[] []         []     கடல்வீரன் கொலம்பஸ் (வரலாற்றுக் கட்டுரைகள்) எழுதியவர் : நாரா. நாச்சியப்பன் katalviran kolumpus by nara nacciyappan In tamil script, unicode/utf-8 format       Acknowledgements: Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work. This etext has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. © Project Madurai, 1998-2020. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website https://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.    விற்பனை உரிமை :  தொல்காப்பியர் நூலகம் 107. கனகசபை நகர், சிதம்பரம். நாகு வெளியீடு-14. முதற்பதிப்பு ஜூன், 1966, பதிப்புரிமை பெற்றது விலை ரூ. 2.75 வெளியிட்டோர்; நாகு வெளியீடு, சென்னை-5 நாவல் ஆர்ட் பிரிண்டர்ஸ். சென்னை-14     கடல்வீரன் கொலம்பஸ் (வரலாற்றுக் கட்டுரைகள்)   எழுதியவர் : நாரா. நாச்சியப்பன்   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com    உரிமை : CC-0 - Public Domain    உரிமை : கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் : த.சீனிவாசன்  மின்னஞ்சல் : tshrinivasan@gmail.com   மின்னூலாக்கம் : சு.ஜெயஶ்ரீ  மின்னஞ்சல் : jayasrijai3@gmail.com    -----------                 பொருளடக்கம் முன்னுரை 5  1. ஆவல் பிறந்தது 6  2. ஒளி தோன்றியது 11  3. எண்ணம் பலித்தது 15  4. கரை தெரிந்தது 20  5. புகழ் கிடைத்தது 24  6. கடிதம் கிடைத்தது 33  7. மனங் கசந்தது 38  8. பழி மிகுந்தது 42  9. உண்மை புரிந்தது 49  10. தெய்வம் காத்தது 54  11. கதை முடிந்தது 66  FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி 69                                        முன்னுரை கொலம்பஸ், செல்வங் கொழிக்கும் ஆசிய நாடுகளுக்குக் கடற்பாதையில் குறுக்கு வழி கண்டு பிடிக்க வேண்டுமென்று முயன்றான். உலகம் உருண்டை என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, மேற்கு நோக்கிச் சென்றால் கிழக்கையடையலாம் என்ற உண்மைக் கருத்தில் நம்பிக்கை கொண்டு அவன் புறப்பட்டான். மேலை நாடுகளுக்கும் கீழை நாடுகளுக்கும் இடையே வழிமுழுவதும் கடலாக இருந்திருந்தால் கொலம்பஸ் நினைத்தது சரியாய் இருந்திருக்கும். ஆனால், இடையிலே அமெரிக்கக் கண்டம் இருந்தது. அதைக் கண்டுபிடித்த கொலம்பஸ், அதுதான் இந்தியா என்று நினைத்தான். அதற்கு இந்தியா என்று பெயரிட்டான். அங்கு வாழும் மக்களை இந்தியர்கள் என்று அழைத்தான். தான் கண்டு பிடித்தது இந்தியா அல்ல என்று அவன் தெரிந்து கொள்ள பல நாட்கள் ஆயிற்று. தான் கண்டு பிடித்தது பொன்வளமும் மண்வளமும் மிக்க புதியதோர் உலகம் என்று அறிந்துகொள்ளாமலே அவன் இறந்து போனான். கொலம்பஸ் கதை சுவை மிக்கது. அவன் புதுநாடு கண்டுபிடிக்கப் பட்ட பாடும் அனுபவமும் தொல்லையும் துயரும் மிக்கன. கடைசியில் அவன் முயற்சியின் பயனாக அடைந்த பலனோ ஏமாற்றம் மிக்கது. கொலம்பஸ் கதை மனத்தை உருக்கும் ஒரு பெருங்கதை (நாவல்) போன்றது. இக்கதையின் மூலம், அவனுடைய அளவற்ற நற்குணங்கள் பலவற்றை நாம் அறிய முடிகிறது. கொலம்பஸ் அரசபக்தி மிக்கவன், தெய்வபக்தியும், மதப்பற்றும் மிகக்கொண்டவன்; விடாமுயற்சியும் ஊக்கமும் உள்ளவன். மனிதாபிமானமுள்ளவன்: நியாயத்திற்குப் போராடும் நெஞ்சுரம் படைத்தவன்; எத்தகைய துன்பத்திற்கும் கலங்காத இரும்பு மனம் கொண்டவன். கொலம்பஸ் கதை உலக அனுபவத்தை மட்டுமல்லாமல், உயர்ந்த இலட்சியங்களையும் உள்ளத்திலே உருவாக்க வல்லது. புதியன கண்டு பிடிக்கும் ஆர்வ மிக்க கொலம்பஸ் கதை மாணவ உலகத்திற்கும், அறிவுத் தாகம் கொண்டோருக்கும் நல்ல விருந்தாகும். இவ்வரலாற்றுக் கதையைத் தமிழில் எழுதித்தந்து வெளியிட உரிமையளித்த திரு. நாரா நாச்சியப்பன் அவர்களுக்கு எங்கள் நன்றி யுரியதாகும். மு. சுப்பிரமணியன் பதிப்பாளர் ------------               1. ஆவல் பிறந்தது ஆசியா மைனர் நாட்டில் ஓர் ஆற்றங்கரையில் ஒரு பெரியவர் வாழ்ந்து வந்தார். அந்த ஆற்றங்கரையில் அவர் வாழ்ந்த இடத்தின் பக்கத்தில் இருந்த துறை மிகவும் ஆழமானது. எளிதாகக் கடக்க இயலாத ஆபத்தான இடம் அது. அந்தப் பெரியவர் நல்ல உயரமும் வலுவும் பொருங்திய உடலைப் பெற்றிருந்தார். பிறருக்குழைப்பதே பேரின்பம் என்ற எண்ணமுடையவர் அவர். எனவே, அந்தத் துறை வழியாக ஆற்றைக் கடக்க முயலுவோருக்கு எப்போதும் அவர் உதவியாக இருந்தார். வலுவான உடலும் நலமான எண்ணமும் படைத்த அந்தப் பெரியவருக்கு, வாழ்விலே ஒரு குறிக்கோள் இருந்தது. இறைவனைக் கண்ணாரக் காணவேண்டும் என்பதுதான் அந்த இலட்சியம். அந்த இலட்சியம் நிறைவேறுவதற்கு வழி என்ன என்பது அவருக்குப் புரியவேயில்லை. அதற்காக என்ன செய்யவேண்டும் என்றும் அவருக்குத் தெரியவே யில்லை. ஒருநாள் அவர் தம் அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு குழந்தையின் குரல் அவர் பெயரைக் கூவியழைத்தது. “கிரிஸ்டாபர்! கிரிஸ்டாபர்!” என்று அந்தக் குழந்தை யழைத்த குரல் அவர் தூக்கத்தைக் கலைத்தது. “கிரிஸ்டாபர், என்னை அக்கரையில் கொண்டு போய் விடு” என்று அந்தக் குழந்தை கூவியது. உடனே பெரியவர் தம் கைத்தடியுடன் வெளியில் வந்தார். அந்தக் குழந்தையைத் தன் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு ஆற்றைக் கடக்கலானர். அவர் ஆற்றைக் கடந்து நடக்க நடக்கத் தோளில் இருந்த குழந்தையின் எடை அதிகரித்துக் கொண்டேயிருந்தது. பளுவைத் தாங்க முடியாமல் அவர் கால் இடறியது. தட்டுத் தடுமாறிக்கொண்டு, எப்படியோ பத்திரமாக அவர் அந்தக் குழந்தையை அக் கரைக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டார். அந்தக் குழந்தையைக் கீழே இறக்கிவிட்டு, “அப்பா, சிறுவனே! என்னைப் பெரிய ஆபத்தில் சிக்க வைக்க இருந்தாய்! உன்னைத் தூக்கியதற்கு இந்த உலகத்தையே தூக்கிச் சுமந்திருக்கலாம் போலிருக்கிறது எவ்வளவு பளு” என்று கூறினார் பெரியவர். “இதில் என்ன ஆச்சரியம் இந்த உலகம் முழுவதையும் இதைப் படைத்தவனையும் சேர்த்துத் தானே நீ சுமந்தாய்! பிறருக்கு நன்மை செய்வதன் மூலம் நீ எனக்குத் தொண்டு புரிந்தாய்! உன் கைத்தடியை அந்தக் குடிலின் வாயிலில் ஊன்றி வை. அது நாளைக்கே பூத்துக் காய்ப்பதைக் காணலாம். போற்றித் தொழும் அருட் காவலனும் இறைவனும் நானே என்பதற்கு அதுவே தக்க சான்றாய் அமையும்” என்று கூறி அந்தக் குழந்தை மறைந்து விட்டது. கிரிஸ்டாபர், குழந்தை வடிவில் வந்த இறைவனின் கட்டளையை நிறைவேற்றினர்; மறுநாட்காலை உண்மையிலேயே அவருடைய கைத்தடி ஓர் அழகான பேரீச்சை மரமாக மாறிவிட்டது என்பது பழங்கதை. அன்று முதல், கடல் வழியாகவோ, நில வழியாகவோ, வான் வழியாகவோ பயணம் மேற்கொள்வோர் கிரிஸ் டாபரை வழித்துணே முனிவராகக் கொண்டு வழிபட்டபின், புறப்படுவது வழக்கமாகி விட்டது. இறைவனகிய கிறிஸ்துவை அக்கரைக்குக் கொண்டு சென்ற கிறிஸ்டாபர் முனிவரைப் போலவே, கிறிஸ்துவ மதத்தைக் கடல் கடந்த காடுகளில் பரவச் செய்ததன் மூலம் கிறிஸ்துவை அக்கரை கொண்டு சேர்த்த கொலம் பசுக்கு, அவனுடைய பெற்றோர்கள் கிரிஸ்டாபர் என்றே பெயர் வைத்தார்கள். கொலம்போ அல்லது கொலம்பஸ் என்பது அவனுடைய குடும்பப் பெயர். கிறிஸ்டாபர் என்பதுதான் பெற்றோர்கள் அவனுக்கு இட்ட பெயர். அவர்கள் என்ன காரணத்தினல் அந்த முனிவரின் பெயரை அவனுக்கு இட்டார்களோ தெரியவில்லை. அவனே, தன் பெயருக்கேற்ப, கிறிஸ்துவை அறியாத மக்களிடையே அவரைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்காகவே தான் பிறந்திருப்பதாக நினைத்துக்கொண்டான் என்பதுமட்டும் உறுதி! கிரிஸ்டாபர் கொலம்பஸ் 1451 ஆம் ஆண்டில் ஜினேவா நகரில் பிறந்தான். அவனுடைய தந்தை டொமினிக்கோ கொலம்போ ஒரு நெசவாளி, கம்பளி நெசவு செய்பவர். அவனுடைய தாய் சூசானாவும் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவள்தான். கிரிஸ்டாபர் கூடப் பிறந்தவர்களில் இளமையிலேயே இறந்தவர்கள் போக மீதியிருந்தவர்கள் மூவர். ஒருத்தி தங்கை. அவள் ஒரு பாலடைக்கட்டி விற்பவனைத் திருமணம் செய்துகொண்டு போய்விட்டாள். மிகுந்த இருவரும் தம்பிகள். ஒருவன் பெயர் பார்த்தலோமியோ மற்றொருவன் பெயர் ஜியா கோமா. இவனே ஸ்பானியர்கள் டீகோ என்று அழைத்தார்கள். ஜினோவாக்காரர்களுக்குப் பொதுவாகவே குடும்பப் பற்று அதிகம். இதற்குக் கிரீஸ்டாபர் கொலம்பஸ் விதி விலக்கல்ல. அவன் தன் தம்பிமார்களை நம்பிய அளவு, அயலார்களை நம்பவில்லை. தன் கூடப் பிறந்தவர்களிடம் மட்டுமல்லாமல் தன் சிற்றப்பன் மகனிடமும் அவன் நல்ல நம்பிக்கை வைத்திருந்தான். கிறிஸ்டாபர் பள்ளிக்குச் சென்ற நாட்கள் மிகக் குறைவு. அவன் ஜினோவா மொழிமட்டும் பேசத் தெரிந்து வைத்திருந்தான். நெடுநாட்கள் வரை எழுதப் படிக்கத் தெரியாமலே யிருந்தான். தற்செயலாக அவன் போர்ச்சுககலுக்குப் போய்ச் சேர்ந்த பிறகு தான் எழுதப் படிக்கத் தெரிந்து கொண்டான். ஜினோவா நகரிலே மீன் பிடிக்கும் தொழில் மிகப் பரந்தது. வேறு எந்த வேலையும் செய்யாதவர்கள் செய்யக் கூடிய மிக எளிமையான தொழில் மீன் பிடிப்பது தான். மீன் பிடிப்பதற்காகப் பெரிய தோணிகளும் பாய்மரக் கப்பல்களும் இருந்தன; துறைமுகங்களில் அவ்வப்போது இப்படிப்பட்ட கப்பல்களைக் கட்டிக்கொள்வதும் உண்டு. கிரீஸ்டாபர் கொலம்பசுக்குத் தன் தந்தையின் நெசவுக் கூடம் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆகவே, தன் பத்தாவது வயதிலேயே மீன் பிடிக்கும் கப்பல்களில் வேலைக்குச் சேர்ந்துகொண்டான். மீன் பிடிக்கச் செல்லும் கப்பல்களிலும், அயல் நாடுகளுக்குக் கருவாடு ஏற்றிச் செல்லும் கப்பல்களிலும், மத்திய தரைக் கடலில் அவன் பலமுறை நெடுந்தொலை பயணங்கள் சென்றிருக்கிறான். கப்பலில் செல்லாத நாட்களில் அவன் தன் தந்தைக்கு, உதவியாக இருந்திருக்கிறான். கிரிஸ்டாபர் தன் பத்தொன்பதாம் வயதில் அஞ்சோ அரசர் இரண்டாம் ரேனி ஓட்டிச் சென்ற சண்டைக் கப்பலில் வேலைக்குச் சேர்ந்துகொண்டான். ஒருமுறை ஜினோவா வணிகர்களுடன் அவர்களுடைய கப்பலில் சீயோஸ் தீவுக்கு ஒரு பயணம் சென்று வந்திருக்கிறான். 1476-ஆம் ஆண்டு மேமாதம் ஜினோவாவிலிருந்து வட ஐரோப்பாவிற்கு விலையுயர்ந்த சரக்குகளை ஏற்றிக் கொண்டு ஒரு கப்பற் படை புறப்பட்டது. இந்தப் போர்க் கப்பல்களில் ஒன்றின் பெயர் பெச்செல்லா. இந்தக் கப்டலில் ஒரு மாலுமியாக வேலை பார்த்துக்கொண்டிருந்தான் கிரிஸ்டாபர். ஆகஸ்டு மாதம் 13-ம் நாளன்று ஜிப்ரால்டர் நீர்க் கணவாயைக் கடந்து போர்ச்சுக்கலின் தென் கரை சென்றுகொண்டிருக்கும்போது, பிரஞ்சுக் கப்பற் படையொன்று எதிர்ப்பட்டுத் தாக்கியது. பகல் முழுவதும் ஓயாத சண்டை! இரவில் போர்த் தாக்குதலின் விளைவாக மூன்று ஜினோவாக் கப்பல்களும் நான்கு பிரெஞ்சுக் கப்பல்களும் உடைந்து கடலில் மூழ்கிப் போயின. இந்த அவகதிக்கு ஆளான கப்பல்களிலே பெச்சல்லாவும் ஒன்று. கிரிஸ்டாபர் அடிபட்டுக் காயமுற்றுக் கடலில் விழுந்து விட்டாலும் மிதந்துகொண்டிருந்த ஒரு பெரிய துடுப்புக் கட்டையைப் பிடித்துக்கொண்டான். அதன்மேல் சாய்ந்து கொண்டும், மாறி மாறி உதைத்துக் கொண்டும் ஆறுமைல் தூரம்வரை சென்று கரையில் ஒதுங்கினான். அவன் கரை ஒதுங்கிய இடத்தின் பெயர் லாகோஸ் என்பதாகும். அந்த ஊர் மக்கள் அவனிடம் அன்பு பாராட்டினார்கள். அவன் உடல் நலமடையும்வரை வைத்திருந்து, பின் அவன் தம்பி பார்த்தலோமியோ, லிஸ்பன் நகரில் இருக்கும் செய்தி யறிந்து அங்கு அனுப்பி வைத்தார்கள். ஜரோப்பாவிலேயே அந்தக் காலத்தில் போர்ச்சுக்கல் மிக முன்னேற்ற மடைந்திருந்தது. எழுச்சியும் உணர்ச்சியும் நிறைந்த போர்ச்சுகல் நாட்டின் தலைநகரான லிஸ்பன் எழிலும் தொழிலும் நிறைந்த பட்டினமாக விளங்கியது. ஆராய்ச்சிகளுக்கும் கண்டு-பிடிப்புகளுக்கும் மூல மையமாக விளங்கிய லிஸ்பன் நகரம் வரலாற்றுப் பெருமைமிக்கது. அரை நூற்றாண்டுக்கு முன்னர் கடல் வீரன் ஹென்றி என்று அழைக்கப்படும் போர்ச்சுகல் இளவரசன் வின்சன்ட் முனையில் அமைத்திருந்த கடல்வழி ஆய்வுக் கழகம் மத்திய தரைக் கடல் மாலுமிகளின் கவனத்தை ஈர்த்தது, அட்லாண்டிக் கடலிலும், ஆப்பிரிக்காவின் மேலைக் கரையிலும் பயணங்கள் செய்து வருவதற்கு இளவரசர் ஹென்றி ஆக்கமும் ஊக்கமும் அளித்து வந்தார். அவருடைய கப்பல் தலைவர்கள் அமெரிக்கா செல்லும் வழியில் உள்ள அசோர்ஸ் தீவுகள் என்ற ஏழு தீவுகளைக் கண்டு பிடித்தார்கள். அவ்வப்போது புதுப்புது இடங்களைக் கண்டுபிடித்த அக் கப்பல் தலைவர்கள் கொலம்பஸ் லிஸ்பன் வந்து சேர்ந்த சமயம் கினியா வளைகுடாவைக் கடந்து விட்டார்கள். ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சிவப்புத் துணியையும், கண்ணுடிக் கற்களையும் குதிரைகளையும் ஏற்றிச் சென்ற கப்பல்களெல்லாம் திரும்பி வரும்போது, தந்தமும் தங்கப் பொடியும் மிளகும் அடிமைகளும் கொண்டுவந்து சேர்த்தன. ஜினோவாக் காரர்களின் வாணிகத்தை யெல்லாம், வேனிஸ்காரர்களும் துருக்கிக்காரர்களும் கைப்பற்றிக் கொண்ட சமயம், லிஸ்பன் நகரம் வாணிபத்துறையிலே மேலோங்கி வளர்ந்து கொண்டு வந்தது. ஆப்பிரிக்காக் கண்டத்தைச் சுற்றி இந்தியாவுக்குக் கடல் வழியைக் கண்டு பிடிப்பதற்குப் போர்ச்சுக்கீசிய அரசாங்கம் ஊக்கமளித்துக் கொண்டிருந்தது. இப்படிப்பட்ட முன்னேற்றமான சூழ்நிலையில் இருந்த லிஸ்பன் மாநகருக்குக் கொலம்பஸ் வந்து சேர்ந்தது அவனுடைய பேறு என்றுதான் சொல்லவேண்டும். பல்வகையிலும் முற்போக்கடைந்திருந்த லிஸ்பன் நகருக்கு வந்த கொலம்பஸ் கல்வியில் ஆர்வம் கொண்டான். இலத்தீனும், புதியமொழிகளும் கற்றுக்கொண்டான். உலக அறிவை வளர்க்கும் உயர்தரமான புத்தகங்களையெல்லாம் வாங்கிப் படித்தான். தம்பி பார்த்தலோமியோ, நிலப்படம், தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலைக்கமர்ந்திருந்தான். தன்னை நாடி வந்த அண்ணன் கிரிஸ்டாபரையும் அதே நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்துவிட்டான். கொலம்பஸ் அங்கு போய்ச் சேர்ந்த சில நாட்களில் அண்ணனும் தம்பியும் சேர்ந்து சொந்தமாகவே நிலப்படம் தயாரிக்கும் தொழிலை மேற் கொண்டுவிட்டார்கள். நிலப்படம் தயாரிப்பதற்கு வேண்டிய சரியான கருவிகள் அந்தக் காலத்தில் கிடையாது. ஆகவே அவை முழுவதும் சரியாக அமைந்திருப்பதும் இல்லை. பெரும் பாலும் கப்பல் தலைவர்கள் கூறுகின்ற தகவல்களைக் கொண்டே அவை தயாரிக்கப்படும். கடல் வழியாக உலகின் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்றுவந்த கப்பல் தலைவர்கள் கூறுகின்ற செய்திகளை ஆதாரமாகக் கொண்டு, நிலப்படங்கள் வரையப்படும். இந்தச் செய்திகளைச் சேர்ப்பதற்காக அவர்கள் கப்பல் தலைவர்களுடன் நெருங்கிப் பழகுவார்கள். கப்பல் தலைவர்களுக்கு விருந்து வைத்துப் பேச்சுக் கொடுத்துச் செய்திகளை யறிந்து கொள்ளுவார்கள். அந்தச் செய்திகளை யடிப்படையாகக் கொண்டு நிலப்படங்களைத் தயாரிப்பார்கள். இவற்றைப் புதிதாகப் பயணம் மேற்கொள்ளும் மாலுமிகளும், புதிய புதிய வழிகளில் தங்கள் கப்பல்களைச் செலுத்த முற்படும் கப்பல் தலைவர்களும் விலைகொடுத்து வாங்குவார்கள் கொலம்பஸ் சகோதரர்களின் பிழைப்பு இவ்வாறு நடந்து வந்தது. லிஸ்பனுக்கு வந்த அதே ஆண்டில் கிரிஸ்டாபர் கொலம்பஸ் ஒரு போர்ச்சுக்கீசியக் கப்பலில் வேலைக்குச் சேர்ந்தான். அந்தக் கப்பல், கம்பளியும், கருவாடும் திராட்சை மதுவும் ஏற்றிக்கொண்டு, ஐசுலாந்து, அயர்லாந்து அசோர்சுத் தீவுகள் ஆகியவற்றிற்குச் சென்று திரும்பவும் ஆங்காங்கிருந்து சரக்குகள் ஏற்றிக் கொண்டு லிஸ்பனுக்குத் திரும்பும். அந்தப் பயணத்தின் போது, சால்வே என்ற துறைமுகத்தில் அந்தப் போர்ச்சுக்கீசியக் கப்பல் ஒதுங்கியவுடன், தானக மிதந்து சென்ற ஒரு தோணியில் இரண்டு பிணங்களைக் கண்டது, நெடுநாளைக்குப் பிறகும் கொலம்பசுக்கு நினைவிருந்தது. அந்தப் பிணங்களின் அசாதாரணமான தோற்றத்தைக் கண்ட ஐரிஷ்காரர்கள், அவை சீனக்காரரின் பிணங்கள் என்று கூறினார்கள். அந்தக் கப்பலின் தலைவன், 1477-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர்ச்சுக்கலுக்குத் திரும்புவதற்கு முன்னால், ஐசுலாந்தின் வடபகுதி நோக்கி நூறு காவதம் தாரம் வரை சென்று திரும்பினார். பெரும்பாலும் அந்தக் கப்பல் ஆர்ட்டிக் வட்டத்தைத் தொட்டுவிட்டு வந்த தென்றே சொல்லலாம்.இவ்வாறு பலவித அனுபவங்களும் பெற்ற கொலம்பஸ் தானே ஒரு கப்பல் தலைவனாகும் தகுதியை யடைந்தது வியப்பிற்குரியதல்ல. 1478-ம் ஆண்டில் ஜினோவா வாணிப நிறுவனத்தார், மடெய்ராவில் போய் சீனி வாங்கிக்கொண்டு ஜினேவாவுக்கு வரும்படி அவனிடம் ஒரு கப்பலை ஒப்படைத்தார்கள். அவர்கள் அதற்குரிய பணம் அவனிடம் கொடுத் தனுப்பவில்லை. மடெய்ராவில் சீனி விற்பவர்கள் கடனுக்குக் கொடுக்க மறுத்துவிட்டார்கள். ஆகவே கொலம்பஸ் வெறுங் கப்பலைத் திருப்பிக்கொண்டு வர நேரிட்டது. அதனால் அவர்கள் அவன்மீது வழக்குத் தொடுத்தார்கள். அந்த வழக்கின் காரணமாக 1479-ம் ஆண்டில் கிரிஸ்டாபர் கொலம்பஸ் பேரிழப்படைய நேரிட்டது. அவன் ஜினோவாவுக்குப் போனதும் அதுவே கடைசித் தடவையாகும். ஜினோவாவிலிருந்து லிஸ்பன் திரும்பிய கொலம்பஸ் போர்ச்சுகவில் ஓர் உயர்தரக் குடும்பத்தினர் வழிவந்த டோனா பெலிப்பா என்ற மங்கையைத் திருமணம் புரிந்து கொண்டான். டோனா பெலிப்பாவின் தந்தை பெரிஸ் டிரில்லோ. போர்ட்டோ சாண்டோத் தீவின் தலைவன். அவளுடைய தாத்தா ஜில்மோனிஸ், ஹென்றி இளவரசரின் வீரத் தோழர். அவளுடைய சகோதரன், போர்ட்டோ சாண்டோத் தீவின் ஆட்சித் தலைவனாக இருந்தான். மணம் நடந்த சிறிது காலம் வரை கொலம்பஸ் தம்பதிகள் பெலிப்பாவின் தாயுடன் லிஸ்பனிலேயே தங்கியிருக்தார்கள். பெலிப்பாவின் தாய், தன் கணவருடைய கப்பல் குறிப்புப் புத்தகங்களையும், கடல் வழிகாட்டும் நிலப்படங்களையும் கட்டுக்கட்டி அவருடைய நினைவுப்பொருளாக வைத்திருந்தாள். தன் மாப்பிள்ளைக்காக அவள் அவற்றை அவிழ்த்து எடுத்துக் கொடுத்தது பெரிதும் போற்றக் கூடிய செயலாகும். சில நாட்களுக்குப் பிறகு, கிரிஸ்டாபர் தம்பதிகள் போர்ட்டோ சாண்டோவில் நிலையாகக் குடியிருக்கலானார்கள். போர்ட்டோ சாண்டோவில் தான் கொலம்பஸின் மகன் டோன் டீகோ கோலன் பிறந்தான். 1482-ல் கொலம்பஸ் தன் குடும்பத்தோடு பஞ்சல் தீவில் குடியேறினான். அங்கிருந்து கோல்டு கோஸ்டுக்கு இரு முறை கப்பல் பயணம் சென்றான். அதில் ஒருமுறை அவனே தலைவனாக இருந்து கப்பலைச் செலுத்திக் கொண்டு போனான் என்பது குறிப்பிடத்தக்கது. தனது முப்பத்தொன்று முப்பத்திரண்டாவது வயதில் கொலம்பஸ் முற்றிலும் தகுதி பொருந்திய ஒரு கப்பல் தலைவனாக விளங்கினான். போர்ச்சுகீசிய வாணிபக் கப்பல்களில் பலமுறை கடற் பயணம் சென்று வந்த அனுபவம் அவனுக்குப் படிந்திருந்தது. வடக்கே ஆர்ட்டிக் வட்டத்திலிருந்து தெற்கே பூமத்தியரேகை வரைக்கும் கிழக்கே சஜியன் தீவிலிருந்து மேற்கே அசோர்சுத் தீவுகள் வரையிலும் உள்ள கடற்பகுதி முழுவதும் அவனுக்ருத் தெரிந்த இடங்களே ! கப்பல் தொழிலின் ஒவ்வொரு நுணுக்கமும் அவனுக்குச் கைவந்த சரக்கு துருவ நட்சத்திரத்தை வைத் துக் கொண்டு நிலப்-படங்களையும் பூரேகைகளையும் வரையும் சிறந்த பயிற்சி அவனுக்கு இருந்தது. பூகோளமும் வானியலும் பற்றி அக்காலத்தில் வெளிவந்த சிறந்த நூல்கள் அனைத்தையும் அவன் படித்திருந்தான். எல்லாவற்றுக்கும் மேலாக அவன் தன் திருமணத்தின் மூலம் போர்ச்சுக்கல் நாட்டின் உயர் குடும்பங்கள் இரண்டுக்கு உறவினனாக இருந்தான். இத்தனை தகுதிகளையும் வைத்துக் கொண்டு அவன் சில ஆண்டுகளில் பெரிய பணக்காரனாக ஆகியிருக்க முடியும். ஆப்பிரிக்காவின் கரையில் உள்ள சில புதிய பகுதிகளைக் கண்டுபிடித்து அவன் பிரபுப்பட்டம் பெற்றிருக்க முடியும். ஆப்பிரிக்க வியாபாரத்தின் மூலம் அவன் பெருஞ்செல்வம் சேர்த்திருக்க முடியும். ஆனால், அவனுடைய ஆசைக்கனவுகள் இந்தச் செயல்களுக்கெல்லாம் மேம்பட்டதாக இருந்தது. பொன்னும் மணியும் கொழிக்கும் கீழ்த்திசை நாடுகளுக்குப் புதியதோர் கடற்பாதை கண்டுபிடிக்கவேண்டும்; மேற்குத் திசையிலே கலஞ் செலுத்திக்கொண்டு சென்று கீழ்த் திசையை யடைய வேண்டும்; இதுவரை எந்தக் கப்பல் தலைவனும் காணாத உயர்புகழையும், எந்த மனிதனும் அடையாத பெருஞ் செல்வத்தையும் அடைய வேண்டும்.இந்தியா, சீனா, ஜப்பான் முதலிய செல்வங்கொழிக்கும் கீழை நாடுகளை அடைய எளிய கடல் வழி ஒன்றைக் கண்டு பிடிக்கவேண்டும் என்ற அடங்காத ஆவல் கொலம்பசின் உள்ளத்திலே கொழுந்துவிட்டெரிந்தது. இந்த எண்ணம் அவனுக்கு எப்போது ஏற்பட்டதோ தெரியவில்லை. ஆனால் இதுவே அவன் வாழ்வின் இலட்சியமாக இருந்தது என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது. -----------        2. ஒளி தோன்றியது  மேற்கு நோக்கிப் புறப்பட்டுக் கடல் வழியாகக் கிழக்கை யடைய வேண்டும் என்ற எண்ணம் கொலம்பசுக்குத் திடுதிப்பென்று ஏற்பட்டு விடவில்லை. இந்த ஆவல் கொலம்பசுக்குத்தான் முதன் முதலில் ஏற்பட்டது என்று சொல்வதற்குமில்லை. உலகம் உருண்டை என்ற உண்மை அப்போது மேல் நாடெங்கும் ஒப்புக்கொள்ளப்பட்ட தத்துவம் ஆகிவிட்டது. ஆகவேதான் பல பூகோள வல்லுநர்கள், கிழக்கே யிருக்கும் ஜப்பானுக்கு, மேற்கே புறப்பட்டுப் போய்ச் சேரலாம் என்று எண்ணலானார்கள். ஆனால், கடல்வழியாக எவ்வளவு தூரம் பயணம் செய்வது? எவ்வளவு தூரத்தில் ஜப்பான் இருக்கிறது? என்பதெல்லாம் தெரியாத நிலையில் யாரும் துணிந்து புறப்படுவதற்கில்லை. அக்காலத்தில் உலகெங்கிலும் புகழ்பெற்ற பல பூகோள வல்லுநர்களின் நூல்கள் கிடைத்தன. அந்த நூல்களெல்லாம், இப்போதைப்போல திட்டவட்டமான கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை. அப்போதிருந்த வசதி வாய்ப்பு ஆகியவற்றிற்குத் தகுந்தாற்போல் கண்டுபிடிக்கப் பட்ட செய்திகளை வைத்துக்கொண்டு, இப்படி யிருக்கலாம் அப்படி யிருக்கலாம் என்ற அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டே கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. கொலம்பஸ் அக்காலத்தில் கிடைத்த பூகோள நூல்கள் அனைத்தையும் வாங்கிப் படித்திருந்தான். தான் படித்த நூல்களைக் கொண்டு – அவை கூறும் கருத்துக்களைக் கொண்டு அவன் ஒரு தீர்மானத்துக்கு வந்தான். வட்ட வடிவமான இந்த உலகத்தில் நிலப்பகுதியைச் சுற்றிலும் கடற்பகுதி சூழ்ந்திருக்கிறது; கடலின் இடையிலே இந்த நிலப்பகுதி ஒரு பெரிய தீவுபோல அமைந்திருக்கிறது; இதில் நிலப்பகுதி ஏழு பாகமும் கடற்பகுதி ஒரு பாகமுமாக அமைந்துள்ளன என்று அவன் நம்பினான். எனவே கடல் வழியாக மேற்கு நோக்கிப் புறப்பட்டால் மிக எளிதாகக் கீழை நாடுகளையடைந்து விடலாம் என்று அவன் திண்ணமாக நம்பினான். உண்மையில் உலகின் மொத்தப் பரப்பில் ஏறக்குறைய முக்கால் பங்கு கடல் சூழ்ந்திருக்கிறது. இது கொலம்பசுக்கு அக்காலத்தில் தெரிந்திராதது அதிசயமில்லை. கீழ்நாடுகளுக்குக் கடல் வழி கண்டுபிடிக்க வேண்டும் என்று மேல் நாட்டார் விரும்பக் காரணம் என்ன? எல்லாம் ஆசைதான்; பேராசைதான்! கீழ் நாட்டுப் பொருள்களுக்கு மேல் நாடுகளிலே அதிக மதிப்பிருந்தது. தங்கமும் வெள்ளியும், முத்தும் இரத்தினமும், பட்டும் பருத்தியும், வாசனைப் பொருள்களும், மருந்து மூலிகைகளும் சிறுசிறு அளவில் மேல் நாடுகளுக்குப் போய்ச் சேர்ந்தன. இவை யாவும், ஒட்டகங்களின் மேல் ஏற்றிச் செல்லப்பட்டு கான்ஸ்டாண்டி நோபிள் போய்ச் சேரும், அங்கிருந்து மரக்கலங்களின் மூலமாக ஐரோப்பிய நாடுகளை யடையும். இவ்வாறு இந்தச் சரக்குகள் பல வணிகர்களின் கை மாறிப் பல மாதங்கள் கடந்து ஐரோப்பாவைப் போய்ச் சேரும். இதனால் அந்தப் பொருள்களின் விலை நூறு மடங்காக ஏறிவிடும். இவ்வாறு சுற்று வழியாக வந்து சேரும் சரக்குகளை நேரடியாக அவை விளையும் இடத்திலேயே போய் வாங்கினால் மிக மலிவாக வாங்கிவிடலாம் என்ற எண்ணமிருந்தது. தவிர, செல்வங்கொழிக்கும் இந்த நாடுகளில் சிலவற்றைத் தங்கள் ஆதிக்கத்திற்குட்படுத்திக் கொண்டால், வாணிபத்தை மேலும் இலாபத்தோடு செய்யலாம் என்ற எண்ணமும் மேல் நாட்டார் பலருக்கும் இருந்தது. போர்ச்சுக்கீசிய அரசர்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றி வந்து இந்தியாவை அடையும் வழியொன்றைக் கண்டுபிடிப்பதற்காகப் பலமுறை முயற்சி எடுத்துக்கொண்டார்கள். ஆனால் இந்த வழி சுற்றுவழி என்றும், நேராக மேற்கு நோக்கிச் சென்று குறுகிய வழியில் கீழ் நாடுகளை அடைவது தான் எளிய வழியென்றும் கொலம்பஸ் எண்ணினான். ஐரோப்பாவின் மேற்குக் கரையிலிருந்து புறப்பட்டால் ஜப்பானின் கிழக்குக் கரையிலே வந்து கப்பல் நிற்கும் என்றும், இடையிலே எவ்விதமான நிலப்பகுதியும் கிடையாதென்றும் தான் அக்காலத்தில் எல்லோரும் நம்பினார்கள். அமெரிக்காக் கண்டம் என்பதாக ஒன்று இருக்கும் செய்தி அக்காலத்தில் யாருக்குமே தெரியாது. கொலம்பஸ் காலத்தில் பிளாரன்ஸ் நகரத்தில் ஒரு ஞானி யிருந்தார். அவர் பெயர் பாவோலோ டோஸ்கானெலி. அவர் மருத்துவத் துறையில் பெரிய வல்லுநர். அத்தோடு வான நூலும், கணித நூலும் அவருக்குத் தண்ணீர் பட்டபாடு. 1471-ம் ஆண்டில் அவர் தம் போர்ச்சுக்கீசிய நண்பர் ஒருவருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். போர்ச்சுக்கீசிய அரசரை மேற்கு நோக்கி ஜப்பானுக்குக் கப்பல் அனுப்ப ஊக்க வேண்டும் என்று அவர் அக்கடிதத்தில் வற்புறுத்தியிருந்தார். கூடவே ஒரு கடல்வழி காட்டும் நிலப்படமும் அனுப்பியிருந்தார். இதைக் கேள்விப்பட்ட கொலம்பஸ் உடனே அந்தப் பிளாரென்ஸ் பட்டணத்து ஞானிக்கு ஒரு கடிதம் எழுதித் தனக்கு மேற்கொண்டு விபரங்கள் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டான். அவர் மகிழ்ச்சியோடு, அவனுடைய ஆவலை ஆதரித்து ஊக்கப் படுத்திக் கடிதம் எழுதியதோடு, அவனுக்கும் ஒரு கடல் வழி காட்டும் நிலப்படம் அனுப்பிவைத்தார். பிற்காலத்தில் இந்தியாவுக்குக் கடல்வழி கண்டுபிடிக்க அவன் பயணம் மேற்கொண்டபோது, அந்த நிலப்படத்தையும் கையோடு கொண்டு போயிருந்தான் என்பது குறிப்பிடத் தக்கது. கொலம்பசுக்குத் தன் எண்ணத்தை வலியுறுத்தும் ஆதாரங்கள் எல்லாம் கிடைத்த பிறகு, அதைச் செயற் படுத்திப் பார்க்கவேண்டும் என்ற துடிப்பு ஏற்பட்டது. ஆனால், தனியொரு மனிதனாக நின்று செய்யக்கூடிய செயல் அல்ல இது. அரசாங்கத்தின் ஆதரவும், வழிச் செலவுக்குப் பணமும் நிறையத் தேவையாயிருந்தது. முன் பின் தெரியாத புதுவழியில், எத்தனை நாள் என்று சொல்ல முடியாத பயணத்தை மேற்கொள்வ-தென்றால் யாராவது ஓர் அரசரின் ஒத்தாசையில்லாமல் முடியாது. 1484-ஆம் ஆண்டில் போர்ச்சுக்கல் அரசர் இரண்டாவது ஜானிடம் அவன் தன் நோக்கத்தை வெளிப்படுத்தி உதவிபெற முயன்றான். புதிய கண்டுபிடிப்புக்களில் ஆர்வங்காட்டிய பழைய ஹென்றி இளவரசனின் மருமகன் ஜான். ஆகவே அவர் தன் முயற்சிக்கு ஆதரவளிப்பார் என்று கொலம்பஸ் எதிர்பார்த்தான். கொலம்பஸின் வேண்டுகோளை ஆராய்ந்து முடிவு கூறும்படி ஒரு குழுவை அமைத்தான் ஜான் அரசன் அந்தக் குழுவில் ஒரு முக்கியமான மதத் தலைவரும் இரண்டு யூத மருத்துவரும் இருந்தார்கள். அவர்கள் கப்பற் பயணங்களில் நல்ல அனுபவமும் திறமையும் பெற்றவர்கள். அவர்கள் கொலம்பசின் கூற்றை ஆராய்ந்து, அது நடை முறைக்கு ஒத்துவராதது என்று தள்ளிவிட்டார்கள். இந்த நிகழ்ச்சி பற்றிப் பலவிதமான கருத்துக்கள் கூறப்படுகின்றன. கொலம்பஸ் பெரிய தற்பெருமை மிகுந்தவனாகவும், அளவு கடந்த வாய்ப் பேச்சுக்காரனாகவும் இருந்ததாலும், சிப்பாங்கோ தீவு என்று அக்காலத்து அழைக்கப்பெற்ற ஜப்பானைப் பற்றி அவன் கூறிய செய்திகள் கற்பனையில் மிஞ்சிய வருணனைகளாக இருந்ததாலும், அரசர் அவனைச் சிறிதும் மதிக்கவேயில்லை என்று சிலர் கூறுகிறார்கள். கொலம்பஸ் தான் கண்டுபிடிக்கப் போகும் நாடுகளில் தனக்குப் பெரும் பங்கும், உரிமையையும், அதிகாரமும், பட்டமும் வேண்டும் என்று கேட்டான்; அவன் கேட்டது மிக அதிகமாக இருந்ததால் அரசர் ஜான் அவனுக்கு உதவியளிக்க மறுத்துவிட்டார் என்று சிலர் கருதுகிறார்கள். இந்தக் கருத்தே பெரும்பாலும் உண்மையாக இருக்கக் கூடும். ஏனெனில் அசோர்சுத் தீவுகளைப் போல் ஏதாவது ஒரு தீவுக் கூட்டத்தைக் கண்டுபிடிக்கக்கூடிய தன் கப்பல் தலைவனுக்கு ஒரு தீவை உரிமைப்படுத்திக் கொடுக்க அரசர் முன் வந்ததற்குச் சான்றுகள் இருக்கின்றன கொலம்பசுக்கு உதவி மறுத்த 1485-ஆம் ஆண்டிலேயே டூல்மோ , எஸ்டிரீட்டோ என்ற இரு போர்ச்சுகீசிய மாலுமிகளுக்கு அண்டிலாத் தீவைக் கண்டு பிடிக்க அனுமதியும் உதவியும் வழங்கியிருக்கிறார். எட்டாவது நூற்றாண்டில் மூர்ச் சண்டையில் தப்பிப் பிழைத்த அகதிகள் அண்டிலா என்ற தீவிலே போய்க் குடியேறி வாழ்ந்தார்கள் என்றும், அவர்கள் வமிச் வழியாக அங்கேயே வாழ்ந்து வருகிறார்கள் என்றும் ஒரு கர்ண பரம்பரைச் செய்தி நிலவி வந்தது. அந்த அண்டிலாத் தீவைக் கண்டு பிடித்தால் அந்த மாலுமிகள் அந்தத் தீவின் தலைமையைப் பரம்பரையாக அனுபவிக்கலாம் என்றும் அதற்குரிய சிறப்புக்களையும் பட்டங்களையும் அடையலாம் என்றும் அரசர் வாக்களித்திருந்தார். அந்த இரு மாலுமிகளும் மேற்கு நோக்கி நாற்பது நாட்கள் வரை பயணம் மேற்கொள்வதென்றும், அதற்கிடையிலே அந்தத் தீவைக் கண்டு பிடிக்காவிட்டால் திரும்பி விடுவதென்றும் ஏற்பாடாகியிருந்தது. உண்மையில் அண்டிலா என்பதாக ஒரு தீவே கிடையாது. இல்லாத அந்தத் தீவைக் கண்டு பிடிக்க முயற்சி யெடுத்துக் கொண்ட அரசர், இருக்கின்ற கீழை நாடுகளுக்குப் புதுவழி கண்டு பிடிக்க முயன்ற கொலம்பசுக்கு ஆதரவளிக்காததற்குக் காரணம் அவனுடைய அதிகப்படியான ஆசை மிகுந்த வேண்டுகோள்களேயாகும் என்று நம்பலாம். போர்ச்சுகீசிய மன்னர் ஆதரவளிக்க மறுத்த அதே 1485-ம் ஆண்டில், அவன் மனைவி டோனாபெலிப்பாவும் லிஸ்பன் நகரில் இறந்துவிட்டாள். அத்தோடு போர்ச்சுக் கீசிய நாட்டில் அவனுக்கிருந்த உறவும் அறுபட்டது. தன் முயற்சியை மேற்கொள்வதற்கு அவனுக்கு எப்படியும் ஓர் அரசர் அல்லது அரசாங்கத்தின் உதவி தேவைப் பட்டது. இனிப் போர்ச்சுக்கீகிய மன்னரை நம்புதற்கிடமில்லை என்று ஏற்பட்ட பிறகு, அவன் ஸ்பெயினிலே போய் முயற்சி செய்து பார்க்கலாம் என்று எண்ணமிட்டான். ஸ்பெயின் நாட்டிலே, அவன் மனைவியின் சகோதரி ஒருத்தி ஒரு ஸ்பானியனைத் திருமணம் புரிந்து கொண்டு ஹசல்வா என்ற ஊரிலே யிருந்தாள். அவளைத் தவிர வேறுவாரையும் அங்கு அவனுக்குத் தெரியாது. இருந்தாலும் ஊக்கத்தைத் துணையாகக் கொண்டு தன் ஐந்து வயது மகன் உகோவை உடனழைத்துக் கொண்டு தன் கப்பலை ஸ்பெயின் நாடு நோக்கிச் செலுத்தினான் கொலம்பஸ். கப்பல் பாலோஸ் துறைமுகத்தை நெருங்கிக் கொண் டிருக்கும் போது, கரையோரத்தில் இருந்த பிரான்சிஸ்கன் மடாலயக் கட்டிடங்கள் கொலம்பசின் கண்களில் தென் பட்டன. உடனே அவன் தன் மகன் டீகோவை என்ன செய்வதென்று முடிவுகட்டி விட்டான். பிரான்சிஸ்கன் மடாலயத்தார், சிறுவர்களை மாணாக்கர்களாக ஏற்றுக் கொண்டு அவர்களுக்குக் கல்விகற்றுக் கொடுத்ததோடு உணவும் உடையும் உறையுளும் கூடத் தருமமாக வழங்கி வந்தார்கள். அந்த மடாலயத்தில் தன் மகனைச் சோத்து விடுவதென்ற முடிவுக்கு வந்த கொலம்பஸ். பாலோஸ் துறைமுகத்தில் தன் கப்பலுக்கு நங்கூரம் பாய்ச்சி விட்டுக் கரையில் இறங்கினான். தன்மகனை அழைத்துக் கொண்டு நான்கு மைல் தொலைவில் இருந்த அந்த மடாலயத்துக்கு நடந்தே சென்றான். மடாலயத்தை யடைந்ததும், கதவைத் தட்டினான். கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்த வேலைக்காரனிடம் தனக்குத் தாகத்திற்குத் தண்ணீரும் பையனுக்குச் சிறிது ரொட்டியும் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டான். அப்பொழுது அவனுடைய அதிர்ஷ்டவசமாக அருள் நிறைந்த உள்ளமும் வான நூல் ஆராய்ச்சியில் நல்ல தேர்ச்சியும் பெற்றவரும், பிரான்சிஸ்கன் பெருந்துறவியருள் ஒருவருமான அண்டோனியோ டி மார்ச்சினா என்ற பெரியவர் வாசற் பக்கம் வந்தார். கொலம்பசுடன் பேசத் தொடங்கிய அவர் அன்புடன் உள்ளழைத்துச் சென்றார். அவன் வேண்டுகோளுக்கு இணங்கிச் சிறுவனைத் தன் மாணாக்கனாக ஏற்றுக்கொள்ள இசைந்தார். கொலம்பசின் கனவுகளையும் வேட்கைகளையும் கண்டறிந்த அவர், பல மரக்கலங்களுக்குச் சொந்தக்காரரும், ஸ்பெயின் தேசத்துப் பிரபுக்களிலே ஒருவருமான மெடினாசீலிச் சீமானுக்கு அவனை அறிமுகப்படுத்தி வைத்தார். சீமான் மெடினா சீலியிடம் கொலம்பஸ் கேட்டதெல் லாம் மூன்று அல்லது நான்கு வசதி பொருந்திய மரக் கலங்கள் தான். சீமான் மெடினா சீலி அதற்குச் சம்மதித் தாலும், கொலம்பஸ் தன் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கும், ஸ்பெயின் நாட்டிலிருந்து கப்பல்கள் புறப்படுவதற்கும் அரசாங்கத்தின் அனுமதி பெறவேண்டியிருந்தது.