[] 1. Cover 2. Table of contents எழுத்துநடையின் செந்தரம் எழுத்துநடையின் செந்தரம்   செயபாண்டியன் கோட்டாளம்   jkottalam@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/ezhuthunadaiyin_sentharam மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation எழுத்துநடையின் செந்தரம் இந்த நூலிலுள்ள கருத்துகளை ஏலறிவிப்புடனோ ஏலறிவிக்காமலோ யாரும் எங்கும் பயன்படுத்தவும் நூலை மற்றவர்களுடன் பகிரவும் இதன் ஆசிரியர் அனுமதிக்கிறேன். பதிவிறக்க: []https://drive.google.com/file/d/15AaC_XPuAr782oGGEWaXL_ln_70LSdLG/view?usp=sharing முதற்பதிப்பு: 18 மே, 2022 திருத்தப்பதிப்பு: 27 திசம்பர், 2022 அச்சுநூலாகப்பெற: https://notionpre.com/read/ezhuthunadaiyin-sendaram [] கொற்கைச்செந்தரத்துக்கு உடன்படிந்தது. []ஆசிரியரைப்பற்றி: https://drive.google.com/open?id=1K-v-0eeapcdhPKPbsCuU9yhvm8rV_0RQ முன்னுரை என்ன! எழுத்துநடைக்கு ஒரு செந்தரமா? எழுத்துநடை என்பது ஒரு எழுத்தாளரின் தனிச்சிறப்பன்றோ? ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு தனிநடை இருக்கிறதே! அதை எப்படி செந்தரமாக்க இயலும் என்ற கேள்வி உடனே உங்கள் மனத்தில் எழவேண்டும். எழுத்துநடை என்பது என்ன? எழுத்துநடை என்று நாம் தளர்வாக குறிப்பிடுவதில் உண்மையில் மூன்றுவிதமான பொருள்கள் அடங்கியிருக்கின்றன. அவற்றுக்கு நான் (1)இலக்கணநடை (2)தெளிவுநடை (3)இலக்கியநடை என்று பெயரிடுகிறேன். எழுத்துநடை என்று சொல்லும்போது நான் மேலே மூன்றாகவதாக குறிப்பிட்ட இலக்கியநடையையே அறிஞர்கள் கருதுகிறார்கள். இதில் செய்யுணடை (செய்யுளின் நடை), கவிதைநடை, உரைநடை போன்றவை அடங்குகின்றன. கதைகளில் நிகழ்ச்சிகளையும் கட்டுரைகளில் கருத்துகளையும் அறிமுகமாக்கி விவரிக்க ஒரு எழுத்தாளர் மேற்கொள்ளும் அணுகுமுறை அவரது தனிநடையாகலாம். அதில் எழுத்தாளர் தன் முழுத்திறமையையும் ஆக்கத்திறனையும் காட்ட எவ்விதக்கட்டுப்பாடும் இல்லை. இதன் மறுமுனையாக, இலக்கணப்பிழைகள் நிரம்ப மோசமாக எழுதிவிட்டு ‘இது என் தனிநடை’ என்று சிலர் சொல்லிவிடுகிறார்கள். உண்மையில் இதை பிழையாகவே நாம் கருதவேண்டும்; நடையாக ஒப்புக்கொள்ளலாகாது. எனினும் இந்தப்பொருளிலும் சிலர் ‘நடை’ என்ற சொல்லை பயன்படுத்துகிறார்கள். பிழையின்றி எழுதி உங்கள் தமிழாசிரியரின் பாராட்டையும் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களையும் பெற உதவும் இந்த நடையை நான் நல்ல இலக்கணநடை என்கிறேன். நான் இங்கு உரையாற்ற எடுத்துக்கொள்ளும் களம் இந்த இரண்டுக்கும் இடைப்பட்டது. இலக்கணப்பிழை இல்லாமல் எழுதியபின்னும் நீங்கள் சொல்லவரும் கருத்து உங்கள் வாசகர்களுக்கு எளிதாகவும் விரைவாகவும் புரிகிறதா என்ற கேள்வியை நான் எடுக்கிறேன். அவ்வாறு புரியும்படியும் பொருண்மயக்கம் இல்லாமலும் எழுத என்னென்ன சொற்றொடரமைப்புகளை பயன்படுத்தலாம் என்று காணப்போகிறோம். ஏன் செந்தரமாக்கவேண்டும்? தமிழ்நாட்டின் பள்ளிப்பாடநூல்களையும் வாரவிதழ்களையும் நாளிதழ்களையும் இணையத்தில் பலர் எழுதுவதையும் நான் வாசிக்கும்போது, தமிழின் இயல்புகளையும் தனிச்சிறப்புகளையும் எழுத்தாளர்கள் உணரவில்லை என்பதும் உணர்ந்திருந்தாலும் மறந்துவிட்டார்கள் என்பதும் தெளிவாகிறது. இலக்கணப்பிழைகளை நீக்கியபின்னும் பலவிதங்களில் தெளிவின்மை இருக்கிறது. கடந்த சில பத்தாண்டுகளில் தமிழின் ‘நடை’ வெகுவாக மாறியிருக்கிறது. பொதுவாக, ஆங்கிலத்தின் இலக்கணவிதிகளின்படி தமிழையும் எழுதும் ஒரு போக்கு வளராகியிருக்கிறது. ஆழ்ந்து ஆராயும்போது இந்த போக்கு தெளிவின்மையை புகுத்தியிருப்பதை காணலாம். நான் ஆங்கிலவெறுப்பினாலோ தமிழ்ப்பற்றினாலோ இதை சொல்லவில்லை. உண்மையில், தமிழின் இலக்கணப்படி ஆங்கிலத்தை எழுதுவதும் குழப்பத்தை விளைவிக்கும். தமிழ்நாட்டில் இப்போது உயர்கல்வியும் ஆராய்ச்சியும் ஆங்கிலத்திலே நடைபெறுகின்றன. இதனால் உயர்கல்விகற்ற அனைவருக்கும் தமிழில் எழுதும் பழக்கம் விட்டுப்போய்விட்டது. கணிதம், அறிவியல் போன்ற பள்ளிப்பாடங்களுக்கு நூல்களை எழுதும் பேராசிரியர்களுக்கு தமிழில் தெளிவாக எழுதத்தெரியவில்லை என்பதை நான் காண்கிறேன். இந்த நூலை படித்துமுடித்தபின் நீங்களும் இதை உணர்வீர்கள். அதன்பின் உங்களை நீங்களே திருத்திக்கொண்டு தெளிவாக எழுதுவீர்கள் என்பது என் நப்பாசை. தமிழின் நடையில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் சீரானதாகவும் இல்லை. சிலர் தூய தமிழ்ச்சொற்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்பார்கள். வேறுசிலர் சமக்கிருதச்சொற்களையும் ஆங்கிலச்சொற்களையும் அப்படியே எடுத்தாளவேண்டும் என்பார்கள். சிலர் கிரந்த எழுத்துகளை விலக்கவேண்டும் என்பார்கள். வேறு சிலர் அவை தேவையானவை என்பார்கள். சிலர் தொல்லிலக்கணவிதிகளை கடைப்பிடிக்கவேண்டும் என்பார்கள். வேறுசிலர் அவை இக்காலத்துக்கு ஒவ்வாதவை என்றும் தமிழுக்கு ஒரு புதிய இலக்கணம் தேவை என்றும் சொல்வார்கள். சிலர் புணர்ச்சியை தவிர்த்து பிரித்தெழுதினாலே இக்காலத்து மக்களுக்கு புரியும் என்பார்கள். வேறுசிலர் புணர்ச்சிவிதிகளை இறுக்கமாக கடைப்பிடிக்கவேண்டும் என்பார்கள். இவ்வாறாக தமிழ்ச்சமூகம் சிதறிக்கிடக்கிறது. இந்த நிலை தமிழ்மக்களுக்கு எவ்விதத்திலும் உதவுவதாக இல்லை. தமிழ்வழியில் கல்விகற்ற மாணவர்கள் இந்தியாவின் மைய அரசு கல்லூரிப்படிப்புக்கும் தொழிற்கல்விக்கும் நடத்தும் போட்டித்தேர்வுகளில் வெற்றியடையவில்லை என்று கவலையடைகிறோம். இதற்கு அரசியற்காரணங்களும் சமூகக்காரணங்களும் இருக்கலாம். ஆனால், ஒருவேளை தமிழில் எழுதிய பாடநூல்கள் மாணவர்களுக்கு புரியவில்லையோ என்ற சாத்தியத்தையும் நாம் கருதவேண்டும். மாணவர்கள் மனப்பாடஞ்செய்து தேர்வெழுதும் நிலை நீடிப்பதற்கு இதுவும் ஒரு காரணமாயிருக்கலாம், அன்றோ? கணிதத்திலும் அறிவியலிலும் தமிழிலக்கணம் முக்கியமில்லை என்ற ஒரு கருத்து இந்த பாடநூல்களை எழுதும் ஆசிரியர்களிடையில் நிலவுவதாக தோன்றுகிறது. ஆனால் தமிழ்வகுப்பில் இலக்கணத்தை கற்கும் அதே மாணவர்களே அறிவியலையும் தமிழில் கற்க வருகிறார்கள். அங்கு சொன்னது இங்கு முரணானால் மாணவர்களுக்கு குழப்பமே மிஞ்சும். மொழிப்பயிற்சியின் நோக்கம் மாணவர்கள் எழுத்தாலும் பேச்சாலும் துல்லியமாக தகவற்பரிமாற்றத்தை மேற்கொள்ளச்செய்வது. அறிவியல் போன்ற அறிவுத்துறைகளை புரிந்துகொள்ள இந்த மொழிப்பயிற்சி அடிப்படையான தேவை. இது மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அறிவியலை தமிழில் எழுதும் ஆசிரியர்களுக்கும் மற்ற எழுத்தாளர்களுக்கும் தேவை. ஒரு சமுதாயத்தின் நல்வாழ்வுக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் மக்களின் உழைப்பும் சிந்தனையுமே அடிப்படையாகின்றன. அந்த சமுதாயத்தின் கல்விமுறை உழைப்பையும் சிந்தனையையும் ஊக்குவிப்பதாகவும் அவற்றில் மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதாகவும் இருக்கவேண்டும். இயற்கையையும் வாழ்க்கையையும் காரணவிளைவான அடிப்படையில் புரிந்துகொண்டு அறிவார்ந்த வகையில் சிந்தித்து அதற்கிணங்க உழைக்கும் பழக்கத்தை மாணவர்களிடையில் மட்டுமின்றி தமிழ்மக்களிடையில்யும் வளர்க்கும் பொறுப்பு கல்வியாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மற்ற கற்றறிஞர்களுக்கும் இருக்கிறது. இன்றைய மாணவர்களே நாளைய மக்கள். இன்றைய மக்கள் நேற்றைய மாணவர்கள். கல்வி பள்ளியுடன் நின்றுவிடாமல் வாழ்க்கையிலும் தொடரவேண்டும். பள்ளியில் கற்றவற்றை வாழ்க்கையில் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், புதிய கருத்துகளையும் அறிந்துகொள்ளவேண்டும். இதற்காக தரமான நூல்கள் தமிழில் வெளிவரவேண்டும். எனவே, பள்ளிப்பாடநூல்கள் மட்டுமல்லாமல், நாளிதழ்கள், வாரவிதழ்கள், விக்கிப்பீடியா, வலைப்பூக்கள், வலைத்தளங்கள், தனியார் பதிப்பிக்கும் நூல்கள் போன்ற எல்லா ஊடகங்களிலும் செயலாற்றும் எழுத்தாளர்கள் ஒன்றுசேர்ந்து ஒரேவிதமான வழியுரைகளை பின்பற்றி ஒரு சீரான நடையில் எழுதுவதே தமிழ்மக்களுக்கு பயனளிக்கும். கருத்து புதிதன்று எழுத்துநடைக்கு ஒரு செந்தரம் என்பது தமிழர்களுக்கு புதிய கருத்தாக தோன்றலாம். ஆனால் இதை நானே கண்டுபிடித்தேன் என்று மார்தட்டவியலாது. வேறு பலவிடங்களில் எழுத்துநடையின் செந்தரத்துக்கான வழியுரைகளை கண்டு பயன்படுத்தியதன் பின்விளைவே இந்த நூல். அவற்றைப்பற்றி சுருக்கமாக இங்கு விவரிக்கிறேன். அறிவுநூல்களையும் ஆராய்ச்சிக்கட்டுரைகளையும் உயர்தர ஆங்கிலத்தில் எழுதுவதற்காக அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் எழுத்துநடைவழிகாட்டிகள் உள்ளன. இவற்றுள் மிகவும் அதிகமாக பயன்படுவது அமெரிக்கவுளவியற்சங்கம் பதிப்பித்தது (அவுசநடை, 2020). இது இலக்கணக்கட்டமைப்பு, நிறுத்தக்குறிகள், மேற்கோள்கள், நோக்கீடுகள் முதலியவற்றை எல்லா எழுத்தாளர்களும் எல்லாவிடங்களிலும் ஒரேசீராக எழுதுவதற்கான வழியுரைகளை தருகிறது. சிக்காகோநடைப்பயனேடு (சிக்காகோ, 2017) மற்றொன்று. இந்த இரண்டு செந்தரங்களுக்குமிடையில் சில சிறு வடிவூட்டவேறுபாடுகளே உள்ளன. அடிப்படையான இலக்கணக்கூறுகளிலும் நிறுத்தக்குறிகளிலும் எந்த வேறுபாடும் இல்லை. அமெரிக்க ஆங்கிலத்துக்கும் பிரித்தானிய ஆங்கிலத்துக்குமிடையில் சில வேறுபாடுகள் உள்ளன. பிரித்தானிய ஆங்கிலத்துக்கு ஆசுபோடுபல்கலைக்கழகம் ஒரு நடைப்பயனேட்டை வெளியிட்டிருக்கிறது (ஆசுபோடு, 2016). இது ஆருட்டின் விதிகள் என்றும் வழங்குகிறது. இயன்மொழிகளுக்கு மட்டுமல்லாமல் கணினிநிரலாக்கமொழிகளுக்கும் நடைக்கையேடுகள் உள்ளன. நிரலாக்கர்கள் கணினிக்காக திட்டநிரல்களை எழுதும்போது கணினி வாசித்து சரியான விளைவுகளை ஏற்படுத்துமாறு அமைப்பது இன்றியமையாதது. அதேநேரம் மக்கள் நிரல்களை வாசிக்கும்போது படிமுறைகளையும் தரவுப்பாய்வுகளையும் எளிதில் புரிந்துகொள்ளும்படி எழுதுவதும் முக்கியமானது. இவ்வாறு எழுத ஒவ்வொரு நிரலாக்கமொழிக்கும் சில விதிகளும் வழியுரைகளும் உள்ளன. இந்த விதிகள் மொழியின் வரியியவிதிகளுக்கு அப்பாற்பட்டவை. வரியியவிதியை மீறும் திட்டநிரல் தொகுப்புப்பிழையை விளைவிக்கும். நடைவிதியை மீறும் திட்டநிரல் வெற்றிகரமாக தொகுப்பாவதுடன் எதிர்பார்க்கும் சரியான விளைவுகளையும் தரலாம். ஆனால் ஒருவர் திட்டநிரலை வாசிக்கும்போது அது செயலாற்றும் விதம் அவருக்கு புரிவது கடினமாயிருக்கும். இவற்றினாலெல்லாம் உந்தப்பட்டு தமிழுக்கும் ஒரு நடைக்கையேட்டை எழுதத்துணிந்தேன். இலக்கணம் ஏன்? மொழி என்பது அதை பேசும் மக்களிடையில் உள்ள ஒரு ஒப்பந்தம்; இந்தப்பொருளை இந்தப்பெயரால் வழங்குவோம் என்று ஒரு சமூகம் ஒப்புக்கொள்வது. இந்த ஒப்பந்தம் இருக்கும்போதே ஒருவர் ஒரு சொல்லை சொல்லும்போது அதே மொழியைப்பேசும் (அதே ஒப்பந்தத்துக்குட்பட்ட) மற்றவர்கள் உடனே அந்தச்சொல்லின் பொருளை புரிந்துகொள்கிறார்கள். இது இலக்கணவிதிகளுக்கும் பொருந்தும். இவ்வாறான ஒரு சொற்றொடர்க்கட்டமைப்பால் செய்திகளை குறிப்போம் என்ற ஒரு ஒப்பந்தமே இலக்கணம். எனவே, எல்லார்க்கும் ஒரே இலக்கணவிதிகள் பயனாகவேண்டும். குப்பனுக்கொரு விதி, சுப்பனுக்கொரு விதி என்றிருந்தால் குப்பனும் சுப்பனும் ஒரே மொழியை பேசுகிறவர்கள் அல்லர். கிளைமொழிகள், வட்டாரவழக்கு, காலமாறுபாடு போன்றவை மொழிகளின் இயல்புகளே. ஆனால் இவையனைத்தும் மொழியின் இலக்கணத்துக்குட்பட்டே இருக்கவேண்டும். இலக்கணம் ஒரு வரந்தையை நிறுவுகிறது. இந்த வரந்தையை மீறாமல் எழுதவும் பேசவும் மிகுந்த நெளிவுமையையும் இலக்கணம் விட்டுவைக்கிறது. வரம்புக்குள்ளான மாறுபாடுகளே கிளைமொழிகள். வரம்பைவிட்டு வெளியேறும்போது அது வேறொரு மொழியாகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலுமாக காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்கள் மொழியின் அடிப்படையான இயல்புகளையும் பண்புகளையும் மாற்றலாகாது. அடிப்படைக்குட்பட்ட மாறுபாடுகளை ஏற்கலாம். ஆனால் இலக்கணத்தை மீறும் மாறுபாடுகளை பிழையாக இனங்கண்டு களையவேண்டும். இவ்வாறு மொழியை காப்பதே அந்தந்த காலக்கட்டத்திலுள்ள மொழியறிஞர்களின் பணியாகவேண்டும். வந்ததெல்லாம் வரவு என்று வைத்து அதற்கெல்லாம் புத்திலக்கணத்தை காணமுயன்றால் அது ஏற்கனவே உள்ள இலக்கணத்துடன் முரண்பட வாய்ப்புள்ளது. இதனால் குழப்பமே விளையும். இலக்கணத்தில் விவரணவிலக்கணம், கட்டெழுத்திலக்கணம் என்ற இரு கூறுகள் உண்டு. மொழியை உள்ளபடியே விவரிப்பது விவரணம். இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வரையறுப்பது கட்டெழுதல். ஒரு மொழி வளராகும்போது ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்’ காண்பது மரபு. ஆனால் தமிழ்போன்ற ஒரு முதிர்ந்த மொழியின் இலக்கணம் கட்டெழுத்தாகவே இருக்கவேண்டும். காலத்தால் ஏற்படும் எல்லா மாற்றங்களையும் வளர்ச்சியாக அறிஞர் எடுக்கலாகாது. சில மாற்றங்கள் மொழியை சிதைக்கவும் வாய்ப்புண்டு. முதிர்ச்சியடைந்த மொழியின் இலக்கணத்தை கட்டிக்காப்பதும் தேவையானபோது சிறு மாற்றங்களை ஆராய்ந்து ஏற்பதும் அறிஞரது கடமை. புதியன புகுதல் தமிழின் தொல்லிலக்கணம் இன்றைய தமிழை விவரிக்கவில்லை என்ற கருத்துடன் அதில் பல மாறுதல்களை செய்ய விரும்புவோர் பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே - நன்னூல் 462 என்ற சூத்திரத்தை மேற்கோளாக காட்டுகின்றனர். இந்த சூத்திரத்தை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு, அதிகம் சிந்திக்காமல் நாம் விரும்பியபடி மாற்றங்களை தமிழிலக்கணத்தில் செய்யலாகாது. நன்னூலாசிரியர் தமிழிலக்கணத்தை 461 சூத்திரங்களில் விளக்கிவிட்டு இறுதியாக ஒரு புறனடையாக (விதிவிலக்காக) இதை சொன்னார். நாம் 461 சூத்திரங்களையும் நன்றாக புரிந்துகொண்டபின்பே அதில் இல்லாத ஒரு புதுத்தேவை எழுவதை முடிவுசெய்யலாம். மேலும், அவர் பழையன கழித்தலும் புதியன புகுத்தலும் என்று சொல்லவில்லை. பெரும்பாலானோர் இந்த சூத்திரத்தை ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்றே மேற்கோளிடுவதும் வழக்கம். அதிலுள்ள மேலும் இரண்டு முக்கியமான புள்ளிகளை கவனிக்க தவறுகிறார்கள். ஒன்று, ‘வழுவல’; அதாவது, பழையன கழிதலும் புதியன புகுதலும் பிழையன்று என்கிறார்; தேவை என்ற சொல்லவில்லை. இரண்டாவது, ‘கால வகையினானே’; அதாவது, காலமாற்றத்தால் நாளடைவில் இந்த மாற்றங்கள் ஏற்படுவதில் தவறில்லை என்கிறார். எவ்வாறாயிலும், மொழியின் புதிய பண்புக்கூறுகளை இலக்கணத்தில் சேர்ப்பதற்கும் ஒரு திட்டவட்டமான வழியுரை தேவை. இதற்காக நான் முன்மொழிவது பின்வருமாறு: (அ) புதிய பண்புக்கூறு பெருவழக்கில் நன்றாக வேரூன்றியதாயிருக்கவேண்டும். (ஆ) புதிய பண்புக்கூறு ஏற்கனவே இருக்கும் இலக்கணத்தின் எந்தவொரு பண்புக்கூறுடனும் முரண்படக்கூடாது. வழக்கொழிந்த பண்புக்கூறுடனும் முரண்படக்கூடாது; ஏனெனில், அந்த இலக்கணப்படி எழுதிய நூல்களை நாம் இன்னும் படிக்கிறோம்; வருந்தமிழரும் படிப்பார்கள். (இ) புதிய பண்புக்கூறு எதிர்காலத்தில் மிகவும் பயன்படக்கூடிய ஒரு விழுமியத்தை தமிழ்மொழிக்கோ தமிழ்ப்பண்பாட்டுக்கோ ஏற்றவேண்டும். விழுமியஞ்சேர்க்காததோ முரண்படுவதோவான ஒரு பண்புக்கூறு நன்கு வேரூன்றியிருந்தாலும் அது எற்புடையதன்று. நடப்பிலிருக்கும் இலக்கணப்படி அதை பிழையாக குறிக்கவேண்டும். பொதுக்கிளைமொழி அறிவியல், சட்டம் போன்ற துறைகளில் துல்லியமான தகவற்பரிமாற்றத்துக்கு ஒரு செந்தரமான மொழி இருக்கவேண்டும். சான்றாக, சட்டத்துறையில் பொருண்மயக்கத்துக்கு இம்மியளவும் இடமில்லை. செய்யுளுக்கும் கவிதைக்கும் சுவையூட்டும் இரட்டுரமொழிதல், இடக்கரடக்கல், உயர்வுநவிற்சியணி போன்றவற்றை துல்லியத்துறைகளில் தவிர்க்கவேண்டும். ஒருபொருளை பலவிதமாகச்சொல்லும் இயன்மை இலக்கியச்சுவையானது. மொழியின் பன்மயம் புனைவிலக்கியங்களில் மிகவும் பயன்படுகிறது. தமிழ் இலக்கியச்செறிவும் கவிதைச்சுவையும் நிறைந்த மொழி என்பதை நான் சொல்லவேண்டியதேயில்லை. ஆனால் ஒரு நலம்பெறுநர் கத்தியின்கீழ் படுத்திருக்கும்போது ஒருபொருட்பன்மொழி, பலபொருளொருமொழி, இரட்டுரமொழிதல், செய்யுளணிகள் போன்றவற்றை சுவைக்க மருத்துவர்களுக்கு நேரமில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதில் திட்டவட்டமான பொதுவான சொற்றொடரமைப்பு இருக்கவேண்டும். ஒவ்வொரு மருத்துவரும் செவிலியரும் ‘என் நடை தனிநடை’ என்றவகையில் பேசினால் நலம்பெறுநரது நிலை இரங்கத்தக்கது. இதற்குத்தேவையான ஒரு செந்தரமான பொதுமொழி தமிழில் இதுவரை இல்லை. இதனாலே உயர்கல்வியிலும் ஆராய்ச்சியிலும் சட்டத்திலும் அரசாட்சியிலும் ஆங்கிலம் இன்னும் நிலைக்கிறது. இத்தகைய ஒரு பொதுக்கிளைமொழியை தமிழிலிருந்து செதுக்கியெடுப்பதே இந்த நூலின் நோக்கம். இந்த பொதுக்கிளைமொழி தமிழிலக்கணத்தை மீறாது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. ஆனால் தமிழிலக்கணம் அனுமதிக்கும் எல்லாவற்றையும் இங்கு அனுமதிக்கப்போவதில்லை. மேலே சொன்னபடி, புனைவிலக்கியத்துக்கு சுவையூட்டும் இரட்டுரமொழிதல், இடக்கரடக்கல், உயர்வுநவிற்சியணி போன்றவை இங்கு இடம்பெறா. இயன்றவரை, பொருண்மயக்கத்தை புகுத்தும் பண்புக்கூறுகளை தவிர்ப்போம். ஒரு கருத்தை அனைவரும் ஒரே வகையில் எழுதுமாறும் பேசுமாறும் இலக்கணக்கட்டமைப்புகளை தேர்வோம். இக்காலத்தில் ‘எளிய தமிழ்’ என்ற பெயரில் இலக்கணத்தை மீறியும் ஆங்கிலக்கலப்புடனும் பலர் எழுதுகிறார்கள். இதை அறிஞர்கள் ஏற்காதது மட்டுமல்லாமல், இதற்கு அவசியமுமில்லை. மேலும் இப்போது பயன்பாட்டிலிருக்கும் ‘எளிய தமிழில்’ எளிய கருத்துகளடங்கிய எளிய நூல்களையும் கட்டுரைகளையும் எழுதலாம்; ஆனால் உயர்கல்விக்கும் ஆராய்ச்சிக்கும் தேவையான கருத்துகளை விவரிக்க கூட்டும முழுத்தொடர்களை எழுதும்போது தெளிவின்மைகளும் பொருண்மயக்கங்களும் வெளிப்படையாவதை இந்த நூலின் முழுவதிலும் காணப்போகிறோம். மேலும் இலக்கணத்தை மீறாமலும் ஆங்கிலங்கலக்காமலும் தமிழில் எளிமையாக எழுத வழியுண்டு என்ற உண்மையையும் நீங்கள் இந்த நூலிலிருந்து உணர்வீர்கள். இலக்கணத்தை கடினமாக காண்பதன் ஒரு காரணம் ஆசிரியர்கள் அவற்றை விதிகளாக பட்டியலிட்டு நம்மை மனப்பாடஞ்செய்யவைத்தது. தேவையானபோது தேவையான இலக்கணக்கூறுகளை காரணத்துடன் கற்றால் அது எளிதாகும். தேவையானவற்றை இந்த நூலில் எளியமுறையில் வழங்க முயன்றிருக்கிறேன். நான் இங்கு தரும் வழியுரைகள் ஒப்பளவில் எளிமையானவை; உரையை வாசிக்கும்போதே பொருளுணர்வை எளிதாக்கும் அடிப்படையில் அமைந்தவை. இந்த வழியுரைகள் பெரும்பாலும் தமிழாசிரியர்கள் தந்த விதிகளுடன் ஒத்துப்போகின்றன; சிலநேரங்களில் முரண்படுகின்றன. ஆனால் மரபிலக்கணத்துடன் முரண்படவில்லை. பருவயிதழ்களிலும் தொலைக்காட்சியிலும் பள்ளிப்பாடநூல்களிலும் இணையதளங்களிலும் இந்த பொதுக்கிளைமொழியே வழங்கவேண்டும். நாளடைவில் இது செந்தரமாகும். எனவே, அனைவருக்கும் பொதுவாக இருக்கக்கூடியதும் துல்லியமானதுமான ஒரு எழுத்துநடையை தக்க காரணங்களுடன் விவரிக்கிறேன். முத்துமுத்தான தெளிவுடன் உரையை எழுத உதவும் நோக்கத்துடன் உருவான இந்த செந்தரத்துக்கு முத்துச்செந்தரம் என்று பெயரிடலாம். இதன்படி எழுதிய நூல்களை முத்துச்செந்தரத்துக்கு உடன்படிந்தது என்று குறிக்கலாம். சான்றோரின் வழியொட்டி இதுவரை அறிஞர்கள் வளராக்கியிருக்கும் கருத்துகளின் அடிப்படையிலே இந்த செந்தரத்தை நான் முன்மொழிகின்றேன். தொல்காப்பியம் முதலான தொல்லிலக்கணநூல்களையும் இக்கால ஆசிரியர்கள் எழுதிய இலக்கணநூல்களையும் ( (பரமசிவம், 1990), (அகத்தியலிங்கம், 2016), (பொற்கோ, 2002), (சுந்தரம், 2022)) வாசித்து இயன்றவரை புரிந்துகொண்டு அவற்றின் அடிப்படையில் அடுத்த அடியை எடுத்துவைக்கிறேன். அவர்களது கருத்துகளில் நான் முரண்படுவது அவர்களை குறைகூறுவதற்காக அன்று; தமிழில் எழுதுவதையும் வாசிப்பதையும் மேலும் எளிமையாக்கி மேம்படுத்தவே. சமூகவூடகங்களில் நான் எதிர்கொண்ட பொன்முடி வடிவேல், செ. இரா. செல்வக்குமார், கவிக்கோ ஞானச்செல்வன், தெய்வ சுந்தரம் நயினார், மணி மணிவண்ணன், வேல்முருகன் சுப்பிரமணியன், முத்தையா சுப்பிரமணியம், இராம. கி., திருவள்ளுவன் இலக்குவனார், கதிர் கிருட்டிணமூர்த்தி, இரவீந்திரன் வெங்கடாச்சலம், இராமசாமி செல்வராசு, சுந்தர் இலக்குமணன், இளங்கோ பிச்சாண்டி முதலிய பலர் தமிழிலக்கணத்திலும் இலக்கியத்திலும் என் எண்ணப்போக்கை சீரமைத்திருக்கின்றனர். இவர்களும் மற்ற அறிஞர்களும் இந்த நூலை மதிப்பாய்ந்து கருத்துரைத்து வரும் பதிப்புகளை மேம்படுத்த உதவுவார்கள் என்று நம்புகிறேன். எளிய முழுத்தொடர் இந்தப்படலத்தில் ஒரு தமிழ்முழுத்தொடரின் அடிப்படைக்கட்டமைப்பை கருதுவோம். அதன் பகுதிகளை துணைத்தொடர்களால் விரித்து கூட்டும முழுத்தொடர்களையும் பலவற்றை இணைத்து இணைந்த முழுத்தொடர்களையும் உருவாக்குவதை பின்பு காண்போம். நான் எளிமையாக தொடங்குவதால் இந்த கருத்துகள் அற்பமானவையாக தோன்றலாம். ஆனால் பின்வரும் வழியுரைகள் இந்த கட்டமைப்பின் அடிப்படையிலே எழுகின்றன. எனவே அடிப்படையை நினைவில் நிற்குமாறு மனத்தில் பதித்துக்கொள்வது நன்று. எழுவாயும் பயனிலையும் ஒரு தகவலை தெரிவிக்க உதவும் ஒரு முழுத்தொடரில் பொதுவாக ஒரு எழுவாயும் ஒரு பயனிலையும் இருக்கின்றன. சான்றாக, அகமது எழுதினான் என்பது ஒரு முழுமையான சொற்றொடர். இங்கு அகமது எழுவாய்; எழுதினான் பயனிலை. பொதுவாக, முழுத்தொடர்களில் எழுவாயும் பயனிலையும் இருக்கவேண்டும்; சில விதிவிலக்குகளை அடுத்த பகுதியில் காண்போம். பயனிலையில் ஒரு வினைச்சொல் மையப்பங்கை வகிக்கிறது. இந்த வினைச்சொல் வினைமுற்று எனில், தொடர் முற்றுத்தொடர்; பெயரெச்சமோ வினையெச்சமோ எனில், எச்சத்தொடர். எழுதினான் வினைமுற்று என்பதால் அகமது எழுதினான் ஒரு முற்றுத்தொடர். ஒரு முழுத்தொடரில் ஒரு முற்றுத்தொடர் கட்டாயமாக இருக்கவேண்டும்; ஒன்றோ பலவோவான எச்சத்தொடர்களும் இருக்கலாம். எச்சத்தொடர்களை நாம் அடுத்த படலத்தில் விரிவாக காண்போம். எனவே அகமது எழுதினான் ஒரு முழுத்தொடரும் ஆகிறது. முற்றுத்தொடர் மட்டும் உள்ள முழுத்தொடரை எளிய முழுத்தொடர் என்றும் முற்றுத்தொடருடன் எச்சத்தொடர்களும் அடங்கிய முழுத்தொடரை கூட்டும முழுத்தொடர் என்றும் அழைக்கிறோம். இந்த படலத்தில் எளிய முழுத்தொடர்களையும் அடுத்த படலத்தில் கூட்டும முழுத்தொடர்களையும் காண்போம். உட்கிடைப்பெயரும் வினையும் முழுத்தொடர்களில் எழுவாயும் பயனிலையும் இருப்பதற்கு சில விதிவிலக்குகள் இருப்பதாக சென்ற பகுதியில் சொன்னேன். அவை (அ) எழுவாயுட்கிடை (ஆ) வினையுட்கிடை (இ) வினையிலி. (அ) நேற்று வந்தேன் என்றால் நான் நேற்று வந்தேன் என்றே பொருள். இங்கு எழுவாய் உட்கிடையாக தொக்கிநிற்கிறது. அதனால் முழுத்தொடரில் எழுவாய் இல்லை. (ஆ) நல்ல மழை! என்பதில் பெய்கிறது என்ற வினைச்சொல் உட்கிடை. (இ) குமரன் ஒரு மாணவன் என்பதில் வினைச்சொல் இல்லை. எனினும் இது ஒரு முழுத்தொடர். இந்த கட்டமைப்பை வினையிலாமுற்றுத்தொடர் எனலாம். ஆனால், குமரன் ஒரு மாணவனாயிருந்தபோது என்ற எச்சத்தொடரில் இரு என்ற வினை வெளிப்படையாகிறது (சுந்தரம், 2022). ஆகவே இதையும் முந்தைய வகையினதாக கருதலாம். எனினும் இந்த பாங்கில் வரும் வினையிலாக்கட்டமைப்பு உரைநடையில் அதிகம் பயன்படுவதால் தனிவகையாக்கி அதற்கு ஒரு தனிப்பெயரும் அளிக்கிறேன். வேற்றுமைகள் ஒரு எளிய முழுத்தொடருடன் மேலும் சொற்களை சேர்ப்பதால் கூடுதலான தகவல்களை தெரிவிக்கலாம். அகமது கடிதத்தை எழுதினான் என்பதும் ஒரு முழுத்தொடர். இங்கு கடிதத்தை என்ற சொல் இரண்டாம் வேற்றுமை என்பதையும் அதன் விகுதி ஐ என்பதையும் அறிவோம். இரண்டாம் வேற்றுமையை செயப்படுபொருள் என்றும் சொல்வோம். அகமது பேனாவால் எழுதினான் அகமது பேனாவால் கடிதத்தை எழுதினான் அகமது வீட்டில் பேனாவால் கடிதத்தை எழுதினான் என்பனவெல்லாம் பல வேற்றுமைச்சொற்களுள்ள முற்றுத்தொடர்களே. இங்கு இல்லும் ஆலும் முறையே ஏழாம்வேற்றுமையுருபும் மூன்றாம்வேற்றுமையுருபும். வேற்றுமைச்சொற்களில் உருபுகளைத்தொடர்ந்து மற்ற சில சொற்களும் வரலாம். அகமது தன் பள்ளியைப்பற்றி கடிதத்தில் விவரித்தான் என்பதில் பற்றி என்பது ஐயின்பின் வந்தது. இதுபோன்றவற்றை பின்னுருபுகள் என்று தமிழறிஞர்கள் (அகத்தியலிங்கம், 2016) அழைக்கின்றனர். அகமது கந்தனைவிட உயரமானவன் என்பதில் விட பின்னுருபு. ஒவ்வொரு வேற்றுமையையும் ஆம் படலத்தில் விரிவாக உரையாற்றும்போது வேறு பல பின்னுருபுகளையும் காண்போம். பின்னுருபுகள் மட்டுமல்லாமல் வேறு பின்னொட்டுகளும் வேற்றுமையுருபுக்குப்பின் வரலாம். அரசருக்கே விளங்கிவிட்டது என்பதில் குகரத்தைத்தொடர்ந்து ஏகாரம் வந்தது. வேற்றுமையுருபுகளும் அதன் பின்னுருபுகளும் எப்போதும் பின்னொட்டுகளாகவே வரவேண்டும். அவை ஒருபோதும் தனிச்சொற்களல்ல. பெயரடைகளும் வினையடைகளும் மேலுள்ள சான்றுகளில் எளிய முழுத்தொடர்களை கண்டோம். ஒரு எழுவாயும் ஒரு வினைச்சொல்லும் மட்டுமே (வெளிப்படையாகவோ உட்கிடையாகவோ) இருப்பது எளிய முழுத்தொடர். எளிய முழுத்தொடர் முற்றுத்தொடராயிருப்பது அவசியம்; அதாவது அதிலுள்ள வினைச்சொல் வினைமுற்றாக இருக்கவேண்டும். எழுவாய் ஒரு பெயர்ச்சொல் என்பது தெளிவு. மேற்கண்ட எளிய முழுத்தொடர்களில் எழுவாயும் வினைச்சொல்லும் இருப்பதுடன் வீடு, பேனா, கடிதம் போன்ற வேறு பல பெயர்ச்சொற்களும் உள்ளன. ஆனால் இவை தனித்து நில்லாமல் வேற்றுமையுருபுகளுடன் சேர்ந்தே வருகின்றன. எந்த பெயர்ச்சொல்லுக்கும் அதன் பண்புகளை விவரிக்கும் அடைச்சொற்களை இட்டு எழுதலாம். அழகான அகமது, நீலநிறமான பேனா, அன்பான கடிதம் போன்றவை சான்றுகள். அழகான அகமது நீலநிறமான பேனாவால் அன்பான கடிதத்தை எழுதினான். பெயர்ச்சொற்களுக்குமுன் பெயரடைகளை பயன்படுத்தியதுபோலவே வினைச்சொற்களின்முன் வினையடைகளை பயன்படுத்தலாம். அகமது கடிதத்தை விரைவாக எழுதினான் என்பதில் விரைவாக வினையடை. ஒரு பெயரடையை தனிச்சொல்லாகவோ முன்னொட்டாகவோ எழுதுவதை ஆம் பகுதியிலும் ஒன்றுக்கு மேற்பட்ட பெயரடைகளை சேர்த்து எழுவதை ஆம் பகுதியிலும் காண்போம். பல, சில, ஒன்று, இரண்டு போன்ற எண்ணுச்சொற்களும் பெயரடைகள். அடைச்சொற்களின்முன் மிகவும், சிறிய போன்ற அளவுரைப்பிகள் வரலாம். கந்தனைப்போல், கந்தனைவிட போன்ற ஒப்பீடுகளும் வரலாம். இடைச்சொல் ஆ, வலிக்கிறதே! என்பதில் ஆ, ஏ போன்றவை உணர்ச்சியை காட்டுகின்றன. இவற்றை இடைச்சொற்கள் என்கிறோம். ஏ குமரா, இங்கு வா! இதில் ஏ, ஆ என்பவை ஒருவரது கவனத்தைப்பெற உதவுகின்றன. அவரா வந்தார்? என்பதில் ஆ கேள்வியைக்குறிக்கிறது. அவரே வந்தார் என்பதில் ஏ அவர் என்ற சொல்லை தனியாக குறித்துக்காட்டுகிறது. இவற்றை இடைச்சொற்கள் என்கிறோம். சாரியைகள், இணைப்புச்சொற்கள் போன்ற வேறு வகையான இடைச்சொற்களையும் முறையே Error: Reference source not foundஆம் பகுதியிலும் ஆம் படலத்திலும் காண்போம். ஆங்கிலத்துடன் ஒப்பீடு இப்போது தமிழுக்கும் ஆங்கிலத்துக்குமுள்ள சில முக்கிய வேறுபாடுகளை கவனிப்போம். சான்றாக, மேற்கண்ட ஒரு முழுத்தொடரை Ahmed wrote the letter at home with a pen என்று ஆங்கிலத்தில் எழுதுவோம். இரண்டு மொழிகளிலும் எழுவாய் தொடரின் தொடக்கத்திலே வருகிறது. இது ஒற்றுமை. ஆனால் பல வேறுபாடுகளும் உள்ளன. அவற்றுள் முக்கியமான இரண்டை இங்கு விவரிக்கிறேன். முதலாவதாக, தமிழ் ஒரு ஒட்டுத்திரண்மொழி; ஆங்கிலம் ஒரு முன்னமைவமொழி. பெரும்பாலான ஒட்டுகள் பின்னொட்டுகள். அதாவது, பேனா என்ற பெயர்ச்சொல்லின்பின் ஆல் என்ற விகுதி ஒட்டுவதால் பேனாவால் என்ற சொல் விளைகிறது. இதே கருத்தை with pen என்று இரண்டு சொற்கள் சேர்ந்து தெரிவிக்கின்றன. இங்கு with ஒரு முன்னமைவி. இரண்டாவதாக, இரண்டாம் வேற்றுமைக்கு ஆங்கிலத்தில் முன்னமைவி இல்லை. கண்ணன், கடிதம் ஆகியவை பெயர்ச்சொற்களாயினும் முந்தையது எழுவாய்; பிந்தையது செயப்படுபொருள். தமிழில் செயப்படுபொருளை குறிக்க ஐ என்ற உருபு பயன்படுகிறது. ஆங்கிலத்தில் இந்த இரண்டு சொற்களுக்குமிடையில் வினைச்சொல் வருகிறது. ஆங்கிலத்தில் எழுவாயையும் செயப்படுபொருளையும் இடநிலையாலே அறிகிறோம். தொகை என்பது என்ன? ஆங்கிலத்தில் இல்லாத ஒரு பண்புக்கூறு தமிழில் இருக்கிறது. அகமது கடிதமெழுதினான் என்று வேற்றுமைத்தொகையாக எழுதும் விருப்புமையை தமிழ் நமக்கு தருகிறது. அதாவது கடிதத்தை என்ற சொல்லையும் எழுதினான் என்ற சொல்லையும் தொகுத்து உருபின்றி கடிதமெழுதினான் என்ற ஒற்றைச்சொல்லாக எழுதலாம். இங்கு கடிதமெழுதல் என்பதை ஒரு வினையாக கருதலாம். தொகுக்காமல் கடிதத்தை எழுதினான் என்று இரண்டு சொற்களாக விரித்து எழுதுவது வேற்றுமைவிரி. ஆனால் இக்காலத்தில் சிலர் கடிதம் எழுதினான் என்று தவறாக எழுதுகிறார்கள். இது தவிர்க்கவேண்டியது. இவ்வாறு எழுதும்போது கடிதம் எழுவாயாகவும் எழுதினான் வினைச்சொல்லாகவும் ஆகின்றன. (திணையியைபின்மை என்ற பிழையும் இருக்கிறது). அகமது கடிதம் எழுதினான் என்ற சொற்றொடரில் இரண்டு எழுவாய்களும் ஒரு வினைச்சொல்லும் இருக்கின்றன. கூட்டுத்தொடர்களில் இரண்டு எழுவாய்கள் அடுத்தடுத்து வருவதையும் அவ்வாறான தொடர்களில் ஒவ்வொரு எழுவாய்க்கும் நிகராக ஒரு வினைச்சொல் இருக்கவேண்டும் என்பதையும் , Error: Reference source not foundஆம் பகுதிகளில் காண்போம். மேற்கண்ட தொடரில் இரண்டு எழுவாய்களும் ஒரு வினைச்சொல்லுமே இருக்கின்றன. இதுபோன்ற இயைபற்ற சொற்றொடரை அல்வடிவத்தொடர் என்றும் சொற்றொடரின் பகுதிகள் ஒன்றுடனொன்று இயைபாகவுள்ள தொடரை நல்வடிவத்தொடர் என்றும் சொல்கிறோம். வேற்றுமைத்தொகையை பயன்படுத்தி, மேலே ஆங்கிலத்தில் எழுதிய முழுத்தொடரை அகமது வீட்டில் பேனாவால் கடிதமெழுதினான் என்று எழுதுகிறோம். ஆங்கிலமுழுத்தொடரில் ஒன்பது சொற்கள் இருக்கும்போது தமிழில் நான்கு சொற்களே இருக்கின்றன. இது ஆங்கிலத்தின் முன்னமைவிகளாலும் தமிழின் தொகையாலும் விளைந்த வேறுபாடு. ஆங்கிலப்பண்புகளை தமிழுக்கும் தமிழ்ப்பண்புகளை ஆங்கிலத்துக்கும் ஏற்றி எழுதுவது பிழை. இரண்டாம் வேற்றுமைக்கு முன்னமைவி இல்லை என்பது ஆங்கிலத்தின் சிறப்பியல்பு. தொகையும் விரியும் தமிழின் சிறப்பியல்புகள். பெயரடையையும் பெயர்ச்சொல்லையும் சேர்த்தும் எழுதலாம். அழககமது நீலநிறப்பேனாவால் அன்புக்கடிதமெழுதினான் என்பதில் அழககமது, நீலநிறப்பேனா ஆகியவை பண்புத்தொகைகள். அன்புக்கடிதமெழுதினான் என்பதில் பெயரடை, செயப்படுபொருள், வினைச்சொல் ஆகிய மூன்றையும் சேர்த்து ஒரே சொல்லாக எழுதினோம். புணர்ச்சி என்பது என்ன? புணர்ச்சியை சந்தி என்றும் சொல்வார்கள். தொகையாலும் வேறு காரணங்களாலும் இரண்டு சொற்கள் சேர்ந்து ஒற்றைச்சொல்லாகும்போது அவற்றுக்கிடையில் நிகழும் மாற்றங்களை புணர்ச்சி என்கிறோம். ஒரு முழுத்தொடரின் பகுதிகளை பொருள்விளங்குமாறு பிரித்தபின் புணர்ச்சி எளிதாகிறது. வெவ்வேறு பகுதிகளிடையில் புணர்ச்சி இல்லை. இரண்டு சொற்களை சேர்த்து ஒற்றைச்சொல்லாக ஒலிக்கும்போதே புணர்ச்சி ஏற்படுகிறது. கடிதத்தை படித்தான் என்று இயல்பாக சொல்லும்போது இந்த சொற்களுக்கிடையில் ஒரு இடைவெளிக்காலம் தோன்றுகிறது. அதனால் இதை விட்டிசைத்தல் என்பர். இந்த இடைவெளிக்காலத்தையே எழுத்தில் இடைவெளியாக காட்டுகிறோம். இரண்டு சொற்கள் சேர்ந்து ஒற்றைச்சொல்லாகும்-போது மட்டுமே புணர்ச்சி எழுகிறது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். சான்றாக, கடிதம், எழுதினான் என்ற இருசொற்களுள்ள தொடர் கடிதமெழுதினான் என்ற ஒருசொற்றொடராக சேரும்போது, ம் + எ = மெ என்ற புணர்ச்சி ஏற்படுகிறது. மற்றொரு சான்றாக, அழகு + அகமது = அழககமது என்றவாறு உகரம் மறைகிறது. அழகு + குமரன் = அழகுக்குமரன் என்பதில் இரண்டு சொற்களுக்கும் இடையில் ஒரு எழுத்தும் வந்தது. இந்த மாற்றங்களை அமைமுறையாக பின்பு ஆம் படலத்தில் வழங்குகிறேன். இக்காலத்தில் அழகு அகமது நீலநிறப் பேனாவால் அன்புக் கடிதம் எழுதினான் என்று எழுதும் பழக்கம் தமிழில் பரவலாக காணப்படுகிறது. இது ஆங்கிலத்தின் தாக்கத்தால் ஏற்பட்டிருக்கலாம். இது தமிழின் இயல்புடன் இயைபற்றது என்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, ஒரு தமிழ்ச்சொல்லின் இறுதியில் வல்லினவொற்று வராது. கருப்புப், அன்புக் ஆகியவை நல்வடிவச்சொற்களல்ல. இவை அரைச்சொற்கள். இவற்றைத்தொடரும் பகுதியுடன் இணையும்போதே முழுச்சொற்களாகின்றன. இரண்டாவதாக, அழகு, கருப்பு, கடிதம் ஆகியவை பெயர்ச்சொற்கள். தமிழில் வேற்றுமையுருபு போன்ற ஒரு துணைச்சொல்லுடன் ஒட்டாமல் தனிநிற்கும் பெயர்ச்சொல் எழுவாய். ஆங்கிலத்தில் எழுவாயல்லாத பல பெயர்ச்சொற்களும் தனிச்சொற்களாக நிற்கலாம். அது ஆங்கிலக்கட்டமைப்புடன் இயைபானது. ஆனால் அதைப்பார்த்து தமிழிலும் அவ்வாறு எழுதுவது குழப்பத்தை விளைவிக்கும். இந்தக்குழப்பம் எளிய முழுத்தொடர்களிலும் அன்றாட வாழ்வில் புழங்கும் சொற்களிலும் வெளிப்படாமலிருக்கலாம். ஆனால் தெரியாத புதிய கலைச்சொற்களை பயன்படுத்தி உயர்நிலைக்கருத்துகளை எழுத கூட்டுத்தொடர்களையும் இணைந்த தொடர்களையும் எழுதும்போது ஒரு வினைத்தொடருக்கு ஒரு எழுவாய் என்ற வழியுரை மிகவும் பயன்படுவதை காண்போம். அன்பு அகமது, கடிதம் எழுதினான் என்றெல்லாம் எழுதாமல் அன்பகமது, கடிதமெழுதினான் என்று எழுதவேண்டுமெனில், அகமது கடிதத்தை எழுதினான் என்பதை அகமதுகடிதத்தையெழுதினான் என்று ஏன் எழுதவில்லை என்ற கேள்வியை சிலர் எழுப்பலாம். ஒரு வினைத்தொடரில் எழுவாய், வினைச்சொல், வேற்றுமைச்சொல் (செயப்படுபொருள் வேற்றுமைகளுள் ஒன்று) போன்ற உறுப்புகளை தனித்தனியே எழுதுவதால் பொருள் தெளிவாகும். அகமது கடிதத்தை எழுதினான் என்பதில் எழுவாய், வினைச்சொல், செயப்படுபொருள் என்ற மூன்று உறுப்புகள் இருக்கின்றன. அகமது கடிதமெழுதினான் என்பதில் செயப்படுபொருள் இல்லை. அதனால் அதை இரண்டு உறுப்புகளாக எழுதினோம். கடிதமெழுதினான் செயற்படுபொருளை ஏற்காத ஒரு வினைச்சொல். முழுத்தொடர்களை சிறுசிறு துண்டுகளாக நொறுக்கியோ பைஞ்சுதைபோல் மெழுகியோ எழுதாமல் பொருள்தோன்றுமாறு பகுதிபிரித்து எழுதுவதே தெளிவு. நீண்ட சொற்களை வரியின் இறுதியில் அசைகளிடை மடித்து எழுதலாம் என்பதை Error: Reference source not foundஆம் பகுதியில் காண்போம். அதாவது அழககமது நீலநிறப்பேனாவால் அன்புக்கடித-மெழுதினான் என்று எழுதலாம். பிரித்தெழுதலுக்கு மாறாக இது மடித்தெழுதல். செய்யுள்வழக்கு இடைவெளிவிட்டு எழுதுவது செய்யுளிலும் உரைநடையிலும் வெவ்வேறானவை. உரைநடையில் வாசித்து பொருளுணர்வதை எளிதாக்க இடைவெளிவிட்டு எழுதி விட்டிசைத்து வாசிக்கிறோம். ஆனால், செய்யுளில் விட்டிசைத்தலும் இடைவெளியும் சீர்களை பிரிக்கவே பயன்படுகின்றன. இது செய்யுளுக்கு ஒரு இசையையும் தாள ஒழுங்கையும் வழங்குகிறது. சான்றாக, முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும் என்ற செய்யுளடியை எடுத்துக்கொள்வோம். (செய்யுளின் ஓரடியை மூன்று வரிகளில் மடித்து எழுதுகிறோம்.) இங்கு முத்தை என்பது ஒரு பொருளுள்ள சொல்; உரைநடையில் அதை தனிச்சொல்லாக எழுதுவோம். ஆனால் செய்யுளில் அது முதற்சீரின் ஒரு பகுதியே