[] []                                                   ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்                                                    புலவர் த. கோவேந்தன்    நூல் : ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்  நூல் ஆசிரியர் : புலவர் த. கோவேந்தன் டி. லிட்    மின்னூலாக்கம் : த . தனசேகர் மின்னஞ்சல் : tkdhanasekar@gmail.com வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை: உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம். பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை. *** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம். Universal (CC0 1.0) Public Domain Dedication This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode No Copyright The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.   You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission. *** This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.   நூல் மூலம – https://ta.wikisource.org/s/8vbv நன்றி – விக்கி மூலம குழு – https://ta.wikisource.org    image source: https://commons.wikimedia.org/wiki/File:Halebid_-_Dedicated_plinth_across_the_temple_depicting_stories_of_Mahabharata,Ramayana_and_Puranas.jpg  CC-BY-SA  பொருளடக்கம் பதிப்புரை 6  1. ஐவரை மணந்தவள் 8  2. கண்ணனின் மனத்தூய்மை 10  3. கடமையா? வாய்மையா? 13  4. பெருஞ்சோறு 16  5. வீமன் எழுதிய சமையல் நூல் 17  6. எச்சில் இலை எடுத்த இறைவன் 18  7. கண்ணனும் குதிரைகளும் 21  8. கண்ணன் உதவாதது ஏன்? 23  9. தருமனின் ஆணவம் 25  10. அர்ச்சுனன் அகந்தை 27  11. எலும்பு சொன்ன இறை மந்திரம் 30  12. துரோணரின் மகள் 32  13. சகுனியின் சகேரதரர்கள் 36  14. பாஞ்சாலி ஏன் சிரித்தாள்? 39  15. கர்ணனின் இடக்கைத் தானம் 41  16. காய்ந்த விறகு ஈந்த ஈர நெஞ்சன் 42  17. உயர்ந்த வேள்வி 43  18. துரோணரும் ஆடுகளும் 45  19. சகாதேவனின் தரும நீதி 46  20. கண்ணனின் உண்மை வடிவம் 48  21. அர்ச்சுனன் அம்புக்கு அஞ்சிய தேவர்கள் 50  22. மலைபோல் குவிந்த மலர்கள் 52  23. தந்தையின் தவம் 55  24. பழத்தோலில் சுவை கண்ட பரந்தாமன் 57  25. கண்ணனின் மானம் காத்த பாஞ்சாலியின் பட்டுச்சேலை 60  26. குடிசையை எரித்த நெருப்பை கும்பிட்டு நின்ற பக்தர் 62  27. கணிகைப் பெண்ணின் பக்தி 64  28. புலையன் வீட்டில் புனிதம் கண்ட இறைவன் 65  29. கண்ணனை தாக்கிய அம்பு 66  30. கண்ணனை காட்டிக் கொடுத்த மணிகள் 68  31. வித்தையால் அழிந்த சீமாலிகன் 70  32. மலர்களால் பெண்களை மறைத்த கண்ணன் 85  33. கண்ணன் ஆடிய கூத்துக்கள் 86  34. தமிழ்ப்பெண் நப்பின்னை 87  35. தேவகியின் ஏக்கம் 89  36. பாமாவின் பக்தி 91  37. வீமனும் விரதமும் 94    பதிப்புரை மகாபாரதக் கதைகளை ஏட்டில் படித்தவர்கள் பலர். ஆனால் அக்கதைகளை ஏட்டில் படிக்காதவர்களிடையே பல வேறுபட்ட கதைகள் வழக்கில் உள்ளன. அவை ஏட்டில் இடம்பெறாத நாட்டுப்புறக் கதைகள். செவிவழிக் கதைகளாக வழங்கப்பெறும் அக்கதைகள் மூலம் பல அறநெறிகள் கற்பிக்கப்படுகின்றன. மனிதர்களின் மனங்களைப் பக்குவப்படுத்துவதற்காகவே கதைகள் பிறந்தன. அவை ஏட்டு வடிவக் கதைகளாக இருந்தாலும் செவிவழிக் கதைகளாக இருந்தாலும் நன்மை பயப்பவைகளே தவிர தீமை விளைவிப்பன அல்ல.  அபிமன்யுவின் மனைவி உத்தரையின் வயிற்றிலிருந்த கருவை அழிப்பதற்காக அசுவத்தாமன் பிரமசிரசு என்ற அம்பை ஏவினான். கண்ணன் அருளால் உத்தரையின் கரு காக்கப்பட்டது. இருப்பினும் கருவிலுள்ள குழந்தையைக் கருகச் செய்தது. கருகிய குழந்தை கரிக்கட்டையாக இறந்து பிறந்தது. பிரம்மச்சரிய விரதத்தைக் கடைப்பிடித்தவர் தொட்டால்தான் கரிக்கொட்டை உயிர்பெறும். முனிவர்கள் பலர் தொட்டனர். உயிர் பெறவில்லை. கடைசியில் கண்ணன் தொட்டான் உயிர்பெற்றது. கேபிகாஸ்திரிகளுடன் கொஞ்சிவிளையாடிய கண்ணனா பிரமச்சரிய விரதம் காத்தவன் என்ற வினா எழுகிறது. ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதை ஒன்று வினா எழுப்பி விளக்கமும் அளிக்கிறது.  பாண்டவர்கள் இராசசூய யாகம் செய்தபோது தலைமையிடத்திலிருந்த கண்ணனைக் காணாமல் தேடினர். அப்போது கண்ணன் விருந்தினர் உண்ட எச்சில் இலைகளை அள்ளிக் கொட்டும் பணியில் ஈடுபட்டிருந்தான். உலகம் பூஜிக்கும் கண்ணனுக்கு இப்பணி தேவையா என்ற கேள்வி எழுகிறது. கேள்வி எழுப்பி ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதை ஒன்று பதிலும் தருகிறது.  மகாபாரதப்போர் நடக்கும்போது பகலில் அர்ச்சுனனுக்குத் தேரோட்டியாக இருந்த கண்ணன் இரவில் குதிரைகளுக்கு உணவூட்டிப் பணிவிடை செய்தான். குதிரைகளுக்கு நீதான் பணிவிடை செய்ய வேண்டுமாஎன்றகேள்வியை அர்ச்சுனன் மூலம்எழுப்பிவிளக்கமளிக்கிறது ஏட்டில் இல்லாத இன்னொரு கதை.  பஞ்சபாண்டவர்களைச் சகுனி மூலம் சூதாடி வென்றான் துரியோதனன். அந்த நேரத்தில் சகுனியை வெல்லக் கண்ணனை அழைத்திருந்தால் இப்படிக் காடு காக்க வேண்டியநிலை வந்திருக்குமா என்ற கேள்வியைச் சகாதேவன் எழுப்புகிறான். விளக்கம் கதையில் உள்ளது.  கண்ணன் மீது அதிக ஈடுபாடுள்ளவனாகக் காட்டிக் கொண்ட அர்ச்சுனனுக்குப் பாடம் புகட்டக் கண்ணன் எண்ணினான். கண்ணன் மேல்கொண்ட பக்தியால் மகனை இரு கூறாக அறுத்த பெற்றோரையும் அறுக்கும்போது மகனின் இடக்கண்ணில் நீர் வந்ததால் ஏற்கமாட்டேன் என்று சொன்ன கண்ணனிடம் வலப்புறம்தானே உனக்குக் காணிக்கையாகிறது: இடப்புறத்துக்கு அந்தப்பாக்கியம் இல்லையே என்று இடதுகண் அழுவதாகப்பெற்றோர் கூறுகின்ற கதைஇந்நூலில் இடம்பெறுகிறது.  துரோணருக்கு அகவத்தாமன் என்ற மகன் மட்டுமல்ல சாந்தா என்ற மகளும் இருந்ததாகவும் துரோணரின் சாதிவெறி அகந்தை அம்மகளால் அழிந்ததென்றும் ஒரு நாடோடிக்கதை கூறுகிறது.  துரியோதனனுடன் பிறந்தவர் நூறுபேர். சகுனியுடன் பிறந்தவரும் நூறுபேர். வணங்கா முடியான துரியோதனனால் நூறு மாமன்மாருக்கும் மரியாதை செலுத்த முடியவில்லை. அதனால் அவர்களைச் சிறையில் அடைத்து ஆளுக்கு ஒருபருக்கைச்சோறு உணவாகக்கொடுத்தான். சகுனி நூறுபேரின் பருக்கைச் சோறும் உண்டு உயிர் பெற்றான். மற்றவர்கள் இறந்தனர். துரியோதனனைப்பழிவாங்கவே கைவரிசையைக் காட்டினான் என்ற கதை இந்நூலில் இடம்பெறுகிறது.  விதுரனின் மனைவி கொடுத்த பழத்தோலைக் கண்ணன் ஏன் உண்டான்? பாஞ்சாலியின் பட்டுச்சேலைகண்ணனின் மானத்தை எப்படிக் காத்தது? கண்ணன் வெண்ணெய் திருடும்போது கையும் களவுமாகப் பிடிப்பதற்காக உறியில் கட்டிவைத்த மணி கண்ணன் வெண்ணெய் திருடும்போது ஒலிக்காமல், வெண்ணையைவாயில் வைக்கும்போது ஏன் ஒலித்தது என்பன போன்ற பல சம்பவங்கள் அடங்கிய ஏட்டில் இல்லாத கதைகள் இந்நூலில் அடங்கியுள்ளன.  இக்கதைகளைப் புலவர் த. கோவேந்தன் தொகுத்துள்ளார். அவருடைய முயற்சி பாராட்டுக்குரியது. இந்நூலை வெளியிட்டு வாசகர்களின் பேராதரவைப் பெரிதும் நாடுகிறோம்.      1. ஐவரை மணந்தவள் அஞ்சு குடிக்கு ஒரு சந்ததி. ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையள், பிஞ்சாய்ப் பழுத்தாள் என்று வைணவ உலகம் வாய்வெருவிப் பாராட்டும் பெருமை பெற்றவள் ஆண்டாள் நாச்சியார். பரமனுக்குப் பாமாலையும் பூமாலையும் பாடியும் சூடியும் கொடுத்த பைந்தமிழ்ச்செல்வி.  தமிழ்மொழியில் "கோதை தமிழ்" என்ற ஒரு தனிப்பிரிவைத் தந்த தாய்.  தாய் வயிற்றில் பிறக்காமல் தண்டுழாய் அடியில் தோன்றிய சகலகாவல்லி.  வடபெருங்கோயிலுடையான் குடி கொண்ட ஸ்ரீவில்லிபுத்துருக்குக் "கோதை பிறந்த ஊர்" என்ற தனிப் பெயரைத் தந்த தமிழ்ப் பெருமாட்டி ஒருமுறை பஞ்சவர் தேவி பாஞ்சாலியைச் சத்திக்க நேர்ந்தது. துவாபர யுகத்து ஆயர்பாடிக் கண்ணனது திருவிளையாடல்களைப் பாஞ்சாலி பேசினாள்.  கலியுகத்துத் தமர் உகந்த உருவமாய் ஊர்தோறும் குடிகொண்டுள்ள இறைவன் சிறப்பை ஆண்டாள் பேசினாள்.  நெடுநேரம் இருவரும் இறைவன் கல்யாண குணங்களில் ஈடுபட்டுப் பேசி மகிழ்ந்திருக்கையில், பாஞ்சாலியை நோக்கி ஆண்டாள் "நீ ஐவருக்குத் தேவியாய் எப்படி வாழ்ந்தாய்?" என்று கேட்டாள்.  ஆண்டாளின் கேள்வியால் பாஞ்சாலி மனம் சற்றே புண்பட்டது.  "கோதாதேவியே! ஐவருக்குத்தேவி என்று என்னை அலட்சியப்படுத்தினாய் அல்லவா? என்னைப் போல் நீயும் ஐவருக்குத் தேவியாவாய்!" என்று கூறிவிட்டுச் சென்று விட்டாள் பாஞ்சாலி.  கோதாதேவி, இறைவனை நாயகனாகப் பெறுவதற்குப் பாவை நோன்பு நோற்பவள். பாஞ்சாலி அந்த இறைவன் பால் பக்தி பூண்டவள். அவள் வாக்கைப் பொய்யாக்கி விடக்கூடாதே!  "கண்ணன், வீடுமர் செய்த குளுரையைக் காக்கத் தன் சூளுரையை விடுத்துப் போரில் ஆயுதம் எடுத்தவன் ஆயிற்றே! அவனைப் போல், பக்தர் சொல்லைப் பொய்யாக்காமல் மெய்யாக்குவதே. நாம் அவனுக்குத் தகுதியானவள் என்பதை காட்டும்" என்று முடிவு செய்தாள் ஆண்டாள்.  பாஞ்சாலி சொல் பழுதாகலாகாது என்பதற்காகவே அரங்கன், வடபத்ரசாயி, வடமலைவாளன் (வேங்கடநாதன்), சோலைமலை அழகன், செண்டலங்காரன் ஆகிய ஐவர் அர்ச்சாமூர்த்திகளை நோன்பு நோற்று மணவாளராக அடைந்தாள் ஆண்டாள்.  பக்தர்க்காக எதையும் சாதிக்க வேண்டும் என்ற கோதையின் பெருங்குணம் இதனால் தெரிகின்றது அன்றோ?  "சீவல மாறன் கதை" என்ற காவியம் இச்செய்தியைக் குறிப்பிடுகின்றது.  ஆண்டாள் பிள்ளைத்தமிழ் என்ற நூலும் இச் செய்தியை நான்கு பாடல்களில் குறிக்கின்றது.    "அரங்கன் முதல் பாரில் ஐவரை எய்துவான். ஐந்துவயதில் பிஞ்சாய்ப் பழுத்த பெண் அமுதம்" "தென்அரங் கேசன்முதல் ஐவரும் குடிபுகச் சிற்றிலை இழைத்தருள்கவே!" "தென்னரங் கேசன்முதல் ஐவரும் விருந்து உண்ணச் சிறுசோறு இழைத்தருள்கவே!" அரங்கேசன்முதலாம் முதல் ஐவரும் மகிழவே பாமாலைஅருளும் புத்தூர் மடந்தை"  என்பன பிள்ளைத்தமிழில் வரும் இடங்கள்.  ஆண்டாள் வரலாற்றில் இடம் பெறாத இச்செய்தி, நாட்டில் வழங்கி வரும் செவிவழிச் செய்தியே யாகும்.  2. கண்ணனின் மனத்தூய்மை   பாரதப் போர் முடிந்தது. வீமன் கதையினால் (கதாயுதம்) அடியுண்டு துரியோதனன் குற்றுயிராகக் கிடந்தான். அகிலமெல்லாம் ஆணை செலுத்திய அரசன். அனாதையாகக் கிடக்கக் கண்ட அசுவத்தாமன் மனம் வருந்தினான்.  "உன்னை அழித்தவர்களை இன்று இரவுக்குள் வேரோடு அழித்து, அவர்கள் தலையை உன் காலடியில் காணிக்கையாக வைக்கின்றேன்" என்று சபதம் செய்தான் அசுவத்தாமன்.  இதனை அறிந்த கண்ணன், பாசறையில் இருந்த பாண்டவர்களை வேறிடத்துக்கு அழைத்துச் சென்று விட்டான்.  பாண்டவர்களைக் கொல்லப் பாசறையுட் புகுந்த அசுவத்தாமன், பாஞ்சாலியின் புதல்வர்களைப் பாண்டவர் என்று கருதி, அவர்கள் தலையை அறுத்து விட்டான்.  போரில் வெற்றி பெற்றும் தங்களுக்குப் பின் நாட்டை ஆள்வதற்கு இருந்த வாரிசுகளும் இறந்துவிட்டனரே என்று தருமர் கவலையுற்றார்.  அபிமன்யுவின் மனைவி உத்தரை கருவுற்றிருந்தாள். அவள் நல்லமுறையில் குழந்தை பெற்றால், வாரிசு இல்லை என்ற கவலை தீரும் என நம்பினார் தருமர்.    "இடிஇடித்திடு சிகரிகள் ஆம்என எறிமருச்சுதன் முதல்இக லோர்தலை துடிதுடித்திட அவர்அவர் சேனைகள் துணிப டப்பொருது எழுபுவி நீபெற விடிவ தற்குமுன் வருகுவென் யான்"  என்ற சபதப்படி உத்தரையின் கருவையும் அழிப்பதற்குப் பிரமசிரசு என்ற அம்பை ஏவினான் அசுவத்தாமன். கண்ணன் கருணையால் உத்தரையின் கரு காக்கப்பட்டது. ஆயினும் அந்த அம்பு, கருவிலுள்ள சிசுவைக் கருகச் செய்துவிட்டது.  உரிய காலத்தில் உத்தரை குழந்தை பெற்றாள். குழந்தை இறந்தே பிறந்தது. கரிக்கட்டைதான் பிறந்தது.  உத்தரையின் கருவும் அழிந்தது கண்ட பாண்டவர் கதறி அழுதனர். குழத்தை உயிர் பெற்றுவிடும் என்று கண்ணன் ஆறுதல் கூறினான்.  கரிக்கட்டை உயிர்பெறப்போகும் அதிசயத்தைக் காணப் பராசர், வியாசர் முதலிய முனிவர்களும் மற்றும் பலரும் திரண்டனர்.  "பிரம்மசரிய விரதத்தைச் சிறிதும் நழுவாமல் கடைப்பிடித்தவர் யாராவது தொட்டால், கணிக்கட்டை உயிர்பெறும்" என்று கண்ணன் கூறினான்.  பிரம்மசரிய விரதத்தில் தங்களை விஞ்சியவர் யாரும் இருக்க இயலாது என்று இறுமாந்திருந்த முனிவர் பலரும் ஒவ்வொருவராகக் கரிக்கட்டையைத் தொட்டனர்.ஆனல் குழந்தை உயிர்பெறவில்லை.  "கண்ணன் கூறியது விளையாட்டுப்பேச்சே! இவ்வளவு பெரிய மகாத்மாக்கள் தொட்டும் குழந்தை உயிர் பெறவில்லையே! என்று பலரும் எண்ணினர்.  "நான் அக்கரிக்கட்டையைத் தொடுகின்றேன். ஒருவேளை, குழந்தை உயிர் பெற்றாலும் பெறலாம் என்று கண்ணன் கூறினன்.  கண்ணன் பேச்சைக் கேட்டு முனிவர் அனைவரும் சிரித்தனர்.  "கண்ணா! தாங்கள் நெடுங்காலம் காட்டிலே தவம் செய்தவர்கள். பந்தபாசங்களை விட்டவர்கள், பிரம்மசரியத்தை உயிரினும் மேலாக மதித்தவர்கள். நாங்கள் தொட்டே உயிர் வராதபோது, நீ தொட்டால் உயிர் பெறுமா?  "உனக்கு எட்டுப் பட்டத்து அரசிகள் பதினாறு ஆயிரம் ஆயர் மங்கையருடன் ராசக்கிரீடை செய்தவன். உன் வாழ்வில் ஒழுக்கம் சிறிதேனும் கடைப்பிடித்தது உண்டா?" என்று கண்ணனை ஏளனம் செய்தனர்.  நான் தொடுவதால் உருவாக்கும் நட்டம் இல்லையே என்று கூறிக்கொன்டே கண்ணன் கரிக்கட்டையை தொட்டான்.  என்ன வியப்பு கரிக்கட்டை குழந்தையாகி அழுதது.  இதை கண்ட பாண்டவர்கள் பரசவமடைந்து பரந்தாமனை பாராட்டினர். முனிவர்கள் நானந்தால் தலைகுனிந்தனர்.  முனிவர்களின் ஐயத்தைப் போக்குவதற்காகக் கண்ணன், "முனியுங்கவர்களே! நீங்கள் தவத்தால் சிறந்தவர்கள் தாம்! பிரம்மசரியத்தைக் கடுமையாகக் கடைப்பிடித்ததும் உண்மையே!  ஆனால் உங்கள் உள்மனம் சில சமயங்களில் காமத்தால் பேதலித்தது. உள்ளத்தால் பொய்த்து ஒழுகினீர்கள்.  "நான் பல்லாயிரம் ஆயர் மங்கையரோடு உறவாடியது உண்மை. உலகோர் கண்ணுக்கு நான் போக புருடனாகத் தோன்றினாலும் என் மனம் மாசற்று விளங்கியது. இக்கரிக்கட்டை உயிர் பெற்றதே அதற்குச் சான்று" என்று விளக்கினான் கண்ணன்.  "நான் பகவத் கீதையில் ஸ்திதப் பிரக்ஞன் உலக போகத்தில் ஈடுபட நேர்ந்தாலும் தாமரையிலையில் தண்ணீர் ஒட்டாமல் இருப்பதுபோல் பற்றற்றுப் பந்தப்படாமல் வேண்டும்" என்றேன். சொன்னது மட்டும் அல்ல, சொன்னபடி வாழ்ந்தேன்  என்று கண்ணன் திருவாய்மலர்ந்தமை கேட்ட அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.  3. கடமையா? வாய்மையா? பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசமும் ஓர் ஆண்டு காந்துறையும் அஞ்ஞாத வாசமும் முடித்துக் கொண்டு வெளிப்பட்டனர்.  துரியோதனன் சொன்னபடி நாடுதர மறுத்துவிட்டமையால், போர் தடுக்க முடியாததாகி விட்டது.  இருதரப்பினரும் போருக்குப் படை திரட்டலாயினர். பாண்டவர் உயலாவியம் என்னுமிடத்திலிருந்து படை திரட்டினர்.  பாண்டவர் தந்தை பாண்டு மன்னனுக்கு இரு மனைவியர். மூத்தவள் குந்தி. அவளுக்குத் தர்மன், வீமன், அர்ச்சுனன் என மூவர் புதல்வர். இரண்டாம் மனைவி மாத்திரி. அவளுக்கு நகுலன், சகாதேவன் என இரு புதல்வர்.  மாத்திரியின் உடன் பிறந்தவன் சல்லியன். அவன் பேராற்றல் படைத்தவன். வில்லாண்மையாலும் வாளாண்மையாலும் வேலாண்மையாலும் அவனை யாரும் வெல்ல இயலாது.  அந்தச் சல்லியன், தன் மருமக்களுக்கு உதவுவதற்காக உபலாவியம் நோக்கித் தன் பெரும்படைகளுடன் வந்து கொண்டிருந்தான்.  இச்செய்தி அறிந்த துரியோதனன், எப்படியாவது சல்லியனைத் தனக்கு உதவியாக்கிக் கொள்ளுதல் வேண்டும் என்று எண்ணினான்.  சல்லியன் நெடுந்தூரம் வந்தமையால், அவனும் அவன் படைகளும் சோர்ந்து போயினர். நடுவில் பெரிய பாலை நிலம் குறுக்கிவிடது. ஒரே வெய்யில் வெப்பக்காற்று வேறு புழுதிப்புயல் கண்ணை மறைத்தது.  படைவீரர் தாகத்தாலும் பசியரலும் துடிக்கலாயினர். நா உலர்ந்து நடைதளர்ந்தனர். நிழலே அருகில் தென்படவில்லை.தன் படைகள் சோர்ந்து போவது கண்டு, சல்லியன் வேதனையுற்றான். இன்னும் பாலை எவ்வளவு தூரம் உள்ளதென்றே தெரியவில்லை.  எப்படியோ மேலும் சிறிது தூரம் முன்னேறினான். என்ன அதிசயம் வழியில் ஒரு பெரிய பந்தல் தென்பட்டது. அளவு கடந்த தன் படைகளுடன் தங்குவதற்கு ஏற்றபடி விசாலமாக அந்தப் பந்தல் இருந்தது. சிலர் வந்து சல்லியனையும் அவன் படைவீரரையும் முகமன் கூறிப் பந்தலுக்குள் அழைத்துச் சென்றனர்.  முதலில் தாகத்துக்கு இளநீரும், மோரும் தந்தனர். யானைகளுக்கும் குதிரைகளுக்கும் தண்ணீரும் கரும்பும் அறுகம் புல்லும் குவிக்கப்பட்டிருந்தன.  சற்றுநேரத்தில் அறுசுவையுண்டி பரிமாறப்பட்டன. அனைவரும் உணவருந்திக் குளிர் நிழலில் இளைப்பாறினர்.  நடுப்பாலையிலே நண்பகலிலே கிடைத்த விருந்து உபசாரம் கண்ட சல்லியன் வியப்பாலும் மகிழ்வாலும் பரவசமானான்.  இத்தகைய அறச்செயலைக் காலத்தினால் செய்த அறவோன் யார்? அவன் எதன் பொருட்டு இந்த அறச்செயலை மேற் கொண்டான்? என்று சல்லியன் சிந்தனையில் ஆழ்ந்தான். அந்த அறவோளை அவன் மனமும் வாயும், வாழ்த்திக் கொண்டே இருந்தது.  “இந்த அறச்செயல் செய்த அறவோனுக்கு என் உடல், பொருள். ஆவி அனைத்தும் உதவினாலும் கைம்மாறு ஆகாது!” என்று அவன் வாய் அவனை அறியாமல் உரக்கக் கூறிவிட்டது.  உடனே அதுகாறும் மறைந்திருந்த துரியோதனன், சல்லி யனுக்கு முன்னே நின்றான்.  “மாமா! தங்கள் மருமகனாகிய நானே தங்களை உபசரிக்கும் இப்பேறு பெற்றேன். தாங்கள் தங்கள் உடல், பொருள், ஆவியும் எனக்கே தருவேன் என்றீர்கள் அல்லவா? வரப்போகும் போரில் எனக்குத் துணையாக நின்றால், அந்த உதவியே போதும். அதுவே நான் எதிர்பார்க்கும் கைம்மாறு” என்றான் துரியோதனன்.  விருந்துண்ட மகிழ்ச்சியில் தன்னை மறந்து கூறிய சொல், சல்லியனது கடமைக்கு மாறாக அமைந்துவிட்டதே!  மருமக்களுக்கு உதவுவதே மாமன் கடமை. இப்போது அக்கடமையைச் செய்ய முடியாமல், தன் வாய்மை தடுத்துவிட்டதே  கடமையா வாய்மையா என்ற பட்டிமண்டபம் நெடுநேரம் சல்லியன் மனத்தில் நிகழ்ந்தது. வாய்மையே பெரிது என்று அவன் மனம் தீர்ப்பளித்து விட்டது.  தன் பெரும் படையுடன் துரியோதனனுக்குப் போரில் உதவி செய்ய அத்தினபுரம் நோக்கிப் புறப்பட்டு விட்டான். போரில் துரியோதனனுக்காகவே தன் உயிரையும் கொடுத்தான்.  சல்லியன் வாய்மை காத்த செயல்கண்டு உலகமே போற்றியது. மருமகன் தருமன் முதலியோரும் தங்களுக்கு எதிராகப் போரிட்ட அவனை வெறுக்கவில்லை அவளைக் கொண்டாடவே செய்தனர். இந்த வரலாறு ஒரே செய்யுளில் வில்லிபுத்தூரார் சுருக்கமாகக் காட்டியுள்ளார்.  "இடைப்படு நெறியில் வைகும் இவனது வரவு கேட்டுத் தொடைப்படு தும்பை மாலைச் சுயோதனன் சூழ்ச்சி யாக மடைப்படு விதியிற் செய்த விருந்தினால் மருண்டு, அவற்கே படைப்படு சேனை யோடும் படைத்துணை ஆயி னானே"  என்பதே அப்பாடல்.    4. பெருஞ்சோறு பாரதப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. இருதரப்பிலும் பல்லாயிரம் உயிர் துறக்கின்றனர். காயம் பட்ட பலர், தாகத்தால் துடிக்கின்றனர். மற்றும் பலர் போர்க்களத்தில் உணவில்லாமல் உலர்கின்றனர்.  இக்கொடுமை கண்டான் தமிழ் மன்னன் ஒருவன்.அவர் பெயர் உதியஞ்சேரலாதன். போர்வீரர் துயருறுவதைக் கண்டு, அவர்களுக்கு உதவி செய்யுமாறு அவன் அருள் உள்ளம் உந்தியது.  தாகம் என்றவர்க்குத் தண்ணீரும் பசித்தவர்க்கு உணவும் தொடர்ந்து வழங்க ஏற்பாடு செய்தான். இன்னர் இனியார் என்னாமல் இருதரப்பினர்க்கும் உதவி செய்தான்.  அவன் செய்த உதவியால், பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றான்.  முதற்சங்கத்துப் புலவராகிய முரஞ்சியூர் முடிநாகராயர் என்பார் அவனைப் பாராட்டிப் பாடினார்.   “அலங்குளைப் புரவி ஐவரொடு சிணைஇ நிலம் தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை ஈரைம் பதின்மரும் பொருது களத்துஒழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்”  என்பதே அப்பாடல்.  இங்கே கண்ட செய்தி எக்காவியத்திலும் இடம் பெறாமல் தமிழ்நாட்டில் மட்டும் வழங்கி வந்துள்ளது. இதே செய்தியைச் சிலம்பும் பெரும்பாணாற்றுப்படையும் கலித்தொகையும் குறிப்பிடுகின்றன.    5. வீமன் எழுதிய சமையல் நூல்   பத்துப்பாட்டு என்ற சங்கப்பாடல் தொகுதியுள் ஒன்று சிறுபாணாற்றுப் படை அதனுள் வீமசேனன் சமையல் சாத்திரம் ஒன்று படைத்தான் என்ற செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.  “காஎரி ஊட்டிய கவர்கணைத் தூணிப் பூவிரி கச்சைப் புகழோன் தன்மூன் பனிவரை மார்பன் பயந்த நுண்பொருட் பனுவலின் வழாஅப் பல்வேறு அடிசில்”                           - (238-242)  என்ற பாடற்பகுதி அது.  “காண்டவ வனத்தில் எரியூட்டியவனும் பகைவர் உயிரைக் கவர்கின்ற அம்பறாத் தூணியினனும் அழகு விரிந்த கச்சை அணிந்தவனும் ஆகிய புகழையுடைய அருச்சுனனுக்கு அண்ணனாகிய விமசேனன் நுண்ணிய பொருளமையச் செய்த மடைநூலினின்று மாறுபடாமல் சமைத்த பலவகை உணவு" என்பது அந்த அடிகளின் பொருள்.  பீமன் செய்த சமையல் இருந்ததாக வடநாட்டுக் காப்பியங்கள் குறிப்பிடவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் இச்செய்தி வழங்கி வந்துள்ளது. இந்த நூல் வழங்கியமையால் தான் உருசியான சமையலை இன்றும் வீமபாகம் என்கின்றோம்.  படைநூல் கற்றவன் மடைநூல் ஆசிரியன் ஆனான் என்பது வியப்புத்தானே!  6. எச்சில் இலை எடுத்த இறைவன் பாண்டவர்கள் இராசசூய யாகம் செய்தனர். பல நாட்டு அரசர்களும் விருந்தினராக வந்திருந்தனர்.  “சபையில் முதலில் பூசிக்கத் தகுதியுடையவர் யார்?” என்று ஒரு வினா எழுந்தது.  பலகலை வல்லவனான சகாதேவன் எழுந்து, “ஆன்றோர்களே அரசர்களே”  "இவ்வுலகம் எவருடைய வடிவம்? வேள்விகள் யாருடைய உருவம்? அப்படிப்பட்டவனே முதல் பூசை பெறத் தகுதியுடையவன் ஆவான்"  “அத்தகையவன் நம்மிடையேயுள்ள கண்ணனைத் தவிர வேறு யாரும் இலர். அவருக்கே பூசை செய்வோம். அப்படிச் செய்தால், எல்லா உயிர்களுக்கும் செய்ததாகும்” என்றான்.  அவன் சொல்லியதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். சிசுபாலன் என்பவன் மட்டும் எதிர்த்தான்.  அவன் எதிர்ப்பைக் கண்டு சினந்த அரசர் பலர் அவனைக் கொல்ல எழுந்தனர்.  நிலைமை கொந்தளிப்பானதை அறிந்த கண்ணன், தன் சக்கரத்தால் சிசுபாலனை அழித்தார்.  பின்னர், சகாதேவன் சொல்லியபடியே கண்ணனுக்கு முதல் பூசை செய்தனர்.  கண்ணன் ஓர் இரத்தின சிம்மாதனத்தில் அமர்ந்த காட்சி அனைவருடைய கண்களுக்கும் விருந்தானது.  இராசசூய வேள்வியின் பிறி செயல்களில் அனைவரும் ஈடுபட்டிருந்தனர். ஒருபுறம் பல்லாயிரவருக்கு விருந்து நடந்துகொண்டிருந்தது.  இரத்தின சிம்மாதனத்தில் வீற்றிருந்த கண்ணனைக் காணவில்லை. முதல் பூசை பெற்ற கண்ணன் எங்கே! என்று எல்லோரும் தேடலாயினர்.  நெடுநேரம் எங்கெல்லாம் தேடியும் கண்ணன் தென்படவே இல்லை.  இறுதியில் விருந்து நடந்து முடிந்த இடத்தில் கண்ணன் தென்பட்டான். விருந்தினர் உண்ட எச்சில் இலைகளை அள்ளி அப்பாற் கொட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தான். முதற்பூசை பெற்ற பரம்பொருள் எச்சில் இலை எடுப்பதா என்று எல்லோரும் வியந்தனர்.  “கண்ணா! எச்சில் இலை எடுக்க எத்தனையோ பேர் உள்ளனரே! நீ வந்து எடுக்கலாமா? முதற்பூசை பெற்ற உன்னை எச்சில் இலை எடுக்க அனுமதிப்பது அவமதிப்பது ஆகாதா! உடனே நிறுத்து. எச்சில்பட்ட உடைகளை மாற்றிக் கொண்டு, சிம்மாதனத்திலிருந்து திருக்காட்சி தரவேண்டும்” என்று வேண்டிக் கொண்டனர்.  “எச்சில் இலை எடுப்பது இழிவான செயலா?” ஏவலர் எடுக்கும்போது அக்கறையில்லாமல், இங்கும் அங்கும் ஒழுக விட்டுத் தரையைச் சேறாக்குகின்றனர். அவ்வாறு செய்தால் மறுபந்திக்கு இடையூறு நேராதா! ஆதலால், எச்சில் இலையை எவ்வாறு சிந்தாமல் சிதறாமல் எடுப்பது என்று ஏவலர்க்குச் செய்து காட்டினேன். சொல்லிக்காட்டுவதைவிடச் செய்து காட்டுவதே மிகப் பயனுடையதல்லவா?  “அதுமட்டுமா? தொழிலில் ஏற்றத்தாழ்வு உண்டா? முதல் பூசை பெறுவதும் ஒரு தொழில் தான், எச்சில் இலை எடுப்பதும் ஒரு தொழில் தான். இரண்டுள்ளும் வேறுபாடு காண்பவன் மூடன். முதல் பூசை பெற்ற நான், எச்சில் இலை எடுப்பதை இழிவாகக் கருதுவேனானால் பெற்ற முதல்பூசை தகுதிக்காகப் பெற்றதாகுமா? பகட்டுக்காகப் பெற்றதாகத் தானே இருக்கும்” என்றான் கண்ணன்.   கண்ணன் செயலும் வாக்கும் அவன் கூறியருளிய பகவத் கீதையின் சாரமாக அமைந்தது என்று ஞானிகளாகிய சகாதேவன் முதலியோர் பாராட்டினர்.  கண்ணனுக்கு முதல்பூசை தந்தது எவ்வளவு தகுதியானது என்று எண்ணி எண்ணி இன்புற்றனர்.  இதைப்போன்ற ஒரு நிகழ்ச்சி காந்தியடிகள் வாழ்விலும் நிகழ்ந்துள்ளது. அதை இங்கு ஒப்பிட்டுக் காண்பது பயனுடையதாக இருக்கும்.  அடிகள் தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராகச் சத்தியாக்கிரகம் என்னும் புதுமுறைப் போர் நிகழ்த்தி ஓரளவு வெற்றி கண்டு இந்தியர்க்குச் சில உரிமைகளைப் பெற்றுத் தந்துவிட்டு நம்நாட்டுக்கு மீண்டார்.  அவர்தம் செயற்கரிய செயல்கண்டு நம்நாட்டு மக்கள் மகாத்மா என்று பாராட்டினர். கண்ணபிரானின் மறு அவதாரம் என்று கொண்டாடினர்.  அடிகள் இந்தியா வந்த சமயம் காங்கிரசு மாநாடு நடந்தது. மாநாட்டில் காந்தியடிகளுக்கு அளவில்லாத பாராட்டும் மரியாதையும் தரப்பட்டன. தலைவர்கள் அனைவரும் அண்ணலின் ஆலோசனைப்படி நடப்போம் என்று உறுதி மொழி எடுத்தனர்.  மாநாடு தொடங்கியது. தலைவர் பலர் பேசினர். காந்தியடிகள் பேசவேண்டிய முறை வந்தது. காந்தியடிகள் எங்கே? மேடையில் காணோம். எங்கும் தேடலாயினர். தென்படவே இல்லை.  இறுதியில் கழிப்பிடப்பகுதியில் கையில் வாளியும் விளக்குமாறும் வைத்துக் கொண்டு கழிப்பிடத்து அழுக்குமலம் அள்ளி அள்ளித் தூரத்தே கொட்டிக் கொண்டிருக்கக் கண்டனர்.  "ஐயோ! இது என்ன காரியம் செய்கின்றீர்கள் மகாத்மா ஆகிய நீங்கள் கண் காட்டினால் கணக்கில்லாதவர் காரியம் செய்யக் காத்துள்ளனரே! நீங்கள் மேடையில் பேசவேண்டிய நேரம் வந்துவிட்டது. உடனே குளித்து உடை மாற்றிக் கொண்டு வாருங்கள். தாங்கள் இக்காரியம் செய்கின்றோம்" என்று ஆளுக்கொரு வாளியும் விளக்குமாறும் எடுத்துக் கொண்டு தலைவர்கள் தாரியத்தில் இறங்கினர்.  "கழிப்பிடப் பகுதியைப் பார்த்தேன். பொதுமக்கள் மட்டுமல்லர் அவர்களுக்கு வழிகாட்டவேண்டிய தலைவர்கள் கூடக் கண்ட கண்ட இடங்களில் அகத்தம் செய்கின்றனர். இதைச் சொல்லினால் திருத்த இயலாது. செயலால் தான் திருத்த இயலும் என்று தோன்றியது. அதனால்தான் இச்செயலில் இறங்கினேன்.  "மேடையில் மாலை போட்டுக் கொண்டு பேசுவதற்கும். கழிப்பிடம் சுத்தம் செய்வதற்கும் வேறுபாடே இல்லை. தொழில் என்ற முறையில் இரண்டும் சமந்தான். கூர்ந்து நோக்கினால் மேடையில் பேசுவதைவிடக் கழிப்பறையைச் சுத்தம் செய்வதே இன்றியமையாத தொழில். மேலான தொழில் என் சொல்லுக்குக் கூட இவ்வளவு பயன் விளைந்திருக்காது. செயல் பல தலைவர்களுடைய மனப்போக்கை மாற்றியமைத்துள்ளது கண்டு மகிழ்கின்றேன்" என்று அண்ணல் கூறிவிட்டு மேடையேறித் தம் கடமையைச் செய்தார்.  7. கண்ணனும் குதிரைகளும் பாரதப் போர் பதினெட்டு நாள் நடந்தது. பகல் முழுவதும் பார்த்தனுக்குத் தேரோட்டுவான் பரந்தாமன்.  அந்நாளில் இரவில் போர் செய்யும் வழக்கமில்லை. இரு பிரிவினரும் இரவில் ஒய்வெடுத்துக் கொள்வர்.  பகல் எல்லாம் போரிட்ட களைப்பால் அர்ச்சுனன் பாசறையில் படுத்து நன்கு உறங்குவான்.  ஆனால் பகல் எல்லாம் தேர் ஒட்டிக் களைத்திருந்தாலும் கண்ணன் மட்டும் இரவில் ஒய்வு கொள்வதில்லை.  தேரை இழுத்து ஓடிக்களைத்த குதிரைகள் மேல் கவனம் செலுத்துவான் கண்ணன்.  வெந்நீர் வைத்துக் குதிரைகளை நன்கு தேய்த்துக் குளிப்பாட்டி விடுவான். குதிரைகளுக்கு இதமாயிருக்கும் பொருட்டு உடல் முழுவதும் பிடித்துவிடுவான். பச்சை அறுகு வெட்டி வந்து கட்டுக்கட்டாகக் குதிரைகளுக்கு ஊட்டிவிடுவான். அடுப்பு மூட்டிக் கொள்ளை வேக வைத்து, வெந்த கொள்ளைத் தன் பட்டு உத்தரீயத்தில் எடுத்து ஒவ்வொரு குதிரைக்கும் முன் நின்று அவை உண்பதைக் கண்டு மகிழ்வான். குதிரைகள் கொள்ளை வயிறார உண்டு முடித்த பிறகு சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளும். அவை ஒய்வு கொள்ளும் போது, கண்ணன் குதிரைக் கொட்டில் முழுவதையும் சுத்தம் செய்வான். அதற்குள் விடியத் தொடங்கிவிடும். உடனே குதிரைகளைப் பூட்டித் தேரினைப் போருக்குச் செல்லத் தயாராக்கி விடுவான்.  ஒவ்வொரு நாளும் இப்படியே தொடர்ந்து நடக்கும். ஒருநாள் அர்ச்சுனனுக்கு நள்ளிரவில் விழிப்பு வந்துவிட்டது. எழுந்து கண்ணன் தங்கிய பாசறைக்குச் சென்றான். அங்குக் கண்ணன் இல்லை. இந்நேரம் களைத்துத் தூங்காமல் கண்ணன் எங்கே போயிருப்பான் தேடினான்.  இறுதியில் கண்ணன் குதிரைக் கொட்டிலில், குதிரைகளுக்குப் பணிவிடைகள் செய்து கொண்டிருப்பதைக் கண்டான்.  உடனே ஒடிச் சென்று கண்ணன் கைகளைப் பற்றிக் கொண்டான். “கண்ணா குதிரைகளுக்கு நீதான் பணிவிடை செய்ய வேண்டுமா? வேறு யாரையாவது விட்டால் செய்யமாட்டார்களா?”  “உன் அடிமையாகிய நான் ஒய்வாக உறங்குகையில் நீ உறங்காமல் பணி செய்து கொண்டிருப்பதா என்ன அபசாரம் இன்று, முதல் இப்பணி நீ செய்யாதே!” என்று அர்ச்சுனன் வேண்டிக் கொண்டான்.  “அர்ச்சுனா குதிரைகளை நன்கு பராமரிக்காவிட்டால் தேர் விரைந்து ஓடுமா? பகைவரை வெல்ல முடியுமா? வேறு யாரையாவது பராமரிக்கச் சொன்னால் அவர்கள் அக்கறையாகக் கவனிப்பார்களா?”  “அது மட்டுமல்ல! இப்போது நடக்கும் போர் முடியும் வரை நாம் மைத்துனன்மார் அல்ல. நீ எஜமானன். நான் நின் ஏவல் கேட்கும் சாரதி. ஆதலால், உன் கடமை போர் செய்வது. என்கடமை தேர் ஒட்டுவது”.  “குதிரைகளைப் பராமரிப்பது சாரதிக்குரிய தொழில். மறுநாள் போருக்காக நன்கு ஒய்வு எடுத்துக்கொள்வது எஜமானன் தொழில்”.  “நம் இருவரின் தொழில் வேறுவேறாக இருந்தாலும், நம் தொழில் போர்த்தொழில் தான். ஆதலால் நாம் செய்யும் தொழிலில் ஏற்றத் தாழ்வு ஏது உனக்கு உரிய தொழில் மறுநாள் போரிடுவதற்கு ஒய்வெடுப்பது. எனக்கு உரிய தொழில் மறுநாள் தேரில் பூட்டக் குதிரைகளைப் பராமரிப்பது. இருவகைத் தொழிலும் செம்மையாக நடைபெற்றால் தான் போரில் வெற்றிகிட்டும்! ஆதலால் நீ சென்று ஓய்வெடுத்துக் கொள் நான் என் கடமையைச் செய்ய இயலாமல் குறுக்கீடு செய்யாதே” என்றான் கண்ணன். கீதை உபதேசம் கேட்ட அன்றினும் இன்று. கண்ணன் செயலாலும் சொல்லாலும் காட்டிய உபதேசம் அர்ச்சுனன் நெஞ்சை நெகிழச் செய்தது.  மறுநாள் முதல் தன் போர்க் கடமையைச் சோர்வின்றிச் செம்மையாகச் செய்து வெற்றியைக் குவித்தான்.        8. கண்ணன் உதவாதது ஏன்?   பாண்டவர் சூதில் நாட்டையிழந்து காட்டில் வாழ்ந்தனர். பாஞ்சாலியும் கூட இருந்தாள்.  ஒருநாள் ஓய்வாக அறுவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். கண்ணனைப் பற்றிய பேச்சு வந்தது. கண்ணபெருமான் கருணைக்கடல். எளியவர்க்கு உதவுபவன். தீமைகண்டு பொறுக்கமாட்டான். எல்லாம் வல்லவன் என்று கண்ணன் புகழை ஒருமனதாக அனைவரும் பேசி மகிழ்ந்தனர்.  "கண்ணன் கருணைக் கடல்தான். தீனரட்சகன்தான். ஏழைகளுக்கு இரங்கியருளுபவன்தான். ஆனால் எல்லோர்க்கும் ஒரேவிதமாக உதவாமல், சிலருக்குமட்டும் உதவுகின்றானே! அது ஏன்?" என்று வீமன் ஓர் ஐயத்தை எழுப்பினான். "நமக்குச் சூது போரில் உதவாத கண்ணன் துரெளபதைக்கு மட்டும் உதவினானே! ஏன்?" என்பதும் வீமன் விடுத்த வினா.  ஐவருள்ளும் சகாதேவன் பெருஞானி, கண்ணன் இயல்புகளை முழுமையாக உணர்ந்தவன். கண்ண பெருமான் பதினாறு ஆயிரம் வடிவெடுத்து நின்ற போது, அவற்றுள் மூலவடிவை அறிந்து கண்ணனை மனத்தால் கட்டியவன்.  அந்தச் சகாதேவன் வீமன் ஐயத்தைத் தெளிவிக்க முன் வந்தான்.  "சூதாட்டத்தில் துரியோதனன் சார்பாகச் சகுனி ஆட முன்வந்த போது. நாமும் நம் சார்பாக ஆடுவதற்குக் கண்ணனை அழைத்திருத்தல் வேண்டும். நாம் அவ்வாறு செய்வதை இழிவு எனக் கருதினோம். ஐவருக்கு மோதுபோர் மட்டுமே தெரியும் சூதுபோர் தெரியாது என்று உலகம் பழிக்குமே என மானம் கருதினோம்".  “அவ்வாறு வறட்டுக் கெளரவம் கருதாமல் இருந்திருந்தால், நமக்கு இந்தக் கதி நேருமாறு கண்ணன் விட்டிருக்க மாட்டான்.  “திரெளபதியோ இராச சன்பயில் அவமானப்பட்டபோது, கெளரவத்தையோ மான அபிமானத்தையோ எண்ணவில்லை. உடுக்கை இழந்தவளின் கை அதைப் பற்றவில்லை. அதற்கு மாறாக அவள் கைகள் தலைக்குமேல் குவிந்தன. மானம் போவதால், நாக்குச் செயல் இழக்கவில்லை. “கோவிந்தா! கோவிந்தா!” என்று கதறினாள். அவமானத் துயரத்தால் கண்கள் வறளவில்லை. கண்ணீரை ஆறுபோலக் கொட்டின. என்னால் முடியும் என்ற இறுமாப்பு உள்ள வரையிலும் கண்ணன் உதவ, ஓடிவர மாட்டான். என் செயலால் இனி ஏதும் இல்லை. இனி எல்லாம் உன் செயலே என்று தஞ்சமடைந்து விட்டால், அவ்வாறு தஞ்சம் அடைந்தவர்களைக் காப்பது அவன் பொறுப்பாகி விடுகின்றது. அதனல்தான் திரெளபதிக்குப் புடவை சுரந்தான்” என்றான் ஞானி சகாதேவன்.  “ஆம்!ஆம்! நாம்தான் மான உணர்வினால் தவறு செய்தோம். அதன் பலனை அனுபவிக்கின்றோம்” என்று ஒருமித்த குரலில் அனைவரும் கூறிக் கண்ணன் திருவடி நண்ணும் மனமுடையவர் ஆயினர்.  9. தருமனின் ஆணவம்   கருவம் என்பது ஒரு பேய். எவ்வளவு பெரிய ஞானியரையும் பற்றிக் கொள்ளும். தருமமே உருவமான யுதிட்டிரனைக் கூட அந்தக் கருவம் பற்றிக் கொண்டது.  உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறியும் கண்ணன் தருமன் மனநிலை அறியமாட்டானா?  தருமன் ஆயினும் கருவம் வந்தால் தாழ்ந்து போவானே! அவன் கொண்ட கருவத்தை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என்று கண்ணபிரானது கருணை உள்ளம் கருதியது.  ஒரு நாள் கண்ண்பிரான், தருமனைப் பாதல உலகிற்கு அழைத்துச் சென்றான்.  இறைவன் உலகம் அளந்தபோது, மூன்றாவது அடிக்கு இடமாகத் தன் தலையையே தந்தவன் மாவலி அவனை இறைவன் பாதலத்து அழுத்தி, அங்கு அரசனாக்கினான்.  பாதலத்துக்குத் தருமனுடன் சென்ற கண்ணன், முதலில் ஒரு சிறு வீட்டு வாசலில் நின்று. தாகத்துக்குத் தண்ணீர் கேட்டான். அந்த வீட்டுக்கரசி, இரு பொற்கலயங்களில் தண்ணீர் கொடுத்தாள். இவர்கள் இருவரும் நீர் பருகிவிட்டுப் பொற்கலயங்களை அவளிடம் தந்தனர். அவற்றை வாங்கிய அவள் தூரத்தே வீசி எறிந்து விட்டாள்.  அவள் செயல்கண்டு வியந்த தருமன், "அம்மா! பொற்கலயங்கள் விலை உயர்ந்தன அல்லவா? அவற்றை வீசி எறிந்து விட்டீர்களே!" என்றான்.  "எங்கள் மாவலி ஆட்சியில் வாழும் நாங்கள். ஒரு முறை பயன்படுத்தியது பொற்கலயமாயினும் மீண்டும் பயன்படுத்த மாட்டோம். வீசி எறியத் தான் செய்வோம்!" என்றாள் அவள். "எவ்வளவு செல்வச் செழிப்பு இருந்தால், இப்படி நடக்கும்?" என்று மருட்கை எய்தி கண்ணனைப் பின் தொடர்ந்தான் தருமன்.  மாவலியிடம் தருமனை அழைத்துச் சென்றான் கண்ணன்.  "மாவலி மன்னா! பாதல நாட்டில் நீ பெருங்கொடை வள்ளல். உன் புகழ் பல உலகங்களிலும் பரவியுள்ளது. இதோ என்னுடன் வந்துள்ளாரே! தருமர். இவர் பூவுலகின் ஏக சக்கராதிபதி. கொடையில் உனக்கு ஒப்பானவர். நாடோறும் பல்லாயிரம் பேருக்கு இல்லையென்னாமல் அன்னமும் சொன்னமும் தருகின்றார்!" என்று தருமன் புகழை விரித்தான் கண்ணன்.  கண்ணன் பேச்சைக் கேட்ட மாவலியின் முகம் சினத்தால் சிவந்தது. வெறுப்பால் விளர்த்தது.  "இந்தப் பாவியை இங்கு ஏன் அழைத்து வந்தாய்! இவன் முகத்தில் விழிப்பதே பாவம். உடனே அழைத்துச் சென்றுவிடு!" என்று சீறினான் மாவலி.  தருமனுக்கு ஒன்றும் புரியவில்லை. மாவலி ஏன் தன்னை வெறுக்க வேண்டும்? தான் செய்த தவறு என்ன? என்று எண்ணி நாணி நின்றான்.  "இந்தப் பாவி நேர்மையாக ஆட்சி செய்தால் நாட்டில் ஏழைகள் இருப்பரா? இவன் போடும் அன்னத்துக்கும் தரும் சொன்னத்துக்கும் இவனைத் தேடி வருவரா? இவனுக்கு நாட்டை ஆளத் தெரியவில்லை என்பது இதனால் விளங்கவில்லையா?  “வரிசைதப்பிய மன்னன் முகத்தில் விழிப்பது பாவந்தானே!" என்று மாவலியே தருமனின் தவற்றைச் சுட்டிக் காட்டினான்.  தருமன் அங்கு நிற்பானா? கண்ணனுக்கு முன்பு நடையைக் கட்டினான்.  பல்லாயிரம் பேருக்கு அன்னமும் சொன்னமும் தரும் நமக்கு நிகரான அரசர் உண்டா? என்று தருமனிடம் தோன்றிய கருவம் பழங்கதையாய்ப் போனது. தருமனுக்குத் தன்னை இகழ்ந்த மாவலிபால் சினம் தோன்றவில்லை. தன்னைக் கருவப் படுகுழியிலிருந்து மீட்ட உபகாரி என்று அவனை, அவன் மனம் பாராட்டியது.     “பசு, பால்அளவை மடியில் மறைப்பதுபோல், வழிப்போக்கன், மடியில் பணத்தை மறைப்பதுபோல்,  உழவு செய்தவன், விதைநட்டு மண்ணால் மூடுவதுபோல் நற்செயலால் உனக்கு வரும் பெருமையை மறை”                                                                                                                                          ஞானேச்வரி.        10. அர்ச்சுனன் அகந்தை கண்ணனுக்கு மிக நெருங்கிய நண்பன் காண்டீபன். கண்ணன் திருவாயால் கீதை உபதேசம் கேட்ட அவனிடமும் அகந்தை சிறிது தலை நீட்டியது. .  