[] [cover image] கலிங்கம் கண்ட காவலர் புலவர் கா.கோவிந்தன் FreeTamilEbooks.com Public Domain - CC0 கலிங்கம் கண்ட காவலர் 1. கலிங்கம் கண்ட காவலர் 1. பதிப்புரை 2. தோற்றுவாய் 2. குலோத்துங்கன் குல மரபு 3. சாளுக்கியன், சோழர் அரியணையமர்தல் 4. குலோத்துங்கன் கொற்றம் 5. குலோத்துங்கன் கோல் முறை 6. மௌரியர் மரபு 7. அரியணை ஏறிய அசோகன் 8. அசோகன் மேற்கொண்ட அருள்நெறி 1. இந்த மின்னூலைப் பற்றி கலிங்கம் கண்ட காவலர் கலிங்கம் கண்ட காவலர்   புலவர் கா.கோவிந்தன்   தமிழாக்கம் -       மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : Public Domain - CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் - G.சுமதி - sumathig000@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/kalingam_kanda_kaavalar} பதிப்புரை கலிங்கம் கண்ட காவலர்-இருவர். வடகலிங்கத்தை வென்ற குலோத்துங்கனைப் பற்றியும், தென்கலிங்கம் வென்ற அசோகனைப் பற்றியும் இந்நூல் கூறுகின்றது. ஆராய்ச்சி முறையும், வரலாறு முறையும் தழுவ எழுதப் பட்டுள்ள இந்நூல் தமிழ் மக்கள் உள்ளத்தில் ஒரு கிளர்ச்சியை யுண்டாக்கும். பழங்கால வரலாற்று உண்மைகளில் பல இக்கால மக்கள் எழுச்சிக்கு எவ்வாறு துணைபுரிகின்றன என்பது இந்நூலைக் கற்பார்க்கு நன்கு விளங்கும். இத்தகைய சிறந்த நூலை எழுதியுதவிய புலவர்: கா. கோவிந்தன் எம். ஏ. அவர்களுக்கு எங்கள் நன்றியுரியது. க. பழநியப்பன், உரிமையாளர், வள்ளுவர் பண்ணை. தோற்றுவாய் இந்திய வரலாற்றில் சிறப்பிடம் பெறத்தக்க இடங்கள் ஒரு சிலவே என்றால், அவற்றுள் கலிங்கம் தலையாய சிறப்பு வாய்ந்தது. கலிங்கம், ஒருபால், ஒர் அரிய இலக்கியம் தோன்றத் துணை புரிந்துள்ளது. மற்றொருபால், அன்பு நெறி வளர்த்து அறவழி காட்டும் ஒர் அரிய மதம் உலகெங்கும் பரவ உறுதுணை புரிந்துள்ளது. “பரணிக் கோர் சயங்கொண்டான்” என்ற பாராட்டிற்கு உரிய பெரியார், கலிங்கத்துப் பரணி என்ற பெயரால், உயர்ந்த செந்தமிழ் இலக்கியக் கருவுலம் ஒன்றை உருவாக்கக் காரணமாய் இருந்தது கலிங்கநாடு. பெரும் படை துணை செய்யப், போர் வெறி பிடித் தலைந்த அசோகன் உள்ளத்தில், அன்பும் அருளும் சுரக்கப்பண்ணி, அவன் துணையால் புத்தன் வகுத்த புது மதம் பாரெல்லாம் சென்று பரவப் பெருந்துணை புரிந்ததும் அக்கலிங்க நாடே. கங்கைக்கும் கோதாவரிக்கும் இடையில், வங்கப் பெருங்கடலைச் சார்ந்திருக்கும் கடற்கரை நாடே, பண்டு கலிங்கம் எனும் பெயர் பூண்டுத் திகழ்ந்தது. அது, கலிங்கம் எனப் பொதுவாக அழைக்கப் பெறினும், கோதாவரிக்கும் மகாநதிக்கும் இடையில் கிடப்பதும் இன்றைய கஞ்சம் விசாகப்பட்டின மாவட்டங்களைக் கொண்டதுமாகிய ஆந்திர மாகாணப் பகுதி தென் கலிங்கம் எனவும், மகா நதிக்கும் கங்கைக்கும் இடையில் உள்ளதும், ஒரிசா மாகாணம் என வழங்கப் பெறுவது மாகிய பகுதி வட கலிங்கம் எனவும் இரு கூறாய்ப் பிரிந்து வழங்கப் பெற்றது. கலிங்கத்தை வென்ற காவலர் இருவர். ஒருவன் வட நாடாண்ட மௌரியப் பேரரசனாகிய அசோகன், மற்றொருவன் தென்னாடாண்ட சோழர்குலப் பேரரசனாகிய குலோத்துங்கன். அசோகன் வென்றது தென் கலிங்கம்; குலோத்துங்கன் வென்றது. வட கலிங்கம். அசோகன் வட நாட்டு வேந்தன்; குலோத்துங்கன் தென்னாட்டுக் காவலன். முன்னவன் மௌரியர் வழி வந்தவன்; பின்னவன் சோழ சாளுக்கியர் வழி வந்தவன். அசோகன் வாழ்ந்த காலத்திற்குப் பின் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகள் கழித்து வாழ்ந்தவன் குலோத்துங்கன். இவ்வாறு அவ்விருவர்க்குமிடையே வேற்றுமை பல விளங்கினும், அவ்விருவரையும் ஒருங்குவைத்துக் காண, வல்ல ஒற்றுமைப் பண்புகள் சிலவும் அவரிடையே உள. இருவரும் கலிங்கத்தை வென்றவர்கள். அவர்கள், கலிங்கத்தின் வேறு வேறு பகுதிகளை வேறு வேறு காலத்தில் வென்றனர் என்றாலும், அவரால் வெல்லப்பட்டது கலிங்கம் என்ற பொதுப்பெயர் பூண்ட ஒரே நாடாகும். இருவரும் மணிமகுடம் புனைந்து மன்னர் ஆவதற்கு முன்னர், இளங்கோப் பட்டம் பூண்டு, போர் வேட்கை மேற்கொண்டு நாடெங்கும் அலைந்து திரிந்தவராவர். தம் ஆட்சி உரிமையைப் பெற, நாட்டில் அரசியல் குழப்பத்தைத் தோற்றுவித்து, ஆட்சிக்கு முறைப்படி உரிமையுடையாரைக் கொலை புரிந்தவர் என்ற பெரும்பழி அவ்விருவர்க்குமே சூட்டப்பட்டுள்ளது. இருவருமே பாராட்டத்தக்க பேராண்மையும் பெரும் படையும் உடையவர். இருவருமே தம் ஆட்சியின் பிற்பகுதியை நாட்டு மக்களின் நல்வாழ்விலே நாட்டம் செலுத்தி, நல்ல பல அரசியல் செப்பங்களை ஆக்கியவர். இவ்வாறு அவ்விருவரிடையேயும் இத்தகைய ஒருமைப் பாடுகள் சில உளவாதல் கண்டு, அவ்விருவரையும் ஒருங்கு காண விழைந்தேன். கண்டேன். அடியேன் கண்டதை உங்களுக்கும் காட்ட முனைந்தேன். அதன் பயனே “கலிங்கம் கண்ட காவலர்” என்ற இச்சிறு நூல்.  குலோத்துங்கன் குல மரபு வேங்கடம் முதல் குமரிவரை பரவிய பெரு நிலப் பரப்பைக் கொண்டது பைந்தமிழ் நாடு. வேங்கடம், பொதியம், பறம்பு, கொல்லி என்ற வளங்கொழிக்கும் மலைகளைத் தன்னகத்தே கொண்ட மாண்பும் அதற்கு உண்டு. வான் பொய்ப்பினும் தான் பொய்யாது வந்து பாயும் காவிரி, வையை, பொருநை போலும் பேராறுகளின் பாய்ச்சலைப் பெறும்பேறும் அதற்கு வாய்த்திருந்தது. வேலி ஆயிரம் விளையும் நிலம், ஒரு களிறு படியும் இடம் ஏழு களிறுகளைப் புரக்கவல்ல வளம் தரும் நிலம் என வாயார வாழ்த்தப்பெறும் வளம் மிக்க நிலங்கள் அந்நாட்டு நிலங்கள். மலைபடு பொருள்களாம் அகிலையும், ஆரத்தையும், மிளகையும், கடல்படு பொருளாம் முத்தையும், கைத்தொழில் திறம் காட்டும் நுண்ணிய ஆடை அணிகளையும் கடல் கடந்த நாடுகளுக்குக் கலம் ஏற்றி அனுப்பிக் கடல் வாணிகம் வளர்த்துக் குவித்த செல்வத்தால் செம்மாந்திருக்கும் சிறப்பும் அச் செந்தமிழ் நாட்டிற்கு இருந்தது. அரணும் அகழியும் அரிய காவற் காடும் சூழ்ந்து கிடக்க, அகநகர் புறநகர் என்ற அமைப்பு முறையில் குறைபடாது. கோடை வெயிலுக்கோ, உதிர்க் குளிருக்கோ கலங்காது வாழ்தற்கு வாய்ப்பளிக்கும் வகை வகையான நிலைகளைக் கொண்ட மாடங்கள், வரிசை வரிசையாக விளங்க, வேந்தர்க்கும் வேதியர்க்கும், வணிகர்க்கும், வேளாளர்க்கும் தனித் தனியே அமைந்த அழகிய அகன்று நீண்ட பெருந் தெருக்களைக் கொண்ட மாநகர்களாம் மதுரை, புகார், உறையூர், வஞ்சி, காஞ்சி, தஞ்சை போலும் பேரூர்கள் பல அந்நாடெங்கும் அமைந்து அழகு தந்திருந்தன.  அம்மட்டோ! மேற்கே சிறந்து விளங்கிய கிரேக்க உரோமப் பேரரசுகளோடும், கிழக்கே சிறந்து விளங்கிய சீனப் பேரரசோடும் வாணிகத் தொடர்பும், அரசியல் தொடர்பும் கொண்டு, அந்நாட்டு அரசவைகளுக்குத் தன்னாட்டுத் தூதுவர்களை அனுப்பி அரசியல் வளம் கண்டது அவ்வண்டமிழ் நாடு, புலவர் பேரவை அமைத்து, நாடெங்கும் உள்ள புலவர்களை ஒன்று கூட்டி, ஒரிடத்தே இருக்கப்பண்ணி, உயர்ந்த இலக்கிய இலக் கணப் பெரு நூல்கள் உருவாக வழிகண்டு, தன் மொழிக்கு உயர்தனிச் செம்மொழி எனும் உயர்வை அளித்த பெருமையும் அந்நாடு ஒன்றற்கே உண்டு. அக வாழ்வும் புறவாழ்வும் ஒருங்கே சிறத்தல் வேண்டும். அதுவே ஒரு நாட்டின் நல்லாட்சிக்கு அறிகுறியாம். அகத்தில் காதலும், புறத்தில் வீரமும் வளர வேண்டும். அவை இரண்டும் ஒன்றற்கொன்று உற்ற துணையாய் நிற்றல் வேண்டும் என நினைந்து, அவ்விரு வாழ்வையும் வளர்க்கும் அகப்புற இலக்கியங்களை ஆக்கி அளித்த நாடு, உலக நாடுகளுள் தமிழ்நாடு ஒன்றே. இவ்வாறு எல்லாவகையாலும் ஈடு இணை இன்றி, இறப்ப உயர்ந்து விளங்கிய தமிழ் நாட்டைத் தொல்லுாழிக் காலம் முதற்கொண்டே சேரர், சோழர், பாண்டியர் என்ற மூவேந்தர் குலத்தவர் ஆண்டு வந்தனர். அதியர், ஆவியர், ஓவியர், மலையர், வேளிர் போலும் வேறு இனத்தைச் சேர்ந்த சிற்றரசர் சிலரும், தமிழகத் தின் சிற்சில இடங்களைச் சிற்சில காலங்களில் ஆண்டு வந்தனர் என்றாலும், அவர்கள் அனைவரும் முற்கூறிய அம்மூவேந்தர்க்கு ஒருவகையால் அடங்கியே ஆண்டு வந்தமையால், தமிழகத்தின் வேந்தர் என வாழ்த்தி வழங்கப் பெற்றவர் அம்மூவேந்தர் மட்டுமே ஆவர். தமிழகத்தை ஆளும் உரிமை, இம்மூவேந்தர்க்கு வந்துற்றகாலம் ஏது? அதற்குமுன் அந்நாடு எவர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என்பதை இப்போது அறிந்து கொள்வது இயலாது. வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட காலத்தில் இருந்ததே. அந்நாடாண்டிருந்தவர் இம் மூவேந்தர்களே. இவர்கள் ஆட்சிக்காலம், இவ்வாறு அளந்து காண மாட்டா. அத்துணைப் பழமை யுடையதாய் விளங்குவதால் அன்றோ, இவர்களைப் பற்றிப் பேசவந்த பேராசிரியர் இருவரும், “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்தகுடி”, என்றும், “படைப்புக்காலம் தொட்டு மேம்பட்டு வரும் தொல்குடி” என்றும் கூறி, அவர் தம் பழமையைப் பாராட்டிச் சென்றனர். தமிழ் மொழியின் தலையாய இலக்கண முதல் நூலை இயற்றிய ஆசிரியப் பெருந்தகையாகிய தொல்காப்பியனார் காலத்திற்கு முற்பட்ட காலத்திலேயே, தமிழ் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை இம்மூவேந்தர் ஏற்றிருந்தனர் என்பதும், அக்காலத்திலேயே அவர்கள் தத்தமக்கெனத் தனித் தனிக் கொடியும் மாலையும் கொண்ட பேரரசப் பெருவாழ்வில் பெருக வாழ்ந்திருந்தனர் என்பதும், ஆசிரியர் தொல் காப்பியனார், இத்தமிழகத்தைக் குறிப்பிடுங்கால் “வண் புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு” என்றும், மூவேந்தரைக் குறிப்பிடுங்கால், “போந்தை வேம்பே, ஆர் எனவரும்.உம் மாபெருந்தானையர்” என்றும் குறிப்பிடுதலால் பெறப்படும். மூவேந்தர்கள், இராமாயண பாரத காலங்களுக்கு முன்பிருந்தே நனிமிகச் சிறந்த நாகரிக வாழ்வினராய் வாழ்ந்து வந்துள்ளனர். சீதையைத் தேடித், மதன் திசைச் செல்லும் அநுமனுக்குத் தென்திசை நாடுகளின் வரலாற்றினை உணர்த்தும் வானரத் தலைவன் வாயில் வைத்து, கடல் கொண்ட பாண்டி நாட்டின் தலைநகராம் கபாடபுரத்தையும், முத்துக்கள் இழைத்துப் பண்ணிய பொற்கதவுகள் பூட்டிய மாடமாளிகைகளைக் கொண்ட அந்நகரமைப்பின் அழகையும், வால்மீகியார் வாயார வாழ்த்தியுள்ளார். பாரதப் பெரும் போரில் இரு திறத்துப் படை வீரர்க்கும், அப்போர் முடியுங்காரும் சோறு அளித்துக் காத்தான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் என்ற சேரர் குலத்தான் எனச் செப்புகின்றன. சங்கத் தமிழ்ச் செய்யுள்கள். கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் மகதநாட்டில் தோன்றி, வட நாடு முழுவதிலும் தன் ஆணைசெல. ஆண்ட அரசர்குல அடலேறாகிய அசோகனால் “என் ஆணைக்கு அடங்காது தனியரசு செலுத்தும் பேரரசர் இத்தமிழரசர்” எனப் பாராட்டப் பெற்றுள்ளனர் இம்மூவேந்தர் என்பது, அவ்வசோகன் கல்வெட்டுக்களினாலேயே நன்கு புலனாகிறது. மேலும் தமிழகத்தில், தமிழ் அரசை அழித்துத் தம் அரசை நிலை நாட்டும் நினைப்பினராய் நெடிய தேர்ப்படையோடு தமிழ் நாட்டுள் நுழைந்த மௌரியப் பெரும் படையைத், தமிழகத்து வீரர்கள் முறியடித்த வீரத்தைப் பழந்தமிழ்ப் பாக்கள் பாராட்டிப் பரணி பாடுகின்றன. அம்மட்டோ! கி. பி. முதல் நூற்றாண்டில் நம்நாடு மேலை நாடுகளோடு கொண்டிருந்த வாணிக உறவின் விளைவால், நம் நாட்டிற்கு வந்து சென்ற தாலமி, பிளைனி போன்ற நில நூல் பேராசிரியர்களாலும், அவர் போலும் ஆசிரியர்கள் ஆக்கிய பெரிப்புளுஸ் போன்ற நூல்களாலும் தமிழ் அரசர்கள் மிக மிக உயர்ந்தோராகப் பாராட்டப் பெற்றுள்ளனர். சேர, சோழ, பாண்டியர் என்ற அத்தமிழ் அரசர் மூவரும் ஒரு தாய் வயிற்றில் தோன்றிய மூவரின் வழி வந்தவர் என்றும், பண்டு, அவர்கள் நாகரிகத்தின் பிறப்பிடம் எனக் கருதப்படும் பொருநை ஆற்றங்கரையில் வாழ்ந்திருந்தனர் என்றும், பிற்காலத்தில் யாதோ ஒரு காரணத்தால் அவர்களிடையே ஒற்றுமை குலைந்து வேற்றுமை தலை தூக்க, மூத்தோன் வழி வந்தவர் மேற்கு மலைத் தொடர்ச்சியைக் கடந்துபோய் மேலைக்கடற் கரையை வாழிடமாகக் கொண்டனர் என்றும், நடுப்பிறந்தோனாகிய சோழன் வழி வந்தவர் வடக்கு நோக்கிச் சென்று, கீழ்க்கடற்கரைக் கண்ணதாகிய காவிரி நாட்டைக் கைப்பற்றி ஆண்டனர் என்றும், இளையோனாகிய பாண்டியன் வழி வந்தவர் மட்டும், தாங்கள் தொன்று தொட்டு வாழ்ந்துவந்த வாழிடமாகிய பொருநை ஆற்றங்கரையிலேயே தங்கிவிட்டனர் என்றும் வரலாற்றாசிரியர் சிலர் கூறுகின்றனர். இவ்வாறு பலரும் பாராட்டப் பாராண்ட பேரரசர் மூவருள் நடுவண் நிறுத்திப் பாராட்டப்பெறும் பேற்றினைப் பெற்றவர் சோழர். சோழர்குல முதல்வர், ஆட்சி முறையின் அரிய உண்மைகளை உள்ளவாறு உணர்ந்த உயர்ந்தோராவர். மக்களின் தேவைகளுள் நனி மிகச் சிறந்தது உணவு. உடையிலும், உறையுளிலும் குறை நேரினும் அவர்கள் தாங்கிக்கொள்வர். ஆனால் உணவில் குறை நேரின் அதை அவர்களால் தாங்கிக்கொள்வது இயலாது. அந்நிலை உண்டாயின் அவர்கள் அமைதி இழந்து போவர். ஆத்திரம் அவர்கள் அறிவை அழித்துவிடும்; சிந்திக்கும் ஆற்றலை இழந்து நிற்கும் அந்நிலையில் அவர்கள் எதையும் செய்யத் துணிந்து விடுவர். அழிவுத் தொழில் ஒன்றைத் தவிர்த்து, வேறு எதையும் அறியாதவராகி விடுவர். அரசியலின் இப்பேருண்மையைச் சோழர் குலப்போரசர்கள் அறிந்திருந்தனராதலின் அவர்கள் தம் நாட்டு உணவுப் பெருக்கத்தைத் தலையாய கடமையாகக் கருதினார்கள். உணவுப் பெருக்கம் உண்டாக வேண்டு மேல், அதற்குக் குறையா நீர்வளம் என்றும் தேவை என்பதை நெஞ்சில் நிலை நிறுத்தினார்கள் . அதனால் பெரியவும் சிறியவுமாய நீர் நிலைகள் எண்ணற்றனவற்றை நாடெங்கும் அமைத்தனர். ஆறுகளின் குறுக்கே அணைகளைக் கட்டிப், பயன் இன்றி ஓடிக் கடலில் விழும் தண்ணீரை வாய்க் கால்கள் வழியே கொண்டு சென்று அந்நீர் நிலைகளை நிரப்பினர். நீர் வளம் பெருகவே நிலம் நிறைய விளைந்தது. ‘வேலி ஆயிரம் விளைக’ என வாழ்த்தினார்கள் ஆன்றோர்கள். வயல்களும் அவ்வாறே விளைந்தன. “ஒரு களிறு படியும் சீறிடம் எழு களிறு புரக்கும் நாடு கிழவோய்” என அந்நாடாள் அரசனை அவன் நாட்டு வளம் காட்டிப் பாராட்டினார்கள் புலவர்கள். “நெல்லுடையான் நீர்தாடர்கோ” எனச் சோழரும், “மேதக்க சோழவள நாடு சோறுடைத்து”, “தஞ்சை, தென்னாட்டின் தெற் களஞ்சியம்” எனச் சோழநாடும் பாராட்டப் பெற்றன. மூவேந்தர்களுள், சோழர்கள் மட்டுமே, இவ்வாறு வளத்தில் சிறந்து விளங்கினமையால், அவர்களுக்கு “வளவர்” எனப் பெயர் சூட்டிப் பாராட்டிற்று அன்றைய உலகம். சோழர் பேரரசின் இப்பாராட்டுதலுக்குப் பெரிதும் காரணமாய் விளங்கியவன் கரிகாற்பெருவளத்தான். இமயம் முதல் ஈழம்வரை சென்று பரவியது போதாது, என் வெற்றிப் புகழ் இமயத்துக்கு அப்பால் உள்ள நாடுகளிலும் சென்று பரவவேண்டும் என்றும், பருவ மழை பொய்யாது பெய்தலால் உளவாகும் வளம் மட்டும் போதாது, காவிரியாற்று நீர் என் ஆணைக்கு அடங்கி, நான் அமைக்கும் அணையில் தேங்கியிருந்து பாய்வதால் பெறலாகும் பெருவளமும் உண்டாதல் வேண்டும் என்றும், உள்நாட்டு வாணிகத்தின் வளர்ச்சி மட்டும் போதாது, நான் அமைக்குப் புகார்த்துறையில் பல்வேறு நாட்டுக் கலங்களும் வந்து காத்துக் கிடக்குமளவு கடல் வாணிகத்தின் வளர்ச்சியும் வேண்டும் என்றும் விரும்பி, விரும்பிய அனைத்தையும் விரும்பியவாறே பெற்றுப் பெருவாழ்வு வாழ்ந்தான் திருமாவளவன். ஆனால் அந்தோ! அவன் கண்ட அப்பேரரசு அவனுக்குப் பின் வீழ்ந்து விட்டது. அவனுக்குப் பின் அரியணை ஏறிய சோழர் குலத்தவர் ஆட்சியைக் கைப்பற்ற நிகழ்த்திய உள்தாட்டுப் போர்களால், சோழர் பேரரசு சிறிது சிறிதாக உரம் இழந்து கொண்டிருந்தது. இருநூறு ஆண்டுகளுக்குள் இருபதுக்கும் மேற்பட்டோர் அரியணை ஏறி இறங்கிவிட்டனர். இந்நிலையில் களப்பிரர் என்ற வடநாட்டுக் கொள்ளைக் கூட்டத்தவர் வேறு, தமிழகத்தில் நுழைந்து தமிழரசுகளை அலைக்கழிக்கத் தொடங்கினர். இயல்பாகவே உரம் இழந்திருந்த சோழ நாடு, களப்பிரரின் வெறியாட்டத்திற்கு இடனாகி இடர் உற்றது. சோழர் தாழ்நிலை உற்றனர். காவற் சிறப்பு அமைந்த உறையூரையும், கடல் வாணிக வளம் கொழிக்கும் காவிரிப்பூம் பட்டினத்தையும் கைவிட்டுப் பழையாறை நகர் புகுந்து நலிவெய்திக் கிடந்தனர் பல நூறு ஆண்டுகள் வரை. சங்ககாலச் சோழர் பேரரசின் தொடக்கக் காலத்திற்கும், விசயாலயன் வழிவந்த பிற்காலச் சோழர் பேரரசின் தொடக்கக் காலத்திற்கும் இடையில் எழுநூறு ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்நீண்டகாலம் முழுவதும் சோழர் தலைமறைவாகவே வாழவேண்டியவராயினர். தமிழகத்தின் அரசியல் அமைதியைக் குலைத்துக் கொடுங்கோல் புரிந்து வந்த களப்பிரர் ஆட்சி, கி. பி. ஆறாம் நூற்றாண்டு வரையும் அழிக்கலாகா ஆற்றல் பெற்று விளங்கிற்று. ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அவர் ஆட்சியும் அழியத் தொடங்கிவிட்டது. ஆயினும், தம் ஆட்சி அழிவிற்குக் காரணமாய் இருந்த களப்பிரர் அழிந்துபோனதும், சோழர் ஆட்சி தலை தூக்கவில்லை. களப்பிரர் வென்று துரத்தப்பட்டனர் என்றாலும், அவரை வென்று துரத்திய அப்பணியை மேற்கொண்டவர் சோழர் அல்லர். அதைப் பல்லவரே முதற்கண் மேற்கொண்டனர். அவரைத் தொடர்ந்து பாண்டியரும் அதை மேற்கொண்டனர். களப்பிரரை வெற்றி கண்ட பல்லவரும் பாண்டியரும் சோணாட்டிற்கு வடக்கிலும் தெற்கிலும் அரசமைத்து வளரத் தொடங்கிவிட்டனர். ஆற்றல் மிக்க அரசன் எவனையும் பெறாமல், நானூறு ஆண்டுகளாக வலியிழந்து வாழ்விழந்து கிடக்கும் சோழரால், புதிய உரத்தோடு பேரரசு அமைத்து வளர்ந்து வரும் பல்லவ பாண்டியர்க்கிடையே வளர்ந்து வாழ்வு பெறுதல் இயலாதாயிற்று. அதனால் மேலும் சில ஆண்டுகள் அடங்கி வாழவேண்டியவராயினர். அவ்வாறே சில நாள் பல்லவ ரோடும் சில நாள் பாண்டியரோடும் உறவும் நட்பும் கொண்டு உயிரோம்பி வந்தனர். “காலம் கருதி இருப்பர், கலங்காது ஞாலம் கருதுபவர்” என்றார் வள்ளுவப் பெருந்தகையார். தம் ஆற்றலை நிலைநாட்டித் தனியரசு அமைக்க வேண்டும் என்ற ஆசை சோழர் குலத்தவரின் உள்ளத்தைவிட்டு அகலவில்லை. பல்லவப் பாண்டியப் பேரரசுகளின் புத்தம் புதிய பெருவாழ்வைக் காணும்போதெல்லாம், அவ்வாசை அவர்கள் உள்ளத்தில் ஓங்கி வளர்ந்து கொண்டேயிருந்தது. அதனால் அவ்வாசையை நிறைவேற்றிக் கொள்ளற்கு வாய்ப்புடைய காலத்தை எதிர் நோக்கியிருந்தனர். அதற்கேற்ப, அந்நற்காலம் அவர்களை அணுகுதற்கு ஏற்ற சூழ்நிலையும் மெல்ல உருவாகத் தலைப்பட்டது. பல்லவர்க்கும் பாண்டியர்க்கும் இடையே பேரரசுப் போட்டி எழுந்துவிட்டது. அதன் பயனாய் இரு பேரரசுகளும் ஓயாது போரிடத் தொடங்கிவிட்டன. தமிழ் நாட்டின் தலை எழுத்து எந்தப் பேரரசையும் இருநூறு ஆண்டுகளுக்குமேல் வாழவிடுவதில்லை. அந்நிலை பல்லவ பாண்டிய அரசுகளுக்கும் உண்டாகிவிட்டது. அவர்களும் இருநூறு ஆடுைகள் அரசமைத்து வாழ்ந்து விட்டனர். மேலும் பேரரசுப் போட்டி காரணமாய் மேற்கொண்ட ஓயாப் போர்களால் அவ்விரு பேரரசுகளின் ஆற்றலும் அழிந்து கொண்டே வந்துவிட்டது. நாடாளும் வேட்கை, நாள்தோறும் ஒவ்வொரு நிலையாக உரம் பெற்று உயர, அதற்கேற்ற காலத்தை எதிர் நோக்கி அடங்கியிருந்த சோழர், இவற்றையெல்லாம் ஊன்றிக் கவனித்துக் கொண்டே வந்தனர். தனியர சமைத்து வாழ வேண்டும் என்பதில் அவருக்குள்ள தளரா ஆர்வம், அதற்கு வாய்ப்புடைய காலமும் நிலையும் தாமாகவே வருக என எண்ணி வாளா இருந்துவிட அவர்களை விட்டிலது. வரும் அவ்வாய்பை விரைந்து வரச்செய்வதற்கு ஏற்றனவற்றை அவர்களும் மேற்கொண்டனர். சூழ்நிலைக்கேற்ப, சிலகாலம் பாண்டியரோடு கூடிப் பல்லவர் ஆற்றலைக் குறைத்தனர். சில காலம் பல்லவரோடு கூடிய பாண்டியரோடு போரிட்டு அவர் ஆற்றலைக் குன்ற வைத்தனர். அதனால் அவர்கள் எதிர்நோக்கியிருந்த நற்காலமும் விரைந்து வந்து சேர்ந்தது. அதைப் பயன்கொண்டு பிற்காலச் சோழர் பேரரசை நிலைநாட்டிய முதல்வன் விசயாலயன் எனும் விழுமியோனாவன். விசயாலயன் வழிவந்த பிற்காலச் சோழர் பேரரசிற்குக் கால்கோள் இட்ட காலம், கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியாகும். அக்காலை, சோழர் குலத்தவர் பழையாறை நகரில் வாழ்ந்திருந்தனர் என்றால், அச்சோழர்க்கு உரிமையுடையதான தஞ்சை மாநகரில் முத்தரையர் என்பார் அரசோச்சியிருந்தனர். அவர்களும் சோழரைப் போலவே, ஒருகால் பாண்டியர்க் கும்,மற்றொருகால் பல்லவர்க்கும் படைத்துணை அளித்து வாழ்ந்து வந்தனர். கி. பி. 846-ல் விசயாலன் அம்முத்தரையரை வென்று, பண்டு தன் குல முதல்வர் இருந்து கோலோச்சிய தஞ்சையைக் கைப்பற்றிக் கொண்டான். விசயாலன் முயற்சிக்கு அக்காலை அரியணையில் அமர்ந்திருந்த பல்லவனும் துணை நின்றான். விசயாலயன் முன்னோரின் கனவு நினைவாகிவிட்டது. சோணாட்டின் ஒரு பகுதி மீண்டும் சோழர் உடமை ஆயிற்று. சோழர் பேரரசு மீண்டும் நிறுவப்பட்டது. பிற்காலச் சோழர் பேரரசு, கி. பி. 846-ல் நிறுவப்பட்டது. எனினும், அழிக்கலாகா ஆற்றல் மிக்க அரசாக அது அந்நாளிலேயே அமைந்துவிடவில்லை; அந்நிலை அதற்குக் கி.பி. 880-லேயே வாய்த்தது. அது, அவ்வாண் டில் கும்பகோணத்திற்கு அணித்தாக உள்ள திருப்புறம்பயத்தில் வெற்றியின் விளைவாகவே வந்து சேர்ந்தது. தம் பெற்ற இரு நாடுகளுக்கு இடைப்பட்ட சோணாட்டைத் தம் ஆணைக்கீழ் வைத்து கொள்ள வேண்டும் என்பதில் பல்லவ பாண்டிய வேந்தர் இருவருமே ஆர்வம் காட்டின்ர்: அதன் பயனாய் அவ்விரு பேரரசர்களும் பெரும் படை துணை செய்யவந்து திருப்புறம்பயத்தில் போரிட்டனர்; அக்காலை விசயாலயன் முதுமை அடைந்துவிட்டானாகவே, அவன் மகன் ஆதித்தன், பல்லவர் பக்கம் நின்று போரிட்டான். போரில் பாண்டியன் தோற்றான். பல்லவன் வெற்றி கொண்டானாயினும், அவன் படைவலி, அறவே அழிந்துவிட்டது. வென்ற நாட்டில் தன் ஆட்சியை நிலைநாட்டும் ஆற்றல் அவனுக்கு இல்லாது போகவே, சோணாட்டு ஆட்சிப் பொறுப்பனைத்தையும் ஆதித்தசோழன் பால் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டான். ஆதித்தன் சோழ மண்டலம் முழுமைக்கும் மன்னனாய் முடி புனைந்து கொண்டான். குலோத்துங்கன் பிறந்த பிற்கால சோழர் பேரரசு பிறந்த வரலாறு இது. பிற்காலச் சோழர் பேரரசு பிறந்த வரலாற்றைக் கண்டோம். வரலாற்றாசிரியர்களால், அச்சோழர் வரிசையில் வைத்து மதிக்கப் பெறும் குலோத்துங்க அச்சோழர் குடியில் பிறந்தவனல்லன். ஆயினும் அச்சோழர் குலத்தவனாகவே வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். அவர்கள் அவ்வாறு கருதுதற்குரிய காரணம், அவனுக்கு முன் அச்சோழர் அரியணையில் அமர்ந்திருந்தார் வரலாற்றை உணர்ந்தவர்க்கே புலனாகும். ஆகவே, அச்சோழர் குலத்தில் தோன்றி அவனுக்குமுன் நாடாண்டோர் வரலாற்றையும் சிறிது கண்டு செல்வோமாக. . முதல் ஆதித்தன்: திருப்புறம்பயப் போர்க்களத்தில் மாண்ட பாண்டிய பல்லவ வீரர்களின் பிணங்களை எருவாக இட்டுச் சோழர் பேரரசு என்ற மரத்திற்கு வித்திட்டவன் இவ்வாதித்தன். விதை முளைத்துச் செடியாகி வளரத் தொடங்கிவிட்டது. ஆயினும் அதன் அருகே பல்லவன் என்ற மரம் இன்னமும் பட்டுப் பேகாமல் நிற்பதைக் கண்டான்; செடி வளமாக வளர வேண்டுமேல், அதைத் தடை செய்யும் நிழல் தரும் மரம் எதுவும் அதன் அருகே நிற்றல் கூடாது என்பதை உணர்ந்தான்; உடனே, அப்பல்லவன் மீதே பாய்ந்தான்; ஆண்டு முதிர்ந்து இயல்பாகவே அழிந்துபோகும் நிலையுற்றிருந்த அப்பல்லவனும், ஆதித்தனை எதிர்த்து வெல்லமாட்டாது இறந்தான். சோழ மண்டலத்திற்குத் துணையாயிற்று தொண்டை மண்டலம். ஆதித்தனின் ஆற்றலையும், அவனால் பல்லவப் பேரரசு முடிவுற்றதையும் கண்ட சேர மன்னன் தாணுரவியும், கங்க நாட்டுக் காவலன் பிருதிவிபதியும் ஆதித்தனோடு நட்புறவுபூண்டு நல்லவர்களாக வாழத் தொடங்கினர். சோழ மண்டலமும் தொண்டை மண்டலமும் அடங்கிய ஒரு பேரரசை நிலைநாட்டிய ஆதித்தன், அந்நாட்டின் செல்வவளத்தைப் பெருக்கும் கருத்துடையனாய்ப் பொன் வளம் மிக்க கொங்கு நாட்டின் மீது படையெடுத்துச் சென்று, அந்நாட்டு அரசர் பலரையும் வென்று, அந்நாட்டில் குவிந்து கிடந்த பொன்னை வாரிக் கொண்டு வந்து சேர்த்தான். ஒரு பெரிய நாட்டையும் கண்டு, அந்நாட்டிற்கு வளத்தையும் அளித்த பின்னர், அவன் உள்ளம் தெய்வத் திருப்பணியில் சென்றது. திருப்புறம்பயப் போரில் பெற்ற வெற்றியே, சோழர் ஆட்சிக்கு அடி கோலிற்று என்பதை அறிந்தவனாதலின், ஆதித்தன், அவ்வூரில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானுக்கு அழகிய கற்கோயில் ஒன்றைக் கட்டிச் சிறப்பித்தான்; தங்கள் சோழர்குலக் கடவுளாய் நடராசப்பெருமான் வீற்றிருக்கும் தில்லைச் சிற்றம்பலத்தின் முகட்டினைக் கொங்கு நாட்டிலிருந்து கொணர்ந்த பொன்னால் பொன்மயமாக்கினான். அம்மாட்டோ! காவிரியாற்றின் இரு கரையிலும் உள்ள எண்ணற்ற சிவன் கோயில்களெல்லாம் செங்கல்லால் கட்டப்பெற்றுள்ளமையால், கால வெள்ளத்தால் அழிந்து போகும் என அறிந்து, அவற்றுள் பலவற்றைக் கற்றளி களாக மாற்றிக் களி கூர்ந்தான். ஆதித்தனின் இச் சிவத் தொண்டினை, நம்பியாண்டார் நம்பிகள் தாம் பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியில் பலமுறை பாராட்டியுள் ளார். அவற்றுள் ஒன்று: **“சிங்கத் துருவளைச் செற்றவனை; சிற்றம்பல முகடு** கொங்கிற் கனகம் அணிந்த ஆதித்தன்.’ முதற் பராந்தகன் : ஆதித்தன் மகனாகிய பராந்தகன் அரியனை யேறுங்கால், வடக்கே வேங்கடம் வரை பரவிய தொண்டை மண்டலமும், கொங்கு மண்டலமும், சோழ மண்டலமும் உள்ளிட்ட ஒரு பேரரசு அவன்பால் ஒப்படைக்கப்பட்டது. தன் குல முதல்வர் தனியரசு அமைத்து வாழத் தடையாக இருந்த பல்லவ பாண்டியர் இருவரில், பல்லவர் ஆட்சி அறவே அழிந்து போக, அவர் ஆண்ட தொண்டைநாடு தன் நாட்டோடு இணைந்துவிட்டது. ஆகவே தன்னாட்டின் வடவெல்லை வலுப்பட்டு விட்டது. ஆனால் அந்நிலை தெற்கே ஏற்பட்டிலது. திருப்புறம்பயப் போரில் பாண்டியன் தோற்றுவிட்டான். என்றாலும் அவன் ஆட்சி அறவே அழிந்துவிடவில்லை. என்றேனும் ஒருநாள், அவன், தன் நாட்டின் மீது பாய்தலும் கூடும்; ஆகவே பாண்டிய நாட்டையும் அகப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். அப்பொழுதுதான் அமைதியாக இருத்தல் இயலும் என உணர்ந்தான் பராந்தகன். உடனே சோழர் பெரும்படை பாண்டி நாடு புகுந்து மதுரையைக் கைப்பற்றிக் கொண்டது. மதுரை வீழ்ந்து விட்டது; ஆனால் மதுரை மன்னன் பணிந்து விட்டானல்லன். பாண்டியன், ஈழ நாட்டரசனை வேண்டிப் பெற்ற படைத் துணையோடு பராந்தகனை மீண்டும் வந்து தாக்கினான். ஆயினும் அப்பொழுதும் தோல்வியே கண்டான். பராந்தகனை வெல்வது இனி இயலாது என்பதறிந்து கொண்ட கூடற்கோ, தன் குலத்தவர்க்குரிய மணிமுடியையும் வேறு பிற அரசச் சின்னங்களையும் உடன்கொண்டு ஈழ நாட்டிற்கு ஓடி, அவற்றை அந்நாட்டு மன்னன் பால் ஒப்படைத்துவிட்டு மலைநாடு புகுந்து மறைந்து வாழலாயினன். பாண்டி நாட்டில் அமைதியை நிலைநாட்டிவிட்டு, மதுரை மன்னனாய் மணிமுடி புனைய விரும்பியபோது, பராந்தகன் அவற்றைக் கண்டிலன். உடனே அவை போன இடம் அறிந்து அலைகடலைக் கடந்து ஈழநாடு புகுந்து போரிட்டான். ஈழ நாட்டான் போரில் புறமுதுகிட்டான் எனினும், பராந்தகன் கருதி வந்த பாண்டியர் முடி முதலானவற்றோடு, சோழர் படை புகமுடியாத மலைக்காட்டு நாட்டுள் சென்று மறைந்துவிட்டான். பராந்தகன் வெறுங்கையோடு வந்து சேர்ந்தான். ஆனால், “மதுரை யும் ஈழமும் கொண்டகோ” என்ற மக்கள் பாராட்டு மட்டும் இன்றளவும் மறையாததாயிற்று. பாண்டி மண்டலத்தை வென்றடக்கிய பின்னரும் பராந்தகன் மண்ணாசை மடியவில்லை. அதனால், தொண்டை நாட்டின் பாலாற்றின் வடகரைமுதல் சித்துார் மாவட்டம் வரை பரவிய நாட்டில் பாராண்டிருந்த வாணர் குலத்தவரை வென்று துரத்திவிட்டு அங்கும் தன் புலிக்கொடியைப் பறக்கவிட்டான். அம்மட்டோ! வாணரோடு தான் மேற்கொண்ட போரில் அவ்வாணர்க்கு வைதும்பராயன் என்ற ஆந்திர அரசன் துணை வந்தான் என அறிந்து, அவனையும் வென்று அவன் நாட்டையும் அகப்படுத்திக் கொண்டான். வடகிழக்கில் கீழைச் சாளுக்கியப் பேரரசிற்கு உட்பட்ட சீட்புலி நாட்டின் மீதும் பராந்தகன் சினம் பாய்ந்திருந்தது. அந்நாட்டிலும் இவன் அரசே நடைபெற்றது. சுருங்கச் சொன்னால், தென்குமரி முதல், நெல்லூர் மாவட்டம் வடபெண்ணையாற்றின் தென்கரை வரையும் பராந்தகன் ஆட்சியே பரவியிருந்தது. ஆனால், அந்தோ! இப்பெருவாழ்வு நெடிது நாள் நிற்கவில்லை. பராந்தகன் கட்டிய பேரரசு அவன் வாழ் நாட் காலத்திலேயே வலியிழந்துவிட்டது. தெற்கே சோழப் பேரரசு தலை தூக்கத் தொடங்கிய காலத்தில், வடக்கில் துங்கபத்திரை ஆற்றங்கரையில் இராஷ்டிரகூடர் என்பவரும் பெருக வாழ்ந்திருந்தனர். வளரும் தன் குலத்தவர்க்கு அவர்கள் பகை ஆகாது என அறிந்தே, ஆதித்த சோழன் அக்குலக் கன்னியொருத்தியை மணந்து அவர்களோடு உறவு கொண்டிருந்தான். அந்த அரசியல் அறிவில் பராந்தகன் குறைந்தவனல்லன். தன் மகள் ஒருத்தியை அக்குல இளவரசன் ஒருவனுக்கு அவனும் மணம் செய்து தத்திருந்தான். ஆனால், அதுவே அவன் அரசழிவிற்கு அடிகோலுவதாய் ஆகிவிட்டது. பராந்தகன் மகளை மணந்த அம்மன்னன் மதிவலி இழந்து மக்கள் வெறுக்க வாழ்ந்தான். அஃதறிந்த அவன் சிறிய தந்தையும், அவன் மகனும், அவனுக்கு எதிராகப் படையெடுத்து, அவனை அரியணையிலிருந்து வீழ்த்திவிட்டார்கள். அரசிழந்த இளவரசன் சோணாடு வந்து மாமன்பால் அடைக்கலம் புகுந்தான். மருமகனுக்கு நேர்ந்த மானக்கேட்டைப் போக்கி, அவனை மீண்டும் மன்னனாக்கத் துணிந்தான் பராந்தகன். சோழர் படை இராஷ்டிரகூட நாடு சென்று போரிட்டது. ஆனால் முடிவு வேறாயிற்று. சோழர்க்குத் தோற்று நாடிழந்து கிடக்கும் வாணர்களும், வைதும்பர்களும் இராஷ்டிரகூடர் பக்கம் நின்று போரிட்டனர். அதனால் அவர் கை வலுத்தது. சோழர் கை சிறுத்தது. சோழர் தோற்றனர். தோல்வியோடு சோணாடு திரும்பிய பராந்தகன், தன் வடவெல்லையில் பகைவர் வலுத்துவிட்டனர்; எந்நேரத்திலும் அவர்கள் தன்னாட்டின்மீது போர் தொடுப்பர் என அறிந்து, திருமுனைப்பாடி நாட்டுத் திருக்கோவலூரில், ஒரு பெரிய படையைத் தன் மக்களுள் ஆற்றல் மிக்கான் ஒருவன் தலைமையில் நிறுத்தி வட வெல்லையைக் கண்காணித்து வந்தான். பராந்தகனின் இப்படை விழிப்பை அறிந்த இராஷ்டிரகூட வேந்தன், தன் படை வலியைப் பெரும் போருக்கு ஏற்பப் பெருக்குமளவும் காத்திருந்தான். அது நிறைவேறியதும் சோணாடு நோக்கிப் புறப்பட்டான். அஃதறிந்த சோழர் படையும் வடநாடு நோக்கிச் சென்றது. தக்கோலத்தில் இரு திறப்படைகளும் எதிர்ப்பட்டு அருஞ்சமர் புரிந்தன. வெற்றி சோழர்க்கு வாய்க்கும் தறுவாயில், யானை மேல் அமர்ந்து கொண்டிருந்த சோழர் குல இளவரசன் அம்பொன்று பாய்ந்து இறந்து போனான். படைத் தலைவன் இறக்கவே படைவீரர் சோர்ந்து போயினர். இராஷ்டிரகூடப் படை வெற்றி பெற்றது. தொண்டை நாடளவும் அவர் ஆட்சிக்கீழ்ப் போய்விட்டது. சோணாட்டெல்லை சுருங்கி விட்டது. அரும்பாடுபட்டுத் தான் அமைத்த பேரரசு தன் கண் முன்னரே அழிந்தமை கண்டு கலங்கினான் பராந்தகன். பின்னர் ஒருவாறு உள்ளம் தேறி, உள்ள சிறு நாட்டில் நல்லரசு நிலவ வேண்டும் எனும் நினைவினனாய்த் தன் இளைய மகன் கண்டராதித்தனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டி ஆட்சிப்பொறுப்பை அவன் பால் ஒப்படைத்தான். தன் இறுதி aநாளை இறையன் பில் கழிக்க எண்ணினான். தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன் ஓடுகளால் மூடி இறவாப் புகழ் பெற்றான். பலரும் அவனைப் புகழ்ந்து பாராட்டினார்கள். அப்புகழ் உரைகளுள் ஒன்று : *“கோதிலாத் தேறல் குனிக்கும் திருமன்றம்** **காதலால் பொன்வேய்ந்த காவலன்.