[] 1. Title Page 2. Cover 3. Table of Contents ஏதேன் நகரம் ஏதேன் நகரம்   அ.இம்ரான்   imranhak78@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - அ.இம்ரான் - imranhak78@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/athen_nagaram மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: அ.இம்ரான் - imranhak78@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Imran - imranhak78@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/athen_nagaram This Book was produced using LaTeX + Pandoc நெஞ்சில் அறையும் நெருப்புத் துண்டங்கள் -மீனாசுந்தர். தீநுண்மியின் பேரோலத்தில் சிக்கித் தவிக்கிற கொடுங் காலமிது. உயிர் வாழ்தல் என்ற நிலையிலிருந்து வழுவி உயிர் பிழைத்தல் என்ற நெருக்கடியான சூழல் நம்மை நண்டின் பற்றுக் கால்களாய்க் கவ்வியிருக்கின்றன. வீட்டிற்குள்ளேயே வலிந்து தம்மைக் கட்டுக்குள் கொண்டு வந்து அடைந்து கிடத்தல் தவமா? தண்டனையா? சொல்லத் தெரியவில்லை. நம்மில் பலரையும் அது பல்வேறு மன நெருக்கடிகளுக்கு இட்டுச் சென்றிருக்கின்றது. மது போத்தல்களை மறந்துவிட்ட மகா குடியர்களுக்கு மத்தியில் பினாயிலைக் குடித்து உயிர் மாய்க்கும் பெருங்கொடுமைகள் கொரானாவை விட அச்சமூட்டுகின்றது. இத்தனைக்கு மத்தியில் பல நற்செயல்களை சத்தமில்லாமல் சிலர் செய்து முடித்துள்ளனர். இக்காலக் கட்டத்தைப் பயனுறப் பயன்படுத்தியவர்களையும் பார்க்கிறோம். அவர்களுள் ஒருவர் தான் கவிஞர் அ.இம்ரான். வளர்ந்து வரும் இளம்படைப்பாளியாகவும் சமூக அக்கறையாளராகவும் தன்னை வரித்துக் கொண்டு நிலைநிறுத்தி வரும் நம்பிக்கை ஒளி, கவிஞர் அ. இம்ரான்.  விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு நல்ல உதாரணம் அவர். அவர் இளங்கலை படிக்கும் காலக்கட்டத்திலேயே படைப்பிலக்கியவாதியாகத் தன்னைப் புனரமைத்துக் கொண்டவர். இலக்கியச் செயல்பாடுகளில் ஆர்வமுடன் தவறாது பங்கேற்பவர். சமூக வாழ்வின் துயர்மிகு இடுக்குகளைத் தனது அறத்தின் கண்களால் கண்டு பதிவு செய்து பல்வேறு சிறுகதைகளை வார்த்து வழங்கியவர். அந்தச் சிறுகதைகளை வாசிக்கும் எவரையும் கசிய வைத்தவர்.  அப்படியோர் எழுத்து வன்மை அவரிடம் இருந்ததை நான் சில காலத்திற்கு முன்பே கண்டு கொண்டேன். ஏதேன் நகரம் வழியாக இனி நீங்களும் கண்டு கொள்வீர்கள். இம்ரான் கச்சித வார்த்தைகளுக்குச் சொந்தக்காரராக இருக்கிறார். அவரிடம் தேவையில்லாத ஊளைச் சொற்கள் ஒரு போதும் வெளிப்படுவதில்லை. அவரின் கவியாளுமையை அது பன்மடங்கு உயர்த்திப் பிடிக்கிறது. சங்கப்பாடல்களில் ஊளைச் சொற்கள் ஒன்றையும் காணவியலாது. ஒரு சொல்லை எடுத்தாலும் பாடல் நிறைவுறாதது போலிருக்கும். தமிழிலக்கியம் படித்ததாலோ என்னவோ இம்ரான் கவிதைகளில் சங்கத்தின் திரட்சியை உருவத்திலும் உள்ளடக்கத்திலும் காண நேர்கிறது. உள்ளடக்கத்தில் சம கால அரசியல் போக்கை பெரும் அனுபவஸ்தரைப் போல மிக அனாயசயமாக தேர்ந்த சொற்களில் பேசிச் செல்வது வியப்பை ஏற்படுத்துகிறது.   ஏவாள் நகரம் தொகுப்பு முழுமையும் அரசியல் தெறிப்புகள் பகடியாகவும் பதைப்புகளோடும் வெளிப்பட்டிருக்கின்றன. மிக அக்கறையாக, நுட்பமாகப் பல சமூகச் சிடுக்குகளை இளம்பிள்ளைக்கேயுரிய துணிச்சலுடன் அவர் வெளிப்படுத்துகிறார். இம்ரான் மீது மிகுந்த நம்பிக்கைத் துளிர் விடுகிறது. அவநம்பிக்கையால் துவண்டு கிடக்கும் இப்பொழுதில் இம்ரானின் நம்பிக்கை, ஆற்றல் கிளர்த்தியாகப் பரிணமிக்கிறது. இரவு ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் அனுபவத்தை மலர்த்துகிறது. வாழ்ந்தவர் வீழ்ந்தவர் அத்தனை பேரும் இரவுக்குக் கட்டுப்பட்டவர்கள். எல்லோருக்கும் ஒரே வகை இரவு என்று தான் பொதுவில் நினைத்திருக்கிறோம். ஆனால் அத்தனை பேருக்கும் அது அத்தனை இரவாகப் பரிணமித்திருப்பதை இம்ரான் கவிதை வழி உணர முடிகிறது. இரவு ஒன்று தானெனினும் ஒருவரின் இரவு மற்றவரின் இரவைப் போல இருப்பதில்லை. இம்ரானின் இரவு பொருத்தமின்மையால் படும் அவஸ்தை நம்மையும் படுத்துகிறது.  ஏதோ உணர்வின் பொருத்தமின்மையால்  கழன்றுவிட்ட தூக்கத்திற்குப் பதிலாக  எதையும் பூட்ட முடிவதில்லை  இரவின் பயணத்தில்  என்கிறார். சில நினைவுகள் நம்மை வாழ வைத்துக் கொன்று விடும். கண்ணதாசன் நினைவுத் துயரின் உச்சத்தில் தான், “நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?” என்று புலம்புகிறார். உறக்கமில்லாமல் நம்மை மனச் சஞ்சலத்திற்கு உட்படுத்தும் அந்தத் துன்பத்திற்குப் பதிலாக எதை இட்டு நம்மை நிரப்பிக் கொள்ள முடியும்? அதைத் தள்ளி தூர வைக்க முடியுமா? நாளைப் பார்த்துக் கொள்ளலாம் என்று கட்டளையிட முடியுமா? மனம் கேட்குமா? தாங்க முடியாத அவஸ்தையில் முழு இரவும் கண்விழித்து எரிச்சலுடன் தவித்துக் கிடப்பதைப் போன்ற வாதை இந்த உலகத்தில் எதுவுமில்லை. அப்படியோர் அனுபவம் உங்களுக்கு வாய்த்தால் மட்டும் தான் ஓர் இரவு எவ்வளவு நீளமானதென்று நீங்கள் கண்டு அதிர முடியும். கவிஞர், உணர்வின் பொருத்தமின்னமயால் கழன்று விட்ட தூக்கம் என்று மிக அழகான பதங்களைக் கையாள்கிறார். அந்த வாதையைக் கூடப் பெயர்த்துக் கவியாக்கியிருக்கிறார்.  