[]   எனது நாடக வாழ்க்கை    அவ்வை தி. க. சண்முகம்    அட்டைப்படம் - எம்.ரிஷான் ஷெரீப் -  mrishansha@gmail.com  மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி -  sraji.me@gmail.com  வெளியிடு : FreeTamilEbooks.com    உரிமை : Public Domain – CC0  உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.                        பொருளடக்கம் முன்னுரை 6  அணிந்துரை 7  அறிமுகவுரை 9  பதிப்புரை 11  மூன்றாம் பதிப்பின் பதிப்புரை 13   நாடக உலகில் நுழைந்தோம் 14  சங்கரதாஸ் சுவாமிகள் 18  பேய் வீடு 27  மறக்க முடியாத இரசிகர்! 30  மதுரை மாரியப்ப சுவாமிகள் 35  சென்னை மாநகரம் 40  முத்துச்சாமிக் கவிராயர் 63  நாட்டுக்கோட்டை நகரத்தில் 68  குமார எட்டப்ப மகாராஜா 72  கலைவள்ளல் காசிப் பாண்டியன் 74  நாஞ்சில் நாட்டில் 76  ஸ்ரீ பால ஷண் முகானந்த சபா 78  தூத்துக்குடி கலவரம் 82  கலைவாணரின் வளர்ச்சி 85  கொங்கு நாட்டில் 88  சீர்திருத்த நாடகாசிரியர் 90  திரைப்படமும் நாடகமும் 93  புதுக்கோட்டைத் தம்புடு பாகவதர் 97  மலையாள நாட்டில் 102  நடிப்பிசைப் புலவர் ராமசாமி 105  இலங்கைப் பயணம் 106  தமிழகம் திரும்பினோம் 109  பெரியண்ணா திருமணம் 112  துன்பத்திலும் சிரிப்பு 117  அம்மாவின் அந்திய நேரம் 120  அரசியல் பிரவேசம் 123  மும்மொழி நாடகம் 131  கோல்டன் சாரதாம்பாள் 134  பாகவதர் சந்திப்பு 137  ஸ்பெஷல் நாடக நடிப்பு 144  மேனகா திரைப்படம் 153  டைரக்டர் ராஜா சாண்டோ 155  முத்தமிடும் காட்சி 159  கம்பெனி நிறுத்தம் 164  மறு பிறப்பு 166  பாலாமணி - பக்காத்திருடன் 168  சின்னண்ணா திருமணம் 171  சீர்திருத்த நாடகக் கம்பெனி 177  கலைஞர் ஏ.பி. நாகராஜன் 182  பூலோகரம்பை 186  அண்ணாவின் விமரிசனம் 189  குமாஸ்தாவின் பெண் படம்! 191  என் திருமணம் 194  நல்ல காலம் பிறந்தது 197  முத்தமிழ்க் கலா வித்துவ ரத்தினம் 200  நாடக உலகில் ஒளவயைார் 205  போரும் புரட்சியும் 209  இல்வாழ்வில் இன்பம் 210  தம்பி பகவதி திருமணம் 213  வருங்காலத் தமிழர் தலைவர் 215  இரு பெரும் கலைஞர்கள் 218  குடும்ப விளக்கு! 222  அண்ணாவின் சந்திரோதயம் 226  முதல் நாடகக் கலை மாநாடு 228  மூன்று இலக்கிய நாடகங்கள் 241  பாகவதரின் கலைக் குடும்பம் 248  தமிழ் நாடகப் பரிசுத் திட்டம் 252  மேதைகளின் விசித்திரப் பண்புகள் 255  பாரதி மண்டபத்துக்கு ஒளவையார் 258  அந்தமான் கைதி 260  முள்ளில் ரோஜா 263  சிறப்புக்குரிய நிகழ்ச்சிகள் 266  பில்ஹணன் திரைப் படம் 271  எங்கள் நாடக அரங்கம் 278  தமிழ் மாகாண 43வது அரசியல் மாநாடு 281  அறவழி காட்டிய அண்ணலின் மறைவு 283  மூன்றாவது தமிழ் எழுத்தாளர் மாநாடு 286  காதல் திருமணம் 291  இமயத்தில் நாம் 293  மனிதன் 295  முன்னுரை   ‘எனது நாடக வாழ்க்கை’ என்ற தலைப்பில் முத்தமிழ்க் கலா வித்துவரத்தினம், ஒளவை திரு டி. கே. ஷண்முகம் எம். எல். சி. அவர்கள், ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நாடகத் துறையில் தமக்கு ஏற்பட்ட அனுபவக் கனிகளைப் பிழிந்தெடுத்து, அந்த நறுஞ்சாற்றினை நாமனைவரும் பருகிடுமாறு அரியதோர் நூல் வடிவில் தமிழ் மக்களுக்கு இன்று வழங்கியுள்ளார்கள்.  மணிவிழா எடுத்திருக்கும் இந்த இனிய மகிழ்ச்சிகரமான நாளிலே நாடகத்துறையில் தொல்காப்பியர் எனத் தகும் எல்லா விதமான ஆற்றல்களும் நிரம்பிடப் பெற்ற அன்னார், எளிய சுவையான நடையிலும், கடந்த காலத்தைத் திரும்பிப்பார்த்தும், இக்கால இளைஞர்களின் சிந்தனைக்கு விருந்தாகவும், கருத்துத் தெளிவுக்கு மருந்தாகவும் இதனைப் படைத்துள்ளார்கள்.  நாடகத்துறையில் தோல்வி காணாது வெற்றிகள் பல ஈட்டியுள்ள அவர்கள், நல்ல தமிழ்ப் பற்றும் தமிழ்ச் சான்றாேர்கள்பால் நீங்காத பக்தியும் உடையவர்கள்; அரசியல் தலைவர்களிடத்திலும் நல்ல முறையிலான தொடர்பும் மதிப்பும் கொண்டுள்ளவர்கள் என்பதையெல்லாம் இந்நூல் நன்கு எடுத்துக் காட்டுகின்றது.  பொதுவாகத் தமிழ் மக்கள் அனைவரும் போற்றுதற் குரியது என்ற என் பணிவான கருத்தினைத் தெரிவித்துத் திரு டி. கே. எஸ் அவர்களின் அரிய முயற்சி வெல்க என வாழ்த்துகின்றேன். வணக்கம்.                                        அணிந்துரை   சிலம்புச்செல்வர் ம. பொ. சிவஞானம் எம். எல். சி. அவர்கள்  ‘எனது நாடக வாழ்க்கை’ எனும் பெயரில் அவ்வை தி. க. சண்முகம் எழுதி வானதி பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள இந்நூல் தமிழ் இலக்கியக் களஞ்சியத்துக்குப் புதிய வரவு எனலாம். ஆம்; நாடக நடிகர் எவரும் இதுவரை தனது நாடகவாழ்க்கையை ஒரு நூலாக உருவாக்கித் தந்ததில்லை. கலைஞர் சண்முகம் போற்றி வரும் நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார், “நான் கண்ட நாடகக் கலைஞர்கள்” எனும் பெயரில் சிறிய நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை நான் படித்தும் இருக்கிறேன். ஆனால், அது முதலியாரின் நாடக வாழ்க்கையன்று. நாடக உலகில் தாம் சந்தித்த சில நடிகர்களைப் பற்றிய குறிப்புக்களையே அவர் அந்நூலில் தந்துள்ளார்.  கலைஞர் சண்முகம், “எனது நாடக வாழ்க்கை” என்று இந்நூலுக்குப் பெயரிட்டிருப்பினும், கடந்துபோன அரை நூற்றாண்டு காலத்தில் தமிழ்நாடகம் வளர்ந்து வந்த வரலாற்றையும் விரிவாகக் கூறியுள்ளார்.  ஐந்தாண்டு பிள்ளைப்பருவத்தில் இந்நூலாசிரியர் நாடக மேடையில் தோன்றினார். அறுபதாண்டு நிறைவு பெற்று, தமக்கு மணிவிழா நடைபெறும் இந்நாளிலே, தமது 55 ஆண்டு கால நாடக வாழ்க்கையை விரித்தெழுதும் பேற்றினைப் பெற்றிருக்கிறார் என்றால், இதனைத் தமிழ் நாடகம் செய்த தவம் என்றே சொல்ல வேண்டும்.  நடிகரெல்லாம் ஆற்றல் மிக்க எழுத்தாளராகி விடுவதில்லை. அப்படியே ஆற்றல் மிக்க எழுத்தாளரெல்லாம் புகழ் மணக்கும் நடிகராகி விடுவதில்லை. இந்த இரண்டு ஆற்றல்களும் அவ்வை சண்முகனாரிடம் நிறைவு பெற்று விளங்குகிறது என்பதற்கு இந்நூல் சான்றாகும். கடந்த காலத்தில் நாடக அரங்கில் தோன்றிப் புகழோடு விளங்கிய பலர் காலப்போக்கிலே மக்கள் கவனத்திலிருந்து மறைந்தே போயினர். ஆம்; மக்கள் என்றென்றும் நினைவில் வைத்துப் போற்றத்தக்க பெருமைக்குரிய நடிக-நடிகையர்கூட இன்றையத் தலைமுறையினரின் நினைவுக்கு அப்பாற்பட்டவராகி விட்டனர். அவர்களை எல்லாம் இந்நூலில் நல்லவிதத்தில் அறிமுகப்படுத்தி, அவர்களுடைய பெயர்கள் மறைந்து போகாதபடி செய்துவிட்டார் ஆசிரியர் சண்முகனார். பொறாமையற்ற பண்பாளர்களுக்கே இது சாத்தியமாகும். கலைஞர் சண்முகம் தம்மிலே நாடக உலகை அடக்கிவிடாமல் நாடக உலகில் தம்மை ஒரு அங்கமாகக் கருதக்கூடிய உயர்குணம் படைத்தவர். அதனால் தமது வாழ்க்கையை மையமாகக் கொண்டு தமிழ் நாடக உலகின் அரை நூற்றாண்டு காலச் சரித்திரமாக இந்நூலைப் படைத்துள்ளார்.  ஒருவருடைய சுய சரிதம் எப்படி எழுதப்பட வேண்டுமோ, அப்படி எழுதப்பட்டுள்ளது இந்நூல். பல இடங்களில் நாடகக் காட்சிகளைப்பற்றிப் படிக்கிறோம் என்பதனை மறந்து, அந்தக் காட்சிகளைப் பார்க்கிறோம் என்ற உணர்வையே பெற்றுவிடுகிறோம்.  நாடக மேடையிலே நடிகர்களுக்கு விபத்துக்கள்கூட ஏற்படுவதுண்டு. இதனை, தாம் பெற்ற அனுபவத்தைக் கொண்டு படிப்பவருடைய மனம் உருகும்படி எழுதியுள்ளார். ஒரு காட்சியிலே கலைஞருக்கு ஏற்படவிருந்த விபத்திலிருந்து அவர் தெய்வாதீனமாகத் தப்பியதனை நாம் படிக்கும்போது, மணிவிழாக் காண வேண்டிய நம் சண்முகனார் விபத்திலிருந்து தப்பியது குறித்து நாம் வியப்பும் மகிழ்ச்சியும் அடைகிறோம். இந்த ஒரு நிகழ்ச்சியை சான்றாகக் கொண்டு, நாடக உலகுக்கு ரசிகர் உலகம் எவ்வளவோ கடமைப் பட்டிருக்கிறது என்பதனை நன்றியறிதலோடு உணர்கிறோம்.  கலைஞர் சண்முகம் நகைச்சுவை ததும்ப எழுதுவதில் தமக்குள்ள ஆற்றலை இந்நூலில் பல்வேறு இடங்களில் வெளிப்படுத்தி, யுள்ளார். நகைச்சுவை ததும்பப் பேசுவது வேறு; எழுதுவது வேறு. நகைச்சுவை ததும்பப் பேசும் ஆற்றல்பெற்றவரைப்போல் அதே முறையில் எழுதுகின்ற ஆற்றலைப் பெற்றவர் கலைஞர் சண்முகம். சில நடிகர்களைப் பற்றி நகைச்சுவையோடு குறிப்பிடும் போது பலமுறை என்னையறியாமலே நான் சிரித்ததுண்டு.  சின்னஞ்சிறு பிள்ளைகளைக் கொண்ட “பாய்ஸ் கம்பெனி” எதுவும் இந்நாளில் இல்லை. அதனால் நாடக உலகில் பிள்ளைகள் பட்ட அல்லல்களை இந்நூலின் வாயிலாகவன்றி வேறு வகையில் தெரிந்துகொள்ள வருங்காலத் தலைமுறையினருக்கு வாய்ப்பில்லை. இந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வறுமையோடு உறவு கொண்டுதான் நாடகக்கலை வளர்ந்து வந்திருக்கிறது. ஐந்து வயதில்-பள்ளிக்குச் செல்ல வேண்டிய பருவத்தில் நாடகத் துறையில் பிள்ளைகள் ஈடுபடுத்தப்பட்ட கொடுமை கடந்த தலைமுறையோடு முடிந்துபோனதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, நாடகக் கம்பெனி என்பது, நடிக்கின்ற பிள்ளைகளை அடைத்து வைக்கும் சிறைச்சாலையாகவும் இருந்து வந்த கொடுமையினை கலைஞர் சண்முகத்தின் நாடக வாழ்க்கையைக் கொண்டே நாம் அறிந்து கொள்ள முடிகிறது.  சங்கரதாஸ் சுவாமிகளைப் பற்றிக் குறிப்பிடும் இடங்களில், குரு பக்தியை நன்றி உணர்வோடு வெளிப்படுத்துகிறார் இந்நூலாசிரியர். தம்முடைய பெற்றோர்களிடமும் பக்தியையும் நன்றியுணர்வையும் வெளிப்படுத்துகிறார் என்றாலும், நாடகக் குருநாதரிடமே இந்த அரிய பண்புகளை அதிகமாக வெளிப் படுத்துகிறார். இதனை எல்லா நடிகர்களிடமும் நாம் காண முடிவதில்லையல்லவா?  இந்த நூலை மிகச் சிறந்த இலக்கியமாகவே நான் கருதுகின்றேன். தமிழிலுள்ள இதனைப் பிற மொழிகளில்-குறிப்பாக உலகமொழியான ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும். இது சரித்திர நூல் மட்டுமல்ல; நாடக உலகைப்பற்றிய மிகச் சிறந்த தகவல்நூல். இன்னொரு வகையில் சொன்னால், தமிழ் நாடக மேடையைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் தரும் நாடகக் கலைக் களஞ்சியம் என்றும் கொள்ளலாம். நூலாசிரியருக்கு என் மனமுவந்த வாழ்த்துக்கள்.  தம்மோடுபிறந்து, தம்மோடுவளர்ந்து, தமதுவளர்ச்சிக்குத் துணை புரிந்து வருபவர்களான தம் சகோதரர்கள் பற்றி மிகுந்த வாஞ்சையோடு நூலின் பல்வேறு இடங்களில் குறிப்பு களைத் தந்துள்ளார் ஆசிரியர். இந்த உயரிய சகோதர வாஞ்சை தான் “டி. கே. எஸ். சகோதரர்கள்” என்ற பெயரே கலைச்சொல் ஆக்கி விட்டது. வருங்கால எழுத்தாளர்கள் இதைவிடவும் பெரிய நூல் ஒன்றைப் படைப்பதற்கான முதல் நூலாக இந்நூல் அமைந்து விட்டது.  அன்பர் திருகாவுக்கரசு நடத்தும் வானதி பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுத் தனது வரலாற்றிலே புதியசிறப்பொன்றைச் சேர்த்துக் கொண்டுவிட்டது. நல்ல காகிதத்திலே, பிழையற்ற முறையிலே, அழகிய பதிப்பாக இதனை வெளியிட்ட அன்பர் திருநாவுக்கரசைப் பாராட்டுகின்றேன்.  சென்னை ம. பொ. சிவஞானம்   20-4-72                         அறிமுகவுரை ⁠1918 முதல் 1972 வரை நாடகத்துறைக்கே வாழ்வைக் காணிக்கையாக்கிய ஒரு நடிகனின் வாழ்க்கைக் குறிப்பு இது. நான் அறிந்த வரையில் இப்படி ஒரு விரிவான நாடகக் கலைஞனின் குறிப்பு இந்திய மொழிகள் எதிலுமே வந்ததாகத் தெரியவில்லை. புதிய முயற்சி இது. கலைஞனின் கன்னி முயற்சி!  ⁠ஆசிரியர் திரு பி. எஸ். செட்டியார் அவர்கள் நடத்தி வந்த ‘சினிமா உலகம்’ ஆண்டு மலரில் 1942இல் எங்கள் வாழ்க்கைக் குறிப்பினைச் சுருக்கமாக எழுதினேன், இரண்டாவதாக, என் அருமை நண்பர் திரு பி. மகாலிங்கம் அவர்கள் நாகர்கோவிலில் இருந்து வெளியிட்ட ‘தேவி’ என்னும் திங்கள் இதழில் 1943இல் ‘எங்கள் நாடக வாழ்க்கை’ என்னும் தலைப்பில் சிறிது விரிவாக எழுதினேன். அதன் பிறகு சகோதரர் கவி. கா. மு. ஷெரீப் அவர்கள் சென்னையிலிருந்து வெளியிட்ட ‘சாட்டை’ வார இதழில் 8-11-59 முதல் 26-3-61 வரை தொடர்ச்சியாக, ‘என் நாடக வாழ்க்கை’ யை மேலும் சற்று விரிவாக வரைந்தேன். எனவே அவர்களுக்கெல்லாம் இந்த நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன்.  ⁠இப்போது வெளியிடப் பெற்றுள்ள எனது நாடக வாழ்க்கை அவற்றைவிட விரிவாகவும் தெளிவாகவும் சரியான தேதிக் குறிப்புக்களோடும் தீட்டப் பெற்றிருப்பதாகக் கருதுகிறேன்.  ⁠எனது 54 ஆண்டுகால நாடக வாழ்க்கையில், 30ஆண்டு வாழ்க்கையினைப் பற்றி எனக்கு நினைவிருந்த வரையில் இதில் சொல்ல முயன்றிருக்கிறேன். இன்னும் 24ஆண்டுகால வாழ்வினை இதன் தொடர்பாக வெளிவரும் எனது நாடக வாழ்க்கை இரண்டாவது பாகத்தில் சொல்வேன்.  ⁠தலைநகராகிய சென்னைக்கு வந்தபின் நாடகம், அரசியல் ஆகிய இரு வாழ்விலும் பிணைந்து பணியாற்றியிருக்கிறேன்.  1950-இல் நாடகக் குழுவுக்கு, ‘மூடுவிழா’ நடத்தியதும், மீண்டும் தொடர்ந்து ‘ஸ்பெஷல்’ நாடக முறையில் புதிய பல நாடகங்களை நடத்தி வந்ததும் எங்கள் நாடக வாழ்வின் பொற் காலமாகும். வெளி மாநிலங்களுக்கும் வெளி நாடுகளுக்கும் சென்று உலாவந்த பெருமைக்குரிய நிகழ்ச்சிகள், அந்தக் காலகட்டத்தில் தான் வருகின்றன. எனவே இரண்டாம் பாகம் மேலும் சுவையாகவும் பயனுடையதாகவும் இருக்குமென்பதில் ஐயமில்லை.  அதனை எழுத என்னை வாழ்விக்குமாறு இறைவனை வேண்டுகிறேன்.  எனது நாடக வாழ்க்கையை எனது கண்ணோட்டத்திலே தான் எழுதியிருக்கிறேன். இதன் முழுப்பொறுப்பும் என்னைச் சார்ந்தது. சகோதரர்களின் கண்ணோட்டத்தில் பல செய்திகள் இதில் விட்டுப் போயிருக்கவும் கூடும்.  எங்கள் குழுவிலிருந்த. என்னோடு தொடர்புகொண்ட-நான் கண்டு மகிழ்ந்த எல்லா நாடக நடிக-நடிகையரைப் பற்றிய செய்திகளும் ஒரளவுதான் இதில் இடம் பெற்றுள்ளன. பெருமைக் குரிய நாடகக் கலைஞர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் நான் தனியாகவே கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அவையெல்லாம் தனி நூல்களாக வெளிவரும்.  என்னோடு தொடர்பு கொண்ட எத்தனையோ நண்பர்கள் இதில் விடுபட்டுப் போயிருக்கலாம். எனக்கே தெரிகிறது. பாரங்கள் அச்சான பிறகுதான் சிலருடைய பெயர்கள் நினைவுக்கு வந்தன. நூலில் இடம் பெறுவதற்குத் தகுதியும் உரிமையும் உடைய கலைஞர்கள், நண்பர்கள் அன்பு கூர்ந்து எனக்கு நினைவூட்டுமாறு பணிவுடன் வேண்டுகிறேன். அவர்களின் பெயர்களை அடுத்த பதிப்பில் சேர்த்துக் கொள்வேன்.  மணிவிழாவிலே எனது நாடக வாழ்க்கை கட்டாயம் வெளிவர வேண்டும் என்று என்னைவற்புறுத்திய தலைவர் சிலம்புச்செல்வர் அவர்கட்கும், பெருமைக்குரிய மாணவர் கலைஞர் ஏ.பி. நாகராஜன், மருகர் நகைச்சுவைச்செல்வர் டி. என். சிவதாணு, தம்பி பகவதி ஆகியோருக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.  இந்த நூலை வெளியிடுவதில் வானதி பதிப்பக உரிமையாளர் அன்பர் திருநாவுக்கரசு அவர்கள் காட்டிய ஆர்வத்தையும் உற்சாகத்தையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். அடேயப்பா!  என்ன சுறுசுறுப்பு! விரைவாகச் செயலாற்றுவதில் அவருக்கு இணை அவரேதான். திருநாவுக்கரசு அவர்களை ஒரு பதிப்பக உரிமையாளராக - வணிகராக மட்டும் நான் கருதவில்லை. அவர் ஒர் அருங்கலைஞர். ஆம், பல்வேறு கலைப் படைப்புகளைத் தமிழுலகுக்குத் தந்த அவர், எனது நாடக வாழ்க்கையினையும் ஒர் உயர்ந்த கலைப்படைப்பாகவே வெளியிட்டிருக்கிறார்.  ⁠அந்த அருமைக் கலைஞருக்கு என் உளமார்ந்த நன்றி.  ⁠இந்நூலை வெளியிடுவதில் எனக்குப் பேருதவியாளராக உடனிருந்து பணியாற்றியவர் கவிஞர் தே. ப. பெருமாள் அவர்கள். அவர் எனது நீண்டநாளைய நண்பர். என் உள்ளத்தை உணர்ந்தவர். அவ்வப்போது எனக்கு ஆலோசனைகள் கூறி உறுதுணை புரிந்தவர். உன்னிப்போடு பிழைதிருத்திப் பெரும் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட அவருக்கு என் நன்றி உரித்தாகட்டும்.  ⁠நூலினை அச்சிட்ட மூவேந்தர் அச்சக உரிமையாளர் திரு முத்து அவர்கள் உழைப்பால் உயர்ந்தவர். ஊக்கம் நிறைந்தவர். எத்தனைமுறை பிழைதிருத்தம் செய்தாலும்முகங்கோணாமல் மிகுந்தபொறுமையோடும் பொறுப்போடும் இந்நூலை அச்சிட்டுத்தந்தார். அவருக்கும், அச்சகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது நன்றி.  ⁠இனி, பாடுபட்டு உழைத்து உருவாக்கியுள்ள இக்கலைப் படைப்பினை வாசக நண்பர்களும், படிப்பகத்தாரும், நூலகத் தாரும் வாங்கி, விரைவில் அடுத்த பதிப்பு வெளிவரவும், இரண்டாவதுபாகத்தை உற்சகாத்தோடுவெளியிடவும் அன்பர்திருநாவுக்கரசு அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.  ⁠இந்நூலுக்கு முன்னுரை எழுதி என்னைச் சிறப்பித்த மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கட்கும், அணிந்துரை தந்து எனக்கு ஆசி கூறிய தலைவர் சிலம்புச் செல்வர் அவர்கட்கும் என் இதயம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.  ‘அவ்வை அகம்’ தி. க. ஷண்முகம்  சென்னை-86 திருவள்ளுவர் ஆண்டு 2003 சித்திரை 8௳                             பதிப்புரை கலைஞர் அவ்வை தி. க. சண்முகம் அவர்களின் எனது நாடக வாழ்க்கை என்னும் இந்நூல், அவரது வாழ்க்கை வரலாறாக இருப்பினும் தமிழ் நாடகக் கலையின் முப்பது ஆண்டுகால வரலாற்று நூலாக விளங்குகிறது.  இந்நூலில் இவரோடு தொடர்பு கொண்ட நாடக ஆசிரியர்கள், நடிக-நடிகையர், கவிஞர்கள், அறிஞர் பெருமக்கள் ஆகியோர் பற்றி இவர் வெளியிடும் செய்திகள் சுவையளிப்பன. அக்கால நாடகமேடை விநோதங்கள், மேடைகளில் நடிகர்கள் மேற்கொண்ட நடிப்பு முறைகள், பார்த்து ரசிக்கும் ரசிகர்களின் விசித்திர இயல்புகள் போன்ற பற்பல செய்திகள் படித்து ரசிக்கத் தக்கவை.  இந்நூலில் கலைஞர், தம் சொந்த வாழ்க்கையில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளை மனம் திறந்து சொல்கிறார். அவர் தம் வாழ்வில் சந்தித்த பலரைப்பற்றிப் பாரபட்சமின்றி விமர்சிக்கிறார். இந்நூலைப் படிக்கும் போது காந்தியடிகளின் சத்தியசோதனை நம் நினைவுக்கு வராமல் போகாது.  அவ்வை சண்முகத்தின் அடக்க இயல்பும், அன்புப் பெருக்கும், பிற கனிந்த பண்புகளும்வசீகரம் மிக்கவை. மற்றவர்களுக்குப் போதனை நல்கும் ஒருவர், தம் சொந்த வாழ்க்கையிலும் எத்துணைத் தூய்மையுடைய வராக இருக்க வேண்டும் என்பதற்கு இவர் எடுத்துக்காட்டாக விளங்குபவர்.   ⁠தமக்குப் பயிற்சி அளித்த நாடகத் தலைமை ஆசிரியர் தவத்திரு சங்கரதாஸ் ஸ்வாமிகள் பெயரால் மன்றம் அமைத்து தமது நன்றிப் பெருக்கை நாள்தோறும் காட்டி வருகிறார் கலைஞர்.  ⁠எண்ணற்ற கலைஞர்களையும் ‘எழுத்தாளர்களையும் நடிக-நடிகையரையும் நாடக உலகத்துக்கு அறிமுகப்படுத்திய பெருமை இவருக்குண்டு.  ⁠புராண - இதிகாச நாடகங்களை நடத்தி வந்த நாடக மேடைகளில் சீர்த்திருத்தக் கருத்துக்கள், தேசியப்பற்று, சுதந்திர எழுச்சி ஆகியவற்றைக் கொண்ட கதைகளையும் நடத்தி மக்கள் உள்ளத்தில் மகத்தான மாறுதலை ஏற்படுத்திய பெருமை இவருக்கும் இவரது சகோதரர்களுக்கும் உரியதாகும்.  ⁠இவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது தமிழ்ப் பெருமக்கள் வாழும் இடங்களாகிய இலங்கை மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளுக்கும் சென்று, தமிழ் நாடகக் கலையின் சிறப்பைப் பரப்பியுள்ளார்கள். இன்று தமிழ்நாடகக் கலையின் ஒளி விளக்காகத் திகழும் திரு. சண்முகம் அவர்கள் தம் பிள்ளைப் பிராயத்திலிருந்தே கலைத் திருவோடு பிரகாசிக்கலானார்.  ⁠வாழ்க்கை முழுதும் நாடகக்கலைக்கே தம்மை அர்ப்பணித்துக் கொண்ட கலைஞர் சண்முகம் அவர்கள் தாம் எழுதிய சுவைக் களஞ்சியமான இந்த அரிய பெரிய நூலை வானதி பதிப்பக வெளியீடாக வெளியிட இசைவு தந்தமைக்கு என் நன்றிப் பெருக்கினை வணக்கத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.  ⁠இடையறாத தம் பணிகளுக்கிடையே என் விருப்பத்துக்கிசைந்து கேட்டவுடன் இந்நூலுக்கு அன்போடு முன்னுரை வழங்கியிருக்கிரார் மாண்புமிகு முதல்வர் கலைஞர் டாக்டர் மு. கருணாநிதி அவர்கள். நாடகக் கலைஞர் எழுதிய நூலுக்குக் கலைகளின் உருவாக அமைந்துள்ள கலைஞரின்   முன்னுரை தங்கக் குடத்துக்கிட்ட கஸ்தூரி திலகமெனத் திகழ்கின்றது. இதற்கு முதல்வர் அவர்களுக்கு நான் மிகவும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறேன்.  ⁠நாடகக் கலைஞர் சண்முகம் அவர்களோடு மிக்க ஈடுபாடும் மதிப்பும் கொண்ட சிலம்புச்செல்வர் ம. பொ. சி. அவர்கள் வழங்கியிருக்கும் அணிந்துரை இந்நூலுக்கு ஒரு நல்ல அணியாகவே திகழ்கின்றது. அவர்களுக்கு என் இதயம் கலந்த நன்றி.  ⁠இராமனுக்கு இளையோன் இலக்குவனைப்போல் கலைஞர் சண்முகம் அவர்களுக்கு உடன் பிறப்புத் தம்பி தி. க. பகவதியவர்கள். இந்நூல் வெளி வர அவர் நல்கிய ஒத்துழைப்பை என்னால் மறக்க முடியாது.  ⁠இந்நூல் உருவாகக் கருத்தோடு ஒத்துழைத்த கவிஞர் தே. ப.பெருமாள் அவர்களுக்கு என் அன்பு கனிந்த நன்றி.  ⁠விரைவில் இந்நூல் வெளிவரத் தூண்டு கோலாக இருந்த நண்பர் -நகைச்சுவைச் செல்வர் நடிகர். டி. என். சிவதாணு அவர்களுக்கும் செப்பமுற நூலைத் துரிதமாக அச்சிட்டுத் தந்த மூவேந்தர் அச்சகத்தாருக்கும் என் நன்றி.  ⁠ரசனை மிக்க இந்நூலை வாசகப் பெருமக்கள் பெருமளவு வாங்கி ஆதரித்து என்னை இப்பணியில் மேலும் ஊக்குவிக்க வேண்டுகிறேன்.  23. 4. 72 ஏ. திருநாவுக்கரசு  சென்னை - 17                                                  மூன்றாம் பதிப்பின்  பதிப்புரை   ⁠முத்தமிழ்க்கலா வித்வரத்தினம் அமரர் அவ்வை சண்முகம் அவர்களின் ‘எனது நாடக வாழ்க்கை’ எனும் இந்நூல் தமிழ் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க இப்பொழுது மூன்றாம் பதிப்பாக வெளிவருகிறது.  ⁠இந்நூலைப் பாராட்டி எண்ணற்ற கடிதங்கள் வந்துள்ளன, தமிழறிஞர்களும் சாதாரணமாக தமிழ்ப்படிக்க தெரிந்த அன்பர்களும் இந்நூலைப் பாராட்டியதோடல்லாமல் இந்நூலின் மறுபதிப்பை உடனடியாகக் கொண்டு வாருங்கள் என்று என்னைத் துரண்டிக்கொண்டே இருந்தார்கள். நூல் அளவில் பெரிது. நூலிலுள்ள விஷயமும் மிகப் பெரிது. இந்நூலை வெளியிடுவதில் வானதி பதிப்பகம் உண்மையிலேயே பெருமை கொள்கிறது.  ⁠இந்நூலின் மூன்றாம் பதிப்பை வெளியிட அனுமதியளித்த வணக்கத்துக்குரிய அவ்வை சண்முகம் அவர்களின் திருக்குமாரர்களுக்கு முதற்கண் உளமார்ந்த நன்றியை வானதி பதிப்பகம் செலுத்துகிறது.  ⁠அவ்வை சண்முகனாரின் மூத்தமகன் திரு டி. கே. எஸ் கலைவாணன் அவ்வை சண்முகம் அவர்களைப் போலவே அருங்கலைஞர். அவர் முன் பதிப்புக்களில் இல்லாத படங்களை எல்லாம் தேடிப்பிடித்து எடுத்துக் கொடுத்து இப்புதிய பதிப்பில் சேர்க்க வேண்டும் என மிக ஆர்வமுடன் சொன்னார். அதன்படி மூன்றாம் பதிப்பு சில புதிய படங்களுடன் இப்பொழுது வெளிவருகிறது.  ⁠“இம்மூன்றாம் பதிப்பை விரைவில் கொண்டுவரத்தான் வேண்டும். நடிகர் உலகமும் தமிழ்வாசகர் உலகமும் பெரிதும் இந்நூலை வரவேற்கிறது. உடனடியாகக் கொண்டு வாருங்கள்” என்று எனக்கு அன்புக் கட்டளையிட்டவர்களில் தலையாயவர் சிறந்த சிரிப்பு நடிகரும் நல்ல நண்பருமான உயர்திரு டி.என்.   சிவதாணு அவர்கள். அவருக்கு அன்புகனிந்த நன்றியை வாசகர் உலகமும், வானதியும் தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறது.  ⁠இந்நூலின் மூன்றாம் பதிப்பை அழகுற அச்சிட்ட குருகுலம் அச்சகத்தாருக்கும், குருகுலம் அச்சுப்பள்ளி மாணவிகளுக்கும் நன்றி.  ⁠எனது நாடக வாழ்க்கை நூலை ஏற்று மகிழுங்கள்!    29–10–86 ஏ. திருகாவுக்கரசு  சென்னை-17      வானதி பதிப்பகம்.                    நாடக உலகில் நுழைந்தோம்   ‘ஒரு தொழிலும் இல்லாதார் நாடகக்காரரானார்’ என்று நாடகக் கலைஞர்களைப்பற்றி மக்கள் இழித்துரைத்த காலம். கூத்தாடிகள், குடிகாரர்கள் இவை போன்ற பெயர்கள் நாடகக்காரர்களுக்கு அடைமொழிகளாயிருந்து வந்தன. நாடகக்காரன் என்றால் குடியிருக்க வீடும் கொடுக்கமாட்டார்கள். அவ்வளவு நல்ல பெயர் நடிகனுக்கு. இளம் பெண்களைக் கடத்திச் சென்று விடுவான் என்று மக்கள் பயப்பட்டார்கள். இந்தப் பயத்தில் ஒரளவு உண்மையும் இருந்தது.  பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நாடகம் பார்க்க அனுமதிக்கமாட்டார்கள். நாடகம் பார்த்த இளைனார்கள் அதை நாலு பேருக்கு நடுவில் சொல்லிக்கொள்ள வெட்கப்படுவார்கள். நாடகக் கொட்டகைக்கு எதிரிலேயே ஒரு கள்ளுக் கடையும் இருக்கும்.  ஆம்; இயல், இசை, நாடகம் என்று தமிழ்மொழியை மூன்றாக வகுத்த நாட்டிலேதான் இந்தக் கேவலநிலை. நாடகத்திற் கென்று தனித்தமிழ் கண்ட நம் நாட்டில், நாடகத்துறை இவ்வாறு அவல நிலையில் இருந்த சமயத்தில் தான் நான் நாடக உலகில் நுழைய நேர்ந்தது.  தாயும் தந்தையும் என் தந்தையார் திரு டி. எஸ். கண்ணாசாமிப்பிள்ளை; தாயார் திருமதி சீதையம்மாள். தந்தையாரும் ஒரு நடிகர். பெண் வேடம் தரித்து நடிப்பதில் பிரசித்தி பெற்றவர். அக்காலத்தில் பிரபலமாய் விளங்கிய வள்ளி வைத்தியநாதையர், அல்லி பரமேசுவரய்யர் ஆகியோர் நடத்தி வந்த கம்பெனிகளில் என் தந்தையார் நீண்டகாலம் பணி புரிந்திருக்கிறார். திரு.பி.எஸ். வேலுநாயர் பின்பாட்டுப் பாடுவதிலிருந்து ராஜபார்ட் வேடத்திற்கு வரத் துாண்டுகோலாயிருந்தவர் என் தந்தையார். இச்செய்தியினைத் திரு நாயரவர்களே என்னிடம் கூறி, என் தந்தையாரைப் பாராட்டினார். அந்த நாளில் எல்லா நாடக நடிகர்களுக்கும் ஆசிரியராக இருந்தவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். அவரைத் தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் என்றே எல்லோரும் குறிப்பிடுவார்கள். என் தந்தையும் அவரது மாளுக்கர்களிலே ஒருவர்.  நாடகத் தொழிலுக்கு அக்காலத்தில் தாய் வீடாக விளங்கியது மதுரைமாரு கரம். நாடகக் கம்பெனிகள் பெரும்பாலும் மதுரையிலிருந்தே தொடங்கும். வேறு ஊர்களில் நாடகம் தொடங்குபவர்கள்கூட மதுரை என்றே போட்டுக் கொள்வது வழக்கம், எனவே, என் தந்தையாரும் மதுரையை இருப்பிடமாகக் கொண்டார்.  தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை அந்தச் சமயம், சங்கரதாஸ் சுவாமிகளை ஆசிரியராகக் கொண்டு ஒரு நாடகக் கம்பெனி தொடங்கியது. இளஞ் சிறுவர்களையே முழுதும் நடிகர்களாகக் கொண்ட அந்தச் கம்பெனியின் பெயர், மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா.  ஒரு நாள் என் தந்தையார் என் சகோதரர்களுடன் என்னையும் அழைத்துக் கொண்டு, தமது ஆசிரியராகிய சுவாமிகளைக் காணச் சென்றார். அப்போது எங்களைக் கூர்ந்து நோக்கிய சுவாமிகள், “கண்ணா, உன் குழந்தைகளே இந்தக் கம்பெனியிலே சேர்த்துவிடு, நான் கவனித்துக் கொள்கிறேன்” என்றார். நாடகத்துறையை வெறுத்திருந்த தந்தையார் தயங்கினார். ‘குழந்தைகள் படிக்கிறார்கள்; அவர்களுடைய படிப்பு ...’ என்று ஏதோ சொல்ல முயன்றார். உடனே சுவாமிகள், “நானே தமிழ்ப் படிப்பும் சொல்லி வைக்கிறேன்; படித்து வக்கீல் உத்தியோகம் செய்யப் போகிறார்களா, என்ன! நல்ல சந்தர்ப்பம், இங்கேயே சேர்த்துவிடு” என்று வற்புறுத்திச் சொன்னார். எங்கள் தந்தை அப்போது ஸ்பெஷல் நாடகம் என்ற மரக் கட்டையைப் பற்றிக் கொண்டு வாழ்க்கைக் கடலில் நீந்திக் கொண்டிருந்தார். கொழும்பு, யாழ்ப்பாணம் முதலிய இலங்கைத் தீவின் நகரங்களிலேதான் அவரது நாடகப்பணி மிகுதியாக நடை பெற்று வந்தது. மதுரை அம்மன் சந்நிதியை அடுத்த சோற்றுக் கடைத்தெருவில் நாங்கள் குடியிருந்தோம். பண்டை நாளில் இத் தெருவில் உணவு விடுதி இருந்திருக்குமென நினைக்கிறேன். ஆனால், நாங்கள் இருந்தபோது சோற்றுக்கடையோ, இந்தக் காலச் சாப்பாட்டு ஒட்டலோ எதுவுமில்லை. அருகே தெற்கு ரத வீதியிலுள்ள வெள்ளியம்பலம் கலாசாலேதான் நான் படித்த பள்ளிக்கூடம். என் மூத்த அண்ணா திரு டி. கே. சங்கரன் ஆறாவது வகுப்பிலும், சின்னண்ணா திரு டி. கே. முத்துசாமி நான்காவது வகுப்பிலும், நான் இரண்டாவது வகுப்பிலுமாகப் படித்துக் கொண்டிருந்தோம். தம்பி பகவதி அப்போது கைக்குழந்தை.  கம்பெனியில் சேர்ந்தோம் என் தந்தையார் நன்கு சிந்தித்தார். எங்களோடு கலந்து பேசினார். என்னையும், சின்னண்ணாவையும் சேர்த்துவிட எண்ணி னார். பெரியண்ணா மட்டும் படிப்பது நலமெனத் தோன்றியது. ஆனால், பெரியண்ணாவோ அப்பாவின் முடிவைக் கேட்டுக் கலங்கினார். எங்களைப் பிரிய அவர் மனம் இடம் தரவில்லை. எனவே, பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. நாங்கள் நாடகக் கம்பெனியில் சேர்ந்தோம். தந்தையார் சிறந்த பாடகர். நல்ல சாரீர வன்மையுடையவர். எனவே, அக்காலத்தில் மிக அவசியமாகக் கருதப்பட்ட பின்பாட்டுப் பாடும் ஸ்தானத்தில் அவரையும் கம்பெனியில் சேர்த்துக் கொண்டார்கள். எங்களைத் தனியே விட்டுப் போகத் தந்தையார் இசையவில்லை.  பெரிய அண்ணாவுக்குப் பத்து ரூபாய் மாதச் சம்பளம். சின்னண்ணாவுக்கு எட்டு ரூபாயும் எனக்குப் பதினேந்து ரூபாயும் கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டது. பின்பாட்டுப் பாடும் என் தந்தையாருக்கு மட்டும் அறுபத்தி ஐந்து ரூபாய் சம்பளம். 1918-ஆம்ஆண்டில் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையின் நாடகங்கள் மதுரையில் ஆரம்பமாயின.   நாரதா கலகப்ரியா!  நாடகக் கம்பெனி மதுரை புட்டுத்தோப்பிலுள்ள ஒரு வீட்டில் இருந்து வந்தது. நாடகங்களுக்குப் பயிற்சி நடந்து கொண்டிருந்ததால் நாங்கள் கம்பெனி வீட்டிலேயே தங்கினோம். எனக்கு முதன்முதலாகச் சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் நாரதர் வேடம் கொடுக்கப்பட்டது. அப்போது கம்பெனியிலிருந்த நடிகர்கள் அனைவரிலும் நான் தான் மிகச் சிறியவன். அதனால் ஆசிரியர் சங்கரதாஸ் சுவாமிகளுக்கு என்மீது அளவு கடந்த பற்றுதல். அவர் என்னைப்பற்றி என்ன நினைத்தாரோ எனக்குத் தெரியாது. அநேகமாக எல்லா நாடகங்களிலும் எனக்கு நாரதர் வேடமே கொடுக்கப்பட்டது.  கம்பெனியில் அப்போது ‘சட்டாம் பிள்ளை’யாக இருந்து பாடங்கள் சொல்லி வைத்தவர் திரு டி. எஸ். குற்றாலிங்கம்பிள்ளை. சீமந்தனி, சதியனுகுயா, சுலோசன சதி, பார்வதி கல்யாணம் முதலிய நாடகங்களில் எல்லாம் நாரதர் வேடமே எனக்குக் கிடைத்தது. தொடர்ந்து நான் நாரதர் பாடம் செய்து வருவதைக் கண்ட மற்றப் பிள்ளைகள் என்னைக் கேலி செய்தார்கள். “நாரதா, கலகப் பிரியா” என்றெல்லாம் அடிக்கடி என்னைப் பெயர் வைத்துக் கூப்பிட்டார்கள். இந்தச் செய்தி சுவாமிகளின் செவிக்கும் எட்டியது. அவர் ஒருநாள் எல்லோரும் இருக்கும் சமயத்தில், “நாரதர் கலகக்காரர்தான்; ஆனால், அவர் செய்யும் கலகத்தினால் யாருக்கும் கெடுதி நேராது; நன்மையே விளையும்” என்று விளக்கம் தந்தார்.  வையை யென்னும் பொய்யாக் குலக் கொடி புட்டுத்தோப்பில் கம்பெனி வீட்டிற்கு எதிரே முழுதும் ஒரே மணற் பரப்பு. வைகையாறு எதிரே இருந்ததால் தினசரி காலையில் ஊற்று நீரில் குளிப்பதற்கும், மாலே நேரங்களில் “பலிஞ் சடுகுடு விளையாடுவதற்கும் எங்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது. “வையை யென்னும் பொய்யாக் குலக்கொடி” என்று சங்க இலக்கியம் வைகையின் வளத்தைப் பற்றிப் பேசுகிறது. அதெல்லாம் பழங்காலம். இப்போதெல்லாம் மழைக் காலங் களில் நாலைந்து நாட்கள் வெள்ளம் கரை புரண்டு ஒடும். மீண்டும் பழைய குருடிதான். அதற்குப் பின் ஊற்று நீரில்தான் குளிக்க வேண்டும்.  நான் எந்தப் பாடத்தையும் மிக விரைவில் நெட்டுருப் போட்டுவிடுவேன். அதனுல் பாடத்திற்காக ஆசிரியர் சுவாமி களிடம் நான் அடிவாங்கியதே இல்லை. சட்டாம்பிள்ளையும் எனக்கு அன்போடு நடிப்புச் சொல்லித் தருவார். ஆனால், மற்ற வர்கள் பாடம் செய்யாமல் அடிபடுவதைப் பார்க்கும்போது எனக்குக் கஷ்டமாக இருக்கும்.  முதல் நாடகம் முதல் நாடகம் ‘சத்தியவான் சாவித்திரி’ மதுரை பெரிய தகரக் கொட்டகையில் அரங்கேறியது. இப்போது அந்தக் கொட்டகை இருந்த அடையாளமே தெரியவில்லை. எல்லாம் வீடுகள் நிறைந்து விட்டன.  மேல மாசி வீதியில் சின்னத் தகரக் கொட்டகை ஒன்று இருந்தது. இப்பொழுது அது சந்திரா டாக்கீஸ் என்று சொல்லப் படுகிறது. இவ்விரண்டைத் தவிர அப்போது மதுரையில் நான் அறிந்த வரையில் வேறு நாடக அரங்கம் கிடையாது.  பெயர் பெற்ற நகைச்சுவை நடிகர் திரு சி. எஸ்.சாமண்ணா ஐயர் எங்களுக்கெல்லாம் பவுடர் தொட்டு நெற்றியிலிட்டு வேஷம் போட்டு விட்டார். எனக்குத் தலையில் நிறைய முடி இருந்ததால் அதிலேயே கொண்டை போட்டார்கள். இடுப்பில் முழங்கால் வரை, தூக்கி ஒரு மஞ்சள் பட்டுத் துண்டைத் தார் போட்டுக் கட்டினார்கள். அதற்குமேல் இடுப்பைச் சுற்றி ஒரு சிவப்புப் பட்டு இரண்டு கால்களிலும் ‘கஜ்ஜை’ கட்டப்பட்டது. நாரதர் கதித்தை போட்டு ஆடிக் கொண்டே வரவேண்டும். நான் அரங்கில் பிரவேசிக்கும் சமயத்தில் யாரோ ஒருவர் வந்து என் கையில் மரத்தால் செய்த ஒரு வீணையைக் கொடுத்தார்.  எமனைக் கண்டு பயம் ‘சரிகம பதநியாம் ஏழு சுர நிலை லய சங்கீத சுகமே பெரிய சுகம்’ என்ற பாடலைப் பாடிய வண்ணம் நான் ஆடிக் கொண்டே அரங்கில் பிரவேசித்தேன். எல்லோரிலும் நான் மிகச் சிறுவனாக இருந்ததால் வந்தவுடனேயே சபையில் கைதட்டலும் கலகலப் பும் ஏற்பட்டன. பாட்டு முடிந்ததும் அசுவபதி ராஜா, அவர் மனைவி மாளவி, புதல்வி சாவித்திரிமூவரும்பாட்டுப்பாடி என்னை வணங்கி உட்காரச் சொன்னார்கள். மேடையில் உயரமான நாற். காலி போடப்பட்டிருந்தது.ஒரு கையில் வீணை இருந்ததால் அந்த உயரமான நாற்காலியில் உட்கார இயலாமல் நான்சற்று, தயங்கினேன். பிறகு கையிலிருந்த வீணையைக் கீழே போட்டுவிட்டு, நாற்காலியைப் பிடித்து ஏறி ஒருவாறு அதில் உட்கார்ந்தேன். சபையில் அதற்கும் கை தட்டினார்கள். எனக்கு ஒன்றும் புரிய வில்லை. பாடத்தை மட்டும் தவறாமல் பேசினேன்; பாடினேன். ஒருவகையாக நாரதரின் முதல் காட்சி முடிந்தது.  உள்ளே வந்ததும் சுவாமிகள் என்னைத் தூக்கி முத்தமிட்டுப் பாராட்டினார். ‘பையன் சீக்கிரம் முன்னுக்கு வந்துவிடுவான்’ என்று எல்லோரும் புகழ்ந்தார்கள். நாரதர் வர வேண்டிய அடுத்த காட்சி. எமதரும ராஜனின் சபை. நான் மகிழ்ச்சியோடு சபையில் பிரவேசித்தேன். எமனுக்கும் எனக்கும் வாதம் நடந் தது. சத்தியவான் உயிரைக் கவரக் கூடாதென நான் பலமுறை வேண்டிக் கொண்டேன். எமதருமன் சாதாரணமாக வாதித்துக் கொண்டே வந்தவர், இறுதியாகக் கோபம் கொண்டு, “எட்டி நில்லும் நாரதரே” என்ற பாட்டைத் தொடங்கித் தன் கையிலிருந்த சூலாயுதத்தை நீட்டிக் கொண்டு என்னை நெருங்கினார்.  நான் பயந்து அலறிய வண்ணம் உள்ளே ஓடிப் போய் சுவாமிகளைக் கட்டிக் கொண்டேன். சபையில் ஒரே சிரிப்பு, கோலாகலம். திரை விடப்பட்டது.  சுவாமிகள் பரிவு அன்று எமன் வேடம் போட்டிருந்தவர் கந்தசாமி என்னும் பெயருடையவர். அவருடைய ஊர் துரத்துக்குடி. வேஷம் போட்டு ஒத்திகை பார்ப்பதெல்லாம் அப்போது கிடையாது. முகமெல்லாம் நீலத்தைப் பூசி, பெரிய கறுப்பு மீசை எழுதி, கண் களில் ஏதோ விழி பிதுங்கியது போன்ற ஒரு நீலக்கண்ணாடியைப் போட்டுக்கொண்டு, பயங்கரமான தோற்றத்தில் நின்ற கந்த சாமியைப் பார்த்ததும் நான் முதலிலேயே பயந்துவிட்டேன். அப்புறம் அவர் கோபத்தோடு சூலத்தை நீட்டிக் கொண்டு என்னை நெருங்கியதும் ஏதோ செய்யப் போகிருரென்று அஞ்சி உள்ளே ஒடி விட்டேன். தேம்பித் தேம்பி அழவாரம்பித்தேன். சுவாமிகள் என்னைச் சமாதானப்படுத்தினார். எமனைக் கூப்பிட்டு, என் பக்கத்தில் நிறுத்தினார், அவருடைய தலையிலிருந்த தகரக் கிரீடத்தையும் ‘டோப்பா’ வையும் மூக்கில் போட்டிருந்த நீல வலைக் கண்ணாடியையும் கழற்றச் செய்தார். “நம்ம கந்தனடா இவன்: நன்றாய்ப் பார். எமனில்லை! அதெல்லாம் வெறும் நடிப்பு!...பயப்படாதே!” என்று தட்டிக் கொடுத்தார், அந்த எமக் கந்தசாமி யும் என்னோடு சிரித்துக் கொண்டே பேசினார். ஒருவாறு பயம் நீங்கியது.  மீண்டும் திரை தூக்கப்பட்டது. காட்சியை விட்ட இடத் திலிருந்து தொடங்கினார் கந்தசாமி, எட்டி நில்லும் நாரதரே’ என்ற பாடலைப் பாடினார். அப்போதும் நான் சற்று நடுங்கிக் கொண்டிருந்தேன். எமன் பேசி முடித்ததும், “கச்சை கட்டிக் கொண்டு, நானே உன் கைவரிசையைப் பார்க்கிறேன்” என்று பாட ஆரம்பித்தேன். அவ்வளவுதான். சபையில் ஒரே கை தட்டல்; சிரிப்பு. நாரதர் பயந்து ஓடிப்போனதைப் பார்த்த சபையோ, இப்போது கைவரிசையைப் பார்க்கிறேன்’ என்றால் வேறு என்ன செய்வார்கள்? எப்படியோ நடுக்கத்துடன் பாடி முடித்து உள்ளே வந்து சேர்ந்தேன்.  அந்த முதல் நாடகத்தில் நான் பயந்தோடிய சம்பவம் இன்னும் பசுமையாக என் நினைவில் இருப்பதுதான் வியப்பாக இருக்கிறது.  கம்பெனியின் உரிமையாளர்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையைப் பற்றியும், தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளைப் பற்றி யும் சில செய்திகள் குறிப்பிடுவது அவசியமெனக் கருதுகிறேன்.  நாடக சபைக்கு உரிமையாளர்கள் நால்வர். திருவாளர்கள் சின்னையாபிள்ளை, பழனியாபிள்ளை, கருப்பையாபிள்ளை, சுப்ரமணிய பிள்ளை. இந்த நால்வரில் நாடக சபைக்கு அதிக முதலீடு செய்தவர் சின்னையாபிள்ளை. இவர் கம்பெனி வீட்டில் தங்குவதில்லை. அடிக்கடி வந்து பார்த்துவிட்டுப் போவார். கருப்பையா பிள்ளை கம்பெனியின் கணக்கு விவகாரங்களையெல்லாம் பார்த்துக் கொள்வார். பெரும்பாலும் கம்பெனி வீட்டிலேயே தங்குவார். சுப்பிரமணிய பிள்ளை எப்போதாவது மாதத்திற்கொரு முறை வந்து போவார். பழனியா பிள்ளை ஒருவர் தான் எல்லோருடனும் நெருங்கிப் பழகக் கூடியவர். அதிலும் ஆசிரியர் சுவாமிகளிடம் ஏதாவது சொல்ல வேண்டுமானால் பழனியா பிள்ளை தான் சொல்வார். மற்ற உரிமையாளர்கள் சுவாமிகளிடம் நெருங்கவே பயப்படுவார்கள்.                                  சங்கரதாஸ் சுவாமிகள்   அந்தநாளில் தமிழ் நாடக உலகில் சுவாமிகள்’ என்றாலே போதும், அது சங்கரதாஸ் சுவாமிகள் ஒருவரைத்தான் குறிக்கும். சுவாமிகள் காலத்தில் இருந்த மிகப் பெரிய புலவர்களும் நாடகாசிரியர்களுமான உடுமலைச் சரபம் முத்துச்சாமிக் கவிராயர், சித்திரக்கவி சுப்பராய முதலியார், ஏகை சிவசண்முகம் பிள்ளை, குடந்தை வீராசாமி வாத்தியார் முதலியோரெல்லாம் சுவாமிகளின் புலமைக்குத் தலைவணங்கிப் பாராட்டினார்கள்.  நடிகர்கள் ஒழுக்கமாகவும், கட்டுப்பாடாகவும் இருக்க வேண்டும் என்பதில் சுவாமிகள் மிகவும் அக்கறையுடையவராக இருந்தார். வெற்றிலை போடுவது, பொடி போடுவது, பீடி சிகரெட் முதலிய லாகிரிப் பொருட்களை உபயோகிப்பது இவை யெல்லாம் சுவாமிகளுக்குப் பிடிக்காது. நடிகர்கள் யாராவது இவற்றை உபயோகிப்பதாகத் தெரிந்தால் அவன் பாடு தீர்ந்தது. பிறகு யார் தடுத்தாலும் பயனில்லை; பயங்கரமான அடி விழும். சுவாமிகளின் இந்த அடிக்குப் பயந்து கம்பெனியை விட்டு ஓடிய நடிகர்கள் பலருண்டு.  சுவாமிகள் தாமே நடிப்புச் சொல்லிக் கொடுப்பதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். எமதருமன், இரணியன், கடோற் கஜன் முதலிய வேடங்களுக்கு அவரேதாம் நடிப்புப் பயிற்சி அளிப்பார். கம்பீரமான அவரது குரல் வெண்கல நாதம்போல் ஒலிக்கும்.  ஒரே நாளிரவில் ஒரு நாடகம் முழுவதையும் கற்பனையாக எழுதி முடிக்கும் மகத்தான ஆற்றல் சுவாமிகளுக்கு இருந்தது. இது வெறும் புகழ்ச்சியன்று; என் கண்கண்ட உண்மை.  நாடகப் புலமை அநேகமாக எல்லா நாடகங்களிலும் எனக்கு நாரதர் வேடமே கொடுக்கப்பட்டு வந்ததாக முன்பு குறிப்பிட்டேனல்லவா? ஒருநாள் பழனியா பிள்ளை, ‘சுவாமி! நம்முடைய சண்முகம் கதாநாயகனுக நடிப்பதற்கு ஏற்றபடி ஒரு நாடகம் எழுத வேண்டும்’ என்று கூறினார்.  சுவாமிகள் அவரைப் பார்த்துப் புன்னகை புரிந்தார். அந்த விநாடியே அவரது சிந்தனை செயல்பட ஆரம்பித்துவிட்டது. பழனியாபிள்ளை சொல்லிய வார்த்தைகள் சுவாமிகளின் நாடக இதயத்தை தொட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அப்பொழுதிருந்தே அவர் வானத்தையும் பூமியையும் பார்த்துச் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்.  அன்று மாலேயே சுவாமிகள் புத்தகக் கடைக்குச் சென்றார். ‘அபிமன்யு சுந்தரி’ அம்மானைப் பாடல் பிரதியொன்று வாங்கி வந்தார். இரவு சாப்பாட்டுக்குப் பிறகு ‘அரிக்கன் விளக்கை’ வைத்துக் கொண்டு எழுத ஆரம்பித்தார். மறுநாள் பொழுது விடிந்து நாங்கள் எழுந்தபோது சுவாமிகள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார். அவருடைய படுக்கையருகே அவர் எழுதிய கையெழுத்துப் பிரதிகள் இருந்தன. அபிமன்யு நாடகம் மங்களப் பாட்டுடன் முடித்து வைக்கப் பெற்றிருந்தது. என்ன ஆச்சரியம்! ....  இந்தக் காலத்தில் ஒரு நாடகம் எழுதுவது என்றால் எத்தனை எத்தனை முன் ஏற்பாடுகள்; ஆலோசனைகள்; விவாதங்கள். வசனம் எழுதுவது ஒருவர்; பாடல் இயற்றுவது வேறொருவர்; இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு இயற்றிய நாடகம் மேடையில் நடிப்பதற்குப் பொருத்தமாக இருக்குமாவென்பது வேறு விஷயம். சங்கரதாஸ் சுவாமிகள் ஒரே நாள் இரவில் நூற்றுக் கணக்கான பாடல்கள் உரையாடல்களுடன் அடித்தல், திருத்தல் இல்லாமல் எழுதியிருந்த அபிமன்யு சுந்தரி நாடகத்தைக் கண்டு எல்லோரும் அதிசயப்பட்டார்கள். ஒரு நாடகத்தை நகல் எடுப்பதற்குக்கூட ஒருநாள் இரவில் முடியாது. நான்கு மணி நேரம் நடைபெறக் கூடிய ஒரு நாடகத்தைக் கற்பனையாகவே ஒர் இரவுக்குள் எழுதி முடித்துவிட்டார் சுவாமிகள். அவரை முருகன் அருள் பெற்ற அருட்பெரும்புலவர் என்றே எல்லோரும் வியந்து பாராட்டினார்கள்.‘அடே சின்னப் பயலே! இந்த அபிமன்யு நாடகம் உனக் காகவே எழுதப் பெற்றது’ என்று கூறிச் சுவாமிகள் அன்று என் முதுகிலே தட்டியபோது அது எனக்குப் பெரிதாகத் தோன்ற வில்லை. இன்று அதை எண்ணியெண்ணிப் பெருமைப்படுகிறேன். பெருமிதம் கொள்கிறேன்.  தந்தையார் நடித்த நாடகம் முதல் நாடகம் சத்தியவான் சாவித்திரி முடிந்த பிறகு, நான்கு நாட்கள் ஒய்வு கொடுக்கப்பட்டது. இடையே ஒருநாள் நாங்கள் நடித்த அதே கொட்டகையில் சுவாமிகளின் கோவலன் நாடகம் நடைபெற்றது. ஸ்பெஷல் நாடக நடிகர்கள் அதில் கலந்து கொண்டார்கள்.  திரு. எம்.எஸ்.தாமோதரராவ் கோவலனாக நடித்தார். மாதவியாக ரத தினசாமிப் பிள்ளையும் கண்ணகி, காளியாக என் தந்தை டி. எஸ் கண்ணாசாமிப்பிள்ளையும் நடித்தார்கள். என்னுடைய நான்கு வயதுப் பருவத்தில் ஒரு முறை என் தந்தையார் நல்ல தங்காள் நாடகத்தில் நல்லதங்கையாக நடித்ததைப் பார்த்திருக்கிறேன். அப்போது நான் நல்லதங்கையின் கடைசிப் பிள்ளையாக நடித்த நினைவிருக்கிறது. நாஞ்சில் நாட்டிலுள்ள தாமரைக் குளம் என்ற ஊரில் அந்த நாடகம் நடந்தது. ஆனால், அது ஏதோ கனவுபோலத்தான் நினைவில் இருந்தது. இப்போது கோவலன் நாடகத்தில் அவர் கண்ணகியாக நடித்ததைத்தான் முதலும் கடைசியுமாய்ப் பார்த்ததாகக் கொள்ளவேண்டும். இந்த நாடகமும் சுவாமிகளின் ஏற்பாட்டிலேயே நடைபெற்றதால் நாங்கள் எல்லோரும் நாடகம் பார்த்தோம்.  எம். எஸ். தாமோதரராவ் அந்தநாளில் மிகச் சிறந்தநடிகராக விளங்கியவர், அவருடைய நாடகங்கள் பலவற்றை நான் பார்த்திருக்கிறேன். நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்தனாரின் மனோகரன், நாடகத்தில் மனோகரனக அற்புதமாக நடிப்பார் தாமோதரராவ் சங்கிலி யறுக்கும் காட்சியில் அவர் நடிப்பதைப் பார்க்கும் போது மெய்சிலிர்க்கும். பழம்பெறும் நடிகர்களிலே ஒருவர் அவர்.  என் தந்தையார் நடிகராகக் கலந்து கொண்டது கடைசியாக அந்தக் கோவலன் நாடகத்தில்தான். அதன்பிறகு நடிக்கும் சந்தர்ப்பம் அவர் வாழ்க்கையில் ஏற்படவே இல்லை. பின்பாட்டுக் காரராகவே இறுதி வரையும் வாழ்ந்தார்.  தத்துவ மீனலோசனி வித்துவ பாலசபையின் நாடகங்கள் மதுரையில் தொடர்ந்து ஒரு மாதகாலம் நடைபெற்றன. பவளக் கொடி, சதியனு சூயா, சுலோசன சதி, சீமந்தனி, பிரகலாதன், கோவலன், பார்வதி கல்யாணம் முதலிய நாடகங்களெல்லாம் நடிக்கப் பெற்றன. சிறுவர்கள் நடிக்கும் நாடகம் ஆனதால் சிறந்த வரவேற்பைப் பெற்றனவென்றே சொல்லவேண்டும்.  தங்கப் பதக்கம் பரிசு அடுத்த ஊர் விருதுப்பட்டி ஆம், விருதுப்பட்டிதான்; நமது தலைவர் திரு. காமராசர் அவர்கள் பிறந்த ஊர்தான். விருதுநகர் என்ற பெயர் அப்போது இல்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஏற்பட்டது. விருதுப்பட்டியை நான் மறக்க முடியாது. அங்குதான் 1936 இல் மனிதகுல மாணிக்கம் பண்டித நேரு அவர்களைத் தரிசித்தேன். வீராங்கனையாக இன்று விளங்கும் திருமதி இந்திரா அவர்களை இளம்பருவத்திலே கண்ட இடமும் விருதுப் பட்டிதான்.  விருதுப்பட்டியில் நாடகங்கள் ஆரம்பமாயின. எங்கள் அன்னயார் மதுரையிலே இருந்தார். தந்தையாருடன் நாங்கள் மூவரும் கம்பெனி வீட்டிலேயே தங்கினோம் விருதுப்பட்டியில் தான் எனக்கு முதன்முதலாக ஒரு தங்கப் பதக்கம் பரிசாகக் கிடைத்தது. விருதுப்பட்டி ரயில்வே அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து அளித்த பரிசு அது. பின்னால் எங்களுக்கு எவ்வளவோ கஷ்டங்கள் நேர்ந்த காலங்களில்கூட அந்த முதற் பரிசை மட்டும் விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருந்தோம்.  புலங்திரன் எங்கே?  பவளக்கொடி நாடகத்தில் நான் புலந்திரனக நடிப்பேன். முதல் காட்சியில் வந்து, தாயார் அல்லி மகாராணியிடம் பவள ரதம் வேண்டுமென்று கேட்டுவிட்டுப் போய்விடுவேன். பிறகு நாடகத்தின் கடைசியில்தான் புலந்திரன் வரவேண்டும். சுமார் நான்கு மணிநேர இடைவேளை இருக்கிறது. அத்தனைநேரம் என்னால் எப்படி விழித்துக் கொண்டிருக்க முடியும்! நாடகம் அந்த நாளிலெல்லாம் இரவு 9.30 மணிக்கு ஆரம்பமாகி ஏறத்தாழ இரவு 2.30 மணிக்கு முடிவுபெறும். பக்கத் தட்டிகளின் ஒரத்தில் நின்று பார்ப்பேன். தவிர்க்க முடியாத நிலையில் தூக்கம் வந்து என் கண்களைத் தழுவிக் கொள்ளும். யாருக்கும் தெரியாதபடி எங்காவது ஒரு மறைவில் படுத்து உறங்கிவிடுவேன். நான் வர வேண்டிய காட்சிக்கு முன்பாகவே என் தந்தையார் என்னைத் தேடிக் கண்டுபிடித்து எழுப்பி விடுவார். இதுவே வழக்கம்.  விருதுப்பட்டியில் ஒரு நாள் பவளக்கொடி நாடகம் நடை பெற்றபோது நான் படுத்துறங்கிய இடம் யாருக்கும் தெரியாது போயிற்று புலந்திரன் காட்சி வருவதற்கு முன்பே என்னைத் தேடத் தொடங்கியவர்கள், அந்தக் காட்சி வரும்வரையில் கண்டு பிடிக்கவில்லை. காட்சியும் வந்துவிட்டது. புலந்திரனைக் காணோம். என்ன செய்வார்கள்!  “எங்கே புலந்திரன்? எங்கே ஷண்முகம்?” என்று தேடினார்கள். கடைசியாக அல்லிவேடம் புனைந்திருந்த நடிகரே என்னைக் கண்டுபிடித்தார். உறக்கம் கலைக்கப்பட்டதும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகுதான் தெளிவுபெற்றேன். சுவாமிகள் என்ன செய்வாரோ வென்று பயந்து நடுங்கினேன். காட்சி முடிந்து வந்ததும் சுவாமிகள் என்னைத் தட்டிக் கொடுத்து “டே சின்னப் பயலே! இனிமேல் எல்லோருக்கும் தெரியும் படியான இடத்தில் படுத்துறங்கு. இப்படி மூலை முடுக்குகளில் கிடந்து உறங்காதே” என்று அன்போடு கூறினார். அன்று முதல் பவளக்கொடி நாடகத்தில் மட்டும் பகிரங்கமாக எல்லோர் முன்னிலையிலும் உறங்க எனக்கு அனுமதி யளிக்கப்பட்டது.  விளம்பரங்கள் நாடக சினிமா விளம்பரங்கள் இந்தக் காலத்தில் எவ்வளவோ வளர்ச்சியடைந்திருக்கின்றன. புதிய புதிய: முறைகளில் போட்டி போட்டுக் கொண்டு விளம்பரங்கள் செய்கிறார்கள். எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதைச் சரியானமுறையில் விளம்பரம் செய்யாவிட்டால் விலை போகாது என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.  புதிய நாடகம் ஒன்றை அரங்கேற்றுவதனால் அதைப் பொது மக்களிடையே விளம்பரப்படுத்த, இன்று மிகவும் சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பெரிய பெரிய சினிமாசுவரொட்டி களுக்கிடையே இன்றையச் சிறிய நாடகச் சுவரொட்டிகள் மங்கி விடுகின்றன. முழுப் பக்கம், அரைப்பக்கம், கால்பக்கம் என்று சினிமா விளம்பரங்கள் வரும் பத்திரிகைகளில் ‘இஞ்சு’ க் கணக்கில் வெளியிடப்படும் நாடக விளம்பரங்கள் மக்களுக்குத் தெரிவதில்லை. இன்று நாடக உலகம் இருக்கும் நிலையில் மிகப் பெரிய அளவில் விளம்பரம் செய்வது முடியாமல் இருக்கிறது. நாடகத்திற்காக ஏற்படும்செலவினங்களே அதிகமாக இருப்பதால் விளம்பரத்திற்கென்று ஒரு பெருந்தொகை ஒதுக்குவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.  இந்தக் கால நாடக விளம்பர நிலை இப்படி ....  அந்தநாளில் நாடகத்தை விளம்பரப்படுத்துவது எவ்வளவு சுலபமாக இருந்தது தெரியுமா? சுவாமிகள் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபைக்கு எழுதிய விளம்பரத் துண்டுப் பிரசுரங்கள் மிக வேடிக்கையாக இருக்கும். ‘பிரகலாதன்’ நாடகத்திற்கு அவர் எழுதிய விளம்பரத்தாள் ஒன்று இரண்டாண்டுகளுக்கு முன்புவரை என்னிடம் இருந்தது.  “இவன் யார்? ஏன் இப்படிப் பார்க்கிறான்? வலது புறம் திரும்பும்போது கண்களில் நீர் ததும்புகிறது இடது புறம் திரும் பும்போது கண்களில் கோபாக்னி வீசுகிறதே! ....”  “ஆம், இவன் இரணியகசிபு -தன் தம்பி இரண்யாட்சன் இறந்து போன செய்தியைத் தூதர் மூலம் அறிந்து வருந்துகிறான். அதே சமயம் தன் தம்பியைக் கொன்ற மாயாவியான ஹரியைப் பழி வாங்க வேண்டுமென்ற ஆவேச உணர்ச்சியால் கோபாக்னி வீசுகிறது”  “வீரம், சோகம், கோபம் ஆகிய மூன்று உணர்ச்சிகளையும் மாறி மாறித் தோன்றும்படியாகச் செய்வது எவ்வளவு அற்புதமாக இருக்கிறது”.  இவ்வாறு கேள்வியும், விடையுமாக நாடகத்தின் முக்கிய கட்டங்களைப்பற்றியெல்லாம் குறிப்பிட்டு, நீளமான விளம்பர அறிக்கை வெளியிடுவார் சுவாமிகள். இந்த விளம்பரங்களைச் சேகரித்து வைப்பதில் அந்த நாளில் எனக்குப் பெரும் பைத்தியம்.  மாட்டு வண்டிப் பயணம் இப்போது நான் சொல்லப் போகும் செய்தி உங்களுக்குப் பெரும் வியப்பாக இருக்கும். கற்பனையல்ல; உண்மையாக நடந்த சம்பவம்.  விருதுப்பட்டிக்குச் சில மைல் தூரத்தில் மல்லாங்கிணறு: என்று ஒரு சிற்றுார். விருதுப்பட்டியில் ஒரு மாத காலம் நாடகங்கள் நடத்தியபின் மல்லாங்கிணறு சென்றோம். அப்போது அந்த ஊருக்குப் போவதற்கு நல்ல பாதையில்லை. பஸ் போக்கு வரத்தெல்லாம் கிடையாது. கரடு முரடான அந்தப் பாதையில் இரட்டை மாட்டு வண்டியில் அமர்ந்து போய்ச் சேர்ந்தோம். பெரியவர்கள் சிலர் வண்டியின் ஆட்டத்திற்குப் பயந்து தமாஷாகப் பேசிக்கொண்டே நடந்து வந்து சேர்ந்தார்கள்.  வேட்டு விளம்பரம் நாங்கள்போன மறுநாள் நாடகம் வைக்கப்பெற்றிருந்தது. முதல் நாடகம் சத்தியவான் சாவித்திரி. விளம்பர அறிக்கை களைச் சேகரித்து வைப்பதில் அந்த நாளில் எனக்குப் பெரிய பைத்தியமென்று முன்பே குறிப்பிட்டேனல்லவா? நாடக நோட்டீஸ் வேண்டுமென்று சில பெரியவர்களிடம் கேட்டேன். கிடைக்கவில்லை. “இந்த ஊரில் நோட்டிஸ் போடும் வழக்கம் கிடையாது” என்று சொல்லிவிட்டார்கள். எங்களுக்குப் பெரிய அதிசயமாக இருந்தது. விளம்பரம் ஒன்றும் இல்லாமல் நாடகத்திற்கு மக்கள் எப்படி வருவார்கள் என்ற கேள்வி மனத்தில் எழுந்தது. எவரிடமிருந்தும் சரியான விடை கிடைக்வில்லை.  நாடகம் இரவு பத்து மணிக்கு ஆரம்பம் என்று சொன்னார்கள். இரவு 7.30 மணிக்கு நாங்கள் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். திடீரென்று காது செவிடு படும்படியாக ஒரு பெரிய வேட்டுச் சத்தம் கேட்டது ஊரே அதிர்ந்து விடும் போல இருந்தது. அந்தச் சத்தத்தைக் கேட்டதும் எல்லோரும் பயத்துடன் நான்கு புறமும் பார்த்தோம். உடனே சங்கரதாஸ் சுவாமிகள்,“ டேய்! ஒன்றுமில்லை. நாடக விளம்பரத்திற்காக வேட்டுப் போடுகிறார்கள்” என்றார், அப்போதுதான் எங்களுக்கு விஷயம் புரிந்தது.  அந்த ஊரில் கொட்டகை வாசலில் வேட்டுப் போடுவதற்காக ஒர் இடம் அமைக்கப்பட்டிருந்ததைப் போகும்போது பார்த்தோம், இரவு 7.30 மணிக்குமேல் மூன்று முறை வேட்டுப் போடுவார்களாம். அந்த ஊரிலும், சுற்றுப்புறத்தில் சுமார் ஏழு எட்டு மைல் தூரத்தில் உள்ள சிற்றுார் மக்கள் இந்த வேட்டுச் சத்தத்தைக் கேட்டுவிட்டு, மல்லாங்கிணறு கூத்து மேடையில் நாடகம் இருக்கிறது என்று தெரிந்து கொள்வார்களாம். எவ்வளவு எளிமையான விளம்பர முறை பார்த்தீர்களா?  வெளிச்சம் போடும் முறை இரவு 8.30 மணிக்கு எல்லோரும் கொட்டகைக்குப் போய்ச் சேர்ந்தோம். அப்போதெல்லாம் மதுரையிலேயே கூட மின்சார விளக்கு கிடையாது. ஆக மொத்தம் நான்கு கியாஸ் லைட்டுகள் தாம் கொட்டகை முழுதும் வெளிச்சம் கொடுக்க வேண்டும். பிரதான வாயிலில் ஒன்று; மேடையுள்ளே வேடம் புனையும் இடத்தில் ஒன்று, மேடையின் இருபுறமும் இரண்டு கியாஸ் லேட்டுகள் மேலே கட்டித் தொங்கவிடப்பெற்றிருக்கும். கொஞ்சம் பெரிய நகரமாய் இருந்தால் இன்னும் இரண்டு கியாஸ் லைட்டுகள் வரும். சபை நடுவில் ஒன்று; மேடை நடுவில் ஒன்று. மல்லாங் கிணறு சிற்றுாரானதால் நான்கு லேட்டுகள்தாம் இருந்தன. இந்த வெளிச்சத்தில் எப்படி நாடகம் பார்த்தார்கள் என்பதை இன்று எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. நம் கண்களுக்கு இன்னும் நுண்ணிய பார்வை இருந்திருக்க வேண்டுமென்றே நினைக்கிறேன். மின்சார வெளிச்சம் வந்த பின் கண் பார்வைக்கிருந்த வலிமை போய்விட்டது. ஒலி பரப்பும் மைக் வந்தபின் அதைக் கேட்டுக் கேட்டு, நம் செவிகளின் வலிமையும் குறைந்து விட்டது.  திறந்த வெளி அரங்கம் இரவு ஒன்பது மணியிலிருந்து பத்து மணிக்குள் நாலா பக்கங்களிலுமிருந்து இரட்டை மாட்டு வண்டிகளிலும், கால் நடையிலுமாகப் பெருந் திரளாக மக்கள்வந்து கூடிவிட்டார்கள், பத்தரை மணி சுமாருக்கு நாடகம் தொடங்கியது. திறந்த வெளியில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் அமர்ந்திருந்தார்கள்.  திறந்த வெளியிலே நாடக அரங்கம் அமைப்பது நமக்குப் புதிதன்று. பண்டைக் காலத்திலேயே நாடகம், நடனம், பிற கூத்து வகைகள் எல்லாம் திறந்த வெளி மேடைகளில் தாம் நடைபெற்று வந்தன. தமிழ்நாட்டின் சிறப்புக்குரிய ஆலயங்களிலெல்லாம் விழாக் காலங்களில், அன்றும் இன்றும் கல நிகழ்ச்சிகள் பெரும்பாலும் திறந்த வெளிகளிலேதான் நடை பெற்று வருகின்றன. இந்தத் திறந்த வெளி அரங்குகளைத் ‘தெருக்கூத்து மேடைகள்’ என்று மக்கள் குறைவாகக் கருதி வந்தார்கள். சென்ற பல ஆண்டுகளாகத் திறந்த வெளி அரங்கின் நினைவு மாறாமல், அழியாமல் பாதுகாத்து வந்தவர்கள் தெருக் கூத்து ஆடியவர்கள்தாம் என்பது மறுக்க முடியாத உண்மை. அது மட்டுமன்று, பாரத விடுதலைப் போராட்டத்தில் தன்னை முதல் பலியாகக் கொடுத்த வீரபாண்டிய கட்டபொம்மணத் தமிழர் மறந்துவிடாதபடி நினைவூட்டிக் கொண்டிருந்தவர்கள், இந்தத் திறந்த வெளி மேடைகளிலே கூத்து நடத்திய கலைஞர் களே என்றால் அதுவும் நன்றியறிதலோடு ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை. எனவே, திறந்த வெளி அரங்கம் புதுமை யானதன்று, பழமையெல்லாம் இன்று புதுமையாகக் கருதப் படுவதுபோலத்தான் இதையும் கொள்ளவேண்டும்.  பயங்கர அமைதி நாடகம் நடந்து கொண்டிருந்தது. இல்லை. நாடகத்தை மக்கள் தெரியவில்லை. உள்ளே சபையில் சத்தமே கொஞ்சங்கூட ரசித்ததாகத் இருந்தவர்கள் ஒருவருக்கொருவர் இதைப்பற்றி முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள். நான் சின்னப் பையனாக இருந்ததால் மேடைக்கு வந்தவுடனேயே ஜனங்கள் கைதட்டி வரவேற்பது வழக்கம். சபையோர் மந்த மாக உட்கார்ந்திருப்பதைக் கண்ட சங்கரதாஸ் சுவாமிகள்,  “எல்லாம் சண்முகம் பயல் மேடைக்குப் போனவுடன் சரியாய்ப் போய்விடும்.”  என்று கூறியது என் காதில் விழுந்தது. நாரதர் வர வேண்டிய காட்சியும் வந்தது. “சங்கீத சுகமே பெரிய சுகம்” என்று பாடிக்கொண்டு நான் அரங்கில் பிரவேசித்தேன். வழக்கம் போல் பெருத்த கரகோஷத்தை எதிர்பார்த்த எனக்குப் பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது. சபையில் முழு அமைதி நிலவியது. தூரத்தில் கற்றாழைப் புதர்கள்; குறைவான வெளிச்சம், எதிரே பயங்கரமான அமைதி. எனக்கு என்னமோ போலிருந்தது. திறந்த வெளியில் நடிப்பது எனக்குப் புதிய அனுபவம். அவையோரின் மரண அமைதி எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. முகத்தில் சோகச்சுவை ததும்ப, நான் உள்ளே வந்து சேர்ந்தேன்.  எமதருமன் தோன்ற வேண்டிய காட்சி வந்தது. சிந்தனை யிலேயே உட்புறம் உலாவிக் கொண்டிருந்த சுவாமிகள், எம தருமனக வேடம் புனேந்திருந்த கந்தசாமியிடம் போய் ஏதோ காதில் சொல்லிக்கொண்டிருந்தார். உடனே எமதருமன் காலில் ‘சலங்கை’ கட்டப் பெற்றது. காட்சி தொடங்கியது.  எமதருமன் ஆட்டம் “விண்டலமும் மண்டலமும் எண்டிசை யடங்களுக் விளங்கும் கீதி மார்க்கம் அடுப்பேன்”  என்று தொடங்கும் பாடலே முழக்கிக் கொண்டு எமன் கந்தசாமி மேடைக்கு வந்தார். வழக்கத்திற்கு மாருகக் கையிலிருந்த குலா யுதத்தைச் சுழற்றிக் கொண்டு. ‘தை தக்க தை தக்க தை’ என்று குதித்துக் கொண்டு, ‘ஜல் ஜல்’ எனச் சலங்கைகள் ஒலி செய்ய, அரங்கம் முழுவதும் ஆட்டம் போடத் தொடங்கினார்.  சபையில் ஒரே கரகோஷம்! அமைதியாயிருந்த சபையில் ஆரவாரம்!! பலே பலே என்ற சத்தம் !!!  அப்போதுதான் எல்லோருக்கும் விஷயம் புரிந்தது. நடிகர்கள் ஆடிக்கொண்டு வரவேண்டும் என்பதையும், ஆடாத நாடகம் அதுவரை மல்லாங்கிணற்றில் நடந்ததே இல்லை யென்பதையும் தெரிந்து கொண்டோம்.  இந்த நாளிலே கூட நாடகத்தை ‘ஆட்டம்’ என்று சொல்வது வழக்கில் இருந்து வருவதைப் பார்க்கிறோமல்லவா?  அன்றைய நாடகத்தில் எமனுக நடித்த கந்தசாமிக்குப் பிரமாதமான பேர். அவரைத் தவிர மற்ற நடிகர்கள் நன்றாயில்லை யென்று பலரும் பேசிக் கொண்டார்களாம்.  எப்படி வேட்டில் விளம்பரமும் வினோத ஆட்டமும்?  மல்லாங்கிணற்றில் நாடகங்கள் அதிக நாட்கள் நடைபெற வில்லை. வெகு விரைவிலேயே சாத்துரர் போய்ச் சேர்ந்தோம், சாத்துரில் நாடகங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது.  கம்பெனியின் நடிகர்கள் அந்த நாட்களில் இப்பொழுது நடைபெறுவதைப் போல் தினசரி நாடகம் கிடையாது, வாரத்திற்கு மூன்று நாட்கள் தான் நாடகங்கள் நடைபெறும். இன்னொரு வியப்புக்குரிய செய்தி என்னவென்றால் பொது விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை நாடகம் வைப்பது வழக்கமில்லை. இப்பொழுதெல்லாம் சனி, ஞாயிறுதாம் முக்கியமான நாடக நாட்கள்; அந்தக் கிழமைகளில்தான் வசூலாகும் என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது . அந்தக் காலத்தில் “பிரதி செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் நாடகம் நடைபெறும்”, “ஆட்ட கால சட்டத்தை அனுசரிப்பதே முறை”, “அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தப்படும்” என்றெல்லாம் விளம்பர அறிவிப்பிலேயே போட்டு விடுவார்கள். ஆக மொத்தம் ஒரு மாதத்தில் பன்னிரண்டு அல்லது பதிமூன்று நாடகங்கள் நடைபெறுவது வழக்கம்.  நடந்தே சென்றோம் நடிகர்களும் மற்றத் தொழிலாளர்களும் எல்லோருமாக ஏறத்தாழ நாடக சபையின் மொத்த எண்ணிக்கை நூறு பேரிருக்கலாம். நாங்கள் தங்கியிருக்கும் வீடு நாடகக் கொட்டகைக்கு அருகிலிருந்தாலும் தொலைவிலிருந்தாலும் எல்லோரும் நடந்தே தான் போய் வருவோம். மாலை நாடகம் என்பதெல்லாம் கிடையாது. எப்போதும் இரவு 9.30 மணிக்குத் தான நாடக ஆரம்பம். இரவு 7 மணிக்குள் சாப்பிட்டுவிட்டு எல்லோரும் புறப்படத் தயாராகி விடுவோம். பெரியவர் யாராவது ஒருவர், ஒரு அரிக்கன் விளக்கைக் கையில் பிடித்துக் கொண்டு முன்னே செல்வார். அவரைப் பின்பற்றி நாங்கள் எல்லோரும் செல்வோம். வீதிகளில் ஆங்காங்கு மினுக்-மினுக்’ கென்று வெளிச்சம் தெரியும், சில இடங்களில் வெளிச்சமே இராது. இருள் சூழ்ந்திருக்கும். பாதை தெரிந்து நடப்பதே கஷ்டமாக இருக்கும்.  எல்லோருக்கும் தலைமுடி அநேகமாக எல்லா நடிகர்களும் தலைமுடியை நீளமாக வளர்த்திருந்தார்கள். இந்த நாளைப்போல் ‘டோப்பா’ வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் பெரும்பாலும் ஏற்பட்டதில்லை. ஆண் வேடதாரிகள் தலைமுடியைப் பின்னல் சுருட்டி விட்டுக் கொள்வார்கள். பெண் வேடதாரிகள் கொண்டையோ அல்லது சடையோ போட்டுக் கொள்வார்கள். அபூர்வமாக யாராவது ‘கிராப்புத் தலை ஆசாமி, பெண் வேடம் புனைய வேண்டிய நெருக்கடி ஏற்படுவதுண்டு. அப்பேர்ப்பட்ட சமயத்தில் கம்பெனி யிலிருக்கும் ‘டோப்பா’ அவரது தலையை அலங்கரித்து, அகோரமாகக் காட்சி அளிக்கும். அந்த நடிகரும் தமது டோப்பா வைத்த அழகிய முகத்தைக் கண்ணாடியில் பார்த்துவிட்டு உடனடியாகத் தலைமுடி வளர்க்க வேண்டிய அவசியத்தைப் புரிந்து கொள்வார்.  கம்பெனியில் அப்போது முக்கிய வேடங்களைத் தாங்கிய நடிகர்கள் சிலரைப்பற்றி இங்கே குறிப்பிடுவது கடமையெனக் கருதுகிறேன்.  பாட்டா ராமகிருஷ்ணன் அப்போது நாடக சபையில் முக்கிய கதாநாயகனாகவிளங்கியவர் திரு டி. ஆர். ராமகிருஷ்ணன். இவர் சங்கரதாஸ் சுவாமிகளின் பேரன். இவரை நாங்கள் எல்லோரும் ‘பாட்டா’ என்றே அழைப்பது வழக்கம். சங்கரதாஸ் சுவாமிகளை நாங்கள் எல்லோரும் சுவாமி என்று கூப்பிடுவோம். இவர் சுவாமிகளின் பேரன் என்ற முறையில் அவரைப் ‘பாட்டா’ என்றே அழைப்பார். எனவே நாளடைவில் இவரையே நாங்கள் ‘பாட்டா’ என்று கூப்பிடத் தொடங்கி விட்டோம். பாட்டா என்ற பெயரே இவருக்கு நிலைத்து விட்டது. சுவாமிகளும் இவரைப் பாட்டா என்றே கூப்பிடுவார்.  சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் பாட்டா இராம கிருஷ்ணன் சத்தியவானாகத் திறம்படப் பாடி நடிப்பார்.  சாரீரம் கணிரென்றிருக்கும். சீமந்தனி நாடகத்தில் சந்திராங்கதனுகவும், அபிமன்யு சுந்தரியில் அரவானுகவும், சுலோசன சதியில் ஆதிசேடனுகவும் நடிப்பார். ஆண் வேடத்தில் எப்படித் திறமையாக நடிப்பாரோ அப்படியே பெண் வேடத்திலும் பெயர் பெற்றவர். பவளக்கொடியில் அல்லியாகவும், சதியனுசூயாவில் அனுசூயாவாகவும் தோன்றுவார்.  1922-இல் நாடக சபை திண்டிவனத்தில் நாடகம் நடத்திக் கொண்டிருந்த போது, இவர் கம்பெனியிலிருந்து விலக நேர்ந்தது. அதன் பிறகு பல நாடக சபைகளில் பணி புரிந்திருக்கிறார், ஸ்பெஷல் நாடக நடிகராக இலங்கையில் சில ஆண்டுகள் இருந்து, இறுதியாக நாடகத்துறையை விட்டே விலகி, இப்போது சொந்த ஊரான தூத்துக்குடியில் இருந்து வருகிறார்.  பெரியண்ணா டி. கே. சங்கரன்  என் மூத்த அண்ணா டி. கே. சங்கரன் நாடக சபையில் மற்றொரு கதாநாயகனாக விளங்கினார். ‘சுலோசன சதி’ நாடகத்தில் அண்ணாதான் இந்திரஜித்துவாக நடிப்பார். சாரீரம் கெம்பீரமாக இருக்கும். வசனங்களைத் தெளிவாகப் பேசுவதில் இவருக்கு ஒரு தனித் திறமை இருந்தது. சுலோசனையை இந்திர ஜித்து சிறையெடுத்துப் போவதாகத்தான் கதை. சுவாமிகளும் அப்படியேதான் மற்றவர்களுக்கு, சுலோசன சதி நாடகத்தை எழுதிக் கொடுத்திருந்தார். ஆனால் பெரியண்ணாவின் பேச்சுத் திறமையைக் கண்டு மகிழ்ந்த சுவாமிகள், சிறையெடுத்துப் போவதை மாற்றி, சுலோசனை தானுக மனமிசைந்து இந்திரஜித்து வுடன் செல்லுவதாகக் கதையை அமைத்துக் கொண்டார். இதற்காக இந்திரஜித்துவுக்கு ஒரு நீண்ட வசனம் எழுதினார். இந்த வசனத்தைப் பேசி முடிக்கச் சுமார் பத்து நிமிடங்கள் ஆகும். இந்த வசனத்தில் தமிழின் சிறப்பும், தமிழர்களின் திருமண வாழ்க்கை பற்றிய செய்திகளும் விரிவாக இடம் பெற். றிருந்தன. ஒரு மங்கை தன் மனத்திற் கிசைந்த ஆடவனோடு தனித்துச் செல்வது தவருகாது என்பதை இந்திரஜித்து சுலோ சனைக்கு விளக்கமாக எடுத்துச் சொல்வதாக அமைந்துள்ள வசனம் இது. இந்த வசனத்தை அந்த நாளில் பெரியண்ணா பேசி முடித்ததும் சபையோர் மகிழ்வோடு கைதட்டிப் பாராட்டு வார்கள். ‘தமிழ் வசனம்’ என்றே நாங்கள் இதைக் குறிப்பது வழக்கம்.  இன்னும் சீமந்தனியிலே அவலோகன்: பவளக்கொடியில் அருச்சுனன்; பிரகலாதாவில் இந்திரன்; அபிமன்யு சுந்தரியில் துரி யோதனன் ஆகிய வேடங்களில் அண்ணா நடித்து வந்தார். இடைக் காலத்தில் 1924-இல் இவர் நடிப்பைக் கைவிட்டுக் கம் பெனியில் கணக்கு வேலைகளைப் பார்த்து வந்தார். பிறகு நாங்கள் இசாந்தக் கம்பெனி துவக்கியபோது மீண்டும் நடிப்புத் துறைக்கு வந்து விட்டார்.  கதாநாயகி சிங்காரவேலு சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் முன் சாவித்திரியாக நடித்தவர் திரு சிங்காரவேலு. இவர் தம்முடைய பெயருக்கு ஏற்ற படி சிங்கார பாகங்களில் மிகத் திறமையாக நடிப்பார். அந்தநாளில் முன், பின் என்று ஒரே பாத்திரத்தை இரு பகுதிகளாகப் பிரித்துக் கொடுப்பது வழக்கம். அநேகமாகக் காதல் காட்சிகளெல்லாம் இவருக்கே கொடுப்பார்கள். சுலோசன சதியிலும் இவர் முன் சுலோசனையாக நடிப்பார். பவளக்கொடி, அபிமன்யுசுந்தரி இரு நாடகங்களிலும் இவர் சுபத்திரையாகத் தோன்றுவார். 1921- இல்சென்னையில் நடித்துக் கொண்டிருந்த சமயம் சிங்காரவேலு ‘ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி’ க்குப் போய் விட்டார். அங்கு, பல ஆண்டுகள் நடித்துப் புகழ் பெற்றார்.  நல்ல பாடகர் நல்லகண்ணா திரு கல்லகண்ணா திருநெல்வேலியில் பிறந்தவர். பின் சாவித்திரியாகவும், பின் சுலோசனையாகவும் நடிப்பார். இனிமை யான குரல்; அருமையாகப் பாடுவார். சோகமாக நடிக்க வேண்டிய பாகங்களில் இவரது நடிப்பு மிகச் சிறப்பாக இருக்கும். சதியனுசூயாவில் நருமதையாகவும், பவளக்கொடியில் பவளக் கொடியாகவும் தோன்றுவார். இவர் 1922-இல் கம்பெனி பூவிருந்தவல்லியில் இருந்தபோது விலகிக்கொண்டார். வேறு சில நாடக சபைகளில் இருந்த பின்பு, திருநெல்வேலியில் தையற் கடை வைத்துக் கொண்டிருந்தபோது நான் இவரைச் சந்திக்க நேர்ந்தது.  எமன் கந்தசாமி எமனக நின்று என்னைப் பயமுறுத்திய திரு கந்தசாமியை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். இவர் தான் என் நினைவில் இன்னும் பசுமையாக இருப்பவர், இரணியன் கடோற்கஜன் முதலிய இராட்சதவேடங்கள் இவரது தனி உரிமை இவரும் தூத்துக்குடியைச் சேர்ந்தவர். இவர் 1922-இல் கம்பெனியிலிருந்து விலகினார். பிறகு வேறு துறைகளில் ஈடுபட்ட தாகக் கேள்வி.  பயூன் ராமசாமி கம்பெனியின் ஒரே நகைச்சுவை நடிகராகத்தனியரசு புரிந்தவர் திரு ராமசாமி. எல்லா நாடகங்களிலும் இவர் நகைச் சுவைப் பாத்திரங்களை ஏற்று நடிப்பார். அந்த நாளில் அவசிய மென்று கருதப்பட்ட ‘பபூன்’ ஆகவும் அடிக்கடி வந்து பாடிப் போவார். அவருக்கென்றே சுவாமிகள் சில புதிய நகைச் சுவைப் பாடல்களை இயற்றினார். இவர் ஆஞ்சநேயராக நடிப்பதற் கென்றே ‘இலங்காதகனம்’, நாடகமும் தயாரிக்கப் பெற்றது. கம்பெனி பூவிருந்தவல்லியில் இருந்த பொழுது இவரும் விலகிக் கொண்டார். நாங்கள் தூத்துக்குடிக்குப் போகும் போதெல் லாம் இவரைச் சந்திப்பதுண்டு.  சின்னண்ணா டி.கே. முத்துசாமி  சின்னண்ணா திரு. டி. கே. முத்துசாமி கம்பெனியின் ஆரம்ப காலத்தில் சிறு சிறு வேடங்கள்தாம் புனைந்து வந்தார். சுலோசன சதியில் சின்னண்ணா ராமராகவும், நான் லட்சுமணனுக வும் நடிப்போம். சீமந்தனியிலே அவர் சுமேதாவாக நடிப்பார். நான் சாமவானக நடிப்பேன். மற்ற நாடகங்களில் எல்லாம் சின்னண்ணாவுக்குப் பெரும்பாலும் தோழி வேடந்தான். 1921இல் சென்னைக்கு வந்தபிறகுதான் அவர் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கினார். சின்னண்ணாவுக்கு ஆரம்பத்தில் நன்றாகப் பாட வராது. அந்தக் குறையைப் போக்க அவர் அரும்பாடு பட்டுச் சங்கீதம் கற்றுக் கொண்டார். பின்னல் அவர் நன்முகப் பாடவும், ஆர்மோனியம் வாசிக்கவும், ஆசிரியராக இருந்து, மற்றவர்களேத் தயாரிக்கவுமாகத் தம்மை வளர்த்துக் கொண்டார். 1935-இல் நாங்கள் சகோதரர்கள் நால்வரும் நடித்த மேனகா பேசும் படத் திற்குச் சின்னண்ணா சங்கீத டைரக்டராகவும் இருந்தார் என்பதை இங்கே மகிழ்வோடு குறிப்பிட விரும்புகிறேன்.  சாத்துளரிலும் சிவகாசியிலும் நாடகங்கள் நடித்துவிட்டு மீண்டும் மதுரைக்கு வந்து சேர்ந்தோம். புதிய நாடகங்கள் சில தயாரிக்கப் பெற்றன. புதிய நடிகர்களும் சிலர் கம்பெனியில் சேர்ந்தார்கள். மதுரையில் மீண்டும் ஒரு மாத காலம் நடித்து விட்டுச் சிவகங்கைக்குப் பயணமானோம்.  பாட்டி முத்தம்மாள் சிவகாசி வரையில் நாங்கள் கம்பெனி வீட்டிலேயே வசித்து வந்தோம். தாயார் மதுரையிலே இருந்தார்கள். அவர்களைப் பிரிந்திருப்பது எனக்கு வேதனையாகத்தான் இருந்தது. தந்தை யாரைப் பெற்ற தாயார் திருமதி முத்தம்மாள் அன்னையாருக்குத் துணையாக இருந்தார்கள். 1920-இல் எங்களுக்கு ஒரு தங்கை பிறந்தாள். சுப்பம்மாள் என்று அவருக்குப் பெயர் சூட்டப் பெற்றது.தாய்க்கும் பாட்டிக்கும் மாமி, மருமகள் உறவு ஒத்துப் போகவில்லை. சின்னண்ணா பெரியண்ணா இருவரும் திருவனந்த புரத்தில் பாட்டியிடமே வளர்ந்தவர்கள். மதுரைக்கு வரும்போது நானும் பகவதியும் தானிருந்தோம். மதுரை வாசம் உறுதிப்பட்ட பிறகு, பாட்டியார் அவர்களை அழைத்து வந்தார்கள். மதுரைக்கு வந்த பாட்டியார், இறுதிக்காலம் வரை எங்களோடு இருக்கத் திட்டமிட்டுத்தான் வந்தார்கள். அதற்குத் தடையாக இருந்தது, வீட்டில் எந்நேரமும் சச்சரவு. தாயார் எவ்வளவு அடங்கிப்போனலும் சண்டை ஓய்வதில்லை. இந்த நிலையில் பாட்டி, தம் சின்ன மகனிடம் போகவேண்டுமென்று நச்சரித்தார்கள்.தந்தையாரால் பாட்டியின் தொல்லையைப் பொறுக்க முடியவில்லை. விருதுப்பட்டியிலிருந்தபோது பாட்டியாரைத் திருவனந்தபுரத்துக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தார் தந்தை. அதன்படி இரண்டு நாள் ஒய்வில் மதுரை சென்று, பாட்டியையும் அழைத்துக் கொண்டு செங்கோட்டை வரை ரயிலில் சென்றார். பிறகு திடீரென்று என்ன நினைத்தாரோ, தெரியவில்லை. பாட்டியாரைத் தனியே அனுப்பிவிட்டு, அங்கேயே தலையை மொட்டை போட்டுக் கொண்டு, உச்சிக் குடுமியோடு விருதுப்பட்டி வந்து சேர்ந்தார். “எதற்காக இந்த மொட்டை?” என்றார்கள் அவரது நண்பர்கள். “தாயாரை ஊருக்கு அனுப்பி விட்டேன். இனிமேல் மீண்டும் அவர்களைப் பார்ப்பேனென்ற நம்பிக்கை இல்லை. எனவே இறுதிக் கடமையை முடித்துக் கொண்டேன்” என்று சமாதானம் கூறினார். இப்போது சிவகங்கைக்குப்பயணமானவுடன் அன்னயாரும் உடன் வந்தார்கள். சிவகங்கையில் தாயாருடன் தனி வீட்டிலேயே வசித்து வந்தோம்.                                                      பேய் வீடு   சிவகங்கை, ஜமீனுக்குச் சொந்தமான நகரம். ஆங்கி லேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்த ராணி வேலுநாச்சியாரும், மருது பாண்டியர்களும் வாழ்ந்த பிரதேசம். அந்த ஊரில் கம்பெனிக்கு வீடே கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டார்கள். கடைசியாகக் கொட்டகைக்கு அருகிலேயே ஒரு பெரிய வீடு கிடைத்தது. அது, சிவகங்கை அரண்மனைக்குச் சொந்தமான வீடு. அந்த வீடு, பல ஆண்டுகளாகப் பூட்டிக் கிடந்ததாகவும், அதில் யாருமே குடியிருப்பதில்லையென்றும் பேசிக் கொண்டார்கள். அந்த வீட்டுக்குப் பக்கத்திலேயே மற்றொரு பெரிய வீடு பாழ டைந்து கிடந்தது. அதுவும் அரண்மனையைச் சேர்ந்த வீடுதான்.  கம்பெனியார் குடியிருந்த வீட்டில், ஏற்கனவே பேய்கள் குடியிருப்பதாகப் பலரும் சொல்விக் கொண்டார்கள். அந்த வீட்டில் இருந்த அரண்மனையைச் சேர்ந்த பல குடும்பங்கள் நசித்துப் போனதாகவும் கதை கதையாகப் பேசிக்கொண்டார்கள்  இந்தக் கதைகளை உறுதிப்படுத்தும் முறையில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஒரு நாள் சுலோசன சதி நாடகத்தில் ஆதிசேடன் வேடம் புனைந்திருந்த பாட்டா இராமகிருஷ்ணன் தன் வேலை முடிந்து விட்டதால் சுவாமிகளிடம் சொல்லிவிட்டுக் கம்பெனி வீட்டுக்குப் போயிருக்கிறார். சமையல் அப்பாஜிராவிடம் சாப்பாடு போடச் சொல்லிவிட்டுப் புழக்கடைப் பக்கம் போனவர், எதிரே யாரோ ஒருவர் நிற்பதைப் பார்த்து, “யாரையா?” என்று கேட்டிருக்கிறார். உடனே திடீரென்று அந்த உருவத்தின் கண்களிலிருந்து நெருப்புப் பொறிகள் வீசவும், குள்ளமாக இருந்த உருவம் பெரிய பனைமரம் அளவுக்கு வளர்ந்து தலைவிரிகோலத் துடன் பயங்கரமாக நின்றதாம். இதைப் பார்த்த இராம கிருஷ்ணன், ‘ஐயோ’ என்று கூச்சலிட்டலறி அப்படியே சாய்ந்து விட்டாராம்.  நாடகம் முடிந்து எல்லோரும் வீடு திரும்பியதும் இச் செய்தியை அறிந்து இரவு முழுவதும் நடிகர்கள் உறக்கமே இல்லாமல் இருந்திருக்கிரு.ர்கள். இராமகிருஷ்ணனுக்குக் காய்ச்சல் கண்டுவிட்டது. ஒரு வார காலம் சிரமப் பட்டார். மறுநாள் தந்தையார் மூலம் இந்தப்பேய் விஷயத்தைக் கேட்டதும் தாயாருடன் தனி வீட்டில் இருக்க நேர்ந்ததற்காக நாங்கள் சந்தோஷப்பட்டோம்.  அதன்பிறகு கொட்டகையில் எப்போதும் பேய்க் கதைகள் பேசுவது சகஜமாகிவிட்டது. “நேற்றிரவு 12 மணிக்கு ஒருபெண் தலைவிரிகோலமாய் அழுது கொண்டிருந்ததை நான் பார்த்தேன்” என்பார் ஒரு நடிகர். “விடிய 4 மணிக்குப் பயங்கரமான சத்தம் மூன்று முறைக்கேட்டேன்” என்பார் மற்றொரு நடிகர். இப்படியே நாளடைவில் பேய்க் கலவரம் அதிகமாகி விட்டது. நகைச்சுவை நடிகர் ராமசாமி, ஒரு நாளிரவு வீட்டில் பேயாகவே நடிக்கத் தொடங்கிவிட்டார். அவரோடு சண்டைப் போட்டுக் கொண்ட இன்னொரு நடிகரைப் பயமுறுத்துவதற்கு இந்த பேய்க்கலவரத் தைப் பயன்படுத்திக்கொண்டார். அந்தவீட்டில் நெல் போட்டு வைக்கும் பெரிய குதிர் ஒன்று இருந்தது. அந்தக் குதிருக்குள்தான் இரவில் அடிக்கடி சத்தம் கேட்பதாகச்சொல்லிக்கொண்டார்கள். பயூன் ராமசாமி மிகவும் துணிச்சல் பேர் வழி. அவர் இந்தக் குதிருக்குள் ஏறி உள்ளே யிருந்து கொண்டு இரவில் பேயாக அலறத்தொடங்கினார். இரண்டொரு நாட்கள் இவ்வாறு அட்ட காசம் செய்து வந்தது ராமசாமிப் பேய். கடைசியாக ஒரு நாள் இரவில் திடீரென்று சுவாமிகள் விழித்துக் கொண்டார். குதிர் அசைவதைப் பார்த்தார். அவருக்கு உண்மை விளங்கிவிட்டது” பெரிய விறகுக்கட்டை ஒன்றைக் கையிலெடுத்துக் கொண்டு குதிர் அருகே வந்தார். “வா பேயே வெளியே” என்று கர்ஜித்தார். சுவாமிகளின் கர்ஜனையைக் கேட்டு நடுங்கிய பேய், வெல வெலத்துப் போய் வெளியே வந்தது. குதிருக்குள்ளிருந்து ஏறிக் குதித்த ராமசாமிப் பேயைக் கண்டதும் எல்லோரும் பயத்தோடு வாயைமூடிக்கொண்டு சிரித்தார்கள். அன்று பேய் சுவாமிகளிடம் நல்ல பூசை வாங்கியது.  சிவகங்கையில் வேறு வீடு கிடைக்காமையால் நாடகம் முடியும்வரை அந்தப் பேய் வீட்டிலேயே இருந்து காலம் தள்ளினார்கள்.  சுவாமிகளின் உறுதி சிவகங்கையில் நாடகங்களுக்கு மற்ற ஊர்களைவிட அதிக மான வசூல். ஜமீன்தாரும் அடிக்கடி நாடகம் பார்த்து வந்தார். ஒருநாள் சதியனுசூயா நாடகத்தன்று ஜமீன்தார் வந்திருந்த பொது நடிகர்கள் சிலருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. சங்கர தாஸ் சுவாமிகளுக்கும். ஒரு பரிசு .ெ கா டு க் க விரும்பினார் ஜமீன்தார். சுவாமிகளை மேடைக்கு அழைத்தார்கள். சுவாமிகள் எப்போதுமே மேடைக்கு வருவது வழக்கமில்லை. ஜமீன்தார் தமது திவான உள்ளே அனுப்பி சுவாமிகளை மேடைக்கு வந்து பரிசைப் பெற்றுக்கொள்ளுமாறு சொன்னார். திவான் வந்து சொல்லிய பிறகுங்கூட சுவாமிகள் பிடிவாதமாக மேடைக்கு வர மறுத்துவிட்டது எனக்கு நன்முக நினைவிருக்கிறது.  புகழ்பாட மறுத்தல் நாங்கள் சிவகங்கைக்கு வருமுன் மதுரையிலிருந்தபோது இதைப் போலவே மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது. அக்காலத்தில் தமிழறினார்களேயும் புலவர்களையும் ஆதரித்துப் போற்றி வந்த வள்ளல் இராமநாதபுரம் சேதுபதி மன்னார் அவர்கள், சுவாமி களைக் காண விரும்பினார். மன்னருடைய அரண்மனை நிர்வாகி ஒருவர் சுவாமிகளை அணுகி, “நமது சேதுபதி மன்னரைப் பாடாத புலவர்கள் ஒருவரும் இல்லையே! சுவாமிகள்மட்டும் ஏன் இன்னும் மன்னார்மீது பாடவில்லை? நேரில் வந்து ஒரு பாடல் பாடினல் தங்களுக்குக் கனகாபிஷேகம் செய்வாரே மன்னார்!” என்றார்.  சுவாமிகள் தொடக்க முதலே மனிதர்களைப் புகழ்ந்துபாடு வதில்லையென்று நோன்புகொண்டவர். ஆதலால் மன்னார்மீது புகழ்மாலை பாட மறுத்துவிட்டார். மீண்டும் மீண்டும் பல அன்பர்கள் வந்து இதுபற்றி வற்புறுத்தினார்கள். சுவாமிகள் சினம் கொண்டு, நானும் மறவன் மன்னனும் மறவன் என்னைவிட மன்னன் எந்த வகையிலும் உயர்ந்தவனல்லன் எதற்காக நான் அவனைப் புகழவேண்டும்? மன்னன்மீது பாடினால்தான் எனது. புலமை மன்னனுக்குப் புரியுமோ?” என்று கூறிவிட்டார்.  சுவாமிகளின் இத்தகைய தன் மதிப்பின் பெருமையும், நெஞ்சுறுதியின் அருமையும் எனக்குப் புரியவில்லை. புரிந்து கொள்ள இயலாத பருவம். இன்று அதன் சிறப்பை உணர்ந்து பெருமிதம் அடைகிறேன். சுவாமிகள் தமது வாழ்நாளில் இறுதி வரையில் ‘நரஸ்துதி’ பாடவேயில்லை என்பதை இங்கே மகிழ் வோடு குறிப்பிட விரும்புகிறேன்.  அன்னம் ஊட்டிய தெய்வம் சிவகங்கையில் தாயோடு வசித்துவந்ததின் அருமை எனக்கு நன்முகத் தெரிந்தது. விருதுப்பட்டி, சாத்துரர் முதலிய ஊர்களில் நாடகம் முடிந்து வந்ததும் நான் அப்படியே உறங்கி விடுவேன் மதுரையில் நாடகங்கள் நடைபெற்றப்போது கூட வீடு தொலை விலிருந்ததால் பெரும்பாலும் வீட்டுக்குப் போவதில்லை. கம்பெனி வீட்டிலேயே படுத்துக் கொள்வது வழக்கம். சிவகங்கையில் தாயாருடன் தனியே இருந்ததால் நாடகம் முடிந்து வந்தவுடன் உறங்க முடிவதில்லை எங்கள் தாயார் பாற்சோறு பிசைந்து அதிலேகொஞ்சம் மோர் வி ட் டு வைத்திருப்பார்கள். நாங்கள் வந்தவுடன் அந்தச் சோற்றைப் பிசைந்து எங்களுக்கு உருட்டிப் போடுவார்கள், சுடச்சுட சுண்டக் கறியோடு அதைச் சாப்பிடும் போது தேவாமிருதமாய் இருக்கும். சில சமயங்களில் அவர்கள் சாதத்தைக் கொண்டு வருமுன் நான் உறங்கி விடுவேன்.  அன்னயார், உறங்கிய என்னை மடியில் போட்டுக்கொண்டு அன்னத்தை ஊட்டுவார்கள். நான் பாதி உறக்கத்திலேயே சாப்பிடுவேன். மறுநாள் காலேயில் எனக்கு இரவு சாப்பிட்ட நினைவே இராது “ஏனம்மா, என்ன எழுப்பிச் சாப்பாடு போட வில்லை?” என்று தாயைக் கோபித்துக் கொள்வேன். தாயார் சிரிப்பார்கள். “பெரியண்ணா ஏண்டா, துரங்கிக் கொண்டே சாப்பிட்டது நினைவில்லையா?” என்று கேட்பார். அப்போதுதான் எனக்குச் சாப்பிட்ட நினைவு வரும். அந்த அருமைத் தாயின் அன்பினை எண்ணி யெண்ணி இப்போது இன்புறுகிறேன்.  பட்டாபிஷேக நாடகம் சிவகங்கையில் ஒருமாத காலம் நாடகம் நடந்தது. கடைசி பட்டாபிஷேக நாடகம் ‘பிரகலாதன்’ வைக்கப் பெற்றிருந்தது. நான் பிரகலாதனாக நடித்தேன். நல்ல கூட்டம். நாடகம் சிறப்பாக நடைபெற்றது.  நாடக சபைகளில் ஒரு வழக்கமுண்டு. கடைசி நாடகத்தன்று காட்சிகள் முடிய முடியப் பின்புறம் திரைகளை அவிழ்த்துக் கட்டி மறுநாள் பயணத்திற்கு ஆயத்தம் செய்துகொண்டே இருப்பார்கள். நாடகம் முடியுந் தருவாயில் முன்புறமுள்ள இரண்டொரு திரைகள்தாம் இருக்கும். அவற்றையும் மேலே பரண் மீதிருந்தபடியே சுருணையோடு சுருட்டிக் கட்டி வைத்து, மங்களம் பாடி முடிந்ததும், அப்படியே சுருணையோடு கீழே இறக்கி விடுவார்கள். இது சபையோருக்கு வேடிக்கையாக இருக்கும். மேலும் கீழுமாக சுருண்டு உயர்ந்து விழுந்து கொண்டிருந்த திரையை எதிர்பாராத விதமாகக் சுருணையோடு அப்படியே கீழிறக்குவதால், சபையோரின் கண்திருஷ்டி கழிந்து விடும் என்ற நம்பிக்கையும் இருந்தது.  பட்டாபிஷேக நாடகத்தன்று அந்த நாளில் எல்லா ஊர்களிலும் நடிகர்களுக்குப் பரிசு வழங்கும் வழக்கம் உண்டு. இந்த நாளில் அது மறைந்து வருகிறது. அந்த நாளில் ரசிகர்கள் இன்னும் கொஞ்சம் தாராள மனம் படைத்தவர்களாக இருந்தார்கள். அத்தோடு, விளம்பரப் பிரியர்களாக இல்லாமலும் இருந்தார்கள். யாருக்கு எங்கிருந்து பரிசு வரப் போகிறது என்பதே ஒருவருக்கும் தெரியாது. பரிசு கொடுப்பதற்காகவென்று எந்தப் பெரிய மனிதருக்கும் இலவசச் சீட்டுக் கொடுப்பதில்லை. நடிகர்களுக்கு நிறையப் பரிசுகளும் கிடைத்து வந்தன.  மறு பிறவி நாடகம் முடிந்தது வழக்கம்போல் மங்களம் பாடுவதற்கு முன், பரிசு வழங்குவார்கள், ஒவ்வொருவராக மேடைக்கு வந்து பெயர்களைச் சொல்லிப் பரிசுகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள். பிரகலாதனுக்கு முடி சூட்டுவதோடு நாடகம் முடிவடைவதால் நான் முடி சூட்டிக் கொண்ட நிலையில் அப்படியே சிம்மாதானத் தில் வீற்றிருந்தேன். அன்று எனக்கும் இரண்டு தங்கப் பதக் கங்கள் பரிசாகக் கிடைத்தமையால் உற்சாகத்தோடு உட்கார்ந்திருந்தேன்.  என் தந்தையார் பின்பாட்டுப் பாடும் இடத்திலிருந்து உட்புறத் தட்டிக்குப் பக்கத்தில் வந்து, ஏதோ சைகை செய்து கொண்டிருந்தார். நான் தற்செயலாகத் தந்தையைப் பார்த் தேன். அவரது சைகையால் என்னைச் சிம்மாதனத்தின் கீழ்ப்படி யில் இறங்கி உட்காரச் சொல்கிரு ரென்பது புரிந்தது. காரணம் புரியாத நிலையில், நான் அவர் சொன்னபடி இருந்த இடத்தி லிருந்து ஒருபடி இறங்கி உட்கார்ந்தேன்.  அவ்வளவுதான். அடுத்த விநாடியில் என் தலைக்குமேல் கட்டப்பட்டிருந்த தர்பார் திரை அப்படியே சுருணையோடு ‘தடா’ ரென்ற சத்தத்துடன் விழுந்தது. என்மேல் விழவில்லை என்றாலும் அது விழுந்த அதிர்ச்சியால் நான் சுருண்டு விழுந்தேன் உள்ளே நின்ற தந்தையார் ஓடி வந்து, என்னை வாரியெடுத்து அணைத்துக்கொண்டார்.  ஒரு படி நான் கீழே இறங்கி உட்கார்ந்திராவிட்டால் என் வாழ்நாள் அன்றே முடிந்திருக்கும். தெய்வத்தின் திருவுள்ளம் வேறு விதமாக இருந்ததால் பிழைத்தேன். ஏதோ தற்செயலாக நான் கீழ்படியில் உட்கார்ந்ததாக எண்ணி, சுவாமிகள் ஆனந்தக் கண்ணிர் சிந்தி, என்னை வாழ்த்தினார் தெய்வம், தந்தையார் உருவத்தில் நின்று, என்னைக் காத்ததை அறிந்தபோது எல்லோரும் அதிசயித்தனார்.  என் தலைக்கு நேராகக் காட்சி அமைப்பாளர் ஒருவர், சுருணையோடு திரையைக் கட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்த என் தந்தையார் ஏதோ எண்ணி, என்னைக் கீழிறங்குமாறு செய்தார் என்பதைப் பின்னல் அறிந்தேன். சில நிமிடங்களில் பரண் மீதிருந்து கீழிறங்கி வந்த காட்சியமைப்பாளர் திரு ராமசாமி என்னைக் கட்டியணைத்துக் கொண்டு, “மறு பிறவி எடுத்தாயே அப்பா” என்று கதறியழுத காட்சி, இன்றும் என் மனக் கண் முன்னால் நிற்கிறது.            மறக்க முடியாத இரசிகர்!   நாடக இரசிகர்களிலேயே பல தரப்பட்டவர்கள் உண்டு. நான் என் நாடக வாழ்க்கையில் எத்தனையோ விதமான இரசிகர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் சிவகங்கையில் எங்களுக்கு அறிமுகமான ஒரு இரசிகரை இன்னும் என்னால் மறக்க முடிய வில்லை.  இந்த நாடக இரசிகர் ஒரு முஸ்லீம். சிவகங்கையில் எங்கள் நாடகங்களை விடாமல் பார்த்து வந்தார். நாடகம் முடிந்த மறு நாள் எங்கள் வீட்டுக்கு வருவார். வரும்போது மிட்டாய் பிஸ்கத்து, பழங்கள் முதலியவற்றைக் கொண்டு வந்து கொடுப்பார். தந்தையாரோடு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பார். தந்தையாருக்கு அந்த இரசிகர் போனால் போதுமென்றிருக்கும். ஆனால் இவர் ஒரு நாளும் எளிதாகப் போனதே இல்லை. இந்த இரசிகர் போவதற்காக மரியாதையான முறையில் தந்தையார் என்னென்னவோ செய்வார். ஒன்றும் அவரிடம் பயன்படாது. கடைசியாக, எங்களுக்கு வேலையிருக்கிறது. நீங்கள் போய் வாருங்கள், என்று அப்பட்டமாகச் சொன்ன பிறகுதான் அவர் போவார்.  சிவகங்கையில் இந்த இரசிகரை முதன்முதலாகச் சந்தித்த போது எங்களுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் ஒவ்வொரு நாளும் அவர் வந்து நாடகத்தைப்பற்றியும், நடிப்பைப் பற்றியும் புகழ்ந்து பேசிப் பேசி, எங்களைச் சலிப்படையச் செய்து விட்டார். தந்தையாருக்கு இவரோடு பேசுவதே ஒரு தொல்லையாகப் போய்விட்டது. அந்த இரசிகரோ எதைப் பற்றியும் சிந்தனைப்படாமல் தொடர்ந்து வந்து கொண்டேயிருத்தார்.  பட்டாபிஷேகம் முடிந்த மறுநாள் காலையிலும் வழக்கம் போல் வந்து விட்டார். அந்தத் திரையோடு கூடிய மர உருளை என்மீது விழுந்திருந்தால் என்ன கதி நேர்ந்திருக்கும் என்பதைப் பற்றியெல்லாம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். தாரை தாரையாகக் கண்ணிர் விட்டார். அவர் அழுததைப் பார்க்க எனக்கே பரிதாபமாக இருந்தது. எப்படியோ ஒரு வகையாக அவரை வெளியே அனுப்பினார் தந்தையார்.  பரமக்குடிப் பயணம் சிவகங்கையில் நாடகம் முடிந்ததும் பரமக்குடிக்குப் பயணமானோம். அப்போது சிவகங்கைக்கு இரயில் பாதை கிடையாது. மதுரையிலிருந்து பஸ் வழியாகத்தான் போனோம். சிவகங்கையிலிருந்து பஸ்ஸிலேறி மானாமதுரை போய் அங்கிருந்து இரயிலேறிப் பரமக்குடிக்குப் போக வேண்டும். நாங்கள் அனைவரும் பஸ்ஸிலேறிப் பயணத்திற்குச் சித்தமாக இருந்தோம். பஸ் புறப்படும் நேரத்தில் அந்த அற்புத நாடக இரசிகர் திடீரென்று வந்து விட்டார். “நானும் உங்களோடு மானுமதுரை வந்து, வழியனுப்பிவிட்டு வந்து விடுகிறேன்” என்று கூறிப் பஸ்ஸில் ஏறினார். என்ன செய்வது? பஸ் புறப்பட்டு விட்டது. வேறு வழியின்றித் தந்தையாரும் தலையசைத்தார்.  மானாமதுரை இரயில் நிலையம் வந்து சேர்ந்தோம். பஸ்ஸிலிருந்து சாமான்களை இறக்குவதிலும், மீண்டும் அவற்றை இரயிலில் ஏற்றுவதிலும் இரசிகர் வஞ்சகமில்லாமல் உதவி புரிந்தார். இரயிலும் புறப்பட்டது. நான் தலையை வெளியே நீட்டி அவரைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். கண்களில் நீர் ததும்ப அவர் ஏக்கத்தோடு நின்றார்.  பரமக்குடிக்கு வந்து சேர்ந்தோம். தந்தையார் முன்பே ஒரு முறை வந்து வீடு பார்த்து வைத்திருந்ததால் நாங்கள் எங்கள் தாயாருடன் தனிவீடு போய்ச் சேர்ந்தோம். அன்றிரவு பயணக் களைப்பு அதிகமாக இருந்தது. நிம்மதியாக உறங்கினோம்.  மறுநாள் காலை மறுநாள் காலை ஏழுமணி அளவில் எழுந்து நான் பல் துலக்கிக் கொண்டிருந்தேன். தந்தையார் அம்மாவுடன் ஏதோ சண்டை போட்டுக் கொண்டிருந்தார். கவனித்தேன். அம்மா, காலையில் கோபி போடுவதற்குக் ‘கருப்பட்டி’ இல்லையென்று சொல்லி யிருக்கிறார்கள். அதுதான் சண்டைக்குரிய விஷயம்.  ஆம்; அந்த நாளில் நாங்கள் கருப்பட்டிக் காபி தான் சாப்பிடுவது வழக்கம். இப்போதுகூட எங்கள் நாகர்கோவிலுக்குப் போகும் நேரங்களில் வீட்டில் என் அண்ணியாரிடம் கருப்பட்டிக் கோபி போடச் சொல்லுவேன். அந்தக் ‘காபி'யில் எனக்கு ஒரு தனி ஆசை.  “பொழுது விடிந்து, காபி குடிக்க வேண்டிய நேரத்தில் தான கருப்பட்டி இல்லையென்று சொல்வது?” இது அப்பாவின் கேள்வி.  “இன்று ‘காபி’ வேண்டியதில்லை. தண்ணீர் குடித்தால் போதும். மற்ற காரியங்களைப் பார்” என்று தந்தையார் இறுதியாக முடிவு கூறி விட்டார். அவரும் பல் துலக்கத் தொடங்கினார்.  வெளியே யாரோ வருவதுபோல் சத்தம் கேட்டது. நாங்கள் எட்டிப் பார்த்தோம். கையில் ஒரு பெரிய கருப்பட்டிப் பொட்டலத்தோடு சிரித்துக் கொண்டே நின்றார் சிவகங்கை நாடக இரசிகர். எங்களுக்கு வியப்பாகப் போய்விட்டது. இவர் எப்படித் திடீரென்று கருப்பட்டியோடு வந்தார்...?  நாடக இரசிகர் எங்கள் பிரிவைத் தாங்காது அடுத்த வண்டியிலேயே பரமக்குடிக்குப் புறப்பட்டு விட்டார். காலையில் எங்கள் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்து வந்திருக்கிரு.ர். உள்ளே அம்மாவும் அப்பாவும் கருப்பட்டிக்காகச் சண்டை போட்டுக் கொண்டது அவர் காதில் விழுந்திருக்கிறது. உடனே அவசரமாக ஒடிப் போய், பக்கத்திலுள்ள கடையிலிருந்து கருப்பட்டியை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார்.  இந்த விபரத்தை அறிந்ததும் தந்தையாருக்கு இவரிடம் மிகுந்த அனுதாபம் ஏற்பட்டது. அவரையும் தம்மோடு பலகாரம் சாப்பிடச் சொன்னார். பிறகு நாடகப் பைத்தியத்தால் ஏற்படும் தீமைகளைப் பற்றியெல்லாம் அவருக்கு விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக் கூறினார். அவரை ஒருவாறு சமாதானப் படுத்தித் தாமே உடனழைத்துச் சென்று இரயிலில் ஏற்றி அனுப்பிவிட்டுத் திரும்பினார்.  நிலாச் சாப்பாடு பரமக்குடியில் நாடகம் தொடங்கியது. நல்ல வசூல். சிவகங்கையிலும் பரமக்குடியிலும் வசூல் அதிகமாகும் செய்தியை அறிந்ததும் கம்பெனி உரிமையாளர்கள் எல்லோரும் அடிக்கடி வந்துபோனார்கள். சங்கரதாஸ் சுவாமிகள், பெளர்ணமியன்று நிலாச் சாப்பாடு சிறப்பாகப் போடவேண்டுமென்று திட்டம் போட்டார். அந்த ஏற்பாடு, உரிமையாளர்களில் இரண்டொருவருக்குப் பிடிக்கவில்லை. சுவாமிகளின் திட்டப்படி அதற்கு அதிகமாகச் செலவாகுமென்று தெரிந்தது. உரிமையாளர்கள் யோசித்தார்கள். சுவாமிகள், அவர்களைப்பற்றிக் கவலைப்படவில்லை. தமது திட்டப்படியே சிறப்பான முறையில் நிலாச்சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்தார். நடிகர்களுக்கெல்லாம் ஒரே குதுரகலம், எல்லோரும் முழு நிலவு உலாவரும் நந்நாளில் விருந்துண்டு களித்தோம்.  உரிமையாளர்கள் திட்டம் உரிமையாளர்கள் கூடிக்கூடிப் பேசினார்களாம். சுவாமிகளின் போக்கில் அவர்களில் சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டதாம் தேவையான நாடகங்களேயெல்லாம் தயாரித்தவுடன் சுவாமிகளை விலக்கிவிடவும், சட்டாம்பிள்ளை திரு குற்றாலலிங்கம் பிள்ளையை வைத்துக் கொண்டே நாடகங்களைத் தொடர்ந்து நடத்தவும் திட்டமிட்டதாக எங்கள் தந்தையார் வந்து கூறினார். உழைப்புப் பங்காளியான திரு பழனியாப்பிள்ளை ஒருவர் மட்டும் இந்த ஏற்பாட்டுக்கு இசையவில்லையென்றும் சொன்னார்.  உரிமையாளர்களின் திட்டமெல்லாம் சுவாமிகளுக்குத் தெரிந்துவிட்டது. அதன் காரணமாகப் புதிதாக நாடகம் தயாரிப்பதும் நிறுத்தப்பட்டது. நிலைமையை அறிந்த உரிமையாளர்கள் சில நாட்கள் அமைதியாக இருந்து பார்த்துவிட்டு மதுரைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். பழனியாப்பிள்ளை மட்டுமே இருந்து நிர்வாகத்தைக் கவனித்து வந்தார்.  பரமக்குடி நாடகம் முடிந்து திண்டுக்கல்லில் ஒரு மாத காலம் நாடகங்கள் நடத்திவிட்டு மீண்டும் மதுரை வந்து சேர்த்தோம். மதுரையில் சில நாடகங்கள் நடைபெற்றன.  திங்கட்கிழமை பஜனை கம்பெனியில் திங்கட்கிழமைதோறும் பஜனை நடைபெறுவது வழக்கம், நடிகர்கள் எல்லோரும் கூட்டமாகச் சுவாமிகளின் பாடல்களைப் பாடுவோம். கடைசியில் தனித்தனியாக ஒவ்வொரு நடிகரும் பாடவேண்டும் கூட்டத்தில் கோவிந்தா போடும் சிலர், தனியாகப் பாடும்போது குளறி வழிவார்கள். இவர்களையெல்லாம் சட்டாம்பிள்ளை குறித்துக் கொள்வார். பின்னல் சுவாமிகள் கவனித்துக் கொள்வார்கள். எனவே பாடும் ஒவ்வொருவரும் பய பக்தியோடு பாடுவார்கள். மதுரையில் ஒரு நாள் புட்டுத்தோப்பிலுள்ள கம்பெனி வீட்டில் பஜனை வழக்கம் போல் நடந்தது. சித்திரைத் திருவிழா நடைபெறும் சமயம் அது. இரவோடிரவாக, சொக்கேசப் பெருமான் ஊர்வலம் புறப்பட்டு புட்டுத்தோப்புக்கு வருகிற நாள். பஜனையில் நாங்கள் எல்லோரும் பாடிமுடித்து விட்டோம். பஜனைக்கு வந்திருந்த நண்பர்களிலும் சிலர் பாடினார்கள். கடைசியாகச் சுவாமிகள் பாட வேண்டுமென எல்லோரும் வற்புறுத்தினார்கள் சுவாமிகள் சிறிது சிந்தித்தார்கள். குறுநகையோடு, “எவ்வளவு நேரம்பாட வேண்டும்?” என்று கேட்டார்கள். “தங்கள் மனம்போல் பாடுங்கள்” என்றார் ஒருவர். சுவாமிகளின் புலமையை நன்கறிந்தவரான பழனியாயிள்ளை, “சுவாமி ஊர்வலம் இங்கு வருகிற, வரை பாடுங்கள்” என்றார்.  “ஆண்ட சக்ரவர்த்தி” என்று திருப்புகழ்ச் சந்தத்தில் பாடத் தொடங்கினார் சுவாமிகள். கண்களை மூடிய வண்ணம் பாடிக்கொண்டேயிருந்தார், ஏற்கனவே நெட்டுருப் போட் டிருந்த பழைய பாடலன்று; அப்போதுதான் கற்பனையாக எழுந்த புதிய பாடல். எல்லோரும் வியப்பே வடிவாக வீற்றிருந்தனார். பாடல் முடியவில்லை. தொடர்ந்து பாடிக்கொண்டே பரவச நிலையிலிருந்தார் சுவாமிகள். நீண்டநேரத்திற்குப் பின் சுவாமி ஊர்வலம் வருவதை அறிவிக்கும் நாதசுர இன்னிசைக் கேட்டது. மேளச் சத்தம் தன் பாட்டுக்கு இடையூராக வந்த நிலையில் கண்களைத் திறந்தார் சுவாமிகள். பாடலை முடித்தார். சுமார் ஒரு மணி நேரம் சுவாமிகள் பாடியதாக எல்லோரும் பேசிக்கொண்டது என் காதில் விழுந்தது. மதுரை நாடகங்களை முடித்துக் கொண்டு விருதுப்பட்டி, சாத்துார், திருநெல்வேலி முதலிய நகரங்களுக்குச் சென்றோம். வசூல் சுமாரான முறையில் இருந்து வந்தது.  ஒப்பந்த நாடகம் தமது ஊராகிய தூத்துக்குடியில் நாடகம் நடத்த வேண்டு மென்று சுவாமிகள் திட்டமிட்டார். திருநெல்வேலியிலிருந்து துரத்துக்குடிக்குப் போனோம். துரத்துக்குடியில் நாடகம் நடத்திக் கொண்டிருந்தபோது பக்கத்தில் சுமார் இருபது மைல் தொலைவிலுள்ள ஏரல் என்னும் ஊரிலிருந்து கம்பெனியைக் ‘கண்ட்ராக்ட்’ பேச ஒருவர் வந்தார்.  அவர், மாதம் பதிமூன்று நாடகங்களுக்குச் சகல செலவுகளும் போக ஆயிரத்தி ஐநூறு ரூபாய்கள் தருவதாக ஒப்பந்தம் செய்துகொண்டார். இப்போதெல்லாம் ஒரு நாடகத்திற்கு 1500 ரூபாய்கள் கொடுத்தாலும் நாடகம் நடத்துவது கஷ்டமாயிருக்கிறது. அந்த நாளில் 13 நாடகங்களுக்கு 1500 ரூபாய்கள் என்றால், கால மாறுபாட்டை எண்ணிப் பாருங்கள். எல்லோரும் இரட்டை மாட்டு வண்டிகளில் பயணம் செய்து ஏரல் போய்ச் சேர்ந்தோம். ஏரலில் வீடு கிடைக்காததால் தாயார் மட்டும் தூத்துக்குடியிலேயே இருக்க நேர்ந்தது.  ஏரலில் நாடகக் கொட்டகைக்கு எதிரேயே ‘கள்ளுக்கடை’ இருந்தது. நாடகம் பார்த்துக் கொண்டிருப்பவர்களில் பலர் அடிக்கடி வெளியே சென்று வருவார்கள். ஒரு சிலர் மொந்தை யோடு உள்ளே வந்து உட்கார்த்து கொண்டு குடிப்பார்கள். இந்தக் கோலாகலத்தைக் கண்டு யாரும் அதிசயப்படுவதுமில்லை; தடுப்பதுமில்லை. நாடகங்கள் நல்ல வசூலில் தொடர்ந்து நடை பெற்று வந்தன.  தகராறும் குழப்பமும் நாடகத்தைக் ‘கண்ட்ராக்டு’ எடுத்தவர் மிகுந்த புத்திசாலி. அவர் சுவாமிகளை எப்படியோ சரிப்படுத்திக் கொண்டார். சுவாமிகளுக்குத் தேவையான சகல வசதிகளையும் தனிப்பட்ட முறையில் செய்து கொடுத்து விட்டார். ஒப்பந்தப்படி கம்பெனிக்கு அன்றாடச் சாப்பாட்டுக்குரிய பணத்தைக் கூடக் கொடுக்காமல் ஏதேதோ சொல்லி வந்தார். சாப்பாட்டுவகையில் ஒருநாள் தகராறு ஏற்பட்டதும் எங்கள் தந்தையாருக்குப் பிரமாதக் கோபம் வந்துவிட்டது. அன்று கடைசி நாடகம், நடிகர்கள் எல்லோரையும் வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு “ஒருவரும் இன்று நாடகத்திற்குப் போகக் கூடாது” என்று ஆணை பிறப்பித்து விட்டார். விபரம் அறிந்தவுடன் கண்ட்ராக்டரிடமிருந்து ஆள் வந்தது. வந்தவர் தந்தையார் வாசற்படியில் கையில் பெரிய தடியோடு உட்கார்ந்திருக்கும் நிலையைப் பார்த்தவுடன் பயந்து ஓடிவிட்டார். பிறகு கண்ட்ராக்டர் சுவாமிகளிடம் விஷயத்தைச் சொல்ல, சுவாமிகளே நேரில் வந்தார். சுவாமிகள் வருவதை அறிந்ததும் தந்தையார் பெட்டிப் பாம்பாய் அடங்கிவிட்டார். ஒன்றும் பேசாமல் கதவைத் திறந்துவிட்டு, எங்கோ போய்விட்டார். அன்று கடைசி நாடகம்; சுவையில்லாமல் கவலையோடு நடந்து முடிந்தது. எல்லோரும் தூத்துக்குடி வந்து சேர்ந்தோம்.  இந்தச் சம்பவத்திற்குப் பின் சுவாமிகளுக்கும், எங்கள் தந்தையாருக்கும் மனக் கசப்பு வளர்ந்தது. துரத்துக்குடிக்கு வந்ததும் திடீரென்று ஒரு நாள் சுவாமிகளிடமும் சொல்லாமல் தந்தையார் எங்கள் எல்லோரையும் அழைத்துக் கொண்டு இரயிலேறி மதுரை வந்து சேர்ந்தார்.  மதுரைக்கு வந்த மறுநாள் தந்தையார், சின்னையா பிள்ளையைப் போய்ப் பார்த்தார். ஏரலில் நடந்த விஷயங்களை யெல்லாம் கூறினார். இனிமேல் கம்பெனியிலிருந்தால் சுவாமிகளுக்கும் தமக்கும் மனத் தாங்கல் வளருமென்றும் கணக்குத் தீர்த்துத் தங்களை நிறுத்திவிடுமாறும் வேண்டிக்கொண்டார். சின்னையா பிள்ளை, கம்பெனியின் முக்கியமான பங்காளி. அதிகப் பணம் போட்டவர். அவர் அப்போது மதுரை பொன்னகரத்தில் தமது குடும்பத்தோடு வசித்து வந்தார். தந்தையாரின் மொழியைக்கேட்டதும், அவர் தந்தையாரைச் சமதானப்படுத்தி விட்டு, உட்புறம்சென்று இரண்டு தந்திகளைக் கொண்டு வந்து கொடுத்தார். அவ்விரண்டு தந்திகளும் தூத்துக்குடியிலிருந்து சுவாமிகளால் கொடுக்கப்பட்டிருந்தன. முதல் தந்தியில், “கண்ணாசாமிப் பிள்ளை கோஷ்டியாரை வைத்து இனிமேல் தொழில் நடத்த முடியாது. வேறு ஏற்பாடு செய்யவும்” என்று குறிப்பிட்டிருந்தது. இரண்டாவது தந்தியில்,  “கண்ணாசாமிப்பிள்ளை கோஷ்டியார் என்னிடம் சொல்லாமல் போய் விட்டார்கள். உடனடியாக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யவும்” என்று எழுதப்பட்டிருந்தது. மாறுபட்ட கருத்துடனிருந்த இவ்விரண்டு தந்திகளையும் படித்துவிட்டுத் தந்தையார் சிரித்தார்.  