“** கண்டராதித்தன் : சோழர் பேரரசு மேலும் சீர் குலைதல் கூடாது எனும் கருத்தையுட்கொண்டே பராந்தகன், கண்டராதித்தனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டி, ஆட்சிப் பொறுப்பை அவன்பால் ஒப்படைத்தான்; ஆனால் கண்டராதித்தன்பால் அவன் எதிர்பார்த்த அரசியல் ஆற்றல் அமையவில்லை. அவன் மனம் அரசியல் துறையினும், அறத்துறையிலேயே ஆழப்பதிந்துவிட்டது. நாடாளும் அரசன்பால் இவ்வரசியல் குறைபாடு  இருப்பது நலியும் ஒர் அரசுக்கு நன்றன்று; அதை அறிந்து கொண்டான். அக்காலைப் பாண்டி நாட்டு அரியணையில் அமர்ந்திருந்தோன்; உடனே, அவன் சோணாட்டுத் தலைமையை வெறுத்துத் தனியரசு அமைத்துக் கொண் டான். ஆகக் கண்டராதித்தன் ஆட்சிக் காலத்தில் சோழர் பேரரசு, சோணாட்டு எல்லைக்குள்ளேயே நின்று விட்டது. கண்டராதித்தன் அது குறித்துக் கவலை கொண்டிலன்; அவன் மனம் மன்றாடும் இறைவனிடத் திலேயே இருந்து விட்டது ; அவனைப் பாடிப் பரவிய வாறே தன் வாழ்நாட்களைக் கழித்துவிட்டான்; ஆனால் வானாள் இறுதியில் செய்த அரசியல் முடிவு, சோழர் ஆட்சியை நன்னிலைக்கண் நாட்டுதல் வேண்டும் என்ப தில் அவனுக்கும் நாட்டம் இருந்தது என்பதை உறுதி செய்வதாயிற்று. முதிர்ந்த ஆண்டில் தனக்குப் பிறந்த மகன், ஆட்சிப் பொறுப்பேற்கலாகா இளமைப் பருவத் தனாதல் அறிந்து, ஆட்சியை அவன் பால் ஒப்படைக்காது, தன் இளவல் அரிஞ்சயன் பால் ஒப்படைத்து ஒய்வு பெற் றான். தில்லையாடிபால் உள்ளம் நெகிந்து அவன் பாடிய பாக்கள் பல. அவற்றுள் ஒன்று: ’சீரான் மல்குதில்லைச் செம்பொன் அம்பலத்து ஆடி தன்னைக் காரார் சோலைக் கோழிவேந்தன் தஞ்சையர்கோன் கலந்த ஆராஇன் சொல் கண்டராதித்தன் அருந்தமில்மாலை - வல்லார் பேராஉலகில் பெருமையோடும் பேரின்பன் எய்துவாரே." அரிஞ்சயன் : முதற் பராந்தகனுக்குக் கேரள அரசன் பழுவேட்டரையன் மகள்பால் பிறந்தவன் இவ்வரிஞ்சயன், பராந்தகன். இராஷ்டிரகூட மன்னானனோடு நடத்திய போரில் இவனும் பங்குகொண்டிருந்தான். இவன் அரியணை அமர்ந்ததும், தக்கோலப் போரில் இழந்த சோணாட்டுப் பகுதியை மீட்பதில் தன் சிந்தையைச்  செலுத்தினான். வலி குன்றியிருக்கும் தன் படையால், வல்லரசாய் வாழும் அவ்வட நாட்டரசை வென்று தன் நாட்டை அகப்படுத்துவது எளிதில் ஆகாது என அறிந்து, அவனோடு போர் தொடுப்பதன் முன், அவன் படை வலியைக் குறைத்துத் தன் படை வலியைப் பெருக்க வழி கண்டான். தொண்டை மண்டலத்தை வென்ற இராஷ்டிரகூட மன்னன், அதன் ஆட்சிப் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொள்ளாமல் அதைத் தக்கோலப் போரில் தன் பக்கம் நின்று போரிட்ட வைதும்பர்பால் ஒப்படைத் திருந்தான். ஆகவே, தான் போர் தொடுக்க வேண்டு மாயின் அவ் வைதும்பர் மீதே போர் தொடுத்தல் வேண்டும் என்பதை அறிந்த அரிஞ்சயன், முதலில் அத் தக்கோலப் போரில் இராஷ்டிரகூடர் பக்கம் நின்று போரிட்ட மற்றோர் அரச இனத்தவராய வாணர் குல இளவரசன் ஒருவனுக்குத் தன் மகள் ஒருத்தியை மணம் முடித்து, அவர் படைத் துணை, பகைவர்க்குக் கிடைக் காமல், தனக்கே கிடைக்கும் படிச் செய்தான்; இவ்வாறு படை வலியைப் பெருக்கிக் கொண்ட பின்னர், ஒருநாள் தொண்டைநாடு நோக்கிப் படை கொண்டு சென்றான். ஆனால் போரின் முடிவு தெரிவதற்கு முன்பே உயிர் துறந்து போனான். வடார்க்காடு மாவட்டம் திருவலத்திற்கு வடக்கே ஆறுகல் தொலைவில் உள்ள மேற்பாடி என்ற ஊரில் அரிஞ்சயன் இறக்க அவன் இறந்த அவ்விடத்தில், அவன் நினைவாய்க் கோயில் அமைத்து வழிபட்டான். அவன் பெயரன் இராச இராசன். இரண்டாம் பராந்தகன் : வடபுறத்துப் பகையைக் குறைத்துக் கொள்ளும் கருத்தோடு வாணர் குலத்தான் ஒருவனுக்குத் தன் மகளைத் தந்தது போலவே, வைதும்பர் குலத்தில் வந்தாள் ஒருத்தியைத் தான் மணம் செய்து கொண்டான் அரிஞ்சயன். அவள் வயிற்றில் பிறந்த மகனே, சுந்தர சோழன் என வழங்கப்பெறும் இவ் விரண்டாம் பராந்தகன். திருமுனைப்பாடி நாட்டையும்,  தொண்டை நாட்டையும், சோணாட்டோடு இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற வேட்கையோடு இறந்து போனான் தந்தை என உணர்ந்து, அதை நிறைவேற்றுவது தன் தலையாய கடமையாகக் கொண்டு, இராஷ்டிர கூடத் தண்டத் தலைவர்கள் பலரோடு, பல்வேறு இடங்களில் பலமுறை போரிட்டுத் தந்தை விரும்பியதை முடித்துத் தந்தான். வடநாட்டில் வெற்றி கண்ட பராந்தகன், பின்னர் பாண்டி நாட்டின்மீது படை தொடுத்தான். அன்று பாராண்டிருந்த பாண்டியன் இயல்பாகவே ஆற்றலில் சிறந்திருந்ததோடு, ஈழநாட்டரசர் துணையையும் பெற்றிருந்தான். அதனால், அவனை ஒரே போரில் வெற்றி கொள்வது பராந்தகனால் இயலாது போயிற்று; ஆயினும் எடுத்த வினையைக் கைவிடக் கருதினானல்லன். பாண்டியனோடு பலமுறை போரிட்டான். அவனுக்குத் துணை வந்த ஈழப் படையை அழித்தான்; ஈழப் படையின் துணை, மீண்டும பாண்டியனுக்கு வாரா வண்ணம் செய்தற் பொருட்டுக் கடல் கடந்து சென்று, அவரோடு அவர் நாட்டிலேயே போரிட்டு மீண்டான். இறுதியில் பாண்டியன் மாண்டான்; பாண்டிநாடு பணிந்து விட்டது; ஆனால், அப்பெருநாட்டைத் தன் நாட்டோடு இணைத்துக் கொள்ளப் பராந்தகன் விரும்பினானல்லன்; அதை அடக்கி ஆளவல்ல பெரும்படை இன்மையாலோ, அவ்வாறு ஆள்வது தன் ஆட்சிக்குத் துணையாகாது எனக் கருதியதாலோ, அந்நாட்டில் வெற்றி கண்டதோடு அமைதியுற்றான். பராந்தகனுக்கு மனைவியர் இருவர்; அவருள் ஒருத்தி மலையமானாட்டுச் சிற்றரசன் மகளாய வானவன் மாதேவியாராவர்; அவள் வயிற்றிற் பிறந்த மக்கள் மூவர்; ஆதித்த கரிகாலன், அருண்மொழித்தேவன், குந்தவை இவர்களே அவர்கள். இளவரசுப் பட்டம் சூட்டப் பெற்ற ஆதித்த கரிகாலன் வஞ்சகர் சிலரால் கொல்லப்பட்டான்; அருண்மொழித்தேவனே, பின்னர் இராச இராசன் எனும் பெயரில் பெருவாழ்வு வாழ்ந்த பெரியோனாவன். குந்தவை, வேங்கி நாட்டில் அரசோச்சி லந்த கீழைச் சாளுக்கிய இளவரசனாகிய வல்லவரையன் வந்தியத் தேவன் என்பானை மணந்து, கீழைச்சாளுக்கிய, சோழர் குலத்தவரிடையே மணவுறவு நிகழ அடி கோலிய மங்கை நல்லாளாவள்; இம்மணமே, சோழர் அரியணையில் குலோத்துங்கன் அமரத் துணை புரிந்த பெருமணமாம். உத்தம சோழன் : சிவநேயச் செல்வர்களாகிய கண்டராதித்தருக்கும், செம்பியன் மாதேவியார்க்கும், அவர் ஆற்றிய அருந்தவப் பயனாய்ப் பிறந்தவன் இவ்வுத்தம சோழன். இரண்டாம் பராந்தகனை அடுத்து, அவன் மகன் அருண் மொழித் தேவன் அரியணை ஏறுவதே முறையாகவும், தன் பெரிய பாட்டனாகிய கண்டராதித்தர் விருப்பத்தை நிறைவேற்றுவது தன் தலையாய கடமை என உணர்ந்த அருண் மொழித் தேவனின் நல்லெண்ணத்தின் பயனாய் இவன் அரியணை அமர்ந்தான். ஆதித்த கரிகாலன் கொலைக்கு இவனே காரணமானவன் என்ற கருத்தும் இருந்தது என்றாலும், அக்கால வரலாற்றினை ஊன்றி நோக்குவார் அனைவரும் அதில் உண்மையில்லை என்ற முடிவினையே கொள்வர்; இவன் ஆட்சி புரிந்த பதினைந்து ஆண்டுகளும், அமைதி நிறைந்த நல்வாழ்வே நாடெங்கும் நிலவிற்று; அவன் நல்லாட்சிக்கு அதுவே போதிய சான்றாம். முதல் இராசராசன் : விசயாலயன் வழி வந்த பிற்காலச் சோழர்களுள், சோழர் பேரரசின் பெருமையை உலகம் பாராட்டுமளவு உயர்த்திய உரவோன் இம்முதல் இராசராசன். இரண்டாம பராந்தகனுக்கு வானவன் மாதேவியால், ஐப்பசித் திங்கள் சதயத் திருநாளில் பிறந்த இவனுக்குப் பெற்றோர் இட்ட பெயர் அருண் மொழித் தேவன் என்பது. ஒரு பெரிய பேரரசைப் படைத்து, அதை அமைதி நிலவும் நல்லரசாக ஆள்வதற்கேற்ற ஆற்றலும், ஆண்மையும் அரசியல் அறிவும் இவன்பால் குறைவின்றி அமைந்திருந்தன. மேலும், இவனை இளமையில் வளர்த்தவர்களாகிய கண்டரதித்த தேவனின் மனைவியாகிய செம்பியன் மாதேவியும், இவன் தமக்கையாராகிய குந்தவை பிராட்டியாரும், இறையன்புக்கும், இறவாப் பெருங்குணங்களுக்கும் உறைவிடமாகிய பெருந்தகையினராவர். ஆதலின்-அவர் வளர்க்க வளர்ந்த அருண்மொழித்தேவன்பால் ஆன்றோர் போற்றும் அத்துணை ஒழுக்கங்களும் ஒன்றி நின்றன. அதுவே, அவனை உலகப் பேரரசர்களுள் ஒருவனாக வைத்து மதிக்கத்தக்க மாண்பினை அளித்தது. பிற்காலச் சோழர் வரலாற்றை அறியப் பெரிதும் துணைபுரிவன அச்சோழ அரசர்களின் கல்வெட்டுக்களில் காணும் மெய்க்கீர்த்திகளே. ஓர் அரசன் ஆட்சிக் காலத்தில் நிகழும் அரிய நிகழ்ச்சிகளை, அவை நிகழ்ந்த காலமுறைப்படி விளக்கும் மெய்கீர்த்தியைத் தமிழில், இனிய எளிய அகவற்பாவில் ஆக்கிக் கல்வெட்டின் தொடக்கத்தில் அமைக்கும் அரிய வழக்கத்தை முதலில் மேற்கொண்ட அரசன், நம் அருண்மொழித்தேவனே ஆவன். அரியணை ஏறிய நான்காண்டிற்குள்ளாகவே, இவன் பாண்டியனையும், சேரனையும் வென்று அவ்விருவர் நாட்டிலும் சோழர் ஆணையே செல்லும்படிச் செய்துவிட்டமையால், சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவேந்தர் முடிகளையும் ஒருங்கே சூடிய முதல்வன் எனும் பொருள் தோன்ற, இவனுக்கு மும்முடிச் சோழன் எனும் சிறப்புப் பெயர் சூட்டினார்கள் மக்கள், மன்னர்களுக்கெல்லாம் மன்னன் எனும் பொருள் தரும் இராசராசன் எனும் பெயரைச் சூட்டிக்கொண்டான் இவனும், அன்று முதல், அருண்மொழித்தேவன் எனும் அவன் பிள்ளைப் பெயர் மறைந்துபோக, இராசராசன் என்ற அச்சிறப்பு பெயரே அவன் இயற்பெயராய் அமைந்துவிட்டது. இராசராசன் ஆற்றிய கன்னிப் போர் காந்தளூர்ச் சாலைப் போராம். இராசராசன் அரியணை ஏறியதும், அரசியல் தூதுவன் ஒருவனைச் சேரன் அரசவைக்கு அனுப்பியிருந்தான்; அக்காலை ஆங்கு அரசோச்சியிருந்த அரசன் அத்தூதுவனை யாது காரணத்தாலோ சிறையில் அடைத்துவிட்டான். தூதுவனுக்கு இழைத்த கேட்டினைத் தனக்கு இழைத்துவிட்டதாகவே மதித்தான் இராசராசன்; உடனே அவ்விழிவைத் துடைக்கத் துணிந்து, சோழர் படை சேரநாடு நோக்கி செல்லவிட்டான். சோழர்படை சேரநாடு செல்ல வேண்டுமாயின், அது பாண்டி நாட்டைக் கடந்தே செல்லுதல் வேண்டும்; ஆகவே சோழர் படை முதலில் பாண்டிநாடு புகுந்தது. அப்போது பாண்டி நாட்டில் அரசாண்டு கொண்டிருந்தவன், சேரனின் உற்ற நண்பனாவன். அதனால், அவன் சேரநாடு நோக்கிச் செல்லும் சோழர் படையைத் தடுத்துப் போரிட்டான். பாண்டியன்மீது போர் தொடுக்கும் கருத்து, படை புறப்படும்போது இராசராசனுக்கு இல்லை என்றாலும், பாண்டியன் வலியவந்து எதிர்க்கவே அவனோடு போரிட்டு வெல்வது இன்றியமையாததாயிற்று; அதனால் சோழர் படை பாண்டியப் படைமீது பாய்ந்தது. பாண்டியன் தோற்றுப் புறமுதுகிட்டான். பாண்டிநாட்டில் வெற்றிக்கொடி நாட்டிய சோழர் படை, பின்னர்ச் சேரநாடு நோக்கி விரைந்தது. சேரநாடு புகுந்த சோழர் படை, காந்தளூர்ச் சாலை எனும் கடற்கரைப் பட்டினத்தை அடைந்து ஆங்கு நின்றிருந்த சேரரின் பெரிய கடற்படையை அறவே அழித்து வெற்றி கொண்டது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாகர்கோயிலுக்கு வடமேற்கேயுள்ள உதகையை அடைந்தது. சேரன், சோணாட்டுத் தூதுவனை அவ்வுதகை நகர்ச் சிறையிலேயே அடைத்திருந்தானாதலின், சோழர்படை அந்நகரைக் காத்திருந்த சேரர் படையைச் சிதறடித்தது. அந்நகரைச் சூழ்ந்திருந்த அரண் மதில்களையும், மாளிகைகளையும் இடித்துட் பொடியாக்கி, எங்கும் எரிஎழப் பாழ் செய்து தன் நாட்டுத் தூதுவனை சிறை வீடுசெய்து பழி தீர்த்துக் கொண்டது. உதகையின் அழிவு கண்டும் இராசராசன் உள்ளம் அமைதியுற்றிலது. சேரர் படை வலியை அறவே சிதைத்தல் வேண்டும் என்று விரும்பினான். உடனே தென்கடற் கோடியில் இருந்த சேரர் படைத் தளமாகிய விழிஞத்தை வளைத்துக் கொண்டு பெரும் போர் புரிந்து சேரர் படை முழுவதையும் பாழ் செய்தான். அம்மட்டோ தான் பிறந்த சதயத் திருநாள் விழாவையும் சேரநாட்டுத் தலைநகரிலேயே சிறப்புறக் கொண்டாடிவிட்டு, அளவிலாப் பொற்குவியல்களையும், எண்ணிலாக் களிறுகளையும் கைக்கொண்டு தலைநகர் வந்தடைந்தான். பெரும் பகைவர்களாகிய பாண்டியனையும் சேரனையும் வென்றடக்கிய பின்னர், இராசராசன் படை பிற சிறு நாடுகள்மீது சென்றது, குடகு என இக்காலத்து வழங்கும் குடமலை நாடே அப்படையின் முதற் குறிக்கோளாய் அமைந்தது. அக்காலை அந்நாட்டைக் கொங்காள்வார் மரபில் வந்த ஒருவன் ஆட்சி புரிந்து கொண்டிருந்தான். குடமலை நாடு புகுத்த சோழர் குலக்குரிசில், அக்கொங்காள்வானைப் பணசோகே எனும் இடத்தில் போரிட்டு வென்றான். வென்ற அந்நாட்டின் ஆட்சிப் பொறுப்பை, அப்போரில் ஆற்றல் காட்டிப் போரிட்ட மனிஜா என்ற வீரன்பால் ஒப்படைத்து வெளியேறினான். குடகை வெற்றிகொண்ட நம் கோமகன், பின்னர் அந்நாட்டை அடுத்திருந்த கங்கபாடி, நுளம்பபாடி, தடிகைபாடி முதலான சிறு நாடுகள் மீது சென்றான். மைசூர் நாட்டின் அகத்திலும் புறத்திலும் இடம்பெற்றிருந்த இச்சிறு நாடுகளுள், தழைக்காடு எனும் ஊரைத் தலைநகராகக் கொண்ட கங்கபாடி மேலக்கர் ஆட்சிக்குட்பட்டிருந்தது. நுளம்பபாடியில், பல்லவரின் ஒரு கிளையினரான நுளம்பர்கள் ஆட்சிபுரிந்திருந்தனர். தமக்கு அரணளித்து வந்த இராஷ்டிரகூடப் பேரரசு அக்காலை ஆற்றல் குன்றி அடங்கியிருந்தமையால், அச்சிறு நாடுகள் மூன்றும், இராசராசனுக்கு எளிதில் அடி பணிந்துவிட்டன. வடமேற்குத் திசை நாடுகளில் வெற்றிக்கொடி நாட்டிக் கொண்டிருக்கும்போதே இராசராசன் சிந்தை மற்றொரு திசையில் சென்றிருந்தது. பாண்டியனும் சேரனும் தனக்குப் பணியாது பகைகொண்டு வாழ்ந்தது, அவருக்கு ஈழ நாட்டரசன் அளித்த படைத்துணை வலியால் என்பதை அறிந்து, இராசராசன் அவ்வீழநாட்டான் பால் கடுஞ்சினம் கொண்டிருந்தான். தமிழகத்தில் தன்னை எதிர்த்து நிற்பார் எவரும் இலர் என்ற நிலை ஏற்பட்டவுடனே, இராசராசன், தன் படையை ஈழநாட்டின்மீது போக்கினான். சோழர் பெரும்படை கலம் ஏறிக் கடல் கடந்து ஈழநாட்டு மண்ணில் அடியிட்ட அதே நேரத்தில், ஈழப் படைக்குள்ளாகவே கலகம் தோன்றிற்று; அதையடக்கும் ஆற்றலையும் இழந்துவிட்ட ஈழநாட்டு அரசன், அத்தீவின் தென்கிழக்கு நாட்டிற்கு ஓடிவிட்டான். ஈழ நாட்டில் வடபகுதி எளிதில் சோழர் உடமையாயிற்று. சோழர் படைக்குத் தலைமை தாங்கிச் சென்ற, இராசராசன் மகனாகிய இராசேந்திரன், அவ்வட பகுதிக்கு மும்முடிச் சோழ மண்டலம் எனத் தந்தை பெயரால் பெயரிட்டுப் பொலன்னருவா நகரைத் தலைநகராகக் கொண்டு, சோணாட்டாட்சியை நிலைநாட்டித் தாய்நாடு திரும்பினான். ஈழநாட்டில் வெற்றிகண்டு வீடு திரும்பிய சோழர் படைக்கு, வடநாடு செல்லவேண்டிய பணி காத்துக்கிடந்தது. இராசராசனால் வென்று அடக்கப்பட்ட நுளம்பபாடி, அது காறும் மேலைச்சாளுக்கியர் ஆட்சிக்குட்பட்டிருந்தது. தம் ஆட்சிக்குட்பட்ட அந்நாட்டில் சோழர் புலிக்கொடி பறப்பதைச் சாளுக்கிய வேந்தன் வாளா பார்த்துக் கொண்டிருக்க விரும்பினானல்லன்; ஆங்குச் சோழர் ஆட்சியை அகற்றக் காலம் நோக்கிக் காத்திருந்தான். அதை ஒற்றர் மூலம் அறிந்து கொண்ட இராசராசன், அம்மேலைச் சாளுக்கிய மன்னன் மீது தன் மகனை ஏவினான். இராசேந்திரனும் தன் பெரும்படையோடு அந்நாடு புகுந்து, அந்நாட்டுப் படையை அறவே அழித்துவிட்டுப் பெரும் பொருளோடு தஞ்சை வந்து சேர்ந்தான். இப்படையெடுப்பின் பயனாய்த் துங்கபத்திரை ஆற்றின் தென்கரை வரையுள்ள நாடுகள் அனைத்தும் சோழர் ஆட்சிக்கீழ் வந்துற்றன. இந்நிலையில், சோணாட்டிற்கு வட கிழக்கில், கிருஷ்ணை, கோதாவரி ஆறுகளுக்கு இடையில் இருந்த வேங்கிநாட்டில் உள்நாட்டுக் குழப்பம் ஓங்கிவிட்டது. அந்நாட்டை அப்போது ஆண்டிருந்தவர் கீழைச்சாளுக்கியவராவர். வாதாபி சாளுக்கியர் வழிவந்த வெற்றி வீரனும், வடநாட்டுப் பேரரசன் அர்ஷனையும், தென்னாட்டு பேரரசன் மகேந்திரவர்ம பல்லவனையும் வெற்றி கொண்டோனும் ஆகிய இரண்டாம் புலிகேசி என்பான், ஆந்திர அரசர்களை வென்று, அவர் ஆண்டிருந்த வேங்கி நாட்டைக் கைப்பற்றிய போது, அதன் ஆட்சிப் பொறுப்பினைத் தன் இளவல் விஷ்ணுவர்த்தனன் என்பவன்பால் ஒப்படைத்தான். வாதாபிசாளுக்கியர்க்கு அடங்கிய அரச குலத்தவராய் ஆண்டிருந்த அவன் வ்ழிவந்தோர், அவ்வாதாபிச்சாளுக்கிய நாடு, இராஷ்டிரகூடர் ஆட்சிக்குட்பட்டதும் தனியரசு அமைத்துக் கொண்டனர்; அன்று முதல் தங்களைக் கீழைச்சாளுக்கியர் என அழைத்துக் கொண்டு, வேங்கிநாட்டின் உரிமை பெற்ற அரச குலத்தவராய் ஆண்டு வரலாயினர். இராசராசன் சோணாட்டு மணிமுடியைத் தாங்கிக் கொண்டிருந்தபோது, வேங்கிநாட்டில் தாயத்தாரிடையே ஆட்சி உரிமைப் போர் தலைதூக்கி நின்றது. மூத்தோன் வழிவந்த சக்திவர்மனையும் அவன் தம்பி விமலாதித்தனையும் நாடு கடத்திவிட்டு இளையோன் வழிவந்தவர் நாடாண்டிருந்தனர். ஆட்சியை இழந்து அலைந்து திரிந்த அண்ணனும் தம்பியும் சோணாடு வந்து இராசராசன் பால் அடைக்கலம் புகுந்தனர். சோணாடு வந்து வாழும் அவ்வரசிளங்குமரருள் இளையோனாகிய விமலாதித்தன் பால், இராசராசன் அரும்பெறற்புதல்வியாகிய குந்தவைக்குக் காதல் உண்டாயிற்று: அஃதறிநத இராசராசனும் அவர் இருவருக்கும் மனம்முடித்து மகிழ்ந்தான்; இத்திருமணத்தின் பயனாய், வேங்கிநாட்டு ஆட்சியைத் தன் அரசவை வந்து வாழும் அரசிளங்குமரர் பால் ஒப்படைக்க வேண்டும் என்ற உணர்வு இராசராசன் உள்ளத்தில் ஆழப் பதிந்துவிட்டது. அந்நிலையில், நெல்லூர் மாவட்டத்திற்கு வடக்கில் விளங்கிய நாடுகளாகிய சீட்புலி நாட்டையும், பாகி. நாட்டையும் ஆண்டிருந்த தெலுங்குச் சோழர்களை வென்று அடக்கவேண்டிய இன்றியமையா நிலை ஒன்று இராசராசனுக்கு ஏற்பட்டது; அந்நாடு நோக்கிச் செல்லும் சோழர் படைக்குத் தலைமை தாங்கிச் செல்லும் தன் தண்டத் தலைவனுக்குத் துணையாகச் சக்திவர்மனையும் இராசராசன் அனுப்பியிருந்தான். அப்போரில் சக்திவர்மன் தன் ஆற்றல் அனைத்தையும் காட்டி அருஞ்சமர் புரிந்து வெற்றி பெற்றான். அதன் பயனாய்ச் சீட்புலிநாடும், பாகிநாடும் சோழர் உடமை ஆயின. அந்நிகழ்ச்சி, சக்திவர்மன்பால் இராசராசன் கொண்டிருந்த அன்பைப் பேரன்பாக்கிற்று. அதனால் அவனை வேங்கி நாட்டிற்கு வேந்தனாக்கும் பணியை அன்றே மேற்கொண்டான்; அவ்வாறே வேங்கி நாட்டின் மீது போர்த்தொடுத்து, இளையோன் வழியினரை அரியணையிலிருந்து அகற்றிவிட்டு, சக்திவர்மனை அரசனாக்கி அன்பு செய்தான். வேங்கி நாட்டிற்கு அவன் ஆற்றவேண்டிய கடமை அவ்வொன்றோடு நின்று விடவில்லை. சக்திவர்மனை அடுத்து அரியணையேறிய விமலாதித்தன் காலத்தில், அவ்வேங்கி நாட்டிற்கு வடக்கில் உள்ள கலிங்க நாட்டில் அப்போது ஆட்சியிலிருந்த அரசன், விமலாதித்தனுக்கு அடிக்கடி இடையூறு இழைக்கத் தொடங்கினான். அவன் தொல்லை பொறுக்கமாட்டாத விமலாதித்தன் தன் மாமன்பால் முறையிட்டான். ம்ருகன் குறை தீர்க்கத் துணிந்த இராசராசன், கலிங்கத்தின் மீதுபோர் தொடுத்து அந்நாட்டுக் காவலனை வென்று, அங்குள்ள ஒருமலை முகட்டில் வெற்றித்தூண் ஒன்றைக் நாட்டினான். சோணாட்டுக் காவலன் கலிங்க நாட்டில் பெற்ற இவ்வெற்றிக்கு, அந்நாட்டு மகேந்திரகிரி மலையில், தமிழிலும் வடமொழியிலும் வரையப் பெற்றுள்ள கல்வெட்டுக்களே சான்று பகிர்கின்றன. இராசராசன் இறுதியாகப் பெற்ற வெற்றி முந்நீர்ப் பழந்தீவு பன்னிராயிரத்தில் பெற்ற வெற்றியேயாகும். சேரநாட்டுக் கடற்கரைக்கு அணித்தாகக் கடலிடையே உள்ள எண்ணிலாச் சிறு தீவுகளில் வாழ்ந்திருந்த கடற்கொள்ளைக் கூட்டத்தார், நினைத்தபோதெல்லாம் சேர நாடு புகுந்து கேடு செய்கின்றனர் என்பதைக் கேள்வியுற்ற இராசராசன் தன் கடற்படையின் துணையால், அத்தீவுகளைக் கைப்பற்றி, அங்குத் தன் படையின் ஒரு பகுதியை நிறுத்தி அத்தீவினரால் தீங்கொன்றும் நிகழாவண்ணம் காவல் மேற்கொண்டான். . பகையரசர் பலரை வென்று ஒரு பேரரசை நிலை நாட்டிய பெரு வீரனாகிய இராசராசன் சிறந்த அரசியல் அறிவும் உடையவனாய் விளங்கினான்; அப்பேரரசில் ஒரு சிறு குழப்பமும் உண்டாகாவண்ணம் நல்லரசு நடத்தினான்; தன் ஆட்சி அமைதி நிலவும் நல்லாட்சியாக விளங்க அவன் ஆற்றிய அரசியல் பணிகள் பலவாம். பேராற்றலும் பெருவீரமும் படைத்த தன் மகன் இராசேந்திரனுக்கு அவன் இளமைப் பருவத்திலேயே இளவரசுப் பட்டம் கட்டி, அரசியல் அலுவல்களில் கலந்து கொண்டு பல துறையிலும் பயிற்சி பெறப் பண்ணினான். அக்காலை அவன் பெற்ற பயிற்சியே, பிற்காலத்தில் ஒரு பேரரசைக் கட்டிக் காக்கும் பெரும் பணியை எளிதில் தாங்கத் துணை புரிந்தது. அறிவும் அன்பும் நிறைந்தவர்களையே அரசியல் அதிகாரிகளாக ஆங்காங்கு நியமித்தான்; ஆற்றலும், ஆண்மையும் அஞ்சாமையும் கொண்டவர்களையே தண்டத் தலைவர்களாகக் கொண்டான். சோணாடு முழுவதையும் அளந்து, நிலங்களின் பரப்பையும் நிலையையும் உணர்ந்து நில வரியை ஒழுங்குபடுத்தினான்; இம்முறையால், ஓர் ஊர் இன்ன நாட்டில் உளது; அந்நாடு இன்ன வளநாட்டில் அடங்கி உளது: அவ்வளநாடு இன்ன மண்டலத்தின் உட்பிரிவு என்ற உணர்வு ஒவ்வொருவருக்கும் தோன்றும் வகையில் ஒவ்வொரு மண்டலத்தையும் பல வளநாடுகளாகவும், ஒவ்வொரு வளநாட்டையும் பல நாடுகளாகவும் பிரித்து வகை செய்தான். “சோழ மண்டலத்து, உய்யக் கொண்டார் வளநாட்டு, வெண்நாட்டு அமண் குடி” என்ற தொடரைக் காண்க. இராசராசன் இறந்துவிட்டான்; அவன் அமைத்த சோழர் பேரரசு அழிந்துவிட்டது. ஆனால் அவன் பெயர் மட்டும் இன்றுவரை மறைந்திலது. இனி அது எக்காலமும் மறையாது. அவ்வாறு அவன் பெயரை என்றும் நிலை நிற்கப்பண்ணுவது, அவன் தஞ்சைமாநகரின் நடுவண் எடுத்துள்ள, ஈடும் எடுப்பும் இல்லாப் பெரியகோயிலே. இராசராசன் பெருமைக்கும் புகழுக்கும் கலங்கரை விளக்காக நிற்பது அது ஒன்றே. இராசராசேச்சுரம் எனத்தன் பெயர் இட்டு எடுத்த அக்கற்கோயில் 793 அடி நீளமும் 397 அடி அகலமும் உடையது; அதன்கண் வானளாவ அமைந்துள்ள நடுவிமானம் மட்டும் 216 அடி உயரம் உடையது. அதன் உச்சியில் போடப் பெற்றிருப்பது, எண்பது டன் எடையுள்ள ஒரே, கருங்கல், விமானத்தின் மேல் அமைத்திருக்கும் செப்புக் கலசம் 3083 பலம் நிறையுடையது; அக்கலசத்தை மூடியிருக்கும் பசும்பொன் 926½ கழஞ்சு. கோயிலின் வெளிச்சுற்றில் அமைக்கப்பட்டுள்ள ஒற்றைக்கல் நந்தி பன்னிரண்டடி உயரமும், பத்தொன்பதரை அடி நீளமும், எட்டேகால் அடி அகலமும் உடையது. மண்ணல்லது மலைகாணாத் தஞ்சை மாவட்டத்தின் நடுவே, முழுதும் கருங்கல்லால் ஆன இத்துணைப்பெரிய கோயிலைக் கட்டிமுடித்த, இராசராசனின் இறவாப் புகழும் பெருமையுந்தான் என்னே! முதல் இராசேந்திரன் : பார்புகழும் பேரரசன் இராசராசனுக்கும், அவன் தேவியருள் வானவன் மாதேவி என வழங்கும் திரிபுவனமாதேவியார்க்கும் மார்கழி ஆதிரை நன்னாளில் பிறந்த நற்புதல்வன் இவ்விராசேந்திரன். இராசராசன் கட்டிய சோழப் பேரரசிற்குப் பெரிதும் துணை புரிந்தவன் இவனே. அவன் மேற்கொண்ட போர்கள் பலவற்றிற்கும் படைத்தலைமையேற்றுப் பணியாற்றியவன் இப்பெரு வீரனேயாவான். ஆகவே அவன் பெற்ற வெற்றியனைத்தும் இவன் பெற்ற வெற்றிகளேயாம். சோணாட்டின் ஆட்சிப்பொறுப்பினை இவன் ஏற்றுக் கொள்ளுங்காலத்தில், சோணாடு, இன்றைய சென்னை மாநிலத்தையும், மைசூர் நாட்டின் பெரும்பகுதியையும், ஈழநாட்டையும் தன்னகத்தே கொண்ட ஒரு பெருநாடாகத் திகழ்ந்தது. சுருங்கச் சொன்னால், துங்கபத்திரை ஆற்றிற்குத் தெற்கே இருந்த இந்தியத் துணை கண்டம் முழுவதிலும் சோழர் புலிக்கொடி ஒன்றே ஓங்கிப் பறந்தது. இவ்வாறு பரந்து அகன்ற ஒருபெரிய நாட்டை, அரியணை ஏறும் தன் ஆட்சியின் தொடக்க காலத்திலேயே பெரும்பேற்றினைப்பெற்ற இராசேந்திரன், உள்ளதே போதும் என உளம் அடங்கினான் அல்லன். அவன் ஆற்றலும் ஆண்மையும், அவன் தோளாற்றலைத் தொலை நாட்டில் வாழ்வாரும் அறிந்து பாராட்ட வேண்டும் எனத் துடித்தன. அதன் பயனாய் அவன் மேற்கொண்ட போர்கள் எண்ணற்றனவாம். அம்முறையால் அவன் பெற்ற வெற்றிகளை அவன் மெய்க்கீர்த்தி, கூறும் முறைப்படியே காண்போமாக.  கிருஷ்ணை துங்கபத்திரை ஆகிய இரு பேராறு களுக்கும் இடையில் அமைந்திருப்பதும், இன்று பம்பாய் மாநிலத்தின் ஒரு பகுதியாய் ரெய்ச்சூர் மாவட்டம் எனப் பெயர் பெறுவதுமாகிய நாடு பண்டு இடைதுறை நாடு என அழைக்கப்பெற்றது; அந்நாடே, இராசேந்திரன் வென்றடக்கிய முதல் நாடாக அவன் மெய்க்கீர்த்தி கூறுகிறது. மைசூர் தனியரசின் வடமேற்குப் பகுதியைத் தன்ன கத்தே கொண்டு, கங்கபாடிக்கு வடக்கிலும், நுளம்ப பாடிக்கு மேற்கிலும் இருந்த வனவாசிப் பன்னீராயிரம் என்ற சிறு நாட்டையும் இராசராசன் வெற்றி கண்டான். ஐதராபாத்திற்கு வடக்கிழக்கில் நாற்பத்தைந்து கல் தொலைவிலுள்ள குல்பாக் என்ற ஊர், பண்டைக் காலத்தில் கொள்ளிப்பாக்கை எனும் பெயருடையதாய், அகழியும் மதிலும்சூழ்ந்த அரண்களைத் தன்னகத்தே கொண்டதாய், ஒரு சிறு நாட்டின் தலைநகராய்த் திகழ்ந்தது; இராசேந்திரன் வெற்றிக்கொடி அந்நகரிலும் நின்று பறந்தது! ஒரு காலத்தில் இராஷ்டிரகூடர்களின் தலைநகராய் இருந்ததும், வழியிடை நகராய் அமைந்து வடநாட்டு வேந்தர்களின் தாக்குதல்களையும், தென்னாட்டுக் காவலரின் தாக்குதல்களையும் ஒருங்கே பெற்று உரு விழந்து போனதும் ஆய, மானியகேடம் என வழங்கும் மண்ணைக் கடக்கத்தின் மண்ணும் இராசேந்திரனின் வெற்றிப்புகழ் பாடிற்று. மேலைச் சாளுக்கியரின் ஆட்சிக்குட்பட்ட இந்நாடுகளில் பெற்ற வெற்றிகள் அனைத்தும் இராசேந்திரன் அரியணை ஏறுவதற்கு முன்னர்ப் பெற்ற வெற்றிகளாம். இராசராசன் ஆட்சிக் காலத்தில் அவன் தண்டத்தலைவனாய்ச் சென்று போரிட்ட தனக்குத் தோற்று, ஒடி ஒளிந்து கொண்ட ஈழநாட்டரசன், சில ஆண்டுகள் கழித்து. ஒரு பெரிய படையைத் திரட்டிக் கொண்டுவந்து, ஈழநாட்டில் தான் நாட்டிவந்த சோழ அரசை அழிக்க முனைவது அறிந்து, இராசேந்திரன் அளவிலாச் சினம் கொண்டான். ஈழநாட்டின் மீது மீண்டும் படையெடுத்துச் சென்றான். வெற்றித் திருமகள் இம்முறையும் இராசேந்திரனுக்கே மாலை சூட்டினாள். ஈழத்தரசனை வெற்றி கொண்ட இராசேந்திரன், வெறுங்கையோடு வீடு திரும்பவில்லை, ஈழத்தரசர்கள் வழிவழியாக அணியும் விழுச்சிறப்புடைய மணிமுடியையும், அவர் தேவியர் அரியனை அமருங்கால் அணியும் அழகிய முடியையும் கைப்பற்றிக்கொண்டான். அம்மட்டோ! தன் பாட்டனுக்குப் பாட்டனாகிய முதற்பராந்தகனுக்குத் தோற்று ஓடிய பாண்டியன், ஈழநாட்டில் அடைக்கலமாக அளித்து வைத்தனவும், அப்பராந்தகன் பலமுறை முயன்றும் அவனால் அடைய இயலாது போயினவும் ஆகிய பாண்டியர் மணிமுடியையும், இந்திர ஆரம் முதலாம் பிற அரசச் சின்னங்களையும் கைப்பற்றிய களிப்போடு, அவ்வீழநாட்டுக் காவலனையும் சிறை கொண்டு சோணாடு வந்து சேர்ந்தான். தென்னகத்தில் தன்னை எதிர்ப்பவர் எவரும் இலர் என்ற பெருநிலையைப் பெற்றுவிட்ட பின்னர், இராசேந்திரன், கங்கை பாயும் வடநாட்டிலும், கடல்கடந்த கடார நாட்டிலும் தன் புகழ் பரவ வேண்டும் என்று விருமபினான். அவ்வாறு விரும்பியவன், அங்கெல்லாம் சென்று வெற்றி பெற்று வரவேண்டுமாயின், தானும் தன் பெரும் படையும் நெடுநாட்கள் வெளிநாட்டில் வாழவேண்டி வரும்; தான் நாட்டில் இல்லை என்பதைப் பகைவர் உணர்வராயின் உடனே உள்நாட்டில் கலகத்தை மூட்டி உரிமைப் போர் தொடுத்துவிடுவர்; அந்நிலை உண்டாகவிடுவது தன் பேரரசின் ஆணிவேரைப் பறிப்பதுபோலாம்; ஆகவே, அக்காலத்தில் அந்நிலை ஏற்படா வண்ணம் ஆவன புரிந்துவிட்டே நாட்டைவிட்டு அகலுதல் வேண்டும் என அறிந் தான். உடனே தன் மக்களுள் ஒருவனைப் பாண்டித் தலைநகர்க்கு அழைத்துச் சென்று, ஆங்கு அவனுக்குச் சோழ பாண்டியன் எனும் பட்டப்பெயர் சூட்டிச் சேர பாண்டிய நாடுகளின் ஆட்சிப் பொறுப்பை அவன்பால் ஒப்படைத்து அவனை ஆங்கிருந்து ஆட்சிபுரியுமாறு பணித்தான். சேர நாட்டின் தென்கோடியில் உள்ள கோட்டாற்றில், தன்கீழ்ப்பணிபுரியும் சாளுக்கிய இளவரசன் ஒருவன் தலைமையின் கீழ் பெரிய நிலைப்படை ஒன்றை நிறுத்தி வைத்தான். இவ்வாறு செய்து முடித்த முன்னேற் பாடுகளால், தான் இல்லாக் காலத்தும் நாட்டில் அமைதி நிலவும் நல்லாட்சியே நடை பெறும் என்ற துணிவு வரப் பெற்றான். நிலைகுலையா நல்லாட்சிக்குச் செய்யவேண்டுவ அனைத்தையும் செவ்வனே செய்து முடித்த அந்நிலையில் வடவெல்லையில் மேலைச் சாளுக்கியர் விளைத்த சிறு பூசல், இராசேந்திரனின் வெளிநாட்டுப் படையெடுப்பைச் சிறிது காலம் கடத்தப் பண்ணிற்று. மேலைச் சாளுக்கிய மரபில் வந்து அப்போது ஆட்சி புரிந்து கொண்டிருந்த மன்னன், சோழரிடம் தன் முன்னோர் இழந்த நாடுகளைக் கைப்பற்றும் கருத்தினைக் கொண்டான். இராசேந்திரன் சிந்தையும் செயலும் வேறு ஒரு திக்கில் சென்றிருந்த சமயம் நோக்கித், துங்கபத்திரை வடகரைக் கண்ணவாய்ச் சோழர் ஆட்சிக்குட்பட்டிருந்த சிற்சில பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டான். அஃதறிந்தான் இராசேந்திரன்; உடனே தொண்டை நாட்டுத் தலைநகராம் காஞ்சியில் நிறுத்தி வைக்கப்பெற்றிருந்த வடவெல்லைப் படையோடு சாளுக்கியநாடு நோக்கிச்சென்றான். முயங்கி எனும் இடத்தில் சாளுக்கியரை மடக்கிப் போரிட்டு வென்றான்; அந் நாட்டு மன்னன் அஞ்சிப் புறமுதுகிட்டு அரண் புகுந்து ஒளிந்து கொண்டான். பொன்னையும் நவமணிகளையும் பெருந்திரளாக வாரிக்கொண்டு, இராசேந்திரன் சோணாடு வந்து வெற்றித் திருவிழாக் கொண்டாடினான். வடவெல்லைப் பூசலை ஒருவாறு வாயடங்கப் பண்ணியதும் இராசேந்திரன் கங்கைநாட்டுப் படையெடுப்பைக் கருத்தில் கொண்டான். மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் தான் புதிதாக அமைத்த தலைநகரையும், ஆங்குத் தான் எடுத்த பெரிய கோயிலையும், அத்தலைநகர்க்கு அணித்தாகத் தான் அமைத்துள்ள பெரிய ஏரியையும் கங்கை நீரால் துரய்மை செய்தல் வேண்டும் என்ற வேட்கை, வட நாட்டு படையெடுப்பை விரைந்து மேற்கொள்ளச் செய்தது. ஆனால், கங்கைவரை சென்று மீளக் குறைந்தது இரண்டு ஆண்டு காலமாவது வேண்டியிருக்கும்; அவ்வளவு நீண்ட காலம், தான் தலைநகரின் நின்று நீங்கியிருப்பது நன்றன்று என எண்ணினான். அதனால் அவ்வட நாட்டுப் படையெடுப்பிற்குத் தலைமை தாங்கிச் செல்வதைத் தான் ஏற்றுக் கொள்ளாது, அதைத் தகுதிபலிக்க தன் பெரும் படைத்தலைவன் ஒருவன் பால் ஒப்படைக்கத் துணிந்தான். வடநாட்டுப் படையெடுப்பின் பொறுப்பேற்றுக் கொண்ட படைத்தலைவன், சோழர் பேரரசின் வட கிழக்கு எல்லை நாடாகிய வேங்கி நாட்டிலிருந்து வடநாடு நோக்கிப் புறப்பட்டு விட்டான். வேங்கிநாட்டு வடவெல்லையைத் தாண்டிய தண்டநாயகன் வத்சநாட்டில் அடியிட்டான்; நாகர் வழிவந்த குறுநிலத் தலைவர் பலர், அவ்வத்சநாட்டின் பல்வேறு உட்பிரிவுகளாய மதுரை மண்டலம், நாமணைக்கோணம், பஞ்சப்பள்ளி, மாசுணி தேசம் முதலான சிறு நாடுகளை ஆண்டுக்கொண்டிருந்தனர்; இக்காலை சித்திரகோட்டம் என வழங்கும் சக்கரக் கோட்டம் எனும் இடத்தில் அவர்கள் அனைவரையும் ஒரு சேர வெற்றிகொண்ட பின்னர், சோழர் தளபதி மேலும் வடக்கு நோக்கிச் சென்றான். பின்னர் ஆதிநகர் அடைந்து, ஆங்கு அரசாண்டிருந்த இந்திரரதனை வென்று அவன் ஆட்சிக்குட்பட்ட ஒட்டரநாட்டையும் கோசலநாட்டையும் கைக் கொண்டான்; கங்கை நோக்கி விரைந்த சோழர் படை, கங்கை பாயும் வங்காள நாட்டில் பேரரசு செலுத்தும் பால மரபினனான மகிபால மன்னனுக்குக் கீழ்ப்படிந்த குறுநில மன்னர்களாய தன்மபாலன், இரணசூரன், கோவிந்தசந்தன் முதலாயினோரை வென்று, அவர்கள் ஆட்சிக்கு உட்பட்ட, தண்டபுத்தி, தக்கண லாடம், வங்காளம் முதலாம் நாடுகளில் வெற்றிக் கொடிகளைப் பறக்க விட்டு, இறுதியில் அம்மகிபாலன் இருந்து ஆளும் உத்தரலாட நாட்டில் அடியிட்டது. ஆங்குத் தன்னை வந்தெதிர்த்த அவனை அமரில் வென்று, அடிமை கொண்டான் சோழர் படைத் தலைவன்; அம்மட்டோ! அவன் உரிமைச் சுற்றமும், உடைமைகள் பலவும் சோழர் உடைமைகளாயின. இறுதியில் தன்னோடு போரிட்டுத் தோற்ற பேரரசர் ஒவ்வொருவர் தலை மீதும் கங்கை நீர் நிரம்பிய குடங்களை எற்றித் தமிழ்நாடு நோக்கி முன்னே போக விட்டுப் பின் தொடர்ந்தான், தமிழ்நாட்டுப் படைப் பெருமையை வடநாட்டு மன்னரெல்லாம் மதிக்கும்படிப் பண்ணி, வெற்றித் திருமகளை, வடநாட்டில் வதுவை முடித்து, பொங்கும் பெருவளத்தோடும் கங்கைத் திருநீரோடும் திரும்பி வரும் தன் படைத் தலைவனை வரவேற்க, இராசேந்திரன் கோதாவரி ஆற்றங்கரையில் காத்து நின்றான். வந்த தலைவனை வாழ்த்தி, வரவேற்றுப் பெருமை செய்தான். பின்னர்ப் பகையரசர் தாங்கி வந்த கங்கை நீரால் தலைநகரைத் தூய்மை செய்து, அந்நகர்க்கு அவ்வெற்றியை நினைவூட்டும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் எனும் திருப்பெயர் இட்டான்; கங்கை கொண்ட சோழன் எனத் தானும் ஒரு புதுப் பெயர் புனைந்து கொண்டான்; தான் அமைத்த ஏரிக்கும் சோழ கங்கம் என அவ்வடநாட்டு வெற்றியால் பெயர் சூட்டினான். வடநாட்டு வேந்தர்களையெல்லாம் வென்று, கங்கை நீரைக் கொணர்தல் வேண்டும் என்ற வேட்கை நிறை வேறியதும், இராசேந்திரன் கடாரப் படையெடுப்பில் கருத்தைச் செலுத்தினான் . கங்கைப் படையெடுப்பில் செய்ததுபோல், படைத் தலைமையை இப்போது பிறர் பால் ஒப்படைக்க கருதினானல்லன், கடாரப் படையெடுப்பு கலங்களின் துணையால் நடைபெறுதல் வேண்டும். ஆகவே, அக்கலங்களைக் காலமும் நிலையும் அறிந்து செலுத்திச் செல்லும் சிறந்த அறிவுடையான் ஒருவனே அப்படையெடுப்பிற்குத் தலைமை தாங்கிச் செல்லுதல் வேண்டும் என உணர்ந்த இராசேந்திரன், அப்பெரும் பொறுப்பைத் தானே ஏற்றுக்கொண்டான். சோணாட்டின் சிறந்த கடற்றுரையாகிய புகார் நகரை விட்டு, போர் வீரர்களைத் தாங்கிய போர்க்கலங்கள் பல, கீழ்த்திசை நோக்கிப் புறப்பட்டன. பலநாள் கழித்து, கலங்கள், இக்காலை சுமத்ரா என வழங்கும் நாட்டின் மேற்கரையில் இருந்த அந்நாட்டின் தலைநகரும், சிறந்த துறைமுகப் பட்டினமுமாகிய பூரீவிசய நகரில் கரையேறின. கலங்களில் வந்திறங்கிய வீரர்களைத் துணைக் கொண்டு, மலேயா, சுமத்ரா நாடுகளை உள்ளடக்கிய பெருநாடாய், பூரீவிசய நாடு எனும் சிறப்புப் பெயருடையதாய் விளங்கிய நாட்டின் வேந்தனாகிய சங்கிராமவிச யோத்துங்கவர்மனை வென்று அடிமை கொண்ட இராசேநதிரன், அவன் பட்டத்து யானையையும், பெரும் பொருட்குவியலையும், வித்தியாதரத் தோரணத்தையும் கவர்ந்து கொண்டான். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, அந்நாட்டின் சிறந்த பெரிய நகரங்களாய பண்ணை, மலையூர், மாயிருடிங்கம், இலங்காசோகம், மாபப்பாளம், இலிம்பங்கம், வளைப்பந்தூர், தக்கோலம், தமாலிங்கம், இலாமுரிதேசம், கடாரங்களுக்கெல்லாம் சென்று, வெற்றிக் கொடியை நாட்டி விட்டுத் தாய்நாடு திரும்பினான்; வழியில் மாநக்கவாரத் தீவுகளில் தங்கி அங்கும் தன் ஆற்றலை நிலைநாட்டி வந்தான். கலம்பல செலுத்திக் கடல் கடந்து சென்று கடாரத்தை வென்ற இவ்வரிய செயலை, இராசேந்திரன்,  வெறும் வெற்றிப் புகழ் ஒன்றையே கருதி மேற்கொண்டானல்லன்; மாறாக, அக்கடாரத்திற்குக் கடல் வாணிகம் கருதிச் சென்று வாழும் எண்ணிலாத் தமிழ் மக்களுக்கு, அந்நாட்டு மன்னனால் நிகழ்ந்த இன்னலைப் போக்கி, அவர்க்கு இனிய வாழ்வளிக்கவே, அவ்வரும் பெரும் பணியை விரும்பி மேற்கொண்டான். கடார வெற்றிக்குப் பின்னர், இராசேந்திரன் சிந்தை யும் செயலும் அரசியல் துறைகளில் சென்றில; அரசியற் பொறுப்புக்களையெல்லாம் தொண்டை மண்டலத்தும், பாண்டி மண்டலத்தும், சேர மண்டலத்தும், ஈழ மண்டலத்தும் இருந்து அம்மண்டலங்களின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நிற்கும் தன் அரும்பெறற் புதல்வர்கள்பால், சிறப் பாகத் தன் மூத்த மகனாகிய இராசாதிராசன்பால் ஒப்படைத்துவிட்டு ஒய்வு பெற்றுக் கொண்டான்; அந்நாள் முதல் அவன் சைவசமய வளர்ச்சியும், தமிழ்மொழி வளர்ச்சியுமே தன் தலையாய கடமையாகக் கொண்டு வாழ்ந்தான். தன் தந்தை, முதலாம் இராசராசன் உண்டாக்கிய சோழர் சாளுக்கிய உறவு, சோணாட்டின் நல்வாழ்விற்கு நல்லதுணையாம் என்பதை இவனும் எண்ணித் தன் இளையமகள் அம்மங்கைதேவியாரைத் தன் உடன் பிறந்தாள் குந்தவைப் பிராட்டியாருக்கும் கீழைச்சாளுக்கிய மன்னன் விமலாதித்தனுக்கும் பிறந்த இராசராச நரேந்திரன் என்பானுக்கு மணம் செய்துவைத்தான்; பிற்காலத்தே, சோழர்குலத்தையும் சாளுக்கியர் குலத்தையும் ஒன்றாக்கி, இருகுலத்தவர்க்கும் ஒருவனே ஆகிக் கோவோச்சிய குலோத்துங்கனைப் பெற்றெடுத்த பெரியாள், இராசேந்திரன் பெற்ற குலக்கொடியாகிய இவ்வம் மங்கை தேவியே ஆவள். இராசேந்திரன் பெற்ற வெற்றிகளுள் ஈடும் எடுப்பும் இல்லாப் பெரு வெற்றிகளாய கங்கை வெற்றியையும்,  கடார வெற்றியையும் புகழ்ந்து பாராட்டும் பாக்கள் பலப் பல. அவற்றுள் ஒன்று: **“கங்கா நதியும் கடாரமும் கைக்கொண்டு** **சிங்காதனத் திருந்த செம்பியர் கோன்“** இராசாதிராசன்: பார் புகழும் பேரரசன், கங்கையும் கடாரமும் கொண்ட இராசேந்திரசோழ தேவனின் மூத்த மகன் இவன். தந்தையின் ஆட்சிக்காலத்தில் இருபத்தாறு ஆண்டுகள் வரையில் இளங்கோவாய் உடன் இருந்து, அரசியல் துறையிலும், அருஞ்சமர் முறையிலும் சிறந்த பயிற்சி பெற்றவன். அக்காலத்தில், சேரர், பாண்டியர், சிங்களர், சாளுக்கியப் போர்க்களப் பொறுப்பனைத்தையும் தான் ஏற்றுத் தந்தையின் தோள் சுமையைக் குறைத்துக் துணைபுரிந்தவன் இவனே. தந்தையின் ஆட்சிக்காலத்தில், தன் தம்பியின் ஆட்சிப் பொறுப்பிலிருந்த பாண்டி நாட்டிலும், சேர நாட்டிலும், அரசிழந்து தலை மறைந்து வாழ்ந்திருந்த அவ்வரசர் மரபில் வந்தோர்களும், சோழர்க்கு அடங்கிய குறுநிலத் தவைவர்களாய் ஆங்காங்கு ஆட்சி புரிந்திருந்தோரும், தனியாட்சி உணர்வுடையராகி விட்டனர்; மதுரை மாநகரிலிருந்து தம்மைக் கண்காணித்து வரும் சோழபாண்டியனை வீழ்த்தி விட்டு, விடுதலை பெறுதற்காம் வழிவகைகளை வகுத்துக் கொண்டிருந்தனர்; அதற்கேற்ற சூழ்நிலை உண்டாகும் வண்ணம், ஆங்காங்கு உள்நாட்டுக் குழப்பங்களை உண்டாக்கத் தலைப்பட்டனர். இஃதறிந்தான் சோழர் குல இளங்கோவாகிய இராசா திராசன்; அக்கலகங்களை அடக்கி அமைதியை நிலைநாட்டப் படையோடு புறப்பட்ட அவன், முதலில் பாண்டிய நாடு சென்றான். ஆங்குப் பெருங் குழப்பம் விளைவித்த பாண்டியர் வழி வந்தோராய, மானாபரணனையும், வீரகேரளனையும கொன்று, சுந்தர பாண்டியன் தன் உடைமைகளை எல்லாம் கைவிட்டுக் காட்டுள் சென்று கரைந்துறையும்படி அவனை வென்று, பாண்டி நாட்டில் மீண்டும் அமைதியை நிலை நாட்டினான். பின்னர்க் கேரள நாடு புகுந்து ஆங்கு அமைதி குலையக் காரணமாயிருந்த மூவருள் வேணாட்டரசனைக் கொன்றான்; கூபகநாட்டு வேந்தனை வென்று நாட்டை விட்டுத் துரத்தினான்; எலிமலைக் கண்மையில் உள்ள இராமகுட நாட்டனை வென்று அடிமைகொண்டான். இவ்வெற்றிகளால் சோழர் ஆட்சி, சேர நாட்டில் மேலும் வலுப்பெற்றது. சோணாட்டின் தலைமையைச், சேர பாண்டியர் களைப் போலவே ஈழர்களும் வெறுத்தனர்; அதிலும் கடல் கடந்த நாட்டார், தம் நாட்டில் வந்து தம்மை அடிமை கொள்வதா என்ற வெறுப்புணர்வு வேறு, அவர்கள் உள்ளத்தை வாட்டி வதைத்தது; அதனால் சோழர்களின் ஆட்சித் தலைமையை அழிப்பதில், சேர பாண்டியர்களைக் காட்டிலும் பெரிதும் விரைவு காட்டினர். ஈழநாடு முழுவதும் சோழர் ஆட்சியே நடைபெற்றது என்றாலும், அந்நாட்டின் தென் கிழக்குப் பகுதியாகிய ரோகண நாடு மட்டும் சோழர் ஆணைக்கு அடங்காமலே இருந்தது; சோழர் படை புகமாட்டா மலையரணும், காட்டரனணும் சூழ்ந்து கிடந்த அந்நாட்டையே, ஈழநாட்டுக் கலகத் தலைவர்கள் தலைமை நிலையமாகக் கொண்டு வாழ்ந்தனர்; இராசாதிராசன் ஆட்சிக் காலத்தில் மட்டும், சோழர் படை ஐந்து முறை தாக்கப்பட்டது; அவற்றை முறையே, விக்கிரமபாகு, கித்தி, விக்கம பண்டு, வீரசலாமேகன், பராக்கிரம பண்டு எனும்பெயர் பூண்ட, அந்நாட்டு அரசர் மரபில் வந்தோர் தலைமை தாங்கிநடத்தினார்கள். ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையிலும் தோல்வியே கண்டார்கள். விக்கிரமபாகு போரில் மாண்டான். முடி முதலாம் அவன் அரசச் சின்னங்கள் இராசா திராசனால் கைப்பற்றப்பட்டன. கித்தி, போரில் தோற்றுப் புறப் புண் பெற்று மானம் பொறாது தற்கொலை புரிந்து கொண்டான். பாண்டிய மன்னன் ஒருவனுக்கும், ஈழ நாட்டு அரசிளங்குமரி ஒருத்திக்கும் பிறந்து, தாய்ப் பாட்டான் நாடாகிய ஈழநாட்டு அரசுரிமையேற்று வாழ்ந்தோனாகிய விக்கம பண்டு போரில் தோற்றான். அவன் மணி மகுடத்தைத் தன் உடைமையாக்கிக் கொண்டான் இராசாதிராசன். சோழர் படையின் தாக்குதலைத் தாங்கமாட்டாது தோற்ற வீரசலாமேகன், தாய், தமக்கை, தன் மனைவி முதலானோரைக் களத்திலேயே கைவிட்டுக் காட்டுள் சென்று மறைந்தான். பின்னர், சோழர் படை வீரர் தன் தமக்கையை மூக்கரிதல் போலும் இழிசெயல் புரிந்தனர் எனக்கேட்டு, மறமும் மானமும் மிகுந்து, மீண்டும் வந்து போரிட்டுமாளவே. அவன் பொன்முடியைச் சோழர் கைக்கொண்டனர். இறுதியாக வந்து போரிட்ட பராக்கிரமபண்டுவும் புறங்காட்டிப் பழியே மேற்கொண்டான். ஈழநாட்டரசர் பலமுறை முயன்றும், சோழர் ஆட்சியை முறியடிக்க முடியவில்லை, ஈழநாட்டில் சோழர் ஆட்சி அத்துணை வலிமையுடையதாக நிலைபெற்றமைக்கு இராசாதிராசனின் பேராற்றலும் போர்ப்பயிற்சியுமே பெரிதும் காரணங்களாம். இராசாதிராசன், தன் வாழ்நாட்காலத்தில் மேலைச்சாளுக்கிய மன்னர்களோடு நடத்திய போர்கள் நான்கு. அந்நாட்டில் அவன்பெற்ற முதல்வெற்றி, இளவரசுப் பட்டம் பெற்று, அவன் தந்தையின் ஆட்சிக்கீழ்ப் பணி புரிந்த காலத்தில் ஆகும். சோணாடடிற்கும் சாளுக்கிய நாட்டிற்கும் எல்லையாக விளங்கியது துங்கபத்திரைப் பேராறே. ஆனால் சிற்சில காலங்களில், அவ்வாற்றின் தென்கரை நாடுகள் சிலவற்றைக் கைப்பற்றி ஆளப் சாளுக்கியர் முனைவதும், அஃதறிந்த சோணாட்டுச் படை, சாளுக்கியர்களைத் துங்கடத்திரையின் வட கரைக்குத் துரத்துவதோடுவிடாது, தொடர்ந்து சென்று, அவர்களை அவர்கள் நாட்டிலேயே போரிட்டு வெல்வதும் வழக்கங்களாகிவிட்டன.  இராசாதிராசன் இளவரசனாய் இருக்கும் காலத்தில், ஆகதமல்லசோமேசுவர்ன் என்பான், சாளுக்கிய நாட்டில் அரசு கட்டில் ஏறினான். அரியணையில் அமர்ந்ததும், தன் ஆற்றலை நாட்டவர்க்குக் காட்டவேண்டும் என்ற ஆர்வம் அவனைப் பற்றிக்கொண்டது; சேணெடும் நாட்டினராகிய சோழர் தன் அண்டை நாட்டில் ஆணை செலுத்துவது தன் ஆண்மைக்கு இழுக்காம்; தன் ஆற்றலைப் பழிப்பது போலாம் என்று எண்ணினான்; உடனே சோழர் ஆட்சிக் குட்பட்ட ஊர்கள் சிலவற்றைக் கவர்ந்து தன் காவற்கீழ் வைத்துக்கொண்டான்; அது கேட்டான் சோழர்குலப் பேரரசன் இராசேந்திரன். அவ்வளவே, சோழர் பெரும் படையொன்று இராசாதிராசன் தலைமையின் கீழ்த் துங்க பத்திரை ஆற்றைக் கடந்து சாளுக்கிய நாட்டில் புகுந்து விட்டது. பாய்ந்துவரும் சோழர் படையைத் தடுத்து நிறுத்திப் போரிட்டுத் துரத்த, ஆகவமல்லன் மக்கள் இருவரும், படைத் தலைவர் மூவரும் படையோடு விரைந்து வந்தனர். இரு திறம்படையினருக்கும் பெரும் போர் நிகழ்ந்தது; போரில் சாளுக்கியப் படைத் தலைவர் இருவர் களத்திலேயே மாண்டனர்; அஃதறிந்த மன்னன் மக்கள் இருவரும் எஞ்சிய படைத் தலைவனோடு களத்தை விட்டோடி எங்கோ கரந்துகொண்டனர். இராசாதிராசன் சாளுக்கிய படைத் தலைவர் களத்தில் விட்டுச் சென்ற களிறுகளையும், குதிரைகளையும் கணக்கிலாப் பிறபொருள்களையும் கைப்பற்றிக் கொண்டு திரும்பினான். திரும்பும் சோழர் படை வாளா திரும்பாது, வழியிடையுள்ள, கொள்ளிப்பாக்கைடோலும் சாளுக்கிய ஊர்களை எரியூட்டி அழித்தவாறே வந்து சேர்ந்தது. இரண்டாண்டுகள் கழிந்தன; மேலைச்சாளுக்கிய மன்னன், மீண்டும் மண்ணாசைக்கடியனாகிவிட்டான்; சோழர் ஆட்சிக்குட்பட்ட நிலத்தில் மீண்டும் அடியிட்டான் மேலைச்சாளுக்கியர்களை முற்றிலும் வென்று, அவர்களைத் தமக்கு வழிவழி அடிமையாக வைத்துக் கொள்ளுதல் வேண்டும் எனும் வேட்கையுடையோராகிய சோழர்குல வேந்தன், இராசாதிராசனுக்குச் சாளுக்கியரின் இச்சிறு செயல் சினத்தியை மூட்டிவிட்டது. அவ்வளவே; சிறிதும் காலங்கடத்தாது, துங்கபத்திரை ஆற்றைக் கடந்து விட்டான், சாளுக்கிய ஆட்சிக்கு அடங்கிய சிற்றரசர் பலரை வென்று துரத்திவிட்டு, அவர் ஆண்ட நாடுகளில் தன் ஆணை நடைபெறப் பண்ணி னான்; சாளுக்கியர்பால் அவன் கொண்ட சினம் அந்த அடிவோடு அமைதியுற்றிலது, சாளுக்கிய மன்னர்களின் வாழிடமாகிய கம்பிலிநகரை அடைந்து ஆங்குள்ள அம் மன்னர் மாளிகைகள் அனைத்தையும் இடித்துப்பாழ் செய்துவிட்டு, அந்நகர் நடுவே, ஆங்குத் தான் பெற்ற வெற்றியை எக்காலத்தவரும் எந்நாட்டவரும் உணர்தல் வேண்டும் என்ற விழைவால், வெற்றித் துரண் ஒன்றை நாட்டிவிட்டு வந்து சேர்ந்தான். - தன் பேரரசின் வடவெல்லையில், இடைவிடாது குறும்பு புரியும் ஒரு பேரரசை வாழவிடுவது, தன் அரச வாழ்விற்கு அரண வரிப்பதாகாது என்ற உண்மையை உணர்ந்த இராசாதிராசன், அவ்வரசின் வலியழிக்கும் செயலை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனத் துணிந்தான் அதைக் குறைவறச் செய்து முடிக்கவல்ல பெரும்படை துணைசெய்யத் தலைநகர் விட்டுப் புறப்பட்டான்; கம்பிலிப்போர் முடிந்து இரண்டாண்டுகள் கழிவதற்கு முன்பே, சோழர்படை சாளுக்கிய நாட்டில் மீண்டும் புகுந்துவிட்டது. இம்முறை சோழர் படை துங்க பத்திரை ஆற்றங்கரையோடு நின்று விடவில்லை: சாளுக்கிய அரசு நிலவும் அகநாட்டில் நெடிது சென்று, கிருஷ்ணை ஆற்றங்கரையை அனுகிவிட்டது. அவ்வாற்றங்கரை நகராகிய பூண்டுரில் பாடிக்கொண்டிருந்த சாளுக்கியப் படைத்தலைவர் அறுவரையும் அவர்க்குத் தலைமை தாங்கி நின்ற பெரும்படைத் தலைவனாகிய விச்சையன் என்பானையும் வென்று, அவன் தாய்-தந்தையரையும் அந்நாட்டு மகளிர் பலரையும் கைப்பற்றிச்சிறை செய்ததோடு அமையாது, அந்நகரைச் சுற்றியிருந்த அரணையும், மதிலையும் அழித்துவிட்டு, அந்நகர்க்கு அணித்தாக இருந்த பேரூரில் உள்ள மன்னர் மாளிகைகளை மண்மேடாக்கிவிட்டு, அச்சாளுக்கியர் சின்னமாம் வராகம் பொறித்த கொடி பறந்த வராகக்குன்றில், அதை அகற்றிவிட்டுப் புலி பொறித்த கொடியைப் பறக்கவிட்டு, பாராட்டத்தக்க பெருமை வாய்ந்த அந்நாட்டுப் பெரு நீர்த்துறைகள் மூன்றிலும் தம் பட்டத்து யானையை நீராட்டி விட்டு இறுதியில் சிறிதே ஒய்வுபெற ஒரிடத்தில் பாடி கொண்டிருந்தது சோழர் பெரும்படை. அவ்வாறு பாடி கோண்டிருக்குங்கால், அப்படையின் நிலையுணர ஆங்கு வந்த ஆகவமல்லன் ஒற்றர்கள், சோழர் படைவீரரின் கையில் சிக்கிக் கொண்டனர். இராசா திராசன் அவர்களைக் கொல்லாது, அவர்கள் மார்பில், ’ஆகவமல்லன் அஞ்சிப் புறங்காட்டுகின்றனனே யல்லது ஆற்றல் காட்டிப் போரிடப் புறப்பட்டிலன்" என்று எழுதித் துரத்தி விட்டான். சின்னாள் கழித்து, ஆகவமல்லன் அமைச்சன் ஒருவன் மெய்க்காப்பாளர் உடன் வரச் சந்துசெய்து போர் தணிக்கும் கருத்துடையவனாய்ச் சோழன் பாடி கொண்டிருக்கும் பாசறைக்குள் புகுந்தான். சோணாட்டு வீரர்கள், உடன் வந்த மெய்க்காப்பாளருள் ஒருவருக்கு ஐங்குடுமி வைத்து ஆகவமல்லன் என்று பெயர் சூட்டியும், மற்றொருவனுக்குப் பெண்ணுடை அளித்து ஆகவமல்லி என்று பெயர் சூட்டியும் புறத்தே துரத்தினார்கள். சோழர் பெரும் படையை வெல்லும் ஆற்றல் தனக்கு இல்லை என அறிந்து அடங்கியிருக்க விரும்பிய ஆகல மல்லன், சோழ வீரர்கள் தன் அமைச்சருக்கும் தன் ஒற்றர்க்கும் செய்த அவ்விழி செயலை எண்ணி எண்ணி வருந்தினான்; இறுதியில் அவமானம் பொறுக்காது, போருக்குப் புறப்பட்டு விட்டான். போரில் சாளுக்கியப் படைத்தலைவர் அனைவரும் புறமுதுகிட்டு ஓடிவிட்டனர்;  துணை வந்த மன்னன் ஒருவனும் மாண்டு போனான். சாளுக்கியப் பேரரசின் தலைநகராம் பெருமைமிக்க கல்யாணபுரம் சோழர் கைப்பட்டது. இராசாதிராசன், அந்நகர் நடுவே அமைந்திருந்த அரண்மனையை அறவே அழித்துவிட்டு, ஆங்குத் தான் பெற்ற வெற்றிக்கு அறிகுறி யாக, அந்நகரிலேயே வீராபிஷேகம் செய்து கொண்டான்; விசயராசேந்திரன் என்ற பட்டத்தையும் குட்டிக் கொண்டான். கல்யாணபுர வெற்றிக்குப் பின்னர் எட்டாண்டுகள் கழிந்தது. இராசாதிராசன், மேலைச்சாளுக்கியரோடு மீண்டும் போர்தொடுத்தெழ வேண்டிய நிலைவந்துற்றது. சோழர்கள் சாளுக்கியர்க்கு விளைத்த இழிவை எண்ணி எண்ணித் துன்புற்ற ஆகவமல்லன், அச்சோழரை என்றேனும் ஒருநாள் எவ்வாறேனும் வென்று பழி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று துணிந்தான்; இந்த எட்டாண்டு காலத்தில், தன் படையை அதற்கேற்ற வகையில் பெருக்கினான்; பிறநாட்டு அரசர்களின் துணையை வேண்டிப் பெற்றான்; ஆகவமல்லன் செய்யும் முன்னேற்பாடுகளை அறிந்தான் சோழ மன்னன் இராசாதிராசன்; மேலும் காலம் தாழ்த்தின் அவன் கை வலுத்துவிடும்; ஆகவே அவன் படைபலம் மேலும் பெருகாத முன்பே அவனை அழித்து விடவேண்டும் எனத் திட்டமிட்டான்; இராசாதிராசன் ஆண்டும் முதிர்ந்துவிட்டது; தன் வாழ்நாள் முழுவதும் ஒயாப்போர் மேற்கொண்டு அலைந்ததால், அவன் உடலும் தளர்ந்திருந்தது. விரைந்து சென்று வீழ்த்தி விடவேண்டும் என்ற நினைவால், பெரும் படையைத் திரட்டிக் காலத்தைக் கழிக்க அவன் விரும்பவில்லை. அதனால் உள்ள படையோடு உடனே புறப்பட்டுக் கிருஷ்ணை ஆற்றங்கரையை அடைந்து விட்டான்; அவ்வாற்றங்கரைப் பேரூர்களில் ஒன்றாகிய கொப்பத்தில் போர் தொடங்கிவிட்டது. இம்முறை இராசாதிராசனே படைத் தலைமையேற்று, பட்டத்து யானைமீது ஏறிப்போர்க்களம் புகுந்தான்; அஃதறிந்த ஆகவமல்லன் தன் படைக்குத் தானே தலைவனாகிக் களம் புகுந்தான்,வெற்றி யாருக்கு வாய்க்கும் என்பதைத் துணிந்துகூறஇயலாத வகையில் போர் கடுமையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. சாளுக்கியர்களின் தோல்விக்கெல்லாம் இராசாதிராசனே காரணமாம்; ஆகவே அவனைக் கொன்றாலல்லது தமக்கு வாழ்வில்லை எனச் சாளுக்கியப் படைத் தலைவர் அனைவரும் உணர்ந்திருந்தனர். ஆதலின், அவர்கள் எல்லோரும் ஒன்று கூடி வந்து இராசாதிராசனைச் சுற்றி வளைத்துக் கொண்டு ஒருமுகமாகப் போரிட்டனர். தனியொருவனாக நின்று போரிட்ட இராசாதிராசனால், படைத்தலைவர் பலரும் கூடித்தாக்கும் தாக்குதலைத் தாங்க இயலாது போயிற்று. அம்பேறுண்டு அவன் யானையும் இறந்தது; அதன் மீது அமர்ந்தவாறே அவனும் மாண்டான். வேந்தன் வீழ்ந்தான் எனக் கேட்டுச் சோழர் படை சிறிதே சோர்வுற்றது என்றாலும், உடன் வந்திருந்த இளவல். அந்நிலையே அக்களத்தில் அரசுரிமை தாங்கி, அஞ்சல் அஞ்சல்! எனக் கூறிவந்து அரும்போர் புரிந்து, சற்றுமுன் பெற்ற தோல்வியைப் பெறுவெற்றியாக மாற்றி விட்டான். கொப்பத்தில் சோழர் வெற்றியே பெற்றனர் என்றாலும், சோணாடு சிறந்த பேரரசன் ஒருவனை இழந்த பேரிழப்பிற்கு உள்ளாகிவிட்டது; சோணாட்டு மக்கள் சிந்தை நொந்து வருந்தினர்; ஆனால் சோணாட் டுப் புலவர்கள் ‘கல்யாணபுரமும், கொல்லாபுரமும் எறிந்து யானைமேல் துஞ்சின உடையார் விசயராசேந் திரன்’ என இராசா திராசன் புகழ்பாடி வாழ்த்தினார்கள். - - இரண்டாம் இராசேந்திரன்: கங்கையும் கடாரமும் கொண் டோன். எனக் கொண்டாடப் பெறும் முதல் இராசேந்திர சோழனின் ஆண் மக்கள் ஐவருள்ளும் நடுப் பிறந்தோன் இவ்விராசேந்திரன் அம்மக்கள் ஐவருள்ளும் நாடாண்ட மக்கள் அவர்; மூவருள்ளும் நடுவில் நிற்போன் இவனே. தன் தந்தை இராசேந்திரனை அடுத்து நாடாண்ட அண்ணன் இராசாதிராசனுக்குப் பெருந்துணையாய் நின்று, ‘தம்பி யுடையான் படைக்கு அஞ்சான்’ என்ற பழமொழிக்கு நல்ல இலக்கியமாய் இருந்து புகழ் பெற்றவன் இவன். தனக்கு இவனாற்றிய துணையின் பெருமையளவை நன்கு அறிந்த இராசா திராசன் தனக்குத் ’தம்பி துணைச் சோழன்" என்ற ஒரு பெயரைச் சூட்டிக் கொண்டதோடு தொண்டை நாட்டை வளநாடு ஒன்றிற்கும்.அப்பெயரைச் சூட்டி இவனைச் சிறப்பித்துள்ளான் எனில் இவன் அண்ணன் மாட்டுக் கொண்டிருந்த அளப்பரிய அன்பின் பெருமையை என்னவென்பது. இராசாதிராசன், மேலைச்சாளுக்கிய மன்னன் ஆகவ மல்லனோடு மேற்கொண்ட நாலாவது போரில் அண்ணனோடு உடன் சென்று பெருந்துணை புரிந்து நின்றான் நம் இராசேந்திரன். களிறுமீதமர்ந்து களம்புகுந்த இராசாதிராசன் இறந்தான் என்பதறிந்து செயல் இழந்து சிதறிய சோழர் படைகளை ஒன்று திரட்டி, ஊக்கம் ஊட்டி வெற்றிக்கு வழி செய்தவன் இவனே. இராசாதிராசனைக் கொன்ற சாளுக்கியமன்னனும் படை மறவரும், இவனையும் சூழ்ந்துகொண்டு கடுமபோர் புரிந்தனர் என்றாலும், அவர்கள் அனைவரையும் வென்று அக் களத்தில் வாகை சூடினான்; என்மருக்கும் மேற்பட்ட அவர் படைத்தலைவர்களைக் கொன்றும், ஆகவமல்லனை யும் மற்றுமுள்ள படைத் தலைவர் மூவரையும், களத்தை விட்டுக் கண்காணா இடம் ஒடத் துரத்தியும், சத்துரு பயங்கரன், கரபத்திரன், மூலபத்திரன் என்ற பெயர் சூடிய சாளுக்கியன் பட்டத்து யானைகள் உள்ளிட்ட யானைகள் ஆயிரமும், எண்ணிலாக் குதிரைகளும், ஒட்டகங்களும், மட்டிலாப் பொருள்களும் ஆகிய பெரும் பொருளைக் கவர்ந்தும், சாளுக்கிய குலதேவியர் பலரைச்சிறைசெய்தும், அந்நாட்டுத்தலைநகர் கொல்லாபுரத்தில் வெற்றித் தூண் நாட்டியும், விஜயாபிஷேகம் செய்து கொண்டும், சோணாட்டுத் தலைநகர்க்குச் செம்மாந்து திரும்பினான், இச்சோழர்குலக்குரிசில். ஈழநாட்டு மன்னர்கள், தங்கள் மண்ணுரிமையைப் பெறும் கருத்தோடு அவ்வப்போது செய்யும் கிளர்ச்சி, இரண்டாம் இராசேந்திரன் காலத்திலும் உரம் பெற்று உயிர்த்தெழுந்தது என்றாலும், இறுதியில் இருந்த இடம் தெரியாதவாறு அழிக்கப்பட்டு விட்டது; அதில் பங்கு கொணட ஈழ நாட்டு மன்னன் மானாபரணன் மக்கள் இருவரையும் சிறைசெய்தும், அப்போருக்குத் தலைமை தாங்கி முன்னின்ற வீரசலாமேகனைக் கொன்றும் வெற்றி கண்டான் இராசேந்திரன். பேராற்றங்கரைக் கொப்பத்தில் நடந்த போரில், இராசேந்திரனால் தோல்வியுண்டமையை எண்ணி எண்ணி வருந்திய ஆகவமல்லன், ஆங்குதான் பெற்ற பழியைத் தீர்த்துக்கொள்ளத் துணிந்து, மீண்டும் ஒரு பெரும்படையைத் திரட்டிக்கொண்டு வந்து, அந்நாட்டில் முடக்காறு என்னும் இடத்தில் பாடிக் கொண்டிருந்த இராசேந்திரனை எதிர்த்துப் போரிட்டான்; ஆனால் அந்தோ? அங்கும் அவன் தோல்வியே கண்டான்; வெற்றித் திருமகள் இம்முறையும் இராசேந்திரனுக்கே மாலை சூட்டினாள். இரண்டாம் இராசேந்திரனுக்கு ஆண்மக்கள் அறுவர்; பெண்மகள் ஒருத்தி. உத்தம சோழன் போலும் பட்டப் பெயர்கள் அளித்து, ஆண்மக்களைப் பெருமை செய்த இராசேந்திரன், பாண்டி மண்டலத்தை வென்று கைப் பற்றிய தன் குலத்தவரின் பெரும்புகழ், பாரெலாம் சென்று பரவும் வகையில், மகளுக்கு மதுராந்தகி எனப் பெயர் சூட்டிப் பெருமை செய்தான். தன் உடன் பிறந்தாள் அம்மங்கைதேவிக்குக் கீழைச் சாளுக்கிய இராச ராசேந்திரன்பால் பிறந்த வீரத்திருமகனும், பிற்காலத்தில் தன் இருகுலமும் ஒரு குலமாய் உயர்ந்தோங்க உலகாண்ட உரவோனுமாகிய குலோத்துங்கனுக்கு, மகள் மதுராந்தகியை மணம் முடித்து மனம் நிறை மகிழ்வெய்தினான். வீரராசேந்திரன். மக்கட் செல்வத்தால் மாண்புற்ற மன்னன், கங்கைகொண்ட சோழன் ஈன்ற கான் முளை களுள், வீரராசேந்திரனும் ஒருவன். ஆவணித் திங்கள், ஆயிலியத்திருநாளில் பிறந்த இவன், அண்ணன் இரண்டாம் இராசேந்திரன் காலத்திலேயே இளவரசுப் பட்டம்பெற்று விளங்கினான், வீரமே துணையாகவும், தியாகமே அணியாகவும் வாழ்ந்த வீரராசேந்திரன், தன் பெயருக்கேற்ப, பேராற்றல் படைத்த பெருவீரனாகவே விளங்கினான். இவன் வாழ்நாள் முழுவதும்; வட வெல்லைப்வ போர்களிலேயே கழிந்து விட்டது. வடவெல்லையைக் காப்பதில், இவன், தன் தமையன் மார் இருவரினும் பெருவிழிப்புடையவனாய் வாழ்ந்தான்; அதனால் வடவெல்லை வாழ்வோராகிய மேலைச் சாளுக்கியரோடு வாழ்நாளெல்லாம் ஒயாப் போர் மேற் கொண்டிருந்தான்; அவர்களை ஐந்துமுறை வெற்றிக் கொண்டு, ஆங்கு அழிக்கலாகா ஆட்சியை நிலைநாட்ட ஆசைகொண்ட தன் அண்ணன் மார் இருவர் கனவுகளையும் நினைவாக்கினான். வெங்களத்து ஆகவமல்லனை ஜம்படி வெந்கண்டு, வேங்கை நாடு மீட்டுக்கொண்டு. தன்னுடன் பிறந்த முன்னவர் விரதம்முடித்தான்" என அவன் மெய்க்கீர்த்தி அவனைப் பாராட்டுவது அறிக. வீரராசேந்திரன், சோணாட்டு மன்னனாய் மணிமுடி புனைந்த மகிழ்ச்சியில், வடவெல்லைக் காவலைச் சிறிதே மறந்திருக்கும் காலம் நோக்கி, ஆகவமல்லனின் இளைய மகன் விக்கிரமாதித்தன், சோழர் ஆணைக்கு அடங்கிய கங்கபாடியைக் கைப்பற்ற திட்டமிட்டான். அஃதறிந்த வீரராசேந்திரன், அக்கணமே அமர்மேற்கொண்டு சென்று, ஆகவமல்லன் மகனையும், அவன் படைத்தலைவர்  அனைவரையும் வென்று, துங்கபத்திரை யாற்றிற்கு அப்பால் துரத்தினான். சோழர்களோடு மூன்று தலைமுறைகளாகப் போரிட் டும் அவர்களை முறியடிக்க முடியாமையைக் கண்டு குந்தள நாட்டுக் காவலன் ஆகவமல்லன், வடவெல்லைப் போர்களில், வெற்றி சோழர் பக்கமே நிற்பதற்கு யாது காரணம் என்பதை எண்ணிப் பார்த்தான். சோணாட்டின் வடவெல்லையில் சோழரோடு பகைகொண்டு வாழ்வார் ஒருவரும் இலர்; அதுமட்டு மன்று, அவர்க்கு உற்ற துணை புரியும் அரசொன்றையும் ஆங்கு அவர்கள் அமைத்திருக்கின்றனர்; தன்னோடு தாயமுறையினராகிய கீழைச்சாளுக்கியர், தனக்குத் துணைபுரியாது, சோழர்க்கே துணைபுரிகின்றனர்; வடவெல்லையில் படைத் துணை அளிக்கும் ஒரு பேரரசைப் பெற்றுள்ளமையினாலேயே சோழர்களுக்கு வடபுலப் போர்களில், வெற்றி எளிதில் வாய்த்து விடுகிறது என்ற உண்மையை உணர்ந்தான் ஆகவமல்லன். உடனே, வீரராசேந்திரனை வெற்றி கொள்வதன் முன்னர், அவன் படை பலத்தைக் குறைத்துத் தன் படைபலத்தைப் பெருக்கிக் கொள்ளும் வகையில், கீழைச் சாளுக்கிய நாடாகிய வேங்கி நாட்டுத் துணையை அடைவதற்கான ஆக்க வேலைகளில் ஆகவமல்லன் சிந்தை சென்றது. அதற்கேற்ற சூழ்நிலையும், வேங்கி நாட்டில் அப்போது உருப் பெற்றிருந்தது. அக்காலை, அந்நாட்டு அரியணையில் அமர்ந்திருந்த வீரராசேந்திரன் உடன் பிறந்தாள் அம் மங்கை தேவியாரின் கணவனாகிய இராசராசநரேந்திரன் இறந்து விட்டான். சோழர்களோடு மண உறவுகொண்ட மன்னர் வழிவந்த அம்மன்னன் மறைவே, அவர்க்கும், சோழர்க்கும் இடையே ஏற்பட்டிருந்த நட்புறவின் மறைவாதல் வேண்டும் என மனத்துக்கொண்ட ஆகவமல்லன், உடனே, தன் தண்டத் தலைவன் ஒருவனைப் பெரும் படையோடு, வேங்கி நாட்டின் மீது ஏவினான். அதை அறிந்தான் வீர ராசேந்திரன், தன் பாட்டனும், தங்கள் குலப் பேரரசனுமாகிய இராசராசனின் பரந்தகன்ற அரசியல் அறிவின் பயனாய் ஏற்பட்ட வேங்கி நாட்டுத் தொடர்பு விட்டுப் போவதை, வீரராசேந்திரன் விணே பார்த்துத் கொண்டிருப்பனோ? சோணாட்டு வட வெல்லைக் காப்பிற்கு வேங்கி நாட்டுறவு, எத்துணை இன்றியமையாதது என்பதை உணர்ந்தவனாதலின், வீர ராசேந்திரனும் வேங்கிநாடு நோக்கி விரைந்தான்; சென்று தாக்கும் போரினும் நின்ற தாக்கும் போரிலேயே கருத்து அதிகமாம் ஆதலின், சோழர் படை பேராற்றல் காட்டிப் போரிட்டது சாளுக்கிய தண்ட நாயகன் வேங்கி நாட்டுக் களத்தில் மாண்டு வீழ்ந்தான். வீரராசேந்திரன் வெற்றிகொண்டான், வேங்கி நாட்டுறவை அசைக்க முடியாத தாக்கி அம்மகிழ்ச்சியோடு வீடு திரும்பினான். வீரராசேந்திரன் வீடு திரும்பினான் என்றாலும், ஆகவமல்லன் ஆசை அடங்கினானல்லன். சோழர் படையைத், துங்கபத்திரையாற்றை விட்டுத் துரத்தும்வரை அவன் கண்கள் துங்கா வாயின. அதனால், மீண்டும் ஒரு பெரும் படையைத் திரட்டிக் கொண்டு வந்து சேர்ந்தான். கிருஷ்ணையும் துங்கபத்திரையும் கூடும் இடமாகிய கூடல் சங்கமத்தில் சோழர் படையை எதிர்த்துப் போரிட்டான்; இம்முறை ஆகவமல்லன் மக்கள இருவரும் தந்தைக்குத் துணையாக வந்திருந்தனர்; பெரும்போர் நடைபெற்றது; முடிவில் ஆகவமல்லன் படைத் தலைவர் அறுவர் கொல்லப்பட்டனர்; அவன் மக்கள் இருவரும் எங்கோ ஒடி ஒளிந்து கொண்டனர், ஆகவமல்லனும் புறங்காட்டினான். வீரராசேந்திரன், ஆகவமல்லன் அரணை வளைத்துக்கொண்டு அவன் மனைவியரையும், புட்பகப்பிடி என்னும் பெயர்பூண்ட பட்டத்து யானை யையும், வராகக் கொடியையும், எண்ணற்ற களிறுகளையும், குதிரைகளையும், கணக்கற்ற பொருள்களையும் கைப்பற்றிக் கொண்டு கங்கை கொண்ட சோழபுரம் அடைந்து வெற்றி விழாக் கொண்டாடினான்.  வீரராசேந்திரன் சிந்தையும் செயலும் வடவெல்லைப் போர்களிலேயே சென்றுள்ளன என்பதை உணர்ந்த, சேர பாண்டிய சிற்றரசர் சிலர், அந்நாடுகளில், அவன் ஆட்சியை எதிர்த்துக் குழப்பம் விளைவித்தனர். வட நாட்டுப் பெரும் போர்களில் ஈடுபட்டிருக்கும் அந்நிலையில், தென்னாடு அமைதி இழப்பது, ஆட்சியின் அரண் அழிவது போலாம் என அறிந்த வீரராசேந்திரன், அக் குழப்பத்திற்குக் காரணமாயிருந்த குறுநிலத் தலைவர்களைக் கொன்றான். அவர்க்குத் துணையாய் நின்று போரிட்ட படைகளையும் கைப்பற்றிக் கொண்டான். உயிர் பிழைத்த ஒரு சிலரும், அவன் ஆணைக்கு அடங்கி வாழ முன்வந்து, அவன் விரும்பும் திறை செலுத்தினார். தமிழ் நாட்டில் இது நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே, ஆகவமல்லன் விடுத்த அறைகூவல் வந்து ஒலித்தது. இம்முறை, மேலைச்சாளுக்கியப் பெரும்படைக்கு, கங்கர்களும், நுளம்பர்களும், காடவர்களும், வைதும்பர்களும் துணையாக வந்து நின்றார்கள். ஆனால், அந்தோ! அவர்கள் ஆரவாரமெல்லாம் வீரராசேந்திரன் களம்புகும் வரையே காட்சி அளித்தன. அவன் களம் புகுந்தான்; ஆகவமல்லன் படைகட்குத் தலைமை தாங்கி நின்ற படைத்தலைவர் அறுவரும்.