்தல் பழவரிசி இருநாழியினால் நானாழியும், உழக்கு நெய்யும் அடுக்கிலையும், ஐந்து காயும், நாலு பழமும்” என்று கூறுகிறது. அதே அரசன் காலத்தில் போனகம் காட்டுதல் என்பது குறிக்கப்பட்டுள்ளது. அவன் பின் தோன்றலான அபராஜிதவர்மன் காலத்தில் “திருவமுது பத்தெட்டுகுத்தரிசி, பதினாறு நாழி போனகத்துக்கும், திருவமுதுக்கும், நெய் ஆறு நாழி, வாழைப்பழம் எட்டு, சர்க்கரை பலம் கறியமுதுக்கு காய் அடைக்காயமுது எண்பதிலையும் பத்துக் காயும், இளநீர் முப்பது, பஞ்சகெளவியத்துக்கு வேண்டுவனவும், சந்தனமும், தூபமும் இவ்வனைத்துக்குமாக வைத்த பொன்” என்று குறிப்பிடுகிறது. மற்றொரு சாஸனம் அப்பத்துக்கு அரிசி, கருப்புக்கட்டி, நெய், தயிர், உப்பு, மிளகு முதலியவை பற்றி கூறுகிறது. அநேகமாக எல்லாச் சாஸனங்களிலும் வெற்றிலையும் பாக்கும் திருவமிர்தின் முடிவில் வெள்ளிலை என்றும் அடைக்காயமுது என்ற பெயரிலும் கூறப்பட்டுள்ளன. மன்னன் அல்லது மற்ற பெரிய மனிதர்களின் நட்சத்திரத்தன்று பெரும் திருவமுது விசேஷமாக இடப்பட்டது என்றும் அறிகிறோம். பல சாஸனங்களில் தேவர் அமுது செய்யும் போது உத்தமாக்கிரமாக வேதப் பிராமணர்களுக்கு அமுது செய்வித்தலைப் பற்றி குறிப்பபுகள் உள்ளன. உத்தமசோழரின் 9ம் ஆண்டு கண்டியூரில் எழுதப்பட்ட ஒரு சாஸனத்தில் மாதந்தோறும் என் பிறந்த நாளான ஜோதி நாளன்று பெரும் திருவமுது செய்ய என்று கூறுகிறது. பராந்தகசோழர் காலத்து சாஸனம் ஒன்று தேவர் அமுது செய்யும் போது வேதப் பிராமணர் நிசதம் ஐவர் அமுதம் செய்வதாகவும் என்று கூறுகிறது. பரிவாரத் தெய்வங்களுக்கும் நித்தம் திருஅமுது இடுவதைப் பற்றி பல சாஸனங்கள் கூறுகின்றன. அய்யன் மகாசாஸ்தா, கணபதி, ஜேஷ்டாதேவி (சேட்டையார்), சப்தமாதர் முதலியவற்றுக்கும் திருஅமுது தினந்தோறும் படைக்கப்பட்டது. திருஅமுதுபடி காண்பிக்கும் போது வாத்தியங்கள் முழங்கின. ஸ்ரீபலி கொட்டுவது என்பது பற்றியும் பல கல்வெட்டுக்களில் காண்கிறோம். ஸ்ரீபலி கொட்டுவதற்குகெனத் தனிப்பட்ட ஒரு தேவரை எடுத்துச் செல்வது வழக்கத்திலிருந்தது. அத்தேவரை ஸ்ரீபலிதேவர் என்று உத்தமசோழர் காலத்திய கல்வெட்டு கூறுகிறது. தஞ்சை பெரிய கோயில் ஸ்ரீ ராஜராஜதேவர் கொடுத்த ஸ்ரீபலி எழுந்தருளும் பொன்னின் கோளகைத் தேவர் ஒருவர் அத்துடன் கொடுத்த பத்மாசன ஸ்ரீபலிதாளம் ஒன்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருஆலத்தி தட்டுகளும், தூபத் தட்டுகளும், தூபத்தோடு காண்பிக்கும் தீபத்துக்கும், கற்பூரமும், பரிச்சின்னங்களும் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான கல்வெட்டுக்களில் ஆலயங்களுக்கு நந்தாவிளக்கு எரிப்பதற்காக விட்ட பரிசுகளைப் பற்றி கூறுகின்றன. நந்தாவிளக்கு எரிக்கக் கொடுத்த பரிசாவது மற்ற எல்லா கைங்கர்யங்களையும் விட பெரிதாகவும் சிறந்ததாகவும் கருதப்பட்டது போலும்! இவ்விளக்குகள் நறுநெய்யால் எரிக்கப்பட்டனவென்றும் இதற்காக விடப்பட்ட ஆடுகள் சாவாமூவாப்பேராடு என்று அழைக்கப்பட்டன என்றும் அறிகிறோம். தீபமாலைகளும், நிலைவிளக்கு, கைவிளக்கு, குத்துவிளக்கு முதலியவையும் ஆங்காங்கே குறிக்கப்பட்டுள்ளன. ஆலயங்களில் சந்தி தோறும் அக்கினிகாரியங்கள் நடைபெற்றன என்றும் பல சாசனங்களிலிருந்து அறிகிறோம். திருநெடுங்குளம் கோயிலிலுள்ள உத்தமசோழரின் கல்வெட்டு “இத்தேவருக்கு நிசதம் மூன்று சந்தியும் அக்கினி காரியத்துக்கு நிபந்தம் செய்த பரிசானது கொண்டு போது அரைப்படி நெய்யும் மேலெரியும் மற்றும் அக்கினி காரியத்துக்கு வேண்டுவது செய்விப்போம்” என்று கூறுகிறது. தமிழ்நாட்டு மரபிலே ஆலயத்துறை தெய்வங்களை திருவிழாக்காலங்களில் வீதி உலாவாக எடுத்துச் செல்லுதல் என்பது பண்டைக் காலந்தொட்டு வழங்கிவந்த ஒரு பழக்கம். சங்ககால இலக்கியங்களும், தேவாரத் திருப்பதிகங்களும் திருவிழாக்களைப் பற்றித் தெள்ளன விளக்குகின்றன. கல்வெட்டுக்களிலிருந்து அறியப்படும் திருவிழாக்கள் பல உண்டு. இவற்றில் சில பொதுவான திருவிழாக்களும், சில சிறப்புத் திருவிழாக்களும் இருந்தன. இவற்றில் சித்திரைத் திருவிழா மிகச் சிறப்புடையதாகக் கூறப்படுகிறது. இது ஏழு நாட்கள் நடைபெற்றது என அறிகிறோம். பல்லவர் காலத்திற்கும் முன்பிருந்தே இத்திருவிழா பெருமை பெற்றிருந்தது என்பதற்கு சான்றாக லால்குடியில் நிருபதுங்க பல்லவமன்னனின் இரண்டாம் ஆண்டு சாசனம் ஒன்று சித்திரை விஷு திருவிழாவுக்கு தாயாரைச் சாத்திவைத்த பொன் ஆண்டாண்டு தோறும் சித்திரை திருவிழாவுக்கு நாராய நாழியால் ஏழுநாளைக்கும் என்றும் கூறுகிறது. சென்னை அரசினர் பொருட்காட்சி சாலையில் உள்ள ஒரு செப்புச்சாசனம் “இத்தேவர் சித்திரை விழாவுக்கு நிபந்தம் செய்தபடி திருவிழா ஏழுநாளைக்கும்” என்று கூறுகிறது. காஞ்சிபுரத்தினருகே உள்ள வேப்பங்குளத்தில் உள்ள ராஜேந்திரசோழனின் சாசனம் “சித்திரை திருவாதிரை ஏழு நாளைக்கும்” என்று குறிப்பதிலிருந்து இத்திருவிழா ஏழு நாளைக்கு நடத்தப்பட்டது என அறிகிறோம். சித்திரை விஷு, வைகாசி விசாகம், ஆனித் திருவாதிரை, ஐப்பசி கார்த்திகை, பரணி கார்த்திகை, மார்கழி திருவாதிரை, தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திரம் முதலிய விழாக்கள் சிறப்பாக நடந்தன. கார்த்திகை திருநாள், பங்குனித்திருநாள் என்ற வழக்கு ராஜேந்திரசோழனின் காலத்திலேயே இருந்தது என்று அறிகிறோம். தஞ்சை கோயிலில் திருச்சதயத் திருவிழா பன்னிரெண்டும், கார்த்திகைத் திருநாள் ஒன்றும், சங்கராந்தி பன்னிரெண்டும், பெரிய திருஉத்சவம் நாள் ஒன்பதும் ஆக நாள் 34 நாள் என்று ராஜராஜனால் குறிக்கப்படுகிறது. திங்கள் தோறும் விஷுவயன சங்கராந்திகளில் திருவிழாக்கள் நடைபெற்றன. அரசர்களின் ஜென்ம நட்சத்திரத்தன்று விசேஷ திருவிழாக்கள் ஏற்படுத்தப்பட்டன. திருவிழா எழுந்தருளும் திருமேனிகளுக்கு அன்றாட திருமஞ்சன நீராடலும் திரு அமிர்தமிடுதலும் திரு ஆபரணங்கள் சாத்துதலும் வழக்கத்திலிருந்து வந்ததது. திருவிழா எழுந்தவாரே திருமஞ்சன நீராடலும் திருஅமிர்து செய்தலும் தீர்த்தமாடுதலும் பஞ்சகெளவியம் ஆடுதலும் ஆங்காங்கே குறிக்கப்பட்டுள்ளன. திருக்கார்த்திகை திருநாளன்று திருவேட்டை எழுந்தருளுதல் பெரும் திருஅமுது செய்தல், அடியார்க்குச் சட்டிசோறு பிரசாதம் செய்தல் முதலிய முறைகளும் வழக்கத்திலிருந்தன. ஒரு சாஸனம் “இத்தேவர் உத்திரமயன சங்கரமத்திலும் சகஸ்ரகலசம் ஆடியருளவும் பெருந்திருவழுது செய்தருளவும்” எனக் கூறுகிறது. திருவிழாக்களில் கொடி முதலில் ஏற்றப்பட்டது என்றும் அரசாங்க அதிகாரிகள் கொடியேற்றத்திற்கு வந்தனர் என்றும் அறிகிறோம். கொடியேற்று நாளன்று பறையறிவித்தலும், செப்புத் திருமேனிகள் உருவிலே தெய்வத்தை ஆலயத்தைச் சுற்றி வலமாக எடுத்துச் செல்லுவதும் சாசனங்களில் கூறப்பட்டுள்ளன. திருவிழாக்களில் ஒவ்வொரு நாளைக்கும் ஒருவர் கட்டளைக்காரராக இருந்தார். மிருத்சங்கிரஹனம் செய்தல், பாலிகை கிழட்டல் (அங்குரார்ப்பணம்) அப்பாலிகையின் அருகே இரவும் பகலும் விளக்கு எரித்தல், திருமஞ்சனத்திற்கென பல குடங்கள் வைத்தல், அவற்றின் நடுவில் சுண்ணாம்பு தடவிய கலசம் அமைத்தல், இவற்றைச் சுற்றி நூல் பட்டும் சுற்றல், முதலிய விவரங்கள் சாசனங்களில் கிடைக்கின்றன. சிதம்பரத்திலுள்ள ஒரு கல்வெட்டு தில்லை நாயகர் திருத்தேர் எழுந்தருளும் போது திருப்புறக் குடையிலே அத்தியயனம் பண்ணி சேவித்தலையும், ஸ்வஸ்தி சொல்லி சேவித்தலையும், திருமஞ்சன காலத்தில் அத்தியயனம் பண்ணி சேவித்தலையும், உத்ஸ்வங்களுக்கு திரு பாலிகை திருநாளுக்கு எழுந்தருளி நாள் மிருத்கிரஹணம் பண்ணி அருளும்போது ஸ்வஸ்தி சொல்லி சேவித்தலையும், திருப்பவனி எழுந்தருளும் போது திருக்கண்சாத்தி அருளுதலையும் குறிக்கிறது. இவ்வாறு திருவிழாவில் எழுந்தருளுவதற்கு அநேகவிதமான செப்புத் திருமேனிகள் செய்து வைக்கப்பட்டன. இவை பெரும்பாலும் செம்பால் வார்க்கப்பட்டவை. தங்கத்தால் செய்யப்பட்ட திருமேனிகளும் வெள்ளியால் செய்யப்பட்ட ஓர் திருமேனியைப் பற்றியும் ராஜராஜன் காலத்திய கல்வெட்டு கூறுகிறது. இவ்விதம் தனித்தனி உலோகங்களால் செய்யப்பட்ட திருமேனிகளைப் பற்றி விவரங்கள் கிடைக்கின்றனவேயன்றி வெண்கலத்தாலோ பஞ்சலோகத்தாலோ ஆன திருமேனி பற்றி இதுவரை சான்று ஏதும் கிடைக்கவில்லை. அநேகமாக எல்லாத் திருமேனிகளும் “கனமாகச்” செய்யப்பட்டன என்றும் வாகனங்கள் “கனப்பொள்ளலாகச்” செய்யப்பட்டன என்றும் சாசனங்கள் கூறுகின்றன. கடவுளின் உருவங்களுக்கு “திருமேனிகள்” என்றும் நாயன்மார், அரசர்கள் முதலிய உருவங்களுக்கு செப்புப் “பிரதிமங்கள்” என்றும் பெயர் வழங்கிற்று. செப்புத் திருமேனிகளை “ரத்தினநியாசம்” செய்து பத்மபீடத்தில் வைப்பது பற்றியும் சாசனங்கள் கூறுகின்றன. தஞ்சை பெரிய கோயிலை எழுப்பிய ராஜராஜன் காலத்தில் சுமார் எண்பதுக்கும் மேற்பட்ட செப்புத்திருமேனிகள் அக்கோயிலுக்கு அளிக்கப்பட்டன என்று அறிகிறோம். இவ்வுருவங்களிலே சில உருவங்கள் சிறந்த உருவங்களாகவும் இன்று அநேகமாக கோயில்களிலே காணப்படாத உருவங்களாகவும் இருக்கின்றன. லிங்கபுராண தேவர், சண்டிகேஸ்வர அனுக்கிறஹமூர்த்தி, ஸ்ரீகண்டதேவர், பஞ்சதேஹ மூர்த்திகள், முதலிய உருவங்கள் பெரும்பாலான கோயில்களிலே உத்ஸவமூர்த்திகளாகக் காணப்படுவதில்லை. ஆபரணங்களைப் பற்றியும், கோயில்களில் பாத்திரங்கள் பற்றியும், பணி புரிவோர் பற்றியும் சாசனங்களிலிருந்து அறிகிறோம். பல கோயில்களிலே பாரதம் வாசித்தல், மீமாம்சை வியாக்யானம் செய்தல், வியாகரணம் வியாக்யானம் செய்தல், சோமசித்தாந்தம் முதலிய சித்தாந்தங்களை விளக்கம் செய்தல், என்ற பணிகள் வழக்கிலிருந்தன என்றறிகிறோம். திருவிழாக்காலங்களிலே ஆரியத்திலும், தமிழிலும் கூத்துக்கள் நடைபெற்றன. சைவக் கோயில்களிலே பூஜை செய்த பெரியார்களை சிவப்பிராமணர்கள் என்று சாசனங்கள் கூறுகின்றன. ஓர் தாமிரசாஸனத்தில் வைணவக் கோயிலில் நம்பியைக் கொண்டு ஆராதனை செய்விக்கவும். நம்பியை பெறாவிடில் வேதமறிந்த பிராமணனை கொண்டு ஆராதிக்கவும் என்று கூறுவதிலிருந்து வழிபாட்டுமுறை தெரிந்த பெரியார்கள் கோயில் பூஜைக்கு அமர்த்தப் பட்டார்கள் என்று அறிகிறோம். இதுபோன்று சாஸனங்களிலிருந்து நாம் அறியும் செய்திகள் பல. இவற்றை ஆராய்ந்தறிந்து பார்க்கும்போது இன்று கோயில்களில் வழிபாட்டு முறை எவ்வாறு நடக்கின்றனவோ அதுபோலத் தான் ஆயிரத்து மூன்னூறு ஆண்டுகட்கு மேலாக தொடர்ந்து நடந்து வந்துள்ளது எனத் தெளியலாம். அஷ்டாங்க விமானங்கள் தமிழ்நாட்டில் கோயில்களைக் கட்டுவதற்கு உரிய விதிகளை, ஆகம நூல்களும்,வாஸ்து சாஸ்திரங்களும் எடுத்துரைக்கின்றன. கோயில் கட்டுவதற்கு மனை தேர்ந்தெடுப்பது, நிலத்தைச் சமன் செய்வது, கட்டிடங்கள் எழுப்புவதற்கு கீழே கோடுகள் வரைவது முதலிய அனைத்தும் இந்த நூல்களில் குறிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த அமைப்புகளுக்குப் பயன்படுத்தும் அளவுகோல் முதலியனவும் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதையும் இந்த நூல்கள் கூறுகின்றன. இத்தகைய கட்டிட அமைப்புகள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, அவற்றை விமானம், மண்டபம், பிராகாரம், மாளிகை, கோபுரம் என்றெல்லாம் பல்வேறு பகுதிகளுக்குப் பல்வேறு பெயர்கள் உண்டு. ஒவ்வொரு பகுதியும் அமைப்பில் பல அங்கங்களைக் கொண்டு விளங்குகின்றது.