முதல் தந்தி கொடுத்தபோது நாங்கள் தூத்துக்குடியை விட்டுப் புறப்பட்டுப் போய்விட்ட செய்தி சுவாமிகளுக்குத் தெரியாது போலிருக்கிறது. அந்தத் தந்தியில் சுவாமிகளுக்கு எங்கள்மேல் இருந்த கோபம் தெரிகிறதல்லவா? சுவாமிகள் முடிவு செய்யுமுன்பே நாங்கள் புறப்பட்டுப் போய்விட்டோமென்று தெரிந்ததும், அந்தக்கோபம் ஒருவாறு தணிந்திருக்கிறது. இரண்டாவது தந்தியைக் கொடுத்திருக்கிறார். சின்னையாபிள்ளை தந்தையாருக்கு நீண்ட நேரம் சமாதானம் சொன்னார், கடைசி யாக மீண்டும் கம்பெனிக்குப் போகச் சம்மதித்து, தந்தையார் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.  தந்தையார் வந்து அம்மாவிடம் இந்த விஷயங்களை யெல்லாம் சொன்னார். அம்மா மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். சுவாமிகளோடு மன வேற்றுமைப் படுவதும், அதற்காகக் கம்பெனியிலிருந்து விலகுவதும் அம்மாவுக்குப் பிடிக்கவேயில்லை.  புதியம்புத்துார் கம்பெனி புதியம்புத்துருக்குப் போயிருப்பதாகவும், அங்கு போய்ச் சேரவேண்டுமென்றும் சொல்லி, சின்னையாபிள்ளை எங்களை அனுப்பி வைத்தார்.  மணியாச்சிக்கும், துரத்துக்குடிக்குமிடையே ‘தட்டப் பாறை’ என்றொரு ஸ்டேஷன் இருக்கிறது. அந்த ஸ்டேஷனில் இறங்கி, மாட்டு வண்டியில் ஏறித்தான் புதியம்புத்துார் போக வேண்டும். நாங்கள் தந்தையாருடன், புதியம்புத்துார் வந்து சேர்ந்தோம். புதியம்புத்துார் ஒரு சிற்றுார்; அந்த ஊர் மக்கள் மிகவும் நல்லவர்கள், எங்களிடம் அன்பும் ஆதரவும் காட்டினார்கள் நாள் தோறும் ஊர் மக்களில் யாராவது ஒருவர், கம்பெனிக்குத் தேவையான காய்கறிகளைக் கொண்டு வந்து கொடுப்பார். வாரத்திற்கு இரண்டு நாள் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுவோம். அந்த நாட்களில் புலால் உணவு போடுவது வழக்கம். ஊர் மக்கள் ஆடுகள், கோழிகள் இவற்றையெல்லாம் அன்புடன் அளித்து உதவினார்கள்.  நாங்கள் புதியம்புத்துருக்கு வந்த பிறகு, சுவாமிகள் சில நாட்கள் எங்களோடு பேசாதிருந்தார். அவரைப் பார்க்கவே எங்களுக்குப் பயமாக இருந்தது. என்னுடைய பாடங்களை யெல்லாம் வேறொரு பையனுக்குக் கொடுத்தார். பெரியண்ணாவின் பாடங்களையும் கேட்டனுப்பினார். எனக்கு அழுகை அழுகையாக வந்தது. நான் ‘சுலோசன சதி’ யில் போடும் நாரதர், இலட்சுமனன், சின்னண்ணா போடும் ‘ராமர்’ ஆகிய பாடங்களை யெல்லாம் கொண்டு வரும்படி ஒருநாள் என்னிடமே சொன்னார். நான் அழுதுகொண்டே போய் அப்பாவிடம் கூறினேன். அப்பாவுக்குக் கோபம் வந்துவிட்டது. எங்கள் மூன்று பேருடைய பாடங்களும் வைத்திருந்த புத்தகப் பெட்டியை அப்படியே தூக்கிக் கொண்டு போய், சுவாமிகளின் முன்னால் போட்டுவிட்டு வந்தார். சுவாமிகள் இப்படி நடக்குமென்று சற்றும் எதிர்பார்க்க வில்லை. உடனே ஏதோ சமாதானம் கூறும் முறையில், “பாடங்களைப் பலபேர் நெட்டுருப் போட்டு வைத்திருந்தால் நோய் நொடி ஏற்படும் சமயங்களில், பயன்படுமே என்பதற்காகத்தான் பாடங்களைக் கேட்டேன். வேறு தவறான எண்ணம் எதுவுமில்லை” என்று மழுப்பினார். புத்தகப் பெட்டி எல்லாப் பாடங்களுடனும் எங்கள் அறைக்கு மீண்டும் வந்து சேர்ந்தது.                                                  மதுரை மாரியப்ப சுவாமிகள்   பிரபல தமிழிசைப் பாடகர், மதுரை மாரியப் பசுவாமிகளை நாங்கள் முதன்முதலாகப் புதியம்புத்துாரில்தான் சந்தித்தோம். அவர் திருச்செந்தூர் முருகன் ஆலயத்திற்குமுன், தாமே நாக்கை அறுத்துக் கொண்டாரென்றும், முருகன் திருவருளால் நல்ல பாடல்களை இயற்றும் திறனுடையவராய் விளங்குகிறாரென்றும் எல்லோரும் பேசிக்கொண்டார்கள். திரு மாரியப்ப சுவாமிகள் திருச்செந்துTர் முருகனுக்குப் பால்காவடிப்பிரார்த்தனை செலுத்துவதற்காக, சுவாமிகளிடம் பொருளுதவிபெற வந்திருந்தார்.  மாரியப்ப சுவாமிகள் சங்கரதாஸ் சுவாமிகளின் சிறந்த மாணாக்கர்களிலே ஒருவர். சுவாமிகளின் சமரச சன்மார்க்க நாடக சபையில் பிரதம நடிகராக விளங்கியவர். சங்கீத ஒளி விளக்காகத் திகழ்ந்த எஸ் ஜி கிட்டப்பாவும், அவரது சகோதரர்களும் சுவாமிகளின் மாணாக்கர்களாக, இந்த நாடக சபையிலே பயிற்சி பெற்றவர்கள்தாம்.  “என்ன மாரியப்பா! பாடல்கள் எழுதுகிறாயாமே? எங்கே நீ எழுதின பாடல்களைப் பாடு. கேட்போம்” என்றார் சுவாமிகள். மாரியப்ப சுவாமிகள் பாடத் தொடங்கினார். கடைசி அடியைப் பாடும்போது ஏதோ சிறிது தயக்கத்துடன் நிறுத்தினார். உடனே சுவாமிகள், “என்னடா, அப்பன் மாரியப்பன் என்று முத்திரை பாடி வைத்திருக்கிறாயா? பாதகமில்லை, பாடு” என்றார். எங்களுக்கெல்லாம் பெரும் வியப்பாகப் போய்விட்டது, சுவாமிகள் கூறியபடியேதான் அந்தப் பாடலின் அடி அமைக்கப்பட்டிருந்தது. சுவாமிகள் துவக்க முதலே தமது பெயரை முத்திரையடியாக வைத்துப் பாடும் வழக்கமில்லாதவர். எனவே மாரியப்ப சுவாமி கள் தமது ஆசிரியர் எதிரில் முத்திரையடி வைத்துப் பாடத் தயங்கினார் என்பதைப் பின்னால் உணர்ந்தோம்.  மதுரை மாரியப்ப சுவாமிகள் தமிழிசைக்குப் பெரும் பணி புரிந்தவர்களிலே தலைசிறந்த ஒருவர். தமிழிசை இயக்கம் தோன்றுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழிசைப் பெரும் புலவராக விளங்கியவர் நூற்றுக் கணக்கான சாகித்தியங்களை அவரே புனைந்திருக்கிறார். அத்தனையும் அருமையான பாடல்கள். சிட்டா ஸ்வரங்களுக்கெல்லாம் சாகித்தியங்கள் அமைத்துப் பாடியிருக்கிறார்.  நண்பர் கருப்பண்ணன் புதியம்புத்துரரில் நாடகங்கள் சிறப்பாக நடைபெற்று வந்தன. அந்த ஊரில் கருப்பண்ணன் என்று ஒருவர் இருந்தார். அவர், ஒரு சலவைத் தொழிலாளி. ஊரில் பெரிய போக்கிரி அவர் கம்பெனிக்கும், சிறப்பாக எங்கள் தந்தையாருக்கும் நெருங்கிய நண்பரானார்.  திரு கருப்பண்ணனுக்குப் பதின்மூன்று மனைவியர் இருந்தார்கள். அவர்கள் பல்வேறு சாதியினார். ஒருநாள் நாங்கள் நாடகக் கொட்டகைக்குப் போகும்போது, அவர்களைப் பார்க்க நேர்ந்தது. பெண்கள் பலர் கூட்டமாக வாயிலில் நிற்பதைப் பார்த்து, “இவர்கள் யார்?” என்று கேட்டோம். உடனே அங்கு நின்று கொண்டிருந்த திரு கருப்பண்ணன், “இவர்களெல்லோரும் அடியேனுடைய வீட்டுக்காரிகள்: உங்களைப் பார்ப்பதற்காகத் தான் நிற்கிறார்கள்” என்றார். எங்களுக்கு ஒரே ஆச்சரியம்! பதின் மூன்று மனைவியரை வைத்துக்கொண்டு, இவர் எப்படித்தான் வாழ்க்கை நடத்துகிறாரோ ஆண்டவனுக்குத்தான் தெரியும்.  பிள்ளையார் உடைப்பு புதியம்புத்துரில் ஒரு குறிப்பிடத்தக்க விசேஷம் நடந்தது. தலைப்பைப் பார்த்ததும் திகைப்படைய வேண்டாம். பிள்ளையாரை உடைக்கும் இயக்கம் பிறக்காத காலம் அது. அந்தக் காலத்தில் ஒருவர் பிள்ளையாரை உடைத்தார் என்றால் அது வியப்புக்குரிய செய்தியல்லவா?  சுமார் பதினைந்து வயதுடைய ஒர் இளைனார் கம்பெனியில் இருந்தார். நல்ல இனிமையான குரல். அவர் பாடும் உச்ச ஸ்தாயிக்கு, ஆர்மோனியத்தில் கட்டையே யில்லையென்று புகழுவார்கள். அவ்வளவு அற்புதமான சாரீரம். நடிப்பிலும் நல்ல திறமை. எந்தப் பாடமாயிருந்தாலும் சிலமணி நேரங்களில் நெட்டுருச் செய்துவிடக்கூடிய அபாரமான நினைவாற்றலும் அந்த இளைஞரிடம் இருந்தது.  இத்தனை தகுதியுடைய ஒருநடிகனுக்கு எப்படி ஓய்வு இருக்க முடியும்? யாராவது காய்ச்சல், தலைவலி என்று படுத்து விட்டால் உடனடியாக அந்தப் பாத்திரத்தை ஏற்க வேண்டிய பொறுப்பு அந்த இளைஞன் தலையில் விழும். இவ்வாறு பல நடிகர்களின் ஸ்தானத்தைப்பூர்த்தி செய்ய வேண்டிய நெருக்கடி அடிக்கடி அவருக்கு ஏற்படுவதுண்டு.  ஒரு நாள் பிரகலாதன் நாடகம். இரணியன் வேடதாரி கந்தசாமி திடீரென்று நோயாய்ப் படுத்துவிட்டார். வழக்கம் போல் நமது இளைஞரே இரண்யனின் இடத்தைப் பூர்த்தி செய்ய வேண்டியதாயிற்று. நடிகருக்கு ஒரே ஆத்திரம். எதிர் பாராது பல வேடங்களில் நடிப்பதற்குக் கிடைக்கும் இந்த நல்ல வாய்ப்புக்கள் அந்த நடிகருக்குச் சிறிதும் மகிழ்ச்சியை உண்டாக்க வில்லை.  அந்த நாளில் காலை, மாலை, இருவேளைகளிலும் நடிகர்களை ஊர்ப்புறத்தில் உலாவ அழைத்துச் செல்வது வழக்கம். ஏரிக் கரையை அடுத்த சமவெளியில் ஓர் அரசமரமும், அதன்கீழ் கெம்பீரமான ஒரு பிள்ளையார் சிலையும், அதைச் சுற்றி நாகர்களும் அமைந்திருந்தன. நடிகர்கள் அந்த இடத்தைத் தாண்டித்தான் ஏரிக்கரைக்குச் செல்லவேண்டும். பிரகலாதன் நாடகம் முடிந்த மறுநாள் அந்த வழியாகச் செல்லும்போது, ஏதோ சத்தம் கேட்டுச் சில நடிகர்கள் திரும்பிப் பார்த்தார்கள். நமது நடிக இளைனார் அரசமரத்தின் முன் நின்று கொண்டு, ஆவேசத்தோடு கையில் கிடைத்த கற்களையெல்லாம் எடுத்து, எதிரேயிருந்த பிள்ளையாரின் மீது வீசிக் கொண்டிருந்தார்.  “ஏனப்பா, இப்படிப்பிள்ளையாரை உடைக்கிறாய்” என்றார் ஒருவர். “இந்த நாசமாப் போற பிள்ளையார் எனக்கு வளமான சாரீரத்தைக் கொடுத்திருப்பதாலல்லவா இந்த வம்பெல்லாம் வருகிறது. பாவிகள் எதற்கெடுத்தாலும் என்னையே போட்டுச் சாகடிக்கிறார்களே! எனக்குச் சாரீரம் கெட்டுப் போகும் வரை இந்தப் பிள்ளையாரை உடைத்தே தீருவேன் என்று சொல்லி மீண்டும் கற்களை வீசினார். அரச மரத்தடிப் பிள்ளையார் சிறிது சேதமடைந்தது. நல்ல குரல் வேண்டும், நல்ல வேடம் புனைய வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டுத் தினமும் பிள்ளையாரை வழிபட்டு வரும் நடிகர்களும் சிலர் இருந்தார்கள். அவர்களுக்கு இளைஞரது செயல் பெரும் வியப்பாக இருந்தது.  ஒரு நாளோடு அவர் இந்தப் பிள்ளையார் உடைப்பை நிறுத்தவில்லை. சுவாமிகள் காதில் செய்தி எட்டிக் கண்டிக்கும் வரை தினமும் இவ்வாறு பிள்ளையார் பூசை நடத்திக் கொண்டே யிருந்தார். இப்படிப் பிள்ளையார் உடைப்பை நடத்திய அந்த நடிகப் பெரு வீரர் யார் தெரியுமா? நன்கு மெருகேறிய பழம் பெரும் நகைச்சுவை நடிகர் அவர். அவரது பெயரை அறிந்து கொள்ள ஆவல் உண்டாகிறதல்லவா? அவர்தாம் திரைப்பட நடிகர் திரு எம். ஆர். சாமிநாதன்!  எம். ஆர். சாமிநாதன்  மிகச் சிறந்த நடிகர், நகைச்சுவை நடிகர்களுக்குச் சாதாரணமாக எல்லா விதப் பாத்திரங்களையும் நடிக்க வராது. அப்படி ஒரு சிலர் நடித்தாலும் ரசிகர்கள் நகைச் சுவையுடனேயே அவர் நடிப்பை வரவேற்பது வழக்கம். திரு சாமிநாதன் அதற்கு முற்றிலும் விலக்கானவர் எந்தப் பாத்திரத்தையும் ஏற்று நடித்து வெற்றி பெற்றுவிடுவார். அவர் தொடர்ந்து தத்துவ மீனலோசினி வித்துவ பால சபையிலும், பிறகு எங்கள் சொந்தக் கம்பெனியிலும் பல ஆண்டுகள் நகைச்சுவை நடிகராக விளங்கி யிருக்கிறார், நாங்கள் முதன் முதலாகத் திரைப்படத் துறையில் புகுந்தபோதும் எங்கள் குழுவோடு சேர்ந்து “மேனகா” படத்தில் நடித்தவர். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்களுக்கு, எம். ஆர் சாமிநாதன் அவர்களை ‘ஆசான்’ என்றே குறிப்பிடவேண்டும். இருவரும் பல ஆண்டுகள் எங்கள் குழுவில் நகைச்சுவை நடிகர்களாக இருந்திருக்கிறார்கள்.  நடிகர் மட்டுமன்று எம். ஆர், சாமிநாதன், ஒரு நாடகாசிரி யருமாவார். இவர் எழுதிய ‘ஜம்புலிங்கம்’ என்னும் சீர்திருத்த நாடகத்தை நாங்கள் 1934ஆம் ஆண்டில் நடித்திருக்கிறோம். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் கோயமுத்தூரில் ‘அசோகன பிக்சர்ஸ்’ என்னும் படக் கம்பெனி வைத்திருந்தபோது, எம்.ஆர். சாமிநாதன் கதை எழுதும் பொறுப்பிலும் சிறந்த முறையில் பணி புரிந்திருக்கிறார். பழனியாபிள்ளை அவர்கள் ஸ்ரீ மீனலோசனி பால சற்குண நாடக சபா’ என்னும் பெயரால் ஒரு சொந்தக் கம்பெனியை நிறுவி, இலங்கையில் நாடகங்கள் நடத்தி வந்த போது திரு எம். ஆர். சாமிநாதன், திரு டி. எஸ்.துரைராஜ் ஆகிய இருபெரும் நடிகமணிகளும் அக்குழுவின் பிரதம நகைச்சுவை நடிகர்களாக விளங்கி வந்தார்கள். டி. எஸ். துரைராஜ் அவர்கள் தயாரித்த "பானை பிடித்தவள் பாக்கியசாலி" என்னும் திரைப் படத்தில் எம். ஆர். சாமிநாதன் ஜட்காவாலா வாக நடித்ததை இரசிகர்கள் இன்னும் மறந்திருக்க முடியாது. இவரைப்பற்றி இன்னும் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட நேருமாதலால் இத்தோடு இங்கே நிறுத்திக் கொள்ளுகிறேன்.  சிதம்பரனரைத் தந்த சிற்றூர் புதியம்புத்தூரில் நாடகங்களுக்கு நல்ல வசூல் ஆயிற்று. ஒரு மாத காலம் நாடகம் நடந்தது. அடுத்த ஊர் முடிமன்; புதியம் புத்துரரிலிருந்து சுமார் ஏழு மைல்கள் இருக்கும். எல்லோரும் மாட்டுவண்டிகளில் முடிமன்னுக்குப் புறப்பட்டோம். வழியில் ஒட்டப்பிடாரம் என்னும் ஊரைத் தாண்டிதான் போக வேண்டும். ஒட்டப்பிடாரம் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரைத் தந்த சிற்றுார். அப்போது தாலுகாவின் தலை நகராக இருந்ததால் பெரிய ஊராகத் தோன்றியது. சிறந்த வாணிபத் தலமாகவும் விளங்கியது.  முடிமன் சென்றபிறகு அங்கு நாடகக் கொட்டகை இல்லை யென்பதை அறிந்தோம். பக்கத்தில் போலிநாய்க்கனூர், என்றொரு சிற்றுார். அந்த ஊரில்தான் கொட்டகை இருந்தது. முடி மன்னில் கம்பெனி வீடு; போலிநாய்க்கனூரில் நாடகக் கொட்டகை. இடையேயுள்ள சுமார் ஒரு மைல் தூரத்திற்குச் சரியான பாதை கிடையாது.  கட்டபொம்மன் சீமை முடிமன்னுக்குச் சுமார் மூன்று அல்லது நான்கு மைல் தொலைவில் பாஞ்சாலங்குறிச்சி இருப்பதாகப் பெரியவர்கள் பேசிக் கொண்டார்கள். அந்த மண்ணாக்கே ஒரு தனி வீரமென்றும், முயல் நாயைத் துரத்தும், பாம்பு கீரியைத் துரத்தும் என்றெல்லாம் கதை கதையாகப் பேசுவார்கள். அந்தப் பாஞ்சாலங்குறிச்சி மண்ணை யாரும் எடுத்துப் போகாதபடி வெள்ளைக்காரர்கள் காவல் போட்டிருப்பதாகக் கூடப் பேசிக் கொண்டார்கள்.  எங்களுக்கெல்லாம் அந்த வீரம் செறிந்த பாஞ்சாலங்குறிச்சியைப் பார்க்க வேண்டுமென்று ஆசை. என்ன செய்வது? யாராவது அழைத்துப் போனால்தானே? அன்று அந்தப் பிரதேசத்தின் பெருமைக்குரிய வரலாறு எங்களுக்குத்தெரியாது. இன்று அதைப்பற்றி எண்ணாம் போதெல்லாம் எனக்கு உள்ளத்தில் ஒரு தனி மகிழ்ச்சியுண்டாகிறது. வீர சிதம்பரனார் பிறந்த ஒட்டப்பிடாரத்திற்கு அருகில் ஐம்பத்தொரு ஆண்டுகளுக்கு முன் நாங்கள் நாடகம் நடித்திருக்கிறோம் வீரபாண்டிய கட்டபொம்மன் சீமையில் எங்கள் கலைப்பணி நடந்திருக்கிறது! ஆஹா, எண்ணாம் போதே உள்ளம் பூரிக்கிறது!  ஒற்றையடிப் பாதை இந்த இடத்தில் ஒரு முக்கியமான நிகழ்ச்சியைக் குறிப்பிட வேண்டியது என் கடமையெனக் கருதுகிறேன். போலிநாய்க்னுாரில் நாடகம். முடிமன்னிலிருந்து நாங்கள் எல்லோரும் நடந்தே செல்ல வேண்டும். சப்பாத்திக் கள்ளிகளும், முட்புதர்களும் நிறைந்த கரடுமுரடான ஒற்றையடிப் பாதை. இரவு ஏழு மணி சுமாருக்கு முடிமன்னிலிருந்து புறப்படுவோம். மங்கலான வெளிச்சமுள்ள ஓர் அரிக்கன் விளக்கைப் பிடித்துக் கொண்டு முன்னால் ஒருவர் போவார். நாங்கள் எல்லோரும் அவரை நெருங்கியபடி நடந்து செல்வோம். நாடகம் முடிந்து திரும்பும்போது எங்களில் சிலருக்குக் குலை நடுக்க மெடுக்கும் சில சமயங்களில் அருகில் ‘புஸ்’ ஸென்று சத்தம் கேட்கும். புதர்களுக்கிடையே ஏதோ ஒடுவது போலத் தோன்றும். பக்கத்தில் வரும் பெரியவர்களைக் கட்டிக் கொள்ளுவோம். சில நேரங்களில் சமையல் அப்பாஜிராவ் என்னைத் தூக்கிக் கொள்வார்.  ஒருநாள் வழக்கம்போல் நாடகம் முடிந்து திரும்பி வரும் போது, புதர்களின் மறைவிலிருந்து திடிரென்று, ஐயா, ஐயா, என்று ஒரு குரல் கேட்டது. எல்லோரும் சட்டென்று நின்றார்கள். எனக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. முன்னால் சென்றவர், விளக்கை முகத்திற்கு நேரே பிடித்தபடி, “யாரையா?” என்று அதட்டிக் கேட்டார். இருளின் வலிமையை இன்னும் அதிகப் படுத்திக் காட்டும் அந்த மங்கிய வெளிச்சத்தில் கரிய நிறமுடைய ஒரு மனித உருவம் நிற்பது தெரிந்தது. பெரிய ஆஜானுபாகு வான தோற்றம்: முழுதும் வெண்மை நிறமுடைய கிருதா மீசை; வலது கையில் நீளமான ஒரு வேல் கம்பு. அந்த உருவத்தைப் பார்க்கவே பயமாக. இருந்தது.  “சங்கர தாஸ்சாமி கூட வருகளா? அவங்களைப் பாக்கணும் செளகரியமாய்ப் பேசணும்”.  அந்த உருவம் இவ்வாறு பேசியது. உடனே எங்களில் ஒருவர், “சாமிங்களுக்கு ஒடம்புசரியில்லே, நாளைக்குவெள்ளென முடிமன்னுக்கு வாங்க பாக்கலாம்” என்று சொல்லிவிட்டு நடந்தார். நாங்களும் அவரைத் தொடர்ந்தோம்.  உண்மைதான். முடிமன்னுக்கு வரும்போதே சுவாமிகள் உடல்நலம் குன்றியிருந்தார். இரவில் நாடகக் கொட்டகைக்கு வருவதில்லை. ஒருதனி வீட்டில் தங்கியிருந்தார். மறுநாள் பொழுது புலர்ந்ததும் நானும் மற்றும் சில நடிகர்களும் சுவாமிகள் இருந்தவீட்டிற்குச்சென்றோம். இரவு கண்டது பேயா, மனித உருவமா என்பதைத் தெளிவுப்படுத்திக் கொள்வதற்காகத்தான்.  ஏட்டுச் சுவடிகள் மனிதன்தான், ஐயமில்லை. அதே பெரியவர், கைத்தடியை ஊன்றியபடி இருமிக்கொண்டே வந்து, சுவாமிகள் அருகில் உட்கார்ந்தார். சுவாமிகளுக்கும் பெரியவருக்கும் நீண்ட நேரம் பேச்சு நடந்தது. பெரியவர் கூறியதன் சுருக்கம் இதுதான்.  “கட்டபொம்மு ஊமைத்துரையைப் பற்றியும்’ தாகுப்பதிப் பிள்ளை, பகதூர் வெள்ளை இவர்களைப் பற்றியும் பலப்பலப்பொய்க் கதைகள் கட்டிவிடப்படுகின்றன. வெள்ளையருக்குப் பயந்து  உண்மையான செய்திகளைச் சொல்ல மக்கள் அஞ்சுகிறார்கள். என்முன்னோர்கள் வெள்ளையத்தேவர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் எங்கள் வீட்டில் ஒருபழைய ஏட்டுச் சுவடிக் கட்டு இருக்கிறது. அதில் நடந்தது நடந்தபடியே செய்யுட்களாக அந்தக் காலத்தில் எங்கள் பெரியவர்களால் எழுதிவைக்கப் பட்டிருக்கிறது. நீங்கள் பெரிய நாடகாசிரியரென்றும், மறக் குலத்தில் பிறந்தவரென்றும் கேள்விப் பட்டேன். அந்தச் சுவடிகளை உங்களிடம் கொடுத்துவிடுகிறேன். அவற்றை வைத்துக் கொண்டு இப்போதில்லாவிட்டாலும் எப்போதாவது ஒருகாலத்தில் இந்த உண்மை நிகழ்ச்சிகளை மக்கள் தெரிந்து கொள்ளும் முறையில் நாடகமாக்கி நடிக்கவேண்டும்.”  இவ்வாறு கூறி விட்டுத் தம்மோடு கொண்டு வந்திருந்த ஒரு சிறு மூட்டையை அவிழ்த்தார். கந்தல் துணியில்சுற்றியிருந்த சில சுவடிக் கட்டுகளைச் சுவாமிகளிடம் கொடுத்தார். இதைச் சொல்லும்போது அவர் கண்கள் சிவப்பேறின. குரல் தழுதழுத்தது. சுவாமிகள் அதை வாங்கி இரண்டொரு ஏடுகளைப் புரட்டிப் பார்த்துவிட்டு, “அருமையான நடை” என்று பாராட்டினார். “இதற்காக உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார் சுவாமிகள். ஒன்றும் வேண்டாம், எங்கள் முன்னோர்களின் சிறப்பை ஒரு காலத்தில் உலகம் அறிய வேண்டும். அதுதான் என் ஆசை” என்றார் பெரியவர்.  அதற்குமேல் அவர்கள் பேச்சு எங்களுக்குச் சுவையளிக்காததால் நாங்கள் போய் விட்டோம். அதன்பின் இரண்டொரு நாட்கள் கம்பெனி வீடு முழுவதும் கட்டபொம்மன் பேச்சுத்தான். பெரியவர்கள் ஒவ்வொருவரும் அவ்வீரனைப்பற்றித் தாங்கள் அறிந்திருந்த கதைகளையெல்லாம் சொன்னார்கள். சுவாமிகள் கட்டபொம்மன் நாடகத்தை விரைவில் எழுத உத்தேசித்திருப்பதாகவும் பேசிக் கொண்டார்கள்.  நிழற் படங்கள் எதிர்பாராதபடி சென்னைக்குக் கம்பெனியைக் ‘கண்ட்ராக்டு’ பேச ஒருவர் வந்தார். பேச்செல்லாம் முடிவடைந்து அடுத்தபடியாகச் சென்னைக்குப் போவதென்று தீர்மானிக்கப் பட்டது. அதுவரையில் கம்பெனிக்குப் புகைப்படங்கள் எதுவும் எடுக்கவில்லை. சென்னைக்குப் போவதென்று முடிவானதால் புகைப்படம் எடுப்பதற்காக மதுரையிலிருந்து ஒருவரை அழைத்து வந்தார்கள். நாடகமில்லாத ஒருநாள், போலிநாயக்கனூர் கொட்டகையில் சில புகைப் படங்கள் எடுக்கப்பட்டன. அப்போதுதான் நான் முதன் முதலாகப் படமெடுத்துக் கொண்டேன். முதல் படம் என்ன தெரியுமா?... . நாரதர்.  ராஜா எம். ஆர்  அருகில் குமாரபுரம் என்றொரு சிற்றுார். முடிமன்னிலிருந்து சுமார் ஆறு மைல்கள் இருக்கலாம். ராஜா எம். ஆர். கோவிந்த சாமிப் பிள்ளையின் நாடகம் நடப்பதாகக் கேள்விப்பட்டோம். பிள்ளையவர்கள் சுவாமிகளின் அபிமானத்திற்குரிய மாணவர். சுவாமிகளை அவர், “அப்பா” என்றுதான் அழைப்பார். முன்பே மதுரையில் புட்டுத்தோப்பில் இருந்தபோது அவரை ஒருமுறை பார்த்திருக்கிறேன். அந்தக் காலத்தில் பிள்ளையவர்கள் மிகப் பிரசித்திபெற்ற நடிகர். “சந்தச் சரப சங்கீத சாகித்ய ராஜ போஜ ராஜா எம். ஆர். கோவிந்தசாமி” என்றுதான் அவரைக் குறிப்பிடுவார்கள்.  ஒருநாள் நல்லதங்காள நாடகம் நடப்பதாக அறிந்தோம். சுவாமிகள் எங்களை அழைத்துப் போய் வரும்படி ஆணையிட்டார்கள். தந்தையாருடன் நாங்கள் நாடகம் பார்க்கச் சென்றோம். நல்லண்ணகை வந்த ராஜா எம். ஆர். ‘கழுகு மாமலை முருகா’ என்று தொடங்கும் ஒரு பாடலைப் பாடிக்கொண்டு மேடைக்கு வந்தார். என்ன அற்புதமான சாரீரம்! இடையிடையே பேசிப் பேசி, அவர் பாட்டைத் தொடங்கும்போதெல்லாம், மக்கள் மகிழ்ச்சியோடு கைதட்டி வரவேற்றது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.  நாடகமேடையில் நின்ற நிலையில் சொந்தமாகவே கவி பாடும் புலமை பெற்றவர் ராஜா எம். ஆர். அந்த நாளில் தென்பாண்டிப் பகுதி முழுமைக்கும் நாடக மேடைக்கு அவர் ராஜாவாகவே விளங்கினார்.  புதியம்புத்துார், முடிமன், குமாரபுரம் முதலிய ஊர்களெல்லாம் அப்போது எட்டையபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்தவை. எட்டையபுரத்தை ஆண்டு வந்தவர் ராஜா ஜெகவீரராம வெங்கடேசுர எட்டப்பன் அவர்கள். ராஜா எம். ஆர். கோவிந்தசாமிப்பிள்ளை எட்டையபுரம் மன்னரின் செல்லப்பிள்ளையாக விளங்கினார். அவர் மேடையில் புனைந்து வந்த ராஜ உடைகளெல்லாம் மன்னரால் பரிசளிக்கப்பெற்றவை யெனத் தந்தையார் மூலம் அறிந்தோம். எங்கள் தந்தையார் அவரோடும் பல நாடகங்களில் கதாநாயகியாக நடித்தவராதலால் எம். ஆர். எங்களை அன்புடன் வரவேற்றார், வெளியே நெருக்கடியான கூட்டம், நாங்கள் மேடையிலேயே ஒரு பகுதியில் உட்கார்ந்து நாடகம் பார்த்தோம். நாடகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நாடகம் முடிந்ததும் எம். ஆர். எங்களை விட வில்லை. தந்தையாரும் அவரும் நீண்ட நேரம் பழங் கதைகளை யெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் உறங்கி விட்டோம். பொழுது புலர்ந்ததும் வண்டியேறி முடிமன்னுக்கு வந்து சேர்ந்தோம்.                          சென்னை மாநகரம்   சென்னைக்குப் போவது உறுதி செய்யப்பட்டதால் முடிமன் நாடகம் முடிந்ததும் எல்லோரும் மதுரைக்கு வந்து சேர்ந்தோம். சங்கரதாஸ் சுவாமிகளின் உடல்நிலை சரியில்லாததால் அவர்கள் மட்டும் தூத்துக்குடிக்குப் புறப்பட்டார்கள். உடல் நிலையைச் சரிசெய்து கொண்டு தாம் சென்னைக்கு வருவதாகவும் கம் பெனியைச் சென்னைக்குப் போகும்படியாகவும் சுவாமிகள் சொன்னதாக அறிந்தோம்.  மதுரைக்கு வந்தபின் ஒருவார காலம் சென்னைப் பயண ஏற்பாடுகள் கோலாகலமாக இருந்தன. எங்களுக்கெல்லாம் ஒரே குதுகலம். பட்டினத்தைப் பார்க்கப் போகிறோம் என்பதில் பெருமகிழ்ச்சி. நாள், நட்சத்திரம், யோகம், சூலம் இராகுகாலம், எமகண்டம் எல்லாம் பார்த்துப் புறப்பட்டார்கள். 1921 செப்டம்பர் மாதம் மதுரையிலிருந்து இரயிலேறிச் சென்னைக்கு வந்து சேர்ந்தோம்.  எழும்பூரில் இரயிலே விட்டிறங்கியதும் எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. பெருந்திகைப்பாக இருந்தது. இரயில் நிலையமும், மக்கள் கூட்டமும், இதர சூழல்களும் எங்களுக்கு புதுமையாகக் காட்சியளித்தன. மதுரை, திருச்சிராப்பள்ளி இரயில் நிலையங்களெல்லாம் இன்று இருக்கும் அளவு பெரியதாக அப்போது இல்லை. எனவே, அன்றையச் சென்னை எழும்பூர் இரயில் நிலையம் பிரம்மாண்டமானதாகத் தோன்றியது. நடிகர்களை அழைத்துப் போகக் காண்ட்ராக்டர்கள் கார்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். எல்லோரும் கார்களில் ஏறிப் புறப்பட்டோம். வழியில் டிராம் வண்டிகளைப் பார்த்தபோது ஒரே வியப்பு! இரயில் வண்டி தெருக்களிலேயே போவதாக எண்ணினோம். பிறகு தந்தையார். “இது மின்சாரத்தால் ஒடும் டிராம் கார்” என்று அதைப் பற்றி விளக்கியபோது, புரிந்துகொண்டது போல் தலையசைத்தோம். வேறென்ன செய்வது? மின்சாரம் என்றாலே என்னவென்று புரியாத எங்களிடத்தில் மின்சார வண்டியைப் பற்றிச் சொன்னல் எப்படிப் புரியும்?  மனிதர்கள் வண்டியிழுப்பதை நான் அதுவரையில் பார்த்ததில்லை. மாடு, குதிரை ஆகிய மிருகங்கள் இழுப்பதைத்தான் பார்த்திருக்கிறேன். நாகரீகம் மிகுந்த பெரிய பட்டினத்தில் மனிதர்கள் இழுக்கும் ரியக்‌ஷா’ வண்டிகளைப் பார்த்தபோது அந்தச் சின்னஞ்சிறு வயதிலே கூட எனக்குக் கஷ்டமாகத்தானிருந்தது. இந்த அதிசயங்களேயெல்லாம் பார்த்துக்கொண்டே ‘கிராண்ட் தியேட்ட'ருக்கு வந்து சேர்ந்தோம்.  கிராண்ட் தியேட்டர் சென்னையில் இப்போது முருகன் டாக்கீஸ் என்ற பெயரால் பட மாளிகை ஒன்று இருக்கிறதல்லவா? அதே கொட்டகைதான் அப்போது கிராண்ட் தியேட்டராக விளங்கியது. நாங்கள் வந்து இறங்கியது காலை நேரமானதால் எல்லோரும் பல் துலக்கிக் கொண்டு சிற்றுண்டியருந்த மேடையில் உட்கார்ந்தோம். எல்லோருக்கும் பூரி மசால் பரிமாறப் பட்டது. நான் அதுவரை யில் பார்த்தறியாத புதிய உணவு பூரி. இட்டளி, தோசை, புட்டு, இடியாப்பம், முதலிய பலகாரங்களையே சாப்பிட்டு வந்த எனக்கு, பூரி. மசால் என்னவோ போலிருந்தது. அது வட இந்தியாவில் பிரசித்தமான உணவு என்று சொன்னார்கள். எனககுப் பிடிக்கவில்லை. பிறகு தந்தையார் இட்டளி வர வழைத்துக் கொடுத்தார்.  சிற்றுண்டி முடிந்ததும் கம்பெனியார் அனைவரும் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். நாங்கள் பெற்றோருடன் ஒரு ஒட்டுக் குடித்தனத்தில் குடியேறினோம்.  ஞாயிற்றுக்கிழமை நாடகம் கிராண்ட் தியேட்டரில் நாடகம் தொடங்கியது. முதல் நாளன்றே கூட்டம் குறைவாக இருந்தது. அதுவரையில் கியாஸ் விளக்குகளில் நாடகம் நடித்து வந்த நாங்கள் அன்று தான் முதன் முதலாக மின்சார விளக்கில் நாடகம் ஆடினோம். என்றாலும், வசூல் இல்லாததால் எங்களுக்கு உற்சாகம் ஏற்பட வில்லை.  ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு நாடகம் என்றதும் எங்களுக்கு வியப்பாக இருந்தது. அதற்குமுன் எந்த ஊரிலும் ஞாயிறன்று நாடகம் போட்டதில்லை. அதுவும் மாலை நேரத்தில் நடித்ததேயில்லை. செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் மட்டும் இரவு 6.30 மணிக்கு நாடகம். ஆக வாரத்திற்கு மூன்று நாடகம் என்றிருந்தது போய் சென்னைக்கு வந்தபின் வாரத்திற்கு நான்கு நாடகங்கள் ஆயின. ஞாயிற்றுக்கிழமை நடந்த மாலை நாடகத்துக்கு வசூலும் மற்ற நாட்களைவிட அதிகமாக இருந்தது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்தான் சென்னையில் வசூலாகும் என எங்கள் தந்தையார் கூறினார்.  நோயும் சிகிச்சையும் நாடகம் தொடர்ந்து நடைபெற்றது. நானும் என் தமையன் மார்களும் நோயில் படுத்தோம். சென்னைக்குப் புதிதாக வருபவர்களுக்கெல்லாம் ஒரு திடீர் காய்ச்சல் வருவது வழக்கமாம். அந்தக் காய்ச்சல் எங்களையும் பீடித்ததால் மிகவும் தொல்லைப் பட்டோம்.  இது ஒரு புது விதமான காய்ச்சல். நாடகம் நடந்த செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில்தான் இந்தக் காய்ச்சல் எங்களை அதிகமாகப் பீடித்தது. முறை ஜூரம் என்றார்கள் சிலர்: மலைரியா ஜுரம் என்றார்கள் வேறு சிலர். பகல் உணவு அருந்தும் வரையில் ஒன்றும் இருப்பதில்லை. பிற்பகல் மூன்று மணிக்குமேல் சகிக்க முடியாதபடி குளிர் எடுக்கும். ஒரு மணி நேரத்திற்குப் பின் காய்ச்சல் அடிக்கும். மறுநாள் காய்ச்சல் விட்டுவிடும்.  அண்டை அயலில் இருந்தவர்கள் சொல்லிய மருந்துகளை யெல்லாம் எங்கள் அன்னையார் கொடுத்துப் பார்த்தார்கள். ஒன்றும் பலிக்கவில்லை. எங்கள் தாயார் இக்காலத்துப் பெண்டிரைப் போன்றவர்கள் அல்லர். எடுத்ததற்கெல்லாம் டாக்டரைத் தேடியோடும் நிலையில் அவர் எங்களை வளர்க்கவில்லை குழந்தைகளுக்கு வரக்கூடிய நோய்களும், அதற்குரிய மருத்துவ சிகிச்சை முறைகளும் அன்னையாருக்கு நன்றாகத் தெரியும். சென்னைக்கு வரும் வரையில் நாங்கள் டாக்டரைச் சந்தித்ததே யில்லை. எந்த நோய் வந்தாலும் அன்னையாரே ஏதாவது கஷாயம் போட்டுக் கொடுப்பார்கள். இரண்டொரு நாளில் குணமாய் விடும். இப்பொழுது எங்களைப் பீடித்தது, பட்டணத்திற்கே உரிய புதுக் காய்ச்சலாக இருந்ததால், அவர்களால் ஏதும் செய்ய முடியவில்லை.  புதிய மருந்து தந்தையார் இரண்டு வாரங்கள் ஏதேதோ மருந்துகளைக் கொடுத்துப் பார்த்தார். நோயினல் நாடகம் தடைப்படவில்லை. அது தொடர்ந்து நடைபெற்று வந்தது. நாங்கள் ஜுரத்துடன் மிகவும் போராடி எப்படியோ நடித்தோம். இறுதியாகத் தந்தையார் தமது சொந்த மருந்தையே கொடுக்கத் தொடங்கினார். குளிர் நின்று காய்ச்சல் வந்ததும் நாடகத்திற்குப் புறப்படும் நேரத்தில் கொஞ்சம் பிராந்தியை ஊற்றி எங்களுக்குக் குடிக்கக் கொடுப்பார். இதைக் குடித்ததும் தேகத்தில் ஒரு புதிய தெம்பு ஏற்படும். நோயினால் உண்டாகும் தளர்ச்சி தெரியாமல் நாங்கள் நடித்து விடுவோம். காய்ச்சல் உண்டாகும் நாட்களில் எல்லாம் இவ்வாறு பிராந்தியே எங்களுக்கு மருந்தாக இருந்து வந்தது. நாடகம் முடிவடையும் நேரத்தில் நாங்கள் உணர்வற்ற நிலையில் இருப்போம். எங்களை வண்டியில் போட்டுத்தான்.வீட்டில் கொண்டு வந்து சேர்ப்பது வழக்கம்.  தோழி கதாநாயகியானாள் ஒருநாள் சத்தியவான் சாவித்திரி நடந்து கொண்டிருந்தது. நந்தவனக் காட்சி. சின்னண்ணா தோழியாக நடித்தார். ஒரே ஒரு வசனம்தான் தோழிக்கு உண்டு. சாவித்திரி ஒரு நீண்ட வசனத்தைப் பேசி முடித்ததும் தோழி,  “ஆம் அம்மா, இங்குள்ள கிளிகள் உன்சொற்களைக் கேட்டும், அன்னங்கள் உன் நடையை மதித்தும், மயில்கள் உன் சாயலைக்கண்டு வெட்கியும் அங்கங்கு பதுங்கி நாண முறுகின்றன பார்!”....  என அதற்கு விடை பகருகிறாள். சின்னண்ணா திரு டி. கே. முத்துசாமி இந்த வசனத்தை நடிப்புணர்ச்சியோடு பேசியதும் சபையில் பெருத்த கரகோஷம் ஏற்பட்டது. சாவித்திரியைவிடத் தோழி நன்றாயிருப்பதாய்ச் சபையோர் பேசிக்கொண்டார்கள். சின்னண்ணாவுக்கு யோகம் அடித்தது; இரண்டாவது முறை சாவித்திரி நாடகம் போட்டபோது, சின்னண்ணாவே சாவித்திரி யாக நடித்தார். அதன் பிறகு தொடர்ந்து பல நாடகங்களில் கதாநாயகி வேடம் இவரைத் தேடி வந்தது.  சென்னைக்கு வந்தவுடன் தந்தையார் ஒரு நாதசுர வித்துவானை எங்களுக்குச் சங்கீதம் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தார். அந்த வித்துவானிடம் சிரத்தையோடு இசை பயின்றவர் சின்னண்ணா ஒருவர்தான். நோய், நொடி இவற்றினிடையேகூட விடாமல் இசைப் பயிற்சியில் முழு அக்கரை செலுத்தியதால் மிக விரைவில் சின்னண்ணா நன்றாகப் பாடவும் பழகிக் கொண்டார். எல்லா நாடகங்களிலும் கதாநாயகியாக நடித்து நல்ல புகழைப் பெற்றார்.  திடுக்கிடும் செய்தி ஒருநாள் திடீரென்று வந்த தந்தி எங்கள் எல்லோரையும் திடுக்கிட வைத்தது.  “சுவாமிகள் வாத நோயால் பீடிக்கப்பட்டார்; வாய்பேச முடியவில்லை. வலது கையும், இடது காலும் முடங்கி விட்டது. படுக்கையில் இருக்கிறார்”.  எதிரிகளும் இரக்கம் கொள்ளத்தக்க இச்செய்தியை அறிந்ததும், கம்பெனியின் உரிமையாளர்களில் ஒருவரான பழனியா பிள்ளை தூத்துக்குடிக்கு விரைந்தார். சென்னையிலேயே வைத்து, சிகிச்சை செய்யும் நோக்கோடு சுவாமிகளை மிகவும் சிரமப்பட்டு, சென்னைக்குக் கொண்டு வந்து சேர்த்தார்.  நாங்கள் கம்பெனி வீட்டிற்குச்சென்று சுவாமிகளைப் பார்த்தோம். எல்லோருடைய கண்களிலும் நீர் பொங்கி வழிந்தது. எத்தனை எத்தனையோ நடிகர்களைப் பேச வைத்த பேராசான் இன்று பேச முடியாமல் ஊமையாகக் கிடந்தார். எண்ணற்ற நாடகங்களை எழுதிக் குவித்த வலக்கரம் செயலற்ற நிலையில் முடங்கிக் கிடந்தது. ஏறுபோல் நடமாடிய அவரது கால்கள் பிறர் உதவியின்றி எழுந்திருக்க இயலாத நிலையில் அடங்கிக் கிடந்தன; பார்த்தோம், பரிதவித்தோம்!  சென்னையில் யார் யாரோ புலவர் பெருமக்கள், நடிக நடிகையர், சுவாமிகளை வந்து பார்த்தார்கள். பல்வேறு சிகிச்சை முறைகளைக் கூறினார்கள். மருத்துவர்கள் பலர் வந்தார்கள். சிகிச்சை செய்தார்கள். ஒன்றும் பயனில்லை. சுவாமிகளின் பணி விடைக்காகத் தனியாக இருவர் நியமிக்கப் பெற்றார்கள். உரிமையாளர்கள் உண்மையான சிரத்தையோடு சுவாமிகளுக்குச் சிகிச்சை செய்து வந்தார்கள்.  கட்டபொம்மன், ஷேக்ஸ்பியரின் ரோமியோவும் ஜூலியத்தும் ஆகிய இருநாடகங்களையும் சுவாமிகள் விரைவில் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தார். எனக்கு ஜூலியத் பாடம் கொடுக்கப் பெற்றிருந்தது. இந்தச் சமயத்தில் எதிர்பாராத நிலையில் சுவாமிகள் நோயுற்றது எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. விரைவில் குணப்பட்டு விடுவார்; புதிய நாடகங்களைத் தயாரிப்பார் என்றெல்லாம் உரிமையாளர்கள் எண்ணினார்கள். நம்பிக்கையோடு சிகிச்சை செய்து வந்தார்கள்.  எம்பிரஸ் தியேட்டர் சுவாமிகளின் பழைய நாடகங்கள் சில பாடம் கொடுக்கப் பெற்றன. வள்ளி திருமணம், அல்லியர்ஜுனா, குலேபகாவலி முதலிய நாடகங்களை நடித்தோம். இந்த நேரத்தில் சென்னை கண்ட்ராக்டு முடிவடைந்து விட்டது. மீண்டும் ஒரு மாத காலம் சென்னையிலே சொந்தமாக நாடகம் நடத்த முடிவு செய்தார்கள். கிராண்டு தியேட்டரில் தொடர்ந்து நடத்துவதைவிட வேறொரு தியேட்டருக்குப் போவது நல்லதென்று எண்ணி, திருவல்லிக்கேணி எம்பிரஸ் தியேட்டரில் நடத்த ஏற்பாடாயிற்று.  இப்போது ஸ்டார் டாக்கீஸ் என்னும் பெயரோடு திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருந்து வருகிறதல்லவா? இதுதான் அந்த நாளில் எம்பிரஸ் தியேட்டராக விளங்கியது. தியேட்டர் மாறியதும் கம்பெனி வீடும், எங்கள் வீடும் திருவல்லிக்கேணிப் பகுதிக்கு மாற்றப்பட்டன.  திருவல்லிக்கேணிக்கு வந்ததும் எங்களுக்கு நோய் இன்னும் அதிகமாயிற்று. அம்மா, அப்பா, தம்பி பகவதி, தங்கை சுப்பு எல்லோருமே காய்ச்சலில் படுத்துவிட்டார்கள். நாடகங்களுக்கு வசூல் இல்லாததால் செலவுக்குப் பணம் கிடைப்பது கூடக் கஷ்டமாகிவிட்டது.  பாட்டியார் மறைவு இந்த நேரத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து எங்கள் பாட்டி இறந்து போனதாக ஒருநாள் தகவல் வந்தது. அம்மாவுக்கும் பாட்டிக்கும் ஒத்துப் போகாததால் பாட்டி தம்இளைய மகனுடன் திருவனந்தபுரத்தில் இருக்க நேர்ந்ததாக முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். இந்த மரணச்செய்தி வந்த அன்று இரவு, நாடகம் வைக்கப் பெற்றிருந்தது. உரிமையாளர்களில் ஒருவரான சின்னையா பிள்ளை காலையில் வந்த கடிதத்தை இரவு ஏழு மணிக்குக் கொண்டு வந்து தந்தையாரிடம் கொடுத்தார். இருவரும் ஏதேதோ பேசினார்கள். எல்லோரும் காய்ச்சலோடு குளித்துவிட்டு நாடகத்தில் நடிக்கச் சென்றோம். ஊருக்குப் புறப்படும் எண்ணம் கைவிடப்பட்டது. வீட்டுச் செலவுக்குக் கம்பெனியிலிருந்து சரியாகப் பணம் கிடைப்பதில்லை. எல்லோரும் நோயுற்றதால், வீட்டில் யாரும் சாப்பிட வேண்டிய அவசியமும் இல்லாதிருந்தது. ரொட்டியும், காபியும்தான் எல்லோருக்கும் உணவு. இப்படியே நாட்கள் ஓடின. நாடகமும் ரூ. 50, 60 வசூலில் நடந்து கொண்டிருந்தது.  காமேஸ்வர ஐயர் உரிமையாளர்களில் இருவர் ஊருக்குப் போய்ச்சேர்ந்தார்கள். பழனியாப்பிள்ளை, கருப்பையாபிள்ளை, இருவர் மட்டுமே இருந்து நிர்வாகத்தை நடத்தி வந்தார்கள். கம்பெனி தள்ளாடியது. இந்தச் சமயத்தில் திரு. காமேஸ்வர ஐயர் என்ற ஒருவர் வந்து சேர்ந்தார். அவர் கருப்பையாபிள்ளையின் நண்பர். அவர் தாமாகவே கம்பெனி நிர்வாகங்களில் தலையிட்டுக் கம்பெனியை வேலூருக்குக் கொண்டுபோக ஏற்பாடுகள் செய்தார். அவருடைய முயற்சியால் எல்லோரும் சென்னையை விட்டு வேலூருக்கு வந்து சேர்ந்தோம்.  வேலூர் தோட்டப்பாளையம் கொட்டகையில் நாடகங்கள் தொடங்கின. நாடகங்களுக்கு வசூல் நல்ல முறையில் இருந்து வந்தது. அப்போது தோட்டப்பாளையம் கொட்டகைக்குச் சொந்தக்காரராக இருந்தவர் திரு க. மாணிக்க முதலியார். இவரைக் கழுதை மாணிக்க முதலியார் என்றே இரசிகர்கள் கூப்பிடு வார்கள். இவர் அந்த நாளில் ஒரு சிறந்த ‘ராஜபார்ட்'டாக விளங்கினார். இவருடைய நாடகங்களை நான் பார்த்திருக்கிறேன். வடபகுதி மாவட்டங்களில் மிகவும் பெயர் பெற்ற நடிகர் இவர். நன்றாகப் பாடக் கூடியவர். பெயருக்குமுன் வந்த தலையெழுத்து ‘க’ வாக இருந்ததால் குறும்புத்தனமான இரசிகர்கள் இவருக்கு கழுதை மாணிக்கம் என்ற ப்ட்டத்தைச் சூட்டி விட்டார்கள்.  மறக்க முடியாத மசால்வடை சென்னைக்கு வந்தபின் நாடகத்தின் நடுவில் சில நிமிடங்கள் இடைவேளை விடுவது வழக்கமாகி விட்டது. வேலூரில் அந்த வழக்கம் தொடர்ந்தது. இடைவேளைக்காக கொட்டகைக்கு உள்ளேயிருந்த சிறிய ஒட்டலில் உப்புமா, மசால்வடை போடுவார்கள். மிக அற்புதமாக இருக்கும். மறக்கமுடியாத மசால் வடை. எங்கள் தந்தையார் வாங்கிக்கொண்டு வந்து அன்போடு கொடுப்பார். அந்த மசால் வடையின் சுவை இன்னும் நினைவை விட்டு அகலவில்லை.  வேலூருக்கு வந்த பின்னும் எங்கள் காய்ச்சலுக்கு விடிவு ஏற்படவில்லை. அடிக்கடி வந்து தொல்லை கொடுத்துக் கொண் டிருந்தது.  வள்ளி திருமணம் ஒரு நாள் வள்ளி திருமணம். சின்னண்ணா வள்ளி வேடம் தாங்குவது வழக்கம். இரண்டு நாட்களாக அண்ணாவுக்குக் கடுமையான காய்ச்சல். வேறு நடிகர் இல்லாததால் முதல்நாள் காய்ச்சலோடு நடித்தார். வள்ளி திருமணத்தன்று அவரால் எழுந்து நிற்கவே முடியவில்லை . இரவுக்குள் சரியாகிவிடுமென்ற நம்பிக்கையோடு ஏதேதோ வைத்தியம் செய்தார்கள்.  இரவு மணி எட்டு. வழக்கம்போல் எல்லோரும் வேடம் புனைவதற்காகக் கொட்டகைக்கு வந்துவிட்டோம். 9.30 மணிக்கு நாடகம் தொடங்க வேண்டும். முதலாளிகளும் எங்கள் தந்தை யாரும் சின்னண்ணாவைச் சுற்றி உட்கார்ந்திருக்கிறார்கள்.  “என்ன முத்து! நடிக்கமுடியுமா?” ......இது முதலாளியின் கேள்வி. இந்தக் கேள்விக்குப் பதிலே கிடைக்கவில்லை. அண்ணாவால் பேசவே முடியவில்லை. கேள்விக்கு விடையாக ஒருமுறை வாந்தியெடுத்தார். அன்று அவரை வள்ளி வேடம் போட்டு நாடகம் நடத்த இயலாதென்பது உறுதி செய்யப்பட்டது. அடுத்த யோசனை?...  “ஏண்டா பசங்களா! யாராவது வள்ளியாக நடிக்கிறீங்களாடா? இல்லேன்ன நாடகத்தை நிறுத்த வேண்டியதுதான்...” அடிக்கடி இப்படி யாருக்காவது உடல் நலமில்லாது போனால் அடுத்த வேடத்தைப் புனைய ‘நான் முந்தி நீ முந்தி’ என்று நடிகர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு வருவது வழக்கம். எல்லோரும் அநேகமாக எல்லா நாடகப் பாடங்களையும் ஒரளவுக்குக் கேள்வியிலேயே நெட்டுருப் போட்டு வைத்திருப்பார்கள். ஆனால், இன்று முதலாளியின் கேள்வி, பலர் வாயிலாகமீண்டும். மீண்டும் எதிரொளித்ததே தவிர யாரும் நடிக்க முன்வரவில்லை.  யார் வள்ளி?  மணி 9 ஆகிவிட்டது. நாடகத்திற்கு அன்று நல்ல வசூல். நடிகர்கள் எவரும் தாமாக முன்வராததால், சில நடிகர்களை. அணுகி வள்ளியாக நடிக்கும்படி முதலாளிகள் வற்புறுத்தியும் பார்த்தார்கள். ஒன்றும் பலிக்கவில்லை.  அப்போது குழுவில் இருந்தவர்களில் நான் மிகச் சிறுவன். எனவே என்னை யாரும் கேட்கவில்லை “நான் வேண்டுமானல், நாரதராக நடிக்கிறேன்” என்றார் ஒரு நடிகர். ஏற்கனவே ஒரு தடவை நான் நோயுற்றிருந்தபோது நடித்தவர் அவர். இன்னும் சிலரும் நாரதராக நடிக்க முன்வந்தார்கள். நான்தான் எப்பொழுதும் நாரதராக நடிப்பது வழக்கம்.  பல நாரதர்கள் முன் வந்ததும், “சண்முகம் வள்ளியாக நடிக்கட்டுமே” என்றது ஒரு குரல்.  “ஆ! சரியான யோசனை! அவன் நடித்துவிடுவான் அண்ணா. முதல் மணியை அடிக்கச் சொல்லுங்கள். சண்முகம்தான் வள்ளி” என்றது மற்றொரு குரல். முதலாளிகள் என்னை நெருங்கினார்கள். வானளாவப் புகழ்ந்தார்கள். தைரியம் கூறினார்கள். “நீதான் நடிக்க வேண்டும்” என்றார்கள். நான், “எனக்குக் கொஞ்சம் கூடப் பாடமில்லையே” என்றேன்.  வள்ளியின் பாடல்களையெல்லாம் நான் அடிக்கடிசின்னண்ணாவுடன் போட்டி போட்டுப் பாடிக் கொண்டிருப்பது என் தந்தையாருக்குத் தெரியும். அவர் என் அருகில் வந்து,  “டே, பயலே! சும்மா போடுடா. நான் பின்னலேநிண்ணா பாடிட்றேன்” என்றார்.  மந்திரம் ஒதினார் பாடம் சொல்லித் தருவதாகச் சிலர் உற்சாகப் படுத்தி -னார்கள். நான் தயங்கிக் கொண்டே நின்றேன். முதலாளிகளில் ஒருவரான கருப்பையாப்பிள்ளை என்னை ஒருபுறமாகத் துாக்கிக் கொண்டு போனார், காதில் ஒரு மந்திரத்தைச் சொன்னார். அவ்வளவுதான்; நான் நடிப்பதாக ஒப்புக் கொண்டேன்.  நாடகம் நடந்தது. நான் வள்ளியாக நடித்தேன். உளறிக் ’கொட்டாமல் ஒழுங்காகவே நடித்தேன். எல்லோரும் என்னைப் பாராட்டினார்கள். என்னை நடிப்பதற்கு ஒப்புக்கொள்ளச் செய்த அந்த மந்திரம்...! முதலாளி கருப்பையா பிள்ளை என் காதில் ஒதிய அந்த மந்திரம்-என்ன தெரியுமா?  “டே பயலே! நீ இன்னிக்கு வள்ளியாக நடிச்சா உனக்கு முழுசா அஞ்சு ரூபாய் இளும் தருகிறேன்” என்பதுதான்.  முதலாளி கருப்பையாபிள்ளை என் காதில் சொன்ன ஐந்து ரூபாய் ரகசியம் நாடகம் முடியுமுன் நடிகர்களுக்கெல்லாம் தெரிந்து விட்டது. பலர் என்னைப் பார்த்து கேலி செய்யத் தொடங்கினார்கள். அஞ்சு ரூபாய் வள்ளி: அஞ்சு ரூபாய் வள்ளி’ என்று என் காதில் விழும்படிக் கிண்டல் செய்தார்கள். நான் அவற்றையெல்லாம் இலட்சியம் செய்யவேயில்லை. நாடகம் முடிந்ததும் எனக்கு ஐந்து ரூபாய்கள் கொடுத்தார் முதலாளி கருப்பையா பிள்ளை.  அந்த ஊரிலேயே சில நாட்களில் எங்கள் சம்பளமும் உயர்த்தப்பட்டது. சின்னண்ணு கம்பெனியின் பிரதம நடிகராய் விட்டதால் அவரது சம்பளம் மாதம் எட்டு ரூபாய்களிலிருந்து இருபத்தி ஐந்து ரூபாய்களாக உயர்ந்தது. எனக்கும் அதே சம்பளம் போடப்பட்டது. தொடக்கத்தில் எங்கள் எல்லோருக்கு மாக மொத்தச் சம்பள வரவு தொண்ணுாற்றி எட்டு ரூபாய்கள். இப்போது மொத்தம் எல்லோருக்கும் நூற்றி நாற்பது ரூபாய்கள் சம்பளம் கிடைத்தது.  ஆசிரியர் குப்புசாமி நாயுடு வேலூரில் திரு. கே.ஜி.குப்புசாமிநாயுடு கம்பெனிக்கு ஆசிரியராக வந்து சேர்ந்தார். இவர் சுவாமிகளின் மாணாக்கர்களில் ஒருவர். மிகச் சிறந்த பெண்வேடதாரியென்று பலரும் புகழுவார்கள். "தாராச சாங்கம்" நாடகத்தில் ‘தாரை'யாக நடிப்பதில் சிறந்து விளங்கியதால் தாரை குப்புசாமி நாயுடு என்றே இவரைக் குறிப்பது வழக்கம். கம்பெனிக்கு வந்து சேர்ந்த சமயத்தில் இவர் வேடம் புனைவதை நிறுத்திவிட்டு நாடகாசிரியராகவே பணி புரிந்து வந்தார். ஒருநாள் இவர் சுவாமிகளைப் பார்க்க வந்திருந்தார். வந்த இடத்தில் சுவாமிகளுடைய விருப்பத்தின்படி கம்பெனியில் இருக்க ஒப்புக்கொண்டார். கே. ஜி. குப்புசாமி நாயுடு சேர்ந்தபின் மற்றுஞ் சில புதிய நாடகங்கள் தயாராயின. அவற்றில் முக்கியமான நாடகம் ஞானசெளந்தரி, வேலூர் முடிந்ததும் பிரஞ்சிந்தியாவைச் சேர்ந்த பாண்டிச்சேரிக்குப் பயணமானோம்.  ஞானசெளந்தரி நாடகம் பாண்டிச்சேரியில் எனக்கு ஞானசெளந்தரி பாடம் கொடுக்க பெற்றது. சின்னண்ணாவுக்கு ஞானசெளந்தரியின் சிற்றன்னை ‘லேனாள்’ பாடம் கொடுத்தார்கள். பாண்டிச்சேரிக்கு வந்தவுடனேயே அவசர அவசரமாக இந்தப் புது நாடகத்தை அரங்கேற்ற முயற்சியெடுத்துக் கொண்டார்கள். பாடத்தை நெட்டுருப் பண்ணுவதற்குக்கூட நாட்கள் போதாது. மிகவும் துரிதப் படுத்தினர்கள். ஞானசெளந்தரி மிகப் பெரிய பாடம். பாடத்தைப் பார்த்தவுடனேயே எனக்குப் பயமாக இருந்தது. நாடகத்தில் ‘லேனா'ளின் சூழ்ச்சியால் ஞானசெளந்தரியின் இருகைகளும் வெட்டப்படுகின்றன. பாதி நாடகம் முழுதும் ஞானசெளந்தரி கைகளைப் பின்புறம் கட்டிக்கொண்டே நடிக்கவேண்டும். இந்த விஷயத்தைக் கேட்டவுடன் எனக்கு மேலும் பயம் அதிகரித்தது. பாடம் கொடுத்தவுடனேயே நாடகத்திற்குத் தேதியும் குறித்து விட்டார்கள். ஒத்திகைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.  கடுக்கன் பரிசு நாடக அரங்கேற்றத்திற்கு இன்னும் இரண்டே நாட்கள். நான் சரியாகப் பாடத்தை நெட்டுருப் பண்ணவில்லை. முதலாளி கருப்பையாபிள்ளை எங்கள் வீட்டுக்கு வந்தார். ஒரு ஜதைக் கடுக்கன்களை என்னிடம் கொடுத்தார். அதன் விலை பத்து ரூபாய், அப்போது பாண்டிச்சேரியில் ஒரு பவுனின் விலையே பதின்மூன்று ரூபாய்கள்தான். அரைப் பவுனில் செய்யப்பட்டிருந்த அந்த ஐந்து கல்பதித்த கடுக்கனைக் கண்டதும் எனக்கு மிகவும் ஆசை உண்டாயிற்று. வாங்கித் தரும்படி அப்பாவிடம் வற்புறுத்தினேன். உடனே கருப்பையாபிள்ளை “ஞானசெளந்தரி பாடத்தை நாடகத்தன்று சரியாக ஒப்பித்து விட்டால் இதை உனக்கு இனமாகவே கொடுத்து விடுகிறேன்” என்றார்.  வேலூரில் வள்ளி நாடகத்தின்போது ஐந்து ரூபாய்கள் செய்த அற்புதத்தைப் பார்த்தாரல்லவா? இம்முறையும் அவருடைய யோசனை பலித்தது. கடுக்கன் போட்டுக்கொள்ளவேண்டு மென்ற ஆசையில் ஒரே மூச்சாக உட்கார்ந்து ஞானசெளந்தரி பாடத்தை நெட்டுருப் போட்டு விட்டேன். வாக்களித்தபடி கடுக்கனைப் பரிசாகப் பெற்றேன்.  முதல் நாடகத்தன்று பிலேந்திரன் ஞானசெளந்தரியைக் காட்டில் சந்தித்து அழைத்துப் போகும் காட்சியில், ஞாபக மில்லாமல் பின்னல் கட்டிக் கொண்டிருந்த கைகளை வெளியே எடுத்து விட்டேன். சபையோர் கொல் வென்று சிரித்து விட்டார்கள். இரண்டாவது நாடகத்திலிருந்து முன் ஜாக்ரதையாக என் கைகள் வெட்டப்பட்டவுடன், கைகளிரண்டையும் பின்புறமாகச் சேர்த்து வைத்து, நாடா போட்டுக் கட்டி விட்டார்கள்.  சுவாமிகளின் நாடக ஆர்வம் பாண்டிச்சேரியில் சுவாமிகளின் உடல்நிலை சுமாராக இருந்தது. அவரும் அடிக்கடி நாடகங்களுக்கு வருவார். உள்ளே பக்கத் தட்டிக்கருகே அவருக்காக ஒரு கான்வாஸ் சேர் போடப் படும். சுவாமிகள் அதில் படுத்துக்கொண்டு கடைசிவரை நாடகத்தைப் பார்த்துக்கொண்டேயிருப்பார். நடிகர் யாராவது பாடம் உளறில்ை சுவாமிகள் அவர்களை எளிதில் விடமாட்டார். காட்சி முடிந்தவுடன் உளறிய நடிகர் சுவாமிகள் இருக்கும் பக்கம் போகவே பயப்படுவார். நடிகரைக் கூப்பிட்டு அவர் பாடம் உளறியதைச் சைகையாலேயே சுட்டிக் காட்டுவார். சில சமயங்களில் அடிக்கவும் முயலுவார். கை கால்கள் சரியாக விளங் காத நிலையில் இருந்ததால் நடிகர்கள் அடிவிழாமல் தப்பித்துக் கொள்ளுவார்கள். எல்லா நாடகங்களும் சுவாமிகளுக்கு மனப் பாடம். நாடகப் புத்தகத்தை வைத்துக் கொண்டு பாடம் சொல்லிக் கொடுக்கும் வழக்கமேயில்லை.  உளறலும் பாராட்டும் ஒரு நாள் பாதுகா பட்டாபிஷேகம் நாடகம் நடந்தது. சின்னண்ணா டி. கே. முத்துசாமி பரதனாக நடித்தார். கேகய நாட்டில் பரதன் தீயகனாக் கண்டு, அதைத் தம்பி சத்துருக்கனனிடம் சொல்லும் காட்சியில், ‘தம்பி சத்துருக்கனா’ என்பதற்குப் பதிலாகத் “தம்பி லட்சுமணா” என்று சொல்லிவிட்டார். சபையோர் அனைவரும் சிரித்துவிட்டார்கள்.  இலங்காதகனம், கலோசனசதி ஆகிய நாடகங்களில் சின்னண்ணா ராமராகவும், நான் லட்சுமணனுகவும் நடிப்பது வழக்கம். பாதுகா பட்டாபிஷேகத்திலும் எனக்கு லட்சுமணன் வேடந்தான் கொடுக்கப்பட்டிருந்தது. சின்னண்ணா பரதனாக நிற்பதை மறந்து, ராமர் வேடம் போட்டுப் பேசிய பழக்கத்தில் “தம்பி லட்சுமணா” என்று தவறுதலாகச் சொல்லி விட்டார். ஆனால் அந்தத் தவறை உடனே புரிந்து கொண்டு,  “தம்பி சத்ருக்கனா! எப்போதும் அண்ணன் ராமச்சந்திரனையும், தம்பி லட்சுமணனையும் என் மனம் நினைத்துக் கொண்டே யிருப்பதால் வாய் தவறி உன்னையும் லட்சுமணாவென்றே அழைத்து விட்டேன்” என்று பேசிச்சமாளித்தார். அண்ணாவுக்கு அப்போது வயது பன்னிரெண்டு இந்த இளம் வயதில் இவ்வளவு சாதுரியமாகச் சமாளித்ததற்காகச் சபையோர் அனைவரும் கரகோஷம் செய்து பாராட்டினார்கள். காட்சி முடிந்து உள்ளே வந்ததும் சுவாமிகள் சின்னண்ணாவைக் கூப்பிட்டார். அவருக்குப் பயந்தான். தன்னுடைய தவறுதலுக்காகச் சுவாமிகள் கோபித்துக் கொள்வாரென்றெண்ணி நடுங்கிக்கொண்டே வந்து நின்றார், சுவாமிகள் அண்ணாவை அருகில் அழைத்து, கண்களில் மகிழ்ச்சிப் பரவசத்துடன் இடது கையால் தட்டிக் கொடுத்தார்.  ‘ரம்’ செய்த ரகளை  பாண்டிச்சேரியில் காமாட்சியம்மன் கோயில் தெருவில் நாங்கள் தங்கியிருந்தோம். எங்கள் வீட்டுக்கு அடுத்தாற்போல் ஒரு பிரபல வழக்கறிஞர் வசித்து வந்தார். அவருக்கு நாடகக்காரர்கள் என்றாலே பிடிப்பதில்லை, நாங்கள் அடிக்கடி பாடிக் கொண்டிருப்போம். எங்கள் வீட்டுச் சுவரையொட்டினாற் போலிருந்தது அவரது படுக்கையறை. அந்த வழக்கறிஞர், நாடக மில்லாத நாட்களில் இரவு நேரங்களில் நாங்கள் பாடும்போதெல்லாம் ஏதாவது முணு முணுத்துக் கொண்டேயிருப்பார். ஒரு நாள் எங்கள் தந்தையார் ‘ரம்’ என்னும் ஒரு புது வகையான மதுவைக் குடித்து விட்டு வந்திருந்தார். போதை தலைக்கேறி விட்டது; ஒரே குஷி, இரவு ஒன்பது மணி: தமது கெம்பீரமான குரலையெழுப்பிப் பாடத் தொடங்கினார். அவரது பாட்டைக் கேட்டவுடன் வழக்கறிஞருக்குப் பிரமாதக் கோபம் வந்து விட்டது. ஆங்கிலமும், தமிழும் கலந்த மணிப்பிரவாள நடையில் ஏதேதோ ஏசத் தொடங்கினார். இரவு ஒன்பது மணிக்குமேல் “இப்படிக் கழுதைபோல்கத்தினால் நாங்கள் எப்படித் துரங்குவது?” என்று சத்தம் போட்டார். வீட்டு வாசவில் ஒரே குழப்பம். எங்கன் தாயார் வழக்கறிஞரைச் சமாதானம் செய்தனுப்பினார்.  நள்ளிரவில் கச்சேரி தந்தையார் பாடுவதை நிறுத்திவிட்டு, அவசரமாக வெளியே சென்றார், நாங்கள் ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தோம். அப்போது எங்கள் வீட்டிலேயே முத்துக் கன்னி மேஸ்திரி என்ற கம்பெனியின் தையல்காரரும் தம் மனைவி யோடு குடியிருத்தார். மேஸ்திரி அப்பாவுக்கு நண்பர். எப்போதும் இருவரும் ஒன்றாகத்தான் வெளியே போய்வருவது வழக்கம். அன்று மேஸ்திரியும் நல்ல குடிபோதையில் இருந்தார். அப்பா மேஸ்திரியை வீட்டுக்குக் காவல் வைத்து விட்டுத் தனியாக வெளியே சென்றதால் எங்களுக்கு மேலும் வியப்பாக இருந்தது. பதினைந்து நிமிடங்களில் இரண்டு புஷ் வண்டிகள் வந்து வாசலில் நின்றன. அவற்றில் ஆர்மோனியம் திரு வைத்திலிங்கம் பிள்ளையும், மிருதங்கம் திரு துரைசாமி நாயுடுவும், கம்பெனியில் அப்போது மிகவும் பலசாலியென எல்லோராலும் கருதப் பெற்ற திரு கோபால பிள்ளையும் வந்து சேர்ந்தார்கள்.  புஷ்வண்டி என்பது ரிக்‌ஷாவைப் போன்று மனிதர்கள் இழுக்கும் வண்டிதான். ரிக்‌ஷாவை முன்னால் நின்று இழுத்துச் செல்வார்கள். இது நாலு சக்கிர வண்டியாதலால் பெரும்பாலும் பின்னல் நின்று தள்ளிச் செல்வது வழக்கம். வண்டியில் உட்கார்ந்திருப்பவர்களே தம் கையில் முன்னாலுள்ள கம்பியைப் பிடித்துக் கொண்டு வண்டியைச் செலுத்த வேண்டும். இந்தப் புஷ் வண்டி அப்போது, பாண்டிச்சேரியிலும் கடலூரிலும் காணப்பட்டது. இப்போது நான் பார்த்ததாக நினைவில்லை.  புஷ் வண்டிகளில் ஆர்மோனியம் மிருதங்கத்துடன் இவர்கள் எல்லோரும் வந்ததும் என்ன நடக்குமோவென நாங்கள் பயந்து விட்டோம். இரவு மணி பத்திருக்கும். வீட்டுக்குள் கச்சேரி தொடங்கியது. தந்தையார் தம்மால் முடிந்த மட்டும் மேலே குரலெழுப்பிப் பாடினார். வைத்திலிங்கம் பிள்ளையும் துரைசாமி நாயுடுவும் அவரோடு சேர்ந்து வாசித்தார்கள். முத்துக்கன்னி மேஸ்திரியும், கோபால் பிள்ளையும் வீட்டு வாயிற் படியில் கையில் தடியோடு காவல் புரிந்தார்கள்.  வழக்கறிஞரின் மன்னிப்பு வழக்கறிஞர் வெலவெலத்துப்போய்விட்டார். அவர் ஆர்ப் பாட்டமெல்லாம் அடங்கி விட்டது, சண்டைக்குக் கச்சை கட்டி நிற்பதைக் கண்டதும், அவர் குரல் கீழே இறங்கிவிட்டது. உள்ளே நடக்கும் கச்சேரியைக் கேட்க வீதியில் ரசிகர்கள் கூடிவிட்டார்கள். பிறகு வழக்கறிஞர், முத்துக்கன்னி மேஸ்திரியிடம் வந்து சமாதானமாகப் பேசினார்.முதலில் தாம் ஏசிப் பேசியதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். எப்படியாவது இந்தக் கச்சேரியை, நிறுத்தினால் போதும் என்றாகி விட்டது அவருக்கு. கோபாலபிள்ளை ஒருவாறு எல்லோரையும் சமாதானப்படுத்தினர். கச்சேரியை நிறுத்தச் செய்தார். ஆர்மோனியம், மிருதங்க வித்துவான்களை வீட்டுக்கழைத்துச் சென்றார். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு வழக்கறிஞர் எந்த வம்புக்கும் வருவதேயில்லை.  தங்கை பிறந்தநாள் 1921ஆம் ஆண்டு டிசம்பர் கடைசி நாள். அன்று அபிமன்யு சுந்தரி மாலை நாடகம்; நாடகம் முடிந்து வீட்டுக்கு வந்ததும் அன்னயார் எல்லோருக்கும் உணவு பரிமாறினார்கள். இரவு ஒரு மணியளவில் உறங்கினோம். ஏதோ சலசலப்புக் கேட்டு விழித்தோம். இரவு மூன்று மணிக்கு, எங்களுக்கு இரண்டாவதாக ஒரு தங்கை பிறந்திருப்பதை அறிந்தோம்; மகிழ்ந்தோம்.  காமாட்சியம்மன் கோயில் தெருவில் குடியிருந்தால் தங்கைக்குக் காமாட்சி எனப் பெயரிடப் பெற்றது தங்கை பிறந்த இரண்டாம் நாள் முதன் முதலாக வீடு பெருக்குவதற்கு ஒரு வேலைக்காரியை நியமித்ததாகத் தந்தையார் தமது நாட்குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார். எனவே ஏழு குழந்தைகளுக்குத் தாயாகும் வரையில் எங்கள் வீட்டில் வேலைக்காரி வைக்க வேண்டிய அவசியமே இல்லாதபடி அன்னையாரே யாவற்றையும் கவனித்து வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.  எங்கள் அன்னையார் ஒர்.அபூர்வப்பிறவி. அவர்கள் காலையில் எழுந்திருப்பதையும் இரவில் உறங்குவதையும் நான் பார்த்ததே யில்லை. நாங்கள் விழித்தெழுந்தவுடன் வெந்நீர் தயாராயிருக்கும். அவர்களேதாம் குளிப்பாட்டி விடுவார்கள். எங்கள் எல்லோருக்கும் தலைமுடி நீளமாக யிருக்கும். எண்ணெய் தேய்த்துக் கொள்ளும் நாட்களில் பெரியண்ணாவுக்கும் தாயார் தாம் தலை தேய்த்து விடுவார்கள். அவர்கள் எப்பொழுது ஒய்வு எடுத்துக் கொள்வார்களோ எங்களுக்குத் தெரியாது. இயந்திரம் போல் சதா வேலை செய்து கொண்டே யிருப்பார்கள். அவர்கள் பிரசவ அறையிலிருந்த நாட்களில் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். தையல் வேலை முத்துக்கன்னி மேஸ்திரி எங்களுடன் குடியிருந்தா ரென்று குறிப்பிட்டேனல்லவா? அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது மனைவியார் எங்களுக்கு வேண்டிய உதவிகள் செய்தார்.  பாண்டிச்சேரியில் நாடகங்களுக்கு நல்லவரவேற்பிருந்தது . பாண்டிச்சேரி முடிந்து திண்டிவனம் சென்றோம். அங்கும் நல்ல வசூல். சென்னையில் வசூல் இல்லாமல் கஷ்டப்பட்ட நிலை மாறி விட்டது. தொடர்ந்து வேலூர், பாண்டிச்சேரி, திண்டிவனம் ஆகிய மூன்று ஊர்களிலும் நல்ல வசூலாயிற்று. கருப்பையா பிள்ளை மற்ற முதலாளிகளை விடக்கொஞ்சம் தாராளமான மனம் உடையவர்: நுணுக்கம் தெரிந்தவர். அவரும் காமேசுவர ஐயரும் தாம் இப்போது கம்பெனியை நிருவகித்து வந்தார்கள். உழைப்புப் பங்காளியான பழனியாப் பிள்ளை ஒன்றுஞ் செய்யத் தோன்றாது அவர்களோடு பேருக்கு ஒத்துழைத்தார்.  ஏ. கே. சுப்பிரமணியன்  திண்டிவனத்தில் பாட்டா இராமகிருஷ்ணன், கம்பெனியை விட்டுப் போய்விட்டார். அவருடைய ஸ்தானத்தை அருப்புக் கோட்டை ஏ. கே. சுப்பிரமணியன் பெற்றார். சுப்பிரமணியன் மிகச் சிறந்த பாடகர், நல்ல வளமான சாரீரம்; இயற்கையாகவே அவருடைய குரலில் ‘பிருகா’ பேசும். சென்னைக்கு வந்தவுடனேயே பல நாடகங்களில் சுப்பிரமணியன் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கி விட்டார், இப்பொழுது பாட்டா இராம கிருஷ்ணன் போய்விட்டதால், எல்லா வேடங்களும் அவருக்கே கொடுக்கப் பெற்றன. சுப்பிரமணியன் நடித்த சத்யவான், கோவலன், வள்ளி நாடகத்தில் வேலன் - வேடன் - விருத்தன் முதலிய பாத்திரங்களில் அவர் பாடிய பாடல்கள் இன்னும் என் நினைவை விட்டு அகலவில்லை. விருத்தங்கள் பாடும்போது அவர் ரசிகர்களிடத்தில் கரகோஷம் பெறுவார். இளம்பருவத்தின்றாகிய சுப்பிரமணியனின் அபாரமான இசைத் திறமை அந்த நாளில் எல்லோராலும் பாராட்டப் பெற்றது.  திண்டிவனத்தில் கண்டம் திண்டிவனத்தில் எனக்கு ஒருபெரிய கண்டம் ஏற்பட்டது. ஒருநாள் ‘இலங்காதகனம்’ நாடகம் நடந்து கொண்டிருந்தது. தான் முதலில் இலட்சுமணனுகவும் கடைசியில் அட்சய குமாரனாகவும் நடிப்பது வழக்கம். அந்த நாளில் தனியே உட்கார்ந்து ஒருவரோடு ஒருவர் அரட்டையடிப்பது இல்லை. பெரும்பாலும் வேடம் புனையாத நேரங்களில் பக்கப் படுதாவின் அருகே நின்று நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருப்போம்.  அன்று கடல் காட்சியைப் போட்டுக்கொண்டிருந்தார்கள் முன்னல் காட்டுத் திரை விடப்பட்டிருந்தது. அனுமார் வானரங் களுடன் பாடிக் கொண்டிருந்தார்.நான் இலட்சுமண வேடத்தை கலைத்துவிட்டு, வெறும் உடம்போடு மேடையின் நடுவே நின்று காட்சி அமைப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது திண்டிவனத்தில் மின்சார விளக்குகள் இல்லை. கியாஸ் விளக்கு கள்தான் போடப்பட்டிருந்தன. மேடையில் காட்சி அமைப்பைப் பார்த்துக் கொண்டிருந்த என் தலைக்கு நேராக ஒரு கியாஸ் விளக்குக் கட்டப்பட்டிருந்தது. கடல் தாண்டும் ‘அட்டை அனுமாரை அங்குமிங்குமாக இழுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் சுவையோடு அந்தக்காட்சியை ரசித்துநின்றேன்.  யாரோ ஒரு காட்சி யமைப்பாளர் மேடையின் நடுவே: தொங்கிக் கொண்டிருந்த கியாஸ் விளக்கை மேலே தூக்கிக் கட்ட முயன்றிருக்கிறார், விளக்கோடிருந்த நூல்கயிறு பரண்மீது எங்கோ மூங்கிலில் சிக்கித் தேய்ந்து போயிருக்கிறது. அவர் விளக்கை வெட்டி இழுத்ததும் கயிறு அறுந்து போய்விட்டது. பெரிய கியாஸ் விளக்கு அப்படியே நேராகக் கீழேநின்ற என்மேல் விழுந்தது. நான் ‘அம்மா’ என்றலறிக் கீழேசாய்ந்தேன். விளக்கு. சுக்கல் சுக்கலாக உடைந்துவிட்டது.  தந்தையின் ஆவேசம் என் அலறல் சத்தத்தைக் கேட்டதும் தந்தையார் ஓடி வந்தார். மேலே கட்டப்பட்டிருந்த கியாஸ் விளக்கு என்மேல் அறுந்து விழுந்து விட்டதையும், நான் கீழே கிடப்பதையும் கண்டார். ஆவேசம் கொண்டார். அதற்குள் சிலர் ஓடி வந்து என்னைத் துளக்கிச் சென்றார்கள். தந்தையார் தம்மையே மறந்து விட்டார். பவுடர் போடுமிடத்திலும் வெளியேயும் போடப் பட்டிருந்த கியாஸ் விளக்குகளைத் தம் கையாலேயே அடித்து உடைத்தார். அவரைப் பிடித்து நிறுத்தச் சிலர் பெரும் பாடுபட் டார்கள். எனக்குப் பெரிய அபாயம் ஏதுமில்லை யென்பதை விளக்கினார்கள்.  கியாஸ் விளக்கு என் தலையோடு உராய்ந்து கொண்டு இடது தோளில் விழுந்தது. விளக்கின் அடியிலிருந்த கம்பி ஆழ மாக என் தோளில் காயத்தை உண்டாக்கியது; இரத்தம் பீறிட் டது. நான் மூர்ச்சித்து விட்டேன். மேடையில் காற்றில்லாத தால் என்னை வெளியே தூக்கிவந்து கொட்டகையின் பிரதான வாயிலருகே ஒரு கட்டிலில் படுக்க வைத்தார்கள். அன்று நாடகம் பார்க்க வத்திருந்த ஒரு டாக்டர் எனக்குச் சிகிச்சை செய்தார். காயம் விரைவில் ஆறிவிடுமென்றும் பயப்பட வேண்டாமென்றும் என் தந்தைக்கு ஆறுதல் கூறினார்.  நான் மூர்ச்சை தெளிந்தபோது வெளியே கட்டிலில் படுத் திருந்தேன். நாடகம் பார்க்க வந்த ஜனங்களில் பலர் என்னைச் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள் நாடகம் நடந்து கொண் டிருத்தது. எனக்குப் பதிலாக அட்சயன் வேஷத்தை யாரோ ஒரு நடிகர் போட்டார். படுக்கையில் கிடந்த எனக்கு அவரைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. நான் எழுந்து பார்த்தால் மேடை நன்றாகத் தெரியும். ஆனால் தந்தையார் என்னை எழுந்திருக்க விடவில்லை. நாடகம் முடியும் வரை அப்படியே படுத்திருந்தேன்.  வீட்டுக்கு வந்ததும் அன்னையார் எனக்குத் ‘திருஷ்டி’ சுற்றிப் போட்டார்கள். மயிலம் முருகப் பெருமான வேண்டிக் கொண்டார்கள். காயம் ஆறுவதற்கு ஒரு வாரம் ஆயிற்று. அம்மாவோடும் அப்பாவோடும் அருகிலிருந்த மயிலத்திற்குச் சென்று முருகப் பெருமானைத் தரிசித்து வந்தோம்.  வண்டிப் பாளையம் திண்டிவனத்தில் இரண்டு மாத காலம் நாடகம் ஆடிய பின் திருப்பாதிரிப்புலியூருக்கு அருகிலுள்ள வண்டிபாளையம் சென்றாேம். வண்டிப்பாளையத்தில் நல்ல வசூல் இல்லை. திருப்பா திரிப்புலியூரிலேயே நாடகம் நடிக்க முதலாளிகள் முடிவு செய் தார்கள். அவ்வாறே உடனடியாகத் திருப்பாதிரிப்புலியூரில் நாடகம் துவக்கப்பட்டது. நல்ல வருவாயும் ஏற்பட்டது. அங்கு வீடு கிடைக்காததால் நாங்கள் வண்டிப்பாளையத்திலேயே இருப்தோம். நாடகத்திற்குப் போய் விட்டு, குதிரை வண்டியில் வண்டிப்பாளையம் திரும்புவோம். இப்படியே தொடர்ந்து நடை பெற்று வந்தது.  ஒருநாள் எங்கள் தந்தையாருக்கும், மானேஜர் நிலையி லிருந்த காமேஸ்வர ஐயருக்கும் பெரிய சச்சரவு ஏற்பட்டது. காமேஸ்வர ஐயர் ஏதோ தவருகப் பேச, தந்தையார்கொட்டகை யில் போட்டிருந்த பந்தல் காலைப் பிடுங்கிக்கொண்டு அவரை அடிக்கப்போக, ஒரே குழப்பம் ஏற்பட்டு விட்டது. ஐயரை எப்படியும் அடித்தே தீருவது என்று அப்பாவும் முத்துக்கன்னி மேஸ்திரியும் பலமுறை முயன்றார்கள்.  சின்னையா யிள்ளை வருகை காமேஸ்வர ஐயர் நடிகர்களிடமும், ஏனைய தொழிலாளர் களிடமும் நடந்து கொண்டவிதம் தந்தையாருக்குப் பிடிக்க வில்லை.  உரிமையாளர்களும் இதில் போதிய கவனம் செலுத்த வில்லை. கம்பெனியின் முக்கிய பங்குதாரரான சின்னையாபிள்ளை சென்னையிலிருந்தது போனவர் திரும்பி வரவே இல்லை, காமேஸ் வர ஐயரின் நடத்தையைப் பற்றியும் அவர் தொழிலாளர்களிடம் நடந்து கொள்ளும் முறைகளைப் பற்றியும் தந்தையார் மதுரையி லிருந்த சின்னையாபிள்ளைக்குக் கடிதம் எழுதினார். கடிதத்திற்குப் பதில் இல்லாததால் ஒரு நாள் மதுரைக்கே நேரில் சென்று விவரங்களே எடுத்துரைத்தார். தந்தையார் மதுரைக்குச் சென் நிருப்பதை அறிந்ததுமே காமேஸ்வர ஐயர் கம்பெனியிலிருந்து விலகிவிட்டார். சகல விவரங்களையும் தந்தையாரின் மூலம் அறிந்த சின்னையாபிள்ளை சில நாட்களில் திருப்பாதிரிப்புலியூர் வந்து கம்பெனியின் நிருவாகத்தை ஏற்றுக் கொண்டார்.  திருப்பாதிரிப்புலியூரில் வசூல் இல்லாததால் மீண்டும் வேலூருக்கு முகாம் மாற்றப்பட்டது. வேலூரிலும் இம்முறை வசூலாகவில்லை. காஞ்சிபுரம் போவதென்று முடிவு செய்தார்கள். காஞ்சிபுரம் வந்தோம். கருடசேவைப் பெருவிழா, நகரில் பிர மாதமாக நடக்கும் சமயம். ஆடிசன்பேட்டை கொட்டகையில் நாடகம். வெளியே ஊரெங்கும் ஒரே ஜனத்திரள். நாடகத்திற்கு மட்டும் வசூல் மிகவும் மோசமாக இருந்தது. சின்னையா பிள்ளை வந்ததும் இந்த நிலை ஏற்படவே எல்லோரும் அவருக்கு அதிர்ஷ்டம் இல்லையென்று பேசிக் கொண்டார்கள்.  மலேரியாவுக்கு மருத்துவம் காஞ்சிபுரத்தில் எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு சித்த மருத்துவர் குடியிருந்தார். சென்னையில் எங்களைப் பீடித்த காய்ச்சல் காஞ்சிபுரத்திலும் தலை காட்டியது. அந்த மருத்துவர் வந்து பார்த்தார். அவரிடம் நாங்கள் நீண்ட காலமாக உபாதைப் படும் நிலையைத் தந்தையார் எடுத்துச் சொன்னார் அவர் நன்கு சிந்தித்து ஏதோ ஒரு பச்சிலையை அரைத்துப் பெரிய உருண்டைகளாக்கி, நாள் ஒன்றுக்கு மூன்று வேலை சாப்பிடும் படியாக மூன்றுநாட்கள் தொடர்ந்து கொடுத்தார். காய்ச்சல் நின்றது. அன்று நின்றதோடு மட்டுமல்ல; இன்று வரை அந்த வேதனைக்குரிய மலேரியாக் காய்ச்சல் எனக்கு வருவதேயில்லை யென்பதை மகிழ்வோடு குறிப்பிட விரும்புகிறேன். சித்தமருத்து வத்தில் நம்பிக்கையில்லாத நண்பர்கள் இதுபற்றிச் சிந்திக்க வேண்டுகிறேன்.  காஞ்சிபுரத்தில் நாடகம் தொடர்ந்துநடைபெற்று வந்தது. திடீரென்று ஒருநாள் முக்கிய நடிகனக இருந்த ஏ. கே சுப்பிரமணியன் சொல்லாமல் ஒடிப்போய் விட்டார். நாடகம் நிறுத்தப் பட்டது. அவருக்குப் பதிலாக மீண்டும் எங்கிருந்தோ பாட்டா இராமகிருஷ்ணன அழைத்து வந்தார்கள். மழையும் அடிக்கடி பெய்ததால் சில நாட்கள் நாடகம் நிறுத்தப்படவும் நேர்ந்தது. காஞ்சிபுரம் யாருக்குமே வசூலாகாத ஊரென்று சிலபேர் ஊரின் மேல் பழி சுமத்தினார்கள்.  வசூல் இல்லாத நிலையில் நாடகங்கள் நடைபெற்று வந்தன. இந்தச் சமயத்தில் அப்பாவுக்குக் கால் பெருவிரலில் ஒரு விஷக்கல் குத்தியதால் சிறு காயம் ஏற்பட்டது. அதை அவர் அலட்சிய மாய் கவனியாது விட்டு விட்டார். சில நாட்களில் அந்தக் காயம் ரணமாகிச் சீழ் வடிய ஆரம்பித்தது. ரண வைத்தியர் ஒருவர் காயத்தைச் சோதித்துப் பார்த்தார். காயம் பட்ட இடத்திலிருந்த துவாரத்தில் ஒரு சிறு கம்பியைச் செலுத்தினார். அந்தக் கம்பி குதிங்கால் வரை வலியே யில்லாமல் உள்ளே போயிற்று பாதம் முழுதும் புறையோடி இருப்பதாகத் தெரிந் தது. அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்பா வலி பொறுக்க மாட்டாமல் படுக்கையில் கிடந்து சில நாட்கள் கஷ்டப்பட்டார். இதற்குள் காஞ்சீபுரம் நாடகம் முடிந்து விட்டதால் வைத்திய ரிடம் மருந்து வாங்கிக் கொண்டு சைதாப்பேட்டைக்குப் பயணப் பட நேர்ந்தது.  சைதாப்பேட்டை கம்பெனி சைதாப் பேட்டைக்குப் போன மூன்று நாட் களுக்குப் பிறகு நாங்களும் சைதாப் பேட்டைக்கு வந்து சேர்ந் தோம். முதல் நாடகத்தன்று பெருமழை பெய்தது. நாடகம் நடைபெறவில்லை. மூன்று நாட்களுக்குப் பின் மீண்டும் நாடகம் துவக்கப் பெற்றது. வசூல் சுமாராக இருந்தது. எங்கள் ஒப் பந்தம் தீர்ந்து விட்டதால் மறுபடியும் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டுமென உரிமையாளர்கள் வற்புறுத்தினார்கள். அப்பாவுக்கும் உழைப்புப் பங்காளியான பழனியாபிள்ளைக்கும் சிறு சிறு தகராறுகள் ஏற்பட்டுக் கொண்டே யிருந்ததால் மறு ஒப்பந்தம் எழுதுவது தடைப்பட்டது. பாட்டியின் முதல் ஆண்டுத் திதி அடுத்து வந்ததால் அதற்குக்குடும்பத்துடன் திருவனந்தபுரம் போய் வரவேண்டுமென்றும், அதன் பிறகு ஒப்பந்தம் எழுதிக் கொள்ளலாமென்றும் அப்பா கூறி விட்டார். அந்த நிலையில் எங்களை ஊருக்கு அனுப்ப சின்னையாபிள்ளை இசையவில்லை.  பால மனோகர சபை சென்னை ராயல் தியேட்டரில் அப்போது திரு தெ. பொ. கிருஷ்ணசாமிப் பாவலரின் பால மனோகர சபையார் நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்தார்கள். ராயல் தியேட்டர் என்பது அப்போது சென்னையில் இருந்த எல்லா நாடகக் கொட்டகை களிலும் சிறந்த ஒன்முகக் கருதப் பட்டது. ஆனைக்கவுனிக்கு மேற்புறமுள்ள பாலத்திற்குக் கீழ்ப்பக்கம், சால்ட்கொட்டகைக்கு அருகில் அமைந்திருந்தது. மிகப் பெரிய நாடக அரங்கம்.  அந்தக் காலத்தில் ஒரு கம்பெனியிலிருந்து. மற்றொரு கம்பெனிக்குப் பையன்களைக் கடத்திக் கொண்டுபோவது சாதாரணமாக நிகழ்ந்து வந்தது. இந்தத் திருப்பணிக்கென்றே சில தரகர் களும் நிரந்தரமாக இருந்து வந்தார்கள். நாங்கள் சைதாப் பேட்டைக்கு வந்த நாளிலிருந்தே பாவலரின் தரகர்கள் எங்களுக்கு வலைவீசத் தொடங்கினார்கள். ஒரு நாள் எங்களுக்கு நாடகமில்லாத நாளில் அப்பாவுடன் சென்னைக்குப் போய் பாவலர் கம்பெனியின் நாடகத்தைப் பார்த்து வந்தோம். பாவலர் குடிப்பழக்கம் உள்ளவர். எங்கள் தந்தையாரோ கேட்கவே வேண்டியதில்லை. இருவரும் மிக விரைவில் தோழமை கொண்டு விட்டார்கள்.  வலை வீசும் படலம் ‘பாவலர் கம்பெனிக்குப்போக வேண்டும்’ என்ற எண்ணத்தைத் தந்தையார் அன்னையாரிடம் தெரிவித்தார். அன்னையார் இந்த எண்ணத்தை வண்மையாக எதிர்த்தார். சுவாமிகள் வாய் பேச இயலாத நிலையில் படுக்கையிலிருக்கும் நேரத்தில் கம்பெனியை விட்டும் போவது நல்லதல்லவெனக் கண்டித்தார். தாயாரின் இந்த எண்ணத்தைப் பாவலர் அறிந்ததும், “தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் எனக்கும் குருவைப் போன்றவர். அவரையும் நானே சென்னைக்கு அழைத்து வந்து வேண்டிய சிகிச்சைகளைச் செய்கிறேன். அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்று சமாதானம் கூறினார்.  ஒரு நாள் மாலையில் தந்தையார் சென்னைக்குச் சென்றார். எனக்கும் சின்னண்ணாவுக்கும் மட்டும் மாதம் இருநூற்றி ஐம்பது ரூபாய் சம்பளம் தருவதாகப் பாவலர் ஒப்புக் கொண்டார். 250 முன் பணமாகவும் கொடுத்தார். பெரியண்ணாவுக்கு அந்தச் சமயம் ‘மகரக் கட்டு’ வந்து சாரீரம் சரியில்லாதலால் அவரை வேடம் புனைய அப்பா அனுமதிக்கவில்லை. அப்போது சென்னையில் பாவலர் கம்பெனியில் பின் பாட்டுப் பாடும் வழக்கம் இல்லை. அதனால் அப்பாவுக்கும் வேலையில்லை. எங்கள் நால்வருக்கும் அப்பாவுமாகச் சேர்த்து 140 ரூபாய்கள் இங்கே சம்பளம். பாவலர் கம்பெனியில் எனக்கும் சின்னண்ணாவுக்குமே 250 சம்பளம்.  நூற்றிப் பத்து ரூபாய்கள் அதிக வரவு; எங்கள் வளர்ச்சியிலுள்ள ஆர்வம் எல்லாமாகச் சேர்ந்து தந்தையார் பாவலர் விரித்த வலையில் விழுந்து விட்டார். ஒருநாள் இரவு சைதாப் பேட்டையில் ‘சுலோசனா சதி’ நாடகம் முடிந்ததும் இரவு மூன்று மணி சுமாருக்கு பாவலர் அனுப்பியிருந்த காரில் நாங்கள் எல்லோரும் புறப்பட்டோம். சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள பாவலர் வீட்டுக்கு வந்து இரவோடிவராகக் குடியேறினோம். தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையிலிருந்து 1922 ஆகஸ்டு 3 ஆம் நாள் இரவு பாவலரின் பால மனோகர சபாவுக்கு வந்து சேர்ந்தோம்.  பாவலரின் திறமை நாங்கள் வந்த இரண்டாம் நாள் ‘கதரின் வெற்றி’ நாடகம் வைக்கப்பட்டிருந்தது. அன்றைய நாடகத்திற்குச் சர்க்காரின் அனுமதி கிடைக்கவில்லை. பாவலர் காலையிலிருந்து படாத பாடு பட்டார். முன்னாள் இரவே டிராம் வண்டிகளில் பிரமாதமாக விளம்பரங்கள் கட்டப்பட்டுப் புறப்படத் தயாராய் இருந்தன. பாவலர் நேராகக் கவர்னரிடமே சென்றார். அப்போது ராஜதானியின் கவர்னராக இருந்தவர் லார்டு வெலிங்டன். பாவலர் சாரணர் படையில் ஒரு தளபதியாக இருந்தார். அந்தச் சலுகையில் எப்படியோ கவர்னரிடமே விசேஷ அனுமதி பெற்று வந்து விட்டார். பகல் 12மணிக்கு மேல் விளம்பரம் செய்யப் பட்டது. கதரின் வெற்றி நாடகம் சிறப்பாக நடைபெற்றது. அமோகமான வசூல். பாவலரை எல்லோரும் புகழ்ந்தார்கள். அன்று நடைபெற்ற கதரின் வெற்றி நாடகத்தில் நாங்கள் நடிக்கவில்லை.  புதிய நாடகங்கள் தயாரான வேகம் மறுநாள் சுவாமிகளின் ‘சதியனுசூயா’ நாடகம் பாடம் கொடுக்கப்பட்டது. தந்தையாரும் பெரியண்ணாவும் எல்லாப் பாடங்களையும் எழுதிக் கொடுத்தார்கள். நடிகர்கள் மிகவிரைவில் நெட்டுருப் பண்ணிவிட்டார்கள். நாங்கள் வந்து சேர்ந்த ஒன்பதாவது நாள் சனி, ஞாயிறு இரு நாட்களிலும் ‘சதியனுகுயா’ நாடகம் நடத்தப் பெற்றது. ஒரு புதிய நாடகத்தை ஒன்பதே நாட்களில் அரங்கேற்றுவதென்பது வியப்புக்குறிய செய்தி யல்லவா? எங்களுக்கே வியப்பாகத்தான் இருந்தது. அந்த நாளிலிருந்த நடிகர்களின் நினைவாற்றலை எண்ணி அதிசயிக்கவேண்டியதாக இருக்கிறது. இந்த நாளில் குறைந்த பட்சம் பதினைந்து நாட்களாவது ஒத்திகை நடைபெற்றால்தான் சில நடிகர்களுக்குப் பாடமே நெட்டுருவாகும். அந்தக் காலத்தில் நடிகர்களுக்கு. நாடகம், நடிப்பு, வேடம் இவற்றைப்பற்றியே சிந்தனை. இந்தக் காலத்தில் நடிகர்களுக்கு எத்தனை எத்தனையோ சிந்தனைகள்! என்ன செய்ய முடியும்?  பர்த்ருஹரி அப்போது சென்னையில் ‘பர்த்ருஹரி’ என்னும் ஒரு மெளனப்படம் ஒடிக்கொண்டிருந்தது. பாவலர் அந்தக் கதையை நாடகமாக நடிக்க விரும்பினார். நாலைந்து இரவுகள் சிரமப்பட்டு நாடகத்தை எழுதி முடித்தார். எல்லோருக்கும் பாடம் கொடுத்தார். எனக்கு விக்ரமன் பாடமும், சின்னண்ணா டி. கே. முத்துசாமிக்கு மோகன பாடமும் கொடுக்கப்பட்டது. நடிப்புப் பயிற்சி யளிப்பதற்குக்கூடப் போதிய நாட்கள் இல்லை. நடிகர்கள் எல்லோரையும் ஒரு நாள் படம்பார்க்க அழைத்துப்போனார். ஏறத்தாழப் படக்கதையை யனுசரித்தே நாடகமும் எழுதப்பட்டிருந்ததால் பாவலர் எங்கள் அருகில் இருந்து படத்தில் நடிப்பவர்களைப் போலவே நடிக்கவேண்டும் என்று கூறினார். நாங்களும் உன்னிப்பாக அந்த ஊமைப் படத்தைப் பார்த்தோம். ஒரே நாள் ஒத்திகை நடந்தது. சதியனுகுயா நடைபெற்ற. ஆறாவது நாள் பர்த்ருஹரி நாடகம் அரங்கேறியது. அப்போது சென்னையில் பர்த்ருஹரி படமும் ஒடிக்கொண்டிருந்ததால் ஊமைப் படத்தைவிட நாடகத்திற்கு அமோகமான வருவாய்’ ஏற்பட்டது. எல்லோரும் பாவலரின் அபாரமான ஆற்றலை வியந்து புகழ்ந்தார்கள்.  தேசீயப் புரட்சி நாடகம் ‘கதரின் வெற்றி’ ஒரு தேசியப்புரட்சி நாடகம். தமிழ்: நாட்டில் முதன் முதலாக நடைபெற்ற தேசீய சமூக நாடகம். அந்த நாடகத்தில் சின்னண்ணாவுக்குக் கதாநாயகி மரகதம்: வேடமும், எனக்கு வக்கீல் வேடமும் கொடுத்தார்கள். சின்னண்ணா கைராட்டையைச் சுற்றிக்கொண்டு பாடும் ஒரு பாடல் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.  சீரான இந்தியாவில் பேர்போன தொழில் களெல்லாம்  செத்துக் கிடக்கும் இந்த சீர்குலைந்த கானவிலே  சேர்ந்த ராட்டின் பெருமை செப்புவேன் கேளருமை  தீருமே நம் வறுமை..."  பாவலரின் இந்தப் பாடலைச் சின்னண்ணா மரகதமாக வந்து பாடும்போது சபையோர் நீண்ட நேரம் கைதட்டிக் கொண்டே யிருப்பார்கள். நாடகத்தில் இரண்டொரு பாத்திரங்களைத் தவிர எல்லோரும் கதராடைகளையே புனைந்து வருவார்கள். நாடகம் முழுதும் கதர் பிரசாரமாகத்தான் இருக்கும்.  பாவலரின் அவதானம் பாவலர் அபாரமான நினைவாற்றலுடையவர். மிகச் சிறந்த முறையில் அவதானம் செய்யக் கூடியவர். ‘சதாவதானம் பாவலர்’ என்றே அவரைக் குறிப்பிடுவார்கள். எட்டுப்பேருடைய கேள்விகளுக்கு விடை சொல்லுபவரை ‘அட்டாவதானி’ என்றும், பத்துப் பேருக்கு விடை சொல்லுபவரைத் ‘தசாவதானி’ என்றும், பதினாறு பேருக்கு விடை சொல்லுபவரைச் ‘சோடசாவதானி’ என்றும், நூறு பேருக்கு விடை சொல்லுபவரைச் ‘சதாவதானி’ என்றும், குறிப்பது வழக்கம். இக்கலையில் தேர்ச்சி பெற்றோர் இப்போது மிகக் குறைந்துவிட்டார்கள். பாவலர் இந்தக்கலையை நன்கு பயின்றிருந்தமையாம் நாங்கள் எல்லோரும் அவரை அவதானம் செய்து காண்பிக்குமாறு வேண்டினோம். சிந்தாதிரிப் பேட்டையிலுள்ள கம்பெனி வீட்டில் ஒருநாள் வேடிக்கையாகத் தசாவதானம் நடைபெற்றது. நான் பாவலரின் முதுகின் பக்கமாக இருந்து உளுந்தம்பருப்பை ஒவ்வொன்முக அவரது முதுகில் எறியும் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். சின்னண்ணா எதிரிலிருந்த கதவைப் பூட்டித் திறக்கும் பணியை ஏற்றுக்கொண்டார். மற்றும் பல நடிகர்கள் பலவிதமான பொறுப்புக்களை ஏற்றார்கள். சுமார் ஒருமணி நேரம் அவதானம் நடைபெற்றது. நான் எத்தனை உளுந்துகள் முதுகில் எறிந்தேன் என்பதையும், சின்னண்ணா எத்தனை முறை பூட்டுத் துவாரத்தில் சாவியைப் புகுத்தினார் என்பதையும், பாவலர் சரியாகச் சொன்னபோது எங்களுக்கெல்லாம் பெரு வியப்பாக இருந்தது. இதைப் படிப்பவர்களில் சிலருக்கு அவதானம் என்றாலே என்னவென்று புரியாதென நினைக்கிறேன். அதை விரிவாக விளக்குவது கடினம். அவதானத்தின் இலக்கணத்தைப் பற்றிச் சரவணப்பெருமாள் கவிராயர் ஒரு பாடலில் குறிப்பிடுகிறார்.அந்தப் பாடலின் ஒரு பகுதியை இங்கே சொல்வது பொருத்தமாக இருக்குமென்று கருதுகிறேன்.  “மாறாமல் வாய்வேலு  மயிலுமென வேசொல்ல, வாசகம்  கைகள் எழுத,  வருகணக் கொருபுறம் தீர, மற்றொரு  புறம் வரைந்திடும் இலக்க மாற” வளைத் திரைக் குட்சிறிது கல்லனி வகுக்கின்ற வன்கணக் கினிது பகர,  மருவு சொக் கட்டானும விளையாட,  மறைவாக வைத்த சதுரங்க மாட ....’  இப்படியே இன்னும் பலவகையான அற்புதச் செயல்களையெல் லாம் நினைவாற்றலோடு செய்ய வேண்டும். அவதானம் செய்வோர் சபைக்குத் தக்கவாறு தம் செயல்களை மாற்றிக் கொள்வதும் உண்டு. இது ஒர் அபூர்வமான கலை, காகர்கோவில் ஆறுமுகம்பிள்ளை தசாவதானம் செய்வதை நான் இருமுறைபார்த் திருக்கிறேன். அபாரமான திறமை, நினைவாற்றல் இவற்றோடு கடவுளின் திருவருளும் இருந்தால்தான் இந்தக் கலையில் வெற்றி பெற முடியும் என்பது என் நம்பிக்கை.  சிந்தாதிரிப்பேட்டையில் கம்பெனி வீட்டோடு இருந்தது எங்கள் தாயாருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் கொஞ்சம் வைதீக மனப்பான்மை உள்ளவர்கள். வேறு தனி வீட்டுக்குப் போக வேண்டுமெனப் பிடிவாதம் செய்தார்கள். வேறு வழியின்றி ஆனைக்கவுணி யருகில் ஒரு ஒட்டுக் குடித்தனத்தில் ஒரு தனிவீடு பார்க்கப்பட்டது. நாங்கள் அந்த அந்த வீட்டில் குடியேறியதும் பாவலரும் கம்பெனி வீட்டை மாற்றிக்கொண்டு ஆனைக் கவுணிக்கே வந்துவிட்டார். எங்களை அதிக தூரத்தில் தங்கவிடக் கூடாதென்பது அவர் எண்ணம்போல் தோன்றியது.  மனோஹரா ஆனைக்கவுணி வீட்டுக்கு வந்ததும் நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் ‘மனோஹரா’ நாடகம் பாடம் கொடுக்கப்பெற்றது. எனக்கு மனேஹரன் பாடமும் சின்னண்ணாவுக்கு வசந்தசேன பாடமும் கொடுத்தார்கள். தொடர்ந்து ஒத்திகை நடைபெற்றது. பாவலர் மிகச்சிறந்த முறையில் எனக்கு நடிப்புப் பயிற்சியளித்தார். அவர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் சென்னை சுகுண விலாச சபையில் சில காலம் நடிகராக இருந்தவர். முதலியாரவர்கள் மனேஹரனாக நடித்தபோது பாவலர் ராஜப்பிரியனாக நடித்திருக்கிறார்.  மனோஹரா ஒத்திகை நடந்துகொண்டிருக்கும் பொழுதே சுவாமிகளின் அபிமன்யு சுந்தரி நாடகம் பாடம் கொடுக்கப் பெற்று அரங்கேறியது. அந்நாடகத்தில் என் நடிப்பைப் பார்த்த பாவலர் என்னைப் பாராட்டி உற்சாகப்படுத்தினார். மனோஹரன் நாடகத்திற்கு மிகப் பெரிய சுவரொட்டிகள் அச்சிட்டு, சென்னை நகரெங்கும் ஒட்டச் செய்தார். பிரமாதமாக விளம்பரங்கள் செய்யப்பட்டன. முதல் நாடகத்திற்கு மனோஹரா நாடகத்தை எழுதிய பம்மல் சம்பந்த முதலியார் அவர்களையே தலைமை தாங்கச் செய்தார். தொடர்ந்து ஒத்திகை நடைபெற்று வந்ததால் நாடகத்தன்று எனக்குத் தொண்டை கட்டிக்கொண்டது. பாவலர் என்னைத் தட்டிக் கொடுத்துப் பயப்படாமல் நடிக்கச் சொன்னார்.  நாங்கள் வேடம் புனைந்து கொண்டிருக்கும்பொழுது பம்மல் சம்பந்த முதலியார் அவர்களையும் அவருடன் கதாநாயகியாக நடிக்கும் திரு. ரங்கவடிவேலு முதலியாரையும் பாவலர் உள்ளே அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார். நாங்கள் பெருமகிழ்ச்சி யடைந்தோம். எனக்கும், அன்று விஜயாளாக வேடம் புனைந்த தருமலிங்கத்திற்கும் ரங்கவடிவேலு முதலியார் பக்கத்தில் நின்று ஒப்பனை செய்வதில் உதவி புரிந்தார். பம்மல் சம்பந்தனார் பாராட்டுரை  1922 அக்டோபர் 7-ஆம் நாள் மனோஹரன் நாடகம் பம்மல் சம்பந்த முதலியார் தலைமையில் சிறப்பாக அரங்கேறியது. மஞேஹரனில் முக்கிய கட்டமான சங்கிலி அறுக்கும் காட்சி முடிந்ததும் பாவலர் ஓடிவந்து, கீழே கிடந்த என்னைத் தூக்கி முத்தமிட்டுப் பாராட்டினார். தலைமை தாங்கிய பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் கீழ்வருமாறு ஆக்கிலத்தில் பேசினார்.  “சீமாட்டிகளே, சீமான்களே! நான் எழுதிய நாடகங்கள் யாவற்றிலும் ‘மனேஹரா’ மிகவும் உயர்ந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்.  இந் நாடகத்தைச் சென்ற இருபத்தைந்து ஆண்டுகளாக எங்கள் சுகுண விலாச சபையில் நானே மனோஹரனாக வேடம் பூண்டு நடித்துவருகிறேன். சிறந்த நடிகர்கள். பலர் மஞேஹரனாக வேடம் தரித்து நடிப்பதையும் நானே நேரில் பார்த்திருக்கிறேன். எனக்கோ வயதாகி விட்டது. முதுமைப் பருவத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன். வீர மனோகரனக நடிப்பதற்குரிய வலிமை குறைந்து வருகிறது. நான் நாடகத் துறையிலிருந்து ஒய்வு பெறும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.  இன்றிரவு மாஸ்டர் டி. கே. ஷண்முகம் மனோகரனாக நடித்ததைப் பார்த்ததும் என்மனதிற்குச் சாந்தியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. நான் வெகுநாட்களாக ஆவலோடு எதிர்ப்பார்த்திருத்த ஓர் உத்தமநடிகர் தோன்றிவிட்டார் என்பதை இந்த இளஞ்சிறுவருடைய நடிப்பு வெளிப் படுத்தியது. கடவுள் இச்சிறியவருக்கு நீண்ட ஆயுளையும் நாடகக் கலைத்துறையிலும் மேன்மலும் வளர்ச்சியையும் சிறப்பையும் தருவாராக.”  நாடகப் பேராசிரியர் பேசியதை யெல்லாம் பாவலர் தமிழில் மொழி பெயர்த்து எனக்குச்சொன்னார். முதலியார் அவர்கள்பேசி முடித்து உள்ளே வந்ததும்நான் அவரது பாதங்களில்பணிந்தேன். பேராசிரியர் என்னை மகிழ்வோடு கட்டிக்கொண்டு உச்சிமோந்து வாழ்த்தினார்.  போட்டாப் போட்டி அப்போது ஒற்றைவாடைத்தியேட்டரில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் பாவலர் கம்பெனியில் ‘அதிரூப அமராவதி’ நாடகம் நடத்தி முடித்து விட்டு நாங்கள் எல்லோரும் ஒரிஜனல் பாய்ஸ் கம்பெனியின் சதியனுசூயா நாடகம் பார்க்கச்சென்றோம். செவ்வாய், வியாழக் கிழமைகளில் நடைபெறும் நாடகங்களைப் பாவலர் நடிகர்களின் விருப்பத்திற்கே விட்டுவிடுவார். சில நாட்களில் நாடகம் மிக விரைவில் முடிந்துவிடும். ‘சரச சல்லாப உல்லாச மனேரஞ்சனி’ என்று ஒரு நாடகம் நடந்தது. அதில் நான் மனோரஞ்சனியாக நடித்தேன். நடிகர்களே திட்டமிட்டு நடத்தும் இந்த நாடகங்களுக்குப் பெரும்பாலும் நல்ல வசூலானதில்லை.  நாங்கள் மனோகரா நாடகம் போட்ட அன்று ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியிலும் மனோகரா நடைபெற்றது. அப்போது அங்கு மனோஹரனாக நடித்தவர் எம். ஜி. தண்டபாணி. அவர் 1920ல் சுவாமிகள் கம்பெனியில் எங்களோடு இருந்தவர். அவருக்கு என்னைவிட நாலைந்துவயது அதிகமிருக்கலாம். ‘வெங்கலத்வனி’ எம். ஜி. தண்டபாணி- பால மனோகரன்’ என்று ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனுயார் விளம்பரம் செய்தார்கள். உடனே பாவலர், யார் பால மனோகரன்? பால மனோகரா சபா எது?” என்ற கேள்வியுடன் ஒரு விளம்பர அறிக்கை விட்டார் அதில், “பால மனோகர சபாவின் நிகரற்ற பால மனோகரன் மாஸ்டர் டி. கே. ஷண்முகம்” எனக் குறிப்பிட்டார். இரு கம்பெனியாருக்கும் விளம்பர அறிக்கைகளிலேயே விவாதம் நடந்தது. மனோகரா போட்டாப் போட்டி நாடகமாக விளங்கியது. மறுவாரம் நடை பெற்ற மனோஹரா நாடகத்தில் பம்மல் சம்பந்தமுதலியார் எனக்கு ஒரு தங்கப்பதக்கம் பரிசளித்தார். இந்து, சுதேசமித்திரன் இரு பத்திரிகைகளிலும் ‘தங்கப் பதக்கம் பரிசளிப்பு’ என்ற தலைப்பில் இச்செய்தி பிரமாதமாக வெளியிடப் பெற்றது. நாங்கள் பெருமகிழ்ச்சியில் திளைத்திருந்தோம்.  சுவாமிகளின் நிலை நாங்கள் சைதாப்பேட்டையிலிருந்து இரவோடிரவாகச் சென்னைக்கு வந்த மறுநாள், செய்தி எல்லோருக்கும் தெரிந்து விட்டது. இரண்டு நாட்கள் நாடகம் நடைபெறவில்லை. தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை தள்ளாடியது. பிறகு வேறு யார் யாரையோ எங்களுக்குப் பதிலாக போட்டு நாடகத்தை தொடர்ந்து நடத்தினார்கள். வசூல் மிகவும் மோசமாகப் போய் விட்டது. கம்பெனியின் நிலையைக் கண்ட மற்றுஞ் சில நடிகர்கள் கம்பெனியிலிருந்து விலகிக் கொண்டார்கள். உரிமையாளர்களில் ஒருவரான சின்னையாபிள்ளை பணம் கொண்டுவருவதாகச் சொல்லி மதுரைக்குப் போப்விட்டார். பழனியாபிள்ளை எப்படியோ சமாளித்து ஆசிரியர் கே. ஜி. குப்புசாமிநாயுடுவின் உதவியால் கம்பெனியைச் சைதாபேட்டையிலிருந்து பூவிருந்தவல்லிக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தார். பூவிருந்தவல்லியில் நாடகம் நடத்தினார்கள். அங்கும் வசூல் இல்லை. நிலைமை மிகவும் நெருக்கடியாய்விட்டது. அன்றாடச் சாப்பாட்டுக்குக்கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டார்கள். எதிர்பாராத இச் சிரமங்களால் சுவாமிகளின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. அவரைக் கவனிப்பதிலும் அசிரத்தை ஏற்பட்டது. அவ்வப்போது சுவாமிகளைக் காண வந்த பெரியவர்கள் சிலரிடம் அவர் தமது கைகளால் சாடைகாட்டி, இரண்டு பையன்கள் இருந்தார்கள்; அவர்கள் ஓடிப்போய் விட்டார்கள்; அதனால் வசூல் இல்லை, கஷ்டப்படுகிறேன்” என்று மனம் நொந்ததாக அறிந்தோம்.  அன்னையின் வெற்றி ஆனைக்கவுணிக்கு வீடு மாறி வத்தபின் குப்புசாமி நாயுடுவின் மனைவியார் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வரத்தொடங்கினார்கள். அவர்கள் மூலம் இச்செய்திகளையெல்லாம் அறிந்தோம். சுவாமிகளின் நிலையைத் தெரிந்ததும் எங்கள் தாயார் மிகவும் வேதனைப்பட்டார்கள். எண்ணத்தை வாய்விட்டுச் சொல்ல முடியாத நிலையில் சுவாமிகளின் மனம் எவ்வளவு வேதனை யடையும் என்பதை எண்ணி யெண்ணி உருகினார்கள். ஒருநாள் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இதுபற்றிப் பலத்த விவாதம் நடந்தது. பாவலர் கம்பெனியில் நாங்கள் பெரும் புகழுடன் சீரும் சிறப்புமாக இருந்து வருவதை அப்பா எடுத்துக் கூறினார். மீண்டும் பழைய கம்பெனிக்குப் போய்ச் சிரமப்பட வேண்டுமா?’ என்று கேட்டார். அப்பாவின் எந்தச் சமாதானமும் அம்மாவைத் திருப்திப் படுத்தவில்லை. “என் குழந்தை களுக்குக் குரு சாபம் பிடித்துவிடும், பொருள் புகழ் இல்லாது போனாலும் குழந்தைகளுக்கு எதுவும் நேராதிருக்க வேண்டும். உடனே எப்படியாவது சுவாமிகள் கம்பெனிக்கே போய்விட வேண்டும்’ என்று சொல்லி, அம்மா அழ ஆரம்பித்து விட்டார்கள். அப்பாவின் எண்ணமும் மாறியது. தாய்மை யுணர்ச்சி. வெற்றிபெற்றது. நாயுடுவின் மனைவியாரிடம் மீண்டும் கம்பெனிக்கு வந்துவிடுவதாகத் தகவல் சொல்லியனுப்பினார் தந்தையார். குப்புசாமி நாயுடு பெரு முயற்சி செய்து பூவிருந்த வல்லியிலிருந்து கம்பெனியைத் தம் சொந்த ஊராகிய பாண்டிச்சேரிக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தார். எங்கள் வருகையை எதிர்பார்த்துக் கொண்டு கம்பெனியார் காத்திருந்தார்கள்.  அப்பா எங்களையும் அழைத்துக் கொண்டு திருவனந்தபுரம் போய் வர வேண்டுமென்று பாவலரிடம் விடுமுறை கேட்டார். அத்தோடு சுவாமிகள் மிகவும் அபாயமான நிலையில் இருப்பதால் அவரையும் பார்த்து வரவேண்டுமெனக் கூறினார். கம்பெனியில் புகழும் பொருளும் ஓங்கி உச்ச நிலையடைந்திருக்கும் அந்த நேரத்தில், நாங்கள் போகக் கூடாதென்று பாவலர் கண்டிப்பாக மறுத்துவிட்டார். முன் பணமாகக் கொடுத்த 250 ரூபாய்களைக் கழித்துக் கொள்ளாமலேயே மாதச் சம்பளத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வந்தார். ஜனவரி மாதம் முடிந்தபின் விடுமுறை அளிப்பதாயும் அப்போது ஊருக்குப் போய் வரலாமென்றும், மேலும் பணம் தேவைப்பட்டால் கொடுப்பதாகவும் கூறி விட்டார். அப்பாவின் நிலை தருமசங்கடமாகி விட்டது.  பாவலர் கம்பெனி நடிகர்கள் பாவலர் கம்பெனியில் அப்போது இருந்த சில முக்கிய நடிகர்களைப்பற்றி இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.  கதாநாயகர்கள் இரண்டுபேர் இருந்தார்கள். ஒருவர் ஏ. என். ராஜன், மற்றொருவர் டி. எம். மருதப்பா. இவ்விருவரும் இரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்கள். ஏ. என். ராஜன் அருமையாகப் பாடக் கூடியவர். டி. எம். மருதப்பா திறமையாக நடிக்கக் கூடியவர். பர்த்ருஹரி நாடகத்தில் ஏ. என் ராஜன் பர்த்ருஹரியாக நடிப்பார். மனோகரன் நாடகத்தில் டி. எம். மருதப்பா புருஷோத்தமனக நடிப்பார். கதரின் வெற்றி யில் கதாநாயகன் சுந்தரம் வேடத்தை இருவரும் திறம்பட நடிப்பார்கள்.  தருமலிங்கம் என்ற ஒருவர் இருந்தார். அவருக்கு என்னுடைய வயதுதான் இருக்கும். அபிமன்யு சுந்தரியில் சுந்தரி யாகவும், மனோஹரனில் விஜயாளாகவும் அற்புதமாக நடிப்பார். நல்ல இசை ஞானமுடையவர். இனிமையான குரல். அருமையாகப் பாடுவார். சில ஆண்டுகளுக்குப் பின் நாங்கள் சொந்தக் கம்பெனி நடத்திய பொழுது, தருமலிங்கம் எங்கள் கம்பெனியிலும் சில காலம் இருந்திருக்கிறார்.  நொண்டிக்கை சுவாமிநாதன் சுவாமிநாதன் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர். அவரை ‘நொண்டிக் கை சுவாமிநாதன்’ என்றுதான் எல்லோரும் குறிப்பிடுவார்கள். அவருடைய கைகளில் ஒன்று கொஞ்சம் ஊனமா யிருந்தது. இவருடைய உடன் பிறந்த தமையனார் திரு பக்கிரி சாமிப் பிள்ளை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில்சிறந்த நகைச் சுவை நடிகராக விளங்கினார். சகோதரர்கள் இருவரில் ஒருவர் பாய்ஸ் கம்பெனியிலும், மற்றொருவர் பாவலர் கம்பெனியிலுமாக இருந்தது, அப்போது எங்களுக்குப் புதுமையாகத் தோன்றியது. நொண்டிக் கை சுவாமிநாதன் மேடைக்கு வந்தவுடனேயே சபையோர் சிரித்து விடுவார்கள். அவர் செய்வதெல்லாம் கொனஷ்டையாகவே இருக்கும். கதரின் வெற்றியில் இன்ஸ் பெக்டராக வந்து அவர் செய்யும் அட்டகாசங்களே இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.  ஒரு நாள், கதரின் வெற்றி நீதிமன்றக் காட்சியில் நொண்டிக்கை சுவாமிநாதன் இன்ஸ்பெக்டராக வந்து வாக்கு மூலம் கொடுத்தார். நான் கோடம்பாக்கத்தில் என்று அவர் பேசத் தொடங்கியதும், மூக்கில் சொருகியிருந்க கம்பிமீசை கீழே விழுந்துவிட்டது. வக்கீலாக நின்ற எனக்குச் சிரிப்புத் தாங்க வில்லை, சபையோர் கைதட்டிச் சிரித்தார்கள். அதற்காக அவர் ஒன்றும் பதற்றமடைய வில்லை. இன்ஸ்பெக்டர் எவ்வித பரப் பரப்பும் இல்லாமல் சாவாசமாகக் குனிந்தார். கீழேகிடந்த மீசையை எடுத்தார். கைக்குட்டையால் அதைத் தட்டினார். மீண்டும் மூக்கில் சொருகிக் கொண்டு பேசத் தொடங்கினார். வேறு எவ்வித உணர்ச்சியையும் அவர் காட்டாமல் அமைதியாக இதைச் செய்ததால் சபையோரின் சிரிப்பு அடங்க வெகு நேர மாயிற்று. மனோகரன் நாடகத்தில் வசந்தனாக அவர் நடிப்பார். “கல்லாசனத்தின் கீழே உட்கார்ந்து, முதுகு வளைந்து போய் விட்டது” என்று வசந்தன் சொல்லும்போது உண்மையாகவே முதுகு வளைந்து போனதுபோல் நடித்துக் காட்டுவார். அவர் உடம்பு, சொல்லுகிறபடி யெல்லாம் வளையும்.  பாயாசமும் பார்த்த சாரதியும் துரைக்கண்ணு என்று மற்றொரு இளம் ஹாஸ்ய நடிகர் இருந்தார். அவர் கதரின் வெற்றியில் வேலையாளாக நடிப்பார். அவரைப் ‘பாயாசம்’ என்றே சபையோர் குறிப்பிடுவார்கள். பாயாசப் பைத்தியம் பிடித்த வேலைக்காரனாக அவர் நடிப்பதை மக்கள் பெருமகிழ்வோடு பாராட்டுவார்கள் எந்த நாடகத்தில், என்ன வேடத்தில், அவர் வந்தாலும் ஜனங்களில் சிலர் ‘பாயாசம், பாயாசம்’ என்று அவருக்குப் பட்டம் சூட்டிக் கூப்பிடுவது வழக்கம்.  மற்றொரு நடிகர் பார்த்தசாரதி. இவர் பெண் வேடம் பூண்டு நடிப்பவர். பெரும்பாலும் சோகச் சுவைப் பாத்திரங்களிலே தோன்றித் திறமையாக நடிக்கக் கூடியவர்.மனோஹரனில் பத்மாவதியாக நடிப்பார். பார்த்தசாரதி பிற்காலத்தில் பல அரசியல் கட்சிகளிலும் பத்திரிக்கைத் துறையிலும் இருந்தபோது பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இப்போது இவர் திராவிட முன் னேற்றக்கழகத்தில் இருந்து வருகிறார்.  பாவலரின் சந்தேகம் தந்தையார் விடுமுறைக் கேட்டது முதல் பாவலருக்கு எங்கள் மேல் சந்தேகம் உண்டாகிவிட்டது. எங்களோடு ஒட்டுக் குடித்தனத்திலிருந்த சிலரிடம் நாங்கள் திடீரென்று எங்காவது புறப்பட்டால் உடனே தகவல் கொடுக்கும்படியாக ரகசியமாகச் சொல்லிவைத்தார். இது தந்தையாருக்குத் தெரிந்துவிட்டது. அந்த வீடு வசதியில்லையென்றும் வேறு வீடு பார்க்கவேண்டு மென்றும் தந்தையார் எல்லோருடைய காதிலும் விழும்படியாக அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு வாரத்திற்குப் பின் செங்காங்கடைப் பக்கம் ஏதோ வீடு கிடைத்து விட்டதாகச் சொன்னார். நாங்கள் நாடகத்திற்குப் போனபின் பெரியண்ணா அம்மாவையும் அழைத்துக்கொண்டு புது வீட்டுக்குப் போய்விட வேண்டுமென்றும், தாம் நாடகம் முடிந்து நேரே புது வீட்டுக்கு வந்துவிடுவதாகவும் சந்தேகப்படாத முறையில் சொல்லிவிட்டுத் தந்தையார், எங்களையும் அழைத்துக் கொண்டு ராயல் தியேட்டருக்கு வந்தார்.  பாண்டிக்கு ஒடினோம் 1922 அக்டோபர் 15ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை. அன்று ‘அபிமன்யு சுந்தரி’ மாலை நாடகம். சர் சி. பி. இராமசாமி ஜயர் தலைமை தாங்கினார். அவர் அப்போது கவர்னரின் நிருவாக சபையில் முதல் மெம்பராக இருந்தார். சர் சி. பி. நாடகத்தைப் பாராட்டிப் பேசினார். பாவலர், சி. பி. கையால் எனக்கு ஒரு தங்கப் பதக்கம் பரிசளிக்கச் செய்தார். நாடகம் சிறப்பாக நடந்து முடிந்தது. தந்தையாரின் முன்னேற்பாட்டின்படி பெரியண்ணா அம்மாவுடன் சூளையிலுள்ள கே. ஜி. குப்புசாமி நாயிடுவின் நண்பர் ஒருவர் வீட்டிற்குச் சென்று விட்டார். நாடகம் முடிந்ததும் நாங்கள் நேராகச் சூளை வீட்டிற்குச் வந்து சேர்ந்தோம். இரவு உணவுக்குப்பின் எல்லோரும் காரில் சைதாப்பேட்டைக்கு வந்து, அங்கிருந்து ரயிலேறி மறுநாள் காலை பாண்டிச்சேரியை அடைந்தோம்.  சுவாமிகளைக் கண்டோம் மறுநாள் காலை கம்பெனி வீட்டிற்குச் சென்று சுவாமிகளைக் கண்டோம். கீழே விழுந்து வணங்கினோம். சுவாமிகளின் கண்கள் கலங்கின. சிறிது நேரம் அமைதியாக நின்றோம். எங்களுக்கும் அழுகை வந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டோம். சுவாமிகள் ஏதேதோ சொல்ல விரும்பினார். வாய் பேச இயலாத நிலையில் அவரது கண்கள்தாம், எண்ணங்களை வெளிப்படுத்தின. நீண்ட நேரத்திற்குப் பின் சுவாமிகள் புன்முறுவல் செய்தார்.  இரண்டு நாட்களில் பாண்டிச்சேரியில் நாடகம் தொடங்கியது. வருவாயும் சுமாராக இருந்தது. விளக்கு அணையும்போது ஒளி விடுவது இயற்கையல்லவா? அதைப்போலச் சுவாமிகளுக்கு ஒரு நாள் திடீரென்று, பக்கவாதத்தினால் முடக்கப்பட்டிருந்த காலும் கையும், நிமிர்ந்து நின்றன. ஒரு சில நிமிடங்கள்தான். மீண்டும் பழைய நிலையையே அடைந்தார். இறுதி நாட்களில் சுவாமிகள் பட்ட கஷ்டத்தை எடுத்துச் சொல்வதே கடினம். எல்லாம் படுக்கையிலேதாம் நடைபெற்றன. கோட்டயம் கோபாலபிள்ளையும், பாண்டிச்சேரி குப்புசாமியும் ஒரு குழந்தையைக் காத்துப் பராமரிப்பது போல் சுவாமிகளுக்கு அன்புடன் பணிவிடை செய்து வந்தார்கள். அவ்விரு பணியாளர்களின் உண்மையான சேவையை எல்லோரும் புகழ்ந்தார்கள்.  பருவுடல் மறைந்தது 1922 நவம்பர் 13 ஆம் நாள், சுவாமிகளின் நிலை நெருக்கடி யாய் விட்டது. எல்லோரும் பதறினார்கள். அன்று திங்கட்கிழமை. சுவாமிகளுக்கு மிகவும் பிடித்தமான புனித நாள். வழக்கம் போல் பஜனை நடைபெற்றது. இரவு 11 மணிக்கு, சுவாமிகளின் ஆவி அமைதியாகப் பிரிந்தது.  தமிழ் நாடகத்தாய் பெறற்கரிய புதல்வனை இழந்தாள்; தமிழ் நடிகர்கள் தங்கள் தந்தைக்கொப்பான பேராசிரியரை இழந்தனர்; கலையுலகம் ஓர் ஒப்பற்ற மாமேதையை இழந்து கண்ணிர் வடித்தது.  தமிழ் நாடக உலகின் தலைமையாசிரியராகவும், நாடக ஆசிரியர்களுக்கெல்லாம் பேராசிரியராகவும் விளங்கிய தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் தமது பருவுடலை விட்டுப் புகழுடம்பை யடைந்தார். 1867ஆம் ஆண்டில் தூத்துக்குடியிலே பிறந்த அப் பெருமகனார், 1922-இல் பாண்டிச்சேரியிலே சமாதியடைந்தார்.  மறுநாள் காலை சுவாமிகளின் சடலத்துடன் புகைப்படம் எடுக்கப் பெற்றது. குழுவினரோடு எடுத்த படத்தில் தம்பி பகவதி நிற்கப் பயந்து மறுத்து விட்டான். அப்போது பகவதிக்கு நான்கு வயதிருக்கும். பிறகு பூஜைக்குரிய முறையில் சுவாமிகளைத் தனியாக எடுத்தார்கள். அப்போது திடீரென்று பகவதிக்குத் தைரியம் வந்து விட்டது. “நானும் படத்தில் நிற்கிறேன்” என்றான். புகைப்படக்காரர் “ஒரே ‘நெகட்டிவ்’ தானிருக்கிறது” என்றார். தம்பி அழ ஆரம்பித்தான். பிறகு அவனைச் சமாதானப் படுத்திக் கையில் மலர்களைக் கொடுத்து, சடலத்தின் பக்கத்தில் நிற்கச் செய்து படமெடுத்தார்கள்.  