[] 1. Cover 2. Table of contents கலைச்செல்வங்கள் கலைச்செல்வங்கள்   இரா.நாகசாமி   tamilarts.academybooks@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA-NC கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/kalai_selvangal மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com மெய்ப்புப் பார்ப்பு : விக்கிமூல பங்களிப்பார்கள் அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Proof Reader : Wikisource Constributors Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation This Book was produced using LaTeX + Pandoc கலைச்செல்வங்கள் இரா. நாகசாமி சென்னை அரசு அருங்காட்சியகம் ** 1961, 2000** முன்னுரை சென்னை அரசு அருங்காட்சியத்தில் உள்ள தொல்லியல் பொருள்களை விளக்கி, இந்தியக்கலை வரலாற்றை விவரிக்கும் வகையில், இவ்வருங்காட்சியத்தின் முன்னாள் காப்பாட்சியர் திரு. இரா. நாகசாமி எழுதிய கலைச்செல்வங்கள் என்ற இந்நூல் ஆயிரத்து தொள்ளயிரத்து அறுபத்து ஒன்றில் அருங்காட்சியாக வெளியீடாக வந்தது. அருங்காட்சியகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கும் தமிழில் துணை நூல்கள் எழுதப்பட வேண்டுமென்றத் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட முதல் தமிழ் நூல் இது. இது மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்று மிகக்குறுகிய காலத்தில் அனைத்து படிகளும் விற்கப்பட்டு விட்டன. இந்நூலின் மறுபதிப்பு வெளியிடப்பட வேண்டுமென நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்திருந்த தமிழன்பர்களின் விருப்பத்தை நிறைவு செய்யும் வகையில் தற்போது மறுபதிப்பாக இந்நூல் வெளியிடப்படுகிறது. கி.பி. இரண்டாயிராம் ரா. கண்ணன் முன்னுரை சென்னை பொருட்காட்சிசாலை கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் பெருமக்களுக்கு பெரும்பணி புரிந்து வருகிறது. மேலை நாட்டு மக்களும் நம் கலைச் செல்வங்களைப் போற்றிப் புகழும் வண்ணம் பல நூல்கள் ஆங்கிலத்தில் வெளியிட்டு பெரும் புகழ் கொண்டு விளங்குகிறது. இதில் உள்ள தொல்பொருள் பிரிவில் சித்திரம், சிற்பம், செப்புப்படிமம் முதலிய பல கலைப்பகுதிகள் அடங்கியுள்ளன. நம் இந்திய நாட்டுக் கலைகள் பல்வேறு காலங்களில் பலபகுதிகளில் அடைந்த மாறுபடுகளை அறியும் வகையில் ஒவ்வொரு பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. எனவே கலைகள் அடைந்த மாறுபாடுகளை சரித்திர அடிப்படையில் அறிந்துகொள்வது எளிதாகிறது. தமிழ்நாட்டுக் கலைகள் பற்றி பல நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளன. ஆனால் இந்திய நாட்டுக் கலைச் சரித்திரம் இன்னம் தமிழ் மொழியில் வரவில்லை. ஆதலின் சிற்பம், கோயில், ஓவியம் முதலிய கலைகளின் வளர்ச்சியை சிறிது விவரித்துக்கூறியுள்ளேன். பல ஆராய்ச்சியாளர்களின் இடைவிடா உழைப்பின் பயனாக இந்தியக்கலைகளின் வரலாற்றை தொடர்ச்சியாக கூறமுடிகிறது. அப்பெரியார்களுக்கு எனது நன்றி உரித்தாகுக. தொல்பொருள் பிரிவின் அமைப்பும், அங்குள்ள பொருள்கள் பற்றியும், உருவநிலைகள் பற்றிய குறிப்பும் இந்நூலில் அடங்கியுள்ளன. பொருட்காட்சிசாலையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு தமிழ்த்துணை நூல்கள் வெளியிட உள்ள திட்டப்படி தமிழ் நூல்கள் வரிசையில் இது முதலாவதாக வெளிவருகின்றது. இந்நூலை எனக்கு பலவழிகளில் ஊக்கமூட்டிய பொருட்காட்சிசாலை சூப்ரின்டென்டெண்டு டாக்டர். சத்தியமூத்தி அவர்கட்கும், அஸிஸ்டண்டு சூப்ரின்டென்டெண்டு ஜயதேவ் அவர்கட்கும் நான் கடைமைப்பட்டுள்ளேன். இந்நூலில் அடங்கிய சில படங்களை உபயோகிக்க அனுமதித்த இந்திய தொல்பொருளாராய்ச்சி இலாகா தலைவருக்கு எமது நன்றி. தமிழ்பெருமக்களுக்கு இது பெரிதும் பயன்படுமென்ற ஆர்வத்துடன் தமிழன்னைக்கு இந்நூலை சமர்ப்பிக்கின்றேன். ரா. நாகசுவாமி சிற்பங்கள் பழங்கால மக்கள் முதலில் கரடுமுரடான கல்லாயுதங்களையும் பின்னர் மிகவும் வழவழப்பான கல்லாயுதங்களையும் உபயோகித்து வந்தனர். இவைகட்கு முறையே பழைய கற்காலம் என்றும், புதிய கற்காலம் என்றும் பெயர். இந்தியாவின் பல பகுதிகளில் கற்கால மனிதர்களின் நாகரிகத்தைக்குறிக்கும் தொல்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதிய கற்காலம் மறைந்து மக்கள் உலோகங்களாலான கருவிகளை உபயோகிக்கும் காலத்தை சிந்துநதி நாகரிகம் குறிக்கின்றது. இது கி.மு. மூன்றாயிரம்க்கும் முற்பட்டது என ஆராய்ச்சியாளர் கொள்கின்றனர். சிந்து நதிச்சமவெளியில் மொஹஞ்சதாரோ, ஹாரப்பா என்ற இடங்களில் புதைந்து கிடந்த நகரங்களில் நிலவி வந்த நாகரிகத்தை சிந்துநாகரிகம் என்பர். இது தெற்கே சொளராஷ்டிர தேசம்வரை பரவி இருந்தது என்பதற்குப்போதிய சான்றுகள் தற்போது கிடைத்துள்ளன. அதன் நாகரங்கள் நன்கு திட்டமிட்டுக் கட்டப்பட்டனவாயும், தெருக்கள் அகலமாக அமைக்கப்பட்டும்,கழிநீர்ப்பாதைகள் சிறந்த முறையில் கட்டப்பட்டும் விளங்கின. ஓவ்வொரு வீட்டிலும் குளிப்பதற்கெனத்தனியறை அமைக்கப்பட்டு இருந்து. மக்கள் விவசாயமும்,வியாபாரமும் செய்து வாழ்ந்து வந்தனர். அக்காலத்தில் வியாபாரம் மெஸபடோமியா நாடுவரை பரவி இருந்தது. என்பதற்குப்போதிய சான்றுகள் உள்ளன. குதிரை, நாய், மாடு போன்ற மிருகங்கள் நாட்டு வாழ்க்கைக்கு உதவியாயிருந்தன. அம்பு, கத்தி, வில், வேல் போன்ற ஆயுதங்கள் உபயோகத்திலிருந்தன. வெண்கலம், தாமிரம் போன்ற உலோகங்களும் வழக்கத்தலிருந்து வந்தன. இது போல தங்கம், வெள்ளி, தந்தம், பீங்கான் முதலியவற்றாலான பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பருத்தி பயிரிடப்பட்டு வந்தது. நூல்நூற்றல், துணி நெய்தல் முதலிய தொழில்களும் வளம்பெற்று விளங்கின. வேலைப்பாடுடைய மட்கலயங்கள் வழக்கத்திலிருந்தன. அக்காலத்து வழிபாட்டுமுறைப்பற்றி இன்னம் ஆதாராமாக ஒன்றும் அறியமுடியவில்லை. அன்னை தெய்வமும், காளையும், மரமும் தொழப்பட்டு வந்தன.அக்காலத்து எழுத்துக்கள் சித்திரம் போன்றவை. சுமேரிய நாகரிகத்தைக்குறிக்கும் மெஸபடோமியா நாட்டு சுசா, கிஷ் என்ற இடங்களில் கிடைத்துள்ள பொருள்கட்கும், மொளஞ்சதாரோவில் கிடைத்துள்ள பொருள்கட்கும் ஒற்றுமை காணப்படுவதால் இதை இந்திய சுமேரிய நாகரிகம் என ஒருபாலர் கொள்கின்றனர். சிந்துநதி நாகரிகத்தைச் சார்ந்த மக்கள் திராவிடர்கள். அவர்களே இந்தியாவின் பழங்குடி மக்கள் என்று சில ஆரய்ச்சியாளர் கருதுகின்றனர். திராவிடர் வெளிநாட்டிலிருந்து வந்து குடியேரியவர் என்று கூறுவோருமுண்டு. திராவிடர் உயர்ந்த பண்பாடு பூண்டு விளங்கியவர் என்பதில் ஐயமில்லை. இக்காலத்துக்கலைகளும் மேன்பாடுற்று விளங்கியிருத்தல் வேண்டும் என்று அறியப்படுகிறது. வார்ப்புக்கலையும் சிறப்புற்று விளங்கியிருந்தது. கைகளை வளையல்கள் அலங்கரிக்க இடையிலே கையமர்த்தி, கொண்டை புனைந்து, ஒயிலாக நிற்கும் நாட்டிய மாதின் வார்ப்புசிலை படம் ஒன்று மிக வனப்பு வாய்ந்தது. இது மொஹஞ்சதரோவில் கண்டெடுக்கப்பட்டது. திராவிடர் தக்காணத்திலும் தமிழ்நாட்டிலும் திராவிடர் வரலாற்றை வரையருத்துக் கூறுதல் கடினம், எனினும் கிறித்துவ சகாப்தத்திறகு பல நூற்றாண்டுகட்கு முன்னரே மிக உயர்ந்த கலைப்பண்பு இங்கு காணப்பட்டது. கி.மு. முன்னூற்றுக்கும் முன்னரே, தக்காணத்தில் ஆந்திரப்பேரரசு கிழக்கிலிருந்து மேற்குவரை பரவியிருந்தது. கொற்கையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாடு தென்னகத்தில் வளம்பெற்று விளங்கியது. இக்காலமே தென்னாட்டு வரலாற்றில் பொற்காலம் எனலாம். இயல், இசை நாடகம், சித்திரம், சிற்பம் முதலிய கலைகள் செழித்து விளங்கின. கடல்கடந்த வாணிபம் மேற்கே ரோமாபுரி வரை பரவியிருந்தது. ஆரியர் ஆரியர்கள் கி.மு. சுமார் இரண்டாயிரத்திலிருந்து ஆயிரத்து ஐநூறுக்குள்ளாக ஆப்கானிஸ்தானத்தின் வழியாக இந்தியாவிற்குள் வந்திருக்கவேண்டும். இவர்கள் வேதத்தை முக்கியமாகவும் யாகங்களையே வழிபாட்டு முறையாகவும் கொண்டவர்கள். தச்சுவேலை, வீடு கட்டுதல், உலோக வேலைப்பாடு முதலியவற்றில் சிறந்து விளங்கினர். இக்கால நூல்களிலிருந்து சிற்பக் கலையைப்பற்றி யாதொரு செய்தியும் அறிய முடியவில்லை. தங்கம், வெள்ளி, முதலிய உலோகங்களினால் சிறுபிம்பங்களை, யாக வழிபாட்டிற்காக இவர்கள் செய்திருக்கக்கூடும். சாலிக்ராமம் அல்லது வழவழப்பான கல்உருண்டைகளைக் கடவுளாகப்பாவித்து இக்காலத்தின் பிற்பகுதியில் வழிபட்டனர். யாகக் குழிகளுக்காக பலவித கோணங்களை கொண்ட சிறுதொட்டிகளை செங்கல்லினால் கட்டுவித்தனர். பின்னர் யாகக்குழிகளின் மேலாக பந்தல்களையும், புகைபோக்கிகளையம் அமைத்திருத்தல் வேண்டும். இவர்களது வேலைப்பாடுகள் சிறந்த சித்திர வேலைப்பாடுடையவையாக இருந்திருத்தல் வேண்டும். ஆரியர் திராவிடர்களைச் சண்டையில் வெற்றி கண்டனர். ஆனால் திராவிட நாகரிகம் ஆரியரை வெற்றி கண்டது. ஆரியர்கள் திராவிடரின் பண்பாடான இயற்கை தெய்வங்களின் வழிபாடு, அன்னை தெய்வவழிபாடு, லிங்கவழிபாடு முதலியவற்றைக் கொண்டனர் என ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இக்காலச் சிறப்பைக்குறிக்கும் யாதொரு பொருளும் இன்னம் கிடைக்கவில்லை. மொளரியர் மொளரியப் பேரரசன் சந்திரகுப்தன் கடைசி நந்த அரசனைத் தோற்கடித்து கி.மு. முன்னூற்று இருபதில் மகதத்து அரியணை ஏறினான் மொளரியர்களில் மிகப்பகழ் கொண்டவர் அசோகன். தென்னாடு தவிர, காஷ்மீரம், ஆப்கானிஸ்தானம், தக்காணம் உள்பட இந்தியாவின் பெரும்பகுதியும் அவர் ஆட்சிக்குட்பட்டிருந்தது. கி.மு. இருநூற்று எழுபத்து இரண்டு முதல் இருநூற்று முப்பத்து இரண்டு வரை ஆண்ட அப்பேரரசர் புத்தமதத்தைத் தழுவி அதை நாடெங்கும் பரவச்செய்தார். பொளத்தமதத்தினரும் ஜைன மதத்தினரும் சிற்பக்கலையில் ஈடுபாடு கொண்டு சிற்பங்களை உருவகப்படுத்த தலைப்பட்டனர். இக்காலம் தொட்டு இந்தியாவில் சிற்பக்கலை வளம்பெற்று விளங்கலாயிற்று. மொளரியர்க்குப் பின்னர் மகதத்தை சுங்கர் கைப்பற்றினர். மொளரியர் காலத்துக்கலையை உள்நாட்டுக்கலை என்றும், அரசாங்கக்கலை என்றும் இருவகையாகப் பிரிக்கலாம். பேஸ்நகர் என்ற இடத்து பஷியின் சிலையையும், பர்கம் யஷ்ன் சிலையையும் உள்நாட்டுக் கலைக்கு உதாரணமாகச் சொல்லலாம். இச்சிலைகள் மிகவும் தொன்மையான அமைப்பும், பளுவான ஆடை அணிகளும் உடையனவாய் உள்ளன. இவைகளை நோக்கின் மரவேலைகளில் முன்னரே தேர்ச்சி பெற்றவர்களால் செதுக்கப்பட்டிருத்தல் வேண்டும். என்று கொள்லாம். யஷன் சிலையில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவைகளிலிருந்து இச்சிலை சிசுநாக வம்சத்தைச்சேர்ந்த குனிக அஜாதசத்ருவின் சிலையாக இருக்கலாம், எனப்பேராசிரியர் ஜயஸ்வால் கருதுகின்றார். அரையிலே அழகிய ஆடை, முத்துசரங்கள் அலங்கரிக்கும் இடை, விம்முகின்றமார்பகம், வளைபூண்ட கைகளில் வெண்சாமரம், கண்களில் ஒளி, இவை விளங்கும் ஒர் ஆரணங்கின் சிலை தீதர்கஞ் என்ற இடத்து கிடைத்துள்ளது. படம் இரண்டு. இதன் வனப்பைபோற்றி புகழாத அறிஞர் இல்லை. தற்போது பாட்னா பொருட்காட்சியிலுருக்கும் இச்சிலையும் மொளரியர்காலத்து உள்நாட்டுக்கலையின் எடுத்துக்காட்டாகும். அசோகனின் ஆதரவு பெற்று நாடெங்கும் செதுக்கப்பட்ட சிலைகள் அரசாங்கக்கலை எனலாம். இவைகள் பெரும்பாலும் சாஸனங்கள் பொறிக்கப்பட்ட கல்தூண்களாகும். தான்பெற்ற இன்பத்தை இவையகத்துக்கு முதன்முதலில் புத்தபிரான் எடுத்துரைத்த சாரநாத்தில், அசோகன் ஓர் கல்தூண் நட்டான். அசோகனால் நாட்டப்பட்ட கல்தூண்களிலே மிகச்சிறப்புப்பெற்றது இத்தூண். இது மிகவும் வழவழப்பாகவும் மேலே செல்லச் செல்ல சிறுத்தும் செதுக்கப்பட்ட உருண்டையான ஓர் கல்தூணாகும். இதன் மேலே நான்கு திசைகளையும் நோக்கி சிம்மங்களமர்ந்துள்ளன. இச் சிங்கங்கள் முதன்முதலில் ஓர் தர்மசக்கரத்தைத் தாங்கியிருத்தல் வேண்டும். சிம்மங்களும் அவற்றைத்தாங்கும் வட்டமான பலகையில் உள்ள குதிரை, யானை, காளை முதலிய வற்றின் உருவங்களும் மிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன. இப்பலகையில் கவிழ்ந்தமணி போன்ற பாகமும் செதுக்கப்பட்டுள்ளது. இச்சின்னம்தான் இந்திய அரசாங்கச்சின்னமாக விளங்குகிறது. இது போன்று அசோகன் தான் நாட்டிய தூண்களை இந்தியச்சிற்பிகளையும் மேலை நாடுகளிலிருந்து வந்த சிற்பிகளையும் கொண்டு செய்வித்தான். சுங்கர்கள் கடைசி மொளரிய அரசனுக்குப்பின்னர் கி.மு. நூற்று எண்பத்தைந்தில் புஷயமித்ரசுங்கன் அரியணை ஏறினான. இக்காலத்தில் பெரும்படை கொண்டு பஞ்சாபின் பெரும்பகுதியையும் தனதாக்கி, பாடலிபுத்திரத்தின் மீது படையெடுத்தான், யவன அரசன் மிளிந்தன். இவனைப் புறமுதுகிட்டு ஓடச்செய்தான் புஷயமித்திரன் இந்து மதத்தில் தீவிர நம்பிக்கை உடையவன் இவ்வரசன் கி.மு. நூற்று அறுபத்தொண்ணில் காரவேலனால் தோற்கடிக்கப்பட்டான். மொளரிய காலத்திலிருந்தே மிகப் பலம் பெற்ற பேரரசாக ஆந்திரர்கள் கிருஷ்ணா கோதவரிக்கரையில் ஆண்டனர். ஹிந்துக்களேயாயினும் இவர்கள் பொளத்த மதத்தை யாதரித்து வந்தனர். பூனா நாகருக்கு அருகில் நாநாகாட் என்ற இடத்தில் இவ்வம்சத்தின் மூன்றாம் அரசனான சாதகர்ணீ என்பவனின் சிலை உள்ளது. ஆந்திர அரசர்கள்தான் மேலைப்பகுதிகளில் உள்ள குகைக்கோயில்களையும், கண்டசாலா,பட்டிப்ரோலு, அமராவதி முதலிய இடங்களில் பொளத்த ஸ்தூபங்களையும் தோற்றுவித்தனர். சாஞ்சி ஸ்தூப வாயில்களும் இக்காலத்தே தோற்றுவிக்கப்பட்டன. இக்காலத்தில் வடமேற்கு பகுதியில் நடந்த அரசுகளைப்பற்றி வரையறுத்து கூறுதல்கடினம். பாக்டீரியா, காபூல், பஞ்சாப் இவைகளை, இரண்டு யவன அரசக்குடும்பங்கள் ஆண்டுவந்தன. இவர்களில் மிளிந்தன் மினாண்டார் மிக முக்கியமானவன். புத்தமதத்தை தழுவிய இம்மன்னன் காபூலையும், தக்ஷசீலத்தையும் ஆண்டான். அவனுக்குப் பின்னர் ஆண்டியல்கிடஸ் என்ற மன்னன் தக்ஷசீலத்தை ஆண்டான். சாகர்கள் பாக்டீரியரைத் தோற்கடித்தனர். ஆயினும் சில காலம் வரை மிளிந்தனின் வழிவந்தோர் க்ஷத்ரபர்கள் என்றபெயரில் பஞ்சாபை ஆண்டனர். இவர்களில் முதலாம் ஆஸஸ், இரண்டாம் ஆஸஸ், கொண்டாபோரஸ் முதலியோர் முக்கியமானவர்கள். சாகர்கள் மதுராவையும், தக்ஷசீலத்தையும், மேலைக்ஷத்ரபர்கள் என்ற பெயரில் ஆண்டனர். இக்காலத்திய சில முக்கியமானவைகளும் மிகத் தொன்மையானவைகளுமான சிற்பங்கள் பாஜா என்ற இடத்தில் உள்ளன. இது புத்தவிஹாரமாகக் குடையப்பட்ட குகையாகும். இதன் வெளித் தாழ்வரையில் உள்ள கம்பங்களின் மேல் பகுதியில், சிம்மம் போன்ற உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. குகை வாயிலின் இருமருங்கிலும் உள்ள சிற்பங்கள் மிக முக்கியமானவை. இவற்றில் ஒன்று, நான்கு குதிரை பூட்டிய ரதத்தைப் பெருமகன் ஒருவன், நடத்திச் செல்வதை குறிக்கிறது. அவனுடைய இருபுறமும் இரு பணிப்பெண்கள் அமர்ந்து சாமரம் வீசுகின்றனர். ரதம் ஆடை அணிகளற்ற ஒர் அரக்கியை மிதித்து செல்கிறது. இச்சிற்பம் இருளை தமஸ் அகற்றும் கதிரவனின் சிலையாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். அதேபோல் மற்றொரு சிற்பம் யானைமீதமர்ந்து உலாவரும் இந்திரனைக் குறிக்கும். மரத்தையே முறித்துத் துதிக்கையினால் சுழற்றி வருகிறது யானை. சுற்றிலும் பல்வேறு உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இச்சிற்பங்கள் பெரும்பாலும் பார்குத் ஸ்தூப சிற்பங்களை ஒத்திருக்கின்றன. இவ்வுருவங்களின் தலைப்பாகைகளும், ஆடைகளும் பெரியவையாயும், பளுவாயும் அமைந்துள்ளன. பார்குத் என்ற இடத்துச்சிற்பமும் காஞ்சி ஸ்தூப வாயில்களும் இந்திய சிற்பங்களில் மிக முக்கியமானவை. இவை சங்கர் காலத்தவையாகும். பார்குத் ஸ்தூபம் செங்கல்லினாலும், அதன் சுற்றுக்களும் வாயில்களும் கல்லினாலும் ஆனவை. காலத்தின் மாறுபாட்டால் அழிந்துபட்டவை போக எஞ்சியவைகள் கல்கத்தாவில் உள்ள இந்திய பொருட் காட்சி சாலையில் காணலாம். இங்கு சுற்றுவேலிகளாக அமைக்கப்பட்ட கல் சிற்பங்களும் தோரணவாயில்களும் மிக அழகு வாய்ந்தவை. இவை பெரும்பாலும் ஜாதகக் கதைகளையும், புத்தரின் வரலாற்று காட்சிகளையும் குறிக்கும். படம் மூன்று. இக்காலத்தில் புத்தரை மக்கள் மனித உருவிலன்றி சின்னங்களாகத்தொழுது வந்தது ஒரு குறிப்பிடத்தக்க விஷயமாகும். ஓர் வஜ்ராசனத்தின் இருமருங்கிலும் ஆடவரும் மகளிரும் தொழுது நிற்கின்றனர். ஆசனத்தின் மேலே ஓர் சக்கரம் காணப்படுகிறது. இதுவே புத்தர் தர்மம் போதித்தலை குறிக்கிறது. இச்சிற்பத்தின் கீழுள்ள எழுத்துக்கள் ‘இது புத்தரை குறிக்கிறது’ எனக்கூறுகின்றன. இது போல் புத்தரின் பிறப்பு, நிர்வாணமடைதல் முதலிய யாவும் சின்னங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. மலர்களின் பளுவால் வளைந்து நிற்கிறது சாலமரத்தின் கிளை. அதைப்பிடித்துக் கொண்டு நின்றனள் புத்தரின் அன்னையாம் மாயாதேவி. அருகில் பணிப்பெண்கள் நீண்ட துணி ஒன்றைத் தாங்கி நிற்கின்றனர். அந்நிலையில் அவனி நோய் தீர்க்க அவதரித்த அண்ணல் ஏழு அடி எடுத்துவைத்ததாகச் சரித்திரம் கூறுகிறது. இது போன்று பல காட்சிகளை பார்க்குத் சிற்பங்களில் காணலாம். அமர்ந்திருக்கும் அன்னையின் தலையில் இரு யானைகள் குடம்கொண்டு நீரூற்றும் காட்சியும் புத்தரின் பிறப்பையே குறிக்கும். ஜைன சிற்பங்களிலும் மகாவீரரின் பிறப்பு இவ்விதம் குறிப்பிடப்பட்டு வந்தது. ஆயினும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் இவ்வுருவம் ஜைன பொளத்தக் கலையிலிருந்து மறைந்துபட்டது. ஆனால் இந்துக்களின் சிற்பங்களில் திருமகள் இவ்விதம் சித்தரிக்கப்படுவது வழக்கத்திற்கு வந்தது. உலகின்கண் உள்ள இன்னல்கட்கு ஓர் முடிவு காண, உறுதியுடன் புத்தகயாவில் உள்ள போதிமரத்தின் கீழமர்ந்தார் புத்தர். ஞான ஓளி அவருள் ஐக்யமாயிற்று. தன்னை மறந்த நிலையிலே எழுந்து நடந்தார் அண்ணல். அவ்விடத்தில் ஓர் சுற்றுவேலி அசோகனால் ஏற்படுத்தப்பட்டது. இங்குள்ள சிற்பங்களில் இந்திரனின் சிற்பம் மிக அழகுவாய்ந்தது. சிற்பக் கலையின் திறன் பேச தலைநிமிர்ந்து நிற்பவை சாஞ்சி ஸ்தூப வாயில்கள். சாஞ்சியில் அசோகனின் கல்தூணைத்தவிர மூன்று ஸ்தூபங்கள் உள்ளன. இவற்றில் சாஞ்சி பெரிய ஸ்தூபமான முதல் ஸ்தூபம். மொளரியர்காலத்தது. செங்கல்லால் கட்டப்பட்டது. சுங்கர் காலத்தில் இரண்டாவது மூன்றாவது ஸ்தூபங்கள் எழுப்பப்பட்டன. முதல் ஸ்தூபம் பெரிதாக்கப்பட்டது. கி.மு. எழபத்திரண்டிலிருந்து இருபத்தியைந்துக்குளாக ஆந்திரர் காலத்தில்தான் முதல் மூன்று ஸ்தூபத்தின் வாயில்கள் எழுப்பப்பட்டன. தோரண வாயில்களிலும் இரண்டாம் ஸ்தூபத்தின் சுற்று வேலிகளிலும் உள்ள சிற்பங்கள் மிக அழகு வாய்ந்தவை. சாஞ்சி தோரண வாயில்களில் உள்ள சிற்பங்கள் ஜாதகக்கதைகளையும், புத்தரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் தொடர்ச்சியாகவும், தெளிவாகவும் சித்தரித்துள்ளன. கதைப்போக்கில் தக்க இடங்களில் புத்தர் சின்னங்களாக குறிப்பிட்டுள்ளார். பார்குத்தை போல் இங்கும் புத்தரை சின்னங்கள் மூலமாக சித்தரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க பொருளாகும். காட்சித்தொடர்களை அழகாக அள்ளிவீசும், இச்சிற்பங்கள் அக்கால சமுதாய அமைப்பையே நம் கண் முன் கொணர்ந்து நிறுத்தி விடுகின்றன. யஷர்களின் உருவங்கள் திசைக்காவலாக செதுக்கப்பட்டுள்ளன. தோரண வாயில்களின் மேல் உள்ள குறுக்கு விட்டங்களின் நுனியில், ஆடையணியா ஆரணங்குகள் மரங்களின் கிளைகளைப்பிடித்து நிற்றல் கண்கவர் காட்சியாகும் படம் ஐந்து. லோனசோபிகா என்ற விலைமாதால் அளிக்கப்பட்ட வழிபாட்டு வட்டம் ஓன்று தற்போது மதுரா பொருட்காட்சிச் சாலையில் உள்ளது. இதில் ஜைன ஸ்தூபம் காணப்படுகிறது. புத்த மதத்தினரைப் போல் ஜைனர்களும் ஸ்தூபத்தைத் தோற்றுவித்துத் தொழுது வந்தனர். இவ்வட்டங்கட்கு ஆயாகபடங்கள் என்று பெயர். ஆந்திரர்கள் கி.மு. முன்னூரிலிருந்து கி.பி. முன்னூரு வரை தக்காணத்தை ஆண்ட ஆந்திரர்கள் சற்றேறக்குறைய சுங்கர்களின் சமகாலத்தவர் எனலாம். சாஞ்சி வாயில்களை அலங்கரிக்கும் இவர்களது சிற்பங்கள் நுட்பமும் அழகும் வாய்ந்தவை. குண்டூரிலிருந்து சுமார் பதினெட்டு மைல் தூரத்திலிருக்கும் அமராவதி என்ற இடத்தில் ஓர் பொளத்த ஸ்தூபம் இருந்தது. பார்குத், சாஞ்சி முதலிய இடங்களில் வளர்ச்சி பெற்ற பொளத்த சிற்பங்களை அமராவதியில் மிக உயர்ந்த நிலையை அடைந்தது. இவ்வரசர்கள் காலத்தில் கோதவரி, கிருஷ்ணா நதிப்பள்ளத்தாகுகளில் நாகர்ஜூன கோண்டா, ஐக்கய்யப்பேட்டா, கோலி போன்ற இடங்களில் மிகச்சிறந்த ஸ்தூபங்கள் எழுப்பப்பட்டன. அமராவதி கிருஷ்ணா நதியின் தென்கரையில் அமராவதி என்ற நகரம் மிகப்புகழ் கொண்டு விளங்கிற்று. அசோகப் பேரரசனால் மதப்பிரசாரம் செய்யப்பட்ட ஓர் பிஷு இங்கு வந்ததாகச்சரித்திரம் கூறுகிறது. கி.பி. முதலாம் நூற்றாண்டின் இறுதிவரை இது ஆந்திரர்களின் தலைநகரமாக இருந்து வந்தது. அக்காலத்தில் இந்நகரம் தான்ய கடகம் என்ற பெயர் பூண்டு விளங்கிற்று. இவ்விடத்தில் புத்தரின் புனித எலும்பு ஒன்று புதைக்கப்பட்டு அதன்மேல் மகாசைத்யம் என்ற ஒரு ஸ்தூபம் கட்டப்பட்டது. இது எப்போது துவங்கியது என அறிய இயலவில்லை. மிகப்பழமையான சிற்பங்களில் உள்ள எழுத்துக்கள் கி.மு. இருநூறில் வழங்கிய பிராம்மி எழுத்துக்களாகக் காணப்படுகின்றன. இரண்டாவது தொகுதியில் உள்ள சிற்பங்களில் உள்ள எழுத்துக்கள் கி.பி. முதல் நூற்றாண்டில் வழங்கிய எழுத்துக்களாகும். இந்த ஸ்தூபத்தைச் சுற்றிலும் கி.பி. நூற்றைம்பதிலிருந்து இருநூறுக்குள்ளாக பொளத்த குருவான நாகார்ஜுனர் சுற்றுச் சுவர்களை அமைத்தார். கி.பி. இருநூறிலிருந்து இருநூற்றைம்பது வரை ஆண்ட பிந்திய ஆந்திர அரசர் காலத்தும் சில சிற்பங்கள் சேர்க்கப்பட்டன. இவை வழி பாட்டு ஸ்தூபங்களின் புறத்தை மூட உபயோகப்படுத்தப்பட்டன. ஆக அமராவதி சிற்பக்கலையின் வளர்ச்சியை நான்கு பகுதிகளாகக் கொள்ளலாம். கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச்சார்ந்த முதல்பகுதி சிற்பங்கள் பெரும்பாலும் உருவத்திற்கொத்த ஆழமின்றி மிகப்பழமையாகவும் வளைவுகளற்றவைகளகவும் காணப்படுகின்றன. இவை மொளரிய காலத்து சிற்பங்களை ஒத்து இருக்கின்றன. நான்கு யானைகளை உடைய கல்தூணும் ஜக்கயப்பேட்டயைச்சார்ந்த உலகப்பேரரசின் சிற்பமும் இக்காலத்தவையாகும். பட்டிப்ரோலு என்ற இடத்துக்கிடைத்த புதைப்பெட்டிகளும் இக்காலத்தவை. இவற்றின் ஒன்றில் ஸ்படிகத்தாலான சிமிழ்கள் காணப்பட்டன. இத்துடன் தங்கத்தினாலான மலர்களும் கற்களினாலான மணிகளும் காணப்பட்டன. இவற்றின் ஓர் சிமிழில் புத்தரின் புனித எலும்பு கிடைத்தது. அது தற்போது மகாபோதி சங்கத்தில் உள்ளது. இரண்டாவது பகுதி சிற்பங்கள் ஸ்தூபத்தின் புறத்தை மூடச் செதுக்கபட்டவையாகும். இவை பெரும்பாலும் புத்த சரித்திரத்தின் நிகழ்ச்சிகளை சித்தரிக்கின்றன. பார்குத், சாஞ்சி போன்று இங்கும் சில இடங்களில் புத்தர் சின்னமாகவே சித்தரிக்கப்பட்டார். ஆயினும் முதன் முறையாக இச்சிற்பங்களில் புத்தர் மனித உருவிலும் படைக்கப்பெற்றார். இவ்வுருவங்கள் வடநாட்டில் வழங்கி வந்த உள்நாட்டு சிற்பஙகளை ஒத்திருக்கின்றன. இக்காலத்தில் தான் மதுராவில் புத்தர் மனித உருவத்தில் உருவகப்படுத்தப்பட்டார். எனவே இப்பண்பாடு சமகாலத்தில் இந்தியாமுழுவதும் பரவிற்று எனலாம். மூன்றாவது காலத்தில் தான் ஸ்தூபத்தை சுற்றிலும் கைச்சுவர்கள் எழுப்பப்பட்டன. நேராக நிறுத்தப்பட்ட கல்தூண்களின் இரு பக்கங்களிலும் குவிந்த இடைவெளிகளைச் செய்து குறுக்கிலும் கற்களைப் பொருத்தி சுற்றுவேலிகள் எழுப்பப்பட்டன. இவைகள் மரத்தலான வேலிகளைப்போன்று செய்யப்பட்டுள்ளன. இவைகளின் மேல் பெரிய குறுக்கு விட்டக்கற்கள் பொருத்தப்பட்டன. இந்தச்சுவற்றின் வெளிப்புற ஓரங்களில் அழகிய வேலைப்பாடுடைய தாமரைப் புஷ்பங்கள் செதுக்கப்பட்டன. மேல் விட்டங்களில் வளைந்து செல்லும் மாலைகளை விண்ணவர் தாங்கிச்செல்லும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. மக்கள் சுற்றிவரும் பக்கமான உட்புறத்தில் வட்டவடிவமான கற்களிலும் மேல்விட்டங்களிலும் ஜாதகக்கதைகள் சித்தரிக்கப்பட்டன. புனிதமான புத்தரின் புகழ் தேவதத்தனின் மனதிலே புயலைக்கிளப்புகிறது. புத்தரைத் தொலைத்துவிட பல வழிகளைக் கையாளுகிறான் தேவதத்தன். எல்லாவகைகளும் தோற்கவே மதம் பிடித்த அரசாங்க யானையை புத்தர் வரும் வழியில் அவிழ்த்து விடுகிறான். வழிபட்டோரை மதயானையின் வெறி சூரையாடுகிறது. துதிக்கைக்கொண்டு ஒருவரைத்தூக்கி எரிகிறது. மற்றவரை காலடியில் போட்டு வதைசெய்கிறது. இப்பயங்கர நிலைக்கண்டு பயந்து ஓடினர் சிலர். நடுநடுங்கி அருகில் நின்ற ஆடவரை அணைந்து ஆதரவு வேண்டிய ஆரணங்குகள் பலர். மாளிகையின் சாரரிலிருந்து இக்காட்சி கண்டு பொறுமியவர் பலர். இவ்விதம் கொடுநடம் புரியும் யானையின் எதிரே தோன்றுகிறது அருள்வடிவாம் புத்த ஜோதி. சூழ்ந்து வந்தனர் சீடர்களும், பிக்குகளும். மனித குலத்தின் மாசு போக்கத் தோன்றிய ஜோதியின் காலடியில் மண்டி போடுகிறது மதங்கொண்ட களிறு. மாபெறும் அருட்சக்தியின் முன்னர் மதயானையின் சக்தி தலைவணங்கியது. இக்காட்சியை படம் ஆறு சிற்பமாகத்தீட்டி அதிலே சீற்றம் பரபரப்பு, அமைதி இவையனைத்தையும் படைத்து அழியா காவியமாக்கினான் அமராவதியில் தொண்டாற்றிய ஓர் சிற்பி. புத்தர் பரிநிர்வாணமடைந்து விட்டார். வறுமை, செல்வம், இறப்பு, பிறப்பு இவையெல்லாம் இனி அவருக்கு இல்லை. இவைகட்கு எல்லாம் அப்பாற்பட்டுவிட்ட அச்செய்தி மக்களைக் குதூகலத்தில் அழ்த்துகிறது, இசைப்பெருக்கெடுத்து ஓடுகிறது பெண்களிடத்தில், யாழெடுத்து வாசித்தாள் ஓர் அழகி, யாழின் தந்திகளிலிருந்து இனிமையான கீதத்தைக் கிளப்பின மென்மையான தளிர் விரல்கள். கொடிபோன்ற உடல்களை வளைத்துத் தளிர் போன்ற கால்களை நெளித்து ஆடினர் நாட்டிய மகளிர்கள். புத்தரின் புனித எலும்புகளை எட்டுபகுதிகளாக்கி உலகின் எட்டுதிக்குகளுக்கும் பேழைகளில் வைத்து யானைமேல் ஊர்வலமாக எடுத்துச்சென்றனர் வீரர்கள். இதை சித்தரிக்கிறது மற்றோர் சிற்பம். படம் ஏழு. ஆரணங்குகள் புடைசூழ கம்பீரமாக ஆசனத்தில் அமர்ந்து இருக்கிறான் அரசன். அன்பளிப்பாக தூதுவர் இரு மலர்மாலைகளை அளிக்கின்றனர். யானையையும், குதிரையையும் நடத்தி வருகின்றனர் வீரர். இது போன்று இன்னம் பல காட்சிகளை உயிருள்ள ஓவியங்களாகச் சிற்பத்தில் தீட்டி மகிழ்ந்தனர். அமராவதியில் அல்லும் பகலுமாக உழைத்த சிற்ப கலைஞர்கள். மிக நுட்பமும் வேலைப்பாடும் கொண்ட ஓர் பெரிய சிற்பம் அமராவதி ஸ்தூபத்தை சித்தரிக்கிறது படம் எட்டு. இது நான்காவது காலத்தைச்சார்ந்த சிற்பமாகும். கோலி என்ற இடத்து சிற்பஙகளும் இக்காலத்தவையாகும். இவற்றில் வஸந்தரா என்ற இளவரசன் தன் உடைமைகளைனைத்தையும் மற்றவர்கட்குக் கொடுத்து உதவும் ஜாதகக்கதையின் காட்சிகள் மிகவும் வனப்பாக செதுக்கப்பட்டுள்ளன. காந்தர சிற்பக்கலை மாவீரன் அலெக்ஸாண்டரால் பஞ்சாபில் விட்டுச்செல்லப்பட்ட கிரேக்க வீரர்கள் சிறிது காலத்துக்குள்ளாக மொளரியப் பேரரசன் சந்திரகுப்தனால் துரத்தியடிக்கப்பட்டனர். பாக்டீரியாவில் வடக்கு ஆப்கானிஸ்தானம் எஞ்சிய கிரேக்க வீரர்கள் ஓர் சாம்ராஜ்யத்தை அமைத்துக்கொண்டு முதலில் காந்தரத்தையும் பின்னர் பஞ்சாபையும் கைப்பற்றினர். இதன் பயனாக கிரேக்கக்கலையும் பண்பாடும் இப்பகுதியில் பரவலாயின. பொளத்தமதம் இங்குபரவியது. கிரேக்கர்கட்குப்பின்னர் சாகர்களும், சஷத்ரபர்களும் இப்பகுதியை ஆண்டபோதிலும் இக்கலை தொடர்ந்து போற்றப்பட்டு வந்தது. இக்கலையைக் காந்தரக்கலை என்றும் கூறுவர். குஷாணர்களாலும் இக்கலை போற்றப்பட்டு கி.