[] 1. Cover 2. Table of contents ஒரு நிமிடக் கதைகள் ஒரு நிமிடக் கதைகள்   வரத இராஜமாணிக்கம்     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : Creative Commons Attribution Share Alike 4.0 India கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/one_minute_stories மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation This Book was produced using LaTeX + Pandoc யுத்த களம் -ஏப்ரல் 21, 2019 […] வியர்வை ராஜீவை குளிப்பாட்டியிருந்தது. வேகுவேகுவென்று வந்து கொண்டிருந்தான். அவன் வந்த வேகத்தைப் பார்த்து அடிகுழாயில் நீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்களும். அரசமரத்தின் அடியே உட்கார்ந்திருந்த வயதான ஆண்களும். அவனை நோக்கி வந்தனர். முதியவரான இருளப்பன், “என்னப்பா சேதி” என நடுங்கும் குரலில் கேட்டார். ஒரு நிமிடம் கனத்த மவுனம் நிலவியது, மூச்சு வாங்கியதில் ராஜீவால் உடனே பேச முடியவில்லை. வியர்வையோடு வழிந்த கண்ணீரை மறைத்து துடைத்துக் கொண்டான். பிறகு, “பனிரெண்டு மணிக்கு மேல, நம்ம வீடுகள இடிக்க அதிகாரிக வர்றாங்களாம்” என்று விட்டு விட்டு அவன் கூறியதும் அதைக் கேட்டவர்களின் தலையில் இடி விழுந்தது போலிருந்தது.நூற்றுக்கும் மேலிருந்த குடிசை வீடுகள், இருந்த அப்பகுதி அங்கே குடியிருந்த எளிய மக்களால், “வெண் மணி நகர்” என அழைக்கப்பட்டது. ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருக் கும் அந்த இடம் கோவில் புறம்போக்கு இடம் என அடங்கலில் குறிப்பிடப்பட்டுள்ளதாம். ஆனால் அங்கே குடிசை மக்கள் கும்பிட வைத்துள்ள கருப்பணசாமியை தவிர வேறு கோவில் எதுவும் இல்லை. இதுநாள் வரை எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. சமீபத்தில் ஷாப்பிங் மால் அருகில் வந்த பிறகு தான், போலீஸ், தாசில்தார், அறநிலையத்துறை அதிகாரிகள் என அடிக்கடி வந்தனர். குடிசைகளை அகற்றிவிட்டால் ஷாப்பிங் மால் எடுப்பாகத் தெரியும். மாலுக்கு வந்து செல்லும் வாகனங்களுக்கு வசதியாக இருக்கும். மதியம் பனிரெண்டு மணிக்கு முன்பே மூன்று ஜே.சி.பி. ராட்சச வாகனங்கள் வந்து நின்றன. அடுத்த ஐந்து நிமிடங்களில் டி.எஸ்.பி.தலைமையில் காவல்துறைப் பட்டாளமும், தாசில்தார் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகளும் முகாமிட்டனர். அவர்கள் உள்ளே நுழையும் வழியை அடைத்து முதலில் பெண்கள் குழந்தைகளுடனும், அதற்குப்பிறகு வயதான ஆண்களும் அணிவகுத்து ஒரு கோட்டை போல் நின்றனர்.தாசில்தார், “உடனடியாக தட்டுமுட்டு சாமான்கள் எடுத்துகிட்டு இடத்தைக் காலி பண்ணுங்க, இல்லையின்னா அத்தனை பேரையும் கைது பண்ணி ஜெயில்ல அடைக்க வேண்டி வரும்” என மிரட்டினார். மக்கள் ஒரே குரலில், குடிசையையும் காலி செய்ய முடியாது, ஜெயிலுக்கும் போக முடியாது என ஆராவரித்தனர். தாசில்தார், டி.எஸ்.பி.யுடன் கலந்து கொண்டு, ஜே.சி.பி. வண்டியை முன்னேறச் சொன்னார். ஜே.சி.பி. வண்டி நகர்ந்த அடுத்த நொடி இன்னும் பெயர் கூட வைக்கப்படாத பெண் குழந்தையை அதன் தாய் கன்னியம்மாள், வண்டியின் சக்கரத்தின் அருகே தரையில் வைத்தாள், ஜே.சி.பி. வண்டியின் சக்கரத்தின் அடியே இருந்த அந்த குழந்தை விறிட்டு அழுதது. இதைச் சற்றும் எதிர்பாராத அதிகாரிகள் திகைத்துப் போய் பின்வாங்கினர். அவர்கள் முற்றிலுமாக இடத்தை விட்டு வெளியேறும் வரை, குழந்தை விடாமல் அழுது கொண்டிருந்தது. உயிர்க்காற்று -ஏப்ரல் 28, 2019 […] அதிகாலை நேரத்திலேயே, சாக்கடைப் பிரச்சனை விஸ்வ ரூபமெடுத்தது. பாத்ரூம், சமையலறை கழிவு நீர் வெளியேற மறுத்து விவகாரம் செய்தது. லட்சுமி வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தாள். தெருச்சாக்கடை தேங்கி கழிவு நீர் வீதியில் வழிந்து கொண்டிருந்தது. இருபக்க சாக்கடைகள் சேரும் பாலத்தில் அடைப்பு ஏற்பட்டிருந்தது. ஆங்கில நாளிதழில் ஐக்கியமாகி சாய்வு நாற்காலியில் இருந்து கொண்டே உலகை அளந்து கொண்டிருந்த பெருமாளைப் பார்த்து, லட்சுமி எரிச்சலுற்றாள். “சாக்கடை அடச்சுக் கெடக்கு, போயி என்னான்னு பாருங்க” என லட்சுமி சொன்னதும் பெருமாள் சாய்வு நாற்காலியை விட்டு எழாமல் முனிசிபாலிட்டியை கைபேசியில் அழைத்தார். லட்சுமி துவைக்க வேண்டிய துணிகளை ஊறவைத்துவிட்டு வெளியே வந்தபோது வீடுகளை விட்டு ஒவ்வொருவராக வெளியே வந்திருந்தனர். கடைசி வீட்டு ராஜம்மாள் மட்டும் வரவில்லை. ராஜம்மாள் மூன்று மாதங்களுக்கு முன்பு தான் வயதுக்கு வந்த மகளோடு, அங்கே குடிவந்தாள். மகளை வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தாள். அவள் தொள தொளப்பான நைட்டியைத் தவிர வேறு ஆடை எதுவும் அணிந்து லட்சுமி பார்த்தது இல்லை. அவளது வலதுபக்க கன்னத்தில் பச்சையாக மச்சம் பைசா அளவு படர்ந்திருந்தது. ராஜம்மாள் வீட்டு வேலைக்குப் போனாள். காலையில் போனால் வேலைகளை முடித்துவிட்டு மதியத்திற்கு மேல் வீடு திரும்புவாள். யாரிடமும் அதிகம் பேசமாட்டாள். சற்று நேரத்தில் முனிசிபாலிட்டியில் இருந்து பெரிய தொரட்டியுடன் நாகராஜன் வந்துவிட்டார். பாலத்தின் அடியில் தொரட்டிக் குச்சியை உள்ளே விட்டு இழுத்ததும், உரச்சாக்கு பொட்டலம் ஒன்று வெளியே வந்தது. நாகராஜன் இறுக கட்டியிருந்த பொட்டலத்தை அவிழ்த்த பொழுது தெருவே கூடி நின்றது. உள்ளே ரோஜாநிறத்தில் அப்பொழுது தான் பிறந்த பெண் குழந்தை பிணமாக கிடந்தது. அய்யோ… என லட்சுமி அலறிவிட்டாள். இது யாரு குழந்தை? எப்படி வந்தது? என்ற விசாரணையில் தெருமக்கள் இறங்கிய வேளையில் நாகராஜன் புகார் சொல்ல போய்க் கொண்டிருந்தார். லட்சுமி நிதானித்துக் கொண்டு குழந்தையின் முகத்தை உற்று கவனித்தாள். குழந்தையின் வலது கன்னத்தில் மெலிதாக மச்சம் படர்ந்திருந்தது. அவசரமாக திரும்பி ராஜம்மாளின் வீட்டைப் பார்த்தாள். அது பூட்டியிருந்தது. ஈக்கள் மொய்க்க ஆரம்பித்திருந்த குழந்தையை பத்திரமாக கையில் எடுத்துக்கொண்ட லட்சுமி அதற்கு உயிர் கொடுக்க முடியாதா? என்ற ஏக்கத்துடன் பிள்ளைப் பேறற்ற தன் வற்றிய வயிற்றுடன் சேர்த்து குழந்தையை அணைத்துக் கொண்டாள். உயிர்க்காற்றின் உந்துதலில் குழந்தை லேசாய் நெளிவது போலிருந்தது. ஆச்சர்யத்துடன் லட்சுமி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே வீறிட்டு அழுத குழந்தை தன் இருப்பை வெற்றிகரமாக உலகிற்கு அறிவித்தது. பந்தயக் குதிரைகள்! -மே 5, 2019 […] பத்மாவுக்கு காலையிலிருந்தே படபடப்பாக இருந்தது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்னும் சிறிது நேரத்தில் அறிவித்து விடுவார்கள். மகள் ஜானு என்ன மார்க் வாங்கப் போகிறாளோ…என மூளை சூடாகிக் கொண்டே போனதில், பத்மாவின் ரவுக்கை வியர்வையில் நனைந்தது. முடிவு தெரிந்துவிட்டது. ஜானு முன்னூற்று இருபது மார்க் வாங்கி இருந்தாள். பத்மா அதிர்ச்சியில் மூர்ச்சையாகி விடுவாள் போலிருந்தது. “நானூறு மார்க்காவது வாங்க வேண்டாமா… எந்தலையில இப்படி கல்லை போட்டிட்டுயேடி பாவி” என மூச்சு வாங்க அழ ஆரம்பித்தாள். அம்மாவை ஏமாற்றி விட்டோமே என்ற ஆதங்கத்திலும், அவமானத்திலும் ஜானுவுக்கு உயிர் போவது போலிருந்தது. வெளியில் எப்படி தலைகாட்டுவது என பத்மா கவலையுடன் யோசித்துக் கொண்டிருந்த பொழுது, வீட்டுக்கதவு தட்டப்பட்டது. பத்மா கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கதவைத் திறந்தாள். கணவன் கிருஷ்ணன் உற்சாத்துடன் வீட்டிற்குள் நுழைந்தான். "ஜானு நீ பத்தாங்கிளாஸ் பாஸ் பண்ணிட்ட என மகளைப் பார்த்து மகிழ்ச்சியுடன் கூறியவாறு கையிலிருந்த சாக்லெட் பாக்ஸை ஜானுவிடம் கொடுத்தான். அப்பாவின் முகத்தில் மலர்ந்திருந்த மகிழ்ச்சி ஜானுவின் முகத்திலும் பூக்க ஆரம்பித்தது. “அவ வாங்கியிருக்கிற மார்க்குக்கு சாக்லெட் ஒன்னுதான் குறைச்சல்” என பத்மா எரிந்து விழுந்தாள். கிருஷ்ணன், “ஜானு என்ன, நீ பந்தயம் கட்டிய குதிரையா, மார்க்கை வைத்து மகளின் அறிவை எடை போடாதே பத்மா” என அமைதியாக கூறியவன், ஜானுவின் தோளை தட்டிக் கொடுத்து, “நீ போம்மா, போயி எல்லாருக்கும் சாக்லெட் கொடு…” என்று சொன்னான். ஜானு, படிகளில் துள்ளி குதித்து, சாக்லெட் பாக்சுடன் பக்கத்து வீடுகளுக்கு ஓடினாள். கம்பீரம் -மே 12, 2019 […] சிறு வயதிலிருந்தே கவிதாவின் கற்பனைகள் வேறு மாதிரியாக இருந்தது. ஒரு பைலட்டாக வானில் பறக்க ஆசைப்பட்டாள். ஒலிம்பிக்கில் ஓடி வீராங்கனையாக வேண்டும் என விருப்பபட்டாள். ஆனால் காலம் அவளை ஒரு கான்ஸ்டபிளாக இருக்க மட்டும் அனுமதித்தது. தலையிலிருக்கும் தொப்பியும், இடுப்பை இறுக்கிய பெல்ட்டும், காக்கி உடுப்பும் அவளைக் கைது செய்து காவல் நிலையக்கொட்டடியில் அடைத்தது போன்று இறுக்கமாக உணர்ந்தாள். அடிக்கடி விடுதலையை விட்டதில் தேடி அலுத்தாள். அவளுக்கு இந்த வேலை சுத்தமாக பிடிக்கவில்லை. அறையிலிருந்து வெளிப்பட்ட இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. யிடம் “கவிதாவையும் கூட்டிட்டு கிளம்புங்க” என்றவாறே வாகனத்தை நோக்கி வேகமாக போனார். கவிதா ஜீப்பின் பின்புறம் ஏறிக்கொண்டாள். சாலை வளைவு திரும்பியதும், கரட்டை ஒட்டி ஊருக்குள் ஒத்தையடிப்பாதை சென்றது. வாகனம் அதற்கு மேல் நகரவில்லை. வயதில் மூத்தவரான இன்ஸ்பெக்டரும், வயிறு தள்ளிய எஸ்.ஐயும் பாதையில் நடக்கவே சிரமப்பட்டனர். இன்ஸ்பெக்டர், கவிதாவிடம் விபரத்தைச் சொன்னதும், கவிதா சிட்டாக பறக்க ஆரம்பித்தாள். பயன்பாடற்ற பாறைக்குழி ஐம்பது அடி ஆழத்திற்கு மேலிருந்தது. ஒரு காலத்தில் குவாரியாக இருந்த இடம். பாறைக்குழியைச் சுற்றிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடிசைகள் இருந்தன. அதில் கல்லுடைக்கும் தொழிலாளிகள் வசித்து வந்தனர். பாறைக்குழிக்குள் இருந்து குழந்தையின் அழுகைச் சத்தம் மட்டும் ஈனஸ்வரமாக கேட்டது. குழிக்கு மேலே குழந்தையின் தாய் கதறிக் கொண்டிருந்தாள். சிலமணித் துளிகளில், இடுப்பில் கட்டிய கயிற்றுடன் பாறைக்குழி மீது அந்தரத்தில் தொங்கிய கவிதாவை சரசரவென குழிக்குள் இறக்கினர். அடுத்த ஐந்து நிமிடத்தில் குழந்தையுடன் மேலே கயிற்றில் ஊஞ்சல் ஆடியவாறே வந்த கவிதாவைப் பார்த்ததும், கூடியிருந்த மக்கள் மத்தியில் இருந்து படபடவென கைதட்டல் எழுந்தது. குழந்தையை தாயிடம் ஒப்படைத்த பொழுது, கண்ணீரைத்துடைத்தவாறே எங்குலங்காத்த சாமி… என கவிதாவின் கால்களைத் தொட்டு கும்பிட்டுவிட்டு குழந்தையை வாங்கிக் கொண்டாள். வானில் பறப்பதைப் போன்றும், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெற்றது போன்றும் கான்ஸ்டபிள் கவிதா கம்பீரமாக உணர்ந்தாள். எம்பாடு தீரலையே…! -மே 19, 2019 […] முனீம்மாக் கிழவி முன்னூறு ரூபாய்க்கு கொய்யா பழங்கள் வாங்கி இருந்தாள். இரண்டு கூடைகளில் அடுக்கி, ஒரு கூடையை பழைய துணி கொண்டு மூடியிருந்தாள். அவளைப் போல கொய்யா பழம் விற்கும் பெண்கள் ரோட்டோரம் வரிசை கட்டி உட்கார்ந்து இருந்தனர்.ஞாயிற்றுகிழமையாதலால் கோவிலில் கூட்டம் நெம்பித் தள்ளியது. கூட்டதைப் பார்த்து விட்டு முனீம்மா போட்ட கணக்கில் அவளுக்கு ஐநூறு ரூபாய் வருமானம் வர காத்து இருந்தது. கொய்யா பழ வியாபாரிக்கு முன்னூறு ரூபாய் கொடுத்து கணக்கு தீர்த்தால் இருநூறு ரூபாய் கைக்கு வரும். அவள் கண்ணில் மூன்று பிள்ளைகளுடன் வாழாவெட்டியாய் வந்திருக்கும் மகள் ராஜி நிழலாடினாள். “இவ்வளவு வயசாகியும் எம்பாடு தீரலையே..” என மனதிற்குள் மருகினாள்.கொட்டு மேளத்துடன் காவடி கூட்டம் கடந்து போனது. காவடிக் சிந்துவுக்கு, ஆணும் பெண்ணும் கோலெடுத்து ஆடி கொண்டே போனார்கள். அரோகரா சத்தம் விண்ணை பிளந்தது. “ஆண்டவா.. இன்னக்கி எம்பொழப்ப நல்லபடியா காப்பாத்திக் கொடு” என முனீம்மா வேண்டிக் கொண்டாள்.கூட்டத்திலிருந்து விலகி வந்த பெண் மஞ்சள் குங்குமத்துடன் மங்களகரமாக வந்தாள். இரண்டு சிறுவர்கள் அவளைத் தொற்றிக் கொண்டு வந்தனர். முதல் போனியை அவள் ஆரம்பித்து வைத்தாள் நன்றாக இருக்கும் என முனீம்மா நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே, அவள் கூடையிலிருந்து பழங்களைப் பொறுக்க ஆரம்பித்தாள். முனீம்மா கேட்ட காசை அட்டியின்றி கொடுத்தவளை, “மகராசியா இரு” என வாழ்த்தினாள். இன்னக்கி ராசி நல்லா இருக்கு, நல்ல வேவாரம் நடக்கும் என வாய்விட்டுச் சொன்ன முனீம்மாவின் முகத்தில் தெளிச்சி ஏற்பட்டது.காலை 11 மணி இருக்கும். ரோட்டில் நிறைய போலீஸ்காரர்கள் நின்றிருந்தனர். சைரன் சத்தத்துடன் வந்த காவல் ஜீப்புக்கு பின்புறம் வந்த கப்பல் போன்ற காரிலிருந்து குடும்பத்துடன் அமைச்சர் இறங்கினார். உடன் வந்த அதிகாரி கொய்யாப்பழம் விற்கும் பெண்களை அசூசையாக பார்த்தார். அடுத்த கணம், போலீசார் கொய்யாப்பழம் விற்கும் பெண்களை அவசரகதியில் அப்புறப்படுத்தினர்.முனீம்மா இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. “ஏய் கிழவி கூடைய எடுத்துகிட்டு ஓடு” என்று உத்தரவிட்ட போலீஸை பார்த்து “எதுக்கு” என முனீம்மா கேட்டாள் . “கேள்வியா கேக்குற” என்று போலீஸ்காரர் கூடையை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தார். கொய்யாப்பழங்கள் ரோட்டில் உருண்டு ஊர்வலம் போயின. முனீம்மா தாங்க முடியாத ஆத்திரத்தில் “அட கொள்ளையில நாசமாப் போனவனே, எம் பொழப்புல மண்ணள்ளி போடுறியே. நீ நல்லா இருப்பியா” என கத்தினாள். போலீஸ் முனீம்மாவின் குடுமியை பிடித்து வளைத்து முதுகில் சாத்தினான். வலி தாங்க முடியாமல் முனீம்மா கதறிக் கொண்டிருந்த பொழுது, அமைச்சர் சாமி கும்பிட கோவிலுக்குள் போய்க் கொண்டிருந்தார். நாம்பெத்த மகளே…! -மே 26, 2019 “அந்த ஈனச்சாதி பையனத் தான் கட்டுவேன்னு சொன்னா அவள கண்டதுண்டமா வெட்றா” என்ற ஊர்ப்பெரியதனத்தின் உருமலுக்கு உடன் இருந்த பெருசுகளும் இளந்தாரிகளும் ஒத்து ஊதினர்.