அடியார்க்கு அருள் செய்வதைக் காட்டிலும் அவர்களிடமுள்ள அகந்தையை ஒழிப்பதையே கண்ணன் சிறப்பாகக் கருதுவான். அருளுக்கு உரியவரையும் அகந்தையானது அண்ணாத்தல் செய்யாத அளற்றில் (உண்டவரை மீள விடாத நரகத்தில்) தள்ளிவிடுமே! என்பது கண்ணன் நினைவு.  “நான் கண்ணனுக்கு நெருங்கிய நண்பன். கண்ணனுக்கு வேண்டிய பணிவிடைகள் அனைத்தும் செய்கின்றேன். கண்ணன் எது கேட்பினும் தருகின்றேன். என் உறுப்புக்களில் எதனைக் கேட்டாலும் தருவேன். ஆதலால் கண்ணனுக்கு என்னை விட உற்றாரோ உறவினரே யாரும் இருக்க இயலாது” என்பது அர்ச்சுனன் கொண்ட அகந்தை.  ஐயப்படாது அகத்தது உணர்கின்ற தெய்வமாகியவன் அன்றோ கண்ணன், அர்ச்சுனன் மனநிலை அறியாமல் போவானோ?  ஒருநாள் “அர்ச்சுனா! நாம் இருவரும் சற்று நேரம் உலாவப் போய் வருவோம்” என்றான் கண்ணன்.  இருவரும் சிறிது தூரம் சென்றனர். ஒரு சிறு குடிசை எதிர்ப்பட்டது. அந்த வீட்டில் கணவன், மனைவி, மகன் ஆக மூவர் மட்டும் இருந்தனர்.  கண்ணனைக் கண்ட மகிழ்ச்சியில் எழுந்து வந்து காலில் விழுந்து வணங்கி, விரிப்பிட்டு அமரும்படி வேண்டினர்.  “இறைவா! பல்லாயிரம் வருடங்கள் தவம் செய்து முனிவர்களும் தேவர்களும் காண இயலாத நின்காட்சி, எங்களுக்கு வலியக் கிடைத்துள்ளது. எங்களிடம் உனக்குக் காணிக்கையாகத் தர விலையுயர்ந்த பொருள் யாதொன்றும் இல்லை. உள்ளது எதுவாயினும் கேட்டுப் பெற்றுக் கொள்க!” என்று தந்தை மன்றாடினான்.  “ஐயா! உன்னிடம் விலையுயர்ந்த பொருள் ஏதும் இல்லையென்று பொய் சொல்கின்றாயே! உலகமே விலை பெறக்கூடிய ஒன்று உன்னிடம் உள்ளது. அதனைக் கேட்டால் தருவாயா?” என்றான் கண்ணன்.  “எங்களிடமா! விலையுயர்ந்த பொருளா! ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே! இருந்தால், அதைத் தருகின்றோம். அப்பொருள் எது என்று நீயே கூறவேண்டும்!” என்றான் தந்தை.  “இதோ இருக்கின்றானே! உன் மகன்! இவன் உன்னிடம் உள்ள ஒப்பற்ற செல்வம் (நன்கலம்) அல்லவா? அவனைக் கொடு!" என்றான் கண்ணன்,  “என்னிடமுள்ளவை அனைத்தும் உனக்குரியனவே! என்மகனை இப்போதே தாரை வார்த்துத் தந்து விடுகின்றேன்” என்று மகனை அழைத்துக் கண்ணன்முன் நிறுத்தினான்.  “ஐயா! இப்படியே உன் மகனைத் தரலாகாது. நீயும் உன் மனைவியும் உச்சியிலிருந்து சரிபாதியாக ரம்பத்தால் அறுத்து வலப்பாதியை எனக்குத் தருதல் வேண்டும்” என்றான் கண்ணன்.  “ஆனால் அறுக்கும் போது, யார் கண்ணிலும் கண்ணீர் வரக்கூடாது” என்று ஒரு நிபந்தனையும் விதித்தான்.  கணவனும் மனைவியும் கணங்கூடத் தாமதம் செய்யாமல், ரம்பம் கொணர்ந்தனர். அறுபடத் தோதாக மகன், தானாகவே அவர்கள் நடுவே வந்து அமர்ந்து கொண்டான்.  ரம்பம் இயங்கியது. மகன் தலை அறுபட்டது. கணவனும் மனைவியும் சிறிதுகூடக் கலங்கவில்லை. கலங்கினால் தானே கண்ணீர் வரும். கண்ணீரே வரவில்லை. ஆனால், அறுபடும் மகனது இடக்கண்ணில் மட்டும் கண்ணிர் ஒழுகியது.  “உடனே கண்ணன், நிறுத்துங்கள், என்னிடம் வாக்குக் கொடுத்ததற்கு மாறாக உங்கள் மகன் கண்ணீர் சிந்துகின்றான். ஆகையால் உங்கள் காணிக்கை ஏற்க மாட்டேன்” என்றான் கண்ணன்.  “இறைவா! என் மகன் முகத்தை நன்கு பார்த்தீர்களா! இடக்கண்ணிலிருந்துதானே கண்ணிர் வருகின்றது. கண்ணனுக்குக் காணிக்கையாகும் பேறு உடலின் வலப்பகுதிக்குத் தானே கிடைத்தது. நமக்கு அப்பேறு கிட்டவில்லையே என்று இடப்பக்கம் அழுகின்றது. ஆதலால் இக்காணிக்கையை ஏற்றுக் கொள்ள நீ மறுக்கலாகாது” என்றனர் தாயும் தந்தையும்.  அவர்கள் தன்பால் கொண்டுள்ள பக்தியைக் கண்டு பரவசமான கண்ணன். அறுப்பதை நிறுத்துங்கள் என்றான். அறுப்பது நின்றது. நின்றவுடன், மகன் எவ்வித ஊனமுமின்றி, ஒளிமுறுவலுடன் வந்து கண்ணன் அடியில் விழுந்து வணங்கினான்.  இந்த அற்புதக் காட்சியைக் கண்ட அர்ச்சுனனின் அகந்தை பறந்துவிட்டது. ஊன் உண்பவன் தவம்போல் ஒழிந்துவிட்டது.  கண்ணன் திருவடிகளில் விழுந்து வணங்கி, "கண்ணா! நீ எனக்குச் சாரதியாக இருந்தாய்! கீதை உபதேசித்தாய்! பகைவரை அழிக்க உதவினாய்! இழந்த நாட்டை மீட்டுக் கொடுத்தாய்! இந்த உதவிக்கெல்லாம் உயர்வான உதவியை இப்போது நீ எனக்குச் செய்துள்ளாய்!"  “மீள இயலாத அகந்தைப் படுகுழியில் வீழாமல் பாதுகாததாய்! இனி நான் என்றும் தவறு செய்யாதவாறு தடுத்துவிட்டாய்!” என்று மனமார வாயார வாழ்த்தினான். -  11. எலும்பு சொன்ன இறை மந்திரம்   ஒரு நாள் அர்ச்சுனன் நன்கு துங்கிக் கொண்டிருந்தான். தூக்கத்திலுங்கூட அவன் வாய் "கண்ணா! கண்ணா!" என்று ஜெபம் செய்து கொண்டே இருந்தது. அவன் உடலின் மயிர்க்கால் தோறும் “கண்ணா! கண்ணா!” என்ற நாமஜெபம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.  இந்த அற்புத பக்தியை அறிந்த கண்ணன் அவ்விடம் வந்தான். அவன் பத்தினிமாரும் வந்தனர். நாரதர், சிவன், பிரமன் முதலிய தேவரெல்லாம் இந்த அதிசயம் காணத் திரண்டு வந்தனர்.  அர்ச்சுனனின் ஆழ்ந்த பக்தி கண்டு அனைவரும் நாட்டியமாடத் தொடங்கினர். அர்ச்சுனன் ஆழ்ந்த உறக்கம் கலையவில்லை.  தெய்வப்பற்றுடையவர்கள் தம்மையறியாமலே எப்போதும் இறைவன் நாமத்தை ஜெபித்துக் கொண்டிருப்பார்கள். அந்த ஜெபம் அவர்கள் உடலின் அணுத்தோறும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும். இது பக்தியின் மேலான நிலை. அந்த நிலையை அடைந்து விட்ட அர்ச்சுனனை அனைவரும் அஞ்சலித்துப் பாராட்டினர்.  காந்தியடிகளும் இந்த மேலான பக்தி நிலையை அடைந்திருந்தார். அதனால் தான் மீர் ஆலம் என்பான் மண்டையில் அடித்த போது “ஹேராம்!” என்றார். மதன்லாலின் குண்டு வெடித்தபோதும் “ஹேராம்!” என்றார். கோட்சேயின் குண்டு உயிர் பறிக்கும் போதும் “ஹேராம்!” என்றே அவர் வாயில் இறைவன் நாமம் வெளிவந்தது.  இதே போன்ற மேலான பக்தி நிலை அடைந்த ஒருவரின் வரலாறு இங்கே நினைவு கூர்வது நலம் பயக்கும்.  பண்டரிபுரத்தில், சோகாமேளர் என்ற ஞானி வாழ்ந்து வந்தார். அவர் குலத்தொழில் செருப்புத் தைப்பது. அத்தொழில் செய்து வாழ்ந்து வந்தார். அவர் தொழில் செய்யும் போதும், உண்ணும்போதும் உறங்கும்போதும் நடக்கும்போதும் நிற்கும்போதும் அவர் வாய் தானாகவே “விட்டல! விட்டல!” என்று நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருக்கும்.  ஒரு விபத்தில் அவர் வீடு இடிந்து விட்டது. அவரும் அவருடன் இருந்த சிலரும் இடிபாடுகளில் சிக்கி மாண்டனர்.  இடிபாடுகளை அகற்றுவதற்குப் பலமாதங்கள் ஆகிவிட்டன. ஞானியாகிய சோகாமேளரின் திருமேனியைக் கண்டு பிடிக்க அவர்தம் சீடர்கள் ஆர்வம் காட்டினர். ஆனால் ஒருவர் உடலும் முழுமையாகக் கிடைக்கவில்லை. எலும்புத் துண்டுகளே எஞ்சியிருந்தன.  இந்த எலும்புகளிலாவது சோகாமேளின் எலும்பைக் கண்டு வழிபட வேண்டுமென்று விரும்பினர் சீடர்கள்.  ஆனால் எலும்பை அடையாளம் காண்பது எப்படி? செய்வதறியாது திகைத்து நின்றனர் சீடர்கள்.  அப்போது பெருஞாளியாகிய நாமதேவர் அங்கு வந்தார். சீடர்களின் திகைப்பைக் கண்டு, அவர்களை அழைத்தார்.  “சோகாமேளரின் எலும்பை அடையாளம் காண்பது மிகவும் எளிது. ஒவ்வொரு எலும்பாக எடுத்துக் காதோரம் வைத்துப் பாருங்கள். எந்த எலும்பிலிருந்து “விட்டல! விட்டல!” என்ற ஒலி . வருகின்றதோ அதுதான் சோகாமேளரின் எலும்பு என்று அறிந்து கொள்ளலாம்” என்றார் நாம தேவர்.  என்ன அதிசயம்! ஓர் எலும்பிலிருந்து, நாமதேவர் சொன்னபடியே, “விட்டல! விட்டல!” என்ற இனிய ஒலி மெல்லிதாகக் கேட்டது.  வாழ்நாள் முழுவதும் இடைவிடாமல் திருநாமத்தை உச்சரித்து வந்தமையால், சோகாமேளின் எலும்பிலும் கூட அந்த ஒலி பதிந்து ஒலித்துக் கொண்டே உள்ளது. இதிலிருந்து நாமஜெபத்தின் பெருமையையும் சேதாமேளரின் பரமபக்திய்யையும் அறிந்து கொள்ளலாம் அன்றோ?  புதையல் எடுத்தது போல் பூரித்துப் போன சீடர்கள் அந்த எலும்பை வைத்துப் பூசித்து வந்தனர். நாமஜெபமும் செய்து வந்தனர் என்று சொல்லவும் வேண்டுமோ?  12. துரோணரின் மகள்   வில் ஆசிரியர் துரோணருக்கு ஒரு மகன் இருப்பது தான் நமக்குத் தெரியும். அவன் பெயர் அசுவத்தாமன். அவன் சிரஞ்சீவி.  துரோணருக்கு ஒரு மகள் இருந்ததாகவும் அவள் பெயர் சாந்தா என்றும் நாடோடிக் கதை ஒன்று கூறுகின்றது. அவள் வரலாறு அற்புதமானது. அதைச் சிறிது காண்போம்.  ஒரு நாள் துரோணர் வீட்டில் இறை வழிபாடு செய்து கொண்டிருந்தார்.  அவ்வூரில் திருக்குலத்து அடியார் ஒருவர் இருந்தார். அவர் பெயர் சேதா. மிக்க பக்திமானாக இருந்தமையால் பக்த சேதா என்று அழைக்கப்பட்டார்.  அவர் மனைவி பெயர் காந்தா, அவர்களுக்கு ஒரு மகள் அவள் பெயர் சேவா.  துரோணர் வீட்டில் வழிபாடு நடப்பதைப் போலத் தன் வீட்டிலும் வழிபாடு நடத்தல் வேண்டும் என்பது சேவாவின் ஆசை. வழிபாட்டுக்கு மலர் வேண்டுமே!  தன். தந்தை தைத்த செருப்புக்களைத் துரோணரின் சீடரிடம் கொண்டு போய்த்தந்து, அவர்களிடம் மலர்களை வாங்கிவந்து, தன் தந்தையிடம் இறை வழிபாட்டுக்குத் தந்தாள் சேவா.  “செருப்புக்கு மலர் மட்டும் விலையாகுமா? மேலும் பணம் கேட்டு வாங்கி வா” என்று காந்தா தன் மகளைத் துரோணர் வீட்டுக்கு அனுப்பினாள்.  அங்குச் சென்ற சேவா, துரோனர் மகள் சாந்தாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது, “என் தந்தை படைக்கும் நைவேத்யத்தைப் பகவான் நேரில் வந்து உண்கின்றார்” என்றாள். சாந்தா, இதை நம்பவில்லை. நீ சொல்வது பொய் என்று சேவாவிட்ம் கூறினாள்.  “நீ என்னுடன் வா! நான் சொல்வது உண்மை என்று நிரூபிக்கின்றேன்” என்றாள் சேவா.  சேவாவுடன் சென்ற சாந்தா, அவள் கூறியது உண்மை என்பதைக் கண்ணாரக் கண்டு வியப்புற்றாள்.  உடனே வேகமாக ஓடி வந்து, தன் தந்தை துரோனரிடம், தான் கண்ட அதிசயத்தைக் கூறினாள்.  துரோணர், மகளின் கூற்றை நம்பவில்லை. சாந்தாவுக்கு மூளை குழம்பிவிட்டதால், இப்படி உளறுகின்றாள். தாழ்குலத்தான் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் ஏற்பானா? என்று கருதி, அவளை வீட்டில் அடைத்து வைத்தார்.  “கீழ்க்குலத்தானாகிய சேதா இறைவனை வழிபடுவதாக நடித்து இப்படிப் பொய்க் கதைகளைக் கட்டி விடுகின்றான். அவனை இப்படியே விட்டு வைத்தால், சாதி மரியாதையைக் குலைத்துவிடுவான். தாழ்குலத்தானுக்கு இறை வழிபாடு செய்ய உரிமை ஏது? உடனே அவனுக்குத் தக்கபுத்தி புகட்ட வேண்டும்” என்று முடிவு செய்தார் துரோணர்.  கீழ்க்குலத்தான் என்பதற்காக ஏகலைவன் வலதுகைப் பெருவிரலை வெட்டச் செய்தவர் அல்லவா துரோணர்!  உடனே சேதாவை அழைத்து வரச் செய்தார். “நாளைக் காலையில், ஆயிரம் சோடி செருப்புக்கள் அவசியம் தருதல் வேண்டும். இல்லையேல், மரண தண்டனை தரச்செய்வேன்” என்று கடுமையான உத்தரவிட்டார்.  என்ன செய்வார் சேதா! “ஒரு நாளில் ஒரு சோடி செருப்புத் தான் தைக்க இயலும் ஆயிரம் சோடி தைப்பது எப்படி? அதற்கு வேண்டிய மூலப் பொருளுக்கு எங்கே பேர்வது? சரி நம் தலை தப்பாது” என்று அழுது கொண்டே வீடு வந்து சேர்ந்தார். வந்த சோர்வால் அப்படியே தூங்கி விட்டார். விடிந்ததை உணர்ந்து எழுந்தார்.  ஆயிரம் சோடிசெருப்புக்கள் தைக்கப்பட்டு அடுக்கடுக்காகக் கட்டி வைக்கப் பட்டிருந்ததைப் பார்த்தார். ஏது. இவை? எங்கிருந்து வந்தன என்று திகைத்தார். இறைவனே நமக்காக இவற்றைத் தைத்து வைத்துள்ளான் என்று தெரிந்து கொண்டார்.  துரோணரின் உத்தரவுப்படி குறித்த நேரத்தில் ஆயிரம் சோடியையும் கொண்டுபோய்ச் சமர்ப்பித்தார் சேதா!  சேதாவின் செயல் கண்டு மகிழ்வதற்குப் பதிலாக அவன் மேல் சினம் கொண்டார் துரோணர். தம் கை வலிக்கும் வரைக்கும் சேதாவைத் தடியால் அடித்தார். சேதா அலுங்காமல் குலுங்காமல் நின்றார். ஏன் நிற்கமாட்டார்? அடியெல்லாம் இறைவன் அல்லவா தாங்கிக் கொண்டான். வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தா, தந்தையின் கொடுமை கண்டு, உண்ணா நோன்பு மேற்கொண்டாள். தன் பக்தை வீட்டுச் சிறையில் உண்ணாமல் உடல் வருந்துவதை இறைவன் பொறுப்பானோ?  வீட்டுக்கதவு தானாகவே திறந்து கொண்டது. சாந்தா வெளியேறினாள்.  சாந்தா தப்பி விட்டதை அறிந்த துரோணர்க்கு அடங்காச் சினம் மூண்டது.  துரியோதன மன்னனிடம் சென்று, “இந்தச் சேதா ஏமாற்றுக்காரன். மாயா ஜாலம் தெரிந்து வைத்து, பக்தனைப் போல் நடித்து மக்களை ஏமாற்றுகின்றான். தாழ்குலத்தானாகிய இவனுக்குக் கடுமையான தண்டனை தரல் வேண்டும். தண்டனை தாராவிடின், நான் உன் முகத்தில் விழிக்கமாட்டேன்” என்று சூள் உரைத்தார்.  ஆசாரியன் வாக்கைச் சீடன் மீறலாமா? “இந்தச் சேதாவின் கண்களைப் பிடுங்கிக் கைகளை வெட்டி விடுங்கள்” என்று உத்தரவிட்டான் துரியோதளன். சேதாவின் மனைவி காந்தா சிறைக்கு வந்து தன் கணவனுக்கு நேர்ந்த அவலநிலை கண்டு அலறினாள். “இந்த அவலம் கண்ட கண்கள் எனக்கு ஏன்” என்று தன் கண்களைப் பிடுங்கிக் கொண்டாள். அந்தக் கற்புக்கரசியின் கதறல் வீண் ஆகுமா? அந்த அவலக்குரல், இறைவன் காதில் படாதா?  பெரும் பூகம்பம் நிகழ்ந்தது. சிறைச்சாலை தகர்ந்தது. அந்நேரம் ஒரு குறவனும் குறத்தியும் எங்கிருந்தோ தோன்றினர். அவர்கள் தொட்டவுடனே சேதாவின் கால்கள் பொருந்திக் கொண்டன. கணவன்-மனைவி இருவர் கண்களும் ஒளி பெற்றன.  துரோணரின் வீட்டிலிருந்து தப்பிய சாந்தா திருக்குலத்தார். சேரிக்கு ஓடினாள். ஏனென்றால் சேரி முழுவதும் தீயிட்டு அழிக்கப் போவதாகத் துரோணர் கூறிக் கொண்டிருந்தார். துரோணர் கொடுமையிலிருந்து சேரிமக்களைக் காக்கவே சாந்தா அங்கே விரைந்தாள்.  துரோணர் சொன்னபடி சேரி தீப்பற்றி எரியத் தொடங்கியது.  சாந்தா, சேரிக்குழந்தைகளைக் காப்பதில் ஈடுபட்டாள். தன் உடலில் தீப்புண் ஏற்படுமே என்று அஞ்சாமல் சேரியினரைக் காப்பாற்ற முனைந்து நின்றாள்.  சாந்தா தீக்கு நடுவே சேரியிலிருப்பதைக் கேள்விப்பட்ட துரோணர் சேரிக்கு ஓடினார்.  அதற்குள் தீயில் வெந்து விடாமல் சாந்தாவைச் சேவா மீட்டு விட்டாள்.  தாங்கள் வழிபடும் இறைவன் திருவிக்கிரகத்தைக் காப்பதற்காகச் சேதாவும் காந்தாவும் ஓடினர்.  என்ன அதிசயம்! அங்கு நெருப்பே பரவவில்லை. இறைவன் முன் அமர்ந்து சேவாவும் சாந்தாவும் இறைவனை வழிப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்துச் சேதாவும் காந்தாவும் இறைவன் திருவருளை எண்ணிக் கண்ணிர் சொரிந்தனர். திடீரென்று நெருப்பு அணைந்து விட்டது. அந்த நெருப்பினால், சேரிக்கு எவ்விதச் சேதமும் நேரவில்லை.  மகளைக் காண ஒடிய துரோனர். சேதாவின் வீட்டில் இறைவன் முன், சேவாவுடன் அவள் இருப்பதைக் கண்டார். கீழ்க்குலச் சேரி என்ற எண்ணம் தகர்ந்தது. சேரி வீட்டில் - சேதா வீட்டில் - நுழைந்தார். அங்குக் குடி கொண்டிருந்த இறைவன் முன் விழுந்து வணங்கினார்.  “பக்த சேதா அவர்களே! தங்கள் பெருமை அறியாமல், சாதி வெறியால் நீதி தவறிப் பல தீங்குகளை உமக்குச் செய்து விட்டேன். அதற்காக என்னை மன்னிக்க வேண்டும்” என்று சேதாவின் திருவடிகளிலும் விழுந்து வணங்கினார் துரோணர்.  பின்பு தம் மகள் சந்தரவைத் தழுவிக் கொண்டு, “மகளே! சாதி வெறித் திரை மூடியிருந்த என் கண்களைத் திறந்துவிட்ட தெய்வம் நீ! என் அகந்தையை நொறுக்க வந்த சம்மட்டி நீ! இனி இத்தகைய செயல்களில் ஈடுபடமாட்டேன்” என்று குரல் தழுதழுக்கக் கண்ணீர் சொரிந்து தன் செயலுக்குக் கழுவாய் தேடலானார்.  13. சகுனியின் சகேரதரர்கள்   துரியோதனன் தாய் காந்தாரி. அவள் காந்தார நாட்டு மன்னன் மகள். அவள் சகோதரன் சகுனி. சகுனியை அறியாதவர் ஒருவரும் இரார். பாண்டவர்களைச் சூதால் வென்று காட்டுக்கு அனுப்பிய அந்தக் கயவனை அறியாமல் இருக்க இயலுமா!  துரியோதனன் உடன் பிறந்தவர் நூறுபேர். ஆதலால் அவர்கள் ஈரைம்பதின்பர் என்றும் நூற்றுவர் என்றும் பெயர் பெற்றனர்.  இதைப் போலவே சகுனியின் உடன்பிறந்தவரும் நூற்றுவரே.  துரியோதனனுக்குத் தாய் மாமன்மாராகிய நூற்றுவரும் ஏதோ காரணத்தினால், அத்தினபுரத்திலேயே தங்கியிருந்தனர்.  அரண்மனையில் எந்நேரமும் சகுளி சகோதரர்கள் இங்கும் அங்கும் போய் வந்து கொண்டே இருப்பர்.  தாய்மாமன் முதலிய பெரியோர் யாராயிருப்பினும் மரியாதை செய்ய வேண்டிய வழக்கம் அந்நாளில் இருந்தது.  ஆதலால் இளவரசர்களாகிய துரியோதனன், துச்சாதனன் முதலியோர் உட்காரவே முடிவதில்லை. அலுத்துப் போய் வந்து, துரியோதனன் சற்றுச் சோர்ந்து அமர்வான். அப்போது யாரோ ஒரு மாமன் அவ்வழியே வந்து விடுவான். மாமனாயிற்றே மரியாதை தராமல் இருக்கலாமா? உடனே இருக்கை விட்டு எழுந்து வணக்கம் செலுத்துவான். அந்த மாமன் சென்று விட்டானே என்று அமர்ந்தால், வேறு ஒரு மாமன் வந்து விடுவான். உடனே எழ வேண்டும்.  யாருக்கும் வணங்கி அறியாத துரியோதனனுக்கு மாமன்மாரால் பெருந்துன்பம் நேர்ந்தது.  ஒரு நாள் மிகவும் சலித்துப் போன துரியோதனன், ஏதோ காரணம் சொல்லிச் சகுனி சகோதரர் நூற்றுவரையும் பிடித்துச் சிறையில் அடைத்து விட்டான். இப்போது அடிக்கடி எழுந்து மரியாதை செலுத்த வேண்டிய தொந்தரவு இராதல்லவா?  சிறைப்பட்ட மாமன்மார், நூற்றுவரையும் ஒரேயடியாக ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்று தீர்மானம் செய்தான் துரியோதனன்.  சிறையிலுள்ளார்க்கு உணவும் நீரும் தர வேண்டுமே! ஆளுக்கு ஒரு பருக்கை சோறும் ஒரு சின்ன நத்தைக் கூட்டில் நீரும் வேளைவேளைக்குத் தரும்படி ஏற்பாடு செய்தான். யாரும் கேட்டால், சோறும் நீரும் தருகின்றேன் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அனைவரையும் கொன்று விடலாம் என்பது துரியோதனன் சாதுரியம்.  நூற்றுவரில் மூத்தவனாகிய சகுனி சாமர்த்தியவான். தம்: தம்பியர் அனைவரையும் அழைத்து. “துரியோதனன் நம் அனைவரையும் கொல்ல ஏற்பாடு செய்துவிட்டான். நாம் அவனை அடியோடு அழித்துப் பழிக்குப் பழிவாங்க வேண்டும். இதற்கு நாம் ஒரு தந்திரம் செய்யவேண்டும்” என்றான்.  “அண்ணா! சகுனி! நீயே அறிவாளி அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டியது உன் கடமை. நீ என்ன சொல்கின்றாயோ? அதை நாங்கள் அப்படியே செய்கின்றோம்” என்ற்னர் தம்பியர்.  “ஒரு பருக்கை சோறும் நத்தைக் கூட்டில் தரும் தண்ணீரும் உண்டு யாரும் சிலநாள் கூட உயிர் வாழ இயலாது. அனைவரும் இவ்வாறு இறப்பதைவிட, நம்மில் யாராவது ஒருவன் உயிர் பிழைத்தால், பழிக்குப் பழிவாங்கத் தோதாக இருக்குமே! ஆதலால் நான் ஓர் யோசனை சொல்கின்றேன். அதன்படி செய்தால், துரியோதனனை அடியோடு ஒழித்து விடலாம்” என்றான் சகுனி  “நூறு பேருக்குத் தரும் சோறும் தண்ணீரும் யாராவது ஒருவன் மட்டும் சாப்பிட வேண்டும். அப்போது ஒருவனாவது மேலும் சில நாள் சாவாமல் இருப்பான். யார் சாப்பிடுவது என்று தீர்மானம் செய்யுங்கள்” என்றான் சகுனி - “அண்ணா! நீதான் புத்திசாலி நீ உயிரோடிருந்தால்தான், துரியோதனனைப் பழிவாங்க முடியும்? ஆகையால் நீயே சோறும் நீரும் உண்ணுதல் வேண்டும்” என்று அனைவரும் ஒருமித்து உடன்பட்டனர்.  