[] 1. Cover 2. Table of contents கங்கைகொண்ட சோழபுரம் கங்கைகொண்ட சோழபுரம்   டாக்டர். இரா.நாகசாமி   tamilarts.academybooks@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA-NC கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/gangai_konda_cholapuram மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com மெய்ப்புப் பார்ப்பு : விக்கிமூல பங்களிப்பார்கள் அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Proof Reader : Wikisource Constributors Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation This Book was produced using LaTeX + Pandoc முன்னுரை தாஞ்சையில் பெருங்கோயில் கட்டிச் சீரும் சிறப்புமாக ஆண்ட முதலாம் இராஜராஜ சோழனின் அருமை மைந்தன், முதலாம் இரஜேந்திர சோழன். வடக்கே கங்கை நதி வரை (தற்கால ஒரிஸ்ஸா, வங்காளம், கல்கத்தா உள்பட) தன் படையை அனுப்பி பெரும் வெற்றி கண்டு கங்கைகொண்ட சோழன் என்று பட்டம் கொண்டு அதன் நினைவாக அவன் நிறுவியது கங்கைகொண்ட சோழபுரம் என்னும் தலைநகர். அங்கு ஓங்கு புகழ் கங்கைகொண்ட சோழீச்சுரம் என்னும் பெருங்கோயில் ஒன்றையும் நிர்மாணித்துள்ளான். கங்கைகொண்ட சோழபுரம் இப்பொழுது திருச்சி மாவட்டம் உடையார்பாளயம் தாலுக்காவில் ஜயங்கொண்டானுக்கு அருகிலுள்ளது. கும்பகோணத்திலிருந்து அணைக்கரை வழியாக அரியாலூர் செல்லும் பஸ்கள் இவ்வூர் வழி செல்கின்றன. முதல் இராஜேந்திர சோழன் தோற்றிவித்த நாளிலிருந்து (1025 முதல்) சுமார் 250 ஆண்டுகள், தென்னாட்டிலேயே ஈடு இணையற்ற தலைநகராக திகழ்ந்தது கங்கைகொண்ட சோழபுரம். வடக்கே துங்கபத்திரை ஆற்றங்கரையிலிருந்து தெற்கே ஈழம் முழுவதும், மேற்கே மகோதயபுரம் (மேலைக் கடற்கரை - கொடுங்கோளூர்) முதல் கிழக்கே வங்கக்கடல் கடந்து கடாரம், ஸ்ரீவிஜயம் வரை (இன்றய மலேசியா, சிங்கபூர் கீழைத்தீவுகள்) தனி ஒரு குடைக்கீழ் ஆண்ட ஒப்பெரும் நகரம் கங்கைகொண்ட சோழபுரம். இந்திய நாட்டு வரலாற்றிலேயே கடல் கடந்து மாற்றான் நாட்டிலேயே அவனை வென்று திறை கொண்டுவந்து குவித்த வீரமிகு தானை தலைவர்கள் இவ்வூரிலிருந்துதான் சென்றனர். இராஜேந்திர சோழனின் ஆற்றலுக்கும், புகழுக்கும் ஏற்ப இத்தலைநகரும், கோயிலும் விளங்கின. அனால் சோழர் ஆட்சியின் இறுதியில் ஏற்பட்ட தளர்வின் காரணமாக இத்தலைநகர் மறைந்து போயிற்று. ஆயினும் இராஜேந்திரனின் திறமையின் சிகரமாக அவன் தோற்றுவித்த கோயில் இன்றும் எஞ்சியுள்ளது. தமிழ்நாட்டின் தலைநகராக மதுரை, காஞ்சி, தஞ்சை போன்ற நகர்கள் திகழ்ந்தன, ஆனால் எந்த தலைநகரையும் ஆட்சியின் சிறப்பிலே, வெற்றி குவித்த வீரத்திலே இதற்கு ஈடாக குறிக்க முடியுமா எனில் இயலாது என்றே சொல்லலாம். ஆனல் இந்நகர் போல வேறு எந்த தலைநகரும் இருந்த இடமே தெரியாது மண்ணோடு மண்ணாக மறைந்து போனதும் இல்லை. இன்றும் அது இருந்த இடத்துக்குச் சென்றால் “இராஜேந்திர சோழன் வாழ்ந்த அத்தலைநகர் எங்கே?” தன் ஆட்சி முழுவதும் திசை எங்கும் சென்று இறுதி வரை தன் முதிர்ந்த வயதிலும் யானை மீதமர்ந்து போர் முகத்து வெற்றி முழக்கமிட்டு உருவிய வாளுடன் பாய்ந்து வாகை சூடி உயிர் நீத்தானே இராஜாதிராஜன் “யானைமேல் துஞ்சிய தேவன்” அவன் வாழ்ந்த இடம் எங்கே? சின்னஞ் சிறு வாயதில் முடிசூடி சோழர் தம் பெருமையை உலகறியச் செய்தானே குலோத்துங்க சோழன்; ஜெயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணி கொண்டவன் அவன் இருந்த அரண்மனை எங்கே? விக்ரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன் போன்ற பின் வாழ்ந்த சோழர்களும், ஜெயங்கொண்டார், சேக்கிழார், ஒட்டக்கூத்தர் போன்ற புகழ்மிகு புலவர்களும் வாழ்ந்த இடம் எங்கே? என்று கேட்க தோன்றும்! ஒரு குடிசை கூட இல்லாத திறந்த வெளியாகத்தான் இந்நகர் காட்சி அளிக்கிறது. நமது குரல் திறந்த வெளியிலே பரவி ஏக்கக் குரலாக எதிரொலிக்கும். அந்த அளவுக்கு இருந்த தடையமே தெரியாது மறைந்து போன ஒரே தலைநகரம் இதுவே. ஆயினும் இந்த ஊரும், இதன் அருகில் உள்ள உள்கோட்டை, வீரசோழபுரம், போன்ற ஊர்களின் பெயர்களும் இதன் சிறப்பை நினைவு கூர்பவையாக இருக்கத்தான் செய்கின்றன. இவ்வாண்டு (1980) தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, இங்குள்ள மாளிகை மேட்டை அகழ்வு செய்து சோழ மாளிகையின் பகுதிகளை வெளிக் கொணர்ந்திருக்கிறது. இது இன்னும் விரிவாக்கப்பட இருக்கிறது. இதன் பயனாக இதன் வரலாறும், புகழும் சிறக்கும் என்பதில் ஐயமில்லை. இராஜேந்திர சோழன் இராஜராஜ சோழனுக்கு, திரிபுவன மாதேவி என்று பெயர் பெற்ற சேரகுலப் பெண்டு வானவன் மாதேவியாரின் வயிற்றில் உதித்தவன் முதல் இராஜேந்திர சோழன். அவன் பிறந்த திருநக்ஷத்திரம் திருவாதிரை. இவன் இளங்கோவாக இருந்தபோதே சுமார் 900,000 வீரர்களுக்குத் தலைமை தாங்கி, வடக்கே பீஜாப்பூர் வரையிலும் வெற்றி நடைபோட்டு மேலைச் சாளுக்கியரை வென்ற புகழாளன். வேங்கியையும், கங்கை மண்டலத்தையும் காத்து நின்றவன் இவனே என்றும் கூறுவர். இரஜராஜன் தன் ஆற்றல் மிகுந்த மைந்தனுக்குக் கி.பி. 1012-ல் முடி சூட்டினான். தன் தந்தையுடன் இராஜேந்திரன் சுமார் நான்கு ஆண்டுகளாவது சேர்ந்து ஆண்டிருக்க வேண்டும். இராஜராஜனின் ஆட்சிச் சிறப்பையும், இராஜேந்திரனின் வீரச் சிறப்பையும் வரலாற்று ஆசிரியர்கள் பலவாறாகவும் புகழ்ந்துள்ளனர். “இராஜேந்திரன் பட்டம் எய்தியபோது, அவனது தந்தை, இராஜராஜன் மிகப் பரந்த சாம்ராஜ்யத்தை நிறுவி தன் மகனிடம் ஒப்படைத்தான். வியக்கத்தகும் வகையில் அரசாங்கம் செயல்பட்டது. பல உயர்தர அதிகாரிகள் சீரும் சிறப்புமாக மிகவும் நுண்ணிதாக அரசியல் பணிகளைக் கண்காணித்தனர். வேளாண்மை, பெரும்சாலைகள், நீர்பாசனம், வரி முதலிய துறைகளிலும் தேர்ந்தவர் பலர் பணியாற்றினர். அன்றிருந்த வணிகர்களின் குழுக்களும், ஊர்ச்சபைகளும், கைவினைஞர் குழுக்களும், முழு உரிமைகளுடன் செயல்பட வாய்பளிக்கப்பட்டிருந்தன. நாட்டில் அமைதி எங்கும் நிலவியது. பலதிறப்பட்ட வீரர்படைகளும் நன்கு தேர்ச்சி பெற்று, வலுவான படைகளாகத் திகழ்ந்தன. முதல் இராஜேந்திரன் இவையனைத்தையும் மேலும் விரிவாக்கினான். சோழ சாம்ராஜ்யாத்தை, என்றும் கண்டிராத அளவுக்கு விரிவாக்கியதோடு ஆசிய நாட்டிலேயே மிகச் சிறந்த இந்து சாம்ராஜ்யமாகத் திகழச் செய்தான்” என்று வல்லுனர்கள் கூறுவர். இராஜேந்திரனின் வெற்றிகள் இராஜேந்திரன் சோழன் பரகேசரி என்று பட்டம் பூண்டான். அவன் அடைந்த வெற்றிகளைப் படிப்படியக அவனது மெய்கீர்த்திகள் கூறுகின்றன. “திருமன்னிவளர இருநில மடந்தையும், போர் செயப்பாவையும் சீர்தனிச் செல்வியும் தன்பெருந்தேவியராகி இன்புற” என்று அவனது மெய்கீர்த்திகள் தொடங்குகின்றன. அவன் இடைத்துறை