பெற்ற மகளையே வெட்டுவதா.. வேலுச்சாமியின் நெஞ்சம் பதைபதைத்தது. “வேலு நமக்கு மானம் மரியாதை தான் முக்கியம். அவ இஷ்டத்திற்கு ஒரு சேரிப்பயல இழுத்துட்டு ஓடுனா இந்த ஊர்ல மீசை வச்ச ஆம்பளன்னு ஒரு பயலும் இருக்க முடியாது. அம்புட்டு பேரும் நாண்டுகிட்டு சாக வேண்டியது தான். பேசாம கதைய முடிச்சிரு” என பெரியதனம் குரலை மாற்றி வேலுச்சாமியை படுபாதக குழிக்குள் இறக்கினார். “நாம்பெத்து வளத்த புள்ளய நானே எப்படி…” அதற்கு மேல் வேலுச்சாமிக்கு வார்த்தைகள் வரவில்லை. மேல்துண்டால் வாயை மூடிக்கொண்டு அழுதார். “அதுக்கு தாண்டா நாங்க இருக்கோம் தகிரியமா முடிவு பண்ணு காரியத்த கச்சிதமா முடிச்சிறலாம்” என பெரியதனம் வேலுச்சாமியின் தோளைத் தட்டிக் கொடுத்தார். கிழக்கே தோன்றிய நிலா உச்சிக்கு வந்தபோது ஊர் அடங்கி இருந்தது. ஊருக்கு மேற்கே மயானத்தில் இருந்த புளியமரத்தோடு மரமாய் செல்வி கட்டப்பட்டிருந்தாள். கூட்டத்திலிருந்து விலகி நின்ற வேலுச்சாமியை பார்த்து “அப்பா..” என அருகில் அழைத்தாள். வேலுச்சாமி நடுங்கும் குரலில் “என்னம்மா..” எனக் கேட்டார். “அப்பா என்னை எரிக்கிறதுக்கு முன்னாடி நான் போட்டிருக்கிற நகைகளை கழட்டி பத்திரமா அம்மா கையில கொடுத்திருங்கப்பா தங்கச்சிக கல்யாணத்துக்கு அது உதவும்” என செல்வி உருக்கமாக வேண்டினாள். அதைக் கேட்டதும் வேலுச்சாமிக்கு அங்கமெல்லாம் பதறியது. “நாம்பெத்த மகளே..” என அரற்றியவர் “ஒன்ன பலி கொடுத்துட்டு நாங்க உயிரோட எப்பிடிம்மா வாழறது” என கதறியவாறு கட்டுக்களை அவிழ்த்து செல்வியை காப்பாற்றப் போனார். அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெரியதனம் “அவன இழுத்துப் புடிங்கடா மண்னெண்ணைய ஊத்தி அவள பத்த வைங்கடா” என உஷ்ணமாக உத்தரவிட்டார். அடுத்த கணம் செல்வியின் உடல் தீப்பற்றி திகுதிகுவென எரிந்தது. முரட்டுக் கரங்களால் சுற்றி வளைக்கப்பட்ட வேலுச்சாமி “அய்யோ.. அய்யய்யோ.. எம்மகள காப்பத்துங்களேன்” என அலறிய சத்தம் அந்த நிலவுக்கும் கேட்டது. தண்ணியில…! -ஜூன் 2, 2019 […] கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிக்கு வந்த மாணவர்களை உற்சாகத்துடன் வரவேற்க அங்கே யாரும் இல்லை. ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் “ஊ” என்ற எழுத்து விடுமுறையில் காணாமல் போயிருந்தது.பள்ளி முன்வாசலில் தூக்கில் தொங்கிய தண்டவாளத் துண்டினைப் போல பள்ளியும் துருப்பிடித்து இருந்தது. முண்டாசு கட்டிய மணி தாத்தா பள்ளி துவங்குவதற்கு அடையாளமாக தண்டவாளத் துண்டில் கணகணவென சத்தம் எழுப்பியதும் மாணவர்களுக்கு மட்டும் அல்ல ஆசிரியர்களுக்கும் வயிற்றைக் கலக்குவது போலிருந்தது. மதிய உணவு இடைவேளை நேரம்.மாணவ மாணவியர் குடிநீர் தொட்டியை முற்றுகை இட்டிருந்தனர். அந்தக் காலத்தில் கட்டப்பட்ட சிமெண்ட் தொட்டி. அடியில் பொருத்தப்பட்டிருந்த இரும்புக் குழாயிலிருந்து பத்து திருகு குழாய்கள் மூலம் குடிநீர் இணைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. பாத்திரத்தை அரைகுறையாக கழுவிய பின்னர் குடிப்பதற்கான நீரை அதிலேயே பிடித்துக் கொண்டு ஒவ்வொருவராக விலகி வந்தனர். சாப்பிட்ட உணவை உள்ளே இறக்க வேகமாக குடிநீரைக் குடித்தவர்கள் முகம் சுளித்தனர். அன்னலட்சுமி கலங்கலாக இருந்த குடிநீரை ஆழமாக முகர்ந்து பார்த்தாள். அடுத்த நொடி “தண்ணியில துர்நாற்றம் அடிக்குது யாரும் குடிக்காதீங்க” என எச்சரித்தாள். தண்ணியைக் குடித்தவர்கள் என்ன செய்வது என தெரியாமல் விழித்தனர். அருகிலிருந்த பாக்கியம் “ஏய் தாயை பழிச்சாலும் தண்ணிய பழிக்காதடி” என்றாள். அன்னலட்சுமி அருகில் இருந்த குமாரிடம் “தொட்டிக்குள்ளாற எட்டிப் பாருடா” என அவசரப்படுத்தினாள்.குமார் அருகிலிருந்த வேப்ப மரத்தில் ஏறி தொட்டியின் மேல்திட்டை அடைந்தவன் அதிர்ச்சியடைந்தான். தொட்டிச் சுவர்களில் பலநாள் பாசம் படர்ந்து இலைதழைகளும் மரக்குச்சிகளும் புழுப்பூச்சிகளும் நீர் முழுக்க பரவி இருந்தது.நடுவில் என்னவோ கருப்பாய் மிதந்தது.உற்றுப் பார்த்தவன் தொட்டிக்குள் “காக்கா செத்து மிதக்குது” என அலறினான். அதைக் கேட்டதும் தண்ணீரைக் குடித்த மாணவர்கள் சாப்பிட்ட உணவுடன் சேர்த்து வாந்தி எடுக்க ஆரம்பித்தனர். ஒரு மாணவி மயக்கம் போட்டு விழுந்தாள். அன்னலட்சுமி “தண்ணியில.. தண்ணியில..” என்றவாறே தலைமையாசிரியரிடம் தகவல் தெரிவிக்க தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தாள். குல்பி -ஜூன் 9, 2019 […] கலர்கலராக பிளாஸ்டிக் குடங்கள் காலையி லிருந்து நீண்ட வரிசையில் காத்திருந்தன. குடிநீர் குழாய் சிமெண்ட் திட்டில் அமுதா உட்கார்ந்திருந்தாள். அவளைப் போலவே இன்னும் சில சிறுமிகள், தண்ணி லாரி வந்தால் தகவல் சொல்ல அங்கே தயாராக இருந்தனர். பொழுது பிற்பகலைக் கடந்து போய்க்கொண்டி ருந்தது. அமுதாவுக்கு பசிக்கிறக்கத்தில் தூக்க மாக வந்தது. தெருவில் போன குல்பி ஐஸ் வண்டிக்காரன், சிறுமிகளைப் பார்த்ததும் திரும்ப திரும்ப மணி அடித்து அழைத்தான். அமுதாவின் கையில் காசில்லை. ஆனால் குல்பி ஐஸ்காரன் கை நீட்டி அழைத்ததும் ஓடிப்போ னாள். அவன் நீண்ட நாள் பழகியது போல, “நீ அமுதா தான, கார்ப்பரேசன் ஸ்கூலுல ரெண்டாங்கிளாஸ் தான படிக்கிற” என கேட்டதும், இவள், ஆமா.. ஆமா.. என ஆச்சர்யமாக தலையாட்டினாள். அவன் அணிந்திருந்த தொப்பி அமுதா வுக்கு பிடித்திருந்தது. அவன் காசு வாங்காமலேயே, “இந்தா குல்பி ஐஸ் சாப்பிடு” என ஒன்றைக் கொடுத்தான். அமுதா “வேணாம்னா…” என்று சொல்லிக்கொண்டே வாங்கிக்கொண்டாள். கையில் இருந்த குல்பி ஐஸை சூப்புவதற்கு வாயருகில் கொண்டு போனாள். அதற்கு முன் ஒரு தடவை, வண்டியில் கட்டியிருந்த பித்தளை மணியை அடித்துப் பார்க்க ஆசைப்பட்டாள். “அண்ணா ஒரு தடவ அடிச்சுக்க வண்ணா..” என்றாள். ஐஸ்க்காரன் சிரித்தவாறே அதற்கு சம்மதித்தான். அமுதா கயிற்றைப்பிடித்து இழுத்தாள். மணி நங்.. நங்கென்று சத்தம் எழுப்பியது. அமுதா சந்தோசம் கொப்பளிக்க குல்பி ஐஸை சுவைக்கப் போனபோது பின்னந் தலை யில் படாரென அடி விழுந்தது. அமுதா நிமிர்ந்து பார்த்தாள் அம்மா பத்ரகாளியாட்டம் நின்று கொண்டி ருந்தாள். “தண்ணி லாரி வந்தது கூடத் தெரியாம பகல்ல அப்படி என்னடி தூக்கம்” என அம்மா கத்தினாள். அமுதா அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் கையிலிருந்த குல்பி ஐஸ் எங்கே போனது என திரும்ப திரும்ப தேடினாள். அதைச் சுவைத்துப்பார்ப்பதற்குள் அம்மா குறுக்கே வந்தது அமுதா வுக்கு பெரும் வருத்தமாக இருந்தது. அவள், “குல்பி ஐஸ்ம்மா…”என அழுக ஆரம்பித்தாள். “குடிக்கத்தண்ணி இல்லையாம், இவளுக்கு குலுப்பி ஐஸ் கேக்கு தாம்” என சலித்தவாறே அம்மா தண்ணி லாரியை நோக்கிப் போனாள். தொலைவில் குல்பி ஐஸ்காரன் எழுப்பும் மணி சத்தம் அமுதாவுக்கு கேட்டது. அவனை நோக்கி ஓடினாள். வண்ணக் குடையின் கீழே ரதம்போல வண்டியை ஓட்டிக்கொண்டு போன ஐஸ்காரனை “அண்ணா…. அண்ணா…” என கை தட்டி அமுதா அழைத்து நிறுத்தினாள். வியர்வை வழியும் முகத்துடன் மூச்சு வாங்க நின்றவளைப் பார்த்து, “ஒரு ஐஸ் பத்து ரூவாப்பா” என்றான். அமுதா, " அண்ணா எம்பேரு அமுதாண்ணா கார்ப்பரேசன் ஸ்கூலுல ரெண்டாங்கிளாஸ் படிக்கிறண்ணா" என்றாள். ஐஸ்க்காரன், அதனால என்ன, துட்ட கொடு குல்பி தர்றேன்" என்றான். அமுதாவுக்கு காசு இல்லாமல் குல்பி கிடைக்காது எனத் தெரிந்ததும் “அண்ணா ஒரு வாட்டி இந்த மணியையாவது அடிச்சிக்கிறேண்ணா..”என கெஞ்சுகிற குரலில் கேட்டாள். ஐஸ்க்காரன் முகம் அந்த வெய்யிலிலும் புன்னகைத்தது. “சரி…ஒரு வாட்டி அடி” என அனுமதி கொடுத்தான். அமுதா கயிற்றைப்பிடித்து இழுத்தபொழுது நங் நங்கென்று அது எழுப்பிய சத்தத்தால் பசியை மறந்து பரவசமானாள். “ரொம்ப தேங்சுன்னா நான் வர்றேன்” என அமுதா திரும்பியபொழுது ஐஸ்க்காரன் என்ன நினைத்தானோ, இந்தா அமுதா" என பெட்டியிலிருந்து ஒரு குல்பி ஐஸை எடுத்து அமுதாவிடம் நீட்டினான். அமுதா, “துட்டு இல்லண்ணா” என வாங்க மறுத்தாள். “பரவால்ல வாங்கிக்க.. அண்ணனுக்கு துட்டு வேணாம் நீ நல்லாப்படிக்கனும். இந்தா பிடி” என்ற போது அமுதா கண்ணீர் மல்க குல்பியை வாங்கிக் கொண்டாள். காவ்யா என்றொரு மாணவி -ஜூன் 16, 2019 […] டவுன்ஹால் மணிக்கூண்டு ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. சுதா டீச்சர் நடையை வேகப்படுத்தினாள். பிடித்திருந்த குடை நிழல் தந்த போதும் உடல் வியர்வையில் திளைத்திருந்தது. முகத்திலும் கழுத்திலும் அணிந்திருந்த வாசனைப்பவுடர் வெயிலுடன் சேர்ந்து வெள்ளையாய் வழிந்தது. அது அவளை மிகவும் சங்கடம் கொள்ளச் செய்தது. நேரங்காலம் தெரியாமல் செல்போன் அடித்தது. சுதா கைப்பையை பிரித்து போனை எடுக்க குனிந்தபோது அது நடந்துவிட்டது.மஞ்சள் சட்டை அணிந்த ஒரு தடியன் இவளது தங்க சங்கிலியுடன் ஓடிக்கொண்டிருந்தான். “அய்யோ திருடன் என் சங்கிலிய அத்துகிட்டு ஓடறான்” என உரக்க குரல் கொடுத்தவள் குடையை மடித்துக் கொண்டு துரத்தினாள். அவளுடன் சேர்ந்து, ஓட முடிந்த பாதசாரிகள் சிலரும் அவனைப் பிடிக்க பாய்ந்தனர். சுதா பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே மஞ்சள் சட்டைக்காரன் மின்னலென மறைந்து விட்டான். சுதா புகார் கொடுத்துவிட்டு பள்ளிக்கு வரும்போது மணி பனிரெண்டு ஆகிவிட்டது. போலீஸ் புத்தி மட்டும் சொன்னதே தவிர நகையை மீட்டித் தருவதாக வாய் தவறி கூட ஒரு வார்த்தை சொல்லவில்லை. சுதாவால் மாணவிகள் முன்பு நடந்ததை மறைக்க முடியவில்லை. மஞ்சள் சட்டைக்காரனைப் பற்றிச் சொல்லி அழுதுவிட்டாள். வேலைக்காக வெளியூர் சென்று இருக்கும் கணவனைக் கூட சமாதானப்படுத்தி விட முடியும். ஆனால் வீட்டிலிருக்கும் மாமியார்க்காரி கொஞ்சம் கொஞ்சமாக கொன்று விடுவாள். டீச்சருக்கு என்ன ஆறுதல் சொல்வது என மாணவிகள் புரியாமல் திகைத்த பொழுது காவ்யா மட்டும் ஏதோ புரிந்தது போல வகுப்பை விட்டு அவசரமாக வெளியேறினாள். மதிய உணவு இடைவேளை நேரம். விசயம் கேள்விப்பட்டு பள்ளி ஓய்வறைக்கு வந்த மாமியார்க்காரி சுதாவை சக ஆசிரியர்கள் முன்பு குற்றவாளிக் கூண்டில் ஏத்தி இருந்தாள். “இவ எல்லாம் ஒரு டீச்சரு இவ கிட்ட படிக்கிற புள்ளைக ஒன்னு கூட உருப்படாது” என சத்தமாக சாபமிட்டாள். அப்பொழுது அறைக்குள் நுழைந்த காவ்யா “இந்தாங்க டீச்சர் உங்க சங்கிலி” என சுதாவின் கையில் திணித்தாள். சங்கிலியைப் பார்த்த சுதாவுக்கு போன உயிர் திரும்பி வந்தது. சங்கிலி எப்படி கிடைத்தது என வினவிய சுதாவை அறைக்கு வெளியே காவ்யா அழைத்துச் சென்றாள். வாசலில் தலை குனிந்து நின்றவரைக் காட்டி “இவரு எங்கப்பா டீச்சர்” என்ற காவ்யா “மன்னிச்சுக்கங்க டீச்சர்” என தேம்பியவாறே சுதாவின் காலில் விழுந்தாள். அவளை வாரி அணைத்துக் கொண்ட சுதா தலை நிமிராமல் நின்ற அந்த மனிதனைப் பார்த்தாள். அவர் மஞ்சள் சட்டை அணிந்திருந்தார். கரி பூசிய முகத்துடன் மாமியார்க்காரி காவ்யாவை பிரமிப்புடன் பார்த்தவாறு இருந்தாள். பாலய்யாவின் முடி -ஜூன் 23, 2019 […] அப்பச்சி சலூன் கடை இடையில் ஏற்பட்ட நவீனமயத் தாக்கம் ஏதுமின்றி ஐம்பது ஆண்டுகாலமாக அப்படியே இருந்தது. இடுப்பில் குடத்துடன் முண்டு கட்டிய கேரளப் பெண் சாயம் போன போட்டாவாய் சுவற்றில் தொங்கினாள். முடியை வெட்டி முடித்து விட்டதாக பாலய்யாவை எழுப்பும் பாவனையில் பிச்சுமணி சொன்னார். பாலய்யாவுக்கு நிம்மதியான ஒரு தூக்கம் இழந்த தவிப்பு. அரைக் கண்களைத் திறந்தவாறே, “இன்னும் கொஞ்சம் வெட்டப்பா” என்றார். “ஏனுங்க வெட்றதுக்கு என்னங்க இருக்கு, நல்லா முழிச்சுப்பாருங்க” என்று சடைந்த பிச்சு மணியை முறைத்துப் பார்த்துவிட்டு, கண்ணாடி யில் வலுக்கையாக இருந்த தலையைப் பார்த்து பொசுக்கென்று கோபப்பட்டார். “தலைல இருந்த முடியெல்லாம் எங்கய்யா?” என்றார். அதற்கு பிச்சுமணி “ஏனுங்க அது போய் இருபது வருசமாச்சுங்க, இப்ப கேக்கறீங்க” என் றார். பாலய்யா, “இருபத்தஞ்சு வருசமா நீ தான் அய்யா முடி வெட்டுற, முடி எங்க போச்சுன்னு நீ தான சொல்லனும்” என்றார். “நானென்னமோ, ஒங்க மண்டை முடிய புடுங்கி பொங்க வச்சுத் தின்ன மாதிரி சொல்றீங்க,” என பொக்கை வாய் பிளந்து சிரித்த பிச்சுமணி பாவமாக இருந்தார். இப்பொழுது பாலய்யா அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தார். “இருபது வருசமா முடியில்ல அப்புறம் எதுக்குய்யா முடி வெட்ற, வெட்றதுக்கு காசு வேற கேக்குற”, என வில்லங்கமாக கேட்டார். “ஏனுங்க முடிவெட்ட நானா கூப்டனுங்க,” என்று கூறிய பிச்சுமணி, பொக்கை வாய் உதடுகளை கூம்பு போல குவித்துக் காட்டி கேலி செய்தார். பாலய்யா தோளில் போட்டிருந்த துண்டால் கழுத்திலும், முதுகிலும் ஒட்டி இருந்த முடித்துகள்களை தட்டி விட்டார். பிறகு, " சரிப்பா பிச்சுமணி நாந்தான் தூங்கிட்டேன், வெட்டுன