இரவு என்ற தலைப்பில் இன்னும் சில கவிதைகளைத் தருகிறார். அதில் மீனின் கண்ணீரைப் போலவே இரவோடு தொலைகின்றன பல வலிகள் என்று அவர் பேசும் கவிமொழி நம்மை அசத்துகிறது. அவரவர் துக்கத்திற்கும் துயரத்திற்கும் பொருத்திப் பார்த்து அழச் செய்துவிடும் போலிருக்கிறது. ஓர் இடத்தில் இரவு பகலைத் தின்னுகிறது என்ற பதத்தில் பயன்படுத்துகிறார். அவரின் கவியாளுமையை உச்சத்திற்குக் கொண்டு  சென்ற பலவிடங்கள் அவரின் இரவுக் கவிதைகளில் புதைந்து கிடக்கின்றன. அவர் காட்சிப்படுத்தும் மற்ற இரவுகளில் நீங்களே தொலைந்து போங்கள் என்று உங்களை ஆனந்தமாய்ச் சபிக்கிறேன். பரபரப்பான விளம்பரத்தின் நடுவே முப்பது வினாடி இடைவேளை சுதந்திர தின வாழ்த்துகள்.  என்று ஒரு குறும்பா. அதில் இழையோடும் பகடியும் உண்மையான  தேசபக்தனின் வலியும் சாதாரணமாகக் கடந்து போகக் கூடியதல்ல. நாடும் நாட்டு மக்களும் எப்படிப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு சாட்டையடிப் பதிவாக இக்கவிதை விளங்குகிறது. மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்பது வழக்கு. நாட்டைப் பீடித்திருக்கும் பிணியைக் களையும் வழி தெரியாமல் மக்கள் அல்லாடுகின்றனர். தொலைக்காட்சி போன்ற தற்காலிக மயக்கத்தில் மக்கள் மூழ்கிக் கிடக்கின்றனர். அவர்களுக்குத் தொடர்கள் இடை நிற்காமல் ஓட வேண்டும். மின்சாரம் தடைபடாமல் ரசிக்க வேண்டும். நாடு எக்கேடு கெட்டால் என்ன? இதில் எங்கே அவர்களுக்குச் சுதந்திரம் பற்றிய அக்கறை வரப் போகிறது.? சும்மாவா பாடினார் பாரதிதாசன் சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே? எல்லாவற்றிற்கும் கைதட்டப் பழக்கி விட்டார்கள். கொரானோ உட்பட. மக்கள் பழகி விட்டார்கள். கவிஞன் மட்டும்  கண்ணீர் சிந்தி என்ன பயன்? வீரமரணம் என்றொரு கவிதை. படித்ததும் என்னை ஆட்டிப் படைத்தது. அதில் ஊடாடும் செய்தியும் நிகழ்வும் நம்மைப் பதைப்புக்குள்ளாக்குகிறது. புலி வாழும் குகைக்குள் எப்படி வந்தன நரிகள்? நயவஞ்சகத்தாலன்றி அவை அப்படி வர முடியுமா? பாயும் புலியின் ரத்தவாடை பதுங்கிச் சாகும் நரிகளின் ஒழுகும் எச்சிலில் வடிகிறது என்பது தீரா வேதனையல்லவா?! ஈழப் போரை நினைவுறுத்தும் இவ்வரிகளை இவ்வளவு நுட்பமாக, நயமாக இம்ரானால் எப்படி எழுத முடிந்தது?  குகைக்குள்  சுருண்டு கிடக்கின்றன நரிகள் ஒழுகும் எச்சிலில் புலிக்கறி வீச்சம். நேரிடையான விவரனை மொழியிலன்றி படிமப் பதுக்கல்கள் இது போன்ற கவிதைகளுக்குத் தேவை என்பதை இம்ரான் உணர்ந்து வைத்திருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். குகைக்குள் இருந்தாலும் நரிகள் சுருண்டு தான் கிடக்கின்றன என்ற நுண் தகவலையும் தருகிறார். புலிக்குட்டிகள் குகையை மீட்கும் காலம் வரும். அப்போது இம்ரானின் எழுது கோல் அதைக் கொண்டாட்டமாய்ப் பாடும். காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம். மரணம் சுகமல்லவா என்றொரு திரைப்பாடல். காதலின் துயர் ஒருவனை மரணத்தைக் கூடச் சுகமாக நினைக்கத் தோன்றுகிறது. அழுது அழுது கண்ணீர் வற்றி உதிரத் துளிகள் ஒழுகும் இம்ரானின் காதல் ஏன் நம்மையும் இப்படி இம்சிக்கிறது? துக்கம் என்ற தலைப்பில் ஒழுகும் உதிரத்தின் ஈரப்பசை நம் மனத்தில் பிசுக்கிறது. ஏற்கனவே வற்றி விட்டன கண்ணீர் வடிவதெல்லாம் உதிரம் மட்டும் தான்  என்பவர் அகோரப்பசியுடன் ஏதேன் நகரத்தில் நுழைகிறார். “ஏதேன் நகரம்” என்ற கவிதையில் காதலின் வலியை முற்றிலும் நமக்குள்ளும் கடத்துகிறார். மழை ஓய்ந்த கடைசியில் அகோரப் பசியோடு அலைகிறான் ஒருவன்  இந்த நாள் எனக்காக இல்லை  என்று தொடங்கும் கவிதையில் நிறைவில் தனக்காக இந்த உலகில் எதுவும் நிகழவில்லை என்பதைப் போன்ற விரக்தியை வெளிப்படுத்துகிறார். வலியை முகிழ்க்கும் இக்கவிதையில் நம்பிக்கை வறட்சியாய் தென்படும் குணத்தை இம்ரான் சற்றே மறுபரிசீலனை செய்யலாம். இந்த மழை பெய்வதும் மரம் அசைவதும் கூட எனக்காக இல்லவே இல்லை என்கிற போது ஓர் சராசரி இளைஞனாகக் காட்சி தருகிறார். கவிஞர் உணர்ச்சியின் பிரவாகமாய் வெளிப்பட்டாலும் அதிலும் ஒரு நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். ஏனெனில் எந்நிலையில் இருந்தாலும் கவிஞனை இச்சமூகம் அறங்கூற்றுவனாகவே எதிர்பார்க்கிறது. அதை கவிஞனும் நிறைவு செய்யும் கடமையிருக்கிறது. பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் நாடறிந்த ஒன்று. எந்நிலையிலும் தளர்ந்து போகாத இந்த மண்ணின் உண்மையான புதல்வர்கள் அவர்கள். அவர்களின் போராட்டம் விழலுக்கு இறைத்த நீராகி விடும் என்று சிலர் கனவு கண்டார்கள். இன்றில்லை என்றாலும் அவர்களின் வீரம் செறிந்த அறப்போர் வென்றே தீரும். ”ஜெய் ஜவான் ஜெய் கிசான்” என்ற கவிதை