பட்டினியால் ஒவ்வொருவரர்கப் பட்டொழிந்தனர். சகுனி மட்டும் சோறும் நீரும் சிறிதளவாவது உண்டமையால், உயிர் தப்பினான்.  அனைவரும் மாண்டிருப்பர் எனக் கருதிய துரியோதனன் சிறைச்சாலையில் புகுந்து பார்த்தான்.  துரியோதனன் மேல் ஆத்திரம் பொங்கினாலும் சகுனி அதனை அடக்கிக் கொண்டான். “அன்பு மருமகனே! நீ எனக்கு எவ்வளவு உபகாரம் செய்தாய்? இந்தக் கயவர்கள் அனைவரும் சேர்ந்து பட்டத்துக்கு உரியவனாகிய என்னை ஒழிக்கத் திட்டம் போட்டிருந்தனர். நீ அதை உணர்ந்து சிறையிட்டு, இந்தக் கொடியவர்களை ஒழித்து எனக்குக் காந்தார நாடு முழுவதும் உரிமையாக்கி விட்டாய் இதற்கு உனக்கு எப்படிக் கைம்மாறு செய்வது?” என்று தேன் ஒழுக பேசினான். துரியோதனன் அவன் பேச்சை அப்படியே நம்பிவிட்டான்.  சகுனிக்கு அன்று முதல் தடயுடலான உபசாரம் நடந்தது. அரண்மனையே சகுனி சொன்னபடி இயங்கியது. துரியோதனனும் சகுனி போட்ட கோட்டைத் தாண்டுவதில்லை.  எவ்வளவு உபசாரம் கிடைத்தாலும் சகுனி தன் குரோதத்தை மறக்கவில்லை.  துரியோதனனுக்கு நல்லவன் போல நடித்து அவனைப் படு குழியில் தள்ளச் சமயம் எதிர்பார்த்திருந்தான்.  சகுனியின் யோசனைப்படியே அத்தினபுரத்தில் புதிய அரண்மனை உருவானது. அரண்மனை புகுவிழாவுக்குப் பாண்டவர் வரவழைக்கப்பட்டனர். விருந்து முடிந்த பின்பு சகுனி, தருமனைச் சூதாட அழைத்தான் வென்றான். துரெளபதையை மானபங்கப் படுத்தச் செய்தான். அதனால் பாண்டவரின் பகையைக் கிளறி விட்டான்.  சகுழி, மூட்டிய பகைத்தீ. பாரதப் போராக மூன்த்து. துரியோதனன் அடியோடு அழிந்தான். துரியோதனன் அழிவுகண்ட சகுனி பழிக்குப் பழி வாங்கிய நிம்மதியோடு உயிர் துறந்தான்.  சகுனி பற்றிய இந்த நாடோடிக்கதை நெடுங்காலமாக நம் நாட்டில் வழங்கி வருகின்றது.  இதே கதை சந்திரகுப்த மெளரியனைப் பற்றியதாக, வடநாட்டில் வழங்கி வருகின்றது. முத்ரா ராக்ஷஸம் என்ற நாடக நூலிலும் குறிப்பாக இடம் பெற்றுள்ளது.  14. பாஞ்சாலி ஏன் சிரித்தாள்?   பாரதப் போரில் வீடுமர் அர்ச்சுனன் அம்பால் அடிபட்டு வீழ்ந்தார் விடுமர் பெருஞானி பகவான் பரசுராமனின் மாணாக்கர் அவர் விரும்பும் போது தான் அவர் உயிர் பிரியும். அத்தகைய வரத்தை அவர் தந்தை, சந்தனு அளித்தார்.  அவர் அம்புபட்டு வீழ்ந்த காலம் தட்சிணாயணம் உத்தராயண காலத்தில் உயிர் துறந்தால்தான் மோட்சம் கிட்டும் ஆதலால் உத்தராயணம் வரும்வரை, அர்ச்சுனன் அமைத்துக் கொடுத்த அம்புப் படுக்கையில் படுத்திருந்தார்  அப்போது தருமன் அவரை வணங்கி, அரசநீதி அறிவுறுத்தும் படி வேண்டினான் கண்ணபெருமானும் அரச நீதியைத் தருமனுக்குக் கூறும்படி வற்புறுத்தினான்  அம்புப் படுக்கையில் படுத்துள்ள துன்பத்தையும் பொருட்படுத்தாமல், வீடுமர் அரசநீதி கூறத் தொடங்கினார்  அப்போது அருகிலிருந்த பாஞ்சாலி உரக்கச் சிரிக்கத் தொடங்கினாள் அவள் சிரிப்பதற்குக் காரணம் என்ன என்று வீடுமர் கேட்டார் “தாத்தா! வேறு காரணம ஏதும் இலலை தாங்கள் பெருஞானி நலலறம முழுவதும் அறிநதவர் உலகிலேயே உயர்ந்த குறிககோளுடன வாழந்தவர். அப்படியிருந்தும் துரியோதனன் சூதாடடம் என்னும வஞ்சனையால், எங்கள் நாட்டைய பறித்துக் கொண்ட போது, அரசநீதி துரியோதனனுககுக கூறவிலலை துச்சாதனன், என்னை மானபங்கப படுததிய போதாவது அறவுரை கூறித் தடுத்திருககலாம் எங்களைக் காட்டுககு அனுப்பாமல தடுத்திருக்கலாம் அப்போது வாய் திறவாமல, தீயவர் செயலுக்கு உடன்பட்டுருந்த நீங்கள். இப்போது அரசநீதி கூறத் தொடங்குவதை எண்ணிப் பார்த்தேன். சிரிப்பு வந்துவிட்டது” என்றாள் பாஞ்சாலி.  “குழந்தாய்! பாஞ்சாலி! நீ நினைத்ததும் சிரித்ததும் ஞாயமானவைதாம் அதற்குரிய காரணம் சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன்”.  “நான் உண்ட உணவு துட்டனாகிய துரியோதனனுடையது அந்த உணவால் உண்டான இரத்தம் என் உடலில் ஓடியது. அந்த இரத்தம் அறநெறியைக் கழுவி, அநீதிச் சேற்றை என்னுள் தேக்கி விட்டது”.  “அதனால்தான், என் வாயிலிருந்து அறநெறி வெளிவரவில்லை. இப்போது, அர்ச்சுனன் அம்புகள் என் உடலைத் துளைத்து, அந்த அநீதிக் குருதி முழுவதையும் வெளியேற்றிவிட்டது”.  “இப்போது என் உடலில் ஓடுவது. இறை பக்தியாகிய குருதி அதனால்தான் அறநெறி கூற என் உணர்வு என்னைத் தூண்டுகின்றது எத்தகைய தூயவராயினும் தீயவர் உறவும் உணவும் உடையவரானால், தீமை கண்டும் சீறி யெழவிடாமல், உணர்வு மழுங்கிவிடும் என்பதற்கு என் செயல் தக்க எடுத்துக்காட்டு. அன்றைய செயலுக்காக இன்று நான் நாணுகின்றேன் என்னைக் கண்டு நீ சிரித்தமைக்காக நான் வெறுப்படையவில்லை மாறாக உவப்பு அடைகின்றேன்”  என்று கூறிவிட்டுத் தருமனுக்கு அரசநீதி கூறத் தொடங்கினார் வீடுமர் 15. கர்ணனின் இடக்கைத் தானம் இன்னும் எத்தனை பிறப்பெடுத்தாலும் இல்லை என்று வந்தவர்க்கு இல்லை என்னாமல் ஈயும் வரமே வேண்டும். முத்திப் பேறும் வேண்டா என்று கண்ணனிடம் தன் உயிர் பிரியும் நிலையில் வரம் கேட்டவன் கர்ணன்.  இத்தகைய மனபாவம் படைத்தவன் ஆகையாலேயே அவன் தலையெழு வள்ளல்களில் முதன்மை பெற்றான்.  ஒரு நாள் கர்ணன் எண்ணெய் நீராட்டுக்காகத் தங்கக் கிண்ணத்தில் எண்ணெய் எடுத்துத் தன் உடலில் தடவிக் கொண்டிருந்தான்.  அப்போது ஓர் இரவலன், ‘பிக்ஷாம்தேகி’ (பிச்சையிடுக) என்று வந்தான்.  தங்கக் கிண்ணம் இடது கைப் பக்கமாக இருந்தது. கர்ணன் அதனைத் தன் இடக் கையாலேயே எடுத்து, இரவலனுக்கு அளித்துவிட்டான். இரவலன் மகிழ்வுடன் சென்றான்.  அருகிலிருந்த நண்பர் ஒருவர், "கர்ணனை நோக்கி அங்கபூபதியே! இடக் கையால் தானம் தரலாகாது என்று அறநூல் கூறுகின்றதே! தாங்கள் செய்தது அறநூலுக்கு மாறுபட்டதல்லவா? வலக்கையால் தானே தந்திருக்கவேண்டும்” என்றார்.  “நண்பரே! அந்த அற நூலை நான் நன்கு பயின்றவன் தான். ஆனால், மனித மனம் நிலையில்லாதது. நொடிக்கு நொடி மாறிக் கொண்டே இருப்பது. இடக்கையருகே உள்ள தங்கக் கிண்ணத்தை அற நூலின்படி வலக்கையால் எடுக்கச் சில நொடிகள் தாமதமாகலாமே! அந்தச் சில நொடிளுக்குள், மனம் மாறிவிடலாமே! இவ்வளவு விலை உயர்ந்த கிண்ணத்தைத் தானமாகத் தரலாமா? என்று மனம் பகுத்தறிவைப் பேசத் தொடங்கிவிட்டால், என்ன ஆவது? என் கொடை தடுமாறிப் போகலாமே! அதனால் தான் இடக்கையால் அளித்தேன்” என்றான் கர்ணன்.  கர்ணனுக்குக் கொடையில் இருந்த ஆர்வம் கண்ட நண்பர் வியப்பில் மூழ்கினார்.  16. காய்ந்த விறகு ஈந்த ஈர நெஞ்சன் ஒரு நாள் ஒர் இரவலன் கர்ணனிடம் வந்து “ஐயா! ஒருவார்மாக மழை பெய்து கொண்டே உள்ளது. வீட்டில் அரிசியிருந்தும் பொங்குவதற்கு விறகு இல்லாமையால் பட்டினி கிடக்கின்றோம். காய்ந்த விறகு சிறிது கொடுத்தால் உதவியாக இருக்கும்” என்று வேண்டினான்.  கர்ணன் அங்க நாட்டு அரசன். அரசன் அரண்மனையில் விறகு இருக்குமா? ஆயினும் “இல்லை” என்ற சொல்லை அறியாத கர்ணன், அந்த இரவலனுக்கு எப்படி உதவலாம் என்ற சிந்தனையில் ஆழ்ந்தான்.  அருகிலிருந்த நண்பர் ஒருவர் “கர்ணன், இந்த இரவலனுக்கு இல்லை என்று சொல்வதைத் தவிர வேறு வழிஇல்லை. இல்லை என்று சொல்லத்தான் போகின்றான்” என்று எண்ணிக் கொண்டிருந்தார்.  ஆனால், கர்ணன் அந்த நண்பரின் நினைவைப் பொய்யாக்கிவிட்டான்.  அரண்மனைத் தாழ்வாரத்தில் போட்டிருந்த கை மரங்களில் சிலவற்றைப் பிரித்தெடுத்தான். நன்கு காய்ந்திருந்த அவற்றை அந்த இரவலனுக்குக் கொடுத்தனுப்பினான்.  அதைக் கண்ட நண்பர், வள்ளல் தன்மைக்கு ஒருவன் என்று உலகம் கர்ணணைப் பாராட்டுவது சரிதான் என்று எண்ணி விடை பெற்றார்.    17. உயர்ந்த வேள்வி பாரதப் போர் முடிந்தது. தருமன் முடி சூடினான். அரசர்க்கரசன் ஆதல் வேண்டும் என்னும் அவாவினால் அசுவமேத வேள்வி ஒன்று செய்தான்.  யாக முடிவில் வந்தவர் அனைவர்க்கும் வாரி வாரிப் பொன்னும் பொருளும் வழங்கினான்.அறுசுவை உண்டி அளித்தான் என்று சொல்லவும் வேண்டுமோ!  தருமன் தானம் வழங்கிக் கொண்டிருந்த போது ஒரு கீரி வந்தது. அது ஓர் அதிசயக் கீரி, அதன் உடலில் பாதி பொன்மயமாயிருந்தது.  அந்தக் கீரி, அங்குக் கூடியிருந்தவர்களைப் பார்த்துப் பேசத் தொடங்கியது:  “இந்த அசுவமேத வேள்வி வெகு சிறப்பாக நடந்தது என்பதை யாரும் மறுக்க இயலாது. ஆயினும் ஓர் ஏழை அந்தணன் குடும்பத்தார் செய்த வேள்விக்கு இது ஈடாகாது” என்றது. கீரி,  “அதிசயக்கீரியே இந்த வேள்வியை விடச் சிறப்பாக ஓர் ஏழை அந்தணன் என்ன செய்திருக்க முடியும்? நீ ஏதோ உளறுவது போல் தெரிகின்றது” என்றனர் அவையினர்.  “அந்த அந்தணன் செய்த வேள்வி பற்றிக் கூறுகின்றேன். அறிந்த பின்பு, கருத்தைக் கூறுங்கள். அவசரப்பட்டு ஏதும் பேசாதீர்கள்!” என்றது கீரி.  “ஓர் ஏழைப் பிராமணன் குருநிலத்திற்கு அருகில் சிறு குடிசையில் வாழ்ந்து வந்தான். அவன் குடும்பத்தில், அவன், அவனுடைய மனைவி, மகன், மருமகள் ஆக நால்வர் இருந்தனர்.  “அந்த அந்தணன் அறுவடை வயல்களில் சிந்திக் கிடக்கும் தானியமணிகளைப் பொறுக்கி வருவான். அவன் மனைவி அதைக் குத்திச சமைப்பாள். நால்வரும் உண்பர். பல நாள் தானிய மணி போதுமான அளவு கிடைக்காவிடின் அரைப்பட்டினி கால்பட்டினியாயிருப்பர்.  ஒரு நாள் சிறிதளவே தானியம் கிடைத்தது. அதைச் சமைத்து நாலு பங்காக்கி, நான்கு தட்டுக்களில் பரிமாறிக் கொண்டிருந்தாள் குடும்பத் தலைவி. அந்நேரம் ஒரு விருந்தினர் வந்து சேர்ந்தார். அவருக்குத் தாள முடியாத பசி, “எனக்கு ஏதாவது உணவு தர இயலுமா?” என்று கேட்டார்.  குடும்பத்தலைவர் தன்பாகத்து உணவை அவர் முன் வைத்தார். அதனால் அந்த விருந்தினர் பசி அடங்கவில்லை. அந்தணர் மனைவி, தன் பங்கை அவருக்குத் தரமுன் வந்தாள்.  “மனைவியைக் காப்பாற்றுவது கணவன் கடமை. நீயோ பசியோடிருக்கின்றாய்! உன் உணவை வாங்கி விருந்தினர்க்கு அளிப்பது அறமாகாது” என்று அந்தணர் அவள் தந்ததை மறுத்தார். “தருமமும் பொருளும் நம் இருவருக்கும் பொதுவானது. விருந்தினர் பசி தணிப்பது இல்லறத்தார் கடமை. ஆதலால், என் உணவையும் விருந்தினர்க்கே அளித்து விடுங்கள்” என்று வற்புறுத்தினாள் மனைவி.  அப்போது, "உங்கள் இருவர் பங்கு உணவும் விருந்தினர்க்குப் போதாது என் பங்கையும் தருகின்றேன்” என்று மகனும் தன் பங்கை விருந்தினரின் முன் வைத்தான்.  மருமகளும் “இந்த உணவு விருந்தினர்க்குப் போதாது. என் உணவையும் தருகின்றேன்” என்று தன் பங்கையும் பரிமாறிவிட்டாள்.  “பிற வேள்விகளில் செய்யும் தானங்களை விட நீங்கள் செய்தது மிகமிகச் சிறந்தது” என்று விருந்தினர் வியந்து பாராட்டினார்.  “அத் தருணத்தில் அழகான விமானம் ஒன்று வானின்று இறங்கியது. அந்த ஏழை அந்தணரையும் அவர் குடும்பத்தாரையும் ஏற்றிக் கொண்டு மோட்ச உலகிற்கு ஏகியது” அந்த விமானம். விருந்தினரும் சென்று விட்டார். “அவர்கள் சென்ற பிறகு விருந்தினர் உண்ட இடத்தில் சிந்திக்கிடந்த பருக்கையில் புரண்டேன். என் உடலில் பாதி பொன்மயமானது. மறுபாதியையும் பொன்மயமாக்க வேண்டும் என்று. வேள்வி நடக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று புரண்டு பார்த்து வருகின்றேன். மறுபாதி பொன்மயமாகவே இல்லை இங்கே நடக்கும்” வேள்வியிலும் அதே நிலைதான்.  “ஆதலால் அந்த ஏழை அந்தணர் குடும்பம் நடத்திய வேள்விக்கு எந்த வேள்வியும் ஈடாகாது” என்று கூறிவிட்டு மறைந்தது  தன்னைவிடச் சிறந்த வேள்வியாளர் இலர் என்ற கர்வம் தருமனுக்குத் தலை தூக்கியது. அந்தக் கர்வத்தை இறைவன் கீரியில் வடிவில் வந்து அழித்து ஆட்கொண்டான். தன் வேள்வியைப் பழித்ததற்காகக் கீரியின் மேல் தருமன் சினம் கொள்ளவில்லை. தன்னை அகந்தைப் படுகுழியிலிருந்து ஈடேற்ற வந்த தெய்வம் என்று கீரி சென்ற திசையை நோக்கி வணங்கினான் தருமன்.  18. துரோணரும் ஆடுகளும் துரியோதனன் முதலிய நூற்றுவர்க்கும் தருமன் முதலியயோருக்கும் வில்லாசிரியர் துரோணர்.  அவருக்கு ஒரே மகன் அவன் பெயர் அசுவத்தாமன். அவன் தாய் வயிற்றில் பிறக்காமல், இறையருளால் தானே தோன்றியவன் ஆதலால் அவனுக்குத் தாய்ப்பால் கிடைக்கவில்லை.  பசுப்பால் வாங்குவதற்கும் வசதி இல்லை. தம் நண்பனான பாஞ்சால மன்னன் துருபத மன்னனிடம் சென்று, ஒரு பாற்பசு தரும்படி கேட்டார் துரோணர்.  பாஞ்சாலன் பாற்பசு தராமல் துரோணரை அவமதித்து அனுப்பினான் துரோணர் பால் கிடைக்காமல் அவதிப்படுகின்றார் என்று கேள்விப்பட்ட ஓர் வள்ளல் இரு பாலாடுகளை வழங்கினார்.  அந்த ஆடுகளைக் கணட கள்வன் ஒருவன் அவற்றைத திருடிச் செல்லத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தான் ஒர் அரக்கன் துரோணரைத் தனக்கு ஆகாரம் ஆக்கிக் கொள்ளக் காலம் கருதியிருந்தான் ஒருநாள், கள்வன் ஆடுகளைத் திருடத் துரோணரின் ஆசிரமத்தின் அருகே பதுங்கியிருந்தான்  அந்நேரம் அரக்கனும் துரோணரைப் பிடித்து உண்பதற்காக அங்கே வந்தான் அரக்கனும் திருடனும சந்திததுக கொண்டனர் ஆடு திருட வநததாகத திருடன் சொனனான முனிவரைப் புசிக்க வந்ததாக அரக்கன் கூறினான் இருவரில் யார் முதலில் தம் தொழிலை முடிப்பது என்பதில் விவாதம் ஏற்பட்டது. அரக்கன், “நான் தான் முதலில் முனிவரைத் தின்பேன்” என்றான், திருடன், “நான் தான் முதலில் ஆடுகளைத் திருடுவேன்” என்றான் விவாதம் வலுத்தது.  துரோணர் நிலைமையை உணர்ந்து கொண்டார். தன் தவ வலிமையால் அரக்கனைச் சாம்பலாக்கி விட்டார் திருடனைக் கல்லாகச் சபித்தார்.  குரு நிலத்தை அடுத்த காட்டில் இன்றும் அந்தக்கல் இருப்பதாகப் பேசிக் கொள்கின்றனர். 19. சகாதேவனின் தரும நீதி ஒரு காட்டில் ஒர் அதிசய விலங்கு வாழ்ந்திருந்தது. அதன் பாதிப்பகுதி விலங்கு வடிவம். மறுபாதி மனித வடிவம். ஆதலால், அது புருட மிருகம் என அழைக்கப்பட்டது.  அளவில்லாத வலிமை படைத்த அது. அக்காட்டையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.  வேற்றாளோ வேற்று மிருகமோ அக்காட்டில் புகுந்தால், உடனே அவை, அதற்கு இரையாகி விடும்.  ஒரு நாள் வீமசேனன், எப்படியோ அக்காட்டில் நுழைய நேர்ந்தது. அவனைக் கண்ட புருட மிருகம், இன்று நமக்கு நல்ல விருந்து கிடைத்தது" என்று மகிழ்ந்து வீமனைப் பிடிக்க விரைந்தது. புருட மிருகத்தைக் கண்ட வீமன், தன் நாட்டை நோக்கி ஒடலானான்.  அவனைத் துரத்திய புருடமிருகம், அவனைப் பிடித்து விட்டது. ஆனால், அது பிடித்த போது, அவன் வலக்கால் தன் நாட்டிலும் இடக்கால் அக்காட்டிலும் இருந்தது.  “நீ என்னைப் பிடித்தது தவறு. நான் என் நாட்டைத் தொட்டுவிட்டேன். என்னை விட்டுவிடு” என்றான் வீமன்.  “இல்லை! இல்லை! நீ என் காட்டில் தான் பிடிபட்டாய்! ஆதலால் நான் உன்னை உண்பதில் தவறு இல்லை” என்று வாதிட்டது புருடமிருகம்.  “நம் வழக்கை நாமாகத் தீர்க்க முடியாது. இந்நாட்டு அரசரிடம் சென்று நீதிகேட்போம். அவர் சொற்படி நடப்போம்” என்றான் வீமன். வீமன் யோசனையைப் புருட மிருகமும் ஒப்பியது. இருவரும் தருமன் சபையை அடைந்து, தம் வழக்கை எடுத்துரைத்தனர்.  “உம் வழக்கில் தீர்ப்பு உரைப்பதற்குமுன், வீமன் பிடிபட்ட இடத்தைப் பார்க்க வேண்டும்” என்றான் தருமன்.  உடனே தருமனும் அமைச்சரும் வீமனும் புருடமிருகமும் அந்த இடத்தை அடைந்தனர்.  இடத்தை ஆராய்ந்த தருமன் தன் தீர்ப்பை வழங்கினான். “புருடமிருகமே! உன் பிரதிவாதி என் தம்பி என்பதற்காகப் பாரபட்சமாகத் தீர்ப்பு வழங்கமாட்டேன். உன் காட்டில் வீமன் உடலின் ஒரு பகுதி இருந்துள்ளது. மறுபகுதி எங்கள் நாட்டில் இருந்துள்ளது. ஆதலால், உன் காட்டில் இருந்த வீமன் உடலில் சரி பாதியை நீ உண்ணலாம்” என்றான் தருமன்.  தண்டனை பெறுபவன் தம்பி என்று கூடப் பாராமல், நீதி வழுவாமல் தீர்ப்பு வழங்கிய தருமனைப் புருடமிருகம் பாராட்டியது.  தீர்ப்பின்படி வீமன் உடலின் பாதியை உண்ணத் தொடங்கியது.  அப்போது சகாதேவன் முன்னே வந்தான். பாண்டவரில், அனைத்து நீதி நூல்களும் அறிந்தவன் சகாதேவன். பகை என்று வெறுப்பதும் உறவு என்று விரும்புவதும் செய்யாத சமத்துவ அறிஞன்.  அத்தகைய சகாதேவன், தன் அண்ணனை நோக்கி, “அண்ணா! நீதி தவறாமல் தீர்ப்பு வழங்கினீர்கள். ஆனால் அந்தத் தீர்ப்பை நிறைவேற்றுவது எப்படி என்று தாங்கள் நிர்ணயமாகக் கூறவில்லையே” என்றான்.  “தம்பி சகாதேவா அந்தத் தீர்ப்பை நிறைவேற்றுவது எப்படி என்பது சகலகலை வல்லவனாகிய உனக்குத்தான் நன்கு தெரியும். அதனை நீயே சொல்” என்றான் தருமன்.  “அண்ணா! புருடமிருகம் வீமன் உடலில் பாதி உண்னும் போது மறுபாதியில் சிறு இரணமோ வலியோ ஏற்படலாகாது. அந்த வகையில் புருடமிருகம் உண்ணட்டும்” என்றான் சகாதேவன். தருமன் சொன்ன தீர்ப்பைக் கண்டு அவனைப் பாராட்டிய புருடமிருகம், சகாதேவன் வழங்கிய திருத்தம் கண்டு மிகமிக மகிழ்ந்தது.  புருடமிருகம் தருமனை நோக்கி, அரசே! நான் அறக்கடவுள். உன் அறநீதியைப் பரிசோதிப்பதற்காகவே இப்படி ஒரு சோதனை மேற்கொண்டேன். இந்தச் சோதனையில் நீ வெற்றி பெற்று விட்டாய். வீமன் தன் வலிமையால் என்னைக் கொல்லமுடியும். ஆயினும் அறத்துக்குக் கட்டுப்பட்டுத் தண்டனை பெற முன் வந்தான். சகாதேவன் தான் கற்ற கலைத் திறத்தாலும் சமயோசித புத்தியாலும் அறநுணுக்கத்தை உணர்த்தினான்.  “அறம் கர்ப்பதே கடனாகக் கொண்ட நீவிர் நெடுங்காலம் வாழ்க” என்று வாழ்த்தி, புருடமிருக உருவம் நீங்கிய அறக்கடவுள் மறைந்தது.    20. கண்ணனின் உண்மை வடிவம்   மாபாரதப் போர் வாராமல் தடுக்க வழி என்ன என்று சகாதேவனைக் கேட்டான் கண்ணன்.  "நீ பாரத அமரில் யாவரையும் நீறுஆக்கிப்  பூ பாரம் தீர்க்கப் புகுந்தாய்! புயல்வண்ணா!  கோபாலா! போர்ஏறே! கோவிந்தா! நீஅன்றிப்  மா பாரம் தீர்க்க மற்றார்கொல் வல்லாரே"  என்று கூறத் தொடங்கிய சகாதேவன், "கண்ணா! நேராகக் கையால் பிடித்து நின்னை நான் கட்டுவனேல், வாராமல் காக்கலாம் மாபாரதம்" என்று முடித்தான்.  "சகாதேவா! என்ன கூறுவாய்! நீ எதைச் செய்ய முடிந்தாலும், எல்லாம் வல்ல இறைவனாகிய என்னைக் கட்ட இயலுமா?" என்றான் கண்ணன்.  "உன்னை நீ தானும் உணராதவனான கண்ணா! உன் உண்மை உருவத்தைக் காட்டு நான் கட்டுகின்றேனா? இல்லையா? பார்!" என்றான்.  உடனே கண்ணன், தான் ஒருவனே பதினாறு ஆயிரம் வடிவு கொண்டு சகாதேவன் எதிரில் நின்றான். "இத்தனை வடிவங்களில் என் மூல வடிவம் கண்டு கட்டு பார்ப்போம்" என்றான் கண்ணன்.  