முடிய கொஞ்சம் காட்டுய்யா பெறகு காசு தர்றேன்" என நியாயஸ்தனைப் போலக் கேட்டார். பிச்சுமணி கையில் இருந்த கத்திரிக்கோலை கண்ணாடி டேபிளில் வைத்துவிட்டு, பாலய்யாவைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டார். “அப்படி வாய்யா வழிக்கி இந்தா இத வாங்கிக்க” என பதினைந்து ஒரு ரூபாய் காசுகளை எண்ணி பாலய்யா பிச்சுமணியிடம் கொடுத்தார். பாலய்யா, ஹேங்கரில் மாட்டியிருந்த சட்டையை எடுத்து அணிந்து கொண்டவர், “பிச்சுமணி நாம பேசுன இந்த மயிறு சமாச்சாரத்துல ஒலக விவ காரம் அடங்கி இருக்கு ஒனக்குத் தெரியுமா?” எனக் கேட்டார். பிச்சுமணி ஒன்றும் பேசாமல், கடை வாசலுக்கு வெளியே வீதியை வளைத்துப் போட்டு படுத்திருந்த தெரு நாயை பார்த்திருந்தார். அதை கவனித்த பாலய்யா அசராமல், “பிச்சுமணி இருபது வரு சத்துக்கு முன்னாடி எந்தலையில ஓரளவுக்காவது முடி இருந்துச்சு அப்ப டித்தான் இந்த நாட்டுல உள்ள ஜனங்க கிட்ட கொஞ்சம் காசு பணம் இருந்துச்சு சொத்து சுகம் இருந்துச்சு அப்புறம் வந்துச்சு பாரு ஒலகப் பொரு ளாதாரம், இருந்த தலைமுடி உதிந்த மாதிரி அது ஜனங்ககிட்ட இருந்த காசை யும் சொத்து சொகத்தையும் அழிச்சு எடுத்துட்டுப் போயிருச்சு” என்றார். இது என்னடா வம்பாப் போச்சு என அதிர்ச்சியடைந்த பிச்சுமணி “அது சரி அடுத்தவாட்டி முடி வெட்ட வருவீங்களா மாட்டீங்களா” என கறாராக கேட்டார். அதற்கு பலமாக சிரித்த பாலய்யா, “இன்னக்கி வரை முடி இருந்தாலும் இல்லைன்னாலும் ஒங்கிட்ட முடிவெட்ட வராம இருக்கனா இல்ல நீ தான் வெட்டாம இருக்கியா நாடு போற போக்கச் சொன்னேன். இருக்குதோ இல்லையோ பொழப்ப ஓட்டித்தான ஆகனும்” எனக் கூறியவாறே கடையை விட்டு வெளியேறினார். அகதிகள் -ஜூன் 30, 2019 […] அடுக்குமாடிக் குடியிருப்பை விட்டு அவன் விடுவிடுவென வெளியேறிக் கொண்டிருந்தான். அவனது வலது கையில் குழந்தை மகேஸ்வரியை நெஞ்சோடு சேர்த்து வைத்திருந்தான். இடது கையில் துணிமணிகள் நிறைந்த தோல் பை இருந்தது. ஐந்தடி இடைவெளியில் தூக்க முடியாத பாத்திரபண்டச் சுமையுடன் அவனது மனைவி சந்திரா வந்து கொண்டிருந்தாள். அவன் முகம் பாறையைப் போல இறுகி இருந்தது. அடுக்குமாடிக் குடியிருப்பின் செக்யூரிட்டி என ஆறு மாதமாய் அவன் பார்த்திருந்த வேலையை ஒரு மணிக்கு குறைவான நேரத்தில் அவன் இழந்திருந்தான். ஒருக்களித்த ஜன்னல், வாசல் கதவுகள் வழியாக குற்ற உணர்வுடன் பார்த்துக் கொண்டிருந்த குடியிருப்பாளர்களின் மத்தியிலிருந்து மகேஸ்வரி என ஒரு சிறுமி அழைக்கும் சத்தம் மட்டும் கேட்டது. அவள் பெயர் அகிலா. பெற்றோர் வேலைக்குச் சென்று விடும், பள்ளி விடுமுறை நாட்களில், அவளுக்கு குழந்தை மகேஸ்வரி தான் உற்ற துணை. அகிலாவுக்கு இனி அவர்கள் திரும்ப மாட்டார்கள் என புரிந்தது கதவை மெல்லமாக சாத்திவிட்டு, அவர்களைப் பின் தொடர்ந்தாள். அவர்கள் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தனர். அவனிடமிருந்து அதே ஐந்தடி இடைவெளியில் சந்திரா நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு எது சாஸ்வதம் என்று சின்ன வயதிலிருந்தே புரியவில்லை. இங்கே இன்று மதியம் வரை எல்லாம் சரியாகத்தான் இருந்தது. மதிய உணவுக்குப்பின் மனைவி உறங்கிய தைரியத்தில், குடியிருப்பின் உரிமையாளர் சந்திராவிடம் அத்துமீறி நடந்துவிட்டார். அதிர்ச்சியில், நடந்ததைப் பற்றி சந்திரா கணவனிடம் கூறியது பெரும் தவறாக போய்விட்டது. அவன், உரிமையாளரிடம் இப்படித்தான் கேட்டான், “எங்களைப் பார்த்தால் உங்களுக்கு மனிதர்களாக தெரியவில்லையா? உரிமையாளர் அதற்கு பதில் சொல்ல மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக வேலையை விட்டு நீக்கிவிட்டார். பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த அவனுக்கு எங்கே போவது என்று தெரியவில்லை. ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அவனது கிராமம் இப்பொழுதும் அவனுக்கு அன்னியமாகத் தோன்றியது. அருகில் வந்த அகிலாவைப் பார்த்ததும், குழந்தை மகேஸ்வரி களிப்புடன் கை தட்டி சிரித்தாள். அகிலா”அங்கிள் எங்க போறீங்க?" எனக் கேட்டாள். அவன், தொலைவில் வரும் பஸ்ஸைக் கை காட்டி காண்பித்தான். பிறகு, “அந்த பஸ் போகும் ஊருக்கு” என்றான். விருந்து -ஜூலை 7, 2019 […] மூன்றாவது முறையாக முயற்சி தோல்வியுற்ற போது மயில்சாமிக்கு கஷ்ட மாக இருந்தது. திரும்பி விடலாமா..? என நினைத்த ஒவ்வொரு முறை யும் அதைத் தடுத்து மண்டப வாசலுக்கு வயிறு மீண்டும் இழுத்து வந்து நிறுத்தியது. எல்லோரும் இவனையே கவனிப்பது போல மயில்சாமிக்கு வெட்கமாக இருந்தது. நண்பனின் மகள் திருமண வரவேற்பு. விருந்து தடபுடலாக இருந்தது. ஒரு பந்திக்கு ஐநூறு பேர் வரை உட்காரலாம். இன்னும் மூன்று பந்திகளுக்கான கூட்டம் மண்டபத்தில் இருந்தது. இதுதவிர விருந்து சாப்பிடுவர்களுக்கு பின்புற மாக முற்றுகையிட்டிருந்த கூட்டமும் டைனிங் ஹால் வாசலில் பாசறை அமைத்திருந்த கூட்டமும் தனி. இதற்கிடையே வசதியும் செல்வாக்கும் படைத்த விருந்தினர்களை நண்பன் தனியாக இடம் பிடித்து அமர வைத்துக்கொண்டி ருந்தான். நண்பனின் பார்வையில் பட மயில்சாமி எடுத்த முயற்சிகள் வீணாகப் போயின. வெள்ளைச் சட்டைக்கு பதிலாக கட்டம் போட்ட கலர்ச் சட்டை அணிந்து வந்ததற்காக வருத்தப்பட்டான். இவன் கிளம்பும் போது, “ஏங்க மதியத்துக்கு கொஞ்சம் சோத்த ஆக்கி வைக்கவா” என ஆதுரத்துடன் கேட்ட மனையாளை, “எல்லாம் நான் அங்கயே பாத்துக்கறேன்” என அலட்சியப்படுத்தியது எவ்வளவு பெரிய தவறாக போய்விட்டது. வாசல் வரை யாரையோ வழியனுப்ப வந்த நண்பன் இவனைப் பார்த்து விட்டான். “சாப்பிட்டாச்சா” என சைகையால் கேட்டவாறே இவனுடைய பதிலை எதிர்பாராமல் சென்று விட்டது இவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. வீட்டில் கல்யாண வயதில் மகள் இருந்தாள். எதிர்பார்க் கும் அளவு சீர்வரிசை செய்ய முடியாத காரணத்தால் வந்த வரன்கள் தட்டிப் போய்க் கொண்டிருந்தன. நண்பன் ஏற்பாடு செய்திருந்த ஒரு பந்திக்காகும் செலவு இருந் தால் கூட போதும் மகளின் திருமணத்தை ஜாம் ஜாமென முடித்து விடலாம் என மயில்சாமி கணக்குப் போட்டான். பிறகு நீண்ட பெருமூச்சு விட்டான். அது மனையாளுக்கு கேட்டிருக்கும் போல அவள் கைப்பேசியில் “சாப்டாச்சா” எனக் கேட்டாள். இவன் உம்.. உம்.. என்றான். அவளுக்கு புரிந்து விட்டது “ஏங்க தயிர் பாக்கெட் வாங்கி வைக்கவா” என்றாள். இவன் எரிச்சலுடன் “சாப்டாச்சுன்றேன்” என்ற உடன் அவள் கைப்பேசியை அணைத்து விட்டாள். ஒரு வழியாக ஐந்தாவது பந்தியில் இடம் கிடைத்து விட்டது. தலை வாழை இலையில் ஆறுவகை காய்கறிகளுடன் ஆவி பறக்க அன்னம் பரிமாறப் பட்டது. அடுத்தடுத்து வடை பாயாசம் அப்பளம் ஐஸ்கிரீம் என வரிசையாக வந்து கொண்டிருந்தது. இவ்வளவையும் எப்படி சாப்பிடுவது என மயில்சாமிக்கு திகைப்பாக இருந்தது. அன்னத்தில் பருப்பை போட்டு நெய் ஊற்றினார்கள். இவன் ஆவலுடன் சாப்பிட முனைந்த பொழுது அருகிலிருந்தவன் “அண்ணே..” என அழைத்தான். அவன் அருகில் நின்றிருந்த பெண்ணைக் காட்டி “சம்சாரம்ங்க அண்ணே எதிர்த்த வரிசையில் ஒரு இடம் இருக்கு நீங்க அங்க போனீங்கன்னா இவ இங்க ஒக்காந்துக்கவாண்ணே” என பணிவுடன் கேட்ட பொழுது மயில்சாமிக்கு மனம் இளகிப் போனது. எதிர் வரிசையில் ஒரு இடம் இருப்பதை உறுதிப்ப டுத்திக் கொண்டவன் “பரவாயில்லை” என்றவாறே அந்த இடத்தை நோக்கி வரிசையை சுற்றிக் கொண்டு வேகமாக போனான். இவன் போய்ச் சேர்வதற்குள் காலியாக இருந்த இடத்தில் ஒருவன் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்து இருந்தான். மயில்சாமி தான் உட்கார்ந்த இடத்தைப் பார்த்தான். கணவனும் மனைவியும் சந்தோஷமாக சாப்பிட்டுக் கொண்டி ருந்தனர். மயில்சாமியை அடுத்த பந்திக்கு காத்திருக்க வயிறு அனுமதிக்க வில்லை. மண்டபத்தை விட்டு வெளியேறியதும் மயில்சாமியின் மனம் ஆசுவாசப் பட்டது. கைப்பேசியில் மனையாளை அழைத்து“ஒரு தயிர் பாக்கெட் வாங்கி வை” என்றவுடன் வயிறு அதை ஆமோதித்தது போல ஏறி இறங்கியது. தகிப்பு -ஜூலை 14, 2019 மலர்கள் சுடுமா? அவளுக்கு பின்புறம் இருந்து கரகரத்த குரலில் அந்தக் கேள்வி வந்தது. கூடவே பீடிப்புகையும் வந்தது. திரும்பி பார்த்தாள். ஆறடி உயரத்தில் அரையில் அழுக்கடைந்த வேட்டி மட்டும் அணிந்து அவன் நின்றான். கேள்வி இவளைப் பார்த்து கேட்டதாக தெரியவில்லை. அவன் வானம் நோக்கி பதிலுக்காக காத்திருந்தான். வினோதமான கேள்வியின் தாக்கமும் அவனது அசாதாரணமான இருப்பும் பேருந்துக்கு காத்திராமல் நிறுத்துமிடத்திலிருந்து அபியை பதட்டத்துடன் நடக்க வைத்தது. இறங்கு வெயிலுடன் மேற்கிலிருந்து வீசிய ஈரக்காற்று மனதை கொஞ்சம் லேசாக்கியது. வழியில் வெள்ளாடுகளை மேய்த்துக் கொண்டு சென்ற மூதாட்டியிடம் மலர்கள் சுடுமா? எனக் கேட்க அபி ஆசைப்பட்டாள். மூன்று கிலோமீட்டர் நடந்த களைப்பு சூடாய் குடித்த காபியில் கரைந்தது. பள்ளியிலிருந்து மகள் வரும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. வீட்டு வேலை செய்யும் முத்தம்மா கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள். வழக்கம்போல வாங்கி வரும் பூப்பொட்டலத்தை அபியிடம் கொடுத்தவள் “இந்த அநியாயத்தை கேட்டீங்களாம்மா” என்றாள். ஆனால் அபி பொட்டலத்தை அவசரமாக பிரித்து மொட்டவிழாத மல்லிகைப் பூக்களை உள்ளங்கைகளில் ஏந்தினாள். குளிர்ச்சியாகவும் இதமாகவும் இருந்தது. அதெப்படி சுடும்? விடை கிடைத்த மகிழ்ச்சியில் மலர்களின் நறுமணத்தை ஆழமாக முகர்ந்தாள். “ஏம்மா நான் என்ன சொல்லிட்டு இருக்கிறேன் நீ என்னமோ பூவ புதுசா பாக்கற மாதிரி அதிசயமா பாத்துகிட்டு இருக்கற” என்ற முத்தம்மா, " இந்த அநியாயத்தை கேட்டீங்களாம்மா" என மீண்டும் ஆரம்பித்தாள். “எங்க தெருவுல பள்ளிக்கூடம் போற புள்ள இன்னும் வயசுக்கு கூட வரலை” என நிறுத்தியவள், “இத எப்படி என் வாயால சொல்றது எந்த படுபாவியோ பச்சை மண்ணுன்னு கூட பாக்காம சின்னாபின்னமாக்கி சீரழிச்சு கொன்னு குப்பையில வீசிட்டான்மா” என்ற முத்தம்மாளின் குரலில் தாய்மை தவியாய் தவித்தது. அபி அதிர்ச்சியில் உறைந்து போனாள். அவள் கைகளில் இருந்த மலர்கள் இப்பொழுது தகித்துக் கொண்டிருந்தன. நீட் -ஜூலை 21, 2019 வீட்டுவாசலில் கூட்டம் அலை மோதியது. தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையாளர்களின் கைகளில் இருந்த கேமி ராக்கள் விடாமல் மின்னிக் கொண்டிருந்தன. அரசியல் கட்சித் தலை வர்கள், அதிகாரிகள் மலர் வளையங்களுடன் மரியாதை செலுத்திக் கொண்டிருந்தனர். இவ்வளவு ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் சற்றே வாய்கோணிய நிலையில் அனு அமைதியாக படுத்து இருந்தாள். உடல் முழுவதும் வெள்ளைத் துணியால் இறுக கட்டப்பட்டு நீலம் படர்ந்த முகம் மட்டும் வெளித் தெரிந்தது. கூச்ச சுபாவம் உள்ள அனு, வீட்டு வாசலில் தான் இப்படி கிடத்தப் பட்டிருப்பதை அறிந்தால் எழுந்து வெட்கம் பிடுங்கித் திங்க வீட்டுக்குள் ஓடியிருப்பாள். வீட்டுக்கு முன்பு உள்ள வேப்ப மரத்திற்கு தினமும் மதிய வேளையில் வரும் ஒற்றைக் காக்கா சூழ்நிலையின் விபரீதம் புரிந்தது போல, விடாமல் கரைந்தது. ஒரு கோடை விடுமுறையில் தினமும் உணவிட்டு காக்காவைப் பழக்கப்படுத்தியவள் இந்த அனு தான். “அய்யோ நெஞ்சே வெடிச்சுடும் போல இருக்கே, மொத்த வீட்டுக்கும் ஒத்தப் பொண்ணு அனு எங்கள ஏமாத்த எப்படிடீ மனசு வந்துச்சு” என மாரில் அடித்துக்கொண்டு அனுவின் அத்தை வீறிட்டு அழுதாள். இன்னும் சிறிது நேரத்தில் அமரர் ஊர்தி வர இருக்கிறது. அதற்கடுத்த சிறிது நேரத்தில் மின் மயானத்தில் அனு ஒரு பூவைப் போல பொசுங்கிப் போகவிருக்கிறாள். சிறிது நேரம் என்றால் அதற்கு கால அளவு என்ன? ஒரு வினாடியா… ஒரு மணித்துளியா… எவ்வளவு நேரம் பிடித்திருக்கும் அனுவுக்கு தன்னைத் தானே மாய்த்துக்கொள்ள? நேற்றைக்கு இதே பொழுதில் அனு உயிருடன் இருந்தாள். குட்டி போட்ட பூனையாய் வீட்டுக்குள் அலைந்து கொண்டிருந்தாள். அவளைப் பார்த்து சிரித்த அனுவின் அம்மா, “ரிசல்ட் வர்றப்ப வரட்டும் ஏன் பதட்டப்படுறே” என்றாள். ஆனால் அந்த ரிசல்ட்டே அனுவுக்கு எமனாகிப் போய்விடும் என அம்மா சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அனுவை எடுத்துச் செல்ல ஊர்தி வந்துவிட்டது. அனுவின் அப்பா அவசரமாக வீட்டுக்குள் சென்றார். அனு +2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சான்றினை எடுத்து வந்தார். அதை அனுவின் தலைமாட்டில் வைத்தவர். “அனுவோட படிப்பும், கனவும் இதுல கலந்திருக்கு, இதையும் சேர்த்து அனுவோட எரிச்சிடுங்க உங்களுக்கு புண்ணியமா போகட்டும்” என அனைவரையும் பார்த்து கண் கலங்க கைகூப்பி வணங்கினார். காப்பகம் -ஆகஸ்ட் 4, 2019 […] அரக்கபரக்க ஆனந்த் உள்ளே நுழைந்தபொழுது அம்மா அவனுக்காக காத்திருந்தாள். இவனைப் பார்த்த சந்தோசத்தில் அம்மாவின் கண்களில் நீர் துளிர்த்தது. அம்மாவின் அருகில் ஆனந்த் அமர்ந்தான். அம்மா, அவனை முழுவதுமாக பார்த்துவிட்டு, “நல்லா இருக்கியாப்பா” எனக் கேட்டாள். அதற்கு ஆனந்த் பதில் சொல்லவில்லை. அவன் அம்மா முகத்தைப் பார்க்காமல் சுவற்றில் மாட்டியிருந்த அன்னை தெரசாவின் புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தான். அதில் அம்மாவின் கனிவு