அப்போதேமாண்டனர்:துணை வந்த அந்நான்கு நாட்டவரும் உயிர் இழந்தனர்; பல நாட்டார் துணை செய்யப் பெரும்படையோடு களம் புகுந்தும் வெற்றி பெறமாட்டாது வீடு திரும்பினான் ஆகவமல்லன். ஆகவமல்லன் அரண்மிக்க இடம் புகுந்து ஒளிந்து கொண்டான்; அவன் மனமோ, அவமானத்தால் குன்றி விட்டது: வீரராசேந்திரனை வெற்றிக்கொள்ளாது வாழ்வதைக் காட்டிலும், களத்தில் வீழ்ந்து மண்ணாவதே மேல் எனக் கருதிற்று; உடனே, பண்டு போரிட்டுத் தோற்ற கூடல் சங்கமப் போர்க்களத்திற்குத் தான் வருவதாகவும், அங்குத் தன்னோடு போரிட வரும்படியும், அவ்வாறு வராதவர் போரில் புறமுதுகு இட்டவராகவும், புரட்ட ராகவும் கருதிப் பழிக்கப்படுவர் என்றும், வீரராசேந்திரனுக்கு ஒலை போக்கினான். ஒலைவரப் பெற்ற சோழர் குலப் பெருவீரன், உள்ள மகிழ்ச்சியால், உருண்டு திரண்ட தோள்கள் இரண்டும் பருத்துக்காட்ட விரைந்து களம் அடைந்து, ஆகவமல்லன் வரவுக்காகக் காத்துக் கிட ந்தான். ஆனால் ஒலைபோக்கிய ஆகவமல்லனால் கூடல் சங்கமக் களத்திற்கு வர இயலவில்லை. அவன் உடல்நலம் திடுமெனக்குன்றிவிட்டது; வாடாவெப்புநோய் அவனைப் பற்றி வாட்டிற்று, மருத்துவர் பலமுயன்றும் தணிக்க மாட்டா அக்கொடு நோயால், தாங்கலாகாத துன்பம் அடைந்த ஆகவமல்லன், துங்கபத்திரை ஆற்றில் வீழ்ந்து உயிர் துறந்து போனான்; ஆகவமல்லனுக்கு நேர்ந்த இக் கதியை வீரராசேந்திரன் அறியான்; அதனால் ஒரு திங்கள் வரையும் ஆங்குக் காத்துக்கிடந்த அவன் ஆகவமல்லன் ஆட்சிக்கு அடங்கிய அவன் சிற்றரசர் பலரை வென்று துரத்தினான்; அவர் நாடுகளை எரியூட்டினான்; துங்க பத்திரைய்ாற்றின் கரையில் வெற்றித்துண் ஒன்றை நாட்டினான். ஆகவமல்லனைப் போன்ற சிலை ஒன்று செய்து, அவனும், அவன் மக்களும் தன் பால் ஐந்துமுறை தோற்ற செய்தி பொறிக்கப் பெற்ற ஒரு பலகையை அதன் மார்பில் மாட்டி மானபங்கம் செய்தான். வீரராசேந்திரன், இவ்வாறு கூடல்சங்கமக் களத்தில் வெற்றிக் களியாட்டங்களில் மூழ்கியிருந்த அதேநேரத்தில், ஆகவமல்லனுடைய இரண்டாம் மக னாகிய விக்கிரமாதித்தன் கீழைச் சாளுக்கியரை வென்று வேங்கி நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான்: அஃதறிந்த விர ராசேந்திரன், கூடல் சங்கமத்திலிருந்தே வேங்கிநாடு நோக்கிப் புறப்பட்டான்; இடையில் ஆங்காங்கே வந்தெதிர்த்த மேலைச்சாளுக்கியப் படைகள் அனைத்தையும் வெற்றி கொண்டவாறே, கோதாவரியைத் தாண்டி, கலிங்கநாட்டைக் கடந்து, சக்கரக்கோட்டத்திற்கு அப்பாலும் சென்று,வேங்கிநாட்டை மீளவும் வெற்றி கொண்டான், வென்ற வேங்கிநாடடு அரியணையில், மாண்டு போன அந்நாட்டு மன்னனின் இளவலாகிய விசயாதித்தனை அமர்த்தி, ஆங்கு அமைதியை நிலைநாட்டி விட்டுச் சோணாடு திரும்பினான். தாய்நாடு திரும்பிய வீரராசேந்திரன் வாழ்நாள் அமைதியாகக் கழிந்திலது, அவன் தலைநகர் வந்து சேர்வதற்கு முன்னரே, ஈழத்திற்கும், கடாரத்திற்கும் செல்ல வேண்டிய பணிகள் காத்துக் கிடந்தன. ஆட்சி உரிமை பெறும் கருத்தோடு அமர் தொடுத்து எழுந்த ஈழநாட்டரசனைத் தன் படைத்தலைவனை அனுப்பி வெற்றிகொண்டான் வீரராசேந்திரன். தன் ஆட்சி உரிமையைத் தாயத்தார் கைப்பற்றிக்கொள்ளவே. தமிழகம் புகுந்து, தன்பால் அடைக்கலம் புகுந்த கடாரத்தரசனை, அவன் அரியணயில் அமர்த்தும் கருத்துடையனாகிக் கடற்படையோடு கடாரம் சென்று, வெற்றிகொண்டு, வந்த நண்பனை அந்நாட்டு வேந்தனாக்கிவிட்டு, அவ்விழுச்சிறப்போடு வந்து சேர்ந்தான். மேலைச் சாளுக்கிய நாட்டில் ஆகவமல்லன் இறந்த பின்னர், அவன் மூத்தமகன் சோமேசுவரன் என்பான் அரியணை ஏறினான். ஆனால் அவனோ அறநெறி மறந்து ஆட்சி புரியத் தலைப்பட்டான். அதனால் அவன் குடிகள் அவன் ஆட்சியை வெறுத்தனர். அண்ணன் ஆட்சி முறையால், நாடு நலிவெய்துவதைக் கண்ணுற்ற, ஆகவமல்லனின் வீரத்திருமகனாகிய விக்கிரமாதித்தன், அவனுக்கு அறிவுரை பல கூறினான். ஆனால் அதற்குப் பலனாக, அவன் பகைமையைப் பெற்றான். தம்பியோடு தாய் நாட்டைவிட்டு வெளியேறித், துங்கபத்திரை ஆற்றங்கரையில் தங்கியிருந்தான். சிலநாள். மேலைச்சாளுக்கிய மன்னர் களுக்கிடையே உருப்பெற்றஇப்பகைமையை உணர்ந்தான் வீரராசேந்திரன், அதைப் பயன்கொண்டு, அம்மேலைச் சாளுக்கிய நாட்டில் தன் ஆணைசெல் வழி காண்பதில் கருத்தைப் போக்கியிருந்தான். அந்நிலையில், அண்ணன் பகைத்து நிற்கும் இந்நிலையில், அவ்வண்ணன் பகைவர்களுள், பெரும் பகைவனாகிய வீர ராசேந்திரன் நட்பைப் பெறுவது நல்லது என்று விக்கிரமாதித்தனுக்கு அரசியல் நெறி காட்டினான் கடம்பர் குலக் காவலன் சயகேசி. சோணாடு புகுந்து வீர ராசேந்திரனுக்கு, விக்கிரமாதித்தன் விருப்பத்தை அறிவித்தான். அதை எதிர் நோக்கியிருந்த சோணாட்டு மன்னன், தன் மகள் ஒருத்தியை, மேலைச் சாளுக்கிய மரபில் வந்தானுக்கு மணம் முடிக்க மனம் இசைந்தான். இரு குலத்தவரையும் ஒன்று படுத்தும் அப்பெருமணம், அவ்விருநாடுகளுக்கும் எல்லையாக ஒடும் துங்கபத்திரை ஆற்றங்கரையில் இனிது நடைபெற்றது. மணம் முடிந்த மறு கணமே, வீரராசேந்திரன், சோமேசுவரன் மீது போர் தொடுத்து வென்று மேலைச் சாளுக்கிய அரியணையில் சோழர் குல மருமானை அமர்த்தி அகம் மகிழ்த்தான். சோழர்குலப் பேரரசனாகிய இராசராசன் தன் மகளை விமலாதித்தனுக்கு மணம் செய்து தந்து, கீழைச்சாளுக்கியர் உறவினைப் பெற்றுச் சோணாட்டின் வடகிழக்கு எல்லைக் காப்பிற்கு வழி கண்டான் என்றால், அப்பேரரசன் பெயரனாகிய வீர ராசேந்திரன், தன் மகனை விக்கிரமாதித்தனுக்கு மணம் செய்து தந்து, மேலைச் சாளுக்கியர் உறவினைப் பெற்று வடவெல்லைக் காப்பிற்கு வழி கண்டான். வாழ்க அவன் அரசியல் அறிவு! அதிராசேந்திரன் : விசயாலயன் வழி வந்த சோழர் குலத்தவருள் இறுதியாக அரசாண்டவன் இவ்வதிராசேந்திரன். வீர ராசேந்திரன் மகனாகிய இவன் ஆட்சி, ஒரு சில திங்கள் அளவே நடை பெற்றது. அதன் பிறகு, கீழைச் சாளுக்கியர் குலத்தில், சோழர் குலத்து வந்தாளுக்குப் பிறந்து, சோழர் குலக் காவலனாய் நாடாண்ட குலோத்துங்கன், சோணாட்டு அரியணையில் அமர்ந்து விட்டான். சாளுக்கியன், சோழர் அரியணையமர்தல் கரிகாலன் வழி வந்த சோழர் மரபு, கடைச்சங்க காலத்தோடு முடிவுற்றது என்றால், விசயாலயன் வழி வந்த சோழர் மரபு, கி.பி. ஆயிரத்து எழுபதாம் ஆண்டோடு முடிவுற்றது. அவ்வாண்டில் சோழர் அரியணையில் அமர்ந்த குலோத்துங்கன், சோழர் குலத்தில் பிறந்தவனல்லன். கீழைச் சாளுக்கிய மரபைச் சேர்ந்தவனாவன். ஆனால், விசயாலயன் வழி வந்த சோழர் குலப் பேரரசனாகிய முதல் இராசராசன் மகள் குந்தவைப் பிராட்டியார், என்று கீழைச் சாளுக்கியர் குலத்தில் குடி புகுந்தனளோ, அன்றே, அச்சாளுக்கிய மரபில் வந்தாரிடையே, சாளுக்கியர் சாயல் மங்கிப் போக, சோழர் சாயல் மணக்கத் தொடங்கி விட்டது. சாளுக்கிய விமலாதித்தனுக்குச் சோழர் குலக் குந்தவையால் பிறந்த கோமகனுக்கு, அச்சாளுக்கியர் குடியின் முன்னோர் பெயரைச் சூட்டாது, இராசராச நரேந்திரன் எனத் தாய்ப் பாட்டனாகிய இராசராசன் பெயரைச் சூட்டி, அவனைச் சோழர் குலத்தவனாகவே மதித்தார்கள் அக்கால மன்னர்களும், மக்களும். இம்மரபு மாற்றம், கங்கையும் கடாரமும் கொண்ட இராசேந்திர சோழ தேவன் மகள் அம்மங்கை தேவியார், அத்தை குந்தவையின் மகன் இராசராச நரேந்திரனை மணங் கொண்டமையால், மேலும் வலுப் பெற்று விட்டது. அவ்விராசராச நரேந்திர சாளுக்கியனுக்கும், சோழர் குல அம்மங்கை தேவியர்க்கும் பிறந்து, பிற்காலத்தில் சோழர் அரியணையில் அமருங்கால், குலோத்துங்கன் என்னும் பட்டப் பெயர் பூண்டவனுக்குப் பிறந்த போது, இராசேந்திரன் எனத் தாய்ப் பாட்டன் பெயர் சூட்டப்பட்டதே யல்லால், விமலாதித்தன் எனத் தந்தையை ஈன்ற பாட்டன் பெயர் சூட்டப்படவில்லை. இந் நிகழ்ச்சிகளால், குந்தவையை மணங் கொண்ட அந்நாள் தொட்டே, சாளுக்கியர் தங்களைச் சோழர் குலத்தவராகவே கருதிவிட்டனர் என்பது புலனாதல் அறிக. மேலும், சோழர் குலக் கன்னியர்க்குப் பிறந்த சாளுக்கிய இளவரசர்கள், வடிவாலும் சோழர்களாகவே விளங்கினார்கள். குலோத்துங்கன் பிறந்த போது அவனைத் தாமரை மலர் போன்ற தம் கைகளில் ஏந்திக் கண்ணுற்ற, அவன் தாயை ஈன்ற பாட்டி, கங்கை கொண்ட சோழன் மாதேவி பெயரனின் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றையும் உற்று நோக்கி, அவன் வடிவால் தன் கணவனை முழுவதும் ஒத்திருப்பது கண்டு, உளம் மகிழ்ந்து, “இவன் திங்களின் வழி வந்த, சாளுக்கியர் குடியில் பிறந்தவனேனும் ஞாயிற்றின் வழி வந்தோராகிய எம் சோழர் குலத்தவனே ஆவன்; சாளுக்கியனேனும், சோணாடாளும் உரிமையுடையான்” என உரிமை கொண்டாடினாள் என்றும், சாளுக்கிய குல தேவி அம்மங்கை வயிற்றில் வந்தவனேனும், சோழர் குல தேவி, அவனைத் தன் மகனாகவே ஆக்கிக் கொண்டாள் என்றும் கலிங்கத்துப் பரணி கூறுகிறது. அலர் மழைபோல் மழைபொழிய, அதுகண்டு கங்கை கொண்ட சோழன்தேவி, குலமகள்தன் குலமகனைக் கோகனக மலர்க்கையால் எடுத்துக்கொண்டே, அவனியர்க்குப் புரந்தரனாம் அடையாளம் அவயவத்தின் அடைவே நோக்கி “இவன் எமக்கு மகன்ஆகி இரவிகுலம் பரிக்கத் தகுவன்” என்றே. மக்கள் தாய் முறைப்படி, தந்தையின் மரபையே தன்னுடைய மரபாகக் கொள்ள வேண்டிய குலோத்துங்கன், மேற்கூறிய காரணங்களால், தன்னைத் தந்தை பிறந்த சாளுக்கிய மரபினனாகக் கருதாது, தன் தாயும், தன் தாய்வழி முதல் தலைமுறைப் பாட்டியும் , இரண்டாந் தலைமுறைப் பாட்டியும் பிறந்த சோழர் மரபினனாகவே கருதினான்.மேலும், தான் பிறந்தது.சோழ மண்டலத்தில், தாய்ப்பாட்டன் அரண்மனையில் ஆதலாலும், தன் இளமைப் பருவத்தின் பெரும் பகுதி சோணாட்டிலேயே கழிந்து விட்டமையாலும், தமிழ் மொழியையே தாய் மொழியாகக் கொண்டு, தமிழ் மக்களின் பழக்க வழக்கங்களிலேயே. பயின்று விட்டமையாலும் தன்னை முழுக்க முழுக்கச் சோழர் குலத்தவனாக கருதி விட்டான்; அவன் கருத்தை வலியுறுத்தும் வகையில், சோணாட்டு அரியணையில் அமர்ந்து ஐம்பது ஆண்டுகள், அந்நாடாளும் பெரு வாய்ப்பும் அவனுக்குக் கிடைத்து. ஆகவே, சாளுக்கியர் குலக்குரிசிலைச் சோணாட்டுக் கோமகனாகவே கொண்டார்கள் வரலாற்று நூலாசிரியர்கள். நாமும் அவ்வாறே கொள்வோமாக. கங்கை கொண்ட சோழபுரத்தில், சோழர் அரண்மனையில் பிறந்த குலோத்துங்கன், தன்னை ஈன்ற தாய்ப் பாட்டி, கங்கை கொண்ட சோழன் மாதேவி பேரன்பு காட்டி வளர்க்க வளர்ந்து பிள்ளைப் பருவம் எய்தினான்; பேரரசு நடாத்தும் ஒரு பேரரசர் அரண்மனையில் வளர்ந்தமையால், அவர் பண்புகள் அனைத்தும் அவன் உடைமையாயின; இவன் மாமன்மார்களாகிய இராசாதிராசன், இரண்டாம் இராசேந்திரன், வீர ராசேந்திரன் மூவரும் தன்னேரில்லாப் பெருவீரர்களாவர், அவர்கள் கண்ட போர்க்களங்களும், பெற்ற வெற்றிகளும் பற்பல. அவர்களிடையே வளர்ந்த குலோத்துங்கனும் ஆண்மை ஆற்றல்களில் அவரொப்பச் சிறந்து விளங்கினான். தங்கள் உடன்பிறந்தாளின் ஒரே மகனாகிய குலோத்துங்கனை அவர்கள் மூவரும் தத்தம் மக்களுள் ஒருவனாகவே மதித்து, மறம் மானம் முதலாம், மன்னர் மன்னர்க்கு மாண்பு தரும் பண்புகளை ஊட்டி வளர்த்தார்கள். தாங்கள் சென்ற போர்க் களங்களுக்கு அவனையும் உட்கொண்டு சென்று போர் முறைகளை யெல்லாம் புகட்டிப் பெருவீரனாக்கினார்கள். இம் முறைகளால், குலோத்துங்கனும் அரசர்க்கு அமையவேண்டிய அத்தனை பண்புகளையும் ஆரப் பெற்றான்; அம்மட்டோ தன் தாய்ப்பாட்டன் இராசேந்திரன் பெயரையே தன் பெயராக் கொண்ட தன் இரண்டாம் மாமன், இரண்டாம் இராசேந்திரனின் ஒரே மகள் மதுராந்தகியை மணந்து, தன் முன்னோர் முறைப்படியே, சோழர்குல மருமக னாகியும் மாண்புற்றான். இந்நிலையில், வேங்கி நாட்டில் அரசோச்சியிருந்த, குலோத்துங்கன் தந்தை, இராசராசசேந்திரன், தன் மகன் மறமாண்புகளில் சிறந்து, மண்ணாளும் தகுதி பெற்று விளங்குவதைக் கண்டான். அவனுக்கு இளங்கோப் பட்டம் சூட்டி மகிழ மனங்கொண்டான். சோணாட்டு அரண்மனையில் வாழ்ந்திருந்த அவனை வேங்கிநாட்டிற்கு வரவழைத்து, தங்கள் நாட்டு வழக்கப்படி, விஷ்ணு வர்த்தனன் என்னும் பட்டப்பெயர் சூட்டி இளவரசனாக்கினான். குலோத்துங்கன் வேங்கி நாட்டு இளங்கோவாகம் பட்டம் சூட்டப்பெற்ற சின்னாட்களுக்கெல்லாம், அவன் தந்தை இராசராச நரேந்திரன் இறந்துவிட்டான்;முறைப் படி, வேங்கி நாட்டு ஆட்சியுரிமை, குலோத்துங்கனுக்கே உரியதாகவும், அதை, தான் அடைய வேண்டும் என்ற ஆசை, அவன் சிற்றப்பன் விசயாதித்தனுக்கு இருப்பதை அவன் உணர்ந்தான். ஆண்டு முதிர்ந்த அவன் ஆசையை நிறைவேற்றி தன் வைப்பது கடன் என்ற நல் உள்ளம் குலோத்துங்கனுக்கும் இருந்தது. மேலும், பரந்தகன்ற பெரிய நாட்டில் பேரரசு செலுத்தும் சோழர்குலச் சிற்றரசர்களுக்கு நிகராகப் படைப்பயிற்சி பெற்றிருக்கும் தன்னால், அப்பேரரசிற்கு அடங்கிய சிறிய நாடாகிய வேங்கி நாட்டு அரியணையில், தன் ஆற்றலையும் ஆண்மையையும் அடக்கிக்கொண்டு அமர்ந்திருத்தல் இயலாது என்பதையும் உணர்ந்தான்; பருத்த பெரிய அவன் தோளாற்றல், களம் பல புகுந்து வெற்றி பல பெறும் வீரவாழ்வு பெறத் துடித்துக்கொண்டிருந்தது; மேலும், தன் மாமன் இரண்டாம் இராசேந்திரன், மேலைச் சாளுக்கியரோடு, துங்கபத்திரை ஆற்றங்கரையில் ஒயாப்போர் மேற்கொண்டிருக்கும் இந்நிலையில், தன் சிற்றப்பனோடு பகைகொண்டு போரிடுவது போர் முறையாகாது என்பதையும் அவன் அறிந்திருந்தான். இந்நிலைமைகளையெல்லாம் எண்ணிப்பார்த்து, வேங்கி நாட்டு அரியணையில் விசயாதித்தனே இருந்து ஆளட்டும் என விடுத்து, வெற்றித் திருவுலா விரும்பி வேங்கி நாடு விட்டு வெளியேறினான். போர் விரும்பிப் புறப்பட்ட குலோத்துங்கன், நேரே சக்கர்க்கோட்டம் சென்றான், சக்கரக்கோட்டம், இன்றைய மத்திய மாகாணத்தில் உள்ள வத்ச நாட்டில் இருந்தது. இக்காலை, அது சித்ரகூட் எனும் பெயர் பூண்டுளது; அந்நாட்டை, தாராவர்ஷன் என்பான் அக்காலை ஆண்டு கொண்டிருந்தான்: வைரச் சுரங்கங்களும், வேழங்களும் மலிந்த வயிராகரம் எனும் நிலமும் அவன் ஆட்சிக்கீழ் இருந்தது. சக்கரக்கோட்டம் புகுந்த குலோத்துங்கன், வத்தவர்குல வேந்தன் தாராவர்ஷனை வென்றான்; அந்நாட்டை எரியூட்டி அழித்தான். தோற்ற வேந்தன் தாராவர்ஷன் வந்து அடிபணிந்தான். வ்யிராகரத்து விழுநிதியாகிய வ்ழங்கள் எண்ணற்றனவற்றயும் வகை வகையான பிற வளங்களையும் திறையாகத் தந்தான்; வத்தவநாட்டில் வெற்றித்திருமகளை மணந்து, செல்வத் திருமகளோடு வேறு நாடு நோக்கிச் சென்றான் குலோத்துங்கன்; குலோத்துங்கன் பெற்ற இக்கன்னிப், போர் வெற்றியைக் கலிங்கத்துப் பரணியும், அவன் மெய்க் கீர்த்திகளும் புகழ்ந்து பாராட்டுகின்றன. அம்மெய்க் கீர்த்திகளுள் ஒன்று இது: . **“விளங்கு சயமகளை இளங்கோப் பருவத்துச்** சக்கரக்கோட்டத்து விக்ரமத்தொழிலால் புதுமணம் புணர்ந்து, மதவரையீட்டம் **வயிராகரத்து வாரி.“** குலோத்துங்கன், இவ்வாறு வெற்றிப்புகழ் வேட்கை மிக்கு வீரத்திருவுலா மேற்கொண்டிருக்கும் காலத்தில், சோணாட்டில், மனைவி மதுராந்தகியின் தந்தை, இரண்டாம் இராசேந்திரன் இறக்க, அவனுக்குப்பின் அரியணையேறிய தன் இளையமாமன் வீரராசேந்திரனும் மேலைச் சாளுக்கியரோடு மாளாப்போர் மேற்கொண்டிருந்தான்; அப்போரின் ஒரு பகுதியாய், அம்மேலைச் சாளுக்கிய மன்னனின் மக்களுள் ஒருவனாகிய விக்கிரமாதித்தன், வேங்கிநாடு புகுந்து, விசயாதித்தனைத் துரத்திவிட்டு, அந்நாட்டின் ஆட்சியைத் தன்னுடைய தாக்கிக்கொண்டிருந்தான். அஃதறிந்த வீரராசேந்திரன் வேங்கிநாட்டின் மீட்சியை முன்னித் துங்கபத்திரைக் கரையை விட்டு புறப்பட்டுவிட்டான்; மாமனுக்குத் துணை புரிய வேண்டி இல்லையாயினும் தன்நாட்டை மீட்க வேண்டியாவது வேங்கிநாடு நோக்கி விரைந்து செல்லவேண்டுவது தன் தலையாயகடன் என்பதை அவன் உணர்ந்தான், உடனே, அவனும் அவன் படையும், வேங்கிநாடு நோக்கிச்செல்லும் வீரராசேந்திரன் படை.யோடு சேர்ந்து கொண்டனர், இடைவழியில் வந்தெதிர்த்த, மேலைச்சாளுக்கிய தண்டத் தலைவர் மூவரையும், விசயவாடையில் வெம்போர்புரிந்து வென்று துரத்தினான். பின்னர்க் கோதாவிரியாற்றையும்ஏழ்கலிங்க நாட்டையும், சக்கரக் கோட்டத்தையும் விரைந்து கடந்து வேங்கிநாடு புகுந்து,விக்கிரமாதித்தனை விரட்டியடித்தான்; அரசிழந்த துன்பத்தோடு, மகனை இழந்த துன்பமும் வருத்த, வன்மை இழந்து கிடக்கும் சிறிய தந்தைபால், குலோத்துங்கனுக்குப் பற்றும் பாசமும் பெருகவே, வென்ற வேங்கிநாட்டு அரியணையில், விசயாதித்தனையே மீண்டும் அமர்த்தினான்:மாமன் வீர ராசேந்திரனும் மருமகன் விருப்பத்திற்கு மறுக்காது மனம் ஒப்பினான். தனக்குரிய நாட்டில் தன் சிறிய தந்தையை இருந்தாள விடுத்து, வீரராசேந்திரனோடு சோணாடு சென்ற குலோத்துங்கனை. ஆங்கே பெரிய வாய்ப்பு ஒன்று வரவேற்று நின்றது. தன்னினும் வலிய பகைவர் தன் நாட்டைக் கைப்பற்றிக்கொள்ள அரசிழந்த கடாரத்து அரசன் ஒருவன் சோணாட்டு அரசவையில் அடைக்கலம் புகுந்தான்; அவன் பகைவரை வென்று, அவர் கவர்ந்த கடார நாட்டு ஆட்சியுரிமையைத் தன்பால் அடைக்கலம் புகுந்தானுக்கு அளித்துவரும் பெரும் பணியை, வீரராசேந்திரன் குலோத்துங்க இளங்கோவிடம் ஒப்படைத்தான். தன் ஆற்றலைக் கடல்கடந்த நாடுகளில் வாழ் வாரும் அறிந்து பாராட்டத்தக்க ஒரு பெரும் பேற்றினைத் தனக்களித்த மாமன் வீரராசேந்திரனை வாழ்த்தி வணங்கி விடை கொண்டு, வங்கப்படை துணை செய்யக் கடாரம் நோக்கிப் புறப்பட்டான், கடாரம் புகுந்த குலோத்துங்கன் தன் நட்பரசன், நாட்டைவிட்டு ஓடிவரப் ப்ண்ணிய அவன் பகைவர்களை வென்று துரத்தினான்; வீரராசேந்திரன் பணித்தவாறே, அவனைக் கடார நாட்டுக் காவலனாக்கி ஏற்று வந்த கடமையை இனிது நிறைவேற்றினான். அந்நாள் முதல், அக்கடார நாட்டுக் காவலன், குலோத்துங்கனின் உற்ற நண்பனாயினான்; சோழர் அரியணையில் அமர்ந்திருந்த காலத்தில், அவ்வரசன் வேண்டுகோளை ஏற்று, நாகப்பட்டினத்தில் முதல் இராசராசன் காலத்தில், கடாரத்தரசன் சமைத்த, இராசராசப் பெரும்பள்ளிக்குச் சோணாட்டு அரசர்கள் அக்காலம்முதல் இறையிலி ஆக்கிவிட்ட ஊர்களைச் செப்பேடுகளில் வரைந்து வழங்கினான்: குலோத்துங்கன் தனக்கு அரச வாழ்வளித்தும், தன் முன்னோர் அமைத்த ஆலயத்தின் அறத்தைக் காத்தும் உற்றது புரிந்து உயர்ந்தோனாகிய குலோத்துங்கனுக்கு நன்றி செலுத்தும் வகையில், சோழகுல வல்லிப்பட்டினம் எனும் சிறப்புப் பெயர் வாய்ந்த அந்நாகப்பட்டினத்தில், குலோத்துங்கன் பெயரால் இராசேந்திர சோழப் பெரும்பள்ளி என்ற புதிய புத்தவிகாரம் ஒன்றைக் கட்டிவைத்தான் கடாரத் தரசன். கடார நாட்டில் வெற்றிக் கொடி நாட்டிய குலோத்துங்கனின் பெருமை, அக்கடாரத்திற்கு அண்மையில் இருந்த நாடுகளிலும் சென்று பரவிற்று. சயாம் நாட்டிற்குக் கிழக்கேயுள்ளதும், இக்காலத்தில் கம்போடியா என்று அழைக்கப் பெறுவதுமாகிய காம்போச நாட்டின் காவலன், குலோத்துங்கனைத் தன்னாட்டிற்கு அழைத்துச் சிறப்புச் செய்தான்; கன்னித் தமிழ்நாட்டிற்கும் காம்போச நாட்டிற்கும் ஏற்பட்ட இந்நட்புறவின் நினைவுச்சின்ன பாய்த்தன்நாட்டு அரும்பொருளாகிய, கல் ஒன்றை காம்போச நாட்டான், குலோத்துங்கனுக்கு அளித்தான்; அவன் அன்போடு அளித்த அக்கல்லைக் குலோத்துங்கன் தன் குல முதற்கடவுள் கோயில் கொண்டிருக்கும் தில்லையில், சிற்றம்பலத்தைச் சார்ந்திருக்கும் திருவெதிரம்பத்தில் பலரும் காணும் இடத்தில் பதித்துவைத்துப் பெருமை செய்தான். கடல்கடந்த நாடுகளில் பெற்ற இவ்வெற்றிச் சிறப்புகள் அளித்த கரைகாணா இன்பவெள்ளத்தில் மிதந்தவாறே தாய்நாடாம் தமிழ்நாடு வந்து சேர்ந்தான். குலோத்துங்கன். குலோத்துங்கன் கடாரத்தில் பெற்ற வெற்றி குறித்து கங்கைகொண்ட சோழபுரத்தில் விழாக்கொண் டாடினான் வீரராசேந்திரன். சோணாட்டுத் தலைநகரில் அலகாலம் வாழ்ந்திருந்த குலோத்துங்கன், ஆங்குத் தான் ஆற்றவேண்டிய அரும்பணி எதுவும் இல்லையாகவே வெற்றித் திருமகள் பால் மீண்டும் வேட்கை கொண்டு வீரத்திருவுலாவர வடநாடு நோக்கிச் சென்றுவிட்டான். குலோத்துங்கன், வடதிசை நாடுகளில் வாழ்ந்திருந்த காலை, சோனர்ட்டில் வீரராசேந்திரன் இறந்தவிட்டான். அவனுக்குப்பின், அவன் மகன் அதிராசேந்திரன் சோழர் அரியணையில் அமர்ந்தான்; ஆனால், ஆட்சியுரிமையை அவன் தானாகவே கைப்பற்றிக் கொண்டானல்லன்; மேலைச் சாளுக்கிய விக்கிரமாதித்தனின் துணை பெற்றே அவன் அதை அடைந்தான்; சோணாட்டு அரியணையில், அந்நாட்டை ஆண்டவன் மகன் அமர, அச்சோழர்க்குலப் பகைவேந்தனாகிய விக்கிரமாதித்தனின் துணைவேண்டியிருந்தமைக்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. தலைமுறை தலைமுறையாக நடைபெற்றும், சோணாட்டுப் படையின் பெரும்பகுதியை அக்களத்தில் அழியவிட்டும் முடிவுகாணாப்பெரும் போரால் விளங்கிய மேலைச் சாளுக்கிய போருக்கு ஒரு முடிவுகாண விரும்பிய வீரராசேந்திரன், அச்சாளுக்கியர்குல இளவரசனாகிய விக்கிரமாதித்தனுக்குத் தன் மகள் ஒருத்தியை மணஞ் செய்துவைத்தான்; ஆகவே, அவ்விக்கிரமாதித்தனுக்குத் தன் மைத்துனன் அதிராசேந்திரனை அரியணையில் அமர்த்துவதில் ஆர்வம் இருந்தது. அதிராசேந்திரன் அரியனை அமரச் சோணாட்டில் தடையெழாதிருந்திருப்பின், அதற்கு விக்கிரமாதித்தன் துணைவேண்டியிருக்காது, ஆங்குத் தடையெழுந்தமையினாலேயே, விக்கிரமாதித்தன் வந்து துணைபுரிய வேண்டியதாயிற்று. அதிராசேந்திரன் ஆட்சிபெற முடியாதவாறு முன்னின்று தடைசெய்தவர் யாவர் என்பது குறித்துச் சோழர் கல்வெட்டுக்களோ, அவர் மெய்க்கீர்த்திகளோ, விக்கிரமாதித்தன் அவைக் களப் புலவராகிய பில்ஹணர் எழுதிய விக்கிரமாதித்தன் வரலாற்று நூலோ ஏதும் கூறவில்லை. ஆனால், வீரராசேந்திரனுக்கு முன் சோணாடு ஆண்ட அவன் முன்னோனாகிய இரண்டாம் இராசேந்திரனுக்கு ஆண் மக்கள் அறுவர் இருந்தனர்; சோணாட்டின் வீர வாழ்விற்குத் துணையாய் அவர்களும் போர் பல புரிந்துள்ளனர்; வெற்றிகொண்ட நாடுகளின் ஆட்சிப் பொறுப்பை, இராசேந்திரன் அவர்கள் பால் அளித்திருந்தான் என்று அக்காலக் கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. மூத்தோன் வழிவந்த அவர்கள் இருக்க, இளையோன் வழி வந்த அதிராசேந்திரன் ஆட்சிப்பீடம் ஏறுவது அரசியல் அறமாகாது என்ற எண்ணம் அவர்கள் உள்ளத்தில் எழ, அதனால் தாய் உரிமைப் போர் தலைதூக்க விக்கிரமாதித்தன் இடைபுகுந்து, அவரை அடக்கி, அதிராசேந்திரனை அரியணையில் அமர்த்தி இருத்தல் கூடும்; அல்லது சோணாட்டில் தாய் உரிமைப்போர் எதுவும் தோன்றாதிருக்கவும், மூத்தோன் வழி மக்கள் அறுவர் இருப்பதால், அது தோன்றிவிடுமோ என்ற அச்சத்தால் அரியணையேறும் மைத்துனனுக்குத் துணைபுரியச் சோணாட்டிற்கு விக்கிரமாதித்தன் வந்திருத்தலும் கூடும். தன் தோள்வலியை வடநாட்டு வேந்தரெல்லாம் கண்டு வியத்தல் வேண்டும் என்பதில் இருந்த குலோத்துங்கன் வேட்கை, சோணாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளுக்குச் செல்ல வொட்டாது தடுத்துவிட்டது போலும்; அவன் ஆங்குச் சென்றிலன்; ஆனால், அவன் அப்போது சென்றிலனேனும், அது நிகழ்ந்த சின்னாட்களுக்கெல்லாம் செல்ல வேண்டிய நிலைமை தானாகவே வந்தடைந்தது. மைத்துனன் மேலைச்சாளுக்கியப் பெருவீரன் விக்கிரமாதித்தன் துணையால் சோணாட்டு மன்னனாகிய முடிபுனைந்த அதிராசேந்திரன், சோணாட்டு அரியணையில் ஒரு சில திங்களே வீற்றிருந்தான்; அவன் ஆட்சி ஆறு திங்களே நடைபெற்றது: ஆறாம் திங்களில் அவன் இறந்துவிட்டான். அவன் இறந்தது குறித்துப் பலர் பற்பல முடிவை மேற்கொண்டுள்ளனர்; வடமொழிப் புலவர் பில்ஹணரின் விக்கிரமாதித்தன் வரலாற்று நூல், அதிராசேந்திரன் சோணாட்டில் நிகழ்ந்த உள்நாட்டுக் கலகத்தில் கொல்லப்பட்டான் என்று கூறுகிறது. உள் நாட்டுக் குழப்பம் ஒரு புறமும், அந்நாள்வரை சோழர் ஆணைக்கு அடங்கியிருந்த குறுநிலத் தலைவர்களின் கலகம் ஒருபுறமும் தலைதூக்கச் சோணாட்டில் அமைதி குலைந்துவிட்டது: அறநெறி ஆட்சி அழிந்துவிட்டது என்று கல்வெட்டுக்களும் கலிங்கத்துப் பரணியும் கூறுவதால், வடமொழிப் புலவர் கூற்றில் உண்மையுளது என்று சில வரலாற்றாசிரியர் வாதிக்கின்றனர். அதிராசேந்திரனின் பெரிய தந்தையாகிய இரண்டாம் இராசேந்திரனுக்கு மக்கள் அறுவர் இருந்தனர்; அமர் புரிவதிலும், ஆட்சி நடத்துவதிலும் அவர்கள் வல்லவர் என்ற வரலாற்று உண்மை, அவ்வாதத்திற்குத் துணை புரிவதாகவும் உளது. சோழர்குலக் கடவுளாம் அம்பலவாணன் அருள் நடம் புரியும் தில்லையில், சித்திரக்கூடத்தில் இருந்த திருமாலின் திருவுருவைப் பெயர்த்துக் கடலில் எறிந்தும், திருமால் அடியார்களைத் துன்புறுத்தியும் வைணவ மதத்தை வேர் அறுக்கப் பண்ணினான் அதிராசேந்திரன்; வைணவத்திற்கு அவன் இழைக்கும் கொடுமைகளைக் கண்டு கலங்கிய அம்மத ஆசிரியராகிய இராமாநுசர் தமிழகத்தை விட்டு வெளியேறி மைசூர் நாடு சென்று தலைமறைந்து வாழ்ந்தார்; அக்காலை, அவர் செய்த மாரண மந்திரத்தினாலேயே அதிராசேந்திரன் மாண்டான் என வைணவ நூல்கள் கூறுகின்றன. வடமொழிப் புலவரின் வரலாற்று நூலினும், இவ்வைணவ நூல்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கன என்ற கருத்து சில வரலாற்றாசிரியர்களிடத்தில் வலுப்பெற்று விளங்குகிறது. அதிராசேந்திரன் இறந்தமைக்குச் சோணாட்டில் நிகழ்ந்த உள்நாட்டுக் குழப்பமோ, வைணவமத விரோ தமோ காரணங்கள் ஆகா சோணாட்டு அரியணையில் அமர வேண்டும் மென்ற ஆசையால் குலோத்துங்கனே முன்னின்று கலகத்தீயை மூட்டி அதிராசேந்திரனைக் கொன்றான் என்ற கருத்துடைய வரலாற்றாசிரியர்க்ளும் சிலர் உளர். தமக்குப்பின் நாடாளும் தகுதியுடையான் யாவன் என்பதை நாட்டு மக்களும், நாட்டின் அரசியல் அதிகாரிகளும் நன்குணர்ந்து கொள்ளுதல் வேண்டும் என்ற அரசியல் நெறியை அறிந்து, அவ்வினவரசனுக்குத் தம் ஆட்சிக் காலத்திலேயே இளவரசுப் பட்டம் சூட்டுவதைச் சோழ மன்னர்கள் முறையாக மேற்கொண்டிருந்தனர்: அம்முறைப்படியே. வீரராசேந்திரனும் தன் மகனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டியிருந்தானாதலின், அவன் இறந்த பின், அதிராசேந்திரன் அரியனை அமர்வதை, அந்நாட்டு மக்களும், அரசியல் தலைவர்களும் மனம் உவந்து ஏற்றுக் கொண்டிருப்பாரே யலலது மாறுபட்டிருக்கமாட்டார், மேலும், அதிராசேந்திரன் ஆண்டது ஆறு திங்களே என்றாலும், அக்குறுகியகால ஆட்சியும், அறவழி ஆட்சியாய் அமைதி நிலவும் ஆட்சியாகவே விளங்கிற்று என்பதற்குக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. மேலும் அதிராசேந்திரன் மெய்க் கீர்த்திகள், “வீரமும் தியாகமும் ஆரம் எனப் புனைந்து, மாப்புகழ் மனுவுடன் வளர்த்த கோப்பரகேசரிவர்மரான உடையார் ஶ்ரீ அதிராசேந்திர தேவர்” என அவனை. வாயார வாழ்த்துவதால், அன் தன்னாட்டு மக்களால் பெரிதும் போற்றப்பட்டுப் பெரும்புகழோடு ’அறநெறியில் அரசாண்டிருந்தான் என்பது மெய்ப்பிக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் நோக்கின், அதிராசேந்திரன் அரியனை அமர விக்கிரமாதித்தன் துணைபுரிந்தான்: ஆனால், ஆறு திங்கள் கழித்து அவன் கொல்லப்பட்ட போது வெகு தொலைவில் வாழ்ந்த விக்கிரமாதித்தனால் விரைந்து சென்று துணை புரிய முடியவில்லை என்று கூறும் பில்ஹணர் வரலாற்றுச் செய்தி உண்மை அன்று; அது தன் பாட்டுடைத் தலைவனாகிய விக்கிரமாதித்தனைப் புகழ்ந்து கூறவந்த வெற்றுரையே என்பது புலனாம் எனக் காரணங்கள் காட்டி, அரசியல் கலகக் கூற்றை மறுக்கின்றார்கள் சில வரலாற்றாசிரியர்கள். தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள திருவக்கரைச் சந்திர மெளனீசுவரர் திருக்கோயிலுக்குள் இருந்த வரத ராசப்பெருமாள் கோயில், கருங்கல் கோயிலாகக் கட்டப் பட்ட நிகழ்ச்சி, அதிராசேந்திரன் ஆட்சிக் காலத்திலேயே நடைபெற்றது என்ற செய்தியொன்றே இவன் வைணவ சமயத்தை வெறுப்பவன் அல்லன் மாறாக அதன் வளர்ச்சிக்குத் துணைபுரிபவன் என்ற உண்மையை நிலைநாட்டும். மேலும், இராமாநுசர் அதிராசேந்திரனுக்கு மிக மிகப் பிற்பட்ட காலத்தவர் என்பதற்கும், சித்திரகூடத் திருமால் வடிவத்தைக் கடலில் எறிந்தவன் இரண்டாம் குலோத்துங்கனாவன் என்பதற்கும் நிறைய சான்றுகள் உள. ஆகவே, அதிராசேந்திரன், வைணவ சமய வெறுப்பின் காரணமாகவே கொலை செய்யப்பட்டான் என்பது அடிப்படையற்ற பொய்யல்லது மெய்யாகாது என்று கூறி அதிராசேந்திரனின் அக்குற்றச் சாட்டையும் மறுக்கிறார்கள் அவ்வரலாற்றாசிரியர்கள். சோணாட்டு அரியணைக்கு உரியாரைக் கொன்று விட்டு, அதைத் தான் கைப்பற்றிக்கொள்ள வேண்டும் என்ற கருத்து குலோத்துங்கனுக்கு இருந்திருந்தால், அதிராசேந்திரன் அரியணையேறும் அக்காலத்திலேயே, நாட்டில் கலகத்தியை மூட்டித் தன் கருத்தை நிறைவேற்றிக் கொண்டிருப்பான். குலோத்துங்கனின், தகுதி திறமைகளை அறிந்திருந்த சோணாட்டு மக்களும் அவனுக்குத் துணை புரிந்திருப்பரேயல்லது தடைகூறியிருக்கமாட்டார்கள்; ஆனால் அவன் அப்போது அது செய்திலன்: செய்திருந்தால் அதிராசேந்திரன் உள்நாட்டுக் கலகத்தில் உயிர் துறந்தான் எனக் கூறும் வடமொழிப் புலவர், அக் கலகத்திற்குக் குலோத்துங்கனே காரணமாவன் என்று கூறியிருப்பர்; விக்கிரமாதித்தன் அவைகளத்தில் அமர்ந்து: தம் அரசனைப் புகழ்ந்து பாராட்டியும், அவன் பகைவர்களை இழித்தும் பழித்தும் பாடுவதையே வழக்கமாகக் கொண்ட பில்ஹணர், தம் அரசரின் பெரும் பகைவனாகிய குலோத்துங்கன் செய்த அக்குற்றத்தைக்கூறாது. விட்டிரார்; அவர் அவ்வாறு கூறவில்லை. அது ஒன்றே: அதிராசேந்திரனின் கொலையில் குலோத்துங்கனுக்குப் பங்கில்லை; இவனுக்கு அவன் மீது பகையும் இல்லை என்பதற்குப் போதிய சான்றாகும் எனக்கூறி அக்குற்றச் சாட்டையும் மறத்துரைக்கிறார்கள் அவ்வரலாற்றாசிரியர்கள், நிற்க, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூகூரில் கண்டெடுக்கப்பட்ட அதிராசேந்திரன் காலத்துக் கல்வெட்டொன்று, அவன் கொடிய நோய்வாய்ப்பட்டுத் துன்புற்றான் என்றும், அது தீர்ந்து அவன் உடல்நலம் பெறற்பொருட்டு, அவ்வூர். இறைவன் திருமுன் நாள்தோறும் இருமுறை தேவாரப்பாக்கள் ஒதப்பெற்றன என்றும் கூறுகிறது. அதிராசேந்திரன் அரசியல் குழப்பத்தாலோ, சமயச் சண்டைகளாலோ கொல்லப்பட்டவன் அல்லன்; அவன் நாட்டில் அவன் காலத்தில் அவ்விதக் குழப்பம் எதுவும் இடம் பெறவில்லை; மாறாக அவன் ஆட்சி, மக்கள் மனம் மகிழும் மாட்சிமையுடையதாகவே விளங்கிற்று; அவன் நோயுற்று இயல்பாகவே இறந்துபோனான் என்ற இவ்வுண்மைகள் அனைத்திற்கும் இக்கூர்க் கல்வெட்டு ஒன்றே, குன்றிடை விளக்கென நின்று விளக்கம் தருகிறது, என்று கூறிக் குலோத்துங்கனுக்குக் கொலைக் குற்றப் பழிசூட்டுவாரின் வாயடைத்து