அப்போது ஸ்பெயின் தேசத்தை ஆண்டு வந்தவள் அரசி இசபெல்லா. இசபெல்லா கத்தோலிக்க சமயத்தில் தீவிர பற்றுதல் கொண்டவள். தெய்வப் பற்றும் சமயப் பற்றும் சிறந்த ஆட்சித்திறனும் கொண்டவள். ஐரோப்பிய அரசர்களிலேயே வலிவும் திறனும் புகழும் பெருமையும் கொண்டவளாக அக்காலத்தில் சிறந்து விளங்கினாள் அவள். - என்ற திருக்குறட் பாக்களுக்கு இலக்கியமாய் ஒரு செயலை முடிக்கச் சரியான ஆளைத்தேர்ந்தெடுப்பதிலும், சரியான நேரத்தில் செய்வதிலும் அவள் வல்லவளாய் விளங்கினாள். அரசி இசபெல்லாவைப் பேட்டி காணக் கொலம்பஸ் ஒன்பது மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. காரணம், அவன் ஸ்பெயினுக்கு வந்து சேர்ந்த சமயம், அவள் அரசியல் வேலையாக ஒவ்வோர் ஊராகச் சென்று கொண்டிருந்தாள். அவளைத் தொடர்ந்து சென்று ஏதாவது ஊரில் சந்திக்கலாம் என்றால் கொலம்பஸ் கையில் பணம் கிடையாது. எனவே, அருகில் இருந்த கோர்டோவா என்ற ஊரிலே காத்திருந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அவன் அரசி இசபெல்லாவைப் பேட்டி கண்டான். முதல் சந்திப்பிலேயே அரசி இசபெல்லாவுக்கு கொலம்பஸ் மீது ஒரு நல்லெண்ணமும் நம்பிக்கையும் ஏற்பட்டு விட்டது. இருந்தாலும் அவள் உடனடியாக அவனுக்கு அனுமதி வழங்கிவிடவில்லை. அவனுடைய திட்டத்தை ஆராய்வதற்காக அப்பொழுது அவள் ஒரு சிறப்புக்குழுவை நியமித்தாள். கொலம்பசின் பெரிய முயற்சித் திட்டத்திற்கு அனுமதி வழங்குவதா, அல்லது தள்ளிவடுவதா, அனுமதி வழங்கினால், சீமான் மெடினா சீலியின் ஆதரவில் முயற்சியை மேற்கொள்ளச் செய்வதா அல்லது அரசாங்கமே அவன் முயற்சிக்கு உதவுவதா என்றெல்லாம் ஆராய்ந்து முடிவு கூறும்படி அவள் அந்தக் குழுவை நியமித்தாள். இப்படிப்பட்ட முயற்சிகளைத் தனிப்பட்டவர்கள் மேற்கொள்ளுவதைவிட அரசாங்கமே மேற்கொள்ளுவதுதான் பொருத்தம் என்று அவள் நினைத்தாள். பலவிதமான தாமதங்களுக்குப் பிறகு கடைசியில் அரசியின் அனுமதி பெற்றுக் கொலம்பஸ் தன் பயணத்தை மேற்கொள்ளுவதற்கு ஆறு ஆண்டுகளாயின. ---------     3. எண்ணம் பலித்தது ஸ்பெயின் நாட்டு அரசி இசபெல்லா கொலம்பஸ் முயற்சிக்கு ஆதரவளிப்பது பற்றியோ அனுமதி கொடுப்பது பற்றியோ ஒரு முடிவுக்கு வர ஆறு ஆண்டு காலம் பிடித்தது. அந்த ஆறு ஆண்டுகளும் கொலம்பசுக்கு வாழ்க்கையே ஒரு நரகம் போல் தோன்றியது. கொலம்பஸ் தன் முயற்சி வெற்றி பெறுவது உறுதியென்று திடமான நம்பிக்கை கொண்டிருந்தான். அந்த வெற்றிதான் தன் வாழ்வில் ஒளி சேர்க்கும் என்று அவன் கனவு கண்டு கொண்டிருந்தான். ஆனால் சுற்றிலும் உள்ளவர்களில் பெரும்பாலோர் அவன் திட்டத்தைக் கேட்டு எள்ளி நகையாடினார்கள். காற்று வாங்கப் போகும் போது மட்டும் கடலைப் பார்த்திருந்த அரச்சபையைச் சேர்ந்த பலர் அவனை நையாண்டி செய்தார்கள். பெரும்பாலானவர்கள் அவனை ஒரு பிச்சைக்காரனிலும் கேவலமாக நடத்தினார்கள். உண்மையில் அவன் நிலைமையும் அவ்வாறுதான் இருந்தது. கைச் செலவிற்குப் பணமில்லாமல் அவன் அந்தச் சமயத்தில் வறுமைக்காளாகி வாதைப்பட்டுக் கொண்டிருந்தான். அரசி இசபெல்லா அமைத்த சிறப்புக் குழுவினர் 1486-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் சமயத்தில் சாலமங்கா என்ற ஊரில் கூடினார்கள். கொலம்பஸ் திட்டத்தைப் பற்றி அவர்கள் ஆராய்ந்தார்கள். ஆனால் அவர்களுடைய விவாதங்கள் ஒரு தீர்மானத்துக்கு வராமலே கலைந்து விட்டார்கள். மீண்டும் ஒரு முறை கூடி விவாதிக்கலாம் என்ற முடிவுடன் அவர்கள் குழுக்கூட்டத்தை முடித்து விட்டார்கள். ஆனால், கொலம்பஸ் வாழ்க்கை நிலையை நன்கு அறிந்த டீகோ டி டீசா என்ற குழு உறுப்பினரின் செல்வாக்குக் காரணமாகவும், குழுத்தலைவரான டாலவெராவின் நல்லெண்ணம் காரணமாகவும், கொலம் பசுக்கு ஆண்டுக்கு 12,000 செப்புக் காசுகள் வாழ்க்கைச் செலவிற்காகச் கொடுப்பதென அந்தக் குழுவில் முடிவாயிற்று. தொகைதான் 12,000. ஆனால் வெறும் செப்புக் காசுகள் தான் இருந்தாலும், தெய்வ சிந்தனையும் ஆடம்பர மற்ற எளிய வாழ்வும் மேற்கொண்டிருந்த கொலம்பஸ் போன்ற மனிதனுக்கு அந்தக் காலத்துப் பொருளாதார நிலைமையை நோக்கும் போது இந்தத் தொகை வாழ்க்கைச் செலவுக்குப் போதுமானதுதான். ஆனால், கொலம்பசின் துரதிருஷ்டம் அந்தத் தொகை கூட அவனுடைய தேவைக்கு ஒழுங்காகக் கிடைத்து வரவில்லை. நாட்கள் நகர்ந்தன; மாதங்கள் மறைந்தன, ஓராண்டும் உருண்டது; அடுத்த கிறிஸ்துமஸ் கூட வந்துவிட்டது. டாலவெராவின் தலைமையில் அமைந்த அந்தக் குழுவினர் மீண்டும் கூடவேயில்லை. எண்ணம் நிறைவேறும் நாளை எதிர்பார்த்துக் காத் திருந்த கொலம்பசுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் யுகமாகத் தோன்றியது. அவர்களோ இதைப் பற்றிய, கருத்தே யில்லாமல் சும்மாயிருந்தார்கள். பொறுமையிழந்த கொலம்பஸ் மீண்டும் போர்ச்சுக்கல் அரசரை நாடிப் பார்க்கலாமா என்று எண்ணினான். போர்ச்சுக்கலில் முன்பு அவன் இருந்தபோது பலரிடம் கடன் வாங்கியிருந்தான். கடன்காரர்கள் அவன் திரும்ப வந்தால் கைது செய்து சிறையில் தள்ளத் தயாராக இருந்தார்கள். தன் வேண்டுகோளை மீண்டும் செவி சாய்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு போர்ச்சுக்கல் அரசர் இரண்டாம் ஜானுக்குக் கொலம்பஸ் ஒரு கடிதம் எழுதினான். அவ்வாறு தன்னை அழைக்கும் போது தன் கடன்களுக்காகக் கைது செய்யாமல் இருக்க வேண்டும் என்றும் அதே கடிதத்தில் குறிப்பிட்டு வேண்டிக் கொண்டான். அவன் வேண்டுகோளை அப்படியே ஏற்றுக் கொண்டு ஜான் அரசர் உடனே வரும்படியாகப் பதில் எழுதினார். போர்ச்சுக்கல் அரசரிடம் ஏற்பட்ட விசேஷ மாறுதலுக்குக் காரணம் இல்லாமல் இல்லை. அண்டீலியாத் தீவைக் கண்டுபிடிக்க அவர் அனுப்பிய கப்பல் தலைவர்கள் பயனில் லாமல் திரும்பி வந்து விட்டார்கள். ஆப்பிரிக்காவைச் சுற்றிக் கொண்டு இந்தியாவை யடைய வேண்டும் என்று போர்ச்சுகீசியர்கள் முன் பத்தொன்பது தடவை செய்த முயற்சிகளும் பலிக்கவில்லை. இருபதாவது முறையாகப் புறப்பட்டுச் சென்ற பார்த்தலோமியா டயஸ் என்ற கப்பல் தலைவனிடமிருந்து ஏழு மாதங்களாகியும் எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை. ஜான் அரசருடைய அழைப்புக் கிடைத்தவுடன், கொலம்பஸ் புறப்பட்டுப் போக முடியவில்லை. காரணம் வழிச்செலவிற்குப் பணம் இல்லாமையே. பணம் தயாரித்துக்கொண்டு கொலம்பசும் அவன் தம்பியும் போர்ச்சுக்கல் போய்ச் சேர்ந்த சமயம், பார்த்தலோமியோ டயஸ் தன் மூன்று கப்பல்களுடன் வெற்றிப் பெருமிதத் துடன் திரும்பிவந்து சேர்ந்தான். அவன் ஆப்பிரிக்காவின் தென் முனையைச் சுற்றிக் கொண்டு கீழ்க்கரைப் பகுதியை அடைந்து விட்டதாகவும். அங்கிருந்து இந்தியா போவது எளிதென்றும், ஆனால் நெடுநாளாகி விட்டதால் தன் ஆட்கள் கட்டாயத்துக் கிணங்கத் தான் தாய் நாடு திரும்பி விட்டதாகவும் அரசருக்குச் செய்தி சொன்னான் அந்தக் கப்பல் தலைவன். இந்தியாவை அடைவதற்கு நிச்சயமான ஒருவழி கண்டு பிடித்த பிறகு ஏன் சந்தேகத்திற்கிடமான கொலம்பஸ் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கருதத் தொடங்கினார் ஜான் அரசர். ஐயத்திற்கிடமான விஷயத்தில் பணம் செலவழிப்பது வீண் என்ற கருத்து அவருக்கு ஏற்பட்ட பின் கொலம்பஸ் அங்குச் சென்றதே வீணாகிவிட்டது. கிறிஸ்டாபர் கொலம்பசும் அவன் தம்பியும் கூடி யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். டால்வெரா குழுவினர் உடனடியாக முடிவு கூறாவிட்டாலும் எப்படியும் நல்ல முடிவுக்கு தன் கனவுகள் பலிக்கும் படியான முடிவுக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை, அடியோடு மாண்டு போய் விடவில்லை. எனவே கொலம்பஸ் ஸ்பெயின் திரும்பினான். அவன் தம்பி பார்த்தலோமியோ கொலம்பஸ், அண்ணனுடைய திட்டத்துக்கு ஆதரவு தேட பிற ஐரோப்பிய நாடுகளில் முயற்சி செய்வதென்று புறப்பட்டான். முதலில் அவன் இங்கிலாந்து சென்றான். அப்போது இங்கிலாந்தை ஆண்டவர் ஏழாம் ஹென்றி. பார்த்த லோமியோ கொலம்பஸ் என்ன விளக்கிச் சொல்லியும் அவர் எதையும் சரியாக மனத்தில் வாங்கிக் கொள்ளவில்லை. அவர் கருத்தைக் கவர முடியாமல் அவன் திரும்பி விட்டான். அங்கிருந்து அவர் பிரான்சு தேசம் சென்றான். பிரெஞ்சு அரசர் எட்டாவது சார்லஸின் சகோதரர் அன்விடி பீஜோவின் அன்பைப் பெற்றான் பார்த்தலோமியோ கொலம்பஸ். அவன் சில நிலப் படங்கள் எழுதித் தரும் வேலையை அவனிடம் ஒப்படைத்தார். அவர் மூலமாகப் பிரெஞ்சு அரசரின் நட்பைப் பெற்றான். ஆனால், திட்டம்தான் அவரிடமும் பலிக்கவில்லை. விஷயத்தை விளக்கிக் கடிதம் போட்டுவிட்டு பார்த்தலோமியோ கொலம்பஸ் பிரான்சிலேயே தங்கி விட்டான். முயற்சிகள் எதுவும் பலிக்காமல் மனம் நொந்து போன கொலம்பஸ் எப்படித்தான் காலம் கழித்தானோ? எவ்வளவு நொந்து போன உள்ளத்துடன் வாழ்ந்தானோ? அவன் ஸ்பெயினுக்குத் திரும்பிவந்த செய்தியறிந்த இசபெல்லா தன்னை சந்திக்கும்படி கட்டளையிட்டாள். அப்போது ஸ்பெயின் அரசாங்கம் மூர் இனத்தாருடன் போரிட்டுக் கொண்டிருந்தது. மூர்கள் நகரான பாஜாவுக்கு வெளிப்புறத்தில் கூடாரமடித்துத் தங்கியிருந்தாள் அரசி இசபெல்லா. கொலம்பஸ் அங்கு வந்து சேருவதற்கு வழியில் எல்லா வசதிகளும் செய்து கொடுக்கும்படி அதிகாரிகளுக்கு ஒரு பொது உத்தரவுக் கடிதம் எழுதி அதைக் கொலம்பசுக்கு அனுப்பியிருந்தாள். அங்கு வந்து சேர்ந்த கொலம்பஸ், சண்டையில் ஒரு சிப்பாயாக சேவகம் செய்யத் தவறவில்லை. 1490-ம் ஆண்டு டாலவெராக் குழுவினர் கூடி விவாதித்து, கொலம்பஸ், திட்டம் பயனற்றது என்று முடிவு கட்டினார்கள். மேற்கு நோக்கிச் சென்று கிழக்கையடைலாம் என்ற கொள்கையே நடைமுறைக் கொவ்வாததென்று அவர்கள் அரசிக்குக் கூறினார்கள். மேற்குப்புறமாகத் சென்று ஆசியாவை அடைய நெடுந்தூரம் கடல்வழி செல்ல வேண்டுமென்றும் அவ்வளவு தூரத்தைக் கடந்து செல்ல சுமார் மூன்று ஆண்டுகளாவது பிடிக்கும் என்றும். ஆகவே கொலம்பஸ் திட்டம் பயனற்றது என்றும் அவர்கள் அரசிக்குக் கூறினார்கள். இந்த முடிவு கொலம்பசின் தலையில் இடி விழுந்தது போலிருந்தது. எத்தனைபேர் மறுத்துச் சொன்னாலும் கொலம்பசுக்குத் தன் திட்டத்திலே அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. தன் திட்டத்துக்கு ஆதரவு கிடைக்கும் என்னும் நம்பிக்கையைத்தான் அவன் இழக்க வேண்டியிருந்தது. குழுவினர் தீர்மானமாக முடிவு சொல்லி விட்டாலும் இசபெல்லா கொலம்பசின் நம்பிக்கையை அடியோடு வெட்டிவிடவில்லை. மூர் இனத்தாரோடு நடைபெறும் சண்டை முடிந்தபின் மீண்டும் அவன் விண்ணப்பித்துக் கொண்டால் தான் மறுபடி இவ்விஷயத்தை ஆலோசனைக்கு எடுத்துக்கொள்வதாகச் சொல்லி அவனுக்கு ஆறுதல் கூறினாள். மீண்டும் ஓராண்டு ஸ்பெயினில் இருந்து பார்த்தான். மூர்ச்சண்டை முடிவதாகத் தெரியவில்லை. தன் மகனை அழைத்துக் கொண்டு பிரான்ஸ் சென்று தன் தம்பியுடன் சேர்ந்து கொள்ள எண்ணினான். தன் மகனை மடத்திலிருந்து அழைத்துக் கொள்வதற்காக அவன் சென்ற பொழுது அங்கு, அந்த மடத்தின் தலைவர் ஜீவான் பெரிஜ் பாதிரியார் மீண்டும் ஒருமுறை அரசி இசபெல்லாவுக்குக் கடிதம் எழுதிப் பார்க்கும்படி வற்புறுத்தினார். அவ்வாறே எழுதினான். கருணை பொருந்திய அரசி இசபெல்லா, கொலம்பசைத் தன்னை வந்து பார்க்கும்படி பதில் எழுதியதோடு , வழிச் செலவுக்கும், புதிய உடை வாங்குவதற்கும் ஒரு குதிரை வாங்கிக் கொள்வதற்கும் அவன் கேட்டெழுதியிருந்தபடி பணமும் அனுப்பி வைத்தாள். 1491-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் சமயத்தில் கொலம்பஸ் சாண்டாபீ என்ற ஊர் முகாமில் கூடிய அரசசபைக்கு வந்து சேர்ந்தான். உடனே அவனுடைய திட்டத்தை ஆராய ஒரு புதுக் குழுவை நியமித்தாள் இசபெல்லா. அந்தப் புதுக் குழுவினர் கொலம்பஸ் திட்டத்தை முயன்று பார்க்கலாம் என்றும் ஆனால் அந்தத் திட்டம் வெற்றி பெற்றால் தனக்கு வேண்டும் என்று அவன் கேட்கும் சலுகைகள் அதிகம் என்றும் கூறினார்கள். 1485-ம் ஆண்டில் சீமான் மெடினா சீலியின் ஆதரவில் பயணம் மேற்கொள்ள இருந்தபோது செலவுக்கு மட்டும் கொடுத்தால் போதும் என்ற கொலம்பஸ்தான் 1491-ல் தான் கண்டு பிடிக்கும் நாடுகளுக்கு அதிகமான விலை கேட்டான். தான் கண்டு பிடிக்கும் புதுநாடுகளுக்குத் தன்னையே ஆட்சித் தலைவனாக நியமிக்க வேண்டும் என்றும், தன்னை அரசப் பிரதிநிதியாக நியமிக்க வேண்டும் என்றும் இந்த இருபதவிகளும் தன் பின் சந்ததியினருக்கும் பரம்பரை யுரிமையாகக் கொடுக்கப்பட வேண்டும் என்றும், அந்த நாடுகளில் செய்யும் வாணிக லாபத்தில் பத்தில் ஒரு பங்கு தனக்கும் தன் வாரிசுகளுக்கும் சேர வேண்டும் என்றும் அவன் கேட்டான். ஸ்பெயினில் அவன் இருந்த காலத்தில் அனுபவித்ததெல்லாம் துன்பமும் துயரமுமே! ஆளான தெல்லாம் பழிக்கும் கேலிக்குமே! ஆகவே, தனக்குரிய சரியான கூலி கிடைக்காமல் ஸ்பெயின் நாட்டை மேம்படுத்த முடியாது என்று அவன் உறுதியான பிடிவாதம் கொண்டிருந்தான். "என்னுடைய கட்டுத் திட்டங்களை ஒப்புக் கொண்டால் அப்படியே ஒப்புக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் விட்டுவிடுங்கள். பேரம் வேண்டிய தில்லை!" என்று தீர்மானமாகச் சொல்லி விட்டான் கிரிஸ்டாபர் கொலம்பஸ். 1492-ம் ஆண்டில் அரசி இசபெல்லாவும், அரசர் பெர்டினாண்டும் சேர்ந்து கொடுத்த பேட்டியில் கொலம்பசின் நிபந்தனைகளை ஏற்க முடியாது; ஆகவே அவனுக்கு அனுமதியோ உதவியோ கிடைக்காது என்று முடிந்த முடிவாகக் கூறி விட்டார்கள். வெறித்த பார்வையும் விடுபட்ட நம்பிக்கையுமாக கொலம்பஸ் தன் குதிரையின் முதுகில் தன் பொருள்களையும், நிலப்படங்களையும் கட்டிக் கொண்டு சாண்டாபீயை விட்டுப் புறப்பட்டு விட்டான். பாலோஸ் அருகில் இருந்த மடாலயம் போய் பையனை அழைத்துக் கொண்டு பிரான்சுக்குப் புறப்பட்டுச் செல்வதென்றும், மீண்டும் எட்டாவது சார்லஸ் அரசரிடம் உதவி கேட்பதென்றும் மனத்திற்குள் முடிவு செய்து கொண்டு அவன் புறப்பட்டு விட்டான். தொங்கிய முகமும் துவண்ட உள்ளமுமாக மட்டக் குதிரையின் மேலேறிச் சென்று கொண்டிருந்த கொலம்பசை நான்கு மைல் தூரத்தில் இருந்த ஒரு கிராமத்தில் அரசாங்கத் தூதன் ஒருவன் வந்து சந்தித்தான். அரசி இசபெல்லா மீண்டும் அவனை அழைத்துவரச் சொன்னதாகக் கூறினான். புதிய நம்பிக்கை யோடு கொலம்பஸ் திரும்பி வந்தான். கொலம்பஸ் கேட்ட நிபந்தனைகளை யெல்லாம் அப்படியே ஒப்புக்கொள்வதாகவும், அவன் மேலைத் திசையில் தன் பயணத்தைத் துவக்கலாம் என்றும் அரசி இசபெல்லா கூறிய போது தான் அவன் உள்ளம் நிறைந்தது. அத்தனை நாளும் தான் பட்ட துன்பங்களுக்கெல்லாம் முடிவு வந்து விட்டது போல் களித்தான். அரசி இசபெல்லாவின் மனம் எப்படி மாறியது? அரசர் பெரிடினான்டின் அந்தரங்கச் செயலாளன் ஒருவன் அரசியிடம் வந்து, கொலம்பஸ் திட்டத்தையும் நிபந்தனையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். லூயிஸ் டி சாண்டாஞ்சல் என்ற அந்த அந்தரங்கச் செயலாளன் கூறிய விளக்கம் பொருத்த மாயிருந்தது. கொலம்பஸ் வழிச் செலவுக்காகக் கேட்கும் மொத்தக் கூட்டுத் தொகையும் ஓர் அரசரின் ஒருவார ஆடம்பரச் செலவு தொகை அளவு கூட வராது. அவன் பட்டங்களும் பதவிகளும் உரிமைகளும் கணக்குப் போட்டுப் பார்த்தால், அவன் கண்டுபிடித்துக் கொடுக்கும் நாடுகளுக்குரிய முழுவிலையுமாகாது; ஒரு சிறு பங்கேயாகும்; புத்தம் புதிய நாடுகளை அரசுக்குச் சேர்த்துக் கொடுக்கும் ஒரு திறமையாளனுக்கு அந்த அளவு கூடக் கொடுக்காமல் இருப்பது என்ன நியாயத்தைச் சேர்ந்தது? இவை யெல்லாம், நாடுகளைக் கண்டு பிடித்தால் தனக்குக் கொடுக்க வேண்டும் என்றுதான் அவன் உறுதி மொழி கேட்கிறான். கண்டு பிடிக்காவிட்டால் கொடுக்க வேண்டியவை அல்ல. கண்டு பிடித்தால் அவனுக்கு கொடுப்பதிலே அரசுக்கு எவ்விதமான நஷ்டமுமில்லை. வரும்படியைச் சேர்த்துத் தருகிறவனுக்குக் கொடுக்கிற ஒரு சிறு கூலியே யாகும். அந்தரங்கச் செயலாளன் எடுத்துக் கூறிய விளக்கங்கள் அரசி இசபெல்லாவின் உள்ளத்தைத் தொட்டன. அவள் உடனே ஆளனுப்பிக் கொலம்பசை வழிமறித்துக் கூட்டி வரச் செய்தாள். அந்தச் செயலாளனைப்போல் முன்னரே யாராவது எடுத்துச் சொல்லியிருந்தால் கொலம்பஸ் அத்தனை யாண்டுகள் வீணாகக் கழித்திருக்க நேர்ந்திராது. 1492-ம் ஆண்டிலேயே ஏப்ரல் மாதத்தில் கிரிஸ்டாபர் கொலம்பசுக்கும் ஸ்பெயின் நாட்டு மாமன்னர் - பேரரசிக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி முத்திரையிடப் பட்டது. கொலம்பஸ் கூறிய நிபந்தனைகள் எல்லாம் அதில் கண்டெழுதப் பெற்றன. கொலம்பஸ் கண்டு பிடிக்கும் நிலப்பகுதிகட்கும். ஆட்சிக் குட்படுத்திக் கொடுக்கும் நாடுகளுக்கும் அவனும் அவன் பரம்பரையினரும் ஆட்சித் தலைவர்களாகவும் அரசப் பிரிதிநிதி களாகவும் இருக்க மாமன்னரும் பேரரசியும் சம்மதித்தனர். அவ்வாறு அவன் கடல் வழியில் நிலப்பகுதிகளைக் கண்டு பிடித்து ஆட்சியில் சேர்த்தால், அவனுக்கு பெருங்கடல் தளபதி (Admiral of the Ocean Sea) என்ற பட்டங் கொடுக்க மாமன்னரும் பேரரசியும் உறுதி கூறினர். மேற்படி நாடுகளிலிருந்து கிடைக்கும் தங்கம். இரத்தினம் வாணிபப் பொருள்களில் பத்தில் ஒரு பங்கு கொலம்பசைச் சேரும். அப்பொருள்களுக்கு அவனுக்கு வரி விலக்களிக் கப்படும். அப்பகுதிகளுக்குச் செல்லும் கப்பல்களில் எட்டில் ஒரு பங்கு அவன் மூலதனம் போடவும் உரிமையளிக்கப் படும். இந்த உரிமைகளும் சலுகைகளும் அவனுக்குப் பின் அவன் சந்ததியினரைச் சேரும். இந்த நிபந்தனைகள் அனைத்தையும் மாமன்னரும் பேரரசியும் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டனர். மன்னரும் அரசியும் புதிய கடல் வழிகளில் செல்வதற்காக அவனுக்கோர் அடையாளச் சீட்டும் வழங்கினர். சீன நாடுகளை அக்காலத்தில் ஆண்டு வந்ததாகக் கருதப்பட்ட கான் பேரரசருக்கு ஓர் அறிமுகக் கடிதமும் மற்றும் தற்செயலாக அவன் போய்ச் சேரக் கூடிய பிற நாடுகளின் அரசர்களுக்கு அவர்கள் பெயர்களும் பட்டங்களும் தெரியாததால் பெயர் போடாததும் பின்னால் நிரப்பிக் கொள்ளக் கூடியதுமான இரண்டு அறிமுகக் கடிதங்களும் மாமன்னரும் பேரரசியும் கையெழுத்திட்டுக் கொடுத்தனர். ஒப்பந்தம் முடிந்தபின் கொலம்பஸ் தன் பயணத்துக்குக் கப்பல்களும் ஆட்களும் சேர்க்கத் தொடங்கினான். கப்பல் தொழிலில் ஈடுபட்ட மூன்று குடும்பத்தினரிடமிருந்த சிறந்த கப்பல்களைப் பெற்றான். அந்த மூன்று கப்பல்களுக்கும் உரியவர்களே அவற்றில் அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டனர். சாண்டாமேரியா, நைனா. பிண்டா என்ற பெயருடைய மூன்று பாய்மரக்கப்பல்களில் அதிகாரிகளும் வேலையாட்களுமாக மொத்தம் 90 ஆட்கள் கொலம்பசுடன் புறப்பட்டார்கள். இவர்களில் பெரும்பாலோர் ஸ்பானியர்கள். கொலம்பசுடன் இன்னொரு ஜினோவாக் காரனும் வேனிஸ்காரன் ஒருவனும் போர்ச்சுகீசியன் ஒருவனும் பிற நாட்டவர்கள். ஆயுள் தண்டனை யடைந்த கைதிகள் மூவர் . அவ்விளைஞர்கள். கொலம்பசுடன் செல்லுவதற்காக விடுதலை செய்யப் பெற்றனர். 1492 -ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2-ம் நாளன்று எல்லாம் ஆயத்த மாகிவிட்டது. மூன்று கப்பல்களின் குறுக்கிலும் நெடுக்கிலும் பலவண்ணக் கொடிகள் பறந்து இன்பக்காட்சி யளித்தன. இசபெல்லா அரசியின் ஆட்சிச் சின்னங்களான கோட்டையும் சிங்கமும் பொறித்த பெரிய கொடிகள் ஒவ்வொரு கப்பலின் கொடிமரத்திலும் பட்டொளி வீசிப் பறந்தன. அன்று இரவு அந்தக் கப்பலில் புறப்பட இருந்த ஒவ்வொருவனும், பாலோஸ் தேவாலயத்தில் சென்று தன் பாவங்களைக் கூறிக் குறையிரந்து ஆண்டவன் துணையை வேண்டித் தொழுகை நடத்தி விட்டு வந்தான். ஆகஸ்ட் 3-ம் நாள் வெள்ளிக் கிழமை அதிகாலையில் கொலம்பஸ் கப்பலில் ஏறினான். பகலவன் தோன்று முன்பாகவே மூன்று கப்பல்களும் நங்கூரங்களைத் தூக்கிவிட்டன, இளங் காற்று வீசும் அந்தப் புலர் காலைப்பொழுதில் வண்ணக் கொடிகள் அழகுற அசைந்தாட, பாய்கள் தொங்கி விரிந்து காற்றடைந்து செல்ல கப்பல்கள் மெல்லப் புறப்பட்டன. கொலம்பஸ் மகன் இருக்கும் மடாலயத்தின் பக்கமாக செல்லும் போது அந்த மடாலயத்துத் துறவிகள் "என்றென்றும் மேன்மேலும் உன்னருளைப் பொழிய வேண்டும் இறைவா" என்று வேண்டும் மந்திர ஒலிகள் காற்றுவாக்கில் கப்பலில் இருந்தவர்களின் செவிகளில் வந்து மோதின ----------                                                   4. கரை தெரிந்தது அட்லாண்டிக் மாகடலில் முன் போய் வந்த அனுபவம் கொலம்பசுக்குத் துணையாக இருந்தது. மேற்கு நோக்கிச் சென்றால் நேராகக் கிழக்கை யடையலாம் என்பது அவன் திட்டம் என்றாலும் கண்னை மூடிக் கொண்டு அவன் நேரே மேற்றிசை நோக்கித் தன் கப்பல்களைச் செலுத்திவிடவில்லை. ஏற்கனவே ஆப்பிரிக்க நாடுகளுக்குக் கப்பல் மாலுமிகளில் ஒருவனாகப் போய்வந்திருந்த அவன் அவ்வழிகளில் உள்ள கடலின் தன்மையை நன்கு புரிந்து வைத்திருந்தான். முதலில் தெற்கு நோக்கிச் சென்று அங்குள்ள கானரித் தீவுகளை அடைவதென்றும், கானரித் தீவுகளிலிருந்து வட மேற்காகத் திரும்பி மீண்டும் மேல் திசையில் செல்வ தென்றும் அவன் முடிவு செய்திருந்தான். கானரித் தீவுகளின் பக்கம் சென்று விட்டால் அங்கு எப்போதும் வீசிக் கொண்டிருக்கும் கீழ்க்காற்றுகள் அவன் மேல் திசை செல்வதற்கு உதவியாக இருக்கும்; அதுவுமல்லாமல் அந்தத் தீவுகளைச் சுற்றியுள்ள கடலின் நீர் ஆண்டில் பெரும்பகுதி கொந்தளிப்பின்றி குளத்து நீரைப் போல் அமைதியாக இருக்கும். அதுவுமல்லாமல் அந்த வழியில் இருப்பதாகக் கருதப்பட்ட அண்டிலியாத் தீவையும் போகும் வழியிலேயே கண்டு பிடிக்க எண்ணியிருந்தான் கொலம்பஸ். பாலோஸ் துறைமுகத்தில் கப்பல்கள் புறப்பட்டு ஒருவாரம் ஆவதற்கு முன்பாகவே கானரித் தீவுகளை நெருங்கிவிட்டன. பிண்டா என்ற கப்பல் சிறிது பழுது பார்க்க வேண்டியிருந்ததால் அதை லாஸ்பால்மாஸ் என்ற கப்பல் கட்டும் துறைமுகத்துக்கு அனுப்புவதென்று திட்டமிட்டான் கொலம்பஸ். அவ்வாறே அதை அங்கே அனுப்பி விட்டு, மற்ற இரண்டு கப்பல்களையும் கானரித் தீவுகளில் ஸ்பெயின் நாட்டார் ஆதிக்கமுள்ள கோமாராத் துறைமுகத்தில் கோண்டு போய் நிறுத்தினான். கோமாராத் துறைமுகத்தில் உணவுப் பொருள்களும், குடிதண்ணீரும் ஏற்றிக் கொள்ளும்படி கப்பல்களின் அதிகாரிகளுக்குக் கூறி ஏற்பாடு செய்துவிட்டு கொலம்பஸ் லாஸ்பால்மாஸ் நகரம் சென்று அங்கு நடைபெறும் பழுது வேலைகளை மேற்பார்வையிட்டான். பிறகு பிண்டா என்ற அந்தக் கப்பலிலேயே ஏறிக் கொண்டு கோமாரா வந்து சேர்ந்தான். அங்கிருந்து புறப்பட்ட கப்பல்கள் கானரித் தீவுகளில் உள்ள சான் செபஸ்டியன் என்ற மற்றொரு முக்கியமான துறைமுகத்தில் 1492-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ம் நாள் நங்கூரம் பாய்ச்சின. அங்கு நான்கு நாட்கள் தங்கி மேற்கொண்டு வேண்டிய உணவுப் பொருள்களையும் தண்ணீரையும் நிரப்பிக் கொண்டு செப்டம்பர் மாதம் 6-ம் நாளன்று பாய்களை விரித்துக் கொண்டு புறப்பட்டன. தெரியாத உலகத்தை நோக்கி முன்பின் சென்று அறியாத பாதையில் செல்லத் தொடங்கிய அந்த மூன்று கப்பல்களும் தெரிந்த உலகத்தை விட்டுக் கடைசியாய் புறப்பட்ட நாள் அந்த 1492 செப்டம்பர் 6-ம் நாள் தான்! முதல் பத்துப்பனிரெண்டு நாட்களும் ஒரே நிலையாக கீழ்க்காற்று வீசிக் கொண்டிருந்தது. கப்பல்கள் மூன்றும் எவ்விதமான தொந்தரவும் இல்லாமல் அன்னப்பட்சிகள் போல் யாரும் போயறியாத அந்த மாகடல் வழியாக அமைதியாகப் போய்க் கொண்டிருந்தன. அந்த பத்துப் பனிரெண்டு நாட்களும் இன்பமயமாக இருந்தன. பார்க்கு மிடமெங்கும் பத்துத்திசையிலும் ஒரே நீலநிறம். மேலே அமைதியான நீலவானம். இடையிடையே மெல்லத் தவழ்ந்து செல்லும் வெள்ளை மேகங்கள். கீழே அலை புரளும் நீலக்கடல். அதன் மத்தியிலே பாய்விரித்து அழகுற மிதந்து செல்லும் மூன்று கலங்கள்! பார்க்கப் பார்க்க இனிமையான அழகிய கண்காட்சி. காலைக்கதிரவன் உதயக்காட்சியும் மாலையில் நீரில் முழ்கும் மாட்சியும் எத்தனை இன்பம்! "வானம்பாடி பாடாத குறை ஒன்று தான்!" என்று கொலம்பஸ் தன் குறிப்புப் புத்தகத்தில் எழுதியிருந்தான். இந்தப் பத்துப் பனிரெண்டு நாட்களிலும் ஒரே சீராகக் சென்று கொண்டிருந்த கப்பல்கள் ஏறக்குறைய 1160 மைல்கள் கடந்துவிட்டன. ஆனால் அதன் பிறகு காற்று மாறியடிக்கத் தொடங்கிவிட்டது. நான்கைந்து நாட்களாக மழை வேறு பிடித்துக் கொண்டு விட்டது. இந்த ஐந்து நாட்களில் சுமார் 240 மைல் தான் நகர முடிந்தது. கப்பலில் இருந்த சில மாலுமிகளுக்கு முதலில் ஒரு விதமான பயமிருந்தது. மேற்கு நோக்கியே இந்தக் காற்று ஓரே சீராக அடித்துக் கொண்டிருந்தால் அதை எதிர்த்து எப்படித் தாய்நாட்டுக்குத் திரும்பப் போகிறோம் என்று பயந்து கொண்டிருந்தார்கள். காற்றுத் திரும்பியடித்தது. சரி சரி திரும்பவும் வழியிருக்கிறது என்று திருப்தியடைந்தார்கள். செப்டம்பர் மாதம் 24, 25-ம் நாட்களில் அவர்கள் போய்க் கொண்டிருந்த இடத்தில் தான் அண்டிலியா என்ற தீவு இருக்க வேண்டும் என்று எதிர்பார்த் தான் கொலம்பஸ். ஆனால், அந்த இடத்தில் ஆழம் பார்த்தபோது 200 பாகங்களுக்கும் அதிகமான ஆழமிருந்தது. ஆகவே அருகில் கரையிருப்பதற்கு வழியில்லை என்று கொலம்பஸ் கண்டு கொண்டான். உண்மையில் அந்த இடம் 2000 பாகங்களுக்கும் அதிகமான ஆழமுடையது. ஒருநாள் பிண்டா என்ற கப்பலில் இருந்த மாலுமி ஒருவன் "அதோ கரை! அதோ கரை!" என்று கூவினான். கதிரவன் மறையப்போகும் அந்தத் தருணத்தில் மேல் திசையில் ஒரு புறத்தில் ஒரு தீவு இருப்பது போல் தென்பட்டது. உடனே மூன்று கப்பல்களையும் அத் திசையில் செலுத்தினார்கள். ஆனால் சிறிது தூரம் சென்றவுடன் அந்தத் தீவு கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விட்டது. வேறு எந்தத் தீவும் புலப்படவில்லை. அடி வானத்தில் சூரியனின் செவ்வொளி பட்டுத் தெரிந்த ஒரு மேகத்தைத் தீவு என்று நினைத்துக்கொண்டு கூவியிருக்கிறான் அந்த மாலுமி. ஆனால், ஏதோ தீவு எங்கோ இருக்கிறது; நாம் திசைமாறி விட்டதால் தென்படவில்லை என்று சிலர் கருதினார்கள். அப்படிக் கருதியவர்களில் முக்கியமானவன் அலோன்சோபின்சோன். அவன் தான் பிண்டா கப்பலின் சொந்தக்காரனும் அதைத் தலைமை வகித்து நடத்தி வந்த கப்பல் தலைவனும் ஆவான். அவன் அந்தத் தீவைத் தேடிப் பார்க்க வேண்டும் என்று கருதினான். ஆனால் இந்திய நாடுகளை விரைவில் அடைய வேண்டியது தான் இலட்சியம் என்றும், இடையில் எதையாவது தேடிக் கொண்டிருப்பது வீண் வேலையென்றும் கூறிக் கொலம்பஸ் மறுத்துவிட்டான். அக்டோபர் முதல் தேதி வாக்கில் மேலும் 400 மைல் அளவில்தான் கடந்திருந்தார்கள். புறப்பட்டு ஒருமாதமாகிவிட்டது. கடந்த மூன்று வாரங்களாக சுற்றிலும் நிறைந்த உப்புத் தண்ணீரைத் தவிர வேறு ஒன்றையும், ஒரு திட்டு நிலத்தையும் காண முடியவில்லை. ஏறக்குறைய 2000 மைல் தூரம் தாய் நாட்டை விட்டு விலகி வந்தாயிற்று. போகப் போக நாடு விலகிக் கொண்டே போகிறது. போகுந்திசையில் என்ன இருக்கிறதோ? அடிவானம் தூரப் போகப்போக ஆழிதான் தென்படுகிறது. வேறு எதுவும் இருந்தாலல்லவா-தென்படும்? எல்லோருக்கும் ஒருவிதமான பயம் ஏற்பட்டது. உயிருடன் நாடு திரும்ப முடியாதோ? கரையே காணாமல் கண்காணாத கடல் வெளியில் அனாதைப் பிணங்களாக அலைகளில் மிதக்க நேரிடுமோ? ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஏற்பட்ட பயம் சதியாக உருவெடுத்தது. அங்கங்கே கப்பல் தட்டுகளில் நான்கைந்து பேராகக் கூடிப் பேசினார்கள். கடலுக்கு அக்கரையே இல்லையென்று சொல்லுவார்கள் பெரியோர்கள். அடிவானத்துக் கப்பால் கடலும் வானும் கலப்பதைத் தவிர வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அந்தப் பாவிப்பயல் ஜினோவாக்காரனுக்கு மட்டும் ஏதோ இருப்பதாகத் தெரிகிறது. வாருங்கள் எல்லோரும் போய் அவனைக் கப்பலைத் திருப்பச் சொல்லுவோம். ஒப்புக் கொள்ளாவிட்டால் அவனைக் கடலிலே தூக்கி எறிந்து விட்டு நாம் திருப்பிக் கொண்டு செல்லுவோம். இப்படியெல்லாம் மாலுமிகள் கூடிப் பேசித் தீர்மானித்தார்கள். ஆனால் அக்டோபர் முதல் தேதி காற்றின் வேகம் அதிகரித்தது. மேற்கொண்டு ஐந்தே நாட்களில் கப்பல் 700 மைல் கடந்துவிட்டது. ஏறக்குறைய 2500 மைல் கடந்தாகி விட்டது. எனவே ஜப்பானை நெருங்கி விட்டோம் என்று எண்ணினான் கொலம்பஸ். மறுநாளே கப்பல்களுக்கு மேலே சில பறவைகள் கூட்டங் கூட்டமாகப் பறந்து சென்றன. ஏதோ நிலமிருக்கும் திசை நோக்கித் தான் அவை போகின்றன என்று எண்ணி அவை பறந்து சென்ற திசையில் கப்பல்களை மாற்றி ஓட்டினான். ஆனால் நெடுந்தூரம் வரை சென்றும் நிலப்பகுதி எதுவும் தென்பட வில்லை. மாலுமிகள் மறுபடியும் கிளர்ச்சி செய்யலானார்கள். "தலைவரே, கப்பலைத் திருப்புங்கள்! இல்லா விட்டால்..." என்று மேற்கொண்டு சொல்லாமலே அச்சுறுத்தினார்கள்.ஆனால், உறுதி மாறாத கொலம்பஸ் இதற்கெல்லாம் நடுங்கி விடவில்லை. அவன் அவர்களுக்கு உற்சாகமான மொழிகளைக் கூறினான். "அஞ்சாதீர்கள்! நம் இலட்சியம் ஈடேறும் வரை பயணம் நீடிக்கத்தான் வேண்டும். கீழ்த் திசையில் இருக்கும் இந்திய நாடுகளை அடைந்துவிட்டால் அடையப் போகும் இலாபத்தை எண்ணிப் பாருங்கள்" என்றெல்லாம் ஆசை வார்த்தைகளை அள்ளி விட்டான். எல்லாம் வல்ல இறைவன் நமக்குத் துணை புரிவார் என்று நம்பிக்கையை வளர்த்தான். மேலும் மூன்று நாட்களுக்குள் நிலப்பகுதி தட்டுப்படவில்லை என்றால், திரும்பிவிடுவதாக அவர்களுக்கு உறுதியும் கூறினான். அந்த மூன்று நாட்களும் கடந்தன. எல்லோருக்கும் அலுத்துப்போய் விட்டது. மூன்றாவதுநாள் அந்திச் சமயத்தில் அவர்கள் நிலப்பகுதி எதையும் கண்ணால் காணா விட்டாலும், இலையும் பூவுமாக ஒடிந்து விழுந்த மரக்கிளைகள் பல ஆங்காங்கே கடலில் மிதந்து சென்றதைக் கப்பல்களில் இருந்தவர்கள் காண நேரிட்டது. அந்த மரக் கிளைகளைக் கண்ணுக்கு நேரே கண்டவுடன் முணு முணுப்பும் சலசலப்பும் ஓய்ந்தன. மாலுமிகள் அனைவரும் உண்மையிலேயே நம்பிக்கையும் உற்சாகமும் கொண்டார்கள். கொலம்பஸ் அவர்கள் உற்சாகத்தை அதிகப்படுத்தினான். அந்தக் கப்பல்களில் புறப்பட்டுச் சென்ற மாலுமிகளுக்கு ஸ்பெயின் மாமன்னர்கள், அது ஒரு மாதத்தில் திரும்பி வந்தாலும் இரண்டு மாதத்தில் திரும்பி வந்தாலும் எத்தனை நாளில் திரும்பி வந்தாலும் ஓர் ஆண்டுச் சம்பளம் கொடுப்பதாக வாக்களித்திருந்தார்கள். அந்த ஓர் ஆண்டுச் சம்பளம் தவிர, அத்தனை நாட்கள் துயரப்பட்டு முதல் முதல் அடையும் நிலப்பகுதியைக் கண்டு பிடிப்பதற்காக மேற் கொண்டு விசேஷ வெகுமதிப் பணமும் அதிகமாக வாங்கித் தருவதாகவும், எச்சரிக்கையாக இருந்து நிலப்பகுதி நெருங்குவதைக் கவனித்து வரும்படியும் ஒவ்வொருவருக்கும் உறுதி கூறினான் கொலம்பஸ். மற்ற கப்பல் தலைவர்கள் பாய்களை அவிழ்த்து விட்டுக் கப்பல்களை மெதுவாக செலுத்திக் கொண்டு போக வேண்டுமென்று எண்ணினார்கள். ஆனால். கொலம்பஸ் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அடையக் கூடிய நிலப்பகுதி மேலும் அதி தொலைவில் இருந்தால், பாய்களை அவிழ்ப்பதால் தாமதப்பட்டு விடக்கூடும் என்று எண்ணினான் அவன். அன்று இரவு நிலாத்தோன்ற நெடுநேரமாகியது. ஆனால் அந்த நிலவு அதியழகாகக் காட்சியளித்தது. கடல் கொந்தளிப்பாக இருந்தாலும், நம்பிக்கை ஏற்பட்டுவிட்ட அந்த உள்ளங்களுக்கு அந்த இரவே அழகு நிறைந்ததாகத் தோன்றியது. கரையை எப்போது காணலாம் என்று அந்த மூன்று கப்பல்களிலும் உள்ள ஒவ்வொருவரும் ஆவலும் துடிப்பும் கொண்டிருந்தார்கள். பிண்டா என்ற கப்பல் முன்னால் சென்று கொண்டிருந்தது. பின்னால் சுமார் அரை மைல் தூரத்தில் இடது பக்கத்திலும் வலது பக்கத்திலுமாக சாண்டா மேரியாவும் நைனாவும் சென்று கொண்டிருந்தன. அடிக்கொரு தடவை ஒவ்வொரு மாலுமியும் கப்பலின் மேல் தட்டுக்கு வந்து மேற்றிசையிலே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். கரையை எவன் முதலில் கண்டு சொல்கிறானோ அவனுக்கு விசேஷ வெகுமதி ஏதாவது நிச்சயம் கிடைக்கும். அக்டோபர் மாதம் 11-ம் நாள் முடிந்து நள்ளிரவில் 12-ம் நாள் தொடங்கியது. ஒருமணி ஆயிற்று இரண்டு மணியும் ஆயிற்று. அப்போது பிண்டாக் கப்பல் அதிகாரி ஒருவன் வெளியே எட்டிப் பார்த்தான். நிலவொளியில் செங்குத்தாய் நின்ற ஒரு வெள்ளைப் பாறை அவன் கண்ணில் தட்டுப்பட்டது. “தரை! தரை!” என்று கூவினான். உடனே அந்தக் கப்பல் தலைவனான அலோன் சோபின்சோன் மேல் தட்டுக்கு ஓடி வந்தான். ஆம் சந்தேகமில்லாமல் அது ஒரு பாறைதான்! உடனே ஒரு துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கிச் சுட்டான். பாய்களைத் தாழ்த்தும்படி மாலுமிகளுக்கு உத்தரவிட்டான். கப்பலின் வேகம் குறைந்தது. அதற்குள் மற்ற இரு கப்பல்களும் வெகு வேகமாக அதை நெருங்கின. கொலம்பஸ் வெளியில் எட்டிப் பார்த்தான். சாண்டாமேரியாவில் இருந்தவாறே ஆனந்தமாகக் கூவினான். “அலோன்சோ! நீ தான் முதலில் கரையைக் கண்டுபிடித்தாய்! ஐயாயிரம் காசுகள் உனக்கு வெகுமதி யளிக்கிறேன்”   கொலம்பசின் குரலில் வெற்றிப் பெருமிதம் இழையோடியது! கண்ட கனவெல்லாம் நிறைவேறிவிட்டது என்னும் களிப்பு நிறைந்து வெளிப்பட்டது! கப்பல்களில் இருந்த எல்லோருமே ஆனந்தக்கடலில் மிதந்து கொண்டிருந்தார்கள்! -----------  5. புகழ் கிடைத்தது கொலம்பஸ் தலைமையில் புறப்பட்ட அந்தக் கப்பல் தலைவர்கள், கடலனுபவம் நிறைந்த பெரும் வல்லுனர்கள். அவர்கள் கரையைக் கண்ட ஆனந்தத்தில் உடனே கரை நோக்கி வேகமாகப் பாய்ந்து சென்றுவிடவில்லை. அவ்வாறு கண்ணை மூடிக்கொண்டு சென்றிருப்பார்களேயானால், கடலுக்கடியிலே மறைந்திருந்த செங்குத்துப் பாறைகளிலே மோதிக் கப்பல் உடைந்து சுக்கு நூறாகி யிருக்கும். கொலம்பஸ் எல்லாக் கப்பல்களிலும் பாயைத் தாழ்த்தச் சொன்னான். அவ்வாறே பாய்கள் இறக்கிச் சுருட்டப்பட்டன. கப்பல்கள் மெல்லமெல்ல ஆடி அசைந்து கொண்டிருந்தன. பொழுது விடியும் நேரத்தை எதிர் பார்த்துக் காத்திருந்தனர். காலை மலர்ந்து எல்லாம் தெளிவாகத் தெரியத் தொடங்கியவுடன் மீண்டும் பாய்களை ஏற்றிக் கொண்டு கண்ணுக்குத் தென்பட்ட அந்தத் தென்முனையைக் கடந்து சென்றார்கள். மேல் கரையில் பாறைத் தொடர்ச்சிக்கிடையே ஏதாவது வழி தெரியுமா என்று ஆராய்ந்து கொண்டே சென்றார்கள். நண்பகலில் ஓர் ஆழமில்லாத வளைகுடாவைக் கண்டுபிடித்தார்கள் அதன் வழியாக உள்ளே நுழைந்து காற்று வேகமில்லாத, நிலப்பகுதி சூழ்ந்த ஓர் இடத்தில் நங்கூரம் பாய்ச்சினார்கள். வெண்பவளப் பாறைகள் ஒளிவீசும் இந்தக் கடற் கரையில் தான் கொலம்பஸ் புதிய உலகத்தில் முதன் முதல் காலடி எடுத்துவைத்தான். கடல் தளபதி கொலம்பஸ் தலைமைக்கப்பலின் படகு ஒன்றிலே இறங்கி, ஸ்பெயின் அரசின் கொடியுடன் கரையில் வந்தேறினான். மற்ற இரு கப்பல் தலைவர்களும், நாடு கண்டுபிடிக்கும் அடையாளக் கொடியுடன் தங்கள் படகுகளில் கரைக்கு வந்து சேர்ந்தார்கள். வெள்ளைத்துணியில் பச்சை நிறத்தில் சிலுவை பொறித்திருந்த அந்த அடையாளக் கொடி, கோட்டையும் சிங்கமும் பொறித்திருந்த நாட்டுக் கொடியைப் போலவே அழகுறக் காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தது. யாவரும் தரையில் மண்டியிட்டு இறைவனைத் தொழுது எல்லையற்ற கருணையாள-னாகிய அவன் தங்கட்கோர் எல்லை காண்பித்ததற்காக நன்றி செலுத்தினார்கள். நெடுநாட்களுக்குப் பின் கண்ணாரக்கண்ட அந்தத் தரையை ஆனந்தக் கண்ணீர் விட்டு நனைத்துக்கொண்டே தழுவிக் கொண்டார்கள். கடல் தளபதி கொலம்பஸ் எழுந்து நின்று புனிதகாவலன் என்ற பொருள்படும் இறைவன் திருநாம மாகிய "சான் சால்வடார்" என்ற பெயரை அந்தத் தீவுக்குச் சூட்டினான். இந்த மூன்று கப்பல் தலைவர்களையும் கண்ட அந்தத் தீவுமக்கள் ஒரே ஓட்டமாக ஓடிக் காட்டுக்குள்ளே சென்று ஒளிந்து கொண்டார்கள். பிறகு, வந்தவர்கள் யார் என்று அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பிடர்பிடித்துத் தள்ள, அவர்கள், சில பரிசுப் பொருள்களுடன் மெல்ல மெல்லத் திரும்பிவந்தார்கள். சட்டை மாட்டிய அந்த வெள்ளைக்காரர்களைக் கண்டு அவர்கள் வியப்பும் அச்சமும் கொண்டார்கள். எங்கோ வானிலிருந்து குதித்த தேவர்களோ என்று எண்ணினார்கள். ஆடையே யணியாத அந்தத் தீவு மக்களைக்கண்டு கப்பல் தலைவர்கள் பெரும் வியப்புக் கொண்டார்கள். கரையில் இறங்கியவுடன் கொலம்பஸ் தான் ஏதோ ஓர் இந்திய நாட்டுப் பகுதியில் இறங்கியிருப்பதாகவே எண்ணினான். ஆகவே, முதன் முதலில் அம்மணமாகத் தான் கண்ட அந்த மக்களுக்கு அவன் இந்தியர்கள் என்றே பெயர் சூட்டினான். அந்தப் பெயரே இன்றுவரை அம்மக்கள் கூட்டத்தின் பெயராக நிலைத்துவிட்டது. இன்று அவர்களை நம்மினின்று வேறுபடுத்துவதற்காகச் சிவப்பு இந்தியர் என்று அழைக்கிறார்கள். அமெரிக்காவின் கீழ்ப்புறத்தில் உள்ள பகாமாத்தீவுகளில் ஒரு சிறுதீவு அது. குவானகானி என்று பெயருள்ள அந்தத் தீவின் மக்களைக் கண்டவுடனே, அவர்களின் வெள்ளையுள்ளத்தை அறிந்த உடனேயே, தங்களுக்காக அவர்களை உழைக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கொலம்பஸ் முடிவு கட்டிவிட்டான். ஆடையின்றி நிற்கும் அந்த மக்களில் சிலருடைய மூக்குகளில் தொங்கிய தங்க வளையங்கள், கப்பல்காரர்களின் கருத்தைப் பெரிதும் கவர்ந்தன. கொலம்பஸ் அந்தத் தீவை இரண்டு நாட்கள் முழுவதும் ஆராய்ந்தான். அது ஜப்பான் தீவுகளில் ஒன்றாயிருக்குமா. சீனாவைச் சேர்ந்ததாக இருக்குமா என்று கண்டு பிடிக்க முயன்றான். அந்தத் தீவுமக்களுடன் சைகை மொழியில் பேசியதிலிருந்து தெற்கிலும் மேற்கிலும் அதுபோல் பல தீவுகள் இருப்பதாக அறிந்து கொண்டான். தன் கையில் இருந்த நிலப்படத்தில் ஜப்பானுக்குத் தெற்கே இருப்பதாகக் காட்டப்பட்டிருக்கும் தீவுக்கூட்டம் தான் இது என்று எண்ணினான் அவன். அப்படியே அது ஜப்பானாக இல்லாவிட்டாலும் சீனாவைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்று நினைத்தான். எனவே அவன் ஆறு சிவப்பு இந்தியர்களைத் துணைக்குக் கொண்டு மற்ற தீவுகளைக் கண்டுவரப் புறப்பட்டான். அக்டோபர் 14-ம் நாள் மற்றொரு தீவைக் கண்டு அதற்கு சாண்டா மாரியா என்று பெயரிட்டான். அந்தத் தீவு மக்களும் சான்சால்வடாரில் உள்ளவர்களைப் போலவே யிருந்தார்கள். கடல் தளபதி வெகுமதியாய்க் கொடுத்த சிவப்புக் குல்லாக்களும், பாசிகளும், வல்லூறு மணிகளும் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தன. சில இடங்களில் டாயினோ என்ற இனத்தவர்களாகிய இந்தச் சிவப்பு இந்தியர்கள், கொலம்பசின் கப்பலைச் சூழ்ந்து கொண்டு, "சக் சக் சக் சக்" என்று கூச்சலிட்டுக் கேட்டார்கள். "வல்லூறு மணி மேலும் வேண்டும்" என்பதற்குத் தான் இந்தக் கூச்சல்! வல்லூறு மணி என்பவை சின்னஞ்சிறிய மணிகளாகும். இவற்றில் ஒன்றை வளர்க்கும் பறவையின் கழுத்தில் அல்லது காலில் கட்டி விட்டுவிட்டால், அது வானில் பறக்கும் போது மணியடித்துக் கொண்டே போகும். மெல்லிய இந்த மணியோசை காதுக்கு மிக இனிமையாயிருக்கும். இந்த மணியையும், பாசியையும் குல்லாவையும் கொடுத்துத்தான், வெள்ளையர்கள் பிற நாடுகளிலிருந்து பல அரும் பொருள்களை அந்நாளில் கைப்பற்றிக் கொண்டு சென்றார்கள். தனக்கு வழி காட்டிய ஆறு டாயினோக்களையும் கொலம்பஸ் அடிக்கொரு தடவை "தங்கம் எங்கேயிருக்கிறது?" என்று கேட்டான். அவர்கள் தங்கள் நாடு முழுவதையும் கொலம்பசுக்குக் காட்டிவிட எண்ணினார்களோ, அல்லது அவனைத் திருப்திப்படுத்த எண்ணினார்களோ, ஒவ்வொருமுறை அவன் கேட்ட போதும் அடுத்த தீவில் நிறையக் கிடைக்கும்!" என்று தங்கள் சைகை மொழியின் மூலம் கூறிக் கொண்டு வந்தார்கள். தங்கத்தைக் காணும் ஆவலால் அவன் அங்கிருந்த கோணல் மாணல் தீவுகள் எல்லாவற்றையுமே சுற்றிப் பார்த்து விட்டான். ஆனால் தேடிப் போன தங்கம் தான் எங்கும் தட்டுப் படவேயில்லை. அவர்கள் மூக்குகளில் தொங்கிய தங்க வளையம் வேறு எங்கிருந்தோ கிடைத்தது. அதை அவர்களால் விளங்கச் சொல்லவும் முடியவில்லை. கொலம்பஸ் கூட்டத்தினரால் அதைப் புரிந்து கொள்ளவும் முடியவில்லை. சில நாட்கள் பழகிய பிறகு, இரு சாராரும் ஓரளவு தெளிவாகப் புரிந்துகொள்ளத் தொடங்கினார்கள். கோல்பா என்ற பெரிய தீவு ஒன்று இருப்பதாக டாயினோக்கள் கூறினார்கள். அது தான் ஜப்பான் தீவாகவோ அல்லது சீனப் பேரரசின் ஒரு பாகமாகவோ இருக்க வேண்டும் என்று எண்ணினான் கொலம்பஸ், உடனே அதற்குப் போக வேண்டும் என்று துடித்தான். டாயினோக்கள் கொலம்பசைத் தாங்கள் வழக்கமாகச் செல்லும் ஓடப் பாதையில் அழைத்துச் சென்றார்கள். இரண்டு மூன்று தீவுகளைக் கடந்து கடைசியில் கோல்பாத் தீவில் உள்ள பாகியா பாரியே என்ற துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அந்தத் துறைமுகம் மிக அழகாக விளங்கியது. இயற்கைக் காட்சியின் எழில் அங்குதான் பூத்துக் குலுங்கியது. ஆனால் அதுதான் ஜப்பான் என்பதற்குரிய அடையாளம் எங்கே? தங்கக் கோபுரங்களோடு கூடிய கோவில்கள் எங்கே? பறக்கும் நாகப்பாம்பின் வாய் போன்ற பீரங்கிகள் எங்கே? தங்கச் சரிகை மின்னிப் பளபளக்கும் பட்டாடையணிந்த சீமான்களும் சீமாட்டிகளும் எங்கே? எவ்விதமான சான்றும் அவன் கண்ணில் தட்டுப்படவில்லை. அடுத்த நாள் அவர்கள் கியூபா என்று இன்று அழைக்கப்படும் அந்தக் கோல்பாத் தீவின் மேற்குக் கரைத் துறைமுகங்களின் வழியாக அழைத்துச் செல்லப்பட்டார்கள். அவர்களுடைய வியாபாரப் பொருள்கள் அங்கிருந்த மக்களுக்கு மிகப் பிடித்திருந்தன. அவர்களில் சிலர் வெள்ளையர்களைத் திருப்திப் படுத்துவதற்காக அந்தத் தீவின் உட்பகுதியில் உள்ள குபனாக்கன் என்ற ஊரில் தங்கம் கிடைக்கும் என்று கூறினார்கள். அந்தக் குபனாக்கன் என்ற ஊரில் தான் சீனப் பேரரசின் அரண்மனை இருக்க வேண்டும் என்று கொலம்பஸ் எண்ணினான். உடனே அந்த ஊருக்கு அவன் ஒரு தூதுக் குழுவை அனுப்ப ஏற்பாடு செய்தான். சீனப் பேரரசின் மாமன்னரான கான் பேரரசருக்கு என்று ஸ்பெயின் நாட்டு மாமன்னரும் பேரரசியும் கொடுத்த அறிமுகக் கடிதத்தை எடுத்தான். ஏற்கெனவே கினியா நாட்டில் ஒரு நீக்ரோ அரசரைப் பேட்டி கண்டு வந்த அனுபவமுடைய ரோட்ரிகோ என்பவனையும், அரபு மொழியில் சிறந்த பாண்டித்தியமுடைய லூயிஸ் டிடோரிஸ் என்பவனையும் தன் தூதர்களாக நியமித்து அவர்கள் கையில் மாமன்னரின் அறிமுகக் கடிதத்தைக் கொடுத்து அனுப்பினான் கொலம்பஸ். சிவப்பு இந்திய வழிகாட்டிகளின் துணையோடு அந்தத் தூதர்கள் குபனாக்கன் சென்றார்கள். அவர்கள் எதிர் பார்த்த மாடமாளிகைகளும் கூடகோபுரங்களும் அங்கேயில்லை. ஐம்பது கூரைக் குடிசைகள் தான் காட்சியளித்தன. சட்டை போட்டுக் கொண்டு வந்த அந்த இரண்டு வெள்ளைக்காரர்களையும் வானத்திலிருந்து குதித்துவந்த தேவர்களாக மதித்து அந்த ஊர் மக்கள் ஓடோடி வந்து கும்பிட்டார்கள். தங்கள் தங்கள் கையில் இருந்த பொருள்களைக் கொண்டு வந்து படைத்தார்கள். நல்ல முறையில் விருந்தளித்தார்கள். ஆண்களும் பெண்களுமாக வந்து அவர்கள் பாதங்களை முத்தமிட்டுச் சென்றார்கள். ரோட்ரிகோ என்ற மாலுமிக்கு இதெல்லாம் பெருமையாக இருந்தது. ஏனெனில் ஆப்பிரிக்க நீக்ரோக்கள் அவனை இவ்வளவு மரியாதையாக நடத்தவில்லை. இது சிறந்த அனுபவமாக இருந்தது. ஆனால் அரபு மொழிப் புலவனான லூயிஸ் டிடோர்சுக்கு இதெல்லாம் ஒன்றும் பிடிக்கவேயில்லை. அந்தக் காட்டு மிராண்டிகளில் ஒருவனுக்குக்கூட அரபு தெரியவில்லை. என்ன பயன்? அந்தத் தூதர்கள் இருவரும் துறைமுகத்துக்குத் திரும்பும் வழியில் ஒரு புது விஷயத்தைக் கண்டுபிடித்தார்கள். அந்தச் சிவப்பு இந்தியர்களில் சிலர் கையில் கொள்ளிக்கட்டை மாதிரி ஏதோ ஒன்று வைத்திருந்தார்கள். அதை அடிக்கடி வாயில் வைத்து இழுத்துப் புகை விட்டார்கள். அது என்ன என்று கேட்டதற்கு டுபாக்கோ என்று கூறினார்கள். அவர்களைப் பார்த்து ஸ்பானியர்கள் சுருட்டுப் பிடிக்கும் பழக்கத்தை மேற் கொண்டார்கள். பின்னால் சென்ற சென்ற நாட்டிலெல்லாம் ஸ்பானியர்கள் இந்தப் பழக்கத்தைப் பரப்பி விட்டார்கள். இன்று அது உலகெங்கும் பரவி விட்டது. அந்தத் தூதுக் குழுவினரை யனுப்பிவிட்டு கொலம்பஸ் தான் கண்டு பிடித்த நாடு இந்தியா தான் என்பதற்கு ஆதாரங்கள் சேர்க்கத் தொடங்கினான். கருவப்பட்டை போல் மணக்கும் ஒரு பூண்டைக் கருவப்பட்டை என்று நினைத்துக்கொண்டு சேகரித்தான், அதுபோல் பசைப் பொருள் ஒன்றைக் கண்டு அதுதான் ஆசியாவில் கிடைக்கும் குங்கிலியம் என்று எண்ணிக் கொண்டான். ஏதோ ஒரு கொட்டையைக் கண்டெடுத்து அதுதான் மார்க்கோபோலே என்பவன் விளக்கிக் கூறியுள்ள தேங்காய் என்று நினைத்துக் கொண்டான். ஏதோ ஒரு வேர்க் கிழங்கை அவனுடைய ஆட்கள் தோண்டி எடுத்தார்கள், அது சீன நாட்டுக் கிழங்கு வகையைச் சேர்ந்ததென்று நினைத்தார்கள். ஆனால் அது சாப்பிடக்கூடாத கிழங்காகத் தோன்றியது. ஆகவே அதை அவர்கள் சேகரித்துக் கொள்ளவில்லை. எதையெதையோ கண்டெடுத்து அவன் இந்தியாவிலும் ஆசியாவிலும் கிடைக்கும் பொருள்கள் தாம் என்று மனச் சமாதானம் அடைய முடிந்தது. ஆனால் தங்கம் மட்டும் அவன் கண்ணில் அகப்படவேயில்லை. அந்த டாயினோக்கள் எப்போதும் வேறு ஓர் இடத்தையே தங்கம் கிடைக்கும் இடமாகச் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தார்கள். ஒரு முறை பாபேக்கு என்ற தீவில் மெழுகுவர்த்தி வைத்துக் கொண்டு தங்கம் தேடி எடுப்பார்கள் என்றும் பிறகு அதைச் சுத்தியால் அடித்துக் கட்டியாக்குவார்கள் என்றும் சிவப்பு இந்தியர்கள் கூறினார்கள். இதை கேட்டு பிண்டா கப்பல் தலைவன் அலோன் சோபின்சோன் கொலம்பசிடம் அனுமதி வாங்காமலே அந்த பாபேக்குத் தீவைத் தேடிக்கொண்டு கப்பலைச் செலுத்திச் சென்று விட்டான். அங்கு போன பிறகுதான் மெழுகுவர்த்தி வைத்துக் கொண்டும் தங்கம் எடுக்கவில்லை; தீவட்டி வைத்துக் கொண்டும் எடுக்கவில்லை என்று தெரிந்தது.   கொலம்பஸ் ஒரு நாளும் சும்மா இருக்கவில்லை. சிவப்பு இந்தியர்களைத் துணைக்கு அழைத்துக்கொண்டு புதுப் புது இடங்களையெல்லாம் சுற்றிப் பார்த்தான். கடைசியாக சான் நிகோலஸ் துறைமுகத்தை யடைந்தான். அங்கு உண்மையிலேயே தங்கம் கிடைத்தது. அது இல்லாமல் அவன் ஸ்பெயினுக்குத் திரும்பியிருந்தால், அவன் எதையோ பார்த்துவிட்டு வந்து இந்தியா என்று சொல்லுகிறான் என்றல்லவா மக்கள் கேலி புரிவார்கள்!   அழகு பொருந்திய ஒரு தீவைக் கண்டு அதற்கு லா ஐலா எஸ்பனோலா என்று பெயரிட்டான் கொலம்பஸ். அந்தத் தீவில் நன்றாக மழை பிடித்துக் கொண்டதன் காரணமாக ஐந்தாறு நாட்கள் தங்கும்படி நேரிட்டது. அவனுடைய கப்பல் மாலுமிகளில் மூவர், ஓர் இளம் பெண்ணை யாருக்கும் தெரியாமல் பிடித்துக் கொண்டுவந்து விட்டார்கள். அவள் தங்க மூக்கு வளையத்தைத் தவிர வேறு எதுவுமே அணிந்திருக்கவில்லை. அவள் டாயினோ இனத் தலைவன் ஒருவன் மகள். கொலம்பஸ் தன் மாலுமிகளைக் கடிந்துகொண்டு, அந்தப் பெண்ணுக்கு நாகரிக உடையுடுத்தி விட்டுக் கைநிறையப் பொருள்களைக் கொடுத்து ஊருக்குள் அனுப்பி விட்டான். இந்த உத்தமச் செயலைக் கண்டு அந்த ஊர் மக்கள் கொலம்பசையும் ஸ்பானியர்களையும் மிக மதித்துப் போற்றினார்கள். மறுநாள் ஒன்பது மாலுமிகளை அழைத்துச் சென்று ஆயிரம் பேர் கூடிய கூட்டத்தில் அவர்களுக்கு விருந்து வைத்துச் சிறப்பித்தார்கள். தங்கள் கையில் இருந்த பொருள்களை யெல்லாம் அம்மக்கள் பரிசாகக் கொடுத்து மகிழ்ந்தார்கள். டிசம்பர் மாதம் 20-ஆம் நாள் அக்குல் வளைகுடாவை யடைந்தான் கொலம்பஸ். ஹைட்டி என்ற அந்தப் பிரதேசத்து மக்கள் மற்ற டாயினோக்களைவிட வெள்ளையுள்ளம் படைத்தவர்களாயிருந்தார்கள். ஆண்களும் பெண்களும் ஆடைகள் எதுவுமற்றுப் பிறந்த மேனியாய் இருந்ததோடு மட்டுமல்லாமல், அந்நியர்கள் எதிரில் நிற்க நாணங் கொள்ளவும் இல்லை. அந்த மக்களிடம் தங்கம் நிறைய இருப்பதாகத் தெரிந்தது. வெள்ளைக்காரர்களையும் அவர்களுடைய கப்பல்களையும் கண்டு அந்த மக்கள் அதி ஆச்சரியம் கொண்டார்கள். ஆயிரம் பேருக்கு மேல் ஓடங்களில் வந்து கப்பலைச் சூழ்ந்து கொண்டார்கள். கரையிலிருந்து மூன்று மைல் தூரத்தில் நங்கூரம் பாய்ச்சி நின்ற கப்பலுக்கு சுமார் ஐநூறு பேர் நீந்தியே வந்து சேர்ந்து விட்டார்கள்.உடையணிந்த அதிசய மனிதர்கள் எங்கிருந்தோ வந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்ட உடனே, ஹைட்டிக்கு வட மேற்கேயுள்ள பிரதேசத்தில் உள்ள குவாக்க நாகரி என்ற தலைவன் ஓர் ஆள் அனுப்பினான். அந்தத் தூதன் வெள்ளையர்களைத் தங்கள் தலைவன் வரவேற்க விரும்புவதாகத் தெரிவித்தான். குவாக்க நாகரி ஆளும் பகுதியில் நிறையத் தங்கம் கிடைக்கும் என்று வேறு சொன்னார்கள். கொலம்பஸ் தாமதிக்கவில்லை. டிசம்பர் 24-ஆம் நாள் பொழுது புலரு முன்பாகவே அக்குல் வளைகுடாவை விட்டு இரண்டு கப்பல்களும் புறப்பட்டன. குவாக்க நாகரியின் அரண்மனையில் கிறிஸ்துமஸ் விழாவை இன்பமாகக் கொண்டாடலாம் என்று மாலுமிகள் ஆனந்தங் கொண்டார்கள். தலைவன் குவாக்க நாகரியே ஜப்பானியச் சக்கரவர்த்தியாக இருக்கக்கூடும் என்று கூட எதிர்பார்த்தார்கள். ஆனால், அந்த ஆண்டு கிறிஸ்துமஸ் அவர்களுக்கு இன்பத் திருநாளாக இல்லை. துக்க தினமாகவே முடிந்தது. அக்குல் வளைகுடாவிலிருந்து சில மைல் தூரத்திலேயேயுள்ள காரகோல் வளைகுடாவை அடைவது மிகக் கஷ்டமாயிருந்தது. ஒருநாள் முழுதும் கலம் செலுத்தியும் துறைமுகத்தையடைய முடியவில்லை. முதல் நாள் இரவு ஹைட்டி மக்கள் கொடுத்த விருந்திலும் அவர்கள் ஆட்டபாட்டங்களைக் கண்டதிலும் எல்லோருக்கும் தூக்கம் கெட்டிருந்தது. ஆகவே மறுநாள் எல்லோரும் அசந்து போயிருந்தார்கள். ஆகவே அன்று இரவு 11 மணிக்குமேல் கடல் அமைதியடைந்து விட்டபடியாலும் வேகமான காற்று இல்லாதபடியாலும் சாண்டா மாரியா கப்பலில் எல்லோரும் தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார்கள். சுக்கான் பிடிக்கிறவனும் ஒரு பையன் கையில் சுக்கானைக் கொடுத்துவிட்டுத் தூங்கப் போய்விட்டான். பையனுக்கு என்ன தெரியும். பாவம். அவன் பாடு சுக்கானைப் பிடித்துக் கொண்டு நின்றான். கப்பல் எந்தப் பக்கம் திரும்பினாலும் சுக்கான் அவன் கையில் தான் இருந்தது! சரியாகப் பணிரெண்டு மணிக்கு சாண்டா மேரியாக் கப்பல் மெல்லச் சென்று நீருக்கடியில் இருந்த ஒரு பவளப் பாறையில் மோதியது. அதிர்ச்சியைக் கேட்டு கொலம்பஸ் மேல் தட்டுக்கு ஓடி வந்தான். அவன் பின்னாலேயே கப்பலோட்டி லாகோசா ஓடி வந்தான். வேறு சிலரும் வந்தனர். கப்பலின் முன்பகுதி மட்டுமே யுடைந்திருந்தது கண்ட கொலம்பஸ், கப்பலைப் பின்னுக்கு நகர்த்துவதன் மூலம் எளிதாகக் காப்பாற்றி விடலாம் என்று கண்டு கொண்டான். கப்பலோட்டி லாகோசாவையும் சில மாலுமிகளையும் பின்பகுதி சென்று நங்கூரம் பாய்ச்சும்படி கட்டளையிட்டான். உயிருக்குப் பயந்த அந்தக் கோழைகள் உத்தரவுக்குப் பணியாமல் ஒரு படகை இறக்கிக் கொண்டு நைனா கப்பலுக்குச் சென்றார்கள். ஆனால், நிலைமையையுணர்ந்த நைனா கப்பலின் தலைவன் வைசென்டி பிக்சோன் அந்தக் கோழைகளைத் தன் கப்பலில் ஏற்றிக் கொள்ள மறுத்துவிட்டான். தன் கப்பல் ஆட்களை ஒரு படகில் இறக்கி சாண்டா மாரியாவின் உதவிக்கு அனுப்பினான். அவர்கள் வந்து சேர சுமார் ஒரு மணி நேரம் பிடித்தது. அதற்குள் சாண்டா மாரியாவின் அடிப் பகுதியும் பாறைகளின் கூர் முனைகளால் துளைக்கப் பெற்று உடைந்து போய் விட்டது, கப்பலில் நீர் குபுகுபுவென்று புகுந்தது. அதன் பின் கப்பலை விட்டுத் தப்பிப் போகும்படி எல்லோருக்கும் கட்டளையிட்டான். காலையில் குவாக்க நாகரியின் குடிமக்கள் சாண்டா மேரியாவைக் காப்பாற்றத் தீவிரமாக ஒத்துழைத்தார்கள். ஆட்களனைவரும் இரவே கப்பலை விட்டுத் தப்பி மறுக்கப்பல்களுக்குப் போய்-விட்டார்கள். சிவப்பு இந்தியர்களின் உதவியால் கப்பலில் இருந்த சரக்குகளும், உணவுப் பொருள்களும் ஆயுதங்களும் காப்பாற்றப்பட்டு விட்டன. ஆனால் சாண்டா மேரியாவைக் காப்பாற்ற முடியவில்லை. குவாக்க நாகரியின் குடி மக்களாகிய அந்த சிவப்பு இந்தியர்கள் கப்பலிலிருந்து காப்பாற்றிய பொருள்களை யெல்லாம் பத்திரமாகப் பாதுகாத்து கொலம்பசிடம் ஒப்படைத்தார்கள். தெய்வ நம்பிக்கையுடைய கொலம்பஸ், கப்பல் உடைந்ததன் காரணம் என்னவா-யிருக்கும் என்று சிந்தித்தான். கப்பல் உடைந்ததை ஒரு சகுனமாகக் கொண்டால், அந்தச் சகுனத்தின் பொருள் என்ன என்று தீவிரமாகச் சிந்தித்தான். பக்தியோடு கூடிய அந்தச் சிந்தனையின் பலனாக அதன் பொருள் அவனுக்கு விளங்கி விட்டது. சாண்டா மேரியா கப்பலில் உள்ள மாலுமிகளைக் கொண்டு அந்தப் பகுதியை ஒரு குடியேற்ற நாடாகக் கொள்ளுமாறு இறைவன் கட்டளையிடுகிறார் என்பதே சகுனபலன் என்று அவன் கண்டறிந்தான். தலைவன் குவாக்க நாகரியும் அந்தக் கருத்தை வரவேற்றான். வெள்ளையர்களின் துப்பாக்கி பலம் இருந்தால் பகைவர்களுக்கு அஞ்சாமல் வாழலாம் என்று எண்ணினான் அந்தப் பழங்குடி மக்களின் தலைவன். அந்தப் பகுதியில் தங்கம் நிறையக் கிடைப்பதற்குரிய அடையாளங்கள் தென்பட்டதால் மாலுமிகளில் சிலர் அங்கேயே குடியேறி வாழ ஒப்புக் கொண்டனர். எனவே கொலம்பஸ் அந்தப் பகுதியில் ஒரு கோட்டை கட்ட உத்தர விட்டான். சாண்டா மேரியாவின் உடைந்த மரத் துண்டுகளையும், பிறவற்றையும் கொண்டு கோட்டை கட்டினார்கள். அந்த இடத்திற்கு கிறிஸ்துமஸ் நகர் என்ற பொருள்படும் நாவிடாட் எனும் பெயரைச் சூட்டினான் கொலம்பஸ். சாண்டா மேரியாவின் மாலுமிகளில் பெரும் பகுதியினரும், நைனா கப்பலைச் சேர்ந்த சிலரும் சேர்ந்து அங்கேயே தங்கினார்கள். கொலம்பஸ் அவர்களுக்காக, வாணிபப் பொருள்களில் பெரும் பகுதியும் உணவுப் பொருள்களில் பெரும் பகுதியும். சாண்டா மேரியாவில் பயன்பட்ட படகுகள் அனைத்தையும் கொடுத்தான். அந்தப் பகுதி முழுவதையும் ஆராய்ந்து தங்கம் கிடைக்கும் இடத்தைக் கண்டு பிடிக்கும்படியும் அந்தப் பழங் குடிமக்களிடம் அன்பாக நடந்து கொள்ளும்படியும் கொலம்பஸ் அவர்களுக்கு அறிவுரை கூறினான். இஸ்பானியோலா என்ற அந்தப் பகுதி ஜப்பானாக இல்லா விட்டாலும், இந்திய நாடுகளின் ஒரு பகுதிதான் என்று அப்போதும் கொலம்பஸ் திண்ணமாக நம்பினான். எப்படியோ பொன் வளம் நிறைந்த ஒரு புத்துலகைக் கண்டு பிடித்துவிட்டோம் என்ற மனநிறைவோடு அவன் 1493-ஆம் ஆண்டுப் பிறப்பன்று புறப்பட ஆயத்தமானான். அன்று குவாக்க நாகரி பிரிவுபசார விருந்து ஒன்று நடத்தினான். அன்புரைகள் பரிமாறிக் கொண்ட பின் நைனாக் கப்பலில் அவன் தாய் நாடு நோக்கிப் புறப்பட்டான். பிண்டாக் கப்பல் சென்ற வழி தெரியவில்லை. ஆகவே, மூன்று கப்பல்களுடன் வந்த அவன், ஒன்றை இழந்து, ஒன்றை வேறு எங்கோ விட்டு விட்டு, ஒன்றை மட்டும் கொண்டு திரும்ப நேர்ந்தது. ஆனால் இரண்டு நாட்களுக்குப் பின் வழியில் பிண்டா கப்பல் வேறொரு திசையில் சென்று கொண்டிருப்பதைக் கண்டான். அதுவும் தாய் நாடு நோக்கித்தான் திரும்பிக் கொண்டிருந்தது. ஒன்றையொன்று நெருங்கியவுடன் கப்பல் தலைவன் அலோன் சோபின்சோன் நைனாவுக்கு வந்து சேர்ந்தான். அலோன்சோ கூறிய விபரங்களிலிருந்து அவனும் இஸ்பானியோலா பகுதியில் சியோ என்ற இடத்தில் தங்கம் நிறைய இருப்பதைக் கண்டு பிடித்ததாகத் தெரிந்தது. தலைமைக் கப்பல் உடைந்த செய்தியை சிவப்பு இந்தியர்களிடையே பரவிய வதந்தியின் மூலம் அறிந்ததாகக் கூறினான் அலோன்சோ. நடந்ததைப் பற்றி இனிக் கவலைப்பட்டுப் பயனில்லை என்று கருதினான் கொலம்பஸ். திரும்பும் வழியில் அவர்கள் இரண்டு கப்பல்களையும் இஸ்பானியோலா கரையோரமாகவே செலுத்திக் கொண்டு போனார்கள். அவ்வழியில் இன்றும் அம்பு முனை என்று அழைக்கப் படுகிற இடத்தை அடைந்தவுடன் அம்புகளை உபயோகப்படுத்தும் குடிமக்களை முதன் முதலாகக் கண்டார்கள். அந்தக் குடிமக்கள், வெள்ளையர்களை வெறுப்புக் கண்ணோடு நோக்கினார்கள். டாயினோக்களின் ஒரு பிரிவினரான சிகுவாயோ இனத்தைச் சேர்ந்த இக்குடி மக்கள் கரிபிய இனத்தினரிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள அம்புகளைப் பயன்படுத்தி வந்தார்கள். சிகுவாயோ ஒருவனைப் பிடித்து அவனை அன்புடன் நடத்திப் பரிசுகள் கொடுத்து அனுப்பிக் காட்டியதன் மூலம் அவர்கள் வெறுப்புணர்ச்சியைத் தணிக்க முடிந்தது. இருந்தாலும் மிகுந்த எச்சரிக்கையோடு அவர்களிடம் வியாபாரம் நடத்த வேண்டியிருந்தது. ஏற்கெனவே கப்பலில் ஸ்பெயினுக்குக் கொண்டு போக ஏற்றியிருந்த சிலரோடு, சேர்ந்து கொள்ளும்படி கேட்டதில் அங்கிருந்து ஒன்றிரண்டு பேர் கப்பலில் ஏறிக் கொண்டார்கள். மாட்டினினோ என்ற தீவில் கரிபியப் பெண்கள் மட்டுமே இருந்து வருவதாகவும் அங்கு ஆண்டுக்கொரு முறைதான் ஆண்கள் போகமுடியு மென்றும், குறிப்பிட்ட காலம் ஆனபின் அங்கு வந்த ஆண்கள் அனைவரையும் பெண்கள் விரட்டி விடுவார்களென்றும் கொலம்பஸ் கேள்விப்பட்டிருந்தான். ஆனால் உண்மை அப்படியில்லை. கரிபியப் பெண்கள் ஆண்களோடு சரிநிகர் சமானமாக நின்று பகைவருடன் போராடுவார்கள். ஆண்கள் துணையில்லாத போது தனித்து நின்று போராடவும் தயங்க மாட்டார்கள். கொலம்பஸ் அந்தத் தீவில் இறங்க எண்ணியிருந்தாலும், தாய் நாடு செல்லத் தோதாகக் காற்று அடிக்கத் தொடங்கியதால், விரிந்த ஆழ்கடலில் இரண்டு கலங்களையும் செலுத்திக் கொண்டு புறப்பட்டு விட்டான் திரும்பி வரும் வழியில் பிப்ரவரி மாதம் 12ஆம் நாள் காற்றின் வேகம் அதிகரித்தது. நேரம் ஆக ஆக வேகம் கூடியது. கடல் கொந்தளித்தது 13-14-ஆம் நாட்களில் இரு கப்பல்களும் பார்வைக் கெட்டாத தூரத்தில் விலகி விட்டன. அதன் பின் நாடு போய்ச் சேரும் வரையில் இரு கப்பல்களும் சந்திக்கவேயில்லை. காற்றின் வேகம் பயங்கரமாக அதிகரித்தவுடன், மாலுமிகள் எல்லோரும் கன்னிமரியாளை வேண்டிக் கொண்டார்கள். "மேரி மாதா, எங்களை எந்த விதமான ஆபத்துமில்லாமல் கரையில் சேர்த்து விடு. முதலில் எந்த ஊரில் இறங்குகிறோமோ அந்த ஊரில் உள்ள உன் கோயிலுக்கு எல்லோரும் அணிந்துள்ள சட்டையோடு ஊர்வலமாக நடந்து வந்து தொழுகை செய்கிறோம்" என்று வேண்டிக் கொண்டார்கள். அதன் பிறகு காற்றின் வேகம் குறையத் தொடங்கியது. பிப்ரவரி 15-ஆம் நாள் காலையில் அசோர்சுத் தீவுகளில் ஒன்றான சாண்டா மரியாவின் துறைமுகத்தில் வந்து நங்கூரம் பாய்ச்சினார்கள். அஞ்சோஸ் என்ற கிராமத்தின் அருகில்தான் அவர்கள் கப்பலை நிறுத்தினார்கள். உடனே கரையில் இறங்கித் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற மாதா கோவிலுக்குச் சென்றார்கள். மாதா கோயிலிலே அவர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது அந்த ஊர் மக்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு பிடித்துச் சிறையில் அடைத்து விட்டார்கள். அந்தத் தீவு போர்ச்சுகீசியர் ஆதிக்கத்தில் இருந்தது. அதன் தலைவன், யாரோ கள்ளத்தனமாக மேற்கு ஆப்பிரிக்கா போய் வருபவர்கள் என்று எண்ணித்தான் மாலுமிகளைச் சிறையில் அடைத்தான். கொலம்பசும், சில மாலுமிகளும் பிறகு கோயில் போகலாம் என்று கப்பலில் தங்கி யிருந்தார்கள். அவர்களைக் கைது செய்வதற்காக அந்தத் தீவின் தலைவன் சென்றான். கொலம்பஸ் அவனைக் கப்பலில் ஏற அனுமதி மறுத்ததோடு, தன் ஆட்களை விடுவிக்காவிட்டால், அந்த ஊரைச் சுட்டுத் தீர்ப்பதாகவும், பதிலுக்கு ஆட்களைப் பிடித்துக் கொண்டு போவதாகவும் பயமுறுத்தினான். சிறிது நேரத்தில் ஒரு புயல் காற்று வீசியது. அதில் கப்பலின் கம்பிகள் அறுந்து போயின. கப்பலும் சிறிது தூரம் தள்ளிக் கொண்டு போகப்பட்டது. புயல் நின்று அது திரும்பி வருவதற்குள் தீவின் தலைவனுக்கு நல்ல புத்தி வந்து விட்டது. பிடிப்பட்ட மாலுமிகளைத் துன்புறுத்தியதிலிருந்து அவன் உண்மையை அறிந்து கொண்டான். அவர்களை விடுவித்ததோடு கப்பலுக்கு வேண்டிய உணவுப் பொருள்களையும் வழங்கினான்.   