தெரிந்தது. அம்மா, “ரம்யா, பிள்ளைங்க எல்லாம் நல்லா இருக்காங்களாப்பா” என கேட்ட கேள்வி காதில் விழாதவன் போல ஆனந்த் அமைதியாக இருந்தான். வர வேற்பறை தரையை ஈரத்துணியால் துடைத்துக் கொண்டிருந்த பணியாள் பார்வதி “எப்பப் பார்த்தாலும் அம்மாவுக்கு உன் நெனப்புத்தாம்பா அடிக்கடி வந்து பாருப்பா” என்றவாறே வாளியைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றாள். ஆனந்த் கையிலிருந்த துணிப் பையை அம்மாவிடம் தந்தான். அதில் ஆர்லிக்ஸிம், சாத்துக்குடிப் பழங்களும், ரொட்டியும் இருந்தன. “இதெல்லாம் எனக்கெதுக்குப்பா…வீட்டுக்கு கொண்டு போப்பா” என கூறியவள், “கம்பெனியில் வேல ஜாஸ்தியாப்பா உடம்பெல்லாம் மெலிஞ்சு போயிருக்கு, கண்ணெல்லாம் உள்ள போயிருக்கு” என கவலைப்பட்டவள், ஆனந்தின் வலது கையை எடுத்து தன் உள்ளங்ககைளில் புதைத்துக் கொண்டாள். ஆனந்து சிறுவனாக இருக்கையில் அம்மாவைக் கட்டியணைத்தவாறு தூங்கிய பொழுது ஏற்பட்ட கதகதப்பை தற்பொழுது உணர்ந்தான். அவனுக்கு அம்மா…என கதறி அழ வேண்டும் போலிருந்தது. மரங்களடர்ந்த கட்டிட வளாகத்தைக் கடந்து, ரோட்டுக்கு வந்ததும் வெயில் சுள்ளென்று உரைத்தது. ஷேர் ஆட்டோ நிற்கும் இடம் வரை நடந்து வந்ததில், வியர்வை சட்டைக் காலரை நனைத்து இருந்தது. ஷேர் ஆட்டோ வந்ததும் முதல் ஆளாக ஏறி ஜன்னல் பக்கம் உட்கார்ந்து கொண்டான். கிளம்பும் நேரத்தில் “கொஞ்சம் நிறுத்துங்க” என்று ஓடி வந்து ஆட்டோவில் ஏறிய பார்வதியின் கையில் ஆர்லிக்ஸிம், சாத்துக்குடிப் பழங்களும், ரொட்டியும் நிறைந்த துணிப்பை இருந்தது. எங்கே பார்வதி பார்த்து விடுவாளோ என்ற பதட்டத்தில் ஆனந்த்; ஜன்னல் பக்கமாக முகத்தை திருப்பிக்கொண்டான். மனசு -ஆகஸ்ட் 11, 2019 […] அரசு ஆரம்ப சுகாதார நிலையம். போர்டு பெரியதாக இருந்தது. ஆஸ்பத்திரி சிறியதாக இருந்தது. மருத்துவமனை வாசலில் பூரணி நின்றிருந்தாள். மகன் நாகராஜ் நிற்கமுடியாமல், கல்திட்டில் கிறங்கி இருந்தான். மூன்று நாட்கள் தொடர்ந்து அடித்த காய்ச்சல் நிற்கவில்லை. கடுமையான தலைவலியால் அவதிப்பட்டான். டாக்டர் இன்று ரத்தப் பரிசோதனை செய்வதாக கூறியிருந்தனர். காலை 8 மணி இருக்கும். வெளிநோயாளிகளின் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. டாக்டரின் வப்பெடுத்த தலை ஜன்னல் வழியாக தெரிந்தது. மதியம் மூன்று மணி யளவில், டாக்டர் அறைக் குள் வரச்சொன்னார். “ஏம்மா பையன வெளி யூருக்கு எங்கயாவது கூட்டிட்டு போயிருந்தீங் களா” எனக் கேட்டார். “எங்கயும் போகலிங்க..” என்று பூரணி பதில் சொன்னாள். “வீட்டுக் குள்ள, வெளியில நல்ல தண்ணி தேங்கியிருக் காம்மா” என டாக்டர் அடுத்த கேள்வியைக் கேட்டார். “குடிக்கற தண்ணிக்கே கஷ்டம்ங்க, இதுல நல்ல தண்ணி தேங்கறதுக்கு வழியில்லங்க” என பூரணி சொன்னதும், “அப்புறம் எப்பிடிம்மா டெங்கு காச்சல் வந்துச்சு” என டாக்டர் கேட்டதும், பூரணிக்கு தலையில் இடியைப் போட்டது போலிருந்தது. “இங்க வச்சு இனி பாக்க முடியாது, டவுன் ஆஸ்பத்திரிக்கு போயிருங்க” என டாக்டர் முடிவாகச் சொன்னார். பிறகு பரிசோதனை செய்த ரிப்போர்ட்டுடன், கையெழுத்துப் போட்ட காகிதத்தைக் கொடுத்து பூரணியை அவசரமாக அனுப்பி வைத்தார். டவுன் ஆஸ்பத்திரி இருபத்தைந்து கிலோ மீட்டர் தள்ளி யிருந்தது. கையில் செலவுக்கு பணமில்லை. தெற்கே மலைக்கரட்டில் பட்டி போட்டு ஆடுகளை மேய்த்துக் கொண்டி ருக்கும் கணவனுக்கு எப்படி தகவல் சொல்வது என பூரணி தீவிரமாக யோசித்தாள். ஒரு வழியும் புலப்படவில்லை. நட்ட கல்லாய் காட்சியளிக்கும் மாரியம்மன் தான் ஞாபகத்திற்கு வந்தாள். அடுத்த நாள் காலை, டவுன் ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்வ தற்குள் பூரணிக்கு பெரும்பாடாகிப் போய்விட்டது. நாக ராஜூக்கு தலைவலியுடன் கடுமையாக கண் வலியும் சேர்ந்து கொண்டது. அவனால் நடக்க முடியவில்லை. தோளில் போட்டுக்கொண்டு உள்ளே வந்தவளை நர்ஸ் வழிமறித்து, “இன்னக்கி டாக்டருக ஸ்டிரைக் பண்றாங்க நாளைக்கு வாங்க” என கறாராக கூறினாள். பூரணி பையனை கீழே இறக்கி விட்டு நர்ஸின் கால்களைப் பிடித்துக் கொண்டு “டெங்கு காய்ச்சலும்மா..”என மன்றாடினாள். மயக்கமடைந்து தரை யில் சரிந்த நாகராஜை வாரி எடுத்துக்கொண்ட நர்ஸ் அவ சர சிகிச்சைப் பிரிவை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாள். காதலைத் தேடி -செப்டம்பர் 15, 2019 […] பாண்டிக்கு காயத்ரியின் முகத்தில் இதுவென்று சொல்ல முடியாத ஒரு வசீகரம் தெரிந்தது. கர்ப்பகிரக அகல்விளக்கைப் போல காயத்ரி இருளின் ஒளியாய் சுடர் விடுகிறாள். இவள் இல்லறத் துணைவியாக கிடைக்க மாட்டாளா என்ற ஏக்கம் நெடுநாளாக பாண்டியை வாட்டி வதைத்தது. பஸ் ஸ்டாப்பில் பாண்டியை கடந்து சென்ற காயத்ரி கைப்பேசியில் நேரம் பார்த்து விட்டு பஸ் வரும் திசையை நோக்க ஆரம்பித்தாள். அவளது நடையிலும் உடையிலும் ஒரு ஒழுங்கும் நளினமும் இருந்தது. இன்னும் சில நிமிடங்களில் பஸ் வந்து விடும். இன்றாவது தன் எண்ணத்தை வெளிப்படுத்தி விட வேண்டும் என்ற பேராவலில் பாண்டிக்கு மூச்சு விட சிரமமாக இருந்தது. என்னவென்று சொல்வது? ஏற்கனவே மனதில் எழுதி வைத்திருந்த வார்த்தைகள் காணாமற் போயிருந்தன. பாண்டி பஸ் வரும் திசைக்கு இடம் மாறி நின்றும் காயத்ரியின் பார்வை கிடைக்கவில்லை. பஸ் தேரடி முக்கில் திரும்புவது தெரிந்தது.அடுத்த சில நொடிகளில் பஸ் வந்து விடும். பாண்டிக்கு இதயத்துடிப்பு எகிறியது. அவனும் பஸ் ஏறுவது போல காயத்ரிக்கு மிக அருகில் வந்து நின்று கொண்டான். அவள் சூடியிருந்த மல்லிகை வாசம் மனதை பிசைந்தது. “காயத்ரி..” என கஷ்டப்பட்டு இவன் அழைக்கவும் பஸ் இரைச்சலுடன் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. காயத்ரி பஸ் ஏற ஒரு அடி முன் வைத்தாள்.அப்பொழுது அவளை நோக்கி கையில் சிறு பாட்டிலுடன் ஒரு இளைஞன் வெறித்தனமாக ஓடி வந்தான். ஒரு நொடியில் நிலைமையை புரிந்து கொண்ட பாண்டி காயத்ரியின் கையைப் பிடித்து அவளைத் தனக்கு பின்புறமாக இழுத்துக் கொண்டான். அதே நேரத்தில் வந்தவன் வீசிய ஆசிட் பாண்டியின் முகம் முழுக்க தெறித்து பரபரவென பற்றி எரிந்தது. காயத்ரி “அய்யய்யோ..” என அலறியவாறே பாண்டியை இறுகப் பற்றினாள். பாண்டி பற்றி எரியும் முகத்துடன் காயத்ரியின் கண்களில் காதலைத் தேடியவாறு மயங்கி அவள் மீது சாய்ந்தான். வெறுமை -செப்டம்பர் 22, 2019 […] “கொஞ்சமாவது அறிவிருக்கா” என பிரேமா கேட்டு முடிக்கும் முன்னர், ரைய் என கன்னத்தில் அறை விழுந்தது. இனி பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும், அடி விழும் என்ற அச்சத்தில் பிரேமா சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள். நகை விளம்பரத்திற்காக தொலைக்காட்சியில் தோன்றிய மொட்டத் தலையன் “நாலு கடையில விசாரிச்சு நகை வாங்குங்க” என வேண்டுகோள் விடுத்தது பாலனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஒரு சவரன் விலை முப்பதாயிரம் ரூபாய்க்கு மேல் போய்க் கொண்டிருந்தது. எதுக்கு நாலு கடையில விசாரிக்கணும் என முணுமுணுத்தவன், தொலைக்காட்சியை அணைத்தான். பிரேமாவை அடித்த கையை இறுக மூடிக்கொண்டான். இனி குறைந்தது ஒரு வாரத்திற்கு பிரேமா முகம் கொடுத்து பேச மாட்டாள். அவள் பேசியதில் நியாயம் இருந்தது. ஒப்புக்கொண்டபடி ஐந்து பவுன் நகை போடாவிட்டால், திட்டமிட்டபடி மகளுக்கு திருமணம் ஆகாது. “நகை வெலை குறைஞ்சதும் போட்டுக்கலாமா” என இவன் யோசனை கேட்டதனால்தான், அவள் அறிவிருக்கா… என திருப்பிக் கேட்டாள். அறைக்குள் விசும்பல் சத்தம் கேட்டது. பாலனுக்கு படபடப்பாக இருந்தது ரத்த அழுத்தம் கூடுவதை நன்கு உணர்ந்தான். கோயில் வரையாவது போய்விட்டு வரலாம் என வெளியில் கிளம்பியவனை, “என்னங்க..” என பிரேமா அழைத்தாள். அவள் முகத்தைப் பார்க்க பாலனுக்கு வெட்கமாக இருந்தது. கையிலிருந்த காகிதப் பொட்டலத்தை நீட்டினாள். அதில் செயினும், காது தோடுகளும், மூக்குத்தியும் ஒரு ஜோடி கை வளையல்களும் இருந்தது. அத்தனையும் பிரேமாவுடையது. பாலன் அவளை ஏறிட்டுப் பார்த்தான். “எல்லாத்தையும் அழிச்சு அஞ்சு பவுனுக்கு புதுசா நகை செஞ்சுருங்க” சொல்லிக் கொண்டிருந்தவளின் வெறுமை இவன் கன்னத்தில் மாறி மாறி அறைந்தது. விடுதலை -செப்டம்பர் 29, 2019 […] அப்பாவை பஸ் ஏற்றி விட்ட பொழுது செந்திலுக்கு சங்கடமாக இருந்தது. இருநூறு கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் ஊர் கண் முன் வந்து போனது. ஆடு மேய்க்கும் சிறார்கள் ஊரின் வாழ்வாதாரத்தை தீர்மானித்தனர். நல்லவேளை செந்தில் அங்கிருந்து தப்பித்து இந்த தொழில் நகருக்கு வந்து விட்டான். பஸ் கிளம்பும் நேரத்தில் அப்பா நடுங்கும் விரல்களால் தண்ணீர் கேட்டு சாடை செய்தார்.செந்தில் தண்ணீர் பாட்டிலை வாங்கிக் கொண்டு ஓடி வரும் போது பஸ் இரக்கமின்றி நிலையத்தை விட்டு வெளியேறி இருந்தது. அப்பா.. அப்பா.. என பஸ்ஸை துரத்தியவன் அங்கிருந்தவர்களுக்கு வேடிக்கைப் பொருளானான். தண்ணீரைப் போலவே அப்பாவுக்கு தேவைப்பட்டது எதுவும் தேவைப்படும் பொழுது கிடைத்திருக்கவில்லை. செந்திலுக்கு அழுகை வரும் போலிருந்தது. ஆடு மேய்த்து தங்களை வளர்த்த அப்பா வயதான காலத்தில் இவனிடமும் இருக்க முடியாமல் கட்டிக் கொடுத்த மகள் வீட்டிலும் இருக்க முடியாமல் அங்கேயும் இங்கேயுமாக அல்லாடினார். இளம் வயதிலேயே இறந்து போன அம்மாவை கொடுத்து வைத்தவளாக அப்பா அடிக்கடி கும்பிட்டார். தண்ணீர் பாட்டிலை கடைக்காரரிடம் தலைகுனிந்து கொடுத்தான். அவர் மறுப்பேதும் சொல்லாமல் திருப்பி கொடுத்த பணம் செந்திலின் கையில் கனத்தது. உச்சி வெயில் நேரத்தில் பஸ் அந்த ஊர் பஸ் ஸ்டாண்டில் நுழைந்தது. அப்பாவுக்கு அந்த ஊர் எதுவென்று தெரியவில்லை. அடுக்கடுக்காய் மலைத்தொடர் தூரத்தில் தெரிந்தது. தட்டுத் தடுமாறி பஸ்ஸை விட்டு இறங்கினார். இலவச கழிப்பிடம் அருகில் இருந்த சின்டெக்ஸ் குழாயைத் திருகி சிந்தாமல் தாகம் தீர தண்ணீர் குடித்தார். திரும்பவும் பஸ் ஏற வந்தவருக்கு ஒரே நிறத்தில் வரிசையாக நின்ற பஸ்களில் தான் வந்த பஸ் எது என தெரியாமல் திகைத்துப் போனார். பஸ் ஸ்டாண்டைக் கடந்து மலைத்தொடரை நோக்கிய பாதையில் செல்லும் ஆட்டு மந்தைக் கூட்டம் அவர் கண்களுக்கு தெரிந்தது. அப்பா தயக்கம் ஏதுமின்றி அதைப் பின் தொடர்ந்தார். இப்போது ஆடுகள் அவரை மேய்த்துச் சென்றது. பேசும் ரோஜா -அக்டோபர் 6, 2019 […] ரங்கநாயகி, மருமகளையும், பேத்தியையும் அழைத்துக்கொண்டு போகத்தான் வந்தாள். ஆனால் அது முடியாது போல் தெரிந்தது. மருமகள் ஆனந்தியின் கண்களில் இல்லற வாழ்க்கையை இழந்து நிற்கும் ஏக்கம் தெரிந்தது. ஒரு பெண்ணாக அது ரங்கநாயகியின் நெஞ்சை சுட்டது. பேத்தி அர்ச்சனா எழும்பும் தோலுமாக தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்க்க பாவமாக இருந்தது. “அக்கா, உங்க மருமகளையும், பேத்தியையும் இந்த வாட்டி அழச்சிட்டுப் போங்க, ரெண்டு மாசத்துல ஒரு அம்பதாயிரம் ரூபாய்க்கு ஏற்பாடு பண்றேன். மக்காச்சோளத்துல புழு விழுந்து எல்லாம் அழிஞ்சு போச்சு.. வாழ வேண்டிய வயசுல புள்ளய விட்டுட்டு போகாதீங்கக்கா” என நாத்தழுதழுக்க அப்பா இறைஞ்சியது ஆனந்தியால் தாளமுடியவில்லை. “அப்பா..” என்று அழுதவளை அம்மா சமையலறைக்குள் இழுத்துக் கொண்டு போனாள். தன்னை உடன்பிறந்த அக்காவாக கருதி உருகும் சம்பந்தியின் பேரில் ரங்கநாயகிக்கு இரக்கம் கூடியது. ஆனால் என்ன செய்வது? கணவன், ஒரு லட்ச ரூபாயுடன் தான் மருமகளையும், பேத்தியையும் அழைத்து வரவேண்டும்" என கறாராக சொல்லியிருக்கிறானே… இந்த முறையும் மருமகளையும், பேத்தியையும் அழைத்துச் செல்லாவிட்டால், மகன் குமார் பிரிவாற்றாமையில் புத்தி பேதலித்துப் போவான். “சரி தம்பி, அவங்கப்பா கிட்ட சொல்லிப் பாக்கறேன்” என்றவாறு ரங்கநாயகி கிளம்ப ஆயத்தமானாள். அப்பொழுது “அப்பாயி..” என அழைத்த குரல் ரங்கநாயகியை திரும்பிப் பார்க்க வைத்தது. பேத்தி விழித்திருந்தாள், “எப்ப வந்தீங்க அப்பாயி” என அவள் கேட்டதற்கு பதில் சொல்ல முடியாமல் ரங்கநாயகியின் மனம் கனத்திருந்தது. பதில் பேச முடியாத ரங்கநாயகி வாசலுக்கு வந்துவிட்டாள். “அப்பாயி கொஞ்சம் நேரம் இருங்க” என கூறிவிட்டு, அர்ச்சனா வீட்டுக்குப் பின்புறம் கொல்லைக்கு ஓடினாள். திரும்புகையில் அவள் கையில் அன்று பூத்த அழகான ரோஜா இருந்தது. “இந்தாங்க பூவ தலையில வச்சிக்கிட்டுப் போங்க” என அன்புடன் கூறிய பேத்தியை, ரங்கநாயகி வாரி அணைத்துக் கொண்டாள். பேத்தி கொடுத்த பூவை தலையில் சொருகிக் கொண்டவள், “ஆனந்தி நடக்கறது நடக்கட்டும் சட்டுப்புட்டுன்னு கௌம்பு எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்” என திடமாகச் சொன்ன ரங்கநாயகி, பேத்தியின் கன்னத்தில் ஆசை தீர முத்தமிட்டாள். உவப்பு -அக்டோபர் 13, 2019 […] அதிகாலை கூடு அகலும் நேரத்திலும், அந்தி சாய கூடு அடையும் நேரத்திலும் பறவைகள் எழுப்பும் ஒட்டு மொத்த ஒலி எல்லா நாட்களிலும் உவப்பாக இருப்பது இல்லை. சில பொழுதுகளில் தாங்க முடியாத எரிச்சலாக இருக்கும். அப்படித்தான் சோமசுந்தரத்திற்கு இப்பொழுது இருந்தது. தெருவோரத் திண்ணையில் உட்கார முடியாத அளவுக்கு தெரு நிறைய கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள் எழுப்பும் சத்தம் அவரை நிலை கொள்ளாமல் தவிக்க வைத்தது. “அங்கிட்டு போயி வெளையாடுங்கடா..” என கையிலிருந்த பனையோலை விசிறியை ஆட்டி ஆட்டி விரட்டிப் பார்த்தார். ஒரு பையன் கூட அவரைத் திரும்பிப் பார்க்கவில்லை. “அட ராமா..” என தலையிலடித்துக் கொண்டவர், “சீதா…” என வீட்டுக்குள்ளிருந்த மனைவியை அழைத்தார். அவளும் வரவில்லை. தட்டுத்தடுமாறி தெருவின் குறுக்கே போய் அவர் நிற்பதற்கும் பந்து அவர் முகத்தைப் பதம் பார்ப்பதற்கும் சரியாக இருந்தது. மூக்கு கண்ணாடி உடைந்து ஒரு பக்க காதில் தொங்க, சோமசுந்தரம் கீழே சரிந்தார். சிறுவர்கள் அடுத்த தெருவில் விளையாட்டைத் தொடர அலுங்காமல் நகர்ந்தனர். மருத்துவமனையில் டாக்டர், என்னாச்சு? எனக் கேட்டதும், சீதா, “வயசு எண்பதாச்சு, இப்பப் போயி கிரிக்கெட் வெளாட்ல சேத்திக்கச் சொன்னா பசங்க கேப்பாங்களா? பந்தால ஒரு போடு போட்டுட்டா..” என நேரில் பார்த்த மாதிரி சொன்னாள். சோமசுந்தரம் செவிடு..