இவற்றை அடிப்படை அங்கங்களாக நூல்கள் குறிக்கின்றன. அடியிலிருந்து முடி வரைக்கும் இந்த அங்கங்களைத் தமிழ்ப் பெயராலும் அறிந்து கொள்லாம். சமஸ்கிருதப் பெயரே பெரும்பாலும் நூல்களில் இடம் பெற்றுள்ளது. அடி,கால், தோள், கழுத்து, தலை, முடி என்று மனித அங்கங்களுக்கு நிகராக இவை குறிப்பிடப்பெறுகின்றன. இதையே சரணம், பாதம், பிரஸ்தரம், கிரீவம், சிகரம், ஸ்தூபி என்று சமஸ்கிருதத்தில் அழைப்பர். பெரும்பாலான கோயில்களில் இந்த ஆறு அங்கங்களும் இடம் பெற்றிருக்கும். ஆதலின், அக்கோயில் அமைப்பு ஆறு அங்க அமைப்பு, ஷடங்க விமானம் என்று கூறப்படும். ஒரு சில விமானங்களில் நான்கு அங்கங்கள் மட்டும் உண்டு. இந்த அமைப்பில் பிரஸ்தரம், கிரீவம் இரண்டும் இருக்காது. உதாரணமாக, மாமல்லபுரத்தில் திரெளபதி ரதம் என்ற ஒரு கோயில் இருக்கிறது. இக்கோயில் ஒரு குடிசை வடிவில் அமைந்துள்ளது. இதில் கிரீவம், பிரஸ்தரமும், இல்லை. ஆதலால் இதை ‘நான்கு அங்க விமானம்’ அல்லது ‘சதுரங்க விமானம்’ என்று கூறுவார்கள். எனவே,அங்கம் என்பது, கட்டிட அமைப்பின் பகுதி நான்கு, ஆறு, எட்டு என அவைகளின் எண்ணிக்கைகளைக் கொண்டு, விமானங்களை, சதுரங்கம், ஷடங்கம், அஷ்டாங்கம் என்றும் பிரிப்பது உண்டு. நான்கு, ஆறு அங்கங்களையுடைய விமானங்களை நமக்கு நூல்கள் எடுத்துரைக்கின்றன. ஆனால் அஷ்டாங்க விமானம் என்று பயன்படுத்தப் படுகின்றது. ஆயினும், அந்த எட்டு அங்கங்கள் எவை என்று தெளிவாக நமக்குத் தெரியவில்லை. நூல்கள் இது குறித்து வெளிப்படையாக ஏதும் கூறியதாகத் தெரியவில்லை. விமான அமைப்பில் இப்போது மேலும் ஒரு கருத்தைத் தெரிந்து கொள்ளவேண்டும். விமானம் என்பது கர்ப்பக்கிருஹத்தைக் கொண்டு மேலே உயரமாகக் கட்டப்பட்டுள்ள கட்டிட அமைப்பாகும். பெரும்பாலான கோயில்களில், விமானங்களில் ஒரே ஒரு கர்ப்பக்கிருஹம்தான் காணப்படும். ஆனால் இதில் சில வேறுபாடுடைய கோயில்களும் உண்டு. உதாரணமாக கர்ப்பகிருஹம் கீழே இல்லாமல் மேலே அமைக்கப்பட்ட விமானங்களும் உண்டு. இந்த அமைப்பை மாடக்கோயில் என்று கூறுவார்கள். சில கோயில்களில், கீழே ஒரு கர்ப்பகிருஹம், முதல் மாடியில் ஒரு கர்ப்பக்கிருஹம், இரண்டாவது மாடியில் ஒரு கர்ப்பகிருஹம் என்று மூன்று கர்ப்பக்கிருஹங்களையுடைய விமானங்கள் ஒன்றின்மீது ஒன்றாக எடுக்கப்படுவதும் உண்டு. இவ்வாறு அமைக்கப்படும் மூன்று கர்ப்பகிருஹங்களையுடைய விமானத்தின் தத்துவம் என்னவென்று எண்ணும்போது ஒர் உண்மை புலப்படும். பண்டைய இந்திய மரபில், மூன்று உலகங்களைக் குறிக்கும் மரபு உண்டு. கீழ் உலகு, நில உலகு, மேல் உலகு என இவை மூன்று உலகங்களாகப் பிரிக்கப்படும். இதையே பூ, புவஸ், ஸுவஹ என்றும் கூறுவர். பரம்பொருள் மூன்று உலகங்களிலும் பரவி நிறைந்து இருக்கிறது என்பதை எடுத்துரைக்கும் தத்துவமாக இது அமைகிறது. இதன் மூன்று கர்ப்பகிருஹங்களை அமைப்பதன் தத்துவம் இதுவே. இது சிவாலயங்களிலும், விஷ்ணு ஆலயங்களிலும் காணப்படும் மகத்தான தத்துவமாகும். இவ்வாறு எழுப்பப்பட்டுள்ள கோயில்களில் மிகவும் தொன்மையானதாக எஞ்சியுள்ளது மாமல்லபுரத்திலுள்ள தர்மராஜ ரதம் என்னும் கற்கோயிலாகும். இது சிவபெருமானுக்காக எடுக்கப்பட்ட கோயில். இந்தக்கோயில் அத்தியந்தரகாமன் என்னும் பெயர் கொண்ட பல்லவ மன்னன் ராஜசிம்மனால் கிபி எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எடுக்கப்பட்டது. இதை ஈஸ்வர கிருஹம் என்று கல்வெட்டு கூறுகிறது. மூன்றாவது நிலையிலுள்ள கர்ப்பகிருஹத்தின் சோமாஸ்கந்தருடைய உருவம் காணப்படுகிறது. ஆனால் இந்த கோயில் முற்றுப் பெறவில்லை. இடைநிலையில் கர்ப்பகிருஹம் செதுக்கி முடிக்கப்படவில்லை. இதுவே நமக்குக் கிடைத்துள்ள விமானங்களில் மிகவும் தொன்மை விமானமாகும். இதற்கு அடுத்துக் காஞ்சிபுரத்தில் வைகுந்தநாதர் கோயில் என்று வழங்கப்படும் விஷ்ணுகிருஹம் இருக்கிறது. இதில் மூன்று கர்ப்பகிருஹங்கள் ஒன்றன்மேல் ஒன்றாக இருக்கின்றன. திருமாலுக்காக எடுக்கப்பட்ட கோயில் இது. கி.பி. எட்டாம் நூற்றாண்டில் நந்திவர்மன் என்ற பெயர் பெற்ற பல்லவமன்னால் எடுக்கப்பட்டது. இதற்கு பரமேச்வர விண்ணகரம் என்று பெயர் உண்டு. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. பெருமாளுக்கு எடுக்கப்படும் மூன்று கர்ப்பகிருஹங்களையுடைய கோயில்களில், கீழே ‘நின்றார்’ ஆகவும், இடையிலே ‘இருந்தார்’ ஆகவும், மூன்றாவது நிலையில் ‘கிடந்தார்’ பள்ளிகொண்ட பெருமாள் ஆகவும் அமைக்கப்படுவது மரபு. இது கட்டிட அமைப்பிற்கு மிகவும் எளிமையாகவும், அழகாகவும் இருக்கும். முதல் நிலையிலுள்ள கர்ப்பகிருஹம், நின்ற பெருமாளைக் கொண்டு விளங்குவதால் சற்று உயரமாக இருக்கும். அமர்ந்த நிலையில் இருக்கின்ற இரண்டாவது நிலையிலுள்ள கர்ப்பகிருஹம் சற்று உயரம் குறைவாக இருக்கும். மூன்றாவது நிலையிலுள்ள படுத்தவரைக் கொண்டு விளங்கும் கர்ப்பகிருஹம் மேலும் சற்று உயரம் குறைவாக இருக்கும். ஆதலால் மேலே செல்லச் செல்ல உயரத்தைக் குறைத்துக் கட்டிடத்தை எழுப்புவது, கட்டிடம் வலுவாகவும், அழகாகவும் அமைய உதவும். காஞ்சிபுரத்திலுள்ள பரமேச்வர விண்ணகரத்தில் மூன்று கர்ப்பகிருஹங்கள் இருந்தபோதிலும், அவற்றிலுள்ள திரு உருவங்கள் நின்றார், இருந்தார், கிடந்தார் என்ற வரிசைப்படி இல்லை. இது ஏன் என்று சரியாகத் தெரியவில்லை. திருமாலுக்கு எடுக்கப்படும் இது போன்ற வேறு சில கோயில்களும் இருக்கின்றன. ஒன்றின்மேல் ஒன்றாக மூன்று கர்ப்பகிருகங்களைக் கொண்டு விளங்குவதோடல்லாமல், கீழ் நிலையிலும், இரண்டாவது நிலையிலும் ஒவ்வொரு திசைக்கும் ஒன்றாக கர்ப்பகிருஹம் அமைக்கப்படுவதும் உண்டு. மூன்றாவது நிலையில்மட்டும் ஒரே கர்ப்பகிருஹம் இருக்கும் ஆக, கீழ்நிலையில் நான்கு, இரண்டாவது நிலையில் நான்கு, மூன்றாவது நிலையில் ஒன்று என மொத்தம் ஒன்பது கர்ப்பகிருஹங்கள் இருக்கும். இவற்றில் கீழ்நிலையில் புருஷன், அச்சுதன், அநிருத்தன், பிரத்யும்நன் என நான்கு வியூகங்களைக் குறிக்கும் மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்படும். மேல்நிலையில் மூலஸ்தானத்தில் அமர்ந்த நிலையில் விஷ்ணுவும், தெற்குப் பக்கத்தில் நாராயணன் உருவமும், மேற்குப் புறத்தில் நரசிம்மர் உருவமும், வடக்குப்பக்கத்தில் வராகமூர்த்தியும் காணப்படுகின்றன. இது போன்ற அமைப்பு மிகவும் தொன்மையான கோயிலான உத்தரமேரூரில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. இன்றும் வழிபாட்டில் இருக்கிறது. இந்த அமைப்பு மரீசி சம்ஹிதை என்ற வைகானச ஆகமத்தில் குறிக்கப்பட்டு இருக்கிறது. இந்த உத்தரமேரூர் கோயில், வைகானச மரீசி சம்ஹிதைப்படி கட்டப்பட்டதாகும். பல்லவமன்னன் நந்திவர்மன் காலத்தில், எட்டாம் நூற்றாண்டின் இருதியில் கட்டப்பட்ட கோயில் இது. இதைக் காஞ்சிபுரத்து பரமேச்வரப் பெருந்தச்சன் என்னும் சிற்பி கட்டினான் என்று கல்வெட்டு கூறுகிறது. இந்த அமைப்பையே தற்காலத்தில் அஷ்டாங்க விமானம் என்று பலர் கூறுகின்றனர். பக்கங்களில் உள்ள கர்ப்பகிருஹம் இல்லாமல் ஒன்றின் மேல் ஒன்றாக மூன்று கர்ப்பகிருஹங்களையுடையதாகக் கட்டப்பட்ட விமானங்கள் மதுரை, திருக்கோஷ்டியூர் ஆகிய இடங்களிலும் இருக்கினறன. மதுரையிலுள்ள கூடல் அழகர் கோயில் பதினைந்து, பதினாறு ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட திருமால் கோயிலாகும. விஜயநகர மன்னர் கலைக்கு ஒர் எடுத்துக்காட்டு. திருக்கோஷ்டியூரில் உள்ள கோயிலும், சற்றேறக்குறைய அதே காலத்தில் திருப்பணி பெற்றிருக்க வேண்டும். எட்டாம் நூற்றாண்டு தொடங்கி, பதினாறாம் நூற்றண்டு வரையில் இங்குமங்குமாக இவ்வாறு திருமாலுக்கு மூன்று அடுக்கு கர்ப்பகிருஹம் உள்ள கோயில்கள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. இவை அனைத்தையுமே பொதுப்படையாக, அஷ்டாங்க விமானம் என்று கூறுவர். இதனை மாதிரியாகக்கொண்டுதான் அண்மையில் சென்னை பெசன்ட் நகர் மஹாலஷ்மி கோயில் கட்டப்பட்டுள்ளது. முன்னர் கூறியபடி, அஷ்டாங்க விமானம் என்றால் என்ன என்பது நூல்களினால் தெளிவு பெறாத பொருளாகும். பல கர்ப்பகிருஹங்களின் எண்ணிக்கை கொண்டு, கீழ்நிலையில் நான்கு, இடைநிலையில் நான்கு ஆக எட்டு கர்ப்பகிருஹங்கள் இருப்பதால் இதை அஷ்டாங்க விமானம் என்று கூறுகிறார்கள். உண்மையில் மூன்றாவது மாடியிலுள்ள கர்ப்பகிருஹத்தையும் சேர்த்து ஒன்பது கர்ப்பகிருஹங்கள் இருக்கின்றன. ஆதலால் அதன் அடிப்படையில், அஷ்டாங்க விமானம் என்று குறிப்பது பொருத்தமல்ல. கட்டுரையின் தொடக்கத்தில் கட்டிட அமைப்பின் அங்கங்கள் யாவை என்பதைக் குறித்துள்ளேன். பீடம், பாதம், பீரஸ்தரம், கிரீவம், சிகரம், ஸ்தூபி, என்று ஆறு அங்கங்களை முக்கிய அங்கங்களாகக் குறித்தேன். இவற்றில் கோயிலின் உயரத்தையும், அழகையும் சிறப்பிப்பதற்காக, பீடத்திற்கு அடியில் உபபீடம் என்ற ஒர் அங்கமும், கிரீவத்தின் அடியில் உபகிரீவம் என்ற அங்கமும் அமைக்கப்படும் மரபும் உண்டு. ஆறு முக்கிய அங்கங்களுடன் இந்த இரு அங்கங்களையும் உடைய விமான அமைப்பையே ‘அஷ்டாங்க விமானம்’ என்று பெயரிட்டனரோ என எண்ண வேண்டியுள்ளது. மதுரைச் சிற்பங்கள் மதுரை என்றாலே இனிக்கும். தமிழ் வளர்த்த பெரும் பதியல்லவா. மதுரையின் வரலாற்றில் அனைத்துமே மனத்துக்கு இன்பமளிப்பவைதான். பாண்டிய மன்னர் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்ததும். ஒப்பரும் மன்னர்கள் மதுரைப்பதியை ஆண்டதும், கட்டிடக்கலையின் சிறப்பை எடுத்துக்காட்டும் வானளாவும் கோபுரங்களும், பக்திப்பெருக்கை வளர்க்கும் அங்கயற்கண்ணி ஆலயமும் அனைத்துமே இன்பமானவைதான். இவற்றோடு இங்கு சிறந்து நிற்கும் சிற்பங்களும் மனத்தைக் கவர்பவைதான். மதுரைச் சிற்பங்கள் உலகப்புகழ் வாய்ந்தவை. சிற்பங்கள் பலவகைப்படும். மண்ணாலும், மரத்தாலும், தங்கத்தாலும், தந்தத்தாலும், கல்லாலும் செய்யப்பட்டுத் திகழும் அனைத்தயும் சிற்பங்கள் என்றே சொல்கிறோம். இவை அனைத்தாலும் செய்யப்பட்ட சிற்பங்கள் மதுரையில் உள்ளன். இவற்றில் பெரும்பலானவை அங்கயற்கண்ணி ஆலயத்தில் உள்ளன. சிற்பங்களைக் கேட்டுக்களிப்பதைவிட, கண்டு களிப்பதுதானே உகந்தது. ஆதலின் அகக்கண்ணாலாவது கண்டுகளிக்க உங்களை மனம் என்னும் இரதத்தில் ஏற்றி மதுரைப்பதிக்கு அழைத்துச்செல்கிறேன் வாருங்கள், செல்வோம். அங்கயர்கண்ணி சந்நிதிக்கு நேர்வாயிலில் அஷ்டசக்தி மண்டபம் இருக்கிறது. அதற்கு முன்னர் கோபுரவாயில் போன்ற அமைப்பு ஒன்று இருக்கிறது பாருங்கள். இதை நகரா மண்டபம் என்று அழைக்கிறார்கள். அதில் தென்கிழக்குத் தூணில் கைகூப்பி நிற்கும் பெண்ணின் சிற்பம் ஒன்றைக் காண்கிறோம். அவள் அருகில் ஒரு சிறுவனும் நிற்பதைக் காண்கிறோம். அப்பெண் யார் தெரியுமா? அவள் தான் ராணி மங்கம்மாள். மதுரையைப் புகழோடு ஆண்ட ஒரு பெண்ணரசி. அவள் தோற்றுவித்தது அந்நுழை வாயில். அதை ‘நகரா’ அடிக்க இப்போது பயன் படுத்துகிறார்கள். அதனால் இதை நகரா மண்டபம் என்று கூறுகிறார்கள். என்ன, அப்பெண்ணின் சிற்பத்தைப் பார்த்து ரசிக்க முடியாமல் சுண்ணாம்பு பூசி மறைக்கப்பட்டிருக்கிறதே என்று எண்ணுகிறீர்கள? அது இன்றய நிலை. அட்டசக்தி மண்டபத்துக்குச் செல்வோம் வாருங்கள். வாயிலின் இருபுறமும் உள்ள தூண்களில் சக்தி உருவில் எட்டு தெய்வச்சிலைகள் உள்ளன. ஆதலால் இதை அட்ட சக்தி மண்டபம் என்று கூறகிறார்கள். மனோன்மணி, மகேச்வரி, சியாமளா, யஞரூபிணி, கெளமாரி, ரெளத்ரி, வைஷ்ணவி, லஷ்மி என்ற எட்டு உருவில் தேவி தோற்றமளிக்கிறாள். ஒவ்வொரு தோற்றத்திலும் தேவி உரிய சின்னங்களோடு காணப்படுகிறாள். உள்ளே கருவறையில் எழில் உருவில் விளங்கும் அன்னை அங்கயற்கண்ணி உலகில் சக்தி மயமாக எவ்வளவு உருவங்களில் தோற்றமளித்து உலகை உய்விக்கிறாள் ! அவற்றின் உருவங்கள்தானே இவை. தேவி! நீ அட்டமூர்த்தியாகிய சிவபிரானின் தேவியல்லவா? அதனால்தான் இங்கு சக்தி உருவிலே, எட்டு உருவிலே தோற்றமளிக்கிறாயோ? ஜகத் சக்தி மயம் வியாப்தம் ஜகத் சக்தி மயம் சிவம் ஜகத் உத்பத்யதே சக்தேர் சக்தி திஹி து பரம சிவ: என்று சக்தியே அனைத்துக்கும் அப்பாற்பட்ட சிவம் என்று ஆன்றோர்கள் உன்னைத் தொழுகிறார்களே! அவ்வன்னை தானே நீ! உன்னை வணங்குகிறேன் தாயே! உடன் வந்த உங்களை மறந்து விட்டேன் பார்த்தீர்களா! அங்கயற்கண்ணியை வணங்க வந்தவர்கள் அனைவருக்கும் ஏற்படும் நிலை இது. இவ்வளவு அழகிய மண்டபத்தே மேலே அங்கயற்கண்ணியின் வரலாற்றைச் சித்தரிக்கும் சிற்பங்களை உடைய இவ்வாயிலை இருமருங்கும் அறுமுகனும், ஆனைமுகத்தோனும் அழகாக வீற்றிருக்கும் வாயிலைத் தோற்றுவித்த பெருந்தகையாளனை மனதார வணங்குவோம். இதோ தடதடவென்று ஒரு கூடை தேங்காயை கடைக்காரர் கொட்டுகிறார். அடடா! அவர் கொட்டும் தேங்காயெல்லாம் ஒரு சிற்பத்தின் மீதல்லவா விழுகிறது! அங்கே நிற்பது யார்? மதுரைப் பதிக்குப்புகழ்ளித்த மன்னன் அங்கயற்கண்ணியின் அடியானாக மதுரையை ஆண்ட பெரும்புகழ் மன்னன் திருமலை நாயக்கரின் சிற்பமல்லவா! அங்கு அதின்மேலா தேங்காய்? அதோ அவன் அருகிலே தேங்காயும் பழமும் போட்டதனால் மறைந்து தலை மட்டும் தெரிகிறதே அது, அவனுடைய பட்டத்து தேவி உருத்ரபதி அம்மையின் உருவம்தான் ! மற்றொரு புறத்தில் மறைந்து கிடக்கிறது அவனது மற்றொ தேவி தோனியம்மையின் உருவம். இப்போது நினைவிற்கு வருகிறது. இம்மண்டபத்தை இவ்விரு தேவியரும்தான் தோற்றுவித்தார்கள். தேங்காயும் பழமும் இவர்களை மூடி இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? அங்கயற்கண்ணியம்மையையும் வருபவர்களையும் எப்பொழுதும் வணங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்றுதான் இங்கு தங்கள் உருவை வைத்தார்கள். இப்போது இந்த நிலை! பாவம், நாம் என்ன செய்ய? மேலே செல்வோம், வாருங்கள். அங்கயற்கண்ணியை வணங்க மண்டபங்களைக் கடந்து வேகமாக உள்ளே செல்கிறோம் ! சித்திரக் கோபுரத்தை அடுத்துள்ள இடைக்கட்டை முதலிப்பிள்ளை மண்டபம் என்கிறார்கள். இதோ இங்கு பிக்ஷாடனர் உருவில் சிவபிரானும், மோஹினியும், முனிவர்களின் பெண்டுகளும் அழகிய சிற்ப வடிவங்களில் காண்பிக்கப்பட்டுள்ளனர். இம்மண்டபத்தை முதலிப்பிள்ளை என்பவர் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டினார் என்பார்கள். அவற்றைக் கடந்து பொற்றாமரைக் குளத்தின் கரையில் உவகையோடு நடந்து அன்னையின் சந்நிதி வாயிலை அடைகிறோம். அங்குள்ள மண்டபத்தில் கிளிகளின் கிள்ளை மொழிகள் கேட்கின்றன. இதையே