பி. முன்னூரில் அவர்கள் ஆட்சி வீழும் வரை விளங்கிவந்தது. தெய்வப்பிறவிகளான கடவுளரையும் தசைகளாலும் உடற்கட்டுக்களாலும் மிகு அழகு வாய்ந்த மனிதர் போல் உருவகப்படுத்தி படம் ஒன்பது மகிழ்ந்தனர் மேல்நாட்டுச்சிற்பிகள். உடற்வனப்பை மறைத்து ஆன்மீக ஒளி வீசும் தெய்வச்சிலையாக மனிதராகிய புத்தரையும் படைத்தனர் இந்திய சிற்பிகள். மனிதன் தெய்வமாக மாற வேண்டும் என்பது இவர்கள் குறிக்கோள் போலும்! காந்தராச்சிற்பங்களில் மனித உருவிலேயே முதலிலிருந்து புத்தர் காண்பிக்கப்பட்டார். இந்திய ஸ்தூபங்கள் போலன்றி இங்கு சுற்றுவேலிகள் கிடையா. குஷாணர்கள் சைனாவின் வடமேற்குப் பகுதிகளில் வாழ்ந்து வந்த யு-சீ மலை ஜாதியினர் சாகர்களை காட்பீஸஸீன் தலைமையில் தோற்கடித்து இந்தியாவின் வடமேற்குப்பகுதியில் நுழைந்தனர். இக்குஷண அரசர்களில் முக்கியமான கனிஷ்கர் தன் நாட்டை காசி வரை பரப்பினார். நாட்டு வெற்றிகண்ட அவர்களை ஆன்மீக வெற்றி கண்டது புத்தமதம். குஷாணர்கள் புத்தமதத்தைத் தழுவி அதைப்பரப்ப ஏற்றவகை செய்தனர். குஷாணர் காலத்தும் வடமேற்குப்பகுதியில் காந்தாரக்கலையே போற்றப்பட்டு வந்தது. இதே காலத்தில் மதுரா, ஸாரநாத் போன்ற இடங்களில் உள் நாட்டுக் கலையும் தனி நிலை படம் பத்து. வகித்து வந்தது. பெஷாவர் நகருக்கு அருகில் கனிஷ்கரால் நிறுவப்பட்ட ஸ்தூபம் இக்கால கலைக்கு எடுத்துக் காட்டாகும் இந்த ஸ்தூபம் அறுநூற்று முப்பதியெட்டு அடி உயரமும் இருநூற்று எண்பத்து ஆறு அடி குறுக்களவும் உடையதாக விளங்கியது. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஸ்தூபமாக இது திகழ்ந்திருக்க வேண்டும். ஸ்தூபத்தின் புனித அறையிலிருந்து புகழ் பெற்ற கனிஷ்கரின் குவளைகள் கிடைத்துள்ளன. இக்கு வளையும் இதன் மூடியும் தங்கமுலாம் பூசப்பட்ட தாம்மிரத்தாலானவை. மூடியின் மேல் புத்தரின் உருவமும் இரண்டு போதிஸ்த்துவர்களின் உருவமும் காணப்படுகின்றன. குவளையின் பக்கங்களில் புத்தர், இந்திரன், சூரியன், கனிஷ்கர் உருவங்கள் உள்ளன. இதை ஈந்தது கனிஷ்கர் என்றும் அதைச் செய்தது அகிசாலா என்ற சிற்பி என்றும், இதில் உள்ள எழுத்துக்கள் கூறுகின்றன. தக்ஷசீலத்தைச் சுற்றிலும் இக்காலத்துக்கு எடுத்துக்காட்டாக கலைச்செல்வங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குப்தர்கள் மாவீரன் சந்திரகுப்தன் பாடலிபுத்திரத்தைத் தலை நகராகக் கொண்டு, குப்த பேரரை ஏற்படுத்தினான் அவனுக்குப்பின் வந்த சமுத்திரகுப்தன் குப்த சாம்ராஜ்யத்தைத் தென்னாடு வரை பரப்பினான். விக்கிரமாதித்தன் என்று போற்றப்படும் இரண்டாம் சந்திரகுப்தன் உஜ்ஜயினியைக் கைப்பற்றி சாகர்களை தோற்கடித்தான். கி.பி. சுமார் நாநூற்று எண்பதிலிருந்து குப்த சாம்ராஜ்யத்தின் மீது ஹுணர்கள் அடிக்கடி படையெடுத்தனர். இப்படையெடுப்புகளினால் பலவீனமடந்த போதிலும் குப்த அரசன் பாலாதித்யன் கி.பி. ஐநூற்று இருபத்தெட்டில் ஹுணர்களைக் கடைசி முறையாகத் தோற்கடித்து துரத்தியடித்தான். இந்திய சரித்திரத்திலேயே மிகப் புகழ் கொண்டு பொற்காலம் எனப்போற்றப்படும் காலம் குப்தர்களது காலம். அரசியலிலும், அறிவு நூல்களிலும், ஆக்க வேலைகளிலும், தலையாய காலமான குப்தர்காலத்தில் சிற்பக்கலை சிறந்த ஸ்தானத்தை வகித்தது. தெளிவும் எளிமையும், வனப்பும் மிக்க சிற்பங்களும் சிலைகளும் இக்காலத்தில் உருவாயின. தன்னிலை மறந்து உயர் நிலைக்கு நம்மை எடுத்துச் செல்லும் ஓவியங்களாக விளங்கின குப்தர்காலத்து சிற்பங்கள். குப்தர்கள் இந்து மதத்தில் நம்பிக்கைக் கொண்டவர்கள். அதைப்பேணி வளர்த்தனர். ஆயினும் புத்தமதமும் அவர்களால் போற்றப்பட்டு வளர்ந்து வந்தது. இக்காலத்துச் சிற்பங்களில் மிக முக்கியமானவை தேவ்கர் என்ற இடத்து கோயிற் சிற்பங்களாகும். இவை கோயிலின் புறங்களை அலங்கரிக்கின்றன. இவற்றிலும் நரநாரணர்களைக் குறிக்கும் சிற்பம் மிக அழகு மிக்கது. படைப்புக் கடவுளாம் பிரம்மனின் மகன் வயிற்றுப் பிள்ளைகள் நரன் நாராயணன் இருவரும். இவ்விருவரும் மரங்களடர்ந்த கானகத்தே தவம் புரிந்தனர். தவநிலை கண்டு பொருமினான் அவரர் தலைவனான இந்திரன். அழகிய பெண்டிரைக் கொண்டு மயக்க முனைந்தான். அவர்களது தவ நிலையிலே சிம்மமும் மண்டி போட்டு மானின் அருகிலே படுத்தது. இந்திரன் நிலை கண்டு நகைத்தனர் இவ்விரு பெரியோர்களும். அழகுக்கு அணிகலனாக ஓர் ஆரணங்கைத்துடையிலிருந்து தோற்றுவித்தனர். அப்பெண்ணின் அழகுகண்டு நாணித் தலை குனிந்தனர் மகளிர்கள். இந்திரன் தோற்று மறைந்தான். தன் மக்களின் தவ வேடங்கண்டு பூரிப்படைந்தார் பிரம்மன். அப்பெண்ணை இந்திரனுக்கே அளித்துவிட்டுத் தவம் முடித்தனர் பெரியோர். இந்நிலைகண்டு விண்ணகத்தோர் மலர் மாரி பெய்தனர். இதைச் சித்தரிக்கும் சிற்பம் மிக வனப்புடையது. இச்சிற்பத்திலே நரனின் இருப்பிடத்தின் அடியில் மானும் நாரணனின் அடியில் சிம்மமும் உள்ளன. மேலே விண்ணவர்கள் மலர்மாரி தூவுகின்றனர். கையிலே மாலை கொண்டு ஓரணங்கு உள்ளனள். மேலே பிரம்மன். இச்சிறபங்களில் உள்ள நெளிவும், முகத்திலே தோன்றும் அமைதியும் போற்றிப் புகழத்தக்கவை. இக் கோயிலின் மற்ற பகுதிகளில் உள்ள அரவணை துயின்ற அண்ணலின் உருவமும், முதலை வாய்ப்பட்ட யானைக்கு மோக்ஷம் அளிக்கும் காட்சியும் மிக சிறப்பு வாய்ந்தவை. மகதத்து தலைநகரான ராஜகிருஹத்து உள்ள ஓர் வனப்பு மிக்க பெண்ணின் சிலையும் குப்தர் காலத்து சிற்பங்களில் மிகப்புகழ் பெற்றதாகும். ஞான ஒளி பெற்ற புத்தர் முதன்முதலில் சாரநாத் என்ற இடத்தில் தர்மத்தை சீடர்களுக்கு உபதேசித்தார். பொளத்த தர்மமாகிய சக்கிரம் முதன்முதலில் இங்குதான் சுழற்றப்பட்டது. இதைதான் வடமொழி வல்லுநர் தர்ம சக்கரப்ரவர்த்தனம் என்பர். இவ்விடத்திலிருந்து கிடைத்துள்ள ஓர்புத்த சிற்பம் வெண்மையான கல்லினால் செதுக்கப்பட்டுள்ளது. ஞான ஜோதியில் தன்னை மறந்து அவ்வொளியை மொளனமாகவே சீடர்களுக்குப் பரப்பும் வகையில் அமர்ந்து காணப்படும் இச்சிறப்பம் சிற்பக்கலைக்கே பெருமை தரும் செல்வமாகும். புத்தரின் காலடியில் அவர் சீடர்கள் அமர்ந்துள்ளனர். இடது பக்கத்தில் ஓர் பெண்ணின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இப்பெண்தான் இச்சிலையை செய்வித்தவள். புத்தரின் தலையைசுற்றி காணப்படும் வட்டமும் அதிலுள்ள சிற்பங்களும் குப்தர் காலச் சிற்பக் கலையின் தனிச்சிறப்புகளாகும். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச்சார்ந்த ஓர் புத்தர் சிலை மதுராவிலிருந்து கிடைத்துள்ளது. எழு அடி உயரமுள்ள இச்சிற்பத்தின் அடியில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. புத்தரை நின்ற வடிவில் சித்தரிக்கும் இச்சிற்பம், வடிவிலும் வனப்பிலும் மிக அழகு வாய்ந்தது. இதன் மேலாடையின் அமைப்பும் மிக அழகு பெற்றது. ஏழரை அடி உயரமுள்ள சுல்தான்கஞ் புத்தரின் செப்புச்சிலை, தற்போது பர்மிங்ஹாம் பொருட்காட்சி சாலையில் உள்ளது. வனப்புமிகும் இச்சிலை கி.பி. முன்னுறுஎண்பதில் ஆண்ட இரண்டாம் விக்ரமாதித்தன் காலத்தைச் சார்ந்தது. அமர்ந்த மங்குவார் புத்தர் சிலையும், எல்லோரா, அஜந்தா, உதயகிரி முதலிய குகைக் கோயில்களில் உள்ள சிற்பஙகளும் குப்தர் காலத்துப் பெருமையைப் பேசுகின்றன. சாளுக்கியர்கள் கி.பி. அறுநூற்றுஆறில் ஹர்ஷவர்த்தனர் ஸ்தான்வீஸ்தரத்தை தானேசர்யும் கனோஜையும் ஆண்டார். அவர் குப்தர் காலத்துப் பெருமையும் புகழையும் புதுபித்தார். அவருடைய எல்லை தெற்கே நர்மதைவரை பரவியிருந்தது. முதலாம் புலிகேசியால் ஸ்தாபிக்கப்பட்ட சாளுக்கியப் பேரரசு அப்போது இரண்டாம் புலிகேசியின் கீழிருந்தது. இப்புகழ் வாய்ந்த மன்னன் ஹர்ஷவர்த்தனரை நர்மதைக்கும் தெற்கே வரவிடாமல் தடுத்து நிறுத்தினார். இரண்டாம் புலிகேசி காஞ்சியைத் தலைநாராகக் கொண்ட மகேந்திரனின் மகனான நரசிம்மனால் தோற்கடிக்கப்பட்டு யுத்தகளத்தில் மாண்டார். இக்காலத்துச் சிற்பங்களை குப்தர் காலச்சிற்பமாகவே கொள்ளலாம். ஹர்ஷரும், சாளுக்கியர்களும் குப்தர்களது சிற்பக்கலையையே தொடர்ந்து போற்றி வந்தமையின் இவ்விரு கலைக்குமிடையே வேறு பாடுகள் கிடையாது. ஆய்ஹோல் கோயிலில் உள்ள சிற்பங்கள் சாளுக்கியரது சிற்பங்களாகும். தேவ்காரைப்போல் இங்கும் அரவணை துயின்ற அண்ணலின் சிலை மிகபுகழ் வாய்ந்தது. எல்லோராக் குகைக் கோயில்களில் துமார்லேனா, ராவண்-கா-காய், தசாவதாரா, ராமேஸ்வரா முதலியவற்றில் உள்ள சிற்பங்கள் சாளுக்கியர் கால கலைத்திறனை வெளிப்படுத்துகின்றன. தசாவதாரக்குகைக்கோயிலில் உள்ள பைரவர் சிற்பம், அழித்தலின் தலைவனாம் ஆண்டவன், பயங்கர உருவுடன் மண்டை ஓடணிந்து. சூலம் ஏந்தி தாக்கும் காட்சி மிக வேலைப்பாடுடையதாகும். கீழே அமர்ந்து உட்குவிந்த கண்ணுடன் கையில் கபாலம் ஏந்தும் காளியின் சிலையும் தலைக்குமேல் தோற்றமளிக்கும் ஆந்தையின் உருவம் இக்காட்சியின் பயங்கரத்தை மிகைப்படுத்துகின்றன. இதே குகையில் உள்ள மார்கண்டனைக்காக்க காலால் காலனை உதைத்த கால காலனின் சிலையும் சிறப்பு வாய்ந்தது. இக்குகையின் மற்றோர் பக்கலில் உமையவள் வேண்டுகோளுக்கிணங்கி வேத முனிவர் பாட, விண்ணவர் கொண்டாட, ஆனந்தத் தாண்டவம் புரியும் அண்ணலின் சிற்பமும் எலிபெண்டா குகையில் உள்ள மற்றோர் தாண்டவச்சிற்பமும் மிக நேர்த்தியானவை. பாதமியில் உள்ள குகைக்கோயில்களும், அவுரங்காபாத் குகைக்கோயில்களும் முந்தய சாளுக்கியர் காலத்தவையாகும். தன் மகவையும் கொடுமைக்கு ஆளாக்கிய ஹிரண்யனை அழிக்கும் நரசிம்ம மூர்த்தியின் சிற்பம் மிக நேர்த்தியானது. அவுரங்காபாத் சிற்பங்களில் நடன மாதரின் சிற்பங்கள் மிக புகழ் கொண்டவை. அரக்கர்கட்கெல்லாம் தலைவன் மூவுலகையும் வெற்றிகண்ட வேந்தன் ஏறிவந்த ரதம் கைலாய மலையின் நேரே வந்ததும் மேலே செல்ல மறுத்தது. காரணம் கண்ட இலங்கை வேந்தன் இறங்கினான். விடு விடு என்று சென்றான். தன்வழி நின்ற மலையை பந்து போல் எடுத்து வீசிடத்தன் இருபது கைகளையும் கொடுத்துத் தூக்கினான். ஆடிய பாதம் கொண்ட அண்ணல் அமர்ந்திருந்த கைலாயம் ஆடியது. கணங்களெல்லாம் கலங்கினர். பணிப்பெண்கள் உமையை விட்டுப்பயந்து ஓடினர். அன்னையும் நடுங்கிப்போய் அரனை அணைத்துக்கொண்டனள். அமைதியின் இருப்பிடமான ஆண்டவன் மட்டும் அசையவே இல்லை. கால்விரல்மட்டும் கைலையை அழுத்தியது. உலகெலாம் வெற்றிகண்ட பெருமிதத்தில் பூரித்து நின்ற இருபது கைகளும் அழுந்தின. தோள்கள் இற்று வீழ்ந்தன. ஆவென்று அலறினான் அரக்கார்கோன். கைலாய நாதர் கோயிலில் உள்ள இச்சிற்பம் உலகப்புகழ் பெற்றது. உள்ளம் கவர் இச்சிற்பத்தில் உணர்ச்சி முழுவதையும் படம்பிடித்துக் காட்டியுள்ளான் சிற்பி படம் பதிமூன்று. ராஷ்டிர கூடர்கள் சுமார் கி.பி. எழுநூற்று ஜம்பத்து மூன்றில் சாளுக்கியரிடமிருந்து தக்காணத்தை ராஷ்டிரகூடர்கள் கைப்பற்றினர். இவர்கள் மால்காட்டைத் தலைநகரமாகக் கொண்டு சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பேரரசாக திகழ்ந்தனர். மிகப் புகழ்வாய்ந்த எல்லோரா கைலாசநாதர் கோயில், ராஷ்டிரகூட மன்னனான முதலாவது கிருஷ்ணனால் தோற்றுவிக்கப்பட்டது. இந்தியாவின்கண் உள்ள மிகப்புகழ் வாய்ந்த சிற்பங்கள் பல இக்கோயிலே உள்ளன. எலிபெண்டா என்ற இடத்து குகைக்கோயிற் சிற்பமும் ராஷ்டிரர்கூடர் காலத்ததாகும். இங்குள்ள கோயில்களின் திருசுற்றுக்களில் சிற்பங்கள் உள்ளன. இவைகளும் எல்லோரா சிற்பங்களைப் போன்றவையாகும். படைத்தல், காத்தல், அழித்தல் இம் மூன்று தொழில்களின் தலைவனாம் திருமூர்த்தியின் சிலை படம் பதிநான்கு. மிகச்சிறப்பு வாய்ந்தது. வனப்பு மிகும் பல சிற்பங்கள் கொண்ட இக்குகைக் கோயில்கள் மனிதனின் பயங்கர வெறிக்கு பலியாகிப் பெரும்பாலும் சிதைந்து கிடக்கின்றன. பல்லவர்கள் பல்லவர்களின் தோற்றம் பற்றி ஆராய்ச்சியாளர்களுக்குள் கருத்து வேற்றுமை நிலவி வருகிறது. ஆந்திரர்களின் சிற்றரசர்களாயிருந்து பின்னர் பிரிந்து தனியாக கொண்டவர் எனச்சிலர் கொள்கின்றனர். மற்றொரு சாரார் மணிபல்லவம் என்ற தீவிலிருந்து தோன்றியவர் எனக் கூறுகின்றனர். இவர்களது ஆட்சி கி.பி. அறுநூறிலிருந்து எண்ணூற்றைம்பது வரை தென்னாட்டில் மிகப்பிரசித்தி பெற்று விளங்கியது. பல்லவ மன்னர்களில் முதலாம் மகேந்திரவர்மனும், நரசிம்மவர்மனும் மிக முக்கியமானவர்கள். இயல், இசை, நாடகம், கோயில், சிற்பம் முதலிய கலைகளனைத்திலும் தேர்ச்சி பெற்று விளங்கிய மகேந்திரவர்மன் காலத்தே தென்னாடு பொன்னாடாக விளங்கிற்று. பல குகைக் கோயில்களைத் தென்னாட்டில் தோற்றுவித்தவன் இவனே. நரசிம்மன் காலத்தில்தான் மகாபலிபுரத்தில் ஓற்றைக்கல் கோயில்கள் தோற்றுவிக்கப்பட்டன. பல்லவர் காலத்து சிற்பங்களில் திருச்சிராப்பள்ளி குகைக் கோயிலில் உள்ள சிற்பமும் மாமல்லபுரத்துள்ள சிற்பங்களும் மிகப்புகழ் வாய்ந்தவை. வஜ்ரம் போன்ற உடல், பளுவான கதை, எருமையின் முகம், எவரும் தன்னை அழிக்கமுடியாது என்ற இறுமாப்பு, இவைகளை உடைய அரக்கன் கையில் பட்டு உலகம் அலறியது. தேவர்கள் அஞ்சி ஓடினர். மூவுலகின் அன்னை தன்மக்கள் படும் அல்லல் கண்டு வெகுண்டு எழுந்தனள். சிங்கத்தின் மீதமர்ந்து சீறிப்பாய்ந்தனள். தாயுள்ளம் படைத்த தெய்வம் வில்லும், அம்பும் கொண்டு அரக்கனுடன் சமர்தொடுத்தாள் அன்னை உருவே அரக்கன் மனத்தில் அச்சத்தை ஊட்டியது. அரக்கர்கோன் அடிபட்டு வீழ்ந்தான். வையம் அன்னையைப் போற்றியது. படம் பதினாறு. இக்காட்சியை சித்தரிக்கிறது, மாமல்லபுரத்துள்ள மகிஷமண்டபத்துச் சிற்பம். கையிலே கதையேந்தியுள்ள மகிஷாசுரனும் அவன் சுற்றமும், வில்லேந்தி வீரச்சமர்புரியும் அன்னையின் உருவமும், கண்களின் உருவும் வனப்பு வாய்ந்தவை. போரின் சீற்றத்தையே கண்முன் கொணர்ந்து நிறுத்தம் ஆற்றல் கொண்டு உள்ளது இச்சிற்பம். இதற்கு எதிரில் அனந்தன் என்ற அரவின் மீது துயிலும் அரியின் உருவம் உள்ளது. இயற்கை அன்னை அமர்ந்துள்ளாள். இவள் மனிதன் தோன்றிய நாள் முதல் உணவும், உடையும், அளித்து வரும் நிலமகளாகத்தானிருக்க வேண்டும். பணிப்பெண்கள் சுற்றிலும் நிற்கின்றனர். அலை வீசும் கடலிலிருந்து அள்ளி உண்ட நீரைத் தன்னுள் அடக்கி விண்ணகத்தை மறைத்து வரும் கார்காலத்து மேகம் போல் இரு மத்தகஜங்கள் துதிக்கையில் கொண்டுள்ள குடங்களிலிருந்து நீரை அலைமகளின் மீது மழையெனக் கொட்டுகின்றன. செல்வத் திருமகள் தெய்வீக ஓளியோடு அமர்ந்திருந்கும் இக்காட்சியை ஆதிவராக மண்டபத்தில் காணலாம் மற்றொரு பகுதியில் மன்னன் மகேந்திரனையும் அவன் மனைவியரையும் காணலாம். மாமல்லபுரத்துச் சிற்பங்கள் தென்னகத்துக்குப் பெருமை தரும் கலைச் செல்வங்களாகும். இச்செல்வங்களை சித்தரித்துத் தனிப்பெரும் நூலே இயற்றலாம் தொன்னூறு அடி நீளமும் இருபத்தைந்து அடி உயரமும் உள்ள ஓர் கற்பாறை. நடுவிலே ஒரு பிளவு. இப்பாறையில் அர்ச்சுனன் தவம் செய்யும் காட்சியை சிற்பமாக அடித்துவிட நினைத்தான் ஓர் சிற்பி. அதன் முடிவுதான் அர்ச்சுனன் தவம் படம் பதினேழு. என்ற அழியாத கல்லிலே செதுக்கிய காவியம். இங்கு ஓர் சிறு கோயிலின் முன்னர் எலும்புக்கூடாக மெலிந்து தவம் புரியும் ஓர்யோகி அர்ச்சுனனாக இருக்கலாம். காண்பிக்கப்பட்டுள்ளார். அர்ச்சுனன் தன் எதிரிகளுடன் சமர்புரிய சிவனை நோக்கி தவம் புரிகின்றான். வழியிலே இந்திரனால் தடுக்கப்பெற்று பின்னர் அவன் அருள் பெற்று கைலை சென்று தவம் புரிகிறான். இக்காட்சி மேலே சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒரு காலைக்கீழே ஊன்றி மற்றொருகாலை மடித்து இரு கைகளையும் உயரத்தூக்கி கடுந்தவம் புரிகின்றான். தங்கள் இயற்பகையையும் மறந்து காடுவாழ் மிருகங்கள் இக்காட்சியைக் கண்டு வியக்கின்றன. துள்ளிக்குதித்து ஓடுகிறது ஒரு புள்ளிமான். தக்க சமயமெனக்கருதி போலித்தவம் புரிகிறது ஓர் பூனை. அதன்காலடியில் விளையாடுகின்றன சுண்டெலிகள். இவ்வரிய காட்சியைக் காண யானைகள் வந்து நிற்கின்றன. யஷர்கள், கின்னரர்கள், வித்தியாதரர் முதலிய விண்ணவர்கள் இவ்வரும் காட்சியைக்காண சுற்றம் சூழ வந்துள்ளனர். கீழுலகிலிருந்து நாகதேவதைகள் தோன்றுகின்றன. கணங்கள் சூழக் கைலயங்கிரி நாதன் காண்டீவனைத் தடுத்தாட்கொள்ளும் காட்சி மிக அழகாக அமைந்துள்ளது. காண்போர் கண்முன் கல்மறைந்து காவியம்தான் தோன்றுகிறது. பொறாமைத்தீக்குப் பலியான இந்திரன் கல்மாறி பொழிந்தான். கோகுலத்து மக்கள் அலறினர். கோவர்த்தன மலையைத் தூக்கி கோகுல மாந்தரைக் காத்தான் கண்ணன். பசுக்களெல்லாம் பயமின்றி உலவின. கழுத்தை வளைத்துத்தன் கன்றை தடவிக் கொடுத்தது ஓர் கறவைப் பசு. நிமிர்ந்து நடைபோட்டது ஓர் காளை. உரியிலே தயிர் கொண்டு சென்றனள் ஓர்கோபி. இவ்வரும் காட்சியும் அருகிலேயே சித்தரிக்கப்பட்டுள்ள வனப்பு மிக்க சிறப்பாகும். அண்மையில், குட்டிகளுக்கு பால்கொடுக்கும் பெண் குரங்கிற்குப் பேன் பார்க்கும் ஓர் ஆண் குரங்கின் சிற்பமும், யானைகளின் உருவமும் உயிருள்ள ஓவியங்களாகவே காண்கின்றன. வாயில்லா உயிர்களும் எளிமையும், தன்னிலை உடையவைகளாக மிகவும் போற்றப்பட்டுமளவில் உலகிலேயே மாமல்லபுரத்தில்தான் செதுக்கப்பட்டுள்ளன என ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். திருச்சிராப்பள்ளி குகைக்கோயலிலும் பல்லவர் கலைத் திறனைக் காணலாம். முயலகன் தலைமீது காலமர்த்தி நிற்கும் சிவனும் மற்ற உருவங்களும் மிக நேர்த்தியான வேலைப்பாடுடையவை. காஞ்சியில் உள்ள கைலாசநாதர் கோயிலை ராஜசிம்மன் கட்டுவித்தான். இக்கோயிலின் திருச்சுற்றுக்களில் உள்ள அறைகளில் சிவனின் பல்வேறு தாண்டவங்கள் மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளன. மாமல்லபுரத்து தலசயன பெருமாள் கோயிலும் இக்காலத்துக் கோயிலாகும். இங்கு பல அடுக்குக்கல்களில் ஓர் சிலை செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இம்முறை மற்ற காலங்களில் கையாளப்படவில்லை. இது போன்று பல சிற்பங்கள் இங்கு உள்ளது ஓர் தனிச்சிறப்பாகும். பல்லவர் காலத்துச் சிறபங்கள் நிலையிலும் உருவிலும் எளிமையாகக் காணப்படுகின்றன. மகுடம் உருண்டையாகவும், உயரமாகவும், தோற்றமளிக்கின்றது. மூக்கு சப்பையாகவும் கன்னங்கள் சிறிது பருத்தும், உடலின் முன்பகுதி தட்டையாகவும் காணப்படும். பூணூல் தட்டையாக ரிப்பன் போல் காணப்படும் இடது மார்பின் மேல் ஓர் முடிச்சும் சிலசமயம் வலது கையின் மேல் எடுத்தும் செல்லப்பட்டும் இருக்கும். அரையாடை மிகப்பளுவாகவும் இருகால்களுக்கும் இடையே பெரிய வளைவுடையதாகவும் காணப்படுகின்றது. சோழர்கள் சுமார் கி.பி. எண்ணூற்றைம்பதில் இருந்து தென்னகம் முழுவதையும் ஓர் குடைக்கீழ் கொணர்ந்து திறம்பட ஆண்டனர் சோழப் பேரரசர்கள். இவர்களில் முக்கியமானவர்கள் முதலாம் ராஜராஜனும், கங்கைகொண்ட சோழபுரத்தை ஏற்படுத்தி, அங்கு கோயில் கட்டிய ராஜேந்திரனுமாவர். சோழர் காலத்து சிற்பங்கள் வளர்ச்சியடைந்து வனப்புடன் திகழும் வடநாட்டு குப்தர்களது சிற்பங்களை நினைவூட்டும். தென்னாட்டுச் சிற்பக்கலையின் மிகச்சிறந்த காலமாக சோழர் காலத்தைக் கூறலாம். திருச்சி மாவட்டத்து சீனிவாநல்லூரில் உள்ள குரங்கநாதர் கோயிலில் உள்ள சிற்பங்களும் தஞ்சை பெரிய கோயலில் உள்ள சிற்பங்களும், பெரியநந்தியின் சிலையும், கங்கைகொண்ட சோழபுரத்து கோயில்களில் உள்ள சிற்பங்களும் இக்காலத்து சிற்பங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும். உமையொருபாகனாயமர்ந்த சிவன் சண்டேசனை ஆட்கொள்ளும் படம் பதினெட்டு. கங்கைகொண்ட சோழபுரத்து சிற்பம் மிகப்பிரசித்தி வாய்ந்தது. கும்பகோணம் நாகேஸ்வரஸ்வாமி கோயிலின் திருச்சுற்றை அலங்கரிக்கும் சிற்பங்களும் நார்த்தாமலை, கொடும்பாளூர், தாராசுரம் முலிய இடங்களில் உள்ள சிற்பங்களும் சோழர்கள் சிறப்பை நினைவூட்டுகின்றன. கொடும்பளூரிலிருந்து கொணர்ந்த முப்புரம் எரித்த சிவனின் படம் பத்தொன்பது சிலையும். திரிபுர சுந்தரியின் சிலையும் படம் இருபது சென்னைப் பொருட்காட்சியில் உள்ளன. மிக வனப்புமிகும் இச்சிலைகள் வெண்மையான கல்லினால் செதுக்கப்பட்டுள்ளன. சோழர்காலத்துச் சிற்பங்கள் நிலையிலும் உருவிலும் பல்லவர் சிற்பங்களை விட வனப்பும் அழகும் பூண்டு விளங்கின. சந்திரன் போன்ற வட்டவடிவமான முகம் இக்காலத்து சிறப்பாகும். பாண்டியர்கள் கி.பி. ஆயிரத்துநூறு முதல் ஆயிரத்து முன்னூற்றைம்பது வரை தென்னாட்டில் பாண்டியர்களின் கை ஓங்கியிருந்தது. இக்காலத்துச் சிற்பக்கலை பிந்திய சோழர் காலமாகவும் கொள்ளலாம். தில்லை, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் முதலிய இடங்களில் இவர்களது சிற்பங்களைக் காணலாம். விஜயநகர் காலம் வித்யாரண்ய முனிவரின் ஆசிபெற்று ஹரிஹரன், புக்கன் என்ற சகோதரர்களால் முகம்மதிய படையெடுப்பை தடுக்க நிறுவப்பட்டதே விஜயநகரப் பேரரசாகும். ஆயிரத்து முன்னூற்றெழுபத் தொன்பது-ல் இரண்டாம் புக்கன் விஜயநகரத்தைத் தோற்றுவித்தான். கிருஷ்ண தேவராயர் காலத்து ஆயிரத்து ஐந்நூற்றொம்பது முதல் ஆயிரத்து ஐநூற்று இருபத்தொன்பதுவரை விஜய நகரப்பேரரசு மிகப்புகழ்பெற்ற அரசாக விளங்கியது. விஜயநகர் காலத்தை கி.பி. ஆயிரத்து முன்னூற்றைம்பது முதல் ஆயிரத்து அறுநூறு வரை கொள்ளலாம். இக்காலத்து சிற்பங்கள் நிறைந்த கல்தூண்களை உடைய பல மண்டபங்கள் கோயில்களிலெங்கும் எழுப்பப்பட்டன. சிறப்புமிகும் கல்யாண மண்டபத்திலும், காஞ்சிபுரத்து வரதராஜப் பெருமாள் கோயிலிலும், விஜயநகரத்துள்ள வித்தலஸ்வாமி கோயிலிலும் காணலாம் கிருஷ்ண தேவராயர் தொழுதுவந்த ஹசார ராமர் கோயிலில் இராமாயணச் சிற்பங்கள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. இக்காலத்துச் சிற்பங்கள் ஆடையிலும் நிலையிலும் மாறுபாடென்பது அற்று ஒரே நிலையாகக் காணப்படுகின்றன. முகத்தில் வனப்புக் குன்றி மூக்கு நீண்டு கூர்மையாகச் செதுக்கப்பட்டன. வயிற்றின் அடிப்பாகம் உருண்டையாக முன்னோக்கிக் காணப்படுகின்றன. இக்காலம் தொட்டுதான் சிற்பங்களில் நாமம் போன்ற சின்னங்கள் தோன்றலாயின. நாயக்கர் காலம் சுமார் கி.