செவிடு.. என மனதிற்குள் மனைவியைத் திட்டினார். டாக்டர் “இனி கிரிக்கெட் விளயாட தெருவுக்கு போகதீங்க, வீட்டுக்குள்ள மாமியோட வெளையாடுங்க” என சொன்னதும், சோமசுந்தரம் வலியை மறந்து பொக்கை வாய் விரிய சிரித்தார். மாலை நேரம், சிறுவர்கள் மீண்டும் தெருவை நிறைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். எப்பொழுதும் போல திண்ணைக்கு வந்த சோமசுந்தரம், சிறுவர்களின் கூச்சலில் கரைந்து தன் இளம் வயதை தேடிப்போனார். பறவைகளின் கூட்டு ஒலி அவருக்கு இப்பொழுது உவப்பாக இருந்தது. உயிர்த் தோழன்..! - செல்வகதிரவன் -அக்டோபர் 13, 2019 சின்னஞ்சிறு கதை அந்த சாதி சங்கத்தின் நகரத் தலைவர் நமச்சிவாயம், சங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்வார். நகரில் நடக்கும் திருவிழா, பொங்கல், முளப்பாரி இத்தியாதி விசேடங்களில் சாதி சங்கத்தின் சார்பில் தண்ணீர் பந்தல் அமைப்பார். அந்த நடுத்தர நகரத்தின் முக்கிய வீதியில் கம்பீரமாகக் காட்சி தரும் புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரரின் சிலை நமச்சிவாயம் முயற்சியால் நிறுவப்பட்டது. ஆம் அந்த சுதந்திரப் போராட்டத் தியாகி நமச்சிவாயம் சாதியைச் சார்ந்தவராம். சிலையை பாராமரிக்க ஒரு நபரை சம்பளம் கொடுத்து நியமித்து… தினந்தோறும் சுத்தப்படுத்த ஏற்பாடு செய்திருக்கிறார். காக்கா், குருவி வகையறாக்கள் எச்சமிட்டு சிலையை அசிங்கப் படுத்திருப்பதை அகற்றவே இந்த ஏற்பாடு. சுதந்திரப் போட்ட தலைவரின் பிறந்த நாள் விழாவை வெகு விமர்சையாக நடத்தி, பத்திரிகைகளுக்கும் சங்கத்தின் பேரில் விளம்பரம் தந்து சாதி சங்க உறுப்பினர்களின் பாராட்டுக்களைப் பெறுவார். சாதிக்காரர்கள் சேர்ந்து விட்டால் போதும் சுயசாதிப் பெருமைகளைப் பற்றி விடாமல் பேசிக் கொண்டிருப்பார். வருடந்தோறும் சங்கத்தின் சார்பில் நாட்காட்டி அச்சடித்து உள்ளூர் முழுவதும் உள்ள சாதிக்காரர்களுக்கு விநியோகிப்பார் நமச்சிவாயம். சாதிக்காரர்கள் வீட்டு விசேடங்களில் தவறாமல் கலந்து கொள்வார். தகுந்த அன்பளிப்பைத் தருவார். சாதாரணமாய் தேனீர் கடை வைத்து வாழ்வைத் தொடங்கி… இன்று, பிரபலமான ஓட்டல் உரிமையாளராகத் திகழும் நமச்சிவாயத்தை உள்ளூர் நாளிதழ் நிருபர் பேட்டி காண வந்தார். கேட்ட கேள்விகளுக்கு சிறப்பான பதில்களை வழங்கிய நமச்சிவாயத்தை நிருபர், கடைசியாக ஒரு முக்கியக் கேள்வியைக் கேட்டார். “உங்களுடைய ஆத்ம நண்பர் யார்…?” இந்தக் கேள்விக்கு நமச்சிவாயம் அளித்த பதில் கேட்டு நிருபர் அதிர்ந்தார். ஆம். நமச்சிவாயம் சொன்ன நண்பர் வேறு சாதிக்காரர். “என்ன இப்பிச் சொல்றீங்க…?” “எனக்கு மட்டுமில்ல.. யாருக்குமே உயிர் நண்பராக… சுகதுக்கங்களை பகிர்ந்து கொள்ளக் கூடிய உற்ற தோழனாக இருப்பவன் சொந்த சாதியைச் சேர்ந்தவனாக இருக்க மாட்டான்” நிருபர் பலரையும் மனக்கண் முன் கொண்டு வந்து பார்த்த போது நமச்சிவாயத்தின் பதிலில் உண்மை இருப்பதை உணர முடிந்தது. பறக்கும் குருவிகள் - வரத.ராஜமாணிக்கம் -அக்டோபர் 27, 2019 “நான் கொஞ்சம் பேக்கு தான், என்னை ஏமாத்திட மாட்டீங்களே” என கண்களை உருட்டி தமயந்தி கேட்டபொழுது ரவிக்கு சிரிப்பு வந்தது. ரவியின் சிரிப்பில் நம்பிக்கை பெற்றவள் போல தமயந்தியும் சிரித்துக்கொண்டாள். அந்த வழியே குடத்தை தலையில் வைத்துக்கொண்டு வந்த மோர்க்கார ஆயா, “ஏம்பய்யா, அவளோட ஒனக்கென்ன நாயம்” என ரவியை அதட்டினாள். ரவி “இல்ல ஆயா..” என்றவாறே அந்த இடத்தை விட்டு அகல ஆரம்பித்தான். “நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம போறீங்க,” என தமயந்தி குறுக்கே நின்றாள். “ஏண்டி ஒரு ஆம்பளய ரோட்டுல நிக்க வெச்சு என்னடி கேள்வி கேக்குறவ, அந்தமட்டுக்கு குருவிக்காரிக்கி கொழுப்பெடுத்துப் போச்சா” என மோர்க்கார ஆயா தமயந்தியின் குமட்டில் குத்த வந்தாள். கொதித்துப் போன தமயந்தி, “அவரு என்னக் கட்டிக்கிறவரு, நான் கேக்குறேன். அதக்கேட்க நீ யாரு ஆயா” என குரலை உயர்த்தினாள். ஆயாவின் கோபம் ரவியின் பக்கம் திரும்பியது. ஆனால் அவன் அங்கு இல்லை. அடுத்த இரண்டு நாட்களில் ஆயா இப்படி இழுத்துவிடுவாள் என ரவி எதிர்பார்க்கவில்லை. சாவடி நிறைய கூட்டம் தளும்பி இருந்தது. ஊர் நாட்டாண்மையிடம், ஆயா பிராது சொல்லிக் கொண்டிருந்தாள். “குருவிக்காரப் புள்ளகிட்ட ஒனக்கென்னடா சோலி,” என ரவியைப் பார்த்து கேட்ட நாட்டாண்மை, “வருசம் ஒரு தடவ வாத்து மேய்க்க வர்ற கூட்டம், இந்த ஊரோட ஒறவு கொண்டாட நெனச்சா அம்புட்டுப் பேரையும் தோலுரிச்சி தொங்க விட்டுருவேன்” என குருவிக்கார கூட்டத்தைப் பார்த்து பல்லைக் கடித்தார். “அந்த புள்ளைய கூட்டிகிட்டு, ஊரவிட்டு கௌம்புங்கடா” என பஞ்சாயத்தை நாட்டாண்மை கறாராக முடித்தார். அடுத்த நாள் காலை, குருவிக்காரக் கூட்டம் ஊரைக் காலி செய்திருந்தது. மோர்க்கார ஆயா ஊர் முழுக்க தேடியும் ரவி கிடைக்கவில்லை. நாட்டாண்மை உட்பட ஊராரின் தோலை உரித்து தமயந்தி தொங்கவிட்டிருந்தாள். சின்னஞ்சிறு கதை : ஒரு கலைஞனின் கர்வம் - செல்வகதிரவன் -அக்டோபர் 26, 2019 […] நாதமுனி அற்புதமான நாதஸ்வரக் கலைஞர். எந்த ஊரில் திருவிழா நடந்தாலும், நாதமுனியின் நாதஸவரக் கச்சேரிக்குத்தான் முன்னுரிமை தருவார்கள். அவரிடம் தேதி கிடைக்கவில்லை என்றால் தான் வேறு புதிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வார்கள். திருமணங்களில் நாதமுனி கச்சேரி நடப்பது திருமண வீட்டாருக்கு பெருமையைப் பெற்றுத் தரத் தவறுவதில்லை. நாதமுனியின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்றார் போன்று திருமண தேதியை நிர்ணயிக்கிற பழக்கமும் நடைமுறையில் இருந்தன. அன்று அந்த மாவட்டக் கலெக்டர் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி. நாதமுனியின் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் நாதஸ்வர மழையில் நனைந்து கொண்டிருந்தார்கள். சலசலப்புச் சத்தங்கள், திசை திருப்பல்கள், கவனமின்மை இத்தியாதிகள் எதுவும் இல்லாமல் கச்சேரி களைகட்டியபடி நடந்தது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த மாவட்ட மந்திரி அடுத்துப் போக வேண்டிய அரசாங்க விழாவை மறந்து கச்சேரியில் லயித்திருந்தார். கச்சேரி முடியும் தருணம் வந்தது. மந்திரி கிளம்பத் தயாரானார். மேடைக்கு எதிரில் இருந்த கலெக்டருக்குத் தகவல் போயிற்று. மந்திரியை வழியனுப்ப வேண்டும். நாதஸ்வரக் கலைஞருக்கு மரியாதை செய்யச் சொல்லி தாசில்தாரிடம் தெரிவித்து விட்டு… மந்திரி பின்னாடிப் போனார் கலெக்டர். மந்திரி காரில் ஏறினதும் கரம் கூப்பி வணங்கி விடை கொடுத்துத் திரும்பினார். அங்கு கலெக்டர் அவர்களுக்கு அதிர்ச்சி தகவல் காத்திருந்தது. தாசில்தார் செய்த மரியாதையை நாதமுனி ஏற்றுக் கொள்ளவில்லை. பழங்கள், சன்மானப் பணம், பட்டுவேட்டி, அங்கவஸ்திரம் வைத்து வழங்கிய தாம்பாளத்தை நாதமுனி வாங்கவில்லை. ஒத்து ஊதும் கலைஞர் பெரியவர் பெரியசாமியிடம் கொடுக்கச் சொல்லிவிட்டார் நாதமுனி. இதனைக் கேள்விப்பட்டதும் கலெக்டர் முகம் கோபத்தால் கறுத்துச் சிறுத்தது. நாதஸ்வர நாதமுனி தம்மை அவமதித்து விட்டதாகக் கருதினார். “என்ன வித்வான் இப்பிடிப் பண்ணிட்டிங்க.. தாசில்தாரத்தான ஒங்கள கவுரவப்படுத்தச் சொன்னேன்… தாசில்தார்ங்கிறது சாதாரணப் பதவி இல்லையே… தாலுகாவுக்கு கலெக்டர் மாதிரிதானே…” “தாலுகா கலெக்டர் மந்திரிய வழியனுப்ப அனுப்பி இருக்கலாமே… மாவட்டக் கலெக்டர் எதுக்குப் போகணும்…மந்திரி எவ்வளவு நாள் மந்திரியா இருப்பாரு… நாளைக்கு மந்திரியா… இல்லையான்னு காலப் பேப்பரப் பாத்தாத்தான் தெரியும்… நான் அப்படியா..? உயிர் மூச்சு நிக்கிற வரைக்கும் வாசிப்ப நேசிக்கிற கலைஞன். எனக்கு தர்ற சன்மானம் முக்கியமில்ல… தர்ற முறைதான் முக்கியம்.. நீங்க ஒங்க தாசில்தார வச்சு சன்மானத்தக் கொடுத்திங்க… நாங்க எங்க கலைஞர வச்சு நீங்க தந்த மரியாதய ஏத்துக்கிட்டோம்… நீங்க செஞ்சது சரின்னா.. நாங்க செஞ்சதும் சரிதான்…” கலெக்டருக்கு இப்போதுதான் தான்செய்தது தவறெனப் புரிந்தது. அமைச்சரை அனுப்பிவிட்டு வந்து நாதஸ்வரக் கலைஞருக்கு மரியாதை பண்ணியிருக்கலாம்.. தவறுக்கு நாதமுனியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு… மீண்டும் ஒரு முறை சன்மானம், பொன்னாடை இத்தியாதிகள் நிரம்பிய தாம்பளத்தட்டை நாதமுனியிடம் வழங்கினார் கலெக்டர். ஒத்து ஊதும் கலைஞரிடம் ஏற்கனவே தந்த தாம்பாளத்தை திரும்பப் பெறவில்லை. இரட்டிப்பு சந்தோசத்தோடு விடைபெற்றார்கள் நாதஸ்வரக் குழுவினர். மழை மனசு -நவம்பர் 3, 2019 […] மறுபடியும் மழை பிடித்துக் கொண்டது. கடைவீதி சேறும் சகதியுமாய் கசகசவென்றிருந்தது. நாராயணன் நனைந்து கொண்டே நடந்து வந்தான். துணைக்கு ஒரு நாயும் மடிந்த காதுகளுடன் நடந்து வந்தது. நாய்க்கு குடை பிடிக்க தெரியாது. இந்த நாய் ஏன் குடை பிடிக்காமல் நனைந்து நடக்கிறது என தன்னை யாரும் கவனிக்கிறார்களா என நாராயணன் சுற்றிலும் பார்த்தான். “நல்லவேளை ஒரு நாயும் பார்க்கல” என முணுமுணுத்துக் கொண்டான். நாராயணனுக்கு வாழ்க்கையின் மீதான கடும் எரிச்சல் காறித் துப்ப வைத்தது. எதிர்பாராமல் எச்சில் தாக்குதலுக்கு ஆளான நாய் அவனை விட்டு விலகியது. நாயும் போனபிறகு மழை இவனை மட்டும் துரத்தியது. உடல் முழுவதும் மழையில் ஒட்டிக் கொண்ட சட்டையும் வேட்டியும் அவன் மனதைப் போலவே கனத்தது. நேற்றைக்கு முதல் நாள் நைட் ஷிப்ட் வேலைக்குச் சென்ற லட்சுமி இன்னும் வீடு திரும்பவில்லை. “பொண்டாட்டி மறைவுல சோறு திங்கறவனுக்கு ரோசம் எதுக்கு” என பெற்ற தாயே கேட்ட போது நாராயணனுக்கு செத்து விடத் தோன்றியது. அப்பொழுது லட்சுமி தான் இவனுக்காக அம்மாவிடம் சண்டைக்கு போனாள். அம்மா அவளை அவுசேரி என வெளிப்படையாக திட்டிய பொழுது நாராயணன் அதிர்ந்து போனான். வீட்டுக்கு போகும் போது லட்சுமி இருந்தால் அவளை வெட்டி கொலை செய்வது இல்லை என்றால் தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவோடு நாராயணன் போனான். கையில் கட்டுடன் வரவேற்ற லட்சுமி, “தூக்க கலக்கத்துல கட்டிங் மெஷின்ல கை விட்டுட்டனங்க” என கலங்கியவளைப் பார்த்து நாராயணன் வெட்கித் தலை குனிந்தான். வெளியே மழை நின்றிருந்தது. போற உசுரு -நவம்பர் 10, 2019 […] பெருசு, மட்ட மத்தியானத்தில் நட்ட நடு ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அது அவருக்கு வாழ்க்கையின் இறுதிகட்ட சவாலாக இருந்தது. முன்னும், பின்னுமாக ஓடிய வாகன ஓட்டிகளின் தாறுமாறான வசவுகள் அவருக்கு உரைக்கவில்லை. பெருசுக்கு அருகில் ஒரு ஆட்டோ வேகமாக வந்தது. காலையில் வெளித்திண்ணையில் தட்டோடு பெருசு உட்கார்ந்த பொழுது மருமகள், “திண்ணையில என்ன சிம்மாசனம் வேண்டிக் கிடக்கு எறங்கி கீழ ஒக்காரு” என்றாள். இருந்த திண்ணையும் போச்சா…என முணு முணுத்தவாறு கீழே உட்கார்ந்தார். அருகில் கட்டப்பட்டிருந்த நாய்க்கு ஏற்கனவே சோறு வைத்து அது தின்று தீர்த்து இருந்தது. பெருசுவின் தட்டைக் காட்டிலும் நாயின் தட்டு பளபளவென்றிருந்தது. பழைய சோற்றைப் பிழிந்து வைத்து நீர் மோர் ஊற்றிய மருமகளை, தொட்டுக்கொள்ள ஊறுகாய் வைக்கமாட்டாளா? என பெருசு ஏக்கமாய் பார்த்தார். அதைப் புரிந்து கொண்ட மருமகள், “சோத்துக்கு கூட உப்புப் போடல தொட்டுக்க ஊறுகாய் கொடுத்தா உடம்புல இன்னங்கொஞ்சம் தெம்பு வந்துரும்” என்றாள். யாரிடம் போய் இதைச் சொல்வது, மகன் அலுவலகத்திற்குப் போய் விட்டான். பேரன் பேத்திகள் பள்ளிக் கூடம் போய்விட்டனர். மருமகளைத் தவிர அங்கே இருக்கிற மற்றோரு ஜீவன் நாய் மட்டும் தான். பெருசு உப்பில்லா சோற்றை திங்க மனசில்லாமல் எழுந்து கொண்டார். அதைப் பார்த்த மருமகள், “ரோசம் பொத்துகிட்டு வருதாக்கும், ஒம்புள்ள சம்பாதனையில வளர்ற புள்ளைகளுக்கே வயிராற சோறு போட முடியல, ஒனக்கு விருந்து கேக்குதாக்கும்” என கொந்தளித்தவள் அத்தோடு நிறுத்தி இருக்கலாம், “திண்ணையிலேயே விழுந்து கெடக்கறதுக்கு, ரோட்டுல அடிபட்டுச் செத்தாலும் போற உசுரு புண்ணியமாப் போகும்” என அவள் சொன்னதும் ஆவேசத்தில் பெருசுவின் உடல் நடுங்கியது. ஆட்டோ ரிக்சா பலமாக மோதி தரதரவென இழுத்துச் சென்றதில் பெருசுவின் உயிர் பொசுக்கென போனது. மார்ச்சுவரியில், பரிசோதனைக்காக பெருசுவின் உடல் காத்திருந்தது. வெளியே வேப்ப மரத்தினடியில் உட்கார்ந்திருந்த மகனிடமும், மருமகளிடமும் ஒரு வக்கீல் “நஷ்ட ஈடு ரெண்டு லட்சம் வாங்கியிறலாம்” என கூறியதும், மருமகளின் கண்கள் விரிந்தது. மாமனாருக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் மண்ணில் உருண்டது. அம்மு -நவம்பர் 17, 2019 […] அம்மு சிரித்த பொழுது நிலவு பெயர்ந்து விழுந்தது போலிருந்தது. “எதுக்கு அம்மு சிரிக்கற” என அப்பாவியாக கேட்ட ராமுவைப் பார்த்து மீண்டும் அம்மு சிரித்தாள். மதிய வேளையில் காலியாக இருந்த பஸ்ஸ்டாப் ஷெல்ட்டரில் அம்முவும் ராமுவும் அமர்ந்து இருந்தனர். வெளியே வெயில் பெய்த போதும் வரும் திசை தெரியாமல் வீசிய காற்றில் இருந்த ஈரம் சூழலை ரம்மியமாக்கி கொண்டிருந்தது. அம்மு நிறுத்திய போதும் அவளது கன்னக்குழிகள் சிரிப்பை நிறுத்தியபாடில்லை. “ஒன்னுமில்லை இன்னக்கி காலைல நம்ம விசயத்தை பத்தி அம்மா கிட்ட பேசினேன். அம்மா அப்பாவிடம் பக்குவமாக சொல்லி சம்மதிக்க வைப்பதாக சொன்னாங்க” என அம்மு கூறியதை பசுமாட்டின் மருண்ட விழிகளுடன் ராமு தலையாட்டிக் கேட்டான். “உங்க நம்பரையும் கம்பெனி அட்ரஸையும் கொடுத்திருக்கேன். இன்னக்கே அப்பா உங்கள பார்க்க வந்தாலும் வரலாம்” என அம்மு மேலும் சொன்னபோது ராமுவுக்கு படபடப்பாக இருந்தது. அன்று மாலை கம்பெனி கேண்டினில் அம்முவின் சாயலில் காத்திருந்த பெரியவரை பார்த்ததும் ராமு கைகூப்பி வணங்கினான். அதை ஏற்பதை போல தலையசைத்தவர் முன்பு ராமு அமர்ந்தான். “அம்மு உங்கள பத்தி சொன்னாள். நீங்கள் என்ன வகுப்பென்று சொல்ல முடியுமா? என சாவதானமாக கேட்டார். ராமு பதில் சொல்ல முடியாமல் அவரையே பார்த்தான்.”