பிப்ரவரி மாதம் 24-ஆம் நாள் அங்கிருந்து இரண்டு கப்பல்களும் புறப்பட்டன. எவ்விதமான இடையூறுமின்றி ஒழுங்காகச் சென்றிருந்தால் ஒரு வாரத்தில் ஐரோப்பாவை எட்டிப் பிடித்திருக்கலாம். ஆனால் 26-ஆம் நாள் ஆரம்பித்த புயலில் நைனாக் கப்பல் திசை மாறி விட்டது. மார்ச் 2-ஆம் நாள் சுழல் காற்று வேறு சூழ்ந்து கொண்டது. எப்படியோ புயலுக்குத் தப்பி போர்ச்சுக்கல் நாட்டை நெருங்கிக் கொண்டிருந்தது கப்பல். அப்போது கப்பலில் கிழியாமல் இருந்தது ஒரே ஒரு பாய் தான். லிஸ்பன் துறை முகத்தில் கப்பலை நிறுத்திப் பழுது பார்த்துக் கொண்டு பிறகு புறப்படலாம் என்று எண்ணினான் கொலம்பஸ். ஆனால் இரண்டாவது ஜான் அரசன் தன்னை எப்படி நடத்துவானோ என்று ஒரு விதமான திகிலும் அவனுக்கு இருந்தது. இருந்தாலும் லிஸ்பன் துறைமுகத்தில் நுழைந்து கப்பலை நங்கூரம் பாய்ச்சினான். சிறிது தூரத்தில் ஒரு பெரிய யுத்தக் கப்பல் நின்று கொண்டிருந்தது. அதன் தலைவன் பார்த்தலோமியோ டயஸ் என்பவன். நன்னம்பிக்கை முனையைக் கண்டு பிடித்த பெருமையுடையவன். அவன் ஆயுதப் படை பொருந்திய ஒரு படகில் வந்து கொலம்பசை யுத்தக் கப்பலுக்கு வரும்படி அழைத்தான். கொலம்பசும் அவனும் முன்பே அறிமுகமானவர்கள்தான். இருந்தாலும் அவன் தன்னிடம் வந்து விவரம் கூறவேண்டுமென்று அதிகார தோரணையில் ஆணையிட்டான் டயஸ். கொலம்பஸ் இப்போது சாதாரணக் கப்பல் தலைவன் அல்லன்; புதிய நாடுகளைக் கண்டு பிடித்ததன் மூலம் ஸ்பெயின் பேரரசரால் கடல் தளபதி என்ற பெரும்பதவியை எய்தியவன். தன்னிலும் குறைந்த பதவியிலுள்ள ஒருவனுடைய அதிகாரத்திற்குக் கட்டுப்படுவது தன் மதிப்புக்கு குறைவு என்று கருதி, டயஸ் ஆணைக்குக் கீழ்ப்படிய மறுத்தான். இருந்தாலும் தனக்குப் பதவி வழங்கிய பத்திரங்களை அவன் டயசுக்கு எடுத்துக் காட்டினான். டயசும் அதை ஒப்புக்கொண்டு நட்பு முறையில் நைனாக் கப்பலுக்கு வந்து கொலம்பசோடு அளவளாவினான். கொலம்பஸ் அனுமதி கேட்டு எழுதிய கடிதத்துக்கு ஜான் அரசரிடமிருந்து பதில் வந்தது. துறைமுகத்தில் கப்பல் தங்குவதற்கு அனுமதித்ததோடு உணவுப் பொருள்கள் ஏற்றிக் கொள்ளவும் அனுமதி கொடுத்திருந்தார். அத்தோடு தன்னை வந்து சந்திக்கும்படியும் அவனை வேண்டிக் கொண்டிருந்தார். கொலம்பஸ் மனத்திற்குள் ஒரு பெரும் போராட்டம் எழுந்தது. ஜான் அரசரைப் போய்ப் பார்க்காவிட்டால் அவருக்குக் கோபம் வரும். அவரைப் பார்த்து விட்டுப் புறப்பட்டால் முதலில் தன்னைப் பார்க்கவில்லை என்று அரசி இசபெல்லாவுக்குக் கோபம் வரும். யார் கோபத்தைத் தாங்குவது என்று அவனுக்குப் புரியவில்லை. வேண்டுகோளை மறுக்க முடியாமல் இரண்டு மூன்று மாலுமிகளையும், சில சிவப்பு இந்தியர்களையும் கூட்டிக் கொண்டு ஜான் அரசரைப் போய்ப் பேட்டி கண்டான். எல்லோரும் மட்டக் குதிரைகளில் ஏறிக் கொண்டு முப்பது மைல் தூரத்தில், ஜான் அரசர் தங்கியிருந்த ஒரு மடத்திற்குச் சென்றார்கள். ஏற்கனவே முன்பின் ஏறியறியாத கப்பலில் ஏறிக் கஷ்டப்பட்டுக் கொண்டு வந்த சிவப்பு இந்தியர்கள், இப்போது குதிரை முதுகில் ஏறி அதிக சிரமப்பட்டார்கள். அத்தோடு போர்ச்சுக்கல் வீதிகள் மிகவும் குறுகலானவை என்பதோடு சகதி நிறைந்தவை. கொலம்பசுடன் பேசிய ஜான் அரசன் அன்பொழுகப் பேசினாலும், உள்ளத்திற்குள் ஆத்திரங் கொண்டிருந்தான். கொலம்பஸ் தான் கண்டு பிடித்த நாடுகளைப் பற்றிக் கதை கதையாகக் கூறியதைக் கேட்ட பிறகும் அவன் முன்பே போர்ச்சுக்கல் நாட்டவர் கண்டு பிடித்த இடங்களுக்கே சென்று வந்தானோ என்று சந்தேகப் பட்டான். ஆனால், அவன் கூடக் கொண்டு வந்திருந்த சிவப்பு இந்தியர்களைக் கண்டதும் அந்தச் சந்தேகம் நீங்கியது. அவர்களைப் போன்ற தோற்றமுடைய மக்களை அவன் அதற்கு முன் பார்த்ததில்லை. போர்ச்சுக்கல் அரசரையும் அரசியையும் பார்த்து விட்டு கொலம்பஸ் திரும்பி வந்தபோது நைனா கப்பல் பழுது பார்க்கப்பட்டுப் புதுப் பாய் மரங்களுடன் புறப்படத் தயாராக அழகாக நின்றது. வேண்டிய உணவுப் பொருள்களும் ஏற்றப்பட்டிருந்தன. கொலம்பஸ் ஏறிவந்த நைனா கப்பல் திசைமாறிய பின், அலோன் சோ பின்சோன் நடத்தி வந்த பிண்டா கப்பல் வேறொரு திசை வழியாக ஸ்பெயினுக்கு வந்து சேர்ந்தது. அக்கப்பல் புயலின் கொடுமைகளுக்குத் தப்பி விட்டது. லிஸ்பனிலிருந்து நைனா புறப்பட்டு ஸ்பெயினை நோக்கிச் சென்றது. செல்லும் வழியில் அதன் பின்னாலேயே கண்ணுக் கெட்டாத தூரத்தில் பிண்டாவும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. அலோன்சோ பின்சோன், முன்னதாகவே ஸ்பெயினின் வடக்குப் பகுதியில் உள்ள யயோனாத் துறைமுகத்தில் தன் கப்பலை நிறுத்தி, பார்செலோனா என்ற ஊரில் தங்கியிருந்த பேரரசர் பெர்டினாண்டுக்கும் பேரரசி இஸபெல்லாவுக்கும் செய்தியனுப்பினான். தான் நேரில் வந்து சந்திக்க அனுமதி கேட்டிருந்தான். ஆனால், அவர்கள் கொலம்பசே நேரில் வந்து கூறட்டும் என்று கூறி அனுமதி வழங்க மறுத்து விட்டார்கள். அங்கிருந்து புறப்பட்டவன்தான் விஸ்பனிலிருந்து வந்த நைனாவைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான். மார்ச் 15-ஆம் நாள் பாலோஸ் துறைமுகத்தில் நைனா கப்பல் நங்கூரம் பாய்ச்சியது. பின்னால் வந்து கொண்டிருந்த பிண்டாவும் அங்கு வந்து சேர்ந்தது. ஏற்கனவே அங்கு நின்று கொண்டிருந்த நைனாவைக் கண்டதும், தனக்கு ஒரு மாதம் முன்னதாகவே அது வந்து விட்டதுபோல் எண்ணிக் கொண்டான் பிண்டாக் கப்பலின் தலைவன். அரசரும் அரசியும் தன்னைக் காண மறுத்தது வேறு அவனுக்குத் தாங்க முடியாத அவமானமாக இருந்தது: கடுமையான கடற் பயணம் வேறு முதுமையான அவன் உடலைப் பாதித்திருந்தது. கப்பலைப் பாலோஸ் துறைமுகத்தில் நிறுத்திய அவன், கொலம்பசையோ வேறு யாரையுமோ பார்க்காமல் நேரே தன் வீட்டுக்குப் புறப்பட்டு விட்டான். உடலும் உள்ளமும் பாதிக்கப்பட்ட அவன் நோய் வாய்ப்பட்டு சுமார் ஒரு மாதத்தில் மனக் குறையுடனேயே இறந்து போய் விட்டான். கொலம்பஸ் லிஸ்பனில் இறங்கியபோது தன் பயணத்தின் விபரத்தைக் குறித்துக் கடிதம் எழுதி பேரரசியாருக்கும் பேரரசரக்கும் அனுப்பி விட்டான். பாலோஸ் துறை முகத்தில் இறங்கியவுடன் மீண்டும் அந்தக் கடிதத்தின் நகல் ஒன்றைப் பேரரசியார்க்கு அனுப்பினான். சோர் டோலா என்ற ஊரில் அவன் திருமணம் செய்து கொள்ளாமல் எடுத்து வைத்திருந்த மனைவி பீட்ரிஜுக்கும் செய்தி யனுப்பினான். அவள் மூலம் அவனுக்குப் பிறந்த பையன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அப்போது ஐந்து வயதிருக்கும். அவன் முதல் மனைவியின் மகனும் அப்போது அவளுடன் இருந்தான். ஏப்ரல் மாதம் 7-ஆம் நாள் அரசி இசபெல்லாவும் அரசர் பெர்டினாண்டும் கடிதம் எழுதியிருந்தார்கள். அதில் கொலம்பசின் பெயருக்கு முன்னால், அவனுடைய பட்டங்கள் குறிக்கப்பட்டிருந்தன. தாம் கண்டு பிடித்த இந்தியத் தீவுகளின் ஆட்சித் தலைவரும் அரசப் பிரதிநிதியுமான பெரும் கடல் தளபதி டோன்கிரிஸ்டோபர் கோலோன் அவர்களுக்கு என்று அரசாங்க பாணியில் அவன் பெயர் குறிப்பிடப்பட்டு வந்த கடிதத்தின் மேலுறையைப் பார்த்தவுடனேயே அவனுக்கு ஆனந்தம் பொங்கி வழிந்தது. அந்தக் கடிதத்தில் மீண்டும் இரண்டாவது பயணம் ஒன்று சென்று வர ஆயத்தங்கள் செய்யும் படியும் குறிக்கப்பட்டிருந்தது. தன் பயணத்தின் பலன் நிறைவெய்தியது என்ற களிப்புடன் அவன் அரசரையும் அரசியையும் காண ஆயத்தங்கள் செய்தான். அவர்களுக்குத் தன் எண்ணத்தை விளக்கி ஓர் அறிக்கையும் தயாரித்தான். இஸ்பானியோலா பகுதியில் ஸ்பெயின் மக்கள் குடியேறுவதற்கும். குடியேறித் தங்கித் தங்க வாணிபம் செய்வதற்கும் உள்ள வாய்ப்புக்களை எடுத்து விளக்கியிருந்தான். இரண்டாயிரம் பேர் வரை அங்குக் குடியேறலாம் என்றும், அவர்கள் அங்கு ஒரு பட்டணம் அமைத்துக் கொள்ளலாம் என்றும், அந்தப் பட்டணத்தில் இருந்து கொண்டு நாட்டுப் பகுதியில் சென்று வியாபாரம் செய்து கொண்டு வரலாம் என்றும், அவர்கள் கொண்டு வரும் தங்கத்தை நிறுத்துப் பார்த்து, அரசர்க்குரிய ஐந்து பங்கும், கடல் தளபதிக்குரிய பத்துப் பங்கும், தேவாலயத்துக்குரிய வரியும் குறைத்துக் கொண்டு மீதியை உரியவரிடம் வழங்கலாம் என்றும், அங்கு தங்குவோர் விவசாயத் தொழிலும் மேற்கொள்ள வேண்டும் என்றும், சிவப்பு இந்தியர்களை மதம் மாற்றப் பாதிரிகளை அனுப்பவேண்டும் என்றும், அவன் கண்டு பிடித்த நாடுகளில் அன்னியர்களையும், யூதர்களையும், மத விரோதிகளையும், புரட்சிக்காரர்களையும் அனுமதிக்கக் கூடாதென்றும் இன்னும் என்னென்னவோ குறிப்பிட்டிருந்தான்.இந்த விவரமான அறிக்கையை அனுப்பி விட்டு அவன் தன் புதிய பட்டத்துக்குத் தகுந்தாற் போன்ற விலையுயர்ந்த ஆடைகளைத் தைத்துக் கொண்டான். தன் கப்பல் அதிகாரிகளில் சிலரையும் கூலிக்கு. அமர்த்திய ஆட்கள் சிலரையும், சிவப்பு இந்தியர்களில் அறுவரையும் சேர்த்து ஓர் ஊர்வலக் குழுவை உண்டாக்கினான். சிவப்பு இந்தியர்கள், அவர்கள் நாட்டு நாகரிகப்படி பறவைகளின் இறகுகளைத் தலையில் கட்டிக் கொண்டார்கள். மீன் எலும்பால் ஆகிய மாலைகளையும், தங்க ஆபரணங்களையும் அணிந்து கொண்டார்கள். கூடுகளில் அடைத்த பச்சைக் கிளிகளைத் தங்கள் கைகளில் தூக்கிக் கொண்டார்கள். போகும் வழியெல்லாம் அந்த விசித்திரச் சிவப்பு இந்தியர்களைக் காணக் கூட்டம் கூட்டமாக மக்கள் கூடினார்கள். சோர்டோலா நகர சபை கொலம்பசுக்கு ஒரு வரவேற்பளித்தது. அங்கு அவன் தன் மனைவியையும் தன் மக்களையும் கண்டு வாரியணைத்து முத்தமிட்டான். ஏப்ரல் கடைசி வாரத்தில் பார்செலோனா நகருக்கு வந்து சேர்ந்தான். அங்கு அரசாங்க அதிகாரிகளும், ஊர் மக்களும் ஒருமிக்கத் திரண்டு வந்து அவனை வரவேற்றார்கள். பேரரசர் பெர்டினாண்டும் பேரரசி இசபெல்லாவும் இருந்த சபா மண்டபத்திற்குள் கொலம்பஸ் சென்றான். அவர்கள் முன்னிலையில் மண்டியிட்டு அவர்களின் திருக்கைகளில் முத்தமிட்டான். சுமார் எட்டு மாதம் கண் காணாத கடலில் சுற்றித் திரிந்து, ஸ்பெயின் நாட்டுக்குப் பல புதிய தீவுகளை உரிமையாக்கிக் கொடுத்த அந்த மாவீரனை வாழ்த்தினார்கள் மாமன்னரும் பேரரசியும். அரசிக்கு வலது பக்கத்தில் அவனுக்கு இடமளிக்கப்பட்டது. அவன் தான் கொண்டு வந்திருந்த சிவப்பு இந்தியர்களையும், பச்சைக் கிளிகளையும் தங்க ஆபரணங்களையும், மருந்து மூலிகைகளையும் அவர்களுக்குக் காணிக்கையாக கொடுத்தான். அரசரும் அரசியும், அந்தப் புதிய நாடுகளைப் பற்றிப் பல கேள்விகளைக் கேட்டு அறிந்தார்கள். பிறகு எல்லோரும் அருகில் இருந்த தேவாலயத்துக்குச் சென்று இறைவன் முன் மண்டியிட்டு எல்லாம் நன்மையாக முடிய வேண்டுமென்று தொழுகை நடத்தினார்கள். அப்போது கொலம்பஸ் அடைந்த ஆனந்தத்தின் அளவை, அவன் கன்னங்களில் வழிந்த கண்ணீராலும் கணக்கிட்டுக் கூற முடியாது! அந்த நேரத்தில் கொலம்பஸ் நினைத்திருந்தால், என்ன வேண்டுமானாலும் பெற்றிருக்கலாம். கோட்டை கொத்தளம், பட்டம் பதவி, செல்வம், எதைக் கேட்டாலும் அரசி கொடுத்திருப்பாள். ஆனால், இந்தச் சுகபோகங்களைக் காட்டிலும் மேலான இலட்சியம் ஒன்று அவனுக்கு இருந்தது. தான் கண்டு பிடித்த நாடுகளில் குடியேற்றம் செய்ய வேண்டும்; தங்க வாணிபம் சீரான முறையில் அங்கு நடைபெற வழிவகுக்க வேண்டும்; அந்த நாட்டு மக்களைக் கிறிஸ்துவ மதத்தில் சேர்த்துவிட வேண்டும்; கான் பேரரசருடன் அல்லது குவாக்க நாகரியை விடப் பன் மடங்கு பெரிய அரசன் ஒருவனுடன் வாணிக ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இப்படியெல்லாம் பல எண்ணங்களைக் கொண்டிருந்தான் கொலம்பஸ். ---------- 6. கடிதம் கிடைத்தது கொலம்பஸ் தான் கண்டு பிடித்த தீவுகளைப் பற்றியும். தன் எதிர்காலத் திட்டங்களைப் பற்றியும் பேரரசியார்க்கும் மாமன்னர்க்கும் எழுதிய கடிதம் சுவையானது. அவன் அக்கடிதத்தை மாமன்னரின் தனிச் செயலாளரான சாண்டாஞ்சலுக்கு அனுப்பி-யிருந்தான். அக்காலத்தில் ஸ்பெயினில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், அரசவையைச் சேர்ந்தவர்களும் தான் அரசர்களுக்கு நேரடியாகக் கடிதம் எழுதலாம். மற்றவர்கள் எழுதுவது மரியாதைக் குறைவென்று கருதப்பட்டது. எனவே தான், தன் பயணத்துக்கு முற்றிலும் உதவியாயிருந்த சாண்டாஞ்சலுக்கு எழுதி, அவன் மூலம் அரசர்க்கும் அரசிக்கும் தகவல் அறிவிக்கச் செய்தான் கொலம்பஸ். 1493-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ஆம் நாள் நைனாக் கப்பலில் உட்கார்ந்து எழுதிய இக்கடிதத்தைத்தான், கொலம்பஸ் தான் லிஸ்பன் துறைமுகம் வந்து சேர்ந்தவுடன் மார்ச் மாதம் 14-ஆம் நாளன்று அரசவைக்கு அனுப்பினான். இக்கடிதம் கொலம்பஸ் கடிதம் என்று பெயரிடப் பட்டு இன்று உலகத்திலேயே முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பத்திரமாகக் கருதப்படுகிறது. இக்கடிதத்தைக் கொலம்பசின் சொற்களிலேயே அப்படியே மொழி பெயர்த்துக் கீழே கொடுத்திருக்கிறோம்: ஐயா, நம் இறைவன் என் பயணத்திற்களித்த பெரும் வெற்றியை அறியத் தாங்கள் மிக மகிழ்ச்சியடைவீர்கள் என்றறிந்தே இக்கடிதத்தைத் தங்களுக் கெழுதுகிறேன். நம் அரசர் பெருமானும் பெருந்தகை அரசியாரும் அளித்த கப்பல்களுடன் நான் முப்பத்து மூன்று நாட்களில் இந்தியத் தீவுகளை யடைந்தேன். எண்ணிக்கையற்ற மக்கள் வாழும் பற்பல தீவுகளை நான் அங்கே கண்டேன். மேன்மை மிக்க அரசர் பெருமானுக்கும் அரசியாருக்கும் சார்பாக நான் அவற்றையெல்லாம் நம் உடைமையாக்கினேன். நம் அரசுக் கொடியுடன், நான் இத்தீவுகளை நம் அரசுக்கு உரிமையாக்கிச் செய்த அறிவிப்பை யாரும் மறுத்துரைக்கவில்லை. நான் முதன் முதலில் கண்ட தீவுக்கு அதிசயமான இத்தீவுகளையெல்லாம் அளித்த விண்ணகத்தின் இறைவன் நினைவாக சான் சால்வடார் என்ற அவன் பெயரையே சூட்டினேன். இத்தீவை அங்குள்ள மக்கள் குனாகானி என்று அழைக்கிறார்கள். இரண்டாவது தீவுக்கு இஸ்லாடி சாண்ட மாரியா என்றும் மூன்றாவதற்கு பெரான்டினா என்றும் நான்காவதற்கு லா இஸ்லா பெல்லா என்றும், ஐந்தாவதற்கு லா இஸ்லா ஜுலானா என்றும் பெயரிட் டேன். இவ்வாறாக நான் கண்டு பிடித்த ஒவ்வொரு தீவுக்கும் ஒவ்வொரு புதுப் பெயரிட்டேன். ஜுலானாத் தீவை நான் அடைந்தவுடன் அதன் மேல் கரையோரமாகச் சென்றேன். அப்பகுதிதான் சீன நாட்டைச் சேர்ந்த கத்தேயோ மாநிலமாக இருக்குமோ என்று நான் ஐயுறும் வண்ணம் அந்தக் கரை நீண்டு கொண்டே சென்றது. அந்தத் தீவில் நான் சென்ற வழியில் பட்டணங்களோ நகரங்களோ காணப்படவில்லை. சிறு சிறு கிராமங்களே தென்பட்டன. அந்தத் தீவின் குடி மக்கள் யாருடனும் நான் பேச முடியவில்லை. ஏனெனில் அவர்கள் என்னைக் கண்டவுடன் ஓடத் தொடங்கி விட்டார்கள். ஏதாவது ஒரு நகரத்தைக் காணலாம் என்ற நம்பிக்கையோடு நான் சென்று கொண்டேயிருந்தேன். ஆனால், பல காதங்கள் சென்ற பின்னும் பயனில்லை. கரையோ வடக்கு நோக்கி என்னை நடத்திக் கொண்டு சென்றது. குளிர்காலம் துவங்கிவிட்டபடியால் நான் தெற்கு நொக்கித் திரும்பி ஒரு குறிப்பிடத்தக்க துறை முகத்திற்கு வந்தேன். பிறகு இரண்டு ஆட்களை உள் நாட்டுப் பகுதிக்கு அனுப்பி ஏதாவது நகரமோ அல்லது யாராவது அரசரோ இருப்பதையறிந்து வரச் செய்தேன். அவர்கள் மூன்று நாள் பயணம் மேற்கொண்டும், சிறு சிறு கிராமங்களையும் அங்கு வாழும் எண்ணற்ற மக்களையும் கண்டு வந்தார்களே தவிர, வேறு முக்கியமான எதையும் காண முடியவில்லை. ஆகவே, பேசாமல் திரும்பி வந்து விட்டார்கள்.ஏற்கெனவே நான் பிடித்து வைத்திருந்த இந்தியர்கள் மூலம் அது ஒரு தீவு தான் என்று அறிந்தேன். அதன் கரையோரமாகவே கிழக்கு நோக்கிச் சென்றேன். அது முடியும் இடத்தில் உள்ள முனைக்குச் சென்ற பின், அங் கிருந்து பதினெட்டுக் காத தூரத்தில் மற்றொரு தீவு இருக்கக் கண்டேன். அந்தத் தீவிற்கு நான் உடனே லாஸ் பானோலா என்று பெயரிட்டேன். அந்தத் தீவுக்குச் சென்று அதன் வடபகுதியில் கிழக்கு நோக்கி 178 காதம் வரை சென்றேன். ஜுலானாவைப் போலவே இதுவும் மிக வளம் நிறைந்த பூமியாக உள்ளது. கடற்கரையோரங்களில் வசதியான துறைமுகங்கள் ஏராளமாக இருக்கின்றன. பெரிய பெரிய ஆறுகளும், உயர்ந்த மலைகளும் மலைக்குவடுகளும், ஆயிரக்கணக்கணக்கான வகைகளைச் சேர்ந்த மிக உயரமான வானளாவிய மரங்களும் பச்சைப்பசேலென்று பார்ப்பதற்கு மிக அழகாயிருந்தன. அந்த மரங்கள் எப்போதும் இலை தழைகளுடனேயே இருக்கும் என்று சொன்னார்கள். அது நம்பும்படியாக வேயிருந்தது. சில மரங்கள் பூத்திருத்தன; சில மரங்கள் பழுத்திருந்தன. ஒவ்வொரு வகை மரமும் அவ்வவற்றின் பருவத்திற்கேற்ற நிலையில் விளங்கின. தென்னை பனை இவற்றின் வகையைச் சேர்ந்த ஏழெட்டு விதமான மரங்கள் அங்கே இருக்கின்றன. அவை யாவும் பார்க்க அழகாகவும் கம்பீரமாகவும் கவர்ச்சியாகவும் இருந்தன. பைன் மரக்காடுகளும் ஆங்காங்கே யிருந்த சமவெளிப் பகுதிகளும் அழகானவை. அங்கே தேன் இருக்கிறது. வானம்பாடிகள் இனிமையாகப் பாடிக் கொண்டிருக்கின்றன. வகை வகையான பழங்களும் வித விதமான பறவைகளும் காணப்படுகின்றன. சமவெளிகள் உழவுத் தொழிலுக்கு ஏற்றவையாயிருக்கின்றன. மேல் தீவில் பலவிதமான உலோகங்கள் இருக்கின்றன. ஆடுமாடுகள் வளர்ப்பதற்கும், நகரங்கள் அமைப்பதற்கும் ஏற்ற பகுதிகள் பல இருக்கின்றன. ஓடைகளிலும் ஆறு களிலும் தங்கம் நிறைய இருக்கிறது. தங்கச்சுரங்கங்களும் வேறு உலோகச் சுரங்கங்களும் இருக்கின்றன. இந்தத் தீவுகளில் உள்ள மக்கள் எல்லோரும் ஆண்களும் பெண்களும் ஆடையுடுத்துவதே யில்லை. அந்த மக்களிடம் எவ்விதமான ஆயுதங்களும் இல்லை. அவர்கள் நல்ல உடற்கட்டும் அழகும் உடையவர்களாயிருக்கிறார்கள். அவர்களிடம் இருக்கும் ஆயுதம் நுனியில் கூரான சிறு கம்பு கட்டிய பிரம்புதான். அவர்கள் புது மனிதர்களைக் கண்டதும் பயந்து ஓடுகிறார்கள். பிறகு சிறிது பழக்கம் ஏற்பட்டதும் மிகத்தாராளமாகப் பழகுவதோடு, தங்களிடம் உள்ள பொருள்களையும் தாராளமாக எடுத்துக் கொடுத்துவிடுகிறார்கள். எதைக் கேட்டாலும், உடனே கொடுத்துவிடுகிறார்கள். சில மாலுமிகள் சிறிய கண்ணாடிப் பொருள்களைக் கொடுத்துவிட்டு தங்கம் வாங்கினார்கள் அந்த எளிய மக்கள் அந்தக் கண்ணாடித்துண்டுகளை வைர மணிகளைப் பெற்றது போல் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டு தங்களிடம் உள்ள தங்கத்தை அப்படியே கொடுத்து விட்டார்கள். இவ்வாறு செய்வது சரியல்ல என்று தடுத்ததுடன், அவர்கள் திருப்தியடையும்படி ஆயிரக்கணக்கான அதிசயப்பொருள்களை வழங்கினேன். அவர்கள் நம்மிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதற்காகவும், பிறகு அவர்களை கிறிஸ்தவர்களாக ஆக்க வேண்டும் என்பதற்காகவும் நான் இவ்வாறு நடந்து கொண்டேன். அவர்களுக்குத் தொழுகை முறைகளோ, மதங்களோபற்றி எதுவும் தெரியாது. எல்லா சக்தியும் வானத்திலிருந்து வருவதாக மட்டும் நம்பினார்கள். எங்களையே வானத்திலிருந்து வந்தவர்கள் என்று எண்ணித் தான் வரவேற்றார்கள். கப்பல்களையோ, உடையுடுத்திய மனிதர்களையோ முன்பின் பார்த்திராததால் தான், நாங்கள் வானத்திலிருந்து வந்தவர்கள் என்று அவர்கள் எண்ணினார்கள். முதன் முதலில் நான் இறங்கிய இந்தத் தீவில், சில மக்களைப் பலவந்தமாகப் பிடித்தேன். அவர்கள் அச்சம் அகன்றபின் சைகை மூலமாகப் பேசி ஒருவரை யொருவர் புரிந்து கொண்டோம். அவர்களின் மூலம் நான் அந்தப் பகுதிகளைப்பற்றிக் கேட்டறிந்து கொண்டேன். அவர்கள், வேலைகளுக்கு நன்கு பயன்பட்டார்கள் அவர்களை இன்னும் நான் வைத்திருக்கிறேன். இவ்வளவு பழகிய பிறகும் இன்னும் அவர்கள் நான் வானத்திலிருந்து வந்தவன் என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். எங்கு போனாலும் அவர்கள் மற்ற குடிமக்களுக்கு என்னை இப்படித்தான் அறிமுகப்படுத்தினார்கள். உடனே மற்றவர்கள், வீட்டுக்கு வீடு ஓடி, "வானத்திலிருந்து வந்தவர்களை வந்து பாருங்கள் ! வாருங்கள் வாருங்கள்!" என்று கூவுவார்கள். ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் பெரியவர்களும் ஒருவர் பாக்கியில்லாமல் ஊரில் உள்ளவர்கள் எல்லோரும் கூடிவிடுவார்கள். ஒவ்வொருவரும் குடிப்பதற்கும் உண்பதற்கும் ஏதாவது கொண்டு வந்து பயபக்தியுடன் என் முன் படைப்பார்கள். அந்த மக்கள் கடலைக் கடக்கச் சிற்றோடங்களையே பயன்படுத்தி வந்தார்கள். இந்த ஓடங்கள் ஒரே மரத்தாலானவை. சில சிறியவை, சில பெரியவை. பெரிய ஓடத்தில் சுமார் 70 அல்லது 80 பேர்வரை ஏறிச் செல்ல முடியும். ஏறியுள்ள ஒவ்வொருவரும் துடுப்புவலித்துக் கொண்டு போவார்கள். இந்த ஓடங்களிலேயே அவர்கள் அந்தத் தீவுக்கூட்டங்களுக்கிடையே போய் வருவார்கள். பொருள்களை ஏற்றிச் சென்று வாணிபம் நடத்துவார்கள். இந்தப் பற்பல தீவுகளிலும் வாழ்ந்த மக்களிடையே அதிகமான வேற்றுமை எதனையும் நான் காணவில்லை. ஒவ்வொருவருடைய பழக்க வழக்கங்களும். பேச்சும் கூட மற்ற தீவைச் சேர்ந்தவர்களுக்கும் புரிவதாயிருந்தது. இதனால் தான் இவர்கள் எல்லோரையும் நம் சமயத்தில் எளிதாகச் சேர்த்துவிடலாம் என்றும், இவர்களின் பேரரசரின் ஒப்புதல் கிடைக்கும் என்றும் நான் நம்பிக்கை கொண்டேன். ஜூலானா என்ற தீவு இங்கிலாந்தையும் ஸ்காட்லாந்தையும் சேர்த்துப்பார்த்தால் கூட அவற்றிலும் பெரியதென்றே சொல்லவேண்டும். இந்தத் தீவில் மேல்திசைப் பக்கம் இரண்டு மாநிலங்கள் உள்ளன. அவற்றிற்கு நான் செல்லவில்லை. இவற்றில் ஒன்றின் பெயர் அவான் என்பதாகும். இங்கு மக்கள் வாலுடன் பிறக்கிறார்கள். எஸ்பானோலர் என்ற தீவு ஸ்பெயின் ஆளுகைக்குட்பட்ட நிலங்கள் அனைத்தையும் விடப் பெரியது. இங்கு தங்கச் சுரங்கங்கள் உள்ளன . இங்கிருந்து கொண்டு மற்ற தீவுகளுடனும், கான் பேரரசருக்குச் சொந்தமான மற்ற பகுதிகளுடனும் இலாபந்தரும் வாணிபம் செய்யலாம். இங்கு நான் ஒரு பெரிய நகரத்தை உரிமையாக்கிக் கொண்டுள்ளேன். இந்த நகரத்திற்கு லாவில்லா டி நேவி டாட் என்று பெயரிட்டுள்ளேன். இங்கு ஒரு பாதுகாப்புக் கோட்டை கட்டியிருக்கிறேன். இந்தக் கோட்டையில் நம் வியாபாரத்தைத் தொடர்ந்து நடத்துவதற்கு அனுசரணையாக நம் ஆட்கள் சிலரைக் குடியிருக்கச் செய்திருக்கிறேன். அவர்களுக்குத் துணைக்கு வேண்டிய ஆயுதங்களும் வெடிமருந்துகளும், படகு ஒன்றும். ஓராண்டுக்குக் காணக் கூடிய உணவுப் பொருள்களும் விட்டு வந்திருக்கிறேன். இவர்களிடையே கடலனுபவம் மிகுந்த ஒரு தலைவனும் இருக்கிறான். இந்தத் தீவின் அரசன் என் சிறந்த நண்பன். அவன் என்னைத் தன் அண்ணன் என்றே பாராட்டுபவன். அவன் மனம் மாறி நம் ஆட்களுடன் பகைமை கொண்டாலும் கூடப் பயமில்லை. ஏனெனில் அவனுக்கோ அவனு டைய குடிமக்களுக்கோ ஆயுதங்களை உபயோகிக்கத் தெரியாது. மேலும் முன் நான் சொன்னபடி அம்மக்கள் மிகவும் அச்சமுடையவர்கள். ஆகவே, அங்கு நான் விட்டு வந்த சிறு கூட்டத்தினரே அந்தத் தீவு முழுவதையும் அழிக்க வேண்டு மென்றாலும் அழித்துவிடலாம். எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்திருந்தால், தங்களுக்கு எவ்விதமான ஆபத்துமின்றி அவர்கள் நன்றாக வாழ்ந்து வரலாம். இந்தத் தீவுகளில் இருப்பவர்கள், ஒவ்வொருவரும் ஆளுக்கொரு மனைவியே கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய அரசன் மட்டும் இருபது மனைவிமார் வரையில் வைத்திருக்க உரிமையுண்டு. அங்கு ஆண்களை விடப் பெண்களே அதிகமாக உழைக்கிறார்கள். பெண்களுக்குத் தனிச் சொத்து உள்ளதா என்பதை இன்னும் நானறிந்து கொள்ளவில்லை. ஆனால், பொதுவாக ஒருவர் வைத்திருப்பதை எல்லோரும் பகிர்ந்து கொள்ளுகிறார்கள். முக்கிய உணவுப்பொருள்களில் இந்தப் பகிர்வு முறையைக் கைக்கொண்டிருக்கிறார்கள். இந்தத் தீவுகளில், பலர் எதிர் பார்த்தபடி அகோரப்பிறவிகள் எதையும் நாங்கள் காணவில்லை. இங்குள்ள மக்கள் எல்லோருமே நல்ல அழகிய தோற்றமுடையவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் கினியாவில் உள்ள நீக்ரோக்களைப் போல் இல்லை. நீண்ட கூந்தலையுடைய தலையுடன் காட்சியளிக்கிறார்கள். சூரியனின் கதிர்கள் நேராகப் பாயும் கடுமையான வெப்பமுடைய நாடு அல்ல என்றாலும், பூமத்தியரேகைக்கு 26 டிகிரி தள்ளியிருந்தாலும் சூரிய வெப்பம் இங்கு அதிகமாகத்தான் இருக்கிறது. உயர்ந்த மலைகள் மிகுந்திருப்பதால் வாடைக்காலம் குளிர் அதிகமாயிருக்கிறது. ஆனால் இங்குள்ளவர்கள் பழக்கத்தினாலும், சூடுண்டாக்கும் உணவுகளை உண்பதன் மூலமாகவும் குளிரைத் தாங்கிக் கொள்கிறார்கள். இந்தத் தீவுகளில் நான் இராட்சதப் பிறவிகள் எதையும் சந்திக்கவில்லை. ஆனால், இந்தியத் தீவுகளில் இரண்டாவதாக உள்ள தீவில் இருப்பவர்கள் மனித இறைச்சி தின்னும் பழக்கமுடையவர்கள். இவர்கள் வில்லும் அம்பும் ஆயுதமாக உடையவர்கள். இரும்பு கிடைக்காததால் அம்பின் நுனியில் கூர்மையான மரப்பலகையே அமைத்து வைத்துள்ளார்கள். மற்ற தீவுகளில் உள்ள மக்கள் அஞ்சிய இயல்புடையவர்கள். அவர்களிடம் இந்த மக்கள் கொடுமையாக நடந்து கொள்கிறார்கள். இவர்கள் பெண்களைப் போல் கூந்தல் வளர்த்துக்கொள்கிறார்கள். ஆனால், பிற தீவு மக்களுக்கும் இவர்களுக்கும் வேறு எவ்விதமான வேற்றுமையும் புலப்படவில்லை. மனித இறைச்சி, தின்னும். இந்த இந்தியர்கள் வேறு தீவுமக்கள் யாருடனும், உறவுவைத்துக் கொள்வதில்லை. ஆனால், மாட்ரிமோனியேர் தீவில் உள்ள பெண்களுடன் உறவு கொண்டுள்ளார்கள். இந்தப் பெண்கள் வில்லம்பு உபயோகிப்பதில் வல்லவர்கள். போரில் தங்களைக் காத்துக் கொள்ள செப்புத் தகடுகளால் மறைத்துக் கொள்கிறார்கள். இவர்களுடைய தீவில் ஓர் ஆண்பிள்ளை கூட இருக்க இடமளிப்பதில்லை. எஸ்பானோலாவைவிடப் பெரிய ஒரு தீவு இருக்கிறதென்று சொன்னார்கள். அங்குள்ள மக்களுக்குத் தலையில் முடியேயில்லை. இந்தத் தீவுகளிலிருந்து மாதிரிக்காகச் சில இந்தியர்களை என்னுடன் கொண்டு வந்திருக்கிறேன். முடிவாகச் சொன்னால் மேன்மைதங்கிய மாமன்னரும் பேரரசியாரும், விரைந்து முடித்த இந்தப் பயணத்தைக் கொண்டு நான் எவ்வளவு தங்கம் வேண்டுமானாலும் தங்களுக்குக் கொண்டுவந்து கொடுக்க முடியுமென்பதை அறிந்துகொள்ளலாம். அவர்கள் எனக்கு ஒரு சிறு உதவி செய்தால் போதும்; வாசனைப் பொருள்களும் பருத்தியும் தவிர, கிரேக்க நாட்டிலும், சியோங் தீவிலுமே கிடைக்கக் கூடிய பசைப் பொருளும், கரும்போழை மரமும் எத்தனை கப்பல் வேண்டுமானாலும் ஏற்றி அனுப்புவேன். உத்தரவிடும் எண்ணிக்கையுள்ள அடிமைகளைப் பிடித்து. ஏற்றுமதி செய்தனுப்புவேன். சீனக்கிழங்கும், கருவாப்பட்டையும்கூட நான் கண்டுபிடித்திருக்கிறேன். இன்னும் நான் அங்கு வீட்டுவந்தவர்கள் அங்கு கிடைக்கும் எத்தனையோ பொருள்களைக் கண்டுபிடித்திருப்பார்கள். கப்பல்கள் மட்டும் என் தேவைக்குச் சரியானபடி பயன்பட்டிருந்தால் இன்னும் எத்தனையோ செயல்கள் செய்திருப்பேன். தன்வழியில் நடப்போருக்கு வெற்றியளிக்கும் என்றுமுள்ள இறைவன் என் பங்கில் தன் கருணையை நிறைய வழங்கியிருக்கிறான். இந்தத் தீவுகளைப் பற்றி. இதற்கு முன் பேசியவர்களும் எழுதியவர்களும், இவற்றைப் பாராமலே பேசியும் எழுதியுமிருப்பதால், அவை யாவும் கட்டுக் கதைகள் போல் தோன்றுகின்றன. அவையெல்லாம் வெறும் அனுமானங்களே. மேன்மைதங்கிய அரசருக்கும் அரசியார்க்கும், பெரும் வெற்றியைத் தேடித்தந்த கருணைமிக்க இறைவனுக்கு, நன்றி செலுத்தி எல்லோரும் தொழுது விழாக் கொண்டாடவேண்டும். இவ்வளவுபெரும் தொகையினரான மக்களை கிறிஸ்தவ சமயத்தில் சேர்க்கும் வாய்ப்பையளித்தமைக்கு ஸ்பெயின் மட்டுமல்லாமல் கிறிஸ்தவ நாடுகள் அனைத்துமே மகிழ்ச்சியடைய வேண்டும்.சுருக்கமாக இருந்தாலும் மேற்குறித்தவைதான் உண்மையில் செய்யப்பட்ட செயல்களாகும்.கானரித் தீவுகளைக் கடந்தபின் 1493 - ம் ஆண்டு பிப்பரவரி மாதம் 15 ம் நாள் கப்பலில் இருந்து எழுதியது. தங்கள் பணிவுள்ள. பெருங்கடல் தளபதி. இக்கடிதத்துடன் இணைந்துவந்த குறிப்புச் செய்தி இது: இதை எழுதியபின், ஸ்பானியக் கடலில் வந்து கொண்டிருக்கும்போது தெற்கிலும் தென்மேற்கிலும் எழுந்த ஒரு பெருங் காற்று கப்பலைத் தாக்கியது. ஆகவே, கப்பலை நான் காற்றின் போக்கில் விடவேண்டியிருந்தது. ஆனால் இன்று லிஸ்பன் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தேன். இது உலகத்திலேயே மிக அதிசயம்தான். இங்கிருந்து நான் மேன்மைதங்கிய அரசர்க்கும் அரசியார்க்கும் கடிதம் எழுத முடிவுசெய்தேன். இந்தியத்தீவுகளில் எப்போதும் மே மாதத்துப் பருவநிலை இருப்பதைக் கண்டேன். முப்பத்து மூன்று நாட்களில் நான் அங்கு போய்ச் சேர்ந்துவிட்டேன். 