விடுவர். அவ்வரலாற்றாசிரியர்கள். அதிராசேந்திரன் எவ்வாறோ இறந்துவிட்டான். அவன் மறைவு இயல்பாக நிகழ்ந்ததோ அல்லது அரசியற் குழப்பத்தின் விளைவாய் அது நேர்ந்ததோ அறியோம்; ஆனால், சோணாடு அரசனை இழந்துவிட்டது. அரசிழந்த நாட்டில் அறம் அழிந்துவிட்டது என்பது மட்டும் உண்மை. அந்தணர் செந்தழல் அவிழ்ந்தது; மனு முறை ஆட்சி மாண்டது, ஆறு சாத்திரங்களும் மாறி மருண்டன; மறையொலி மங்கிற்று; உள்ளத்தான் ஒன்றி ஒரிடத்தே வாழ்ந்த பல சாதி மக்களும் பகை மிகுந்து போரிட்டு மடியலாயினர்; மக்கள் தங்கள் தங்களுக்கு உரிய ஒழுக்க நெறிகளைக் கைவிட்டுத் தகாவொழுக்கங்களைத் தலைமேற்கொண்டனர்; குற்றம் புரிவதில் சோணாட்டார் ஒருவரையொருவர் மிஞ்சினர்; கோயில்களில், சிறப்பும் பூசையும் சீர் குலைந்தன, செயல் இழந்தன; காரிகையரின் கற்பு நெறி கெட்டழிந்தது; ஊர்களைச் சுற்றி அமைந்த அரண்களும் அழிந்தன; உள்ளத்திற்கு அரண் அளிக்கும் அருங்குணங்களும் அழிவுற்றன; சோணாட்டின் இக்கொடுங்காட்சியைப் படம் பிடித்துக் காட்டுகிறது கலிங்கத்துப் பரணி, காணக் கூசும் அக்காட்சியை நீங்களும் காணுங்கள்: “மறையவர் வேள்விகுன்றி, மனுநெறி அனைத்தும்மாறித் துறைகள் ஓர் ஆறும் மாறிச், சுருதியும் முழக்கம் ஓய்ந்தே; சாதிகள் ஒன்றோடொன்று தலைதடுமாறி, யாரும் ஒதியநெறியின் நில்லாது ஒழுக்கமும் மறந்துபோயே; ஒருவரை ஒருவர் கைம்மிக்கு உம்பர்தம் கோயில்சாம்பி அரிவையர் கற்பின்மாறி, அரண்களும் அழிய ஆங்கே.” தன்னைப் போற்றி வளர்த்த பெருநாடு, தன் தாயை ஈன்ற திருநாடு அரசிழந்து அல்லல் உறுகிறது என்பதைக் கேட்டான் குலோத்துங்கன்; இருநூறு ஆண்டுகளாக இறவாப் பெருநிறையில் வாழ்ந்த ஒரு பேரரசு வீழ்ந்து போவதை அவனால் வாளா பார்த்திருக்க முடியவில்லை. மேலும் கங்கை கொண்ட சோழனுடைய மகள் வயிற்றுப் எனும் முறையால், அச்சோணாட்டு அரியணையில் அமரும் உரிமை தனக்கு இருப்பதையும் உணர்ந்தான், உடனே வடநாட்டு வாழ்வை வெறுத்து, விரைந்து தென்னகம் வந்து, கங்கைகொண்ட சோழபுரத்தில், சோணாட்டுக் காவலனாய் முடி புனைந்து கொண்டான்; அவனை அவன் இளமைப் பருவம் தொட்டே அறுந்திருந்த சோணாட்டு மக்களும் அவன் ஆட்சித் தலைமையை விரும்பி ஏற்றுக் கொண்டனர்; சாளுக்கியச் சிற்றரசன் சோழர்குலப்பேரரசனாம் பேற்றினைப் பெற்றான்; அவனுக்கு அப்பெரும்பேற்றினை அளித்த சோணாடு, அவன் வரவால் அமைதி நிலவும் நல்வாழ்வையும், அலை கடலுக்கு அப்பாலும் சென்று பரவும் வாழ்வையும் பெற்றுப் பெருமையுற்றது. சோணாட்டு மக்கள் பண்டைப் பெருவாழ்வு மீள மகிழ்ச்சியில் திளைத்தார்கள். எட்டுத்திசைக் கொற்ற வேந்தர்களும் குலோத்துங்கன் குடைநிழற்கீழ் வந்து குவிந்தார்கள். நான் மறைகளும் நன்னெறி நிலவ நாடெங்கும் முழங்கின; சேரன், வீரக்கழல் ஒலிக்கும் குலோத்துங்கன் காலடியில் வந்து சேர்ந்தான்; மதுரை மன்னன் கடலிடைத் தீவுகளுக்குச் சென்று கரந்துறை வாழ்வு மேற்கொண்டான். புலவர்கள் பாடிப் பெறும் பரிசில் பொருள்களைச் சுமக்கமாட்டாது சுமந்து சென்றனர்; பொதிகாளைகள் பகையரசர்கள் வழங்கிய பகுதிப் பொருள்களைச் சுமந்து வரிசை வரிசையாக வந்து சேரலாயின; அவன் ஆணைக்கு அடங்கிய சிற்றரசர் பலர் ஆங்காங்கிருந்து அவன் ஏவல் வழி அரசாளத் தொடங்கினர்; அவன் தோள்கள் ஆட்சிச் சுமை தாங்கும் ஆணவத்தால் பருத்துப் பெருமையுற்றன. “நிழலில் அடைந்தன திசைகள்; நெறியில் அடைந்தன மறைகள்; கழலில் அடைந்தனர் உதியர்; கடலில் அடைந்தனர் செழியர்; பரிசில் சுமந்தன. கவிகள்; புகடு சுமந்தன திறைகள்; அரசு சுமந்தன இறைகள்; அவனி சுமந்தன புயமும்.” குலோத்துங்கன் கொற்றம் வடக்கே வேங்கிநாடு முதல், தெற்கே கடல் கடந்த ஈழ நாடு வரை பரவியிருந்த ஒரு பேரரசைக் கட்டிக் காக்கும் பொறுப்பு, கொற்றம் மிக்க குலோத்துங்கனுக்கு அரசியல் சுமையாகத் தோன்றவில்லை; குலோத்துங்கன் மூவேந்தர் குடியில் வந்தவனல்லன்; தமிழ்நாட்டில் பிறந்து, தமிழர்களின் பழக்க வழக்கங்களை மேற்கொண்டு தமிழனாகவே வாழ்ந்தான் எனினும், அவன் தமிழ் நாட்டான் அல்லன்; இக்காரணங்களால், தமிழரசர்களாகிய சேரனும் பாண்டியனும் அவன் ஆட்சித் தலைமையை வெறுக்கத் தலைப்பட்டார்கள். தம் அண்டை நாட்டில் அரசோச்சும் சோழர் தலைமையையே வெறுத்து வந்த ஈழ நாட்டார், நனிமிகச் சேயநாட்டினனாகிய சாளுக்கியன் தலைமை கீழ் வாழ விரும்புவரோ? அவர்கள் உள்ளத்திலும் வெறுப்புணர்வு வளர்ந்துகொண்டிருந்தது. தன் மைத்துனன் அதிராசேந்திரன் இருந்து ஆண்ட அரியணையில், தன் தாயத்தவனும் தன்குலப் பகைவனுமாகிய குலோத்துங்கன் அமர்வதையும், அவன் தலைமையில், வேங்கிநாடும், சேர, சோழ, பாண்டிய நாடுகளும் அடங்கிய ஒரு பேரரசு வருவதையும் மேலைச்சாளுக்கிய விக்கிரமாதித்த மாவீரன் வெறுத்தான்; இத்தகைய சூழ்நிலையில் சோணாட்டு அரசுரிமையை ஏற்றுக்கொண்ட குலோத்துங்கன், எத்தகைய தாக்குதலையும் தாங்கி அழிக்கவல்ல வீரமும் விழிப்புணர்வும் உடையனாய் விளங்கினான். ஆண்மை ஆற்றல்களில்; சோணாட்டு அரியணையில் அமர்ந்து ஆண்ட அரசர்கள் அனைவரினும் குலோத்துங்கன் சிறந்து விளங்கினான் என்றாலும், அக்குல முன்னோர் போல் சென்று தாக்கும் போரில் சிந்தை  செலுத்தினானல்லன்; அப்போர் முறை ஒரு பேரரசிற்கு ஆக்கத்தினும் அழிவையே அளிக்கும். என அறிந்திருந்தமையால், எந்நாட்டின் மீதும் வலியச் சென்று போர்த் தொடுப்பதை அவன் விரும்பினானல்லன்; ஆனால் தன் நாட்டின் மீது போர் தொடுப்பவரையும், தன் தலைமையை வெறுத்து விடுதலை பெற விரும்பும் வேந்தர் களையும் வென்று பணி கொள்வதில் அவன் காட்டிய வீரமும் விரைவும் அம்மம்ம! வாய்விட்டுக் கூறமாட்டா விழுச்சிறப்புடையவாம். இவ்வகையால் குலோத்துங்கன் புகுந்த போர்க்களங்கள் சிலவற்றையும், அக்களங்களில் அவன் பெற்ற வெற்றிகள் சிலவற்றையும் கண்டு செல்வோமாக. மேலைச்சாளுக்கியரொடு மேற்கொண்ட போர்: குலோத்துங்கனோடு முதன் முதலில் எதிர்ந்து போரிட வந்த மன்னன், மேலைச்சாளுக்கிய விக்கிரமாதித்தனே ஆவன். சோணாட்டு அரசியலில் தன்கை தாழ்ந்து போகக் குலோத்துங்கன் கை ஓங்கிவிட்டதை வெறுத்த விக்கிரமாதித்தன், குலோத்துங்கன் கொற்றத்தைக் குலைப்பதில் கருத்தைப் போக்கினான். குலோத்துங்கன் பேராண்மையையும் படைப்பெருமையையும் அறிந்திருந்த அவன், அவற்றை அழித்தொழிக்கும் ஆற்றல் பெரும் அளவு, தன் படைப் பெருமையைப், பெருக்குவதில் சில ஆண்டுகளைக் கழித்தான். ஐந்து ஆண்டுகளாக அரும்பாடுபட்டுப் படையைப் பெருக்கினான்; மேலைச்சாளுக்கியனின் மனக்குறிப்பைக் குலோத்துங்கனும் அறிந்திருந்தான்; அதனால், அவன் படையெதிர்ப்பை எதிர் நோக்கித் தன் படையையும் பெருக்கிக் கொண்டே வந்தான். மேலும், மேலைச்சாளுக்கியர்க்குரிய குந்தள நாட்டரசியலில் குழப்பநிலை நிலைபெறுவதையுணர்ந்து, அதைத் தனக்கு ஆக்கநிலையாக ஆக்கிக் கொள்வதிலும், தன் அரசியல் திறத்தைப் பயன் கொண்டான். குந்தள நாட்டின் ஒரு பகுதி விக்கிரமாதித்தன் ஆட்சிக்கீழ் இருக்க, மற்றொருபகுதி அவன் முன்னோன் சோமேசுவரன். ஆட்சிக்கீழ் இருந்தது; இருவரும் உடன் பிறந்தவர்களேனும் அவர்களிடையே, அக்காலை ஒற்றுமை குலைந்து பகையுணர்வு தலைதூக்கி நின்றது. அஃதறிந்த குலோத்துங்கன் சோமேசுவரனைத் தன் துணைவனாக ஆக்கிக்கொண்டான். “தன் துணை இன்றால்; பகை இரண்டால்; தான் ஒருவன்; இத்துணையாக் கொள்க அவற்றின் ஒன்று” என்ற போர் நெறியுணர்ந்து குலோத்துங்கன் மேறகொண்ட இம்முடிவு கண்டு விக்கிரமாதித்தன் வெஞ்சினம் கொண்டான்; இனியும் காலங்கடத்தின் தனக்குக் கேடாம்; குலோத்துங்கன் வெற்றிக்குத் தானே வாய்ப்பளித்தது போலாம் என உணர்ந்தான்; உடனே, தம்பி துணைவர, ஐந்து ஆண்டுகளாகத் திரட்டி வைத்துள்ள பெரும்படையோடு தென்னாடு நோக்கிப் புறப்பட்டான். விக்கிரமாதித்தன், சோழ அரசின் வடவெல்லை நாடாகிய மைசூர் நாட்டுக்குள் புகுந்துவிட்டான் என்பதை அறிந்த குலோத்துங்கன் வடதிசை நோக்கி விரைந்தான்; வாக்களித்தவாறே, விக்கிரமாதித்தனின் முன்னோனாகிய சோமேசுவரன் சோழன் பக்கம் நின்று போரிட்டான், ஹொய்சள எரியங்கன், கடம்பகுல சயகேசி, பாண்டியன் திருபுவன மல்லன், யதுகுல சேஷணன் முதலிய சிற்றரசர்கள் விக்கிரமாதித்தனுக்குத் துணையாக வந்தார்கள். இருதிறப் படையினர்க்கும் போர் தொடங்கிவிட்டது; மைசூர் நாட்டு மண்ணில் மாண்டவர் தொகையை மதிப்பிடல் இயலாது; பல பேரூர்கள் போர்க்களங்களாயின; வெற்றி தோல்வி காணாவகையில் வீரர்கள் வெஞ்சமர் புரிந்தார்கள். இறுதியில், கோலார் மாவட்டத்தில் உள்ள நங்கிலி நகர்க்கு அணித்தாக நிகழ்ந்த போரில் குலோத்துங்கன் வெற்றி கொண்டான்; ஆங்குத் தோற்ற விக்கிரமாதித்தன் துங்கபத்திரையாற்றைக் கடந்து அக்கரையடையும்வரை அவனை விடாது துரத்திச் சென்றான் சோணாட்டுக் காவலன், அங்ஙனம் சென்ற சோழர் படைவாளா செல்லாது வழியிடை நகள்களாகிய மணலூரிலும், அளத்தியிலும், மேலைச்சளுக்கியர் படையை மடக்கி நிறுத்தி நிறுத்தி, மண்டமர் புரிந்து வெற்றி பல கண்டவாறே சென்றது; மைசூர்நாட்டு நவிலையிலும், அளத்தியிலும் விக்கிரமாதித்தன் நிறுத்தி வைத்த வேழப்படைகள் அனைத்தையும் கைப்பற்றிக் கொண்டது, குலோத்துங்கன் நவிலையில் பெற்ற களிறுகள் மட்டும் ஆயிரத்துக்கு மேலாகும். இறுதியில் துங்கபத்திரைப் பேராற்றங்கரையில் நடைபெற்ற போரில், விக்கிரமாதித்தனும் அவன் தம்பியும் சோழர் படையின் எதிர் நிற்கமாட்டாது களம் விட்டகன்று கரந்து கொண்டனர்; இப்போர்களின் பயனாய்க் கங்க மண்டலமும், கொண் கானமும் குலோத்துங்கன் உடைமைகளாயின; இவ்வாறு மேலைச்சளுக்கிய நாட்டில் வெற்றி பெற்ற குலோத்துங்கன், ஆங்குத்தான் கைப்பற்றிய கணக்கிடமாட்டாக் களிறுகளோடும், பெரும் பொருட்குவியலோடும், எண்ணிலாப் பெண்களோடும், கங்கைகொண்ட சோழ புரம் வந்து சேர்ந்தான். பாண்டியரொடு மேற்கொண்ட போர்: தமிழரசர் மூவேந்தருள், பழமையானவர், தமிழ் வளர்த்தவர் என்றெல்லாம் பாராட்டப் பெறும் பெருமையுடையவர் பாண்டியர்; விசயாலயன் வழிவந்த சோழர் பேரரசு தோன்றுவதற்கு முன்னர்த் தமிழகத்தில் பேரரசு நடத்தியவர்கள்; அத்தகையர் பிறிதொரு பேரரசின் கீழ் அடங்கி வாழும் அடிமை வாழ்வை விரும்புவரோ? பராந்தகனும் இராசராசனும் அவர்களை வென்று, அவர்கள் நாட்டில் சோழ அரசை நிலைநாட்டினர் என்றாலும், பாண்டியர்கள் காலம் வாய்க்கும்போதெல்லாம் சோழ அரசை அழித்துத் தனியரசு பெறும் முயற்சியை விடாது மேற்கொண்டே வந்தனர்; அதனால் சோழ மன்னர்கள், பாண்டி நாட்டு மண்ணில் ஓயாயப்போர் மேற்கொண்டே  அந்நாட்டைக்காத்துவந்தனர்; பாண்டி மன்னர்களின் இம் மறவுணர்வை அறிந்துகொண்டமையால் கங்கைகொண்ட சோழன். தன் மக்களையும் பேரன்மார்களையும், பாண்டிய நாட்டுத் தலைநகர் மதுரையிலேயே இருந்து ஆளும் முறையை மேற்கொண்டான். அதனால் பாண்டி மன்னர்களின் விடுதலை முயற்சி ஒருவாறு அடங்கியிருந்தது. இந்நிலையில் சோணாட்டில் வீரராசேந்திரனுக்குப் பிறகு அரியணை ஏறிய அவன் மகன் ஆறு திங்கள் கூட இருந்து ஆளாது இறந்து விட்டான். அரசுக்கு உரியாரைப் பெற மாட்டாது சோணாடு சில திங்கள் அல்லற்பட்டுக் கிடந்தது; இந்நிலையை இனிய வாய்ப்பாகக் கொண்டு, பாண்டி மன்னர் மரபில் வந்த அரசிளங்குமரர் ஐவர், சோணாட்டுப் படைகளைத் துரத்திவிட்டுப் பாண்டி மண்டலத்தை ஐந்து பகுதியாகப் பிரித்துக்கொண்டு அரசாளத் தொடங்கிவிட்டார்கள். சோழ அரசனாகக் கங்கைகொண்ட சோழபுரத்தில் முடிபுனைந்து கொண்ட குலோத்துங்கன் பாண்டிநாட்டு நிலையை அறிந்தான்; ஆயினும் வடவெல்லையில், விக்கிரமாதித்தன் பெரும் படையோடு காத்திருக்கும் காலத்தில், தென்னாட்டின் மீது படைகொண்டு செல்வது போர் முறையாகாது என அறிந்த குலோத்துங்கன், பாண்டியர்களை, அவர்கள் போக்கில் சிலகாலம் விட்டுவைத்தான் ; வடவெல்லைப் போரை முடித்துக்கொண்டு, விக்கிர்மாதித்தனை வென்று திரும்பியதும் பாண்டிநாட்டின் மீது அவன் பார்வை சென்றது. ஆயினும் பாண்டி நாட்டுப் போரை அப்போதே தொடங்க அவன் விரும்பவில்லை, ஒரு பெரும் போரில் ஈடுபட்டுத் தன் படை பெரிதும் வலி யிழந்து கிடக்கிறது; ஆனால் பாண்டியர்களோ, இந்த இடைக் காலத்தில் தம் படைகளைப் பெருவாரியாகப் பெருக்கி வைத்திருந்தனர்; அதை உணர்ந்திருந்த குலோத் துங்கன், தன் படை பலம் பண்டேபோல் பேராண் மையும், பேராற்றலும் வாய்ந்ததாகுக என ஐந்தாண்டு காலம் காத்திருந்தான். எப்படையையும் எதிர்த்தழிக்க வல்ல ஆற்றல் உடையதாகிவிட்டது என்பதை அறிந்து கொண்ட அக்கணமே, குலோத்துங்கன் பாண்டிநாடு நோக்கிப் புறப்பட்டுவிட்டான்; பாண்டியர் ஐவரும் ஒன்று கூடி வந்து குலோத்துங்கனை எதிர்த்தனர்; பல ஆண்டுகளாகத் திரட்டி வைத்திருந்த பாண்டியப் படையும், உரம்மிக்கு உரிமைப் போர் நடத்திற்று; ஆயினும் குலோத்துங்கன் கொற்றத்தின் முன் அவை எம்மாத்திரம்? சோழர் படையின் தாக்குதலைத் தாங்கமாட்டாது சோர்ந்து விட்டது; பாண்டிய மன்னர்கள், படைகளைக் கைவிட்டுப் புறங்காட்டி ஓடிக் காட்டுக்குள் புகுந்து மறைந்துவிட்டார்கள். வாகை சூடிக் கள வேள்வி நடத்திய குலோத்துங்கன், பாண்டிநாடு முழுவதும் வெற்றித் தூண்களை நாட்டினான். பாண்டியர்க்குப் பெருமை அளிக்கும் முத்து கிடைக்கும் கடற்றுறைப் பட்டினங்களையும், சந்தனம் வளரும் பொதியிற் கூற்றத்தையும், காவிரி பிறக்கும் சைய மலையையும், குமரி முனையையும் கைப்பற்றிக்கொண்ட கொற்றத்தோடு கங்காபுரி வந்தடைந்தான். சேரருடன் மேற்கொண்ட போர்: தங்கள் நாட்டில் சோழர் ஆட்சி நடைபெறுவதை வெறுப்பதில், சேரர்கள் பாண்டியர்க்குச் சிறிதும் குறைந்தவரல்லர்; சோழ அரசை அழித்துத் தம் அரசு அமைத்து ஆள்வதில் ஆர்வம் மிக்க சேரர்களும், பாண்டியர்களைப் போலவே, அதிராசேந்திரன் இறந்தமையால் சோணாட்டில் தலை தூக்கிய அமைதியின்மையையே பயன்கொண்டு கலகம் விளைவித்து ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டனர்; அவர்கள் ஆட்சியும் ஆங்குச் சிலகாலம் நடைபெற்றது. இறுதியில் பாண்டியரை வெற்றிகொண்ட குலோத்துங்கன் சேர நாடு சென்று சேர்ந்தான். மேலைக்கடற்கரையைச் சார்ந்த வீழிஞம், குமரிமுனைக் கோட்டாறு, காந்தளூர்ச்சாலை முதலான ஊர்களில் பெரும்போர் நடைபெற்றது, க-6 மலைநாட்டு மக்கள் மறங்கொண்டு போராடினார்கள்; ஆயினும் எண்ணற்றோர் உயிர் இழந்தனர். காந்தளூர்ச் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சேரரின் கடற்படை இருமுறை அழிக்கப்பட்டது. கோட்டாற்றை எரியூட்டி அழித்தார்கள். சேரமன்னன் செருக்களம் விட்டோடி வந்து சோழ மன்னன் அடிபணிந்தான்; அவன் ஆட்சித் தலைமையை ஏற்றுக் கொண்டான். பாண்டியநாட்டுப் போரிலும், சேரநாட்டுப் போரிலும் வெற்றி பெற்ற குலோத்துங்கன், அந்நாடுகளில், இவை போலும் போர்க் கிளர்ச்சிகள் இனியும் தலைதூக்கி விடக்கூடாது; அதற்கு வழியாது என ஆராய்ந்தான்; பாண்டியர்க்கும், சேரர்க்கும் படைதிரட்டும் வாய்ப்புக் கிட்டுவதினாலேயே இத்தகைய கிளர்ச்சிகள் அவ்வப்போது இடம் பெறுகின்றன. அவ்வாய்ப்புக் கிட்டாமல் செய்துவிட்டால் இவை இடம் பெறா என உணர்ந்தான். அவ்வுணர்வின் பயனாய்த் தமிழகத்தின் தென்கோடி முனையிடை ஊராகிய கோட்டாறு முதலான பகை நாட்டுப் பேரூர்கள் ஒவ்வொன்றிலும், சோணாட்டின் நிலைப் படைகளை நிறுவி, அப்பகைவர்கள் படையெடாவாறு பார்த்துக் கொள்ளப் பணித்துவிட்டுப் பழையாறை நகர் வந்து சேர்ந்தான். தென் கலிங்க வெற்றி : தன் சிறிய தந்தை விசயாதித்தன் மாண்ட பின்னர் வேங்கிநாட்டு ஆட்சி உரிமையைக் குலோத்துங்கன் ஏற்றுக்கெண்டான்; தந்தை வழிவந்த தர்ய்உரிமை நாடாதலின், வேங்கி நாட்டில் இருந்தாள வேண்டுவது தன் நீங்காக் கடமை ஆயினும், வடகோடி நாடாகிய வேங்கிநாட்டிற்குத் தான் வந்து விட்டால், தாய்வழி பெற்ற சோழர் பேரரசை இழக்க வேண்டிவரும் என அறிந்த குலோத்துங்கன், வேங்கி. நாட்டு வாழ்வை விரும்பினானல்லன்; ஆயினும் அந்நாட்டு உரிமையை அறவே கைவிடவும் அவன் விரும்பவில்லை; அதனால் அதன் ஆட்சிப் பொறுப்பைத் தன் .  மூத்தமகன் விக்கிரமசோழன்பால் ஒப்படைத்து, அவனை ஆங்கு அனுப்பியிருந்தான். வேங்கிநாட்டு வெண் கொற்றக்குடைக்கீழ் வீற்றிருப்பவன் கொற்றம் மிக்க குலோத்துங்கன் அல்லன்: விளையாடற் பருவத்தனாகிய விக்கிரமனே என்ற அறியாமை உணர்வால் அறிவிழந்து போனான். வேங்கி நாட்டின் அண்மை நாடாகிய தென் கலிங்க நாட்டுக் காவலன் வீமன், அன்று வரை வேங்கி நாட்டு வேந்தர் க்கு அடங்கிய சிற்றரசனாய் வாழ்ந்திருந்தவன் அவ்வீமன், அவனை அறியாமை இருள் சூழ்ந்து கொள்ளவே, தனியரசு அமைத்துக் கொள்ள ஆசை கொண்டு தன் நாட்டில் ஆரவாரம் செய்யத் தலைப் பட்டான்; அஃதறிந்தான் வேங்கிநாட்டு வேந்தன் விக்கிரமசோழன். உடனே பெரும் படையோடு தென் கலிங்கம் புகுந்து போரிட்டு, வீமனை வென்று பண்டே போல் தனக்குப் பணிந்து ஒழுகும் சிற்றரசாய்ப் பணி கொண்டு மீண்டான். மகன் பெற்ற இவ்வெற்றி தந்தை பெற்ற வெற்றியே ஆதலின், தென்கலிங்க வெற்றியைக் குலோத்துங்கன் வெற்றியாகவே மதித்தார்கள் மக்கள். வடகலிங்க வெற்றி : சோழர் பேரரசின் உள் நாடுகளுள் ஒன்றாகிய தொண்டை நாட்டின் தலைநகர் காஞ்சி, பல்லவர் காலத்திற்கும் முற்பட்ட காலத்தில் லிருந்தே, வடவெல்லைத் தலைநகராக விளங்கிய அந், நகரைக் குலோத்துங்கனும், தன் தலைநகர்களுள் ஒன்றாகக் கருதி, வாழ்நாளின் ஒரு பகுதியை அந்நகரிலும் கழிக்கத் திருவுளங்கொண்டு, அவ்வப்போது அந்நகர் வந்து தங்கிச் செல்வான். அவ்வாறு ஒரு முறை ஆங்குச் சென்றிருந்த குலோத்துங்கன் ஒரு நாள், அமைச்சர், அவைக்களப் புலவர், அரசர்குல ஆசிரியர், பெரும் படைத் தலைவர் பலரோடும் பேரவையில் வீற்றிருந்தான்: அரசவைக்கு அணிகலன்களாகிய ஆடலும், பாடலும், வாழ்த்தும், வணக்கமும் முடிவுற்ற பின்னர், திருமந்திர ஒலைநாயகன் கோமகன் திருமுன் வந்து சோழர்  பேரரசிற்கு அடங்கி அரசோச்சும், பெருநில வேந்தர்களும், குறுநில மன்னர்களும், மண்டலத் தலைவர்களும், தத்தம் திறைப்பொருள்களுடன், அரசவையின் கடைவாயிற்கண் காத்திருக்கின்றனர் என அறிவித்தான்; அவர்கள் அரசவை வருக எனக் குலோத்துங்கன் பணிக்க, வந்து வணங்கிய பின்னர்த் தாம் கொணர்ந்த வகை வகையான பொருள்களைக் குலோத்துங்கன் காண வரிசை வரிசையாக வைத்து நின்றார்கள் அவ்வேந்தர்கள். மணி ஆரங்களும், முத்தாரங்களும், நவமணிகோத்த ஏக வடங்களும், பொன் அணிகளும், பொன் முடிகளும், பொற்பெட்ட கங்களும், மணிகள் இழைத்த மகரக் குழைகளும், மகளிர் அணியும் நெற்றிப் பட்டங்களும், வேறு பல பொன்னணிகளும், நவமணிக் குவியல்களும், பொற் குவியல்களும் அரசவையில் உள்ளார் கண்ணும் கருத்தும் கூசும் வகையில் காட்சி அளித்தன. அம்மட்டோ! அவர் கள் அளித்த களிறுகள் கணக்கில; கடல் அலையெனத் தாவிக் காற்றென விரையும் குதிரைகள் கணக்கில; ஒட்டகங்களும், உயர்வகைப் பிடியானைகளும் பற்பல. திறைபெறும் அவ்வினை முடிவில், குலோத்துங்கன் திருமந்திர ஓலைநாயகத்தை நோக்கித் திறை தரா அரசர் எவரேனும் நம் ஆட்சிக் கீழ் உளரோ?" என்று வினவி னான்; ஒலைநாயகம் அரசனை வணங்கி, ஆம் அரசே! வடகலிங்க நாட்டுக் காவலன் அனந்தவன்மன், திறை தர இருமுறை வந்திலன்" என்று விட்ையளித்தான். அது கேட்டான் குலோத்துங்கன் கடுஞ்சினம் கொண் டான்; தன் அருகில் வீற்றிருக்கும் பெரும் படைத் தலைவன் கருணாகரத்தொண்டைமானை நோக்கிப் படைத்தலைவ! வடகலிங்கக் காவலன் வன்மை இல்லாதவன் ; அவன்மீது போர் தொடுப்பது நம் பேராண்மைக்கு இழுக்காகும்; ஆனால் நம் அடிபணிய மறுக்கும் அவனை வாளாவிடுவது அரச முறை ஆகாது. ஆகவே வடகலிங்கம் நோக்கி இன்றே புறப்படு; அவ்வடகலிங்கம், வலிய மலை யரணால் சூழப்பெற்றது. அம்மலைகள் பொடிபடும்படி பெரும்படையை உடன்கொண்டு செல்; கலிங்க நாட்டுக் களிறுகள் களப்போர் புரிவதில் திறமை வாய்ந்தன; அக்களிறுகள் எண்ணற்றவற்றைக் கைப்பற்றிக் கொணர்க; அந்நாட்டுக் காவலனையும் சிறை செய்து தருக" எனப் பணித்தான். சோழ மண்டலத்தில் குலோத்துங்க சோழ வள நாட்டில், திருநறையூர் நாட்டில், வண்டை நகரில் வந்தோனாகிய கருணாகரத் தொண்டைமான், குலோத்துங்கன் பணித்த பணியை மகிழ்ந்து ஏற்றுக்கொண்டான்; “வடதிசை அரசர்களை அறவே அழிப்பேன்; வேந்தே! விடைகொடு” என்று வேண்டிக்கொண்டான்; வேந்தனும் விடை கொடுத்தான்; அவ்வளவே. அடுத்த கணமே, போர் முரசு ஒலிக்க, சோழர் பெரும்படை வடநாடு நோக்கிப் புறப்பட்டு விட்டது; வழியறிந்து செல்லற்காம் பகலில் நடந்தும், இரவில் இருந்து இளைப்பாறியும் சென்ற அச்சேனை, பாலாறு, குசைத்தலையாறு, பொன் முகரியாறு, கொல்லியாறு, வடபெண்ணையாறு, மண்ணாறு, குன்றியாறு, கிருஷ்ணைப் பேராறு, கோதா வரியாறு, பம்பையாறு, கோதமையாறு, கோடிபலி ஆறு என்ற சிற்றாறுகளும் பேராறுகளுமாகிய ஆறுகள் பன்னிரண்டையும் வரிசையாகக் கடந்து வடகலிங்கம் அடைந்தது. கலிங்கம் புகுந்த சோழர் பெரும்படை அந்நாட்டு நகரங்களைக் கொள்ளையடித்தும், தீயிட்டுக் கொளுத்தியும் அழித்தவாறே அனந்தவன்மன் அரணை நோக்கி விரைந்து சென்றது. சோழர் படைவரவையும், அப்படையாலாம் அழிவுகளையும் கண்டு கலங்கிய கலிங்க நாட்டு மக்கள், உடல் பதற, உடை அவிழ ஓடி, அனந்தவன்மன் அடி வீழ்ந்து, “அரசே! சோழர் பேரரசிற்குத் தர வேண்டிய திறையைத் தர மறுப்பது தகாது எனக் கூறிய எம் சொற்களைக் கேட்டிலை; அதனால் சினங்கொண்ட சோழர் படை நம் கலிங்க நாட்டில் புகுந்துவிட்டது. அதன் வரவால் மதில்கள் இடிகின்றன; பதிகள் எரிகின்றன; எங்கும் புகை எழுகின்றது; மரச்சோலைகள் மடிகின்றன; குடி மக்கள் கெடுகின்றனர்; சோழர் படையோ மேலும் மேலும் வந்து குவிகின்றது; கடல் பொங்கி எழுந்தால் புகலிடம் எங்கே கிடைக்கும்; கடல் போலும் சோழர் பெரும்படை பொங்கி எழுந்தால், நம்மை அழியாமல் காக்க வல்ல அரண் எங்கே உளது?” என உரை குழற முறையிட்டனர். மக்கள் முறையீட்டைக் கேட்டும், அவர் நிலையைக் கண்டும், அனந்தவன்மன் அறிவு வரப் பெற்றானல்லன் “கலிங்க நாடு, கான் அரனும், மலை அரணும் உடையது; அதனால் அழிக்கலாகா ஆற்றல் மிக்கது என்பதை அறிய மாட்டாமையால் சோழர் படை புகுந்து விட்டது; புகுந்த படை படும் பாட்டை இனிக் காண்போம்; பாராளும் பேரரசன் குலோத்துங்கனையே பணிய மறுக்கும் யான், அவன் படைத் தலைவனைப் பணிவனோ? அத்துணை எளியவனோ யான்?” என இகழந்து கூறினான்; வந்துள்ள சோழர் படையின் பெருமையையும்; கலிங்க நாட்டுக் காவலனின் சிறுமையையும் கண்ணுற்ற அமைச்சன் எங்கராயன், அரசன் முன் வந்து, “வேந்தே! வந்த படைத் தலைவன் கருணாகரத் தொண்டைமானின் பேராற்றலை நீ அறிவாய்; பாண்டியர் ஐவர் அழிந்ததும்,சோழர் படைத் தலைவனால் அல்லது, சோழர் குலக் கோமகனால் அன்று; சோழர் படை கண்டு சேரர் பட்ட பாட்டினை நீ அறிவாயோ? நவிலையில் ஆயிரம் களிறுகளைக் கைப்பற்றியதும் சோணாட்டுப் படையே; அளத்தி அழிந்ததும் அப்படையால்; வத்த நாட்டை வென்றதும் அவன் படையே; சோழர் படைத் தலைவரால் தம் அரசிழந்த அரசர்களை எண்ணிக் கூறல் இயலுமோ? ஆகவே, வேந்தன் வந்திலன்; படைத் தலைவனே வந்துளான் எனப் பழிப்பது பொருந்தாது? புடைத் தலைவன் பெருமையை இன்று பழிக்கும் நீ, நாளை அமர்க்களத்தில் நீயே அறிந்து கொள்வாய்; ஆகவே, கொடுக்கத் தவறிய திறைகளைத் தந்து பணிந்து போவதே நன்று” என அரசியல் முறைகளை எடுத்து ஓதினான். அமைச்சன் கூறிய அறிவுரைகளை அனந்தவன்மன் ஏற்றுக் கொண்டானல்லன். மாறாக, அமைச்சன் அறிவுரை கூறக்கூற அவன் சினம் அளவிறந்து பெருகிற்று; அமைச்ச! என்னுடைய தோள்வலியும், என்னுடைய வாள் வலியும் யாதும் அறியாது, பிறர் போல் உன்னுடைய பேதைமையினால் இவ்வளவும் உரைத்தாய்; பிழையுரை புகன்று பிழை புரிந்துவிட்டாய்;. என் நலன் குறித்துக் கூறும் உன் அறிவுரை, என் பெருமையை அழிப்பதாக அமைவது அறிவுடைமையோ? சிங்கக் குட்டி வாழும் குகை முன்சென்று களிறொன்று பிளிறினால் அச்சிங்கக்குட்டி அஞ்சி அடங்கி விடுமோ? அறிவுரை கூறுவதை விடுத்து, அரணகத்துப் படைகளை உடனே போர்க்களம் புகவிடுக; நாடெங்கும் போர்ப்பறை முழங்கட்டும், நால்வகைப் படை வீரரும், விரைந்து களம் புகட்டும்" என ஆணையிட்டு அமர்மேற் கொண்டான். கலிங்கப்படை களம் புகுந்தது; இருபெரும் கடல்கள், எதிர் எதிர் நின்று போரிட்டன; படைக் கலங்களை எடுங்கள்; பரிகளைப் பாய விடுங்கள்; களிறுளைக் களம் நோக்கிப் போகவிடுங்கள்" என்னும் ஒலிகள், கடல் ஒலி போல் ஓவென ஒலித்தன. வில் நாணை இழுத்து விடுந்தொறும் எழும் ஒலியும், வீரர்களின் ஆரவாரப் பேரொலியும் காதுகள் செவிடுபடும்படி சென்று ஒலித்தன; காலை கழிந்து மாலை வரவர கலிங்க வீரர்களிடையில் சோர்வு தலை தூக்கிற்று; அந்நிலையில் கருணாகரனும் களம் புகவே, கலிங்கப்படை அறவே அழிய எஞ்சிய சிலரும் பிழைத்தோடத் தலைப்பட்டார்கள். பிழைத்தால் போதும் எனப் புதரிடைப் புகுந்து ஓடியபோது, அப்புதரிடைச் சிக்குண்டு அரை ஆடை கிழிந்து போகத் தலைமயிர் பறிப்புகண்டு போக, நின்ற சில மயிரையும் நீக்கிவிட்டு, “அமணர் நாங்கள்; அடித்து அழிக்காதீர்கள்” என்று கூறிச் சில கலிங்கர் பிழைத்துச் சென்றனர்; வில் நாணை முந்நூலாக மார்பில் அணிந்து “அந்தணர் யாம்; கங்கை ஆடப் போந்து அகப்பட்டுக் கொண்டோம்” என உரைத்து உயிர் பிழைத்தார் ஒரு சிலர். குருதிக் கறை, படிந்து காவி நிறம் பெற்ற கொடிச் சீலைகளால் உடலை மறைத்துக் கொண்டு, “சாக்கியச் சந்நியாசிகள் யாம்: எம் ஆடை அதை உமக்கு அறிவிக்கவில்லையோ” எனக் கூறியவாறே களத்திலிருந்து மறைந்து விட்டார்கள் மற்றும் சிலர். யானை மணிகளைக் கையிற் கொண்டு, “பாடிப் பிழைக்கும் பாணர்கள் யாம். களக்கொடுமை கண்டு கலங்கி நிற்கின்றோம்” எனக் கூறிப் பிழைத்தார் கணக்கற்றோர். கலிங்கப் படையின் நிலை இது. படை புற முதுகிட்டு ஓடி விட்டது எனக் கேட்ட கலிங்கக் காவலன், சோணாட்டுப் படைவீரர் புக மாட்டா இடம் சென்று ஒளிந்து கொண்டான்: கருணாகரன் கலிங்க நாட்டார் களத்தில் விட்டுச் சென்ற வேழ வரிசைகளையும், விரைந்தோட வல்ல குதிரைக் கூட்டத்தையும், நெடிய பெரிய தேர்களையும், உயர்ந்த ஒட்டகங்களையும், நவநிதிக் குவியல்களையும், நங்கையர் திரளையும் கைப்பற்றிக் கொண்டான். இவ்வாறு களப்போரில் வெற்றி கொண்ட பின்னர், குலோத்துங்கன் படைத் தலைவன், அனந்தவன்மன் அடங்கியிருக்கும் மலையைச் சூழ, வில்லாலும், வாளாலும் அரண் அமைத்து, விடியும் வரைக் காத்திருந்து, காலை வந்துற்றதும், அக்கலிங்கனைக் கைப்பற்றிச் சிறை செய்து கொண்டு சோணாடு வந்து சேர்ந்தான். வெற்றி பெற்று வந்த வண்டையர் கோவுக்கு, குலோத்துங்கன் வரிசைகள் பல வழங்கி வாழ்த்தினான். பாடற் பொருளாகக் கொண்டு, “பரணிக்கோர் சயங் கொண்டார்” என்ற பாராட்டினுக் குரிய பெரும் புலவராகிய சயங் கொண்டார் கலிங்கத்துப் பரணியைப் பாடிக் குலோத்துங்கனைப் பெருமை செய்தார். கலிங்க வெற்றியின் சிறப்புக்களை விளங்க உணர விரும்புவார், அப்பரணியின் துணை பெறுவாராக. ஈழநாட்டுப் போர் : குலோத்துங்கன் பெற்ற வெற்றிகளுள், வடகலிங்க வெற்றியே பெருவெற்றியாம். எனினும், அதுவே அவன் பெற்ற இறுதி வெற்றியுமாகும்; கலிங்கப் போருக்குப் பின்னர் அவன் புகுந்த களங்களிலெல்லாம் வெற்றி பெறுவதற்கு மாறாகத் தோல்வியே கண்டான். சோழராட்சிக்கு உட்பட்டிருந்த ஈழ நாட்டில், உரிமைப் போர் உணர்ச்சி குலோத்துங்கன் ஆட்சியின் தொடக்கக் காலத்திலேயே உருப்பெற்று விட்டது; ஈழ நாடாண்ட இறுதிச் சோழன் அதிராசேந்திரனே எனத் துணிந்து சொல்லலாம். சோழர் குலப் பகைவர்களாகிய சேர பாண்டியரோடு நட்புறவு மேற்கொண்டிருந்த சிங்களவர், அவர்களைப் போலவே தனியாட்சி மேற்கொள்வதில் தணியா வேட்கையுடையராய் விளங்கினர்; அதற்கு ஏற்ற காலத்தை எதிர் நோக்கியிருந்த அவர்கள், சோணாட்டில் அதிராசேந்திரன் இறக்க, அரசியல் குழப்பம் தலையெடுத்ததும், உரிமைப் போருக்கு உரிய காலம் அதுவே என உணர்ந்து, ரோகண நாட்டில் தலை மறைந்து வாழும் தங்கள் வேந்தன் விசயபாகுவைக் கொணர்ந்து, ஈழ நாட்டின் கோமகனாக முடி சூட்டி மகிழ்ந்தார்கள்; அவன் அனுராதபுரத்திலும், பொலன்னருவாவிலும் இருந்த சோழர் படைகளை வென்று துரத்தினான். தன் படை தோல்வியுற்றது எனக் கேட்ட குலோத்துங்கன், மற்றொரு பெரும் படையை ஈழ மண்டலத்திற்கு அனுப்பினான்; ஆனால் அப்படையும் தோல்வியே கண்டதும், அனுராதபுரமும், பொலன்னருவாவும் ஈழவரின் உடைமைகளாயின; விசயபாகு ஈழ நாடு முழுமைக்கும் மன்னனாய் முடி புனைந்து கொண்டான், தன் பகைவன் மதுரை மன்னனுக்கு இருக்க இடம் தந்தனர்  என்ற காரணத்தால் பராந்தகன் வென்று கைக்கொண்ட ஈழநாட்டைக் குலோத்துங்கன் இழந்துவிட்டான்: ஈழத்தைக் காத்திருந்த சோழர் படை சோணாடு வந்தடைந்தது. கடல் கடந்த நாட்டிலும் சோழர் ஆணை நடைபெற்றது என்ற புகழ் குலோத்துங்கன் காலத்தில் அழிந்து விட்டது. கங்கபாடிப்போர்: ஈழ நாட்டை ஆட்சித் தொடக்கத்தில் இழந்துவிட்ட குலோத்துங்கன் கங்கபாடி நாட்டைத் தன் ஆட்சியின் இறுதியில் இழந்துவிட்டான். மைசூர் மாநிலத்தின் தென்பகுதியும், சேலம் மாவட்டத்தின் வட பகுதியும் உள்ளடங்கிய கங்கபாடி, முதல் இராசராசன் காலத்தில், சோழர் தலைமையை ஏற்று, சோணாட்டின் வடமேற்கு எல்லையைக் காத்து வந்தது; தழைக்காட்டைத் தலைநகராகக் கொண்ட அந்நாட்டின் ஆட்சிப் பொறுப் பைத் தகடுர் அதிகமான் மரபில் வந்தாரிடையே ஒப் படைத்திருந்தான் இராச ர்ாசன், அந்நாள் முதல், சோழர்க்குப் படைத்துணை அளிக்கும் அதியமான்களே, இந்நாட்டை ஆண்டு வந்தனர்; அந்நல் வாய்ப்பும் குலோத்துங்கனுக்கு இல்லையாயிற்று. போசள வேந்தன் பிட்டிக விஷ்ணுவர்த்தனன், தன் தண்ட நாயகன் கங்கராசன் துணை கொண்டு அதிகமானைத் தழைக் காட்டிலிருந்து வென்று துரத்திவிட்டான். தமிழர்கள், கங்கபாடியைக் கைவிட்டுச் சோணாடு வந்து சேர்ந்தார்கள். தமிழகத்தின் தென்கோடி எல்லையில் தோல்வி கண்ட குலோத்துங்கன், அந்நாட்டின் வடமேற்கிலும் தோல்வி கண்டான்; சோழர் பேரரசின் எல்லை சுருங்கத் தொடங்கி விட்டதுபோலும்! வேங்கிநாட்டுப் போர் தான் ஏற்றுக்கொண்ட சோழர் பேரரசிற்கு உட்பட்ட நாடுகளாகிய ஈழத்தையும், கங்க பாடியையும் இழந்ததோடு குலோத்துங்கன், தன் தந்தை யிருந்து ஆண்டதும், தனக்கே உரியதுமாகிய வேங்கிநாட்டையும் இழந்துவிட்டான். வேங்கிநாட்டு அரியணையில் தன் சிறியதாதையை அமர்த்திவிட்டுச் சோணாட்டு  அரியணையில் அமர்ந்த குலோத்துங்கன், சிறிய தந்தை மாண்டபிறகு, வேங்கிநாட்டின் ஆட்சிப் பொறுப்பைத் தன் மக்கள் பால் ஒப்படைத்திருந்தான். குலோத்துங்கன் மக்களாகிய, இராசராச மும்முடிச் சோழன், வீரசோழன், இராசராச சோழ கங்கன், விக்கிரம சோழன் என்ற இந் நால்வரும், நாற்பத்திரண்டு ஆண்டு காலம், அந் நாட்டு அரியணையில் ஒருவர் பின் ஒருவராய் அமர்ந்து ஆட்சி புரிந்து வந்தனர். அக்காலத்திலேயே, வேங்கி நாட்டைக் கைப்பற்றிக் கொள்ளும் கருத்து மேலைச் சாளுக்கிய விக்கிரமாதித்தன் உள்ளத்தில் கருப் பெற்று வளர்ந்து வந்தது. குலோத்துங்கனுக்குப் பிறகு சோணாடு ஆண்ட விக்கிரமன் ஆங்கிருக்கும் வரை, அவனுக்கு அவ் வாய்ப்புக் கிட்டவில்லை. தனக்கு முதுமை வந்தடைந்து விட்டது, மன்னர் மன்னனாய், இனி நெடுங்காலம் வாழ்வது இயலாது என்ற உணர்வு வரப்பெற்ாதும், குலோத்துங்கன், வேங்கி நாட்டில் வாழும் விக்கிரமனைச் சோணாட்டிற்கு வருவித்து இளவரசுப்பட்டம் சூட்டி உடன் வைத்துக் கொண்டான். வேங்கி நாட்டைக் காக்கும் பணியை, வெல. நாண்டுத் தெலுங்குச் சோழர் வழி வந்தானொருவன்பால் ஒப்படைத்திருந்தான்.