தொட்டு புழங்கற சாதியா இருந்தா கல்யாணத்தப் பத்தி பேசலாம்" என பெரியவர் தொடர்ந்த பொழுது, ராமுவுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. அன்று இரவு முழுதும் ராமுவுக்கு தூக்கம் வரவில்லை. அடுத்த நாள் காலை அம்மு கைப்பேசியில் அழைத்தாள். “அப்பா உங்ககிட்ட பேசினதா சொன்னாரு. நீங்க பதில் ஒன்னும் சொல்லலையாம், நான் தெளிவா சொல்லிட்டேன், ஏற்கனவே நாங்க இரண்டு பேரும் தொட்டு புழங்கிட்டோம் அதனால நாங்க ரெண்டு பேரும் ஒரே சாதிதான்னு” என்று அம்மு சிரித்துக் கொண்டே பேசிய போது, ராமுவின் எதிரே சூரியன் மேலேறி வந்து கொண்டிருந்தான். கொக்குகள் கண் சிமிட்டுகின்றன! -நவம்பர் 24, 2019 […] மலர்கள் நிறைந்து கிடந்த பூங்காவில் சற்று முன்னர் பெய்த மழை குளிர்ச்சியை கொண்டு வந்திருந்தது. நடுவே விரிந்து விண்ணை நோக்கி பரந்தி ருந்த ஆலமரத்திலிருந்து ஒரு ஆண் அணில் சரசரவென தரையிறங்கியது. அருகில் பெரி தாய் மலர்ந்திருந்த மஞ்சள் ரோஜாவை பறித்துச் செல்ல ஆசைப்பட்டது. ஆனால் ஒரு இதழை மட்டுமே அதனால் கவ்விச் செல்ல முடிந்தது. மலரி தழுடன் மரமேறிச் சென்ற அணிலின் வரவுக்காக பெண் அணில் காத்திருந்தது. பெண் அணிலிடம் அணுக்கமாக அமர்ந்த ஆண் அணில், இதழை இரு முன் கைகளால் துடைத்து பவித்ரமாக கொடுத் தது. பெண் அணில் வாங்க மறுத்து திரும்பிக்கொண்டது. “நான் கேட்டது இதழல்ல, மலர்” என வீம்பு செய்தது, அருகி லிருந்து அதைக் கேட்டுக் கொண்டிருந்த வெள்ளை நிறக் கொக்கு, “அதற்கென்ன நான் பறித்துத் தருகிறேன்” என்றது. ஆண் அணில் எச்சரிக்கையுடன் “வேண்டாம்” என்றது. ஆனால் பெண் அணிலோ அதன் வெள்ளையை நம்பி சம்மதம் தெரி வித்தது. அடுத்த நிமிடம் மஞ்சள் ரோஜாவுடன் கொக்கு பறந்து வந்தது. அதைப் பெற்றுக் கொள்ள ஆசையாய் பெண் அணில் கைகளை நீட்டியது. ஆனால் கொக்கோ, “என் முதுகில் சிறிது நேரம் சவாரி செய்தால் மட்டுமே, ரோஜாவைத் தர முடி யும்” என நிபந்தனை விதித்தது. நிலைமை கை மீறிப் போகி றது என உணர்ந்து ஆண் அணில் பெண் அணிலைத் தடுத்தது. ஆனால் பெண் அணில் தயக்கமின்றி கொக்கின் முதுகில் ஏறி அமர்ந்த கொண்டது. கொக்கு ஜிவ்வென வானில் பறக்க ஆரம்பித்தது பெண் அணிலுக்கு நிலை கொள்ளா சந்தோசம். கொக்கு கவ்வி யிருந்த ரோஜாவை, கொடுக்க முடியுமா? என அணில் கேட்டது. கொக்கு “அதற்கென்ன எடுத்துக்கொள்” என ரோஜாவைக் கவ்வியிருந்த வாயைத் திறந்தது. ரோஜா மண்ணை நோக்கி இறங்கியது. பெண் அணில், “அய்யய்யோ ரோஜா போச்சே” என அலறியது “அதனாலென்ன அதன் பின்னால் போய் எடுத்துக் கொள்” என கொக்கு சிறகுகளை ஒரு பக்கம் சாய்த்த தில், பெண் அணில் ஆ.. வென்று கீழே விழுந்தது. அதன் உயிர் பிரிந்தது. இறந்த பெண் அணிலின் ருசியான உடல் பாகங்களை கொத்திச் சுவைத்த கொக்கு, “பெண் அணில் ரோஜா மல ருக்கு ஏன் ஆசைப்பட்டது” என சிந்திக்கவும் செய்தது. ஆண் அணில் பெண் அணிலின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தது. மாலையில் கூடு அடைந்த கொக்கிடம் ஆண் அணில் பெண் அணிலைப் பற்றி விசாரித்தது. ’’பெண் அணில் மலரு டன் சேர்ந்து இறைவனைச் சரணடைந்து விட்டது" என கூசா மல் பொய் சொன்னது. பிறகு கண்களைச் சிமிட்டியவாறே “உனக்கும் மலர் வேண்டுமா?” எனக் கேட்டது. கற்றல் - செல்வகதிரவன் -நவம்பர் 24, 2019 அன்று அந்தத் தனியார் பள்ளியில் பெற்றோர், ஆசிரியர் கூட்டம். ஒவ்வொரு பெற்றோராக அழைத்து பிள்ளையின் படிப்பு பற்றி எடுத்துச் சொன்னார் வகுப்பாசிரியை. நந்தகோபாலின் முறை வந்தது. நந்தகோபாலின் பையன் அந்தப் பள்ளியில் நான்காவது படிக்கிறான். “சார்.. ஒங்க பையனின் படிப்பு பரவாயில்லை. எல்லாப் பாடங்கள்லயும் அறுபது பிரசண்ட் மார்க் வாங்கறான்.. ஆனா இது போதாது.. நீங்க வீட்டுல அவன் மேல இன்னும் கொஞ்சம் அக்கறை எடுத்து படிக்கிறதில ஈடுபடுத்தினா… நிச்சயமா பிரசண்டேஜ் கூடும்…” “என்ன மேடம் நாலாவது படிக்கிற பயல் அறுபது பிரசண்ட் எடுக்கிறான்.. போதாதா..? அவனப் போட்டு இன்னும் கசக்கி பிழிஞ்சு… மார்க்க கூட்டி என்ன ஆகப் போகிது..” “என்ன சார் இப்பிடிப் பேசுறீங்க…?” “சரியாத்தான் மேடம் பேசுறேன்… நானெல்லாம் நாலாவது படிக்கும் போது இந்தளவுக்கு மார்க்கு வாங்கல மேடம்… அதனால ஒண்ணும் கொறஞ்சு போகல… வங்கியில வேல கெடச்சு வசதியாத்தான் இருக்கேன்…” “வந்த பேரண்ஸ்கள்ல யாரும் இப்பிடிப் பேசினதில்ல சார்…” “பேசி இருக்க மாட்டாங்க… தெரியும்…. சரி… அவன இன்னம் கொஞ்ச நேரம் படிக்கச் சொல்றது இருக்கட்டும்… நீங்க கடேசியா என்ன புத்தகம் மேடம் படிச்சிங்க. சொல்லுங்க…” “ஞாபகம் இல்ல சார்…” "ஒங்க பள்ளிக் கூடத்தில நூலகம் இருக்கு.. நூலகத்தில ஏராளமான புத்தகங்க இருக்கு… நீங்க அந்தப் பக்கமே திரும்பிக் கூடப் பாக்காம… பிள்ளைங்கள பாடப் புத்தகங்களப் படிக்கச் சொல்லி படாதபாடு படுத்துறீங்க.. நூலகம் போய் நீங்க முதல்ல படிங்க மேடம்… பிள்ளைங்களையும் நூலகத்தில விட்டு வாசிக்க விடுங்க… பிள்ளைங்க பிரமாதமா வருவாங்க… படிப்புங்கிறது பாடப் புஸ்தகத்தம் படிக்கிறது மட்டுமில்ல… பல வகையான புஸ்தங்களையும் படிக்கிறதுல இருக்கு… மொதல்ல அதச் செய்யுங்க… வணக்கம்.. போய்ட்டு வர்றேன்.." வகுப்பாசிரியையின் பதிலுக்குக் காத்திராமல் வெளியேறினான் நந்தகோபால். வகுப்பாசிரியை திகைத்துப் போனார். இந்த விசயம் பள்ளி முதல்வருக்குப் போயிற்று. இப்பொழுது அந்தப் பள்ளிக் கூடத்தில் நூலக வாசிப்பிற்கென ஒரு ‘பிரியேடு’ ஒதுக்கி… பிள்ளைகளையும் வாசிக்க வைத்து… ஆசிரியர்களையும் வாசிக்க வழிவகை செய்திருக்கிறார் அந்தப் பள்ளியின் முதல்வர். செல்லாத வாழ்க்கை -டிசம்பர் 8, 2019 […] படலை விலக்கிக் கொண்டு உள்ளே வந்த மனிதன் மாயன் என்பது அருகில் வந்ததும் தான் கிழவிக்கு புலப்பட்டது. மருமகன் என்பதால் மேலில் விலகி இருந்த முந்தானைச் சேலையை அனிச்சையாய் இழுத்து மூடி கிழவி மரியாதை செய்தாள். திண்ணையில் அமர்ந்த மாயன் குனிந்து கைகளால் முகத்தை மூடி உடம்பு குழுங்க அழுததைப் பார்த்து கிழவி அதிர்ச்சியுற்றாள். அறுவைச் சிகிச்சைக்காக உயிர் போகும் அவசரத்தில் மகள் முருகாயி காத்திருக்கிறாள் என்பதை அறிந்து பெற்ற வயிறு கிழவிக்கு பற்றி எரிந்தது. தனியார் மருத்துவமனை இருபத்தைந்தாயிரம் ரூபாய் முன்பணம் கட்டினால் மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும் என்று கூறிய விபரத்தை மாயன் கிழவியிடம் சொல்லிப் புலம்பினான். கிழவியின் முகம் தெளிவானது. “கவலப்படாதே எங்கிட்ட பணம் இருக்கு எடுத்துத் தர்றேன் கொஞ்சம் பொறு” என்று கிழவி சொன்னதும். மாயனுக்கு ஆச்சர்யமாகவும், ஆறுதலாகவும் இருந்தது. கிழவி, கூரை முகட்டில் சொருகி வைத்திருந்த துணிச் சுருளை எடுத்து மருமகனிடம் கொடுத்தாள், “கூலி நாழிக்குப் போய் கொஞ்சம், கொஞ்சமாய் வாயக்கட்டி வயத்தக் கட்டி சேத்து வச்ச காசு, புள்ளகுட்டிகளுக்கு ஆகும்னு பத்திரமா வெச்சிருந்தேன். எம்பொண்ண எப்படியாவது பொழைக்க வச்சிருயா” என கை கூப்பி கண்ணீர் விட்டு அழுதாள். மாயன் அவசரமாக துணிச்சுருளைப் பிரித்து பணத்தை எண்ணினான். மொத்தம் இருபத்திரண்டாயிரம் இருந்தது. அத்தனையும் பழைய ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள்…. ஊர்த்தலையாரி பேச்சை கேட்டு, மாயன் உள்ளூர் பேங்க் மானேஜரைப் போய் பார்த்தான். “எல்லாம் செல்லாத நோட்டா.. இவ்வளவு நாளா, எங்க மறச்சு வச்சிருந்தீங்க, இன்னும் எவ்வளவு பணம் வச்சிருக்கீங்க” என கிரிமினல் குற்றவாளியைப் போல மாயனை விசாரித்தவர் “இதெல்லாம் அரசு கணக்குப்படி கறுப்பு பணம் வெளிய தெரிஞ்சதுன்னா போலிஸ் கேஸாயிரும்” என மாயனை எச்சரித்தார். கைவிட்டு போகும் மனைவியை நினைத்து மாயனுக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. கழுகும், காக்காவின் கூடும் -டிசம்பர் 15, 2019 […] ஆலமரம் சுற்றிலும் விழுதுகள் விட்டு வேரோடி திரு வாரூர் தேர் போல நின்றது. காக்கா, குருவி, கிளி, கொக்கு, மைனா, ஆந்தை என பற்பல பறவைகள் அதில் கூடுகள் கட்டி குடியிருந்து வந்தன. பறவைகளின் ஒட்டு மொத்த வீடாக இருந்த ஆலமரம் ஒற்றுமைக்கான மகிழ்வின் அடையாளமாக இருந்தது. ஒரு மதிய நேரம், காக்கையின் கூட்டிலிருந்த குஞ்சுகளைக் கவ்விச் செல்ல ஒரு கழுகு எங்கிருந்தோ வந்தது. காக்கைகள் ஒன்று சேர்ந்து, குஞ்சுகளை நெருங்கவிடாமல் கழுகை துரத்தின. இதனால் கோபம் கொண்ட கழுகு, காக்கா கூடு கட்டியிருக்கும் மரம் தன்னுடையது என வம்பு செய்தது. இதை காக்கைகள் மட்டுமல்ல, மரத்தில் கூடு கட்டியிருந்த மற்ற பறவைகளும் ஏற்க மறுத்தன. எனவே, கழுகு பைசல் செய்ய கிளியை அழைத்தது. கிளி, காக்காவையும், கழுகையும் விசாரணை செய்தது. கழுகு சொன்னது. “என் பாட்டன் முப்பாட்டன் காலத்தில் இருந்து, காக்கா கட்டியிருந்த கூட்டில்தான் எங்களின் கூடு இருந்தது. அதனால் காக்கா ஒன்று கூட்டை காலி செய்து கொடுக்க வேண்டும் இல்லை குஞ்சுகளை எனக்கு இரையாக்க வேண் டும்” எனக் கத்தியது. கழுகின் கத்தலில் பயந்து போன கிளி சமா தானமாகப் போகலாம் என்றது. மற்ற பறவைகளுடன் கூடிப் பேசிய கிளி, “இவ்வளவு பெரிய மரத்தில் உனக்கு பிடித்த இடத்தில் கூடு கட்டிக்கொள், குஞ்சுகளுடன் இருக்கும் காக்கா வின் கூட்டை கேட்காதே” என கழுகுக்கு அறிவுரை கூறியது. கிளியின் அறிவுரையை ஏற்க மறுத்த கழுகு படபடவென்று இறக்கைகளை அடித்து பயம் காட்டியது. கிளியின் கூடு இருக்கும் இடத்திற்கு அதன் பார்வை சென்று மீண்டது. இதனால் அச்சமடைந்த கிளி, இறுதியாக தன் தீர்ப்பை வழங்கி யது. “காக்கா அதன் பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து அந்த கூட்டில் குடியிருந்து வருவதை நிரூபிக்கவில்லை. இவ்வ ளவு பெரிய கழுகு பொய் சொல்லும் என்று நான் நம்ப வில்லை. ஆகவே, காக்கா கூட்டைக் காலி செய்து, மரத்தின் வேறு இடத்தில் கூடு கட்டிக் கொள்ள வேண்டியது. கழுகு, காக்கா கூட்டில் குடியேற வேண்டியது”. கிளியின் தீர்ப்பை எல்லா பறவைகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அன்பு டன் மிரட்டிய கழுகு, “காக்கா, கூடு இனி என்னுடையது. அதில் உள்ள குஞ்சுகளும் என்னுடையது” என அதிரடியாக அறி வித்தது. குஞ்சுகளை ஒவ்வொன்றாய் விழுங்கியது. ஊரடங்கு -டிசம்பர் 22, 2019 […] வெளியே பனி பெய்து கொண்டிருந்தது. மும்தாஜ் ஜன்னலை ஒரு பக்கம் லேசாகத் திறந்து உலகைப் பார்க்க முயன்று கொண்டிருந்தாள். சில்லென்று வீசிய குளிர்காற்றில் அவளது உடலும், மனமும் சிலிர்த்தது. வீதியை, வீதியோர மரங்களை வீடுகளின் கூரைகளை நீலநிற மலைகளை, வெள்ளை நிறப்பனி மலர்களைப் போல போர்த்தி படர்ந்திருந்தது. மும்தாஜிக்கு வீதியில் இறங்கி தன் சிநேகிதிகளுடன் சேர்ந்து கூட்டாக பனி விளையாட்டுக்கள் விளையாடவும், கும்மாளம் போடவும் ஆசையாக இருந்தது. கடந்த வருட இதே பனிக்காலம் கனவு போல மும்தாஜிக்கு தோன்றி மறைந்தது. ஒரு வருட இடைவெளியில், அவள் வீட்டை விட்டு வெளியேற தடை செய்யப்பட்டு இருந்தாள். பள்ளிக்கு சென்று பல மாதங்கள் ஆகிறது. என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்பது அந்த சிறுமிக்கு மட்டுமல்ல, அவளது வீட்டுப் பெரியவர்களுக்கும் புரியவில்லை. மும்தாஜ், அம்மாவிடம் பலமுறை கேட்டு விட்டாள். அம்மா ஒவ்வொரு முறையும் அல்லா.. என ஆண்டவனை அழைப்பதுடன் சரி, பதில் ஏதும் சொல்ல முடியாதவளாக இருந்தாள். பக்கத்து வீட்டில் சிநேகிதி ஆயிஸா இருந்தாள். படுத்துறங்கும் நேரம் தவிர அவளுடன் ஒன்றாக கழித்த இனிய பொழுதுகள் மும்தாஜிக்கு ஏக்கப் பெரு மூச்சாக வெளிப்பட்டது. வாசல் கதவைத் திறந்து கொண்டு அவளைப் பார்க்கப் போனால் என்ன? என