இத்தொகுப்பில் வரலாற்றைப் பதிவு செய்து வைத்திருக்கும் ஆவணமாகத் திகழ்கிறது. காலங்கடந்தும் இந்தக் கவிதை பேசப்படும். “நந்தனை எரித்த நெருப்பு” என்ற தலைப்பிலேயே பலவற்றையும் பேசி விடுகிறார் கவிஞர். இன்றைய நாட்டில் சிறுபான்மையினரும், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரும் அதிகார வர்க்கத்தினரால் வஞ்சிக்கப்படும் நிலையை இம்ரான் பல கவிதைகளில் பதிவு செய்கிறார். மதத்திற்கும் சாதிக்கும் அவர் தரும் வரையறை ஒரு கவிதையில் நமக்குள்  பெரும் அதிர்வை ஏற்படுத்துகிறது. இந்தக் கவிதையும் வரலாற்றின் கரை படிந்த பல பக்கங்களை நமக்கும் வேதனையோடு அள்ளித் தெளிக்கிறது. புளிய மரத்தின் ஆணிகளில் அவன் நரம்புகள் உராய்ந்து கிழிகின்றன. தண்டவாளங்களில் ஊரைக் கடக்கும் இரயில்கள் அவன் இரத்தத்தையும் இழுத்துச் செல்கின்றன. எரியும் அவன் பிண்டத்திலிருந்தே அரிவாள்கள் காய்ச்சப்பட அணைக்கப்படாமலேயே இருக்கிறது இன்னமும் நந்தனை எரித்த  நெருப்பு அணைக்கப்படாமலிருக்கும் நந்தனை எரித்த நெருப்பு என்று அணையும்? எரியும் அவன் பிண்டத்திலிருந்து காய்ச்சப்படும் அரிவாள்கள் என்று ஓயும்? காலம் தான் பதில் சொல்ல வேண்டும். கடவுள் குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டேயுள்ளன. உண்டா இல்லையா? என்று அவரவர் நோக்கத்திற்கு வரையறைகளும் தரப்படுகின்றன. ஆயினும் பக்தி சார்ந்த மரபையும் போற்றிப் பாதுகாப்பவர்களாகவே நாம் உள்ளோம். கடவுள் என்ற தலைப்பில் இம்ரான் தரும் விளக்கும் மிகவும் நடைமுறை சார்ந்ததாக உண்மையை உரத்துச் சொல்லும் விதமாக அமைந்திருக்கிறது. அறுத்தவைக்கெல்லாம் அவன் காரணமாகிறான் பொய்த்தவைக்கெல்லாம் நான்  பொறுப்பாளியாகிறேன் கடவுளின் குரலாய் வெளிப்படும் கவிதை நிகழ்நடப்புகளை அசல் தன்மையுடன் பேசுகிறது. இதில் எந்தப் பூடகமுமில்லை. மேக் இன் இந்தியா, காத்திருப்பு, அன்றாடங்களின் உணவு போன்ற கவிதைகள் கவிதை நேசர்களுக்கு நல்ல தீனி வழங்குபவை. நுகர்வுக் கலாச்சாரம் பெருகிச் செழிக்கும் காலத்தில் அன்றாடங்களின் முகங்களை அசலாக வெளிப்படுத்தும் இக்கவிதைகள் காலத்தின் சாட்சியமாய் விளங்குகின்றன. இம்ரான் சமூகத்தில் ஒரு பிரஜையாக ஏதோ வாழ்ந்தோம் என்ற சராசரியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் பொறுப்புமிக்க மானுடனாக பரிணமித்திருப்பது இளைய தலைமுறைக்கு நல்ல முன்னுதாரணம். கவிதை நூல்கள் நாளும் பெருகி வருகின்றனவென்றாலும் நிற்கும் தகுதியுள்ளவை காலத்திற்கும் நின்று வாழ்கின்றன. இவை நிற்கும் தகுதியுள்ள கவிதைகள். இன்றைய தலைமுறைக் கவிஞர்களுக்கு சிலரின் சொல்முறைமையின் பாதிப்புகள் இருப்பதைத் தவிர்ப்பதற்கில்லை. அ. இம்ரானிடம் கவிஞர் மனுஷ்யபுத்திரனின் பாதிப்புகள் நிறையவே  தெரிகின்றன. அதைப் போக போக தவிர்த்து அவருக்கென்று ஒரு புதிய வடிவத்தை அவர் விரைவில் கண்டடைவார் என்று நம்புவோம். சொற்சிக்கனம், வடிவ நேர்த்தி, உள்ளடக்கத் தேர்வில் அ. இம்ரான் பல உயரங்களைத் தொட்டிருக்கிறார். அவர் வயதில் கவிதை எழுத வந்த பலருக்கும் இந்தத்  தெளிவு இருந்திருக்குமா என்பது ஐயமே. அ. இம்ரானின் தொடக்கமே அசத்துகிறது. நாளைய இலக்கிய உலகில் அவர் கவிதைகள் உச்சம் தொடும் என்பதில் எனக்கு ஐயமில்லை. அவரை உச்சரிக்காத தமிழ் வாய்கள் இல்லை என்னுமளவிற்கு அவர் உயர்ந்து, அடர்ந்து, செழித்து வளர்வார்.  நெஞ்சார்ந்த வாழ்த்துகள், பேராசிரியர்,முனைவர் மீனாசுந்தர். அணிந்துரை கண்டடைய நிறைய இருக்கின்றன….. இம்ரானின் படைப்புகளில்… பெயருக்கு முன்னால் கவிஞர், கவிஞருக்கு முன்னால் ரத்தம் சிந்தாது வென்றெடுத்த பட்டங்கள் என ஏதும் இல்லாத ஒருவரின் எழுத்துக்களுக்குகவிதை என்று பெயர் சூட்ட ஆயிரம் முறை யோசிக்கத்தான் வேண்டியுள்ளது. கசங்கிய காகிதங்களிலும் கடந்து செல்லும் காற்றாலையிலும் புதையும் மஹாகவிகளின் வாசனை காணாமல் போவதில்லை. பழகப்பழக கவிதை வருவதில்லை.. முன் பார்த்திராத முகமாக இருந்தாலும் இரு கைகளையும்நீட்டிக் கழுத்தைக் கட்டிக் கொண்டு இறங்க மறுக்கும் குழந்தையைப் போல இம்ரானின் கழுத்தைக் கட்டிக் கொண்டு இறங்க மறுக்கிறது கவிக்குழந்தை… யாவற்றையும் போலவே கவிதையும் இயல்பாகப் பிறப்பதில்லை…. ஆனால் சிசேரியனாக இருந்தாலும் அதில் இயல்பு இல்லாமல் இருப்பதில்லை… காதல்..ஏக்கம்..புறக்கணிப்பு…சமூகம்…விடுதலையுணர்வு… புனிதங்களைச் சிதறடித்தல் எனப் பல தளங்களில் இம்ரானின் கவிதைகள் கருக்கொள்கின்றன… தேடிவரும் சொற்கள்…சாயலை நாடாத நடை…… “ஒரு பக்க முக்கோணமாய்..சாய்ந்து கிடக்கிறது நெடுஞ்சாலை”- உவமையில் புதுக்கோணம்… ஆழமாக வாசித்தால் கண்டடைய நிறையக் காத்திருக்கின்றன இம்ரானின் படைப்புகளில்…. முனைவர் F.