வேங்கி நாட்டில் விக்கிரமன் இல்லை என்பதை அறிந்துகொண்ட விக்கிரமாதித்தன், போரிட்டு அதைத் தன்னுடையமையாக்கிக் கொண்டான். சோழர் பேரரசின் வடகிழக்கு எல்லையில், வலுவுள்ளநாட்டாரின் துணை வேண்டும் என அறிந்து, இராசராசன், தன் மகளை மணம் செய்து கொடுத்து உறவுகொண்ட வேங்கி நாட்டை அந்நாட்டின் உரிமை பெற்ற கொற்றவனாகிய குலோத்துங்கனே இழந்து விட்டான். கலிங்கம்கொண்டவன், கடாரம் வென்றவன் என்ற பாராட்டிற்குரிய பெருவீரனாகிய குலோத்துங்கன், ஈழத்தையும், கங்கபாடியையும், வேங்கியையும் இழந்தமைக்கு இறங்கினானல்லன்; அவற்றை மீட்கும் உள்ளுரம் அவனுக்கு உண்டாகவில்லை என்பது விந்தை  யிலும் விந்தையே, குலோத்துங்கனின் அரசியல் முறை யினை அறிந்திருப்பார்க்கு அது, விந்தையாகத் தோன்றாது. அது, அவன் ஆழ்ந்த அரசியல் அறிவின் வெற்றி யாகவே தோன்றும், மாமன்மார் மூவரும், மேலைச் சாளுக்கிய மன்னர்களோடு துங்கபத்திரை ஆற்றங்கரையில் மேற்கொண்ட நீண்ட பெரும்போரை நேர் நின்று கண்டவன் குலோத்துங்கன், துங்கபத்திரை ஆற்றின் வடகரைக்கு அப்பால் உள்ள நாடுகளிலும் தம் அரசு நடைபெற வேண்டும் என்ற ஆரா ஆசை காரணமாக மேற்கொண்ட போரில் மாண்ட சோணாட்டு வீரர்களும், சோழர்குல அரசிளங்குமரர்களும் எண்ணற்றோராவர், அத்துணைப் பேரழிவிற்குப் பிறகும், ஆங்குச் சோழர் ஆட்சியை அமைக்க முடியவில்லை; மேலைச் சாளுக்கிய நாட்டு மக்களும், மாநகர்களும் அழிவுற்றதே கண்ட பயன்; மாமன்மார்களுக்குத் துணையாய் அப்போர்களில் கலந்துகொண்ட குலோத்துங்கன், அம்முயற்சி, பய னற்றது; பேரழிவிற்குத் துணை நிற்பது என்பதை அப் போதே கண்டு கொண்டான்; அதனால், தன் படை பலத்தால் அடக்கி ஆளமாட்டாத் தொலைநாடுகளை வென்றடக்கும் வீண் முயற்சிகளைக் கைவிடவேண்டும் என்ற கருத்தைக் குலோத்துங்கன், அந்நாள் தொட்டே வளர்த்து வந்தான்; அம்முயற்சிகளில், மக்களையும், மாநிலங்களையும் அழிப்பதை விடுத்து, நாட்டில் அமைதி நிலவும் நல்லாட்சியை நிலைநாட்டுவதே அரசியல் முறையாம், ஆக்கம் பெருக்கும் வழியாம் என்பதையும் அறிந்திருந்தான். ஆகவே, குலோத்துங்கன், அந்நாடுகள் தன் கை விட்டுப் போனதைத் தோல்வியாகக் கொள்ளாது, வெற்றியாகவே கொண்டான்; வரலாற்றாசிரியர்களும் அதைக் குலோத்துங்கனின் கொற்றமாகவே மதித்து, அவனை மனதாரப் பாராட்டுவாராயினர். குலோத்துங்கன் கோல் முறை தம் குடை நிழற்கீழ்ப் பரந்த பெரிய நாடுவந்து வாழ வேண்டும் என விரும்புவதைக் காட்டிலும், வேந்தர்கள், அக்குடைக் கீழ் வாழும் குடிமக்களின் நலம் பெருகுதல் வேண்டும் என்றே விரும்புதல் வேண்டும், என்ற செங்கோல் முறையைச் சிறக்க அறிந்திருந்தான் குலோத்துங்கன்:நாட்டு மக்களின் நலம் பெருக்குவதே குலோத்துங்கன் குறிக்கோள்; அரசு சிறிதேயாயினும், அந் நாட்டின் நலன் பெரிதாதல் வேண்டும். சிறுகக் கட்டிப் பெருக வாழ்வதே சிறந்த அரசியல் முறையாம். அப் பேருள்ளத்தைச் சிறக்கப் பெற்றிருந்தமையால், குலோத்துங்கன் ஆற்றிய அரசியல் செப்பங்கள் எண்ணற் றனவாம். அவற்றுள் ஒரு சிலவற்றை ஈண்டுக் கண்டு செல்வோமாக. அங்கிய நாட்டார்பால் அன்புடைமை: ஒரு நாட்டை அழித்து அடிமை கொள்வதால் ஆகும் ஆக்கத்தினும், அந் நாட்டின் பால் அன்புகாட்டி அணைத்துக் கொள்வதால் ஆகும் ஆக்கமே பெரிதாம் என்ற பேருண்மையை அறிந்தவன் குலோத்துங்கன், அவ்வுண்மையுணர்ந்து, கடல்கடந்த நாடுகளாகிய கடாரத்தோடும், காம்போசத் தோடும் அன்பு கொண்டு அந்நாடுகளுக்குச் சென்று, அந்நாட்டு அரசர்களின் நட்புறவு பெற்று மீண்டதை மூன்னரே கண்டோம், கடல் இடைபட்ட நாட்டவரின் நட்பை நாடா திருப்பனோ? காசிமா நகர்க்கு வடமேற்கில்,  ஐக்கிய மாநிலத்தில் உள்ள கன்னோசி நாட்டுக்காவலனை குலோத்துங்கன் தன் ஆருயிரனைய நண்பனாகப் பெற்றிருந்தான். கங்கையாறு பாயும் கன்னோசி நாட்டான், காவிரியாறு பாயும் கன்னித்தமிழ் நாட்டிற்கு வந்தான். குலோத்துங்கனின் கோநகராகிய கங்கைகொண்ட சோழபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் இறைவனுக்குத் தன் வருகையின் நினைவுச் சின்னமாய், நிவந்தங்கள் பல அளித்துக் குலோத்துங்கனைச் சிறப்பித்தான். வந்தானை வர வேற்று விருந்தளித்ததோடு அமையாது குலோத்துங்கன், சூரியனுக்குக் கோயில் கட்டி வழிபடும் கன்னோசி நாட்டாரின் வழக்கத்தைத் தமிழ்நாட்டிலும் வழங்கச்செய்து, சோணாட்டிலும் சூரியனுக்குக் கோயில் கட்டி, அதற்குக் குலோத்துங்க சோழ மார்த்தாண்டன் கோயில் எனத் தன் பெயரால் பெயர் சூட்டி, வழிபாட்டிற்கு வேண்டும் நிவந்தங்களையும் வழங்கினான்; சூரியனார் கோயில் என இக்காலத்தில் வழங்கப்பெறும் அக் கோயிலில், கங்கைக் கரைக் கடவுளாகிய விசுவநாதருக்கும், விசாலாட்சி அம்மைக்கும் வடிவங்கள் சமைத்துவைத்து, வழிபாட்டிற்கு வழிவகுத்தும் வைத்தான். கங்கைக் கரையான்பால், காவிரிக் கரையான் காட்டும் நட்பின் பெருமை தான் என்னே! சுங்கம் தவிர்த்தமை: கன்னிக் காவிரியின் பாய்ச்ச லால், சோணாடு பொன்னிவளநாடு என்னும் பேரும் புகழும் பெறும் வகையில் வளங் கொழித்தது என்றாலும், நெல் வளம் ஒன்றால் மட்டும் நாட்டின் செல்வநிலை சிறந்து விடாது; அந்நாட்டின் பொன்வளமும் பெருக வேண்டும் என அறிந்து, அப்பொன் வளம் தரும் வெளி நாட்டு வாணிக வளர்ச்சிக்காகவே, புகார் நகரைக் கண்டு, அதனால் பெருந்திருமாவளவன் எனும் புகழ்மிக்க ழன் வழியில் வந்தவன் குலோத்துங்கன். அதனால் வற்றாவளம் தரும் அவ்வாணி  கத்தை வளர்க்கும் வழிவகைகளைக் காண்பதில் அவன் ஆர்வமிக்கிருந்தான்; ஒரு தொழிலின் வளர்ச்சி, அத் தொழிலின் மீது, அரசியலார் விதிக்கும் வரிகளைப் பொறுத்திருக்கும் என்ற வாணிக அறிவு வாய்க்கப் பெற்றவன் அவ்வளவர் கோன். வரி அதிகமாயின், தொழில் வளராது குன்றிவிடும்; அது குறைவாயின், வளர்ந்து பெருகும் என்பதை அறிந்திருந்தான். சோணாட்டுக் கடற்றுறைகளில், கலங்களில் ஏற்றி வெளி நாடுகளுக்கு அனுப்ப வேண்டிய பொருள்களும், வெளி நாட்டிலிருந்து தமிழகத்துப் பேரூர்களின் வாணிக நிலையங்களில் விற்பனையாதற் பொருட்டுக் கலங்களில் வந்த பொருள்களும் மலையெனக் குவிந்து கிடக்கும்; அப்பொருள்கள் அனைத்திற்கும், இதற்கு இவ்வளவு வரி என விதித்து, அதிற் சிறிதும் குறையாமல் வாங்கும் வரி முறையைச் சோழர் குல மன்னர்கள், கரிகாலன் காலத்திலிருந்தே மேற் கொண்டு வந்துள்ளனர். கடல் வாணிகப் பொருள்கள் மீது விதிக்கும் அவ்வரிக்குச் சுங்கம் என்பது பெயர்; அச் சுங்க வரியால் வாணிகத்தின் வளர்ச்சி ஓரளவு தடை யுற்றுளது என்பதைக் கண்டான் குலோத்துங்கன்; மேலும் சுங்க வருவாயை எதிர்நோக்க வேண்டா வகையில், சோணாட்டின் அரசியல் பண்டாரம், நிறைந்திருந்தது. அதையும் அறிந்திருந்தான் அவன், உடனே, வாணிகப் பொருள்கள் மீது, வழி வழியாக விதித்து வாங்கி வந்த சுங்க வரியை அகற்றி விட்டான்; ஆயிரம் ஆண்டுகளாகத் தாங்கி வந்த ஒரு பெருஞ்சுமையை இறக்கிவிட்ட குலோத்துங்கனைச் சோணாட்டு வணிக மக்களும், ஆங்கு வந்து தொழில் புரியும் வெளிநாட்டு, வாணிக மக்களும், வாயார வாழ்த்தினார்கள்; சுங்கம் தவிர்த்த சோழன் எனப் பெயர் சூட்டிப் பாராட்டினார்கள் மக்கள்; தஞ்சை மாநகரைச் சார்ந்திருந்த கருந்திட்டைக் குடிக்குச் சுங்கம் தவிர்த்த சோழ நல்லூர் என்றும், சோணாட்டில் ஒடிய ஒரு ஆற்றிற்குச் சுங்கம் தவிர்த்த சோழப் பேராறு என்றும் பெருமைதரும் அவன் பெயரால்  பெயர் சூட்டி நினைவுச் சின்னம் நாட்டினார்கள் நாட்டு மக்கள். “சுங்கம் இல்லாச் சோழ நாடு” என்ற சிறப்புப் பெயர், சோணாட்டோடு வாணிகத் தொடர்புடைய தொலை நாடுகளின் தெருவெங்கும் சென்று வழங்கிற்று. குலோத்துங்கன் வெற்றி விளங்கப் பரணி பாடிய பெரும் புலவராகிய சயங் கொண்டாரும், மூவர் உலா பாடிய பெரும் புலவராகிய ஒட்டக் கூத்தரும், சுங்கம் தவிர்த்த அச்சிறப்பைத் தம் பாவிடை வைத்துப் பாராட்டியுள் ளார்கள். • - “அவனி திருமகட்காக, மன்னர் அழிவந்த சுங்க தவிர்த்தபிரான்“-பரணி. ’புவிராசராசர் மனு முதலோர் நாளில் தவிராத சுங்கம் தவிர்த்தோன்“-உலா. நிலம் அளக்கப் பெற்றமை; நிலங்கள் மீது விதிக்கும் வரிகள் தரும் வருவாயே, நாட்டின் வருவாயில் பெரும் பகுதியாம், அதுவே நிலையான வருவாயுமாம். ஆதலின், வரி விதிக்கலாம் நிலங்களின் பரப்பு யாது, அந்நிலங்கள் மீது விதிக்கும் வரியின் அளவு யாது என்பதில் வேந்தர்கள் அந்நாள் தொட்டே விழிப்புடையவராய் விளங்கினார்கள். கணக்கெடுப்பு முறையில் கரை கண்டு விளங்கும் இக் காலத்தில், நிலங்களின் பரப்பு, அந்நிலங்களிலிருந்து எதிர் நோக்கலாம் வரிகளின் வருவாய் இவை குறித்து ஐயமறத் தெரிவிக்கும் கணக்கினைப் பெற மாட்டாது கலங்கு கிறார்கள் நாடாளும் தலைவர்கள். அக்குறை ஓர் அரசையே அழித்து விடுமாதலின், அதில் விழிப்புணர்வோடு வாழ்ந்து வந்தான் குலோத்துங்கன். துங்கபத்திரை ஆற்றின் தென்கரை முதல், குமரிமுனை வரைப் பரவி யிருந்த ஒரு பேரரசில், நிலங்களின் அளவு, அரசியலார் அறிந்து கொள்ள முடியாத வகையில் அவ்வப்போது வேறுபட்டுப் போவது எளிதில் நிகழக் கூடிய தா தலின்,நிலங்கள் அவ்வப்போது அளக்கப் பெறுதல் வேண்டும், அதற்கேற்ப, அவற்றின் மீது விதிக்கும் வரிகளின் அளவும் அவ்வப்போது மாற்றப் பெறுதல் வேண்டும் என உணர்ந்தான் குலோத்துங்கன். தன் தாய்வழிப் பாட்டனாகிய கங்கை கொண்ட சோழனின் தந்தையாகிய இராசதிராசன் காலத்தில், சோணாட்டு நிலங்கள் ஒரு முறை அளக்கப் பெற்றன வேனும், அதற்குப் பிறகு மூன்று தலைமுறைக் காலம் கழிந்து விட்டமையால், தன் காலத்தில் ஒரு முறை அளக்கப் பெறுதல் வேண்டும் என்று உணர்ந்தான். அப்பணியைத் திருவேகம்பமுடையான், திருவரங்கத் தேவன் என்ற இரு அரசியல் அதிகாரிகள் பால் ஒப்படைத்தான். அவர்களும் அப்பணியை இரண்டாண்டுக் காலத்தில் செய்து முடித்தார்கள். அப்பெரும் பணியைக் குறைவற முடித்துக் கணக்கெடுத்த அவர்களுக்கு, முறையே, உலகளந்த சோழப் பல்லவரையன், உலகளந்தான் என்ற பட்டப் பெயர்களைச் சூட்டிப் பெரும்ை செய்தான் குலோத்துங்கன். கல்விச்சிறப்பு: குலோத்துங்கன், பரணி பாடிய பெரும்புலவரால், “பல்கலைத்துறை நாவில் உறைந்தவன்” என்றும், ’அறிஞர் தம்பிரான் அபயன்" என்றும் பாராட்டுமளவு பேரறிவு படைத்தவனாவன். கலிங்கத்துப் பரணி என்ற பெயரால் தன் வெற்றியையும், குலோத்துங்க சோழ சரிதை என்ற பெயரால் தன் வரலாற்றையும் இரு பெரும் புலவர்கள் பாடிப் பாராட்டுமளவு புலமையுள்ளமும், புலவர் நட்பும் உடையவன் குலோத்துங்கன். குலோத்துங்கன், கல்விச் சிறப்போடு கலை உணர்வும் உடையான். ஏழிசை பயின்றவன் அவன்; அவ்வேழிசைக்கும் இலக்கணம் காணும் கதையறிவுடையவன், அவன் ஆக்கிய இசை நூலே, அக்கால இசை வல்லார் பின்பற்றிய இலக்கண நூலாம். அவன் இயற்றிய இசை நூலைக் கற்றுத் தேர்ந்து. அதை அவன் கேட்கப் பாடி, “ஏழிசை வல்லபி” எனப் பெயர் சூட்டப் பெற்றாள் குலோத்துங்கன் மனைவியருள் ஒருத்தி. தன்னைப் பாடிப் பரிசில் பெற வரும் பாணர்கள், பாட்டில் தாளப் பிழை யும், கானப் பிழையும் இடம் பெறுமாயின், கண்டு கொள்வான் குலோத்துங்கன். அதனால் பிழையறக் கற்ற பாணர்களே, அவன் அவை வந்து பாடி நிற்பர் என்று கூறிக் குலோத்துங்கன் கலையுள்ளத்திற்குப் பாராட்டளிக்கிறது பரணி. “தாளமும் செலவும் பிழையா வகை தான்வகுத்தன தன்எதிர் பாடியே காளமும் களிறும்பெறும் பாணர்தம் கல்வியில் பிழை கண்டனன் கேட்கவே.” சமயப் பொதுநோக்கு: சமயப் போராட்டத்தால் சரிந்த பேரரசுகள் பல. அதனால், ஒரு பேரரசின் ஆட்சிப் பொறுப்பேற்றிருப்பவன் பால் அமைந்து கிடக்க வேண்டிய அரிய பண்புகளில், சமயப் பொறையும் ஒன்று. குலோத்துங்கன், தன் குல முன்னோர்களைப் போல், தில்லையில் நடம் புரியும் பெருமான் மீது பேரன்பு கொண்டு ‘திருநீற்றுச் சோழன்’ எனப் பெயர் பூண்டு சைவ சமய நெறி நின்றான். எனினும், அவன் பிற சமயங்களை வெறுத்தவன் அல்லன்; மாறாக, அவன் மனம், அச்சமயங்களிலும் ஆரா அன்பு கொண்டிருந்தது. வேங்கி நாட்டில் அவன் வாழ்ந்திருந்த போது, விஷ்ணு வர்த்தனன் எனும் வைணவப் பெயரையே விரும்பி மேற்கொண்டான். மன்னார்குடியில் இருக்கும் இராச கோபாலசாமி கோயில், குலோத்துங்கன் காலத்தில் எடுக்கப்பட்டதே; அது. அக்காலத்தில், குலோத்துங்க சோழ விண்ணகரம் என அவன் பெயரினாலேயே பெயர் சூட்டப்பட்டிருந்தது. தன் நண்பன், கடார்த்தரசன், நாகப்பட்டினத்தில், ஒரு புத்த விகாரம் அமைக்கவும், அதற்கு இராசேந்திர சோழப் பெரும்பள்ளி எனத் தன் பெயரைச் சூட்டவும் இசைவு தந்ததோடு அவ்விகாரத்திற்குச் சில ஊர்களை இறையிலியாக்கி அளித்த குலோத்துங்கன் செயல், புத்த சமயத்தின்பால் அவன் கொண்டிருந்த பற்றினைப் புலப்படுத்துவதாமன்றோ? இவ்வாறு கொற்றமும் கோலும் சிறக்க, ஒரு பேரரசை ஐம்பது ஆண்டு காலம் அளவும் கட்டிக் காத்த பெருமையுடையான், குலோத்துங்கன் ஒருவனே. வாழ்க அவன் குலப்புகழ்! வளர்க அவன் கோன் முறை! மௌரியர் மரபு *“மறந்தும் மழைமறா மகத நன்னாடு” “மகதத்துப் பிறந்த மணிவினைக் காரரும்** **பாடலிப் பிறந்த பசும்பொன் வினைஞரும்“** எனப் பண்டைப் பெரும் புலவர்களால் பாராட்டப் பெறும் பெருமை வாய்ந்தது மகதநாடு. ஆயிரம் மைல்களுக்கு அப்பாற்பட்ட தமிழ்நாட்டில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்திருந்த பெரும் புலவர்கள் அறிந்து பாராட்டுமளவு அனைத்துலக நாடுகளினும் உயர்ந்து விளங்கிய சீரும் சிறப்பும் வாய்ந்தது மகத நன்னாடு. வட இந்தியாவில், கங்கை பாயும் வளம் மிக்க நிலத்தில் விளங்கிய விழுச் சிறப்புடையது அம்மகத நாடு. இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே, பேரரசாய் விளங்கிய பெருமை வாய்ந்தது. அந்நாடு. அந் நாட்டை அக்காலத்திலேயே ஆண்ட மன்னர் மன்னர் எண்ணற்றவராவர். தான் பிறந்த கிரேக்க நாட்டில் தொடங்கிய தன் வெற்றித் திருவுலாவைச் சிந்து நதியைக் கடந்த பின்னரும் கைவிடக் கருதாத கிரேக்கப் பெருவீரன் அலெச்சாந்தரின் ஆசைக் கனலை அவித்து வெற்றி கண்ட விழுச் சிறப்புடையது அம் மகதம். மாண்புமிக்க அம்மகத நாட்டிற்குத் தலைநகராகும் தனிச்சிறப்பு வாய்ந்தது பாடலிபுத்ரம்.கங்கைப் பேராறும், சோணையும் கவக்கும் இடத்தில் அமைந்திருந்த அந் நகரையும், அந்நகரின் பொன் வளத்தையும், அந்நகராண்ட நந்த மன்னர்களின் நீணிதிப் பெருக்கையும்,பேராசைப் பேயனாகிய அக்குலக் கோமகன் ஒருவன் பெரும் பதுமம் என்று பேரெண் அளவு ஈட்டிய தன் மாநிதியைத் தான் அல்லது பிறர் எவரும் அறிதலோ அடைதலோ ஆகாது எனும் அழிவுள்ளம் கொண்டு, கங்கைக்கு அடியில் சுருங்கை அமைத்து, அதில் வைத்துக் காத்து வாருங்கால், கங்கையின் போக்கு திடுமென மாற, அம்மாநிதி வைத்த இடம் அறியாவாறு மறைந்து போன மானக் கேட்டையும், நம் பழந்தமிழ்ப் புலவர்கள் அறிந்திருந்தார்கள். தாம் அறிந்த அச்செய்திகளைத் தம் பாக்கள் வழியே நமக்கும் புலப்படுத்தியுள்ளார்கள்: *“வெண்கோட்டு யானை சோனைபடியும்” பொன்மலி பாடலி,“** **“பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்** சீர்மிகு பாடலிக் குழிஇக், கங்கை **நீர் முதல் கரந்த நிதியம்.“** பழந்தமிழ்ப் புலவர்களால், பாடலி எனப் பெயரிட்டு அழைக்கப் பெறும் அப்பேரூர், பாடலிபுத்ரம், புஷ்பபுரம், குசுமபுரம் என்றெல்லாம், அக்கால மக்களாலும், அந்நாட்டு மக்களாலும் அழைக்கப் பெற்றது. மலர் நகரம் என்ற மாண்புமிக்க பொருள் தரும் பெயரைத் தாங்கி நிற்கும் அப்பேரூர், கி.மு. 500-ல், மகத நாட்டின் மன்னனாய் மணி முடி புனைந்து கொண்ட அஜாதசத்ரு என்ற ஆற்றல் மிக்க பெருவீரனால், கங்கைக்கும் வடக்கில் விளங்கிய நாடுகளைக் கட்டிக் காக்கும் கருத்தையுட் கொண்டு, கங்கையும் சோணையும் கலக்குமிடத்தில் தோற்றுவிக்கப்பட்டது. அவன் காலத்தில் ஒரு சிற்றர ணாகத் தோற்றுவிக்கப்பட்ட பாடலியை, அவன் பெயரன், புகழ் மிக்க பேரூராக மாற்றி மாண்புற்றான். பாடலி, பாடலிபுரத்தில் எனப் பண்டு பெயர் பெற்றிருந்த அந்நகர்க்கு இக்கால மக்கள் இட்டு வழங்கும் பெயர்கள் பாட்னா, பங்கிபூர் என்பனவாம். கி. மு. 500-ல் தோற்றுவிக்கப்பட்ட பாடலி, கி. மு. 600-லும் பெருமை குன்றாமலே விளங்கிற்று. மகத நாடாண்ட மௌரிய மன்னர்களின் அரசவைக்குக் கிரேக்க நாட்டுக் காவலன், கி. மு. 300-ல் அனுப்பிய நல்லெண்ணத் தூதுவன் மெகஸ்தனிஸும், இந்நாட்டுச் சமய நிலைகளை நேரில் கண்டறிய, கி. பி. 400-ல் இந் நாட்டிற்கு வந்திருந்த முதற் சீனப் பெருமகனாகிய பாகியானும், அப்பெரு நகரில் பல காலம் வாழ்ந்து, அதன் பல்வேறு நலங்களையும் கண்டு களித்து, தாம் கண்ட அந்நலங்களை நம்மனோரும் கண்டு களிக்க, விரிவாக எழுதி வைத்துச் சென்றார்கள். பாடலிபுத்ரம், கங்கையும் சோணையும் ஒன்று கலக்கும் கூடற்கண், சோணையாற்றின் வடகரையில், கங்கைக்குச் சில கல் தொலைவில் தோற்றுவிக்கப்பட்டது. கங்கையின் போக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மாறி, ஏறக்குறைய பன்னிரண்டு கல் தொலைவிற்கு அப்பால் ஒடத் தொடங்கி விட்டது. பண்டு கண்ட பாடலி இப்போது இல்லை; கங்கை வெள்ளத்தில் அது அழிந்து விட்டது போலும். புதையுண்டு போன பழைய பாடலியின் மீதே, இக்கால பாட்னா நகரம் பெருமிதமாக வீற்றிருக்கிறது. பழைய பாடலி, ஒன்பது கல் நீளமும், ஒன்றரைக் கல் அகலமும் கொண்ட, நீண்ட சதுரப் பேரூராக நின்று காட்சி அளித்தது. அது பெருமரத் துண்டுகளால் ஆகி, அகன்று உயர்ந்த மதில்களால் வளைப்புண்டு கிடந்தது. குடைந்து அமைத்த அறுபத்தினான்கு வாயில்களும், மணி முடியென, வானுற உயர்ந்து விளங்கும் ஐந்நூற்று எழுபது கோபுரங்களும் அரண் மதில்களுக்கு அணி செய்து கிடந்தன. அரணைச் சூழ, ஆழ்ந்து அகன்ற அகழி வெட்டி, அதில் சோணையாற்றின் நீரைத் தேக்கித் தலைநகரைக் காத்து வந்தார்கள். அழகிய மரஞ்செடி கொடிகள் அணி அணியாக வளர்ந்து நிற்க, வண்ணத்தாலும், வடிவாலும் வனப்பு காட்டும் மீன்கள் வாழும் நீர் நிலைகள் நிறைந்திருக்க, அகன்ற பெரிய பூஞ்சோலை நாற்புறமும் சூழ்ந்து கிடக்க, இடையில், கண்ணையும் கருத்தையும் கவரும் கவின் ஊட்டி, பொன் மலர்க் கொடிகள் சுற்றிக் கிடப்பன போலவும், வெள்ளிப் பறவைகள் வீற்றிருப்பன போலவும் வனையப்பட்ட தூண்களை வரிசை வரிசையாக நாட்டிக் கட்டிய கோமகன் கோவில் கொலு வீற்றிருந்தது. பாடலியைத் தலைநகராகக் கொண்டு மகதத்தை ஆண்ட மன்னர்கள், மௌரிய குல மன்னர்களுக்கு முன்னரும் சிலர் இருந்தனர். என்றாலும், அன்னார் மரபு மாசுடையது எனக் கூறப்படுதலான், மகத நாடாண்ட முதல் மன்னர் மரபினர் மௌரியரே என்று வரலாற்று நூலாசிரியர்கள் கூறிச் சென்றுள்ளார்கள். மௌரியருக்கு முன். அந்நாடாண்டவர் நந்த குலத்தவராவர். மகத நாடாண்ட மன்னன் ஒருவன் மனைவி, அந்நாட்டு அம்பட்டன் ஒருவன் பால் காதல் கொண்டாள்; அக்கள்ளக் காதலர் இருவரும் தங்கள் காதலுக்குத் தடையாய் இருந்த மன்னனைக் கொன்று விட்டார்கள், மன்னன் மறைந்த பின்னர், அவன் மக்களைக் காக்கும் கடமை மேற் கொண்டுள்ளேன் எனக் கூறிக் கொண்டு, அரசியின் அந்தப்புரத்தை விட்டு, அரசியலில் காலடியிட்ட அரசியின் கள்ளக் காதலன், சின்னாட்களுக்கெல்லாம் மன்னன் மக்களையும், மற்றும் உள்ள மன்னர் குலத்தவரையும் கொன்று விட்டு, மகத நாட்டிற்குத் தானே மன்னன் என மணி மகுடம் சூட்டிக் கொண்டான். தனக்கும் தன் காதலி அரசமாதேவிக்கும் பிறந்த தன் மகனை, மகத நாட்டின் இளங்கோவாக்கி முடி சூட்டி வைத்தான்; இது நிகழ்ந்து கொண்டிருக்குங்கால், அம்மகத நாட்டு மன்னர் மரபில் வந்தான் ஒருவன், முரா என்ற பெயர் உடைய ஓர் இழிகுல மங்கையை மணந்து கொண்டான்; அவர்களுக்கு மகனாகப் பிறந்து சந்திரகுப்தன் எனும் பெயர் பூண்டு வளர்ந்த இளைஞன், உலகியல் உணர்வு வரப் பெற்றதும், தன் மரபினர் சூட வேண்டிய மணி முடியை, மன்னர் குலத்துக்கு மாசூட்டிய ஒருவன் சூடியிருப்பதை அறிந்து உளம் கொதித்தான்; சந்திரகுப்தன் பிறப்பையும்,அவன் உள்ளத்தில் உருவெடுக்கும் அரசியல் புயலையும் கண்டு கொண்டான் அரியணையில் வீற்றிருக்கும் அக்கள்ளக் காதவன்; உடனே சந்திரகுப்தனை நாடு கடத்தி விட்டான். நாடு கடத்தப்பட்ட சந்திரகுப்தன், பஞ்சாப் சென்று வாழ்ந்திருந்தான். ஆங்குத் தலை மறைந்து வாழ்ந்திருந்த சந்திரகுப்தன், அக்காலை ஆங்குப் படையெடுத்து வந்த கிரேக்க வீரன் அலெக்சாந்தரைக் கண்டான். கண்டு “மகதநாட்டு அரியணையில் வீற்றிருப்பவன், அரசர் வழியில் வராதவன்; அம்பட்டர் வழியில் வந்தவன். அதனால் மக்கள் அவன்மீது மாளா வெறுப்புக் கொண்டுள்ளனர்; ஆகவே இந்நிலையில் என்னோடு வந்தால், மகத நாட்டை வெற்றி கொள்ளலாம்; வருக” என வேண்டுகோள் விடுத்தான். இருநூறு ஆயிரம் வீரர்களையும், இருபதாயிரம் குதிரைகளையும், இரண்டாயிரம் தேர்களையும் நாலாயிரம் யானைகளையும் கொண்டிருந்த மகத நாட்டின் படைவலி கண்டு அஞ்சியோ, உள்ள அரசழித்துத் தான் ஆள எண்ணும் சந்திரகுப்தன் ஆசை அடாதது என எண்ணியோ அலெக்சாந்தர் அவ்வழைப்பை ஏற்றுக் கொண்டிலன். மேலும் சில ஆண்டுகள் சென்றன. மாவீரன் அலெக்சாந்தர் தன் தாய் நாட்டிற்குத் திரும்பிவிட்டான். அவன் கால்கள் இந்திய மண்ணிலிருந்து மறைந்துவிட்டன என்ற செய்தி அறிந்ததும், அதுகாறும் அவன் ஆண்மை ஆற்றல்களுக்கு அஞ்சி அடங்கியிருந்த அரசரெல்லாம், அயலார் ஆட்சித் தலைமையை வெறுத்து, தத்தம் ஆட்சியை நிறுவத் துணிந்து முன் வந்தார்கள். இங்கு இவ்வுரிமையுணர்ச்சி ஊற்றெடுத்துப் பெருகிக் கொண்டிருக்கும் காலத்தில், அலெக்சாந்தர் இடை வழியில் இறந்து போனான் என்ற செய்தியும் வந்து சேரவே, அடங்கியிருந்த அரசர்கள் விடுதலைபெற வீறுகொண்டு எழுந்து விட்டார்கள். அப்புரட்சிப் படைக்குத் தலைமை தாங்கினான், இருபத்தைந்து ஆண்டு நிரம்பாத இளையோனாகிய சந்திரகுப்தன். வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் கொள்ளையடித்துக் குடியோம்பும் குடியில் வந்த வீரம் மிக்க இளைஞர்களைக் கொண்ட ஒரு பெரிய படைக்குத் தலைவனாய் தகுதி பெற்றிருந்த சந்திரகுப்தன் பஞ்சாப் மாகாணத்தில் பாராண்டிருந்த கிரேக்க நாட்டுக் காவலனைக் கொன்று, அவனுக்குத் துணைநின்ற படைகளை அழித்து அம்மாகணத்தைக் கைப்பற்றிக் கொண்டான். வடமேற்கு எல்லையில் வெற்றி கண்டதும், அவ்வீர இளைஞன் உள்ளம் தான் பிறந்த, மகதநாட்டு மண்ணின் மீது சென்றது; உடனே தன் துணைவரோடு மகதநாடு சென்று சேர்ந்தான்; அக்காலை அந்நாட்டு அரியணையில், அரசியாரின் கள்ளக் காதலால் பிறந்த கான்முளை அமர்ந் திருந்தான். அவனைப் பெற்றவன் பால் பொருந்தியிருந்த அத்தனை இழி பண்புகளும் அவன்பாலும் பொருந்தியிருந்தன. பொருளாசையில் பெற்றவனையும் மிஞ்சியிருந்தான் அவன் வரிமேல் வரியென விதித்து, நாட்டு மக்களை வாட்டி வருத்தினான், ஒழுக்கம் என ஒரு பொருளும் உலகில் உளதோ?’ என்று கேட்குமளவு உயர்ந்திருந்தது அவன் செயல், அதனால் நாடனைத்தும் அவனை வெறுத்தது, அவன் ஆட்சி அழிவுறும் நன்னாளை ஆர்வத்தோடு எதிர்நோக்கியிருந்தார்கள் மகத நாட்டு மக்கள். ஆனால் தங்கள் அண்டை நாட்டு அரியனைபில், அறிவிழந்து அழிசெயல் புரிவான் ஒருவன் அமர்ந் திருப்பது தம் ஆக்கத்திற்கு வழியாகுமேயல்லது. சந்திர குப்தன் போலும் ஆற்றல்மிக்க அடலேறு ஒருவன். அமர்வது, தம் ஆக்கத்திற்கு வழியாகாது. மாறாகத் தம் அழிவிற்கே அது துணைபுரியும் என உணர்த்த மகதத்தின் அண்டை நாட்டு மன்ன்ர்கள் எல்லோரும் ஒன்று திரண்டு, மகதத்தில் சந்திரகுப்தன் எழுப்பிய புரட்சிப்போர் வெற்றி பெறாதிருக்கப் பெரும்பாடுபட்டனர். ஆனால், அரசியல் புரட்சியை வெற்றி பெற நடத்த வல்ல உற்ற துணைவன் ஒருவன், சந்திரகுப்தனுக்குக் கிடைத்திருந்தான். அரசியல் சூழ்ச்சிகளில் வல்ல அவன் ஓர் ஆரியன். சாணக்கியன், கெளடல்யன், விஷ்ணு குப்தன் எனப் பல பெயர் இட்டு அழைக்கப் பெறும் அவன் அறிவின் பெருந்துணையோடு, பிறந்த நாட்டில் புரட்சிக் கொடியேந்திய சந்திர குப்தன், விரைவில் வெற்றிக் கொடி நாட்டி விட்டான். அரியணையில் வீற்றிருந்த, அவ்விழி குலத்தான் கொல்லப் பட்டான். அதைத் தொடர்ந்து அவனுக்கு உறவுடையார் அனைவரும் அறவே அழிக்கப்பட்டனர். சந்திரகுப்தன் மகத நாட்டின் மன்னனாய் மணி முடி புனைந்து கொண்டான். தான் பிறந்த குடிக்கு மௌரியர் குடி எனத் தன்னை ஈன்ற தாயின் பெயரால் பெயர் நாட்டி, அவளுக்கு அழியாத நினைவுச் சின்னம் அமைத்து, அன்பு வழிபாடாற்றினான். மௌரிய மரபின் முதல்வனாகிய சந்திர குப்தன், ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டதும், ஒரு சிறிதும் ஒய்வு கொண்டிலன். நந்த அரசனிடமிருந்து கைப்பற்றிய மகத நாட்டுப் படையைப் பெருக்கினான். அது ஆறு நூறாயிரம் வீரர்களையும் முப்பாதாயிரம் குதிரைகளையும், ஒன்பதாயிரம் களிறுகளையும், எண்ணித் தொலையாத் தேர்களையும் கொண்ட பெரும் படையாய் மாறிற்று. அப்பெரும் படையும், அந்தணன் சாணக்கியனின் அரசியல் சூழ்ச்சித் திறனும் துணைவரைப் போர் மேற்கொண்டு புறப்பட்ட அவன் விரைவில் வடநாட்டரசுகள் அனைத்தையும் வென்று அணைத்துக் கொண்டான். இமயப் பெருவரையின் அடிமுதல், தருமதையாற்றின் கரை வரையும் பரவி. பிருந்த வடதிச்ை நாடுகள் பலவும் அவன் ஆணைக் கீழ் வந்து அடைந்தன. மேற்கில் அரபிக் கடலும், கிழக்கில் வங்கப்பெருங் கடலும் அவன் நாட்டின் இருபுற எல்லைகளாய் நின்று காத்தன. இந்தியாவின் வரலாறு கண்டமுதற் பேரரசன், மன்னர் மன்னவன், அரசர்க்கு அரசன் எனும் அழியாப் புகழ் அவனை வந்தடைந்தது. சந்திரகுப்தன் வென்ற நாடுகளில் அமைதியை நிலை நாட்டி, ஆங்கு தன் ஆணை அழிக்கலாகாவாறு நடை பெறுதற்காம் வழிவகைகளை மேற்கொண்டிருக்குங்கால், வடமேற்கில் ஒரு பெரும்பகை உருவெடுத்தது. மாவீரன் அலெக்சாந்தர் மாண்ட பின்னர் அவன் வென்ற மேற்கு ஆசிய நாடுகளுக்கும், மத்திய ஆசிய நாடுகளுக்கும் செல்யூகஸ் என்பவன் தலைவனாக வந்து சேர்ந்தான். கிரேக்க வீரர்கள் வெற்றி கொண்ட இந்திய நாடுகளிலும், தன் ஆட்சி செல்ல வேண்டும் என அவன் விரும்பினான். தன் முன்னோன் வழி காட்டிய முறைப் படியே சிந்து நதியைத் தாண்டி, கங்கைச் சமவெளியுள் புகுந்து போரிட்டான்; ஆனால் அந்தோ! ஆங்கு அவன் வரவை எதிர் நோக்கிக் காத்திருந்த சந்திரகுப்தன் படை தன் படையைக் காட்டிலும் பன்மடங்கு பெருமை வாய்ந்திருந்ததை அறியாது போனான்; அதனால் வெற்றி தேடிப் புறப்பட்ட அவனுக்கு ஆங்கு தோல்வியே காத்திருந்தது. மகத நாட்டு மன்னன் மாபெரும் வெற்றி பெற்றான், சிந்து நதிக்குக் கீழ்ப்பால் உள்ள நாடுகளையும் ஆள வேண்டும் என்னும் ஆசை கொண்டு வந்த கிரேக்கக் காவலன், போர் முடிவில் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் பயனாய், அந்நதிக்கு மேற்பால் உள்ள தன் நாட்டிலும் பெரும் பகுதியை இழக்க வேண்டியதாயிற்று. இந்திய நாட்டின் எல்லைக்கு அப்பாற்பட்ட நாட்டில்; இந்தியப் பேரரசின் ஆணை செல ஆண்ட முதல் மன்னன் என்னும் மங்காப் புகழ் மகத நாட்டானுக்குக் கிட்டிற்று; ஆப்கானிஸ்தானமும், அதை யொட்டிய சிறு நாடுகள் சிலவும் சந்திர குப்தன் உடைமைகளாயின. இமயப் பெருமலையைத் தாண்டி இந்தியாவுக்குள் நுழைய இடமளிக்கும் நுழைவாயிலாய் விளங்கிய கைபர் கணவாய், சந்திர குப்தன் காவற் கீழ் வந்துற்றது. இந்தியாவின் வடவெல்லைக் காவற் கூடற்களுள் தலை சிறந்தது என மதிக்கப் பெற்று, இன்றும் பெரும்படை நிறுத்திக் காக்கப் பெறும் அக்கணவாயை, இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காத்து நின்றான் சந்திரகுப்தன் என்ற சிறப்பு அவனுக்கு வாய்த்தது. மகதத்தின் மன்னன் மாற்றானுக்குரிய மண்டலங்களைப் பெற்றதோடு நின்றானல்லன். அம்மாற்றான் பெற்றெடுத்த மகள், மாசிடோனியா நாட்டின் மங்கை, மகத நாட்டின் மாதேவியாய்ப் பாடலி வந்து சேர்ந்தாள். மகளை மணம் செய்து தந்த செல்யூகஸுக்கு, மன்னன் ஐந்நூறு ஆண் யானைகளை அளித்து, அவன் படை பெருகத் துணை புரிந்தான். மேலைநாட்டு மன்னனோடு மகதத்தின் காவலன் மேற்கொண்ட மணத் தொடர்பால் ஏற்பட்ட நட்பு, மகத நாட்டு அரசவையில் வந்து தங்கிய கிரேக்கத் தூதுவன் மெகஸ்தனிஸால் மேலும் வளர்ந்து வலுப் பெற்றது. மௌரியர் அரண்மனையில் வாழ்ந்திருந்த அவ்வரசியல் தூதுவன், மகத நாடு, அந்நாட்டின் தலை நகர் பாடலி, மகத நாட்டு மக்களின் பழக்க வழக்கங்கள், அந்நாட்டின் ஆட்சி முறை ஆகிய அனைத்தைப் பற்றியும் விரிவாகவும், விளக்கமாகவும் எழுதி வைத்துள்ளான். அவன் அன்று எழுதி வைத்த அதுவே மௌரிய அரசைப் பற்றி நாம் அறிந்து கொள்ள இன்றும் நின்று துணை புரிகிறது. நிற்க, தன் தோளாற்றலாலும், தன் படைத் துணையாலும் அடைந்த பேரரசில், தனக்கு அரசியல் வழிகாட்டியாய் விளங்கிய ஆரிய நண்பன் சாணக்கியன் துணையால், அமைதி நிலவும் நல்லாட்சி நிலவச் செய்தான் சந்திர குப்தன். நாகரிக நெறி நிற்கும் நல்லரசு என இக்கால வரலாற்றுப் பேராசிரியர்களாலும் வாழ்த்த வல்ல விழுமிய அரசாய் விளங்கிற்று சந்திரகுப்தன் கண்ட அம்மௌரியப் பேரரசு.. மகத நாட்டு மன்னன் கோயிலில், பொன்னும் நவ மணியும் மண்டிக் கிடந்தன: ஆறு அடி அகலம் வாய்ந்து, பொன்னாலும் வெள்ளியாலும் வனையப்பட்ட வண்ணக் கிண்ணங்களும், நுண்ணிய சித்திர வேலைப்பாடமைந்த அரியணைகளும், அரசு கட்டில்களும், செம்பால் செய்து, நவமணிகள் வைத்திழைக்கப்பெற்ற வகை வகையான கலங்களும், கண்ணைப்பறிக்கும் வண்ணம் ஊட்டிப் பொன்னிழை இட்டு நெய்த ஆடைகளும், அழகிய சட்டைகளும், மன்னன் கோயிலிலும், மன்னனுக்கு நிகரான மக்கள் தலைவர்களின் மாடங்களிலும் மலிந்துகிடந்து, அக்காலச் செல்வச் சிறப்பிற்குச் சான்று பகர்ந்தன. பெற்ற வெற்றி குறித்தும், பிறந்த நாள் குறித்தும் எடுக்கும் விழாக்காலங்களில், கருஞ்சிவப்புப் பட்டும், மஞ்சள் நிறப் பொன்னிழையும் கலந்து