நாடு, வனவாசி, கொள்ளிப்பாக்கை, மண்ணைக் கடக்கம் முதலான வெற்றி கொண்டு தெற்கே ஈழமண்டலம் முழுவதையும் வென்று, ஈழத்து அரசனுடைய முடியும், அவனுது தேவியர் முடியும் கைப்பற்றினான். இராஜேந்திர சோழனுக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பராந்தக சோழன் பாண்டியரை வென்றான். தோற்றோடிய பாண்டியன் ஈழத்தில் தஞ்சம் புகுந்தான். தனது மகுடத்தை ஈழத்தில் பதுக்கிவைத்தான். அந்த முடியை இராஜேந்திரன் வென்று கைப்பற்றிக் கொணர்ந்தான். பாண்டியர்கள் பெருமையுடன் தரித்துக்கொண்டது, ‘இந்திரன் ஆரம்’ எனப்பட்டது. அதுவும் ஈழத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது. அதையும் இராஜேந்திரன் கைப்பற்றினான். பெருங்கடல் ஈழத்தரசர் தம்முடியும் ஆங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும் முன்னவர் பக்கல் தென்னவன் வைத்த சுந்தரமுடியும் இந்திரனாரமும் தெண்டிரை ஈழமண்டல முழுவதும் என்று அவன் மெய்கீர்த்தி கூறுகிறது. முதலாம் இராஜேந்திர சோழன் பாண்டிய நாட்டை வென்று அங்கு ஒரு பெரும் மாளிகை எடுப்பித்து தன்னுடைய மகனை பாண்டி நாட்டின் அரசன் ஆக்கினான். அவனுக்கு சோழ பாண்டியன் என்று பட்டம் அளித்து ஆளவகை செய்தான். சேர நாட்டை வென்று, அந்த நாட்டு முடியையும் மாலையையும் கைப்பற்றியாதோடு, அரண்கள் சூழ்ந்த சாந்திமத்தீவில் பரசுராமனால் வைக்கபட்டிருந்த பொன் முடியையும் கைப்பற்றினான். முயாங்கி என்ற இடத்தில் மேலைச் சாளுக்கிய மன்னன் ஜெயசிங்கன் என்பவனை வென்று இரட்டைப்பாடி, ஏழரை இலக்கத்தைக் கைப்பற்றினான். இதனைப் “பயங்கொடு பழிமிக முயங்கியில் முதுகிட்டு ஒளித்த ஜெயசிங்கன் அளப்பரும் புகழொடு இரட்டைப்பாடி, ஏழரை இலக்கம்” கண்டான் என்று கல்வெட்டு கூறும். சுள்ளி சூழ்ந்த கொள்ளிப்பாக்கையைக் கைப்பற்றினான் என்றும் கல்வெட்டு கூறுகிறது. பின்னர் கலிங்கப் பகுதியில் பல இடங்களை வென்று கங்கை நதிவரையில் வெற்றி கண்டதை அவனது கல்வெட்டுக்கள்: விக்கிரம வீரர் சக்கராக் கோட்டமும் முதிர்பட வல்லை மதுரை மண்டலமும் காமிடை வளைஇய நாமணைக் கோணமும் வெஞ்சின வீரர் பஞ்சப் பள்ளியும் பாசடைப் பழன மாசுணி தேசமும் அயர்வில் வண்கீர்த்தி ஆதிநகர் அகவையிற் சந்திரன் தொல்குலத்து இந்திரரதனை விளையமர்க் களத்துக் கிளையொடும் பிடித்துப் பலதனத் தொடுநிறை குலதனக் குவையும் கிட்டருஞ் செறிமிளை ஒட்ட விஷயமும் பூசுரர் செருநற் கோசல நாடும் என்று கூறுகின்றன. கங்கை வெற்றி கங்கை நதி வெற்றி ஒரு மாபெரும் வெற்றியாக, வேறு எந்த தமிழ் மன்னனும் வென்றிராத அளவுக்கு அடைந்த பெரும் வெற்றியாக திகழ்ந்தது. அவனது தானைத் தலைவர்கள் கங்கையாற்றிலிருந்து புனித நீரை வெற்றிச் சின்னமாக எடுத்து வந்தனர். வெற்றி வாகையோடு திரும்பிய அந்த வீரர்களை இராஜேந்திர சோழன் தானே கோதாவரி வரையில் சென்று வரவேற்றான். அங்கிருந்து கொண்டு வந்த நீரை கங்ககொண்ட சோழபுரத்தில் கொண்டு வந்து “சோழ கங்கம்” என்ற பெரும் ஏரி ஒன்றை தோண்டி அதில் ஊற்றி அதனை ஒரு ஜல மயமான வெற்றிச் சின்னமாக ஆக்கினான் என்று வரலாறு கூறும். அவ்வாறு வரும் வழியில் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகில் உள்ள திரைலோக்கி என்ற ஊரில் உள்ள சிவன் கோயிலில் தங்கத்தால் ஆன தாமரை மலரைச் சிவபெருமானுக்கு வைத்து வணங்கினான் என்று அறிகிறோம். இந்த கங்கை வெற்றியின் காரணமாக “கங்கைகொண்ட சோழன்” என்று புகழ் பெற்றான். அதன் நினைவாக “கங்கைகொண்ட சோழபுரம்” தலைநகராகத் தோன்றியது. கடல் கடந்த வெற்றி பின்னர் இராஜேந்திர சோழன் ஆழ்கடல் நடுவில் பல கலங்களைச் செலுத்தி ஸ்ரீவிஜயத்து அரசன் சங்கிராம விஜயோத்துங்கவர்மன் என்பவனை வெற்றி கண்டான். அங்கிருந்த நாடுகளையும், நகரங்களையும் கைப்பற்றி, அங்கிருந்த வித்தியாதர தோரணம், தங்கத்தால் ஆன கதவுகளும் இன்னும் ஏராளமான நிதிக் குவியல்களும் அவனது கப்பல் படையால் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு கொண்டு வந்து சேர்க்கச் செய்தான். கடல் கடந்து கடாரத்து அரசனை வென்ற இராஜேந்திரன் திறன், அவனது கப்பற் படையின் வீரம் இந்திய நாட்டில் வேறு எவரும் காணத ஒரு பெரும் வெற்றியாகும், ஆதலால் அவனைக் “கடாரம் கொண்ட சோழன்” என்று கல்வெட்டுக்கள் புகழ்கின்றன. மேலும் “நிகோபார்” என்கின்ற “நக்கவாரத்தை” வென்று அங்கு புலிக்கொடியைப் பொறிக்கச் செய்திருக்கிறான். இச்செய்தி பின்வருமாறு; நித்தில நெடும்கடல் உத்திரலாடமும் வெறிமலர்த் தீர்த்தத்து எறிபுனல் கங்கையும் அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்திச் சங்கிராம விசையோத்துங்கவர்மன் ஆகிய கடாரத்து அரயனை வாகையம் பெருகடல் கும்பக் கரியொடும் அகப்படுத்து உரிமையில் பிறக்கிய பருநிதிப் பிறக்கமும் ஆர்த்து அவன் அகநகர்ப் போர்த்தொழில் வாசலில் விச்சாதிரத் தோரணமும் மொய்த்து ஒளிர் புனைமணிப் புதவமும் கனமணிக் கதவமும் திறைசீர் விசயமும் துறைநீர்ப் பண்ணையும் வண்மலை ஊர் எயில் தொன்மலை ஊரும் ஆழகடல் அகழசூழ் மாஇரு திங்கமும் கலங்கா வல்வினை இலங்கா சோகமும் காப்புறு நிறைபுனல் மாப்பப்பாளமும் காவலம் புரிசை மேவிலிம்பங்கமும் விளைப்பந் தூருடை வளைப்பந் நூரும் கலைத்தக்கோர் புகழ் தலைத் தக்கோலமும் தீது அமர் பல்வினை மாதமாலிங்கமும் கலாமுதிர் கடுந்திறல் இலாமுரி தேசமும் தேனக்கவார்பொழில் மாநக்கவாரமும் மாப்பெருந் தண்டால்கொண்ட கோப்பரகேசரிவன்மரான உடயார் ஸ்ரீ ராஜேந்திர சோழதேவர் அப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம். இராஜேந்திர சோழனுக்கு கங்கைகொண்ட சோழன், மும்முடிச்சோழன், மதுராந்தகன், உத்தம சோழன், பண்டித சோழன், வீர சோழன், பூர்வதேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட அய்யன் பரகேசரி என்ற பட்டப் பெயர்கள் உண்டு. “வடதிசை கங்கையும், தென்திசை ஈழமும், குடதிசை மகோதமும், குணதிசை கடாரமும்” அவனது எல்லைகளாகத் திகழ்ந்தன. அவனுக்கு வானவன் மாதேவி, பஞ்வன் மாதேவி, முக்கோக்கிழான், வீரமாதேவி என்ற பல தேவியர் இருந்தனர். பெரும் புகழ் மன்னன் வடக்கே கஞ்சிபுரத்துக்கு அருகில் பிரும்மதேசம் என்ற இடத்தில் இறந்தான். அவனது உடல் ஈமத்தீயில் இடப்பட்டது. அப்போது அவனது தேவி வீரமாதேவி என்பவள் தீப்பாய்ந்து உயிர் நீத்தாள். வீரமாதேவியின் அண்ணன், அவர்கள் உயிர் நீத்த இடத்தில் தண்ணீர் பந்தல் ஒன்றை வைத்து அவ்வழி செல்வோர்க்கு நீர் அளிப்பதற்காக வகை செய்தான். இராஜாதி இராஜன் இராஜேந்திர சோழனுக்கு விஜய இரஜேந்திரன், இராஜேந்திரன், வீர இராஜேந்திரன் என்ற மூன்று மக்கள் இருந்தனர். விஜய இராஜேந்திரன் என்பவனே முதலாம் இராஜாதி இராஜன் என்பவனாகும். அவனை இராஜேந்திர சோழன் கி.பி. 1018-ல் இளங்கோவாக முடி சூட்டினான். கி.பி. 