என்பதால் இடம்விடவில்லை. முத்தைத்தரு என்பது ஒரு சீர். சீர்களை பிரிக்கவே இடம்விடுகிறோம். பத்தித் என்பதை ஒரு சீராக எழுதுகிறோம். இதை சொல்லாக கருதினால் வல்லினவொற்று சொல்லிறுதியில் வந்து இலக்கணத்தை மீறும்; இது சொல்லன்று. பத்தித்திருநகை என்பதே பொருள்தரும் சொல். மற்றொரு சான்றாக பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர் என்ற திருக்குறளை கருதுவோம். பொருள் தோன்றும்படி உரைநடையாக பகச்சொல்லி கேளிர்ப்பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடலை தேற்றாதவர் என்று எழுதலாம். ஆனால், செய்யுளின் யாப்பிலக்கணப்படி சீர்கள் பிரிந்திருக்கின்றன. தேற்றாதவர் என்ற ஒற்றைச்சொல் இரண்டு சீர்களாக பிரிந்திருப்பதை நோக்குக. செய்யுளில் சீரிறுதியில் வல்லினவொற்றுகள் வருவதை அதிகமாக காண்கிறோம். வல்லினவொற்றுகள் அடைப்பொலிகள் என்பதால், சீரிறுதியில் இவை வரும்போது ஒரு இயல்பான தாளநிறுத்தத்தை வழங்கி செய்யுளுக்கு இசையூட்டுகின்றன. இதனால் உரைநடையில் வல்லொற்று மிகுக்கத்தேவையில்லாத சூமைவுகளிலும் செய்யுளில் இசைநயத்துக்காக வல்லொற்று மிகலாம். சுருக்கமாக, செய்யுளில் ஒற்றுமிகலுக்கும் பிரித்தெழுதுவதற்கும் வேறு மரபுகள் உள்ளன. இதையும் யாப்பிலக்கணத்தையும் தவிர, மற்ற எல்லா இலக்கணக்கூறுகளும் செய்யுளுக்கும் உரைநடைக்கும் பொதுவானவை. இந்த நூலில் நாம் உரைநடையை மட்டும் கருதுவோம். எதிர்மறைத்தொடர் முற்றுத்தொடரையும் பெயரெச்சத்தொடரையும் எதிர்மறையாக்கலாம். ஒரு முழுத்தொடரின் முற்றுத்தொடர் எதிர்மறையெனில், அதை எதிர்மறைமுழுத்தொடர் என்கிறோம். இவ்வாறான தொடர்களில் வினைமுற்று எதிர்முற்றாகிறது. சான்றாக அவன் வந்தான் X அவன் வரவில்லை அவன் வருவான் X அவன் வரமாட்டான் இருக்கக்கூடியது இல்லாமற்போகும்போதும் நிகழக்கூடியது நிகழாமற்போகும்போதும் இல்லை என்ற எதிர்மைறைச்சொல்லை பயன்படுத்துகிறோம். சாடியில் உப்பு இல்லை. இங்கு மழை பெய்வதில்லை. வினையிலாமுற்றுத்தொடர்களை எதிர்மறையாக்க அல் என்ற வினையை இயைபான விகுதியுடன் பயன்படுத்தவேண்டும். அவன் குமரன் அல்லன். அது பசு அன்று. எதிர்மறைவினைத்தொடர்களை மேலும் விரிவாக ஆம் பகுதியில் காண்போம். வியங்கோள்வினை வியங்கோள்வினையை ஏவல்வினை என்றும் கோரிக்கைவினை என்றும் சொல்கிறோம். எந்தவொரு வினைக்கும் வியங்கோள்வடிவத்தை எழுதலாம். அனைவருக்கும் பொதுவாக சொல்லும்போது செய்க என்ற வாய்ப்பாட்டில் எழுதுவது நன்று. அதையே செந்தரமாக கொள்வோம். சான்றாக, குப்பையை குப்பைத்தொட்டியில் போடுக. இக்காலத்தில் சிலர் குப்பையை குப்பைத்தொட்டியில் போடவும் என்று எழுதுகிறார்கள். இது பிழை. உம்மை வியங்கோளாக வராது. வியங்கோட்டொடர்களை மேலும் ஆம் பகுதியில் காண்போம். வினாத்தொடர் அறியாததை வினவி அறிந்துகொள்ள வினாத்தொடர் பயன்படுகிறது. அடிவினா, ஒட்டுவினா ஆகிய இரண்டுவிதமான வினாக்கள் உள்ளன. அடிவினா யார், எதை, எங்கு, எப்படி, எதனால் யாருக்கு, யாருடையை போன்ற வினாக்களை எழுப்புகிறது. ஒட்டுவினா ஐயத்துக்குரியதில் ஆ என்ற பின்னொட்டை சேர்க்கிறது. யார் சொன்னார்? அவனா சொன்னான்? இவை முறையே அடிவினாவுக்கும் ஒட்டுவினாவுக்கும் சான்றுகள். சுருக்கவுரை இப்படலத்தில் கண்டவற்றை சுருக்கமாக மீள்காண்போம். ஒரு எளிய முழுத்தொடரில் ஒரு எழுவாயும் ஒரு பயனிலையும் உள்ளன. பயனிலையில் ஒரு வினைமுற்றும் வேற்றுமைச்சொற்களும் உள்ளன. எழுவாயிலோ வேற்றுமையிலோ உள்ள பெயர்ச்சொல்லின்முன் அதன் பண்புகளை விவரிக்கும் பெயரடைகள் இருக்கலாம்; வினைச்சொல்லின்முன் அதன் பண்புகளை விவரிக்கும் வினையடைகள் இருக்கலாம். இரண்டாம் வேற்றுமைச்சொல்லை செயப்படுபொருள் என்றும் சொல்கிறோம். இது தொகையாகவும் வரலாம். இதுவரை நாம் கண்ட முழுத்தொடர்களில் பெயரடைகளும் வினையடைகளும் அளவுரைப்பிகளும் இருப்பினும், ஒரு வினைச்சொல்லே இருப்பதால் இவையெல்லாம் எளிய முழுத்தொடர்களே. இதுவே எல்லாவிதமான முழுத்தொடர்களுக்கும் அடிப்படைச்சட்டகமாக விளங்குகிறது. எவ்விதமான உட்சிக்கலான நீண்ட முழுத்தொடரையும் இந்த சட்டகத்தில் சில சொற்களை மாற்றிடுவதால் பெறலாம். திருப்புக்கூற்றாக, நாம் எழுதும் எந்த உட்சிக்கலான முழுத்தொடரும் இந்த சட்டகத்துக்கு குறைக்கக்கூடியதாக இருக்கவேண்டும். கூட்டும முழுத்தொடர் ஒரு எளிய முழுத்தொடரில் வினைச்சொல்லுடன் பெயர்ச்சொற்களும் பெயரடைகளும் வினையடைகளும் இருக்கலாம் என்று முந்திய படலத்தில் கண்டோம். இந்தப்படலத்தில் கூட்டும முழுத்தொடர்களையும் இணைந்த முழுத்தொடர்களையும் பார்ப்போம். எளிய முழுத்தொடரிலிருந்து கூட்டும முழுத்தொடரையோ இணைந்த முழுத்தொடரையோ பெறுவதை மூன்று விதங்களாக பிரிக்கலாம். அவை: (அ) பெயரடையை பெயரெச்சத்தாலோ வினையடையை வினையெச்சத்தாலோ மாற்றிட்டு கூட்டும முழுத்தொடரை பெறுவது; (ஆ) எழுவாயிலோ வேற்றுமைச்சொல்லிலோ செயப்படுபொருளிலோ உள்ள பெயர்ச்சொல்லை பெயர்த்தொடரால் மாற்றிட்டு கூட்டும முழுத்தொடரை பெறுவது; (இ) ஒன்றுக்கு மேற்பட்ட முழுத்தொடர்களை இணைப்பிகளால் இணைத்து இணைந்த முழுத்தொடரை பெறுவது. பெயரெச்சமும் வினையெச்சமும் ஒரு வினைச்சொல் முற்றுப்பெறாமல் ஒரு பெயர்ச்சொல்லை எதிர்நோக்கி நிற்பது பெயரெச்சம்; வினைச்சொல்லை எதிர்நோக்கி நிற்பது வினையெச்சம். வந்த என்பதைத்தொடர்ந்து ஒரு பெயர்ச்சொல் வரவேண்டும் என்பதால் இது பெயரெச்சம். வந்து என்பதைத்தொடர்ந்து ஒரு வினைச்சொல் வரவேண்டும் என்பதால் இது வினையெச்சம். சென்ற படலத்தில் ஒரு பெயர்ச்சொல்லின்முன் ஒரு பெயரடையை சேர்த்ததுபோலவே ஒரு பெயரெச்சத்தை சேர்க்கலாம்; பெயரெச்சத்தொடரை சேர்க்கலாம். அலுவலகத்திலிருந்து வந்த அகமது மின்னஞ்சலை எழுதினான். அகமது சென்னையில் வசிக்கும் தன் அம்மாவுக்கு மின்னஞ்சலெழுதினான். இங்கு அகமது என்ற எழுவாய்க்கு அலுவலகத்திலிருந்து வந்த என்ற பெயரெச்சத்தொடரும், அம்மாவுக்கு என்ற வேற்றுமைக்கு சென்னையில் வசிக்கும் என்ற பெயரெச்சத்தொடரும் அடைகளாக வந்துள்ளன. அகமது தன் பிள்ளைளைப்பற்றிய விவரங்கள் அடங்கிய மின்னஞ்சலை எழுதினான் என்பதில், தன் பிள்ளைளைப்பற்றிய விவரங்கள் அடங்கிய என்ற பெயரெச்சம் செயப்படுபொருளாகிய மின்னஞ்சல் என்ற பெயர்ச்சொல்லுக்கு அடையாக வந்தது. ஒவ்வொரு பெயரெச்சத்தொடரிலும் ஒரு வினைச்சொல் எச்சமாக இருப்பது அவசியம்; எளிய முழுத்தொடரின் மற்ற உறுப்புகளும் இருக்கலாம். மேற்கண்ட சான்றுகளில் வா, வசி, அடங்கு ஆகிய வினைச்சொற்கள் எச்சமாக உள்ளன. அலுவலகத்திலிருந்து, சென்னையில், பிள்ளைகளை ஆகியவை வேற்றுமைச்சொற்கள். வா, வசி ஆகியவற்றின் எழுவாய்கள் பெயரெச்சங்களின் இலக்குகளான பெயர்ச்சொற்கள். அதாவது வருவது அகமது, வசிப்பது அம்மா. ஆனால் அடங்கு என்பதில் விவரம் எழுவாய்; பெயரடைகளை பெயரெச்சத்தொடர்களாக விரிக்க வேறு பல வழிகளையும் ஆம் பகுதியில் காண்போம். வினையடைக்குப்பதிலாக வினையெச்சத்தொடர் வருவதன் சான்று அகமது அலுவலகத்திலிருந்து வந்து மின்னஞ்சலெழுதினான். இந்த முழுத்தொடரில் அகமது மின்னஞ்சலெழுதினான் முற்றுத்தொடர்; அகமது அலுவலகத்திலிருந்து வந்து வினையெச்சத்தொடர். அகமது இரண்டு தொடர்களுக்கும் பொதுவான எழுவாய். பெயர்த்தொடர் எளிய முழுத்தொடரிலிருந்து கூட்டும முழுத்தொடரைப்பெறுவதன் மற்றொரு வழி பெயர்ச்சொல்லின் இடத்தில் பெயர்த்தொடரை வைப்பது. முதலில் பெயர்த்தொடர் என்றால் என்ன என்று பார்ப்போம். குமரன் வீட்டுக்கு சென்றது முருகனுக்கு தெரியும். குமரன் வீட்டுக்கு சென்றதால் முருகன் வேலையை முடித்தான். குமரன் வீட்டுக்கு சென்றதை முருகன் பார்த்தான். மேற்கண்ட சான்றுகளில் சென்றது தொழிற்பெயர்; எனவே, குமரன் வீட்டுக்கு சென்றது ஒரு பெயர்த்தொடர். மேற்கண்ட மூன்று சான்றுகளிலும் இந்த பெயர்த்தொடர் முறையே எழுவாயாகவும் வேற்றுமையாகவும் செயப்படுபொருளாகவும் வருகின்றன. மேற்கண்ட சான்றுகளில் குமரனுக்குப்பதிலாக ஒரு அஃறிணைப்பெயர்ச்சொல் வரும்போது, மாடு வீட்டுக்கு சென்றது முருகனுக்கு தெரியும் என்பதில் மாடு வீட்டுக்கு சென்றது என்பது ஒரு முழுத்தொடராகலாம்; ஏனெனில், சென்றது என்ற சொல் தொழிற்பெயராகவும் வினைமுற்றாகவும் வரலாம். இதனால் ஏற்படும் பொருண்மயக்கத்தை எழுத்தாளர் நீக்கவியலாது. இதைத்தொடர்ந்து வரும் சொற்களை வாசித்தபின்பே பின்னோக்கி இந்த பொருண்மயக்கத்தை நீக்கவியலும். இவ்வாறான சாத்தியங்களை உணர்ந்து பொருண்மயக்கம் எளிதில் நீங்கும்படி எழுத்தாளர் எழுதவேண்டும். இனி, கீழ்க்கண்ட தொடரை கருதுக. கொடியசைந்ததும் காற்றுவந்ததா, காற்றுவந்ததும் கொடியசைந்ததா? இங்கு கொடியசைந்தது என்ற பெயர்த்தொடர் ஒற்றைச்சொல்லாக வந்தது. கொடி அசைந்தது என்பதை ஒரு செய்தியாக சொல்லும்போது அசைதல் வினை, கொடி எழுவாய். ஆனால் இங்கு கொடியசைவதை ஒரு வினையாக கருதி ஒற்றைச்சொல்லாக சொல்கிறோம். இங்கு காற்றுவரும் என்றால் இந்த இடம் காற்றோட்டமான இடம் என்பது பொருள். காற்றுவருதலே வினை; வருதல் அன்று. இதன் வினாவடிவம் இங்கு காற்றுவருமா என்பதே. இங்கு என்ன வரும் என்ற கேள்வியை காற்று வரும் என்ற விடையை எதிர்பார்த்து யாரும் கேட்பதில்லை. எனவே, இங்கு காற்று வரும் என்பது பிழை. இணைந்த முழுத்தொடர் இரண்டு முழுத்தொடர்களை இணைப்பிகளால் இணைத்து ஒரு பெரிய முழுத்தொடரை உருவாக்கலாம். இங்கு நான்குவிதமான இணைப்பிகளை காண்போம் அவை (அ) அரைப்புள்ளி (ஆ) உம்மை (இ) ஓகாரம் (ஈ) எனில் ஆகியவை. (அ) மழை பெய்தது; குளம் நிரம்பியது. இங்கு இரண்டு எளிய முற்றுத்தொடர்கள் இருக்கின்றன. அவற்றை அரைப்புள்ளி இணைக்கிறது. இவற்றை தனிமுழுத்தொடர்களாகவும் எழுதலாம். ஆனால் இவற்றிடையில் ஒரு தொடர்பு இருப்பதை காட்ட இணைந்த தொடராக எழுதுகிறோம். மழை பெய்ததால் குளம் நிரம்பியது என்பது உள்ளுரை. மற்றொரு சான்று: அகமது வீட்டுக்கு வந்தான்; மின்னஞ்சலை எழுதினான். இங்கும் அரைப்புள்ளி இணைப்பியாக பயன்படுகிறது. இங்கு அகமது இரண்டு முழுத்தொடர்களுக்கும் பொதுவான எழுவாய். எழுவாய் பொதுவாக உள்ள இணைந்த முழுத்தொடரை அகமது வீட்டுக்கு வந்து மின்னஞ்சலை எழுதினான் என்றவாறு, வினையெச்சமுள்ள முழுத்தொடராகவும் மாற்றி எழுதலாம். இணைந்த தொடரின் இரண்டு எளிய தொடர்களும் சமானமானவை. மாறாக, எச்சங்களால் உருவான தொடர்களில் எச்சத்தொடர் முற்றுத்தொடரை சார்ந்திருக்கிறது. (ஆ) எழுவாயும் வினைச்சொல்லும் பொதுவாக உள்ள இணைந்த முழுத்தொடர்களை உம்மையால் எழுதலாம். சான்றாக, வள்ளி கதையையும் கட்டுரையையும் எழுதினாள் என்பது வள்ளி கதையை எழுதினாள், வள்ளி கட்டுரையை எழுதினாள் ஆகிய இரண்டு முழுத்தொடர்களின் இணைப்பு. முழுத்தொடரின் மற்றப்பகுதிகளையும் உம்மையால் இணைத்து இணைந்த முழுத்தொடர்களை உருவாக்கலாம். செலினாவும் கந்தனும் வந்தார்கள் என்பதில் இரண்டு எழுவாய்கள். அகமது பேனாவாலும் பென்சிலாலும் படம்வரைந்தான் என்பதில் இரண்டு மூன்றாம் வேற்றுமைச்சொற்கள் உம்மையால் சேர்கின்றன. அகமது அம்மாவுக்கு பேனாவால் தாளில் எழுதிய கடிதத்தையும் தங்கைக்கு மின்னஞ்சலையும் அனுப்பினான் என்பதில் ஒரு இரண்டாம் வேற்றுமைத்தொடரும் ஒரு இரண்டாம் வேற்றுமைச்சொல்லும் உம்மையால் சேர்கின்றன. பெயர்த்தொடரில் ஒரு பெயரெச்சம் உள்ளது. உம்மையைப்பற்றி மேலும் சற்று விரிவாக ஆம் பகுதியில் காண்போம். (இ) ஓகாரத்தாலும் முற்றுத்தொடர்களை சேர்க்கலாம். ஓகாரத்துடன் அல்லது என்ற சொல்லும் இருக்கலாம். செலினாவோ வள்ளியோ வந்தாள் செலினாவோ அல்லது வள்ளிவோ வந்தாள் ஆகியவை சான்றுகள். இந்த இரண்டுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. முதலாவதன்படி செலினா வந்திருக்கலாம், வள்ளி வந்திருக்கலாம், இருவரும் வந்திருக்கலாம். இரண்டாவதன்படி செலினா வந்திருக்கலாம், வள்ளி வந்திருக்கலாம், ஆனால் இருவரும் வரவில்லை. அதாவது இங்கு அல்லது என்ற சொல் இல்லாவிட்டால் என்ற பொருளுள்ளது. ஓகாரமும் அல்லதும் ஒன்றாக வருவதை கணிதத்தில் தவிர்ப்போகாரம் என்கிறோம்; ஏனெனில் இரண்டு நிகழ்வுகளும் சேர்ந்து நிகழ்வதை இது தவிர்க்கிறது. ஓகாரத்தைப்பற்றி மேலும் சற்று விரிவாக ஆம் பகுதியில் காண்போம். எச்சத்துள் எச்சம் பெயரெச்சத்தொடர், வினையெச்சத்தொடர், பெயர்த்தொடர் ஆகியவற்றின் உட்பகுதிகளாக பெயரடை, வினையடை, பெயர்ச்சொல் ஆகியவை இருக்கலாம். இவற்றையும் முறையே பெயரெச்சம், வினையெச்சம், பெயர்த்தொடர் ஆகியவற்றால் மாற்றிடுவதன்மூலம் மேலும் நீண்ட முழுத்தொடர்களை பெறலாம். இதை எச்சங்களின் உள்ளடுக்கல் என்கிறோம். சான்றாக, மதுரைக்குச்செல்லும் தொடர்வண்டியில் ஏறிய கந்தன் தன் இருக்கையில் அமர்ந்தான். இங்கு, மதுரைக்குச்செல்லும் என்ற பெயரெச்சம் தொடர்வண்டியில் ஏறிய என்ற பெயரெச்சத்தின் வேற்றுமைச்சொல்லான தொடர்வண்டிக்கு அடையாக வந்தது. மதுரைக்குச்செல்வதை தொடர்வண்டியின் ஒரு பண்பாக கருதி ஒற்றைச்சொல்லாக எழுதுகிறோம். வேற்றுமையுருபோ வேறு உருபனோ தொக்குநிற்பதே தொகை என்பார்கள்; ‘தொக்கு’ என்றால் ‘மறைந்து’ என்று பொருள். இதனால், எந்தப்பகுதியும் மறையாமல் சேர்த்தெழுதி அதையும் தொகை என்று சொல்வதை அறிஞர் பிழையாக கருதலாம். ஆனால் இதை புணர்ச்சி என்று சொல்வது பிழையாகாது. பெயர்த்தொடர்கள் ஒரு எளிய முழுத்தொடரில் வரக்கூடிய பெயர்ச்சொல்லின் இடத்தில் பெயர்த்தொடரை வைப்பதன்மூலம் கூட்டும முழுத்தொடரை ஆக்கலாம் என்பதை ஆம் பகுதியில் கண்டோம். தொழிற்பெயர் ஒரு வினையிலிருந்து பெயர்ச்சொல்லை பெற செய்தல் என்ற வாய்ப்பாடு பயன்படுகிறது. சான்றாக, பெருகு என்ற வினைச்சொல்லிலிருந்து பெருகுதல் என்ற பெயர்ச்சொல்லை பெறுகிறோம். இது இலக்கணத்தில் தொழிற்பெயர் எனப்படுகிறது. இதைப்போலவே, எந்தவொரு முழுத்தொடரிலிருந்தும் ஒரு பெயர்த்தொடரை பெறலாம். சான்றாக குளத்தில் நீர் பெருகுகிறது என்ற எளிய முழுத்தொடரிலிருந்து குளத்தில் நீர் பெருகுதல் என்ற பெயர்த்தொடரை பெறுகிறோம். பிறகு இந்த பெயர்த்தொடரை பெயர்ச்சொல்போல் பயன்படுத்தி வேறு முழுத்தொடர்களை உருவாக்கலாம். குளத்தில் நீர் பெருகுதல் விவசாயத்துக்கு நல்லது. குளத்தில் நீர் பெருகுதலால் மீன்வளம் அதிகரிக்கிறது. குளத்தில் நீர் பெருகுதலை ஊர்மக்கள் கண்டனர். இந்த சான்றுகளில் அந்த பெயர்த்தொடர் எழுவாயாகவும் வேற்றுமையாகவும் செயப்படுபொருளாகவும் வந்தது. காலங்காட்டும் பெயர் காலங்காட்டும் வினையிலிருந்து காலங்காட்டும் பெயர்த்தொடரையும் பெறலாம். செய்தது, செய்கின்றது, செய்வது ஆகியவை இதற்கான வாய்ப்பாடுகள். மழை பெய்ததால் குளத்தில் நீர் பெருகியது. மழை பெய்கிறதால் வெளியே போகவில்லை. மாமா வருவதால் பள்ளிக்கு வரமாட்டேன். கடந்தகாலத்திலும் நிகழ்காலத்திலும் செய்தமை, செய்கின்றமை ஆகிய வாய்ப்பாடுகள் இதே பொருளில் வழக்கிலுள்ளன. நாம் இவற்றை செந்தரத்தில் தவிர்ப்போம். காலத்துடன் பாலையும் திணையையும் காட்டும் வினையிலிருந்து அதே பாலையும் திணையையும் காட்டும் பெயர்த்தொடரை பெறலாம். இதற்கான வாய்ப்பாடுகள் செய்தவன், செய்கிறவன், செய்பவன், செய்தவள், இன்ன பிற. நேற்று வந்தவர்கள் இன்று போகிறார்கள். நாளை வரப்போவதை யாரறிவார்? எதிர்மறைப்பெயர் பெயர்த்தொடர்களை எதிர்மறையாக்க பின்வரும் வாய்ப்பாடுகளை பயன்படுத்துகிறோம். எதிர்மறைச்சொற்கள் காலத்தையும் இடத்தையும் காட்டுவதில்லை; முழுத்தொடரிலுள்ள மற்ற சொற்களாலே காலத்தையும் இடத்தையும் அறியலாம். ஆனால் திணைப்பால்விகுதிகளை தக்கவைக்கின்றன. மழை பெய்யாததால் பயிர்கள் வாடிவிட்டன. நேற்று வராதவள் இன்று ஏன் வந்தாள்? நேற்று வராதவளே, இன்று ஏன் வந்தாய்? வராததை எண்ணி கவலைப்படாதே! திணைபாலியைபு தொல்லிலக்கணம் உயர்திணைக்கு ஆண்பால், பெண்பால், பலர்பால் ஆகிய மூன்று பால்களும் அஃறிணைக்கு ஒன்றன்பால், பலவின்பால் ஆகிய இரண்டு பால்களும் இருப்பதாக சொல்கிறது. இதன்படி அவர், ஆசிரியர், தச்சர், பொருளாளர், மருத்துவர் போன்றவை பலர்பால். இவை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான சொற்கள். ஆசிரியர் வருகிறார் என்றவாறு நிகரான வினைச்சொல்லுள்ள முழுத்தொடர் நல்வடிவத்தொடர். தொல்லிலக்கணப்படி, இது ஒன்றுக்குமேற்பட்ட ஆசிரியர்கள் வருவதை குறிக்கிறது. இக்காலத்தில் பலர்பாலில் ஒரு குழப்பம் நிலவுகிறது. அவர் உயர்பாலாகவும் அவர்கள் பலர்பாலாகவும் கருதப்படுகின்றன (பொற்கோ, 2002). கதை இத்துடன் முடியவில்லை! அவர்கள் என்பதும் உயர்வுப்பாலாக ஆகிக்கொண்டுவருகிறது. குமரனவர்கள் வந்தார்கள் என்று சொல்லும் வழக்கமும் நிலவுகிறது. சில வட்டாரங்களில் அம்மா, அப்பா, ஆசிரியர் போன்றோரை கள்விகுதியாலே குறிப்பதுண்டு. அவர் என்ற சொல் உயர்பாலானபின் பலர்பாலுக்காக அவர்கள் என்பதை உண்டாக்கினோம். அவர்களும் உயர்பாலானபின் பலர்பாலுக்காக வேறொருசொல் தேவைப்படும். இதன் முடிவு எங்கு? அவர்கள்கள் என்று தொடர்வதை நிறுத்த, ஆசிரியன் வந்தது என்பதையே பிழையாக கருதி, ஆசிரியன் வருகிறான் என்பதை உயர்திணையாக இலக்கணம் சொல்வதை ஏற்கவேண்டும். அப்போதே மொழி சிதையாமல் நிலைக்கும். மக்கள் பேசுவதையெல்லாம் சரியென்று கொண்டு விவரணப்புத்திலக்கணத்தை வகுக்காமல் இலக்கணத்தின் கட்டெழுத்துரிமையை சமூகத்தின்மீது நிலைநாட்டுவது அறிஞரது கடமை. இந்த நோக்கத்துடன் அவர்கள் கல்வித்திட்டத்தை சீரமைக்கவேண்டும். ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான ஒரு பால் இக்காலத்தில் தேவைப்படுகிறது. மருத்துவரோ ஆசிரியரோ பொருளியலாளரோ ஆணாயிருந்தாலென்ன, பெண்ணாயிருந்தாலென்ன! இதற்காக அவர் என்ற உயர்பாற்சொல்லை பொதுப்பாலாக பயன்படுத்தலாம். இதனால், பொற்கோவின் வழியுரையை பின்பற்றி, உயர்திணைக்கு ஆண்பால், பெண்பால், உயர்பால், பலர்பால் என்ற நான்கு பால்களும் அஃறிணைக்கு ஒன்றன்பால், பலவின்பால் என்ற இரண்டு பால்களுமாக மொத்தம் ஆறு பால்களை செந்தரமாக்குவோம். உயர்பால் பொதுப்பாலாகவும் பணியாற்றுகிறது. இதன்படி மருத்துவன், மருத்துவள், மருத்துவர் ஆகியவை ஒருமை; மருத்துவர்கள் பன்மை. எழுவாயில் அர் விகுதி வரும்போது வினையில் ஆர் விகுதி வரவேண்டும்; எழுவாயில் கள் வரும்போது வினையிலும் இயைபாக கள் இடுவோம்; அர் விகுதியை பயன்படுத்தவேண்டாம். மாணவன் வந்தான் ஆசிரியன் வந்தான் மாணவி வந்தாள் ஆசிரியை வந்தாள் மாணவர் வந்தார் ஆசிரியர் வந்தார் மாணவர்கள் வந்தார்கள் ஆசிரியர்கள் வந்தார்கள் வேறுவிதமாகச்சொன்னால், பெயர்ச்சொல்லின் பாலுக்கு இயைபாக வினைச்சொல்லின் பால் அமைகிறது; வருவது மாணவரா ஆசிரியரா என்பதைப்பொறுத்து அமையவில்லை. செந்தரத்தில், அவர் என்ற சொல்லை உயர்வுக்காகவோ ஆண்பெண்பொதுமைக்காகவோ பயன்படுத்துகிறோம். ஒருவரை மட்டும் குறிக்க பன்மை விகுதிகளை பயன்படுத்துவதில்லை. இதன்படி, அப்பா சொன்னார்கள் தவறு; அப்பா சொன்னார் சரி. முன்னிலையில் நீ சொன்னாய், நீ சொல் ஆகியவை ஒருமை; நீர் சொன்னீர், நீர் சொல்லும் உயர்வுப்பொது; நீங்கள் சொன்னீர்கள், நீங்கள் சொல்லுங்கள் பன்மை. கள்விகுதி அஃறிணைப்பெயருக்குரியது என்கிறது தொல்லிலக்கணம். அதனால் அவர்கள் தவறு என்று கொள்வோரும் இக்காலத்தில் இருக்கின்றனர். இவ்வாறான கருத்துவேறுபாடுகளை ஒடுக்கி, ஒரே சீராக எல்லாரும் எழுதுவதற்கும் பேசுவதற்காகவுமே இந்த செந்தரம் உருவாகிறது. கள்விகுதி அஃறிணைக்குரியது என்பதை பழையதாக கழித்துவிட்டு, அவர் உயர்பால், அவர்கள் பலர்பால் என்ற புதியனவற்றை புகவிடுகிறோம். இந்த மாற்றம் ஆம் பகுதியில் சொன்ன வழியுரைக்கு உடன்படிகிறது. சில மாவட்டங்களில் பெண்களை அவள் என்பதை இழிவாகக்கருதி, அது என்று குறிப்பிடுவதாக தோன்றுகிறது. மற்ற மாவட்டத்தினருக்கு இந்த வழக்கமே இழிவாகத்தோன்றலாம். இலக்கணப்படி, கணவன் சொன்னார், கணவர் சொன்னார்கள், மனைவி சொன்னது, கணவன் சொன்னது ஆகியவை பிழையானவை. கணவன் சொன்னான், கணவர் சொன்னார், மனைவி சொன்னாள், மனைவி சொன்னார் ஆகியவை சரியானவை. கணவன் ஆண்பாலாகவும் கணவர் உயர்பாலாகவும் இருப்பதில் தவறில்லை. ஆனால், மனைவி என்ற சொல் பெண்பாலுக்கும் உயர்பாலுக்கும் ஒன்றே. (ஒருவேளை மனைவர் என்ற சொல்லை உருவாக்கலாமோ!) ஆசிரியன், ஆசிரியை, ஆசிரியர், ஆசிரியர்கள் என்பவை முறையே ஆண்பால், பெண்பால், உயர்பால், பலர்பால். ஆசிரியை வந்தார் பிழை. ஆசிரியை வந்தாள், ஆசிரியர் வந்தார் ஆகியவை சரி. ஆசிரியர் ஆண்பாலை குறிப்பதாக கருதி ஆசிரியர்களும் ஆசிரியைகளும் வந்தார்கள் என்பது பிழை. ஆசிரியர்கள் வந்தார்கள் சரியானது. உயர்திணையில் பன்மைக்காக மார் என்ற பின்னொட்டும் இருக்கிறது. அண்ணன்மார், தம்பிமார், அக்காள்மார், தங்கைமார், தாய்மார், தச்சன்மார், மருத்துவன்மார் ஆகியவை சான்றுகள். சொற்பொழிவாளர் ‘பெரியோர்களே, தாய்மார்களே!’ என்று தொடங்குவது தாய்மாரை இழிவுறுத்துவது. தாய்மாரும் பெரியோர்களே; அவர்களை தனியாக சொல்லவேண்டியதில்லை. மேலும் தாய்மார் பன்மை; கள் விகுதி கூடாது. அது என்பது ஒருமைச்சொல்; அதற்கிணையான பன்மைச்சொல் அவை. அதேபோல், ஒருமைத்தொடர் து என்ற விகுதியிலும் பன்மைத்தொடர் அவை என்ற விகுதியிலும் முடிகின்றன. கட்டவிழ்ந்தது எங்கு சென்றதோ! இங்கு மேய்ந்தவை யாரது மாடுகள்? இதுபோன்ற முழுத்தொடர்களில் எழுவாய்க்கும் வினைச்சொல்லுக்குமிடையில் எண்ணில் ஒவ்வுமை இருக்கவேண்டும். அதாவது, எழுவாயும் வினையும் ஒருமையாகவோ, இரண்டும் பன்மையாகவோ இருக்கவேண்டும். ஒன்று ஒருமையாகவும் மற்றது பன்மையாகவும் இருப்பது பிழை. இங்கு மேய்ந்தது யாரது மாடுகள்? இக்காலத்தில் சிலர் அதுகள், அவைகள் என்று பிழையாக எழுதுகிறார்கள். இது தவிர்க்கவேண்டியது. கட்டவிழ்ந்ததுகள் எங்கு சென்றனவோ! கட்டவிழ்ந்தவை எங்கு சென்றனவோ! இங்கு மேய்கின்றவைகள் யாரது மாடுகள்? இங்கு மேய்கின்றவை யாரது மாடுகள்? உம்மையால் இணைந்த பல பெயர்த்தொடர்கள் எழுவாயாக வரும்போது பன்மைவினையால் அதை முடிக்கவேண்டும். ஆடும் மாடும் வந்தன. அவன் அங்கு வந்ததும் இவனைக்கண்டு பேசியதும் உடனே புறப்பட்டுச்சென்றதும் உணரத்தக்கவை. ஆனால், எண்ணுறாத அளவை குறிக்கும் சொல்லை ஒருமையாகவே கருதவேண்டும். ஐந்து கிலோ சக்கரை கிடைத்தது. ஐந்து கிலோ சக்கரைகள் கிடைத்தன. இங்கு ஐந்து என்ற எண்ணுப்பெயர் இருப்பினும் ஐந்து கிலோ என்ற எடை எண்ணுறாதது; ஏனெனில், எடை ஐந்தரைக்கிலோவாகவோ 5.783 கிலோவாகவோ இருக்கலாம். பைப்பிணைப்புகளின் வலிமையைவிட சிகுமாப்பிணைப்புகளின் வலிமை அதிகமானது. பைப்பிணைப்புகளின் வலிமைகளைவிட சிகுமாப்பிணைப்புகளின் வலிமைகள் அதிகமானவை. இங்கு பிணைப்புகள் பன்மையாயினும் அவற்றது வலிமை ஒருமையே; ஏனெனில் வலிமை எண்ணக்கூடியதன்று; அளவிடக்கூடியது. உதிரியான பொருள்களையே எண்ணலாம். ஒவ்வொரு என்பது ஒருமைச்சொல்; எல்லா என்பது பன்மைச்சொல். ஒவ்வொரு நாளும் நல்ல நாளே! எல்லா நாள்களும் நல்ல நாள்களே! ஒரு முழுத்தொடரின் சொற்களிடையில் எண்ணியைபு வேண்டுமென்று இலக்கணத்தில் படிக்கும்போது அற்பமாகத்தோன்றலாம். ஆனால் நடைமுறையில் எழுதும்போது எழுத்தாளர்கள் இதை மறந்துவிடுவதை காணலாம். அனைத்து கோள்களின் சுற்றுப்பாதையும் மிகவும் கிட்ட்டத்தட்ட வட்டமாக இருக்கிறது. அனைத்து கோள்களின் சுற்றுப்பாதைகளும் மிகவும் கிட்டத்தட்ட வட்டங்களாக இருக்கின்றன. பெயர்ச்சொல்லுடன் கள் சேரும்போது ஏற்படும் புணர்ச்சிகளை Error: Reference source not foundஆம் பகுதியில் விவரிக்கிறேன். அது, அவை, வந்தது, போனவை போன்ற சொற்களுடன் வேற்றுமையுருபுகள் சேரும்போது, ஒருமைக்கு அன், பன்மைக்கு அற்று ஆகிய சாரியைகள் வருவதை Error: Reference source not found, Error: Reference source not found ஆகிய பகுதிகளில் காணலாம். கணிதக்கோவைகள் கணிதவுரையில் x போன்ற அடையாளமோ ax² + textbx போன்ற கணிதக்கோவையோ வரும்போது அதை ஒரு பெயர்ச்சொல்லாகவோ பெயர்த்தொடராகவோ கருதி முழுத்தொடரின் ஒரு பகுதியாக்கவேண்டும். தனிவரியில் நிற்கும் ஒரு சமன்பாட்டுக்கும் இது பொருந்துகிறது. சான்றாக, இதை குறியீட்டால், undersetxrightarrowaஎல்லைfleft(xright) = l என்று எழுதுகிறோம். சமன்பாடுகளை முழுத்தொடராகவும் சமமிலியை எதிர்மறைத்தொடராகவும் கருதலாம். ஒரு சமன்பாடு கூட்டுத்தொடரின் ஒரு பகுதியாகலாம். சான்றாக, x > 5 எனில், x² − 4x > 0 என்பதில், x > 5 என்ற முழுத்தொடரை எனில் என்ற இணைப்பியால் x² − 4x > 0 என்ற முழுத்தொடருடன் இணைத்தோம். வேற்றுமையுருபுகள் தனியே நிற்பதில்லை என்ற வழியுரை கணிதக்கோவைகளிலும் பொருந்தும். சுழியத்தின் மிக அருகிலுள்ள xஇன் மதிப்புகளுக்கு நாம் gleft(xright)ஐ கணக்கிட்டு, gleft(xright)இன் மதிப்பு சுழியத்தை நெருங்குவதை காண்கிறோம். சுழியத்தின் மிக அருகிலுள்ள x இன் மதிப்புகளுக்கு நாம் gleft(xright) ஐ கணக்கிட்டு, gleft(xright) இன் மதிப்பு சுழியத்தை நெருங்குவதை காண்கிறோம். கணிதக்கோவை எழுவாயாக வரலாம். gleft(xright) = xvee, xneq0 என்ற சார்பனை கருதுக. gleft(0right) வரையறுக்கப்படாததை நோக்குக. எண்களும் அலகுகளும் இயற்பியல்போன்ற அறிவியற்றுறைகளில் எழும் ஒவ்வொரு அளவிலும் ஒரு எண்மதிப்பும் அலகுத்தொகுப்பும் உள்ளன. சான்றாக, ஒளியின் வேகம் 299792458ms⁻¹. இங்கு 299792458 எண்மதிப்பு; ms⁻¹ அதன் அலகுத்தொகுப்பு. இந்த எண்களையும் அலகுகளையும் எழுதுவதற்காக அனைத்துலக அலகமைப்பு (அவ) எனப்படும் ஒரு செந்தரம் உள்ளது. இதன்படி, (அ) எண்களை மும்மூன்று இலக்கங்களாக தொகுத்து இடைவெளிவிட்டு எழுதவேண்டும்; (ஆ) எண்ணுக்கும் அலகுக்குமிடையில் ஒரு இடைவெளி இருக்கவேண்டும்; (இ) அலகுத்தொகுதியின் வெவ்வேறு அலகுகளிடையில் இடைவெளி இருக்கவேண்டும். மேற்கண்ட அளவில் m மீட்டரையும் s நொடியையும் குறிக்கின்றன. இவற்றிடையில் இடைவெளி விடாமல் textms என்று எழுதினால் அது மில்லிநொடியாகிவிடும். எண்களின் முத்தொகுதிகளை நாம் முறையே ஆயிரம், இருமடியாயிரம், மும்மடியாயிரம் என்றவாறு சொற்களால் குறிக்கிறோம். 299792458ms⁻¹ என்பது தமிழுரையில் வரும்போது அதை நாம் ஒரு பெயர்த்தொடராக கருதுகிறோம். சொற்களால் ‘இருநூற்றுத்தொண்ணூற்றொன்பதிருமடியாயிரத்து எழு-நூற்றுத்தொண்ணூற்றிரண்டாயிரத்து நானூற்றைம்பத்-தெட்டு மீட்டர் நொடிக்கு’ என்று சொல்கிறோம். சிறு எண்களை எழுத்தால் எழுதுவது சிறந்தது. 21 முவியத்துணைக்கோள்களும் 3 உதிரித்துணைக்-கோள்களும் புவியிலிருந்து 12550 மைலுக்கு மேலமைந்த சுற்றுப்பாதைகளில் இருக்கின்றன. இருபத்தொரு முவியத்துணைக்கோள்களும் மூன்று உதிரித்துணைக்கோள்களும் புவியிலிருந்து 12550 மைலுக்கு மேலமைந்த சுற்றுப்பாதைகளில் இருக்கின்றன. எண்ணுடன் வேற்றுமையுருபு வரும்போது உருபை தனிச்சொல்லாக எழுதக்கூடாது. கேலாசிக்கு 1808 இல் இந்த விதியை தந்தார். கேலாசிக்கு 1808இல் இந்த விதியை தந்தார். வினைத்தொடர்கள் ஒரு முழுத்தொடரில் வினைச்சொல்லே மையப்பங்கை வகிக்கிறது. இந்தப்படலத்தில் வினைச்சொல், வினைத்தொடர் ஆகியவற்றின் பல வகைகளையும் சிறப்பியல்புகளையும் காண்போம். வினைச்சொல்லின் மையப்பங்கு குமரன் வீட்டில் இருந்தான். குமரன் வீட்டில் புத்தகத்தை எடுத்தான். குமரன் வீட்டில் புத்தகத்தை முருகனுக்கு கொடுத்தான். இந்த மூன்று முழுத்தொடர்களிலும் வீட்டில் என்ற சொல் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு முழுத்தொடரும் பொருள்தரும். ஆகவே வீட்டில் என்பது விருப்பும வேற்றுமைத்தொடர். ஆனால் புத்தகத்தை என்ற சொல்லையோ முருகனுக்கு என்ற சொல்லையோ நீக்கினால் பொருள் முழுமையடையவில்லை. எதை எடுத்தான், எதை யாருக்கு கொடுத்தான் என்ற கேள்விகள் எஞ்சிநிற்கின்றன. எனவே கொடுத்தான் என்ற வினைக்கு இரண்டாம் வேற்றுமையும் நான்காம் வேற்றுமையும் கட்டாயத்தேவை. அதாவது இருந்தான், எடுத்தான், கொடுத்தான் என்ற வினைகளுக்கு முறையே சுழியம், ஒன்று, இரண்டு வேற்றுமைத்தொடர்கள் இருப்பது கட்டாயமாகிறது. குமரன் புத்தகத்தை முருகனுக்கு இருந்தான் என்பது அல்வடிவத்தொடர் என்பது நமக்கு உடனே விளங்குகிறது. ஏன்? இருந்தான் என்ற வினைக்கு வரக்கூடாத வேற்றுமைகள் வந்திருக்கின்றன. இது பிழை! எனவே, ஒரு வினைத்தொடரில் அமைகிற பெயர்த்தொடர்களுக்கு செயற்பங்கை அதன் வினைச்சொல்லே அளிக்கின்றது. செயற்பங்கு இல்லாத பெயர்த்தொடர்கள் வந்தால் அது பிழையான தொடர் (சுந்தரம், 2022). எழுவாயையும் உருபற்ற ஒரு வேற்றுமையாக கருதலாம். எனவே, ஒரு முழுத்தொடர் என்பது ஒரு வினைச்சொல்லும் அதனுடன் வேற்றுமையுறவுடைய பல பெயர்ச்சொற்களும் அடங்கிய ஒரு சொற்றொடர் என்று வரையறுக்கலாம். எல்லா வினைகளுக்கும் எழுவாய் கட்டாயமானது. அதற்குமேலும் சில வினைகளுக்கு கட்டாயவேற்றுமைகளும் விருப்புமவேற்றுமைகளும் உள்ளன. எல்லா எளிய முழுத்தொடர்களும் கூட்டும முழுத்தொடர்களும் இதே பாங்குடையவை. இணைந்த முழுத்தொடர்களில் இணைப்பிகளும் இருக்கின்றன. சொன்முறைமை ஒரு முழுத்தொடரில் சொற்கள் தோன்றும் முறைமைக்கு சில நெகிழ்மைகளும் கட்டுப்பாடுகளும் உள்ளன. அகமது பேனாவால் கடிதத்தை எழுதினான் என்ற முற்றுத்தொடரிலுள்ள சொற்களை நம் விருப்பப்படி எப்படிவேண்டுமானாலும் முறைமைமாற்றலாம் என்பது தமிழின் ஒரு தனிச்சிறப்பு. எழுதினான் கடிதத்தை அகமது பேனாவால் என்பது ஒரு சான்று. எனினும் எழுவாயை முதலிலும் வினைமுற்றை இறுதியிலும் வைப்பது உரைநடையிலும் பேச்சிலும் ஒரு மரபேற்பு. பெரும்பான்மையான நேரங்களில் நாம் இவ்வாறே எழுதுகிறோம், பேசுகிறோம். ஆனால் இடையில் வரும் வேற்றுமைத்தொடர்களை முறைமைமாற்றிக்கொள்வது நடைமுறையிலும் ஏற்புடையது. அகமது கடிதத்தை பேனாவால் எழுதினான் என்ற முறைமையும் வழக்கிலுள்ளது. ஆனால் பெயரடைகளும் பெயரெச்சங்களும் பெயரெச்சத்தொடர்களும் ஒரு பெயர்ச்சொல்லின் முன்பே வரவேண்டும். (இடப்பக்கத்தை முன்பு என்கிறோம்). அகமது நீலநிறமான பேனாவால் எழுதினான். அகமது பேனாவால் நீலநிறமான எழுதினான். அதேபோல், வினையடை வினைமுன் வருவது உரைநடையில் இயல்பு. அகமது விரைவாக ஓடினான். எனினும் அகமது ஓடினான் விரைவாக விரைவாக அகமது ஓடினான் என்பவையும் ஏற்கத்தக்கவை; குறிப்பாக இவை கவிதையிலும் புனைவிலக்கியத்திலும் எழுத்தாளர் வேண்டும் விளைவை தரலாம். ஆனால் உள்ளதை உள்ளபடி உரைக்கும் அல்புனைவுகளில் இந்த கட்டுமானங்கள் இயல்பானவையல்ல. ஓடினாள், ஓடினாள், வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள் என்பது புனைவிலக்கியத்தில் உணர்ச்சிபொங்கும் தொடர். ஆனால் பிணைந்தது, பிணைந்தது, ஐதரசனுடன் ஆக்குசிசன் பிணைந்தது என்று சொன்னால் சிரிப்பன்றோ வருகிறது! கூட்டுவினைகள் செயப்படுபொருளுக்கும் எழுவாய்க்கும் வினைச்சொல்லுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதை ஆம் பகுதியில் கண்டோம். சிலநேரங்களில் வினையெச்சத்துக்கும் வினைச்சொல்லுக்குமுள்ள தொடர்பு நெருங்கி அவை ஒரே சொல்லாகின்றன. கண்ணன் அந்த செயலை செய்துவிட்டார் என்பதில் செய்து என்ற வினையெச்சத்துடன் விட்டார் என்ற வினை சேர்ந்து செய்துவிட்டார் என்ற வினைச்சொல்லை உருவாக்குகிறது. இவ்வாறான சொற்களில் செய் என்பது முதன்மைவினை என்றும் விட்டார் என்பது துணைவினை என்றும் தமிழறிஞர்கள் சொல்கிறார்கள். இங்கு செய்துவிடு என்பதே வினையடி. இதை கூட்டுவினை எனலாம். அதாவது ஒரு முதன்மைவினையும் துணைவினையும் கூடுவதால் உருவாவது. செய் என்ற இடத்தில் எந்தவினையையும் இட்டு வந்துவிடு, போய்விடு, உண்டுவிடு, எழுந்துவிடு என்றவாறு சொல்லலாம். எனவே செய்துவிடு என்பது ஒரு வாய்ப்பாடு. இதேபோல், செய்துபார் என்ற வாய்ப்பாட்டிலும் சமைத்துப்பார், படித்துப்பார், வந்துபார் என்றவாறு சொல்லலாம். செய்துகொள் என்ற வாய்ப்பாட்டிலும் பல சொற்கள் இருக்கின்றன. தனி வினைச்சொற்கள் நாளடைவில் விகுதிபோன்ற இலக்கணப்பகுதியாவதை இலக்கணவயமாதல் என்று மொழியியலர்கள் அழைக்கிறார்கள். (சுந்தரம், 2022). எழுந்திரு, விழித்தெழு, கண்டுபிடி, விட்டுக்கொடு, ஒத்திவை, திறந்துவை போன்ற சொற்களில் இரண்டு பகுதிகளுக்குமிடையான உறவு மேலும் நெருங்குகிறது. ஒவ்வொன்றும் இரண்டு வினைச்சொற்களை சேர்த்து இரண்டிலிருந்தும் மாறுபட்ட பொருளுடைய ஒரு சொல்லை உருவாக்குகின்றது. இந்த நிகழ்வை மொழியியலர்கள் சொல்வயமாதல் என்கிறார்கள். மேற்கண்ட கூட்டுவினைகள் செய்து என்ற சொல்லின் அடிப்படையில் அமைந்தவை. செய்ய என்ற சொல்லின் அடிப்படையிலும் செய்யப்பார், செய்யப்போ போன்ற கூட்டுவினைகள் அமைகின்றன. துணைவினைகளின் பல வகைகளையும் அவற்றின் பயன்பாடுகளையும் பயன்பாட்டிலுள்ள நுண்ணிய வேறுபாடுகளையும் விவரமாக அறிய ‘இக்காலத் தமிழ் இலக்கணம்’ என்ற நூலில் நோக்குக (பொற்கோ, 2002). செய்துவிடு, செய்துபார், செய்துகொள், செய்துகொண்டிரு, செய்துவா, செய்துகிட, செய்துமுடி, செய்துகாட்டு, செய்யப்போ, செய்யப்படு, செய்யப்பெறு, செய்யலாம், செய்யக்கூடும், செய்யவேண்டும் என்பவை கூட்டுவினைகளின் சில வாய்ப்பாடுகள். கூட்டுவினையை ஒற்றைச்சொல்லாகவே எழுதுக. அவள் பூச்சூடினாள். துணி தீப்பிடித்தது. பூச்சூடினாள் என்பது பூவை சூடினான் என்பதன் தொகை. இது கடிதமெழுதினான் போன்றது. ஆனால் தீப்பிடித்தது என்பதில் தீப்பிடி ஒரு வினைச்சொல்; அதாவது, கூட்டுவினைச்சொல். இவ்வாறு, வினைச்சொல்லுக்கும் மற்ற சொற்களுக்குமுள்ள உறவின் வலிமையில் மிகுந்த மாறுபாடு உள்ளது. சிலநேரங்களில் எழுத்தாளர் தன் தேவைக்குத்தக்கபடி தொகையாகவோ விரியாகவோ எழுதும் விருப்புமை இருக்கிறது. கடிதமெழுதினான் என்றோ கடிதத்தை எழுதினான் என்றோ எழுதலாம். வேறு நேரங்களில் இரண்டு பகுதிகளும் வலுவாகச்சேர்ந்து பிரிக்கவியலாமல் ஒற்றைச்சொல்லாகிவிடுகின்றன. தீப்பிடித்தது என்பதை தீயை பிடித்தது என்று எழுதவியலாது. எதிர்மறைத்தொடர் செய்தான் என்ற வாய்ப்பாட்டின் உடன்பாட்டு வினைச்சொல்லை செய்யவில்லை என்ற வாய்ப்பாட்டால் எதிர்மறையாக்கலாம். ஆனால் செய்கிறான் என்பதற்கும் இதுவே எதிர்மறை. எனவே, செய்யவில்லை என்பது கடந்தகாலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் பொதுவான எதிர்மைறை. இதேபோல் செய்தாள், செய்தேன், செய்தாய், செய்தது, செய்தன முதலியவற்றுக்கும் செய்யவில்லை என்பதே எதிர்மறை. அதாவது, எதிர்மறைச்சொல் திணைபாலிடவேறுபாடுகளையும் இழந்துவிடுகிறது. ஆனால், எதிர்காலத்தில் செய்வான் என்ற வினைக்கு செய்யமாட்டான் என்ற காலங்காட்டும் எதிர்மறை உள்ளது. மேலும் இவை செய்யமாட்டாள், செய்யமாட்டேன், செய்யமாட்டாய், செய்யாது, செய்யா என்றவாறு பாலையும் இடத்தையும் காட்டுகின்றன. சான்றாக, வா என்ற வினையடிக்கு இவை [] என்றாகின்றன. எனவே, மாடுகள் வராது என்பது பிழை; இதில் எண்ணியைபு இல்லை. மாடுகள் வாரா என்பதே சரி. செய்திரு, செய்துவிடு, செய்துகொள் போன்ற கூட்டுவினைகளுக்கும் மேற்சொன்னவையெல்லாம் பொருந்துகின்றன. சான்றாக, வந்திருந்தான் X வந்திருக்கவில்லை வந்துகொண்டிருக்கிறான் X வந்துகொண்டிருக்கவில்லை வந்துவிடும் X வந்துவிடாது வந்துவிடுவன X வந்துவிடா எடுத்துக்கொண்டான் X எடுத்துக்கொள்ளவில்லை ஆனால், கூட்டுவினைகளின் எதிர்மறைக்கு மற்றொரு வடிவமும் இருக்கிறது. செய்யாமலிரு, செய்யாமல்விடு என்ற வாய்ப்பாட்டு வினையடிகளுடன் காலத்தையும் பாலையும் காட்டும் விகுதிகளை சேர்க்கலாம். வந்திருந்தான் X வராமலிருந்தான் வரமாட்டாள் X வராமலிருக்கமாட்டாள் வரட்டும் X வராமலிருக்கட்டும் சொல்லப்பட்டது X சொல்லாமல்விடப்பட்டது வந்துவிடு X வராமலிருந்துவிடு இங்கு இரு, விடு ஆகியவை துணைவினைகள். எனவே, வராமல் இருக்கட்டும், செய்யாமல் விடப்பட்டது என்று பிழையாக எழுதாதீர்கள். அதேபோல் வர மாட்டான் என்பதும் பிழை. அல்ல என்பதன் சரியான வடிவங்கள் அவன் மருத்துவன் என்ற உடன்பாட்டு முழுத்தொடரை மறுக்க அவன் மருத்துவன் இல்லை என்றோ அவன் மருத்துவன் அல்ல என்றோ எழுதுவது பிழை. அல் என்ற வினையடி பாலிடவிகுதிகளை ஏற்கின்றது. அது எழுவாயுடன் இயையவேண்டும். எனவே, அவன் மருத்துவன் அல்லன் அவள் மருத்துவள் அல்லள் அவர் மருத்துவர் அல்லர் அது மருத்துவர் அன்று அவை மருத்துவர் அல்ல நீ மருத்துவன் அல்லாய் நீ மருத்துவள் அல்லாய் நீர் மருத்துவர் அல்லீர் நீங்கள் மருத்துவர்கள் அல்லீர்கள் நான் மருத்துவன் அல்லேன் நாங்கள் மருத்துவர் அல்லேம் என்று எழுதுவதே முறை. இது இன்றைய வழக்கத்தில் இல்லையெனினும் இதையே செந்தரமாக கொள்வோம். நாளடைவில் வழக்கத்துக்கு மீள்வரும். நானன்று அங்கு போனது நான் அடித்தது அவனையன்று நான் அவனை அடித்ததன்று குற்றம் என்ற தொடர்களில் முறையே போனது, அடித்தது, குற்றம் ஆகிய எழுவாய்களுடன் அன்று என்ற வினை இயைகிறது. வியங்கோள்வினைத்தொடர் செய்க எனும் வாய்ப்பாட்டின் வினைகளை வியங்கோள்வினை என்கிறோம். இது அறிவுரை போன்ற பொருளில் பயன்படுகின்றது. இதை வேண்டுகோளாகவும் கட்டளையாகவும் எண்ணலாம்; எனினும் இது தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களுக்கும் உரியது. தமிழ் வாழ்க என்பதில் படர்க்கையாக வருவதை நோக்குக. செய், செய்யுங்கள், செய்யட்டும், செய்யலாம் என்ற வாய்ப்பாடுகளையும் அறிஞர் வியங்கோளுக்காக பட்டியலிடுகின்றனர். குறிப்பாக ஒருவரையோ ஒரு சிலரையோ விளிக்கும்போது செய், செய்யும், செய்யுங்கள் என்பனவற்றையும் பயன்படுத்தலாம். ஆனால் இங்கும் செய்க பயனாகும் என்பதால் இதையே செந்தரமாக கொள்வோம். செய்யவும் என்ற வாய்ப்பாடு நடைமுறையில் வழக்கிலிருப்பதை காணலாம். இது பிழை. உம்மை வியங்கோளாக வராது. சில வினைகளுக்கு செய்க எனும் வாய்ப்பாட்டுவடிவம் செய எனும் வினையெச்சத்துக்கு சமமாவதால் பொருண்மயக்கம் ஏற்படுகிறது. சான்றாக, இருக்க, நடக்க, படிக்க. இந்த நூலை படிக்க - வியங்கோள். இந்த நூலை படிக்க விரும்புகிறேன் - எச்சம். இது விரும்பத்தக்க நிலைமையன்று; இருப்பினும் தவிர்க்கவியலாதது. வேறு பல வினைகளுக்கு இந்த வடிவங்கள் முறையே வருக, செல்க, எழுதுக, தருக என்றும் வர, செல்ல, எழுத, தர என்றும் வேறுபடுகின்றன. இந்த நூலை எழுதுக. இந்த நூலை எழுத விரும்புகிறேன். செய்யலாம், செய்யட்டும் என்ற வாய்ப்பாடுகளையும் வியங்கோள்வினையாக சிலர் பயன்படுத்துகின்றனர். இவற்றையும் செந்தரத்தில் தவிர்ப்போம். சில நேரங்களில் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கும்போது திருப்புமுறைமையில் எழுதவேண்டியதிருக்கும். See equation 10. காண்க சமன்பாடு 10. 