28 நாட்களில் நான் திரும்பியிருப்பேன். ஆனால், புயல் எழுந்து 23 நாட்கள் என்னைக் கடலில் அலைக்கழிய வைத்து விட்டது. இங்குள்ள கப்பல்காரர்கள், இவ்வளவு மோசமான குளிர்காலத்தைக் கண்டதில்லையென்றும், பல கப்பல்களை இழக்கும்படி நேரிட்டதென்றும் கூறுகிறார்கள். மார்ச்மாதம் 4ம் நாள் எழுதியது. கொலம்பஸ் எழுதிய இந்தக்கடிதத்தில் அவன் தன் அனுபவங்களைச் சுருக்கி எழுதியிருந்தான் என்றாலும், சில இடங்களில் மிகைப்படுத்தி எழுதியிருந்தான். சில இடங்களில் அவன் தான் காணாதவைகளை, அனுமானத்தின் பேரில் எழுதியிருந்தான். ஒரு தலைநகரத்தைக் கூடக் காணாவிட்டாலும், அவன் அந்தத் தீவுக் கூட்டங்கள் ஆசியப்பகுதியைச் சேர்ந்தவை என்றே நம்பிக்கொண்டிருந்தான். -------- 7. மனங் கசந்தது கொலம்பஸ், அரண்மனை விருந்தாளியாய், பார்சலோனா நகரில் தங்கியிருந்தபொழுது அவனுக்கு மிக மகிழ்ச்சியளித்த நிகழ்ச்சி தன்னுடன் வந்த ஆறு இந்தியர்களையும் கிறிஸ்தவர்களாக மாற்றி ஞான நீராட்டியதுதான். கிறிஸ்தவர்களாக மாறிய அவர்களுக்கு ஞானத்தாய் தந்தையராக இருக்க அரசர் பெர்டினாண்டும், அரசி இசபெல்லாவும், இளவரசர் டோன் ஜுவானும் அருள் கூர்ந்து இசைந்தார்கள். அந்த ஆறு இந்தியர்களுக்கும் கிறிஸ்தவப் பெயர்கள் சூட்டப்பட்டன. அவர்களில் ஒருவன் தலைவன் குவாக்க நாகரியின் உறவினன். அவன் அரண்மனையிலே வேலைபார்த்துக் கொண்டிருந்து இரண்டாண்டுகளுக்குப் பின் இறந்துவிட்டான். மற்ற ஐந்து பேரும் மீண்டும் கொலம்பஸ் தான் கண்டுபிடித்த இடங்களுக்குப் புறப்பட்டபொழுது கூடச் சென்றார்கள். கொலம்பஸ் தன் பயணத்தைப்பற்றி எழுதிய அறிக்கை, அவன் பார்சலோனா சென்ற சிலநாட்களில் அச்சிடப் பெற்றது. அச்சிட்ட பிரதிகள் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் பரப்பப்பட்டன. ஒரு பிரதி ரோம் நகருக்கு ஏப்ரல் மாதம் 18- ம் நாள் போய்ச்சேர்ந்தது. செய்தி பரவவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு மட்டும் அது அச்சிடப்படவில்லை. அக்காலத்தில் ஐரோப்பிய நாட்டரசர்கள் புதிய நிலங்களைக் கண்டுபிடித்துத் தங்கள் ஆட்சியில் இணைத்துக் கொள்வதில் மும்முரமாயிருந்தார்கள். தாங்கள் கண்டுபிடித்த நாடுகள் தங்கள் உடைமை என்று நிலைநாட்ட இப்படிப்பட்ட சான்றுகள் இன்றியமையாதவையாய் இருந்தன. இந்தியத் தீவுகளில் ஸ்பெயினுக்குள்ள ஆதிக்கத்தை நிலைநாட்டவே இவ்வறிக்கை அச்சிட்டுப் பரப்பப்பட்டது. கொலம்பஸ் அறிக்கை இலத்தீன் மொழியிலும் பெயர்த்தெழுதப் பெற்று அச்சிட்டுப் பரப்பப்பட்டது. கொலம்பஸ் இரண்டாவது முறையாகத் தன் பயணத்தைத் துவக்க இருந்தபொழுது அவன் புகழ் எங்கும் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான இளைஞர்களும் முதியவர்களும் அவனுடன் புறப்படத் தயாராயிருந்தனர். தங்கங் கிடைக்கும் தீவுகளுக்குச் சென்று தங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ளப் போட்டி போட்டுக் கொண்டு பலர் முன்வந்தனர். முதலில் ஆள் கிடைக்காமல் சிறையில் இருந்த கைதிகளைக் கூட விடுவித்துத் தன்னுடன் அழைத்துச் சென்ற கொலம்பஸ் இப்போது யாரைத் தன்னுடன் அழைத்துச்செல்வது என்று தேர்ந்தெடுக்கவேண்டிய நிலையில் இருந்தான். 1498 ம் ஆண்டு மே மாத இறுதியில் பேரரசரும் பேரரசியும் கொலம்பசுக்கு, குடியேற்ற நாட்டில் என்னென்ன செய்ய வேண்டும் என்று குறிப்புக்கள் வகுத்துக் கொடுத்தார்கள். இஸ்பானியோலாவை, வாணிகக் குடியேற்ற நாடாக்கும் அவனுடைய, திட்டத்துக்கு அவர்கள் அனுமதி யளித்தார்கள். முக்கிய குறிக்கோளாக, அந்தத் தீவுகளின் உள்ள மக்களை கிறிஸ்தவர்களாக்கவேண்டுமென்று கூறி அதற்காக ஆறு மதகுருமார்களை அவனுடன் அனுப்பிவைத்தார்கள். இந்தியர்களை நன்றாகவும் அன்பாகவும் நடத்த வேண்டும் என்றும் இதில், பெருங்கடல் தளபதி கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். சீன நாட்டின் பொன்மயமான கத்தே மாநிலத்திற்குக் கியூபாவின் வழியாகச் செல்ல முடியுமா என்பதை ஆராயும்படி அவர்கள் கொலம்பசைக் கேட்டுக்கொண்டார்கள். கொலம்பசின் இரண்டாவது பயணம் காடிச் துறை மூகத்திலிருந்து புறப்படுவதா-யிருந்தது. கொலம்பஸ் காடிச் துறைமுகத்திற்கு ஜூலை மாதத் துவக்கத்தில் வந்து சேர்ந்தான். அவன் இந்தப் பயணத்திற்கு மிகப் பெரிய ஏற்பாடுகளைச் செய்தான். பதினேழு கப்பல்களை ஆயத்தப்படுத்தினான். ஆறுமாதத்திற்கு வேண்டிய உணவுப் பொருள்களைச் சேமித்தான். மாலுமிகளும், படைவீரர்களும், குடியேறி வாழ முன்வந்த மக்களுமாக ஆயிரத்து இருநூறுபேருக்கு அவன் பயிற்சியளித்தான். குடியேற்ற நாட்டில் தேவைப்படக் கூடிய ஆடுமாடுகளையும், விவசாயக் கருவிகளையும், கொத்து வேலைக்கு வேண்டிய சாமான்களையும், பிற தொழில்களுக்கு வேண்டிய கருவிகளையும், ஆயுதங்களையும், வெடி மருந்துகளையும், விதைகளையும் செடிகளையும் ஒன்று பாக்கி விடாமல் சேகரித்தான். அரசரும் அரசியும், நடப்பு விலையில் எல்லாப் பொருள்களும் கப்பலுக்கு வாங்கிக் கொடுக்கும்படி அதிகாரிகளுக்கு ஆணையிட்டிருந்தார்கள்.   கோதுமை வாங்கிக் கட்டப்பட்டது. மாட்டிறைச்சியும் பன்றிக்கறியும் நிறைய வாங்கி, கெட்டுப்போகாமல் இருப்ப ற்காக உப்பில் ஊறவைக்கப்பட்டன. பீப்பாய்களில் திராட்சை மது வாங்கி நிரப்பப்பட்டது. பதினேழு கப்பல்களில் மிகப் பெரிய கப்பலுக்கு முதற்பயணத்தில் உடைந்து போன சாண்டாமேரியாவின் பெயரே வைக்கப்பட்டது. ஆனால் மாலுமிகள் அதை மரியாலாண்டி என்று அழைத்தார்கள். இவற்றில் பழைய கைனா கப்பலும் இருந்தது. இந்தக் கப்பல்களில் சென்ற ஆயிரம்பேருக்கு அரசினரின் சம்பளம் கிடைத்தது. இருநூறு பேர் தொண்டர்களாகப் புறப்பட்டனர். பெண்கள் யாரும் ஏற்றிச் செல்லப்படவில்லை. 1493 - ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25உ எல்லாக் கப்பல்களும் காடிச் துறைமுகத்திலிருந்து புறப்பட்டன. பதினேழு கப்பல்களிலும் வண்ணக் கொடிகள் கட்டியிருந்தது. பார்க்க மிகப் பிருமாண்டமான அழகுக் கண்காட்சியாக இருந்தது. ஒவ்வொரு கப்பலின் முன் கம்பத்திலும் ஸ்பெயின் அரசுக் கொடி கம்பீரமாகப் பறந்துகொண்டிருந்தது. பீரங்கி வேட்டுடன் தாரை தப்பட்டைகள் முழங்க வீணையின் இன்னிசையோடு கப்பல்கள் புறப்பட்ட காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. கானரித் தீவுகளையடைந்த கப்பல்கள், கடைசியாகக் கோமாராத் தீவுகளிலிருந்து புறப்பட்டன. அங்கிருந்து புறப்பட்டுச் சரியாக 22வது நாளில் டொமினிக்காத் தீவையடைந்தன. அந்தப் பயணத்தில் ஒரு நாள் இடிவிழுந்து சில பாய்களை முறிந்ததைத் தவிர வேறு எவ்விதமான இடையூறுகளும் ஏற்படவில்லை. பயணம் மிக இனிமையாக இருந்தது. டொமினிக்காவைச் சேர்ந்த கப்பல்கள் அங்கு கரை பிடிக்கவில்லை. சரியான நுழைவாயில் இல்லாத்தால் அங்கிருந்து புறப்பட்டு மற்றொரு பெரிய தீவையடைந்தன. அந்தத் தீவிற்கு சாண்டாமேரியா டி குவாடலூப் என்று கொலம்பஸ் பெயரிட்டான். குவாடலூப் கரும்பு விளையும் நிலம்; வளம் பொருந்திய தீவு. கடற்கரையோரமாக குவாடலூப் மலையிலிருந்து விழுந்த ஒரு. நீர்வீழ்ச்சி வெள்ளிக் கம்பிபோல் மெல்லியதாக விழுந்து கொண்டிருக்கும் அழகை நேரில் பார்த்துத்தான் அனுபவிக்க வேண்டும். மலையைத் தொட்டுக்கொண்டு நிற்கும் மேகங்களிலிருந்து நூலிழை ஒன்று. நழுவி விழுவது போல அந்தச் சிறு நீர்வீழ்ச்சி வீழ்ந்து கொண்டிருக்கும். தீவின் தென்பகுதியில் இருந்த ஒரு வளைகுடாவில் கப்பல்கள், ஐந்தாறு நாட்கள் நங்கூரம் பாய்ச்சிக்கொண்டு நின்றன. கொலம்பஸ் அங்கு ஒருநாள் மட்டுமே தங்க முடிவு செய்திருந்தான். ஆனால் கரையில் இறங்கி உள்நாட்டைச் சுற்றிப்பார்க்கச் சென்ற சிலர் காட்டுக்குள் வழிதெரியாமல் மாட்டிக்கொண்டு விட்டபடியால், அவர்கள் திரும்பிவரும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. விட்டுவிட்டுப் போய், மறுபடி அந்தப் பக்கம் வரும்போது அவர்களை அழைத்துக் கொள்ளலாம் என்று புறப்படுவதற்கு கொலம்பஸ் மனம் இடந்தரவில்லை. ஏனெனில் அந்தத் தீவில் வாழும் கரீபியர்கள் மனித இறைச்சி தின்னும் பயங்கர மனிதர்கள் காணாமற் போனவர்களை விட்டுவிட்டுச் சென்றால், திரும்பி வரும்போது அவர்கள் எலும்புகளைக் கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. காணாமற் போனவர்களைத் தேடி ஐம்பது ஐம்பது பேர் அடங்கிய நான்கு குழுக்கள் நான்கு வேறு வழிகளில் புறப்பட்டன. கடைசியில், அவற்றில் ஒரு குழு அவர்களைக் கண்டுபிடித்துக் கரைக்கு அழைத்து வந்தது. ஸ்பானியர்கள் இவ்வாறு சுற்றித் திரிந்தபோது. கரீபியர்களைப் பற்றிய பல விவரங்களைத் தெரிந்து கொண்டார்கள். கரீபியர்களின் சில குடிசைகளுக்குள் அவர்கள் இல்லாத பொழுது. நுழைந்து பார்த்த போது, அங்கு மனித எலும்புகளையும், வெட்டிவைக்கப்பட்ட மனித இறைச்சியையும், பாதி உண்ணப்பட்ட கறித்துண்டுகளையும் கண்டரர்கள். சில குடிசைகளில், இறைச்சிக்கா வளர்க்க கப்பட்டு அடைபட்டுக்கிடந்த இளைஞர்களையும், இளம் பெண்களையும் கண்டார்கள். அப்படி அடைபட்டுக்கிடந்த சில பெண்களையும் பையன்களையும் ஸ்பானியர்கள் விடுவித்துத் தங்கள் கப்பல்களுக்கு அழைத்து வந்தார்கள். அவர்கள், பின்னால், மொழி பெயர்ப்பாளர்களாகவும் வேறு பல வேலைகளுக்கும் பயன்படுத்தப்பெற்றார்கள்.   கன்னிமேரியிடம் பக்தி கொண்ட கொலம்பஸ், அப்போதுதான் கண்டு பிடித்த தீவுகளுக்கெல்லாம் அவளுடைய வெவ்வேறு திருப்பெயர்களைச் சூட்டிக் கொண்டே சென்றான். சாண்டாகுரூஸ் என்ற தீவையடைந்த பொழுது, முதன் முதலாக ஸ்பானியர்கள் கரீபியர்களுடன் சண்டையிட நேர்ந்தது. கப்பலிலிருந்து இறக்கிய ஒரு படகில் இருபத்தைந்து பேர் கரையை நோக்கிச் சென்றார்கள். கரையில் நின்ற கரீபியர்கள் நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும் தான். முதலில் பெரிய பெரிய கப்பல்களைக் கண்டவுடன் அவர்கள் பயந்து ஓடினார்கள். ஆனால், பிறகு தெளிந்து திரும்பிவந்தார்கள். தங்கள் ஒடத்தில் ஏறித் திரும்பிக் கொண்டிருந்த படகை விரட்டிக் கொண்டு வந்தார்கள். வரும்போதே, வில்லில் அம்புகளை நாணேற்றி ஸ்பானியர்களை நோக்கி எய்தார்கள். இரண்டு ஸ்பானியர்கள் காயமுற்றார்கள். ஒருவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயமடைந்தான். நெருங்கிவந்தவுடன், கப்பல் படகு திருப்பித் தாக்கிய வேகத்தில், ஓடம் கவிழ்ந்தது. கடலில் வீழ்ந்த கரீபியர்கள் நீந்திச் சென்று ஒரு பாறையை' அடைந்தார்கள். ஸ்பானியர்கள் விரட்டிக் கொண்டு சென்று அவர்களைப் பிடித்துக் கப்பலுக்குக் கொண்டு வந்தார்கள். அந்தக் கரீபியர்களில் பெரு முரடனான ஒருவனைக் கப்பல் மேல் தட்டில் நிற்கவைத்துச் சுட்டார்கள். குண்டு துளைத்து அவன் குடல் வெளிவந்துவிட்டது. அவனைக் கடலில் தூக்கி எறிந்தார்கள். அவன் தன்குடலை ஒரு கையால் அழுத்திப் பிடித்துக் கொண்டே கரைநோக்கி நீந்தினான். மீண்டும் அவனைப் பிடித்துக் கயிற்றினால் கற்றிக் கட்டிக் கடலுக்குள் எறிந்தார்கள். அவனோ, தன் கட்டுக்களை அவிழ்த்துக் கொண்டு மீண்டும் குடலை அழுத்திப் பிடித்தபடி கரைநோக்கி நீந்தத் தொடங்கினான். அதன் பின் பல முறை அம்பெய்துதான் அவனைக் கொன்றொழிக்க முடிந்தது. இந்தக் காட்சியைக்கண்ட, கரையில் இருந்த ஒன்றிரண்டு பேர் மூலம் செய்தியறிந்த கரீபியர்கள் கூட்டமாகத் திரண்டு பழிவாங்க ஓடிவந்தார்கள். ஆனால் அவர்கள், கப்பல்களை நெருங்கமுடியாததாலும் கப்பல்கள் நின்ற இடம்வரை எட்டிப் பாயக் கூடிய ஆயுதங்கள் இல்லாததாலும் ஒரு கெடுதலும் செய்யமுடியவில்லை. கரீபியர்கள் மேலும் திரண்டு உண்மையில் ஒரு போர் மூளும் வரை கொலம்பஸ் காத்திருக்க விரும்பவில்லை. வடதிசை அடிவானத்தை யொட்டிப் பலப்பல தீவுகள் தென்படுவதைக் கண்டு அத்திசையில் தன் கப்பல் கூட்டத்தைச் செலுத்திக் கொண்டு சென்றான். கப்பல்கள் நெருங்கிச் செல்லச் செல்ல மேலும் பல தீவுகள் கண்ணுக்குத் தோன்றின. அந்தத் தீவுகளுக்கெல்லாம் பதினோராயிரம் கன்னிகள் என்று பெயரிட்டான் கொலம்பஸ். பலப்பல புதிய தீவுகளைக் கண்டுபிடித்து. அவற்றிற்கெல்லாம் புதுப்புதுப் பெயர்கள் வைத்துக் கொண்டு கடைசியில் தான் முதற்பிரயாணத்தில் கண்டுபிடித்த இஸ்பானியோலாவை யடைந்தான் கொலம்பஸ். கப்பலில் கூடவந்த சிவப்பு இந்தியன் ஒருவன் அதை அடையாளங் கண்டு கொண்டு, தன் சொந்த ஊர் இருக்கும் சாமனா வளைகுடாவிற்கு வழிகாட்டினான். அங்கு கரைபிடித்தவுடன், அவனைப் பல வியாபாரப் பொருள்களுடன் இறக்கிவிட்டுத் தன் ஊருக்கு செல்லவிடுத்தான்.இந்தச் செயலினால் அவன் எதிர்பார்த்தது நடந்தது. பல இந்தியர்கள் தங்கள் பயத்தை யெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டுக் கப்பல்களுக்கு வந்தனர். நல்ல வியாபாரம் நடந்தது. சாந்தா குரூசில் கரீபியர்களால் காயப்படுத்தப்பட்ட மாலுமி, பின்னால் இறந்துபோனான். அவனுடைய உடல் இங்கே ஒரு கிறிஸ்தவனுக்குரிய கிரியைகளுடன் அடக்கம் செய்யப்பட்டது. தனக்கு ஏற்கனவே பழக்கமான பகுதிகளுக்கு வந்தவுடன், கொலம்பஸ், நாவிடாடிலுள்ள தன் ஆட்களுடன் தொடர்புகொள்ள ஆவல் கொண்டான். இருந்தாலும் புதிதாகக் குடியேற்றம் செய்வதற்குத் தகுந்த இடத்தைக் கண்டு பிடிக்கவேண்டிய வேலையிருந்ததால் உடனடியாக அவன் நாவிடாடுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால், நாவிடாடில் தான் விட்டுவந்த ஸ்பானியர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை ஒருவாறாகச் சொல்வது போல் ஒரு குறிப்புக் கிடைத்தது. மாண்டிகிரிஸ்டி என்ற இடத்தில் கரையோரத்தில் அடையாளம் தெரியாத இரண்டு பிணங்களைக் கரைக்குச் சென்றுவந்தவர்கள் கண்டுபிடித்தார்கள். சிவப்பு இந்தியர்கள் தாடி வளர்ப்பதே கிடையாது. அந்தப் பிணங்களுக்கு தாடியிருந்தது. ஆகவே அவை ஸ்பானியப் பிணங்களாக இருக்கக்கூடும் என்று அனுமானிக்க இடமிருந்தது.இந்த அனுமானம் சரிதானென்று சில நாட்களிலேயே தெரிந்துவிட்டது.   நவம்பர் மாதம் 27-ம் நாள் காரகோல் வளைகுடாவைச் சேர்ந்த ஹைட்டியன் முனைத் துறைமுகத்தையடைந்தது. கப்பல் கூட்டம் இரவில் கரைக்குச் செல்லவேண்டாம் என்று எல்லோருக்கும் ஆணையிட்டான் கொலம்பஸ். இரவில் வெகுநேரங் கழித்து சிவப்பு இந்தியர்கள் நிறைந்த ஓர் ஓடம் கப்பல்களை நோக்கி வந்தது. அந்த இந்தியர்கள் கொலம்பசை அடையாளம் கண்டு கொண்டார்கள். உடனே தலைவன் குவாக்க-நாகரியின் சார்பாக பல பரிசுகளைக் கொடுத்தார்கள். நாவிடாடில் உள்ள ஸ்பானியர்களைப் பற்றி விசாரித்தபோது சில பேர் இறந்து விட்டதாகவும், மீதி எல்லோரும் நலமாக இருப்பதாகவும் உறுதியாகக் கூறினார்கள். ஆனால் அவர்கள் கூற்றில் ஏதோ ஒருவிதமான ஐயம் ஏற்படும்படியாக இருந்தது. கொலம்பஸ் தன்னுடன் கூட்டிச் சென்று. ஸ்பெயினில் கிறிஸ்தவனாக்கிய இந்தியன் டீகோகோன் அவர்களிடமிருந்து, உண்மையை வரவழைத்தான். என்ன பயங்கரமான உண்மை அது. அதைக் கேட்டுக் கொலம்பஸ் திடுக்கிட்டுப் போனான். அவன் உள்ளம் கொந்தளிப்படைந்தது. அவர்கள் சொன்ன கதை இதுதான். நாவிடாடில் இருந்த ஸ்பானியர்கள் நேர்மையற்ற முறையில், நடந்து கொண்டார்கள். தலைவன் குவாக்கநாகரி கொடுக்க முடிந்த அளவைக் காட்டிலும் அதிகமான தங்கம் பெற ஆவல் கொண்டு அவர்களில் இரண்டுபேர் ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு தீவைச் சுற்றிவந்தார்கள். மகுவானா இனத்தின் தலைவனான சோனாபோ விடம் அவர்கள் முறையற்ற முறையில் சென்று சண்டையிட்டுக் கொண்டார்கள். ஆத்திரக்காரனான அவன் அவர்களையெல்லாம் பிடித்துக் கொன்றுவிட்டான். அது மட்டுமல்லாமல் நாவிடாடுக்குப் படையெடுத்து வந்து அங்கிருந்தவர்கள் அனைவரையும் கொன்று விட்டான். தப்பியோடியவர்களையும் வேட்டையாடிக் கொன்று விட்டான். இந்தக் கதையைக் கேள்விப்பட்ட கப்பலில் வந்திருந்த மதகுருக்களின் தலைவர், குவாக்கநாகரியைப் பிடித்துக் கொன்றால் மற்றவர்களுக்கெல்லாம் புத்திவரும் என்று கூறினார். ஆனால் கொலம்பஸ் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. உண்மையில் தலைவன் குவாக்கநாகரி கடைசிவரை ஸ்பானியர்களின் நண்பனாக இருந்தான். ஆனால் இந்நிகழ்ச்சி கொலம்பசுக்கு ஸ்பானியர்களிடையே இருந்த செல்வாக்கைக் குறைத்து விட்டது என்றே சொல்ல வேண்டும். கொலம்பசுக்கும் இந்தத் துயரக் கதையைக் கேட்டது முதல், உள்ளத்தில் கவலை பீடித்துக்கொண்டது. -----------                             8. பழி மிகுந்தது  வாணிகம் செய்வதற்குத் தோதாக ஒரு குடியேற்றப் பகுதியை உண்டாக்க வேண்டிய செயலில் கொலம்பஸ் இறங்கியபோது அது பெருஞ்சிக்கலாயிருந்தது. டாக்டர் சங்கா என்பவர் காரகோல் வளைகுடா பகுதியிலேயே குடியேற்ற நாட்டை உருவாக்கலாம் என்று கருதினார். அதற்குக் காரணம் அங்குள்ள குடிமக்கள், வெள்ளையரோடு நட்பாக இருந்தார்கள் என்பது தான். ஆனால், தங்கம் கிடைக்கக்கூடிய சிபாவோ அங்கிருந்து மிகத் தொலைவில் இருந்ததால், அந்தக் கருத்தைக் கொலம்பஸ் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே, நல்ல ஓர் இடத்தைத் தேடிக் கிழக்கு நோக்கிக் கப்பல்களைச் செலுத்தினான் கொலம்பஸ். ஆனால், எதிர்க்காற்றையும், கடல் நீரோட்டத்தின் வேகத்தையும் எதிர்த்துக் கிழக்கு நோக்கிச் செல்வது எளிதாக இல்லை. கடலில் முப்பத்திரண்டு மைல் கடந்து செல்ல இருபத்தைந்து நாட்கள் பிடித்தது என்றால், அந்தப் பயணம் எவ்வளவு இடர்ப்பாடும். முயற்சியும் உடையது என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். மாலுமிகளும், கப்பலில் இருந்த மக்களும் அரத்துச் சலித்துக் களைத்துப் போனார்கள். 1494-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ஆம் நாள் காற்றுத் தொந்தரவில்லாத ஒரு தீபகற்பத்தின் கரையில் கப்பல்கள் ஒதுங்கின. கொலம்பல மனஞ்சலித்துப் போயிருந்த காரணத்தினாலோ, அல்லது உடனடியாக ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும் என்ற உந்துதலினாலோ, அந்த இடத்தையே குடியேற்றத்திற்குரிய பகுதியாகத் தேர்ந்தெடுத்தான். அந்த இடத்திற்கு அரசி இசபெல்லாவின் பெயரையே இட்டான். இசபெல்லா என்ற அந்த இடம் குடியேறி வாழ்வதற்குச் சற்றும் ஏற்ற இடமல்ல. முதலாவதாக அங்கு நல்ல குடி தண்ணீர் கிடைக்கவில்லை. அடுத்தபடியாக அங்கு மலேரியாக் காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் அதிகமாக இருந்தன. கப்பல்கள் ஒதுங்குவதற்கு நல்ல துறைமுகம் கூட இல்லை. எல்லோரும் நகரம் உருவாக்கும் வேலையில் ஈடுபட்டார்கள். மரங்களை வெட்டி வீழ்த்தினார்கள். பவழப்பாறைகளை உடைத்துப் பெயர்த்தார்கள். பக்கத்தில் ஓடிய ஆற்றிலிருந்து நல்ல தண்ணீர் வருவதற்காகக் கால்வாய் வெட்டினார்கள். சமயத்திற்குப் பயன்படக் கூடியதாக சுமார் இருநூறு குடிசைகளைக் கட்டி முடித்தார்கள். ஆனால், கப்பலில் கொண்டு வந்த உணவுப் பொருள்களில் பாதிக்குமேல் வழியிலேயே தீர்ந்துவிட்டன. மீதியிருந்தவை போதுமானதாக இல்லை. மதுவும் பிற குடிவகைகளும் தீர்ந்து விட்டன. அங்கு கிணற்று நீரைத்தான் குடிக்க வேண்டியிருந்தது. தண்ணீர் ஒத்துக் கொள்ளாமல் நோய்வாய்ப் பட்டார்கள் சிலர். தின்று பழக்கமில்லாத மீனைத் தின்று வேதனைக்காளானார்கள் சிலர். மலேரியாக் காய்ச்சலுக்கு இரையாகித் துயரப்பட்டார்கள் சிலர். அங்குக் கிடைத்த உணவுப் பொருள்களைச் சமைத்தவுடன் டாக்டர் சங்கா முதலில் ஒரு நாய்க்கும் கொடுத்துப் பரிசோதிப்பார். அதன் பிறகுதான் மனிதர்களைச் சாப்பிட அனுமதிப்பார். அப்படியிருந்தும், உணவு ஒத்துக் கொள்ளாமல் வயிற்றுக் கோளாற்றுக்கு ஆளானவர்கள் பலர். பெரும் பகுதி ஆட்கள் நோயுற்றுப் படுத்த படுக்கையாகி விட்டபடியால், சொந்தச் செலவில் வந்திருந்த சில செல்வந்தர்களையும் உடலுழைப்புச் செய்யும்படி கட்டாயப் படுத்தினான் கொலம்பஸ். அவர்கள் தங்கம் தேடி வந்திருந்தார்களே தவிர அங்கம் நோக உழைக்க வரவில்லை. குடியேற்றத்துக்குத் தடையாக அந்த நாட்டுக் குடிமக்கள் இருந்து அவர்களை எதிர்த்துப் போராடச்சொல்லியிருந்தால், உற்சாகத்தோடு துப்பாக்கியைத் தோளில் தூக்கியிருப்பார்கள். ஆனால், மரம் வெட்டவும், மண் வெட்டவும், கல்லுடைக்கவும், சாந்து பூசவும் சொன்னால் அவர்களுக்குக் கோபம் வராதா என்ன? ஆனால், அவர்கள் கோபம் பலிக்கவில்லை. உழைக்காதவர்களுக்கு உணவுப் பங்கு கிடைக்காதென்று வீதிவகுத்து விட்டான் கொலம்பஸ் தரம் தெரியாதவன் என்று அவனைத் திட்டிக்கொண்டே அவர்கள் வேலை செய்தார்கள். நகர் உருவாக்கும் வேலை நடக்கும்பொழுதே ஓஜிடா என்பவன் தலைமையில் படைவீரர் கூட்டம் ஒன்று தங்கம் கிடைக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கக் கிளம்பியது. ஒஜிடா ஸ்பானிய வீரர்களோடு, இந்திய வழிகாட்டிகள் சிலரையும் கூட்டிச் சென்றான். அக்கூட்டத்தினர் இஸ்பானியோலாப் பெரும் பள்ளத்தாக்கின் மையப் பகுதியில் ஊடுருவிச் சென்று மத்திய கோர்டிலசா மலையடிவாரத்தில் உள்ள சிபாலோவை யடைந்தார்கள். அங்கு தங்கம் கிடைக்கும் என்பதற்குரிய ஏராளமான சான்றுகளுடன். மூன்று பெரிய தங்கக் கட்டிகளையும் எடுத்துக் கொண்டு, ஆரவாரத்தோடு அவன் இரண்டே வாரத்தில் இசபெல்லாவுக்குத் திரும்பி வந்துவிட்டான். மக்களை இறக்கி விட்டுவிட்டுத் திரும்பவேண்டிய கப்பல்கள் பனிரெண்டு. அந்தப் பனிரெண்டு கப்பல்களிலும், ஓஜீடா கொண்டு வந்த மூன்று தங்கக் கட்டிகளை மட்டும் அனுப்பிவைத்தால் பேரரசர் தன்னை எப்படி மதிப்பார் என்று எண்ணிப் பார்க்கவே அருவருப்பாயிருந்தது. 'ப்படியும் கப்பல்களைத் திருப்பியனுப்பியாக வேண்டும் அவற்றைக் காவியாக அனுப்பலாமா? டோரிஸ் என்ற கப்பல் தலைவனின் தலைமையில் அப்பனிரெண்டு கப்பல்களும் திருப்பியனுப்பப் பெற்றன. அவற்றில் கொலம்பஸ் ஏற்றியனுப்பிய பொருள்கள் இவைதாம். கருவாப்பட்டை கடுமிளகு, சந்தனக் கட்டை, அறுபது கிளிகள், இருபத்தாறு அடிமைகள், தங்கக் கட்டிகள்! இவற்றில் கருவாப்பட்டை என்ற பெயரில் அனுப்பிய பொருளைக் கடித்துப் பார்த்தால் இஞ்சியின் சுவையுடையதாயிருந்தது. கடுமிளகு, மிளகைப் போலிருந்தாலும், அதற்குரிய வாசமற்றிருந்தது. சந்தனக்கட்டை என்ற பெயரில் சென்ற மரங்கள் சந்தன மரங்களின் குணங்களைக் கூடப் பெற்றிருக்கவில்லை. தங்கத்தின் மதிப்போ பதினாலாயிரம் சவரன்கள் தான்! இந்தச் சரக்குகளைப் பார்த்த அரசாங்க அதிகாரிகள், கப்பல் தலைவன் டேனிசைப் பார்த்துப் பரிகாசம் செய்தார்கள். "பொன் விளையும் பூமியான இந்தியாவிலிருந்து இந்த அற்பச் சரக்குகள் தானா அனுப்பி வைத்தார் உங்கள் பெருங் கடல் தளபதி" என்று கேட்டு அவர்கள் எள்ளி ககையாடினார்கள். பேரரசர்க்கும், பேரரசியார்க்கும் கொலம்பஸ் சாமர்த்தியமாகச் செய்தி சொல்லியனுப்பியிருந்தான். தங்கம் நிறையக் கிடைக்கிறது. ஆனால், அதை ஆற்று நீரிலிருந்து அரித்தெடுக்க வேண்டும். அதற்கு நாளாகும். மேலும் ஆட்கள் பலர் நோயில் வீழ்ந்துவிட்டார்கள். கிடைக்கும் தங்கத்தை உள் நாட்டிலிருந்து துறைமுகத்திற்கு எற்றிவரக்கூடிய சுமை விலங்குகள் கைவசம் இல்லை. எல்லாம் ஒழுங்கு பண்ணிக் கப்பலில் ஏற்றி அனுப்புவதென்றால் பல நாட்கள் செல்லும். ஆகவே அதிகமாக எதுவும் அனுப்பாததற்குப் பொறுத்துக் கொள்ள வேண்டும். இந்தச் செய்தியை டோரிஸ் மூலம் கேட்ட அரசரும் அரசியாரும், உயர்ந்த அரசப் பண்போடு, “எல்லாம் சரி' என்று சொல்லி விட்டார்கள். தங்கம் கண்டுபிடித்துக் கிடைக்கச் செய்த ஆண்டவன் அருளைக் குறித்து நன்றி கூறினார்கள். குடியேற்றத்திற்காக வந்துள்ளவர்களுக்கு, நாட்டுணவு ஒத்துக் கொள்ளாததால் ரொட்டி, ஊறிய மாட்டுக் கறி, மது முதலியனவும் பிற உணவுப் பொருள்களும் அனுப்பும்படி கொலம்பஸ் கேட்டிருந்தான். ஆடு, மாடுகளும், கழுதை, குதிரைகளும், ஆடைகளும், காலணிகளும் அனுப்பும்படி பேரரசியாருக்குச் செய்தி யனுப்பியிருந்தான். நூறு துப்பாக்கிகளும், நூறு வில்லும், இருநூறு மார்புக் கவசங்களும், ஏராளமான துப்பாக்கிக் குண்டுகளும் கேட்டிருந்தான். ஆடைகளும் காலணிகளும் தவிர மற்ற பொருள்கள் அனைத்தையும் அவன் கேட்டிருந்தபடியே அனுப்பும்படி அரசரும் அரசியும் கட்டளை பிறப்பித்தார்கள். டோரிஸ் மூலம் தான் அனுப்பிய செய்தியில் அடிமை வாணிபத்தை மேற்கொள்ளலாம் என்று யோசனை கூறியிருந்தான் கொலம்பஸ. ஆனால் அரசி இஸ்பெல்லா இந்த யோசனையை ஏற்றுக் கொள்ளவில்லை. அது இலாபங்தரும் தொழில் அல்ல என்பதனால் தான் அவள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. தொண்டர்களாகப் புறப்பட்டுச் சென்ற இரு நூறு செல்வந்தர்களையும் மற்றவர்களைப் போலவே அரசாங்கச் சம்பளகாரர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று கொலம்பஸ் கேட்டிருந்தான். அப்போதுதான் அவர்கள் அடங்கி நடப்பார்கள் என்று காரணமும் குறிப்பிட்டிருந்தான். அவ்வளவும் சரிதான் ஆனால், கொலம்பஸ் சிவப்பு இந்தியர்களைப் பற்றிக் கொண்டிருந்த எண்ணம்தான் தவறாயிருந்தது. அவர்கள் யாரும் வணிகர்களல்ல நாகரிக மனப்பான்மையில்லாத அவர்களுடைய தேவைகளும் மிகக் குறைவேயாகும். வெள்ளையர்கள் கொண்டு சென்ற புதுப் பொருள்களை ஒரு முறை வாங்கிப் பயன்படுத்தியபின் அவர்கள் ஆவல் அடங்கிவிட்டது. மேற்கொண்டு வாங்க வேண்டிய தேவையோ ஆவவோ அவர்களுக்கு ஏற்படவில்லை. டோரிசை ஸ்பெயினுக்கு அனுப்பிய பின், கொலம்பஸ், நூற்றுக்கணக்கான படைவீரர்களுடன், தங்கம் கண்டு பிடிக்க இசபெல்லாவிலிருந்து புறப்பட்டான். அழகு நிறைந்த வீகா ரீல் சமவெளியைக் கடந்து ஓர் ஆற்றங் கரையை அடைந்தனர். வழியில் தென்பட்ட கிராமங்களில் இருந்த இந்தியர்கள், தங்கப் பொடி நிறைந்த சிறு பைகளை அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். ஓடங்களிலும், இந்தியர்களின் தோள்களிலும் ஏறிக் கொண்டு ஆற்றைக் கடந்து கோர்டிலெரா மலையின் வடபுறத்தையடைந்தார்கள். அங்கு ஒரு மண் கோட்டை எழுப்புமாறு ஐம்பது ஆட்களை விட்டுச் சென்றான் கொலம்பஸ் அந்தக் கோட்டைக்கு, இஸ்பானியோலாவில் தங்கம் எங்கே கிடைக்கப் போகிறது என்று சொன்ன சாண்டோ தாமஸ் என்பவனின் பெயரையே சூட்டினார்கள். கோட்டையில் தங்கியவர்கள் போக மற்றவர்கள் மலை மீது ஏறித் தங்கம் எங்குக் கிடைக்கும் என்று ஆராய்ந்தார்கள். இசபெல்லாவிலிருந்து புறப்பட்டு இந்த ஆராய்ச்சி நடத்தி முடியும்வரை இருபத்தொன்பது நாட்களாயின. இந்த இருபத்தொன்பது நாட்களும் அவர்கள் பட்ட துன்பங்கள் சிறிதல்ல. பருவநிலை உடம்புக்கு ஒத்துக் கொள்ளவில்லை. உணவும் நல்ல தண்ணீரும் சரியாகக் கிடைக்கவில்லை. இருந்தாலும் தங்கம் கிடைக்கப்போகிறதென்ற ஆர்வத்தில் அவர்கள் இந்தத் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டார்கள். இசபெல்லாவில் தங்கியிருந்தவர்களின் நிலைமையோ மேலும் மோசமாயிருந்தது. இருப்பில் இருந்த உணவுகளெல்லாம் தீர்ந்து போய்விட்டது. ஆத்திரமும் வெறுப்பும் அதிகரித்துக் குழப்பமும் ஏற்படத் தொடங்கியது. தொல்லை கொடுக்கக் கூடியவர்கள், விலங்கிட்டு வைக்கப்பட்டார்கள். முன் எச்சரிக்கையாகக் கொலம்பஸ் ஆயுதங்களில் பெரும் பகுதியைத் தலைமைக் கப்பலில் வைத்திருந்தான். அவன் சகோதரனுடைய பாதுகாப்பில் அவையிருந்தன. தொல்லை கொடுப்பவர்களை அகற்றுவதற்குக் கொலம்பஸ் ஒரு வழிவகுத்தான். தங்கம் கிடைக்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க ஒஜிடா தலைமையில் மற்றொரு படையை அனுப்பி வைத்தான். ஆபத்தான சூழ்நிலையில் இருந்த சாண்டோ தோமாஸ் கோட்டையைப் பாதுகாக்கும்படி அந்தப் படைக்கு உத்தரவிட்டான். அதன்பின் தங்க ஆராய்ச்சி நடத்தச் சொன்னான். இந்தியர்களுக்குத் தொல்லை கொடுக்கக் கூடாதென்று அவன் எவ்வளவோ எச்சரித்தனுப்பினான். ஆனால் ஓஜிடா அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டான். பழைய உடுப்புக்கள் சிலவற்றைத் திருடிக் கொண்டு ஓடினான் என்று சொல்லி ஓஜிடா முதலில் ஓர் இந்தியனுடைய காதையறுத்துவிட்டான். அடுத்தபடியாக அவர்களின் இனத் தலைவன் ஒருவனைக் குற்றம் சாட்டி விலங்கிட்டு இசபெல்லாவுக்கு நடத்திச் செல்லுமாறு செய்தான். கோட்டையை ஆபத்திலிருந்து காப்பாற்றிய பின், உடனிருந்த முந்நூறு வீரர்களுடன் வீகாரில் சமவெளியைச் சுற்றி வந்து, ஆங்காங்கேயுள்ள இந்தியர்களிட மிருந்த தங்கத்தையெல்லாம் கைப்பற்றினான். அவர்களுடைய உணவுப் பொருள்களை அபகரித்துக் கொண்டான். இந்திய இளைஞர்களையும் பெண்களையும் அடிமைகளாகப் பிடித்துக் கொண்டான். இந்த நிகழ்ச்சிகள், குடிமக்களை ஸ்பானியர்களிடம் வெறுப்புக் கொள்ளும்படி செய்தன. இவற்றைப் பற்றியெல்லாம் கேள்விப்படுவதற்கு முன்னால், கொலம்பஸ் தங்கம் கண்டுபிடிப்பதற்காகக் கியூபாவுக்கு போய்விட்டான். இசபெல்லாவிலிருந்து ஏப்ரல் மாதம் 24-ம் நாள் மூன்று கப்பல்களுடன் புறப்பட்டு 29-ம் நாள் கியூபாவில் இறங்கினான். வழக்கம் போல் ஒரு கொடியையும் ஒரு சிலுவையையும் நிறுத்தி கியூபாவை ஸ்பெயினுக்கு ஆதீனப்படுத்தினான். ஏப்ரல் 30-ல் போர்ட்டோகிராண்டி. துறைமுகத்தையடைந்தனர். கப்பல்களிலிலிருந்து இறங்கிய சிலர் கரைப் பகுதியைச் சுற்றிப் பார்த்து வரக் கிளம்பினார்கள்.   