1044-ல் இரஜேந்திரன் இறக்கும் வரையில் முதலாம் இரஜாதி இராஜன் தன் தந்தையோடு ஆட்சி செய்தான். பல போர்களில் வெற்றி பெற்று வீரவாகை சூடிய வீரப் பெரும் மன்னன் முதல் இராஜாதி இராஜ சோழன் ஆவான். கங்கைகொண்ட சோழபுரத்தில் முதன் முதலில் முடி சூடப்பட்ட சோழ மன்னன் முதலாம் இராஜாதி இராஜன் ஆகத் தோன்றுகிறது. முதலாம் இராஜாதி இராஜன் தான் அரியணை ஏரிய நாள் தொட்டு இறுதிநாள் வரையில் பல்வேறு இடங்களிலும் போரிட்டு, பெரும் வெற்றி குவித்து இறுதியில் யானை மீது அமர்ந்து, சாளுக்கிய மன்னனோடு போரிட்டுக் கொண்டிருக்கும் போது, இறந்து போனான். ஆதலினால் அவன் “கல்யாண புறமும், கொல்லா புறமும் கொண்டு யானை மேல் துஞ்சிய அண்ணல்” என்ற பட்டம் பெற்றான். இராஜதி இராஜன் சாளுக்கிய மன்னனோடு போரிட்டுக் கொண்டிருந்த போது சாளுக்கிய படைகள் இராஜாதி இராஜன் மீது குவிந்து அவனை வீழ்த்தின. தங்களது மன்னன் வீழ்ந்ததைக் கண்டு கலங்கய சோழர் படை அங்குமிங்குமாகத் திரிந்து புறமுதுகிட்டு ஓடத் தொடங்கின. வீரத்தோடு போர் புரிந்த பெரும் படை கலங்கி பின்னிட்டு ஓடுவதை அதன் பின்னே நின்று கொண்டிருந்த இராஜேந்திர சோழன், முதலாம் இராஜாதி இராஜனின் தம்பி "இதோ நான் இருக்கிறேன், முன்னேறுங்கள்! முன்னேறுங்கள்! என்று குரல் கொடுத்துப் பின்னிட்டு வரும் படையின் நடுவே பாய்ந்து அதன் முன் சென்று, சாளுக்கிய வீரர்கள் ஓட போர் புரிந்தான். தோற்று சின்னாபின்னமாக சிதறி ஓட இருந்த படை இரண்டாம் இராஜேந்திரனின் பின் அணி வகுத்து மீண்டும் போரில் பாய்ந்தன. ஒரு வினாடியில் தோற்க இருந்த படை முன்னேறி இராஜேந்திரனின் வீர முழக்கத்தோடு ஆக்கம் கொண்டு சாளுக்கிய வீரர்களை வீழ்த்தின. அக்கணமே வெற்றி சோழரை அடைந்தது. யாரும் கண்டிராத வெற்றி. ஆதலின் இரண்டாம் இராஜேந்திர சோழன் அந்த வெற்றி பெற்ற களத்திலேயே முடி சூட்டிக்கொண்டான். கங்கைகொண்ட சோழபுரத்தில் சீரும் சிறப்புமாக முடி சூட்டிக்கொள்ள வேண்டியவன், அதைக்காட்டிலும் அரிதான முடிசூட்டு விழாவைத் தான் வெற்றி கண்ட போர்களத்திலே நடத்திய பெருமகன் ஆவான். அவனுக்கு அடுத்து அவனுடய மகன் ராஜமகேந்திரன் என்பவன் மிகக் குறுகிய காலம் ஆண்டிருக்கிறான். இரண்டாம் இராஜேந்திரனுக்குப் பின் தோன்றிய வீர இராஜேந்திரன் பேரரசனாகக் கங்கைகொண்ட சோழபுரத்தில் முடி சூடிக் கொண்டான். சுமார் ஏழு ஆண்டுகள் ஆண்ட வீர இராஜேந்திர சோழனின் கல்வெட்டு கங்கைகொண்ட சோழீச்சுரம் கோயிலில் காணப்படுகிறது. முதலில் வீர இரஜேந்திரன் சாளுக்கிய மன்னனோடு போர் தொடுத்தான். வெற்றியும் கண்டான் ஆயினும் இறுதியில் தன்னுடைய பெண்ணை சாளுக்கிய அரசானுக்கு மணம் செய்து கொடுத்தான். அவனுடய ஆட்சியன் இறுதிக் காலத்தில் தன்னுடைய மகன் அதிராஜேந்திரனுக்கு முடிசூட்டி வைத்தான். குலோத்துங்க சோழன் முதலாம் இராஜேந்திர சோழனுக்கு அம்மங்காதேவி என்று ஒரு பெண் இருந்தாள். அவளை முதலாம் இராஜேந்திர சோழன் கீழைச் சாளுக்கிய அரசன் ராஜராஜநரேந்திரனுக்கு மணம் செய்து கொடுத்தான். அம்மங்காதேவி தன் தந்தை நிறுவிய கங்கைகொண்ட சோழபுரத்தில் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறாள். அவள் தனக்கு பிறந்த குழந்தைக்கு இராஜேந்திரன் என்ற தன் தந்தையின் பெயரையே சூட்டி மகிழ்ந்தாள். அம்மங்காதேவியின் குழந்தையை இரேஜேந்திரனின் தேவி மடியில் வைத்து கொஞ்சும் போது “இரு குலமும் சிறக்க வந்த செல்வனே” என்று போற்றியதாகக் கலிங்கத்து பரணி கூறும். அந்தக் குழந்தையே பின்னர் குலோத்துங்கன் என்று முடி சூட்டப்பட்ட பெரும் பேரரசன் ஆவான். குலோத்துங்கன் பிறந்து வளர்ந்து நூல் பல கற்று, போர் முறை கற்றுச் சிறந்த இடம் கங்கைகொண்ட சோழபுரம். ஆதலின் அவன் கீழைச் சாளுக்கிய அரசனுக்குப் பிறந்தவன் ஆயினும் தன் தாயாகிய அம்மங்காதேவியின் இடத்திலேயே வளர்ந்தான். ஆதலின் சோழனாகவே வளர்ந்தான். சிறு வயதிலேயே சிறப்பும், ஆற்றலும், திறனும் கொண்டவனாக இருந்ததால் வீர இராஜேந்திரனால் முடி சூட்டப் பெற்றான். அவன் வடக்கே போர் முனையில் ஈடுபட்டு இருந்தான். அச்சமயத்தில்தான் வீர இராஜேந்திரன் இறந்து போக அதிராஜேந்திரன் அரியணையில் ஏறினான். அனால் கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்த சேனாதிபதிகள் சாளுக்கிய மன்னனோடு ஏற்பட்ட தொடர்பை வெறுத்து கலகம் புரிந்தனர். ஆதலின் சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தன் என்பவன் பெரும் படை கொண்டு தன் மைத்துனனைக் காப்பதற்காக கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வந்தான். வரும் வழியில் சோழர்களின் தானைத் தலைவர்கள் பலரை வெற்றி கண்டான். கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வந்து அதிராஜேந்திரனை அங்கு முடி சூட்டிவித்து இரண்டு மாதம் அங்கு தங்கி பின்னர் தன் நாடு திரும்பினான். அவன் திரும்பி தன் தலைநகர் சேரும் முன்னர் மீண்டும் கங்கைகொண்ட சோழபுரத்தில் கலவரம் மூண்டது. அக்கலவரத்தில் அதிராஜேந்திரன் கொல்லப்பட்டான். சோழ அரசு உரிய தலைவன் இன்றி தவித்தது. அப்பொழுது குலோத்துங்கன் பேரரசனாக முடி சூட்டப்பட்டான். அந்த முடி சூட்டு விழாவைக் கலிங்கத்துப் பரணி மிகச் சிறப்பாக பாடுகிறது. குலோத்துங்க சோழனின் 55 ஆண்டு ஆட்சியால் சிறந்தது கங்கைகொண்ட சோழபுரம். அவன் காலத்தில் கன்னோஜியை தலைநகராகக் கொண்டு ஆண்ட காஹடவால அரசர்கள் குலோத்துங்கனோடு நெருங்கிய தொடர்பு கொண்டு இருந்தார்கள். அவ்வரசர்களில் ஒருவன் கங்கைகொண்ட சொழபுரத்தில் இருந்திருக்கிறான். அவனுடைய கல்வெட்டு ஒன்று கங்கைகொண்ட சோழபுரத்துக் கோயிலில் உள்ளது. குலோத்துங்கனுக்கு பின் வந்த விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜன், இரண்டாம் இராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகிய சோழ மன்னர்கள் காலத்தில் கங்கைகொண்ட சோழபுரம் புகழுடன் திகழ்ந்தது. சோழ மன்னர்களில் இறுதியாக ஆண்ட பெரும் மன்னன் மூன்றாம் குலோத்துங்கன். அவன் மதுரையும், ஈழமும், கரூவூரும், பாண்டியன் முடித்தலையும் கொண்டவன் என்று புகழப்படுகிறான். அவனது ஆட்சியின் இறுதியில் பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்திர பாண்டியன் சோழ நாட்டை வென்றான். ஆயிரத்தளி என்ற இடத்தில் வீராபிஷேகம் புரிந்து கொண்டான். ஆனால் சுந்திர பாண்டியன் கங்கைகொண்ட சோழபுரத்தைக் கைப்பற்றினானா என்பது தெளிவாக தெரியவில்லை. எனினும் இதுவே சோழப் பேரரசு தளர்ச்சி அடையக் காரணமாக இருந்தது. மூன்றாம் குலோத்துங்கனுக்குப் பிறகு மூன்றாம் இராஜராஜன் அரியணை ஏரினான். ஆனால் கோபெருஞ்சிங்கன் என்ற பல்லவ குறுநில மன்னனால் தோற்காடிக்கப்பட்டான். கைது செய்யப்பட்டான். அவனை போசள மன்னன், கோபெருஞ்சிங்கன் வாயிலிருந்து மீட்டு மீண்டும் சோழ அரியணையில் அமர்த்தினான். மூன்றாம் இராஜராஜன் கங்கைகொண்ட சோழபுரத்து அரியணையில் மீண்டும் அமர்ந்தான். அவனுக்குப் பின்னர் மூன்றாம் இராஜேந்திர சோழன் என்பவன் பட்டத்துக்கு வந்தான். அவனோடு சோழ பேரரசு பொலிவிழந்து போயிற்று. கங்கைகொண்ட சோழபுரத்தில் ஜடாவர்மன் சுந்திர பாண்டியனுடைய மூன்றாவது ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு ஒன்று இருக்கிறது. ஜடாவர்மன் சுந்திர பாண்டியன் 1251-ல் பட்டம் எய்தியவன். பாண்டிய பேரரசர்களிடையே சிறந்தவனாக திகழ்ந்தவன். அவனது ஆட்சியில் சோழ நாட்டை சிறக்கச் செய்திருக்கிறான். தொண்டுகள் பெயரால் சுந்திர பாண்டியான் செய்த சந்தி என்று கங்கைகொண்ட சோழபுரக் கோயிலிலே ஒரு வழிபாட்டைச் சிறக்கச் செய்திருக்கிறான். அவனோடு விக்கிரம பாண்டியன் என்பவனும் சேர்ந்து ஆண்டிருக்கிறான். அவனும் தொண்டுகள் பெயரால் கங்கைகொண்ட சோழபுரக் கோயிலிலே ராஜாக்கள் நாயகன் சந்தி என்று ஒரு சந்திபுஜை வழிபாட்டிற்காக குலோத்துங்க சோழ நல்லூர், இராஜேந்திர சோழ நல்லூர் ஆகிய இரு ஊர்களைக் கொடுத்திருக்கிறான். சுந்திர பாண்டியனுக்கு பின்னர் 1261-ல் மாறவர்மன் குலசேகரன் பட்டத்துக்கு வந்தான். அவன் ஆட்சியின் கீழ் கங்கைகொண்ட சோழபுரம் இருந்தது. அவனது ஆட்சியின் இறுதியில்தான் மாலிகபூர் படையெடுத்து வந்தான். இந்த காலகட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரம் வலிமை குறந்தது. விஜயநகர அரசின் கீழ் விஜயநகர பேரரசன் குமாரகம்பணன் என்பவன் 1365-ல் படையெடுத்து இரமேஸ்வரம் வரையில் சென்றான். ஆயினும் கங்கைகொண்ட சோழபுரத்தில் அவனது கல்வெட்டுகள் ஏதும் கிடைக்கவில்லை. கி.பி. 1363-ஐ சேர்ந்த ஒரு கல்வெட்டு இங்குள்ளது. அதில் திருவேங்கடமுடையான் ஏகாம்பரநாத காங்கேயன் என்பவன் குறிக்கப்படுகிறான். அவன் விஜயநகர அரசில் மல்லிக்கார்ஜுனனின் கீழ் இருந்திருக்க வேண்டும். அவனுக்கு பிறகு 1483-ல் ஆண்ட மல்லிகார்ஜுன ராயரின் மகன் பிரவுட விருபாட்சன் என்பவனின் கல்வெட்டு உள்ளது. அதன் பின்னர் விஜயநகர சாம்ராஜய சக்ரவர்த்தி கிருஷ்ணதேவராயர் காலத்தில் கங்கைகொண்ட சோழபுரக் கோயில் புகழுடன் திகழ்ந்திருக்கிறது. சோழ மண்டலத்து பல பெருமாள் கோயில்களுக்கும், சிவாலயங்களுக்கும் கிருஷ்ணதேவராயர் ஜோதி, சூலவரி போன்ற வரிகளைத் தானமாகக் கொடுத்தார். அக்கோயில்களின் பெயர்கள் “தீர்த்தநகரி” என்ற கல்வெட்டில் குறிக்கப்படுகின்றன. இவ்வாரு கிருஷ்ணதேவராயர் இறைவரி கொடுத்த கோயில்களில் கங்கைகொண்ட சோழபுரமும் ஒன்று. உடையார்பாளையத்தின் கீழ் 16-ஆம் நூற்றாண்டிலிருந்து கங்கைகொண்ட சோழபுரமும், உடையார்பாளையமும் அரசு காவலர் அல்லது பாளையக்காரர் கீழ் வந்தது. இவர்கள் விஜயநகர பேரரசின் கீழ் ஆண்டவர்கள். வண்டிகள், குதிரைகள், யானைகள், படைவீரர்கள் ஆகியவற்றை அரசர் வேண்டும் போது இவர்கள் கொடுத்து உதவ வேண்டும், அதற்கேற்ப அவர்களின் கீழ் பல பகுதிகள் திகழ்ந்தன. ஆதலின் கங்கைகொண்ட சோழபுரம், உடையார்பாளய அரசு காவலின் கீழ் வந்தது. வெளிநாட்டார் ஆட்சியில் விஜயநகரப் பேரரசு வீழ்ந்தபின் கி.பி. 1756-ல் பிரஞ்சுக்காரர்கள் உடையார் பாளையத்தின் மீது படையெடுத்தார்கள். நாற்பதினாயிரம் ரூபாய் திறை செலுத்த பாளையக்காரர் வற்புறுத்தப்பட்டார்கள். கி.பி. 1765-ல் ஆங்கிலேயர்களுடைய உதவியோடு நவாப் இவ்வூரைக் கைப்பற்றினார். இந்தப் போரில் கங்கைகொண்ட சோழபுரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. கோயிலின் புறத்தே உள்ள கோட்டை மதில்கள் இந்த காலத்தில் எடுக்கப்பட்டதாக இருக்கலாம். கி.பி. 1801-ல் கிழக்கிந்திய கம்பெனியாருக்கு திருச்சிராப்பள்ளிச் சீமை கொடுக்கப்பட்டது. அப்போது உடையார்பாளையம் ஜமீனுக்கு 1000/- ரூபாய் மானியம் அளித்தார்கள். 1817-ல் ஆங்கிலேய அரசு உடையார்பாளையத்தைப் பாளையக்காரரிடத்திலே ஒப்படைத்தனர். ஆனால் கங்கைகொண்ட சோழபுரம் ஆங்கிலேயர் ஆட்சியிலேயே வைத்துக்கொள்ளப்பட்டது. இடித்தனர் 1836-ல் கொள்ளிடம் நதியின் கிழக்கே கோயிலிருந்தது. சுமார் 7 கல் தொலைவில் ஒரு அணை கட்டப்பட்டபோது கோயில் மிகவும் பாதிக்கப்பட்டது. கோயிலில் இருந்து மண்டபத் திருச்சுற்றுக் கற்கள் எல்லாம் பொதுப்பணித் துறையால் அணைக்கரை கட்ட எடுத்துச் செல்லப்பட்டது. இதை பற்றிய குறிப்பு ஒன்று 1855-ஆம் ஆண்டின் “இந்தியன் ஆண்டிக்வரி” என்ற நூலில் காணப்படுகிறது. அதன் பிறகு கங்கைகொண்ட சோழபுரக் கோயில் பொலிவு மங்கி காணப்பட்டது. மறைந்த மாளிகை சோழப்பேரரசின் இறுதிக் காலத்திலேயே தலைநகராகத் திகழ்ந்த கங்கைகொண்ட சோழபுர மாளிகைகள், அரண்மனைப் பகுதிகள், கோட்டை கொத்தளங்கள் தரை மட்டமாக இடிக்கப்பட்டிருக்க வேண்டும். படிபடியாக அங்கு கிடந்த செங்கற் குவியல்களை அந்த இடத்தின் அருகே வாழ்ந்த மக்கள் எடுத்துச் சென்று தங்கள் வீடுகளுக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் இந்த பகுதியில் பூமியைத் தோண்டி செங்கற்களை வண்டி வண்டியாக பெயர்த்து எடுத்துச் சென்று சுற்று வட்டாரங்களில் வீடுகள் எழுப்பி இருக்கிறார்கள். ஒரு வண்டி செங்கற்களுக்கு விலை 4 அணா (25 காசுகள்) தானாம். ஏற்றமிகு எழில் அரண்மனையாக இருந்த இடம் முள்ளும், புதரும் மண்டி, எங்கு பார்த்தாலும் ஒரே சமவெளியாகத் திகழ்ந்தது. ஆங்காங்கே அதிக ஆழம் உழ இயலாமல் இருந்ததால் புஞ்சை நிலமாக இது திகழ்ந்தது. தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழ்வாராய்ச்சி அண்மையில் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை இந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு உள்ளது. மாளிகைமேடு என்ற இடத்தை பாதுகாத்து வருகிறது. இங்கு நடக்கும் அகழ்வாராய்ச்சியில் மிகப் பரந்த சுவர்பகுதிகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சுமார் ஏழு அடிக்கு மேலாக அஸ்திவாரம் போட்டு சுவர்கள் காணப்படுகின்றன. மிகப் பெரிய ஐந்து அடி அகலம் உள்ள இரண்டிரண்டு சுவர்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு அதன் மேல் தூண்களையும் சுவர்களையும் எழுப்பி அரண்மனையை தோற்றுவித்திருக்கறார்கள். அவற்றின் பகுதிகள் இப்போது கிடைக்கின்றன. அத்துடன் வண்ணம் பூசப்பட்ட சுண்ணக் காரைகளும் கிடைக்கின்றன. அவற்றிலிருந்து மாளிகையின் பல பகுதிகள் அழகிய சித்திரங்கள் தீட்டப்பட்டு திகழ்ந்தன என்பது தெளிவு. சிதைந்துபோன பானை ஓடுகளும், சீன தேசத்துப் பானைகளும் சில பகுதிகளில் வெளிப்பட்டு வருகின்றன. மரத்தூண்களும், கதவுகளும், இணைப்பதற்கு பயன்படுத்தப்படும் இரும்பு ஆணிகளும், பிற பொருட்களும் கிடைத்துள்ளன. பெரிய வாள் ஒன்றின் பிடி ஒன்றும் கிடைத்துள்ளது. அகழ்வாராய்ச்சி மேலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மண்ணில் மறைந்த