10ஆம் சமன்பாட்டை காண்க. செய்யற்க என்பது எதிர்மறைவியங்கோளுக்கான வாய்ப்பாடு. ஆனால், பெரும்பாலான இடங்களில் எதிர்மறையேவல் போதுமானதாயிருக்கலாம். குப்பையை தரையில் போடாதீர். பூக்களை பறிக்காதீர். இந்த கருத்தை மறந்துவிடாதீர். செய்வினையில் எழுதுவோம் வினைகளில் செய்வினை, செயப்பாட்டுவினை இருப்பதை அறிவோம். குமரன் புல்லை வெட்டினான். புல் குமரனால் வெட்டப்பட்டது. அறிவியல்போன்ற கலைப்புலங்களில் உரையை ஆங்கிலத்தில் எழுதும்போது செயப்பாட்டுவினை அதிகம் பயன்படுகிறது. ஆனால் தமிழில் செய்வினையாக எழுதுவது இயல்பானதும் பொருளுணர எளிதானதும். இதற்கான பல சான்றுகளை காண்போம். (அ) As shown in the figure படத்தில் காட்டப்பட்டுள்ளபடி படத்தில் காட்டியபடி (ஆ) This is shown in figure 8.7. இது படம் 8.7 இல் காட்டப்பட்டுள்ளது. இதை படம் 8.7 காட்டுகிறது. இதை 8.7ஆம் படம் காட்டுகிறது என்பது மேலும் சிறப்பாயிருக்கும். ஆனால், உரையலசுமென்பொருள்கள் இதை இப்போது ஆதரிக்கவில்லை. (இ) This law was put forth by Antoine Lavoisier in 1789. இந்த விதி அந்துவான் இலவாசியேவால் 1789இல் முன்மொழியப்பட்டது. அந்துவான் இலவாசியே 1789இல் இந்த விதியை முன்மொழிந்தார். (ஈ) இந்த வழியுரை பலநேரங்களில் ஆங்கிலவுரைக்கும் பொருந்தும். Complicated schemes of motion were put forward by Ptolemy in order to describe the observed motion of the planets. Ptolemy put forward complicated schemes of motion in order to describe the observed motion of the planets. கோள்களில் கண்டறிந்த அசைவுகளை விளக்க உட்சிக்கலான வரைதிட்டங்களை தாலமி முன்வைத்தார். நிகழ்காலத்தில் எழுதுவோம் அறிவியல்போன்ற துறைகளில் எக்காலத்திலும் சரியாகும் உண்மைகளை நிகழ்காலத்தில் எழுதவேண்டும். இந்த முடிவிலாத்தொடர் குவிபோகும். இந்த முடிவிலாத்தொடர் குவிபோகிறது. புவி கதிரவனை சுற்றும். புவி கதிரவனை சுற்றுகிறது. இது ஈர்ப்புவிசையை காட்டும். இது ஈர்ப்புவிசையை காட்டுகிறது. சோடியம் நீருடன் வினைபுரியும். சோடியம் நீருடன் வினைபுரிகிறது. புலி மானை வேட்டையாடும். புலி மானை வேட்டையாடுகிறது. தன்மைப்பன்மையில் எழுதுவோம் அதாவது செய்யப்படுகிறது என்று எழுதாமல் செய்கிறோம் என்ற வாய்ப்பாட்டில் எழுதுவோம். இவ்வாறு எழுதுவது பள்ளியிலும் நூல்களிலும் கற்பதை நம் வாழ்வுக்கு தொடர்புள்ளதாக்குகிறது. செய்யப்படுகிறது என்று எழுதினால், அது மேனாட்டில் யாரோ செய்தது, அதை நாம் படிக்கிறோம் என்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. அறிவை வாழ்க்கையிலிருந்து விலக்கி நிறுத்துகிறது. உண்மையில், இவ்வாறான உண்மைகள் அனைத்துலகமானவை; மேனாட்டினர் கண்டுபிடித்த உண்மைகளும் எல்லா நாட்டினருக்கும் எல்லாக்கலாச்சாரங்களுக்கும் பொதுவானவை. எனவே, பரிசோதனைகளையும் கணிதக்கையூடாளல்களையும் நமக்குச்சொந்தமானவையாகவும் நாம் செய்வனவாகவும் வழங்குவது மக்களை அந்த கருத்துகளைவிட்டு வெளிநிறுத்தாமல் உள்ளெடுக்கும். இங்கு நாம் என்ற சொல் மேனாட்டினர், உண்ணாட்டினர் என்ற பாகுபாடின்றி மனிதவினத்தை பொதுவாக குறிக்கிறது. இவ்வாறு எழுதுவதன் சில சான்றுகளை காண்போம். (அ) ஆங்கிலவுரையில் is used என்ற தொடர் பலவிடங்களில் வரக்காணலாம். இதை பெரும்பாலான எழுத்தாளர்கள் பயன்படுத்தப்படுகிறது என்றே தமிழில் எழுதுகிறார்கள். பயன்படுகிறது என்றாவது எழுதலாம். பயன்படுத்துகிறோம் என்பது மேலும் சிறப்பு. is used பயன்படுத்தப்படுகிறது பயன்படுகிறது பயன்படுத்துகிறோம் (ஆ) can be understood நம்மால் புரிந்துகொள்ள இயலும் நாம் புரிந்துகொள்ளலாம் (இ) From this relation weight percentage is obtained இந்த உறவிலிருந்து நிறைநூற்றுவீதம் பெறப்படுகின்றது இந்த உறவிலிருந்து நிறைநூற்றுவீதத்தை பெறுகிறோம் (ஈ) It is well-known நன்கறியப்பட்டது நன்கறிகிறோம் (உ) She is well known. அவர் நன்கறியப்படுகிறார். அவரை நன்கறிகிறோம். (ஊ) The formula weight is calculated instead of molecular weight வாய்ப்பாட்டு நிறை மூலக்கூறு நிறைக்குப் பதிலாக கணக்கிடப்படுகிறது. மூலக்கூறு நிறைக்குப் பதிலாக வாய்ப்பாட்டு - நிறையை கணக்கிடுகிறோம். (எ) Acids are known to turn blue litmus paper into red and liberate dihydrogen on reacting with some metals. அமிலங்கள் நீலநிறமான பாசிச்சாயத்தாளை சிவப்புநிறமாக மாற்றுவதையும் சில மாழைகளுடன் வினைபுரிந்து ஈரைதரசனை வெளியிடுவதையும் அறிவோம். (ஏ) Similarly, bases are known to turn red litmus paper blue, taste bitter and feel soapy. இதைப்போல், காரங்கள் சிவப்பு பாசிச்சாயத்தாளை நீலநிறமாக மாற்றுவதையும் காரச்சுவையாயிருப்பதையும் வழவழப்பாயிருப்பதையும் அறிவோம். தமிழியலாக்குவோம் ஒவ்வொரு மொழியிலும் அதற்கேயுரிய சில சொல்வழக்குகள் இருக்கின்றன. தமிழில் அறிவுநூல்களை எழுதுவோர் பெரும்பாலும் ஆங்கிலமூலமே அந்த அறிவை பெறுகின்றனர். இதனால் அவர்கள் தமிழில் எழுதும்போதும் ஆங்கிலவழக்குகளை பயன்படுத்தும் ஒரு போக்கு இருப்பதை காண்கிறோம். இதை தவிர்த்து தமிழின் சொல்வழக்குகளை பயன்படுத்துவதற்கு சில சான்றுகளை கீழே காண்போம். (அ) ஆங்கிலத்திலுள்ள A has B என்ற பாங்கை பலர் A Bயை கொண்டுள்ளது என்று எழுதுகிறார்கள். அதை Bக்கு A உள்ளது என்று எழுதவேண்டும். இந்த சான்றும் அடுத்த இரண்டு சான்றுகளும் இந்த கருத்தை எடுத்துக்காட்டுகின்றன. Viruses have crystalline structure வைரசுகள் படிகக்கட்டமைப்பை கொண்டுள்ளன. வைரசுகளுக்கு படிகக்கட்டமைப்பு உள்ளது. (ஆ) Every experimental measurement has some amount of uncertainty aociated with it because of limitation of the measuring instrument and the skill of the person making the measurement. ஒவ்வொரு சோதனையிலும் அளக்கப்படும் ஒரு அளவீடு அதனுள் நிச்சயமற்ற தன்மையை கொண்டிருக்கும். ஏனெனில், இது நாம் பயன்படுத்தும் கருவியின் அளத்தல் முறையிலுள்ள குறைபாட்டினாலும், அளக்கும் மனிதரின் திறமை குறைபாட்டினாலும் வருவதாகும். ஒவ்வொரு சோதனையளவீட்டிலும் ஓரளவு நிச்சயமின்மை இருக்கிறது. இது நம் அளத்தற்கருவிகளின் செல்வரம்புகளாலும் அளக்கும் மனிதரின் திறமையாலும் எற்படுவது. (இ) The bar has two small lead spheres attached at its ends. பாரை அதன் முனைகளில் இணைக்கப்பட்டுள்ள இரண்டு சிறிய காரீயக்கோளங்களை கொண்டுள்ளது. பாரையின் முனைகளில் இரண்டு சிறிய காரீயக்கோளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. (ஈ) செய்ய, பண்ண ஆகிய வினைகளை தேவையில்லாமல் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். Should dilute நீர்த்தல் செய்ய வேண்டும் நீர்க்கவேண்டும் மதிப்பீடு செய்யும்போது மதிப்பிடும்போது (உ) This law comes from the observation that … … என்று கண்டறிந்ததிலிருந்து இந்த விதி வருகிறது. … என்று கண்டறிந்ததிலிருந்து இந்த விதியை பெறுகிறோம். (ஊ) We make sure that the gases in the two test tubes are of the same color. இரண்டு சோதனைக்குழாய்களிலுமுள்ள வளிமங்கள் ஒரே நிறத்தில் இருக்குமாறு உறுதிசெய்கிறோம். இரண்டு சோதனைக்குழாய்களிலுமுள்ள வளிமங்கள் ஒரே நிறத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்கிறோம். Hydrocarbons are obtained from coal and petroleum. ஐதரசக்கரிமங்கள் நிலக்கரியிலிருந்தும் கன்னெய்-யிலிருந்தும் பெறப்படுகின்றன. ஐதரசக்கரிமங்கள் நிலக்கரியிலிருந்தும் கன்னெய்-யிலிருந்தும் கிடைக்கின்றன. (எ) ஆங்கிலத்தில் A is B என்றிருப்பதை தமிழில் A B என்றே எழுதவேண்டும். A B ஆகும் என்று எழுதக்கூடாது. இது ஆம் பகுதியில் கண்ட வினையிலாமுற்றுத்தொடர். Is என்ற சொல்லுக்கு நிகராக ஒரு தமிழ்ச்சொல் தேவையில்லை என்பதை நோக்குக. சான்றாக, Cow is an animal பசு ஒரு விலங்கு பசு ஒரு விலங்கு ஆகும் என்றாலோ பசு ஒரு விலங்காகும் என்றாலோ இன்றுவரை அது வேறொன்றாயிருந்து நாளை விலங்காகும் என்று பொருள். அதைப்போலவே The color of gra is green புல்லின் நிறம் பச்சை புல்லின் நிறம் பச்சை ஆகும். வினைச்சொல் இல்லாத சொற்றொடர் தமிழில் உண்டு; ஆங்கிலத்தில் இல்லை. வள்ளி ஒரு மாணவி என்பதை வள்ளி ஒரு மாணவியாக இருக்கிறாள் என்று எழுதுவது தமிழில் செயற்கையாக தோன்றுகிறது. ஆனால் பெயரெச்சத்தில் வள்ளி மாணவியாயிருந்த நாள்களில் என்பது இயல்பே. (ஏ) பலநேரங்களில் ஆங்கிலத்தில் A is B என்றிருப்பதை B A என்று முறைமைமாற்றி எழுதுவது தெளிவாகும். Some commonly known examples of salts are sodium chloride, barium sulphat and sodium nitrate. உப்புகளுக்கு நாமறிந்த சில பொதுவான சான்றுகள் ஆவன சோடியம் குளோரைடு, பேரியம் கந்தகேட்டு மற்றும் சோடியம் நைற்றேட்டு. சோடியம் குளோரைடு, பேரியம் கந்தகேட்டு, சோடியம் நைற்றேட்டு ஆகியவை உப்புகளுக்கு நாமறிந்த சில பொதுவான சான்றுகள். (ஐ) வினைமுற்றுகளை உம்மையால் இணைக்கவியலாது. ஒவ்வொரு முழுத்தொடரிலும் ஒரு வினைமுற்று இருக்கவேண்டும் என்று முன்பு கண்டோம். ஆங்கிலத்தில் இரண்டு வினைமுற்றுகளை and என்ற சொல்லால் இணைப்பதுண்டு. He bought and read the book. இதைப்போலவே தமிழில் சிலர் அவன் புத்தகத்தை வாங்கினான் மற்றும் படித்தான் என்று எழுதும் போக்கு இருக்கிறது. தமிழில் இரண்டு வினைமுற்றுகளை உம்மையால் இணைக்கவியலாது. ஒன்றை வினையெச்சமாக எழுதி மற்றதை முதன்மைத்தொடராக்கவேண்டும். அவன் புத்தகத்தை வாங்கி படித்தான் என்பதில் வாங்கி வினையெச்சம். அவன் புத்தகத்தை வாங்கினான்; படித்தான் என்று வெவ்வேறு தொடர்களாக எழுதி அரைப்புள்ளியால் இணைக்கலாம். வேற்றுமைத்தொடர்கள் தொல்லிலக்கணவழக்கை பின்பற்றி, வேற்றுமை-களை தனிப்படலத்தில் உரையாற்றுகிறேன். ஆனால், கொள்கையளவில், வேற்றுமைகளை பெயரடைகளாக-வும் வினையடைகளாகவும் கருதலாம். முதல் வேற்றுமை ஒரு முழுத்தொடரின் எழுவாயை குறிக்கிறது. இரண்டாம்முதல் ஐந்தாம்வரையான வேற்றுமைகளும் ஏழாம் வேற்றுமையும் வினையைப்பற்றிய கூடுதலான விவரங்களை தருவதால் இவற்றை வினையடைகளாக கருதலாம். ஆறாம் வேற்றுமை பெயர்ச்சொல்லின் ஒரு விவரத்தை தருவதால் இதை பெயரடையாக கருதலாம். முதல் வேற்றுமை இதை எழுவாய் வேற்றுமை என்றும் அழைக்கிறோம். செலினா எழுதினாள் என்பதில் செலினா எழுவாய்; எழுவாய்க்கும் பயனிலைக்குமுள்ள தொடர்பே முதல்வேற்றுமை. உருபில்லை முதல் வேற்றுமைக்கு உருபு இல்லை. மற்ற எல்லா வேற்றுமைகளுக்கும் உருபுகள் இருப்பதால், தனியே நிற்கும் ஒரு பெயர்ச்சொல் முதல் வேற்றுமையாகிறது, அதாவது எழுவாயாகிறது. இக்காலத்தில் ஆங்கிலப்பாங்கை பின்பற்றி பின்னொட்டுகளை தனியே எழுதுவதன்மூலம் எல்லா பெயர்ச்சொற்களையும் தனிச்சொற்களாக எழுதும் போக்கு நிலவுகிறது. நான் இங்கு இக்காலம் என்று குறிப்பது பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தொடங்கியிருக்கலாம். இன்று வாழும் அறிஞர்களை குறைகூறுவது என் நோக்கமன்று. குறையைச்சுட்டி அதை களைவதே என் நோக்கம். இவ்வாறு எழுதியபின் எழுவாயை மற்ற பெயர்ச்சொற்களிலிருந்து வேறுபடுத்தவியலாமல் திண்டாடி எழுவாய்க்குப்பின் காற்புள்ளியிடுவதோ ஆனது போன்ற விகுதியை சேர்ப்பதோவான வழிகளை பின்பற்ற முயல்கிறார்கள். இந்த இரண்டு முறைகளாலும் சிக்கல் தீர்வதில்லை; மாறாக வேறு சிக்கல்கள் தோன்றுகின்றன. அதாவது ஒரு பிழையை திருத்தும் முயற்சியில் வேறு பிழைகளை இழைக்கிறார்கள். தொகையுண்டு எழுவாயும் ஒரு வேற்றுமை எனில், மற்ற வேற்றுமைகளைப்போலவே இதுவும் தொகையாக வரலாமா என்ற கேள்வி எழுகிறது. வரலாம் என்பதே விடை. பெரும்பான்மையான சூழமைவுகளில் எழுவாய் முழுத்தொடரின் ஒரு தனியுறுப்பாக நிற்கிறது. ஆனால் சில நேரங்களில் ஒரு எழுவாயின் செயலிலிருந்து மற்றொரு எழுவாயின் அதே செயலை ஒப்பிடும்போது இந்த தொகை எழுகிறது. முருகன்சொல்வதை கேட்பதா, கோட்டாளஞ்-சொல்வதை கேட்பதா! என்று ஒரு எழுத்தாளர் எழுத விரும்பலாம். முருகன் சொல்வதை கேட்பதா, கோட்டாளம் சொல்வதை கேட்பதா! என்று எழுதுவதில் பிழையில்லை. பலநேரங்களில் நிகழ்வதுபோல் தொகையாகவோ விரியாகவோ எழுதும் விருப்புமையை எழுத்தாளருக்கு தமிழ் வழங்குகிறது. நான்பார்த்த பெண்ணை நீ பார்க்கவில்லை; நீபார்த்த பெண்ணை நான்பார்க்கவில்லை. இங்கும் நான் பார்த்த பெண்ணை நீ பார்க்கவில்லை; நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை என்று எழுதும் விருப்புமை இருக்கிறது. கொடியசைந்ததும் காற்று வந்ததா, காற்றுவந்ததும் கொடியசைந்ததா? என்ற சான்றை ஆம் பகுதியில் ஏன்கனவே கண்டோம். காற்புள்ளி எழுவாயுருபா? காற்புள்ளியின் பயன்களை Error: Reference source not foundஆம் பகுதியில் காண்போம். இப்போது மற்ற பெயர்ச்சொற்களை முறையாக எழுதினால் எழுவாய்க்குப்பின் காற்புள்ளி தேவையில்லை என்பதை மட்டும் உணர்வோம். அகமது, கடிதத்தை எழுதினான். அகமது கடிதத்தை எழுதினான். பசு ஒரு விலங்காகும் பிழையானது என்று ஆம் பகுதியில் கண்டதுபோலவே, பசுவானது ஒரு விலங்கு என்பதும் பசுவானது ஒரு விலங்காகும் என்பதும் பிழை. பசுவானது என்றால் அண்மைக்காலத்தில் பசுவாக மாறியது என்று பொருள். விகுதியாக வரும்போது வினைச்சொல்லன்று என்று விவாதிக்கலாம். ஆனால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழில் இல்லாத இவ்வாறான ஒரு விகுதியின் தேவை இன்று ஏன் எழவேண்டும்? எவ்வாறாயினும் துல்லியத்தை வேண்டும் செந்தரக்கிளைமொழியில் இந்த பொருண்மயக்கம் வேண்டாம். புல்லினது நிறம் பச்சை. புல்லினது நிறம், பச்சை. புல்லினது நிறமானது பச்சை. புல்லினது நிறமானது பச்சை ஆகும். ஆனது, ஆகும் என்ற வெற்றுச்சொற்களை பயன்படுத்தவேண்டாம். அவை வாசிப்பில் தடங்கலை ஏற்படுத்துகின்றன. பிரித்தெழுதலே எளிதா? தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி, சொற்களை தேவையில்லாமல் பிரித்தெழுதும் வழக்கம் தமிழரிடையில் புரையோடியிருக்கிறது. Bypa என்பதை by pa என்றும் இதைவிட மோசமாக bye pa என்றும் எழுதுகிறார்கள். Greenhouse effect என்பதை green house effect என்கிறார்கள். இன்னும் bylaws, bookkeeping, இவ்வாறு எத்தனையோ! மகிழ்ச்சி அளிக்கிறது என்றால் மகிழ்ச்சி எதையோ அளிக்கிறது என்று பொருள். மகிழ்ச்சியளிக்கிறது என்றால் எதுவோ மகிழ்ச்சியை அளிக்கிறது என்று பொருள். இரண்டாம் வேற்றுமைத்தொகையாக எழுதினால் வினையுடன் சேர்த்தே எழுதவேண்டும். இவ்வாறே மகிழ்ச்சி தருகிறது என்பதும் மகிழ்ச்சிதருகிறது என்பதும். பிரித்தெழுதுவது வாசிப்பதை எளிதாக்கும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. அது எவ்வளவு தவறானது என்பதை மேற்கண்ட எடுத்துக்காட்டுகளால் நீங்கள் புரிந்துகொண்டிருக்கலாம். சரியான பொருள் தோன்றும்படி புணர்ச்சியால் சேர்த்தெழுதியதை வாசிப்பது கடினம் என்ற கருத்து தமிழை பள்ளிகளில் சரியாக சொல்லிக்கொடுக்காததாலும் ஆங்கிலக்கல்விக்கு முதன்மைவழங்குவதாலும் ஏற்பட்டது. தமிழை எழுத்துக்கூட்டி வாசிக்கும் எளிநிலை மாணவர்களுக்கும் தமிழை அதிகம் பயிலாமல் ஆங்கிலப்பள்ளிகளில் படித்தவர்களுக்கும் தமிழில் வாசிப்பது கடினமாயிருப்பதில் வியப்பில்லை. ஆனால் தமிழில் உயர்நிலைக்கருத்துகளை பரிமாற விரும்பும் நமக்கு எளிதில் பொருள்தோன்றும்படி சொற்களை கூட்டியெழுதுவதே பொருண்மயக்கத்தை தவிர்க்கிறது. எழுவாய்மயக்கம் பிரித்தெழுதுவதால் ஏற்படும் தடுமாற்றத்தை உணர மற்றொரு சான்றாக ஆயர் சேரியிலிருந்து ஓடிவரு.. (ஞானச்செல்வன், 2021) என்ற தொடரை கருதுக. இதை படிக்கத்தொடங்கும்போது ஆயர் எழுவாயாகவும் அவர்கள் சேரியிலிருந்து ஓடிவருவதாகவும் தோன்றுகிறது. ஆனால் ஆயர் சேரியிலிருந்து ஓடிவருகிறாள் … என்று தொடர்கிறது. வினைச்சொல்லின் பெண்பால்விகுதி எழுவாயுடன் இயையாததால் நாம் முதலில் எண்ணியது தவறு என்ற ஐயம் தோன்றுகிறது. ஆயர் சேரியிலிருந்து ஓடிவருகிறாள் கண்ணகி என்று தொடர் முடியும்போதே கண்ணகி எழுவாய் என்பதையும் ஆயர் சேரி ஆயரது சேரியை குறிப்பதையும் நாம் உணர்கிறோம். இதற்கு வரியியலில் பின்னடந்து பொருளுணர்தல் என்று பெயர். அதாவது, ஏற்கனவே வாசித்து பொருளுணர்ந்த பகுதிக்கு மீண்டும் சென்று அதன் பொருளை மாற்றவேண்டியதாகிறது. ஆயர்ச்சேரியிலிருந்து ஓடிவருகிறாள் கண்ணகி என்று சரியாக எழுதும்போது தடுமாற்றம் இல்லாமல் விரைவாக பொருளுணர்கிறோம். கல்லீரல் அழற்சி என்று ஒரு முழுத்தொடர் தொடங்கும்போது அந்த முழுத்தொடரின் எழுவாய் கல்லீரல் என்று முதலில் எதிர்பார்ப்போம். கல்லீரலழற்சி என்பதில் இந்த சிறு தடுமாற்றம் இல்லை. வேறுவிதமாகச்சொன்னால், வாசிப்பவர் இரண்டு சொற்களை வாசித்து பொருள்கூட்டுவதைவிட எழுதுபவரே கூட்டியெழுதிவிடுவது வாசிப்பை எளிதாக்கும். உயர்கருத்துகளை தமிழில் வாசிப்பவர்கள் விரைவாக படித்து பொருளுணர்வதையே விரும்புவார்கள். பிரித்தெழுதியதை பொருளுணராமல் வெறுமனே வாசித்துக்காட்டுவது எளிதாகலாம்; ஆனால் பொருளுணர்வது கடினம். எழுவாய் நிலுவை இரண்டு பெயர்ச்சொற்கள் அடுத்தடுத்து வரும்போதெல்லாம் அவற்றை சேர்க்கவேண்டும் என்பது உண்மையானால் ஆயர் சேரி என்றும் கல்லீரல் அழற்சி என்றும் எழுதலாம்; ஆனால் அது உண்மையன்று என்பதை இப்போது காட்டுகிறேன். பூஞ்சைகள் தூசியங்கள் எனப்படும் பாலுறவிலா வித்துகளாலே இனப்பெருக்குகின்றன என்ற முழுத்தொடரை கருதுக. இங்கு பூஞ்சைகள், தூசியங்கள் ஆகிய இரண்டுமே பெயர்ச்சொற்கள். இவை அடுத்தடுத்து வருகின்றன. இவற்றை சேர்த்து எழுதவில்லை என்பதால் வேற்றுமைத்தொகையன்று. இரண்டும் வெவ்வேறு தொடர்களின் எழுவாய்கள். ஒரு எழுவாயையடுத்து மற்றொரு எழுவாய் வந்தால் முதலெழுவாய் நிலுவையில் இருக்கும்போது மற்றொரு தொடர் தொடங்குகிறது என்று பொருள். இங்கு பூஞ்சைகள் இனப்பெருக்குகின்றன முதன்மைத்தொடர். தூசியங்கள் எனப்படும் பாலுறவிலா வித்துகளாலே என்பது வேற்றுமைத்தொடர். இதை தூசியங்கள் எனப்படும் பாலுறவிலா வித்துகளாலே பூஞ்சைகள் இனப்பெருக்குகின்றன என்று அந்தந்த எழுவாயை அந்தந்த வினைச்சொல்லின் அருகில் எழுதுவது சாத்தியமே. ஆனால் முதன்மைவினைத்தொடரின் எழுவாயை முதலில் எழுதுவதே தமிழின் இயல்பான கட்டமைப்பு. இது எதைப்பற்றி பேசுகிறோம் என்பதை தொடக்கத்திலே தெளிவாக்குகிறது. அகமது நாதசுரம் எனப்படும் ஊதுகருவியையும் முருகன் தவில் எனப்படும் அடிகருவியையும் இசைத்தனர் என்றவாறு வெவ்வேறு எழுவாய்களுடைய இரண்டு முழுத்தொடர்கள் இணைந்து தொடராகும்போது நாதசுரம் எனப்படும் ஊதுகருவியை அகமதும் தவில் எனப்படும் அடிகருவியை முருகனும் இசைத்தனர் என்று எழுதுவது மேலும் செயற்கையாக தோன்றுகிறது. இயற்பெயர்களில் மயக்கம் மேலே சொன்ன வழியுரையை இயற்பெயர்களில் கடைப்பிடிக்க இயலவில்லை. ஏனெனில், இயற்பெயர்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பகுதிகள் இருக்கின்றன. ஒருமனிதருடைய பெயரில் பொதுவாக ஒன்றுக்கு மேற்பட்ட பகுதிகள் இருக்கின்றன. சவகர்லால் நேரு, வல்லபாய் பட்டேல், இந்திரா காந்தி ஆகியவை சான்றுகள். இயற்பெயர்கள் வரும்போது பல சொற்களை சேர்த்து ஒற்றைப்பெயர்ச்சொல்லாக கருதவேண்டியதை ஒரு விதிவிலக்காக நாம் ஏற்கவேண்டும். இதை ஏற்கலாமெனில் மற்றவற்றையும் ஏற்கலாமே என்ற கேள்வி எழுகிறது. இயன்றவரை ஒரு அமைமுறையில் எழுதுவதும் பேசுவதுமே இந்த செந்தரநடையின் நோக்கம். இது பொருண்மயக்கத்தையும் அதனால் ஏற்படும் குழப்பத்தையும் வெகுவாக குறைக்கிறது. சென்னையிலிருந்து வெளியாகும் இந்து ஆங்கில நாளிதழில் ஏப்பிரல், 2022இன் முற்பகுதியில் ஒருநாள் வெளியான செய்தியில் கீழ்க்கண்ட தொடர் இருந்தது. When council for V.K. Sasikala Raja Senthoor Pandian sought to know … இங்கு, எத்தனை மனிதர்களது பெயர்கள் உள்ளன? சசிகலா, இராசா, செந்தூர், பாண்டியன் ஆகிய நான்குபேரா; சசிகலாராசா, செந்தூர்ப்பாண்டியன் ஆகிய இரண்டுபேரா? இருவர் என்று வைத்துக்கொண்டாலும் இருவருள் ஒருவருடைய முழுப்பெயரையாவது அறிந்தோருக்கே இந்தத்தொடரை சரியாக சேர்க்கத்தெரியும். V. K. Sasikala என்பது ஒருவருடைய பெயர் என்பதை அறிந்தால், பிறகு அவருடைய ஆலோசகர் இராசா செந்தூர்ப்பாண்டியன் என்பதை ஊகிக்கலாம். இந்த மயக்கத்தை தவிர்க்க, எழுத்தாளர் When Raja Senthoor Pandian, council for V.K. Sasikala, sought to know … என்று எழுதியிருக்கவேண்டும். இயற்பெயர்களில் இரண்டு பகுதிகளை பிரித்து எழுதவேண்டியதிருப்பினும், காவிரி ஆறு, நயாகரா அருவி, நியூயார்க்கு நகரம் என்றவாறு எழுதவேண்டியதில்லை. இவை காவிரி என்ற ஆறு போன்றவற்றின் தொகைகள். எனவே காவிரியாறு, நயாகராவருவி, நியூயார்க்குநகரம் என்று எழுதுவதே சரியானது. பலநேரங்களில் காவிரி, நயாகரா, நியூயார்க்கு என்று எழுதுவதே போதுமானதாயிருக்கும். எழுவாயற்ற தொடர் ஆங்கிலத்தின் சொற்றொடர்க்கட்டமைப்புக்கும் தமிழ்க்கட்டமைப்புக்குமுள்ள மற்றொரு வேறுபாடு என்னவென்றால், எழுவாய் இல்லாத சொற்றொடர் தமிழில் உண்டு; ஆங்கிலத்தில் இல்லை. I will come tomorrow நாளை வருவேன் நான் நாளை வருவேன் தவறில்லை, ஆனால் தேவையில்லை. இரண்டாம் வேற்றுமை இரண்டாம் வேற்றுமைக்கு ஐ என்ற ஒரு விகுதியே உள்ளது; வேறு விகுதிகள் இல்லை. கடிதத்தை எழுதினான் என்ற சான்றை முன்பே கண்டோம். ஐயின்பின் வல்லினம் இரண்டாம் வேற்றுமையுருபுக்குப்பின் வரும் சொல் வல்லினத்தில் தொடங்கினால் அந்த வல்லினவொற்று மிகுகிறது. சீதையைக்கண்ட அனுமன் என்ற பெயர்த்தொடர் ஒரு சான்று. அனுமன் சீதையை கண்டான் என்பதில் ஒற்று மிகாததை நோக்குக. அதாவது அனுமன் சீதையைக் கண்டான் என்பது இந்த செந்தரத்தின்படி பிழை. இது இக்கால வழக்கத்துடனும் பெரும்பான்மையான தமிழறிஞர்களின் கருத்துடனும் முரண்படுகிறது. இரண்டு சொற்கள் சேர்ந்து ஒற்றைச்சொல்லாக வரும்போதே புணர்ச்சி ஏற்படுகிறது என்பது இந்த செந்தரத்தின் கொள்கை. கடிதத்தை படித்தான் என்ற தொடரை கடிதத்தைப் படித்தான் என்று எழுதுவோர் கடிதத்தை எழுதினான் என்பதை கடிதத்தை யெழுதினான் என்று எழுதவில்லையே! இதிலிருந்தே இக்காலத்தறிஞர்கள் ஒற்றுமிகலுக்கு மிகைமுக்கியம்வழங்குவது விளங்கவில்லையா? நாம் இங்கு பிழையாகக்கருதும் கடிதத்தைப் படித்தான் என்பதையும் கடிதத்தை யெழுதினான் என்பதையும் புறச்சந்தி என்பார்கள் மொழியியலர்கள் (பொற்கோ, 2002). நம் நோக்கில் அகச்சந்தி, புறச்சந்தி என்ற வேறுபாடு இல்லை. எல்லாச்சந்தியும் அகச்சந்தியே. சொற்சந்தி, தொகைச்சந்தி, தொடர்ச்சந்தி என்று பிரிப்பதிலும் பயனில்லை. கடிதத்தை எழுதினான் என்ற வேற்றுமைவிரியை கடிதமெழுதினான் என்ற வேற்றுமைத்தொகையாகவும் எழுதலாம் என்று முன்பு கண்டோம். பின்னுருபுகள் இரண்டாம் வேற்றுமையுருபுக்குப்பின் சில பின்னுருபுகள் வரலாம். போல், விட என்பவை ஒப்புப்பின்னுருபுகள். பற்றி, பொறுத்து, பொறுத்தவரை, அடுத்து போன்ற பின்னுருபுகளும் தொடரலாம். நோக்கி, சுற்றி, விட்டு, அடுத்து, ஒட்டி போன்ற பின்னுருபுகள் திசையுறவை குறிக்கின்றன. அகமதைப்போல் முருகனும் உயரமானவன். அகமதைவிட முருகன் உயரமானவன். சென்னையைநோக்கி பயணித்தான். அவனைச்சுற்றி கூட்டமாக இருந்தது. வகுப்பைவிட்டு போய்விட்டான். தாம்பரம் சென்னையையடுத்து இருக்கிறது. இதைப்பற்றி மேலும் பேசுவோம். இதையொட்டி மேலும் பேசுவோம். பின்னுருபுகளை தனியே எழுதக்கூடாது என்பதை செந்தரமாக கொள்வோம். அதாவது சென்னையை நோக்கி பயணித்தான் வகுப்பை விட்டு போய்விட்டான் என்பவை செந்தரத்துக்கு உடன்படியாதவை. ஒப்புமைகளில் மூன்று தகவுகள் உள்ளன. அவற்றை ஒன்றைப்போல் மற்றொன்று, ஒன்றைவிட மற்றொன்று, ஒன்று மற்ற எல்லாவற்றையும்விட என்ற வாய்ப்பாடுகளால் குறிக்கலாம். வள்ளி செலினாவைப்போல் உயரமானவள். வள்ளி செலினாவைவிட உயரமானவள். வள்ளி மற்ற எல்லாரையும்விட உயரமானவள். தொகையா என்ற கேள்வி பேராசிரியர் அகத்தியலிங்கம் (அகத்தியலிங்கம், 2016) கடிதமெழுதினான் என்ற தொடரை வேற்றுமைத்தொகையாக கருதவில்லை என்பதை இங்கு குறிக்க கடமைப்படுகிறேன். கடிதமா எழுதினான், கடிதமே எழுதினான், எழுதினான் கடிதம் என்று எழுதும் சாத்தியங்கள் இருப்பதால் கடிதம் எழுதினான் என்று தனிச்சொற்களாக எழுதவேண்டும் என்கிறார். ஆனால் இது புரட்டு ஏரணம்! கடிதம் எழுதினான் என்ற பிழையான தொடரின் அடிப்படையில் எழுந்தவையே கடிதமா எழுதினான், கடிதமே எழுதினான், எழுதினான் கடிதம் ஆகியவை. எனவே, இவையும் பிழையானவையே. இவை அகமதா எழுதினான், அதமதே எழுதினான், எழுதினான் அகமது என்பனவற்றுக்கு ஒப்பானவை. விரியாகவோ தொகையாகவோ இல்லாமல் இரண்டுங்கெட்டானாக எழுதுவதால் செயப்படுபொருள் எழுவாயாக மாறும் சாத்தியம் இருக்கிறது. எனவே அதை தவிர்க்கவேண்டும். தொகையில் இடைச்சொற்களை புகுத்தவோ முறைமைமாற்றவோ இயலாது. கடிதத்தையா எழுதினான், கடிதத்தையே எழுதினான், எழுதினான் கடிதத்தை என்றவாறு விரியாக எழுதியே புகுத்தலாம்; முறைமைமாற்றலாம். ஆங்கிலத்தில் Letter wrote Ahmed என்று முறைமை-மாற்ற இயலாது; ஏனெனில் ஆங்கிலத்தில் இரண்டாம்வேற்றுமைக்கான முன்னமைவி இல்லை. தமிழில் முறைமைமாற்றுவது எவ்வாறு சாத்தியமாகிறது? வேற்றுமைகளுக்கு உருபுகள் இருப்பதால்! அவற்றை நீக்கினால் குழப்பம்! கடிதம் எழுதாது; கடிதத்தைத்தான் யாரும் எழுதியிருப்பார்கள்; ஆகவே கடிதம் செயப்படுபொருள் என்று சிலர் விவாதிக்கலாம். இது வரியியலடிப்படையில் பொருளுணரவியலாமல் பொருள்கோளடிப்படையில் பொருளுணர்வது. இது பின்னடந்து பொருளுணரல். அதாவது, எழுதினான் என்ற சொல்லை வாசித்தபின்பே அதற்கு முந்திய சொல்லான கடிதம் செயப்படுபொருள் என்று ஊகிக்கிறோம். மேலும், இந்த விவாதம் கூட்டுமத்தொடர்களில் பொருந்தாமற்போவதற்கு இரண்டு சான்றுகளை முந்திய பகுதியில் கண்டோம். கடிதமெழுதல் ஒரு வினைச்சொல் எனில், அது அகராதியில் இடம்பெறுகிறதா என்ற கேள்வியை சிலர் எழுப்பலாம். இல்லை, இடம்பெறவில்லை! இது தமிழின் சிறப்பியல்பு. கடிதத்தை என்ற சொல்லும் அகராதியில் இடம்பெறவில்லை கடிதம் என்ற சொல்லே இடம்பெறுகிறது. தமிழ் ஒரு ஒட்டுத்திரண்மொழி. அதாவது, எழுத்தாளர் சொல்லுருபன்களை ஒட்டித்திரட்டி தன் தேவைக்கேற்ற சொற்களை இலக்கணத்துக்குட்பட்டு உருவாக்கிக்கொள்கிறார். பெயர்ச்சொல் எழுவாயா செயப்படுபொருளா என்ற மயக்கத்துடன் எழுதுவதன் மற்றொரு சான்று சில பார்த்தான்; பல பார்க்கவில்லை. இதை இரண்டு விதமாக பொருள்கொள்ளலாம். சில பார்த்தன; பல பார்க்கவில்லை என்பதன் பிழைவடிவமாகவோ சிலவற்றை பார்த்தான்; பலவற்றை பார்க்கவில்லை என்பதன் பிழைவடிவமாகவோ கொள்ளலாம். உயர்திணைச்சொல் செயப்படுபொருளாக வரும்போது பெரும்பாலும் வேற்றுமைவிரியாகவே எழுதுகிறோம். அகமது கந்தனை அழைத்தான். அகமது கந்தனழைத்தான். ஒட்டுவினைகள் கண்ணன் பட்டம்விட்டார் என்பதற்கு இணையாக கண்ணன் பட்டத்தை விட்டார் என்ற வேற்றுமைவிரி இல்லை. இங்கு பட்டம்விடுதல் முழுவினைச்சொல்லாக மட்டுமே வருகிறது; விடுதல் என்ற வினையின் வேற்றுமைச்சொல்லாக பட்டம் வருவதில்லை. எனவே, கடிதமெழுதலில் இருப்பதைவிட பட்டம்விடுதலில் செயப்படுபொருளுக்கும் வினைக்குமிடையில் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஓட்டம்பிடித்தான் என்பதில் இந்த தொடர்பு மேலும் நெருங்குகின்றது. இவ்வாறான வினைச்சொற்களை ஒட்டுவினைகள் எனலாம். பேய்பிடிப்பது, பைத்தியம்பிடிப்பது, வேகமெடுப்பது ஒன்றுக்குப்போதல், சிறுநீர்கழித்தல், மலங்கழித்தல், புல்லறுத்தல், நீரருந்தல், உணவுண்ணல், கொட்டடித்தல், குழலூதல், நாற்றுநடல், களையெடுத்தல், பாடம்படித்தல், இசைமுழக்கல், விளக்கேற்றல், கணினிமறுதொடக்கல் போன்றவையும் ஒற்றைச்சொற்களே. சீரழிதல் என்பதை யாரும் சீர் அழிதல் என்று எழுதமாட்டார்கள் என்று நினைக்கிறேன். இவ்வாறு பெயர்வினை என்ற பாங்கில் பல சான்றுகளை தமிழில் காணலாம். மூன்றாம் வேற்றுமை தொல்லிலக்கணம் மூன்றாம் வேற்றுமை என்று குறிக்கும் வேற்றுமைகளை இந்த பகுதியில் காண்போம். பொருளும் உருபும் மூன்றாம் வேற்றுமை என்று தொல்லிலக்கணம் குறிப்பது கருவி, காரணம், பொருண்மம், உடனிகழ்ச்சி என்ற பொருள்களில் வருகிறது. பண்டைக்காலத்தில் ஒடு, இன், ஆன் என்ற உருபுகள் இருந்திருக்கின்றன. இக்காலத்தில் ஆல், உடன் ஆகிய இரண்டும் பயன்படுகின்றன. பேனாவால் எழுதினான் செய்தியை சொன்னதால் மகிழ்ந்தான் நகையை பொன்னால் செய்தான் இராமனுடன் வந்தான் ஆகியவை முறையே கருவி, காரணம், பொருண்மம், உடனிகழ்ச்சி ஆகிவற்றுக்கு சான்றுகள்; ஏனெனில், பேனா எழுதுவதற்கு கருவியாகவும் செய்தி மகிழ்ச்சிக்கு காரணமாகவும் பொன் நகைசெய்யும் பொருண்மமாகவும் இராமன் உடன்வருபவராகவும் செயலாற்றுகின்றன. அதன்மூலம், சாலையின்வழியாக என்பனவற்றில் மூலம், வழியாக ஆகியவை மூன்றாம் வேற்றுமைப்பொருளில் வருகின்றன. அன், இன் சாரியைகள். சிலநேரங்களில் சாலைவழியாக என்று சாரியை இல்லாமலும் இருக்கலாம். சாலைப்பயணம் வேற்றுமைத்தொகை; சாலைவழியான பயணம் வேற்றுமைவிரி. வேற்றுமையுருபை பின்னொட்டாகவே எழுதவேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது. இராமன் உடன் கண்ணன் வந்தான். வட்டார உருபுகள் வட்டார வழக்குகளில் கொண்டு, வைத்து, தொட்டு, காட்டியும், அடுத்து, மூலம் போன்ற வேறு பல உருபுகள் மூன்றாம் வேற்றுமைப்பொருளில் பயன்படலாம். இவற்றை செந்தரத்தில் தவிர்ப்போம். கிழங்கை கத்திகொண்டு வெட்டினான். கிழங்கை கத்திவைத்து வெட்டினான். நீ அழைத்ததைத்தொட்டு வந்தேன். நீ கூப்பிட்டதாங்காட்டியும் வந்தேன். செய்தியின்மூலம் மகிழ்ச்சியடைகிறேன். கிழங்கை கத்தியால் வெட்டினான். நீ அழைத்ததால் வந்தேன். செய்தியால் மகிழ்கிறேன். வட்டாரவழக்கில் எழுதும் தேவை எழும்போதும் (சான்றாக, புனைவிலக்கியத்தில்) பேனா கொண்டு என்றோ பேனா வைத்து என்றோ வேற்றுமையுருபை தனிச்சொல்லாக எழுதுவது பிழை. இடம், கிட்ட என்ற சொற்களை உடன் என்பதனிடத்தில் பயன்படுத்தவேண்டாம். கண்ணனுடன் பேசினேன் என்பதற்குப்பதிலாக கண்ணனிடம் பேசினேன் என்றோ கண்ணன்கிட்ட பேசினேன் என்றோ எழுதவேண்டாம். உடனும் உம்மையும் சில வினைச்சொற்களுக்கு உடன்வேற்றுமையும் மற்றொரு பெயர்ச்சொல்லும் கட்டாயமாகின்றன. இந்த மற்றொரு சொல் எழுவாயாகவோ இரண்டாம் வேற்றுமையாகவோ இருக்கலாம். பாலுடன் நீரை கலந்தான் பாலுடன் நீர் கலந்தது கண்ணனுடன் செலினா விளையாடினாள் பத்துடன் ஐந்தை கூட்டினான் அதாவது, கலத்தல், விளையாடல், கூட்டல் போன்ற வினைகளுக்கு எது, யார் என்பதையும் எதனுடன், யாருடன் என்பதையும் சொல்லவேண்டும். ஒரு பெயர்ச்சொல் மட்டுமே தேவைப்படும் வினைகளுக்கும் உடன் பயன்படலாம். கன்றுடன் பசுவை வாங்கினேன். கண்ணனுடன் செலினாவுக்கும் கொடுத்தேன். இங்கு வினைக்கு ஒரு பெயர்ச்சொல்லே தேவையாயினும், இரண்டு பெயர்களுக்கு அந்த நிகழ்ச்சி நிகழ்வதால் உடன் வந்தது. உடன் என்ற வேற்றுமையுருபு வரும் தொடர்களை உம்மையால் மாற்றி எழுதலாம். செலினாவும் கண்ணனும் வந்தனர். பாலும் நீரும் கலந்தன. கண்ணனும் செலினாவும் விளையாடினர். பத்தையும் ஐந்தையும் கூட்டினான். கன்றையும் பசுவையும் வாங்கினேன். கண்ணனுக்கும் செலினாவுக்கும் கொடுத்தேன். இவ்வாறு எழுதும்போது இவை இணைந்த தொடர்கள். இணைந்த தொடர்களில் இரண்டு கூறுகளும் சமானமானவை. ஒன்று எழுவாயாகவும் மற்றது வேற்றுமைத்தொடராகவும் வரும்போது அவற்றுள் எது முதன்மையாகிறது என்பது சூழமைவைப்பொறுத்தது. எழுத்தாளர் விரும்பும் பொருள் வருமாறு கவனமாக எழுதவேண்டும். இதன் மறுபக்கமாக, சமானமான இரண்டு கூறுகளை உம்மையாலே இணைத்து எழுதவேண்டும். நான்காம் வேற்றுமை இது வினைச்சொல்லுக்கு ஒரு இலக்கை தருகிறது. இதை குறிவேற்றுமை என்றும். கொடைவேற்றுமை என்றும் அழைக்கிறோம். நான்காம் வேற்றுமைக்கு கு என்ற ஒரே உருபு உள்ளது. இது இலக்கு, கொடை, உடைமை, காலம் ஆகிய பொருள்களில் வருகிறது. கண்ணன் வீட்டுக்கு வந்தான். அவனுக்கு தமிழ் தெரியும். கண்ணன் பணத்தை குமரனுக்கு கொடுத்தான். மாட்டுக்கு நான்கு கால்கள். பத்து மணிக்கு வந்தான். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உடைமைப்பொருளில் வருவதுபோல் உறவுப்பொருளிலும் வருகிறது. அவன் எனக்கு மகன். நான்காம் வேற்றுமையுருபின்பின் ஆக, பதிலாக, உரிய என்ற பின்னுருபுகள் வரலாம். எனக்காக இதை செய். பொருளுக்குப்பதிலாக பணத்தைத்தருக. அவனுக்குரிய பொருள். நான்காம் வேற்றுமையுருபின்பின் வல்லொற்று மிகுகிறது. முருகனுக்குக்கொடுத்த பேனா என்பது சான்று. ஆனால் முருகனுக்குப் பேனாவை கொடுத்தேன் என்று எழுதவேண்டாம். ஐந்தாம் வேற்றுமை இது நீங்கல்வேற்றுமை எனப்படுகிறது. தொல்லிலக்கணத்தில் இன் என்ற ஒரே உருபு இருந்திருக்கிறது. அதுவே ஐவிட என்ற பொருளிலும் பயன்பட்டது. வீட்டின் வருகிறேன் - தொன்மை அகமது கண்ணனின் உயரமானவன் - தொன்மை பழைய இலக்கியத்தை புரிந்துகொள்வதற்காக மேற்கண்ட பயன்பாட்டை அறிந்திருப்பது தேவை. ஆனால் இன்றைய உரைநடையில் இன் ஐந்தாம் வேற்றுமையுருபாக பயன்படாதது மட்டுமின்றி, ஆறாம் வேற்றுமையாக பயன்படுகிறது. இது சாரியையாகவும் இருப்பதால் குழப்பத்தை தவிர்க்க ஐந்தாம் வேற்றுமையுருபாக பயன்படுத்தவேண்டாம். சான்றாக, வீட்டின் என்று இக்காலத்தில் எழுதுவது வீட்டினது என்ற ஆறாம் வேற்றுமையையே குறிக்கிறது. இக்காலத்தில் இலிருந்து, இடமிருந்து என்பவை ஐந்தாம் வேற்றுமைக்கு உருபுகளாக வழங்குகின்றன. வீட்டிலிருந்து வருகிறேன். குமரனிடமிருந்து பெற்றேன். கரும்பிலிருந்து சக்கரையை எடுக்கின்றனர். இலிருந்தும், இடமிருந்தும் ஒற்றையுருபுகள். குமரனிடம் இருந்து பெற்றேன் என்பது பிழை. மேற்கண்ட சான்றுகளில் இலிருந்து என்ற உருபு செயலின் தொடக்கத்தை காட்டுகிறது. செயலின் முடிவைக்காட்ட வரை என்ற பின்னுருபும் நான்காம் வேற்றுமையுருபும் பயன்படலாம். இந்த நெடுஞ்சாலை காசுமீரத்திலிருந்து கன்னியாகுமரிவரை ஓடுகிறது. சென்னையிலிருந்து சேலத்துக்கு சென்றான். கால இடைவெளியையும் முதல், வரை என்ற உருபுகளால் குறிக்கிறோம். சான்று திங்கள்முதல் வெள்ளிவரை. இதற்காக தொட்டு, பிடித்து ஆகிய சொற்களை பயன்படுத்தவேண்டாம். திங்கள்தொட்டு வெள்ளிவரை. ஆறாம் வேற்றுமை உருபுகள் இது உடைமை வேற்றுமை எனப்படுகிறது. அது என்பது பண்டையுருபு. இப்போது இன், உடைய ஆகியவையும் பயன்படுகின்றன. பண்டையிலக்கியத்தில் இன் ஐந்தாம் வேற்றுமையுருபாக பயன்பட்டது; சாரியையாகவும் பயன்படுவதை இன்றும் காணலாம். பண்டையிலக்கியத்துடன் தொடர்ச்சியை காக்கவும் குழப்பத்தை தவிர்க்கவும் அவனது பேனா அவனுடைய தம்பி என்றவாறு அஃறிணைக்கு அதுவும் உயர்திணைக்கு உடையவும் பயன்படுத்துவதை விரும்பத்தக்கதாக கருதுவோம். எனினும் சிலவிடங்களில் இன் பயன்படுவதை இக்காலத்தில் தவிர்க்கவியலாது. மாட்டினது வால் என்பதில் இன் சாரியை; அது ஆறாம் வேற்றுமையுருபு. ஆறாம் வேற்றுமைத்தொகையாக அவன்தம்பி, அவன்பேனா என்று எழுதுகிறோம். மாட்டுவால், ஆட்டுப்பால், மான்கொம்பு, என்பேனா, அவள்கை ஆகியவையும் வேற்றுமைத்தொகைகள். வெற்றுச்சொல்லும் ஆறாம் வேற்றுமையுருபாக வருகிறது என்பது சில தமிழறிஞர்களது கூற்று. அதாவது உருபு இல்லாமலும் ஆறாம் வேற்றுமைப்பொருள் வருகிறது (அகத்தியலிங்கம், 2016) என்கிறார்கள். இதை இந்த செந்தரத்தில் ஏற்கவில்லை. அதாவது ஆறாம் வேற்றுமைவிரியை உருபின்றி எழுதவேண்டாம். என் வீடு என்று எழுதாமல் என்வீடு என்று தொகையாகவோ எனது வீடு என்று விரியாகவோ எழுதுவோம். அண்ணன் மகன் என்று எழுதாமல், அண்ணனுடைய மகன் என்றோ அண்ணன்மகன் என்றோ எழுதுவோம். பெயர்ச்சொல்லுறவு ஆறாம் வேற்றுமை ஒரு வகையில் மற்றவற்றிலிருந்து வேறுபடுகிறது. மற்ற வேற்றுமைகள் வினைச்சொல்லுக்கும் பெயர்ச்சொல்லுக்குமிடையான உறவுகளை விவரிக்கும்போது, ஆறாம் வேற்றுமை இரண்டு பெயர்ச்சொற்களுக்கிடையான உறவை விவரிக்கிறது. அதாவது ஒரு பொருள் மற்றொன்றுக்கு உடைமையாவதை குறிக்கிறது. இதனால் இந்த வேற்றுமை அடுக்கி வரலாம். என் மாமாவுடைய மகனின் மனைவியுடைய அக்காவுடைய பெண் என்று விரியாகவும் என் மாமாமகன்மனைவியுடைய அக்காபெண் என்று தொகையாகவும் எழுதலாம். ஆறாம் வேற்றுமை பெயரடைபோலவும் மற்ற வேற்றுமைகள் வினையடைபோலவும் செயலாற்றுவதை நீங்கள் உணரலாம். ஏழாம் வேற்றுமை பொருளும் விகுதிகளும் இதை இடவேற்றுமை, காலவேற்றுமை என்ற இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம். கண் என்பது ஏழாம்வேற்றுமைக்கான தொன்மையுருபு. இல், இடம் ஆகியவை இன்றைய உருபுகளுள் முதன்மையானவை. இடவேற்றுமை வீட்டில் இருக்கிறான் கண்ணனிடம் இருக்கிறது விமானத்தில் வந்தான் அஞ்சலில் வந்தது என்பனவற்றை இடவேற்றுமையாக கருதலாம். மற்ற இடவேற்றுமையுருபுகள் மீது, அருகில், எதிரில், கீழ், மேல், முன், பின், இடையில், தோறும், உள் போன்றவை. இவை உருபுகள்; தனிச்சொற்களல்ல. வீடுதோறும் விளக்கு அவற்றுள் சிறந்தது இருவரிடையில் பேச்சுவார்த்தை நிகழ்ந்தது மூவருக்குள்ளும் பேச்சுவார்த்தை நிகழ்ந்தது ஆகியவையும் ஏழாம் வேற்றுமைத்தொடர்கள். காலவேற்றுமை இல் உருபு காலப்பெயருடனும் சேர்கிறது. காலையில் வந்தான். இது 1954ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. நான் 1954இல் பிறந்தேன். காலப்பெயருக்கான மற்ற வேற்றுமையுருபுகள் இன்போது, குமுன், குப்பின், தோறும் போன்றவை. கூட்டத்தின்போது, கூட்டத்துக்குமுன், கூட்டத்துக்குப்பின், மாதந்தோறும் சான்றுகள். மற்ற வேற்றுமைகளுடன் ஒப்பீடு அவருக்குப்பின் வருகிறான் என்பது ஏழாம் வேற்றுமை எனினும் அவருடன் வருகிறான் என்பது மூன்றாம் வேற்றுமை என்பது நோக்கத்தக்கது. வீட்டில் இருக்கிறான் ஏழாம் வேற்றுமை எனினும் வீட்டிலிருந்து வருகிறான் ஐந்தாம் வேற்றுமை என்பதும் நோக்கத்தக்கது. சாரியைகள் அஃறிணைப்பெயர்களைத்தொடர்ந்து பின், முன், கீழ், மேல் போன்ற சொற்கள் வரும்போது இன் சாரியை தோன்றும். வீட்டின்முன் நிற்கிறான் ஒரு சான்று. மன்னன்முன் நிற்கிறான் என்பதில் அந்த சாரியை வரவில்லை. பின்னுருபுகள் ஏழாம் வேற்றுமையுருபைத்தொடர்ந்து இருக்கும், உள்ள போன்ற பின்னுருபுகள் வரலாம். மதுரையிலிருக்கும் என் மாமா, சென்னையிலுள்ள உயர்நீதிமன்றம் சான்றுகள். மதுரையில் வசிக்கும் என் மாமா என்பதில் வசி ஒரு தனிவினை; எனவே அதை தனிச்சொல்லாக எழுதுகிறோம். ஆனால் மதுரையிலிருக்கும் என்பதில் இரு தனிவினையன்று; அது பின்னுருபு. எனவே அதை பெயர்ச்சொல்லுடன் சேர்த்தே எழுதவேண்டும். அதைப்போலவே நேசன் இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் உயர்கல்விபெற்றார் நேசன் இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகத்தில் உயர்கல்விபெற்றார் என்பதும். எட்டாம் வேற்றுமை இது விளிவேற்றுமை எனப்படுகிறது. இதற்கு தனியாக உருபு இல்லை. விளிப்பொருளை உணர்த்த இடைச்சொற்களே பயன்படுகின்றன. ஏ, இங்கு வா! கண்ணா, இங்கு பார்! அன்பே, ஆருயிரே, இன்னமுதே! ஆகியவை சான்றுகள். இங்கு முறையே ஏ, ஆ, ஏ (மூன்று முறை) ஆகிய இடைச்சொற்கள் விளிவிகுதிகளாக பயன்படுகின்றன. எட்டாம் வேற்றுமைக்கு தொகை இல்லை. வேற்றுமைத்தொகை வேற்றுமையுருபுகள் தொக்கு வருவது வேற்றுமைத்தொகை. சில சான்றுகளை ஆங்காங்கே கண்டோம். மேலும் சில சான்றுகளை காணலாம். தலைவணங்கினான் என்பது தலையால் வணங்கினான் என்பதன் தொகை; இது மூன்றாம் வேற்றுமைத்தொகை. இதைப்போலவே மற்ற வேற்றுமைகளிலும் தொகையாக எழுதலாம், பேசலாம். சென்னைசென்றான் என்பது நான்காம் வேற்றுமைத்தொகை; சென்னைக்கு சென்றான் என்று பொருள். நாடுகடத்தினார்கள் என்ற ஐந்தாம் வேற்றுமைத்தொகையின் விரி நாட்டிலிருந்து கடத்தினார்கள். செயபாண்டியன்மகள் ஆறாம் வேற்றுமைத்தொகை; அதன் விரி செயபாண்டியனுடைய மகள். கண்ணன்கை என்பதும் கண்ணனது கை என்ற பொருளுடைய ஆறாம் வேற்றுத்தொகை. மேசைக்கணினி ஏழாம் வேற்றுமைத்தொகை. தங்கமோதிரம் என்பது தங்கத்தாலான மோதிரம் என விரிகிறது. இங்கு ஆல் என்ற வேற்றுமையுருபுடன் ஆன என்ற உருபும் தொக்கியிருக்கிறது. ஆகவே இதை மூன்றாம் வேற்றுமையுருபும் பயனும் உடன்றொக்க தொகை என்கிறோம். வேற்றுமைத்தொகைகளின் புணர்ச்சிகள் பலவிதமானவை. இவற்றுள் முக்கியமான வல்லொற்று மிகுதலை Error: Reference source not found, Error: Reference source not foundஆம் பகுதிகளில் காணலாம். வேற்றுமைமயக்கம் வேற்றுமைவிரியிலும் தொகையிலும் பொருண்மயக்கம் ஏற்படுவதை காண்போம். உருபுமயக்கம் ஒரு வேற்றுமையுருபு மற்றொரு வேற்றுமையின் பொருளில் வருவதை உருபுமயக்கம் என்கிறோம். மழை பெய்ததில் சகதியாகிவிட்டது விபத்தில் இறந்தான் என்றவாறு இல் என்ற ஏழாம் வேற்றுமையுருபு மூன்றாம்வேற்றுமைப்பொருளிலும் பயன்படுகிறது. மேற்கண்ட தொடர்களின் உண்மையான பொருள் மழை பெய்ததால் சகதியாகிவிட்டது விபத்தால் இறந்தான் என்பவையே. வேற்றுமையுருபுமயக்கத்தை செந்தரமான பொதுக்கிளைமொழியில் தவிர்ப்போம். இதன் மறுபக்கமாக மூன்றாம்வேற்றுமையின் பொருள் தேவையில்லாதவிடங்களில் மூன்றாம் வேற்றுமையுருபை பயன்படுத்துவதும் பிழை. கோபத்துடன் பேசினான் என்பதற்கு கோபமாக பேசினான் என்பதே பொருள் என்பதால் அவ்வாறே எழுதவேண்டும். இது உடனிகழ்வை குறிக்கவில்லை. மழையில் நனைந்தான், கல்லில் சிலை செய்தான், கோபத்தில் பேசினான், காய்ச்சலில் கிடக்கிறான் ஆகியவை தவறு. இவற்றில் உருபுமயக்கம் உள்ளது. மழையால் நனைந்தான், கல்லால் சிலை செய்தான், கோபமாக பேசினான், காய்ச்சலால் கிடக்கிறான் ஆகியவை சரி. தொகைமயக்கம் பொதுவாகவே எல்லாத்தொகைகளும் பொருண்மயக்கத்துக்கு உட்பட்டவை. இங்கு நான் முன்மொழியும் வழியுரைகளின்படி எழுதும்போது பொருண்மயக்கத்தின் சாத்தியம் வெகுவாக குறைகிறது; எனினும், தொகைகளில் பொருண்மயக்கம் உள்ளியல்பானது. நாகர்பலி என்பது நாகர் + பலி என்ற இரு சொற்கள் சேர்ந்தது. இது நாகரை பலியாக கொடுத்தது எனவும் நாகருக்கு கொடுத்த பலி என்றும் பொருள்தரவல்லதால் பொருண்மயக்கம் உள்ளது. தலைப்பட்டை என்பது தலைப்பு + அட்டை என்ற சொற்களிலிருந்தோ தலை + பட்டை என்ற சொற்களிலிருந்தோ வந்திருக்கலாம். எனவே, இது தலைப்புடைய அட்டை என்றோ தலையிலுள்ள பட்டை என்றோ பொருள்படலாம். புலியஞ்சும் யானை என்பதை புலி அஞ்சும் யானை என்ற எழுவாய்த்தொகையாகவோ புலியை அஞ்சும் யானை என்ற இரண்டாம் வேற்றுமைத்தொகையாகவோ பொருளுணரலாம். புலிகொல்யானை என்பதில் ஒரு வேற்றுமைத்தொகையும் ஒரு வினைத்தொகையும் உள்ளன. புலி கொன்ற யானை என்று முதல்வேற்றுமைத்தொகையாகவும் புலியை கொன்ற யானை என்று இரண்டாம் வேற்றுமைத்தொகையாகவும் பொருள்கொள்ளலாம். அதைப்போலவே, பாம்புகடிகீரி என்பது பாம்பு கடித்த கீரி, பாம்பை கடித்த கீரி என்ற பொருள்களை தரலாம். வண்டியேறிய பையன் என்பதை வண்டி ஏறிய பையன் (வண்டி எந்தப்பையன்மீது ஏறியதோ அந்தப்பையன்) என்றும் வண்டியில் ஏறிய பையன் என்றும் பொருள்கொள்ளலாம். இதுபோன்ற பொருண்மயக்கங்கள் வேற்றுமைத்தொகையில் இயல்பானவை. எழுத்தாளர் வருவிக்க விரும்பும் பொருள் தெளிவாக வாசகருக்கு தெரியும்போதே தொகைகளை பயன்படுத்தவேண்டும். இந்த பொருண்மயக்கத்தை தவிர்க்கவேண்டுமெனில், விரியாகவே எழுதவேண்டும். புலி கொல் யானை, புலி கொல்யானை, புலிகொல் யானை ஆகியவை பிழையானவை. இவற்றுக்கு பொருளில்லை. வெற்றிடத்தை (விட்டிசைப்பை) பொருளற்றதாக நாம் கருதக்கூடாது. அதை ஒரு ஒலியனாகவும் உருபனாகவும் பயன்படுத்துகிறோம். காலவகைமயக்கம் ஆறாம் வேற்றுமைக்கு உடைய என்ற உருபை தொல்காப்பியத்திலோ நன்னூலிலோ சொல்லவில்லை. இது பிற்காலத்தில் நடைமுறைக்கு வந்திருக்கவேண்டும். இப்போது கீழ்க்கண்ட இரண்டு தொடர்களையும் ஒப்பிடுக. கந்தனுடைய செவி தோடுடைய செவி - தேவாரம் இவையிரண்டிலும் உடைய என்ற சொல் வெவ்வேறு பொருள்களில் வருவதை நோக்குக. சொல்லப்போனால், நேரெதிரான பொருள்களில் வருகிறது. முதலாவது கந்தனது செவி; ஆனால் இரண்டாவதை தோட்டினது செவி என்ற சொல்லவியலாது. இக்கால வழக்கின்படி தோடுள்ள செவி என்று சொல்லலாம். இவ்வாறு, உடைய என்ற சொல்லின் இக்காலப்பொருள் அதன் தொன்மைப்பொருளிலிருந்து வேறுபடுகிறது. இது ‘வழுவல காலவகையினானே’ என்று நன்னூலார் சொன்னதால் ஏற்பட்ட பொருண்மயக்கம். இதனால் நான் இதை காலவகைமயக்கம் என்கிறேன். வேற்றுமைப்பிழைகள் வேற்றுமைத்தொகைகளிலும் புணர்ச்சியிலும் கவனஞ்செலுத்தாமல் எழுதுவதால் ஏற்படும் பொருண்மயக்கத்துக்கு சில சான்றுகளை காண்போம். இந்த மயக்கங்கள் தவிர்க்கக்கூடியவை. (அ) வானலை ஆற்றல் அணுக்களையும் மூலக்கூறுகளையும் அயனியாக்கும் அளவுக்கு வலியவையல்ல என்று எழுதியதை இரண்டுவிதமாக பொருளுணரலாம். வானலை ஆற்றலணுக்களையும் மூலக்கூறுகளையும் அயனியாக்கும் அளவுக்கு வலியவையல்ல. வானலையாற்றல் அணுக்களையும் மூலக்கூறுகளை-யும் அயனியாக்கும் அளவுக்கு வலியவையல்ல. இங்கே எழுத்தாளர் என்ன சொல்ல வருகிறார் என்பதை ஏற்கனவே அறிந்தவர்கள் இரண்டாவதே சரியானது என்று அறிகிறோம். ஆனால் தெரிந்தவர்களுக்கு ஏன் சொல்லவேண்டும்? தெரியாததை தெரிவிப்பதுதானே மொழியின் வேலை! (ஆ) உடன்பிணைப்பு மின்னணு கோட்பாட்டினது வளர்ச்சி கரிமவேதியியலை அதன் நவீன வடிவத்திற்கு கொண்டுவந்தது என்பதில் உடன்பிணைப்பு, மின்னணு, கோட்பாடு ஆகிய பெயர்ச்சொற்களை எவ்வாறு கூட்டி பொருள்கொள்வது என்று விளங்கவில்லை. எனக்கு வேதியியல் ஏற்கனவே தெரிந்திருப்பதால் உடன்பிணைப்பு எனப்படும் மின்னணுக்கோட்பாட்டை எழுத்தாளர் சொல்கிறார் என்று அறிகிறேன். உடன்பிணைப்பு எனும் மின்னணுக்கோட்பாட்டினது வளர்ச்சி கரிமவேதியியலை அதன் நவீன வடிவத்துக்கு கொண்டுவந்தது. (இ) முருகன் வீட்டுக்கு போனான் என்பதும் முருகன்வீட்டுக்கு போனான் என்பதும் வெவ்வேறு பொருளுடையவை. முந்தையதன் பொருள் முருகன் யாருடைய வீட்டுக்கோ போனான். பிந்தையதில் முருகனுடைய வீட்டுக்கு யாரோ போனான். (ஈ) Conservation of energy – ஆற்றலழிவின்மை என்று வேற்றுமைத்தொகையாகவோ ஆற்றலின் அழிவின்மை என்று வேற்றுமைவிரியாகவோ எழுதலாம். நீண்ட முழுத்தொடர்களில் இந்த கருத்து வரும்போது ஆற்றலழிவின்மை என்று ஒற்றைச்சொல்லாக எழுதுவது பொருளுணர்வை எளிதாக்கும். Conservation of orbital symmetry – பரிதியச்சமச்சீர்மையழிவின்மை என்பது இரட்டை வேற்றுமைத்தொகையாக மீகநீண்ட சொல்லாகிவிடுகிறது. ஒரு தொகையை விரித்து பரிதியச்சமச்சீர்மையினது அழிவின்மை என்று எழுதும் விருப்புமை உள்ளது. (உ) மனித அறிவின் மூலம், தன்மை, முறைகள், வரம்புகள் ஆகியவற்றை ஆராயும் என்று எழுதும்போது, எழுத்தாளர் மனித அறிவின்மூலம் தன்மை, முறைகள், வரம்புகள் ஆகியவற்றை ஆராயும் மனித அறிவினது மூலம், தன்மை, முறைகள், வரம்புகள் ஆகியவற்றை ஆராயும் ஆகிய இரண்டில் எதை சொல்லவருகிறார் என்பது விளங்கவில்லை. (ஊ) Atomic ma என்று ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் அணுவின் நிறை என்றோ அணுநிறை என்றோ எழுதவேண்டும். அணு நிறை என்பது பிழை. ஆங்கிலத்திலும் atom ma என்று எழுதவில்லை; atomic என்பது adjective. ஆங்கிலம் அவ்வாறே வடிவமைந்தது; தமிழ் இவ்வாறே வடிவமைந்தது. இரண்டையும் அறிவது புலமை; இரண்டுக்கும் ஒரே இலக்கணத்தை பின்பற்றுவது மடைமை. இதைப்போலவே வேதி வினை, வேதிவினை, சம நிலை, சமநிலை, அணுக் கோட்பாடு, அணுக்கோட்பாடு, இன்ன பிற. (எ) உமிழொளி அதிர்வெண் ஆற்றல் மட்டங்களின் வேறுபாட்டைப் பொறுத்தது என்று ஒரு எழுத்தாளர் எழுதியிருக்கிறார். இரண்டாம் வேற்றுமையுருபின்பின் தவறாமல் ஒற்றுமிகுத்துவிட்டார்! ஆனால் உமிழொளி, அதிர்வெண், ஆற்றல், மட்டம் ஆகிய நான்கு பெயர்ச்சொற்களுக்கு ஒரு பின்னொட்டு இருக்கிறது. இந்த நான்கு சொற்களையும் எவ்வாறு சேர்த்து பொருள்கூட்டவேண்டும்? உமிழொளியின் அதிர்வெண்ணாற்றல் மட்டங்களின் வேறுபாட்டை பொறுத்தது. உமிழொளியின் அதிர்வெண் ஆற்றன்மட்டங்களின் வேறுபாட்டை பொறுத்தது. உமிழொளி அதிர்வெண்ணாற்றலின் மட்டங்களின் வேறுபாட்டை பொறுத்தது. என்று மூன்றுவிதமாக சேர்க்கலாம். ஒளியியலையும் நிறநிரலியலையும் ஏற்கனவே அறிந்தவர்கள் மட்டுமே இதன் பொருளை உணரவியலும். உமிழொளியதிர்வெண் ஆற்றன்மட்டங்களின் வேறுபாட்டைப்பொறுத்தது என்பது சரியான பொருளை எல்லாருக்கும் தருகிறது. (ஏ) ஒரு கரிமச்சேர்மத்திலுள்ள கரிமத்தை மதிப்பிடும்போது, பொட்டாசியம் ஐதராக்குசைடு கரைசல் கரிம ஈராக்குசைடு உறிஞ்சியாகப் பயன்படுத்துவதன் காரணம் யாது? இது மற்றொரு எழுத்தாளரின் கேள்வி. இதன் பொருள் வேதியியலறிந்த எனக்கே விளங்கவில்லை. ஆகவே ஆங்கிலமூலத்தை பார்த்தேன். Why is a solution of potaium hydroxide used to absorb carbon dioxide evolved during the estimation of carbon present in an organic compound? ஆங்கிலமூலத்தை படித்தபின் தமிழில் எழுத்தாளர் எவ்வாறு எழுதியிருக்கிறார் என்பது ஒருவாறு புரியத்தொடங்குகிறது. அதாவது கரிம ஈராக்குசைடை உறிஞ்ச பொட்டாசிய ஐதராக்குசைடு கரைசல் பயன்படுகிறதாம். பிறகு நான் இவ்வாறு மாற்றி எழுதினேன். ஒரு கரிமச்சேர்மத்திலுள்ள கரிமத்தை மதிப்பிடும்போது, கரிமவீராக்குசைட்டை உறிஞ்ச பொட்டாசியவைதராக்குசைட்டின் கரைசலை பயன்படுத்துவதன் காரணம் யாது? பெயரடைத்தொடர்கள் பெயரடைகள் பெயர்களின் பண்புகளையோ செயல்களையோ விவரிக்கின்றன. பெயரடையின் வகைகள் பெயரடைகளில் கீழ்க்கண்ட நான்கு வகைகள் உள்ளன (சுந்தரம், 2022). (அ) நல்ல, தீய, அந்த, இந்த, எந்த, எல்லா போன்ற தனிச்சொற்கள் பெயரடைகளாக வருவதை தனிப்பெயரடை என்கிறோம். (ஆ) அழகான என்பதுபோல் ஒரு பெயர்ச்சொல் ஆன என்ற பின்னொட்டால் பெயரடையாக மாறிவருவதை கூட்டுப்பெயரடை என்கிறோம். உள்ள என்பது மற்றொரு உருபு. அன்பான தம்பி, அன்புள்ள தம்பி, அன்புத்தம்பி ஆகியவை சான்றுகள். (இ) உயர்ந்த மனிதர், படித்த பையன் போன்றவற்றில் உயர்ந்த, படித்த ஆகிய சொற்கள் பெயரெச்சங்களாயிருப்பினும் இங்கு உயர்வதான செயலையோ படிப்பதான செயலையோ குறிக்காமல் பெயர்களின் பண்புகளையே குறிக்கின்றன. ஆகவே இவற்றை பெயரெச்சவடிவப்பெயரடை என்கிறோம். (ஈ) பெயரெச்சம் பெயரடையாக வரலாம். பெயரெச்சத்தினிடத்தில் பெயரெச்சத்தொடர் இருக்கலாம் என்பதை முன்பே கண்டோம். சான்றாக, பேசிய, ஓடுகிற போன்றவை அந்தந்த வினைகளையே குறிக்கும் பெயரெச்சங்கள். என்ற, என்கிற, எனப்படும் ஆகிய கூற்றுச்சொற்களும் பெயரடைகள். மைக்கேல் என்ற பெயருடைய பையன் மைக்கேல் எனப்படும் பையன் என்பனவற்றில் என்ற கூற்றுப்பெயரடை. இது நேரடிக்கூற்றிலும் வரலாம். “வரமாட்டேன்” என்ற மைக்கேல் வந்திருக்கிறார். “வருவேன்” என்ற பீட்டர் வரவில்லை. பெயரடைகளின்முன் அளவுரைப்பிகள் வரலாம் என்பதை முன்பு கண்டோம். மிகச்சிறிய துகள் என்பதில் மிக அளவுரைப்பி. பெயரெச்சவுறவுகள் பெயரெச்சத்துக்கும் அதை முடிக்கும் பெயர்ச்சொல்லுக்குமிடையில் பலவிதமான உறவுகள் இருக்கலாம் (அகத்தியலிங்கம், 2016). துவைத்த பையன் (எழுவாய்) துவைத்த துணி (ஐ வேற்றுமை) துவைத்த சோப்பு (ஆல் வேற்றுமை) துவைத்த கூலி (கு வேற்றுமை) துவைத்த கல் (இல் வேற்றுமை) துவைத்த வேகம் (வினையடை) துவைத்த நேரம் (காலம்) துவைத்த முறை (வினையடை) துவைத்த துவைப்பு (வினை) சான்றாக, துவைத்த சோப்பு என்பது எந்த சோப்பால் துவைத்தாரோ அது என்று விரிகிறது. இவற்றுள் இரண்டாம் வேற்றுமையை மட்டும் துவைக்கப்பட்ட துணி என்று வெளிப்படையாக செயப்படுபொருளாக எழுதலாம். மற்ற உறவுகளுக்கு இந்த வசதி இல்லை. பொதுவாக, பெயரெச்சத்தில் பொருண்மயக்கம் அதிகம். இந்த பொருண்மயக்கம் சூழமைவாலே நீங்கும். எழுத்தாளர்கள் தாம் சொல்லவிரும்பும் பொருளுடன் வேறு பொருளும் வர வாய்ப்பிருக்கிறதா என்று சிந்தித்து கவனமாக எழுதவேண்டும். நான் பார்த்த கண்ணாடி என்பதை நான் எந்தக்காண்ணாடியால் பார்த்தேனோ அது என்றும் நான் எந்தக்கண்ணாடியை பார்த்தேனோ அது என்றும் பொருள்கொள்ளலாம். பணங்கொடுத்த பையன் என்பதை பணத்தை எந்தப்பையன் கொடுத்தானோ அவன் என்றும் பணத்தை எந்தப்பையனுக்கு கொடுத்தோமோ அவன் என்றும் பொருள்கொள்ளலாம். பெயரெச்சத்தை தனிமுழுத்தொடராக மாற்றலாம். சான்றாக, படித்த பையன் வருகிறான் என்பதை பையன் வருகிறான்; அவன் படித்தவன் என்று இணைந்த தொடராக எழுதலாம். நான் படித்த புத்தகத்தை அவனுக்கு கொடுத்தேன் என்பதை புத்தகத்தை நான் படித்துவிட்டேன்; அதை அவனுக்கு கொடுத்தேன். என்று எழுதலாம். இவ்வாறு விரித்தெழுதும்போது பெயருக்கும் வினைக்குமுள்ள உறவு வெளிப்படையாக தெரிகிறது. முன்னொட்டாக பெயரடை அழகான அகமது என்பதையே அழககமது என்று முன்பு எழுதினோம். இங்கு முந்தையதில் அழகான என்ற தனிச்சொல்லும் பிந்தையதில் அழகு என்ற முன்னொட்டும் இடம்பெற்றன. இதைப்போல் பல அடைச்சொற்களை-யும் அவற்றின் அளவுரைப்பிகளையும் இரண்டுவிதமாக எழுதலாம். சான்றுகள்: கருப்பான பேனா கரும்பேனா, கருப்புப்பேனா சிறிய மரம் சிறுமரம் பெரிய மரம் பெருமரம் மிகவும் சிறிய மிகச்சிறிய ஒரு ஆரஞ்சு ஓராரஞ்சு அந்த மரம் அம்மரம், அந்தமரம் அந்த பெட்டி அப்பெட்டி, அந்தப்பெட்டி புதிய பேனா புதுப்பேனா நல்ல பண்பு நற்பண்பு தீய பண்பு தீப்பண்பு அந்தப் பெட்டி, மிகச் சிறிய, சிறு மரம், ஓர் ஆரஞ்சு என்றவாறு இரண்டுங்கெட்டானாக எழுதவேண்டாம். சிறு, குறு, நுண் ஆகிய மூன்றையும் ஒருபொருட்பலசொல்லாக தமிழறிஞர்கள் கருதுகிறார்கள். ஆங்கிலத்திலும் small, fine, micro போன்றவை இவ்வாறே. ஆனால், அறிவியலிலும் தொழினுட்பத்திலும் வெவ்வேறு அளவுவீச்சுகளை வேறுபடுத்த இந்த சொற்களை பயன்படுத்துகிறோம். அதாவது, சிறியதைவிட குறுமை சிறியதென்றும் நுண்மை அதைவிட சிறியதென்றும் கொள்கிறோம். எனவே, சிறு – small < குறு – fine < நுண் – micro என்ற தொடராக பயன்படுத்துவோம். இவை பண்பியச்சொற்கள். அளவியத்துக்காக மில்லி left(10⁻³right), மைக்குரோ left(10⁻⁶right), நேனோ left(10⁻⁹right) போன்ற சொற்கள் பயன்படுகின்றன. Small particle – சிறுதுகள் Fine particle – குறுந்துகள் Microparticle – நுண்டுகள் ஆங்கிலத்தில் small, fine தனிச்சொற்களாகவும் micro- முன்னொட்டாகவும் இருப்பதை நோக்குக. வேறு சில பெயரடைகளுக்கு முன்னொட்டு வடிவங்கள் இல்லை. அன்றைய, இன்றைய, என்றைய, அவ்வாறான, இவ்வாறான, எவ்வாறான போன்றவை சுட்டுப்பெயரடைகள். அழகான, அன்புள்ள, தகுதிவாய்ந்த போன்றவை கூட்டுப்பெயரடைகள். மேற்கத்திய, கிழக்கத்திய, முற்றைய, பின்னைய, செய்யத்தக்க, செய்யத்தகாத, செய்யவேண்டிய, செய்யவேண்டாத போன்றவையும் பெயரடைகள். இவற்றுக்கெல்லாம் முன்னொட்டுவடிவங்கள் இல்லை. பெயர்ச்சொற்களின் முதலில் பலவிதமான எழுத்துகள் வருவதால், பெயரடைகள் அவற்றுக்கு முன்னொட்டாக வரும்போது, பலவிதமான புணர்ச்சிவிதிகள் செயலாற்றுகின்றன. வல்லினத்தில் தொடங்கும் பெயர்களுக்கு Error: Reference source not foundஆம் பகுதியிலுள்ள விதிகள் முக்கியமானவை. எதிர்மறைப்பெயரெச்சங்கள் பெயரெச்சத்தை எதிர்மறையாக்கலாம். வந்த, வராத, செய்த, செய்யாத, வரக்கூடிய, வரக்கூடாத, செய்யத்தகு, செய்யத்தகாத போன்ற எதிர்ச்சோடிகள் நாம் நன்கறிந்தவை. செல்லாத காசு, கேளாத காதினர், மாறாத பகை ஆகியவை எதிர்மறைப்பெயரெச்சத்தொடர்கள். எதிர்மறைப்பெயரெச்சம் முன்னொட்டாகவும் வரலாம். அவ்வாறு வரும்போது அதன் ஈறு கெடுகிறது, அதாவது மறைகிறது. இதனால் அதை ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம் என்கிறோம். செய்யா, செய்யத்தகா என்பவை வாய்ப்பாடுகள். வாராக்கடன், செல்லாக்காசு, கேளாக்காதினர், மாறாப்பகை, பாடாப்பைங்கிளி, கூவாக்குயில், அடங்காச்சினம் ஆகியவை சான்றுகள். இவற்றில் பெயர்ச்சொல்லுக்கும் முன்னொட்டுக்குமிடையில் வல்லொற்று மிகுவதை நோக்குக. ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சத்தில் வல்லொற்று மிகுகிறது. ஓடாமுயல், கேளாவரம் ஆகியவையும் ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சங்களே. இங்கு பெயர்ச்சொற்கள் வல்லினத்தில் தொடங்காததால் ஒற்றுமிகவில்லை. இந்த செந்தரத்தில் நேர்மறைப்பெயரெச்சங்களை-யும் எதிர்மறைப்பெயரெச்சங்களையும் தனிச்சொற்களாக-வும் ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சங்களை முன்னொட்டுகளாகவும் எழுதுவதை ஒரு மரபேற்பாக கொள்வோம். இதன்படி செய்யத்தகு செயல் செய்யத்தகாத செயல் செய்யத்தகாச்செயல் என்ற வாய்ப்பாட்டை பின்பற்றுவோம். வினைத்தொகை ஒரு பெயர்ச்சொல்லின் முன்னொட்டாக ஒரு வினையடி வந்து பெயரடையைப்போல் செயலாற்றுவது வினைத்தொகை. ஆடுகளம், ஊறுகாய். ஊதுகுழல் ஆகியவை சான்றுகள். ஆடுகளம் என்பதில் களம் என்ற பெயர்ச்சொல்லுக்கு ஆடு என்ற வினையடி அடையாக வருகிறது. இந்த வினைச்சொல் காலங்காட்டவில்லை. எனவே, வினைத்தொகை முக்காலத்துக்கும் பொருந்தும் பண்பை குறிக்கிறது. ஊறுகாய் ஊறிய காய், ஊறுகின்ற காய், ஊறும் காய் என்று விரிவதாக தமிழாசிரியர்கள் அடிக்கடி சொல்லக்கேட்டிருக்கிறோம். வினைத்தொகையில் ஒற்று மிகாது. எனவே ஆட்டுக்களம், ஊற்றுக்காய், ஊத்துக்குழல் தவறு. பண்புத்தொகை பண்புச்சொல்லும் பெயர்ச்சொல்லும் தொகுத்து வருவது பண்புத்தொகை. வெண்மை + கொக்கு = வெண்கொக்கு கருமை + காக்கை = கருங்காக்கை செம்மை + தாமரை = செந்தாமரை நன்மை + நடத்தை = நன்னடத்தை வேகம் + பந்து = வேகப்பந்து பச்சை + கொடி = பச்சைக்கொடி பண்புத்தொகைகளை வெண்மையான கொக்கு, கருமையான காக்கை, வேகமான பந்து என்றவாறு பண்புவிரிகளாகவும் எழுதலாம். பண்புப்பெயர்கள் பண்புத்தொகையில் வரும் முன்னொட்டுகளாக மாறுவது பலவிதங்களில் நடைபெறுகிறது. மேற்கண்ட வெண்மை, கருமை, செம்மை ஆகிய சொற்களில் இறுதியிலுள்ள மை மறைந்தது. வறுமை + அர் = வறியர் என்பதில் மை போனதுடன் இடையிலுள்ள உகரம் இகரமானது. பெருமை + உவகை = பேருவகை என்பதில் ஈறு கெட்டு இடையுகரம் இய்யானதுடன் முதலெழுத்தாகிய பெ நெடிலானது. மேலும் பல. இந்த முன்னொட்டுகளை பழக்கத்தாலே அறியவேண்டும். ஒரு பெயர்ச்சொல்லை அதனது வகையாக விவரிக்க மற்றொரு பெயர்ச்சொல் தொகுத்து வருவது இருபெயரொட்டுப்பண்புத்தொகை. சாரைப்பாம்பு, உழவுத்தொழில், மல்லிகைப்பூ, கோடைக்காலம், சித்திரைத்திங்கள், வெள்ளிக்கிழமை, தமிழ்ப்பாடம் ஆகியவை சான்றுகள். இவற்றை விரியாக எழுதுவதில்லை. உவமைத்தொகை ஒரு பெயர்ச்சொல்லுக்கு மற்றொன்று உவமையாக வருவதையும் விரியாகவும் தொகையாகவும் எழுதலாம். விரியாக வரும்போது போன்ற என்ற சொல் உவமையை குறிக்க பயன்படுகிறது. மலர்போன்ற கண், மலர்க்கண் தாமரைபோன்ற கண், தாமரைக்கண் எல்லாத்தொகைகளிலும் பொருண்மயக்கம் இருக்கிறது. தாமரைக்கண் என்பதில் இரண்டு பெயர்ச்சொற்களே இருக்கின்றன. கோட்பாட்டளவில் இதை தாமரையாலான கண், தாமரையிலுள்ள கண், தாமரையது கண், தாமரையும் கண்ணும் என்றவாறு பலவிதமாக விரிப்பது சாத்தியம். எனவே இதில் கடுமையான பொருண்மயக்கம் உள்ளது. சூழமைவாலே பொருண்மயக்கத்தை நீக்குகிறோம். பொருண்மயக்கம் வெவ்வேறு வேற்றுமைகளிடையில் மட்டுமல்லாமல், வேற்றுமைக்கும் மற்ற தொகைகளுக்குமிடையிலும் இருக்கிறது. தொகையாக எழுதவேண்டியது கட்டாயமில்லை என்பதும் விரியாக எழுதும் விருப்புமை எழுத்தாளருக்கு எப்போதும் இருக்கிறது என்பதும் மீண்டும் நினைவுகூரத்தக்கவை. எண்ணுப்பெயரடைகள் பெயர்ச்சொல்லின்முன் வரும் இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து முதலியவை எண்ணுப்பெயரடைகள். இவை ஒரு, இரு, மு, நான், ஐ, அறு முதலிய முன்னொட்டுகளாகவும் வரலாம். ஒன்றாம், இரண்டாம், மூன்றாம் முதலியவையும் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது முதலியவையும் முறைமைப்பெயரடைகள். ஒருவர், இருவர், இரண்டுபேர், மூவர், மூன்றுபேர், அறுவர், ஆறுபேர், எண்மர், எட்டுபேர், பதின்மர், பத்துபேர் இத்தனைபேர், அத்தனைபேர், எத்தனைபேர் என்பவையும் பெயரடைத்தொடர்கள். எண்ணுப்பெயர்களின் புணர்ச்சிகளை Error: Reference source not foundஆம் பகுதியில் காண்க. பெயரடையடுக்கல் பெயரடைக்கும் பெயர்ச்சொல்லுக்குமிடையில் வேற்றுமையுருபுகள், உம்மை போன்ற பின்னொட்டுகள் வரவியலாது. அவை பெயர்ச்சொல்லைத்தொடர்ந்தே வரவேண்டும். ஆங்கிலத்தில் Tall and beautiful Everest போன்ற கட்டமைப்பு வெகுவாக காணப்படுவதால் தமிழிலும் உயரமான மற்றும் அழகான எவரசுட்டு என்று சிலர் எழுதுகிறார்கள். இது தவறு. உயரமான என்ற பெயரடையைத்தொடர்ந்து ஒரு பெயர்ச்சொல்லோ மற்றொரு பெயரடையோ வரலாம்; மற்றும், உம்மை, ஆ, ஏ போன்ற இடைச்சொற்கள் வரலாகாது. உயரமான அழகான எவரெசுட்டு என்றோ உயரமானதும் அழகானதுமான எவரெசுட்டு என்று மாற்றியோ எழுதலாம். இங்கு, உயரமானது, அழகானது ஆகியவை பெயர்த்தொடர்களாக மாறிவிட்டன. பிறகு இரண்டையும் உம்மையால் சேர்த்து ஆன என்ற பின்னொட்டு பெயரடையாக்குகிறது. Tall and handsome boy என்பது உயரமானவனும் அழகானவனுமான பையன் என்றாவதை நோக்குக. உயரமான அழகான பையன் என்பதும் சரி. பெரிய, பழுத்த, இனிப்பான மாம்பழங்கள் பெரிய, பழுத்த இனிப்புமாம்பழங்கள் தனிச்சொற்களான பெயரடைகள் அடுக்கிவரும்போது காற்புள்ளி தேவையில்லை; எனினும், பிழையில்லை. இவற்றுளொன்று பெயரெச்சத்தொடராயிருக்கும்போது காற்புள்ளி கட்டாயமாகலாம். பெரிய, வேரில் பழுத்த, சுவையான பலாப்பழம் காற்புள்ளி இல்லாமல் எழுதுவது வேறு பொருளை தருகிறது. பெரிய வேரில் பழுத்த சுவையான பலாப்பழம் என்றால் வேரே பெரியது என்றாகிறது. பொதுவாக பெயரெச்சத்தொடர்கள் அடுக்கிவருவதில்லை. பானைபோல் பெரிய, வேரில் பழுத்த, தேன்போல் சுவையான பலாப்பழம் என்ற கருத்தை சொல்ல விரும்பினால், பானைபோல் பெரியதும் வேரில் பழுத்ததும் தேன்போல் சுவையானதுமான பலாப்பழம் என்பது சிறப்பு. காலத்தால் இயைபுமை பெயரெச்சத்தொடர் முதன்மைத்தொடருடன் சரியான காலவுறவில் இருக்கவேண்டும். வந்த பையன் இருந்தான் வந்த பையன் இருக்கிறான் வருகின்ற பையன் இருப்பான் வரும் பையன் இருப்பான் அழுத பிள்ளை பால்குடிக்கும் என்பவை எது முதலில் நிகழ்ந்தது எது பிறகு நிகழ்ந்தது என்பதை தெளிவாக காட்டுகின்றன. வருகிற பையன் இருந்தான் அழுகிற பிள்ளை பால்குடித்தது என்பவை பிழையாயிருக்க வாய்ப்புள்ளது. ஆனால் இப்போது வருகிற பையன் நேற்று அங்கு இருந்தான் இப்போது அழுகிற பிள்ளை சற்றுமுன்பே பால்குடித்தது போன்ற சூழமைவுகளில் இவை சரியாகின்றன. எனினும் எழுத்தாளர் சொல்லவிரும்புவது இதுதானா என்ற கவனத்துடன் எழுதவேண்டும். பொருண்மயக்கம் (அ) பெயரெச்சத்தில் இருவகைகள் உள்ளன. கிழக்கில் உதிக்கும் கதிரவன் மேற்கில் அடைகிறது என்பதில் கிழக்கில் உதிப்பது கதிரவனின் இயல்பு என்பதை நாம் அறிவோம்; ஏனெனில் கிழக்கில் உதிக்காத கதிரவன் என்று ஒன்றுமில்லை. இதன் மறுபக்கமாக, ஓட்டப்பந்தயத்தில் வென்ற பையன் என்பது வென்ற பையனை வெல்லாத பையன்களிலிருந்து பிரித்துக்காட்டுகிறது. இங்கெல்லாம் நம் உகல அறிவால் பொருண்மயக்கத்தை நீக்கிக்கொள்கிறோம். ஆனால் நன்றாக உழைக்கும் சீனர்கள் முன்னேறுகிறார்கள் என்பதில் நன்றாக உழைப்பது சீனர்களின் பண்பு என்று எழுத்தாளர் சொல்கிறாரா, நன்றாக உழைக்காத சீனர்கள் முன்னேறவில்லை என்பதிலிருந்து இதை வேறுபடுத்த விரும்புகிறாரா என்ற பொருண்மயக்கம் உள்ளது. (ஆ) சிறந்த மாணவர்ச்சங்கம் என்பதில் மாணவர்ச்சங்கம் வேற்றுமைத்தொகை; மாணவர்களின் சங்கம் என விரிகிறது. இங்கு சிறந்த என்ற அடைச்சொல் சங்கத்துக்கே உரியது. மாணவர்கள் சிறந்தவர்கள் என்ற பொருளில் எழுதவேண்டுமெனில் சிறந்த மாணவர்களின் சங்கம் என்று எழுதவேண்டும். சிறந்த சங்கம் என்ற பொருளில் வேற்றுமைவிரியாக எழுதவேண்டுமெனில் மாணவர்களின் சிறந்த சங்கம் என்று எழுதவேண்டும். சிறந்த மாணவர் சங்கம் என்பதில் எழுவதாக அகத்தியலிங்கம் (அகத்தியலிங்கம், 2016) சொல்லும் மயக்கம் இங்கு சொன்ன வழியுரைகளின்படி எழுதும்போது எழவில்லை. இதைப்போலவே, பழைய மாணவர்விடுதியும் பழைய மாணவர்களின் விடுதியும் (பொற்கோ, 2002). (இ) The Copernican model which allowed only circular orbits … வட்டச்சுற்றுப்பாதைகளை மட்டுமே அனுமதித்த கோப்பர்நிக்கசின் ஒப்புரு … இங்கு, கோப்பர்நிக்கசின் ஒப்புரு என்ற பெயர்த்தொடரை வட்டச்சுற்றுப்பாதைகளை மட்டுமே அனுமதித்த என்ற பெயரெச்சத்தால் விவரிப்பது ஆசிரியரின் நோக்கம். ஆனால், அனுமதித்த என்ற பெயரெச்சம் கோப்பர்நிக்கசுக்குரியதா ஒப்புருவுக்குரியதா என்ற ஒரு பெருண்மயக்கமும் இருக்கிறது. எழுதியபடி கோப்பர்நிக்கசுக்கே உரியது. இந்த பொருளுணர்வை தவிர்க்கவேண்டுமெனில், வட்டச்சுற்றுப்பாதைகளை மட்டுமே அனுமதித்த கோப்பர்நிக்கசொப்புரு … என்று எழுதவேண்டும். (ஈ) கூட்டும முழுத்தொடர்களில் பெயரெச்சத்தால் எழும் பொருண்மயக்கங்களை காண்போம். குமரன் துவைத்த துணியை உடுத்தினான் என்ற முழுத்தொடரை கருதுக. இதை குமரன் யாரோ துவைத்த துணியை உடுத்தினான் எவனோ குமரன் துவைத்த துணியை உடுத்தினான் என்ற இரண்டுவிதமாக பொருள்கொள்ளலாம். இங்கு ஒரு எழுவாயும் இரண்டு வினைச்சொற்களும் வருவதால் மயக்கம் ஏற்படுகிறது. இன்னொரு எழுவாயையும் சேர்ப்பதால் இந்த பொருண்மயக்கத்தை நீக்கலாம். துவைத்த துணியை குமரன் உடுத்தினான் என்று எழுவாயை அதன் வினைக்கருகில் எழுதுவது இந்த சூழமைவில் இந்த சிக்கலை தீர்க்கும். ஆனால், இந்த அணுகுமுறை பொதுவான தீர்வாகாது என்பதை ஆம் பகுதியில் கண்டோம். (உ) எழுவாயற்ற பெயரெச்சம் பெயரடையாக வரும்போது அந்த பெயரெச்சத்தை தனிமுழுத்தொடராக எழுதுவது பொருளுணர்வை எளிதாக்கும். சென்னைக்கு செல்ல விரும்பிய கந்தன் நின்றிருந்த பேருந்தில் ஏறினான் பின்னடந்து பொருள்கொள்வது தேவையானதால் இதை பிழையானதாக குறிக்கிறேன். சென்னைக்கு செல்ல விரும்பிய கந்தன் நின்றிருந்த பேருந்து என்பது ஒரு நல்வடிவமான பெயர்த்தொடர். இது கந்தன் பேருந்தில் நின்றிருந்தான் என்று பொருளுடையது. ஆனால் ஏறினான் என்ற மற்றொரு வினை வரும்போதே நின்றிருத்தல் பேருந்துக்கும் ஏறுதல் கந்தனுக்குமுரிய வினைகள் என்று மறுபொருளுணர்கிறோம். எழுத்தாளர் பின்னடத்தலை தவிர்க்க விரும்பினால், கந்தன் சென்னைக்கு செல்ல விரும்பினான்; நின்றிருந்த பேருந்தில் ஏறினான் என்று பெயரெச்சமாயிருந்ததை தனிமுழுத்தொடராக எழுதலாம். (ஊ) மேற்சொன்ன கருத்துக்கு மற்றொரு சான்று: This law was a deviation from the Copernican model which allowed only circular paths. இந்த விதி வட்டப்பாதைகளை மட்டுமே அனுமதித்த கோப்பர்நிக்கசொப்புருவிலிருந்து விலகுகிறது. விதி வட்டப்பாதைகளை மட்டுமே அனுமதித்தது என்று முதலில் பொருளுணர்ந்து, பிறகு அனுமதித்த என்ற வினையைச்சத்தை படிக்கும்போது மற்றொரு பெயர்ச்சொல்லை எதிர்நோக்குகிறோம். இதன்பிறகே வட்டப்பாதைகளை என்பது வரும் பெயர்ச்சொல்லுக்கான வேற்றுமைத்தொடர் என்பதை அறிகிறோம். இந்த விதி கோப்பர்நிக்கசொப்புருவிலிருந்து விலகுகிறது; ஏனெனில், அந்த ஒப்புரு வட்டப்பாதைகளை மட்டுமே அனுமதித்தது. (எ) இதுவும் அது. பாலுறவிலாவினப்பெருக்கம் இயக்கவித்துப்பைகளில் உற்பத்தியாவதும் கசையிழையுடையதுமான இயக்கவித்து-களால் நடைபெறுகிறது. முதலில் இனப்பெருக்கமே வித்துப்பைகளில் உற்பத்தியாவது என்று பொருள்கொள்கிறோம். இறுதியில் நடைபெறுகிறது என்பதை படிக்கும்போது நம் எண்ணத்தை மாற்றவேண்டியதாகிறது. பாலுறவிலாவினப்பெருக்கம் இயக்கவித்துகளால் நடைபெறுகிறது. இயக்கவித்துப்பைகளில் உருவாகும் இந்த இயக்கவித்துகள் கசையிழையுடையவை. வினையடைத்தொடர்கள் வினையடையின் பொருள் வினையடையை துல்லியமாக வரையறுப்பது நம் நோக்கமன்று. பொதுவாக, ஒரு வினையை எழுவாய் எவ்வாறு, எப்போது, எங்கு, எந்த