அப்போது அங்கே சில கியூபாக்கார இந்தியர்கள் கரையில் மீன் கறி சமைத்துக் கொண்டிருந்தார்கள். தங்கள் ஊர்த் தலைவன் மற்றொரு தலைவனுக்கு விருந்தளிப்பதற்காக அவர்கள் மீன் பிடித்துச் சமைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கரையில் இறங்கிய வெள்ளையர்களைக் கண்டவுடன் ஓட்டம் பிடித்தார்கள். வெள்ளையர்கள் அவர்களை விரட்டிப் பிடித்துச் சமையல் நடந்த இடத்திற்குக் கூட்டி வந்தார்கள். அவர்களுக்கு பருந்து மணிகளும், பிறபொருள்களும் பரிசாகக் கொடுத்தார்கள். ஆனால், அவர்கள் சமைத்த மீன்கறியைத் தின்பதற்கு வெள்ளையர்களுக்குப் பயமாக இருந்தது. அவர்கள் அதைத் தொடவேயில்லை என்பதைக் கண்டு அந்தச் சமையல் கூட்டத்தினர் மகிழ்ச்சியடைந்தார்கள். ஓரிருவர் ஸ்பானியர்களைச் சாப்பிடும்படி கேட்டுக் கொண்டார்கள். "சில நாட்கள் போகட்டும்; இந்த ஊர்ப் பழக்கமெல்லாம் உடம்புக்கு ஒத்து வந்தவுடன், முதலையையே வேண்டுமானாலும் பிடித்துச் சாப்பிடுகிறோம்" என்று ஸ்பானியர்கள் வேடிக்கையாகக் கூறினார்கள். ஆனால், அந்த நகைச்சுவையை கியூபாக்காரர்கள் முழுமையாக இரசிக்க முடியவில்லை என்றாலும் கூடச்சேர்ந்து. சிரித்தார்கள். கியூபாவில் தங்கம் கிடைப்பதற்குரிய அடையாளம் எதுவும் தென்படவில்லை. எனவே. முதல் பயணத்தில் சாண்டியாகோவில் இருந்த இந்தியர்கள் மூலம் கேள்விப்பட்டிருந்த ஜமைக்கா நோக்கிப் புறப்பட்டான். மே மாதம் 5-ம் நாள் ஜமைக்காவில் உள்ள செயின்ட் ஆன் வளைகுடாவில் நங்கூரம் பாய்ச்சினான், கப்பல்களைக் கண்டவுடன் அறுபதெழுபது இந்தியர்கள் இடத்தில் ஏறிக் கொண்டு, கப்பல்களைத் தாக்க விரைந்து வந்தார்கள். ஆனால், ஒரு பீரங்கிக் குண்டை வெடித்தவுடனேயே பேசாமல் கரைக்குத் திரும்பி விட்டார்கள். விறகும் தண்ணீரும் வேண்டியிருந்ததால், அடுத்த துறைமுகமான ரியோபோனோவில் கப்பல்களை நிறுத்தினான். அங்கும் இந்தியர்கள் எதிர்த்துத் தாக்கும் எண்ணத்துடன் வந்தார்கள். கப்பலிலிருந்து படகுகளில் புறப்பட்ட விற்படையினர், அந்த இந்தியர்களின் மீது அம்பெய்து சிலரைக் கொன்றுவிட்டார்கள். கரையை அடைந்தவுடன், இந்தியர்களின் மீது ஒரு பெரிய நாயை ஏவி விட்டான் அந்த நாய் இந்தியர்களை விரட்டி விரட்டிக் கடித்தது. இந்தியர் தொல்லையைத் தவிர்ப்பதற்கு இந்த நாய்களைப் பயன்படுத்தும் முறை இஸ்பானியோலாவிலும், அதற்கு முன் கானரித் தீவிலும் ஸ்பானியர்களால் பழக்கப்படுத்தப் பட்டிருந்தது. ரியோபோனோவில் இருந்த இந்தியர்களும் டாயினோ இனத்தார்களேயாவர். அவர்கள் ஸ்பானியர்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களைக் கொடுத்தார்கள். ஆனால் தங்கம் மட்டும் அவர்களால் கொடுக்க முடிய வில்லை. இருந்தாலல்லவா கொடுப்பதற்கு! எனவே, கொலம்பஸ், ஜமைக்காவில் மற்றொரு துறைமுகத்தில் கப்பல்களை நிறுத்தி தேவையான பொருள்களை ஏற்றிக்கொண்டு, மீண்டும் கியூபாவுக்குத் திரும்பி அதன் தென்கரைப் பகுதியை ஆராயலானான். சீன நாகரிகத்திற்குரிய சான்றுகள் ஏதாவது தென்படுமா என்ற விழிப்புணர்ச்சியுடன் அவர்கள் சென்று கொண்டிருக்கும் பொழுது சிறு தீவுகள் நிறைந்த கடல் அவர்கள் பார்வையில் பட்டது. இந்தத் தீவுக் கூட்டத்திற்கு இராணியின் தோட்டம் என்று கொலம்பஸ் பெயரிட்டான். இங்கு பெரிய கொக்குக்களைப் போன்ற ஆனால் சிவப்பு நிறமுடைய பறவைகளைக் கண்டனர். இங்குள்ள குடிமக்கள் பழக்கிய மீனைக் கொண்டு ஆமை பிடிக்கும் காட்சியையும் கொலம்பஸ் கண்டான். கொலம்பஸ் இதைக் கூறியபோது பலர் நம்பவில்லை. ஆனால் இன்றும் கையாளப்பட்டு வருகிறது. அவர்கள் செல்லும் வழியில் டிரினிடாடு மலைத்தொடர் இருந்தது. அந்தக் கடற்கரையில் கப்பல்கள் ஒதுங்கிய போது அங்கிருந்த மக்கள் வானிலிருந்து வந்த மனிதர்களைப் பார்க்கத் திரண்டு வந்தனர். ஆனால் அவர்களில் யாரும் சீனாக்காரர்களைப்போல் இல்லை. சீனப் படகுகளோ ஓடங்களோ சீனக் கோயில்களோ, பாலங்களோ ஒன்று கூடத் தட்டுப் படவில்லை. கான் பேரரசருடைய இந்தப் பகுதிகளில் சீன நாகரிகம் பரவவில்லையோ என்னவோ! டிரினிடாடில் இருந்த மொழி புரியாத மக்களை விசாரித்தறிந்ததில் மேற்கில் மாசோன் என்ற நாடு இருப்பதாகக் கூறினர். அதுதான் சீன நாட்டைச் சேர்ந்த, மாங்கியாக . இருக்க வேண்டுமென்று எண்ணிக்கொண்டான் கொலம்பஸ். கியூபாக் கரை தென்புறமாக வளையும் இடத்தை சையாம் வளைகுடா என்று நினைத்துக் கொண்ட கொலம்பஸ் தான் மாலாக்காவை அணுகி விட்டதாகவே கருதினான். அப்படியானால் ஏன் உலகத்தைச் சுற்றிக் கொண்டு எதிர்த் திசையில் சென்று ஸ்பெயினை அடையக்கூடாது என்றும் எண்ணினான். நல்ல வேளையாக இந்த எண்ணத்தை அவன் செயலில் நிறைவேற்றவில்லை. அதற்குக் காரணம் கப்பல்களில் போதிய உணவுப் பொருள்கள் இல்லாமையும், அவை பழுதுபார்க்கப் பட வேண்டியிருந்தமையுமேயாகும். ஆகவே அவன் இசபெல்லாவுக்கே திரும்பினான். ஜூன் 18-ஆம் நாள் திரும்பிய கப்பல்கள் செப்டம்பர் 28-ஆம் நாள் இசபெல்லாவை யடைந்தன. இசபெல்லாவை அடைந்தபோது கொலம்பஸ் நோயுற்றுப் படுத்த படுக்கையாகக் கிடந்தான். மாலுமிகள் அவனைத் தூக்கிக் கொண்டு வந்து கரையில் சேர்க்கும்படியாக அவன் நிலை மிக மோசமாக இருந்தது. அப்பொழுது ஆரம்பித்த மூட்டுவாத நோய், பிறகு சிறுகச் சிறுக வளர்ந்து அவனுடைய வாழ் .நாளின் கடைசிப் பத்து ஆண்டுகளையும் துயர மிக்கதாகச் செய்துவிட்டது.இசபெல்லாவில் அவன் வந்து சேர்ந்தவுடன் கேள்விப்பட்ட செய்தி, அவனுக்குப் பெருமகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது. ஆறு ஆண்டுகளாகப் பிரிந்திருந்த அவனுடைய சகோதரன் பார்த்தலோமியோ கொலம்பஸ் இசபெல்லாவுக்கு வந்திருந்தான் என்பதே அந்த நற்செய்தியாகும். கொலம்பஸ் தன் இரண்டாவது பயணத்தை மேற்கொள்ளும் போதே, பார்த்தலோமியோவும் கூட வர வேண்டும் என்று எண்ணினான். ஆனால், அவன் அனுட்பிய செய்தி போய்க் கிடைத்து அவன் புறப்பட்டு வந்து சேர் வதற்குள், ஸ்பெயினிலிருந்து கப்பல்கள் புறப்பட்டு விட்டன. பின்னால் வந்து சேர்ந்தவனைத் தான் அரசர் மூன்று. கப்பல்களுடன் இஸ்பானியோலாவுக்கு அனுப்பி வைத்தார். பார்த்தலோமியோ கொலம்பஸ் நல்ல நிர்வாகத் திறமையுடையவன். அவன் தம்பி டீகோவுக்குப் பதிலாக முதலிலேயே அவன் வந்திருந்தால், இசபெல்லாவில் எழுந்த குழப்பங்களை மிகச் சுலபமாக சமாளித்திருப்பான். என்ன இருந்த போதிலும் கொலம்பஸ் சகோதரர்கள் ஸ்பானியர்கள் அல்ல; ஜினோவாக்காரர்கள்! அவர்கள் கண்டுபிடிக்கும் நாடெல்லாம் ஸ்பானியர்களுக்குச் சொந்தம். ஸ்பானியர்கள், இன உணர்ச்சி மிக்கவர்கள். அவர்கள் எப்படி ஜினோவாக்காரர்களுக்கு அடங்கி நடக்க இசைவார்கள். இதுதான் கொலம்பஸ் சகோதரர்களுக்கும் அவர்களுடைய வளர்ச்சிக்கும் தடையாக இருந்தது. கொலம்பஸ் இஸ்பானியோலாவில் இரண்டு தவறுகள் செய்தான். முதலாவது சிறிதும் நிலைமையைச் சமாளிக்கத் தெரியாதி. தன் தம்பி டீகோவைத் தன் பிரதிநிதியாக நியமித்தது. இரண்டாவது ஓஜிடான்வையும், மார்கரிட் என்பவனையும், இஸ்பானியோலாவில் உள் நாட்டுக்குள் அனுப்பி வைத்தது. மனிதாபிமானமோ நியாய உணர்ச்சிகளோ இல்லாத அவர்கள் குடிமக்களின் பகைமையை மிக விரைவில் வளர்த்து விட்டார்கள். கொலம்பஸ் இல்லாதபோது மார்கரிட் என்பவன் செய்த கொடுமைகளைப் பற்றி யறிந்த டீகோ, அவனைத் தன் போக்கை மாற்றிக்கொள்ளும்படி ஓர் உத்தரவு அனுப்பியிருந்தான். தனக்கு உத்தரவிட அவன் யார் என்று கேட்டு, உத்தரவைத் திரும்பப் பெறும்படி எச்சரித்துக் கேட்டுக் கொண்டு இசபெல்லாவுக்கு வந்தான். உத்தரவு திரும்பப் பெறப்படவில்லை. இதனால் மேலும் ஆத்திரமடைந்த அவன், வேறு சிலரோடு பார்த்த லோமியோ கொண்டு வந்திருந்த கப்பல்களைக் கைப்பற்றி ஓட்டிக்கொண்டு ஸ்பெயினுக்குப் போய் விட்டான். இவ்வாறு கப்பல்களைக் கைப்பற்றிக்கொண்டு, அவற்றில் அப்பாவிக் குடிமக்களிடமிருந்து அரட்டிப் பறித்த தங்கத்தையும் பிற பொருள்களையும் ஏற்றிச் சென்று ஸ்பெயினில் திருட்டுத்தனமாக இறக்கிக் கொண்டதோடு நில்லாமல் கொலம்பஸ் மீது பழி தூற்றிக்கொண்டு வேறு திரிந்தார்கள் அந்தக் குழப்பக்காரர்கள்.   கொலம்பஸ் நோயுடன் இசபெல்லாவுக்கு வந்த இரண்டாவது மாதத்தில் டோரிஸ் என்பவன் குடியேற்றவாதிகளுக்குத் தேவையான பொருள்களை நான்கு கப்பல்களில் ஏற்றிக்கொண்டு வந்தான். அரசரும் அரசியும் அவன் மூலம் அனுப்பியிருந்த கடிதத்தில், போர்ச்சுக்கலுடன் ஏற்பட்டிருந்த ஓர் அரசியல் விவகாரத்தில் உதவுவதற்காக வருமாறு கொலம்பசை அழைத்திருந்தார்கள். ஆனால், உடல் நிலை காரணமாக கொலம்பஸ் அப்போது போக முடியவில்லை. டோரிஸ் திரும்பும் போது, அவனுடைய கப்பல்களில் தங்கம் ஏற்றி அனுப்ப வேண்டியிருந்தது. அரசாங்கத்துக்கு அனுப்ப வேண்டிய அளவு தங்கம் சேரவில்லை. அதற்காக, அவன் கொடுமைக்காரனான மார்கரிட் வழியைப் பின்பற்றி இந்தியர்களிடம் கட்டாய வசூல் செய்யலானான். மறுத்துரைத்தவர்களை அடிமைகளாகப் பிடித்தான்; பெருமுரடர்களாயிருந்தவர்களுக்குக் கொலைத்தண்டனை விதித்தான்.இவ்வாறு பிடிபட்ட அடிமைகள் ஆயிரத்தைந்நூறு பேர் சேர்ந்திருந்தார்கள். டோரிஸ் தன் நான்கு கப்பல்களிலும் ஐநூறு பேரை ஏற்றிக் கொண்டான். மீதியிருந்தவர்களை, இசபெல்லாவில் இருந்த ஸ்பானியர் ஒவ்வொரு வரும் தங்களுக்கு எத்தனை அடிமைகள் தேவையோ அத்தனை பேரை வேலைக்கு வைத்துக் கொள்ளலாம் என்றான். அதற்கும் அப்பால் மீதப்பட்டவர்களை விரட்டி விட்டான். ஸ்பானியர்களிடமிருந்து அவர்கள் தப்பியோடிய காட்சி மிகப் பரிதாபமாக இருந்ததென்று கண்டவர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். அவர்களாவது தப்பிப் பிழைத்தார்கள். கப்பலில் சென்றவர்களில் இருநூறு பேர் வழியிலேயே இறந்து போய்க் கடலில் தூக்கி எறியப்பட்டார்கள். மீதி முந்நூறு பேரும், பலவிதமான நோய்களுக்கும் துன்பத்துக்கும் ஆளானார்கள். ஸ்பெயின் போய்ச் சேர்ந்த பின் அந்நாட்டு வெப்பதட்ப நிலை ஒத்துக்கொள்ளாமல் பலர் இறந்து போனார்கள். மிச்சம் மீதி இருந்தவர்கள் வியாபாரப் பொருள்களைப் போல் விற்கப்பட்டார்கள்.   அடிமையாகப் பிடிபட்டு வந்தவர்களில் இசபெல்லாவிலிருந்து தப்பியோடியவன் தலைவன் குவாட்டி குவானா. இஸ்பானியோலா முழுவதிலும் சுமார் இரண்டரை லட்சம் டாயினோக்கள் இருந்தார்கள். அந்த இரண்டரை லட்சம் பேரையும் ஒன்று சேர்த்து ஸ்பானியருக்கெதிராகப் போராட முயன்றான் தலைவன் குவாட்டி குவானா. ஆனால் டாயினோக்கள் இடையே ஒற்றுமையுணர்ச்சியில்லாததால் அவன் முயற்சி பலிக்கவில்லை. ஸ்பானியர்களிடம் வெடி மருந்துகள் இருந்தன. அதற்கும் மேலாக, டாயினோக்களிடையே ஒரு தலைவனை ஆதரித்து மற்றொரு தலைவனுடன் போர் மூட்டிவிட்டு, அவர்களைத் தங்களுக் குள்ளேயே போராடச் செய்து அழிவெய்தச் செய்யும் திறமை இருந்தது. கவோனாபோ என்ற தலைவன் பெரும் வல்லமையுடையவன். முன் நாவிடாடுக் கோட்டையை அழித்தொழித்தவன் இவன் தான். அவனை ஸ்பானியர்கள் பிடித்துக் கொன்ற முறை மிக அக்கிரமமானது. ஓஜிடா, அத்தலைவனுக்கு விருந்து நடத்துவதாகச் சொல்லி இசபெல்லாவுக்கு அழைத்தான். விருந்துக்கு வந்த அவனைக் கைகளை நீட்டச் சொன்னான். ஸ்பெயின் தேசத்துச் சிங்கார ஆபரணங்கள் இவைதாம் என்று சொல்லி, அவன் கையில் இரும்புக் காப்புகளைப் பூட்டினான்; விலங்குகளை மாட்டினான். அப்படியே அவனை இழுத்துக் கொண்டு போய்ச் சிறையில் அடைத்தான். அங்கே டாயினோத் தலைவன் கவோனாபோ பல்லைக் கடித்துக் கொண்டு ஆத்திரத்தோடு உறுமியதைப் பார்த்த போது, அடைப்பட்ட சிங்கம் கர்ச்சிப்பது போலவே இருந்தது. கொலம்பஸ் டாயினோக்களை அன்பாக நடத்த வேண்டும் என்றுதான் எண்ணியிருந்தான். அரசரும் அரசியும் அவ்வாறுதான் கூறியனுப்பியிருந்தார்கள். ஆனால், பின்னால் ஏற்பட்ட தங்கத் தேவை, அவனையும், ஓஜிடா. மார்கரிட் போன்றவர்களின் பாதையிலேயே செல்லும்படி செய்து விட்டது. இஸ்பானியோலா முழுவதும் ஆங்காங்கே கோட்டைகள் கட்டப்பெற்றன. பதினான்கு வயதுக்கு மேற்பட்ட இந்தியர்கள் அனைவரும் கட்டாய வேலைக்கு ஆட்படுத்தப்பட்டனர். ஒவ்வொரு வரும் நான்கு பருந்து மணியளவு தங்கப் பொடி அரித்துக் கொடுக்க வேண்டுமென்று சட்டம் செய்யப் பெற்றது. இச் சட்டத்தை மீறியவர்கள் ஈவு இரக்கமின்றிக் கொல்லப் பட்டார்கள். இந்தக் கொடுமைக்கு அஞ்சி மலையடிவாரங்களுக்கு ஓடிய இந்தியர்கள் வேட்டையாடிக் கொல்லப் பட்டார்கள். அதற்கும் தப்பியவர்கள் பசி பட்டினியாலும்; தங்கள் துயர வாழ்க்கையை நொந்து கசாவா நஞ்சையுண்டும் இறந்து போனார்கள். 1492-ஆம் ஆண்டு இரண்டரை லட்சம் மக்கள் இருந்தார்கள். கொலம்பஸ் துவக்கி வைத்த இந்தக் கொடுமை காரணமாக 1508-இல் இஸ்பானியோலா முழுவதிலும் இருந்த டாயினோக்களின் எண்ணிக்கை அறுபதினாயிரம்தான். இதே அக்கிரம வழியைப் பின்னால் வந்தவர்களும் பின் பற்றியதால் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஐநூற்றுக்கும் குறைவான இந்தியர்களே இருந்தார்கள். கொலம்பஸ் ஈவிரக்கமற்றுச் செய்த இந்த முறையினால் மனித சமுதாயத்தில் ஓர் இனமே அழிந்தொழிந்து போயிற்று. மார்க்கரிட்டும் மற்றவர்களும் கூறிய குற்றச் சாட்டுக்களைக் கேட்ட அரசரும் அரசியாரும், ஜுலான் அகுவாடோ என்பவனை இது பற்றி விசாரிக்க இசபெல்லாவுக்கு அனுப்பினார்கள். அவன் வந்தபின், தன் அரசியல் தகுதியை நிலைநாட்டிக் கொள்ள ஸ்பெயினுக்குத் திரும்புவதே நலமென்று கொலம்பஸ் முடிவுக்கு வந்தான். ஆகவே தலைமைப் பொறுப்பை அவன் பார்த்தலோமியோவிடம் ஒப்படைத்தான். இசபெல்லாவை விட்டு வேறொரு புது நகரத்தை உருவாக்க உத்தரவிட்டுவிட்டு அவன் 1496-ஆம் ஆண்டு மார்ச் மாத வாக்கில் நைனா கப்பலில் புறப்பட்டான். கூடவே மற்றொரு கப்பலும் சென்றது. இரு கப்பல்களிலும் 225 ஸ்பானியர்களும் 30 இந்திய அடிமைகளும் சென்றார்கள். எதிர்பார்த்தபடி கப்பல்கள் விரைவாகச் செல்லவில்லை. நாளாக ஆக உணவுப் பொருள்கள் குறைந்தன. கடைசியில் அரைப் பட்டினியும் முக்கால் பட்டினியும் கிடக்கும்படியான நிலைமை வந்தது. அப்போது சில ஸ்பானியர்கள், பசியைத் தீர்க்க இந்திய அடிமைகளைக் கொன்று தின்னலாம் என்று யோசனை சொன்னார்கள். முதலில், மனித இறைச்சி தின்னும் பழக்கமுடைய கரீபிய இனத்தவரைத் தின்னலாம் என்றும், பிறகும் தேவைப்பட்டால் டாயினோக்களைத் தின்னலாம் என்றும் சொன்னார்கள். மனித இறைச்சி தின்னும் கரீபியர்களைக் கொன்று தின்பதால், அவர்களுடைய பாவத்திற்குப் பரிகாரம் ஏற்படும் என்றும், பழிக்குப் பழி வாங்கியதாக ஆகும் என்றும் கூறினார்கள். என்ன இருந்தாலும் அவர்களும் மனிதர்கள்தாம் ! அவர்களைக் கொன்று தின்பது நமக்கு அழகல்ல! என்று கூறித் தன் மனிதத் தன்மையை நிலைநாட்டிக் கொண்டான் கொலம்பஸ். கடைசியாக ஜூன் மாதத்தில் ஸ்பெயினுக்கு வந்து சேர்ந்தன இரு கப்பல்களும். கப்பல்களிலிருந்து இறங்கியவர்கள், பஞ்சைகளைப் போல் குழி விழுந்த கண்களும் வற்றி ஒட்டிய வயிறுமாகப் பார்க்கப் பரிதாபமான கோலத்துடன் இறங்கினார்கள். அவர்கள் நாட்டில் பரப்பிய வசவுகளும் பழிகளும் கொலம்பஸ் சகோதரர்களை, இந்தியத் தீவுகளைப் பற்றியே நினைக்காதபடி செய்திருக்கும் வலிவைப் பெற்றிருந்தன; கொலம்பசின் செல்வாக்கை அடியோடு குறைத்து அவமானப் படுத்தக்கூடிய ஆற்றலைப் பெற்றிருந்தன. ஆனால் போர்ச்சுக்கீசிய அரசர் இந்தியாவுக்கு வழிகாணச் செய்த முயற்சியும், இங்கிலாந்து மன்னர் ஹென்றி கத்தேயுவுக்குக் கடல் வழி காணச் செய்த முயற்சியும், ஒரு போட்டியுணர்ச்சியை ஏற்படுத்தின. அந்த உணர்ச்சிக்கு ஆட்பட்ட ஸ்பெயின் அரசியும் அரசரும் இஸ்பானியோலாவை விட்டு விடக் கூடாதென்று எண்ணினர். ------------                                               9. உண்மை புரிந்தது அரசியாரும் அரசரும் அகுவாடோ என்பவன் மூலம் அனுப்பிய உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து, இஸ்பானியோலாவிலிருந்து புறப்பட்ட கொலம்பஸ் காடிஜ் துறைமுகம் வந்து சேர்ந்தான். காடிஜுக்கு வந்து சேர்ந்தபோது அவன் மிக மிக மனம் நொந்து போயிருந்தான். நம்பிக்கை மிக்க தன்னை ஆண்டவன் ஏன் இப்படிச் சோதிக்க வேண்டும் என்று எண்ணி எண்ணி அவன் மனம் ஒடிந்து போயிருந்தான். இயல்பாகவே அரச பக்தியுள்ளவனாயிருக்கும் தன்மீது சில தீயர்கள் கூறிய பழியுரைகளைக் கேட்டு அரசரும் அரசியும் அவநம்பிக்கை ஏன் கொண்டார்கள் என்று எண்ணிய போது அவன் மனம் வெடித்துவிடும் போலிருந்தது. ஆகவே அவன் அரண்மனைகளுக்கும் கோட்டைகளுக்கும் விருந்துக்குப் போவதை வெறுத்து, புனித மடாலயங்களிலே தங்கிக் காலத்தைக் கழித்து வந்தான். பிறவித் துயர் போக்கும் பேரிறைவனையே எண்ணி எண்ணித் தொழுது கொண்டிருப்பதே உய்யும் வழியென்று முடிவு கட்டி எளிய வாழ்க்கையை மேற்கொண்டு அந்த மடாலயங்களிலே தங்கினான். கடைசியாக அரசரிடமிருந்தும் அரசியிடமிருந்தும் ஓர் அழைப்பு வந்தது. அந்த அழைப்பைத்தான் கொலம்பஸ் எதிர்பார்த்துக் காத்திருந்தான். இயல்பாகவே எளிய வாழ்க்கையில் ஈடுபாடு கொண்ட கொலம்பஸ், ஸ்பானியர்களிடம் செல்வாக்குப் பெற ஆடம்பரம் தேவையென்று நன்றாக உணர்ந்திருந்தான். ஆகவே, அரசாங்க அழைப்பு வந்தவுடன், கவர்ச்சி மிகுந்த ஆடம்பரத்தோடு ஊர்வலமாகச் செல்ல ஏற்பாடுகள் செய்தான். கொலம்பசின் இரு புறத்திலும், டாயினோ இனத் தலைவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிவப்பு இந்தியர்கள் மட்டக் குதிரைகளில் ஏறிச் சென்றார்கள். வேலைக்காரர்கள் பல அழகிய வர்ணங்களைக் கொண்ட கிளிகள் அடங்கிய கூடுகளுடன் முன்னே சென்றனர். அந்தக் கிளிகள் கீச் கீச் சென்று கத்தி எழுப்பிய பேரொலியே அந்த ஊர்வலத்திற்குரிய பெரிய மங்கல வாத்தியம் போல் இருந்தது. அந்தச் சத்தம் கேட்டுத் தெருவுக்கு ஓடி வந்த மக்கள், இந்த வினோத ஊர்வலத்தைக் கண்டு அதிசயித்து நின்றார்கள். காட்டுப் பாதைகளில் ஊர்வலக் குழு செல்லும் போது, பேசாமல் போவார்கள். வழியில் உள்ள ஊருக்குள் நுழையு முன்னால், இந்தியர்கள் இருவருக்கும், இறக்கைகளாலாகிய பெரிய ராஜ முடியைத் தலையில் அணிவிப்பார்கள். அவர்கள் தங்கள் பரம்பரை வழக்கப்படி அணியும் தங்க ஆபரணங்களைக் கட்டி விடுவார்கள். பார்ப்பவர்கள், "ஆகா! தங்க வளம் நிறைந்த புதியதொரு நாட்டைக் கண்டு பிடித்த கொலம்பஸ் வருகிறார்!" என்று தெரிந்து கொள்ளத்தான் இந்த ஏற்பாடு! வல்லா டோனிட் என்ற ஊரில் அரசரையும் அரசியையும் சந்தித்தான் கொலம்பஸ். அரசிக்குப் பணிபுரியும் பையன்களாய் இருந்த தன் புதல்வர்கள் இருவரையும் கண்டு அளவளாவினான். அரசாங்க முறைப்படி அவன் வரவேற்கப்பட்டான். அவன் அரசருக்கும் அரசியாருக்கும் புறா முட்டை அளவுள்ள தங்கக் கட்டிகள் சிலவற்றை அன்பளிப்பாக வழங்கினான். அரசரும் அரசியும் மகிழ்ச்சியோடு அவனைச் சிறப்பாக வரவேற்ற அந்தச் சமயத்தை நழுவ விடாமல், அவன் மூன்றாவது முறையாகத் தான் ஒரு பயணம் மேற்கொள்ள அனுமதி கேட்டான். இஸ்பானியோலாவுக்கு உணவுப் பொருள்கள் ஏற்றிச் செல்ல ஐந்து கப்பல்களும், புதியதோர் கண்டத்தைக் கண்டு பிடிக்கத் தனக்கு இரு கப்பல்களும் வேண்டும் என்று கேட்டான். ஆண்டிலிஸ் தீவுகளுக்குத் தெற்கே ஒரு கண்டம் இருக்கக் கூடுமென்று போர்ச்சுகல் அரசர் நம்பிக்கை கொண்டிருந்தார். சிவப்பு இந்தியர்களோடு பேசிப் பார்த்ததில், அந்த எண்ணம் கொலம்பசுக்கு வலுப்பட்டது. அந்தக் கண்டத்தைக் கண்டு பிடிக்கவே தனக்கென்று இரு கப்பல்கள் கேட்டான், கொலம்பஸ். போர்ச்சுகல் அரசர் ஜான் இறந்துவிட்ட போதிலும், அவருடைய வாரிசாக வந்துள்ள மானுவேல் பல புதிய முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறான் என்ற செய்திகள் அடிக்கடி கிடைத்துவந்தன. ஜான் அரசர் திட்டமிட்ட அந்தக் கண்டத்தைத் தாங்கள் முதலில் கண்டு பிடித்துவிட வேண்டும் என்ற ஆவல் ஸ்பெயின் அரசருக்கும் அரசிக்கும் ஏற்பட்டிருந்தது. வாஸ்கோடகாமா, போர்ச்சுகீசிய நாட்டிலிருந்து புறப்படத் தயாராகி விட்டான் என்று செய்தி கிடைத்ததும் அரசருக்கும் அரசிக்கும் விறுவிறுப்பு ஏற்பட்டது. அதன் பிறகு தான் அவர்கள் கொலம்பசை ஆயத்தப்படுத்தத் தொடங்கினார்கள்.   வாஸ்கோடகாமா ஒரு பெரிய நீண்ட கடற்பயணம் மேற்கொள்ள இருக்கிறான் என்ற செய்தி கிடைத்தது. ஆனால், அவன் என்ன நோக்கத்தோடு எந்தத் திசையில் எதற்காகப் போகிறான் என்பது பற்றி திட்டவட்டமான செய்திகள் கிடைக்கவில்லை. 1497-ம் ஆண்டு மே, ஜூன் மாதங்களில், அரசர் பெர்டினாண்டும், அரசி இசபெல்லாவும், கொலம்பசின் உரிமைகளையும் பட்டங்களையும் மீண்டும் உறுதிபடுத்தினார்கள். இஸ்பானியோலாவில் குடியேறுவதற்கு சுமார் முந்நூறு பேர்களை ஆயத்தப்படுத்தும்படி உத்தரவிட்டார்கள். எல்லோருக்கும் ஆகும் செலவை அரசாங்கத்திலேயே ஏற்றுக் கொள்வதாக வாக்களித்தார்கள். குடியேற்ற நாட்டில் போயிருக்க முப்பது பெண்களையும் ஆயத்தப் படுத்தினான் கொலம்பஸ். சிறு குற்றங்கள் செய்து சிறையில் அடைபட்டுக் கிடந்த கைதிகள் யாவரும், குடியேற்ற நாட்டிற்குச் செல்வதற்காக மன்னிப்புப் பெற்று விடுதலை யடைந்தார்கள். இஸ்பானியோலாவிற்குச் செல்ல மறுத்தவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. அங்கு சென்று ஒன்றிரண்டு ஆண்டுகள் வாழ்ந்துவர ஒப்புக்கொண்டவர்களே விடுதலை செய்யப்பட்டார்கள். ஏற்பாடுகள் எல்லாம் செய்து கப்பல்கள் புறப்பட ஓராண்டாயிற்று. காரணம், அரசாங்கத்தின் இருப்பில் பணம் இல்லாமையேயாகும். கைதிகளைத் தவிர மற்ற குடியேற்றவாதிகள் யாரும் முன்பணமாகத் தங்கள் சம்பளத்தைப் பெறாமல் பயணப்படத் தயாராக இல்லை. 1498-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்து கப்பல்கள் இஸ்பானியோலாவிற்கு நேராகப் புறப்பட்டுச் சென்றன. கொலம்பஸ் தனக்கென்று ஒதுக்கப்பட்ட மூன்று கப்பல்களுடனும். காரலாஜல் என்ற தலைவனின் கீழ்ப் புறப்பட்ட மூன்று கப்பல்களுடனும் 1498-ம் ஆண்டு மே மாதம் கடைசி வாரத்தில் தான் புறப்பட்டுச் சென்றான் அதே வாரத்தில் ஆப்பிரிக்காவைச் சுற்றிக்கொண்டு. இந்தியாவில் உள்ள கள்ளிக்கோட்டையைப் போய்ச் சேர்ந்துவிட்டான், போர்ச்சுகீசியனான வாஸ்கோடகாமா. இந்த முறை கொலம்பஸ் தென் திசையில் அதிகமாகக் கீழிறங்கிச் செல்லலானான். ஜான் அரசரின் கண்டத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, தங்கம் அதிகமாகக் கிடைக்கும் இடத்தையும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆசை கொலம்பசுக்கு. மடெய்ரா, கோமாராத் தீவுகளில் சற்றுச் சற்றுத் தங்கி போலிஸ்டா என்ற துறைமுகத்தில் ஆட்டுக்கறி வாங்கி உப்புக்கண்டம் போட்டுக்கொண்டான். அந்தத் துறைமுகத்தில் மாட்டுக்கறி கிடைக்கவில்லை. சாட்டியாகோ என்ற துறைமுகத்தில் மாடுகள் கிடைக்குமா என்ற எண்ணத்தில் ஒரு வாரம் தங்கினான் மாடுகள் கிடைக்கவில்லை. மாலுமிகள் சிலருக்கு நோய் வந்தது தான் மிச்சம். எத்தனையோ கஷ்டங்களுக்குப் பிறகு கப்பல்கள் ஆகஸ்டு மாதம் முதல் தேதி, டிரினிடாடு தென்கரையை வந்தடைந்தன. கொலம்பஸ் எதிர்பார்த்தபடியே ஒருவிரி குடாவில் நல்ல நீரோடும் ஆறு ஒன்று வந்து கடலில் கலந்தது. குளிர்ச்சியும் சுவையும் மிகுந்த நீர் நீறைந்த அந்தச் சிற்றாற்றில் இறங்கிக் குடைந்து குடைந்து நீராடி மகிழ்ந்தார்கள் மாலுமிகள். எத்தனையோ நாட்களாகக் குளிக்காமல் வியர்த்து உப்பூறி நாறிப்போயிருந்த தங்கள் உடல்களை நன்றாகத் தேய்த்துக் குளித்து ஆனந்தமனுபவித்தார்கள். குளித்தபின், ஆடிக் கொண்டும், பாடிக்கொண்டும் அருகில் இருந்த காட்டுக்குள் சுற்றித் திரிந்துவிட்டு வந்தார்கள்.அங்கிருந்து புறப்பட்டு டிரினிடாடிலுள்ள இகாகோஸ் முனையருகில் நங்கூரம் பாய்ச்சி மாலுமிகளைக் கரையில் இறக்கிவிட்டான், அவர்கள், மீன் பிடிப்பதிலும், சிப்பிகள் பொறுக்குவதிலும் காலம் கழித்தார்கள்.   எரின் விரிகுடாவில் கப்பல்கள் செல்லும்போதே தென் அமெரிக்கக் கண்டம் கொலம்பஸ் பார்வையில் தட்டுப்பட்டது. ஆனால். அது ஒரு வெறு நிலம் என்று அவன் அறிந்துகொள்ளவில்லை. மற்றத் தீவுகளைப்போல் அதுவும் ஒன்று என்று எண்ணிக் கொண்டான். டிரினிடாடுப் பகுதியில், தான் சீனர்களைப் பார்க்கக் கூடும் என்று எதிர்பார்த்தான். கொலம்பஸ். அப்படியில்லாவிட்டால் நீக்ரோ மன்னர்களையாவது சந்திக்கக் கூடும் என்று எண்ணினான். ஆனால், கப்பல்களுக்குச் சிறிது தூரத்தில் ஒரு படகு தோன்றியது. அதில் இருந்தவர்கள் எல்லோரும் கரீபியர்களைப் போன்ற சிவப்பு இந்தியர்களாகவேயிருந்தனர். ஆனால், அவர்களைக் காட்டிலும் சிறிது நல்ல பழக்க வழக்கமுடையவர்களாகத் தோன்றினார்கள். அவர்கள் கருத்தைக் கவர்வதற்காக, கப்பல் மேல் தட்டில் பித்தளைக் குடங்களைக் கொண்டுவந்து வைக்கச் சொன்னான் கொலம்பஸ். ஆனால் அவர்கள் அதை விசேஷப் பொருள்களாக எண்ணிக் கப்பலை நோக்கி வரவில்லை. அதன் பின், மாலுமிகள் சிலரைக் கப்பல் மேல் தட்டில் ஏறி நடனம் ஆடி நிற்கும்படி சொன்னான். அவர்கள் ஆட்டத்திற்கேற்றபடி குழல் ஊதப்பட்டது. இந்தக் காட்சியைக் கண்ட இந்தியர்கள், இது ஏதோ போரழைப்பு என்று எண்ணிக் கொண்டு. கப்பலை நோக்கி மழைபோல் அம்புகளைப் பொழிந்தார்கள். நல்ல வேளையாக ஒரு அம்புகூடக் கப்பலை எட்டவில்லை. அதன் பின் அவர்கள் தங்கள் வழியில் சென்று மறைந்து விட்டார்கள். அந்த வளைகுடாப் பகுதி முழுவதையும் ஆராய்வது என்ற திட்டத்துடன் ஆகஸ்டு மாதம் 4-ம் நாள் கப்பல்கள் புறப்பட்டன. எங்கோ எரிமலை வெடித்ததன் காரணமாக ஏற்பட்ட கொந்தளிப்பில் அலைகள் மலைகளென உயர்ந்தன. கப்பல்களை ஒரே தூக்காகத் தூக்கி மேலே கொண்டு சென்று அதே வேகத்தில் கடலின் அடி தெரியும்படியான கீழ்ப்பகுதிக்குத் தள்ளி இப்படியாகச் சிறிது நேரம் அலைக்கழித்தன. அதிர்ஷ்ட வசத்தாலும், மாலுமிகளின் திறத்தாலும் எவ்வித ஆபத்தும் உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. என்றாலும் அப்போது மாலுமிகள் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட பயம் அவர்கள் ஆயுட்காலங்களில் வேறெப்போதும் ஏற்பட்டதில்லை. அந்த இடம் தங்கியிருப்பதற்கு ஏற்ற இடம் அல்ல என்று கருதிய கொலம்பஸ், அதற்கு நாகப் பாம்பின் வாய் என்ற பொருளுடைய லாபோக்காடிலா சர்ப்பே என்ற பெயரை வைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டான். வடக்கே தொலை தூரத்தில் அடிவானத்தில் சில மலைகள் தெரிந்தன. அந்த மலைகள் இருந்த பரியாத் தீபகற்பத்தை நோக்கி கப்பல்களைச் செலுத்திய கொலம்பஸ் அன்று இரவு பாகியாத் துறைமுகத்தின் அருகே நங்கூரம் பாய்ச்சினான். மறுநாள் அந்தப் பகுதிகளைச் சுற்றிப் பார்த்துவரக் கிளம்பினான், அந்தப் பகுதியில் பல அழகான வசதியான துறைமுகங்கள் இருந்தன. அவற்றில் ஒன்றான எசினாடா யாக்குலா என்ற துறைமுகத்தில் கப்பல்களை நிறுத்தினான். அந்த மிக அழகிய கடற்கரையையுடைய துறைமுகத்தில் சிறிது தூரத்தில் மிகப் பெரிய வீடு ஒன்று தெரிந்தது. அதன் எதிரே நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. ஆனால், கொலம்பசும் ஸ்பானியர்களும் இறங்கிச் சென்றபோது, அங்கே மக்கள் யாரும் காணப்படவில்லை. எல்லோரும் ஸ்பானியர்களைக் கண்டு பயந்தோடி விட்டார்கள். அவர்களை வரவேற்க அந்தக் குடிசையில் குரங்குகள்தான் இருந்தன. அந்தக் குரங்குக் கூட்டம் ஸ்பானியர்களைக் கண்டு தங்கள் - பற்களைக் காட்டி, வரவேற்றது. அமெரிக்கக் கண்டத்தின் நிலப்பகுதியில் கொலம்பஸ் முதன் முதலாகக் காலடி எடுத்துவைத்தது அந்தத் துறைமுகத்தில் தான். ஆனால், கொலம்பசுக்கு தான் அப்போது ஒரு பெரிய கண் டத்தில் இறங்கியிருப்பதாகத் தெரியாது. பரியாத் தீப கற்பத்தையே அவன் ஒரு பெரிய தீவு என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தான். அவன் அமெரிக்கக் கண்டத்தில் காலடி வைத்த நாள் ஒரு ஞாயிற்றுக்கிழமை. 