பி. ஆயிரத்து அறுநூற்றில் விஜய நகர அரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் அவர்களின் பிரதிநிதிகளாயிருந்த நாயக்கர்கள் மதுரை, செஞ்சி, தஞ்சாவூர் முதலிய இடங்களில் தங்களாட்சியை ஏற்படுத்தினர். இவர்களில் மதுரை நாயக்கர்கள் மிகப்புகழ் பெற்றவர்கள். திருமலை நாயக்கர் தென்னிந்தியாவில் இன்றும் போற்றப்படும் ஓர் அரசராகத் திகழ்ந்தார். இக்காலத்துச் சிற்பக்கலையை தற்காலம் எனக்கொள்ளலாம். மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, கிருஷ்ணாபுரம், பேரூர் படம் இருபத்தொன்று., ராமேஸ்வரம் முதலிய இடங்களில் இக்காலத்துச் சிற்பங்களைக் காணலாம். மதுரை மீனாட்சி கோயிலில் உள்ள ஊர்த்துவ தாண்டவர் சிலையும், காளியின் சிலையும், அகோரவீரபத்திரர், அக்னி வீரபத்திரர் முதலிய சிலைகளும் மிகச்சிறப்பு வாய்ந்தவை. புதுமண்டபத்துச்சிற்பங்களும் மிக வனப்பு மிக்கவையாகும் ஆந்திரர்கள் இரண்டாம் புலிகேசிக்குப்பின்னர், குப்ஜ விஷ்ணுவர்த்தனன் வேங்கியைத் தலைநகராகக் கொண்டு கீழச்சாளுக்கியப் பேரரசை ஏற்படுத்தினான் இவ்வரசர்களும் சாளுக்கியக் கலையையே போற்றி வளர்த்தனர். இவர்களது சிற்பங்களுக்கும் பல்லவர்களது சிற்பங்களுக்கும் மிகுந்த ஒற்றுமை காணப்படுகின்றது. கிருஷ்ணா, கோதாவரிக் கரையில் ஏற்படுத்திய இவர்கள் இவர்கள் கோயில்களில் இக்காலச் சிற்பங்களைக் காணலாம். பிக்காவல் என்ற இடத்துள்ள சிற்பங்கள் படம் இருபத்திரண்டு மிகப்புகழ் பெற்றவை. தலைக் காட்டைத் தலைநகராகக் கொண்டு சாளுக்கிய நாட்டிற்குத் தென்பால் உள்ள பகுதியை ஆண்ட மேலை கங்கர்கள், தஞ்சாவூரை ஆண்ட சோழர்களால் கி.பி. ஆயிரத்தில் தோற்கடிக்கப்பட்டனர். இவர்களது சிற்பங்கள் இன்னும் நன்கு ஆராய்ச்சி செய்யப்படவில்லை, எனினும் சிரவண்பெல்கோலா என்ற இடத்துள்ள ஜைனத்துறவி கோமதீஸ்வரரின் சிலை இவர்கள் காலத்தது. வனப்பு மிகும் இச்சிலை ஜம்பத்துஏழு அடி உயரம் உள்ளது. ஹேமாவதியைத் தலைநகராமாகக் கொண்டு கி.பி. ஏழுநூறு முதல் ஆயிரத்துநூறு வரை நோளம்பர்கள் மேலை கங்கர்களின் சிற்றரசகளாக ஆண்டு வந்தனர். பின்னர் மேலைச் சாளுக்கியரின் சிற்றரசர்களாக மாறினர். இவர்கள் பல்லவர் வழிவந்ததாகத் தங்களை கூறிக்கொண்டனர். சாளுக்கியக் கலையைப் பின்பற்றிய போதிலும் இவர்களது சிற்பங்களிலும் பல்லவர்களது சிற்பங்களின் ஒற்றுமையைக் காணலாம். சாளுக்கியர்கள் கி.பி. தொள்ளயிரத்தைம்பதில் ராஷ்டிர கூடர்களிடமிருந்து தங்கள் நாட்டைக் கைப்பற்றினர். கல்யாணைத் தலைநகராகக் கொண்டதால் கல்யாணி சாளுக்கியர்கள் என்றும் இவர்கள் அழைக்கப்படுவர். துவாரசமுத்திரத்தைத் தலை நகராகக் கொண்டு ஹோய்சாளர்கள் கி.பி. ஆயிரத்துநூறு முதல் ஆயிரத்து முன்னூற்றுபத்து வரை தற்கால மைசூர் அரசின் வடபகுதியை ஆண்டனர். இவர்கள் மேலைச் சாளுக்கியக் கலையைப் பேணி வளர்த்த போதிலும் தமக்கெனத் தனிவழி வகுத்துக் கொண்டு ஆபரணங்கள் அதிகமாக அலங்கரிக்கும் அழகிய சிற்பங்களை தோற்றுவித்தனர். மிகநுட்பமான வேலைப்பாடுடைய நூற்றுக்கணக்கான சிற்பங்களை படம் இருபத்திமூன்று உடைய கோயில்களைத் தோற்றுவித்த பெருமை இவர்களைச்சாரும் இவர்கள் கோயில்களின் சுவர்கள் முழுவதும் சிற்பங்களால் ஆனவைதான்.மிகவும் புகழ்பெற்ற மேலூர், சோமநாதபுரம் ஹலேபீடு இடத்து கோயில்கள், இவர் புகழ்பாடுகின்றன. ஹோய்சாளர்களின் சமகாலத்தவரான காகதீயர்கள் வாரங்கல்லைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். இவர்கள் மேலைச் சாளுக்கியக் கலையையும் படம் இருபத்திநான்கு ஹோய்சாளர் கலையையும் ஓன்றாக்கியதின் பயனாக இன்றளவும் வழங்கிவரும் தெலுங்கு நாட்டு சிற்பக்கலை தோன்றியது. கலிங்கர்கள் கலிங்கம் மொளரிய காலத்திற்கு முன்னரே புகழ் பூண்ட நாடாக விளங்கிற்று. அசோகன் கலிங்கத்தை வெற்றி கொண்ட போது தான் அவனை புத்தமதம் வெற்றி கொண்டது. இதன் பழமையான தலைநகர் விசாகப்பட்டினம் மாவட்டத்து வட எல்லையில் உள்ள முகலிங்கமாகும். கலிங்கரது சிற்பக்கலை சுமார் கி.பி. ஆயிரத்து நூறில் மிக உன்னத நிலையை அடைந்தது, மிகப்பெரிய கோயில்கள் இக்காலத்தில் புவனேஸ்வரில் கட்டப்பட்டன. பரசுராமர் கோயில், முக்டேஸ்வரர், லிங்கராயர், ராஜாராணி முதலிய கோயில்களில் மிகப்புகழ் பெற்ற சிற்பங்கள் உள்ளன. உணர்ச்சியிலும் உருவிலும் குற்றமற்ற சிற்பங்களைக் கலிங்க நாட்டின் சிற்பிகள் தோற்றுவித்தனர். உலகில் மிகப்புகழ் பெற்ற சிற்பங்களுடன் ராஜாராணி கோயில் சிற்பங்களை ஒப்பிடலாம். உள்ளமும் உடலும் ஒன்றாகத் தங்கள் நிலை மறந்து அணைந்து நிற்கும் காதலர்களின் சிலைகள் கலிங்கக் கலையின் தனிப் பெருமையாகும். உதட்டில் புன்சிரிப்பு தவழ ஒயிலென நிற்கும் இவர்கள் சிற்பங்கள் உள்ளம் கவர் ஓவியங்களாகும். இக்கலை கொணாரக்கில் உள்ள ஆதவன் கோயிலில் உன்னத நிலை அடைந்து காணப்படுகிறது. பல வகைகளில் உள்ளக் கிளர்ச்சிகளை வெளியிடும் இக்காதலர்களின் சிற்பங்கள் படம் இருபத்தைந்து உலகப் புகழ் கொண்டவை. பார்ப்போர் உள்ளம் கொள்ளை கொள்ளும் வனப்பு மிக்கவை. மகத்தான பெரிய சிற்பங்களையும் கோணாரக்கில் காணலாம். கீழ்வாசலில் இரு சிம்மங்கள் யானைகளின் மேல் தங்கள் பாதங்களை ஊன்றி நிற்கின்றன. அருகில் அடிபட்டு வீழ்ந்த ஆடவரின் உடல்கள் காணப்படுகின்றன. அது போல் தென்வாயிலில் மிகப்பெரும் இரு குதிரைகளின் காலடியில் சிக்கித்தவிக்கும் வீரனின் நிலை, பயங்கரத் தோற்றத்துடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. முகம்மது கஜினியின் படையெடுப்பின் பயனாக குஜராத்தின் பல பகுதிகளிலிருந்த கலைச்செல்வங்கள் சூரையாடப்பட்டன. அதற்குப்பின்னர் கஜூராஹோவில் கட்டப்பட்ட கோயில்களில் விளங்கும் சிற்பங்கள்தான் தற்போது எஞ்சிய குஜராத்தின் கலைச் செல்வங்கள். பந்தல்கண்டை ஆண்ட பிரதிஹார அரசர்களின் பிரதிகளான சண்டேளர்களால் கி.பி. ஆயிரத்து முப்பதில் கட்டப்பட்ட இக்கோயில்களில் கண்டரீய மகாதேவர் கோயில் மிகப்புகழ் கொண்டது. புவனேஸ்வர சிற்பங்களைப்போல் இக்கோயிலில் உள்ள சிற்பங்களும் காதலர்களின் நிலை களையே முக்கியமாகக் கொண்டவை படம் இருபத்துஆறு. கையில் கண்ணாடி கொண்டு தன்னழகைக்கண்டு மயங்கி நிற்கும் மகளிரின் சிற்பமும், சிங்காரபாலகனைச் சிரிக்க வைத்து, அவன் முத்துப் பல்வரிசை கண்டு முகம் மலர்ந்த அன்னை ஒருவரின் சிற்பமும், போற்றத்தக்கவை. அபுமலையில் உள்ள தில்வாரா கோயில்களிலும் இக்காலத்திய மிகச் சிறப்பு வாய்ந்த சிற்பங்களைக் காணலாம். கோயிலின் மேல்புறங்களை எல்லாம் சீரிய சிற்பங்களைக் கொண்டு மூடியிருக்கும் நேர்த்தி வியப்பூட்டும் வகையில் உள்ளது. பாலசேனர்கள் சுமார் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து பால பால மன்னர்கள் வங்காளத்தை ஆண்டு வந்தனர். அவர்கள் பொளத்த மதத்தைச் சார்ந்தவராயினும் ஹிந்து மதத்தையும் ஆதரித்தனர். ஆதலின் இரு மதத்துச் சிற்பங்களும் இக்காலத்து செதுக்கப்பட்டன. படம் இருபத்தியேழு. பாலர்கட்குப் பின்னர் சேனர்கள் வங்காளத்தை ஆண்டனர். இவர்கள் ராஜேந்திரசோழப் பேரரசன் கங்கைவரை கைப்பற்றியபோது, அவன் சேனையை நடத்தி வந்த சேனைத் தலைவன் ஒருவன் வழி வந்தவர்கள். இக்காலத்தும் சிற்பக்கலை புகழ்கொண்டு போற்றப்பட்டது. இச்சிற்பங்களில் பெரும்பாலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆதலின் இவைகளின் காலத்தைக் கூறுதல் எளிது. பாலர்களின் சிற்பங்கள் வழவழப்பான கல்லினால் செதுக்கப்பட்டன. நினைவுச் சின்னங்கள் வீரக்கல் : நாட்டையும், மக்களையும் காக்கப் போர் முரசு கொட்டி உயிர் தியாகம் செய்த வீரனுக்கோ, அன்றி சேனைத் தலைவனுக்கோ சுற்றமும், கொற்றமும் நினைவுச் சின்னமாகச் சிலை அமைத்து, அந்நிகழ்ச்சியைப் பொறித்து வைப்பதே வீரக்கல்லாகும். இதை நடுகல் என்றும் நம் இலக்கியங்கள் கூறும். நெஞ்சகத்தே வேல் தாங்கி போரிலே வீரம் காட்டி மாண்டுபட்ட வீரன் வீர சுவர்க்கம் விண்ணகம் எய்துவான் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அவ்வீரனை விண்ணகத்து மாதர்கள் ரதங்களில் ஏற்றி அழைத்துச் செல்வர். அவ்வீரனை வில்லும் அம்பும் கொண்டவனாகவோ, யானை, குதிரை, முதலியவற்றை நடத்துபவனாகவோ, அன்றி எதிரிகளுடன் போரிடுபவனாகவோ, வீரக்கல்லில் சித்தரிப்பது வழக்கம். அவன் மறைந்த தேதியைக் குறிப்பதும் வழக்கம். சில சமயம் கீழ் பகுதியில் போர் செய்வதையும், நடுப்பகுதியில் விண்ணகத்து மகளிர் வீரனை எடுத்துச் செல்லுதலையும், மேல் பகுதியில் வீரன் கடவுளைத் தொழுதலையும் சித்தரிப்பது வழக்கம். சிவலிங்கச் சின்னத்தை இச்சிற்பங்களில் அமைத்தலும் வழக்கம். சிவலிங்கத்தையே நினைவுச் சின்னமாக நிறுத்துவதும் உண்டு. சதிக்கல்: மாண்டுவிட்ட கணவருடன் மகளிர் தீக்குளித்து மாய்ந்து விடுவதை சதி என்பர் இவ்வழக்கம் ராஜபுத்திரர்களிடத்தே அதிகம் நிலவி வந்தது. இங்ஙனம் இறந்த மகளிர்களின் நினைவாக நிறுவப்படும் சின்னத்திற்கு சதிக்கல் எனப்பெயர். இதில் வளைபூண்ட ஓர் கை காண்பிக்கப்படும். இது கணவருடன் என்றென்றும் சேர்ந்து வாழ்ந்து வளை பூண்ட கையை உடைய மகளிராகத் திகழ்வதை குறிக்கும். மாண்டு போன கணவரின் நினைவுச் சின்னத்தை விதவையான மகளிர்கள் தோற்றுவித்தலும் பழக்கத்தே இருந்து வந்தது. மைசூரில் அதுக்கூர் என்ற இடத்து காட்டுப்பன்றியை வேட்டையாடிக் கொன்றபோது, தானும் இறந்த ஓர் வேட்டை நாய்க்கு எழுப்பபட்ட நினைவுச் சின்னம் உள்ளது. சில இடங்களில் வீரன் உயிரோடு இருந்த போதிலும் அவனின் வீர நிகழ்ச்சிக்காக எழப்பப்பட்ட நினைவுச் சின்னங்களும் உண்டு. விரதம் பூண்டு மன்னன் மாண்டபோது, தானும் மாண்ட வீரர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் எழுப்பப்பட்டன. இதை வடக்கிருத்தல் என்று தமிழிலக்கியங்கள் கூறும். நாகக்கல்: மணம் முடித்து பல ஆண்டுகளாகியும் மகப்பேறு இல்லாமைக்கு இப்பிறப்பிலோ அன்றி முன்பிறப்பிலோ நாகத்தைக் கொன்ற கொடுவினையே காரணம் என இன்றுவரை கொள்வோருமுண்டு. அவ்வினை தீர்க்க அரசமரத்தடியில் நாகக்கல் நட்டு வழிபடுவது ஓர் முறையாகும். இம்மாதிரி நாகக்கற்களில் இரண்டு அரவங்கள் பிணைந்த படியோ அன்றி ஓர் அரவோ செதுக்கப்படுதல் வழக்கம். சிவலிங்கமும், கண்ணன் சிலையும் இவற்றில் பொறிக்கப்படுவதும் உண்டு. சிலவற்றில் அரவு போன்ற உடலும் மனிதர் தலையும் காணப்படுவதுண்டு. கோயில்கள் சிந்துநதிப் பண்பாட்டைச்சார்ந்த மக்களின் வழிபாட்டு முறைபற்றி இன்னம் நன்கு அறிந்து கொள்ள இயலவில்லை என முன்பே கூறினோம். ஆதலின் அவர்களது காலத்து கோயிற் கலையைப்பற்றிக் கூற இயலாது. எனினும் இம் மக்கள் பொருளீட்டலையும் இவ்வுலகில் இன்பம் பெறுதலையும் முக்கியமாகக் கொண்டிருந்தனர். ஆதலின் இவர்களது காலத்தில் கோயில்கள் இருந்திருக்க முடியாது எனச்சில ஆராய்ச்சியாளர் கொள்கின்றனர். இவர்களது கட்டிடங்கள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டவை. இச்செங்கற்கள் தற்காலத்து உபயோகத்திலிருக்கும் செங்கற்களைவிட அளவில் மிகப்பெரியவைகள். களிமண் சுதைகளை கொண்டு கட்டப்பட்ட இக்கட்டிடங்கள் மிக நேர்த்தியான திட்டங்களோடும் சில இடங்களில் இரண்டு அல்லது மூன்று மாடிகளோடும் கட்டப்பட்டிருந்தன. இவைகளில் கூரைகள் தட்டையானவை. மிகப்பெரிய விட்டங்களாலும் பலகைகளாலும் ஆனவை. சில மிகப்பெரிய அறைகளை வழிபாட்டுக்காக உபயோகித்திருக்கலாம். ஆனால் இப்பண்பாடு கி. மு. இரண்டாயிரத்து ஐந்நூறில் மறைந்து பட்டது. செங்கல் கட்டிடக்கலையிலே இன்றளவும் போற்றும் வகையிலே அமைந்த இப்பண்பாடு மறைந்ததன் பயனாகப்பின்னர் தோன்றிய கலை மிகப் பழமையானதாகத்தான் துவங்கியது. கி. மு. இரண்டாயிரத்து ஐநூறில் இந்தியாவின் மேற்குப்பகுதி வழியாக வந்த ஆரியர்கள் நதிக்கரைகளில் தங்கினர். தங்கள் இருப்பிடங்களை மூங்கில்களினால் கட்டினர். வட்ட வடிவமான குடிசைகளைக் கட்டி வாழ்வது பழங் குடிமக்களின் மரபு. ஆரியர்களின் குடிசைகளும் வட்ட வடிவமானவைதான். மேலே மூங்கிற் கம்புகளால் கட்டி இலைகளைக் கொண்டு கூரைகளை வேய்ந்தனர். தங்கள் இருப்பிடங்களையும், கால்நடைகளையும் காட்டு மிருகங்களிடமிருந்து காக்க, மூங்கில்களினாலான வேலிகளைக் குடிசைகளைச் சுற்றி எழுப்பினர். வாயிற்கள் மட்டும் மனிதர் சென்று வர ஏதுவாக உயர்த்தி எழுப்பப்பட்டன. பல குடிசைகளைக் கொண்ட ஊர்களைச் சுற்றிலும் இது போன்று வேலிகள் எழுப்பப்பட்டன. இவ்வேலிகள்தான் பிற்காலத்தே பொளத்த ஸ்தூபங்களின் திருசுற்றிகளை அமைக்கப் பின்பற்றப்பட்டன. தட்டையான கூறைகள் பிற்காலத்தில் வளைந்த மூங்கில்களால் கட்டப்பட்டன. இதன் பயனாக, இந்திய கட்டிடக்கலையில் வளைந்த மாடிகளும் சிகரங்களும் அதிகமாகத் தோன்றலாயின. மேல் நாடுகளில் இவ்வழி காணப்படுவதில்லை. ஆரியர்களின் பண்பாடு வளர வளர மூங்கில்களுக்குப் பதிலாக மரங்களிலிருந்து செதுக்கப்பட்ட விட்டங்கள் உபயோகப் படுத்தப்பட்டன. மரங்களினாலான வீடுகளும் மாளிகைகளும் பிற்காலத்து மறைந்துபட்டமையின் இக்காலத்து எஞ்சிய கட்டிடங்கள் ஏதும் இல்லை. இக்கால இலக்கியங்களான மகாபாரதம், இராமாயணம் முதலியவை வானளாவ தோன்றும் கட்டிடங்களைப்பற்றி கூறுகின்றன. மொளரியர்:- மொளரியர் காலத்திலிருந்துதான் இந்தியாவின் சரித்திரம் தெளிவாக விளங்குகிறது. சிற்பக் கலையைப் போன்று கட்டிடக் கலையிலும், அசோகப்பேரரசன் பாரசீக வழியை பின்பற்றினான். அசோகன் புத்தரின் பொன் மொழிகளை பாறைகளில் அழியாத செல்வங்களான சாசனங்களாகப் பொறித்து வைத்தான். வானளவும் கல்தூண்களை நாட்டி அவற்றிலும் புத்தரது பொன்மொழிகளைப் பொறித்தான். ஸ்தூபங்களை கட்டுவித்தான் குகைகளைக் குடைந்து அஜிவகர்கள் என்ற துறவிகள் வசிக்க வழிவகுத்தான். பெரிய மாளிகை ஒன்று எழுப்பினான். மகதத்துத் தலைநகரான ராஜகிருகத்தில் அசோகனின் மாளிகையின் பகுதிகள் எஞ்சியுள்ளன. சீன யாத்ரிகனான ஹுவான்சுவாங் இந்த மாளிகையின் தோற்றத்தைப் புகழ்ந்து எழுதியுள்ளான். அசோகனது கல்தூண்களைப் பற்றி முன்னரே கூறியுள்ளோம். ஸ்தூபம்:- இறந்து பட்டோரின் உடலை சிதை அடுக்கி அதில் வைத்து எரித்து விடுவது நம்நாட்டில் வழங்கிவரும் ஒரு பழக்கம். அது போல் உடலைப் பேழைகளில் வைத்து பூமியில் புதைத்துக் கல்லறை எழுப்பு வதும் மிக பழமையான வழக்கம். புத்தர் இறந்தபின்னர் அவரது புனித எலும்புகளை அடக்கம் செய்த இடத்தில் தோன்றிய கல்லறை வழிபாடே பிற்காலத்தில் ஸ்தூப வழிபாடாக மாறிற்று என ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இது போன்று மிகப்புகழ் பெற்ற பொளதத் துறவிகளின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டு அதன் மேல் ஸ்தூபங்கள் எழுப்பப்பட்டன. இவ்வித ஸ்தூபங்களிலிருந்து புனித எலும்புகளைக் கொண்ட பேழைகள் (குவளைகள்) கிடைத்துள்ளன. இவைகள் ஸ்படிகக் கற்களாலும், தங்கம் முதலிய உலோகங்களாலும் ஆனவை. மிகப்பழமையான ஸ்தூபங்கள் செங்கல்லினால் ஆனவை. பின்னர் அதன் சுற்றுப்புரங்களில் காரை பூசப்பட்டன. சில ஸ்தூபங்கள் பாறைகளைக் குடைந்து ஒரே கல்லிலிருந்து குடையப்பட்டன. இவற்றில் சில ஸ்தூபங்களில் உள்ளே பொளத்த துறவிகளின் எலும்புகள் வைக்கப்பட்டன. ஸ்தூபம் வட்டம் அல்லது சதுரமான அடிப்பகுதியின் (மேதி) மேல் எழுப்பப்படும். இதைச் சுற்றி திருச்சுற்று வழிகள் உண்டு. ஸ்தூபத்தின் மேலே ஏற படிகள் (சோபானம்) உண்டு. ஸ்தூபம் உருண்டை வடிவான உருவுடையது. இதை அண்டம் அல்லது கர்ப்பம் என்பர். ஸ்தூபத்தின் மத்தியில் புதைக்கப்ட்ட ஓர் கம்பம், இதன் வழியாக மேலே நீண்டு காணப்படும். உலோகத்தாலான இக்கம்பம் பல குடைகளை (சத்ரம்) சின்னங்களாகத் தாங்கி நிற்கும். அதன் மேல் மழைக் குடங்கள் (கலசங்கள்) வைக்கப்பட்டிருக்கும். ஸ்தூபங்களைச் சுற்றிலும் திருசுற்று வேலிகள் (வேதிகா) எழுப்பப்பட்டன. இவைகள் மரத்தாலான வேலிகள் போன்றவை. இவ்வேலிகளின் அடிப்பகுதியை ஆலம்பனம் என்றும் நெடிலாய் நிற்கும் கல் தூண்களை தாபா என்றும் குறுக்கில் பொறுத்தி வைக்கப்பட்ட கல் பலகைகளை ஊசி (சூசி) என்றும் கூறுவர். இவைகளின் மேல் உள்ள குறுக்கு விட்டங்களுக்கு உஷ்ணீஷா என்று பெயர். இந்த ஸ்தூபங்களை அடைவதற்கு நான்கு திசைகளிலும் தோரணவாயில்கள் எழுப்பப்பட்டன. மொளரியர் காலத்து ஸ்தூபங்கள் செங்கல்லினால் கட்டப்பட்டவை. பச்சை செங்கல்களை உபயோகித்து கட்டப்பட்ட இக்காலத்து ஸ்தூபம் சாஞ்சியில் உள்ளது. இதன் மேல்புறம் பூசப்பட்டு, பின்னர் சுண்ணாம்பு பூசப்பட்டு விளங்கியது. சுற்று புறங்களில், விளக்குகள் வைப்பதற்குச் சிறு சாளரங்கள் இருந்தன. இந்த ஸ்தூபம் பிற்காலத்தில் கருங்கற்களினால் மூடப்பட்டு பெரிதாக்கப்பட்டது. வழிபாட்டிற்காக ஏற்படுத்திய ஸ்தூபங்களை அழிப்பது பாபம் எனக்கொண்ட ஆன்றோர்கள் அழியும் பொருள்களால் கட்டப்பட்ட இந்த ஸ்தூபங்களை அழியாத கற்களினால் மூடிப்பெரிதாக்கினர். இவ்விதம் மூன்று முறை பெரிதாக்கப்பட்ட ஸ்தூபங்கள் உள்ளன. புத்தரின் மறைவுக்குப் பின்னர் அவரது புனித எலும்புகளை எட்டு பகுதிகளாக்கி, எட்டு திசைகளுக்கு எடுத்துச்சென்று ஸ்தூபங்களை எழுப்பியதாகச் சரித்திரம் கூறுகிறது. இவற்றில் ஏழு ஸ்தூபங்களிலிருந்து புத்தரின் புதை அங்கங்களை எடுத்து சுமார் எண்பத்து நான்காயிரம் ஸ்தூபங்களை அசோகப் பேரரசன் எழுப்பியதாக அறிகிறோம். அனால் அவற்றில் எஞ்சியவை மிகச்சிலவே, சாஞ்சி, சாரநாத் இவ்விடங்களில் உள்ள செங்கல் ஸ்தூபங்கள் அசோகனால் கட்டப்பட்டவையாகும். ஸ்தூபங்கள் புத்தரின் சரித்திரத்தில் முக்கிய சம்பவங்கள் நடந்த இடங்களிலும் யாத்ரீகர்களின் வழிகளிலும் எழுதப்பட்டன. சுங்கர்கள் காலத்தில் தான் செங்கல்லினால் கட்டப்பட்ட ஸ்தூபங்கள் பெரிதாக்கப்பட்டன. சாஞ்சியில் உள்ள மொளரிய ஸ்தூபம், இரண்டு மடங்கு பெரிதாக்கப்பட்டது. இதன் பயனாக, ஸ்தூபத்தை சுற்றிலும் இருந்த மரத்தாலான திருசுற்று வேலிகள் அழிந்துப்பட்டன. அதன் பிரதியாக கல்லினாலான வேலிகள் எழுப்பப்பட்டன. இகற்கள் சிற்ப வேலைப்பாடுகள் ஏதுமின்றி எளிமையான மரவேலிகளைப் போன்றே முதலில் தோன்றின. இது போன்றே ஸ்தூபத்தில் மேல்பகுதியிலும் ஒருசிறு வேலி தோன்றியது. இது புனிதக்குடையை காத்து நின்றது. சாஞ்சியில் தோன்றிய இவ்வேலிக்குப் பின்னர் பார்குத்திலும் வேலி எழுப்பப்பட்டது. பார்குத் ஸ்தூபம் பெரிதாக்கப்படவில்லை. ஆயினும் சுற்று வேலிகளாக அமைந்த கற்களில் ஜாதகக்கதைகள் சிற்பமாக செதுக்கப்பட்டன. இவ்விதம் தோன்றிய சிற்பங்களைப் பற்றி முன்னரே தெரிவித்தோம். ஆந்திர அரசர்கள் காலத்தில் சுற்று வேலிகளின் வாயில்கள் மிகப்புகழ்வாய்ந்த சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டன. சாஞ்சி ஸ்தூபத்தின் நான்கு புறங்களிலும் தோன்றிய தோரண வாயில்கள் மிகப்புகழ் கொண்ட சிற்பங்களை உடையவை. பார்ப்போர் மனங்கவர் வனப்புடையன. இக்காலத்தில் தக்காணத்தில் தோன்றிய ஸ்தூபங்களில் மிகப்புகழ் பெற்றது அவராவதி ஸ்தூபம். தக்காணத்தில் தோன்றிய ஸ்தூபங்களில் தோரண வாயில்கள் கிடையா. அவற்றிற்குப் பதிலாக நான்கு திசைகளிலும் சுற்று வேலிகளின் வாயிலை நோக்கி ஆயகத் தூண்கள் நிறுவப்பட்டன. சுற்றுவேலி கற்களில் மட்டுமின்றி ஸ்தூபத்தின் புறங்களை மூடிய கற்களிலும் சிற்பங்கள் தோன்றின. இவ்விதம் வளர்ந்த ஸ்தூபங்கள் பிற்காலத்தில் மறைந்துபட்டன. பொளத்தமதம் மங்கத் தொடங்கியவுடன், மக்கள் உள்ளத்திலே இவை ஏற்படுத்திய புனிதத்தன்மையும் மறைந்தன. கலை அறிவற்ற சில மனிதரின் கைப்பட்ட அரும்பெரும் செல்வங்கள் அழிந்தன. சிதைந்தன. சீர்குலைந்தன. எஞ்சியவைகளில் சிலவற்றைமட்டும் இன்று நாம் காண முடிகிறது. பார்குத் சிற்பங்களை கல்கத்தா பொருட்காட்சியிலும் அமராவதி சிற்பங்களை சென்னை பொருட்காட்சியிலும் காணலாம். அழகுமிகும் அமராவதி ஸ்தூபம், முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் நன்கு விளங்கிய ஸ்தூபம், அழிந்துபட்ட கதையை கேட்பின் கல்லும் கசிந்துருகும். இச்சிற்பங்களை வெட்டி எடுத்துச் சிற்பங்களைச் சிதைத்து வாயிற் படிகளாக உபயோகித்தனர் சிலர். புதைபொருள் இருக்குமென தகர்த்தனர் சிலர். இவ்விதம் மாண்டுபட்ட கலைச்செல்வங்கள் ஆயிரமாயிரமாகும். சைத்ய அறைகள்:- ஸ்தூபங்களைப் புறத்தே கட்டி மக்கள் மனதிலே மாபெரும் கிளர்ச்சியை ஊட்டிய துறவிகள் தங்களது வாழ்க்கை புனித மடைய மனித சஞ்சாரமற்ற மலைச் சாரல்களிலே தங்கி தவமிருந்தனர். இயற்கையாகப் பிளந்திருந்த மலைச் சரிவுகளில் குகைகளைக் குடைந்து குகைக் கோயில்களைத் தோற்றுவித்தனர். இக்குகைகளில் ஸ்தூபங்களையும் குடைந்து நிறுத்தினர். ஸ்தூபங்களின் முன்னர் வழிபாட்டுக்காகத் துறவிகள் கூடுவதற்கு ஓர் அறையும் குடைந்தனர். இவற்றை சைத்ய அறைகள் என்று கூறுவர். இவ்விதம் முதன்முதலில் தோன்றிய சைத்ய அறைகள் மரத்தாலான குடிசைகளின் பிரதிகளாகும். மொளரிய காலத்து தோன்றிய பராபர் மலைத்தொடரில் உள்ள லோமஸ் ரிஷி குகையும், சுதாமர் குகையும் வளைந்த மேல் கூரைகளை உடைய குடிசைகளைப் போலவே தோற்றமளிக்கின்றன. சூரிய வெளிச்சம் தோன்றுவதற்கு மரத்தாலான சாளரங்கள் போன்று சாளரங்கள் தோன்றின. இவற்றைத்தான் சைத்ய சாளரங்கள் என்பர். பிற்காலத்தில் எங்கும் மிகவும் அதிகமாகக் காணப்படும் இவற்றை லோமாஸ் ரிஷி குகைவாயிலில் தான் முதன்முதலில் காண்கின்றோம். அதன் பின்னர் குடைந்து எடுக்கப்பட்ட ஸ்தூபம் உடைய இச்சைதய அறைகளில் நீண்ட சதுரமான அறையும் ஸ்தூபத்தை சுற்றிவந்து வழிபட பின்புறம் வளந்த வழிகளும் குடையப்பட்டன. குதிரை லாடத்தைப் போன்ற இத்திட்டத்தை ஒட்டி பிற்காலங்களில் சில கோயில்கள் கட்டப்பட்டன. விஹாரங்கள்:- மனித குலத்திடமிருந்து பிரிந்து காடுகளில் தவமிருந்த பொளத்த துறவிகளை அசோகன் சங்கங்களாக கூட்டுவித்தான். இவர்கள் காடுகளில் குடிசை கொண்டு வாழ்ந்தது போல, மலைச் சாரல்களில் அறைகள் குடைந்து வசித்தனர். துறவிகள் வசிப்பதற்கெனப் பல அறைகளும் அனைவரும் கூடுவதற்கு மத்தியிலே ஓர்பெரும் அறையும் குடையப்பட்டன. இவ்விதம் ஏற்பட்ட இடங்களுக்கு விஹாரங்கள் எனப்பெயர். இவைகளும் சைத்ய அறைகளைப் போன்று மரங்களாலான குடிசைகளை ஒத்திருந்தன. இவ்விதம் தோன்றிய விஹாரங்கள் நாளடைவில் மிகப்பெரியதாகவும் நன்கு திட்டமிட்டு குடையப் பட்டவைகளாகவும் காணப்படுகின்றன. முந்தய குகைகளில் சிற்பங்கள் ஏதும் இல்லையெனும் பாரசீகத்து வழியைப் பின்பற்றித் தோன்றும் தூண்கள் உள்ளன. இக்காலத்தில் புத்தரை மனித உருவில் படைக்காமல் சின்னமாகத் தொழுது வந்தமையின் சிற்பங்கள் அதிகம் இல்லை. நாசிக், அஜந்தா முதலிய இடங்களில் உள்ள சைத்ய குகைகள் கி. மு. நூற்றைம்பதை சேர்ந்தவையாகக் கொள்லாம். கீழ் மகுதியில் கதவுகளும் மேல்பகுதியில் சைத்யச் சாளரங்களும் உள்ளன. நாகபான குகை விஹாரம் இக்காலத்தை சேர்ந்ததாகும். பாஜா குகை விஹாரம் இவற்றிற்கும் முந்தய காலத்ததாகும். முந்தய சைத்ய குகைகளில் பெரியதும் இந்தியாவில் உள்ள எல்லா சைத்ய குகைகளிலும் மிக அழகும் சிறப்பும் கொண்டது கார்லி என்ற இடத்தில் உள்ளது. நூற்றிருபத்தியைந்து அடி நீளமும், இருபத்தியைந்து அடி அகலமும், இருபத்தியைந்து அடி உயரமும் உள்ள இப்பெரும் சைத்ய குகை கிறிஸ்தவாபதத்தின் முதல் நூற்றாண்டைச் சார்ந்தது. நாசிக் குகையின் முகப்பைப் போன்று இங்கும் கீழ்பகுதி, மேல்பகுதி என இரு பிரிவுகளைக் காணலாம். கீழ் பகுதியில் மூன்று வாயில்கள் உள்ளன. மேல் பகுதியில் மிகப்பெரிய சைத்ய சாளரங்கள் உள்ளன. இவற்றில் வளைந்த வடிவைத்தாங்க உபயோகிக்கப்பட்ட மரவிட்டங்கள் இன்னமும் உள்ளன. ஸ்தூபம் உயர்ந்த உருண்டை வடிவானது. இரண்டு திருசுற்று வேலிகளை உடையது. இதன்மேல் அக்காலத்தே வைக்கப்பட்ட மரத்தாலான குடை இன்னமும் உள்ளது. வழிபாட்டு அறையின் இருமருங்கிலும் உள்ள தூண்கள் பாரசீகத் தூண்களைப் போன்று உள்ளன. கீழ்பகுதிகளின் இரண்டு வாயில்களின் இடையில் சிற்பங்கள் உள்ளன. பல மாடிகளைக் கொண்ட கட்டிடங்களை யானைகள் தாங்கி நிற்பது மிக அழகு வாய்ந்த அமைப்பாகும். ஸ்துபம், சைத்தியம், விஹாரம் போன்று பொளத்த மதத்தினர் போதி மரங்களையும் போற்றிப் பணிந்தனர். இவ்வழிபாட்டைக் குறிக்கும் வகைகளில் பல சிற்பங்கள் உள்ளன. புத்தகயாவில் புத்தர் ஞானம் பெற்ற இடத்தில் போதிமரத்தைச் சுற்றிலும் எழுப்பப்பட்ட சுற்று வேலி இத்தகையதாகும். இவற்றின் சிறப்புகளைப் பற்றி முன்னரே கூறியுள்ளோம். குஷானர்கள்:- குஷாணர்கள் பொளத்த மதத்தைப்போற்றி வளர்த்தனர் என்று கூறினோம். இவர்களது ஸ்தூபங்கள் ஆப்கானிஸ்தானில் ஜல லாபாத், பாமியான் முதலிய இடங்களில் உள்ளன. பாமியான் என்ற இடத்தில் பல குகை விஹாரங்களும் உள்ளன. இவையனைத்தும் கனிஷ்கருக்குப்பிந்திய காலத்தவைகள். கனிஷ்கர் காலத்து மிக முக்கிய மான ஸ்தூபம் பெஷாவரில் தோற்றுவிக்கப்பட்டது. சீன யாத்ரிகர்களின் வாயிலாக இது மிகப்பெரியது எனவும், மிகப்புகழ் கொண்டது எனவும் அறிகிறோம். இதன் அடிப்பாகம் ஐந்து அடுக்குகளாக நூற்றியைம்பது அடி உயரமிருந்தது. இதன் மேல் பதினைந்து மாடிகளால் ஆன ஸ்தூபம் ஸ்தூபம் மரத்தாலானது. இதன் மேலிருந்த இரும்புத் தூணில், இருபத்தைந்து தங்கமுலாம் பூசிய குடைகளும் இருந்தன. இதன் உயரம் அறுநூற்று முப்பத்தி எட்டு அடி, குறுக்களவு இருநூற்றி எண்பத்தி ஆறு அடி. இம்மாபெரும் ஸ்தூபம் இந்தியாவிலேயே மிகப்பெரியதாகும். குப்தர்கள்:- குப்தர்கள் காலத்து கட்டிடக் கலைகளை பொளத்த குகைகள் என்றும், இந்துகுகைகள் என்றும், கோயில்கள் என்றும், மூன்று வகையாகப் பிரிக்கலாம். இக்காலத்துப் பொளத்த குகைக் கோயில்கள் அவுரங்காபாத், எல்லோரா, அஜந்தா, பாக் முதலிய இடங்களில் உள்ளன. சைத்ய அறைகள்:- இருபத்தெட்டு குகைகள உடைய அஜந்தா குகைத்தொடரில் ஐந்து குப்தர் காலத்துக்கு முந்தியது. மற்றவை குப்தர் காலத்தவை. இவற்றில் பத்தொன்பது, இருபத்தொன்பது ஆவது குகைகள் சைத்திய கோயில்களாகும் முந்திய