புலவர்களின் கண்ணிர் சுவாமிகள் மறைந்த செய்தி நாடெங்கும் அறிவிக்கப் பட்டது. தமிழ் நாட்டில் அப்போது வாழ்ந்த நாடகப் புலவர்களெல்லாம் இரங்கற் பாக்கள் பாடி அனுப்பியிருந்தார்கள். சுவாமிகளோடு நெருங்கிய தோழமை கொண்டவர் உடுமலை சக்தச் சரபம் முத்துச்சாமிக் கவிராயர். அவர் சுவாமிகளோடு சக மாணவராகப் பழனி தண்டபாணி சுவாமிகளிடம் பாடம் கேட்டவர். கவிராயர் அவர்கள் அனுப்பியிருந்த இரங்கற் பாக்கள், மனத்தை உருக்குவதாக அமைந்திருந்தன. ஒரு பாட்டை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.  "சுந்தரராவ் முதலாகத் துலங்கணக்தன்     வரைவகுத்துச் சொல்லுங் காலை  எந்தகா டகத்லைவர் நீயின்றி     நடனவரங் கேறி நின்றார்?  அந்தமார்க கண்டனுக்கன் றரனளித்த     வரமுனக்கிண் டருமை யாச்சோ?  சந்தமார் சங்கரதாஸ் சாமிநினை     யாங்காணும் தருண மென்றே!"  பாவலர் நோட்டிஸ் பாவலர் கம்பெனியில் நாங்கள் இரண்டரை மாதங்களே இருந்தோம். ஆனால் அந்தக் குறுகிய காலத்தில் நடிப்புத் துறையில் நாங்கள் பெற்ற பயிற்சி மிகச் சிறப்பானது. அப் பயிற்சி நாடகத் துறையில் முன்னேறுவதற்கு எங்களுக்குப் பெருந்துணையாக இருந்தது என்பதை மகிழ்வோடு குறிப்பிட வேண்டியது என் கடமை.   பாவலர் கம்பெனியிலிருந்து நாங்கள் வந்த பின் அவர் ஏதேதோ முயற்சிகள் செய்தார். எங்கள்மீது குற்றம் சாட்டி நோட்டீஸ் விட்டார். தந்தையாரும் ஒருவக்கீலைக் கலந்து பதில் நோட்டீஸ் கொடுத்தார். சில நாட்கள் இவ்வாறு நோட்டீஸ்களிலேயே வாதம் நடந்தது. கடைசியில் பாவலர் தமது முயற்சியைக் கைவிட்டார்.  சுவாமிகள் மறைவோடு வசூலும் குறைந்து போனதால் சில ஸ்பெஷல் நாடகங்களை நடத்தத் திட்டமிட்டார்கள். பாலாமணி அம்மாள் குழுவினரைக் கொண்டு டம்பாச்சாரி நாடகம் போடச் செய்தார்கள். இக்குழுவினர் அனைவரும் சுவாமிகளிடம் பாசமும் பக்தியும் கொண்டவர்கள்.  அப்போது பாலாமணி அம்மாள் மிகவும் வயதுமுதிர்ந்தவர். அவர்தாம் குழுவின் உரிமையாளர். எனக்கு முதன் முதலாகப் பவுடர் பூசிவிட்ட சி. எஸ். சாமண்ணா ஐயர், குழுவின் மானேஜராக இருந்தார். இந்தக் குழுவில் அதிகமான பெண்கள் இருந்தார்கள். ‘டம்பாச்சாரி’ நாடகம் போடுவதில் இந்தச் சபையார் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தார்கள். பாலாமணி அம்மையார் இளமைப் பருவத்தில் மிகச் சிறந்து விளங்கினராம். கும்பகோணத்தில் பாலாமணி அம்மையார் கதாநாயகியாகவும் பாலாம்பாள் அம்மையார் கதாநாயகனாகவும் நடித்து வந்த காலத்தில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணத்திற்கு, ‘பாலாமணி ஸ்பெஷல்’ என்ற பெயரால் ஒரு ரயிலே விடப்பட்டதாம், பாலாமணிச் சாந்து, பாலாமணிப் புடவை என்றெல்லாம் வியாபாரிகள் விளம்பரப்படுத்துவார்களாம். இவற்றையெல்லாம் என் தந்தையார் மூலம் அறிந்தேன்.  டம்பாச்சாரி உதவி பாலாமணி அம்மையாரே டம்பாச்சாரியாக நடித்தார். கதாநாயகி மதனசுந்தரியாக வடிவாம்பாள் நடித்தார். சி. எஸ். சாமண்ணா ஐயர் முதலிலிருந்து முடிவு வரை மொத்தம் பதினொரு வேடங்களில் தோன்றினார். அற்புதமாக நடித்தார். அவரை ‘இந்தியன் சார்லி சாப்ளின்’ என்றே அக்காலத்தில் குறிப்பிட்டார்கள். இந்தப் பட்டம் அப்போது சென்னை கவர்னராக இருந்த லார்டு வெல்லிங்டன் அவர்களால் இவருக்கு வழங்கப் பட்டது. பதினொரு வேடங்கள் என்று குறிப்பிட்டேனல்லவா? ஒப்பனை முறைகளெல்லாம் நன்கு வளர்ச்சி பெறாத அந்த நாளில் சாமண்ணா ஐயர் பல்வேறுபட்ட குணங்களையுடைய இந்தப் பாத்திரங்களைத் தாங்கி நடித்ததுதான் மிகவும் வியப்புக்குரியது. பாத்திரங்களின் பெயர்களைக் கேட்டால் நீங்களே வியப்படைவீர்கள். நாவிதர், தவசிப்பிள்ளை, டாபர் மாமா, எஞ்சினியர், தமிழ்ப்புலவர், கோமுட்டி செட்டியார், ஷேக்மீரா லெப்பைடு அமீனா, வக்கில், அப்பர்சாமிகள், சட்டிப்பரதேசி ஆகிய இவ் வேடங்கள் அனைத்தையும் புனைந்து அந்தந்தப் பாத்திரங்களுக்கு ஏற்றவாறு அவர் பேசி நடிப்பது பிரமிக்கத் தக்கதாக இருக்கும். தமிழ், தெழுங்கு, ஆங்கிலம், கன்னடம், மலையாளம் முதலிய பல்வேறு மொழிகளைச் சரளமாகப் பேசத் தெரிந்தவர் அவர். சாமண்ணா ஐயரின் இந்த அபாரமான திறமையை எல்லோரும் பாராட்டினார்கள்.  டம்பாச்சாரி நாடகம், தமிழகத்தில் தன் முதலாக நடிக்கப் பெற்ற சமுதாய நாடகம். இந்த நாடகத்தின் கதை உண்மையாகவே நடந்த ஒரு செல்வச்சீமானின் கதை. தாசியின் மையலில் சிக்கிச் சீரழிந்த ஒருவரின் வரலாறு. இதைப் போன்ற கதைகள் மக்களின் உள்ளத்தில் இன்றுவரை நீங்காது இடம் பெற்றிருப்பதை நாம் பார்க்கிறோம், கடம்பாச்சாரி முதல் “இரத்தக் கண்ணிர்” வரை எத்தனையோ நாடகங்கள் இந்த அடிப்படையிலே எழுதி நடிக்கப்பட்டு வந்திருக்கின்றன.  டம்பாச்சாரி நாடகத்திற்கு நல்ல வசூலாயிற்று. அந்த உதவியுடன் எங்கள் நாடக சபை திருப்பாதிரிப்புலியூருக்கு வந்து சேர்ந்தது. சுவாமிகள் காலமானபோது வந்திருந்தவர்களில் முதலாளி சின்னைய்யாபிள்ளை மீண்டும் மதுரைக்குப் போய் விட்டார். கருப்பையாபிள்ளையும், காமேஸ்வர ஐயரும் கம்பெனியிலே மீண்டும் இடம் பெற்றார்கள். பழனியாபிள்ளையின் உதவியுடன் அவர்களே கம்பெனியை நடத்தி வந்தார்கள். வசூலும் சுமாராக ஆயிற்று. கம்பெனியிலிருந்து விலகிய பல நடிகர்கள் மீண்டும் வந்து சேர்ந்தார்கள். மனோகரா நாடகம் நடத்தினோம். புதிய நாடகமாதலால் பிரமாதமான வரவேற்புக் கிடைத்தது.  மனோஹரன் நாடகத்தில் திருப்பாதிரிப்புலியூரில் ஒருநாள் மனோஹரன் நாடகம் நடந்து கொண்டிருந்தது. மனோஹரனில் முக்கியமான காட்சி; சங்கிலிகளால் கட்டப்பெற்று ஆவேசங் கொண்ட நிலையில் நிற்கிறான் மனோகரன். “என் மைந்தனா நீ?” என்கிறார் தந்தை புருஷோத்தமர். உடனே மனோஹரன், “என்ன சொன்னீர்?” என்று ஆக்ரோஷத்தோடு சங்கிலிகளை அறுத்துக் கொண்டு எதிரே நிற்கும் காவலனின் வாளை உருவி, தந்தையைக்கொல்லப் பாய்கிறான்.  புருஷோத்தமன் பேச்சு முடிந்தது. மனோஹரனாக நின்ற நான். “ஆ, என்னசொன்னீர்?” என்று கர்ஜித்தபடி சங்கிவிகளைப் பிணைத்திருந்த சுருக்குக் கயிற்றை இழுத்தெறிந்து விட்டு அதாவது சங்கிலிகளை அறுத்தெறிந்து விட்டு, எதிரே நின்ற காவலனின் உடைவாளை உருவிக்கொண்டு, சிம்மாதனத்தில் வசந்த சேனையுடன் வீற்றிருந்த புருஷோத்தமரை நோக்கிப்பாய்ந்தேன்.  பரிதாப நிலை சபையில் ஒரே சிரிப்பொலி, எவ்வளவு ரசனைக் குறைவான சபையாயிருந்தாலும் சிரிக்கக் கூடிய கட்டமல்ல அது. எதிரே சிம்மாசனத்தில் வீற்றிருந்த புருஷோத்தமர் உதடுகளிலும் புன்னகை தவழ்ந்தது.வசந்தசேனை வேடத்திலிருந்த சின்னண்ணாவும் சிரிப்பை அடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். ஒரு விடிை எனகொன்றும் புரியவில்லை ...பிறகு, உண்மையை உணர்ந்தேன். என் உயிரே போய்விடும்போல் இருந்தது வீர தீர மனோஹரனுடைய அப்போதைய நிலைமை மிகப் பரிதாபகரமானது... . . ... விஷயம் என்ன தெரியுமா? காவலனிட மிருந்து நான் உடைவாளை உருவியபோது, என் கையோடு வந்தது, கத்தியின் கைப்பிடி மட்டும்தான். கத்தி, பிடியிலிருந்து விடுபட்டு வெளியே வராமல் காவலனின் உறைக்குள்ளேயே தங்கி விட்டது. எனக்கிருந்த உணர்ச்சி வேகத்தில் நான் இதைக் கவனிக்கவில்லை. வெறும் கைப்பிடியோடு நின்ற மனோகரனின் நிலையைக் கண்டு யார்தான் சிரிக்கமாட்டார்கள்?  எனது நடிக நண்பர்களுக்கு இதைப் போன்ற பரிதாப நிலை ஏற்படாதிருக்குமாக! எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதற்காகவே இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டேன்.  அப்பாவுக்கு நோய் அதிகப்பட்டது திருப்பாதிரிப்புலியூரிலிருந்து சில சிற்றுரர்களுக்குச் சென்று சிதம்பரம் வந்து சேர்ந்தோம். அப்போது அண்ணாமலைப் பல்கலை கழகமும், அண்ணாமலை நகரும் இல்லாத காலம். சிதம்பரத்தில் ஒடுகள் வேய்ந்த ஒருகொட்டகையில் நாடகங்கள் நடைபெற்றன. நல்ல வசூலாயிற்று. தம்பி பகவதி, தொடக்கப் பள்ளியில், சேர்க்கப்பட்டான். காஞ்சீபுரத்தில் தந்தையாருக்குக் காலில் விஷக்கல் குத்தி நோய் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டேனல்லவா? அந்த நோய் மீண்டும் தலைகாட்டத் தொடங்கியது. அடிக்கடி உடல் நலமில்லாமல் சிரமப்பட்டார். திடீரென்று ஒருநாள் மயக்கம் வந்துவிட்டது. தமக்கு இறுதி நாள் நெருங்கிவிட்ட தென்ற எண்ணம் அவரது உள்ளத்தில் தோன்றி விட்டது. குடும்பத்தோடு, பிறந்த ஊருக்குப் போகவேண்டுமென முதலாளிகளிடம் பிடிவாதம் செய்தார். எங்களை மட்டும் விட்டுப் போகும்படி உரிமையாளர்கள் ஏதேதோ சொன்னார்கள். அப்பா ஒப்பவில்லை.  “தான் திடீரென்று இறந்துபோக நேரலாம். பிறந்த ஊரில் சுற்றத்தார் முன்னிலையில் இறக்க விரும்புகிறேன். பல ஆண்டுகளுக்குப் பின் ஊருக்குப் போவதால் பிள்ளைகளையும் அவசியம் அழைத்துப் போகவேண்டும். ஒரு வாரத்தில் அவர்களை அனுப்பி விடுகிறேன். நான் சில மாதங்கள் தங்கியிருந்து உடல் நிலை சுகமடையுமானால் வருகிறேன்” என்று கூறினார். வேறு வழியின்றி முதலாளிகளும் இசைந்தார்கள். தூரப் பயணமாதலால் துணைக்காகக் கோட்டயம் திரு கோபாலபிள்ளையையும் அழைத்துக் கொண்டு, எல்லோரும் குடும்பத்துடன் பிறந்த ஊராகிய திருவனந்தபுரத்திற்குப் பயணமானோம்.  பிறந்த நகரம் திருவனந்தபுரத்திற்குப் போகிறோம் என்பதில் எங்களுக்கெல்லாம் பெரு மகிழ்ச்சி. நானும், என் தமையன்மார்கள் இருவரும் திருவனந்தபுரத்தில்தான் பிறந்தோம். சின்னஞ் சிறு வயதில் நான் தவழ்ந்து விளையாடிய இடம். திருவனந்தபுரத்தில் இப்போது இருக்கும் பெரிய ரயில் நிலையம் அப்போது இல்லை. கடற்புரத்திற்கு அருகில் ஒரு சின்ன ரயில் நிலையம் இருந்தது. அதில் தான் இறங்கினோம். குதிரை வண்டிகள் பெட்டி வண்டிகளைப் போல் அழகாக இருந்தன. எனக்கு நினைவு தெரிந்தபின் நான், பிறந்த ஊரையே பார்த்ததில்லை. காணும் காட்சியெல்லாம் புதுமையாக இருந்தது. எல்லோரும் இரண்டு வண்டிகளில் ஏறியதும் ‘புத்தன் சந்தை’ என்ற இடத்திற்கு வண்டியை விடச் சொன்னார் தந்தையார்.  ஆம், புத்தன் சந்தையில்தான் எங்கள் உறவினார்கள் அதிகமாக இருந்தார்கள். நாங்கள் பிறந்த இடமும் அதுதான். தந்தையார் தம் தம்பிக்குக் கடிதம் எதுவும் எழுதாமல் திடீரென்று புறப்பட்டதால், அவர் தங்கியிருந்த இடம் தெரியாமல் தேடினார். கடைசியில் எப்படியோ ஒருவகையாக எங்கள் சிற்றப்பா செல்லம்பிள்ளை, தம் மனைவியுடன் குடியிருந்த வீட்டைக் கண்டு பிடித்தோம். சிற்றப்பா சர்க்காரில் ஏதோ ஒரு ‘பியூன்’ வேலையில் இருந்தார்.அடிக்கடி வெளியூர் போகவேண்டிய வேலை. நாங்கள் போன சமயம சிற்றப்பா வெளியூர் போயிருந்தார். அவர் அப்போதுதான் புதிதாகத் திருமணம் செய்திருந்தார். அக்கம் பக்கத்திலுள்ள உறவினார்கள் சித்தியை அம்மாவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள். சிற்றப்பா மிகுந்த வறுமை நிலையிலிருந்தார். அவர் குடியிருந்த வீடும் எல்லோரும் தங்குவதற்கு வசதியாக இல்லாதிருந்தது. அருகிலேயே வேறு வீடு பார்த்துக் குடியேறினோம். இரண்டு நாட்களில் சிற்றப்பா வந்து சேர்ந்தார். நீண்ட காலத்திற்குப்பின் சந்தித்த அப்பாவும், சிற்றப்பாவும் எதுவும் பேசாமல் கண்ணிர் விட்டுக் கொண்ட காட்சி, இன்னும் என் நினைவில் இருக்கிறது.  திருவண்ணாமலையில் வாக்களித்தபடி ஒரு வாரம் கழிந்து விட்டது. கோபால பிள்ளையுடனும் பெரிய அண்ணாவுடனும், நானும் சின்னண்ணாவும் சிதம்பரம் வந்து சேர்ந்தோம். சிற்றப்பாவும் எங்களுடன் சிதம்பரம் வரை துணைக்கு வந்து இரண்டு நாட்கள் தங்கிவிட்டுத் திரும்பினார். கம்பெனி திருவண்ணாமலைக்கு இடம் மாறியது. திருவண்ணாமலையில் நாடகம் பிரமாதமான வசூலில் நடை பெற்றது. சத்தியவான் சாவித்திரி நாடகத்திற்கு நல்ல பேர். அந்த நாடகம் பலமுறை நடிக்கப் பெற்றது.  ஒரு நாள் பெரியண்ணாவுக்கு ஊரிலிருந்து தந்தி வந்தது. அந்தத் தந்தியைப் பார்த்த உரிமையாளர்கள், காவடிப் பிரார்த்தனை செலுத்த எங்களை ஊருக்கு அனுப்பிவைக்க வேண்டு மென்று எழுதப்பட்டிருப்பதாகவும், திருவண்ணாமலை முடிந்து ஊருக்குப் போகலாமென்றும் சொன்னார்கள். புத்தன்சந்தை, சுப்பிரமணியசுவாமி கோவிலுக்குக் காவடியெடுப்பதாக நேர்த்திக் கடன் இருந்ததால் நாங்களும் அதை நம்பி விட்டோம். அன்றிரவு, பவளக்கொடி நாடகம் மிகச் சிறப்பாக நடை பெற்றது.  மறுநாள் பகலில் மற்றொரு தந்தி வந்தது. அதைப் பார்த்த உரிமையாளர்கள் தங்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டார்கள். அன்று ஒய்வு நாள். அப்போது விழுப்புரத்தில் திரு.கன்னையா கம்பெனியின் நாடகங்கள் நடைபெற்று வந்தன. அந்த நாடகத்தைப் பார்க்கவேண்டுமென நாங்கள் அடிக்கடி ஆசையோடு பேசிக் கொள்வோம். உரிமையாளர் கருப்பையா பிள்ளை எங்களிடம், “கன்னையா நாடகம் பார்த்து வரலாமா?” என்று கேட்டார். பெரியண்ணா ஒப்புக்கொண்டார். நாங்கள் மூவரும் கருப்பையாபிள்ளையுடன் மாலையில் பயணமானோம் விழுப்புரம் ரயில் நிலையம் வந்தது. இறங்கவில்லை. பயணம் தொடர்ந்தது. அண்ணா, கருப்பையாபிள்ளையிடம் காரணம் கேட்டார். சும்மா வேடிக்கையாகச் சொன்னதாகவும், காவடிக் கட்டுக்குத் திருவனந்தபுரம் வரும்படியாக வற்புறுத்தி இரண்டாவது தந்தியில் குறிப்பிட்டிருப்பதாகவும், திருவனந்தபுரம் போவதாகவும் சொன்னார். நாங்கள் சிந்தனையில் ஆழ்ந்தோம்.  புகைவண்டி வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. முதலாளி கருப்பையாபிள்ளை எங்கள் சிந்தனையைக் கலைக்க. ஏதேதோ பேசினார். பெரியண்ணா மட்டும் அவருடைய பேச்சில் ஈடுபடவில்லை. நானும் சின்னண்ணாவும் அவரோடு உரையாடிப் பொழுது போக்கினோம். நீண்ட நேரத்திற்குப் பின் கண்ணயர்ந்தோம்.  தங்தையை இழந்தோம் மறுநாள் மாலை திருவனந்தபுரம் வந்து சேர்ந்தோம். வீட்டை நெருங்கியதும் அவலச் செய்தி எங்களுக்காகக் காத்திருந்தது. வெள்ளைப் புடவை யுடுத்தித் தலைவிரி கோலத்துடன் இருந்த அன்னையாரைக் கண்டதும், “ஐயோ” என்றலறினோம். “உங்களைத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டாரேடா அப்பா” என்று அம்மாவின் அடிவயிற்றிலிருந்து எழுந்த குரல், நெஞ்சை உருக்குவதாக இருந்தது.  ஆம்; 1923 ஏப்ரல் 27ஆம் நாள் இரவு 12.30 மணிக்கு, நாங்கள் திருவண்ணாமலையில் பவளக்கொடி நாடகத்தில் நடித்து கொண்டிருந்த நேரத்தில் தந்தையார் இறைவனடி சேர்ந்தார். பவளக்கொடி நாடகத்தில் கிருஷ்ணன் மாயப் பெண்ணாகவும், அர்ஜுனன் கிழவனாகவும் வேடம் பூண்டு, பவளக்கொடியை ஏமாற்றி, வண்டு கடித்து இறந்ததுபோல் நடிப்பதுண்டல்லவா? அந்தக் காட்சியில் அர்ஜுனனப் படுக்கவைத்து, நான் மாயப் பெண்ணாக நின்று ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்த அதே நேரத்தில்தான், தந்தையார் இறந்திருக்கிறார்! இதையறிந்த போது இறைவனின் செயலை எண்ணி எல்லோரும் வியந்தார்கள். அப்போது பெரியண்ணாவுக்கு வயது பதினேழு. நிலைமையை அறிந்ததும் அவர் அழவேயில்லை. உள்ளே வந்து அம்மாவைப் பார்க்கவுமில்லை. அப்படியே வெளித்திண்ணையில் உணர்வற்று உட்கார்ந்து விட்டார். அவரது உள்ளத்திலிருந்த ஆயிரமாயிரம் எண்ண அலைகளால் ஏற்பட்ட உணர்ச்சியின் கொந்தளிந்பு கண்களில் தெரிந்தது. இரத்தச் சிவப்பேறி நின்ற அவரது கண்களைக் கண்டு எல்லோரும் பயந்தார்கள். அவரது அருகில் போய் உட்கார்ந்து ஆறுதல் கூறினார்கள். அம்மாவையும், ஐந்து தம்பி தங்கை மார்களையும் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு, தம்மேல் சுமத்தப் பெற்றதையும், அந்த எதிர் கால வாழ்வையும் எண்ணி ஏங்கினார் போலிருக்கிறது.  எங்கள் நிலை அப்பாவின் இறுதிச் சடங்குகள் நடந்தேறின. நாங்கள் போட்டிருந்த சில நகைகளையும், பரிசு பெற்ற தங்க மெடல்களையும் தவிர வேறு ஆஸ்தி எதுவும் இல்லை. எனவே அதற்கான குழப்பங்கள் ஒன்றும் ஏற்படவில்லை. அப்பாவின் அளவுக்கு மீறிய குடியினால் அவரது ஈரலில் துவாரங்கள் விழுந்து விட்டதாயும் அதனாலேயே விரைவில் மரணம் ஏற்பட்டதென்றும் மருத்துவர் கூறினார்.  பதினாறாவது நாள் சடங்கு முடியும் வரை முதலாளி எங்களோடு தங்கியிருந்தார். மறு நாள் திருவண்ணாமலைக்குப் புறப்பட முடிவு செய்தோம். சிற்றப்பா செல்லம்பிள்ளையும் எங்கள் தாயுடன் பிறந்த மாமா செல்லமபிள்ளையும் எங்களோடுவருவதாக அறிவித்தார்கள். அம்மாவும் அதை விரும்பினார். அவர்கள் இருவருக்கும் வெளி வேலைகள் ஏதாவது கொடுப்பதாகக் கருப்பையாபிள்ளை கூறினார். கைம்மைக் கோலம் ஏற்றதாயுடனும் சிற்றப்பா, மாமா, எல்லோருடனும் மறுநாள் புறப்பட்டுத் திருவண்ணாமலை வந்து சேர்ந்தோம்.                                  முத்துச்சாமிக் கவிராயர்   திருவண்ணமலையில் நாடகங்கள் தொடர்ந்து நடை பெற்றன. மாமாவும் சிற்றப்பாவும் எங்களோடு தனி வீட்டில் தங்கினார்கள். அவர்கள் இருவருக்கும் வேலை கொடுத்து, ஆளுக்கு இருபத்தைந்து ரூபாய்கள் வீதம் சம்பளம் கொடுக்கப் பெற்றது. எங்களுக்குக் கொடுத்து வந்த இருநூற்றி இருபத்தி ஐந்து ரூபாய் சம்பளம், அப்பா காலமானதால் நூற்று எழுபத்தைந்தாகக் குறைந்தது.  சில நாட்களில் உடுமலை சந்தச் சரபம் முத்துசாமிக் கவிராயர் எங்கள் கம்பெனிக்கு நாடகாசிரியராக வந்து சேர்ந்தார். இவர் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் நன்கு பயின்றவர். மூன்றிலும் கவிபுனையும் ஆற்றல் பெற்றவர். எல்லோரிடமும் இனிய முறையில் பழகக் கூடியவர். சாதுரியமாகப் பேசி அனைவரையும் சிரிக்க வைக்கும் தன்மை வாய்ந்தவர். வேடிக்கை கதைகள் சொல்லுவதில் கவிராயர் நிபுணர். எப்போதும் கம்பெனிப் பிள்ளைகளைக் கூட்டி வைத்து ஏதாவது கதைகள் சொல்லிக் கொண்டேயிருப்பார். பாடத்தைவிடக் கதைகளைத்தான் நாங்கள் அதிக ஆர்வத்துடன் கேட்போம். பாடம் சொல்லிக் கொடுக்கும் நேரங்களில் கூட அதை மறந்து விட்டு, கதைகள் சொல்லும்படி நாங்கள் வற்புறுத்துவோம். அவரும் சளைக்காமல் அன்போடு சொல்லுவார். சங்கரதாஸ் சுவாமிகளைவிட வயதில் மூத்தவர். வாயில் ஒரு பல் கூட இல்லை. பொக்கை வாய்க் கிழவராகக் காட்சி அளித்தார். மதுரைவீரன், மன்மத தகனம் ஆகிய இரு நாடகங்களையும் அவர் எழுதிக் கொடுத்தார். மதுரை வீரனில் எனக்கு, ‘சக்கிலிச்சி’ பாடம் கொடுக்கப்பெற்றது. சின்னண்ணாவுக்குப் ‘பொம்மி’ பாடமும் ‘பிரதி’ பாடமும் தரப் பெற்றன. மதுரை வீரன் நாடகத்தில் தெலுங்குப் பாடல்களும் உரையாடல்களும் இடையிடையே உண்டு.  சேஷாத்திரி சுவாமிகள் திருவண்ணமலையில் அப்போது, சேஷாத்திரி சுவாமிகள் இருந்த காலம். அவருடைய சித்து விளையாடல்களில் மக்களுக்கு அதிக நம்பிக்கை இருந்து வந்தது. சேஷாத்திரி சுவாமிகள் திடீரென்று ஒருநாள், சத்தியவான் சாவித்திரி நாடகம் நடந்து கொண்டிருக்கும் போது கொட்டகைக்குள் வந்தார். நான் நாரதராக நடித்துக் கொண்டிருந்தேன். யாரோ ஒருவர் வைத்துக் கொண்டிருந்த மாலையைப் பிடுங்கினார். வேகமாக மேடை மீது ஏறினார். மாலையை என் கழுத்தில் போட்டு விட்டுக் கைதட்டினார். அங்கிருந்த அனைவரும் மகிழ்ச்சியோடு கரகோஷம் செய்தார்கள். அடுத்த விநாடியில் வேகமாகக் கீழிறங்கிப் போப் விட்டார். சுவாமிகளின் கையால் மாலை வாங்கிய அது பாத்தியத்தை எல்லோரும் வியப்பாகச் சொல்லிக் கொண்டார்கள். அந்த நாளில் எனக்கொன்றும் புரியவில்லை. இன்று சேஷாத்திரி சுவாமிகளின் பெருமையையும் அவரது அற்புதச் செயல்களையும் உணர்ந்த நான் அந்தப் பழைய நிகழ்ச்சியை எண்ணிப் பெருமையடைகிறேன் உண்மையிலேயே அது பெற்றகரிய பேறு என்றே கருதுகிறேன்.  திருவண்ணாமலையிலிருந்து மேக்களுர், செங்கம், காஞ்சி ஆகிய சிற்றுார்களுக்குச் சென்று நாடகம் நடித்தோம். சிறிய கிராமங்களாக இருந்தாலும் மேக்களுரிலும் செங்கத்திலும் வசூல் பிரமாதமாக இருந்தது. மேக்களுரில், நடிகர்கள் மேடையில் போட்டுக் கொள்ள, ஊரிலுள்ள தாய்மார்கள் தங்கள் விலை யுயர்ந்த நகைகளை அன்போடு கொடுத்துதவியது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.  தெய்வத் தொண்டர் தேவ சேனாதிபதி மேக்களுரில் ஒரு சிவாலயமிருந்தது. நாங்கள் குடியிருந்த வீடு அதன் அருகிலிருந்தது. அப்போது கம்பெனியில் என் ஒருவனைத் தவிர எல்லோரும் புலால் உண்ணக் கூடியவர்கள். நான் ஒருவன்தான் சைவம். அந்த ஊரில் ஒட்டலும் இல்லை. எனக்கு மட்டும் தனியாகச் சைவ உணவு தயாரிப்பது சிரமமல்லவா? ஆலயத்தில் அர்ச்சகராக இருந்து வந்த ஒருபெரியவரின் குடும்பத்தோடு தொடர்பு கொள்ள, இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. கம்பெனியில் புலால் போடும் நாட்களில் ஆலயக் குருக்கள் வீட்டில் எனக்குச் சாப்பாடு. பகல் வேளைகளில் குருக்களின் பிள்ளைகளோடு சேர்ந்து நாங்கள் கோலி விளையாடுவது வழக்கம். இதில் தேவன் என்ற ஒரு சிறுவன் என் கூட்டாளி. சின்னஞ் சிறு பருவத்தில் ஏற்பட்ட நட்பல்லவா? எப்படி மறக்க முடியும்? இந்த நட்பு விடுபடாதிருக்க இடையிடையே அச் சிறுவனைச் சந்திக்கும் வாய்ப்பும் எனக்கேற்பட்டது. அச் சிறுவன் தான் இன்று சென்னை இராயப்பேட்டை சித்திபுத்தி விநாயகர் கோயில் அர்ச்சகராக இருக்கும் தேவ சேனதிபதி குருக்கள்.  மேக்களுர் முடிந்து மீண்டும் திருவண்ணாமலைக்கு வந்து நாடகங்கள் நடித்தோம். பட்டாபிஷேக நாடகத்தன்று நான் மறக்க முடியாத ஒரு விசேஷம் நடந்தது.  பரிசு கொடுப்பதில் போட்டி சத்தியவான் சாவித்திரிக்கு நல்ல வரவேற்பு என்று முன்பே குறிப்பிட்டேனல்லவா? அதையே பட்டாபிஷேக நாடகமாகவும் வைத்திருந்தார்கள். நாடக முடிவில் வழக்கம்போல் அப்போது சட்டாம் பிள்ளையாக இருந்த திரு கல்யாண வீரபத்திரன் மேடைக்கு வந்து, “நடிகர்களுக்குப் பரிசு கொடுப்பவர்கள் கொடுக்கலாம்” என்று அறிவித்தார். சபையிலிருந்த சிலர், ‘பபூன் வேடதாரிடம் பரிசுகளைக்கொடுக்க, அவர் பரிசு கொடுத்த ஒவ்வொருவர் பெயரையும் சொல்லி, நடிகர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.  சத்தியவானாக நடித்த ஏ. கே. சுப்பிரமணியனுக்கும், சாவித்திரியாக நடித்த சின்னண்ணா டி. கே. முத்துசாமிக்கும் ஊரில் நல்லபெயர். “சத்தியவான்தான் உயர்ந்த நடிகர்” என்றார்கள் சில ரசிகர்கள். “இல்லை; சாவித்திரிதான் உயர்ந்த நடிகர” என்றார்கள் வேறு சிலர். இவ்வாறு ஊரிலுள்ள நாடக ரசிகர்கள் இரு நடிகர்களிடத்திலும் ஆதரவு காட்டி வந்ததால், “ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்” என்னும் பழமொழிப்படி அந்த இரு நடிகர்களுடைய ஆதரவாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு பரிசுகளை வழங்கினார்கள்.  நாரதரும் நாடகத்தில் ஒரு முக்கியமான பாத்திரமல்லவா? அன்று நாரதராக நடித்த அடியேனை ஒருவருமே கவனிக்கவில்லை. மற்ற ஊர்களில் எல்லாம் எனக்குத்தான் அதிகப் பரிசுகள் கிடைப்பது வழக்கம். திருவண்ணாமலையில் என்னுடைய அதிர்ஷ்டம் வேறு விதமாக இருந்தது. சத்தியவானும் சாவித்திரியும் பரிசு பெறும் கோலத்தைப் பார்த்துச் சோர்ந்து போய், ஏமாற்றத்தோடு நான் நின்று கொண்டிருந்தேன். இந் நிலையில் எமதருமனாக நடித்த இராமானுஜத்திற்கும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்தது.  தங்கப் பதக்கங்கள் கொடுக்கப் பெற்று முடிந்ததும், சபை யிலிருந்த ஒருவர், சத்தியவானுக்குப் பத்து ரூபாய்’ என்று ஒரு நோட்டை விட்டெறிந்தார். உடனே மற்றொருவர், ‘சாவித்திரிக்கு இருபது ரூபாய்’ என்று இரண்டு நோட்டுக்களைக் கொடுத்தார். இதிலும் போட்டி ஏற்படவே நூற்றுக் கணக்கான ரூபாய்கள் மேடைக்கு வரத் தொடங்கின. மாறி மாறிச் சத்தியவானுக்கும் சாவித்திரிக்குமே நோட்டுகள் வந்தன. ஏங்கி நின்ற என்னை எவருமே பொருட்படுத்தவில்லை.  நாரதரின் அழுகை நாரதருக்கு நெஞ்சம் குமுறியது. கண் கலங்கியது. அந்த நிலையிலும் என்னை யாருமே கவனிக்கவில்லை. இரண்டொரு நிமிடங்களில், பொருமலை அடக்க முடியாமல் அழ ஆரம்பித்தேன். மங்களம் பாடி முடிந்ததும் திரை விடப் பெற்றது. உள்ளேயிருந்து நான் படும் வேதனையைப் பார்த்துக் கொண்டிருந்த கருப்பையா பிள்ளை என்னிடம் வந்து “சீ, இதற்காகவா அழுகிறாய்? இந்த ஊர் ஜனங்களுக்கு ரசிக்கவே தெரியவில்லை” என்று சொல்லி, என்னைச் சாமாதானப் படுத்தினார். பக்கத்திலிருந்த நடிகர் சிலர் சிரித்தார்கள். வேறு சிலர் அனுதாபம் காட்டினார்கள். ஆனாலும் என் அழுகை ஓயவில்லை.  எதற்காக அன்று அப்படித் தேம்பியழுதேன் என்பதை எண்ணியெண்ணிப் பார்க்கிறேன். இன்னும் அதன் மர்மம் எனக்குப் புரியவில்லை. பிஞ்சு உள்ளங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் பெரும் வேதனையாக இருக்கும்போல் தோன்றுகிறது.  திருவண்ணமலையில் நாடகம் முடிந்தது. திருக்கோவிலூரில் நாடகம் தொடங்கப் பெற்றது. நல்ல வசூல். ரசிகர்கள் பலர் எங்களோடு நெருங்கிப் பழகினார்கள். திருக்கோவிலூரில்தான் நாங்கள் முதன் முதலாக ரசிகர்கள் அழைப்பிற்கிணங்கி விருந் துக்குப் போைேம். ரசிக நண்பர்களோடு 1923இல் எடுக்கப் பெற்ற புகைப்படம், இன்னும் எங்கள் பெரியண்ணா இல்லத்தில் இருக்கிறது.  ஆவுடையப்ப முதலியார் திருக்கோவிலூரில் நல்ல வருவாயுடன் கம்பெனி நடந்து கொண்டிருந்த நிலையில், மதுரையிலிருந்து சின்னையாபிள்ளை வந்தார். இவர் கம்பெனிக்குப் பணம் அதிகமாகப் போட்டவர். ஆனால் இதுவரை எவ்விதப்பயனையும் அடையாதவர். கம்பெனியை எப்படியாவது மதுரைப்பக்கம் அழைத்துப் போக வேண்டும் என்பது இவருடைய எண்ணம். அதற்காகக் கூடவே ஒரு காண்ட்ராக்டரை கூட்டி வந்திருந்தார். புதுக்கோட்டை, காரைக்குடி இருநகரங்களிலும் இரண்டு மாதங்கள் நாடகம் நடத்த ஒப்பந்தம் செய்வதாக ஏற்பாடு. இந்த விவரங்களை அறிந்ததும், மானேஜர் காமேஸ்வர ஐயரும், கருப்பையாப்பிள்ளையும் காண்ட்ராக்டரைத் தனியே அழைத்து, உபதேசம் செய்தார்கள். புதுக்கோட்டை போவது அதிகச் செலவென்றும், பக்கத்தில் விழுப்புரம், பண்ணுருட்டி போனல் அதிக லாபம் கிடைக்குமென்றும் ஆசைக் காட்டினார்கள். காண்ட்ராக்டர் ஆவுடையப்ப முதலியார், அவர்கள் பேச்சில் மயங்கி அப்படியே வற்புறுத்தி ஒப்பந்தம் செய்தார்.  விழுப்புரத்திலும், பண்ணுருட்டியிலும் நாடகங்கள் நடை பெற்றன. திருக்கோவிலுரிலும் திருவண்ணாமலையிலும் பிரமாதமாக வசூலான கம்பெனிக்கு, விழுப்புரத்திலும் பண்ணுருட்டியிலும் பெரிய நஷ்டம் ஏற்பட்டது. ஆவுடையப்ப முதலியார் அவதிப் பட்டார்.  ஈ ஜோசியர் ஆவுடையப்ப முதலியாரின் தமையனார் ஒருவர் இருந்தார். அவர் ஒவ்வொரு நாளும் எங்கள் வீட்டுக்கு வருவார். சிறுதுண்டுக் காகிதங்களில் நாலைந்து நாடகங்களின் பெயர்களை எழுதிப் போடுவார். அவற்றில் முதலாவதாக எந்தக் காகிதத்தில் “ஈ” வந்து உட்காருகிறதோ, அதைப் பிரித்துப் பார்த்து அந்த நாடகத்தையே போட ஏற்பாடு செய்வார். இவருடைய செயலைப் பார்த்து நாங்கள் இவருக்கு ‘ஈ ஜோசியர்’ என்று பெயர் வைத்தோம். எந்த ஜோசியமும் பலிக்கவில்லை. வசூல் வர வரக் குறைந்து கொண்டே வந்தது.  இந்த நிலையில் ஆவுடையப்ப முதலியாருக்குச் சொந்தமாகக் கம்பெனி நடத்த வேண்டுமென்ற ஆசையும் ஏற்பட்டது. வசூல் இல்லாத அந்த நிலையிலும்கூட எனக்கு அவர் அவ்வப்போது ஐந்து ரூபாய்கள் பரிசளித்து வந்தார். சின்னையாபிள்ளைக்கும் தேவைபோல் பணம் கொடுத்தார். கடைசியாக, காண்ட்ராக்ட் முடியும் சமயத்தில் கம்பெனியார் காண்ட்ராக்டருக்குப் பணம் திருப்பிக் கொடுக்க வேண்டிய நிலை நேரிட்டது. ஆவுடையப்ப முதலியார் தம் பணத்திற்குத் தொந்தரவு கொடுக்கவே, சின்னையாபிள்ளை முழுத் தொகைக்கும் நோட்டு எழுதிக் கொடுத்து விட்டுக் கூடலூருக்குக் கம்பெனியைக் கொண்டு சென்றார்.  கருப்பையாபிள்ளை சொந்தக் கம்பெனி கூடலூரில் நாடகம் நடந்தது. வசூல் மிகவும் மோசமாக இருந்தது. இந்த நிலையில் முதலாளி கருப்பையாபிள்ளை, சின்னையா பிள்ளையுடன் வேற்றுமைப் பட்டு கம்பெனியை விட்டு விலகிக் கொண்டார். திருப்பாதிரிப்புலியூரில் உடனடியாகச் சொந்தக் கம்பெனி துவக்க ஏற்பாடுகள் செய்தார். காமேஸ்வர ஐயர் மட்டும் அவரோடு போகாமல் எங்கள் கம்பெனியிலேயே இருந்து வந்தார்.  கூடலூரில் கொட்டகைக்குரிய வாடகை சரியாகக் கொடுக்கப் படவில்லை, அதற்காகக் கொட்டகைக்காரர் ஒரு ஆளை டிக்கெட் விற்கும் அறையிலேயே இருக்கச் செய்து வசூல் பணத்தை எடுத்துவர ஏற்பாடு செய்தார். அந்த ஆள் பலே பேர்வழி. அந்த நாளில் கொட்டகைக்காரருக்கு ஒவ்வொரு நாடகத்திற்கும் இலவச அனுமதிச் சீட்டுகள் ஏராளமாகக் கொடுப்பதுண்டு. அந்த இலவச டிக்கெட்டுக்களையெல்லாம் இந்த ஆள் விற்றுச் சொந்தத் தில் பணம் திரட்டத் தொடங்கினார். அதனால் கம்பெனிக்கு வருவாய் மேலும் குறைந்தது.  காமேஸ்வர ஐயரின் தில்லுமுல்லுகள் கம்பெனி மானேஜர் காமேஸ்வர ஐயர், சின்னையாபிள்ளையிடமிருந்து நல்ல நடிகர்களையெல்லாம் கலைத்துக் கருப்பையாபிள்ளையின் கம்பெனிக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும் திருப்பணியில் ஈடுபட்டிருந்தார். பெரியண்ணாவையும், மாமாவையும் ஒருநாள் திருப்பாதிரிப்புலியூருக்கு அழைத்துப்போய், கருப்பையாப்பிள்ளையைச் சந்திக்கச் செய்தார். கருப்பையாப்பிள்ளை, எங்களைத் தம் கம்பெனிக்கு வந்துவிடும்படியும் அதிகச் சம்பளம் தாம் தருவதாகவும் வற்புறுத்தினார். பெரியண்ணா, அம்மாவிடம் கலந்து கொண்டு இதற்குப் பதில் சொல்லுவதாகக் கூறிவிட்டார். இந்தச் செய்தி எப்படியோ சின்னையா பிள்ளைக்குத் தெரிந்துவிட்டது. அவர் அலறியடித்துக் கொண்டு அம்மாவிடம் வந்து அழுதார். “யார் போனலும் நான் கம்பெனியை நடத்திக் கொள்வேன். நீங்களும் போய்விட்டால் எனக்கு வேறு வழியேயில்லை. எங்கே யாவது போய் விழுந்து உயிரை விடுவதென்று முடிவு செய்து விட்டேன். என் மனைவியின் மாங்கல்யத்தை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்” என்று புலம்பினார்.  முதலாளி கருப்பையாபிள்ளை, எங்களோடு மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். தந்தை இறந்த சமயத்தில் அவர் செய்த உதவிகள் மறக்க முடியாதவை. அவருக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டிருந்தோம். என்றாலும், சின்னையா பிள்ளையின் அப்போதைய நிலையை எண்ணிப் பார்த்தபோது, அம்மாவுக்கு அவர்மீது இரக்கம் உண்டாயிற்று. என்ன நேர்ந்தாலும் கருப்பையாபிள்ளையின் கம்பெனிக்குப் போவதில்லையென முடிவு கூறி விட்டார்.  எங்கள் சிற்றப்பா செல்லம்பிள்ளை நல்ல உடற்கட்டும் வலிமையும் உடையவர். அவரைக் கண்டால் எல்லோரும் பயப்படுவார்கள். அவர் ஒருநாள் காமேஸ்வர ஐயர் வந்திருந்தபோது எச்சரிக்கை செய்தார். கூடலூரிலும் திருப்பாதிரிப்புலியூரிலுமாக இரண்டு கம்பெனிகளில் ஒரே சமயத்தில் நீர் இவ்வாறு தில்லுமுல்லு வேலைகள் செய்து வந்தால் வீணாக அடிபட்டுச் சாக நேரிடும்’ என்று கோபத்துடன் அச்சுறுத்தினார். இதன் பிறகு காமேஸ்வர ஐயர் கருப்பையாபிள்ளை கம்பெனிக்கே போய் விட்டார். கம்பெனியில் முக்கிய நடிகராக இருந்த ஏ. கே. சுப்பிரமணியம், அவரோடு வந்த மற்றுஞ் சில நடிகர்கள் எல்லோரும் கருப்பையாபிள்ளை கம்பெனிக்குப் போய்ச் சேர்ந்தனார்.  போஸ்ட் மாஸ்டர் உதவி கூடலூரில் கம்பெனியின் நிலைமை மிகவும் நெருக்கடியாய் விட்டது. காட்சியமைப்புப் பொருட்களையெல்லாம் கொட்ட கைக்காரர் கொடுக்க மறுத்துவிட்டார். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வாடகைப் பணம் கொடுக்காது போனால் எல்லாவற்றையும் கொட்டகைக்காரரே எடுத்துக்கொள்ளலாமென்றும் எழுதிக் கொடுக்கப்பட்டது.  மாமாவும், பழனியாபிள்ளையும் சிதம்பரம் போய்கொட்டகை பேசிவந்தார்கள். முன்பணம் கொடுக்கப் பணம் இல்லாததால் மாமா, தமது மோதிரத்தை விற்றுப் பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்து வந்தார். சிதம்பரம் போக இரயில் செலவுக்கும் பணம் இல்லை. சின்னையாபிள்ளை செய்வதறியாது திண்டாடினார். அப்போது கூடலூரில் போஸ்ட்மாஸ்டராக இருந்த கிருஷ்ணசாமி ஐயர் சிறந்த நாடக ரசிகர். அவர் எங்களுக்கு நண்பராகவும் இருந்தார். அவரும், கூடலூர் ஸ்டேஷன் மாஸ்டரும் பேருதவி செய்து, எவ்விதச் செலவுமில்லாமல் கம்பெனியைச் சிதம்பரத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.  இராஜாம்பாள் நாடகம் சிதம்பரத்தில் வசூல் சுமாராக இருந்தது. எஸ். என். இராமையா என்னும் புதிய நடிகர் ஒருவர் வந்து சேர்ந்தார். நல்ல இனிமையான குரல். அவருக்குக் கதாநாயகன் வேடம் கொடுக்கப்பட்டது.  சக்கரவாகம்பிள்ளை என்று ஒரு புதிய ஆசிரியரும் கம்பெனிக்கு வந்து சேர்ந்தார். அவர் ஏற்கனவே பாலாமணி அம்மாள் கம்பெனியில் இருந்தவர். அங்கே அவருக்குப் பாடமாகியிருந்த ஜே. ஆர். ரங்கராஜூ அவர்களின் இராஜாம்பாளை எங்களுக்குப் பயிற்றுவித்தார். இராஜாம்பாள் நாடகத்திற்கு அனுமதி சுலபத்தில் கிடைக்கவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு மாமா நேரில் சென்னைக்குப்போய் ரங்கராஜுவிடம் அனுமதி வாங்கி வந்தார். ரங்கராஜுவின் சட்ட திட்டங்கள் நிரப்பவும் கெடுபிடியானவை. அவரது நாவல்களை யாரும் எளிதில் நாடகமாக நடித்துவிட இயலாது. அவற்றையெல்லாம் பின்னால் விவரமாகச்சொல்லுகிறேன். மாமா அனுமதிபெற்று வந்ததும் கடைசிநாடகமாக “இராஜாம்பாள்” நடித்துவிட்டு எல்லோரும் தஞ்சாவூர் போய்ச் சேர்ந்தோம்.  ஆரிய கான சபை தஞ்சாவூர் வந்த அன்று, நாங்கள் நடிக்கவிருந்த கொட்டகையில் ஆரிய காண சபையின் கடைசிநாடகம் சதி சுலோசன நடைபெற்றது. நாங்கள் வழக்கமாக நடித்துவரும் நாடகமாதலால் எல்லோரும் இரவு அந்நாடகத்திற்குப் போயிருந்தோம்.  மன்னார்குடி எம் ஜி. நடராஜபிள்ளை இந்திரஜித்துவாகவும் கே. எஸ். அனந்தநாராயணகய்யர் சுலோசனையாகவும் நடித்தார்கள். இவர்கள் இருவரும் நடித்த அந்த நாடகம் மிகவும் சிறப்பாக இருந்தது. இருவரும் அருமையாகப் பேசினார்கள். அனந்த நாராயணய்யரின் தளுக்கும், குலுக்கும், ஒரு பெண்ணைப் போலவே குழைந்து குழைந்துபேசும் அழகும், இசைத்திறமையும் மறக்க முடியாதவையாக இருந்தன. இடையிடையே இவர்கள் சொந்தமாகப் பேசிக்கொண்ட சில உரையாடல்களைத் தவிர, எல்லாம் நாங்கள் நடிக்கும் சுவாமிகளின் பாடம்தான், எனவே, நாடகம் எங்களுக்கு மிகவும் சுவையாக இருந்தது. சுவாமிகளின் கம்பெனி நடிகர்கள் என்றறிந்ததும் அனந்தநாராயணய்யரும் நடராஜபிள்ளையும் எங்களை அன்புடன் வரவேற்றார்கள்.  சங்கீதக் காவலன் மறுநாள் தஞ்சை காமாட்சியம்பாள் நாடகக் கொட்டகையில் நாடகம் தொடங்கியது. எஸ். என். இராமையாவின் பாட்டுக்குப் பிரமாதமான பேர். கோவலன் நாடகத்தில் பாடல்கள் அதிகம். அந்த நாடகமே பலமுறை வைக்கப் பெற்றது. கோவலன் நாடகத்தில் நான் இடைச்சியாகவும், நன்மந்திரி யாகவும் நடித்தேன். நான் இடைச்சி வேடத்தில் ‘தயிர் வாங்கலேயோ’ என்று பாடி, மேடையில் வரும்போது சபையில் சில ரசிகர்கள் சில்லரை நாணயங்களையும், ரூபாய்களையும் என் மீது வீசி எறிவார்கள்.  அப்போது சங்கீத ஒளி விளக்காகக் கருதப் பெற்ற எஸ். ஜி. கிட்டப்பா மற்றொரு கொட்டகையில் வந்து ஸ்பெஷல் நாடகம் போட்டார். அந்தச் சமயம் அவருக்கு மகரக்கட்டு ஏற்பட்டு சாரீரம் தொந்தரை கொடுத்துக் கொண்டிருந்த காலம். அவருடைய நாடகங்களுக்கு வசூல் ஆகவில்லை. “எஸ். என். இராமையா பாட்டுக்கு முன், கிட்டப்பா பாட்டு செல்லாது” என்றெல்லாம் ரசிகர்கள் பேசிக்கொள்வதாகப் பெரியண்ணா அடிக்கடி சொல்லி வருத்தப்படுவார். அவருக்குக் கிட்டப்பா பாட்டில் அதிக மயக்கம், கிட்டப்பாவின் நாடகங்களைப் பார்த்துவிட்டு வந்து, அண்ணா எங்களிடம் சதா புகழ்ந்து கொண்டேயிருப்பார். இருந்தாலும், என்ன செய்வது? கிட்டப்பா நாடகங்களுக்கு வசூல் இல்லை. எஸ். என். இராமையா நடித்த எங்கள் சங்கீதக் கோவலனுக்குப் பிரமாதமான வசூல். அந்த நாளில் தஞ்சையில் எட்டு முறை கோவலன் நாடகம் வைக்கப் பெற்றதென்றால், அந்த நாடகத்தை மக்கள் எப்படி வரவேற்றிருப்பார்கள் என்பது தெரிகிறதல்லவா?  தஞ்சாவூரில் நாடகங்கள் நடந்து கொண்டிருக்கும் பொழுதே நாகைப்பட்டினத்துக்குப் போய் கோவலன் நாடகம் போட்டு வந்தோம். தஞ்சையில் நல்ல வசூலானதால் ஏற்கனவே இருந்த பல கடன்கள் தீர்ந்தன. நடிகர்களுக்கும், மற்றத் தொழிலாளர்களுக்கும் பல மாதங்கள் இருந்து வந்த சம்பளப் பாக்கியும் தீர்ந்தது. அடுத்த ஊர், புதுக்கோட்டை போவதாக முடிவு செய்தார்கள்.              நாட்டுக்கோட்டை நகரத்தில்   புதுக்கோட்டை அப்போது தனி சமஸ்தானமாக இருந்தது. பல கம்பெனிகள் புதுக்கோட்டைக்குப் போய் வசூல் இல்லாமல் சிரமப்பட்டதாக அறிந்தோம். பிரசித்தி பெற்ற நடிகராகிய மனமோகன அரங்கசாமி நாயுடுவின் நிருவாகத்தில் இருந்த ஆலந்துார் ஒரிஜினல் டிராமடிக் கம்பெனியார் புதுக்கோட்டையில் அதிகக் கஷ்டப்பட்டதாகவும், அதன்பிறகு யாரும் புதுக்கோட்டைக்கே போனதில்லையென்றும் பேசிக் கொண்டார்கள். பல ஆண்டுகளாகப் புதுக்கோட்டையில் நாடகமே நடந்த தில்லையென்பதை அறிந்தபோது எங்களுக்கெல்லாம் அச்சமாக இருந்தது. தஞ்சையிலிருந்து புதுக்கோட்டைக்கு அந்த நாளில் லாரி வசதிகளெல்லாம் இல்லை. திருச்சி வழியாக ரயில்கூட இல்லாத காலம் அது. சாமான்களை இரட்டை மாட்டு வண்டிகளில் ஏற்றி அனுப்பிவிட்டு, நாங்கள் பஸ்ஸில் போய்ச் சேர்ந்தோம்.  புதுக்கோட்டையில் முதல் நாடகம் தொடங்கியது. வசூல் சுமாராக இருந்தது. இரண்டாவது நாடகத்திலிருந்தது எதிர் பாராதபடி அமோகமாக வசூலாயிற்று. எங்களுக்கு ஒரே குதுரகலம். புதுகோட்டை பிரஹதாம்பாள் தியேட்டரில் வேறு எந்தக் கம்பெனிக்கும் இப்படி வசூலானதில்லையென்று எல்லோரும் அதிசயப்பட்டார்கள். நாடகம் பார்க்க வந்த ரசிகர்களில், நாட்டுக்கோட்டை செட்டிப்பிள்ளைகள் அதிகமாக இருந்தார்கள்.  சின்னையாபிள்ளையின் மனமாற்றம் நாலைந்து நாடகங்கள் நடந்ததும் கூடலூர் கொட்டகையில் அடகுவைக்கப்பட்டிருந்த சாமான்களை மீட்டு வர, சின்னையா பிள்ளை பணத்துடன் போனார்.நான்கு நாட்களில் திரும்பினார். அடகு வைக்கப்பட்டிருந்த தவணை நாட்கள் தீர்ந்துவிட்டதால் கொட்டகைகாரர் சாமான்களையெல்லாம் விற்று விட்டதாகவும், அவற்றைத் தன் தம்பியே வாங்கியிருப்பதாகவும், தம்பியிட மிருந்து தான் வாடகைக்கு வாங்கி வந்திருப்பதாகவும் கூறினார். மற்றப்பங்காளிகளை வஞ்சிக்கும் நோக்கமுடன் இவ்வாறு ஒரு தந்திரம் செய்திருப்பதாக ஊகித்தோம். இவற்றை எல்லோரும் நம்பும் விதத்தில் பத்திரங்களும் தயார் செய்து கொண்டு வந்திருந்தார்.  புதுகோட்டைக்கு வந்தபின் பெரியண்ணா டி. கே. சங்கரன் கம்பெனியில் கணக்குப்பிள்ளை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப் பட்டார். அவருக்கு இருபத்தைந்து ரூபாய் சம்பளம் போடப் பெற்றது. சின்னையாபிள்ளை கூடலூருக்குப் போகும் போது வசூலாகும் பணத்தை நடிகர்களுக்கு கொடுக்கும் படியாகப் பெரியண்ணாவிடம் சொல்லிவிட்டுப் போனார். அதன்படியே கொடுக்கப்பட்டது. திரும்பி வந்ததும் பூராப் பணத்தையும் செலவு செய்து விட்டது பற்றிக் கடிந்து கொண்டார். எங்களைப் பற்றித் தாறுமாருகத் தப்பும் தவறும் பேசியதாக மற்றொரு பங்காளியான பழனியாபிள்ளை முலம் அறிந்து வருந்தினோம். பேச்சு வார்த்தை வளர்ந்தது. இறுதியாக அந்த ஊரோடு கம்பெனியை விட்டு விலகிக் கொள்வதாகத் தெரிவித்து விட்டு வந்தார் பெரியண்ணா.  பிறகு, சின்னயாபிள்ளை அம்மாவிடம் வந்து, தான் ஒன்றுமே தவருகச் சொல்லவில்லையென்றும், யாரோ வேண்டு மென்று கோள் மூட்டியிருக்கிறார்களென்றும் கூறினார். கம்பெனிக்கு நல்ல வசூலாகி வருவதால் பாவலர் கம்பெனியில் கொடுத்து வந்த இருநூற்றி ஐம்பது ரூபாய்கள் சம்பளம் போட்டுத் தாம் தருவதாகவும் அறிவித்தார். மீண்டும் சமரசம் ஏற்பட்டுக் கம்பெனியில் இருக்க ஒப்புக்கொண்டோம். எனக்கும் சின்னண்ணாவுக்கும் ரூ. 250 சம்பளம் போடப்பட்டது.  பி. யூ சின்னப்பா  புதுக்கோட்டையில் பிற்காலத்தில் பிரசித்தி பெற்ற நடிகராக விளங்கிய பி. யூ. சின்னப்பா சுவாமி கம்பெனியில் நடிகராக வந்து சேர்ந்தார். அவருடைய சாரீரம் கணிரென்றிருந்தது. அவருக்கு இராஜாம்பாள் நாடகத்தில் துப்பறியும் கோவிந்தனை அடிக்கும் ரெளடிகளில் ஒருவனான ‘அம்மாவாசை’ வேடம் கொடுக்கப்பட்டது. சாவித்திரி நாடகத்தில் புண்ணிய புருஷனாக வந்து அருமையாகப் பாடினார்.  சின்னப்பா சிறுவயதில் படுசுட்டியாக இருந்தார். கம்பெனி வீட்டுக்குப் பின்புறம் பெரிய தென்னந்தோப்பு இருந்தது. சின்னண்ணாவும், சின்னப்பாவும் அவற்றில் ஏறி, இளநீர்க் குலைகளப் பறித்து, எல்லோருக்கும் தானம் வழங்குவார்கள். ஒருநாள் வாத்தியார் குற்றாலலிங்கம்பிள்ளை, சின்னப்பா தென்னைமரத்தில் இருப்பதைப் பார்த்து விட்டார். அவருக்குச் சரியான பூசை கிடைத்தது. அவ்வளவுதான். மறு நாள் சின்னப்பாவைக் காணோம். அவருடைய வீடு தேடிப் போனார்கள். பையன் அடி பட்டிருப்பதைப் பார்த்த அவரது தந்தையார், சின்னப்பாவை அனுப்ப மறுத்து விட்டதாகச் சொன்னார்கள்.  டி. பி. இராஜலெட்சுமி நாடகம்.  புதுக்கோட்டை நாடகம் முடிந்து காரைக்குடிக்குப் போனோம். அப்போது காரைக்குடியில் டி.பி. இராஜலட்சுமியின் நாடகம் நடந்துகொண்டிருந்தது. நானும், சின்னண்ணாவும் சிற்றப்பாவுடன் நாடகம் பார்க்கப் போயிருந்தோம். அன்று. சாவித்திரி நாடகம். எம். ஜி. நடராஜபிள்ளை சத்தியவாளுகவும். எமதர்மனகவும் நடித்தார். எஸ். வி. சுப்பையா பாகவதர் நாரதராக நடித்தார். அந்த நாளில் டி. பி. இராஜலட்சுமிக்கு, செட்டி நாட்டில் அபாரமான பேர். கடைசி நாடகமானதால் மக்கள் பெருந்திரளாகக் கூடியிருந்தார்கள்.  காரைக்குடியில் அப்போதிருந்து வந்த வழக்கத்தையும், நாட்டுக் கோட்டைச் செட்டிப்பிள்ளைகள் நாடகம் பார்க்கும் முறையைப்பற்றி இங்கே சற்று விபரமாகக் குறிப்பிடவேண்டியது இன்றியமையாதது எனக் கருதுகிறேன்.  காரைக்குடி அக்காலத்தில் செல்வம் கொழிக்கும் நகரமாக விளங்கியது. மற்ற ஊர்களிலெல்லாம் இல்லாத ஒரு புதுமையைக் காரைக்குடியிலே கண்டோம். நாடகக் கொட்டகையில் முதல் வகுப்பு கான்வாஸ்சேர்-அதாவது சாய்மான நாற்காலி, ஐந்நூற்றுக்கு மேற்பட்ட சாய்மான நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டும், சில நேரங்களில் படுத்துக் கொண்டுதான் செட்டிப் பிள்ளைகள் நாடகம் பார்ப்பார்கள். அந்த நாளில் மற்ற ஊர்களில் முதல் வகுப்பு ரூ. 1- 8.0 போடுவது வழக்கம். காரைக் குடியில் மட்டும் முதல்வகுப்பு ரூ. 2- 8.0 போடப்பட்டிருப்பதைப் .பார்த்து நாங்கள் வியப்படைந்தோம். சபையில் நான்கில் ஒரு பகுதியை நீளமாகத் தனியே தடுத்து அந்த இடம் பெண்களுக்காக ஒதுக்கப் பெற்றிருந்தது. முன்னால் சிறிது தூரம்வரை பாய் விரித்திருக்கும். அதற்கு எட்டணா கட்டணம். வெறும் தரையில் உட்காருவதற்கு ஆறணு கட்டணம். இதில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், பெண்கள் யாரும் முதல் வகுப்புச் சாய்மான நாற்காலிகளில் உட்காரக் கூடாது. ஆண்களோடு பெண்களும் சரிசமானமாக இருக்கக் கூடாது என்பது அவர்கள் எண்ணம். இதை யாரும் எதிர்க்காததால் நடைமுறையில் இந்த விதி ஒழுங்காகச் செயல் பட்டு வந்தது.  ஆண் பெண்ணாண அதிசயம் டி.பி. இராஜலட்சுமியின் நாடகத்தைப் பார்த்து நானும் சின்னண்ணாவும் பிரமாதமாக ரசித்துக் கொண்டிருந்தோம். நாங்கள் சிற்றப்பாவோடு சாய்மான நாற்காலியில் அமர்ந்திருந்தோம், சிண்னண்ணாவுக்கு அப்போது பதினைந்து வயது. அழகிய தோற்றம்; நீளமான தலை முடி; பெண் போலவே இருப்பார். கைகளில் காப்பு, கொலுசு, சிறு தங்க வளையல்கள் எல்லாம் போட்டிருந்தார். காதில் ஐந்து கல் பதித்த கடுக்கனும் இருந்தது. எங்கள் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு செட்டியார், சின்னண்ணாவை முறைத்து முறைத்துப் பார்த்தார். யாரோ ஒரு பெண்தான் வேட்டி, சட்டை போட்டுக்கொண்டு வந்திருப்பதாக எண்ணிக்கொண்டார். அவர் நன்றாகக் குடித்திருந்தார். அந்தப் போதையும் இப்படி எண்ணாவதற்குத் துணை செய்தது. அவரால் சும்மா இருக்க முடியவில்லை. பக்கத்திலிருந்த மற்றொரு செட்டியாரிடம் சின்னண்ணாவைக் காட்டிப் புகார் செய்தார். அந்தச் செட்டியார், நாங்கள் மறுநாள் நாடகம் போடப் போவதை அறிந்தவர். எனவே அவர், “அது பையன்தான், பெண்ணல்ல” என்று கூறினார். நாடகம் நடந்து கொண்டிருக்கும் போதே முதல் வகுப்பில் இது பற்றிச் சலசலப்பு ஏற்பட்டது. பெண்ணென்றே கருதிய செட்டியார், இறுதியாக நேரிலேயே கேட்டுவிட முடிவு செய்தார். மெதுவாகச் சின்னண்ணாவிடம் நெருங்கி, “பெண்கள் இங்கே உட்காரக் கூடாது” என்றார், உடனே சிற்றப்பா சிரித்துக் கொண்டே, “பெண்ணல்ல ஐயா, அவன் பையன்” என்று கூறினார். இருந்தாலும் செட்டியார் மனம் அமைதியுறவில்லை. சில நிமிடங்கள் கழித்து மீண்டும், “நீ பெண்ணா, ஆணா?” என்று சிறிது கோபத்தோடு கேட்டார். சிற்றப்பாவுக்கும் கோபம் வந்து விட்டது. அவர் ஆத்திரத்தோடு, எழுந்து, “என்னய்யா, நான்தான் பையன்என்று சொன்னேனே; ஒரு மணி நேரமாக அவதிப் படுகிறீரே ! பையனா பெண்ணா. என்று பார்க்கிறீரா?” என்று சத்தம் போட்டார். சபையில் குழப்பம் ஏற்பட்டது. அப்புறம் தெரிந்தவர்கள் சிலர் வந்து, சிற்றப்பாவையும் செட்டியாரையும் சமாதானப் படுத்தினார்கள். பிறகு இறுதிவரையில் இருந்து, நாடகத்தை நன்கு ரசித்துப் பார்த்தோம்.  அபராதக் காணிக்கை மறுநாள் எங்கள் நாடகம் தொடங்கியது. வசூல் அமோகமாக இருந்தது. இதற்கு முன் எந்த ஊரிலும் இந்த அளவுக்கு வசூலானதில்லை. மூன்று நாடகங்கள் நடைபெற்றதும் சின்னையா பிள்ளைக்குக் கொஞ்சம் நப்பாசை ஏற்பட்டது. முதல் வகுப்பு மட்டும் இரண்டரை ரூபாயிலிருந்து மூன்று ரூபாயாக உயர்த்தப் பெற்றது. அதற்கும் செட்டிப் பிள்ளைகள் சளைக்கவில்லை. மேலும் இரண்டு நாடகங்கள் நடைப்பெற்றன. மீண்டும் முதல் வகுப்புக் கட்டணம் மூன்றரை ரூபாயாக உயர்ந்தது. அப்போதுதான் செட்டிப் பிள்ளைகள் கட்டணம் உயருவதைக் கொஞ்சம் கவனித்தார்கள். இரண்டு நாடகங்களுக்குப் பின், முதல்வகுப்பு நான்கு ரூபாய் என அறிவிக்கப்பெற்றதும் செட்டிப்பிள்ளைகள் விழித்துக் கொண்டார்கள். அன்றும் நல்ல கூட்டம். நாடகம் தொடங்கியதும் முன் வரிசையில் இருந்தவர்கள் எல்லோரும் எழுந்து நின்று கட்டணம் நான்கு ரூபாயாக உயர்த்தப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்தார்கள். சின்னையாபிள்ளை வந்து அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அன்றைய நாடகத்திற்கு ஆன வசூலி லிருந்து 125 ரூபாய்கள் கொப்புடையம்மன் கோயிலுக்குஅபராதக் காணிக்கையாகச் செலுத்தவேண்டும் என்றார்கள் சில பெரியவர்கள். சின்னையாபிள்ளை அவ்வாறே அபராதம் செலுத்தினார். அப்புறம் நாடகம் தொடர்ந்து நடைபெற்றது. மறுநாள் முதல் - மூன்றரை ரூபாய் கட்டணத்தோடு முதலாளிதிருப்தி அடைந்தார்.  ஐநூறு ரூபாய் சம்பளம் காரைக்குடியில் வருவாய் அதிகமாக ஏற்பட்டதும் சின்னையாபிள்ளையின் சுபாவத்திலும்பெரிய மாறுதல் ஏற்பட்டது. பெரியண்ணாவுக்கும் அவருக்கும் அடிக்கடி தகராறுகள் நேர்ந்தன. தான் போட்ட பணமெல்லாம் புதுகோட்டை, காரைக்குடியிலேயே வந்து விட்டதாகவும், இனி யாருக்கும் பயப்படப் போவதில்லையென்றும் ஆத்திரத்தோடு பேசியதாகப் பழனியா பிள்ளை கூறினார். அம்மாவின் செவிக்கு இந்தச்செய்தி எட்டியதும் அவர்கள், உடனே நாங்கள் அங்கிருந்து விலகி, வேறு கம்பெனிக்குப் போகவேண்டுமென்று முடிவுசெய்தார்கள். இதைக்கேள்விப் பட்டதும் சின்னையாபிள்ளை மீண்டும் வந்து, தான் ஒன்றும் சொல்லவில்லையென்று சாதித்தார். நீண்ட நேரம் வாத பிரதி வாதங்கள் நடந்தன. கடைசியாக இனிமேல் கம்பெனியில் இருக்க வேண்டுமானுல் எனக்கும் சின்னண்ணாவுக்கும் ஐநூறு ரூபாய் சம்பளமும், ஆயிரம் ரூபாய் முன்பணமும் கொடுக்க வேண்டுமென்று பெரியண்ணா கேட்டார். வேறு வழியின்றி இந்தச் சம்பளத்திற்குச் சம்மதித்து முன்பணமாக ஐநூறு ரூபாய் கொடுத்தார் சின்னையாபிள்ளை.  நாங்கள் கேட்டபடி ஐநூறு ரூபாய் சம்பளம் கொடுத்தும் சின்னையாபிள்ளையிடம் பெரியண்ணாவுக்கு நம்பிக்கை ஏற்பட வில்லை. கூடலூரில் அவர் தற்கொலை செய்து கொள்ளச் சித்தமாயிருந்த நிலையையெல்லாம் மறந்து விட்டார்; ஆதலால் எந்த நிமிஷத்திலும் கம்பெனியை விட்டு நிறுத்திவிடக் கூடும் என்றெண்ணினார் அண்ணா. காரைக்குடி நாடகம்முடிந்ததும் மீண்டும் புதுக்கோட்டையில் சில நாடகங்கள் நடத்தி விட்டு மதுரைக்குப் பயணமானோம்.  சொந்தக் கம்பெனிக்கு ஆயத்தம் மதுரை வந்ததும் பெரியண்ணா கணக்கர் வேலையிலிருந்து விலகிக் கொண்டார். அண்ணாவும் மாமாவும் கலந்து யோசித்தார்கள். எதிர்பாராது கம்பெனியில் தகராறு ஏற்படுமானால் உடனே சொந்தமாகக் கம்பெனி தொடங்குவதற்கான ஆயத் தங்களைச் செய்தார்கள். ஒரு தையற்காரரை வீட்டிலேயே அமர்த்தி, நாடகங்களுக்கு உடைகள் தயாரிக்க ஏற்பாடு செய்தனார். வெல்வெட், சரிகை முதலியவைகள் வாங்கப்பட்டன. எனக்கும் சின்னண்ணாவுக்கும் எல்லா நாடகங்களுக்கும் உடைகள் தயாராயின.  இந்த விபரத்தை அறிந்த சின்னையாபிள்ளை பெரிய அண்ணாவைக் கூப்பிட்டுக் காரணம் கேட்டார். “தங்களுடைய மனநிலை எப்படியெல்லாம் மாறுமென்று எங்களுக்குப் புரிய வில்லை. எதிர்பாராத நிலையில் திடீரென்று கம்பெனியை விட்டு விலக்கி விட்டால் என்ன செய்வது? அதற்காக, முன் எச்சரிக்கையாய்த் தயாராகிறோம். தாங்கள் சரியாக நடந்து கொள்ளும் வரையில் நாங்கள் கம்பெனியிலிருந்து விலகமாட்டோம்” என்று பெரியண்ணா உறுதி கூறினார்.  உடைகள் தயாரித்தது அம்மாவுக்குப் பிடிக்கவில்லை யென்றாலும், பெரியண்ணாவும் மாமாவும் இந்த வகையில் மிகவும் பிடிவாதமாக இருந்ததால் விட்டுக் கொடுத்தார். மதுரையில் நாடகங்கள் நல்ல வசூலோடு நடைபெற்றன.                                                      குமார எட்டப்ப மகாராஜா   மதுரையில் நடைபெற்ற நாடகங்களை எட்டையபுரம் அரண்மனை அதிகாரிகள் சிலர் வந்து பார்த்தார்கள். அவர்கள் மூலம் நாடகங்களின் சிறப்பை அறிந்த எட்டையபுரம் அரசர், தமது திவானை அனுப்பிக் கம்பெனியை எட்டையபுரத்திற்கு அழைத்தார். அரசனின் அழைப்பை ஏற்று, எட்டையபுரம் சென்றாேம். எட்டையபுரம் கொட்டகையில் நாடகங்கள் நடை பெற்றன. அப்போது எட்டையபுரம் அரசராக இருந்தவர் குமார எட்டப்ப மகாராஜா. இவர் மிகுந்த கலையுண்ர்ச்சியுடையவர்: வயது முதிர்ந்தவர்; தாத்தா மகாராஜா என்றுதான் இவரைக் குறிப்பிடுவார்கள். இவரது புதல்வர்கள் இருவ மூத்தவர் தங்க மகாராஜா. இளையவர் காசி மகாராஜா. எல்லோரும் கலையறிவு நிறைந்தவர்கள். ஊருக்குப் பொதுவாக அமைக்கப் பெற்றிருந்த நாடக அரங்கத்தைத் தவிர, அரசருக்கென்றும், அவரது புதல்வர்களுக்கென்றும் தனித்தனியாகப் பல நாடக அரங்குகள் அங்தவர் அரண்மனைக்குள்ளேயே அமைக்கப் பெற்றிருந்தன. தாத்தா மகாராஜாவுக்கு முன்னர் அரசராக இருந்தவர் ராஜா ஜெகவீர ராம வெங்கடேசுர எட்டப்பர். அவர் காலமாகிவிட்டதாலும், அவருக்குப் புதல்வர்கள் இல்லாததாலும் ஜமீன் பட்டம் அவரது சிற்றப்பாவாகிய இளைய பரம்பரைக்கு வந்து விட்டது.  தாத்தாவின் அறிவுரை எட்டையபுரம் போன இரண்டாம் நாள் நாங்கள் அனைவரும் தாத்தா மகாராஜாவைப் பார்க்கப் போனோம். பிரம்மாண்டமான அரண்மனை, அதற்கு முன் அதைப் போன்ற ஒருகட்டிடத்தை நாங்கள் பார்த்ததே இல்லை. அரசர் சாய்மான நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அவர் எங்களைப் போலவே இடுப்பில் வேட்டி, மேலே சட்டை எல்லாம் போட்டுக் கொண்டு சாதாரணமாக இருந்தார். நான் அரசரை வேறுவிதமாக உருவகப் படுத்தி வைத்திருந்தேன். வெல்வெட் சரிகையில் கால்சட்டை, மேலங்கி யெல்லாம் அணிந்திருப்பார்; பீதாம்பரம் மேலே போட்டிருப்பார், என்றெல்லாம் எண்ணியிருந்தேன். அரசர் சாதாரணமாகவும், எளிமையாகவும் இருக்கவே எங்களுக்குத் தைரியம் ஏற்பட்டது. நாங்கள் எல்லோரும் கைகூப்பி வணங்கி நின்றோம். அவர் எங்களிடம் நாடகங்களைப்பற்றிப் பேசத் தொடங்கினார், ஓயாமல் பேசிக் கொண்டே இருந்தார். திடீரென்று ஒரு நிமிடம் பேச்சை நிறுத்திவிட்டு, “நீங்களெல்லாம் குடிகாரர்களாகிக் கெட்டுப் போகக் கூடாது. எம். ஆர். கோவிந்தசாமி, குடியினால்தான் அழிந்தான். இன்னும் எத்தனையோ கலைஞர்கள் குடிப் பழக்கத்தால் நாசமாகியிருக்கிறார்கள். இந்தக் காலத்தில் தந்தையார் கூடத் தம் புதல்வர்களுக்கு மருந்து என்று சொல்லி மது வகைகளைக் கொடுக்கிறார்கள். அப்படிக் கொடுத்தாலும் நீங்கள் குடிக்கக் கூடாது. பிறகு அதுவே பழக்கமாகி விடும்” என்றார்.  அரசர் இவ்வாறு கூறியதும் நானும், சின்னண்ணுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். சென்னையில் எங்கள் தந்தையார் மலேரியா ஜுரத்திற்குப் பிராந்தியை மருந்தாகத் தந்தது நினைவிற்கு வந்தது.  கல்யாணராமையர் அரசரின் எதிரே ஆள் உயரத்தில் ஒரு படம் சுவரில் மாட்டப் பெற்றிருந்தது. வேட்டியை மூலக் கச்சமாகக் கட்டி, நீண்ட கோட்டு, தலைப்பாகையெல்லாம் அணிந்து, அந்தப் படத்தில் காணப்பட்ட உருவத்தை நாங்கள் யாரோ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என எண்ணினோம். அரசர் அந்தப் படத்தை எங்களுக்குச் சுட்டிக் காட்டி,  “இதோ, இந்தப் படத்திலிருப்பவர்தான் பிரபல நடிகர் கல்யாணராமையர். பெண்ணாக நடிப்பதற்கு அவரைப்போல் இனியொருவர் பிறக்க வேண்டும். பாமா விஜயத்தில் அவர் சத்தியபாமாவாக நடித்தது இன்னும் என்கண்முன்னே நிற்கிறது. அவரது நினைவு மாறாதிருக்கவே இந்தப் படத்தை எதிரே வைத்திருக்கிறேன். நானறிந்தவரையில் இவர் ஒருவர்தான் குடிக்காத நடிகர்” என்று கூறினார்.  பிறகு, கல்யாணராமையர் நாடகக் குழுவின் சிறப்பையும், அந்தக் குழுவில் நடிகர்களாக இருந்த ராமுடு ஐயர், சங்கரதாஸ் சுவாமிகள் ஆகியோர் பெருமையையும்பற்றி நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்தார். சிறுவர்களாக இருந்ததால், அவருடைய நீண்ட பேச்சு எங்களுக்கு அலுத்துப் போய்விட்டது. பிறகு, தம் சமஸ்தானத்தின் வெளியீடாக அச்சிட்ட கல்யாணராமையரின் பாமா விஜயம், லதாங்கி ஆகிய இரு நாடகங்களையும் கொண்டு வரச் சொல்லி, என் கையில் ஒரு பிரதியும் சின்னண்ணா கையில் ஒரு பிரதியும் கையெழுத்திட்டுக் கொடுத்தார்.  மனோஹரனுக்குச் சிறப்பு அன்றிரவு அரசரின் அரண்மனை அரங்கில் மனோஹரா நாடகம் வைக்கப் பெற்றிருந்தது. அரசரும், அவரது இகளய புதல்வர் காசி மகாராஜாவும், மற்றும் சில அதிகாரிகளும் மட்டும் கூடியிருந்தார்கள். அவர்களுக்குப் பின்புறம் அந்தப்புரப் பெண்கள் இருப்பதாகப் பேசிக் கொண்டார்கள். ஆனால், எங்களுக்குத் தெரியவில்லை. பத்துப் பதினைந்து பேர் முன்னிலையில் நாடகத்தை நடிப்பது எங்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. அன்று எனக்கும் சின்னண்ணாவுக்கும் மிகப் பெரிய பதக்கங்கள் பரிசளிக்கப் பட்டன. ஒவ்வொரு பதக்கமும் ஆறு பவுனில் செய்யப்பட்டிருந்ததாகச் சொன்னார்கள். காட்சிகள் நடந்து கொண்டிருக்கும்போது இடையே என்னை அழைத்தார்கள். நான் போய் வணங்கி நின்றேன். காசி மகாராஜா தமது புதல்வரின் கழுத்திலிருந்த ஒரு வைரம் பதித்த சங்கிலியைக் கழற்றி என் கழுத்தில் போட்டார். அப்படியே சின்னண்ணாவுக்கும் ஒருதங்கச்சங்கிலி பரிசு கிடைத்தது. மற்றும் பலநடிகர்களுக்கும் பரிசுகள் வழங்கினார்கள். நாடகம் முடிந்து, வீடு திரும்பினோம்.  மறுநாள்காலை மீண்டும் அரசர் எங்களைக் கூப்பிட்டனுப்பினார். முதல் நாள் அரசர் உட்கார்ந்திருந்த இடத்திற்கு மிக அருகிலேயே ஒரு சிறிய நாடக அரங்கு இருந்தது. மனோஹரன் சங்கிலியறுக்கும் காட்சியை அந்த அரங்கிலே நடிக்கச் சொன்னார் அரசர். எனக்கு என்னவோபோலிருந்தது. பகல்வேளை, உடைகள் இல்லை; ஒப்பனை இல்லை; சங்கிலியில்லை. இரண்டுபேர். மேல் துண்டை என் கைகளிலே கட்டியிழுத்துப் பிடித்துக் கொண்டார்கள். நான் எப்படியோ ஒரு வகையாக நடித்தேன். அரசர், தம் பேரரின் கையிலே போட்டிருந்த மோதிரத்தைக் கழற்றி என் கையிலே போட்டார். அவரது போற்றத் தகுந்த அந்தக் கலையுணர்ச்சி, அன்று எனக்குப் புரியவில்லை. இன்று அதன் சிறப்பினை எண்ணிப் பெருமகிழ்ச்சியடைகிறேன். அன்றைய மறு நாள் காசி மகாராஜா அரண்மனையிலுள்ள நாடக அரங்கில் மனோஹரன் நாடகம் நடந்தது. அன்று தாத்தா மகாராஜா வரவில்லை. மற்றவர்கள் அனைவரும் வந்திருந்தார்கள். மற்றும் பல பரிசுகள் வழங்கப் பெற்றன. சின்னண்ணாவுக்கு அந்தப்புரப் பெண்கள் ஒரு புடவையைப் பரிசாக அனுப்பினார்கள்.                                                கலைவள்ளல் காசிப் பாண்டியன்   காசிப் பாண்டியன் அவர்களைப்பற்றி இங்கே சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். வீரபாண்டியக் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்தது எட்டப்பர் பரம்பரை என்று நாம் எல்லோரும் பேசி வருகிறோம். அதே நேரத்தில் அந்தப் பரம்பரையில் பின்னால் தோன்றிய பல ஜமீன்தார்கள், தமிழ் மொழிக்கும், தமிழ்க் கலைக்கும் செய்துள்ள சிறந்த சேவையை நாம் நன்றி யுணர்வோடு போற்றவும் கடமைப் பட்டிருக்கிறோம். இராமநாதபுரம் சேதுபதி மன்னார்கள், தமிழ்ப் புலவர்களை ஆதரிப்பதில் எவ்வாறு முன்னணியில் நின்றார்களோ, அதேபோன்று கலைஞர்களை ஆதரிப்பதில் காசிப் பாண்டியன் அவர்களும், அவரது முந்திய பரம்பரையினரும் முன்னணியில் நின்றார்கள் எனக் கூறுவது சிறிதும் மிகையாகாது. இசை, நடனம், நாடகம், சிற்பம், சித்திரம் ஆகிய நுண்கலைகளையெல்லாம் நமது தமிழ் மன்னார்கள் ஆதரித்து வளர்த்தார்கள் என்பதற்குச் சான்றாக விளங்கக் கூடியவர் காசிப் பாண்டியன் அவர்கள். காசிப் பாண்டியன் சித்திரக் கலையில் வல்லவர். புகைப்படம் எடுப்பதில் நிபுணர். இசைக் கலையிலே தேர்ந்தவர். இவரது அரண்மனையில் எப்போதும் இன்னிசை முழங்கிக் கொண்டே இருக்கும். இவரது கையால் வரைந்த அற்புதச் சித்திரங்கள் சுவரை அழகுபடுத்தி நிற்கும். இசைக் கலைஞர்களுக்கும், நாடகக் கலைஞர்களுக்கும் பரிசுப் பொருட்களை வாரி வாரி வழங்கிய பெரு வள்ளல் என இவரைக் கூறலாம். இவரது அரண்மனையே ஒரு காட்சி சாலையாக விளங்கியது. இவர்கள் தந்த பரிசுகளும், காட்டிய ஆதரவும் எங்கள் நாடக வாழ்க்கையில் குறிப்பிடத் தக்க இடம் பெறக்கூடியவையாகும்.  எட்டையபுர அரசரின் அழைப்பு எங்களுக்கு எல்லா வகை யிலும் சிறப்பாக அமைந்தது. மற்றும் சில நாடகங்களை நடித்து விட்டு மதுரைக்குத் திரும்பினோம்.  தீ விபத்து மதுரையில் நாடகம் முடிந்ததும் இராமநாதபுரத்தில் - நாடகம் தொடங்குவதாக ஏற்பாடு. இராமநாதபுரத்தில் அப்போது கொட்டகையில்லாததால் சொந்தத்தில் கீற்றுக் கொட்டகை போட்டார்கள். எட்டையபுரம் நாடகம் முடிந்ததும் இராமநாதபுரம் போவதாக இருந்ததால், கம்பெனியின் காட்சிச் சாமான்களும் இராமநாதபுரத்திற்கு அனுப்பப்பட்டன. நாங்கள் மதுரைக்குத் திரும்பியதும் திடுக்கிடத்தக்க செய்தி கிடைத்தது. இராமநாதபுரம் கொட்டகையும் அதிலிருந்த சாமான்களும் யாரோ வைத்த தீயால் எரிந்து சாம்பலாகி விட்டதாக அறிந்தோம். சின்னையாபிள்ளை அலறியடித்துக் கொண்டு இராமநாதபுரத்திற்கு ஓடினார்.  எட்டையபுரம் நாடகத்திற்காக உடைகளைக் கையோடு வைத்திருந்ததால் அவை மட்டும் விபத்துக்கு இரையாகாமல் தப்பின. இராமநாதபுரம் சென்றிருந்த சின்னையாபிள்ளை துயரத்தோடு திரும்பினார். அப்போது; பிரபல ஓவியர் கொண்டையராஜு கம்பெனியில் இருந்தார். அவரைக் கொண்டு புதிய சாமான்கள் எழுதத் திட்டம் போட்டார்கள். மதுரையிலேயே மேலும் சில நாடகங்கள் நடத்திவிட்டுத் திருநெல்வேலிக்குப் பயணமானோம்  பழனியாபிள்ளை விலகினார் திருநெல்வேலி மனோரமா தியேட்டரில் நாடகங்கள் நல்ல வசூலுடன் நடைபெற்றன. ஒவியர் கொண்டையராஜு புதிதாகச் சாமான்கள் எழுதத் தொடங்கினார். இந்த நிலையில் பழனியா பிள்ளைக்கும் சின்னையாபிள்ளைக்கும் மன வேற்றுமை ஏற்பட்டது. ஆதிமுதலே உண்மையாக உழைத்து வந்தவர் பழனியாபிள்ளை. அவர் பணம் எதுவும் போடாதவர். உழைப்புப் பங்காளி. புதுக் கோட்டை, காரைக்குடி, மதுரை ஆகிய இடங்களில் வசூல் மிகவும் லாபகரமாக இருந்தது. அந்தச் சமயத்தில்கூட பழனியா பிள்ளைக்குப் பங்கு எதுவும் கொடுக்கவில்லை. எனவே பழனியா பிள்ளை கம்பெனியிலிருந்து விலகிக் கொண்டார். அவர் தொடர்ந்து கம்பெனியில் உழைத்து வந்தவரானதால் எல்லோ ருக்கும் அவரிடம் மதிப்பும் அனுதாபமும் இருந்தன. பிரிந்துபோன அவர் உடனடியாகச் சொந்த கம்பெனி துவக்க ஏற்பாடு செய்வ தாகவும் அறிந்தோம். அவர்மீது பற்றுக் கொண்ட சில நடிகர்கள் கம்பெனியை விட்டுச் சொல்லாமலேயே விலகி அவரிடம் போய்ச் சேர்ந்தார்கள். வேறு சில முக்கியமான தொழிலாளர் களும் அவருக்காக விலகினர்கள். திருநெல்வேலி நாடகம் முடிந்து நாகர்கோவிலுக்குச் சென்றோம்.                                                                                                          நாஞ்சில் நாட்டில்   நாகர்கோவிலில் எங்களுக்கு உறவினார்கள் பலர் இருந்தார்கள். நான், எனக்கு அறிவு தெரிந்த பருவம் முதல் மதுரையில் இருந்து வந்ததால் உறவினார்கள் எவரையுமே சந்தித்ததில்லை. நாகர்கோவிலில்தான் முதன்முதலாக அந்த வாய்ப்பு ஏற்பட்டது. தந்தை வழியில் சொந்தக்காரர்களான பலரை அம்மா எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். அம்மாவின் உடன் பிறந்த தங்கை, அம்முக்குட்டியம்மாள் நாகர்கோவிலுக்குப் பத்து மைல் தொலைவிலுள்ள அழகிய பாண்டியபுரத்தில் வாழ்க்கைப்பட்டிருந்தார். சின்னஞ்சிறு வயதில், சில காலம் நானும் அழகிய பாண்டியபுரத்தில் சித்தி வீட்டில் இருந்திருக்கிறேன். சித்தியைப் பார்த்ததும் சின்னஞ்சிறு பருவத்தில் நடந்த நிகழ்ச்சிகள் என் நினைவுக்கு வந்தன.  சின்னஞ்சிறு வயதில் அப்போது எனக்கு நான்கு வயது இருக்கும். அழகிய பாண்டியபுரத்தில் சித்தி வீட்டில் இருந்தேன். நான் எப்போது போனாலும் சித்தி எனக்கு அவல் விரவிக்கொடுப்பார்கள். நாஞ்சில் நாட்டுச் சம்பா அவல் மிகுந்த சுவையாக இருக்கும். அவலை உரலில் போட்டு இடித்து, வெல்லச்சர்க்கரை, தேங்காய்த் துருவல், ஏலம், சுக்கு இவை எல்லாம் போட்டு விரவித் தருவார்கள். ஒரு நாள் யாரோ நண்பர்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள். சித்தி இரும்பால் செய்யப்பட்ட அரைப்படி நாழியை எடுத்துக் கொண்டு, வீட்டின் எதிரேயுள்ள கடையில் அவல் வாங்கப் புறப்பட்டார்கள். உடனே நான் நாழியை அவர்களிடமிருந்து பிடுங்கிக் கொண்டு, அவல் வாங்கக் கடைக்கு ஓடினேன். அவலை வாங்கிக் கொண்டு மீண்டும் வேகமாக வீட்டுக்குத் திரும்பினேன். ஏதோ கல் தடுக்கியது; கால் இடறி நாழியோடு கீழே குப்புற விழுந்தேன். விழுந்த வேகத்தில் நாழியின் கூரான விளிம்பு, என் நாடியின் வலப்புறத்தில் தாக்கியது. ஆழமான காயம், ரத்தம் கொட்டியது. சித்தி ஓடி வந்து, என்னை மார்போடு அணைத்துக் கொண்டார்கள். உடனடி சிகிச்சை செய்யப் பெற்றது. காகிதங் கள் சிலவற்றைக் கொளுத்தி, அந்தக்கரியைத் தேங்காயெண்ணெ யில் குழப்பிக் காயம்பட்ட இடத்தில் வைத்துக் கட்டினார்கள். ரத்தம் வருவது நின்றது. இரண்டொரு நாட்களில் காயமும் ஆறிவிட்டது. வேறு எந்த மருந்தும் போட்டதாக எனக்கு நினைவில்லை. 56 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால், அந்தக் காயத்தின் வடுமட்டும் சித்தி வீட்டின் நினைவாக இன்னும் மாறாமல் இருக்கிறது. சித்தியிடத்தில் அம்மா அதிகமான அன்பு வைத்திருந்தார். வறுமையாயிருந்த நிலையில்கூடச் சித்திக்குப் பல வகைகளில் உதவிபுரிந்து வந்தார்.  பகவதி பிறந்த ஊர் நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரிக்குப் போகும் வழியில் மூன்றாவது மைலில், ஆசிராமம் என்ற ஒரு சிற்றுார். அந்த ஊரில் தந்தையார் குடும்பத்தோடு சில காலம் வசித்து வந்தார். ஆசிராமத்தில் தம்பி பகவதி பிறந்தான். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்போது நான் ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஏடு படித்துக் கொண்டிருந்தேன். எங்களைத் தனியே விட்டு அப்பா அடிக்கடி நாடகத்திற்காக வெளியூர்களுக்குப் போவார். ஒருமுறை தாமரைக்குளம் என்னும் அருகேயுள்ள சிற்றுாரில் அப்பா நல்லதங்காள் வேடம் பூண்டு நடிப்பதை நான் பார்த்திருக்கிறேன். அன்று, நான் ஏழாவது பிள்ளையாக நடித்ததை முன்பே கூறியிருக்கிறேன். ஏதோ கனவுபோல் இருக்கிறது. அப்பா ஆறு பிள்ளைகளையும் கிணற்றில் போட்டுவிட்டு என்னைத் தூக்க வந்தார். நான் அழத் தொடங்கிவிட்டேன். அவர் பிடிக்கு அகப்படாமல் உள்ளே ஒடினேன். அப்பா என்னைத் துரத்திப் பிடித்துக் கிணற்றில் போட்டதாக நினைவு.  சுட்டித்தனம் ஒருநாள் வீட்டின் வெளியே நடுத்தெருவில் விளையாடிக் கொண்டிருந்தேன். கன்னியாகுமரிக்குப் போகும் முக்கியமான சாலை அது. அந்தக் காலத்தில் போக்கு வரத்து அதிகம் இல்லை. என்றாலும், மணிக்கொரு வண்டியாவது போய்க்கொண்டுதான் இருக்கும். யாரோ ஒருவர் சைக்கிளில் வேகமாக வந்தார். அவரைத் தடுக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றியது. சைக்கிளை வழிமறித்து நின்றேன். அவர் மற்றொரு புறமாக விலகிச் சென்றார். நானும் விடவில்லை. அந்தப் பக்கமும் ஒடி வழிமறித்தேன். என்னைத் தாண்டிச் செல்ல அவர் சைக்கிளை இருபுறமும் திருப்பி ஒட்டினார். அதுவும் பலிக்கவில்லை. நான் வீரனல்லவா? விடுவேனா? குறுக்கே விழுந்து தடுத்தேன். அவர் வேகமாகப் போக முயன்றதால் சைக்கிள் என்மீது பலமாக மோதியது. நானும் அவரும் கீழே விழுந்ததோடு, சைக்கிளும் விழுந்தது. வீதியில் ஒரே குழப்பம். அப்பா ஓடி வந்து, என்னையெடுத்து அணைத்துக் கொண்டார். சைக்கிள்காரருக்கு நல்ல பூசையும் விழுந்தது. அவரைப் பார்க்க எனக்கே பரிதாபமாக இருந்தது. பாவம், அவர் என்னசெய்வார்? நானல்லவா குற்றவாளி! நாகர் கோவிலில், இந்தப்பழைய நினைவுகளெல்லாம் எனக்கு இன்பமாக இருந்தன.  பகவதி பால பார்ட்டு நாடகங்கள் ஒழுகினசேரி சரஸ்வதி தியேட்டரில் நடை பெற்றன. நல்ல வசூலும் ஆயிற்று. அந்த நாளில் ‘பாலபார்ட்டு’ என்று ஒரு வேடம் உண்டு. மூன்று அல்லது ஐந்து பேர், திரை தூக்கியவுடன் மேடைமீது நின்று தோத்திரப் பாடல்களைப்பாடுவார்கள். அவர்கள் சில பாடல்களைப் பாடிவிட்டு, உள்ளே வந்ததும் ‘பபூன்’ போவார். அவரும் சில பாடல்களைப் பாடுவார். அதன் பிறகுதான் நாடகக் காட்சி தொடங்கும். இந்தப் பால பார்ட்டுகளில் ஒருவகைத் தம்பி பகவதியும் நாகர்கோவிலில் அரங்கேறினன். நடிகர்கள் கூட்டமாகப்பாடப் பயிற்சி பெறுவதற்கு இந்த பால பார்ட்டு மிகவும் உபயோகப்பட்டது. தாளம் சரியாக வராதவர்களையெல்லாம் பால பார்ட்டில் ஒரு மாத காலம் போட்டு வைத்தால், கூட்டத்தோடு பாடி அவர்களுக்குத் தாளம் வந்துவிடும். பகவதியும் இவ்வாறு பயிற்சி பெறத் தொடங்கினன். நாகர்கோவில் நாடகம் முடிந்து, திருவனந்தபுரம் போகலாமென்று சிற்றப்பா, மாமா ஆகியோர் கருத்துத் தெரிவித்தார்கள். திருவனந்தபுரம் எங்களுடைய சொந்த ஊரானதால் நாங்கள் அங்கேயே கம்பெனியைக் கலைத்துவிடக் கூடுமெனச் சின்னையாபிள்ளை பயந்தார். எனவே, கொல்லம் கொட்டகையைப் பேசி வந்தார். நாகர்கோவில் நாடகம் முடிந்து கொல்லத்திற்குச் சென்றோம்.  மகரக்கட்டு கொல்லம், காயிக்கரை முதலாளி சாய்புவின் கொட்டகையில் நாடகங்கள் நடைபெற்றன. கொல்லத்தில் சின்னண்ணாவுக்கு, “மகரக் கட்டு ஏற்படுவதற்குரிய அறிகுறிகள் தோன்றின. பெண்கள் மங்கைப் பருவம் அடையும்போது உடலிலே மாறுதல் ஏற்படுவதுபோல் ஆண்களின் பருவ வளர்ச்சியைக் காட்டுவதற்குரிய அறிகுறிதான் ‘மகரக்கட்டு’ என்பது. பதினைந்து அல்லது பதினாறாவது வயதில் இந்த மகரக்கட்டு தோன்றும். இனிமையான குரல் மாறி கனமான குரல் ஏற்படும். இந்த இடைக்காலம் அந்த நாளில் நடிகர்களுக்கு மிகவும் பயங்கரமான காலமென்று சொல்லலாம். குரல் நாம் நினைக்கிறபடி கட்டுப்படாமல் அதன் போக்கில் நம்மை இழுத்துப் போகும். பிசிர் அடிக்கும் பருவம் என்று நாங்கள் இதைக் குறிப்பிடுவோம். பாட்டுக்கு முதன்மை யிருந்த காலமாதலால் பெரும்பாலான நடிகர்கள் இந்தக்கட்டத்தைத் தாண்டுவது கஷ்டம். இந்த மகரக்கட்டு வரும் சமயத்தில் பெரும்பாலும் நடிகர்கள் மதிப்பிழந்து விடுவார்கள். குரலிலே கோளாறு ஏற்படுகிறது என்று தெரிந்ததும் அவருடைய வேடங்களெல்லாம் உடனடியாக மாற்றப்படும். அதிலும் பெண்வேடம் புனையும் இளைஞர்களுக்கு இந்த நேரத்தில் சொல்ல முடியாத மனோவேதனை.  சின்னண்ணாவுக்கு மகரக்கட்டு ஏற்படுவதைக் கண்ட சின்னையாபிள்ளை ஏதேதோ சொன்னதாக அறிந்தோம். “இனி மேல் முத்துசாமி, வேடத்திற்குப் பயன்பட மாட்டான். ஷண்முகத்திற்கு மட்டும் ஐநூறு ரூபாய் சம்பளம் தர இயலாது” என்று சின்னையாப் பிள்ளை சொன்னதாகப் பெரியண்ணா வந்து கூறினார். குறைந்த சம்பளம் போட்டுப் புதிதாக ஒப்பந்தம் எழுத வேண்டுமென்றும் பேசிக் கொண்டதாக அறிந்தோம். பெரியண்ணாவுக்கும் சின்னையாப் பிள்ளைக்கும் பேச்சு வார்த்தை தடித்தது. அம்மாவுக்கு இந்தச் செய்தி எட்டியதும், எந்தக் காரணத்தைக் கொண்டும் கம்பெனியிலிருந்து விலகக்கூடாதென்று சொல்லிக்கொண்டிருந்த அவர்கள், உடனேயே கம்பெனியிலிருந்து விலகிவிட வேண்டுமென அறிவித்தார்கள். இரண்டு நாட்களில் கம்பெனியை விட்டுப் பிரிந்து திருவனந்தபுரம் வந்து சேர்ந்தோம்.    ஸ்ரீ பால ஷண் முகானந்த சபா   திருவனந்தபுரம் ஆரிய சாலைத் தியேட்டரில், உள்ளேயே சில வீடுகள் இருந்தன. அங்கே வந்து தங்கி, சொந்தக் கம்பெனி ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்தோம். மாமா செல்லம்பிள்ளை பல இடங்களுக்குப் போய், புதிய பையன்களைக் கொண்டு வந்து சேர்ந்தார். எஸ். எஸ். சங்கரன் நன்றாகப் பாடக் கூடியவர். அவரைத் திருநெல்வேலியிலிருந்து அழைத்து வந்தார்கள். அவருக்குக் கோவலன் பாடம் கொடுக்கப்பெற்றது. கம்பெனிக்கு, ஸ்ரீ பால ஷண்முகானந்த சபா எனப் பெயர் சூட்டப் பெற்றது. திருவனந்தபுரத்தில்தான் கம்பெனியைத் துவக்கினோம். என்றோலும், மதுரை நகரத்தின்பால் எங்களுக்கு ஏற்பட்டிருந்த பற்றுதலினல் ‘மதுரை ஸ்ரீ பால ஷண்முகானந்த சபா’ என்றே பெயர் வைத்தோம். நாடகங்கள் வேகமாய்த் தயாராயின.  விளையும் பயிர் முளையிலே மாமா நாகர்கோவிலிலிருந்து நாலைந்து பையன்களைக்கூட்டி வந்திருந்தார். அவர்களில் ஒருவருடைய சாரீரம், மகரக் கட்டு வந்து, தேறிய சாரீரம் போல் கனமாகவும் கம்பீரமாகவும் இருந்தது. புதிய பையன்களுக்குப் பாட்டுகளைச் சொல்லி வைக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப் பெற்றது. புதிதாக வந்த நான்கு பேரையும் உட்கார வைத்து நான், ‘மூல மந்திர மோன நற்பொருளே’ என்னும் சுவாமிகளின் பாடலைச் சொல்லிக் கொடுத்தேன். ஐந்தாறு முறை சொல்லிக் கொடுத்து விட்டுத். தண்ணிர் குடிக்கச் சென்றேன். மீண்டும் மாடிக்கு வரும்போது, புதிதாக வந்தவர்களில் கனமான சாரீரமுடையவர், மற்ற மூன்று பேருக்கும் அந்தப் பாடலைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். எனக்கு ஒரே வியப்பாக இருந்தது. “இந்தப் பாட்டு உனக்கு ஏற்கனவே தெரியுமா?” என்று அவரைக் கேட்டேன். “நாகர்கோவிலில் உங்கள் நாடகம் நடைபெற்றபோது நான் அடிக்கடி வந்து பார்த்திருக்கிறேன். பால பார்ட்டுகள் இந்தப் பாடலைத் தினமும் பாடுவதைக் கேட்டிருக்கிறேன்” என்றார். எனக்குப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டது. “சரி, நீயே சொல்லிக் கொடு” என்று சொல்லி விட்டு, நான் வேறு வேலையைக் கவனிக்கச்சென்றேன். பாடம் சொல்லிக்கொடுத்த முதல் நாளே ஆசிரியப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அந்த இளைஞர் யார் தெரியுமா? அவர்தாம் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன். விளையும்பயிர் முளையிலே தெரியும் என்பார்கள். அதைப்போல என். எஸ். கிருஷ்ணன், வருங்காலத்தில் மகோன்னதமாக விளங்கப்போகிறார் என்பதை அவரது இளம் பருவச் செயல்கள் காட்டின.  விளையாட்டுத் திறன் மாதம் பதிமூன்று நாடகங்கள் நடந்துகொண்டிருந்த காலமாதலால் எங்களுக்கு நிறைய ஒய்வுண்டு. ஒய்வுநேரங்களில் பலீன் சடுகுடு, கிளிதட்டு, நொண்டி, பிள்ளையார் பந்து முதலிய பலவிதமான விளையாடல்களை நாங்கள் ஆடுவோம். எந்த விளையாட்டுக்கும் இரண்டு கட்சி உண்டல்லவா? கட்சி பிரிக்கும் போது ஒவ் வொருவரும், என். எஸ். கிருஷ்ணன் எந்தக் கட்சியில் இருக்கிறாரோ, அந்தச் கட்சியில் சேரவே விரும்புவார்கள். ஏன் தெரியுமா? என். எஸ். கிருஷ்ணன் இருக்கும் கட்சி கண்டிப்பாய் வெற்றி பெறும். நான் எப்போதும் என். எஸ். கே. கட்சியில் தான் சேருவேன்.  ‘கிளித்தட்டு’ என்பது ஒரு நல்ல விளையாட்டு, அதில் ஒவ்வொரு கட்சியிலும் கிளியாக இருப்பவருக்குச் சில தனி உரிமைகள் உண்டு. கட்டத்தைச் சுற்றி வரவும், குறுக்கே தாண்டியடிக்கவும் கிளிக்கு மாத்திரம் உரிமையுண்டு. இந்த ஆட்டத்திலும் வழக்கமாக என். எஸ். கே. கட்சிதான் வெற்றி பெறும். அவர் கிளியாக நின்று அற்புதமாக விளையாடுவார். வழக்கமாக அவர் கட்சி ஜெயிப்பதைக் கண்டதும், நாங்கள் எல்லோரும் அவரை இரு கட்சியாருக்கும் பொதுக் கிளியாக இருக்க வேண்டுமென்று சொல்வோம். அவ்வாறே அவர் பொதுக்கிளியாக இருந்து, ஒவ்வொரு ஆட்டத்தின் போதும் தம் கட்சிக்கு வெற்றியைத் தேடிக் கொடுப்பார்.  விளையாட்டுகளில் இவ்வாறு முதன்மை பெற்றிருந்தாலும் நாடகங்களில் சிறிய பாத்திரங்களையே தாங்கி வந்தார். அவர் கோவலனில் பாண்டியன், சாவித்திரியில் சத்தியவானின் தந்தை துயுமத்சேனன், மனோஹரனில் பெளத்தாயணன் இவைதாம் என். எஸ். கிருஷ்ணனுக்குத் துவக்கத்தில் கிடைத்த வேடங்கள்.  எஸ். ஆர். ஜானகி நாடகம்  திருவனந்தபுரம் ஆரிய சாலையில் எங்கள் கம்பெனி தொடங்கிய நேரத்தில், ஓவியர் பொன்னுசாமிப் பிள்ளை கம்பெனியார் அங்கே நாடகங்கள் நடத்தி வந்தார்கள். அவர்களும் எங்களுடனேயே தியேட்டருக்குள் குடியிருந்தார்கள். அவர்களுடைய நாடகங்கள் சிலவற்றைப் பார்க்க எங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது. அந்தக் கம்பெனியில் எஸ். ஆர். ஜானகி அம்மாள் கதாநாயகனாக நடித்து வந்தார். கதாநாயகி எஸ். என் இராஜலட்சுமி, ஜானகியம்மாள் மிக நன்றாக பாடுவார். அவரது குரல் கெம்பீரமாக இருக்கும். வேடம் புனைந்து, மேடைக்கு வந்துவிட்டால் பெண் என்ற நினைவே சபையோருக்கு ஏற்படாது, தோற்றம், நடை, பாவனை எல்லாம் ஆண் போலவே இருக்கும். அவர்கள் நடித்த நாலைந்து நாடகங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்ததும் எங்களுக்கெல்லாம் அவர்கள் மீது பற்றுதல் உண்டாகி விட்டது. நாங்கள் எங்கள் அன்னையாருடன் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு அடுத்த அறையிலேயே தங்கியிருந்தோம். எஸ்.ஆர். ஜானகியம்மாள் எங்கள் தாயாருடன் நெருங்கிப் பழகினார்கள். அங்கு, சிலநாட்கள் ஒன்றாகக் குடியிருந்து விட்டு, அவர்கள் பிரிந்து சென்றபோது எங்களுக்கு வருத்தமாக இருந்தது.  நாடகத் துவக்கம் 1925 பிப்ரவரி 15 ஆம் நாள் சின்னையாபிள்ளை கம்பெனியை விட்டு விலகினோம், ஒன்றரை மாதத்திற்குப் பின் 1925 மார்ச்சு 31ஆம் நாள், ஆரியசாலைத் தியேட்டரில், எங்கள் சொந்தக் கம்பெனியின் முதல் நாடகம் அரங்கேறியது. ஆரம்ப நாடகம் கோவலன்.  நாடகக் கம்பெனி தொடங்குவதற்காய் நாங்கள் செலவிட்ட பணம் சுமார் ஐநூறு ரூபாய். சின்னையாபிள்ளை கம்பெனியிலிருந்து பல நடிகர்கள் எங்கள் கம்பெனிக்கு வரத் தயாராக இருந்தார்கள். என்றாலும், அம்மா யாரையும் சேர்த்துக் கொள்ளக் கூடாதென்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள். கோவலனாக நடித்த எஸ். எஸ். சங்கரன் முன்பே நாடகங்களில் நடித்தவர். மற்ற நடிகர்கள் அனைவரையும் புதிதாகவே சேர்த்துக் கொண்டோம். நகைச் சுவை நடிகர் எம். ஆர். சாமி நாதன் ஒருவர் மட்டும் சின்னையாபிள்ளையிடமிருந்து விலகிப் பிடிவாதமாக வந்து எங்களிடம் சேர்ந்து கொண்டார். அவருடைய வேண்டுகோளை அம்மாவாலும் தடுக்கமுடியவில்லை.  முதல் நாடகத்தில் தம்பி பகவதி பபூனாக நடித்தான். சுவாமிகளின் அருமையான நகைச்சுவைப் பாடல்களை அவன் பாடியபோது, சபையோர் வெகுவாக ரசித்தார்கள். இரண்டாவதாக மனோஹரா நடைபெற்றது. மொத்தம் ஆறு நாடகங்களே தயாராகியிருந்தன. அவற்றை நடித்துவிட்டு நாகர்கோவிலுக்குச் சென்றோம்.  செய்கு தம்பிப் பாவலர் தீர்க்க தரிசனம் நாகர்கோவிலிலும் இதே ஆறுநாடகங்கள் நடைபெற்றன. கோவலன் நாடகத்திற்குப் பெரும் புலவரான கோட்டாறு சதாவதானம் செய்குதம்பிப் பாவலர் வந்திருந்தார். ஒழுகினசேரி சரஸ்வதி ஹாலில் நாடகங்கள் நடைபெற்றன. என். எஸ். கிருஷ்ணன் ஒழுகினசேரியைச் சேர்ந்தவராதலால், அங்குள்ள சில நண்பர்கள் ஒன்று சேர்ந்து, என். எஸ். கிருஷ்ணனுக்கு ஒரு தங்கப் பதக்கம் பரிசளித்தார்கள். அந்தப் பதக்கத்தைப் பாவலரைக் கொண்டு, வாழ்த்திக் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். செய்கு தம்பிப் பாவலர் இன்று நம்மிடையே இல்லை. அவர் பெரும் புலமை வாய்ந்தவர். புத்தேரி, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை யவாகள், பாவலர் மறைந்தபோது பாடிய ஒரு உருக்கமான பாடல், அவரது பெரும் புலமைக்குச் சான்றாக நிற்கின்றது.  "ஒரும் அவதானம் ஒருநூறு செய்திந்தப்  பாரில் புகழ்படைத்த பண்டிதனைச்-சீரிய  செந்தமிழ்ச் செல்வன, செய்குதம்பிப் பாவலனை  எந்தகாள் காண்பேன் இனி?"  இத்தகைய பெரும் புகழ்படைத்த முஸ்லீம் பெரியார், அன்று மேடையேறி, பாண்டியன் வேடத்தில் நின்ற என். எஸ். கிருஷ்ணனை வாழ்த்திப் பரிசளித்தார்.  “நம் நாஞ்சில்நாட்டு இளஞ்சிறுவன் என்.எஸ். கிருஷ்ணன் வருங்காலத்தில் மகா மேதையாக விளங்கப் போகிறான். இவனுடைய புகழால் நம் நாஞ்சில்நாடு மட்டுமல்ல; தமிழ்நாடே பெருமையடையப் போகிறது.”  எனச் செய்குதம்பிப் பாவலர்தம் செந்தமிழ்த் திருவாயால் வாழ்த்தியது என் நினைவில் இருக்கிறது. அப்பெரியாரது தீர்க்க தரிசனத்தை எண்ணி, இப்போதும் நான் பெருமையடைகிறேன். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் எத்தனையோ முறை இதைப் பெருமையோடு சொல்லி மகிழ்ந்திருக்கிறார்.  யார் உரிமையாளர்?  கம்பெனி திருநெல்வேலிக்கு வந்தது. கொல்லத்தில் நாங்கள் விலகியபின் சின்னையாபிள்ளை மிகவும் சிரமப்பட்டதாக அறிந்தோம். எப்படியோ தட்டுத் தடுமாறி அவரும் திருநெல்வேலிக்கு வந்து சேர்ந்தார். எங்கள் கம்பெனி மனோரமா தியேட்டரிலும், சின்னையாபிள்ளை கம்பெனி கணபதி விலாஸ் தியேட்டரிலும் நடைபெற்றது. பல நடிகர்கள் போய் விட்டதால் அவருடைய கம்பெனி தள்ளாடிக் கொண்டிருந்தது.  சகோதரர்கள் நாங்கள் நால்வரும் சிறுவர்களாய் இருந்ததால் மாமா செல்லம்பிள்ளை, தம் பெயரையும், சிற்றப்பா பெயரையும் உரிமையாளர் ஸ்தானத்தில் போட்டார். இதைப் பார்த்த சிற்றப்பா யாராவது ஒருவர் பெயர் இருந்தால் போதும்’ என்றார், உடனே மாமா, தம் பெயரை எடுத்து விட்டார். ‘டி. எஸ்.செல்லம்பிள்ளை உரிமையாளர்’ என்று சிற்றப்பா பேரே விளம்பரப் படுத்தப் பட்டது. இந்த நிலையில் நாங்கள் சொந்தக் கம்பெனி தொடங்கிய விஷயம் தெரிந்து, பழைய மானேஜர் காமேஸ்வர ஐயர் வந்து சேர்ந்தார். கருப்பையாபிள்ளை கம்பெனி அதற்குள் கலைந்து விட்டதால் சும்மா இருந்த ஐயரை அவரது விருப்பத்தின்படி எங்கள் கம்பெனியில் சேர்த்துக் கொண்டோம். அவருடைய போக்கு எங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் நல்ல நிருவாகத் திறமையைக் கருதி, இடமளித்தோம். மானேஜர் ஐயர் வந்து சேர்ந்தவுடன் இரண்டாம் நாளே ஒரு மாறுதல் செய்தார். உரிமையாளர் ஸ்தானத்திலிருந்த சிற்றப்பா பெயரை நீக்கி விட்டார். இரண்டு நாடக விளம்பரங்களில் எந்தப்பெயரும் இல்லாதிருந்தது. சிற்றப்பாவுக்குக் கோபம் வந்து விட்டது. ஐயரைக் கடுமையாகக் கண்டித்தார். ஐயர் ஏதோ சமாதானம் சொல்லிப் பார்த்தார். ஒன்றும் சரிப்படவில்லை. கடைசியாகச் சிற்றப்பா பெயர் மறுபடியும் ஒழுங்காக விளம்பரங்களில் போடப் பெற்றது.                          தூத்துக்குடி கலவரம்   திருநெல்வேலி நாடகம் முடிந்து தூத்துக்குடி சென்றோம். அந்த நாளில் அநேகமாக எல்லா ஊர்களிலும் ரெளடிகள் உண்டு. அவர்கள் நாடகக்காரர்களிடம் எப்போதும் தங்கள் கைவரி சையைக் காண்பிப்பது வழக்கம். இதற்காக ஒவ்வொரு ஊரிலும் சில ரெளடிகளுக்கு ஒசி டிக்கட் கொடுத்துச் சரிப்படுத்துவதுண்டு. தூத்துக்குடியில் இப்படிப்பட்ட ரெளடிகள் அந்த நாளில் அதிகம். நாங்கள் துரத்துக்குடியில் நாடகம் துவக்கிய அன்று, சில் ரெளடிகள் கம்பெனி வீட்டுக்கு வந்தார்கள். நானும் மானேஜர் ஐயரும் திண்ணையில் உட்கார்ந்திருந்தோம். ஐயரிடம் அவர்கள் ஏதோ பேசினார்கள். எந்தக் கம்பெனி வந்தாலும் தாங்கள்தாம் நுழைவு வாயிலில் இருப்பது வழக்கமென்றும், அதற்காக ஒரு குறிப்பிட்ட தொகை தரவேண்டுமென்றும் சொன்னார்கள். ஐயர், வந்தவர்களிடம் பொறுமையோடு பேசவில்லை. பேச்சு வளர்ந்து தகராறு முற்றியது. வந்த ரெளடிகள், ‘இன்று நாடகம் நடப்பதைப் பார்க்கலாம்’ என்று போய் விட்டார்கள். ஐயர் கோபத்தோடு, “இது என்ன வெள்ளரிக்காய் பட்டணமா?” என்று முணுமுணுத்தார். கொட்டகையோ மூக்கமேஸ்திரியின் பழைய ஓலைக் கொட்டகை. துரத்துக்குடியைப்பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். எனவே, இரவு நாடகத்தின் போது என்ன நேருமோவென்று நான் பயந்து கொண்டே இருந்தேன்.  முதல் நாடகம் அபிமன்யு சுந்தரி. நாடகம் தொடங்கி நடந்து கொண்டிருந்தது. வெளிவாயிலுக்குச் சுமார் ஐம்பதடி தூரத்தில்தான் அரங்கின் நுழைவாயில். கொட்டகை முழுதும் மெல்லிய மூங்கிற் பாயினால் போடப் பெற்றிருந்தது. நான் மூங்கிற் பாயின் இடுக்குகளின் வழியாகவெளிவாயிலைப்பார்த்துக் கொண்டிருந்தேன். குழப்பம் ஏதாவது நடக்கிறதாவென அடிக்கடி விசாரித்துக் கொண்டே நின்றேன். சுந்தரி, அபிமன்யுவுக்கு ஒலை எழுதியனுப்பும் காட்சியும் முடிந்தது. அடுத்து அபிமன்யு வரவேண்டிய காட்சி. நான் வேட்டைப் பாட்டுப் பாடியபடி மேடைக்கு வந்தேன். அவ்வளவுதான்.  வாயிலில் குழப்பம் வெளியே வாயிலில் ஏதோ குழப்பம் நடப்பது நன்றாகத் தெரிந்தது. டிக்கட் விற்குமிடத்திலும் ஒரு கூட்டம் பாய்ந்தது. அடி, குத்து, வெட்டு என்றெல்லாம் பெருஞ் சத்தம் கேட்டது. பலத்த அடிதடி நடப்பதை மேடையிலிருந்தே பார்த்தேன் . எனக்குக் குலை நடுக்கம் எடுத்தது. இதில் பெரிய ஆச்சரியம் என்ன வென்றால், உள்ளேயிருந்த சபையோர் அப்படியொரு கலவரம் நடப்பதாகவே கருதியதாகத் தெரியவில்லை. அமைதியாக நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எவரும் இந்தக் குழப்பத்தைப்பற்றிச் சட்டை செய்யவில்லை. ஆணகள்தான் அப்படியென்றால் பெண்களும் வீராங்கனைகளாக இருந்தார்கள். யாரும் எழுந்திருக்கவில்லை. கலவரத்தைக் கவனிக்கவுமில்லை. எதுவும் நடவாததுபோல் நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்களுக்கு இது புதிய அனுபவமாயிருந்தது. கூச்சலும், குழப்பமும் அதிகரித்தது. கலவரம் உச்சநிலையடைந்தது, முன் திரை விடப்பெற்றது. நான் அச்சத்தோடு பின்புறம் நின்று கொண்டிருந்தேன். ஆர்மோனியம் கிருஷ்ணமூர்த்திஐயர் வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆர்மோனியம், மிருதங்கம் எல்லாம் அரங்கின் வலதுபுறத்தில்தான் இருக்கும். முன்னால் உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு ரசிகர்க்கு, நாடகத்தை நிறுத்தியது பிடிக்கவில்லை போலிருக்கிறது. நாடகத்தைத் தொடர்ந்து நடத்தும்படி சத்தம் போட்டார். அத்தோடு நிற்கவில்லை. தான் உட்கார்ந்திருந்த நாற்காலியைத் தூக்கி, ஆர்மோனியக்காரரின் மேல் வீசினார். நல்ல வேளையாக நாற்காலி அவர்மேல் விழவில்லை. முன் வீதித் திரையைக் கிழித்துக் கொண்டு, உள்ளே நின்ற என் காலடியில் வந்து வீழ்ந்தது.  அரங்கிற்குள் ஆர்ப்பாட்டம் இந்தச் சமயத்தில் பெருங்கூச்சலுடன் மேடைக்குள் ஒரு கூட்டம் நுழைந்தது. “இதோ இருக்கிருண்டா” என்றது ஒரு குரல். அடுத்த வினாடி யாருக்கோ பலமான- அடி விழுந்தது. ஐம்பது அறுபது பேர் தாக்கினார்கள் ஒருவரை. அடிப்பட்டவர் “நானில்லே, நானில்லே’ என்று கதறினார். அந்தக்குரல் எங்கள் சமையல் மாதவன் நாயருடைய குரல். நாங்கள் பதறினோம்; சிறுவர்கள் அனைவரும் அஞ்சி நடுங்கி ஒருபுறமாக நின்றோம். வந்தவர்களில் ஒருவர், “டே, பையன்களை யாரும் ஒண்ணாம் செய்யாதீங்கடா” என்று தெய்வம்போல் குரல் கொடுத்தார். இதற்குள் சமையல் மாதவன் நாயரை உற்றுப் பார்த்த ஒருவர் “அடே, இவனில்லேடா, குத்தினவன் வேறு ஆளு. வாங்க வெளியே போய்ப் பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார். அனைவரும் அவரைப்பின் தொடர்ந்தார்கள்.  சில நிமிடங்களில் கொட்டகையின் பின்புறமிருந்த மூங்கிற் பாயைக் கிழித்துக் கொண்டு ஒரு உருவம் எட்டிப்பார்த்தது. அவர் எங்கள் சிற்றப்பா. கலவரக்காரர்கள் அவரைத்தான் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தது. அவரைப் போய் விடுமாறு வேண்டிக்கொண்டோம். அவர், தான் அருகிலேயே இருப்பதாகவும், பயப்படாதிருக்குமாறும் கூறிவிட்டுமறைந்தார். இதற்குள் நாடகத்தை நடத்துமாறு சபையோர் சத்தம் போட்டார்கள். இத்தனைக்குழப்பத்திலும் நாடகம் பார்க்க வந்தவர்களில் யாரும் கலவரம் அடையவில்லை. இதுபோன்ற கலவரங்கள் பலவற்றை அவர்கள் அடிக்கடி பார்த்து பழகிவிட்டதுதான் காரணமென்று பின்னால் தெரிந்தது. நாடகம் தொடர்ந்து நடை பெற்று முடிந்தது. கம்பெனி வீடு அருகிலேயே இருந்தது. என்றாலும் எங்களுக்கு வெளியே போகப் பயமாகவே இருந்தது. பெரியவர்கள் சிலர் தைரியமாக நின்று அழைத்துச் சென்றார்கள். மறு நாள் பொழுது புலர்ந்த பிறகு, சிற்றப்பாவின் மூலம் நடந்த விபரங்கள் தெரிய வந்தன.  கண்டகோடரியும் கத்தி வீச்சும் மானேஜர் ஐயரிடம் பயமுறுத்தி விட்டுப் போன ரெளடிகள் இரவு நன்றாகக் குடித்துவிட்டு, ஆட்களைத் திரட்டிக் கொண்டு வந்திருக்கிறார்கள். சிற்றப்பாவும் மற்றொருவரும் வெளிவாயிலில் அவர்களைத் தடுத்திருக்கிறார்கள். சிற்றப்பாவுடனிருந்த மற்றொருவர், தாம் வைத்திருந்த கண்டகோடரியால் ஒருவரைத் தாக்கியிருக்கிறார். ரத்தக்காயம். ஏற்பட்டதும் கலவரம் வலுத்து விட்டது. பிறகு சிற்றப்பா, தம் கையிலிருந்த நீண்ட கத்தியால், பலபேரைக் குத்தியிருக்கிறார். கலவரம் வலுத்துவிடவே பையன்களுக்கு ஆபத்து வரக்கூடுமென்று அஞ்சிக் கூட்டத்திலிருந்து மறைந்து விட்டார். கண்டகோடரியால் தாக்கியவரும் தலை மறைவாய் போய்விட்டார். இருவரையும் தேடிக் கொண்டு தான் கலவரக்காரர்கள் அரங்கிற்குள் வந்திருக்கிறார்கள். இத்தகைய எதிர்ப்பைக் கலவரக்காரர்களும் எதிர்ப்பார்க்கவில்லை. குத்தியவரைத் தேடிப் பார்த்துவிட்டு, வேறு எதுவும் செய்யத் தோன்றாது அவர்கள் திரும்பிச் சென்றிருக்கிறார்கள் என்பது தெரிந்தது.  சமாதானம் சுவாமிகளின் நண்பரும், பரதவர் சமூகத்தில் மிகுந்த செல்வாக்குள்ளவருமான அலங்காரப்பரிசு என்பவர் கலவரச் செய்தியறிந்து கம்பெனி வீட்டுக்கு வந்தார். கலவரம் செய்தவர் களையும் சிற்றப்பாவையும் ஒன்றாக வைத்துப்பேசிச் சமரசம் செய்து வைத்தார். இரண்டாவது நாடகத்திற்குக் கலவரம் செய்தவர்களே வெளிவாயிலில் இருக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனார். கலவரம் செய்த ரெளடிகளே பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின் கலவரம் நடக்குமா? அதன் பிறகு நாடகங்கள் அமைதியாக நடை பெற்றன. இவ்வளவு குழப்பத்திலும் போலீஸார் யாரும் தலையிடாதது எங்களுக்குப் பெரும்வியப்பாக இருந்தது. கலவரம் விளைவதற்குக் காரணமாயிருந்த மானேஜர் காமேஸ்வர ஐயர், வெளிவாயிலில் அடிதடி விழுந்ததுமே ஓடிப்போனவர் மறுநாள் தான் கம்பெனிவீட்டிற்கு வந்துசேர்ந்தார். தூத்துக்குடி நாடகங்கள் முடிந்து, சாத்துாருக்குப் புறப்பட்டோம்.  காசிப்பாண்டியனின் கலை ஆர்வம் சாத்துரரில் எட்டையபுரம் இளையராஜா காசிப் பாண்டியன் தினமும் நாடகம் பார்க்க வந்தார். நடிகர்களுக்குப் பெரும் பரிசுகள் வழங்கினார். தம் புதல்வர்கள் காதில் போட்டிருந்த வைரக் கடுக்கன்களைக் கழற்றி, எனக்கும், சின்னண்ணாவுக்கும் போட்டார். தம் கையில் போட்டிருந்த வைர மோதிரங்களையும் பரிசாகக் கொடுத்தார். மற்றொரு நாள் திடீரென்று தம் மனைவி கழுத்திலிருந்த கெம்பு அட்டிகையைக் கழற்றிச் சின்னண்ணா கழுத்தில் போட்டார். இவற்றையெல்லாம்விட அவர் செய்த மற்றொரு செயல் எங்களைப் பிரமிக்க வைத்தது. ஒருநாள் மனோஹரா நாடகத்தின் போது சின்னண்ணா உடுத்தியிருந்த புடவை அவருடைய மனத்திற்குத் திருப்தியளிக்கவில்லை. வசந்த சேனை இம்மாதிரிப் புடவையையா உடுத்திக் கொள்வது என அவருக்குத் தோன்றியது போலிருக்கிறது. தம் மனைவியின் காதில் ஏதோ ரகசியமாகச் சொன்னார். அந்த அம்மையார் காருக்குச் சென்று, மற்றொரு சாதாரணப் புடவையை உடுத்திக் கொண்டு திரும்பி வந்தார். அவர்கள் முதலில் உடுத்தியிருந்த விலையுயர்ந்த பட்டுப்புடவை, சின்னண்ணாவுக்குப்பரிசாக வழங்கப் பெற்றது. அடுத்த காட்சியில் அதை உடுத்திக் கொண்டு வரும் படியாகக் கட்டளையும் பிறந்தது. இளையராஜா காசி விஸ்வநாத பாண்டியனையும், அவரது கலையார்வத்தையும் எண்ணாம்போது இனி அப்படியொருவர் தோன்றுவாரா என்றே வியப்பாக இருக்கிறது. சாத்துார் முடிந்து திருச்சிக்குப் போனோம்.  திருச்சியில் எங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. திண்டாடினோம் என்றே சொல்லவேண்டும். திருச்சியில் பிரண்டு ராமசாமி கம்பெனிக்கு வந்து சேர்ந்தார். அப்போது அவரது பெற்றோர் யாரென்றே அவருக்குத் தெரியாது. மலையாள மொழி அவருக்குத் தெரிந்திருந்ததால் கேரளத்தில் எங்கோ பிறந்திருக்க வேண்டுமென்பது மட்டும் புரிந்தது.                                                      கலைவாணரின் வளர்ச்சி   திருமயத்திலிருந்து சாய்பு ஒருவர் கம்பெனியை ஒப்பந்தம் பேசித் திருமயத்திற்கு அழைத்துப் போனார். மாதம் பதிமூன்று நாடகங்களுக்கு ரூபாய் 1500 என்று ஒப்புக் கொண்டோம். இந்த நாளில் ஒரே ஒரு நாடகம் நடத்த 1500 ரூபாய்கள் தேவைப்படுகிறது. அன்று பதிமூன்று நாடகங்களுக்குக்கொட்டகை வாடகை, விளம்பரச் செலவு மட்டும் நீக்கி, ரூபாய் 1500 என்றால் ஆச்சரியமாக இல்லையா? காண்ட்ராக்டரின் அதிர்ஷ்டம் திருமயத்தில் நல்ல வசூலாயிற்று. இரவு 8.45 வரையில் கூட்டமே இராது. இரவு 9 மணி சுமாருக்கு, நான்கு புறங்களிலிருந்தும் ரேக்ளா வண்டிகளிலும், மாட்டு வண்டிகளிலுமாகச் செட்டிப் பிள்ளைகள் வந்து கூடி விடுவார்கள்.  பாம்புக் காடு திருமயத்தில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. ஒருநாள் அல்லி அர்ஜ்ஜுன நாடகம் நடந்துகொண்டிருந்தது. பாம்புப் பிடாரன் மகுடி ஊதும் காட்சியில் ஆர்மோனியம் கிருஷ்ணமூர்த்தி ஐயர் ஆர்மோனியத்தில் மகுடி வாசித்தார். காட்சி முடியும்போது ஆர்மோனியக்காரரின் பக்கத் தட்டியில், ஒரு நாகப்பாம்பு இருப்பதைப் பின்பாட்டுக்காரர் சாமிக்கண்ணு பார்த்து விட்டார். கூச்சல் போடாமல் ஆர்மோனியக்காரருக்கு ஜாடை மூலம் அறிவித்தார். அந்தப் பாம்பை அடிக்க முயன்றார்கள். அதற்குள் பாம்பு சரசரவென்று கீழிறங்கி எங்கோ மறைந்துவிட்டது. திருமயம் அந்த நாளில் ஒரு பாம்புக் காடாகவே இருந்தது. கற்றாழைப் புதர்களுக்கும், கரையான் புற்றுக்களுக்கும் நடுவேதான் கொட்டகை அமைந்திருந்தது. இரவு கொட்டகைக்குப் போய் வரவே எங்களுக்குப் பயமாக இருக்கும்.  மாலை நேரங்களில் வெளியே போகும்போது அடிக்கடி பாம்புகளைப் பார்க்க நேரும். அது என்ன பாம்பு என்று எங்களுக்குள் விவாதம் நிகழும். ஒவ்வொருவரும் பலவிதமான பாம்புகளின் பெயர்களைக் குறிப்பிடுவார்கள். துணிவுள்ள சில பையன்கள் இருந்தார்கள். அவர்கள் என்ன பாம்பென்று சோதித்துப் பார்க்க முயல்வார்கள். ஒரு நாள் கற்றாழைப் புதர்களின் நடுவே நாங்கள் நின்று கொண்டிருந்தோம். சரசரவென்று சத்தம் கேட்டது. சுமார் நாலடி நீளமுள்ள ஒரு பாம்பு, எங்களை லட்சியம் செய்யாமல் புதர்களுக்கிடையே சென்றது. “அது விரியன் பாம்பு” என்றார்கள் சிலர். இல்லை, “ஓலைப் பாம்பு” என்றார் நகைச்சுவை நடிகர் எம். ஆர். சாமிநாதன். இதற்குள் புதர்களுக்கிடையே சென்ற பாம்பு, இரை விழுங்கியது போல் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. சாமிநாதன் தன் வாக்கை மெய்ப்பித்துக் காட்ட எண்ணி, கொஞ்சம் மண்ணை அள்ளி அதன்மீது வீசினார். அவ்வளவுதான்; ஊர்ந்து கொண்டிருந்த பாம்பு நின்றது; தலையைத் துாக்கி, தான் இன்னார் என்பதைக் காட்டுவதுபோல் மெதுவாகப் படத்தை விரித்தது. ‘ஐயோ, நல்ல பாம்பு’ என்று சிலர் அலறிக்கொண்டு ஓடினார்கள். அப்புறம் நாங்கள் ஏன் அங்கே நிற்கிறோம்?...இவ்வாறு திருமயத்தில் பாம்பைப் பற்றி நினைக்காத நேரமே இல்லை என்னும்படியாகப் பல நிகழ்ச்சிகள் நடை பெற்றன.  நடிகப் பரம்பரை திருமயத்தில் சதியனு சூயா நாடகம் தயாராயிற்று. அதிலே ஒரு ராஜா, அந்த ராஜாவுக்குப் பெயர் இல்லை. இருட்டு ராஜா என்று நாங்கள் குறிப்பிடுவது வழக்கம். நறுமதையின் சாபத்தால் உலகம் இருளடைந்து விடுகிறது. கதிரவன் ஒளியின்றிக் குடிகள் கஷ்டப்படுகிறார்கள். இருள்நீக்கி, ஒளி காட்டி உதவுமாறு இருட்டு ராஜா, பதிவிரதை அனுசூயாவிடம் முறையிடுகிறார். இந்த இருட்டு ராஜாவாகச் சுவாமிகளிடம் பாடம் கேட்டு நடித்தவர் எங்கள் பெரியண்ணா டி. கே. சங்கரன். இருட்டு ராஜா வேடம் இப்போது என்.எஸ் கிருஷ்ணனுக்குக் கொடுக்கப் பெற்றிருந்தது. பெரியண்ணா பயிற்சியளித்துக் கொண்டிருந்தார்.  என்ன ஆச்சரியம் இது-ஆகா! என்ன ஆச்சரியம் இது  எங்கும் இருள் சூழ்ந்துல கிருண்டிருக்குது,  ஏழுநாள் ஓர் வாரத்துக்கு மேலானது .. (எ)  இது இருட்டுராஜா பாட வேண்டிய பாட்டு. என். எஸ். கிருஷ்ணன் பாடினார். ‘ஆகா!’ என்னும் இடத்தில் கொஞ்சம் தாளத்தைக் கவனித்து எடுக்கவேண்டும். பெரியண்ணா நாலைந்து முறை சொல்லிக் கொடுத்தார். தாளம் சரியாக வரவில்லை. பெரியண்ணாவுக்கு ஆத்திரம் வந்தது. ‘நிமிட்டாம்பழம்’ கொடுத்தார். நிமிட்டாம் பழம் என்றால் தெரியுமல்லவா? தொடையில் பெருவிரலையும் சுட்டுவிரலையும் சேர்த்துக் கொண்டு கிள்ளுவது. சகிக்க முடியாத வலியெடுக்கும். இதெல்லாம் அந்த காலத்தில் சர்வ சாதாரணம். என். எஸ். கிருஷ்ணன் அழுதுகொண்டே பாடினார். அழுகை வந்தாலும் பாடுவதை நிறுத்தக் கூடாது. நிறுத்தினல் மேலும் பூசை விழும். என். எஸ். கிருஷ்ணன் ஆகா என்று அழுது கொண்டே பாடியது எங்களுக்கெல்லாம் சிரிப்புண்டாக்கியது. பாடம் சொல்லிக் கொடுத்து விட்டுப் பெரியண்ணா வெளியே சென்றார், நாங்கள் என். எஸ். கிருஷ்ணன் பாடியதுபோல் பாடிக் காட்டிச் சிரித்தோம்.  “ஏம்பா சிரிக்கிறீங்க... அண்ணாச்சிதானே அடிச்சாரு; பரவாயில்லே. அவரும் இந்தப்பாட்டைக் கத்துக்கிட சங்கரதாஸ் சுவாமிக்கிட்ட அடி வாங்கித்தான் இருப்பாரு. நானும் இனிமே எத்தனையோ பேரை இப்படி அடிக்கத்தான் போறேன். இது தானே நடிக பரம்பரை. இது புரியாமே ஏன் சிரிக்கிறீங்க?” என்றார் கலைவாணர். அப்போது அதன் பொருள் எங்களுக்குப் புரியாததால் மீண்டும் சிரித்தோம். திருமயம் முடிந்ததும் கம்பெனி காரைக்குடிக்குச் சென்றது.  காரைக்குடியில்தான் என். எஸ். கிருஷ்ணன் நகைச்சுவை நடிகராவதற்குரிய சூழ்நிலை உருவாயிற்று. சாவித்திரி நாடகத்தில் ஒருமுறை சாவித்திரியின் தந்தை அஸ்வபதியாக அவர் நடித்தார். அந்தக் காலத்தில் பெரும்பாலும் நன்றாகப் பாடக் கூடிய நடிகர்களாக இருந்தால் அரங்கில் பிரவேசிக்கும் போதே பாடிக் கொண்டு வருவது வழக்கம். திருப்பரங்குன்றில் விளங் கும் குகா என்னும் மதுர பாஸ்கரதாஸின் பாடலை என். எஸ். கிருஷ்ணன் மிக நன்றாகப் பாடுவார். அஸ்வபதி மேடைக்கு வரும்போது அந்தப் பாட்டைப் பாடிக்கொண்டு வந்தார். சபையோர் அன்று இவரை உன்னிப்போடு கவனித்தார்கள்.  