அபுபக்கர் உதவிப் பேராசிரியர், தமிழ் துறை அரசு கலைக்கல்லூரி,உடுமலை கருத்துரை “எழுதுகோல் தெய்வம் என் எழுத்தும் தெய்வம்” என்பான் பாரதி அவை தாம் ‘ஏதேன் நகரம்’ எனும் இத்தொகுப்பை வரமாக்கியுள்ளன. சாஸ்திரி அவர்களின் ‘ஜெய் ஜவான் ஜெய் கிஸான்’ முழக்கத்தை நினைவில் நிறுத்தும் கவிதைப் புனைவு சிறப்பு. “ இடிபாடுகளுக்கிடையே பாலருந்தும் பச்சிளங் குழந்தை தாய் மண்ணையும் சேர்த்துச் சுவைக்கிறது ” இதயத்தை கணக்க வைக்கும் வரிகள். ஆதாம் ஏவாள் காலந்தொடங்கி இன்றுவரை காதல் என்பது உன்னதப் பரிணாமமாகவே காட்சியளிக்கிறது. வீணையில் ராகங்களை விதவிதமாக வாசிக்கலாம்ஆனால், மனதில் இடம் பிடித்தவருக்காக வாசிக்கப்படும் காதல் ராகம் கடைசி மூச்சு வரை ஒலிக்கும் என்பதை இக்கவிதை வரிகளில் காண முடிகின்றது. “ அந்த காதலின் கல்லறையில் காய்வது மஜ்னுவின் சதலம் மட்டுமல்ல என் மனமும் தான் ” வாழ்வின் இழந்த தருணங்களைப் பலரும் இவ்வாறு தான் கடக்கிறார்களோ????? “ நாம் கைகோர்த்து நடந்த வீதிகளில் உன் நினைவோடு உலா வந்தேன்” உயிர்ப்புள்ள வரிகள் எத்தனை இலகுவாக வெளிவருகின்றன. “ வதைப்பதில் இரம்பத்தை விடவும் குரூரமானது நினைவுகள் ” கவிதைகளை வாசிக்கும் போது அதன் நடையோடு இயல்பாய் ஒன்றிப் போக முடிகின்றது. மொத்தத்தில் உயிர்துடிப்பு… உணர்ச்சிக் கொந்தளிப்பு….… “அணைக்கப் படாமலேயே இருக்கிறது இன்னமும் நந்தனை எரித்த நெருப்பு” ஒவ்வொரு பக்கத்திலும் கவி உள்ளத்தின் நாதத்தை உணர முடிகிறது.வார்த்தைகள் ஒவ்வொன்றும் உயிருள்ள ஆன்மாவின் ஜீவ கீதங்களாக இசைக்கின்றன. ஏதேன் நகரம் என்னும் இக்கவிதைத் தொகுப்பினை உருவாக்கியுள்ள அருமை மாணவன் இம்ரான் மேன்மேலும் வளர வாழ்த்துகள். முனைவர் ம.ராஜாத்தி செல்வக்கனி 17/062021 பழனி என்னுரை நிமிர்ந்து நில் கவிதைத் தொகுப்பு,ரொமாண்டிக் குற்றம் நெடுங்கதை தற்போது ஏதேன் நகரம் கவிதைத் தொகுப்பு தொடர்ந்து பயணிக்கிறோம் என்பதே மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இன்னும் நீண்டுள்ளது பாதை…………………………… தங்களது அயராத பணிச்சுமைகளுக்கு இடையேயும் மறவாது மறுக்காது என் கவிதைகளுக்கு அணிந்துரை வழங்கிய எனது இலக்கிய ஆசான் பேராசிரியர் முனைவர் மீனா சுந்தர் அவர்களுக்கும், பேராசிரியர் முனைவர் F.அபுபக்கர் அவர்களுக்கும் முனைவர் ராஜாத்தி செல்வக்கனி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். தொடர்ந்து எனது கவிதைகளை வாசித்து ஊக்கமளிக்கும் என தருமை உயிர் நட்பூக்கள் மணிகண்டன்,முத்தரசு,போகராஜ்,எஸ்தர் கிரேஸி,செல்வராஜ் ஆகிய அனைவருக்கும் எனது பேரன்புகள். இன்ப ஊற்றுக்களாகவும்,எரிமலைக் குழம்பாகவும், பாலை வெக்கையாகவும்பரிணாமித்து உலா வரும் கவிதைக் காற்றை நிரம்ப சுவாசியுங்கள். நன்றி. சமர்ப்பணம் [இவ்வுலகை விட்டு மறைந்தாலும் உயர்ந்த இலக்குகளில் எங்களோடு வாழும்என் கவிதைகளின் தீரா ரசிகன் அன்புத் தம்பி அதிரடி அப்சர்கு………………….] எழுதுகோல் உருவாக்கவும் கருவாக்கவும் பிரசவிக்கவும் வளர்க்கவும் காதலிக்கவும் கட்டிலில் சேரவும் கழுத்தை அழுத்தி கதையை முடிக்கவும் என்னால் மட்டுமே எளிமையாக முடிகிறது காயம் காகிதங்கள் கூட காயப்படுத்தத் தொடங்கிவிட்டன உன் நினைவுகளைப் போல சுயவதை தாளின் வெற்றிடத்தை பலாத்காரம் செய்திட விரும்பவில்லை உன் நினைவுகளை இருதயத்துக்குள்ளேயே அடைத்து வைத்துள்ளேன். நிர்கதி ஊடல் கொண்டவன் குறவன் கோவணத்தோடு ஏறிவிட்டான் காதல் கண்டவன் நானோ இறங்குவதற்கு இடமேயில்லை இரவு-1 ஏதோ உணர்வின் பொருத்தமின்மையால் கழன்றுவிட்ட தூக்கத்திற்கு பதிலாக எதையும் பூட்ட முடிவதில்லை இரவின் பயணத்தில் இரவு-2 ஏதோ ஒரு சிறுதூண்டல் உன்னை நியாபகப்படுத்திவிட்டது பரந்து விரிந்த நதியில் ஜொலிக்கும் சிறு தூண்டில் புழுக்காக பாயும் மீனைப் போல உன் நினைவுகளை மீட்டிப் பார்க்கிறேன் மீனின் கண்ணீரைப் போலவே இரவோடு தொலைகின்றன பல வலிகள் # இரவு-3 இரவுக்காக பயந்து கிடந்த நிமிடங்களை விடக் கொடியது இரவுக்காக வருந்துகின்ற நொடிகள். இரவு-4 அடிவயிற்றில் ஒட்டிய ஆடையில் பட்டுத் திரும்புகிறது வெக்கை முதுகுத் தண்டில் பாயும் இரத்த ஓட்டத்தின் முனகலில் உடலெல்லாம் பரவித் தகிக்கிறது இளஞ்சுட்டுச் சிலிர்ப்பு முடியாது நீளும் இளமைக்குள் முடியாதாயென ஏங்க வைக்கின்றன இரவுகள். ஆறுதல் இதயக் கருவாக இமைகளின் நினைவாக இருவிரல் பிரசவமாக கதையில்,கவிதையில் உன்னைத் தவிர்க்க இயலாத எழுத்தென்பது தோல்வியெனினும் என் தவிப்பின் தாகம் தீர்வதில் ஆறுதலடைகிறது மனம். இருள் இருளைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும். அது இரவில் வரும் என்பதைத் தவிர  ஆனால்  நான் சொல்லுவேன். அது பகலைத் தின்பது சிறுவர்களின் துள்ளலான விளையாட்டுப் பொழுதை விழுங்கி பயத்தை கக்குவது. இளைஞர்களின் வெக்கையான தனிமையில் மேலும் நெருப்பூட்டுவது. தம்பதிகளின் தவிப்பின் வாசலை தாழிட்டு மூடிக்கொள்வது. இப்படியாக இருளுக்கு  ஆயிரம் குணங்களுண்டு அதே போல அது ஒவ்வொரு பருவத்திலும் ஏதாவதொன்றை களவாடிக் கொண்டே தான் உள்ளது கடைசியாக எனது காதலின் உயிரை திருடியது போல. புணர்ச்சி அந்த கோதுமைக் கனியின் சுவை ஈறுகளில் ஒட்டிக் கிடக்கிறது நம் காதலின் நினைவாக. மௌனம் கொஞ்சம் வார்த்தைகள் நிறைய