கிளிக்கூட்டு மண்டபம் என்று இப்போது கூறுகிறார்கள். இம்மண்டபத்தின் தூண்களை அலங்கரிக்கும் தருமன், அர்ஜுனன் முதலியோர் சிற்பங்களும், பாதி உருவம் மனித உருவாகவும் பாதி உடல் விலங்காகவும், பிற உருவம் மனித உருவிலும் உள்ள சிற்பமும் அனைவர் கவனத்தையும் கவர்கின்றன பாருங்கள்! இதை அபிஷேகப் பண்டாரம் என்பவர் கட்டினார் என்று கூறுவார்கள். அன்னையின் சந்நிதியில் இப்போது நுழைகிறோம். அங்கு ஒரு பிராகாரத்தைக் காண்கிறோம். நம் எதிரே காணப்படுவது கொடிக்கம்பம். அது தகடு போர்த்தப்பட்டு தங்கமுலாம் பூசப்பட்டு விளங்குகிறது. இக்கொடிக்கம்பத்தின் அடிப்பகுதியில் வடபுறம் பாருங்கள். ஒருபன்றி, குறுவாள், சூரியன், சந்திரன், ஒருமரம் இவற்றின் உருவங்கள் உள்ளன. ஆம்! அவை அரசச் சின்னங்கள்! இது தான் திருமலை மன்னனின் அரசாங்க இலச்சினை. இக்கொடிக்கம்பத்தைத் தோற்றுவித்து, தங்கத்தால் பூசியவன் அப்பெருமன்னன்தான். இப்பிராகாரத்தை அவன்தான் எழுப்பியிருக்க வேண்டும். அதோ தென்கிழக்குப்பகுதியில் அவனும் அவனது தேவியரும் நின்ற நிலையில் சிற்ப வடிவில் உள்ளதைக்காணுங்கள். இது ஆறுகால் மண்டபம் என்று அழைக்கப்படும். திருமலை நாயக்கரின் முன்னிலையில், குமரகுருபர சுவாமிகள் மீனாஷிபிள்ளைத்தமிழ் பாடியதும், அன்னைசிறு பெண்ணாகத் தோன்றி அருள் பாலித்ததும் இங்குதான். இங்குத்தான் ஆண்டுதோறும் திருமலை நாயக்கர் மீனாஷி அம்மனிடமிருந்து செங்கோல் பெற்று, தானே அரண்மனைக்கு எடுத்துச்சென்று அரியணையில் அமர்த்தி அதன் அடியானாகத் தான் ஆண்டது. அவ்வளவு புகழ் வாய்ந்த மண்டப வாயிலில் உள்ள உயர்ந்த துவாரபாலர்களின் இரு செப்புச்சிலைகளும் திருமலை மன்னன் செய்துவத்தவையே. செப்புச்சிலைகளுக்கு எடுத்துக்காட்டாக எவ்வளவு சிறந்து விளங்குகின்றன! எவ்வளவு பெரிய செப்புச்சிலைகள்! இவற்றை எப்படித்தான் வார்த்தார்களோ? அவ்வளவு சிறந்த நம் கலை வல்லமை இன்று எங்குச்சென்று மறைந்ததோ?. கிளிக்கூண்டு மண்டபத்திலிருந்து சுந்தரேசப் பெருமானின் ஆலயத்துக்குள் செல்ல இடையிலுள்ள கோபுரத்தைக்கடக்க வேண்டும். அதற்கு எதிரில் மிகப்பெரிய பிள்ளையார் உருவம். இதை முக்குறுணிப் பிள்ளையார் என்று கூறுகிறார்கள். இப்பெரும் பிள்ளையாரையும் திருமலைநாயக்கர்தான் செய்து வைத்தார். இக்கோபுரவாயிலில் உள்ள இரு கதவுகளையும் பாருங்கள்! என்ன, வண்ணம் பூசப்பட்டு விளங்குகிறதே என்று நினைக்கிறீர்களா? பரவாயில்லை. அவ்வண்ணத்திற்கும் அடியில் மறைந்து நிற்கும் அழகிய மரச்சிற்பங்களைப்பாருங்கள். இவை மரச்சிற்பங்களை எவ்வள்ளவு நுணுக்கமாக செய்யமுடியும் என்பற்கு எடுத்துக்காட்டுகள் அல்லவா? சுமார் நானூரு வருடங்களுக்கும் முன்பே சிராமலை செவ்வந்தி செட்டி என்பவர் இக்கோபுரத்தைக்கட்டியபோது அமைந்த சிறிய செழுமை வாய்ந்த மரக்கதவுகள் இவை. மரச்சிற்பங்களைப்பற்றிப் பேசும்போது இக்கோயிலுக்குச் சொந்தமான இரண்டு தேர்கள் உள்ளன. அவற்றில் அற்புதமான வேலைப்பாடுடைய மரச்சிற்பங்கள் உள்ளன. அவ்விரு தேர்களும் ஒரு தனிப்பட்ட அழகிலும் வடிவிலும் விளங்கும். அவ்விரண்டையும் திருமலைமன்னன் செய்து கொடுத்தான். அவன் கொடுத்த அத்தேர்கள் இன்றும் இருக்கின்றன போலும். சுந்தரேசப் பெருமானின் இரண்டாம் பிராகாரத்தைச் சுற்றி, சந்நிதிக்கு வருகிறோம். அங்கு நந்தி, கொடிக்கம்பம் முதலியவை உள்ள ஒரு கல்மண்டபம் உள்ளது. அங்குதான் எவ்வளவு மக்கள் நின்று அங்குள்ள மூர்த்திகளின் உருவங்களைக்கண்டு பெருமிதம் கொள்கிறார்கள். இம்மண்டபத்தில் உள்ள தூண்களில் ஏகபாதர், விருஷாரூடர், உமையொருபாகன், அரியரன், ஜலந்தரனுக்கு அருள்பாலித்த மூர்த்தி, பிஷாடனர், ஆனையை உரித்த அழகர், வீரபத்திரர், கிராதர், கல்யாணசுந்தரர், முப்புரம் எரித்த முதல்வன், காலனைக்காலால் கடிந்தவர், நடராஜர், உமாமகேச்சுரர், விருஷாந்திகர், லிங்கோத்பவர், திருமாலுக்குச்சக்கரம் அளித்த அண்ணல், அறம் உரைத்தபட்டர், சண்டிக்கு மலர்மாலை சூட்டுவித்த பெருமான், சோமாஸ்கந்தர், உமாமகேசுவரர், காமாந்தகர், இராவணானுக்ரஹமூர்த்தி, காமனைக் காய்ந்த காலன், சுகாசனர் என சிவபெருமானின் இருபத்திஐந்து திரு உருவங்கள் எழில் சிற்பங்களாய் விளங்குகின்றன. இவற்றில் கல்யாண சுந்தரத் திருமேனியாய் அங்கயற்கண்ணியை மணந்து கொள்ளும் பெருந்தகையாய் சிவபிரானின் தோற்றம் எவ்வளவு சிறப்பாக இருக்கிறது! திருமால் நீர் வார்க்க, அங்கயற்கண்ணியின் கைப்பற்றுபவராக காட்சியளிக்கிறார், சுந்தரேசக்கடவுள். நாணமே உருவாக தலையைச்சற்று சாய்த்து, எவருக்கும் கிடைத்தற்கரிய பெரும் பேற்றை ஏற்றுக்கொள்கின்ற பெருமிதத்துடன் தேவி காட்சியளிக்கிறாள். இவ்வெழில் சிற்பத்தைக் கண்டு போற்றாதாரே கிடையாது. உலகப் புகழ்வாய்ந்தது இச்சிற்பம். இதன் எதிரில் பாருங்கள். நான்கு பெரும் தெய்வீகத் திருவுருவங்கள். இடப்புறத்தில் அக்னி வீரபத்திரர் என்று இரண்டு வீரபத்திர உருவங்கள். இவர்கள் தோற்றத்தில் தான் எவ்வளவு சீற்றம்! சம்ஹார மூர்த்திகளாக இவர்கள் தோற்றமளிக்கின்றனர். வலப்புறத்தே வலது காலை உயரத்தூக்கி வீசி எடுத்த பாதம் உடையாராக ஊர்த்தவ தாண்டவ மூர்த்தியாக விளங்குகிறார், சிவபெருமான்; தாண்டவக் கடவுள ல்லவா? அவரை நாட்டியத்தில் வெல்ல முடியுமா? ஆடவல்ல பெருமானின் அருகில் அவர்போல் ஆட முடியாது நாணம் மேலிடநிற்கிறாள் காரை உருவில் அன்னை. பார்ப்போர் பிரமிக்கும் வகையில் சுமார் எட்டு அடி உயரத்திற்கு உள்ள இச்சிலைகளை யார் தோற்று வித்தார்கள்? இப்பிராகாரத்தில் உள்ள ஒரு தூணில் விஸ்வநாதநாயக்கர், கிருஷ்ணப்ப நாயக்கரய்யன் குமாரர் வீரப்பநாயக்கர் பதினைந்தாயிரத்து எண்ணுத்தி முபத்திநான்கில் மண்டபத்தைக்கட்டுவித்தார் என்று அறிகிறோம். திருமலை நாயக்கருக்கு முன்பே தோற்றுவிக்கப்பட்ட சிற்பங்கள்தாம் இவை. சுந்தரரேசப் பெருமானின் சந்நிதயில் நுழைகிறோம். நுழைவாயிலில் இருபுறமும் சதாசிவ மூர்த்தியின் சிலையும் மனோன்மணியான காயத்ரியும் காட்சி அளிக்கின்றனர். உட்பிராகாரத்தில் முன் மண்டபத்தில் அறுபத்து மூன்று திருவிளையாடல்களும் இடம்பெற்றுள்ளன. அண்ணலின்கோயிலே மிகவும் அழகுடையது. எட்டு திக்கஜங்கள் விமானத்தைத் தாங்குவன போல் காட்சி அளிக்கின்றன. இது போன்ற அமைப்பு தமிழகத்தில் எங்கும் இல்லை. யானைகளுக்கும் மேலே பாருங்கள் அழகிய சிற்பங்கள் கொடுங்கையில் சாய்த்துப் பொருத்தப்பட்டுள்ளன. இவ்வளவு அழகிய சிற்பங்களைப் பெரும்பாலானவர்கள் பார்ப்பதே இல்லை. தஷிணாமூர்த்தியின் எதிரில் தாய்மார் எழுவர்களான சப்தமாதர்களின் சிலைகள் உள்ளன. இவைதான் இக்கோயிலிலேயே மிகவும் பழமையான சிற்பங்கள். ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கும் முன்னர் அரிகேசரி பராங்குச மாறவர்மன், பராந்தகன் நெடுஞ்சடையன் முதலிய பாண்டிய மன்னர்கள் மதுரையை ஆண்டபோது செய்து வைக்கப்பட்ட சிற்பங்கள். நாயக்கர்காலச் சிற்பங்களுக்கும் இவற்றிற்கும் தான் எவ்வளவு வித்தியாசம்! சுந்தரேசப் பெருமானின் சந்நிதி வாயிலில் உயரமான துவாரபாலர்களின் செப்புச்சிற்பங்கள் உள்ளன. இவற்றையும் திருமலை நாயக்கர்தான் செய்துவைத்தார். இதே போன்று வாயில் நிலையை அலங்கரிக்கும் நிலைவிளக்கும் அவர் செய்து வைத்ததுதான். வார்ப்பு மகரதோரணம் போன்ற அமைப்புடைய இதன் அடியில் திருமலை நாயக்கரும் அவருடைய மனைவியரும் கைகூப்பித் தொழுவது போல் உள்ளதைக்காணலாம். இது வார்ப்புக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. இது போன்று முக்குறுணிப் பிள்ளையாரின் முன்னரும் ஒன்று இருக்கிறது. அங்கயற்கண்ணி ஆலய வாயிலிலும் இது போன்ற நிலை விளக்கு திருமலை மன்னனின் உருவத்தோடு விளங்குகிற்று. அது இப்போது அங்கு இல்லை. சொக்கநாதப் பெருமானின் சந்நிதியில் தென்புறம் நோக்கி கால்மாறி ஆடிய பெருமானின் உருவம் கல்லிலும் செம்பிலும் செய்யப்பட்டு விளங்குகிறது. அறுபத்து மூவர்களின் செப்புச்சிலைகளும் நாயக்கர் காலத்தவைதான். செம்பிலே வார்த்தும் செதுக்கியுமே சிறந்த சிற்பங்களைத் தோற்றுவித்துள்ளனர். இக்காலத்தில் செய்யப்பட்ட தங்கச்சிலைகளும் இக்கோயிலில் உள்ளன. சொக்கநாதப் பெருமானும் அங்கயற்கண்ணியும் ஆக விளங்கும் அவ்வுருவங்களை வெள்ளிக்கிழமை தோறும் ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து வழிபடுவதைக் காணலாம். நேரம் அதிகம் ஆகிவிட்டது. இன்னம் இரண்டு இடங்களில் உள்ள முக்கிய சிற்பங்களைக் காணவேண்டும். விரைந்து வாருங்கள். நாம் இப்போது வந்துள்ளது ஆயிரக்கால்மண்டபம். இவ்வெழில் மண்டபத்தை விஸ்வநாதர் காலத்தில் அவரது அமைச்சராய்ப் பணிபுரிந்த தளவாய் அரியநாத முதலியார் கட்டுவித்தார். இந்நுழைவாயிலில் குதிரை மீர்ந்து வரும் பெருமிதமான தோற்றம் அவருடையது என்று இதுகாறும் கருதினர். அதன்காலில் இதோ ஒரு நரியின் உருவம் உள்ளது. நரியைப் பரியாக்கிய சுந்தரேக்கடவுள் என்பதைக்கண்டு சொன்னேன். புரிந்து கொண்டார்கள் புகழும் கொண்டார்கள். இங்கு எவ்வளவு எழிலார்ந்த சிற்பங்கள் உள்ளன பாருங்கள்.மேலே உடும்பு ஒர் சங்கிலியைக் கவ்வி நிற்பது போன்ற ஒர் அழகான காட்சி.தன் கண்ணை இடந்து முக்கண்ணனுக்கு அப்பி அழியாப்பகழ் கொண்ட கானவன் கண்ணப்பனின் சிலையைக்காணயங்கள். முப்புரமெரித்த மூர்த்தி, வீரபத்திரக்கடவுள். இன்னும் உள்ளே மகாபாரதத்தில் வரும்பல ஒப்பற்ற சிற்பங்கள் இவற்றைப் பார்த்துப் பார்த்து மகிழ வேண்டுமானால் ஒருநாள் முழுவதும் போதாது. இங்குள்ள கலைக் கூடத்தில் நல்ல தந்தச்சிற்பங்கள் உள்ளன. இன்னும் ஒர் இடம் உண்டு. அதுதான் திருமலை மன்னரால் கட்டப்பட்ட புதுமண்டபம் என்னும் வசந்தமண்டபம். இம்மண்டபத்தில் சிவபெருமானின் பல்வேறு தோற்றங்கள் உள்ளன. பன்றிக்குட்டிக்குப் பால் கொடுத்தது, புலிக்குட்டியைப் பேணியது போன்ற திருவிளையாடல் காட்சிகள் சிற்பங்களாக உள்ளன. திருமாலைமன்னர் மதுரையை ஆண்ட தன் மூதாதையரின் உருவங்களையும் தன் உருவத்தையும் இங்கே செய்து வைத்துள்ளார். தமிழகத்தில் உருவச்சிலைகள் குடபுலங் காவலன் வடபுலவிமயத்து வாங்குவிற் பொறித்த குட்டுவர் வழி வந்தோன் சேரப்பெருந்தகை செங்குட்டுவனை அறியாதார் தமிழகத்தில் யாருமில்லை. அவன் கண்ணகிக்கு உருவச்சிலை எடுத்தான் என்று சங்ககால இலக்கியங்கள் கூறும். அவ்வுருவச்சிலை கண்ணகி மறைந்த பின்னர் எடுக்கப்பட்டது. குன்றவருங் கண்டு நிற்பக் கொழுநனொடு கொண்டு போயினா இவள் போலு நங்குலக் கோரிருந் தெய்வ மில்லையாதலிற் சிறு குடியீரே, சிறு குடியீரே தெய்வங் கொள்ளுமின் சிறுகுடியீரே" என்பதிலிருந்து கண்ணகியின் உருவச்சிலையைத் தெய்வமாக வணங்கினர் என்று அறிகிறோம்.இச்சிலையெடுக்க இமயம் வரை சென்று கல்லெடுத்தான் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மகன் செங்குட்டுவன்.கண்ணகி, தன் கொழுநனுக்கிழைக்கப்பட்ட அநீதியைத்தீர்த்து விண்ணகம் எய்திய ஒரு தனிப் பெரும் பத்தினித் தெய்வமாவாள். ஆதலின் கண்ணகிக்கு உருவச்சிலை வைக்கப்பட்டது. தமிழ் மகனுக்குச் சிலை தனது அரசனுக்காகப்போர்க்கோலம் பூண்டு வீரப்போர் புரிந்து, போர்களத்திலே மாண்டுவிட்ட தமிழ் மகனுக்குச்சிலையெடுப்பதும் இந்நாட்டிலுண்டு.அதற்கு ‘வீரக்கல்’ அல்லது ‘நடுகல்’ எழுப்புவது என்று பெயர். இச்சிலையில் அவனது உருவம் பொறிக்கப்பட்டுருக்கும்.நாட்டுற்கோ அல்லது ஊருக்கோ இடுக்கண் ஏற்பட்ட காலத்து, தன் இன்னுயிரையும் மதியாது, தோள்வலி காட்டி அவ்விடுக்கண்களைந்தவனுக்கு அவன் உயிரோடு இருக்கும்போதே நினைவுச்சின்னம் ஏற்படுத்துவதும், தமிழக மரபுகளில் ஒன்றாகும். அதையும் ‘வீரக்கல்’ என்றே கொள்வர்.இதிலும் வீரனது உருவச்சிலை பொறிக்கப்பட்டிருக்கும் பல்லவர் காலத்தில் சங்க காலம் விடுத்துச்சரித்திர காலம் புகுங்கால், தமிழகத்தில் பல்லவர்கள் பலம்பொருந்தியவர்களாகக் காணப்படுகின்றனர். கி.பி.ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் பல்லவ அரசனான சிம்ம விஷ்ணு என்பான், சேரர், களப்பிரர் முதலியோரைத் தோற்கடித்துப் பல்லவராட்சியைக் காஞ்சியில் நிலைநாட்டினான் என்று அறிகிறோம்.அவனது குமாரன்தான் புகழ் வாய்ந்த மகேந்திரப் போத்தரையன் என்று கூறப்படும் முதலாம் மகேந்திரன்.இம்மன்னன் தனிப்புகழ் வாய்ந்தவன்.கல்வி கேள்விகளிற் சிறந்தவன், சிறந்த கலை நிபுணன். இயல், இசை, நாடகம் போன்ற முப்பெருந்துறைகளிலும் சிறந்த வல்லுனன். தன்னை ‘விசித்திரசித்தன், சித்திரகாரப்புலி, குணபரன்’ என்றெல்லாம் கூறிக்கொள்கிறான். இவன்தான் தமிழகத்தில் குடைவரைக் கோயில்கள் தோற்றுவித்தவன் என்று சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர். இவனால் செய்யப்பட்ட குடைவரைக்கோயில்கள் தமிழகத்தில் பல இடங்களில் இருக்கின்றன.இவன் காலத்தில் பல்லவர் ஆட்சி தெற்கே திருச்சிராப்பள்ளிவரை பரவியருந்தது. திருச்சி மலையில் திருச்சிராப்பள்ளி மலையின் மேலேயுள்ள குடைவரைக் கோயில் இவனால் செய்விக்கப்பட்டது.