எனக்கும் கலைவாணருக்கும் கம்பெனி தொடங்கிய நாளிலிருந்து நெருங்கிய தொடர்பு ஏற்பட்டிருந்தது. விளையாட்டு, கதை பேசுதல், எல்லாவற்றிலும் நாங்களிருவரும் இணைந்தே கலந்து கொள்வோம். நான் எப்போதாவது சோர்ந்திருக்கும் நேரத்தில், எனக்குச் சிரிப்பூட்டுவதற்காக ஏதாவது வேடிக்கை செய்வார் அவர். கலைவாணரின் இயற்கையான நகைச்சுவைப் பண்பை அறிந்த நான், நாடகங்களில் எம். ஆர். சாமிநாதன் போட்டு வந்த நகைச்சுவைப் பாத்திரங்களையெல்லாம் நெட்டுருப் போட்டு வைக்கும்படியாக அடிக்கடி அவரிடம் கூறுவதுண்டு.  எம். ஆர். சாமிநாதனிடம் ஒரு கெட்ட குணம் இருந்தது. எந்தக் குழுவிலும் நிரந்தரமாக் இருக்க மாட்டார். திடீர் திடீரென்று சொல்லாமல் ஒடிப்போய் விடுவார். அப்புறம் திடீரென்று சொல்லாமலே வந்து விடுவார். அவருடைய தங்கை மீனாட்சியும் அப்போது எங்கள் குழுவில் நடித்துக் கொண்டிருந்தாள். அவள்தான் மனோஹரனில் விஜயாளாக நடிப்பாள். அண்ணனும் தங்கையும் ஒருநாள் சொல்லாமல் போய்விட்டார்கள். அன்று மனோஹரன் நாடகம் வைக்கப் பெற்றிருந்தது. விஜயாளாக நடிப்பதற்கு, செல்லம் என்னும் ஒரு பையனை ஏற்கனவே பயிற்சி கொடுத்து வைத்திருந்தோம். பைத்தியக்காரன் வசந்தகை யார் நடிப்பதென்பது பெரும் பிரச்னையாய் விட்டது. பழைய நடிகர்கள் யாரும் அப்போது கம்பெனியில் இல்லை. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளும்படியாக நான் என். எஸ். கிருஷ்ணனைத் தூண்டினேன். பெரியண்ணாவிடம் போய், “என். எஸ். கிருஷ்ணன் நடிப்பதாகச் சொல்கிறார். அவர் நன்முக நடிப்பாரென்று தோன்றுகிறது” என்றேன். அண்ணா என். எஸ். கே. யைக் கூப்பிட்டுக் கேட்டார். அவர் முதலில் அஞ்சினார்; நாங்கள் அனைவரும் உற்சாகப்படுத்தவே ஒப்புக் கொண்டார். அன்று மனோஹரன் நாடகம் சிறப் பாக நடந்தது. எம். ஆர். சாமிநாதனுக்குச் சிறிதும் குறைவு படாத முறையில் என். எஸ். கிருஷ்ணன் அன்று வசந்தனாக நடித்தார். எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. எல்லோரும் அவரைப் பாராட்டினார்கள். அன்று முதல் எம். ஆர். சாமிநாதன் புனைந்து வந்த எல்லா வேடங்களையும், என். எஸ். கிருஷ்ணனுக்கே கொடுத்தார் பெரியண்ணா. கலைவாணர், கம்பெனியின் நிரந்தர நகைச் சுவை நடிகரானார். 1956இல் இராஜா அண்ணாமலை மன்றத்தில் இராஜராஜசோழன் நாடகம் நடந்தபோது கலைவாணர் தலைமை தாங்கினார். அப்போது இந்தச் செய்திகளையெல்லாம் மேடையிலேயே வெளிப்படையாக அவர் கூறி, என்னைப் பாராட்டிய போது எங்கள் இருவர் கண்களும் கலங்கின.  சின்னையாபிள்ளை வருகை காரைக்குடியில் நல்ல வசூலில் கம்பெனி நடந்து கொண்டிருக்கும் பொழுது சின்னையாபிள்ளை வந்தார். நடிகர்களும் ஏனைய தொழிலாளர்களில் பலரும் பழனியாபிள்ளையின் ஸ்ரீ மீன லோசனி பால சற்குண நாடக சபைக்குப் போய் விட்டதாகக் கூறினார். தத்துவ மீனலோசனி வித்துவ பாலசபை மூடப்பட்ட சேதியைக் கேட்டு வருந்தினோம், நாங்கள் சொந்தமாகக் கம்பெனி நடத்த ஆரம்பித்த பிறகுதான் அதிலுள்ள கஷ்டங்களை ஒருவாறு உணர முடிந்தது. பெரியண்ணாவுக்கும் சிற்றப்பாவின் நிருவாகத்தில் கம்பெனியைத் தொடர்ந்து நடத்த இஷ்ட மில்லை. எனவே, நாங்கள் அதுவரை கம்பெனிக்காகச் செலவு செய்த ரூபாய் 2000த்தையும் கொடுத்து விட்டால் கம்பெனியை அப்படியே சின்னையாபிள்ளையிடம் ஒப்படைத்து விடுவதாகப் பெரியண்ணா கூறினார். சின்னையாபிள்ளை அப்போது அதை ஏற்க இயலாத நிலையில் இருந்ததால் போய்விட்டார். மேலும் பல நாடகங்களை நடத்திவிட்டு நாங்கள் கரூருக்குச் சென்றோம்.                                                கொங்கு நாட்டில்   மானேஜர் காமேஸ்வரய்யர் கரூரில் சில தகிடுதத்த வேலைகள் செய்ய ஆரம்பித்தார். நாடகம் முடிந்ததும் காலையில் கணக்குப் பார்க்கும் பொறுப்பு மானேஜரிடம் ஒப்படைக்கப் பெற்றது. இரவு கொட்டகையில் கூட்டம் பிரமாதமாக இருக்கும். ஆனால் காலையில் வசூல் கணக்கைப் பார்த்தால் மிகவும் குறைவாக இருக்கும். இது எல்லோருக்கும் அதிசயமாக இருந்தது. அந்த நாளில் தரை டிக்கட்டுகளைக் கொஞ்சம் கனமான அட்டை களிலேயே அச்சிட்டுக்கொடுத்து வந்தார்கள். பலவண்ண அட்டைகளில் இவற்றை அச்சிட்டு வைத்துக்கொண்டு, ஒவ்வொரு நாடகத்திற்கும் வண்ணங்களை மாற்றிக் கொள்வது வழக்கம். தவிர டிக்கெட்டுகளைக் கிழிப்பதில்லை. மானேஜர் ஐயர் ஒரு தந்திரம் செய்தார். தரை வாயிலில் டிக்கெட்டுகளை வாங்கி ஒரு பெட்டியில் போட்டு விடுவார்கள். மானேஜர் காலையில் அந்தப் பெட்டியைத் திறந்து விற்பனையான டிக்கெட்டுகளில் பலவற்றை மறுபடியும் கணக்குப் பெட்டிக்குள் வைத்து விட்டு அவற்றுக்குரிய பணத்தை எடுத்துக் கொள்வார். இப்படியே ஐயரின் வேலை நடைபெற்று வந்தது. ஒருநாள் பெரியண்ணா சந்தேகங்கொண்டு. ஐயருக்குத் தெரியாமல் இரவே வசூல் கணக்கைப் பார்த்து முடித்து விட்டுப் பெட்டிச் சாவியை ஐயரிடம் கொடுத்து விட்டார். விபரம் தெரியாத ஐயர், வழக்கம்போல் தமது காரியத்தைச் செய்யவே அவருடைய திருட்டு வெளிப்பட்டு விட்டது. மாமா, ஐயரை உடனே நீக்கிவிட வேண்டுமென்று ஆத்திரப்பட்டார். பெரியண்ணா சிபாரிசின் பேரில் ஐயருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு மானேஜரிடம் பெட்டிச் சாவி கொடுப்பதை நிறுத்திக் கொண்டார்கள். மாமாவே முன்னின்று எல்லாக் காரியங்களையும் மேற்பார்த்து வந்தார். மானேஜருக்கு வெளி அலுவல்களை மட்டுமே கவனித்துக் கொள்ளும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அடுத்த ஊர் திருப்பூர் போவதாக முடிவு செய்தனர்  திருப்பூருக்கு நாங்கள் போனபோது தண்ணிர்ப் பஞ்சம் அதிகமாயிருந்தது. பல ஆண்டுகளாக மழையே இல்லை. எங்கு பார்த்தாலும் வறண்டு போயிருந்தது. காலையிலும் மாலையிலும் தண்ணிருக்காக நெடுந்துாரம் சென்று வருவோம். இறங்கிக் குளிக்கக் கூடிய முறையில் சில கிணறுகள் இருந்தன. சிலர் குளிக்க அனுமதிப்பார்கள். ஒருசிலர் கூடாதென்று மறுத்து விடுவார்கள். எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி, இலவச டிக்கெட்டுகள் கொடுத்து, சிலரைச் சரிபடுத்திக் கொண்டோம்.  காக்கை வலிப்பு கம்பெனியில் எம். சங்கரன் என்று ஒரு நடிகர் இருந்தார். அவர் பெண் வேடம் புனைபவர். அவருக்கு காக்கைவளி நோய் உண்டு. அது எதிர்பாராமல் திடீரென்று வந்துவிடும். அதுவும் தண்ணிர்த்துறைகளில்தான் இந்த நோய் பெரும்பாலும் வருவது வழக்கம். ஒருநாள் முற்பகலில் நாங்கள் எல்லோரும் எண்ணெய் தேய்த்துக் குளித்துக் கொண்டிருந்தோம். எம். சங்கரன் சாவ காசமாகவே எதையும் செய்வார். குளிப்பதிலும் அப்படித்தான். முதலில் ஒரு கிணற்றில் சீயக்காய் தேய்த்துத் தலையை நன்றாக அலசிவிட்டு, பிறகு அருகிலுள்ள மற்றொரு கிணற்றில் குளிக்க வேண்டும். எனவே நடிகர்கள் இரண்டு கிணற்றிலுமாகக் குளித்துக் கொண்டிருந்தோம்.  முதல் கிணற்றில் சங்கரனும், சின்னண்ணாவும் இன்னும் இரண்டொருவரும் மட்டுமே இருந்தார்கள். சங்கரன் திடீரென்று கை கால்களே அடித்துக்கொண்டு தண்ணிரில் மூழ்கினார்... ஒரு நிமிடம், இரண்டு நிமிடம்; மூழ்கியவர் வெளிவரவே இல்லை. பக்கத்தில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் பரபரப்படைந்தார்கள். சின்னண்ணா கொஞ்சம் துணிவுள்ளவர். மூழ்கிப் பார்த்தார். ஆழமான கிணறு. அடிப்புறத்தில் ஏதோ உருவம் கிடப்பது போல் புலப்பட்டது அவருக்கு. இரண்டாவது முறையும் மூழ்கித் துாக்கிப் பார்த்தார். முடியவில்லை. இதற்குள் செய்தியறிந்து பக்கத்துக் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தவர்களும் ஓடி வந்தார்கள். வந்தவர்களில் கோபால் பிள்ளை மிகவும் தைரிய சாலி, அவர் வந்த வேகத்திலேயே கிணற்றில் குதித்து மூழ்கினார். அடுத்த நிமிடத்தில் சங்கரனையும் தூக்கிக் கொண்டு மேலே வந்தார். எல்லோரும் வியப்போடும், கவலையோடும் அவரையே பார்த்துக்கொண்டு நின்றோம். கரைக்குக் கொண்டு வந்து, மூர்ச்சித்துக் கிடந்த சங்கரனைத் தலைமீது வைத்துக் கொண்டு சுற்றினார். சங்கரன் வாய்வழியாகத் தண்ணிர் வெளியேவந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு சங்கரனுக்கு மூச்சு வந்தது. எங்களுக்கும் உயிர் வந்தது.கோபாலபிள்ளையின் துணிவை எல்லோரும். பாராட்டி வாழ்த்தினார்கள்.  கோபால பிள்ளை இவ்வாறு பலசந்தர்ப்பங்களில் எங்களுக்கு மகத்தான உதவிகள் புரிந்திருக்கிறார். இவர் கோட்டயத்திலே பிறந்தவர். ஆர்மோனியம் கே. டி. கடராஜ பிள்ளை நடத்தி வந்த சிறுவர் கம்பெனியில் சில ஆண்டுகள் பணிபுரிந்தவர். பின்னால் தத்துவ மீனலோசினி வித்துவ பாலசபையில் ஆடையணிவிக்கும் பொறுப்பில் பல ஆண்டுகள் சிறப்பாகச் செயலாற்றியவர். நாங்கள் சொந்தக் கம்பெனி தொடங்கியபின் உரிமையோடு எங்களிடம் வந்து, பணியாளராக மட்டுமல்லாது, பாதுகாப்பாளராகவும் இருந்து வந்தார். இவருடைய வலிமையும் வீரமும். எங்கள் குழுவுக்குத் தோன்றாத் துணையாக இருந்து வந்தன.                                                      சீர்திருத்த நாடகாசிரியர்   திருப்பூரில் நாடகங்கள் நடந்துகொண்டிருந்தபொழுது, சீர் திருத்த நாவல் நாடகாசிரியர்’ எனப்புகழ்பெற்ற திரு எம் கந்தசாமி முதலியார் எங்கள் கம்பெனிக்கு வந்துசேர்ந்தார். முதலியா ரோடு அவரது புதல்வரான நடிகமணி எம். கே. ராதாவும், மற்றொரு சிறந்த நடிகரான கே கே. பெருமாளும் வந்தார்கள். ஏற்கனவே நடந்து வந்த இராஜாம்பாள் நாடகம், ஆசிரியர் முதலியார் வந்ததும் புதுமை பெற்றது. கந்தசாமி முதலியார் சென்னை சுகுண விலாச சபையில் பெண் வேடநடிகராக இருந்தவர். பம்மல் சம்பந்த முதலியாரிடம் பயிற்சி பெற்றவர். பாலாம்பாள் கம்பெனி, பி. எஸ். வேலுநாயர் கம்பெனிகளுக்கெல்லாம் பம்மல் முதலியாரின் மனோஹரன் நாடகத்தை இவர்தான் சொல்லி வைத்தார். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் நீண்டகாலம் இருந்தார். ஜே. ஆர். ரங்கராஜூவின் இராஜம்பாள், இராஜேந்திரா, சந்திரகாந்தா, ஆனந்த கிருஷ்ணன் ஆகிய நாவல்களையெல்லாம் நாடகமாக்கி அரங்கேற்றினார். இவரை எங்கள் ஆசிரியராகப் பெற்றது பெரும் பாக்கியம் என்றே கருதினோம். திருப்பூர் நாடகம் முடிந்து கம்பெனி பாலக்காடு சென்றது.  புதிய நாடகங்கள் பாலக்காடு வந்ததும் பம்மல் சம்பந்தனரின் இரத்தினாவளி பாடம் கொடுக்கப் பெற்றது. அப்போது எங்கள் கம்பெனியில் எஸ். என். இராமையா, மனோகரனத் தவிர மற்றெல்லா நாடகங்களிலும் கதாநாயகனுக நடித்து வந்தார். இரத்தினவளியில் வத்சராஜன் பாடம் மிகவும் அதிகமான வசனங்கள் உள்ளது. அதை இராமையாவுக்குக் கொடுக்க வாத்தியார் விரும்பவில்லை. “வுண்முகம்தான் வேண்டும்” என்று வற்புறுத்தினார். வத்சராஜன் பாடம் எனக்குக் கொடுக்கப்பெற்றது. பாலக்காடு அமிட்டி ஹாலில் இரத்தினுவளி நாடகம் அரங்கேறியது. எம். கே. ராதா வசந்தகளுகவும், கே. கே. பெருமாள் பாப்ரவ்யளுகவும், என். எஸ். கிருஷ்ணன் டாம்ரவ்யனுகவும், சிறப்பாக நடித்தார்கள். சின்னண்ணா வாசவதத்தை இரத்தினவளி பாத்திரத்தை இரு பகுதிகளாகப் பிரித்து, முற்பகுதியைச் சேதுராமனும் பிற் பகுதியைச் செல்லமும் நடித்தார்கள். நாடகம் மிகவும் நன்றாய் இருந்ததாக அனைவரும் சொல்லிக் கொண்டார்கள்.  தம்பி பகவதி அதுவரை பபூன் வேடமே புனைந்து வந்தான். வாத்தியார் வந்ததும் அவனுக்கு வேறு வேடங்களும் கொடுக்கப் பட்டன. மனோஹரனில் ராஜப்பிரியன் வேடம் கொடுத்து, நன்முக நடிப்பும் சொல்லிக் கொடுத்தார். விளம்பரங்களிலும் அவனைப்பற்றித் தனியாகக் குறிப்பிட்டு எழுதினார். இராஜாம்பாள் நாடகத்தில் நான் வக்கீலாகவும், பகவதி பாரிஸ்டராகவும் நடிப்போம். கடைசியாக நடைபெறும் நீதிமன்றக் காட்சியில் ஆங்கிலத்தில் எனக்கும் பகவதிக்கும் வசனம் எழுதிக்கொடுத்தார். ஆங்கிலத்தை தாங்கள் தமிழிலேயே எழுதி நெட்டுருப் போட்டோம். ஆங்கிலம் நன்முக அறிந்தவர்கள் பேசுவதைப்போல் அந்த வசனத்தைப் பேசவும் எங்களுக்குப் பயிற்சி கொடுத்தார். நானும் பகவதியும் ஆங்கிலத்தில் பேசியதை ரசிகர்கள் பெருத்த கரகோஷம் செய்து வரவேற்றார்கள்.  இராஜேந்திரா பாலக்காடு முடிந்து, கோயமுத்துர் சென்றதும் இராஜேந்திரா நாடகம் தயாராயிற்று. இராஜேந்திரா ஒரு சமூகச் சீர்திருத்த நாடகம், வரதட்சணையின் கொடுமையை உயர்ந்த முறையில் எடுத்துக் காட்டும் நாடகம். 1922ல் பாவலர் கம்பெனிக்குப் போன சமயம் வேஷத்தை நிறுத்திய பெரியண்ணா டி. கே. சங்கரன், நாவல் நாடகங்கள் தயாரானதும் வேடம் புனையத் தொடங்கினார். இராஜேந்திரனில் பெரியண்ணாவுக்கு ராகவன்வேடம் கொடுக்கப் பெற்றது. நான் ராகவனின் மகள், லட்சுமியாக நடித்தேன். ஒரு படுகொலையை நேரில் பார்த்ததால், லட்சுமிக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது. அது மிகவும் சிரமப்பட்டு நடிக்க வேண்டிய காட்சி. அந்தக் காட்சியில் நடிப்பதற்கு வாத்தியார் எனக்குப் பிரத்தியேகப் பயிற்சி அளித்தார். லட்சுமியின் காதலன் ரங்கநாத், ஒரு காதல் காட்சியில் மகாகவி ஷேக்ஸ்பியர் சங்கீதத்தைப் பற்றிச் சொல்லியிருக்கும் சில வரிகளை ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும். ரங்கநாத்தாக நடித்த ராமையாவுக்கு ஆங்கிலத்தில் பேச வரவில்லை. எனவே அந்த வசனத்தை லட்சுமியே பேச வேண்டியதாயிற்று. “மகாகவி ஷேக்ஸ்பியர் சொல்லுகிறார்”...என்று சொல்லத் தொடங்குவார் ராமையா. உடனே நான் இடைமறித்து, “ஒ, அதுவா? எனக்குத் தெரியுமே” என்று ஷேக்ஸ்பியரின் கவியைச் சொல்லி முடிப்பேன். ராமையா பேச வேண்டிய வசனத்தைத்தான் நான் பேசுகிறேன் என்று ரசிகர்கள் எளிதாகப் புரிந்து கொண்டார்கள். நாடக அரங்கேற்றத்தன்று, இந்த ஆங்கில வசனத்தை நான் பேசி முடித்து ராமையா மீண்டும் பேசத் தொடங்கியதும் ரசிகர்கள் கைதட்டி வரவேற்றார்கள்,  வரதட்சணையின் கொடுமை இராஜேந்திரனாக எம். கே. ராதாவும், ருக்மணியாகச் சின்னண்ணா டி. கே. முத்துசாமியும் அற்புதமாக நடித்தார்கள். இராஜேந்திரனில் முக்கியமான கட்டம் இது: கோபாலாச் சாரியின் சூழ்ச்சியால் சிற்றன்னை ரங்கம்மாள், ருக்மணிக்கு மயக்க மருந்தைப் பாலில் கலந்து கொடுத்து விடுகிறாள். ஸ்ரீ ரங்க நாதரைத் தரிசித்து வரலாமென்று போக்குக் காட்டி ஆலயத்துக்கு அழைத்து வருகிறாள். வருகிற வழியில் ருக்மணிக்கு மயக்கம் வந்து விடுகிறது. உடனே அருகிலிருக்கும் கோபாலாச் சாரியின் வீட்டுக்குள் நுழைகிறார்கள். அங்கு ருக்மணியைப் படுக்க வைக்கிறார்கள். கோபாலாச்சாரியின் திட்டப்படி அங்கே காத்திருக்கிறான் இராஜேந்திரன். ருக்மணியைத் தனியே அறையில் கட்டிலில் கிடத்திவிட்டு ரங்கம்மாளும், கோபாலாச் சாரியும் மறைகிறார்கள். ருக்மணி மயக்கமாயிருக்கும் அந்நிலையில் இராஜேந்திரன் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறான். இளமையின் வெறி அடங்கியதும் அவன் உள்ளத்திலுள்ள நல்லுணர்வுகள் மேலெழும்புகின்றன. மனச்சாட்சி அவனைக் கண்டிக்கிறது. ஒழுக்கத்தை உயிரென மதிக்கும் அந்த இளம் பெண், உணர்வு பெற்றுத் தன் அலங்கோல நிலையைக் கண்டு தற்கொலை செய்து கொள்ளக் கூடாதே என்று எண்ணாகிறான், அவளிடம் மன்னிப்புக் கேட்கத் துடிக்கின்றான். தற்கொலை செய்து கொள்ளக் கூடாதென்று அவளிடம் வாக்குறுதி பெற விரும்புகிறான். அவன் சிந்தனையில் மூழ்கித் தத்தளித்து நிற்கும் இந்த நேரத்தில், ருக்மணி கண்விழிக்கிறாள்; சுற்று முற்றும் பார்க்கிறாள்; சித்தி, தன்னை மோசம் செய்து விட்டதை உணர்ந்து ஆவேசம் கொள்ளுகிறாள்.  நடிப்புத் திறமைக்கே சவால்விடும் ஒர் அற்புதமான கட்டம் இது. இந்தக் காட்சியில் எம். கே. ராதாவும் சின்னண்ணாவும் அபாரமாக நடித்தார்கள். கற்பிழந்த அந்த நிலையில் நின்று, கதறி, அதனைச் சூறையாடிய அந்த இளைஞனைச் சபித்து, ஆவேசமாகப் பேசி, “ஐயோ, அம்மா, அப்பா” என்று அலறி ருக்மணி மூர்ச்சையடைகிறாள்.  சின்னண்ணா இந்தக் காட்சியில் மூர்ச்சித்து விழுந்ததும் சபையோர் மிகுந்த உணர்ச்சியுடன் பலமாகக் கைதட்டிப் பாராட்டினார்கள். காட்சியைப் பார்த்துக்கொண்டு, உள்ளே இருந்த எங்களுக்கெல்லாம் புல்லரித்துப் போய்விட்டது. காட்சி முடிந்ததும் வாத்தியார், சின்னண்ணா நடித்ததை அபாரமாகப் பாராட்டிப் புகழ்ந்தார்.  இராஜேந்திரனில் சிறந்த நகைச்சுவைப் பாத்திரம் கோபாலாச்சாரி. அந்தப் பாத்திரம் என். எஸ். கிருஷ்ணனுக்கே தரப்பெற்றது. என். எஸ். கே. அதைத் திறம்பெற நடித்து, வாத்தியாரின் பாராட்டைப் பெற்றார். தம்பி பகவதிக்கு, சீனிவாசன் வேடம் கொடுக்கப் பெற்றது. சீனிவாசன் ஒரு சின்ன வில்லன் பாத்திரம். அதில் பகவதிக்கு நல்லபேர். மிகச்சிறுவனாக இருந்ததால் அடிக்கடி ரசிகர்கள் கைதட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள்.  கே. கே. பெருமாள், துப்பறியும் கோவிந்தகை நடித்தார். இராஜேந்திரனுக்காக ஸ்ரீரங்கம் கோவில், காளிவிக்ரஹம் முதலிய சில புதிய காட்சிகளையும் தயாரித்தோம். கோவை, வெரைட்டி ஹாலில் இராஜேந்திரன் நாடகத்திற்கு அபாரமான வசூலாயிற்று. கொட்டகை உரிமையாளர் திரு. வின்சென்டை வாத்தியாரே நேரில் கண்டு, சினிமாவுக்கு உபயோகிக்கும் ‘ஆர்க் லைட்டை'க் கொடுத்துதவும்படியாகக் கேட்டுக் கொண்டார், “வெரைட்டி ஹால் உரிமையாளர் வின்சென்ட் அவர்கள், அன்புடன் உதவிய சினிமா கார்பன் ஆர்க் லைட்டின் ஒளியில் எங்கள் அற்புதக் காட்சிகளைக் காணத் தவறாதீர்கள்” என்று ஆர்க் லைட்டைக் குறித்துத் தனியாக விளம்பரமும் செய்தார். நாடகம் நடைபெறும்போது ஸ்ரீ ரங்கம் கோவில், காளிவிக்ரஹத்தின் அருகே நடக்கும் கொலை, ருக்மணி பாங்க் ஆகிய முக்கிய காட்சிகளில், மெளனப் படம் காண்பிக்கும் அறையிலிருந்து ஆர்க் லைட்டின் வெளிச்சம் விதவித நிறங்களில் பளிச்சிட்டு ஒளி வீசும், ரசிகர்கள் அந்த நாளில் இந்தச் சாதாரணக் கலர் லைட்டை வியப்போடு பார்த்தார்கள். அந்த லைட் காண்பிக்கப்படும் போதெல்லாம் மசிழ்ச்சியோடும், ஆரவாரத்தோடும் வரவேற்றார்கள்.                                                                திரைப்படமும் நாடகமும்   கோவையில்தான் முதன் முதலாகத் திரைப்படம் காண்பிக்கும் தியேட்டரில் நாடகம் நடித்தோம். மாலை 6.30 முதல் 9.மணி வரை மெளனப் படம் ஏதாவது நடைபெறும். அதன் பிறகு 9.30 க்கு நாடகம் தொடங்குவோம். நாங்கள் எல்லோரும் படம் பார்க்கும் ஆசையால் விரைவாகவே சாப்பிட்டுவிட்டுக் கொட்டகைக்கு வந்துவிடுவோம்.  வெரைட்டி ஹாலில் நாங்கள் நாடகம் நடத்திய சமயத்தில் ஆங்கில சீரியல் படங்கள் ஒடிக் கொண்டிருந்தன. வில்லியம் டெஸ்ட்மாண்ட் என்னும் நடிகர் நடித்த நீளப் படம் எங்களை மிகவும் கவர்ந்தது. ஒரு படத்திற்குச் சுமார் 60 சுருணைகள் இருக்கும். இந்தச் சுருணைகளை நான்கு பகுதிகளாக்கிக் கொள்வார்கள். ஒவ்வொரு பாகத்தையும் ஒரு வாரம் போடுவார்கள். வெள்ளிக்கிழமை பாகம் மாற்றுவார்கள். பொதுமக்கள் தொடர்ந்து ஒரு மாதம் படத்தைப் பார்த்தால்தான் முழுக் கதையையும் புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு பகுதியும் முடியும் நேரத்தில் கதாநாயகனையோ, அல்லது கதாநாயகியையோ மிகவும் அபாயகரமான நிலையில் சிக்க வைத்துவிட்டு, அந்த அபாயத்திலிருந்து அவர்கள் எப்படித் தப்புகிறார்கள் என்பதைப் பார்க்கப் பொது ஜனங்களின் உணர்ச்சியைத் துண்டி விடுவார்கள். அடுத்த பகுதியை எப்போது பார்க்கப் போகிறோமென்று எங்களுக்கு ஏக்கமாக இருக்கும். நிகழ்ச்சி மாற்றத்தன்று சாப்பாட்டைக்கூட மறந்து விட்டு, முன்னாடியே சிலர் கொட்டகைக்கு வந்துவிடுவதுமுண்டு.  நடிகமணி சகஸ்ரநாமம் கோவையிலிருந்தபோதுதான் நடிகமணி எஸ். வி. சகஸ்ர நாமம் கம்பெனியில் வந்து சேர்ந்தார். அவர் சேர்ந்ததே ஒரு சுவையான நிகழ்ச்சி. கம்பெனியில் பெற்றோர்கள் அனுமதி யில்லாமல் யாரையும் சேர்ப்பது வழக்கமில்லை. சகஸ்ரநாமம் வந்து கேட்டபோது அவருக்கு 13 வயதிருக்கலாம். “உன் தகப்பனரிடமிருந்து கடிதம் வாங்கிக் கொண்டு வா சேர்த்துக் கொள்கிறேன்” என்றார் பெரியண்ணா. உடனே சகஸ்ரநாமம் கம்பெனியில் சேரவேண்டுமென்ற ஆர்வத்தால், தகப்பனார் எழுதுவதுபோல் ஒரு கடிதத்தைத் தாமே எழுதினார். பெரியண்ணாவிடம் கொண்டு வந்து கொடுத்து விட்டுக் கம்பெனியில் சேர்ந்து கொண்டார். பிறகு அந்தக் கடிதத்தில் கண்ட முகவரிக்குப் பெரியண்ணா கடிதம் எழுதினார். தகப்பனார் அலறியடித்துக் கொண்டு வந்து சேர்ந்தார். அவருக்கு சகஸ்ரநாமத்தைக் கம்பெனியில் சேர்க்க விருப்பம் இல்லை. பெரியண்ணா அவரோடு வெகு நேரம் வாதாடினார். “நாடகத் துறையில் விருப்பமிருக்கும் பையனை வேறு துறைக்கு அனுப்புவது சரியல்ல” என்று எடுத்துச் சொன்னார். கடைசியாகத் தந்தையின் பூரண சம்மதத்தோடு சகஸ்ரநாமம் கம்பெனியில் சேர்ந்து கொண்டார்.  எடிபோலோ, எல்மோ  கோவை நாடகம் முடிந்ததும் கம்பெனி சேலம் சென்றது. சேலம் கொட்டகைகளிலும் சினிமா சீரியல் படங்கள் நடந்து வந்தன. அவை எடியோலோ, எல்மோ நடித்த படங்கள். இவ்விரு நடிகர்களும் சீரியல் மெளனப் படங்கள் வந்த காலத்தில் பிரமாதமான பெயர் பெற்றிருந்தார்கள். இந்த இரு நடிகர்களுக்கும் தனித்தனி ரசிகர்கள் இருந்தார்கள். இவர்கள் அந்நடிகரின் பெயரால் கட்சியாக நின்றனர். எங்கள் கம்பெனி நடிகர்களில் சிலர் எடிபோலோ கட்சி; சிலர் எல்மோ கட்சி; இருவரில் யார் நல்ல நடிகர்? யார் பலசாலி? என்பதில் இரு கட்சியாளருக்கும் போட்டி. சில சமயங்களில் இதற்காக வாய்ச் சண்டைகூட ஏற்படுவதுண்டு. பழங்காலத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவங்களே யெல்லாம் நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. இப்போதும் கட்சிச்சண்டைகள் வேறு உருவங்களில் இருந்து வருகிறதே தவிர, அடிப்படை உணர்ச்சி மாறிவிட்டதாகக் கூறுவதற்கில்லை. இவ்வாறு நாங்கள் சினிமா பார்த்து வந்த போதெல்லாம் இந்தச் சினிமாப் படம் வாய் திறந்து பேசுவது நம் காதில் விழுந் தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும் என எண்ணிப் பார்ப்பதுண்டு. நாமும் ஒரு காலத்தில் சினிமாப் படத்தில் நடிக்க நேருமென நாங்கள் அப்போது கனவு கூடக் காணவில்லை.  பிரதாபச்சந்திரன் சேலத்தில் பிரதாபச்சந்திரன் நாடகம் தயாராயிற்று. இந்நாடகம் பல ஆண்டுகளுக்கு முன் இராமசாமி ராஜா என்பவரால் எழுதப் பெற்றது. திரு. கந்தசாமி முதலியாரே இந்நாடகத்தைப் பயிற்றுவித்தார். நான் பிரதாபச்சந்திரனில் விசுவாசகாதகன் என்னும் பாத்திரத்தை ஏற்றேன். பெயரே பாத்திரத்தின் பண்பை உணர்த்துகிறதல்லவா? நான் முதன் முதலாகத் தியோனாக வேடம் தாங்கியது இந்த நாடகத்தில்தான். இந் நாடகத்தை மொத்தம் நான்கு முறையே நடித்திருக்கிறோம். தொடர்ந்து நடைபெறவில்லை. காரணம், இது பெரும்பாலும் டம்பாச்சாரி நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. இளஞ்சிறுவர்களுக்கு வேண்டாத பல கருத்துக்கள் இந்நாடகத்தில் இருந்தன. சிறுவர்கள் இந்நாடகத்தில் நடிப்பதை ரசிகர்கள் அவ்வளவாக வரவேற்கவில்லை. உரையாடல்கள் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய பல மொழிகளைக் கொண்டிருந்தன. இந்நாடகத்தில் எம். கே. ராதா, முழுவதும் தெலுங்கு பேசும் செட்டியாராக ஒரு நகைச்சுவைப் பாத்திரத்தை ஏற்று, அற்புதமாக நடித்ததை என்னால் மறக்க முடியவில்லை.  ரயில்வேயில் லஞ்சம் சேலத்தில் சந்திரகாந்தா நாடகம் பாடம் கொடுக்கப் பெற்றது. ஒத்திகையும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அடுத்த ஊரில் அரங்கேற்றமாகும் என நம்பிக் கொண்டிருந்தோம். இந்த நேரத்தில் கம்பெனி பெங்களுருக்குப் புறப்பட்டது. பெங்களுர் கண்டோன்மெண்ட் லக்ஷிமி தியேட்டரில் நாடகங்கள் நடத்தினோம். இங்கு நாடகம் தொடங்கு முன்பே சிறிது தொல்லை ஏற்பட்டது. சேலத்திலிருந்து சீன் சாமான்களைக் கூட்ஸ் வண்டியில் ஏற்றிவிட்டு, நாங்கள் பெங்களுருக்குப் போய் விட்டோம். சாமான் குறிப்பிட்டபடி வந்துவிடுமென்று நம்பி நாடகத் தேதியும் விளம்பரம் செய்து விட்டோம். ஆனால், சாமான்கள் குறித்த தேதியில் வரவில்லை. எங்களுக்கும் எவ்விதத் தகவலும் இல்லை. சேலம் ஜங்ஷனில் கூட்ஸ் வண்டி கழற்றி விடப்பட்டிருப்பதால் அது சரியான நிலையில் இல்லையென்றும், மீண்டும் எங்கள் ஆட்கள் வந்து சாமான்களை வேறு வண்டியில் ஏற்ற வேண்டுமென்றும், சேலத்திலிருந்து வந்த ஒரு நண்பர் கூறினார். பிறகு சேலம் போய் விசாரித்ததில் இது, ரயில்வே கூட்ஸ் ஷெட் அதிகாரி ஒருவருக்கு இலவச டிக்கெட் கொடுக்காததால் ஏற்பட்ட வினையென்பது தெரிய வந்தது. அந்த அதிகாரி தன்னால் இயன்ற புண்ணியத்தைச் செய்து, முதல் நாடகத்தையே நிறுத்தும் படியாகச் செய்து விட்டார். விபரம் தெரிந்ததும் அவருக்கு லஞ்சம் கொடுத்து, அதே வண்டியை மீண்டும் பெங்களுருக்கு அனுப்ப ஏற்பாடு செய்து வந்தார் மானேஜர்.  பார்சி கம்பெனி நாடகம் பெங்களுரில் எங்கள் நாடகம் நடைபெறுவதற்கு முன் அதே கொட்டகையில் பார்சி கம்பெனியாரின் இரு நாடகங்களைப் பார்த்தோம். காட்சி அமைப்புகள் பிரமாதமாக இருந்தன. பிரதான நாடகத்திலேயே நகைச்சுவையை இணைக்காமல் அதற்கென்று ஒரு தனி நாடகமே நடித்தார்கள். பிரதான நாடகத்தில் ஒரு காட்சி முடிந்ததும், நகைச்சுவை நாடகத்தின் காட்சி யொன்று நடைபெறும். இரு நாடகங்களின் காட்சிகளும் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து நடைபெறும். பிரதான நாடகம் முடியு முன்பே நகைச்சுவை நாடகம் முடிந்துவிடும். இந்த முறை எங்களுக்குப் புதிதாக இருந்தது. இருந்தாலும், நாடகங்களை நன்கு ரசித்தோம். இந்த நாடகத்தைப் பார்த்ததின் மூலம் சில புதிய அனுபவங்களைப் பெற்றோம். பெங்களுரில் சரியானபடி வசூல் ஆகவில்லை. இந்த நிலையில் வாத்தியார் கந்தசாமி முதலியாரும், எம். கே. ராதாவும், கே. கே. பெருமாளும் திடீரென்று கம்பெனியிலிருந்து விலகிக் கொண்டார்கள். வாத்தியார் தயாரித்த நாடகங்களை அவர் இல்லாது நடத்துவது கஷ்டமாகி விட்டது. பெரியண்ணா டி. கே. சங்கரன், எம். கே. ராதா புனைந்து வந்த பாத்திரங்களை ஏற்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. பெங்களுரில் விரைவில் நாடகத்தை முடித்துக்கொண்டு திருப்பத்தூர் வந்துசேர்ந்தோம்.  பிரண்டுக்கு யோகம் அப்போது கம்பெனியில் சிறு வேஷங்களைப் போட்டுக் கொண்டிருந்த பிரண்டு ராமசாமிக்கு யோகம் அடித்தது. பெருமாள் போட்டு வந்த துப்பறியும் கோவிந்தன் பாத்திரத்தை இராஜாம்பாள், இராஜேந்திரா ஆகிய இரு நாடகங்களிலும் அவர் ஏற்றார், தெளிவாகப் பேசித் திறம்பெற நடித்தார். அந்தக் காலத்தில் துப்பறியும் கோவிந்தன் ஒன்றுதான் பாட்டுகள் இல்லாத பாத்திரம். பிரண்டு ராமசாமிக்கு நன்றாகப் பாட வராது. துப்பறியும் கோவிந்தன் வேடத்தில் அவருக்கு அபாரமான பெயர் கிடைத்தது. இரத்தினாவளியில் எம்.கே. ராதா நடித்த வசந்தகன் வேடத்தையும் ராமசாமியே திறமையாக நடித்தார்.  எம். எம். சிதம்பராாதன் நாடகம்  திருப்பத்துாரில் நாங்கள் நடித்துக் கொண்டிருந்தபோது. அருகிலிருந்த கிருஷ்ணகிரியில் எம். எம். சிதம்பரநாதனின் அரிச்சந்திரா மயான காண்டம் நாடகம் நடந்தது. நாங்கள் பாவலர் கம்பெனியை விட்டுப் பிரிந்தபின் பாவலரிடம் பயிற்சி பெற்று முன்னுக்கு வத்தவர் சிதம்பரநாதன். அரிச்சந்திரா நாடகத்தில் அப்போது அவருக்கு நல்ல பெயர். அன்று எங்களுக்கு நாடகமில்லாததால் நானும் மற்றுஞ்சிலரும் கிருஷ்ணகிரிக்கு நாடகம் பார்க்கச் சென்றோம். அப்போது கிருஷ்ணகிரிக்குத் தனியாக ரயில் வண்டித் தொடர் இருந்தது. சின்ன ரயில் அது. இப்போது பொருட்காட்சிகளில் ஒடும் விளையாட்டு ரயில்போல இருக்கும். அதில் பயணம் செய்தது எங்களுக்கு மிகுந்த குதுரகலமாக இருந்தது. அரிச்சந்திரா நாடகத்தில் சிதம்பரநாதன் மிகுந்த சுறுசுறுப்பாகவும், அற்புதமாகவும் நடித்தார். சந்திரமதியாக நடித்தவரின் பெயர் நினைவில்லை. ஆனால், சின்னஞ்சிறுவகை நின்ற அரிச்சந்திரனுக்கு, சந்திரமதி தாய்போலத் தோற்றமளித்தார். சிதம்பரநாதனுக்கு அப்போது பதினன்கு வயதிருக்கலாம். சந்திரமதியாக நடித்தவர் முப்பது வயதுக்கு மேற்பட்ட அம்மை. யாராக இருந்தார். சிதம்பரநாதன் திறமையாக நடித்ததோடு அருமையாகவும் பாடினார். அந்த நாளில் பிரசித்தி பெற்றிருந்த டி. எஸ். வேலம்மாள், தாணுவம்மாள், டி. டி. ருக்மணி, எஸ். டி. சுப்புலட்சுமி, டி. பி. இராஜலட்சுமி, டி. ஆர். முத்துலட்சுமி, மிகவும் முதுமைப் பருவமடைந்த வி. பி. ஜானகியம்மாள் உள்ளிட்ட பெரிய நடிகையர் அனைவரும் சிதம்பரநாதனோடு சந்திரமதியாக நடித்திருக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத் தக்கதாகும். நாடகம் முடிந்ததும் சிதம்பரநாதனப் பார்த்துப் பாராட்டிவிட்டு, திருப்பத்துாருக்குத் திரும்பினோம்.  சவுக்கடி சந்திரகாந்தா வாத்தியார் ஏற்கெனவே பயிற்சி அளித்திருந்த சந்திர காந்தா நாடகத்தை நடத்த நாங்களே முயற்சித்தோம். ஓவியர் கே. மாதவன் அப்போது எங்கள் கம்பெனியில் இருந்தார். அவரிடம் அந்த நாளிலேயே அற்புதமாக வரையும் ஆற்றல் நிரம்பியிருந்தது. அவரைக்கொண்டு சந்திரகாந்தாவுக்குப்பெரும் பொருட் செலவில் காட்சிகளை உருவாக்கினோம்.நாடக ஒத்திகை தீவிரமாக நடந்தது. ஏராளமான புகைப்படங்கள் எடுத்துப் பிரமாத விளம்பரம் செய்யப் பெற்றது.  ஜே. ஆர். ரங்கராஜு  சந்திரகாந்தாவை நாவல் வடிவில் எழுதிய ஜே.ஆர். ரங்க ராஜூ நேரில் வந்து பார்த்துத்தான் அனுமதி கொடுப்பது வழக்கம். இராஜாம்பாள் நாடகத்திற்கு இருபத்தி ஐந்து ரூபாய்களும், இராஜேந்திரா, சந்திரகாந்தா ஆகிய நாடகங்களுக்கு முப்பது ரூபாய்களும் அவருக்கு ‘ராயல்டி’ யாகக் கொடுக்க வேண்டும். அவர் சொல்வதுதான் சட்டம். நாடகத்தில் எந்த அம்சமாவது அவருக்குத் திருப்தியளிக்காவிட்டால் அனுமதி கொடுக்க மாட்டார். சந்திரகாந்தா நாடகத்திற்குத் தேதியும் போட்டுச் சுவரொட்டிகள் ஒட்டப் பெற்றன. நாடகங்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன் ஜே. ஆர். ரங்கராஜு வந்தார். அன்றே காலையிலும் மாலையிலுமாக உடைகளைப் போட்டுக் காட்சிகளுடன் ஒத்திகை நடத்திக் காண்பித்தோம். ஒத்திகை முடிந்ததும் சிலதிருத்தங்களைச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். மாமாவும், சிற்றப்பாவும் அவர் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றார்கள். அனுமதி அளிக்கவேண்டுமென்று கேட்டார்கள். அவரிடமிருந்து கிடைத்த பதில் சிறிதும் எதிர்பாராததாக, அதிர்ச்சி தருவதாக இருந்தது.  நாடகம் சரியில்லை; காட்சிகளின்அமைப்புச் சரியில்லை; நடிகர்களின் நடிப்புச் சரியில்லை; பாடங்கள் சரியில்லையென்று எல்லாவற்றையுமே குறை சொல்லிவிட்டு, “இவை யெல்லாவற்றையும் விரைவில் சரிபடுத்திக் கொண்டு எழுதுங்கள். மறுபடியும் வந்து ஒத்திகை பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டுச் சென்னைக்குப் புறப்பட்டுவிட்டார். அன்று, அவர்மீது எங்களுக்கு வந்த கோபம், இவ்வளவு அவ்வளவென்று சொல்ல முடியாது. என்ன செய்வது? அனுமதியில்லாததால் குறித்த தேதியில் நாடகம் நடைபெறவில்லை. மீண்டும் சந்திரகாந்தாவை நடத்தும் எண்ணத்தைக் கைவிட்டோம்.  ஒவியர் மாதவனின் உன்னதக் காட்சிகள் சந்திரகாந்தாவுக்காக ஒவியர் மாதவன் எழுதிய காட்சிகள் எங்களைப் பார்த்துச் சிரித்தன. அவற்றில் திருக்கள்ளுர் பண்டார சந்நிதியின் அந்தப்புரம் ஒன்றை மிக அருமையாக சிருஷ்டித்திருந்தார். அதில் ஆறு கதவுகள் இருந்தன. அந்த ஆறு கதவுகளிலும் ஒரு ஆள் உயரத்தில் எழுதப் பெற்றிருந்த மடாதிபதியின் காதல் மனைவியரின் உருவங்கள் கண்ணையும், கருத்தையும் கவர்வனவாக அமைந்திருந்தன. ஆறு பேரும் ஆறு ஜாதிப் பெண்கள்; உயிருடன் நிற்பது போலவே பார்ப்பவருக்குத் தோன்றும். அந்த அற்புதக் காட்சியைக் காண்பிக்க முடியாமல் செய்துவிட்ட ஜே. ஆர். ரங்க ராஜுவை நானும், கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனும் சபித்துக் கொண்டே இருந்தோம்.  பெரியம்மை விளையாட்டு இந்தச் சமயத்தில் கம்பெனியின் சில நடிகர்களுக்கு அம்மை நோய் வந்தது. அவர்களைத் தனியாக வைத்து, சிகிச்சை புரிவது சிரமமாக இருந்தது. எங்கள் தாயார் நிமோனியா ஜுரத் தால் மிகவும் கஷ்டப்பட்டார்கள். தங்கை சுப்பம்மாள், சிற்றப்பா செல்லம்பிள்ளை இருவருக்கும் அம்மை போட்டிருந்தது. இன்னும் சில பையன்களும் அம்மை நோயால் அவஸ்தைப் பட்டார்கள். இந்த நிலையில்நாங்கள் பட்டாபிஷேகத்தை முடிக்காமல்கோவை நாடகத்தை நிறுத்திவிட்டோம். நோயுற்றவர்களையெல்லாம் கோவையிலேயே தங்கவைத்து, வேண்டிய ஏற்பாடுகள் செய்து விட்டுக் கரூருக்கு வந்து சேர்ந்தோம். லஷுமணன் என்னும் ஒரு நடிகர் கம்பெனியில் இருந்தார். பெண்வேடம் புனைபவர். நன்றாக நடனம் ஆடக்கூடியவர். தாம்பாள நடனம் ஆடிக்கொண்டே புறா மாதிரி துணியில் புனைந்து காட்டுவார்; பரதநாட்டியம் போன்ற பல்வேறு நடனங்களையும் நன்றாக ஆடுவார்; நாடகத்திலும் பெண் வேடங்களில் மிகத் திறமையாக நடிப்பார். அவர் அம்மை நோய்க்கு அதிகமாகப் பயந்தவர். கரூர் ரயில் நிலையத்தில் இறங்கியதும் லஷுமணன், “அப்பா! ஒரு வகையாக அம்மை நோயிலிருந்து தப்பிவிட்டேன்” என்று கூறினார். எல்லோரும் கம்பெனி வீடுவந்து சேர்ந்தோம். மறுநாட் காலையில் லஷுமணனுக்கு அம்மைக் கொப்பளங்கள் இருப்பதைக் கண்டு எல்லோரும் அதிசயித்துப் போனோம். அவர் முன்னாள் ரயில் நிலையத்தில் பேசியதின் விளைவே இது என்று பலபேர் அபிப்ராயப்பட்டார்கள். இதில் அம்மன் விளையாட்டு, தெய்வீக சக்தி என்பது மெய்யோ, பொய்யோ, ஆனால் லஷுமணன்மட்டும் அதுதெய்வசக்தியென்று: உறுதியாக நம்பிவிட்டார். அவரை, அடுத்த ரயிலில் கோவை வீட்டுக்கு அனுப்பி வைத்தோம். கோவையில் எல்லோருக்கும் குணம் ஆயிற்று. ஆனால் லஷுமணன் அம்மை விளையாட்டுக்குப் பலியானார். கம்பெனி துவங்கியபின் அதுதான் முதல் மரணம். அவரை அடக்கம் செய்துவிட்டு, சிற்றப்பா முதலியவர்கள் வந்து சேர்ந்தார்கள்.  எஸ். என். இராமையா  கரூரில் நாடகங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. எங்கள் கம்பெனியில் அப்போது கதாநாயகனாகவேடம் புனைந்து வந்தவர் எஸ். என். இராமையா என்பதை முன்பே சொல்லி யிருக்கிறேன். சுவாமிகள் நாடகங்கள் எல்லாவற்றிலும் இவர் கதாநாயகனுக நடித்து வந்தார். மிக நன்றாகப் பாடக் கூடியவர். ஏற்கனவே சின்னையாபிள்ளை கம்பெனியில் எங்களோடு: இருந்தவர். அந்தக் கம்பெனி நிறுத்தப்பட்டதும் நாங்களே விரும்பி ராமையாவைச் சேர்த்துக் கொண்டோம். அவர், தம் குடும்பத்துடன் தனியே வசித்து வந்தார். அவருக்குப் பல புதிய நண்பர்கள் சேர்ந்தார்கள். அவர் க ளின் போதனையினல் ராமையா, அதிகச் சம்பளம் கொடுத்தால்தான் கம்பெனியில் இருக்க முடியும் என அறிவித்தார். மாதம் ஆயிரம் ரூபாய்கள் வேண்டுமென்று கேட்டார். அவருக்குப் பின்பலமாக உள்ளுரிலுள்ள ஒரு வக்கீல் இருந்து வேலை செய்தார். இராமையாவை: நிறுத்திவிட்டு, நாங்கள் நாடகம் நடத்த ஆரம்பித்தோம். அவருக்குத் துணையாக இருந்த வக்கீல், கரூரில் நல்ல செல்வாக்கு. உடையவர். அவருடைய ஆட்கள் நாடகம் நடைபெறாமல் குழப்பம் செய்து வந்தார்கள். வேறு வழியின்றிப் பஞ்சாயத்துப் பேசி ரூபாய் ஐநூறு சம்பளம் தருவதாகச் சொல்லி இராமையாவை மீண்டும் சேர்த்துக் கொண்டோம்.  கரூரிலிருந்து கம்பெனி புதுக்கோட்டைக்குப் போனதும் இராமையா மீண்டும் தொல்லை கொடுக்கத் தொடங்கினார். அவரை விலக்கிவிட்டு நன்னிலம் நடராஜன் என்னும் புதிய நடிகர் ஒருவரைச் சேர்த்துக் கொண்டோம்.  புதுக்கோட்டைத் தம்புடு பாகவதர்   புதுக்கோட்டையில் தம்புடு பாகவதர் என்றால் அனை வருக்கும் தெரியும். அப்போது எங்கள் கம்பெனியில் ஆர்மோனியம் வாசித்து வந்த பி. ஆர். கிருஷ்ணமூர்த்தி ஐயர்புதுக்கோட்டையைச்சேர்ந்தவர்.அவர்தான் தம்புடு பாகவதரை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். தம்புடு பாகவதர் சிறந்த சங்கீதஞானம் உடையவர்; கதா காலட்சேபக் கலையில் விற்பன்னர்; புதுக்கோட்டையிலேயே தம் தந்தையின் பெயரால் ஒரு சிறந்த கலாசாலையை நடத்தி வந்தார் அவர்.  இளஞ் சிறுவர்களுக்குப் பாடல்களைப் பயிற்றுவிப்பதில் இவருக்கு நிகரான ஒருவரை நான் இதுவரையிலும் கண்டதில்லை. சிதம்பரபாகவதர் என்பது இவரது பெயர். ஆனால் எல்லோரும் தம்புடு பாகவதர் என்றே அழைப்பார்கள்.  இவர் துருவச் சரித்திரத்தை நாடகமாக எங்களுக்குப் பயிற்றுவித்தார். பாடங்கள் அனைத்தும் நல்ல கர்னடக இசையில் அமைந்திருந்தன. அவற்றை அவர் எங்களுக்குப் பயிற்றுவித்த முறையே போற்றத் தக்கதாக இருந்தது. நான் துருவகை நடித் தேன். புதுக்கோட்டையில் துருவன் நாடகத்திற்கு அமோகமான வரவேற்பு இருந்தது. இதைநாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடி சென்றோம். அங்கும் துருவன் நாடகத்திற்குப் பிரமாதமான வரவேற்பும், வசூலும் இருந்தன. காரைக்குடியில் மட்டும் தொடர்ந்து துருவன் நாடகத்தையே பலமுறைகள் நடித்தோம். நாடகம் மக்களை மிகவும் கவர்ந்தது.  துருவனில் ஆங்கிலம் அந்தநாளில் ஸ்பெஷல் நாடக நடிகர்கள் புராண இதிகாச நாடகங்களில் சாதாரணமாக ஆங்கில வார்த்தைகளைப் பயன் படுத்துவார்கள். ஆனால் பாலர் கம்பெனிகளில் இந்தக் கொடுமை யெல்லாம் இல்லை. துருவச் சரித்திரத்தில் மட்டும் ஆங்கிலம் எப்படியோ இடம் பெற்று விட்டது.  துருவன் நாடகத்தில் ஒரு காட்சி. துருவனும், உத்தான பாத மகாராஜாவின் இளையாள் பிள்ளை உத்தமனும் விளையாடும் காட்சி அது. அந்த நாளில் எல்லாம் பாடல்கள்தானே! பிள்ளைகள், பாடல்களிலேயே விளையாடுகிறார்கள். பிள்ளைகள் கூடி விளையாடும் இடத்தில் விகடப் பையனும் ஒருவன் இருந்தாக வேண்டுமே!...... துருவன் பாடியதும், விகடப் பையனாக வேடம் புனைந்த கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் பாடுவார்:  டென்னிஸ் புட்பாலடித்து     ரவுண்டர்ஸ் பிளே செய்திடுவோம் டிபன் கொஞ்சம்எடுக்க     டி காபி பார்த்திடுவோம்  பாடலைக் கவனித்தீர்களா? டென்னிஸ், புட்பால் இவைபோன்ற விளையாடல்களை எல்லாம் துருவனும், உத்தமனும் விளையாடுகிறார்கள்! எப்படி? அந்தக் காலத்துப் புராண இதிகாச நாடகங்களில் ஆங்கில மொழி எப்படி ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. பார்த்தீர்களா? இந்தக் கேலிக் கூத்தையெல்லாம் பொது மக்கள் அமோகமாக ரசிக்கத்தான் செய்தார்கள்!  பக்த ராமதாஸ் தயாரிப்பு பக்த துருவனில் மகத்தான வெற்றியைக் கண்டதும். தம்புடு பாகவதர், மற்றொரு சிறந்த காலட்சேபக் கதையான பக்த ராமதாசையும் எங்களது வேண்டுகோளுக்கிணங்கி நாடக. மாக்க முனைந்தார். காரைக்குடி முடிந்து, சிவகங்கை சென் றோம். பக்த ராமதாஸ் பாடம் கொடுக்கப்பட்டது. வழக்கம் போல் எல்லோருக்கும் பாடல்களை முதலில் சொல்லிக் கொடுத். தார் பாகவதர். துருவச் சரித்திரத்தில் அவர் பாடல்களைச் சொல்லிக் கொடுத்தபோதே கணத்த குரலில் அவர் பாடும். பாணி, சாதாரணமாகச் சிலருக்கு நகைப்பையே உண்டாக்கும். நகைச்சுவை நடிகர்களுக்குக் கேட்க வேண்டுமா, என்ன! அவர் பாடும்போது தலையை அசைக்கும் பாங்கையும், உதடுகள் குவிந்து விரியும் தோற்றத்தையும் அப்படியே காப்பியடித்தார்கள் சிலர். இவர்களில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனும், புளிமூட்டை ராமசாமியும் முதன்மையாக இருந்தனார். ராமதாசில் ஸ்ரீராம நவமி உத்ஸவத்தில் சாப்பிட்டு விட்டு வந்து, அதைப்பற்றி வர்ணித்துப் பாடும் இரு பிராமணர்களாக நடிக்க வேண்டிய நிலை இவ்விருவருக்கும் நேர்ந்தது. பிறருக்குச் சொல்லிக் கொடுப் பதையே நையாண்டி செய்யும் இவர்கள், தாங்களே பயிலும் நிலை ஏற்பட்டபோது, நிரம்பவும் திண்டாடினார்கள். ஒரு நாள் என். எஸ். கிருஷ்ணனையும், ராமசாமியையும் எதிரே உட்கார வைத்துக் கொண்டு பாகவதர் பாட்டுச் சொல்லிக் கொடுத்தார்.  கூட்டுக்கறிகள் பாருமே     கோசம்பரி சட்னி பச்சடி லாம்பார் (கூட்டு)  அப்பளமிது செப்பரிதாகும்     சொப்பனத்திலும் கண்டிலோம்  ஷோக்கு ஷோக்கென் றுண்டிடுவோம் (கூட்டு)  இதைத் தம்புடு பாகவதர் அவருடைய வழக்கமான ‘பந்தாவில்’ பாடத் தொடங்கிய உடனேயே என். எஸ். கிருஷ்ணனுக்குச் சிரிப்பு வந்து விட்டது. அவர் நேராகப் பாகவதர் முகத்தைப் பார்க்காமல் சிரிப்பை அடக்கிக்கொண்டு, ராமசாமியைப் பார்த் தார். அவரும் அதே நிலையில் இருந்தார். வாயைத் திறக்காமல் உதட்டைக் கடித்த வண்ணம் இருந்தால் ஒரளவு சிரிக்காமல் சமாளிக்க முடியும்; ஆனால் வாயைத் திறந்து பாடவேண்டுமே! இரண்டு மூன்றுமுறை பாகவதர் பாடிவிட்டு, ‘நீங்கள் பாடுங்கள், பாடுங்கள்’ என்றார். இருவரும் பாடுவதற்கு வாயைத் திறந்து, “கூட்டு கறிகள் பாருமே” என்றார்கள். ‘பா’ என்ற சொல்லிலேயே பற்கள் முப்பத்திரண்டும் தெரியும்படியாக ‘குபுக்’ என்று இருவரும் சிரித்துவிட்டார்கள். இது பாகவதருக்கு எப்படி இருந்திருக்கும். இளம்பிள்ளைகளின் விளையாட்டு என்ற முறையில் பெருந் தன்மையோடு “சரி நாளைப் பாடலாம்” என்று எழுந்து போய் விட்டார். செய்தி பெரியண்ணா காதுவரைக்கும் எட்டியது. அவர், இருவரையும் கூப்பிட்டுக் கண்டித்தார். “இனிமேல் சரியாகப் பாடுகிறோம்” என்றார்கள் நகைச்சுவை நடிகர்கள் இருவரும்.  வாய்ப்பினை இழந்தோம் மறுநாள் பொழுது விடிந்த உடனேயே, இன்று சிரிக்காமல் பாடவேண்டும் என்று இருவரும் தங்களுக்குள்ளேயே உறுதி செய்து கொண்டார்கள். பாகவதர் வந்து உட்கார்ந்தார். இருவரும் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு, ஒழுங்கான பிள்ளைகளாக வந்து, எதிரில் அமர்ந்தார்கள். பாகவதர் பழைய தோரணையில் பாடலைத் தொடங்கினார். என். எஸ். கிருஷ்ணனும், ராமசாமியும், பாகவதர் முகத்தை ஏறிட்டுப் பார்க்காமல் தலையைக் குனிந்து கொண்டே பாடத் தொடங்கினார்கள். ஆனால் மிகுந்த சிரமத்தோடு அவர்கள் அடக்கி வைத்திருந்த அந்த சிரிப்பு ஒரு முறைதான் கட்டுப்பட்டிருந்தது. இரண்டாம் முறை அவர்கள் கட்டுப்பாட்டை உடைத்துக் கொண்டு, சத்தத்தோடு பொட்டிச் சிதறியது. இருவரும் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினார்கள். பாகவதர் பொறுமை இழந்தார். “இந்தப் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க என்னால் இயலாது” என்றார். அப்படிச் சொன்னதோடு மட்டும் நில்லாமல் உடனடியாகப் புதுக்கோட்டைக்கும் பயணமானார், பெரியண்ணா அவரை எவ்வளவோ சமாதானப்படுத்தியும் பயனில்லாமல் போயிற்று. என். எஸ். கிருஷ்ணன் இதற்காக மன்னிப்புக் கேட்டுப் பாகவதருக்குக் கடிதமும் எழுதினார். ஆனால் பாகவதர் திரும்பி வரவே இல்லை. நாங்கள் மிகவும் வருந்தினோம். மும் மொழி நாடகமான பக்த ராமதாசை அரங்கேற்றும் வாய்ப்பு அப்போது எங்களுக்குக் கிட்டவில்லை. அந்த நல்ல வாய்ப்பு மதுரை ஸ்ரீ பால மீன ரஞ்சனி சங்கீத சபாவுக்குக் கிடைத்தது. பின்னர் சிவகங்கையிலிருந்து திருநெல்வேலிக்குப் போய்ச் சேர்ந்தோம்.  திருநெல்வேலியில் மீண்டும் வாத்தியார் கந்தசாமி முதலியாரும், அவரது புதல்வர் எம். கே. ராதாவும், கே. கே. பெருமாளும் வந்து சேர்ந்தார்கள். இம்முறை அவர்களோடு கே. பி. காமாட்சி சுந்தரமும் வந்து சேர்ந்தார். அவர்கள் வந்தபின் சந்திர காந்தா நாடகம் மீண்டும் பாடம் கொடுக்கப் பெற்றது.  தம்பி பகவதிக்கு டைபாய்டு திருநெல்வேலியில் தம்பி பகவதி, அம்மா,சிற்றப்பா மூவரும் டைபாய்டு ஜுரத்தால் பீடிக்கப்பட்டார்கள். வீட்டில் வைத்து சிகிச்சை செய்யமுடியவில்லை. பாளையங்கோட்டைஆஸ்பத்திரியில் மாதக்கணக்கில் அவர்கள் இருக்க நேரிட்டது. இதனால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். அம்மாவும், சிற்றப்பாவும் விரைவில் குணமடைந்தார்கள். தம்பி பகவதி மட்டும் நீண்ட காலம் ஆஸ்பத்திரியிலேயிருந்து சிகிக்சை பெற்றான். ஆஸ்பத்திரியின் பிரதம கம்பவுண்டர் ரங்கமன்னார் நாயுடுவும், கம்பவுண்டர் ஷண்முக சுந்தரம் பிள்ளையும் இந்தச் சமயத்தில் எங்களுக்குப் பேருதவி புரிந்தார்கள். இதன் காரணமாக அவர்கள் எங்கள் குடும்ப நண்பர்களாகவே ஆகிவிட்டார்கள்.  கம்பெனியில் நடத்திக் கொண்டிருந்த எல்லா நாடகங்களையும் நடித்து விட்டோம். மேற்கொண்டு புதிய நாடகம் ஏதாவது நடத்தினால்தான் வசூலாகும்போல் தோன்றியது. நிலைமை நெருக்கடியாய் விட்டது. வெளியூர்களில் ஸ்பெஷலாகச் சில நாடகங்களை நடத்தினோம். வசூலாகவில்லை. தம்பி பகவதிக்குத் துணையாக அம்மாவையும் ஆஸ்பத்தியிரிலேயே இருக்கச் செய்து விட்டு, நாங்கள் மதுரைக்குச் சென்றோம். மதுரையிலிருந்து எட்டையபுரம் இளையராஜா காசிவிஸ்வநாதபாண்டியன் அவர்கள் வேண்டுகோளின்படி மீண்டும் எட்டையபுரம் சென்றோம். ஒரே ஒரு இரத்தினவளி நாடகம் மட்டும் போடவேண்டும் என்ற ஏற்பாட்டில் தான் போயிருந்தோம். ஆனால் எட்டையபுரத்தார் எங்களை விடவில்லை. தாத்தா மகாராஜா, தங்க மகாராஜா, காசி மகாராஜா ஒவ்வொருவர் அரண்மனை அரங்கிலும் இரத்தினவளி நாடகம் சிறப்பாக நடைபெற்றது. வாத்தியார் கந்தசாமி முதலியாருக்கு எட்டையபுரம் அரசர் ஏராளமான சன்மானங்கள் செய்தார். இரத்னவளியாக நடித்த செல்லத்திற்கு இரண்டு கைக் கொலுசுகள் பரிசாக அளித்தது குறிப்பிடத்தக்க ஒரு விசேஷம். கலைவாணர் என். எஸ் கிருஷ்ணனுக்கு வைரக்கற்கள் பதித்த தம் கைக்கெடியாரத்தையே காசிமகாராஜா அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டார். மற்றும் எல்லா நடிகர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பெற்றன.  கலைவாணர் தமக்கையார் வீட்டில் எட்டையபுரத்தில் என். எஸ். கிருஷ்ணனின் மூத்த சகோதரி இருந்து வந்தார். நாங்கள் சகோதரர்கள் நால்வரும்: கலைவாணருடனும், வாத்தியார் முதலியாருடனும் அவரது இல்லத்தில் உணவு புசிப்பது வழக்கம். வாத்தியாருடன் நான் அடிக்கடி சிறுபிள்ளைத்தனமாக ஏதாவது விளையாடிக் கொண்டிருப்பேன். ஒருநாள் நாங்கள் எல்லோரும் உணவு அருந்திக் கொண்டிருந்தபொழுது, வாத்தியாருக்குத் தாகம் எடுத்தது. அவர், எதிரிலிருந்த டம்ளரை எடுக்கக் கையை நீட்டினார். நான் உடனே விளையாட்டாக அவருக்குமுன் அந்த டம்ளரை எடுத்து, அதிலிருந்த தண்ணிரைக் குடித்துவிட்டு, வெறும் டம்ளரை வாத்தியார் முன்னால் வைத்தேன். எல்லோரும் சிரித்தார்கள். மீண்டும் டம்ளரில் ஜலம் ஊற்றப்பட்டது. வாத்தியார் கையை நீட்டினார். மறுபடியும் நான் டம்ளரிலுள்ள நீரை எடுத்துக் குடித்து விட்டேன். அவ்வளவுதான். வாத்தியார் விக்கி விக்கித் தவித்தார். அவரது கண்கள் மேலே செருகிப் போய்விட்டன. அப்படியே பின்னால் சாய்ந்தார். உடனடியாகத் , தண்ணிர் கொண்டுவரப்பட்டு, அவரது முகத்தில் தெளிக்கப்பட்டது. தண்ணீரைக் குடித்தார். பிறகு ஒருவாறாகச் சமாளித்து எழுந்து உட்கார்ந்தார். நான் திடுக்கிட்டுப் போய்விட்டேன். இப்படி நேருமென்று எதிர்பார்க்கவே இல்லை. எல்லோரும் என்னைக் கோபத்தோடு பார்த்தார்கள். பெரியண்ணாவின் கண்களைப் பார்க்கவே எனக்குப் பயமாக இருந்தது. “சிறுபிள்ளை விளையாட்டாகச் செய்துவிட்டான்” என்று வாத்தியாரே மற்றவர்களைச் சமாதானப் படுத்தியது, எனக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது.  எட்டையபுரத்தில் அரண்மனைக்கு வெளியேயும் ஒரு பெரிய நாடகக் கொட்டகை இருந்தது. இரத்தினவளி நாடகம் அங்கும் நடிக்கப்பெற்றது. ஆக, ஒரே ஒரு நாடகத்திற்காக எட்டையபுரம் சென்ற நாங்கள், அரண்மனையின் உள்ளிலும், வெளியிலுமாக மொத்தம் பதினைந்து நாடகங்கள் நடிக்க நேர்ந்தது. மதுரைக்குத் திரும்பியதும் விரைவில் பட்டாபிஷேகத்தை முடித்துக் கொண்டு, மீண்டும் திருநெல்வேலிக்கு வந்து சேர்ந்தோம்.  சந்திரகாந்தா அரங்கேற்றம் இம்முறை சந்திரகாந்தா நாடகம் எவ்வித விக்கினமும் இல்லாமல் அரங்கேறியது. இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், கோவையில் நேரில் வந்து ஒத்திகை பார்த்து அனுமதி கொடுக் காமல் போன ஜே. ஆர். ரங்கராஜு, இப்போது அதைப் பார்க் காமலே அனுமதி கொடுத்துவிட்டார். வாத்தியார் முதலியாரின் நாடகத் தயாரிப்பில் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை.  சந்திரகாந்தா, இராஜேந்திரா முதலிய நாவல் நாடகங்களில் இப்போது கே. பி. காமாட்சி பிரதம வேடம் தாங்கினார், காமாட்சி மிகச் சிறந்த நடிகர். “இந்தியன் எடிபோலோ” என்று அடைமொழி கொடுத்து, அவர் பெயரை விளம்பரப் படுத்துவது வழக்கம், அவருடைய நடிப்பு, மற்றவர்கள் நடிப்பினின்றும் முற்றிலும் வேறுபட்டிருக்கும். கைகால்களே அதிகமாக அசைக் காமல் முகத்திலேயே உணர்ச்சிகளைக் காட்டி நடிப்பார். அவரது அற்புதமான நடிப்புத் திறமையை எல்லோரும் புகழ்வார்கள்.  காரைக்குடியில் கம்பெனியை விட்டுப்போன எம். ஆர். சாமிநாதன் மீண்டும் இப்போது கம்பெனியில் சேர்ந்திருந்தார். ஆனால் பழைய ஸ்தானம் அவருக்குக் கிடைக்கவில்லை. என். எஸ். கிருஷ்ணன் அவருடைய இடத்தைப் பிடித்துக்கொண்டதால் சாமிநாதன் வேறு சில்லரை வேடங்களே புனைய நேர்ந்தது. நாடகங்களில் இரண்டாவதாக வரும் நகைச்சுவை வேடமே அவருக்குக் கொடுக்கப் பெற்றது. சந்திரகாந்தாவில் நாவிதர் முனிசாமியும், திருக்கள்ளுர் பண்டார சந்நிதியும் கலைவாண ருக்கே கிடைத்தன. எம். ஆர், சாமிநாதனுக்கு மொந்தையூர் பண்டாரசந்நிதி வேடமே கொடுக்கப்பட்டது. நான் அவரிடம் மிகவும் அனுதாபம் கொள்வேன். ஆனால் சாமிநாதன் இதுபற்றிக் கவலைப்படாதவர் போல் காட்டிக் கொள்வார். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனுக்கு, அவரது மனநிலை ஒருவாறு தெரியும். எனவே அவர், எம். ஆர். சாமிநாதனிடம் எப்போதும் மரியாதை கொடுத்து, அன்புடனேயே பழகி வந்தார்.  சுண்டூர் இளவரசன் நான் சுண்டூர் இளவரசனாக நடித்தேன். சின்னண்ணா சந்திரவதனாவாக நடித்தார். சந்திரகாந்தாவில் சுண்டூர் இளவரசன் ஒரு பொறுப்பான பாத்திரம். அந்த வேடத்திற்கு எனக்கென்றே தனியாக வாத்தியார் ஒரு ஆங்கில வசனம் எழுதினார். அந்த வசனம் ஒரு சிறந்த கவிதைபோல் அமைந்திருக்கும். அதற்குத் தெளிவாகப் பொருள் கூறிச் சொல்லிக் கொடுத்தார். அந்த ஆங்கில வசனத்தை நான் பேசியபொழுது ரசிகர்கள் மகிழ்ச்சி யோடு கைதட்டிப் பாராட்டினார்கள். சுண்டுர் இளவரசன் வேடத்தில் எனக்குப் பெரிய வரவேற்புக் கிடைத்தது. அந்த நாளில் நான் நடித்த பாத்திரங்களில், எனக்கு மிகவும் பிடித்தமான பாத்திரம் சுண்டூர் இளவரசன்தான்.  மாமாவுடன் மனத்தாங்கல் ஆஸ்பத்திரியிலிருந்து தம்பி பகவதி உடல் நலமாகி வீடு வந்து சேர்ந்தான். டைபாய்டு ஜுரம் அவனை உருக்குலைத்திருந்தது. மிகத் தெளிவாகப் பேசிக் கொண்டிருந்த பகவதியின் வார்த்தையில் இப்போது தடுமாற்றம் காணப்பட்டது. திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் வந்து சேர்ந்தோம். நாகர் கோவிலில் நாடகம் தொடங்கியது. அப்போது கைவசமிருந்த சொற்பத் தொகையைக் கொண்டு நாகர்கோவிலில் ஒரு நிலம் வாங்க எங்கள் தாயார் திட்டமிட்டார்கள். மாமா செல்லம் பிள்ளை ஒரு நிலம் பார்த்து வந்தார். அந்த நிலம் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. அது சம்பந்தமாக அம்மாவுக்கும், மாமாவுக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. வார்த்தை வளர்ந்தது. மாமா ஏதோ தவறாகப் பேசினார். அம்மா மாமாவைக் கன்னத்தில் அறைந்து விட்டார்கள். அவர்கள் தம்பி என்ற முறையில் அடித்தாலும், அவ்வளவு பெரியவரை அடித்தது எங்களுக்கெல்லாம் கஷ்டமாகவே இருந்தது.  இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பெரியண்ணாவுக்கும், மாமாவுக்கும் மனத்தாங்கல் ஏற்பட்டது. அடுத்த ஊர் திருவனந்தபுரம் வந்ததும் மாமா, கம்பெனியிலிருந்து விலகிக் கொண்டார். அவருக்கும் பெரியண்ணாவுக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தின் காரணத்தை அறிய எங்களால் முடியவில்லை. பெரிய அண்ணாவும் அதை யாரிடமும் சொல்லவிரும்பவில்லை. திருவனந்தபுரத்தை விட்டுப் புறப்பட்டபோது, அப்போது முக்கிய பெண் வேடதாரியாக இருந்த செல்லம், கம்பெனியோடு வர மறுத்து விட்டான். அவனை மாமா மிகவும் அபிமானத்தோடு நடத்தி வந்ததால், மாமா இல்லாமல் அவன் வர விரும்பவில்லை. மாமாவே செல்லத்தைப் போக வேண்டாமென்று சொல்லி நிறுத்தி விட்டதாகவும் கேள்விப்பட்டேன். பணம் சம்பந்தமாகவும் மாமா எங்களுக்குப் பெரிய மோசடி செய்துவிட்டதாக அம்மா கூறினார்கள். எனவே, மேற்கொண்டு நான் எதுவும் கேட்க விரும்பவில்லை.  காவடிக் கட்டு திருவனந்தபுரம் புத்தன் சந்தையிலுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் எனக்குக் காவடி எடுக்கும் நேர்த்திக் கடன் இருந்தது. அம்மா எப்போதோ நேர்ந்திருந்தார்கள். இதற்கு முன் திருவனந்தபுரம் சென்றபோதெல்லாம் இக்கடனைத் தீர்க்கச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. இம்முறை அதை நிறைவேற்ற முடிவு செய்தார்கள். காவடியைத் தூக்கித் தோளில் வைத்ததும் சுவாமி வரும்; தன் நினைவே இராது என்று நான் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தேன். நான் கடவுள் நம்பிக்கை உடையவன். என்றாலும் இதில் எனக்கு நம்பிக்கையில்லை. நேர்வுக் கடன் தீர்க்கும் தினத்தன்று காலை நீராடிக் காவியுடை கட்டி, பூஜைக்கு ஆயத்தமானேன். செண்டை, முரசு, நாதசுரம், தவுல் போன்ற மேளதாளச் சத்தங்கள் என் செவிகளைத் துளைக்கத் தொடங்கின. காவடி எடுத்துத் தோளில் வைத்ததும், என் முன்னே இசைக்கருவிகளை உச்ச ஸ்தாயையில் முழக்கி, ஆட்டம் போடலாயினார். அவ்வளவுதான். தலை சுற்றுவது போன்ற நிலை; என் உணர்வில் ஒரு எழுச்சி. நினைவை இழந்தேன். மீண்டும் எனக்கு நினைவு வந்தபோது, சுப்பிரமணிய சுவாமி கோவிலின் முன் காவடியோடு நின்று கொண்டிருந்தேன். ஏறத்தாழ ஒரு மைல் தொலைவிலுள்ள கோவிலுக்கு எப்படி வந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. இந்த அனுபவம் எனக்குப் புதுமையாக இருந்தது.                                                மலையாள நாட்டில்   திருவனந்தபுரத்திலிருந்து கம்பெனி கொல்லம் வந்து சேர்ந்தது. கொல்லத்தில் வசூல் மிகவும் மோசமாக இருந்தது. நாடகங்களை விரைவில் முடித்துக் கொண்டு ஆலப்புழைக்குச் சென்றோம். ஆலப்புழையில் நாவல் நாடகங்களுக்கு மட்டும் சுமாராக வசூல் ஆயிற்று. அந்த நாளில் மலையாளத்தின் அந்தப் பகுதியில் பஸ் போக்குவரத்துகள் அதிகமாக இல்லை. எங்கு பார்த்தாலும் நீண்ட நீர்க் பரப்பு; ‘காயல்’ என்று அதைக் குறிப்பிடுவார்கள். வேம்ப நாட்டுக் காயல், காயங்குளம் காயல் போன்ற பல காயல்கள் ஒன்று சேர்ந்து சமுத்திரம்போல் கிடக்கும். சாமான்களையெல்லாம் பெரிய வள்ளங்களில் ஏற்றி அனுப்பிவிட்டு நாங்கள் எல்லோரும் சிறு கப்பல்களைப் போலிருக்கும் போட்டுகளில்தான் பிரயாணம் செய்தோம். கொல்லத்திலிருந்து எர்ணாகுளம் வரை இதே நிலைதான். ஆலப்புழை, கொச்சி முதலிய ஊர்களில் நாடகம் நடத்திவிட்டுத் திருச்சூர் வந்து சேர்ந்தோம். திருச்சூரிலும் வசூலாகவில்லை. தொடர்ந்து வசூல் இல்லாத அன்றைய நிலை எனக்கு மிகவும் கவலையை அளித்தது. நாடகங்கள் சிறப்பாக நடைபெற்றன. நல்ல திறமையுள்ள நடிகர்கள் கம்பெனியில் இருந்தார்கள். வசூல் மட்டும் ஆகவில்லை. இராஜாம்பாள், இராஜேந்திரா, சந்திரகாந்தா முதலிய எல்லா நாடகங்களும் தோல்வி யடைந்தன. கே.பி. காமாட்சி, எம். கே. ராதா, கே. கே. பெருமாள், என். எஸ். கிருஷ்ணன், எம். ஆர். சாமிநாதன், நன்றாகப் பாடக்கூடிய பல இளம் நடிகர்கள் எல்லோருமிருந்தும் பயனில்லை. மிகவும் சிரமப்பட்டோம்.  மகத்தான துரோகம் கம்பெனி திருச்சூரிலிருந்து எப்படியாவது தப்பிப் பிழைத்தால் போதும் போலிருந்தது. பொள்ளாச்சியில் கொட்டகையை பேசிவந்தார் பெரியண்ணா. எல்லோரும் பொள்ளாச்சிக்குப் புறப்பட்டோம். வாத்தியார் கந்தசாமி முதலியார் தனி வீட்டில் இருந்தார். அவரும், மற்றும் சில முக்கியமான நடிகர்களும் இரண்டு நாட்களுக்குப்பின் வருவதாகச் சொன்னார்கள். ஒரு சிலர் சொந்த ஊருக்குப் போய் வருவதாகப் புறப்பட்டுச் சென்றார்கள். நாங்கள் பொள்ளாச்சி வந்து சேர்ந்தோம். முதல் நாடகத்திற்குச் சுவரொட்டிகள் அடிக்கப் பெற்றன. விளம்பர அறிவிப்புகளும் தயாராயின. திருச்சூரில் தங்கியவர்கள் வருகைக்காகக் காத்திருந்தோம். குறித்தபடி இரண்டு நாட்களாயின. யாரும் வரவில்லை. ஊருக்குப் போனவர்களிடமிருந்தும் எவ்விதத் தகவலும் இல்லை. எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த நிலையில் திருச்சூரில் நாங்கள் தங்கியிருந்த வீட்டின் சொந்தக்காரரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதம், இடி போன்ற ஒரு அதிர்ச்சியான செய்தியைத் தாங்கி வந்தது. திருச்சூரில் தங்கியவர்களும், ஊருக்குப் போவதாகப்புறப்பட்டவர்களும் ஆக எல்லோருமாகப் பதினாலு பேர்கள்-வேறு ஒரு கம்பெனியில் முன்பணம் வாங்கிக் கொண்டு மங்களுருக்குப் போய்விட்டார்கள் என்று அக்கடிதத்திலிருந்து தெரிய வந்தது. நாங்கள் சிறிதும் எதிர்பாராத இந்தச் செய்தி எங்களைத் திடுக்கிடச் செய்தது. வாத்தியார் கந்தசாமி முதலியார், அவரது புதல்வர் எம். கே. ராதா, கே.பி. காமாட்சி, கே.கே. பெருமாள், எம். ஆர். சாமிநாதன், நன்னிலம் நடராசன் உள்ளிட்ட பதினாலு பேர்களைத் திடீரென்று இழந்த நிலையில் எப்படி நாடகங்களை நடத்த முடியும்?  துரோகத்தில் சிக்காத தூயவர் ஊருக்குப்போன சில நடிகர்களின் பெட்டிகளைத் திறந்து பார்த்தோம். சில பெட்டிகளில் ஒன்றுமே இல்லை. இரண்டொரு பெட்டிகளில் வெறும் காகிதக் குப்பைகள் கிடந்தன. ஒருவர் மிகவும் புத்திசாலி. பெட்டி கனமாக இருப்பதற்காக அவர் இரண்டு, கனத்தபெருங்கற்களை உள்ளேவைத்திருந்தார். இவ்வளவு பெரிய துரோகத்தை எங்களில் யாரும் கனவுகூடக் காணவில்லை.  ஆனால் ஒருவருக்கு மட்டும் இப்படி நடக்குமென்று முன்னாடியே தெரிந்திருந்தது. அவரையும் ஓடிப் போனவர்கள், தம்மோடு வர அழைத்திருந்தார்கள்.ஆனால் அவருக்குக் கம்பெனியின் மீது இருந்த பற்றுதல், நன்றியுணர்ச்சி, அவர்களோடு போகவிடாது தடுத்து விட்டன. அவர் என்னிடம் இந்த உண்மையைக் கூறியபோது, நான் அவரை ஆனந்தத்துடன் தழுவிக் கொண்டேன். அவர்தான் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்.  முக்கிய நடிகர்கள் பலர் போய்விட்டதால் பொள்ளாச்சியில் நாடகங்களைத் துவக்க இயலாமல் சிரமப்பட்டோம். பதினைந்து நாட்கள் நாடகம் நடைபெறவில்லை. சில்லரை வேடங்களைப் புனைந்து வந்த பல நடிகர்களுக்கு நல்ல வேடங்களைத் தாங்கச் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. புதிதாகச் சில நடிகர்கள் சேர்க்கப் பட்டனார். எப்படியோ ஒருவாறாக நாடகம் மீண்டும் துவங்கியது. இந்த நிலையில் வசூலை எதிர்ப்பார்க்க முடியுமா? மிகவும் கஷ்டப் பட்டோம்.  காலவ ரிஷி பொள்ளாச்சியில் இந்தக் கஷ்டத்திலும் புதிய நாடகமாக, பம்மல் சம்பந்தனரின் காலவரிஷி தயாராயிற்று. அந்நாடக அரங்கேற்றத்தன்று வேடிக்கையான ஒரு சம்பவம் நிகழ்ந்தது.  காலவரிஷி நாடகம் தொடங்கி நடந்துகொண்டிருந்தது. காலவ முனிவர் ஆற்றின் நடுவே நிஷ்டையில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு மண்டு, கமண்டு என்னும் இரு சீடர்கள். அவர்களும் கரையருகே கண்களை மூடியவண்ணம் வீற்றிருக்கிறார்கள்.  திரை உருண்டு உயர்ந்ததும், சித்திரசேனன் என்னும் கந்தர்வன் ஊர்வசி சமேதனாய் உல்லாசத்துடன் விமானத்தில் பறந்து வருகிறான். விமானம் ஆற்றைக் கடந்து செல்லும்போது தன்வாயிலிருந்த தாம்பூலத்தைக் கீழே உமிழ்கிறான். அது ஆற்றில் கண்களை மூடிக் கைகளை நீட்டி நிஷ்டையிலிருந்த காலவ முனிவரின் வலதுகரத்தில் விழுகிறது. கரத்தில் ஏதோ விழுந்துநிஷ்டை கலைக்கப்பட்டதும் காலவர் நாற்புறமும் பார்க்கிறார். சினத்துடன் சிஷ்யர்களை அழைக்கிறார். பிறகு ஞான திருஷ்டியால், உண்மையறிந்து, ஏதோ சபதம் செய்கிறார். இதன் காரணமாக, கிருஷ்ணுர்ஜுன யுத்தம் நடக்கிறது. இதுதான் நாடகக் கதை.  காலவர் நிஷ்டையிலிருக்கும் நிலையில் காட்சி தொடங்கியது. அன்று காலவராக வேடம் புனைந்திருந்தவர் திரு. மாதவராவ் என்னும் சிறந்த ஹாஸ்ய நடிகர். சாதாரணமாக வீட்டிலேகூட அவருடைய நடவடிக்கைகள் எங்களுக்குச் சிரிப்பைத் தருவனவாக இருக்கும். காலவரின் சிஷ்யர்களான மண்டு, கமண்டு வேடங்களில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன், சுந்தரமையர் இருவரும் நடித்தார்கள். மேலே பறந்து செல்லும் கந்தர்வன் சித்திரசேனனுக நான் நடித்தேன்.  நாடகம் அன்றுதான் முதன் முறையாக நடிக்கப் பெற்றதால் நடிகர்கள் அனைவரும் உணர்ச்சியோடு நடித்தார்கள்.  மேடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கம்பியில் இணைக்கப் பட்டிருந்த ஒர் அட்டை விமானத்தில் நான் ஊர்வசியுடன் பறந்து சென்றேன். ஆற்றின் நடுவே விமானத்தை நிறுத்தித் தாம்பூலத்தையும் உமிழ்ந்தேன்.  கொண்டை பறிபோனது சபையில் ஒரே கரகோஷம். அதைத் தொடர்ந்து பெருஞ் சிரிப்பு. காட்சியை மக்கள் பிரமாதமாக ரசித்ததாக எண்ணிப் பூரிப்படைந்தேன்.  “அடே மண்டு, கமண்டு” என்று ஆவேசத்துடன் கூச்சலிட்டு, “என் வலக்கரத்தில் உச்சிஷ்டத்தை உமிழ்ந்தவர் யார்?” என அலறினார் காலவராக வீற்றிருந்த நடிகர் மாதவராவ். மண்டுவும், கமண்டுவும் ஸ்வாமி என்று ஒடி வந்ததும் சபையில் மேலும் சிரிப்பொலி அதிகரித்தது.  திரை மறைவில், மேலே விமானத்தில் இருந்த எனக்கு என்ன நடக்கிறதென்பது தெரியவில்லை. தலையை நீட்டிப் பார்த்தேன். சிஷ்யர்களான என். எஸ். கிருஷ்ணனும், சுந்தரமையரும் மாதவராவைப் பார்த்து, வாயைப் பொத்தியவாறு சிரிப்புத் தாங்காமல் பொருமிக் கொண்டிருந்தார்கள். சிஷ்யர்களின் சிரிப்பைக் கண்ட சபையோர், மேலும் கை தட்டிச் சிரித்தார்கள். மாதவராவ் இருந்த இடம் எனக்குத் தெரியவில்லை. இதற்குள் உள்ளேயும் சிரிப்பொலிகள் கேட்கத் தொடங்கின. என்.எஸ்.கே. பேசவேண்டும், அவரோ பேச முடியாமல் “ஸ்வாமி, தங்கள் தங்கள்..."என்று தவித்துக் கொண்டிருந்தார்.  இந்த நிலையில் “திரை விடுங்கள், திரை விடுங்கள்” என்ற பல குரல்கள்! திரைவிடப் பட்டது. விமானம் கீழே இறக்கப் பட்ட பிறகுதான் எனக்கு உண்மை விளங்கியது.  விமானம் காலவரைக் கடந்து செல்லும் போது அந்த அட்டை விமானத்தில் நீண்டு கொண்டிருந்த ஒரு ஆணி,நிஷ்டை யிலிருந்த முனிவரின் நீளக் கொண்டையோடு கூடிய சடைமுடி டோப்பாவையும் பூப்போல எடுத்துக் கொண்டு போய் விட்டது. விமானம் மறைந்ததும், நிஷ்டை கலைந்த காலவர் மொட்டைத் தலையில் உச்சிக் குடுமியோடு சபைக்குக் காட்சியளித்தார். உணர்ச்சியோடு வீற்றிருந்த அவருக்குக் கொண்டை பறிபோனதுகூடத் தெரியவில்லை. இந்த நிலையில் முனிபுங்கவரைப் பார்த்த சிஷ்யர்களால் எப்படி வாய் திறந்து பேச முடியும்?... ரசிகர்களால்தான் எப்படிச் சிரிப்பை அடக்க முடியும்?  நாடகங்களுக்கு வருவாய் குறைவாக இருந்தாலும், இவ்வாறு மேடையில் நிகழும் சுவையான நிகழ்ச்சிகள் எங்கள் கவலைக்கு மருந்தாக அமைந்தன. பொள்ளாச்சி முடிந்து ஈரோடு வந்தோம்.                                                      நடிப்பிசைப் புலவர் ராமசாமி   ஈரோட்டில் நாடகங்கள் சுமாரான வசூலில் நடைபெற்றன. நாவல் நாடகங்களில் பெரியண்ணா முக்கிய பங்கெடுத்துக் கொண்டார். ஈரோட்டிலிருந்து மீண்டும் கோவைக்கு வந்தோம். நாங்கள் தாயாருடன் இருக்கத் தனி வீடு கிடைக்காததால் தாயார் மட்டும் ஈரோட்டிலேயே தங்க நேர்ந்தது, நாங்கள் கோவைக்கு வந்தபின் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியார் ஈரோட்டில் நாடகங்கள் நடித்தார்கள். அவர்கள் அப்போது சி. கன்னையா கம்பெனியார் தயாரித்திருந்ததைப்போல் ஏராளமாகப் பொருட் செலவு செய்து, தசாவதாரம் நாடகத்தை நடித்துக் கொண்டிருந்தார்கள். நாவல் நாடகங்களை அதிகமாக நடிப்பதில்லை. எங்கள் தாயார் ஈரோட்டிலேயே இருந்ததால், ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நடிகர்களில் சிலர், அவர்களைப் பார்த்துப்போக அடிக்கடி வந்தார்கள். அப்படி வந்த சில நடிகர்கிளில் ஒருவர்தான் கே.ஆர்.ராமசாமி அவருக்கு எங்கள் கம்பெனிக்கு வரவேண்டுமென்ற ஆவல் இருந்தது. அந்த ஆவலை எங்கள் அன்னையாரிடம் சொல்லி,எப்படியாவது தன்னைக் கம்பெனியில் சேர்த்து விடுமாறு கேட்டுக் கொண்டார். அப்போது கே. ஆர். ராமசாமிக்குப் பதிமூன்று வயதிருக்கும். அவருடைய தகப்பனாருக்கு எழுதி, அதற்கு ஏற்பாடு செய்யுமாறு அன்னையார் சொல்லி விட்டார்கள். திடீரென்று ஒருநாள் கே. ஆர். ராமசாமி தன்னந் தனியே புறப்பட்டுக் கோவைக்கு வந்து சேர்ந்தார். ஈரோட்டி லிருந்து அம்மாதான், தன்னை அனுப்பியதாகச் சொன்னார். அம்மாவும், நடிகர்கள் சிலர் வந்து போகும் செய்திகளைப் பெரிய அண்ணாவுக்குக் கடிதமூலம் அறிவித்திருந்தார்கள். கே. ஆர். ராமசாமியைப் பாடச் சொல்லிக் கேட்டவுடன் எல்லோருக்கும் நிரம்பவும் பிடித்து விட்டது. அவருடைய சாரீரம் மிகவும் இனிமையாகவும், கெம்பீரமாகவும் இருந்தது. பெரியண்ணா அவரைக் கம்பெனியில் சேர்த்துக் கொள்ளச் சம்மதித்து விட்டார். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் அப்போது ஆசிரிய ஸ்தானத்தில் இருந்தவர் காளி. என். ரத்தினம். அவர் பெரியண்ணாவுக்குக் கடிதம் கொடுத்து, ஒருவரை அனுப்பியிருந்தார். அவர் வந்ததும் பெரியண்ணா, ராமசாமிக்கு விருப்பமிருந்தால் அழைத்துப் போவதில் எங்களுக்கொன்றும் தடையில்லை என்று கூறினார். வந்தவர் என்னென்னவோ சொல்லிராமசாமியை அழைத்துப் போக முயன்றார், எதுவும் பலிக்கவில்லை. ஒரே உறுதியாக ராமசாமி ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனிக்கு வரமுடியாதென்று மறுத்துவிட்டார். ராமசாமிக்கு உடனடியாக அபிமன்யு, சுந்தரி நாடகத்தில் கிருஷ்ணன் வேடம் கொடுக்கப் பட்டது.  யாழ்ப்பாணம் சண்முகம் பிள்ளை கோவை முடிந்து தாராபுரம் சென்றோம். தாராபுரத்தில் இருந்தபோது, கொழும்புக்கு வரவேண்டுமென்று யாழ்ப்பாணம் சண்முகம் பிள்ளை வந்து அழைத்தார். இவர் அந்த நாளில் இலங்கையில் பிரசித்தி பெற்ற காண்ட்ராக்டர். இவரைப்பற்றி” நிறைய கேள்விப்பட்டிருந்தோம். எஸ். ஜி. கிட்டப்பாவை முதன் முதலாக இலங்கைக்குக் கொண்டு சென்றவர் சண்முகம் பிள்ளை தான் என்று சிலர் பெருமையாகச் சொல்லிக் கொண்டார்கள். போகவரச்செலவு நீக்கி, மாதம் ஒன்றுக்கு ஆருயிரம்ரூபாய் பேசி, மாதம் பதினறு நாடகங்கள் நடத்துவதாக ஒப்பந்தம் செய்யப் பட்டது. ஒப்பந்தம் முடிந்ததும் கரூருக்கு வந்து சேர்ந்தோம்.  சம்பளத் தகராறு கொழும்புப் பயணம் நிச்சயமானதும் எல்லோரும்: சம்பளம் அதிகம் கொடுக்க வேண்டுமென்று கேட்டார்கள். அந்த நாளில் இலங்கைக்குப் பயணம் என்றால், மாதம் இருபது ரூபாய் சம்பளம் பெறும் ஒருவருக்கு இலங்கையில் நாற்பதும், பர்மாவில் அறுபதும், மலையாவில் எண்பதுமாகச் சம்பளம் கொடுக்கவேண்டும். கொழும்புவுக்கு எல்லோருக்கும் இரட்டிப்புச் சம்பளம் தருவதாகப் பெரியண்ணா ஒப்புக்கொண்டார். கரூரில் சில நாடகங்கள் நடித்தபின் இலங்கைக்குப் பயணமானோம்.        இலங்கைப் பயணம்   1928ஆம் ஆண்டில் இலங்கைக்கு முதன் முறையாக ரயில் மூலமாகப் புறப்பட்டோம். பயணம் மிகவும் கஷ்டமாக இருந்தது. தனுஷ்கோடியை நெருங்கியதும் மண்டபம் கேம்ப்பில் எங்களை இறக்கி விட்டார்கள். ஒரு வார காலம் அங்கேயே தங்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது, வைத்தியர் சண்முகம்பிள்ளை ஏற்கனவே ஒரு நாடகக் கம்பெனியைக் கொண்டு போயிருக்கிறாரென்றும், அவர்களே இன்னும் திருப்பிக்கொண்டுவந்து சேர்க்காததால் நாங்கள் போக இயலாதென்றும் சொல்லப்பட்டது. ஒரு கல் மண்டபத்தில் தங்கி, நாற்றம் பிடித்த அரிசியைச் சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டு மிகவும் கஷ்டப்பட்டோம். சண்முகம்பிள்ளை எப்படியோ நிலைமையைச் சமாளித்து, இலங்கைக்கு எங்களைக் கொண்டு போக அனுமதி பெற்றுவிட்டார். ஒருவாரத்திற்குப் பின் தனுஷ்கோடி போய்க் கப்பலேறினோம். கப்பலில் வீசிய மணம் சிலபேருக்குப் பிடிக்கவில்லை. தலைச்சுற்று, மயக்கம் எல்லாம் வந்தன. இரவு எட்டு மணியளவில் தலைமன்னார் போய்ச் சேர்ந்தோம். தலைமன்னரில் கொழும்புக்குப் புறப்பட ரயில் காத்துக் கொண்டிருந்தது. எல்லோரும் விழுந்தடித்துக்கொண்டு ரயிலில் போய் ஏறினோம். ரயிலில் உட்காரவே இடமில்லை. மிகவும் நெருக்கடி. இடையில் லுங்கியும், மேலே ஜாக்கெட் மட்டும் போட்ட சிங்களப் பெண்கள் சிலர் வந்து, நெருக்கித் தள்ளிக் கொண்டு உட்கார்ந்தது எங்களுக்கு வியப்பாக இருந்தது. அலுப்பு மிகுதியாக இருந்ததால் நான் விரைவில் உறங்கி விட்டேன். அதிகாலேயில் கொழும்பு மருதானே ரயில் நிலையத் திற்கு வந்து சேர்ந்தோம். சண்முகம்பிள்ளை எங்களை வரவேற்று ஜிந்தும்பிட்டி ஹாலுக்குக் கொண்டு வந்து சேர்த்தார்.  ஜிங்தும்பிட்டி ஹால் அப்பொழுது கொழும்பில் நாடகம் நடைபெறும் பெரிய தியேட்டர் ஒன்றுதானிருந்தது. அதுதான் ஜிந்தும்பிட்டி ஹால். சுமார் இரண்டாயிரம் பேர் தாராளமாக உட்காரக்கூடிய நாடக அரங்கம். தரை இல்லை. அதற்குப் பதிலாக ஏறக்குறைய ஆயிரம் பேர் வசதியாக உட்காரக் கூடிய முறையில் காலரி அமைத்திருத்தது. 5, 4, 3, 2, 1 எனக் கட்டணம் வைத்து, ஐந்து வகுப்புகள் பிரித்திருந்தார்கள். இந்தக் கட்டணம் நாங்கள் தமிழ்நாட்டில்: அந்த நாளில் கேள்விப்படாத கட்டணம். நாடகக் கொட்டகை இருந்த இடம் ஒரு பெரிய சுற்று வட்டகைக்குள் காலனிபோல் தனியிடமாக இருந்தது. கொட்டகை இருந்த வட்டகைக் குள்ளேயே சுமார் பத்து வீடுகளுக்கு மேலிருந்தன. முதல் வீடு எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது. அந்த வீட்டில் குடியேறினோம். அடிக்கடி நாடகங்களை ஒத்திகைப் பார்க்கவும், பகல் நேரங்களில் விளையாடவும் கொட்டகை எங்களுக்கு வசதியாக இருந்தது. தம்பி பகவதி, கே. ஆர். ராமசாமி, பிரண்ட் ராமசாமி, சகஸ்ரநாமம் இவர்களையெல்லாம் சாப்பாட்டு நேரம் தவிர மற்ற நேரங்களில், கொட்டகையில்தான் பார்க்கலாம். நாடகமேடையில் முழுதும் பலகை போட்டு, அடியில் ஒரு ஆள் உயரம் வசதியாக இடமிருந்ததால் வெயில் படாது ஓடிவிளையாடுவதற்கு செளகரியமாக இருந்தது. காலரி போட்டிருந்த இடத்திலும் அதே போன்று வசதியிருந்தது. இவ்விரு இடங்களையும் நாங்கள் விளையாடுவதற்காகப் பயன்படுத்திக் கொண்டோம். பகல் நேரம் முழுதும் அங்குதானிருப்போம்.  பெருங் கலகம் நாடகம் தொடங்கியது. நல்ல வசூலாயிற்று. வைத்தியர் சண்முகம்பிள்ளை ஒரே உற்சாகமாக இருந்தார். நாற்காலி,பெஞ்சி, காலரிக்குரிய வாயில்களில் நிற்பதற்காக நாலைந்து பேரை நிரந்தரமாக வைத்திருந்தார். அவர்களில் மூக்குப்பரி என்பவர் ஒருவர். நல்ல ஆஜானுபாகுவான ஆசாமி. பார்ப்பதற்கே பயமாக இருக்கும். ஏறத்தாழ எட்டடி உயரமிருப்பார். அவர் எப்போதும் கொட்டகையில்தான் படுத்துக் கொள்வது வழக்கம். பிற்பகல் நேரங்களில் மூக்குப்பரி குடித்துவிட்டுவந்து அட்டகாசம் செய்வார். இரவு நாடகமாதலால், பகல் உணவுக்குப்பின் எல்லோரும் உறங்குவார்கள். இவர் யாரையும் உறங்கவிடாமல் உபத்திரவம் செய்வார். ஒருநாள் தம்பி பகவதியைப் பிரியத்தோடு தூக்கிக் கீழே போட்டுவிட்டார். வேண்டுமென்று போட வில்லை. குடிவெறியில் தள்ளாடிக் கொண்டிருந்த நிலையில் அவ்வாறு நேர்ந்துவிட்டது. இந்தச் செய்தி சிற்றப்பா காதுக்கு எட்டியதும் அவர் சண்முகம் பிள்ளையிடம் புகார் செய்தார். மூக்குப்பரியைக் கண்டிப்பதாகச் சண்முகம்பிள்ளைக் கூறினார். மூக்குப்பரியின் அட்டகாசம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஒருநாள் பிற்பகலில் மூக்குப்பரி நன்றாகக் குடித்துவிட்டு வந்து வழக்கம்போல் ரெளடித்தனம் செய்துகொண்டிருந்தார். செய்தி அறிந்ததும் கம்பெனி வீட்டிலிருந்து எல்லோரும் ஓடினார்கள். முதலில் போன கம்பெனி பலசாலி கோபாலபிள்ளை, மூக்குப் பரியை ஒரே அறையில் கீழே வீழ்த்தினார். சிற்றப்பா மூக்குப்பரியை இடுக்குப் பிடிப்போட்டுப் பிடித்துக்கொண்டார். அந்தப்பிடி இரும்புப் பிடியாக இருந்தது. கம்பெனியில் பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் மூக்குப்பரியை ஆசை தீர அடித்துத் தமது வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டார்கள். பெரியண்ணா ஒருவர் மட்டும் இந்த அடிதடியில் கலந்துகொள்ளவில்லை. அடித்துக் கட்டிப் போட்டுவிட்டு எல்லோரும் போய்விட்டார்கள். சற்று நேரம் கழித்துப் போதை தெளிந்தபின் அவர் எழுந்தார். கொட்டகையைவிட்டு வெளியே வந்தார். அவருக்குத்துணையாக ஒரு பெருங்கூட்டம் இருந்தது. அந்தக் கூட்டத்தாரைத் திரட்டிக் கொண்டு மீண்டும் கொட்டகைக்குள் நுழைந்தார்.  அப்போது நாவல் நாடகங்களில் பயன்படுத்துவதற்காக நாங்கள் ரிவால்வர் வைத்திருந்தோம். பொய்த் தோட்டாக்களை உபயோகிப்பதற்குத்தான் அனுமதி இருந்தது. ஆனால் உண்மையான தோட்டாக்களை உபயோகிக்கவும் அனுமதி இருப்பதாக ஒரு வதந்தியைப் பரப்பி விட்டிருந்தோம். நாடகங்களில் நாங்கள் ரிவால்வர் உபயோகிப்பதை மூக்குப்பரி பார்த்திருந்தார். எனவே இந்த வதந்தியை அவரும் நம்பியிருந்தார். சிற்றப்பா ரிவால்வரைக் கையில் வைத்துக்கொண்டு கலகக் கூட்டத்தார் யாராவது கம்பெனி வீட்டிற்குள் நுழைந்தால் சுட்டுப் பொசுக்கி விடுவதாகப் பயமுறுத்தினார். உயிருக்குப் பயந்த கலகக் கூட்டம் உள்ளே நுழையாமல் வாயிலுக்கு வெளியிலேயே நின்று கூச்சல் போட்டுக் கொண்டிருந்தது. சிற்றப்பாவையும், முதலில் தன்னை அடித்து வீழ்த்திய கோபால் பிள்ளையையும் கொன்று விடுவதாக மூக்குப்பரி சபதம் செய்திருப்பதாக அறிந்தோம். இரவு நேரங்களில் உறக்கமே வருவதில்லை. எந்த நேரத்திலும் என்ன நடக்குமோவென்று அச்சமாயிருந்தது.  நீதி மன்றத்தில் கண்ட்ராக்டர் சண்முகம் பிள்ளை எதுவும் நேராதென்று எங்களுக்கெல்லாம் தைரியம் கூறினார். இந்தக் கலகத்தால் யாரும் வெளியே போகவோ, எதையும் பார்க்கவோ இயலாமல் மிகுந்த கஷ்டப்பட்டோம். எங்களுக்கும், மூக்குப்பரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. சிற்றப்பா நீதிமன்றத்திற்குப் போகும்போது அவருக்குப் பாதுகாப்பாக இரு போலீஸ்காரர்களும், கொழும்பிலே இருந்த வேறு சில தமிழ் வீரர்களும் உதவினார்கள், மூக்குப் பரியும் அவரது ஆட்கள் சிலரும் எந்நேரமும் கொட்டகையின் வெளி வாயிலருகே ஒரு கட்டையில்தான் உட்கார்ந்திருப்பார்கள். அவர்கள் நிலையையும் உறுதியையும் கண்ட பெரியண்ணா, எந்தக் காரணத்தைக்கொண்டும் யாரும் வெளியே போகக்கூடாதென்று உத்தரவு போட்டு விட்டார். எல்லோரும் இறுதிவரை கொட்டகையிலேயே அடைபட்டுக் கிடந்தார்கள். நீதிமன்றத்தில் வழக்கு சமரசமாய்ப் போகச் சண்முகம்பிள்ளை ஏற்பாடு செய்தார். சிற்றப்பாவையும் மூக்குப்பரியையும் இணைத்து வைத்தார். மூக்குப்பரிக்குத் தன்னை முதலில் அடித்த ஒருவரை மட்டுந்தான் நன்றாகத் தெரியும். அவரை மாத்திரம் எப்படியாவது தீர்த்துக் கட்டி விடுவதென்று முடிவு செய்து கொண்டார்.  நாங்கள் செய்த தந்திரம் மூக்குப்பரிக்குத் தெரியாமல் கோபால்பிள்ளையைத் தமிழ் நாட்டுக்கு அனுப்பிவிடப் பெரியண்ணா ஏற்பாடுகள் செய்தார். கோபால்பிள்ளை நல்ல வீர உள்ளம் படைத்தவர். எனவே, அவர் இவ்வாறு கோழைத்தனமாக ஓடிப்போகச் சம்மதிக்க வில்லை. என்றாலும், குழுவின் பொது நன்மையைக் கருதிப் பெரியண்ணா வற்புறுத்தவே ஒருவாறு இசைந்தார். ஒருநாள் மூக்குப்பரி வெளியில் இல்லாத சமயம் பார்த்து, தந்திரமாகக் கோபால் பிள்ளையை வெளியேற்றி ரயிலுக்கு அனுப்பிவைத்தோம். அவர் எவ்வித இடையூறுமின்றிக் கரூர் போய் சேர்ந்தார். கரூரிலிருந்து கடிதம் வந்தபிறகுதான் எனக்கு நிம்மதி ஏற்பட்டது  நாடகம் நல்ல வசூலுடன் நடைபெற்று வந்தது. யாழ்ப் பாணம் சண்முகம் பிள்ளைக்கு என்னை நிரம்பவும் பிடித்திருந்ததால், அவருடைய வேண்டுகோளின் பேரில் நான் சில நாடகங்களில் கதாநாயகனாக நடித்தேன். சத்தியவான் சாவித்திரியில் நாரதராகவே நடித்து வந்த நான், கொழும்பில் சத்தியவாகை நடித்தேன். சண்முகம்பிள்ளை என்னை மிகவும் பாராட்டினார். வெளியே எங்கும் போக முடியாததைப்பற்றி நாங்கள் - நடிகர்கள் கவலைப் படவில்லை. பகல் நேரங்களில் விளையாடுவதற்கு வேண்டிய வசதி கள் இருந்ததால் மகிழ்ச்சியாகவே பொழுதைப் போக்கிைேம்.  கலைவாணர் கற்பனையும் மன்னிப்பும் ஒருநாள் மனோகரா நாடகம் நடந்தது.வழக்கம்போல் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் வசந்தனக நடித்தார். அவர் எந்த நாடகத்திலும் கற்பனையாக ஏதாவது வேடிக்கை செய்வார். அவரும் சின்னண்ணாவும் இதுபற்றி வீட்டிலேயே திட்டம் போட்டுப் பேசி முடிவு செய்து கொள்வார்கள். மனோகரனில் நந்தவனக் காட்சி நடைபெற்றது. வசந்தன் கல்லாசனத்தின் இழே ஒளிந்திருந்து மனோகரன் தன் தாயார் பத்மாவதியிடம் சபதம் செய்வதைக் கேட்கும் காட்சி அது. பத்மாவதி போன பின் விஜயாள் வந்து மனோகரன விளையாட அழைக்கிறாள். மலர் மாலையால் அவனைக் கட்டி இழுக்கிறாள். இந்தச் சமயத்தில் ராஜப் பிரியன் வந்து மனோகரனக் கேலி செய்கிறான், வசந்தன் கல்லா சனத்தின் கீழிருந்து வெளியே வருகிறான். முதுகு வளைந்துபோய் விட்டதாகப் புலம்புகிறான். அவனுடைய பைத்தியச் செயல்களைக் கண்டு எல்லோரும் சிரிக்கிறார்கள். வசந்தனின் தாய்வசந்தசேனை வருகிறாள். அவன் தன் தாயிடம் புகார் செய்கிறான். மனோஹரனும் விஜயாளும் தனியே ஒருபுறம் நின்று சிரிக்கிறார்கள். உடனே வசந்தன், “அண்ணாத்தே, நீ அந்த்ப் பொண்ணை வச்சுக்கிட்டு சிரி; நான் இந்தப்பொண்ணை வச்சுக்கிட்டுச் சிரிக்கிறேன்" என்று தன் தாயைக் கட்டிக் கொள்கிறான். இதைக் கேட்டு மேலும் எல்லோரும் சிரிக்கிறார்கள்.  கலைவாணர் பேசிய இந்த வசனம், பம்மல் சம்பந்தனரின் நாடகத்தில் இல்லை. என். எஸ். கே. கற்பனையாகப் பேசியது. இந்த வசனத்துக்குச் சபையில் பெருத்த கைதட்டல் ஏற்பட்டது. காட்சி முடிந்ததும் சண்முகம்பிள்ளை உள்ளே வந்தார். என். எஸ் . கிருஷ்ணனைக் கூப்பிட்டார்.  “என்னப்பா, மனோஹரன் மனைவியை வைத்துக் கொண்டு சிரித்தால், வசந்தன் தன் தாயை வைத்துக் கொண்டு சிரிப்பதாகச்சொல்வதா? என்னதான் பைத்தியக்காரனாக இருந்தாலும் தாய்க்கு மரியாதை கொடுக்க வேண்டாமா?” சண்முகம் பிள்ளையின் கேள்வி இது. என். எஸ். கிருஷ்ணன் அவர் இவ்வாறு கேட்பாரென்று எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் கேட்டபின் நிலைமையைச் சமாளிக்க வேண்டுமே!  சண்முகம் பிள்ளைக்குக் கோபம் வந்து விட்டது. “என்னப்பா, கதையளக்கிறாய்? சம்பந்த முதலியாரை எனக்குத் தெரியாதா? நான் இப்பொழுதுதான மனோகரன் நாடகம் பார்க்கிறேன். அவருடைய நாடகத்தையே நான்தானே இங்கு நடத்தினேன். எனக்குத் தெரியாதா?” என்றார். என். எஸ். கே. இதன் பிறகு வாதாடவில்லை. தான் தவறாகப் பேசிவிட்டதாகக் கூறி, அவரிடம் மன்னிக்க வேண்டினார். கலைவாணர் அவ்வாறு அடங்கிப் போனதும், மன்னிப்பு கேட்டதும் எங்களுக்கெல்லாம் வியப்பாக இருந்தது. அவர் எங்கள் குழுவிலிருந்த காலம்வரை, மன்னிப்புக் கோரியது, இதுதான் முதல் தடவை. மேலும். சண்முகம் பிள்ளையிடம் வாதாடாமல் சமரசமாகப் போனதற்கு நாங்கள் எல்லோரும் சந்தோஷப் பட்டோம். கலைவாணரைப் பாராட்டினோம்.            தமிழகம் திரும்பினோம்   கொழும்பில் இரண்டு மாதங்கள் நடித்த பிறகு, மேலும் பல ஊர்களுக்கு வரவேண்டுமென்று சண்முகம் பிள்ளை வற்புறுத்தினார். கொழும்பில் ஏற்பட்ட மூக்குப்பரி கலக அனுபவத்தால் வேறு ஊர்களுக்குப் போக நாங்கள் சம்மதிக்கவில்லை. நாடகங்கள் முடிந்தன.கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு எல்லோரும் புறப்பட்டோம். எதிர்பாராத நிலையில் எங்களுக்கு எதுவும் அபாயம் ஏற்படாதிருக்கச் சண்முகம் பிள்ளை ஏற்பாடு செய்திருந்தார். இருந்தாலும் கடைசி நிமிஷத்தில் என்ன நேருமோவென்று நடிகர்கள் பயந்து கொண்டிருந்தார்கள். மூக்குப்பரி சமரசமாகப் போய்விட்டதால் எல்லோரையும் பார்க்கவேண்டுமென்று ரயில் நிலையத்துக்கு வந்திருந்தார். சிற்றப்பா அவர் அருகிலேயே நின்று கொண்டு ஜாக்கிரதையாக அவரது ஒவ்வொரு செயலையும் உன்னிப்பாகக் கவனித்து வந்தார். முக்குப்பரியின் சிவப்பேறிய கண்கள் கோபால் பிள்ளையைத் தேடிக் கொண்டிருந்தன. பெரியண்ணாவிடம் மட்டும் மூக்குப்பரி அபார மதிப்பு வைத்திருந்தார். பெரியண்ணா அவரை நெருங்கி, “யாரைப் பார்க்க வேண்டும்?” என்று கேட்டார். “என்னை முதலில் அடித்தானே, அந்தத் தைரியசாலியைப் பார்க்க வேண்டும். அந்த ஆசாமி எங்கே?” என்று கேட்டார் அவர். “ஒரு அவசர காரியமாக அவர், முன்பே ஊருக்குப் போய்விட்டாரே” என்றார் பெரிய அண்ணா. இந்தச் செய்தியை அறிந்ததும் மூக்குப்பரி, ‘ஆஹா மோசம் போய்விட்டேனே; அவனையல்லவா தீர்த்துக் கட்டத் திட்டம் போட்டிருந்தேன்’ என்று வருத்தப்பட்டார். இதை மூக்குப்பரி வாய்விட்டுச் சொல்லியதும், எங்களுக்கெல்லாம் குலை நடுக்கம் எடுத்தது. அதற்குள் ரயிலும் புறப்பட்டு விட்டது. எல்லோரும் மீண்டும் கப்பலிலும், ரயிலிலுமாகப் பிரயாணம் செய்து கரூருக்கு வந்து சேர்ந்தோம்.  கலைவாணர் ஊடல் கரூரில் மீண்டும் நாடகங்கள் தொடங்கின. என். எஸ். கிருஷ்ணனுக்கும் சிற்றப்பாவுக்கும். ஏதோ சிறு தகராறு ஏற்பட்டது. கிருஷ்ணனுக்குப் பெரியண்ணா அதிகமாகச் சலுகை கொடுத்து விட்டதாகவும், அதனால் தன்னை அவன் மதிப்பதில்லை யென்றும் சிற்றப்பா புகார் செய்தார். பெரியண்ணா என். எஸ். கிருஷ்ணனைக் கூப்பிட்டுக்கேட்டார். அவருடைய பதில் திருப்தி யளிக்கவில்லை. எனவே, உடனடியாகக் கணக்குத் தீர்த்து, அவரைக் கம்பெனியிலிருந்து நிறுத்தி விட்டார்.  எங்களுக்கு நிரம்பவும் கவலையாயிருந்தது. கலைவாணர் கம்பெனியின் முக்கிய நடிகராக மட்டும் இல்லை. எங்கள் எல்லோருடைய உள்ளங்களையும். கவர்ந்திருந்தார். மீண்டும் அவரைக் கம்பெனியில் சேர்த்துக்கொள்ளச் சின்னண்ணா எவ்வளவோ முயன்றார். பயனளிக்கவில்லை. கலைவாணரும் உடனே ஊருக்குப் போகவில்லை. அவருக்குக் கம்பெனியை விட்டுப் போக மனமுமில்லை. கம்பெனி வீட்டு அருகிலேயே ஒரு தனி அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, அடிக்கடி எங்கள் கண்ணில் படும்படியாகப் போவதும் வருவதுமாக இருந்தார். ஒரு நாள் “கள்வர் தலைவன்” நாடகம் நடைபெற்றது. அதற்கு டிக்கட் எடுத்துக் கொண்டு முன்வரிசையில் வந்து உட்கார்ந்து நாடகம்பார்த்தார். அவர், நாடகத்தில் ‘வயத்தான்’ என்ற பாத்திரத்தை ஏற்று, மிகச் சிறப்பாக நடிப்பார். அந்தப் பாத்திரத்தை அன்று, மற்றொரு நகைச்சுவை நடிகராகிய சுந்தரமையர் போட்டிருந்தார். ஒருவருக்கும் நாடகத்தில் மனம் செல்லவில்லை. என்.எஸ். கிருஷ்ணனையே பார்த்துக் கொண்டு நடித்தார்கள். பல நடிகர்கள் பகல் நேரங்களில் அவருடைய தனியறைக்குப் போய்ப் பேசிக் கொண்டிருப்பது வழக்கமாகி விட்டது. என். எஸ். கிருஷ்ணன் விலகியதும் தன் தந்தைக்குக்கடிதம் எழுதியிருப்பார்போல் தெரிகிறது. நாலந்து நாட்களில் அவரது தந்தையார் சுடலைமுத்துப் பிள்ளை நாகர்கோவிலில் இருந்து வந்து சேர்ந்தார். சிற்றப்பாவுடன் கலந்து பேசினார். இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்ததால் ஒன்றாகவே போய்க் குடித்துவிட்டு வந்தார்கள். குடியினால் ஏற்படும் நட்பு மிகவும் வலிமையானது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அது முற்றிலும் உண்மை. பிறகு சிற்றப்பாவே வந்து கிருஷ்ணனை மீண்டும் கம்பெனியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று பெரியண்ணாவிடம் சிபாரிசு செய்தார். சுமார் பதினைந்து நாட்கள் கம்பெனியோடு கலைவாணருக்கிருந்து வந்த ஊடல் நீங்கியது. மீண்டும் கம்பெனியில் சேர்த்துக்கொள்ளப் பெற்றார்.  கலைவாணரின் ஆற்றல் அந்த நாளிலேயே என். எஸ். கிருஷ்ணனுக்கு அபாரமான திறமை இருந்தது. ஆர்மோனியம் வாசிப்பார். மிருதங்கம் வாசிப்பார்; ஒவியம் வரைவார். ஒவியர் கே. மாதவனிடம் அவருக்கு நெருங்கிய நட்புறவு இருந்தது. மாதவன் அவர்கள், என். எஸ். கிருஷ்ணனின் ஓவியக் கலை உணர்ச்சியை வளர்ப்பதில் பெரும் பங்கு கொண்டார். மாதவனும் மிருதங்கம் வாசிக்கக் கூடியவர்; இராகங்களை அற்புதமாகப் பாடுவார். கே. ஆர். ராமசாமிக்கு, மாதவன் அடிக்கடி இசைப்பயிற்சி அளிப்பதுண்டு.  ஒருநாள், நாடகத்தில் மிருதங்கம் வாசிப்பவருக்கு உடல் நலம் கெட்டுவிட்டது. வேறு யாரும் கிடைக்கவில்லை. அந்த நெருக்கடியில், அன்று என். எஸ். கிருஷ்ணன்தான் மிருதங்கம் வாசித்து, நாடகத்தைச் சிறப்பாக நடத்தினார். இதே போன்று சில நாடகங்களுக்கு என். எஸ். கிருஷ்ணன் ஆர்மோனியம் வாசிக்கவேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்பட்டதுண்டு. ஒவியர் மாதவன் இல்லாத நேரங்களில் காட்சிகளும் வரைந்து கொடுத்திருக்கிறார். பொதுவாகக் கலைவாணர் கிருஷ்ணன் ஒரு சகல கலா வல்லவராகவே விளங்கி வந்தார். அவரைப் பற்றிய அபூர்வமான குறிப்புகள் மேலும் தொடருமாதலால் இப்போது இவ்வளவோடு விட்டுவிட்டு மேலே செல்லுகிறேன்.  கே. பி. சுந்தராம்பாள் அம்மையார்  கரூரிலிருந்தபோது எங்களுக்கும் திருமதி கே. பி. சுந்தராம்பாள் அம்மையாருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. அவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார். பவளக்கொடி நாடகத்தில் நான் கிருஷ்ணனாக நடிப்பேன். அந்த வேடத்திற்குரிய பாடல்கள் சிலவற்றை, எனக்குச் சொல்லிக் கொடுத்தார். நாங்களும் அவர் வீட்டிற்குப் போவதுண்டு. ஒருநாள் எங்கள் தாயாருடன் கொடுமுடியிலுள்ள தமது இல்லத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார். காவேரியில் எல்லோருமாகக் குளித்துவிட்டு, பாடல் பெற்ற புண்ணியத் தலமாக விளங்கும் தென்பாண்டிக் கொடுமுடி ஈஸ்வரன் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டோம். பிறகு அம்மையார் இல்லத்தில் தங்கி விருந்து புசித்தோம். அப்போது அவர் எஸ்.ஜி.கிட்டப்பா ஐயரோடு ஊடல் கொண்டிருந்த இடைக் காலம். அவரது இல்லத்தில் கிட்டப்பா ஐயருடன் அவர் எடுத்துக் கொண்ட பல்வேறு புகைப்படங்கள் இருந்தன. அவற்றையெல்லாம் என்னிடம் காண்பித்துத் தமது குறைகளையெல்லாம் கதை கதையாகச் சொன்னார். எங்கள் தாயாருக்கு, கே. பி. எஸ். மீது அதிகமான பற்றுதல் ஏற்பட்டிருந்தது. கரூருக்குப் போகும் பொழுதெல்லாம் நாங்கள் சுந்தராம்பாள் அம்மையார் வீட்டுக்குப் போகாமல் இருப்பதில்லை.  மேனகா அரங்கேற்றம் கரூர் முடிந்து, வேறு பல ஊர்களுக்குச் சென்றபின் மதுரைக்கு வந்தோம். மீண்டும் வாத்தியார் கந்தசாமி தமது முதலியார், புதல்வரோடு வந்து சேர்ந்தார். இம்முறை வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் எழுதிய மேனகா என்னும் அருமையான நாவலை, நாடகமாகத் தயாரித்தார். திருநெல்வேலி யிலிருந்தபோது பாடம் கொடுக்கப்பெற்றது. - நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ராமசாமி மேனகா, தம்பி பகவதி வராகசாமியாகவும், எம். கே. ராதா டிப்டிக் கலெக்டர் சாம்பசிவமாகவும், என். எஸ். கிருஷ்ணன் சாமா ஐயராகவும் நடிக்க ஏற்பாடாயிற்று. மேனகாவில் நான் நைனமுகமதுவாகவும், தாசி கமலமாகவும் ஒரே சமயத்தில் இரு வேடங்களில் நடித்தேன். பெண்வேடம் புனைபவர்கள் அப்போது கம்பெனியில் பலர் இருந்தார்கள். என்றாலும், தாசி கமலம் நான்தான் நடிக்கவேண்டு மென்று வாத்தியாரும் கலைவாணரும் விரும்பினார்கள். வேறு வழி யின்றி நான் அதை ஏற்றுக் கொண்டேன். மேனகாவுக்கு ஏராளமான பொருள் செலவு செய்து காட்சிகளையும், உடைகளையும் தயாரித்தோம். கல்லிடைக்குறிச்சியில் மேனகா அரங்கேறியது. கே. ஆர். ராமசாமி மேனகா பாத்திரத்தை மிக அற்புதமாக. நடித்தார். அருமையாகப் பாடினார். மாயூரம் வேதகாயகனாரின் ‘நாயகர் பட்சமடி எனக்கது ஆயிரம் லட்சமடி’ என்ற பாடலை அவர் பிலஹரி இராகத்தில் பாடியது, இன்னும் பசுமையாக என் நினைவில் இருக்கிறது. பகவதிக்கும், ராமசாமிக்கும் கணவன் மனைவி இணைப் பொருத்தம் பிரமாதமாக இருந்தது. இந்த இணைப்புப் பொருத்தத்தைப் பார்த்து, மேலும் பல நாடகங்களில் கணவன் மனைவி பாத்திரங்கள் இவர்களுக்கே அளிக்கப்பட்டன. மேனகாவுக்கு நல்ல பேரும், புகழும் கிடைத்தன. மேனகா அரங் கேறியபின், நாங்கள் நடித்த எல்லா நாடகங்களிலும் இதுவே முதன்மையாக நின்றது.  கல்லிடைக்குறிச்சி எழில் மிக்க சிற்றுார். வாய்க்காலிலும், தாமிரபரணி ஆற்றிலும் நிறையத் தண்ணிர் ஓடிக்கொண் டிருந்தது. எல்லோரும் காலையில் ஆற்றில் குதித்து விளையாடிக் குளித்து விட்டுத்தான் வீடு திரும்புவோம். கல்லிடைக்குறிச்சி டாக்டர் சங்கரய்யரும், அவரது மனைவி லட்சுமியம்மாளும் பிரபல மாணவர்கள். தேசீய இயக்கத்தில் ஈடுபட்டவர்கள். அவர்கள் எங்கள் நடிகர்களிடம் மிகுந்த அன்பு காட்டினார்கள். நாடகக் கொட்டகைக்கு அருகிலேயே அவர்கள் வீடும் இருந்தது. எங் களுக்கு ஏதாவது தலைவலி,காய்ச்சல்என்றால் உடனே சங்கரய்யர் வீட்டுக்குப் போவோம். அவர்கள் வீடு, எங்கள் சொந்த வீடு மாதிரி, அந்த அளவுக்கு நெருங்கிப் பழகினோம்.  மேனகா நாடகம் பல வகையில் எங்களுக்குத் தொல்லை கொடுத்தது. முஸ்லீம்கள் அதிகமாக இருக்கும் ஊரில் “இந்துப் பெண்ணை ஒரு முஸ்லீமுக்கு விற்பதா?” என்று கூறி, இந்துக்கள் நாடகத்தை எதிர்ப்பார்கள். ஜாதி இந்துக்கள் அதிகமாக இருக்கும் ஊரில், “ஒரு முஸ்லீமை அயோக்கியணாகக் காட்டுவதா?” என்று கூறி, முஸ்லீம்கள் நாடகத்தை எதிர்ப்பார்கள். இப்படியே பல ஊர்களில் எங்களுக்குச் சிரமம் ஏற்பட்டு வந்தது. ஆனால், எல்லா ஊர்களிலும் நடுநிலையோடு நாடகம் பார்க்கும் ரசிகர்களும் இருப்பார்களல்லவா? அவர்களின் துணையோடு இந்த எதிர்ப்புக்களை யெல்லாம் சமாளித்து வந்தோம்.                                               பெரியண்ணா திருமணம்   கல்லிடைக்குறிச்சியில் இருந்தபோது பெரியண்ணாவுக்குத் திருமண ஏற்பாடு நடைபெற்றது. நாடகம் முடிந்தபின் சாமான்களையெல்லாம் கொல்லத்திற்கு அனுப்பிவிட்டு எல்லோருமாக நாகர்கோயில் போய்ச் சேர்ந்தோம். கவிமணி தேசிக விநாயகனாரின் ஊராகிய புத்தேரியைச் சார்ந்த திருமதி பேச்சியம்மை அவர்களுக்கும் பெரியண்ணா டி. கே. சங்கரன் அவர்களுக்கும் 1929 நவம்பர் 21 இல் புத்தேரியில் திருமணம நடந்தேறியது. இதுவே எங்களுக்குத் தெரிந்து, குடும்பத்தில் நடந்த முதல் திருமணம், நாங்களெல்லாம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தோம். ஆனால், பெரியண்ணாவுக்கு மட்டும் , திருமணம் மகிழ்ச்சியை உண்டாக்கவில்லை.  திருமணத்திற்காக நாங்கள் எல்லோரும் நாகர்கோவில் ஒழுகினசேரியில் ஒரு இல்லத்தில் தங்கியிருந்தோம். திருமணம் முடிந்த இரண்டாம் நாள் இரவு, சிற்றப்பாவுக்கும், என். எஸ். கிருஷ்ணனுக்கும் சிறு தகராறு ஏற்பட்டது. சிற்றப்பா என். எஸ். சிருஷ்ணனை வாயில் வந்தபடி திட்டிவிட்டார். என். எஸ் கிருஷ்ணன் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, திடீரென்று அன்றிரவே மதுரைக்குப் புறப்பட்டுப் போய், ஜெகன்னாதைய்யரின் பால மீன ரஞ்சனி சங்கீத சபையில் சேர்ந்துகொண்டார். விபரம் அறிந்த நாங்கள் வருந்தினோம். பெரியண்ணாவுக்கு ஏற்கனவே மண வாழ்வில் வெறுப்பு ஏற்பட்டிருந்த நிலையில் என். எஸ். கிருஷ்ணன் ஒடிப்போன செய்தி மேலும் வேதனையை வளர்த்தது.  கலைவாணரின் நல்லுணர்வு நாங்கள் கொல்லம் நாடகம் முடிந்து, ஆலப்புழையில் நடித்துக் கொண்டிருந்தோம். ஜெகன்னாதய்யர் கம்பெனியி லிருந்து அப்போது தான் நவாப் ராஜமாணிக்கம், காமடியன் சாரங்கபாணி, ஏ. எம். மருதப்பா, சிதம்பரம் ஜெயராமன் முதலியோர் விலகி, அவர்களுக்கும் ஜெகன்னதய்யருக்கும் வழக்கு நடந்து கொண்டிருந்தது. இந்தச் சமயத்தில் என். எஸ். கிருஷ்ணன் தமது கம்பெனிக்கு வந்ததும் ஐயர் மிகவும் சந்தோஷப்பட்டு, சாரங்கபாணி போட்டு வந்த வேடங்களை யெல்லாம் கிருஷ்ணனுக்குக் கொடுத்துக் கெளரவத்தோடு நடத்தி வந்தார்.  ஜெகன்னாதய்யரிடம் செல்வாக்கோடு இருந்து வந்த அந்த நிலையிலும், என். எஸ். கிருஷ்ணனுக்கு எங்கள் குழுவின் மீதே பற்றுதல் இருந்து வந்தது. இரவில் உறக்கம் பிடிக்கவில்லை. அவசரத்தில் ஐயருக்கு ஒப்பந்தமும் எழுதிக் கொடுத்திருந்தார். ஒரு நாள் திடீரென்று புறப்பட்டு, நேராக ஆலப்புழைக்கே வந்து விட்டார். தம்மால் அங்கிருக்க முடியவில்லையென்றும், பயிற்சி பெற்ற இடத்திலேயே இறுதிவரை இருக்க வேண்டுமென்று தமது நல்லுணர்வு தூண்டியதாகவும் கூறினார். நாங்கள் அனைவரும் அளவற்ற மகிழ்ச்சியடைந்தோம்.  கலைவாணருக்கு நெருக்கடி சில நாட்கள் சென்றன. ஒருநாள் எல்லோரும் ‘பாட் மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தோம். யாரோ ஒருவர் வந்து, என். எஸ். கிருஷ்ணனைப் பார்க்கவேண்டுமென்று கூறினார். நாங்கள் கிருஷ்ணனைக்காட்டினோம், வந்தவர் ரகசியப்போலீசைச் சேர்ந்தவர். அவர் உடனே என். எஸ். கிருஷ்ணனைக் கைது செய்து அழைத்துச் சென்றார். எங்களுக்கெல்லாம் பெரிய அதிர்ச்சி! ஜெகன்னாதய்யர், என். எஸ். கிருஷ்ணனைத் திருட்டு வழக்கில் சம்பந்தப்படுத்தி, வழக்குத் தொடர்ந்திருந்தார். *அரஸ்ட் வாரண்ட் பிறப்பித்திருப்பதாகப் பேசிக்கொண்டார்கள், மானேஜர் காமேஸ்வர ஐயரும், சிற்றப்பாவும், போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று ஏதேதோ செய்து பார்த்தார்கள். ஜாமீனில் விடுவிக்க முயற்சி செய்யப்பட்டது. திருவாங்கூர் சமஸ்தானத்தில் ‘பிரிட்டிஷ் ரெசிடெண்ட்’ கட்டளைப்படி கைது செய்யப்பட்டதால் எதுவும் செய்ய இயலவில்லை. மதுரைக்குப் போய்த்தான் ஜாமீனில் விடுதலைக்கு முயற்சிக்க வேண்டுமென்று திருவாங்கூர் போலீசார் கூறிவிட்டார்கள். கைதியைப்போல் கையில் விலங்கு பூட்டப்பட்டுக் கலைவாணர் கால்நடையாகவே கொல்லம்வரை அழைத்துச் செல்லப்பட்டதாக அறிந்து எல்லோரும் வேதனைப்பட்டோம். வேறு முயற்சிகள் எடுத்துக் கொள்ளக்கூடிய வசதிகள் ஏதுமில்லாததால் சக்தியற்ற நிலையில் புலம்பிக் கொண்டிருந்தோம். பெரியண்ணா மீதும், சிற்றப்பா மீதும் எங்களுக்கெல்லாம் வருத்தம் ஏற்பட்டது. மதுரையில் ஏதோ செய்யப் போவதாக எண்ணியிருந்தோம். மதுரையி லிருந்த எங்கள் நண்பர்கள் வீரமணி ஐயருக்கும் கிட்டு ராஜு விக்கும் இந்தச் செய்தி அறிவிக்கப்பட்டது. ஜெகன்னதய்யரின் சூழ்ச்சியின் முன், அவர்களாலும் எதுவும் செய்ய முடியவில்லை. இறுதியில் என். எஸ். கிருஷ்ணனின் தந்தையார் மதுரைக்குச் சென்று, கிருஷ்ணனை ஐயர் கம்பெனியிலேயே இருக்கச் செய்த பிறகுதான் திருட்டு வழக்கு வாபஸாயிற்று. கம்பெனியிலிருந்து விலகிச் செல்லும் நடிகர்கள்மீது இவ்வாறு திருட்டுக் குற்றம் சுமத்துவதும், போலீஸாரைக் கையில் போட்டுக் கொண்டு தொல்லைகள் கொடுப்பதும், விடுபட இயலாத சூழ்நிலையை உண்டாக்கி அவர்களை மீண்டும் தங்கள் கம்பெனியில் சேர வைப்பதும் அன்று சில குறிப்பிட்ட நாடக முதலாளிகளின் வழக்கமாக இருந்து வந்தது.  இரு சகோதரர்கள் பெரியண்ணாவுக்குத் திருமணம் முடிந்து புறப்பட்டபோது இரு சகோதரர்கள் கம்பெனிக்கு வந்து சேர்ந்தார்கள். மூத்தவர் என். எஸ். பாலகிருஷ்ணன். இளையவர் என். எஸ். வேலப்பன். இருவரும் வெகு விரைவில் முன்னுக்கு வந்தார்கள். என். எஸ். பாலகிருஷ்ணன் கம்பெனியின் முக்கிய பெண் வேடதாரியாக விளங்கினார். வேலப்பனும் மாயா சூர்ப்பனகை போன்ற பாத் திரங்களில் மக்களின் புகழ்ச்சிக்குப் பாத்திரமானார். பால கிருஷ்ணன் சிறந்த முறையில் நடித்து வந்ததோடு, ஒய்வு நேரங் களில் ஆர்மோனியமும் பயின்று வந்தார். எதிர்காலத்தில் அவர் ஒருசங்கீத டைரக்டராகத் திகழுவார் என நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆம்; பிற்காலத்தில் பிரபலத் திரைப்படப் பின்னணி சங்கீத இயக்குநராகவும், எம். ஜி. ஆர். குழுவின் சங்கீத டைரக்ட ராகவும் விளங்கிய என். எஸ். பாலகிருஷ்ணனைத்தான் குறிப்பிடு கிறேன். என். எஸ். கிருஷ்ணன் திரைப்படத் துறையில் புகுந்த பின் அவர் பாலகிருஷ்ணனுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வந்ததாலும், தமது இடைவிடா முயற்சியிலுைம் இவர் ஒரு சிறந்த சங்கீத டைரக்டராக விளங்கினார்.  