மௌனத்தோடு உன்னிடம் அடைக்கலமாகிறது மனம் பார்வையும் மௌனமும் எவ்வளவு அர்த்தமுள்ளவையென்பதை உனர்ந்த பிறகு பேசுவதையே நிறுத்திக் கொண்டேன் நான். காதல் நட்சத்திரம் நீ என் வாழ்வின் சாபமென்கிறான் என் நண்பன் நானெப்படி அவனுக்கு புரிய வைப்பேன் நிலவைப்போல நட்சத்திரங்கள் நட்போடு பின் தொடர்வனவல்ல அவை பாதைகளற்ற கடலில் இரகசியமாக வழிசொல்லி மறைந்து விடுவனவென்று. அமைதி வலிகளை கடத்துவதில் என்ன மனிதநேயம் உள்ளது மூடிவிட்டேன் பேனாவினை. உணர்ச்சி கசாப்புக் கடைக்காரனின் இதயத்தை எந்தக் கவிஞனாவது உணர்ந்ததுண்டா அவனது இருதயத்தையும் இரத்தம்தானே கழுவிக் கொண்டுள்ளது. முதல் காதல் தூரத்து மேடையில் ஏவாளின் வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தார்கள் என் தூரிகை காதலின் முதல் விடுதலையை வர்ணித்தது. சுதந்திர தின வாழ்த்துக்கள். மதம் கலவரத்திற்கு சாதி அடக்குமுறைக்கு சட்டம்ஒடுக்குமுறைக்கு இந்தியா வாடகைக்கு. பரபரப்பான விளம்பரத்தின் நடுவே. முப்பது வினாடி இடைவேளை சுதந்திர தின வாழ்த்துக்கள். பொதுமுடக்கம் மூன்றாம் படைவீட்டில் முடங்கிய முருகுவேலைக் காண அழகுமயில் காத்திருக்கும் காட்சி எந்தப்பாணன் எழுதுவானோ இதற்கொரு ஆற்றுப்படை இமை சிறை தேசாந்திரியான என்னை ஓர் அறைக்குள் தாழிட. அவள் இமைகளால் மட்டுமே முடிந்தது கண்களின் கட்டுக்காவலில் சிறையிடப்பட்ட நான் துரதிருஷ்டவசமாய் தப்பி வந்தேன் இரு துளி கண்ணீரில் இருண்டது உலகம் தண்டிக்கப்பட்ட காதல் கடைசியாக முத்தமிட்டது அவள் கண்களில் தான் பின் என்ன ஆனது? தண்டிக்கப்பட்டது காதல். துக்கம் 1 எண்ணிக்கையில் ஒரு நட்சத்திரம் கூடி இருக்கிறது அது நீயாகத்தான் இருப்பாய் எங்கோ ஒரு மூலையில் அழுகையின் விசும்பலை நிசப்தம் விழுங்குகிறது அது உனக்காகத்தான் இருக்கும் நீ விரும்பிய பொருளில் விரும்பக்கூடிய ஒன்றை தொலைத்து விட்டாயே எங்கள் விருப்பமில்லாமல் இதயங்கள் மட்டும் அழவில்லை எழுத்துக்கள் எல்லாமும்துக்கம் அனுஷ்டித்து விட்டன நேசிக்க படாத கவிதைகள் இனி பிறந்தாலென்ன ஒழிந்தாலென்ன முழுமையாக வாசிக்கப்படாத புத்தகமொன்று எரிந்து விட்டது. அலாதி விலா எலும்புகளின் மீதான காதல் அலாதியானது அந்த காதலுக்காகவே ஆதாம் கனியைப் பறித்தார் அதே காதலுக்காகத்தான் தடங்களில்லா உலகை வலம் வந்தார் லைலாவின் மண்ணறையில் காய்ந்து போன மஜ்னுவைப் போலவே இந்த காதல் ஒவ்வொருவர் மனதிலும் ஒட்டிக் கிடக்கிறது. சுண்டிவிட்ட நாணயம் அவள் பகல் இவள் இரவு இவளிடம் பொய்கள் இல்லை. அவளிடம் வசீகரம் உண்டு. அவள் கண்கள் சிறைச்சாலை இவள் கன்னக்குழிகள் கன்னிப் பொறி. அவள் தாகத்தில் அருந்திய ஆற்று வெள்ளம் இவள் தாம்புழத்திற்கு வந்த ரோஜாவின் சாறு. அவள் தவறிப் போனவள் இவள் தேடிவந்தவள். நானோ சுண்டிவிட்ட நாணயத்தின் சுழற்சியில் மிதக்கிறேன். வீரமரணம் குகைக்குள் சுருண்டு கிடக்கின்றன நரிகள் ஒழுகும் எச்சிலில் புலிக்கறி வீச்சம். மாரத்தான் ஊர்க்குருவியை பருந்தாக்கத் துடிக்குது பாவலர் மனம் உள்ளுக்குளே பெருக்கெடுத்து சுற்றிச்சூழலுது ஆசைகள் தினம் தேரிழுக்க தெருவிருந்தும் குதிரைக்குக் கொள்ளில்லை மானும் முயலும் நரியும் சிங்கமும் ஓடும் போட்டியில் ஆமையும் வெல்லும் ஓர் தினம் . பயணம் கருவறையிலிருந்து விரட்டப்பட்ட மழலையின் நடைபோல சுருங்குகிறது என் பயணம் முன்னோக்கும் கால்களுக்கும் பின்னோக்கும் மனதிற்குமிடையே நீள்கிறது இடைவெளி நாளாமிலாச் சுரப்புகளில் நனைந்த உடலிற்கு நெற்றி முத்தம் கதகதப்பைச் செலுத்த உன் கெண்டைக் காலிலாவது என்னை கட்டிக் கொள்ளென கெஞ்சுகிறது காமமும் காதலும் கவிதையும் கடந்த உதிரமெலாம் உணர்வுகளை நிரப்பிக் கொண்ட ஒரு பைத்தியக்காரனின் உளறல். அன்றாடங்களின் உணவு எனக்கென நான் ரசிகர்களை சேர்க்கவில்லை காதலர்களையும் கூட எப்போதோ என் பேனாவைத் தொலைத்துவிட்டேன். கடிகாரத்தைக் கூட நிறுத்திவைத்துவிட்டேன் வாசலில் வந்து “அண்ணா டீ” எனக் கூவும் வடநாட்டான் தான் சூரியனின் இயக்கத்தையே நினைவூட்டுகிறான். எனது அகோர மேய்ச்சலிலிருந்து புத்தகங்கள் தப்பித்துக்கொண்டன இப்பொழுது. அன்றாடங்களுக்கு. நானே உணவு குளிரூட்டப்பட்ட அறையில் ஒரே விவாதத்தை திரும்பத் திரும்ப பேசி ஒரே வழக்கை திரும்பத் திரும்ப விவாதிக்கிறேன் எனது கண்ணாடிக் கூண்டைத் தாண்டி பேருந்தின் இரைச்சலும் காற்றின் இருமலும் தான் வந்து படிகிறது ஒரு வண்டிக் குதிரையைப் போல என் கண்களுக்கு யாராவது திரையிட்டிருக்கலாம் இல்லை மனதையாவது எந்தக் கடவுளின்கால்களிலாவது கட்டிப் போட்டிருக்கலாம் காலியான அம்புக் கூடுடன் மன்மதன் ஈனப் பார்வையை வீசுகிறான் உதிரம் வெண்மையாய் கசிந்து காய்கிறது. சிலுவையை மறுத்தவன் என் தோள்கள் மிக மெலிந்துள்ளன எனது கால்களைப் போல அவை வலுவாக இல்லை என் அன்பர் ஒருவர் அலைபேசியில் முகமனோடு உரையாடத் தொடங்கி இந்த சிலுவையைக் கொஞ்சம் சுமக்க முடியுமாவென வேண்டுகிறார் அந்த குறுகிய உரையாடலுக்குள் வலுவான