1498-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ம் நாள் தான் அது. மற்ற தீவுகளில் செய்தது போல் அந்த இடத்தையும் ஸ்பெயினுக்கு உரிமையாக்கும் சடங்கைச் செய்யவேண்டும். ஆனால் சுற்றிலும் கூடியிருக்கும் குரங்குகளின் முன்னிலையில் அவன் அந்தப் புனிதச் சடங்குகளைச் செய்ய விரும்பவில்லை. அந்த நாட்டுக்கு உரிய மக்கள் சிலரையாவது முன்னால் வைத்துக்கொண்டு செய்வதுதான் பொருத்தமாகும் என்று நினைத்தான். நட்புரிமை பூண்ட சில சிவப்பு இந்தியர்கள் கப்பல்களை அணுகினார்கள். கொலம்பசுக்கு அப்போது உடல் நலம் சரியில்லை. ஆகவே கப்பல் தலைவன் பெட்ரோடி டெரிரோஸ் என்பவனை அந்த நிலப்பகுதியை உரிமையாக்கும் சடங்கைச் செய்யுமாறு அனுப்பினான். அவனும் அந்தச் சிவப்பு இந்தியர்கள் முன்னிலையில் பரியா நிலப்பகுதியை ஸ்பெயினுக்கு உரிமையாக்கும் சடங்கைச் செய்து முடித்தான். பாசி மாலைகளும், பருந்து மணிகளும், சர்க்கரையும் கொடுத்தவுடன், சிவப்பு இந்தியர்கள் கப்பலடிக்குத் திரண்டு வந்தார்கள். இந்தப் பொருள்களைப் பெறுவதற்காக அவர்கள் தங்கள் கைவசமுள்ள எந்தப் பொருளையும் தந்துவிட ஆயத்தமாயிருந்தனர். அவர்கள் தங்கள் கழுத்துகளிலும் கைகளிலும் அணிந்திருந்த ஆபரணங்கள். தங்கமும் செம்பும் கலந்த உலோகத்தால் ஆனவை. இவர்களுக் குத் தங்கத்தை விடச் செம்பே உயர்வாகப் தோன்றியது. காரணம், செம்பு உள்நாட்டில் மத்திய பகுதியில் தான் கிடைத்தது. தங்கமோ அவர்கள் இருக்கும் பகுதியிலேயே கிடைத்தது. ஆகவே அவர்கள் இரண்டையும் உருக்கிக் கலந்து உருவாகிய உலோகத்தால் ஆபரணங்கள் செய்து கொண்டார்கள். கொலம்பஸ் ஒரு புதிய பெரு நிலத்தை. மட்டும் கண்டுபிடிக்கவில்லை. ஒரு தனி நாகரிகம் படைத்த இனத்தினர் வாழும் பகுதியிலும் நுழைந்திருந்தான். கொலம்பஸ் அந்த நிலப்பகுதி முழுதும் சுற்றிப் பல துறைமுகங்களை ஆராய்ந்தான். ஒரு துறைமுகத்தில், ஒரு. கிராமத்துப் பெண்கள் பலர் கப்பலுக்கு வந்தார்கள். அவர்கள் கழுத்துக்களில் ஒளி வீசும் முத்துக்கள் பதித்த. அட்டிகைகளை அணிந்திருந்தார்கள். பருந்து மணிக்கும், பாசி மாலைக்கும் அவர்கள் அந்த அட்டிகைகளைக் கழற்றிக் கொடுத்து விட்டார்கள். அவர்கள் கையில் வேறு முத்து அட்டிகைகள், இல்லாததால் கொலம்பஸ் தன் ஆசையை அடக்கிக் கொண்டான். அவர்களை விசாரித்தபோது, தீபகற்பத்தின் மறு பகுதியில் ஏராளமாக முத்துக் கிடைப்பதாகக் கூறினார்கள். திரும்பும் போது அங்கு செல்லலாம் என்றிருந்தான்; ஆனால் அந்தப் பாதையில் அவன் திரும்பவில்லை. பொதுவாக அந்தப் பகுதி மக்கள் அன்பும் பண்பும் உடையவர்களாக இருந்தார்கள். ஓரூரில் இருந்த பெரிய கூரை வீட்டில், ஒரு கப்பலைச் சேர்ந்த மாலுமிகள் அனை வருக்கும் நல்ல விருந்து வைத்தார்கள். வயிறு புடைக்க உண்டுவிட்டு, ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் மாலுமிகள் கப்பலுக்குத் திரும்பி வந்தார்கள். பல துறைமுகங்களைப் பார்த்துக்கொண்டே கப்பலை மேற்றிசையில் செலுத்திய கொலம்பஸ் ஆகஸ்டு 15-ம் நாள் ஒரு தீவைக் கண்டான். அந்தத் தீவில் இறங்காமலே அதற்கு மார்கரிட்டா என்று பெயர் வைத்தான். அந்தத் தீவில் முத்து நிறையக் கிடைத்தது, ஆனால், இஸ்பானியோலாவில் அமைந்துள்ள சாண்டா டோமிங்கோ என்ற புதிய நகரத்திற்கு விரைந்து செல்லவேண்டும் என்று எண்ணியதால் கொலம்பஸ் அங்கு இறங்கவில்லை. மார்கரிட்டாவில் அவன் இறங்கி முத்துக்கள் சேர்த்துக் கொண்டு போயிருந்தால், ஸ்பெயினில் அவனுக்கு நல்ல வரவேற்பிருந்திருக்கும். ஆனால், அவனுடைய அதிர்ஷ்ட குறைவு அவனை அங்கு இறங்க விடவில்லை. எங்கும் சுற்றிப் பார்த்த பிறகுதான் கொலம்பஸ் தான் ஒரு பெரிய புதிய கண்டத்தில் இறங்கியிருப்பதை உணர்ந்தான். பரியாவைப் பற்றிய தன் எண்ணத்தைக் கப்பல் குறிப்புப் புத்தகத்தில் அவன் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறான். இதுவரை யாரும் கண்டறியாத ஒரு பெரிய கண்டம் இதுவென்றே நான் நம்புகிறேன். முன் என்னிடம் சிறைப் பட்ட பல கரீபிய இனத்தைச் சேர்ந்த இந்தியர்கள், தெற்கே ஒரு பெருநிலம் இருப்பதாகப் பல முறை கூறி இருக்கிறார்கள். அங்கே நிறையத் தங்கம் கிடைக்கும் என்று அவர்கள் கூறினார்கள். இது மட்டும் ஒரு பெரிய கண்டமாயிருந்தால் இது ஒரு பேர் ஆச்சரியமாக இருக்கும். இவ்வளவு பெரிய ஆறு ஒன்று - 48 காத தூரத்திற்கு நல்ல தண்ணீர் பாயும் கடல் போல இருப்பதால் இது நிச்சயமாக ஒரு பெரிய கண்டமாகத்தான் இருக்க வேண்டும். "இந்த நிலப்பகுதிகள் வேறு ஓர் உலகமேயாம்" என்றும் கொலம்பஸ் குறிப்பிட்டிருக்கிறான். அவன் அதே குறிப்புப் புத்தகத்தில் மேலும் இரண்டு நாள் கழித்து, அந்த நிலப்பகுதி ஒரு சொர்க்கம் என்றே வருணித்துப் பலவாறாக எழுதியிருக்கிறான். கொலம்பஸ் இஸ்பானியோலா நோக்கிச் சென்றான். புதிய தலைநகரமான சாண்டா டோமிங்கோவை நெருங்கி வந்த போது பீட்டாத் தீவில் கப்பல்களை நிறுத்தி நங்கூர மிட்டான். அப்போது சாண்டா டோமிங்கோப் பக்கத்திலிருந்து ஒரு சிறு கப்பல்காரன் கொலம்பஸ் கப்பலை நோக்கிச் சுட்டான். ஆனால், இரு கப்பல்களும் நெருங்கிய பின் கவனித்தால் அந்தக் கப்பலைச் செலுத்தி வந்தவன் அவன் சகோதரன் பார்த்தலோமியாதான் என்று தெரிந்தது பிறகு நான்கு கப்பல்களும் எட்டு நாட்கள் பயணம் செய்து சாண்டா டோமிங்கோவை அடைந்தன. -------------   10. தெய்வம் காத்தது பரியா மாநிலத்தைக் கண்டுபிடித்த பிறகு, இஸ்பானியோலாவை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, பரியா ஒரு சொர்க்கமாகவும், இஸ்பானியோலா ஒரு நரகமாகவும் தான் தோன்றியது கொலம்பசுக்கு. உண்மையிலேயே இஸ்பானியோலா அவனை வாட்டி வதைக்கும் நரகமாகமாறி விட்டது. பிரான்சிஸ்கோ ரோல்டான் என்பவனை கொலம்பஸ் இஸ்பானியோலாவின் தலைமை நீதிபதியாக நியமித்திருந்தான், அந்தத் தலைமை நீதிபதி கொலம்பசை எதிர்க்கும் புரட்சிக்காரனாக மாறிவிட்டான். நீதிபதி ரோல்டான், ஸ்பானியர்களிடையே இனவெறியைத் தூண்டிவிட்டுத் தனக்கு ஆள் சேர்த்துக்கொண்டான், ஸ்பானியர்களாகிய நாம் ஒரு ஜினோவாக்காரனுக்கா ஆட்பட்டிருப்பது என்று கேட்டுக் கிளர்ச்சி மூட்டினான். ரோல்டான் இஸ்பானியோலாவில் சில பகுதிகளைத் தன் வசப்படுத்திக் கொண்டான். தன் ஆட்சிக்குக் கீழ்ப்பட்ட ஸ்பானியர்களுக்கு, அவன் ஏராளமான தங்கமும். அதிக அடிமைகளும், வைத்துக்கொள்ள உரிமையளித்தான். ஸ்பெயினிலிருந்து நிறைய உணவு வரவழைத்துத் தருவதாக வாக்களித்தான். ஸ்பானியர்கள் இந்தியர்களை அடிமையாக வைத்துக் கொள்ள உரிமையளித்த அதே ரோல்டான், இந்தியர்களை வசப்படுத்த அவர்களுக்குள்ள வேலையைக் குறைப்பதாகவும், மேற்கொண்டு அவர்களில் யாரையும் அடிமைப் படுத்துவதில்லை என்றும் கொடுமைப் படுத்துவதில்லை என்றும் வாக்களித்தான். இதை நம்பிய சில ஏமாந்த சிவப்பு இந்திய இனத்தலைவர்கள் அவன் பக்கம் அனுசரணையாக நடந்து கொண்டார்கள். பார்த்தலோமியோ கொலம்பஸ் முதலில் சிவப்பு இந்தியத் தலைவர்களைத் தன்வசப்படுத்திக் கொண்டான். பிறகு ரோல்டானைப் பிடித்துத் தண்டிக்க விருந்தபோது, அந்தப் புரட்சிக்கார நீதிபதி எழுபது துப்பாக்கி வீரர்களுடன் சாரகுலா என்ற இடத்திற்கு ஓடி விட்டான். காரலாஜல் தலைமையில் மூன்று கப்பல்கள் நிறையக் கொலம்பஸ் ஸ்பெயினிலிருந்து உணவு ஏற்றிவிட்டானல்லவா? அந்தக் கப்பல்கள் சாண்டா டோமிங்கோவுக்கு வழி தெரியாமல் அதைக் கடந்து வந்துவிட்டன. அவை சாரகுலாவை அடைந்தன. காரலாஜல் கொலம்பசிடம் உண்மையன்புள்ளவன். ஆனால், அந்தக் கப்பலில் ஏறி வந்த சிறைக்கைதிகள் சிலரும், வேறு சில மாலுமிகளும் ஒன்று சேர்ந்து, கூட்டமாகக் கரைக்குச் சென்று புரட்சிக்காரன் போல்டானுடன் சேர்ந்து கொண்டனர். புதிய பலம் பெற்ற ரோல்டான், லாவீகா கோட்டைமீது படையெடுத்துச் சென்றான். அப்போது சாண்டா டோமிங்கோவில் இருந்த கொலம்பசிடம் மதிப்பு வைத்திருந்த உண்மையான ஸ்பானியர்கள் பலர் பலவிதமான உடல் நோய்களுக்கு ஆளாகிப் படுக்கைகளில் கிடந்தனர். அதனால் புரட்சிக்காரர்களை எதிர்த்துப் போராட முடியாமல் கொலம்பஸ் சகோதரர்கள் ரோல்டானைச் சமாதானப்படுத்த முயன்றனர். சமாதானப் பேச்சு ஏறக்குறைய ஓராண்டுகாலம் நடைபெற்றது. தடவைக்குத் தடவை ரோல்டான் எதிர்ப்பைக் கைவிடுவதற்குரிய தன் கேள்விகளை அதிகப்படுத்தினான், கடைசியாக ரோல்டான்மீது உள்ள குற்றச்சாட்டுகளெல்லாம் சரியானவையல்ல என்று அறிவித்து, அவனை மீண்டும் தலைமை நீதிபதி பதவியில் அமர்த்தினான் கொலம்பஸ். ரோல்டானின் ஆட்களில் ஸ்பெயின் திரும்ப விரும்பியவர்கள் எல்லோருக்கும், கட்டணமில்லாமல் கப்பலில் செல்லும் வாய்ப்பும், அவர்கள் வரியில்லாமல் தங்கம் எடுத்துச் செல்லவும் அனுமதியும் அளித்தான் கொலம்பஸ். ஸ்பெயின் செல்லாதவர்கள், சாரகுலாவில் நிலங்கள் பெற்றுக் கொள்ளலாமென்று அறிவித்தான. ரோல்டானுக்காக கொலம்பஸ் வழங்கிய இந்தச் சலுகையின் மூலம், ஸ்பானியர்கள், விளை நிலங்களில் ஒவ்வொரு பகுதியைத் தங்கள் உடைமையாகப் பெற்றனர். அந்தந்த நிலப்பகுதிகளில் வாழும் சிவப்பு இந்தியர்கள் அனைவரும் அவ்வந்நிலத்தின் உடைமைக்காரனுக்கு அடிமையானான். அந்தந்த நிலங்களில் கிடைக்கும் தங்கம் முழுவதும் அவனவனுக்கே உரிமை. அவன் அரசுக்கும் பெருங்கடல் தளபதிக்கும் வரிகூடக் கொடுக்க வேண்டிய இல்லை. கொலம்பஸ் ஸ்பானியர்களுக்கு அளித்த இந்தச் சலுகையினால் ஸ்பெயினுக்கும் ஸ்பெயின் அரசுக்கும் அப்படி ஒன்றும் அதிகமான நஷ்டம் இல்லை என்பது உண்மைதான்! ஆனால், அந்த நிலங்களின் பரம்பரை உரிமைக்காரர்களான சிவப்பு இந்தியர்களுக்கு இது ஒரு பேரிடியாகவே விழுந்தது. மேலும் அவர்கள் ஸ்பானியர்களுக்கு என்றென்றும் அடிமையாயிருக்க வேண்டிய கொடுமைக்கும் ஆளாயினர். ஆயுத பலமில்லாத அந்தக் கள்ளங்கபடமறியாத மக்கள், எங்கிருந்து வந்தோ குடியேறிய யாரோ ஒருவன் செய்த சட்டத்திற்குத் தங்கள் மனித உரிமைகளைப் பரம்பரை பரம்பரையாக இழக்கும்படி நேரிட்டது. தங்கள் நாட்டுக்கு வந்தவர்களை அன்பு கொண்டு வரவேற்று தங்கள் உடைமைகளையெல்லாம் அள்ளிக் கொடுத்து உபசரித்த அந்த பண்புமிக்க மக்கள் பரம்பரை யடிமைகளாக வேண்டிய இந்தப் பேரிடியை வாய்பேசாது தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது. கொலம்பசின் துரதிர்ஷ்டம் இத்தோடு நிற்கவில்லை. 1498-ம் ஆண்டில் ஸ்பெயினுக்குத் திருப்பியனுப்பிய சோரியோ என்ற அவனுடைய தலைமைக் கப்பலில் அரசருக்கும் அரசியாருக்கும் அவன் அனுப்பிய குறிப்புப் புத்தகத்தையும், நிலவழி காட்டும் படத்தையும் ஓஜிடா என்பவன் கைப்பற்றிக் கொண்டான். ஒரு கப்பல் தலைவனுக்கு வேண்டிய முக்கியமான இந்த இரண்டு பொருள்களையும் கைப்பற்றிக் கொண்ட ஒஜிடா, அரசியின் அனுமதி பெற்று பரியா மாநிலத்தில் முத்துக் கண்டுபிடிக்க பயணம் புறப்பட்டு விட்டான். அவன் தன்னுடன், நிலப்படம் வரைபவர்களான ஜூலான் டி லாகோசா என்பவனையும் அமெரிகோ லெஸ்பூசி என்பவனையும் அழைத்துச்சென்றான். கொலம்பஸ் மூன்றாவது முறையாகச் சென்ற வழியில் சென்று முத்துக்கள் கிடைக்கும் மார்கரிட்டாவையடைந்து ஏராளமான முத்துக்களைக் கப்பலில் ஏற்றிக் கொண்டான். அரூபா, குராக்காவோ, மராக்கைபோ வளைகுடா முதலியவற்றைக் கண்டுபிடித்துத் திரும்பும் வழியில் சாரகுலா வந்து ரோல்டானுடன் சேர்ந்து கொண்டான். பிறகு அவனுடன் சண்டையடித்துக் கொண்டு, புறப்பட்டு, பஹாமாவில் இறங்கி சிவப்பு இந்தியர்களை வேட்டையாடிப் பிடித்து அடிமைகளாகக் கப்பலில் ஏற்றிக்கொண்டு ஸ்பெயினுக்கு வந்து சேர்ந்தான், சாண்டா மேரியா கப்பலின் முன்னாள் கப்பலோட்டியான வெரலோன் சேர நைனோ என்பவன் ஒரு முறை பரியா மாநிலம் சென்று ஏரானமான முத்துக்களை ஏற்றிக்கொண்டு வந்தான். நைனா கப்பலின் முன்னாள் கப்பல் தலைவனான வின்சென்ட் யலினஜ் பின்சோன் ஒரு பயணம் சென்று அமேசானைக் கண்டுபிடித்து வந்தான். கொலம்பஸ், தான் கண்டுபிடிக்த நாடுகளுக்கு வைசிராய் என்பது ஏட்டளவில்தான் இருந்தது. அவன் அனுமதியில்லாமலே, அவன் அறியாமலே, கப்பலோட்டத் தெரிந்தவனெல்லாம் அமெரிக்காவுக்குச் சென்று வரத் தொடங்கிவிட்டான். அரச சபையிலோ நாளுக்கு நாள் கொலம்பசின் மதிப்புக் குறைந்துவரத் தொடங்கியது. கொலம்பஸ் சகோதரர்களின் ஆதிக்கத்திற்கு எதிர்ப்பான குற்றச்சாட்டுகள் அதிகமாகிக் கொண்டிருந்தன. குடியேற்ற நாட்டிலிருந்து திரும்பி வந்த ஸ்பானியர்கள் பெருந் தொல்லைக்காரர்களாயிருந்தார்கள். அரசர் வெளியில் எங்கு சென்றாலும் அவரைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டு "சம்பளம் சம்பளம்!" என்று கூக்குரலிட்டார்கள். அவரை அசையவிடவில்லை. கொலம்பஸ் மகன்கள் இருவரும் அரசியின் ஏவற்பணி புரியும் பையன்களாய் வேலை பார்த்தார்கள். அரசியுடன் போகும்போது அவர்களைக் கண்ட ஸ்பானியர்கள், கூவிக் கூச்சலிட்டு மட்டந்தட்டிப் பேசினார்கள். "அதோ பார் ! கொசுப்படைத் தளபதியின் மக்கள் போகிறார்கள், ஒன்றும் கிடைக்காத நாடுகளைக் கண்டுபிடித்தவனின் மக்கள் போகிறார்கள் ! ஸ்பானியப்பெருமக்களின் சீரழிவுக்கும் பேரிழவுக்கும் காரணமான அந்த இடுகாடுகளைக் கண்டுபிடித்த கொசுப்படைத் தளபதியின் மக்கள் போகிறார்கள் ! அதோ பார் பார் !” என்று கூவி அந்த இளம் பையன்களை இழித்தும் பழித்தும் பேசினார்கள். தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி ரோல்டான் தனியாகச் சில ஊர்களை வசப்படுத்திக் கொண்டு தனியாட்சி நடத்துகிறான் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட அரசரும் அரசியாரும் மிகக் கவலைப் பட்டார்கள். குடியேற்ற நாட்டில் ஏற்பட்ட குழப்பத்தைப் போக்குவதற்காக மிகுந்த அதிகாரங்கள் கொடுத்து பிரான்சிஸ்கொ டி போபடில்லா என்பவனை ராயல் கமிஷனராக நியமித்து இந்தியத் தீவுகளுக்கு அனுப்பினார்கள். அவன் உடனடியாகப் புறப்பட்டு வந்திருந்தால், ரோல்டானுடன் கொலம்பஸ் சமாதானம் செய்துகொண்டு அமைதியாக இருந்த காலத்தில் வந்து சேர்ந்திருப்பான். நமக்கு இங்கே வேலையில்லை என்று பேசாமல் திரும்பிப் போயிருப்பான், ஆனால், அவன் புறப்படவே ஓராண்டு ஆயிற்று.   போபடில்லா புறப்பட்டு சாண்டா டோமிங்கோ வந்து சேர்ந்தபோது கொலம்பஸ் சகோதரர்கள் மூவரும் மூன்று இடத்தில் இருந்தனர். கொலம்பஸ் லாசா என்ற ஊரில் இருந்தான். பார்த்தலோமியோ சாரகுலாவில் இருந்தான். சாண்டாடோமிங்கோவில் நிர்வாகத் திறமை சிறிதுமற்ற டீகோ இருந்தான். போபடில்லா துறைமுகத்தில் வந்திறங்கி ஊருக்குள் நுழைந்ததும் முதலில் அவனுக்குக் காட்டப்பட்ட காட்சி ஏழு ஸ்பானியப் பிணங்கள் தொங்கிய ஒரு தூக்கு மரம்தான்! அவன் இன உணர்ச்சி மிக்கவன். அவனுக்கு ஸ்பானியர்களின் பிணங்களைப் பார்த்தவுடன் இரத்தம் கொதித்தது. அவன் இது குறித்து டீகோவை என்ன என்று கேட்டபோது அவன், "நாளை இன்னும் ஐந்து பேர் தூக்கிடத் தயாராக வைக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றான், சிரித்துக்கொண்டே அவன் சொல்லிய இந்தச் செய்தியைக் கேட்டுப் போபடில்லா ஆத்திரம் கொண்டான். அந்த ஸ்பானியர்கள் ஆட்சியை எதிர்த்துக் கலகம் செய்தவர்கள். ரோல்டான் உதவியுடன் பிடித்துவரப்பட்டார்கள். இந்த விவரங்கள் போபடில்லாவுக்கு மேலும் அதிர்ச்சியைக் கொடுத்தன. கலகக்காரன் ரோல்டான் கொலம்பசின் கையாள் ஆகீட்டான் என்றவுடன் அவன் தன் அதிகாரத்தை உடனே செலுத்தத் தொடங்கினான். இந்த நிகழ்ச்சி பற்றிக் கொலம்பஸ் சதோதரர்கள் கூற்றை அவன் கேட்கவே தயாராயில்லை. அவன் செய்த முதல் வேலை, ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டதுதான் அடுத்த வேலை. ஆட்சிப் பொறுப்பிலிருந்த கொலம்பசின் சகோதரன் டோன் டீகோவைப் பிடித்துக் கப்பலில் சிறை வைத்ததுதான். கொலம்பசின் அதிகாரத்திற்கு எங்கும் தடையேற்படுத்தினான். தன் ஆட்சியை குடியேற்றவாதிகள் ஏற்றுக் கொள்வதற்காக யாரும் எங்கும் எவ்விதக் கட்டுப்பாடின்றியும் தங்கம் சேர்க்கலாம் என்று அறிக்கையிட்டான். பிறகு, தன்னை வந்து காணும்படி கொலம்பசுக்கே கட்டளை பிறப்பித்தான். கொலம்பஸ் எப்போதுமே அரச ஆணைக்குக் கட்டுப்பட்டு நடப்பவன். போபடில்லா, அரசரும் அரசியும் அதிகாரங் கொடுத்தனுப்பிய ஆள் என்று அறிந்ததும், அவன் கட்டளைக்குக் கீழ்பணிந்து அவனைப் பார்க்க வந்தான், தன்னைப் பார்க்க வந்த கொலம்பசுடன் போபடில்லா, நாட்டு நிலைமை குறித்துப் பேசவில்லை. ஏன் குழப்பும் எப்படிக் குழப்பம் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று ஆராயவில்லை. கொலம்பசைச் சங்கிலிகளால் பிணித்து, நகரத்துச் சிறைச்சாலையிலே அடைத்து வைத்தான். படைவீரர்கள் அனைவரும் அப்போது பார்த்த லோமியோ கொலம்பசின் கையில் இருந்தார்கள். அவன் நினைத்திருந்தால், போபடில்லாவைப் பிடித்துச் சிறையிலடைத்துவிட்டோ, சித்திரவதை செய்துவிட்டோ, கொலம்பசை விடுவித்திருக்க முடியும். ஆனால், அரசர்க்கும் அரசியாருக்கும் செலுத்தும் மரியாதை அதுவல்லவே! ஆகவே, கொலம்பஸ் அவனையும் பணிந்து போகும்படி கூறியனுப்பினான். அவனுக்கும் போபடில்லா கொடுத்த பரிசு, இருப்புச் சங்கிலியும் விலங்கும்தான்! கொலம்பஸ் மீது வெறுப்புக் கொண்டிருந்த ஸ்பானியர்கள் பலரின் குற்றச்சாட்டுக்களையும் சேகரித்து ஒரு குற்ற அறிக்கை தயாரித்தான் போபடில்லா. அந்த அறிக்கையையும், விலங்கிட்ட கொலம்பஸ் சகோதரர்கள் மூவரையும், இரண்டு கப்பல்களில் ஏற்றி ஸ்பெயினுக்கு விசாரணைக்கு அனுப்பிவைத்தான். கொலம்பசை ஏற்றிச் சென்ற கப்பல் தலைவன் அவனிடம் பெருமதிப்பு வைத்திருந்தான். அவன் தானே விலங்குகளை உடைத்துவிட இருந்தான். ஆனால், கொலம்பஸ் அதற்கு இடம் கொடுக்கவில்லை. 'அரச ஆணை பெற்ற. ஓர் அதிகாரியின் கட்டளைக்குக் கீழ்ப்படியாதது அரசர்க்கும் அரசியார்க்கும் கீழ்ப்படியாதது போன்றதாகும். இட்ட விலங்கை அகற்ற இனி அவர்கள்தான் கட்டளை பிறப்பிக்க வேண்டும்' என்று கூறி மறுத்துவிட்டான். காடிஜ் துறைமுகத்தில் இறங்கிய கொலம்பஸ், அரச உத்தரவு வரும் வரை செலில்லி நகருக்கருகில் உள்ள புனித மடாலயத்தில் போய்த் தங்கினான். விடுதலை செய்து தங்களை வந்து பார்க்கும்படி அரசரும் அரசியாரும் ஆணை அனுப்ப ஆறு வாரங்கள் பிடித்தன. அந்த ஆறு வாரங்களும் கொலம்பஸ் பூட்டிய விலங்குடன், காவலாள் மேற்பார்வையில்தான் மடாலயத்தில் இருந்தான். அகற்றப்பட்ட அந்த விலங்குகளையும் சங்கிலியையும், கொலம்பஸ் தன் அறையிலேயே வைத்திருந்தான். எந்த அரசுக்காகத் தான் உலகஞ்சுற்றி நாடுகள் சேர்த்துக் கொடுத்தானோ அந்த அரசு கொடுத்த அந்தப் பரிசை அவன் பத்திரமாகக் காப்பாற்றி வைத்தான். அதுமட்டுமல்ல, அந்த விலங்கையும் சங்கிலியையும் தான் இறந்தபின் தன்னுடன் சேர்த்தே புதைத்துவிட வேண்டும் என்று தன் குடும்பத்தினருக்குக் கட்டளையும் இட்டிருந்தான். அரசரும் அரசியாரும் கொலம்பசை வரவழைத்துக் குற்ற விசாரணை நடத்தவில்லை, அவனிடம் அன்பாகப் பேசி நடந்துபோன செயலுக்காக ஆறுதல் கூறினார்கள். நீதியை நிலைநாட்டுவதாகவும் அவன் இழந்த உரிமைகளையும் அதிகாரங்களையும் திருப்பிக் கொடுப்பதாகவும் வாக்களித்தார்கள். நாட்கள் வாரங்களாயின. வாரங்கள் மாதங்களாயின. எதுவும் நடக்கவில்லை. அவர்களுக்கு எத்தணையோ அரசாங்க அலுவல்கள். கொலம்பஸ் விவகாரமும் இஸ்பானியோலாவும் தானா இன்றியமையாதவை! எட்டு. மாதங்களுக்குப் பிறகு போபடில்லா திருப்பியழைக்கப் பெற்றான். மீண்டும் கொலம்பசை அனுப்பாமல் ஓவாண்டோ என்பவனை கவர்னராக நியமித்து அனுப்பி வைத்தார்கள். ஓலாண்டோ முப்பது கப்பல்களில் 2500 பேருடன் இஸ்பானியோலாவுக்குப் புறப்பட்டுச் சென்றான். கொலம்பசுக்கு, பெருங்கடல் தளபதி, வைசிராய் என்ற பட்டங்களை வைத்துக்கொள்ளும் உரிமை கொடுத்தார்கள். ஓவாண்டாவின் கப்பல்களில் தன் பிரதிநிதியாக ஒருவனை அனுப்பித் தனக்குரிய பகுதிப் பணத்தை வசூலித்துக் கொள்ளவும் அனுமதித்தார்கள். இந்த ஏற்பாடுகளெல்லாம் கொலம்பசுக்கும் பிடிக்கவில்லை. மீண்டும்தான் இந்தியத் தீவுகளுக்குச் செல்ல அனுமதி கேட்டான். கப்பல்களும், செலவு தொகையும் கேட்டான். அவனுடைய வற்புறுத்தலை மறுக்க முடியாமல் அரசரும் அரசியாரும் நான்காவது பயணம் மேற் கொள்ள அவனுக்கு அனுமதி வழங்கினார்கள். ஆனால், ஓவாண்டோ புறப்பட்டுச் சென்ற ஒரு மாதங் கழித்துத்தான் அவர்கள் இந்த அனுமதியை வழங்கினார்கள். கொலம்பஸ் தனது நான்காவது பயணத்தை மேற் கொண்டபோது அவனுக்கு வயது ஐம்பத்தொன்று. வயது அதிகமாகிவிட்டாலும், அப்போதும் அவன் ஒரு சிறந்த மாலுமியாகவே விளங்கினான். அலைகடல் அவனுக்கு விளையாட்டு நிலமாக இருந்தது; அஞ்சாமையும் உறுதியும் நிறைந்திருந்தன. கப்பல்களை நடத்திச் செல்லுவதில் அவன் இணையற்றவனாக விளங்கினான். ஆனால், அவனிடம் இருந்த ஒரே குறை நிர்வாகத் திறமையில்லாமையேயாகும். இதற்கு ஓர் எடுத்துக்காட்டுக் கூறலாம். ஸ்பெயின் அரசாங்கத்தின் பொருளாளனாக இருந்தவன் தன் மைத்துனர் இருவரையும், கப்பல் தலைவர்களாக கூட அழைத்துச் செல்லவேண்டுமென்று கொலம்பசைககேட்டுக் கொண்டான். அவன் தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்கு கொலம்பசைக் கட்டாயப்படுத்தினான். கொலம்பசோ முன்பின் ஆராயாமல் அவர்களைக் கப்பல் தலைவர்களாக அமர்த்திக் கொண்டான். அவர்கள் அசகாய சூரர்கள்! கொலம்பஸ் சகோதரர்கள் மட்டும் அவர்களைக் காட்டிலும் வல்லவர்களாக இல்லாமல் இருந்திருந்தால், தாங்களே அமெரிக்காவைக் கண்டுபிடித்ததாகக் கூறி விடக்கூடியவர்கள். கொலம்பஸ் தன் நான்காவது பயணத்தை நான்கு கப்பல்களுடன் தொடங்கினான். இந்த முறை அவனுடைய குறிக்கோள் கியூயாவுக்கும். பரியா மாநிலம் உள்ள கண்டத்திற்கும் இடையே ஒரு கடற் கால்வாய் வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதேயாகும். இன்னும் அவன் கியூபாவைச் சீனாவின் ஒரு பகுதியென்றே நினைத்துக் கொண்டிருந்தான். இந்தக் கடற் கால்வாய் வழியாகத்தான் மார்க்கோபோலோ சீனாவிலிருந்து இந்திய மாக்கடலுக்குச் சென்றான் என்று கருதினான் கொலம்பஸ். இந்தியாவில் எங்கேனும் அவன் வாஸ்கோடகாமாவைச் சந்திக்கக்கூடும் என்று கருதிய அரசரும் அரசியாரும், அவனுக்கு ஓர் அறிமுகக் கடிதம் எழுதிக் கொடுத்திருந்தனர். நீரோட்டங்களின் வேகத்தை எதிர்த்துக் காற்றின் உதவியால் செல்லக்கூடிய புதுமுறைக் கப்பல்கள் சிலவற்றைக் கட்ட வேண்டுமென்று கொலம்பஸ் எண்ணியிருந்தான். ஆனால் அதற்கெல்லாம் நேரமுமில்லை அந்த ஆராய்ச்சிகளில் செலவழிக்க அவனிடமோ அரசியிடமோ பணமுமில்லை. கிடைத்த பாய்மரக் கப்பல்களை வைத்துக் கொண்டு பயணம் தொடங்கினான். இந்தக் கப்பல்களைச் செலுத்திச் சென்ற மாலுமிகளும் கப்பல் தலைவர்களும் திறமை மிக்கவர்கள். இந்தக் கப்பல் பிரயாணிகளிலேயே குறிப்பிடத்தக்கது ஓர் ஐரிஷ் வேட்டை நாய்தான்! இதை இந்தியர்களை எதிர்த்து நிற்கும் சமயத்தில் அவர்களை விரட்டிக் கடிக்க விடுவதற்காக கொலம்பஸ் கொண்டு வந்தான். இந்தப் பயணத்தில் கப்பலில் வேலைக்கு வந்த மாலுமிகளில் பெரும்பாலோர் இளைஞர்கள். வயதான மாலுமிகளைக் காட்டிலும் இளைஞர்களை அழைத்துச் சென்றதால், வேலைகள் சுறுசுறுப்பாக நடந்தன. கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார்கள். தங்கள் கப்பல் தலைவர்களை மதித்து பணிவுடன் நடந்து கொண்டார்கள். முன் பயணங்களில் வந்த மாலுமிகள், வேலையும் ஒழுங்காகச் செய்ததில்லை. பற்றாக்குறைக்கு, "இவர் என்ன பெரிய ஊரைக் கண்டுபிடித்தார்? கால் காசுக்குப் பெறாத கடல் தீவுகள்!" என்று வேறு பேசினார்கள். இந்தத் தொந்தரவுகன் எல்லாம் இல்லாதொழிந்தன. கப்பல் தலைவர்கள் மாலுமிகள் எல்லோருக்கும் அரசாங்கம் சம்பளம் கொடுத்தது. ஆறு மாதச் சம்பளம் முன்பணமாகக் கொடுக்கப்பட்டது. பயணம் முடிந்து திரும்பி வருபவர்களுக்கு ஒரு பானை பணம் கொடுக்க ஒப்பந்தமாகியிருந்தது. 1502-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாம் நாள் செலிலித் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் புறப்பட்டன. மே பதினொன்றாம் நாள் சாடிஜ் துறைமுகத்தை யடைந்த கப்பல்கள் காற்றுத் தோதாக இல்லாததால் காத்திருக்க நேரிட்டது. மொரோக்கோவில் உள்ள அர்ஜிலாத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுப் பின் புறப்பட்டு மே இருபதில் லாங்பால்மாஸ் துறைமுகம் அடைந்தன. கானரிப் பெருந் தீவுகளிலிருந்து கப்பல்கள் மேற்கு நோக்கிப் புறப்பட்ட நாள் மே இருபத்தைந்து! சரியாக இருபத்தொரு நாள் பயணம் செய்து ஜூன் 15-ம் நாள் தென் டொமினிகாவை அடுத்த தீவான மார்ட்டினிக்கில் நங்கூரம் பாய்ச்சி மாலுமிகள் அங்கே மூன்று நாள் ஓய்வு எடுத்துக் கொண்டார்கள். இந்த மூன்று நாட்களும் ஆள் தின்னும் கரீபியர்களின் தொந்தரவில்லாமல் இருந்தது. ஜூன் 29-ம் நாள் அவன் கப்பல்கள் சாண்டா டோமிங்கோவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தன. சாண்டா டோமிங்கோவிற்குப் போகக் கூடாதென்று அரசரும் அரசியாரும் அவனை மிகவும் எச்சரித்திருந்தார்கள். அங்கு சென்றால் அவனுக்கும் ஓவாண்டோவுக்கும் தகராறு ஏற்படக் கூடும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால். அவர்கள் எச்சரிப்பையும் மீறிக் கொலம்பஸ் அந்த ஊர் நோக்கிச் சென்றான். ஓவாண்டோ திருப்பியனுப்பும் கப்பல்களில் கடிதம் எழுதிக் கொடுத்துவிடலாம் என்பதற்காகவே அங்கு சென்றதாக கொலம்பஸ் சமாதானம் கூறினான். மேலும், ஒரு புயல் இரண்டொரு நாளில் உருவாகக் கூடும் என்று எதிர்பார்த்தான். சாண்டோ டோமிங்கோவை நெருங்கிய கொலம்பரை தன் கப்பல் தலைவர்களில் தலைமையான ஒருவனைக் கரைக்கு அனுப்பினான். கவர்னர் ஓவாண்டோவுக்கு அந்தக் கப்பல் தலைவன் மூலம் கொலம்பஸ் ஒரு கடிதம் கொடுத்துவிட்டான். தன் கப்பல்கள் அங்கு தங்குவதற்கு அனுமதி கேட்டு எழுதியிருந்தான் கொலம்பஸ். அத்துடன் மட்டுமல்லாமல், இரண்டொரு நாட்களில் புயல் உருவாகக்கூடும் என்ற செய்தியையும் குறிப்பிட்டு. கப்பல்கள் எங்கேனும் புறப்படுவதாயிருந்தால் இரண்டு நாட்களுக்குப்பின், புயல் நின்ற பிறகு புறப்படலாம் என்றும், எல்லாக் கப்பல்களுக்கும் இருபுறமும் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் எச்சரித்தும் எழுதியிருந்தான். அகங்காரம் பிடித்த ஓவாண்டோ, கொலம்பஸ் அரும் பாடுபட்டுக் கண்டுபிடித்த ஒரு நாட்டுக்குத்தான் தான் கவர்னராயிருக்கிறான் என்பதையும் எண்ணிக்கூடப் பார்க்காமல், இந்தக் கடிதத்தைத் தன் ஆட்கள் முன்னிலையில் வேடிக்கையாகப் படித்தானாம்! அக்கடிதத்தில் உள்ள சொற்களைப் படிக்கும் போது அவற்றிற்குரிய நடிப்புக்களைச் செய்து காட்டி, நையாண்டி செய்துகொண்டே படித்தானாம்! கூட இருந்தவர்கள் ஆடிப்பாடிப் பரிகசித்தார்களாம்! கொலம்பஸ் தன் கப்பல்களுடன் துறைமுகத்தில் தங்க அனுமதி வழங்க மறுத்துவிட்டான். அத்துடன் நில்லாது, கொலம்பஸ் எச்சரித்திருப்பதையும் பொருட்படுத்தாது தான் முன் ஏற்பாடு செய்திருந்தபடியே தன்னுடன் வந்த கப்பல்களை ஸ்பெயினுக்குத் திருப்பியனுப்பினான். அந்தக் கப்பல்கள் மோனா வழியைச் சுற்றிக்கொண்டு இஸ்பானியோலாவின் தென் கரைப்புறமாகச் சென்ற போது புயலடிக்கத் தொடங்கிவிட்டது. தென்கரைப் புறத்தில் ஒரு துறைமுகங்கூடக் கிடையாது. சுழற்காற்றோ வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் சீறி வந்தது.. ஓவாண்டோவின் அகங்கார மமதைக்கு அந்தக் கப்பல்கள் எல்லாம் பலியாயின. பத்தொன்பது கப்பல்கள், ஏறியிருந்த ஆட்கள், தங்கம், மற்ற பொருள்களோடு அப்படியே மூழ்கிவிட்டன. ஆறு கப்பல்கள் மூழ்கினாலும், அவற்றில் இருந்த சிலர் எப்படியோ தப்பிப் பிழைத்துக் கரையேறி விட்டார்கள். நான்கு கப்பல்கள், சுழலுக்குத் தப்பிப் பத்திரமாக சாண்டா டோமிங்கோ வந்து சேர்ந்து விட்டன என்றாலும், சேர்ந்த உடனேயே துறைமுகத்திலேயே மூழ்கிப் போயின! அப்படிப்பட்ட நிலையில்தான் உயிருக்குப் போராடிக்கொண்டு, அந்தக் கப்பல்களை மாலுமிகள் காப்பாற்றிக்கொண்டு வர முடிந்தது, தப்பிப் பிழைத்து எவ்வித சேதமுமில்லாமல் திரும்பிவந்து, ஸ்பெயினுக்கும் போய்ச் சேர்ந்தது, அந்தக் கப்பலில்தான் கொலம்பசின் வரித் தங்கத்தை வசூலித்துக்கொண்டு அவனுடைய பிரதிநிதியான கார்லாஜல் புறப்பட்டிருந்தான், கார்லாஜலும், கொலம்பசின் தங்கமும், அந்தச் சிறு கப்பலின் மாலுமிகளும் பத்திரமாக ஸ்பெயின் போய்ச் சேர்ந்தனர்.கொலம்பசை எத்தனையோ சோதனைகளுக்காட்படுத்திய கடவுள், அந்த நேரத்தில், நியாயத்தை நிலைநிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவனுடைய தங்கமும் அவனுடைய பிரதிநிதியும் ஏறியிருந்த கப்பலைக் காப்பாற்றி விட்டார் போலும், அதுமட்டுமல்ல, இந்தப் புயலுக்குக் கொலம்பசும் தன் நான்கு கப்பல்களோடு தப்பிவிட்டான். சாண்டோ டோமிங்கோவில், அவன் தங்க ஓவாண்டோ அனுமதி மறுத்துவிட்டான். ஆகவே கொலம்பஸ் சாண்டா டோமிங்கோவிற்கு மேற்கே சிறிது தூரத்தில் உள்ள ரியோ ஜயினா ஆற்று முகவாயிலை அடைந்தான்! அந்த இடம் புயலுக்கு மறைவிடமாயிருக்கும் என்று அவன் கணித்தபடியே நடந்தது. மோனாவழியில் புயல் சீறியடித்தபோது ரியோ ஜயினா முகவாயிலில், காற்றின் அசைவுகூட இல்லாமலிருந்தது! ஆனால், இரவில் வடகாற்றுச் சீறியடித்தது! அதன் கோபத்திற்கு ரியோ ஜயினா முகவாயிலும் ஆளாயிற்று. கொலம்பசின் கப்பல்கள் காற்று வேகத்தில் நங்கூரத்தை அறுத்துக்கொண்டு கடல்வெளியில் தள்ளுண்டு சென்றன. கப்பல்கள் பக்கத்துக்கொன்றாகப் பிரிந்து சென்றன. இருந்தாலும், திறமையும், ஊக்கமும் சுறுசுறுப்பும் உடைய இளம் மாலுமிகளின், விழிப்புணர்ச்சி மிக்க உழைப்பாலும் கடலனுபவத் திறத்தாலும், நான்கு கப்பல்களுமே காற்றை சமாளித்துத் தப்பிவிட்டன. ஒவ்வொரு கப்பலிலும் இருந்தவர்கள், மற்ற மூன்று கப்பல்களுமே மூழ்கிவிட்டன என்று எண்ணிக் கொண்டார்களாம்! ஆனால், ஒரு சிறு துறைமுகத்தில் ஜூலை மாதம் மூன்றாம் நாள் ஞாயிற்றுக் கிழமையன்று அதிசயிக்கத்தக்க முறையில் ஒன்றன் பின் ஒன்றாக நான்கு கப்பல்களும் வந்து சேர்ந்தனவாம். ஒரு கப்பலின் படகும், மூன்று கப்பல்களின் நங்கூரமும் உடைந்து போயின! இவை மட்டுமே பெரிய சேதங்களாம்! பத்து நாள் அசுலா என்ற இடத்தில் தங்கியிருந்து பின் புறப்பட்ட கொலம்பஸ் ஜமைக்காவின் தென்கரை வழியாகச் சென்று கரீபியன் கடலைக் கடந்து சென்றான். போனாக்கா திவில் அவர்கள் நங்கூரம் பாய்ச்சிக் கப்பலை நிறுத்தியிருந்தபோது ஒரு கப்பலளவு பெரிய இந்திய ஓடத்தைக் காண நேரிட்டது. இவ்வோடத்தில், அறைகள் அமைக்கப் பெற்றிருந்தன. பருத்தித் துணிகளும் செப்புத் தளவாடப் பொருள்களும். உலோகங்களை உருக்கப் பயன்படுத்தும் மூசைகளும், ஹியூபோ என்ற பழச்சாற்றில் செய்யப்பட்ட பீர் அடங்கிய சுரைக் குடுக்கைகளும், சாக்சாலோ பீன்சுகளும் அந்த ஓடத்தில் வாணிகச் சரக்குகளாக ஏற்றப்பட்டிருந்தன. அந்த ஓடம் ஓட்டியைக் கொலம்பஸ் பலவந்தமாகப் பிடித்துத் தன் கப்பலில் ஏற்றிக்கொண்டான். அவன் பிறகு, வழிகாட்டியாகவும், மொழி பெயர்ப்பாளனாகவும் கொலம்பசுக்குத் துணையாகப் பயன்பட்டான். ரியோ ரோமானோவிலிருந்து புறப்பட்ட இருபத்தெட்டு நாட்களுக்கு இடையில் கொலம்பஸ் மீண்டும் காற்றின் கொடுமைக்கு ஆட்பட வேண்டியிருந்தது. தொடர்ந்து பெய்த மழையும், இடியும், மின்னலும், இதயங்குலுக்கும் பயங்கரத்தை உண்டாக்கி விட்டன. ஊழிக்கால மழை போல் சிறுங் காற்றோடு கூடித் தொடர்ந்தடித்த இம்மழை. ஊக்கமும் வீரமும் மிக்க பழம் புலிகளையே உள்ளம் குலைய வைத்தது. ஒவ்வொருவரும் தங்களைக் காப்பாற்றிவிட்டால் யாத்திரை போவதாகவும், பாவம் எதுவும் செய்வதில்லை யென்றும் ஆண்டவனைத் தொழுது வேண்டிக்கொண்டார்கள். தங்கள் பாவங்களை யெல்லாம், மற்றவர்கள் காது கேட்கும்படியாகக் கூறி ஒவ்வொருவரும் இறைவனிடம் மன்னிப்புக் கோரித் தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்டார்கள். கொலம்பஸ் தன் மனவுறுதியினாலேயே. இந்நிலையைச் சமாளித்தான் என்று சொல்லவேண்டும். அவனுக்கிருந்த மனவுறுதி யிருந்தாலொழிய வேறு யாரும் இந்தத் துயரத்தினின்று மீண்டிருக்க முடியாது. காற்றோ தொடர்ந்து கீழ்த்திசையிலிருந்து அடித்துக் கொண்டிருந்தது. கடல் நீரோட்டமோ மேல் திசையிலிருந்து கிழக்கு நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. பகலிற் போலவே இரவிலும் கப்பல்கள் மேலும் கீழுமாக அல்லாடிக் கொண்டிருந்தன. யாரும் தூங்க முடியாது. மேலும், படையெடுத்து வந்த கொசுக்களோடு வேறு போராட வேண்டியிருந்தது. கப்பல்கள் ஓரேயிடத்தில் நின்றாலும் ஆபத்தாயிருந்தது; நிற்காமல் சென்றாலும் ஆபத்தாயிருந்தது. ஒரு நாள் சென்ற திசையில் மறுநாள் செல்ல முடியாமலிருந்தது. போன திசையிலிருந்து புறப்பட்ட இடத்திற்கே சில சமயம் திரும்பி வர நேர்ந்தது. எப்படி எப்படியோ சமாளித்து செப்டம்பர் 14:ம் நாள் ஒரு முனையை அடைந்து அத்தீவின் தென்கரைப் பக்கமாகக் கப்பல்களை ஒதுக்கிக் காற்றின் கொடுமைக்குத் தப்பிவிட்டார்கள். நிகாரகுலா என்ற இடத்தில் தண்ணீரும் விறகும் ஏற்றுவதற்காகக் கப்பல்களை நிறுத்தினான். அங்கு இரண்டு மாலுமிகள் ஆற்றில் வீழ்ந்து மூழ்கிப் போனார்கள். அங்கிருந்து கோஸ்டாரிக்காவை அடைந்தார்கள். கோஸ்டாரிக்காப் பகுதியைச் சேர்ந்த உவாத்தீவில் இந்தியர்களிடம் சிறிது வாணிபம் நடந்தது. அந்தத் தீவை ஸ்பெயினுக்கு உரிமைப்படுத்தும் சடங்கைச் செய்வதற்காக பார்த்தலோமியோ கொலம்பஸ், கரைக்குச் சென்றான். தாள். இறகு பேனா, மைக்கூடு ஆகியவற்றுடன் சென்ற மாலுமிகளை மந்திரவாதிகள், என்றும், அவர்களுடைய எழுது கருவிகளை மாந்திரீகக் கருவிகள் என்றும் எண்ணிப் பயந்தார்கள் அந்த இந்தியர்கள். இப்பகுதியின் உள்நாட்டுப் பகுதியை ஆராய்வதற்காக ஆயுதந் தாங்கிய ஒரு குழுவை அனுப்பி வைத்தான் கொலம்பஸ். இங்கு அவர்கள் காட்டு மிருகங்களை வேட்டையாடிக் கொண்டு வந்தார்கள். மான்கள், பூமா என்ற காட்டுப் பூனை, வான் கோழியைப் போன்ற பாலோன் என்ற பறவை இவற்றோடு நீண்ட வாலுடைய ஒருவகைக் குரங்கொன்றை உயிருடன் கொண்டு வந்தார்கள். போர்ட்டோ லிமனிலிருந்த இந்தியர்கள் கொலம்பசுக்கு இரண்டு காட்டுப் பன்றிகளை அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். அவற்றில் ஒன்றைக் கொலம்பஸ் கப்பலிலேயே வைத்துக் கொண்டான். அது கப்பலிலிருந்த வரை அவனுடைய ஐரிஷ் வேட்டை நாய் வெளிக்கிளம்பவேயில்லை. பயந்து போய் ஒரு மூலையிலே பதுங்கிக் கிடந்தது. ஆனால், நீண்ட வால் குரங்குக்கும், அந்தக் காட்டுப் பன்றிக்கும் ஒரே போட்டியாய் இருந்தது. இரண்டையும் சண்டைக்கு வீட்டுப் பார்ப்பதில் ஸ்பானியர்கள் வேடிக்கையாகப் பொழுது போக்கினார்கள். வால்குரங்கு வேட்டையில் காயமுற்றிருந்த போதும், பின்வாங்காமல் போரிட்டது. காட்டுப் பன்றியின் நீண்ட வாயைத் தன் வாலினால் சுற்றிக் கட்டிவிட்டு, அதன் கழுத்தைப்பிடித்து கொண்டு, அது கதறித் துடிக்கக் கடித்துக்கொண்டிருந்தது. இரக்கவுணர்ச்சி சிறிதுமில்லாமல் மாலுமிகள் இந்தச் சண்டையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.   