சைத்தியங்களான ஒன்பது, பத்தாவது குகைகளைப் போன்ற திட்டம்தான் இங்கும் காணப்படுகின்றன. பத்தொன்பதாவது குகை வகாடக அரசனான ஹரிசேனன் காலத்தது. மற்ற சைத்தியங்களைப் போன்று இதன் மத்தியில் சைத்தியம் அல்லது ஸ்தூபம் உண்டு. இதில் நின்ற நிலையில் புத்தரின் சிலை செதுக்கப்பட்டுள்ளது. அறையில் அழகான வேலைப்பாடுடைய கல்தூண்கள் செதுக்கப்பட்டுள்ளது. இருபத்தியாராவது சைத்யகுகை பிற்காலத்தைச் சார்ந்தது. ஸ்தூபத்தில் அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை தோற்றமளிக்கிறது. இதை பிரலம்பபாத நிலை என்று அழைப்பர். முந்தய குகைகளைப் போலன்றி இக்குகைகளில் சிற்பங்கள் அதிகமாக முகப்பிலும் உள் அறைகளிலும் செதுக்கப்பட்டன. புத்தர் பல நிலைகளிலே படைக்கப்பட்டார். பெரிய அளவில் தோன்றிய சைத்ய சாளரங்கள் அளவில் சிறியதாக்கப்பட்டன. எல்லோராக் குகைத் தொடரில் உள்ள விஸ்வகர்மா குகை சைத்திய மாகும். அஜந்தா சைத்திய குகைகளைப் போலவே திட்டம் அமைந்திருந்த போதிலும் அளவில் இது மிகப்பெரியது. அஜந்தா சைத்யங்களில் சைத்யத்தை சுற்றி வர வழியுண்டு. ஆனால் இங்கு சைத்யம் பின்சுவரை ஒட்டிச் செதுக்கப்பட்டுள்ளது. ஆதலின் சுற்றிவரும் வழியில்லே. ஆனால் மற்ற சைத்ய அறைகளில் ஸ்தூபங்கள்தான் முக்கியமாகத் தோற்றுவிக்கப்பட்டன. இங்கு ஸ்தூபத்தில் உள்ள புத்தர் சிலை மிகப்பெரியதாக அமைந்து, ஸ்தூபத்தின் நிலையை மங்கச்செய்கிறது. சைத்ய சாளரங்களின் நிலை மறைந்து வட்டமான சாளரங்கள் தோன்றலாயின. இவ்விதம் சிலை வழிபாடு அதிகமாகவே சைத்ய வழிபாடு குன்றி சைத்யங்கள் பிற்காலத்தில் மறைந்துபட்டன. விஹாரங்கள்:- குப்தர் காலத்து விஹாரங்களை காட்டிலும் காலத்தில் முந்திய விஹாரங்களில் நடுவில் தூண்கள் கிடையா. அஜந்தா விஹாரங்களில் இருப்பது குகைகள் இக்காலத்தவை. விஹாரங்களின் பின்சுவரில் ஓர் அறை குடையப்பட்டு அதில் அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை படைக்கப்பட்டது. அஜந்தாவில் உள்ள பதினோறாவது குகையில்தான் முதன்முதலாகத்தூண்கள் தோன்றுகின்றன. இவ்விடத்திய விஹாரக்குகைகளில் மிக முக்கியமானவை ஒன்று, இரண்டு, பதினாறு, பதினேழாகும். பதினாறு, பதினேழாம் குகைகள் வாகாடக மன்னன் ஹரிசேனன் காலத்தவை. சீரான திட்டங்களோடு தோற்றுவிக்கப்பட்ட இவைகளில்தான் மிகப்புகழ் வாய்ந்த அஜந்தா ஓவியங்கள் உள்ளன. முற்றுப்பெறாத இருபத்தி நான்காவது குகை, மிக அழகும் நேர்த்தியான திட்டமும் வாய்ந்தது. இரண்டாம் புலிகேசி மன்னன் நரசிம்ம பல்லவன் கைப்பட்டு மாண்டதாலும் தக்காணத்தில் பின்னர் தோன்றிய குழப்பங்களாலும் இக்கலை தடைபட்டு, மங்கிப்பின்னர் மறைந்தது. ஹிந்து குகைகள்:- ஹிந்துக்கள் சிலை வழிபாட்டை புத்த மதத்திற்குப் பின்னர்தான் தழுவியிருக்க வேண்டும். பேஸ் நகர் என்ற இடத்து ஓர் விஷ்ணு கோயில் இருந்த சின்னங்கள் உள்ளன. இது கி. பி. சுமார் நூற்றுநாற்பதுக்கு முந்தியதாகும். இவ்வாலயம்தான் ஹிந்துக்களது கோயில்களில் மிகப்பழமை யானது. இங்கு எஞ்சியுள்ள செங்கற்கட்டிடங்களில் முதன் முதலாக சுண்ணாம்புச் சுதை, கற்களின் இடையில் வைக்கப்பட்டு இருகற்களை பிணைக்கும் பொருளாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அருகிலுள்ள கருடஸ்தம்பம் ஹிலியோடோரஸ் என்ற கிரேக்க தூதனால் எழுப்பப்பட்டது. இதிலுள்ள சாஸனம் சரித்திர காலத்தைத் தீர்மானிக்க மிகவும் உபயோகமாக உள்ளது. புத்த சைத்தியங்களையும் விஹாரங்களையும் போன்று இக்காலத்தில் குகைக்கோயில்களை காண்கிறோம். உதயகிரி மலைத்தொடரில் உள்ள குகைகளில் சில ஹிந்துக்களது குகைகளாகும். இங்கு இயற்கையாய் அமைந்த பாறைப் பிளவுகளைக் குடைந்து குகைக் கோயில்களையும், அவற்றின் முன் கல்லினால் கட்டிய மண்டபங்களை இணைத்துக் கோயில்களை தோற்றுவித்தனர். கட்டிடக்கலையில் இவை ஓர் தனி வழியாகும். இங்குள்ள வராக மூர்த்தியின் சிலை மிகப்புகழ் கொண்டது. ஓர் குகைக்கோயிலில் இரண்டாம் சந்திரகுப்தனின் கி. பி. நாநூற்று ஒன்று சாஸனம் உள்ளது. முந்திய சாளுக்கியரின் தலைநகரான வாதாபிபுரம் தற்காலத்து பாதாமி என்று அழைக்கப்படுகிறது. இங்கு குகைக்கோயில்களும், கட்டிடக் கோயில்களும் உள்ளன. உதயகிரி கோயில்களுக்குப் பின்னர் தோன்றிய இக்குகைகள் இக்கலையின் முன்னேற்றத்தைக் குறிக்கின்றன. இக்குகைகள் ஆறாம் நூற்றாண்டின் முன்பகுதியைச் சார்ந்தவை. குகைக் கோயிலின் தொடர்ச்சியாக எல்லோராவில் உள்ள ஹிந்து குகைக் கோயில்களையும் ஆராய்வோம். முந்திய சாளுக்கியர்கள் சற்றேறக்குறைய குப்தர்களின் சம காலத்தவர்கள். இவ்விருவர்களது கலைகளிடையே வேறுபாடு கிடையாது என முன்னரே கூறினோம். எல்லோரா குகைக் கோயில்கள் முந்திய சாளுக்கியர் காலத்தவை. இங்குள்ள பதினறு ஹிந்து குகைக் கோயில்களில் தசாவதார, ராவண்-கா-காய், ராமேஸ்வரா, துமார்லேனா, கைலாசநாதர் கோயில்கள் மிக முக்கியமானவை. இங்குள்ள கோயில்களில் மிகப்பழமையானது தசாவதார குகை கோயிலாகும். இரண்டு மாடிகளை உடைய இக்கோயில் பல தூண்களை உடைய பெரிய கூடமும், பின்பகுதியில் கடவுள் அறையும் உள்ளன. இதன் திட்டம் புத்த விஹாரங்களை ஒத்து காணப்படுகின்றது. துறவிகள் வசிக்கும் அறைகளுக்குப்பதிலாக சிற்பங்கள் உள்ள கோஷ்டங்கள் காணப்படுகின்றன. குகை வாயிலில் ஓர் மண்டபம் குடையப்பட்டுள்ளது. சிறிது வேறு பாடுடைய அமைப்பை ராவண்-கா-காய், ராமேஸ்வர குகைகளில் காணலாம். முன்போல் தூண்களை உடைய கூடமும் பின்பகுதியில் கனவடிவான கடவுள் அறையைச் சுற்றிவர திருச்சுற்றுவழி இங்கு காணப்படுகிறது. ராமேஸ்வர குகையில் கடவுள் அறைக்கு எதிராக நந்தி கொண்ட ஓர் மண்டபம் வெளியே தோற்றமளிக்கிறது. இக்குகையில் உள்ள சிற்பங்கள் மிகப்புகழ் கொண்டவை. இதற்குப்பின் தோன்றியது துமார்லேனா குகையாகும். அமைப்பிலும், திட்டத்திலும் அழகு வாய்ந்த இக்குகை, ஹிந்துக்களின் குகைக் கோயில்களில் மிக உன்னத நிலை வகிக்கிறது. குகையின் வாயில் சில வழிகளைக் கொண்டுள்ளது. கூடம் நீண்ட சதுரவடிவுள்ளது. பின்புறத்தே திருச்சுற்றுடன் கூடிய கடவுள் அறை உள்ளது. கடவுள் அறையின் நான்கு பக்கங்களிலிருந்தும் உள்ளே செல்லப்படிகளும் வழியும் உள்ளன. மிக்பெரிய துவாரபாலர்களின் சிற்பங்கள் திசைகளில் உள்ளன. கூடத்தின் இருமருங்கிலும் அறைகள் உள்ளன. ராஷ்டிரகூடர் காலத்து தோன்றிய எலிபெண்டா குகைக்கோயிலும் அமைப்பில் துமார்லேனாவை ஒத்து காணப்படுகிறது. துமார்லேனா போன்ற சீரான அமைப்பு இங்கு காணப்படவில்லை. எனினும் இங்குள்ள சிற்பங்கள் எல்லோரா சிற்பங்களை காட்டிலும் மிக வனப்பும் புகழும் வாய்ந்தவை. தமிழ் நாட்டில் தோன்றிய குகைக் கோயிலைப்பற்றி பின்பு விவரிப்போம். கட்டிடக்கோயில்கள்:- கோயில் கட்டிடங்கள் குப்தர் காலத்திற்கு முன்னர் விரைவில் அழிந்துபடும் பொருள்களால் கட்டப்பட்டன. அக்காலத்து சாஸனங்கள் நாட்டின் பல பகுதிகளில் தோன்றிய கோயில்களைப் பற்றி கூறுகின்றன. சீன யாத்ரீகரான ஹுவான்சுவாங், நம் நாட்டில் தோன்றிய பல கோயில்களைப் புகழ்ந்து எழுதியுள்ளார். குகைக் கோயில்கள் ஹிந்துக்களின் வழிபாட்டுக்கு ஒவ்வாத காரணத்தால் கட்டிடக்கோயில் அதிகம் தோன்றலாயின. குப்தர் காலத்து கோயில்கலையை ஐந்து பிரிவுகளாக பிரித்துக்கொள்லாம். - தட்டையான மாடமும், சிறிய முன் மண்டபமும், உள்ள சதுரக் கோயில்கள் - தட்டை மாடமுடைய சதுரக்கோயில்களைச்சுற்றிவர மேலே மூடிய திருச்சுற்றுகளை உடைய கோயில்கள். - சதுரக்கோயில்களின் மேலேசிறிய சிகரம் உள்ள கோயில்கள் - நீண்ட சதுரமும் வளைந்தலாடம் போன்ற அமைப்புடைய கோயில்கள் - வட்டமான அமைப்புடைய கோயில்கள். நான்கு, ஐந்தாவது வகைகள் புத்த சைத்யங்களையும் ஸ்தூபங்களையும் போன்றவையாகும். செஸார்லா என்ற இடத்து கபோதேஸ்வரர் கோயில் பின்புறம் வளைந்த லாட அமைப்பு கொண்டது. ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்த ஆய்ஹோல் துர்க்கை கோயிலும் இவ்வமைப்புடையது தான். எனினும் இக்கோயிலின் கடவுள் அறையின் மேலே சிறிய சிகரம் ஒன்றும் கடவுள் அறையைச் சுற்றி பல தூண்கள் கொண்ட திருசுற்று ஒன்றும் உள்ளது. பழமையான நகரமான ராஜகிருஹத்து மனியார்மாத் என்ற கோயில் வட்டமான ஸ்தூபம் போன்ற அமைப்பு உடையது. இதன் புறங்களில் உள்ள கோஷ்டங்களில் மிக அழகிய சிற்பங்கள் உள்ளன. இக்கோயில் செங்கல்லினாலும், சிற்பங்கள் சுதையாலும் ஆனவை. குப்தர் காலத்து எளிமையும் அழகும் வாய்ந்த கோயில் சாஞ்சி கோயிலாகும். இது சதுரமான கடவுள் அறையும், சிறிய முன் மண்டபும், சிகரங்கள் ஏதுமற்ற தட்டையான மாடமும் கொண்டது. இதன் சுற்றுப்புறங்களில் சிற்பங்கள் ஏதுமின்றி எளிமையான அமைப்புத் தென்படுகிறது. திகரவா, எரான் என்ற இடங்களிலும் இது போன்ற குப்தர் காலக் கோயில்கள் உள்ளன. இரண்டாவது வகை, முதல் அமைப்பின் வளர்ச்சியெனலாம். சதுரமான கடவுள் அறையைச்சுற்றிலும் சதுரமான அமைப்புடைய திருச்சுற்று அல்ல பிரதஷிண வழி அமைந்துள்ளது. இதை ஓர் சதுரத்துள் மற்றோர் சதுரம் எனலாம். நாச்னாகுதாரா என்ற இடத்து பார்வதி கோயில் இவ்வமைப்புடையது. ஆய்ஹோலில் உள்ள லட்கான் கோயிலும் இவ்வமைப்புக்கொண்டது தான். எனினும் இதன் கடவுள் அறையின்மேல் பட்டையான மாடமுடைய ஒரு மாடி, அல்லது சிகரம் உள்ளது. மூன்றாவது வகை சிறிய சிகரங்களை உடைய கோயில்களாகும். தேவ்காரில் உள்ள தசாவதாரக் கோயில் முதன்முதலில் சிகரம் உடைய கோயிலாக காணப்படுகின்றது. இதன் மேல்பகுதி அழிந்து பட்டமையின் சிகரம் அல்லது விமானத்தின் அமைப்பை நிச்சயித்துக் கூறமுடியாது. புத்தகயாவிலுள்ள மகாபோதி கோயிலும் இக்காலத்தது. இதே அமைப்பு பூண்டு விளங்கியதெனினும், பிற்காலத்து இது பல முறை புதுப்பிக்கப்பட்டுவிட்டது. உயர்ந்த அதிஷ்டானத்தின் மீது நான்கு புறங்களிலிருந்தும் படிகளை உடைய கடவுள் அறையாக தேவ்கர் கோயில் அமைந்துள்ளது. கர்ணக் கூடுகளில் சைத்யம் சாளர அமைப்பைக் காண்கிறோம். முன்புறத்தைத்தவிர மற்ற மூன்று புரங்களிலும் புகழ்வாய்ந்த சிற்பங்கள் உள்ளன. ராமாயணக் காட்சிகள் தொடர் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. சிகரத்தின் தோற்றத்திலிருந்து, தற்போதுள்ள புத்தகயா மகாபோதிக் கோயிலின் சிகரம் போன்று, தட்டையாக மேலே செல்லச் செல்ல சிறுத்துச் செல்லும் சிகரம்தான் இக்காலத்து அமைப்பாக இருக்கும் என ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். பித்ரகானில் உள்ள செங்கல் கோயிலும் இந்த அமைப்பை உடையதெனினும் நான்கு புறங்களின் மத்தியிலிருந்து வெளிநீண்ட ஓர் அமைப்பு காணப்படுகிறது. சிகரம் இவ்வமைப்புடன் விளங்குகின்றது. இதுவே பிற்காலத்து வட இந்திய சிகரங்களின் அமைப்புக்கு அடிகோலியாக அமைந்திருக்கவேண்டும். முந்தய சாளுக்கிய காலத்து கோயில்களையும், குப்தர் காலத்து கோயில்களுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளோம். ஆய்ஹோலில் உள்ள கோயில்கள் சாளுக்கியர் காலத்தவையாகும். சாளுக்கியர்கள் குப்தர் வழியைச்சில இடங்களிலும், சில சமயம் தென்னாட்டு வழியையும் பின்பற்றினர். இதற்கு எடுத்துக்காட்டாக பட்டடக்கல் கோயில்களைக் கூறலாம். பட்டடக்கல்லில் உள்ள பாபநாதர் கோயில் வட இந்திய வழியைகொண்டு கட்டப்பட்டுள்ளது. ஆனால் இரண்டாம் விக்ரமாதித்யன் மனைவியால் கட்டப்பட்ட விரூபாஷன் கோயில் காஞ்சி கைலாசநாதர் கோயிலைப் போன்றது. இம் மன்னன் காஞ்சியைத் தோற்கடித்து அவ்விடத்தில் சாஸனம் பொறித்து வைத்துள்ளான். கைலாயநாதர் கோயிலை ஒவ்வொரு அங்கத்திலும் ஒத்து கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் காஞ்சியிலிருந்து கொண்டுவரப்பட்ட சிற்பங்களால் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர் துணிபு. இக்கோயில் தென்னந்திய வழியைக் கொண்டது. இது போன்று எல்லோராவில் ராஷ்டிரகூட மன்னனான இரண்டாம் கிருஷ்ணனால் தோற்றுவிக்கப்பட்ட கைலாயநாதர் ஒற்றைக்கல் கோயிலும் தென்னிந்திய வழியைக் கொண்டதுதான். மிகப்புகழ் வாய்ந்த இப்பெரும் கோயிலும் காஞ்சி கைலாயநாதர் கோயில் போன்று உருவானதுதான். மேலே செல்ல சிறுத்துக் கூர்மையாக நேர்கோடுகள் மிக முக்கியமாகக் காணப்படுபவை வட இந்திய சிகரங்கள். அடுக்கடுக்காக மாடிகளாக சிறுத்து குறுக்குக் கோடுகளை முக்கியமாகக் கொண்டவை தென்னிந்திய சிகரங்கள். அருகில் இவ்விரு வழிகளையும் ஒன்றாக்கி நட்சத்திரம் போன்ற சிகரங்களை தோற்றுவித்தனர் ஹோய்சாளர்கள். இக்கோயில்களை மைசூர் நாட்டில் காணலாம். பல்லவர்கள்:- பல்லவர் காலத்து கோயிற்கலையை மகேந்திரன் காலம், மாமல்லன் காலம், ராஜசிம்மன் காலம், அபராஜிதன் காலம் எனப்பிரித்துக் கொள்ளலாம். மகேந்திரவர்மனின் புகழ்பாடும் மண்டகப்பட்டு சாஸனமும், ஏகாம்பர நாதர் கல்தூண் சாஸனமும், மரம், செங்கல் உலோகம் இவையின்றி இம்மன்னன் கோயில் எழுப்பியதாகக் கூறுகின்றன. இக்காலத்திற்கு முன்னர் தென்னாட்டில், மரம், செங்கல் போன்ற விரைவில் அழிந்துபோகும் பொருள்களால் ஆலயங்கள் கட்டப்பட்டிருத்தல் வேண்டும். என அறியலாம். தென்னாட்டில் மகேந்திரன் காலத்துக்கு முந்திய கோயில்கள் ஏதும் எஞ்சவில்லை. தென்னாட்டுக் கலைச் சரித்திரத்தில் மிகப்புகழ் கொண்ட இம்மன்னன், வடநாட்டில் தோன்றிய குகைக் கோயில்களைப் போன்று தென்னாட்டில் தேர்ந்தெடுத்த மலைச்சரிவுகளில் குகைக் கோயில்களை தோற்றுவித்தான். இக்காலத்து குகைகளில் காணப்படும் தூண்கள் சதுரமாகவும் மத்தியில் எட்டுப்பட்டைகளை உடையைதாகவும் காணப்படுகின்றன. கர்ணக் கூடுகளில் சைத்ய சாளரங்கள் அல்லது கூடுகள் காணப்படுகின்றன. இக்கூடுகளின் மத்தியில் மனிதத் தலைக் காணப்படுகின்றது. போதிகைகள் வளைந்து அலைபோன்ற அமைப்புடன் காணப்படுகின்றன. மிகப்பளுவான கதைகளின்மேல் துவாரபாலர்கள் சாய்ந்து நிற்கின்றனர். மாமல்லன் தந்தை வழியைப் பின்பற்றி குகைக் கோயில்களை தோற்றுவித்தான். இக்குகைக் கோயில்களிலே தூண்கள் எண்பட்டையுள்ளன. கீழ்ப்பகுதியில் அமர்ந்த சிம்மத்தையும் மேலே பலகையையும் கொண்டுள்ளன. மாமல்லபுரத்து வராகமண்டபம், திருமூர்த்தி மண்டபம், மகிஷாசுர மர்த்தினி மண்டபம் முதலியவை இக்காலத்து குகைக்கோயில்களில் சிறந்தவையாகும். இவைகளில் மிகப்புகழ் வாய்ந்த பல்லவ சிற்பங்கள் உள்ளன. பஞ்சபாண்டவர் மண்டபத்தில் கண்ணன் கோவர்த்தன மலையைக்குடையாக பிடித்த சிற்பம் உள்ளது. மாமல்லன் குகைக்கோயில்களை மட்டுமின்றி ஒற்றைக்கல் கோயில்களையும் ஏற்படுத்தினான். தென்னகத்து புகழ்பாடும் இக்கோயில்கள், நின்ற பாறைகளைச் செதுக்கி நிறுவியவையேயாகும். இக்கோயில்களை ரதங்கள் (படம் இருபத்து எட்டு) என்பர். சீராகவும் அழகாகாவும் அமைந்த மாமல்லபுரத்து ஐந்து ரதங்களைக் கண்டு ஆச்சரியமடையாத மக்களே இல்லை. தென்னாடு வரும் எந்நாட்டவரும் இது காணாமல் தந்நாடு செல்வதில்லை என்றால் அதில் வியப்பொன்றும் இல்லை. அக்காலத்து இருந்த கட்டிடக் கோயில்கள் போன்ற உருவங்கள் கொண்ட இக்கோயில்கள் சைவக் கோயில்களாகும். சதுரமாகவும், நீண்ட சதுரமாகவும், பின்புறம் வளைந்த குதிரை லாடம் போன்றதாகவும் உள்ள திட்டங்களை இங்கு காணலாம் இவற்றின் சிகரங்கள் படிப்படியாக குறைந்த மாடிகளாக உள்ளன. இவற்றில் பஞ்சரங்கள் என்ற சிறு மண்டபங்களை காண்கிறோம். கர்ணக் கூடுகளில் சைத்யசாளரங்கள் அல்லது கூடுகள், மனிதத்தலைகளை உள்ளடக்கித் தோற்றமளிக்கின்றன. கூடுகளின் மேல் பகுதிகளில் கீர்த்திமுகமும் சிம்மமுகமும் தெளிவற்ற நிலையில் தோற்றமளிக்கின்றன. தூண்களின் அடிப்பகுதியில் அமர்ந்த சிம்மங்கள் உள்ளன. பலகைகள் மிகப்பெரிதாகக் காணப்படுகின்றன. திரொளபதி ரதம் வளைந்த கூரைகள் உடைய ஓர் குடிசையை ஒத்திருக்கிறது. வாயில் விட்டங்களில் மகர தோரணங்கள் தோற்றமளிக்கின்றன. இக்காலத்து லிங்கங்கள் உருண்டை வடிவானவை. ராஜசிம்மன் காலத்தில் தான் தென்னாட்டில் கல்லிலாலான கட்டிடக்கோயில்கள் தோன்றின. காஞ்சியில் உள்ள கைலாயநாதர் கோயிலும், மாமல்லபுரத்து தலசயனப்பெருமாள் கோயிலும் இம்மன்னன் காலத்தவை. புகழ்வாய்ந்த கைலாயநாதர் கோயில் கூர்முனைச் சிகரமும் தூண்கள் கொண்ட தட்டையான மண்டபமும் கொண்டது. இதைச்சுற்றிலும் தொடராகச் சிறு சிறு ஆலய அறைகள் ரதங்கள் போன்று உள்ளன. வளைந்த போதிகைகளின் மத்தியில் பட்டை அமைப்பு இக்காலம் தோன்றியது. இக்காலத்தில் கர்ப்பகிருஹத்தின் பின்புறம் சோமாஸ்கந்த மூர்த்தியின் சிலை எல்லா கோயில்களிலும் காணப்படுகின்றன. பட்டையான லிங்கங்கள் இக்காலச் சிறப்பாகும். சிம்மங்கள் பாயும் நிலையில் உள்ளன. நந்திவர்ம பல்லவன் காலத்தும் இவ்வழி கைப்பற்றப்பட்டது. காஞ்சி வைகுண்ட நாதர் கோயில் இக்காலத்ததாகும். கி. ப. ஒன்பதாம் நூற்றாண்டின் முன்பகுதியில் அபராஜிதன்காலத்து பல்லவர் கலை இன்னம் வளர்ச்சியடைந்து சோழர்களது கலையைப்போல் தோற்றமளிக்கிறது. லிங்கங்கள் மறுபடியும் உருண்டையாக தோற்ற மளிக்கின்றன. சோழர்கள்:- விஜயாலயன் வழிவந்த சோழப்பேரரசர்கள் காலத்து, தென்னாடு முழுவதும் நூற்றுக்கணக்கான கோயில்கள் தோன்றின. வழிபாட்டுக்கென மட்டுமின்றி, அறிவுத்திறனை வளர்க்கும் கலாசாலைகளாகவும், கலைக்கூடங்களாகவும், மக்களின் வாழ்வில் பெரும்பங்கு பூண்டு விளங்கும் மாடங்களாகவும் இவை திகழ்ந்தன. மன்னர்களும், சேனைத் தலைவர்களும், அரசாங்க அலுவலர்களும், அரசமாதேவியரும், பொற்காசுகளையும், நிலங்களையும், பசுக்களையும் கணக்கின்றி இக்கோயில்களுக்கு அளித்துப் பூரிப்படைந்தனர். முதலாம் ஆதித்யன் காவிரியாற்றின் கரைகள் முழுவதும் வானளாவும் பல கோயில்களை எழுப்பியதாக ஓர்கல்வெட்டு கூறுகிறது. முதலாம் பராந்தகன் தில்லைக் கோயிலின் மாடத்தைத் தங்கம் கொண்டு போற்றி அதைப் பொன்னம்பலமாக்கினார். கண்டராதித்யரின் மனைவியும் உத்தமசோழரின் அன்னையுமான செம்பியன் மாதேவியார், பக்தி பூண்டு பல கோயில்கள் தோன்றப் பேருதவி புரிந்தார். இராஜ இராஜப் பேரரசரின் உடன் பிறந்த குந்தவை பிராட்டியார் பல கோயில்களுக்கு பொருள் வாரி வழங்கினார். இங்கனம் கோயில்கள் தென்னகத்து மக்களின் வாழ்விலே ஜோதியெனத் திகழ்ந்து வந்தன. கி. பி. பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்லவர் பலம் குன்றிச் சோழர் கை ஓங்கத் தொடங்கியது. பல்லவர் கோயில்களைப் போன்று சிறு அளவில் கல்லினால் ஆன கோயில்கள் தோன்றின. இவற்றில் மிக முக்கியமானவை புதுக்கோட்டை நகரைச்சுற்றிலும் உள்ளன. திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோயிலும், நார்த்தாமலை விஜயாலயர் கோயிலும், கொடும்பாளூர் மூவர் கோயிலும் இவற்றில் முக்கியமானவை. மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட கற்களினால் கட்டப்பட்ட இக்கோயில்கள் சோழர் காலத்து கோயிற் கலையின் தொடக்கம் தோன்றிய போதிலும், பல்லவர் காலத்து கோயில்களின் ஒற்றுமையையும் காணலாம். முந்தய சோழர் காலத்துக் கோயில்களில் மிக முக்கியமானது திருச்சி மாவட்டத்து சீனிவாச நல்லூரில் உள்ள குரங்கநாதர் கோயிலாகும். கோயில் கட்டி முடித்தவுடன் குரங்கு ஒன்று அசுத்தம் செய்ததன் பயனாக அபிடேக ஆராதனை நின்று விட்டதாக அந்நாட்டில் வழங்கிவரும் கதை. இதன் பயனாகத்தான் குரங்குநாதர் என பெயர் கொண்டதாகக் கூறுகின்றனர். இது உண்மைக்குப் புறம்பான போதிலும், இக்கோயில் இன்றும் வழிபாடு ஏதுமின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. முதலாம் பராந்தகன் காலத்து கட்டப்பட்ட இக்கோயில் சுமார் ஐம்பது அடி நீளமுடையது. பல தூண்கள் கொண்ட மண்டபம் ஒன்றும், பின் பகுதியில் விமானத்தோடு கூடிய கடவுளரையும் கொண்டுள்ளது. கடவுளறை இருபதடி சதுரமும், விமானத்தின் உயரம் ஐம்பது அடியாகும். இவ்வளவுகளிலிருந்து குரங்கநாதர் கோயில் சீரான அளவுகளோடு கட்டப்பட்ட சிறிய கோயில் என அறியலாம். பிற்காலத்தில் திராவிடக் கோயில்களில் தோன்றிய பல வேறுபாடுகளின் தொடக்கத்தை இங்கு காணலாம். வெளிப்புரங்கள் எளிமையாக கட்டப்பட்டன. பல்லவர் காலத்துத்தூண்களின் அடியில் நின்ற நிலையிலும் பாயும் நிலையிலும் தோன்றிய சிம்மங்கள் மறைந்துபட்டன. தூண்களின் மேல்பகுதியில் பத்மபந்தம் அல்லது குறுகிய அமைப்புத் தோன்றியது. அதன் மேல்கலசம் என்றபகுதியும், இடை என்ற அமைப்பும், பலகையும் முழுவளர்ச்சி பெற்று விளங்குவதை உள் மண்டபத்துத் தூண்கள் கட்டுகின்றன. வெளிப்புறங்களில் உள்ள கோஷ்டங்களில் அழகிய சிற்பங்கள் உள்ளன. பிற்காலத்தில் யாளித் தொடராகவும், அரக்கர் தலையின் தொடராகவும் சித்தரிக்கப்படும் வழக்கம் முதன்முதலில் இங்கு தோற்றமளிக்கிறது. எனவே முந்தய சோழர்காலக் கோயில் கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது சீனிவாசநல்லூர் கோயில். கி. பி. ஆயிரத்தில் தோற்றுவிக்கப்பட்டது இராஜராஜேஸ்வரம் என்றும் பிரஹதீஸ்வரம் என்றும் அழைக்கப்படும் படம் இருபத்தொன்பது. தஞ்சை பெரியகோயில். மிகப்புகழ்வாயந்த இக்கோயில் இராஜ இராஜப் பேரரசனால் கட்டப்பட்டது. கட்டிடக் கலைகளிலேயே வியக்கத்தக்க இக்கோயில் நூற்று தொன்னூறு அடி உயரமுடையது. சுமார் ஐம்பது அடிக்கு மேலே செல்லும் விமானம், பின்னர் செல்லச்செல்ல சிறுத்து, மேலே உருண்டைக் கல்லினாலான சிகரத்துடன் தோன்றும் காட்சி, மிகமிகப் போற்றத்தக்கதாகும். கடவுளறையின் முன்னர் துண்கள் கொண்ட மண்டபம் ஒன்று அமைந்துள்ளது. சுற்றுப்புறங்களில் கோஷ்டங்களில் உள்ள சிற்பங்களின் அழகையும், விமானம் மேலே செல்லச்செல்ல சிறுத்து, சிகரத்துடன் விளங்கும் நேர்த்தியையும், இம்மாபெரும் ஆலயத்தை உவகைப்பெருக்கால் தோற்றுவித்த இராஜ இராஜப் பேரரசனின் ஆற்றலையும், அல்லும் பகலும் தங்களை மறந்து, சீரிய இப்பணி முடித்த சிற்பிகளையும், போற்றிப் புகழாத அறிஞர்கள் இல்லை. பல போர்களிலே வெற்றி கண்டு கொண்டு வந்த திரைகளனைத்தையும் இராஜராஜப் பேரரசன் இக்கோயிலுக்கு அளித்து மகிழ்ந்தான். நாற்பத் தொன்றாயிரத்து ஐநூறு பொற்காசுகளும், பத்தாயிரத்து இருநூறு காசுகள் மதிப்புள்ள நகைகளும், ஐம்பது ஆயிரத்து அறுநூற்றி ஐம்பது வெள்ளிக்காசுகளும், வருடம் ஒருலட்சத்து பதினாறாயிரம் கலம் நெல் விளையும் பூமிகளையும் இம்மன்னன் பிரஹதீஸ்வரர் ஆலயத்துக்கு ஈந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. குந்தவைபிராட்டியார் பத்தாயிரம் களஞ்சு பொற்காசுகளும், பதினெட்டாயிரம் காசு பெருமானமுள்ள பாத்திரங்களும் அளித்ததாக அறிகிறோம். பாரதத்துக்கே பெருமை தரும் செல்வம் தஞ்சை பெரிய கோயில் என்றால் மிகையாகாது. சோழப்பேரரசு, இராஜேந்திரன் காலத்தில் கடாரம் வரை பரவியது. தந்தையைப் போலவே போர்த்திறனிலும், கலை ஆர்வத்திலும் புகழ் கொண்ட இம்மன்னன் தன் வடநாட்டு வெற்றிக்கு எடுத்துக்காட்டாக கங்கைகொண்ட சோழபுரத்தை ஏற்படுத்தினான். அங்கு தஞ்சை பெரிய கோயிலை போன்ற ஓர் மாபெரும் கோயிலை கட்டிமுடித்தான். இதுவும் தஞ்சை பெரிய கோயிலை போன்றே தோன்றியது. நூற்றி ஐம்பது அடி உயரமுள்ள இக்கோயிலின் சுற்றுகளில் உள்ள கோஷ்டங்களை மிக அழகிய சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. இதன் பின்னர் சோழ மன்னர்கள் காலத்தில் பெரிய அளவில் கோயில்கள் தோன்றவில்லை. சிறு அளவில் தோன்றிய கோயில்கள் தஞ்சைப்பெரிய கோயிலைப் போன்ற தோற்றமுடையவை. பாண்டியர்கள்:- ஆயிரத்து நூறு - ஆயிரத்து முன்னூற்றிம்பது தென்னாட்டில் சங்ககாலம் முதல் முப்பெரும் மன்னர்களுள் அடிக்கடி சண்டை தோன்றி நாட்டை சீர்குலைத்தது என்பது ஓர் முடிவாகும். பாண்டியன் சேரனை தோற்கடித்தான், சேரன் சோழனுடன் சமர்புரிந்தான். சோழன் பல்லவனை வெற்றி கொண்டான். இவை சரித்திரம் கூறும் சம்பவங்கள் எனினும், தென்னகத்து வேந்தர்களிடத்தே ஓர் பண்பு இருந்து வந்தது. மாற்றானான போதிலும் ஒரு மன்னன் தோற்றுவித்த கலைச் செல்வங்களை மற்றவன் அழிக்கவில்லை. சிதைத்து இறுமாப்பு எய்தவில்லை. சோழன் பொருள் கொடுத்த கோயில்கட்கு தான் நிலம் கொடுத்து பூரிப்படைந்தான் பாண்டியன். இதனால் கலைச் செல்வங்கள் பயங்கர யுத்த வெறியின் காலடியில் பட்டு சிதறவில்லை. ஆனால் வட இந்தியாவில் கலைச்செல்வங்கள் அழிந்து பட்டன. சோமனாதபுர ஆலயத்தின் மீது பதினெட்டு முறை படை செலுத்தி அவ்வாலயத்தை தரைமட்டமாக்கி களித்தான் கஜனி மகம்மது. ஹிந்துக்கள் கோயில்களெல்லாம் சிதைந்தன. மசூதிகளாக மாற்றப்பட்டன. கிருஷண தேவராயன் காலத்தில் உலகத்திலேயே அழகும் புகழும் கொண்ட நகரம் என்று வெளிநாட்டு யாத்ரிகர்களால் போற்றப்பட்ட விஜயநகரம், நூறு ஆண்டுகட்குள்ளாக பேயும், கோட்டான்களும் வசிக்கும் இடமாக மாற்றப்பட்டது என சரித்திர ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். எனவே தங்கள் நலனுக்காகப் போர் கூட்டிய தமிழ் வேந்தர்கள் கலைச் செல்வங்களை வளர்த்துப் போற்றித் தமிழகத்தின் பண்பைத் தழைக்கச் செய்தனர். கி. பி. ஆயிரத்து நூறிலிருந்து சுமார் இருநூற்றைம்பது வருடகாலம் தென்னாட்டில் பாண்டியர் கை ஓங்கி இருந்தது. இதைப்பாண்டியர் காலம் எனலாம். சிலர் பிந்திய சோழர்காலம் எனவும் இதை கூறுவர். பாண்டிய மன்னர்கள் முன்பு இருந்த கோயில்களைப் பெரிதாக்குவதில் தங்கள் கவனத்தச் செலுத்தினர் எனலாம். அதன் பயனாக கோயிலைச் சுற்றிலும் மதில் சுவர்கள் எழுப்பப்பட்டன. இதற்கு