இந்த மாளிகையைக் கங்கொண்ட சோழன் தோற்றுவித்த போது எவ்வளவு சிறந்ததாகத் திகழ்ந்திருக்க வேண்டும்! இராஜராஜன் காலத்தில் தஞ்சை தலைநகராகத் திகழ்ந்த போது ஏன் கங்கைகொண்ட சோழபுரத்தை இராஜேந்திர சோழன் தலைநகராக மாற்றினான் என்பதற்கு எவ்வித காரணமும் கூற இயலவில்லை. ஒருகால் கங்கைக் கரை வரை வெற்றி கண்ட இராஜேந்திர சோழனுக்கு ஊக்கமும், ஆர்வமும் அவன் இந்த இடத்திற்கு வந்தபோது தோன்றி இருக்கலாம். அதன் பயனாக அங்கு தலைநகர் தோற்றியிருக்ககூடும். வீரம் விளைத்த பூமி என்பதால் உறையூரும், பாஞ்சாலங்குறுச்சியும் தலைநகர்களாக அமைக்கப்பட்டன என்று பாண்டிய மரபுகள் கூறும். அதுபோல இராஜேந்திர சோழனின் கங்கைகொண்ட சோழ வெற்றிக்கு முழு உரு கொடுத்த இடமாக இது இருந்திருக்கலாம். பராந்தகன் காலத்திலேயே அண்மையில் இங்கு பராந்தக சோழனுடைய கல்வெட்டு ஒன்றை தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை கண்டுபிடித்துள்ளது. அதிலிருந்து 10-ம் நூற்றாண்டிலேயே இங்கோர் வணிகத் தலம் இருந்தது எனவும், அதற்கும் தஞ்சாவூருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது எனவும் அறியமுடிகிறது. கங்கைகொண்ட சோழன் மாளிகை இங்கு கங்கைகொண்ட சோழபுரம் தோன்றியபோது பெரும் ராஜதானியாக நிர்மாணிக்கப்பட்டு அரண்மனைப் பகுதிகளும் இருந்தன என அறிகிறோம். இரண்டு கோட்டை மதில்களாவது இங்கு இருந்திருக்க வேண்டுமென அறிய முடிகிறது. ஒன்றின் பெயர் “இராஜேந்திர சோழன் மதில்” என்றும், மற்றொன்று “உள்படை வீட்டு மதில்” என்றும் கல்வெட்டு மூலம் அறிகிறோம். வீரராஜேந்திர சோழனுடைய கல்வெட்டில் இங்கிருந்த அரண்மனையின் பெயர் “சோழ கேரளன் திருமாளிகை” என்று இருந்தது என அறிகிறோம். இது இராஜேந்திரனுடைய பட்டங்களில் ஒன்றாக இருக்கலாம். அங்குள்ள கல்வெட்டு அரண்மனையின் ஆதிபூமி, கீழை சோபானம், மாவலி வாணதராஜன் பள்ளிக்கட்டில், போன்ற பகுதிகளைக் குறிக்கிறது. முதல் குலோத்துங்க சோழனுடைய கல்வெட்டு ஒன்று இங்கிருந்த மாளிகையை கங்கொண்ட சோழன் மாளிகை என்று குறிக்கிறது. இங்கு வருவதற்கு இராஜராஜன் பெருவழி என்றும், இராஜேந்திரன் பெருவழி என்றும் இரு வழிகள் இருந்தன. அதோடு விளங்குடையான் பெருவழி, கூழை யானை போன பெருவழி என்ற பாதைகளும் அங்கிருந்தன. வேம்புகுடி வாசல் என்ற ஒரு வாயில் இருந்திருக்கிறது. குலோத்துங்கன் காலத்தில் மதில் ஒன்றும், கோட்டைச் சுவர் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. அதற்கு குலோத்துங்க சோழன் திருமதில் என்ற பெயர் இருந்தது. அதற்கு வரும் வழியைக் குலோத்துங்க சோழன் திருமதில் பெருவழி என்று கல்வெட்டு கூறுகிறது. இதற்கு கிழக்கில் சற்று தொலைவில் ஓடுகின்ற ஆற்றுக்கு, “மதுராந்தக வடவாறு” என்ற பெயர் இருந்தது என அறிகிறோம். இந்த இடத்தைச் சுற்றியள்ள சில ஊர்களாகிய வீரசோழபுரம், கொல்லாபுரம், மெய்காவல்புத்தூர், வீரபோகம் போன்றவை இவ்வூரின் தொன்மையை இன்றும் எடுத்துக் கூறும். வாணிகம் கங்கைகொண்ட சோழபுரத்தில் இரஜேந்திரன் காலத்திலேயே “மும்முடிசோழப் பெருந்தெரு” என்றும் “முடிகொண்ட சோழன் மடிகை” என்றும் வணிகத்தலங்கள் இருந்தன எனக் கல்வெட்டு கூறுகிறது. மூன்றாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டொன்று “தரணி சிந்தாமணிப் பெருந்தெரு” என்னும் வாணிகத் தலத்தை கூறுகிறது. ஆதலின் இங்கு வாணிகம் செழித்திருந்தது அன்பது தெளிவு. கங்கைகொண்ட சோழீச்சுரம் இங்கு ஊருக்கு அருகில் உள்ள பல குளங்களும் பண்டைய கல்வெட்டுக்களில் குறிக்கப்படுகின்றன. கோயில்: கங்கைகொண்ட சோழீச்சுரம் தஞ்சை ராஜராஜீஸ்வரர் கோயிலுக்கு அடுத்து, கங்கைகொண்ட சோழீச்சுவரர் விமானமே தமிழநாட்டில் உள்ள விமானங்களில் உயர்ந்து நிற்பதாகும். இக்கோயிலை நெடுஞ்சாலையிலிருந்து வடக்கேயுள்ள வாயில் வழியாக அடையலாம். ஆனால் பண்டு கிழக்கில் ஒரு உயர்ந்த கோபுரமிருந்தது, அது இடிந்து சரிந்து காட்சி அளிக்கிறது. இதுவே முன்னர் கோயிலுக்கு முன் வரும் முக்கிய வழியாகத் திகழ்ந்தது. இப்பொழுது உருவே தெரியாது அழிந்து நிற்கிறது. உள்ளே திருச்சுற்று கிழக்கு மேற்காக நீண்ட சதுரவடிவில் அமைந்துள்ளது. இவ்வமைப்பு தஞ்சைக் கோயிலிலிருந்து மாறுபட்ட அமைப்பாகும். இத்திருச்சுற்று இரண்டு தளங்களை உடையதாகக் கோயிலைச் சுற்றி மாளிகையாகத் திகழ்ந்தது. இப்போது அதன் ஒரு பகுதியே எஞ்சியுள்ளது. பிராகாரத்தின் நடுவில் ஓங்கி விமானமாக நிற்பது கங்கைகொண்ட சோழீச்சுரர் கோயிலாகும். அதற்கு முன்னே நீண்டதொரு மண்டபம் காணப்படுகிறது. கங்கைகொண்ட சோழீச்சுரத்தின் வட புறத்திலும், தென்புறத்திலும் சிறு கோயில்கள் உள்ளன. வடபாலுள்ளதை வடகைலாயம்; தென்பாலுள்ளதைத் தென்கைலாயம் என்றும் கூறுவர். இரண்டு கோயில்களும் சோழர்காலத்துக் கோயில்களே. ஓங்கி உயர்ந்து நிற்கும் கங்கைகொண்ட சோழீச்சுரர் விமானம் கீழே சதுரமாகவும், அதற்கு மேலே எண்பட்டை உருவிலும், மேல் உச்சியில் வட்ட அமைப்பிலும் அமைக்கப்பட்டிருக்கிற விமானமாகும். சிவபெருமானின் உருவான சிவலிங்க அமைப்பில், கீழே சதுரமாகவும், இடையில் எண்பட்டை வடிவிலும், மேலே வட்ட வடிவிலுமுள்ளது போல அதன் புறத்தோற்றமாக இந்த விமானம் அமைந்துள்ளது சிறப்பாகும். இந்த சுவரின் கீழ்ப்பகுதியில் பல கோஷ்ட்டங்கள் உள்ளன. அவற்றில் சிவபெருமானுடைய பல உருவங்கள் இடம் பெற்றுள்ளன. தஞ்சைக்க கோயிலைத் தோற்றுவித்துச் சிற்பங்களையும் படைத்து அதன் வாயிலாக அனுபவம் முதிர்ந்த சிற்பிகள் செய்து வைத்துள்ளதால் மிகப் பொலிவுடையதாகக் காணப்படுகின்றன. இங்குள்ள ஒவ்வொரு சிற்பமும் சிறந்த படைப்பு எனில் அது மிகை ஆகாது. ஒவ்வொரு சிற்பத்தின் அங்க அமைப்பும், முகப் பொலிவும் கண்டு கண்டு இன்புறத்தக்கன. தென்புறத்திலிருந்து வலப்புறமாக வந்தோமானால் வரிசையாகக் கீழ்கண்ட சிற்பங்கள் உள்ளன. தெற்குப்பக்கம் நர்தனமாடும் கணபதியின் உருவம் உள்ளது அதற்கடுத்து உமையொருபாகனின் உருவம் அர்த்தனாரியின் சிலை. அடுத்து காணப்படுவது தக்ஷிணாமூர்த்தியின் சிலை. ஆனால் இப்பொழுது உள்ள தக்ஷிணாமூர்த்தியின் சிற்பம் காலத்தால் பிற்பட்டது. அதன் அருகில் உள்ள முனிவர்களின் சிலைகளோ கோயிலின் சமகாலத்தவை. அதனை அடுத்து உள்ளது அரி-அரன் சிற்பம். இது கண்டு களிக்கத் தக்கதொன்று. அடுத்து தென் சுவற்றின் மேலை கோடியில் உள்ளது ஆடவல்லானின் அற்புதச் சிற்பம். முகத்தில் புன் முறுவல் தவழ, கையில் அனல் ஏந்தி ஆனந்த தாண்தவம் ஆடும் அண்ணலின் உருவம் தெய்வத்தின் தன்மையை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் தன்மை வாய்ந்தது ஆகும். ஆனந்த கூத்தனின் அருகில் உமை அன்னை, நந்தியின் அருகில் நின்று கொண்டு, தாண்டவத்தைக் கண்டு லயித்து