ஒரு வளை குடாப் பகுதியில், நாட்டின் உட்பகுதியில் இருந்த இந்தியர்கள் தங்க வளையங்களை அணிந்திருந்தார்கள். மூன்று பருந்து மணிகளுக்கு ஒரு வளையம் வீதம் அவை வாங்கப்பட்டன. இதில் ஒன்றுக்கு நான்கு மடங்கு இலாபம் இருந்தது. இங்கு தான் தேடிவந்த கடல்வழிக் கால்வாயைக் கண்டுவிட்டதாகக் கொலம்பஸ் எண்ணிக் கொண்டான். கைச்சாடை மூலம் ஏதேனும் கடற்கால்வாய் இருக்கிறதா என்று இந்தியர்களைக் கேட்டதற்கு, அவர்கள் ஒரு சிறு கால்வாயிருந்த திசையைக் காட்டினார்கள். மிகக் குறுகிய அதன் வழியாகக் கால்வாய்கள் சென்று கடைசியில் ஒரு கடல் ஏரியை யடைந்தன. இந்திய மாக்கடலை யடைவதற்குப் பதிலாக, சுற்றிலும் மலைகள் சூழ்ந்த இந்த ஏரியையடைந்து ஏமாந்தான் கொலம்பஸ். இங்கும் தங்க வளைய வாணிகம் நன்றாக நடந்தது. சைகை மொழியைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், இந்தியர்களுடன் பேசிய கொலம்பஸ், கங்கையாறு அங்கிருந்து பத்து நாள் பயணத்தில் தான் இருக்கிறதென்று கற்பனை செய்துகொண்டான். பல இடங்களைச் சுற்றிக்கொண்டு நவம்பர் 2-ம் நாள் போர்ட்டோ பெல்லோ துறைமுகத்தை யடைந்தான். இத் துறைமுகம் மிக அழகானது. இங்கு தங்கம் கிடைக்காததால் கொலம்பஸ் தங்கவில்லை. கொலம்பஸ் இங்கு சில நாள் தங்கியிருந்திருந்தால் பனாமாக் கடல் கால்வாயைக் கண்டுபிடித்திருப்பான். ஆனால், பொன்னில்லா ஊரில் பொறுத்திருக்க வேண்டாம் என்று ஒரு வாரத்தோடு புறப்பட்டு விட்டான். எஸ்கிரிபானோ என்ற சிறு துறைமுகத்தில் இறங்கிய மாலுமிகள், ஊருக்குள் சென்று துப்பாக்கியின் உதவியால் சில இந்தியர்களை மிரட்டிப் பொருள்களைப் பறித்துக் கொண்டு வந்தனர். இது பேராபத்தாக முடிந்தது. இந்தியர்கள் பெரும்படையாகத் திரண்டு கடற்கரைக்கு வந்து விட்டார்கள். அவர்களைக் கலைப்பதற்காக துப்பாக்கியால் சுட்டுச் சிலரைக் கொல்லும்படி நேர்ந்தது. தங்க வியாபாரத்திற்காக மீண்டும் கப்பல்கள் போர்ட்டோ பெல்லோவுக்குத் திரும்பி வந்தன. அங்கு காற்றும் மழையும் பலமாகப் பிடித்துக் கொண்டன. இங்கு கொலம்பஸ் பைபிளிலுள்ள புனித உபதேசங்களில் சிலவரிகளைப் படித்தவுடன் மழை நின்றுவிட்டதாம். பனாமாக் கால்வாய்ப் பகுதியில் உள்ள கிரிஸ்டோபல் துறைமுகத்தில் கிறிஸ்துமசும், 1503-ம் ஆண்டுப் பிறப்பும் கழிந்தன. ஆனால், அவை புத்துணர்ச்சியுடன் கொண்டாடப்படவில்லை. கொலம்பசுக்குப் பொறுமையிருந்திருந்தால் அப்போது பனாமாக் கால்வாயைக் கண்டுபிடித்திருக்க முடியும். ஆனால், அவன் அப்போது அலுத்துக் களைத்துப் போயிருந்ததால், அந்தப் பகுதியைச் சுற்றி ஆராய முற்படவில்லை. ஆகவே, அவன் நான்காவது பயணம் புறப்பட்டுச் சென்ற நோக்கம் சிறிதும் நிறைவேறாமலே போயிற்று. மேல்திசை வழியாகத் திரும்பத் தொடங்கிய கொலம்பஸ், தங்கம் நிறையக் கிடைக்கக் கூடிய ஓரிடத்தைக் கண்டுபிடித்து வாணிய நிலையமாக்கவேண்டும் என்று எண்ணினான். வெராகுலா ஆற்றங்கரைப் பகுதியில் ஆற்றின் முகவாயில் அருகில் இருந்த ஒரு குன்றிருந்த இடத்தை அவன் நகரமாக்கத் திட்டமிட்டான். அந்த இடம் மிக அழகாக இருந்தது. அதன் அழகில் மயங்கியே கொலம்பஸ் வாணிப நிலையமாக்க எண்ணினான். பெலன் என்ற இடத்தில் ஸ்பானியர்கள் கோட்டை கட்டித் தங்கலானார்கள். அந்தப் பகுதியின் சிவப்பு இந்தியத் தலைவன் குயிபியன் என்பவன் முதலில் நட்பாகத்தான் இருந்தான், தன் ஆட்களோடு வந்து கொலம்பசின் கப்பலில் விருந்துண்டு சென்றான். ஆனால், ஸ்பானியர்கள் அங்கேயே நிலையாகத் தங்க முடிவுகட்டி விட்டார்கள் என்றவுடனே அவன் பலவழிகளில் தொந்தரவு கொடுக்கத் தொடங்கிவிட்டான். அதன் பின் அந்தப் பகுதியில் வெள்ளையர்கள் உயிரோடு இருப்பதே அரிதாகத் தோன்றியது. கடைசியில் பல தொல்லைகளுக்குப் பின், பல ஸ்பானியர்களைப் பலிகொடுத்தபின் கொலம்பஸ் அந்த இடத்னத விட்டு விட்டுப் புறப்பட முடிவு கட்டினான். 1503-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாம் வாரத் துவக்கத்தில் பெலன் பகுதியை வீட்டுப் புறப்பட்ட கொலம்பஸ் சாண்டா டோமிங்கா சென்று கப்பல்களைப் பழுது பார்த்துக் கொண்டு போக எண்ணினான். கொலம்பஸ் தன் அனுபவத்தின் துணையால், சாண்டா டோமிங்கோவிற்கு விரைவாகப் போய்ச் சேரக்கூடிய வழியில் கப்பலைச் செலுத்தினான். கீழைக் காற்றுகளைச் சமாளித்துப் போவது எளிதல்ல. ஆசுவே, கரையோரமாகவே சென்று இஸ்பானியோலாவின் தென்பகுதியை அடைய வேண்டும் என்று திட்டமிட்டான். ஆனால், மற்ற கப்பல் தலைவர்கள், முன்பின் தெரியாத முறையில் கப்பலைச் செலுத்திக்கொண்டு போக விரும்பவில்லை. வழியில் கொலம்பசைச் சூழ்ந்துகொண்டு வட திசையில் கப்பலைத் திருப்பும்படி கட்டாயப்படுத்திக் தொந்தரவு கொடுத்தார்கள். கப்பல்கள் மிகவும் ஓட்டையாகி விட்டன. ஓட்டைகளின் வழியாகத் தண்ணீர் கப்பல்களுக்குள் புகுந்து கொண்டேயிருந்தது. மாலுமிகள் அல்லும் பகலும் குழாய்களின் மூலம் தண்ணீரை வெளியேற்றிக்கொண்டே யிருந்தார்கள்.   எப்படியெப்படிப் பட்ட தொல்லைகளை யெல்லாமோ அனுபவித்துக்கொண்டு ஜூன் 25-ம் நாள் ஜமைக்காவில் உள்ள செயின்ட் ஆன் விரிகுடாவில் உள்ள சாண்டா குளோரியாவை அந்தக் கப்பல்கள் அடைந்தன. ஓட்டையாக இருந்த அந்தக் கப்பல்களை நீரில் விட்டு வைப்பது பயனில்லை என்று கண்ட கொலம்பஸ் அவற்றைக் கடற்கரை மணற்பகுதியில் கரை தட்டச் செய்தான். அவற்றை ஒன்றன் அருகில் ஒன்றாக முட்டுக் கொடுத்து நேராக நிற்க வைத்து, அக்கப்பல்களின் மேலேயே ஓலை வேய்ந்து, ஆட்கள் தங்குவதற்கு அறைகள் அமைத்தான். ஏறக்குறைய அங்கு அவர்கள் ஓராண்டு காலம் தங்கி யிருந்தார்கள். அருகில் இருந்த சிற்றூரில் இருந்த இந்தியர்கள் நட்பு முறையில் பழகினார்கள். தன் ஆட்களைக் கரையில் விட்டால், விரைவில் அந்த நட்பைப் போக்கிப் பகைமை வளர்த்துவிடுவார்கள் என்று கண்ட கொலம்பஸ் தன் அனுமதியில்லாமல் யாரும் கப்பல்களை விட்டுப் போகக் கூடாதென்று கட்டளையிட்டுவிட்டான். ஓராண்டாக அங்கு தங்கிய ஸ்பானியர்கள் தங்கள் தேவையைத் தாங்களே நிறைவேற்றிக் கொள்ளச் சிறிதும் முயலவே இல்லை. நிலவளமிகுந்த அந்தப் பகுதியில் உணவுத் தானியங்களைப் பயிரிட்டிருக்கலாம். மீன் பிடித்திருக்கலாம். அதெல்லாம் செய்யவில்லை. டீகோ மெண்டஸ் என்ற கப்பல் தலைவன் உணவு பெறுவதற்காக இந்தியர்களுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டான். இரண்டு பாசி மணிகளுக்கு ஒரு கசாவா ரொட்டித் துண்டும், சரிகைத் துண்டு ஒன்றுக்கு ஒரு பெரிய குழி முயலும் கொடுக்கவேண்டும் என்று ஏற்பாடு செய்து கொண்டான். இந்தியர்கள் மட்டும் உணவு கொடுக்காமல் இருந்திருந்தால், ஸ்பானியர்கள் பட்டினி கிடந்தே செத்துப் போயிருக்க நேரிட்டிருக்கும். அங்கிருந்து எப்படித் தாய்நாட்டுக்குத் திரும்புவது என்பது பெரிய பிரச்சினையாகி விட்டது. கப்பல்கள் அந்தப் பக்கம் வருமென்று எதிர்பார்ப்பதற்கும் வழியில்லை. யாராவது ஒருவர் துணிந்து இஸ்பானியோலா நோக்கிப் புறப்பட்டுச் சென்று, அங்கிருந்து ஓர் உதவிக் கப்பலைக் கொண்டுவந்தால் நல்லது என்று எல்லோரும் கருதினார்கள். ஆனால், யார் போவது? டீகோ மெண்டஸ் உதவியைத்தான் எல்லோரும் நாடினார்கள். டீகோ மெண்டஸ் இந்தியர்களிடமிருந்து ஒரு பெரிய ஓடத்தை விலைக்கு வாங்கினான். அதற்குப் பாய்மரமும் பாய்களும் அமைத்தான். ஒரு சிறு கப்பல் போல் அதை மாற்றியமைத்தான். இஸ்பானியோலா நோக்கிப் புறப்பட்டான். ஆனால், வழியில் வடமுனையில் ஓரிடத்தில் வாழ்ந்த இந்தியர்கள் அவனைப் பிடித்துக் கொண்டார்கள். அவன் எப்படியோ தப்பிப் பிழைத்து சாண்டா குளோரியாவுக்கே திரும்பி வந்து சேர்ந்தான். மறுபடியும் அவன் புறப்பட்ட போது ஜினோவாக்காரனான பீக்கி என்ற மற்றொரு கப்பல் தலைவன் இன்னொரு ஓடத்தில் அவனுக்குத் துணையாகப் புறப்பட்டான். ஓடத் துக்கு ஒரு தலைவனும், ஆறு வெள்ளையர்களும் பத்து இந்தியர்களுமாகப் பதினேமும் பதினேழும் முப்பத்து நான்கு பேர் புறப்பட்டுச் சென்றார்கள். இந்தியர்கள் பாதி வழியிலேயே இருந்த தண்ணீரையெல்லாம் குடித்துத் தீர்த்து விட்டார்கள். தண்ணீர் தவிப்பெடுத்தே ஓர் இந்தியன் இறந்து போனான். மற்றவர்கள் துடுப்பு வலிக்கக்கூட வலுவில்லாமல் சோர்ந்து கிடந்தார்கள். நமாசா என்ற இடத்தில் எல்லோரும் கரைக்குச் சென்று, வயிறு கொண்ட மட்டும் நல்ல தண்ணீரைப் பருகி. மீன் கறி சமைச்துச் சாப்பிட்டார்கள். மறுநாள் மாலை இஸ்பானியோலாவின் டிபுரான் முனையை அடைந்துவிட்டார்கள். அங்கு புதிதாகச் சில இந்தியப் படகோட்டிகளைத் துடுப்பு வலிக்க அமர்த்திக்கொண்டு அசூலாவிற்கு வந்து சேர்ந்தான். அங்கிருந்து கால்நடையாகச் சென்று கவர்னர் ஓவாண்டோ இருந்த இடத்தையடைந்தான். கவர்னர் ஓவாண்டோவிடம் அப்போது இரண்டு கப்பல்கள் துறைமுகத்தில் இருந்தன. ஆனால், அவற்றில் ஒன்றைக்கூட அவன் கொலம்பசையும் ஆட்களையும் மீட்டு வர அனுப்ப இசையவில்லை. கொலம்பஸ் வந்தால் மீண்டும் அவனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துத் தான் பதவியை விட்டுவிட நேரிடும் என்று அஞ்சினான் கொலம்பஸ் ஜமைக்காவிலே இருந்து தொலைந்துவிட்டுப் போகட்டும் என்று எண்ணினான். ஏற்பாடு செய்வோம், செய்வோம் என்று சொல்லிச் சொல்லி ஏழு மாதம் வரை மெண்டசைக் காக்கவைத் தான். கடைசியில் கால்நடையாகச் சென்று சாண்டா டோமிங்கோவில் வேறு கப்பல்கள் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்ள அனுமதித்தான். தன் வசமிருந்த இரண்டு கப்பல்களில் ஒன்றைக் கூடக் கொடுக்க முடியாதென்று கண்டிப்பாக மறுத்துவிட்டான். கப்பல் கொண்டுவரப் போனவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. ஆறுமாதமாகியும் ஆறுதலான செய்தி எதுவும் கிடைக்கவில்லை. கொலம்பசுடன் கூட இருந்த மாலுமிகளில் சிலர் முணுமுணுத்தார்கள். கொலம்பசுக்கும் அவர்களுக்குமிடையே சச்சரவு மூண்டது. எதிர்ப்பாளர்கள், போராஸ் சகோதரர்களின் தலைமையில் ஒன்று திரண்டார்கள்   ”கொலம்பஸ். இந்தத் தீவிலேயே நாடு கடத்தப்பட்டவனாக கிடக்கட்டும். வாருங்கள்! நாம் இஸ்பானியோலா நோக்கிப் புறப்படுவோம்" என்று போராஸ் சகோதரர்கள் கூட்டம் சேர்த்தார்கள். 48 பேர் கையில் கிடைத்த துப்பாக்கிகளுடன் புறப்பட்டார்கள். 1504-ம் ஆம் ஆண்டுப் பிறப்புக்கு மறுநாள் ”ஸ்பெயின் செல்லுவோம்”; என்ற முழக்கத்துடன் பத்து ஓடங்களில் அவர்கள் கீழ்த்திசை நோக்கிப் புறப்பட்டார்கள். கரையோரமாகவே சென்ற அவர்கள் ஆங்காங்கே இருந்த சிற்றூர்களில் இறங்கி, சிவப்பு இந்தியர்களின் குடிசைகளில் புகுந்து கொள்ளையடித்தார்கள். கொள்ளை யடித்துக் கிடைத்த உணவுப் பொருள்களுடன் பயணத்தைத் தொடர்ந்தார்கள். பதினைந்து மைல் தூரம் தான் போயிருந்தார்கள். எதிர்க்காற்று அவர்களை மேலே போக விடாமல் தடுத்தது. ஓடங்கள் மூழ்கிவிடும் போலிருந்த நிலையில் கொள்ளையிட்ட பொருள்களைக் கடலுக்குள் எறிய வேண்டி நேரிட்டது. பளுவைக் குறைப்பதற்காகச் சில இந்தியத் துடுப்புக்காரர்களையும் கடலுக்குள் பிடித்துத் தள்ளினார்கள். மேற்கொண்டு போகவே முடியாதென்ற நிலையில் அருகில் இருந்த கரையில் ஒதுங்கினார்கள். மறுபடியும் இரண்டு முறை முயன்றும் காற்றை எதிர்த்துப் போக முடியவில்லை. ஓடங்களை விட்டுவிட்டுக் கரையோரமாக கால்நடையாக சாண்டா குளோரியாவுக்கே திரும்பிச் சென்று சேர்ந்தார்கள். இதற்கிடையில் கொலம்பசும், அவனிடம் பற்றுக் கொண்டு உடன் தங்கியவர்களும் பசியால் வாடும் நிலை ஏற்பட்டது. இந்தியர்களிடம் ரொட்டித் துண்டு வாங்கப் பயன்பட்ட பருந்து மணிகளும், சரிகைத் துண்டுகளும் தீர்ந்துவிட்டன. மேற்கொண்டு எப்படி உணவு பெறுவதென்று தெரியாமல் விழித்தார்கள். கொலம்பஸ் ஒரு தந்திரம் செய்தான். அவனிடம் இருந்த நாட்பஞ்சாங்கத்தில், பிப்ரவரி மாதம் 29-ம் நாள் பூரண சந்திரக் கிரகணம் என்று குறிப்பிட்டிருந்தது இதைக் கண்டு கொண்ட கொலம்பஸ் பக்கத்து ஊர்களிலிருந்த சிவப்பு இந்திய இனத்தவர்களையெல்லாம் கிரகணத் தன்று வரவழைத்தான். கப்பல் தட்டுக்கு வந்த அவர்களிடம், தொடர்ந்து அவர்கள் கிறிஸ்தவர்களுக்கு உணவு கொடுத்துவர வேண்டுமென்பதே ஆண்டவனின் விருப்பம் என்று சொன்னான். அவ்வாறு கொடுக்காவிட்டால் ஆண்டவன் கோபம் கொள்ளுவார் : சந்தேகமிருந்தால் அன்றிரவு சந்திரனைக் கவனிக்கலாம் என்றுரைத்தான். சந்திரன் தோன்றியது. சிறிது நேரத்தில் கிரகணம் பீடிக்க ஆரம்பித்தது. சந்திரனை இருள் கவ்விப் பரவப் பரவ இந்தியர்களின் பீதி அதிகரித்தது. ஆண்டவன் சந்திரனையே அழித்து விடுவாரோ என்று பயந்தார்கள். இரவில் வெளிச்சம் இல்லாமலே போய்விடுமோ என்று நடுங்கினார்கள். கப்பல்கள் நின்ற இடத்திற்கு ஓடி வந்தார்கள். ”நிறுத்துங்கள், நிறுத்துங்கள்! நீங்கள் சொல்கிற படியெல்லாம் கேட்கிறோம்" என்று கொலம்பசை வேண்டினார்கள். கொலம்பஸ் மலுக்கிக் கொண்டான். பேசாமல் கப்பல் அறையில் போய்ப் படுத்துக்கொண்டான். நேரத்திற்கு நேரம் வெளியில் இந்தியர்களின் பீதிக் கூச்சல் அதிகமாகிக் கொண்டிருந்தது. கிரகணம் விலக ஆரம்பிக் கும் நேரத்தில் கொலம்பஸ் வெளியில் வந்தான். "உங்கள் குறையை ஆண்டவனிடம் சொன்னேன் ; நீங்கள் எங்க ளுக்கு நாள்தோறும் உணவுப் பொருள்கள் கொடுப்பதாயிருந்தால் மன்னித்துச் சந்திரனை விட்டுவிடுவதாக இறைவன் கூறுகிறார்" என்றான். "எப்படியாவது சந்திரனை விட்டால் போதும்" என்று இந்தியர்கள் அவனை வேண்டினார்கள். அதன்பின் சந்திர கிரகணம் விலகியது. கொலம்பசின் உணவுப் பஞ்சமும் ஒழிந்தது. மார்ச் மாதக் கடைசியில் மெண்டஸ் புறப்பட்டுச் சென்ற எட்டாவது மாதம் ஒரு கப்பல் சாண்டா குளோரியா அருகில் வந்தது. அதை இஸ்பானியோலா கவர்னர் ஓவாண்டோ தான் அனுப்பியிருந்தான். கொலம்பசும், அவன் ஆட்களும் இன்னுமா உயிருடன் இருக்கிறார்கள் என்று பார்த்து வரும்படி அந்தப் படுபாதகன் அக்கப்பலை அனுப்பியிருந்தான். ஓர் ஆளைக் கூட ஏற்றிக்கொண்டு வரக் கூடாதென்று அந்தக் கப்பல் தலைவனுக்கு அவன் கடுமையான உத்தரவிட்டிருந்தானாம். ஆனால், இரண்டு பீப்பாய் திராட்சை மதுவும் சிறிது உப்பிட்ட பன்றிக்கறியும் அவன் வெகுமதியாக அனுப்பியிருந்தான். அத்தோடு அந்தக் கப்பல் தலைவன் ஒரு நல்ல செய்தி கொண்டுவந்திருந்தான். உதவிக் கப்பல் கொண்டுவர மெண்டஸ் முயற்சி செய்து கொண்டிருக்கிறான் என்பதே அந்நற்செய்தி. கப்பல் சென்றபின் போராஸ் சகோதரர் கூட்டத்துக்கும் கொலம்பஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே ஒரு சிறு சண்டை ஏற்பட்டது. இருக்கும் ஆயுதங்களைக் கைப்பற்றுவதற்காகவே அவர்கள் சண்டையிட்டார்கள்: கடைசியில் கொலம்பஸ் பக்கத்தாருக்கே வெற்றி கிட்டியது. போராஸ் சகோதரர்கள் இருவரைத் தவிர மற்ற அனைவரும் மன்னிப்புப் பெற்றார்கள். அவர்கள் இருவரும் பாதுகாவலில் வைக்கப்பட்டார்கள். ஜமைக்காவில் குடியேறி ஓராண்டு கழிந்தபின் மெண்டஸ் அனுப்பிய ஒரு சிறு ஓட்டைக் கப்பல், உயிர் பிழைத்திருந்த சுமார் நூறு பேரையும் ஏற்றிக்கொண்டு இஸ்பானியோலாவுக்குப் போய்ச் சேர்ந்தது. அங்கிருந்து மற்றொரு கப்பலை அமர்த்திக்கொண்டு கொலம்பஸ் ஸ்பெயினுக்குத் திரும்பினான். ஜமைக்காவிலிருந்து வந்தவர்களில் பலர் அவனுடன் ஸ்பெயினுக்குத் திரும்பவில்லை. சாண்டா டோமிங்கோவிலேயே தங்கிவிட்டார்கள். ஜமைக்காவிலிருந்து வரும் வழியில் கப்பலில் ஓட்டை வழியாக நிரம்பிய தண்ணீரை இரைத்து வெளியேற்றும் வேலையிலேயே பத்துப்பேர் செத்துப் போனார்கள். மீண்டும் ஒரு கடற்பயணத் துன்பத்தைத் தாங்கக்கூடிய வலுவை அவர்கள் இழந்திருந்தார்கள். உண்மையில் கொலம்பஸ் ஸ்பெயினுக்குத் திரும்பிய பயணமும் நீண்டதாகவும் கொந்தளிப்பு நிறைந்ததாகவும் இருந்தது. இரண்டரையாண்டுகள் கழித்து அவன் ஸ்பெயினுக்குத் திரும்பிய நான்காவது பயணம் பயனுள்ளதாக இல்லை. அவன் நினைத்தபடி கடற்கால்வாய் வழி கண்டுபிடிக்க முடியவில்லை. வாணிப நிலையம் ஏற்படுத்திய வெராகுவா, தங்கம் கிடைக்கும் இடமாயிருந்தாலும் தங்கியிருக்கக் கூடிய இடமாக இல்லாமற் போய்விட்டது. எவ்வித பலனுமின்றியே அவன் தன் நான்காவது பயணத்தை முடித்துக்கொண்டு ஸ்பெயின் போய்ச் சேர்ந்தான். -------------               11. கதை முடிந்தது அலுப்பும் கொண்டு இன் விவர அலுப்பும் சலிப்பும் நிறைந்த தன் நீண்ட நான்காவது பயணத்தை முடித்துக் கொண்டு ஸ்பெயின் வந்து சேர்ந்தான் கொலம்பஸ். தன் பயணத்தின் விவரங்களைக் குறித்து, அரசர்க்கும் அரசியார்க்கும் டீகோ மெண்டஸ் வசம் ஒரு கடிதம் கொடுத்தனுப்பினான். அரசரும் அரசியாரும் கொலம்பசுக்கு வேறு எதுவும் செய்யவில்லை என்றாலும், அவனை நேரில் அழைத்துப் பயணம் பற்றி விசாரிக்கக் கூட இல்லை. வெளிநாடு. சென்று வந்த ஒரு கப்பல் தலைவனுக்கு கிடைக்க வேண்டிய மிகக் குறைந்த இந்த மரியாதை கூடத் தனக்குக் கிடைக்கவில்லையே என்பதை எண்ணி நொந்து போனான் கொலம்பஸ். கொலம்பஸ் ஸ்பெயின் வந்து சேர்ந்த சமயத்தில், செகோவியா என்ற ஊரில் தங்கியிருந்த அரசி இசபெல்லா நோய்வாய்ப்பட்டிருந்தாள். அது காரணமாகவே கொலம்பஸ் அழைக்கப் பெறவில்லை என்று அரசாங்கச் சார்பில் கூறப்பட்டது. நோயினால் துன்புற்றிருக்கும் அரசியாரைக் கொலம்பஸ் வந்து சந்தித்துத் தன் துயரக் கதைகளைக் கூறினால், அது அரசியாரின் உடல் நிலையைப் பாதிக்கும் என்று அரசர் கருதினார். ஆகவே, கண்டிப்பாகக் கொலம்பசுக்கு அரசியைக்காணும்: அனுமதி வழங்கப்படக் கூடாதென்று அவர் கட்டளையிட்டிருந்தார். மெடினா டெல்காம்போ என்ற நகரில் இருந்த போது ஸ்பெயின் நாட்டின் பேரரசி இசபெல்லா 1504 - ம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ம் நாளன்று உலகவாழ்வை நீத்தாள். அவள் இறந்து போனதை எண்ணிப் பெருந்துயர் உற்றவன் கொலம்பஸ் ஒருவனே! இந்தப் பரந்த உலகில் அவனுக்கு ஆதரவளித்த ஒரே இதயம் அரசி இசபெல்லாவினுடையதுதான் மன்னாதி மன்னர்கள் இந்த மாநிலத்தில் பலர் இருந்தாலும், அவனுடைய மதிப்பை உள்ளபடியே கணித்தறிந்தவள் அவள் ஒருத்தியேதான் பின்னும் பின்னும், அவன் மீது பழியும் குற்றமும் பலர். சாட்டிய போதும், அவனுக்கு அனுசரணையாக நின்று அவனுடைய துயரத்தைத் துடைத்த அன்னை போல் இருந்தவள் அவள் ஒருத்தியேதான்! அரசர் பெர்டினான்ட் கூட் கொலம்பசை ஒரு தலைவலியாகவே கருதினார். ஆனால், அரசியாரின் மனத்தை வருத்தக் கூடாதென்றே அவர் கொலம்பசுக்கு ஆதரவு தருவதில் பங்கு கொண்டார். அரசி இசபெல்லா மட்டும் இல்லாதிருந்தால், கொலம்பஸ் தான் கண்ட கனவுகளை உள்ளத்திலே அழுத்தி அழுத்தவைத்துக் கொண்டு பித்தம் பிடித்தவனாய்ப் போயிருப்பான், அல்லது, நடைப் பிணமாக வாழ்க்கை நடத்திக் கொண்டு இருந்திருப்பான். தனக்கு ஆதரவு தந்த அரசியின் ஈமச் சடங்குகளில் கலந்து கொள்ளக் கூட கொலம்பசால் முடியவில்லை. அவனுடைய மூட்டுவாதம் அதிகமாகி அவனைப் படுத்த படுக்கையாக்கி விட்டது. செவிலியில் உள்ள சாண்டா மேரியா தேவாலயத்தைச் சேர்ந்த ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தான் கொலம்பஸ். பொருளாதார நிலையைப் பொறுத்தவரை, அவன் அப்போது போதுமான அளவு செல்வம் வைத்திருந்தான் என்றே சொல்ல வேண்டும் ஒப்பந்தப்படி அவனுக்குச் சேரவேண்டிய பல தொகைகள் கிடைக்கவில்லை என்றாலும், ஓரளவு கிடைத்ததே போதுமானதாகத்தான் இருந்தது. அவன் தன் நான்காவது பயணத்தில் கொண்டுவந்த தங்கம் நிறைய இருந்தது. அது தவிர அவனுடைய வரிப் பங்குப் பணமாக கப்பல் தலைவன் காரலாஜல் கொண்டு வந்து சேர்த்த தங்கம் வேறு இருந்தது. அதுவுமல்லாமல் கவர்னர் ஓவாண்டோ வேறு சாண்டா டோமிங்கோ சென்றிருந்தபோது அவனுக்குரியதாக ஒரு பேழை நிறையத் தங்கம் கொடுத்திருந்தான். இருந்தாலும் தனக்குச் சேர வேண்டியது முற்றிலும் சேரவில்லை என்ற குறையிருந்தது கொலம்பசுக்கு. ஒப்பந்தப்படி அவனுக்குச் சேரவேண்டிய பொன் முழுவதும் ஒழுங்காகக் கொடுக்கப் பட்டுவந்திருந்தால், அவனும், அவனுடைய சந்ததியினரும், மன்னர்களைக் காட்டிலும் பெரிய செல்வந்தர்களாகியிருக்க முடியும். சிறிது உடல் நலம் ஏற்பட்டவுடன் கொலம்பஸ் அரசர் பெர்டினாண்டைச் சந்திக்கப் புறப்பட்டான். குதிரை வளர்ப்பவர்களின் கட்டுப்பாட்டின் காரணமாக அக்காலத்தில் ஸ்பெயினில் யாரும் மட்டக் குதிரை வைத்துக் கொள்ளக் கூடாதென்று சட்டம். இருந்தது குதிரையில் ஏறிச் சென்றால், கொலம்பசுக்கு அப்போதிருந்த உடல் சிலையில் வேதனை பொறுக்க முடியாததாயிருக்கும். ஆகவே, தனக்கு ஒரு மட்டக்குதிரை வாங்க அனுமதி வேண்டும் என்று கேட்டிருந்தான் கொலம்பஸ். கருணையுள்ளத்தோடு அரசர் பெர்டினாண்ட் அனுமதி வழங்கினார். மட்டக்குதிரையில் ஏறிப் பயணம் செய்து, அரசர் தங்கியிருந்த செகாவியா என்ற ஊருக்குப் போய்ச் சேர்க்தான். அரசர் பெர்டினாண்ட் அவனை அன்போடு வரவேற்றா. கொலம்பஸ் ஒப்பந்தப்படி கேட்பதெல்லாம் கொடுக்கக் கூடிய நிலையிலோ, மனப்பாங்கிலோ அரசர் இல்லை. கொலம்பஸ் தன் ஒப்பந்தப்படி உள்ள உரிமைகளை யெல்லாம் விட்டுக் கொடுத்துவிட்டால், அவனுக்கு நல்ல வரும்படி வரக்கூடிய பெரும் பண்ணை ஒன்றையளிப்பதாகக் குறிப்புக் காட்டினார் அரசர். அதற்கெல்லாம் கொலம்பஸ் சிறிதும் ஒப்புக் கொள்ளவில்லை. கிடைத்தால் முழுவதும் கிடைக்க வேண்டும் இல்லாவிட்டால் எதுவும் வேண்டாம் என்று கண்டிப்பாகக் கூறிவிட்டான் அவன், அவனுக்கு எதுவும் கிடைக்காமலே போய்விட்டது. அரசர் செல்லுமிடமெல்லாம் அவனும் தொடர்ந்து சென்றான். . ஓராண்டு, சென்றபின்னும் அவனுடைய வேண்டுகோள் செவிசாய்க்கப்படவில்லை. அவனுடைய மூட்டுவாதம் அதிகரித்துக் கொண்டேவந்தது. எப்படியும் கடைசியில் தனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. எல்லாம் தனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவன் ஓர் உயில் எழுதி வைத்தான். தனக்கு வரும் வரிவருமானங்களையெல்லாம் சிலுவைப் போர் நிதிக்குக் கொடுக்க வேண்டும் என்று எழுதிவைத்தான். ஜினோவாவில் தன் பரம்பரையினருக்காக ஒரு மாளிகை எழுப்ப வேண்டுமென்று எழுதி வைத்தான். இஸ்பானியோலாவில் ஒரு தேவாலயம் கட்டி அவன் ஆத்மா சாந்தியடைய நாள் தோறும் தொழுகை நடத்திவர வேண்டும் என்று எழுதி வைத்தான். இந்த நற்செயல்களுக்குப் பயன்படுவதற்காகவாவது அரசர் மனத்தை மாற்றி அத்தனையும் கிடைக்குமாறு ஆண்டவன் அருள் புரியமாட். டாரா என்று எண்ணினான் கொலம்பஸ். கடைசிநேரத்தில், தன் தாயின் அரசுரிமையைக் கேட்டுப் பெற்றுக் கொள்வதற்காக ஜூலானா இளவரசி ஸ்பெயினுக்கு வந்திருந்தாள். தாய் அளித்த சலுகையை மகள் அளிப்பாள் என்ற நம்பிக்கையோடு அவளைக் கண்டு பேசி வரத் தன் சகோதரன் பார்த்தலோமியோவை அனுப்பி வைத்தான் கொலம்பஸ். பார்த்தலோமியோ புறப்பட்டுச் சென்ற பின் கொலம்பஸ் உடல் மிகத் தளர்ச்சியுற்றது. 1506 ம் ஆண்டு மே மாதம் 19 ம் நாள் அவன் தன் கடைசி உயிலை எழுதிவைத்தான். தன் மகன் டோன் டீகோவைத் தன் நேர் வாரிசாகக் கொண்டு மற்ற உறவினர்களுக்கும் சிலச்சில உரிமைகளைக் கொடுத்து அந்த உயிலை எழுதி வைத்தான். உயில் எழுதிய மறுநாள் திடீரென்று உடல் நிலை கவலைக்கிடமாயிற்று. மதகுரு ஒருவர் அழைத்துவரப்பட்டார். கொலம்பசின் மகன்கள் இருவரும் தம்பி டீகோவும் மெண்டஸ், பீச்சி போன்ற நண்பர்களும் மற்றும் சில நண்பர்களும் உறவினர்களும் படுக்கையைச் சுற்றி நின்று இறை வணக்கம் செய்தார்கள். "ஆண்டவனே, உன் கைகளிலே என் ஆவியை ஒப்படைக்கிறேன்" என்று சேசுநாதர் கூறிய அதே சொற்களைத் தன் சொல்லாகக் கூறி கொலம்பஸ் உயிர் நீத்தான்.ஓர் அரசப்பிரதிநிதிக்கு, மிகப்பெரிய சிறப்புக்குரிய பெருங் கடல்தளபதிக்கு உரிய முறையில் அவன் ஈமச் சடங்குகள் செய்யப்படவில்லை. மிகமிக எளிமையான முறையில் யாரோ மூலையில் கிடப்பவனுக்குச் செய்வது போல் அச்சடங்குகள் செய்யப்பெற்றன. அவன் இருந்த போதோ, இறந்த போதோ யாரும் அவனுடைய பெருமையை உணரவில்லை. சொல்லப் போனால், கொலம்பசே, தான் கண்டுபிடித்துள்ள இடம் மிகப் பெரியதும், மிக வளமுள்ளதுமான அமெரிக்கக் கண்டம் என்பதை உணர்ந்து கொள்ளவில்லை. காலமும் நேரமும் அவன் பாடுபட்டுக் கண்டுபிடித்ததன் பலனை அனுபவிக்காமல் செய்துவிட்டன. நாளாக ஆகத்தான் அவன் பெருமை மக்கள் மனத்தில் இடம் பெற ஆரம்பித்தது. யாரோ நாங்கள் தான் அமெரிக்காவைக் கண்டுபிடித்தோம் என்று சொலலிக் கொண்டதெல்லாம் தவறான செய்திகள் என்பதும், உண்மையில் அதைக் கண்டுபிடித்தவன் கொலம்பஸ் என்பதும் பிற்காலத்தில் உறுதிப்பட்ட செய்தியாகிவிட்டது. இன்று கொலம்பஸ் உலகவரலாற்றிலே, ஒரு முக்கியமான இடம் பெற்றுவிட்டான். காலகாலத்திற்கும் அவன் பெயர் ஒளி வீசித் திகழும் தன்மையைப் பெற்றுவிட்டது.   கொலம்பஸ் இறந்து மூன்றாண்டுகளானபின், அவனுடைய மகன் டோன் டீகோ இஸ்பானியோலாவின் கவர்னராக நியமிக்கப் பெற்றான். அவனுக்குரிய பரம்பரைப் பட்டங்களும் அளிக்கப் பெற்றன. இச்செயல் மூலம் ஓரளவு கொலம்பசின் விருப்பம் அரசரால் நிறைவேற்றப்பட்டது என்றே சொல்ல வேண்டும். கொலம்பஸ் தெய்வபக்தியுள்ளவன்; அதைக் காட்டிலும் மதபக்தி நிரம்பியவன். சிவப்பு இந்தியர்களை அவன் மனமறிந்து கொடுமைப் படுத்திய துண்டு: அடிமைகளாக்கி விற்றதுண்டு என்றாலும் பல சமயங்களில் அவன் அவர்களிடம் மனிதாபிமான உணர்ச்சியோடு நடந்திருக்கிறான். அவன் அவர்களைக் கொடுமையாக நடத்திய தெல்லாம் கால நெருக்கடியின் காரணமாகத்தான். தன் வாழ்வின் பெரும் பகுதியைக் கடலிடையிலேயே கழித்த அவன், தன் ஆராய்ச்சி வேட்கையின் காரணமாகப் பெரும் புயல்களையும் அவற்றின் கொடுமைகளையும் பொறுத்துக் கொண்டிருந்திருக்கிறான். ஊக்கமும் விடாமுயற்சியும் மிகுந்தவனாக இருந்தும், அவன் தன் செயல்களில் பெருந்தோல்விகளையே காணநேரிட்டது. அதற்குரிய காரணத்தையும் ஆங்காங்கே இக்கதையில் விளக்கிக் கூறப்பட்டுள்ளது. விஞ்ஞான வசதிகள் இல்லாத அக்காலத்தில் புத்தம்புதிய இடங்களைக் கண்டுபிடிப்பதும், போனவழியே திரும்பி வருவதுமே அரிய காரியங்கள். கொலம்பஸ் பலநேரங்களில் தோல்வியைச் சந்தித்தான் என்றால், அதற்கு அவனுடைய ஊக்கமின்மை காரணமன்று. ஒன்றைத் தேடுகிறவன், அது உள்ள இடத்தை விட்டு விட்டு மற்ற இடம் அனைத்தையும் தேடிப்பார்த்துவிட்டுத் திரும்பும் கதை போலவே கொலம்பஸ் செயல்கள் அனைத்தும் முடிந்திருக்கின்றன. இந்த முறையிலே தான் இந்தியாவைத் தேடிவந்தவன் அமெரிக்காவைக் கண்டுபிடித்தான். ஆனால், அமெரிக்கா தன் பெருவளம் முழுவதையும் அவன் கண்ணுக்குக் காட்டாமல் ஏமாற்றிவிட்டது. கொலம்பகடன் கூடச்சென்றவர்கள், அவன் கொசுப் படைத்தளபதி என்று கிண்டல் செய்யும் அளவுக்கு அமெரிக்கா வெற்று நிலமாகத் தோன்றியது. ஆனால் அவனுக்குப் பின்னால் சென்றவர்கள் சிறிது சிறிதாக அந்நிலத்தின் தங்கவளத்தைக் கண்டார்கள். ஆசியாவில்தான் தங்கம் நிறையக் கிடைக்கிறதென்று எண்ணி, இந்தியாவையும் சீனாவையும் பற்றிக் கனவுகண்டு கதை பேசிக் கொண்டிருந்த ஐரோப்பியர்கள் அமெரிக்காவில் தங்கம் கிடைக்கிற தென்றவுடன் கூட்டங் கூட்டமாக அங்கே குடியேறினார்கள். இன்று அமெரிக்கா உலகத்திலேயே மிகப்பெரிய வல்லரசாகவும், செல்வத்திருநாடாகவும் விளங்குகிறது. இன்றைய அமெரிக்காவின். மூல முதல்வன் கொலம்பஸ் தான்! ஆம்! பெருங்கடல்தளபதி கிரிஸ்டாபர் கொலம்பஸ் தான்!. -------------   This file was last updated on 6 June 2020. Feel free to send the corrections to the Webmaster.     FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்:  மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்:  ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்:  தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி?  அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா?  கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com  இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்?  யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும்.மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்?  ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும் எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா?  உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com  2. www.badriseshadri.in  3. http://maattru.com  4. kaniyam.com  5. blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது?  இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G +: https://plus.google.com/communities/108817760492177970948  நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது?  அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்?  ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.    தவிர்க்க வேண்டியவைகள் யாவை?  இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.    எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி?  நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - email : freetamilebooksteam@gmail.com   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948     இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்?  குழு – https://freetamilebooks.com/meet-the-team/  Supported by  - Free Software Foundation TamilNadu, www.fsftn.org   - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/