நெய்த கரையினைக் கொண்ட நுண்ணிய மெல்லிய மஸ்லின் துணியால்மூடி, முத்துச்சரங்கள் நாலவிட்ட பொற்பல்லக்கில் அமர்ந்து, அரசன் உலா வருவன். விழா நிகழ் இடங்களில், காளைச்சண்டை, ஆட்டுக்கிடாய்ச் சண்டை, யானைச்சண்டை, காண்டாமிருகச் சண்டைகளை,மன்னனும் மக்களும்கண்டு மனங்களிப்பர். வீரர்கள் மேற்கொள்ளும் வாட்போர், விற்போர் விளையாட்டுகளும், அவ்விழாக் களங்களில் நிகழ்வதுண்டு. இக்காலக் குதிரையோட்டப் பந்தயம் போல் காளைகளை ஒடவிட்டுப் பந்தயம் கட்டும் வழக்கத்தில், அக்காலத்தில் அரசர்களும் ஆர்வம் கொண்டிருந்தார்கள். இவ்விளையாட்டுக்களைவிட , நகர் நடுவே அமைத்த வேலிகளுக்கு இடையே வேட்டை விலங்குகளை விடுத்து, அவ்வேலியின் ஒரு கோடியில் அமைக்கும் உயர்ந்த மேடை மீது நின்று மன்னன், அவ்விலங்குகளை வேட்டையாடி மகிழும் விளையாட்டையே வேந்தர்கள் மிகவும் விரும்பினார்கள். அதற்கேற்ப, அவ்விளையாட்டு விழா ஏனைய விளையாட்டு விழாக்களைக் காட்டிலும் மிக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது. அமைச்சர் முதலாயினோர் சூழ, அரசவையில் அமர்ந்து முறையளிக்கவும், குறைபோக்கவும், காடு புகுந்து வேட்டையாடவும், களம்புகும் போர்புரியவும் புறம் போவதல்லது, பிற்காலங்களில் அரசன் அரண்மனைப்புறம் வருதல் இல்லை. அரண்மனைக்குள் மெய்க்காவலர் சூழ, அவன் அடங்கியிருத்தல்வேண்டும் என்றே அக்கால அரசியல் நூல்கள் அறிவூட்டின. ஆயினும் ஒரு நாளில் ஒரு முறையாவது, மன்னன் அரியணையில் அமர்ந்து, காட்சிக்கு எளியனாய் இருந்து, தம் முறையீடுகளை நேரில் கேட்டு நீதி வழங்கவேண்டும்; குறைபாடுகளைக் கேட்டறிந்து அது தீர்க்கவேண்டும் என மக்கள் விரும்பினார்கள், மகதப் பேரரசை அளித்து, அதன் அரியணையில் அசைக்கமுடியாதவாறு தன்னை அமர்த்திய தன் நாற் படையைப் பெருமளவில் பெருக்குவதிலும், அப்படைக்கு வேண்டும் படைக்கலங்களை அளித்து, அணிசெய்து பேணிக் காப்பதிலும் விழிப்புடையனாய் விளங்கினான் சந்திரகுப்தன். படையைப் பேணிப் புரக்கும் பொறுப்பு ஐவர் அடங்கிய ஆறு ஆட்சிக் குழுவினர் பால் ஒப்புடைக்கப்பட்டிருந்தது. முதற்குழு கடற்படைத் தலைவன் துணைகொண்டு கடற்படை நிலையங்களைக் கண்காணித்தது. இரண்டாங்குழு படை செலவு, படை யுணர்வு, படைக்கலம் வழங்கல் ஆகிய பொறுப் பேற்றிருந்தது. மூன்றாவது குழுவினர் காலாட் படையையும், நான்காவது குழுவினர் குதிரைப் படையையும், ஐந்தாவது குழுவினர் தேர்ப்படையையும், ஆறாவது குழுவினர் காற்றுப் படையையும் கண்காணித்து வந்தனர். பாடலிபுத்ரம், தட்சசீலம், உச்சைனி போலும் மகத நாட்டு மாநகர்கள், ஆறு ஆட்சிக் குழுவினராகப் பிரிந்து பணிபுரியும் முப்பது உறுப்பினர்களால் ஆன நகராட்சி மன்றத்தால் ஆளப்பட்டு வந்தன. முதற்குழு கைத் தொழில் வளர்ச்சியில் கருத்துன்றியிருந்தது. வேலைக்குத் தகுந்த கூலி கெர்டுக்கவேண்டும்; கூலிக்குத் தக்க வேலை செய்தல் வேண்டும்; ஆக்கப்படும் பொருள்கள் கலப்பற்று, கைத்திறம் விளங்கும் உயர்வுடையவாதல் வேண்டும்; நுண்கலைத் தொழில் வல்லார்க்கு, மன்னர்க்கு நிகரான மதிப்பளிக்க வேண்டும்; அவர்க்கும், அவரால் ஆக்கப்பட்ட அரும் பொருளுக்கும் கேடு விளைப்பவரின் கையையும் கண்ணையும் போக்கும் கடுந்தண்டம் அளிக்க வேண்டும் என்ற அரச ஆணைகளைச் செயற்படுத்துவது அக்குழுவின் அலுவலாம். இரண்டாங்குழு கடல் கடந்த நாடுகளிலிருந்து வந்து வாழ்பவரின் நல்வாழ்க்கையில் நாட்டம் செலுத்திற்று. வெளி நாட்டார்க்கு வாழ்விடம் தேடித் தருவதும். வழித்துணையளிப்பதும், நோயுற்றால் அது தீர மருந்தளிப்பதும், இறந்து போவார் உடலை உரிய முறையில் அடக்கம் செய்வதும், அவர் உடைமைகளைக் காத்து உரியவார் பால் ஒப்படைப்பதும் அக்குழுவின் கடமைகளாம். மகத நாட்டு மக்களின் பிறப்பு இறப்புக்களை மறவாமல் பதிவு செய்யும் பணியை மூன்றாங்குழு மேற்கொண்டிருந்தது. நாட்டிற்குத் தேவையாம் பொருள் அளவையும், நாட்டு மக்களிடத்திலிருந்து பெறக்கூடிய வரியளவையும் அறியத் துணை புரிவது இக்குழுவினர் காட்டும் கணக்கே ஆதலின், அதன் அலுவல் அரசாட்சிக்கு இன்றியமையாது வேண்டப்பட்டது. தம் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாழ்பவர் ஒவ்வொருவரைப் பற்றியும் குறித்து வைக்க வேண்டுவது நகரக் காவலரின் நீங்காக் கடமையாம்; ஆண் அல்லது பெண், இளைஞன் அல்லது முதியோன், சாதி, இயற் பெயர், குடிப்பெயர், செய்தொழில், ஆண்டு வருவாய், ஆண்டுச் செலவு, உள்ள கால்நடைச் செல்வம் ஆகிய இவை குறித்த விளக்கங்களை ஒன்று விடாமல் குறித்து வைப்பர். அது மட்டுமன்று; தம் ஆட்சி எல்லைக்குள் வருவோர் போவோரின் எண்ணிக்கையையும் குறித்து வைக்கக் கடமைப்பட்டவராவர்; மக்கட் கணிப்புக் குறித்துப் பொய்க் கணக்கு அளிப்பவர், திருட்டுக் குற்றம் புரிந்தவர் போல் உறுப்புக் குறைபடும் கடுத்தண்டத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். வாணிக வளர்ச்சி நான்காம் குழுவினர் பால் இருந்தது. விற்பனையை ஒழுங்கு செய்வது முத்திரையிட்டபடி, படிக்கல் முதலா அளவுக் கருவிகளை வழங்குவது, வாணிகம் புரிவார்க்கு வாணிக உரிமைச் சீட்டு வழங்கி அதற்கான கட்டணம் தண்டுவது ஆகிய இவை அக்குழுவின் பணிகளாம். வரி தண்டலை எளிமையாக்குதற்கு பொருட்டு பொருள்களை அவை தோன்றும் இடங்களிலேயே விற்பனை செய்தல்கூடாது பொருளணைத்தும் வாணிக நிலையங்களுக்கு வந்தே விற்பனையாதல் வேண்டும்; விற்கும் பொருள் ஒவ் வொன்றின்மீதும் வரிபெற்றமையைக் காட்டும் அரச இலாஞ்சனை இடப்பெற்ற பின்னரே அவற்றை விற்றல் வேண்டும் என்பனபோலும் விதிமுறைகள் வகுக்கப் பெற்றிருந்தன. வெளிநாடுகளிலிருந்து வாணிகம் கருதி வந்து குவியும் பொருள்களுக்கு, ஐந்தில் ஒரு பங்கு விலை, சுங்கமாக வசூலிக்கப் பட்டது. பழங்கள், காய்கறிகள் போலும் எளிதில் கெடக்கூடிய பொருள்களுக்கு ஆறில் ஒரு பங்கே வரியாக விதிக்கப் பெற்றது. பத்தில் ஒரு பங்கு வரி விதிக்கப் பெறும் உணவுப் பொருள் வகையும் சில இருந்தன. பொன்னும் நவமணியும் போலும் விலை யுயர்ந்த பொருள்களுக்கு விதிக்க் வேண்டிய வரியளவை, அப்பொருள்களின் தரம் அறியவல்லார், அவ்வப்போது அறிந்து விதித்தனர். தொழிற்சாலைகள் ஆக்கி அளிக்கும் பொருள்களின் தரம் குறையாதபடி பார்த்துக் கொள்வதும், அவற்றை அவற்றின் தரத்திற்கேற்பப் பிரித்து வகை செய்வதும்; புதுப் பொருளும் பழம் பொருளும் கலந்து விடாதபடி கண்காணிப்பதும், கலப்பவர்க்குக் கடுந்தண்டம் விதிப்பதும் ஐந்தாங்குழு ஆற்றவேண்டிய பணிகளாம்.வாணிகப் பொருள்களின் விலையில் பத்தில் ஒரு பகுதியை வாணிக வரியாக வாங்குவதும், வரி தர மறுப்பவர்க்கும், விலைகளை மறைத்து விற்பவர்க்கும் கொலைத் தண்டம் கொடுப்பதும் ஆறாங் குழுவின் நீங்காக் கடமைகளாம். நகராட்சிக் கழகத்தின் செயல் முறைகள் செந்நெறியில் நடைபெறச் செய்யும் பொறுப்பேற்ற ஆணையாளர் ஒருவர், ஒவ்வொரு நகரிலும் இருந்து வந்தார். நகரின் நல்வாழ்விற்கு அவரே முழுப் பொறுப்பு உடையவராவர். நகராட்சி மன்றத்தின் நடைமுறைகளில் நாட்டம் செலுத்துவதோடு, வாணிக நிலையங்கள், வழிபாடிடங்கள், வங்கம் வந்து தங்கும் கடற்றுறைகள், இவை போலும் பிற பொதுவிடங்கள் ஆகியவற்றைக் காக்கும் கடமையும் அவருக்கிருந்தது. - மகதப் பேரரசு நான்கு பெரு மாநிலங்களாகப் பிரித்து ஆளப்பட்டது. தலைநகர் பாடலியைச் சூழ்ந்து கிடந்த மத்திய மாநிலம், அரசனுடைய நேரிடை ஆட்சிக் கீழ் இருந்தது. தலைநகர்க்கு வெகு தொலைவில் இருந்த மாநிலங்களின் ஆட்சிப் பொறுப்பு. அரசகுடியில் வந்த அரசப் பிரதிநிதிகள் பால் ஒப்படைக்கப்பட்டிருந்தது. வட மேற்கு மாநிலம் அல்லது தட்சசீல மாநிலத்தின் தலைநகராகத் தட்சசீல நகரும், மேற்கு மாநிலம் அல்லது மாளவ மாநிலத்தின் தலைநகராக உச்சைனி நகரும், கூர்ச்சரமும், கத்தியவாரும் உள்ளடங்கிய தெற்கு மாநிலத்தின் தலைநகராகக் கிரைனார் நகரும் விளங்கின. நகரங்களிலும், நாட்டுப்புறங்களிலும் நடைபெறும் அன்றாட நிகழ்ச்சிகளைக் கண்ணிமை மூடாது கண்காணித்து, அவ்வப்போது அரசர்க்கு அறிவிக்கும் ஒற்றர்கள் மகத நாடெங்கும் மறைந்து திரிந்து செய்தியறிந்து வந்தார்கள். பாடலிபுத்ரத்திற்கும், மகத நாட்டின் பல்வேறு மாநிலத் தலைநகர்களுக்கும் இடையே அகன்று நீண்ட பெரு வழிகள் பல அமைந்திருந்தன, ஏறக்குறைய ஒன்பது பர்லாங்கிற்கு ஒன்றாக நாட்டப்பட்ட உயர்ந்த கல்தூண்கள், வழியளவையும், வழி மாற்றங்களையும் வழி வருவார்க்குக் காட்டி நின்றன. பாடலியிலிருந்து, வடமேற்குஎல்லை வரையும் ஆயிரத்து ஒரு நூறுகல் நீளம் உள்ள, படைபோகு பெருவழி ஒன்று போடப்பட்டிருந்தது. நிலங்களை அளந்து மதிப்பிட்டு, விளைபொருள்களில் நாலில் ஒன்றை வரியாக வாங்கி வந்தார்கள். வரி வழங்கத் தவறிய நிலங்களை விற்று வரி பெறும் வழக்கமும் ஆட்சியில் இருந்தது. நிலவரி வாங்கிய அவ்வரசு, அந்நிலங்களுக்குத் தேவையான தண்ணீர் வளம் தருவதிலும் கருத்துன்றியிருந்தது. ஆங்காங்கே பெரிய பெரிய ஏரிகளை அமைத்தும், கால்வாய்களை வெட்டியும், நீர் போகு மதகுகளைக் கண்காணித்தும் நீர்வளம் கண்டார்கள். கத்தியவார் மாநிலத்தைச் சந்திரகுப்தன் அரசப் பிரதிநிதியாய் இருந்து ஆண்ட புஷ்யகுப்தன், ஆங்குச் “சுதர்சன ஏரி” என்ற பெயரில் எடுத்த ஏரியை வரலாற்று நூல்கள் வாயாரப் புகழ்கின்றன. . மகதநாட்டு மக்கள், மனம் மொழி மெய்களால் தூய்மையுடையவர்களாகவே வாழ்ந்தார்கள். முறை கெட நடப்பவர்களைக் கண்டு ஒறுப்பதில், அக்கால ஆட்சியாளர் சிறிதும் பிறழாது நின்றனர். நீதிமன்றங்கள் நடுநிலை நின்று முறை வழங்கின. அரசியற் சட்டங்கள் சிறிதும் புறக்கணிக்கப்படுதல் கூடாது என்பதில் அரசனும், அவன் குடிகளும் ஒத்த கருத்துடையவராய்க் காணப்பட்டார்கள். குற்றம் நிகழ்ந்து விட்டால் கொடிய தண்டம் விதிக்கப் பெற்றது. ஒருவரை அடித்துப் புண் படுத்தினவரை அதே போல் அடித்துப் புண்படுத்துவதோடு அடித்த அவர் கைகள் குறைக்கப்படும்; அடியுண்டு புண்பட்டவர், அரண்மனையில் பணிபுரியும் நுண் கலைத் தொழில் வல்லுநராயின், குற்றம் புரிந்தவர்க்குக் கொலையே தண்டமாம். பொய்ச் செய்தி புகன்றவரின் உடலுறுப்புகளைக் குறைத்து உருவிழக்கப் பண்ணுவர். கட்வுட்டின்மையுடையவாகக் கருதப் படும் காவல் மரங்களுக்குக் கேடு விளைத்தவரும், நகராட்சிக்கு நல்க வேண்டிய வரியை ஏமாற்றியவரும், அரசன் உலா வருங் கால் ஊடறுத்து ஓடியவரும் கடுந்தண்டம் பெற வல்லக் கொடுங் குற்றம் புரிந்தவராவர். இத்தகைய பார் புகழும் பேரரச வாழ்வில் இருபத்தைந்து ஆண்டுகள் இருந்து இன்புற்ற சந்திரகுப்தன் கி. மு. 297-ல் மண்ணுலகை விட்டு மறைந்து விட்டான். சமணச் சார்புடைய சில நூல்கள், அவன் தன் இறுதி நாளில் முடி துறந்து, முனிவனாய், மைசூர் நாட்டுச் சிராவண பெலகோலா அடைந்து அரிய தவம் ஆற்றி அழியாப் பெருநிலை அடைந்து விட்டான் என அறிவிக்கின்றன. சந்திரகுப்தனுக்குப் பிறகு அவன் மகன் பிந்துசாரன் மௌரிய ஆட்சியை ஏற்று நடத்தினான். தன் தந்தை மேற் கொண்ட திருமணத்தால் ஏற்பட்ட கிரேக்க நாட்டாரின் நட்பை இவனும் போற்றி வளர்த்து வந்தான். மகஸ்தனிஸை அடுத்து, மற்றொரு கிரேக்க அரசியல் அறிஞன், மகத நாட்டிற்குத் தூதுவனாய் வந்து பாடலியில் பல்லாண்டு வாழ்ந்திருந்தான். செல்யூகஸுக்குப் பிறகு மாசிடோனிய மன்னனாய் மகுடம் புனைந்து கொண்டானைப் பதம் பண்ணப் பெற்ற அத்திப் பழங்கள், கொடி முந்திரிப் பழத்திலிருந்துபிழிந்தெடுத்த இனிய நறவு ஆகிய பொருள்களையும், வாதிட வல்ல ஒரு பேராசிரியனையும் அனுப்பும் படி பிந்துசாரன் வேண்டியிருந்தான். கிரேக்க நாட்டு அரசியல் சட்டம் அறிஞரை விற்கத் தடை விதிக்கிறது என்று கூறிப் பேராசிரியனை ம்ட்டும் தந்து உதவாது, ஏனைய இரு பொருள்களை மட்டும் அளவின்றி அனுப்பி வைத்தான் அந்நாட்டு அரசன். அக்காலை எகிப்தின் மன்னனாய் விளங்கிய இரண்டாம் தாலமியும், தன் நாட்டு அரசியல் தூதுவன் ஒருவனைப் பாடலி அரசவைக்கு அனுப்பி வைத்திருந்தான். மேனாட்டு இவ்வரசியல் தூதுவர் இருவரும் தம் முன்னோரைப் போலவே, தாம் வந்து வாழும் நாட்டைப் பற்றிய செய்திகளை விரிவாகக் குறித்து வைத்தார்கள். பிந்துசாரனின் வெளிநாட்டு உறவால், மகத நாட்டின் வாணிகம் பெரிதும் வளர்ந்து வளங்கொழித்தது. - பிந்துசாரனுக்குப் “பகையரசர் குலகாலன்” எனும் பட்டப்பெயர் சூட்டிப் பாராட்டியுள்ளார்கள் கிரேக்கர்கள். மகதப் பேரரசை நிறுவிய சந்திர குப்தனுக்குப் பெருந் துணை புரிந்த சாணக்கியன், பிந்துசாரன் காலத்திலும் வாழ்ந்து, அவனுக்கு அரசியல் வழிகாட்டியாய் விளங்கினான். அவன் துணையால், பிந்துசாரன், மகதப் பேரரசை முன்னிலும் பன்மடங்கு பெரிதாக்கிப் பெருமையுற்றான். ’ஆரிய மஞ்சூரி மூல கல்பம்" என்ற புத்த சமய நூலின் ஆசிரியர், “நனிமிக இளைஞனாய் அரியணை அமர்ந்து, ஆண்மை, ஆற்றல், இனிய சொல்வன்மை போலும் நற்பண்புகளை நிறையக் கொண்ட பிந்துசாரன் காலத்திலும், அவ்வரசியல் அந்தணன் தோண்டாற்றினான்” என்று கூறுகிறார். சமண சமயப் பேராசிரியராகிய ஹேமச்சந்திரரும், அவ்விருவர் தம் நட்புறவினை நாவாரப் பாராட்டியுள்ளார். அவ்வந்தண நண்பனின் அருந்துணையால், பித்துசாரன் தன் பேரரசின் தென் எல்லையை விந்திய மலையிலிருந்து, வேங்கடத்திற்குக் கொண்டு சென்றான். வடமேற்கு மாநிலத்தில் சிந்து நதிக்கரையில் வந்து அரசமைத்து வாழ்ந்திருந்த வெளி நாட்டாரை வென்று துரத்தவும், மகதத்தின் அரியணையில் அமர்ந்திருந்த இழிகுலத்தானை இறக்கி விட்டு, அதில் தான் அமரவும்,வென்று கைப்பற்றிய நாட்டில் தோன்றிய கலகங்களையும், குழப்பங்களையும் அடக்கி அமைதி நிலை நாட்டவுமே சந்திரகுப்தனுக்குக் காலம் போதவில்லை. ஆதலின், அவன் விந்தியத்திற்கு வடக்கிலேயே நின்று விட்டான். அவனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த பிந்துசார்னுக்கு வடநாட்டில் வேலையில்லை. ஆட்சி அமைதியுற, அசைக்க மாட்டா வன்மையோடு நடைபெற்று வந்தது. ஆகவே அவன் சிந்தனை, விந்தியத்திற்கு அப்பால் உள்ள நாடுகள் மீது சென்றது. அவன் இளமைத் துடிப்பும், தோளாற்றலும், அவன் உள்ளத்தில் போர் வெறியைப் புகட்டின. உடனிருக்கும் அந்தண நண்பனும் அதற்குத் துணை நின்றான். ஆகவே நெடிய பெரிய தேர்ப்படைகளோடு கூடிய மகதப் பெரும் படை தென்திசை நோக்கிப் புறப்பட்டு விட்டது. தம் தேர்ப் படை செல்லாதபடி இடை நின்று தடுத்த மலைகளையெல்லாம் வெட்டியெறிந்து வழி செய்து கொண்டு விரைந்து சென்று, பல நாடுகளை வென்று கைப்பற்றியது வடநாட்டுப் படை. தமிழகமும், தென் கலிங்கமும் நீங்கலாக உள்ள இந்தியப் பெரு நிலம் எங்கும், பாடலிபுத்திரக் கொடி பெருமிதத்தோடு பறந்தது. தாரநாதன் என்ற திபேத்திய நாட்டு வரலாற்று நூலாசிரியர் “பிந்துசாரன் பதினாறு நாடுகளை வென்றான்; அவன் ஆட்சி குணகடல், குடகடல் என்ற இரு கடல்களுக்கும் இடைப்பட்ட ஒரு பெரு நாட்டில் இனிது நடைபெற்றது” என்று கூறுகிறார். வேங்கடம் வரை பரவிய ஒரு பெருநாட்டை வென்றும், பிந்துசாரன் போர் வேட்கை தணியவில்லை. அம்மலையை வடவெல்லையாகக் கொண்ட தமிழகத்திலும் தன் ஆணை செல்ல வேண்டும் என்று விரும்பினான். உடனே, வேங்கடத்தை அடுத்து வாழ்ந்திருந்த வடுக வேந்தனின் துணையோடு தமிழகம் புகுந்தான். வடுகப்படை முன் நடந்து வழி காட்ட வழியிடை மலைகளைக் குறைத்து வழி செய்து கொண்டு தமிழகம் புகுந்த மௌரியப் பெரும் படைக்கு, ஆங்கு வெற்றிக்கு மாறாகத் தோல்வியே காத்திருந்தது. மௌரியப் படை தமிழகம் புகுந்த காலை, மோகூரில், பழையன் எனும் பெயர் பூண்ட ஒரு பெரிய வீரன் வாழ்ந்திருந்தான். பாண்டியர் படைத் தலைவனாய்ப் பணி புரியும் அவன் கீழ், ஆற்றல் மிக்கவராய கோசர்களைக் கொண்ட ஒரு பெரும் படையும் இருந்தது. தமிழகத்தில் வெற்றிகாண வேண்டுமேல், இப்பழையனை முதலில் வெற்றிகொள்ள வேண்டும் என்று அறிந்த வட நாட்டுப்படை. மோகூர் அரணைத் தாக்கி அருஞ்சமர் புரிந்தது. தேர்ப்படையோடு கூடிய வடநாட்டுப் படையாலோ, அதற்குத் துணைவந்த வடுகபடையாலோ, மோகூர் மன்னனைப் பணி கொள்ள முடியவில்லை. மாறாக, அவன்தன் கீழ்ப்பணி புரியும் கோசர் படைத் துணையால், வந்த வடநாட்டாரை வென்று துரத்தினான். தமிழகத்தில் வெற்றி காணமாட்டாமலே, பிந்து சாரன் வடநாடு திரும்பிவிட்டான். தமிழகத்தில் அவன் கண்ட பெருந்தோல்வி,தென்கலிங்கநாட்டையும் மறக்கச் செயது விட்டது, அதை வெல்லக்கருதிய கருத்தையும் கை விட்டுத் தலைநகர் சென்று சேர்ந்தான். வடுகர் துணை செய்யவந்த மௌரியர் படை யெடுப்பை முறியடித்த தமிழகத்தாரின் தன்னேரில்லாப் பேராற்றலைத் தமிழ்ப்புலவர்கள் தாம் பாடிய சங்கச் செய்யுள்களில் வைத்து வாயாரப் பாராட்டி வாழ்த்தியுள் ளார்கள். அவை இவை; வென் வேல் - விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர், திண்கதிர்த்திகிரி திரிதரக் குறைத்த உலக இடைகழி அறைவாம்" -கள்ளில் ஆத்திரையனார்: புறம் 175. கனைகுரல் இசைக்கும் விரைசெலல் கடுங்கணை முரண்மிடு வடுகர் முன்னுற, மோரியர் தென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு." “வெல் கொடித் துனைகால் அன்ன புனைதோக் கோசர், தொன்முது ஆலத்து அரும்பணைப் பொதியில் இன்னிசை முரசம் கடிப்பிடித்து இரங்கத் தெம்முனை சிதைத்த ஞான்றை, மோகூர் பணியாமையின் பகைதலை வந்த மாகெழுதானை வம்பமோரியர்.” . -மாமூலனார் :அகம் 28 1, 251, அரியணை ஏறிய அசோகன் மகதத்தின் அரியணையில் மௌரிய மரபின் இரண் டாவது மன்னனாய் அமர்ந்து அரசாண்ட பிந்துசாரன், தன் வாழ்நாட் காலத்தின் இறுதியில், தன் மக்களுள், தனக்குப் பின் ஆட்சிக்கு வரத் தக்கான் ஒருவனைத் தேர்ந்து இளங்கோவாக்க விரும்பினான். அவனுக்கு மக்கள் பலர் இருந்தனர் என்றாலும், அவர்கள் அனைவரிலும் அசோகனே, ஆளப் பிறந்தவர் பால், அமைய வேண்டிய அரும் பண்புகளை ஆரப் பெற்றிருந்தான். ஆகவே, அவனுக்கே இளங்கோப் பட்டம் சூட்டித் தன் அரசியல் துணைவனாய் ஆக்கிக் கொண்டான். இளங்கோப் பட்டம் பெற்ற அசோகன், காஷ்மீரத்தையும், பஞ்சாபையும உள்ளடக்கிய வடமேற்கு மாகாணத்தின் அரசப் பிரதிநிதியாய்ச் சென்று, தன் இளமைப் பருவத்தின் பெரும் பகுதியை ஆங்கே கழித்துக் கொண்டிருந்தான். அம்மாகாணத்தின் தலைநகராய்த் திகழ்ந்த தக்ஷசீலம், அக்காலப் பல்கலைக் கழக நகராய்ப் பெருமையுற்றிருந்தது. கீழ்த் திசை நாடுகளில் சிறந்து விளங்கும் பேரூர்களுள் ஒன்று என்னும் புகழ் பெற்ற அந்நகர், இந்து சமய சாத்திரங்களின் கலைக் கூடமாகவும் காட்சி அளித்தது. அந்தணர், அரசர், அரசர்க்கு நிகராய் அருநிதி படைத்தோர். வணிகர் போலும் வளமார் குடியில் வந்த இளைஞர்கள், இந்திய நுண்கலைகளிலும், விஞ்ஞானத் துறையிலும், சிறப்பாக மருத்துவத் துறையிலும் பயிற்சி பெற, அக்காலத்தில் அப்பேரூர்க்கே செல்வர். அத்தகைய பெருமை வாய்ந்த பேரூரில் பல்லாண்டு இருந்து ஆளும் வாய்ப்பினை இளமைப் பருவத்திலேயே பெற்ற அசோகன். அவ்வருங்கலைகளை ஐயந்திரிபறக் கற்றுத் தேர்ந்து சிறந்த கலைஞனாய் விளங்கினான். அதனாலேயே மத்திய ஆசியாவில் இருந்து இந்தியாவுக்குள் நுழையக் கருதும் வெளிநாட்டாரை தடுத்து நிறுத்தி, வென்று துரத்தும் படைத்தலமாய் விளங்கிய தக்ஷசீல மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பு அத்துணை இளைமைப் பருவத்திலேயே அவன் பால் ஒப்படைக்கப்பட்டது, அசோகன் ஆட்சி நலத்தால், வடமேற்கு மாகாணத்தின் அச்சம் அகன்று அமைதி நிலவுகிறது என்பதை அறிந்து கொண்டதும், பிந்துசாரன், அவனை மேற்கு மாகாணத் தலைநகர்க்கு அனுப்பினான். தக்ஷசீலம் எல்லைப்புறக் காவல் நிலையமாய்ச் சிறப்புற்றது என்றால், மேற்கு மாகாணத் தலைநகராகிய உச்சைனி, பெருவாணிக நிலையமாய்ப் பெருமையுற்றது. மேலைக் கடற்கரைக்கண் உள்ள பெரிய துறைமுகப் பட்டினங்களில் வந்து குவியும் வெளிநாட்டுப் பொருள்களின் வாணிக நிலையமாய் விளங்கியது அவ்வுச்சைனி நகரே. மேலும் சமயச் சிறப்பு வாய்ந்த ஏழு பேரூர்களுள் அதுவும் ஒன்று என்ற பெருமையும் அதற்கு இருந்தது. அதனால் வாணிக வளர்ச்சி குறித்தும், வழிபாட்டுப் பயன் கருதியும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், மக்கள் திரள் திரளாக அந்நகர்க்கு வருவாராயினர். இவ்வாறு இரு வகையாலும் பெருமையுற்ற அவ்வூரின் ஆட்சிப் பொறுப்பையும் இளங்கோ அசோகனே ஏற்றல் வேண்டும் என்று விரும்பினான் பிந்துசாரன். அரசன் ஆணையை ஏற்று அசோகன், தக்ஷசீலம் விட்டு, உச்சைனி அடைந்து, அதன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். அசோகன் உச்சைனியில் வாழ்ந்திருந்தான். சில ஆண்டுகள் கழிந்தன. பிந்துசாரன் உடல்நலம் குன்றினான். அது கேட்டுத் தலைநகர்க்கு விரைந்து வந்து சேர்ந்தான் அசோகன். வந்த சின்னாட்களுக்கெல்லாம், மகதமன்னன் மாண்டு விட்டான். மன்னனால் இளங்கோவென மதிக்கப் பெற்ற அசோகன், முறைப்படி மகதப் பேரரசின் மன்னனாய் மணி முடி புனைந்து கொண்டான். நிற்க, பிந்துசாரனுக்குப் பதினாறு மனைவியர் இருந்தனர் என்றும், அவர்கள் வழியாக அவனுக்கு ஆண்மக்கள் மட்டும் நூற்றொருவர் இருந்தனர் என்றும், பிந்துசாரன் இறந்ததும் அவர்களிடையே ஆட்சியுரிமைப் போர் தலை தூக்கிற்று என்றும், அவர்களுள், ஒரு தாய் வயிற்றில் பிறந்த தன் இளவலாகிய திஸ்ஸன் ஒருவனைத் தவிர்த்து ஏனைய உடன் பிறந்தார் அனைவரையும் கொன்று அசோகன் அரசைக் கைப்பற்றிக் கொண்டான் என்றும், அவ்வாட்சியுரிமைப் போர் காரணமாகவே, அசோகன் முடிசூட்டு விழா, மன்னன் மாண்டு நான்காண்டுகள் கழிந்த பின்னர் நடை பெற்றது என்றும் மகாவம்சம் என்ற ஈழ நாட்டு வரலாற்று நூல் கூறுகிறது. அசோகனுக்குக் கொலைக் குற்றம் சாட்டும் மகாவம்சம் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டதாகும். அசோகனுக்குப் பிறகு ஏறக்குறைய ஒன்பது நூற்றாண்டுகள் கழித்துக் தொகுபட்ட அது கூறும் செய்திகள் ஏற்றுக் கொள்ளத் தக்கன அல்ல; மேலும், அசோக வரலாறு கூறும் அது அவன் வாழ்க்கையில் நிகழ்ந்த சிறந்த நிகழ்ச்சியாகிய கலிங்க வெற்றி குறித்து வாய் மூடிக் கிடக்கிறது; அவன் ஆட்சி முறை குறித்தும் அது ஏதும் அறிவிக்கவில்லை; இவ்வாறு குறைபட்ட ஒன்று கூறும் சான்றைக் கொண்டு அசோகனைக் குற்றவாளியாக்கி விடுவது கூடாது; மேலும் இளமையில் அவ்வளவு கொடியவனாய் வாழ்ந்தவனே, முதுமையில் அறவழி காட்டும் ஆன்றோனாய் மாறி மாண்புற்றான் என அவன் பிற்காலத்தில் ஏற்றுக் கொண்ட புத்த மத வாழ்வைச் சிறப்பிப்பதற்காக அவன் இளமை வாழ்க்கை அவ்வாறு பழிக்கப்பட்டதேயல்லது, அதில் சிறிதும் உண்மையில்லை; மேலும் அரசன் ஒருவனுக்குப் பதினாறு மனைவியர் இருத்தனர்; அவர்கள் வழியாக நூறறுவர்க்கும் மேற்பட்ட மக்கள் இருந்தனர் என்பன நம்பத் தக்கன ஆகா. அது மட்டுமன்று. அண்ணனும் தம்பியும், தங்கையும் தமக்கையுமாக உடன் பிறந்தார் பலர் சூழ அசோகன் அரசாண்டான்; அவர்கள் வாழ்க்கையை வளமாக்குவதில் அவன் ஆர்வம் காட்டியிருந்தான் என்ற வரலாற்றுச் செய்திகளும் உள்ளன. மேலும், அசோகனின் பாட்டனாகிய சந்திர குப்தன். இளமையில் வறுமையில் வாழ்ந்தான்; நாடு கடத்தப்பட்டு நலிவுற்றான்; அவ்வாறு அமைதியற்ற வாழ்வில் வாழ்ந்திருந்தவன், அரண்மனை வாழ்க்கையில் அடியிடத் தொடங்கியதும், தனககுக் கேடு செய்பவர் என்று ஐயுற்றவர்களையெல்லாம் கொன்று குவித்ததில் நேர்மை நின்றது; அவனைப் போல் அலலாமல், இரு தலைமுறைகளாக அமைதி நிலவும் நல்லாட்சி நடாத்தும் ஒரு குடியில் பிறந்து, தந்தையால் பலர் அறிய இளங்கோப் பட்டம் சூட்டப் பெற்ற அசோகனை, அவன் அரியணை அமருங் காலத்தில் தடை செய்வார் எவரும் இருந்திரார்; ஆகவே அவனுக்கு அத்தகைய அச்சம் உண்டாகக் காரணம் இல்லை. ஆகவே அவன் மீதும் குற்றத்தைச் சாட்டுவது குற்றமாம் என்று கூறி மகாவம்சம் கூறும் அச்செய்தியை மறுக்கிறார்கள் சில வரலாற்றாசிரியர்கள். தர்ம அசோகன் எனப் பிற்காலத்தில் பாராட்டப் பெற்ற அசோகன் இளமையில் ஆற்றவும் கொடியோனாய். வாழ்ந்து, அதன் காரணமாய் அதர்ம அசோகன் எனும் இழிபெயர் இட்டுப் பழிக்கப்பெற்றுளான் என்பதற்குச் சரித்திரச் சான்றுகள் உள. அசோகன் தன் இளமைப் பருவத்தில், குருதிப் பலி விரும்பும் துர்க்கையை வழி படும் சைவ சமய நெறி நின்று, உயிர்களைச் சிறிதும் தயங்காது கொன்று குவித்தான். அரண்மனையின் ஒரு வேளை விருந்திற்காக வேண்டி ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்றிருக்கிறான். புலால் தின்னும், புலையனாய் வாழ்ந்தான்; விலங்குகளுக்கு வேதனையைத் தரும் வேட்டையை விளையாட்டாகக் கருதிக் கொடுமை செய்தான்; மது உண்பதிலும், மங்கையர் ஆடல் பாடல்களில் அகமகிழ்வதிலும் ஆர்வம் காட்டினான்; இவ்வாறு அறத்தைக் கை விட்டு வாழ்ந்த அக்காலத்தில் அசோகன் அரியணை ஏறும் ஆர்வத்தில், அதற்குத் தடையாய் நின்றாரைத் தயங்காது கொன்றேயிருப்பான்; பிந்துசாரனுக்கு அத்துணை பெரிய குடும்பம் இருந்தது என்பது ஏற்றுக் கொள்ளத் தகாத ஒரு கட்டுக் கதையன்று; கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்திருந்த பர்மா நாட்டு மன்னன் ஒருவன் தன்னுடைய எழுபத்தைந்தாவது ஆ ண் டி ல், நூற்றிருடத்திரண்டு மக்களையும் இருநூற்றெட்டுப் பெயரன்மார்களையும் விட்டுப் பிரிந்து விண்ணுலகடைந்துள்ளான். ஆகவே அது வரலாற்றோடு ஒட்டிய ஒர் உண்மை நிகழ்ச்சியேயாகும்; அசோகன் அரியணையேற்றம் அமைதியாகவே நிகழ்ந்தது என்று கூறும் அவர்கள், அது அவன் தந்தை இறந்து நான் காண்டுகள் கழிந்த பின்னரே நடைபெற்றமைக்குக் காரணம் ஏதும் காட்டினாரல்லர்; அல்லது அதை மறுத்தவருமல்லர். அதற்கு மகத நாட்டு அரண்மனையில் நிகழ்ந்த ஆட்சி உரிமைப் போர், அல்லது பொருந்தும் காரணம் பிற யாதாய் இருக்க முடியும் என்று வாதிட்டு அசோகன் கொலைக் குற்றத்தை உறுதி செய்வார்கள், சில வரலாற்றாசிரியர்கள். அரசிளங் குமரர்களைக் கொன்றோ, அல்லது அமைதியாகவோ அசோகன் அரியணையில் அமர்ந்து விட்டான். மகதப் பேரரசின் உரிமை பெற்ற மன்னனாய் மணி முடி சூட்டு விழாவும் நடைபெற்று விட்டது. வட மேற்கு இந்திய எல்லைக்கு அப்பாற்பட்ட ஆப்கானிஸ்தானம், பலுஜிஸ்தானம் முதல், தமிழகத்தின் வடவெல்லையாகிய வேங்கடம் வரை பரவிய ஒரு பேரரசின் காவலனாய்ப் பொறுப்பேற்ற அசோகன், தன் ஆட்சியின் தொடக்க ஆண்டுகள் பன்னிரண்டை, அந்நாட்டில் அமைதியை நிலை நாட்டும் அரும்பணிக்கே செலவிட்டான். அவற்றுள் ஒரு சிலவே தன் பாட்டன் சந்திரகுப்தனால் கைப்பற்றப்பட்டன; எஞ்சிய நாடுகளெல்லாம் அவன் தந்தை பிந்துசாரன் ஆட்சியில் இறுதி நாட்களிலேயே வென்று கொள்ளப் பட்டனவாதலின் அந்நாட் டு மக்களை மகதத்தின் ஆணைக்கு அடங்கியவர்களாக ஆக்க அத்தனை ஆண்டுகளைச் செலவிட வேண்டியதாகி விட்டது; அதைத் திறம்பட முடித்து வெற்றி கண்ட அசோகன், பாடலிபுரத் தலைநகரில் தன் அரண்மனையின் மேன்மாடியில் நின்று, தன் தாள் பணிந்து கிடக்கும் தன் பேரரசைத் தலை நிமிர்ந்து நோக்கினான். உமையொரு பங்கன் வீற்றிருக்கும் இமயப் பெருவரையின் அடி முதல், மாலவன் வீற்றிருக்கும் வேங்கடத்தின் முடிவரை பரந்து கிடக்கும். அதைப் பார்த்துப் பெருமிதம் கொண்டான்; ஆனால் அந்தோ! அம்மகிழ்ச்சி சிறிது நாழிகைக்கெல்லாம் மறைந்து விட்டது; இவ்வாறு பரந்து அகன்ற ஒரு பெரு நாட்டை ஆளும் தனக்கு அடங்காது தன்னரசு செலுத்தும் சின்னஞ்சிறு தமிழகமும், தென்கலிங்கமும் அவன் கண்ணில் பட்டு அவன் கருத்தைக் குருடாக்கின; என் பேரரசின்முன் இவை தனியரசு செலுத்துவதா என்று எண்ணிப் பெருமூச்செறிந்தான். அவற்றையும் தன் ஆணைக் கீழ்க் கொண்டு வர வேண்டும் என்று துணிந்தான். அசோகன் போர்க் கண்கள் தமிழகம், தென்கலிங்கம் ஆகிய இரண்டின் மீதும் ஒரு சேரவே வீழ்ந்தன என்றாலும், கலிங்க வெற்றியையே முதலில் கருதினான். தமிழகம் தன் அரசின் எல்லைக்கு அப்பால் தனித்துக் கிடக்கிறது, மேலும், அது தன் தந்தை கொண்டு சென்ற மௌரியப் பெரும் படையை வென்று துரத்த வல்ல தோளாற்றல் பெற்றுளது. மேலும், மததத்தின் அரியணையில் தந்தையினும் ஆற்றல் மிக்க தான் அமர்ந்திருப்பதை அறியும் அது. தான் மீண்டும் படையெடுத்தலும் கூடும் என்ற எண்ணங் கொண்டு முன்னிலும் பன்மடங்காக அதன் படை பலத்தைப் பெருக்கி வைத்திருத்தலும் கூடும்; ஆகவே, முதலில் தமிழக வெற்றியில் தலையிடல் கூடாது; கலிங்கம் அத்தகையதன்று, ஒருபுறம் மட்டும் கடல் எல்லையாக, ஏனைய மூன்று புறங்களிலும் தன் ஆட்சி நில்வும் நாடுகளே எல்லையாக அமைந்து கிடக்க நடுவில் நின்று தன் ஆண்மையை, ஆற்றலை எள்ளி நகைப்பது போல் காட்சியளிக்கிறது. மேலும் தமிழகத்தையும் வெல்ல வேண்டும்: அதிலும் தன் ஆணை செல்ல வேண்டும் என்று விரும்பி அதன் மீது போர் தொடுத்துச் செல்லும் போது தன் படைக்குப் பின்னே கலிங்கம் போலும் தன் கட்டுக்கடங்கா ஒரு நாட்டை விட்டு வைப்பது போர் முறையாகாது. ஆகவே, தன் கன்னிப் போர்க்களமாகத் தென்கலிங்க நாட்டைத் தேர்ந்து கொண்டான். விண்ணைத் தொடும் கொடியும், வெண் கொற்றக் குடையும் கட்டிய நெடிய பெரிய தேர்களைக் கொண்ட மௌரியப் பெரும்படை தென்கலிங்கம் புகுந்து பாடி கொண்டது. கலிங்கம் வந்து கண்ட கங்கைக் கரையான், தான் எதிர் பார்த்ததுபோல் கலிங்கம் படை பலத்தால் குறைந்திருக்கவில்லை என்பதைக் கண்டான். அறுபதினாயிரம் வாள் வீரர்களையும், ஆயிரம் குதிரை வீரர்களையும், எழுநூறு போர் யானைகளையும் கொண்ட பெரும்படை, அசோகன் வரவை எதிர் நோக்கி ஆங்கு காத்து நின்றது. அது அசோகன் சினக் கனலைச் சிறக்க மூட்டி விட்டது. ஒரு பேரரசின் காவலனாகிய தான் தன் பெரும் படையோடு வந்திருப்பதை அறிந்தவுடனே ஓடி வந்து அடிபணிய வேண்டிய ஒரு சிறிய நாடு, தன்னோடு பகைத்துப் படை கொண்டு நிற்பதா என்று எண்ணிச் சினந்தான். அவ்வளவே அவன் பெரும் படை தென்கலிங்கப் படை மீது பாய்ந்து விட்டது. அறம் அருள் என எண்ணிப் பாராமல் கலிங்க நாட்டின் காவற் சோலைகளைக் கவினிழக்கப் பண்ணிற்று. விளைபயிர்களுக்கு எரியூட்டிற்று. உண்ணு நீர்க் குளங்களையும், தண்ணீர் நிறைந்து வழியும் ஏரிகளையும் இடித்துப் பயனிலவாக்கிற்று; மாடங்கள் மண் மேடாயின, பொதுவில்லங்கள் மக்கள் வழங்கலாகாப் பாழிடங்களாயின, மகதப் படை இவ்வளவு அழிவு செய்தும் கலிங்கப் படை கலங்காது போரிட்டது. ஒரு நூறாயிரம் வீரர் உயிர் இழந்தனர். அவர் மேலும் ஒன்றரை மடங்கு வீரர் சிறை பிடிக்கப்பட்டனர். இவ்வளவு பேரழிவிற்குப் பிறகும், சின்னஞ்சிறு கலிங்கம் மகதப் பேரரசை எதிர்த்து நிற்றல் இயலுமோ? இறுதியில் கலிங்கம் பணிந்து