சங்கரமேனன் கேரளப் பகுதிக்கு நாங்கள் சென்றபோது சங்கரமேனன் எங்கள்கம்பெனியில் சேர்ந்தார்.இவர் மிகநன்றாக ஆர்மோனியம் வாசிப்பார். ஏற்கனவே ஜெகன்னுதையர் கம்பெனியில் நீண்ட காலம் இருந்தவர். இவர் கம்பெனியில் சேர்ந்தபின் நடிகர்கள் எல்லோருக்கும் முறையாக சங்கீதப் பயிற்சி அளிக்கப்பட்டது. கே. ஆர். ராமசாமி, டி. கே. பகவதி, நான், சின்னண்ணா அனைவரும் இவரிடம் இசை பயின்றுவத்தோம். ஜண்டை வரிசை யிலிருந்து தொடங்கி, வர்ணம் வரை எல்லா நடிகர்களும் கர்நாடக இசையை இவரிடம் பயின்றார்கள். தியாகையர், திட்சிதர், சாமா சாஸ்திரி, பட்டினம் சுப்பிரமணிய ஐயர் ஆகியோரின் தெலுங்கு வடமொழிக் கீர்த்தனைகளை இவர் நன்கு பயிற்றுவித்தார். ஏற்கனவே நல்ல இசைத் திறமையுள்ள நடிகர்கள், இவர் அளித்த பயிற்சியால் மேலும் தேர்ச்சிப் பெற்று விளங்கினார். சிலர் பிற்காலத்தில் இசைப்புலவர்களாகவே விளங்கு வதற்கு இவர் அளித்த பயிற்சியே பயன்பட்டதென்று சொல்ல வேண்டும். இவரை சங்கர பாகவதர் என்றே நாங்கள் அழைத்து வந்தோம்.   பெரியண்ணாவின் உறுதி கம்பெனி தொடர்ந்து நடைபெற்று வந்தது. பெரியண்ணா வின் திருமணத்திற்குப்பின் நாங்கள் மதினியோடும், தாயோடும் தனியே வசித்து வந்தோம்; பெரியண்ணா வீட்டிற்கு வருவதே இல்லை. அம்மாவுக்கு இதனால் ஏற்பட்ட மன வருத்தம் சொல்லி முடியாது. பெரியண்ணாவுக்கு இரண்டாந் தாரமாக மற்றொரு அழகிய பெண்ணே மணம்செய்து வைக்க எவ்வளவோ முயன்றார், பெரியண்ணா மனைவியுடன் மனமொத்த வாழ்க்கை நடத்தவில்லை யென்றாலும், மறுதாரம் செய்து கொள்ளப் பிடிவாதமாக மறுத்துவிட்டார். ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார். அம்மாவுக்கு இதுவே பெரிய கவலையாகப் போய்விட்டது. அடிக்கடி ஏதாவது நோய் வந்து தொல்லே கொடுக்க ஆரம்பித்தது.  மனநோய்க்கு மருந்தேது? அன்னையார் எப்போதும் இதே நினைவில் இருந்து மனம் வெதும்பினார். மூத்த புதல்வரின் வாழ்க்கையைப் பாழ்படுத்தி விட்டோமே என்ற உணர்ச்சி அவரை உருக்குலைத்து விட்டது.பெரியண்ணா வீட்டிற்கு வருவதே இல்லை. உணவு, உறக்கம் எல்லாம் கம்பெனி வீட்டிலேயே நடந்துவந்தன. மதினியாரின் நிலை மிகவும் பரிதபிக்கத் தக்கதாய் இருந்தது. பாவம்! பெண்ணல்லவா? அவர் தமது மன உணர்ச்சிகளையெல் லாம் அடக்கிக்கொண்டு ஒரு உத்தமமான குடும்பத் தலைவிக் குரிய முறையில் எல்லோரிடமும் அன்போடும், பண்போடும் பழகினார். நானும் சின்னண்ணாவும் மதினியாரின் நிலையை எண்ணியெண்ணி வருந்தினோம். முக அழகு குறைந்துவிட்டால்: என்ன? வேறு எவரிடமும் காண்பதற்கரிதான அக அழகு. அண்ணியாரிடம் நிறைவு பெற்றிருந்தது. அதுவே அவரது: வாழ்க்கையை உயிர்ப்பித்தது என்றும் சொல்லலாம்.  உத்தமமான மனிதர் இந்தச் சமயத்தில் ஆலப்புழையில் என் சிறு தவருல் நேர இருந்த ஒரு பேரிழப்பு என் நினைவிற்கு வருகிறது. நாங்கள் எங்களுடைய பரிசுப் பொருட்கள் அனைத்தையும் ஒரு சிறு பெட்டி யில் வைத்து, நாடகத்திற்குப் போகும்போது கையில் கொண்டு. செல்வதும் திரும்பும்போது பத்திரமாகக் கொண்டு வருவதும். வழக்கம். அப்பெட்டியில் இருந்த பொருட்களின் மொத்த மதிப்பு அந்த நாள் கணக்குப்படி பத்தாயிரம் ரூபாய்வரை இருக்கலாம். ஒருநாள், நாடகம் முடிந்து திரும்பியபோது மிகுந்த அசதியாக இருந்தது. இரவு இரண்டு மணிக்கு வந்து, வீட்டுக் கதவைத் தட்டினோம். கதவைத் திறக்கச் சற்று நேரமானதால் பெட்டியை வைத்துவிட்டு முன் திண்ணையில் உட்கார்ந்தோம். சற்று நேரத். தில் கதவு திறக்கப்பட்டது. என்ைேடு வந்த சின்னண்ணாவும், பகவதியும், சிற்றப்பாவும் உள்ளே சென்றார்கள். நானும் மறதி யால் பெட்டியை எடுக்காது அவர்களைப் பின் தொடர்ந்தேன். பெட்டியைப் பற்றிய நினைவே எனக்கில்லை. வரல்லை. வழக்கம் போல் உறக்கத்தில் ஈடுபட்டோம். பொழுது விடிந்தது. அப்போது பெட்டியைப் பற்றிய நினைவு வரவில்லை.வெளியில் யாரோ அழைப்பதாக ஒரு பையன் சிற்றப்பாவைக் கூப்பிட்டான். அழைத்தவரின் பெயரைக் கேட்டதும் சிற்றப்பா விரைவாகச் சென்றார், ஒருமணி நேரத்திற்குப்பின் முன்னால் இரவு தவற விட்ட பெட்டியோடு திரும்பி வந்த அவரைக் கண்டதும் எனக்கு ‘பகீர்’ என்றது. இரவு திண்ணையில் வைத்த பெட்டியை உள்ளே எடுத்துவர மறந்தது அப்போதுதான் நினைவு வந்தது.  ஆலப்புழையில் திரு. ராஜப்ப ரெட்டியார் என்பவர் பெரிய வணிகர். நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகிலேயே அவரது வீடு இருந்தது. வழக்கம்போல் அதிகாலையில் உலாவப் புறப்பட்ட அவர், கருக்கிருட்டில் திண்ணையில் ஒரு பெட்டியிருப்பதைக்கண்டு சுற்றுமுற்றும் பார்த்திருக்கிறார், எங்கும் யாரையும் காணவில்லை. சற்றுநேரம் நின்று பார்த்துவிட்டு, பெட்டியை அவரே எடுத்துக் கொண்டு போயிருக்கிறார். வீட்டுக்குச் சென்று பெட்டியைத் திறந்து பார்த்ததும் அவருக்குத் தூக்கிவாரிப்போட்டது. மெடல்களிலிருந்த பெயர்களைப் பார்த்ததும் அவருக்கு உண்மை விளங்கி விட்டது. உடனே சிற்றப்பாவுக்கு ஆளனுப்பியிருக்கிறார், *சின்னப்பிள்ளைகள் மறந்தாலும், “பெரியவராகிய நீரல்லவா பெட்டியைப் பத்திரமாகக் கொண்டு போயிருக்க வேண்டும்!” என்று சிற்றப்பாவையும் கடிந்துகொண்டார் அவர். எங்களுக்குப் பொருளாதார நெருக்கடி அதிகமாயிருந்த அந்த நேரத்தில், ! நாங்கள் அப்பெட்டியை இழந்திருந்தால் என்ன ஆயிருக்கும் என்பதை எண்ணிப் பார்த்தபோது எங்களுக்கு உண்மையிலேயே அழுகை வந்துவிட்டது. பெட்டி ஒரு உத்தமமான மனிதரின் கையில் கிடைத்ததற்காக இறைவனுக்கு வணக்கம் செலுத்தினோம். 1931-இல் கம்பெனிக்கு மிகப்பெரிய கஷ்டம் வந்த காலத்தில் இந்தப் பெட்டியிலிருந்த விலையுயர்ந்த பொருட்கள் தான் எங்களுக்கு உதவின என்பதை எண்ணிப்பார்க்கும்போது இப்போதும் அந்த உத்தமமான மனிதரை நினைத்துக் கொள்கிறோம்.  மீண்டும் கலைவாணர் வந்தார் ஆலப்புழைக்குப் பிறகு கோட்டயம், கொச்சி, திருச்சூர், பொள்ளாச்சி முதலிய பல ஊர்களுக்குச் சென்றோம். எங்கும். வருவாய் இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டோம். சிலமாதங்களுக்குப் பின் கரூர் வந்து சேர்ந்தோம். திடீரென்று ஒரு நாள் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. என். எஸ். கிருஷ்ணன் எழுதியிருந்தார். ஜெகன்னதையர் கம்பெனி யாழ்ப் பாணத்தில் கலைந்துவிடக் கூடிய நிலையில் இருப்பதாகவும், அப்படி ஏற்படுமானல் மீண்டும் எங்கள் கம்பெனிக்கே வந்து விடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்தச் செய்தி எங்களுக்குப் பெரு, மகிழ்ச்சி அளித்தது. ஒரு வாரத்திற்குப்பின் என். எஸ். கிருஷ்ணன் தந்தி கொடுத்திருந்தார். ஐயர் கம்பெனி கலைந்து விட்டதாகவும், உடனே பணம் அனுப்பும்படியாகவும் வந்த தந்தியைக் கண்டதும், பெரியண்ணா மகிழ்ந்து தந்தி மணியார்டர் அனுப்பினார். கிருஷ்ணன் மூன்று நாட்களில் கரூருக்கு வந்துசேர்ந்தார். ஜெகன்னதையர் கம்பெனிச் செய்திகளையெல்லாம் கதை. கதையாகச் சொன்னார். ஒரு வார காலம் அவர் கூறிய சுவையான கதைகளைக் கேட்பதிலேயே பொழுதைப் போக்கினோம்.  புதிய இளைஞர் கரூரில் புதிய இளைஞர் ஒருவர் எங்கள் குழுவில் சேர்ந்தார். இவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர். அங்குள்ள பிள்ளையார் கோயிலில் அர்ச்சகராக இருந்தவர். வைதீகப் பிராமணர்போல் குடுமி வைத்திருந்தார். சுமாராகப் பிடில் வாசிக்கக் கூடியவர். தம்மோடு ஒரு பிடிலையும் கொண்டு வந்திருந்தார். சின்னண்ணாவும் பிடில் வாசிக்கக் கூடியவரானதால் அவரும் புதிய இளைஞரும் அடிக்கடி பிடில் வாசித்து வந்தார்கள். இளைஞருக்கு நல்ல வாட்டசாட்டமான சரீரம். சாரீரமும் அதற்கேற்றபடி அமைந்திருந்தது. அப்போதெல்லாம் இரணியன், எமதருமன், கடோற்கஜன் முதலிய பாத்திரங்களை எல்லாம் எங்கள் பெரியண்ணா டி. கே. சங்கரன் தாம் ஏற்று நடிப்பது வழக்கம். அவர் தம் வேடங்களை ஒவ்வொன்றாகக் குறைத்துக் கொண்டு வந்தார். புதிதாக வந்த இளைஞர் இரண்டொரு நாடகங்களில் சில்லரை வேடங்களில் நடித்துப் பழகினார். பிறகு அவருக்கு அபிமன்யு சுந்தரியில் கடோற்கஜன் கொடுக்கப்பட்டது.  அபிமன்யு கதை சங்கரதாஸ் சுவாமிகளின் அபிமன்யு சுந்தரி நாடகக் கதை உங்களுக்குத் தெரியுமல்லவா? ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, தமது புதல்வி சுந்தரியைத் துரியோதனன் மகன் இலக்கணனுக்குக் கொடுக்க முடிவு செய்து விடுகிறார். இந்தச் செய்தியறிந்த சுந்தரி தன் அத்தை மகன் அபிமன்யுவுக்கு ஒலை அனுப்புகிறாள். வீரன் அபிமன்யு அந்தத் திருமணத்தைத் தடுத்துச் சுந்தரியை மீட்க வீராவேசத்தோடு புறப்படுகிறான்; வழியில் பீமன் மகன் கடோற் கஜனச் சந்திக்கிறான். இன்னாரென்று தெரியாமல் இருவரும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். கடைசியில் உண்மை யறிந்து உறவாடி இருவருமாகப் புறப்படுகிறார்கள். அதன் பின் அர்ஜூனனின் மற்றொரு மகன் அரவானைச் சந்திக்கிறார்கள். அங்கேயும் ஆள் தெரியாமல் போர் நடக்கிறது. இறுதியில் சகா தேவன் மகன் தொந்திசெட்டி குறுக்கிடுகிறான். அங்கேயும் சண்டை நடக்கிறது. பிறகு சமாதானம். ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நால்வரும் துவாரகைக்குச் செல்லுகிறார்கள். துரியோ தளுதியரை முறியடித்து வெற்றி பெறுகிறார்கள். அபிமன்யுவுக்கும் சுந்தரிக்கும் திருமணம் இனிது நடைபெறுகிறது. இது தான் நாடகக் கதை.  தொந்திசெட்டி ஒரு நகைசுவைப் பாத்திரம். சகோதரர் மூவரோடும் அவர் சண்டை போடுகிற காட்சி மிகவேடிக்கையாக இருக்கும். கடோற்கஜனும், தொந்திசெட்டியும் மற்போர் புரிவது, சபையோரிடையே பெரும் ஆரவாரத்தையெழுப்பும். இறுதியில் தொந்திசெட்டியே தோல்வியடைய வேண்டும். புதிய இளைஞர் கடோற்கஜன் வேடம் தாங்கி மிக நன்றாக நடித்தார். தோற்றமே கடோற்கஜனுக்குப் பொருத்தமாக இருந்ததால் விரைவில் சபையோரின் பாராட்டைப் பெற்றார். தொந்தி செட்டியோடு நாங்கள் சண்டை போடும் காட்சி வந்தது. என்ன செய்யவேண்டும் என்பதையெல்லாம் ஒத்திகையில் அவருக்குத் தெளிவாகச் சொல்லியிருந்தோம். அந்தக் கடோற் கஜன், தம் உடல் வலிமையில் நம்பிக்கை வைத்து, ஹாஸ்ய நடிகரான தொந்தி செட்டியை அலாக்காக மேலே தூக்கிக் கீழே போட்டு உருட்ட எண்ணினார். அதற்கு முன் கடோற்கஜனுக நடித்தவர்கள் யாரும் அப்படிச் செய்ததில்லை. அந்தக் காட்சியில் மேடைக்கு வரும்போது கடோற்கஜன் என்னிடம் இந்த ஆசையை வெளியிட்டார். நான் சிரித்துக் கொண்டே, “முடிந்தால் செய்யுங்கள். அதிலொன்றும் தவறில்லை. வேடிக்கையாகத் தானிருக்கும்” என்று கூறினேன்.  கடோற்கஜன் வீழ்ந்தார் காட்சி நடைபெற்றது. சண்டை துவங்கியது. கடோற்கஜன் தொந்தி செட்டியைத் தூக்க முயன்றார். எதிர்பாராத நிலையில் தொந்தி செட்டி லாவகமாக விலகிக் கொண்டார். அத்தோடு நிற்கவில்லை. கடோற்கஜனின் வலது கையைப் பிடித்து அப்படியே அவரை முதுகில் தூக்கித் தடாரென்று கீழே மல்லாந்து விழச் செய்தார். எல்லாம் இமைகொட்டும் நேரத்தில் நடந்து விட்டது. கடோற்கஜன் கீழே பரிதாபமாகக் கிடக்கிறார். தோல்வியடைய வேண்டிய தொந்திசெட்டி, வெற்றிப் பெருமிதத்தோடு, “தொந்திசெட்டியைத் தூக்கவா பார்க்கிறாய்?” என்று கூறி நகைக்கிறார். அபிமன்யுவாக நின்ற எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. சபையில் ஒரே கரகோஷம்.  தொந்திசெட்டியாக நடித்தவர் என். எஸ். கிருஷ்ணன். அவர் ஒல்லியான சரீரமுடையவர். ஆனால் கொஞ்சம் குஸ்தி முறைகளெல்லாம் தெரிந்தவர். நல்ல துணிச்சல் பேர்வழி. அவர் மலை போன்ற சரீரத்தைத் தூக்கியடித்தது எல்லோருக்கும் பெரு வியப்பை அளித்தது. மேடையில் நின்ற எனக்கும் அரவானுக்கும் . சிரிப்புத் தாங்கவில்லை. தொந்தி செட்டி தம்மைத் துாக்க முடியுமெனக் கனவிலும் கருதாத புதிய இளைஞர் கடோற்கஜன் அசட்டுச் சிரிப்புடன் எழுந்து நின்றார். அன்று அவ்வாறு திண்டாடித் திணறிய கடோற்கஜன் மலை வேறு யாருமல்ல. நமது புளிமூட்டை ராமசாமியே!  பிள்ளை விளையாட்டு புளிமூட்டை ராமசாமி நன்றாகப் பாடுவார். கதா காலட் சேபம் செய்வார். வடமொழியில் உள்ள மந்திரங்கள் பலவற்றை எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். நாங்கள் எல்லோரும் காலையில் அமராவதி ஆற்றுக்குப் போய் குளிப்பது வழக்கம். போகும்போது நான், என். எஸ். கிருஷ்ணன், புளிமூட்டை ராம சாமி, எஸ். வி. சகஸ்ரநாமம், மற்றொரு நகைச்சுவை நடிகர் சுந்தரம் ஐயர் எல்லோரும் ஒன்றாகக் கையைக் கோர்த்துக் கொண்டு வீதியில் மந்திரங்களை முழக்கிக் கொண்டே போவோம்.  "சன்னோ மித்ரசம் வருணஹ  சன்னை யவத் துரியமாம்  சன்ன இந்த்ரோ  பிருஹஸ் பதிஹி"  என இவ்வாறு நாங்கள் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு போவதை வீதியில் அனைவரும் பார்த்துச் சிரிப்பார்கள். சில பிரா மணர்கள், இதைப் பிள்ளை விளையாட்டாகக் கருதாமல் தங்களைக் கேலி செய்வதாக எண்ணிப் பெரியண்ணாவிடம் புகார் செய்தார் கள். இதன் பிறகு மந்திரங்களை வீதியில் சொல்லக் கூடாதென்று எங்களுக்குத் தடையுத்திரவு போடப்பட்டது.                              துன்பத்திலும் சிரிப்பு   கரூரிலிருந்து புதுக்கோட்டைக்குச் சென்றோம். அப்போது மழைக்காலம். புதுக்கோட்டையில் கடுமையானமழை. வசூலே இல்லாமல் மிகுந்த சிரமப் பட்டோம். பெரியண்ணா நிலத்தை அடமானம் வைத்துப் பணம் கொண்டு வர நாகர் கோயிலுக்குப் போயிருந்தார். புதுக்கோட்டையில் நான்கு புறங்களிலும் பெரு மழையால் உடைப்புகள் ஏற்பட்டு விட்டன. புதுக்கோட்டை ஒரு தீவுபோல ஆகிவிட்டது.  ஒரு நாள் சாவித்திரி நாடகம். வசூல் ஏழே ரூபாய்கள். ஆனாலும் நாடகத்தை நிறுத்தாமல் நடத்திைேம். மின்சார விளக்குக்காகத் தனியே பாலகிருஷ்ண சாஸ்திரி என்பவரிடம் ஒப் பந்தம் செய்திருந்தோம். அவரது இஞ்சின் மூலம் எங்களுக்கு மின்சாரம் கிடைத்து வந்தது. அந்த இஞ்சின், கொட்டகையின் பின்புறம் ஒடிக் கொண்டிருந்தது. மழையின் வேகத்தால் இஞ்சின் புதைந்திருந்த இடம் முழுவதும் வெள்ளக் காடாகி விட்டது. இஞ்சின் ஒடவில்லை. கொட்டகையில் இருள் சூழ்ந்தது. வழக்கம்போல் இரண்டு கியாஸ் லேட்டுகள் மேடையில் வைக்கப் பட்டன. சாவித்திரி நாடகம் தொடர்ந்து நடந்தது. அன்று நான் சத்தியவானக நடித்தேன். என். எஸ். கிருஷ்ணன் சுமாவியாக நடித்தார். சத்தியவானின் திருமணச் செய்தியைச் சுமாலியிடம் சொல்லியனுப்புகிறார்கள். சுமாவி ஒரு கிழவனுக மாறுவேடம் பூண்டு வந்து, சத்தியவானுக்குக் கோபத்தை மூட்டுகிறான். சத்தியவான் கோபத்தில் அவனது தாடியைப் பிடித்து இழுக்க, தாடி கையோடு வந்து விடுகிறது. உண்மை வெளியாகிறது. இந்தக் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. என். எஸ். கிருஷ்ணன் அன்று கிழவகை வேடம் பூண்டு வந்து செய்த வேடிக்கைகள்-கற்பனைகள் எனக்குத் தாங்க முடியாத சிரிப்பை யுண்டாக்கின. கோபிக்க வேண்டிய நான், சிரித்துக் கொண்டே நின்றேன். உடனே என். எஸ். கிருஷ்ணன் “நான் என்ன செய் தாலும் உனக்குக் கோபம் வராது போலிருக்கிறதே? “ என்றார், நான், “நீர் யாரென்று எனக்கு நன்றாகத்தெரியும். சத்தியவானை உம்மால் ஏய்க்க முடியாது” என்று கூறிக்கொண்டே அவர்கட்டி யிருந்த தாடியை இழுத்தேன். அவரும் நான் இப்படிச் செய்வே னென்று எதிர்பார்க்கவில்லை. விழுந்து விழுந்து சிரித்தார். சபை யில் அங்கொருவர் இங்கொருவராக அமர்ந்திருந்த பொது மக்க ளும் எங்கள் விளையாட்டைப் பார்த்துச் சிரித்தார்கள். துன்பமய மான அந்த நேரத்திலும் எங்களுக்குச் சிரிப்பூட்டி இன்பத்தைத் தந்த அந்தப் பொன்னை நாட்களை என்னல் மறக்க முடிய வில்லை.  வெள்ளத்தில் நீந்தினார் நிலத்தை அடமானம் வைத்துப் பணம் கொண்டுவரச் சென்ற பெரியண்ணா, பணத்தோடு திரும்பினார். புதுக்கோட் டைக்கு அவர் வரமுடியாமல் மழையில் ஏற்பட்ட உடைப்புகள் தடுத்தன. எங்கும் ஒரே வெள்ளக் காடு. காரைக்குடிக்கும் புதுக்கோட்டைக்கும் இடையே பாதை உடைப்பெடுத்துக் கொண்டது. காட்டாறு கரை புரண்டு ஓடியது. பெரியண்ணாவின் வருகையை ஒவ்வொருவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். நெருக்கடியான நிலைமை.  பணத்துடன் வந்த பெரியண்ணா வெள்ளத்தைக் கண்டார்; சிந்தித்தார். வெள்ளம் குறைந்த பின் போகலாமென்று எண்ண வும் இடமில்லை. மழை மேலும் பெய்துகொண்டே இருந்தது. ஒரு முடிவுக்கு வந்தார். வேட்டி, சட்டையைக் களைந்து எல்லா வற்றையும் பணத்தோடு தலையில் கட்டிக் கொண்டார். ஒடும் வெள்ளத்தில் குதித்து நீந்தத் தொடங்கினார்.அவருடைய இந்தத் துணிவைக் கண்டு, கூடி நின்ற மக்கள் எல்லோரும் வியப்படைந் தார்கள். பெரியண்ணா நன்முக நீந்தக் கூடியவர். சிறிதும் அஞ்ச வில்லை, துணிவோடு நீந்தி மறு பக்கம் வந்து சேர்ந்தார். பெரி யண்ணா வந்து, தாம் நீந்தி வர நேர்ந்த நிலைமையைப் பற்றிச் சொன்னபோது, எங்களுக்கெல்லாம் பயமாகஇருந்தது. கம்பெனி யின் இந்தக் கஷ்டமான நிலையிலும் நடிகர்கள் அன்போடு மனம் கலங்காது ஒத்துழைத்தார்கள்.  நகைச்சுவை நடிகர் சிவதாணு புதுக்கோட்டையில் கம்பெனி இவ்வாறு தள்ளாடிக் கொண்டிருந்த நிலையில், அம்மா நாகர்கோவிலுக்குப் போய்த் திரும்பியபோது சிவதானுவையும் அழைத்து வந்தார்கள். சிவதாணு எங்கள் ஒன்றுவிட்ட தமக்கை மீனாட்சியம்மையாரின் புதல்வர். பள்ளிக்கூடத்தில் மிகவும் குறும்புகள் செய்து கொண்டிருந்த சிவதாணுவை எங்கள் தமக்கையார்,தாயாரோடு அனுப்பி வைத்தார்கள். சிவதாணுன்வக் கண்டதும் எங்கள் குழுவிலிருந்த நடிகர்கள் சிரித்தார்கள். பார்ப்பதற்கு முரட்டுத் தனமாக இருந்த சிவதாணு, ஒரு நகைச்சுவை நடிகராக வரக் கூடுமென்று யாரும் எண்ணவில்லை. புதுக்கோட்டையில் அம்மாவுக்கு உடல் நலம் குன்றியது. படுக்கையிலேயே கிடந்தார்கள். இந்நிலையில் நாங்கள் காரைக் குடிக்குப் பயணமானோம். காரைக்குடி வெற்றி விநாயகர் தியேட்டரில் நாடகம் தொடங்கியது. அம்மா மட்டும் புதுக் கோட்டையிலேயே இருந்தார்கள். காரைக்குடியில் அமோகமாக வசூலாயிற்று. நாவல் நாடகங்களுக்கு நல்ல பேர். புதுக்கோட்டையில் திண்டாடிக் கொண்டிருந்த கம்பெனிக்குக் காரைக்குடி வசூல் வியப்பை அளித்தது.  சீனிவாசபிள்ளை கம்பெனி அப்போது காரைக்குடி ஷண்முக விலாஸ் தியேட்டரில், பிர சித்தி பெற்ற சீனிவாச பிள்ளை கம்பெனியார் நடித்து வந்தார்கள். ஏராளமான காட்சியமைப்புக்களும், கண் கவரும் உடைகளும் வைத்திருந்த பெரிய கம்பெனி அது. அவர்கள் இராமாயணம், மகாபாரதம், மயில் இராவணன், புல்புலையான், அலியாதுஷா முதலிய நாடகங்களையெல்லாம் நடித்தார்கள். புல்புலையான் நாடகத்தில் மேடையிலேயே இரயில் ஒடுவதுபோல் காண்பிப்பார்கள். அவ் வளவு பெரிய கம்பெனிக்கு ஐம்பது, நூறுதான் வசூலாகியது. அதே நேரத்தில் பழைய ஓட்டை உடைசல் சாமான்களை வைத்துக் கொண்டு நாடகங்களை நடித்த எங்களுக்கு ஆயிரம் ரூபாய்கள் வரை வசூலாயிற்று. எங்களுடைய சிறுவர் கம்பெனி, பெரியவர்கள் கம்பெனிக்குப் போட்டியாக நின்று சமாளித்து, வெற்றியும் அடைந்தது. சீனிவாசபிள்ளை கம்பெனியார் வேறு ஊருக்கு மாற்றிக் கொண்டு போய் விட்டார்கள். எங்கள் நடிகர்களுக்கு ஒரே குதூகலம். திடீரென்று ஒருநாள் அம்மா அபாயகரமான நிலையிலிருப்பதாகத் தகவல் வந்தது. நாடகம் முடிந்ததும் நண்பர் ஒருவர் உதவிய காரில் நாங்கள் நால்வரும் இரவோடிரவாகப் புதுக்கோட்டைக்கு வந்தோம்… அந்தக் கண்டத்திலிருந்து அம்மா ஒருவாறு தப்பிப் பிழைத்தார்கள்.  குடந்தையில் காலரா  காரைக்குடி நாடகம் முடிந்த பின் திருவாரூரில் ஒரு மாத காலம் நடித்து விட்டுக் கும்பகோணம் வந்தோம். வாணி விலாஸ் தியேட்டரில் நாடகங்கள் நடைபெற்று வந்தன. கும்பகோணத்தில் அப்போது காலரா நோய் வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. அந்நோய் முதன்முதலாக என்னையும், என். எஸ். பாலகிருஷ்ணனையும் பீடித்தது. எங்கள் இருவருக்கும் அம்மாவே பல மருந்துகள் கொடுத்தார்கள்.  நோயோடு போராடிக் கொண்டே நாங்கள் இருவரும் தொடர்ந்து நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தோம். அம்மாவில் மருந்து எங்கள் நோயைக் குணப்படுத்தியது. நாடகத்திற்கு வசூல் மிக மோசமாக இருந்தது. இந்நிலையில் கம்பெனியில் முக்கிய வேடம் தாங்கி வந்த சுப்பையா என்னும் சிறுவனுக்குக் காலரா நோய் கண்டது. சுப்பையா நல்ல நடிகன்; பாடங்களை விரைவாக நெட்டுருப் போடும் ஆற்றல் வாய்ந்தவன். ஒரு சமயம் மேனகா நாடகத்தில் மேனகா பாடத்தை ஒரே நாளில் பாடம் செய்து நடித்தவன். அவன் மீது எல்லோரும் அபிமானம் வைத்திருந்தோம். அவன் திடீரென்று நோய் கண்ட இரண்டாம் நாளே இறந்து விட்டான். இந்த எதிர்பாராத அதிர்ச்சியால் நாடகம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, சின்னண்ணா டி.கே.முத்துசாமிக்குக் காலரா நோய் கண்டது. ஏற்கனவே மனநோய் பிடிந்திருந்த நிலையில், அம்மாவினால் இந்த அதிர்ச்சியைத் தாங்க முடிய வில்லை . அவர்கள் என்னென்னவோ மருந்துகளைக் கொடுத்துப் பார்த்தார்கள். எதுவும் பயனளிக்கவில்லை.  டாக்டர் சாம்பசிவய்யர் அப்போது கும்பகோணத்தில் டாக்டர் சாம்பசிவய்யர் பிரசித்தி பெற்ற டாக்டராக இருந்தார். அவரிடம் சின்னண்ணாவைக் கொண்டு போய் வந்தோம். அவரும் ஏதோ மருந்து கொடுத்தார்; ஊசி போட்டார்; வீட்டுக்கும் வந்து பார்த்தார். “பிழைப்பது கடினம். ஏதோமுயல்கிறேன்.இறைவன் திருவருள்’ என்று சொல்லிப் போய்விட்டார். இந்தச் செய்தி அறிந்ததும், அம்மாவுக்கு ஆறுதல் கூற முடியவில்லை. சின்னண்ணா முன்னிலையில் அழக்கூடாதென்று சொல்லி அம்மாவை ஒருவாறு சாந்தப் படுத்தினோம். மூத்தப்பிள்ளையோ முகங்கொடுத்துப் பேசுவதில்லை. இரண்டாவது பிள்ளை பிழைப்பது கடினம் என்று டாக்டர் சொல்லிவிட்டார். இதை ஒரு தாயுள்ளம் எப்படி தாங்க முடியும்?  அம்மா மனத் துயரங்களையெல்லாம் அடக்கிக் கொண்டு அண்ணாவைக் கவனித்தார்கள். இடைவிடாது அவர் அருகிலேயே இருந்து வேண்டியது செய்தார்கள். மூன்றாம் நாள் காலை அம்மா வுக்குக் காலரா நோய் வந்துவிட்டது. டாக்டர் வந்து பார்த்தார். ஏற்கெனவே மிகவும் பலஹlனமான உடல்.பிழைப்பது கஷ்டம்’ என்று சொல்லி விட்டார். நான் பெருந் துயரத்திலாழ்ந்தேன். அறைக்குள் படுத்திருந்த சின்னண்ணாவை வெளியே கூடத்தில் படுக்க வைத்துவிட்டு, அம்மாவை அறைக்குள் படுக்கவைத்தேன்.                                                      அம்மாவின் அந்திய நேரம் அம்மாவுக்கு நோய் கண்ட அன்று மாலை பெரியண்ணா வந்திருந்தார். கல்யாணமான நாளிலிருந்து அவர் அம்மாவோடு பேசுவதும் இல்லை; வீட்டுக்கு வருவதும் இல்லை. அன்று வந்தவர் வாசலிலேயே நின்று விசாரித்துவிட்டுப் பார்க்காமல் போய் விட்டார். காலரா கண்டு குணமடைந்தவன் ஆகையால் நான் அம்மாவின் அருகிலேயே இருந்தேன். அப்போது எனக்கு என்றுமில்லாத துணிவு ஏற்பட்டிருந்தது. அம்மாவின் வயிற்றில் பூச டாக்டர் ஒரு மருந்து கொடுத்திருந்தார். நான் அந்த மருந்தைப் பூசிக் கொண்டிருந்தேன். மதினி கோதுமைத் தவிடு வறுத்துக் கொண்டு வந்து கொடுத்தார்கள். அதை வாங்கி டாக்டர் சொன்னபடி ஒத்தடம் கொடுத்தேன். அம்மாவுக்குத் தன் நினைவு இல்லை, கண்கள் மேலே சொருகின. மதினி பயந்து அழத் தொடங்கினார்கள். வெளியே சின்னண்ணாவும் மரணத் தருவாயில் படுத்திருப்பதைச் சைகையால் காட்டி, நான் மதினியின் அழுகையை அடக்கினேன்... சில நிமிடங்களில் அம்மா மீண்டும் கண் திறந்தார்கள். “பெரியண்ணாவை அழைத்து வரச் சொல்லட்டுமா?” என்று கேட்டேன். அம்மா வேண்டாமென்று கையசைத்தார்கள். பேச முடியவில்லை. கோதுமைத் தவிடு கொடுத்துவிட்டுப் போன மதினியைச் சுட்டிக் காட்டி “அவளைக் கை விடாதிருக்கச் சொல்” என்று ஜாடை காட்டினார்கள். மீண்டும் ஏதோ சொல்ல முயன்றார்கள். பேச்சு வரவில்லை. நான் அருகில் குனிந்து ‘என்னம்மா’ என்றேன். அவர்கள் காட்டிய சைகையிலிருந்து தங்கைமார்களை நினைவுபடுத்துவதாகப் புரிந்து கொண்டேன். “சுப்பு-காமாட்சியைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் அம்மா” என்றேன். அம்மாவின் கண்கள் மலர்ந்தன. சற்று நேரத்தில் மீண்டும் கண்கள் மேலே சொருகிக் கொண்டன. அம்மா உறங்குவதாக நினைத்து நான் வெளியே வந்தேன். சின்னண்ணாவுக்கும் உறக்கம் இல்லை. வாயால் பேசவும் இயலாத நிலை.அவரது கண்கள்,அம்மாவின் நிலையை அறிய ஆவல் கொண் டிருப்பது தெரிந்தது. அம்மா உறங்குவதாக அவருக்குச் சைகை காண்பித்து விட்டு,வாயிலில் இறங்கிவிதிக்கு வந்தேன்.நள்ளிரவு: வீதியில் ஜன நடமாட்டமே இல்லை. வானம் நிர்மலமாயிருந்தது. நட்சத்திரங்கள் பளிச்சிட்டன. கம்பெனியின் நீண்ட பணியாளரான கோபால்பிள்ளை மட்டும் திண்ணையில் படுத்திருந்தார். உள்ளே தங்கைமார்கள் சுப்புவும், காமாட்சியும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். இரண்டொரு நாய்கள் ஊளையிட்டன. அருகிலிருந்த கம்பெனி வீட்டுக்குப் போய்வர எண்ணி இரண்டடி நடந்தேன். மீண்டும் தயக்கத்துடன் வீட்டினுள் நுழைந்தேன். அறைக்குள்ளே மதினி அழுதுகொண்டிருப்பது தெரிந்தது.அறைக் குள் அடியெடுத்து வைத்தேன். அம்மா எவ்விதச் சலனமுமின்றி அமைதியாகக் கிடந்தார்கள். கோபால்பிள்ளையை அழைத்து பார்க்கச் சொன்னேன்... அவர் பார்த்தார். அம்மா எங்களை விட்டுப் பிரிந்து விட்டார்கள் என்பதை அவர் முகம் காட்டியது.  என் நெஞ்சம் ஏனே கல்லாய் உறைந்திருந்தது!அழுகையே வரவில்லை. மதினியையும் அழ வேண்டாமென்று சமாதானப் படுத்தினேன். சின்னண்ணா ஒன்றும் புரியாமல் விழித்தபடி கிடந் தார். பெற்ற அன்னையார் எங்களைப் பிரிந்து நெடுந்துாரம் சென்று விட்டார்கள். கொடுங் காலரா நோய் பெற்ற தாயை விழுங்கிக் கொண்டது. 1931 ஜனவரி 29-ஆம் நாள் இரவு 12.30க்கு எங்கள் அன்னயார் இறைவனடி சேர்ந்தார்.  மறுநாள் முற்பகல் 11 மணியளவில் அம்மாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. இதுதான் எங்கள் நாடக வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும் சோதனைக் காலம்.கம்பெனி நிலை தத்தளித்தது. திசை தெரியாத காட்டில், சேறு நிறைந்த பாதையில் சிக்கிக் கொண்ட வண்டிக்காரனுடைய நிலைமையில் நாங்கள் இருந்தோம். கம்பெனி என்னும் வண்டியை எப்படி மேலே கொண்டு செல்வது? நடிகர்களின் பெற்றோர்கள் பலர் தமது பையன்களை ஊருக்கு அனுப்பி வைக்குமாறு கடிதங்கள் வரைந் தனார். சிலர் நேராகவே வந்து அழைத்துச் சென்றனார். ஒரு மாத காலம் நாடகம் நிறுத்தப்பட்டது.  பரிவு காட்டிய பால்ய நண்பர்கள் இந்த நெருக்கடியான நேரத்தில் எங்களுக்கு இரு நண்பர்கள் உதவி புரிந்தார்கள்.ஒருவர் கிட்டுராஜூ, மற்றவர் வீரமணி ஐயர். இவ்விருவரும் 1924ஆம் ஆண்டு முதல் எங்களோடு நெருங்கிப் பழகியவர்கள். பெரும் செல்வந்தர்களாகப் பிறக்கவில்லையென்றா லும் நல்ல மனம் உடையவர்கள்.இவ்விரு நண்பர்களும் அடிக்கடி வந்து சந்தித்தார்கள்;ஆதரவு கூறினார்கள். பொருள் கொடுத்தும் உதவினார்கள். கையில் பொருளின்றிக் கடன் கேட்க மனமின்றி, விடுபட வழியுமின்றி, நாங்கள் வேதனைக்கடலுள் ஆழ்ந்து கிடந்த போது, பாசத்தோடு பரிவு காட்டிய கண்பர் கிட்டுராஜுவை உயி ருள்ள வரை மறக்க முடியாது. பல நாடக ரசிகர்களால் எங் களுக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களும் நகை களும் இருந்தன. எட்டையபுரம் ஜமீந்தார் காசி விஸ்வநாத பாண்டியன் அன்புடன் வழங்கிய வைர மோதிரங்கள், கடுக் கன்கள், கெம்பு அட்டிகை முதலிய விலையுயர்ந்த பொருட்கள் எல்லாம் இந்த நேரத்தில் கம்பெனிக்கு உயிர் கொடுத்தன.  எங்கள் நிருவாகம் அம்மாவின் மரணத்திற்குப் பின் சிற்றப்பாவுக்கும், பெரியண்ணாவுக்கும் மனத்தாங்கல் ஏற்பட்டது. எதிலும் பொறுப்பில்லாமல் நடந்து கொண்ட சிற்றப்பா, இனித் தாம் கம்பெனியில் உரிமையாளராக இருக்க இயலாதென்று கூறி விட்டார். பெரியண்ணாவும் இதையே எதிர்பார்த்திருந்தார். மிகுந்த மகிழ்ச்சியுடன் எங்கள் சார்பில் நிருவாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். கம்பெனி நேரடியாக எங்கள் நிருவாகத் தில் வந்தது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனுக்கு நாகர்கோவிலில் திருமணம் நடை பெற்றது. அம்மா இறந்த சமயம் என். எஸ். கிருஷ்ணன் நாகர் கோவிலில் இருந்தார். திருமண சம்பந்தமாக அவருக்கு பண உதவிசுட நண்பர் கிட்டுராஜுவே செய்தார். கொடுங் காலரா நோய் அம்மாவைக் கொள்ளை கொண்டபின் வேறு யாரையும் துன்புறுத்தவில்லை. சின்னண்ணா மறுபிறவிஎடுத்தது போல் படிப் படியாகக் குணம் அடைந்தார். திருமணத்தால் பெரியண்ணா வுக்கு ஏற்பட்டிருந்த மனக்கசப்பும் அம்மாவின் மறைவுடன் தீர்ந்தது. இனிக் குடும்பத்தைப் பராமரிக்க வேண்டிய முழுப் பொறுப்பும் பெரியண்ணாவின் தலையில் சுமந்தது. சிறு குழந்தை களாக இருந்த இரண்டு தங்கைமார்களைக் காப்பாற்றிக் கல்யாணம் செய்துகொடுக்க வேண்டிய கடமையும் அண்ணாவுக் கிருந்தது. எனவே அவர் பழைய வெறுப்பு மனோபாவத்தை விட்டுத் தமது மனைவியுடன் ஒன்றுபட்டிருந்து வாழ்க்கை நடத்தத் தொடங்கினார்.  கிட்டப்பா நந்தனார் நாங்கள் நாடகத்தை நிறுத்தியிருந்த சமயத்தில் எஸ். ஜி. கிட்டப்பாவின் ஸ்பெஷல் நந்தனார் நாடகம் ஒன்று எங்கள் கொட்டகையிலேயே நடந்தது. நாங்கள் எல்லோரும் நாடகம் பார்க்கப் போயிருந்தோம்.  அன்று காயக சிகாமணி ஹரிகேசவகல்லூர் முத்தையா பாகவதரும் உள்ளே எங்களோடு உட்கார்ந்து நாடகம் பார்த்தார். கிட்டப்பா நந்தகைவந்து,அன்று பாடிய அற்புதமான பாடல்கள் இன்னும் என் செவிகளிலே ரீங்காரம் செய்து கொண்டிருக் கின்றன. சபையோர் கிட்டப்பாவின் இசையமுதத்தைப் பருகி, மதுவுண்ட வண்டுபோல் மயங்கிக் கிடந்தனார் என்றே சொல்ல வேண்டும். பாடல்களிலே நடிப்புணர்ச்சியைக் கொட்டிப் பாடும் பாவத்தோடு கூடியபாடல்களை நாங்கள் அன்றுதான் கேட்டோம். என் வாழ்நாளில் அப்படிப் பாடிய ஒரு சங்கீத தெய்வத்தை நான் இன்னும் சந்திக்கவில்லை. எங்களுக்கு ஏற்பட்டிருந்த எண்ணற்ற கவலைகளையெல்லாம் மறந்து, நான்கு மணி நேரம் கிட்டப்பாவின் இசை வெள்ளத்திலே மூழ்கிக் கிடந்தோம்.  மானேஜரின் துரோகம் கம்பெனிக்கு நல்ல வருவாய் ஏற்பட்ட காலத்திலெல்லாம் அவற்றை உள்ளிருந்த மனிதக் கரையான்கள் அரித்துத் தின்று கொண்டிருந்தன. மானேஜர் காமேஸ்வர ஐயர் இப்படிச் செய்தவர்களிலே முதல்வர். எத்தனை எத்தனையோ துன்பங்களுக்கு அவர் காரணமாக இருந்தார். நகைகளை அடகு வைப்பதில் என்னென்னவோ தந்திரங்களைக் கையாண்டார். சில நகைகளைத் தாமே வைத்துக் கொண்டு பணம் கொடுத்தார். அவற்றின் கெடு தீர்ந்ததும் ஏலத்தில் போய்விட்டதாகப் பொய்யுரைத்தார். அவருடைய துரோகச் செயல்களேத் தெரிந்திருந்தும் விடுபட வழியின்றி அவஸ்தைப்பட்டோம். சிற்றப்பா நிர்வாகத்தை விட்டதோடு காமேஸ்வர ஐயரையும் கம்பெனியிலிருந்து விலக்கினோம், அவருக்கு ஒரு பெருந்தொகை சம்பளப் பாக்கியாகக் கொடுபட வேண்டியிருந்தது. அதைச் சில மாதங்களில் கொடுத்துவிடுவதாகப் பெரியண்ணா எழுதிக் கொடுத்தார். எப்படியாவது மானேஜர் போனால் போதுமென்றிருந்தது.  காட்சி அமைப்பாளர்கள் இச்சமயம் காட்சியமைப்பாளர்களில் முதல்வராயிருந்த பகவதியாபிள்ளை இரண்டு திரைகளை யாருக்கோ விற்றுவிட்டார். மற்றொருவரும் இதற்கு உடந்தையாக இருந்தார் என்று தெரிந்தது. என்ன செய்வது? நிருவாகத்தில் குழப்பம். நாடகம் நடைபெறாத நிலைமை. எல்லாம் ஒன்று சேர்ந்து அவர்களை இவ்வாறு செய்யத் தூண்டியிருக்க வேண்டும்! பகவதியாபிள்ளை ஆரம்பகாலத்தில் எங்களிடம் உண்மையாக உழைத்த ஊழியர்களில் ஒருவர். காகிதத்தில் செடி, கொடி, பூ இவற்றைச்செய்வதில் நிபுணர். அவர் இவ்வாறு நடந்து கொண்டது எங்களுக்கெல்லாம் வேதனை அளித்தது. மேலும் மேலும், நாடக அரங்கில் பல பொருட்கள் களவாடப்பட்டு வந்தன. கடைசியாக வேறுவழி யின்றிப் பகவதியாபிள்ளையை விலக்க நேர்ந்தது. கும்பகோணத்திலிருந்து வேறு ஊருக்குப்போக முடிவு செய்தோம். புது ஊர்கள் எதிலும் கொட்டகை கிடைக்கவில்லை. பெரியண்ணாவும் கோபால் பிள்ளையும் பல ஊர்களுக்குப் போய்த் திரும்பினார்கள். கடைசியில் தஞ்சாவூருக்குப்போக முடிவு செய்யப் பெற்றது.  மோகனசுந்தரம் தஞ்சையில் வாத்தியார் கந்தசாமி முதலியார் மீண்டும் கம்பெனிக்கு வந்துசேர்ந்தார். மோகனசுந்தரம் நாடகம் தயாராயிற்று. மோகனசுந்தரம் ஒரு அருமையான நாடகம் ஜே. ஆர். ரங்கராஜுவின் சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று. முற் போக்குக் கருத்துக்கள் அமைந்த நாடகம். பின்னல்திரைப்படத்தில் எல்லோரும்கண்டு மகிழ்ந்திருக்கிருேமாதலால் இதைப்பற்றி விரிவாகக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. இந்நாடகம் மிகச் சிறப்பாக அரங்கேறியது. கம்பெனியின் இந்தக் கஷ்டமான நிலையிலும் புதிய நாடகத்திற்குக் காட்சிகள் தயாராயின. சின்னண்ணா லீலாவதியாகவும், எம். கே. ராதா சுந்தர முதலியாராகவும் தோன்றி நடிக்கும் காட்சிகள் மிக நன்முக இருக்கும். இந்நாடகத்தில் முக்கியபாத்திரமான விசாலாட்சியாக எம். ஆர். சந்திரன் என்ற இளைனார் நடித்தார். இவர் மிக அழகிய தோற்றம் உடையவர். ஒப்பனை ஒன்றும் இல்லாமல் சாதாரண நிலையிலேயே பாவாடை, தாவணி கட்டிவிட்டால் பகலில் கூட. இவரைப் பெண்ணென்றே எல்லோரும் நினைப்பார்கள். தலைமுடி யும் நன்றாக வளர்ந்திருந்ததால் யாரும் சந்தேகப்பட மாட்டார்கள். இவரிடம் ஒரு சிறிய குறைபாடு இருந்தது. எப்போதும் தொண்டை ‘கரகர’ என்று இரு குரல்களிலேயே பேசும். ஒப்பனை முடிந்த பின் இவரைத் தொடர்ந்து ஐம்பது தோப்புக் கரணங்கள் போடச் சொல்வோம். கொஞ்சம் மூச்சு வாங்கினால் தொண்டையிலுள்ள அந்தக் கரகரப்பு போய்விடும். பிறகு சாரீரம் இனிமையாக இருக்கும். இவர் மிக நன்றாக நடிக்கக் கூடியவர். மோகனசுந்தரத்திற்கு சுமாராக வசூலாயிற்று.                          அரசியல் பிரவேசம்   1931-ஆம் ஆண்டில் தான் நாங்கள் அரசியல் விஷயங்களில் நேரடியாகத் தொடர்புகொள்ள ஆரம்பித்தோம். அன்னையார் இறந்த சில நாட்களில் பண்டித மோதிலால்நேரு இறந்ததாகச் செய்திப் படித்தோம். கும்பகோணம் காந்தி பார்க்கில் அவருக்காக ஒரு அனுதாபக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில்தான் நான் முதன் முதலாகப் பாரதி பாட்டுக்கள் பாடினேன். தஞ்சைக்கு வந்தபின், பகவத்சிங் டில்லி சட்டசபை யில் குண்டு போட்ட செய்திகளையும், அதுபற்றிய வழக்குகளையும் நாங்கள் தொடர்ந்து படித்து வந்தோம்.  திடீரென்று ஒருநாள் பகவத்சிங் தூக்கிலிடப்பட்ட செய்தியைப் பத்திரிக்கைகளிலே படித்தபோது எங்களுக்கெல்லாம் உள்ளம் குமுறியது. அரசியல் விஷயங்களில் மனத்தை ஈடு படுத்திக் கொண்டிருந்த எங்களுக்கு, இச்செய்தி அதிர்ச்சியைத் தந்தது. அன்று மாலே தஞ்சை பெரியகோயிலுக்கு அருகேயுள்ள மைதானத்தில் ஒரு கண்டனக் கூட்டம் நடைபெற்றது. தேச பக்தர் வேங்கடகிருஷ்ணபிள்ளை தலைமை வகிப்பாரென அறிவிக்கப் பெற்றிருந்தது. அப்போது எங்கள் கம்பெனியில் சின்னண்ணா டி. கே. முத்துசாமியும் என். எஸ், கிருஷ்ணனும் தீவிரவாதிகள். இருவரும் இணைபிரியாத தோழர்கள். நாடகமேடை சம்பந்தமான பொறுப்புகளானலும் சரி, வேறு எதுவானாலும்சரி, இருவரும் கலந்தே முடிவு செய்வது வழக்கம். அப்போதெல்லாம் நான் சுயேச்சையாக வெளியே செல்லும் வழக்கமில்லை. அன்று நடைபெறும் கண்டனக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் போல் என்னுள்ளம் துடித்தது. அன்று கூட்டம் நடைபெறாதென்றும், தடை செய்யப்பட்டிருப்பதாகவும் வதந்திகள் வந்தன. சின்னண்ணாவும் கலைவாணரும் கூட்டத்திற்குப் போயிருந்தார்கள். கூட்டத்தில் வேங்கடகிருஷ்ணபிள்ளை கைது செய்யப்பட்டார். பிரம்மாண்டமான கூட்டத்தைப்போலீசார் தடியடி கொடுத்துக் கலைத்தார்கள். சில அடிகள் சின்னண்ணாவுக்கும் கலைவாணருக்கும் கிடைத்தன. வீட்டுக்கு வந்து அவர்கள் இச்செய்தியை அறிவித்த, போது என்னால் தாங்க முடியவில்லை. உணர்ச்சி விவரிக்க இயலாததாக இருந்தது. என்னை ஈன்ற தாய்நாட்டிற்கு என்னால் இயன்ற பணியைச் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் மேலெழுந்தது. ஒரு முடிவுக்கு வந்தேன். மறுநாள் என்னுடைய மேனியைப் புனிதமான கதராடை அழகு செய்தது.  நாற்பத்தொரு ஆண்டுகள் கடந்தன. அன்று முதல் இன்று வரை நான் தொடர்ந்து கதராடைதான் உடுத்தி வருகிறேன். தொடக்கத்தில் சாக்கு, சமுக்காளம் இவற்றை உடுத்துவது போன்ற சிறு உணர்வு தோன்றியதுண்டு. ஆனால் உள்ளத்தில் அலைமோதிக் கொண்டிருந்த தேசிய உணர்ச்சிக்குமுன் இந்த மென்மை உணர்வுகளெல்லாம் பறந்தோடிவிட்டன. எங்கள் நாடகக் குழுவின் நெருக்கடியான காலங்களில் அதிகப் பணம் கொடுத்து உடைகள் வாங்குவதற்கும் இயலாதிருந்த எத்தனையோ சந்தர்ப்பங்களில் கதரே உடுத்துவது என்ற இலட்சியத்தை நிறைவேற்ற நான் பட்ட கஷ்டங்களெல்லாம் இப்போது நினைவுக்கு வருகின்றன.  வாத்தியார் மீண்டும் விலகினார் தஞ்சையிலிருந்து ஒருவகையாகத் தட்டுத் தடுமாறி மதுரைக்கு வந்து சேர்ந்தோம். பழைய நாடகங்களுக்கு வசூல் இல்லாததால் புதிய நாடகம் தயார் செய்யும்படி வாத்தியார் முதலியாரிடம் பெரியண்ணா வற்புறுத்தினார். ‘சுந்தர திரன்’ என்னும் ஒரு நாவல் நாடகம் பாடம் கொடுக்கப் பெற்றது. இரண்டொரு நாட்கள் ஒத்திகையும் நடைபெற்றது. அதற்குள் வாத்தியாரோடு சம்பளத் தகராறு ஏற்பட்டுவிட்டது. அதிகச் சம்பளம் கொடுத்தால்தான் இரவு நாடகத்திற்கு வரமுடியு மென்று வாத்தியார் கண்டிப்பாகக் கடிதம் எழுதியனுப்பி விட்டார். இந்தக் கடிதத்தைக் கண்டதும் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனுக்குக் கோபம் வந்துவிட்டது. அவர் நேராக வாத்தியார் இருப்பிடம் சென்றார். கம்பெனியின் நிலையை உணராமல் அதிகச் சம்பளம் கேட்பது முறையல்லவென எவ்வளவோ எடுத்துக் கூறினார்.  வாத்தியாருக்கும் என். எஸ். கிருஷ்ணனுக்கும் வாக்கு வாதம் வளர்ந்தது. கடைசியாகக் கலைவாணர் வாத்தியாரைக் கண்டபடி பேசிவிட்டு வந்தார். அன்றிரவு மோகனசுந்தரம் நாடகம். முதல் மணியடிக்கும்வரை வாத்தியாரும், எம். கே. ராதாவும் வரவில்லை. பெரியண்ணா சுந்தரமுதலியார் வேடத்தைப் போடத் தொடங்கினார். அந்தச் சமயம் திடீரென்று ராதாவோடு வாத்தியார் வரவே பெரியண்ணா வேடத்தைக் கலைத்துவிட்டு ராதாவையே போடச் சொன்னார், மறுநாள் காலை வாத்தியார் கணக்குத் தீர்த்துக் கொண்டு கம்பெனியை விட்டு விலகிக் கொண்டார். அடிக்கடி இவ்வாறு கம்பெனிக்கு வருவதும் போவதுமாக இருந்த வாத்தியாரின் போக்கு எங்களுக்குப் பிடிக்க வில்லை. இருந்தாலும் என்ன செய்ய முடியும்? மேதைகள் சிலர் இப்படித்தான் இருக்கிறார்கள்!                                                                                                    தேசபக்தி   எங்களுக்கெல்லாம் புதிய நாடகம் தயாரிக்க வேண்டு மென்ற ஒரே ஆவல். அப்போது மதுரகவி பாஸ்கரதாஸ் மதுரையில் ஒரு சிறந்த நாடகாசிரியராக இருந்தார். அந்த நாளில் அவருடைய பாடல்களைப் பாடாத ஸ்பெஷல் நடிகர்களே இல்லை யென்று சொல்லலாம். பாஸ்கரதாஸ் ஒரு தேசீயவாதி. இந்தியத் தேசீயத் தலைவர்களின் பேரிலெல்லாம் ஏராளமான பாடல்கள் புனைந்திருக்கிறார், பிச்சையெடுக்கும் சிறுவர்கள்கூடப் பாஸ்கர தாசின் தேசீயப் பாடல்களைப்பாடுவதை நான் கேட்டிருக்கிறேன். சொற்சுவையும், பொருட்சுவையும் நிறைந்து காலத்தோடு ஒத்திருந்த அவரது பாடல்கள் மிகப் பிரசித்தி பெற்று விளங்கின. பாஸ்கரதாஸ் எங்களுக்கு அறிமுகமானார். வெ. சாமிநாத சர்மா எழுதிய பாணபுரத்துவீசன்என்னும் ஒரு நாடகத்தின் அச்சுப் பிரதியை அவர் கொண்டு வந்தார். அதைப் படித்துப் பார்த்தோம். அப்போதிருந்த எங்கள் தேசீய உணர்ச்சிக்கு அந்த நாடகம் நிரம்பவும் பிடித்தது இடையிடையே சில புதியகாட்சிகளைச் சேர்த்து அவரே எழுதிக் கொடுத்தார். அப்போது பாண புரத்துவீரன் நாடகம் சர்க்காரால் தடை செய்யப்பட்டிருந்தது. எனவே அந்நாடகத்திற்குத் தேசபக்தி என்றுபெயர் வைத்தோம்.  தேசபக்தி நாடகம் வேகமாகத் தயாராயிற்று. பாஸ்கரதாஸ் உணர்ச்சி மிகுந்த பாடல்களை இயற்றித் தந்தார். அத்தோடு மகாகவி பாரதியின் ‘என்று தணியுமிந்த சுதந்திர தாகம்’ ‘விடுதலை விடுதலை,’ ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’ முதலிய பாடல்களையும் இடையிடையே சேர்த்துக் கொண்டோம். தேசபக்தி நாடகத்தில்தான் முதன் முதலாகப் பாரதியின் பாடல்கள் பாடப் பெற்றன. அந்த நாடகத்தில் புதுமையாக ஏதாவது செய்ய வேண்டுமென்று சின்னண்ணாவும், கலைவாணரும் யோசித்தார்கள். மகாத்மா காந்தியடிகளைப் பற்றிய வரலாற்றுப் புத்தகம் ஒன்று வாங்கி வந்தார்கள், காந்தி மகான் கதையை வில்லுப்பாட்டாகப் பாடலாமென முடிவு செய்யப்பட்டது. காந்தியடிகளின் பிறப்பு முதல் அவர் வட்டமேஜை மாநாட் டுக்குப் புறப்பட்டது வரை வில்லுப்பாட்டாக அமைக்கப்பட்டது. ஒரு நாள் இரவு உணவுக்கு மேல் நானும் கலைவாணரும் உட்கார்ந்து பாடல்களை எழுதி முடித்தோம். மறுநாள் ஒத்திகை ஆரம்பமாயிற்று. தயாரிப்பு வேலைகள் சுறுசுறுப்பாக நடந்தன. தேசீய வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் புனிதமான கதரிலேயே உடைகள் தைக்கப்பட்டன. வாத்தியார் கம்பெனியை விட்டு விலகிய பதினேழாவது நாள் அவசர அவசரமாகத் தேசபக்தி அரங்கேறியது.  உணர்ச்சி வேகம் 1931 மே 19 ஆம் நாள். ஆம்; அன்றுதான் தேசபக்தி அரங்கேற்றம். அன்று எங்களுக்கு ஏற்பட்டிருந்த உணர்ச்சியை விவரிக்க இயலாது. ஏதோ ஒர் உணர்ச்சியும் எழுச்சியும் எல்லோருக் கும் இருந்தது. நாடெங்கும் கொந்தளிப்பு! விடுதலையுணர்ச்சி கொழுந்து விட்டு எரிந்த காலம்! பாரத வீரன் பகவத் சிங்கும் அவரது தோழர்கள் சுகதேவ், ராஜகுருஆகியோரும் தூக்கிலிடப்பட்டுச் சில நாட்களே ஆகியிருந்தன. அந்த நெஞ்சுருக்கும் செய்திகள் நாட்டு மக்கள் உள்ளத்தில் பெரும் ஆவேசத்தை ஊட்டியிருந்தன. நாட்டின் சூழ்நிலை, நடிகர்களாகிய எங்கள் உள்ளத்தை மட்டும் பாதிக்காதா, என்ன! நாங்களும் உணர்ச்சியில் திளைத்து நின்றோம்.  நாடகம் தொடங்கியது. முதற் காட்சி பொதுக்கூட்டம்.  தேச பக்தியே முக்தியாம்  தெய்வ சக்தியாம்  என்ற பாடலை நான் முதலில் பாடியதும் சபையோர் உணர்ச்சி வசப்பட்டு, மகாத்மா காந்திக்கு ஜே!” என்று கோஷமிட்டனார். பாட்டு முடிந்ததும் பாணபுரத்தின் தலைவர், வாலீசனாக நடித்தவர் பேசினார். அவரது பேச்சுத் தெளிவும், கெம்பீரமான குரலும், மெய்ப்பாட்டுணர்ச்சியும் சபையினருக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் உணர்ச்சி ஊட்டுவனவாய் இருந்தன. பெருத்த கைத்தட்டலுடன் முதற்காட்சி முடிந்தது.  உயிரை ஊசலாட விட்டார் இரண்டாவது காட்சி ஈசானபுர மன்னனின் விசாரணை மண்டபம். சுதந்திர வீரனை வாலீசனுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. மூன்றாவது காட்சி தூக்குமேடை, வாலீசன் தூக்கிலிடப்பட்டு மடிகிறான். அவனது மரணத்திற்குப் பின் புரேசன் என்ற தலைவன் பொறுப்பேற்றுப் போராடி, பாண புரத்தை அடிமைத் தளையிலிருந்து விடுவித்துச் சுதந்திர நாடாக்குகிறான். இது கதை......  தூக்குமேடைக் காட்சியைப் பல முறைகள் ஒத்திகைகள் பார்த்து, உண்மைபோல் தோற்றுவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட் டிருந்தன. வாலீசன் மேடைமீது ஏறியதும் சுருக்குக் கயிற்றைத் தானே எடுத்துக் கழுத்தில் மாட்டிக் கொள்கிறான். அதிகாரி கையசைக்கிறார். உள்ளே மணிச் சத்தம் கேட்கிறது. கீழே நிற்கும் காவலன் பலகையைத் தட்டி விடுகிறான். இவ்வாறு காட்சி நடை பெற வேண்டும்.  வாலீசனுக நடித்தவர் சுருக்குக் கயிற்றைக் கழுத்தில் மாட்டிக் கொள்ளும்போதே அதனோடு இணைக்கப்பட்டிருந்த ஒரு இரும்புக் கொக்கியைத் தனது இடுப்பிலே கட்டப்பட்டிருந்த மற் றொரு கயிற்றில் மாட்டிக் கொள்ளவேண்டும். இப்படிச் செய்தால் அவர் தொங்கும்போது அவரது உடல் பாரத்தை இரும்புக் கொக்கி தாங்கிக் கொள்ளும். கழுத்துச் சுருக்கு இறுக்காது.  மூன்றாவது காட்சி தொடங்கும் போது வாலீசனுக நடித்தவர் உணர்ச்சிப் பிழம்பாக இருந்தார். துாக்கு மேடையில் ஏறி ஆவேசத்துடன் வீர முழக்கம் செய்துவிட்டுக் கயிற்றைக் கழுத்தில் போட்டுக் கொண்டார். ஆனால் இரும்புக் கொக்கியை ஒத்திகைப் படி மாட்டினார்களா என்பதைக் கவனிக்க மறந்து விட்டார்,  நாடகம் தொடங்கியது முதல் நெஞ்சு படபடக்கத் திரை மறைவில் நின்று கொண்டிருந்த எங்களில் எவருமே இதைக் கவ னிக்கவில்லை. தூக்குமேடைப் பலகையை இழுக்கும் காவலனாக நின்ற நடிகரும் இதைப்பற்றிச் சிறிதும் கவலை கொள்ளவில்லே. சுருக்கைக் கழுத்தில் மாட்டினார் வாலீசர். வீர முழக்கமிட்டார். மணியடிக்கப்பட்டது. பலகை இழுக்கப்பட்டது. வாலீசன் அந் தரத்தில் தொங்கினார், மெய் மறந்திருந்த சபையோர், “பகவத் சிங்குக்கு ஜே” என்று பலமுறை கோஷமிட்டனார். நான் அடுத்த காட்சிக்காகத் திரை மறைவில் தூக்குமேடையருகே நின்று கொண்டிருந்தேன். வாலீசன் தொங்கியபோது கொடுத்த குரல் என்னவோ போலிருந்தது. அவரது முதுகுப்புறம் இரும்புக் கயிற்றில் கொக்கி மாட்டப்படாததை அப்போதுதான் உணர்ந்தேன். என்னைப்போலவே மற்றும் சிலர் இதைக் கவனித்தார்கள் போலிருக்கிறது. “திரை, திரை, படுதா படுதா” என்று பல குரல் கள் ஓலமிட்டன. அரை நிமிட நேரம் தொங்கிய பிறகே திரை விடவேண்டுமென ஒத்திகையில் அறிவிக்கப்பட்டிருந்தது. சபையோரின் ஜே கோஷத்தில் ஒலக் குரல்கள் உடனே கேட்கவில்லை. திரைவிடச் சில வினாடிகள் தாமதம் ஏற்பட்டது.  கடவுள் காப்பாற்றினார் திரை விழுந்ததும் சிலர் ஓடிப்போய் வாலீசனாக நடித்தவரைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு இறுகிப்போயிருந்த கழுத்துச் சுருக்கை அவிழ்த்தார்கள். நடிகருக்குப் பிரக்ஞை இல்லை. சபையோருக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது. உணர்ச்சி வசப்பட்ட அவர்கள் அடுத்தகாட்சி தொடங்கும் வரை “பகத்சிங்குக்கு ஜே! பகத்சிங்குக்கு ஜே!” என்று முழங்கிக்கொண்டே இருந்தார்கள்.  வாலீசனாக நடித்தவருக்குத் தன் நினைவுவர அரை மணி நேரமாயிற்று. அன்று வாலிசனாக நடித்து, உணர்ச்சிப் பிழம்பாக நின்று உயிரை ஊசலாடவிட்ட உண்மை நடிகர்தாம் நடிகமணி எஸ். வி. சகஸ்ரநாமம். அவரது கழுத்துச் சுருக்கைப்பற்றிக் கவலை கொள்ளாமல் காவலனாக நின்று பலகை இழுத்த புண்ணியவான் வேறு யாறாமல்ல. நமது நகைச்சுவைச் செல்வன் டி. என். சிவதானு.  தேசபக்தி நாடகத்தில் நான் புரேசனாக நடித்தேன். சின்னண்ணா என் மனைவி சுதர்மா தேவியாக நடித்தார். ஈசான புரத்து மன்னன் அதிரதனாக புளி மூட்டை ராமசாமி நடித்தார். சேனதிபதி சேமவீரனாக நடித்தவர் யார் தெரியுமா? நகைச்சுவை நடிகர் எம். ஆர். சாமினாதன். அவர் மிக அழகாகக் கத்திச் சண்டை போடுவார். நானும் அவரும் தேசபக்தியில் ஆவேசத்துடன் கத்திச் சண்டை போடுவோம். எம். ஆர். சாமிநாதன் தான் எனக்குக் கத்திச் சண்டை போடக் கற்றுக் கொடுத்தார். எந்த வேடத்தைப் போட்டாலும் திறமையாகச் செய்யக் கூடியவர் சாமிநாதன் என்று முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். அல்லவா? தேசபக்தி நாடகத்தில் சாமினாதனை எல்லோரும் பாராட்டினார்கள். என். எஸ். கிருஷ்ணன் பல வேடங்கள் புனைந்து சபையோரைப் பரவசப் படுத்தினார். காந்தி மகான் வில்லுப் பாட்டுக்குப் பலமுறை கைதட்டல் கிடைத்தது. நாடகத்திற்குப் பிரமாதமான பேர். ஆனால் வசூல்தான் அதற்கேற்றபடி இல்லை.  தம்பி பகவதி இந்த நாடகத்தில் தம்பி பகவதி மற்றொரு சுதந்திர வீரன் நாகநாதனாக நடித்தார். புரேசனும் சேமவீரனும் வாட்போர் புரியும் பொழுது, நாகநாதன் சேமவீரனோடு வந்த காவலர்களுடன் சண்டையிட்டு அவர்களை விரட்டவேண்டும். தம்பி பகவதிக்குக் கத்திச் சண்டைபோட அவ்வளவாக வராது; கட்டிப் புரண்டு மற்போர் புரிவதென்றால் நிரம்பப் பிடிக்கும். எனவே நாகநாதன் காவலர்களுடன் மற்போர் புரிந்து விரட்டுவதாக அமைத்துக் கொண்டோம். தம்பி பகவதிக்கு மற்போர் பிடிக்கும் என்று சொல்லும் இந்தச் சமயத்தில் மதுரையில் நடந்த மற்றொரு நிகழ்ச்சி என் நினைவுக்கு வருகிறது. அப்போது கம்பெனியில் முதன்மையான பெண் வேடதாரிகளில் ஒருவராக இருந்தார் ஒரு நடிகர். அவரை ஊருக்கு அழைத்துப்போக அவரது மாமனரும் தமையனும் வந்திருந்தார்கள். தம்பியை ஜெகன்னாதய்யரின் கம்பெனியில் சேர்ப்பது தமையனின் திட்டம், பெரியண்ணா இதைப் புரிந்து கொண்டார். அந்த நடிகர் முக்கிய பாத்திரமாக நடிக்க வேண்டிய நாடகங்கள் நடக்க வேண்டியிருந் ததால், அந்நாடகங்கள் முடிந்த பிறகு அழைத்துப் போகும்படி கேட்டுக் கொண்டார். வந்தவர்களோ உடனடியாகப் போக வேண்டுமெனப் பிடிவாதம் பிடித்தார்கள். நடிகனும் அவர்களோடு போகத் துடித்தார். அன்றிரவு நாடகத்தில் நடிக்க அவரைத் தவிர வேறு ஆள் இல்லை. பெரியண்ணா நயமான முறையில் எவ்வளவோ எடுத்துச் சொன்னார். அலுவல் அறையில் நீண்டநேரம் நடந்து கொண்டிருந்த இந்த உரையாடலை நாங்கள் தலைமறைவாக நின்று கேட்டுக் கொண்டிருந்தோம். நடிகரின் தமையன் ஒரே கூச்சல் போட்டார். பெரியண்ணா காட்டிய பொறுமை எங்களுக்குப் பெரு வியப்பை அளித்தது. கூச்சல் போட்டவரின் ஆவேசம் உச்சநிலைக்குப் போய்க்கொண்டிருந்தது. கடைசியாகப் பெரியண்ணா சிறிது கோபத்தோடு, “நாடகம் முடிந்தபிறகுதான் அவனே அனுப்பமுடியும். எந்தக்காரணத்தைக் கொண்டும் இப்போது அனுப்ப இயலாது” என்று கூறினார். இது கேட்டதும் நடிகரின் தமையன் மேலும் ஆத்திரம் அடைந்தார். “அதெல்லாம் முடியாது. உங்கள் நாடகத்தைப்பற்றி எனக்குக் கவலையில்லை; நாங்கள் இப்போதே புறப்படத்தான் போகிறோம்”, என்று சொல்லிவிட்டுத் தன் தம்பியைப் பார்த்து “எடுடா பெட்டி படுக்கையை” என்றார். அண்ணன் இப்படிச் சொல்லு முன்பே ஆயத்தமாக இருந்த நடிகத் தம்பி, உடனே பெட்டி படுக்கையோடு புறப்படச் சித்தமானார். தமையனும், மாமனும் முன்னை செல்லத் தம்பி அவர்களைப் பின் தொடர்ந்தார். மூவரும் அலுவல் அறையைத் தாண்டினார்கள்.  வெறி கொண்ட வேங்கை!  ‘பளார்’ என்றாெரு சத்தம். அதைத்தொடர்ந்து “ஐயோ’’ என்ற அலறல்! எனக்கு ஒன்றும் புரியவில்லை. எட்டிப் பார்த்தேன். நடிகரின் தமையன் அடி பொறுக்க முடியாமல் கீழே கிடந்தான். அவன் எதிரே வெறி கொண்ட வேங்கை போல் ஒரு மனித உருவம் நின்று கொண்டிருந்தது. அதன் வாயிலிருந்து வார்த்தைகள் வேகமாக வந்தன. “இன்னக்கே புறப்படத்தான் போறயா! எங்கடா புறப்படு! நீ பொறப்பட்டுப் போறதை நான் பார்க்கிறேன்” என்ற வார்த்தைகளோடு கீழே கிடந்தவனுக்கு, மேலும் சில அடிகள் விழுந்தன. நடிகர் பெட்டி படுக்கையைப் போட்டு விட்டு அலறிய வண்ணம் உள்ளே ஓடினார். மாமனார் செய்வதறியாது ஒரு மூலையில் ஒதுங்கினார். தமையன், “ஐயோ, கொல்றானே” என்று ஒலமிட்டார். பெரியண்ணா விரைந்து சென்று அந்த வேங்கையைப் பிடித்து அடக்கினார். மனித உருவில் நின்ற அந்த வேங்கைதான் தம்பி பகவதி. அப்போது தம்பி பகவதிக்கு வயது பதினான்கு-நடிகருக்கும் ஏறத்தாழ அதே வயதுதான் இருக்கும். அடிபட்ட தமையனருக்கு இருபத்தி ஐந்து வயதுக்குமேல் இருக்கலாம். எதற்காக இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டேன். தெரியுமா? பகவதியுடைய முரட்டுத்தனம், உடல் வலிமை, தீமையை எதிர்க்கும் போக்கு, இவற்றையெல்லாம் இந்நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறதல்லவா? இதன் பிறகு அந்த நடிகர் மதுரை நாடகங்கள் முடியும் வரை கம்பெனியில் இருந்து விட்டுத்தான் போனார்; தேசபக்தியில் நாகநாதனின் காதலி சுந்தரியாகவும் அவர் நடித்தார்.  தேசீய நாடகத்திற்குத் தடை தேசபக்தி நாடகத்தோடு மதுரை முகாம் முடிந்தது, திருநெல்வேலியில் நாடகம் துவக்கினோம். தேசபக்தி நாடகத்திற்குப் போலீஸ் அதிகாரிகள் வந்து குறிப்பெடுத்துக் கொண்டு போனார்கள். நாடகம் முடிந்த மறுநாள்காலை கம்பெனி வீட்டிற்கு இரண்டு போலீசார் வந்தார்கள். உரிமையாளரையும், நாடக ஆசிரியரையும் உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரும்படி இன்ஸ்பெக்டர் உத்திரவென்று கூறினார்கள். பெரியண்ணா வெளியூர் போயிருந்தார். சிற்றப்பா தம் மனைவியோடும் எங்கள் தங்கைகளோடும் மதுரையிலேயே இருந்தார். கம்பெனியின் பிரதிநிதிகளாக சின்னண்ணா டி. கே. முத்துசாமியும், என்.எஸ். கிருஷ்ணனும் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றார்கள். இன்ஸ்பெக்டர் அவ்விருவரிடமும் பல கேள்விகளைக் கேட்டார். கடைசியாகத் தேசபக்தி நாடகம் நடைபெற வேண்டுமானல் தாம் சொல்லும் திருத்தங்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும், இல்லையானால் நாடகம் தடை செய்யப்படுமென்றும் கண்டிப்பாகக் கூறினார் இன்ஸ்பெக்டர். அவருடைய ஆட்சேபனைகள் என்னவென்பது வாசகர்களுக்குச் சுவையாக இருக்கும்.  ஆட்சேபணைகள் முதல் காட்சியில் நாங்கள் சொற்பொழிவு நிகழ்த்துவோம். என்.எஸ்.கிருஷ்ணன், சி. ஐ. டி.யாக வேடம் புனைந்து தோன்றுவார். எங்கள் பேச்சுக்களைக் குறிப்பெடுக்கும்போது அதற்கேற்றவாறு உணர்ச்சிகளைத் தம் முகத்திலே தோற்றுவிப்பார். நான் பேசும்போது, “இதோ எங்கள் சொற்பொழிவைக் குறிப்பெடுக்கிறாரே, இவரும் நம் நாட்டவர்தாம். நமது சகோதரரில் ஒருவர்தாம். ஆனால் இந்த நாட்டில் பிறந்து, இந்த நாட்டில் வளர்ந்து, இந்த நாட்டு உப்பையே தின்று கொண்டிருக்கும் இந்த மனித உருவம் தம் சொந்தச் சகோதரர்களையே அன்னிய நாட்டானுக்குக் காட்டிக் கொடுக்கும் துரோகச் செயலைச் செய்து கொண்டிருக்கிறது! பாவம். என்ன செய்வது? வயிற்றுப் பிழைப்பு!” என்றுகூறுவேன். உடனே என். எஸ். கிருஷ்ணன் கை கால்களெல்லாம் பதற்றத்தால் ஆடுவது போல நடிப்பார். சபையோர் கைதட்டிச் சிரிப்பார்கள். இன்ஸ்பெக்டர் இந்தக் காட்சியில் என். எஸ். கிருஷ்ணன் வரக்கூடாதென்று ஆட்சேபித்தார்.  இரண்டாவதாக, சுதந்திர வீரன் புரேசனும், ஒருமித வாதக் கனவானும் பேசிக் கொள்ளும் காட்சி. மிதவாதி சர்க்கார் கட்சியைத் தாங்கிப் பேசுவார். நீண்ட நேரம் வாதம் நடை பெறும். முடிவில் நான் ஆவேசத்துடன், “தாய்நாட்டை அன்னியருக்குக் காட்டிக் கொடுக்கும் சண்டாளர்கள், தம் தாயை மாற்றாரிடம் கூட்டிக் கொடுக்கும் கொடுமையைச் செய்கிறார்கள் என்று ஏன் சொல்லக் கூடாது?” என்று கேட்பேன். இந்தக் காட்சியிலும் என். எஸ். கே. தான் மிதவாதியாக வருவார். என் கேள்விக்கு விடையாக அவர் கொடுக்கும் முகபாவமும், ஆத்திரத் தோடு நடந்து கொள்ளும் நடிப்பும் சபையோரிடையே பெருங் கோஷத்தை எழுப்பும். இந்தக் கேள்வியையும் இன்ஸ்பெக்டர் ஆட்சேபித்தார்.  மூன்றாவதாக, நாடகத்தில் இறுதியாக வரும் சண்டைக் காட்சியில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் தலைமையில் ஒரு தொண்டர் படை காட்சியளிக்கும். படையின் தளபதி கலைவாணர் பெரிய கைராட்டை ஒன்றைக் கையில் தாங்கிய வண்ணம் தோன்றுவார். இந்தக் காட்சியில் கொட்டகையே கலகலத்துப் போகும்படி சபையோர் கைதட்டுவார்கள். இந்தக் காட்சியையும் எடுத்துவிட வேண்டுமென்றார் இன்ஸ்பெக்டர்.  இன்னும் சில்லரை மாறுதல்கள் சிலவற்றைச் சொன்னார். இவற்றில் எதுவும் நாடகத்தைப் பாதிக்காதபடியால் இன்ஸ்பெக்டரின் ஆட்சேபனைகளை ஏற்றுக் கொண்டு, அப்படியே திருத்தம் செய்வதாகக் கூறி, என். எஸ். கேயும் சின்னண்ணாவும் திரும்பி விட்டார்கள். மறுநாள் நாடகம் இன்ஸ்பெக்டர் சொன்ன மாறுதல்களுடன் நடத்தப் பெற்றது.  அந்த நாளில் எங்களுக்கிருந்த உணர்ச்சியில் இன்ஸ்பெக்டரின் இந்த ஆட்சேபனைகள் நிரந்தரமாக நீடித்து நிற்கவில்லை. மறு வாரம் மீண்டும் தேசபக்தி நடைபெற்றது. அன்று போலீஸார் யாரும் வரவில்லை. எனவே இன்ஸ்பெக்டர் ஆட்சேபித்த காட்சிகளையெல்லாம் முன்னிலும் பன்மடங்கு சிறப்பாக நடத்திக் காட்டினோம். சி. ஐ. டி.கள் யாரோ வந்திருந்தார்கள் என நினைக்கிறேன். நாடகம் அன்று பெரும் கோலாகலத்துடன் நடந்தது. மறுநாள் நாலே நாங்கள் மகிழ்ச்சியோடு உரையாடிக் கொண்டிருந்தோம். போலீஸ் அதிகாரி ஒருவர் வந்து ஏதோ கொடுத்துவிட்டுப் போனார். திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் தேசபக்தி நாடகம் தடை செய்யப்பட்டிருப்பதாக அறிவித்துள்ள தடையுத்திரவு அது.  காங்கிரசுக்கு நன்கொடை திருநெல்வேலியில் பட்டாபிக்ஷேகம் முடிந்த பிறகு மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி நிதிக்காக ஒரு தேசபக்தி நாடகம் நடித்துக் கொடுத்தோம். திருமதி லட்சுமி சங்கரய்யர் தலைமை தாங்கினார். இதே போல் தொடர்ந்து பல ஊர்களில் காங்கிரஸ் கமிட்டிகளுக்குத் தேசபக்தி நாடகத்தை எவ்வித ஊதியமும் பெறாமல் நடித்துக்கொடுத்திருக்கிறோம். எங்கள் கணக்குப்படி தமிழ்நாடு முழுவதிலும் காங்கிரஸ் கமிட்டிகளுக்கு நூற்றி ஐம்பத்தி ஏழு நாடகங்கள் இதுவரை நன்கொடையாக கடத்திக் கொடுக்கப் பெற்றுள்ளன. இவற்றையெல்லாம் பழைய காங்கிரஸ் நண்பர்கள் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்களா என்பது சந்தேகம்.  நிலத்தை அடமானம் வைத்தோம் திருநெல்வேலி நாடகம் முடிந்தபின் ஸ்ரீவைகுண்டம், சாத்துார், விருதுநகர் ஆகிய ஊர்களுக்குச் சென்றோம். விருது நகரில் மானேஜர் காமேஸ்வர ஐயர் வந்து தமது பாக்கிப் பணத்திற்காக தொந்தரவு கொடுத்தார். ஏற்கனவே அவருடைய கடன் பாக்கிக்கு நோட்டு எழுதிக் கொடுத்திருந்தமையால் எவ்விதச்சமாதானமும் கூறமுடியாமல் பெரியண்ணா தயங்கினார். அப்போது எங்களுக்கிருந்த சொற்ப நிலத்தை அடமானம் எழுதிக் கொடுத்துப் பணம் வாங்க முடிவு செய்தார். இதற்காக நாங்கள் சகோதரர்கள் நால்வரும் நாகர்கோவிலுக்குப் போகவேண்டியதாக இருந்தது. ஒருநாள் நாடகம் முடிந்ததும், நால்வரும் புறப்பட்டு நாகர்கோவில் போய்ச்சேர்ந்தோம். அன்றே ஒருவரிடம் நிலத்தை அடமானப்படுத்தி இரண்டாயிரம் ரூபாய்கள் பெற்றோம். நெல்லேயில், இதற்காகத் தங்கியிருந்த காமேஸ்வர ஐயரிடம் அவருடைய பாக்கியைக் கொடுத்துத் தீர்த்துவிட்டு விருதுநகருக்கு ரயிலேறினோம். அந்த ரயில் எப்போதும் இரவு 10 மணிக்குத்தான் விருதுநகருக்கு வருவது வழக்கம். இரவு 9-30 மணிக்கு விருதுநகரில் மேனகா நாடகம் வைக்கப்பட்டிருந்தது. எங்கள் நண்பர் கிட்டுராஜூ அந்நாளில் ரயில்வே அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். எஞ்ஜின் டிரைவராக நின்று ரயிலை ஒட்டுவதற்கும் அவர் நன்றாகப் பழகியிருந்தார். மணியாச்சியில் அவர் எஞ்சினுக்குள் ஏறி டிரைவரை ஒரு பக்கம் உட்கார வைத்துவிட்டுத் தாமே ரயிலை, ஒட்டினார். பத்து மணிக்கு விருதுநகருக்கு வரவேண்டிய ரயில் இரவு 9 மணிக்கே வந்து சேர்ந்தது. இப்படி நடந்திருக்குமா என்று வாசகர்களில் சிலர் நம்புவதுகூட சிரமந்தான். ஆனால் இப்போது நான் சொல்லியவை அனைத்தும் உண்மையாக நடந்தவை.  மீண்டும் செட்டி நாடு விருதுநகருக்குப்பின் மீண்டும் செட்டிநாட்டிற்குப் பயணம் தொடங்கினோம். இம்முறை காரைக்குடி கை கொடுக்கவில்லை. புதிய நாடகம் நடத்த எண்ணி ஸ்ரீ கிருஷ்ணலீலாவைத் தயாரித்தோம். அதற்காக இந்த நெருக்கடியான கட்டத்திலும் நகைகளை யெல்லாம் அடகு வைத்துச் சாமான்களைத் தயார் செய்தோம். எதிர்பாராதபடி அந்தச் சமயம் மற்றொரு கொட்டகையில் புளிய மாநகர் பாய்ஸ் கம்பெனி நாடகம் நடத்தி வந்தது. அதில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்த பி. எஸ். கோவிந்தனுக்கு அபாரமான பேர். அவர்களுடைய நாடகங்களுக்கு நல்ல வசூலும் ஆயிற்று. புளியமாநகர் பாய்ஸ் கம்பெனியில் சிறந்த நடிகர்கள் இருந்தார்கள். பாய்ஸ் கம்பெனி என்ற பெயருக்கொப்ப எல்லோரும் சிறுவர்களாகவும் இருந்தார்கள். எங்கள் கம்பெனியின் பழைய நடிகர் கல்யாண வீரபத்திரன் தான், அங்கு வாத்தியாராக இருந்தார். அவர் தயாரித்த சுவாமிகளின் அபிமன்யு சுந்தரி நாடகத்தை நாங்களும் பார்த்தோம். பி. எஸ். கோவிந்தன் வீர அபிமன்யுவாக நானே வியக்கும் முறையில் நடித்தார். கடோற் கஜனக நடித்த காளீஸ்வரன், சுந்தரியாக நடித்த மயில்வாகனன்ஆகியோரும் மிக அருமையாக நடித்தார்கள். புதிய காட்சிகளைத் தயாரித்து ஸ்ரீகிருஷ்ணலீலாவை அமோகமாக நடத்தியும் எங்களுக்கு வசூல் இல்லை. விரைவில் நாடகத்தை முடித்துக் கொண்டு திருமயத்திற்குப் பயணமானோம்.  நாகர்கோவிலில் குடும்பம் நிலைத்தது இந்தச் சமயங்களிலெல்லாம் சிற்றப்பாவின் குடும்பம் மதுரையிலேயே இருந்து வந்தது. இறுதியாகப் பெரியண்ணா ஒரு முடிவுக்கு வந்து, சிற்றப்பா, அவர் மனைவி, தங்கைமார்கள், பெரியண்ணாவின் மனைவி எல்லோரையும் நாகர்கோவிலில் ஒருவீடு பார்த்து, அங்கேயே நிரந்தரமாகத் தங்கச் செய்து விட்டு, திருமயம் திரும்பினார்.திருமயத்திலும் வசூல் இல்லை. எங்கள் பெரிய தகப்பனார் மகன் டி. எஸ். திரவியம் பிள்ளை நாகர்கோவிலில் இருந்தார். கம்பெனியின் நிருவாக வேலைகளைக் கவனிப்பதற்கு ஒருவர் தேவைப் பட்டது. அந்த வேலையைத் திரவியம்பிள்ளை அவர்களுக்குக் கொடுக்க எண்ணி, அவரையும் அழைத்து வந்தார் பெரியண்ணா. சில மாத காலம் திரவியம் பிள்ளையின் மேற்பார்வையில் கம்பெனி நடைபெற்றது. அவருடைய போக்கு, கம்பெனியிலிருந்த நடிகர்கள் யாருக்கும் பிடிக்கவில்லை. என்றாலும் அதை வெளியே சொல்ல அஞ்சி, எல்லோரும் பேசாதிருந்தார்கள். இந்த நிலையில் கம்பெனி திண்டுக்கல் சென்றது.                                                  மும்மொழி நாடகம்   திண்டுக்கல்லில் இருந்தபோது என். எஸ். கிருஷ்ணன் ஜெகன்னதய்யர் கம்பெனியில் பிரபலமாய் விளங்கிய பக்த ராமதாஸ், நாடகத்தை நடத்த விரும்பினார். அதற்கான பொறுப்புக்களை அவரே ஏற்றுக் கொண்டார். நாடக ஆசிரியர், புதுக்கோட்டை தம்புடு பாகவதர் வந்தார். இவர் ஏற்கனவே துருவன் நாடகத்தை எங்களுக்குப் பயிற்றுவித்தவர். அதன் பிறகு சிவ கங்கையிலிருந்த போது ராமதாஸ் நாடகத்தையும் பாடம் கொடுத்திருந்தார். எனவே அதனைத் தயாரிக்க இப்போது அதிக சிரமம் எடுத்துக் கொள்ளவில்லை. நாடகம் தயாராயிற்று. ஆனால் நாடகத்துக்குத் தேவையான காட்சிகள், உடைகள் முதலியவற்றைச் செய்ய வேண்டுமே; எங்களுக்கிருந்த பொருளாதார நெருக் கடியில் எதுவும் செய்ய இயலவில்லை. இருந்த சில காட்சிகளை வைத்துக் கொண்டே நாடகத்தை நடத்த முனைந்தோம். ராமதாசரை அடைத்து வைக்கும் சிறைச்சாலை ஒன்று மட்டும் தேவைப்பட்டது. அப்போது ஓவியர் யாரும் இல்லை. சிறைச் சாலைக் காட்சியை என். எஸ். கிருஷ்ணனே ஒரே நாளில் எழுதி முடித்தார். நவாவுக்கு நல்ல உடைகள் இல்லை. முழுதும் ஜரிகையாலான துணி வேண்டுமென்று எல்லோரும் சொன்னோம். காட்சியமைப்பாளர்களில் ஒருவரான மாதவன் அதற்கும் ஏற்பாடு செய்தார். ஜரிகைபோல் தோன்றும் பவுன் வண்ணமுள்ள பெரிய ரேக் காகிதங்களை வாங்கி, அதிலேயே உடைகள் தயாரிக்கப் பட்டன. காகிதம் நீடித்து இராதென்றாலும் கண்ணாக்கு அழகாகவே இருந்தது. ராமதாஸ் தமிழ், தெலுங்கு, இந்துஸ்தானி ஆகிய மும்மொழிகளில் அமைந்த நாடகம். நான் ராமதாசராகவும் பெரியண்ணா டி. கே. சங்கரன் நவாப் தானிஷாவாகவும் நடித்தோம். என். எஸ். கிருஷ்ணன் மாறுபட்ட பத்து வேடங்களில் தோன்றி மிக அற்புதமாக நடித்தார். நாடகம் சிறப்பாக அரங்கேறியது. ராமதாஸ், என். எஸ். கிருஷ்ணனுடைய முழுத் திறமையையும் வெளிப்படுத்தும் நாடகமாக அமைத்தது. திண்டுக்கல் முடிந்ததும் கம்பெனி திருச்சி, தஞ்சை முதலிய நகரங்களுக்குச் சென்றது.  எந்த ஊரிலும் வசூல் இல்லை. மிகவும் கஷ்டப்பட்டுக் கம்பெனியை நடத்தி வந்தோம். இந்தச் சமயத்தில் பேசும் படங்கள் தமிழ் நாட்டில் வேகமாக வரத் தொடங்கின. ஏதேதோ கனவுகள் கண்டு கொண்டிருந்த எங்களுக்குப் பேசும் படங்களின் வருகை இடி விழுந்தது போலிருந்தது. படமல்லவா பேசுகிறது?... மனிதர்கள் பேசுவதை யார் கேட்பார்கள்?  பேசும் படப் போட்டி ஆகாசவாணி பேசுவதாகவும், அசரீரி ஒலமிடுவதாகவும், பதுமைகள் வாய் திறந்து பாடுவதாகவும் பழங் கதைகளில் படித்திருந்த மக்கள், படம் பேசுகிறது என்றவுடன் திருவிழாவுக்குப் போவதைப்போல் சாரி சாரியாகப் போகத் தொடங்கினார்கள். புதிதாக வந்த நிழல் மனிதனுடன், உயிர் மனிதன் போட்டியிட இயலவில்லை. கம்பெனி கடிய வேகத்தில் பள்ளத்தை நோக்கிப் பாய்ந்தது. டி. பி. ராஜலட்சுமி நடித்த வள்ளி திருமணம் படம் அமோகமாக ஓடியது. ஜனங்கள் வெறிபிடித்தவர்களைப் போலத் திரைப்படக் கொட்டகையில் போய் விழுந்தார்கள். திரைப்படங்களில் அப்போது பாடல்களுக்குத்தான் முதலிடம் கொடுக்கப் பெற்றிருந்தது. எனவே சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றிருந்த நடிகர்களுக்கு அதிக மதிப்பு இருந்தது. நாடகத்திலேயே பாடல்களைக் குறைத்துக் கொண்டு நாங்கள் சமுதாய நாடகங்களை நடத்தி வந்தோம். எங்கள் நாடகங்களில் நடிப்புக்குத்தான் முதலிடம். எனவே எங்களால் பொதுமக்களைக் கவர முடியவில்லை.  சுந்தரராவ் தஞ்சையில் நாடகங்கள் நடந்துகொண்டிருந்தபோது, அங்குள்ள அமைச்சூர் சபைகளுடன் எங்களுக்குத் தொடர்பு ஏற்பட்டது. அந்நாளில் சென்னைக்கு அடுத்தபடியாகத் தஞ்சையில் தான் அதிகமான அமைச்சூர் சபைகள் இருந்தன. சுதர்சன சபா மிகப் பழைய அமைச்சூர் குழு. இதைத் தவிர விஜய விலாச சபா. சக்ரதா சபா, குமரகான சபா முதலிய பல சபைகள் இருந்தன. குமரகான சபையைச் சேர்ந்த என். விஸ்வநாதய்யர் பல நாடகங்களை எழுதி நடித்து, அச்சு வடிவிலும் கொண்டு வந்திருந்தார். விஜயவிலாச சபா, சக்ரதர சபா இவற்றுடன் நாங்கள் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தோம். இந்தச் சபைகளில் ஆசிரியராகவும் நடிகராகவும் விளங்கினார் சுந்தரராவ். நல்ல எடுப்பான தோற்றம் உடையவர்; கெம்பீரமான குரல் மிகச் சிறந்த நடிகர். உஷா பரிணயம், பிரகலாதன் இரு நாடகங்களை நாங்கள் பார்த்தோம். பிரகலாதனில் இரண்யனாகவும், உஷாபரிணயத்தில் பாணுசூரனாகவும் சுந்தரராவ் அபாரத்திறமையுடன் நடித்தார். அதே நேரத்தில் பேசும் படங்களில் வந்த வற்றல் உருவங்களைப் பார்த்தபோது, ‘இப்பேர்ப்பட்டவரையல்லவா ராட்சத வேடம் போடச் செய்ய வேண்டும்’ என்று நாங்கள் எண்ணிப் பெருமூச்சு விட்டோம்.  சுந்தரராவின் கல்லெண்ணம் எங்கள் நாடகங்களையும் நடிப்பையும் பார்த்துப் பரவசப் பட்ட சுந்தரராவ் எங்களோடு அன்னியோன்னியமாகப் பழகினார். ஒத்திகைகள் நடைபெறும் போது தாமாகவே வந்து உட்கார்ந்து கொள்வார், வாத்தியார் இல்லாததால் சுந்தரராவே அந்த ஸ்தானத்தை ஏற்றுக்கொண்டு, நடிப்புச் சொல்லிக் கொடுப்பார். பெரியண்ணாவுடன் நெருங்கிப் பழகுவது எல்லோராலும் இயலாது. அதுவே ஒரு தனிக் கலை என்றுதான் சொல்ல வேண்டும். சுந்தரராவ் எப்படியோ பெரியண்ணாவைக் கவர்ந்து விட்டார். இருவரும் மிக நெருங்கி உறவாடினார்கள். சுந்தரராவ் இரண்டாவது மகாயுத்தத்தில் சேவை புரிந்தவர், அப்போது கலைக்டர் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். சர்க்காரால் அவருக்குக் கொஞ்சம் நிலம் மான்யமாகக் கொடுக்கப் பெற்றிருந்தது. எங்கள் நிலையை நன்குணர்ந்து அனுதாபப்பட்ட சுந்தரராவ் தமது நிலத்தை அடகு வைத்துப் பணம் வாங்கித் தருவதாகவும், நல்ல காட்சி உடைகளைத் தயாரித்து நாடகங்களைச் சிறப்பாக நடத்துமாறும் ஆலோசனை கூறினார். பெரியண்ணா அதற்கு ஒப்பவில்லை. கஷ்டங்கள் முழுவதையும் தாமே ஏற்றுக்கொள்வதாகவும், நண்பர் களை இதில் பங்கு கொள்ளச் செய்ய விரும்பவில்லையென்றும் சொல்லிவிட்டார். பின்னும் சுந்தரராவ் எங்களுக்கு ஒரு கெளரவ ஆலோசனையாளராகவும், ஆசிரியராகவும், நாங்கள் போகும். ஊர்களுக்கெல்லாம் வந்து கலந்து கொண்டார்.  எம். ஆர். ராதா  பட்டுக்கோட்டையில் நாங்கள் நாடகங்கள் நடத்திக் கொண் டிருந்த போது நடிகவேள் எம். ஆர். ராதா எங்கள் கம்பெனியில் வந்து சேர்ந்தார். என். எஸ். கிருஷ்ணன், ஜெகனாதையர் கம்பெனியிலிருந்தபோது, எம்.ஆர். ராதாவோடு நெருங்கிய நட்பு கொண்டிருந்ததால் அவரே கடிதம் எழுதி ராதாவை வரவழைத்தார். ராதா வந்ததும் ஏற்கனவே நடந்து வந்த நாடகங்களில், சில நகைச்சுவை வேடங்களைத் திறமையாக நடித்தார். பதிபக்தி நாடகம் தயாராயிற்று. பதிபக்தி நாடகத்தில் ராதாவுக்கு. அந்நாளில் பிரமாதமான புகழ் இருந்து வந்தது. ஜெகனாதையர் நாடகசபை யாழ்ப்பாணத்தில் கலைந்துபோன பிறகு, ஐயரின் புதல்வர் ராமசுப்பு அந்தக்கம்பெனியை ஒருவாறு ஒழுங்குப்படுத்தி மதுரைக்குக் கொண்டுவந்தார். அந்தக் கம்பெனியில் பதிபக்தி நாடகம் அப்போது முதலிடம் பெற்றது. நாடக ஆசிரியர் எம். எஸ். முத்துகிருஷ்ணன் கங்காதரனாகவும், எம். ஆர். ராதா துப்பறியும் சந்தானமாகவும் தோன்றி மேடையில் பயங்கரமாகச் சண்டை போடுவார்கள். இதை நாங்கள் ஏற்கனவே ஒருமுறை பார்த்திருக்கிறோம். பதிபக்தியில் நான் ராஜசேகரனாக வேடம் புனைந்தேன். தம்பி பகவதி கங்காதரனுகவும், எம். ஆர். ராதா துப்பறியும் சந்தானமாகவும் நடிக்கத் திட்டமிட்டிருந்தனார். சண்டைபோடும் நுணுக்கங்களையெல்லாம் பகவதிக்கு ராதாவே சொல்லிக்கொடுத்தார். பகவதியும்.அப்போது முரட்டுப் பேர்வழி. சாதாரண விளையாட்டுகளிலே கூட ராதாவுக்கு ஈடுகொடுக்கக் கூடியவர் பகவதி ஒருவர்தான். பதிபக்தியில் அவர்கள் சண்டை போடும் காட்சியைக்காண நாங்கள் ஆவலோடிருந்தோம். பதிபக்தி ஒத்திகை தொடர்ந்து நடைபெற்று வந்தது.  ராஜசேகரன் தஞ்சை என்.விஸ்வநாதையர் எழுதிய ராஜசேகரன் நாடக அச்சுப் புத்தகத்தை ஒருநாள் நானும் ராதாவும் படித்தோம். அந்த நாடகம் எங்களுக்கு நிரம்பவும் பிடித்தது. ராதா ராஜ சேகரனக நடிப்பதென்று முடிவாயிற்று. உடனே பாடம் எழுதத் தொடங்கினோம். ஆனால், பதிபக்தி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு ஆர்வத்தோடு ஏற்பாடுகளைச்செய்த ராதா, பதிபக்தி அரங்கேறுவதற்கு முன்பே கம்பெனியை விட்டுச் சொல்லாமல் போய் விட்டார். அவர் போய்விட்டதை அறிந்த என். எஸ். கிருஷ்ணன் “அடப்பாவி, நான்தான் ராதாவைக் கம்பெனியில் சேர்த்தேன்; என்னிடம்கூடச் சொல்லாமல் போய்விட்டானே!” என்று வருந்தினார். பிறகு ராதா போடவேண்டிய சந்தானம் வேடத்தை என். எஸ். கிருஷ்ணனே போட்டார். சுவாமி நாடகங்களில் ராதாவுக்குப் பொருத்தமான வேடங்கள் ஒன்றும் இல்லாதபடியால் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. இருந்த வரை எங்களோடு அன்புடன் பழகினார். நல்ல முறையில் நடந்துகொண் டார். பெரியண்ணாவிடத்தில் அவருக்கு மிக்க மதிப்பு ஏற்பட்டிருந்தது. ராதா வரும்போது அவரைப்பற்றி முன்னாலேயே கேள்விப்பட்டிருந்த எங்களுக்கு அவர் எப்படியிருப்பாரோ வென்று யோசனையாகத்தான் இருந்தது. வந்து சிலகாலம் இருந்து போன பிறகு அவரது நட்புறவு எங்களை மிகவும் வருத்தியது. பட்டுக்கோட்டை, மன்னார்குடி, முதலிய ஊர்களில் நடித்துவிட்டு நாகப்பட்டினம் சென்றோம்.  கோல்டன் கோவிந்தசாமி நாயுடு வசூல் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது. எல்லோரும் சேர்ந்து கம்பெனியை இழுத்து நிறுத்த முயன்றோம். இயலவில்லை. சாண் ஏறினல் முழம் சறுக்கியது. பணம் என்னும் கயிறு இருந்தால்தான் கம்பெனியைக் கட்டி இழுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. பொருள் வலிமை யுடைய ஒருவரிடம் கம்பெனியை ஒப்படைத்து நடிகர்களாகவே ஊதியம் பெற்றுக் கம்பெனியின் பெயர் மறையாதபடியாவது காப்பாற்றிக் கொள்ளலாம் என எங்களுக்குத் தோன்றியது. சென்னை கோவிந்தசாமி நாயுடு, கோல்டன் கம்பெனி என்னும் ஒரு பெரிய நாடகக் குழுவை வைத்துச் சிறப்பாக நடத்தியவர். அவர் எங்கள் நாடகக் குழுவை வருஷ ஒப்பந்தம் பேசி, எடுத்து நடத்த முன்வந்தார். சுந்தரராவ் இப்படி நிரந்தரமாகக் கம்பெனியை மற்றொருவரிடம் ஒப்படைப்பதை எவ்வளவோ தடுத்தார். பல ஆண்டுகள் வசூல் இல்லாது, மனம் கசந்து இருக்கும் நிலையில் பெரியண்ணா சுந்தரராவின் யோசனையை ஏற்க வில்லை. சகல செலவுகளும் கோவிந்தசாமி நாயுடுவே செய்து கொள்வதென்றும், நாங்கள் நால்வரும் நடிப்பதற்காகவும், காட்சியமைப்புகள், உடைகள் இவற்றிற்காகவும் ஆண்டுக்கு ஆருயிரம் ரூபாய்கள் பெற்றுக் கொள்வதென்றும், கம்பெனியின் பெயர் ஸ்ரீபாலஷண்முகானந்தசபா என்றே இருக்கவேண்டுமென்றும் பேசி முடிவு செய்யப்பட்டது. எங்கள் நடிகர்கள் அனைவரும் இந்த ஏற்பாட்டுக்கு வருத்தத்துடன் ஒப்புக் கொண்டார்கள். என். எஸ் கிருஷ்ணன், பெரியண்ணாவுடன் எவ்வளவோ தடுத்துப் பேசிப் பார்த்தார். இறுதியாக அவரும் ஒப்புக் கொண்டார். மூன்றாண்டுகள் இவ்வாறு நடைபெற வேண்டு மென்று கோல்டன் கோவிந்தசாமி நாயுடுவுடன் ஒப்பந்தம் முடிவாகியது. காரைக்காலில் கடைசியாக நாடகம் நடத்தி விட்டு 1932இல் கம்பெனியை நாயுடுவிடம் ஒப்படைத்தோம்.                              கோல்டன் சாரதாம்பாள் முதன் முதலாக உடுமலைப்பேட்டையில் நாடகம் தொடங்கியது. ஸ்ரீபால ஷண்முகானந்த சபையின் பெயரால் நடத்தப் பட்டாலும் அது உண்மையில் கோல்டன் கம்பெனியின் நாடகமாகவே விளங்கியது. நாயுடுவின் மனைவியாக இருந்த சாரதாம்பாள் அம்மையார் கம்பெனியில் முக்கிய இடம் பெற்றார். இராமாயணம் நாடகத்திற்குப் புது மெருகு கொடுக்கப்பட்டது. சாரதாம்பாள் மிகச் சிறந்த நடிகையாதலால் புதிய நடிகர்களுக்குத் தினமும் முறையாக நடிப்புப் பயிற்சி கொடுத்து வந்தார். தொடக்கத்தில் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டன. நாங்கள் அவற்றைப் பொருட்படுத்தாமல் ஒத்துழைத்தோம். எங்கள் நடிகர்களும் உள்ளன்போடு உண்மையாக உழைத்தார்கள். என்ன செய்தும் பயனில்லை. எங்களைப் பிடித்த ‘ஏழரை நாட்டான்’ நாயுடுவையும் பிடித்துக்கொண்டது போலும்!  கோல்டன் கம்பெனியார் ஒரு காலத்தில் இராமாயணம், மகாபாரதம், ஸ்ரீகிருஷ்ண லீலா முதலிய பெரிய நாடகங்களை யெல்லாம் பிரமாதமாக நடத்தியவர்கள். எனவே புதிதாக மகா பாரதம் பாடம் கொடுக்கப்பெற்றது. மகாபாரதத்தில் சாரதாம்பாள் அம்மையாரே துரோபதையாக நடித்தார்.  கம்பெனியின் எல்லாப் பொறுப்புக்களையும் நாயுடுவே கவனித்து வந்தார். எனவே, பெரியண்ணா, நடிகர்கள், ஏனைய, தொழிலாளர்களுக்குரிய சம்பளத் தொகையை ஒப்பந்தப்படி தாமே வாங்கிக் கொடுக்க விரும்பவில்லை. நேரடியாக நாயுடு விடமே எல்லோரும் சம்பளம் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தார். நாயுடுக்கு இந்த ஏற்பாடு மிகவும் செளகரியமாகப் போய்விட்டது. அவர் இதைப் பயன்படுத்திக் கொண்டு நடிகர் களையும்,தொழிலாளர்களையும் தமது வசப்படுத்திக் கொள்ள முற்பட்டார். உடுமலைப்பேட்டை வசூல் திருப்திகரமாக இல்லை. திருப்பூருக்குச் சென்றோம். அங்கும் வசூல் இல்லை. ஸ்பெஷலாகச் சில பெரிய நடிகர்களைப் போட்டு நடத்தினால் வசூலாகுமென்று நாயுடு எண்ணினார். நாங்கள் அவருடைய விருப்பத்துக்குச் சம்மதித்தோம்.  பி. எஸ். வேலுநாயர்  பிரசித்தி பெற்ற நடிகர் பி. எஸ். வேலுநாயரைக் கொண்டு சத்தியவான் சாவித்திரி, கோவலன் ஆகிய இரு நாடகங்கள் நடத்த ஏற்பாடாயிற்று. முதல் நாடகம் சத்தியவான் சாவித்திரி நடந்தது. பி. எஸ். வேலுநாயர் முற்பகுதியில் சத்தியவானாகவும் பிற்பகுதியில் எமதருமனுகவும் நடித்தார். சாரதாம்பாள் அம்மையார் சாவித்திரியாக நடித்தார். மற்ற எல்லா வேடங்களையும் எங்கள் நடிகர்களே ஏற்று நடித்தார்கள். நான் நாரதராக நடித்தேன். நாடகம் துவங்குவதற்கு ஒரு மணி நேரம் இருக்கும்போதுதான் நாயர் அரங்கிற்குள் வந்தார். எல்லோரையும் அழைத்தார். “உங்கள் அனைவருக்கும் சுவாமிகளின் பாடம் தானே?” என்று கேட்டார். எல்லோரும் ‘ஆமாம்’ என்று தலை யசைத்தோம். நாயர் மகிழ்ச்சியோடு “அப்படியானால் கவலை யில்லை” என்றார்.  நாயரின் நாவன்மை எங்கள் தந்தையார் வேலுநாயரோடு பெண்வேடம் தாங்கி நடித்தவர். தாயரின் பேச்சுத் திறமையைப் பற்றி அவரிடம் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். மிகுந்த வாதத் திறமையோடு பேசக்கூடிய சிறந்த பேச்சாளரென அவரை எல்லோரும் புகழ்வார்கள். கே. எஸ். அனந்த நாராயண ஐயரும், கோல்டன் சாரதாம்பாளும்தான் நாயருடைய பேச்சுக்கு ஒருவாறு ஈடு. கொடுக்கக்கூடியவர்கள் என்று நண்பர்கள் பேசிக்கொண்டார்கள். அவர் என்ன பேசுவாரோ வழக்கமான பாடத்தை விட்டு வேறு எதையாவது பேசினால் என்ன செய்வது? என்ற அச்சம் எங்கள் எல்லோருடைய உள்ளங்களிலும் குடி கொண்டிருந்தது. நாயர் சத்தியவானக நடித்த முதல் பகுதியில் சுமாலியாக நடித்த என். எஸ். கிருஷ்ணனுடன் ஏதேதோ புதிய கேள்விகள் போட்டார். நகைச்சுவை நடிகரானதாலும், ஏற்கனவே சபையோரிடம் நன்மதிப்பைப் பெற்றிருந்ததாலும் என். எஸ். கே, ஒருவாறு சமாளித்தார். சாரதாம்பாள் அன்று மிகத் திறமையாக நடித்தார். வேலுநாயருக்கும், அவருக்கும் நடந்த உரையாடலை சபையோர் நன்கு ரசித்தார்கள். சத்தியவாகை நடித்த முற்பகுதி முடிந்தது. அடுத்தது எமதர்மன் காட்சி. சித்திரகுப்தனிடம் விசாரணை நடந்தது. சத்தியவான் உயிரைக் கவர்ந்து வரக் கிங்கரர்கள் அனுப்பப் பட்டார்கள். அடுத்து நாரதர் வர வேண்டிய கட்டம். நான் வந்தேன். வேலுநாயர் நாங்கள் வழக்கமாகப் பேசும் வசனங்களையே பேசினார். சுவாமிகளின் பாடத்தை அவர் ஒழுங்காகப் பேசியது எனக்கு வியப்பாக இருந்தது.  வாக்கு வாதம் சத்தியவான் உயிரைக் கவராதிருக்கும்படி நாரதர் எம தருமனை வேண்டுகிறார். இருவருக்கும் வாதம் நடைபெறுகிறது. முடிவில் எமன் கோபம் கொள்கிறார். “எட்டி நில்லும் நாரதரே” என்னும் பாட்டு; இதன் பிறகு நாரதர் சபதம் செய்து கொண்டு உள்ளே போகவேண்டும். நாரதருக்கும் எமனுக்கும் வாக்குவாதம் நடைபெற்றது. வழக்கப்படி பேசும் சுவாமிகளின் பாடங்களையே நாயர் பேசி வந்தார். நானும் ஒழுங்காகப் பேசினேன். சுவாமிகளின் பாடம் முடிந்தது. எமன், “என்ன சொன்னீர்?” என்று கூறிப் பாட்டைத் தொடங்க வேண்டும். நாயர், நான் எதிர்பாராதபடி மேலும் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். எனக்கு என்ன செய்வதெனத் தோன்றவில்லை.  நாரதரின் திணறல் இம்மாதிரி ஸ்பெஷல் நாடகங்களில் பேசி நன்கு பழக்கமில்லாததால் நான் திணறினேன். நாரதர் திணறுவதைப் பார்த்த நாயர், மேலும் சிரித்துக் கொண்டே பேசினார். எமன் கோபப்பட்ட பிறகு பேச வேண்டிய ஒரே ஒரு வசனம் மட்டும் பாக்கியிருந்தது. ‘ஏ மறலீ! முன்பு மார்க்கண்டனுக்காகச் சிவபெருமானிடம் உதை வாங்கி அவமானப்பட்டதை மறந்து விட்டாயா?” என்ற வசனம் அது. வேறு வழியின்றி எமன் கோபப்படாத நிலையிலேயே, அதையும் பேசி முடித்தேன். எமனாக நின்ற நாயர் அதன் பிறகும் கோபம் கொள்ளவில்லை. “என்ன நாரதரே! அரியும், அயனும் காண்பதற்கு அரிதான எம்பெருமான் திருவடி என் மீது பட்டதையா அவமானம் என்று சொல்கிறீர்? ஆஹா, அதற்கு நான் என்ன பாக்கியம் செய்திருக்க வேண்டும்?” என்று மேலும் சிரித்துக்கொண்டே பேசினார். எனக்கு எதுவும் தோன்றவில்லை. எமன் கோபப்பட்டாலல்லவா நாரதரும் கோபத்தோடு சபதம் செய்ய முடியும்? சிரித்துப் பேசும் எமனிடம் எப்படிக் கோபம் கொள்வது? திணறினேன்; ஏதேதோ குளறினேன். கடைசியாக என்னுடைய பரிதாப நிலைக்கு இரங்கி நாயர் கோபம் கொள்வது போல் நடித்த பிறகுதான் நாடகம் நகர்ந்தது. நானும் பாட்டுப் பாடிச்சபதம் செய்துவிட்டுத் தப்பித்தோம், பிழைத்தோம் என்று உள்ளே வந்து சேர்ந்தேன். ஒருவாறு நாடகம் முடிந்தது. மற்றொரு நாடகத்தையும் நடித்துவிட்டு வேலுநாயர் போய் சேர்ந்தார். அந்த இரு நாடகங்களுக்கும் எதிர்பார்த்தபடி வசூலாக வில்லை. பாட்டுக்கு அதிகமான மதிப்பு இருந்த காலமாதலால் பேச்சிலும், நடிப்பிலும் வல்லவரான வேலுநாயரைப் பொது மக்கள் அவ்வளவாக விரும்பவில்லை.  மகாபாரதம் மகாபாரதத்தில் பெரியண்ணா துரியோதன்னாக நடித்தார். நான் துச்சாதன்னாகத் தோன்றினேன். வீட்டில் ஒத்திகை நடை பெற்றது. இன்னின்னவாறு செய்ய வேண்டுமென்று சாரதாம்பாள் அம்மையார் சுருக்கமாகச் சொன்னார்கள். துகிலுரியும் காட்சியைப் பற்றிய குறிப்பு எதுவும் விளக்கமாகத் தெரிந்து கொள்ள என்னால் முடியவில்லை. இதைப்பற்றி அவர்களிடம் கேட்க என் மனம் கூசியது. துச்சாதனனாக நடிக்க நேர்ந்த என் துர்ப்பாக்கியத்தை எண்ணி வருத்தினேன். நாடகத்தன்று கம்பெனி வீட்டில் ரோஜாப்பூ வர்ணத்தில் தோய்த்துப் பலசேலைகளை உலர்த்தியிருந்தார்கள். இந்த சேலைகளையெல்லாம் துகிலுரியும் காட்சியில் அம்மையார் உடுத்திக் கொள்வார்கள் என்று சொல்லப்பட்டது. நாடகம் தொடங்கியது. துகிலுரியும் காட்சியும் வந்தது. என் உள்ளம் ஏனோ பதறியது. கை, நடுங்கின. துரியோதனனாக நடித்த பெரியண்ணாவின் மனநிலை என்னைவிட மோசமாக இருந்திருக்கவேண்டும்! அவருடைய முகத்தில் இனம் தெரியாத ஒரு பீதி குடிகொண்டிருந்தது.  சேலையைக் களையுமாறு துரியோதனன் ஆணையிட்டார். நான் கை நடுக்கத்துடன் துரோபதையின் சேலைத் தலைப்பைப் பிடித்தேன். சாரதாம்பாள் அம்மையார் அப்போது தடித்த அற்புதமான நடிப்பை விவரிக்க இயலாது. “கிருஷ்ணா, கண்ணா, கோபாலா, மாதவா” என்று கதறிக்கொண்டு அவர்கள் இரு கரங்களையும் மேலே உயர்த்திக் கும்பிட்டதும், சுழன்று சுழன்று உடுத்தியிருந்த சேலைகள் லாவகமாக விட்டுக் கொடுத்ததும் எல்லாம் உண்மையிலேயே மாயா ஜாலம்போல் விளங்கின. உண்மையாகவே நாங்கள் பிரமித்துவிட்டோம். அந்தக் காட்சி முடிந்த பிறகுதான் எனக்கு உயிர் வந்தது.  வசந்தனின் ஆர்ப்பாட்டம் திருப்பூரில் மனோஹரா நாடகம் நடைபெற்றபோது ஒரு சுவையான சம்பவம் நடந்தது. என். எஸ்.கிருஷ்ணன் மனேஹராவில் வசந்தனாக நடித்தார். பெரும்பாலான நாடகங்களில் அவர் பவுடர் போடும் வழக்கம் இல்லை. இதற்கு விதிவிலக்காக இரண்டொரு நாடகங்கள் உண்டு. அவற்றில் ஒன்று மனோஹரா. நகைச்சுவை நடிகர்களில் அநேகர் உச்சிக் குடுமி வைத்துக்கொண்டிருந்த காலம். நகைச்சுவைக்கும் உச்சிக் குடுமிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக அந்த நாளில் கருதப்பட்டு வந்தது. என். எஸ். கிருஷ்ணனும் அப்போது உச்சிக் குடுமி வைத்துக் கொண்டிருந்தார். மனோஹராவில் மட்டும் வசந்தனுக்கு ஒரு பழைய ‘டோப்பா’ (பொய்ச் சிகை) வைத்துக் கொள்வது வழக்கம்.  நாடகம் நடந்து கொண்டிருந்தது. வசந்தன் புருஷோத்தம மஹாராஜாவின் ஆடையாபரணங்களையெல்லாம் புனைந்து கொண்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்யும் காட்சி நடந்தது. கலைவாணர் ஒவ்வொரு மனோஹராவின் போதும் புதிது புதிதாக ஏதாவது கற்பனை செய்து நடிப்பது வழக்கம். எனவே பக்கத் தட்டிகளின் மறைவில் நடிகர்கள் கூட்டமாக நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். புருஷோத்தம ராஜாவின்ஆடை யாபரணங்களுடன் வசந்தன் அவையில் புகுந்தார். ‘திரிலோக மும் புளுகும் சுந்தர திர விர சூரன் நானே” என்ற பாடல் முழங்கியது. தூங்கிக்கொண்டிருந்த விகடனை எழுப்பி, தேச விசாரணை நடத்தினார். புதிய கற்பனைகளை உதிர்த்தார். எங்களுக்கெல்லாம் ஒரே சிரிப்பு. கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தோம்.  சிற்றெறும்பின் திருவிளையாடல் என். எஸ். கே. முகத்தில் திடீரென்று ஏதோ மாறுதல் ஏற்பட்டது. தலையிலிருந்த ரேக்கு ஒட்டிய தகரக் கிரீடத்தை அடிக்கடி எடுத்து, சரிப்படுத்திக்கொண்டார். ஏதோ அவஸ்தைப் படுவதுபோல் அவருடைய முகம் தோற்றம் அளித்தது. வசந்தனின் அட்டகாசம் வழக்கத்திற்குமேல் அதிகமாக இருந்தது. எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.  “விகடா, எனக்கு ரொம்ப அவசரம். நான் அதிக நேரம் இங்கே நிற்க முடியாது. என்னால் தாங்க முடியவில்லை. நான் உள்ளே போகிறேன். பிறகு வந்து பேசிக்கொள்கிறேன்”.  என்று சொல்லி, அவசர அவசரமாக உள்ளே வந்தார். கிரீடத்தைத் தூக்கி எறிந்தார். தலையில் போட்டிருந்த டோப்பா வைக்கையில் எடுத்தார். “ஆ...ஆ...உஸ்...” என்றெல்லாம் அரற்றினார். விஷயம் விளங்காமல் என்னமோ ஏதோ என்று திகைத்தோம், “என்ன, என்ன?” என்று எல்லோரும் சூழ்ந்து கொண்டோம். “ஒண்னுமில்லேப்பா, சிற்றெறும்பின் திருவிளையாடல்” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.  நடந்தது இதுதான். நாடகத்தின் முற்பகுதி முடிந்து, டோப்பாவைக் கழற்றியபோது ஒப்பனையாளரிடம் “ஏம்பா, இதுக்கு தேங்கா எண்ணெய் போட்டு, கொஞ்சம் சரிப்படுத்தி வைத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டிருக்கிறார். அவருடைய ஆணையை உடனே நிறைவேற்றிய ஒப்பனையாளர், எண்ணெய் போட்டு, டோப்பாவைச் சரிப்படுத்தித் தனியே பத்திரமாக ஓரிடத்தில் வைத்துவிட்டார். டோப்பா வைத்த இடத்தில் எறும்புகள் ஏகாந்தமாக ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தன. எண்ணெய் மணத்தில் டோப்பாவைத் தங்கள் இருப்பிடமாக்கிக் கொண்ட சிற்றெறும்புகள் கலைவாணரின் உச்சிக்குடுமித் தலையை நன்றாகப் பதம் பார்த்துவிட்டன. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு நீண்ட காலம் வரையில் கலைவாணர் டோப்பா வைக்கும் போதெல்லாம் சிற்றெறும்புகள் செய்த இந்தத் திருவிளையாடல்களைச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பார்.       பாகவதர் சந்திப்பு   திருப்பூர் முடிந்து வேறு சில ஊர்களுக்குச் சென்றோம். பொன்னமராவதியில் நாடகம் நடித்துக் கொண்டிருந்தபோது ஸ்பெஷலாக வள்ளித்திருமணம் நாடகத்திற்கு எம். கே. தியாகராஜ பாகவதர் வந்தார். அவர் அப்போதுதான் புதிதாக மேடைக்கு வந்து கொண்டிருந்தார். சரியாகப் பேசத்தெரியாது. ஆனால் அற்புதமான சாரீரம். இனிமையாகப் பாடுவார். பாகவதர் அரங்கிற்கு வந்ததும் எங்களை அழைத்து, “நான் ஒன்றும் தெரியாதவன். புதிதாக நாடகமேடைக்கு வந்திருக்கிறேன். நீங்கள் பாய்ஸ் கம்பெனி நடிகர்கள். நன்றாக நடிக்கவும், பேசவும் தெரிந்தவர்கள். நான் ஏதாவது தவறுசெய்தாலும் நீங்கள்தான் சரிப்படுத்திக்கொண்டு என்னைக் கெளரவிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அவர் அவ்வாறு அடக்கத்துடன் பேசியது எங்களுக்கு அதிசயமாக இருந்தது.  வள்ளித்திருமணம் நாடகம், கழுகாசலக் காட்சி தொடங்கியது. பாகவதர் பாடி முடித்துப் பேசியதும் நான் நாரதராக வந்தேன். அவர் ஏதோ பேசினார். வார்த்தைகள் சரியாக வராமல் தடைப்பட்டன. அவர் பேசமுடியாமல் திணறுவதைப் பார்த்து நானே பேசி அவர் பேசவேண்டிய பகுதியை நினைவுபடுத்தினேன். ஒருவாறு காட்சி முடிந்தது. உள்ளே வந்ததும் பாகவதர் என்னிடம் நன்றி தெரிவித்துக்கொண்டார். அவர் அன்றாேடு அந்தச் சம்பவத்தை மறந்துவிடவில்லை. பிறகு திரைப்படத்துறையில் ஈடுபட்டு நட்சத்திரமாகத் திகழ்ந்த நாட்களிலேகூட என்னைச் சந்திக்கும்போது, இந்தப் பழைய நிகழ்ச்சியை நினைவுபடுத்தி மற்றவர்களிடம் இதைப் பெருமையோடு சொல்லி, என்னை அறிமுகம் செய்து வைத்த பெருந்தன்மையை என்றும் மறக்க முடியாது. என். எஸ். கிருஷ்ணன் தினைப்புனக் காவலராகத் தோன்றிப் பாகவதரைத் திணற அடித்தார்.  பாகவதர் நடித்த வள்ளித்திருமணம் நாடகத்திற்கு நல்ல வசூலாயிற்று. மீண்டும் பழைய நிலைதான். மகாபாரதத்தில் மட்டும் நடித்துக் கொண்டிருந்த சாரதாம்பாள் வேறு சில நாடகங்களிலும் நடிக்கத் தொடங்கினார். இராமாயணத்தில் மாயா சூர்ப்பனகையாக நடித்தார். ராமராக நடிக்க, ராமர் நடிப்பில் பிரசித்தி பெற்ற பரசுராமபிள்ளை வந்திருந்தார். அவர் கோல்டன் கம்பெனியில் ஏற்கனவே நடித்தவர். சீனிவாச பிள்ளையைப் போலவே அவரும் சொந்தமாகக் கம்பெனி வைத்து நடத்திப் புகழ் பெற்றவர்; நன்றாக முறுக்கிய மீசையோடு அவர் ராமராக வந்தார்; அற்புதமாக நடித்தார்; அருமையாகப் பாடினார். நான் லட்சுமணனாக நடித்தேன். லட்சுமணன், ராமனுக்கு முடிசூட்டுவதைத் தடுத்த அனைவரையும் அழித்தொழித்து விடுவதாக ஆர்ப்பாட்டம் செய்து விட்டு உள்ளே போகும்போது ராமர் வருகிறார். வரும்போதே “ஆறுதல் சினமே” என்ற பாட்டு. இந்தப் பாட்டை உள்ளிருந்தபடியே இரண்டு மூன்று முறைகள் பாடிக் கொண்டிருந்தார் பரசுராமபிள்ளை. அவர் பின்னால் நின்றுகொண்டிருந்த கோவிந்தசாமி நாயுடுவுக்கு இது பிடிக்கவில்லை. “வெளியே போய்த்தான் பாடுமேய்யா” என்று பரசுராமபிள்ளையை முதுகில் கை வைத்துத் திடீரென்று தள்ளிவிட்டார். அவர் தள்ளப்பட்ட நிலையில் தடுமாறிக்கொண்டு வந்து நின்றதும் எனக்குச் சிரிப்பு வந்து விட்டது.  சாரதாம்பாளின் கிண்டல் அன்று எனக்குத் தொண்டை மிகவும் கம்மியிருந்தது. சரியாகப் பேச முடியவில்லை. சக்தியை முழுவதும் உபயோகப்படுத்திப் பேசினேன். பேசவே முடியவில்லையென்றால் பாட்டு எப்படி யிருக்கும்?... ஒரே அலறலாக இருந்தது. சூர்ப்பனகையின் காதலை ராமர் புறக்கணித்து விட்டுப் போனபின் அவள் லட்சுமணனோடு வாதாடுகிறாள். சூர்ப்பனகைக்கும், லட்சுமணனுக்கும் வாதம் நடந்தது. நான் பேச முடியாமல் திணறுவதைக் கண்டு சாரதாம்பாள் அம்மையாருக்கு ஒரே சிரிப்பு. என் தொண்டையிலிருந்து நாலைந்து குரல்கள் வெளி வந்தன. இந்த லட்சணத்தில் நான் பாடத் தொடங்கினேன்.  "வேண்டாதே எனைத் தீண்டாதே மொழி தாண்டாதே தூர நில்...”  என்னும் பாடலை நான் மிகவும் சிரமப்பட்டுப் பாடி முடித்தேன். உடனே சாரதாம்பாள்,  “ஐயா, நீர் என்னைக் கொல்லுவதற்குள் உம்முடைய உயிர் போய்விடும் போலிருக்கிறதே! வேண்டாமையா வேண்டாம். நீர் என்னை விரும்பாவிட்டால் போகிறது. உம்முடைய நிலையைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது. கொஞ்சம் அமைதியாக இரும்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார். சபையோரும் நிலைமையை உணர்ந்து கைதட்டிச் சிரித்தார்கள்.  சொந்தச் சமையல் பொன்னமராவதியிலிருந்து கீழச்வசேற்பட்டிக்குப் போனோம். கம்பெனி வீட்டில் எல்லாரோடும் இருப்பது பெரியண்ணாவுக்கு வசதிக் குறைவாகத் தோன்றியது. அவருடைய விருப்பப்படி வேறு தனி வீட்டில் வசித்து வந்தோம். ஒட்டல் சாப்பாடு பிடிக்காததால் நாங்களே சமைத்து உண்டோம். பெரியண்ணா கறிகாய்களை எப்படிப் பாகம் செய்ய வேண்டும் என்பதை விளக்கிச் சொல்லுவார். அவரே கறிகாய்களை அரிந்தும் கொடுப்பார். மசாலை அரைக்க வேண்டிய வேலை என் பொறுப்பு. சின்னண்ணா அடுப்படியிலிருந்து எல்லாவற்றையும் ஆக்கித் தருவார். நாங்களே சமைத்து உண்டது மிகவும் சுவையாகத்தான் இருந்தது. அடிக்கடி கம்பெனியில் எங்களிடம் பாசமும் பரிவுமுடைய பிள்ளைகள் வந்து அனுதாபத்தோடு உதவி புரிவார்கள்.  கீழச்சேவற்பட்டியில் வசூல் இல்லை. மேலும் சில ஊர்களுக்குச் சென்றோம். அங்கும் இதே நிலைமை. கடைசியாக கரூருக்கு வந்தோம். கோவிந்தசாமி நாயுடுவின் மகள் கிருஷ்ணவேணியும் சில நாடகங்களில் எங்களோடு நடித்து வந்தார். ராமாயணத்தில் சீதையாக நடிப்பார். சந்திரகாந்தாவில் சந்திரவதனுவாக நடிப்பார். கரூரில் சந்திரகாத்தா நாடகத்தில் ஒருசுவையான நிகழ்ச்சி நடந்தது. நாடகம் நடந்து கொண்டிருந்தது. சுண்டுர் இளவர சன் சந்திரவதைைவப் பலாத்காரம் செய்யப்போய் உதை வாங்கும் கட்டம். நாடகத்தில் இது ஒரு சுவையான காட்சி.  பரிதாப பலாத்காரம் பூங்காவில் சந்திரவதனா உலாவிக் கொண்டிருக்கிறாள். சுண்டூர் இளவரசன் அங்கு வருகிறான், தனக்கு அவள் மீதுள்ள தணியாக் காதலைப்பற்றி விவரிக்கிறான், சந்திரவதனா. அவனை விரும்ப மறுக்கிறாள். கடைசியில் வெறி கொண்ட இளவரசன் அவளைப் பலாத்காரம் செய்ய முயல்கிறான். சந்திரவதனா கூச்ச லிடுகிறாள். அவள் காதலன் ராகவரெட்டி திடீரென்று தோன்றி, சுண்டுர் இளவரசனை அடித்து வீழ்த்திச் சந்திரவதனவைக் காப்பாற்றுகிறான்... காட்சி இவ்வாறு நடைபெற வேண்டும்.  இந்தச் சுவையான காட்சி தொடங்கியது. சுண்டுர் இளவரசன் வந்தார். சந்திரவதனாவிடம் தனது காதலின் தன்மையைப் பற்றி அபாரமாக அளந்தார். தமிழில் மட்டுமல்ல; ஆசிரியர் திரு எம். கந்தசாமி முதலியார் பயிற்சியளித்திருந்தபடி ஆங்கிலத்திலும், தான் கொண்ட ‘லவ்’வைப் பற்றிப் பொழிந்துதள்ளினார். பலிக்கவில்லை. கடைசியாக,  அட்டியின்றி கட்டி முத்தமிடாவிடில் நானே-உன்னைத் திட்டம் பலாத்காரம் செய்குவேன் சத்தியம் தானே  என்று பாட்டிலேயே சத்தியமும் செய்துவிட்டுச் சந்திரவதனாவைப் பலாத்காரம் செய்வதற்குப் பாய்ந்தார். வழக்கம் போல் சந்திரவதனா பக்கத்தட்டிவரை ஓடினாள்; கூச்சலிட்டாள். இளவரசன் அவள் கையைப் பிடித்துவிட்டான். அடுத்த விநாடியில் ராகவ ரெட்டி வந்து இளவரசன் முதுகிலே அறைய வேண்டும்.  எங்கே ராகவரெட்டி?... காணோம் அவரை! சந்திரவதனாவுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. எதிரே காதலரைக் காணவில்லை. வேறு எங்கிருந்தாவது வரக் கூடுமென நம்பி இளவரசனின் பிடியிலிருந்து திமிறுவதுபோல் சிறிது நடித்தாள். ராகவரெட்டி வரவே இல்லை. திரைமறைவில் பல குரல்கள் ராகவரெட்டியைத் தேடின. முதுகில் அடி விழுவதை எதிர் பார்த்து நின்ற சுண்டுர் இளவரசனுக்கு ஒரே திகைப்பு. பலாத்காரம் செய்யக் கையைப் பிடித்தாயிற்று. வழக்கம்போல் அறை விழவில்லை. பின்னல் திரும்பிப் பார்க்கவும் கூடாது. என்ன செய்வார் இளவரசன்? சந்திரவதனா. பெண் வேடம் புனைந்த ஆணாக இருந்தாலாவது சிறிது அதிகமாக நடிக்கலாம். அதற்கும் வழியில்லை. அவள் நிஜமாகவே பெண். அதிலும் மங்கைப் பருவம் கடந்த பெண். பலாத்காரம் செய்யப் பிடித்த கையை விடவும் முடியாமல், வேறு வழியும் தோன்றாமல் திண்டாடினார் இளவரசன்.  அண்ணாசாமியின் ஆவேசம் ராகவரெட்டி எங்கோ ஒரு மூலையில் அமைதியாக உறங்கினார் என்பது மட்டும் புரிந்தது. அரங்கின் உட்புறம் அமர்க்களப் பட்டது. சுபேதார் அண்ணாசாமியாக வேடம் புனைந்திருந்த பெரியண்ணாவின் குரல் உட்புறம் பயங்கரமாக ஒலித்தது. அவர்கையில் வைத்திருந்த சவுக்கும் யார் மீதோ சாத்துபடி ஆயிற்று. “பளார், பளார்” என்ற ஒசையுடன் விழுந்த சில பூசைகளின் ஒலியும் கேட்டது.  சந்திரவதனவும் சுண்டுர் இளவரசனும் மேடையில் பலாத்காரக் கட்டத்தில் நின்று பரிதவித்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று பேயறைந்தது போன்ற ஒரு பயங்கரமான அடி இளவரசனின் முதுகில் விழுந்தது. அவ்வளவுதான்; அறைந்தபின் ராகவ ரெட்டியால் கீழே இழுத்துத் தள்ளப்பட வேண்டிய இளவரசன், அறைபட்டவுடனேயே விழுந்துவிட்டான். ஐயோ பாவம்... நல்ல உறக்கம் கலைக்கப்பட்டதால் உண்டான கோபம்; உள்ளே தான் வாங்கிய பலத்த அடிகளால் ஏற்பட்ட ஆத்திரம்: எல்லாவற்றையும் சேர்த்துச் சுண்டுர் இளவரசனைப் பலம் கொண்ட மட்டும் தாக்கிவிட்டார் அந்த ராகவரெட்டியார். கீழே விழுந்தபின் மீண்டும் எழுந்து ராகவரெட்டியைப் பார்த்து உறுமி விட்டுப் போக வேண்டிய சுண்டுர் இளவரசன், எழுந்திருக்க முடியாமல் அவஸ்தைப்பட்டு எப்படியோ ஒரு வகையாகத் தட்டுத் தடுமாறி உள்ளே போய்ச்சேர்ந்தார். பலாத்காரம் செய்யப் போய் பரிதவித்த அந்தப் பரிதாபத்துக்குரிய சுண்டுர் இளவரசன் வேறு யாறுமல்லன்; அடியேன் தான். கும்பகர்ணன் சேவையிலிருந்து விடுபட்டு, உள்ளே அறையும் பட்டு, வந்த உணர்ச்சியில் என்னைப் பேயறை அறைந்த ராகவரெட்டி எனது அருமைத் தம்பி பகவதி.  நாயுடுவுக்கும் எங்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. வசூல் இல்லாததால் நாயுடுவுக்கு எங்களைக் கண்டாலே வெறுப்பாக இருந்தது.  என். எஸ். கே. யோசனை  இந்நிலையில் மதுரை பால வினோத சங்கீத சபையின் உரிமையாளராகிய பக்கிரி ராஜா, கரூருக்கு வந்தார். அப்போது அவருடைய கம்பெனியிலிருந்து நவாப் இராஜமாணிக்கம் கே. சாரங்க பாணி முதலியோர் பிரிந்து சொந்தமாகத் தேவி பால வினோத சங்கீத சபா என்னும் கம்பெனியைத் துவக்கியிருந்தார்கள். பக்கிரி ராஜா என், எஸ். கிருஷ்ணனிடம் தனியாகப் பேசினார். அவரைத் தமது கம்பெனிக்கு வருமாறு அழைத்தார். பெரியண்ணா பக்கிரி ராஜாவைச் சந்தித்து, என். எஸ். கிருஷ்ணனை அழைத்துப்போவதால் தமக்கொன்றும் ஆட்சேபனை இல்லையென்று கூறி அனுமதி யளித்தார். மறுநாள் கிருஷ்ணன் பெரியண்ணாவிடம் வந்து, பக்கிரி ராஜா எங்கள் நால்வரையும் விரும்புவதாகவும், நாமெல்லோரும் ஒரு குழுவாகவே போய்க் கொஞ்சகாலம் நிம்மதியாக இருக்கலாம் என்றும் யோசனை கூறினார். பெரியண்ணா அதற்கு உடன்படவில்லை. நாங்கள் மறுத்து விட்டதால் என். எஸ். கிருஷ்ணனும் பக்கிரி ராஜா கம்பெனிக்குப் போக மறுத்து விட்டார்.  