இதில் மிகவும் அழகான கங்காதரமூர்த்தியின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அதன் இரு மருங்கிலும் மகேந்திரனது கல்வெட்டுகள் உள்ளன. மகேந்திரன் பரமனுக்கு இவ்விசித்திரமான கோயிலைத் தோற்றுவித்ததாக இக்கல்வெட்டுகள் கூறுகின்றன. இங்கு எழுந்தருளியிருக்கும் சிவன் அருகே தனது உருவச்சிலையைப் படைத்ததாக இவன் கூறிக்கொள்கிறான். இங்கு தாணுவைத் தோற்றுவித்தேன். அவர் என்றும் அழியாத சிலையாகத் தோற்றமளிக்கிறார். அவரது அருகிலே எனது உருவையும் படைத்த நான் சிலையாக நின்று என்றும் அழியாத புகழடைந்து விட்டேன். என்று பெருமிதத்துடன் கூறிக்கொள்கிறான் இம்மன்னன். “என்றும் அழியாப் பரமனை என்தலையில் தாங்குகிறேன்” என்று கூறுவதிலிருந்து இவன் தன்னை ஒரு சிறந்த சிவபக்தன் ஆகக் காட்டவே தன் உருவச்சிலையைத் தோற்றுவித்தான் என்று கொள்ள இடமிருக்கிறது. மாமல்லபுரத்தில் இவனுக்குப்பின் தோன்றிய இவனது மகனான மாமல்லன் நரசிம்மன் பல்லவ அரசர்களிலே சிறந்தவன். சாளுக்கிய மன்னனான இரண்டாம் புலிகேசியை வடபுலத்துத் தோற்கடித்து வாதாபியைத் துகளடித்தான். ஈழத்தை வெற்றி கொண்டான். இவனுக்குப்பின்னர் தோன்றியவர்களில் முதலாம் பரமேசுவரனும் அவனது மகனான ராஜசிம்மனும் பல்லவர்களில் மிகவும் சிறந்து விளங்கினர். இக்காலத்தில்தான் மாமல்லபுரம் உருவாக்கப்பட்டது. உலகிலேயே ஒப்பற்ற கலைச் செல்வங்கள் மாமல்லபுரத்துக் கல்ரதங்களும், சிற்பங்களும் ஆகும். இவைகளை உருவாக்கிய பெருமை மன்னர்கள் மனத்திலே ஊக்கத்தைத் தோற்றுவித்தல் இயல்பு. இவ்வரும் படைப்புகளைத் தோற்றுவித்த மன்னர்கள் இங்கு தங்களது உருவச்சிலைகளையும் செய்வித்துள்ளார்கள். மாமல்லபுரத்தில் ஆதிவராக குடைவரைக்கோயிலில் பல்லவ மன்னர் இருவரின் உருவச்சிலைகள் உள்ளன. இவைகளில் ஒன்று அமர்ந்த நிலையிலும் மற்றது நின்ற நிலையிலும் உள்ளன.அமர்ந்த நிலையில் உள்ள சிலைக்கு மேல் உள்ள கல்வெட்டு “சிம்ம விஷ்ணு போத்ராதிராஜன்” என்று கூறுகிறது. நின்ற நிலையில் உள்ள உருவச்சிலையின் மேலே உள்ள எழுத்துக்கள் “மகேந்திர போத்ராதிராஜன்” என்று கூறுகிறது. இக்குகையின் பெயர் “பரமேசுவர மகா வராக விஷ்ணுகிருஹம்” என்பது. இவ்விரு உருவச்சிலைகள் யார், யாருடையவை என்பது பற்றிச் சரித்தர ஆசிரியர்களிடையே கருத்து வேற்றுமை நிலவி வருகிறது. “பஞ்சபாண்டவர் ரதம்” என்று கூறப்படும் ஜந்து கல்தேர்களில் மிக உயரமானதற்கு தர்மராஜ ரதம் என்று பெயர். அதன் தென்புறத்தே ஒர் உருவச்சிலை செதுக்கப்பட்டுள்ளது. அது, அக்கல்தேரைத் தோற்றுவித்த நரசிம்மனின் சிலை என்பர். காஞ்சியில் உள்ள கயிலாயநாதர் கோயிலுக்கு முன்னால் ராஜசிம்மனின் மகனான மூன்றாம் மகேந்திரன் ஒரு கோயிலைத் தோற்றுவித்துள்ளான். அதற்கு “மகேந்திரவர்மேசுவர கிருகம்” என்று பெயர். அதற்குப்பின்புறத்தில் ஒரு மன்னன் தன் மனைவியுடன் அமர்ந்திருக்கும் உருவச்சிலை ஒன்று உள்ளது. அது மூன்றாம் மகேந்திரனது சிலை என்று சிலர் கொள்வர். நந்திவர்மன் என்ற பல்லவமன்னால் கட்டப்பட்ட வைகுந்தப் பெருமாள் கோயிலில் பல்லவரது சரித்திரமே சிலையாகச் செய்யப்பட்டுள்ளதைக் காணலாம். இவ்வாறு என்றென்றும் அழியாப் புகழ் வாய்ந்த கோயில்களைக் கட்டுவித்தற்காகத் தங்களது உருவச்சிலைகளையும் அங்கு அமைத்தனர் பல்லவ மன்னர்கள். சோழர் காலத்துச்செப்புச்சிலைகள் கரிகால் பெருவளத்தான் காலந்தொட்டுப் புகழ் வாய்ந்து விளங்கிய “குணபுலன்காவலர்” என்றும் “செம்பியர்” என்றும் கூறப்படும் சோழரது ஆட்சி, பல்லவரது காலத்தில் மங்கி இருந்தது. சுமார் கி.பி. எண்ணூற்று ஜம்பது இல் விஜயாலயன் சோழ வம்சத்தின் புகழ்க் கொடியை நாட்டினான். அவன் வழித்தோன்றலான முதலாம் ராஜராஜன், சோழமன்னர்களில் சிறந்தவன், சோழப் பேரரசு அவன் காலத்தில் மிகவும் பெரியதாய்த் திகழ்ந்தது. அவன் சிறந்த சிவபக்தன். அவனை மக்கள் “சிவபாதசேகரன்” என்று கூறி கொளரவித்தார்கள். அவனது சிவ பக்திக்கு எடுத்துக்காட்டாக அமைந்ததுதான் தஞ்சை பிருஹதீஸ்வரர் ஆலயம். அவனது மகனான ராஜேந்திர சோழன் தந்தையைப் போலவே கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒரு கோயிலைத் தோற்று வித்தான். இவனுக்குப் பின்னர் வந்த சோழ மன்னர்களும் சிறந்த கோயில்களைக் கட்டியுள்ளனர். ஆயினும் இவர்கள் தங்களது உருவச் சிலைகளைத் தாங்களே வைத்தனர் இல்லை. ஆனால் அதற்குப்பதிலாகா சைவசமயம் தழைக்கச் செய்த பெரியோர்களது உருவச் சிலைகளைச் செப்புப் பிரதிமங்களாகத் தோற்றுவித்தனர். திருநாவுக்கரசர், வாதவூர் அடிகள், ஆளுடைய பிள்ளயார், கண்ணப்ப தேவர் போன்ற பெரியோர்களின் பிரதிமங்கள் தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள பண்டைய ஒவியங்களில் ஒன்று ராஜராஜனையும் அவனது குருவான கருவூர் தேவரையும் குறிக்கும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தற்சமயம் தஞ்சைக் கோயிலில் இருக்கும் ராஜராஜனது உருவச்சிலை அக்காலத்தது அல்லவென்றும், சுமார் நாற்பது ஆண்டுகட்கு முன்னர் உண்மை ராஜராஜனது சிலை இருந்தது என்றும், தற்பொழுது அது மறைந்துவிட்டது என்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இது உண்மையாய் இருப்பின் தமிழகத்தின் தலை சிறந்த சோழப் பெருந்தகையின் உருவச்சிலை இவ்விதம் மறைந்தது தமிழகத்தின் துர் அதிஷ்டமாகும் என்றுதான் கொள்ளவேண்டும். காளகஸ்தியில் குலோத்துங்க சோழனின் உருவச்சிலையும், சோழ மகாதேவியின் உருவச்சிலையும் இருந்தன. சமீப காலத்தில் இவையும் மறைந்துவிட்டன என அறிகிறோம். ராஜராஜானின் சிறிய தந்தையான மதுராந்தக உத்தம சோழனின் சிலை சென்னைப் பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவை போன்று பல செப்புச் சிலைகள் சோழர் காலத்தில் செய்விக்கப்பட்டு, கோயில்களில் வைக்கப்பட்டன. இவை பெரும்பாலும் இம்மன்னர்கள் மறைந்த பின்னர் இவரது வழித்தோன்றல்களால் இவரது பக்திக்கு எடுத்துக்காட்டாக வைக்கப்பட்டன. இவர்கள் வாழ்ந்த காலை, தங்களது குல தெய்வத்திடம் கொண்ட பக்தி ஈடுபாட்டிற்காக என்றென்றும் தங்களது கடவுளின் அருகில், சிலை வடிவில், தொழுத உருவில் இருத்தல் வேண்டும் என்று வைக்கப்பட்டன. சிதம்பரம் கோயிலில் சுமார் பதிமூன்றாம் நூற்றாண்டில் சோழ மன்னனைச் சிறையில் அடைத்த பல்லவ மன்னன் சகலபுவன சக்கரவர்த்தி அவனியாளப் பிறந்தான் கோப் பெருங்சிங்கன், தில்லை நாயகத்தின் கோயிலில் பல திருப்பணிகள் செய்தான். செப்புக் கோபுரத்தைத் தோற்றுவித்தான். அவனது சிலை சிதம்பரம் கோயிலில் இன்றும் உள்ளது. விஜயநகர மன்னர்களது காலத்திலும் கோயில்களில் மன்னர்களது உருவச்சிலைகள் வைக்கப்பட்டன. கிருஷ்ண தேவராயர் விஜயநகர மன்னர்களுள் சிறந்தவர். கலையையும் கற்றறிந்தோரையும் போற்றியவர். தமது இரு மனைவிகளுடன் பணிவுடன் கடவுளைத் தொழுத நிலையில் உள்ள இம்மன்னரது உருவச்சிலை, இன்றும் திருப்பதியில் உள்ளது. சிதம்பரம் வடக்குக் கோபுரத்தை இம்மன்னர் பழுதுபார்த்தார். வடக்கு கோபுரத்தில் அவரது சிலை உள்ளது. அம்மன்னர்களின் சேனைத் தலைவர்களின் சிலைகளும் அக்கோபுரத்தைக் கட்டிய சிற்பிகள் இருவரின் சிலைகளும் அங்கு உள்ளன. இக்காலத்திற்குப்பின்னர் நாயக்க மன்னர்கள் கோயில் பணிகளில் ஈடுபட்டனர்.அவர்கள் பணிபுரிந்த கோயில்கள் அனைத்திலும் தங்களது சிலைகளையும் வைத்துள்ளனர்.சிதம்பரம் கோயிலில் பச்சையப்ப முதலியாரின் சிலையள்ளது. நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம் இங்கனம் தமிழகத்தில் தோற்றுவித்த உருவச்சிலைகளை நோக்கிடின் ஒர் உண்மை புலப்படும். பெரும்பாலும் பேரரசையாண்ட பெருந்தகை மன்னர்களது உருவச்சிலைகளே வைக்கப்பட்டுள்ளன. எகிப்து நாட்டுக்கோயில்களிலும், மன்னர்களது சவத்தை அடக்கம் செய்யும் பிரமிடுகளிலும் மன்னர்களது உருவச்சிலைகள் வரையப்பட்டிருக்கின்றன. அங்கு மன்னர்கள் பகையரசர்களின் தலையை உடைப்பது போன்றும் மன்னர்களது செயல்கள் காட்டப்பட்டுளன.அனால் தமிழகத்தில் பெரும் பேரரசரான போதிலும், கடவுளின் பக்தனாகக் கைகூப்பித் தொழும் நிலையில்தான் அவனது சிலை வைக்கப்பட்டது. தமிழகத்தில் தொன்று தொட்டு ஊராண்மைக் கழகங்களும், நாட்டாண்மைக் கழகங்களும் பெரும் பணிபுரிந்து வந்திருக்கின்றன. பல மூல பரிஷத்துக்களும், சபைகளும், வாரியங்களும் குடியாட்சியைக் காத்து வந்துள்ளன. பலவிடங்களில் இவ்வித சபைகளில் பணிபுரிவோர் இருந்தனர். பெரும்பாலும் இச்சபைகள் கோயில்களில் உள்ள கூடங்களிலோ அல்லது அரசு போன்ற மரங்களினடியிலோ கூடின. அவ்விடங்களில் பொதுப்பணி புரிந்தவர்களின் சிலைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டதோ என்னவோ! சரித்திர வாயிலாக அவ்விதம் தோற்றுவிக்கப்பட்ட சிலைகளைப்பற்றி இதுவரை ஏதும் சான்று இல்லை. தமிழர் மாண்பு கி.பி. ஆயிரத்து இருநூற்று ஐம்பதில் தென்புலங் காவலனான சுந்தரபாண்டுயன் பேரரசனாகத் திகழ்ந்தான். கோப்பெருஞ்சிங்கனைத் தோற்கடித்து மாபெரும் சோழ சாம்ராஜ்யத்தையே இருந்த இடம் தெரியாமல் செய்தான். காஞ்சி இவன் கைப்பட்டது. தென்னாடு முழுமையும் ஒரு குடைக்கீழ் ஆண்ட ஒரு மாவீரன் திருவரங்கப் பெருமானிடம் பெரும் பக்தி பூண்டவன். தன்பலப்பல வெற்றிகளுக்கு எடுத்துக்காட்டாகத் திருவரங்கத்தில் துலாபாரம் செய்வித்தான். ஒரு சிறிய யானை செய்து அதன்மேல் ஏறிக்கொண்டான். அதற்குச்சம எடையான தங்கத்தைத் திருவரங்கப் பெருமானுக்கு அளித்தான். இப்பேரரசனின் மனத்திலே ஒரு சிறிய ஆசை தோன்றியது. பெருமானின் சந்நிதியில் தன் உருவச்சிலை ஒன்றை வைக்க ஆசைப்பட்டான். ஆனால் கோயில் சபையோர் பேரரசரான போதிலும் ஒரு மனிதனின் உருவச்சிலையைப் பெருமானின் சந்நிதியில் வைக்க மறுத்துவிட்டனர். அதன் விளைவாக அவன் கொடுத்த பொருட் செல்வத்தைத் தொடக்கூட மறுத்து விட்டனர். சுமார் இரண்டாண்டுகள் அச்செல்வம் தொடுவார் யாருமின்றிக் கிடந்தது. முடிவில் முடிதரித்த மன்னன் சபையோரின் தீரத்தையும் பெரும்தன்மையையும் மெச்சினான்; தன் உருவச்சிலையை வைக்கவேயில்லை; தனது பெயரை மட்டும் குறித்து வைத்தான். பின்னர்தான் அவன் ஈந்த பொருள்கள் அங்கீகரிக்கப்பட்டன. என்னே இச்சான்றோரின் பெருமை! தமிழகத்தில் உருவச்சிலைகளின் சரித்திரம் மிகச்சிறப்பு வாய்ந்தது என்பதை இதுகாறும் அறிந்தநாம், வாய்ப்பு வந்தபோதெல்லாம் அவற்றை கண்டுகளிப்போமாக!. வீர மரணம் எய்தியோர்க்கு நட்டகல் மாற்றான் படை அவன் நாட்டின் மீது பாய்ந்தது. அதை எதிர்த்து நின்றான் அவ்வீர மகன்.தன்னிடமிருந்த சரங்களை மாரியாகப் பொழிகிறான். உரையிலிருந்து அம்புகள் தீர்ந்துவிட்டன. எதிரிப்படை அவ்வளவு பெரியது. மலைத்தானா? இல்லை. இடுப்பில் இருந்து குறுவாளைக்கையிலே உருவிக்கொண்டான்.வெள்ளம் போன்ற மாற்றான் படைமீது பாய்ந்தான். அந்நிலையில் இறந்து பட்டான் அவ்வீரன். இந்நிகழ்ச்சியை அண்மையில் தமிழ் நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறையால் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு கூறும் அழகைப் பாருங்கள். பாசாற்றூர் எருமைத் தொறு எயினாட் டார் கொள்ள, பாசாற்றூர் பூசல்லிட, பூசல் சென்று, கோவூர் நாட்டுச் சிற்றிடையாற்று முது கொன்றை மூக்கின் மீமலை அயங்கயக் கரையில் சென்று முட்டி, மலையநூருடைய செம்பர் மகன்னான காரிப்பெருமான் உரையில் அம்பு மாள எவ்வி, பத்திரம் உருவி, எதிரே சென்றுபட்டான்’ என்று வருகிறது. இதில் பல இலக்கிய மரபுகள் இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியத்தில் ‘பூசல் மாற்று’ என்று வருவதுதான் இதில் பூசலிட என்று வந்துள்ளது. எல்லி என்பது ஏவு என்னும் பொருளில் வந்துள்ளது.பத்திரம் என்பது சிறுவாள். காரிப்பெருமான் என்பது அப்பெரும் வீரனின் பெயர். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று அவ்வீரனின் கல்லைக் காணும்போது உடம்பு புல்லரிக்கிறது. இது போன்ற வரலாறு குறிக்கும் பல நடுகற்களைத்தான் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை அண்மையில் வடார்க்காடு மாவட்டம் செங்கம் பகுதியில் படி எடுத்துள்ளது. தொன்மையான தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியத்திலும், புறநானூறு போன்ற சங்க இலக்கியங்களிலும் மாற்றரசர்களோடு போரிட்டு வீர மரணம் அடைந்த மறவர்களுக்குக் கல்லில் அவர் பெயரும் உருவமும் எழுதி, கல்லை வணங்குவது பண்டை மரபு என்பது குறிக்கப்பட்டுள்ளது. மாற்றார் நாட்டுக்குள் சென்று ஆநிரைகளைக் கவர்ந்து கொண்டு போதல், கவர்ந்து செல்லும் ஆநிரைகளை மீட்டல், மாற்றார் கோட்டையைக் கொள்ளல் தன் கோட்டையைக் காத்தல், மாற்றார் மீது எழுந்து போர் தொடுத்தல், வருகின்ற படையை எதிர்த்துத் தாக்குதல் ஆகிய வேலைகளில் மறவர் ஈடுபடுவர். இவற்றில் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு பூவின் பெயரை இட்டு அதை, திணை என்று அழைப்பது தமிழ் மரபு. எடுத்துக்காட்டாக, ஆநிரை கவர்ந்து கோடலுக்கு வெட்சித் திணை என்றும், மீட்டலுக்கு கரந்தைத் திணை என்றும் பெயர். இது இலக்கிய மரபு. இது வெறும் இலக்கிய மரபுதானா அல்லது உண்மையிலேயே கற்கள் நாட்டியிருந்தனவா? இம்மரபு சங்க காலத்தில் இருந்ததா அன்றிப் பிற்காலத்தும் வழக்கிலிருந்ததா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் பல நடுகற்கள் தமிழகத்தில் காணப்பட்டுள்ளன. இவற்றில் ஆநிரைப்போரிலும், கோட்டைப் போரிலும், பறந்தலைப் போரிலும் மாண்ட வீரர்களுக்கு நடப்பட்ட கற்கள் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலக்கியத்தில் குறிக்கப்பட்டுள்ள பல்வேறு திணைகளுக்குரிய நடுகற்களும், கிடைத்துள்ளதால், இவற்றை அறிவதால் தமிழ் இலக்கியத்தைத் தெளிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு எற்படுகிறது. இக்கற்கள் அனைத்திலும் மாண்ட வீரனது உருவம் செதுக்கப்பட்டிருக்கும். வீரன் தன்கரத்தில் வில்லோ, வாளோ அன்றி சூலமோ ஏந்தி வீரச் சமர் புரிவது போன்று அவன் உருவம் காணப்படும். அவன் அருகில் மங்கலச் சின்னங்கள் சிலவும் காணப்படும். பல சிலைகளில் வீரனின் உடலைப்பல அம்புகள் துளைத்து நிற்பதைக் காணலாம். உருவத்தின் மேலோ பக்கத்திலோ அன்றிக்கீழோ, அப்பகுதியில் அன்று வழங்கிய எழத்துக்களில் செய்திகள் பொறிக்கப்பட்டிருக்கும். அன்று ஆண்ட மன்னனின் பெயர், அவன் ஆட்சி ஆண்டு, மாண்டவீரனின் பெயர், அவன் எவ்வூரைச் சேர்ந்தவன், எக்காரணத்தால் இறந்தான் என்பனவும் குறிக்கப்பட்டிருக்கும். இச்செய்திகள் வரலாற்று ஆசிரியர்களுக்கு மிகவும் பயனபடுபவை. இவற்றை வைத்துக்கொண்டு வரலாற்று ஆசிரியர்கள் ஒரு நாட்டுக்கும், மற்றைய நாட்டுக்கும், நடந்த போரையும், அதில் சிற்றரசர்கள் கொண்ட பங்கையும், போர் எவ்வளவு காலம் நீடித்தது என்பதையும், யார் இறுதியில் வெற்றி பெற்றனர் என்பதையும் தொகுத்துக் கூறுவர். இந்நடுகற்கள் எழத்திலக்கணம், பொருள் இலக்கணம் ஆகியவற்றை வரலாற்று அடிப்படையில் அறியப்பெரிதும் பயன்படுகின்றன. எழத்துக்கள் சங்க காலம் தொட்டு இன்று வரை பல நிலைகளைப் பெற்று வளர்ந்து வந்திருக்கின்றன. அவற்றின் வளர்ச்சியில் இதுகாறும் தெளிவாகாத சில நிலைகள் அண்மையில் கிடைத்த நடுகற்களிலிருந்து தெரிகின்றன. அண்மையில் வட ஆற்க்காடு மாவட்டத்திலிருந்து சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட நடுகற்கள் படி எடுக்கப்பட்டுள்ளன. அற்றில் பெரும்பாலானவை பல்லவர் காலத்தவை. சிம்மவிஷ்ணு, மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், நந்திவர்மன், கம்பவர்மன் ஆகிய மன்னர்கள் காலத்தவை. கம்பவர்மன் காலத்தைத்தவிர மற்றவை அனைத்தும் வட்டெழுத்தில் உள்ளன. இவற்றிலிருந்து பல புதிய செய்திகள் கிடைத்துள்ளன. மகேந்திரனின் தந்தை சிம்ம விஷ்ணு முப்பது ஆண்டுகளுக்கு மேலும், மகேந்திரன் அறுபது ஆண்டுகளும், நரசிம்மவர்மன் ஜம்பது ஆண்டுகளும் கோலோச்சியுள்ளனர் என்று அறிகிறோம். நரசிம்மவர்மன் என்று குறிக்கப்பட்டுள்ளது மட்டும் சாளுக்கிய மன்னன் புலிகேசியை வென்று வாதாபியைத் துகளடித்து, மாமல்லன் என்று பெயர் பெற்றிருந்தானே அவனைக் குறிக்கிறதா? அன்றி காஞசியிலும், மாமல்லபுரத்திலும் உலகப்புகழ் வாய்ந்த கோவில்களைத் தோற்றுவித்தானே இரண்டாம் நரசிம்மன் அவனைக் குறிக்கிறதா என்றும் தெளிவாகத் தெரியவில்லை. இதுகாறும், இம்மூன்று மன்னர்களும் இவ்வளவு காலம் ஆண்டுள்ளனர். என்பது தெரியாது. வரலாற்று ஆசிரியர்கள் இவர்கள் குறைந்தகாலமே ஆண்டதாகக் குற்த்துள்ளனர். இவர்கள் ஆட்சியில் காணும் மாற்றம், பல்லவர் வரலாற்றையும் அதன் சமகாலத்துப் பாண்டியர், கங்கர் முதலியோர் வரலாற்றையும் மாற்றி எழத வேண்டிய செய்திகளைத் தந்துள்ளன. பல்லவர் காலத்தில் நாடு எவ்வாறு பிரிக்கப்பட்டு ஆளப்பட்டது.என்பதையும் சில கல்வெட்டுகள் குறிக்கின்றன. பல்லவர் தங்கள் கீழ் படிப்படியாகக் குறுநிலத் தலைவர்களை நியமித்து அவர்கள் மூலம் நாட்டை ஆண்டிருக்கின்றனர். கம்பவர்மனின் கீழ் வயிரமேகன் என்னும் வாண அரசன் குறுநில மன்னனாய் இருந்தார். அவர் வாணகோப்பாடியும், இலாடைப்பாடியும், மிலாடும், சோழ நாட்டுக்காவிரியின் வடகரையும் ஆண்டார். அவரின் கீழ் வேணாடு முந்நூறு என்னும் பகுதியையும், மேனாடைந்நுறு, என்னும் பகுதியையும் நந்தி என்பவர் ஆண்டார். அவரின் கீழ் வெண்ணம் இப்போது வீராணம் என்ற ஊரையும், சாத்தனுரையும் நந்தியின் மகன் அக்கழிமல்லன் என்பவர் ஆண்டார். அவரின்கீழ் வெண்ணம் என்ற ஊருடைய தலைவனாக மோடப்பன் குறிக்கப்படுகிறார். இது பல்லவர் ஆட்சி முறையைத் தெளிவாக்குகிறது. இப்பொழுது ஓர் அணையால் புகழ் பெற்றுள்ள சாத்தனூர், மலைக் குன்றுகள் நிறைந்த ஒருபகுதி. மேலைப் பகுதியிலிருந்து கீழைப்பகுதிக்கு வரும் படைகள் இங்குள்ள இடை நிலப்பகுதி வழியாகத்தான் வரும். ஆகையால் இப்பகுதியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பெரும் போர்கள் பல நடந்துள்ளன என்று இப்போது அறிகிறோம். அது போன்ற போர் ஒன்றை மிக அழகாகக் குறிக்கின்றது ஒரு நடுகல். அக்கழி மல்லனார் வெண்ணமுஞ்சாத்தனூரும் ஆளா நிற்க பங்கள நாடுடைய மாதேவர் படை சாத்தனூர் ஏறிய வெண்ணமுடைய மழநாட்டு மோடப் பன் பின்பு சென்று பிணங்கி வேணாட்டெல்லையிற் சறுகளப்பட்டான் மழ நாடர் கல் என்று குறிக்கிறது. ஒரே சண்டை இரண்டு மூன்று இடங்களில் தொடர்ந்து நடந்தபோது ஆங்காங்கே வீழந்த வீரர்களுக்கு ஆங்காங்கே நடுகற்கள் காணப்படுவது ஒரு சிறப்பாக உள்ளது. நல்ல தமிழ்ப்பாக்கள் உள்ள நடுகற்களும் முன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எதிரிகளைச் சாய்த்து வீழ்த்திய ஒரு வீரனின் நடுகல்லில், வாய்ந்த புகழ் மங்கலத்து வந்தெதிர்த்த மாற்றலரை சாய்த்த மகன் வென்றசயம் பெருக நிக்குவனம் மற்பொறிக்கப்பட்டான் கரடி குலச் சொக்கனேந்தலே உலகில்தான்". என்னும் அழகிய பாட்டுள்ளது. அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு நடுகல் மிகவும் அரிய செய்தியைத்தருகிறது.ஒரு வீரன் தன்னெருமைகளைக்காத்து நின்றான்.அப்புறத்தே கள்வன் நுழைந்தான்.வீரன் இறந்தான்.அவனுடைய நாய் கள்வனைக்கடித்துத் தன் தலைவன் அருகே நின்றது.நன்றி மறவா இவ்விலங்கை அவ்வூரார் நன்றிக்கடனோடு நினைத்து அவ்வீரனுக்கு நட்ட நடுகல்லிலே அந்நாயின் உருவையும் பொறித்து அதன் பெயரையும் குறித்துள்ளனர். இது ஆயிரத்துமுன்னுறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்ட பல்லவப்பேரரசன் மகேந்திரவர்மன் காலத்தில் நடந்தது. கோவிசைய மயிந்திர பருமற்கு ஜப்பத்து நான்காவது வானகோ அரைசரு மருமக்கள் பொற்றொக்கை ஆர் இளமகன் கருந்தேவக்கத்தி தன்னெருமைப்புறத்தே வாடிபட்டான் கல் கோவிவன்னெனுந் நாய் இருகள்ளனைக் கடித்துக் காத்திருந்தவாறு என்று அக்கல்வெட்டில் காணப்பட்டுள்ளது. அக்காலத்தில் தமிழகத்தில் இருந்த நாய்கள் எவ்வளவு வலிவுள்ளவையாக, கண்டார் அஞ்சும் உருவம் உடையவையாய் உயர்ந்த ரகத்தைச் சார்ந்தவையாய்த் திகழ்ந்தன என்று இந்நாயின் உருவமே தெரிவிக்கிறது. இது போன்று பல அரும் செய்திகளைத் தரும் நடுகற்களை அப்பகுதி மக்கள், வேடியப்பன் என்று வழிபடுகின்றனர். வரலாறு வழங்கும் செங்கம் வட ஆர்க்காடு மாவட்டம் செங்கம் இன்று புகழ் பெற்று வரும் ஒர் ஊர். அது செங்கம் வட்டத்தின் தலைநகராக திகழ்கிறது. ஊர் என்னவோ மிகவும் பெரியது என்று சொல்வதற்கில்லை. ஆனால் அதன்புகழ்மிகவும் பெரிது. சங்ககாலந்தொட்டே அதன்புகழ் சிறந்துள்ளது. இவ்வூரைத்தலைநகராகக்கொண்டு ஆண்ட நன்னன் சேய் நன்னனைப் பெருங்குன்றூர்ப் பெருங்கொளசிகனார் ‘மலைபடு கடாம்’ என்னும் நூலில் புகழ்ந்துள்ளார். அந்நூல் ‘செங்கண்மா’ என இவ்வூரை அழைக்கிறது. அதுவே இப்பொழுது செங்கம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரின் அருகில் நவிரைமலை உள்ளது. இங்குள்ள கல்வெட்டுக்கள் இவ்வூரைச்செங்கண்மா என்றும், இம்மலையை நவிரை என்றும் குறிக்கின்றன. இவ்வூர்ப்பகுதி தமிழக வரலாற்றுக்குப் பல அரிய செய்திகளை அள்ளிக்கொடுத்து வருகிறது. தமிழக வரலாற்றில் இன்றியமையாத கட்டங்களில் எல்லாம் செங்கம் அருஞ்செய்திகளை அளித்து வருகிறது. இவ்வூருக்கு அருகில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நூற்று இருபது காசுகள் கிடைத்தன. கிடைத்த ஊர் ஆண்டிப்பட்டி என்ற ஊராகும். இக்காசுகள் ஈயக்காசுகளாகும். இவற்றின் ஒரு புறத்தில் வளைவு வளைவான கோடுகள் உள்ளன. மறுபுறம் ’ திண்ணன் எதிரான் சேந்தன் ‘அ’ என்ற எழுத்துப் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வெழுத்துக்கள் சுமார் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு எழுத்துக்களாகும். இதுகாறும் தமிழகத்தில் கிடைத்துள்ள காசுகளில் தமிழில் பெயர் பொறிக்கப்பட்ட தொன்மையான காசுகள் இவையே. பெரும்பாலும் காசுகள் செம்பு, தங்கம் அல்லது வெள்ளியில் செய்யப்பட்டிருக்கும். இவை ஈயத்தால் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றகும். கிறிஸ்து சகாப்தத்தின் தொடக்கத்தில் ஆந்திர, கர்நாடகப் பகுதியை ஆண்ட சாதவாகன மன்னர்கள் ஈயக் காசுகளை வெளியிட்டிருக்கிறார்கள். அதே காலத்தில் வெளியிடப்பட்ட இக்காசுகளும் ஈயத்தால் செய்யப்பட்டிருப்பது சிறப்பாகும். இக்காசுகளில் மற்றுமொரு சிறப்பும் உண்டு. இவை அச்சில் வார்க்கப்பட்டவை. சுமார் நூற்று இருபது காசுகள் கிடைத்துள்ளன. இவற்றில் ‘எ’ என்ற குறில் எழத்தின் உள்ளே புள்ளி இடப்பட்டுள்ளது. தொல்காப்பிய சூத்திரத்தில் ‘எ’ கரக்குறிலுக்குப் புள்ளி இடவேண்டும் என விதி. அது கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலேயே உள்ளது இக்காசினால் தெரிகிறது. செங்கம் பகுதியில் ஏராளமான நடுகற்களைத் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை கண்டுபிடித்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை பல்லவர் காலத்தவை. நாட்டையும் கால் நடைகளையும் காத்து வீரமரணம் எய்திய மறவர்களுக்கு அக்காலத்தார் எடுப்பித்துள்ள வழிபாட்டுச் சின்னங்கள் இவை. இவற்றைத் தொகுத்து “செங்கம் நடுகற்கள்” என ஒரு நூலை தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியிட்டுள்ளது. இந்நடுகற்கள் பல அரிய வரலாற்றுச் செய்திகளை நமக்கு எடுத்துரைக்கின்றன. இதுவரை மகேந்திர பல்லவன் முப்பது ஆண்டுகளே ஆண்டான் என்று நினைத்திருந்தோம். ஆனால் இப்பொழது நாற்பது ஆண்டுகள் ஆண்டிருக்கிறான் என அவனது கல்வெட்டுக்கள் கூறுகின்றன. மகேந்திரன் மட்டுமல்ல, அவன் தந்தை சிம்மவிஷ்ணு முப்பத்து மூன்று ஆண்டுகள் ஆண்டதாக இந்நடுகற்களில் இருந்து அறிகிறோம். அவனது தந்தை சிம்மவர்மனும் இப்பகுதியில் சீரும் சிறப்புமாக ஆண்டிருக்கின்றான் என்றும் இக்கல்வெட்டுக்கள் நமக்கு உணர்த்துகின்றன. இந்நடுகற்கள் அரசியல், சமுதாய வரலாற்றிற்கு எவ்வளவு இன்றியமையாதவையோ அதேபோல் தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி அறியவும் மிகவும் உதவும் உதவுகின்றன. இவ் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த செங்கத்தின், கல்வெட்டுக்கள் இரண்டும் சிறப்புமிக்கவை. பாடல்வடிவில் அவை அமைந்துள்ளன. அவற்றில் “மலை கடாம் பாட்டு” மலைபடுகடாம் குறிக்கப்பட்டுள்ளது. இன்னும் சிறப்பாகும். இப்பகுதியை ஆண்ட காங்கேயனை அக்கல்வெட்டுகள் புகழ்கின்றன. கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டில் ஆண்டவன் இவன். இவன் மாற்றரசர்களின் மீது சீறினான். அவன் சீற்றத்தால் கண் சிவந்தது. முன்னர் “மலைகடாம் பாட்டு” கொண்ட மலை இருக்கிறதே அதில் இப்பொழுது இவனது கண் சிவக்கவும் பகை அரசர்களின் இரத்தம் அலைபுரண்டு ஓடியது என, வண்டறை தார் மன்னர் மலைப்படைத்தென் மன்னரை வெண்கண்ட திறற்காங்கேயன் கண்சிப்பக் கண்டே மலைகடாம் பாட்டுண்ட மாலவரை செங்சோரி அலைகடாம் பாட்டுண்டது நயம்பட உரைக்கிறது. கல்வெட்டுக்களில் சங்க இலக்கியங்கள் குறிக்கப்படுவது அரிது. இங்குமலைகடாம் பாட்டு குறிக்கப்பட்டுள்ளது பெருமைக்குரிய சிறப்பல்லவா? இச்சிறப்பு வாய்ந்த செங்கத்தில் அண்மையில் பெருமாள் கோயிலில் இராமாயண ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்கோயிலை சற்றேறக்குறைய ஆயிரத்து அறுநூறு இல் செஞ்சியை ஆண்ட நாயக்க மன்னர் ஓருவர் கட்டியிருக்கிறார். இக்கோயிலின் பெயர் அர்ஜுன சாரதியான வேணுகோபால சுவாமி எனக் கல்வெட்டில் காணப்படுகிறது. இக்கோயிலின் முன் மண்டபத்தில்தான் இவ்வோவியங்கள் உள்ளன. முன்மண்டபம் முழுவதும் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. இராமகாதை தொடக்கத்திலிருந்து ராமபட்டாபிஷகம் வரை இங்குக்காட்சி காட்சியாகத் தீட்டப்பட்டிருந்தன. இவற்றில் நடுமண்டபத்தில் உள்ள ஓவியங்களைத் தவிர மற்றய ஓவியங்கள் மறைந்துவிட்டன. வெளியில் மறைந்த பகுதியில் ஆங்காங்கே சில காட்சிகள் சிதைந்தும் மறைந்தும் காணப்படுகின்றன. அவற்றிற்கு