முறைமையில், எந்த அளவுக்கு செய்தது போன்ற கேள்விகளுக்கு விடையளிப்பவை வினையடைகள் எனலாம். ஆனால் இந்த விடைகளை வேற்றுமைகளும் அளிக்கின்றன. நாம் வேற்றுமைகளை வினையடையில் சேர்க்கவில்லை. வினையடையின் பங்கை வினையெச்சம் வகிக்கலாம் என்பதால் வினையெச்சத்தை வினையடையில் சேர்க்கிறோம். நன்கு செய்தான் – எவ்வாறு நேற்று வந்தான் – எப்போது இங்கு வந்தான் – எங்கு இரண்டாவதாக வந்தான் – எந்த முறைமையில் அரைகுறையாக உண்டான் – எந்த அளவுக்கு ஆகியவை ஒவ்வொரு வகைக்கும் ஒரு சான்றை தருகின்றன. மிகைப்பிகள் வினையடைக்கும் பெயரடைக்கும் ஒரு தொடர்பு உள்ளது. இனிமையாக பாடுதல் என்ற வினை இனிமையான பாடல் என்ற பெயருடன் தொடர்புடையதால், அவன் மிகவும் இனிமையாக பாடினான் இது மிகவும் இனிமையான பாடல் என்றவாறு இரண்டுக்கும் ஒரேவிதமான மிகைப்பிகள் வரலாம். எவ்வாறு என்ற வினையடைகள் எழுவாய் வினையை எவ்வாறு செய்கிறது என்பதை நன்கு, நன்றாக, அழகாக, மோசமாக, விரைவாக, மெதுவாக, ஒழுங்காக, ஒழுங்கின்றி, அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு போன்ற வினையடைகள் விவரிக்கின்றன. ஒரு வினையடையின் இடத்தில் செய்து, செய்ய என்ற வாய்ப்பாடுகளுள்ள வினையெச்சங்கள் வந்து கூட்டும முழுத்தொடர்களை உருவாக்கலாம். அகமது கடிதத்தை எழுதி அனுப்பினான். அகமது கடிதமெழுத விரும்பினான். செய்தபடி, செய்யுமாறு என்ற வாய்ப்பாடுடைய சொற்களும் இவ்வாறே பயன்படலாம். நேற்று சொன்னபடி இன்று செய்தான். செலினா கந்தனை பள்ளிக்குச்செல்லுமாறு தூண்டினாள். எப்போது என்ற வினையடைகள் நேற்று, இன்று, நாளை, முன்பு, பின்பு, நெடுங்காலமாக, எப்போது போன்றவை காலஞ்சார்ந்த வினையடைகள். செய்தபோது, செய்கிறபோது, செய்யும்போது போன்ற வாய்ப்பாடுகள் காலஞ்சார்ந்த வினையெச்சங்கள். இவற்றின் பொருளிலே செய்கையில் என்ற காலங்காட்டாத வாய்ப்பாடும் ஒரு வட்டாரவழக்கில் இருப்பதாக தோன்றுகிறது. இதை இந்த செந்தரத்தில் பயன்படுத்தவேண்டாம். செய்தபின், செய்யும்முன், செய்தவுடன், செய்யும்வரை போன்றவையும் காலஞ்சார் வினையெச்சங்களே. கண்ணன் மழை பெய்தபோது வந்தான். நீர் அமிலம் இருக்கிறபோது காரமாகவும் காரம் இருக்கிறபோது அமிலமாகவும் வினையாற்றுகிறது. வள்ளி வந்தவுடன் நாம் உண்போம். எங்கு என்ற வினையடைகள் அங்கு, இங்கு, எங்கு போன்றவை இடஞ்சார்ந்த வினையடைகள். நான்காம் வேற்றுமைத்தொடரும் இதைப்போலவே செயலாற்றுவதை நோக்குக. பீட்டர் எங்கு போனான்? பீட்டர் வீட்டுக்கு போனான். இடஞ்சார்ந்த வினையடைகளின்பின் வல்லொற்று மிகுவதை Error: Reference source not foundஆம் பகுதியில் காண்போம். மற்ற வினையடைகள் நிபந்தனையையும் வினையடையாக கருதலாம். ஆல் என்ற பின்னொட்டு நிபந்தனையை குறிக்கிறது. பீட்டர் வந்தால் நான் வருவேன். ஆல் என்பது மூன்றாம் வேற்றுமையுருபாக வருவதை முன்பு கண்டோம். இரண்டுக்கும் வேறுபாடு காண்பது எளிது. பெயர்ச்சொல்லின் பின்னொட்டாக வரும்போது வேற்றுமையுருபு; வினைச்சொல்லின் பின்னொட்டாக வரும்போது வினையடை. எனில் என்ற சொல்லும் நிபந்தனையை காட்டுகிறது. x இரட்டைப்படை எனில், அது ஒரு பகுவெண். என்று என்ற சொல்லால் அறியும் கூற்றுத்தொடர் மற்றொரு வகையான வினையடை. “நாளை வருவேன்” என்று சொன்னார். இதனால் வெள்ளி ஒரு உலோகம் என்று அறிகிறோம். எதிர்மறை வினையடை சில எவ்வாறு என்ற வினையடைகளுக்கு எதிர்மறை வினையடைகள் உள்ளன. மற்றவற்றை இன்றி என்ற பின்னொட்டை சேர்த்து எதிர்மறையாக்கலாம். எந்த வினையெச்சத்தையும் அதிலுள்ள வினைச்சொல்லை எதிர்மறையாக்குவதன்மூலம் எதிர்மறையாக்கலாம். இயைபுமை வினையெச்சத்துக்கும் அதை முடிக்கும் வினைமுற்றுக்கும் பொது எழுவாய் இருக்கலாம். பீட்டர் பள்ளிக்கு வந்து தேர்வெழுதினான். வெவ்வேறு எழுவாய்களும் இருக்கலாம். மழை பெய்தால் குளம் நிறையும். வினையெச்சங்கள் அடுக்கி வந்து அவற்றை ஒரு வினைப்பெயர் முடிக்கும்போது அந்த வினைப்பெயரின் வினைச்சொல் ஒருமையாகவேண்டும். அவன் அங்கு வந்து இவனைக்கண்டு பேசி உடனே புறப்பட்டுச்சென்றது உணரத்தக்கது. அவன் அங்கு வந்து இவனைக்கண்டு பேசி உடனே புறப்பட்டுச்சென்றது உணரத்தக்கவை. இங்கு, உணர என்ற வினைக்கு புறப்பட்டுச்சென்றது என்பதே எழுவாய்; அதனால் அவை எண்ணில் இயைகின்றன. வந்து, பேசி ஆகியவை புறப்பட்டுச்செல் என்ற வினையின் வினையடைகள். சிறிய முழுத்தொடரில் காற்புள்ளி தேவையில்லை. குமரன், கடைக்குச்சென்று, பாலை வாங்கினான். குமரன் கடைக்குச்சென்று பாலை வாங்கினான். எச்சங்களுள் எச்சங்கள் வரும் நீண்ட கூட்டுத்தொடர்களில் தகுந்த இடங்களில் காற்புள்ளியிடுவது உரையை தெளிவாக்கலாம். குமரன் தாம்பரத்திலுள்ள கந்தன்வீட்டுக்கு வந்து, அவன்மகனான முருகனைக்கண்டு, இந்தியாவின் பொருளாதராத்தையும் உலகவொற்றுமையையும்பற்றி பேசிவிட்டு, கருக்கலுக்குமுன்பு புறப்பட்டுச்சென்றான். வினையெச்சத்தொடரில் ஒற்றுமிகல் தமிழை கற்கப்போகிறான் என்பதில் கற்க + போ = கற்கப்போ என்றவாறு ஒற்று மிகுந்தது. தமிழை என்பது இரண்டாம் வேற்றுமை. இதை தொகையாக தமிழ்கற்கப்போகிறான் என்றும் எழுதலாம். செய்ய எனும் வினையெச்சத்தை பயன்படுத்தி இங்கு தமிழ்கற்க பயிற்சியளிக்கப்படும் என்ற கூட்டுத்தொடரை எழுதலாம். இது வாசித்து பொருளுணர தெளிவாயிருக்கிறது. ஆனால் புணர்ச்சிவிதிகளை கண்மூடித்தனமாக கடைப்பிடித்து இங்கு தமிழ் கற்கப் பயிற்சி அளிக்கப்படும் என்று எழுதுவது இந்த செந்தரத்தின்படி பிழை. தமிழ்கற்றல் ஒரு வினை; பயிற்சியளித்தல் மற்றொரு வினை. தமிழ்கற்க என்பது செய்யவெனும் வாய்ப்பாட்டு வினையெச்சம். வினையெச்சத்தையும் வினைச்சொல்லையும் தனித்தனியாகவே எழுதவேண்டும் என்ற முறைப்படி இடையில் ஒற்றுமிகவில்லை. புணர்ச்சி பொருளின் அடிப்படையிலானது. இடைச்சொற்கள் இடைச்சொற்கள் பலவகையானவை. இவை தனிச்சொற்களாகவோ பின்னொட்டுகளாகவோ இருக்கலாம். உண்மையில் பெயர்ச்சொல்லோ வினைச்சொல்லோ பெயரடையோ வினையடையோ அல்லாத எந்தச்சொல்லும் இடைச்சொல்லே. இந்த வரையறையின்படி வேற்றுமையுருபுகளும் சாரியைகளும் இடைச்சொற்களே. இங்கு ஏகாரம், உம்மை, ஓகாரம் ஆகிய மூன்று இடைச்சொற்களைப்பற்றியும் கலைத்துறைகளில் அதிகம் பயன்படும் வேறு சிலவற்றைப்பற்றியும் உரையளிக்கிறேன். தான், ஏ, ஆ போன்ற இடைச்சொற்கள் அவரா இங்கு நேற்று வந்தார்? அவர் இங்கா நேற்று வந்தார்? அவர் இங்கு நேற்றா வந்தார்? என்றவாறு ஒரு முழுத்தொடரின் வெவ்வேறு இடங்களில் வரக்கூடியவை என்பதால் இவற்றை மிதவையொட்டுகள் என்கிறார்கள் (பொற்கோ, 2002). ஏகாரம் பொருள் ஏகாரம் முழுத்தொடரின் ஒரு சொல்லுக்கு முக்கியத்துவமளிக்க பயன்படுகிறது. கண்ணனே வந்தான் என்பது வேறு யாருமன்று என்பதை உள்ளுரைக்கிறது. காலையிலே வந்தேன் என்பது நான் வந்த நேரம் காலை என்பதை உறுதியாக உரைக்கிறது. பேனாவாலே எழுதினேன் என்பது வேறு எதாலும் எழுதவில்லை என்கிறது. இவ்வாறு, ஏகாரம் எழுவாயுடனும் வேற்றுமையுடனும் வருவதை காண்கிறோம். அடைகளுடனும் வரலாம். விரைவாகவே வந்தேன்; எனினும் பிந்திவிட்டது. தான் என்ற பின்னொட்டை தவிர்ப்போம் இக்காலப்பேச்சில் தான், மட்டும் ஆகிய சொற்கள் வரும் பெரும்பான்மையான இடங்களில் ஏகாரத்தை பயன்படுத்தலாம் என்பதால் அவற்றை தவிர்ப்போம். கண்ணன்தான் வந்தான் கண்ணனே வந்தான் காலையில்தான் வந்தேன் காலையிலே வந்தேன் பேனாவால்தான் எழுதினேன் பேனாவாலே எழுதினேன் தான் என்ற சொல்லுக்கு வேறு பொருள் இருப்பதாலும் அது இடைச்சொல்லாக தேவைப்படும் பெரும்பான்மையான இடங்களில் ஏவை பயன்படுத்தலாம் என்பதாலும் அவர்தான் வந்தார் என்பதை இயன்றவரை தவிர்த்து அவரே வந்தார் என்போம். ஆனால், நான் நேற்றே வந்துவிட்டேன்; அவன் இன்றுதான் வந்தான் என்பதில் தான் என்ற இடைச்சொல்லை தவிர்க்கவியலாது. அவர் இங்குதான் வந்தார் என்பதை அவர் இங்கே வந்தார் என்று சொல்லலாம். இங்கேயே என்று சொல்லவேண்டியதில்லை என்பதை அடுத்த பகுதியில் காண்போம். அதைப்போலவே, உங்களுக்குத்தான் – உங்களுக்கே உங்களுக்காகத்தான் – உங்களுக்காகவே உங்களைப்போலத்தான் – உங்களைப்போலவே உங்களைத்தான் – உங்களையே பாட்டுதான் – பாட்டே கருத்துதான் – கருத்தே கருப்புதான் – கருப்பே அதனால்தான் – அதனாலே என்று ஏகாரத்தை பயன்படுத்தி எழுதலாம். இவ்வாறு எழுதுவது தொன்றமிழுடன் இயைகிறது. மேலும், அதனால்தான் என்பது லகரவொற்றைத்தொடர்ந்து தகரம் வராது என்ற விதியையும் மீறுகிறது. புளியம்பருப்பில் ஒருவகையான சக்கரை இருப்பதால்தான் பூச்சிகளும் செவ்வெறும்புகளும் விரும்பி நாடுகின்றன. புளியம்பருப்பில் ஒருவகையான சக்கரை இருப்பதாலே பூச்சிகளும் செவ்வெறும்புகளும் விரும்பி நாடுகின்றன. ஏகாரம் ஒரு சொல்லை சிறப்பிக்கிறது. ஆனால் எவ்விதத்தில் சிறப்பிக்கிறது என்பதில் உறுதியில்லை. தலைவரே வருவாரென்று எதிர்பார்த்தோம்; ஆனால், தொண்டரே வந்தார் என்பதில் முதல் ஏகாரம் பெருமையையும் இரண்டாவது சிறுமையையும் சிறப்பிப்பதை நோக்குக. அரசருக்கே விளங்கிவிட்டது என்று சொல்லும்போது, உள்ளுரை ‘அரசர் அதிகாரமுள்ளவர். அவருக்கு விளங்கியபின் மற்றவர்களுக்கு விளங்குவது முக்கியமில்லை’ எனபதாகவோ, ‘அரசர் மரமண்டை; அவருக்கு விளங்கியது உமக்கு ஏன் விளங்கவில்லை?’ என்பதாகவோ இருக்கலாம். இரட்டை ஏகாரத்தை தவிர்ப்போம் அவர் இங்கேயே வந்தார் என்பதில் இரட்டை ஏகாரம் உள்ளது. இங்கு என்பதே பொருளுடைய சொல்; அதனுடன் ஏகாரம் சேர்ந்து இங்கே உண்டாகிறது. நாளடைவில் இங்கே என்ற சொல் இங்கு என்ற பொருளுடையதாகிவிட்டது. இதனால் இங்கேயுடன் ஏகாரஞ்சேர்த்து இங்கேயே என்கிறார்கள். எதிர்காலத்தில் இங்கேயே என்பதும் இங்கு என்ற பொருளுடையதாகி-விட்டால் இங்கேயேயே என்று சொல்லவேண்டியதிருக்கும். எனவே இங்கேயே என்ற இரட்டை ஏகாரமுள்ள சொல்லை பிழையாக இந்த செந்தரத்தில் குறிக்கிறோம். இது கட்டெழுத்திலக்கணம். குமரன் இதை யாருடைய உதவியும் இல்லாமலேயே செய்துவிட்டான். குமரன் இதை யாருடைய உதவியும் இல்லாமலே செய்துவிட்டான். அங்கேயே – அங்கே உடனேயே – உடனே சொல்லாமலேயே – சொல்லாமலே அதனாலேயே – அதனாலே அக்காலத்திலேயே – அக்காலத்திலே உம்மை பொருள் உம்மை பெரும்பாலும் இணைப்பும்மையாக வருகிறது. இணைப்பும்மை ஒரு எளிய முழுத்தொடரிலோ எச்சத்தொடரிலோ ஒன்றுக்குமேற்பட்ட முறை வருவதால் அதை எளிதில் இனங்காணலாம். சான்றாக, முருகனும் குமரனும் வந்தார்கள். சிலநேரங்களில் முதலும்மை இல்லாமலிருக்கலாம்; அதாவது உள்ளுரையாயிருக்கலாம். சான்றாக, ஐயா, நீங்கள் விழாவுக்கு வாருங்கள்; அம்மா, நீங்களும் வாருங்கள். இருவரும், எல்லாரும் போன்ற சொற்களிலும் உம்மை இருப்பதை நோக்குக. பலரை இணைத்து சொல்வதால் இதுவும் இணைப்பும்மை. சிலநேரங்களில் உம்மையால் இணையும் முழுத்தொடர்களுள் ஒன்று உள்ளுரையாக நிற்கலாம். அவன் அழைத்தாலும் போகமாட்டேன் என்பதில் அழைக்காவிட்டால் போகமாட்டேன் என்பது சொல்லாமலே விளங்குகிறது. எனவே இதுவும் இணைப்பும்மை. அவன் அழைத்தாலும் போகமாட்டேன்; அவன் அழைக்காவிட்டாலும் போகமாட்டேன் என்பது அவன் அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் போகமாட்டேன் என்பதன் ஒரு விரிவடிவம். மற்றும் என்பதை தவிர்ப்போம் குமரன் கதையையும் கட்டுரையையும் எழுதினான் என்பதை ஆங்கிலத்தில் Kumaran wrote stories and eays என்று எழுதுவதால், அதே அடிப்படையில் இக்காலத்தில் சிலர் குமரன் கதை மற்றும் கட்டுரையை எழுதினான் என்று எழுதுகிறார்கள். இது தமிழின் இயல்புக்கு உகந்ததன்று. தமிழில் எழுவாயைத்தவிர வேறு பெயர்ச்சொற்கள் தனியே நிற்பதை தவிர்க்கவேண்டும். கதை என்ற சொல்லை வாசிக்கும்போதே அது செயப்படுபொருள் என்பது தெளிவாகவேண்டும்; அதனால் கதையை என்றே எழுதவேண்டும். கதையையும் என்று உம்மை வருவதால் மற்றொரு செயப்படுபொருள் வரப்போகிறது என்பதை அறிகிறோம். இதற்கு கணினியியலில் ஒற்றைக்கடவச்சொல்லலசல் என்று பெயர். மாறாக, கதை மற்றும் கட்டுரையை என்பதன் இறுதியிலுள்ள ஐயுருபை வாசித்தபின்பே கதை செயப்படுபொருள் என்பதை உணர்கிறோம். இது ஆம் பகுதியில் நாம் கண்ட பின்னடத்தல். பல எச்சத்தொடர்களுடைய நீண்ட முழுத்தொடரில் இந்த பின்னடத்தலும் நீளும். ஒற்றைக்கடவமுறையில் எழுதியதை விரைவாகவும் எளிதாகவும் வாசித்து பொருளுணரலாம். கடைக்குச்சென்று Please give me a coconut and two bananas என்பதை ஒரு தேங்காய் மற்றும் இரண்டு பழங்கள் தாருங்கள் என்று தமிழறிந்தோர் யாரும் சொல்வார்களா? ஒரு தேங்காயும் இரண்டு பழங்களும் தாருங்கள் என்று சொல்வதே சரியானது. ஒரு வேதிவினையின் வினை மற்றும் விளை பொருள்களில் என்று எழுதும்போது கள், இல் ஆகிய விகுதிகள் ஒருமுறையே வருகின்றன. மற்றும் என்ற சொல் எந்த இரண்டு பகுதிகளை இணைக்கிறது என்பதில் ஒரு சிறு மயக்கம் இருக்கிறது. ஒரு வேதிவினையின் வினைபொருள்களிலும் விளைபொருள்களிலும் என்று எழுதும்போது இணையும் இரண்டு பகுதிகளையும் வெளிப்படையாக உம்மைகள் குறிக்கின்றன. இங்கு பொருள்களிலும் என்ற சரம் இரண்டுமுறை வருகிறது. மற்றும் என்ற சொல்லை பயன்படுத்தி சுருக்கி ஏன் எழுதக்கூடாது என்று சிலர் வினவலாம். இரண்டுமுறை வருவதில் பிழையில்லை. வினைபொருளையும் விளைபொருளையும் பிரிப்பது கந்தனையும் கண்ணனையும் பிரிப்பதைப்போன்றது. கந்தனும் கண்ணனும் வருகின்றனர் க ந்தன் மற்றும் ண்ணன் வருகின்றனர். நான் வேடிக்கையாக இவ்வாறு எழுதிக்காட்டுவதாக நீங்கள் எண்ணலாம். ஆனால் தமிழ்நாட்டின் பதினோராம் வகுப்புக்கான வேதியியற்பாடநூலில் இயற் மற்றும் வேதிப் பண்புகள் என்ற தொடர் அடிக்கடி வருகிறது. இது ஒருமுறை நேர்ந்த பிழையன்று. இவ்வாறே ஆசிரியர்கள் எழுதுகின்றனர். இதை physical and chemical properties என்ற ஆங்கிலத்தொடரின் மொழிபெயர்ப்பாக அவர்கள் எண்ணலாம். ஆனால் இது மிகமோசமானதும் தவறானதுமான மொழிபெயர்ப்பு. இயற்பண்புகளும் வேதிப்பண்புகளும் என்பதே சரி. ஆங்கிலத்தில் physical, chemical என்ற சொற்கள் adjective எனும் பெயரடையான முழுச்சொற்கள்; தமிழில் இயல், வேதி ஆகியவை முன்னொட்டுகள். ஒரு சொல்லின் முடிவில் வல்லினவொற்று வரவியலாது. அதாவது, இயற் என்றும் வேதிப் என்றும் தனிச்சொற்களாக சொல்ல முயன்றால் அது இயற்று என்றும் வேதிப்பு என்றும் கேட்கும். கூட என்பதை தவிர்ப்போம் சில வட்டாரவழக்குகளில் கூட என்ற சொல் உம்மைப்பொருளில் பயன்படுகிறது. கூட என்பது வேறு பொருளுடன் மயங்குவதால் இதையும் தவிர்ப்போம். அவன் அழைத்தால்கூட போகமாட்டேன். அவன் அழைத்தாலுங்கூட போகமாட்டேன். அவன் அழைத்தாலும் போகமாட்டேன் இதைப்போலவே, அவரைக்கூட – அவரையும் அவருக்குக்கூட – அவருக்கும் நீங்கள் கேட்டுக்கூட – நீங்கள் கேட்டும் எழுதக்கூட – எழுதவும் திருத்திக்கூட – திருத்தியும் அவர்கூட உங்களை தேடினார் – அவரும் உங்களை தேடினார் ஒரு ஈ கூட இல்லை – ஒரு ஈயும் இல்லை புலிகூட புல்லை தின்னாது – புலியும் புல்லை தின்னாது ஒரு எழுத்துக்கூட சரியில்லை – ஒரு எழுத்தும் சரியில்லை விகுதிகள் சேர்ந்து வருதல் மேலே நாம் எதிர்கொண்ட வினைபொருள்களிலும் விளைபொருள்களிலும் இயற்பண்புகளும் வேதிப்பண்புகளும் என்ற சான்றுகள் கள், உம் என்ற பின்னொட்டுகள் சேர்ந்துவரும்போது உம்மை இறுதியில் வருவதை எடுத்துக்காட்டுகின்றன. வேற்றுமையுருபு இருந்தால் உம்மை அதன்பின் வருகிறது. அவகாடிரோ அணு மற்றும் மூலக்கூறை வேறுபடுத்தினார் அவகாடிரோ அணுவையும் மூலக்கூறையும் வேறுபடுத்தினார் சோதனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றால் சோதனையாலும் பயன்பாட்டினாலும் உடைமையைக்குறிக்கும் ஆறாம் வேற்றுமைத்-தொடர்கள் உம்மையால் இணையவியலாது; பொதுவாக, ஒரு பொருள் பலவற்றுக்கு உடைமையாயிருப்பதில்லை. உடைமையாகும் பொருள்களே இணையவேண்டும். குமரனது கையும் கந்தனது கையும் சான்று. ஆறாம் வேற்றுமை பெயர்ச்சொற்களிடையான உறவை விவரிப்பதாக முன்பு கண்டோம். அதனாலே இந்த வேறுபாடும் எழுகிறது. இரண்டு பெயரடைகளை உம்மையால் இணைக்கவியலாது. இயற் மற்றும் வேதிப் பண்புகள் இயற்பண்புகளும் வேதிப்பண்புகளும் வினை மற்றும் விளை பொருள்களில் வினைபொருள்களிலும் விளைபொருள்களிலும் என்ற சான்றுகளை முன்பே கண்டோம். இயற்பண்புகளும் வேதிப்பண்புகளும் என்பது பெயர்த்தொடர். இது இவ்வாறே எழுவாயாக வரலாம். இதனால் கரிமச்சேர்மங்களின் இயற்பண்புகளும் வேதிப்பண்புகளும் தெளிவாகின்றன. ஆனால் இது வேற்றுமைத்தொடராக வரும்போது வேற்றுமையுருபுகள் பன்மையுருபுக்குப்பின்னும் உம்மைக்கு முன்னும் வருகின்றன. இதனால் இவற்றின் இயற்பண்புகளையும் வேதிப்பண்புகளையும் அறிகிறோம். வேற்றுமையுருபுகளுடனும் உம்மையுடனும் பின்னுருபுகள் வரும்போது அவை உம்மைக்குப்பின் வருகின்றன. அகமது கந்தனையும் முருகனையும்விட உயரமானவன் என்னையும் உன்னையும்பற்றி பேசினார் பணத்துக்கும் பொருளுக்கும் பதிலாக அவனுக்கும் இவனுக்கும்பின் அவனுக்கும் இவனுக்குமுரிய அமெரிக்காவிலும் இங்கிலாந்திலுமுள்ள பல்கலைக்கழகங்கள் ஆடுகளுக்கும் மாடுகளுக்குமான தொழுவம் இவ்வாறு வரும் பின்னுருபுகள் இரண்டாம் உம்மைக்குப்பின் மட்டுமே வருகின்றன. பொதுவாக, பின்னொட்டுகள் பன்மை, வேற்றுமை, இணைப்பி, பின்னுருபு என்ற முறைமையில் வருகின்றன. இது முற்றிலும் ஏரணமானது. கள்விகுதி பெயர்ச்சொல்லை பன்மையாக மாற்றி பெயர்ச்சொல்லாகவே அதே இடத்தில் வைக்கிறது. வேற்றுமையுருபுகள் பெயர்ச்சொற்களின் பங்கை விவரிக்க வருபவை என்பதால் அவை பெயர்ச்சொற்களையடுத்து வருகின்றன. இரண்டு வேற்றுமைத்தொடர்களை சேர்க்க உம்மை வந்து அவற்றை ஒரே வேற்றுமைத்தொடராக்குகிறது. பிறகு அந்த வேற்றுமைத்தொடருக்கு பின்னுருபு வருகிறது. சிலநேரங்களில் உம்மைக்குமுன் பின்னுருபுகள் வருவதுமுண்டு. என்னைப்பற்றியும் உன்னைப்பற்றியும் பேசினார் எனக்காகவும் உனக்காகவும் இதை செய் என்ற சான்றுகளில் இரண்டு சொற்களிலும் பின்னுருபு வந்தபின் அவற்றை உம்மை இணைக்கிறது. பின்னொட்டுகளும் உம்மையும் வரும் முறைமைக்கு இறுக்கமான விதிகள் இல்லை. எது வழக்கம் என்பதை பழக்கத்தாலே அறியவேண்டும். இயைபுமை உம்மையால் இணையும் தொடர்களுக்கு ஒரே இலக்கணக்கூறு இருக்கவேண்டும். சான்றாக, பெயர்ச்சொல்லை வினைச்சொல்லுடன் உம்மையால் இணைப்பது இயைபின்மை. வெவ்வேறு விதமான வேற்றுமைத்தொடர்களை இணைப்பதும் இயைபின்மை. குமரனுக்கும் கந்தனுக்கும் கொடுத்தேன் குமரனுக்கும் கந்தனையும் கொடுத்தேன் வேறுவிதமாகச்சொன்னால், ஒன்றுக்கு மேற்பட்ட ஒரேவிதமான தொடர்கள் உம்மையால் இணைந்து அதேவிதமான ஒரு தொடரை தருகின்றன. சான்றாக குமரனுக்கு, கந்தனுக்கு ஆகிய இரண்டும் நான்காம் வேற்றுமைத்தொடர்கள். அவை இணைவதால் உண்டாகும் குமரனுக்கும் கந்தனுக்கும் என்ற கூட்டுத்தொடரும் ஒரு முழுத்தொடரில் நான்காம் வேற்றுமைத்தொடரின் பங்கை வகிக்கிறது. எழுவாய்த்தொடர் கூட்டுத்தொடராகலாம். சான்றாக, ஆறுகளின் கழிமுகப்பகுதிகளில் நெய்வளமும் ஐதரசக்கரிமவளமும் இருக்கிறது என்பதில் நெய்வளமும் ஐதரசக்கரிமவளமும் எழுவாய்த்தொடர். வேற்றுமைக்கு மேலும் சான்றுகள்: இவ்வகையான தொடுதிரைகள் கீறல்களாலும் அழுத்தங்களாலும் பாதிக்கப்படுகின்றன. அகமது கந்தனுடனும் முருகனுடனும் வந்தான். தாவரங்கள் ஒளிச்சேர்க்கைக்குத்தேவையான கரிமத்தை வளிமண்டலத்திலிருந்தும் அதற்கான ஆற்றலை கதிரவவொளியிலிருந்தும் பெறுகின்றன. ஒரே அழுத்தத்திலும் வெப்பநிலையிலுமுள்ள வெவ்வேறு வளிமங்களின் அடர்வுகள் சமம். தமிழில் பெயரடைகள் உம்மையால் இணைவதில்லை. ஆறாம் வேற்றுமையும் பெயரடைபோல் செயலாற்றுவதால் அதுவும் உம்மையால் இணையவில்லை. பெயரெச்சங்களும் இணைவதில்லை என்பதும் சொல்லாமலே விளங்கும். வினையடைகளையும் வினையெச்சங்களையும் உம்மையால் இணைக்கலாம். விரைவாகவும் செம்மையாகவும் செய்தான். நன்றாக படித்தும் கடினமாக உழைத்தும் முன்னேறினான் என்பதில் நன்றாக, கடினமாக என்பவை முறையே படித்தலுக்கும் உழைத்தலுக்குமான வினையடைகள். ஆனால் நன்றாக படித்தும் கடினமாக உழைத்தும் என்ற தொடர் முன்னேறுதலுக்கான செய்து எனும் வாய்ப்பாட்டு வினையெச்சம். எனவே, இது எச்சத்துளெச்சத்துக்கும் ஒரு சான்று. கூட்டுத்தொடர்களை உம்மையால் இணைத்து மேலும் கூட்டான தொடர்களை உருவாக்கலாம். ஒரு அமைமுறையான பாங்கை பின்பற்றி தொடர்களை அடுக்கினால் எந்த நீண்ட கூட்டுத்தொடரையும் பொருளுணர்வது எளிதாகிறது. நீர்மூலக்கூறு அமிலம் இருக்கும்போது ஒரு நேர்மின்னியை ஏற்பதன்மூலம் காரமாகவும் காரம் இருக்கும்போது ஒரு நேர்மின்னியை வழங்குவதன்மூலம் அமிலமாகவும் செயல்படுகிறது. உடலின் இந்தக்காரணிகள் ஆக்குசிசனை சிற்றறைகளிலிருந்து ஆக்குசிசநீங்கிய குருதிக்கும் ஆக்குசிசனேற்ற குருதியிலிருந்து திசுக்களுக்கும் விரவ உதவுகின்றன. இரண்டுக்கும் மேற்பட்ட உறுப்புகளையும் உம்மையால் இணைக்கலாம். இன்று சீனாவிலும் இந்தியாவிலும்ண இலங்கையிலும் மற்ற பல வளரும் நாடுகளிலும் பரவலாக புழக்கத்தில் வந்துள்ளது கையில் ஏந்தும் அலைபேசி. சமச்சீர்மை உம்மையால் இணையும் தொடர்கள் ஒரே வகையாக மட்டுமல்லாமல் சமச்சீர்மையாகவும் இருப்பது பொருளுணர்வை எளிதாக்குகிறது. பள்ளியில் என்னுடன் பயிலும் அகமதும் கந்தனும் வருகிறார்கள் என்பதில் அகமது, கந்தன் ஆகிய பெயர்ச்சொற்கள் உம்மையால் இணைகின்றன. இங்குள்ள பெயரெச்சம் அகமதும் கந்தனும் என்ற பெயர்த்தொடருக்கு உரியது. ஆனால் பள்ளியில் என்னுடன் பயிலும் அகமதும் எனது வீட்டினருகில் வசிக்கும் கந்தனும் வருகிறார்கள் என்பதில் பள்ளியில் என்னுடன் வசிக்கும் என்ற பெயரெச்சம் குமரனுக்கும் எனது வீட்டினருகில் வசிக்கும் என்ற பெயரெச்சம் கந்தனுக்கும் உரியவை. அதாவது உம்மையால் இணையும் தொடர்களுக்கிடையில் ஒரு சமச்சீர்மை இருக்கிறது. முதலாவதில் பெயர் + பெயர் என்ற பாங்கும் இரண்டாவதில் (பெயரெச்சம் பெயர்) + (பெயரெச்சம் பெயர்) என்ற பாங்கும் உள்ளன. வேற்றுமைத்தொடர்களையும் இணைக்கலாம். அகமது வீட்டிலிருந்தும் கந்தன் பள்ளியிலிருந்தும் வருகிறார்கள். இங்கெல்லாம் உம்மையின் இரண்டு பகுதிகளிலும் சீரான ஒரு பாங்கு உள்ளது. மற்றொரு சான்றாக ஒற்றைமரபுமெய்ய நுண்வித்துகளும் பெருவித்துகளும் உண்டாகின்றன என்பதை கருதுவோம். சமச்சீர்மைக்கொள்கையால், நுண்வித்துகளும் பெருவித்துகளும் ஒற்றைமரபுமெய்யன என்றாகிறது. நுண்வித்துகள் மட்டும் ஒற்றைமரபுமெய்யன என்று சொல்ல விரும்பினால் ஒற்றைமரபுமெய்ய நுண்வித்துகளும் வேறுவிதமான பெருவித்துகளும் உண்டாகின்றன என்பதுபோல் சொல்லவேண்டும். மறுவழியாக, நுண்வித்துகளும் பெருவித்துகளும் உண்டாகின்றன; நுண்வித்துகள் ஒற்றைமரபுமெய்யன என்று பிரித்தெழுதுவது தெளிவு. கொள்கையளவில் ஒரு பெயர்ச்சொல்லையும் பெயர்த்தொடரையும் உம்மையால் இணைக்கலாம். சான்றாக நேற்று பள்ளியில் புதிதாகச்சேர்ந்த மாணவனும் குமரனும் வருகிறார்கள் என்ற தொடர் இலக்கணப்படி சரியானது; ஆனால் இங்கு இணையும் பகுதிகள் சமச்சீர்மையாயில்லை. புதிதாகச்சேர்ந்த என்ற பெயரெச்சம் மாணவன் என்ற பெயர்ச்சொல்லுக்கு மட்டுமே உரியது என்பதை எல்லாரும் ஒப்புக்கொள்வோம். புதிதாகச்சேர்ந்த மாணவன் என்ற தொடர் ஒருவரை குறிக்கிறது. குமரன் மற்றொருவரை குறிக்கிறது. எனவே, இங்கு வரியியச்சமச்சீர்மை இல்லாவிட்டாலும் ஒரு பொருள்கோளியச்சமச்சீர்மை இருக்கிறது எனலாம். பொதுவாக, இவ்வாறான கட்டுமானத்தை நாம் தவிர்க்கவேண்டும். வரியியச்சமச்சீர்மையுடன் எழுதுவதே பொருளுணர்வை எளிதாக்கும். இந்த கருத்தை மேலும் விரிவாக ஆம் பகுதியில் காண்போம். உம்மைத்தொகை சிலநேரங்களில் உம்மையால் இணைந்த சொற்களை தொகுத்து உம்மைத்தொகையாக எழுதலாம். பால்பழம் – பாலும் பழமும் ஆடல்பாடல் – ஆடலும் பாடலும் ஒலியொளி – ஒலியும் ஒளியும் தாய்தகப்பன் – தாயும் தகப்பனும் அம்மாபிள்ளை – அம்மாவும் பிள்ளையும் ஆகியவை சான்றுகள். புணர்ச்சிவிதிகள் சொன்முதலிறுதியிடைவிதிகளின் அடிப்படையிலானவை – உம்மைத்தொகை. புணர்ச்சிவிதிகள் சொன்முதல்விதிகள், சொல்லிறுதிவிதிகள், சொல்லிடைவிதிகள் ஆகியவற்றின் அடிப்படையிலானவை – உம்மைவிரி. எல்லா தொகைகளிலும் இருப்பதுபோலவே இங்கும் பொருண்மயக்கம் ஏற்படுகிறது. அம்மாபிள்ளை என்பது அம்மாவுடைய பிள்ளை என்ற வேற்றுமைத்தொகையாகவும் அம்மாவும் பிள்ளையும் என்ற உம்மைத்தொகையாகவும் பொருள்படலாம். இத்தகைய பொருண்மயக்கத்தை தவிர்க்க விரும்பினால் உம்மைவிரியாகவே எழுதவேண்டும். உம்மைத்தொகையில் ஒற்று மிகாது. அம்மா + பிள்ளை = அம்மாபிள்ளை உம்மைமயக்கம் நாம் கவனமாயில்லாவிட்டால் தமிழில் எழுதும்போதும் ஆங்கிலத்தில் எழுதும்போதும் உம்மையால் பொருண்மயக்கங்கள் புகுந்துவிட வாய்ப்புண்டு. இதை நான்கு சான்றுகளால் விளக்குகிறேன். (அ) I want coffee with sugar and milk என்பதை சீனியிட்ட காப்பி வேண்டும்; பாலும் வேண்டும் சீனியும் பாலுமிட்ட காப்பி வேண்டும் என்பதாக இருவழிகளில் பொருள்கொள்ளலாம்; ஏனெனில் with, and ஆகியவற்றில் எதற்கு முன்னுரிமை அதிகம் என்ற விதி இல்லை. முதல்வழியில் பொருள்கொண்டால் பாலை காப்பியிலிடாமல் தனியாக கேட்கிறார் என்று பொருள். உலகவழக்கில் இரண்டாம் பொருளே வழக்கம் என்பதால் இந்த பொருண்மயக்கம் நம் மனங்களுக்கு தோன்றுவதில்லை. ஆனால், இதே ஏரணப்படி, I want coffee with sugar and vadai என்று ஒருவர் கேட்கும்போது, பரிமாறுபவன் என்னைப்போன்றவனாயிருந்தால், வடையை காப்பியில் போட்டு கொடுத்துவிட்டு ‘நீங்கதானே இப்படிக்கேட்டீங்க’ என்று சொல்லிவிடுவான். இதை தவிர்க்க, முந்தைய பகுதியில் கண்ட சமச்சீர்மையை பயன்படுத்தி I want a coffee with sugar and a vadai என்று சொல்லலாம். இப்போது உம்மையால் இணையும் பகுதிகள் a என்ற சொல்லில் தொடங்குகின்றன. தமிழிலும் சீனியிட்ட காப்பியும் பாலும் வேண்டும் என்று சொல்லும்போது சீனி காப்பியில் மட்டுமா பாலிலுமா என்ற கேள்வி எழுகிறது. நாம் இங்கு பின்பற்றும் வழியுரையின்படி, காப்பியும் பாலும் என்பதை ஒரு பெயர்த்தொடராகவும் சீனியிட்ட என்பதை அந்த தொடரின் பெயரடையாகவும் கருதுகிறோம். பாலில் சீனி வேண்டாமென்றால், சீனியிட்ட காப்பியும் வெறும் பாலும் வேண்டும். சீனியிட்ட காப்பி வேண்டும்; பாலும் வேண்டும் என்று சொல்லலாம். இரண்டிலும் சீனி வேண்டும்போது சீனியிட்ட காப்பியும் சீனியிட்ட பாலும் வேண்டும் காப்பியிலும் பாலிலும் சீனியிட்டு வேண்டும் என்று வெளிப்படையாக சொல்வது பொருண்மயக்கம் ஏற்படும் வாய்ப்பையே தவிர்க்கிறது. பொருண்மயக்கமின்றி இரண்டு பகுதிகளை இணைக்க இயலாவிட்டால் தனித்தனியாகவே எழுதிவிடலாம். I want coffee with sugar, and I want vadai சீனியிட்ட காப்பி வேண்டும்; வடையும் வேண்டும் (ஆ) இந்தியாமுழுவதற்குமான பாடநூல்களை எழுதி வழங்கும் கவாபதேம என்ற அரசுநிறுவனம் வெளியிடும் ஒரு பாடநூலில் Bryophytes include the various moes and liverworts that are found in moist areas என்ற முழுத்தொடர் இருக்கிறது. இங்கு found in moist areas என்ற தொடர் liverwortsக்கு மட்டும் பயனாகிறதா, moes and liverworts என்ற தொடருக்கு பயனாகிறதா என்ற ஐயம் எழலாம். இதன் அறிவியலுண்மையை அறியாமல் தமிழில் எழுதவியலாது. உண்மை என்னவென்றால் பாசிகளும் ஈரமான இடங்களில் காணப்படுகின்றன. எனவே, பாசியங்களில் பாசிகளும் ஈரப்பகுதிகளில் காணப்படும் ஈரற்செடிகளும் அடங்குகின்றன என்பது தவறு. பாசியங்களில் ஈரப்பகுதிகளில் காணப்படும் பாசிகளும் ஈரற்செடிகளும் அடங்குகின்றன என்று எழுதலாம். ஆனால் ஈரப்பகுதிகளில் காணப்படும் என்ற பெயரெச்சத்தை பாசிகளுக்கு மட்டும் உரியதாக சிலர் எண்ணலாம். Bryophytes include various moes and liverworts; these are found in moist areas. பாசியங்களில் பாசிகளும் ஈரற்செடிகளும் அடங்குகின்றன; இவை ஈரப்பகுதிகளில் காணப்படுகின்றன. என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுவது ஐயத்துக்கிடமின்றி சரியான பொருளை தருகிறது. இதுவாவது பரவாயில்லை. இங்கு the … that என்ற கட்டுமானம் இருக்கிறது. ஆங்கிலத்தை நன்கறிந்தோர் the various moes and liverworts என்பதை ஒரே தொடராக வாசித்து இதன் பெயரடையாக that … என்பதை புரிந்துகொள்ளலாம். ஆனால் அடுத்துவரும் சான்று இதைவிட மோசமானது. (இ) அதே நூலில் Vegetative reproduction in moes is by fragmentation and budding in the secondary protonema. என்ற முழுத்தொடரும் இருக்கிறது. இங்கு, இரண்டாமை வித்துமுளையில் நிகழ்வது மொட்டுவிடல் மட்டுமா துண்டாதல், மொட்டுவிடல் ஆகிய இரண்டுமா என்பதில் தெளிவில்லை. இதன் அறிவியலுண்மையை அறிந்தாலே தமிழில் மொழிபெயர்க்கவியலும். உண்மை என்னவென்றால், துண்டாதலால் ஏற்படும் இரண்டாமை வித்துமுளையில் மொட்டுவிடல் நிகழ்கிறது. எனவே, பாசிகளது தழையவினப்பெருக்கம் துண்டாதலாலும் மொட்டுவிடலாலும் நிகழ்கிறது; இவை இரண்டாமை வித்துமுளையில் நிகழ்கின்றன என்பது தவறு. பாசிகளது தழையவினப்பெருக்கம் துண்டாதலாலும் இரண்டாமை வித்துமுளையில் மொட்டுவிடலாலும் நிகழ்கிறது என்பதே சரி. ஆங்கிலத்தில் எழுதியவர்கள் Vegetative reproduction in moes is by fragmentation and by budding in the secondary protonema. என்று எழுதியிருக்கலாம். (ஈ) உம்மையால் எழும் வேறுவிதமான ஒரு பொருண்மயக்கத்தை புரிந்துகொள்ள Acids are electrolytes என்ற ஆங்கிலத்தொடரை கருதுக. இதை தமிழில் அமிலங்கள் மின்பகுளிகள் என்று எளிதாக எழுதிவிடுகிறோம். இவ்வாறே, Acids and bases are electrolytes அமிலங்களும் காரங்களும் மின்பகுளிகள் என்பதில் உம்மையால் இணைந்த பெயர்த்தொடர் எழுவாயாக வருகிறது. இதைப்போலவே Acids are electrolytes and conductors அமிலங்கள் மின்பகுளிகளும் மின்கடத்திகளும் என்பதில் உம்மைத்தொடர் பயனிலையாக வருகிறது. இங்கும் சிக்கலில்லை. ஆனால் இரண்டிடங்களிலும் உம்மை வரும்போது எழுவாயையும் பயனிலையையும் எங்கு பிரிக்கவேண்டும் என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. Acids and bases are electrolytes and conductors என்று ஆங்கிலத்தில் எழுதுவதில் சிக்கலில்லை; ஏனெனில் are என்ற வினைச்சொல் எழுவாயையும் பயனிலையையும் பிரிக்கிறது. ஆனால் தமிழில் அமிலங்களும் காரங்களும் மின்பகுளிகளும் மின்கடத்திகளும் என்பது சரியில்லை; மாற்றி எழுதவேண்டும். இங்கு வினைச்சொல் மறைந்திருப்பது சரியான விளைவை தரவில்லை; வெளிப்படையான ஒரு வினைச்சொல் தேவையாகிறது. அமிலங்களும் காரங்களும் மின்பகுளிகளாகவும் மின்கடத்திகளாகவும் செயலாற்றுகின்றன. உம்மைப்பிழைகள் (அ) கீழ்க்கண்ட மொழிபெயர்ப்பை ஓரிடத்தில் கண்டேன். A Geostationery satellite can receive these signals and broadcast them back to a wide area on earth. ஒரு புவிக்கிடப்புத்துணைக்கோள் இந்த சமிக்கைகளை பெறலாம் மற்றும் புவியின் ஒரு அகலப்பரப்புக்கு மறுபடியும் அகற்பரப்பலாம். இங்கு எழுத்தாளர் ஆங்கில முழுத்தொடரை சொல்லுக்குச்சொல் மொழிபெயர்க்க விரும்பியிருக்கிறார். And என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் மற்றும் என்பது அவரது கருத்து. இரண்டு வினைகள் இணைந்து ஒரு இணைந்த தொடர் உருவாவதை தமிழில் செய்து என்ற வாய்ப்பாட்டால் கூட்டுத்தொடராக எழுதுவதே இயல்பு. ஒரு புவிக்கிடப்புத்துணைக்கோள் இந்த சமிக்கைகளை பெற்று புவியின் ஒரு அகலப்பரப்புக்கு மறுபடியும் அகற்பரப்பலாம். (ஆ) கிடைக்கோணம், குத்துக்கோணம் மற்றும் குத்துயரத்தை அறியவியலும். கிடைக்கோணத்தையும் குத்துக்கோணத்தையும் குத்துயரத்தையும் அறியவியலும். (இ) புவியியலிடநிலையை கிடைக்கோணம் மற்றும் குத்துக்கோணமாகத் தருகின்றன. புவியியலிடநிலையை கிடைக்கோணமாகவும் குத்துக்கோணமாகவும் தருகின்றன. (ஈ) பயணம் செய்யும் திசை மற்றும் வேகத்தை கணிக்கவியலும். பயணிக்கும் திசையையும் வேகத்தையும் கணிக்கவியலும். (உ) மரபணுக்களையும் மற்றும் பல்வேறு சிறு சிறு பாகங்களையும் கொண்ட உயிரணுக்கள் மரபணுக்களையும் மற்ற பல்வேறு சிறு சிறு பாகங்களையும் கொண்ட உயிரணுக்கள் (ஊ) It is known … this … and … that என்ற ஆங்கிலக்கட்டுமானத்தை இது மற்றும் அது அறியப்படுகிறது என்று எழுதாமல் இதையும் அதையும் அறிவோம் என்று எழுதவேண்டும். (எ) இதனது அடிப்பாகத்தில் ஒரு பருத்த சூலகமும் ஒரு நீண்ட மெல்லிய சூற்றண்டும், ஒரு சூன்முடியும் உள்ளன. மூன்றுமே அடிப்பாகத்தில் உள்ளனவா? இல்லை. இதனது அடிப்பாகத்தில் ஒரு பருத்த சூலகமும் அதன்மேல் ஒரு நீண்ட மெல்லிய சூற்றண்டும், ஒரு சூன்முடியும் உள்ளன என்பதே அறிவியலுண்மை. (ஏ) The functional group is an atom or a group of atoms joined to the carbon chain which is responsible for the characteristic chemical properties of the organic compounds. கரிமச்சேர்மத்தில் இருக்கும் வினைத்தொகுதி என்பது, கரிமவணுத்தொடுப்பத்துடன் இணைந்த ஒரு குறிப்பிட்ட அணு அல்லது அணுக்களின் குழு ஆகும். இது கரிமச்சேர்மங்களின் சிறப்பியல்பு வேதியியல் பண்புகளுக்கு பொறுப்பாகும். கரிமச்சேர்மத்திலுள்ள கரிமவணுத்தொடுப்பத்துடன் இணைந்ததும் அந்த சேர்மத்தின் சிறப்பியல்பான வேதிப்பண்புகளுக்கு பொறுப்பாவதுமான ஒரு குறிப்பிட்ட அணுவோ அணுக்களின் தொகுதியோ வினைத்தொகுதி எனப்படுகிறது. (ஐ) நான் சுவையைவிட உடலுக்கு எது நல்லது என்பதற்கே முதலிடம் கொடுப்பேன் என்று எழுதும்போது, சுவை உடலுக்கு நல்லது என்றும் அதைவிட எது நல்லது என்பதற்கு முதலிடம் கொடுப்பேன் என்றும் பொருளாகிறது; ஏனெனில், ஐவிட அடுத்துவரும் பெயரடைக்கே பயனாகும். எழுத்தாளர் சொல்ல விரும்பியது சுவையைவிட உடனலத்துக்கே முதன்மையளிப்பேன் என்பது. அதாவது இது சுவைக்குக்கொடுப்பதைவிட உடலுக்கு எது நல்லது என்பதற்கே அதிக முதன்மைகொடுப்பேன் என்பதன் தொகை. சுவைக்குவிட என்றோ சுவைக்கைவிட என்றோ வராது. ஐவிட என்பதே ஒப்புமையுருபு. ஓகாரம் பொருள் ஓகாரம் பெரும்பாலும் ஐயப்பொருளில் வருகிறது. ஐயத்துக்குறியது ஒன்றாகவோ ஒன்றுக்கு மேற்பட்டோ இருக்கலாம். ஒரு நிகழ்வு நிகழுமோ நிகழாதோ என்பது அந்த நிகழ்வை மட்டும் பற்றிய ஐயம். மழை வருமோ! சான்று. இராமனோ கண்ணனோ வரலாம் இராமனோ கண்ணனோ முருகனோ வரலாம் என்பவை யாராவது ஒருவரோ இருவரோ மூவருமோ வரலாம் என்ற பொருளுடையவை. தவிர்ப்போகாரம் ஒருவர் வந்தால் மற்றவர் வரமாட்டர் என்ற பொருள் வரவேண்டுமெனில் இராமனோ அல்லது கண்ணனோ வரலாம் என்று சொல்வதை இந்த செந்தரத்தின் ஒரு மரபேற்பாக கொள்வோம். இங்கு அல்லது என்ற சொல் இல்லாவிட்டால் என்ற பொருளில் வருகிறது. கணிதத்தில் இதை தவிர்ப்போகாரம் என்கிறோம். அதாவது அல்லது என்ற சொல் இணைக்கும் நிகழ்வுகளில் ஏதாவது ஒன்றே நிகழலாம். ஒன்று நிகழ்ந்தால் மற்றது நிகழாது என்பதால் இந்த நிகழ்வுகள் ஒன்றையொன்று தவிர்க்கின்றன என்றும் இதை தவிர்ப்போகாரம் என்றும் சொல்கிறோம். அல்லதையும் ஆவதையும் தவிர்ப்போம் இக்காலத்தில் இராமன் அல்லது கண்ணன் வரலாம் என்று எழுதும் வழக்கத்தையும், சில வட்டார வழக்குகளில் இராமனாவது கண்ணனாவது வரலாம் என்ற கட்டுமானத்தையும் காணலாம். இந்த வழக்குகள் தவிர்ப்போகாரத்துக்கும் சேர்ப்போகாரத்துக்கும் வேறுபாடுகாண்பதில்லை. இந்த கட்டுமானங்களை இந்த செந்தரத்தில் தவிர்ப்போம். விகுதிகள் சேர்ந்து