விட்டது, வெள்ளையாடையின் இடையே கரும் புள்ளி போல், பரந்த மகதப் பேரரசின் நடுவே தனியரசு செலுத்திய கலிங்கத்தின் ஆட்சி அழிந்து விட்டது. அசோகன் கனவு நனவாகி விட்டது. - கலிங்கம் பணிந்து விட்டது. அசோகன் மேற்கொண்ட முதற்போர் அது. அதில் அவன் பெருவெற்றி பெற்று விட்டான். ஆனால், அதுவே, அசோகன் வாழ்வில் கண்ட கடைசிப் போராகவும் முடிந்தது. கலிங்கத்தில் வெற்றி கண்ட மகதக் காவலன், களக் காட்சியைக் கண்டான், அவ்வளவே, அவன் அகக்கண் திறந்து கொண்டது. களத்தில் மாண்டு கிடக்கும் மறவர்களின் தொகையை மதிப்பிட்டுப் பார்த்தான், வீழ்ந்து கிடக்கும் வேழங்கள் எத்தனை ஆயிரம்? காற்றெனப் பாய்ந்தோடும் குதிரைகளில் கொலையுண்டு போயின எத்தனை ஆயிரம்? உருக்குலைந்து கிடக்கும் தேர்கள் எத்தனை? இப்பேரழிவுக்குக் காரணம் தான் ஒருவனே அல்லவோ? தன்னொருவன் ஆசையை நிறைவேற்றவோ இத்தனை உயிர்களின் அழிவு? இதுவும் ஒரு வெற்றியா? என்னே என் அறியாமை! என்று எண்ணி எண்ணி இடர் உற்றது அவன் உள்ளம். அந்நிலையில், மகதப் படைகள் கலிங்க நாட்டில் விளைத்த கேட்டின் பயனாய்க் கலிங்க நாடு வளம் இழந்து போய் விட்டது, மக்கள் வறுமைக்குள்ளாயினர். பசியால் வாடிய அவர்கள் வாடிய அவர்கள் பிணியுற்று உழல்கின்றனர், கொள்ளை நோயால் உயிரிழந்தவர் எத்தனை ஆயிரவர் என்று எண்ணிக் கூறுவது இயலாது என்ற செய்தி தொடர்ந்து வரத் தொடங்கி விட்டது. உகிர்ச்சுற்றின் மேல் உலக்கை விழுந்தது போலவும் லெந்த புண்ணில் வேல் நுழைந்தது போலவும் ஆகி விட்டது அசோகனுக்கு. போரின் துணையால் பெறலாகும் வெற்றிப் புகழில் அவன் கொண்டிருந்த ஆர்வம் அறவே மறைந்து விட்டது, ஆற்றல், ஆண்மை என ஒயாது ஒலித்திருந்த அவன் உள்ளத்தில் அன்பு, அருள் என்ற இன் ஒலி எழுந்து விட்டது, போர் வெறி தணிந்து விட்டது, பேரருள் சுரந்து விட்டது, முற்றிலும் புதியவனாகி விட்டான் அசோகன, கன்னிப் போராய் விளங்கிய கலிங்கப் போரே அவன் கண்ட கடைசிப் போராகவும் ஆகி விட்டது, போர் நினைப்பை இழந்து புத்த நெறியில் புகுந்துவிட்டான் அப்ப்ோர் வீரன்! அசோகன் மேற்கொண்ட அருள்நெறி கலிங்கப்போர், இந் நாடாண்ட முடிமன்னர் எவராலும் அடைய முடியாத ஒரு பெருநிலையை அசோகனுக்கு அளித்தது. “அசோகனுக்கு முன்னும் பின்னும் அரசாண்ட இந்தியப் பேரரசர் எவரும் இவ்வளவு பெரிய நாட்டின் மன்னராய் விளங்கவில்லை” என்ற மங்காப் புகழளித்தது கலிங்கத்தில் அசோகன் பெற்ற வெற்றி. இவ்வாறு அரசியல் துறையில் இந்நாட்டு மன்னர் மன்றத்தின் தலைமையில் அசோகனை அமர்த்தியது அதுவே. உலக அறவோர்களின் அவைத் தலைமையினையும் அவனுக்கு அளித்தது. அவன் வாழ்க்கை முறையையும். ஆட்சி முறையையும் அது அறவே மாற்றி விட்டது; நாட்டு மக்களின் புறநலக் காவலனாய் வாழ்ந்த அசோகனைக் கலிங்க வெற்றி, அவர்களின் அகநலக் காவலனாய் மாற்றி விட்டது. அந்நாள் வரை ஆண்மை, ஆற்றல், மறம், மானம் எனக் கூறி வந்த அசோகன், அந்நாள் தொட்டு அன்பு, அருள், உண்மை, ஒழுக்கம் என்று உரைக்கத் தொடங்கி விட்டான். கலிங்கப் போர்க்களத்தின் கொடுமைகளைக் கண்டு அப்பேரழிவிற்குத் தானே காரணம் என்பதை அறிந்து அசோகன் நெஞ்சு நெக்குருகிற்று. உள்ளம் உடைந்தது. செய்த தவறினை எண்ணிச் சிந்தை நொந்தான். ’என் வாழ்க்கையில் இத்தகைய பேரழிவின் நிலைக்களமாகும் ஒரு பேராசைக்கு இனி ஒரு போதும் அடிமையாகேன்" என்ற உறுதி அவன் உள்ளத்தில் உருப்பெற்றது. கலிங்கப் போர் நடந்து நான்காண்டுகள் கழித்து, “கலிங்கத்தில் என்னால் சொல்லப்பட்டவர், சிறை பிடிக்கப் பட்டவர்களில் ஆயிரத்தில் ஒருவரை இழக்கவும் இன்று இசையோன் இழக்க நேர்த்தால் ஆறாப் பெருந்துயர்க்கு மீளா அடிமையாவேன்” என்று கூறுமளவு அவன் மனம் பண்பட்டு விட்டது. அது முதல் போர் தரும் புகழை அவன் வெறுக்கத் தலைப்பட்டான். போர் உணர்வே வேர் அற்றுப் போய் விட்டது. “படைக்கலம் ஏந்திப் பெறும் வெற்றி, வெற்றியன்று; அன்பு நெறி அருள் நெறிகள் வழிவரும் வெற்றியே உண்மை வெற்றி; உயர்ந்த வெற்றி” என்று அறிவூட்டத் தொடங்கி விட்டான். அவன் உள்ளமும் மெல்ல மெல்ல புத்த சமயச் சாயல் பெறத் தொடங்கி, இறுதியில் அதுவாகவே ஆகி விட்டது. கலிங்க வெற்றிக்குப் பிறகு, தன் வாழ்நாள் முழுவதும் புத்த மத ஆசிரியர்கள்பால் அறிந்த உண்மையறங்களைப் பரந்த தன் நாட்டில் அறிவூட்டவும், பரப்பவும், நடைமுறைக்குக் கொண்டு வரவுமே, தன் அரச ஆணை அனைத்தையும் பயன் கொண்டான். ஆட்சிக்கு வந்த இருபத்தி நான்காம் ஆண்டில் புத்தன் பிறந்து, மெய்யுணர்வு பெற்று உலகிற்கு உணர்வூட்டி வாழ்ந்து, உயிர் நீத்த புண்ணிய நகர்களைக் கண்டு வரப் புறப்பட்டான். வடமதுரையில் நறுமணப் பொருள் விற்கும் வணிகர் ஒருவரின் மகனாய்ப் பிறந்து புத்த மதப் பேராசிரியராய் விளங்கிய உபகுப்தா, அசோகனுக்கு வழித்துணையாக உடன் சென்றார். பாடலியிலிருந்து புறப்பட்ட அசோகன், நேர் வடக்கே செல்லும் அரசப் பெருவழியே சென்று இமயப் பெருவரையின் அடிவரையை அடைந்தான். சென்ற வழி நெடுக, தன் வருகையின் நினைவுச் சின்னங்களாக ஒற்றைக் கல்லால் ஆன உயர்ந்த பெரிய கற்றுாண்களை நிலைநாட்டிச் சென்றான். இமயப் பெருவரையடைந்த அசோகன், அதைக் கடவாமல், மேற்கு நோக்கி நடந்து, மாயாதேவி புத்தனை ஈன்ற பெருமை மிக்க லும்பினிச் சோலையை அடைந்தான். ஆங்கு உபகுப்தர், அசோகனை நோக்கி, “அரசே! இங்குதான் நம் அருட் பெரியோன் தோன்றியருளினான்” என்று கூறிய உரைகள் பொறிக்கப் பெற்ற ஒரு தூண், அசோகன் வருகையின் நினைவுச் சின்னமாய் ஆங்கு இன்றும் நிற்கிறது. அதை நாட்டிவிட்டு ஆங்கிருந்து புறப்பட்ட அசோகன், புத்தன் தன் பிள்ளைப் பருவத்தில் ஆடியும் பாடியும், அருங்கலை பயின்றும் வாழ்ந்த கபிலவாஸ்து நகரடைந்து களிப்புற்றான். சில நாள் கழித்து, தான் அறிந்த உண்மைகளைப் புத்தன், உலகத்தவர்க்கு முதன் முதலாக உணர்த்தத் தொடங்கிய தொல்பெரும் சிறப்பு வாய்ந்த சார்நாத் சென்று சேர்ந்தான். காசி மாநகர்க்கு அணித்தாக இருந்த அந்நகரில், சிந்தை மகிழச் சில நாள் இருந்து விட்டுப் புத்தன் பல்லாண்டு வாழ்ந்த பெருமை வாய்ந்த புண்ணிய் நகராகிய ஸிராவஸ்தியை அடைந்தான். அந்நகரைக் கண்ணுற்று அகமகிழ்ந்த அசோகன், ஆங்கிருந்து, புத்தன் அறியாமை யிருளின் நீங்கி மெய்ஞ் ஞானவுணர்வு பெற்ற போதிமரம் நிற்கும் கயை நகர் சென்று கண்டு களி கூர்ந்தான். கடைசியாகப் புத்தன் வாழ்வால் பெருமையுற்ற அவ்விடங்களின் நல்வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் துணை செய்யும் அரும் பெரும் கொடைகள் பல அளித்து, அவ்வாறு அளித்த்தை அறிவிக்கும் தன் அரச ஆணைகள் பொறித்த கற்கம்பங்களை ஆங்காங்கே நாட்டி வைத்தான்; அவற்றை நாட்டி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகியும், அவை இன்றும் அழிவுறாமலே நிலை பெற்றுள்ளன. புத்த சமயச் சார்புடைய இடங்களுக்குத் திருவருட் பயணம் மேற்கொண்டு சென்ற அசோகன், அவ்வாறே நேபாள நாட்டிற்கும் சென்றிருந்தான். தன் வருகையை நினைவூட்டும் வகையில், நேபாளப் பள்ளத்தாக்கில் லலித பாதன் என்ற பெயரில் புதிய தலைநகர் ஒன்றை அமைத்தான், நேபாளத்தின் இன்றைய தலைநகராய்த் திகழும்  காத்மண்டுவிற்குத் தென் கிழக்கில் இரண்டரை கல் தொலைவில் இன்று நின்று காட்சிதரும் அந்நகர், அசோகன் வளர்த்த புத்த சமய நெறியை, இன்றும் கடைப்பிடித்து நிற்கிறது. நேபாளத்திற்கு, அசோகனுடன் அவன் மகள் சாருமதியும் சென்றிருந்தாள்; தந்தை தாய்நாடு திரும்பவும் திரும்பாது, துறவறம் மேற் கொண்டு, பசுபதிநாத்திற்கு வடக்கில், தேவப்பட்டணம் எனத் தன் கணவன் பெயரால் ஒரு நகரையும், அதனி டையே கன்னியர் மாடம் ஒன்றையும் அமைத்து அறம் வளர்க்கத் தொடங்கி விட்டாள். அந்நகரும், லலிதயாதன் நகரின் நடுவிலும், அதன் நாற்புறத்திலும் அசோகன் நாட்டிய அழகிய கோயில் மாடங்கள் ஐந்தும் இன்றும் ஓங்கி உயர்ந்து விளங்குகின்றன. கலிங்கப் போருக்குப் பிறகு, அசோகன் உள்ளத்தில் அன்பும் அருளும் இடம்பெற்றன. அவன் க்ண்ட அற வழியின் தலையாய கொள்கையாக, விலங்கினத்தில் விளங்கித் தோன்றும் கடவுட்டன்மையைக் கண்டு மதித்தல் மேற்கொள்ளப்பட்டது. மிக மிக இழித்தது என்று கருதப்படும் உயிருக்கும், இறைவன் தனக்கு இயல் பாக அளித்துள்ள வாழ்நாளின் இறுதிவரை இருந்து வாழும் உரிமையுண்டு என அவன் உளமார உணர்ந்தான்; அந்நெறியில் நிற்குமாறு தன் நாட்டவர்க்கு ஆணையிட் டான்; சிற்றுயிர்க்கு உற்ற துணையாதல் வேண்டும் என்பதில் ஆழ்ந்த உள்ளம் உடைய அசோகன், அதை மதியாது. உயிர்களுக்கு ஊறு விளைவிப்பவர்களுக்குக் கொலைத்தண்டம் அளிக்கவும் துணிந்தான். அரிது அரிது. மானிடராதல் அரிது என்று போற்றத்தகும் மக்கள் உயிரும், அவன் அறவழியின் கண்களுக்கு அற்பமாகவே. புலப்பட்டது. கொல்லாமை யறத்தை உலகத்தவர்க்கு ஊட்ட முன்வந்த அசோகன். அதைத் தன் வாழ்வின் தலையாய அறமாகக் கருதினான்; இளமையில், அரண் மனையின் ஒரு வேளை விருந்திற்கு ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்றவன், ஒரு நாளைக்கு ஒரு மான், இரண்டு மயில்கள் மட்டுமே கொல்லப்படுதல் வேண்டும் என ஆணையிட்டான்; அதுவும் நாளடைவில் அறவே நிறுத்தப்பட்டது. பாட்டன் சந்திரகுப்தன் காலத்தில் அரண்மனைப் பெருவிழாவாக மதித்துக் கொண்டாடப் பெற்ற வேட்டை விழாவை நிறுத்தி விட்டான். “வேந்தர்கள், விளையாட்டு வேடிக்கைகளில் விருப்பமுடையவராய் உலா வரும் பண்டை வழக்கம் கை விடப்படும்; இனி, அவர்கள், நாட்டு மக்களின் நலன் காணவும், அருட் பெரியார்களைக் கண்டு அவர்க்கு வேண்டுவன அளிக்கவும், அருள் நெறி முறைகளை ஆராய்ந்து, அவற்றை மக்களுக்கு அறிவிக்கவும், வேண்டிய அரண்மனைப் புறம் போவர்” எனப் பறை சாற்றி அறிவித்தான். நாளடைவில், அக்கொல்லாமை அறம் நாட்டின் சட்டமாகவும் ஆக்கப்பட்டது. அதன் பயனாய் எண்ணற்ற கோடி உயிர்கள் கொலையுண்டு போகாது காப்பாற்றப் பட்டன; நாட்டு மக்களில், புலால் தவிர்த்துப் புறவுணவு உண்டறியாத மக்களும் உள்ளனர் என்பதை அறிந்தவனாகிய, அசோகன், அவர்க்கு மட்டும் விலக்களித்திருந்தான் என்றாலும், ஒர் ஆண்டில் ஐம்பத்தாறு நாட்களைக் குறிப்பிட்டு, அந்நாட்களில், அவர்களும் கொல்வதோ, புலால் உண்பதோ கூடாது என்று ஆணையிட்டிருந்தான். கொல்லாமையறத்தை வலியுறுத்தும் அரச ஆணையைச் சிறிதும் வழுவாது காக்கும் கருத்துடையனாய், அதற்கெனச் சில அரசியல் ஆணையாளர்களை நியமித்திருந்தான். கொல்லாமையறம் மேற்கொண்ட மௌரியக் கோமகன், விலங்குகள், கொடுநோயால் கொலையுண்டு போவதையும் போக்க விரும்பினான்; அதற்காக நாடெங்கும் விலங்குகளுக்கான மருத்துவ, நிலையங்களை நிறுவினான். அகமதாபாத்திலும், சூரத்திலும் இன்று உள்ள மருத்துவ நிலையங்கள், மௌரிய மன்னன் நிறுவியனவேயாகும்; சூரத் நகரில் உள்ள கால்நடை மருத்துவ நிலையம், பதினெட்டாம் நூற்றாண் டில் இருந்த நிலைமையை அறிந்தால் மௌரியர் காலத்தில் அது இருந்த நிலைமையை ஒருவாறு அறியலாம். தொன்றுதொட்டு ஆலின் கீழ் நடைபெற்று வந்தமையால் ஆலமர மருத்துவ நிலையம் என்று வழங்கப் பெறும். அது மிக உயர்ந்த மதில்கள் சூழ்ந்து, பரந்தகன்று, வகை வகையான விலங்குகள் வாழ்வதற்கு வாய்ப்பளிக்கும். வகையில், பல பகுதிகளாகப் பிரிந்திருந்தது ; நோயுற்ற விலங்குகள், மிகவும் விழிப்பாய்க் கண் காணிக்கப்பட்டன. அவ்விடம், அவற்றிக்கு ஒரு சிறந்த காப்பிடமாய்த் திகழ்ந்தது; கால் ஒடிந்தோ, அல்லது பிற வகையாலோ இயங்கும் ஆற்றலை இழந்துபோன விலங்குகளை, உரியார் அவ்விடத்திற்குக் கொணர்வர்: உரியவரின், நாடு, இனம், மொழிகளின் வேற்றுமை கருதாது அவை போற்றப்படும். அதில், குதிரைகள், கோவேறு கழுதைகள், காளைகள், ஆடுகள், குரங்குகள், போலும் விலங்குகளும், புறாக்கள், கோழிகள் போலும் பறவைகளும் பருத்துவம் பெற்றன. முதிய ஆமை ஒன்று, எழுபத்தைந்து ஆண்டுகள், அம்மருத்துவ மனை யில் இருந்து வந்ததாம். எலி, சுண்டெலி, மூட்டைப் பூச்சிகளுக்கான தனி விடுதிகளும் ஆங்கு இருந்தனவாம். கொல்லாமை அறத்தை அடுத்து, அசோகன் மேற் கொண்ட அறம், தன்னை ஈன்ற தாய் தந்தையர்களையும், தனக்கு அறிவூட்டிய ஆசிரியனையும் உயர்வாக மதித்துப் பணிந்து ஒழுகவேண்டும் என்பதாம்; அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’; எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும் என்ற உண்மைகளை ஒவ்வொரு வரும் உணர்தல் வேண்டும். தம்மினும் தாழ்ந்த தம் மக்கள், மாணாக்கர், ஏவல் இளையர், அடிமைகள் ஆகியோர் தம்மிடம் பணிவாய் ஒழுகுதல் வேண்டும் என்பதை எதிர்நோக்கும் முதியோர்கள், அதற்கு மாறாக, அவ்விளையேர்ர்க்கு உரிய தகுதிகளை மதித்து, அவர்களிடம் அன்பாய்ப் பழகுதல் வேண்டும்; ஒருவர் பணிந்து நிற்க, மற்றொருவர் அன்பு காட்ட வாழும் இவ்வறம் அதையொட்டி, நண்பர், உறவினர், நல்லற நெறி நிற்கும் துறவிகள் பாலும் தொடர்தல் வேண்டும்; ஓரினத்தைச் சேர்ந்த ஒருவர்க்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்தல் வேண்டும் என்ற பண்பாட்டு நெறியைப் பாரெங்கும் பரப்பினான். இவ்விரு பெரும் அறங்களோடு, அசோகன் மேற்கொண்ட மூன்றாவது அறம் வாய்மை. உண்மை உயர்வளிக்கும் என்ற உயர்ந்த அறத்தை அறிந்து, மக்கள் எல்லோரும், எப்பொழுதும் வாய்மையே பேசுதல் வேண்டும் என்று விரும்பினான். அவ்வறத்தை நாட்டு மக்களிடையே வற்புறுத்தினான். அசோகனின் சிறு பாறைக் கல்வெட்டு அரச ஆணை வரிசையுள் இரண்டாவது ஆணை “தாயையும் தந்தையையும் வழிபட வேண்டும்; அதைப் போலவே வாழும் உயிர்களை மதித்துப் பேணுதலும் வேண்டும்; வாய்மையை வழங்குதல் வேண்டும். மக்கள் மேற்கொள்ள வேண்டிய அருள் அறத்தின் உயிர் நாடிகள் இவையே. அதைப் போல்வே, மாணாக்கர் ஆசிரியன்மாரைப் பணிந்து வழிபட வேண்டும்; சுற்றத்தவர் பேணப்படுதல் வேண்டும். இவையே முன்னோர் கண்ட அறமுறைகளாம்; இம்முறை வாழ்நாளை வள்ர்க்கும். நாட்டு மக்கள் இம்முறைப்படியே வாழ்தல் வேண்டும். மதிப்புக்குரிய மன்னன் ஆணை இது” என்று கூறுகிறது. கொல்லாமை, பணிவுடைமை, வாய்மை போலும் விழுமிய அறங்களோடு, நாட்டில் சமரச நிலை நிலவவும் அசோகன் பெரும்பாடு பட்டான். தன் சமய நெறியைப் போலவே, பிற சமய தெறிகளும், தன்னடக்கம், துர்ய உள்ளம் ஆகிய உயர்ந்த குறிக்கோள் உடையனவேயாதலின், புறத் தோற்றத்தில் அவை எவ்வளவுதான் மாறுபடுவனவாகத் தோன்றிலும், உண்மையடிப்படையில் ஒத்த இயல்புடையவேயாம் என்பதை அறிந்து, பிற சமய நெறிகளையும் மதித்து, அவை இனிது நடைபெறத் துணை புரியும் சமரச நோக்குடையராதல் வேண்டும் என்பதை அறிவுறுத்தினான். பாறைக் கல்வெட்டு அரச ஆணை வரிசையுள் இரண்டாவது ஆணை, “ஒருவன் தன் மதத்தைப் புகழ்ந்து, பிறர் மதத்தைப் பழித்தல் கூடாது; பிற மதங்களும் யாதேனும் ஒரு வகையால் பாராட்டத் தக்க பண்புடையனவே. இதை அறிந்து நடந்தால், ஒருவன் தன் மதத்தையும் உயர்த்தியவனாவன்; பிற மத வளர்ச்சிக்கும் துணை புரிந்தவனாவன்; இதற்கு மாறாக நடந்து கொள்பவன், தன் மதத்திற்கும் மாசூட்டி, பிற மதங்களையும் பாழ் செய்தவனாவன். தன் மதத்தை உயர்த்த வேண்டிப் பிற மதங்களைப் பழித்துப் பேசுபவன். உண்மையில், அவ்வாறு பழிப்பதால், தன் மதத்திற்குத் தானே கேடு விளைக்கின்றான்; ஆகவே, பிற மதத்தவர்க்குப் பொன்னும் பொருளும் போல்வன அளிக்கும் புறச் செயல்களால் சமரச நிலை ஏற்பட்டு விடாது; பிற மதங்களையும் தம் மதமே போல் மதிக்கும் பண்பாடு வளர்தல் வேண்டும்; அதுவே உண்மைச் சமரச நிலைக்கு வழித்துணையாம் என்று மாண்புமிகு மன்னன் மதிக்கின்றான்” என்று கூறுகிறது. சமரச நிலை வளரவேண்டும், வாழ வேண்டும் என்று ஆணையிடும் அசோகன், தான் மேற்கொண்ட அறங்களுள் தலையாயது கொல்லாமை அறமாகவும், தன் உயிரைத் தாமே பலி கொடுக்கும்,கொடுந்தவ நெறி நிற்கும் ஒருசார் துறவிகளுக்கும் பெருங்கொடை வழங்கியும், புலால் உண்ணாமையாகிய உயர்ந்த அறவழி நிற்கும் தன் ஆட்சியிலும், புலால் உண்டு உயிர் வாழும் இனத்தவர்க்கு அவ்வுரிமையை மறுக்காது வழங்கியும், அச்சமரச நெறியில் வாழ்ந்தும் காட்டினான்.  ஈதலின் சிறப்பை அறிந்தவன் அசோகன்; வறி யோர்க்கு வழங்கி வாழவேண்டும்; அற்றார் அழிபசி தீர்த்தல் வேண்டும். அரசன் கடமைகளுள் அதுவும் ஒன்று என்பதை அவன் அறிவான்; ஈதலும், இசைபட வாழ்தலுமே உயிர்க்கு ஊதியங்களாம் என்பது உண்மையே என்றாலும், உணவளித்து உடற்பசியைப் போக்குவது உண்மை ஈகை ஆகாது; அறிவு வழங்கி அறிவுப் பசியைப் போக்குவதே, ஈகையாம்; அன்ன சத்திரம் ஆயிரம் கட்டுவதைக் காட்டிலும், ஆங்கு ஒர் ஏழைக்கு அறிவூட்டுதலே சிறந்த அறக்கொடையாம் என்று கருதினான் அசோகன்; ‘’உணவளிப்பது உயர்ந்த கொடையாக ஏற்றுக்கொள்ளப் பெறினும், சிறந்த அற நூல்கள், அறிவிலாதவர்க்கு, அருளற நெறிகளை அறிவிப் பதுபோலும் கொடை உலகில் இல்லை; அருளற நெறியுணர்வைப் பகிர்ந்தளிப்பதுபோல் ஆகாது, பொன்னையும் பொருளையும் பகிர்ந்தளிப்பது’ என்று கூறுகிறது, அசோகன் அரச ஆணைகளுள் ஒன்று. அக்காலச் சமயச் சடங்குகளையும், அரண்மனைப் பெரு விழாக்களையும் கண்டு வெறுத்தவன் அசோகன்; பிறந்த நாள் விழா முதல், நினைவு நாள் விழாவரை ஒருவரின் வாழ்நாளில் வந்து வந்து செல்லும் விழாக்களையும், அவற்றிற்காக பெரும் பொருள் செலவையும் கண்டு சிந்தை நொந்த அசோகன், வினைகளும் விழாக்களும் சிறு பயன் அளிப்பன; பிழையாது பயனளிக்க முடியாதன; உண்மையான கொடை அறம், ஒருவன் தன்னுடன் வாழ்வார்க்கு அருள் நெறி அறத்தை அறிவூட்டு வதில் நிற்பதுபோல், உண்மையான வினைகளும் விழாக்களும், அறிந்த அருளற நெறிவழி நடந்து காட்டுவதில் நிற்கின்றன; அடிமைகளையும், பணிபுரிவாரையும், அன்போடு நடத்துதல், ஆசிரியர்களை வழிபடுதல் பிற உயிர்களை மதித்துப் பேணுதல், அறவோர்களுக்கும், அந்தணர்களுக்கும் உரிமை அளித்தல் ஆகிய இவையே உயர்ந்த வினைகளும், சிறந்த விழாக்களுமாம்" என்று கூறி வழி காட்டியுள்ளான். அருளற வழிகளைக் காட்டி, மக்களின் உயிர் வளர்ச்சிக்குத் துணை புரிந்த அசோகன், அவர்களின் உடல் வளர்ச்சியை மறந்தானல்லன். உடலார் அழியின் உயிரார் அழிவர் என்ற உண்மையை உணர்ந்திருந்தமையால், மக்களின் புற நலனுக்கான பற்பல வழிகளை வகுத்திருந்தான்; “படைபோகு பெருவழி போலும் வழிகளின் இருமருங்கும், மக்களுக்கும், மாக்களுக்கும் நிழல் தரும் ஆலமரங்களை வளர்த்தேன். ஆங்காங்கே, சுவை மிக்க காய்களையும் கனிகளையும் தரும் மாமரங்களையும் வளர்த்து வைத்தேன்; இரண்டாயிரம் கெஜத்திற்கு ஒன்றாகக் கிணறுகளை வெட்டி வைத்தேன்; அறச்சாலைகளையும் கட்டி வைத்தேன்; எண்ணற்ற தண்ணீர்ப் பந்தல்களை ஆங்காங்கே அமைத்து, விலங்குகளும், மக்களும் வழி வருத்தம் உணராது வழி கடக்கத் துணை புரிந்தேன்” எனக் கூறும் அசோகன் கல்வெட்டுக்கள், அவன் ஆற்றிய அறப் பணிகளை நாம் அறியக் காட்டுகின்றன. தம்மைப் பற்றி வருத்தும் நோய்களை வாய் திறந்து கூற மாட்டா விலங்குகளின் நோய் போக, கால்நடை மருத்துவ நிலையங்களை நிறுவிய அசோகன், மக்களின் நோய் போக்கும் மருத்துவ மனைகளையும் கட்டி வைத்தான். அசோகனின் அருள் உள்ளம், அம்மனைகளைத் தன் ஆட்சிக்குட்பட்ட நாடுகளில் மட்டும் அமைத்ததில் அமைவுற்றிலது; தன்னோடு நட்புடையராய்த் தனியரசு புரியும் தமிழரசர் நாடுகளிலும், கிரேக்கரின் ஆட்சி, நிலவும் ஆசிய நாடுகளிலும், உடல் நல உறைவிடங்களை எடுப்பித்தான். மருந்தாகிப் பயன்படும் மரம் செடி கொடிகளை ஆங்காங்கே நட்டு வளர்த்தான்; வேண்டிய் மருந்து வகைகளை வெளிநாடுகளிலிருந்து வரவழைத்து அளித்தான். அருளற நெறி கண்ட அசோகன், அவ்வுணர்வும் ஊக்கமும் ஆட்சித் தலைவனாகிய தனக்கு மட்டும் போதாது; அதனால் கருதிய பயன் கை கூடாது; அவ்வுள்ளம் தன் ஆட்சிக் கீழ்ப் பணி புரியும், ஆணையாளர் அனைவரிடத்தும் அமைதல் வேண்டும். ஆகவே அவ்வுள்ளம் உடையாரையே ஆணையாளர்களாக அமர்த்துதல் வேண்டும்; அவ்வுள்ளம் அவர்கள் பால் இயல்பாக அமைந்து கிடப்பினும், அவ்வுணர்வினை அவ்வப்போது ஊக்கிக் கொண்டேயிருத்தல் வேண்டும் என்று கருதினான். அதனால், தான் மேற்கொண்ட அருளற நெறிமுறைகள், அவற்றைச் செயற்படுத்த வேண்டிய செயல் முறைகள், அவற்றைச் செயற்படுத்தும் ஆணையாளர்களின் கடமைகள் ஆகியவற்றை, அரச ஆணைகளாக அவ்வப்போது அறிவித்து வந்தான். அவர்கள், தங்கள் கடமைகளை ஆர்வத்தோடு ஆற்ற, அவர்க்கு உரிமை பலவும் வழங்கினான். தம் ஆட்சிக்குட்பட்ட மக்களுக்கு மனம் நிறை வாழ்வையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் வகையில், நல்லது புரிந்த மக்களுக்கு, நன்மை பல வழங்கியும், அல்லன புரிந்தார்க்கு அவர் திருந்தத் தண்டம் அளித்தும் தம் கடமைகளை நம்பிக்கையோடு, அச்சம் அற்றுச் செய்து வருவான் வேண்டி, “என் ஆட்சிக்குட்பட்ட மாகாணத் தலைவர்களுக்கு உரிமை பல வழங்கியுள்ளேன். ஒருவன், தன் குழந்தையை அறிவறிந்த ஒரு செவிலி பால் ஒப்படைத்து,”அன்பும், ஆர்வமும், அறிவும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற இச்செவிலி, என் மகவின் மகிழ்ச்சியில், மாறாகக் கருத்துடையள்" எனத் தனக்குள்ளே சொல்லி அமைதி பெறுவது போல், யானும், என் மக்களின் நல்வாழ்வில் ஆர்வமும் ஊக்கமும் மிக்காரையே மாகாணத் தலைவர்களாகத் தேர்ந்துள்ளேன். அவர் ஆட்சிக் கீழ் என் மக்கள் நல்வாழ்வு வாழ்வர் என்று கூறி அமைதி காண விரும்புகிறேன்" என்றும், “என் ஆட்சிக் கீழ் வாழும் மக்கள் அனைவரும், என் வயிற்றிற் பிறந்த மக்களே! என் மக்கள் ஒவ்வொருவரும் இவ்வுலகில் நன்கு வாழ்ந்து மறுவுலகில் நன்னிலை பெறவேண்டும் என்பதில் எனக்கு எவ்வளவு ஆர்வம் உண்டோ, அவ்வளவு ஆர்வம் என் நாட்டு மக்களின் நல்வாழ்விலும், உண்டு. ஆகவே, மதிப்பு மிக்க மாகாணத் தலைவர்களே! நீங்கள் உங்கள் ஆட்சிக் கீழ் உள்ள மக்களை என்னை நம்பும்படியும்,”அரசன் நமக்குத் தந்தை போல்வான். அவன் தன் பால் அன்பு காட்டுவது போலவே, நம்மீதும் அன்பு காட்டுகின்றான்; ஆகவே, அவன் மக்கள் அவன் பால் அன்பு காட்டுவது போல் நாமும் அவன் பால் அன்பு கொள்ளுதல் வேண்டும்" என்று உணர்வு பெறும்படியும் ஆட்சி புரிதல் வேண்டும்; அவ்வாறு பணி புரிந்தால், நீங்கள் மறுமையில் வீட்டுலக வாழ்வு பெறுதலோடு, இம்மையில் அரசனுக்கு, ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றிய பெருமையும் பெறுவீர்கள்" என்றும், “முறையும் தண்டமும், எவர்க்கும், எங்கும், எக்காலத்தும் ஒரு நிகரானவாதல் வேண்டும்; அதற்காக, இன்று முதல் இதுவே என் ஆணையாம்; கொலைத் தண்டம் பெற்றுக் கொடுஞ்சிறையில் வாழ்வார்க்கு,அத்தண்டம் நிறைவேற வேண்டிய நாளிலிருந்து மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கின்றேன். இம்மூன்று நாட்களில், தண்டம் பெற்றவரின் உறவினர், வழக்கை மீண்டும் விசாரித்துக் குறை தண்டம் தண்டம் விதிக்க வேண்டிக்கொள்வதும், ஏழைகளுக்கு உணவளித்து மறுமையில் நல்வாழ்வு பெற ஆண்டவனை வேண்டிக் கொள்வதும், உயர்கதி அடைய உண்ணா நோன்பு மேற் கொள்வதும் செய்வார்களாக. இவ்வாணையை வெளியிடுவதன் நோக்கம், ஒருவர் வாழ்நாளின் முடிவு மாற்ற முடியாத வகையில் உறுதி செய்யப்பட்ட நிலையிலும், அவர்கள் மறுமையில் இன்பம் அடைய வழி செய்து கொடுத்தல் வேண்டும்; அது காணும் மக்களிடையே, தன்னடக்கம் விட்டுக் கொடுத்தல் போலும் நல்லியல்புகள் இடம் பெறவும் வழி காணுதல் வேண்டும் என்பதே” என்றும் அவன் ஆணை அறிவிக்கும் கல்வெட்டுச் செய்திகள் அவன் ஆட்சி நலத்தை அறிவிக்கின்றன. அருளறப் பெருநெறியை, இவ்வாறு தன் அரசியல் ஆணைகள் மூலம் தன் நாட்டு மக்களிடையே பரப்பிய அசோகன், அதன் பயனாகத் தன் காலத்து மக்கள் பெறுவதே போல், வருங்கால மக்களும் அடைதல் வேண்டும் என்று விரும்பினான்; அதன் பயனாய், அருளறத்தின் உண்மைகளையும், அவ்வ்றம் நிலை பெற மக்களும், மன்னனும் மேற்கொள்ள் வேண்டிய செயல் முறைகளையும், தன் நாடெங்கும் உள்ள கற்பாறைகளில் பொறித்து வைத்தான்; அவை பொறிக்கப் பெற்ற ஒற்றைக் கற்களால் ஆன தூண்களை ஆங்காங்கே நாட்டி வைத்தான். அவற்றைக் கால முறைப்படி எட்டு வகையாகப் பிரித்து வரிசை செய்துள்ளார்கள், வரலாற்றாசிரியர்கள். 1. பாறைக் கல்வெட்டு ஆணைகள் பதினான்கு: இவை அசோகனின் அரசியற் கொள்கைகளையும், அறிவொழுக்க நெறிகளையும் விளக்குகின்றன; இவை அனைத்தும், தலைநகர்க்கு வெகு தொலைவில் உள்ள எல்லைப்புற மாகாணங்களிலேயே காணப்படும். 2. கலிங்க நாடு குறித்த கல்வெட்டு ஆணைகள்: இவை புதிதாக வென்ற கலிங்க நாட்டில் நிலவ வேண்டிய அரசியல் முறைகளையும், அந்நாட்டின் எல்லைகளில் வாழும் காட்டு மக்கள் பால் காட்டவேண்டிய நெறி முறைகளையும் எடுத்து இயம்புகின்றன. 3. குகைக் கல்வெட்டுகள்: கயா மாவட்டத்தில் பராபர் என்னும் இடத்தில், அஜீவீக சமயத்தைச் சேர்ந்த அம்மண சந்நியாசிகள் வாழ்வதற்காகஜீவீ குகைகள் குடைந்து அவற்றை அவர்க்கு உரிமையாக்கும் அசோகனின் ஆணை, அம்மூன்று குகைகளிலும் பொறிக்கப்பட்டுள்ளது. 4. தராயி கற்றூண் கல்வெட்டுகள்: புத்தன் பிறந்த புண்ணிய இடங்களுக்கு அசோகன் சென்ற செய்தியை அறிவிக்கின்றன, இக் கல்வெட்டுக்கள் இரண்டும். 5. கற்றூண் அரச ஆணைகள் ஏழு : இவை முன்னர் கூறிய பதினான்கு பாறைக் கல்வெட்டு ஆணைகளின் பிற் சேர்க்கை என மதிக்கும் வகையில், அவற்றில் கூறியனவற்றையே மேலும் வற்புறுத்துகின்றன. - 6. கற்றூண் அரச ஆணைகளின் தொடர் ஆணைகள் : இவ்வாணை அடங்கிய கல்வெட்டுக்களின் பொருள் இனிது விளங்காத வகையில், இவை பெரிதும் சிதைந்து விட்டன. 7. சிறுபாறைக் கல்வெட்டாணைகள் : அசோகன் ஆட்சி ஆண்டு நாற்பத்திரண்டில் வெளியிடப்பட்ட இவற்றில் அறிவிக்கும் செய்திகள் புரியாத புதிராகவே உள்ளன. 8. பாப்ரா அரச ஆணை : ஆட்சியின் இறுதிக் காலத்தில் துறவு நிலை மேற்கொண்ட அசோகன், இராஜ புதான மலைகளில் இருந்த ஒரு புத்தப் பள்ளியிலிருந்து, புத்த மதத் துறவிகளுக்கு, புத்தன் போதித்த ஒழுக்க நெறி நிற்கவும், அவன் அறிவித்த அருள் அறநெறி முறைகளை ஆராய்ந்து அறியவும் அறிவூட்டிய ஆணை அடங்கிய இக்கல்வெட்டு, புத்த சமயத்தின் பெருநிதியாகும். சிறு பாறைக் கல்வெட்டு ஆணையில் வரும். “இச்செய்திகள் மண்டலத் தலைவர்களுக்கு அனுப்பப் பெறுகின்றன; அவர்கள், இவற்றை நாட்டு மக்களுக்குப் பறை சாற்றி அறிவித்தல் வேண்டும். சமய ஆசிரியர்கள், இவற்றைத் தங்கள் மாணாக்கர்களுக்கு அறிவூட்டுதல் வேண்டும். இவற்றைக் கற்றறிந்தவர்கள், இவற்றில் அடங்கிய செய்திகளைக் கல்லாத தம் சுற்றத்தார்க்கு அறிவித்தல் வேண்டும்” என்ற தொடர், இக் கல்வெட்டு ஆணைகளை அக்கால மக்கள் எவ்வாறு பயன் கொண்டார்கள் என்பதைத் தெரிவிக்கிறது. அருள்நெறி உண்மைகளை, அரசியல் ஆணையாளர் வழியாகவும், கற்பாறைகளிலும், கற்றுாண்களிலும் செதுக்கிய கல்வெட்டுக்கள் வழியாகவும், தன் நாட்டில் வாழும் பக்களுக்கும் இனி வாழப் போகும் மக்களுக்கும் உணர்த்திய அசோகன், யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற உயர்ந்த உள்ளம் கொண்டு உலக மக்கள் அனைவருக்கும் உணர்த்த விரும்பினான். அரசன் இறந்தால், அவன் மக்களுள் மூத்தோன் அரியணை ஏற, இளையோர் பிற அரசியல் பணியேற்று வாழ்வர்; அம்முறையாலும், அவரிடையே மனவேறுபாடு தோன்றி பகை வளருமாதலின், அசோகன், அவ்விளையோர்களைத் துறவிகளாக்கி அருளற நெறி வளர்க்கும் அடியார்களாக்கி விட்டான். அவ்வடிகளாரைத் தன் சமய வளர்ச்சிக்குத் துணையாகக் கொள்ளக் கருதினான். அவர்களையும், வேறு பிற புத்தத் துறவிகளையும் கொண்ட புத்த மத வளர்ச்சிக் கழகம் ஒன்றை நிறுவினான். அவற்றின் வழியாக, அவர்களை வெளி நாடுகளுக்கு அனுப்பி புத்த மதத்தைப் பரப்பினான். இமயமலை நாடுகளாகிய திபேத், காம்போஜம், காபூல் பள்ளத்தாக்கு நாடுகளாகிய காந்தாரம், யவனம், விந்திய மலை நாடுகளாகிய போஜம், புலிந்தம், கிருஷ்ணையும், கோதாவரியும் பாயும் ஆந்திரம், முதலாம் தன் ஆட்சிக்குட்பட்ட நாடுகளுக்கும், தன் ஆணைக்கு அடங்காராயினும், தன் பால் அன்பும் நட்பும் உடையார் ஆளும், சேர,சோழ, பாண்டிய சத்திய புத்திரர் நாடுகளுக்கும், கடல் கடந்த ஈழ நாட்டிற்கும், சிரியா, எகிப்து, மாசிடோனியா, முதலாம் மேலை நாடுகளுக்கும் அடிகளாரை அனுப்பி அருளற நெறியை அங்கெல்லாம் பரப்பினான், இலங்கைக்குச் சென்ற அடிகளார் திருக்குழுவிற்குத் தன் இளவல் மகேந்திரனையே தலைவனாக்கி அனுப்பினான். ஈழ நாட்டின் வரலாறு உரைக்கும் மகாவம்சம், சங்கமித்திரை என்ற பெயர் பூண்ட அவன் தங்கையும் உடன் சென்றதாகக் கூறுகிறது. அதே வரலாற்று நூல், பர்மா நாட்டில் உள்ள, சுவர்ண பூமி என வழங்கும் பெருநாட்டிற்கும் அசோகன், அறளறநெறி வளர்க்கும் அடிகளாரை அனுப்பிவைத்தான் என்று கூறுகிறது. அசோகன் ஆசை நிறைவேறிவிட்டது; புத்தமதம், பிறந்த நாட்டில் மறைந்துவிட்டது என்றாலும் உலகப் பெருமதங்களுள் ஒன்று என்ற புகழ் நிலையை இன்றும் பெற்றுத் திகழ் கிறது. அசோகன் வளர்த்த புத்தமதம், இன்று இந் நாட்டில் இல்லை என்று கூறுமளவு குறைந்துவிட்டது என்றாலும், அம் மதத்தின் அறங்களாகிய, அன்பு, அருள், கொல்லாமை, வாய்மை, முதலாயின, பல்வேறு மதங்களுக் குள் புகுந்துகொண்டு, அழியாப் பெருநிலை பெற்று விட்டன. அருள் அறநெறி வளர்த்த அசோகன் புகழ், பொன்றாது நின்று விளங்குகிறது; வாழ்க அவன் புகழ்; வளர்க அவன் வளர்த்த அருள் நெறி! இந்த மின்னூலைப் பற்றி உங்களுக்கு இம்மின்னூல், இணைய நூலகமான, விக்கிமூலத்தில் இருந்து கிடைத்துள்ளது[1]. இந்த இணைய நூலகம் தன்னார்வலர்களால் வளருகிறது. விக்கிமூலம் பதிய தன்னார்வலர்களை வரவேற்கிறது. தாங்களும் விக்கிமூலத்தில் இணைந்து மேலும் பல மின்னூல்களை அனைவரும் படிக்குமாறு செய்யலாம். மிகுந்த அக்கறையுடன் மெய்ப்பு செய்தாலும், மின்னூலில் பிழை ஏதேனும் இருந்தால் தயக்கம் இல்லாமல், விக்கிமூலத்தில் இம்மின்னூலின் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கலாம் அல்லது பிழைகளை நீங்களே கூட சரி செய்யலாம். இப்படைப்பாக்கம், கட்டற்ற உரிமங்களோடு (பொதுகள /குனு -Commons /GNU FDL )[2][3] இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே, இந்த உரையை நீங்கள் மற்றவரோடு பகிரலாம்; மாற்றி மேம்படுத்தலாம்; வணிக நோக்கத்தோடும், வணிக நோக்கமின்றியும் பயன்படுத்தலாம் இம்மின்னூல் சாத்தியமாவதற்கு பங்களித்தவர்கள் பின்வருமாறு: - TI Buhari - Sanganur - Sgvijayakumar 1. ↑ http://ta.wikisource.org 2. ↑ http://creativecommons.org/licenses/by-sa/3.0/ 3. ↑ http://www.gnu.org/copyleft/fdl.html