பெருஞானியாகிய சகாதேவன், தன் பக்தித் திறத்தில் மூல வடிவை அடையாளம் கண்டு அதனைத் தன்மனத்தினால் இறுக்கமாகப் பற்றிக் கொண்டான்.  சகாதேவன் மனத்தின் இறுக்கம் பொறுக்க இயலாமல் கண்ணன் "சகாதேவா! நீ வென்றுவிட்டாய்! நீ மனத்தால் கட்டிய இறுக்கம் தாங்க இயலவில்லை! என்னை விட்டு விடு!" என்று கெஞ்சினான் எம்பெருமான்.  இச்செய்தி மாபாரதத்தில் வில்லிபுத்துசாழ்வார் கூறியது.  கண்ணனைக் கட்டியதுபோல், இராமனையும் கட்டி ரசிக்க வேண்டும் என்று பெரியாழ்வார் விரும்பினார். கண்ணன் சகாதேவன் மனத்தால் கட்டுண்டான். இராமனைப் பெரியாழ்வார் மல்லிகை மா மாலை கொண்டு, கட்டுவித்தார்.  திருமணம் ஆன புதிது. சீதையும் இராமனும் நூல் நடுவே நுழையினும் பொறுத்துக் கொள்ள இயலாத அன்றில்கள் போல் இணை பிரியாமல் நெருங்கி காதல் களியில் ஈடுபட்டனர்.  வேடிக்கைப் பேச்சுக்களும் வினோதக் கதைகளும் பரிமாறிக் கொண்டிருந்தனர்.  "என்னிடம் இவ்வளவு நெருங்கிப் பழகுகின்றாயே! ஏதாவது காரணத்தால் நான் பிரிந்து செல்ல நேர்ந்தால் என்ன செய்வாய்!" என்று கேட்டான் இராமன்.  "என்ன செய்வேனா? பிரியவே முடியாதபடி கட்டிப் போட்டு விடுவேன்!" என்றாள் சீதை!  "என்னைக் கட்ட உன்னால் முடியுமா?" இராமன்.  "இதோ கட்டிக்காட்டுகின்றேன்" என்று கூறிக் கொண்டே சீதை, தன் கூந்தலில் சுற்றியிருந்த மல்லிகை மாலையை அவிழ்த்து, அதைக் கொண்டு அருகிலிருந்த சண்பகக் கொடியில் கட்டி விட்டாள்.  மல்லிகைக் கொடி தானே! இராமன் எளிதில் அறுத்துவிட மாட்டானா என்று நமக்குத் தோன்றும்.  அது வெற்று மல்லிகைக் கொடியா?  கண்ணனைக் கட்டிய சகாதேவன் மனத்தன்பைவிடப் பலமடங்கு அன்பு அம்மல்லிகை மாலையில் பிணைந்துள்ளதே! மல்லிகை மாலையை அறுக்கலாம். அதில் பிணைந்துள்ள காதலன்பை இராமனால் அறுக்க இயலுமா?  அல்லியம்பூ மலர்க்கோதய்! அடிபணிந்தேன் விண்ணப்பம்! சொல்லுகேன் கேட்டருளாய்! துணைமலர்க்கண் மடமானே! எல்லியம்போது இனிதிருத்தல் இருந்ததோர் இடவகையில் மல்லிகைமா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததுமோர் அடையாளம்.  என்று இராமன், சீதையைத் தேடிக் காண அனுமனை அனுப்பிய போது. இச்செய்தியை அடையாளமாகக் கூறியனுப்பினான்.  21. அர்ச்சுனன் அம்புக்கு அஞ்சிய தேவர்கள்   பாண்டவரும் கெளரவரும் துரோனரிடம் வித்தை பயின்றனர். பாண்டவர் புத்திசாலிகள் ஆகையால், வித்தையில் மிகமிகச் சிறப்புற்றனர். கெளரவர் எவ்வளவு முயன்று கற்றும் பின் தங்கியே நின்றனர்.  ஐராவத பூசைப் பெருவிழா நடத்தினால் தாங்களும் பாண்டவர்போல் புத்திசாலிகளாகலாம் என்று கெளரவர் கருதினர்.  பெரும் பொருட் செலவு செய்து, ஐராவத யானையின் உருவமைத்துப் பூசை செய்துமுடித்தனர்.  தானம் தட்சினைகள் தாராளமாக வழங்கினர்.  இதைக் கண்ட குந்தி தேவிக்கும் ஓர் ஆசை பிறந்தது. நம் மக்களும் இத்தகைய ஐராவத பூசை செய்தால் சிறப்படையலாமே என்று சிந்தித்தாள். ஆனாலும் நாம் கெளரவர் போல் பெரும் பொருட்செலவு செய்ய இயலாதே! என்று கவலையுற்றாள்.  அன்னையின் கவலை அறிந்த அர்ச்சுனன், அக்கவலையைக் கண்டிப்பாகத் தான் போக்குவதாக உறுதி அளித்தான்.  கெளரவர் செய்த பூசையைவிடப் பலமடங்கு சிறப்பாகச் செய்து காட்டவேண்டும் என்று கருதினான் அர்ச்சுனன்.  ஐராவதத்தின் உருவத்தைத் தானே அவர்கள் பூசித்தார்கள்? நாம் ஐராவத யானையையே நேரில் கொணர்ந்து பூசிப்போம் என்பது அவன் திட்டம்.  ஐராவதத்தை வரவழைப்பது எப்படி?  தேவர் தலைவனுக்கு ஒரு கடிதம் எழுதினான் அர்ச்சுனன். அதைத் தன் அம்பில் பூட்டி விண்ணுலகுக்கு ஏவினான்.  தேவேந்திரன் சபையில் அவன் காலடியில் சென்று விழுந்தது அக்கடிதம்.  “அன்புள்ள தந்தையே! கெளரவர்கள் எங்களுக்கு இழைத்துவரும் தீமைகள் கொஞ்சமல்ல என்பதை அறிவீர்கள். அண்மையில் ஐராவத பூசைவிழா நடத்திப் பெரும் புகழ் பெற்றமையால் இறுமாப்பு அதிகமாகி விட்டது. அந்த இறுமாப்பினால், எங்களுக்கு மேலும் பல தீமைகள் செய்யத் திட்டம் தீட்டி வருகின்றனர்.  கெளரவர் எடுத்த விழாவைவிடச் சிறப்பாக நாங்கள் விழா கொண்டாடினால்தான் அவர்கள் கர்வம் அடங்கும். எங்களுக்குத் தீமை செய்யாமல் இருப்பர்.  ஐயா! ஆதலால், தங்கள் ஐராவதத்துடன் தாங்களும் விழாவுக்கு வந்து விழாவைச் சிறப்பிக்க வேண்டுகின்றேன்”  என்று அக்கடிதத்தில் எழுதப்படட்டிருந்தது.  கடிதத்தைக் கண்ட இந்திரன் புறப்படத் தயாரானான். தேவலோகத்திலுள்ள தன் பரிவாரங்களையும் உடன் வருமாறு கூறினான்.  மானிடர் அழைப்பை வானவர் ஏற்பது இழிவான செயல் என்று அவர்கள் வர மறுத்தனர். ஏன்? இந்திரன் மனைவி இந்திராணி கூட வர மறுத்தாள்.  தேவேந்திரன் என்ன செய்வான்? அப்போது அங்கு வந்த நாரதரிடம் “நாரதபகவானே! அர்ச்சுனன் நடத்தும் பூசைக்கு வரத் தேவர் ஒருவரும் இசையவில்லை. நான் மட்டும் அவர்கள் விருப்பத்துக்கு மாறாக எப்படிச் செல்வது? இதற்கு ஒரு வழி நீவிர்தான் கூற வேண்டும்” என்றான் இந்திரன்.  தேவர்கள் வர மறுத்த செய்தி, நாரதர் மூலம் அறிந்த அர்ச்சுனனுக்குச் சினம் மூண்டது. விண்ணுலகத்தை நோக்கித் தன் காண்டீபத்தின் அம்புகளைச் செலுத்தலானான். அம்பின் அடிபொறுக்க முடியாத தேவர்கள் செய்வதறியாது திகைத்தனர். தங்கள் குருவாகிய வியாழ தேவரை அணுகினர். என்ன செய்யலாம்? அர்ச்சுனன் சினத்திலிருந்து எப்படித் தப்பலாம் என்று யோசனை கேட்டனர்.  வியாழபகவான் கூறிய அறிவுரையால் தேவர்கள் அனைவரும் ஐராவத யானையுடன் பூசை நடக்கும் இடத்துக்கு வந்தனர். அர்ச்சுனன் அம்புகளால் ஆகாயம்வரை ஒரு ஏணி அமைத்தான். அதன் வழியாக மகளிரும் மைந்தரும் சுகமாக இறங்கி வந்தனர்.  பூசைக்குரிய செலவு முழுவதும் விண்ணவர் ஏற்றுக் கொண்டனர். கெளரவரின் பூசையை விடப் பலமடங்கு சிறப்பாகப் பாண்டவர் பூசை அமைந்தது.  நாட்டு மக்கள் மகிழ்ச்சியில் துள்ளினர். கெளரவர் மட்டும் பொறாமைத் தீயில் வெதும்பினர் என்று சொல்லவும் வேண்டுமோ?  22. மலைபோல் குவிந்த மலர்கள்   அருச்சுனன் பெருவீரன். தெய்வபூசை தவறாமல் செய்பவன். பூசை செய்யத் தவறுமாயின், உணவே உண்ண மாட்டான்.  அத்தகைய தெய்வ பக்தனிடமும் ஒரு குறை இருந்தது. உலகத்தில் தன்னைவிடச் சிறந்த பக்தர் இலர் என்று எண்ணும் இறுமாப்பே அது.  அதனால், வீமனைச் சற்று ஏளனமாக நோக்குவான்.  "இவன் தெய்வபூசையே செய்வதில்லை. எந்நேரமும் வண்டிவண்டியாய் உண்டி உண்பதிலேயே ஆர்வம் காட்டுகிறான்" என்பதால், வந்த ஏளனம் அது.  கண்ண பெருமான், அருச்சுனனிடத்துள்ள இந்த அகந்தையை அறிந்தார். "கீதை உபதேசம் நேரில் கேட்டும் அகந்தை போகவில்லையே! அகந்தை இருந்தால், பிற நல்ல குணங்களையெல்லாம் மழுங்கச் செய்து விடுமே! ஆதலால், இவன் அகந்தையைத் துடைக்க வேண்டும்" என்று எண்ணிச் செயல்படக் காலம் எதிர்நோக்கியிருந்தார்.  பாரதப்போரில் அருச்சுனன் மகன் அபிமன்யுவைச் சயததிரதன் என்பவன் கொன்று விட்டான்.  "என் மகனைக் கொன்றவனைக் கொன்றே தீருவேன்" என்று அருச்சுனன் சபதம் செய்தான்.  அந்தச் சபதம் நிறைவேற வேண்டுமாயின், சிவபெருமானிடம் பாசுபதம் என்னும் ஆயுதம் பெறவேண்டும். அதற்காக சிவன் இருக்கும் கயிலை மலைக்கு அருச்சுனனை அழைத்துக் கொண்டு, கண்ணன் புறப்பட்டான்.  பனியால் மூடப்பட்டிருந்த கயிலை மலைப்பகுதியில் புல், பூண்டு கூட முளைப்பதில்லை.  ஆனால் வழியெங்கும் மலர்கள் குவிந்தவண்ணமே இருந்தன.  சிவகணங்கள் என்னும் சிவத் தொண்டர்கள், குவியும் மலர்களை அப்புறப்படுத்திக் கொண்டே இருந்தனர். ஒருமுறை அப்புறப்படுத்தப்பட்ட இடத்தில் மறுகணமே மலர்கள் குவிந்துவிடும். மலர்களை அள்ளி அள்ளி அப்புறப்படுத்திச் சிவகணங்கள் ஓய்ந்து சோர்ந்து போய்க் கொண்டிருந்தனர்.  இக்காட்சியைக் கண்ட அருச்சுனன், கண்ணனிடம் "எம்பெருமானே பனி மூடிய பகுதியில் மலர்கள் மலர இயலாது. ஆனால், மலர்கள் மலைபோல் குவிந்து கொண்டே இருக்கின்றனவே! இக்காட்சி வியப்பாக இல்லையா?" என்று கேட்டான்.  "அருச்சுனா! இம்மலர்கள் இங்குப் பூப்பவை அல்ல. நிலவுலகில் மலர்வன. அவை அனைத்தும் இங்கே வந்து குவிகின்றன" என்றான் கண்ணன்.  "நிலவுலக மலர்கள் தானாக எப்படி இங்கு வர இயலும்?" என்று கேட்டான் அருச்சுனன்.  "தானாக இம்மலர்கள் இங்குக் குவியவில்லை. நிலவுலகில் உன் அண்ணன் வீமன், தெய்வத்துக்கு அருச்சனை செய்த மலர்கள் இவை. அவன் அருச்சனையில் பயன்பட்ட மலர்கள் இங்குக் குவிக்கின்றன" என்றான் கண்ணன்.  "வீமனாவது, அருச்சனை செய்வதாவது? அவனுக்கு அருச்சனை செய்ய நேரந்தான் ஏது? உணவு உண்ணவே நேரம் போதவில்லையே அப்படியிருக்கும் போது, அவன் எப்போது அருச்சனை செய்வான்? அப்படியே அருச்சனை செய்தாலும், யாராவது கண்டிருக்கமாட்டார்களா? இதுகாறும் யாரும் கண்டதில்லையே! நீ கூறுவதை எப்படி நம்ப முடியும்" என்று அருச்சுனன் நீண்ட வினா எழுப்பினான்.  "ஆம்! அருச்சுனா வீமன் அருச்சனை செய்வதை யாரும் பார்க்கவில்லை. பார்க்கவும் முடியாது. அவன் உன்னைப் போல், தெய்வ உருவம் நிறுவி, மந்திரங்கள் ஓதி, மலர்கள் தூவி அருச்சனை செய்வதில்லை.  அவன் செய்யும் அருச்சனை மானசீகமானது; மனத்தாலேயே செய்யப்படுவது. அவன் எங்காவது சென்று கொண்டிருக்கும்போது, கண்ணில் பட்ட மலர்களைப் பார்த்து இவை தெய்வ அருச்சனைக்கு உரியவை ஆகட்டும்! என்று மனத்தால் நினைப்பான். உடனே அம்மலர்கள் அனைத்தும் இங்கே வந்து மலைமலையாகக் குவிந்து விடும். நீ நினைப்பது போன்று வீமன் உண்ணும் பிண்டம் அல்ல. சிறந்த தெய்வ பக்தன். அவனோடு ஒப்பிடும்போது, நீ பக்தனே அல்ல என்ற நிலைக்குத் தள்ளப் படுவாய்! ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பக்தனை நீ ஏளனம் செய்வதை நான் அறிவேன். இனியாவது ஏளனம் செய்வதை விட்டுவிடு!  "நீ தான் சிறந்த பக்தன் என்ற அகந்தை உன்னிடம் உள்ளது. தெய்வபக்திக்குப் பெருந்தடையாக இருப்பது அகந்தையே! நாயினும் கடையேன் என்று தன்னை நினைப்பவனே உண்மைப் பக்தன் ஆவான்".  என்று கண்ணன் கூறிய மொழிச்சுடரால் அருச்சுனன் நெஞ்சில் மண்டியிருந்த அகந்தை அரக்கு உருகி இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது.  தன்னைத் திருத்தி ஆட்கொள்வதற்குக் கண்ணன் செய்த உபதேசத்தை எண்ணி, அருச்சுனன் மெய்சிலிர்த்து நின்றான். அன்று முதல் வீமனிடம் மிக்க பணிவுடன் நடந்து கொண்டான் என்பதைச் சொல்ல வேண்டுமோ?  23. தந்தையின் தவம்   பாரதம் ஐம்பத்தாறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. அவற்றுள் ஒன்று சிந்து.  அந்நாட்டு மன்னனுக்கு ஒரே மகன். பெயர் சயத்திரதன். அவன் வளர வளரத் தீய குணங்களும் அவனிடம் வளர்ந்தன. பிறர்க்குத் துன்பம் இழைப்பதைப் பெருமகிழ்ச்சியாகக் கருதினான். யாராவது அவன் செய்வது தவறு என்று சுட்டிக் காட்டினால், அவர்களைத் தண்டிப்பான்.  சிந்து மன்னன், விருத்தக்ஷத்திரன் தன் மகன் செய்யும் கொடுமைகளை அறிவான். ஆயினும் ஒரே மகன் என்ற பாசத்தால், அவனைக் கண்டிக்கவே மாட்டான்.  திருமணம், செய்து வைத்தால் அவன் கொடுங்குணம் குறையலாம். என்று எண்ணிய தந்தை, அவனுக்குத் துரியோதனன் தங்கை துச்செள்ளையைத் திருமணம் செய்து வைத்தான்.  தந்தையின் எதிர்பார்ப்பு வீணானது. சயத்திரதன் கொடுமை எல்லை கடந்து போயிற்று.  "இத்தகைய கொடியவனுக்குக் கேடு நேருமே! யாரிடமாவது சிக்கித் தலை அறுப்புண்டு சாகவுங்கூடுமே! இனி இவனைத் திருத்தவே இயலாது. இவன்கேடு அடையாமல் காக்கவும் வேண்டும். இதற்கு என்னவழி என்று ஆராய்ந்தான்.  "தவம் செய்து இறைவனிடம் வரம் பெற்று நம் ஒரே மகனைக் காப்போம்" என்று எண்ணினான். காட்டின் நடுவே சியமந்தகம் என்ற ஒரு தடாகம்(குளம்) இருந்தது. அதன் கரையெங்கும் மரங்கள் வானுற ஓங்கி வளம்பெற வளர்ந்திருந்தன. வெயில் நுழைபு அறியாத சோலைகளாக அவை இருந்தன.  தவம் செய்வதற்கு ஏற்ற இடம் இதுதான் என்று அதனைத் தேர்ந்தெடுத்தான்.  "என் மகனைக் கொன்று அவன் தலையை நிலத்தில் இட்டவன் தலை நொறுங்கவேண்டும்" என்று தான் இறைவனிடம் கேட்க வேண்டிய வரத்தையும் தீர்மானித்துக் கொண்டான்.  பல ஆண்டுகள் தவம் செய்தான். வரமும் பெற்றுவிட்டான். இனித் தவத்தை முடிக்கலாம் என்ற நிலை.  அப்போது எதிர்பாராத ஒரு நிகழ்ச்சி நடந்தது. பாரதப் போரில் அபிமன்யுவைச் சயத்திரதன் வஞ்சனை செய்து கொன்று விட்டான்.  இதை அறிந்த அபிமன்யுவின் தந்தை அருச்சுனன் "சயத்திரதனைக் கொன்றே தீருவேன்" என்று சபதம் பூண்டான். கண்ணன் உதவியால் மறுநாள் மாலை அருச்சுனன் ஓர் அம்பால் சயத்திரதன் தலையைக் கொய்தான்.  உடனே கண்ணன் "அருச்சுனா! அந்தத் தலையை நிலத்திற்படவிடாதே. மேலும் மேலும் அம்பு தொடுத்துச் சியமந்தக தடாகத்தில் தவம் செய்து கொண்டிருக்கும் இவன் தந்தை கையில் விழப்பண்ணு" என்று ஏவினான்.  கண்ணன் சொன்னபடியே அருச்சுனன் செய்தான். சயத்திரதன் தலை, தவம் செய்து கொண்டிருந்தவனுடைய விரித்தகையில் விழுந்தது. எதிர்பாராது விழுந்தமையால், துணுக்குற் தந்தை, தன்மகன் தலையைக் கீழே போட்டான்.  அவன் பெற்ற வரம் பலித்துவிட்டது. "என் மகன் தலையை நிலத்தில் இட்டவன் தலை நொறுங்க வேண்டும்" என்பது தானே அவன் பெற்ற வரம்.  இப்போது நிலத்தில் இட்டவன் அவன் தானே! அக்கணமே அவன் தலை நொறுங்கி உயிர் இழந்தான். திருந்தாத தீயவனைக் காக்க எண்ணியவன் அத்தீயவனோடு தானும் மாண்டான்.  தீயவர் யாராயினும் திருத்த முயலுதல் வேண்டும். திருத்த இயலாவிடின், தீமைக்குத் தக்க தண்டனை தரவேண்டும். அந்தத் தண்டனை பிறர் தந்தால், தன்வினை தன்னைச் கூடாது விடுமா என்று ஆறுதல் பெறவேண்டும்.  இந்த நீதிக்கு மாறாகத் தவம் செய்த பெற்ற வரம், கருதிய பயன் தரவில்லை. மாறாகத் தவம் செய்தவனையே அழித்தது.    24. பழத்தோலில் சுவை கண்ட பரந்தாமன்   பாண்டவர் தூதளாகப் பரந்தாமன் அத்தினபுரம் சென்றான். பரந்தாமன் வருகை அறிந்த ஆன்றோர் அனைவரும் அவனை எதிர்கொண்டனர்.  கண்ணன் இராசவீதி வழியாக வந்து கொண்டிருந்தான். வீதியின் இருமருங்கிலும் வானம் அளாவிய மாளிகைகள் கண்ணனை வரவேற்பதற்காக அலங்கரிக்கப்பட்டு விளங்கின.  முதல் மாளிகையைக் கண்ட கண்ணன் "இது யாருடையது?" என்றான். "என்னுடையது" என்று பதில் வந்தது. பதில் சொன்னவன் துரியோதனன்.  இப்படியே ஒவ்வொரு மாளிகையையும் கண்னன் கேட்டுக் கொண்டே வந்தான். அவனைத் தொடர்ந்து எதிர் கொண்டவர்கள் என்னுடையது என்னுடையது என்றே சுட்டிக் காட்டினர்.  துரோணர், வீடுமர். கிருபர். துச்சாதனன், கர்ணன் முதலியோர் அனைவரும் அவ்வாறு கூறியவருள் முக்கியமானவர்கள்.  கண்ணன். அவர்கள் வரவேற்பைப் பொருட்படுத்தாமல், சென்றுகொண்டேயிருந்தான். வீதியின் கடைசிப் பகுதிக்கு வந்தாகி விட்டது. அங்கே ஒரு கூரைச் சிறுகுடில். தவக்குடில் போல விளங்கியது. வழக்கம் போல் "இது யாருடையது?" என்றான் கண்ணன்.  "இது தேவரீரது திருமாளிகை" என்று பதில்வந்தது. பதில் வந்த திசையை நோக்கினான் எம்பெருமான். அங்கே மகாத்மா விதுரர். பணிவுடன் கண்ணனை வணங்கியவண்ணம் காட்சியளித்தார். அவரது தோற்றம் அடக்கமே உருவம் கொண்டு எதிரே நிற்பது போன்றிருந்தது.  பக்தவத்சலனான பாண்டவர் தூதன், "அப்படியா? இப்பெருநகரில் எனக்கும் ஒரு மாளிகையுள்ளதே! நான் அதில் தங்குவதே முறை" என்று கூறிக் கொண்டு, அந்தக் குடிலுக்குள் நுழைந்துவிட்டான்.  தனது சிறு குச்சிலில் தற்பரன் எழுந்தருளிவிட்டான் என அறிந்த விதுரன், பூரித்துப் போனான்.  எதிர்பாராமல் வந்த விருந்தினன் கண்ணனை எவ்வாறு உபசரிப்பது? ஏதாகிலும் பால், பழம் வாங்கி வரலாம் என்று விதுரன் வெளியே சென்று விட்டான்.  விதுரன் வீட்டில் அவன் துணைவி மட்டும் தனியாக இருந்தார். கண்ணனை எதிர்பாராமல் சந்தித்த அந்த அம்மையாரும் விம்மிதமுற்றுச் செய்வதறியாது திகைத்து நின்றார்.  கண்ணன் அமர்வதற்கு ஓர் ஆசனங்கூடத் தரவேண்டும் என்று தோன்றவில்லை.  கண்ணன் ஒன்றையும் எதிர்பாராமல், தரையில் அமர்ந்து கொண்டான்.  "அம்மா எனக்குப் பசிக்கின்றது. ஏதாவது கொண்டு வாருங்கள்!" என்றான் கண்ணன்.  வீட்டில் இன்னும் சமையல் ஆகவில்லை. விதுரன் ஏதாவது வாங்கி வந்த பிறகுதான் சமையல் ஆக வேண்டும்.  அதற்குள் பரம்பொருள் பசிக்கின்றது என்கின்றாரே அந்த அம்மையார் செய்வதறியாமல் இயந்திரம் போல் இயங்கத் தொடங்கினாள்.  சமையலறையில், எப்போதோ சமைத்த கீரை மட்டும் இருந்தது. காய்ந்து போயிருந்த அந்தக் கீரையைக் கொண்டுவந்து கண்ணன் முன் வைத்தாள்.  கண்ணன் கைநிறைய வெண்ணெய் எடுத்துண்டு பழகியவன் அல்லவா? அந்தப் பழக்கத்தால் போலும்! கீரையைக் கைநிறைய எடுத்து உண்டான். “ஆகா இவ்வளவு சுவையான கீரையை இதற்கு முன்பு நான் உண்டதே இல்லை” என்று கூறியவாறே அந்தக் காய்ந்துலர்ந்த கீரை முழுவதும் உண்டுவிட்டான்.  “கீரை தீர்ந்துவிட்டதே! வேறு என்ன தரலாம்!” என்று சிந்தித்த அந்த தெய்வத்தாய்க்கு, வீட்டுக்குள் வாழைப்பழம் இருப்பது நினைவுக்கு வந்தது.  விரைந்து சென்று வாழைப்பழம் கொண்டுவந்தாள். பழத்தை உரித்து உரித்துப் பகவானுக்குத் தர்த்தொடங்கினாள். பக்திப்பரவசத்தில் மூழ்கிய அம்மையார், அவசரத்தினால் உரித்த சுளைகளை அப்பால் எறிந்துவிட்டுப் பழத்தோலை இறைவன் திருக்கரத்தில் கொடுத்தாள். கண்ணன் பழத்தோலை சுவைத்துச் சுவைத்துச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தான். பழச்சுளைகள் குப்பையில் விழுந்துகொண்மே இருந்தன.  அப்போது விதுரன் வந்துவிட்டார். கண்ணனுக்குத் தன் மனைவி வெறுந்தோலைத் தருவதும், அவன் உண்பதும் கண்ட விதுரர், வியப்பில் மூழ்கினார். “ஐயோ! பகவானுக்குத் தோலை உண்ணத் தந்து அபசாரப்பட்டுவிட்டோமே!” என்று கழிவிரக்கம் கொண்டார்.  “இறைவனே விருந்தினனாக வந்துள்ள போது, வாழைப் பழத்தோலைத் தரலாமா? இது பகவானுக்குச் செய்யும் அவமானமல்லவா? இங்கே கொண்டுவா நான் தருகின்றேன். நீ சென்று சமையல் செய்!” என்று மனைவியை அனுப்பிவிட்டுத் தாமே வாழைப்பழத்தை உரித்துத் தரலானார். தோலை எறிந்து விட்டுச் சுளையைத் தந்தார் விதுரர்.  பழச்சுளையைச் சற்றே சுவைத்த மாயபிரான், விதுரனை நோக்கி, “நான் இவ்வளவு நேரமும் உண்ட தோலின் சுவை இந்தச் சுளையில் சிறிது கூட இல்லையே!” ஆதலால், தங்கள் மனைவியார் தந்ததுபோல் தோலையே தாருங்கள்!" என்று கேட்டு அருந்தலானான். வாழைப்பழத்தை விடத் சுவையாக இருக்குமா? கண்ணன், விதுரரிடம் விளையாட்டுக்காக அப்படிப் பேசினாரா? என்று ஐயம் நமக்கு எழலாம்.  அது சாதாரணத் தோலாக இருந்தால், கலை இராதுதான். ஆனால், அதில் அந்த அன்னையாரின் பாசமும் பரிவும் பக்தியும் அல்லவா கலந்திருந்தன! இவை கலந்திருந்தால் சுவையில்லாமல் போகுமா?  