வாயிலும், வாயிலை அலங்கரிக்கச்சிறிய கோபுரம் ஒன்றும் தோன்றியது. எனவே இக்காலம் தொட்டு தென்னாட்டில் கடவுளறையின் மேலே உள்ள விமானம் ஒன்றும், கோபுரவாயில் ஒன்றும் ஆக இரு அமைப்புகள் தோன்றின. முதலில் சிறிதாகத் தோன்றிய கோபுர வாயில்கள் பின்னர் மிகப்பெரிதாகி விமானத்தை மங்கச்செய்து விட்டது. திருவானைக்காவலில் உள்ள சுந்தரபாண்டியன் கோபுரமும், சிதம்பரம், திருவண்ணாமலை (படம் முப்பது) கும்பகோணம் முதலிய இடங்களில் உள்ள கோபுரங்களும் இக்காலத்தவை. சிதம்பரம் கோபுரத்தில் சுந்தர பாண்டியனின் கல்வெட்டு ஒன்று உள்ளது. இக்காலத்துக் கோபுரங்கள் மேலே செல்லச் செல்ல நேராக சிறுத்து பல அடுக்குகளாக அமைந்துள்ளன. முதல் இரண்டு மாடிகள் கருங்கல்லாலும் பின்னர் செங்கல்லாலும் ஆனவை. போதிகைகளின் நுனியில் தாமரை போன்ற அலங்கரிப்பு தோற்றமளிக்கிறது. சிதம்பரம் கோபுரம் தொண்ணூறு அடி நீளமும், அறுபது அடி அகலமும் உள்ள நீண்ட சதுர அமைப்புடன் கூடிய அடிப்பகுதியை உடையது. முப்பத்தைந்தடி உயரம் வரை நேராகவும் கருங்கல்லாலும் கட்டப்பட்டது. இதன் மேல்பகுதி சிறிது சிறிதாக நேராக சென்று சிகரத்தலி முடிகிறது. சிகரம் வளைந்த கூரைபோன்ற அமைப்புடையது. இக்கோபுரம் நூற்று முப்பத்தைந்து அடி உயரம் கொண்டது. தாராசுரம் கோயில் இக்காலத்தே கட்டப்பட்டது. இக்கோயிலில் பல நூற்றாண்டுகளாக மறைந்ததும் பல்லவர் காலத்து தூண்களின் அடிப்பகுதியில் தோன்றியதுமான சிம்மங்கள், மறுபடியும் தோற்றமளிக்கின்றன. இவ்வமைப்பு தொடர்ந்து பின்னர் குதிரையும் ஈஹா மிருகங்களாக அடிக்கடி சித்தரிக்கப்படுவதை விஜயநகர் காலத்தில் காணலாம். விஜயநகர் காலம்:- கி. பி. ஆயிரத்து முன்னூற்றைம்பதிலிருந்து சுமார் இருநூற்றி ஐம்பது வருடகாலம் விஜய நகர மன்னர்கள் தென்னிந்தியாவில் தனியாக பூண்டு விளங்கினர். தேசத்தின் பல பகுதிகள் முகம்மதியர்கள் கைப்படவே, தென்னாட்டை மட்டிலும் அவர்களது கைப்படாது காத்து, கலைச் செல்வங்களைப் பெருக்கிய பெருமை விஜய நகர மன்னர்களைச் சாரும். இக்காலத்தில் மிக அழகு வாய்ந்த மண்டபங்கள் தோன்றின. சிற்பங்கள் மலிந்த கல்யாண மண்டபங்களும், மிகவும் உயர்ந்த கோபுரங்களும் தோன்றின. இவ்வரசர்களின் தலைநகரான விஜயநகரத்து வித்தலஸ்வாமி கோயிலும், ஹஸாரா ராமர் கோவிலும் இக்கால கோயில்களில் மிகச்சிறந்தவையாகும். வித்தலஸ்வாமி கோயில் முற்றுப்பெறாமல் நின்றுவிட்டது. ஹஸாரா ராமர் கோயில் முற்றுப்பெற்ற மிக அழகிய கோயிலாக இன்றும் அமைந்துள்ளது. இக்கோயில் சிற்பங்களால் நிறைக்கப்பட்டு கண்கவர் வனப்பு மிக்கதாய் திகழ்கின்றது. கல் முழுவதையும் சிற்பமாக்கி, கல்லிலே நாடகத்தையே தோற்றுவித்துக் கருத்தை கவர்ந்தனர் விஜயநகர மன்னர்கள். இவர்களது திறனை வேலூர், காஞ்சீபுரம், ஸ்ரீரங்கம், திருவாரூர், விரிஞ்சிபுரம், சிதம்பரம் முதலிய இடங்களில் காணலாம். வேலூர் கல்யாணமண்டபமும், ஸீரங்கம் குதிரை மண்டபமும் (படம் முப்பத்தொன்று)புகழ் வாய்ந்தன. இக்காலத்துத் தூண்களில் பாயும் குதிரையும், கற்பனை மிருகங்களும் காட்சியளிக்கின்றன. போதிகையில் உள்ள தாமரை அமைப்பு சிறிது நீண்டு காணப்படுகிறது. மதுரை:- கி. பி. ஆயிரத்துக்கு மேல் விஜயநகரம் வீழ்ந்த பின்னர் அவர்களின் பிரதிநிதிகளான நாயக்கர்கள் பாண்டியர்களைப் போன்று கோயில்களைப் பெரிதாக்கினர். இவர்கள் காலத்தில் கோபுரக்கலை மிக உன்னதத்தை அடைந்தது. சிற்பங்கள் நிறைந்த மண்டபங்களும் அதிகமாகத்தோன்றின. ஓர் கோயிலை மன்னர்கள் பல காலங்களில் பெரியதாக்கியதன் பயனாக சீரான அமைப்பு இன்றி போயின. ஒரே காலத்தில் பெரிதாக்கப்பட்ட கோயில்கள் நல்ல சீருடன் விளங்குகின்றன. கடவுளரையைச் சுற்றிலும் கட்டப்பட்ட திருசுற்றுகள் ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்க்கப்பட்டன. இதன் பயனாக ஸ்ரீரங்கத்தில் சுமார் பத்துத்திருச்சுற்றுகள் உள்ளன. நாயக்கர் காலத்துக் கோயில்களை, மதுரை, ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், திருநெல்வேலி, தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர் முதலிய இடங்களில் காணலாம். இவற்றில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் மிகப்புகழ் வாய்ந்தது. இக்கோயிலில் உள்ள நான்கு கோபுரங்களும் (படம் முப்பத்திரண்டு) சுமார் நூற்றெண்பது அடி உயரத்திற்கு மேற்பட்டவை. இக்கோபுரங்கள் மேலே செல்லச் செல்ல நேராகச் செல்லாமல் குவிந்த அமைப்புடன் கண்கவர் வனப்புடன் திகழ்கின்றன. திருமலை நாயக்கர் சத்திரம் என்னும் வசந்த மண்டபமும், ஆயிரக்கால் மண்டமும், இக்காலச் சிறப்புக்கு எடுத்துக்காட்டுகாளகும். பல தூண்களை உடைய ராமேஸ்வரம் கோயிலின் திருச்சுற்று மிகப்புகழ்வாய்ந்த அமைப்புடையது. தற்காலத்தும் தழைத்து ஓங்கி நிற்கும் கோயிற் கலையை, புதுப்பிக்கப்படும். கோயில் கோபுரங்களில் காணலாம். வட இந்திய கோயில்கள்:- வட இந்திய அல்லது நாகர சிகரங்களை முதன்முதலில் ஆய்ஹோலில் உள்ள துர்க்கை கோயிலில் காண்கிறோம். தேவ்கர், பித்ரகான் கோயில்களை விட இங்கு சிகரம் நன்கு வளர்ச்சி பெற்றுக் காணப்படுகிறது. சுற்று வழியும் அதன் மேலே கற்பலகைகளால் மூடப்பட்ட மாடமும் உள்ளன. கலிங்கர்கள்:- மேலே நேராக குறைந்து சென்ற சிகரங்கள் பிற்காலத்தில் உள்ளே சிறிது வளைவுடன் கட்டப்பட்டன. இவ்வித சிகரங்களை புவனேஸ்வரில் காணலாம். இங்குள்ள பரமேஸ்வர் கோயில் கி. பி. ஏழாம் நூற்றண்டைச் சார்ந்தது. இதில் கடவுள் அறைக்கு முன்னர் முகமண்டபம் அல்லது ஜக்மோஹன் என்ற அறை உள்ளது. பின்னர் மிக வளர்ச்சியடந்தவையாக பத்தாம் நூற்றாண்டு தோன்றிய லிங்கராஜர் ராஜா ராணி முதலிய கோயில்கள் இங்குள்ளன. பல சிறு சிகரங்கள் கொண்ட பெரிய சிகரம் இங்குள்ள வழியாகும். இவற்றுடன் நடமண்டபமும், போக மண்டபமும் கட்டப்பட்டன. கோனாரக்கில் உள்ள ஆதவன் கோயிலும் இவ்வகைதான். சக்கரங்கள் கொண்ட தேர் போன்ற கோயிலைப் பல குதிரைகள் இழுத்துச் செல்வது போல் அமைந்துள்ள இக்கோயில் மிகப்புகழ் வாய்ந்தது. இக்கோயில் அதிகமாகத் தூண்கள் கிடையா. காஜூராஹோ:- கி. பி. பதினொன்று அல்லது பன்னிரெண்டாம் நூற்றாண்டுகளில் சண்டேளர் என்ற மன்னர்களால் தோற்றுவிக்கப்பட்ட இக்கோயிலின் சிகரங்களும் மூடிய திருச்சுற்றுகளும் குறிப்பிடத்தக்கவை. முகப்பில் உள்ள சாய்ந்த இருப்பிடங்களும், மண்டபங்களும், சிறந்த சிற்பங்களும் இக்கோயில்களின் தனிச் சிறப்புகளாகும். கண்டரிய மஹாதேவர் கோயில் மிகப்புகழ் வாய்ந்தது. ஜைனர் கோயில்கள்:- ராஜஸ்தானத்தில் உள்ள கோயில்களில் மிக அழகிய வேலைப்பாடுடைய தூண்கள் கொண்ட ஜைனர் கோயில்கள் முக்கியமானவையாகும். இவற்றைத் தில்வாராக் கோயில்கள் என்பர். அபுமலைச் சிகரங்களில் உள்ள இக்கோயில்களில் மாடங்களை மறைக்கப்பல அழகிய சிற்பங்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. வெளித் தோற்றத்திற்கு அழகற்றவையாய்க் காணப்பட்ட போதிலும், உள்ளே மிக உயரங்களில் உள்ள சிற்பங்கள் வியக்கத்தகும் வனப்பு உடையவை. மகம்மதியர் கையில் படாமலிருக்க மிக உயரத்தில் உள்ள இச்சிற்பங்கள் வெள்ளை பளிங்கு கற்களினாலானவை. ஹோய்சாளர் கோயில்கள்:- சாளுக்கியர்கள் தென்னிந்திய சிகரம் கொண்ட கோயில்களையும், வட இந்திய சிகரம் கொண்ட கோயில்களையும் எழுப்பினமையின் இப்பகுதியில் பிற்காலத்து இரண்டு வகையையும் ஒன்றாக்கி, ஓர் நட்சத்திரம் போன்ற அமைப்புடைய கோயில்களை ஹோய்சாளர்கள் தோற்றுவித்தனர். பல கோணங்களை உடைய தரையமைப்புடன் இக்கோயில்கள் தோன்றின. சில இடங்களில் இரண்டு அல்லது மூன்று கடவுளறைகள் இணைக்கப்பட்டு அழகு பூண்டு விளங்கின. இவ்வழி வந்த மிகச்சிறந்த கோயில்களை பேலூர், ஹலேபீடு, சோமநாத்பூர் என்ற இடங்களில் காணலாம். மரக்கோயில்கள்:- கேரளநாட்டில் இன்றளவும் சில கோயில்கள் மரத்தால் கட்டப்பட்டுள்ளன. பல அடுக்குகள் கொண்ட கூரை உடையவையாய் காணப்படும் இக்கோயில்கள், நேபாளத்து கோயில்களை ஒத்துக்காணப்படுகின்றன. சாஸனங்கள் இந்திய சரித்திரத்தை நன்கு அறிந்து வரையறுத்துக் கூற மிகவும் உதவுவது கல்வெட்டுக்களும், சாஸனங்களுமாகும். சாஸனங்கள் பொறித்து வைப்பதற்கு கல், செப்பேடுகள், ஓலைகள், செங்கற்கள் முதலியவை உபயோகப்படுத்தப்பட்டன. டில்லி மாநகரத்தில் மெஹ்ரொலி என்ற இடத்தில் இரண்டாம் சந்திரகுப்தன் காலத்து நிறுவிய இரும்புத்தூண் ஒன்று உள்ளது. இதன் மேல் பகுதியில் சாஸனம் பொறிக்கப்பட்டுள்ளது. பல மன்னர்கள் தாங்கள் செய்த கொடைகளைச் செப்பேடுகளில் பொறித்து வைத்துள்ளனர். எல்லாவற்றிற்கும் அதிகமாகக்கற்களில் சாஸனங்கள் பொறிக்கப்பட்டுக் காணப்படுகின்றன. பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த ஓர் செப்பேட்டில் முதல் வரி பொறிக்கப்பட்டும், மற்றயவரிகள் மசியினால் எழுதப்பட்டும் காணப்படுகின்றது. இதிலிருந்து முதலில் ஏடுகளிலும், கற்களின் மேல் பாகங்களிலும் எழுத்துக்கள் மசியினால் எழுதப்பட்டுப் பின்னர் உளியினால் செதுக்கப்பட்டன என அறிகிறோம். அசோகன் புத்தமதத்தைத் தழுவி அதை பரப்புவதற்காக கல்தூண்களை நாட்டி, தர்மத்தைத் தூண்களில் பொறித்துவைத்துள்ளான். இவற்றிலிருந்து அக்காலத்துக் குடி நிலைப்பற்றியும், மன்னன் மன நிலைபற்றியும் நம்மால் அறியமுடியும். கலிங்க அரசனான காரவேலனின் ஹாதிகும்பா சாஸனம் மிகப்புகழ் பெற்றது. இம் மன்னனின் வீரச் செயல்கள் அனைத்தையும் மிக அழகாக இச்சாஸனம் எடுத்துக்கூறுகிறது. குப்த பேரரசானன சமுத்திரகுப்தனைப் பற்றி அலகாபாத் சாஸனத்திலிருந்து அறிகிறோம். ஜுனாகாத் கல்வெட்டுகள் மகாஷத்ரபருத்ரதாமனின் புகழ் பாடுகின்றன. அமராவதி, பார்குத் போன்ற ஸ்தூபங்களில் உள்ள ஒவ்வொரு சிற்பத்திலும் கொடையளித்த வள்ளல்களின் பெயரை எழுத்துக்கள் எடுத்துக் கூறுகின்றன. சிற்பங்களின் அடியில் அச்சிற்பக் கடவுளரின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளதிலிருந்து அக்காலத்தே யஷ வழிபாடு பழக்கத்திலிருந்தது என அறியமுடிகிறது. மண்டகப்பட்டு சாஸனத்தில் மகேந்திரவர்மன், செங்கல், மாம், உலோகம் இவையின்றி தான் கோயில் எழுப்புவதாக கூறி பெருமைப்படுகிறான். நரசிம்மவர்ம பல்லவன், வாதாபியை வெற்றிகண்டு, இரண்டாம் புலிகேசியைப் போர்க்களத்தில் கொன்று புகழ்மாலை சூடியதை வாதாபியில் உள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன. புகழ்வாய்ந்த காஞ்சி கைலாசநாதர் கோயிலை தோற்றுவித்த ராஜசிம்மனின் மனைவியின் பெயர் ரங்கபதாகை என்றும், அவள் மகளிர் குலத்துக்கே புகழ்கொடி போன்ற வனப்பும், அழகும், உடையவள் என்றும் அக்கோயிலில் உள்ள சாஸனம் கூறுகின்றது. குடுமியாமலை, திருமையம் இடத்துச் சாஸனங்கள் வல்லவர் காலத்துச் சங்கீதக் கலையின் நிலையை நன்கு உணர்த்துகின்றன. பரிவாதினி என்ற முந்தியகால வீணை கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை பழக்கத்து இருந்து வந்துள்ளது என்றும் இதிலிருந்து அறிகிறோம். சோழப் பேரரசர்களான ராஜராஜனும், ராஜேந்திரனும் தங்கள் நிலை கூற பல கல்வெட்டுக்களை பொறித்து வைத்துச் சென்றுள்ளனர். அருள் வடிவாய் விளங்கிய செம்பியன் மாதேவியரைச் சோழர்களது கல்வெட்டுக்கள் போற்றி புகழ்கின்றன. தனது பெரியோராகிய உத்தம சோழருக்கு, பின்னர்தான் அரியணை ஏறமுடியும் என, தன்னை மன்னனாக தேர்ந்தெடுத்த மக்களுக்குக் கூறியதாக, ராஜராஜ பெருந்தகையைப் பற்றி திருவேலங்காடு சாஸனம் கூறுகிறது. ராஜேந்திர மன்னனின் வெற்றிப் போர்களைப் பற்றி அவருடைய மெய்கீர்த்திகள் பாடுகின்றன. இலங்கை, கங்கை, கடாரம் முதலிய போர் வெற்றிகளைப் பற்றி இம் மன்னனது கல்வெட்டுகள்தான் நமக்கு உணர்த்துகின்றன. உத்திரமேரூர் சாஸனம், அக்காலத்து மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வகை பற்றியும் அங்கத்தினர்களின் கல்வி, பொருள், நிலை முதலியவற்றைப் பற்றியும், குடவோலைச் சீட்டுகள் பற்றியும், தகுதியற்ற தன்மைகள் குறித்தும் மிக விளக்கமாகக் கூறுகின்றது. கோயில், குளங்கள், தங்கம், வியாபாரம், முதலியவற்றைக் கவனிக்கத் தனித்தனி சபைகள் இருந்தன. பல கல்வெட்டுகளிலிருந்து சக வருடம், சாலிவாகன வருடம், விக்கிரம வருடம், முதலிய பல வருடக் கணக்குகளைப் பற்றியும், வான நூல் பற்றியும் அறிகிறோம். காஞ்சியில் மயூரன் என்ற வடமொழிப் புலவனின் சூரிய சதகம் என்ற கவிதை கல்லிலே பொறிக்கப்பட்டு காணப்படுகின்றன. இவ்விதம் கல்வெட்டுக்களிலிருந்து நாம் அறிந்து கொள்ளும் செய்திகள் பலவாகும். மன்னர்கள் முக்கியமாக கோயில்களுக்குப் பல கொடைகளை வழங்கி அவற்றைக் கற்களிலே பொறித்து வைத்தனர். பல பசுக்கள், ஆடுகள், தங்கம், நிலம் முதலியவை தெய்வ வழிபாட்டுக்காக கொடுக்கப்பட்டன. கோயில்களில் விளக்குகள் எரிக்க பல ஆடுகள் கொடுக்கப்பட்டன. கற்றறிந்த அறிஞர்கட்கும் நிலம் வழங்கி மகிழ்ந்தனர் மன்னர்கள். இவற்றைச் செப்பேடுகளில் எழுதி, ஓர் வளையத்தில் மன்னனின் முத்திரையுடன் பதிவு செய்து வைத்தனர். கோயில்களைப் புதுப்பிக்கும் போது அங்குள்ள கல்வெட்டுகளின் பிரதிகளைத் தயார் செய்துகொண்டு, வேலை முடிந்தவுடன் அதே இடங்களில் மறுமுறை அச்சாஸனங்களை பொறித்தனர். அக்கால மன்னர்கள், இச்சாஸனங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள லாம். சரித்திர வரலாறுகளை இவ்விதம் நமக்கு வரையறுத்தல் கூறும் கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துக்கள் இன்றுள்ளவை போல் அன்று இல்லை. அசோகன் காலத்திலிருந்து இன்றுவரை பல மாறுபாடுகளை அடைந்த எழுத்துக்களின் சரித்திரமே ஒரு தனி நூலாகும். அசோகன் காலத்தில் இரண்டுவித எழுத்துக்கள் இருந்தன. ஒன்று பிராம்மி என்றும் மற்றது கரோஷ்டி என்றும் அழைக்கப்பட்டன. கரோஷ்டி என்ற எழுத்து வலது புறமிருந்து இடது புறமாக எழுதப்படும் ஒரு வகையாகும். இந்தியாவின் வடமேற்குப்பகுதியில் மட்டும் வழங்கி வந்த இவ்வகை கி.பி. நான்காம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வழக்கத்திலிருந்து மறைந்துபட்டது. பிராம்மி எழுத்துக்கள் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகின்றது. தென் இந்தியப் பகுதிகளிலும் பிராம்மி எழுத்துக்கள் உள்ளன. மொஹஞ்சதாரோ முத்திரைகளில் இருக்கும் எழுத்துக்கள் சித்திரம் போன்றவை. இவ்வெழுத்துக்களை அறிந்து கொள்ள இன்னும் இயலவில்லை. கி.பி. நான்காம் நூற்றாண்டு வரை, பிராம்மி எழுத்து எல்லாப் பகுதிகளிலும் ஒன்றுபோல் வளர்ந்து வந்தது. பின்னர் பல பகுதிகளாகப் பிரிந்து இந்தியாவில் உள்ள பல மொழி எழுத்துக்களாக மாறியது. வடக்கே குப்தர்களது சாஸனங்களும், தக்ஷிணத்தில் வாகாடகர்களின் சாஸனங்களும், தெற்கே பல்லவர்களது சாஸனங்களும், மருவிய பிராம்மி எழுத்துக்களேயாகும். இவைதான் பின்னர், தெலுங்கு, கன்னடம், தமிழ், கிரந்தம், நாகரம் என்ற எழுத்துக்களாக மாறின. அமராவதியில் பிராம்மி எழுத்துக்கள் பல நூற்றாண்டுகளில் அடைந்த வளர்ச்சியைக் காணலாம். கிரந்தம், தமிழ் இரண்டும் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தான் இருவகையாக பிரிந்தன. பல்லவர்களது சாஸனங்களில் கிரந்தம் அதிகமாக உபயோகிக்கப்பட்டமையின் இவற்றை பல்லவ கிரந்தம் என்று கூறுவர். சோழர், விஜயநகர மன்னர் காலத்தில் கிரந்தம், தமிழ் இரண்டும் சேர்ந்து உபயோகிக்கப்பட்டன. பாண்டியர் பகுதியிலும் தென்மேற்குப் பகுதியிலும் தமிழ் மொழியை வட்டெழுத்துக்களில் பொறித்து வைத்தனர். சுமார் கி.பி. ஆயிரத்து அறுநூறு வரை வட்டெழுத்து பழக்கத்திலுருந்து வந்தது. விஜயநகர மன்னர்கள் காலத்தில், திராவிட மொழிகளனைத்திலும் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. நாகரி எழுத்தையும் விஜயநகர மன்னர்கள் தங்கள் சாஸனங்களில் உபயோகித்தனர். இவற்றை நந்தி நாகரி என்று அழைப்பர். இருமொழிகளில் தோன்றும் சாஸனங்கள் முதலில் வடமொழியிலும், பின்னர் தமிழிலும் இருப்பதைக் காணலாம். இரண்டும் ஒரே செய்தியைப்பற்றித்தான் கூறுகின்றன. மங்கள வாக்யத்துடன். தொடங்கும் இச்சாஸனங்களில் மன்னர்கள் தங்கள் மூதாதையர்களின் பெயர், வெற்றி முதலியவற்றை கூறுகின்றபடியால் சரித்திரத்தை நன்கு வரையருத்து கூறமுடிகிறது. ஓவியங்கள் ஓவியம்:- மனிதன் தன்னுள்ளக்கிடக்கையை சைகையாலும், மொழியாலும்,வெளிப்படுத்துவது போன்று சித்திரம் அல்லது ஓவியத்தாலும், வெளிப்படுத்த முயல்கின்றான். தன்மொழி அறிந்தவர்களுடன்தான் மனிதன் உரையாடல் முடியும். ஆனால் ஓவியத்தை பாஷை அறிந்தவரும், அறியாத பாலர்களும் அறிந்து கொள்ள முடியும். எனவே மொழியைக் காட்டிலும் ஓவியக்கலை ஓர் படி உயர்ந்ததாகவே சிலர் கொள்கின்றனர். ஓவியக்கலை மனிதனின் தொடக்க காலமுதல் இருந்திருக்க வேண்டும். எனினும் நம் நாட்டில் மொஹஞ்சோதாரோவிலிருந்துதான் சரித்திரம் தொடங்குகிறது என்று முன்பே கூறியுள்ளோம். இங்கு வாழ்ந்த மக்கள் தாங்கள் உபயோகித்த பானை, கலயம் முதலியவற்றின் புறங்களில் அழகிய சித்திரங்கள் தீட்டியுள்ளனர். மயில் போன்ற பிராணிகள் மிக அழகாக சித்தரிக்கப் பட்டுள்ளதைக் கண்டால், இக்காலத்தில் சித்திரக்கலை மிக உயர்ந்த நிலையில் இருந்திருக்க வேண்டும் எனக்கொள்ள இடமுண்டு. தென்னிந்தியாவில் தொன்மையான நூலான தொல்காப்பியம் ஓவியக் கலையைப்பற்றிக் குறிப்பிடப்படுகிறது. சங்க் செய்யுள்கள் ஒவியக் கலையின் உன்னதத்தை உணர்த்துகின்றன. மாடங்களும் கோயில்களும் சித்திரம் தீட்டப்பெற்று விளங்கின. மகளிர்கள் ஓவியக்கலை பயின்றனர். தங்கள் காதலர்களின் உருவம் தீட்டி மகிழ்ந்தனர். நாட்டிய மகளிர்கள் சிறப்புற, ஓவியக்கலை அவசியமாயிருந்தது. என அறிகிறோம். ‘தலைமான் போருக்குச் சென்றிருக்க அவன் தலைவி மாடத்துச் சென்று, மெத்தையில் படுத்து மேல் நோக்கினள். அவள் கண்களிலே கண்கவர் ஓவியம், இணைந்து நின்ற இரு காதலர்களின் உருவங்கள் படுகின்றன. இப்பெருமகளின் உள்ளத்து விரகம் தோன்றி வதைக்கிறது. படைக்களத்து சென்ற தன் தலைவனை எண்ணி விம்முகின்றாள்.’ என்று சித்தரிக்கிறது. ஒரு சங்கச் செய்யுள். அஜந்தா:- இந்திய நாட்டில் மிகப்பழமையான ஓவியங்கள், உள்ளம் கவர் சித்திரங்கள், உலகம் போற்றும் வண்ணப் படைப்புகள், அஜந்தா குகைத் தொடரில்தான் உள்ளன. ஓவியக்கலையின் உன்னதத்தை அடைந்த இக்கலையைக் கண்டு வியக்கின்றது அறிஞ்ர் உலகம். பல நூற்றாண்டுகளாக வளர்ச்சி பெற்றுத்தான் இக்கலை இங்கு இவ்வுன்னத நிலை அடைந்திருக்க வேண்டும் என்றால் அது மிகையாகாது. அஜந்தா குகைத் தொடரில் ஒன்று, இரண்டு, பதினாறு, பதினேழு, பத்தொன்பது குகைளில் உள்ள ஓவியங்கள்தான் நல்ல நிலையில் உள்ளன. மற்றகுகைளில் உள்ள ஓவியங்கள் மறைந்து பட்டன. புத்தரி்ன் வாழ்க்கைச் சம்பவங்களையும், ஜாதகக் கதைகளையும் இவைகள் அக்காலத்து மக்களின் நடை, உடை, பாவனைகளைப் படம் போல் நம்முன் கொணர்ந்து நிறுத்துகின்றன். மகளிர்களின் அணிகலன்களையும், கூந்தல் அலங்கரிப்புகளையும், ஆடைகளின் அழகுகளையும் நம்மால் இவற்றிலிருந்து அறியமுடிகிறது. மன்னனது சபையையும், இசைக் கருவிகளையும், மற்ற மரம், செடி, காடுவாழ் மிருகங்கள் இவற்றின் நிலையையும் இவ்வோவியங்கள் சித்தரிக்கின்றன. கணங்கள் சூழ அன்பும், அருளும், கொண்டு கையிலே தாமரைமலர் பிடித்து அமைதியின் வடிவாய் விளங்கும் அவலோகிதேஸ்வரரின் ஓவியம் உலகச் சிறப்புடையது. மகளிர்கள் புடை சூழ, யாழிசையொலிப்ப விண்ணகத்துப் பறந்து செல்லும் கந்தர்வர்களின் ஓவியத்தை நோக்கிடின் நாம் இருப்பது மண்ணகமா அல்லது விண்ணகமா என்ற பிரமை தோன்றும். பதினாறாவது குகையில் புத்தரின் வரலாற்றுக் காட்சிகளைக் காணலாம். புத்தரின் பிறப்பு, ஜாதகம் கணித்தல், பள்ளிப்படிப்பு, தவம், ராஜகிருஹத்துக்குச் செல்கை முதலிய வரலாறுகள் தொடர்ச்சியாக சித்தரிக்கப்பட்டுள்ளன. அரசன் தன் அன்பு மனைவியை அணைத்து அமர்ந்திருக்கும் ஓவியத்தை பதினேழாவது குகையில் காணலாம். இக்குகையின் மற்றொரு பகுதியில் நளகிரியென்ற மதயானையைப் புத்தர் அடக்கும் காட்சியைக் காணலாம். முற்பிறப்பில் மனைவியாயிருந்த தன்னைப் புறக்கணத்ததாக காசிவாழ் அரசியின் ஆணைப்படி, புகழ்கொண்ட யானையைப் பிடிக்க வேடர்கள் காட்டுக்குச் சென்றனர். ஆறு வண்ணங்கள் வீசும் தந்தங்கள் கொண்டதும் யானைக் கூட்டங்களுக்குத் தலைவனுமான அந்த யானையை பிடிக்க வேடர்கள் செய்த முயற்சி பலிக்காது போயிற்று. சதந்தன் என்ற இந்த யானை உண்மையின் போதிசத்வராகும். வேடர்களின் நிலைக்கண்டு வருந்தி அது அவர்களுக்காகத்தன் தந்தங்களைத்தானே முன்வந்து கொடுத்தது. அதன் பயனாக யானையும் மாண்டு வீழ்ந்தது. செய்தியை அரசிக்கு அறிவித்தனர் வேடர்கள். வெறிகொண்ட உள்ளம் மறந்தது. தன் முன் பிறப்பில் கணவனான யானை மாண்ட செய்தி இவளை மாளாத் துயரத்தில் ஆழ்ந்தது. கைகள் சோர்ந்து வீழ்ந்தன. அருகிலிருந்தவர்கள் அணைத்துத் தாங்கினர், உடல் சோர்ந்து துவண்டு வீழ்ந்தது. ஓரிரு வினாடிகளில் அவள் உயிரும் பிரிந்தது. சதந்த ஜாதகம் என்ற கதையின் இக்காட்சிகளை இங்கு காணலாம். துவண்டு வீழ்ந்து உயிர் துறக்கும் அரசியின் ஓவியம் மிகவும் புகழ் கொண்டது. துவண்டு விழும் இவ்வரசியின் நிலை கண்டால் நம்மனமும் குலையும் என்றால் ஓவியங்களின் சிறப்பை என்னென்று புகழ்வது. தன் உடைமைப் பொருள்களைனைத்தையும் தானமிடும் வஸந்தரன் என்ற குமாரனின் வரலாற்று ஓவியங்களும், கையில் கண்ணாடி கொண்டு ஒரு காலை வளைத்து ஒயிலாக நின்று தன்னை அலங்கரித்து நிற்கும் அணங்கின் ஓவியமும் மிகப் புகழ் கொண்டவை. ஞானம் பெற்று புத்தராக திரும்பி வரும் தன் தந்தையிடம் ராகுலன் தன் பங்கு கேட்கும் ஓவியம், ஓவியக் கலையுலகில் ஓர் உன்னத படைப்பு என ஆராய்ச்சியாளர் கொள்கின்றனர். இவ்விதம் குகைக் கோயில்களின் சுவர்கள் முழுவதிலும் சித்ர வேலைப்பாடுடன் கூடிய ஓவியங்களைக் கல்லிலே தீட்டியதே ஓர் கலையாகும். கரடு முரடான பாறைச் சுவர்களின் மேல் களிமண், சாணம், கற்களின் பொடிகள், தவிடு இவற்றை கலந்து இரண்டு நூல் அளவிற்கு பூசினர். இதன்மேல் மிக மெல்லிய அளவில் வெண் சுண்ணாம்புச் சுதைகள் பூசப்பட்டன. இவை ஈராமாக இருக்கும்போதே வண்ணங்கள் பூசப்பட்டன. இவ்விதம் தயாரிக்கப்பட்ட ஓவியங்கள் இன்றளவும் உள்ளன. விஷ்ணுதர்மோத்திரம் என்ற வடமொழிநூல், ஓவியம், பூச, சுவரைத்தயாரிக்கும் முறைகளைப்பற்றி நன்கு விவரிக்கிறது. பாக்குகைகளில் உள்ள ஓவியங்களும் சற்றேறக்குறைய அஜந்தாவின் சம காலத்தவையாகும். பாக்ஓவியங்கள் குடிவாழ்க்கை வரலாற்றுகளை மிக அதிகம் சித்தரிக்கின்றன. நடனம், ஆடும் மகளிர் குழு மிகச்சிறப்பு வாய்ந்தது. அஜந்தா, பாக் இவ்விரு இடத்து ஓவியங்களும் பொளத்தமதத்தைத் தழுவியவை. பாதாமி குகைக்கோயிலில் உள்ள ஓவியங்கள் ஹிந்துக்களது தெய்வங்களைச் சித்தரிக்கின்றன. இங்குள்ள சிவன், உமை இவ்விருவரின் ஓவியங்கள் மிகச்சிறப்பு வாய்ந்தவை. அஜந்தா ஓவியக் கலையின் தொடர்புதான் இங்கும் காணலாம். அஜந்தா, பாக், பாதாமி குகைகளில் உள்ள ஓவியங்கள் குப்தர் காலத்தவை என ஆராய்ச்சியாளர் கொள்கின்றனர். பல்லவர்கள்:- தென்னிந்தியாவிலும் அஜந்தாக்கலையின் தொடர்பை சித்தன்னவாசல் குகைக்கோயிலில் காணலாம். மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் ஓவியக்கலையும் மிகவும் உன்னத நிலையில் இருந்தது. அரசாங்கத்தாரால் போற்றப்பட்டு வந்தது. மகேந்திரவர்மனின் பிருதங்கள் அவனை விசித்திரசித்தன் என்றும், சித்திரகாரபுலி என்றும் புகழ்கின்றன. முதலில் இம்மன்னன் சமணமதத்தினனாக இருந்தான். புதுக்கோட்டைக்கு ஒன்பது கல் தொலைவில் அக்காலத்தில் சமணர்குகை தோற்றுவிக்கப்பட்டது. அதுதான் சித்தன்னவாசல் குகைக் கோயிலாகும். அங்குள்ள வண்ண ஓவியங்களும் மகேந்திரவர்மனின் காலத்தவையாகும். சமண மதத்தினரின் கதைகளைக் குறிக்கும் காட்சிகள் மேல் பகுதிகளை சித்தரிக்கின்றன. தூண்களின் மேல் பகுதிகளிலும் சில ஓவியங்கள் உள்ளன. தூண்களின் கீழ்ப்பகுதிகளிலும் சுவரின் கீழ்ப் பகுதிகளிலும் இருந்த ஓவியங்கள் மறைந்துபட்டன. மாடத்தின் கூரைப் பகுதியில் உள்ள ஓவியம் ஓர் தாமரைத் தடாகத்தை குறிக்கிறது. தாமரை இலைகளும் மலர்களும் உள்ள அத்தடாகத்தில் யானைகள் இறங்கி விளையாடுகின்றன. தாமரைத் தண்டுகளை முறித்து ஓடுகின்றன. அன்னங்கள் அழகாக அமர்ந்து இன்புறுகின்றன. ஓர் பகுதியில் புனலாடும் எருமைகளைக் காணலாம். கையிலே தாமரைகளைத் தாங்கித் தோற்றமளிக்கும் கந்தர்வர்கள் சமணர்களாகத்தான் இருக்கவேண்டும்! இக்காட்சியை சித்தரிக்கும் ஓவியம் நன்கு காப்பாற்றப்பட்டுள்ளது. உள் அறையின் மாடக் கூரைகளில் உள்ள சித்திரங்கள் வேலைப்பாடுடயவை. தூண்களின் மேல்பகுதியில் உள்ள ஓவியங்கள்தான் மிகமிக முக்கியமானவை. இவற்றில் மூன்று மட்டும் நல்ல நிலையில் உள்ளன. மற்றவை மங்கி சிதைந்துள்ளன. இவற்றில் இரண்டு நடனமகளிர்களின் ஓவியங்களாகும். தங்கள் நிலை மறந்து, கலைப் பெருக்கிலே லயித்து, கைகளை லாகவமாக வைத்து, நடமாடும் நிலையில் அமைந்துள்ள இவ்விரு ஓவியங்களையும் படம் முப்பதுமூன்று இன்று முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கலாம். நடன மகளிரின் மலர் முகத்திலே தோன்றும் கலை லயத்தைக்கண்டு, ஓவியனின் புகழ் பாடுகின்றனர் கலை வல்லுனர்கள். மற்றொறு பகுதியில் உள்ள உருவம் மன்னன் மகேந்திரனின் உருவமாக இருக்கலாம். பெருந்தகையான இம்மன்னனின் பெருமிதத்தைக் காட்டுகிறது. இந்த ஓவியம். இது போன்று காஞ்சி கைலாயநாதர் கோயில் திருச்சுற்றுகளிலும் சிதைந்த ஓவியங்களின் சின்னத்தைக் காண்கின்றோம். பல்லவர் காலத்து பனமலை கோயிலிலும் பல்லவர் ஓவியத்தைக் காணலாம். இங்குள்ள பார்வதியின் ஓவியம் மிக வனப்பு மிக்கது. (படம் முப்பதுநான்கு.) வட ஆற்காடு மாவட்டத்துத் திருமலை கோயிலிலும், திருநெல்வேலி மாவட்டத்துத் திருமலைபுரம் கோயில்களிலும் மலையாடிப்பட்டியிலும் இக்காலத்து ஓவியங்களை காணலாம் சோழர்கள்:- சோழர்காலத்தும் கோயில்களில் வனப்புமிகும் ஓவியங்கள் வரையப்பட்டன. பின்னர் வந்த அரசர்கள் அவற்றின் மேல் மறுமுறையும் வேறு ஓவியங்கள் தீட்டியதின் பயனாகச் சோழர்கால ஓவியங்கள் அதிகம் எஞ்சவில்லை. எனினும் சமீபத்தில் தஞ்சை பெரியகோயிலில் ஓவியங்களைப் பழுது பார்க்கும்போது, சோழர்காலத்து ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சுந்தரமூர்த்தி நாயனார் வெள்ளை யானை மீது ஏறிக் கைலாயம் செல்கிறார். வழியில் அவரை அடைந்து அவருக்கு முன் புரவிவியில் ஏறிச் செல்கிறார் சேரமான் பெருமான். கைலைக்குச் செல்லும் வழியிலே விண்ணகத்து மகளிர்கள் தோன்றுகின்றனர். கைலை அடைந்த சுந்தரரும், சேரமானும் கைகூப்பித் தொழுகின்றனர். அம்மையை அருகில் அருகில் கொண்ட அண்ணல் ஆனந்தக் காட்சியளிக்கிறார். தேவமளிர்கள் (படம் முப்பதைந்து) நாட்டியம் ஆடுகின்றனர். இக்காட்சி இங்கு மிக அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அரக்கருடன் சமர் தொடுத்தார் முப்புரம் எரித்த அண்ணல். அன்னையும், பரமனும், தேவ கணங்களும், ஆதவனும், நிலவும் பங்கு கொண்டன. எதிர்த்தனர் அரக்கர் கண் பார்வையே உங்களனைவரையும் சாம்பலாக்கும் என்பவர் போல் வீரத் தோற்றமளிக்கும் சிவனின் தோற்றத்தில் உள்ள சீற்றத்தை ஓவியத்தின் முன் நின்று உணராலாம். சிதம்பரம் கோயிலில் உள்ள ஓவியங்கள் பிந்தய சோழர் காலத்தவையாகும். இவற்றில் சிவன் ஆண்டியாகி தாருகவனத்து ரிஷிமகளிரை மயக்கும் காட்சியும், விஷ்ணு மோஹினி உருகொண்டு ரிஷிகளை மயக்கும் காட்சியும் மிகவனப்பு மிக்கவை. கி.