வருதல் பின்னொட்டுகள் பன்மை, வேற்றுமை, இணைப்பி, பின்னுருபு என்ற முறைமையில் வருகின்றன என்று ஆம் பகுதியில் கண்டது இங்கும் பயனாகிறது. வினைபொருள்களிலோ விளைபொருள்களிலோ இயற்பண்புகளோ வேதிப்பண்புகளோ முருகன் கந்தனையோ முருகனையோவிட உயரமானவன் அல்லன் அவனுக்கோ இவனுக்கோவுரிய அமெரிக்காவிலோ இங்கிலாந்திலோவுள்ள பல்கலைக்கழகங்கள் என்னையோ உன்னையோபற்றி பேசவில்லை சிலநேரங்களில் பின்னுருபுகளைத்தொடர்ந்து ஓகாரங்கள் வருகின்றன. என்னைப்பற்றியோ உன்னைப்பற்றியோ பேசவில்லை. இயைபுமை ஓகாரம் இணைக்கும் பகுதிகளுக்கும் ஒரே இலக்கணக்கூறு இருக்கவேண்டும். கண்ணனுக்கோ இராமனுக்கோ கொடுத்தான் கண்ணனுக்கோ இராமனையோ கொடுத்தான் ஓகாரத்தால் இணைந்த பெயர்த்தொடர் எழுவாயாகலாம். ஆறுகளின் கழிமுகப்பகுதிகளில் நெய்வளமோ ஐதரசக்கரிமவளவோ இருக்கலாம். இது வேற்றுமைத்தொடர்களுக்கும் பொருந்தும். தொடுதிரைகள் கீறல்களாலோ அழுத்தங்களாலோ பாதிக்கப்படலாம். அகமது கந்தனுடனோ முருகனுடனோ வருவான். விலங்குகள் தாம் உண்ணும் தாவரங்களிலிருந்தோ மற்ற விலங்குகளிலிருந்தோ ஆற்றலை பெறுகின்றன. இரண்டு அமைப்புகளும் வெவ்வேறு அழுத்தத்திலோ வெப்பநிலையிலோ இருக்கலாம். ஆறாம் வேற்றுமைத்தொடர்கள் உம்மையால் இணையாததுபோலவே ஓகாரத்தாலும் இணைவதில்லை. இரண்டு பெயரடைகள் ஓகாரத்தால் இணையவியலாது. பெயர்ச்சொற்களையே இணைக்கிறோம். கேட்டவோ பார்த்தவோ நிலையில் செய்தேன் கேட்ட அல்லது பார்த்த நிலையில் செய்தேன் கேட்ட நிலையிலோ பார்த்த நிலையிலோ செய்தேன் வேகமானவோ வீரமானவோ போக்கு வேகமான அல்லது வீரமான போக்கு வேகமோ வீரமோவான போக்கு இங்கு வேகம், வீரம் ஆகிய பெயர்ச்சொற்கள் ஓகாரத்தால் இணைந்து பிறகு ஆன என்பதால் பெயரடையாகிறது. பெயரடைகள் இணையவில்லை. மேலும், ஆன இரண்டாஞ்சொல்லுக்கு மட்டும் பின்னொட்டாக தோன்றினாலும், அது உண்மையில் வேகமோ வீரமோ என்ற தொடருக்கான பின்னொட்டு. வினையடைகளை ஓகாரத்தால் இணைக்கலாம்; வினையெச்சங்களையும் ஓகாரத்தால் இணைக்கலாம். விரைவாகவோ செம்மையாகவோ செய்யவில்லை. நன்றாக படித்தோ கடினமாக உழைத்தோ முன்னேறலாம். இரண்டுக்கும் மேற்பட்ட உறுப்புகளையும் ஓகாரத்தால் இணைக்கலாம். குமரனோ கந்தனோ முருகனோ வரலாம். சமச்சீர்மை ஓகாரத்தால் இணையும் தொடர்களது சமச்சீர்மையால் பொருளுணர்வு எளிதாகிறது. என்னுடன் பணியாற்றும் குமரனோ கந்தனோ வரவில்லை. என்னுடன் பணியாற்றும் குமரனோ எனது வீட்டினருகில் வசிக்கும் கந்தனோ வரவில்லை. ஓகாரமயக்கம் உம்மைமயக்கத்தைப்போல் ஓகாரமயக்கமும் எழலாம். சீனியிட்ட காப்பியோ பாலோ வேண்டும் என்பது சீனியிட்ட காப்பியோ சீனியிட்ட பாலோ வேண்டும் என்று பொருளாகிறது. மாறாக, சீனியிட்ட காப்பியோ வெறும் பாலோ வேண்டும் என்பது வேறுபொருளுடையது. வினையிலாமுழுத்தொடர்களிலும் ஓகாரமயக்கம் ஏற்படலாம். அமிலங்களோ காரங்களோ மின்பகுளிகளோ மின்கடத்திகளோ. அமிலங்களோ காரங்களோ மின்பகுளிகளாகவோ மின்கடத்திகளாகவோ செயலாற்றலாம். ஓகாரங்கள் தொகையாக வரவியலாது. பால்பழம் என்பதற்கு பாலும் பழமும் என்றே பொருள். பாலோ பழமோ என்ற பொருளில்லை. ஆனால் பாற்பழம் வேற்றுமைத்தொகை. அது பாலிலிட்ட பழம் என்று பொருளாகலாம். வேற்றுமையல்லாத தொகைகளில் இயல்புபுணர்ச்சியும் வேற்றுமைத்தொகைகளில் வல்லினம் வரும்போது வன்மைமிகுவதையும் Error: Reference source not foundஆம் பகுதியி்ல் காண்போம். ஓகாரவாகாரவினா (ஆ) அதுவோ இதுவோ என்ற பாங்கிலுள்ள ஐயத்துக்கும் அதுவா இதுவா என்ற பாங்கிலுள்ள கேள்விக்கும் அல்லது கூடாது. பயன்கள் அதிகமா அல்லது ஆபத்துகள் அதிகமா? பயன்கள் அதிகமா ஆபத்துகள் அதிகமா? ஆனால் என்ற இடைச்சொல் எளிய முழுத்தொடர்களை இணைப்பிகளால் இணைப்பதன்மூலம் கூட்டும முழுத்தொடர்களை பெற அரைப்புள்ளி, உம்மை, ஓகாரம் ஆகியவற்றைத்தவிர வேறு பல சொற்களும் இருக்கின்றன. இவற்றுள் முதன்மையானது ஆனால். சான்றாக, கந்தன் பள்ளிக்கு வந்தான், ஆனால் படிக்கவில்லை. கந்தன் பள்ளிக்கு வந்தான்; ஆனால் முருகன் வரவில்லை. கந்தன் பள்ளிக்குவந்தான்; ஆனால் முருகன் வீட்டுக்குச்சென்றான். இங்கு முதலாவதில் எழுவாய் இரண்டு முழுத்தொடர்களுக்கும் பொதுவானது. எனவே, எளிய முழுத்தொடர்களுக்கிடையில் காற்புள்ளியை இட்டோம். இரண்டாவதிலும் மூன்றாவதிலும் வெவ்வேறு எழுவாய்கள் இருப்பதால் அரைப்புள்ளியிட்டோம். இரண்டாவதில் ஒரு வேற்றுமைச்சொல் இரண்டுக்கும் பொதுவாயிருக்கிறது. மூன்றாவதில் எதுவும் பொதுவாயில்லை. எனில், எனினும் எனில், எனினும் போன்ற சொற்களும் இணைப்பிகளாக பயன்படுகின்றன. அவர் வருவார் எனில், நீங்களும் வரலாம். உங்களுக்கு விடை தெரியும் எனில், சொல்க. சிறு முழுத்தொடர்களில் பின்னொட்டாகவும் எழுதலாம். அவர் வருவாரெனில் நீங்களும் வரலாம். உங்களுக்கு விடை தெரிமெனில் சொல்க. இதே பொருளில் வேறு பல சொற்களை பயன்படுத்துவதும் வழக்கிலுள்ளது. ஆனால் இந்த சொற்களுக்கு வேறு பொருள்களும் இருப்பதால் செந்தரத்தில் அவற்றை பயன்படுத்தவேண்டாம். அவர் வருவார் ஆனால் நீங்களும் வரலாம். அவர் வருவார் என்றால் நீங்களும் வரலாம். உங்களுக்கு விடை தெரியுமானால் சொல்க. உங்களுக்கு விடை தெரியுமென்றால் சொல்க. ஆனால் எதிர்நிகழ்வை குறிக்க பயன்பட்டதை சென்ற பகுதியில் கண்டோம். என்றால் கூற்றுப்பொருளை குறிப்பதை அடுத்த பகுதியி்ல் காண்போம். சிலநேரங்களில் எனில் என்பதனிடத்தில் ஆல் என்ற பின்னொட்டை பயன்படுத்தி செய்தால் என்ற வாய்ப்பாட்டில் எழுதலாம். அவர் வந்தால் நீங்களும் வரலாம். உங்களுக்கு விடை தெரிந்தால் சொல்க. ஆல் மூன்றாம் வேற்றுமையுருபு என்பதை ஆம் பகுதியில் கண்டோம். இது வேற்றுமையுருபாக பெயர்ச்சொல்லின்பின்னும் இடைச்சொல்லாக வினைச்சொல்லின்பின்னும் வருவதால் குழப்பம் நேராது. பொதுவாக கணிதத்திலும் கணினியியலிலும் எனில் தனிச்சொல்லாக வெகுவாக பயன்படுகிறது. x > 5 எனில், x² − 4x > 0. எனினும் என்பதும் ஆனால் போன்று எதிர்நிகழ்வை குறிக்க பயன்படுகிறது. அவர் வந்தார் எனினும், இவர் வரவில்லை. விடை தெரியும் எனினும், சொல்லவில்லை. இதே பொருளில் சிலநேரங்களில் உம் என்ற பின்னொட்டு வழக்கிலுள்ளது. இதை உம்மையுடன் குழப்பாமலிருக்க செந்தரத்தில் பயன்படுத்தவேண்டாம். அவர் வந்தும் இவர் வரவில்லை. விடை தெரிந்தும் சொல்லவில்லை. என்று, என்ற, என்பது என்று என்ற சொல் பெரும்பாலும் நேர்க்கூற்றையும் அயற்கூற்றையும் குறிக்க பயன்படுகிறது. “நாளை வருவேன்” என்று சொன்னான். மறுநாள் வருவான் என்று சொன்னான். மின்மத்தின் மதிப்பு  − 1.602176times10⁻¹⁹C என்று அறிவியலர்கள் ஏற்றிருக்கிறார்கள். கோள்கள் நன்கு வரையறுக்கப்பட்ட சுற்றுப்பாதைகளில் வலம்வருகின்றன என்று அது காட்டுகிறது. இங்கு என்று என்பது இணைப்புச்சொல். மேற்கண்ட ஒவ்வொரு சான்றிலும் இரண்டு முழுத்தொடர்களை அது இணைப்பதை நோக்குக. இத்துகள்களை எதிர்மின்னிகள் என்று அழைக்கிறோம் என்ற பாங்கிலும் என்று என்ற சொல் வருகிறது. சிறு முழுத்தொடர்களில் இது பின்னொட்டாகவும் வரலாம். அவர் வருவாரென்று நினைத்தேன். என்று என்பது எனல் என்ற தொழிற்பெயரின் செய்து எனும் வாய்ப்பாட்டு வினையெச்சம். என்றிரு என்பது அதே வினையின் அடிப்படையிலான ஒரு கூட்டுவினை. அவர் வந்ததும் போகலாம் என்றிருந்தேன். விகிதங்கள் $ :: 1:1.128:1.224$ என்றிருப்பதாக பரிசோதனைகள் காட்டுகின்றன. என்ற, என்கிற, எனும் ஆகியவை இந்த வினையின் பெயரெச்சங்கள்; எனப்படு என்பது செயப்பாட்டுவினை. குமரன் என்ற பெயருடைய மருத்துவர் அழுத்தத்தை textpV = textnRT என்ற வளிமவிதியை பயன்படுத்தி காணலாம் எந்த அயனியும் நீருடன் வினைபுரிவதில்லை என்ற எடுகோளுடன் ஆகியவை சான்றுகள். செயப்பாட்டுவினைக்கு மின்வாய்கள் எனப்படும் இரு மெல்லிய உலோகத்துண்டுகள் இவ்வகையான கட்டமைப்புகள் நூயியினது புள்ளிக்கட்டமைப்புகள் எனப்படுகின்றன ஆகியவை சான்றுகள். என்பது என்ற சொல் எனல் என்ற வினையின் அடிப்படையிலான பெயர்த்தொடர். இங்கு எண்வவிதி பொருந்தாது என்பது வெளிப்படை. கந்தகம் எண்வவிதியை நிறைவேற்றும் சில சேர்மங்களையும் உண்டாக்குகிறது என்பது ஒரு ஆர்வமான உண்மை. எனவே, இன்ன பிற இதுவரை இடைச்சொற்கள் இரண்டு முழுத்தொடர்களை இணைத்து ஒரு முழுத்தொடராக்கும் இணைப்பிகளாக பயன்படுவதை பார்த்தோம். இனி, ஒரு முழுத்தொடரை மேம்படுத்த அதனுடன் சேர்ந்து வரும் சில இடைச்சொற்களை காணலாம். கணித வகுப்பில் ஆசிரியர் நமக்கு சிக்கல்களை தீர்த்துக்காட்டும்போது therefore என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துவதை கவனித்திருக்கிறோம். தமிழில் பாடம்நடத்தும்போதும் இந்த ஆங்கிலச்சொல்லையே சொல்வதுண்டு. அந்தளவுக்கு இந்தச்சொல் கணிதத்தில் ஊறிப்போனது. Therefore என்ற சொல் வரும்போதெல்லாம் நம் மனங்களில் ஒரு எதிர்பார்ப்பு எழுவதுண்டு. அதாவது, இதுவரை சொன்ன கருத்துகளின் முடிவை சொல்லப்போகிறார் என்பதற்கு அந்தச்சொல் ஒரு குறிப்பியாக பயன்படுகிறது. இந்த எதிர்பார்ப்பை நம் மனங்களில் தூண்டுவதற்காகவே அதே குறிச்சொல்லை இயைபுடன் ஆசிரியர் பயன்படுத்துகிறார். இதே செய்நுட்பத்தை கலைத்துறைகளில் நாம் எழுதும்போது பயன்படுத்தலாம். இதுபோன்ற சொற்கள் அந்தந்த இடங்களில் குறிப்பிகளாக பயன்படுவது அலுப்பூட்டாது; மாறாக, சரியான நேரங்களில் சரியான எதிர்பார்ப்புகளை உண்டாக்கி உரையை புரிந்துகொள்ள உதவும். தமிழிலும் இவற்றுக்கு இணையான சொற்களை இயைபுடன் பயன்படுத்துவதை செந்தரமாக்குவோம். Therefore – எனவே: இதுவரை சொன்னதன் முடிபை சொல்லப்போகிறார். Because – ஏனெனில்: இப்போது சொன்னதன் காரணத்தை சொல்லப்போகிறார். That is – அதாவது: இப்போது சொன்னதை வேறு சொற்களால் சொல்லப்போகிறார். In other words – வேறுவிதமாகச்சொன்னால்: சென்ற பத்தியிலோ பகுதியோலோ சொன்னதை மீண்டும் வேறுவிதமாக சொல்லப்போகிறார். On the other hand – இதன் மறுபக்கமாக: இப்போது சொன்னதற்கு மாற்றுக்கருத்தை சொல்லப்போகிறார். Conversely – திருப்புக்கூற்றாக: இப்போது சொன்னதன் திருப்புக்கூற்றை வெளிப்படையாக உரைக்கப்போகிறார். திருப்புக்கூற்றாக என்பதுடன் தொடர்புடையவை Vice versa – திருப்பியவாறு And vice versa – திருப்பியவாறும் என்பவை. திருப்புக்கூற்றுக்கும் திருப்பியவாறுக்குமுள்ள சிறுவேறுபாட்டை உணர்க. சான்றுகள்: கோழி கூவினால் பொழுது விடியும்; திருப்புக்கூற்றாக, பொழுது விடிந்தால் கோழி கூவும். அமெரிக்கா இந்தியாவை நட்புநாடாக கருதுகிறது; திருப்பியவாறும். இங்கு திருப்பியவாறு என்பது இந்தியா அமெரிக்காவை நட்புநாடாக கருதுகிறது என்பதை குறிக்கிறது. Alternatively – மறுவழியாக: இப்போது சொன்னதற்கு ஒரு மாற்றுவழியை சொல்லப்போகிறார். In particular – குறிப்பாக: பொதுவமாக சொன்னதற்கு ஒரு குறிப்பிட்ட தனித்துவத்தை எடுத்துரைக்கப்போகிறார். In summary – சுருக்கவுரையாக: இதுவரை சொன்னதை சுருக்கி சொல்லப்போகிறார். Et cetera - இன்ன பிற If A, then B - A எனில், B பொருள்களையோ சிறு முழுத்தொடர்களையோ எண்களிட்டோ அ, ஆ, இ,… என்று வரிசையிட்டோ பட்டியலிடலாம். பல கருத்துகளை ஒன்றன்பின் ஒன்றாக பட்டியிலிடும்போது முதலில் எத்தனை கருத்துகள் வரப்போகின்றன என்பதை சொல்லி அதன்பின், முதலாவதாக, இரண்டாவதாக, மூன்றாவதாக என்ற சொற்களால் தொடங்கவேண்டும். எல்லா கருத்துகளையும் சொல்லிமுடித்தபின் முடிந்தது என்பதையும் தெரிவிக்கவேண்டும். சான்றுக்காக ஒரு உரைப்பகுதியை கீழே தருகிறேன். அதற்கு நாம் மூன்று கருத்துகளை தனித்தனியே கருதவேண்டும். முதலாவதாக, இது எங்கிருந்து வருகிறது என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். இரண்டாவதாக, இதை ஏற்பதால் ஏற்படும் நன்மைகளும் பின்விளைவுகளும் என்னென்ன என்பதை பட்டியலிட்டுக்கொள்ளவேண்டும். மூன்றாவதாக, இது இல்லாவிட்டால் என்ன இழப்பு நேரும் என்பதை சிந்தித்து இதன் மதிப்பை உணரவேண்டும். இந்த மூன்று கருத்துகளையும் கருதியபின் இந்த உரைப்பகுதி ஒன்றுமே சொல்லவில்லை என்பதை நாம் அறியலாம். செய்யுளுக்கான பொழிப்புரையை எழுதும்போது இதன் பொருள் என்று தொடங்கி என்றவாறு என்று முடிப்பது வழக்கம். இதை (இ-ள்) என்றும் (எ-று) என்றும் சுருங்கக்குறிப்பதுண்டு. இதைப்போலவே, கணிதத்தில் ஒரு தேற்றத்தை கூறியபின், அதன் நிறுவல் உடனே தொடங்காவிட்டால் கூற்றின் முற்று என்று குறிக்கவேண்டும். நிறுவலின் தொடக்கத்தில் நிறுவல் என்றும் முடிந்தபின் நிறுவலின் முற்று என்றும் குறிக்கவேண்டும். ஆங்கிலத்தில் இதை QED என்று குறிப்போம். மேலே சில சொற்கள் குறிப்பிட்ட பாங்குகளில் பயன்பட்டதுபோலவே சில கட்டுமானங்களும் பயன்படுகின்றன. அவற்றுளொன்று … மட்டுமல்லாமல் …உம் என்ற கட்டுமானம். இது மற்ற உருபுகளுடன் சேர்ந்தும் வரலாம். கீழ்க்கண்ட உரை … ஐ மட்டுமல்லாமல் …ஐயும் என்ற கட்டுமானத்தை எடுத்துக்காட்டுகிறது. இருமுனைதிருப்புமை தனித்தனியான பிணைப்புகளை மட்டுமல்லாமல் வெவ்வேறு பிணைப்புகள் வெளியில் அடுக்கப்பெறுவதையும் சார்ந்திருக்கிறது. தேவையற்ற இடைச்சொற்கள் தேவையற்ற சொற்களை தவிர்த்து சுருக்கமாக எழுதினால் வாசிப்பது விரைவாகும். (அ) M என்ற பெருநிறையுடைய ஒரு பொருளும் அதனருகில் m என்ற நிறையுடன் v என்ற திசைவேகத்தில் இயங்கும் ஒரு துகளும் அடங்கிய ஒரு தனிமையான அமைப்பு இருந்தால் என்பதில் என்ற மூன்றுமுறை வருவது தேவையில்லை; ஏனெனில், எண்ணுச்சொற்களும் அளவுச்சொற்களும் பெயரடைகள். M பெருநிறையுடைய ஒரு பொருளும் அதனருகில் m நிறையுடன் v திசைவேகத்தில் இயங்கும் ஒரு துகளும் அடங்கிய ஒரு தனிமையான அமைப்பு இருந்தால் என்று எழுதினால் போதும். மூன்று கிலோ எடையுள்ள அரிசி என்று எழுதினால் போதும். மூன்று கிலோ என்ற எடையுள்ள அரிசி என்று எழுதவேண்டியதில்லை. (ஆ) ஒரு பொருளின் மொத்த எந்திர ஆற்றல் என்பது அதன் நிலைம ஆற்றல் மற்றும் இயக்க ஆற்றல் ஆகியவற்றின் கூடுதல் ஆகும். ஒரு பொருளின் மொத்த எந்திர ஆற்றல் அதன் நிலைம ஆற்றலும் இயக்க ஆற்றலும் சேர்ந்த கூட்டல். (இ) பொதுவாக, A is B என்று ஆங்கிலத்தில் எழுதுவதை A என்பது B ஆகும் என்று எழுதவேண்டாம்; தமிழில் A B என்று எழுதினாலே போதும். இதற்காக, பசு ஒரு விலங்கு என்ற சான்றை ஆம் பகுதியில் முன்பே பார்த்திருக்கிறோம். (ஈ) ஆங்கிலத்தில் A or B என்றிருப்பதை Aயோ Bயோ என்று எழுதவேண்டும். இதுவே தமிழ்நடை. இவ்வாறு எழுதினால் பெயர்ச்சொற்கள் தனியாக நின்று குழப்பத்தை விளைவிக்கா. இராமன் மரத்தையோ செடியையோ நட்டான் இராமன் மரம் அல்லது செடியை நட்டான் புணர்ச்சி புணர்ச்சியை சந்தி என்றும் சொல்கிறோம். இங்கு புணர்ச்சிவிதிகளை அமைமுறையாக தொகுத்து தருகிறேன். இந்த தொகுப்பை முழுமையானதாக கருதவியலாது; எனினும் இன்றைய நடைமுறையில் உரைநடையெழுத போதுமானதாக கருதலாம். தமிழறிஞர்கள் ‘இந்த புணர்ச்சிவிதியால் இது இப்படியாகும். அந்த புணர்ச்சிவிதியால் அது அப்படியாகும்’ என்றெல்லாம் பேசுவதை அடிக்கடி கேட்கிறோம். இதனாலும் நம் கல்விமுறையாலும் எண்ணிலடங்காத குழப்பமான புணர்ச்சிவிதிகள் இருப்பதுபோன்றும் இதை முற்றிலும் கற்பது மிகவும் கடினமானதுபோன்றுமான ஒரு மாயத்தோற்றம் உருவாகியிருக்கிறது. ஆனால், உண்மை அதுவன்று. புணர்ச்சிவிதிகளை அமைமுறையாக ஒரு வரிசையில் பட்டியலிடும்போது கற்பது எளிது என்பதையும் அவற்றுள் பல நீங்கள் ஏற்கனவே அறிந்தவை என்பதையும் மொத்தம் சுமார் இருபது விதிகளே உள்ளன என்பதையும் நீங்கள் இந்தப்படலத்தில் உணர்வீர்கள். மேலும், சில புணர்ச்சிவிதிகள் மற்றவற்றுடன் முரண்படுவதுபோலும் தோன்றுகின்றன. ஒரு விதிக்கு பல விதிவிலக்குகள், ஒவ்வொரு விதிவிலக்குக்கும் மேலும் பல விதிவிலக்குகள் என்றிருப்பதாகவும் தோன்றுகிறது. இந்த படிவரிசையை எளிதாக செயலாற்றும் வகையிலும் முரண்பாடுகள் ஏற்படாத வகையிலும் அமைமுறையாக இங்கு வழங்குகிறேன். புணர்ச்சியின் அடிப்படை புணர்ச்சி எவ்வாறு செயலாற்றுகிறது, அதன் தேவை எவ்வாறு எழுகிறது, அதன் விளைவுகள் யாவை என்பனவற்றை இங்கு சுருக்கமாக காண்போம். புணர்ச்சி செயலாற்றும் விதம் இரண்டு சொற்கள் (அவற்றுளொன்று வேற்றுமையுருபு போன்ற ஒட்டாகவுமிருக்கலாம்) சந்திக்கும்போது புணர்ச்சி ஏற்படுகிறது. முதற்சொல்லை நிலைச்சொல் என்றும் இரண்டாஞ்சொல்லை வருஞ்சொல் என்றும் சொல்வது வழக்கம். மற்ற படலங்களில் சொற்றொடர்களில் முதற்சொல்லின்பின் இரண்டாஞ்சொல் வருவதாக சொன்னோம். இது காலத்தின் அடிப்படையிலானது. அதாவது முதற்சொல்லை எழுதியபிறகு இரண்டாஞ்சொல்லை எழுதுகிறோம்; வாசிப்பதும் அவ்வாறே. ஆனால், தொல்லிலக்கணநூல்களில் உரையை முன்னோக்கி எழுதுவதாகவும் வாசிப்பதாகவும் கருதி நிலைச்சொல்லின்முன் வருஞ்சொல் என்ற மரபை பின்பற்றினார்கள். இது உரையோட்டத்தின் அடிப்படியிலானது. ஆகவே முன் என்ற சொல்லின் பொருள் நாம் இதுவரை புரிந்துகொண்டதற்கு எதிரானதாகிறது. எனினும், புணர்ச்சியைப்பற்றி பேசும்போது நாமும் இந்த மரபை பின்பற்றுவோம். இது பண்டைய இலக்கணநூல்களை நீங்கள் படிக்கும்போது அவற்றை புரிந்துகொள்ள உதவும். புணர்ச்சியை பல விதிகளாக பட்டியலிடலாம். ஒவ்வொரு விதிக்கும் ஒன்றோ பலவோவான முன்னிலவரங்களும் ஒரு விளைவும் இருக்கின்றன. கணினியில் செயலாக்கும்போது ஒவ்வொரு புணர்ச்சிவிதியையும் கணினியில் செயலாற்றக்கூடிய ஒரு படிமுறையாக கருதலாம். சான்றாக, உயிர்முன் வல்லினம் மிகல்: நிலைச்சொல் உயிர்மெய்யெழுத்தில் முடிந்து வருஞ்சொல் வல்லினத்தில் தொடங்கும்போது, அந்த வல்லினம் மிகுகிறது என்பது ஒரு புணர்ச்சிவிதி. இங்கு, ‘உயிர்முன் வல்லினம் மிகல்’ என்பது இந்த விதியின் பெயர்; நிலைச்சொல் உயிர்மெய்யில் முடிவது, வருஞ்சொல் வல்லினத்தில் தொடங்குவது ஆகியவை முன்னிலவரங்கள்; வல்லினம் மிகுவது விளைவு. கொடுக்கப்பட்ட சொற்களுக்கு ஒரு விதியின் முன்னிலவரங்கள் நிறைவேறும்போது அந்த விதி செயலாற்றி விளைவை தருகிறது. சில விதிகளுக்கான முன்னிலவரங்கள் மிகவும் பொதுவமானவை; வேறு சிலவற்றின் முன்னிலவரங்கள் தனித்துவமானவை. குறிப்பிட்ட சொற்களுக்கே தனித்துவமான ஒரு சில விதிகளும் இருக்கின்றன. சிலநேரங்களில் பொதுவமான விதிகளுக்கு விதிவிலக்காக தனித்துவவிதிகள் அமைகின்றன. சான்றாக தொண்ணூறாதல்: ஒன்பதும் பத்தும் புணரும்போது தொண்ணூறு ஆகிறது என்பது மற்றொரு புணர்ச்சிவிதி. இந்த விதி நிலைச்சொல் ஒன்பதும் வருஞ்சொல் பத்துமாக இருக்கும்போது மட்டுமே செயலாற்றுகிறது. இது எல்லாவற்றையும்விட தனித்துவமான விதி. இப்போது ஒரு உண்மையை நோக்குக. தொண்ணூறாதல் என்ற விதியின் முன்னிலவரங்கள் நிறைவேறினால் உயிர்முன்வல்லினமிகல் என்ற விதியின் முன்னிலவரங்களும் நிறைவேறுகின்றன! ஏனெனில், ஒன்பது உயிர்மெய்யில் முடிந்து பத்து வல்லினத்தில் தொடங்குகிறது. இவ்வாறான நிலைமைகளில் அதிக தனித்துவமான விதியே செயலாற்றுகிறது. இங்கு அது தொண்ணூறாதல் விதி. இவ்வாறு, உயிர்முன் வல்லினம் மிகும் விதிக்கான ஒரு விதிவிலக்கை தொண்ணூறாதல்விதி உரைக்கிறது. இலக்கண நூல்களில் பொதுவிதிகளை முதலிலும் விதிவிலக்குகளை அதன்பின்னும் வழங்குவது வழக்கம். ஆனால், இன்றைய கணினித்தொழினுட்பங்களில் பழகிய நமக்கு தனித்துவ விதிகளை முதலிலும் பொதுவ விதிகளை பின்பும் பட்டியலிடுவது வசதியாகிறது. இது கணினியில் செயலாக்கவும் எளிதாகிறது. இந்த முறைமையில் மேலிருந்து கீழாக விதிகளை முயன்றுகொண்டு போகும்போது முதலில் முன்னிலவரங்களை நிறைவேற்றும் விதியை செயலாக்கிவிட்டு அதன்பின் வருபவற்றை விட்டுவிடலாம். பொதுவாக, எல்லா புணர்ச்சிவிதிகளும் நிலைச்சொல்லின் இறுதியெழுத்திலோ வருஞ்சொல்லின் முதலெழுத்திலோ இரண்டிலுமோ விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இடையில் ஒரு எழுத்தோ பல எழுத்துகளோ தோன்றவும் செய்யலாம். சில விதிகள் சொல்லின் ஈற்றயலெழுத்திலும் (இறுதிக்கு முந்திய எழுத்து) விளைவுகளை உண்டாக்குகின்றன. சில விதிகளின் விளைவுகள் நிலைச்சொல்லிலும் வருஞ்சொல்லிலும் மாற்றமேற்படுத்தி அவற்றை இணைத்து ஒற்றைச்சொல்லை வெளியீடாக தருகின்றன. வேறு சில விதிகள் இரண்டுக்குமிடையில் மற்றொரு உருபை புகுத்தி மூன்று பகுதிகளை இடைவிளைவாக வெளியிடுகின்றன. இவ்வாறு மூன்று பகுதிகள் வெளியீடாகும்போது அவற்றிடையில் இரண்டு சந்திகள் இருக்கின்றன. இவற்றுள் ஒவ்வொரு சந்தியையும் தனித்தனியாக புணர்ச்சிக்குள்ளாக்க புணர்ச்சிவிதிகளை மேலிருந்து கீழாக மீண்டும் பயனாக்கவேண்டும். புணர்ச்சிவிதிகளின் சில முன்னிலவரங்கள் சொற்களின் வகைகளை சார்ந்தவை. மற்றவை நிலைச்சொல்லின் இறுதியிலும் வருஞ்சொல்லின் முதலிலுமுள்ள எழுத்துப்பாங்குகளை சார்ந்தவை. இந்த பாங்குகளை விவரிக்க, ஒரு உயிர்மெய்யெழுத்தை அதிலுள்ள மெய்யெழுத்தாகவும் உயிரெழுத்தாகவும் பிரித்துக்கொள்கிறோம். சான்றாக வெள்ளி + பெட்டி என்ற சந்தியை கருதுவோம். நிலைச்சொல்லின் இறுதியெழுத்து ளி; வருஞ்சொல்லின் முதலெழுத்து பெ. இவற்றை மேலும் ளி = ள் + இ, பெ = ப் + எ என்று பிரித்து, நிலைச்சொல் இகரத்தில் முடிவது என்றும் வருஞ்சொல் பகரத்தில் தொடங்குவது என்றும் சொல்கிறோம். சொன்முதலிறுதியெழுத்துகள் சில புணர்ச்சிவிதிகளின் முன்னிலவரங்கள் சொற்களின் முதலிறுதியெழுத்துகளின் அடிப்படையில் இருப்பதால், இந்த எழுத்துகளில் கவனஞ்செலுத்துவோம். [] அட்டவணை 10.1 சொன்முதலில் வரும் எழுத்துகளும் வராதவையும் தமிழில், எல்லா எழுத்துகளும் சொன்முதலிலோ இறுதியிலோ வரவியலாது. சொல்லின் முதலிலும் இறுதியிலும் என்னென்ன எழுத்துகள் வரலாம் என்று இலக்கணம் பட்டியலிடுகிறது. இந்த பட்டியலும் பேச்சொலியியலின் அடிப்படையிலானது; ஆனால் நாம் அவ்வளவு ஆழமாக இலக்கண ஆராய்ச்சியில் இறங்கவேண்டாம். சொன்முதலில் எல்லா உயிரெழுத்துகளும், க, ச, த, ப ஆகிய வல்லினங்களின் எல்லா உயிர்மெய்களும், ந, ம ஆகிய மெல்லினங்களின் எல்லா உயிர்மெய்களும், வு, வூ, வொ, வோ ஆகியவற்றைத்தவிர வகரத்தின் மற்ற உயிர்மெய்களும் ஞா, ஞெ, ஞோ, யா ஆகிய எழுத்துகளும் வருகின்றன. புள்ளிவைத்த எழுத்துகள் சொன்முதலில் வருவதில்லை. ட, ற என்ற வல்லினங்களும் ங, ண, ன, ர, ல, ழ, ள ஆகியவையும் சொன்முதலில் வருவதில்லை. [] அட்டவணை 10.2 சொல்லிறுதியில் வரும் எழுத்துகளும் வராத எழுத்துகளும் சொல்லிறுதியில் பெரும்பாலும் எல்லா மெய்களும், எ, ஒ, ஔ ஆகியவற்றைத்தவிர, மற்றெல்லா உயிர்களின் உயிர்மெய்களாக வரலாம்; ஙகரத்தைத்தவிர மெல்லினமும் இடையினமும் மெய்யெழுத்துகளாகவும் வரலாம். வல்லினம் உயிர்மெய்யாக சொல்லிறுதியில் வரினும், மெய்யெழுத்தாக வராததை நோக்குக. இதனாலே அன்புக் என்ற சொல்லை முன்பு பிழையாக குறித்தேன். ஞ, ந ஆகியவற்றின் மெய்களில் முடியும் சொற்கள் இக்காலத்தில் வழக்கிலில்லாததால் அவற்றையும் சொல்லிறுதியில் வராதவையாக கருதலாம். வகரப்புள்ளியில் முடிவதாக அவ், இவ், எவ் ஆகிய மூன்று முன்னொட்டுகளுமே வழக்கிலுள்ளன. இவற்றை நாம் தனிச்சொற்களாக கருதாததால் வகரத்தில் சொல் முடிவதில்லை என்றே கொள்ளலாம். மேற்கண்டவற்றையெல்லாம் ஒருவர் நினைவில் பதிக்கவேண்டியதில்லை. வேண்டியபோது [] இலும் அட்டவணை 10.2இலும் நோக்கிக்கொள்ளலாம். மெய்மயக்கம் சொல்லின் இடையில் எந்தெந்த எழுத்துகள் இணைந்து வரலாம் என்பதற்கும் வரம்புகள் உள்ளன. ஒரு உயிர்மெய்யெழுத்தை மெய்யொலியைத்தொடர்ந்து உயிரொலி வருவதாக கருதலாம். இதை மெய்மீது எறிவரும் உயிர் என்று இலக்கணத்தார் சொல்வது வழக்கம். எந்த உயிர்மெய்யெழுத்தும் வேறெந்த உயிர்மெய்யின்முன்னும் வரலாம். இவ்வாறு வருவது உயிரொலியும் மெய்யொலியும் மாறிமாறி வருவதற்கு ஒப்பாகும். அவ்வாறான தொடரை நாம் ஒலிப்பதில் எவ்விதமான சிக்கலுமில்லை. ஆனால் இரண்டு மெய்யெழுத்துகள் அடுத்தடுத்து வரும்போது சில சேர்க்கைகளை எளிதில் ஒலிக்கலாம்; வேறு சிலவற்றை ஒலிக்கவியலாது. இது அந்தந்த ஒலிகளை ஒலிக்கும்போது நம் வாயும் நாக்கும் உதடுகளும் என்னென்ன அமைவடிவத்தில் இருக்கின்றன என்பதைப்பொறுத்தது. சான்றாக, க்ன என்ற சேர்க்கையை சொல்ல முயன்றுபாருங்கள். நம்மையறியாமல் ஒரு உயிரொலி இடையில் தோன்றி கின என்பதுபோல் ஒலிப்பதை உணர்வீர்கள். வேறு மொழிகளில் இந்த சேர்க்கை வருகிறதே என்று நீங்கள் வாதிடலாம். ஆனால் கூர்ந்து நோக்கும்போது அந்த ஒலிகள் தமிழொலிகளிலிருந்து சற்றே வேறுபட்டவை என்பதையும் உணர்வீர்கள். ஒற்று தொடரும் உயிர்மெய் ------- ------------------------------ க் க ங் க, ங ச் ச ஞ் ச, ஞ, ய ட் க, ச, ட, ப ண் க, ச, ஞ, ட, ண, ப, ம, ய, வ த் த ந் த, ந, ய ப் ப ம் ப, ம, ய, வ ய் க, ங, ச, த, ப, ஞ, ந, ம, ய, வ ர் க, ங, ச, த, ப, ஞ, ந, ம, ய, வ ல் க, ச, ப, ய, ல, வ வ் ய, வ ழ் க, ங, ச, த, ப, ஞ, ந, ம, ய, வ ள் க, ச, ப, ய, வ, ள ற் க, ச, ப, ற ன் க, ச, ஞ, ப, ம, ய, வ, ற, ன அட்டவணை 10.3 தன்னைத்தொடர்ந்து தானும் பிறவும் மேலும், அந்த மொழிகளில் தமிழ்போன்ற இறுக்கமான இலக்கணவரம்புகள் இல்லாமலிருக்கலாம். இவ்வாறான வரந்தைகள் தமிழில் இருப்பதால் தமிழ் தகவற்பரிமாற்றத்துக்கு ஒரு சிறந்த மொழியாக திகழ்கிறது. புலவர்களும் அறிஞர்களும் தமிழ் ஒரு இனிய மொழி என்பார்கள். நான் என் அறிவியனோக்கில் தமிழ் ஒரு துல்லியமான மொழி என்கிறேன். ஏனெனில், ஒலியன்களிடையில் போதுமான இடைவெளி இருப்பதாலும் இயைபற்ற ஒலியச்சேர்க்கைகளை மேற்கண்ட விதிகள் தவிர்ப்பதாலும், இலக்கணவிதிகளை சரியாக கடைப்பிடித்து பேசும்போது ஒலிமயக்கமும் பொருண்மயக்கமும் ஏற்படும் வாய்ப்பு மிகக்குறைவு. ஒலியன்களிடையில் போதுமான அளவு வேறுபாடுகள் இருப்பது தமிழுக்கு வலிமையூட்டுகிறது. இதனால் தமிழ்த்தகவற்றொடர்பில் பிழைச்சகிப்பு அதிகமாகிறது. புல் என்ற தமிழ்ச்சொல்லை ஒருவர் bull என்றும் மற்றொருவர் pull என்றும் ஒலிப்பினும் கேட்பவர் புல்லையே புரிந்துகொள்வார். ஒரு மெய்யெழுத்தைத்தொடர்ந்து எந்தெந்த மெய்யெழுத்துகள் வரலாம் என்பதை அட்டவணை 10.3 காட்டுகிறது. அட்டவணையில் ஒரு உயிர்மெய் இருப்பது அந்த மெய்யினது எல்லா உயிர்மெய்யெழுத்துகளையும் குறிக்கிறது. சான்றாக க் என்ற மெய்யெழுத்துக்கு நிகராக க பட்டியலில் உள்ளதால், க, கா, கி, கீ, … கௌ ஆகியவற்றுள் ஒன்று வரலாம். விதிகளின் அடிப்படை மேற்சொன்ன முதலிறுதியிடைவிதிகள் இருப்பது முதனோக்கில் குறிப்பற்றவையாக தோன்றலாம். ஆனால் சற்றே சிந்திக்கும்போது ஒவ்வொன்றுக்கும் ஆழ்ந்த காரணம் இருப்பது புலப்படுகிறது. சான்றாக, வு, வூ, வொ, வோ ஆகியவை சொன்முதலில் வரலாகாது என்றும் வகரத்தின் மற்ற எழுத்துகளெல்லாம் வரலாமென்றும் யாரோ காரணமில்லாமல் எழுதிவைத்ததுபோல் தோன்றுகிறது. ஆனால் இந்த நான்கு எழுத்துகளையும் சொல்லிப்பாருங்கள். இவற்றை ஒலிக்கும் முறை முறையே உ, ஊ, ஒ, ஓ ஆகியவற்றை ஒலிக்கும் முறைகளிலிருந்து மிகவும் மாறுபடவில்லை. எல்லாமே இதழ்குவித்து ஒலிப்பவை. இந்த உயிரெழுத்துகளில் தொடங்கும் சொற்கள் தமிழில் இருக்கும்போது, வு, வூ, வொ, வோ ஆகியவற்றில் தொடங்கும் சொற்களும் இருந்தால் ஒலிப்பில் எளிதாக வேறுபாடுகாணவியலாத இரண்டு சொற்கள் தமிழில் இருப்பது சாத்தியமாகிறது. வாழைமரத்துக்கு தரைக்கடியில் உள்ள தண்டுப்பகுதியை அண்டி என்கிறோம். வண்டி என்ற சொல் இருப்பதையும் நாம் அறிவோம். இந்த இரண்டு சொற்களையும் வேறுபடுத்தி ஒலிப்பது எளிது. ஆனால், உருண்டை, வுருண்டை என்ற சொற்களும் இருந்தால் வுருண்டை என்று ஒருவர் சொல்லும்போது மற்றவர்களுக்கு அது உருண்டை என்ற கேட்கும் வாய்ப்பு அதிகம். இதனால் வுவில் சொற்கள் தொடங்குவதற்கு இலக்கணம் தடைவிதிக்கிறது. இலக்கணம் எழுதிய காலத்தில் அவ்வாறான சொற்கள் இல்லை என்று மட்டும் சொல்லாமல் எதிர்காலத்தில் எப்போதும் இவ்வாறான சொற்கள் எழாமல் பார்த்துக்கொள்கிறது! இதை இவ்வளவு விரிவாக ஏன் இங்கு சொல்கிறேனென்றால், இந்த விதிகளின் அடிப்படையில் புணர்ச்சிவிதிகள் எழுகின்றன. புணர்ச்சிவிதிகளும் இதுபோன்ற காரணங்களால் எழுந்தவை. இக்காலத்தில் புணர்ச்சிவிதிகளும் இலக்கணமும் பழையவையென்றும் கடினமென்றும் காலத்துக்கொவ்வாதவை என்றும் அவற்றை புறக்கணித்து புதுத்தமிழென்றும் எளியதமிழென்றும் எழுதும் போக்கு வெகுவாக காணப்படுகிறது. இது தமிழின் முதிர்ச்சியடைந்த ஒழுங்கான கட்டமைப்பை குலைக்கிறது என்று காட்டவே விளக்கினேன். மனிதப்பண்பாடு வளர வளர, புதுப்புது கருத்துகளும் எண்ணங்களும் எந்திரங்களும் தொழினுட்பங்களும் மிகவிரைவாக தோன்றுகின்றன; இலக்கணத்தை எழுதியோரது கற்பனைக்கு எட்டாத அளவில் தோன்றி மலர்கின்றன; வெள்ளமாக பெருகுகின்றன. அவற்றையெல்லாம் விவரிக்க நாம் புதுச்சொற்களை ஆக்கவேண்டியதிருக்கும் என்பதை அறிந்து, அதற்கு அடிப்படையாக ஒரு அருமையான செம்மையான துல்லியமான தன்னியைபான மொழியமைப்பை நமக்கு முன்னோர் தந்திருக்கின்றனர். இதை புரிந்துகொள்ளாமல் நாம் பழையன கழித்து புதியன புகுவோம் என்றும் புதுத்தமிழை உருவாக்குவோம் என்றும் தமிழை சீர்திருத்துவோம் என்றும் தமிழை எளிதாக்குவோம் என்றும் புத்திலக்கணங்காண்போம் என்றும் சொல்லிக்கொண்டு அந்த அருமையான அமைப்பை சீரழிக்கவேண்டாம். அந்த அமைப்பை புரிந்துகொள்ள இந்த நூல் சிறிதாவது உதவும் என்று நம்புகிறேன். பன்மையாதல் சொல்வகையின் அடிப்படையிலான சில விதிகளை முதலில் காண்போம். பிறகு மற்ற சந்திகளை எழுத்தடிப்படையில் பாகுபடுத்தி புணர்ச்சிகளை காண்போம். பெயர்ச்சொல்லுக்குமுன் கள்விகுதி சேர்ந்து பன்மையாக்குவதை முதலில் காண்போம். (அ) தனி நெடிலாகவோ ஒற்றைக்குறிலும் நெடிலுமாகவோ உள்ள பெயர்ச்சொல்லின்முன் கள் வரும்போது இடையில் ககரவொற்று தோன்றுகிறது. ஆ + கள் = ஆ + க் + கள் = ஆக்கள் ஈ + கள் = ஈ + க் + கள் = ஈக்கள் பூ + கள் = பூ + க் + கள் = பூக்கள் மா + கள் = மா + க் + கள் = மாக்கள் பலா + கள் = பலா + க் + கள் = பலாக்கள் புறா + கள் = புறா + க் + கள் = புறாக்கள் சுறா + கள் = சுறா + க் + கள் = சுறாக்கள் (ஆ) இரண்டு எழுத்துகளாலான சொற்களை ஈரெழுத்துச்சொற்கள் என்கிறோம். உகரத்தில் முடியும் ஈரெழுத்துச்சொல்லின்முன் கள் வரும்போதும் இடையில் ககரவொற்று தோன்றுகிறது. தெரு + கள் = தெரு + க் + கள் = தெருக்கள் புழு + கள் = புழு + க் + கள் = புழுக்கள் குழு + கள் = குழு + க் + கள் = குழுக்கள் (இ) மகரவொற்றில் முடியும் சொல்லின்முன் கள் வரும்போது மகரவொற்று ககரத்தின் இனமான ஙகரவொற்றாகிறது. மரம் + கள் = மரங் + கள் = மரங்கள் (ஈ) ஒற்றைக்குறிலைத்தொடர்ந்து லகரவொற்று வரும் பெயர்ச்சொற்களில் லகரவொற்று றகரவொற்றாகிறது. கல் + கள் = கற் + கள் = கற்கள் சொல் + கள் = சொற் + கள் = சொற்கள் பல் + கள் = பற் + கள் இங்கு முறையே க, சொ, ப ஒற்றைக்குறில்கள். (உ) மற்றெல்லாவிடங்களிலும் இயல்புபுணர்ச்சி. கதைகள், விதிகள், வீதிகள், சாலைகள், காதுகள், மாசுகள், துகள்கள், கப்பல்கள், செங்கல்கள், கண்கள், மீன்கள், வால்கள், வாள்கள், தோள்கள், பருப்புகள், வாழ்த்துகள். சாரியை தோன்றல் சில பெயர்ச்சொற்களுடன் வேற்றுமையுருபு சேரும்போது இடையில் சாரியைகள் தோன்றுகின்றன. எந்தெந்ந சூழமைவுகளில் என்னென்ன சாரியைகள் தோன்றுகின்றன என்பதை இந்தப்பகுதியில் காண்போம். சாரியை தோன்றியபின் சாரியைக்குமுன்னும் சாரியைக்குப்பின்னுமாக இரண்டு புதிய சந்திகள் தோன்றுகின்றன. இவற்றுக்கும் தனித்தனியாக புணர்ச்சிவிதிகளை பயனாக்கவேண்டும். அன் எனும் சாரியை அது, இது, எது ஆகியவை அஃறிணைச்சுட்டுப்-பெயர்கள். வந்தது, பெரியது போன்ற பெயர்த்தொடர்களும் அது எனும் அடிப்படையில் எழுகின்றன. இந்த சொற்களின்முன் வேற்றுமையுருபு வரும்போது அன் என்ற சாரியை இடையில் தோன்றுகிறது. அது + ஐ = அது + அன் + ஐ = அதனை எது + கு = எது + அன் + கு = எதற்கு பெரியது + ஆல் = பெரியது + அன் + ஆல் = பெரியதனால் அது + அன் + ஐ எவ்வாறு அதனை ஆகிறது என்பதை கீழ்வரும் மற்ற புணர்ச்சிவிதிகளால் புரிந்துகொள்ளலாம். அற்றுச்சாரியை அவை என்ற சொல்லுக்கும் அவை என்ற விகுதியுடன் முடியும் பெயர்த்தொடருக்கும்முன் வேற்றுமையுருபுகள் வரும்போது இடையில் அற்று என்ற சாரியை தோன்றுகிறது. இதன் விளைவாக அவற்று என்பதனுடனே வேற்றுமையுருபுகள் சேர்கின்றன. அவை + ஐ = அவற்று + ஐ = அவற்றை அவை + ஆல் = அவற்று + ஆல் = அவற்றால் அவை + கு = அவற்று + கு = அவற்றுக்கு இவ்வாறே, அவற்றிலிருந்து, அவற்றது, அவற்றில். இது, அங்கு மேய்கின்றவற்றை விரட்டு என்றவாறு பெயர்த்தொடர்களுக்கும் பொருந்தும். இவை, எவை, பல, சில ஆகிய சொற்கள் வேற்றுமையுருபுகளுடன் சேரும்போதும் அற்றுச்சாரியை இடையில் வருகிறது. எனவே, இவற்றை, பலவற்றை, இவற்றின், சிலவற்றின், எவற்றுக்கு என்று எழுதவேண்டும். அற்றுச்சாரியையுடன் இன்சாரியையை சேர்த்து அவற்றினை, பலவற்றினை என்றவாறும் எழுதலாம். இதனால் இங்கு அற்று கட்டாயச்சாரியை என்றும் இன் விருப்புமச்சாரியை என்றும் தமிழறிஞர்கள் சொல்கின்றார்கள். (பொற்கோ, 2002). நாம் கட்டாயச்சாரியையை மட்டும் எடுத்து விருப்புமச்சாரியையை விட்டுவிடுவோம். அதாவது அவற்றை, இவற்றை என்றே எழுதுவோம்; அவற்றினை, இவற்றினை என்று எழுதவேண்டாம். எழுதினால் பிழையில்லை; தேவையில்லாததால் சீர்மைக்காக அன் இல்லாமல் எழுதுவோம். இவ்வாறே வந்தவை, சென்றவை போன்றவற்றுக்கும் வந்தவற்றை சென்றவற்றுக்கு என்றவாறு எழுதுவோம்; வந்தவற்றினை சென்றவறிற்கு என்று எழுதவேண்டாம். அத்துச்சாரியை பெயர்ச்சொல் ம் என்று முடியும்போது அந்த பெயர்ச்சொல்லுக்கும் எந்த வேற்றுயுருபுக்குமிடையில் அத்துச்சாரியை வருகிறது. இதன் விளைவாக பெயர்ச்சொல் அத்து என்று முடிவதுபோல் வேற்றுமையுருபுடன் சேர்கிறது. மரம் + ஐ = மரத்து + ஐ = மரத்தை படம் + அது = படத்து + அது = படத்தது கோட்டாளத்துக்கு காப்பி கொடுங்கள் அவர் உங்கள் படம்-ஐ விரும்புகிறார் என்று பேசுபுக்கு எழுதுவது தமிழுக்கு அவமதிப்பு. அவர் உங்கள் படத்தை விரும்புகிறார் என்பதே சரி. தன்மைமுன்னிலையில் வேற்றுமை நான், நாம், நீ, நீர், நீங்கள், தான், தாங்கள் ஆகிய சொற்களுடன் ஒரு வேற்றுமையுருபு சேரும்போது அவை முறையே என், நம், உன், உம், உங்கள், தன், தங்கள் என்றாகின்றன. இதன்படி இரண்டாம் வேற்றுமையுருபுடன் என்னை, எங்களை, உன்னை, உம்மை, உங்களை, தன்னை, தங்களை என்றும், ஆறாம் வேற்றுமையுருபுடன் அஃறிணைக்கு எனது, எங்களது, உனது, உமது, உங்களது, தனது, தங்களது என்றும் உயர்திணைக்கு என்னுடைய, எங்களுடைய, உன்னுடைய, உம்முடைய, உங்களுடைய, தன்னுடைய, தங்களுடைய என்றும் ஆகின்றன. இதைப்போலவே, எனக்கு, என்னுடன், என்னால், உன்னால், இன்ன பிற. நான் என்ற சொல்லுடன் அது சேரும்போது எனது என்றாகிறது. இது எப்படி? யான் என்ற சொல்லே மருவி இக்காலத்தில் நான் என்று வழங்குகிறது. ஆனால் அதற்குமுன்பே யான் + அது = எனது என்ற சொல் வழக்கிலிருந்திருக்கிறது. குற்றியலுகரப்புணர்ச்சி இனி எழுத்தடிப்படையிலான புணர்ச்சிகளை காண்போம். இதற்காக சொல்லின் முதலிலும் இறுதியிலும் வரும் எழுத்துகளை உயிரெழுத்துகளாகவும் மெய்யெழுத்துகளாகவும் பிரித்து உரையாற்றுவது வழக்கம். உயிரெழுத்துகளில் முடியும் சொற்களில் குற்றியலுகரத்தை தனியாக முதலில் கருதுவது வசதியாகிறது. சில சொற்களின் இறுதியில் வரும் கு, சு, டு, து, பு, று ஆகிய வல்லினவுகரங்கள் உகரத்துக்கு இயல்பான