ஒப்பந்தம் ரத்தாகியது கரூரில் எங்களுக்கும் நாயுடுவுக்கும் வழக்கு நடைபெறக் கூடிய அளவுக்குக் குழப்பங்கள் வளர்ந்தன. பெரியண்ணா மிகவும் வேதனைப்பட்டார். தொடர்ந்து வந்த துன்பத்தைப் போக்கிக் கொள்ள வேண்டிக் கம்பெனியை ஒருவரிடம் ஒப்படைத்தோம். ஆனாலும் எங்கள் துன்பம் தீரவில்லை. செலவுக்குப் பணம் பெறுவதே கஷ்டமாகப் போய்விட்டது. இந்நிலையில் திருச்சிராப்பள் விக்கு வந்து சேர்ந்தோம். மூன்றாண்டுகள் நாயுடுவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்தோம். ஒப்பந்தப்படி பதினொரு மாத காலந்தான் நாடகம் நடந்தது. எங்களுக்கு வர வேண்டிய சம்பளப் பாக்கிக்கு நோட்டு எழுதிக் கொடுத்தார் நாயுடு. கம்பெனியில் இருக்க விருப்பமில்லாதவர்கள் எங்களோடு வந்து விடலாமென்றும் அவர்களை அனுப்பி வைப்பதாகவும் பெரியண்ணா கூறினார். பெரும்பாலோர் எங்களோடு வர விரும்பவில்லை. ஒராண்டு காலமாகத் தொடர்பு விட்டுப்போனதால் எல்லோரும் நாயுடுவுடனேயே இருக்க விரும்புவதாகவும் கூறிவிட்டார்கள்.  மீண்டும் காமேஸ்வரய்யர் எங்கிருந்தோ பழைய காமேஸ்வரய்யர் வந்து சேர்ந்தார். தாம் பணம் தருவதாகவும், கம்பெனியைத் தொடர்ந்து நடத்த வேண்டுமென்றும் துாண்டினார். பெரியண்ணா அப்போது ஆத்திரத்தோடு கூறிய வார்த்தைகளை இன்னும் என்னல் மறக்க முடியவில்லை.  “எவ்வளவோ கஷ்டங்கள் எங்களுக்கு வந்தது; ஆனாலும் நாங்கள் கலங்கவில்லை. எங்களுக்கென்றிருந்த ஒரே ஒரு சிறு நிலத்தை உங்கள் சம்பளப் பாக்கிக்காக அடகு வைக்கும் நெருக்கடியை உண்டாக்கினீர்கள். நிலமும் அடகு வைக்கப் பட்டது. உங்கள் சம்பளமும் வசூல் செய்யப்பட்டது. இப்போது ஒத்தாசை செய்வதாகப் பாசாங்கு செய்கிறீர்கள்! அனந்தகோடி வந்தனம். உங்கள் ஒத்தாசையில் கம்பெனி நடப்பதை நான் விரும்பவில்லை. எங்கள் தலையெழுத்துப்படி நடக்கட்டும். நீங்கள் போய்வரலாம்”.  என்று கண் கலங்கக் கூறினார் பெரியண்ணா, காட்சிகள், உடைகள் இவற்றையெல்லாம் ஒரு வீட்டை வாடகைக்குப் பேசி, அதிலேபோட முடிவு செய்தார். நாங்கள் புறப்படும் சமயம் சாமான்களை வாடகை வீட்டில் சேர்ப்பிக்கக்கூட யாரும் ஒத்தாசைக்கு வரவில்லை. திருச்சிராப்பள்ளி ரங்கவிலாஸ் தியேட்டருக்கு உள்ளேயே கம்பெனி வீடு இருந்தது. நாயுடு வாயிலில் நாற்காலியின் மேல் உட்கார்ந்திருந்தார். அவருக்குப் பயந்துகொண்டு நடிகர்கள் யாருமே வெளி வரவில்லை.  நன்றி காட்டியவர்கள் நாயுடு அதிகச் சம்பளம் தருவதாக எவ்வளவோ ஆசை காட்டியும் அதற்குக் கட்டுப்படாமல் எங்களோடு வந்தவர்கள் சிலர். அவர்களில் முதல்வர் என். எஸ். கிருஷ்ணன். இன்னும் சீன் மேஸ்திரி பத்மனாபபிள்ளை, கொல்லம் பாலகிருஷ்ணன், கே. கோவிந்தசாமி, டி. என். சிவதானு, என். எஸ். பால கிருஷ்ணன், என். எஸ். வேலப்பன், பிரண்டு ராமசாமி ஆகியோர், எல்லோருமாகச் சாமான்களை வெளியே கொண்டு சேர்த்தனார். விடைபெற்றுக் கொண்டு வெளியேறினோம். அப்போது நவாப் இராஜமாணிக்கம் பிள்ளை நகரசபைத் தியேட்டரில்(தேவர் மன்றம்) நாடகம் நடத்திக் கொண்டிருந்தார். சொந்தக் கம்பெனி ஆரம்பித்த புதிதாகையால் எந்நேரமும் ஒத்திகை சுறு சுறுப்பாக நடைபெற்று வந்தது. விலகியவர்கள் எல்லோரும் நவாப்பின் விருந்தினராக, ஒரு நாள் அவர்கள் கம்பெனி வீட்டிலேயே தங்கினோம். எல்லோரும் உட்கார்ந்து புகைப் படம் எடுத்துக் கொண்டோம். மறுநாள் புறப்பட்டு நாகர் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம்.                      தேவி பால ஷண்முகானந்த சபா நாகர்கோவிலில் எங்களுக்கு அமைதி ஏற்படவில்லை. தங்கைமார்கள் இருவரும் சிற்றப்பாவின் பராமரிப்பில் மிகவும் கஷ்டத்துடன் காலம் கழித்து வருவதை அறிந்தோம். நாங்கள் மாதம் மாதம் ஒழுங்காகப் பணம் அனுப்பியும் அவர்களுக்கு நிம்மதியான வாழ்வில்லையென்பதை அறிந்தபோது எங்கள் உள்ளம் வேதனைப்பட்டது. எதுவும் செய்ய முடியாத நிலையில் புழுங்கினோம்.  நாகர்கோவிலுக்கு நாங்கள் வந்த ஒரு மாதத்திற்குள் கொரடாச்சேரியைச் சேர்ந்த தர்மராஜபிள்ளை என்பவர் எங்களைச் சேர்த்துக் கொண்டு தேவி பால ஷண்முகானந்த சபா என்னும் பெயருடன் கம்பெனியை நடத்த முன் வந்தார். அவருடைய அழைப்பை ஏற்றுக் கொண்டோம். அவரைப் பெரிய செல்வந்தர் என எண்ணினோம். சாமான்களையெல்லாம் வாடகை பேசி அவரிடம் ஒப்படைத்தோம். எங்கள் நால்வருக்கும் மாதம் இருநூற்றி ஐம்பது ரூபாய் சம்பளம் தருவதாகத் தர்மராஜபிள்ளை ஒப்புக் கொண்டார். என்.எஸ். கிருஷ்ணன் முதலிய எங்கள் குழுவினருக் கெல்லாம் தனியாகச் சம்பளம் பேசி முடிவு செய்யப்பட்டது. எல்லோருமாகத் தஞ்சாவூர் போய்ச் சேர்ந்தோம்.  டி. எம். தியாகராஜன்  தஞ்சையில் தேவி பால ஷண்முகானந்த சபையின் நாடகங்கள் தொடங்கப்பட்டன. டி. எம். தியாகராஜன் என்னும் சிறுவன் புதிதாக வந்து சேர்ந்தான். அவனுடைய அற்புதமான சாரீரமும் சங்கீத ஞானமும் என்னைக் கவர்ந்தன. அபிமன்யு சுந்தரி நாடகத்தில் அவனுக்குச் சுந்தரி பாடம் கொடுக்கப்பட்டது. பாடல்களை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கும்போது எனக்கே ஆனந்தமாக இருக்கும். முன் எவரும் பாடாத முறையில் புதிய புதிய சங்கதிகளைப் போட்டுத் தியாகராஜன் பாடினன். ஒருநாள் பாட்டுச் சொல்லிக் கொண்டிருக்கும் போது அசட்டையாக எங்கோ கவனித்துக் கொண்டிருந்தான். எதிரேயிருந்த நான், கையில் பிரம்பை எடுத்து “எங்கே கவனிக்கிறாய்?” என்று அவனது தலையில் தட்டினேன். பிரம்பின் நுனி அவன் தலையில் பொத்துக் கொண்டது. கொட கொடவென்று ரத்தம் கொட்டிவிட்டது. நான் பதறிப்போய் விட்டேன். அவன் அழவேயில்லை; என்னுடைய அறியாத்தனத்திற்காக அன்றிரவு முழுதும் வருந்தினேன். உறக்கமே வரவில்லை.  வள்ளித்திருமணம் நாடகத்திலே தியாகராஜன் வள்ளியாக வேடம் தாங்கி வருவான். “எந்த மானிட வேடர் நீர்காண்” என்னும் விருத்தத்தைச் சங்கராபரணத்திலே அவன் பாடும் போது நான் வேடனாக நிற்பேன்; மெய் மறந்து நிற்பேன். என்றாவது ஒரு நாள் அவன் நாடகத்துறையை விட்டு இசைத் துறைக்குப் போய், அபாரத் திறமையோடு விளங்குவானென அன்றே எண்ணினேன். என் எண்ணம் வீண் போகவில்லை. அந்த இளஞ்சிறுவன்தான் இன்று சங்கீத விற்பன்னராக விளங்கும் இசைமேதை தஞ்சை டி. எம். தியாகராஜன்.  பசுவை விலை பேசினார் தஞ்சையில் சில நாடகங்களை நடத்தி விட்டுத் திண்டுக்கல் வந்து சேர்ந்தோம். திண்டுக்கல்லில் வசூலாகவில்லை. தர்மராஜ பிள்ளை பெரும் செல்வந்தர் என எண்ணினோமல்லவா? அதற்கு முற்றிலும் மாறாக ஒட்டை மூங்கிலாக இருந்தார் அவர். அவரது மனப்பான்மையை விளக்குவதற்கு ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறேன்.  கம்பெனிக்குக் காலை மாலை இரு வேளைகளிலும் காப்பிக்காகப் பால் வாங்குவது வழக்கம். ஏற்கனவே எங்களுக்குப் பழக்கமாயிருந்த ஒரு பால்காரர் பால் கொடுத்து வந்தார். திண்டுக்கல்லுக்கு வந்த மூன்றாம் நாள் பால்காரர் வரும்போது தர்மராஜபிள்ளையும் இருந்தார். பால்காரரிடம் பாலின் விலை, முதலிய விபரங்களையெல்லாம் விசாரித்தார். திடீரென்று “இந்தப் பசு என்ன விலை?” என்று கேட்டார். பால்காரர். ஏதோ ஒரு விலையைச் சொன்னார். “சரி, இந்தப் பசுவை எனக்குக் கொடுத்து விடுகிறாயா?” என்று கேட்டார் பிள்ளை. பால்காரரும் சம்மதித்தார். தர்மராஜபிள்ளை வாங்கிக் கொள்வதாகத் தீர்மானிக்கப்பட்டது. இரண்டு மூன்று தினங்களில் பணம் கொடுத்து விடுவதாக முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு தர்மராஜபிள்ளை அடிக்கடி தஞ்சைக்குப் போய் வந்து கொண்டிருந்தார். ஆனால் பணம் கொண்டு வரவும் இல்லை; பசுவையும் வாங்கவில்லை. பால்காரர் வழக்கப்படி பால் கொடுத்து வந்தார்.   பணத்தை ஏப்பமிட்டார் சுமார் இருபது நாடகங்களுக்குப் பின் பால்காரர் வந்து, மானேஜரிடம் பால் கொடுத்ததற்குப் பணம் கேட்டார். அந்தச் சமயம் கம்பெனி வீட்டிலிருந்த தர்மராஜபிள்ளை,  “எவ்வளவு பணம்?” என்று கேட்டார். பால்காரர் தமக்குச் சேர வேண்டிய தொகையைச் சொன்னார்.  “அடேயப்பா, அவ்வளவு தொகையா? பசுதான் என்னுடையதாச்சேப்பா!... பாலைக் கணக்குப் பண்ணாதே. நீ இத்தனை நாட்கள் பகவுக்குப் போட்ட தீவனத்திற்குரிய தொகையை மட்டும் வாங்கிக் கொள்” என்றார்.  இந்த வார்த்தையைக் கேட்டதும் பால்காரர் மட்டுமல்ல; நாங்களும் பிரமித்து விட்டோம். பசுவை வாங்கிக் கொள்வதாக வாயால் பேசியதைத் தவிர வேறு எதுவும் நடக்கவில்லை. அதற்காக முன் பணமும் கொடுக்கவில்லை. இந்த நிலைமையில் பசு தம்முடையது என்று உரிமை கொண்டாடத் தர்மராஜபிள்ளை துணிந்து விட்டாரென்றால் அவருடைய சுபாவம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? இந்தச் சம்பவம் எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்தது. பால்காரருக்கும் பிள்ளைக்கும் நீண்ட நேர வாதம் நடந்தது. இறுதியாகப் பால்காரர், பிள்ளையைக்கண்டபடி ஏசிவிட்டுப் போய்ச் சேர்ந்தார்.  மீண்டும் ஊர் திரும்பினோம் வசூல் இல்லாமல் சாப்பாட்டு நிருவாகம் தத்தளித்தது. என்ன செய்வதென்று தோன்றவில்லை. ஒரு மாத காலம் நாடகம் நடந்தது. நீடித்து நடத்த முடியாமல் தர்மராஜபிள்ளை ஒரு நாள் சொல்லாமலே போய்விட்டார். நாடகக் கொட்டகைச் சொந்தக்காரர் தம் வாடகைப் பாக்கிக்காகச் சாமான்களை வைத்துக் கொண்டார். காட்சிகள், உடைகள் முதலிய எங்கள் சாமான்கள் கொட்டகையில் இருந்தன. அவை எங்களுடையதென்று கொட்டகைக்காரர் மீது வழக்குத் தொடர்ந்து, அவற்றை மீட்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டு விட்டது. எப்படியோ ஒரு வகையாகச் சாமான்களை மீட்டு, அவற்றையெல்லாம் ஒருவீட்டில் போட்டு வைத்தோம். புதிதாகச் சேர்ந்திருந்த சில பையன்களை அவரவர் ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டிய பொறுப்பும் எங்கள் தலையில் சுமந்தது. எல்லோரையும் அனுப்பிவிட்டு, ஊரிலிருந்து புறப்பட்ட எங்கள் சிறிய குழுவுடன் நாகர்கோவிலுக்குத் திரும்பினோம்.  பெரியண்ணா மனச் சோர்வு பெரியண்ணாவுக்கு மிகுந்த மனச்சோர்வு ஏற்பட்டுவிட்டது. எங்கள் மூவரை மட்டும் ஏதாவது ஒரு கம்பெனியில் சேர்ந்துவிட எண்ணினார். சில காலமாவது கம்பெனி நடத்தும் தொந்தரவி லிருந்து நிம்மதி பெற விரும்பினார். நவாப் ராஜமாணிக்கம் பிள்ளைக்குக்கூட எழுதியதாக அறிந்தோம். எவரிடமிருந்தும் அனுகூலமான பதில் வரவில்லை.  இரண்டு மாதகாலம் அமைதியின்றிக் காலம் கழித்தோம். அதற்குள் என். எஸ். பாலகிருஷ்ணன், என். எஸ் வேலப்பன் இருவரும் சாரதாம்பாள் கம்பெனிக்குப் போய்விட்டார்கள். நாங்கள் கம்பெனி ஆரம்பிக்கப் போவதை எதிப்பார்த்து என். எஸ். கிருஷ்ணன் மட்டும் காத்திருந்தார். நாட்கள் செல்லச் செல்ல அவருடைய உறுதியும் தளர்ந்தது. எல்லோரிடமும் வறுமை தாண்டவமாடியது. தினமும் என். எஸ். கிருஷ்ணன் எங்களைச் சந்திப்பார். கம்பெனியைத் தொடங்கச் சொல்லி வற்புறுத்துவார். ஒருநாள் பெரியண்ணா, எங்களுக்காக நீ காத்திருக்க வேண்டாம். எந்தக் கம்பெனியிலாவது சேர்ந்து கொள். பிறகு நாங்கள் கம்பெனி தொடங்கும்போது உன்னை அழைத்துக்கொள் கிறோம்” என்று சொன்னார். என். எஸ். கிருஷ்ணன் வருத்தத்துடன் பின்னும் சில நாட்கள் இருந்து பார்த்தார். பயனில்லை. நாயுடு அடிக்கடி அவருக்குக் கடிதம் எழுதி வற்புறுத்தினார். அச்சமயம் கோல்டன் கம்பெனியே நாகர்கோவிலுக்கு வந்து விட்டது. நாடகங்கள் தொடர்ந்து நடைபெற்றன. நானும் என். எஸ். கே.யும் அடிக்கடி நாடகங்கள் பார்த்தோம். சாரதாம்பாள் என்.எஸ்.கிருஷ்ணனைத் தம் கம்பெனியில் சேர்ந்து விடும்படி நேரில் கேட்டுக்கொண்டார். என். எஸ். கே. அதுபற்றி யோசிப்பதாகக் கூறினார். நாகர்கோவில் முடிந்து கம்பெனி திருவனந்தபுரம் சென்றது. அங்கு சென்ற பிறகும் நாயுடுவின் வற்புறுத்தல் கடிதங்கள் வந்தன. இறுதியாக வேறு வழியில்லாத நிலையில் என். எஸ். கிருஷ்ணன் ஒருநாள் எங்களிடம் வந்து கண்களில் நீர் ததும்பப் பிரியாவிடை பெற்று, சாரதாம்பாள் கம்பெனிக்குப் போய்ச் சேர்ந்தார்.                                                            ஸ்பெஷல் நாடக நடிப்பு   நீண்ட காலம் நாடகத்தில் நடித்துவிட்டு, ஊரில் வந்து வேறு வேலை எதுவுமின்றி இருந்ததால், நாஞ்சில் நாட்டிலுள்ள நாடக நண்பர்கள் ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்க என்னை அழைத்தார்கள். பெரியண்ணா இதை விரும்பவில்லை. இந்தத் தொந்தரவு அடிக்கடி ஏற்பட்டதால் தவிர்க்க முடியாமல் இரு நாடகங்களில் நடிக்க நேர்ந்தது. ஒன்று அல்லி அர்ஜூனா, மற்றொன்று சதாரம். ஸ்பெஷல் நாடக அனுபவம் எனக்கில்லை. என்றாலும் ஏராளமான ஸ்பெஷல் நாடகங்களைப் பார்த்திருப்பதால் சமாளித்துக் கொள்ளலாம் என்ற துணிவோடு ஒப்புக் கொண்டேன். முதல் நாடகம் அல்லி அர்ஜூனா, சுசீந்திரத்தை அடுத்த தாமரைக் குளத்தில் நடந்தது. என் தந்தையாரோடு இளமையில் நடித்த ஐயப்பன் உடையார் பிள்ளை, அன்று ஸ்ரீ கிருஷ்ணனக நடித்தார். நான் அர்ஜுனன், நாஞ்சில் நாட்டில் அப்பொழுது பிரபலமாய் இருந்த நாகர் கோவில் லக்ஷ்மி அல்லியாக நடித்தார்.  ஒசரவிளை உடையார்பிள்ளை இவர் நாஞ்சில் நாட்டில் குறிப்பிடத்தக்க நாடக ஆசிரியர். மிகச்சிறந்த ஐயப்பசுவாமி பக்தர். எப்போதும் இவருடைய வாய் ‘சாமியே சரணம் ஐயப்பா’ என்று துதித்த வண்ணமிருக்கும். நவாப் இராஜமாணிக்கம் கம்பெனிக்கு பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் நாடகத்தை எழுதிப் பயிற்றுவித்தவர் இவரே தாம். மேலும் இவர் தம் பெரு முயற்சியால் நிதி வசூலித்து, இறுதியாகத் தாம் வாழ்ந்து வந்த கடுக்கரை என்ற சிற்றுாரில் ஐயப்ப சாமிக்கு ஒர் ஆலயம் அமைத்துள்ளார். இவர் என் தந்தைக்கு மிகவும் வேண்டியவராதலால் என்னைக் கண்டதும் அன்பு பாராட்டி அணைத்துக்கொண்டு பாசமும் பரிவும் காட்டினார்.  இரண்டாவது ஸ்பெஷல் நாடகம் சதாரம். நாகர்கோவில் மீனாட்சிபுரத்திலுள்ள ஸ்ரீமீனாம்பிகா தியேட்டரில் நடந்தது. அதில் நான் மயோனாக நடித்தேன். மற்றப் பாத்திரங்களைத் தாங்கி நடித்தவர்களின் பெயர்கள் எனக்கு நன்கு நினைவில்லை. சதாரத்தைச் சல்லாபம் செய்ய அழைக்கும் கட்டத்தில், நான் பாடிய காதல் பாட்டுக்களை ரசிகர்கள் பிரமாதமாக ரசித்துக் கைதட்டிப் பாராட்டினார்கள். சுவாமிகளின் நாடகங்களிலுள்ள எத்தனையோ காதல் பாட்டுக்களும், உரையாடல்களும் எனக்கு மனப்பாடமாய் இருந்ததால் சிறிதும் சிரமப் படாமல் சமாளித்தேன். தாமரைக் குளத்தைப் போலவே இங்கும் பெரும் புகழ் கிடைத்தது. இரண்டு ஸ்பெஷல் நாடகங்களிலும் பேரும் புகழும் பெற்று விட்டதால் ஸ்பெஷல் நாடகக் காண்ட்ராக்டர்கள் என்னை முற்றுகை யிட்டார்கள். ஆனால் எனக்கோ, என் சகோதரர்களுக்கோ இந்த நாடகங்கள் மகிழ்ச்சி அளிக்கவில்லை. நாடகத் துறையில் எங்களுக்கு ஒரு இலட்சியம் இருந்ததால், இந்த நாடகங்களின் மூலம் நல்ல வருவாய் வந்த போதிலும் கட்டுப்பாடில்லாத இந் நாடகங்களில் தொடர்ந்து நடிக்க நான் விரும்பவில்லை.  ஆடம்பரமும் அமுலும் ஸ்பெஷல் நாடகத்திற்கு நான் நடிக்க ஒப்புக்கொண்டதும் எனது மருமகன் டி. என். சிவதாணுவுக்கும், எங்கள் பழைய நடிகரும் எங்கள் அன்புக்கு பாத்திரருமான கொல்லம் பால கிருஷ்ணனுக்கும் ஒரே குவி. ஸ்பெஷல் நாடக ராஜபார்ட்டு காரர்களுக்குச் சில கையாட்கள் நடத்தும் ஆடம்பரப் படாடோபங்களை எனக்கும் நடத்த இவர்கள் ஆசைப்பட்டார்கள். முதல் நாடகத்தன்று நான் காரில்போய் தாமரைக் குளம் நாடகக் கொட்டகைக்கு முன் இறங்கியதுமே இவர்களது இந்த அமுல் தொடங்கிவிட்டது. என் முன்னை கூடிநின்றவர்களை யெல்லாம் ‘விலகுங்கள் விலகுங்கள்’ என்று சொல்லி, அமளி துமளிப்படுத்தினார்கள். இது எனக்கு மிகவும் கூச்சமாக இருந்தது. நான் எவ்வளவோ தடுத்து விலக்கியும் இவர்கள் கேட்கவில்லை. ஸ்பெஷல் நாடக ராஜபார்ட்டுக்கு இந்த ஆடம்பரமெல்லாம் தேவையென்று சொல்லி என் வாயை அடைத்து விட்டார்கள். காட்சி முடிந்து நான் உள்ளே வரும்போது, நாற்காலி கொண்டு  வந்து போடுவதும், சோடா வேண்டுமா, காபி வேண்டுமா என்று கேட்பதும், விசிறி கொண்டுவந்து வீசுவதுமாக, நாடகம் முடிந்து நான் மீண்டும் காரில் ஏறும்வரையில் அவர்கள் அரங்கிற் குள் நடத்திய பாவனை, படாடோபங்களை யெல்லாம் இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.  பாலகிருஷ்ண சாஸ்திரி கம்பெனி திடீரென்று ஒரு நாள் பாலகிருஷ்ண சாஸ்திரியிடமிருந்து கடிதம் வந்தது. மடிந்து கொண்டிருந்த பழைய ஜெகனாதையர் கம்பெனி நடிகர்களில் சிலர் அவருடைய நிருவாகத்தில் வேலூரில் நாடகம் நடத்திக் கொண்டிருந்தார்கள். பாலகிருஷ்ணசாஸ்திரி ஏற்கனவே எங்களுக்குப் பல ஆண்டுகளாக அறிமுகமானவர். மின்சாரம் இல்லாத கொட்டகைகளில் அவர்தான் இஞ்சின் கொண்டு வந்து, வாடகைக்கு மின்சாரம் கொடுத்து உதவுவார். எங்களிடம் அவருக்கு அபார நம்பிக்கை. வேலூருக்கு வந்து, தாம் நடத்தும் கம்பெனியில் ஒத்துழைக்க வேண்டுமென்று அவர் கடிதம் எழுதியிருந்தார். ஊரில் சும்மா இருப்பதைவிடச் சில காலம் அவரது நிர்வாகத்தில் இருக்கலாமென எண்ணினோம், பெரியண்ணாவை ஊரில் அமைதியாக இருக்கவிட்டு நான், சின்னண்ணா, பகவதி மூவரும் வேலூருக்குப் பயணமானோம், வேலூருக்கு வந்தபின்தான் அறிந்தோம் கம்பெனியின் நிலைமையை.  பாலசுப்பிரமணியத்தின் அன்பு கம்பெனியின் நிருவாகம் யாரிடத்தில் இருக்கிறதென்றே புரியவில்லை. சாப்பாட்டு நிருவாகம் ஒழுங்காக இல்லை. டி. பால சுப்பிரமணியம் தாயுடன் தனியே குடியிருந்தார். நாங்கள் வந்ததற்காக உண்மையில் சந்தோஷப்பட்டவர் அவர் ஒருவர்தாம். அவரும் நாங்களும் நன்கு அளவளாவி மகிழ்ந்தோம். அவருடைய தாயார் எங்களிடம் மிகவும் பரிவு காட்டினார்கள். டி. பால சுப்பிரமணியம் ஜெகனாதையரின் ஸ்ரீபால மீன ரஞ்சனி சங்கீத சபையில் இருந்தவர். பழம் பெரும் நடிகர். ஐயர் கம்பெனியில் சங்கரதாஸ் சுவாமிகள் ஆசிரியராக இருந்த காலத்தில், அவரிடம் பயின்றவர். சுவாமிகளிடம் அளவுகடந்த பக்தியுடையவர். இலக்கியப் பற்று மிகுந்தவர். சுவாமிகளின் பக்தி ரசக் கீர்த்தனை என்ற நூலினையும், லவகுசா நாடகக் கையெழுத்துப் படியினையும் அவர் காலமாகுமுன் எனக்குக் கொடுத்து உதவியவர் என்பதை நன்றியோடு இங்குக் குறிப்பிட்டுக் கொள்கிறேன்.  நாங்கள் போனபின் வேலூரில் சில நாடகங்கள் நடந்தன. வசூல் இல்லை. சாஸ்திரி அடிக்கடி வெளியூருக்குப் போய்க் கொண்டிருந்தார். சாப்பாட்டு நிருவாகம் ஒரே ஊழலாக இருந்தது. ஒருநாள் பகல் பதினொரு மணிவரை அடுப்பே எரியவில்லை. அதற்கு மேல் அரிசி காய் கறிகள் எல்லாம் வந்தன. சமையல் ஆரம்ப மாயிற்று. பிற்பகல் இரண்டரை மணிக்குத்தான் உணவு கிடைத்தது. நாங்கள், இருக்கும் நிலைமையைப் பார்த்து வருந்தினோம். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கம்பெனிக்கு யார் பொறுப்பாளி யென சாஸ்திரியைக் கேட்டோம். திருப்தியான பதில் கிடைக்கவில்லை. “நாங்கள் இந்த நிலைமையில் இங்கே இருப்பது சாத்தியமில்லை; எங்களை ஊருக்கு அனுப்பி விடுங்கள்” என்று வேண்டினோம். சாஸ்திரியும் சிந்தித்தார் கடைசியாய் எப்படியோ ஒருவகையாக நாங்கள் திண்டுக்கல்லுக்கு வந்து சேர்ந்தோம்:  எட்டையபுரத்தார் பரிவு எட்டயபுரம் இளையராஜா காசி விஸ்வநாத பாண்டியன் சில காலம் சொந்தக் கம்பெனி வைத்து நடத்தினார். பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் கம்பெனி கலைக்கப்பட்டது. அக்கம்பெனியின் காட்சிகளும் உடைகளும் அவரிடமிருந்தன. அவற்றில் உபயோகமான பொருட்களை எங்களுக்கு கொடுத்து உதவுவதாகக் கூறினார். மீண்டும் கம்பெனியைத் தொடங்குமாறு வற்புறுத்தினார்.  எங்களிடம் ஏற்கனவே இருந்த காட்சிகள், உடைகள் இவற்றுடன் எட்டையபுரம் இளைய ராஜா காசி விசுவநாதபாண்டியன் அவர்கள், அன்புடனளித்த சில சாமான்களையும் வைத்துக் கொண்டு மீண்டும் திண்டுக்கல்லிலேயே கம்பெனியைத் துவக்கினோம். பழைய நடிகர்களில் பலர் மறுபடியும் வந்து சேர்ந்தார்கள். புதிதாகச் சில நடிகர்களையும் சேர்த்துக்கொண்டோம். கம்பெனி ஒழுங்காக நடைபெற்றது.        பெரியார் - ஜீவா நட்பு    திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி, ஈரோடு முதலிய ஊர்களுக்குச் சென்றோம். ஈரோட்டில் ஒரு நாள் ஈ. வெ. ரா. பெரியார் அவர்களைக் காண அவரது குடியரசு அச்சகத்திற்குச் சென்றேன். முன்புற அறையில் உட்கார்ந்திருந்த ஒருவர் என்ன அன்புடன் வரவேற்றார்.  கறுத்து அடர்ந்த மீசை, கம்பீரமான தோற்றம், பேச்சிலே இனிமை தவழ்ந்தது. அவர் எங்கள் தேசபக்தி நாடகத்தைச் சிறப்பாகப் புகழ்ந்தார். அதில் பாரதி பாடல்களைப் பாடுவதற்காக மிகவும் பாராட்டினார். தங்கள் பெயரென்ன? என்றேன். ஜீவானந்தம் என்று பதில் கிடைத்தது. தேசிய உணர்ச்சி ஏற்பட்ட பின்பு, தொடர்ந்து தமிழில் வெளி வந்த எல்லாப்பத்திரிகைகளையும் நான் படித்து வந்தேன். அவற்றில் பூவாளுர் அ. பான்னம் பலஞரின் “சண்ட மாருதம்” ஒன்று. அதில் படித்த, தோழர் ஜீவாவின் பாடல் என் நினைவுக்கு வந்தது.  பச்சைக் குழந்தைக்குப் பாலுமில்லை-அதன்  பட்டினி யழுகை கேட்பதில்லை  இச்சையுடன் பாலைச் சாமிக்கென்றே கல்லில்  இட்டு வணங்குறார் முத்திக்கென்றே  பாடல் பல அடிகளைக் கொண்டது. இந்தப் பாடலை எழுதிய ஜீவானந்தம் என் இதயத்தில் இடம் பெற்றிருந்தார். அவரே இப்போது எதிரில் இருப்பவர் என்பதை அறிந்ததும் என் உள்ளம் மகிழ்ந்தது. தோழர் ஜீவா என்னைப் பெரியாரிடம் அழைத்துச் சென்றார். அறிமுகப்படுத்தி வைத்தார். எங்கள் நாடகங்களைப் பற்றிப் புகழ்ந்தார். பெரியார் அவர்கள் என்னை மகிழ்வுடன் வர வேற்றார். குடியரசுப் பதிப்பகம், பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் சார்பில் தாம் வெளியிட்ட நூல்களையெல்லாம் கொண்டுவரச் சொன்னார். சிறிதும் அயர்வுருது, அத்தனை நூல் களிலும் கையெழுத்திட்டுக் கொடுத்தார். அன்றுமுதல் பெரியார் ஜீவா, பட்டுக்கோட்டை அழகிரிசாமி உள்ளிட்ட சுயமரியாதை இயக்கத் தோழர்களுடன் எங்களுக்கு நெருங்கிய நட்புறவு ஏற்பட்டது.  கடவுட் கொள்கையில்எங்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன. என்றாலும் சுயமரியாதை இயக்கத்தின் சாதி ஒழிப்பு, குழந்தை மணத்தடை, கலப்புமணம், கைம்மை மணம் முதலிய சமுதாயச் சீர்திருத்தக் கொள்கைள் என்னைமட்டுமல்ல, எங்கள் குழுவினார் அனைவரையும் கவர்ந்தன. தோழர் ஜீவாவின் சமதர்ம உணர்வும், அது பற்றிய அவரது பாடல்களும் சொற்பொழிவு களும் எனக்கு ஒரு உறுதியான லட்சியத்தை வகுத்துத் தந்தன வென்றே சொல்ல வேண்டும். எனக்கு அரசியலறிவு ஊட்டிய அறிஞர்களில் முதலாவதாகக் குறிப்பிடத் தக்கவர் தோழர் ஜீவானந்தம் அவர்களே ஆவார்.  நாங்கள் நடத்தி வந்த சமுதாயச் சீர்திருத்த நாடகங்களைப் பெரியார் அடிக்கடி வந்து பார்த்தார்.அந்த நாடகங்கள் அவரை மிகவும் கவர்ந்தன. எங்கள் மீது பற்றுக் கொள்ளச் செய்தன. எங்கள் குழுவினார் அனைவருக்கும் ஒரு நாள் பெரியார் இல்லத்தில் விருந்து நடந்தது. அப்போது பெரியார் அவர்களின் துணைவியார் காகம்மையார் உயிருடன் இருந்தார்கள். அவர்கள் எங்களை அன்புடன் வரவேற்று உபசரித்தார்கள். பெரியார் அவர்கள் எங்கள் நாடகக் கம்பெனிக்கு விருந்து வைத்ததைக் கண்டு ஊரே வியந் தது. எப்போதும் சிக்கனத்தைக் கையாளும் பெரியார் அவர்கள் ஒரு நாடகக் கம்பெனியாரிடம் இவ்வளவு தாராளமாகப் பழகியதும் விருந்து வைத்ததும் வியப்புக்குரிய செய்தியல்லவா!  பம்பாய் மெயில் ஈரோட்டில் சதாவதானம் தே. பொ. கிருஷ்ணசாமி பாவலர் அவர்கள் எழுதிய பம்பாய் மெயில் நாடகம் தயாராயிற்று. அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. ஈரோட்டில் இருந்து கொண்டே பவானி, கொமாரபாளையம், கோபிச் செட்டிப்பாளையம் ஆகிய இடங்களில் ஸ்பெஷலாகப் பம்பாய் மெயில்,பதிபக்தி நாடகங்கள் போட்டு வந்தோம். பாவலரின் இவ்விரு நாடகங்களும் கம்பெனி யின் முதன்மையான நாடகங்களாக விளங்கின.  பாலகிருஷ்ண சாஸ்திரி கம்பெனியில், வேலூரில் எங்களுக்கு அறிமுகமான ஏ. டி. தர்மராஜூ ஈரோட்டில் வந்து சேர்ந்தார். நீண்டகாலமாகப் பெரியண்ணா பார்த்து வந்த கணக்கு வேலை இவரிடம் ஒப்படைக்கப் பெற்றது. இவர் நல்ல நிருவாகத் திறமையும் நாணயமும் உடையவர். 1970 வரை இவரே கம்பெனியின் நிருவாகப் பொறுப்பையும் குடும்ப சம்பந்தமான இதர வேலைகளையும் கவனித்து வந்தார். சாஸ்திரியாரின் கம்பெனி கலைந்துபோனதால் மற்றுஞ் சில நடிகர்கள் வந்து சேர்ந்தார்கள். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் டி. எம் தியாகராஜன், டி. எ. காசிகாதன், டி. எஸ். தட்சணுமூர்த்தி, இன்று தேவி நாடக சபையின் அதிபராக இருக்கும் கே. என்.ரத்தினம் முதலியோர்.  ஜீவாவின் பாட்டு 1981 ஆம் ஆண்டு முதலே பத்திரிக்கைகளைப் படிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். தோழர் ஜீவானந்தம் அவர்களோடு நட்புறவு ஏற்பட்டபின் இந்த ஆர்வம் பன்மடங்காக வளர்ந்தது. ஒய்வு நேரங்களில் எப்போதும் தனியேயிருந்து படித்துக் கொண்டேயிருப்பேன்.  நாங்கள் போகும் ஊர்களுக்கெல்லாம் ஜீவா கூட்டங்களுக்காக அடிக்கடி வருவார். பெரும்பாலும் எங்கள் கூடவே தங்கு வார். நாடகங்களைப் பற்றி உரையாடுவார். அவரோடு பேசிக் கொண்டிருப்பதே எங்களுக்குப் பெரும் உற்சாகமாக இருக்கும். பம்பாய் மெயில் நாடகத்தில் நான் பாடுவதற்கென்றே ஒரு விருத்தம் எழுதிக் கொடுத்தார். அப்பர் பெருமானின் தேவாரப் பாடலைச் சிறிது மாற்றி எழுதியிருக்கிறேன் என்று சொன்னதாக நினைவு. அதை நான் கேதார கெளளராகத்தில் வீராவேசத்தோடு பாடுவேன். பாடுகிற எனக்கே உடல் புல்லரிக்கும். பாடல் முடியும்போது பெருத்த கைதட்டல் விழும். அந்தப் பாட்டு இது.  “புற்றில்வாழ் அரவுக் கஞ்சோம் பொய்யர்தம் மெய்யுக் கஞ்சோம் விற்றொழில் வேந்தர்க் கஞ்சோம் வெஞ்சிறை வாழ்வுக் கஞ்சோம் கொற்றொழில் பீரங் கிக்கும் கொடும்பணத் திமிர்க்கு மஞ்சோம் பற்றிலா ஏழை கண்ணிர் பார்க்ககாம் அஞ்சு வோமே!  இந்தப் பாட்டு அந்த நாளில் பம்பாய் மெயில் நாடகத்தின் தரத்தையே உயர்த்தியது.  கையெழுத்துப் பத்திரிகை ஈரோடு முடிந்ததும் சேலம், ஆத்தூர் முதலிய இடங்களுக்குச் சென்றோம். ஆத்தூரில் பம்பாய் மெயில் நாடகத்திற்கு அமோகமான ஆதரவு கிடைத்தது. பகல் நேரங்களில் எங்களுக்கு நிறைய ஒய்வுண்டு. அதைப் பயனுள்ள வழியில் செலவழிக்க விரும்பினேன். கையெழுத்துப் பத்திரிகையொன்று தொடங்கத் திட்டமிட்டேன். சில நடிக நண்பர்கள் என் யோசனையை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள்.  9.12-34 இல் அறிவுச்சுடர் என்னும்பெயருடன் கையெழுத்துப் பத்திரிக்கையின் முதல் இதழ் வெளி வந்தது. நடிகர்களும் ஏனைய தொழிலாளர்களும் புனைபெயரில் கட்டுரை எழுதி என்னிடம் ரகசியமாகக் கொடுத்து விடுவார்கள். நான் அவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்தி, பத்திரிகை முழுவதையும் என்கையாலேயே எழுதுவேன். கதை, கட்டுரை, அரசியல் சமுதாயச் சீர்திருத்தம் விகடத் துணுக்குகள், அந்தரத் தபால்கள், திருக்குறள் விளக்கம் இவற்றுடன் நாடக சம்மந்தமான அறிவுரைகளும் அறிவுச்சுடரில் இடம் பெற்றன. நடிகர்கள் உற்சாகத்தோடு எழுதினார்கள். புனைபெயர்களில் எழுதுபவர்களின் உண்மைப் பெயர்களை நான் ஒருவரிடமும் சொல்வதில்லை. எனவே எழுதுபவர்கள் யாரென்று தெரியாமல் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டார்கள். வாரந்தோறும் ஞாயிறன்று தவறாமல் பத்திரிகையை வெளி பிட்டு வந்தேன். நடிகர்கள் அறிவு வளர்ச்சி பெறவும், பொது விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் கட்டுரை, கதையெழுதி பழகவும் நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில நடிகர்களும் தொழிலாளர்களும் இதைத் தொடர்ந்து நடத்த முடியாமல் தொல்லை கொடுத்தார்கள்.  ஆத்தூர், விருத்தாசலம், பண்ணாருட்டி ஆகிய மூன்று ஊர்களிலுமாக மொத்தம் பத்து இதழ்கள் வெளிவந்தன. தம்முடைய குற்றம் குறைகளைப் பத்திரிக்கையில் எழுதுவதைச் சிலர் விரும்பவில்லை. இதனால் அடிக்கடி சச்சரவுகள் ஏற்பட்டன. கடைசியாகப் பெரியண்ணா ஒருநாள் என்னிடம்,  “‘உன்னுடைய பத்திரிகையால் வீணாகச் சண்டை ஏற்பாடுகிறது. நீ செய்வது பயனில்லாத வேலை!” என்றார். வேறு வழியின்றிப் பத்தாவது இதழோடு அறிவுச்சுடர் நிறுத்தப்பட்டது.  சிறுவந்தாடு மாநாடு பண்ணாருட்டியில் வசூல் இல்லை. இராமாயணம், பம்பாய். மெயில் இரு நாடகங்களுக்கு மட்டும் சுமாராக வசூலாயிற்று. பண்ணாருட்டிக்கு அருகில் பத்தாவது மைலில் சிருவந்தாடு என்னும் சிற்றுார் இருக்கிறது; மகாத்மா காந்தியடிகள் காங்கிரஸ் மாநாடுகள் நகரங்களை விட்டுச் சிற்றுார்களில் நடைபெற வேண்டுமென ஆணையிட்டிருந்தார். அதற்கிணங்கத் தமிழ் மாகாண மாநாடு முதன்முதலாகச் சிறுவந்தாடு கிராமத்தில் நடந்தது. எங்களில் சிலர் காங்கிரசில் தீவிரப் பற்றுக் கொண்டிருந்தால் சிறுவந்தாடு மாநாட்டில் கலந்து கொள்ள முடிவு செய்தோம். மாநாட்டுக்கு முதல் நாள் இராமாயணம் வைக்கப் பட்டிருந்தது. நாடகம் விடிய ஆறுமணிவரை நடந்தது. நாடகம் முடிந்ததும் நானும், தம்பி பகவதியும் மற்றும் சிலரும் குறுக்கு வழியில் கால்நடையாகவே புறப்பட்டுச் சிறுவந்தாடு சேர்ந்தோம். மாநாடு மிகச் சிறப்பாக நடந்தது. எங்களுக்கு அறிமுகமான நண்பர்கள் பலர் மாநாட்டுக்கு வந்திருந்தால் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நான் பாரதி பாடல்களைப் பாடினேன். அன்று மாலையே பண்ணாருட்டிக்குத் திரும்பினோம்.  ராஜ சேகரன் பண்ணாருட்டியில் புதிதாக ராஜசேகரன் நாடகம் தயாராயிற்று. இந் நாடகம் தஞ்சை என். விஸ்வநாதய்யரால் எழுதப் பெற்றது. எம். ஆர். ராதா இருந்தபோதே நடந்த எண்ணிய நாடகம் இது. நல்ல முற்போக்கான கருத்தமைந்த நாடகம். இந்நாடகத்திற்கு நான் சில பாடல்களும் எழுதினேன். காட்சிகள், உடைகள் ஒன்றும் புதிதாகத் தயாரிக்க வசதி இல்லை. என்றாலும் நாடகம் சிறப்பாக நடந்தது.நான் ராஜசேகரனாக நடித்தேன். எங்கள் குழுவில் அப்போது பிரதம பெண் வேடதாரியாக விளங்கிய பி. எஸ். திவாக்ரன் ராஜகுமாரி பத்மலோசனியாக நடித்தார். திவாகரன் நல்ல அழகும் இனிய குரலும் வாய்ந்த இளைஞர். அவருடைய தோற்றம் பெண்போலவே இருக்கும். பல நாடகங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார், மிகச் சிறந்தநடிகர், திவாகரன் இப்போது சென்னையில் ‘செக்ஸ்போன்’ என்னும் இசைக் கருவியை மிக அருமையாக வாசித்து வருகிறார், மலையாளப் படங்களுக்குச் சங்கீத டைரக்டராகவும் இருந்து வருகிறார்.  ராஜசேகரன் நாடகத்திற்கும் வசூல் இல்லை. பண்ணாருட்டியை விட்டு வேறெங்கும் போக முடியாமல் கஷ்டப்பட்டோம். இந்த நிலையில் நாகர்கோவிலில் இருந்த எங்கள் மூத்த தங்கைக்கு வரன் பார்ப்பதற்காகப் பெரியண்ணா அடிக்கடி ஊருக்குப் போக வேண்டிருந்தது. பாலகிருஷ்ண சாஸ்திரி, கம்பெனிக்கு மானேஜராக வந்து சேர்ந்தார்.  சாஸ்திரியின் நிருவாகம் சாஸ்திரியார் கள்ளம் கபடு இல்லாதவர்; நேர்மையானவர்; ஆனால் எப்போதும் வாய்த்துடுக்காகப் பேசுவார். இந்தப் போக்கு கம்பெனியில் யாருக்கும் பிடிக்கவில்லை. எல்லோரும் அவருடன் வெறுப்போடு பழகினார்கள். இதைக் குறித்துப் பெரியண்ணாவிடம் புகார்செய்யவும் ஒருவருக்கும் தைரியம் வரவில்லை. எனவே எல்லோரும் பொருமிக் கொண்டு சும்மா இருந்தார்கள்.  பண்ணாருட்டியில் நாடகமும் நிறுத்தப்பட்டது கண்ணனூர், மேட்டுப்பாளையம் ஆகிய ஊர்களிலிருந்து கண்ட்ராக்டர்கள், வந்து போனார்கள். பயனில்லை. சிறந்த நடிகர்கள், உயர்ந்த நாடகங்கள், ஓரளவுக்குக் காட்சியமைப்பு, உடைகள் எல்லாம் இருந்தும் வசூல் இல்லையென்றால் எவர் உள்ளந்தான் வேதனை யடையாது? பெரியண்ணா எப்போதும் சோர்ந்தபடி சிந்தனையில் இருக்கத் தொடங்கினார். இந்நிலையில் ஒரு வாரம் சென்றது. தெய்வச் செயலாக மீண்டும் மேட்டுப் பாளையம் கண்ட்ராக்டர் வந்தார். மேட்டுப்பாளையத்துக்கு ரயில் செலவு நீக்கி ஒரு மாதத்திற்கு ஆயிரத்து அறுநூற்றி இருபத்தைந்து ரூபாய்கள் தருவதாகச் சொன்னார். கம்பெனியின் ஒருமாதச் சாப்பாட்டுக்கும், சம்பளத்திற்கும் குறைந்த பட்சம் அப்போது இரண்டாயிரம் ரூபாய்கள் தேவைப்பட்டன. என்றாலும் எப்படியாவது பண்ணாருட்டியை விட்டு வெகுதூரம் போய்விட வேண்டும் என்னும் எண்ணம் தோன்றியதால் பெரியண்ணா ஒப்புக் கொண்டார். ஊருக்குப் போய் பணம் அனுப்புவதாகச் சொல்லிப்போன கண்ட்ராக்டர் சொன்னபடி பணம் அனுப்பவில்லை. ரயில் செலவுக்குப் பணம் வந்து சேர ஒருவாரம் பிடித்தது. பணம் வந்த பிறகு உள்ளுர்க் கடன்களையெல்லாம் தீர்த்துவிட்டு மேட்டுப்பாளையத்திற்குப் புறப்பட்டோம். வழியில் எத்தனையோ கஷ்டங்கள் ஏற்பட்டன.எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டு மேட்டுப்பாளையம் வந்து சேர்ந்தோம்.  குழப்பமான சூழ்நிலை மேட்டுப்பாளையத்தில் சுடுகாட்டின் அருகில்தான் எங்களுக்குக் குடியிருக்க இடம் கிடைத்தது. பெரியாரின் தொடர்பு ஏற்பட்டபின், பேய் பிசாசுப் பயம் போய்விட்டதால் துணிவாக இருந்தோம். பயங்கரமான மழை மேட்டுப்பாளையத்தில். கொட்டகையின் தகரம் ஒருநாள் காற்றில் பிய்த்துக்கொண்டு போய்விட்டது. நாடகங்களுக்கு வசூல் இல்லை. காண்ட்ராக்டரிடமிருந்து பணம் பெற வழியில்லை. அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நடிகர்களும் தொழிலாளிகளும் அடிக்கடி கோவைக்குப் போய் வந்தார்கள். கம்பெனியின் சட்டதிட்டங்களுக்கு யாரும் கட்டுப்படுவதாகத் தெரியவில்லை. கோவையில் அப்போது ஏ. என் மருதாசலம் செட்டியார், மனோரமா பிலிம்ஸ் என்னும் படக் கம்பெனியைத் தொடங்கியிருந்தார். அவர் சதிலீலாவதியை படமாக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கேள்விப்பட்டோம். அதற்காகச் செட்டியார் நடிகர்களைத் தேடிக் கொண்டிருந்தார். எங்கள் கம்பெனியில் அப்போது நகைச்சுவை நடிகராக இருந்த சுந்தரமையர் எங்கள் அனுமதி இல்லாமலை செட்டியாரது படத்தில், நடிக்க முன்பணம் வாங்கியதாக அறிந்தோம். மற்றும் சில நடிகர்களும் இவ்வாறே நடந்து கொண்டார்கள். செட்டியார் எங்களையும் படத்தில் நடிக்க அழைத்தார். பெரியண்ணா இதற்கு ஒப்பவில்லை. இந்த நிலையில் காண்ட்ராக்டு முடிந்தது. உதக மண்டலத்திற்குப் போய் சொந்தமாக நாடகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. உதகமண்டலத்தின் குளிரை நான் ஒருமுறை ஏற்கனவே அனுபவித்திருந்தேன். எனவே, குளிருக்கு வேண்டிய ஆடைகள் எதுவும் இல்லாத நிலையில் இந்த முடிவு செய்தது எனக்குத் திருப்தியளிக்கவில்லை.                                நீலகிரி மலை 1935 ஏப்ரல் 19ஆம் நாள் பிற்பகல் எல்லோரும் புறப்பட்டு இரவு ஏழு மணிக்கு உதகமண்டலம் என்று அழைக்கப்படும் நீலகிரிமலைக்கு வந்து சேர்ந்தோம். அதுவரை அனுபவித்திராத கடுங்குளிர் எங்களை மிகவும் வருத்தியது. இரவு நேரமானதால் எல்லோரும் கஷ்டப்பட்டார்கள். நாடகம் நடைபெறும் இடமாகிய புளு மவுண்டன் தியேட்டருக்கு அருகிலேயே கம்பெனி வீடு இருந்தது. கொட்டகையின் பின்புற வழியாகவே கம்பெனி வீட்டுக்குப் போய்விடலாம். இது எங்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது.  முதல் நாள் இரவை எப்படியோ கழித்தோம். மறுநாள் வாடகைக்குக் கம்பளிகள் கொடுக்கும் ஒரு கடைக்குச் சென்று சில கம்பளிகளையும், உல்லன் மப்ளர்களையும், பனியன்களையும் வாங்கி வந்தார்கள். நான்கு பேருக்கு ஒரு கம்பளி வீதம் போர்த்திக் கொண்டுதான் உறங்குவது வழக்கம். அவ்வளவு கடுமையான குளிர்.  நாடகம் தொடங்கியது. முதல் நாடகம் சந்திரகாந்தா நடந்தது. நாங்கள் அதிகமான வசூலை எதிர்பார்க்கவில்லை. ஆனால், எதிர்பார்த்ததைவிட பரம மோசமாக இருந்தது வசூல். குளிரில் நடிப்பது சிலருக்கு மரண வேதனையாக இருந்தது. என்ன செய்வது? வேறு வழியின்றி நடித்தோம். நீலகிரி மிக அழகான பிரதேசம். அங்கு வசிப்பவர்கள் அங்குள்ள குளிருக்கேற்ற உடைகளை அணிந்து கொண்டு வாழ்கிறார்கள். வாடகைக்கு வாங்கிய உடைகள் மிகவும் கிழிந்து போனவையாதலால் வெளியே போக வர அவற்றைப் பயன்படுத்த முடியவில்லை. தியேட்டரையும் கம்பெனி வீட்டையும் தவிர நடிகர்கள் எங்குமே போகவில்லை.  ஜீவா சொற்பொழிவு தோழர் ஜீவானந்தம் அப்போது நீலகிரியில் வந்து தங்கி யிருந்தார். அவரும் நானும் தனியே அமர்ந்து பல்வேறு விஷயங் களைப் பற்றி பேசிக் கொண்டிருப்போம். கம்பெனியின் கஷ்டமான நிலையைப்பற்றி நான் அடிக்கடி வேதனைப்படுவேன். அப்போ தெல்லாம் ஜீவானந்தம் எனக்கு ஆறுதல் கூறித் தேற்றுவார். ஒரு நாள் சமூகச் சீர்திருத்த சங்கத்தின் சார்பில் ஒரு கூட்டம் நடை பெறுவதாகக் கூறி, என்னையும் தம்பி பகவதியையும் அழைத்துச் சென்றார். கூட்டம் ஒரு வீட்டில் நடந்தது. அந்த வீட்டின் முன் புறக் கூடத்தில் சுமார் ஐம்பதுபேர் உட்கார இடமிருந்தது. ஆனால் வந்திருந்தவர்கள் ஐந்தே பேர்கள்தாம். ஜீவானந்தம், தோழர் ஆர். கிஸன், அவரது மனைவி, நான், பகவதி-எங்களைத் தவிர யாருமே வரவில்லை. நான் ஜீவாவைப் பார்த்துச் சிரித்தேன். அவர் அதுபற்றிக் கவலைப்பட்டதாகவே தோன்றவில்லை. என்னைப் பாடச் சொன்னார். பாடினேன். பாட்டு முடிந்ததும் ஜீவா பேசத் தொடங்கினார். அவருடைய கர்ஜனையைக் கேட்டு, மற்றும் நான்கு பேர் வந்து உட்கார்ந்தார்கள். ஆகச்சொற்பொழிவாளர் உட்பட ஒன்பது பேர். இந்த மாபெரும் கூட்டத்தில் தோழர் ஜீவா, சமுக சீர்திருத்தத்தைப் பற்றி ஒன்றரை மணி நேரம் ஒரு அருமையான சொற்பொழிவாற்றினார். அவருடைய நெஞ்சுத் துணிவை நான் பாராட்டினேன்.  ஒடிவிடத் தீர்மானித்தேன் நாடகம் தொடர்ந்து நடைபெற்றது. ஒரு நாள் பம்பாய் மெயில் நாடகம். சுந்தரம் கிணற்றுக்குள்ளிருந்து தன் தம்பி கோபலனத் தூக்கி வரும் காட்சியில் இருவரும் மேலே தண்ணீரை ஊற்றிக்கொள்ள வேண்டும். நான் வெந்நீர் வேண்டு மென்று கேட்டிருந்தேன். ஆனால், காட்சியில் நான் கிணற்றி லிருந்து குதித்தபோது கீழே புதைக்கப்பட்டிருந்த டிரம்மிள் ஜில்லென்ற தண்ணிர் தான் இருந்தது. கால்களெல்லாம் வெட வெடவென்று நடுங்குவதுபோல் நடிக்க வேண்டும். ஆனால் இப்போது உண்மையாகவே கைகால்கள் நடுங்கின. சுந்தரம் கிணற்றில் குதித்ததும் கிணற்றின் மேற்புறத்தைப் பெரிய பலகையால் மூடி விடுகிறார்கள் எதிரிகள். சுந்தரம் தம்பியை முதுகில் கட்டிக்கொண்டு மேலே வருகிறான். வழி பலகையால் மூடப் பட்டிருப்பதைப் பார்க்கிறான். பின் உள்ளிருந்தே கிணற்றின் சுவரை இடித்து வழியுண்டாக்கி, அதன் வழியாக வெளியே வருகிறான். மிகவும் அற்புதமான காட்சி இது. இத்தக் காட்சி பதினைந்து நிமிடங்கள் நடைபெறும். என்ன செய்வது? நேரம் இரவு பன்னிரெண்டு மணி. தாங்க முடியாத குளிர். ஐஸ் போன்றிருந்த தண்ணிரையே மேலே ஊற்றிக் கொண்டு நடித்தேன். நானும், கோபாலனாக நடித்த டி. ஏ. காசிநாதனும் குளிர் தாங்க முடியாமல் அவஸ்தைப்படுவதைச் சபையோர் பார்த்து அனுதாபப்பட்டது எங்களுக்கு ஆறுதலாக இருந்தது.  பம்பாய் மெயில் முடிந்த மறுநாள் தனியே பூங்காவிற்குச் சென்றேன். கம்பெனியின் நிலைமையை எண்ணிப் பார்த்தேன். மூலதனம் எதுவும் இல்லாமல் மேலும் கம்பெனியை நடத்திக் கொண்டு போவது சரியெனத் தோன்றவில்லை. உட்கார்ந்திருக்க முடியவில்லை. எழுந்து உலவினேன். பைத்தியம் பிடித்தவனைப் போலப் பூங்காவெங்கும் சுற்றினேன். ஒய்வில்லாது உழைத்தும், உடுத்திக் கொள்ளச் சரியான உடைகளும் இல்லாத நிலை என்னை மிகவும் துன்புறுத்தியது. சகோதரர்களை விட்டு எங்கேயாவது ஒடிப்போய்விட வேண்டும் என்ற உணர்ச்சி என்னை உந்தித் தள்ளியது. நீண்ட நேரம் யோசனை செய்தேன். இறுதியாக, ஓடிவிடுவது என்ற முடிவுக்கே வந்தேன்.  அன்பரின் அறிவுரை திடீரென்று ஜீவானந்தம் வந்தார். அவரிடம் நான் என் மன வேதனையைக் காட்டிக் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே பேசினேன். ஜீவா அரசியல் விஷயங்களைப் பற்றிப் பேசினார். தேசத்திற்காகப் பல இன்னல்களை அனுபவித்த வீரர்களின் கதைகள் சிலவற்றைச் சொன்னார். அந்தக் கதைகளையெல்லாம் கேட்ட பிறகு, என் முடிவு குலைந்தது. உள்ளம் உறுதிப்பட்டது. எத்தனை துன்பங்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் தீரத்தோடு போராடிச் சமாளிக்க வேண்டும் என்ற நெஞ்சுரம் ஏற்பட்டது.  தோழர் ஜீவாவுக்கு ஆண்டவன் இருப்பதாக நம்பிக்கை இல்லை. ஆனால் ஓடிப் போகத் தீர்மானித்த எனக்கு, அறிவுரை கூறித் திருத்த ஆண்டவனே ஜீவாவை அனுப்பியதாக எண்ணினேன் நான்.  நீலகிரியில் வசூல் இல்லாமலே ஒருமாத காலம் நாடகம் நடந்தது. மீண்டும் மேட்டுப்பாளையம் வந்தோம். குழப்ப நிலை திரவில்லை. மயில்ராவணன் நாடகத்தைப் புதிய முறையில் எழுதிச் சிறப்பாகத் தயாரித்தார் சின்னண்ணா. நாடகம் அருமையாக அமைந்தது. வசூல்தான் இல்லை. அருகிலுள்ள கோபிச்செட்டிப் பாளையம் போவதென்று முடிவு செய்தார்கள். பஸ்ஸிலேயே கோபிச்செட்டிப்பாளையம் வந்து சேர்ந்தோம்.  மயில்ராவணன் தகராறு கோபிச்செட்டிப் பாளையத்தில் மயில்ராவணனுக்கும், பம்பாய் மெயிலுக்கும் நல்ல வசூலாயிற்று. மயில்ராவணன் நாடகத்தில் எம். ஆர். சாமிநாதன் காளிகோயில் அர்ச்சகராக நடிப்பார். கடைசியாக ஆஞ்சநேயர், காளி சிலைக்குப் பின்னல் மறைந்து கொண்டு பேசும் கட்டத்தில், எம். ஆர். சாமிநாதன் உள்ளே போகப் பயந்து, நான் பிராமணனே இல்லையென்று பூணூலைக் கழற்றிக் கொடுத்துவிட்டு ஓடிப் போவார். இந்தக் காட்சியில் அவர் பேசும் பேச்சைக் கோபிச்செட்டிப்பாளையத்திலுள்ள சில பிராமணர்கள் வெறுத்தார்கள். நாடக அமைப்பில் இந்தக் காட்சியில் தவறு ஒன்றும் இல்லாததால் நாங்கள் மற்றவர்களுடைய வெறுப்பை லட்சியம் செய்யவில்லை.  மயில்ராவணன் நாடகம் முடிந்த மறுநாள் வழக்கம்போல் எல்லோரும் வாய்க்காலுக்குக் குளிக்கப் போனோம். அங்கே பிராமணர்களுக்கென்று தனியாக ஒரு படித்துறை இருந்தது. அந்தப் படித்துறையிலும் சில நடிகர்கள் குளித்தார்கள். அதற்கு முன்பெல்லாம் ஒன்றும் பேசாத சில பிராமணர்கள், அன்று பிராமணர்கள் படித்துறையில் நாங்கள் குளிக்கக் கூடாதென்று ஆட்சேபித்தார்கள். எம். ஆர். சாமிநாதன் குறும்புப் பேர்வழி. அவர் படித்துறையை விட்டுத் தண்ணிரில் இறங்கி நின்று கொண்டு குளித்தார். படித்துறைதானே பிராமணர்களுக்குச் சொந்தம்? வாய்க்கால் எல்லாருக்கும் பொதுதானே? பிராமணர்கள் குளிப்பதற்கு முன்புறம்போய் வாய்க்காலில் அவர் நின்று கொண்டார். பிராமணர்கள் முணுமுணுத்தார்கள். அன்று மாலை நாங்கள் வழக்கம்போல் வெளியே போய்விட்டு வரும்போது அக்ரஹாரத்தில் ஏதோ கூட்டம் நடப்பதைப் பார்த்தோம். பெஞ்சின்மீது நின்று ஒரு வைதீகப் பிராமணர் பேசிக் கொண்டிருந்தார். மயில்ராவணன் நாடகத்தில் நாங்கள் பிராமணர்களை இழிவுபடுத்துவதாகவும், வாய்க்கால் படித்துறையில் அக்ரமம் செய்ததாகவும், அதனால் ஸ்ரீ பால சண்முகானந்த சபையார் நடத்தும் நாடகங்களுக்குப் பிராமணர்கள் போகக்கூடாதென்றும் பிரசங்கம் செய்தார். நாங்கள் அவருடைய அறியாமையை எண்ணிச் சிரித்தோம். இந்தப் பிரசங்கத்திற்குப் பிறகு மயில் ராவணனுக்கு அதிக வசூலாயிற்று. பக்கத்திலுள்ள சத்தியமங்கலத்திலும் மயில் ராவணன் போடவேண்டுமென்று அழைப்பு வந்தது. அங்கும் ஸ்பெஷலாகப் போய்ச் சில நாடகங்கள் நடத்திவிட்டு வந்தோம்.                                                            மேனகா திரைப்படம்   கோபிச்செட்டிப்பாளைத்தில் நாடகங்கள் நல்ல வசூலில் நடந்துகொண்டிருந்தபோது, திருப்பூர் ஸ்ரீ சண்முகானந்தா டாக்கீசார் வந்தார்கள். நாங்கள் நடத்தி வந்த மேனகா என்னும் சமூக நாடகத்தைத்திரைப்பட மெடுக்க விரும்பினார்கள். எங்கள் கம்பெனியில் பெயரும் படக் கம்பெனியின் பெயரும் ஒன்றா யிருந்தது. இது, இரு கம்பெனிகளுக்கும் ஏதோ நெருங்கிய தொடர்பு இருப்பதுபோல் காட்டியது. நாடகங்களுக்குச் சுமாராக வசூலாகி வரும் சமயத்தில் திடீரென்று நிறுத்திவிட்டுத் திரைப்படத்தில் நடிக்கச் செல்வதென்றால் மனத்திற்குக் கஷ்டமாகத்தானிருந்தது. என்றாலும் எங்கள் உருவம் பாடுவதையும், பேசுவதையும், நடிப்பதையும் நாங்களே பார்த்து மகிழக் கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பை இழந்துவிட விரும்பவில்லை. எனவே ஒப்புக்கொண்டோம். ஒப்பந்தம் முடிவாயிற்று. எங்கள் நால்வருக்கும், குழுவினார் அனைவருக்குமாகப் பதினாலாயிரம் ரூபாய்கள் கொடுப்பதென்று முடிவு செய்யப்பட்டது. கோபிச்செட்டிப் பாளையத்தில் சமூகச் சீர்திருத்தச் சங்கத்திற்காகப் பெரியார் ஈ. வெ. ரா. தலைமையில் பம்பாய் மெயில் நடைபெற்றது. பெரியார் நாடகத்தைப் பிரமாதமாகப் பாராட்டினார். நல்ல வசூலும் ஆயிற்று. ஏற்கனவே எங்கள் மேல் கோபம் கொண்டிருந்த பிராமணர்களுக்கு இந்த நாடக நிகழ்ச்சி மேலும் கோபத்தை மூட்டியது. கோபி முடிந்ததும் ஈரோடு வந்து சேர்ந்தோம்.  ஈரோட்டில் எம். ஆர். சாமிநாதன் ஜம்புலிங்கம் என்னும் ஒரு சமூக நாடகத்தை எழுதிக் கொடுத்தார். அந்த நாடகத்தை அவசரமாகத் தயாரித்து அரங்கேற்றினோம். இது விதவைக்கு மறுமணம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒரு சிறந்த நாடகம். தோழர் ஜீவானந்தம் ‘பெண்ணாரிமைக் கீதங்கள்’ என்னும் நூல் ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் “கன்னி விதவைத் துயர் நினைந்திடக் கண் கலங்கிடுமே” என்னும் ஒரு பாடலை எழுதியிருந்தார். அப்பாடல் ஜம்புலிங்கம் நாடகத்திற்காகவே எழுதப்பட்டது போல் இருந்தது. நாடகத்தில் அந்தப் பாடலைச் சேர்த்துக் கொண்டோம். எல்லோரும் பாராட்டினார்கள். நாங்கள் பம்பாய் புறப்படவிருப்பதை யொட்டிப் பல நண்பர்கள் விருந்துகள் நடத்தி வாழ்த்தினார்கள். பெரியாரும் ஒரு பெரிய விருந்து நடத்தினார். சமூகச் சீர்திருத்த சங்கத்திற்கு நாடகம் நடத்திக் கொடுத்ததற்காகப் பெரியார் ஒரு பாராட்டுக் கூட்டமும் நடத்தினார். எல்லோரும் அதிசயப்படும் படும்படியாக அவர் அந்தக் கூட்டத்தில் எனக்கு ஒரு தங்கப்பதக்கமும் பரிசளித்தார். இந்தப் பதக்கம் ஒரு பவுனில் தமது சொந்தப் பணத்தில் செய்யப்பட்டது என்பதைப் பெரியார் அறிவித்தபோது எல்லோரும் வியப்படைந்தார்கள். பெரியார் அவர்களை நன்கறிந்தவர்கள் அவரிடமிருந்து பரிசு பெறுவது எவ்வளவு பெரிய காரியம் என்பதை நன்கு உணர்வார்கள். அதனால்தான் இதை இங்கே குறிப்பிட்டேன்.  1935, செப்டெம்பர், 2ஆம் தேதி எல்லோரும் மேனகா படப்பிடிப்பிற்காகப் பம்பாய்க்குப் பயணமானோம்.  புகைவண்டி பம்பாயை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. எங்கள் எல்லோருடைய உள்ளங்களிலும் மகிழ்ச்சியின் தாண்டவம். ஆங்கிலப் படங்களைக் கண்டு அதிசயித்ததும், வட இந்தியப் படங்களைக் கண்டு மகிழ்ந்ததும், கடைசியாக நம் தமிழிலேயே படம் பேசுவதைக் கண்டு பிரமித்ததும் ஒன்றன்பின் ஒன்றாக என் மனக் கண்முன் தோன்றி மறைந்தன. ரயில் வண்டியே அல்லோல கல்லோலப்பட்டது. எல்லோருடைய நாவிலும் சினிமாப் பேச்சுதான், எடிபோலோவிலிருந்து எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி நடிப்புவரை எங்கள் நடிகர்கள் பேசித் தீர்த்துவிட்டார்கள். நான் மட்டும் மற்றவர்கள் பேச்சில் கலந்து கொள்ளாமல் இன்பக் கனவுகளில் ஆழ்ந்திருந்தேன். நமது படத்தை, நமது பேச்சை, நமதுபாட்டை நாமே சிலமாதங்களில் சினிமாத் திரையில் பார்க்கவும் கேட்கவும் போகிறோம் என்பதை எண்ணி எண்ணி என் உள்ளம் பூரித்தது.  இவர்தானம்மா உன் கணவர்!  ரெயிச்சூர் ஜங்ஷனில் ஸ்ரீஷண்முகானந்தா டாக்கீசாரின் பங்குதாரர்களில் ஒருவரான திரு, எஸ். கே. மொய்தீன் அவர்கள் பெண் நடிகையர் இருந்த பெட்டிக்கு, எங்களை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். எம். எஸ். விஜயாளுக்கு நான் அறிமுகப்படுத்தப்பட்டதும் அவர் என்னைச் சுட்டிக் சுாட்டி கே. டி. ருக்மணியிடம், “இவர்தானம்மா உன் கணவர்” என்றார். கே. டி. ருக்மணி சளைக்கவில்லை. அவர் என் தம்பி பகவதியைச் சுட்டிக்காட்டி எம். எஸ். விஜயாளிடம், “இவர்தான் உன் கணவர்” என்றார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. மேனகா படத்தில் நூர்ஜஹானக நடிக்கும் கே. டி. ருக்மணியின் கணவனாக நானும், மேனகாவும் நடிக்கும் எம்.எஸ். விஜயாளின் கணவனாகத் தம்பி பகவதியும் நடிக்க ஏற்பாடு செய்திருந்ததை யொட்டி அவர்கள் இவ்வாறு தமாஷாகப் பேசிக்கொண்டார்கள். என்றாலும் இளமங்கையர் கணவர் என்ற பதத்தை இவ்வளவு தாராளமாக உபயோகித்தது எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது. சில மணி நேரம் அந்த வண்டியில் இருந்துவிட்டுப் திரும்பியவுடன் என் மகிழ்ச்சியெல்லாம் எங்கோ பறந்தோடி விட்டது. மனம் பலவிதமாகக் குழப்பமுற்றது.  இரும்பும் காந்தமும் ஐந்தாம் தேதி காலை பம்பாய் தாதர் ரயில் நிலையத்தில் இறங்கும்வரை இதைப்பற்றிய நினைவுதான். திரைப்படம் முடிந்து திரும்புவதற்குள், அப்சரஸ் திலோத்தமையால் சகோதரர்களுக்குள் சண்டை பிடித்துக்கொண்ட சுந்தோபசுந்தார் கதி எங்களுக்கு நேராதிருக்க வேண்டுமே என்றெண்ணிப் பெருமூச்சு விட்டேன். அந்தச் சமயம் எங்கள் பெரியண்ணா டி. கே. சங்கரன் அவர்களைத் தவிர எங்களில் எவருக்கும் மணமாகவில்லை. நாங்களும் எங்கள் குழுவின் ஏனைய நடிகர்களும் துள்ளித் திரியும் பருவமுடைய வாலிபர்கள்! வந்திருக்கும் நடிகையரோ இளமையும் எழிலும் குலுங்க நிற்கும் மங்கையர்! இந்நிலையிலே “இரும்பும் காத்தமும் பொருந்தும் தன்மைபோல்” விபரீத விளைவுகள் ஏற்படுவது இயற்கையல்லவா? இந்தப் பயம் அண்ணாவுக்கும் ஏற்பட்டிருந்தது என்பது சினிமாக் கம்பெனி வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே தெரிந்தது. தாதரில் ஸ்டுடியோவின் அருகிலேயே ஒரு பெரிய பங்களா ஏற்பாடு செய்யப் பெற்றிருந்தது. பெண்களுக்கு மாடி மீதும். எங்களுக்குக் கீழேயும் இடம் ஒதுக்கப் பட்டது. வீட்டில் அடியெடுத்து வைத்தவுடனேயே எங்கள் பெரியண்ணா, “எல்லோருக்கும் சொல்கிறேன். எவரும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் மாடிக்கு அனுமதியின்றிப் போகக்கூடாது” என்று கண்டிப்பான உத்தரவு போட்டுவிட்டார்.                                டைரக்டர் ராஜா சாண்டோ   மேனகா படத்தின் டைரெக்டர் ராஜாசாண்டோ அவர்களுடைய ஆடம்பரத்தையும் அந்தஸ்த்தையும் பற்றி நாங்கள் பலவிதமாகக் கற்பனை செய்து வைத்திருந்தோம். அவற்றிற் கெல்லாம் மாறாக ராஜாசாண்டோ, ஒரு குடையைக் கையில் பிடித்துக் கொண்டு சர்வ சாதாரணமாக நடத்தே கம்பெனி வீட்டிற்கு வந்தவுடன் உண்மையிலேயே எங்களுக்குப் பெரும் வியப்புண்டாயிற்று. பல ஆண்டுகளாக வடநாட்டிலேயே இருக்கிறாரே, தமிழ் மொழியையே மறந்து, ஆங்கில மோகத்தில் ஆழ்ந்திருப்பாரோவென எங்களிற்சிலர் ஐயுற்றிருந்தோம். முதல் நாள் சந்திப்பிலேயே அந்தச் சந்தேகத்தை நீக்கிவிட்டார் ராஜா. தமிழ் மொழியை மறவாதது மட்டுமன்று. தமிழிலே அருமையாக எழுதவும் ஆற்றல் பெற்றிருந்தார். தமிழ் வரிவடிவ இலக்கணம், நன்னூல், நிகண்டு முதலியவற்றையெல்லாம் அவர் மனப்பாடம் செய்திருந்தது, எங்களுக்கு ஆச்சிரியமாயிருந்தது. ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு மேலாக வடநாட்டிலேயே வசித்து இந்தி, மராத்தி, குஜராத்தி, ஆங்கிலம் முதலிய பிற மொழிகளிலேயே பேசிப் பழகிக் கொண்டிருந்த ராஜாவுக்குத் தமிழ் நாட்டுப் பழங் கிழவிகள் சொல்லக்கூடிய சாதாரணப் பழமொழிகளும் மறக்காமல் இருந்தன. நடிப்புச் சொல்லிக் கொடுப்பதில் ராஜாவுக்கு இணையான டைரக்டர் இந்திய நாட்டிலேயே இல்லையென்பது அன்று வடநாட்டாரும் ஒப்புக்கொண்ட உண்மை. ராஜா பாரத நாட்டின் ஒப்புயர்வற்ற நடிகப் பேரரசன். அவரிடம் பயிற்சி பெறும் போது, நடிப்பவன் சலிப்படைவானேயன்றிச் சொல்லிக் கொடுக்கும் ராஜா சிறிதும் சலிப்படைய மாட்டார்.  ஆண்களே பெண் வேடம் ஏழாம் தேதி எல்லோருக்கும் பாடம் கொடுக்கப்பட்டது. மேனகா, நூர்ஜஹானைத் தவிர மற்றும் சில பெண் பாத்திரங்கள் இருந்தார்கள். தாசி கமலம், கோமளம், கனகம்மா ஆகிய வேடங்களைப் போடுவதற்கு உடன் பிறந்த சகோதரியர் மூன்று பேர் வந்திருந்தார்கள். பிராமண விதவையாகிய பெருந்தேவி மேனகாவில் ஒரு முக்கியமான பாத்திரம். அந்த, வேடத்தை நாடகத்தில் சின்னண்ணா டி. கே. முத்துசாமி போடுவது வழக்கம். தலையை மொட்டையடித்துக் கொண்ட பிராமணப் பெண்கள் யாரும் அந்த நாளில் சினிமாத் துறைக்கு வரச் சம்மதிக்கவில்லை. கடைசியில் சினிமாவிலும் சின்னண்ணாவே பெருந்தேவி வேடத்தைப் போட நேர்ந்தது. வேலையாள் ரங்கராஜூவின் மனைவியும் மகளும், எங்கள் குழுவில் அப்போது பிரதான நடிகர்களாக இருந்த டி.என்.சுப்பையாவும், பி.எஸ். திவாகரனும் போடுவதாக முடிவு செய்யப்பட்டது. மேனகா படம் வெளிவந்தபோது, அதற்கு ஆனந்தவிகடனில் விமர்சனம் எழுதிய கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சின்னண்ணாவின் பெண் வேட நடிப்பைப் பிரமாதமாகப் புகழ்ந்து எழுதி இருந்ததோடு, “பெருந்தேவியாக நடிப்பவர் ஒரு ஆண் மகன் என்பதையே என்னால் நம்ப முடியவில்லை” என்றும் குறிப்பிட்டிருந்தார். பெரியண்ணா டிப்டி கலைக்டராக நடித்தார். நடிகமணி எஸ். வி. சகஸ்ரநாமம் தாசில்தார் தாந்தோனிராயராகவும், பிரண்டு ராமசாமி, நடிப்பிசைப்புலவர் கே.ஆர். ராமசாமி, நகைச்சுவைச் செல்வன் டி. என். சிவதாணு முதலியோர் பைத்தியக்காரர்களாகவும் நடித்தார்கள். மேனகா பட ஒப்பந்தம் முடிந்த அன்றே சாமா ஐயராக நடிப்பதற்கு என். எஸ். கிருஷ்ணனையே அழைத்து வர வேண்டுமென்று பெரி யண்ணா கூறினார். அதன்படி என்.எஸ். கிருஷ்ணனும் எங்களோடு வந்திருந்தார். அவரே ஐயராகநடித்தார். மற்றும் எங்கள் குழுவி அலுள்ள பெரியவர்கள் பல சில்லரை வேடங்களில் நடித்தார்கள்.  பாட்டுத் தகராறு மேனகா நாங்கள் நடித்த முதல் திரைப்படமாதலால் அந்தச் செய்திகள் மிகச் சுவையாக இருக்கும். அதனால்தான் சுருக்கமாகச் சொல்லாமல் சற்று விரிவாகவே எழுதுகிறேன். அப்பப்பா! பாடல்களுக்கு மெட்டு போடும் விஷயமாக ஏற்பட்ட தகராறு இருக்கிறதே, அதற்கே ஒரு தனி அத்தியாயம் எழுத வேண்டும். எவ்வளவு ரசமான விஷயம்! பாட்டு வாத்தியார் பூமிபாலகதாஸ் பெரும் புலவர். அவர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. பாட்டுக்கு மெட்டு அமைப்பதா, மெட்டுக்குப் பாட்டு அமைப்பதா என்று நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. கடைசியாக மெட்டுக்கே பாட்டு அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். புலவர் பூமிபாலகதாஸ் கொஞ்சம் சிரமபட்டார். சின்னண்ணா தான் சங்கீத டைரக்டர். தமிழிலேயுள்ள இசைப் பாடல்களைப்போல் ஒரு வரம்புக்குள் அடங்காத இந்தி மெட்டுகளிலே எதுகை மோனை முதலிய இலக்கண விதிகளுக்கு உட்பட்டுப் பாடல்கள் புனைவதென்றால் எளிதான காரியமா? அதிலும் இசைப்பயிற்சியில்லாத புலவர் என்ன செய்வார்? இந்தத் தொந்தரவுகளிலெல்லாம் மாட்டிக் கொள்ளாமல் என். எஸ். கிருஷ்ணன் அவர் பாத்திரத்துக்குரிய இரண்டு பாடல்களையும் அவரே போட்டுக் கொண்டார். எனக்குரிய மூன்று பாடல்களையும் நானே புலவருடன் இருந்து புனைந்து வாங்கிக்கொண்டேன்.  தாசி கமலமாக நடிக்க வந்திருந்த அம்மையார், அவர் பாடவேண்டிய பாட்டிலுள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் தகராறு செய்யத் தொடங்கினார்.  ஆசை யென்பது அளவு மீறியே  ஆஹா வெகு மோகமானேன்  அணைய வாரும் துரையே கீரும்  என்பது அவரது பாட்டின் முதலடி. இதில் ‘அணைய வாரும் துரையே’ என்ற வரியைப் பாட முடியாதென்று அம்மையார் மறுத்துவிட்டார். பாட்டு வாத்தியாரோ அந்தவரியை மாற்றவே முடியாதென்று கூறி விட்டார். தகராறு முற்றியது. கடைசியில் சின்னண்ணா அவர்கள் ‘அணைய வாரும் துரையே’ என்பதை ‘அருகில் வாரும் துரையே’ என்று மாற்றிக்கொடுத்தார். இதைப் போன்ற சில சிக்கல்களுக்கிடையே பாட்டுப் போடும் படலம் முடிந்தது.  சாமிநாதன் துரதிர்ஷ்டம் ஒத்திகை ஆரம்பமாயிற்று. முதல் நாள் எம்.ஆர்.சாமிநாதன் நடிக்க வேண்டிய காட்சிகள். நடிப்பு இயற்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக ராஜா விஷயங்களைத் தெளிவாக விளக்கிப் பச்சைக் குழந்தைகளுக்குச் சொல்லுவது போலப் பன்முறை சொன்னார். சாமிநாதன் நல்ல கற்பனா சக்தியுள்ள மிகச்சிறந்த நடிகர்தாம். என்றாலும் ஒத்திகையில் பூரணமாக நடிப்பதில்லை. எனவே ராஜா அவரை நடிக்கத் தெரியாதவர் என்று முடிவு கட்டி விட்டார். சாமிநாதனின் துரதிர்ஷ்டத்தை எண்ணி நாங்கள் வருத்தப்பட்டோம். பிறகு ராஜாவுக்கு ஏற்பட்ட அந்த எண்ணத்தை மாற்ற எவ்வளவோ முயன்றோம். கதையில் வரும் ரங்கராஜு பாத்திரத்தை ராஜா பிரமாதமாக உருவகப்படுத்தி வைத்திருந்தார். சாமிநாதன் ஒத்திகையில் நடித்ததைப் பார்த்ததும் அவருக்கு மிகவும் கவலையாகப் போய் விட்டது, “இந்தப் பாத்திரத்தைப் போட வேறு யாரும் இல்லையா?” என்று வெளிப் படையாகக் கேட்டது எங்களைத் துன்புறுத்தியது. நான் சாமி நாதனுக்குச் சமாதானம் கூறி, நடிக்கச் செய்தேன். ஒத்திகையில் சாமிநாதனுக்கு ஏற்பட்ட இந்த விபத்தைப் பார்த்ததும் நான் கொஞ்சம் விழித்துக் கொண்டேன். ஒத்திகையிலேயே முழுத்திறமையையும் காட்டி, ‘சபாஷ்’ பெற வேண்டுமென்று முடிவு கட்டி வைத்திருந்தேன். மறுநாளே என் ஒத்திகை.  காதல் சிரிப்பு நைனா முகம்மது நூர்ஜஹான் காதல் காட்சி. நான் கே.டி. ருக்மணியோடு நடிக்க வேண்டிய சுவையான கட்டம், பெண் வேடத்தில் நிற்கும் ஆண்களோடுதான் நான் நடித்திருக்கிறேன். பருவப் பெண்களோடு காதல் காட்சியில் நடிப்பதென்பது அன்று தான் எனக்கு முதல் அனுபவம். வந்தது முதல் நான் மாடிக்குப் போகவும் இல்லை, பெண்கள் எவருடனும் பேசவும் இல்லை. இந்த நிலையிலே ஒத்திகை தொடங்கியது.  நூர்ஜஹான் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். நைனா முகம்மது விரைந்து வந்து, அவள் முகவாய்க்கட்டையைப் பிடித்துத் தன்பக்கம் திருப்பிப் பேச வேண்டும்.   ராஜா இரண்டு முறை நடித்துக் காண்பித்தார். எனக்கு என்னவோ போலிருந்தது. ‘பெண்ணின் மீது கை வைத்துத் தொட்டு நடிக்க வேண்டிய இந்த எழவை எல்லாம் ஸ்டுடியோவில் படம் பிடிக்கும் போது வைத்துக் கொள்ளக் கூடாதா?’ என்று ராஜாவை மனத்திற்குள்ளாகவே சபித்தேன். பட முதலாளிகளில் ஒருவரான எஸ். கே. மொய்தீன் எதிரில் உட்கார்ந்து சிரித்துக் கொண்டிருந்தார். என் நண்பர்கள், சகோதரர்கள் எல்லாரும் எதிரே வீற்றிருந்தர்கள். எல்லோருடைய கண்களும் என்மீதே பதிந்திருந்தன. எனக்கோ ஒரே கூச்சம். ராஜா ‘உம் ரைட்’ என்றார். நானும் மனதைத் திடப் படுத்திக்கொண்டு அவர் நடித்துக் காண்பித்தவாறே நடிக்க முயன்றேன். ருக்மணியின் முகவாய்க்கட்டையைப் பிடித்துத்திருப்பினேன். எங்கள் இருவருடைய கண்களும் சந்தித்தன. அவ்வளவுதான். ருக்குமணி சிரிக்கத் தொடங்கினார். எனக்கும் சிரிப்பு வந்துவிட்டது. எவ்வளவோ முயன்றும் அந்தச் சிரிப்பை அடக்க முடியவில்லை. ருக்குமணிக்கும் அதே நிலைதான். அவருடைய முகம் நாணத்தால் சிவந்துவிட்டது. நல்ல வேளையாக அன்று பெரியண்ணா மட்டும் இல்லை. ராஜா இரண்டுமுறை கோபித்துப் பார்த்தார், நாங்களும் சிரிக்காமல் நடிக்க ஆன மட்டும் முயன்றோம். ஒன்றும் பலிக்கவில்லை. நாலைந்து முறை இவ்வாறு எங்கள் முயற்சியில் தோல்வி ஏற்பட்டதும் எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தார்கள். கோபித்தும் பயனில்லாததைக் கண்ட ராஜாவும் சிரித்து விட்டார். இவ்வாறு அன்றைய ஒத்திகை சிரிப்பிலேயே முடிந்தது. விஷயம் பெரியண்ணா காதுக்கு எட்டியதும் மிகவும் கோபப்பட்டார். ‘ஏன் அப்படிச் சிரித்தோம்?’ என்பது எனக்கே புரியவில்லை. “இதுதான் காதல் சிரிப்பு” என்றார் என்.எஸ்.கிருஷ்ணன்.  காப்பியடிக்காதே!  மறுநாள் மிகத் துணிவோடு ஒத்திகையில் நடித்தேன். ராஜா எப்படிச் சொல்லிக் கொடுத்தாரோ அப்படியே நடித்தேன். உடனே ராஜா கலகலவென்று சிரித்துவிட்டார்.  “நான் செய்வதை அப்படியே காப்பியடிக்காதே. அது நடிப்பல்ல. சொல்லுவதைக் கேட்டுப் புரிந்துகொண்டு, அந்தக் கருத்தை மனத்தில் பதிய வைத்துக் கொண்டு, உனக்கு இயற்கையாக எப்படி வருகிறதோ அப்படிச்செய். ஒவ்வொருவரும் அவர்களின் உடல் அமைப்பிற்கும், அங்க அசைவுகளுக்கும் ஏற்றவாறு தான் நடிக்க வேண்டும். ஒரு வரைப் பார்த்துக் காப்பியடிப்பது அவரவர்க்கு உண்டான இயற்கை நடிப்பைக் கெடுத்துவிடும்” என்றார்.  ராஜாவின் இந்த அறிவுரை நான் நடிப்புத் துறையில் வளர்ச்சிப் பெறப் பெருந் தூண்டுகோலாக இருந்தது.  அந்தநாளில் பம்பாய் ஸ்டுடியோக்கள் பெரும்பாலும் நாங்கள் தங்கிய தெருவிலேயேதான் இருந்தன. பேசாப் படத்திலேயும், பேசும் படத்திலேயும் நாங்கள் கண்ட பல நடிகர்கள் எங்கள் கண்களிலே தென்பட்டார்கள். பில்லிமோரியாவையும், ஜால்மெர்ச்சென்டையும், பேசாப் படக் கத்திச்சண்டை வீரர்களான விட்டல் பச்சு முதலியோரையும் நேரில் கண்டபோது எங்களுக்கு ஒரே குதுரகலமாய் இருந்தது.  தலையும் மீசையும் தப்பியது முதன்முதலாக நான் வேடம் புனைய வேண்டிய நாள் வந்தது. ராஜா காலையிலேயே நாவிதரை அழைத்து என் தலையை கிராப், செய்ய வேண்டிய மாதிரியைச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். இரவு ‘மேக்கப்’ அறையில் நான் வேடம் புனைந்து கொண்டிருந்த போது அவர் வந்து பார்த்தார். கிராப் செய்திருந்த முறை அவருக்குத் திருப்தி அளிக்கவில்லை. கோபத்துடன் நாவிதரை வரச்சொன்னார். அந்தச் சமயத்தில் நாவிதர் வருவது சாத்திய மில்லையெனத் தெரிந்தது. “கொண்டாடா கத்தரிக்கோலை” என்றதும் எனக்குக் குலை நடுக்கம் எடுக்க ஆரம்பித்தது. கத்தரிக் கோல் வந்தது. எனக்குக் ‘கிராப்’ வெட்டத் தொடங்கி விட்டார் ராஜா. எங்கள் நடிகர்கள் சிரிப்பை அடங்கிக் கொண்டு மெளனமாய் நின்றார்கள். ஒருவாறு தலையலங்காரம் முடித்தது. என் முகத்தைப் பார்க்க எனக்கே கோரமாக இருந்தது. மீசை அடிக்கடி ஒட்ட வேண்டிய கஷ்டத்தை உத்தேசித்து, பம்பாய் சென்றதும் நான் மீசை வளர்த்துக் கொண்டேன். சிகையலங்காரத்தை முடித்ததும் ராஜாவின் கண்கள் என் மீசை மீது விழுந்தன. அதிலும் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. மீசையையும் திருத்த ஆரம்பித்தார். கத்தரிக்கோலை மூக்கருகில் கொண்டுவந்தார். “அசையாமல் இரு” என்றார். மாற்றி மாற்றி சரிபார்த்தார். இரு புறமும் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிக்கொண்டே போனார். இறுதியாகக் குரங்கு அப்பம் பங்கு வைத்தகதையாய் ஒட்டுமீசை வைக்கவேண்டி வருமோ என்று நான் பயந்தேன். என் அதிர்ஷ்டம் அப்படி ஏற்படவில்லை. முன்பொரு நாள் இதே மாதிரி நாவிதர் இல்லாத சமயத்தில் எங்கள் நடிகர் ஒருவருக்கு ஸ்டுடியோவில் உள்ள வறட்டுக் கத்தியால் ராஜா சவரம் செய்ய முனைந்தபோது எங்களுக்கெல்லாம் பயமாக இருந்தது. அந்த மாதிரி ஒருநிலை எனக்கு ஏற்படாததை எண்ணி உள்ளுர மகிழ்ச்சி யடைந்தேன்.                                                                முத்தமிடும் காட்சி   நானும் ருக்மணியும் நடிக்க வேண்டிய காதல் காட்சி வந்த போது ஒத்திகையை நினைத்து என் உள்ளம் வெட்கத்தால் குன்றியது. காதல் கட்டம் என்றால் எப்படி?... அன்றுவரை நான் கேள்விப்பட்டிராத முறையில் புது மாதிரியாகக் காதல் செய்யும் பேறு எனக்குக் கிடைத்தது. நான் ருக்மணியை ஒரு கையால் அணைத்தபடி அவருடைய வலது கையிலே முத்தம் கொடுக்க வேண்டும். எப்படி? சாதாரண முத்தமா? கைவிரல்களிலிருந்து தொடங்கித் தோள் வரையில் முத்தமழை பொழிந்த கொண்டே போகவேண்டும். சரியாக ஒரு டசன் முத்தங்கள்!... கூச்சத்தால் என் உயிரே போய்விடும் போலிருந்தது. ராஜா இதை நடித்தும் காண்பித்தார். நானும் ஒரு வகையாக நடிக்க முயன்றேன். அதிகமாக வெட்கப்படுவதைக் கண்ட ராஜா, சிரித்துக் கொண்டே படமுதலாளிகளில் ஒருவரான திரு எம். சோமசுந்தரம் அவர்களை நோக்கி,  “என்ன சோமு, இந்தப் பயல் சுத்தப் பேடியாக இருக்கிறான். சொந்தப் பெண்டாட்டியிடத்திலேயே இப்படிக் கூச்சப் படுகிறானே, அப்புறம் அன்னியன் மனைவியான மேனகாவை எப்படி பலாத்காரம் பண்ணப் டோகிறான்?” என்று கூறினார். எனக்கோ மானம் போயிற்று! ஆத்திரம் ஆத்திரமாகவும் வந்தது. எப்படியோ நடித்தேன். எனக்கும் குக்மணிக்கும் உள்ள காதல் காட்சி இரண்டு நாள் தொடர்ந்து நடைபெற்றது. இரண்டாம் நாள் புகைப்படம் பிடிப்பதற்காக எங்கள் இருவரையும் ‘லவ்போஸ்’ கொடுத்து நிறுத்தினார் ராஜா. அவர் நிறுத்தியபடி நான் ருக்மணியின் இடுப்பை அணைத்தவாறு நின்றேன். மின்சார  விளக்குகளைப் போட்டுச் சரிசெய்யச் சில நிமிடங்கள் ஆயின. எவ்வளவு நாழிதான் இந்தக் கோலத்தில் நிற்பது? இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தோம். ஒத்திகையில் வந்த சிரிப்பு மீண்டும் தலையாட்டும்போல் தோன்றியது. கொஞ்சம் விலகி நின்று கொண்டேன். ‘ரெடி’ என்று சொல்லிவிட்டுத் திரும்பிய ராஜா, நான் சற்று விலகி நிற்பதைக் கண்டு அருகில் வந்து எங்கள் இருவரையும் பிடித்துச் சேர்த்து வைத்துவிட்டு, பட முதலாளி எஸ். கே. அவர்களை நோக்கி, நல்ல பையன்களைப் பிடித்துக் கொண்டு வந்தீர்களேயா!... அழகான இந்தப் பெண்ணை அணைக்கத் தெரியாமல் முழிக்கிறானே! ... என்று கூறி விழுந்து விழுந்து சிரித்தார். இப்படியாக என் சொந்த மனைவியிடம் காதல் செய்யும் படலம் ஒருவாறு முடிந்தது. அடுத்தது இன்றாெருவன் மனைவியைப் பலாத்காரம் செய்யும் படலம். சொந்த மனைவியிடமே காதல் செய்யக் கூச்சப்பட்டுக் கொண்டிருந்த நான், இன்னொருவன் மனைவியைத் தூக்கிக் கொண்டுவந்து எப்படித்தான் பலாத்காரம் செய்வதாக நடிக்கப் போகிறேனோ என்ற டைரக்டரின் திருவாக்குப்படி விழித்துக் கொண்டிருந்தேன்.  பலாத்காரக் காட்சி நைனமுகம்மது மேனகாவை எட்டிப் பிடிக்கப் போகும் பொழுது மேனகா அவனை ஆத்திரத்தோடு கீழே தள்ளுவதாக ஒரு கட்டம். இது எங்கள் நாடகக்தில் இல்லாதது. மேனகாவாக நடித்த எம்.எஸ். விஜயாள் என்னைத் தள்ளினார். அவர் தள்ளியதில் சிறிதும் பலம் இல்லாததால் நான் வேண்டுமென்றே கீழே விழுவது போலிருந்தது. நடிப்பு இயற்கையாக இல்லையென்று கூறி ராஜா இரண்டாவது முறையும் அதை எடுத்தார். வேகமாக என்னைத் தள்ள விஜயாள் அஞ்சுகிறார் என்று எண்ணிய நான், அன்றுதான் முதன் முறையாகத் துணிந்து விஜயாளிடம் பேசினேன்,  “அம்மா, நல்ல பலத்தோடு தள்ளுங்கள். நான் சமாளித் கொள்கிறேன். பரவாயில்லை”. 305  என்று ரகசியமாகக் கூறினேன். மீண்டும் ஒத்திகை நடந்தது. விஜயாள் முழுப் பலத்தோடு என்னைத் தள்ளுவாரென்று எண்ணி நான் வேகமாக அவரைப் பிடிக்கச் சென்றேன். அவர் தள்ளியது முன்போலவே இருந்ததால், விரைந்து சென்ற நான் அவர் மார்போடு மோதிக் கொள்ள நேர்ந்தது. விஜயாள் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.  “சீனில் குஸ்தி போட எனக்குத் தெரியாது” என்றார், அந்த நிகழ்ச்சி மீண்டும் ஒருமுறை எடுக்கப்பட்டு முடிந்தது. அடுத்த ‘ஷாட்’டுக்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். நான் ஒரு புறம் அமர்ந்து நடந்த சம்பவத்தை எண்ணிப் பார்த்தேன். வேண்டுமென்றே நான் மோதிக்கொண்டதாக விஜயாள் எண்ணியிருக்க வேண்டும்! அதனால்தான் ‘குஸ்திபோட எனக்குத் தெரியாது’ என்று கோபித்துக் கொண்டிருக்கிறார்.  தேம்பி அழுதேன் இதை நினைத்ததும் எனக்குத் தாங்க முடியாமல் அழுகை வந்து விட்டது. முதல் ஒத்திகையில் சிரிப்பை எப்படி நிறுத்த முடியவில்லையோ அதேபோல் அன்று அழுகையையும் என்னால் நிறுத்த முடியாமல் போயிற்று. நம்மைப்பற்றி விஜயாள் தவறாக நினைக்கும்படி நடந்துவிட்டோமே என்பதை எண்ணியெண்ணி அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தேன். விஷயமறிந்த ராஜா என்ன அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறினார். எஸ். கே., சோமு எல்லோரும் என்னைச் சமாதானப்படுத்தினார்கள். அன்று ஸ்டுடியோவில் சகோதரர்கள் யாருமில்லை. அவர்கள் என்ன நினைப்பார்களோ என்று ஏங்கினேன். ஸ்டூடியோ முழுவதும் விஜயாளியின் மீது சினந்தது. அவருடைய தாயார்கூட அவரைக் கண்டித்தாகச் சொல்லிக் கொண்டார்கள். ஏறக்குறைய மூன்று மணி நேரம் அழுது தீர்த்த பின்னரே என்னால் நடிக்க முடிந்தது. அன்று அப்படி அழுததை எண்ணினால் இன்றுகூட வெட்கமாக இருக்கிறது! பல நாட்களுக்குப் பின் எங்கள் மேனகா நாடகங்களில் ஸ்பெஷலாக நடிக்க எம். எஸ். விஜயாள் வந்தபோதுகூட என்னால் அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்துப் பேச முடியவில்லை.  கீழே விழுந்தார் மறுநாள் எடுத்த காட்சியில் ஒரு ரசமான கட்டம். கதையின்படி நைன முகம்மது ஐயாயிரம் கொடுத்து மேனகாவைத் தன் வீட்டிற்குக் கொண்டு வந்து விடுகிறான். அவள் தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்ளத் தப்பி வெளியே ஒடுகினாள். நைனமுகம்மது வழி மறித்து அவளைத் துக்கிக் கொண்டு கட்டிலை நோக்கிச் செல்கிறான். இப்படித் தூக்கிக் கொண்டு செல்வது எங்கள் நாடகக் கதையிலோ, வடுவூராரின் நாவலிலோ இல்லாத சம்பவம். டைரக்டர் ராஜாவின் சொந்தக் கற்பனை. தூக்கிக் கொண்டு போவது வேண்டாமென்று நான் ராஜாவிடம் எவ்வளவோ வாதாடிப் பார்த்தேன். ராஜா சாண்டோ அலட்சியமாக,  “போடா, ஐயாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டுத் தொட்டுத் தொந்தரவு பண்ணாமல் விட்டு விடுவானா?” என்றார்.  என்னைப்போலவே விஜயாளும் தகராறு செய்தார். ராஜா பிடிவாதமாய் இருக்கவே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. இதற்கு ஒத்திகை நடைபெறவில்லை. ‘டேக்’ என்று காமிராவை முடுக்கியதும் விஜயாள் ஓடினார். நான் வழி மறித்து அவரைத் தூக்கினேன். இயற்கையாக நடிப்பதானால் நான் அவரைக் கொஞ்சம் இறுகப் பிடித்து அணைத்தபடி இருந்திருக்கவேண்டும். முதல் நாள் சம்பவம் என் நினைவில் இருந்ததால் நான் அவரை அப்படியே எடுத்துக் கைகளில் தாங்கிய வண்ணம் கட்டிலை நோக்கிச் சென்றேன். விஜயாள் என் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள முயல்பவரைப்போல் கைகால்களை உதறிக் கொண்டார். நான் அவரை மார்போடு தழுவி அணைத்துக் கொள்ளாததால் எனது பிடியிலிருந்து விடுபட்டுத் தொப்பென்று கீழே விழுந்து விட்டார். எல்லோரும் சிரித்து விட்டார்கள். ராஜாவும் கலகல வென்று சிரித்து, “நல்லாக் கட்டிப்பிடிடா” என்றார். ஆனால் விஜயாள் அதை இரண்டாம் முறை படம் எடுக்க அனுமதிக்கவில்லை. பெருத்த சண்டைக்குப் பின், “சரி, வேண்டாம்” என்று ராஜாவும் விட்டு விட்டார். படம் திரையிடப்பட்ட போது நான் தூக்கிச்  சென்ற அந்தக் காட்சி அப்படியே இருந்தது. விஜயாள் கீழே விழுந்ததை மாத்திரம் வெட்டி விட்டார்.  தீண்டாத காதல் மற்றொரு சுவையான நிகழ்ச்சி நடந்தது. சாமா ஐயராக நடித்த கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன், தாசி கமலம் வீட்டில் அகப்பட்டுக் கொள்ளும் ரசமான காட்சி. முதலில் சாமாவுக்கும் கமலத்துக்கும் சிங்காரப் பேச்சுகள் நடக்கின்றன. இறுதியில் திருடர்கள் சாமாவைப் பிடித்து அடித்துச் சாக்குப் பையில் போட்டுக் கட்டி விடுகிறார்கள். இதை வேடிக்கை பார்க்க எங்கள் நடிகர்கள் பலரும் கூடியிருந்தார்கள். மேனகா நாடகத்தில் நான் முதலில் நைனமுகமதுவாக நடித்துவிட்டுப் பிற் பகுதியில் தாசி கமலாவாகவும், நடிப்பேன். எனவே என்னோடு நடித்த என். எஸ். கே. பெண்ணாேடு எப்படி நடிக்கிறார் என்பதைப் பார்த்து ரசிக்க எல்லோரையும் விட எனக்கு ஆவல் அதிகமாக இருந்தது.  படப்பிடிப்பு தொடங்கியது. டைரக்டர் ராஜா சுறுசுறுப்பாக வேலை செய்தார். சாமா ஐயரும் தாசி கமலமும் கட்டிலில் அமர்ந்தார்கள்; உரையாடினார்கள். சாமா ஐயர் காதல் பாட்டுப் பாடினார். படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. வேடிக்கை பார்க்க நின்ற நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம் படாதிபதிகளான எஸ். கே. மொய்தீனும், எம். சோமசுந்தரமும் செய்வது புரியாமல் விழித்தார்கள், நான் கலைவாணரை வியப்புடன் பார்த்தேன். கலைவாணர் என்னைப் பார்த்துச் சிரித்தார். அந்தக் சிரிப்பில் சினமும் கலத்திருந்ததை நான் உணர்ந்தேன். காரணம் என்ன தெரியுமா? படப் பிடிப்பு நாங்கள் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக நடந்தது. சாமா ஐயரை மயக்கிக் கொள்ளை யடிக்கும் நோக்கோடு அழைத்து வந்த தாசி கமலம், சாமாவைத் தொடவும் இல்லை; அவர் பக்கத்தில் நெருங்கி உட்காரவும் இல்லை. தீண்டாத காதலாக இருந்தது. ஒரு முழத் தூரத்திலேயே இருந்தபடி எல்லாவற்றையும் பேசி முடித்து விட்டார்.  படாதிபதிகளின் ஏமாற்றம் நாடகத்தில் நானும், என். எஸ். கேயும் இந்தக் காட்சியில் நடிப்பதைப் பல முறையும் பார்த்து ரசித்திருந்த படாதிபதிகள் அதைவிடச் சிறப்பாக சினிமாக் காட்சி அமையுமென எதிர்பார்த் திருந்தார்கள். அவர்களுக்கு ஒரே ஏமாற்றம். டைரக்டர் ராஜா ஏன் இப்படிச் செய்கிறார் என்று புரியவில்லை. ஆத்திரமும் கோபமும் அவர்கள் கண்களில் தெரிந்தன . ராஜாவிடம் நெருங்கிப் பேசப் பயம். நிலைமையைச் சரிப்படுத்த ஒரு வழியும் தோன்றாமல் திகைத்தார்கள்.  சாமாவின் சல்லாபப் பேச்சு முடிந்ததும் திருடர்கள் கட்டிலைச் சூழ்ந்து கொள்ளுகிறார்கள். தாசி கமலம் அவர்களைக் கண்டு பயந்தவள்போல் சாமா ஐயரைக் கட்டிக் கொள்ள வேண்டும். சாமா அவளை அணைத்தபடி திருடர்களோடு போராட வேண்டும்.  டைரக்டர் ராஜா இந்த விவரங்களையெல்லாம் நன்றாக விளக்கிச் சொல்லத் தொடங்கினார்.  “கிருஷ்ணா, நீ இப்படி இருக்கிறே; கமலம் அங்கே நிக்கிரு; திருட்டுப் பசங்க வந்ததும் அவ பயந்து ஓடி வந்து உன்னைக் கட்டிக்கிறா. நீ உடனே வீராவேசத்தோட திருடனுங்க மேலே பாயனும்” -  என்று சொல்லிவிட்டுக் காமிரா அருகில் சென்றார். கலைவாணர் அதுவரையில் அடக்கிக் கொண்டிருந்த ஆத்திரமும் சினமும் அமைதியாக வெளிவரத் தொடங்கின.  “எல்லாம் சரி; ஆனா, அந்த அம்மா வந்து என்னைக் கட்டிக்காதபடி வேறே ஏதாவது வழி பண்ணாங்கோ”......என்றார்.  நான் பதிவிரதன் !  என். எஸ். கே. யின் இந்தப் பேச்சைக் கேட்டதும் ராஜா திடுக்கிட்டார்.  ஸ்டுடியோவில் பூரண அமைதி நிலவியது. நாங்கள் எல்லோரும் ராஜாவின் வாயிலிருந்து என்ன வார்த்தை வரப் போகிறது என்பதை எதிர்பார்த்துக் கொண்டு நின்றோம்.   “ஏண்டா! உன்னைக் கட்டிக்கப்படாது?” என்றார் ராஜா. கலைவாணர் மேலும் அமைதியாக, “நான் பதிவிரதன்” என்றார்.  “பதிவிரதனா?... அதென்னடா, புதுசாயிருக்கு?” இது ராஜாவின் கேள்வி.  “புதுசு ஒண்ணாமில்லையே! பொம்பளையிலே பதி விரதையில்லே? அது மாதிரி ஆம்பிளேயிலே நான் பதிவிரதன். என் மனைவி நாகம் மாளைத் தவிர வேறே எந்தப் பொம்பளையும் என்னைத் தொட அனுமதிக்க மாட்டேன். நான் ஏக பத்தினி விரதன்” என்றார் கலைவாணர்.  கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் இப்படிச்சொன்னதும் டைரக்டர் ராஜா திடுக்கிட்டார். ஏதோ காரணத்தோடுதான் கிருஷ்ணன் இவ்வாறு பேசுகிறார் என்பது ராஜாவுக்குப் புரிந்து விட்டது. உடனே அவர் எஸ். கே. மொய்தீனை நோக்கி, என்ன எஸ். கே. ஒங்க கிருஷ்ணன் தகராறு பண்றானே? தொட்டு ஆக்டு பண்ணாதே போன படம் நல்லாயிருக்குமோ?”... என்று கேட்டார். விஷயம் இவ்வளவு தூரத்திற்கு வந்ததும் எஸ். கே மொய் தீனுக்கும் பேசத் துணிவு வந்துவிட்டது. அவர் அதுவரையில் பொருமிக்கொண்டிருந்த தம் உணர்ச்சிகளையெல்லாம் வார்த்தைகளாகக் கொட்டத் தொடங்கினார்.  “பின்னே என்னுங்க, இந்த சீன நீங்க இப்படியா எடுக்கிறது? கிருஷ்ணனும் ஷண்முகமும் நாடகத்திலே எப்படி அற்புதமா நடிப்பாங்க; பொம்பளையாச்சே நாடகத்தை விட நல்லா அமையும் சினிமாவிலேண்ணா நாங்க சந்தோஷமா யிருந்தோம். நீங்க ஆரம்பத்திலேயிருந்தே சாமாவும் கமலமும் தொடாமலே எடுத்து முடிச்சிட்டீங்களே? பின்னே கிருஷ்ணனுக்கு வருத்தம் வராதுங்களா? நீங்க கேட்டதையே திரும்பிக் கேக்கிறேன். அந்த அம்மா கிருஷ்ணனைத் தொட்டு ஆக்டு பண்ணாத போனா படம் நல்லாயிருக்குங்களா? நீங்க முன்னாடி தாசி கமலத்தைத் தொட கிருஷ்ணனை அனுமதிக்கவேயில்லை... அதனாலேதான் இப்போ கிருஷ்ணன் தொட்றதுக்குத் தகராறு பண்றாரு ! என்று மேலும் படபடப்போடு பேசிக்கொண்டே போனார். அப்போதுதான் ராஜா தம் தவறை உணர்ந்தார். தாசி கமலமாக நடித்த அம்மையாரும் அவரது சகோதரிகளும் ஆரம்ப முதலே ராஜா வோடு நெருங்கிப் பழகிக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட வினை இது. ஆனால் உண்மையை யுணர்ந்ததும் ராஜா சிறிதும் தகராறு செய்யவில்லை. அவரல்லவா பெரிய மனிதர்! உடனே;  “அடடே, அப்படியா? இதை அப்பவே சொல்லியிருக்கலாமே. சரிடா கிருஷ்ணா, இந்த சீன மறுபடியும் எடுக்கிறேன். ஒன் இஷ்டம்போல் ஆக்டு செய்”  என்று சொல்லிவிட்டு மீண்டும் கேமரா அருகில் சென்றார் .  ராஜாவின் தனிச்சிறப்பு இதுதான் ராஜாவிடமுள்ள தனிப் பெருங்குணம், ‘நன்றல்லது அன்றே மறப்பது நன்று’ என்னும் வள்ளுவர் வாக்குக்கு இலக்கியமாக விளங்கியவர் ராஜா. தவறு என்று உணர்ந்தால் உடனே அதைத் திருத்திக் கொள்ளத் தயங்கமாட்டார். ‘தான் பிடித்த முயலுக்கு மூன்றேகால்’ என்று சாதிக்கும் பிடிவாதக் குணம் அவரிடம் இல்லை. ஒருநாள் ஸ்டுடியோவில் ஒருவரோடு பிரமாதமான சண்டை நடக்கும். மறுநாள் அதே மனிதரோடு ராஜா களிப்புடன் பேசிக் கொண்டிருப்பதைக் காணலாம். பழகுபவர் எவரையும் உரிமை பாராட்டி ஒருமைப்பதங்களால் அழைப்பது ராஜாவின் இயற்கை குணம். புதிதாகப்பழகுபவர்கள். இதைத் தவறாக எண்ணவுங் கூடும். ஆனால் மற்றவர்களின் விருப்பையோ வெறுப்பையோ ராஜா பொருட்படுத்து வதில்லை.  அந்தக்காலத்தில் பிரபல நடிகர்களாக விளங்கிய பில்லி மோரியா ஈஸ்வர்லால், ஜால்மார்ச்செண்ட், கோஹர், சுலோசன முதலியோர் எங்கள் மேனகா படப் பிடிப்பைப் பார்க்க வருவார்கள். அவர்களிடம் ராஜா,  “பார்த்தீர்களா, உங்கள் தமிழ்நாட்டு இளங் குழந்தைகளின் திறமையை? இன்னும் இரண்டொருபடங்களில் நடித்தால் உங்களையெல்லாம் தோற்கடித்துவிடுவார்கள்.”  என்று பெருமையோடு கூறுவார்.  ராஜாவின் இன உணர்ச்சி ஒரு நாள் மேனகாவில் டிப்டிக் கலெக்டர் பங்களாக் காட்சிக்கு ஸ்டுடியோவிலுள்ள மட்டரகமான சோபாக்களையும், நாற்காலிகளையும் போட்டுவிட்டு செட்டிங் மாஸ்டர் அலட்சியமாக இருந்து விட்டார். அப்பொழுது ராஜா ரஞ்சித் மூவிடோனிலேயே நடிகராகவும், டைரக்டராகவும் மாதச் சம்பளத்திற்கு இருந்தபடியால் இதுபற்றி சிரத்தை எடுத்துக் கொண்டு கேட்பாரென செட்டிங் மாஸ்டர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ராஜா படப்பிடிப்பின்போது வந்தார். செட் அமைந்திருந்ததைச் சுற்றிப் பார்த்தார். கண்களில் கோபக்கனல் வீசியது.  “யாரடா அவன் ஸெட்டிங் மாஸ்டர், ரஞ்சித் மூவிடோனில் நல்ல சோபாக்கள் கிடையாதா? ஏன் இந்த ஒட்டை உடைசல்களே யெல்லாம் எடுத்துப் போட்டிருக்கிறீர்கள்?”  என்று இந்தியில் கேட்டார். செட்டிங் மாஸ்டரும், ஸ்டோர் கீப்பரும் முனகிக் கொண்டே,  “மற்ற சோபாக்களெல்லாம் நமது இந்திப் படங்களுக்கு ஸ்பெஷலாக உபயோகிப்பது” ... என்று மேலும் ஏதோ சொல்ல முயன்றார்கள். உடனே ராஜா கடுங் கோபத்தோடு இடை மறித்து,  “ஏண்டா ஸ்டுடியோவுக்கு முள்ளங்கிப் பத்தைப்போல் ரூபாய் பதிமூவாயிரம் வாங்கவில்லையா! எங்கள் தமிழ் நாட்டான் காசு உங்க பாட்டன் வீட்டுச் சொத்தா?” என்றார். அதற்குள் ஸ்டோர் அறையின் சாவி வேறு யாரிடமோ இருப்பதாகச் சிப்பந்திகள் முணுமுணுத்தார்கள்.  “கொண்டாடா சுத்தியலேயும், கடப்பாறையையும்” என்று ஆவேசத்துடன் கூறிவிட்டு, சோபாக்கள் வைத்திருந்த ஸ்டோர் அறையின் பெரிய பூட்டை உடைப்பதற்குத் தயாரானார் ராஜா. உள்ளே இவ்வாறு கலவரம் நடந்துகொண்டிருந்தபோது வெளியிலிருந்து வந்த ஸ்டூடியோ முதலாளி திரு சந்துலால்ஷா நடந்த விஷயத்தை விசாரித்துத் தெரிந்து கொண்டு, ராஜா   இஷ்டப்படி செய்யுமாறு சைகை காட்டி விட்டு, வந்த சுவடு தெரியாமல் போய் விட்டார். பிறகு முறைப்படி காரியங்கள் ஒழுங்காக நடைபெற்றன. ராஜாவின் வலிமைக்கு அந்த நாளில் வடநாட்டார் அவ்வளவு தூரம் பயந்திருந்தார்கள்.  பட அதிபர்களும் நடித்தனார் எஸ். கே. மொய்தீன், எம். சோமசுந்தரம், கேசவலால் காளிதாஸ் சேட் ஆகிய சண்முகானந்தா டாக்கீசின் படாதிபதிகளும் மேனகாவில் எங்களோடு நடித்தது படத்திற்கு ஒரு தனிச் சிறப்பினைத் தந்தது. சோமு, இன்ஸ்பெக்டர் சஞ்சீவி ஐயராக நடித்தார். எஸ். கே. டாக்டராகவும், ‘கேசவலால் சேட், வராக சாமி காரில் அடிபட்ட இடத்திற்கு வரும் வணிகராகவும் நடித் தார்கள். இவர்களே யெல்லாம் நடிப்பதற்குத் துரண்டியவரே ராஜாதான். இன்ஸ்பெக்டர் சஞ்சீவி ஐயர் கொஞ்சம் பெரிய பாத்திரம். நடிப்புத் துறையில் சிறிதும் பழக்கமில்லாத சோமு அவர்களே இவ்வேடம் தாங்கச் செய்து வெற்றிகரமாக நடிக்க வைத்த ராஜாவை எல்லோரும் புகழ்ந்தார்கள்.  முப்பதே நாட்களில் படம் முடிந்தது படப்பிடிப்பு மிக விரைவாக நடைபெற்றது. இன்றைய நிலையைப்போல் ‘டீ’ வராத சண்டையோ, கார் வராத தாமதமோ, வேஷம் போடாத தடங்கலோ, செட்டிங் தயாராகாத தொல்லையோ எதுவும் மேனகா படப் பிடிப்பில் ஏற்படவில்லை. நடிகர்கள் பெரும்பாலும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள். டைரக்டர் பூரணமாக ஒத்துழைத்தார். பெண் நடிகையரும் எவ்விதக்குழப்பமும் செய்யவில்லை. முப்பதே நாட்களில் மேனகா படப் பிடிப்பு முடிந்தது. ஏறத்தாழ இரண்டு மாத காலம் பம்பாயில் தங்கினோம். மேனகா படப்பிடிப்பு முடிந்து, நவம்பர் 9ஆம் நாள் நாங்கள் பம்பாயிலிருந்து தமிழகத்துக்குப் புறப்பட்டோம். அப்போது எங்களை வழியனுப்ப ரயில் நிலையத்துக்கு வந்த ராஜா, இரு கரங்களையும் மேலே உயர்த்தியபடி கண்களில் நீர் பெருக,   “டேய் பசங்களா, தொழில்நேரத்தில் உங்களைக் கோபமாக ஏதாவது திட்டியிருப்பேன்; தாறுமாருகப் பேசியிருப்பேன் என்ன தவறு செய்திருந்தாலும் மறந்திடுங்கடா!” என்று கூறியதை எண்ணும்போது இன்றும் என் விழிகளில் நீர் பெருகுகிறது! இத்தகைய வீர நடிக ராஜா 1944 நவம்பர் 24இல் கோவையில் மாரடைப்பினால் மாண்டார் என்ற செய்தி கேட்டு நாங்கள் எல்லாம் கண்ணிர் விட்டோம். வியப்பென்னவென்றால் தமிழ் நாட்டிலிருந்து வடநாடு சென்று, திரையுலகில் முப்பதாண்டு காலம் தனியரசு செலுத்திய அந்தக் கலைச்செம்மல் - வீரத் தமிழனின் மரணச்செய்தி எந்தப்பத்திரிகையிலும் முக்கியத்துவம் பெறவில்லை. தமிழன் என்ற இன உணர்வும் எழுச்சியும் இந்த நைந்த தமிழகத்திற்கு என்றுதான் வருமோ என்று அன்றே ஏங்கினேன்.          கம்பெனி நிறுத்தம்   நவம்பர் 11ஆம் நர்ள் எல்லோரும் ஈரோட்டுக்குத் திரும்பினோம். மேனகா படத்திற்காக எங்களுக்கு மொத்த வருவாய் பதினாலாயிரம் ரூபாய்கள். அதில் நடிகர்களுக்கும் ஏனைய தொழிலாளர்களுக்கும் கொடுத்ததுபோக எங்கள் நால்வரின் உழைப்புக்கு எண்ணாயிரம் ரூபாய்கள் மிஞ்சியது. கம்பெனியைத் தொடர்ந்து நடத்தப் பெரியண்ணா விரும்பவில்லை. நாடகசாலை களெல்லாம் பேசும் படக்காட்சி சாலைகளாக மாறிக் கொண்டிருந்தன. வாடகை பன்மடங்கு உயர்ந்து விட்டது. நெடுங்காலம் நாடக எந்திரத்தில் சிக்கிக் கொண்டு சுழன்று வந்த எங்கள் வாழ்க்கையில், சினிமா உலகம் சிறிது சாந்தியை உண்டாக்கியது. இந்நிலையில் மீண்டும் தொல்லையில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பது நல்லது என்றே தோன்றியது. எங்கள் குடும்பத்திலும் சில அவசியமான காரியங்கள் நடைபெற வேண்டியிருந்தன. எல்லாவற்றையும் உத்தேசித்து 1935 நவம்பர் 11ஆம் தேதியோடு கம்பெனியைக கலைத்துவிட்டு நாகர்கோவிலுக்குப் போக திட்ட மிட்டார் பெரியண்ணா. நடிகர்கள் எங்களிடம் விடை பெற்றுக் கொண்டு பிரிந்தபோது, எங்கள் கண்கள் கலங்கின. மீண்டும் கம்பெனி துவக்குவோம் என்ற நம்பிக்கை சிறிதும் இல்லாததால் துக்கம் தாங்க முடியவில்லை.  தேர்தல் பிரசாரம் அந்தச் சமயத்தில் காங்கிரஸ், சட்ட சபையைக் கைப்பற்றும் முதல் தேர்தல் இந்தியா முழுவதும் நடைபெற்றது; ஈரோட்டுப் பகுதியில் பழைய கோட்டை பட்டக்காரர் திரு நல்லதம்பிசக்கரை மன்றாடியார் காங்கிரஸ் சார்பிலும், அவருக்குப் போட்டியாகக் குட்டப்பாளையம் திரு கே. எஸ். பெரியசாமிக் கவுண்டரும் நின் றார்கள். திருமதி கே. பி சுந்தராம்பாள் அம்மையார், காங்கிரஸ் சார்பில் தீவிரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள். நாங்கள் பம்பாயிலிருந்து திரும்பியதும் அவர்களை ஈரோட்டில் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் தம்முடன் என்னைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவேண்டுமென்று விரும்பினார்கள். திரு ஈஸ்வரன், திரு முத்துக்கருப்பன் செட்டியார், குழந்தைவேலு செட்டியார்முதலிய காங்கிரஸ் தலைவர்கள் இதை ஆமோதித்தார்கள். ஈரோடு ஈஸ்வரன் சிறந்த தேச பக்தர். நாங்கள் முதன் முதல் ஈரோட்டுக்குச் சென்ற காலத்தில் நெருங்கிப் பழகியவர். முற்போக்கான லட்சியங்களைக் கொண்டவர். நாங்கள் பம்பாய் சென்றபோது அவரையும் எங்களுக்குத் துணையாக அழைத்துச் சென்றிருந்தோம். எல்லோரிடமும் இனிய முறையில் பழகுபவர். அவருடைய வேண்டுதலைப் புறக்கணிக்கப் பெரியண்ணாவால் இயலவில்லை. எனவே பெரியண்ணாவும் இதற்கு ஒப்புதல் தந்து, நாகர்கோவில் பயணத்தை இரண்டு நாட்கள் ஒத்திப்போட்டார், நான் கே. பி. எஸ். அவர்களுடன் கிராமம் கிராமமாகச் சுற்றித் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டேன்; நான் பாடுவேன். கே. பி. எஸ். அவர்கள் பேசுவார்; கே.பி. எஸ். பாடினால், நான் பேசுவேன். இறுதியில் கே.பி. எஸ். மஞ்சள் பெட்டியின் மகிமையைப் பற்றிச் சில வார்த்தைகள் பேசுவார். இப்படியே ஈரோடு தாலுக்காவில் பல கிராமங்கள் சுற்றினோம், அப்போது கே. பி. எஸ். அவர்கள் பேசிய ஆவேசப் பேச்சை இன்னும் என்னல் மறக்க முடியவில்லை. கொடுமுடிவரை போய் சுந்தராம்பாள் அம்மையாரிடம் விடை பெற்றுக் கொண்டு திரும்பினேன்.  பிரியா விடை 19ஆம் தேதி நாகர்கோவிலுக்குப் பயணம் என்பது உறுதி செய்யப்பட்டது. எங்களிடமிருந்த சீன் சாமான்களையெல்லாம் அருகிலுள்ள பவானி கொட்டகையில் கட்டி வைக்க ஏற்பாடு செய்தோம். உடைகள் வைக்கும் பெட்டி, புத்தகப் பெட்டி எல்லாமாகப் பதினறு பெரிய பெட்டிகள் இருந்தன. அவற்றை எங்கள் நண்பரும், சமய சஞ்சீவியுமான கிட்டு ராஜூவிடம் ஒப்படைத்தோம். மற்றும் சில சாமான்களை சீன் வேலையாட்களுக்குக் கொடுத்தோம். எல்லா வேலைகளும் முடிந்தன. புறப்படும் நாள் காலையில் பெரியார் ஈ. வே. ரா. அவர்களிடம் விடைபெறச் சென்றோம், நாங்கள் கம்பெனியை நிறுத்தப் போகிறோம் என் பதை அவர் எதிர்பார்க்கவே இல்லை. செய்தியைக் கேட்டதும் மிகவும் வருந்தினார்.  “இனிமேல்தான் உங்கள் நாடகக் குழுவுக்கு நல்ல எதிர் காலம் இருக்கிறது. இந்த நல்ல சமயத்தில் கம்பெனியை நிறுத்துவது சரியல்ல. அவசியமானல் சில மாதங்கள் ஒய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் கம்பெனியைத் தொடர்ந்து நடத்துங்கள். இதை என்னுடைய அறிவுரையாக ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று பரிவோடு கூறினார். மற்றும் ஈரோட்டிலிருந்த எங்கள் நண்பர்கள் அனைவரிடமும் விடைபெற்றுகொண்டு அன்று பகல் ரயிலில் புறப்பட்டு மறுநாள் இரவு ஏழு மணியளவில் நாகர் கோவில் வந்து சேர்ந்தோம். எங்கள் நாடக வாழ்க்கையில் ஒரு பகுதி முடிந்தது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது.  பெரியண்ணாவுக்கு நாடக வாழ்க்கையில் அலுப்புத் தட்டி விட்டது. 1918 முதல் 1935 வரை பதினேழு ஆண்டுகள் ஒய்வின்றி உழைத்ததின் பலனை எண்ணிப் பார்த்த பிறகு அவருக்கு நாடகம் என்றாலே வேப்பங்காயாகிவிட்டது. படத்தில் கிடைத்த சொற்ப ஊதியத்தையும் பாழாக்கி விட மனமின்றி வேறுதொழில்களில் ஈடுபட முயற்சித்தார். படத்தில் எங்களுக்குக் கிடைத்த தொகையைக் கொண்டு அடகு வைத்திருந்த நிலத்தை மீட்டோம்.  தங்கையின் திருமணம் தங்கை சுப்பமாளுக்கு வரன் தேடும் முயற்சியில் ஈடுபட்டோம். நாடகக்காரர்களின் குடும்பத்தில் பெண் கொள்ளப் பெரும்பாலோர் விரும்பவில்லை. நாகர்கோவிலுக்கு மூன்றாவது மைலிலுள்ள சுசீந்திரம் அக்கரையில் தங்கைக்குப் பொருத்தமான வரன் கிடைத்தார். மாப்பிள்ளைக்குத் தாய் தந்தை இல்லை. தமையனும் தமக்கையும் முன்னின்று பேச்சு வார்த்தைகளை முடித்தார்கள். 1936 பிப்ரவரி 2 ஆம் தேதி சுப்பையாபிள்ளைக்கும், சுப்பம்மாளுக்கும் திருமணம் நடந்தேறியது.  தங்கையின் திருமணத்திற்கான செலவுகள் போகமீதியிருந்த் சொற்பத் தொகையைக் கொண்டு ஒரு சிறிய ஷராப் கடை வைக்க ஏற்பாடு செய்தார் பெரியண்ணா. நாகர்கோவில் மணி மேடையின் பக்கம் ஷராப் கடை தொடங்கப் பெற்றது.  மேனகா படம் வெளி வந்தது. அமோகமான வசூல், எங்கள் நால்வருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. பத்திரிகைகளில் வெளி வந்த விமர்சனங்களையெல்லாம் ஆர்வத்தோடு வாங்கிப் படித்தேன். திருநெல்வேலியில் மேனகா திரையிடப் பெற்றது. நாங்களும் என். எஸ். கிருஷ்ணனும் சென்று கலந்துகொண்டோம். இடைவேளையில் எங்களைப் பேசச் சொல்லி ரசிகர்கள் கூச்சலிட்டார்கள். நானும் என்.எஸ். கிருஷ்ணனும் ரசிகர்களுக்கு நன்றி கூறிப் பேசினோம். கலைவாணர் என்.எஸ். கிருஷணன் தொடர்ந்து படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். எனக்கும் தம்பி பகவதிக்கும் தனித்தனியாகச் சிலரிடமிருந்து படத்தில் நடிக்க அழைப்புக்கள் வந்தன. பெரியண்ணா எங்களைப் பிரித்து அனுப்ப விரும்பவில்லை. நாங்களும் அப்படி போக விரும்பவில்லை. எனவே தொடர்ந்து நடிக்க இயலாது போயிற்று.  நண்பர்கள் வற்புறுத்தல் சில மாதங்கள் ஒடிமறைந்தன. உழைப்பினிலே இன்பம் கண்ட எங்கள் மூவருக்கும் சும்மா இருப்பது கஷ்டமாக இருந்தது. பெரியார் ஈ. வே. ரா. அவர்கள் மீண்டும் கம்பெனியைத் தொடங்குமாறு வற்புறுத்தியதாக ஈரோட்டிலிருந்து நண்பர் ஈஸ்வரன் எழுதியிருந்தார். எங்கள் மீது அன்பு கொண்ட மற்றும் பல நண்பர்கள் நாடகக்குழுவை நடத்தியே தீரவேண்டுமென அன்புக் கட்டளைகள் விடுத்தனார். எங்கள் பால் மாருத அன்பு கொண்ட கலை வள்ளல் எட்டையபுரம் இளைய ராஜா திரு காசிவிசுவநாத பாண்டியன் மீண்டும் குழுவைத் தோற்றுவிக்குமாறு அன்புடன் வேண்டினார். இரவு நேரங்களில் எங்களுக்குச் சரியான உறக்கம் இல்லை. இராமாயணம், மகாபாரதம், முதலிய நாடகங்களையெல்லாம் பல்வேறு நூல்களைக்கொண்டு நன்கு ஆராய்ந்து புதுமுறையில் இந்த ஓய்வு நாட்களில் எழுதி முடித்தோம். நாடகக் கம்பெனியைத் தொடங்குமாறு நாங்களும் பெரியண்ணாவை வேண்டினோம். எங்கள் சோர்வுற்ற நிலையைக் கண்டு அவரது மனமும் மாறி யது. வாழ்ந்தால் நாடகத் துறையில் வாழ்வது, வீழ்ந்தாலும் இத்துறையிலேயே வீழ்வது என்ற முடிவுடன் நாகர்கோவிலி: லிருந்து புறப்பட்டோம்.    மறு பிறப்பு   சுமார் ஆறுமாத கால ஓய்வுக்குப் பின்னார் புதிய உற்சாகத் தோடு கம்பெனியைத் துவக்கினோம். 1936 மே மாதம் 19ம் நாள் மீண்டும் ஈரோட்டிலேயே கம்பெனி புனார்ஜென்மம் எடுத்தது. எங்கள் குழுவிலிருந்த நடிகர்கள் பெரும்பாலோரும் வேறு கம்பெனிகளுக்குச் செல்ல மனமின்றி இருந்ததால் கம்பெனியை மீண்டும் தோற்றுவிப்பதுஎளிதாக இருந்தது. பழைய நடிகர்கள் பலரும் வந்து சேர்ந்தார்கள்.  எங்கள்மீது அன்புகொண்ட பெரியார் ஈ.வே. ரா. அவர்கள் விளம்பரச் சுவரொட்டிகளைத் தம் அச்சகத்தில் இலவசமாகவே அடித்துக் கொடுத்து உதவினார்.  டாக்டர் கிருஷ்ணசாமியின் நட்பு இந்தச் சந்தர்ப்பத்தில் 1934 முதல் எங்களோடு நட்புரிமை பூண்ட டாக்டர் கிருஷ்ணசாமி எனக்குப் பெரிதும் உதவினார். 1929 முதலே வலது கையில் எனக்கு ஒரு வலி ஏற்பட்டிருந்தது. அந்த வலிக்கு ஊசி போட்டுக் கொள்வதற்காக நண்பர் ஈஸ்வரன் எனக்கு டாக்டரை அறிமுகப்படுத்தினார். அது முதல் டாக்டர் சிருஷ்ணசாமிக்கும் எனக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. உடன் பிறந்த சகோதரரைப்போல் எண்ணி, டாக்டர் எனக்குச் சிகிச்சையளித்தார். மருந்துக் கூடப் பணம் பெறாமல் தாமே அனைத்தும் செய்தார். டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு பொதுவுடமை வாதி. தோழர் ஜீவா, பி. இராமமூர்த்தி, பெரியார் ஈ வே. ரா. ஆகியோருடன் தொடர்புடையவர். மேனகா படத்திற்காக தாங்கள் பம்பாய்சென்றிருந்தபோது அவரும்பம்பாய்க்குவந்திருந் தார், நாங்கள் கம்பெனியை நிறுத்தியபோது மிகவும் வருந்திய  வர்களில் டாக்டரும் ஒருவர். எனவே இப்போது மீண்டும் கம்பெனியைத் தொடங்கியதால் அவர் உற்சாகத்தோடு தேவையான உதவிகளைச் செய்தார்.  கொட்டகை வாடகை, விளம்பரம் முதலிய செலவுகளுக்குப் பயந்து பெரிய நகரங்களுக்குச் செல்லவில்லை. சிறிய ஊர்களுக்கே சென்றுவந்தோம். இம்முறை கம்பெனி முன்னேறிச் செல்லாவிட்டாலும் பின்னோக்கிப் போகவில்லை. நம்பிக்கையளிக் கும் முறையில் நடை பெற்றுவந்தது.  ஜூபிடர் அழைப்பு தாராபுரத்தில் நாடகம் நடத்திக் கொண்டிருக்கும் பொழுது மேனகா படத்தில் பங்காளிகளாக இருந்த எஸ். கே. மொய்தீனும், எம்.சோமசுந்தரமும் வந்தார்கள். தாங்கள் ஜூபிடர் பிகசர்ஸ் என்னும் பெயரால் ஒரு படக் கம்பெனியைத் துவக்கியிருப்பதாகவும் சந்திர காந்தா நாடகத்தைப் படமெடுக்கப் போவதாகவும் கூறினார்கள். அப்போது நாங்கள் சந்திரகாந்தா நாடகத்தை நிறுத்தியிருந்தோம். என்னையும் தம்பி பகவதியையும் சுண்டுர் இளவரசனுக்கும் ராகவரெட்டிக்கும் ஒப்பந்தம் செய்ய விருப்புவதாகச் சொல்லி, அந்த நாடகத்தை ஒருமுறை பார்க்க வேண்டுமென்றும் கூறினார்கள். அப்போது சந்திரகாந்தா நாடகத்துக்குரிய காட்சியமைப்புகள் எதுவும் இல்லை. என்றாலும் அவர்கள் வேண்டுதலை மறுக்க முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு நாடகத்தைத் தாயாரித்தோம். சந்திரகாந்தா நாடகம் ஒருநாள் நடந்தது. ஜூபிடர் பிக்சர்ஸார், சந்திரகாந்தா நாவலின் ஆசிரியர் ஜே. ஆர். ரங்கராஜு முதலியோர் நாடகத்தைப் பார்த்தார்கள். நாடகம் முடிந்த பிறகு சென்னைக்குப்போய் விபரமாகக் கடிதம் எழுதுவதாகக் கூறிச் சென்றார்கள். சந்திர காந்தாவுக்கு டைரக்டராக ராஜா சாண்டோவையே ஏற்பாடு செய்திருந்தார்கள்.அவர் எங்கள் நால்வரையும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனையும் அவசியம் ஏற்படு செய்யும்படி சொல்லி யிருந்தாராம். இரண்டு மூன்று தினங்களுக்குப் பின் ஜூபிடரிலிருந்து கடிதம் வந்தது.  ராகவ ரெட்டி வேடத்திற்கு வேறு ஒருவரைப் போடும்படி படியாக ரங்கராஜு கூறிவிட்டாரென்றும், சுண்டுர் இளவரசனுக்கு மட்டும் என்னைப்போட உறுதி செய்திருப்பதாகவும் அதற்குச் சம்மதிக்க வேண்டுமென்றும் எழுதியிருந்தது. பெரியண்ணாவுக்கு என்னைத் தனியே அனுப்ப விருப்பமில்லை.  “வுண்முகத்தையும் பகவதியையும் அழைத்து போவ தானல் அனுப்புகிறேன். ஷண்முகத்தை மட்டும் அனுப்பிவிட்டுக் கம்பெனியை நிறுத்திவைக்க நான் விரும்பவில்லை” என்று ஜூபிடருக்குப் பதில் எழுதினார் பெரியண்ணா. எனக்கு மட்டும் ஐயாயிரம் ரூபாய்கள் கொடுப்பதாகவும் ராஜா சாண்டோ வற்புறுத்திக் கூறியிருப்பதாகவும் அவசியம் ஒப்புக்கொள்ள வேண்டுமென்றும் மீண்டும் கடிதம் வந்ததது. பெரியண்ணா இதற்கு ஒப்புக்கொள்ள மறுத்து விட்டார். வேறு வழியின்றி ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் குண்டுர் இளவரசனுக நடித்த பி.