பி. ஆயிரத்து முன்னூற்றைம்பதில் தென்னிந்தியாவின் பெரும்பகுதியும் ஆண்ட விஜய நகர் மன்னர்களும் கோயில்களின் சுவர்களில் ஓவியம் தீட்டி மகிழ்ந்தனர். லேபாக்ஷி கோயிலில் இக்காலத்து ஓவியங்கள் மிக வனப்புடன் இன்றும் திகழ்கின்றன. நாயக்கர் காலத்துத் தோற்றமளித்த கோயில்களில் பதினாறு, பதினேழாம் நூற்றாண்டு ஓவியக்கலையின் நிலை அறியலாம். சிதம்பரம், காஞ்சிபுரம், ஸீரங்கம், ஸீவில்லிபுத்தூர், போன்ற இடங்களில் இம்மன்னர்களது ஓவியங்களைக் காணலாம். மதுரைக் கோயிலில் உள்ள ஓவியங்கள் சமீபத்தில் புதுபிக்கப்பட்டபோது தீட்டிவியவையாகும். பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியங்களைத் திருவனந்தபுரம், பத்மநாபபுரம் முதலிய இடங்களில் காணலாம். கைப்பிரதி ஓவியங்கள்:- தென்னாட்டில் தற்காலம்வரை மிகப்பெரிய சுவர் ஓவியங்கள் வழக்கத்து இருந்துவந்தன. ஆனால் வட இந்தியாவில் கி.பி. எட்டாம்நூற்றாண்டுக்குப் பின்னர் சுவரில் பெரிய அளவில் ஓவியங்கள் தீட்டுவது மறைந்துபட்டது. சிறு அளவில் ஓவியங்கள், மதநூல்களின் கைப்பிரதிகளில் தோன்றலாயின. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை பாலர் ஓவியங்களும். பதினொன்றாம் நூற்றாண்டிலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டுவரை குஜராத்திய ஓவியங்களும் சிறு ஓவியங்களாக தோற்றமளிக்கின்றன. புத்தரது சரித்திர சம்பவங்கள் பாலர் ஓவியங்களில் வரையப்பட்டன. மெல்லிய கோடுகளும், மங்கலான வண்ணங்களும் எளிய அமைப்புகளும் கொண்டவை பாலர் ஓவியங்கள். “பிரஞாபரிமித” என்ற பொளத்த ஓலைப் பிரதிகளில் உள்ள சிறு ஓவியங்கள் பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவை. குஜராத்தி:- கி.பி. பதினொராம் நூற்றாண்டிலிருந்து சுமார் ஐநூறு ஆண்டுகள் வரை தொடர்ந்து வளர்ச்சி பெற்றுவந்த குஜராத்திய ஓவியங்களும் கையெழுத்துப் பிரதிகளின் ஓவியங்களாகும். இவ்வளர்ச்சியை இரண்டு பகுதிகளாகக் கொள்ளலாம். முதல் பகுதி ஓவியங்கள் ஓலைப்பிரதிகளின் மேல் வரையப்பட்டன. பின்பகுதியில் காகிதத்தின் மேல் தீட்டப்பட்டன. மிக உன்னத நிலையை குஜராத்திய ஓவியங்கள் கி.பி. ஆயிரத்து முன்னூற்றைம்பதிலிருந்து ஆயிரத்து நாநூற்றைம்பதுக்குள் அடந்தான. பக்கமுகமும், கூர்மை யானமூக்கும், கன்னத்தையும் தாண்டி தீட்டப்பட்ட நீண்ட கண்களும் அணிகலன்களின் அலங்கரிப்புகளும் இக்காலச் சிறப்புகள் ஆகும். முந்திய ஓவியங்களில் செங்கல் வண்ணம் அதிகம் உபயோகப்படுத்தப்பட்டன. சமணமதத்துச் சம்பவங்களும், கண்ணனின் பிறப்புப் பற்றிய சம்பவங்களும், இவ்வோயிங்களில் தோன்றின. கீதகோவிந்தம், கிருஷ்ணலீலா, பாலகோபாலஸ்துதி போன்ற நூல்களின் செய்யுள்களுக்கு ஒப்ப ஓவியங்கள் தீட்டப்படுள்ளன. கி.பி. ஆயிரத்து நாநூற்றைம்பதில் எழுதப்பட்ட “வஸந்த விலாசம்”. ஓவியங்கள் ஓர் நீண்ட துணிச்சுருளில் தீட்டப்பட்டுள்ளன. மிகவும் வனப்பு வாய்ந்த இவை, வசந்த காலத்தின் நிலையை நன்கு சித்தரிக்கின்றன. ராஜஸ்தானி:- இந்திய மக்களின் உள்ளத்து உணர்ச்சிகளைத் தெள்ளென எடுத்துரைக்கும் வகையில் அமைந்தவை, பதினாறு, பதினெழாம் நூற்றாண்டைச் சார்ந்த ராஜபுதனத்து ஓவியங்கள். இவற்றை ராஜஸ்தானி ஓவியங்கள் என்று அழைப்பர். ராஜஸ்தானி ஓவியங்களைத் தீட்டியோர் உலகத்தில் தலைசிறந்த ஓவியக் கலைஞர்களின் வரிசையைச் சார்ந்தவர்கள் எனப் பேராசிரியர் ஆனந்த குமாரசுவாமி கூறுகின்றார். காதலின்பத்தை முக்கியமாகக் கொண்டவை இக்கால ஓவியங்கள். கண்ணனையும், ராதையையும், உமையையும், சிவனையும், ஓவியர்கள் பல நிலைகளில் படைத்து பரவசம் அடைந்தனர். இவற்றுள் தோற்றமளிக்கும் மகளீர்கள், ஆரணங்குகளின் அழகுக்கு உரைகல்லெனக் கூறலாம். நீண்ட தாமரை போன்ற கண்கள், அலையென நெகிழும் கூந்தல்கள், கனத்த மார்பங்கள், மெல்லிய இடைகள், சிவந்த கைகள் உடையவர்களாகத் இவர்கள் தோன்றுகின்றனர். பளபளப்பான வண்ணங்கள் இக்கால சிறப்பாகும். இசைப் பண்கள் அல்லது ராகங்களை உருவகப்படுத்தி ஓவியங்களாகத் தீட்டிய பெருமை ராஜஸ்தானத்து ஓவியர்களுக்கே சாரும். வண்ணங்கள் தீட்டிய இச்சித்திரங்களின் மேல் பகுதியிலோ அன்றி கீழோ, அக்காட்சியை விவரிக்கும் செய்யுளை காணலாம். தோடி ராகினி என்ற ஓவியத்தின் பெயர் தென்னிந்தியப் பெயராக தோற்றமளிக்கிறது. அழகான ஓர் பெண் அமர்ந்து யாழ் வாசித்துக் கொண்டிருக்கிறாள். துள்ளி குதித்து ஓடுகின்ற மான், இசை கேட்டு அசையாது, லயித்து நிற்கின்றது. அழகுக்கு அணிகலனாக விளங்கும் அந்நல்லாளைக் கண்டு ஆடவர் மனம் அலைமோதுகிறது. இக்காட்சியைத்தான் தோடி ராகினி ஓவியத்தில் காண்கிறோம். இது போன்ற பல மனநிலைகளைப் படம் பிடித்துக்காட்டுபவை பைரவி, கம்பவதி, மாலா போன்ற ராகினி ஓவியங்கள். பிஹாரி:- ராஜஸ்தானி ஓவியங்களின் தொடர்ச்சியாக ஜம்மு, பஷோலி, காங்ரா, சம்பா, போன்ற இடத்து ஓவியங்களைக் கொள்ளலாம். இவைகளும் பளபளப்பான வண்ணங்கள் கொண்டவைதான். இவற்றில் காங்ரா ஓவியங்கள் மிகவும் புகழ் கொண்டவை. கண்ணனது குழந்தைப் பருவ விளையாட்டுக்களும், ராதையுடன் கூடிய காட்சிகளும் காங்ரா ஓவியங்களில் தோன்றுகின்றன. மொகலாயர் ஓவியங்கள்:- மொகலாய மன்னர்கள் ஓவியக்கலையும், கட்டிடக் கலையையும், நெய்தல் கலையையும், போற்றி வளர்த்தனர். சரித்திரப்புகழ் வாய்ந்த அக்பர், ஓவியக் கலையைப் பேணி வளர்த்தார். நூற்றுக் கணக்கான ஓவியர்களை ராஜஸ்தானம், குஜராத் உள்பட இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து வரவழைத்து, வடமொழி நூல்கட்கும், பாரசீக நூல்கட்கும் ஓவியங்களைத் தீட்டச் செய்தார். இவ்விதம் தீட்டப்பட்ட பல ஓவியங்கள் இன்றும் உள்ளன. அக்பரின் சொந்தப் பிரதியென கருதப்படும் மகாபாரத ஓவியங்கள் ராஸநாமா என்ற பெயரால் தற்போது ஜெய்பூரில் உள்ளன. காதல் காட்சிகளை அடிப்படையாகக் கொண்ட ஹம்ச நாமா ஓவியங்கள் துணியில் தீட்டப்பட்டன. ஆயிரத்து முன்னூற்றெழுபத்தைந்து ஓவியங்களைக்கொண்ட இப்பிரதியை அக்பர் மிகவும் விரும்புவாராம். அபுல் பாசல் என்பவரால் எழுதப்பட்ட அக்பரின் சரித்திரமாகிய அக்பர் நாமாவுக்குத் தீட்டப்பட்ட ஓவியங்களும் உள்ளன. ராஜஸ்தானத்து ஓவியங்களிலிருந்தும் சிறந்த பண்புகளைக் கொண்டு தனக்கென தனிவழி வகுத்தது மொகலாயர் ஓவியக்கலை, மொகலாயர்கள் இந்திய வாழ்வில் ஒன்றுபட்டவுடன் அவர்களது ஓவியங்களும் இந்தியக் கலையாக மாறியது. ஆயினும் மொகலாயர் ஓவியங்கள் உண்மை நிலையை ஒட்டி அரச குடும்பத்தினரின் வாழ்க்கைச் சித்திரங்களையும், மாளிகை நிலைகளையும் சித்தரித்தன. நேரில் காணும் உருவங்களைப் போன்றே ஓவியங்களும் தீட்டப்பட்டன. அக்பருக்குப்பின்னர் ஜஹாங்கீர் ஓவியக் கலையைப் போற்றி வளர்த்தார். ஓவியக்கலையில் தந்தையைக் காட்டிலும் இவருக்கு அர்வம் அதிகம், தனக்குள்ள ஓவியக்கலையின் நுண்ணறிவைப் பற்றி இவர் அடிக்கடி பெருமைப்படுத்துவது வழக்கம். தீட்டிய ஓவியங்களிலிருந்து ஓவியனை வெகு எளிதில் இவர் எடுத்துக் கூறிவிடுவாராம். ஓரே ஓவியத்தைப் பலர் தீட்டிய போதிலும், ஓவ்வொரு ஓவியனையும் தன்னால் கூற முடியும் என இவர் கூறுவார். இவருடைய வாழ்க்கையை முக்கியமாகக் கொண்டவை இக்கால ஓவியங்கள். இவருக்கு மிருகங்களிடமும், பறவைகளிடமும் பற்று அதிகம். எனவே உஸ்தாத் மான்சூர் என்ற புகழ்கொண்ட ஓவியனைக் கொண்டு, பல பறவைகள், மிருகங்கள் இவைகளின் ஓவியங்களை தீட்டச்செய்தார். மெல்லிய கோடுகளும், எளிய வண்ணங்களும் இக்காலச் சிறப்பாகும். ஷாஜஹான் கட்டிடக்கலையில் மிகுந்த ஆர்வம் செலுத்தியதின் பயனாக ஓவியக்கலை அதிகம் கவனிக்கப்படவில்லை. எனினும் ஓவியர்கள் அலங்கரிப்புச் சி்த்திரங்களில் தங்கள் திறனைகாட்டி மகிழ்ந்தனர். ஓளரங்கசீப் காலத்தில் கலைகள் போற்றப்படவில்லை. கலைஞர்கள் நிலை மிகவும் அவலமாக மாறியது. ஓவியர்கள் வாழ்க்கை நாடி தென் பகுதியில் குடியேறத் தொடங்கினர். இதன் பயனாக, கோல்கொண்டா போன்ற தக்காண அரசுகளில் ஓவியர்கள் வேலை கண்டனர். தக்காண ஓவியங்கள்:- தக்காணத்தில் தோன்றிய ஓவியங்கள் பல காட்சிகளைச் சித்தரிக்கின்றன. இக்கால அரச குடுப்பத்தினரின். உருவங்களையும், புத்தக காட்சிகளையும், ராக மாலைகளையும் தீட்டி மகிழ்ந்தனர். கி.பி. பதினேழாம் நூற்றாண்டின் பின்பகுதியைச் சார்ந்த ஓவியங்கள் மிகப்புகழ் வாய்ந்தவை. தஞ்சை ஓவியங்கள்:- தக்காணத்தில் தோன்றிய கலையை ஒட்டி, தஞ்சையில் வாழ்ந்த மராட்டிய மன்னர்களாலும், காலஹஸ்தியைச் சுற்றிலும் வசித்த சிற்றரசர்களாலும் இக்காலத்து ஓவியர்கள் போற்றப்பட்டனர். தஞ்சையில் அரசர்களின் உருவங்கள் அதிகமாக வரையப்பட்டன. இவற்றில் மேலை நாட்டுத் தொடர்பைக் காணலாம். கடவுள்களின் உருவங்களும் மதவிஷயங்களும் மறைந்து, புகைப்படத்திற்கு நிற்பவர் போன்று தஞ்சை மன்னர்கள் தீட்டப்பட்டனர். இது போன்று ஆந்திர நாட்டிலும் ஓவியக் கலை தொடர்ந்து இருந்து வந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து தஞ்சைக் கலையையும், ஆந்திரக் கலையையும் மிகச்சிறப்பாக வாயந்தவையாக கூறமுடியாது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ராஜா ரவிவர்மா மிகப் புகழ்வாய்ந்த ஓவியராக வாழ்ந்தார். மேலை நாட்டு எண்ணெய் வண்ணங்களை இவர் கையாண்டபோதிலும், இந்நாட்டுக் கடவுளர்களின் உருவங்களையும், புராணம், இதிகாசம், முதலியவற்றின் காட்சிகளையும் மிக அழகாகத் தீட்டி இந்நாட்டு மக்களின் மனதில் அழியா இடம் தேடிக் கொண்டார். நாட்டின் கண் ஒவ்வொரு வீட்டிலும் இவரது ஓவியங்களின் பிரதிகளை இன்றளவும் காணலாம் என்றால் அவர் மக்களிடத்தே கொண்ட புகழை நன்கு அறியலாம் செப்புப் படிமங்கள் கல்லால் சிலை செதுக்கி கடவுளறை கட்டி, ஆலயமாக்கி அங்கு சென்று வணங்கி வருவது ஒரு வழிபாட்டு முறையாகும். கல்லினாலான சிலைகளே பெரும்பாலும் காணப்பட்ட போதிலும் சிலைகளை பல பொருள்கொண்டு படைப்பதும் வழக்கம். பூரியில் உள்ள ஆலயத்தில் மூலவர் சிலை மரத்தாலானது. செங்கல், சுதை முதலிய கொண்டும் சிலைகளைச்செய்வது வழக்கம். நம் நாட்டில் கிராம தேவதைகளின் உருவங்கள் இன்றும் இவற்றால் செய்யப் படுதலை காண்கிறோம். எனினும் இவையனைத்தும் நிறுவப்பட்ட இடத்திலிருந்து அசையாத சிலைகளாதலால், சிறு அளவில் சிலை படைத்து, அதை நன்கு அலங்கரித்து, வீதிகளில் பவனியாக எடுத்து செல்லுதல் நம்நாட்டில் வழங்கிவரும் தனி சிறப்பாகும். இச்சிலைகள் கல்லால் ஆனவை அல்ல. செம்பாலான வார்ப்புச் சிலைகளாகும். இதன் காரணமாக, தென்னகத்தைப் போன்று மற்ற இடங்களில் வார்ப்பு கலை உன்னத நிலையடையவில்லை. இவைகளை செப்புச் சிலைகள் என்றும் கூறுவர். உலகிலேயே வார்ப்புக் கலையில் மிக உன்னத நிலை வகிப்பது தென்னாடு. இங்குள்ள செப்புச் சிலைகளின் அழகு கண்டு உலகமே வியக்கிறது. கிறீஸ்தவாப்தத்தின் தொடக்கத்திலேயே வார்ப்புக் கலைப் பற்றிய மிக உயர்ந்த நூல்கள் தென்னகத்தே தோன்றியுள்ளன. இன்றளவும் வார்ப்புக் கலையை தொழிலாகக் கொண்ட ‘ஸ்தபதி’ வகுப்பினர் இவ்வாகமங்களைக் கொண்டே சிலைகளைச் செய்கின்றனர். அன்று தொட்டு இன்றுவரை தொடர்ந்து வரும் இக்கலையின் வழிகள் மிகப்பண்பு வாய்ந்தவை. ஓவ்வொரு சிலையின் அமைப்பும் செய்யுள் வடிவிலே அமைக்கப்பட்டுள்ளது. இதை ஸ்தபதி மனத்திலே இருத்தி, அவ்வமைப்பில் தன்னை மறந்து, மனத்திலே உள்ளதை சிலை வடிவிலே தோற்றுவிக்க உயர்ந்த கலைப்படைப்பு தோன்றுகிறது. மெழுகினால் முதலில் உருவத்தை அமைத்து, அதன்மேல் மண்பூசி நெருப்பிலிட, மெழுகு உருகி மறைந்து படுகிறது. இவ்விதம் தோன்றிய வார்ப்பில் கூழ்போல் காய்ச்சப்பட்ட செப்புக்குழம்பு ஊற்றப்படுகிறது. இது குளிர்ந்தவுடன் மண்வார்ப்பை உடைத்து படிமம் எடுக்கப்படுகிறது. இதன் பின்னர் ஸ்தபதியின் ஆற்றலுக்கு ஒப்ப அழகுபடுத்தப்படுகிறது. இவ்விதம் தோற்றுவிக்கப்பட்ட செப்புச்சிலைகளில்லாத தென்னகத்து கோயில்களே இல்லையெனலாம். இவ்விதம் உள்ள செப்புச்சிலைகள், கடவுளின் பல உருவங்களைக் காட்டுகின்ற போதிலும், சில உருவங்கள் மட்டும் எல்லா கோயில்களிலும் அதிகமாகக் காணப்படுகின்றன. நிலமகளும் அலைமகளும் சூழ விளங்கும் விஷ்ணுவின் சிலையை எல்லா வைணவர் கோயில்களிலும் காணலாம். காளிங்கன் என்ற அரவின்மீது நடமாடும் கண்ணன், ஸ்ரீனிவாசப்பெருமாள், வரதராஜர், நரசிம்மர், முதலிய சிலைகளும் அதிகம் காணப்படுகின்றன. மற்ற சிலைகள் அவ்வளவு அதிகமாக காணப்படுவதில்லை. ராமர், கிருஷ்ணர், போன்ற சிலைகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன. சைவர் கோயில்களில் சிவகாமி அம்மையை அருகிலிருத்தி, ஆனந்த தாண்டவமாடும் நடராசர் சிலையை எங்கும் காண்கிறோம். நடராசர் சிலைக்கென ஒவ்வொரு கோயிலிலும் தனியறை ஏற்பட்டுள்ளதைக் காணலாம். இது போன்று சோமாஸ்கந்தர் சிலையும் சைவர் கோயில்களில் அதிகம் காணப்படுகின்றன. திரிபுராந்தகர், வீணாதரர், பிஷாடனர், பைரவர், சந்திரசேகரர், ப்ரதோஷ மூர்த்தி போன்ற பல உருவங்களும் ஆங்காங்கு காணப்படுகின்றன. சைவ சமயாசாரியகளான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஞானசம்மந்தர் இவர்களது படிமங்களும், பிற்காலத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களது படிமங்களும் கோயில்களில் வைக்கப்பட்டன. வைணவர் கோயில்களிலும் ஆழ்வார்களது செப்புச்சிலைகள் தோன்றின. மொஹஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட நடமாடும் பெண்ணின் வார்ப்புச் சிலைப்பற்றி முன்னரே குறிப்பிட்டுள்ளோம். சுல்தான்கஞ் என்ற இடத்து கிடைத்த குப்தர் காலத்து புத்தர் சிலையும் செப்புச்சிலையாகும். வங்காளத்தில் பாலர்களது ஆட்சியில் புத்த படிமங்கள் மிக அதிகமாக செய்யப்பட்டன. இவை தென்னகத்து சிலைகள் போல் மிகப்பளுவாகும். முழுவதும் உலோகங்களினாலானவை அல்ல. தென்னகத்தில் பல நூற்றாண்டுகளாக பழக்கத்திலிருந்த போதிலும், சோழர் காலம் தொட்டுத்தான் செப்புச்சிலைகள் அதிகமாக தோன்றலாயின. கல்லினாலான சிற்பங்களைப் போல எளிமையாகவும், ஆடை ஆபரணங்கள் அதிகமின்றி, அழகு பூண்டு விளங்கும் செப்புச்சிலைகள் சோழர்காலத்தவையாகும். காலம் செல்ல, செல்ல அங்கங்கள் தடித்தும், அழகு குன்றியும், ஆபரணங்கள் அதிகமாகவும் உடையவையாக இச்சிலைகள் காணப்படுகின்றன. தஞ்சை கலைக்கூடத்தில் உள்ள கல்யாண சுந்தரர், பிஷாடனபைரவர், ரிஷபாந்திகர் முதலிய சிலைகளை இன்று முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கலாம் உலகின்கண் உள்ள மிகப்புகழ்வாய்ந்த செப்புப்படிமங்கள் சென்னை பொருட்காட்சியில் உள்ளன. இவற்றில் திருவேலங்காடு சோமாஸ்கந்தர், சிலையும் விஷாபஹரணர் சிலையும், பல்லவர் காலத்ததாகக் கொள்ளப்படுகின்றன சிறிய உருவிலிருந்த போதிலும் சோமாஸ்கந்தரின் (படம் முப்பதாறு) சிலை மிக நேர்த்தியானது. அண்ணலின் அமைப்பும், அம்மையின் வடிவும் பார்ப்பாவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். பெருந்தோட்டம் விஷ்ணுவின் சிலை, சோழர்களது தொடக்க காலத்தைச் சேர்ந்தது. தேசியக் கலைக் கூடத்திலிருக்கும் நடராசர் சிலை (படம் முப்பத்தியேழு) உலகின் கண் உள்ள கலைப் படைப்புகளில் முதலிடம் வகிக்கிறது என்று புகழ்வாய்ந்த கலைஞர்கள் ஒப்புக்கொள்கின்றனர். நடராசர் வடிவத்தை கலைப்படைப்பின் உன்னத தத்துவமாக கொள்ளப்படுவதால் அதைப்பற்றிய அறி்ஞர்களின் கொள்கையை இங்கு சுருக்கி கூறுவோம். நடராச வடிவம் இடது காலை தூக்கி வலது காலால் முயலகனை மிதித்து உடுக்கையும், அனலும் பூண்டு, அபயமளித்து, திருவாசியின் மத்தியில் ஆடும் நடராசர் வடிவை தோற்றுவித்தது தென்னகம். நடமாடும் கடவுள், நடனத்தின் கடவுள், சிவன். சிவன் ஆடிய நடனவகைகளை கூறுவது கடினம். எனினும், இவையனைத்தின் தத்துவம் சுழன்று ஆடும் உலக சக்தியின் தோற்றமே. தத்வும் எதுவாக இருப்பினும் காலப் போக்கில் மிகவும் போற்றத்தகும் உருவமாக, அமைந்துள்ளது நடராச வடிவம். சிவன் ஆடிய நடனங்களில் மூன்று முக்கியமானவை. ஒன்று அந்திமயங்கும் நேரத்தில் இமயத்தில் தெய்வீக இசையின் மத்தியில் ஆடும் நடனம். இதை “சிவ ப்ரதோஷ ஸ்தோத்ரம்” என்ற செய்யுள் நன்கு சித்தரிக்கிறது. மூவுலகின் அன்னையாம் உமையை பொன்னாலும், மணியாலுமான ஆசனத்தில் அமர்த்தி இமயத்தில் சூலபாணி நடமாடுகிறார். கலைவாணி வீணை வாசிக்க, இந்திரன் குழலூத, பிரம்மன் தாளம் போட, இலக்குமி பாட, விஷ்ணு மத்தளம் தட்ட, அண்ணல் ஆடும் நடனத்தை விண்ணவர் கண்டு களிக்கின்றனர். கதாசரித்சாகரம் என்ற வடமொழி நூலில் கடவுள் துதியாக மாலை நடனம் போற்றப்பட்டுள்ளது. இவ்விதம் நடமாடும் சிவனின் உருவில் இரண்டு கைகள்தான் உண்டு. காலடியில் முயலகன் இல்லை. இரண்டாவது சிவனின் உக்ரமான தாண்டவம். பைரவராகவோ, வீரபத்ரராகவோ, இடுகாடாம் சுடலையில் பத்து புயங்களுடன் தேவியும், பூத கணங்களும் ஆட, ஊழிக்கூத்து ஆடும் தாண்டவம் மிகப்புகழ் வாய்ந்தது. எல்லோரா, எலிபெண்டா இடத்துள்ள முந்தய சிற்பங்களில் காணப்படுவது இந்நடனம்தான். மூன்றாவதாக, உலகின் நடுவாம் தில்லையம்பதியில், பொற்றம்பலத்தில் சபை நடுவே ஆடும் நாதாந்தத் தாண்டவம். கோயிற்புராணம் நடராசர் வடிவத்தின் சின்னங்களுக்கு விளக்கம் தருகிறது. தாருக வனத்தில் மீமாம்சை வழியைப் பின்பற்றி வாழ்ந்தனர் பல முனிவர்கள். இவர்களை நல்வழிப்படுத்த விஷ்ணு மோஹினி வடிவிலும், சிவன் ஆடையற்ற ஆடவர் வடிவிலும் சென்றனர். மோஹினியின் அழகிலே தங்களை மறந்த முனிவர்கள், சிவனிடத்து தங்கள் மனைவியர் மயங்குதல் கண்டு கோபமுற்றனர். சிவனை தொலைத்துவிட மாபெரும் யாகம் செய்தனர். அதிலிருந்து பயங்கரமான புலி ஒன்று தோன்றி சிவன்மீது பாய்ந்தது. அதை தன் விரல் நகத்தால் கொன்று, அதன் தோலை தன் ஆடையாக அணிந்தார். அண்ணல் புலிக்கு பதிலாக யானை வந்ததாக கூறுவதும் உண்டு. எனவே, யானை தோல் பூண்டவராகவும், சிவனை காண்கிறோம். இதன் பின்னர் ஓர் கொடூரமான அரவை தோற்றுவித்தனர் முனிவர்கள். தன் கழுத்தைச்சுற்றிலும் மாலையாக அதை அணிந்து நடமாட ஆரம்பித்தார் சிவன். குள்ளமான பூதம் ஒன்று பின்னர் சிவன்மீது பாய்ந்தது. அதைக் காலடியில் இருத்தி நடனமாடினார் அண்ணல். யாகத்திலிருந்து அனுப்பப்பட்ட மானும் மழுவும் சிவனின் சின்னங்களாயின. நடனத்தில் முனிவர்களும், தேவர்களும் தங்களை மறந்தனர். ஆதிசேடன் சிவனை போற்றி நடனத்தை காண வேண்டினார். தில்லையம்பலத்தில் வந்து காணக்கூறி சிவன் மறைந்தார். இதன்படி, தில்லையிலாடிய வடிவே தென்னிந்திய செப்புபடிமங்களில் நடராச வடிவமாக, சபாபாதி என்ற பெயரில் தென்னாட்டுச்சைவ ஆலயங்களைனைத்திலும் காணப்படுவது. இந்நடனம், சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபவம், அனுக்ரஹம், என்ற ஐந்து செயல்களை குறிக்கின்றதாகக் கொள்கின்றனர். ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல், என்பவையே இவ்வைந்து செயல்களாகும். இச்செயல்கள் முறையே பிரமன், விஷ்ணு, ருத்ரன், மகேச்வரர், சதாசிவர், முதலியோரின் தனி செயல்களாகும். “உண்மை விளக்கம்” என்ற நூல் உடுக்கை உலகத்தின் தோற்றத்தையும், அபயமளிக்கும் கை காத்தலையும், நெருப்பு அழித்தலையும், முயலகன் மீது அமர்ந்த கால் மறைத்தலையும், தூக்கிய கால் முக்தியையும் குறிப்பதாகக் கூறுகிறது. தூக்கிய காலை சுட்டி காண்பிக்கும் இடது கை நோக்கத்தக்கது. நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் முதலிய ஐம்பொருள்களிலும் ஆடும் அம்பலவாணனை திருமூலர் தன் திருமந்திரத்தில், காளியோடாடி கனகாசலத்தாடிக் கூலியோடாடிக் குவலயத்தேயாடி நீடிய நீர்தீகால் நீள்வானிடையாடி நானுற அம்பலத்தேயாடும் நாதனே! எனப்பாடுகின்றார். இதுவே அவர் நடனம். ஒவ்வொரு உயிரின் உள்ளத்தே இது ஆடப்பட்டுகின்றது. என்பதை அறிந்ததால் இந்நடனத்தின் தன்மையை அறிந்தவறாகிறோம். எங்கும் சிவமயம், எங்கும் என்பது உள்ளமே, எனவே, ஆடிய காலும் அதிற்சிலம்போசையும் பாடிய பாட்டும் பலவான நட்டமுங் கூடிய கோலங் குருபரன் கொண்டாடத் தேடியுளே கண்டு தீர்ந்தற்றவாறே என்று பாடியுள்ளனர் பெரியோர். சிவன் அழித்தலின் கடவுள், சுடலையை விரும்புவர். சிவன் எதை அழிக்கிறார்? விண்ணுலகையும், மண்ணுலகத்தையும் கல்பத்தின் முடிவிலே அழிக்கவில்லை. ஒவ்வொரு உயிரின் உள்ளத்தையும் மறைத்து நிற்கும் பாசத்தை அழிக்கிறார். அவர் நடமாடும் இடம் நம் உடலை தீக்கிடும் இடுகாடல்ல. பாசத்தை பொசுக்கிய பக்தனின் உள்ளக்காடே அண்ணலாடும் இடம். உயிர்களின் உள்ளக்கிடக்கையில் உள்ள அகந்தையை மடமையை போக்குவித்தலே அவர் செய்யும் எரித்தல் தொழிலாகும். அதுவே இடுகாடாகும். ஆகவே சிவனை சுடலையாண்டி என்கின்றனர். இதையே உண்மை விளக்கம். மாயைதனை உதறி, வல்வினையைச்சுட்டு மலம் சாய அமுக்கி, அருள் தானெடுத்து நேயத்தால் ஆநந்த வாரிதியில் ஆன்மாவைத் தனழுத்தல் தனெந்தையார் பாதம் தான் என்றய கூறுகிறது. சிவனின் நடனத்தை மற்றொரு வகையில் நமசிவாய என்ற ஐந்து எழுத்தையுடைய பஞ்சாஷர மந்திரத்தைக் குறிப்பதாகவும் கூறுவர். "திருவடி (ந)கரத்தையும், உதரம் (ம)கரத்தையும், வளர் தோள் (சி)கரத்தையும், முகம் (வா)வையும், முடி (யா)வையும் குறிக்கும். உண்மை விளக்கத்தின் மற்றொரு செய்யுள். நடராச வடிவைச் சுற்றி வளைந்து நிற்கும் திருவாசியை, ஓங்காரத்தின் கொம்பாகவும் சிவனை ஓம்காரமாகவும் கூறும். ஓங்காரமே நல் திருவாசியுற்றதனின் நீங்காவெழுத்தே நிறைகடராம் ஆங்காரம் அற்றார் அறிவாணியம்பலத்தா னாடலிது பெற்றார் பிறப்பற்றார் பின் இதையே “திருவருட்பயன்” என்ற நூல் மிகவும் தெளிவாகக் கூறுகிறது. சிவனின் ஞானத்தாண்டவத்தின் எதிரே நின்று ஆடும் இயற்கை அன்னையின் வடிவே திருவாசியாகும். எனவே முதல் நடனம் பொருள் அல்லது இயற்கையின் செயல். இதுவே திருவாசி, ஓம்காரம் அல்லது காளியின் நடனம். மற்றது சிவனின் நடனம். இதுவே ஓம்காரத்திலிருந்து பிரிக்க முடியாத அக்ஷரம், அர்த்தமாத்ரம், அல்லது பிரணவத்தின் நான்காவது, சதுர்த்தம், துரியம், என்ற எழுத்து. சிவன் விரும்பித்தானும் ஆடினால் ஒழிய முதல் நடனம் என்பது முடியாது. எனவே திருவாசி என்பது பொறுள், இயற்கை அல்லது ப்ரகிருதியாகும். தன் கைகளாலும், தலையாலும், காலாலும் திருவாசியைத் தொட்டு நடமாடும் சிவனே உலகெலாம் பரவி நிற்கும் புருஷன். முடிவில் நடராச வடிவம், விஞ்ஞானம், மதம், கலை இவையனைத்தும் ஒன்றாகி விளங்கும் ஓர் உண்மை ஒளியாகும். சோழப் பெருந்தகையான ராஜராஜன் காலத்தில்தான் இவ்வுருவம் தோற்றுவிக்கப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இத்தகைய உருவத்தைத் தோற்றுவித்த பெரியார்களின் மேன்மையை எண்ணி, நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை. ஏனெனில் முதன்முதலில் இவர்கள் தோற்றுவித்த இவ்வுருவம் உண்மையின் பிரதிபிம்பமாகவும், சிக்கல் நிறந்த வாழ்க்கைக்கு துறவுகோலாகவும், இயற்கையின் எழிலாகவும் அமைந்துள்ளது. இது ஒரு மதத்தினர், ஓர் வகுப்பினர் அல்லது ஓர் தேசத்து அறிஞர்கள் மட்டுமின்றி, உலகத்துள்ள