நிற்கிறாள். அண்ணலின் அருகில் காளியின் ஆடலையும் காண்கிறோம். மறுபால், குடமுழா வாசிக்கும் நந்திகேசுவரனையும் காணலாம். ஆடுகின்ற பெருமானின் காலடியில் கணங்கள் ஆடுகின்றன. இங்கு ஒரு அற்புத உருவைக் காணலாம். எலும்பும் தோலுமாய், ஆனல் பக்தியே உருவாக, காரைக்கால் அம்மை, தாளம் போடுகின்ற காட்சி. இது மிகவும் அரிய காட்சி. தஞ்சாவூர்க் கோயிலிலும் இதே இடத்தில் நடராஜப் பெருமானின் உருவம் இருக்கிறது. ஆனால் அதன் கீழ் காரைக்கால் அம்மையாரின் உருவம் இல்லை. இங்கு கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடுகின்ற அண்ணலின் தூக்கிய திருவடியின் கீழ் அம்மை அமர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. காரைக்கால் அம்மையாரின் வரலாறு உள்ளம் உருக்கும் வரலாறு. தன் ஊண், உடலை நீத்து பேயாகி அண்ணலைக் காண அவர் சென்றபோது “அம்மையே” என்று சிவபெருமானே அழைக்கும் பேறு பெற்றாள். அந்த புனிதவதியின் வரலாற்றைச் சேக்கிழார் அழகாக எழுதியுள்ளார் அதில் கைலையங்கிரியில் அண்ணலைக் கண்டபோது காரைக்கால் அம்மையார், இறைவா இன்ப அன்புவேண்டி பின்னும் வேண்டுகின்றார் “பிறவாமை வேண்டும் பிறப்பு உண்டேல் உன்னடியை மறவாமை வேண்டும் மகிழ்ந்துபாடி இன்னும் வேண்டும் நான் இறைவா நீ ஆடும்போது உன்னடியின் கீழிருக்க” என்றார் என்று சேக்கிழார் கூறுகிறார். ஆம் இறைவன் ஆடுகின்ற போது அம்மை அவர் திருப்பாத கமலத்து அடியின் கீழிருக்க வேண்டும் என்று கூறுவது எவ்வளவு பொருத்தம். இங்கு ஒரு சிறப்பு உண்டு. கங்கைகொண்ட சோழீச்சுரத்தை இராஜேந்திர சோழன் சுமார் கி.பி. 1050-ல் எடுப்பித்தான். சேக்கிழார் அதற்கு சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றியவர். ஆயினும் சோழரவையில் அமைச்சராய் பணிபுரந்தவர். அதாவது கங்கைகொண்ட சோழபுரத்துச் சோழர் அவையில் பணிபுரிந்தவர். அவர் கங்கைகொண்ட சோழபுரத்துக் கோயிலைப் பலமுறை கண்டிருப்பார். அப்போது இங்குள்ள ஆனந்த கூத்தனும் அவரது அடியின் கீழிருக்கும் அம்மையும், அவர் மனத்தைக் கொள்ளை கொண்டிருக்க வேண்டும். ஆதலின் பாட்டு, “இறைவா நீ ஆடும்போது உன்னடியின் கீழிருக்க” என்றது இந்த சிற்பத்தைத்தான் என்றால் மிகையல்ல. மேற்குப்புறச் சுவரில் கங்காதரர், இலங்கோத்பவர், மகாவிஷ்ணு, சுப்ரமணியர், விஷ்ணு, அனுக்ரகமூர்த்தி ஆகிய சிற்பங்கள் உள்ளன. வடச்சுவரில் காலாந்தகர், துர்கை, பிரும்மா, வைரவர், காமதகனர் ஆகிய உருவங்கள் உள்ளன. பிரும்மாவின் உருவம் தாடியுடனும் மூன்று தலைகள் தெரியும் வகையிலும் உள்ளது. அவரது மேல் கரங்களில் யாகத்துக்குப் பயன்படும் ச்ருக், ச்ரவம் என்னும் மரத்தாலான கலங்கள் உள்ளன. அவருக்கு இரண்டு தேவியர் காணப்படுகின்றனர். ஒரு தேவி சரஸ்வதியாகும். மற்றவள் சாவித்திரி தேவியாகும். இது ஒரு அரிய காட்சி. இச்சுவரின் கிழக்குக் கோடியில் உள்ள காமாந்தகர் சிலை மிகவும் பெருமிதமான அமைப்புடையது. சிவபெருமானும், அவர் சுட்டிக்காட்டும் கையும், போற்றத்தகும் வனப்புடையது. இதை அடுத்துப் பக்கவாட்டில் படிகள் உள்ளன. வடபுறத்தில் இருந்து அர்த்தமண்டபத்துக்குச் செல்லும் படிகள் உள்ளன. அதன் இருமருங்கும் உலகமே வியக்கின்ற இரண்டு சிற்பங்கள் உள்ளன. ஒன்று சண்டேச அனுக்ரஹ மூர்த்தியின் உருவம். சிவபெருமான் உமையான்னையுடன் அமர்ந்திருக்கிறார். அவரது காலடியில் கரம் கூப்பி வணக்கமே உருவாக, அமைந்துள்ள சண்டிகேசுவரரின் உருவம். சிவபெருமான் பக்திப் பெருக்கோடு அமர்ந்திருக்கும் சண்டிகேசுவரரின் முடியில் மலர் மாலையைச் சூட்டுகிறார். சிவபெருமானின் அருள் முகமும், உமையன்னையின் மலர்முகமும், சண்டிகேசுவரரின் தோற்றமும் தெய்வீகத் தன்மையைக் கல்லிலே வடித்துக் காட்டும் ஆற்றலுக்கு எடுத்துக்காட்டு. இக்கோயிலில் கண்டு ஆனந்திக்க வேண்டிய சிற்பங்களில் இன்றியமையாத ஒன்று. மற்றது சரஸ்வதியின் சிற்பம். சரஸ்வதி தேவியின் கையில் அக்ஷமாலை, கெண்டி, ஓலைச்சுவடி ஆகியன கொண்டு சாந்தமும் புன்னகையும் தவழ கலையின் இருப்பிடமாகக் காணப்படுகிறது. ஒரு சிறந்த கற்பனைத் திறன் மிகுந்த சிற்பத்தின் முன்னே நிற்கிறோம் என்ற எண்ணம் நம்மை அறியாது தோன்றுமாறு அமைந்துள்ள சிற்பம். விமானத்தின் முன்னர் உள்ள மண்டபம், இரண்டு அடுக்கு உள்ள மிகப் பெரிய மண்டபமாகத் திகழ்ந்திருக்க வேண்டும். ஆனால் இப்பொழுது எஞ்சியுள்ள அதன் அடிப் பகுதி மட்டும் பழமையானது. மேல் பகுதி மிகவும் பிற்காலத்தில் எடுக்கப் பெற்றது. முன்னரே கூறியாது போன்று அணைக்கரைக்கு இம்மண்டபத்தைக் கலைத்துக் கற்களை எடுத்துச் சென்றிருக்கின்றனர் என்று தெரிகிறது. ஆதலின் இம் மண்டபம் அலங்கரித்த சிற்பங்கள் பழமையான கோட்டங்களில் இல்லை. இருப்பினும் இம்மண்டபத்தில் பல வாயில்களையும் காத்து நிற்கும் வாயிற்காவலர் சிலைகள் மிகவும் பெரியவை மட்டுமல்ல நல்ல அழகும் மிக்கவை. இப்பொழுது பெரிய நாயகி அம்மன் உள்ள வடகையிலாயம் என்னும் கோயிலிலும் கோஷ்ட்ங்களைத் தெய்வ உருவங்கள் அலங்கரிக்கின்றன. அதேபோல அதன் அடிப்பகுதியில் நாட்டியம் ஆடுவோர் பலர் உருவங்கள் உள்ளன. பெரிய நாயகி அம்மனின் உருவம் மிகவும் பெரியது. வனப்பு மிக்கது. தென்கையிலாயம் சிவபெருமானுக்கு எடுக்கப்பட்டதாகக் காணப்படுகிறது. இந்த பெரும் கோயிலில் சில சிற்பங்கள் சாளுக்கிய நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டவையாகக் காணப்படுகின்றன. முதலாம் இராஜதிராஜ சோழன் மேலைச் சாளுக்கியர் தலைநகரான கல்யாணபுரத்தை வெற்றி கொண்ட போது அங்கிருந்து சில சிற்பங்களை கொண்டுவந்துள்ளான். ’உடையார் ஸ்ரீவிஜய ரஜேந்திர சோழ தேவர் கல்யாணபுரமெறிந்து கொண்டு வந்த துவாரபாலர்" என்ற கல்வெட்டுப் பொறித்த சிற்பம் ஒன்று இப்பொழுது தஞ்சை கலைக்கூடத்தில் உள்ளது. இது மாற்றார் நாடுகளைச் சோழ மன்னர்கள் வென்ற போது அங்கிருந்து சிற்பங்களை வெற்றிப் பரிசாக கொண்டு வந்துள்ளனர் என்பதற்கு சான்று. அதைப்போன்று சாளுக்கிய நாட்டிலிருந்து, (தற்கால புனா நகருக்கு அருகிலிருந்தும்) நூளம்பர் நாட்டிலிருந்தும், (தற்கால அனந்தபூருக்கு அருகிலிருந்தும்) கலிங்கர் நாட்டிலிருந்தும், (விசாகப்பட்டினம், புவனேச்வர் அருகிலிருந்தும்) பாலர் நாட்டிலிருந்தும், (தற்கால வங்காளத்திலிருந்தும்) போசளர் நாட்டிலிருந்தும், (மைசூருக்கு அருகிலிருந்தும் கொண்டு வரப்பட்ட சிற்பங்கள் கங்கைகொண்ட சோழபுரத்திலும்) அதன் அருகில் உள்ள ஊர்களிலும் காணப்படுகின்றன. கங்கைகொண்ட சோழீச்சுரம் கோயிலில் இரண்டு சிற்பங்கள் இவ்வாறு கொண்டு வராப்பட்டவற்றுள் சிறந்தவை. ஒன்று இப்போது சிம்மகேணிக்கு அருகில் உள்ள சிற்றாலயத்தில் வழிபாட்டில் உள்ள துர்கை சிலையாகும். பல கரங்களுடன் எருமை ஒன்றின் தலையைத் துண்டிக்க, அதன் கழுத்திலிருந்து ஒரு மனித