என் மௌனத்தை உதிர்க்கிறேன் மீண்டும் மீண்டும் மௌனம் மறுப்பின் அடையாளமாக சிலுவை காத்து நின்றது என் குதிரை வான் நோக்கி மேலெழும்பியது. துக்கம் 2 ஏற்கனவே வற்றிவிட்டன கண்ணீர் வடிவதெல்லாம் உதிரம்மட்டுந்தான். கடத்தல் பெருங்காற்று சுமக்கும் ரோஜாவின் வாசனையைப் போல இறந்தவர்களின் நினைவு நம்மை கடந்து செல்கிறது கத்தரிக்கோல் சப்தம் காலணிகளின் உரசல் மூக்குப்பொடிவாசனையென அத்தனையையும் நரம்புக்குள் நிரப்பிக் கொள்கிறேன் நினைவுக் காட்சிகளாக மனத்திரையில் மீண்டும் மீண்டும் ஓட்டிப்பார்த்து கடத்தும் போது வார்த்தைகளும் கொஞ்சம் கண்ணீருமே மிஞ்சியிருக்கக் கூடும். எனக்காக எனக்காக யாரும் சிரிக்க வேண்டாம் அழவும் வேண்டாம் ஏனெனில் நானே எனக்காக அழுவதுமில்லை சிரிப்பதுமில்லை கண்கள் எழுதியே ஆக வேண்டுமென்று தோன்றியது உன் கண்கள் ஆகச் சிறந்த காதல் கவிதையின் தொடக்க வரி. ஏதேன் நகரம் மழை ஓய்ந்த கடைசியில் அகோரப் பசியோடு அலைகிறான் ஒருவன் மின் கம்பங்களைப் போல முளைத்துக் கிடக்கின்றன கோதுமை மரங்கள் சாத்தான் ஓய்வெடுக்கிறான். இந்த நாள் எனக்காக இல்லை கவிதைக்காக விரித்திருந்த காகிதத்தில் கருப்பு மை கொட்டிவிட்டது இந்த நாளுக்காக எத்தனை கனவுகளை வடிவமைத்திருந்தோம் என் மார்பில் விரவியிருந்த உன் கூந்தலின் குளுமையை உன் இடையில் கதகதப்பூட்டிய என் உடலின் அணைப்பை நான் நினைவுகூர்வதேயில்லை அந்த பேருந்தில் இப்பொழுதெல்லாம் சன்னல் இருக்கை காலியாகவே உள்ளது உச்சி வெயிலில் காதலர்கள் யாரும் தன் காதலியை தேடி நடப்பதில்லை காலம். அனைத்தையும் அரித்துவிட்டது நம் காதலையும் கூட இந்த நாள் வராமலேயே இருந்திருக்கலாம் இல்லை இன்றொரு நாள் மட்டும் நான் கோமாவில் இருந்திருக்கலாம் ஏனெனில் இந்த நாள் எனக்காக இல்லை இந்த மழை பெய்வதும் மரம் அசைவதும் கூட எனக்காக இல்லவே இல்லை. விதி விலக்கு உனக்கான வாழ்த்துக் கவிதையை நான் எங்கிருந்து தொடங்குவது என் தலையணைக்கடியில் சில துளி கண்ணீர் திவலைதான் மீந்திருக்கிறது காலம் தீட்டிய வெள்ளைப் பூச்சில் காயங்களும் மறைந்துவிட்டன காதல் காதல் ஒன்று தான் உனக்கான பிறந்த நாள் பரிசு அன்பே இந்த நாளில் தான் நாம் கைகோர்த்து கடலில் இறங்க திட்டமிட்டிருந்தோம் இன்று என்னிடம் உன் விரல்கள் இல்லை வாசனை மட்டுமே உள்ளது இருந்தாலென்ன நீ யாருடனோ கடலில் நீந்தத்தானே போகிறாய் எல்லா கரைகளிலும் யாரோ ஒருவர் வரவிற்காக ஒரு தீபம் எரிந்து கொண்டிருப்பது வழக்கம் விதி விலக்காய் ஒரு தீபம் எரிந்து கொண்டேயிருக்கும் உன் பயணத்திற்காக. போர்த்திக் கொண்ட இருள் ஏதோவொன்றை எழுத வேண்டுமென்று உறுத்துகிறது இப்பொழுதெல்லாம் மனுஷ்யபுத்திரனின் முகநூலை தேடுவதேயில்லை பேருந்தின் ஜன்னல்வழி எந்தப் பெண்ணையும் ரசிப்பதுமில்லை கண்ணால் பேசும் மொழியைக் கூட கைவிட்டு விட்டேன் ஆனால் இன்று உன் முகச்சாயலுடைய பெண்ணைக் கண்டேன் உன் பெயரை யாரோ உரக்க அழைக்கக் கேட்டேன் நீரைச் சுமக்கும் மேகத்தின் மடியைப் போல நெஞ்சுக்குள் பாரம் ஏறிக் கொண்டது இருளும் கூடவே.… மதம் பிடித்த மனம் உணர்வுகளின் பிளிறல்களை பாகனின் பக்குவத்தோடு கையாள்கிறேன் ஆனாலும் உன் தொடுதலுக்காய் இந்த மனம் ஏன் இப்படி மதம் பிடித்தலைகிறது காமமும் காதலும் தொடங்கும் முன்னதற்கான அந்தி இருட்டிற்குள் காணாமல் போக ஒரு கவிதையின் இறுதி வாக்கியத்திற்காக இதயத்தை கொஞ்சம் அரிந்து பார்த்தேன். குருதி பிசுபிசுக்கிறது. ஏமாற்றம் கடிகார முட்களைப் போல ஆங்காங்கே நம் நினைவுகள் சந்தித்துக் கொள்கின்றன நேற்றைய என் கனவில் சவமாகிக் கிடந்தேன் எல்லோரும் ஏதேதோ சுவாரசியமாய் கதைத்தார்கள் எப்போதும் போல என் இதயம் உன் குரலுக்காக தாழ்ந்தது தோள்கள் கூட உன் சாய்விற்காக திடமாகியது கனவிலும் நீ என்னை ஏமாற்றிவிட்டாய் உயிரற்ற வார்த்தைகளால் சவக்குழியை நோக்கி கவிதைகள் ஊர்வலம் போகின்றன. நீதி பற்றிக் கொள்ள உன் கரங்கள் இல்லாததால் ஒரு பக்க முக்கோணமாய் சாய்ந்து கிடக்கிறது நெடுஞ்சாலை. பக்கம் வந்து விலகிய வாகனமொன்றில் தப்பிப் பிழைத்து உன் நினைவினில் மோதிக்கொண்டேன் கண்கள் நடுநடுங்குகின்றன எப்போதும் நமக்காக காத்திருக்கும் பேக்கரியின் இருக்கையில் யாரோ அமர்ந்திருக்கிறார்கள். தோள் சாய்ந்து நடந்த வீதியெல்லாம் புழுதி கரைந்து செல்கிறது உன் இளஞ்சூட்டின் நியாபகம் நெஞ்சுக்குழியில் அனல் கற்றையாய் வீச்ச மெடுக்க கடந்து வந்த பாதையெங்கும் சீதையின் கருகிய சதைத் துண்டங்கள் சிதறிக்கிடக்கின்றன காதலையும் காமத்தையும் கடந்த நம் உணர்வின் கூட்டில் கல்லெறிந்தவன் யார் தீராப் பகையுடன் தேடிக் கொண்டிருக்கிறேன். எல்லா யுகங்களிலும் இராவணன் தான் வெற்றியடைகிறான். ஜெய் ஜவான் ஜெய் கிஸான் அந்த கோட்டையின் சரித்திரம் மிக நீண்டது எப்போதும்அதனுள் யாரோ சிலர் பதுங்கியிருப்பார்கள் அங்கிருந்து எத்தனை எத்தனையோ பீரங்கிகள் புறப்படும் அதன் ஒவ்வொரு செங்கல்லிலும் துரோகம் நாற்றமெடுக்கும். அடிக்கடி நடக்கும் அதன் மீதான