விளக்கங்கள் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டுள்ளன. நடுமண்டபத்தில் உள்ள ஓவியங்கள் நல்ல நிலையில் உள்ளன. அவற்றிற்கு விளக்கங்கள் தமிழிலும் சில இடங்களில் தெலுங்குமொழியிலும் உள்ளன. தமிழ் மொழிப்பகுதிகள் கி. பி. பதினேழாம் நூற்றாண்டில் நாயக்கர் காலக் கொச்சைத் தமிழில் உள்ளன. எஞ்சியள்ள ஓவியங்கள் யுத்தகாண்டத்திலிருந்து தொடங்குகின்றன. இந்திரஜித்தன் இலக்குவனோடு இடும் போர், நிகும்பலை யாகம் செய்தல், நிகும்பலை யாகத்திற்கு அழிவு, மேகநாதனும் இலக்குவனும் இடும்போர், மேகநாதனின் வதை முதலியன ஒருபுறம் இடம்பெறுகின்றன. இப்பகுதியிலேயே அனுமனை சாம்பன் சஞ்சீவி கொண்டுவர அனுப்புவதும் இடம்பெற்றுள்ளது. கிழக்குப்பகுதியில் இராவணன் இடும்போர் சித்திரிக்கப்பட்டுள்ளது. இக்காட்சியில் பிற இடங்களில் இல்லாத சில நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன. இராவணன் இராமனோடு யுத்தம் செய்ய இயலாமல் பாதளத்தில் சென்று “ஓமம்” செய்கிறான். அதைக் கலைக்க அனுமன், அங்கதன் முதலியோர் முயல்கின்றனர், முடியவில்லை. ஆதலின் இராவணனது பட்டமகிஷி மண்டோதரியை அங்கு இழுத்து வருகின்றனர். அனுமனும், அங்கதனும் மண்டோதரியை இழுத்து அடிக்கின்றனர். மண்டோதரி கதறுகிறாள். இராவணன் ஓமம் கலைகிறது. வதைக்கப்படுகிறான். இந்நிகழ்ச்சி சமஸ்கிருதத்தில் அத்யாத்ம ராமாயணம். ஆனந்த ராமாயணம் என்னும் நூல்களிலும், தெலுங்கு மொழியில் இரங்கநாத ராமாயணம் என்னும் நூலிலும் உள்ளது என்பர். இந்நூல்களிலும் கூட அங்கதன் மண்டோதரியை அடிப்பதாகவே உள்ளது. அனுமன் அடிப்பதாகக் குறிக்கப்படவில்லை என்பர். இங்குள்ள காட்சி எந்நூலின் அடிப்படையில் அமைந்தது எனத் தெளிவாகத் தெரியவில்லை. தெலுங்கு மொழியில் விளக்கங்கள் உள்ளதால், ஒரு கால் தெலுங்கு இராமாயணத்தில் அடிப்படையில் இவை தீட்டப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. நாயக்கர்கள் தெலுங்குமொழியினர் என்பதையும் இங்கு நினைவிற் கொள்ள வேண்டும். இவ்வோயிங்களின் பிற பகுதிகள், சீதை தீக்குளித்தல், இராமருடன் புஷ்பக விமானத்தில் அயோத்தி செல்லுதல் முதலிய பகுதிகளும் இறுதியில் ஸ்ரீராம பட்டாபிஷேகமும் இடம்பெற்றுள்ளன. இராம பட்டாபிஷேகத்தைக் காணப் பலர் வந்து நிற்கின்றனர். அவர்களுள் இக்கோயிலைத் தோற்றுவித்துள்ள நாயக்கர் உருவமும் உள்ளது என்பது குறிப்பிடரத்தக்க ஓன்றாகும். செங்கம் தமிழ் வரலாற்றுகுக் கொடுத்துள்ள அரிய வரலாற்றுச்செய்திகள் பலவற்றுள் இதுவும் ஓன்று. தஞ்சைக் கோயில் தேவி மகாத்மியம் நமது பாரதத்தின் வரலாறு, பண்பாடு, கலை அனைத்தையும் கொண்டு நிகழ்பவை தமிழகத்துக் கோயில்கள். இவை அனைத்தும் நம்கோயில்களிலே நிறைந்து, “இதோ நாங்கள் இருக்கிறோம். எங்களை உங்கள் முன்னோர்கள்தாம் படைத்து வழிபட்டிருக்கிறார்கள். நீங்கள் அனைவரும் கண்டு போற்ற வேண்டும். சந்திரன், சூரியன் உள்ளவரையும் வரும் சந்ததியினர் கண்டுகளிக்க வேண்டும் என்றுதானே எங்களைப் படைத்திருக்கிறார்கள். நாங்கள் இருப்பது உங்களுக்குப் புரியவில்லையா? எங்களைக் காணுங்கள் காணுங்கள்” என்று கூறத்துடிக்கின்றன. நாம்தான் அவற்றைச் சரிவரக்கண்டுகளிக்க இன்னமும் அறிந்து கொள்ளவில்லை. தஞ்சைப் பெருங்கோயிலை நாம் இப்பொழுதுதானே பார்க்கக்கற்றுக் கொண்டிருக்கிறோம். அப்பெருங்கோயிலிலே தேவி மகாத்மியம் முழுவதும் ஓவியமாக சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தீட்டப்பட்டுள்ளதை வெகு சிலரே கண்டிருப்போம். உலகம் பல்வேறு உருவங்களில் தோற்றம் எடுக்கிறது. உயிர்கள் வாழ்கின்றன. வளர்ந்து பல்வேறு மாற்றங்களை அடைகின்றன. இவை அனைத்தையும் இயக்குவன அன்னையின் பல்வேறு தோற்றங்களே. இவ்வன்னையை நன்றிப் பெருக்கோடு எவ்வளவோ உருவங்களில் தோற்றுவித்து வழிபடுகிறோம். நம் உள்ளங்களுக்கு சாந்தியை அளிக்கும் இத்தேவி வழிபாடு நவராத்திரியில் சிறப்பைப் பெறுகிறது. தேவியை துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதியாக ஆவாகித்து வணங்குகிறோம். இதையே மகாகளி, மகாலக்ஷ்மி, மகாசரஸ்வதி என்றும் வணங்குகிறோம். இந்திய நாட்டில் தேவியின் உன்னதத்தை வேதத்தில் கூறும் ராத்திரி சூக்த்தத்திலிருந்து பல நூல்கள் எடுத்துரைக்கின்றன. இவற்றில் மிகவும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது தேவி மகாத்மியம் என்னும் நூல். இதை துர்க்கா சப்தசதி என்னும் பெயராலும் சிறப்பாக அழைப்பர். இந்நூல் மார்க்கண்டேய புராணத்தின் ஒரு பகுதி என்பர். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்நூலில் உள்ள தேவியின் வராலாறு. இந்திய சிற்பக்கலை, ஓவியக்கலை, இலக்கியங்கள் ஆகியவற்றில் சிறப்பிடம் பெற்றுள்ளது. தேவியின் இவ்வரலாறு முக்கியமாக மூன்று பகுதிகளாக, தேவி மகாத்மியத்தில் குறிக்கப்பட்டுள்ளது. முதல் வரலாற்றில் யோக நித்திரையில் திருமால் துயில்கிறார். மதுகைடபர் என்னும் இரு அரக்கர்கள் உலகை பீடிக்க, அவர்களைச் சம்ஹாரம் செய்ய நான்முகன் தேவியை தோத்திரம் செய்கிறார். நித்திரா தேவியாக இருந்த அன்னை திருமாலை விட்டு அகல்கிறாள். துயிலெழுந்த திருமால் மதுகைடபர்களை அழிக்கிறார். தேவியை மதுகைடபப் பிரசமனி என்று ஆன்றோர் போற்றினர். இது முதல் வரலாறு. இரண்டாவது வரலாறு, இறுமாப்புடைய எருமைத்தலை அசுரனாக வந்த மகிஷாசுரனை தேவி அழித்து மகிஷாசுர மர்த்தினி எனப்பெயர் பெற்றது. மூன்றாவது வரலாறு சும்பன், நிசும்பன் என்ற இரு அரக்கர்களைத் தேவி அழித்து சும்ப, நிசும்பன் சூதனியாய் பெயர்பெற்றது. இவற்றில் மகிஷாசுரமத்தினியின் வராலாறும், சும்ப நிசும்பமர்த்தினியின் வரலாறும் தஞ்சைப் பெருங்கோயிலில் ஓவியமாக வரையப்பட்டுள்ளன. பிருஹந்நாயகி கோயிலில் முன்மண்டபத்தின் விமானத்தில் இவ்வோவியங்கள் உள்ளன. நாம் நுழைகின்ற இடத்திலிருந்து கதை தோடங்குகிறது. உள்ளே செல்லச் செல்ல கதை வளர்ந்து அர்த்த மண்டப வாயில் வரை உள்ளது. சும்ப நிசும்பனை வதம் செய்த தேவியை தேவர்கள் துதிப்பதோடு ஓவியம் முடிவடைகிறது. ஓலைச் சுவடியில் எழதியது போல ஓவியம் அமைந்துள்ளது. காட்சிகளின் மேல் தமிழ் எழுத்துக்களில் விளக்கங்கள் எழுதப்பட்டுள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டு கொச்சைத் தமிழில் விளக்கங்கள் உள்ளன. ஒரு சினிமாக் காட்சியைப் பார்ப்பது போல மகிஷாசுரமர்த்தினிக் கதையையும், சும்ப நிசும்பமர்த்தினி கதையையும் இங்கு கண்டுகளிக்கலாம். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சையை ஆண்ட ஒரு மன்னனால் இவை தீட்டப்பட்டன. என்று எண்ணும்போது நம் உள்ளம் எல்லாம் பூரிக்கும். இவற்றை மராத்திய அரசன் சரபோஜி தீட்டியிருக்கிறான். அம்மன்னன் தஞ்சைப் பெருங்கோயிலுக்குப் பல திருப்பணிகள் செய்துள்ளான். திருச்சுற்றுச் சுவர்களில் திருவிளையாடல் புராணம் முழுவதையும் ஓவியமாகத் தீட்டியள்ளான். சுப்ரமண்யர் ஆலயத்தின் முன்மண்டபத்தில் சிவாஜி தொடங்கி சரபோஜி வரை தஞ்சையை ஆண்ட மராத்திய அரசர்களின் உருவங்களை ஓவியங்களாகத் தீட்டியிருக்கிறான். சக்தி வழிபாட்டில் தக்ஷயக்ஞம் மிகவும் இன்றியமையாத புராணம் ஆகும். ஓட்டக்கூத்தர் எழுதிய தக்கயாகப்பரணி மிக உயர்ந்த ஒரு சாக்தநூல் எனக்கண்டோம். தேவி மகாத்மியத்திம் மார்க்கண்டேய புராணத்தில் உள்ளது என்று கண்டோம். ஆதலின் தஷயக்ஞமும், மார்கண்டேய புராணமும் இவ்வோவியங்களில் இடம் பெற்றுள்ளது மிகவும் பொருத்தமே. சரபோஜி மன்னன் பிருஹந்நாயகி ஆலயத்தில் முன் மண்டபத்தில் தேவி மகாத்மியத்தை ஓவியமாகத் தீட்டியருப்பது சிறப்பாகும். தேவி பவானியைப் போற்றிய சிவாஜி வழிவந்தவர்கள் அல்லவா மராட்டிய அரசர்கள். இம்மண்டபத்தில் பக்க அங்கணங்களில் தஷயக்யஞம், மார்கண்டேய புராணம் ஆகிய புராணங்களும் தீட்டப்பட்டுள்ளன. இவை தவிர பக்கச் சுவர்களில் பல தேவதைகளின் கல்யணக் கோலங்கள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. வள்ளி கல்யாணம், ராதா கல்யாணம், மீனாஷி கல்யாணம் முதலிய பிரபலமான கல்யாணக் காட்சிகளோடுங் கூட சூரியன் கல்யாணம், சந்திரன் கல்யாணம், பிரும்மாவின் திருமணம், நந்திகேசுவரின் கல்யாணம், திருமால் கல்யாணம், பிள்ளையார் கல்யாணம் முதலிய கல்யாணக் கோலங்களையும் ஓவியமாகத் தீட்டியுள்ளான். நாராத்திரி விழாக்காலத்திலே பிருகந்நாயகியை பல அழகிய கோலங்களில் அலங்கரித்து தஞ்சைமக்கள் வணங்குகின்றனர். இக் கண்கொள்ளாக் காட்சியைக் காணச் செல்லும் மக்கள் இச்சித்திரக் காட்சியையும் கண்டுகளிக்க உள்ளம் வேண்டும். பூம்புகார் பூம்புகார் போற்றுதும் போற்றுதும்! வீங்குநீர் வேலியுலகிற்கு அவன் குலத்தோடு ஓங்கி பரந்தொழுகலான் என்று சிலப்பதிகாரத்தில் போற்றப்பட்டுள்ளது, காவிரிப்பூம்பட்டினம். கடல்சூழ்ந்த உலகில், சோழர்குலம் பாடு வார் அனைவரும் பூம்புகாரைப் போற்றுவராதலின் நாமும் பூம்புகாரைப் போற்றுவோம் என்று இளங்கோவடிகளால் புகழப்பட்டது இந்நகரம். கடலில் சங்கமம் ஆகும் இடம் புகார் எனப்படும். பூம்புகார் என்பது காவிரி ஆறு கடலில் புகும் இடம் என்பது யாரும் அறிந்ததாகும். இந்நகருக்குப் பூம்புகார், காவிரிப்பூம்பட்டினம், காகந்தி சம்பாபதி, பலர்புகழ்மூதூர், மண்ணகத்து வான்பதி, சோழப்பட்டினம், சபேரீஸ் எம்போரியம், கோலப்பட்டினம் என்று பல பெயர்கள் உண்டு. அகநானூறு, புறநானூறு, பட்டினப்பாலை, முத்தொள்ளாயிரம், சிலப்பதிகாரம், மணிமேகலை, தேவாரம், திருத்தொண்டர் புராணம் முதலிய தமிழ் நூல்களும். மிளிந்த பணஜாதகக் கதைகள், அபிதம்மாவதாரம், புத்தவம், சாத்தகதா முதலிய பிராகிருத நூல்களும், டாலமி எழுதிய பூமிநூல், பிளனி எழுதிய நூல், பெரிப்ளல் மெரிஸ் ஏரிதராய் முதலுய வெளிநாட்டார் எழுதிய நூல்களும், கல்வெட்டுகளும் இந்நகரைப்பற்றிச் சிறப்பாகக்குறிக்கின்றன. பூம்புகாருக்கு சம்பாபதி என்பது பழைய பெயர். சம்பு அல்லது சம்பாபதி என்பவள் அந்நாகரின் தெய்வம். காந்தன் என்ற சோழமன்னன் வேண்டியதால், காவிரிப்பாவை அந்நகரிலே தோன்ற, அவளைச் சபாபதி வரவேற்றாள்! அத்தெய்வத்தைக் காவிரி தொழுதாள். “என் பெயர் பெற்ற இம்மூதூர் இனி உன்பெயரால் வழங்கப்படும்” என்று சம்பாபதி கூற, அந்நகா் காவிரிப்பூம்பட்டினம் என்று பெயர் பெற்றது என்று மணிமேகலை குறிக்கிறது. அரச குலத்தை அழித்து வந்த பரசுராமருக்குப் பயந்து காந்தன் என்ற சோழமன்னன், காவற் கணிகையின் புதல்வன் ககந்தன் என்பவனை அந்நகருக்குக் காவலாக நிறுத்திச் சென்றான். ககந்தனால் காக்கப்பட்டதாதலால் காகந்தி என்றும் இந்நகர் அழைக்கப்பட்டது என்பர். வட இந்தியாவில் பார்குத் என்ற இடத்தில் ஒரு பெளத்த ஸ்தூபம் தூண் இருந்தது. அப்பகுதியை கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் ஆண்ட சுங்க மன்னர்கள் காலத்தில் எழில் வாய்ந்த சிற்பங்களால் அந்த ஸ்தூபம் அழகு செய்யப்பட்டது. அக்காலத்தில் சிற்பங்களும் கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. அங்கு கிடைத்த ஒருகல்தூண் காகந்தி நகரைச் சேர்ந்த “சோமா” என்ற பிக்குனியால் தானமாக அளிக்கப்பட்டது என்று கல்வெட்டு கூறுகிறது. காகந்தி என்பது பூம்புகாரின் மற்றொரு பெயர் என்று பார்த்தோம். கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலேயே பூம்புகார் சிறந்த நகராக விளங்கியது என்பதற்கு இதுவும் சான்று. புகார் நகரைத், தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், முகுந்தன், மனுநீதிசோழன், கரிகால் பெருவளத்தான், கிள்ளிவளவன் போன்ற சிறந்த சோழமன்னர்கள் ஆண்டிருக்கிறார்கள். தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் இந்திரவிழா சிறப்பாக நடத்தப்பட்டது. முகுந்த சோழன் ஒரு சமயம் அமரர்க்கு உதவி செய்தான் அப்போது அசுரரால் ஏற்பட்ட துயரைப் பூதம் ஒன்று போக்கியது. அதனால் அப்பூதத்தை, பூம்புகாரில் நாளங்காடியில் பிரதிஷ்டை செய்து விழிபட்டனர். கரிகாலன் காலத்தில் பூம்புகார் நகர் சிறப்பாக விரிவாக்கப்பட்டது எனலாம். நகர அமைப்பு பூம்புகார் எவ்வாறு அமைக்கப்பட்டிருந்தது என்பதைச் சிலப்பதிகாரத்தில், இந்திரவிழா ஊரெடுத்த காதையில் காணலாம். இந்நகரின் சிறப்பைக் காணும்போது இப்பட்டினம் நன்கு திட்டமிட்டுக் கட்டப்பட்டது என்பது புலனாகும். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டுக் கட்டப்பட்ட சிறந்த பட்டினத்திற்கு அது எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தது. அக்காலத்திலேயே தமிழகத்தில் ஊரமைப்பும், நகர அமைப்பும், மிகச்சிறந்த நிலையை அடைந்திருந்தன என்றும் இதிலிருந்து அறியலாம். பட்டினப்பாலை, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய நூல்களில் மயன் என்ற பெரும் தச்சன் போற்றப்பட்டுள்ளான். அவனுடைய நூல் தமிழகத்தில் மட்டும் பெரும்பாலும் பின்பற்றப்பட்டது. எனவே பூம்புகார் நகரம் மயனுடைய நூலைப்பின்பற்றி அமைக்கப்பட்டதாக இருக்குமோ என்ற ஐயப்பாடு தோன்றுகிறது. பூம்புகார் நகரம், மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்ற இரண்டு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இரண்டு பகுதிகளுக்கும் இடையில் மரங்கள் அடர்ந்த பகுதியில் நாளங்காடி இருந்தது. புகாரின் கடற்கரைப்பகுதியில் மீனவர்களின் சேரி இருந்தது. துறைமூன்றிலில் கலங்களில் வந்து இறங்கும் பொருள்களைச் சேமித்து வைக்க கோட்டகாரங்கள் இருந்தன. மருவூர்ப்பாக்கத்தில் பல தொழில் செய்பவர்கள் தனித்தனித் தெருக்களில் வாழ்ந்து வந்தனர். துணி நெய்வோர், பிட்டு விற்போர், அப்பவணிகர், மீன், இறைச்சி முதலியன விற்போர், தானியம் விற்போர், சித்திரகாரிகள், மண்ணீட்டாளர், இரத்தினத்தட்டார் முதலியோருடைய இருக்கைகள் இருந்தன. பட்டினப்பாக்கத்தில் அரசனுடைய மாளிகை, அவருடைய சுற்றம்,பெருங்குடி வணிகர், உழவர், முதலியோர் வாழ்ந்தனர். கணிகையர், ஆடற்கூத்தியர் முதலிய பெண்கள் வாழ்ந்த தெருக்களும், மருத்தவர், சோதிடர் முதலியோர் இடங்களும், தேர்ப்பாகர், யானை வீரர், குதிரை வீரர், காலாட்படையினர் முதலியோரும் வசித்தனர். புகார் நகரில் வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் நின்ற மன்றம், பூதசதுக்கம், பாவை மன்றம் என ஐந்து மன்றங்கள் இருந்தன. பண்டகசாலைகளில் பொதிகள் இருக்கும், அவற்றில் அளவு, நிறை, எண் மூன்றும் குறிக்கப்பட்டு, பெயரும் எழதப்பட்டிருக்கும். அவற்றை அவ்வூரில் உள்ளோர் களவு செய்யமாட்டார். வெளிநாட்டார் யாராகிலும் களவு செய்தால் அவர் கழுத்து முறியும்படிப் பொதியை அவர் தலையில் ஏற்றி ஊரைச்சுற்ற வைக்கும், ஆதலால் கள்ளர் மனத்தில் நினைத்தாலே நடுக்கம் தரக்கூடியது வெள்ளிடை மன்றம். கூன், குருடு, வியாதியாளர் முதலியோர் வலம் வந்து பயன்பெறுவது இலஞ்சி மன்றம் என்ற பொய்கை மன்றம். நஞ்சுண்டோர், பேய்பிடித்தோர் முதலியோர் வழிபட்டு நல்ல நிலை அடைந்தது நெடியகல் நின்ற மன்றம். தவ வேடம் பூண்டு ஊரை ஏமாற்றுபவர், கணவரை ஏமாற்றும் பெண்கள், பிறர் மனைவியை இச்சிப்போர், அரசைக் கீழாக எண்ணும் அமைச்சர் முதலியோரைத் தன் பாசத்தால் பிடித்து நிலத்தில் அடித்து உண்ணும் பூதசதுக்கம். அரசனோ அல்லது நியாயம் கூறுபவர்களோ தெரியாது ஒருபுறம் கூறினும் கண்ணீர் உருக்கும் பாவை மன்றம் என்ற ஐந்து மன்றங்கள் அங்கு இருந்தன. வனங்கள் பூம்புகாரில் பல வனங்கள் இருந்தன. அரசனும் அவனுடைய சுற்றமும் இருக்கும் இலவந்திகைச் சோலை அங்கு இருந்தது, தேவர்கள் மட்டும் விரும்புவதும், மனிதராலும் வண்டுகளாலும் விரும்பப்படாததுமான மலர் மரங்கள் நிறைந்த உய்யானவனம் ஒன்று இருந்தது. அவ்வனத்தை பாசத்தைக் கையில் உடைய பூதம் காத்து நின்றது. சூரிய கிரணத்தால் சிறகு இழந்த சம்பாபதி என்ற கழுகு இருந்த வனம் ஒன்றும் அங்கு இருந்தது. அதற்குச் சம்பாபதிவனம் என்று பெயர். அதேபோன்று காவிரியின் தந்தையாகிய கவேரன் இருந்த முதிய கவேரவனமும் அங்கு இருந்தது. இவை தீண்டி வருத்தும் தெய்வங்களால் காக்காப்பட்டன. உவவனம் என்ற ஒரு வனமும் அங்கு இருந்தது. அதன் மத்தியில் பளிங்கு அறை ஒன்று இருந்தது. அதன் மத்தியில் தாமரைப் பீடிகை ஒன்றும் இருந்தது. இவ்வைந்து வனங்களும் காவிரிப்பூம்பட்டினத்தின் எந்தப் பகுதியில் இருந்தன என்று தெரியவில்லை. ஒரு கால், ஆற்றின் அருகில் இருந்திருக்கக்கூடும் என்று எண்ண வேண்டியிருக்கிறது. இவை தவிர, பூம்புகாரில் ஈமப்புறங்காடு ஒன்றும் இருந்தது. அது மதில் சூழ்ந்து நான்கு புறங்களில் வாயில்களோடு இருந்தது. ஒரு புறத்து வாயிலில் தேர்களின் ஓவியங்கள் தீட்டப்பட்டன. மற்றும் ஒரு வாயிலில் நெல், கரும்பு, நீர், சோலை முதலியன ஓவியமாகத் தீட்டப்பட்டன. மூன்றாம் வாயில் வெளியாகி இருந்தது. நான்காம் வாயிலில் முடித்த வாயும், கையில் பாசமும், சூலமும் பிடித்து நின்ற நிலையில் மண்ணீட்டால் செய்யப்பட்ட பூதம் இருந்தது. அந்த ஈமக்காட்டின் உள்ளே காளி கோயில் ஒன்றும் இருந்தது. அங்கு இடுவோர், சுடுவோர், தொடு குழியில் புதைப்போர், தாழ்வாயில் அடைப்போர், முதுமக்கள் தாழியில் கவிப்போர் எனப்பல ஈமக்கிரியைகள் செய்வோரும் வருவர். அக்காட்டைக் காத்து நின்ற காவலர்களின் குடிசையும் உள்ளே இருந்தது. ஈமப்புறங்காட்டின் புறத்தே சம்பாபதி அம்மனுக்கு ஓரு கோயில் இருந்தது. அதில் பல மண்ணீட்டால் ஆன உருவங்கள் செய்து வைக்கப்பட்டிருந்தன. அதன் அருகில் உலகவறவி என்ற மண்டபம் இருந்தது என்றும் அறிகிறோம். கோயில்கள் பூம்புகாரில் சிவபெருமான் கோயில் முதல் சதுக்கபூதம் வரை பல கோயில்கள் இருந்தன. கல்ப விருஷத்தின் கோயில், இந்திரனுடைய ஐராவதத்தின் கோயில், பலராமர், சூரியன், சிவபெருமான், முருகன், வச்சிராயுதம், மாசாத்தான், சந்திரன், சமணர், முதலிய பல தெய்வஙகளின் கோயில்கள் இருந்தன. திருமால், பாம்பணைப் பள்ளியில் படுத்தவராகக் காட்சியளித்த மணி வண்ணண் கோட்டம் இருந்தது. பெளத்த மகா சைத்தியம் ஸ்துபம் ஒன்றும் இந்திரன் மதம் என்ற நூலைப் பின்பற்றிக் கட்டப்பட்ட விகாரங்கள் ஏழும் இருந்தன. விகாரம் என்பது பெளத்த துறவிகள் வாழும் இடமாகும். இவை தவிர, நதிக்கரையின் அருகில் மரங்கள் அடர்ந்த குளிர்ந்த திருமஞ்சனப் பெருவழி ஒன்றும் இருந்தது. புறச்சேரியில் உறை கிணறுகள் இருந்தன. பூம்புகாரைச் சுற்றிலும் கோட்டை மதில்கள் இருந்தனவா என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனினும் புலிப்பொறியிட்ட போர்க்கதவுகள் இருந்தன என்று குறிப்பதிலிருந்து இந்நகரைச்சுற்றிலும் மதில்சுவர்கள் இருந்தன என்று யூகிக்க இடம் இருக்கிறது. மக்கள் வாழ்க்கை இவ்வளவு சிறப்பாக அமைந்த பட்டினத்து மக்களின் வாழ்க்கைபற்றிப் பட்டினப்பாலை மிக அழகாகச் சித்தரிக்கிறது. பல மொழி பேசும் மக்கள் இங்கு ஒரு குடிமக்கள் போல் கலந்து வாழ்ந்தனர். பல் ஆயமொடு பதி பழகி வேறு வேறு உணர்ந்த முதுவாய் ஒக்கல் சாறு அயர் மூதூர் சென்று தொக்கு ஆங்கு மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப் புலம் பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும் முட்டாச் சிறப்பின் பட்டினம் …… …….பட்டின்பாலை (213-218) பூம்புகார் பட்டினம் பண்டைய நாளிலிருந்து வாணிபத்தில் சிறப்புற்றிருந்தது. அங்கு வாழ்ந்த வாணிபப் பெருமக்கள் தங்கள் குலத்திற்கு இழுக்கு நேரக்கூடாது என்று அஞ்சி, நேர்மை தவறாமல் வாழ்ந்தனர். தாங்கள் கொடுப்பதற்கு மேல் பொருள் கொள்ளாமல், தங்களிடம் வாங்குவோரிடம் பெற்றதற்குக் குறைத்துப் பொருள் கொடாமல் உயர் வாழ்வு வாழ்ந்தனர். நெடு நுகத்துப் பகல் போல நடுவு நின்ற நல் நெஞ்சினோர் வடுஅஞ்சி வாய் மொழிந்து தமவும் பிறவும் ஒப்ப நாடிக் கொள்வதூஉம் மிகை கொடாது கொடுப்பதூஉங் குறை கொடாது பல் பண்டம் பகர்ந்து வீசும் தொல் கொண்டி துவன்று இருக்கை (206- 212) பட்டினப்பாலையில் சிறப்பாக மீனவர்களுடைய பழக்க வழக்கங்கள் குறிக்கப்பட்டுள்ளன. உப்பை உள்நாட்டில் கொண்டு விற்று அதற்குப்பதிலாக நெல் பெற்று நாட்டுப் படகுகளில் கொண்டு வந்தனர். மேலை நாடுகளிலிருந்து உயர்ந்த சாதிக்குதிரைகள் வந்திறங்கின, மாட்டு வண்டியில் மிளகு மூட்டைகள் வந்திறங்கின. வடதிசையில் இருந்து வந்த மணியும், பொன்னும், குடதிசையில் இருந்து வந்த சந்தனுமும், அகிலும், தென் கடலில் இருந்து கிடைத்த முத்தும், கீழ்க்கடலில் கிடைத்த பவழமும், கங்கையாற்றுப் பொருள்களும், காவிரியாற்றுப் பொருள்களும், ஈழத்திலிருந்து வந்த பொருள்களும் மற்ற நாடுகளிலிருந்து வந்த கர்ப்பூரம் போன்ற பொருள்களும் ஏராளமாக குவித்து விற்க்கப்பட்டன. பண்டகசாலை கரையோரமாக இருந்தது. அங்கு கலத்திலிருந்து ஏராளமான பொருள்கள் இறங்கின. கரையிலிருந்து கலங்களில் பொருள்கள் ஏற்றப்பட்டன. அங்கு அரசர்களே சென்று வந்தனர். தமிழ் நாட்டிலிருந்து பருத்தியும், பட்டும் முக்கியமாக ஏற்றுமதி செய்யப்பட்டன. இவை அலெக்சாண்டிரியா நாட்டுத் தொழிற்சாலைகளில் வேயப்பட்டன. ரோமானிய நாட்டிலிருந்து கண்ணாடி உலோகங்கள், லினன் முதலியவை இங்கு அனுப்பப்பட்டன. ரோமானிய வணிகர்கள் தமிழ் நாட்டு அரண்மணைகளில் பணிபுரியப் பெண்களை இங்கு கொணர்ந்தனர். சாடிகளும் சிறந்த பானங்களும் மேலை நாடுகளிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்தன. ரோமானியர்கள் மிளகு, தந்தம், வாசனைப் பொருள்கள், முத்து, பவளம் முதலியவைகளைக்கொண்டு அவற்றிற்குப் பதிலாகத் தங்கத்தையும், வெள்ளியையம் கொடுத்தனர். முதன்முதலில் மேலை நாட்டு வாணிபம், அரேபிய நாட்டுத் துறைமுகங்கள் வழியாக நடந்தது. அலெக்சாண்டிரியா நாட்டினரான ஹிப்பார்க்கஸ் என்பவர் பருவக்காற்றின் போக்கை அறிந்து கூறியவுடன் அந்நாட்டிற்கும், தமிழ் நாட்டிற்கும் நேர்முக வாணிபம் பெருகியது. கி.பி. மூன்றாம் நூற்றண்டுக்குப் பின்னர் ரோமானிய பேரரசின் வீழ்ச்சியோடு வாணிபம் வீழ்ந்தது. பிராகிருத நூல்களில் பூம்புகார் பூம்புகாரைப்பற்றிப் பிராகிருத நூல்கள் சிலவற்றில் குறிப்புகள் காணப்படுகின்றன. கி.மு. முதல்நூற்றாண்டைச் சார்ந்த மிளிந்தபண என்ற நூலில் கோலப்பட்டணம் என்று புகார் குறிக்கப்பட்டுள்ளது. அகீர்த்தி என்பவன் காசி மாநகரை விட்டுத் தமிழ் நாட்டுக் காவேரிப்பட்டணத்தில் ஒரு வனத்தில் இருந்ததாக பொளத்த ஜாதகக் கதைகளிலிருந்து அறிகிறோம். புத்ததத்தர் என்ற பொளத்தப் பெரியார் அபிதம்மாவதாரம், புத்தவம்சாத்தகதா என்ற நூல்கள் இயற்றியள்ளார். இவ்விரண்டு நூல்களிலும் காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அங்கு உயர் குடிமக்கள் ஆகிய ஆண்களும், பெண்களும் நிரம்பி வாழந்தனர். அது மிகவும் விசாலமானது. ஒரு நகரத்திற்கு வேண்டிய எல்லா அங்கங்களும் உடையது. குற்றமற்ற காவிரி நீரும், கடல் நீரும் அங்கு உள்ளன. எல்லாவித ரத்தினங்களும் அங்கு கிடைத்தன. பல்வேறு விதமான கடைத் தெருக்கள் அங்கு இருந்தன. மனத்துக்கு இன்பம் தரும் பல வனங்கள் அங்கு இருந்தன. கயிலாயத்தை ஒக்கும் சிகரங்களோடு கூடிய மாளிகைகள் அங்கு சூழ்ந்திருந்தன. அவ்வளவு எழில் காவிரிப்பட்டினத்தில், “கணதாசன்” என்ற சாதுவால் கட்டப்பட்ட மனத்துக்குகந்த விஹாரம் ஒன்று இருந்தது. அதில் பல அழகிய திருச்சுற்றுக்களும், கோபுரங்களும் இருந்தன. அங்கு பழைமையான மாளிகையில் இருந்தபோது இந்நூலை இயற்றினேன் என்று புத்ததத்தர் குறிக்கிறார். இவர் தாம் இயற்றிய விநய விநச்சியம் என்ற மற்றொரு நூலில் சோழ நாட்டை அச்சுத விக்ராந்தன் என்ற களப்பிர மன்னன் ஆண்டபோது, தான் நுல் இயற்றியதாகக் குறித்துள்ளார். தமிழகத்தில் பல்லவர்களின் ஆட்சி தலை தூக்குவதற்கு முன்பு அச்சுத விக்ராந்தன் ஆண்டிருக்கவேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது சிலப்பதிகாரம் மணிமேகலை காலத்திற்கும் பிந்தியதாக இருக்கவேண்டும். பூம்புகார் சங்ககாலச் சோழமன்னர்களுடைய காலத்தில் சிறந்த பட்டினமாகத் திகழ்ந்தது. மணிமேகலையில், இந்திரவிழா நடைபெற்றதால் காவிரிப்பட்டினம் கடலில் மூழ்கிற்று என்று குறிக்கப்பட்டுள்ளது. காவிரிப்பட்டினத்தின் ஒரு பகுதி மூழ்கிற்றா அல்லது பெரும்பகுதி மூழ்கிற்றா என்பது விளங்கவில்லை அதன்பின்னர் சோழநாடு களப்பிரர் வசமாயிருத்தல் வேண்டும். கி.பி. ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அது பல்லவர் வசம் ஆயிற்று. அக்காலத்தில் அங்கு எழுப்பப்பட்ட கோயிலே பல்லவனீச்சுவரம் என்று பெயர் பெற்றிருக்கவேண்டும். அப்பர், ஞானசம்பநதர், என்ற இரண்டு பெரியார்களும் இந்நகரைப் போற்றியுள்ளனர். கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வரை இந்நகர் பல்லவர் ஆதிக்கத்தில் இருந்திருக்கவேண்டும் கி.