உருவில் அசுரன் வெளிப்படுவதையும், தேவியின் சிம்மம் மகிஷத்தின் மீது பாய்ந்து கடிப்பதும் புதுமையாக இருப்பதைக் காணலாம். தமிழ்நாட்டு சிற்பங்களில் மகிஷாசுரன் மனித உருவமும் எருமைத் தலையும் உடையவனாகக் காணப்படுவான். ஆனால் இங்கு எருமை உடலும், அதிலிருந்து தோன்றும் மனித உருவமும் காணப்படுகின்றன. இது சாளுக்கிய நாட்டுச் சிற்பம். இதே போன்று இன்று நவகிரகம் என்று வணங்கப் பெறும் சூரிய பீடமும், சாளுக்கிய சிற்பமாகும். அலர்ந்த தாமரை மலர் மேலே காணப்படுகிறது அதன் கீழே ஒரு சக்கரமுள்ள தேரும், அதை இழுத்து பாயும் ஏழு குதிரைகளும், அதை ஓட்டி வரும் அருணனும், எட்டு திசைகளிலும் உள்ள உருவங்களும் ஒரு புதிய அமைப்புடையவை. ஒவ்வொன்றும் காணத் தவறக்கூடாத சிற்பமாகும். கோயிலுக்குச் சற்று கிழக்கே மண்மேடு என்ற இடத்தில் துர்கை சிலை ஒன்று உள்ளது. அது நுளம்பர் சிலைபோல் காணப்படுகிறது. கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகில் வீராரெட்டித் தெரு என்ற இடத்தில் உள்ள துர்கையின் சிலை மேலைச் சாளுக்கியர் சிற்பமாகும். நெடுஞ்சாலைக்குக் கிழக்கில் ஒன்றரைக்கல தொலைவில் செங்கமேடு என்ற இடம் உண்டு. அங்கு இரண்டு வைரவர் சிலைகளும், ஒரு வைரவி சிலையும் உள்ளன. இவை கலிங்க நாட்டுச் சிற்பங்களாகும். இவற்றைக் கங்கை நதிவரை கண்ட இராஜேந்திர சோழனோ அல்லது “கலிங்கத்துப் பரணி” கொண்ட குலோத்துங்க சோழனோ கொண்டு வந்திருக்க கூடும். திரைலோக்கி என்ற ஊரில் சாளுக்கிய நாட்டு மிகப்பெரிய “சுப்பிரமணியர் தேவசேனை” சிற்பம் ஒன்று உள்ளது. இது மிகவும் அழகான சிலை. அதே கோயிலில் அமர்திருக்கும் நந்தியின்மீது சிவபெருமானும், உமையும், உமாமகேசுவரராக அமைந்துள்ளதைக் காணலாம். இது நுளம்பர் சிலையாகும். கங்கைகொண்ட சோழபுரத்து மாளிகை மேட்டுக்கு அருகில் கணக்குப் பிள்ளையார் என்று ஒரு பிள்ளையார் கோயில் இருக்கிறது. இப்பிள்ளையார் சிலையும் சாளுக்கிய நாட்டினதாகக் காணப்படுகிறது. கங்கைகொண்ட சோழீச்சுரர் கோயிலில் எழிலார்ந்த செப்புத் திருமேனிகள் உள்ளன. அவற்றில் முருகப்பெருமானுடைய திருமேனி ஒன்று மிகவும் அழகுற அமைக்கப்பட்டதாகும். கங்கைகொண்ட சோழபுரத்தில் குருவாலப்பர் கோயில் என்னும் பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. இது “குருகை காவலப்பர்” என்பதின் திரிபாகும். இக்கோயில் ஆளவந்தார், இராமனுஜர் ஆகியோரது வாழ்கையுடன் நெருங்கிய தொடர்புடையது. கல்வெட்டுக்கள் இவ்வூரில் கிடைத்துள்ள கல்வெட்டுகளில் மிகவும் தொன்மையானது பராந்தக சோழனுடையது ஆகும். இது இவ்வூர் 10-ம் நூற்றாண்டிலிருந்து உறைவிடமாக இருந்து வந்துள்ளது என்பதற்கு சான்று. இங்குள்ள கோயிலைக் கங்கைகொண்ட சோழன் கட்டிய போதிலும், அவனுது கல்வெட்டுக்கள் இதில் இல்லை. இராஜேந்திரனின் மூன்றாம் மகன் வீரராஜேந்திரனது கல்வெட்டுதான் இக்கோயிலில் காணப்படும் தொன்மையானது. இது ஒரு மிகப்பெரிய கல்வெட்டாகும். சுமார் 216 வரிகள் கொண்டது. இந்த கல்வெட்டை இங்கு பொறிக்கும்படி வீரராஜேந்திரன் ஆணையிட்டிருக்கிறன். அவன் காஞ்சிபுரத்திலிருந்த அரண்மனையில் அமர்ந்திருந்த போது இவ்வாணையிட்டன் எனக் கல்வெட்டுக் கூறுகிறது. இக்கல்வெட்டு வீரராஜேந்திரனின் கல்வெட்டான போதிலும், முதல் இராஜேந்திரன், முதல் இராஜாதிராஜன் ஆகியோரின் ஆணைகளையும் உள்ளடக்கிய கல்வெட்டு. இராஜேந்திர சோழன் தனது 23-ம் ஆண்டில் கொடுத்த தானங்களையும், இராஜாதிராஜன் தனது 26, 30-ம் ஆண்டுகளில் கொடுத்த தானங்களையும் குறிக்கிறது. ஆதலின் இக்கோயில் இராஜேந்திர சோழனின் 23-ம் ஆட்சி ஆண்டுக்கு (கி.பி.1035) முன்னர் கட்டப்பட்டது என்று தெளியலாம். இக்கோயிலுக்கு இராஜேந்திர சோழனும், இராஜதிராஜனும், வீரராஜேந்திரனும் வழிபாட்டுக்காக கொடுத்த பல ஊர்களை இக்கல்வெட்டு குறிக்கிறது. அந்த தானங்களே வீரராஜேந்திரனின் ஆட்சியில் கோயில் பொறிக்கப்பட்டன. சோழ மண்டலத்துப் பல நாட்டுப் பிரிவுகளையும், அவற்றில் இருந்த ஊர்களையும், அந்த ஊர்கள் இந்த கோயிலுக்கு அளிக்க வேண்டிய நெல்லையும் இது குறிக்கிறது. அதோடு அரசாங்க அதிகாரிகளாக யார் யார் பணிபுரிந்தார்கள்; அவர்களது பணிகள் என்ன என்பதையும் இக்கல்வெட்டுத் தெளிவாகக் கூறுகிறது. இராஜேந்திர சோழனைக் குறிக்கும் போது “பூர்வதேசமும், கங்கையும் கடாரமும் கொண்ட அய்யன்” என்றும், இராஜாதிராஜனைக் “கல்யாணபுரமும், கொல்லாபுரமும் கொண்டு யானை மேல் துஞ்சின அண்ணல்” என்றும் குறிக்கிறது. வீரராஜேந்திரனின் ஆணையைத் திருமந்திர ஓலை என்ற பதவி வகுத்த அதிகாரி அரசன் சொல்ல எழுதினான். அவன் பெயர் பல்லவரையன் என்பதாகும். இவன் எழுதியதை மூன்று மேலதிகாரிகள் ஒப்பிட்டுப் பாரத்தனர். அவர்களது பதவி “திருமந்திர ஓலை நாயகம்” என்பதாம். வாணாதி ராஜன், மதுராந்தக பரும்மாதிராஜன், பல்லவரையன் என்பவர்கள் அவ்வாறு ஒப்பிட்டுப் பாரத்தனர். இவர்கள் தவிர மேலும் 64 அதிகாரிகள் இக்கல்வெட்டில் குறிக்கப்படுகின்றனர். இராஜேந்திரனின் தேவி வானவன் மாதேவியேயும், இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்காதேவயையும் குறிக்கும் துண்டுக் கல்வெட்டுக்களும் இங்கு உள்ளன. இந்தக் கோயிலுக்கு ஆண்டுதோறும் 1,03,893 கலத்துக்கும் மேல் நெல் அளக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட ஊர் மட்டும் 20,000 கலத்துக்கு மேல் நெல் அளந்தது. முதல் குலோத்துங்க சோழன், பொத்தாலிமடத்து இரஜேந்திர சோழீச்சுரம் என்னும் கோயிலுக்கு சுங்கம் தவிர்த்த சோழ நல்லூர் என்னும் ஊரைத் தானமாகக் குடுத்தான். இந்த ஆணையைக் குலோத்துங்கன் கங்கைகொண்ட சோழபுரத்து, கங்கைகொண்ட சோழன் மாளிகையில் ஆதிபூமியில், கீழைச்சோபானத்து, பள்ளிக்கட்டிலில் அமர்ந்த போது விடுத்தான் என்று கல்வெட்டுக் கூறும். காஹடவாலத்தரசனின் கல்வெட்டை முன்னரே கூறினோம். பாண்டிய மன்னர்களில் ஜடாவர்மன் சுந்திர பாண்டியன், விக்கிரம பாண்டியான், மாறவர்மன் குலசேகரன் ஆகியோர் இக்கோயிலில் வழிபட்டுத் தானம் கொடுத்திருக்கிறார்கள். 