யு. சின்னப்பாவை ரூபாய் ஐநூறுக்கு ஒப்பந்தம் செய்ததாக அறிந்தோம். சின்னப்பா அவர்களுக்கு சந்தரக்காந்தாதான் முதல் படம் என்பதும், அவருடைய வளர்ச்சிக்கு அதுவே காரணமாக இருந்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.                                                      பாலாமணி - பக்காத்திருடன்   நாடகங்கள் தொடர்ந்து சிரிய ஊர்களில் நடை பெற்று வந்தன. விருதுநகரில் நாங்கள் இருந்தபோது மேனகா படத்தின் மற்றும் இரு பங்காளிகளான ஈரோடு முத்துக் கருப்பன் செட்டியாரும், கேசவலால்காளிதாஸ் சேட்டும் வந் தார்கள். வடுவூர் துரைசாமி ஐயங்காரின் பலாமணி - பக்காத் திருடன் நாவலைப் படமெடுக்கப் போவதாகவும் நாங்கள் நால் வரும் அதில் நடிக்க வேண்டுமென்றும் அழைத்தார்கள். எங்கள் நால்வருக்கும், எங்கள் குழுவிலுள்ள இன்னுஞ்சில முக்கிய நடிகர் களுக்குமாகச் சேர்த்து ஒன்பதியிைரம் ரூபாய்கள் தருவதாகக் கூறினார்கள். கம்பெனி வளர்ச்சியைக் கருதி இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டோம்.  சத்தியமூர்த்தியின் பெருந்தன்மை அப்போது பண்டித ஜவர்ஹர்லால் நேரு தமது குடும்பத்தினருடன் விருதுநகருக்கு வருகை புரிந்தார். பிரமாண்டமான ஏற்பாட்டில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. உள்ளுர் காங்கிரஸ் கமிட்டியார் விரும்பியபடி அன்று நாங்களும் நாடகத்தை நிறுத்தி னோம். நேருவுடன் சத்தியமூர்த்தி ஐயரும் சுற்றுப் பயணம் செய்தார். தேசபக்தர் சத்தியமூர்த்தி ஒரு சிறந்த கலா ரசிகர். பம்மல் சம்பந்தனார் நாடகங்களில் நடித்தவர். மேனகா படம் சென்னை யிலே திரையிடப்பட்டபோது ஒரு நாள் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். படத்தில் “வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே” என்னும் மகாகவி பாரதியார் பாடலைச் சேர்ந்திருந் தோம். இந்தப் பாடல்தான் முதன்முதலாகத் திரைப்படத்தில் பாடப் பெற்ற பாரதியார் பாடல். இந்தப் பாடலைப் படத்தில் சேர்த்திருந்தது குறித்து, சத்தியமூர்த்தி வெகுவாகப் பாராட்டி  னார். அதன் பிறகு கரூரில் ஒருமுறை நான் அவரை கே. பி. சுந்தராம்பாள் அம்மையாருடன் சந்தித்தபோது மேனகா படத் தைப் பிரமாதமாகப் பாராட்டினார். அவரோடு எனக்கு ஏற்கனவே பழக்கமிருந்ததால் அவரது வேண்டுகோளின்படி நான் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அரைமணி நேரம் பாரதி பாடல்களையும், ஜீவானந்தம் பாடல்களையும் பாடினேன். நான் பாடிக்கொண்டிருக்கும்போதே நேரு வந்துவிட்டார். அவரோடு திருமதி கமலா நேருவும் செல்வி இந்திராவும் வந்தனார். அதன் பிறகும் சில நிமிடங்கள் பாடும்படி சத்திய மூர்த்தி ஆணையிட்டார். நான் பாடிக் கொண்டிருக்கும் போதே எங்கள் நாடகக் குழுவின் சிறப்பையும் எங்கள் சமுதாய சீர் திருத்த நாடகங்கள், தேசீய நாடகங்கள் ஆகியவற்றைப்பற்றியும் நேருஜியிடம் சத்தியமூர்த்தி வெகுவாகப் புகழ்ந்து கொண்டிருந்தார். காலஞ்சென்ற தலைவர் சத்தியமூர்த்தி அவர்களின் பெருங் குணத்தைக் காட்டுவதற்காகத்தான் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டேன். நான் பாடி முடித்ததும் நேரு என்னை யழைத்து அருகிருத்திப் பாராட்டினார். என் உள்ளமெல்லாம் பூரித்தது.  பாலாமணி படம் இம்முறை படத்தில் கிடைக்கும் வருவாய் முழுவதையும் கம்பெனிக்குக் காட்சிகள், உடைகள் தயாரிப்பதிலேயே செலவிட முடிவு செய்தோம். அதற்கு வசதியாகக் கம்பெனியை எட்டைய புரம் கொண்டு சென்றோம். இளைய ராஜா அவர்களின் சொந் தக் கொட்டகையில் சாமான்களையெல்லாம் போட்டு விட்டு, வேண்டிய ஏற்பாடுகள் செய்தோம்.  சிறுவர்களை மட்டும் அவரவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தோம். காட்சி அமைப்பாளர்கள் கொட்டகையி லேயே இருந்தார்கள். கணக்குப் பிள்ளை தர்மராஜு மேற்பார்வையாளராக இருந்து, எல்லாவற்றையும் கவனித்துக் கொண் டார். பெரிய நடிகர்கள் சிலர், படத்தில் நடிப்பதற்காக எங்க ளோடு வந்தார்கள். இவர்களில் எஸ். வி. சகஸ்ரநாமம், பிரண்டு ராமசாமி, டி.என். சிவதாணு,டி.பி சங்கரநாராயணன் ஆகியோரும் இருந்தனார்.   எஸ். வி. சகஸ்ரநாமம் பாலாமணி படத்தின் கதாநாயகன் எஞ்சிட் சிங்காக நடித்தார். சாண்டோ வி. கே. ஆச்சாரி, பக்காத் திருடனாக நடித்தார். சின்னண்ணா கதை வசனம் எழுதும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மற்றவர்கள் எல்லோரும் பல பாத்திரங்களை ஏற்று நடித்தோம். என். எஸ். கிருஷ்ணனையும் இந்தப் படத்தில் நடிக்கச் செய்ய வேண்டுமென்று பெரியண்ணா வற்புறுத்தினார். படாதிபதிகள் அதன்படி என். எஸ். கே. யை யும் ஒப்பந்தம் செய்தார்கள். அவரும் எங்களோடு பாலாமணி யில் நடித்தார்.  பாவேந்தர் பாரதிதாசன் பாலாமணிக்குப் பாடல்கள் எழுதத் தமிழகத்தின் தன்னிக ரில்லாத புரட்சிக்கவினார் பாரதிதாசனை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் ஈரோட்டுக்கு வந்து எங்களோடு தங்கினார். பாரதிதாசன் பாடல்களிலே உள்ளத்தைப் பறிகொடுத்தவன் நான். பாடல்கள் எழுத அவரை ஏற்பாடு செய்யும்படி நான்தான் படாதிபதிகளிடம் வற்புறுத்தினேன். கவிஞரோடு நெருங்கிப் பழகவும் உரையாடவும் எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. உயர்ந்த மேதைகளோடு பழகுவதென்பது ஒரு அரியகலை. காலமறிந்து மென்மை யாகப் பழக வேண்டும். அவர்களைப் புரிந்து கொண்டு பழக வேண்டும். புரட்சிக் கவினார் அப்படிப் பழகி உறவாட வேண்டிய பெரிய மேதை என்பதை அந்நாளிலேயே நான் புரிந்து கொண்டேன். சின்னண்ணா டி. கே, முத்துசாமிதான் படத்தின் சங்கீத டைரக்டர். பாரதிதாசன் அவரோடு நல்ல முறையில் ஒத்துழைத்தார். பாலாமணிக்குரிய பாடல்கள் அனைத்தும் ஈரோட்டிலேயே எழுதப் பெற்றன.  திரைப்படங்களுக்குப்பாடல்கள் எழுதுவதிலே புரட்சிக்கவிஞருக்கு உற்சாகமில்லை. மற்றவர்கள் வற்புறுத்தலுக்காக ஏதோ எழுதினார். பாடல்கள் எழுத உட்காருவார், இரண்டு வரிகள் எழுதுவார். உடனே ஏதாவது இலக்கிய பேச்சு தொடங்கும். அதிலேயே மூழ்கிவிடுவார்.சுவையோடு பேசிக் கொண்டிருப்பார். பாடல்களைப் பற்றி யாராவது நினைவுபடுத்துவார்கள். “அது கெடக்குதுப்பா; எழுதினால் போச்சு. சினிமாப் பாட்டுத் தானே?"ன்று சொல்லிவிட்டு மீண்டும் பேச்சைத் தொடங்குவார்.  ஈரோட்டிலும் ஏற்காடு மலைப்பகுதியிலும் பாலாமணிக்குச் சில வெளிப்புறக் காட்சிகள் படமெடுக்கப்பட்டன.  டைரக்டர் பி. வி. ராவ்  பாலாமணியை டைரக்ட் செய்ய பி. வி. ராவ் வந்து சேர்ந்தார். அவர் ஒத்திகை பார்க்கும் முறையும், படம் எடுக்கும் விதமும் எங்களுக்கு வேடிக்கையாக இருந்தன. யார் எதைச் சொன் ஞலும் கேட்கமாட்டார். தாமே சர்வாதிகாரியாக இருந்து செய லாற்றினார். எங்களோடு நடிக்க வந்திருந்த பெண்கள் அவரிடம் அகப்பட்டுக் கொண்டு விழித்தது மிகவும் பரிதாபமாக இருந்தது. அடிக்கடி எங்களுக்குள் தகராறு நடந்து கொண்டே இருந்தது. எங்களுக்கு வந்த ஆத்திரத்தையெல்லாம் ஒருவாறு அடக்கிக் கொண்டு, 1937இல் குமாஸ்தாவின் பெண் நாடகத்தைத் தயாரித்தபோது டைரக்டர் வி.பி.வார் என்று ஒரு பாத்திரத்தைப் படைத்தோம், ராவ் செய்த அட்டூழியங்களே அந்த வார் என்னும் பாத்திரத்தின் மூலம் மக்களுக்கு விளக்கிக் காட்டி எங்கள் வயிற். றெரிச்சலைத் தீர்த்துக் கொண்டோம். சபையோர் அந்தக் காட்சியைப் பிரமாதமாக ரசித்தார்கள்.  டைரக்டர் பி.வி.ராவ் சாதாரணமாக எப்போதுமே நிதா னத்தில் இருப்பதில்லை. அரை மயக்கத்திலேயேதான் காரியங் களைச் செய்வது வழக்கம். அதே நிலையில் படத்தையும் டைரக்ட் செய்தார். நாங்கள் பம்பாயில் இருந்த அதே சமயத்தில் புளுவில் சந்திரகாந்தா, வசந்தசேனா படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. ஒருநாள் எல்லோரும் புனா சென்று ராஜாவைப் பார்த்து வந்தோம். டைரக்டர் ராவும் எங்களோடு ராஜாவைப் பார்க்க வந்திருந்தார். எல்லோரும் மகிழ்ச்சியோடு அளவளாவிக் கொண் டிருக்கும் நேரத்தில் டைரக்டர் ராஜா,  “டே பசங்களா, ராவ் ஒன்னும் தெரியாதவன்; அப்பாவி. நீங்கதான் கூட இருந்து படத்தை உருப்படியாச் செய்யனும்” என்று எங்களிடம் கூறினார். டைரக்டர் ராவிடம்,   “டே ராவ், பையன்களெல்லாம் நல்ல புத்திசாலிங்க. நீ சர்வாதிகாரம் பண்ண ஆரம்பிச்சிடாதே. அவங்களோட ஒத்துழைச்சு படத்தை ஒழுங்கா எடுக்க முயற்சி பண்ணு” என்று கூறினார். ராஜாவின் வார்த்தைகள் தீர்க்கதரிசனம் போல் இருந்தன.  பெருந் தோல்வி பம்பாயில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது எட்டையபுரம் அரண்மனைக் கொட்டகையில் கம்பெனிக்குப் புதிய காட்சிகள் தயாராகி வந்தன. பம்பாயில் எங்களுக்கு நிம்மதியே இல்லை. கம்பெனியின் வளர்ச்சிபற்றிக் கனவுகள் கண்டோம். மனத்திலேயே புதிய புதிய கோட்டைகளைக் கட்டினோம்.  அந்தேரி ராம்னிக்லால் மோகன்லால் ஸ்டுடியோவில் இரண்டு மாதம் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்றது. எப்படியோ படத்தை ஒருவாறு முடித்துக் கொண்டு திரும்பினோம். படத்தின் எடிட்டிங்'கின் போது சின்னண்ணா உடனிருப்பது நல்லதென எல்லோரும் எண்ணினோம். டைரக்டர் ராவ், பிடிவாதமாக மறுத்து விட்டார்.  நாங்கள் திரும்பிய இரண்டு மாதத்திற்குப் பிறகு பாலாமணி படம் மதுரையில் திரையிடப்பட்டது. நாங்கள் நால்வரும் போய்ப் பார்த்தோம். எங்களுக்கே மூளை குழம்பியது. எடுத்ததே மோசம். அதிலும் காட்சிகளை முன்னும் பின்னுமாக வெட்டி ஒட்டி ஒரே குளறுபடி செய்திருந்தார். பி. வி. ராவ். படத்தை முழுதும் பார்க்க மனமின்றிப் பாதியிலேயே எழுந்து வந்து விட்டோம். முதல் படம் மேனகா சிறந்த படமெனப் பரிசு பெற்றது. இரண்டாவது படம் பாலாமணி படுதோல்வி அடைந்தது.                                                சின்னண்ணா திருமணம்   பம்பாயிலிருந்து நாங்கள் திரும்பியதும் நாகர்கோவிலைச் சேர்ந்த வடிவீசுரத்தில் சின்னண்ணா டி. கே. முத்துசாமிக்கும் செல்வி கோலம்மாளுக்கும் 30.4.1937 இல் திருமணம் சிறப்பாக நடந்தேறியது.  திருமணம் முடிந்தபின் எல்லோரும் எட்டையபுரம் சென்றோம், நாடகங்கள் தொடர்ந்து நடைபெற்றன. எட்டைய புரத்திலும் கோவில்பட்டியிலும் சில நாடகங்கள் நடத்தினோம். அடுத்து, திருநெல்வேலியில் புதிய புதிய முறைகளில் பிரமாதமாக விளம்பரம் செய்து, புதிய காட்சிகளுடன் பாம்பாய் மெயில் நாடகத்தை நடந்தினோம். முன்பெல்லாம் பம்பாய் மெயில் கம்பெனியின் முக்கிய நாடகங்களில் ஒன்றாகவும், வசூலைத்தரும் நாடகமாகவும் இருந்தது. இப்போது புதிய காட்சிகளோடு நடித்தும் என்ன காரணத்தாலோ அதற்கு வசூல் ஆகவில்லை. படுமோசமாக இருந்தது. எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. நாடகங்கள் சிறப்பாக நடைபெற்றன. மனதைத் தளர விடாமல் உற்சாகத்தோடு நடித்து வந்தோம்.  தேசபக்திக்குத் தடை அப்பொழுது, நடத்தப் போகும் நாடகங்களே முன்னதாகவே அறிவிக்க வேண்டுமென ஒரு புதிய உத்திரவு கலைக்டரிடமிருந்து வந்தது. நாங்கள் நாடகங்களைக் குறித்து அனுப்பினோம். தேசபக்தி, கதரின் வெற்றி, ஜம்புலிங்கம் ஆகிய மூன்றுநாடகங்களை மட்டும் தடை செய்திருப்பதாக எங்களுக்கு அறிவிக்கப்பட்டது.  காங்கிரஸ்காரர்கள் சட்டசபையைக் கைப்பற்றி, தலைவர் ராஜாஜி முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த சமயம் அது.  தேசியவாதிகள் அமைச்சர்களாக இருக்கும் நேரத்தில் தேசீய நாடகங்களுக்குத் தடையா? எங்கள் உள்ளம் குமுறியது. திருநெல்வேலி மாவட்டத்தின் அப்போதைய கலெக்டரின் பெயர் ராமமூர்த்தி என்று நினைவு. அவருடைய போக்கைக் கண்டித்து எங்கள் சார்பில் ஜில்லா காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறை வேற்றியது. சுதந்திரச்சங்கு என்னும் பெயரால் அப்போது சென்னையில் நடைபெற்று வந்த காலணா வார இதழ், கலெக்டரின் செயலைக்கண்டித்துத் தலையங்கம் எழுதியது. கல்லிடைக்குறிச்சி எம்.எல்.ஏ. திருமதி லட்சுமி சங்கரய்யர் எவ்வளவோ முயற்சி எடுத்துக் கொண்டார். எதுவும் பயனளிக்கவில்லை. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி செலுத்துகிறது; ஆனால் மாவட்டத்தில் கலெக்டர் ஆதிக்கம் செலுத்துகிறார்! நாங்களும் என்னென்னவோ செய்து பார்த்தோம். நாடகத்தின் தடை நீங்கவே இல்லை. அப்போது விளம்பர அமைச்சராக இருந்த திரு. எஸ். ராமநாதன் எங்கள் பழைய நண்பர். நாங்கள் பெரியார் அவர்களோடு தொடர்பு கொண்ட நாள் முதலே எஸ்.ராமநாதனோடும் நெருங்கி பழகினோம். அவரும் எங்கள் தேசப்பக்தியைப் பார்த் திருக்கிரு.ர். எனவே, அவருக்குத் தனிப்பட்ட முறையில் நிலைமையை விளக்கி ஒரு நீண்ட கடிதம் எழுதினேன்.  அதற்கு அவர் ஆறுதல் கூறிப் பதில் எழுதியிருந்தார். தங்களுக்கிருக்கும் தற்போதைய அதிகாரத்தைக் கொண்டு என்ன செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்வதாக அறிவிக்கப்பட் டிருந்தது. ஆனால் எதுவும் நடைபெறவில்லை. தேசபக்தியையும் கதரின் வெற்றியையும் திருநெல்வேலி மாவட்டத்தின் எந்த ஊரிலும் நடத்த முடியாமலை போய் விட்டது. அப்போது எட்டையபுரம் இளைய ராஜா அவர்களின் கம்பெனியிலிருந்த சில நடிகர்கள் எங்கள் குழுவில் சேர்க்கப் பெற்றார்கள், அவர்களில் டி. வி. நாரயணசாமி, பி. எஸ் வேங்கடாசலம், எஸ். பி. வீராச்சாமி ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.  சுசீந்திரம் கோமதி முதலாவதாக எங்கள் கம்பெனியில் இருந்த நடிகை, நகைச் சுவை நடிகர் எம். ஆர். சாமிநாதனின் தங்கை மீனாட்சி. இவ ளுக்குப் பின் நீண்ட காலமாகப் பெண்கள் யாரையும் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்ற முடிவோடு இருந்தோம். ஆனால் 1936இல் பாலாமணி படம் முடிந்து மீண்டும் குழுவைத் தொடர்ந்து நடத்தியபோது சுசீந்திரம் கோமதி எங்கள் குழுவிலே சேர்க்கப் பெற்றார், இவர் நன்றாகப் பாடும் திறமை பெற்றவர். இவருடைய இசைஞானத்துக்காகவே இவரை விரும்பிச்சேர்த்துக் கொண்டோம். வயது வந்த பெண்ணாக இருந்ததால் வந்த உடனேயே முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்தார். ஏறத்தாழ அப்போது நடைபெற்ற எல்லா நாடகங்களிலும் கதாநாயகி வேடம் இவருக்கே கொடுக்கப்பட்டது. எட்டையபுரம், கோவில் பட்டி, திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சி, நாகர்கோவில் ஆகிய ஊர்களில் ஏறக்குறைய ஏழுமாத காலம் இவர் கம்பெனியில் நடித்தார். நாகர்கோவிலில் இவர் தாமாகவே விலகிக் கொண்டார். நல்லமுறையில் நடித்து வந்த இவர் திடீரென்று விலகியது எங்களுக்குக் கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. நாகர்கோவிலிலிருந்து திண்டுக்கல் வந்து சேர்ந்தோம்.  ரங்கராஜு நாடகங்கள் நிறுத்தப்பட்டன அப்போது பெரும்பாலும் ரங்கராஜுவின் நாடகங்களே எங்கள் குழுவில் அதிகமாக நடைபெற்று வந்தன. இராஜாம்பாள் நாடகத்திற்கு இருபத்தைந்து ரூபாயும், இராஜேந்திரன், சந்திர காந்தா, மோகனசுந்தரம் ஆகிய நாடகங்களுக்கு நாடகம் ஒன்றுக்கு முப்பது ரூபாயும் ராயல்டியாகக் கொடுத்து வந்தோம். வசூல் மிக மோசமாக இருந்த நிலையில் இந்தத் தொகையைக்கொடுப்பது மிகவும் சிரமமாக இருந்தது.  நாவல் நாடகங்களுக்குச் சில சமயங்களில் ஐம்பது, அறுபது ஆான் வசூலாயிற்று. எனவே பெரியண்ணா ரங்கராஜாவுக்குக் கடிதம் எழுதினார். சுமார் பத்தாண்டுகளாகத் தங்கள் நாட கங்களை நாங்கள் நடித்து தருகிறோம்.இதுவரை பல ஆயிரங்களை ராயல்டியாகக் கொடுத்திருக்கிறோம். அதையெல்லாம் உத் தேசித்து. இப்போது வசூல் இல்லாமல் கஷ்டப்படும் நிலையில், ராயல்டி தொகையைக் கொஞ்சம் குறைத்துப் பெற்றுக் கொள்ள வேண்டும். பம்மல் சம்பந்த முதலியார் நாடகங்களுக்குக் கொடுப்  பதுபோல நாடகம் ஒன்றுக்குப் பத்து ரூபாய் தாங்கள் நாடகங் களுக்கு அனுப்பி விடுகிறோம். தயவு செய்து அனுமதியுங்கள்” என்று உருக்கமாக எழுதினார். ரங்கராஜு அதற்கு எழுதிய பதில் சிறிதும் அனுதாபம் இல்லாததாகவும் கடுமையானதாகவும் இருந்தது.  “ராயல்டித் தொகையைச் சிறிதும்குறைத்துக் கொள்ளமுடி யாது. முழுத்தொகையையும் முன் பணமாக அனுப்பிவிட்டுத் தான் நாடகம் நடத்த வேண்டும். அதற்கு இஷ்டமில்லா விட் டால் என் நாடகத்தை நிறுத்திவிடலாம்.”  இவ்வாறு எழுதப் பெற்றிருந்த ஜே. ஆர். ரங்கராஜூ அவர்களின் கடிதத்தைக் கண்டதும் எங்கள் மனம் சொல்லொன வேதனை அடைந்தது. நாங்கள் நால்வரும் நீண்டநேரம் விவா தித்தோம். இறுதியாக இனிமேல் என்றுமே ரங்கராஜுவின் நாடகங்களை நடிப்பதில்லை யென்று முடிவு செய்தோம். அதே வேகத்தில் புதிய சமுக நாடகங்களை நடத்தத் திட்டமிட்டோம்.  தலைவர் காமராஜ் தலைமை அரசியல் தலைவர்கள் பல்வேறு கட்சியினராயினும் அவர்கள் அனைவருடனும் எங்களுக்கு நெருங்கிய பழக்கமுண்டு. என்னைப் பொறுத்தவரையில் எனக்கென்று சில லட்சியங்களைக் கடைப் பிடிப்பவன் நான். அவற்றுக்கு மாருன கருத்துக்கொண்டவர் களோடும் நான் பகைமை கொள்வதில்லை. பண்புடனேயே பழகு வேன். தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களிடம் எனக்குப் பெரு மதிப்புண்டு. அந்த வகையில் தலைவர் காமராஜ் அவர்களிடமும் மட்டப்பாறை வெங்கட்ராமையர் அவர்களிடமும் மிகுந்த அன்பு கொண்டிருந்தேன். தலைவர் காமராஜ் அவர்களைத் திண்டுக்கல்விலுள்ள எங்கள் நண்பர் திரு கருப்புச்சாமி அவர்களின் கதர் கடையிலேயே அடிக்கடி சந்தித்து உரையாடியதுண்டு. திண்டுக்கல் தங்கரத்தினம், நீராம் சேஷன், நகரமன்றத் தலைவர் பி. வி. தாஸ், மணிபாரதி, கணேசய்யர் போன்ற தேசீயப் பற்று டைய நண்பர்களோடெல்லாம் எங்களுக்குப் பழக்கமுண்டு. பொதுவாக எங்களுக்கு நண்பர்கள் அதிகம் நிறைந்த நகரங்களில் திண்டுக்கல்லும் ஒன்று எனச் சொல்லலாம்.  ‘தேசபக்தி’ நாடகத்தைப் பார்வையிட்டு ஆசி கூறும்படி தலைவர் காமராஜரையும், மட்டப்பாறை வெங்கட்ராமையரை யும் அழைத்திருந்தோம். 20. 11- 37ல் நடந்த தேசபக்தி நாடகத் ‘திற்குத் தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். மட்டப்பாறை வெங்கட்ராமையரும் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். இருவரும் நாடகத்தை மிகவும் பாராட்டினார்கள். அத்துடன் நற்சான்றுகளும் எழுதித் தந்து உதவினார்கள். அந்த நாளில் எங்களுக்கு வசூல் இல்லாது போனலும் இது போன்ற பாராட்டுக்களே மேன்மேலும் இத் துறையில் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்து வந்தன.  18. 12. 37ல் பொதுவுடமைக் கட்சிப் பத்திரிக்கையான ஜனசக்திவார இதழுக்காக சந்திரகாந்தா நாடகம் நடிக்கப் பட்டது. அன்று தோழர் ஜீவானந்தம் தலைமை தாங்கிப் பாராட்டினார், அவரது கம்பீரமான ஊக்கம், உணர்ச்சி நிறைந்த பேச்சு மேலும் எங்களை உற்சாகப்படுத்தியது.  சின்னண்ணாவின் நாடகத் திறமை எங்கள் நால்வரில் சின்னண்ணா டி. கே. முத்துசாமி அவர்களுக்கு நாடகம் புனையும் ஆற்றல் நன்கு அமைந்திருந்தது. அப்போது அன்னபூர்ணா மந்திரம் என்னும் மலையாள நாவல் ஒன்றை நாங்கள் படித்துக்கொண்டிருந்தோம். அது வங்காளியிலிருந்து மொழி பெயர்க்கப் பெற்ற கதை. அந்தக்கதையின் அமைப்பு எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தியிலிருந்து மொழி பெயர்த்ததாக மலையாள ஆசிரியர் குறிப்பிட்டிருந்தார். எனவே நாங்கள் ‘அன்ன பூர்ணிகா மந்திர்’ என்னும் அதன் இந்திமொழி பெயர்ப்பை வரவழைத்துப் படித்தோம். நாகர்கோவிலில் ஒய்வாக இருந்த நாட்களில் நானும்சின்னண்ணாவும் ஒரளவு இந்தி படிக்கக் கற்றுக் கொண்டோம். மலையாளம், இந்தி ஆகிய இரு மொழி பெயர்ப்புகளின் துணையோடு அந்தக் கதையைத் தமிழ் நாடகமாக எழுதி முடித்தார் சின்னண்ணா. குமாஸ்தாவின் பெண் என்று அந்த நாடகத்திற்கு பெயரிட்டார்.  குமாஸ்தாவின் பெண் எங்கள் நாடக வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க ஒரு முக்கிய சிறப்பு உண்டு. ஒரு எழுத்தாளருடைய நாவலையோ, நாடகத் தையோ அவரது அனுமதியின்றி நாங்கள் நடித்ததே இல்லை. எழுத்தாளருக்குச் சிறப்பளிக்க வேண்டுமென்பது எங்கள் லட்சி யங்களில் ஒன்று. எனவே ‘குமாஸ்தாவின் பெண்’ நாடகத்தை எழுதி முடித்ததும் அந்தக் கதையை எழுதியவரைத் தேடி அவரிடம் அனுமதிபெற மிகவும் சிரமப்பட்டோம். இந்தி மலையாள நூல்களில் அதன் மூல ஆசிரியரின் முகவரி இல்லை. ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்றை வெளியிட்ட கல்கத்தா நூல் நிலையத்தின் முகவரி இந்தி நூலில் இருந்தது. எனவே அந்நூல் நிலையத்திற்கு எழுதிக் கதாசிரியரின் முகவரியைப் பெற்றோம். அதன்பிறகு அந்நூலின் ஆசிரியை கிருபாதேவிக்கு ஒரு தொகை கொடுத்து, அதன் உரிமையைப் பெற்று நாடகத்தை அரங் கேற்றினோம். 1937 டிசம்பர் 25ந் தேதி திண்டுக்கல்லில் *குமாஸ்தாவின் பெண் நாடகம் சிறப்பாக அரங்கேறியது. நாடக நுணுக்கங்களை நன்கறிந்த புலவர்கள் பலர் இத்தகையை ஒரு அற்புதமான நாடகம் தமிழ் நாடக உலகில் இதுவரை நடை பெற்றதில்லையெனப் புகழ்ந்தார்கள். பிரசித்தி பெற்ற தேசீயக வி க. ஆ. ஆறுமுகனார் இந் நாடகத்திற்கு அருமையான பாடல் களைப் புனைந்து தந்தார்.  கவி ஆறுமுகனார் கவி ஆறுமுகளுர் அவர்களைப்பற்றி இங்கே சில வார்த்தை கள் குறிப்பிடுதல் கடமையென எண்ணாகிறேன். ஆறுமுகனார் பழம் புலவர்களின் அடிச்சுவட்டிலேயே பாடல்கள் புனைபவர். யாப்பிலக்கண விதிமுறைகளை முறையாகப் படித்தவர் மகாகவி பாரதி யிடம் அளவற்ற பக்தியுடையவர். யாரதி படிப்பகம் என் னும் பெயரால் தாம் வாழும் இராமலிங்கம்பதியிலே ஒரு படிப்ப கம் நிறுவி, நிரந்தரமாக ஹரிஜனத் தொண்டு புரிந்து வருபவர். விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறை சென்ற நல்ல தியாகி. சிறந்த பண்புடையவர். குமாஸ்தாவின் பெண் நாடகத்திற்குப் பாடல்கள் எழுதியதன் மூலம் இவர் எனக்கு அறிமுகமானார். அதன் பின் தயாரான வித்தியாசாகரர், மற்றும் பல நாடகங்களுக்கும், ஏற்கனவே நடைபெற்று வந்த பழைய நாட கங்களுக்கும் இவர் பாடல்கள் புனைந்தார். எங்கள் சமுதாய சீர் திருத்த நாடகங்களைப் பற்றி ஏராளமான கவிதைகள் பாடியிருக் கிறார். எனக்கு எழுதும் கடிதங்கள் பலவற்றையும் இவர் கவிதை யாகவே எழுதுவார். என்னுடன் ஆண்மீக உறவு கொண்டுள்ள நண்பர்களில் இவரும் ஒருவர்.  கே. ஆர். சீதாராமன்  குமாஸ்தாவின் பெண் நாடகத்திற்கு அமோகமான ஆதரவு கிடைத்தது. அப்போது எங்கள் குழுவில் முக்கிய பெண் வேடங்களைப் புனைந்து வந்தவர் கே. ஆர். சித்தாராமன் என்ற இளைஞர். இவர் நன்றாகப் பாடும் திறமையுடையவர். மிகுந்த சுறுசுறுப்புள்ளவர். குமாஸ்தாவின் பெண்ணில் கதா நாயகி சீதையாக இவர் நடித்தார். ரசிகர்களில் பலர் இவரைப் பெண்ணென்றே எண்ணி ஏமாற்றம் அடைந்தனார். எல்லா நாடகங்களிலும் கதாநாயகியாக இவர் திறம்பட நடித்தார். எனக்கு மகளாகவும், மனைவியாகவும், மாதாவாகவும் நடித்த பெருமை இவருக்குண்டு. நடிப்பதில் மட்டுமல்ல, நாடகத்தை மேடையில் உருவாக்குவதிலும் இவருக்கு நிறைந்த ஆற்றல் உண்டு. எங்கள் நாடகக் குழுவில் சட்டாம்பிள்ளை ஸ்தானத்தில் இவர் நீண்ட காலம் பணி புரிந்திருக்கிரு.ர். நாடகம் சிறப்பாக நடைபெற வேண்டு மென்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர். பெண்களே பெண் பாத்திரங்களை நடிக்கத் தொடங்கியபின் பல் வேறுப்பட்ட ஆண் பாத்திரங்களையும் தாங்கி நடித்துப் புகழ் பெற்றார் இவர்.  1948இல் நாங்கள் கோயமுத்துTரில் இருந்தபோது பில்ஹணன் படப்பிடிப்பிற்காக நான்இரவு நேரங்களிலும் ஸ்டுடியோ வில் இருக்க நேர்ந்தது.அந்தச் சமயங்களில் சேர்ந்தாற்போல் பதி னேந்து நாட்கள் எனக்குப் பதில் ஒளவையார் வேடத்தை, சீதா ராமன் ஏற்றுத் திறம்பட நடித்தார். நானே சிலநாட்கள் அவரது ஒளவையார் நடிப்பைச் சபையில் வீற்றிருந்து பார்த்து பெருமிதம் அடைந்தேன். 1955இல் நாங்கள் தயாரித்த இராஜராஜ சோழன் நாடகத்தில் கதானாயகன் வீர விமலாதித்தனாக நடித்து மங்காத புகழைப் பெற்றார் கே. ஆர். சீத்தாராமன். இவருடைய நாடக நடிப்பினைப் பாராட்டித் தமிழ்நாடு சங்கீத நாடகச் சங்கம் இவருக்குக் கலைமாமணி என்ற விருதினை வழங்கியுள்ளது.   எம். எஸ். திரெளபதி  திண்டுக்கல் முடிந்து தாராபுரம் வந்தோம். தாராபுரத்தில் நல்ல வசூலாயிற்று. ஆனால் நகரசபை அதிகாரிகளின் தொந்தரவு அதிகமாக இருந்தது. அதனால் நீண்ட காலம் நாடகம் நடத்த முடியாமல் திருப்பூருக்கு வந்தோம். திருப்பூரில் எம். எஸ். திரெளபதி எங்கள் குழுவில் சின்னஞ்சிறுமியாக வந்துசேர்ந்தாள். அதற்கு முன்பும் எங்கள் குழுவில் சுசீந்திரம் கோமதி, மீனாட்சி முதலிய நடிகையர் இருந்தார்கள் என்பதை முன்பே கூறியிருக்கிறேன். என்றாலும், நீண்டகாலம் பாலர் குழுவில் இருந்த முதல் தர நடிகையாக எம். எஸ். திரெளபதியைத்தான் குறிப்பிட வேண்டும். திரெளபதி நன்றாக பாடுவாள். அவள் முதன் முதலாகப் போட்ட வேடம் பபூன். ‘மஞ்சள் குருவி ஊஞ்ச லாடுதே’ என்னும் பாடலைப் பபூகை வந்து அவள் பாடும் போது சபையோர் தம்மை மறந்து கைதட்டி ஆரவாரிப்பார்கள். இராமாயண நாடகத்தில் குரங்குகளின் நடனம் உட்பட எல்லாக் கோஷ்டி நடனங்களிலும் திரெளபதி கலந்துகொள்வாள். சிறுவர் களிடையே அரைக்கால் சட்டையோடு நின்று கொண்டிருக்கும். அவளைப் பெண்ணாகவே யாரும் எண்ணவில்லை. ஒரே ஒரு பெண்ணை குழுவில் வைத்துக் கொண்டு அவளுக்குப் பிரத்தியேக வசதிகளைச் செய்து கொடுப்பது சிரமமாக இருந்தது. பெரியண்ணா அவளை விலக்கிவிட எண்ணினார். எனக்கு அவள் திறமையில் அபார நம்பிக்கை இருந்ததால் அவள் எதிர்காலத்தில் கம்பெனியின் சிறந்த நடிகையாக விளங்குவாளென்று அண்ணாவிடம் உறுதி கூறினேன். அதன் பிறகு அவளுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. திரெளபதி பிற்காலத்தில் நான் எதிர்பார்த்த படி எங்கள் சபையின் முதல்தர நடிகையாக விளங்கினாள். வீரம், காதல், சோகம் ஆகிய எச்சுவையையும் அதற்குரிய மெய்ப்பாட்டுணர்ச்சியுடன் திறம்பட நடித்துப் பெரும் புகழ் பெற்றாள். குமாஸ்தாவின் பெண், வித்யாசாகரர், ராஜா பர்த்ருஹரி பில்ஹணன், உயிரோவியம், முள்ளில் ரோஜா, அந்தமான் கைதி மனிதன் முதலிய நாடகங்களில் திரெளபதியின் அற்புதநடிப்பை இன்னும் என்னல் மறக்க முடியவில்லை. தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் திரெளபதியின் சிறந்த நாடக நடிப்பினைப் பாராட்டி கலைமாமணி என்னும் விருதினை வழங்கியுள்ளது.  வித்யாசாகரர் திருப்பூரில் மற்றொரு புதிய நாடகம் தயாராயிற்று. வடுவூர் துரைசாமி ஐயங்காரின் வித்யாசாகரர் என்னும் நாவலை ஒரு சிறந்த நகைச்சுவை நாடகமாக எழுதினார் சின்னண்ணா. இக் நாடகம் 23. 6. 38இல் அரங்கேறியது. வயிறு குலுங்கக் குலுங்கச் சிரிக்கவும் அதே நேரத்தில் சிந்திக்கவும் வைக்கும் ஒரு சிறந்த நாடகம் வித்யாசாகரர். இதில் நான் வித்யாசாகரராக நகைச்சுவைப் பாத்திரமேற்று நடித்தேன். ஏற்கனவே நடைபெற்று வந்த சமுதாய நாடகங்களில் குறைந்தது முப்பது பாடல்களாவது இருக்கும். ஆனால் புதிதாக தயாரித்த குமாஸ்தாவின் பெண் வித்தியாசாகரர் நாடகங்களில் பாடல்களே வெகுவாகக் குறைத் தோம். அதை ஒரு குறையாக கூடப் பொதுமக்கள் அந்நாளில் குறிப்பிட்டார்கள். வித்தியாசாகரர் நாடகத்திற்கு மொத்தம் பத்தே பாடல்கள்தாம் பாடப்பெற்றன. ஏற்கனவே நடைபெற்று வந்த நாடகங்களிலும் பல பாடல்கள் குறைக்கப்பட்டன. இதன் காரணமாக, எல்லோரும் பாடத் தெரிந்திருக்க வேண்டு மென்ற கம்பெனியின் நீண்டநாள் கட்டுப்பாடு சிறிது தளர்ந்தது. சுமாராகப் பாடிக்கொண்டிருந்த நடிகர்கள் சிலரும் பாடுவதையே மறந்துவிட்டார்கள். ஒரு சிலர் பாடுவதற்கே வெட்கப்பட்டார்கள். நாடக மேடையில் பாடலுக்கு இருந்து வந்த ஆதிக்கம் ஆட்டம் கொடுக்கத் தொடங்கியது.  அறிவுச்சுடரும் அறிவு அபிவிருத்திச் சங்கமும் நாடக மேடையையும், வேடிக்கை விளையாட்டையும் தவிர வேறு எதையும் அறியாதிருந்த நடிகர்களிடையே பொது அறிவு மலருவதற்காகச் சங்கம் ஒன்று தோற்றுவித்தேன். அறிவு அபி விருத்திச் சங்கம் என்பது அதன் பெயர். பல்வேறு நூல்களையும் பத்திரிகைகளையும் சங்கத்தில் வாங்கிப் போட்டேன். நடிகர்கள் உற்சாகத்தோடு படிக்கத் தொடங்கினார்கள். நான் எண்ணியபடி நடிகர்களின் பொது அறிவு மலர்ந்தது. நாட்டிலுள்ள தேசிய இயக்கங்களைப் பற்றியும் உலக நிகழ்ச்சிகளைப் பற்றியும் சொற் போர் நிகழ்த்தும் அளவுக்கு நடிகர்கள் பயிற்சி பெற்றார்கள்.  பண்ணுருட்டியில் 1934இல் நிறுத்தப் பெற்ற மாதக் கையெழுத்துப் பத்திரிகையாகிய அறிவுச்சுடர் மீண்டும் வார இதழாக மறு மலர்ச்சிபெற்றது. நடிகர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள். நன்றாக எழுதவும் திறமை பெற்றார்கள். எழுதப் படிக்கத் தெரியாமல் கம்பெனியில் சேரும் இளைஞர்கள் பலர். அவர்களின் அறிவுப்பசியினைப் போக்குவதற்கும் ஏற்பாடுகள் செய்தோம். சுந்தரமூர்த்தி என்னும் தமிழாசிரியர் ஒருவரையும் தேவராஜு என்னும் ஆங்கில ஆசிரியர் ஒருவரையும் மாதச் சம்பளத்திற்குக் கம்பெனியில் சேர்த்துக் கொண்டோம் . அவர்கள் காலையிலும் மாலையிலும் பாடம் சொல்லித்தர வேண்டும். இரவு நேரங்களில் தேவைப்பட்டால் அரங்க வாயில்களில் நிற்க வேண்டும். இவை போன்ற பொது அறவு வளர்ச்சிக்குரிய முயற்சிகளெல்லாம் எங்கள் குழுவிலேதாம் நடை பெற்றன என்று சொல்லிக்கொள் வது எங்களுக்குப் பெருமையல்லவா? நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி, கடிகமணி டி.வி. நாராயணசாமி, நக்கீரர், என். எஸ். காராயணபிள்ளை, தம்பி பகவதி, பிரண்டு ராமசாமி மற்றொரு சிறந்த நடிகர் சி.வி. முத்து முதலிய பலர் அறிவுச் சுடரில் தொடர்ந்து கட்டுரை கதைகள் எழுதி, நன்கு பயிற்சி பெற்றார்கள். இப்போது அறிவுச் சுடர், வாரப் பத்திரிகையாதலால் எனக்குச் சிறிதும் ஒய்வே கிடைப்பதில்லை. ஆங்கிலம் பயில எனக்கு ஆர்வம் இருந்தது. ஆனால் நேரம் கிடைக்கவில்லை. பகல் உணவுக்குப்பின் உறங்குவதைக் கூட நிறுத்தி விட்டேன். எல்லோரும் இரவு நாடகத்தை முன்னிட்டு உறங்குவார்கள். நான் அமைதியாக அமர்ந்து எழுதிக்கொண்டிருப்பேன். அறிவுச் சுடரை வாரந் தோறும் தவறாமல் வெளியிட்டு வந்தேன்.  இம்முறை ‘அறிவுச் சுடர்’ பத்திரிகையினுல் குழப்பம் எதுவும் உண்டாகவில்லை. நடிகர்கள் அனைவரும் உற்சாகமாக எழுதி வந்தார்கள். வாரந்தோறும் இரண்டு பிரதிகளை எழுதி வெளியிடுவது எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. எல்லோரும் புனே பெயரிலேயே எழுதி வந்ததால் பத்திரிகை எழுதும் பொறுப்பை மற்றவரிடம் விடவும் முடியவில்லை. இரவு நாடகம் முடிந்து உறங்குவதற்கு மூன்று மணியாய்விடும். காலையில் மற்ற நடிகர்களைப் போல் பத்து மணிவரை உறங்கும் பழக்கமும் எனக் கில்லை. ஆறுமணிக்கே எழுந்துவிடுவேன். பகல் உணவுக்குப்பின் வழக்கமாக மூன்று மணிநேரம் உறங்குவேன். இப்போது அந்த நேரத்தில் பத்திரிகை எழுத நேர்ந்ததால் பகல் உறக்கம் இல்லாமல் போய் விட்டது. எனவே, இரவுநாடகத்தின் போது கொட்டாவி விடத்தொடங்கினேன். சில சமயங்களில் கண்கள் தாமாகவே மூடிக்கொண்டன. இந்நிலையில் கம்பெனி சேலம், ஆம்பூர் முதலிய ஊர்களுக்குச் சென்றது.  ஜீவானந்தம் பாடல்கள் தோழர் ஜீவானந்தம் அடிக்கடி எங்களோடு வந்து தங்கு வாறென்று முன்னல் குறிப்பிட்டேனல்லவா?இது பற்றிச் சற்று விரிவாகச் சொல்ல வேண்டியது என் கடமையாகும். அவர் எங்க ளோடு தங்கியிருந்த நாட்களில் புதிது புதிதாகப் பல பாடல்களை இயற்றியதுண்டு. எல்லோரும் பாடும்படியான எளிய மெட்டுகளிலேயே பாடல்கள் அமைய வேண்டுமென்பது அவர் விருப்பம். எங்கள் நாடகங்களிலுள்ள புதிய மெட்டுகள் சிலவற்றை நான் பாடுவேன், கோவைத் தோழர் ராமதாஸ் திரைப்படப் பாடல்களைப் பாடுவார். அந்த மெட்டுகளிலெல்லாம் ஜீவா உடனுக்குடன் பிரசாரப் பாடல்கள் புனைந்து தருவார். அப்படி ஜீவா பாடிய பாடல்கள் எத்தனை எத்தனையோ!  சிவபெருமான் கிருபை வேண்டும்-அவர் திருவருள் பெற வேண்டும் வேறென்ன வேண்டும்  (சிவ)  இந்தப் பாடல் தியாகராஜ பாகவதர் அவர்களால் திரைப் படத்தில் பாடப் பெற்றது. அந்தக் காலத்தில் பொதுமக்கள் எல்லோருடைய நாவிலும் நின்றது. இதே மெட்டில் ஜீவா பாடினார்.  பொதுவுடமை பெற வேண்டும்-உடன் புரட்சி செய்திட வேண்டும் வேறென்ன வேண்டும்  (பொது)  இந்தப்பாடலை நான் எங்கள் தேசபக்தி நாடகத்திலே ஒரு காட்சியில் இணைத்துப் பாடினேன்.  நானோர் தொழிலாளி-ஒரு  நாய்க்குறும் சுகமேனும் வாய்க்கும் வழியில்லை ஏனோ புவி வாழ்வு?   மிக உருக்கமான பாடல் இது. இப்பாடலைப் பதிபக்தி நாட கத்தில் தேயிலைத் தோட்டக் காட்சியிலே நான் பாடுவேன். சபை யோரில் சிலர் கண்ணிர் விட்டு அழுவதைப் பலமுறை பார்த் திருக்கிறேன். ஜீவாவின் பாடல்களில்,  “ஏழைத் தொழிலாளர் வாழ்வு இன்பம் சூழ்கவே” “காலுக்குச் செருப்புமில்லை கால்வயிற்றுக் கூழுமில்லை”  ஆகிய இரு பாடல்களும் அந்நாளில் நான் பாடிய பாடல் களில் சிறப்பும், முதன்மையும் பெற்ற பாடல்களாகும். சபையோர் இவ்விரு பாடல்களையும் விரும்பிக் கேட்பது வழக்கம். எனவே, எந்த நாடகம் நடந்தாலும் இந்தப் பாடல்களை நான் அடிக்கடி பாட நேர்ந்தது.  மயில்ராவணனில் தொழிலாளர் வாழ்வு ஒருநாள் மயில்ராவணன் நாடகம் நடந்துகொண்டிருந்தது. நான் ராமராக நடித்தேன். சபையிலிருந்து ஏழைத் தொழிலாளர் வாழ்வு என்ற குரல் எழுந்தது. இன்னும் சில குரல்கள் காலுக்குச் செருப்புமில்லை என்று கூவின. சத்தம் அதிகரித்ததால் நான் மேடைக்கு வந்தேன். “இந்த வேடத்தில் நின்றுகொண்டு அந்தப் பாடல்களைப் பாட என் மனம் இடம் தரவில்லை. அப்படிப் பாடினாலும் பாடுவதில் உணர்ச்சி இராது. நீங்கள் அமைதியாக இருந்தால் இறுதியில் வந்து பாடுகிறேன்” என்றேன். மக்கள் என் பேச்சைக் கைதட்டி வரவேற்றார்கள். நாடகம் முடிந்தது. சபையில் யாரும் எழுந்திருக்கவில்லை. வாக்களித்தபடி வேடத்தைக் கலைத்துவிட்டு வந்து, நான் அவ்விரு பாடல்களையும் பாடினேன். சபையோர் அமைதியாக இருந்து கேட்டுவிட்டுக் கலைந்து சென்றனார்.                சீர்திருத்த நாடகக் கம்பெனி   இக்காலங்களில் எல்லாம் எங்கள் குழுவைப் பற்றி மக்கள் குறிப்பிடும்போது சீர்திருத்த நாடகக் கம்பெனி என்ற சிறப்புப் பெயரிட்டுத்தான் அழைப்பது வழக்கம். நாடகங்களும் அதை உறுதிப்படுத்தும் முறையிலேயே நடைபெற்று வந்தன. தேசபக்தி, கதரின் வெற்றி, பதிபக்தி, பம்பாய் மெயில், மேனகா, குமாஸ்தாவின் பெண், வித்தியாசாகரர் முதலிய சமூக, தேசீய நாடகங்களே அதிகமாக நடைபெற்று வந்தன. ரங்கராஜு நாடகங்களை அறவே நிறுத்தி விட்டதால், இடையிடையே சுவாமிகளின் புராண, இதிகாச நாடகங்களையும் நடத்தி வந்தோம். இவ்விரு வகை நாடகங்களுக்கும் வருவாய் மிகவும் குறைவாகவே இருந்து வந்தது. எப்போதாவது இராமாயணம், மனோஹரா போட்டால் அதற்கு மட்டும் கொஞ்சம் வசூல் ஆகும். சுவாமிகளின் நாடகங்களில் பாடல்கள் முக்கியமாதலால் நன்றாகப் பாடக் கூடிய இளைஞர்கள் அதிகமாக இல்லாத நிலையில் அவற்றிற்கு வரவேற்பு இல்லை. மறு மலர்ச்சி உற்சாகத்தில் பாடல்களைக் குறைத்து வந்த எங்களுக்கு ரசிகர்களின் வரவேற்பு உற்சாகம் அளிக்கவில்லை. இருந்தாலும் பேருக்கு நடத்திக் கொண்டிருந்தோம்.  ஸ்ரீ கிருஷ்ண லீலா அப்போது எங்கள் குழுவின் முக்கிய நடிகராக இருந்த நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ராமசாமி ஸ்ரீ கிருஷ்ணலீலா நாடகத்தைச் சிறந்த காட்சியமைப்புகளோடு நடத்த வேண்டுமென யோசனை கூறினார். ஏற்கனவே ஸ்ரீ கிருஷ்ண லீலாவை நடத்தி யிருக்கிறோம். என்றாலும், அவ்வளவு ஆடம்பரமாக நடைபெற வில்லை. ஆம்பூரில் இரண்டு சினிமாவும் சர்க்கஸும் எங்களுக்குப் போட்டியாக இருந்தன. நிர்வாகச் செலவும் அதிகரித்தது. பெரிய பெரிய விளம்பரங்களிடையே நாடக விளம்பரம் மங்கியது. நாடகங்களுக்கு நல்ல பேர். ஆனால் அதற்கு தக்க வருவாய் இல்லை. கண்கவர் காட்சிகளையும் வனப்பு மிக்க உடைகளையும் மக்கள் விரும்பினார்கள். ஆடம்பரமும் விளம்பரமும் முன்னேற்றத்திற்கு அவசியம் என்பதை உணர்ந்தோம். சீர் திருத்த தேசீய நாடகங்களை மட்டும் வைத்துக்கொண்டு சினிமாப் போட்டியைச் சமாளிக்க இயலவில்லை. எனவே வருவாய் முழுவ தையும் செலவிட்டு ஸ்ரீ கிருஷ்ண லீலாவைத் தயாரித்தோம். ‘புதிய மொந்தையில் பழைய கள்’ என்பதற்கொப்ப பழைய கிருஷ்ண லீலாவுக்குப் புது மெருகிட்டோம். நாடகம் ஆடம்பரத் தோடு அரங்கேறியது.  தினசரி நாடகம்-தரை இரண்டணா  மாதம் பதினைந்து நாடகங்கள் நடத்துவது தான் வழக்கம். செலவினங்கள் அதிகரித்ததால் பல கம்பெனிகள் தினசரி நாடகம் நடத்தும் முறையைக் கையாண்டன. அது எங்களுக்குச் சிரமமாகத் தோன்றியதால் நீண்ட காலமாக நாங்கள் இந்த வழக்கத்தை மேற்கொள்ளவில்லை. வேறு வழியில்லாததால் கால வெள்ளம் எங்களையும் அதில் இழுத்துச் சென்றது. ஸ்ரீ கிருஷ்ண லீலா ஆம்பூரில் தினசரி நாடகமாக நடந்தது. அதுவரை நான்கணாவுக்குக் குறைவாகக் கட்டணம் போட்டதே இல்லை. ஸ்ரீ கிருஷ்ண லீலாவுக்குத் தொடக்கத்திலிருந்தே தரைக்கு மட்டும் இரண்டணா கட்டணம் வைத்தோம். கட்டணம் இரண்டணா என்றதும் தாய்மார்கள் கூட்டம் பிரமிக்கக்கூடிய அளவுக்கு வந்து கொட்டகையை முற்றுகையிட்டது. எனக்கு எத்தனையோ ஆண்டுகளாகக் கிடைக்காதிருந்த ஓய்வு கிருஷ்ண லீலாவில் கிடைத்தது. நானும் டிக்கட் விற்கும் அறையில் உட்கார்ந்து கணக்குப் பிள்ளைக்கு உதவியாக டிக்கெட் விற்றேன். ஜனங்கள் கட்டம் சொல்லி முடியாது. எங்களுக்கு வேறென்ன வேண்டும்? ஒரே குதூகலம்!  திறமை மிக்க நடிகர்கள் கம்பெனியிலிருந்த நல்ல நடிகர்களின் திறமை ஸ்ரீ கிருஷ்ண லீலாவில் பரிமளித்தது. அப்போது பாஸ்கரன், கருணாகரன்,   கிருஷ்ணன் என்ற மூன்று சகோதரர்கள் எங்கள் குழுவில் இருந்தார்கள். அவர்களில் கருணாகரன், அப்போது சின்னஞ்சிறுவராக இருந்தார்.அவர் வெண்ணெய் திருடும் கண்ணளுகத் தோன்றி அற்புதமாக நடித்தார். கோவிந்தராஜன் அப்போது கம்பெனி யின் குட்டி நகைச்சுவை நடிகராக விளங்கினார். இவருடைய மெலிவான உடலைக்கண்டு நடிகர் எல்லோரும் இவரைக் ‘காமா’ என்று பட்டம் சூட்டி அழைத்தார்கள். காமா என்ற பெயரோடு ஒரு பெரிய பயில்வான்-குஸ்தி வீரர் இருந்தாரல்லவா? அந்தப் பெயரால் இந்த எலும்புருவத்தை வேடிக்கையாக அழைத்தோம். இவர் கிருஷ்ணனோடு விளையாடும் ராமனாகத் தோன்றி எங்களையும், சபையோரையும் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்தார். கே. ஆர். ராமசாமியும், தம்பி பகவதியும் பயங்கர கம்சனக நடித்தார்கள். இருவரும் ஒருநாள் விட்டு ஒருநாள் மாறி மாறி வேடம் புனைவார்கள். நகைச்சுவை நடிகர் சிவதானு நடன ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். முன்பு காரைக்குடியில் கிருஷண லீலாவைத் தயாரித்தபோது பிரபல நடன ஆசிரியர் தர்மாஞ்சலு நாயுடு கம்பெனியில் இருந்தார். அப்போதே சிவதாணு நாயுடுவின் பிரதம மாணவராக விளங்கினார். இடையே நாயுடு கம்பெனியை விட்டுப் போய் விட்டதால் நடனப் பொறுப்பு முழு வதையும் அதன் பிறகு சிவதானுவே ஏற்றுக் கொண்டார். கிருஷ்ண லீலாவில் பல நடனங்கள் உண்டு. அவற்றையெல்லாம் சிவதானு சிரத்தையோடு சொல்லி வைத்தார். நாடகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நடிகர்கள் உற்சாகத்தோடு நடித்தார்கள். கிருஷ்ண லீலா நாடகம் எங்களுக்கு புது நம்பிக் கையை உண்டாக்கியது. இரண்டாவது கிருஷ்ணகை நடித்த இளைஞர் ஜெயராமனுக்கு நல்ல இனிமையான குரல்; திக்குவாய். பேசும் போது திக்கித் திக்கித்தான் பேசுவார். பாடும் போது மட்டும் அவர் திக்குவாய் என்பதே தெரியாது. அருமையாகப் பாடுவார். நன்முக நடிப்பார். எல்லோரும் சேர்ந்து கிருஷ்ண லீலா நாடகத்தைச் சிறப்பித்தார்கள். ஆம்பூர் நாடகத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சித்துார் சென்றோம்.  சித்துரரில் தமிழ் நாடகம் சித்தூர் அப்போது சென்னை ராஜ்யத்தோடு சேர்ந்திருந்தது. மொழிவாரி ராஜ்யம் பிரிக்கப்பட்டு ஆந்திரப்பிரதேசம் உருவான   போது, தமிழகத்தைச் சேரவேண்டிய சித்துார் மாவட்டத்தை ஆந்திராவோடு சேர்த்துக்கொண்டார்கள். இந்த அநீதத்தை எதிர்த்துத் தமிழரசுக் கழகம் பெரும் போராட்டம் நடத்தியபிறகு அதில் ஒரு பகுதியாகிய திருத்தணி தாலுகா இப்போது நமக்குத் திரும்பக் கிடைத்திருக்கிறது. சித்துரர் மக்களில் பெரும்பாலோர் தமிழர்கள். நெல்லூர், சித்தூர் முதலிய நகரங்களில் எல்லாம் அந்த நாளில் தமிழ் நாடகங்கள் மாதக்கணக்கில் வெற்றிகரமாக நடை பெற்றிருக்கின்றன. ஆந்திரர்களோடு போராடி நியாயத்திற்காக வாதாடும் ஆற்றல் நம் காங்கிரஸ் அமைச்சர்களுக்கு இல்லாததாலும் இந்த உரிமையை அறிவுறுத்தும் முறையில் தமிழரசுக் கழகம் நடத்திய போராட்டங்களுக்குக் காங்கிரஸ் அமைச்சர்களின் தார்மீக ஆதரவு கூட இல்லாததாலும்தான் அந்தத் தமிழ்ப்பகுதிகளை நாம் இழக்க நேர்ந்தது. இந்த உண்மையை உணர்ந்தவர்கள் ஆட்சிப் பீடத்தில் அமருங் காலத்தில் இழந்த திருப்பதி வேங்கட எல்லையை மீண்டும் பெற்று மகாகவிபாரதி கூறியபடி “குமரி எல்லை வட மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு'’ நம் தாயகமாக அமைய வேண்டுமென்பதே என் கருத்தாகும்.  சித்துாரில் இரண்டு மாதங்கள் வெற்றிகரமாக நாடகங்களை நடத்தினோம். அது வேறுமொழி பேசப்படும் பகுதி என்னும் எண்ணமே எங்களுக்கு ஏற்படவில்லை. சித்துரரில் கிருஷ்ண லீலாவுக்கு மேலும் புதிய உடைகள் தயாராயின. எல்லா நாடகங்களையும் விட கிருஷ்ண லீலாவுக்கு அமோகமான வசூலாயிற்று. வந்தவருவாய் முழுவதும் காட்சிகள் உடைகள் தயாரிப்பதிலேயே செலவிட்டோம்.  நாடகம் தினசரி நடைபெறத் தொடங்கிவிட்டதால் ‘அறிவுச்சுடர்’ பத்திரிக்கையைத் தொடர்ந்து நடத்துவது சிரமமாகி விட்டது. இதற்காக இரவும் பகலும் கண் விழிக்க நேர்ந்ததால் உடல் நலம் குன்றியது. ஏற்கனவே இருந்து வந்த கைவலி அதிகமாயிற்று. எனவே 1.10.38ல் வெளியிட்ட இதழோடு பத்திரிக்கையை நிறுத்திக்கொண்டேன்.  இளைய தங்கையின் திருமணம் அடுத்தபடியாக வேலூருக்கு வந்தோம். அங்கும் நல்ல வசூலாயிற்று. இராமாயணத்திற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் அந்த நாடகமே பலமுறை வைக்கப்பெற்றது. வேலூரில் இருந்த போது எங்கள் இளைய தங்கை காமாட்சியின் திருமணத்தைப் பற்றிய பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இதற்காகப் பெரியண்ணா நாகர்கோவில் போய் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து வந்தார். வேலூர் நாடகம் முடிந்து திருவண்ணாமலை போவதாக முடிவு செய்யப்பட்டது. எல்லோரையும் திருவண்ணாமலைக்கு அனுப்பிவிட்டு நாங்கள் நால்வரும் பாளையங்கோட்டைக்குப் போய்ச் சேர்ந்தோம். 1939ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் நாள் பாளையங்கோட்டையில் இளைய தங்கை செல்வி காமாட்சிக்கும் செல்வன் சண்முகசுந்தரம் பிள்ளைக்கும் திருமணம் நடந்தேறியது. என்னுடைய திருமணத்திற்கும் பெரியண்ணா இதையடுத்து ஏற்பாடு செய்வதாக அறிந்தேன். இந்தச் சூழ் நிலையில் நான் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லையென்று உறுதியாகக் கூறி விட்டதால் அம்முயற்சி கைவிடப் பட்டது. தங்கையின்திருமணம் நிறைவேறியதும் நாங்கள் திருவண்ணாமலை வந்து சேர்ந்தோம்.  மறுமலர்ச்சி நாடகாசியா மறைவு திருவண்ணாமலையிலும் கம்பெனிக்குநல்லவசூலாயிற்று. அப்போதெல்லாம் நான் அடிக்கடி வெளியேபோய் அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்வேன். பெரியண்ணா இதுபற்றி வருத்தப்படுவதாக அறிந்தேன். “ஒன்று நாடகத்தில் முழுதும் ஈடுபட்டு வேலை செய்யவேண்டும். அல்லது அரசியலிலேயே முழுநேரத்தையும் செலவிடவேண்டும். இரண்டுங்கெட்டானாக இருதுறை களிலும் காலை வைத்துக் கொண்டிருப்பது நல்லதல்ல” என்று பெரியண்ணா கண்டித்ததாகக் கூறினார்கள். என்போக்கு தவறென்று எனக்குப் பட்டது. அன்று முதல் வெளியே பொது இடங்களில் அரசியல் பேசுவதை நிறுத்திக் கொண்டேன்.  திருவண்ணாமலையில் நாங்கள் நடித்துக் கொண்டிருந்த போது சென்னையில் எங்கள் அன்புக்குரிய வாத்தியார் கந்தசாமி முதலியார் காலமானதாகச் செய்திகிடைத்தது. 1939மார்ச்8ஆம்  நாள், நாடகத்துறையிலே மறுமலர்ச்சி கண்ட அந்தப் பெருந்தகையின் ஆவி பிரிந்தது. உடனே சென்னைக்கு விரைந்தேன். அவரது புதல்வர் எம். கே. ராதா என்னைத் தழுவிக் கொண்டு கண்ணீர் விட்டுக் கதறினார். ஆசிரியர் முதலியார் அவர்கள் என்பால் அளவற்ற அன்புடையவர். ‘நான் சொல்லிக் கொடுப்பதை என் இஷ்டப்படி நடித்துக் காட்டுபவன் சண்முகம்’ என்று தமது புதல்வரிடம் அடிக்கடி கூறுவாராம். மரணத் தருவாயில் கூட ‘ஷண்முகத்தைப் பார்க்க விரும்புகிறேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்ததாக நண்பர் எம். கே. ராதா கூறிக் கண்ணிர் விட்டார். இரண்டு நாள் தங்கி ராதாவுக்கு ஆறுதல் கூறிவிட்டுத் திரும்பினேன்.  மேனகா பேசும் படமாக வெளிவந்த பிறகு எங்கள் நாடக மேனகாவுக்கு வசூலாவதில்லை. திரையில் தோன்றிய நடிகையரையே நாடகத்திலும். எதிர்பார்த்தார்கள் ரசிகர்கள். அவர்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக கே. டி. ருக்மணியையும், எம். எஸ். விஜயாளையும் ஸ்பெஷலாக வரவழைத்து நடிக்க வைத்தோம். திரைப்படத்தில் போட்ட நூர்ஜஹான், மேனகா வேடங்களிலேயே மேடையிலும் தோன்றி அவர்கள் நடித்தார்கள். கே. டி. ருக்மணி மனோஹரன் நாடகத்தில் என்னோடு விஜயாளாகவும் நடிந்தார். ஒவ்வொரு ஊரிலும் மனோஹரன் மேனகா நாடகங்களைச் சேர்ந்தாற்போல் வைத்துக்கொண்டு இவ்விரு நடிகையரையும் அழைப்பது வழக்கமாகிவிட்டது.  கலைவாணர் மனத் தாங்கல் திருவண்ணாமலையிலிருந்து நான் சென்னைக்குச் சென்றிருந்த போது என். எஸ். கிருஷ்ணனுடன் தங்கவும், நீண்ட நேரம் பேசவும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது அவர் மேனகா நாடகத்தில் சாமா ஐயராக நடிக்கத் தம்மை அழைக்காதது பற்றிக்குறை கூறினார். அழைத்தால் எப்போதும் வரச் சித்தமாக இருப்பதாய்த் தெரிவித்தார். “கே. டி. ருக்மணி, எம். எஸ். விஜயாள் இருவரையும் ஸ்பெஷலாக அழைத்துப் போகும்போது உங்களோடு என்றும் உரிமையுள்ளவனான என்னைமட்டும் பெரியண்ணா ஏன் அழைக்கவில்லை?’’ என்று கூறி வருத்தப் பட்டார். எனக்கும் அது சரியாகவே தோன்றியது. நான் சென்னையிலிருந்து திரும்பியதும் அவர் என்னிடம் கூறியதைப் பெரியண்ணா காதில் போட்டு வைத்தேன். திருவண்ணமலை நாடகம் முடிந்து காரைக்குடிக்குப் போய்ச் சேர்ந்தோம்.  மனத்தாங்கல் வளர்ந்தது காரைக்குடியில் நாங்கள் எதிர்பார்த்தபடி வசூல் இல்லை. நல்ல வசூலாகும் என்று எதிர்பார்த்த ஸ்ரீ கிருஷ்ணலீலா நாடகமும் தோல்வி யடைந்தது. அப்போது என். எஸ். கிருஷணனுக்குத் திரையுலகில் அபார மதிப்பிருந்தது. அவரை அழைத்து மேனகா நாடகம் போடலாமென நானும் பகவதியும் பெரியண்ணாவுக்கு யோசனை கூறினோம். பெரியண்ணா அதுபற்றிச் சிந்திப்பதாகச் சொன்னார். இந்தச் சமயத்தில் நாங்கள் சற்றும் எதிர்பாராதபடி என். எஸ் கிருஷ்ணன் காரைக்குடிக்கு வந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. சில மணி நேரத்தில் அவரே கம்பெனி வீட்டுக்கும் வந்துவிட்டார். நாங்கள் எல்லோரும் அவரை அன்புடன் வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்தோம். பெரியண்ணா வழக்கம்போல் தம் அறையில் அமர்ந்து கணக்குகளை எழுதிக் கொண்டிருந்தார். என். எஸ். கே. எங்களோடு சிறது நேரம் பேசிவிட்டு அறைக்குள் சென்று பெரியண்ணாவை வணங்கினார். அவர் எப்பொழுதும் புன்னகையுடன் பதில் வணக்கம் புரிந்து விட்டு இரண்டொரு வார்த்தைகள் பேசினார். மீண்டும் கணக்கில் கவனத்தைச் செலுத்தினார். இது என். எஸ். கே.க்குப் பிடிக்கவில்லை. தம்மைச் சரியாக வரவேற்று அன்பு காட்டவில்லை யென்று அவர் எண்ணிக் கொண்டார். கம்பெனி வீட்டில் சாப்பிட்டுவிட்டுப் போகுமாறு நாங்கள் அவரை வற்புறுத்தினோம். ஆனால் வேறு அவசர அலுவல் இருப்பதாகக் கூறி அவர் புறப்பட்டு விட்டார். காரைக்குடியில் எங்களுக்கும் அவருக்கும் வேண்டிய சில நண்பர்கள் இருந்தார்கள். பெரியண்ணா ஏற்ற முறையில் தம்மை வரவேற்க வில்லையென்று அவர்களிடம் கூறி வருத்தப்பட்டதாக அறிந்தோம். இந்தச் செய்தி என் செவிக்கு எட்டியதும் நான் கலைவாணருக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினேன். அதில், அவரைப் பழைய கிருஷ்ணனாகவே எண்ணிப் பண்புடன் வரவேற்றதாகவும், பிரசித்த பெற்ற திரைப்பட நட்சத்திரம் என்ற முறையில் ஒரு தனி மரியாதை காட்டும் இயல்பு எப் போதுமே பெரியண்ணாவிடம் இல்லையென்பதையும் நினைவு படுத்தி யிருந்தேன். அந்தக் கடிதத்திற்கு என்.எஸ் கே. யிடமிருந்து பதில் வரவே இல்லை. எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. என்னைப் போலவே கே. ஆர். ராமசாமியும் அவருக்கு ஒரு கடிதம் எழுதினார், அதை என்னிடமும் காண்பித்தார். இந்த விபரங்களையெல்லாம் அறிந்ததும் பெரியண்ணா மிகவும் வருத்தப் பட்டார். இந்த நிலையில் அவரை அழைத்து மேனகாவில் நடிக்க வைக்கப் பெரியண்ணா விரும்பவில்லை. “தேவையற்ற ஆடம்பர மரியாதைகளையெல்லாம் நீண்ட காலம் பழகிய நம்மிடம் எதிர்பார்க்கும் கிருஷ்ணனை நாம் எப்படி அழைப்பது? அவருக்குத் தனி மரியாதை செய்யவோ, கெளரவிக்கவோ எனக்குத் தெரியாது” என்று கூறி விட்டார். இந்தச் சம்பவத்திற்குப் பின் என். எஸ். கே. யை நாடகத்திற்கு அழைக்கும் எண்ணத்தையே கைவிட நேர்ந்தது.  இலட்சிய வெற்றி காரைக்குடியில் வசூல் நிலை மிகவும் மோசமாக இருந்த தென்று குறிப்பிட்டேனல்லவா? இதற்காக அடிக்கடி யாராவது ஒரு பிரமுகரைத் தலைமை தாங்கச் செய்தோம். ஒருநாள் ‘குமாஸ்தாவின் பெண்’ நாடகத்திற்குத் தோழர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். ஏறத்தாழ அரை மணிநேரம் நாடகக் கதையையும் அதனை நாங்கள் நடிக்கும் சிறப்பினையும் வியந்து பேசினார். பேச்சின் முடிவில்,  “இன்று இந்த அற்புதமான நாடகத்தைக் காண மிகக் குறைந்த எண்ணிக்கையான மக்கள் இங்கே கூடியிருக்கிறீர்கள். காலம் மாறத்தான் போகிறது. இன்னும் சில ஆண்டுகளில் ஆயிரக் கணக்கான மக்கள் இதே நாடகத்தைக் கண்டு மகிழப் போகிறார்கள் என்பதை அறுதியிட்டுச் சொல்கிறேன்” என்று ஆவேசத்தோடு கூறினார். ஜீவாவின் இந்தத் தீர்க்கதரிசனம் 1940-ஆம் ஆண்டில் உண்மையாகவே நிறைவேறியது. ஆனால் அப்போது ஜீவா தலைமறைவாக இருந்தார், ஆம்; அவருடைய மகிழ்ச்சிக் கடிதம் எனக்கு மதுரையில் கிடைத்தது.  மற்றொரு நாள் காரைக்குடி நகரக் காங்கிரஸ் பிரமுகர் சா. கணேசன் குமாஸ்தாவின் பெண் நாடகம் பார்க்க  வந்திருந்தார். நாடகக் கதை அவரது இதயத்தை மிகவும் கவர்ந்தது. நாடகத்தைப்பற்றி மேடையில் பேச விரும்புவதாகச் சொல்லியனுப்பினார். நாங்கள் மிகவும் மகிழ்ந்தோம். வழக்கம் போல் நாடகம் முடிவதற்கு ஒரு காட்சி இருக்கும்போது பேசுமாறு கேட்டுக் கொண்டோம். அவர் அதற்கு ஒப்பவில்லை. “சுவையான கதையினிடையே நான் பேச மாட்டேன். நான் பேசுவதாக அறிவித்து விடுங்கள். சபையோர் கலையமாட்டார்கள்” என்று கூறினார். எங்களுக்கு வியப்பாக இருந்தது, அப்படி ஒரு போதும் இதற்குமுன் யாரும் பேசியதில்லை. என்றாலும் அவர் கூறியபடியே நாடகம் முடிந்தபின் நகரக் காங்கிரஸ் தலைவர் திரு சா. கணேசன் பேசுவார் என்பதை அறிவித்தோம். நாடகம் முடிந்தது. சா. கணேசன் மேடைக்கு வந்து பேசினார். சபையோர் கலைந்து விடுவார்கள் என்று நாங்கள் பயந்தோம்.என்ன ஆச்சரியம்! ஒருவர்கூட எழுந்திருக்கவில்லை. எல்லோரும் அவர் பேச்சு வன்மையிலே கட்டுண்டு அமைதியாக இருந்தார்கள். அன்றைய வசூல் என்ன தெரியுமா? நூற்றி இருபத்தி நான்கு ரூபாய்கள்! இந்தக் குறைந்த வசூலிலும் அஞ்சாமல் குமாஸ்தாவின் பெண் நாடகத்தைப் பலமுறை நடித்தோம். இலட்சிய வெற்றியையே பெரிதாக மதித்தோம். “உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள் (Workers’ of the World, Unite) என்ற பொன்மொழியைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் முதல் திரையில் எழுதி வைத்தோம். இந்தப் பொன் மொழி சில தனவந்தர்களின் கண்களை உறுத்தியிருக்க வேண்டும்! கம்பெனி எங்கோ பொதுவுடைமைப் பாதையில் செல்வதாக அவர்கள் எண்ணிக்கொண்டார்கள் போல் இருக்கிறது. கட்டுப்பாடாக நாடகங்களைக் காண மறுத்து விட்டார்கள். நல்லவர்களின் அமோகமான பாராட்டுக்கள் இருந்தன. நாடகங்கள் சிறந்த முறையில் நடைபெற்றன. காரைக்குடியிலிருந்து வெளி வரும் திரு சொ. முருகப்பாவின் ‘குமரன்’, தமிழ்க்கடல் ராய சொக்கலிங்களுரின் ‘ஊழியன்’ வார இதழ்களில் சிறந்த விமர்சனங்கள் வந்தன. ஆனால் இறுதி வரை வசூலே இல்லை.                                                கலைஞர் ஏ.பி. நாகராஜன்   காரைக்குடியில் சேலம் தேவாங்கா அச்சகத்தைச் சேர்ந்த நண்பர் சங்கரன் மூலம் ஒன்பது வயதுச் சிறுவன் ஒருவன் கம்பெனியில் சேர்க்கப் பெற்றான். பெண் வேடத்திற்குரிய நல்ல தோற்றமும் இனிமையான குரலும் அவனிடம் அமைந்திருந்தன. வந்த சில நாட்களில் காரைக்குடியிலேயே அவன் இராமாயணத்தில் பால சீதையாக அரங்கேறி விட்டான். அவனுடைய நடிப்பிலே நல்ல மெருகும் புதுமையும் இருந்தன. அச்சிறுவனை நான் பிரத்தியேகமாகக் கவனிக்கத் தொடங்கினேன். அப்போது நடந்து வந்த நாடகங்களில் முக்கிய பெண் பாத்திரங்களையெல்லாம் அச்சிறுவனுக்குக் கொடுக்கச் செய்தேன். பம்பாய் மெயில் நாடகத்தில் கதாநாயகன் சுந்தரத்தின் காதலி பார்வதியாக ஒரு நாள் திடீரென்று அவன் நடிக்க நேர்ந்தது. புதிதாய் நடிப்பதாகவே தோன்றவில்லை. நீண்ட காலம் அனுபவம்பெற்ற நடிகனைப் போல் பிரமாதமாக நடித்தான். நாடகத்தின் நடுவே ஒரு சுவை யான காதல் காட்சி. பம்பாய் மெயிலாகவும், சுந்தரமாகவும் நான் தான் நடித்தேன். என் காதலி பார்வதியோடு சல்லாபமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது இன்ஸ்பெக்டர் வந்துவிடுகிறார். நாணிக் கோணிக்கொண்டு உள்ளே போக முயல்கிறாள் பார்வதி . நான் அவளைப் போக விடாமல் குறும்பாக அவள் சடை நுனியைப் பிடித்து இழுத்து நிறுத்துகிறேன். இந்தக் காட்சி நடந்தது. பார்வதி போகும்போது நான் சிரித்துக் கொண்டே சடைப் பின்னலைப் பிடித்து இழுத்தேன். அவ்வளவுதான். சடை என் கையோடு வந்துவிட்டது. என் காதலி பார்வதி ஒரு சாண் நீளமுள்ள தலைமுடியுடன் உள்ளே ஓடிவிட்டாள். அந்த நாளில் பெண்வேடம் புனைபவர்கள் அனைவரும் கூந்தலை வளர்க்க வேண்டும், பார்வதியாக நடித்த அந்தச் சிறுவனுக்கு முடி கொஞ்சந்தான் வளர்ந்திருந்தது. ஒப்பனையாளர் இராஜமாணிக்கம் அந்த முடியிலேயே கொண்டை ஊசி, கரல் பின் ஆகியவற்றின் துணையோடு பின்னிவிடப்பட்ட ஒரு சடையைத் தொங்கவிட் டிருந்தார். நான் இழுத்ததும் சிறுவன் சட்டென்று நிற்காமல் போக முயன்றதால் சடை கையோடு வந்தது. சபையில் ஒரே கரகோஷம். சடையைக் காதலனிடம் பறி கொடுத்துவிட்டு ஓடிய அந்தச் சிறுவன்தான் கலைஞர் ஏ.பி.நாகராஜன்.  மனத்தாங்கலின் உச்ச கட்டம் காரைக்குடியில் பட்டாபிஷேகத் தேதி முன் கூட்டி அறிவிக்கப் பட்டது. அந்தத் தேதிக்கு மறுநாள் நாங்கள் நடிக்கும் அதே கொட்டகையில் “திரைப்பட நடிகர் என்.எஸ். கிருஷ்ணன் ஒரு நாடகத்தில் நடிக்கப் போகிறார்” என்ற விளம்பரத்தைப் பார்த்தோம் எனக்குத் திகைப்பாய் இருந்த்து. உடனடியாக என்.எஸ்.கேக்குக் கடிதம் எழுதினேன். “வசூல் இல்லாமல் நாங்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தாங்கள் இவ்வாறு வந்து நடிப்பதும், அதை முன்கூட்டியே விளம்பரப் படுத்துவதும் போட்டி நாடகம் போல் கருதப்படுமல்லவா?” என்று குறிப்பிட்டிருந்தேன். என்.எஸ்கிருஷ்ணன் எனக்குப் பதில் எழுதியிருந்தார்.  “நம்முடைய கம்பெனி நாடகம் முதல் நாள் இருப்பது எனக்குத் தெரியாது. நான் நடிக்கும் நாடகம் ஒருவருக்கு உதவி யளிப்பதற்காக ஒப்புக் கொண்ட நாடகம். அதை இனி நிறுத்து வது சாத்தியமில்லை” என்று குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதில் எனக்குத் திருப்தி அளிக்க வில்லை. காரைக்குடி நகரில் பலமுறை என்.எஸ்.கே. எங்கள் குழுவில் பணி புரிந்திருக்கிறாராதலால் நகரத்தார் பலருக்கு எங்கள் தொடர்பு நன்றாகத் தெரியும். எனவே, அவர்களில் பலரும் என்.எஸ்.கே. இப்படிச் செய்வது தவறு என்று அபிப்பிராயப் பட்டார்கள்.  இந்த நிலையில் எங்கள் பட்டாபிஷேக நாடகம் முடிந்தது . மறுநாள் என்.எஸ்.கே. நடிக்கும் நாடகத்திற்காக நாடகாசிரியர் யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளை குழுவினரில் சிலர் வந்திருந்தார்கள். அவர்களும் எங்களோடு சேர்ந்து வருத்தப்பட்டார்கள். மறு நாள் நாடகமாதலால் இரவு, நாடகம் முடிந்ததும் உடனடியாகச் சாமான்களையெல்லாம் அப்புறப்படுத்தி விடவேண்டுமென்று கொட்டகைக்காரர் உத்திரவு போட்டார். இது மிகவும் சிரமமான காரியம் என்பது கொட்டகைச் சொந்தக்காரருக்கு நன்றாகத் தெரியும். அப்படியிருந்தும் வேண்டுமென்றே இப்படிச் செய்தார். பெரியண்ணா எதற்கும் மனம் கலங்கவில்லை. நாடகம் முடிந்ததும் சாமான்கள் அத்தனையையும் அரங்கத்திலிருந்து அகற்றிவிடும்படி ஆணையிட்டார். காட்சியமைப்பாளரும் நடிகர்களுமாகச் சேர்ந்து சாமான்கள் முழுவதையும் இரவோடிரவாகக் கொட்டகைக்கு வெளியே வெட்ட வெளியில் கொண்டு வந்து போட்டார்கள்.  மறுநாள் நாடகத்தன்று மாலை சின்னண்ணா கொட்டகை வாயிலில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த என். எஸ். கிருஷ்ணனுக்கும் சின்னண்ணாவுக்கும் பலத்த வாக்குவாதம் நடை பெற்றதாக அறிந்தேன். வருந்தினேன். ஆனாலும் எங்களுக்கெல்லாம் அன்றைய நாடகத்தைப் பார்க்க வேண்டுமென்று ஒரே ஆசை. பெரியண்ணாவுக்குப் பயந்துகொண்டு ஒருவரும் போக வில்லை. நாடகம் முடிந்த மறுநாள் சீன் வேலையாட்களில் சிலர் வந்து, நாடகத்தில் கூச்சலும் குழப்பமும் இருந்ததாகவும், அமைதியாக நடைபெறவில்லையென்றும், வசூலும் எதிர் பார்த்தபடி இல்லையென்றும் சொன்னார்கள். நாடகத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு நாங்களே காரணமென்றும், முன் கூட்டியே திட்டமிட்டு வேலை செய்திருப்பதாகத் தோன்றுகிறதென்றும் கலைவாணர் கருதியதாக அறிந்தோம். எங்களிடையே இருந்து வந்த மனத்தாங்கல் இந்த நிகழ்ச்சியால் மேலும் வளர்ந்தது. பொன்னமராவதி போய்ச் சேர்ந்தோம்.  சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் பொன்னமராவதி எங்களுக்குக் கொஞ்சம் கைகொடுத்தது. அங்குப் பிரசித்திபெற்ற கதா காலட்சேப வித்வான் சூலமங்கலம் வைத்தியகாத பாகவதர் எங்களுக்கு அறிமுகமானார். நாங்கள் நடித்த இராமாயணம் அவரை மிகவும் கவர்ந்தது. அதைப் பாராட்டு வதற்காக ஒரு நாள் காலையில் கொட்டகைக்கு வந்தார். பாடல்களைச் சுத்தமாகவும் கர்னாட சங்கீதத்திலும் அமைந்திருப்பதாகவும், நன்றாகப் பாடியதற்காகவும் எங்களை மனமாரப் பாராட்டினார். அன்று முதல் அவரோடு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. புராண இதிகாசங்களில் புதுமை காண விழைந்தோம். திருமாலின் லீலைகளே தசாவதாரம், ஸ்ரீ கிருஷ்ணலீலா, இராமாயணம், மகாபாரதம் முதலிய கதைகளாக நாடக சினிமா உலகில் நடமாடி வந்தன. சிவபெருமானின் திருவிளையாடல்கள் எதுவும் மேடையிலோ, திரைப்படங்களிலோ வந்ததில்லை. எனவே அவற்றை மேடையில் தோற்றுவிக்க எண்ணினோம்.  சூலமங்கலம் பாகவதர் சிவபுராண ஆராய்ச்சியில் பெரும் புகழ் பெற்றவர். எனவே அவரிடம் எங்கள் எண்ணத்தை வெளியிட்டோம். திருவிளையாடல் புராணத்தை நாடகமாக்கித் தருவதாக அவர் ஒப்புக் கொண்டார். அந்நாடகத்திற்குச் சிவலீலா என்ற பெயர் பொருத்தமாயிருக்குமெனச் சின்னண்ணா கூறினார். சிவலீலா நாடக முயற்சி தொடங்கப் பெற்றது. பாகவதரும் சின்னண்ணாவும் தனியே கலந்து திருவிளையாடல் புராணத்தில் எந்தெந்தப் படலங்கள் நாடகத்திற்குச் சுவையளிக்கும் என்பதைப் பற்றி ஆராய்தார்கள்.  சிவலீலா பொன்னமராவதியிலிருந்து திருச்சி வந்து சேர்ந்தோம். திருச்சியில் நாடகங்களுக்கு வசூல் இல்லை. பாகவதர் எழுதிய சிவலீலா வந்தது. புதிய நாடகத்தைத் தயாரிக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டோம். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் எங்கள் குடும்பத் தோழர். பிரபல அமைச்சூர் நடிகர் எப்.ஜி. நடேசய்யர் எங்கள் உற்ற நண்பர். டாக்டர் ஒ.ஆர். பாலு எங்களுக்குப் பலவகையில் உதவியவர். இவர்களெல்லாம் சிவலீலா பெற்றிகரமாக உருவாக யோசனைகள் கூறினர். பொருள் வசதியில்லாத நிலையில் எந்த யோசனையைத்தான் செயல்படுத்த முடியம்? இருந்தாலும் சிவலீலாவைத் திருச்சியில் எப்படியும் அரங்கேற்ற முனைந்தோம். பாடம் கொடுத்தோம். முஸ்லீம் கவிசர் சையத் இமாம் புலவர் சிவலீலாவுக்குப் பாடல்களை புனைந்தார். ஏற்கனவே எப்.ஜி. நடேசய்யரின் ஞான சௌந்தரிக்குப் 351  பாடல்கள் எழுதியவர். எப். ஜி. என். தான் புலவரை அறிமுகப் படுத்திவைத்தார். கிறித்துவக் கதையாகிய ஞானசெளந்தரிக்கும் இந்து புராணக்கதையாகிய சிவலீலாவுக்கும் ஒரு முஸ்லீம் புலவர் பாடல் புனைந்தது குறிப்பிடத்தக்க செய்தியல்லவா? இதில் வியப்பென்னவென்றால் திருவிளையாடல் புராணம், பெரிய புராணம் இவற்றையெல்லாம் புலவர் சையத் இமாம் நன்கு அறிந்திருந்தார். அவரோடு நெருங்கிப் பழகியபோது எளக்கு எங்கள் நாஞ்சில் நாட்டுப் பெரும் புலவர் கோட்டாறு சதாவ தாளம் செய்குத்தம்பிப் பாவலர்தாம் நினைவுக்கு வந்தார்.  சிவலீலா ஒரு புது விதமான நாடகமாக உருவாகியது. இறைவன் விறகு விற்ற படலத்தில் தமிழ் இசையின் சிறப்பு வலி யுறுத்தப் பெற்றது. தருமிக்குப் பொற் கிழி அளித்த படலத்தில் தமிழ் மொழியின் வளமையைச் சொல்ல வாய்ப்புக் கிட்டியது. கல்யானைக்குக் கரும்பருத்திய படலம் தந்திரக் காட்சிக்குரிய தாக இருந்தது. கால்மாறியாடிய படலம் சிவசக்தி கடனத்திற்கு ஏற்றதாக அமைத்தது. வலைவீசும் படலம் காதல்சுவை நிறைந்த பகுதியாக விளங்கியது. பெரிய புராணத்திலிருந்து திருக்குறிப்புத் தொண்ட நாயனரைச் சேர்த்துக்கொண்டோம். அஃது பக்தியின் பெருமையை எடுத்துக் காட்டுவதாகத் திகழ்ந்தது. ஆக நாடகம் பல்வேறு சுன்வகளைக் கொண்டதாகவும் பயனுடையதாகவும் அமைந்தது. நல்ல காட்சிகளும், உடைகளும் தயாரித்து நடத்தி னால் சிவiலா பொதுமக்களை ஈர்க்கும் நாடகமாக அமையு மென்பது நன்றாகப் புரிந்தது. நிலைமையைக் கருதி அவசியமான சிலவற்றை மட்டும் செய்து சிவலீலா நாடகத்தை 25-12-39 இல் அரங்கேற்றினோம். சிவசக்தி நடனத்திற்குப்பயிற்சி அளிக்கும் பொறுப்பை எப். ஜி. என். அவர்களின் மூத்தமகன் தியாகராஜன் ஏற்றுக்கொண்டார்.  நடனமாடும் சிவனுகவும், பார்வதியாகவும் கம்பெனியில் அப்போது முக்கிய பாத்திரங்களே ஏற்று நடித்து வந்த ஜெயராம னும், சோமசுந்தரமும் பயிற்சி பெற்றார்கள். இவ்விருவரும் மிகவும் திறமையாக ஆடினார்கள்.  சிவசக்தி நடனம், நாடகத்திற்குச் சிகரமாக அமைந்தது. எங்கள் வளர்ச்சியில் அக்கறை கொண்ட எப். ஜி. நடேசய்யர் டாக்டர் ஒ. ஆர். பாலு முதலியோர் நாடகத்தை வெகுவாகப் பாராட்டினார்கள்.  டி. வி. நாராயணசாமி   எட்டையபுரம் ராஜாவின் பரிந்துரையோடு எங்கள் குழுவில் சேர்ந்த டி. வி. நாராயணசாமி சிவலீலாவில் சிவபெருமானாக நடித்தார். சிவபெருமான் பக்தர்களுக்காக மேற்கொள்ளும் மாறு வேடங்களை எல்லாம் நான் நடித்தேன். ஏ. பி. நாகராஜன் பார்வதியாகவும், பின்னல் வலை வீசும் படலத்தில் கயற்கண்ணியாகவும் நடித்தார். நடிப்பிசைப் புலவர் கே. ஆர். இராமசாமி வடநாட்டு இசைப்புலவர் ஹேமநாதனாகவும், எட்டையபுரம் அரசர் கம்பெனி யிலிருந்த நன்றாகப் பாடும் திறமைப் பெற்ற சங்கரநாராயணன் பாணபத்திரராகவும், பிரண்டு இராமசாமி தருமியாகவும் நடித்தார்கள். நகைச் சுவைச் செல்வன் டி. என். சிவதாணு தொடக்க முதல் இறுதிவரைப் பல வேடங்களில் தோன்றிச் சபையோரைப் பரவசப்படுத்தினார். டி. வி. நாராயணசாமிக்குச் சிவபெருமான் வேடப்பொருத்தம் சிறப்பாக அமைந்தது. கம்பெனியில் சேர்ந்த தொடக்க நாளில் நாராயணசாமி துச்சாதனகை நடித்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. வீர அபிமன்யு நாடகத்தில் துச்சாதனனுக்கு வசனம் எதுவும் இல்லை. பேருக்கு ஒருவர் வேடம் புனைந்து நிற்க வேண்டியதுதான். அப்படி எண்ணித்தான் இவரை போட்டோம். ஆனால் துரியோதனாதியர் அனைவரையும் கட்டி நிறுத்தி இலக்கண குமாரனுக்கு ஐந்து குடுமிவைத்து, அரசாணிக் காலிலே கட்டும்நாடகத்தின் இறுதிக்கட்டத்தில் டி. வி.நாராயண சாமி எங்களேயெல்லாம் திணறவைத்துவிட்டார். அவர் காட்டிய வீரமும் ஆவேசமும் அடேயப்பா!... துச்சாதனனை அடக்குவது எங்களுக்குப் பெரிய தொல்லையாகப் போய்விட்டது. அதற்கு முன்பெல்லாம் இவ்வேடம் புனைந்த துச்சாதனார்கள் இடித்த புளி போல் நின்றுகொண்டிருப்பார்கள். அவர்கள் முகத்தில் எவ்வித உணர்ச்சியும்இராது. வார்த்தைகள் எதுவுமில்லாத அந்தவேடத்திலேயே டி. வி. நாராயணசாமியின் நடிப்பாற்றல் என்னைக் கவர்ந்தது. அதன் பிறகு அவருடைய திறமைக்கேற்றவாறு விரைவில் முன்னேறினார். இராமாயணத்தில் அவர் இலட்சு மணனாக நடித்தது இன்னும் என் மனக்கண் முன் நிற்கின்றது. மந்திரி சுமந்திரர், தந்தைக்குச் சொல்ல வேண்டிய செய்தி ஏதேனும் உண்டா?’ என்று கேட்கும் நேரத்தில், அது யாரவன் எனக்குத் தந்தை?’ என்று கண்களில் கோபக் கனல் தெறிக்கக் கூறி, கம்பன் பாடியுள்ள மூன்று பாடல்களை ஆவேசத்தோடு முழக்கும் அவரது ஆற்றல் மிக்க நடிப்பு, அவையோரை மட்டு மல்ல; மேடையில் அவரோடு இராமராக நடிக்கும் என்னையும் மெய்சிலிர்க்க வைக்கும். சிவலீலாவில் சிவபெருமாகை நின்று பார்வதி, முருகன், நந்திதேவர் முதலியோருக்கு அவர் சாபம் கொடுக்கும் கட்டம், பார்த்து மகிழ வேண்டிய அருமையான காட்சி. அக் காட்சி நடைபெறும்போது நான் பக்கத்தட்டியில் மறைவில் நின்று பார்த்து ரசித்துக் கொண்டிருப்பேன்.  சீனிவாச ஐயங்கார் திருச்சியில் சிவலீலா நாடகம் நான்கு நாட்கள் நடந்தன. இவ்வளவு சிரமப்பட்டுத் தயாரித்த சிவiலாவுக்கும் வசூல் இல்லை. வழக்கம்போல் கே.டி. ருக்மணியை வரவழைத்து மனே கரா நாடகம் போட்டோம். சுமாராக வசூலாயிற்று. திண்டுக்கல் போக முடிவு செய்தோம். பணநெருக்கடி அதிகமாக இருந்தது. எதிர் பார்த்த நண்பர்களின் உதவி உரிய சமயத்தில் கிடைக்க வில்லை. இந்த நிலையிலும் மணவை ரெ. திருமலைசாமியின் நகரதுாத னுக்கும், எதிரொலி என்னும் இதழை நடத்தி வந்த நண்பர் கணபதிக்கும் திருச்சியில் உதவி நாடகங்கள் நடத்தி கொடுத் தோம். அவற்றிற்கு டிக்கட் தனியாக விற்பனை செய்ததால் ஒரளவு வசூல் ஆயிற்று. கணபதியின் எதிரொலிக்காக 9-12-39 இல் நடந்த தேசபக்தி நாடகத்திற்கு முன்னுள் காங்கிரஸ் மகா சபைத்தலைவர் எஸ். சீனிவாசஐயங்கார் தலைமை வகித்தார். அவர் ஆங்கிலந்தில்தான் பேசினார். என்றாலும், தமிழில் பேச இயலாத தம் நிலையை எடுத்துச்சொல்லி மிகவும் வருத்தப்பட்டார். “இந்த நடிகமணிகள் தேசபக்தி நாடகத்தில் பேசிய தமிழைப்போல் என்னுல் பேச முடிந்திருந்தால் சாதாரணத் தமிழ் மக்களிடையே யும் நான் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருப்பேன், நான் படித் துள்ள ஆங்கிலக் கல்வி, படித்த கூட்டத்தாரிடம் மட்டுமே என்னைத் தொடர்பு கொள்ள வைத்து விட்டது. அதற்காக மிகவும் வருந்துகிறேன்’ என்று கூறினார்.   மணவை திருமலைசாமி மணவை ரெ. திருமாலைசாமி அவர்களின் நகர தூதன் ஏட்டுக்காக 29.12.39.ல் நடந்த நாடகத்திற்குப் பெரியார் ஈ. வெ. ரா. அவர்கள் தலைமை வகித்தார்கள். அன்பர் திருமலைசாமி ஒரு சிறந்த எழுத்தாளர். நகர தூதனில் ‘பேணு நர்த்தனம்’ என்னும் தலைப்பில், அவர் எழுதிவந்த அரசியல் கட்டுரைகள் அந்த நாளில் மிகவும் கவர்ந்தன. பிரபல எழுத்தாளராகிய கல்கி, ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மணவை திருமலைசாமி அவர்களின் எழுத்தாற்றலைப் பற்றி அடியில் வருமாறு பாராட்டியுள்ளார்.  “திருச்சி நகர தூதன் பத்திரிகையின் முதல் பக்கத்தில் ‘பேனாநர்த்தனம்’ என்னும் தலைப்பில் ஒருவர் எழுதுகிறாரே, அவர் மிகவும் பொல்லாத எழுத்தாளர். அவருடைய பேனாநர்த்தனத்தில் பரத நாட்டியத்திலேயுள்ள சகல ஜதி வகைகளையும் காணலாம். அப்படித் துள்ளிக் குதிக்கும் வேகமுள்ள தமிழ் நடையில் எதிர்க்கட்சிகாரர்களையும், எதிர்க் கட்சிக் கொள்கைகளையும் அவர் தாக்குவார். நானும் பார்த்து வருகிறேன்; சென்ற இருபது ஆண்டுக்கு மேலாக அவருடைய கொள்கையும் ஒரே மாதிரியாக இருந்து வருகிறது. அவருடைய தமிழ் நடையும் ஒரேவித நோக்கமுள்ளதாய் இருந்து வருகிறது. இவரால் தாக்கப்படுகின்ற மனிதர் நல்ல ரசிகராக மட்டும் இருந்தால் ‘'தாக்கப்பட்டாலும் இப்படிப் பட்ட பேனாவினாலல்லவா தாக்கப்பட வேண்டும்’ என்று அவருக்கு எண்ணத் தோன்றும்.”  1947இல் இவ்வாறு ரா. கிருஷ்ண மூர்த்தி பாராட்டினாரென்றால் அவருடைய அபாரமான எழுத்தாற்றலுக்கு வேறன்ன நற்சான்று வேண்டும்? அன்று நாடகத்திற்குத் தலைமை தாங்கிய பெரியார் ஈ. வே. ரா. அவர்கள் கூறிய மொழிகள், எனக்கு நன்முக நினைவிலுள்ளன. “நான் டி. கே. எஸ். சகோதரர்களை எவ்வளவோ பாராட்டியிருக்கிறேன். விருந்துகள் நடத்தியிருக்கிறேன். என் பத்திரிக்கைக்கு அவர்கள் இப்படி நாடகம் நடத்திக் கொடுத்ததில்லை. மணவை திருமலைசாமி நிரம்பவும் கெட்டிக்காரர். எனக்குக்கிடைக்காத அந்தநிதி-உதவி அவருடையப்பத்திரிகைக்குக் கிடைத்துவிட்டதே!” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.  திருச்சி நாடகம் முடிந்து திண்டுக்கல் வந்து சேர்ந்தோம்.          பூலோகரம்பை   ஈ. வெ. ரா.பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலிருந்து விலகி, இப்போது பொதுவுடைமைப் புரட்சி வீரராக விளங்கினார் தோழர் ஜீவானந்தம். அவர்மூலம்பொதுவுடைமை வீரர்கள் சிலர் எங்களுக்கு அறிமுகமாயினார். இவர்களில் ஏ. கே கோபாலன், பி.இராமமூர்த்தி, கே. பாலதண்டாயுதம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். பாலதண்டாயுதம் தம்பதி சமேதராகவே நாடகம் பார்க்க வருவார். எனக்கு அவர் அளித்த ஒரு சிறிய வெள்ளிப் பரிசினைக்கூட நான் இன்னும் வைத்துக் கொண்டிருக்கிறேன். உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று வெளிப்படையாகவே எழுதித் தொங்கவிட்ட எங்கள் முகப்புத் திரை பல்வேறு அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்த்தது. அதன் காரணமாக சர்க்கார் அதிகாரிகளின் தொல்லையும் அதிகரித்தது. பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் வெளியிடப் பெற்ற ‘ஜன சக்தி’ வார இதழுக்கு எங்கள் குழுவின் நடிகர் ராஜநாயகம் ஏஜண்டாகவே இருந்தார். சமுதாய நாடகங்களில் வாய்ப்பு நேரும் போதெல்லாம் சமதர்மக்கருத்துக்களைப் பிரசாரம் செய்து வந்தோம்.  பூலோகரம்பையில் ஒப்பந்தம் திண்டுக்கல்லில் நாடகங்கள் நடத்தத் தொடக்கத்திலேயே அவசரமாகப் பணம் தேவைப்பட்டது. சின்னண்ணா துணைவியாரின் கழுத்திலிருந்த சில நகைகளைப் பாங்கில் அடகு வைத்துப்பணம் வாங்கினோம். காரியங்கள் நடந்தன. குமாஸ்தாவின் பெண் நாடகத்தைத் திரைப்படமாக்க வேண்டுமென்று சின்னண்ணா திட்டமிட்டார். அதற்காக எங்கள் குழுவிலிருந்த பழைய நடிக நண்பர் கே.வி. சீனிவாசனைக் கம்பெனிக்கு வரவரைத்தார்.  நாடகத்தைத் திரைப்படத்திற் கேற்றவாறு எழுதும்பொறுப்பினை அவரிடம் ஒப்படைத்தார். கே. வி. சீனிவாசன், சதிலீலாவதி பட டைரக்டர் ஏல்லிஸ் ஆர். டங்கனிடம் உதவியாளராக இருந்து அனுபவம் பெற்றவர். அவர் கம்பெனியில் இருந்து கொண்டே சின்னண்ணாவுக்கு ஆதரவாகப் பெரியண்ணா உட்பட எங்கள் எல்லேருடைய அபிப்ராயங்களையும் உருவாக்கிக் கொண்டிருந்தார். இந்தச் சமயத்தில் கோவையிருந்து பூலோக ரம்பை படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தது. 20.1-40இல் ஷண்முகா பிலிம்ஸ் எம். சோமசுந்தரம் சேலம் கந்தசாமி செட்டியார் நடிகை கே. எல் வி. வசந்தா ஆகியோர் திண்டுக்கல் வந்து பூலோகரம்பையில் நடிக்க எனக்கு மூன்றுமாத காலத்திற்கு ரூ.3750 சம்பளம் பேசி முன்பணமும் கொடுத்துச் சென்றார்கள் நெருக்கடியான நேரத்தில், கிடைத்த இந்தப்பணம் தெய்வம்தந்த வரப்பிரசாதமாக இருந்தது.  ‘நாஷ்’ கார் வாங்கினோம்  பூலோக ரம்பை படப்பிடிப்புக்காக அடிக்கடி கோவைக்குப் போய் வர ஒரு கார் தேவைப்பட்டது. அதைக் கம்பெனிக்குச் சொந்தமாகவே வாங்குவதென முடிவுசெய்தார் அண்ணா. காரைக்குடியிலிருந்த எங்கள் நண்பர் மெக்கானிக் சங்கர் நாயுடு இதற்கு உதவினார், 30-1- 40 இல் ஒரு பழைய ‘நாஷ்’ கார் 1225 ரூபாய்களுக்கு வாங்கப்பட்டது. அப்போது நான் முக்கிய பாத்திர மேற்று நடிக்காத நாடகம் ஸ்ரீகிருஷ்ணலீலா ஒன்று தான். எனவே அந்த நாடகத்தைத் தொடங்கிவிட்டு, என்னைக் கோவைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார் அண்ணா.  6 . 2. 40 இல் பூர் கிருஷ்ணலீலா தொடங்கியது. பூலோக ரம்பைபடத்தில் நடிப்பதற்காக அன்றிரவு 7மணிக்கு நான் காரில் கோவைக்குப் புறப்பட்டேன். இரவு 10 மணியளவில் ஈரோடு வந்து, எனது இனிய நண்பர் டாக்டர் கிருஷ்ணசாமி இல்லத்தில் தங்கினேன். மறுநாள் பகல் பெரியார் ஈ. வே. ரா அவர்களின் தமையனார் ஈ. வே. கிருஷ்ணசாமி நாயக்கர் நான்படத்தில் நடிக்க இருப்பதைப் பாராட்டும் முறையில் எனக்கு விருந்தளித்தார். இந்த விருந்தில் அறிஞர் அண்ணா, தோழர்கள் எம். ஏ. ஈஸ்வரன்,  ஏ.சங்கரய்யா முதலிய நண்பர்கள் கலந்து கொண்டு என்னை வாழ்த்தினார். 8 ஆம் தேதி காலை புறப்பட்டுக் கோவை சேர்ந்தேன்.  கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், எஸ்.வி. சகஸ்ரநாமம் முதலியோர் என்னை அன்புடன் வரவேற்றார்கள். சகோதரர் சகஸ்நாமம் அப்போது என். எஸ்.கே. படக்கம்பெனியின் நிருவாகப் பொறுப்பினை ஏற்றிருந்தார். அவர் எனக்குத் தேவையான உதவிகளைச் செய்தார். நீண்ட காலம் பழகிய நண்பர்களோடு இருந்ததால் சகோதரர்களைப் பிரிந்த தனிமை உணர்வு எனக்கு ஏற்படவில்லை.  பி. எஸ். இராமையா  கோவைராயல் இந்து ரெஸ்டாரண்டில் நான் தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள். கதாசிரியர் பி.எஸ். இராமையாவும் அங்கேயே தங்கியிருந்தார். நான் என் அறைக்குச் சென்றதும், “வாங்கோ மிஸ்டர் ஷண்முகம்” என்ற குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். “நான்தான் பி.எஸ்.இராமையா, பூலோகரம்பை கதையை நான்தான் எழுதுகிறேன்” என்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர். பி.எஸ்.இராமையாஅவர்களோடு அதுதான் எனக்கு முதல் சந்திப்பு. அவருடைய அற்புதமான சிறுகதைகளை மணிக்கொடியில் நிறையப் படித்திருக்கிறேன். பூலோகரம்பைக்கு அவர் வசனம் எழுதுகிறார் என்பதைக் கேள்விப்பட்டபோது மிகவும் மகிழ்ந்தேன். இருந்தாலும் அவர் இவ்வளவு எளிமையாகப் பழகுவார் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை. பிரபலமான ஒர் எழுத்தாளர் என் அறைக்கே வந்து, என்னை வரவேற்றது, அவருடைய எழுத்தில் நான் வைத்திருந்த மதிப்பைப் பன்மடங்கு உயர்த்தியது. நானும் பி.எஸ்.இராமையாவும் நெடுநாளைய நண்பர்களைப் போல் மனம் விட்டுப் பேசினோம். நெருங்கி உறவாடினோம்.  பாடலாசிரியர் ஆனை வைத்தியநாதய்யரும் எங்களோடு தங்கியிருந்தார், நான் போன மறுநாள்பாட்டு ஒத்திகைநடந்தது. டி.ஆர்.மகாலிங்கமும் நானும் பாடினோம். படத்தில் எங்க ளோடு என். எஸ். கே. டி. ஏ. மதுரம், கே, எல். வி. வசந்தா,  டி.எஸ்.துரைராஜ், டி.பாலசுப்பிரமணியம், டி. எஸ். பாலையா, பேபி ருக்மணி, பி.ஜி. வெங்கடேசன் முதலியோரும் நடித்தார்கள். பி, என்.ராவ், படத்தை டைரக்ட் செய்தார்.  தம்பியின் முதன்மை திண்டுக்கல்லில் நான் இல்லாமலை நாடகங்கள்தொடர்ந்து நடைபெறுவதற்கு நடிகர்கள் வழிவகை செய்தார்கள். சிவலீலாவில் நான் புனேந்த விறகுவெட்டி, புலவர், சிவனடியார், எல்லாம் வல்ல சித்தர், வலைஞன் ஆகிய வேடங்களை நடிப்பதற்குத் தம்பி பகவதியே துணிவோடு முன்வந்தார். அதேபோல் குமாஸ்தாவின் பெண்ணிலும் நான் நடித்த ராமு வேடத்தைப் பகவதியே நெட்டுருப் போட்டார். ராமதாசில் இரண்டாவது ராமதாசாக நடிக்க கே. ஆர். ராமசாமி இசைவளித்தார். ஆக, ஷண்முகம் இல்லாமலே நாடகங்களைத் தொடர்ந்து நடத்த முடியும் என்ற நிலைமையை உருவாக்க நடிகர்கள் அனைவரும் ஒத்துழைத்தார்கள். சம்பூர்ண இரமாயணம், மனோகரா முதலிய சில நாடகங்களுக்குத்தான் நான் தேவைப்பட்டது. திண்டுக்கல்லுக்கும் கோவைக்குமாக இரண்டு மூன்றுமுறை இவ்வாறு காரில் பயணம் செய்ய நேர்ந்தது. பெரியண்ணா என் உடல் நலத்தைப் பற்றி மிகவும் கவலைப்பட்டார். கோவைக்கு அருகிலேயே இருந்தால் இன்னும் கொஞ்சம் வசதியாக இருக்குமென்று எண்ணினார். பொள்ளாச்சி, திருப்பூர் இரு ஊர்களுக்கும் சென்றார். திருப்பூர் கொட்டகை உறுதிப்பட்டது. நான் எவ்விதக் கவலையுமின்றித் தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தேன். குதிரையேற்றம் பழகினேன். சிறுவாணி, பேரூர் முதலிய இடங்களில் நானும் மகாலிங்கமும் குதிரை சவாரி செய்தோம். பாலையாவுக்கும் எனக்கும் சிறுவாணிக் காட்டில் பலத்த சண்டை நடந்தது. படப் பிடிப்பில் மிகுந்த உற்சாகத்தோடு இருந்தேன். திடீரென்று திருப்பூரிலிருந்து உடனே புறப்பட்டு வரும்படியாகப் பெரியண்ணா தொலைபேசி மூலம் அறிவித்தார். 15-3-40-ஆம் நாள் அதிகாலை காரில் புறப் பட்டுத் திருப்பூர் வந்தேன். தங்கை சுப்பம்மாளின் கணவருக்கு உடல் நலமில்லையென்றும் உடனே நாகர்கோவில்செல்ல வேண்டு மென்றும் கூறினார். சிறிதும் தாமதிக்காமல் திண்டுக்கல்வந்தோம். அன்றிரவு நடைபெற இருந்த நாடகம் நிறுத்தப்பட்டது. மாலை யிலேயே நாகர்கோவில் போய்ச் சேரும் எண்ணத்துடன் தம்பி பகவதியையும் அழைத்துக் கொண்டு காரில் பயணமானோம். சின்னண்ணா தம் மனைவியுடன் முன்பே நாகர்கோவில் சென்றிருந்தார்.  தங்கையின் கோலம் நாம் நினைத்தப்படி எதுவும் நடப்பதில்லையே! பயணத்தில் பல்வேறு இடையூறுகள்; தடங்கல்கள். விருதுநகரைத் தாண்டியதும் டயர் பஞ்சர். ஸ்டெப்னியைப் போட்டுக் கொண்டு புறப்பட்டோம். சாத்துரைக் கடந்ததும் ‘டியூப் பஞ்சர்.’ மீண்டும் எப்படியோ சமாளித்துப் பயணத்தைத் தொடர்ந்தோம். கயத்தாற்றின் அருகே வரும்போது மற்றொரு டியூப்பும் பஸ்டு ஆகி விட்டது. மேலே பயணத்தைத் தொடர வழியில்லை. நான் பஸ்ஸில் திருநெல்வேலிக்குச் சென்றேன். இரவு நேரம். மிகுந்த சிரமபட்டு அலைந்து, புது டியூப் வாங்கினேன். வாடகைக் காரில் வந்து சேர்ந்தேன். டியூப்பைப்போட்டுக் கொண்டு புறப்பட இரவு மணி 10க்கு மேலாகிவிட்டது. எங்கும் நிற்காமல் இரவு 2 மணி யளவில் நாகர்கோவில் வந்து சேர்ந்தோம். கீழத் தெருவிலுள்ள எங்கள் இல்லத்தை அடைந்தோம். எங்கோ ஒரு நாய் ஊளை யிட்டது. கதவைத் தட்டினோம். அண்ணியர் கதவைத் திறந்தார்கள். உள்ளே அடியெடுத்து வைத்தோம். அண்ணியார் வாயிலிருந்து வந்த சொற்கள் எங்களை அதிர்ச்சியடையச் செய்தன. தங்கையின் கணவர் சுப்பையாபிள்ளை 15.3.40 அதி காலை 5 மணிக்கே காலமாகிவிட்டார். எங்கள் வருகைக்காகக் காத்திருந்து இரவு 7 மணிக்கு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.  நாங்கள் வந்துவிட்டதை அறிந்த தங்கை சுப்புவின் அழுகுரல் என் செவிகளில் கேட்டது. 20 வயதே நிரம்பிய இளமைப் பருவம் இரு பெண் குழந்தைகள் ஏதுமறியாத நிலையில் அந்தப் பச்சிளங் குழந்தைகள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தன. வெள்ளைச் சேலையைப் போர்த்திக் கொண்டு கைம்மைக் கோலத்தில் கிடந்த என் அருமைத் தங்கையின் திருமுகத்தை ஏறிட்டுப் பார்க்கவும் என்னல் முடியவில்லை. தேம்பித் தேம்பி அழுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?   முன்பணம் பெற முயற்சி!  நாகர்கோவிலில் நான்கு நாட்கள் இருந்தோம். 18ஆம் தேதி திண்டுக்கல் திரும்பி நாடகத்தில் பங்கு கொண்டோம். நாலைந்து நாடகங்களில் நடித்துவிட்டு மீண்டும் கோவை சென்றுபடப்பிடிப்பில் ஈடுபட்டேன். முன்னரே திட்டமிட்டபடி என்னுடைய படப் பிடிப்பின் வசதியை முன்னிட்டுக் கம்பெனி திருப்பூரில் முகாம் இட்டது. கோவை பிரிமியர் சினிடோன் கூட்டுறவோடு குமாஸ்தாவின் பெண்ணைப் படமெடுப்பதற்குரிய ஆயத்தங்களைச் சின்னண்ணா செய்து வந்தார். பொருளாதார நிலை சரியில்லாததால் பெரியண்ணாவுக்குப் படப்பிடிப்பில் விருப்பமில்லை, என்றாலும் இளையவரின் முயற்சியை அவர் தடை செய்யவில்லை. சின்னண்ணா சென்னை சென்று திரு எஸ். எஸ். வாசனைக் கண்டு பேசினார். குமாஸ்தாவின் பெண் படத்தின் விநியோக உரிமையை அவருக்கு அளிக்கவும், முன்கூட்டியே பணம் பெறுவதற்குமான ஏற்பாடுகளைச் செய்து வந்தார்.  அரங்க நாடகம் அச்சேறியது கம்பெனி திருப்பூருக்கு வந்தது எனக்கு மிகவும் வசதியாக இருந்தது. திரைப்படத்தில் நடிப்பது என்னதான் வருவாய்க்குரியதாக இருந்தாலும் என்னுடைய கவனமெல்லாம் நாடகத்திலேயே இருந்தது. கம்பெனி தளர் நடைவிட்டுக் குதித்தோடும் பருவத்தில் இருந்ததால் எனக்கும் சொந்தப் படப்பிடிப்பில் அவ்வளவு சிரத்தை ஏற்படவில்லை. ஆயினும் சின்னண்ணா முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொண்டு எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். கேவையில் இரவு படப்பிடிப்பு இல்லையென்றால் நான் உடனே திருப்பூருக்குக் காரில் வந்துவிடுவேன். அரங்கில் நடைபெற்ற குமாஸ்தாவின் பெண்நாடகத்தை அச்சில் கொண்டு வரவும் முயன்றேன். திருப்பூரில் குமாஸ்தாவின் பெண் நாடகம் நடைபெற்றபோது, அந்நாடகம் திருப்பூர் யூனியன் அச்சகத்தில் அச்சாகி நூல் வடிவிலும் வெளிவந்தது.  படாதிபதிகள் திட்டமிட்டபடி பூலோகரம்பை படம் மூன்று மாதங்களில் முடியவில்லை. எனவே அதனை அனுசரித்து நாங்களும் உடனே கோவையில் குமாஸ்தாவின் பெண் படப் பிடிப்பைத் தொடங்க முடிவு செய்தோம்.        அண்ணாவின் விமரிசனம்   கம்பெனி ஈரோடு சென்றது. அங்கும் குமாஸ்தாவின் பெண் வெற்றிகரமாக நடைபெற்றது. ஈரோட்டிலுள்ள எங்கள் நண்பர்கள் அனைவரும் நல்ல முறையில் பாராட்டி நாடகம் திரைப்படமாக வந்து அமோக வெற்றி பெறவேண்டுமென்று வாழ்த்தினார். அறிஞர் அண்ணா அவர்கள் “விடுதலை”யில் இந்நாடகத்திற்கு ஓர் அருமையான இலக்கிய விமர்சனம் எழுதினார். அதன் தொடக் கத்தில் கீழ் வருமாறு குறிப்பிட்டிருந்தார்.  “வனிதைகளை மணந்து வாழ்வதென்றாலே வெறுப்புக் கொள்ளும் வேதாந்தி! கண்டவர் கனியோ, மணியோ எனக் கூறி கட்டி யணைக்க விரும்பும் கட்டழகு படைத்த இருமங்கைகள்! கூனோ குருடோ-எவனோ ஒருவன் வரமாட்டான, வயதுக்கு வந்துவிட்ட பெண்னைக் கட்டிக் கொண்டு சாதியாசாரம் கெடாதபடி, பழி வராதபடி, தடுத்து ஆட்கொள்ள மாட்டான என்று சதா கவலைப் படும் தந்தை; சோகத்தில் பங்கு கொள்ளவே ஜனித்த அவரது மனைவி; அவர்களின் இணை பிரியாத் தோழன் வறுமை; உல்லாசமே உயிர் வாழ்க்கையின் இலட்சியம் என எண்ணி வாழும் செல்வச் சீமான்; அவனது உதவி இருக்கும் போது வீட்டைப்பற்றிக் கவலை எதற்கு என்று எண்ணாம் இளங்காளை; காளையைக் சுற்றிலும் கண் சிமிட்டிக் கையசைத்துக் காலம் தள்ளும் காரிகைகள்; அத்தகை யோரைக் கொண்டே நடிப்புக் கலையை நடத்தி நல்ல பணம் பெற முடியும் என எண்ணாம் சினிமா டைரக்டர்; இவ்வளவு பேருக்கும் இடையே நின்று அகப்பட்டதைச் சுருட்டி வாழும் சில அந்தணர்கள்!  “குமாஸ்தாவின் மகள்” என்னும் நாடகத்தில் வரும் பாத்திரங்கள் இவைகளே. குடும்பபாரம்; வறுமையின் கொடுமை வரதக்ஷிணையின் குரூரம்: மண அறையில் பிணம் விழுதல்; தந்தை மொழியால் தற்கொலை; இந்த நேரத்தில் வீடு ஜப்தி; இவைகளை விட சோகக் காட்சிகள் ஏது? இவ்வளவும் ‘குமாஸ்தாவின் மகள்’ தருகிறாள்-அதாவது அந்த நாடகத்தில் உண்டு.”[1]  இவ்வாறு விமர்சனத்தைத் தொடங்கி ஒவ்வொரு கட்டத்தைப் பற்றியும் ஒவ்வொரு நடிகரைப் பற்றியும் விரிவாகப் எழுதிவிட்டு இறுதியில் “பல நாட்களில் நான் கண்டறியாதன இதில் கண்டேன். நான் கண்டதைச் சுருக்கித் தான் எழுதினேன். முழுவதையும் நீங்கள் காணவேண்டுமே; ஈரோடு வாசிகள் இன்றே செல்லுங்கள். மற்ற ஊரார் அழைப்பு அனுப்புங்கள் கம்பெனிக்கு. குமாஸ்தாவின் மகள் சினிமாவாகவும் வரப் போகிறது. கவனம் இருக்கட்டும்!!” என்று முடித்திருந்தார். இந்த விமர்சனம் எங்கள் நடிகர் அனைவருக்கும் மிகுந்த உற்சாகம் ஊட்டியது. பலமுறை படித்துப்படித்துச் சுவைத்தோம்.  ஈரோடு நண்பர்களுக்கெல்லாம் ஒரு இனிய விருந்து நடத்தி னார் பெரியண்ணா. இதில் பெரியார் ஈ. வே. ரா,அறிஞர் அண்ணா, டாக்டர் கிருஷ்ணசாமி, எம். ஏ. ஈஸ்வரன் முதலிய அனைவரும் கலந்து கொண்டனார்.  வியக்கத் தக்க நடிப்பு குமாஸ்தாவின் பெண்ணில் கதாநாயகி சீதாவாக நடிக்க திருமதி எம். வி. ராஜம்மா ஏற்பாடு செய்யப்பட்டார். இவர் நாடகத்தை ஒரு முறை பார்க்க விரும்பினார். திரைப்பட விநியோக உரிமையைப் பெறுவதற்காக முன் பணம் கொடுக்க ஒப்புக்கொண்ட திரு எஸ். எஸ். வாசன் அவர்களும் நாடகத்தைப் பார்க்க ஆசைப்பட்டார். 30-6.40 இல் நடைபெற்ற குமாஸ்தாவின் பெண் நாடகத்திற்கு எஸ்.எஸ்.வாசன், நாராயண ஐயங்கார், சென்ட்ரல் ஸ்டுடியோ ஸ்ரீராமுலு நாயுடு, மூர்த்தி பிலிம்ஸ் மருதாசலம் செட்டியார், எம். வி. ராஜம்மா, பெரியார் ஈ. வெ. ரா. அறிஞர் அண்ணா முதலியோர் வந்திருந்தனார். அன்று நாடகம் மிகச் சிறப்பாக நடந்தது. மிகுந்த ஆர்வத்தோடு நாடகம் முழுவதையும் பார்த்த எம். வி. ராஜம்மா, வாசன் ஆகியோர் நாடகம் முடிந்ததும் உள்ளே வந்தனார். பெண் வேடத்தோடிருந்த கலைஞர் ஏ. பி. நாகராஜனை ஏற இறங்கப் பார்த்தார்கள். உற்று நோக்கினார்கள். “சீதாவாக நடித்த இந்தப் பையனப்போல் ராஜம்மா நடித்துவிட்டால் போதும். படம் முதல் தரமாக அமைந்து விடும்” என்றார் எஸ். எஸ். வாசன். உடனே ராஜம்மா, ஐயோ! இந்தப் பையனைப்போல் எப்படி நான் சீதாவாக நடிக்கப் போகிறேன்? எனக்கு பயமாக இருக்கிறது!” என்று நாகராஜனின் நடிப்பை வியந்து போற்றினார். ஆம்; அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை! கலைஞர் நாகராஜனின் அந்தப் பெண் வேட நடிப்பு, அன்று நடிகர்களாகிய எங்களை யெல்லாம் கூட பிரமிக்க வைத்தது.  ஸ்பெஷல் ரயில் சமுதாயச் சீர்திருத்த நாடகமாகிய குமாஸ்தாவின் பெண்ணைப் படமெடுக்க முன் வந்த எங்களைப் பாராட்டும் முறையில் பெரியார் ஈ. வெ. ரா. அவர்கள் கம்பெனி முழுவதுக்கும் ஒரு பெரிய விருந்து நடத்தினார். 18-7.40இல் நடைபெற்ற இவ் விருந்தில் நகரப் பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொண்டனார். எல்லோர் உள்ளத்திலும் மகிழ்ச்சி குடி கொண்டிருந்தது.  குமாஸ்தாவின் பெண் படபிடிப்புக்குரிய எல்லா ஏற்பாடுகளும் முடிந்து விட்டதால் அதற்கு வசதியாகக் கம்பெனி கோவைக்குச் சென்றது. இதில் குறிப்பிடத்தக்க ஒரு விசேஷம் ஈரோட்டிலிருந்து கோவைக்கு, ஸ்பெஷல் ரயில் ஒன்று எங்களுக்காகவே விடப்பட்டது. அறிஞர் அண்ணா உட்பட ஈரோடு நகரப் பிரமுகர்கள் அனைவரும் வந்து எங்களை மகிழ்ச்சியோடு வழியனுப்பினார்கள்.  1. இவ்விமர்சனம் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம் வெளியிட்டுள்ள நாடக உலகில் அண்ணா என்னும் நூலில் உள்ளது.                                            குமாஸ்தாவின் பெண் படம்!   குமாஸ்தாவின் பெண் படப் பிடிப்பு 31-7.40இல் கோவை பிரிமியர் சினிட்டோனில் தொடங்கப் பெற்றது. மறு நாள் கோவை ராஜா தியேட்டரில் நாடகமும் ஆரம்பமாயிற்று. அடுத்து, குமாஸ்தாவின் பெண் நாடகத்தை, நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் தலைமையில் தொடங்கினோம்” நாடகத்தைப் பாராட்டிய அவர் படமும் வெற்றி பெற வேண்டு மென்று வாழ்த்தினார்.  எங்கள் குமாஸ்தாவின் பெண் படப் பிடிப்பைப் பற்றிச் சொல்வதென்றால் அது ஒரு மகாபாரதமாகும். கதை, சீனரியோ டைரக்ஷன்,நடிகர்கள், பின்னணி, இசை இவையெல்லாம்.எங்கள் பொறுப்பு. ஸ்டுடியோ நிருவாகம் மூர்த்தி பிலிம்ஸைச்சேர்ந்தது. பெண் நடிகையர் எம். வி. இராஜம்மா, டி. எஸ். இராஜலட்சுமி, சகுந்தலா, இரண்டொருவரைத் தவிர எம். எஸ். திரெளபதி உட்பட எங்கள் நடிகர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்களாதலால் ஒத்திகை முதலிய வகைகளில் தகராறு வராது; கோவையில் மூன்று மாத காலம் நாடகம் ஆடிக்கொண்டே படப்பிடிப்பையும் முடித்து விடலாம் என்பது எங்கள் திட்டம். ஆனால் நடந்தது வேறு. படப்பிடிப்பு நடந்த பிரிமியர்சினிடோன் ஸ்டுடியோவின் அன்றைய நிலை நைந்து போன பழைய வேட்டியைப் போன்றது தொட்ட இடமெல்லாம் கிழியும். ஒரு புறம் தைத்தால் மறுபுறம் பிய்த்துக் கொள்ளும், அப்பப்பா! எவ்வளவு தகராறுகள்! எத்தனை மனஸ்தாபங்கள் !! ஸ்டுடியோ தொழிலாளர்களின் திடீர் வேலை நிறுத்தங்கள்; எடுத்த பிலிம் சுருணையை அடிக்கடி கழுவுவதற்கு ‘ஐஸ்’ இல்லாத தொல்லை; வெளிக் காட்சிகளைப் படமெடுக்க அடிக்கடி சவுண்ட் ட்ரக்” வெளி வர முடியாத நிலைமை. டெலி போன்’ இருந்தும் பேச முடியாத பரிதாபம். இப்படி எத்தனே, எத்தனையோ தொல்லைகள்!  ஒய்வின்றி உழைத்தோம் ‘ரீ டேக்’ எடுக்காத படமென்றுதான் எங்கள் படத்தைச் சொல்ல வேண்டும். ஏன் தெரியுமா? எடுத்த படத்தை உடனே போட்டுப்பார்க்க வசதியில்லை. ஒருவகையாய் சரிப்படுத்தி ‘ரஷ் பிரின்ட்’ போட்டுப் பார்க்க முயல்வோம். அதற்குள் ‘செட்டிங்’ மாறிவிடும். இதனால் அவசியம் என்று கருதப்பட்ட கட்டங்களைக் கூட மறுமுறை எடுக்கவில்லை. எப்படியாவது மானம் போகாமல் படம் முடிந்தால் போதும் என்ற நிலையிலேயே படத்தை முடித். தோம். எங்கள் மூன்று மாதத் திட்டத்தில் படம் முடியவில்லை. கோவை முடிந்து கள்ளிக்கோட்டை, பாலக்காடு ஆகிய ஊர்களில் நாடகத்திலும், படத்திலுமாக ஒய்வின்றி உழைத்தோம். அவ்வாறு உழைப்பதிலேயே இன்பம் கண்டோம், நாங்கள் நடிகர்களாக இருந்தமையால்தான் படம் முடிந்தது என்று சொல்லலாம். பட அதிபர்களுக்கு மட்டும் எங்கள் நிலை ஏற்பட்டிருந்தால் படப்பிடிப்பை விட்டுவிட்டு ஓடியிருக்க வேண்டியதுதான். இது தற்புகழ்ச்சியல்ல. உண்மை.  இயக்குநர் கே. வி. சீனிவாசன்  குமாஸ்தாவின் பெண்படம் எடுப்பதற்கு சீனரியோ தயாரித்ததோடு அஸோஸியேட் டைரக்டராகவும் இருந்துபடத்தை முடிப்பதற்கும் பெருந்துணையாக இருந்தவர் கே.வி.சீனிவாசன், இவர் எங்கள் கம்பெனியின் பழைய நடிகர் என்பதை முன்பே கூறியிருக்கிறேன். படம் நல்லமுறையில் வெளிவர இதயபூர்வமாக உழைத்தவர்களில் இன்று பிரபல டைரக்டர்களாக விளங்கிக் கொண்டிருக்கும் கிருஷ்ணன்-பஞ்சு இவ்விருவரையும் குறிப்பிட வேண்டும். பஞ்சு படத்திற்கு எடிட்டராகவும் கிருஷ்ணன் ‘லேபரட்ரியின்’ முதல்வராகவும் இருந்து அவ்வப் போது எங்களுக்கு அரிய யோசனைகளைக் கூறி ஒத்துழைத்தார்கள். நடிகர்கள் அனைவரும் தங்கள் சொந்தப்படம் என்ற உணர்விலேயே நடித்தனர்.  பூலோக ரம்பை படப்பிடிப்பு முடிவு பெறாத நிலையிலேயே குமாஸ்தாவின் பெண் படப்பிடிப்பு வேலையும் தொடங்கியதால் இருபடங்களிலும், அத்துடன் நாடகங்களிலும் நடிக்கவேண்டிய, நெருக்கடி எனக்கு ஏற்பட்டது.  உதட்டுக்கோபமும், உள்ளத் தூய்மையும்  ஒருநாள் பூலோகரம்பை படப்பிடிப்பின்போது சென்ட்ரல் ஸ்டுடியோவில் கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன்; அப்போது குமாஸ்தாவின் பெண்ணில் நடிக்கத் தம்மை அழைக்காதது பற்றி அவர் மிகுந்த வேதனைப்பட்டார். “மேனகா, பாலாமணி படங்களில் நானும் நடிக்க வேண்டுமென்று நீங்களே பட அதிபர்களை வற்புறுத்தி அழைத்தீர்கள். சொந்தப் படம் எடுக்கும் இப்போது மட்டும் என்னை அழைக்காதது ஏன்?” என்று கேட்டார். நியாயமான கேள்விதான். இதற்கு நான் எப்படிப் பதில் அளிக்க முடியும்? ஒரு முறை குமாஸ்தாவின் பெண் படப் பிடிப்புக்கு அவர் வந்தால் பெரியண்ணாவோடு ஏற்கனவே ஏற்பட்டிருந்த மனத் தாங்கல் தீருமென எண்ணினேன். வரும்படியாக வற்புறுத்தி அழைத்தேன். என் அழைப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, கொஞ்சம் கோபத்தோடு பேசினார். “குமாஸ்தாவின் பெண் படக் கதைதானே உங்களுக்குச் சொந்தமானது. அதிலுள்ள டைரக்டரின் நகைச்சுவைக் காட்சியை வேறு யார் எடுத்தாலும் உங்களால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார்.  “ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்?” என்றேன் நான்.  “அந்தக் காட்சியை நானே உங்கள் படம் வருவதற்குமுன் எடுத்து வெளியிடப் போகிறேன்” என்றார்.  அவருடைய இந்தப் பதில் எனக்குச் சிறிது வேதனையைத் தந்தது என்றாலும் நான் எதுவும் பேசாமல் மெளனமாக இருந்தேன். அவரே மேலும் பேசினார். “கண்டிப்பாக டைரக்டரின் நகைச்சுவைக் காட்சியை நான் எடுக்கத்தான் போகிறேன்"  என்று மீண்டும் அழுத்தமாகக் கூறினார். தொடர்ந்து நான் பூலோகரம்பை படப்பிடிப்பில் கலந்துகொண்ட போதெல்லாம் இதை நினைவுப் படுத்திக் கொண்டே இருந்தார். எனக்கு அச்ச மாகத்தான் இருந்தது. ஒரு நாள் நான் சின்னண்ணாவிடம் கலைவாணர் கூறியதைத் தெரிவித்தேன். உடனே அவர் சிரித்துக் கொண்டு, “நம்மைப் பாதிக்கும் வகையில் என். எஸ் கிருஷ்ணன் எதையும் செய்வானென்று நான் நினைக்கவில்லை. நாம் படத் திற்குக் கூப்பிடவில்லையே என்ற கோபத்தில் ஏதோ பேசலாம்; இதெல்லாம் உரிமையோடு வரும் கோபம் ஆனால் நம்மைப் பொறுத்தவரை தவறான காரியம் எதுவும் நடைபெறாது’ என்றார். அவர் சொன்னபடியேதான் நடந்தது. இறுதிவரையில் கலைவாணர் உதட்டளவில் கோபத்தை வைத்துக் கொண்டிருந்தாரே தவிர அவரது உள்ளம் துய்மையாகதான் இருந்தது என்பதைப் பின்னால் உணர்ந்தேன்.  பாலக்காடு முகாமில் குமாஸ்தாவின் பெண் ‘அவுட்டோர்’ காட்சிகள், பெரும்பாலும் கல்பாத்தி ஆற்றிலும், பாலக்காட்டைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் எடுக்கப்பட்டன. பூலோக ரம்பை படப்பிடிப்பு முடிந்து விட்டது. குமாஸ்தாவின் பெண்ணில் சில சில்லரைக் காட்சிகளே எடுக்க வேண்டியிருந்தன. டைரக்டர் பி. என். ராவ் இருபடங்களையும் இயக்கி வந்ததால் இயன்றவரை முழுமையாக ஒத்துழைத்தார்.  இந்து முஸ்லீம் கலவரம் படப் பிடிப்பு வேலைகள் முடிந்து விட்டதால் கம்பெனி மதுரைக்குச் சென்றது. நான் குழுவினரை வழியனுப்பிவிட்டு கோவை சென்றேன். எனக்கு மட்டும் இரண்டொரு நாள் படப்பிடிப்பு இருந்தது. குழுவினர் மதுரைக்குச் சென்ற மூன்றாம் நாள், மதுரையில் பலத்த இந்து முஸ்லீம் கலவரம் நடப்பதாகப் பத்திரிக்கையில் படித்தேன், பெரியண்ணாவின் கடிதமும் வந்தது. மதுரையில் கலவரம் நடப்பதால் நாடகம் சினிமா முதலிய கேளிக்கைகளை யெல்லாம் தடை செய்திருப்பதாகவும் ஒரு மாத காலம் இராஜபாளையத்தில் நாடகம் நடத்த முடிவு செய்திருப்பதாகவும் எழுதியிருந்தார். என் மனம் கவலைப்பட்டது. வட  நாட்டில்தான் இப்படியுள்ள கலவரங்கள் அடிக்கடி ஏற்படுவது வழக்கம். இந்துக்களும் முஸ்லீம்களும் அண்ணன் தம்பிகள்போல் வாழும்தமிழ்நாட்டிலும் இப்படியொருநினைவு ஏற்பட்டுவிட்டதே என்று மிகவும் வருந்தினேன். கம்பெனியைப் பொறுத்தவரை இது எதிர்பாராத நஷ்டத்தையே அளித்தது.  நாலேந்து நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டு இராஜபாளையம் வந்து சேர்ந்தேன். இராஜபாளையத்தில் சற்றும் எதிர் பாராத வகையில் முதல் நாடகம் இராமாயணத்துக்கு நல்லவசூலாயிற்று. தொடர்ந்து குமாஸ்தாவின்பெண் நாடகம் நடந்தது. அதற்கும் சிறந்த வரவேற்பு.  இராஜபாளையம் நல்ல ரசிகர்கள் நிறைந்த இடம். குமாஸ்தா இராசாமி ஐயராக கம்பெனியின் பழம் பெரும் நடிகர் சிவகங்கை நடராஜன் நடித்தார். மிகச் சிறந்த நடிகர் இவர். உருக்கமாக நடிப்பார். வறுமை நிறைந்த தமது குடும்பத்தைத் தவிக்கவிட்டு ஐயர் மரணமடையும் காட்சியில் நானே உள்ளேயிருந்து அழுவேன். அவையோரும் கண்கலங்குவார்கள். இக்காட்சியில் பெரும்பாலும் சபையோரின் ரசனையை நான் உள்ளிருந்தபடியே, எங்கள் ரகசியத் துளைகளின் வழியாகப் பார்ப்பது வழக்கம். இராஜபாளையம் ரசிகர்கள் இக்காட்சியில் தேம்பித் தேம்பியழுதார்கள். குமாஸ்தாவின் பெண் 20 நாட்கள் நடந்தன.  