யோசித்தாள். உள்ளே அம்மா வேலையாக இருந்தாள். மும்தாஜ் பூனையைப் போல மெத்தென நடந்தாள். கதவுக்கருகே வந்துவிட்டாள். தாழ்ப்பாளை நீக்க அவளது கைகள் நடுங்கியவாறு முன் சென்ற நேரத்தில் வெளியே, துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து “யா…அல்லா” என்ற ஒலியுடன் ஒரு ஆணின் உடல் சரிவதை மும்தாஜ் உணர்ந்தாள். முன் சென்ற கைகளை பின் இழுத்துக் கொண்டு, மும்தாஜ் பயத்துடன் வீட்டுக்குள் ஓடி வந்தாள். அம்மாவுக்கும் அந்த சத்தம் கேட்டு இருக்கும். ஆனால் அவள் சலனமின்றி வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். மும்தாஜ் மீண்டும் ஜன்னல் முன் வந்தாள். சீருடை அணிந்த மனிதர்கள் துப்பாக்கிகளுடன் காவலிருந்தனர். ஆயிஸா வீட்டுக் கூரையிலிருந்து உயரப் பறந்த புறாவின் சிறகடிப்பு, சீருடை மனிதர்களுக்கு படபடப்பை ஏற்படுத்துவதாக இருந்தது. மும்தாஜ், புறாவைப் பார்த்து, “ஆயிஸா….” என ஒருமுறை சத்தமாக அழைத்து விட்டு ஜன்னலை மூடிக் கொண்டாள். ஓட்டு -டிசம்பர் 29, 2019 […] தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்து சொக்கன் தலைகீழாக போதையில் திரிந்தான். இரவு திரும்பியவன் கையில் பிரியாணி பொட்டலம் இருந்தது. முத்தம்மாள் பொட்டலத்தை வெளியே வீசி எறிந்தாள். காத்திருந்த நாய் பொட்டலத்தைக் கவ்விக்கொண்டு ஓடியது. “ஏண்டி பிரியாணியை நாய்க்கு வீசுன” என சொக்கன் அடிக்க வந்தான். “அப்படித்தான்யா வீசுவேன். மானம் கெட்டுப் போய் குவார்ட்டருக்கும், பிரியாணிக்கும் ஆசப்பட்டு பொழப்ப தொலச்சிட்டு நிக்கிற நீயெல்லாம் ஒரு ஆம்பளையா” என்ற முத்தம்மாளின் வாயில் சொக்கன் ஒரு குத்து விட்டான். வலி தாங்க முடியாமல் “அய்யோ..” என முத்தம்மாள் அலறியதில், தூக்கத்திலிருந்த பாப்பா எழுந்து கொண்டாள். பயத்தில், “அம்மா…” என அருகில் வந்தவளை முத்தம்மாள் அள்ளி அணைத்துக் கொண்டாள். “அம்மா வாயில நெத்தம்” என பாப்பா துடைத்து விட்டதும், முத்தம்மாள் பொங்கி அழுதாள். தேர்தல் நாளன்று காலையில் சொக்கன் பரப்பரப்பாக இருந்தான். “பன்னாடிக்கு சாவி சின்னத்துல முதல் ஓட்ட நீதான் போடனும் முத்தம்மா” என கனிவாக கேட்டுக் கொண்டான். பாப்பாவை இடுப்பில் தூக்கிக் கொண்டு, முத்தம்மாள் ஓட்டுப் போட கிளம்பினாள். சொக்கனுக்கு சந்தேகமாக இருந்தது. “முத்தம்மா, மறக்காம சாவி சின்னத்துக்கு போட்டுரு, வேற சின்னத்துக்கு போட்டு எம் மான மரியாதைய வாங்கியிறாத” என கெஞ்சினான். பாப்பா எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தாள். முத்தம்மாள் ஓட்டுச்சீட்டை வாங்கிக் கொண்டு உள்ளே போனாள். முத்திரைக் கட்டையை எடுத்து, சாவி சின்னத்திற்கு போடப் போனவளை தடுத்த பாப்பா, “சீப்பு சின்னத்துக்கு போடும்மா” என திடமாக கூறினாள். மகளின் வார்த்தையில், கணவனை மறந்த முத்தம்மாள், சீப்பு சின்னத்துக்கு ஓட்டுப் போட்டாள். வெளிய வந்ததும், சொக்கன், “அம்மா எந்த சின்னத்துல ஓட்டுப் போட்டுச்சு” என பாப்பாவிடம் கேட்டான். “அம்மா..அம்மா” என இழுத்த பாப்பா “சாவி சின்னத்துல போட்டாங்க” என்றதும் சொக்கன் சந்தோசமாக முத்தம்மாளைப் பார்த்தான். முத்தம்மாள் பாப்பாவின் கன்னத்தில் முத்தமிட்டாள். மண்ணு -ஜனவரி 5, 2020 […] வெளியே கடும் வெய்யில்.பேருந்து அங்குலக் கணக்கில் நகர்ந்து கொண்டிருந்தது. உட்கார்ந்து இருக்கும் அன்புக்கு இறங்கி ஓடலாமா என்றிருந்தது. இடித்துக் கொண்டு நிற்பவர்கள் நிலை கவலைக்கிடமாக இருந்தது. குல்லா தரித்திருந்த முதியவர் முகத்தில் உட்கார இடம் கிடைக்காதா என்ற ஏக்கம் வியர்வையாய் வழிந்தது. கண்டக்டரின் கீழ் உதடு எச்சில் தொட்டு தொட்டு முன்னாடி துருத்திக் கொண்டிருந்தது. நல்லவேளை அவரிடம் டிக்கெட் மெஷினை கொடுத்து விட்டார்கள். கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கும் போது “எதனாலங்க டிராபிக் ஜாம்’’ என அன்பு கேட்டான்.”ஆத்துப்பாலத்துல இருந்து உக்கடம் வரை ஆர்ப்பாட்டம் பண்றாங்க எல்லா பஸ்ஸையும் இந்த ரூட்டுல திருப்பி விட்டுட்டாங்க" என எரிச்சலுடன் பதில் சொன்ன கண்டக்டரின் கீழ் உதடு கட்டுக்குள் நிற்காமல் நடனமாடியது. அன்புக்கு முன்புறம் அமர்ந்திருந்த கண்ணாடிக்காரர் “இவனுகளுக்கு இதே எழவாப் போச்சு சட்டம் போட்டாத்தான இந்த நாட்டுக்காரன் யாரு வெளிநாட்டுக்காரன் யாருன்னு தெரியும்” என சத்தமாக சொன்னதை பேருந்தில் இருந்தவர்கள் மறுபேச்சில்லாமல் கேட்டுக் கொண்டனர். முதியவர் வியர்வையை துடைத்துக் கொண்ட போது அவர் முகத்தில் வெளிப்பட்ட வேதனை அன்புவின் மனதை உறுத்தியது. அன்புவின் மன ஓட்டத்தை புரிந்து கொண்டவர் போல முதியவர் அன்புவைப் பார்த்து புன்முறுவல் பூத்தார். பிறகு “நான் இந்த மண்ணுல பிறந்து எழுபது வருசமாச்சு எங்க வாப்பா அவரோட வாப்பா எல்லாம் இந்த மண்ணு தான். இப்பபோயி ஆதாரம் கேட்டா நான் எங்க போவேன்” என இவன் மட்டும் கேட்கும் அளவுக்கு முதியவர் பேசியது அன்புவின் மனதை நெகிழச் செய்தது. இருக்கையில் இருந்து எழுந்த அன்பு “பெரியவரே முதல்ல சீட்டில உட்காருங்க சட்டம் சரியா இருந்தாத்தான் ஜனங்க ஏத்துக்குவாங்க இல்லைன்னா எதுத்து நிப்பாங்க” என கண்ணாடிக்காரரைப் போலவே சத்தமாக சொன்னான். முதியவர் நம்பிக்கையுடன் அவனைப் பார்த்தவாறே பத்திரமாக அமர்ந்து கொண்டார். பேருந்தில் இருந்தவர்கள் இதையும் மறுபேச்சில்லாமல் கேட்டுக் கொண்டனர். ரூபாய் -ஜனவரி 12, 2020 […] காலையில் எப்பொழுதும் போல செலவுக்கு நூறு ரூபாய் கொடுத்த முருகேசனிடம், ’’இத வச்சுகிட்டு என்ன பண்றது" என வாய்வரை வந்த வார்த்தைகளை சுமதி கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள். மாமியாருடன் சேர்த்து ஐந்து பேர் அடங்கிய குடும்பத்தை கொண்டு செலுத்துவதில் ஒவ்வொரு நாளும் சுமதி செத்துப் பிழைத்தாள். பிள்ளைகள் மதிய நேரச் சாப்பாட்டை பள்ளியில் முடித்துக் கொண்ட போதும், மாலையில் வரும் பிள்ளைகளுக்கும், கணவனுக்கும் கொஞ்சம் காய்கறிகளோடு வயிறார சோறு போட வேண்டும். சுமதி, மஞ்சள் பையுடன் கடை வீதிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். பக்கத்து வீட்டு வாசலில் பழைய அம்பாசடர் கார் கறுப்பு நிறத்தில் வந்து நின்றது. பத்மாக்காவின் கணவர் பிரேதமாய் காரிலிருந்து இறக்கப்பட்டார். கடந்த ஒரு மாதமாய் கணவருக்கு வந்த நோயுடன் இரவு பகலாய் மல்லுக்கட்டியதில் பத்மாக்கா பாதி ஆளாய் கரைந்து போயிருந்தாள். அரசு மருத்துவமனையிலிருந்து பிரேதத்தை எடுத்து வந்ததற்கு கார்க்காரன் வாடகை கேட்டான். நூறு ரூபாய் குறைவாய் இருப்பதை கறாராக கார்க்காரன் ஏற்க மறுத்துவிட்டான் என்ன செய்வது எனத் தெரியாமல் நின்ற பத்மாக்கா ஒரு நொடியில் பிச்சைக்காரியைப் போல தோற்றமளித்தாள். சுமதியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கையிலிருந்த நூறு ரூபாயை, “இந்தாக்கா” என பத்மாவிடம் கொடுத்துவிட்டு வீட்டுக்குள் வந்துவிட்டாள். இதை பார்த்துக் கொண்டிருந்த மாமியார் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது. இதை எப்படி சமாளிப்பது எனத் தெரியாமல்; சுமதிக்கு பெரும் சங்கடம் ஏற்பட்டது. அலமாரி, அஞ்சறைப் பெட்டி எல்லாவற்றிலும் தேடிப் பார்த்துவிட்டாள். ஒரு பைசா கூட தேறவில்லை. அப்படியே சமையலறைச் சுவற்றில் சாய்ந்து அமர்ந்துவிட்டாள். சுமதி படும் அவஸ்தையைப் பார்த்தவாறு இருந்த மாமியாரின் கண்களில் கரிசனம் தெரிந்தது. உரிக் கயிற்றில் சாமிக்கு முடிந்து வைத்திருந்த முடிச்சை அவிழ்த்துப் பார்க்கச் சொன்னாள். சுமதி அவசரமாக அவிழ்த்துப் பார்த்தாள். அதில் நூறு ரூபாய் ஒரு குழந்தையைப் போல சிரித்துக் கொண்டிருந்தது. அடிமாடுகள் -ஜனவரி 19, 2020 […] மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஜல்லிக்கட்டு நடந்து கொண்டிருந்தது. வாடி வாசலில் இருந்து முட்டி மோதிக்கொண்டு வந்த பாண்டித்துரையின் காளையை இளவட்டம் யாரும் நெருங்க முடியவில்லை. முத்துவுக்கு முன்புறம் நின்ற நண்பன் மருது துணிச்சலாய் முன்னேறினான். அடுத்த நொடி காளை அவனைத் தூக்கி வீசியது. காளையைத் தொட மாடுபிடி வீரன் ஒருவன் கூட தயாராக இல்லை. காளையும் அந்த இடத்தை விட்டு நகர்வதாக தெரியவில்லை. “இது காளை இல்லப்பு பாண்டித்துரையோட வேங்கைப் புலி வெளயாட வந்துருக்கு பிடிக்க வேணாம் திமிலைத் தொட்டுக் காட்டு ஒரு பவுன் தங்கக் காசு” என்ற தொகுப்பாளரின் சீண்டலில் முத்துவுக்கு சூடேறியது. கூட்டம் காளைக்கு ஆதரவாக கைதட்டி விசிலடித்தது. பாண்டித்துரை மீசையை முறுக்கி விட்டார். “ஏப்பு பிடிக்கிறீகளா இல்ல காளை ஜெயிச்சிருச்சுன்னு அறிவிக்கட்டுமா?” என தொகுப்பாளர் உசுப்பியது, தார்க்குச்சியால் புட்டத்தில் குத்தியது போல முத்துவுக்கு பொத்துக் கொண்டு வந்தது. அதே நேரத்தில் தடுப்புக் கட்டை அருகே விழுந்து கிடந்த மருது “டேய் முத்து விடாதடா” என குரல் கொடுத்தான். முத்து சக்தி அனைத்தையும் திரட்டி கண்ணிமைக்கும் நேரத்தில் காளையின் திமிலை எட்டி தவ்விப் பிடித்தான். காளையின் கால்கள் முன்னும் பின்னும் துள்ளி முத்துவை ஆக்ரோசமாக உதறப் பார்த்தது. முத்துவுக்கு தட்டாமலை சுற்றுவது போலிருந்த போதும் பிடித்த பிடியை விடவில்லை. காளை களத்தை விட்டு ஓட ஆரம்பித்தது. காளை பிடிபட்டது. உசுரக் கொடுத்து காளையைப் பிடிச்ச வீரன் முத்துவுக்கு ஒரு தங்கக் காசு, ஏப்பா ஏ.. முத்து மேல வாப்பா" என தொகுப்பாளர் அழைத்ததும் கரகோசம் விண்ணைப் பிளந்தது. முத்து ஓடோடி மேடை ஏறினான். அவனைத் தடுத்து நிறுத்திய பாண்டித்துரை, “ஏண்டா யார்றா நீ, கண்ட சாதிப்பய கைய வைக்கவா நான் காளைய வளத்தேன். எவன்டா இவன களத்துல எறக்குனது” என தொகுப்பாளரிடம் போட்ட சத்தம் மைதானம் முழுக்க ஒலிபெருக்கியில் எதிரொலித்தது. இதைச் சற்றும் எதிர்பார்க்காத முத்து ஆவேசத்துடன் மாவட்ட ஆட்சியரையும் காவல்துறை அதிகாரிகளையும் பார்த்தான். அவர்கள் அடிமாடுகளைப் போல தலையை தொங்கப் போட்டிருந்தனர். கேள்விகள் -பிப்ரவரி 2, 2020 […] கீழ்வானில் நிலா மெல்ல மேலேறிக் கொண்டிருந்தது. அம்மாயின் மடியில் அமர்ந்திருந்த குமுதினி எதிரே இருந்த குதிரைகளை கவனித்துக் கொண்டிருந்தாள். இரண்டு வெள்ளைக் குதிரைகள் கம்பீரமாக நின்றிருந்தன. ஒரு குதிரை சிவப்பு நிறத்திலும் இன்னொரு குதிரை பச்சை நிறத்திலும் சேணம் தரித்திருந்தன. குதிரைகளின் இடுப்பைச் சுற்றி மஞ்சள் நிறத்தில் சலங்கை மணிகள் பூட்டப்பட்டிருந்தன. கடிவாளம் சுண்டி இழுத்த நிலையில், குதிரைகளின் மூக்குத் துவாரங்கள் விடைத்து காற்றை சுவாசித்துக் கொண்டிருந்தன. புறப்பாட்டுக்குத் தயார் நிலையில் இருந்த குதிரைகளில், “யார் சவாரி போவார்கள்?” என அம்மாயிடம் குமுதினி கேட்டாள். நகரத்திலிருந்து விடுமுறையில் கிராமம் வந்திருந்த பேத்தியின் கேள்வியில் அம்மாயிக்கு சந்தோசம் தலைதூக்கியது. அம்மாயி, “ஒரு குதிரயில அய்யனாரு போவாங்க, இன்னொரு குதிரயில கருப்பணசாமி போவாங்க” என்றாள். குமுதினி “எங்க போவாங்க அம்மாயி?” எனக் கேட்டதும், “வேட்டைக்கு போவாங்க” என அம்மாயி பதில் சொன்னாள். உடனே, “எப்ப போவாங்க” என ஆர்வமுடன் குமுதினி கேட்டாள். “நடுச்சாமத்துல” என அம்மாயி கண்களை உருட்டி ரகசியமாகச் சொன்னாள். “நம்ம வீட்டுப்பக்கம் போவாங்களா அம்மாயி” என படபடப்புடன் குமுதினி கேட்டதும் அதை எதிர்பாராத அம்மாயி, “அவங்க வீதி வழியா போக மாட்டாங்க ஆகாசத்துல போவாங்க” என சமாளித்தாள். அதில் திருப்தி அடையாத குமுதினி, “குதிரய நல்லாப் பாருங்க அம்மாயி, அதுக்கு ரெக்கை இல்ல. எப்படி ஆகாசத்துல பறக்க முடியும்?” என கேட்டதும், அம்மாயி பதில் சொல்ல முடியாமல் திகைத்துப் போனாள். குமுதினி இப்பொழுது தானாக யோசிக்க ஆரம்பித்தாள். பிறகு, “அம்மாயி அதுக நெஜக் குதிர இல்ல, மண்ணுக் குதிரைங்க அதுல சவாரி செய்யவும் முடியாது, பறக்கவும் முடியாது” என தீர்க்கமாக சொன்னாள். “ஓஹோ எல்லாந் தெரிஞ்சுகிட்டுத்தான் எங்கிட்ட கேக்குறியா” என அலுத்துக் கொண்ட அம்மாயி, குமுதினியின் பார்வை அய்யனார் மீதும், கருப்பணசாமி மீதும் போவதைப் பார்த்தாள். இனி அவர்களைப் பற்றி குமுதினி ஏதும் கேட்டால் என்ன செய்வது என, “நேரமாச்சு வா வீட்டுக்கு போகலாம்” என அவசரமாக கோவிலை விட்டு அம்மாயி நடையைக் கட்டினாள். முறுக்கிய மீசையுடனும், தூக்கிய அரிவாளுடனும் நெடுநெடுவென எந்நேரமும் நின்றிருக்கும் அய்யனாரைப் பற்றியும், கருப்பணசாமியைப் பற்றியும் கேட்க, குமுதினியிடம் நிறையக் கேள்விகள் இருந்தன. நீர்க்குமிழி -பிப்ரவரி 9, 2020 அவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என கேள்வி கேட்பதற்கு அந்த ஊரில் யாரும் இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் இனி அரசு கேட்டால் தான் உண்டு. கிருஷ்ணனும், சித்ராவும் நிலையான வாழ்வைத் தேடி குறைந்தது பத்து ஊர்களையாவது கடந்து வந்திருப்பார்கள். ஏற்கனவே வேலை பார்த்த அனுபவம், குறைந்த கூலிக்கு டெக்ஸ்டைல் மில்லில் வேலையும், குடியிருக்க ஒரு ஓலைக் குடிசையும் கிடைத்தது. அருகிலிருந்த ஒற்றை ஆசிரியர் அரசு ஆரம்பப் பள்ளியில் ஆறு வயதான மகள் ராதிகாவுக்கு ஒன்றாம் வகுப்பில் இடமும் கிடைத்தது. ஒரு நாள் மாலை, பள்ளியிலிருந்து வந்த ராதிகா, “அம்மா, கீதா டீச்சர் என்னை கலெக்டருக்கு படிக்கச் சொன்னாங்க” என