போர் நாடகங்கள் இன்றோடு முடிவடைந்துவிட்டன இந்த யுகத்தின் மிகச் சிறந்த வீரர்களால் அது முற்றுகையிடப்பட்டாயிற்று அவர்கள் தலைகளில் விடுதலையை சூடியிருந்தார்கள் கைகளில் சுதந்திரத்தை தூக்கிப் பிடித்திருந்தார்கள் வற்றிவிட்ட அவர்களின் கண்களுக்கு கண்ணீர் புகை குண்டு வெற்று மூட்டமானது வாடி நின்ற மூவர்ணக் கொடியும் சற்றே விலகிக் கொள்ள அந்த கோட்டையின் இறுமாப்பில் பெரிய பள்ளம் அதன் உயர்ந்த கோபுரத்தில் ஒற்றை முழக்கம் ஜெய் ஜவான், ஜெய் கிஸான். [பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தின் நினைவாக] தூரம்…… வண்டுகளாய் வட்டமடிக்கின்றன சிறு கண்கள் புலியாய் துரத்தி ஓடும் வளர்ந்த மனம் புயலாய் சுழன்றலையும் எண்ண அலைகள் பூக்களாய் மானாய்,தென்றலாய் நீ தூரம் நிற்கிறாய். மரணம் என்னை முழுமையாய் ஒப்படைத்திருந்தேன் திடீரென நீ தொலைந்துவிட்டாய் என்னிடமிருந்து என்னை இனியார் விடுதலை செய்வது வெளிச்சம் குடிக்கும் இருளின் வெறுமை கொஞ்சம் கொஞ்சமாய் விழுங்க விலங்குகளிலிருந்து விடுபடவெனவே மௌனக்கோரிக்கை வைக்கிறேன் காரணங்களில்லாததால் கடவுள் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கிறார். முத்தம் எனக்கு நூறு கசையடி கொடுங்கள் கல்லால் அடியுங்கள் சிலுவையைத் தோளில் சுமத்துங்கள் ஆனால் அதற்கு முன் இயேசு மீதம் வைத்த விஸக்கோப்பையை கொண்டு வாருங்கள் இனி என் உதடுகள் அதைத் தவிர வேறெதையும் முத்தமிடாது. காய்தல் மனக்கதவுகளின் முன்னே மண்டியிட்டு ஜெபிக்கிறேன் எரிப்பதில் சூரியனை விடவும் வன்மையானது காலம் வதைப்பதில் இரம்பத்தை விடவும் குரூரமானது நினைவுகள் அந்தக் காதலின் கல்லறையில் காய்வது மஜ்னுவின் சடலம் மட்டுமல்ல என் மனமும் தான். பயம் தரும் வெளிச்சம் அங்கே இருளென்று இங்கே ஓடிவந்தேன் ஒரு தீபத்தின் சுடரை ஏகப்பட்ட விளக்குகளில் ஏற்றி வைத்திருந்தார்கள் ஏழெட்டு திசைகளில் அவை ஒளி வீசி அழைத்துக் கொண்டிருந்தன எனக்கென ஒரு வழியை நினைக்கவே பயமாய் இருக்கிறது இருளை விடவும் இந்த வெளிச்சங்கள் அதிக பதற்றத்தை உண்டாக்குகின்றன. நினைவு நாள் இன்றைய நாள் எவ்வளவு அற்புதமானது தெரியுமா உன் வீட்டைக் கடந்து சென்றேன் நாம் கைகோர்த்து நடந்த வீதிகளில் உன் நினைவோடு உலா வந்தேன் அப்படியே என் டைரியில் இதை எழுதிக் கொள்கிறேன் வருடாவருடம் நம் காதலின் நினைவு நாளில் இதைப் பற்றியும் ஒரு கவிதை எழுதுவேன். நந்தனை எரித்த நெருப்பு புளியமரத்தின் ஆணிகளில் அவன் நரம்புகள் உராய்ந்து கிழிகின்றன தண்டவாளங்களில் ஊரைக் கடக்கும் இரயில்கள் அவன் இரத்தத்தையும் இழுத்துச் செல்கின்றன எரியும் அவன் பிண்டத்திலிருந்தே அரிவாள்கள் காய்ச்சப்பட அணைக்கப்படாமலேயே இருக்கிறது இன்னமும் நந்தனை எரித்த நெருப்பு. மாற்றம் கால்கள் வளர்ந்துவிட்டன செறுப்பை மாற்றியாக வேண்டும் இராமன் நாடு திரும்புகின்றான். பிரம்ம வதம் ஒழுகும் எச்சிலிலும் கொதித்து விழும் விந்துவிலும் எத்தகைய கொலையை செய்துவிட முடியும் கரும்புக் காட்டிலும் குளிர்சாதன அறையிலும் தொடைவிரித்துக் கிடக்கின்றன கௌரவம் திணிபட்ட யோனிகள் ஒரு சவரக் கத்தியை ஒரு மண் வெட்டியை ஒரு கதிரருவாளைக் கொண்டு வாருங்கள் பிரம்மனுக்கு இனி ஒரு தலை போதும். ப்ளாஸ்டிக் மலர் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஓர் பராஅத் இரவில் என்னை அழைத்திருந்தாய் பிரிவின் சோகங்கள் வடிய வடிய அந்த இரவு இருளை கொஞ்சம் கொஞ்சமாக கழற்றியது விதியை எழுதும் இரவில் நம் கதியை உரையாடிக் கொண்டோம் இரவு ஏன் இவ்வளவு கொடூரமாக உள்ளது உச்சியேறும் பகல்களே காதலரின் சுகந்தமென்பதை யாரும் அறியர் அதற்கு பின் பல பராஅத் இரவுகளை கடந்து விட்டேன் நம் காதலின் கல்லறைக்கு இப்போது நான் அடிக்கடி செல்வதில்லை ஒரு ப்ளாஸ்டிக் மலர் கொத்தை அங்கேயே பதித்து விட்டேன். [பராஅத்- இஸ்லாமிய புனித இரவுகளில் ஒன்று] கடவுள் அறுத்தவைக்கெல்லாம் அவன் காரணமாகிறான் பொய்த்தவைக்கெல்லாம் நான் பொறுப்பாளியாகிறேன். இருவாழ் உயிரி உனக்காக நான் எதுவுமே எழுதவில்லை உன் அன்பின் சமுத்திரம் திரண்டிருக்கிறது உன்னை அணைத்துக் கொள்ளும்படியான பரந்த நெஞ்சம் என்னிடமில்லை ஒரு கோப்பை அமிர்தத்தில் சில துளி மதுச்சாறு நான் தயவு செய்து உன் கண்களின் தூண்டிலை மடக்கிக் கொள் எனக்கு இருளிலும் இரையாகவே தெரிகிறது மீன் தொட்டியே நீரைக் குடிக்கும் காலம் தோன்றிவிட்டது நான் சூரியனோடு சண்டையிடவில்லை வற்றுகிற காதலோடு தான் போராடி ஓய்ந்துவிட்டேன். இப்போது நான் இருவாழ் உயிரி. இழப்பு என் வயதை மட்டுமல்ல ஆண்டுதோறும் ஓர் உறவை இழப்பதையும் அனிச்சையாய் கடந்து போய்க் கொண்டிருக்கிறேன். அன்பின் சாயல் எல்லோருக்கும் ஒன்று போலிருப்பதில்லை என்னுடைய அன்பு உன்னிடம் இருப்பதைப் போன்று உன்னுடைய அன்பு எங்கோ ஒருவனின் முதுகில் அழுத்திக் கொண்டிருக்கிறது. விரும்பியபடியே நாம் விலகிக் கொள்வோம் அன்பு நிலைத்திருக்கட்டும். ஆதாமின் எச்சில் நான் காதலிக்கப்படும் போதெல்லாம் அச்சப்படுகிறேன். காதல் கண்களில் நுழைந்து