ஒருமாத்திரையிலிருந்து அரைமாத்திரையாக குறுகி ஒலிப்பதுண்டு. அதாவது உதடுகளை முற்றிலும் குவித்து ஒலிக்காமல் அரைகுறையாக ஒலிக்கிறோம். இவை குற்றியலுகரங்கள். குரங்கு என்ற சொல்லை சொல்லிப்பார்த்து இதை நீங்களே உணரலாம். இந்த சொல்லிலுள்ள முதற்குகரத்தை முழுமையாகவும் இறுதிக்குகரத்தை இதழ்களை முற்றிலும் குவிக்காமலும் ஒலிக்கும் ஒரு போக்கு இருக்கிறது. இதனால் முந்தையதை முற்றியலுகரம் என்றும் பிந்தையதை குற்றியலுகரம் என்றும் இலக்கணம் வேறுபடுத்துகிறது. சொல்லின் இறுதியில் வரும் எல்லா வல்லினவுகரங்களும் குற்றியலுகரங்கள் அல்ல. முற்காலத்தில் குற்றியலுகரத்தை தனியெழுத்தால் குறிந்ததாக தோன்றுகிறது. ஆனால் வரலாற்றுப்போக்கில் எந்தெந்த சொற்களில் குற்றியலுகரங்கள் என்ற தகவலை இழந்துவிட்டோம். இன்றைய நிலையில் சொல்லிறுதியில் வரும் எல்லா குசுடுதுபுறுகளையும் குற்றியலுகரங்களாக கொள்ளலாம்; ஆனால், இதற்கு சில விதிவிலக்குகள் இருக்கலாம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. குற்றியலுகரத்தை அதற்குமுன் வரும் எழுத்தின் அடிப்படையில் பாகுபடுத்துகிறோம். இரண்டு எழுத்துகளாலான சொற்களில் முதலெழுத்து நெடிலாகவும் இரண்டாமெழுத்து குற்றியலுகரமாகவும் இருந்தால், அது நெடிற்றொரடர்க்குற்றியலுகரம். ஈற்றயல் உயிரெழுத்தாக வரும் மற்றெல்லாம் உயிர்த்தொடர்க்குற்றியலுகரம். ஈற்றயல் வல்லினம், மெல்லினம், இடையினம், ஆய்தம் எனும்போது அவற்றை முறையே வன்றொடர்க்குற்றியலுகரம், மென்றொடர்க்குற்றியலுகரம், இடைத்தொடர்க்-குற்றியலுகரம், ஆய்தத்தொடர்க்குற்றியலுகரம் என்று சொல்கிறோம். காடு : நெடிற்றொ-ம் படு, குருடு, அழுக்காறு : உயிர்த்தொ-ம் பாட்டு, தேக்கு, பருப்பு : வன்றொ-ம் குரங்கு, பஞ்சு, பாம்பு : மென்றொ-ம் மூழ்கு, சார்பு : இடைத்தொ-ம் எஃகு : ஆய்தத்தொ-ம் ஆகியவை சான்றுகள்; இங்கு, தொடர்க்குற்றியலுகரம் என்பதை தொ-ம் என்று சுருக்கமாக குறித்தேன். ஆய்தத்தொடர் மிகக்குறைவாகவே வழக்கிலிருக்கிறது; அது இங்கு சொன்ன எந்த புணர்ச்சிவிதியிலும் வரவில்லை. எண்ணுப்புணர்ச்சி ஒன்றுமுதல் பத்துவரையான சொற்கள் பெரும்பாலும் குற்றியலுகரங்கள். ஏழு வல்லெழுத்தில் முடியாததால் அதை குற்றியலுகரமாக கருதவியலாது; எனினும் அதுவும் உகரத்திலே முடிகிறது. ஆயிரம் மகரத்தில் முடிகின்றது. இலட்சத்தையும் கோடியையும் நாம் இக்காலத்தின் கலைத்துறைகளில் பயன்படுத்தவேண்டாம்; நூறாயிரம், இருமடியாயிரம் போன்றவற்றை பயன்படுத்துவோம். ஆகவே, மகரத்தில் முடியும் சொல்லைத்தவிர மற்ற முழுவெண்களெல்லாம் உகரத்தில் முடிகின்றன; பெரும்பாலானவை குற்றியலுகரங்கள். எண்கள் ஒன்றுடனொன்றும் மற்ற சில சொற்களுடனும் புணர்வதற்கான சில தனித்துவவிதிகள் உள்ளன. அவற்றை இங்கு பார்ப்போம். (அ) பத்து என்ற சொல்லின்முன் இரண்டு வரும்போது, த்து ஆகிய இரண்டு எழுத்துகளும் மறைந்து இடையில் இரண்டு னகரவொற்றுகள் தோன்றுகின்றன. இவ்வாறு விடை பன்னிரண்டு என்றாகிறது. பத்து + இரண்டு = ப + ன்ன் + இரண்டு இதுபோன்ற விதிகளை பத்தும் இரண்டும் சேரும்போது அது பன்னிரண்டு ஆகிறது என்றவாறு சொல்லியிருக்கலாம். ஆனால், என்னென்ன எழுத்துகள் மறைகின்றன, எவை தோன்றுகின்றன, எவை மாறுகின்றன என்றே இலக்கணத்தில் சொல்வது வழக்கம். (ஆ) பத்து என்ற சொல்லைத்தொடர்ந்து எந்த எண்ணும் வரும்போது இதிலுள்ள து மறைந்து இன்சாரியை தோன்றுகிறது. பத்து + ஒன்று = பத் + இன் + ஒன்று = பதினொன்று பத்து + மூன்று = பத் +இன் + மூன்று = பதின்மூன்று இவ்வாறே, பதினான்கு, பதினைந்து, பதினாறு, பதினேழு, பதினெட்டு, பதினொன்பது. (இ) இரண்டு என்ற சொல்லின்முன் எந்த பெயர்ச்சொல் வரும்போதும் அது இரு என்றாகிறது. மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என்பவற்றின்முன் பெயர்ச்சொல் வரும்போது, முறையே மு, நால், ஐம், அறு, ஏழ், எண் என்று மாறி பிறகு மேலும் புணர்கின்றன, இரண்டு + சொல் = இருசொல் மூன்று + கனி = மு + கனி = முக்கனி நான்கு + முகன் = நால் + முகன் = நான்முகன் ஐந்து + பொன் = ஐம்பொன் ஆறு + கோணம் = அறுகோணம் ஏழு + ஆழாக்கு = ஏழாழாக்கு எட்டு + திசை = எண் + திசை = எண்டிசை இரண்டுமுதல் எட்டுவரையான எண்களின்முன் பத்து வரும்போது பத்தின் தகரவொற்று மறைந்து பது என்றாகி மேலும் புணர்கிறது. இதனால் இருபது, முப்பது, நாற்பது, ஐம்பது, அறுபது, எழுபது, எண்பது என்ற சொற்களை பெறுகிறோம். (ஈ) ஒன்பதும் பத்தும் புணரும்போது தொண்ணூறு ஆகிறது. ஒன்பது + பத்து = தொண்ணூறு இந்த விதியை நான் இப்படி சொல்லிவிட்டேன். ஆனால் தொல்காப்பியம் என்ன சொல்கிறது தெரியுமா? ஒன்பதுமுன், பத்து வரும்போது, வருஞ்சொல்லின் தகரப்புள்ளி மறைந்து ஆய்த எழுத்து தோன்றுகிறது; குற்றியலுகரமெய் மறைந்து, ஒகரத்தின் மீது தகரப்புள்ளியெழுத்து வருகிறது; அந்த ஒகரத்தை அடுத்து இரண்டு ணகரப்புள்ளியெழுத்துக்கள் தோன்றுகின்றன; பஃது என்ற சொல்லின் ஆய்தவெழுத்தும், பகரங்களும் மறைகின்றன; நிலைச்சொல்லில் ஊகாரம் வருகிறது; தகரமெய் றகரமெய்யாக மாறுகிறது. அதாவது, ஒன்பது + பத்து = ஒன்பது + பஃது = ஒன்ப + பஃது = தொன்ப + பஃது = தொண்ண்ப + பஃது = தொண்ண + து = தொண்ணூ + து = தொண்ணூ + று = தொண்ணூறு. ஏன் இவ்வளவு கழைக்கூத்து? எந்தக்காரணமுமில்லாமல் மக்கள் இப்படித்தான் சொல்கிறார்கள் என்ற உண்மையை ஒப்புக்கொள்ளாமல், ஏதோ சப்பைக்கட்டு கட்டுவதுபோலுள்ளது. ஒருவேளை இது தொல்காப்பியரது நகைச்சுவையுணர்வோ! நம் ஆசிரியர்கள் நமக்கு சிரிப்பூட்டுவதுபோல் அப்போதும் இருந்திருக்கலாமே! இதன் மறுபக்கமாக, இதற்கெல்லாம் அறவியற்காரணங்களோ வரலாற்றுக்காரணங்களோ இருக்கலாம். யார் கண்டார்! ஆனால் ஒன்பது + பத்து = தொண்ணூறு நமக்கு போதும். உள்ளொற்று மிகல் பெரும்பான்மையான வருஞ்சொற்களுக்கு, டு, று என்று முடியும் நெடிற்றொடர்க்குற்றியலுகரத்திலும் உயிர்த்தொடர்க்குற்றியலுகரத்திலும் குற்றியலுகரத்தின் மெய் இரட்டிக்கிறது. காடு, மாடு, ஆடு, ஆறு, மாறு, குருடு, கயிறு, கோட்பாடு ஆகியவை காட்டு, மாட்டு, ஆட்டு, ஆற்று, மாற்று, குருட்டு, கயிற்று, கோட்பாட்டு என்றாகி பிறகு வருஞ்சொல்லுடன் மேலும் புணர்கின்றன. இதை காடு + * = காட்டு + * ஆறு + * = ஆற்று + * குருடு + * = குடுட்டு + * கயிறு + * = கயிற்று + * கோட்பாடு + * = கோட்பாட்டு + * என்றவாறு குறிக்கலாம்; இங்கு, எந்தச்சொல்லும் வரலாம் என்பதை உடுக்குறியால் குறிக்கிறோம். ஐ என்ற இரண்டாம் வேற்றுமையுருபுடன் சேரும்போது காட்டை, மாட்டை, ஆட்டை, ஆற்றை, மாற்றை என்றாவதை 10.5.4ஆம் பகுதியில் காண்போம். வருஞ்சொன்முதல் வல்லினமெனில் காட்டுப்பூனை, சோற்றுப்பானை, கிணற்றுத்தவளை, ஆட்டுக்கால் என்றவாறு வல்லொற்று மிகுவதை 10.5.3ஆம் பகுதியில் காண்போம். ஆறு என்ற சொல் எண்ணாக வரும்போது ஒற்று மிகாதது ஒரு விதிவிலக்கு. ஏழிலிருந்து ஆறைக்குறைத்தால் ஒன்று. நீர்நிலையை குறிக்கும்போதே ஒற்று மிகுகிறது. படகால் ஆற்றை கடந்தான். பெரும்பான்மையான வருஞ்சொற்களுக்கு என்று இந்த விதியை தொடங்கியதால் விதிவிலக்குகள் இருப்பது தெளிவு. ஆறுகடந்தான், நாடுகடத்தப்பட்டான், சோறுதின்றான், வீடுசென்றான் போன்ற இரண்டாம் வேற்றுத்தொகைகளில் ஒற்று இரட்டிக்கவில்லை. மூலக்கூறு, மாதிரிக்கூறு என்ற இக்காலச்சொற்களையும், கூற்று என்ற சொல்லிலிருந்து வருவித்ததான பொருள்கோளை தவிர்ப்பதற்காக, மூலக்கூற்று, மாதிரிக்கூற்று என்று ஆக்கவில்லை. வல்லினம் இரட்டித்தல் வன்றொடர்க்குற்றியலுகரத்துக்கும் மென்றொ-டர்க்குற்றியலுகரத்துக்கும்முன் வல்லினம் வரும்போது அந்த வல்லினம் மிகுகிறது. வருஞ்சொல்லின் வல்லினம் க, ச, த, ப ஆகியவற்றை குறிக்கிறது; ஏனெனில், ட, ற சொல்லின் தொடக்கத்தில் வராதவை. கொக்கு + கால் = கொக்குக்கால் குரங்கு + தலை = குரங்குத்தலை பாட்டு + பாடினான் = பாட்டுப்பாடினான் நெடிற்றொடர்க்குற்றியலுகரம் 10.5.2ஆம் பகுதியில் கண்டபடி ஒற்று மிகுந்து வன்றொடர்க்குற்றியலுகரமா-வதால், வல்லினம் வரும்போது மற்றொருமுறை ஒற்று மிகுகிறது. காட்டு + பூனை = காட்டுப்பூனை சோற்று + பானை = சோற்றுப்பானை கயிற்று + கட்டில் = கயிற்றுக்கட்டில் கோட்பாட்டு + கருத்துரு = கோட்பாட்டுக்கருத்துரு உயிர் வரின் ஓடும் குற்றியலுகரத்தின்முன் உயிரெழுத்து வரும்போது குற்றியலுகரத்தின் உகரம் மறைகிறது. தத்து + எடுத்தான் = தத்தெடுத்தான் சோறு + உண்டான் = சோறுண்டான் நெடிற்றொடர்க்குற்றியலுகரம் 10.5.2ஆம் பகுதியில் கண்டபடி ஒற்று மிகுந்து வன்றொடர்க்குற்றியலுகரமாவதால், அது மேலும் உயிர்களுடன் புணர்கிறது. காட்டு + ஐ = காட்டை ஆற்று + இன் = ஆற்றின் உயிரும் உயிரும் இரண்டு உயிர்கள் சந்தித்து இணையும்போது இடையில் ஒரு புதிய ஒலி பிறக்கிறது. இதை உடம்படுமெய் என்கிறோம். இது பிறக்கும் காரணத்தை சற்று விரிவாக காண்போம். உடம்படுமெய் மகிழ்ச்சி+அளிக்கிறது என்ற சொற்களை இடைவிடாமல் உரக்க சொல்ல முயலுங்கள். ஒன்று, மகிழ்ச்சி என்ற சொல்லுக்கும் அளிக்கிறது என்ற சொல்லுக்குமிடையில் ஒரு விட்டிசைப்பு தோன்றுகிறது; அல்லது, மகிழ்ச்சியளிக்கிறது என்ற ஒலியே உங்கள் வாயிலிருந்து வருகிறது. இதன் காரணம், நிலைச்சொல் ஒரு உயிரெழுத்தில் முடிகிறது; அடுத்த சொல் ஒரு உயிரெழுத்தில் தொடங்குகிறது. இரண்டு உயிரொலிகளை அடுத்தடுத்து இடைவிடாமல் சொல்லவியலாது. அப்படி சொல்லமுயலும்போது இடையில் ஒரு மெய்யொலி இயல்பாகவே தோன்றிவிடுகிறது. இதுபோன்ற இயல்பான நிகழ்வுகளையே புணர்ச்சிவிதிகள் எதிரொலிக்கின்றன. தமிழின் ஒலியமைப்பும் புணர்ச்சிவிதிகளும் அறிவியலடிப்படையானவை. இவ்வாறு இரண்டு உயிரெழுத்துகளுக்கிடையில் தோன்றும் மெய்யெழுத்தை உடம்படுமெய் என்கிறோம். நிலைச்சொல் இகரவொலியில் (இ, ஈ, ஐ) முடிந்தால் யகரவொற்றும் இல்லாவிட்டால் வகரவொற்றும் உடம்படுமெய்யாக வருகின்றன. மகிழ்ச்சி + அளிக்கிறது = மகிழ்ச்சி + ய் + அளிக்கிறது = மகிழ்ச்சியளிக்கிறது. அணு + எண் = அணு + வ் + எண் = அணுவெண். மகிழ்ச்சி + தருகிறது = மகிழ்ச்சிதருகிறது என்பதில் இடையில் எந்த மாறுதலும் இல்லையெனினும் இதுவும் புணர்ச்சியே. இது இயல்புபுணர்ச்சி. உடம்படுமெய்யின் தன்மை உயிரும் உயிரும் சந்தித்தால் உடம்படுமெய் தோன்றுகிறது. அணு + எண் = அணுவெண் மணி + ஓசை = மணியோசை தமிழில் உயிரொலிகளுக்கிடையில் யகரமும் வகரமும் உடம்படுமெய்யாக தோன்றுகின்றன. இவை மெய்யெழுத்துகளாயிருப்பினும் இவற்றின் ஒலிகளில் உயிரொலிகளின் பண்பும் இருக்கிறது. இதுபோன்ற ஒலிகளை மொழியியலர்கள் அரையுயிர்கள் என்கிறார்கள். ஆங்கிலத்திலும் w, y ஆகிய எழுத்துகளை அரையுயிர்கள் என்கிறார்கள். இக்காலத்தில் நாம் உதட்டைக்கடித்து வகரத்தை ஒலிப்பது சரியில்லையோ என்று தோன்றுகிறது. ஆங்கிலத்தில் v ஒலிக்கு உதட்டை கடித்தும், w ஒலிக்கு குவித்தும் சொல்வார்கள். இதனால் wஇனது ஒலி உவ போன்று ஒலிக்கும். நீங்கள் அணு, எண் ஆகிய இரண்டு சொற்களையும் அடுத்தடுத்து ஒலித்துப்பாருங்கள். இடையில் இதழ்குவிந்து பிரிவதால் வகரம்போன்ற ஒரு ஒலி நம்மையறியாமலே தோன்றிவிடுகிறது. இதைத்தான் உடம்படுமெய் என்று சொல்லி வகரத்தால் குறிக்கிறோம். இதுவே வகரத்தினது உண்மையான ஒலியாயிருக்கலாம். அழுத்தம் + அலை = அழுத்தவலை அழுத்தம் + வலை = அழுத்தவலை என்பனவற்றில் (மகரங்கெட்டு உடம்படுமெய் வருவதான) புணர்ச்சிக்குப்பின் அழுத்தத்தினது அலைக்கும் வலைக்கும் வேறுபாடுகாண இயலாது. ஆயுதம் + இலக்கு = ஆயுதவிலக்கு ஆயுதம் + விலக்கு = ஆயுதவிலக்கு என்பனவற்றில் ஆயுதங்களினது இலக்குக்கும் விலக்குக்கும் வேறுபாடுகாண இயலாது. ஆனால் பேசும்போது ஒரு சிறு ஒலிவேறுபாட்டால் இவற்றிடையில் வேறுபாடு காட்டலாம். அதாவது வகரத்தை கடித்து ஒலிப்பதன்மூலம் வலையையும் விலக்கையும் கடிக்காமல் குவித்து ஒலிப்பதன்மூலம் அலையையும் இலக்கையும் காட்டலாம். இதனாலே தொல்காப்பியர் எழுத்தோ ரன்ன பொருடெரி புணர்ச்சி யிசையிற் றிரித னிலைஇய பண்பே அவைதாம் முன்னப் பொருள புணர்ச்சி வாயி னின்ன வென்னு மெழுத்துக்கட னிலவே (தொல் 141, 142) என்றார்போலும். அதாவது, புணர்ச்சியால் ஒன்றுபடும் வெவ்வேறு பொருளுடைய சொற்களை ஒலிப்பின் சிறு வேறுபாடுகளால் வேறுபடுத்தலாம் எனினும் அவற்றை எழுத்தில் வேறுபடுத்தவியலாது என்கிறார். இகரத்தின்முன் யகரம் தோன்றலாமா? தொல்காப்பியத்தில் உடம்படுமெய் எவை என்று சொல்லவில்லை. நன்னூல் இகரவொலிக்குமுன் யகரமும் மற்ற ஒலிகளுக்குமுன் வகரமும் உடம்படுமெய் என்கிறது. இருப்பினும் வருஞ்சொல் இகரமாகும்போதும் யகரத்தை உடம்படுமெய்யாக்கி ஆயுதம் + இலக்கு = ஆயுதயிலக்கு என்று எழுதிவிட நாம் விரும்பினால், அதற்கு மிகுந்த துணிச்சல் வேண்டும். இந்த துணிச்சல் இருந்தால், பக்கம் + இலையடுக்கம் = பக்கயிலையடுக்கம் இருமம் + ஈரடுக்கு = இருமயீரடுக்கு இளம்பருவம் + இறகு = இளம்பருவயிறகு உகமம் + ஈரப்பதம் = உகமயீரப்பதம் உள்வம் + இடைவெட்டு = உள்வயிடைவெட்டு உள்வம் + இழப்பு = உள்வயிழப்பு கேளா + ஈவுத்தொகை = கேளாயீவுத்தொகை என்பனவும் எளிதாகின்றன. அகரம் குறுகலாமா? இரண்டு உயிரெழுத்துகளை அடுத்தடுத்து ஒலிப்பது கடினமாதலால் உடம்படுமெய் இடையில் வருகிறது. அதற்கு கோட்பாட்டளவில் சாத்தியமான மற்றொரு தீர்வு ஒரு உயிரொலியை நீக்குவது. தோற்க + அடித்தல் = தோற்கடித்தல் என்பதில் இந்த நீக்கமே செயலாகிறது. இலக்கணத்தை இறுக்கமாக கடைப்பிடித்தால் தோற்கவடித்தல் என்றே வரும். இவ்வாறு அகரம் குறுகுவதையும் எந்த இலக்கணநூலும் சொன்னதாக நான் அறியேன். இருப்பினும் இரும + அளவம் = இருமளவம் என்பது இருமவளவத்தைவிட எளிதாக தோன்றுகிறது. இதற்கும் மிகுந்த துணிவு தேவையாகிறது. முந்தைய பகுதியில் சொன்ன இகரம் வரும்போது யகரமும் இந்தப்பகுதியில் சொன்ன அகரக்குறுக்கலும் என் முன்மொழிவுகளேயன்றி வேறல்ல. பார்க்கப்போனால், இந்த நூலிலுள்ள பல கருத்துகள் என் முன்மொழிவுகளே; எனினும் அவை ஏற்கனவே இருக்கும் இலக்கணத்தின் அடிப்படையில் சொல்பவை. ஆனால் இந்த இரண்டும் புதிய இலக்கணம் எழுதுவதன் முதற்படியாகின்றன. அதனால் இவற்றை ஓரடி பின்னின்றே முன்மொழிகிறேன். மற்ற உடம்படுமெய்கள் தொல்காப்பியம் உடம்படுமெய்யைப்பற்றி சொல்கிறது; ஆனால் எந்தெந்த எழுத்துகள் உடம்படுமெய்யாக வரலாம் என்பதை சொல்லவில்லை. பின்பு வந்த நன்னூல் வகரத்தையும் யகரத்தையும் உடம்படுமெய்களாக குறிப்பிடுகின்றது. அதன்பின் வந்த எல்லா இலக்கணநூல்களும் அவ்வாறே சொல்வதாக தோன்றுகிறது. வேறு மெய்களும் உடம்படுமெய்யாகலாமா என்ற கேள்வி எழுகிறது. ஓட்டுநர், அறிஞர் என்ற சொற்களில் முறையே நகரமும் ஞகரமும் உடம்படுமெய்கள் என்று யாரோ ஒரு பேசுபுக்குப்பதிவில் சொன்னதாக எனக்கு நினைவிருக்கிறது. ஓட்டு + அர் = ஓட்டு + ந் + அர் = ஓட்டுநர் அறி + அர் = அறி + ஞ் + அர் = அறிஞர் இங்கு ஓட்டு முற்றியலுகரமாக செயலாற்றுகிறது. இதை உங்கள் தகவலுக்காக தந்திருக்கிறேன். உயிரும் மெய்யும் இனி உயிரின்முன் மெய் வருவதை காண்போம். தாவரப்பெயர்களின் புணர்ச்சி உயிரில் முடியும் எந்தச்சொல்லும் நிலைச்சொல்லாக வரும் சூழமைவுக்கான புணர்ச்சியை சொல்ல முயன்றால், மரங்களின் பெயர்களும் வேறு சில தாவரங்களின் பெயர்களும் விதிவிலக்காகின்றன. அதனால் அவற்றை முதலில் சொல்லிவிட்டு பிறகு எஞ்சியவற்றுக்கான விதியை பொதுவிதியாக அடுத்த பகுதியில் சொல்கிறேன். மா, பலா, புளி, அரளி, பருத்தி, தேக்கு, பாக்கு, வேம்பு, வாழை, பனை, ஈச்சை, தாழை, சுரை, தென்னை போன்ற பல தாவரங்களின் பெயர்கள் உயிரில் முடிகின்றன. வருமெழுத்து வல்லினமாயிருக்கும்போது, எல்லா மரப்பெயர்களுக்கும் ஒரே விதியையும் சொல்ல இயலவில்லை. ஆகாரத்தில் முடியும் மரப்பெயர்களுக்கு ஒரு விதி என்றும் சொல்ல இயலவில்லை. மாவுக்கு இது, பலாவுக்கு அது என்று தனித்தனியே சொல்லவேண்டிய அளவுக்கு இந்த புணர்ச்சிகள் தனித்துவமானவை. ஆனால் இவற்றை பல வகுப்புகளாக வகுக்கலாம். (அ) பலா, அரளி, பருத்தி, பாக்கு, வாழை, சுரை ஆகியவற்றின் முன் வல்லினம் வரும்போது 10.7.3ஆம் பகுதியில் சொல்லப்போகும் பொதுவிதி செயலாகிறது. அதாவது அந்த வல்லினம் மிகுகிறது. பலா + காய் = பலாக்காய் அரளி + பூ = அரளிப்பூ பருத்தி + கொட்டை = பருத்திக்கொட்டை பாக்கு + தோப்பு = பாக்குத்தோப்பு வாழை + கன்று = வாழைக்கன்று சுரை + காய் = சுரைக்காய் (ஆ) மா என்ற மரப்பெயரின்முன் வல்லினம் வரும்போது அந்த வல்லினத்தின் இனவொற்று தோன்றுகிறது மா + காய் = மாங்காய் மா + சோலை = மாஞ்சோலை மா + தளிர் = மாந்தளிர் மா + பழம் = மாம்பழம் (இ) புளி, தேக்கு, வேம்பு ஆகிய சொற்களின்முன் வல்லினம் வரும்போது அம் சாரியை இடைவருகிறது. இதனால் ஏற்படும் இரண்டு சந்திகளும் அவற்றுக்குரிய விதிகளால் மேலும் புணர்கின்றன. புளி + காய் = புளி + அம் + காய் = புளியங்காய் தேக்கு + கன்று = தேக்கு + அம் + கன்று = தேக்கங்கன்று வேம்பு + பூ = வேம்பு + அம் + பூ = வேப்பம்பூ (ஈ) மாதுளை, தாழை, ஈச்சை, பனை என ஐகாரத்தில் முடியும் சொற்களின்முன் வல்லினம் வரும்போது: நிலைச்சொல் தென்னையாகவும் வருஞ்சொல் காய் என்றும் இருக்கும்போது விளைவு தேங்காய் தென்னை + காய் = தேங்காய் மற்றெல்லாவிடங்களிலும் ஐகாரம் மறைந்து அம் சாரியை தோன்றுகிறது. மாதுளை + பழம் = மாதுள் + அம் + பழம் = மாதுளம்பழம் தாழை + பூ = தாழ் + அம் + பூ = தாழம்பூ ஈச்சை + பழம் + ஈச்ச் + அம் + பழம் = ஈச்சம்பழம் பனை + காய் = பன் + அம் + காய் = பனங்காய் தென்னை + குலை = தென்ன் + அம் + குலை = தென்னங்குலை (உ) புளியின்முன் மெல்லினமோ இடையினமோ வரும்போது அ என்ற சாரியை இடைவருகிறது. புளி + மரம் = புளி + அ + மரம் = புளியமரம் புளி + விளார் = புளி + அ + விளார் = புளியவிளார் (ஊ) ஈச்சைமுன் மெல்லினமோ இடையினமோ வரும்போது ஐ மறைந்து அ தோன்றுகிறது. ஈச்சை + விதை = ஈச்ச் + அ + விதை = ஈச்சவிதை (எ) மற்ற தாவரப்பெயர்களின்முன் மெல்லினமும் இடையினமும் வரும்போது இயல்புபுணர்ச்சி. மா + மரம் = மாமரம் பலா + மரம் = பலாமரம் தேக்கு + மரம் = தேக்குமரம் பாக்கு + மட்டை = பாக்குமட்டை வாழை + மரம் = வாழைமரம் வாழை + நார் = வாழைநார் பலா + வேர் = பலாவேர் புவியில் நூறாயிரக்கணக்கான தாவரவினங்கள் இருப்பதாக தாவரவியல் பட்டியலிடுகிறது. இவற்றுள் நடைமுறையில் பழக்கத்திலிருப்பவை ஆயிரக்கணக்கில் இருக்கலாம். எல்லாவற்றையும் இங்கு சொல்லவில்லை என்பது தெளிவு. ஒவ்வொன்றுக்கும் வழக்கிலிருக்கும் சொற்களை அறிந்து அதற்கான விதியை பொருத்திக்கொள்க. சான்றாக, அவரைக்காய், புடலங்காய் என்று வழக்கிலிருப்பதால் அவரைக்கு (அ)வும் புடலைக்கு (ஈ)யும் என்றறிக. சுட்டின்பின் ஒற்றுமிகல் அ, இ, எ ஆகிய சுட்டுகளின்முன் எந்த மெய் வரும்போதும், ஒற்று மிகுகிறது. அக்காலம், இம்மலை, இந்நேரம், எவ்வாரம் ஆகியவை சான்றுகள். அடுத்த பகுதியில் சொல்லப்போவது வல்லினமெய்களுக்கு மட்டுமென்பதையும் இங்கு சொன்னது எல்லா மெய்களுக்கும் என்பதையும் நோக்குக. உயிரைத்தொடர்ந்து வல்லினம் மிகல் உயிர்ப்புணர்ச்சிக்கு வேறு பல விதிவிலக்குகள் இருப்பினும், அவ்வாறான சொற்களை இக்கால நடைமுறையில் எதிர்கொள்வது அரிது. ஆகவே, மேற்சொன்னவை தவிர மற்றெல்லா சூழமைவுகளிலும், உயிரைத்தொடர்ந்து வரும் வல்லினம் மிகுகிறது என்பதை பொதுவிதியாக கொள்ளலாம். இதற்கு பலவிதமான சான்றுகளை காண்போம். (அ) வேற்றுமைத்தொகை நிலா + காலம் = நிலாக்காலம் வெள்ளி + பெட்டி = வெள்ளிப்பெட்டி கத்தி + குத்து = கத்திக்குத்து கத்தியால் குத்து என விரிவதால் இது வேற்றுமைத்தொகை. இவ்வாறே, புலிப்பால், கிளிக்கூண்டு, மொழிப்பற்று, அறிவுக்கடல், பசிப்பிணி, யானைக்காது, (ஆ) அந்த, இந்த, எந்த, அங்கு, இங்கு, எங்கு, அப்படி, இப்படி, எப்படி ஆகிய பெயரெச்சங்கள் அந்த + பக்கம் = அந்தப்பக்கம் அப்படி + சொன்னதால் = அப்படிச்சொன்னதால் (இ) எல்லா, புது போன்ற பெயரடைகள் எல்லாப்புகழும் இறைவனுக்கே. ஆனால், புதுச்சட்டை எனக்கு. (ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம் ஓடாக்குதிரை, பாடாக்கிளி, விடத்தகாக்குற்றம், முறைமைதீர்மானிக்கத்தகாச்சமன்பாடு. (உ) அகரத்திலும் இகரத்திலும் முடியும் வினையெச்சங்கள். இனிமையாகப்பாடிய பீட்டரை அனைவரும் பாராட்டினர். விரைவாகச்சென்றுவிட்ட பேருந்தை நிறுத்த இயலவில்லை. இங்கு பீட்டர் இனிமையாகப்பாடியதே பாராட்டுக்குரியது. அதனால் இனிமையாகப்பாடியது என்பதை ஒன்றைவினையாக சொன்னோம். இனிமையாக பாடிய பீட்டரை அனைவரும் பாராட்டினர் என்று சொன்னால், பாடிய பீட்டரை பாராட்டினர். அவன் பாடியது இனிமையாகவும் இருந்தது என்று பொருளாகும். அதைப்போலவே பேருந்தை நிறுத்தவியலாததற்கு அது விரைவாகச்சென்றுவிட்டதே காரணம். இவ்வாறு வினையடையை வினைச்சொல்லுடன் சேர்த்து எழுதுமிடங்களில் வல்லொற்று மிகுகிறது. (ஊ) செய்ய, செய்து, என, ஆக எனும் வினையெச்சங்கள் வர + போகிறான் = வரப்போகிறான் திரும்பி + பார் = திரும்பிப்பார் என + சொன்னான் = எனச்சொன்னான் வேகமாக + போனான் = வேகமாகப்போனான் பாடித்திரிந்த பறவைகளே ஆடிக்களித்தான் ஆகியவை சான்றுகள். (எ) இரட்டைச்சொற்களாக வரும் சில வினையடைகளுக்கும் இது பொருந்துகிறது. போகப்போக புரியும் சொல்லச்சொல்ல கேட்கவில்லை படித்துப்படித்துப்பார்த்தேன் தூங்கித்தூங்கி விழுகிறான் (ஏ) வினையடையும் வினையும் சேர்ந்து கூட்டுவினைகள் உருவாகும்போதும் இது பொருந்துகிறது. கேட்டுப்பார், எழுதிப்பழகு, போய்க்கேள் சான்றுகள். (ஐ) மிக என்ற அளவுரைப்பியின்முன் மிகப்பெரிய, மிகச்சிறிய, மிகத்தெளிவான, மிகத்தெளிவாக என்றாகின்றன. மெய்யும் உயிரும் அடுத்ததாக, நிலைச்சொல் மெய்யில் முடிந்து வருஞ்சொல் உயிரில் தொடங்குவதை காண்போம். ணனலள இரட்டித்தல் முதலெழுத்து குறிலாகவும் இரண்டாமெழுத்து ண, ன, ல, ள ஆகியவற்றுள் ஒற்றாகவும் உள்ள ஈரெழுத்துச்சொற்களை கருதுக. கல், கள், கண், பொன் ஆகியவை சான்றுகள். இவற்றின்முன் உயிர் வரும்போது அந்த ஒற்று மிகுகிறது. இது எந்த உயிருக்கும் பொருந்துவதால் ஐ, ஆல், இலிருந்து, அது, இல் போன்ற வேற்றுமையுருபுகளுக்கு பொருந்துகிறது. கல் + ஐ = கல் + ல் +ஐ = கல்லை கள் + ஐ = கள் + ள் +ஐ = கள்ளை கண் + ஐ = கண் + ண் +ஐ = கண்ணை பொன் + ஐ = பொன் + ன் + ஐ = பொன்னை இதைப்போலவே, மற்ற வேற்றுமையுருபுகளும் கல்லின், கள்ளால், கண்ணிலிருந்து, பொன்னில், பல்லது என்று வருகின்றன. உயிரில் தொடங்கும் மற்ற சொற்களுக்கும் உருபுகளுக்கும் இது பொருந்துகிறது. பொன்னன், சொல்லாற்றல், கல்லணை, பல்லாண்டு, வில்லாளன், பொன்னொளி, கண்ணோட்டம் ஆகியவை சான்றுகள். கல்லெறிந்தான் என்பது வேற்றுமைத்தொகைக்கு சான்று. நல்லியல்பு பெயரடைத்தொடருக்கு சான்று. ஒன்றுதல் இயல்பே மெய்யெழுத்தின்முன் உயிரெழுத்து வரும்போது அவை இயல்பாகவே இணைந்து உயிர்மெய்யாகின்றன. சென்ற விதியின் விளைவாக கிடைக்கும் சொற்கள் இந்த விதியின்படி மேலும் புணர்கின்றன. கல் + ல் +ஐ = கல்லை சொல் + ல் + இல் = சொல்லில் வேறுவிதமான சான்றுகள்: பால் + உம் = பாலும் பழம் + உண்டான் = பழமுண்டான் கடல் + அலை = கடலலை மெய்யும் வல்லினமும் இனி மெய்முன் மெய்வருவதை காணவேண்டும். இக்கால வழக்கில் ண், ம், ன், ய், ர், ல், ழ், ள் ஆகிய மெய்களே சொல்லிறுதியில் வருகின்றன. எனவே, மெய்முன் என்று சொல்லும்போது இந்த எட்டு எழுத்துகளின்முன் என்ற பொருளிலே சொல்கிறோம். இதற்கான புணர்ச்சிவிதிகளை வருஞ்சொல்லின் வகைப்படி மூன்றுவிதமாக பிரித்துக்கொண்டு முதலில் வல்லின வருஞ்சொல்லை காண்போம். அடுத்துவரும் பகுதிகளில் மெல்லின, இடையின வருஞ்சொற்களை காண்போம். வருஞ்சொல் வல்லினமாயிருக்கும்போதும் நிலைச்சொல்லைப்பொறுத்து பல வேற்றுநிலைகள் இருக்கின்றன. மகரங்கெட்டு வல்லொற்று மிகல் இரண்டாம் வேற்றுமை தவிர மற்ற வேற்றுமைத்தொகையில் மகரவொற்றில் முடியும் சொல்லின்முன் வல்லினம் வரும்போது அந்த ஒற்று மறைந்து வல்லினம் மிகுகிறது. பணம் + பெட்டி = பணப்பெட்டி மரம் + கட்டை = மரக்கட்டை குன்றம் + குமரன் = குன்றக்குமரன் மகரம் வல்லினத்தால் திரிதல் இரண்டாம் வேற்றுமைத்தொகையிலும் வேற்றுமையல்லாத தொகைகளிலும் மகரவொற்றின்முன் வல்லினம் வரும்போது மகரவொற்று வல்லினத்தின் இனவெழுத்தாகிறது. க, ச, த, ப ஆகியவற்றுக்கு முறையே ங, ஞ, ந, ம இனவெழுத்துகள் என்பதை நினைவுகொள்க. இரண்டாம் வேற்றுமைத்தொகையில் ஏற்படும் புணர்ச்சிக்கு ஒரு சான்று, பழம் + தின்ன = பழந்தின்ன என்பதில் வருஞ்சொல் தகரத்தில் தொடங்குவதால் மகரவொற்று நகரவொற்றாகிறது. பழம் + கேட்டு = பழங்கேட்டு என்பதில் வருஞ்சொல் ககரத்தில் தொடங்குவதால் மகரவொற்று ஙகரவொற்றாகிறது. வரம் + தந்த சாமி = வரந்தந்த சாமி குற்றம் + கூறினான் = குற்றங்கூறினான் ஆகியவையும் இரண்டாம் வேற்றுமைத்தொகைகள். அல்வழிக்கு கீழ்க்கண்ட பெயரடைத்தொடர்கள் சான்றுகள்: பழம் + கஞ்சி = பழங்கஞ்சி பழம் + சோறு = பழஞ்சோறு வினையடை அடுக்கி வரும்போதும் இதை காணலாம். கூட்டங்கூட்டமாக கண்டுங்காணாமல் ஒன்றுஞ்சொல்லாமல் ணனலளமுன் வல்லினம் இது வேற்றுமைத்தொகைகளில் ண, ன என்ற மெல்லின ஒற்றுகளுக்கும் ல, ள என்ற இடையின ஒற்றுகளுக்கும்முன் வல்லினம் வருவதற்கான விதி. இந்த விதியின் விளைவு நிலைமொழியின் ஒற்று தனக்கு தொடர்பான வல்லினமாக மாறுவது. இந்த தொடர்பு பின்வறுமாறு: ண ன ல ள ட ற ற ட அதாவது, னகரத்துக்கும் லகரத்துக்கும் தொடர்பானது றகரம்; ணகரத்துக்கும் ளகரத்துக்கும் தொடர்பானது டகரம். (அ) வரும் வல்லினம் க, ச, ப ஆகியவற்றுள் ஒன்றாயிருக்கும்போது நிலைமொழியின் ஒற்று தனக்கு தொடர்பான வல்லினமாகிறது. மண் + குடம் = மட்குடம் முன் + காலம் = முற்காலம் பொன் + சிலை = பொற்சிலை நெல் + பயிர் = நெற்பயிர் பால் + குடம் = பாற்குடம் வாள் + போர் = வாட்போர் (ஆ) வரும் வல்லினம் தகரமாயிருக்கும்போது, நிலைமொழியின் ஒற்று தனக்கு தொடர்பான வல்லினமாவதுடன், தகரமும் அதே இனவெழுத்தாகிறது. மண் + தலை = மட்டலை பொன் + தாலி =பொற்றாலி நல் + திணை = நற்றிணை காவல் + துறை = காவற்றுறை தகவல் + தொடர்பு = தகவற்றொடர்பு மக்கள் + தொகை = மக்கட்டொகை ணனலளவொற்றுகளின்பின் தகரம் வராது என்பதை அட்டவணை 10.3இல் காணலாம். எனவே, மக்கள்தொகை, காவல்துறை, தகவல்தொடர்பு என்றெல்லாம் இக்காலத்தில் எழுதுவது கடுமையான பிழை. மக்கள்தொகை, மக்கட்டொகை போன்ற சொற்களை அவ்வாறே உரக்கச்சொல்ல முயலுங்கள். புணர்ச்சிவிதிகளின் அறிவியலுண்மையை நீங்களே உணர்வீர்கள். மனத்துக்குள்ளே வாசிக்கும்போது இதுபோன்ற வேறுபாடுகளை நாம் கவனியாதிருக்கலாம்; ஆனால் பேசும்போது எளிதில் உணரலாம். இந்த விதியின் இரண்டு பகுதிகளையும் சேர்த்து ஒரு வாய்ப்பாடாக சுருக்கியெழுதலாம். அதாவது, (ண், ள்) + (க், ச், ப்) = ட் + (க், ச், ப்) (ன், ல்) + (க், ச், ப்) = ற் +(க், ச், ப்) (ண், ள்) + த் = ட் + ட் (ன், ல்) + த் = ற் + ற் யரழமுன் வல்லொற்று மிகல் யகர, ரகர, ழகரவொற்றில் முடியும் சொல்லின்முன் வல்லினம் மிகுகிறது. நாய் + கடி = நாய்க்கடி தேர் + கால் = தேர்க்கால் தமிழ் + சொல் = தமிழ்ச்சொல் பொய்க்கணக்கு திடீர்க்காய்ச்சல் கீழ்த்தட்டு மெய்யும் மெல்லினமும் இனி, ண், ம், ன், ய், ர், ல், ழ், ள் ஆகியவற்றின்முன் மெல்லினம் வருவதை காணவேண்டும். லளமுன் மெல்லினம் லகர, ளகரவொற்றுகளின்முன் மெல்லினம் வராது என்று [] இல் நோக்கி அறிக. ஆனால் ஒரு சொல்லின் இறுதியில் இந்த ஒற்றுகள் இருக்கலாம் என்பதை அட்டவணை 10.2உம், சொல்முதலில் ம, ந ஆகிய மெல்லினங்கள் இருக்கலாம் என்று [] உம் காட்டுகின்றன. எனவே, இவ்வாறான சொற்கள் புணரும்போது இந்த எழுத்துகள் மாறவேண்டும் என்ற முடிபை பெறுகிறோம். லகர, ளகரவொற்றின்முன் மெல்லினம் வரும்போது லகரம் னகரமாகவும் ளகரம் ணகரமாகவும் ஆகின்றன. இங்கு மெல்லினம் ம, ந ஆகிய இரண்டு எழுத்துகளையே குறிக்கிறது. மற்றவை மொழிமுதலில் வருவதில்லை. மெல்லினம் நகரமெனில், அதுவும் னணவாகிறது. கல் + மழை = கன்மழை முதல் + முறை = முதன்முறை முள் + மரம் = முண்மரம் புல் + நன்மை = புன்னன்மை நல் + நூல் = நன்னூல் உள் + நோக்கல் = உண்ணோக்கல் ணனமுன் நகரம் ணகர, னகரவொற்றின்முன் வரும் நகரம் முறையே ணகரமாகவும் னகரமாகவும் மாறுகிறது. தண் + நிழல் = தண்ணிழல் தன் + நலம் = தன்னலம் திரிந்த நகரம் கெடல் குறிலும் ஒற்றுமான ஈரெழுத்துச்சொற்களை தவிர, மற்ற நிலைச்சொற்களுக்கு, ல, ண, ஆகிய ஒற்றுகளின்முன் திரிந்த நகரம் மறைகிறது. (நன்னூல் 229, 210) தொழில் + நுட்பம் = தொழின்னுட்பம் = தொழினுட்பம் முரண் + நோக்கம் = முரண்ணோக்கம் = முரணோக்கம் மீள் + நடவு = மீண்ணடவு = மீணடவு நன்னூல், தண்ணிழல் ஆகியவற்றில் திரிந்த நகரம் மறையாததை நோக்குக; ஏனெனில் இங்கு நிலைச்சொல் குறிலும் ஒற்றும் அடங்கியது. மெய்யும் இடையினமும் மகரம் கெடல் வேற்றுமைத்தொகையில் நிலைச்சொல்லின் இறுதியில் மகரவொற்று மறைகிறது. தங்கம் + விலை = தங்கவிலை மரம் + வேர் = மரவேர் இயல்புபுணர்ச்சி மேற்சொன்ன பாங்குகளில் பொருந்தாதவை இயல்பாக புணர்கின்றன. அவற்றுக்கு சில சான்றுகளை காண்போம். (அ) இயல்பு + புணர்ச்சி = இயல்புபுணர்ச்சி இடைத்தொடர்க்குற்றியலுகரத்தின்முன் வந்த வல்லினம் மிகவில்லை. (ஆ) போன + வாரம் = போனவாரம் உயிரின்முன் வந்த இடையினம் இயல்பாகிறது. (இ) மண் + மாட்சி = மண்மாட்சி வேற்றுமையில் ணகரத்தின்முன் மெல்லினம் இயல்பாகிறது. (ஈ) வெண் + சாமரம் = வெண்சாமரம் வேற்றுமையல்லாத பண்புத்தொகையில் ணகரத்தின்முன் வல்லினம் வரும்போது ணகரமும் வல்லினமும் இயல்பு. (உ) போர் + முரசு = போர்முரசு மெய் + மயக்கம் = மெய்மயக்கம் இடையினத்தின்முன் மெல்லினம் இயல்பு. மெய்மயக்கத்தில் மகரவொற்று மிகுவதும் உண்டு. நம் வழியுரையின்படி இயல்பை செந்தரமாக கொள்வோம். (ஊ) இரண்டாம் + முறை = இரண்டாம்முறை மெல்லினத்தின்முன் மெல்லினம் இயல்பு (எ) கல் + யானை = கல்யானை வாள் + விளிம்பு = வாள்விளிம்பு வாய் + வன்மை = வாய்வன்மை இடையினத்தின்முன் இடையினம் இயல்பு (ஏ) மண் + வாசனை = மண்வாசனை மெல்லினத்தின்முன் இடையினம் இயல்பு. (ஐ) வாள்வீச்சு, மலர்விழி இடையினத்தின்முன் இடையினம் இயல்பு நிறுத்தக்குறிகள் ஒரு முழுத்தொடரை சரியாக பொருளுணருமாறு அதன் பகுதிகளை பிரிக்க தேவையான இடங்களில் நிறுத்தக்குறிகளை பயன்படுத்துகிறோம். தேவையற்ற இடங்களில் நிறுத்தக்குறிகளை பயன்படுத்துவதும் பொருளுணர்வுடன் குறுக்கிடுகிறது. காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி, முழுப்புள்ளி, அடைப்புக்குறிகள், வினாக்குறி, வியப்புக்குறி, மேற்கோட்குறிகள், இடைக்கோடு ஆகியவற்றை தமிழில் சரியான இடங்களில் பயன்படுத்தலாம். காற்புள்ளி பொதுவாக ஒரு பட்டியலின் பதிகைகளை பிரிக்க காற்புள்ளி பயன்படுகிறது. இந்த பதிகைகள் பெயர்ச்சொற்களாகவோ பெயர்த்தொடர்களாகவோ இருக்கலாம். பொதுவாக, பெயரடைகளையும் வினையடைகளையும் பிரிக்க காற்புள்ளி தேவையில்லை. எச்சத்துளெச்சமுள்ள உட்சிக்கலான நீண்ட வினையெச்சங்களை காற்புள்ளியால் பிரிப்பது பொருளுணர்வை எளிதாக்கலாம். பட்டியலிடல் பட்டியலின் உறுப்புகளை பிரிக்க இரண்டு வழிகள் உள்ளன. 1) உம்மை; 2) காற்புள்ளி சிரீதரன் கடைக்குச்சென்று பாலையும் பழத்தையும் முறுக்கையும் வாங்கினான். சிரீதரன் கடைக்குச்சென்று பால், பழம், முறுக்கு ஆகியவற்றை வாங்கினான். உம்மையைத்தொடர்ந்து காற்புள்ளி இல்லாததை நோக்குக. பால், பழம், முறுக்கு ஆகியவை என்பது ஒரு பெயர்த்தொடர். முழுத்தொடரது கட்டமைப்பில் இது ஒரு பெயர்ச்சொல்லின் பங்கை வகிக்கிறது. காற்புள்ளியும் இந்த பெயர்த்தொடரின் பகுதியாகிறது. இரண்டில் எந்த முறையை பின்பற்றினாலும் மற்றும் என்ற சொல் வரக்கூடாது. தொல்லிலக்கணம் காற்புள்ளிமுறையை குறிப்பிடவில்லை; உம்மைத்தொகையை குறிப்பிடுகிறது. சிரீதரன் கடைக்குச்சென்று பால்பழம்முறுக்கை வாங்கினான் என்பதில் உம்மைத்தொகை உள்ளது. காற்புள்ளிமுறை தெளிவானதால், உம்மைத்தொகைமுறை இக்காலத்தில் பெருவழக்கில் இல்லை. எனினும், சேர்ந்தே வரும் பெயர்களை இவ்வாறு சொல்வதை இன்னும் காணலாம். கோவிலுக்குப்போக தேங்காய்பழம் வாங்கு என்பது சான்று. இதைப்போலவே வெற்றிலைபாக்கு, பால்பழம், சந்தனங்குங்குமம், ஆடியோவீடியோ, இட்டிலிசாம்பார், வடைகாப்பி, சோறுதண்ணீர் போன்றவையும். காற்புள்ளியிட்ட பட்டியலாக எழுதும்போது அந்த பட்டியலை ஒரு முடிப்புச்சொல்லால் முடிக்கவேண்டும். மேற்கண்ட சான்றில் ஆகியவை என்ற சொல் பட்டியலை முடிக்கும் சொல்லாக வந்தது. இந்தச்சொல் பட்டியல் முழுமையடைந்துவிட்டதை குறிக்கிறது. முழுப்பட்டியலின் ஒரு சில உறுப்புகளை மட்டும் எழுதினால், இடத்தைப்பொறுத்து, முதலியவை, போன்றவை, இன்ன பிற போன்ற சொற்களுள் ஒன்றால் முடிக்கலாம். தமிழ், மலையாளம், தெலுங்கு முதலியவை இந்திய மொழிகள். அமெரிக்கா, செருமனி, சப்பான் போன்ற முன்னேறிய நாடுகளில், … இரும்பு, செம்பு, நிக்கல், இன்ன பிற மாழைகள் நல்ல மின்கடத்திகள். பொதுவாக, நீண்ட பட்டியல்களை உம்மைக்குப்பதிலாக காற்புள்ளியிட்டு எழுதுவது வசதியாகும். சிரீதரன் கடைக்குச்சென்று பாலையும் பழத்தையும் முட்டையையும் காப்பித்தூளையும் முறுக்கையும் வடையையும் பருப்பையும் தேங்காயையும் வாங்கினான். சிரீதரன் கடைக்குச்சென்று பால், பழம், முட்டை, காப்பித்தூள், முறுக்கு, வடை, பருப்பு, தேங்காய் ஆகியவற்றை வாங்கினான். முழுமையடையாத பட்டியலையும் உம்மையால் எழுதாமல் காற்புள்ளியிட்டு எழுதுவது இயல்பு. இரும்பும் செம்பும் நிக்கலும் இன்னபிறவுமான மாழைகள் நல்ல மின்கடத்திகள். இரும்பு, செம்பு, நிக்கல், இன்ன பிற மாழைகள் நல்ல மின்கடத்திகள். தொடர்களை காற்புள்ளியால் பிரித்தல் நீண்ட முழுத்தொடர்களில் எச்சத்தொடர்களை காற்புள்ளிகளால் பிரிப்பது பொருளுணர்வதை எளிதாக்கும். ஐதரசனும் ஆக்குசிசனும் சேர்ந்து நீரை விளைவிக்கும் வினையில், 2 பருமன்களான ஐதரசன் ஒரு பருமனான ஆக்குசிசனுடன் சேர்ந்து, வினைபுரியாத வளிமங்கள் எஞ்சாதவகையில், 2 பருமன்களான நீரை தருகிறது. பகுதிகள் ஒற்றைச்சொல்லாகவோ மற்றப்படி எளிமையாகவோ இருக்கும்போது காற்புள்ளியிடுவது வாசிப்பதில் தடுப்பியிடும். இந்த வேதிவினையில், ஐதரசன் ஆக்குசிசனுடன் சேர்ந்து, வளிமங்கள் எஞ்சாதவகையில், நீரை தருகிறது. இந்த வேதிவினையில் ஐதரசன் ஆக்குசிசனுடன் சேர்ந்து வளிமங்கள் எஞ்சாதவகையில் நீரை தருகிறது. முழுத்தொடருக்கு அடைச்சொல் ஒரு முழுத்தொடரை பொதுவாக விவரிக்கும் ஒரு சொல்லையடுத்து காற்புள்ளி வரவேண்டும். இவ்வாறான சொற்கள் பொதுவாக, கொள்கையளவில், எனவே, ஏனெனில், அதாவது, இங்கு, இவ்வாறு, மேலும், போன்றவை. பொதுவாக, மீக்குறைவாக எதிர்மின்னியிழுக்கும் அணு மையவிடத்தில் இருக்கிறது. இங்கு, மீக்குறைவாக எதிர்மின்னியிழுக்கும் அணு மையவிடத்தில் இருக்கிறது என்பது ஒரு முழுமையான தகவலை தருகிறது. அந்த தகவலைப்பற்றிய கூடுதலான ஒரு குறிப்பை பொதுவாக என்ற சொல் தருவதால் அதையடுத்து காற்புள்ளியிட்டோம். கொள்கையளவில், எந்தவொரு முழுமையான செங்கோணவலகுமையான சார்புக்கணத்தையும் chi_(i)left(rright)களாக பயன்படுத்தலாம். கீழ்க்கண்ட சான்று எனவே என்ற