மலர்ந்த முகத்துடன் கூறிய பொழுது, கிருஷ்ணனுக்கும், சித்ராவுக்கும் வாழ்வின் மீதான நம்பிக்கை முதன் முறையாக துளிர்த்தது. சித்ரா மகளைக் கட்டியணைத்துக் கொண்டு, “என் ராசாத்தி டீச்சர் அப்படியா சொன்னாங்க” என மகளின் கன்னம் வழித்து நெட்டி முறித்தாள். அன்று ஞாயிற்றுக்கிழமை, மக்காச்சோளக் காட்டுக்குள் சக மாணவர்களுடன் சேர்ந்து, கண்ணாமூச்சி விளையாட்டு ஆடிக் கொண்டிருந்த ராதிகா திடீரென காணாமல் போய்விட்டாள். அடுத்த நாள் காலை அருகிலிருந்த தோட்டத்து கிணற்றில் ராதிகா நீர்க்குமிழியாய் மிதந்தாள். பாலியல் வன்முறைக்கு கொடூரமாக பலி ஆகியிருந்தாள். கீதா டீச்சர் தலைமையில் பள்ளி மாணவர்கள் நெடுஞ்சாலையை மறித்தனர். ஊர் மக்களும் சேர்ந்து கொண்டனர். பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. கலெக்டர் வராமல் மறியலைக் கைவிட முடியாது என கீதா டீச்சர் காவல்துறையிடம் கறாராக சொல்லி விட்டார். கடைசியில் கலெக்டர் அம்மா வந்து விட்டார். “என்ன நடந்ததுன்னு சொல்லுங்கம்மா”, எனக் கேட்ட கலெக்டர் அம்மாவின் முகத்தில் தன் மகள் ராதிகாவை ஆவலுடன் தேடிய சித்ரா பதில் சொல்ல முடியாமல் மயங்கி விழுந்தாள். தொற்று -பிப்ரவரி 16, 2020 கரோனா வைரஸைப் போல சங்கரியின் சிரிப்பு அனைவருக்கும் தொற்றிக் கொண்டது. அவளது படர்ந்த முகம் மேலும் விரிந்து சிரித்தது. அவளது கண்களும், மூக்கும், காதுகளும், கழுத்து நரம்புகளும் சிரித்துக் கொண்டிருந்தன. அப்துல்லா சிரித்துக் கொண்டே தான் கேட்டார், “எதுக்கு சிரிக்கிறவ”. சங்கரியால் சிரிப்பை நிறுத்திவிட்டு பதில் சொல்ல இயலவில்லை. அதற்குள் ஜெயராமன், “அவங்க சிரிக்கிறாங்க, நீங்களும் நானும் சிரிக்கிறோம் இது எல்லாம் சந்தோசந்தானே, இதுக்கு ஒரு காரணம் கேட்கனுமா,” என சிரித்துக் கொண்டே பதில் சொன்னார், கற்பகம், “அப்துல்லா அண்ணே அவளோட கல்லு மூக்குத்தியப் பாருங்க அதுவுங்கூட ஜோரா சிரிக்குது,” என மூக்குத்தியை கை நீட்டிக் காட்டினாள். “ஆமாம் அதுந்தான் சிரிக்குது” என ஆச்சரியப்பட்ட அப்துல்லா பலமாக சிரிக்க ஆரம்பித்தார். அப்பொழுது, பிளாஸ்க்கில் காபி வாங்கிக் கொண்டு அறைக்குள் நுழைந்த ஜோசப்புக்கும் சிரிப்பு ஒட்டிக்கொண்டது. “சங்கரி சிரிச்சா போச்சு அப்புறம் எல்லாருஞ் சிரிக்க வேண்டியதுதான்” என்றவாறே டம்ளர்களில் காப்பியை ஊற்றலானார். மானேஜர், கடுகடுத்த முகத்துடன் கண்ணாடிக் கதவு வழியாக பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு மடாரென கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தவர், “வேலை நேரத்துல சிரிப்பு என்ன வேண்டிக்கிடக்கு” எனப் பொறிந்தார். மானேஜரின் கோபத்தை ஆற்றும் விதமாக, ஜோசப் காபி டம்ளரை அவரை நோக்கி சிரித்தவாறே நீட்டினான். “முதல்ல எல்லாரும் சிரிப்ப நிறுத்துங்க பெறகு காப்பி சாப்பிடலாம்” என மானேஜர் எரிச்சலுடன் உத்தரவிட்டார். அதைச் சற்றும் பொருட்படுத்தாத கற்பகம், “ஏன் சார் நீங்க தான் ஒரு வாட்டி எங்களுக்குச் சிரிச்சு காமிங்களேன்” என கைகூப்பி அவள் கோரிக்கையாக வைத்த விதம் எல்லோருக்கும் மீண்டும் சிரிப்பை வரவழைத்தது. மானேஜர் சிரிப்பு தனக்கும் தொற்றிக் கொள்ளுமோ என்ற பதட்டத்தில் அறைக்குள் சென்று தன்னை தனியாக அடைத்துக்கொண்டார். அம்மா பேசட்டும் -பிப்ரவரி 23, 2020 “நீ கொஞ்சம் பேசாமல் இரு” என மூர்த்தி அடக்கினான். “இவரும் பேசமாட்டீங்கறாரு, என்னையும் பேச விடாம அடக்கறாரு, எம்புள்ள விசயத்துல நான் பேசாம வேற யாரு பேசுவா” என சுகந்தி மனதிற்குள் பொங்குவது அப்படியே அவளது முகத்தில் முத்து முத்து வியர்வையாக வடிந்தது. சம்பந்தியம்மாள் மூக்கு விடைக்க மீண்டும் பேச ஆரம்பித்தாள். “படிச்ச புள்ளன்னா ஒரு வேலை வெட்டி செய்ய மாட்டாளா, எந்நேரமும் கையில புஸ்தகத்தை வச்சுகிட்டு ஒக்காந்துகிட்டா, யாரு சமைக்கிறது யாரு கூட்டுறது யாரு தொவைக்கிறது யாரு பாத்திரபண்டம் கழுவுறது யாரு…” திக்கு திசை தெரியாமல் செல்லும் ரயில் பெட்டி களைப் போல சம்பந்தியம்மாள் அடுக்கிக் கொண்டே போனாள். அருகில் உட்கார்ந்திருந்த மாப்பிள்ளை சீனிவாசன் சுவரோரம் ஊர்வலம் போய்க் கொண்டிருந்த சிற்றெறும்புகளை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். மூர்த்தி, மகள் வினோதினியின் முகம் பார்த்தார். “அப்பா, எல்லா வேலயும் முடிச்சிட்டுத்தான் டி.என்.பி.சி.எக்ஸாமுக்கு படிச்சிகிட்டு இருந்தேன்பா” என அவள் மெல்லிய குரலில் பேசியது சம்பந்தியம்மாளின் காதுகளுக்கு தெளிவாகக் கேட்டது. “கிழிச்ச எத்தன வாட்டி எழுதுவ ஒன்னுக்கு ரெண்டு பெத்துட்டு பரிட்சைக்கு படிக்கிறாளாம் வேலக்கி போறாளாம்” என வினோதினியின் குமட்டில் குத்துவது போல பேசிய சம்பந்தியம்மாள் மகனைப் பார்த்து, “என்னடா வாயைத் தொறந்து பேச மாட்டியா” என அதட்டினாள். சீனிவாசன் ஒருமுறை எச்சில் விழுங்கிக்கொண்டு, “ஒன்னுமில்ல பத்து லட்ச ரூபா ஏற்பாடு பண்ணுனா, வினோவுக்கு வேலை வாங்கி யிர்லாம்…” என இழுத்தவனைப் பிடித்து கன்னத்தில் நாலு சாத்து சாத்தலாம் என வினோதினிக்கு தோன்றியது. இதுவரை அடங்கியிருந்த சுகந்தி இப்பொழுது பேச ஆரம்பித்தாள். “இதுக்குத் தான் இவ்வளவு சுத்து சுத்தினீங்களா சம்பந்தியம்மா புள்ளைய கட்டிக்கொடுத்து பத்து வருசமாச்சு, அவளும் ரெண்டு புள்ளைய பெத்துட்டா, இனி ஒங்க மகனுக்கு தெம்பிருந்தா வச்சி பொழைக்கட்டும் இல்லன்னா மகராசனா விட்டுட்டு போகட்டும்” என வெட்டு ஒன்னு துண்டு இரண்டாக பேசியதும், “நீ கொஞ்சம் சும்மா இரு” என்று எப்பொழுதும் போல சொல்ல வந்த மூர்த்தியை, “அப்பா விடுங்கப்பா அம்மா பேசட்டும்” என வினோதினி வெடுக்கென்று தடுத்தாள். கறுப்புச் சட்டைக்காரர்கள் - செல்வகதிரவன் -பிப்ரவரி 23, 2020 இடம் வாங்க இன்சூரன்ஸ் கம்பெனி, வீடு கட்ட வங்கி என்று அலைந்து திரிந்து… கடன் வாங்கி, வீட்டைக் கட்டி முடித்தான் கதிர்வேலன். கட்டி முடித்த வீட்டிற்கு இன்று புதுமனை புகு விழா. மிக நெருங்கிய உறவினர்கள், அலுவலக நண்பர்கள் முதலியோரை மட்டும் விசேடத்திற்கு அழைத்திருந்தான். பால் காய்ச்சும் நிகழ்ச்சி காலையில் வைத்திருந்தான். அதனால் அழைக்கப்பட்டோர் ஒவ்வெருவராக காலை முதல் வந்தவாறு இருந்தனர். அலுவலக நண்பன் அறிவுக்கரசு முழுக்கை கறுப்புச் சட்டை வெள்ளைப் பேண்ட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்து இறங்கினான். வீட்டுக்குள் அமர்ந்திருந்தோர் அனைவரின் பார்வையும் அறிவுக்கரசை நோக்கியே பாய்ந்தது. கதிர்வேலன் முகத்திலும் இலேசான முகச் சுளிப்பைக் காண முடிந்தது. “எவ்வளவு கஷ்டப்பட்டு கடன ஒடன வாங்கி வீடு கட்டி இருக்கான். இந்த கிரகப் பிரவேச ஃபங்சனுக்கு கறுப்புச் சட்டையில வந்திருக்கான் பாரு..” “ஆமா ஆமா.. கறுப்புச் சட்டை பிடிக்கிதுன்னா போட்டுக்கிட்டுப் போ அதப் போட்டுக்கிட்டு விசேசத்துக்கு எதுக்கு வர்ற.. கறுப்பு அபசகுனம்னு நெனைக்கிறவுங்க நெறையப் பேர் இருப்பாங்கன்னு தெரியாமலா இருக்கும்..?” “எல்லாம் அந்த ஈரோட்டுக் கெழவர் பண்ணின வேல.. அவரு செத்து நாப்பத்தி ஐந்து வருசமாச்சு.. ஆனா இன்னமும் பல பேரு மனசில ஆனி அடிச்ச மாதிரி ஒட்காந்துகிட்டு இருக்காரு..” “அம்பது அறுபது வயசு கடந்த ஆட்களுக்குத்தான் அவரப் பத்தி தெரிஞ்சிருந்தது. இந்த பிஜேபிக் கட்சிக்காரங்க அவரக் கன்னா பின்னான்னு பேச இந்தக் காலத்துப் பசங்களும் அவரப் பத்தி தெரிஞ்சுக்கிட்டாங்க… அவரு புஸ்தகங்கள படிக்க ஆரம்பிச்சிட்டாங்க… புஸ்தகக் கண்காட்சியில அவரோட புக்ஸ் எக்கச்சக்கமா விக்கிதாம்…” “சும்மா கிடந்த சங்க ஊதிக் கெடுத்த மாதிரி பார்லிமெண்ட்டுலேயே பெரியார் பேர முழங்க வச்சது பிஜேபிக் கட்சிக்காரங்கதான்… வடநாட்டுலயும் அவரோட பேரு பெரிசா பரவியிடுச்சு..” “ஒண்ணப் புரிஞ்சுக்கிடணும்… கோயிலுக்குப் போறவுங்க எல்லாம் பிஜேபி கிடையாது… பெரியாரப் புகழ்ரவுங்க எல்லாம் கோயிலுக்குப் போக மாட்டாங்கன்னு சொல்ல முடியாது.” இது மாதிரியான உரையாடல்கள் விசேடத்திற்கு வந்தோர் மத்தியில் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது கறுப்புச் சட்டை போட்டு, கறுப்பு வேட்டி கட்டி சபரிமலைக்கு மாலை போட்டிருந்த மனிதர் ஒருவர் அங்கு வந்தார். அவர் அணிந்திருந்த கறுப்பு ஆடை பற்றி ஒருவரும் வாய் திறக்கவில்லை. அது மட்டுமல்ல… அவரைப் பார்த்து சிலர் “சாமி சரணம்” என்று கூறி வணங்கினார்கள். நீலமலர் -மார்ச் 1, 2020 […] தேனீக்கள் வராவிட்டால் மலர்கள் ஏமாந்து தான் போகின்றன. தேனின் கனம் தாங்காமல் அந்த நீலநிற மலர் தலை சாய்த்து இருந்தது. அது, தேனீக்களின் வரவை எதிர்பார்த்து காத்திருப்பது போலவும் இருந்தது. கனகாவை மருத்துவமனைக்கு வரச்சொல்லிவிட்டார்கள்.இன்றோ… நாளையோ… பிரசவமாகி விடும் என டாக்டரம்மா சொல்லி இருந்தார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வருவதாகச் சொல்லிச் சென்ற கணவன் முத்துச்சாமி இன்னும் வரவில்லை. பிரசவ செலவுக்காக ஓனரிடம் பணம் வாங்கப் போவதாக சொல்லி இருந்தான். சிறுநீர் கழிக்க வேண்டும் போல இருந்தது. கஷ்டப்பட்டு எழுந்தவளுக்கு மூச்சிரைத்தது. முத்துச்சாமி ஒர்க் ஷாப் ஓனர் முன்பு வெகு நேரமாக நின்று கொண்டிருந்தான். ஓனர் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தார். அவர் எப்பொழுது பேசி முடிப்பார் என அவரது வாயைப் பார்த்துக் கொண்டிருந்த முத்துச்சாமியின் மனது கனகாவை நினைத்து கலக்கமடைந்திருந்தது. ஓனர், உரத்துப்பேச ஆரம்பித்தார். எதிர்முனையில் இருந்தவரிடம் இப்பொழுது சண்டை போடுமளவுக்குப் போனார். முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது. டைய் அடித்திருந்த மீசையின் மேலுதடு துடித்தது. கைப்பேசியைக் கட் செய்து டேபிள் மீது வீசியவர். அதே கோபத்துடன் எதிரே நின்றிருந்த முத்துச்சாமியை, புருவம் நெரித்து “என்ன” எனக் கேட்டார். முத்துச்சாமியின் நாக்கு பயத்தில் மேலன்னத்தில் ஒட்டிக்கொண்டது. கழிப்பறையில் சிரமப்பட்டு சிறுநீர் கழிக்க உட்கார்ந்த கனகாவுக்கு, இடுப்பில் உயிர் போவது போல வலி ஏற்பட்டது. வீதியில், காய்கறி விற்றுச்சென்ற பாயம்மாள் குரல் காதில் விழுந்தது. கனகா “பாயம்மா…” என பயத்தில் அலறினாள். பாயம்மாள் முக்காட்டை சரி செய்து கொண்டே, அடுத்த நிமிடம் கழிப்பறைக்குள் வந்து விட்டார். கனகாவின் நிலையறிந்து, “யா..அல்லா..” என்ற வேதனை வெளிப்பாட்டுடன் அருகில் அமர்ந்தாள். கனகா, பாயம்மாளின் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டாள். ஐந்து குழந்தைகளுக்கு தாயான பாயம்மாள் கனகாவுக்கும் தாய் ஆனாள். கடைசி வரை தேனீ வரவில்லை. நீலமலர் கனம் தாங்காமல் காம்பிலிருந்து விடுபட்டு வீழும் நேரத்தில், எங்கிருந்தோ காற்று வீசியது. மலரில் திரண்டிருந்த தேன் வீசிய காற்றில் நறுமணத்துடன் சிதறி தேனீக்களை விருந்துக்கு அழைத்தது. நீலமலர், உயிர் கொடுத்த காற்றுக்கு நிமிர்ந்து நின்று நன்றி சொன்னது. அழகான பெண் குழந்தையுடன் கனகாவைப் பார்த்த முத்துச்சாமியின் முகத்தில் சந்தோசம் தாண்டவமாடியது. கனகா சொன்னாள், “பாயம்மா பேர் என்னன்னு கேளுங்க, குழந்தைக்கு அவங்க பேரத்தான் வைக்கனும்”. விருந்து! -மார்ச் 8, 2020 […] இந்த விசேஷத்திற்காக கரகரவென்று கடந்த மூன்று நாட்களாக பழனியப்பன் அலைந்து திரிந்து கொண்டிருந்தார். இன்று காலை பண்ணாடியின் மகன்களுக்கு மலைக் கோவிலில் காதுகுத்து. மதியம் மண்டபத்தில் கறி விருந்து. போலியோவினால் பாதிக்கப்பட்ட பத்து வயது மூத்தவனை பழனியப்பன் தோளில் சுமந்து நெஞ்சு வலிக்க மலை மீது சேர்த்தார். மதியம் மண்டபம் நிறையக் கூட்டம். மண்டபத்திற்கு முன்பு நின்றிருந்த விலை உயர்ந்த கார்கள் பண்ணாடியின் செல்வாக்கை பறைசாற்றின. பழனியப்பனுக்கு ஒரே பெருமை. அடுத்து அடுத்து வந்த வேலைகளை அசராமல் செய்து கொண்டிருந்தார். காலையிலிருந்து சாப்பிடவில்லை. பிரியாணி வாசம் மண்டபத்திற்கு வெளியேயும் வீசியது. பழனியப்பனுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. எங்காவது ஒரு இடத்தில் ஒய்ந்து உட்கார்ந்து ஒரு வாய் சாப்பிட வேண்டும் போலிருந்தது. மாலை நான்கு மணி ஆகி விட்டது. “என்றா பழனியப்பா நீ இன்னும் சாப்பிடலயா?” என பண்ணாடிச்சி கேட்டார். “இல்லை” என மெதுவாக பழனியப்பன் தலையசைத்தார். “சரி சரி வாடா.. வந்து சாப்பிடு” என மண்டபத்தின் முன்வாசலில் தரையில் இலை போட்டார். பழனியப்பனும் சம்மணம் கட்டி உட்கார்ந்து விட்டார். இலை நிறைய கறித் துண்டுகளுடன் பிரியாணி பரிமாறப்பட்டது. இவர் இது போன்ற மணம் மிகுந்த உணவை சாப்பிட்டது இல்லை. பக்கத்தில் எச்சில் இலைகள் கொட்டப்பட்டிருந்த மூங்கில் கூடையை நான்கைந்து தெரு நாய்கள் ஒரே நேரத்தில் முற்றுகை இட்டிருந்தன. இலைக்கான சண்டையில் ஒன்றின் மீது ஒன்று பாய்ந்தன. அதில் தோல்வியுற்ற நாய் ஒன்று ஊளையிட்டு கொண்டே பழனியப்பன் இலை மீது வந்து விழுந்தது. அதிர்ச்சியில் பழனியப்பன் சாப்பிடாமல் எழுந்து கொண்டார். நாய் பிரியாணியை சாப்பிட்டது. “என்றா பழனியப்பா சாப்பிடலையா?” பண்ணாடிச்சி தான் கேட்டார். “நாய் சாப்புடுற பிரியாணியை நான் சாப்பிட முடியாதும்மா” என்று சொல்லியவாறே மண்டபத்தை விட்டு பழனியப்பன் பசியுடன் நடையைக் கட்டினார். FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.