கண்ணீரோடு வெளியேறிவிடுமென்பது இயற்கையின் விதியாயிற்றே இந்த இடைவேளையில் நடக்கும் நாடகத்திற்காகத்தான் அத்தனை எதிர்பார்ப்புகளும் கடவுள் விளங்க முடியாத உணர்ச்சிகளுக்கு முன்னமே விலக்கப்பட்ட கனியைப் படைத்து விட்டார். போதை இந்த வாழ்க்கையின் சிலுவைகள் திணற அழுத்துகின்றன.. கனவு, காமம் குடும்பம் மகிழ்ச்சியென நாலா திசையிலும் என் வறண்ட கைகளுக்கான ஆணியை எவனோ தூரத்தில் வார்க்கிறான் தோள்கள் பிளந்துவிடுவது போல வலிக்கிறது கால்களும் ஆனாலும் விளக்குகள் தேவைப்படாத சித்திரை பௌர்ணமி எத்தனை அழகு. மெல்லிய நிலவொளி அனைத்தையும் மறக்கச் செய்கிறது ஒரு பெண்ணின் கண் சிமிட்டலைப் போல. மேக் இன் இந்தியா நாங்கள் அரசாங்கத்திற்கு முழுமையாக கட்டுப்படுகிறோம் எங்கள் முகக்கவசங்களை கழட்டுவதேயில்லை ஓய்வறியாத முழக்கங்களிலிருந்து எல்லா வழிபாட்டுத் தலங்களையும் அடைத்துவிட்டோம் சோர்வு வந்தாலும் கூட பிராணவாயுவின் பயன்பாட்டை மெல்லக் குறைத்துக் கொண்டே வருகிறோம் அடுக்களையில் அரை லிட்டர் கோமியத்தைத் தயாராகவே வைத்துள்ளோம் ஜெய் ஸ்ரீ ராம் உச்சரிப்பை மனதின் மூலையில் உரக்கச் சொல்லிச் சொல்லிப் பழகுகிறோம் எங்கள் உடல்களை எரிப்பதற்கான விறகுக்கட்டைகளையும் ஏற்கனவே சேமித்துவிட்டோம் நாங்கள் அரசாங்கத்திற்கு முழுமையாக கட்டுப்படுகிறோம். மண் யுத்தம் இருள் கவ்வும் நீல வானில். பிறைதேடுகிறான் ஏவுகணைகளின் மூட்டத்திற்கு மத்தியில் புத்தாடைகளின் புதுவாசனைக்கு பதிலாக தோட்டாக்களின் சாம்பல் புழுதியை பூசிக் கொண்ட சிறுவன் அதான் ஒலித்த சில நிமிடங்களில் ஏளான் செய்யப்படுகிறது எங்கே அய்யூபி, அய்யூபி எங்கே இடிபாடுகளுக்கிடையே பாலருந்தும் பச்சிளங் குழந்தை தாய் மண்ணையும் சேர்த்து சுவைக்கிறது கொடிய நோயின் கோர தாண்டவத்திற்கு இடையே குரூர மனிதர்கள் பிணமாலையை சூடிமார்தட்ட ஓட்டப்படும் குருதியின் ஒவ்வொரு சொட்டும் ஓங்கி ஒலிக்கிறது உரிமையின்குரலாக. உயிர்கொல்லி உயிர் கொல்லி மெல்ல மெல்ல ஊர்ந்து வருகிறது. முதலில் சுவையுணர்வைப் பறிக்கிறது பின் வாசனையை… காதலின் கண்கள் இசையின் சுகந்தத்தில் அறிவை வீழ்த்துகிறது பின் மனதை ஆக்கிரமிக்கிறது இறுதியாய் உயிர் கொல்லிகள் போராடி உடலை அபகரித்து விடுகின்றன உயிரின் அத்தனை செயல்பாடுகளிலும் தன் முகத்தை ஏற்றிக் கொள்கிறது காதல். மெல்ல ஊர்ந்து வருகிறது உயிர்க் கொல்லி காதலின் எல்லா முகங்களோடும். அன்பின் முத்தம் வானம் வெறித்திருக்கிறது என் பார்வையை தூரப்பாய்ச்சுகிறேன் உன் நினைவின் நிழல் இப்போது கலங்கலாகவே நிற்கிறது நீ எப்போது திரும்புவாய் உன் காதல் தீர்ந்த பின்னா இல்லை நம் காதல் தொடங்கிய உடனா அன்பே உனக்காக எழுதிய கடிதங்கள் உனக்காகவே வாசித்த கவிதைகள் இன்னும் காத்திருக்கின்றன உன்னிடம் நான் விட்டு வந்த அன்பின் முத்தங்களோடு மட்டும் திரும்பி வா எனது புத்தகங்கள் எதுவும் எனக்கு வேண்டாம் நமது கடிகாரம் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தூய்மை மனதின் ஊற்றுக் கண் அடைத்திருக்கிறது எந்த ஞானகுருவும் என்னருகிலில்லை கவியும்,கதைகளும் வார்த்தையறுந்து விட்டன இறைவா பேரன்போடு என்னை அணைத்துக் கொள் ஜம்ஜம் ஊற்றின் பாய்ச்சலாக கழுவித் தூய்மையடையட்டும். பிரிவச்சம் இன்றோடு துக்கத்தின் கடலிலிருந்து மீண்டாகிவிட்டது நினைவுகளின் சுமைகள் கனத்துக் கிடக்கிறது கரையில் அச்சப்படுவதெல்லாம் மரணத்தைப் பற்றியல்ல பிரிவை உணர்ந்து தான். காத்திருப்பு முதிர்ந்த பனைமரம் போல மனிதர்கள் பூத்துக் குலுங்கி மறைகிறார்கள் நிழற்குடை அகற்றப்பட்ட பேருந்து நிறுத்தமாக மனம் தகிக்கிறது யாரோ ஒருவர் மரக் கன்றுடன் வருகிறார் இனி எத்தனை நாட்கள் காத்திருப்பது. துக்கம் 3 முதல் முதலாய் அவர் கரத்தில் தான் எழுதப் பழகினேன் அரபு எழுத்துக்களை நினைவின் நிழல் படம் மனதில் ததும்புகிறது கடிதங்கள் எழுதப் பழக்கிய அவருக்காக இந்த கவிதையை எழுதும்போது கண்ணீர் மையாகிறது சுருண்ட தலைமுடியும் சிவந்த உதடுகளும் சிரித்த முகமும் கனிந்த குரலும் அத்தனை வசீகரமானவை மதரஸாக்களின் விளக்கு வெளிச்சமாக மலையையும் பள்ளத்தையும் இணைத்த சுனைநீராக தேவைகளின் தேர்வுகளை தேர்ச்சி பெறச் செய்த பேரன்பரைஇந்த சிறிய வார்த்தைகளில் அடக்க முடியாது மரணம் அச்சமூட்டுகிறது கவலை நெஞ்சடைக்கிறது அவர் எங்களை பிரிந்து சென்றுவிட்டார் என்கிறோம் இல்லை அவர் நகர்த்திய தஸ்பீஹ் மணியின் மெல்லிய இசையோடு தன் காதலை அடைந்து விட்டார் அவரது பூனை உணவில்லாமல் களைப்பில்லாமல் தேடிக்கொண்டேயிருக்கிறது நாங்கள் மறந்த ஏதோவொன்றை. கொலை நிலவில் கூடு கட்டவும் நிலத்தில் கைகோர்க்கவும் காற்றில் வீடுகட்டி நீரில் வாழ்ந்து காட்டவுமாக என்னை உதிக்கச் செய்தவளை குற்றமின்றி கொலை செய்து விட்டேன் தூய அவள் உடல் வெண்மைக்காகிதத்தில் கூறான எனது நீலப்பேனாவின் தழும்புகளோடு. FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.