சொல்லின் பயன்பாட்டை காட்டுகிறது. கலப்பினப்பரிதியங்கள் எதிர்மின்னிச்சோடிகளின் விலக்கல்களை குறைத்து அவற்றை நிலைப்பான அடுக்கல்களில் வைப்பதற்காக வெளியில் சில முன்விருப்பத்திசைகளை நோக்கி இருக்கின்றன. எனவே, கலப்பினத்தின் வகை மூலக்கூறின் வடிவத்தை காட்டுகிறது. கீழ்வருவது ஏனெனில், அதாவது ஆகிய இரண்டு சொற்களின் பயன்பாட்டையும் எடுத்துக்காட்டுகிறது. மேற்சொன்ன விளைவுகளை தொல்லியற்பியலின் அடிப்படையில் விளக்க இயலவில்லை; ஏனெனில், அதன்படி, ஒரு ஒளிக்கற்றையின் ஒளிர்மத்தைப்பொறுத்தே அதன் ஆற்றல் உள்ளது. அதாவது, வெளிவரும் எதிர்மின்னிகளின் எண்ணிக்கையும் அவற்றின் இயக்கவாற்றலும் ஒளியின் ஒளிர்மத்தைப்பொறுத்திருக்கவேண்டும். கணிதம் அறிவியல், தொழினுட்பம் போன்ற துறைகளில் வரையறைகளையும் சமன்பாடுகளையும் எதிர்கொள்கிறோம். சமன்பாடுகளை எழுதி அவற்றிலுள்ள குறியீடுகளை விளக்க ஒரு குறிப்பிட்ட பாங்கை ஆங்கிலத்தில் பின்பற்றுகிறோம். For a mixture of several gases, we define x_(i) = fr is the molefraction of the i-th gas, n_(i) is the number of its moles, and n is the total number of moles. அதாவது சமன்பாட்டை எழுதியபின், where என்ற சொல்லைத்தொடர்ந்து சமன்பாட்டிலுள்ள குறியீடுகளின் பொருளை ஒவ்வொன்றாக விளக்குவது வழக்கம். இதே பாங்கை தமிழில் பல வளிமங்கள் அடங்கிய கலவையில் x_(i) = fracn_(i)n என்று வரையறுக்கிறோம்; இங்கு, x_(i) என்பது iஆம் வளிமத்தின் மோல்விகிதத்தையும் n_(i) அதன் மோலெண்ணிக்கையையும் n மொத்த மோலெண்ணிக்கையையும் குறிக்கின்றன. என்றவாறு எழுதுவதை செந்தரமாக கொள்வோம். ஆங்கிலத்தில் where வகித்த பங்கை தமிழில் இங்கு வகிக்கிறது. கீழ்க்காணும் சான்றுகள் முறையே இவ்வாறு, சுருக்கவுரையாக, சான்றாக, முதலில், இரண்டாவதாக, அப்படியானால் ஆகிய சொற்களது பயன்பாடுகளை எடுத்துக்காட்டுகின்றன. எதிர்மின்னிகளது சிறப்பியல்புகள் மின்வாய்ப்-பொருண்மங்களையும் குழல்களிலுள்ள வளிமத்தின் தன்மையையும் சாராதவை. இவ்வாறு, எதிர்மின்னிகள் எல்லா அணுக்களிலும் அடங்கியுள்ளதாக நாம் முடிவுசெய்யலாம். சுருக்கவுரையாக, பன்மையெதிர்மின்னியணுவின் ஒற்றையெதிர்மின்னித்தீர்வான psi_(i)left(rright)களை நீரியவணுவின் அடிப்படையிலான சிலேற்றரின்வகை வட்டாரங்களின் நேரியச்சேர்வுகளாக எழுதி உரூத்தானின் தளவணிமுறையை பின்பற்றி ஆர்த்திரிபாக்கின் தவிபு முறையை செயலாற்றுகிறோம். சான்றாக, வெவ்வேறு வட்டாரங்களிலுள்ள மூன்று எதிர்மின்னிகளின் மொத்த தற்சுழலை காண, … முதலில், இரண்டு வட்டாரக்கோணவுந்தங்களை (220)ஆம் சமன்பாட்டை பயன்படுத்தி கூட்டும்போது, … இரண்டாவதாக, ஒரே வட்டாரத்திலுள்ள இரண்டு எதிர்மின்னிகளில் ஒன்று … அப்படியானால், σ=0 என்றும் பெறுகிறோம். அதாவது, பொதுவாக இரண்டு தற்சுழற்செயலிகளின் கூட்டல் சுழியாகவோ ஒன்றாகவோ இருக்கலாமெனினும், இணைமமுற்ற எதிர்மின்னிகளின் ஒன்று என்ற மதிப்பை பாலியின் தவிர்ப்புக்கொள்கை நீக்கிவிடுகிறது. எனவே, இணைமமுற்ற எதிர்மின்னிகளின் தற்சுழல்களையும் கணக்கிலெடுக்காமல் விட்டுவிடலாம். எழுவாய்க்கு பின்னொட்டு இல்லை பட்டியலில் வரும் பெயர்ச்சொற்களை காற்புள்ளி பிரிப்பதால் எழுவாயைத்தொடர்ந்து காற்புள்ளி வைக்கக்கூடாது. வைத்தால், அது ஒரு பட்டியலின் தொடக்கம் என்று பொருள்கொள்வோம். எழுவாயின்பின் ஒரு பட்டியல் வரும்போது இது பொருண்மயக்கத்தை உண்டாக்கும். இச்சோதனைகள் அணுக்கள் எதிர்மின்னிகள், நேர்மின்னிகள், நொதுமிகள் ஆகியவற்றால் ஆனவை என்று நிறுவுகின்றன என்ற முழுத்தொடரில் இச்சோதனைகள் என்ற எழுவாய் நிலுவையிலிருக்கும்போது அணுக்கள் என்ற எழுவாயுள்ள தொடர் தொடங்குகிறது. அதன் வேற்றுமைத்தொடரில் எதிர்மின்னிகள், நேர்மின்னிகள், நொதுமிகள் ஆகியவை என்ற பெயர்த்தொடர் வருகிறது. இந்த பொருளுணர்வு எழுவாய்கள் காற்புள்ளிகளும் உருபுகளும் இல்லாமல் தனியாக நிற்பதாலே சாத்தியமாகிறது. முதல் வேற்றுமைக்கும் உருபு வேண்டும் என்று விவாதிப்பவர்கள் இச்சோதனைகளானவை அணுக்களானவை எதிர்மின்னிகள், நேர்மின்னிகள், நொதுமிகள் ஆகியவற்றால் ஆனவை என்று நிறுவுகின்றன என்று எழுதுவார்கள். அப்படியானால், இந்த விகுதியானது முதல் வேற்றுமைக்கு எல்லாவிடங்களிலும் வரும்படி எழுதவேண்டும். உரைமுழுவதையும் இவ்வாறே எழுதுவதானதும் வாசிப்பதானதும் அலுப்பூட்டுவதும் இயல்பற்றதும். எழுவாயை வினைச்சொல்லுக்கருகில் எழுதும் அறிவுரையின் ஏரணப்படி எதிர்மின்னிகள், நேர்மின்னிகள், நொதுமிகள் ஆகியவற்றால் அணுக்கள் ஆனவை என்று இச்சோதனைகள் நிறுவுகின்றன என்று எழுதவேண்டும். இது இயல்பற்றது. மேலும், இயைபுமைக்காக எப்போதும் கடிதத்தை அகமது எழுதினான் என்றும் எதிர்மின்னிகளது சிறப்பியல்புகள் மின்வாய்ப் பொருண்மங்களையும் குழல்களிலுள்ள வளிமத்தின் தன்மையையும் சாராதவை என்பதை மின்வாய்ப்பொருண்மங்களையும் குழல்களிலுள்ள வளிமத்தின் தன்மையையும் எதிர்மின்னிகளது சிறப்பியல்புகள் சாராதவை என்றும் எழுதவேண்டியதிருக்கும். பொதுவாக, சீர்திருத்த நோக்குடன் தமிழை மாற்றியமைப்பது தேவையில்லை. பிழையுள்ளபோதே திருத்தம் தேவை. தமிழின் கட்டமைப்பை தெளிவாக புரிந்துகொண்டபின், அவ்வாறு புரிந்துகொள்ளாதது நம் குறையே என்றும் தமிழிலக்கணத்தில் எந்தக்குறையும் இல்லை என்பதையும் உணரலாம். பட்டியலிடலில் பிழை (அ) காற்புள்ளியிட்ட பட்டியலில் மற்றும் என்ற சொல் வேண்டாம். கோள்கள், கதிரவக்குடும்பம், உடுக்குழு, உடுத்திரள், உடுக்குழு, மற்றும் புடவி ஆகியவற்றின் இயக்கத்தை விளக்க இந்த சமன்பாடு போதுமானதாகவே இருந்தது. (ஆ) எழுவாய்க்குப்பின் காற்புள்ளி கூடாது. கீழ்க்கண்டதில் கதிர்வீச்சுச்சிகிச்சையால் ஏற்படும் பின்விளைவுகள் என்ற தொடரின்பின் காற்புள்ளியிடுவதால் அதுவும் பட்டியலில் சேர்ந்துவிடுகிறது. பிறகு எழுவாய் எங்கு என்று தேடவேண்டியதாகிறது. கதிர்வீச்சுச்சிகிச்சையால் ஏற்படும் பின்விளைவுகள், கதிர்வீச்சினது எடுப்பளவு, சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கதிரியக்க வகை, உடலின் எந்த பாகத்துக்கு இச்சிகிச்சை அளிக்கப்படுகிறது போன்றவற்றைப் பொறுத்தே அமைகின்றன. அந்த காற்புள்ளி இல்லாதபோது பொருள் தெளிவாவதை நோக்குக. கதிர்வீச்சுச்சிகிச்சையால் ஏற்படும் பின்விளைவுகள் கதிர்வீச்சினது எடுப்பளவு, சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கதிரியக்க வகை, உடலின் எந்த பாகத்துக்கு இச்சிகிச்சை அளிக்கப்படுகிறது போன்றவற்றைப்பொறுத்தே அமைகின்றன. ஐதரசன், ஆக்குசிசனுடன் சேர்ந்து நீரையும் ஐதரசவதியாக்குசைட்டையும் உருவாக்குகிறது. ஐதரசன் ஆக்குசிசனுடன் சேர்ந்து நீரையும் ஐதரசவதியாக்குசைட்டையும் உருவாக்குகிறது. வேறிடங்களில் காற்புள்ளியிடுவதால் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுவதில்லை. பொதுவாக, இரும்பு, செம்பு, நிக்கல், இன்ன பிற மாழைகள் நல்ல மின்கடத்திகள். இங்கு பொதுவாக பெயர்ச்சொல்லன்று என்பதால் அதை பட்டியலில் ஒன்றாக நாம் கருதுவதில்லை. அரைப்புள்ளி ஒரு முழுத்தொடருக்கு அடுத்த முழுத்தொடருடன் நெருக்கமான தொடர்பு இருக்கும்போது, இரண்டையும் அரைப்புள்ளியால் பிரிக்கவேண்டும். சில சான்றுகளை காண்போம். (அ) அரைமணிநேரமாக காத்திருந்தான்; பேருந்து வரவில்லை. (ஆ) அங்கே போனால் மழை; இங்கே வந்தால் வெயில். (இ) இந்த செயலம் பொருளின் புள்ளிகளிடையான தொலைவுகளையும் கோணங்களையும் மாறாமல் காப்பது கட்டாயம்; ஏனெனில், அவ்வாறு மாறினால் வெளிவடிவக்கட்டமைப்பு மாறிவிடும். (ஈ) இங்கு C₄ அச்சு இல்லை; எனினும், மூன்று S₄ அச்சுகள் இருக்கின்றன. (உ) இது அந்த அச்சை உள்ளடக்கியோ அதற்கு செங்கோணமாகவோ இருக்கலாம்; வேறு கோணங்களில் இருக்கவியலாது. (ஊ) ஒவ்வொரு பிளாட்டோவியத்திண்மத்திலும் எல்லா உச்சிகளும் ஒன்றுக்கொன்று சமானமானவை; எல்லா விளிம்புகளும் சமானமானவை; எல்லா முகங்களும் சமானமான ஒழுங்குப் பலகோணங்கள். சிலநேரங்களில் ஆங்கிலத்தில் கருத்தால் மட்டுமே தொடர்புடைய இரண்டு முழுத்தொடர்களை and என்ற சொல்லால் இணைப்பதுண்டு. சான்றாக The members of a homologous series can be represented by general molecular formula and the succeive members differ from each other in molecular formula by a –CH₂ unit என்பதில் and இணைக்கும் முழுத்தொடர்களுக்கு எழுவாயோ பயனிலையோ வேறு எந்த உறுப்போ பொதுவாக இல்லை. படியொப்புவரிசையைப்பற்றியே இரண்டும் சொல்வதால் எழுத்தாளர் அவற்றை இணைத்திருக்கிறார். இதுபோன்ற முழுத்தொடர்களை தமிழில் இணைக்க உம்மை பயன்படாது; அரைப்புள்ளியை பயன்படுத்தவேண்டும். இதை உணராமல் ஒரு எழுத்தாளர் ஆங்கிலமுறைப்படியே எழுத முயன்றிருப்பதை பாருங்கள். அரைப்புள்ளியால் எழுதுவது தெளிவாவதையும் நோக்குக. படியொப்புவரிசையினது எல்லாச்சேர்மங்களையும் பொது மூலக்கூறுவாய்ப்பாட்டினாலும், மற்றும் அதே தொடரிலுள்ள அடுத்தடுத்த உறுப்பு மூலக்கூறுகளை ஒரு CH₂ அலகு மூலம் வேறுபடுத்திக் குறிப்பிடப்படுகின்றன. படியொப்புவரிசையினது எல்லாச்சேர்மங்களையும் ஒரு பொதுமூலக்கூறுவாய்ப்பாட்டால் குறிக்கலாம்; வரிசையின் அடுத்தடுத்த சேர்மங்களது மூலக்கூறுவாய்ப்பாடுகள் ஒரு CH₂ அலகால் வேறுபடுகின்றன. முக்காற்புள்ளி தொடர்பான கருத்துகளை பட்டியலிட்டு எழுதத்தொடங்கும்போது கீழ்க்காணுமாறு, பின்வருமாறு போன்ற ஒரு சொல்லை முக்காற்புள்ளியுடன் எழுதி பிறகு கருத்துகளை பட்டியலிடுகிறோம். கலப்பினமாதலின் முதன்மையான பண்புக்கூறுகள் பின்வருமாறு: கலப்பினப்பரிதியங்களின் எண்ணிக்கை கலப்பினமாகும் பரிதியங்களின் எண்ணிக்கைக்கு சமம். கலப்பினப்பரிதியங்கள் எப்போதும் ஆற்றலிலும் வடிவத்திலும் சமானமானவை. தூய அணுப்பரிதியங்களைவிட கலப்பினப்-பரிதியங்கள் நிலைப்பான பிணைப்புகளை உருவாக்குவதில் அதிக பயன்றிறனானவை. ஒரு தகவலை உரையுடனே தரவியலாமல் கணிதக்கோவையாகவோ அட்டவணையாகவோ படமாகவோ தரவேண்டியதிருக்கும்போது கீழ்க்காணும் போன்ற சொல்லாலும் முக்காற்புள்ளியாலும் காட்டலாம். O₂னுக்கும் F₂னுக்குமான பல்வேறு மூலக்கூறுபரிதியங்களின் ஆற்றல்கள் கீழ்க்காணுமாறு இருக்கின்றன: ஒரு பத்தியின் தலைப்பு தனிவரியாக இல்லாமல் பத்தியுடனே இருக்கும்போது தலைப்புக்குப்பின் முக்காற்புள்ளியை இடவேண்டும். textsp கலப்பினமாதல்: பெரிலியத்தின் தரைநிலை எதிர்மின்னியமைவடிவம் 1s²2s². அதன் இரட்டைப் பிணைவுமையை விளக்க … இதற்கு இது என்ற தொடர்பை காட்டவும் முக்காற்புள்ளியை பயன்படுத்தலாம். மாணவர்கள் கீழ்க்கண்டவாறு விருப்பப்பாடங்களை தேர்ந்திருக்கின்றனர். அகமது: கணிதம், இயற்பியல் கந்தன்: கணிதம், வேதியியல் வள்ளி: உயிரியல், வேதியியல் செலினா : கணிதம், பொருளியல் சில மூலக்கூறுகளின் எதிர்மின்னிக்கட்டமைப்புகள்: விகிதங்களை குறிக்க முக்காற்புள்ளி பயன்படுகிறது. அவற்றிடையான விகிதங்கள் $ :: 1:1.128:1.224$ என்றிருப்பதாக பரிசோதனைகள் காட்டுகின்றன. இங்கு இரட்டைமுக்காற்புள்ளியின் பயன்பாட்டையும் நோக்குக. உரைநடுவில் குறிப்பு, பயிற்சி, சிக்கல், நினைவூட்டல், எச்சரிக்கை போன்றவற்றை செருகவும் முக்காற்புள்ளி பயன்படுகிறது. குறிப்பு: ஆற்றல் போன்ற ஒரு ஆற்றலியக்கப்பண்புக்கும் பருமன் போன்ற ஒரு எந்திரவியப்பண்புக்குமிடையில் ஒரு கணிசமான வேறுபாடு … முழுப்புள்ளி, வினா, வியப்பு முழுப்புள்ளி முதன்மையாக முற்றுப்புள்ளியாக பயன்படுகிறது. அதாவது, வினாவையும் வியப்பையும் தவிர, ஒவ்வொரு முழுத்தொடரது இறுதியிலும் அது முற்றுப்பெற்றதை காட்ட முழுப்புள்ளியை வைக்கிறோம். இதற்கு தனியாக ஒரு சான்று தேவையில்லை. வினாவின் இறுதியில் வினாக்குறியை இடவேண்டும் என்பதும் சொல்லாமலே விளங்கும். அதேபோல், வியப்பைக்காட்டும் முழுத்தொடர்களை வியப்புக்குறியால் முடிக்கவேண்டும். அகமது வந்தானா? வள்ளி வந்துவிட்டாள்! முழுத்தொடரின் இடையில் முழுப்புள்ளியையோ வினாக்குறியையோ வியப்புக்குறியையோ இடக்கூடாது. இது அற்பமாக தெளிவானாலும் சிலர் இதில் பிழையிழைக்கின்றனர். வினாவையும் வியப்பையும் அயற்கூற்றாக எழுதும்போது வினாக்குறியோ வியப்புக்குறியோ இடக்கூடாது. நேர்க்கூற்றாக எழுதும்போது மேற்கோட்குறிகளுக்குள் இந்த குறிகளை இடவேண்டும். அகமது வந்தானா? என்று கேட்டான். வள்ளி வந்துவிட்டாள்! என்று கூவினாள். “அகமது வந்தானா?” என்று கேட்டான். “வள்ளி வந்துவிட்டாள்!” என்று கூவினாள். நீண்ட தொடர்களில் இந்த பிழையை காண்பது கடினமாகலாம். அணுக்கள் ஏன் இணைகின்றன? சில சேர்க்கைகளே சாத்தியமாவது ஏன்? சில அணுக்கள் சேர்வதும் வேறு சில சேராததும் எதனால்? மூலக்கூறுகளுக்கு திட்டவட்டமான வடிவங்கள் இருப்பது ஏன்? அணுக்கள் ஏன் இணைகின்றன? சில சேர்க்கைகளே சாத்தியமாவது ஏன்? சில அணுக்கள் சேர்வதும் வேறு சில சேராததும் எதனால்? மூலக்கூறுகளுக்கு திட்டவட்டமான வடிவங்கள் இருப்பது ஏன்? போன்ற கேள்விகள் எழுகின்றன. அணுக்கள் ஏன் இணைகின்றன, சில சேர்க்கைகளே சாத்தியமாவது ஏன், சில அணுக்கள் சேர்வதும் வேறு சில சேராததும் எதனால், மூலக்கூறுகளுக்கு திட்டவட்டமான வடிவங்கள் இருப்பது ஏன் போன்ற கேள்விகள் எழுகின்றன. பொதுவாக, வியப்புக்குறியை உணர்ச்சிக்குறியாக நாம் கருதலாம். வியப்புக்குறிகள் வரவேண்டிய இடங்களுக்கு சில சான்றுகள்: இதன்பொருள் அதுதானே! இதை நாம் புறக்கணிக்கலாமா! ஏகாரத்திலும் ஆகாரத்திலும் முடியும் இந்த தொடர்கள் கேள்விகளைப்போல் கட்டமைந்தாலும் உண்மையில் எழுத்தாளர் நம்மிடம் ஒரு கேள்வியை கேட்கவில்லை. தான் உணர்வதை நமக்கு சொல்லவே விரும்புகிறார். வாழ்க! நலமுண்டாகட்டும்! போன்ற வாழ்த்துச்சொற்களிலும் வியப்புக்குறியை இடுகிறோம். இதைக்கண்டு சிலர் எல்லா வியங்கோள் வினைகளிலும் வியப்புக்குறியை இடுகிறார்கள். இது தவறு. இந்த எண்களை கூட்டி விடையை தருக! என்பதில் வியப்போ வேறெந்த உணர்வோ இல்லை. இது வெறும் வேண்டுகோள். இந்த எண்களை கூட்டி விடையை தருக. பாடநூல்களில் மாணவர்களுக்கு வழங்கும் எல்லா பயிற்சிகளையும் வினாக்குறிகளால் முடிக்கக்கூடாது. வினாத்தொடர்களை மட்டுமே வினாக்குறியால் முடிக்கவேண்டும். சமநிலைமாறிலியை கணக்கிடுக? சமநிலைமாறிலியை கணக்கிடுக. இதற்கான காரணிகள் யாவை? இதற்கான காரணிகளை கூறுக. சிறுகுறிப்புவரைக. அடைப்புக்குறிகள் உரையின் ஓட்டத்தை திசைதிருப்பாமல் தொடர்பான ஒரு தகவலை பக்கவாட்டில் சொல்வது அவசியமாகும்போது அந்த தகவலை அடைப்புக்குள் இடலாம். அடைப்புக்குள் இடும் தகவல் மாற்றீட்டுத்தகவலாகவோ சேர்ப்புத்தகவலாகவோ இருக்கலாம். மாற்றீட்டுத்தகவல் ஒரு கலைச்சொல்லின் பொருளை அடைப்புக்குள் குறிக்கலாம். அணுவுட்டுகள் (அணுவினுள்ளிருக்கும் துகள்) என்பது அணுவினது கூறடக்கமாக அதனுள்ளிருக்கும் பலவிதமான துகள்களை குறிக்கும் சொல். ஒரு சொல்லின் பொருள் வேறு சொல்லாலும் வழங்கப்பட்டால் அதை அடைப்புக்குள் இடலாம். போதுமான அதியுயர் மின்னழுத்தம் இரு மின்வாய்களுக்கிடையில் செலுத்தப்படும்போது, எதிர்ம மின்வாயிலிருந்து (வெளிவாயிலிருந்து) நேர்ம மின்வாய்க்கு (உள்வாய்க்கு) துகள்களின் தாரைவழியாக மின்சாரம் பாயத்தொடங்குகிறது. அடைப்புக்குள்ளிடும் சொல்லோ தொடரோ வெளியிலிருக்கும் சொல்லுடனோ தொடருடனோ இலக்கணப்படி இயையவேண்டும். அதாவது, வெளியிலுள்ளதை உள்ளிருப்பதால் மாற்றிட்டால் முழுத்தொடரின் கட்டமைப்பும் பொருளும் மாறக்கூடாது. மேற்கண்ட சான்றுகளில் அணுவுட்டுகள் என்ற சொல்லை எடுத்துவிட்டு அணுவினுள்ளிருக்கும் துகள் என்று எழுதினால் முழுத்தொடர் நல்வடிவமாகும். ஆனால் போதுமான அதியுயர் மின்னழுத்தம் இரு மின்வாய்களுக்கிடையில் செலுத்தப்படும்போது, எதிர்ம மின்வாயிலிருந்து (வெளிவாய்) நேர்ம மின்வாய்க்கு (உள்வாய்) துகள்களின் தாரை வழியாக மின்சாரம் பாயத்தொடங்குகிறது என்று எழுதும்போது வெளிவாய் என்ற பெயர்ச்சொல்லை எதிர்ம மின்வாயிலிருந்து என்ற நான்காம் வேற்றுமைத்தொடருக்கு மாற்றாக வைக்கவியலாது. சேர்ப்புத்தகவல் கூடுதலாக சேர்க்க விரும்பும் சொல்லையோ தகவலையோ அடைப்புக்குள் இடலாம். வெளிவாயிலிருந்து உள்வாய்க்கு (எதிர்ம) மின்சாரம் பாய்வதை மேலும் உறுதிப்படுத்த என்ற தொடரில் வெளிவாயிலிருந்து உள்வாய்க்கு பாயும் மின்சாரம் எதிர்மமின்சாரம் என்பதை வாசகர் அறிந்திருப்பதாக எழுத்தாளர் எதிர்பார்க்கிறார். அதனால் அதை சொல்லாமல் விட்டிருக்கலாம். எனினும் நினைவுறுத்துவதற்காக அடைப்புக்குள் இடுகிறார். தாமிசன் 1898இல் (தோராயமாக 10⁻¹⁰ மீட்டர் ஆரமுள்ள) கோள வடிவமான ஒரு அணுவில் நேர்மமின்மங்கள் சீராகப்பரவியுள்ளன என்ற கருத்தை முன்வைத்தார். இங்கு தாமிசன் முன்வைத்த மையக்கருத்தை அறிய அணுவினது ஆரம் தெரியவேண்டியதில்லை. எனினும் எழுத்தாளர் கூடுதலான தகவலாக அதை அடைப்புக்குள் தருகிறார். ஒரு கருத்துக்கான விளக்கத்தையோ குறிப்பையோ அடைப்புக்குள் இடலாம். இவற்றில் எதிர்மின்னிகள், ஆற்றலின் ஏறுவரிசையில், பாலியினது தவிர்ப்புக்கொள்கை (ஓரணுவில் எந்த இரு எதிர்மின்னிகளுக்கும் அனைத்து நான்கு துணுக்கவெண்களும் சமமாக இருக்கவியலாது), உண்டினது மீப்பெருமப்-பன்மையம் (ஒரே துணைக்கூட்டிலுள்ள பரிதியங்களில், ஒவ்வொரு பரிதியமும் ஒரு எதிர்மின்னியை பெறும்வரை சோடியாதல் நடைபெறாது) ஆகியவற்றின் அடிப்படையில் நிரம்புகின்றன. இங்கு பாலியினது தவிர்ப்புக்கொள்கையையும் உண்டினது மீப்பெருமப்பன்மையத்தையும் அடைப்புக்-குறிக்குள் சுருக்கமாக விளக்குகிறார். எனினும், இவ்வாறு நீண்ட தொடர்களை அடைப்பிடுவது முதன்மைமுழுத்-தொடரை வாசிப்பதில் தொடர்ச்சியின்மையை புகுத்துகிறது. முழுத்தொடரை முடித்தபின், அதற்கான குறிப்புகளை அடைப்புக்குள் இடலாம். இவற்றில், எதிர்மின்னிகள் ஆற்றலின் ஏறுவரிசையில், பாலியினது தவிர்ப்புக்கொள்கை, உண்டின் மீப்பெருமப்பன்மையம் ஆகியவற்றின் அடிப்படையில் நிரம்புகின்றன. (ஓரணுவில் எந்த இரு எதிர்மின்னிகளுக்கும் அனைத்து நான்கு துணுக்கவெண்களும் சமமாக இருக்கவியலாது என்று பாலியினது தவிர்ப்புக்கொள்கையும், ஒரே துணைக்கூட்டிலுள்ள பரிதியங்களில் ஒவ்வொரு பரிதியமும் ஒரு எதிர்மின்னியை பெறும்வரை சோடியாதல் நடைபெறாது என்று உண்டின் மீப்பெருமப்பன்மையமும் சொல்கின்றன.) அடைப்புக்குறிக்குள் இருப்பது ஒரு முழுத்தொடராகும்போது முற்றுப்புள்ளியை அடைப்புக்குறிக்குள் வைக்கிறோம். இரதர்போடின் அணுக்கருவொப்புருவில் கோள்களின் சுற்றுப்பாதைபோன்ற பாதையில் நகரும் எதிர்மின்னிகள் முடுக்கமடைகின்றன. மேக்குவல்லின் மின்காந்தக்கோட்-பாட்டின்படி, மின்மமேற்ற துகள்கள் முடுக்கமடையும்போது மின்காந்தக்கதிர்வீச்சை உமிழ்கின்றன. (மின்மங்கள் இல்லாததால் கோள்களுக்கு இத்தகு பண்பு இல்லை.) எனவே சுற்றுப்பாதையில் பயணிக்கும் ஒரு எதிர்மின்னி கதிர்வீச்சை உமிழவேண்டும். அடைப்புக்குறிக்குள் இருப்பது வெளியிலுள்ள முழுத்தொடரின் பகுதியாக அதன் இறுதியில் இருக்கும்போது முற்றுப்புள்ளியை அடைப்புக்குறிக்கு வெளியில் வைக்கிறோம். nஇன் மதிப்பு 2எனில் 0, 1 எனும் இரண்டு மதிப்புகள் lக்கு சாத்தியம். n = 3 எனில், l = 0, 1, 2 (மூன்று மதிப்புகள்). ஒவ்வொரு கூட்டிலும் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டதோவான துணைக்கூடுகள் உள்ளன. ஒரு வரலாற்றுமனிதரின் பெயர் முதன்முதலாக உரையில் வரும்போது அவர் வாழ்ந்த காலத்தை அடைப்புக்குள் இடுவது வழக்கம். மேரி கியூரி (1867-1934) மேற்கோட்குறிகள் ஒருவர் சொன்னதையோ எழுதியதையோ மேற்கோளாக எடுத்தாள மேற்கோட்குறிகள் உதவுகின்றன. ஒற்றைமேற்கோள், இரட்டைமேற்கோள் ஆகிய இருவிதமான குறிகள் உள்ளன. ஒருவர் சொன்னதை நேர்க்கூற்றாக எழுத இரட்டைமேற்கோட்குறிகள் பயன்படுகின்றன. “மழை வரலாம்” என்று குமரன் சொன்னான். “வராது” என்று வள்ளி உறுதியளித்தாள். ஒரு முழுத்தொடர் மேற்கோட்குறியினுள் வரும்போது அதனிறுதியில் முற்றுப்புள்ளி வைப்பதில்லை. ஆனால், ஒரு வினா உள்ளிருக்கும்போது வினாக்குறியை உள்ளே வைக்கவேண்டும். “மழை வருமா?” என்று குமரன் கேட்டான். வியப்புக்குறியையும் உள்ளே இடலாம். “ஐயோ! மழை வருகிறதே!” என்றாள். பல முழுத்தொடர்கள் அடங்கிய உரையை மேற்கோளிடும்போது, இறுதிமுழுத்தொடரைத்தவிர மற்ற எல்லாவற்றையும் முற்றுப்புள்ளியால் முடிக்கிறோம். “இந்தா சரோ, சீக்கிரம் பார்த்து எடு. பிடிக்கவில்லையானால் வேறு கடையை பார்க்கலாம்” என்றாள். ஒரு மேற்கோள் யாருடைய கூற்று என்று சூழமைவால் தெளிவாகும்போது மேற்கோள் மட்டுமே ஒரு முழுத்தொடராகலாம். அப்போது முற்றுப்புள்ளியை மேற்கோட்குறிக்குள் இடுகிறோம். இவ்வாறான கட்டமைப்பை கதைகளில் வரும் உரையாடல்களில் அதிகமாக காணலாம். “என்ன சொன்னான்?” “எனக்காக விலையை குறைத்துத்தருகிறானாம்; வாங்கிக்கொண்டு போகச்சொன்னான்.” “நீ என்ன சொன்னாய்?” “நாளைக்கு வருவதாய் சொன்னேன். கடன்கேட்டாலும் தந்துவிடுவான்.” கலைச்சொல்போன்ற ஒரு சொல்லையோ தொடரையோ தனியாக எடுத்துக்காட்ட ஒற்றைக்குறிகளை பயன்படுத்தலாம். ‘உலர்பனிக்கட்டி’ எனும் திண்ம CO₂ வேதியியலில், ‘மீட்டிருப்பத்தகு’ என்ற சொல், கொடுக்கப்பட்ட வேதிவினை ஒரே நேரத்தில் இரு திசைகளிலும் தொடரவியலும் என்பதை குறிக்கிறது. இப்போதெல்லாம் அச்சிலும் மின்னூடகத்திலும் ஒற்றைமேற்கோட்குறிகளுக்குப்பதிலாக நிறத்தாலோ எழுத்துவகையயாலோ சொற்களை வேறுபடுத்தலாம். உலர்பனிக்கட்டி எனும் திண்ம CO₂ வேதியியலில், மீட்டிருப்பத்தகு என்ற சொல், கொடுக்கப்பட்ட வேதிவினை ஒரே நேரத்தில் இரு திசைகளிலும் தொடரவியலும் என்பதை குறிக்கிறது. இடைக்கோடு இடைக்கோடு நீண்ட சொற்களை வரியிறுதியில் மடித்தெழுத பயன்படுகிறது. இதைப்பற்றி மேலும் 12.3ஆம் பகுதியில் காண்போம். ஆங்கிலத்தில் கூட்டுச்சொற்களை பிரிக்க சிலநேரங்களில் இடைக்கோடு பயன்படுகிறது. Initial-value problem, boundary-value problem இதை தமிழில் பயன்படுத்துவதில்லை. ஆங்கிலத்திலும் இப்போது வழக்கொழிந்துவருகிறது. உடைமைக்குறி ஆங்கிலத்தில் உடைமைக்குறியாக பயன்படும் இந்தக்குறி தமிழில் பயனாவதில்லை. Kumaran’s book அச்சமைப்புத்தேவைகள் சுமார் ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்பே தமிழ் எழுத்தாணியை உதறித்தள்ளிவிட்டு அச்சேறியது. இக்காலத்தில் அது தாளையும் மையையும் உதறிவிட்டு கணினியேறுகிறது. கணினித்தொழினுட்பம் முதலில் ஆங்கிலத்தில் முதிர்ச்சியடைந்து பத்திருபதாண்டுகளுக்கு முன்பே தமிழை ஆதரிக்கத்தொடங்கியிருக்கிறது. இந்த ஆதரவு இன்னும் முழுமையாகவில்லை. பேனாவை பயன்படுத்தாமல் கணினியின் உதவியுடன் தமிழில் எழுத்தாளர்கள் எழுதுவதும் அச்செந்திரத்தை பயன்படுத்தாமல் பதிப்பாளர்கள் மின்னூல்களை வெளியிடுவதும் பொதுமக்கள் மின்னூல்களை படிக்கும் வசதியும் பழக்கமும் உடையவர்களாவதுமான காலம் விரைவில் வரவேண்டும். அதற்குத்தேவையான ஆராய்ச்சிகளை தமிழர்கள் மேற்கொள்ளவேண்டும். என் பணியில் நான் எதிர்கொள்ளும் சில குறைபாடுகளை இங்கு விவரிக்கிறேன். அளவுவேறுபாடு தமிழும் ஆங்கிலமும் கலந்த உரையை எழுதும்போது தமிழெழுத்துகளது அளவும் ஆங்கிலவெழுத்துகளது அளவும் வேறுபடுகின்றன. கலந்த உரையில் அளவு வேறுபடல். size difference in mixed text (Latha body). கலந்த உரையில் அளவு வேறுபடல். size difference in mixed text (Nirmala UI). கலந்த உரையில் அளவு வேறுபடல். size difference in mixed text (Vijaya). மேற்காண்பவை எல்லாமே 12 புள்ளி உயரமான எழுத்துருக்களால் எழுதப்பட்டவை. வெவ்வேறு எழுத்துருக்களிடையில் வேறுபாடு இருப்பது இயல்பு. ஆனால் நான் இங்கு கருதுவது ஒரே எழுத்துருவில் தமிழெழுத்துகளுக்கும் உரோமானியவெழுத்துகளுக்கு-முள்ள வேறுபாடு. தமிழில் எழுத்துருக்களை வடிவமைப்போர் இதை கருதவேண்டும். மேற்கண்டவற்றுள் விசயா என்பது அண்மைக்காலத்தில் வெளியானது. எனவே, இந்த நிலைமை முன்னேறிவருவாதாக தோன்றுகிறது. முற்றுப்புள்ளியின் அளவு கணினித்தொழினுட்பம் முதலில் ஆங்கிலத்தில் முதிர்ந்து பிறகு தமிழுக்கு வந்திருப்பதால் பல பண்புக்கூறுகளையும் நாம் ஆங்கிலத்திலிருந்து பெறுகிறோம். சிலவற்றை தமிழுக்கு தகுந்தவாறு மாற்றியமைக்கவேண்டியதாகிறது. ஆங்கிலத்தில் ஒரு முழுத்தொடர் முடிந்து அடுத்தது தொடங்குவதை குறிக்க இரண்டு பண்புக்கூறுகள் பயனாகின்றன. முதல் முழுத்தொடர் முற்றுப்புள்ளியில் முடிந்து இரண்டாம் முழுத்தொடர் மேலெழுத்தில் தொடங்குகிறது. இந்த இரண்டும் சேர்ந்து வாசிப்பவர்களது கண்களுக்கு இந்த மாறிடத்தை எளிதாக தோன்றச்செய்கின்றன. ஆனால், தமிழில் மேலெழுத்து, கீழெழுத்து என்ற வேறுபாடு இல்லை. மாறிடத்தைக்காண முற்றுப்புள்ளியை மட்டுமே நம்பியிருக்கிறோம். இவ்வாறிருக்க, தமிழில் முற்றுப்புள்ளியின் அளவு கண்ணுக்கு எளிதாக தோன்றுமளவுக்கு பெரிதாயிருக்கவேண்டும். முந்தைய பகுதியில் கண்ட விசயா என்ற எழுத்துருவில், எழுத்துயரங்கள் ஒரே அளவுக்கு இருப்பினும், அகலங்கள் வேறுபடுகின்றன. இது உரோமானியவெழுத்துக்கும் தமிழெழுத்துக்குமுள்ள அடிப்படையான வேறுபாடு. உரோமானியவெழுத்தில் கீழ்மேலாகச்செல்லும் கோடுகள் இரண்டுக்குமேல் இருப்பது அரிது (m, w மட்டும்); தமிழில் பெரும்பான்மையான எழுத்துகளில் இவ்வாறான கோடுகள் மூன்றுநான்குமுறை வருகின்றன. இதனால் உரோமானியவெழுத்துகள் அகலத்தைவிட உயரமாகவும் தமிழெழுத்துகள் உயரத்தைவிட அகலமாகவும் இருக்கின்றன. முற்றுப்புள்ளியும் இதற்குத்தகுந்த அகலத்தில் இருக்கவேண்டும். வட்டவடிவத்திலே வைத்துக்கொண்டு ஆரத்தை சற்று அதிகரிக்கவேண்டும். பெரும்பான்மையான முழுத்தொடர்கள் வினைமுற்றுகளில் முடிவதால் முழுத்தொடர் முடிவதை நாம் அறியலாம். வினையிலா முழுத்தொடர்களில் இது கடினமாகிறது. இங்கு நாம் முற்றுப்புள்ளியையே முழுவதுமாக நம்பியிருக்கிறோம். இவ்வாறான முழுத்தொடர்களை பல எழுத்தாளர்கள் ஆகும் என்று முடிக்கின்றனர். ஒருவேளை முற்றுப்புள்ளி எளிதாக கண்ணுக்கு தோன்றினால் இந்த வழக்கம் தேவையிராது. மடித்தெழுதல் தமிழ் ஒரு ஒட்டுத்திரண்மொழி என்று 2.6ஆம் பகுதியில் குறிப்பிட்டேன். அதாவது பல சொற்களும் உருபுகளும் தொகையாலும் புணர்ச்சியாலும் திரண்டு நீண்ட சொற்களை உருவாக்குகின்றன. இந்த நீண்ட சொற்களை வரிகளில் இடைவிடாமல் அடுக்குவது கடினமாகிறது. ஆங்கிலம் ஒட்டுத்திரண்மொழியன்று; எனினும் இந்த சிக்கல் அங்கும் எழுகிறது. ஆனால் தமிழில் மேலும் கடுமையாகிறது. இந்த சிக்கலின் தீர்வு வரிமுடிவில் வரும் சொல்லை தகுந்தமுறையில் மடித்து எழுதுவது. இங்கு தகுந்தமுறை என்பது மொழிக்குமொழி வேறுபடலாம். தமிழில் பாவிலக்கணம் சொற்களை அசைகளாக பிரிக்கிறது. நேர், நிரை என்ற இருவிதமான அசைகள் இருக்கின்றன. சொற்களை மடிப்பதற்காக அசைகளாக பிரித்துக்கொள்ளலாம் என்று நான் கருதுகிறேன். அவ்வாறு ஒரு சொல்லை இரண்டு வரிகளில் மடிக்கவேண்டிய தேவை ஏற்படும்போது பிரிவிடத்தை ஒரு இடைக்கோட்டால் காட்டலாம். இதை கணினியில் செயலாக்க மென்பொருளை வளராக்கவேண்டும். பிழைதிருத்தியும் புணர்ச்சிநீக்கியும் முந்தைய மூன்று பகுதிகளிலும் சொன்னவை வெறும் அச்சமைப்புக்கூறுகள். அவற்றுக்கு மொழியறிவு தேவையில்லை. ஆனால் பிழைதிருத்தி போன்ற மென்பொருளை வளராக்குவது அதைவிட கடினமானது. புணர்ச்சிவிதிகளால் சொற்களை சேர்ப்பதற்கும் ஒரு மென்பொருள் தேவை. அவ்வாறு சேர்த்த சொற்களை கூறுபிரிக்கும் மென்பொருளும் தேவை. நான் பள்ளியில் படித்தபோது பதினாறுவரையான பெருக்கல்வாய்ப்பாடுகளை மனப்பாடஞ்செய்தோம். கணக்குகளை கையாலே போட்டோம். இப்போது கணினியும் கணக்கிடுவியும், அலைபேசியும், கைக்கடிகாரமும் விடையை எளிதில் தந்துவிடுகின்றன. இதே தொழினுட்பவுதவி புணர்ச்சிவிதிகளுக்கும் வரவேண்டும்; விரைவில் வந்துவிடும். இன்றைக்கு ஆங்கிலத்தில் உரை எழுதும்போது மென்பொருள்கள் எழுத்துப்பிழைகளை போகிறபோக்கில் திருத்துவது மட்டுமல்லாமல், இலக்கணப்பிழைகளை சுட்டிக்காட்டி திருத்தும் வழிகளையும் பரிந்துரைக்கின்றன. ஒரு தமிழெழுத்தாளர் கணினியில் எழுதும்போது எழுத்துப்பிழையை திருத்துவதும் புணர்ச்சிவிதிகளை பயனாக்குவதும் தானியக்கமாக நடைபெறும் நாள் விரைவில் வரப்போகிறது. (இப்போது இவ்வாறான மென்பொருள்கள் வளராக்கத்திலும் சோதனையிலும் உள்ளன). அப்போது புணர்ச்சிவிதிகளை எழுத்தாளர் புரிந்துகொண்டால் போதும்; மனப்பாடமாக அறியவேண்டியதில்லை. தொகையால் புணர்ந்த சொற்களை பிரித்து விரியாக பொருள்கொள்வதிலும் கணினி உதவலாம். இவ்வாறு தொகையை நீக்கி கூறுபிரிப்பது முதனோக்கில் கடினமாக தோன்றலாம். ஆனால் இதுபோன்ற படிமுறைகளை மென்பொருளாளர் பலதுறைகளிலும் கையாள்கின்றனர். இதன் அடிப்படையான அணுகுமுறை கூட்டுச்சொல்லின் முதலெழுத்தில் தொடங்கி ஒவ்வொரு எழுத்தாக சேர்த்து அந்த உட்சரம் ஒரு சொல்லாக அகராதியில் தோன்றுகிறதா என்றும் தோன்றாவிட்டால் தொடர்பான ஏதாவதொரு புணர்ச்சிவிதியின் புரட்டை பயன்படுத்தி அகராதியில் தோன்றும் ஒரு சொல்லாக மாற்றவியலுமா என்றும் பார்ப்பது. முதற்பகுதி ஒரு சொல்லாகும்போது எஞ்சியபகுதி மற்றொரு சொல்லானால் இது ஒரு விளைவு. புணர்ச்சியால் பொருண்மயக்கம் ஏற்படுவது சாத்தியம் என்பதால், ஒரு விளைவுடன் படிமுறை நின்றுவிடாமல் கூட்டுச்சொல்லின் இறுதிவரை தொடரவேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட சேர்க்கைகள் விளைந்தால், பொருண்மயக்கநீக்கம் தேவைப்படும். முடிவுரை இந்த நூலில் நான் எழுத்துநடை என்றழைப்பது தமிழில் தெளிவாக எழுதுவதையே என்பது உங்களுக்கு தெளிவாகியிருக்கும். இலக்கணத்தை புறக்கணிக்காமல் அதன் வழியுரைகளை பின்பற்றி எழுதுவதே தெளிவு என்பதையும் காட்ட முயன்றிருக்கிறேன். இலக்கணம் என்பது நம்மை துயரத்தில் ஆழ்த்துவதற்காக யாரோ ஒரு துன்புறுத்தின்பர் இயற்றியதன்று. நாம் உயர்கருத்துகளை தெளிவாக ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள தேவையான ஒரு மொழியமைப்பை ஆக்கிக்கொடுப்பதே அதன் வேலை. இந்த அமைப்பை ஊன்றிக்கற்காமல் ‘தமிழ் என் தாய்மொழி. அதுதான் எனக்கு தெரியுமே’ என்ற எண்ணத்தால் வாய்க்கு வந்தபடி பேசுவதும் கைக்குவந்தபடி எழுதுவதும் மொழியையும் நாளடைவில் அந்த மொழிபேசும் சமூகத்தையும் சிதையச்செய்கிறது. இந்த சிதைவை தவிர்க்க எழுத்தாளர்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் பணியாற்றவேண்டும். இதை நான் செந்தரம் என்று குறிக்கிறேன். எனினும் தனிமரம் தோப்பாகாது. இதில் பொதிந்த கருத்துகள் மிகவும் பயனுடையவை என்று நான் கருதுவதால் அறிஞர்களும் இவ்வாறே கண்டு ஏற்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் ஒரு முரட்டுத்துணிவுடனே இந்த நூலை வெளியிடுகிறேன். செந்தரமாக நான் முன்மொழியும் இந்த வழியுரைகளின்படி எழுதிய உரையை பின்னோக்கலின்றி ஒற்றைக்கடவச்சொல்லலசலால் பொருள்கொள்ளலாம் என்று கண்டோம். இந்த அமைப்பு தொல்லிலக்கணத்துடன் முரண்படவில்லை என்றே கருதுகிறேன். புணர்ந்த சொற்களை மீண்டும் பிரித்தெழுலாகாது என்பதில் மட்டுமே இந்த அமைப்பு இக்காலத்தமிழறிஞர்களது கருத்துடன் முரண்படுகிறது; வேறொன்றிலும் முரண்படவில்லை. அறிஞர்கள் இந்த நூலை மதிப்பாய்ந்து கருத்திட்டு அடுத்த பதிப்பை மேம்படுத்துமாறு கோருகிறேன். நோக்கீடுகள் - அகத்தியலிங்கம். (2016). தமிழ்மொழி அமைப்பியல். சிதம்பரம்: மெய்யப்பன் தமிழாய்வகம்.அவுசநடை. (2020). - Publication manual of the Americal Psychological Aociation. https://apastyle.apa.org/products/publication-manual-7th-edition?tab=10 -இல் இருந்து எடுக்கப்பட்டது - ஆசுபோடு. (2016). *New Oxford Style Manual - Oxford University Pre.சிக்காகோ. (2017). - The Chicago Manual of Style. University of Chicago Pre.சுந்தரம், ந. த. (2022). - மொழியும் தமிழ் இலக்கணமும். சென்னை: அமுத நிலையம்.ஞானச்செல்வன், க. (2021). - இது கதையன்று வாழ்க்கை. சென்னை: எழில் நிலையம்.பரமசிவம், ச. (1990). - நற்றமிழ் இலக்கணம்* (4 பதி.). சென்னை: பட்டுப் பதிப்பகம்.பொற்கோ. (2002). - இக்காலத் தமிழ் இலக்கணம். சென்னை: பாரி நிலையம். கலைச்சொற்கள் அணுவுட்டுகள் subatomic particle அரையுயிர் semivowel அல்வடிவ ill-formed அளவிய quntitative அளவுரைப்பி quantifier அற்பமான trivial ஆசுபோடுபல்கலைக்கழகம் Oxford university இணைந்த முழுத்தொடர் compound sentence இணைப்பி [மொழி] conjunction இயன்மொழி natural language இரண்டாம் வேற்றுமை accusative case ஈற்றயல் penultimate உட்கிடை implicit உள்ளடுக்கல் nesting எச்சத்தொடர் dependent clause எடுப்பளவு dose எழுவாய் subject [ling] எளிய முழுத்தொடர் simple sentence ஒட்டுத்திரண்மொழி agglutinative language ஒப்பீடு comparison ஒற்றைக்கடவச்சொல்லலசல் single pa parsing கட்டாயச்சாரியை கட்டெழுத்திலக்கணம் prescriptive grammar குற்றியலுகரம் கூட்டும முழுத்தொடர் complex sentence சமச்சீர்மை symmetry சாரியை சிறப்பியல்பு characteristic செயப்படுபொருள் direct object சொல்வயமாதல் lexicalization தவிர்ப்போகாரம் exclusive or துன்புறுத்தின்பர் sadist நடைக்கையேடு style guide நிரலாக்கமொழி programming language நிலைச்சொல் நிறுத்தக்குறி punctuation நோக்கீடு reference படலம் chapter பண்பிய qualitative பயனிலை predicate பன்மயம் diversity பிழைச்சகிப்பு error telerance பின்னடத்தல் backtracking புணர்ச்சி பெயரடை adjective பெயரெச்சம் adjectival participle பொதுக்கிளைமொழி generic dialect பொருள்கோள் semantics முவிய (முழுப்புவியிடங்குறிப்பமைப்பு) GPS (global positioning system) முழுத்தொடர் sentence முற்றியலுகரம் முற்றுத்தொடர் primary sentence முன்னமைவி preposition முன்னிலவரம் precondition மெய்மயக்கம் மேற்கோள் quotation வடிவூட்ட formatting வரியியல் syntax வருஞ்சொல் வழியுரைகள் guidelines விகுதி suffix வித்துமுளைகள் protonema விருப்புமச்சாரியை விவரணவிலக்கணம் descriptive grammar விளைவு result, effect வினையடை adverb வினையெச்சம் கணியம் அறக்கட்டளை [] தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழலை உருவாக்குதல். பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். எமது பணிகள் - கணியம் மின்னிதழ் - kaniyam.com - கணிப்பொறி சார்ந்த கட்டுரைகள், காணொளிகள், மின்னூல்களை இங்கு வெளியிடுகிறோம். - கட்டற்ற தமிழ் நூல்கள் - FreeTamilEbooks.com - இங்கு யாவரும் எங்கும் பகிரும் வகையில், கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில், தமிழ் மின்னூல்களை இலவசமாக, அனைத்துக் கருவிகளிலும் படிக்கும் வகையில் epub, mobi, A4 PDF, 6 inch PDF வடிவங்களில் வெளியிடுகிறோம். - தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கம் - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல். மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். https://github.com/KaniyamFoundation/Organization/issues இந்த இணைப்பில் செயல்களையும், https://github.com/KaniyamFoundation/Organization/wiki இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account