25. கண்ணனின் மானம் காத்த பாஞ்சாலியின் பட்டுச்சேலை துரியோதனன் சபையில், துரெளபதி மானபங்கப் படுத்தப்பட்டாள். துச்சாதனன் அவள் புடவையை உரியத் தொடங்கினான். பாண்டவர்கள் ஐவரும் செய்வதறியாது கவிழ்ந்த தலையராய்க் கண்ணீர் உகுத்து நின்றனர்.  வீடுமன், துரோணன், கிருபன் முதலிய சான்றோர்களும் வாய் திறக்கவில்லை.  கற்புக்கரசி காந்தாரியோ “அஞ்சுடன் ஆறு ஆகட்டும்! அதற்கென்ன எழுந்து போடி?” என்பதுபோல் மூச்சு விடாமல் மெளனமானாள்.  இந்நிலையில் செயலிழந்த பாஞ்சாலி: “கோவிந்தா! கோவிந்தா!” என்று புடவை பற்றிய கையைத் தலைமேல் தூக்கிக் கண்ணனைச் சரணம் அடைந்தாள்.  துச்சாதனன் உரிய உரியத் துகில் வளர்ந்தது. ஆயிரம் யானை பலம் கொண்ட துச்சாதனன் சோர்ந்து ஓய்ந்து கீழே சாய்ந்தான். திரெளபதி மானம் இழக்காமல், மன்னர் சபையில் மாண்புடன் நின்றிருந்தாள்.  பாஞ்சாலி கூப்பிட்டவுடன் கண்ணன் புடவை சுரந்தானே! ஏன்? இப்படி ஒரு வினா எழுந்தது ஒரு நாட்டுப்புறக் கலைஞன் மனத்தில்.  தன் கற்பனையால் அத்ற்கு ஒரு காரணம் கண்டு பிடித்தான். இன்னொருவன் வேறொரு காரணம் கற்பித்தான். அந்த இரண்டையுமே காண்போம்.  ஒருமுறை கன்ன்ன் கத்தியால் பழம் அறுத்துக் கொண்டிருந்தான். அந்தக் கத்தி, கண்ணன் கையில் பலமாகப் பட்டுவிட்டது. இரத்தம் ஊற்றெடுக்கத் தொடங்கியது. பலர் அங்கே திரண்டிருந்தனர் கண்ணன் காயம் பட்டதற்கு என்ன செய்யலாம் என்று யாருக்கும் தோன்றவில்லை வாயினால, தம் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொணடிருந்தனர்.  பாஞ்சாலி, அவர்களைப் போல் அனுதாபப்படவில்லை இராஜபத்தினியாகிய அவள், புதுப்பட்டுப் புடவை கட்டியிருந்தாள் உடனே அப்புடவையில் ஒரு பகுதியைக் கிழித்துத் தண்ணீரில் நனைத்துக் கண்ணன் கையில் கட்டுப்போட்டாள். கைக்காயம் உடனே ஆறிவிட்டது உடனே எப்படி ஆறும்!  கண்ணன் அங்கிருந்தவர்களின் மனநிலையைச் சோதிக்கத் தானே கையில் காயம் ஏற்படுத்திக் கொண்டான் எல்லோரும் உதவ முன்வராத நிலையில் பாஞ்சாலி தானே பட்டுச்சேலை என்று பாராமல் கிழித்துக் கட்டுக் கட்டினாள்?  பாஞ்சாலி செய்த உதவிக்கு எப்படிக் கைம்மாறு செய்வது என்று நெடுநாளாகக் காத்திருந்தான் கண்ணன்.  பாஞ்சாலிக்குச் செய்யவேண்டிய நன்றிக்கடன், சாதாரணக் கடனுக்கு வட்டி வளர்வதுபோல் வளர்ந்து கொண்டே இருந்தது.  அந்த நன்றிக் கடன் தீர்க்கும் வாயப்பு, துரியோதனன் சபையில் வாய்த்தது. ஒரு புடவைத்துணுக்குக்காக மலைமலையாகப் புடவைகளைக் குவித்த பின்பே, கணணன் தன் கடன் சுமை தீர்ந்தது என்று நிம்மதி அடைந்தான்.  இது ஒரு கலைஞனது கற்பனை.  இனி மற்றொருவன் கற்பனையையும் காண்போம்.  ஒரு முறை கண்ணன் குளத்தில் நீராடிக் கொண்டிருந்தான். அப்போது, அவன் கட்டியிருந்த ஆடையை ஒரு மீன் இழுத்துக் கொண்டு மறைந்துவிட்டது.  ஆடையில்லாமல் கண்ணன் கரை ஏறுவது எப்படி? கரை ஏறினாலும் வீடுவரை செல்வது எப்படி? தண்ணீருக்குள் மூழ்கியவாறே தத்தளித்துக் கொண்டிருந்தான். குளிர் உடலை வாட்டுகின்றது பசியோ காதை அடைக்கின்றது அவ்வழியே பலர் சென்று கொண்டுதான் இருந்தனர் யாருக்கும் கணணன் நிலை கண்டு உதவத் தோன்றவிலலை அவர்கள் வழியே போயக் கொண்டிருந்தனர்  அப்போது, பாஞ்சாலி அவ்வழியே வரநேர்ந்தது கண்ணன் நீரில் தததளிப்பதைப் பார்த்தாள அவன் கரை ஏறாமைக்குரிய காரணத்தையும் உயத்து உணாந்து கொண்டாள். உடனே தான் அணிந்திருநத விலையுயர்ந்த படடுச் சேலையில் ஒரு பகுதியைக் கிழித்துக் கண்ணனிடம வீசினாள கண்ணன் அதை உடுத்துக் கொண்டு கரை ஏறினான்.  காலத்தினால் செயத பாஞ்சாலியின் உதவி ஞாலத்தின் மாணப் பெரிதனறோ? இந்த நன்றிக் கடன், வட்டிபோல் வளர்ந்து கொண்டே இருந்தது. இக்கடனைத் தீர்ககும் வாய்ப்பை எதிர்நோக்கியிருந்தான் அந்த வாய்ப்பைத் துரியோதனன உணடாக்கித் தந்தான், கணணன் தன் கடனைத் தீர்க்க அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொணடான்.  26. குடிசையை எரித்த நெருப்பை கும்பிட்டு நின்ற பக்தர்   “நிற்கின்ற தெல்லாம் நெடுமால்என்று ஓராதார்  கற்கின்ற தெல்லாம் கடை” என்றார் திருமழிசை மன்னன் “பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தம்” என்றார் தாயுமானார்  “அறியும்செந் தீயைத்தழுவி அச்சுதன் என்னும் மெய் வேவாள்” என்றார் நம்மாழ்வார்  “தீக்குள் விரலையிட்டால் நந்தலாலா - உன்னைத்  தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா” என்று வழிமொழிந்தார் பாரதியார் தம் குடிசையை எரித்த நெருப்பை நெடுமால் என்று வணங்கி நின்றார் ஓர் அடியார் அவர் பெயர் நாம தேவர் நாமதேவருக்கு ஒரு கூரைச் சிறுகுடில்தான் இருப்பிடம் ஒரு நாள் குடில்மேல் வேய்ந்திருந்த புல்லில் நெருப்புப் பற்றிக் கொண்டது நெருப்பின் செந்நாக்குகள் நீண்டு குடிசையைச் சாம்பலாக்கும் காட்சியைக் கண்டார் நாமதேவர்.  தமக்குள்ள ஒரே குடிசை வெந்து அழிகின்றதே என்று அவர் வருந்தவில்லை குடிசையை எரித்து வானுயர நிமிரும் நெருப்பை, நெடுமாலின் பொன்மேனி என்று எண்ணினார்  “இறைவா! இந்த ஏழையையும் பொருட்படுத்தித் திருக்காட்சி தருகின்றாயே இதற்கு அடியேன் என்ன கைம்மாறு செய்வேன்!” என்று நாத் தழுதழுக்கக் கூறி உள்ளமெல்லாம் உருகி உடம்பெலாம் கண்ணீர் சோரக் கைகூப்பி நின்றார் குடிசைபாதி மட்டும் எரிந்து நின்றுவிட்டது  “நெருப்புருவம் கொண்டு. செந்நிறச் சுவாலையுடன் தோன்றிய நீ ஏன், முழுக்குடிசையையும் உன் வடிவாகக் காட்டாமல், பாதியுடன் நின்று விட்டாய்” என்று பரவசத்துடன் கூறினார் தமர் உகந்தது எவ்வுருவமோ அவ்வுருவம் தானே ஆகும் இறைவன், நாமதேவர் விரும்பியபடியே குடிசையின் மறுபாதியையும் எரித்து முடித்தான். நாமதேவர். இறைவனின் முழுத்தோற்றமும் கண்டோம் என்ற மகிழ்ச்சியில் திளைத்து நின்றார்.  அடியார் விரும்பினாலும், அவர்களைத் துன்புறவிடுவானா இறைவன் இறைவனே பணியாளாக வந்து, எரிந்து போன குடிசையை மீண்டும் அமைத்துத் தந்தான்.  27. கணிகைப் பெண்ணின் பக்தி காந்தியடிகளின் பிரார்த்தனைக் கீதம்.  “ரகுபதி ராகவ ராஜாராம்  பதீத பாவன சீதாராம்” என்பது கணந்தோறும் ராம நாம ஜபம் செய்து வந்தமையாலேயே, அமரராகும் போது கூட, “ஹே ராம்” என்ற அமுத நாமம், அவர்தம் அருள்வாயில் ஒலித்தது  ராமநாமம், அண்ணல போன்ற மகாத்மாக்களுக்கு மட்டுமா பயன்தரும்! கடையனுக்கும் கதிமோடசம் தரும் தெய்வீக நாமம் அல்லவா அது இதறகுச் சான்றாக ஒரு வரலாற்றினைச் சூர்தாசர் கூறியுள்ளார் அந்த வரலாறு மிகமிகச் சுருங்கியது ஆனால பயனில் விஞ்சியது  ஓர் ஊரில் கணிகை ஒருத்தி இருந்தாள் அவளை விரும்பித் தேடி வரும் ஆடவர்க்கெல்லாம் இன்பம் தந்து, அதற்கு விலைபெறும் புலைத் தொழிலில் ஈடுபட்டிருந்தாள்  உடலால் மாசுபட்டாலும், அவள் உள்ளம் மாசுபடாமல் இருந்தது மாசுபடாத உள்ளம் இறைவன் ஆலயம் அல்லவா அவள் உள்ளத்தில இறைவன் குடிகொண்டிருந்தான்  அவள், ஒரு கிளி வளர்த்தாள் அதற்குத் தன் இட்ட தெய்வமாகிய “சீதாராம்” என்று பெயர் சூட்டினாள் இந்திமொழியில், கிளிக்குத் தோதா என்று பெயர் அதனால், அதனைத் தோதாராம் என்றும் அழைப்பாள்  “சீதாராம், சீதாராம்” என்று கிளியை அடிக்கடி அழைத்து வந்தமையால், அவள் நாக்கு அசையும் போதெல்லாம் சீதாராம் என்ற நாமம் தானாகவே ஒலிக்கலாயிற்று அந்தக் கணிகைக்கு இறுதிக் காலம் அடுத்தது தான் செல்லமாக வளர்த்த கிளியைச் சீதாராம் கீதாராம் என்று அழைத்துக்கொண்டிருக்கும் போதே உயிர் பிரிந்தது  மரணத் தருவாயில் சீதாராம் என்ற இறைவன் திருநாமத்தை உச்சரித்தமையால், இறைவன் தூதர்கள் வந்து அவளைத் தெய்வ விமானத்தில் மிக்க மரியாதையுடன் ஏற்றிப் பரமபதத்துக்கு அழைத்துச் சென்றனர்  இருடிகளும் முனிவர்களும் பலகாலம் தவம் செயதும் எளிதிற் பெற இயலாத வானோர்க்கு உயர்ந்த உலகத்தைச் சீதாராம் என்ற திருநாமம் உச்சரித்தமையால் பெற்றாள் ஒரு கணிகை என்பது வியப்புத் தானே!  28. புலையன் வீட்டில் புனிதம் கண்ட இறைவன் “கல்வியும் விநயமும் நன்கு கற்ற பிராமணன் பசு, யானை, நாய், நாய் தின்னும் புலையன் முதலிய அனைவரையும் மெய்ஞ்ஞானிகள் சமமாகவே நோக்குவர்” என்பது கண்ணன் வாக்கு  மெய்ஞ்ஞானிகளுக்கே இத்தகைய சமப்பார்வையிருப்பின், இறைவனிடம் சமப்பார்வை இல்லாமல் போகுமா?  இறைவனது சமப்பார்வையைக் குறிக்கும் வரலாறு ஒன்று சூர்தாசர் குறிப்பிட்டுள்ளார் அதைக் காண்போம்.  புலையினத்தான் ஒருவன் இருந்தான். அவன் நாய் ஊன் உண்பவன். அவன் ஊமை. ஆதலால் அவனை அனைவரும் “மூக சண்டாளன்” என்றே அழைப்பர் ஊமையாகிய இழிகுலத்தான் என்பது அதற்குப் பொருள்  நாய்தின்னும் இழிகுலத்தான் ஆயினும், அவனிடம் ஓர் ஒப்பற்ற நற்பண்பு இருந்தது தன் தாய் தந்தையரைத் தெய்வமாகவே மதித்தான் மனப்பூர்வமாக அன்பு காட்டிப் பெற்றோர்க்குப் பணிவிடை செய்து வந்தான்  அவன் பெற்றோரிடம் வைத்த பக்தியின் சிறப்பால், அவன் வீடு, பூமியில் தொடாமல், எவ்விதப் பற்றும் இன்றி அந்தரத்தில் நின்றது. அதுமட்டுமா?  இறைவன் அறவோன் ஆகிய அந்தணன் வடிவுகொண்டு, அந்த மூக சண்டாளன் வீட்டிலேயே நிரந்தரமாகத் தங்கினான்  இறுதியில் அந்த மூக சண்டாளனுடன், அவன் உறவுடைய அனைவரையும் பரமபதத்துக்கு அந்த இறைவன் அழைத்துச் சென்றான். ஞானிகள்,  “ஊன்வாட உண்ணாது உயிர்காவ லிட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும்நொந்து  தாம்வாட வாடத் தவம் செய்தும்” பெறுவதற்கரிய பரமபதம், பெற்றோரைத் தெய்வமாகக் கருதிப் பணிவிடை செய்த ஒரு செயலாலேயே, நாய் தின்னும் புலையன் எளிதிற் பெற்று விட்டான்.  தவம் செய்து பெற இயலாததைத் தொண்டினால் பெற இயலும் என்பதற்கு இவ்வரலாறு எடுத்துக்காட்டு. 29. கண்ணனை தாக்கிய அம்பு   “இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்  என்ன பயத்ததோ சால்பு” என்றார் திருவள்ளுவர் இது கண்ணன் கூறிய “துல்ய ப்ரிய அப்ரியோ தீர” (இனியவரிடத்தம் இன்னாதாரிடத்தும் சமானமாக நடக்கும் தீரன்) என்ற குரலின் எதிரொலியே எனலாம்  இன்னா செய்தார்க்கும் இனிய செய்க என்று சொல்வது யார்க்கும் எளிய ஆனால் சொல்லியவண்ணம் செயதல அரியதெனபது தமிழ்மறை கண்ண பெருமான் முழுஞானி அவனிடம் சொல்லுககும் செயலுக்கும் வேறுபாடு காண இயலுமா!  இக்கருத்துக்கு எடுத்துக் காட்டாகக் கண்ண பெருமானின் இறுதி வரலாறு திகழ்கின்றது தன் அவதாரச் செயல்கள் முழுவதும் முடிந்தபின்பு, அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்தனையில் ஆழ்ந்தான் கண்ணன் ஓர் அரச மரத்தின் நிழலில், ஒரு காலை மேலே மடித்து வைத்துக் கொண்டு தனிமையில் அறிதுயில கொண்டிருந்தான்  அவன் திருவடியின் உள்ளங்கால் செவ்வண்ணம் கண்ட ஒரு வேடன், ஏதோ ஒரு மிருகம் அமர்ந்திருப்பாக எண்ணி விட்டான்  அன்று அவன் வேட்டைக்குப் புறப்பட்டதிலிருந்து எந்தப் பிராணியும் தென்படவில்லை எதிர்பாராமல் தென்பட்ட இந்தப் பிராணியை விட்டுவிடலாகாது என்று கருதினான் உடனே கண்ணபிரானது திருவடித்தலத்தில தன் அம்பைக் குறி வைத்து எய்துவிட்டான் அந்த அம்பு, தவறாமல் கண்ணனது உள்ளங்காலில் தைத்தது இரத்தம் பீறிட்டது தான் எய்தது விலங்கை அல்ல, கண்ணபிரானையே என உணர்ந்த வேடன் நடுங்கினான்  “ஐயோ! எத்தகைய பாவம் செய்துவிட்டேன் உலகம் காக்க அவதாரம் செய்த அச்சுதனை அல்லவா எய்துவிட்டேன் இனி நான் உயிரோடிருத்தல் தகாது” என்று தன் அம்பாலேயே தன் வயிற்றைக் கீறிக் கொள்ள முனைந்தான்  இறைவன், நில்லு வேடப்ப! நில்லு வேடப்ப! என்று அபயம் கொடுத்து, அருகில் அழைத்து, நீ தெரிந்து இத்தவறு செய்யவில்லை அதுமட்டுமல்ல எனக்கு நன்மையே செய்துள்ளாய் என் அவதார நோக்கம் நிறைவேறிவிட்டது அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன்  அடுத்துத் தன்னுடைய சோதிக்கு எழுந்தருளுவதே பரமபதம் மீளுவதே செய்ய வேண்டுவது என்பதனை நீ உன் செயலால் உணர்த்தி விட்டாய்! நீ பாபம் என்று எண்ணுவது, எனக்கு லாபமாக முடிந்தது என்று ஆறுதல் கூறினான்  பின்னர், அந்தரத்திலிருந்து வந்த தெய்வ விமானத்தில் அவ்வேடனை தூலஉடலுடனே ஏற்றிப் பரமபதத்துக்கு அனுப்பினான்.  30. கண்ணனை காட்டிக் கொடுத்த மணிகள் தீராத விளையாட்டுப் பிள்ளை எனப் பெயர் பெற்றவன் கண்ணன். நவநீதசேரன், வெண்ணெய்த்திருடன் என்ற பட்டப் பெயர்களும் உண்டு.  ஆயர் வீடுகளில் வெண்ணெயை உறியில் தான் வைப்பார்கள். வீடுகள் என்பது சிறு குடிசைகள் தாம். கதவு வெறும் படல் தான். ஆயரில் ஆண்கள் காலிகளை மேய்க்கச் சென்று விடுவர்.  ஆய்ப்பெண்கள், பால், மோர் விற்கப் போய்விடுவர். வீட்டில் ஒருவரும் இருக்கமாட்டார்கள்.  இந்த நேரத்துக்காகக் காத்திருப்பான் கண்ணன். படலைத் தள்ளி உள்ளே புகுந்து, உறியில் உள்ள வெண்ணெய் முழுவதும் திருடி உண்டுவிடுவான்.  ஆய்ச்சியர் வந்து கேட்டால், நான் ஒன்றும் அறியேன் என்று சொல்லி விடுவான்.  வெண்ணெய் திருடு போகாமல் இருக்க என்ன செய்யலாம் என்று ஆய்ச்சியர் யோசித்தனர். கண்னன்தான் திருடுகின்றான் என்பதும் தெரியும் ஆயினும் கையும் களவுமாக அல்லவா பிடிக்க வேண்டும்  வீட்டிலுள்ள உறிகளில் மணிகளைக் கட்டி வைக்க வேண்டும். கண்ணன் திருடும்போது, மணி ஓசை எழுப்பும், அந்த ஒலி கேட்டு ஓடிச் சென்று கண்ணனைக் கையும் வெண்ணெயுமாகப் பிடிக்க வேண்டும் என்று சிந்தித்தனர்.  சிந்தித்ததை உடனே செயல்படுத்தினர் ஒவ்வொரு வீட்டிலும் உறிதோறும் வெண்கலமணி கட்டப்பட்டது. எப்போதும் போல், கண்ணன் வெண்ணெய் திருடுவதற்காக ஒரு வீட்டுப் படலைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். உறியில் மணி கட்டியிருப்பதை பார்த்தான்  வெண்ணெய் எடுத்தால், மணியொலித்துவிடும். உடனே மணி ஒலித்துவிடும். உடனே ஆய்ச்சியர் வந்து பிடித்து கொள்வர். மணி ஒலிக்காமலிருக்க என்ன செய்யலாம் என்று உபாயம் தேடினான்.  மணியைப் பார்த்து. “மணியே! மணியே! நான் வெண்ணெய் எடுக்கும் வரை நீ ஒலிக்காமல் இரு! உனக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என்று மணியிடம் வேண்டினான்.  மணியும் சம்மதித்தது கண்ணன் உறியில் கைவிட்டு வெண்ணெயைக் கையில் எடுத்துக் கொண்டான். அதுவரை சொன்னவாக்குப்படி மணி ஒலிக்காமல் இருந்தது.  “இனியாரும் நம்மைப் பார்க்க இயலாது வெண்ணெயை ஆர அமர உண்ணலாம்” என்று மகிழ்ந்த கண்ணன், வெண்ணெயை வாயில் வைத்தான்.  வைத்தது தான் தாமதம். உடனே மணி வேகமாக ஒலிக்கத் தொடங்கியது.  கண்ணன் மணியைப் பார்த்து, “ஏ மணியே சொன்ன வாக்குத் தவறலாமா? ஒலிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு, இப்போது உரக்க ஒலிக்கின்றாயே ஆய்ச்சியர் வந்துவிடுவார்களே இப்படி என்னைக் காட்டிக் கொடுப்பது ஞாயமா?” என்று கேட்டான்.  “கண்ணா! நீ வெண்ணெய் எடுக்கும்போது தானே ஒலிக்க வேண்டாம் என்றாய்! நான் எடுக்கும் போது ஒலிக்கவில்லையே நீ உண்ணும்போது தானே ஒலித்தேன். இது எப்படி வாக்குத் தவறியதாகும்?”  “அது மட்டுமல்ல. ஆலயங்களில் இறைவன் நிவேதனம்(உணவு) கொள்ளும்போது, நான் ஒலிப்பது வழக்கம் அல்லவா? நான் ஒலிக்கலாகாது என்று இருந்தாலும் நெடுநாளாகத் தொடர்ந்து வரும் வழக்கம் மாறுமா? மாற்றத்தான் முடியுமா? மாற்றுவது மரபு ஆகுமா?” என்று மணி விரிவுரை நிகழத்தியது  அதற்குள் ஆயச்சியர் மணியோசை கேட்டு ஓடிவந்து, கண்ணனைப் பிடித்துக் கட்டி தாய் யசோதையிடம் புகார் செயய் அழைத்துச் சென்றனர்  இத்தகைய எத்தனையோ சுவையான கண்ணன் விளையாடலைப் பற்றிய செய்திகள் நாட்டுப்புறக் கதைகளாக வழங்கி வருகின்றன பெரியாழ்வாரும், பாரதியாரும் பல கற்பனைகள் கலந்து கண்ணன் திருவிளையாடல்களுக்கு மெருகூட்டியுள்ளனர்.  31. வித்தையால் அழிந்த சீமாலிகன் தீராத விளையாட்டுப் பிள்ளையாகிய கண்ணனுடைய திருவருட் செயல் ஒவ்வொன்றும் அற்புதமானது அறிவுக்கு எட்டாதது ஆனால், முடிவில் நல்லோர்க்கு நலமும் தீயோர்க்குத் தீமையும் பயப்பது  இங்குக் காணப்போகும் வரலாறும் அத்தகையதே இது காவியங்களில் இடம் பெறாத வரலாறு ஆனால் நாட்டுப்புறக் கதையும் அன்று பெருஞானியாகிய பெரியாழ்வார் தம் பேரருட் சிந்தனையில் உருவான கற்பனை சிறு விதையாக உள்ள கற்பனையைச் சிறு மரமாக்கி இன்பக்கனி நுகர்வோம்! வாருங்கள்  ஆருயிர் நண்பன் அட்டூழியம் செய்கின்றான். அன்பின் காரணமாக அவனை அடக்க மறுக்கின்றான் அச்சுதன் ஆயர்கள், கண்ணனின் விநோதப் போக்கினால் கலங்குகின்றனர் முடிவு கண்ணனின் நட்பும் களங்கமுறவில்லை கண்ணனாலேயே அவன் நண்பனும் அழிகின்றான் அதிசயமாக அல்லவா உள்ளது அதிசயம் ஆனால் முடிவு அதுதான்  “சீமா லிகன் அவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய்! ஆமாறு அவனைநீ எண்ணிச் சக்கரத் தால்தலை கொண்டாய்!”  என்பதே பெரியாழ்வார் தூவியவிதை! அவ்விதையில் மரபு வழுவாமல் கற்பனைப் புனல் பாயந்து களிக்க கனிதரும் நாடக மரமாக வளர்ந்துள்ளது.      காட்சி-1    இடம்               யமுனைக் கரையில் மரம் அடர்ந்த பகுதி காலம்             மாலை பாத்திரங்கள்  சீமாலிகன், சில தோழர்கள்   ஒருவன்: சீமாலிக வேட்டைக்காகக் காட்டில் வெகுதூரம் வந்துவிட்டோம். களைப்பாக உள்ளது பசி வயிற்றைக் கிள்ளுகின்றது அதோ அம் மாமரத்தில் கனிகள் பழுத்துத் தொங்குகின்றன அவற்றைப் பறித்துத் தின்னலாம் வா!  மற்றொருவன்: ஆமாம்! ஆமாம்! எனக்கும் பசிதான் வாருங்கள் போகலாம்  எல்லோரும் சரி! சரி! புறப்படுவோம் (சற்றுத்துரம் செல்கின்றனர்)  ஒருவன்: அதோ பார் அந்த மாம்பழம் எவ்வளவு உயரத்தில் தொங்குகின்றது? அது தன் பொன்வண்ணம் காட்டி நம்மை நோக்கிப் புன்னகை புரிகின்றது சீமாலிக எனக்கு அந்தப் பழம் பறித்துத் தர மாட்டாயா?  சீமாலிகன்: இதோ! உன்கையில் அதை விழச்செய்கின்றேன். (அம்பு எய்கின்றான் அது கனியில் படாமல் ஒரு காயை வீழ்த்துகின்றது)  ஒருவன்: என்ன சீமாலிக! கனியைக் கேட்டால், காயை வீழ்த்துகின்றாயே! களைப்பினால் கண் பஞ்சடைந்து விட்டதா?  இன்னொருவன்: குறி தவறாமல் எய்துவிட, இவன் என்ன அந்தக் கண்ணபிரானோ? யானைக்கும் அடி சறுக்கும்!  சீமாலிகன்: (சினத்துடன்) நிறுத்து கண்ணனைப் புகழ்ந்து என்னை ஏளனம் செய்யாதே! யானைக்கு அடி எல்லோரும்: சறுக்கலாம் சீமாலிகன் குறி தவறாது (சற்றுத் தொலைவில் ஒரு மான் ஓடுவதைக் கண்டு) அதோ பார் ஒரு மான்! இதோ என் அம்பு! (அம்பு எய்கின்றின் அதிலும் குறி தவறி விடுகின்றது அம்பு மான்மேல் படாமல் மரத்தின்மேல் படுகின்றது.)  எல்லோரும்: பரிகாசமாகக் கைதட்டுகின்றனர்.  