எல்லா தேசத்திலும், எல்லாகாலத்தும் தோன்றிய அறிஞன், பக்தன், கலைஞன், அனைவரும் போற்றும் கலைப் படைப்பாகும். தனிப்பட்ட துறையிலே முன்னேறிவரும், தற்காலத்து ஒருங்கேயமைந்த இது போன்ற எண்ணங்களை அறிந்து கொள்வது கூட கடினம். இம்மாபெரும் படைப்பின் ஒவ்வொரு பகுதியும் மதக்கட்டுபாடுகளையோ, அல்லது மூட நம்பிக்கைகளையோ, குறிப்பவையல்ல உண்மையான நிலைகளையே எடுத்து கூறுவையாகும். விஞ்ஞனம் போற்றி புகழ்கின்றதும். இயற்கையின் அடிப்படையாகவுமுள்ள சக்தியை இவ்வளவு எளிதாகவும், அழகாகவும், உண்மையாகவும், தற்கால அறிஞர் எவராலும் தோற்றுவிக்க முடியாது. காலத்தையும் நேரத்தையும் வரையறுத்து மாற்றி மாற்றிக் கூறும் வகையில் கையிலே உள்ள உடுக்கையும், அனலும் அமைந்துள்ளன. ஒன்று ஆக்குகிறது, மற்றது அழிக்கவில்லை, மாற்றுகிறது. பிரமனின் பகலாகவும், இரவாகவும் இதையே கொள்கின்றனர். பிரமனின் இரவிலே இயற்கை செயலற்று இருக்கிறான். சிவன் விரும்பினாலொழிய அவனால் இயங்க முடியாது. சிவன் எழுந்து தன்னை மறந்து அசையாத பொருள்களினுடே அலைகளைத் தோற்றுவிக்க இயற்கையும் சிவனை சுற்றிக் கொழுந்து விட்டெரியும் திருவாசியாக, ஜோதியாக ஆடுகிறான். நடமாடும் சிவன் பலவகைப்பட்ட நிலைகளை காக்கிறார். நடமாடிக் கொண்டே எல்லாப் பெயர்களையும், உருக்களையும், அனலால் அழித்து, அவைகளுக்கு புதியதோர் செயலற்ற நிலை தருகிறார். இதுவே காவியம். எனினும் இதுவே உண்மை விஞ்ஞான நிலையாகும். நடராசர் வடிவம் பல நூற்றாண்டுகளாகப் போற்றப்படுவதில் வியப்பொன்றும் இல்லை. தொட்டதெல்லாம் சந்தேகக் கண்களுடனும், எடுத்ததெல்லாம் காட்டுமிராண்டித்தனமான மூடநம்பிக்கையாகவும், காணும் நாம், இன்னமும் நடராசவடிவை தொழுபவராகவே பெருமையடையலாம். தேசிய கலைக்கூடத்திலிருக்கும் திருவாலங்காட்டு நடராசர் வடிவை “ரோடின்” என்ற உலகப்புகழ்வாய்ந்த பிரெஞ்சு சிற்பி, கலை விதிகளுக்கும், கட்டுப்பாட்டுகளுக்கும் உட்படுத்தி, ஆராய்ச்சி செய்து, உலகின்கண் உள்ள கலைப் படைப்புகளின் தலையாய சிலையாகக் கொண்டார். முகத்திலே புன்சிரிப்பு தவழ, காலைத் தூக்கி நின்ற இப்பரத்தைக் காண, பல நாடுகளிலுருந்தும் மக்கள் வருகின்றனர். அவர்களில் சிலர் சிறந்த விஞ்ஞானிகள், புகழ் வாய்ந்த கலைஞர்கள், மற்றும் பலர். எந்நாட்டவராயினும், வாழ்க்கையில் எப்பிரிவைச் சார்ந்தவராயிருந்த போதிலும், இப்படிமத்தின் முன்னர் நின்று, இதன் கருத்தழகிலே மனதைக் கொடுத்து, கலையழகிலே லயித்து நேரம் என்பதை மறந்து நின்று ரசிப்பது கண்கூடு. இது போன்று அழகின் வடிவமாக அமைந்த மிதிலை செல்வியும், இளவலும், அனுமனும் சூழ நிற்கும் வடக்குப்பனையூர் ராமர் சிலை (படம் இருபத்தெட்டு) மிக நேர்த்தியானது. சென்னை பொருட்க்காட்சியில் உள்ள பாண்டி நாட்டைச் சார்ந்த மாறுகால் நடராசர் சிலையும், புங்கனூர் நடராசர் சிலையும், வேளாங்கண்ணி நடராசர் சிலையும் அழகுமிக்கவை. பேலூர் நடராசர் படிமத்திலும், சென்னியின் விடுதி காளியின் சிலையிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. திருவெண்காட்டிலிருந்த சமிபத்தில் கிடைத்த அர்த்தநாரீஸ்வரர் படிமமும் (படம் முப்பத்தொன்பது). சண்டேச்வரர் படிமமும் ராஜராஜ சோழன் காலத்தவை. மிக வனப்பு மிக்கவை. பேலூர் வீணாதரர், கண்ணப்பர், ஐயனார் முதலிய சிலைகள் மிக வேலைப்பாடு உடையவை. சாளுக்கிய காலத்தைச் சார்ந்த வணுகோபலர் படிமம் மிக அழகுவாய்தவை. நாகப்பட்டினத்திலிருந்து கிடைத்த சோழர்கால புத்த படிமங்கள் பலவும் சென்னை பொருட்காட்சியில் உள்ளன. தஞ்சை மாவட்டத்து கிடைத்த மைத்ரேயர் படிமம் (படம் நாற்பது). வனப்பு மிக்கது. திபெத்து, நேபாளம் முதலிய இடங்கள் போன்று தங்க முலாம் பூசப்பட்டு இது விளங்குகிறது. கோயில்கள் எல்லாம் கலைக்கூடங்களாக விளங்கி திகழ்ந்த தமிழ் நாட்டில், இன்றும் தலை சிறந்த இக்கலையை எல்லாக் கோயில்களிலும் காணலாம் சென்னை பொருட்காட்சிச்சாலை சென்னை பொருட்காட்சி சாலையில் உள்ள தொல்பொருள் பிரிவை சிற்ப வரலாற்றுப் பகுதி என்றும், ஹிந்துக்கள் பகுதி என்றும், பொளத்த, சமண சிற்பப்பகுதிகள் என்றும், ஓவியப்பகுதி என்றும், செப்புப்படிமங்கள் பகுதி என்றும் பிரிக்கலாம். சிற்பங்கள் சிற்பவரலாற்றுப் பகுதியில் கி.பி அறுநூறிலிருந்து தற்காலம் வரை தமிழ் நாட்டு சிற்பங்களும், ஆந்திர நாட்டுச் சிற்பங்களும் அடைந்த மாறுதல்களை கீழ் பகுதியில் காணலாம். கீழ் பகுதியின் இடதுபுறம் தமிழ்நாட்டு சிற்பங்களின் நிலையும், வலது புறம் ஆந்திர சிற்பங்களின் வளர்ச்சியும் காண்பிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு காலத்தும் ஏற்பட்ட மாறுதல்களைப் பற்றி முன்னரே கூறியுள்ளோம். பல்லவர் பிரிவில் உள்ள விஷ்ணுவின் சிலையும், கொம்பு கொண்ட வாயிற் காவலன் சிலையும் மிக நேர்த்தியானவை. மேல் மாடத்து செல்லும் படியின் இருமருங்கிலும் பொருத்தி வைக்கப்பட்டுள்ள சங்க நிதி, பத்மநிதி இவற்றின் சிற்பங்களும் பல்லவர் காலத்தவையாகும். சிதைந்து உள்ள முருகன் சிலை சோழர் காலத் தொடக்கத்தைக் குறிக்கும். முந்தய சோழர்காலப் பிரிவில் உள்ள பிக்ஷாடனர் சிலை பிக்ஷாண்டர் கோயிலிலிருந்து கொண்டுவரப்பட்டதாகும். திருக்கண்ணம் பூண்டியிலிருந்து கொண்டுவரப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் சிலை தென்னகத்துச் சிற்பக் கலையின் ஒப்பற்ற சாதனையாகும். கொடும்பாளுர் திரிபுராந்தகர், திரிபுரசுந்தரி சிலைகள் வெண்மையான கல்லினாலானவை. மிக நேர்த்தியான வேலைப்பாடுடையவை. சோழர் காலக் கலையின் உன்னதத்திற்கும், அழகின் மேன்மைக்கும் அணிகலனாக இச்சிலைகளைக் கூறலாம். திரிபுரசுந்தரியின் சிலையை நாள் முழுவதும் கண்டுகளிக்கலாம். மேல் மாடத்து படியை எதிர்நோக்கி நிற்கும் சூரியனும் சோழர்காலத்ததாகும். அடுத்த பிரிவில் உள்ள அரங்கநாதர் சிலை பிந்தய சோழர் காலத்ததாகும். அழகு குன்றத் தொடங்கி அணிகலன்கள் அதிகமாகும் தன்மையை இங்குகாணலாம். தமிழ் நாட்டுப்பாணியில் அமர்ந்த கண்ணன் சிலை ஒன்று விஜயநகர பிரிவில் உள்ளது. இது முதன் முதலில் உதயகிரியில் (கலிங்க நாட்டில்) ஓர் ஆலயத்து வைக்கப்பட்டு தொழப்பட்டுவந்தது. கி.பி. ஆயிரத்து ஐநூற்றுப் பதினைந்தில் கிருஷ்ணதேவராயர் கலிங்கத்தின் மீது போர் தொடுத்து, வெற்றிகண்டு, இச்சிலையை தன் நகருக்கு கொணர்ந்து, இதற்கென தனி ஆலயம் கட்டுவித்ததாக சரித்திரம் கூறுகிறது. விஜயநகரம் வீழ்ந்த போது கோயிலும் சிதைந்து சிலையும் சிதைந்தது. இவ்வுருவில் முதன் முதலாக நாமத்தை காணலாம். இதற்கு அடுத்த பிரிவில் அழகு குன்றிய சிற்பங்களை காணலாம். சிற்ப வரலாற்று பகுதியில் ஆந்திர நாட்டு சிற்ப வரலாற்றை காணலாம். முந்தய சாளுக்கியர் காலத்தை குறிக்கும் வாயிற் காப்பவனின் சிலை பீஜாப்பூரில் இருந்து கொண்டுவரப்படது. பல்லவர் காலப்பிரிவை எதிர் நோக்கியிருப்பது கீழைச் சாளுக்கியர் பிரிவாகும். துதிக்கையை வலதுபுறம் மடித்து மோதகம் உண்ணும் கரிமுகக் கடவுளின் சிலை மிகப்பெரியது. படியின் இருபுறமும் உள்ள பெரிய வாயிற் காப்போர் சிலைகளும் யானைகளின் பகுதிகளும் கீழைச் சாளுக்கிய சிற்பங்களாகும். வாயிற் காப்போர் சிலைகள் மிக அழகு வாயந்தவை. இடது புறம் உள்ள சிலையின் பின்புறம் பழைய தெலுங்கு எழுத்துக்கள் உள்ளன. வலப்பகுதியின் இரண்டாம் பிரிவில் நூளம்பர்களின் சிற்பங்களை காணலாம். இப்பிரிவின் இருபுறமும் உள்ள சிற்பங்கள் பிந்தய மேலைச் சாளுக்கியர் சிற்பங்களாகும். நடமாடும் கலைத்தெய்வத்தின் சிற்பம் மிக வளப்பு மிக்கது. இப்புறத்து மூன்றாம் பிரிவில் ஹோய்சாளர்களின் சிற்பங்கள் உள்ளன. மிக நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுடைய வாயிலும், நடமாடும் தெய்வமங்கையின் சிலையும் அழகு மிக்கவை. இவ்வாயிலின் மேல் குறுக்கு விட்டத்தில் நடமாடும் கணபதி உருவைக்காணலாம். கல்லின் ஒவ்வொரு அங்குலத்தையும் சிற்பத் திறனுக்கு ஆளாக்கி, பெருமைகொண்ட ஹோய்சாளர்களின் கலைக்கு இவைகள் எடுத்துக்காட்டாகும். விஜயநகர மன்னர்கள் ஆந்திர சிற்பங்களைக் காட்டிலும் தமிழகப் பாணியையே போற்றி வந்தமையால் அடுத்த பிரிவில் உள்ள சிற்பங்கள் தமிழகத் தொடர்பை நன்கு தெளிவுறுத்தும் வகையில் உள்ளன. இதற்கு அடுத்தபிரிவில் ஆந்திர கலை மறுபடியும் தலைதூக்கி முக்கிய நிலை வகிப்பதைக் காணலாம். சிற்ப வரலாற்று பகுதியில் மேல் மாடத்து வலதுபுறம் எழுத்துக்கள் தொடர்ந்து அடைந்த மாறுபாடுகளை காணலாம். கி.மி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து விஜயநகர மன்னர் காலம் வரை (கி.பி. ஆயிரத்து அறுநூறு) உள்ள தமிழ், கன்னடம், நாகரி முதலிய எழுத்துக்களடங்கிய கல்வெட்டுக்கள் இங்குள்ளன. எழுத்துக்களடைந்த வளர்ச்சியைக் குறிக்கும் படங்களும் இங்கு காட்டப்பட்டுள்ளன. இப்புறத்தின் கடைசிப் பிரிவில் கி.பி. சுமார் பதினொன்றாம் நூற்றண்டை சார்ந்த வங்காள நாட்டு பால, சேன மன்னர்களது சிற்பங்கள் உள்ளன. சிந்து நதி பண்பாட்டைக் குறிக்கும் பொருள்கள் மேல் மாட முன்னறையில் உள்ளன. மொஹஞ்சாதாரோவில் உபயோகிக்கப்பட்ட செங்கற்களையும் அக்காலக்கருவிகளையும், மணிகளையும், விளையாட்டு வண்டிகளையும், எடைகளையும், தானியங்களையும் புதைக்கும் தாழிகளையும், சித்திர வேலைப்பாடுடைய பானைகளின் ஓடுகளையும் காணலாம். இவ்வறையின் இரு மருங்கிலும் நாணயங்களும், அரசாங்க நகல்களும் உள்ளன. ராபர்ட்கிளைவ் எழுதிய கையெழுத்து நகல் ஒன்றையும் இதில் காணலாம். இவற்றிற்கு எதிராக மண் பொம்மைகள் மொளரியர் காலம் தொட்டு காணப்பட்டுள்ளன. மாடத்தின் இடதுபுறத்தே மொளரியர் காலம் தொட்டு கலிங்கர் காலம் வரை, வடநாட்டின் வளர்ந்த சிற்பக் கலையை காணலாம். முன்னரே விவரித்துள்ள தீதர்கஞ்ச யக்ஷியின் சுண்ணாம்புச் சுதைப்பிரதி முழு உருவில் உள்ளது. பாஜா குகை விஹாரத்து உள்ள சூரியன், இந்திரன் சிற்பங்களின் பிரதிகளும் இங்குள்ளன. பார்குத் குறுக்கு விட்டம் ஒன்றும் இங்கு உள்ளது. ராம்பூர்வா காளையின் சுண்ணாம்புச் சுதையால் ஆன சிறிய மாதிரி உருவம் அசோகனது காலத்தது. அடுத்த பிரிவில் உள்ள சிற்பங்கள் இந்திய உள்நாட்டு சிற்பங்களைக் குறிக்கும். மங்கையர்கள் மண்டிபோட்டு, புத்தபிரானின் பாதங்களை தொழும் காட்சி மிக மிக நேர்த்தியானது. இது அமராவதி ஸ்தூபத்து சிற்பமாகும். குஷாணர்களது உள்நாட்டு சிற்பங்களும் எடுத்துக்காட்டாக பல சிற்பங்கள் உள்ளன. அடுத்த பிரிவில் காந்தாரக் கலையைக் காணலாம். ரோமானிய ஆடைகளும், சுருண்ட மயிரும், சதைப்பற்றுடைய அகண்ட மார்ப்பும் உள்ள சிற்பங்கள் கிரேக்க பொளத்த சிற்பங்களாகும். அடுத்த பிரிவில் குப்தர்களது பொன்னான சிற்பங்களை காணலாம். அஜந்தா குகைச் சிற்பத்தின் பிரதி ஒன்றை இப்பிரிவில் காணலாம். கலிங்க நாட்டு சிற்பம் அடுத்தபிரிவில் உள்ளது. ஒயிலென நிற்கும் இரண்டு மாதர்களின் சிற்பங்கள் மிக வனப்பு கொண்டவை. சிற்ப வரலாற்று பகுதியிலிருந்து ஹிந்து சிற்ப அறைக்கு செல்லும் பாதையில் நினைவுச் சின்னங்கள் உள்ளன. வீரர்களின் ஞாபகார்த்தமாக எழுப்பப்பட்ட கற்களில் கல்வெட்டுக்கள் உள்ளன. தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலிய பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட வீரகற்களையும், சதிக் கற்களையும் காணலாம். ஹிந்துகளின் சிற்பங்களனைத்தையும் சிற்ப வரலாற்றுப் பகுதியில் காண்பிக்க இயலாதாகையால், இதற்கென தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது இங்கு பல கால சிற்பங்களையும் காணலாம். சத்தியமங்கலம் விஷ்ணுவின் சிலை, சப்த மாதர்கள், காவிரிப்பாக்கத்து தக்ஷிணாமூர்த்தி, மாமல்லபுரத்து அர்த்தநாரீஸ்வரர் முதலியவை பல்லவர் காலத்தவையாகும். அன்னங்களின் தொடரும் பூத கணங்களின் தொடரும் காவிரிப்பாக்கத்திலிருந்து கொண்டுவரப்பட்டவை. பல்லவர் காலத்ததாக கொள்ளப்படுகின்றன. இங்குள்ள வாயு, அக்னி, கொளமாரி இவற்றின் சிலைகள் மிக நேர்மையான வேலைப்படுடையவை. கோயில்களில் போதிகைகள் காலப்போக்கில் அடைந்த மாறுதல்களை பல்லவர் காலம்தொட்டு, தற்காலம் வரை இங்கு காணலாம். அனந்தபூர் சிற்பம் ஒன்றில் நாகர திராவிட சிகரங்கள் இணைந்து ஒன்றாக திகழ்வதை இங்கு காணலாம். அனந்தபூர் காளியின் சிலை மிகக் குறிப்பிடத்தக்கது. இங்கு தென்னாட்டு சைவ, வைணவக்கோயில்களின் பிரதிகளும், சாஞ்சி ஸ்தூபத்தின் பிரதியும் சுண்ணாம்பு சுதையால் தயாரிக்கப்பட்டு காண்பிக்கப்பட்டுள்ளன. திருவெற்றியூர் கோயிலில் உள்ள ஆதி சங்கர பெருமானின் பிரதியும் இங்கு உள்ளது. அமராவதி சிற்ப அறையின் முகப்பில் கோலி என்ற இடத்து கிடைத்த பொளத்த சிற்பங்கள் உள்ளன. கருங்கல்லினாலான சிம்மநாதர், புத்தர் சிற்பங்கள் அமராவதியில் கிடைத்தவை. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்தவை. கோலி சிற்பங்களைப்பற்றி முன்னரே குறிப்பிட்டுள்ளோம். இவை சுமார் கி.பி இருநூற்றைம்பதை சார்ந்தவை. இச்சிற்பங்களைத்தவிர ஹிந்துச்சிற்ப அறையில் பல்லவர் போன்ற மன்னர்கள் செப்பேடுகளில் உபயோகித்த முத்திரைகளின் ஓவியங்கள் உள்ளன. பல்லவர், சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர்கள், சாளுக்கியர் முதலிய மன்னர்களது முத்திரைகளை காணலாம். அடுத்த அறையில் பொளத்த சிற்பங்கள் உள்ளன. இங்கு பெரும்பாலும் அமராவதியிலிருந்து கிடைத்த சிற்பங்களே உள்ளமையின் இதை அமராவதி சிற்ப அறை என்றும் கூறுவது வழக்கம். இங்கு காஞ்சி காமாக்ஷியம்மன் கோயிலிருந்து கொண்டுவரப்பட்ட மிகப்பெரிய புத்த சிலையையும், கூவம் புத்தர் சிலையையும் காணலாம். அமராவதி ஸ்தூபத்தின் மாதிரி உருவம் ஒன்றும் இங்கு உள்ளது. பட்டிப்ரோலு என்ற இடத்தில் கிடைத்த ஸ்படிகக் குவளைகளும், தங்கமலர்களும், மணிகளும் இங்கு காட்சியில் உள்ளன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் செய்யப்பட்ட ஸ்படிகக் குவளைகளைக் கண்டு, அக்காலத்திய தொழில் நுண்ணறிவை உலகம் போற்றுகின்றது. இவற்றில் ஒரு குவளையில் புத்தரின் புனித எலும்பு கிடைத்தது. அது தற்போது மகாபோதி சங்கத்தாரிடம் உள்ளது. அமராவதி ஸ்தூபத்தை சுற்றிலும் நான்கு காலங்களில் தோன்றிய சிற்பங்களும் இங்கு உள்ளன. இச்சிற்பங்களைப் பற்றி முன்னரே விவரித்துள்ளோம். இதற்கு அடுத்த அறையில் சமணத் துறவிகளின் சிலைகள் உள்ளன. தானவுலப்பட்டு என்ற இடத்து கிடைத்த சிதைந்த கோயிலிலிருந்து இச்சிற்பங்கள் கொண்டு வரப்பட்டன. இச்சமண சிற்பங்கள் ராஷ்டிரகூடர் காலத்தவையாகும். மைசூர் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட சமணத்துறவிகளின் சிலைகள் வழவழப்பான கருங்கல்லினாலாக்கப்பட்டவை. தூத்துக்குடியிலிருந்து கொண்டுவரப்பட்ட மகாவீரரின் சிலை நேர்த்தியானதாகும். ஓவியங்கள் இந்நாட்டின் குகைக் கோயில்களிலும், கட்டிடக் கோயில்களிலும் உள்ள சுவற்றோவியங்களைப் பற்றி முன்னர் விவரித்துள்ளோம். காலப்போக்கால் கோயில்களிலும், குகைகளிலும், உள்ள சிற்பங்கள் மங்கியுள்ளன. வெளவால் போன்ற பறவைகள் அண்டி அழிந்தன. பல ஓவியங்கள், கலையறிவற்ற மனிதர் கைப்பட்டு கீறல், கிருக்கல், போன்றவைக்கு ஆளாகி சிதைந்தன. பல நூற்றாண்டுகளின் காரணத்தால் காரை பெயர்ந்து வீழ்ந்தன. இன்னம் சில ஓவியங்கள், மங்கிய ஓவியங்களின் மீது சுண்ணாம்பு பூசி மறைத்தனர். மற்றும் பல ஓவியங்களை. இவை போக, பழங்கால பெருமையும் ஓவியக்கலை இருந்த உன்னத நிலையையும் எடுத்துக்கூற எஞ்சியவை மிகச்சிலவைதாம், அவைகளும் காலப்போக்கில் மறைந்துபட்டு போகலாம். எனவே ஓவியக் கலைஞர் துணை கொண்டு இச்சித்திரங்களின் பிரதிகள் தயாரித்து மக்களுக்கு காண்பிப்பதும், நூல்வடிவிலே கொண்டு வருதலும் அரசாங்கத்தின் பொறுப்பெனக் கொண்டு, சென்னை அரசாங்கத்தால் பல ஓவியங்களின் பிரதிகளை தயாரித்துள்ளனர். இவைகளை ஓவிய அறையில் காணலாம். இங்கு அஜந்தா குகையில் மிகப்புகழ் வாய்ந்த யரோதரையும், ராகுலனும் என்ற காட்சியின் பிரதியையும், இந்திரன், கந்தர்வர், புடைசூழ விண்ணகத்தே செல்லும் காட்சியின் பிரதியையும் காணலாம். தஞ்சை பெரிய கோயிலில் உள்ள திரிபுராந்தக மூர்த்தியின் ஓவியமும், சிவன் உமையுடன் சுந்தரருக்கும், சேரமானுக்கும் காட்சியளிக்கும் சித்திரமுமுள்ளன. சித்தன்னவாசல் தாமரைக்குளத்தின் பிரதி இங்கு உள்ளது. சிங்களத்து சிகிரியா என்ற இடத்து ஓவியங்களின் பிரதிகளையம் இங்கு காணலாம். பல்லவர்காலத்து பனமலை கோயிலின் பார்வதியின் ஓவியப்பிரதி இங்கு உள்ளது. கி.பி பதினாறாம் நூற்றாண்டைச் சார்ந்த திருவனந்தபுரத்து பத்மநாபஸ்வாமி கோயிலின் ஓவியப் பிரதிகளையும் காணலாம். பிந்தய காலத்தைச் சார்ந்த சிதம்பரம் ஓவியப் பிரதிகளும், நாயக்கர் காலத்தைச் சார்ந்த ஸ்ரீரங்கம் கோயில் ஓவியப் பிரதிகளையும் இங்கு காணலாம். மற்றய ராஜஸ்தானி, தக்காண ஓவியங்கள் தேசிய கலைக்கூடத்து காண்பிக்கப்பட்டுள்ளன. செப்புபடிமங்களை முன்கட்டிடமேல் மாடத்தில் காணலாம். உருவ நிலைகள் குறிப்பு கணபதி:- ஹிந்து மதத்தில் எப்பிரிவை சேர்ந்தவராலும், முதலில் போற்றப்படும் கடவுள், யானை முகமும், பருத்த தொந்தியும், நான்கு கைகளும், ஒரு தந்தமும், சுண்டெலி வாகனமும், கொண்ட வினாயகராகும். உமை தன் காவலனாக ஓர் உருவை தோற்றுவித்தாள். ஓர் சமயம் சிவனையே தடுத்து நிறுத்தியது அவ்வுருவம். வெகுண்ட சிவன் அத்தெய்வ வடிவின் தலையை துணித்தார். பின்னர் உமையின் வேண்டுகோளுக்கு இணங்க அருகிலிருந்த யானைமுகத்தை பொருத்தி உயிர்ப்பித்தார். அதன் பயனாய் கரிமுகம் கொண்ட கடவுளாக அது மாரியது. சிவன் இவரை தன் கணங்களின் தலைவனாக நியமித்தார். ஆதலின் கணபதி என்ற பெயர் தோன்றியது. அமரர்களின் வேண்டுகோளுக்கிணங்க அசுரர்களுக்கு இன்னல் களை இக்கடவுள் தோற்றுவித்தார். தன்னை போற்றியவர்களின் இன்னல் களை போக்குவித்தார். ஆதலின் இன்னல்களின் கடவுள், விக்னேஸ்வரன் எனப்பெயர் கொண்டார். வியாஸ முனிவரின் வேண்டுகோட்கு இணங்க பாரதம் எழுத அமர்ந்த இவரிடம் எழுதுகோல்இல்லாததால் தன் தந்தம் ஒன்றை முறித்து எழுதினார். ஆதலின் ஏகதந்தன் என்ற பெயர் கொண்டார். மக்கள் தங்கள் இன்னல் தீர இக்கடவுளை இன்றளவும் வணங்குகின்றனர். ஆண்டுதோறும் தங்கள் வீட்டில் களிமண்ணால் இவர் உருவம் செய்து இவரை தமிழ் நாட்டு மக்கள் வழிபட்டு வருகின்றனர். ஒவ்வொரு கோயில்களிலும் முதன்முதலில் இவரை வணங்கித்தான் மேல் செல்கின்றனர். " கோலஞ்செய் துங்க கரிமுகத்து தூமணியே நீயெனக்கு சங்கத்தமிழ் மூன்றுந்தா". என ஒளவை பிராட்டியார் இக்கடவுளை வணங்குகிறாள். கணபதியின் சிலை நின்ற நிலையிலும், அமர்ந்த நிலையிலும் காணப்படுவதுண்டு. நின்ற நிலையில் உள்ள உருவங்கள் நேராகவோ அல்லது இரண்டு மூன்று வளைவுகளோடு கூடிய உடலையுடையதாகவோ காணப்படும். அமர்ந்த நிலையில் உள்ள உருவங்களில் பருத்த தொந்தியின் காரணத்தால் கால்கள் மடித்து காணப்படும். நடமாடும் கணபதியின் உருவமும் ஆங்காங்கே காணப்படுவது உண்டு. கணபதி உருவங்கள் பெரும் பாலும் நான்கு கைகள் கொண்டவையாக தோன்றுகின்றன. மேல் இரண்டு கைகளில் அங்குசமும், பாசமும் காணப்படுகின்றன. கீழ் இடது கையில் கொழுக்கட்டையும், வலது கை அபயச்சின்னத்தோடும் விளங்கும். வயிற்றிலே ஓர் பாம்பு சுற்றிக்கட்டப்பட்டிருக்கும். இவரது வாகனம் சுண்டெலி. கணபதிக்கு மோதகம் மிகவும் பிடித்தமான படைப்பு. பெரும்பாலும் இவரை மணமாகாதவராகவே கொள்கின்றனர். மனைவியுடன் கூடியவராகவும் சில இடங்களில் இவரை வல்லப கணபதி என்றும், உச்சிஷ்டகணபதி என்று அழைக்கின்றனர். நரசிம்ம பல்லவனின் சேனைத்தலைவனாகச்சென்ற பரஞ்சோதியார் வாதாபியை வென்று திரும்புகையில் கணபதியை தமிழ்நாட்டுக்கு கொணர்ந்ததாக ஓர் வரலாறு உண்டு. ஆகவே வாதாபி கணபதி என்றும் பெயர் உண்டு. வைணவ விக்ரஹங்கள்:- விஷ்ணுவை பெரும்பலும் நான்கு கைகளை உடையவராகப்படைப்பது வழக்கம். மேலிருகைகளிலும் ஆழியும் சங்கமும் கொண்டு இவ்வுருவம் விளங்கும். தலையில் கீரிடம் அல்லது மகுடம் உண்டு. வலது பக்கலில் செல்வக்கிழத்தியாம் அலைமகளும் (ஸீதேவி) இடது பக்கலில் இயற்கை அன்னையாம் நிலமகளும் (பூதேவி) அமர்ந்திருப்பர். அலைமகளை கையலே தாமரை கொண்ட நிலையில் தனிமையிலும் தொழுவது வழக்கம் இருபக்கலிலும் யானைகள் நிற்க தமரையில் அமர்ந்த கஜலஷ்மியாகவும் காணலாம். விஷ்ணுவிற்கு ஊர்தி (வாஹனம்) புள் (கருடன்). விஷ்ணுவிற்கு தனிப்பட்ட இடங்களில் தனிப்பட்ட நிலைகள் உண்டு. வரதராஜர்:-காஞ்சியில் வரமளிக்கும் வகையில் கீழ் வலதுகையும், இடதுகை துடையிலுமாக அமைந்த நிலைக்கு வரதராஜர் என்று பெயர். ஸீனிவாசர்:- திருவெங்கட மலையில் கீழ் வலது கை அபய நிலையிலும், இடதுகை துடையிலுமாக அமர்ந்த நிலைக்கு ஸீனிவாசர் எனப்பெயர். ரங்கநாதர்:- ஸீரங்கத்தில் அரவணையில் படுத்து துயிலும் அண்ணலை அரங்கநாதர் என்பர். பாண்டுரங்கர்:- பண்டரிபுரத்து இரண்டு கைகள் மட்டும் கொண்டு உள்ள உருவத்தை பாண்டுரங்கர் என்பர். இவ்விருகைகளும் இடுப்பிலமர்ந்த நிலையிலோ அன்றி தொங்கும் நிலையிலோ அமைந்திருக்கும். இடது கையில் சங்கயிருக்கும். வைகுண்டநாதர்:- அரவணை மேல் அமர்ந்த நிலை. லக்ஷ்மி நாராயணர்:- அமர்ந்த நிலையில் அலைமகளை இடது துடையில் அமர்த்தி விளங்கும் நிலை. அரக்கர்கள் உலகுக்கு விளைவித்த இன்னல்களை அவ்வப்பொழுது விஷ்ணு பல உருவங்களில் தோன்றி, அவர்களை அழித்து, இன்னல் களைந்த நிலைகளை பத்து அவதாரங்களாக கொள்கின்றனர். ஒன்று மத்ஸ்யம்(மீன்) இரண்டு கூர்மை(ஆமை). மூன்று வராகம்(பன்றி). நான்கு நரசிம்மம்(பாதிசிம்மம் பாதி மனிதன்).ஐந்து வாமனர் ஆறு பரசுராமர் ஏழு ரகுராமர் எட்டு கிருஷ்ணர், ஒன்பது புத்தர், பத்து கல்கி முதலியவையாகும். மத்ஸ்யம்:- முன்னர் உலகின் பெரும்பகுதி பிரளயத்தில் மூழ்கியது. அது சமயம் ஹயக்ரீவன் என்ற அரக்கன் பிரமனின் வாயிலிருந்து தோன்றிய வேதநூல்களை, திருடிச்சென்று தண்ணீருள் மறைத்தான். அப்போது திருமால் மீன் உருக்கொண்டு அரக்கனை தோற்கடித்து வேத நூல்களை மீட்டார். அன்றி அறையிலிருந்து கீழ்பகுதி மீனாகவும், மேல்பகுதி நான்கு கைகள் கொண்ட திருமாலின் உருவிலும் படைக்கப்படுவது வழக்கம். மேல் இரண்டு கைகளில் ஆழியும் சங்குமேந்தி கீழ் இருகைகளை அபய வரத சின்னங்களாக கொண்டு அணிகலன்கள் அலங்கரிக்க அழகிய உடலும், தலையிலே கீரிடமும் துலங்க விளங்கும் உருவே மீன் அவதாரமாகும். கூர்மம்:- அமரரும் அசுரரும் அமிர்தம் அடைய விரும்பினர். அதற்கு மேருவை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கி பாற்கடலை கடைந்தனர். பளு தாங்காமல் மேருமலை கீழ் செல்ல, ஆமை வடிவு கொண்டு தன் முதுகிலே மேருவை தாங்கிய திருமாலின் அவதாரத்தை கூர்மாவதாரம் என்பர். மீன் அவதாரம் போன்று இங்கும் கீழ் பகுதி ஆமை வடிவிலும் மேல்பாதி ஆழியும் சங்கமும், அபயமும் வரதமுமுள்ள கைகளோடு விளங்கும் திருமாலாக தோற்றுவிப்பது வழக்கம். வராகம்:- ஊழிக்கூத்தென கடல் அலைகள் வீசின. பெரும் பிரளயம் தோன்றியது. நிலமகளை அலைகள் அள்ளி விழுங்கின. கடலின் அடியிலே சிக்கி தவித்தனள் பூதேவி. அவளை விடுவிக்க மாபெரும் பன்றியின் உருவிலே புனலிலே பாய்ந்தார் திருமால். திருமாலைக்கண்டதும் கரம் குவித்து வணங்கினாள் நிலமகள். ஆதிசேஷனாம் அரவின் தலையிலே காலை ஊன்றி ஆர்பரித்து, அம்மகளை தூக்கி வெளியே கொணர்ந்தார் திருமால். அமரர்கள் ஆரவரித்தனர். உலகம் உய்ந்தது. " பெரியதன் புனல் சூழ பெருநிலம் எடுத்த பேராளன் ". என இவரை பக்தர்கள் பாடினர். உதயகிரி, மாமல்லபுரம், பாதாமி குகைகளில் உள்ள வராகமூர்த்தியின் சிற்பங்கள் மிக போற்றத்தக்கவையாகும். முகத்தை பன்றி உருவிலும் மற்ற அங்கங்களை மனித உருவிலும் கொண்டதாக வராகமூர்த்தியை தோற்றுவிப்பர். வராக மூர்த்திக்கும் நான்கு கைகள் உண்டு. மேல்இருகைகளும் ஆழியும் சங்கும் கொண்டு விளங்கும். கீழ் இடது கை நிலமகளின் பாதங்களை தாங்கி நிற்கும் வலதுகை நிலமகளை அணைத்து நிற்கும். வலது கால் சிறிது மடங்கி ஆதிஷேனின் தலையில் நிறுவப்பட்டிருத்தல் வேண்டும். ஆதிசேசனுடன் அவன் மனைவியும் கரம் கூப்பி தொழுத நிலையில் இருத்தல் வேண்டும். வராக மூர்த்தியின் முகம் பூதேவியை நோக்கியிருக்கும். நிலமகள் தன்னிரு கால்களும் தொங்க வராகத்தின் வலது காலில் அமர்ந்து கரம் குவித்து அண்ணலை நோக்கியிருத்தல் வேண்டும். இவ்வுருவையே ஆதிவராகம் அல்லது பூவராகம் என்பர். ஆசனத்தில் அமர்ந்து இருமருங்கிலும் அலைமகளும் நிலமகளும் அமர பன்றி முகத்துடன் தோன்றும் உருவை யஞ்வராஹம் என்பர். நரசிம்மம்:- காசியபர் என்ற முனிவருக்கு திதி என்ற மனைவி வயிற்றில் பிறந்தவன் ஹிரண்யகசிபு பரமனை நோக்கி கடுந்தவம் புரிந்து அமரராலும், மனிதராலும், மிருகங்களாலும் அழிக்கமுடியாத தன்மையை வரமெனப்பெற்றான். ஆணவம் ஓங்கியது, அமரர்களை துன்புறுத்தினான். திருமாலை தொழுத புதல்வன் பிரஹலாதனை துன்புறுத்தினான். “சொல்லடா ஹரியென்ற கடவுளெங்கே?”. என்று பிரஹலாதனை நோக்கி உறுமினான். சிறுவன் " நாரயணன் தூணிலும் உள்ளான் துரும்பிலும் உள்ளான்." என விடை பகர்ந்தனன். ஆத்திரத்துடன் தூணை உதைத்தான் ஹிரண்யகசிபு. தூண் இரண்டாக பிளந்தது.