1463-ல் இருந்த வைப்பூர் திருவேங்கடமுடையான் ஏகாம்பரநாத காங்கேயன் என்பவன் இங்கு ஒருமடத்துக்கு அளித்த தானத்தை ஒரு கல்வெட்டு குறிக்கிறது. காஷ்மீர தேசத்திலிருந்து வந்த “காஷ்மீரராயன்” என்பவனும் இவ்வூர்க் கல்வெட்டில் குறிக்கப்படுகிறான். இலக்கயம் கங்கைகொண்ட சோழபுரத்தைப் பல இலக்கியங்கள் கூறுகின்றன. தமது “திருவிசைப்பா”வில் கருவூர்த்தேவர் கங்கைகொண்ட சோழீச்சுரத்துப் பெருமானைப் பாடியுள்ளார். “முக்கண்ணா - நாற் பெருந் தடந்தோள் கன்னலே, தேனே, அமுதமே, கங்கைகொண்ட சோழீச்சுரத்தானே” என்று அருமையான பாக்களால் பாடுகிறார். அப்பாடல்கள் பன்வருமாறு: அன்னமாய் விசும்பு பறந்தயன்தேட அங்ஙனே பெரியா நீ சிறிய என்னைஆள் விரும்பி என்மனம் புகுந்த எளிமையை யென்றும்நான் மறக்கேன்! முன்னம்மால் அறியா ஒருவனும் இருவா! முக்கண்ணா! நாற்பெருந் தடந்தோட் கன்னலே! தேனே! அமுதே! கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே உண்ணெகிழ்ந் துடலம் நெக்குமுக் கண்ணா ஓலம்என் றோலமிட் டொருநாள் மண்ணின்நின் றலரேன்; வழிமொழி மாலை மழலையஞ் சிலம்படி முடிமேற் பணிநின் றுருகேன்; பணிசெயேன் எனினும், பாவியேன் ஆவியுள் புகுந்தென் கண்ணிநின் றகலான்என்கொலோ! கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே அற்புதத் தெய்வம் இதனின்மற் றுண்டோ? அன்பொடு தன்னைஅஞ் செழுதின் சொற்பதத் துளவைத் துள்ளம்அள் ளூறும் தொண்டருக் கொண்டிசைக் கனகம பற்பதக் குவையும், பைம்பொன்மா ளிகையும், பவளவா யவர்பணை முலையும் கற்பகப் பொழிலும் முழுதுமாங் கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே ஐயபெட் டிட்ட அழகுவா ணுதலும், அழகிய விழியும், வெண்ணீரும், சைலம்விட் டிட்ட சடைகளும், சடைமேல் தரங்கமுஞ் சதங்கையுஞ் சிலம்பும் மொய்கொள்எண் திக்கும் கண்டநின் தொண்டர் முகம்மலர்ந் திருகண்நீர் அரும்பக் கைகள்மொட்டிக்கும் என்கொலோ! கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே சுருதிவா னவனாம்! திருநெடு மாலாம்! சுந்தர விசும்பின் இந்திரனாம்! ப ருதிவா னவனாம்! படர்சடைமுக்கட் பகவனாம் அகஉயிர்க் கமுதாம், எருதுவா கனனாம் எயில்கள்முன் றெரித்த ஏறுசே வகனுமாம்! பின்னும் கருதுவார் கருதும் உருவமாம்! கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே அண்டம்ஓர் அணுவாம் பெருமைகொண் டணுஓர் அண்டமாம் சிறுமைகொண் டடியேன் உண்டவூண் உனக்காம் வகையென துள்ளும் உள்கலந் தெழுபரஞ் சோதியே! கொண்டநாண் பாம்பாய் பெருவரை வில்லிற் குறுகலர் புரங்கள்மூன் றெரிந்த கண்டனே! நீல கண்டனே! கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே மோதலைப் பட்ட கடல்வயி றுதித்த முழுமணித் திரளமு தாங்கே தாய்தலைப் பட்டங் குருகிஒன் றாய தன்மையில் என்னைமுன் ஈன்ற நீதலைப் பட்டால் யானும்அவ் வகையே; நிசிசரர் இருவரோ டொருவர் காதலிற்பட்ட கருணையாய்! கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே தத்தையங் கனையர் தங்கள்மேல் வைத்த தயாவைநூ றாயிரங் கூறிட் டத்திலங் கொருகூ றுன்கண்வைத் தவருக் கமருல களிக்கும்நின் பெருமை பித்தனென் றெருகாற் பேசுவ ரேனும் பிழைத்தவை பொறுத்தருள் செய்யுங் கைத்தலம் அடியேன் சென்னிமேல் வைத்தகங்கை கொண்டசோ ளேச்சரத் தானே பண்ணிய தழல்காய் பாலளாம் நீர்போற் பாவமுன் பாறைந்துபா லனைய புண்ணியம் பின்சென் றறிவினுக் கறியப் புகுந்தோர் யோகினிற் பொலிந்து நுண்ணியை யெனினும் நம்பநின் பெருமை நுன்னிடை யொடுங்கநீ வந்தென் கண்ணினுண் மணியிற் கலந்தனை! கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே அங்கைகொண் டமரர் மலர்மழை பொழிய அடிச்சிலம் பலம்வந்த தொருநாள் உங்கைகொண் டடியேன் சென்னிவைத் தென்னை உய்யக்கொண் டருளினை! மருங்கிற் கொங்கைகொண் டனுங்குங் கொடியிடை காணிற் கொடியுள்என் றவிர்சடை முடிமேற் கங்கைகொண் டிருந்த கடவுளே! கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே மங்கையோ டிருந்தே யோகுசெய் வானை வளர்இளந் திங்களை முடிமேற் கங்கையோ டணியுங் கடவுளை கங்கை கொண்டசோ ளேச்சரத் தானை அங்கையோ டேந்திப் பலிதிரி கருவூர் அறைந்தசொல் மாலையால் ஆழிச் செங்கையோ டுலகில் அரசுவீற் றிருந்து திளைப்பதும் சிவனருட் கடலே விக்கிரமாங்கதேவ சரிதம் என்னும் வடமொழி நூல் சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தன் மீது பாடப்பெற்றது. இதில் விக்கிரமாதித்தன் தன் மைத்துனன் அதிராஜேந்திர சோழனைக் காக்கப் படை திரட்டி வந்து பகைவரை வென்று கங்கைகொண்ட சோழபுரத்தில் அவனுக்கு முடி சூட்டித் தன் தலைநகர் திரும்பியது கூறப்படுகிறது. அந்தநூலில் கங்கைகொண்ட சோழபுரம் “கங்கா குண்டம்” என்று கூறப்படுகிறது. ஜயங்கொண்டார் தாம் எழுதிய கலிங்கத்துப் பரணியில், “கங்காபுரியின் மதில் புறத்துக் கருதார் சிரம்போய் மிகவீழ”, என்று கங்கைகொண்ட சோழபுரத்தைக் கூறுகிறார். ஒட்டகூத்தர் தாம் எழுதியுள்ள மூவர் உலாக்களிலும் இந்நகரைப் பாடியுள்ளார். கோயிலுரிமைக் குழாம் நெருங்கி – வாயிலும் மாளிகையும் சாலையும் ஆலயமும் மண்டபமும் குளிகையும் எம்மருங்குந் தோரணமும் – சாளரமுந் தெற்றியும் மாடமும் ஆடரங்கும் செய்குன்றும் சுற்றிய பாங்கரும் தோன்றாமே ….. இரஜராஜ சோழனுலா சோழ கங்கை இவ்வூரில் மேற்கில் ஜயங்கொண்டான் செல்லும் சாலை ஒரு மாபெரும் ஏரியை ஊடறுத்து செல்கிறது. இந்த பெரும் ஏரியே இராஜேந்திர சோழனால் தோற்றுவிக்கப்பட்டதாகும். இப்பொழுது இந்த ஏரி பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது. முன்னர் கொள்ளிடத்திலிருந்து நீர் இங்கு வந்து விழ பெரும் அமைப்புக்கள் இருந்தன. தமிழநாட்டில் சோழப் பேரரசர்கள் நீர்ப்பாசனத்தின் மேல் மேறக்கொண்ட கவனத்தை இவை பறைசாற்ற நின்றன. ஆனால் இப்பொழது இவை மறைக்கப்பட்டு மூடப்பட்டு விட்டன. இதை நடுவில் ஊடறுத்து சாலை அமைத்திருக்கின்றார்கள். ஏரியின் பல பகுதிகள் களர் நிலமாய், படிபடியாக புகழ் குன்றிவருகிறது. ஆனால் இதை எவ்வளவு ஆர்வத்துடன் நாடே கண்டிராத பெரும் ஏரியாக, ஜலமயமான வெற்றிச் சின்னமாக இராஜேந்திரன் தோற்றுவித்தான்! இராஜேந்திர சோழன் தண்ட நாயகன் தான் வென்ற மாற்றரசர்களின் தலைமேல் கங்கையாற்றிலிருந்து தூய்மையான நீரை எடுத்து வரச் செய்தது தன் அரசனிடம் சேர்பித்தான் என்றும்; அதை “சோழகங்கை” என்று கங்கையின் ஜலத்தினால் ஜயஸ்தம்பமாக இரஜேந்திரன் செய்வித்தான் என்றும் அவனது திரு வாலங்காட்டு செப்பேடு கூறுகிறது. விஜிதைஹி ததீயதட பூமிநாயகைஹி ஸலிலம் ததீயமத பாவனம் பரம் நிஜ நாயகாய மதுராந்தகாய தத் ஸமநீநயத் ஸபதி தண்டநாயாகஹ என்றும் சோழகங்கம் இதி க்யாத்யா ப்ரதிதந் நிஜமண்டலே கங்கா ஜலமயந் தேவஹ ஜயஸ்தம்பம் வியதத்த ஸஹ அகழ்வாய்வு இப்புகழ்வாய்ந்த நகரை, தன் புகழ் நிறுத்தி மண்ணில் மறைந்த நகரை, தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை அகழ்வாய்வு செய்து வருகிறது. அதில் சோழர்தம் அரண்மனைப் பகுதிகள் வெளிப்பட்டு வருகின்றன. அவர்கள் அரண்மனை அமைத்த பாங்கு வெளிப்படுகிறது. இப்பெரும் நகரின் புகழை ஓரளவாவது தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை வெளிப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. உள்கோட்டை இளைஞர்கள் தாமே மனமுவந்து முன் வந்து மாளிகை மேட்டுக்கு வரும் சாலை அமைத்துள்ளார்கள். இங்கு நிலம் உடையோர் மனம் உவந்து அனுமதி அளித்து அகழ்வாராய்ச்சிக்கு உதவியுள்ளனர். FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.