ஒருவன்: சபாஷ்! சீமாலிக! உன்குறி என்றுமே தவறாது. மானைக் குறி வைத்தால் மரத்தைத் தாக்கும்.  இன்னொருவன்: குறி தவறாமல் எய்வதற்கு இவன் என்ன அந்தக் கண்ணனோ?  சீமாலிகன்:மீண்டும் மீண்டும் கண்ணன் பெயரைக் கூறி என் ஆத்திரத்தைத் தூண்ட வேண்டாம் கண்ணன் மட்டும் குறி தவறவிட மாட்டானோ? பாருங்கள்! அந்தக் கண்ணனிடமே சென்று அவன் அறிந்த வித்தை அனைத்தும் கற்று, அந்தக் கண்ணனையே வென்று காட்டுகின்றேன். இது சத்தியம் இந்தச் சபதம் நிறைவேறாமல் நான் திரும்பமாட்டேன் இதோ! இப்போதே செல்கின்றேன். (யமுனையை நோக்கி ஒடுகின்றான்)  எல்லோரும்: சீமாலிக! இது என்ன விபரீதச் செயல்! யமுனைநதி கரை புரண்டோடுகின்றது அதில் இறங்காதே! இறங்காதே! (சீமாலிகன் ஆற்றில் குதித்து விடுகின்றான்) ஐயோ விளையாட்டு விபரீதமாகி விட்டதே! வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் ஆற்றில் குதித்துவிட்டானே!      [திரை]  காட்சி 2    இடம் :               யமுனையின் மறுகரை காலம்:              மாலை பாத்திரங்கள் : கண்ணன். ஆயர் சிறுவர்சிலர். சீமாலிகன்.   ஒரு சிறுவன்: கண்ணா! வெகுநேரம் ஆகிவிட்து. வாருங்கள் மாடுகளை மடக்கிக் கொண்டு வீட்டுக்குப் போவோம்.  மற்றொருவன்: : ஐயோ! என் மாடுகள் வெகுதூரம் போய்விட்டனவே! நான் போய் அவற்றை ஒன்று சேர்த்து வருவதற்குள் இருட்டிப்போகுமே!  வேறொருவன்: கண்ணா! என் மாடுகள் கூடத் தொலைவில் தான் மேய்கின்றன. விளையாடிக் கொண்டே மாடுகளைக் கவனிக்காமல் விட்டுவிட்டோமே! ஆகையால், கண்ணா நீதான் அவற்றை ஒன்று சேர்க்க வேண்டும்!  மற்றொருவன்: ஆமாம்! கண்ணா! நேரம் கழித்துச் சென்றால் என் தந்தை சினம் கொள்வார். ஆகையால், மாடுகளை விரைவில் ஒன்று சேர்த்துக் கொடு.  கண்ணன்: தோழர்களே! பயப்பட வேண்டா. இதோ! உங்கள் மாடுகள் வந்துவிடும். (குழலூதுகின்றான்) (மாடுகள் எல்லாம் குழலோசை கேட்டுக் குதித்தோடி வருகின்றன. இடைச்சிறுவர் மகிழ்கின்றனர்.  ஒருவன்: கண்ணா! மாடுகள் வந்துவிட்டன. புறப்படுவோமா!  இன்னொருவன்: சரி சரி! வாருங்கள் போவோம். கண்ணன்: (யமுனையைச் சுட்டிக்காட்டி) அங்கே பாருங்கள். யமுனையின் பெருக்கையும் பொருட்படுத்தாமல், யாரோ ஒருவன் அக்கரையிலிருந்து நீந்தி வருகின்றான். சற்றுப் பொறுங்கள். யார் என்று தெரிந்து கொள்வோம். (நீந்திக் கரையேறிய சீமாலிகன், ஈரத்துணியுடன் மூச்சு வாங்கக் கண்ணன் எதிரே வருகின்றான்)  கண்ணன்: நண்பா! நீ யார் ஏன் இந்த வெள்ளத்தில் உயிரையும் மதியாது. நீந்தி வந்தாய்! நல்லகாலம் எப்படியோ உயிர் தப்பி வந்து சேர்ந்தாய்! இதோ இந்த மேல் துண்டை உடுத்துக் கொண்டு உன் ஈர உடைகளை மாற்று.  சீமாலிகன்: கண்ணா! உன் பொன்னடிகளில் பற்றுவைப்போர் பிறவிக் கடலையே கடந்து விடுகின்றனரே !கேவலம் ஓர் யமுனையைத் தாண்டியது அதிசயமா? உன் திருவருள் கிட்டுமாயின், இந்த யமுனை மட்டுமா ஏழு கடல்களையும் அல்லவோ தாண்டுவேன். (துணிகள் மாற்றிக் கொள்கின்றான்)  கண்ணன்: நண்பா! உன் அன்பு என்னைப் பரவசப் படுத்துகின்றது. யமுனை நதி கடந்து வந்து என்னை அன்பு நதியில் மூழ்கடிக்கின்றாய்! என்னால் உனக்கு ஏதேனும் ஆக வேண்டுமானால் கூறு செய்கின்றேன்.  சீமாலிகன்: கண்ணா! உன்னிடம் ஏதேனும் பெற்றுச் செல்வதற்காக நான் இங்கு வரவில்லை. உன் திருவடிகளில் தொண்டு செய்து புனிதனாகும் அவாவினாலேயே இங்கு வந்தேன்.  கண்ணன்: அன்பா உன் விருப்பம் எதுவாயினும் நிறைவேறும்! நீ இன்றுமுதல் உன் உயிர் நண்பன் உன் நலமே என்நலம் வா நம் வீட்டுக்குப் போவோம்  சீமாலிகன்: என் பாக்கியமே பாக்கியம் பிறவிப் பெரும்பயன் இன்றே கிட்டியது (போகின்றனர்)  சீமாலிகன்: (தனக்குள்) கண்ணனை எளிதில் வசம் செயது விட்டேன். இனிக் காரியம் கைகூடத் தடை இல்லை      காட்சி-3   இடம்               ஊர்ப் பொது மன்றம் காலம்              பகல் பாத்திரங்கள்   ஆயர் பெருமக்கள் தலைவர்: நாம் இங்கு ஏன் கூடியுள்ளோம் என்பதனை நீங்கள் அறிவீர்கள் சீமாலிகன், கண்ணனுடன் நட்புப்பூண்டு, நம் ஆயர்பாடிக்கு வந்தது முதல் அவன் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லை. அவனை அடக்குவதற்கு-வழி காண வேண்டும் அதைப் பற்றி ஆலோசனை செய்யவே இங்குக் கூடியுள்ளோம்.  ஒருவர்: ஐயன்மீர்! என் மகள் தண்ணீர் எடுக்கப் போகும் போது, வழிமறித்து அடாத சொற்களைக் கொட்டியிருக்கின்றான்.  மற்றொருவர்: அவன் வந்தது முதல், நம் மாடுகளில் பல நாடோறும் காணாமல் போகின்றன அவன் தான் அதற்குக் காரணம் என்று கருதுகின்றேன்  இன்னொருவர்:நாம் வேலைக்குச் சென்ற பிறகு, நம் வீடுகளில் பல பொருள்கள் காணாமல் போய் விடுகின்றன. இந்நாள் வரை காரணம் தெரியாமல் இருந்தோம். இப்போது தான் புரிகின்றது சீமாலிகன் திருவிளையாடல் என்று வேறொருவர்: யாருக்கும் அஞ்சாத நம் வாலிபர்களை அவன் அச்சுறுத்தி அடக்கி ஆள்கின்றான். அவன் ஆணைப்படியே எல்லோரும் நடக்க வேணடும் என்று வற்புறுத்துகின்றான். அவனுக்கு அடங்கி நடக்காதவரை அடித்துத் துன்புறுத்துகின்றான்  மற்றொருவர்: அவனை யாராலும் அடக்க முடியவில்லை கண்ணனிடம் நண்பனைப்போல் நடித்து, அனைத்து வித்தைகளையும் நன்கு கற்றுக் கொண்டுவிட்டான் அதனால் கருவம் தலைக்கு ஏறிவிட்டது. இவனை இப்படியே விட்டுவிட்டால், ஆயர்களாகிய நமக்கு அமைதியே இல்லாமல் போகும்.  இன்னொருவர்: தலைவர் அவர்களே! இதற்கு இப்போதே ஒரு முடிவு கட்டியாக வேண்டும்  தலைவர்: உங்கள் குறைகளையெல்லாம் நானும் நன்கு அறிவேன் நாமாக அவனை ஒன்றும் செய்ய இயலாது. நாமே ஏதாவது செய்ய முயன்றாலும், கண்ணனது வெறுப்புக்கு ஆளாக நேரும். ஆகையால், நாம் அனைவரும் அரசர் நந்தகோபரிடம் சென்று முறையிடுவோம் அவர் கண்ணனிடம் சொல்லிச் சீமாலிகனை அடக்க ஏற்பாடு செய்வார் இப்போதே புறப்படுங்கள் (எல்லோரும் நந்தகோபன் அரண்மனை நோக்கிப் புறப்படுகின்றனர்)    காட்சி-4    இடம்              நந்தகோபன் ஒலக்கம்    காலம்             மாலை பாத்திரங்கள்  நந்தகோபன், அமைச்சர், ஆயர், கண்ணன், நாரதர்   காவலர்: வாழ்க மன்னர்! வளர்க அவர் கொற்றம்!  நந்தன்: காவல்! என்ன செய்தி!  காவலன்: அரசே! ஆயர் பெருமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க வந்துள்ளனர்.  நந்தன்: உள்ளே வரச்சொல்! (காவலன் அவர்களை அழைத்துவருகின்றான்)  ஆயர்பெருமக்கள்: அரசே வணக்கம்.  நந்தன்: வாருங்கள் பெரியோரே! நம் ஆட்சியில் உமக்கு ஏற்பட்ட குறை யாது?  ஆ.பெருமக்கள்: : அரசே! நம் இளவரசர் கண்ணபிரானின் உயிர்த்தோழனாம், சீமாலிகன், இளவரசர் தரும் சலுகைகளால் கருவம் கொண்டு, ஆயர்பாடியில் செய்துவரும் அட்டூழியங்கள் கொஞ்சமன்று.  இன்னொருவர்: ஆம் அரசே! நேற்று என் வீட்டுக்கதவைத் திறந்து வாள் காட்டி அச்சுறுத்தி, வீட்டிலிருந்த நகை, பணம் முதலியவற்றையெல்லாம் அள்ளிக் கொண்டு போய்விட்டான்.  மற்றொருவர்: ஆமாம் அரசே! என் மகள் யமுனைக்கு நீர் கொணரச் செல்லுகையில் வழி மறித்து நகைகளை அபகரித்துக் கொண்டான்.  இன்னொருவர்: அரசே! தெருவில் செல்லும்போது, என்மகனை வலுச்சண்டைக்கு இழுத்து, மண்டையைப் பிளந்துவிட்டான்.  அமைச்சர்: அரசே இதைப்போலப் பலமுறையீடுகள் என்னிடமும் வந்துள்ளன. இளவரசரின் நண்பன் என்னும் மமதையால் ஏதேதோ செய்து திரிகின்றான். அவனைக் கண்டித்துத் தண்டிக்காவிட்டால், நம் ஆயர்பாடிக்கே அபாயந்தான். (கண்ணன் வருகை. தந்தையை வணங்குகின்றான்).  நந்தன்: கண்ணா! நீ இன்னும் விளையாட்டுப் பிள்ளை அல்ல. இந்நாட்டு இளவரசன் எதிர்கால அரசன். ஓர் அரசனுக்குள்ள பொறுப்பும் தகுதியும் உனக்கு வேண்டும். தக்காரோடு பழக வேண்டும். சீமாலிகன் போன்ற தீயோர் நட்புக் கூடாது. எங்கோ கிடந்த சீமாலிகனோடு நட்பாடி அவனுக்கு நீ கற்ற வித்தைகள் அனைத்தும் கற்பித்துள்ளாய் அவன் செய்யும் அடாத செயல்கள் அளவுக்கு மீறிவிட்டன. ஆயர்பாடியே இன்று அவனைக் கண்டு அலறுகின்றது. இவை அனைத்தும் அறிந்தும் நீ அவனைக் கண்டிக்காமல் உள்ளாயே! இது தகுமா!  அமைச்சர்: ஆம் இளவரசே! தாங்கள் அவனைத் தடுத்துத் திருத்தாவிட்டால், ஆயர்பாடியே அழிந்து போகும். பலவித வித்தைகளும் அவன் பயின்றுள்ளதால், யாருக்கும் அஞ்சுவதில்லை. அரசகாவலர் அவனைக் கண்டு அஞ்சுகின்றனர். நமது ஆணையினால் அவனை அடக்க இயலவில்லை. அவனை அடக்கும் வலிமை, இளவரசராகிய தங்களுக்கே உண்டு. (நாரதர், “நாராயண நாராயண” என்று பாடிக் கொண்டே வருகின்றார்).  நந்தன்: யாரது? நாரதப் பிரமமா? வருக! வருக! நல்ல நேரத்தில் வந்தீர்கள். அந்த அரியனையில் அமர்க! நாரதர்: இங்கு நடந்ததனைத்தும் தெரிந்து கொண்டேன். அமைச்சர் சொன்னதுபோல் சீமாலிகனை அடக்க கண்ண பெருமானால் தான் முடியும்.  கண்ணன்: நாரதரே! மன்னிக்க வேண்டும். சீமாலிகன் என் உயிர் நண்பன். நண்பனைக் கண்டிக்கவோ தண்டிக்கவோ என்னால் இயலாது. தோழனுக்குத் துரோகம் செய்யமாட்டேன். அவனை அடக்க வேறு வழி தேடிக் கொள்ளட்டும்!  நாரதர்: கண்ணா! கடமையைப் புறக்கணிப்பது பெருமையன்று. அடாது செய்பவன் யாராய் இருந்தால் என்ன? உயிர்நண்பன் ஆனாலும் அடக்கித்தான் தீரவேண்டும். கண்டித்துத் தான் தீர வேண்டும். இது அரசகுமாரனாகிய உன் கடமை.  கண்ணன்:: நாரதரே! எது நேரினும் சரி என்னால் இக்காரியம் மட்டும் முடியாது. என்னை விட்டு விடுங்கள்.  நாரதர்" கண்ணா! இப்போது அப்படித்தான் கூறுவாய் பார்! நீயே சீமாலிகனைக் கொல்லப் போகின்றாய்! உன் கையாலேயே அவன் அழியப்போகின்றான். நாரதன் சொன்னது நடந்தே தீரும்?  கண்ணன்: நாரதரே! இந்த இடத்தில் உம் வாக்குப் பலிக்காது. ஏமாந்து போவீர்!  நாரதர்: ஏமாந்து போவது யார்? நாடோடி நாரதனா? ஆயர்பாடி அச்சுதனா? பொறுத்துப் பார்க்கலாம். நாராயண' நாராயண' (நாரதர் போகின்றார்)      (திரை)  காட்சி - 5    இடம்           :        ஒரு சோலை காலம்          :        மாலை பாத்திரங்கள்   :    நாரதர், சீமாலிகன் (சீமாலிகன் ஒரு மேடையில் அமர்ந்துள்ளான். நாரதர் வருகின்றார்)  சீமாலிகன்: (அலட்சியமாய்) யாரது? நாடோடி நாரதரா?  நாரதர்: சீமாலிகா! நலமா!  சீமாலிகன்: நலத்திற்கு என்ன குறை? கண்ணனை நண்பனாகப் பெற்ற பின், கவலையும் உண்டோ?  நாரதர்: சீமாலிகா! கண்ணன் ஒரு கபடக்காரன் அவனை முற்றிலும் நம்பிவிடாதே!  சீமாலிகன்: நாரதரே! நாவை அடக்கிப் பேசுங்கள். சீமாலிகன் எதிரில், கண்ணனைப் பழித்துப் பேசலாகாது.  நாரதர்: உண்மை கசக்கத்தான் செய்யும் நீயாகவே தெரிந்து கொள்வாய்! (சற்றுப் பொறுத்து) சரி, சீமாலிகா! கண்ணன் உனக்கு எல்லா வித்தைகளும் கற்றுத் தந்து விட்டானா?  சீமாலிகன்: நூற்றுக்கு நூறு கற்றுக்கொண்டு விட்டேன்.  நாாதர்: சீமாலிகா! நீ ஏமாந்து போனாய்? முற்றும் கற்றுத் தந்துவிட்டதாக உன்னை நம்ப வைத்துள்ளான். இது ஒன்றே போதாதா அவன் கபட நாடகக்காரன் என்பதற்கு?  சீமாலிகன்: நாரதரே! நீங்கள் சொல்வது ஒன்றும் புரியவில்லையே! என் மனம் அறியக் கண்ணன் ஒன்றும் மறைக்கவில்லை. மறைக்கவும் மாட்டான்.  நாரதர்: எல்லாம் கற்றுக் கொண்டதாகச் சொல்கின்றாயே! சக்கரப் பிரயோகம் செய்ய அறிந்து கொண்டாயா!  சீமாலிகன்: (சற்றுப் பொறுத்து) நாரதரே! தக்க சமயத்தில் ஞாபகப்படுத்தினிர் கண்ணன் இந்தச் சீமாலிகனை ஏமாற்றத்தான் செய்துள்ளான். இதோ! இப்போதே சென்று அவனைக் கேட்கின்றேன்.  நாரதர்: சீமாலிகா! பதறாதே! வேண்டுமென்றே மறைத்த வித்தையை அவன் உனக்கு ஒரு போதும் கற்றுத் தரமாட்டான். வீணாசையை விடு!  சீமாலிகன்: நாரதரே! நான் சக்கரப் பிரயோக வித்தையைக் கற்றுக் கொள்கின்றேனா இல்லையா பாரும் சீமாலிகனிடம், கண்ணன் தப்ப முடியாது.  நாரதர்: கண்டிப்பாக நீ கற்க முடியாது. கற்றுக் கொள்ள முயன்றால் உனக்கு ஆபத்து நேரலாம். நாரதன் சொன்னது நடந்தே தீரும். போய் வருகின்றேன். நாராயண! நாராயண! நாரதர் போகின்றார்)  நாரதர்: (தனக்குள்) ஒவ்வொரு நாளும் ஒரு கலகம் ஏற்படுத்த வேண்டும் என்ற நியதிப்படி நேற்றும் இன்றும் இரண்டு கலகங்கள் ஏற்படுத்தி விட்டேன். சீமாலிகனுக்கு நான் கொடுத்த மருந்து, நன்றாக வேலை செய்யத் தொடங்கி விட்டது.    [திரை]  காட்சி-6    இடம் :               கண்ணன் திருமாளிகை காலம் :              மாலை பாத்திரங்கள் :   சீமாலிகன், கண்ணன், நாரதர்   (கண்ணன் அரியணையில் உள்ளான். சீமாலிகன் வருகின்றான். அவன் முகத்தில் கவலையும் வெறுப்பும் காணப்படுகின்றன) கண்ணன்:சீமாலிகா வருக! வருக! (சீமாலிகன் பேசாமல் இருக்கின்றான்)  கண்ணன்: என்ன சீமாலிகா! என்ன நேர்ந்தது. ஏன் இவ்வளவு சோர்வு. மெளனம் ஏன்? என் நண்பனுக்கு யாரேனும் இடையூறு செய்துவிட்டனரா?  சீமாலிகன்: கண்ணா! வாய்ச்சொல் பேசி வஞ்சிக்க வேண்டா. உற்ற நண்பனிடம் உண்மையை மறைத்த உன்னைத் தவிர, உலகத்தில் எனக்கு இடையூறு செய்ய யாரால் இயலும்.  கண்ணன்: சீமாலிகா! இஃதென்ன விபரீதப் பேச்சு! உண்மையை நான் மறைத்தேனா? உன்னிடமா! சிறிது விளக்கமாகத் தான் சொல்லேன்!  சீமாலிகன்: ஒன்றும் தெரியாதவன் போல உரையாடாதே! முற்றும் கற்றுத் தந்து விட்டதாகச் சற்றும் கூசாது சாற்றினாயே! அந்தச் சக்கரப் பிரயோக வித்தையை ஏன் மறைத்து வைத்தாய்!  கண்ணன்: அப்பாடா! இவ்வளவு தானா என்னவோ ஏதோ என்று பயந்து போனேன். சக்கரப் பிரயோகம் கற்பது கடினம். இவ்வுலகில் என்னைத் தவிர வேறு யாரும் அதனை அறியார். அறியவும் முடியாது.  சீமாலிகன்: என்னால் முடியும். இப்போதே கற்றுத் தரல் வேண்டும். உண்மையான நண்பனாக இருந்தால் மறுக்காதே! உன் மேல் ஆனண!  கண்ணன்: சீமாலிகா! பதறாதே! அந்த வித்தை கற்பது ஆபத்தானது. உயிர்க்கே கேடு பயப்பது. ஆதலால், வேண்டாம். உன் நன்மை கருதியே சொல்கின்றேன். பிடிவாதம் செய்யாதே!  சீமாலிகன்: முடியாது. நீ கற்றுத் தரத்தான் வேண்டும். உனக்குள்ள திறமை எனக்கும் உண்டு. கற்றுத் தராமலிருப்பதற்காகக் கபட வார்த்தை கழறாதே! இதுவரை ஏமாற்றியது போல, இன்னும் ஏமாற்ற இயலாது. இப்போதே பயிற்சி தொடங்கட்டும்!  கண்ணன்: சீமாலிக! பிடிவாதம் செய்கின்றாய்! வஞ்சகத்தால் நான் மறுக்கவில்லை. அபாயம் வருமே என்று அஞ்சுகின்றேன் ஆயினும் நீ பிடிவாதம் பிடிக்கின்றாய் சரி! ஆகிறபடி ஆகட்டும். கற்றுத் தருகின்றேன்.  (கற்பிக்கத் தொடங்கல்)  சீமாலிகா, நிமிர்ந்து நில்! ஏறுபோல் பார்வையை என் மேல் வை சரி வலது கையை மடித்து மேல் நிறுத்து சுட்டுவிரல் தவிர, மற்ற விரல்கள் மடக்கு மடக்கிவிட்டாயா? சுட்டுவிரலை வானம் நோக்கி நீட்டு இப்போது தான் ஆபத்தான கட்டம், அஞ்சாதே இந்தச் சக்கரத்தைச் சுட்டு விரலின் துனியில் சாயாமல் நிறுத்து! நிறுத்தி விட்டாயா?  எங்கே இலேசாகச் சக்கரத்தைச் சுழற்று சக்கரம் சுழல்கின்றதா? சுட்டுவிரல் கழுத்தோரம் வாராமல் எட்டியே இருக்கட்டும் சுட்டுவிரல் கழுத்தோரம் வந்துவிட்டால், சக்கரம் கழுத்தை அறுத்துவிடும்! எச்சரிக்கையாயிரு சக்கரம் வேகமாகி வருகின்றது சுட்டுவிரல் கழுத்தோரம் வரும்போல் தோன்றுகின்றது. எச்சரிக்கை!  சீமாலிகன்: கண்ணா சக்கரத்தோடு சேர்ந்து என் தலையும், சுழல்கின்றதே! மயக்கமாக வருகின்றதே ஐயோ! நிற்க இயலவில்லையே!  கண்ணன்: சற்றுப்பொறு சக்கரம் சுழலாமல் நிறுத்தக் கற்றுத் தருகின்றேன். .....ஐயையோ சீமாலிகா எத்தனை முறை எச்சரிக்கை செய்தும், சுட்டு விரல் கழுத்தோரம் வந்துவிட்டதே! ஐயோ! கழுத்து.... (சீமாலிகன் கழுத்தைச் சக்கரம் அறுத்து விடுகின்றது. தலைவேறு தான் வேறாகக் கீழே விழுகின்றான். நாராயண! நாராயண! என்ற ஒலி எழுகின்றது. நாரதர் தோன்றுகின்றார்)  நாரதர்: கண்ணா என்ன சக்கரப்பயிற்சி துக்கப் பயிற்சியாகி விட்டதா!  கண்ணன்: தோழனைப் பிரிந்து துயர் உறும் போது, ஏளனம் செய்யவா வந்தீர்! நாரதரே! நண்பனை இக்கோலத்தில் கண்டு புண்படும் வேளையிலே ஏளனம் செய்யவா வந்தீர்? நாரதரே! ஐயகோ! பொறுக்க இயலவில்லையே! (கண்களில் நீர் அரும்ப, குரல் தழுதழுக்க) சீமாலிகா முரட்டுப் பிடிவாதத்தால் வாழ்வை முடித்துக் கொண்டாயே! வேண்டாம் என்று எவ்வளவோ தடுத்தும் விதி வலியால் இந்த விபரீதத்துக்கு ஆளானாயே! ஐயோ! நண்பா இனி என்று காண்பேன்!  நாரதர்:' கண்ணா! நடக்க வேண்டியது தான் நடந்துள்ளது. எதிர்பார்த்தபடி எல்லாம் முடிந்தது. ஆயர்பாடியின் அல்லல் அகன்றது. நாரதன் சொன்னது நடந்தே தீரும். தோழமைத் துரோகம் உன்னைச் சேராமல், சீமாலிகன் தன் முடிவைத் தானே தேடிக் கொண்டான். இவன் முடிவு கண்டு இன்புறுவோர் பலர். துன்புறுவோன் நீ ஒருவன் மட்டுமே!  இஃது என்ன விந்தை! மானிடனாய் அவதரித்தும் மானிடரினின்றும் மாறுபட்டு நடக்கலாமா? அறம் தலை நிறுத்தவந்த தனி முதலான உன் செயல்கள் பெருவியப்பாக அன்றோ உள்ளது. வாழ்க நின் திருவிளையாடல் வாழ்க நின் அருட்பெருங்கீர்த்தி நாராயண! நாராயண! (நாரதர் மறைகின்றார்)                                                                                   ஒம் 32. மலர்களால் பெண்களை மறைத்த கண்ணன் கண்ணன் ஆயர்பாடியில் செய்த திருவிளையாடல்களைப் பலரும் அறிவர். பல காவியங்களிலும் அவை இடம் பெற்றுள்ளன.  காவியங்களில் இடம் பெறாமல், செவிவழிச் செய்தியாக ஒரு திருவிளையாடல் நெடுங்காலம் வழங்கி வந்துள்ளது. அதனை அகநானூறு என்ற சங்க நூல் மிகச் சுருக்கமாகக் குறிப்பிடுகின்றது.  “வடாது வண்புனல் தொழுநை வார்புனல் அண்டர் மகளிர் தண்தழை உடீஇயர் மரம்செல மிதித்த மால்” (அகம்:59)  என்பதே அகநானூறு கூறும் செய்தி “ஆயர் பெண்கள் குளியா நின்றார்களாக, அவர், இட்டு வைத்த துகில் எல்லாம் பின்னை எடுத்துக் கொண்டு கண்ணன் குருந்தமரத்து ஏறினாராக, அவ்வளவில் நம்பி மூத்தபிரான் பலராமன் வந்தாராக, அவர்க்கு ஒரு காலத்தே கூட மறைவதற்கு மற்றொரு வழியின்மையின் ஏறி நின்ற குருந்த மரத்துக் கொம்பைத் தாழ்த்துக் கொடுத்தார். அதற்குள்ளே அடங்கி, (ஆய்ச்சியர்) மறைவாராக, அவர் போமளவும் தானையாக உடுக்கத் தாழ்த்தார்”  என்பது இப்பகுதிக்கு உரிய புழைய உரை கண்ணன் ஆய்ச்சியர் துகிலை எடுத்துக் குருந்தமரம் ஏறினான். அப்போது எதிர்பாராமல், பலராமர் அவ்வழியே வந்து விட்டார். அதனால் கண்ணன், தன் குறும்பு வெளிப்பட்டு விடக்கூடாதே என்று அஞ்சினான். துகிலை மீண்டும் தந்து அணிந்து கொள்ளச் செய்ய நேரம் இல்லை. ஆதலால் தான் ஏறிய குருந்த மரத்தை நீருடன் தாழும்படி காலால் மிதித்து வளைத்தான். மரக்கிளைகள் வளைத்து நீராடிய பெண்களை மறைத்துக் கொண்டது. பலராமன் சென்றபிறகு, மரக்கிளைகளை நிமிர்த்துத் துகிலைத் தந்தான். என்பது இங்குக் குறிக்கப்படும் வரலாறு.  