அதிலிருந்து பயங்கர உரு தோன்றியது. அது அமரர் உருவம் அல்ல, மனித உடலும் சிம்ம முகமும் கொண்ட நரசிம்ம உருவம். ஆணவம் கொண்ட அரக்கன் அழிந்தான். அவன் உடலை இருகூராகபிளந்தது. அவ்வுருவை “கடுத்த போர் அவுணன் உடல் இருபிளாக கைஉகிர் ஆண்ட எம் கடலே” என்று போற்றியது பக்தர் கூட்டம். இதையே நரசிம்மா அவதாரம் என்பர். நரசிம்மர் உருவங்களில் யோகநரசிம்மர் என்னும், லக்ஷ்மிநரசிம்மர், உக்ரநரசிம்மர் என்றும் பலவகைகள் உண்டு. இரு கால்களையும் மடித்து இரு முழங்கல்களின் அருகில்(யோகப்பட்டம்) மேலாடையைசுற்றி, தலையிலே கிரீடம் புனைந்து, மேலிருகைகளிலே ஆழியும் சங்கும் கொண்டு, கீழிருகைகளையும் முழங்கால்களின் மேல் தொங்கவிட்டு, சிம்மமுகத்துடன் விளங்கும் உருவே யோகநரசிம்மமாகும். இடது கையில் திருமகளை அமர்த்தி கீழ் இடது கையினால் தேவியை அணைத்து, கீழ் வலது கரம் அபயமளிக்க, மேலிருகைகளும் ஆழியும் சங்கமும் கொள்ள, வலது கால்தொங்க, சிம்மமுகத்துடனிருக்கும் மூர்த்தி லக்ஷ்மிநரசிம்மமாகும். ஹிரண்யகசிபுவை தன்கால்களில் குறுக்கேகிடத்தி உடலை இரு கூராக பிளந்து, குடலை மாலையாக கொள்ளும் பயங்கர உருவில் படைக்கப்படுவது உக்கிரநரசிம்மராகும். இவ்வுருவில் பலஜதக்கைகள் உண்டு. பற்கள் நீண்டு கோரமாகவும், கண்கள் உருண்டு கோப அனல் பரப்புவையாகவும் காணப்படும். எல்லோரா, பாதமி குகைகளில் உள்ள நரசிம்மமூர்த்தியின் சிலைகள் மிகப்புகழ்கொண்டவை. வாமனர்:- வைரோசனின் புதல்வனான பலி தவமிருந்து வரம் பல பெற்று பலம் பூண்டு விளங்கினான். ஆணவம் அதிகமாக அமரர் தலைவனையும் துன்புறுத்தினான், அதிதியின் வேண்டுதலின் பேரில், விஷ்ணு சிறுவேடம் தாங்கி, யாகம் செய்து நின்ற பலியிடம் மூன்றடி நிலம் யாசகமாக கேட்டார். அரக்கர்களின் குருவாம் சுக்ராசார்யனின் புத்திமதியையும் புறக்கணித்து பலி தானம் தருவதாக வாக்களித்தான். சிறுவனாயிருந்த உருவம் மிகப்பெரிய உருவமாக மாறியது. கையில் கதை, கத்தி, சங்கு, ஆழி, வில் முதலிய கொண்டு திரிவிக்கிரமனாக விஷ்ணு மாறினார். ஓர் காலினால் பூமியை அளந்தார், மற்ற அடியினால் விண்ணகத்தையும் அளந்தார், மூன்றாவது அடிவைக்க இடமின்றி பலியின் தலையிலேயே வைத்தார். பலி பாதாள உலகிற்கு அழுத்தப்பட்டான். உலகம் உய்ந்தது. ஓங்கி உலகளிந்த உத்தமனின் புகழ் பாடினர் பெரியோர். பலியை பாதள உலகின் மன்னனாக மாற்றினார் கடவுள். சிறுவனாக வந்த உருவை வாமனன் என்று அழைப்பர். சிறு குள்ளமான உருவும் ஓர் கையில் குடையும், மற்றகையில் கமண்டலமும் கொண்டு இவ்வுருவம் அமைக்கப்படும். திருவிக்கிரமராக விஷ்ணுவை எட்டு கைகளுடன் படைப்பர். ஓர்கால் தரையிலும் மற்றகால் விண்ணோக்கி தூக்கப்பட்டும் இருக்கும். தூக்கியகாலை பிரம்மன் தொழுது நிற்பர். பயந்து கைகட்டி வாய்புதைத்து, காலடியயில் பலியின் உருவம்கிடக்கும். இடது கை இரண்டு விரல்களை காண்பித்துகொண்டு இருக்கும். மற்ற கைகளில் ஆயுதங்கள் தோன்றும். எல்லோரா, பதாமி, மகாபலிபுரம் முதலிய இடங்களில் உள்ள திரிவிக்ரமர் சிற்பங்கள் மிகப்புகழ்கொண்டவை. பரசுராமர்:- உலகுக்கு மன்னர்குலம் இன்னல் விளைவித்து வந்தது. இவ்வின்னலை களைய ஜமதக்னி முனிவரின் புதல்வராக விஷ்ணு பிறந்தார். கார்த்த வீரியன் என்ற மன்னன் ஒரு சமயம் தன் புடைசூழ ஜமதக்னி முனிவரை கண்டான். அவரது “சபலா” என்ற பசு மன்னனின் பரிவாரங்களனைத்தின் பசியையும் போக்கியது. மன்னன் முனிவரிடம் அவ்வதியசப்பசுவை தரவேண்டினான். முனிவர் மறுக்கவே அவரைகொன்று தன்னாடு திரும்பினான். காடு சென்று திரும்பிய ராமர் கொல்லப்பட்ட தன் தந்தையை நோக்கினார். மன்னர் குலத்தையே பூண்டோடு அழித்துவிட பிரதிஞை பூண்டார். கையிலிருந்த மழுவைக்கொண்டு மன்னர் குலத்தையே நாசம் செய்தார். கையிலே மழுவை கொண்டதால் பரசுராமர் என்ற பெயர் தோன்றியது. சிற்பங்களில் வலது கையில் மழுவும் இடது கை சுட்டிக்காண்பிக்கும் வகையிலும் அமைந்திருக்கும். ஜடாமகுடமும் உடலிலே பூணலும் காணப்படும். இவ்வுருவம் அதிகமாக எங்கும் காணப்படுவதில்லை. ராமர்:- உன்னத மனிதத் தன்மைக்கு எடுத்துக்காட்டாக அயோத்தியில் தசரதன் மைந்தனாய் அவதரித்த மூர்த்தியே ராமர். மிதிலை செல்வியை மணந்து, முடி துறந்து, காடு சென்று, செல்வியை அரக்கன் தூக்கி செல்ல, அனுமனின் உதவியால் அரக்கர்கோனை கொன்று உலகம் உய்ய செய்த கதை யாவரும் அறிந்ததே. சிற்பங்களில் இராமர் இருகை உடையவராகவே காணப்படுகிறார். இடது கையில் வில்லும் வலது கையில் அம்பும் கொள்ளும் நிலையில் காணப்படுவார். இடது பக்கலில் இளவலும், கைகட்டி வாய் புதைத்து நிற்கும் அனுமனும், வலது பக்கலில் மிதிலைச்செல்வியும் நிற்பதைக்காணலாம். கிருஷணர்:- வசுதேவருக்கும் தேவகிக்கும் மைந்தனாய் பிறந்து கோகிலத்தில் யசோதையிடம் வளர்ந்தவர். சிறு குழந்தைபருவத்தில் பல அதிசயங்கள் செய்தவர். பூதனை என்ற அரக்கியையும் பல அரக்கர்களையும் கொன்றார். காளியன் என்ற பாம்பின் கொடுமையை அடக்கினார். கோபிகைகளிடத்தில் வெண்ணைய் திருடி உண்டார். பொறாமைக்கு பலியான இந்திரன் தோற்றுவித்த கல்மழையிலிருந்து கோவர்த்தனமலையைத்தூக்கி ஆநிரைகளை காத்தார். பாரதப்போரில் பாண்டவர் பக்கம் நின்று பார்த்தனின் சாரதியாய் வெற்றிகண்டார். கண்ணனின் கதை தெரியாதார் இல்லை. இவரை சிற்பங்களில் பல நிலைகளில் காணலாம். சந்தான கோபாலார்:- சிறு குழவியாக வாயிலே கட்டை விரல்வைத்து இருக்கும் நிலை. வடபத்ரசாயி:-ஆலிலையில் சிறுகுழந்தையாக துயிலும் எம்மான். யசோதை கிருஷ்ணர்:- அன்னையின் அணைப்பிலே பாலுண்ணும் குழந்தை. பாலகிருஷ்ணர்:- நடமாடும் சிறு குழந்தையாகவோ அல்லது தவழும் நிலையிலும் காணலாம். இதே உருவில் கையில் வெண்ணெய் இருந்தால் நவநீத கிருஷ்ணன் என்பர். காளீய கிருஷ்ணன்:- ஐந்து தலை அரவின் மீது நடமாடும் கண்ணனை காளீய கிருஷ்ணர் என்பர். வேணுகோபாலர்:- புல்லாங்குழலூதும் இளைஞர் வடிவு கொண்டது வேணுகோபாலர் சிலை. கிருஷ்ணன்:- இடது கை தூக்கி அருகிலுள்ள ருக்மிணியின் தோளில் அணைவது போன்றும் வலது கையில் ஓர் வளைத்தடியும் கொண்டு இரு பக்கலிலும் ருக்மணி, சத்தியபாமை என்ற தேவியர் சூழ விளங்கும் கண்ணன். பார்த்தசாரதி:- மஹாபாரதப்போரின்போது அர்ஜூனனின் சாரதியாய் தோன்றிய அண்ணல். புத்தர்:- புத்தரையும் விஷ்ணுவின் அவதாரமாக ஹிந்துக்கள் கொள்கின்றனர். கல்கி:- இக்கலியுகத்தின் முடிவில் இன்னல் களைய குதிரைமுகத்துடன் அவதரிக்கும் அண்ணலே கல்கி என்பர். பலராமர்:- கண்ணனுக்கு மூத்தவர், ராமருக்கும் கிருஷ்ணனுக்கும் இடையில் தோன்றிய அவதாரமாக கொள்வர். பலராமரை பத்து அவதாரங்களில் ஒன்றாகக்கொண்டால் புத்தரை தவிர்த்தல் வேண்டும்.இவை தவிர வேறு சில அவதாரங்களும் விஷ்ணு கொண்டதாக அறிகிறோம். தாத்தாத்ரேயர்:- மூன்று தலைகொண்டு நான்கு நாய்கள் சூழ விளங்கும் நிலை. ஹயக்ரீவர்:- விஷ்ணுவின் ஆழியும் சங்கமும் கொண்டு குதிரை முகத்துடன் உள்ள நிலை. விஷ்வக்ஸேனர்:- விஷ்ணுவின் காவலாளி, நான்கு கைகள் உண்டு. மேலிருகைகளிலும் ஆழியும் சங்கமும் கொண்டுள்ளார். கீழ் வலது கை எச்சரிக்கும் வகையிலோ அல்லது தடியோ கொண்டு விளங்கும். இடது கை முழங்காலில் கதையுடன் அமர்ந்திருக்கும். ஜய-விஜயர் விஷ்ணுவின் வாயிற்காவலர்கள் ஹனுமான்:- ராமனின் தூதுவர். பன்னிரண்டு வைணவ ஆழ்வார்கள் கடவுட் தன்மை அடைந்தவர்களாக தொழப்படுகின்றனர். பல சமயப்பெரியார்களும் இவ்வழியில் தொழப்படுவதுண்டு. பெரும்பாலும் அனைவரும் கைகூப்பி தொழும் நிலையில் அமர்ந்து காணப்படுவர். விஷ்ணுவின் சக்கரம் அல்லது ஆழி சுதர்சனராக எட்டு அல்லது மேல் பட்ட கைகளையுடைய உருவாக ஒரு பக்கமும், நரசிம்மராக மற்றொரு பக்கமும் தோற்றுவிக்கப்படுவது வழக்கம். சைவ விக்ரஹங்கள் சிந்துநதி பண்பாட்டிலிருந்து சிவன் வழிபாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது.சிவ வழி பாட்டை திராவிடமிருந்து ஆரியர் கொண்டதாக ஆராய்ச்சியாளர் கொள்கின்றனர். தென்னாட்டின் தனித்தெய்வமாக ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என பெரியார்கள் பாடியுள்ளனர். சிவன் லிங்கமாகவே எங்கும் வணங்கப்படுகிறார். அவர் சடைமுடி தரித்து மண்டை ஓடும், கங்கையும், திங்களின் கீற்றும், அரவும், கொன்றை மலரும் பூண்டு விளங்குகிறார். நெற்றியிலே ஓர் கண்ணுடையவர். தென்னிந்தியாவில் மானும் மழுவும் பூண்டு விளங்குகிறார். வட இந்தியாவில் சூலம் முக்கியமாக காணப்படுகின்றது. உடுக்கை, கபாலம் போன்ற மற்ற ஆயுதங்களும் அவரிடத்து காணப்படுகின்றன. உமையை மனைவியாகவும், நந்தியை வாகனமாகவும் கொண்டவர். சாந்த உருவிலும் உக்ரமான உருவிலும் இவர் காணப்படுகிறார். சுகாசனர்:- அமர்ந்த நிலை. சந்திரசேகரர்:- மானும் மழுவும் கொண்டு நேராக நிற்கும் நிலை. சடைமுடியில் திங்களின் கீற்று நன்குதெரியும் வகையில் அமைந்திருக்கும். உமா சஹிதர்:- உமை அருகிலே நிற்க, நேராக நிற்கும் நிலை. ப்ரதோஷ மூர்த்தி:-உமை அருகிலே நிற்க அம்மையின் பக்கலில் வளைந்து, அணைத்து நிற்கும் நிலை. இதை ஆலிங்கன சந்திரசேகர் என்றும் கூறுவர். சோமாஸ்கந்தர்:- உமை அருகிலே அமர்ந்திருக்க அண்ணலுக்கும் அம்மைக்கும் இடையில் முருகன் குழந்தையாக நிற்கும் நிலை. கல்யாண சுந்தரர்:- பர்வத ராஜனின் மகள் ஐந்து அக்னிகளின் மத்தியில் நின்று சிவனை அடைய தவமிருந்தாள். அவள் அன்னை இத்தவம் வேண்டாம் என்று பொருள்பட ‘உமா’ என்றனள். அதன் பயனாக உமை என்று அழைக்கப்பட்டாள். உமைக்கும் மகேஸ்வரரான சிவனுக்கும் மணம் நடந்தது. தன்தங்கையாம் உமையை தானே தாரை(நீர்) வார்த்து அளித்தார் விஷ்ணு. இத்திருமணக்கோலத்தில் விளங்கும் நிலையையே கல்யாண சுந்தரர் என்பர். உமையின் கைபிடித்து நிற்கும் நிலையில் இவ்வுருவங்களைக்காணலாம். கங்காதரர்:-சூலத்தை மேலிரு கைகளாலும் பின்புறத்தில் குறுக்கே பிடித்து, சடையை பிரித்து, விண்ணகத்திலிருந்து வீழும் கங்கையை தடுத்து நிறுத்திய அண்ணலின் உருவையே கங்காதரர் என்பர். முடியில் கங்கை நன்கு தெரியும் வகையிருத்தல் வேண்டும். விஷாபஹரணர்:- பாற்கடலை கடைந்த போது தோன்றிய ஆலகால விஷத்தை ஓர் கிண்ணத்தில் வலது கையில் தாங்கி நிற்கும் நிலை. தக்ஷிணாமூர்ததி:- சனகாதி முனிவர்களுக்கு தத்வங்கள் போதித்த மூர்த்தி. மேலிருகைகளில் அரவும் அனலும் கொண்டு, கீழ் வலது கை போதித்தலைக்குறிக்க இடது கை வேதநூல்கள் கொண்டிருக்கும். வீணாதரதக்ஷிணா மூர்த்தி:- மேலிருகைகளில் மானும், மழுவும் கொண்டு, கீழிருகைகளில் வீணைகொண்டு முனிவர்கட்கு இசை போதித்த நிலை. நடராசர்:- காளியின் அகந்தையை போக்க நடனமாடியதாகக்கொள்வர். (செப்புப்படிமங்கள் என்ற பிரிவின் கீழ் நடராச வடிவத்தின் தத்வம் கூறப்பட்டுள்ளதை காண்க) மேலிருகைகளில் உடுக்கையும் அனலும் கொள்ள, கீழ் வலது கை அபயமாகவும், இடது கை தூக்கி நின்ற காலைக்குறித்து இருக்கும். சிவனின் உக்ரமான உருவங்கள் நின்ற நிலையில் தான் காணப்படுகின்றன. நீண்ட இரு கோரப்பற்கள் முகத்தில் காணப்படும். பிக்ஷாடனர்:- பிரமனின் தலையைத்துணித்த பாபத்தைப்போக்க ஆடையற்ற நிலையிலே, கையிலே கபாலம் ஏந்தி நிற்கும் நிலை. கங்காள மூர்த்தி:- விஷ்வக்ஸேனனின் முதுகெலும்பை கைத்தடியாகக்கொண்டு,உடுக்கையும், உடுக்கையடிக்கும் குச்சியும் கொண்டு நிற்கும்நிலை. இவர் அருகிலே மான் நின்றிருக்கும். பைரவர்:- ஆடையற்ற நிலையிலே உலகைக்காப்பவராக தோன்றும் நிலை. அறுபத்து நான்கு நிலைகளிலே பைரவரைப்படைப்பது வழக்கம். பெரும்பாலும் நாய் ஒன்றுடன் காணப்படும் நிலையைத்தான் காண்கிறோம் இவருக்கு நான்கு கைகள் உண்டு, மேலிருகைகளில் உடுக்கையும் பாசமும் கொண்டிருப்பர். வீரபத்திரர்:- இவரது சடைமுடியில் ஓர் லிங்கம் காணப்படும் கையிலே கத்தியும் கேடயமும் காணப்படுவதுண்டு. மற்ற ஆயுதங்களும் கையில் உடையவராக படைப்பது வழக்கம். காலில் பாதுகைகள் காணப்படும். ஓர் ஆட்டை தூக்கிக்கொண்டோ அல்லது மனித உடலும், ஆட்டின தலையும் உடைய தக்ஷனை அருகில் கொண்டோ விளங்குவார். காலாரிமூர்த்தி:- தன் பக்தனாம் மார்க்கண்டனைக்காக்க காலனை காலால் உதைத்து சூலத்தால் தாக்கும் நிலை.சிவன் சில இடங்களில் விஷ்ணுவுடன் ஒன்றுபட்டவராக ஹரிஹரன் அல்லது சங்கரநாராயணனாக காணப்படுவர். அப்போது அவரது வலது புறம் சிவனுடைய சின்னமும் இடதுபுறம் விஷ்ணுவின் சின்னமும் பூண்டு விளங்கும். அர்த்தநாரி:- சிவனும் உமையும் ஒன்றாக பாதிசிவன் உருவம் பாதி உமையுருவம் கொண்ட அர்த்தநாரிஸ்வரர் நிலையாகும். சிவனுடைய மனைவியாக நின்ற நிலையிலே உமை, இரண்டு கைகள் மட்டும் உடையவளாகக்காணப்படுவள், அமர்ந்த நிலையில் நான்கு கைகள் உண்டு.ராஜராஜேஸ்வரியாகவும் இவ்வன்னையை வணங்குவோர் பெரியோர். துர்க்கை:- விஷ்ணுவின் சின்னங்களான ஆழியும் சங்கமும் மேலிருகைகளில் கொண்டு நின்ற நிலையில் நிற்கும் நிலை. காளி:-மானைத்தவிர மற்ற சிவனின் சின்னங்கள் கொண்டு விளங்கும் அன்னையை காளி என்பர். இரண்டு கைகள் மட்டும் இருந்தால் காளி என்றும் மேற்பட்ட கைகள் இருந்தால் பத்ரகாளி என்றும் அழைப்பர். முருகன்:- தமிழ் நாட்டின தனித் தெய்வம் முருகன். இவரை கந்தன் என்றும், சுப்ரமணியர் என்றும், ஆறுமுகன் என்றும் அழைப்பர். வட இந்தியாவில் கார்த்திகேயன் என்று அழைப்பர். முருகனை அறியாத தமிழர் இல்லை. வள்ளி, தேவசனை என்ற இரண்டு அம்மையார் சூழ விளங்குபவர். கையிலே வஜ்ரம், சக்தி என்ற ஆயுதம் பூண்டவர். சிறு குழந்தையாக, பாலசுப்ரமணியனாகவும், ஆறுமுகமுடைய ஷண்முகராகவும் இவரைக்காணலாம். கையிலே தடிக்கொண்டு கோவணம் பூண்டு ஆண்டியாக விளங்கும் அண்ணலை பழனி ஆண்டவர் என்பர். இவரது வாகனம் மயில். ஐயனார்:- விஷ்ணு மோஹினி அவதாரமெடுத்தபோது இவரிடத்தும் சிவனிடத்தும் தோன்றிய அண்ணல். கிராம மக்களின் தலையாய கடவுள் இவரையே சாத்தன் என்றும் சாஸ்தா என்றும் அழைப்பர். மலையாள நாட்டிலே நாட்டிலே ஐய்யப்பன் என்றும் கூறுவர். குதிரை, யானை முதலியவற்றின் மீது வருபவராக இவரைக்காணலாம். பூர்ணை, புஷ்கலை என்றமனைவியர் சூழ, கையில் வளைந்த தடி ஒன்று பூண்டு விளங்குவார். இவை தவிர சிவனிடம் பக்தி பூண்டு விளங்கிய அறுபத்து மூன்று நாயன்மார்களையும் கடவுளாக பாவித்து அவர்களது சிற்பங்களை கோயில்களில் வைத்து பூஜிப்பது வழக்கம். பெரும்பாலும் இரண்டு கைகளும் நின்ற நிலையில்தான் இவர்களது உருவை காணலாம். சண்டிகேஸ்வரர்:- சைவக்கோயிலகளில் உள்ள பொருள்களின் காவலாளி. கையிலே மழுகொண்டு விளங்கும் நிலையில் காணப்படுவர். கண்ணப்பர்:- தன்னிரு கண்களையும் சிவனுக்கு கொடுத்த வேடபெருமாள். கையிலே வில்லும் அம்பும் கொண்டு விளங்கும் நிலையில் காலில் பாதுகையுடன் விளங்கும் பெரியார். அப்பர்:- இவரை திருநாவுக்கரசர் என்றும் அழைப்பர். கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த இவர் முதலில் சமணராயிருந்து பின்னர் சைவராக மாற்றப்பட்டார்.புகழ்கொண்ட மகேந்திரவர்ம பல்லவனை சைவமதத்திற்கு மாற்றினார். ஆலயங்களின் புறத்தே உள்ள செடி கொடிகளை வெட்டி சுத்தம் செய்து வந்ததால் இவரது கையி்ல் மண்வெட்டி போன்ற உருப்பை காணலாம். இரு கைகளும் கூப்பிய நிலையில் காணப்படும். இவரது பதிகங்கள் நான்கு,ஐந்து,ஆறாம் திருமுறைகளாக தொகுக்கப்பட்டன. திருஞானசம்பந்தர்:- சீர்காழிப்பதியில் பிறந்தசம்பந்தர் குழந்தைப்பருவத்திலிருக்கும்போது பார்வதியினால் பாலூட்டப்பட்டார்.ஞானப்பாலுண்ட இப்பிள்ளை மூன்றுவயது முதல் தென்னாடுடைய சிவனை நோக்கி தேவாரப்பதிகங்கள் பாடினார். இவர் பதிகங்கள் முதல்மூன்று திருமுறைகளாக தொகுக்கப்பட்டன. கி.பி.ஏழாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் அப்பரின் சமகாலத்தவராக வாழ்ந்த இவர் நெடுமாறன் என்ற பாண்டிய மன்னனை சைவனாக்கினார். பதினாறாம் வயதிலேயே இவ்வுலகைநீத்தார்.இவரை எப்பொழுதும் சிறு குழந்தையாக, ஆடையற்ற நிலையில்தான் படிமங்களில் காணலாம். இடது கையில் பொற்கிண்ணமும், வலது கை சுட்டிக்காண்பிக்கும் வகையிலும் அமைந்திருக்கும். மாணிக்கவாசகர்:- திருவாசகப்பதிகங்களை பாடிய பெரியார். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர் கொள்கின்றனர்.இவர் பாடல்களில் இனிமையும் எளிமையும் காணப்படுகின்றன.எட்டாம் திருமுறைகளாக இவர்களது பாடல்கள் அமைந்துள்ளன. இடது கையில் ஓலைச்சுவடிகளும் வலது கை போதித்தலையும் குறிக்கும் வகையில் இவர் உருவம் அமைக்கப்படும். சுந்தரர்:- திருநாவலூர் என்ற பதியில் அவதரித்த சுந்தரமூர்த்தியை அவரது மணவினையின்போது சிவன்ஆட்கொண்டர். அதிலிருந்து “பித்தா பிறைசூடி”என்று தொடங்கி பதிகங்கள் பாட ஆரம்பித்தார். அவரது பதிகங்கள் ஏழாம் திருமுறையாக தொகுக்கப்பட்டன. இவர் இரண்டாம் நரசிம்ம பல்லவன் காலத்தவர். தஞ்சை பெரிய கோயிலில் இவரது ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. பொளத்த விக்கிரகங்கள்:-பொளத்தமதத்தின் தொடக்க காலத்தில் புத்தரை ஓர் புண்யபுருஷராய் கொண்டனர். அவரை மனித உருவிலே தோற்றுவித்து தொழுவது தவறு எனக்கொண்டமையின் சிற்பங்களில் சின்னமாகவே தோற்றுவித்தனர். சில நூற்றாண்டுகளுக்குள்ளாக அவரின் உருவம் அதிகமாக பழக்கத்துக்கு வந்தது. ஒரு துறவி உடையிலே புத்தர் தோற்றுவிக்கப்பட்டார்.அவர் தலையிலே சுருண்டகேசமும் மேல்நோக்கிய ஒரு சிறிய பகுதியும் காணப்படுகின்றன. அவருடைய நெற்றியில் ஒரு வட்டமான சின்னம் காணப்படுகின்றது. அவர் பெரும்பாலும் மூன்று நிலைகளில் தோற்றுவிக்கப்பட்டார். ஒன்று. தர்மத்தை போதிக்கும் நிலை. இரண்டு. ஞானம் அடைவதற்கு முன்னர் நிலமகளை சாட்சியாக அழைக்கும் பூமியை தொடும் நிலை.மூன்று. இரு கைகளையும் துடையிலே அமர்த்தி தியானத்தில் ஆழ்ந்தநிலை. வாழ்க்கையின் உயர்ந்த தத்துவங்களை போதித்த பொளத்த விதிகளை அறிந்து கொள்ள முடியாத பாமர மக்களுக்கு புத்தரை பல உருவு கொண்ட தெய்வமாக தோற்று வித்தது பிற்கால பொளத்தமதம். இதை மனுயானம் என்பர். இவ்வழியில் பல புத்தர்களும் போதி சத்வர்களும் தாராக்களும்,நேபாளம், திபெத்து, முதலிய நாடுகளில் தோற்றுவிக்கப்பட்டு தொழப்பட்டன.இவைகளில் சிலவற்றையே தென்னிந்திய கலைகளில் காண்கின்றோம். ஆதிபுத்தர் அல்லது வஜ்ரதரர் ஆழ்ந்த தியானத்தில் இருப்பவராகக்கொள்ளப்பட்டார்.இவரிடமிருந்து ஐந்து தியானி புத்தர்கள் தோன்றினர். எப்பொழுதும் தியானத்தில் அமர்ந்த இவர்கள் உலக நடவடிக்கைகளுக்கு தங்கள் பிரதிகளாக தெய்வீக போதிசத்வர்களைத்தோற்றுவித்தனர்.இது தவிர மற்ற போதிசத்வர்களும் இவர்களிடமிருந்து தோன்றினர்.மனித உலகிலே உடல்பூண்ட போதி சத்வர்களும் உண்டு. இவர்கள் பல பிறவிகள் மக்களின் நலனுக்காக பாடுபடுவர். சிலர் மிருகங்களாகவும் பிறந்து ஞானம் அடந்து உலகிலே புத்தராக பரிணமிப்பர். திபெத்திலே ஏழு புத்தர்களையும், சிலோனில் இருபத்துநான்கு புத்தர்களையும் வரிசையில்கொண்டு உள்ளனர். கருணை வடிவான இனி தோன்ற மைத்ரேயர் உலக புத்தர் வரிசையில் கடைசியானவர். தியானி புத்தர்களின் சக்திகளாக வெவ்வேறு பெயர்களில் பெண் உருவங்கள் காணப்படுகின்றன. இவர்களில் சிலர் கடவுளர்களின் மனைவியராக கருதப்படுகின்றனர். செல்வத்தின் கடவுளாம் ஜம்பலாவுக்கு வசுதரா என்பவள் மனைவியாக கொள்ளப்படுகிறாள். மற்றவர்கள் அவலோகிதேஸ்வரர் போன்ற போதிஸத்வர்களுக்கு பணியாட்களாவர். இவை தவிர அவலோகிதேஸ்வரரின் சக்தியாக தாரா என்ற தெய்வம் அதிகமாக தொழப்பட்டு வருவதையும் காண்கிறோம். கொளதமபுத்தர்,அவலோகிதேஸ்வரர், தாரா மூன்றும் தென்னாட்டில் அதிகம் காணப்படுகின்றன. புத்தரை துறவியின் உடையிலும், அவலோகிதேஸ்வரரை அரச உடையிலும் காண்பிக்கப்படுவது வழக்கம். ஆதிபுத்தர்:- இவரை வஜ்ரதரர் என்றும் அழைப்பர். அரச உடையில் அமர்ந்த நிலையில் இருப்பர். வலது கையில் வஜ்ராயுதமும் இடது கையில் மணியும் இருக்கும். இவரது சக்தியை ஆதிபிரக்ஞா என்றும் பிரக்ஞபாரமிதா என்றும் அழைப்பர். தியானி புத்தர்கள்:- வைரோசனர்: இரண்டு அரக்க அரவு சூழ அமர்ந்திருப்பவர். கைகள் தர்மசக்கரத்தை சுழற்றும் வகையில் அமைந்திருக்கும். அக்ஷோரப்பர்:- இரு யானைகள் சூழ இருப்பவர். கைகள் பூமி ஸ்பர்ச முத்திரையில் இருக்கும். ரத்னசாம்பவர்:- இரு சிம்மங்கள் சூழ அமர்ந்திருப்பவர். வலதுகை வரத முத்திரையில் இருக்கும். அமிதாபர்: இரு மயில்கள் சூழ இருப்பவர். கைகள் தியானநிலையில்மர்ந்திருக்கும். அமோக சித்தி:- இரு கருடன்களுடன் இருப்பவர். கைகள் அபயமுத்திரையிலிருக்கும் போதி சத்வர்கள்:- தியானி புத்தர்களின் பிரதி உருவங்களாக தெய்வீக போதி சத்வர்களைக்கொள்கின்றனர்.காந்தராக்கலையில் தெய்வீக போதிசத்வரான வஜ்ரபாணி, கொளதமபுத்தரை காத்து நிற்பதைக்காணலாம் அவலோகிதேஸ்வரர்: விண்ணகத்துக்கடவுள். மண்ணுலகநலனை கவனித்து வருவர். மஞ்சுஸ்ரீ: அறிவின் கடவுள். தாரா:அவலோகிதேஸ்வரரை சூழவிருக்கும் பெண் தெய்வங்களைத்தவிர மற்ற பெண்தெய்வங்கள் தாராக்களாகும். கொளதம புத்தர்: இவரை அறியாதவர் இல்லை சிற்பங்களில் துறவியின் உடையில் ஐந்து முத்திரைகளில் ஏதேனும் ஒருமுத்திரையுடையவராக இவர் காண்பிக்கப்படுவர். அவைகள் முறையே அபய முத்திரை, வரதமுத்திரை, தர்மசக்ர பிரவர்த்தன முத்திரை, புஸ்பர்ச முத்திரையாம். மைத்ரேயர் அரச உடையில் காணப்படுகிறார். அவர் மகுடத்தில் ஸ்தூபம் காணப்படும். ஜம்பலா குள்ளமான குண்டான உடல்உள்ள செல்வத்தின் கடவுள். வற்றாத தங்கம் கொடுக்கும் ஓர் கீரியை கையில்கொண்டிருப்பர். சமண விக்ரஹங்கள் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் என்ற பெரியார்கள் சமண மதத்தை வளர்த்தனர். இரண்டு கைகளும் பக்கலில் தொங்க, நின்ற நிலையிலோ அல்லது அமர்ந்த நிலையிலோ இவர்களது உருவங்கள் காணப்படும். ஆடையற்றவைகளாக நிர்வாணமாகத்தான் இச்சிற்பங்களை காண்கிறோம். இவ்வுருவங்களில் வேறுபாடும் ஏதும் கிடையாது. இவ்வுருவங்களின் ஆசனத்தின் அடியிலுள்ள வாஹனங்களைக்கொண்டுதான் இப்பெரியார்களை கண்டுகொள்ளமுடியும். அமர்ந்த நிலையில் உள்ள தீர்த்தங்கரர் சிலைகட்கும், புத்தர் சிலைகத்கும் வேறுபாடு அறிவது கடினம். ஆயினும் புத்தர் சிலைகளில் இடது மார்பை மூடி மடித்த மேலாடை உண்டு. தீர்த்தங்கரர் சிலைகளில் அது கிடையா. தீர்த்தங்கரர்களின் இருமருங்கிலும் காத்துநிற்கும் சிலைகள் யாவும் யக்ஷர்,யக்ஷிகளின் சிலைகளாகும் தீர்த்தங்கரர்களது பெயரும், சின்னங்களும் கீழே தரப்பட்டுள்ளன. - ரிஷபதேவர் அல்லது ஆதிநாதர்: வாஹனம் அல்லது சின்னம் காளை - அஜிதநாதர்: யானை - சம்பவநாதர்: குதிரை - அபிததானர்:குரங்கு - சுமதிநாதர்: சக்கரம் - பத்மப்ரபர்: சிகப்பு தாமரை - சுபார்ச்வநாதர்: ஸ்வஸ்திகம் கொண்ட ஆசனம், தலைக்குமலே ஐந்து தலை அரவம் - சந்திரப்ரபா: பிறைமதி - புஷ்பநாதர்: முதலை அல்லது நண்டு - சீதளநாதர்: கல்பமரம் - ச்ரேயம்நாதர்; மான் அல்லது கருடன் - வாசுபுஜ்யர்: எருமை அல்லது மாடு - விமலநாதர்: காட்டுபன்றி - அனந்தநாதர்; கரடி - தர்மநாதர்: வஜ்ராயுதம் - சாந்திநாதர்: மான் - குந்துநாதர்: ஆடு - அரநாதர்: மீன் - மல்லிநாதர்: நீர்குடம் - முனிசுவரர்: ஆமை - நமிநாதர்: அல்லி - நேமிநாதர்; சங்கம் - பார்ஸவநாதர்: ஆசனத்தில் ஓர் அரவம், தலைக்குமே ஓர்அரவம் - மகாவீரர்; சிம்மம் நூலாசிரியர் வித்யாவாசஸ்சபதி டாக்டர். இரா. நாகசமி அவர்கள் கோவை மாவட்டம், ஊஞ்சலூரில் 1930ல் பிறந்தவர். சம்ஸ்கிருத மொழியில் எம். ஏ. பட்டப் படிப்பும், தொலியலில் டாக்டர் பட்டமும் பெற்றவர். சங்க இலக்கியம் முதல் அண்மைக் கால இலக்கியம் வரை தமிழில் ஆழ்ந்த புலமை பெற்றவர். குறிப்பாக சைவ இலக்கியங்களில் சிறப்பாக ஈடுபட்டு பல நூல்களை இயற்றியவர். இவரது கட்டுரைகள் யுனஸ்கோ நிறுவனத்தல் 20க்கும் மேற்ப்பட்ட உலக மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத் தொல்லியல் துறையின் முதல் இயக்குனராக பொருப்பேற்ற 22 ஆண்டுகாலப் பணியில் தமிழகம் முழுவதிலும் கல்வெட்டிலும், கலைகளிலும் பெரும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியவர். தொல்லியல், காசுகள், கலைகள், கோயில் வழிபாடு, சிற்பம், ஓவியம், இசை, நாட்டியம் ஆகிய பல துறைகளிலும் வல்லுனர். கர்நாடக இசைப் பாடல்கள் பல இயற்றியவர். இராஜராஜ விஜயம், ஞானக்குழந்தை, அப்பர் சரிதம், மணிமேகலை முதலிய பத்துக்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்களை இயற்றியவர். பண் முறையிலேயே பாடல்களைப் பாடி நாட்டியம் அமைத்தவர். இவரது நாட்டிய நாடகங்கள் ஸ்வீடன், ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா, கானடா ஆகிய உலக நாடுகலளில் மிகவும் சிறப்பாக நடிக்கபெற்று புகழ் பெற்றன. பத்தூரில் கிடைத்த நடராஜர் சிலை வழக்கில் இந்திய அரசின் சார்பில் லண்டன் உயர்நீதிமன்றத்தில் சிறப்பாக சாட்ச்சியம் அளித்து நீதிபதியின் பாராட்டுகளை பெற்றதோடு வெளிநாடு சென்ற சிலையை இந்தியாவுக்கு மீட்டுத்தந்தவர். “சிலை மீட்ட செல்வர்” என பொள்ளாச்சி வள்ளல் நா. மகாலிங்கம் அவர்களால் பட்டம் அளித்து சிறப்பிக்கப் பெற்றவர். இவரது தொல்லியல் கலை சேவையை பாராட்டி தமிழக அரசு கலைமாமணி பட்டம் அளித்து சிறப்பித்துள்ளது. FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.