பி. எண்ணுற்று ஐம்பதுக்குப் பிறகு இது மீண்டும் சோழர் வசம் ஆயிற்று. இவ்வூரின் அருகில் உள்ள சாயாவனம் கோயிலில் பண்டைய கல்வெட்டுகள் உள்ளன. இரண்டாம் இராஜராஜ சோழனுடைய கல்வெட்டில் இவ்வூர் ராஜாதிராஜ வளநாட்டு நாங்கூர் நாட்டு காவிரிப்பூம்பட்டினம் என்று குறிக்கப்பட்டுள்ளது. விக்கிரம சோழனுடைய ஐந்தாம் ஆண்டுக் கல்வெட்டில் இவ்வூர் புகார் நகரம் என்று குறிக்கப்பட்டுள்ளது. பதிமூன்றாம் நூற்றாண்டில் சோழப் பேரரசை வீழ்த்தக் காரணமாக இருந்த கோப்பெருஞ்சிங்கன் போசளர்களை வென்று வரும்போது இந்நகருக்கு வந்ததாகவும் அறிகிறோம். தொல்பொருள் ஆராய்ச்சி இச்சிறப்பு வாய்ந்த பட்டினத்தைத்தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஆயிரத்து தொள்ளாயிரத்து பத்தாம் ஆண்டில் தொல்பொருள் துறை தென்பகுதி சூப்ரண்டெனடு, காவிரிப்பட்டினத்தின் பல பகுதிகளைப் பரிசோதித்துப் பார்த்தார். அப்போதே பல பண்டைய சின்னங்கள் புதைந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முக்கியமாக கடற்கரையின் அருகிலே சில கிணறுகள் பூமிக்கடியில் காணப்பட்டன. இக்கிணறுகளின் புறங்கள் சுடு மண்பூசப்பட்டும் அதன்மேல் கெட்டியான களிமண் பூசப்பட்டும் விளங்கின. இவற்றை உறை கிணறு என்று அழைப்பர். பட்டினப்பாலையில் கடற்கரை ஓரத்தில் உறைகிணறுகள் இருந்தன என்பதை உறை கிணற்றுப் புறச்சேரி என்று குறிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து தொள்ளயிரத்து பத்தில் இக்கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டது சிறப்பான அம்சமாகும். அத்துடன் சம்பாபதி அம்மன் கோயில், பல்லவனீச்சுவரம், என்ற பகுதிகளில் உயர்ந்த மேடுகள் இருப்பதையும் அங்கு பண்டைய சின்னங்கள் கிடைப்பதையும் அவற்றை அகழ்வாராய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயிரத்து தொள்ளயிரத்து பத்திலிருந்து ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஆயிரத்து தொள்ளயிரத்து அறுபது, அறுபத்தொன்றில் தொல்பொருள் துறை காவிரிப்பட்டினத்தை அகழந்தாராயும் முயற்சியை மீண்டும் மேற்கொண்டுள்ளது. அலைகளால் அரிக்கப்பட்ட கடற்கரைப் பகுதிகளின் பண்டைய செங்கற்களும், மற்ற சின்னங்களும் தெரிகின்றன. இதுவரை பல பகுதிகளைப் பரிசோதித்துள்ளனர். கீழையூர் என்ற பகுதியில் செங்கற் கட்டிடம் ஒன்று காணப்பட்டது. இதன் அருகில் மரத்தாலான கால்கள் காணப்படுகின்றன. உப்பை நெல்லுக்கு விற்று, அதை ஏற்றி வந்த படகுகள் மரத்தறிகளிலே கட்டப்பட்டிருந்தன. என்று பட்டினப்பாலை குறிக்கிறது. இப்போது கண்டுள்ள பகுதி அதுவாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். வானகிரி என்று அழைக்கப்படும் இடத்தில் ஓர் பொய்கை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதன் புறங்கள் செங்கல்லால் உறை எடுக்கப்பட்டுள்ளது. இப்பொய்கை அர்த்த சந்திரன் வடிவிலே அமைந்துள்ளது. காவிரியாற்றிலிருந்து தண்ணீர் வரும் ஒரு வாய்க்கால் இதில் கலக்கிறது. இந்த வாய்க்கால் முழுவதும் செங்கல்லால் எடுக்கப்பட்டதாகும். இது போன்று விளங்கியவைகளை தேய்பிறையுருவக்கேணி என்று நம் இலக்கியங்கள் கூறுகின்றன. அனைத்திலும் முக்கியமான அகழ்வாராய்ச்சி, பல்லவனீச்சுவரத்தில் மேற்கொண்டதாகும். இங்குதான் சதுரமான அறைகளை உடையதும் அறுபது அடிகளுக்குமேல் நீண்டதுமான புத்தவிஹாமுரம் சேதியமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்திலிருந்தும், மணிமேகலையிலிருந்தும் பூம்புகாரில் பொளத்தமதம் சிறந்து விளங்கிற்று என்று அறிவோம். புத்த சைத்யமும், இந்திர விஹாரமும் ஏழும் இங்கிருந்தன என்று அந்நூல்களிலிருந்து நாம் அறிவோம். இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள பல பகுதிகள் இப்பொழுது தொல்பொருள் ஆராய்ச்சியால் வெளிப்படுவது தமிழ் மக்களுக்குப் பெருமை தரும் விஷயம் ஆகும். காவிரிப்பட்டினத்தில் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புத்த விஹாரம் ஆந்திரப்பிரதேசத்தில் நாகார்ஜுன கொண்டாவில் காணப்பட்ட விஹாரத்தைப்போல இருக்கிறது. மற்றும் இப்பகுதியிலே கல்லில் செதுக்கப்பட்ட புத்தபாதம் ஒன்று கிடைத்துள்ளது. இது அமராவதி, நாகார்ஜுன கொண்டா முதலிய இடங்களில் உபயோகிக்கப்பட்ட ஒரு வகை பளிங்குக்கல்லால் ஆனது. சுமார் மூன்றரை அடி நீளமும் இரண்டரை அடி அகலமும் உள்ள இப்புத்த பாதத்தில் இரண்டு பாதங்களும், சுவஸ்திகம், பூர்ணகலசம், ஸீவத்சம் போன்ற மங்கலச் சின்னங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இது போன்றவைகளைத்தான் பீடிகை என்றும், புத்தபீடிகை என்றும் நம் நூல்கள் குறிக்கின்றன. செங்கல்லாலும், சுதையாலும் ஆன தூண்களும் போதிகைகளும் இங்கு கிடைத்துள்ளன. இங்கு கிடைத்த பொருள்களில் மண்பொம்மைகள் சில அழகாக உள்ளன. செப்புக்காசுகளும் இங்கு ஏராளமாகக் கிடைத்துள்ளன. அவற்றில் சதுரமாகவும், வட்டமாகவும் உள்ள காசுகள் பல இருக்கின்றன. இக்காசுகளின் முன்புறம் வாலைத் தூக்கி நிற்கும் புலியின் உருவமும், அதன்மேல் சூரியனின் உருவமும் காணப்படுகிறது. பின்புறத்தில் யானையின் உருவமும் காணப்படுகிறது. சோழர்களது இலச்சினையான புலி காணப்படும் இக்காசுகள் கரிகாலன் காலத்தவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. வெள்ளையனிருப்பு என்ற இடத்தில் ரோமானிய செப்புக்காசு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது. பூம்புகாரில் இருந்த யவனரிருக்கையைப் பற்றி முன்பே கூறினோம். ரோமானியக் காசு அதை உறுதிப்படுத்துகிறது. பிற்காலத்தில் வழங்கிய ராஜராஜன் காசுகளும் கிடைத்துள்ளன. புத்தபிரான் தியானத்தில் அமர்ந்திருக்கும் நிலையில் செப்பு விக்ரகம் ஒன்றும் கிடைத்துள்ளது. பல மணிகளாலான பாசுகளும், கண்ணாடியால் ஆன வளையல்களும், பவழங்களும், சங்கு வளையங்களும் கிடைத்துள்ளன. பறவைப் பந்தல் அப்போது சேர நாட்டை ஆண்டு வந்த மன்னன் விசித்திரமான முடியைத்தரித்திருந்தான் அம்முடி நாரினால் செய்யப்பட்டிருந்தது. அழகிய தங்கப்பட்டைகள் பிடிக்கப்பட்டிருந்தது. அம்முடியைச் சுற்றி களங்காயினால் ஆன மாலையைச் சூடியிருந்தான். அதனால் அவனைக் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் என்று அழைத்தனர். அதே போன்ற முடியை அவன் ஏன் தரித்திருந்தான் என்று யாருக்குமே தெரியாது. ஏழ மன்னர்களுடைய முடியை அவன்மார்பில் ஆரமாகத்தரித்திருந்தான். பெரியோர்களைப் போற்றுவதில் சிறந்தவன். அச்சிறந்த மன்னனுக்கு ஆய் எயினன் என்பவன் படைத்தலைவனாக இருந்தான். அவன் வேளிர் குலத்தவனாதலால் வேண்மான் என்று அழைக்கப்பட்டான். அவன் தந்தையின் பெயர் வெளியன் என்பது. எனவே அவனை மக்கள் வெளியன், வேண்மான், ஆய், எயினன், என்று அழைத்தனர். எயினன் ஒர் இளைஞன். முருகனை ஒத்த அழகும், வலிமையும் உடையவன். சிறந்த போர் வீரன். அக்காலத்தில் மதுரையை ஆண்ட பாண்டியனுக்கு அகுதை என்ற படைத்தலைவன் ஒருவன் இருந்தான். அகுதைக்குப்போர் புரியவேண்டும் என்று பேராவல் இருந்தது. போருக்குக் கிளம்பினான். இது கேட்டு எயினன் சிரித்தான். அகுதையின் பலம் அவனுக்குத் தெரியும். தானே போருக்கு வருவதாகச் சொல்லி அனுப்பினான். அவ்வளவுதான் ஆய் எயினன் பெயரைக்கேட்டதும் பயந்து அகுதை எடுத்தான் ஓட்டம். மதுரையின் கோட்டைக்குள் சென்று ஒளிந்த பிறகுதான் அவனுக்கு மூச்சே வந்தது. ஆய் எயினன் பெயர் கேட்டாலே நடுங்குவான் அகுதை. அவ்வளவு சிறந்த ஆய் எயினன் கொடுமை மிக்கவன் அல்லன். எல்லோரிடத்திலும் அபோடு பழகுவான். அவனை அண்டி வந்தவர்களுக்கு ஏராளமாகப் பரிசுகளை வழங்குவான். நள்ளிரவான போதிலும் அவன் புகழ்பாடி வந்தவர்களுக்கு உயர்ந்த யானைகளைப் பரிசாக அளிப்பான். அவனுக்குப் பறவை இனத்திடம் பேரன்பு உண்டு. அவன் வெளியே கிளம்பினால் பறவைகள் பேராரவாரம் செய்து அவனை வரவேற்கும். பண்பு மிக்க அவ்வீரன் தனக்குப் படைத்தலைவனாக அமர்ந்ததில் சேரனுக்குப் பெருமதிப்பு. இக்காலத்தில் கொங்கணம் என்று குறிக்கும் பகுதியைப் பூழிநாடு என்று அக்காலத்தில் அழைப்பர். அந்நாட்டின் சிற்றரசனாகத் திகழ்ந்தவன் நன்னன் என்ற வீரன். அவனுக்கு அன்னி மிஞிலி என்ற வீரன் படைத்தலைவனாக அமர்ந்தான். அதனால் நன்னன் வலிமைமிக்கவன் ஆனான். தன்நாட்டைத்தனி அரசாக்கி அண்டைப்பகுதிகளையும் பிடிக்கமுற்பட்டான், அவன் ஆட்சியின் கீழ் பாரம், பாதி, வியலூர், கடம்பின் பெருவாயில் என்ற ஊர்களும், எழில்மலையும், பாழிச்சிலம்பு என்ற மலையும் அடங்கியிருந்தன. இவற்றின் காவலை மிஞிலி என்பவனே ஏற்று, காவல் புரிந்து வந்தான். மிஞிலி, அதிகன் என்ற வீரனைக்கொன்று ஒன்வாய் அமலை என்ற வெற்றிக் கூத்தாடினான். நன்னன், மிஞிலியின் உதவியால் வலிமை மிகுந்த பிண்டன் என்பவனைக் கொன்று ஏராளமான பொருள்களைக் கைப்பற்றி பாழியில் சேர்த்து வைத்தான். இதனால் துணிந்து நன்னன் சேரநாட்டின் ஒரு பகுதியையே பிடிக்கத்தலைப்பட்டான். அப்பகுதிக்குப் பொன்னாடு என்று பெயர். மன்னனுடைய கொடுமையும், மிஞிலியின் செய்கையும் தாங்கது அந்நாட்டு மக்கள் அலறினார்கள். சேர மன்னனின் படைத்தலைவனா பார்த்திருப்பான்? மன்னனிடம் விடை பெற்றுச் சீறி எழந்தான் ஆய் எயினன். பொன்னாடடைந்து, மக்களுக்கு ’ அஞ்சாதீர் அஞ்சாதீர்’ என்று குரல் கொடுத்தான். நன்னனுடைய கொடுமை தாங்காது ஓடிய பலர் எயினனிடம் வந்து நன்னனின் வலியையும், மிஞிலியின் திறனையும் எடுத்துக்கூறினர். “நீ மிஞிலியுடன் போருக்குச்செல்லாதே; சென்றால் திரும்புவது கடினம்” என்று சொல்லித்தடுத்தனர். நில்லாத இந்த யாக்கைக்குப்பயந்து நிற்பதா? எய்னன் சிரித்தான். “அஞ்சாதீர்” என்று “நான் கூறியது பொய்ப்பதா? இல்லை இல்லை இதோ மிஞிலியோடு பொருதே தீருவேன்” என்று கிளம்பினான் எயினன். நன்னனுடைய பகுதியை அடைந்து போர் தொடுத்தான் எயினன். அக்குரல் கேட்டு வெளிவந்தான் நன்னன். அவன் கண்களில் தீப்பொறி பறந்தது. தன்னுடைய பேய்க்கூட்டருகில் நின்று மிஞிலியை அழைத்து எயினன் மீது ஏவினான். காலை நேரத்தில் தொடங்கிய போர் கடுமையாக நடந்தது. வெயில் ஏற ஏற “வெற்றி யாருக்கு?” என்பது தெரியாத வகையில் உச்ச நிலையை அடைந்தது போர். உச்சி வேளையில் ஆய்எயினனை வீழ்த்தி அவன் மார்பில் தன் வேலை ஊன்றினான் வலிமை மிக்க மிஞலி. சிறந்த வீரன் மாண்டுகிடந்தான். இக்கொடுமை தாங்காது வெயில் கடுமையாயிற்று. தங்கள் மீது ஆராத அன்புகொண்ட ஆய் எயினன் மாண்டு கிடக்க அவன் உடலை வெயில் காய்ச்சுவதா? அதைத்தாங்களும் பார்த்திருப்பதா என்று எண்ணிய பறவை இனங்கள் குபீரென்று மேலே பறந்தன. தங்களது இறக்கைகளை விரித்து அவன் உடலின்மீது மண்டலமிட்டுப் பறந்தன. வெய்யில் அவன் உடலைக் காய்க்காத வண்ணம் பந்தலிட்டவைபோல பறந்தன. அவன் மாண்டது கண்டு அவை இட்ட சப்தம் ஆகாயத்தையே கிடுகிடுக்கச் செய்தது. நன்னனின் முன்பு வெற்றி வாகையோடு சென்று நின்றான் மிஞிலி. அவனைப் பெருமிதத்தோடு பார்த்த நன்னன் பறவைகளின் செய்கை கண்டு நாணித் தலைகுனிந்தான். தன் மாளிகைக்குள் மனக்குழப்பத்தோடு நுழைந்தான். ஆய் எயினனுடைய உரிமை மகளிர்கள் எல்லாம் கதறினார். அவர்கள் இட்டசப்தம் கேட்ட பின்னர்தான் மதுரையில் ஓளிந்திருந்த அகுதையின் பயம் நீங்கிற்று. தன் தானைத் தலைவன், தன்னலங்கருதாத ஆய்எயினன் வீழ்ந்தது கேட்டு மனம் துடித்தான் நார்முடிச்சேரல். மறு நிமிடம் அவனது போர் முரசும் முழங்கிற்று. குடையும் வாளும் வடபுறம் பெயர்ந்தன. ஓரிரு நாட்களில் நன்னன் நாட்டைந்தான். பெருந்துறை என்னுமிடத்தில் இருந்த நன்னனின் மாவல்மரமான வாகை மரத்தை வெட்டி வீழ்த்தினான். அதுகேட்டுப் பொன்னாலான பூண் அணிந்து, போர் தொடுத்து வந்தான் நன்னன். நார்முடிச் சேரலுக்கும் நன்னனுக்கும் பல நாட்கள் போர் நடந்தது. முடிவில் சேரமன்னன் நன்னனை வெட்டி வீழ்த்தினான். ஆய் எயினனை வீழ்த்திய நன்னனும் மாண்டான். பூழிநாடு சேர நாடோடு இணைந்தது. ஆய் எயினன் மறைந்த போதிலும் அவன் வாக்குப் பொய்க்கவில்லை; அவன் புகழ்ப் பாடினர் “பரணர்” முதலிய பெரும் புலவர்கள், இது தமிழகத்தில் நிகழ்ந்த வரலாறு. கதை அல்ல. நூலாசிரியர் வித்யாவாசஸ்சபதி டாக்டர். இரா. நாகசமி அவர்கள் கோவை மாவட்டம், ஊஞ்சலூரில் 1930ல் பிறந்தவர். சம்ஸ்கிருத மொழியில் எம். ஏ. பட்டப் படிப்பும், தொலியலில் டாக்டர் பட்டமும் பெற்றவர். சங்க இலக்கியம் முதல் அண்மைக் கால இலக்கியம் வரை தமிழில் ஆழ்ந்த புலமை பெற்றவர். குறிப்பாக சைவ இலக்கியங்களில் சிறப்பாக ஈடுபட்டு பல நூல்களை இயற்றியவர். இவரது கட்டுரைகள் யுனஸ்கோ நிறுவனத்தல் 20க்கும் மேற்ப்பட்ட உலக மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத் தொல்லியல் துறையின் முதல் இயக்குனராக பொருப்பேற்ற 22 ஆண்டுகாலப் பணியில் தமிழகம் முழுவதிலும் கல்வெட்டிலும், கலைகளிலும் பெரும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியவர். தொல்லியல், காசுகள், கலைகள், கோயில் வழிபாடு, சிற்பம், ஓவியம், இசை, நாட்டியம் ஆகிய பல துறைகளிலும் வல்லுனர். கர்நாடக இசைப் பாடல்கள் பல இயற்றியவர். இராஜராஜ விஜயம், ஞானக்குழந்தை, அப்பர் சரிதம், மணிமேகலை முதலிய பத்துக்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்களை இயற்றியவர். பண் முறையிலேயே பாடல்களைப் பாடி நாட்டியம் அமைத்தவர். இவரது நாட்டிய நாடகங்கள் ஸ்வீடன், ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா, கானடா ஆகிய உலக நாடுகலளில் மிகவும் சிறப்பாக நடிக்கபெற்று புகழ் பெற்றன. பத்தூரில் கிடைத்த நடராஜர் சிலை வழக்கில் இந்திய அரசின் சார்பில் லண்டன் உயர்நீதிமன்றத்தில் சிறப்பாக சாட்ச்சியம் அளித்து நீதிபதியின் பாராட்டுகளை பெற்றதோடு வெளிநாடு சென்ற சிலையை இந்தியாவுக்கு மீட்டுத்தந்தவர். “சிலை மீட்ட செல்வர்” என பொள்ளாச்சி வள்ளல் நா. மகாலிங்கம் அவர்களால் பட்டம் அளித்து சிறப்பிக்கப் பெற்றவர். இவரது தொல்லியல் கலை சேவையை பாராட்டி தமிழக அரசு கலைமாமணி பட்டம் அளித்து சிறப்பித்துள்ளது. FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.