இந்த வரலாறு சிந்தாமணி நாமகள் இலம்பகம் 209 ஆவது பாடலும் குறிப்பிடுகின்றது.  இது தமிழ் நாட்டில் மட்டும் வழங்கி வந்த செய்தி.  33. கண்ணன் ஆடிய கூத்துக்கள் கண்ணன் பேரன். அநிருத்தன். பானாசுரன் மகள் உஷை. அவள் அநிருத்தனைக் காதலித்தாள். அநிருத்தன் தூங்குகையில் அவனைத் தன் அந்தப்புரத்துக்குக் கடத்திச் சென்று விட்டாள்.  அவனை மீட்பதற்காகக் கண்ணன் பாணாசுரனது சோ நகருக்குச் சென்றான். அப்போது அங்கு அநிருத்தன் உள்ள இடம் தெரிந்து கொள்ளும் பொருட்டு, வீதியிலே குடக்கூத்தும், பேடிக்கோலக் கூத்தும் ஆடிக் கொண்டு சென்றான் என்பது தமிழ் நாட்டில் வழங்கி வந்த செவிவழிச் செய்தி.  அது மட்டுமன்று கஞ்சனைக் கொல்வதற்காக அல்லியத் தொகுதிக் கூத்து என ஒருவகைக் கூத்து ஆடினான் என்பதும். கஞ்சன் ஏவிய சாணூரன், முட்டிகன் என்ற மல்லரைக் கொல்வதற்காக மல்லாடல் என்ற கூத்தும் ஆடினான் என்பதும் தமிழ் நாட்டில் மட்டும் வழங்கிய செய்திகள். இவற்றைச் சிலப்பதிகாரம் மிகமிகச் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளது.  சங்க நூல்களில் பொதுவாக, கண்ணன் வரலாறுகள் பல கூறப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் வடநாட்டுக் காவியங்களில் உள்ளனவே.  கண்ணன் சூரியனைத் தந்தான் என ஒரு செய்தி குறிப்பிடப்படுகின்றது. அவ்வரலாறு வடமொழிக் காவியங்களில் இல்லை. தமிழ்நாட்டில் வழங்கி வந்த செவிவழிச் செய்திதான் போலும்! ஆனால் அச்செய்தி விளக்கமாகத் தெரிந்துகொள்ள இயலவில்லை.  34. தமிழ்ப்பெண் நப்பின்னை கண்ணன் வடமதுரையில் பிறந்தவன். வடபகுதிக்கு உரிய தெய்வமாகிய அவனைத் தமிழர் தமக்குரிய தெய்வமாகவே உரிமை கொண்டாடினர். கண்ணன் வரலாறுகள் பல செவிவழிச் செய்திகளாக கிழங்கி வரலாயின.  கண்ணனுக்குத் தமிழ் நாட்டோடு நீங்காத தொடர்பு ஏற்படுத்தி விட வேண்டும் என்ற ஆர்வத்தால் கற்பித்துக் கொண்டதுதான் நப்பின்னை வரலாறு.  வடநாட்டுக் காவியங்களில் கண்ணன் காதலியாக இடம் பெறுபவள் இராதை மட்டுமே! நப்பின்னை என்ற பெயரே அங்குள்ளார் அறியார்.  கண்ணனுக்கு மனைவியர் எண்ணிலர். அவருள் உருக்குமணி, சத்தியபாமை, ஜாம்பவதி, காளிந்தி, மித்திரவிந்தை, சத்தியை, பத்திரை, லஷ்மணை என்ற எண்மர் பட்டத்தரசிகள்.  இவருள் நப்பின்னை சேர்க்கப்படவில்லை. ஆனால் சங்க காலத்துக்கு முன்பிருந்தே, நப்பின்னை வரலாறு தமிழ்நாட்டில் வழங்கி வருகின்றது. நப்பின்னை என்பது தனித்தமிழ்ப் பெயர். அதனை உபகேசி என்று வடமொழி கற்ற தமிழ்ப்புலவர் நல்கூர் வேள்வியார் என்பவர் குறிப்பிடுகின்றார்.  “உப்பக்கம் நோக்கி உபகேசி தோள் மணந்தான். உத்தர மாமதுரைக்கு அச்சு என்ப” என்பது திருவள்ளுவமாலையில் உள்ள பாடல். உபகேசி என்பது நப்பின்னைப் பிராட்டியார் என்று நேமிநாத உரையாசிரியர் குறிப்பிடுகின்றார்.  இந்த நப்பின்னைப் பிராட்டி யமுனை யாற்றங்கரையில் தன்னை வஞ்சித்த கண்ணனைத் தன் அழகில் ஈடுபடச் செய்து மயக்கினாள் என்று பழமொழி நானூறு என்ற பழைய நூல் கூறுகின்றது. அதனால் “சால்பினைச் சால்பு அறுக்குமாறு” என்ற பழமொழியே தோன்றி வழங்கியதாக அறிகின்றோம். இதே வரலாறு சிலம்பிலும் உள்ளது.  கண்ணன் - நப்பின்னை வரலாறு. தமிழ் நாட்டில் நாடகமாக நடிக்கப்பட்டு வந்துள்ளது என்பதற்குச் சிலம்பு சான்று தருகின்றது.  “குலம் நினையல் நம்பி! நிலமகட்குக் கேள்வனும் நீள்நிரை நப்பின்னை இலவலர் வாய் இன்னமிர்தம் எய்தினான் அன்றே”  என்பது சிந்தாமணிப் பகுதி.  நிலமகட்குக் கேள்வன் - அரசனாகிய கண்ணன் நீள்நிரை நப்பின்னை பெருந்திரளான பசுக்களைக்  கொண்ட ஆயர்குலத்து நப்பின்னை.  இருவரும் மணம் செய்து கொண்டனர் என்பது. கருத்து. இந்த நப்பின்னை வரலாறு ஆழ்வார்கள் பாடல்களில் பரக்க இடம்பெறுகின்றது. பூமிதேவி சீதேவி ஆகிய இருவருடன் சேர்ந்து திருமாலுக்கு மூன்றாவது தேவியாக இடம் பெறுகின்றாள்.  தமிழ் நாட்டில் மட்டும் வழங்கி வந்த நப்பின்னை வரலாற்றை நெல்லிநகர் வரதராச ஐயங்கார் தம் காவியத்தில் சேர்த்துக் கொண்டுள்ளார். நப்பின்னைப் படலம் என அப்பகுதிக்குப் பெயரிட்டு, யசோதையின் தமையன் கும்பகன் மகள் நப்பின்னை என்று குறிப்பிட்டுள்ளார். கண்ணன் ஏழு எருதுகளை அடக்கி நப்பின்னையை மணந்து கொண்டானாம்.  நப்பின்னை வரலாறு போலவே வள்ளி தேவியின் வரலாறும் தமிழ் நாட்டுக்கே உரியது. தெய்வயானை என்ற வடநாட்டுப் பெண் ஒருத்தியை மணந்திருந்த முருகனுக்குத் தென்னாட்டுக் குறமகனை மனம் செய்வித்துத் தமிழ்க் கடவுளாக்கிய வரலாறும் இத்தகையதே!  வடமொழிக் கந்தபுராணத்தில் வள்ளி இடம் பெறவே இல்லை.      35. தேவகியின் ஏக்கம் ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஒர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளிந்து வளர்ந்தவன் கண்ணன்.  பெற்றவள் தேவகி. வளர்த்தவள் யசோதை. கண்ணபிரானுடைய குழந்தை விளையாட்டையும் குறும்புத் தளத்தையும் கண்டு களிக்கும் பேறு தேவகிக்குக் கிட்டவில்லை. அந்தப் பெரும் பேறு பெற்றவள் யசோதை.  “மருவும் நின்திரு நெற்றியில் கட்டி      அசைதர மணிவாயிடை முத்தம் தருதலும் உன்தன் தாதையைப் போலும்     வடிவு கண்டுகொண்டு உள்ளம்உள் குளிர  விரலைச் செஞ்சிறு வாயிடைச் சேர்த்து    வெகுளியாய் நின்று உரைக்கும்அவ் வுரையும் திருவி லேன்ஒன்றும் பெற்றிலேன் எல்லாம்    தெய்வ நங்கை யசோதைபெற்றாளே! முழுவதும் வெண்ணெய் அளைந்து தொட் டுண்ணும்  முகிழ் இளஞ்சிறு தாமரைக் கையும்   எழில்கொள் தாம்புகொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் வெண்தயிர் தோய்ந்தசெவ் வாயும் அழுகையும்அஞ்சி நோக்கும் அந் நோக்கும் அணிகொள் செஞ்சிறு வாய்நெளிப் பதுவும் தொழுகையும் இவை கண்ட யசோதை தொல்லை இன்பத்து இறுதிகண் டாளே”  என்று ஏங்கினாள் தேவகி கம்சனைக் கொன்று மகாபாரதப் போர் முடித்த பின்பு, கண்ணபெருமான் துவாரகையில் வாழ்ந்து வந்தான். உருக்குமணி, சத்தியபாமா முதலிய தேவியரும் வாசுதேவன், தேவகி ஆகிய பெற்றோரும் உடனிருந்தனர்.  ஒருநாள் தேவகியின் முகத்தில் வாட்டம் கண்ட கண்ணன், “அம்மா! உனக்கு என்ன கவலை? எதுவாயிருந்தாலும் தீர்த்து வைக்கின்றேன்” என்றான்.  “மகனே! நீ இளம் பருவத்தில் செய்த விளையாட்டுக் குறும்புகளைக் காணும் பேறு எனக்குக் கிட்டவில்லை. எல்லாம் தெய்வமங்கை யசோதை பெற்றாள். அவள் பெற்ற பேறு கிட்டாதா?” என்று ஏங்குகின்றேன். என்றாள் தேவகி.  “தாயே! உன் ஏக்கத்தை இப்போதே தீர்த்து வைக்கின்றேன்” என்று மழலைப் பருவ வேடம் கொண்டான் கண்ணன்.  தேவகி தயிர் கடையும்போது, “அம்மா எனக்கு வெண்ணெய் தா! இல்லையேல், நானே முழுவதும் எடுத்து உண்டுவிடுவேன்! என்றான் கண்ணன்.  தேவகி இழந்தசெல்வம் மீண்டும் பெற்றவள் போல் பெருமகிழ்வு கொண்டாள்.  “கொஞ்சம் பொறு! நெய்யாக்கித் தருகின்றேன்” என்றாள் தேவகி  கண்ணன் தயிர் கடையும் கயிற்றைப் பறித்துக் கொண்டு ஓடினான். தேவகி துரத்தினாள்.  கண்ணன் பயந்தவன் போல் வீடு முழுவதும் சுற்றிச் கற்றி ஓடினான். முடிவில் மத்தை எடுத்துத் தயிர்ப் பானையை உடைத்து விட்டான். தயிர் எல்லாம் சிதறியது.  கண்ணனின் குறும்பு கண்ட தேவகி தொல்லை இன்பத்து இறுதி கண்டாள். கண்ணன் மழலை வேடம் மாறி மீண்டும் முன்னைய வடிவம் பெற்றான்.  “இன்னும் சிறிதுநேரம் அந்த மழலைக் கோலத்திலேயே இருந்திருக்கலாகாதா!” என்று தேவகி ஏங்கினாள்.  கண்ணன் விசுவகர்மாவை வரவழைத்துத் தன் மழலை வடிவத்தைச் சிலையாக வடித்துத் தரும்படி ஏவினான்.  விசுவகர்மா, மத்தும் கையுமாக இருக்கும் கோலத்தில் சிலை வடித்துத் தந்தான். தேவகி அந்தச் சிலையைக் கண்டு கண்டு களிப்பின் எல்லையைக் கண்டாள்.  இறுதிக் காலத்தில், துவாரகையைக் கடல் கொண்டபோது, அச்சிலையைத் கோபியாகிய திருமண்ணில் மறைத்துக் கடலில் விட்டுவிட்டாள்.  நாலாயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு ஒரு மீனவன் கடலில் படகுப் பயணம் செய்தான். அப்போது புயல் ஒன்று தோன்றிப் படகைக் கவிழ்த்தது. அந்தப் படகு கவிழாமல் மத்வாச்சாரியார் தம் தெய்விக சக்தியால் காப்பாற்றினார்.  அந்த மீனவன் தன்னைக் காத்த மத்வருக்குக் காணிக்கையாக அந்தக் கோபிக்கட்டியைக் கொடுத்தான்.  காணிக்கை பெற்ற மத்வர் அதை உடைத்துப்பார்த்தார். மத்தும் கையுமாயிருந்த கண்ணன் காட்சியளித்தான். அந்தக் கண்ணனை அவர் உடுப்பியில் நிறுவி ஓர் ஆலயம் எழுப்பினார்.  அந்த ஆலயமே உடுப்பியில் இன்று உலகமே வழிபடும் ஆலயமாக விளங்குகின்றது.    36. பாமாவின் பக்தி கண்ணன் துவாரகையில் ஆண்டு கொண்டிருந்த போது. சத்தியபாமா ஒருநாள், பாரிஜாத மலரை விரும்பினார்.  உடனே கண்ணன் தேவலோகம் சென்று, அம்மலரைக் கொணர்ந்து பாமாவிடம் கொடுத்தான்.  இதைக் கேள்விப்பட்ட உருக்குமணிக்குக் கண்ணன்மேல் ஊடல் பிறந்தது.  தானே பேரழகி என்பது உருக்குமணியின் எண்ணம். இவ்வளவு அழகியாகிய எனக்குக் கிடைக்காத மலரைப் பெறப் பாமாவுக்கு என்ன தகுதி உண்டு என்று எண்ணினாள்  இதே சமயம் கண்ணன் கருடனிடம் உரையாடிக் கொண்டிருந்தான். அவனிடம், அனுமனுடைய பக்திப் பெருக்கையும் ஆற்றல் மிகுதியையும் செயற்கரிய செய்து முடிக்கும் சீர்மையையும், கண்ணன் கூறினான்.  தன்னைவிடச் சிறந்தவன் அனுமன் என்று கூறியது கருடனுக்குப் பொறுக்கவில்லை. கேவலம் ஒரு குரங்கு என்னைவிட மேலானதாக இருக்க இயலுமா? என்று கருடன் எண்ணினான்.  ஒரே சமயத்தில் தோன்றிய உருக்குமணி, கருடன் ஆகிய இருவர் பொறாமையையும் நீக்கி விடவேண்டும் என்று கண்ணன் எண்ணினான்.  கருடனை அழைத்து நீ உடனே சென்று “இராமனும் சீதையும் அழைக்கின்றனர் என்று கூறி, அனுமனை அழைத்துவா!” என்று ஏவினான். கருடன் புறப்பட்டு விட்டான்.  பின்னர் உருக்குமணி, பாமா இருவரையும் அழைத்து, “இன்னும் சற்று நேரத்தில் அனுமன் வரப்போகின்றான். நாம் கண்ணனும் உருக்குமணி, பாமாவாகக் காட்சி தந்தால் அவன் வணங்கமாட்டான். உடனே திரும்பிவிடுவான். நான் இராமனாகக் காட்சி தரப்போகிறேன். உங்கள் இருவரில் ஒருவர் சீதையாக உடனே மாற வேண்டும்” என்று கட்டளையிட்டான்.  காட்டில் வாழ்ந்த சீதையாக மாறுவது அவ்வளவு கடினமா? என்று அலட்சியமாகக் கருதிய உருக்குமணி பலவித ஒப்பனைகளைச் செய்து கொள்ளத் தொடங்கினாள். சீதையின் எளிமைத் தோற்றத்துக்குப் பதிலாக, செல்வத் தோற்றமே அவளுக்கு அமைந்தது.  “இந்தக் கோலத்தில் உன்னைச் சீதையாக அனுமன் ஒப்ப மாட்டான்” என்று அவளைப் போகச் சொல்லி விட்டான் கண்ணன்.  பாமாவை அழைத்து, “நீ சீதையாக உடனே மாறி வா” என்றான். பாமா உடனே இருந்த ஒப்பனைகளையும் ஆடை அணிகளையும் அகற்றிவிட்டு, எளியதோற்றத்துடன் கண்ணன் எதிரில் நின்றாள்.  அந்நேரம் கருடன் அனுமனை அழைத்து வந்தான். ராமனையும் சீதையையும் கண்ணாரக் கண்டு களி நடனமாடினான் அனுமன். கண்ணன் கழலிணை வணங்கிக் களிக் கூத்தாடி இராம நாம ஜபம் செய்து கொண்டிருந்தான்.  தானே பேரழகி என்ற இறுமாப்பு உருக்குமணிக்கு நீங்கியிருக்கவேண்டும்.  ஆனால் பாமாவின்மேல் மேலும் பொறாமை அதிகரித்தது.  உருவத்தால் பாமா என்னை வென்றுவிட்டாள். கண்ணனிடம் என்னைவிடச் சிறந்த காதல் அவளுக்கு ஏது? என்று மீண்டும் அவள் மனம் கறுவியது.  இதை உணர்ந்த கண்ணன் உருக்குமணி, பாமா இருவரையும் அழைத்து. “உங்களில் என் மேல் மிக்க காதல் உடையவர் யார் என்று அறிவதற்காக ஒரு தேர்வு வைக்கப் போகின்றேன். அதில் வெற்றி பெறுபவரே சிறந்த அன்புடையார் ஆவர்” என்றான். உடனே உருக்குமணி “நம்மைவிடச் சிறந்த அன்பு-காதல்-பக்தி பாமாவுக்கு ஏது? நாமே வெல்வது உறுதி” என்று எண்ணி இறுமாந்து நின்றாள்.  பாமா, கண்ணனைத் தியானம் செய்துகொண்டு பேசாமல் நின்றாள்.  ஒரு தராசு வரவழைத்தான் கண்ணன். “இந்தத் தராக நிரம்ப விலையுயர்ந்த பொருள் யார் வைக்கின்றாளோ அவளே சிறந்தவள்” என்றான் கண்ணன்.  உடனே உருக்குமணி, தள்ளிடமிருந்த நவமணி பதித்த அணிகலன் அனைத்தும் தராசில் குவித்தாள். தராசுத் தட்டுக் கீழே இறங்கவே இல்லை. பின்னர் பட்டுப்புடவைகள் விலையுயர்ந்த பண்டங்கள் உள்ளனவெல்லாம் வைத்தும் தராசுத் தட்டுக் குத்துக்கல்லாக அப்படியே இருந்தது.  மேலும் செய்வதறியாத உருக்குமனி தன் தோல்வியை ஒப்புக் கொண்டு பின் வாங்கினாள்.  அடுத்தது பாமாவின் முறை. பாமா ஏதுமே செய்யவில்லை. விலையுயர்ந்த அணிகலன்களைத் தேடவில்லை. அருகே வளர்ந்திருந்த ஒரு துளசி இலையைப் பறித்து, “கண்ணா! கண்ணா!” என்று கூறியவாறே தட்டில் வைத்தாள்.  என்ன அற்புதம். அவ்வளவு அணிகலன்களாலும் அசையாத தட்டு, துளசிஇலை பட்டவுடன் கீழே இறங்கி விட்டது.  அன்பு என்பது உள்ளத்துக்கு உரியது. வெளியில் காட்டுவதல்ல. என்ற உண்மையை இவ்வரலாறு நிரூபித்தது.  உருக்குமனியின் செருக்குப் பறந்தது. பாமாவிடம் கொண்ட பொறாமை அன்பாக மாறியது.  கண்ணன் கருடனை நோக்கி, அனுமனை அவன் இருந்த இடத்தில் விட்டுவிட்டு வா! என்று ஆணையிட்டான். இறைவன் ஏறிய தோளில் இந்த ஏழைக் குரங்கு ஏறுவதா என்று பொருமினன் கருடன், ஆயினும் என்ன செய்வது? கண்ணன் கட்டளையை மீற முடியுமா?  நான் போகும் வேகத்தில் இந்தக் குரங்கு கீழே விழுந்து - நொறுங்கிப் போகுமே! என்று எண்ணியவாறே அனுமனைத் தன் தோளில் ஏற்றிக் கொண்டு பறந்தான் கருடன். “சே! சே! உன் வேகம் இவ்வளவு தானா? இராம-இலக்குவர் இருவரையும் தூக்கிக் கொண்டு நான் தாவிய வேகத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட உன்னிடம் இல்லையே! சஞ்சீவி மலையைப் பேர்த்துக் கொண்டு அரை நொடிக்குள் வந்தேனே! என்று கூறிக் கொண்டே அனுமன், கருடனை வேகப் படுத்தினான். வேகத்தால் களைத்துப் போனான் கருடன். களைத்துப் போன கருடனை அனுமன், தன் வாலில் கட்டி இழுத்துக் கொண்டு அரை நொடியில் தன் இருப்பிடத்தை அடைந்தான்.  அனுமனால் கருவம் குலைந்த கருடன், அனுமனை வணங்கி, வாணர வேந்தே! நான் தோற்றேன். என் கருவத்தைக் குலைத்து என் உள்ளத்தைத் தூய்மையாக்கி விட்டிர்கள். உங்களுக்குக் கோடி வணக்கம்" என்று கூறிவிட்டு மீண்டான்.  37. வீமனும் விரதமும் இராமாயணம், மகாபாரதம் இரண்டும் இதிகாசங்கள். இவை மக்களிடம் பரவி வழங்குவதைப் போல், வேறு எந்தக் காவியமும் வழங்கப்படவில்லை  வால்மீகியும், வியாசரும் கூறாத பல இதிகாசக்கதைகள், செவி வழிச் செய்திகளாக - நாடோடிக் கதைகளாக வழங்கி வருகின்றன.  அவற்றுள் ஓர் அறிய செய்தியை இங்க காண்போம் பஞ்சபாண்டவர் ஐவருள் ஒருவனாகிய, வீமன் ஆயிரம் யானைகளின் பலம் ஒருங்கே பெற்றவன். பிறக்கும் போதே பெரும்பலத்துடன் விளங்கினான். ஒரு நாள் தாயான குந்திதேவி, கைப்பிள்ளையான வீமனை ஒரு பாறையில் நழுவவிட்டுவிட்டாள். “ஐயோ! குழந்தையின் உடல் நொறுங்கிப் போயிருக்குமே!” என்று அஞ்சிக் குழந்தையை எடுத்தாள். என்ன விந்தை குழந்தை சிரித்துக் கொண்டிருந்தது. சிறு சிராய்ப்புக் கூட உடம்பில் இல்லை.  ஆனால குழந்தை விழுந்த இடத்தில் பாறையில் குழியிருந்தது. வீமனின் உடல்வலிமையைக் காட்டுவதற்காக வழங்கப்பட்டுவரும் செவிவழிச் செய்தி இது.  வீமன் உண்பதற்கு உணவு வண்டி வண்டியாக் வேண்டும் பகாசுரனுக்காக அனுப்பிய ஒரு வண்டி உணவையும் வீமன் ஒருவனே உண்டு விட்டான்.  பகாசுரன் மிக வலிமை வாய்ந்த அரக்கன். தன் உணவை வீமன் உண்பதைக் கண்டான். சினம் கொண்டான். ஓடிவந்து வீமன் முதுகில் ஓங்கி ஒரு குத்துவிட்டான்.  வீமன் “அப்பாடா உண்ட சோறு விக்கியிருந்தது. இப்போது உள்ளே இறங்கிவிட்டது” என்றான். பல் தேய்க்கும் குச்சி முழுப் பனைமரந்தானாம். இவ்வாறு பல செய்திகளை மக்கள் வியந்து பேசுவதை இன்றும் காணலாம்.  பெருந்தீனியனாக இருந்தாலும் வீமன் ஒழுக்கம் தவறாதவன். பக்தி நிரம்பியவன்.  ஆனால் பிறர் காணும்படி பூசை, அர்ச்சனை, தியானம் ஏதும் செய்யமாட்டான்.  அவன் பூசனை அனைத்தும் மானசீக பூசனையே.  பஞ்சவரும் நாட்டினரும் ஏகாதசிவிரதம் கடைப்பிடிப்பது வழக்கம். ஆனால் வீமனுக்கு எந்த விரதமும் ஒத்து வராது. ஏனெனில், விரதம் என்றால் பசி பொறுக்க வேண்டுமே!  வீமன் விரதம் கடைப்பிடிக்காமை கண்டு அர்ச்சுனன் முதலியோர் அவனை ஏளனம் செய்வதுண்டு.  உணவுண்ணவே நேரம் போதாது. அதனால் தான் வீமன் விரதம் கடைப்பிடிப்பதில்லை என்பது அவர்களின் ஏளனத்துக்குக் காரணம்  இதை உணர்ந்த வீமன் தானும் ஏகாதசி விரதம் இருந்தே தீருவது என்று முடிவு செய்தான்.  தங்கள் மூதாதையாகிய வியாச பகவானிடம் “நான் விரதம் இருக்க வேண்டும். அதன் விதிமுறைகள் யாவை?” என்று கேட்டு அறிந்து கொண்டான். “பசி பொறுக்க இயலாவிட்டால் என்ன செய்யலாம்?” என்பதனையும் மறக்காமல் கேட்டுக் கொண்டான்.  “பசி பொறுக்க இயலாவிடின், பால், பழம், கரும்பு முதலியவற்றை உண்ணலாம்” என்றார் வியாசர்.  ஏகாதசியன்று வீமன் விரதம் தொடங்கி விட்டான். இச்செய்தி கண்டு நாட்டுமக்களெல்லாம் வியப்பெய்தினர். “இவனாவது விரதம் இருப்பதாவது இடையிலே விரதத்தைக் கைவிட்டு விடுவான்” என்றும் சிலர் ஆருடம் கூறினர்.  ஆனால், வீமன் பிறர் ஏளனத்தைப் பொருட்படுத்தவில்லை. விரதம் காலையில் தொடங்கியது. காலைமணி 10 ஆனது. வீமனுக்குப் பசி பொறுக்க இயலவில்லை. கால் கைகள் அனைத்தும் சோர்ந்து போயின; கண் பஞ்சடைந்தது; காது அடைத்தது: பெருங்குடல் சிறுகுடலைக் கவ்வத் தொடங்கியது. இந்நிலையில் வியாசர் சொன்னபடி பால், பழம் முதலியன உண்ணத் தொடங்கினான்.  அந்த ஒரு வேளை அவன் உண்ட அளவு எவ்வளவு தெரியுமா?  ஏகாதசிப் புராணம் அந்த அளவைக் குறிப்பிடுகின்றது.  இனிய கதலிப் பழக்குலைகள்      ஈரைஞ் நூறும் எழிற்பனசக் கணிஆ யிரமும் முந்நூறு      கட்டுக் கரும்பும் குலைஇளநீர் தனி ஆயிரமும் முன்அருந்திச்      மற்றும் பசிகள் தணியனாய்ப் புனிதப் பசுப்பால் நீர் அருந்திப்     போகாது உயிரைப் புறம்காத்தான்.  இப்பாடலே ஏகாதசிப் புராணம் காட்டும் உணவின் அளவு. இவற்றைப் பட்டியலிட்டுக்காண்போம்.  வாழைப்பழக் குலைகள் 1000 பலாப் பழங்கள் 1000 கரும்புக் கட்டுக்கள் 300 பெரிய இளநீர்க் குலைகள் 1000  இவை முதலில் காலை 10 மணிக்கு அருந்தியது மட்டும். இவ்வளவு உண்டும் வீமன் பசி அடங்கியதா? பசியை அதிகப்படுத்தியது. உடனே குடம்குடமாகப் பசுவின் பால் பருகினான். அதன் பின் தண்ணீர் பல குடங்கள் காலியாயின.  இந்த உணவு அவன் உயிர் உடலை விட்டுப் புறம் சென்றுவிடாமல் ஓரளவு பாதுகாத்தது.  இதைப்போல் பலமுறை பால், பழம் அருந்தி அந்த விரதத்தை முடித்தான்.  வீமன் விரதம் இருந்தநாள் மாசி மாதம் வளர்பிறையில் வரும்ஏ காதசி, ஆதலால் அந்த நாள் விம ஏகாதசி என்றே வழங்கப் படலாயிற்று.