மதுரைக் கலவரம் ஒருவாறு அடங்கி விட்டதாகவும் தகவல் கிடைத்தது. இராஜபாளையம் நாடகத்தை முடித்துக் கொண்டு மதுரை வந்து சேர்ந்தோம்.                                            என் திருமணம்   8- 4- 41இல் மதுரையில் ‘இராமாயணம்’ நாடகம் தொடங்கினோம். அடுத்துக் குமாஸ்தாவின் பெண் தொடர்ந்து நடைபெற்றது. நாடகம் தொடர்ந்து நடைபெறும் சமயத்திலேயே மதுரை சென்ட்ரல் டாக்கீசில் குமாஸ்தாவின் பெண்படமும் திரையிடப்பட்டது. நாடகம், படம் இரண்டுக்கும் நல்ல பெயரும் புகழும் கிடைத்தன.  எங்கள் மனப்படி படம் சிறப்பாக வெளிவரவில்லை, என்றாலும் தமிழ் மக்களின் பாராட்டுக்குறித்தான படமாக இருந்தது. தமிழகத்தின் சிறந்த பத்திரிக்கைகளெல்லாம் படத்தைப் பாராட்டி எங்களுக்கு நல்வாழ்த்துக் கூறின. அறிஞர் அண்ணாவும் விடுதலையில் ஒருஅருமையான மதிப்புரை எழுதியிருந்தார் “நல்ல ஸ்டூடியோவும் திறமையான டைரக் ஷனும் இருந் திருந்தால் ‘குமாஸ்தாவின் பெண்’ இந்தியாவின் சிறந்த படங்களில் ஒன்றாக விளங்கியிருக்கும்” என்று பம்பாயின் பிரபல ஆங்கிலப் பத்திரிக்கையான ‘பிலிம் இந்தியா’ விமர்சனம் எழுதியிருந்தது. பாராட்டுக்கு முக்கிய காரணம் கதையமைப்புத்தான் குமாஸ்தாவின் பெண் படத்தினால் கம்பெனிக்குத் தமிழ்நாட்டில் நல்ல விளம்பரம் கிடைத்தது. எங்கள் உழைப்புக்குக் கிடைத்த லாபம் அதுதான் என எண்ணி மன நிறைவு பெற்றோம்.  புராணப் படங்கள் ஒரளவு தோல்வியடைந்தாலும் போட்ட பணத்திற்கு மோசமில்லை. சமூகப் படங்கள் அப்படி யல்ல; பெரும் வெற்றி பெற்றால்தான் சிறிதாவது லாபம் கிடைக்கும். இதுதான் அன்றைய நிலை. இனி, எவருடைய கூட்டுறவுமின்றிப் படம் பிடிக்க முடிந்தால் அதில் ஈடுபடுவது;  எ. நா-24  இல்லையேல் இந்தப் படத்துறையே நமக்கு வேண்டாம் என்று எண்ணினோம். படமும் நாடகமும் ஒரே சமயத்தில்பல வாரங்கள் மதுரையில் ஓடியதால் எங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை. நல்ல காலம் பிறந்ததாகவே கருதினோம். வெற்றிக் களிப்பில் வருவாய் முழுதும் செலவிட்டுச் சிவலீலாவுக்குப் புதிய காட்சிகள் தாயாரித்தோம்.  இனிக்கும் இராமாயணம் சிவலீலாவைத் தயாரிக்க உதவியாக ஸ்ரீகிருஷ்ணலீலா தொடர்ந்து 50 நாட்கள் நடைபெற்றது. சம்பூர்ண ராமாயணமும் தொடர்ச்சியாக நடந்தது. அது இரவு 9 மணிக்குத் தொடங்கி மறுநாள் விடிய 6 மணிவரை நடைபெறும் நாடக மாதலால் இடையே ஒரு நாள் ஒய்வு விட்டு மறுநாள் நடை பெற்றது. இராமாயணத்திற்கு மதுரையில் ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கான மக்கள் இடமின்றித் திரும்பிச் சென்றனார். அன்று நடைபெற்ற இலக்கியச் சுவையும் இசைச் சுவையும் நிரம்பிய இராமாயணத்தை இன்று நினைத்தாலும் உள்ளமெல்லாம் இனிக்கிறது! நடிகர்களின் பட்டியலைப் பாருங்கள். கலைஞர் ஏ. பி. நாகராஜன் சீதை, கலைமாமணி எம். எஸ் திரெளபதி மாயா சூர்பநகை; சங்கீதமேதை சங்கரநாராயணன் தசரதர்; பிரண்டு ராமசாமி விசுவாமித்திரர்; நடிகமணி டி. வி. நாராயணசாமி இலட்சுமணன்; தம்பி பகவதி இராவணன், நடிப்பிசைப் புலவர் கே. ஆர். இராமசாமி அனுமார் இராமர் நான், நகைச்சுவைச் செல்வன் டி. என். சிவதாணு தொடக்க முதல் இறுதிவரை பல நகைச்சுவை வேடங்கள். திருவாரூர் சீனிவாசன் பரதன். இவருடைய பரதன் நடிப்பைக் கண்டு தோழர் ஜீவானந்தமும் அறிஞர் அண்ணாவுமே கண்ணீர் விட்டிருக்கிறார்களென்றால் இவர் நடிப்பின் சிறப்புக்கு வேறென்ன நற்சான்று வேண்டும்?  திருமண ஏற்பாடுகள் சிவலீலா தொடங்குமுன் எனக்குத் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. நாகர் கோவிலிலும் திருவனந்தபுரத்திலும் என் ஒன்றுவிட்ட அண்ணா திரவியம் பிள்ளையுடன் சென்று முன்பே நாலைந்து பெண்களைப் பார்த்தேன். அவர்களில் எவரும் என் மனதுக்குப் பிடிக்கவில்லை. இப்போது புதிய நாடகத்தயாரிப்பில், தீவிரமாக ஈடுபட்டிருக்கும் இந்த நேரத்தில் நான் திருமணம் செய்து கொள்ள உண்மையில் விரும்பவில்லை. என்றாலும் பெரி யண்ணா விருப்பத்தை மறுக்காது ஒப்புக் கொண்டேன். சேலத்திலுள்ள எங்கள் நண்பர் திரு பஞ்சகதம் செட்டியார் சேலம் செவ்வாய் பேட்டையில் ஒரு பெண் இருப்பதாகவும், அவள் எனக்குப் பொருத்தமான பெண் என்றும் பெரியண்ணாவிடம் சொன்னதாக அறிந்தேன். சேலம் பெண்ணைப் பார்த்து வருவதற்காகத் தான் பெரியண்ணா என் ஒப்புதலை அறிய விரும்பினார் என்பது புரிந்தது. நான் இசைவு தெரிவித்ததும் பெரியண்ணா சேலம் போய் பெண் பார்த்துவர முடிவு செய்தார். அண்ணாவின் விருப்பற்திற்கு இணங்கினேன் என்றாலும் வடமொழி மந்திரங்கள் சொல்லாமல் தமிழ்த் திருமண முறையிலேயே எனக்குச் சடங்குகள் நடைபெற வேண்டும் என்பதை வற்புறுத்தினேன். இதைப் பெரியண்ணாவிடம் நேராகச் சொல்ல எனக்குத் துணிவு வரவில்லை. அண்ணா திரவியம் பிள்ளையவர்களிடம் அழுத்தமாகச் சொன்னேன். “அதற்கென்ன, அப்படியே செய்யலாம்” என்றார் அவர். நான் சேலம் மாப்பிள்ளையாக வேண்டும் என்பதில் மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டார் எங்கள் பஞ்சநதம் செட்டியார்.  புதுமனை புகு விழா நாகர்கோவிலில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் மதுர பவனம் புதுமனை புகுவிழா 9-7-41இல் மிகச் சிறப்பாக நடை பெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக நானும் கே. ஆர். இராமசாமியும் சென்றிருந்தோம். என். எஸ். கே.யின் விருப்பத்திற்கிணங்க மேலும் ஒருநாள் அவர் இல்லத்தில் தங்கினோம். மதுர பவனம் திறப்பு விழா நடைபெற்ற அதே தேதியில் சேலம் செவ்வாய்ப் பேட்டையில் பெரியண்ணா எனக்குப் பெண் பார்த்ததாக அறிந்தேன். 11-7-41 இல் நானும் சகோதரர் இராமசாமியும் பாளையங்கோட்டை வந்து தங்கை காமாட்சி வீட்டில் தங்கினோம். என்னை உடனே அவசரமாகப் புறப்பட்டு வரும்படி மதுரையிலிருந்து சின்னண்ணா தந்தி கொடுத்திருந்தார். மறுநாட் காலை நானும் இராமசாமியும் மதுரை வந்து சேர்ந்தோம். சேலத்தி லிருந்து பெரியண்ணா எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார். பெண்ணைப் பார்த்ததாகவும், நானும் வந்து பார்த்தால் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார். சேலம் பஞ்சநதம் செட்டியார் வீட்டில் தங்கியிருப்பதாகவும் கடிதத்தில் கண்டிருந்தது. நான் உடனே என் திருமணம் தமிழ் மண முறை யில் நடை பெறவேண்டும் என்பதை வற்புறுத்தி, அதற்கான காரணங்களையும் விளக்கிப் பெரியண்ணாவுக்கு நீண்ட கடிதம் எழுதி அவசரத் தபாலில் போட்டேன். சின்னண்ணா விரும்பியபடி அன்றிரவே நானும் எங்கள் நண்பர் எம். கே. கிட்டுராஜூவும் பெண் பார்த்து வரச் சேலம் புறப்பட்டோம்.  தமிழ்த் திருமணம் மறுநாள் சேலம் வந்து சக்தி பிலிம்ஸ் நிர்வாகி நண்பர் சீனிவாசன் இல்லத்தில் தங்கினேன். நான் சேலம் வருவதற்குள் பெரியண்ணா மதுரைக்குப் புறப்பட்டு விட்டார். முதல்நாள் நான் பெரியண்ணாவுக்கு அனுப்பிய அவசரக் கடிதம் பஞ்சநதம் செட்டியார் வீட்டுக்குச் சென்றபோது கிடைத்தது. அதை வாங்கி மீண்டும் ஒருமுறை படித்தேன். இந்தக் கடிதத்தைப் பார்த்தால் பெரியண்ணாவின் மனம் ஏதேனும் புண்படுமோ என்ற ஐயம் தோன்றியது. உடனே கடிதத்தைக் கிழித்தெறிந்து விட்டேன். பெண் வீட்டார் சார்பில் சில நண்பர்கள் வந்திருந்தார்கள். “தமிழ்த் திருமண முறையில் சடங்குகள் நடப்பதற்கு பெண் வீட்டார் சம்மதிப்பார்களா?” என்று கேட்டேன். அவர்களில் எனக்கு மிகவும் நெருங்கிய பிராமண நண்பர் ஒருவர், “ஏன் வட மொழிமீது உங்களுக்கு வெறுப்பா?” என்று கேட்டார். நான் மிகுந்த அடக்கத்தோடு, வடமொழியாகிய சமஸ்கிருதத்தின் மீது எனக்குச் சிறிதும் துவேஷம் இல்லை. ஆனால் நான் தமிழன். என் திருமணம் என்னுடைய தாய்மொழியாகிய தமிழில் தேவாரத் திருமுறைகளை ஓதி நடைபெறவேண்டும். இதுவே என் கொள்கை என்றேன். பிறகு நண்பர் சிரித்துக்கொண்டே, “அதெல்லாம் உங்கள் விருப்பம்போல் நடக்கும். பெண்வீட்டார் தடையொன்றும் சொல்லமாட்டார்கள்” என்றார்.  மைத்துணியின் வரவேற்பு 14-ஆம் தேதி முற்பகல் பெண் வீட்டிற்குச் சென்றேன் பெண்ணுக்குத் தந்தையார் இல்லை. தாயும், தாயோடு பிறந்த, மாமனும் இருந்தார்கள். பெண்ணின் உடன் பிறந்தவர்களான ஒரு சகோதரனும் இரு சகோதரிகளும் என்னை வரவேற்றார்கள். பெண்ணின் தங்கை சரஸ்வதி ஒரு தூண் அருகில் நின்று கொண்டு புன்னகையோடு என்னை கும்பிட்டாள். அவளுடைய அழகிய தோற்றத்தையும் வசீகரத்தோடு என்னை வணங்கி நின்ற பாங்கினேயும் பார்த்து நான் முதலில் இவள்தான் பெண் என்று நினைத்துக் கொண்டேன். என்னுடன் வந்த நண்பர் இவள் பெண்ணின் தங்கை சரஸ்வதி. பெண் இன்னும் சிவப்பாகவும் அழகாகவும் இருப்பாள்” என்று காதில் ஒதினார். உடனே பெண்ணின் தங்கை சரசு “அக்கா உள்ளே இருக்கிறாள். வெளியே வரக் கூச்சப்படுகிறாள். நீங்கள் உள்ளே போய்ப் பார்க்கலாம்” என்றாள். அவளை எனக்கு நிரம்பவும் பிடித்தது. நான் உடனே “உன்னைப் பார்த்ததே போதும். அக்கா உன்னை விடஅழகு என்று நண்பர்சொல்லுகிறார். உள்ளேபோய் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை” என்று சொல்லிவிட்டு எழுந்தேன். உடனே அவள் பதற்றத்தோடு, “இருங்கள், காப்பி சாப்பிட்டு விட்டுப் போகலாம்” என்று உள்ளே ஓடினள். உள்ளிருந்து சிரிப்பொலிகேட்டது. அருகில் இருந்த என் நண்பர் “பெண்தான் சிரிக்கிறாள்” என்று மெதுவாகச் சொன்னார். நானும் சிரித்தேன், சிற்றுண்டி பரிமாறப் பட்டது. விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டோம். மறுநாள் மதுரை வந்து சேர்ந்தேன். பெண்ணின் தமையனும் பெரியண்ணாவுடன் பேசுவதற்காக என்னோடு மதுரைக்கு வந்தார்.  திருமணம் நடந்தது 16-ஆம்தேதியன்று திருமணம் உறுதிசெய்ப்பட்டது. பிறகு ஏற்பாடுகள் விரைவாக நடந்தன. 20ஆம் தேதி காலை சேலம் செவ்வாய்பேட்டையிலுள்ள பெண்வீட்டில் நிச்சயதார்த்தம் நடை பெற்றது. பெரியண்ணா, சின்னண்ணா தம்பதிகள், தங்கைகாமாட்சி அண்ணா திரவியம்பிள்ளை முதலியோர் இதில் கலந்து கொண்டார்கள். அவர்கள் சேலத்திலிருந்து திரும்பியதும் கம்பெனி மானேஜர் திரு ஆர். கே. மூர்த்தி என்னிடம் வந்து தமிழ்த் திருமணம் நடத்த எல்லோரும் இசைந்துவிட்டதாகக்கூறினார். ஆனால் உண்மையில் நான் எண்ணியபடி நடைபெறவில்லை. திருமணத்திற்கு இரண்டு நாட்களின் முன்பே புரோகித முறைப்படி தான் திருமணம் நடைபெறும் என்ற செய்தியினை நான் அறிந்தேன். என் வேண்டுகோளை யாருமே பெரியண்ணா காதில் போடவில்லை என்ற உண்மை அப்போதுதான் எனக்குத்தெரிந்தது. அவரிடம் இதைச் சொல்ல அஞ்சி அனைவரும் மெளனம் சாதித்து விட்டார்கள் என்பது புரிந்தது. நானும் பெரியண்ணாவின் மனம் புண்படும்படி எதுவும் நடந்து விடக்கூடாது என்று கட்டப்பாட்டுக்கு அடங்கினேன். புரோகித மறுப்புப் பெரிதா? சகோதரப்பாசம் பெரிதா? என்ற மனப் போராட்டத்தில் சகோதர பாசமே தலைதுாக்கி நின்றது; வென்றது!  4-7-1941 இல் மதுரை இராமநாதபுரம் சேதுபதி மன்னார் மாளிகையில் சேலம் செவ்வாய்பேட்டை செல்வி மா. மீனாட்சிக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. ஆம்! புரோகித முறைப்படி வட மொழியில் மந்திரங்கள் ஒதித்தான் மாங்கல்யம் சூட்டினேன். என் அன்புக்கும் பெருமதிப்புக்குமுரிய நாதசுர வித்வான் குளிக்கரை திரு. பிச்சையப்பா அவர்கள் குழுவினார் நாதசுர இன்னிசை பொழிந்தார்கள். வேய்ங்குழல் மாமன்னார் டி. ஆர். மகாலிங்கம் அவர்களின் புல்லாங்குழல் கச்சேரி மாலையில் விமரிசையாக நடந்தது.  ஏற்கனவே மனஸ்தாபம் காரணமாக விலகியிருத்த மாமா திரு. செல்லம்பிள்ளை என் விருப்பத்திற்கிணங்க திருமணத்திற்கு வந்திருந்து, வாழ்த்தினார். காரைக்குடியியில் ஏற்பட்ட சம்பவத்தினால் கம்பெனிக்கு வராதிருந்த கலைவாணர் என். எஸ் கிருஷ்ணனும் தம் மனைவி மதுரம் அம்மையாரோடு வந்து கலந்து கொண்டார். கருத்து வேற்றுமையால் பிரிந்திருந்த இவர்களெல்லாம் மீண்டும் ஒற்றுமையுணர்வோடு வந்து உறவாடிக் களிக்க என் திருமணம் காரணமாக இருந்தது குறித்து நான் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தேன். திருமணத்தையொட்டி சேலம் சென்று, மறுவீடு மற்றும் சடங்குகள் எல்லாம் முடித்து, மதுரைக்குத் திரும்பி, புதிய நாடக வேலைகளில் ஈடுபட்டேன்.            நல்ல காலம் பிறந்தது   சிவ லீலாவுக்காக கைலாயம்; பாண்டியன் அவை, ஹேம நாதன் வீடு; தாமரைத் தடாகம்; சொக்கேசர் சந்நிதி; மீனாட்சி யம்மன் சந்நிதி; பொற்றாமரைக்குளம்; சங்கமண்டபம்; அபிஷேக பாண்டியன் அந்தப்புரம், கல்யானை மண்டபம், துர்க்கை சந்நிதி கடற்கரை முதலிய காட்சிகள் அனைத்தும் பிரம்மாண்டமான முறையில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டன. ஆலயத்தின் உள்ளேயுள்ள கல்யானைகளை அப்படியே மோல்ட் எடுக்க ஆலய அதிகாரிகள் ஒத்துழைத்தார்கள். இவற்றைத் தவிர இடையே தாமதம் ஏற்படாதிருக்கச் சில மாறுங் காட்சிகளும் வரையப் பெற்றன. ஒவியர் தேவராஜய்யர் ஒவ்வொரு காட்சியையும் வியக்கத்தக்க வகையில் எழுதினார். ஒப்பனையாளர் இராஜ மாணிக்கம் உடைகளுக்காக வரைபடங்கள் எழுதிக்கொண்டு பல வித வண்ண உடைகள் வெல்வெட்டிலே தயாரித்தார். சரிகை வேலைப்பாட்டில் கைதேர்ந்த மஸ்தான்கான், சுபான் சாயபு ஆகிய முஸ்லீம் கலைஞர்கள் தறியில் இடைவிடாது வெள்ளிச் சரிகை வேலை செய்தனார். மரச் சிற்ப வேலையில் பிரசித்தி பெற்ற இரு மலையாள இளைனார்கள், சிங்க ஆசனம், யானை ஆசனம், மயில் ஆசனம், மயில் கட்டில், பல்லக்குகள் முதலியனவற்றை விரைவாகச் செய்து முடிக்க, அவற்றிற்குத் தங்க ரேக் ஒட்டும் நுணுக்கமான வேலையை நடிகர்கள் அனைவரும் செய்தார்கள். பின்னணி இசையமைப்புக்காக டி. எம். இப்ராஹீம் பெரு முயற்சி எடுத்துக் கொண்டார். நகைச்சுவை நடிகர் சிவதாணு நடனப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக் கொண்டு பாவையர் நடனம், மயில் நடனம், வலைனார் நடனம் ஆகியவற்றை அழகுபெற அமைத்தார். ஆலவட்டம், சந்திரவட்டம், சூரியப் பிரபை, தங்கத்தடி, வெள்ளித்தடி, மீனக்கொடி, வெண்சாமரம் அனைத்தும் தயாராயின, சாதாரணக் காவலர் உட்பட எல்லாப் பாத்திரங்களுக்கும் புதிய உடைகள் தைக்கப் பட்டன. திருக் குறிப்புத் தொண்ட நாயனார் பகுதிக்குத் தேவையான மின்னல். இடி-மழைக்காட்சி பரணில் நீண்ட குழாய்கள் பொறுத்தி எல்லோரும் வியப்புறும் வண்ணம் மேலிருந்து மழைகொட்டும்படி தந்திரக் காட்சியாக அமைக்கப் பெற்றது. ஏற்கனவே பல முறைகள் நடைபெற்ற பழைய சிவலீலாவை மீண்டும் சில நாட்கள் ஒத்திகைப்பார்த்து ஒர் உன்னதமான கவலைப்படையாக உருவாக்கினோம். 27-7-1941 ஞாயிறன்று மதுரை கோபாலகிருஷ்ணா தியேட்டரில் சிவலீலா பிரமாதமான விளம்பரத்துடன் தொடங்கியது. எங்களுக்கும் நல்ல காலம் பிறந்தது. சூலமங்கலம் பாகவதரும் அவரது குடும்பத்தினரும் புதிய தயாரிப்பை வந்து பார்த்துப் பூரித்துப் போனார்கள்.  தம்பி பகவதியின் சாதனை திருச்சிக்குப் பிறகு சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் மதுரையில்தான் மீண்டும் வந்து, சிவலீலாவைப் பார்த்தார். நான் கோவைப் படப்படிப்பில் ஈடுபட்டிருந்தபோது அவரிடமிருந்து எனக்கொரு கடிதம் வந்தது. அதில், நான் இல்லாமல் சிவலீலா நடைபெறுவது குறித்து மிகவும் வருத்தப்பட்டு எழுதியிருந்தார். பகவதியின் நடிப்பில் அவருக்கு நம்பிக்கை இல்லை. திருப்பூரில் சிவலீலா தொடர்ந்து நடைபெற்றபோது, நான் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் திருப்பூருக்கு நாடகம் பார்க்க வந்து விடுவேன்; சபையில் அமர்ந்து சிவ லீலா நாடகத்தை நானே பல முறை பார்த்திருக்கிறேன். விறகுவெட்டி, புலவர், சிவனடியார், சித்தர், வலைஞன் ஆகிய வேடங்கள் என்னைவிடப் பகவதிக்கு மிகவும் பொருத்தமாக இருந்தன. தோற்றப் பொலிவு எந்த நாடகத்திற்கும் இன்றியமையாத ஒன்று. தம்பி பகவதி பார்வைக்கு என்னைவிடப் பெரியவராகத் தோன்றுவார். அது மட்டுமல்ல; என் குரல் மென்மையானது. பகவதியின் குரல் கம்பீரமானது. சிவலீலாவில் நான் புனைந்த வேடங்கள் யாவற்றிலும் பகவதி என்னைக்காட்டிலும் பன்மடங்கு சிறந்து விளங்கினார். எனவே, நான் மீண்டும் அந்த வேடங்களைப் புனைய விரும்பவில்லை. நாடகத்தின் நடுவே வரும் சண்பக பாண்டியன் என்னும் சிறிய வேடத்தை ஏற்று நடித்தேன். இந்த விவரங்களையெல்லாம் நான் பாகவதருக்கு எழுதினேன். ஆனாலும், அவருக்கு மன நிறைவு ஏற்படவில்லை. மதுரைக்கு வந்து நாடகத்தைப் பார்த்த பிறகுதான் அவருக்குப் பூரண திருப்தி ஏற்பட்டது. பகவதியின் நடிப்பையும் பாட்டையும் அவர் அபாரமாகப் புகழ்ந்து பாராட்டினார். வாய்ப்பு நேரும்போதுதானே வளர்ச்சி தெரியும்! ஒருவருடைய ஆற்றலை அறிய வேண்டுமானல் அதற்குரிய பொறுப்பினை அவரிடம் ஒப்படைக்க வேண்டுமல்லவா? தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பினைத் தம்பி பகவதி, அரிய சாதனையாக வெளிப்படுத்தி அனைவருடைய பாராட்டுதல்களையும் பெற்றார்.  காற்றும் மழையும் சிவலீலா அரங்கேறிய ஐந்தாம் நாள் நவாப் இராஜ மாணிக்கம் நாடகம் பார்க்க வந்திருந்தார். அன்று மாலை ஆறு மணிக்கே காற்றும் மழையும் அமக்களப்படுத்தின. ஒப்பனைக்காகத் தனியே தகரக் கொட்டகை போட்டிருந்தது. அதன் நடுவே சில தென்னை மரங்களும் இருந்தன. எல்லோரும் வேடம் புனைந்து கொண்டிருந்தனார். மணி 7-30 ஆயிற்று. மழை நிற்கவில்லை. காற்றின் வேகமும் தணியவில்லை. இந்த நிலையில் பளீரென்று ஒரு மின்னல்; மின்சார விளக்குகள் அணைந்தன. மின்னொளி நிபுணர் ஆறுமுகம் உள்ளே வந்தார். நானும், தம்பி பகவதியும் ஒப்பனைக்காகப் போடப்பட்டிருந்த ஷெட்டின் உள்ளே, தென்னை மரத்தின் ஒரமாக நின்று, “என்ன மின்சாரக் கோளாறு?” என்று ஆறுமுகத்தை விசாரித்தோம்; அவ்வளவுதான். தீடீரென்று ஒரு சூறைக் காற்று; தென்னை மரம் முறிந்து பயங்கரமான சத்தத்துடன் தகர ஷெட்டின் மீது விழுந்தது. நாங்கள் நின்ற இடத்தில் எங்கள் தலைக்கு மேலே போட்டிருந்த தகரம் பிய்த்துக் கொண்டு தடாரென்று எங்கள் காலடியில் விழுந்தது. நாங்கள் பிழைத்தது ‘இறைவன் திருவருள்’ என்றே சொல்ல வேண்டும். புத்தம் புதிய காட்சிகள் யாவும் நனைந்தன.....  என்ன ஆச்சரியம்! திடீரென்று மழை ஒய்ந்து, சில நிமிடங்களில் வானத்தில் நட்சத்திரங்கள் தோன்றின. சிவலீலாவுக்கு ஏற்பட்ட திருஷ்டி என்று சில பெரியவர்கள் பேசிக் கொண்டார்கள். மின்சார வீசிறிகளைச் சுழல விட்டு, நனைந்த ஆடைகளை உலர்த்தினோம், நாடகம் 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. விடா மழையிலும் பெருங் கூட்டம் வந்திருந்தது. இசைச்செல்வர் இலட்சுமணபிள்ளை, திருமுருக கிருபானந்த வாரியார், சர். பி. டி. இராஜன் மூவரும் இடையே நடைபெற்ற நாடகங்களில் தலைமை தாங்கி வாழ்த்தினார்.  நக்கீரர் நாராயணபிள்ளை சிவலீலாவில் நக்கீரராக நடித்த என். எஸ். நாராயண பிள்ளையைப் பற்றிச் சில வார்த்தைகள் இங்கே குறிப்பிட்ட விரும்புகிறேன். இவர் நாஞ்சில் நாட்டைச் சேர்ந்தவர். கோல்டன் சாரதாம்பாள் கம்பெனியில் நடிகராக இருந்து புகழ் பெற்றவர். 1937இல் எங்கள் குழுவில் சேர்ந்தார். பெரும்பாலும் நகைச் சுவைப் பாத்திரங்களையே ஏற்பார். நன்றாக நடிப்பார். தமிழில் புலமை பெற்றவர். இயல்பாகவே திறமையாகப் பேசும் ஆற்றல் வாய்ந்தவர். எங்கள் குமாஸ்தாவின் பெண் நாடகத்தில் ஜோஸ்யர் பாத்திரத்தைத்தாங்கி அற்புதமாக நடித்து வந்தார். திரைப்படத்திலும் இவரே ஜோஸ்யராக நடித்தார். குமாஸ்தாவின் பெண் கடைசிக் காட்சியில் மாப்பிள்ளையின் தகப்பனார் வேடத்திலும் இவரே நடித்தார். பெண் வீட்டாரிடம் பணம் பிடுங்குவதற்காக இவர் கோபித்துக் கொண்டு வெளியேறும் கட்டத்தில் அபாரமாக நடித்து அவையோரின் பாராட்டுதலைப் பெறுவார். தருமிக்குப் பொற்கிழி அளித்த படலத்தில் இவர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் நக்கீரராக நடித்தார். தருமியிடமும், தருமிக்காக வாதாட வரும் புலவரிடமும் இவர் உரையாடும் பாங்கு மிகச் சிறப்பாக இருக்கும். கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி என்னும் செய்யுளை இவர் தெளிவாக எடுத்துச் சொல்லி, அதில் குற்றம் கூறும் தோரணையும், இவருடைய கம்பீரமான தோற்றப் பொலிவும், இறைவன் நெற்றிக் கண்ணைத் திறந்து, “நக்கீரா குற்றந்தானா?” என்று கேட்கும் போது, “புலவரே, நீரே முக்கண் முதல்வனுயினுமாகுக; உமதுநெற்றியில் காட்டிய கண்ணைப்போல் உடம்பெல்லாம் கண்ணாக்கிச் சுட்டாலும் உமது கவியிற் குற்றம் குற்றமே; நெற்றிக்கண் திறக்கினும் குற்றம் குற்றமே” என்று வீர முழக்கம் செய்யும் கட்டம் எழுச்சி மிக்க புலவர் நக்கீரனுரையே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும். நாடகத்தின் நடுவே வரும் இக்காட்சி முழுதும் ‘செந் தமிழ் முழங்கும்’ என்று சொன்னால் சிறிதும் மிகையாகது. இறுதியில் நக்கீரர் “தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க!! உலகெல்லாம் தமிழ்முழங்கட்டும்!!!” என்ற முழக்கத்தோடு உள்ளே செல்வதும் அவரைத் தொடர்ந்து புலவர் பெருமக்கள் எல்லோரும், “உலகெல்லாம் தமிழ் முழங்கட்டும்!” என்று உரத்த குரலில் எதிரொளிப்பதும் சபையோரைப் புல்லரிக்கச் செய்யும் அற்புதக் காட்சியாகும். சில நாட்களில் இந்த முழக்கத்தில் சபையோரும் உணர்ச்சி வசப்பட்டு “தமிழ் வாழ்க, தமிழ் வாழ்க!” என்று முழங்கியது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சிவலீலா புராண நாடகந்தான் என்றாலும் தருமிக்குப் பொற்கிழி அளித்த இந்தப் படலத்தின் மூலம் தமிழ் உணர்வை மக்கள் உள்ளத்தில் நன்கு பதிய வைப்பதில் நாங்கள் வெற்றி கண்டோம்.                                                                முத்தமிழ்க் கலா வித்துவ ரத்தினம்   சிவலீலா தொடர்ந்து நடைபெற்றது. 100வது நாள் விழாவுக்கு குமாராஜா எம். ஏ. முத்தையா செட்டியார் தலைமை தாங்கிப் பாராட்டினார். “என் தந்தையார் தமிழிசை இயக்கம் தொடங்குவதற்கு முன்பே டி. கே. எஸ். சகோதரர்கள் இந் நாடகத்தில் தமிழ் இசையை நல்ல முறையில் பரப்பிப் பிரச்சாரம் செய்து வருவது குறித்துப் பாராட்டுகிறேன்.” என்று கூறினார். மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர் பெருமக்கள் அனைவரும் வந்து நாடகத்தைப் பார்த்தார்கள். தமிழ் சங்கத் துணைத் தலைவர் சீனிவாச ஐயங்காரும் தலைமைப் பேராசிரியர் திரு நாராயண ஐயங்கார் சுவாமிகளும் நாவலர் சோமசுந்தர பாரதியார் ஜெகவீர பாண்டியனார், கார்மேகக் கோனார் முதலிய பெரும் புலவர்களும் 108ஆவது நாள் வருகை புரிந்து எங்களைப்பாராட்டி முத்தமிழ்க் கலா வித்துவ ரத்தினம் என்னும் பட்டத்தையும், சங்கத் தலைவர் இராமநாதபுரம் சேதுபதி மன்னார் கையெழுத்திட்ட பெரிய பத்திரத் தையும் அளித்தனார்.  அன்று அந்த மாபெரும் புலவர் பெருமக்கள் மேடைமீது நின்று வாழ்த்திப் பாடிய பாடல்களிலும் மனமுவந்து வாழ்த்திய உரை மணிகளிலும் சிலவற்றைச் சுருக்கமாக இங்கு தருகிறேன்.  மதுரைத் தமிழ்ச்சங்கக் கலாச்சாலை ஆசிரியர் சு. நல்ல சிவன்பிள்ளை அவர்கள் பரதவன்றன்வடிவாகி வலேகைக் கொண்டு பகர றிய மீன்படுத்தும் பரிவிற் செய்த புரதகனன் விளையாட்டும், அவன்றன் கூத்தும், புவனமெல்லாம் ஈன்ற சக்தி புரியும் கூத்தும்,  விரதமுனி வரர் விபுதர் உரக ரேனோர் விழைந்துதவம் புரிந்திடினும் மேவு றாத சரதமுறு சிவலீலை புரியூரீ பால சண்முகா னந்தசபை தனிற்கண் டோமே! சிவபத்தி அடியர்பத்தி சிறந்த கச்சித் திருகுறிப்புத் தொண்டர் பத்தித் திறனைக் கண்டு நவபத்தி யுலகிலுளோ ரடையும் வண்ணம் நடித்தாகா டகத்திறனை காமென் சொல்கேம்! பவசத்தி தனையகற்றும் நெறிகைக் கொண்ட  பண்புறுகா டகசபையின் பால சீலர் தவசத்தியுறுதலைவர் தூய பால சண்முகா னந்தசபை தழைத்து வாழி!  நாவலர் எஸ். சோமசுந்தர பாரதியார் அவர்கள் எம். ஏ., பி. எல்.  “ஸ்ரீபால சண்முகானந்த சபையார் நடத்தும் சிவலீலா என்னும் நாடகத்தைப் பல நண்பர் பார்த்து வந்து புகழ்ந்ததைக் கேட்டு 26.10.41 இல் நானும், என் குடும்பத்தாரும் போய். பார்த்தோம். நன்றாயிருந்தது என்று சொல்லுவது நான் அனுப வித்த உணர்ச்சியை விளக்கப் போதாது. தற்காலம் நடிக்கப்படும் தமிழ் நாடகங்கள் குலப் பெண்களோடு கண்டுகளிக்கக்கூடாத தாயும்,கல்லாத மாந்தர்க்கன்றி நல்லோர் உவக்கக்கூடாததாயும் இருந்து வருவதால் சுமார் 40 ஆண்டுகளாக நான் ஒரு தமிழ் நாடகத்தையும் பார்க்காமல் வெறுத்திருந்தேன். சிவலீலாவைக் கண்ட பிறகுதமிழரும் நல்ல முறையில் அறிவுடையார் மகிழ, கண்டார் மனதில் அறநிலைகள் உறைக்க, இன்பமும் உணர்வும். ஒன்றி உவக்க, நடிகர்கள் தமிழில் நாடகம் நடத்தக்கூடுமென்று நம்பலானேன்.  அவரவர் நிலையில், அவரவர் நடிப்புச் சிறந்திருந்தது. இவ் வாறு சமயக் கதைகளை வழுவற நடித்துச் சான்றாேர் மகிழச் செய்வதால் சமயத்தில் அன்பும் மதிப்பும் வளர்வதாகும். காத லின்பமும் தூய முறையில் காட்டப்பெற்றது. காட்சிகளெல்லாம் இயற்கையின் மாட்சி தோன்ற இனிது சமைக்கப்பட்டிருந்தது. அசாதாரண கடவுட் செயல்களை நிகழ்வனபோல் நேரிற் காட்டி, பார்ப்பவரெல்லாம் பரவசப்படுமாறு அமைத்திருந்த அழகு வியக் கத் தக்கது. இசையொடு நிறைந்த இன்சுவைப் பாட்டுகள் ஒவ்வொரு நடரும்பாடிய சிறப்பு உணர்வைக்கொண்டது. ஐம்பொறி களையும், அறிவையும் ஈர்த்து ஒப்பக் களிக்கச் செய்த இந்நாடகத்தை எல்லோரும் வியந்து புகழ்வது இயற்கையாகும். இத்தகைய நல்ல கதைகளே நாடகமாக்கி நடித்துத் தமிழரை அறிவும் ஒழுக்கமும் இன்ப முறையில் எளிதில் உணர்த்தி இச் சபையார் புகழொடு செல்வம் பெருக அருளுமாறு இறைவனை இறைஞ்சுகின்றேன்; சபையோருக்குப் பல்லாண்டு கூறி வாழ்த்து கின்றேன்.  மதுரை அமெரிக்கன் கல்லூரித் தமிழாசிரியர்  ஆ. கார்மேகக்கோனார் அவர்கள்  ”... ... ... .... .... ... ... ... ... ...  ஆலவாய் அவிர்சடைப் பெருமான் அன்று  சாலவே மன்பதை தாமுய்ங் திடற்கு  அருளொடு புரிந்த திருவிளையாடலுள்  ஒரு சில வற்றை உருவுடன் தொகுத்து  இந்த காள்தனில் இங்ககர் வாழும்  மக்கள் யாவரும் மகிழ்ந்துகண் டின்புற  ஆடலும் பாடலும் அபிநய வகைகளும்  பீடுறும் எழினியின் பிறங்கொளி கலங்களும்  சாலவே அமையப் பால சண்முகா  ந்த சபையார் நலமுடன் புரிந்து  நூற்றெட்டு நாட்களும் நுவவருஞ் சிறப்பொடு  நாற்றிசை போற்ற கடித்திட்ட காட்சியை  என்னென் றியம்புவேன்! இந்நக ரெல்லாம்  எண்ணாம் எண்ணமும் இயம்பும் சொல்லும்  சிவலீ லையே! சிவலீ லையே!"  திருவனந்தபுரம் இசைச் செல்வர்  திரு தி. இலட்சுமணபிள்ளை அவர்கள்  டி. கே. எஸ். 8 சகோதரர்கள் மதுரையில் நடத்தி வருகிற நாடகங்களில் சிவலிலே என்னும் திருவிளையாடற் புராணக்கதை  நடித்ததை நான் கண்ணாற்று மிக மகிழ்ந்தேன். நடிப்பு முறை களில் எல்லா அம்சங்களும் போற்றத் தக்கனவாக இருந்தன. இவ்வாறு வேறுஅநேக கதைகளையும் இவர்கள் நடித்து மகாஜனங் களே ஆனந்திப்பித்து வருவதாக அறிகிறேன். நாடகப் பாத்திரங் களாயுள்ளவர்கள் இனிய செந்தமிழ் நடையிலும் யாவரும் எளிதில் உணர்ந்து கொள்ளும் விதத்திலும் பேச்சு நடத்துவதைக் கேட்டு உவகை கொண்டேன். காட்சிப் படங்கள் மனதைக் கவர்ந்து கொள்ளும் சிறப்புடையன. சாகித்யமும் சங்கீத மெட்டுக்களும் மெச்சத்தக்கன. நாடகம் நடத்துகிற ஒழுங்கும் நடவடிக்கைகளும் டி. கே. எஸ். சகோதரர்களினுடையநுண்ணறி வையும் நல்லொழுக்கத்தையும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளக்குவன. அவர்களுடைய இந்த வியக்கத் தக்க முயற்சி இன்னும் மேம்பாடுற்று இனிய தமிழ் வளர்ச்சியையும் தமிழ் இன்னிசை வளர்ச்சியையும் உண்டாக்கித் தழுலகிற்குப் பேருதவி யளிக்குமென்று நான் உறுதியாய் நம்புகிறேன்.  மதுரை தமிழ் வித்வான் திரு. நா. கிருஷ்ணசாமி நாயுடு அவர்கள்  சிவபெருமான் கூடலின்கண் செய்ததிரு விளையாடல் செப்புங்காலை எவரறிவார் பரஞ்சோதி எழுதிவைத்த ஏட்டிலிவை இருப்பதன்றி? பவம்விலகிப் புனிதமுற மதுரையூரஸ்ரீ  பாலசண்மு கானந்தப்பேர் சவைகடித்துக் காட்டினதால் சங்கீத  வமுதினையும் சார்ந்துண்டோமே! வல்லானென் றிசைப்போர்க்கு வந்தவனை  யோடவிட்ட மகிமை கண்டோம் கல்லானை உண்பதற்குக் கரும்பளித்த பெருங்காட்சி கண்டோம் ஆங்கே இல்லாரை உண்டாக்கி இருக்தாரைக்  கணமறைத்த இயல்பு கண்டோம் எல்லாஞ்செய் திடற்குரிய ஈஸ்வரனார்  விளையாடல் என்னே! என்னே!!  பேர்சிறக்த டி. கே. எஸ். பிரதரிவர் நடிப்புமுறை பேணுங்கீதம் சீர் சிறந்த செந்தமிழ்ப் செவிக்கினிய  வசனநடை தேகுே பாலோ! ஓர் சிறந்த தெள்ளமுதோ உண்ண உண்ணத் திகட்டாமல் உளமுற்றுாறும் பார் சிறந்த முப்பழத்தின் பாகமுதோ அத்தனையும் பகரலாமே! தனிமதுரை ஸ்ரீபால சண்முகா  னந்தசபை தரணிமீது கனிமதுர கவரசநற் கண்காட்சி சங்கீதம் கலந்து தோன்ற மனிதர்குலம் மகிழ்வடைய மாபெரிய சரிதமெலாம் வகுத்துமேலாய் இனி திருந்து நடத்திடுக! இருகிலமிங்  கிருக்கும்வரை இசைந்துமாதோ !  மதுரை கே. இலட்சுமி பாரதி. எம். எல். ஏ.  இச்சபையார் நடத்தி வருகிற சிவலீலா நாடகத்தை மும் முறை பார்த்தேன். இன்னும் எத்தனைமுறை பார்த்தால் திருப்தியடைவேன் என்று சொல்வதற்கில்லை. தெவிட்டாத தெய்வ அமிர்தம் என்றே சுருங்கக் கூறுவேன். தமிழை அழ்மிதுக்கு ஒப்பிட்டது இதனால்தான் போலும்! தெய்வ பக்தியின் மேன்மைகளைப் பரப்புவது இந்த நாடகம், தமிழ்மொழியைத் தழைத்து ஓங்கச் செய்வது இந்த நாடகம் பார்க்குந் தோறும் உள்ளத்தை உயர்த்துகிறது. கண்ணைக்கவரும் காட்சிகள்; உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ளும் பேச்சு! செவிக்கினிய பாட்டு!! மனதை இழுக்கும் சிவ பெருமான் திருநடனம். பார்த்து அனுபவிக்க வேண்டிய இந்த நாடகத்தை எழுத்தில் புகழ்வது எங்ஙனம் இயலும்? மக்களுக்குப் பயன்படும் இத்தகைய நாடகங்களை நடத்திப் பேரும் புகழோடும் சீரும் சிறப்போடும் இச்சபையார் வாழ்ந்து ஓங்கி வளம்பெற வளரவேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.  கவிராஜ பண்டித ஜெகவீர பாண்டினார் அவர்கள் உலகுயிர் உய்ய ஒளிர்சிவம் நடித்த உயர்சிவ லீலையை இன்றித் தலமுயர் பால சண்முகா னந்த சபையினார் சதுருடன் நடிக்கும் நிலையெதிர் கண்டார் நிறைநலம் கண்டார் நித்தலும் சிவனருள் நினைந்து நலமுயர் பக்தி நிலைமிகப் பெற்று நானிலம் இன்புற வாழ்வார்!  ஸ்ரீ மதுர பாஸ்கரதாஸ் அவர்கள் தீர்க்கமுடன் நூற்றெட்டுத் தினங்களிதே சிவலிலைத் திருவி ழாவைப் பார்க்கவரும் பேர்களித்தோ ராயிரத்தெட் டரன்பதியைப் பணிந்த பாக்யம் ஊக்கமுறக் கிடைத்ததென்றே கூறுகின்றார் நந்நெறியி லுயர்ந்தோ ரெல்லாம் ஆக்கமிகும் ஸ்ரீபால சண்முகா னந்தசபைக்  கரும்பே றீதே!  இயலிசைக்குப் பிறகுவைத்த நாடகத்தை முதன்மைபெற எடுத்துக் காட்டிச் செயலிசைக்கும் நவரஸங்க ளுடன் பலமெய்க் காட்சிகளும் சிறப்பாய்த் தோன்றக் கயலிசைக்கண் ணம்பிகையாள் மதுரைநகர்ச் சனசமுகம் களிப்பே கூர மயலிசைக்கும் ஸ்ரீபால சன்முகா னந்தசபா வாழ்க மன்னே! சங்கரன் முத்துசாமி சண்முகனும் பகவதியாம் சகோத ரர்தாம் பொங்கரவம் புனைந்தபிரான் திருவருளாற் பலாகலமும் பொருந்தி வாழ்க!  இங்கிதமும் குணநெறியும் தவருத சதுரரிவர் இனிதாய் வாழ்க! மங்களமும் நிறைமதியும் நவகிதியும் ஓங்கியென்றும் வாழ்க மாதோ!  தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஜனாப் உபயதுல்லா அவர்கள் இவர்கள் தேர்ச்சியாக நடத்தி வரும் சிவலீலா நாடகத்தை இரண்டு முறை பார்த்தேன். மிகவும் நேர்த்தியாகவும், நடி கர்கள் திறமையாகவும் வாக்குச் சுத்தத்தோடும் இசைவன்மை யோடும் நடிப்பின் பாவத்தோடும் நன்முக நடிக்குந் தன்மை, மிகவும் போற்றத்தக்கதாக இருந்தது. சரித்தித்தின் தன்மை, போக்குக்கு ஏற்றார்போல் காட்சிக்கு அழகான படுதாக்கள். வர்ணத்தட்டிகள் மிக மிக அமைப்பாக இருந்தது. மணிக்கணக் காகப் பார்ப்பதில் சலிப்புத் தட்டவில்லை. இப்பொழுது நவீன முறையில் பல சினிமாப் படங்கள் மதுரை நகரில் நடந்து வரும் போதும் ஒரே கதையை நூறுதினங்கள் நடத்திய பிறகும் ஜனங் களின் உற்சாகம் குன்றாது கூட்டம் கூட்டமாகப் பார்த்து வருவது ஒன்றே, இக்கம்பெனியின் திறமையை மெய்பிக்கிறது.  குமரகவி திரு. மு. நாராயணசாமி பிள்ளை  நவரசங்கள் மேவுமுயர் நாடகப்பண் பால்முன் த வமுனிவர்க் கேற்றவரம் தந்தோன்-சிவபெருமான்  செய்தவிளை யாட்டெல்லாம் தெள்ளதென் றேயளிக்கும்  மெய்ச் சிவலி லாபொன்னா மே.   திரு. பி. பாஸ்கரய்யர்  தண்டமிழார் கூடலிறை தந்தவிளை யாடலொடு  தொண்டர்புரா னத்திலொரு தொண்டர்கதை -கொண்ட  சிவலீலா நாடகத்தின், சீர்த்திதனைப் பாரார்  பவல்லா நீங்காரென் பேம்.  செட்டிநாடு குமாரராஜா சா.மு. அ. முத்தையா செட்டியார் அவர்கள்  ஸ்ரீ பால ஷண்முகானந்த சபையாரால் நடத்தப்பெற்ற சிவல்லா என்னும் புண்ணிய திவ்ய சரித்திரத்தை அதன் நூறாவது தினத்தன்று கண்டு களிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததைப் பற்றி மட்டற்ற மகிழ்சியடைந்தேன். இந்நகரிலே இந் நாடகம் இடைவிடாது நூறு தினங்களுக்கு மேல் நடை பெற்றதே இந்நாடகத்தின் சிறப்பைப் பன்மடங்கு உயர்த்துகின்றது.  இதில் நடிக்கின்ற எல்லா நடிகர்களும் மிகவும் திறமையுடன் அவரவர்கள் பாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்தது இனிது பாராட்டத்தக்கது. மேலும் இவர்கள் பாடும் ஒவ்வொரு பாடலும் எளிதில் சகல மக்களும் உணருமாறு இனிமையாக இருந்தது. பல்லாயிரக்கணக்கான வருஷங்களில் முன் நடைபெற்ற சிவபெருமானின் லீலைகளை இன்னும் மக்கள் பக்திரசத்துடன் கண்டு களித்து ஆனந்தத்துடன் அனுபவிக்கவும், இச்சபையினார் தங்கள் நாடகங்கள் மூலமாய் தமிழ் இசைக்கும், தமிழ்க்கலை வளர்ச்சிக்கும் செய்யுந் தொண்டு மிக மிக போற்றற்பாலது.  Mr J M Dogk, Managing Dircetor, The Madura Mills Co. Ltd, Madura. Mrs. Doak and I are greatful to Messrs T. K. S. & Bros. for giving us an opportunity to attend the Centenary Celebration of the Drama ‘Sive Leela’ Yesterday. it was an amazing exparence, for Surpassing any othar Tamil Drama we have everseen. The stagecraft, settings, Costumes & above all the spirited acting breathed the spirit of Madura. Madura is fortunate in having such talent & trust Messrs T. K. S. & Bros. will go on here from Success to Success இத்தகைய பெருமைக்குரிய வாழ்த்துக்களை யெல்லாம் நாங்கள் பெருவதற்கு எங்கள் அருமைச் சகோதரர் திரு. சுந்தர சர்மா அவர்கள் முன்னின்று பாடுபட்டார் என்பதை நன்றியோடு குறிப்பிட விரும்புகிறேன். அன்றிரவே மீனட்சியம்மன் ஆலயத்திற்கு எங்கள் நால்வரையும் மேள தாளத்தோடு வரவேற்று, பத்வட்டம் கட்டிச் சிறப்புகளைச் செய்தனார். இப்பெரு முயற்சியில் ஆலய நிர்வாக அதிகாரி ஆர். எஸ். நாயுடுவும், அதிகார பாரபரிதியம் சுந்தர சர்மாவும் முன்னின்று உழைத்தனார். ஒரு நாடகம். ஒரே நாடக அரங்கில் தொடர்ந்து 108 நாட்கள் நடைபெற்றது இதுவே முதல் தடவையென்று எல்லோரும் பாராட்டினார்கள். சிவலீலா நாடகம் தொடங்கிய அன்று திரைப்பட முறையைப்  பின்பற்றி நாடகத்திற்குப் பாட்டுப் புத்தகங்கள் வெளியிட்டோம். கடைசி நாளன்று சிவலீலா நாடக நூலும் வெளியிடப் பெற்றது.  சிவலீலா வெற்றிக் களிப்பில் சின்னண்ணா ராஜாபர்த்ருஹரி நாடகத்தை எழுதித் தயாரித்தார். பர்த்ருஹரிக்காகவும் பல புதிய காட்சிகள் தயாரிக்கப்பெற்றன. இவற்றில் குறிப்பிடத்தக்கவை ராணி அந்தப்புரம், நந்தவன மாடி, குதிரை லாயம் முதலியனவாகும். 1941 டிசம்பர் 7 ஆம் தேதி நாடகம் அரங்கேறியது. பகவதி பர்த்ருஹரியாகவும், கலைஞர் நாகராஜன் இராணி மோகனவாகவும், நடிப்பிசைப் புலவர் கே. ஆர். இராமசாமி விக்ரமனுகவும், எம். எஸ். திரெளபதி சரசாவாகவும், நான் குதிரைக்காரனாகவும், சிவதாணு என்கையாளாகவும் நடித்தோம். இந்நாடகத்தில் என் மனதிற்கு பொறுத்தமான வேடம் கிடைத்தது. நடிப்புத் திறமையை நன்கு வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்க நாடகம் இது. நான் என் துணைவியோடு தனியே வாழ்ந்த இன்ப நாட்களல்லவா? அவள் இந் நாடகத்தைத் தொடர்ந்து பலமுறை வந்து பார்த்தாள். கலைஞர். ஏ. பி. நாகராஜனுடன் நான் நடிக்கும் காதல் காட்சிகளைக் கண்டு என்னோடு ஊடினாள். உண்மையில் நாகராஜன் அவள் கண்களுக்குப் பெண்ணாகவே காட்சி அளித்தார். பெண்களுக்குரிய நடை, நளினம், குழைவு, நெளிவு, குரல், கொடிபோன்ற உடல் அனைத்தும் நாகராஜனிடம் அந்த நாளில் பூரணமாக அமைந்திருந்தன. ராஜா பர்த்ரு ஹரியோடு மோகன செய்யும் சாகசமும், தன் உள்ளம் கவர்ந்த அஸ்வபாலைேடு அவளுக்கிருந்த அளவற்ற ஆசாபாசமும், கள்ளத்தனத்தைக் கண்டு பிடித்துக் கண்டித்த விக்ரமன் மீது அவளுக்கு ஏற்படும் வெறியும், இறுதியில் கணவனை எதிர்த்து நின்று எழுச்சியோடு பேசும் பேய்க் குணமும் கலைஞர். ஏ.பி. நாகராஜனின் திறமையான நடிப்பில் நன்கு வெளிப்பட்டன. ராஜா பர்த்ருஹரி தொடர்ந்து இருபத்தி ஐந்து நாட்கள் நல்ல வசூலுடன் வெற்றிகரமாக நடைபெற்றது.    நாடக உலகில் ஒளவயைார்   தமிழ் மூதாட்டி ஒளவையாரை நாடக மேடைக்குக் கொண்டுவர வேண்டுமென்பது எங்கள் நீண்ட நாளைய அவா. மதுரை நகர மக்கள் அளித்த பேராதரவினல் அதுவும் சாத்திய மாயிற்று. ஒளவையாரை அரங்கேற்றியதுதான் எங்கள் நாடக வாழ்க்கையின் வெற்றிச் சின்னமெனக் கருதுகிறோம்.  நாடகாசிரியர் எதிராஜுலு இராஜபாளையத்தில் இருந்தபொழுது, போர்டு பாடசாலைத் தமிழாசிரியர் பி. எதிராஜுலு நாயுடு எங்களுக்கு அறிமுகமானார். ஒளவையாரை மேடைக்குக் கொண்டுவர வேண்டுமென்ற என் ஆர்வத்தை அவரிடம் கூறினேன். உடனே எழுதித் தருவதாக வாக்களித்தார். நாடகத்தை நல்ல முறையில் தொகுத்து மதுரையிலே கொடுத்தார். ஒளவை நாடக நிகழ்ச்சிகள் ஒன்றாேடு ஒன்று தொடர்புடையன அல்ல. ஒளவைப் பெருமாட்டியையே மையமாகக் கொண்டு, பல்வேறு இடங்களில், பல சந்தர்ப்பங்களில் நிகழும் பலதிறப்பட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பே இந் நாடகம். கல்வி முறை, அரசு முறை, நீதிமுறை, உழவு முறை, இல்லற முறை முதலிய அரும்பெரும் உறுதிப் பொருள்களாகிய மக்களது ஒழுக்க வழக்க நியமங்கள் அனைத்தும் நகைச்சுவையோடு கலந்து இந் நாடகத்தில் தரப்படுகின்றன. ஒளவையை நடிக்க ஆசைப்பட்டோம். நாடகமும் கையில் கிடைத்தது. இனித் தனித்தனியே பாடங்கள் எழுதி நடிகர்களுக்குக் கொடுக்க வேண்டும். இங்கேதான் வந்தது சங்கடம்.  ஒளவையாராக யார் நடிப்பது?  தமிழ் நாடக உலகில் இறவாத புகழுடைய நாடகமாகப் பண்டிதருக்கும் பாமரருக்கும் மகிழ்வூட்டிப் பண்பை வளர்க்கும் நாடகமாக-புகழின் எல்லையைக் கண்ட நாடகமாக ஒளவையார்  நாடகம் நாடக உலக வரலாற்றிலேயே அழியாத இடம் பெற்று விட்டது. இத்தனைச் சிறப்புக்களையும் பெற்ற ஒளவையாரின் பாத்திரத்தைத் தாங்கி நடிக்க எனக்கு வாய்ப்புக் கிடைத்ததும், இதைப் பற்றிய விவரங்களும் மிகச் சுவையானவை.  ஒளவையாராக யார் நடிப்பது? ... இரண்டொரு நாட்கள் இதைப்பற்றி நன்கு விவாதித்தோம். அப்போது ஆசிரியராகவும், நாடகத் தயாரிப்பாளராகவும் இருந்த சின்னண்ணா டி. கே. முத்துசாமியும், நானும் தனியே இருந்து பலமுறை இதைப் பற்றிப் பேசினோம். முடிவு காண இயலவில்லை. குழுவின் முக்கிய நடிகர் கே. ஆர். இராமசாமி சிறுவதில் மேனகாவாகவும்; மற்றும் சில நாடகங்களில் கதாநாயகியாகவும் திறம்பெற நடித்தவர். எல்லோரையும்விட நன்றாகப் பாடும் ஆற்றல் அவருக்கிருந்தது. ஒளவைக்கு விருத்தப் பாக்கள் அதிகமாக இருந்தமையால் கே. ஆர். இராமசாமியை ஒளவையாராகப் போடுமாறு அண்ணாவிடம் ஆலோசனை கூறினேன். இதுபற்றி நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ஆரிடம் கேட்டபோது, அவர் “ஐயையோ, நான் பெண் வேடம் புனைந்து நீண்டகாலம் ஆகிவிட்டது. அந்தப் பழக்கமெல்லாம் எனக்கு இப்போது வராது. நான் நடித்தால் நன்றாய் இராது” என்று உறுதியாகச் சொல்லி மறுத்துவிட்டார். நானும் இளமையில் பெண்வேடம் பூண்டவன். அஃது பழைய கதையாதலால் என்னை ஒளவையாராய்ப் போட வேண்டுமென்ற எண்ணமே யாருக்கும் எழவில்லை.  கடைசியாக ஒருநாள், ‘இன்று யாரையாவது ஒருவரை முடிவு செய்வது; அல்லது நாடகத்தையே கைவிடுவது’ என்ற தீர்மானத்துடன் சின்னண்ணாவும் நானும் கலந்து பேசினோம். எங்கள் குழுவிலுள்ள ஒரே பெண் நடிகை எம். எஸ். திரெளபதி. அவளோ சிறுபெண். எனவே, வழக்கமாகப் பெண் வேடம் தாங்கிவந்த நடிகர்களில் ஒருவர்தான் போட வேண்டும். அவர்களில் நன்றாகப் பாடக்கூடியவர்கள் யாருமில்லை. ஏ. பி. நாக ராஜன் அப்போது சேலத்துக்குப் போயிருந்தார். அவர் மீண்டும் கம்பெனிக்குத் திரும்புவது சந்தேகமாக இருந்தது. எனவே எவரையும் உறுதி செய்ய இயலாமல் திண்டாடினோம். என் வரையில் நான் ஒரு முடிவுக்கு வந்தேன்.  தாங்களே நடிக்க வேண்டும்!  சின்னண்ணா, வேடம் புனைவதை நிறுத்திச் சில ஆண்டுகளே ஆயின. ஆனால், இறுதிவரை பெண் வேடங்களிலேயே நடித்தவர். எப்போதாவது மேனகா நடைபெற நேர்ந்தால் அவர்தாம் பெருந்தேவியாக நடிப்பார். அண்ணாவின் நடிப்புத் திறமையில் எனக்குப் பூர்ண நம்பிக்கை இருந்தது. அவரை எப்படியாவது சம்மதிக்கச் செய்ய வேண்டும் என்று எனக்குள் முடிவு செய்து கொண்டேன். அவர் இதை எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டாரென்று தெரியும். எனவே பெரிய பீடிகை போட்டிக் கொண்டு பேசத் தொடங்கினேன்.  “அண்ணா, நாடகத்தில் தமிழ்ச் சுவை முக்கியம். பாடும் போதும், பேசும்போதும் வார்த்தைகள் தெளிவாக இல்லாவிட்டால் நாடகமே நன்றாக இராது. எல்லாக் காட்சிகளிலும் ஒளவையார் வரவேண்டியிருக்கிறது. அனைத்தும் அறிவுரைகளாகவே நிறைந்திருக்கின்றன. ஒளவையாராக நடிப்பவர் மிகத் திறமையாக நடிக்க வேண்டும். இல்லாவிட்டால் நான்கு மணி நேரம் கிழவியையே பார்த்துக்கொண்டு சபையோர் நாடகத்தை ரசிக்க முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை” என்று கூறினேன்.  “அது சரி,எதற்காக இவ்வளவு பீடிகை?” என்றார் அண்ணா.  “தயவு செய்து ஒளவையார் வேடத்தைத் தாங்களே புனைய வேண்டும். நாடகம் சிறப்பாக அமைய வேண்டுமானல் இதைத் தவிர வேறு வழியில்லை” என்று அழுத்தமாகத் தெரிவித்தேன். அருகிலிருந்த நடிக நண்பர்களும் இதனை மகிழ்வோடு ஆமோதித்தார்கள். சின்னண்ணா சிறிதும் எதிர்பார்க்கவில்லை. திகைப்படைந்தார். “சேச்சே, என்னால் முடியாது. அந்தக் காலம் போய் விட்டது” என்றார். இதைச் சொல்லிவிட்டு மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தார். நான் விடவில்லை. மேலும் உற்சாகத்தோடு பேசினேன். ஒளவையாராக நடிப்பவர் என்னென்ன விஷயங்களைக் கவனத்தில் வைக்கவேண்டும்; எப்படியெல்லாம் நடிக்கவேண்டும் என்பனவற்றை விரிவாக எடுத்து மீண்டும் மீண்டும் விளக்கிக் கொண்டே போனேன். திடீரென்று இடைமறித்து, “ஏண்டா,  இவ்வளவு தூரம் இந்தப் பாத்திரத்தைப் பற்றி என்னிடம் விளக்குகிறாயே; நீயே ஒளவையாராக நடித்தால் என்ன?” என்றார்.  அதிர்ச்சியும் துணிவும் நான் அதிர்ச்சியடைந்தேன். அண்ணா இப்படிச் சொல்வா ரென்று எதிர்பார்க்கவேயில்லை. ஏதோ சொல்லி மறுத்தேன். சிறிது நேரம் வாதம் நடந்தது. இறுதியாக அவர் எழுந்து,  “ஒளவையார் வேடத்தை நீ புனைவதாக இருந்தால் நாடகத்தை நடத்துவோம்; இல்லாவிட்டால் இந்த நாடகமே வேண்டாம்”  என்று சொல்லிப்போய் விட்டார். ஒளவையாரை அரங்கில் காணத்துடித்த என் உள்ளத்திற்கு, இதுபெரும் சோதனையாகவே இருந்தது. நான் ஏற்றுக்கொள்ளாவிட்டால் ஒளவையார் நாடகம் நடைபெறப் போவதில்லை! இந்த நிலை எனக்கு மிகவும் வேதனையைத் தந்தது. தனியே இருந்து சில மணி நேரம் சிந்தித்தேன். சோதனையில் தேறினேன். துணிவோடு அண்ணாவிடம் சென்றேன். “நானே ஒளவையாராக நடிக்கிறேன்” என ஏற்றுக் கொண்டேன்.  அதே நினைவு; அதே சிந்தனை  அன்று முதல் இரவும் பகலும் ஔவையைப் பற்றியே சிந்தித்தேன். ஔவை மூதாட்டியைப் பற்றி அறிஞர்கள் எழுதியுள்ள நூல்கள் அனைத்தையும் வாங்கிப் படித்தேன். வீதிகளில் போகும் போதும் வரும்போதும் வயது முதிர்ந்தோர் எதிர்ப்பட்டால் சற்று நின்று உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்குவேன். மேடையில் நடித்துக் கொண்டிருக்கும் போதுகூட, சபையில் எதிரேவீற்றிருக்கும் பாட்டிமார்களின் உருவங்கள் என் கவனத்தைக் கவர்ந்தன. ஒளவையைப் பற்றியே நாள்தோறும் சிந்தித்துச் சிந்தித்துத் தெளிவு பெற முயன்றேன்.  கம்பெனி நடிகர் பி. எஸ். வேங்கடாசலம் மாம்பழக் கவிச் சிங்க நாவலரின் பரம்பரையைச் சேர்ந்தவர். ஒளவை நாடகத்திற்குப் பாடல்கள் இயற்றும் பொறுப்பினைத் தமக்கு அளிக்க  வேண்டுமென அவர் சின்னண்ணாவிடம் விரும்பிக் கேட்டார். அவர் பாடல்கள் இயற்றக்கூடிய திறமையுடையவரென்று அது வரையில் எனக்குத் தெரியாது. இரட்டிப்பு மகிழ்வோடு அவரையே பாடல்கள் எழுத அனுமதித்தார் அண்ணா. பெரும்பாலான பாடல்கள் ஒளவையாரே பாடியவை. இவற்றைத்தவிர மாகாகவி பாரதியார், புரட்சிக் கவினார் பாரதிதாசனார், கவிமணி தேசிக விநாயகனார், இசைச் செல்வர் இலட்சுமணப்பிள்ளை, தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் ஆகியோரின், ‘தமிழ்த் திருநாடுதனைப் பெற்ற’, ‘இனிமைத் தமிழ்மொழி எமது’, ‘மங்கையராகப் பிறப் பதற்கே’, ஒன்றே உயர்சமயம், ‘தேகம் நிலையுள்ள தல்லவே’ ஆகிய பாடல்களையும் நாடகத்தில் தக்க இடத்தில் சேர்த்துக் கொண்டோம். இவற்றைத் தவிர சில பாடல்களே தேவை பட்டன. அவற்றை வேங்கடாசலம் மிக நன்றாக இயற்றி உதவினார். அவரே நாடகத்தில் பாரி வள்ளலாகவும் நடித்தார்.  டி. என். சிவதானுவும், பிரண்டுராமசாமியும் நகைச்சுவை பாத்திரங்களை ஏற்றனார். அவர்கள் ஏற்றபாத்திரங்கள் அனைத்தும் ஒளவையாரின் நிகழ்ச்சிகளோடு தொடர்பு கொண்டவை. எனவே ஒளவையாரின் பாத்திரத்திற்கு மேலும் பெருமை சேர்க் கும் வகையில் அவர்களுடைய நகைச்சுவை அமையவேண்டும் என ஆலோசனைக் கூறினேன்.  கலைமகள் தடுமாறினாள் ஒளவையின் தொடக்க நாளிலேயே சில சகுனத் தடைகள் ஏற்பட்டன. நாடகத்தின் முதல் காட்சி இது. வானத்தில் மேகங்களின் இடையே செந்தாமரையில் பிரமனும், வெண்தாமரையில் கலைமகளும் தோன்றுகின்றனார். பிரமன் பூலோகத்தில் ஒளவையாக அவதரித்து அருந்தமிழ் மொழிக்குத் தொண்டு புரிந்து வருமாறு கலைவாணிக்கு ஆணையிடுகிறார். கலைமகள் அயனின் ஆணைக்கு அடிபணிகிறார். செந்தாமரை, வெண்தாமரை, இரண்டையும் பெரிதாகச்செய்து அவற்றின் நடுவே பிரம்மனையும், கலைமகளையும் இருத்தித் தாமரைகளின் இதழ்களை மூடிவிட்டு, இருதாமரைகளை யும் வால் பெட்டியோடு இணைத்து வைப்போம். முதல் வேட்டுக்குப் பிரமன் தோன்றுவார். இரண்டாவது வேட்டுக்குக் கலைமகள் காட்சி அளிப்பார். வேட்டுச்சத்தம் கேட்டாலும் தாமரையை இணைத்திருக்கும் வால்பெட்டியின் கயிற்றை உள்ளிருந்தபடியே இழுக்க வேண்டும். மேகங்களின் இடையே தாமரை மொட்டு மேலெழுந்துதோன்றும். பின்பு இதழ்கள் விரிந்துமலரும், பிரமன் பேசுவார். அதே போன்று கலைமகளும் காட்சி தரவேண்டும். வால் பெட்டியைத் தாங்கி நிற்கும் இரும்புக் குழாய் தெரியாமல் இருக்க அதனைத் தாமரைத் தண்டுபோல் தோன்றும் வண்ணம் பச்சை நிறம் பூசிவிடுவோம். கலைமகள் பேசியதும் காட்சி முடிகிறது. இதனை முதல் நாள் இரவே பல முறை ஒத்திகை பார்த்து வைத்திருந்தோம். காட்சி தொடங்கியது. வேட்டுச் சத்தம் கேட்டதும் செந்தாமரை மொட்டு உயர்ந்தது, பின்பு இதழ்கள் விரிந்து மலர, பிரமன் தோன்றினார். அவையோர் ஆர்வத்தோடு கைதட்டிப் பாராட்டினார். இரண்டாவது வேட்டுக்கு வெண்தாமரை மொட்டு உயர்ந்து மலர்ந்தது. அதில் வீற்றிருந்த கலைமகள் அசைந்தாடித் தள்ளாடித் தடுமாறிக் கீழே விழுந்து மேகத் தட்டிக்குள் மறைந்தாள். அவையில் சில அனுதாப ஒலிகள் கேட்டன. திரைவிடப்பட்டது. வால் பெட்டி உயரும்போது சிறிது சமாளித்துக்கொள்ளாது கலைமகளாக நடித்த பையன் ஆடியதால், மலர் விரிந்ததும் கிழே விழ நேர்ந்தது. மீண்டும் கலைமகளைத் தூக்கி உட்கார வைத்துக் காட்சியை ஒருவாறு முடித்தோம். ஆரம்பநாளிலேயே அசம்பாவிதம் ஏற்பட்டதால் ஒளவை நாடக வெற்றியில் யாருக்கும் நம்பிக்கை ஏற்பட வில்லை. கலைமகள் தடுமாறி விழுந்தது பெரிய சகுனத்தடை என்றார்கள். நான் இதனாதெல்லாம் சிறிதும் சோர்ந்து விடவில்லை. வசூல் மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால் நாடகம் தொடர்ந்து பதினேழு நாட்கள் நடந்தது. புலவர்களும் அறிஞர்களும் வந்து பார்த்து என்னை உளமாரப் பாராட்டி உற்சாகப் படுத்தினார்கள். வேறு சில நாடகங்கள் நடந்தபின் மீண்டும் வடலூர் இராமலிங்க சாமிகள் மடத்தின் நிதிக்காக ஒளவை யாரையே நடித்தோம். அன்று வாரியார் சுவாமிகள் தலைமை தாங்கி வாழ்த்தினார்கள்.  எங்கள் குறிக்கோள் ஒளவையாராக வேடம் புனேந்து நடிப்பதற்கு நானும்எனது முன்னோர்களும் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டுமென்றே எண்ணினேன். நான்பெற்ற அரிய பேற்றினை எண்ணி யெண்ணிப் பெருமிதம் அடைந்தேன். நாடகத்திற்கு வசூலாகவில்லை. என்றாலும் என்னைப் பொறுத்தவரையில் ஒளவையாராக நடித்தபின் எனக்கு ஆன்மீக நிறைவு ஏற்பட்டது. மக்களின் வரவேற்புக்குரிய நாடகங்களையே நடிப்பது எங்கள் குறிக்கோள் அன்று. மக்களுக்கு எதைச் சொல்ல வேண்டும் என்று எண்ணாகிறோமோ, எது தேவையென்று நினைக்கிறோமோ அத்தகைய நாடகங்களையே இது வரை நடித்து வந்திருக்கிறோம். அவ்வாறு நடிக்கப்பெறும் நல்ல நாடகங்களுக்குப் பொது மக்களின் வரவேற்பினைப்பெற்றுத் தர அறிஞர்களின் ஆதரவும் பத்திரிகைகளின் பாராட்டுரைகளும் எங்களுக்கு மிகவும் உதவியிருக்கின்றன. குமாஸ்தாவின் பெண்ணைத் தொடங்கிய நாளில் போதுமான ஆதரவில்லை. ஆனால், மதுரையில் அமோகமான வரவேற்புக் கிடைத்தது. அஃதே போன்று ஒளவை யாருக்கும் ஆதரவு கிடைக்குமென்று உறுதியாக நம்பினோம்.  ஒளவையாரைப் பார்த்த புலவர் நல்லசிவன் பிள்ளை “நாடகக்கலைக்கு நல்ல காலம் பிறந்தது” என்று எழுதினார். “நீங்கள் கூத்தாடிகள் அல்ல; மாபெருங் கலைஞர்கள்,” என்று மதுரைச் சங்கப் புலவர் நா. கிருஷ்ணசாமி நாயுடு பாராட்டியிருந்தார். உற்சாகம் எங்களை ஊக்கியது. மதுரையில் நாடகம் தொடங்கி ஏறத்தாழ ஒராண்டு முடிந்தது. மேலும் சில புதியநாடகங்களைத் தயாரித்து, மதுரையம் பதியிலேயே அரங்கேற்ற எண்ணினோம். அதற்குள் உலகில் போர்ச் சூழல் உருவாகிவிட்டது.                                                போரும் புரட்சியும்   கண்ணாக் கெட்டாத் தொலைவிலிருந்த யுத்தமேகம் நமது மண்ணை நெருங்கியது. ஜப்பானின் தாக்குதலும், விலைவாசி ஏற்றறமும் மதுரை நகர மக்களிடையே பெருங் குழப்பத்தை உண்டாக்கின. “கொழும்பில் குண்டு! கொச்சியில் ஜப்பான் படை! சென்னை காலி செய்யப்பட்டது! பாம்பன் பாலம்போயிற்று! கரை யோரம் எரிகிறது.” இவைகள்தாம் காலையில் கண் விழித்ததும் பரதேசித் தபாலில் வரும் பயங்கரச் செய்திகள்! அரிசிவிலை பவுன் விலையாக உயர்ந்தது. அன்றாடக் கூலிகளின் அடிவயிற்றில் தீப் பிடித்தது. வயிற்றுப்பிரச்னை வந்துவிட்டால் அதன் விளைவு என்ன வாகும்? பசி வந்தால் பத்தும் என்ன; எல்லாம் பறந்து போவது இயல்புதானே!  கொள்ளையும் கல்லெறியும் கொள்ளை! கொள்ளை!! அரிசிக்கடை, மளிகைக்கடை,ஜவுளி கடை எங்கும் கொள்ளே !!! நள்ளிரவிலல்ல; பட்டப் பகலில், வெட்ட வெளியில், உணவு உடை இரு பகுதியிலும் பெருங் கொள்ளை. சந்தடிச் சாக்கில், சொந்த விருப்பு வெறுப்பில் வந்த தைச் சுருட்ட வந்தவர் சிலர். புரட்சியைப்பற்றி அறிந்திருக் கிறோம் புத்தகங்களில். அதன் அமைப்பில்-உருவத்தில் ஒரு பகுதியை அன்று கண்முன்னே கண்டோம் மதுரையில், ‘பல்பு’கள் உடையாத சினிமாக் கொட்டகைகளே இல்லை. அலங்கார விளக்குகள் அலங்கோலமாயின. தெருவெல்லாம் கண்ணாடிச் சிதறல்கள்!  எங்கள் நாடகக்கொட்டகையை ஒட்டிய விறகுக் கடையில் புரட்சி வீரர்கள் புகுந்தனார். ஒரு கட்டை விடாமல் காலி செய் யப்பட்டது. அடுத்த பாய்ச்சல் நாடகக் கொட்டகை பல்பு களின் மேல் என்றுதான் எதிர்பார்த்தோம். அவர்களை யாரும் தடுப்பாரில்லை. ஆனால், ஆவேசத்தினிடையே அன்பு தாண்டவ மாடியது. திடீரென்று ஒரு குரல். டே, டி. கே. பிரதர்ஸ் கொட்டகைடா, கல்லெறியாதீங்க” என்றது. தெய்வமே குரல் எழுப்பியதாக நினைத்தோம்.  திருமணமான நான், மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத் திய சமயமல்லவா? இந்தப் புரட்சியைக் கண்டு அவள் நடுங்கினாள். சேலத்தில் இதையெல்லாம் பார்த்ததில்லை. அவளுக்கு நான் ஆறுதல் கூறினேன். அன்று மாலை நான்கு மணி. வீட்டுக்கு அருகிலேயே கலகம்! எதிரே ஒரு மளிகைக் கடையில் கொள்ளை ! நானும் என் துணைவியுடன் மாடியில் நின்று வேடிக்கை பார்த்தேன். கொள்ளையில் குதுகலித்த வீரர்கள் கல்லாலும், கம்பாலும் வீதியிலிருந்த வீட்டின் கதவுகளை விசாரித்துக் கொண்டே சென்றார்கள். எங்கள் வீட்டுக் கதவிலும் ஒர் அடி! என் பக்கத்தில் ஒரு கல்! ‘ஐயோ!’ என்று அலறினாள் மனைவி. உடனே ஒரு சத்தம், “டே, அயோக்கியப் பயல்களா, டி. கே. ஷண்முகம் வீடுடா, நிக்கிறாரு தெரியலே?” அவ்வளவு தான், வீரர்கள் கண்கள் மேலே பார்த்தன. போகிற போக்கில் சில கைகள் தலைக்கு மேலே உயர்ந்து வணக்கமும் செய்தன. ரகசியப் போலிசார் பார்த்தார்களோ, என்னவோ. யாருக்குத் தெரியும்? காக்கி உடை தரித்த போலீஸ்காரர்களைத் தான் அன்று காணவே இல்லை: கலக வீரர்களின் இந்த அன்பு வணக்கம் எங்களையும் புரட்சிக் கூட்டுறவில் சம்பந்தப்படுத்தி விடலாமல்லவா? கம்யூனிஸ்டுகளுக்கு நாங்கள் உதவி புரிவதாக ஏற்கனவே போலீ சாருக்கு மொட்டைக் கடிதங்கள் போயுள்ளன. தலைமறைவாக. இருக்கும் சிலர் என்னை அடிக்கடி வந்து சந்திப்பதாகப் புரளியிருந்தது. இரண்டு நாட்கள் ஊரெங்கும் இந்த அமளி நடந்தது. இந்த நிலையில் இருட்டடிப்பு உத்தரவும் வந்தது. சென்னையில் எதிரி விமானம் பறந்தததாகச் சொன்னார்கள். நாங்கள் மதுரையிலிருந்து கும்பகோணத்திற்குப் பறந்தோம்.            இல்வாழ்வில் இன்பம்   குடந்தை வாணி விலாச சபைத் தியேட்டரில் நாடகம் தொடங்கினோம். மதுரையில் மகத்தான வெற்றி பெற்ற சிவலீலாவையே முதல் நாடகமாக நடித்தோம். அமோகமான ஆதரவு கிடைத்தது. சிவலீலாவே தொடர்ந்து நடைபெற்றது. ஏதேதோ இன்பக் கனவுகள் கண்டு கொண்டிருந்த என் மனைவி மீனாட்சியிடம் ஒய்வாக இருந்து உரையாடி மகிழக் குடந்தையில் தான் எனக்கு நேரம் கிடைத்தது. திருமணம் முடிந்தவுடனேயே சிவலிலா நாடகத் தயாரிப்பில் ஈடுபட்டோம். ஏறத்தாழ ஒரு வாரம் என் இல்லத்தரசியின் வீட்டில், சேலம் செவ்வாய் பேட்டையில் தங்கியிருந்தேன். என்றாலும், என் நினைவெல்லாம் சிவலீலாவின் வெற்றியிலேயே குறியாக இருத்தது. மறு வீடு சென்று மனைவியின் வீட்டில் இருந்த போதும் நாடகத்திற்குத் தேவையான குறிப்புகளை எழுதுவதிலேயே பெரும் பொழுது கழிந்தது. மனைவியின் வீட்டில் வரவேற்புக்கும் உபசாரத்திற்கும் குறைவில்லை. அவருடைய தமக்கையும் தங்கை சரசுவும் என்னிடம் மிகுந்த அன்பு காட்டினார். எனக்கோ இருக்கை கொள்ளவில்லை. மனைவியுடன் மதுரைக்குத் திரும்பினேன். இரவு நாடகமாதலால் பகல் வேளை உணவுக்குப் பின் சற்று உறங்குவேன். மாலையிலேயே கொட்டகைக்குப் போய் விடுவேன். நாடகம் முடிந்து வீடு திரும்ப இரண்டு மணி ஆகிவிடும். அதற்குமேல்தான் அன்பு மனே யாளுடன் அளவளாவி மகிழ நேரம் கிடைக்கும்.  மீனாட்சியக்காளின் அன்பு எங்கள் குடும்ப உறவினார்களைப் பற்றிய சில குறிப்புகளை இங்கு கூறுவது இன்றியமையாததாகும். எங்கள் தந்தை வழிப் பாட்டனார் திரு சங்கரமூர்த்தியா பிள்ளை திருவனந்தபுரம் புத்தன்  சந்தையில் நல்ல மதிப்போடு வாழ்ந்து வந்தவர். அவர் ஓர் ஆசிரியர். சொந்தத்தில் ஒரு தொடக்கப் பள்ளியினையும் நடத்தி வந்தார். இளம் பருவத்தில் மரத்திலிருந்து விழுந்து காலில் ஊனம் ஏற்பட்டதன் காரணமாக அவரை எல்லோரும் நொண்டி அண்ணாவி என்றே குறிப்பிடுவார்கள். அவருக்கு இரு மனைவியர்; இரண்டாவது மனைவியின் பெயர் முத்தம்மை.அந்த அம்மையாரிடம் பிறந்த்வர்கள் சண்முகம்பிள்ளை, கண்ணாசாமிப்பிள்ளை, செல்லம் பிள்ளை ஆகிய மூவர். இவர்களில் சண்முகம்பிள்ளை எங்களுக்கு அறிவு தெரியுமுன்பே காலமாகி விட்டார். பாட்டனாருக்கு முதல் மனைவியிடம் பிறந்தவர் திரு சுந்தரம்பிள்ளை. அவரது மனைவி தாயம்மையிடம் பிறந்தவர்கள் செல்லம்மை, திரவியம்பிள்ளை, மீனாட்சியம்மை, இராமலிங்கம்பிள்ளை ஆகிய நால்வர். எங்களின் ஒன்றுவிட்ட சகோர-சகோதரியரான இவர்கள் நாகர்கோவிலிலேயே வசித்து வந்ததால்தான் எங்கள் அன்னையார் நாகர் கோவிலில் நிலம் வாங்கவும், அதனையே நிரந்தர இருப்பிடமாகக் கொள்ளவும் நேர்ந்தது. எங்களுக்கு அறிவு தெரிந்தபின் 1924இல் நாங்கள் முதல் முறையாக நாகர்கோவிலுக்குச் சென்றிருந்த போது அன்னையார் முலம் இவர்கள் அனைவரும் அறிந்து கொண்டோம். இவர்களில் மூத்த அண்ணா திரவியம்பிள்ளை, கம்பெனியில் சில காலம் மானேஜராகவும் இருந்தார் என்பதை முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். இளையவர் இராமலிங்கம்பிள்ளை வக்கீல் குமாஸ்தா. எங்களிடம் பாசமும் பரிவும் கொண்டவர். இவரோடு நாங்கள் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தோம். மீனாட்சியக்காள் என்மீது மிகுந்த அன்புடையவர். இவருடைய மூத்த மகன்தான் நகைச்சுவை நடிகன் சிவதாணு. எனக்குத் திருமணம் நிகழ்ந்த சில நாட்களிலேயே திரவியம்பிள்ளையின் மூத்த மகள் சுந்தரிக்கும் சிவதாணுவுக்கும் திருமணம் நிகழ்ந்தது. மகளுக்கும் மருமகனுக்கும் இருந்த மன ஒற்றுமையை அறிந்த நான், இவர்கள் திருமணத்தை வற்புறுத்தி, அண்ணாவையும் அக்காளேயும் சம்மதிக்க வைத்தேன். என் திருமணத்திற்காக உறவினார்கள் அனைவரும் மதுரைக்கு வந்திருந்தபோது இந்த ஏற்பாடுகளெல்லாம் நடைபெற்றன. என் திருமணத்தைக் காண வந்திருந்த மீனாட்சியக்காள், நான் மனைவியுடன் தனிக்குடித்தனம் தொடங்கியதும் என் மீது கொண்டிருந்த அன்பின் காரண  மாக, என் இல்லத்திலேயே என் மனைவிக்குத் துணையாகத் தங்கி விட்டார். கம்பெனியின் ஒரே நடிகையான திரெளபதியும் வயது வந்த பெண்ணாக இருந்ததாலும், அவளுக்கு துணையாக வேறு யாரும் கம்பெனியில் இல்லாததாலும் வசதியைக் கருதி எங்களுடனேயே இருந்து வந்தாள்.  செல்லக் கோபம் மதுரையில் நாங்கள் குடியிருந்தவீட்டின் மாடியறையில் நான் மனேவியுடன் தங்கியிருந்தேன். அக்காள் தன் மகனின் திருமணத்திற்குக் கூட நாகர்கோவிலுக்குப் போகவில்லை. மகனும் மருமகளும் மதுரைக்கு வந்து தனிக்குடித்தனம் தொடங்கினார். அப்போதும் அக்காள் என்னைவிட்டுப் போக மறுத்துவிட்டார். மகனிடம் சண்டை எதுவும் இல்லையானலும், அவன் இல்லத்தில் சென்று மருமகளுக்குத் துணையாக இருக்க அவர் ஏனோ விரும்ப வில்லை. அடிக்கடி போய் விசாரிப்பதோடு நிறுத்திக் கொண்டார்.  அக்காள் நல்ல உழைப்பாளி. வீட்டு வேலைகளையெல்லாம் தாமே தலைமேல் போட்டுக்கொண்டு செய்வார். நாடகம் முடிந்து வீடு திரும்பியதும், ஏதாவது சாப்பிட்டுவிட்டு நான் மாடிக்குச் செல்வேன். நான் வரும்வரை பெரும்பாலும் என் மனைவி உறங்கு வதே இல்லை. ஆனால், அயர்ந்து உறங்குவதுபோல் பாவனை செய் வாள். நான் நடிகனல்லவா? எனக்குத் தெரியாதா? சிறிது சல சலப்போடு அருகில் அமர்வேன் நான். கீழேயிருந்து அக்காளின் குரல் கேட்கும்.  “ ஏ சாந்தா, ஏ......சாந்தா”  ஆம், என் மனைவி மீனாட்சியை சாந்தா என்று தான் கூப்பிடுவோம். ஏ. சாந்தா என்றதும் “என்னக்கா?” என்பேன் நான்.  “இந்தப் பாலை வாங்கிகிட்டுப் போகச் சொல்லப்பா சாந்தாவை”  “அவ அசந்து தூங்குரு அக்கா; இதோ நானே வர்றேன்” என்று எழுந்திருப்பேன்.  அதற்குள் என் மனைவி அடித்துப் புரண்டு எழுந்து, வேகமாகக் கீழே ஒடுவாள்.  “மெதுவா...மெதுவா” என்பேன். பாலை வாங்கிக் கொண்டு மேலே வருவாள்.  ‘மெதுவாப் போகக் கூடாதா? ஏன் இப்படி ஒடினே?’ என்று வாய்விட்டுச் சிரிப்பேன் நான்.  அவள் செல்லமாக ஒரக்கண்ணால் என்னைப் பார்த்து, ‘ஊம் சிளிப்பு வேறே” என்பாள். படுத்திருந்த தன்னை உரிமையோடு முதுகில் தட்டி எழுப்பவில்லையே என்ற கோபம் அவளுக்கு. அந்தச் செல்லக் கோபத்தையும், ‘சிளிப்பு’ என்று அவள் சொல்லும் அழகையும் ரசிப்பதில் எனக்கொரு தனி மகிழ்ச்சி.  மனையாளின் மனக்குறை மீனாட்சியம்மன் கோயில், மாரியம்மன் தெப்பக்குளம், திரு மலை நாயகர் மகால், திருப்பரங்குன்றம், அழகர் கோயில் இங்கெல்லாம் என்னோடு தனியாக வந்து பார்க்கவேண்டு மென்பது அவள் ஆசை..எங்கள் திருமணம் நடந்த அன்று மாலை, இராமநாதபுரம் மன்னார் மாளிகைக்கு எதிரேயுள்ள மாரியம்மன் தெப்பக் குளத்தில் நானும் என் மனைவியும் படகில் ஏறி உலா வந்தோம். அப்போது அவள் தமக்கையும் மற்றுஞ் சில பெண்களும் படகில் இருந்தனார். ‘அதைப்போல் ஒருமுறை நாமிருவரும் தனியே அங்கு சென்று படகிலேறி மைய மண்டபம் பார்த்து வரலாம்’ என்றாள் என் மனைவி. ஒன்றன்பின் ஒன்றாகப் புதிய நாடகங்களை ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்ததால் இந்த ஆசையை நிறைவேற்ற முடியவில்லை. அக்காளோடு போய்வரச் சொல்வேன் எப்போதும் செல்லமாகச் சிணுங்குவாள். நான் பல்வேறுபட்ட பாத்திரங்களை நாடகங்களிலும் நாவல்களிலும் பார்த்தும் படித்தும் அறிந்தவன் தான். என்ன செய்வது? நாடக வேலைகளில் எனக்கிருந்த அன்றைய ஆர்வத்திற்கு முன் மனையாளின் இந்த ஆசைக் கோரிக்கைகள் முதன்மையாகத் தோன்றவில்லை. அதுவே அவளுக்குப் பெரிய மனக்குறையாக இருந்தது. வெளியே எங்கு போவதான லும் கணவன் தன்னோடு வரவில்லையே என்று அவள் கொஞ்சம் வேதனைப்பட்டாள். இரவு நேரங்களில் இதற்கெல்லாம் ஏதாவது சமாதானம் கூறுவேன் நான்.  ஒரு நாள் இரவு திடீரென்று “நாக்கால் மூக்கைத் தொட முடியுமா உங்களால்?” என்றாள். அவள் எதற்காகக் கேட்கிறாள் என்பது எனக்குப் புரியவில்லை. “முடியாது” என்றேன்.  “முடியாதா? ஊம் ..... முடியவே முடியாதா?” என்றாள்.  “நீ தொடு பார்க்கலாம் என்றேன் நான். அழகான கூரிய முக்கு அவளுக்கு. நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை, சட்டென்று நாக்கை நீட்டித் தன் மூக்கின் துனியைத் தொட்டாள். எனக்கு ரோஷம் வந்துவிட்டது. என்னல் முடிந்த மட்டும் நாக்கை நீட்டி நீட்டிப் பார்த்தேன். மூக்கின் பக்கத்தில்கூட நெருங்க வில்லை அது. மனைவி விழுந்து விழுந்து சிரித்தாள். தோல்வியை சமாளிக்க வேண்டுமே, “பெண்களுக்கே நாக்கு நீளந்தான்” என்றேன். வேறு என்ன செய்வது? ...மதுரையில் அவளுக்கு இருந்த மனக் குறையை எல்லாம் வட்டியும் முதலுமாகக் கும்பகோணத்தில் தீர்த்தேன். சிவ லீலாவில் எனக்கு முக்கியமான வேடம் இல்லாத தால் திரெளபதையை முன்னுல் அனுப்பிவிட்டு நான் சாவகாச கொட்டகைக்குப் போவேன். அதில் என் மனைவிக்கு எல்லையற்ற மகிழ்ச்சி.                                                  தம்பி பகவதி திருமணம்   கரூரில் 2- 8- 42 முதல் சிவலீலா நாடகம் தொடங்கியது. நல்ல வருவாயும் இருந்தது. தம்பி பகவதிக்குத் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. சின்னண்ணா நாகர்கோவிலில் இருந்ததால் அங்கேயே பகவதிக்குப் பெண் பார்த்தார், பெரியண்ணாவும் நாகர்கோவில் சென்று பெண்ணைப் பார்த்து முடிவு செய்து விட்டுத் திரும்பினார். திருமணத்தேதி உறுதி செய்யப்பட்டது. கல்யாணக் கச்சேரியில் தமிழிசையே முழங்க வேண்டுமென நான் விரும்பினேன். மாலையில் இசையரசு எம். எம். தண்டபாணி தேசிகரின் இன்னிசையும் இரவில் திருமுருக கிருபானந்த வாரியாரின் வள்ளி திருமணம் கதையும் நடத்த முடிவு செய்தோம். தேசிகர் அப்போது காஞ்சீபுரத்தில் இருப்பதாக அறிவித்தேன். அறிஞர் அண்ணா அவர்களுக்குத் தந்தி மூலம் தகவல் அறிந்தேன். அவர் எங்கள் சார்பில் தேசிகர் அவர்களைச் சந்தித்துப் பேசி முடிவு செய்து கடிதம் எழுதினார். 1942 நவம்பர் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று கருருக்கு அருகிலுள்ள திருமுருகன் திருத்தலங்களில் ஒன்றான வெண்ணெய் மலையில் தம்பிபகவதிக்கும் திருவளர் செல்வி கஸ்தூரிக்கும் திருமணம் நடந்தேறியது.  கந்தலீலா கரூரில் கந்தலீலா நாடகத்தை நல்ல முறையில் தயாரிக்கத் திட்டமிட்டோம். சின்னண்ணா நாகர் கோவிலில் இருந்ததால் புதிய நாடகத்தை உருவாக்கும் பொறுப்பினை நான் ஏற்றுக் கொண்டேன். யாக குண்டம்; திருச்செந்துTர் கோயில்; சுவாமி மலை; பழனி, சரவணப் பொய்கை, திருத்தணிகை மலை முதலிய காட்சிகளெல்லாம் புதிதாகத் தயாரிக்கப் பெற்றன. சிவபெரு மானின் விஸ்வரூபமும், நெற்றிக் கண்ணிலிருந்து நெருப்புப் பொறிகள் பறப்பதும், அவை சரவணப் பொய்கையில் விழுந்து ஆறு குழந்தைகள் ஆவதும் கார்த்திகைப் பெண்கள் அக்குழந்தை களைத் தாலாட்டுவதும், பின் அவர்கள் நட்சத்திரங்களாவதும் அருமையான காட்சிகள். மின்சாரத்தின் துணையோடு மிக அற்புத மாக இவற்றை உருவாக்கிக் காட்டினார் மின்சார நிபுணர் ஆறுமுகம் 1943 ஜனவரி 1 ஆம் தேதியன்று கந்தலீலா அரங்கேறியது. சிறந்த பாடகர் எம். எஸ். வேலப்பன் சுப்பிரமணியராக வும்; நான் நாரதராகவும், பகவதி சூரபத்மனாகவும், டி. வி. நாரயணசாமி சிவபிரானுகவும் நடித்தோம். நாடகம். மிகச் சிறப்பாக அமைந்தது.  பண்டித இராமசர்மா கரூர் பிரபல ஆயுர்வேத வைத்தியர் பண்டித இராமசர்மா வுடன் எங்களுக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. அவர் சிறந்த நாடக ரசிகர். அவரும் அவரது சகோதரரும் நாடகங்களை ஆர்வத்தோடு வந்து பார்ப்பார்கள், நோய், நொடி என்றால் அவரைத் தான் அணுகுவோம். அன்பும் பன்பும் நிறைந்த உத்தமமான மருத்துவர். கரூருக்கு வந்த சில நாட்களில் என் மனைவி நோயுற்றாள். எப்போதும் அவள் உடம்பு கதகதப்பாகவே இருந்தது. அடிக்கடி இருமிளுள். இராமசர்மா அவள் உடல் நிலையை நன்குகவனித்து ஏதேதோ மருந்துகள் கொடுத்தார். நோய் குணமாகவில்லை. ஒருநாள் என்னைத் தனியே அழைத்தார்.  “மனைவியைத் தாய்வீட்டுக்கு அனுப்பி வைப்பது நல்லது” என்றார்,  “ஏன் நீங்களே குணப்படுத்தமுடியாதா?” என்றேன் நான்.  “கணவனைவிட்டுப் பிரிந்திருந்தால் விரைவில் குணப்படலாம்” என்றார் சர்மா.  அவர் வற்புறுத்தலின் மீது நான் மனைவியைச் சேலத்துக்கு அனுப்பி வைக்க ஒப்புக் கொண்டேன். சேலத்துக்குத் தகவல் அறிவித்தேன். சாந்தாவின் தமையன் வந்து அவளை அழைத் துச் சென்றார். என்னைப் பிரிய மனமில்லாதவளாய் சாந்தா கண் கலக்கத்துடன் பிரிந்து சென்றாள். சேலம் சென்ற பிறகும்  அவள் உடல்நிலை தேறவில்லையென்று கடிதம் வந்தது. அவளே உருக்கத்தோடு எழுதியிருந்தாள்.  பண்டித சர்மா ஒருநாள் என்னை அழைத்தார். சென்றேன்.  “நீங்கள் தொடர்ந்து சில மருந்துகள் சாப்பிட வேண்டும் என்றார். “சாப்பிடுகிறேன்” என்று ஒப்புக் கொண்டேன்.  அவர் கொடுத்த மருந்துகளைச் சாப்பிட்டேன். “சாத்துக் குடிச்சாறு இரவு படுக்கைக்குப் போகு முன் ஒரு கோப்பை குடிக்க வேண்டும்” என்றார்.  அதன்படியே குடித்து வந்தேன். கரூர் நாடகம் முடிந்து பாலக்காடு புறப்படும்போது சர்மாவிடம் சென்று விடை பெற்றேன். புதிதாக மருந்துகள் எதுவும் கொடுக்கவில்லை. “சாத்துக்குடிச் சாறு மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள்” என்றார். “ஏன்?” என்று கேட்டேன். “வேறொன்றுமில்லை. உடம்புக்கு நல்லது” என்றார் சர்மா. என்ன காரணத்திற்காக சர்மா எனக்கு மருந்துகள் கொடுத்தாரென்று அப்போது எனக்குத் தெரியவில்லை. பின்னால்தான் புரிந்தது. மொத்தம் ஐந்து மாதங்கள் கரூரில் நாடகங்கள் நடந்தன. பாலக்காடு பயணமானுேம்.  பழைய நாடகங்களுக்குப் புதிய மதிப்பு பாலக்காடு கவுடர் தியேட்டரில் சிவலீலா தொடங்கியது. 1940இல் எங்கள் நாடகங்களுக்கு பாலக்காட்டில் இருந்த ஆதரவைவிட அதிக ஆதரவு இப்போது கிடைத்தது. மதுரை சிவ லீலாவுக்குப் பிறகு நாங்கள் சென்றவிடமெல்லாம் சிறப்புத் தான். நைந்துபோன பழைய நாடகங்களுக்குக்கூட ஒரு புதிய மதிப்பு ஏற்பட்டது. ஐம்பது ரூபாய் கூட வசூலாகாமல் இடைக் காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த மனோகராவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் இடமின்றித் தவித்தது எங்களுக்கே வியப்பாக இருந்தது. மனோகரனாக நான் நடித்த போது, புதிய புதிய கட்டங்கள் சிலவற்றை மக்கள் ரசனை உணர்வோடுகை தட்டிப் பாராட்டினார்கள். இராமாயணம் நாடகத்திற்கு அதற்கு முன் கண்டிராத முறையில் நாடக வெறி பிடித்தவர்களைப் போல ரசிகப் பெருமக்கள் நாலா பக்கங்களிலிருந்தும் வந்து குவிந்தனார். இராமாயணம் இரவு 9 மணிக்கு ஆரம்பமாகும். ஆனால் ரசிகர்கள் மாலை 4 மணி முதலே இரட்டை மாட்டு வண்டிகளிலும், பஸ்களிலும், கார்களிலுமாகச் சாரி சாரியாக வரத் தொடங்கினார்கள். தியேட்டரின் பின்புறம் பெரிய தென்னத்தோப்பும், அதன் நடுவே கம்பெனி வீடும் இருந் தன. மாட்டு வண்டிகளையும்,கார்களையும், பஸ்களையும் தாண்டித் தான் நாங்கள் தியேட்டருக்குள் நுழைய வேண்டும். ஆண்களும் பெண்களுமாக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கட்டுச்சோற்றை வைத்துக் கொண்டு சிறுசிறு கூட்டமாக உட்கார்ந்து சாப்பிடுவது காட்சிக்குப் பெரும் விருந்தாக இருந்தது. மற்ற நாடகங்களுக்கு வசூல் குறையும்போது மனோகராவும், இராமாயணமுந்தான் வசூலுக்கு நம்பிக்கை தரும் நாடகங்களாக அமைந்தன.                                    வருங்காலத் தமிழர் தலைவர்   நாடகங்களைப்பற்றி மேலே தொடருமுன் பேரறினார் அண்ணா அவர்களோடு எனக்கேற்பட்ட பெருமைக்குரிய ஒரு தொடர்பினே இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஆம், பாலக்காடு முகாமில் தான் இது நடந்தது. அறிஞர் அண்ணா அவர்களின் திராவிட நாடு இதழ் காஞ்சீபுரத்திலிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. குமாஸ்தாவின் பெண் அல்லது கொலைகாரியின் குறிப்புகள் என்னும் பெயரில் அண்ணாவின் முதல் நவீனம் வாரந் தோறும் அதில் வெளியாயிற்று. அதனை நாங்கள் தொடர்ச்சி யாகப் படித்து வந்தோம். அடிக்கடி நான் அண்ணாவுக்குப் பாராட்டுக் கடிதங்களும் எழுதினேன். பாலக்காடு வந்த சமயம் அந்தத் தொடர் கதை முடிவு பெற்றிருந்தது. அதனை நூல் வடி வில் வெளியிட விழைந்தார் அண்ணா. கதை நாங்கள் நடித்த நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதால் முறைப்படி அனுமதி பெற்றுக் கொள்ளுமாறு வேண்டினேன். அதன்படி அனுமதி கோரிக் கடிதம் எழுதிய அண்ணா, அத்தோடு நாவலுக்கு நானே ஒரு முன்னுரை எழுத வேண்டுமென்றும் கேட்டிருந்தார். இதனை எனக்குக் கிடைத்த பெரும் பேருகக் கருதினேன். 30. 1. 1943 இல் அண்ணாவின் முதல் நாவலுக்கு நான் எழுதிய முன்னுரை இது.  “தோழர் சி. என். அண்ணாதுரை அவர்கள் வருங்காலத் தமிழர் தலைவர். இன்று தமிழகத்தில் சிறந்த எழுத்தாளர்கள் என்று புகழப்படும் ஒரு சிலரில் தோழர் அண்ணாதுரை அவர்கள் முன்னணியில் நிற்பவர். இவரது ஆராய்ச்சி நிறைந்த ஆணித் தரமான சொற்பொழிவைக் கேட்க, கொள்கையில் வேறுபட்ட கூட்டத்தினரும் குழுமி நிற்பர். இவரது அழகிய உரைநடையை “கவிதை நடை” என்றே கூறலாம். இந்த நடைச் சித்திரத்தைக் நண்டு வியந்த தமிழறினார் பலர். இன்று தோழர் அண்ணாதுரை  அவர்களே “அடுக்குச் சொல் வீரர்” என அடைமொழி கொடுத்து அழைக்கின்றனார். இவரது எழுத்தின் வேகம் படிப்பவர் மூளையைப் பண்படுத்தி, புதைந்து கிடக்கும் பகுத்தறிவைத்துருவி எடுக்கும் தன்மை வாய்ந்தது. எந்த இலக்கியமும் மனித சமூகத்திற்குப் பயனளிக்கும் பான்மையதாய் இருக்க வேண்டுமென்பதை தோழர் சி. என். ஏ. அவர்கள் நன்றாய் அறிந்தவர். அதன்படியே தொண்டாற்றியும் வருபவர்.  இவரது உள்ளச் சோலையிலேயே பூத்த நறுமண மலர்தான் “குமாஸ்தாவின் பெண் என்ற கொலைக்காரியின் குறிப்புக்கள்.”  உயிருள்ள சித்திரம்; அறிவுக்கு விருந்து: கற்பனே ஒவிய மல்ல; இன்று நம் கண்முன் நிகழும் காட்சி.  எங்கள் நாடக குமாஸ்தாவின் பெண் ணின் பிற்பகுதியை தமது கருத்திற்கேற்பச் சிறிது மாற்றி எழுத, தோழர் சி. என். ஏ அவர்கள் விரும்பினார். ஆவலுடன் அனுமதி அளித்தோம்; தமது ‘திராவிட நாட்டில் வெளியிட்டார், படித்தோம். இவ்வரிய சித்திரத்தை வரைய எங்கள் ‘குமாஸ்தாவின் பெண்’ திரையாக இருந்தது என்பதை யெண்ணும் போது உண்மையிலேயே பெருமையடைகிறோம்.  தமது உள்ளத்தில் குமுறிக் கொண்டிருக்கும் உணர்ச்சிப் பெருக்கின, தோழர் அண்ணாதுரை அணை போட்டுத் தடுத்து, சந்தர்ப்பம் நேரும் போதெல்லாம் வாரியிறைத்திருக்கிறார் கதையில் —  "கன்னியாக இருக்கையில் காதல் கொண்டு, அது கணியாததால் வெம்பிய வாழ்வு பெற்று, விதவையாகி விபசார வாழ்க்கையிலே ஆனந்தம் பெற, ஆசை நாயகனைப் பெற்று, அவனது துரோகத்தால் துயருற்று அவனேக் கொன்ற காந்தாவின் கதை இதுவே”  என்று தோழர் அண்ணாதுரையே இக்கதைச் சுருக்கத்தை, அழகாகக் கூறி முடிக்கிறார். வெறும் கதையை ரசித்தால் போதாது. அதனுள் பொதிந்து கிடக்கும் உண்மையை உணர வேண்டும்.  கதாபாத்திரங்களின் மனோ நிகழ்ச்சிகளைச் சித்தரிப்பதில் தோழர் சி. என். ஏ. எவ்வளவு திறன் படைத்துள்ளார் என்பதை  காந்தா நெ. 1-க்கும் காந்தா நெ. 2-க்கும் நடக்கும் தீவிரப் போராட்டத்தின் மூலம் அறிந்து கொள்ளாலம். பன்முறை. படித்துச் சுவைக்க வேண்டிய கட்டம் இது. கதையின் ஜீவநாடி.  விதவை நிலையடைந்த காந்தாவின் உள்ளம் எப்படியிருக்கிறது பாருங்கள்!  “நான் விதவையானேன்; சகுனத் தடையானேன்; சமுதாயத்தின் சனியனனேன்; என் இளமையும் எழிலும் போகவில்லை; கண்ணாெளி போகவில்லை; நான் அபலையானேன்; அழகியாகத் தானிருந்தேன்; தாலி யிழந்தேன்; ஆனால் காய்ந்த தளிர் போலிருந்தேனேயன்றி சருகாக இல்லை... வாடாத பூவாக இருந்தேன். ஆனால் விஷவாடையுள்ள மலரென்று உலகம் என்னைக் கருதிற்று. அது என்னுடைய குற்றமா?... எங்கள் ஏழ்மை யைக் கண்டு உதவி செய்ய முன்வர யாருமில்லை; எனக்குத் தக்கவனத் தேடித்தர ஒருவரும் வரவில்லை; என் வாழ்வு கொள்ளை போவதைத் தடுக்க யாரும் வர வில்லை. எல்லாம் முடிந்து நான் விதவையானதும், என் விதவைத் தன்மை கெட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ளும்படி செய்ய, உபதேசிக்க, உற்றார் வந்தனார். அவர்களுக்கிருந்த கவலை எல்லாம் குலப்பெருமைக்குப் பங்கம் வரக்கூடாதென்பது தான். என்னைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. எனக்கு வீடே ஜெயில்; அப்பா அம்மாவே காவலாளிகள், உறவினார் போலீஸ்; ஊரார் தண்டனை தரும் நீதிபதிகள். இது உலகம் எனக்குண்டாக்கி வைத்த ஏற்பாடு; இதற்காகவா நான் பிறந்தேன்?”  என்று கேட்கிறாள் காந்தா. இது கதையில் காந்தா சொல்வதல்ல. கோடிக்கணக்கான இளம் விதவையர் உள்ளத்திலிருந்து எழும் கூக்குரல்.  பக்கம் பக்கமாக எழுதிப் படிப்பவர்களுக்கு அலுப்பை உண்டாக்காமல் விஷயத்தைச் சுருக்கி இனிய நடையில் தோழர் சி. என். ஏ. அவர்கள் சொல்லும் எழிலைப் பாருங்கள்!  “அவரிடம் (கிழவரிடம்) பணம் இருந்தது. ஏழ்மையில் நெளிந்துகொண்டு நானிருந்தேன். கிடாபோல்  வளர்ந்தவளை எவனுக்காவது பிடித்துக் கட்டி வைக்காமலிருக்கலாமோ வென்று கேட்க ஊரிலே பல பித்தர்களிருந்தனார்; எத்தகைய பொருத்தமும் தட்சணை தந்தால் சரியாக இருக்கின்றதெனக் கூறும் சோதிடர் சிலர் இருந்தனார். உலகில் எது இல்லை? பளபளப்பான தோலைப் போர்த்துக் கொண்டிருக்கும் பாம்பு இல்லையா? எப்படியோ ஒன்று என் கழுத்தில் தாலி ஏறிற்று”  கசப்பு மருந்தைக் கனியுடன் கலந்து கொடுப்பது போல் நகைச் சுவையுடன் நல்லுணர்ச்சி யூட்டுவது தோழர் அண்ணாதுரையின் தனிப் பண்பு. கீழ்வரும் வாக்கியங்களைப் படித்துப் பாருங்கள்.  “சீதாவுக்கு ராமு என்ற ஒருவன் மேல் ஆசை; அவனுக்கோ கோயில், குளம், பூஜை, புத்தகம் முதலியவற்றிலே ஆசை; அவளையும் கல்யாணம் செய்து கொண்டு அவன் கோயிலுக்குப் போவதை எந்தக் கடவுள் வேண்டாமென்று கூறிவிடுமோ தெரியவில்லை!...... எந்தக் கோயிலிலும் தேவியிருக்க, நாம் ஏன் கல்யாணம் வேண்டா மென்று சொல்ல வேண்டுமென்று ராமு யோசிக்கவில்லை.”  என்கிறார் தோழர்.  காந்தாவின் மீது ராமு கடைக்கண் செலுத்தவில்லையாம்: இதைக் காந்தா உதாரணத்துடன்,  “அவரோ பக்தர்களின் பாடலைக் கேட்டுக் கேட்டு மெளனமாக இருக்கும் பழக்கம் கொண்ட தேவன்போல் என் கண்களின் வேண்டுகோளைக் கண்டு, அசையா உள்ளங் கொண்டவராகவே யிருந்தார்”  என்று அழகாய்க் கூறுகிறாள்.  நினைத்ததைக் கொடுக்கும் ‘கற்பகவிருட்சம்’ ‘காமதேனு’ என்பன போன்ற நைந்துபோன பழைய உதாரணங்களுக்கு, அண்ணாதுரையின் கற்பனையில் எழுந்த புதிய உதாரணம்,  மிராசுதாரர் அவளுக்கு ‘அலாவுதீனின் தீபமானார்’ என்பது இலக்கியச் சுவைக்கு ஒர் எடுத்துக் காட்டு.  “நான் தொட்டு விளையாட முடியாத பருவம் என் கிட்ட வரமுடியாத வயது ... அவன் என்ன செய்தான் தெரியுமோ? யாரது புதிதாக இருக்கிறதே என்று நான் பார்த்தேனே இல்லையோ, ஒரே தாவாகத் தாவி என் நெஞ்சிலே புகுந்து கொண்டான். அந்த உருவம் எதிர் வீட்டு வாசற்படியண்டைத் தானிருந்தது; ஆனால் நெஞ்சிலே சித்திரம் பதித்து விட்டது.”  இந்தச் சொற்றொடரை “வசன கவிதை” என்று ஏன் கூறக் கூடாது?  வாசகத் தோழர்கள் மேற்போக்காகக் கதையைக் படிக்கக் கூடாதென்பதற்காகச் சிலவற்றை எடுத்துக் கூறினேன். காகித விலையேற்றம் கையைப் பிடித்து நிறுத்துகிறது. கடைசியாக தான் கூறுவது ஒன்றே. எழுதியவர் பால் கொள்கை காரணமாகவோ, தனிப்பட்ட முறையிலே விரும்பு வெறுப்புகளிருந்தால் அவற்றையெல்லாம் ஒரு புறம் மூட்டை கட்டி வைத்து விட்டுப் படிக்கத் தொடங்குங்கள் - இது போன்ற பல கதைகளைத் தமிழருக்களிக்குமாறு மனமார வாழ்த்துங்கள்”  நான் இந்த முன்னுரையினை எழுதிய அந்தநாளில் அண்ணாவுக்கு அறிஞர் என்ற அடைமொழி இல்லை. அவர் நாடகாசிரியராகவும் வரவில்லை. நடிகராகவும் மேடையேறவில்லை. எழுச்சி மிக்க தலையங்கங்களையும் சில திறனாய்வுக் கலைக் கட்டுரைகளையும் தவிர அதிகமான கட்டுரைகளோ கதைகளோகூட எனக்குத் தெரிந்தவரையில் எழுதாத காலம் அது. இந் நிலையில் அவரை வருங்காலத் தமிழர் தலைவர் என்று எழுதினேன் நான். எப்படி எழுதினேன்? ஏன் எழுதினேன்? நானா எழுதினேன்? இல்லை. இல்லை. இறைவன் என்னை எழுத வைத்தான். ஆம், அதுவே உண்மை. தெய்வ வாக்குப் பலித்தது!                                              இரு பெரும் கலைஞர்கள்   ஒருநாள் பாலக்காட்டில் இராமாயணம் நடந்தது. கே. ஆர். இராமசாமி வழக்கம்போல் ஆஞ்சநேயராக நடித்தார். அருமையாக பாடினார். முற்பகுதிக் காட்சிகள் முடிந்தன. இனி ஆஞ்சநேயர் கடல் தாண்டி இலங்கைக்குச் செல்ல வேண்டும். அவ்வாறு தாண்டுவதற்கு அப்போதெல்லாம் வெறும் அட்டையில் செய்த அனுமாரை இழுப்பது வழக்கமில்லை இராமசாமியே மேலிருந்து தொங்கும் நான்கு வளையங்களில் கை கால்களை துழைத்துக்கொண்டு கடலைத் தாண்டுவார். பார்ப்பதற்குப் பிரமிப்பாக இருக்கும். அன்று இராமசாமி அங்கதன் ஜாம்பவான் முதலிய வானர வீரர்களிடம் விடைபெற்றுக் கொண்டு கடல் தாண்டப் புறப்பட்டார். “ராம ராம ராம சீதா” என்ற வானர வீரர்களின் ராம நாம கோஷம் ஒலித்துக் கொண்டிருந்தது. இராமசாமி உள்ளே வந்தார். குதிரை ஏணிமேல் ஏறித் தொங்கிக் கொண்டிருந்த நான்கு வளையங்களில் கைகளையும் கால்களையும் நுழைத்துப் பாய்ந்து செல்வது போல் ஒரு கையையும் காலையும் முன்னல் நீட்டிக்கொண்டு போஸ் கொடுத்தார். எதிர்ப்புறமிருந்து குறுக்கே கட்டப்பட்டிருந்த கம்பியை இழுத்தார்கள். கம்பிகள் மிகச்சிறியவை. சபையோர் கண்ணாக்குத் தெரியாது. ஆகையால் இராமசாமி பாய்ந்தபடியே கடலைத் தாண்டி எதிர்ப்புறம் செல்லும் போது ஒரே கரகோஷம். திரை விடப்பட்டது. மீண்டும் குறுக்குக்கம்பியை முன்னிருந்த இடத்திற்கே இழுத்தார்கள், கம்பி மேடையின் நடுவே வந்ததும் மேலே கட்டப் பட்டிருந்த குறுக்குக் கம்பி படாரென்று அறுந்து விட்டது. ஆஞ்சநேயர் அப்படியே கீழே விழுந்தார். எல்லோரும் பதறிப் போய் ஒடினோம். நல்ல வேலையாகக் கீழே வரிசையாகக் கட்டப் பட்டிருந்த கூர்மையான மரத் துண்டுகளோடு கூடிய அலைகளின் மேல் விழவில்லை. இரு அலைகளின் நடுவே விழுந்தார். குப்புற  விழுந்ததால் மார்பில் பலத்த அடி. அப்படியே தூக்கிப் போய் மின்சார விசிறியின் கீழே படுக்க வைத்தோம். சோடா கொடுக் கப்பட்டது. ஆஞ்சனேயரின் உடை ரோமம் போல் தோன்று வதற்காக அடுக்காகத் தைக்கப்பட்டு, மெத்தை போன்றமைக்கப் பட்டிருந்ததால். அபாயும் எதுவும் ஏற்படவில்லை. இரண்டொரு நிமிடங்களில் சமாளித்துக் கொண்டார். நாடகம் தொடர்ந்து நடைபெற்றது.  இளம் நடிகர் எஸ். வி. சுப்பையா  கலைமாமணியென இன்று நம்மால் போற்றப்பெறும் நடிகர் எஸ். வி. சுப்பையா அப்போது கம்பெனியில் இருந்தார். 1939 இறுதியில் திருச்சிராப்பள்ளியில் இருந்தபோதே அவர் எங்கள் குழுவில் சேர்ந்தார். நன்றாகப் பாடுவார். பல்வேறு நாடகங் களில் சிறிய வேடங்களைப் புனைந்து வந்தார். சிவலிலா மதுரை யில் தொடர்ந்து நடைபெற்றபோது, சிவபெருமானைக் கால் மாறி ஆடச்சொல்லும் அபிஷேகப் பாண்டியனாக நடித்தார். நடிகர்கள் ஏராளமாக இருந்ததால் பெரிய வேடங்களைத் தாங்கி நடப்பதற்குரிய வாய்ப்பு அப்போது அவருக்குக் கிடைக்கவில்லை. அன்று அவர் புனைந்த பாத்திரங்களிலே குறிப்பிடத்தக்கதாக இருந்தது கர்ணன். ஆம், மகாபாரதம் மாதக் கணக்கில் தொடர்ந்து நடைபெறும் நாடகமாகஇருந்தது. அதில் சுப்பையா கர்ணனாக நடித்தார், குந்தியும் கர்ணனும் சந்திக்கும் காட்சியில் மிக உருக்கமாக நடித்தார். சபையோரை மட்டுமல்ல. உள்ளிருந்த எங்களேயெல்லாங்கூடக் கண்கலங்க வைத்தார். அவரை மேலும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பினை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தோம்.  அடக்கம் நிறைந்த ஆர். எம். வீரப்பன்  இப்போது சத்யா மூவீசின் அதிபராக விருக்கும் ஆர். எம். வீரப்பன் அவர்கள் அப்போது எங்கள் நாடகக் குழுவில் இருந்தார். அடக்கமான இளைஞர். யாரோடும் வம்புக்குப் போக மாட்டார். சின்னச் சின்ன வேடங்கள் புனைவார். அவருடைய கையெழுத்து அந்தச் சிறு வயதிலேயே அழகாக இருந்தது. எனவே எங்கள் கணக்குப்பிள்ளை ஏ. டி. தர்மராஜூ ஆர்.எம்.வீரப்பனைக் கணக்குகள் எழுத நன்கு பயன்படுத்திக் கொண்டார். கணக்குப் பிள்ளையோடு அவர் எழுதிக் கொண்டிருப்பதை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். இந்தப் பையன் நல்ல நிர்வாகி யாக வருவான் போல் தோன்றுகிறது. என்று அன்றே கணக்குப் பிள்ளையிடம் கூறினேன். ஆர். எம். வீரப்பனுக்கும், எஸ். வி. சுப்பையாவுக்கும் மிகுந்த நட்பு. இருவரும் எப்போது பார்த்தாலும் நெற்றியில் திருநீற்றோடு தான் காட்சியளிப்பார்கள். சுப்பை யாவைவிடப் பெரியவர்கள் சிலர், என்னப்பா, நீதான் பண்டா ரமாப் போயிட்டே வீரப்பனையும் பண்டாரமாக்கிடா தேப்பா” என்று வேடிக்கையாகப் பேசுவார்கள்.  கே. ஆர். இராமசாமிக்கும், எஸ். வி சுப்பையாவுக்கும் எந்நேரமும் தகராறுகள். பிரண்டு இராமசாமிக்கும் இதில் பங்குண்டு. இதற்குக் குறிப்பான காரணம் எதுவும் சொல்ல இயலாது. நாடகக் கம்பெனிகளில் இதுபோன்ற சண்டைகளும், சமரசங்களும் சாதாரண நிகழ்ச்சிகள். இரண்டு நடிகர்கள் சண்டை போட்டுக் கொள்வார்கள். இறுதியில் சண்டை முற்றி ஒருவரைக் கம்பெனியிலிருந்து விலக்கப்படுவார்; விலகுவதற்குச் பூசல் வளர்ந்துவிடும். ஒருவர் விலக்கப்படுவார். விலக்குவதற்குக் காரணமாயிருந்த நடிகரே அவரைப் போய் வழியனுப்பி விட்டுக் கண்கலக்கதோடு திரும்புவார். இத்தகைய நிகழ்ச்சிகள் எத்தனை எத்தனையோ எங்கள் கம்பெனியில் நடைபெற்றுள்ளன.  இரு இராமசாமிகளும் ஒரே கட்சி கே.ஆர்.இராமசாமியும், பிரண்டு இராமசாமியும் கம்பெனியின் பழைய நடிகர்கள். இவர்களுக்குப் பெரியண்ணாவிடம் மிகுந்த செல்வாக்கு. சுப்பையா தன்னை ஏதேதோ கெட்ட வார்த்தைகள் சொல்லி ஏசிவிட்டதாக கே. ஆர். இராமசாமி பெரியண்ணாவிடம் புகார் செய்தார். பெரியண்ணா சுப்பையா வைக்கூப்பிட்டு விசாரித்தார். சுப்பையாவின் பதில் அடக்கமாக இல்லை. பெரியண்ணாவுக்குக் கோபம் மூண்டது.  “குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி  கணமேயுங் காத்தலரிது”  என்று வள்ளுவர் கூறயிருக்கிறாரல்லவா? இதற்கு இலக்கியமாக விளங்குபவர் பெரியண்ணா. அவ்வளவுதான், சுப்பையாவுக்கு நல்ல அடி. ஒவியர் தேவராஜய்யர். கணக்குப்பிள்ளை தர்மராஜு யார் யாரோ குறுக்கே வந்து தடுத்தார்கள். பயனில்லை. பலமாக அடித்த பிறகுதான் ஒய்ந்தார் அண்ணா. அப்போது இரவு மணி ஏழு. அன்று ஸ்ரீ கிருஷ்ண லீலா நாடகம். நான் கொட்டகையை அடுத்த ஒரு வீட்டில் குடியிருந்தேன். இரவு 8-30 க்குத் தியேட்டருக்கு வந்தேன். சுப்பையா என்னிடம் வந்தார். “என் மீது ஒரு குற்றமும் இல்லை. கறுப்பு இராமசாமியும், சிவப்பு இராமசாமியும் கோள் மூட்டியதால் பெரியண்ணாச்சி என்னை அநியாயமாக அடித்து விட்டார்” என்றார். அவர் உடம்பில் அடிபட்ட காயங்கள் இருந்தன. நான் அவருக்கு ஆறுதல் கூறினேன். இதே போன்று தம்பி பகவதி, எஸ். வி. சகஸ்ரநாமம் போன்றவர்களெல்லாம் கூட அடி வாங்கியவர்கள் தாம் என்று கூறி அவரைச் சமாதானப்படுத்த முயன்றேன். இரு இராமசாமிகளையும் பெரியண்ணாவிடம் புகார் கூறியதற்காகக் கடிந்து விட்டு வெளியே சென்றேன்.  நள்ளிரவில் சென்ற கலைஞர் சுப்பையா சோகமே உருவாக ஒருபுறம் உட்கார்ந்திருந்தார். இரவு மணி 9. இன்னும் அரைமணி நேரத்தில் நாடகம் தொடங்க வேண்டும். அன்று நாடகத்தில் சுப்பையாதான் வசு தேவர். அவரோ வேடம் புனையவில்லை. முதல் காட்சியிலேயே வசுதேவர் வரவேண்டும். இரண்டொருவர் சுப்பையாவிடம் போய் இன்னும் வேடம் புனையவில்லையா?’ என்று கேட்டார்கள். அவர் வேடம் புனைய மறுத்து விட்டார். சுப்பையா வசு தேவர் போட மறுக்கிறார் என்று சொல்லி எனக்கு ஆள் வந்தது. பகவதி அன்று கம்சன், கே. ஆர். இராமசாமியும், பகவதியும் மாறி மாறிப் போடுவார்கள். அன்று பகவதியின் முறை. பகவதி கம்சன் வேடத்தோடு வந்து, வேடம் புனையும் படியாகச் சுப்பையாவிடம் கூறினார் போல் இருக்கிறது. சுப்பையா அவரிடமும் மறுத்து விட்டார். ஒப்பனை அறையில் ஒரே ரகளே. சுப்பையா வேடம் புனைய மறுப்பதாகப் பெரியண்ணாவிடம் சொல்ல ஆள் போய் விட்டதாக அறிந்தேன். எனக்கும் தகவல் வந்தது. நான் வந்து சுப்பையாவிடம் எவ்வளவோ சொன்னேன். அவர் ஒரே பிடிவாதமாக வேடம் புனைய மறுத்து விட்டார். உடனே நான் கே. ஆர். இராமசாமியை வசுதேவர் போடச் சொல்லி விட்டு சுப்பையாவையும் அழைத்துக் கொண்டு அருகிலுள்ள என் விட்டிற்குச் சென்றேன். கிருஷ்ணலீலாவில் எனக்கு வேடம் இல்லையாதலால் நிறைய நேரம் கிடைத்தது. வேடம் புனையாததற்காகப் பெரியண்ணா மீண்டும் வந்து அடிப்பார் என்பதைச் சுப்பையா நன்றாக அறிவார். ஆனாலும் அவருக்கு அசட்டுப் பிடிவாதம் ஏற்பட்டிருந்தது. மேலும் அடிபடவும், வேடம் புனையாததன் விளைவுகளை ஏற்கவும் சுப்பையா சித்தமாக இருந்தார். நான் சுப்பையாவுக்கு அறிவுரைகள் கூறினேன். என்னத்தான் இருந்தாலும் வேடம் புனைய மறுத்தது தவறு என்பதை அவருக்கு உணர்த்தினேன். பெரியண்ணாவின் கோபத்தை நன்கு உணர்ந்தவன் நான். விடிந்தால் சுப்பையாவுக்கு என்ன நேருமோ என்று எனக்கு அச்சமாக இருந்தது. சுப்பையா மேற்கொண்டு கம்பெனியில் இருக்கவும் விரும்பவில்லை. இரவோடிரவாக அவரை ஊருக்கு அனுப்பி விடுவது நல்லது என எனக்குத் தோன்றியது. அவரும் என் யோசனையை ஏற்றார், கையிலிருந்த சிறு தொகையை அவரிடம் கொடுத்தேன். அன்றிரவே அவரைப் பாதுகாப்பாக. ஊருக்கு அனுப்பிவைத்தேன். எல்லோரும் சுப்பையா தானாகவே ஒடி விட்டதாக எண்ணினார்கள். நானே அவரை அனுப்பினேன் என்பது பெரியண்ணாவுக்குக் கூடத் தெரியாது.  கலைமாமணி கே. பி. கேசவன்  ஒருநாள் பழம் பெரும் கலைஞர் கே. பி. கேசவன் மனோகரா நாடகம் பார்க்க வந்திருந்தார். நாடகம் முடிந்ததும் உள்ளே வந்து என்னைப் பாராட்டினார். தன் இல்லத்திற்கு ஒருநாள் விருந்துண்ண வர வேண்டுமென்று அழைத்தார். அழைப்பினை ஏற்று ஒலவக்கோட்டிலுள்ள அவரது இல்லத்திற்குத் தம்பி பகவதி, சிவதாணு, கே. ஆர். இராமசாமி ஆகியோருடன் நானும் சென்றிருந்தேன். மலர்ந்த முகத்துடன் எங்களே வரவேற்றார் கேசவன். கம்பெனியின் பழங்கால நிகழ்ச்சிகளைப் பற்றி வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். விருந்துண்ட பின்னும் பேச்சு முடியவில்லை. நாடகம் இருந்ததால் விடைபெற்றுக் கொண்டு திரும்பினோம்.  கே. பி. கேசவன் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் சிறந்த நடிகர்களிலே ஒருவர். நன்றாகப் பாடவும் திறமை வாய்ந்தவர். அவரது ஆற்றல்மிக்க நடிப்பினை ஏற்கனவே நான் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். 1934இல் நாங்கள் விருத்தாசலத்தில் இருந்த போது மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியார் கூடலூர் முத்தையா தியேட்டரில் பம்பாய் மெயில் நாடகம் நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது எங்கள் கம்பெனியிலும் பம்பாய் மெயில் முக்கிய நாடகமாக இருந்ததால், கே. பி. கேசவனின் பம்பாய் மெயில் நாடகத்தைப் பார்க்க ஆசைப்பட்டேன். எங்களுக்கு நாடகம் இல்லாத நாளில் இதற்காகவே கூடலூர் சென்றேன். பம்பாய் மெயில் நாடகம் பார்த்தேன். நாடகத்தில் கே. பி. கேசவனின் அபாரமான நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. நாடகம் முடிந்ததும் அவர் வருகைக்காகக் காத்திருந்து நேரில் சந்தித்தேன். மனமாரப் பாராட்டி விட்டு விருத்தாசலம் திரும்பினேன். கே. பி. கேசவனின் பம்பாய் மெயில் நடிப்பைப் பார்த்தது எனக்குமிகவும் பயனுடையதாக இருந்தது. அதன் பிறகு நான் நடித்த பம்பாய் மெயிலில் புதிய மெருகுடன் நடித்தாக எல்லோரும் பேசிக் கொண்டார்கள்.  திரைப்பட உலகில் கே. பி. கேசவன் நடித்த பதி பக்தியும் இரு சகோதரர்களும் இன்னும் கூட என் நினைவிலிருந்து அகல வில்லை. தமிழ் நாடக உலகை விட்டு அவர் விலகிய வெகு காலத்திற்குப் பிறகுகூட, தமிழ்நாடு சங்கீத நாடக சங்கத்தின் சிறந்த நாடக நடிகருக்குரிய விருதினை அவருக்கு வழங்கவேண்டுமென்று, நான் ஆர்வத்தோடு பரிந்துரைத்தேன். கே.பி. கேசவன் சென்னை க்கு வந்து சங்கத்தின் விருதினைப் பெற்றுக் கொண்டபோது, அப்படியே அவரைக் கட்டித் தழுவிக் கொண்டேன்.  கலைவாணர் கடிதம் சென்னையிலிருந்து கலைவாணர் கிருஷ்ணன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். கே. ஆர். இராமசாமியை சிவசக்தி என்னும் படத்தில் கதாநாயகனுக நடிக்க ஏற்பாடு செ ய்திருப்பதாகவும் அவரை அனுப்புவதால் கம்பெனிக்குத் தொந்தரவு எதுவும் இல்லை யென்றால் பெரியண்ணாவிடம் கூறி அனுப்பிவைக்க வேண்டு, மென்றும் பெரியவரின் ஒப்புதல் இருந்தால் இதனுள் இருக்கும் கடிதத்தை இராமசாமியிடம் கொடுக்கலாம் என்றும் எழுதப் பெற்றிருந்தது. உள்ளே இராமசாமிக்கு ஒரு கடிதமும் இருந்தது. நான் மிகுந்த மகிழ்ச்சியோடு கடிதத்தைப் பெரியண்ணாவிடம் காட்டினேன். என். எஸ். கே. இராமசாமிக்கே நேராக எழுதாமல் எனக்குக் கடிதம் எழுதியதற்காக அவரைப் பாராட்டினார் அண்ணா. “இராமாசாமி தாராளமாகப் போய் நடிக்கட்டும்; அவன் திரைப்படத்தில் நடித்தால் நமக்குத்தானே பெருமை! எப்பொழுது தேவையோ அப்பொழுது அனுப்பலாமென்று நான் சொன்னதாகக் கிருஷ்ணனுக்கு எழுது” என்றார். அண்ணா சொன்னபடியே கலைவாணருக்கு எழுதினேன். கடித்ததையும் இராமசாமியிடம் கொடுத்தேன். இராமசாமிக்கு ஒரே மகிழ்ச்சி. அண்ணாவின் அனுமதியோடு கலைவாணருக்குக் கடிதம் எழுதினார். நாலைந்து நாட்களில் உடனே புறப்படும்படியாகக் கலைவாணரிடமிருந்து தந்தி வந்தது. அன்றிரவே இராமசாமி சென்னைக்குப் புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டது. எல்லோருடைய அன்புக்கும் பாத்திரமாக இருந்த கே. ஆர். இராமசாமி கண்கலக்கத்துடன் விடைபெற்றுச் சென்னைக்கு சென்றார்.  மயங்கி விழுந்தேன் அப்போது மயில் ராவணன் தொடர்ச்சியாக நடந்து வந்தது. நான் அதில் இராமர் போடுவது வழக்கம். சிறிய வேடம் அது. இராமசாமி ஆஞ்சநேயராக நடிப்பார். அவர் போன அன்று நானே ஆஞ்சநேயராக நடிக்க நேர்ந்தது. அதுவரை மயில் ராவணன், இராமாயணம் ஆகிய நாடகங்களில் நான் ஆஞ்சநேயர் பாத்திரத்தை ஏற்றதே இல்லை. அதுமட்டுமல்ல; சுக்ரீவனாகவோ, வாலியாகவோ கூட நடித்ததில்லை. குரங்குகளுக்குரிய உடையை அன்றுதான் முதலாவதாகப் புனைந்தேன். ஏப்ரல் மாதம் அது. உள்ளே ஒரே புழுக்கம். ரோமம் போன்று அடுக்கடுக்காக வைத்துத் தைக்கப்பட்ட அதிகக் கனமாக உடையைப் போட்டேன். தலையில் குல்லாவையும் வைத்துக் கட்டினேன். அதன்மேல் கிரீடத்தை வைத்தேன். உடலுக்குள் காற்று புகுவதற்கு வழியே இல்லை. வியர்வை கொட்டியது. துடைக்கவும் இயலவில்லை. இரண்டு காட்சிகளில் நடித்தேன். மின்சார வெளிச்சம் மேடையில் மேலும் வெப்பத்தை உண்டாக்கியது. ஏதோ தலை சுற்றுவது போலிருந்தது. அவ்வளவுதான். மயங்கி விழுந்து விட் டேன். காரணம் எல்லோருக்கும் புரிந்தது. என் உடைகளைத் தளர்த்தி மின்விசிறியின் கீழே படுக்கவைத்தார்கள். ஐந்து நிமிடங் களுக்குப் பிறகுதான் நினைவு வந்தது. எப்படியோ ஒருவகையாக நடித்து நாடகத்தை முடித்தேன். மறுநாள் இந்தச் செய்திகளை யெல்லாம் இராமசாமிக்கு விவரமாக எழுதினேன். உன்னுடைய அருமையும் பெருமையும் இப்போது முன்னைவிட அதிகமாகப் புரிகிறது. உனக்கு அடுத்தபடியாக உன்னுடைய வேடங்களைப்புனைய தகுதியுடையவனுக இருந்த சுப்பையா கம்பெனியை விட்டு விலகு வதற்கு நீயே காரணமாக இருந்தாய். இப்போது நீயும் விலகிக் கொண்டாய். நான்தான் உன் வேடத்தைப் போட்டுக் கொண்டு அவஸ்தைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தேன். ஏறத்தாழ ஐந்து மாத காலம் பாலக்காட்டில் நாடகம் நடத்திவிட்டு ஈரோட்டுக்குப் பயணமானோம்.                              குடும்ப விளக்கு!   ஈரோடு கான்சாகிப் சேக்தாவுத் அவர்களின் சென்ட்ரல் நாடக அரங்கில் 1-6-43இல் நாடகம் தொடங்கியது. மதுரை சிவலீலா வெற்றிக்குப்பின் நாங்கள் சென்ற நகரங்களிலெல்லாம் சிவலிலாவையே முதல் நாடகமாக ஆரம்பித்தோம். ஈரோட்டில் தொடர்ந்து ஐம்பது நாட்கள் சிவலீலா நடைபெற்றது. இப்போ தெல்லாம் சென்னையில் புதிய நாடகங்கள் நடந்தால், அது 25 முறை நடைபெற்று வெள்ளி விழாக் காணுவதே வியப்பாக இருக்கிறது. அப்படி வெள்ளி விழாக்காணும் நாடகம் கூடத் தொடர்ந்து ஒரே அரங்கில் நடைபெறுவதில்லை. நாடகம் தொடங்கிப் பல மாதங்களுக்குப் பிறகுதான், வெள்ளிவிழா, பொன்விழா எல்லாம் நடை பெறுகின்றது. 1940 ஆம் ஆண்டிலும் அதற்கு முன்பும்கூட, இது போன்ற விழாக்கள் எல்லாம் தொழில்முறை நாடக சபைகளுக்குச் சாதாரண நிகழ்ச்சிகளாக இருந்தன.  ஈரோட்டில் சிவலிலாவுக்குப் பின் கிருஷ்ணலீலா, மகா பாரதம், ராஜாபர்த்ருஹரி, கந்தவீலா, ஒளவையார், மேனகா ஆகிய நாடகங்கள் ஒவ்வொன்றும் மாதக்கணக்கில் நடந்தன. திரைப்படமாக வந்து ஓடிக்கொண்டிருந்த ‘குமாஸ்தாவின் பெண்’ நாடகம் கூட ஈரோட்டில் 25 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. வசூலும் நல்ல முறையில் இருந்தது. பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒவ்வொரு நாடகத்தையும் பலமுறை பார்த்து மகிழ்ந்தார். பார்த்த மறுநாள் அதைப்பற்றித் திறனாய்வு செய்யவும் தவறுவதில்லை,  பட்டக்காரர் பங்களா இந்தமுறை எங்கள் குடும்பத்தினருக்கு வீடு கிடைப்பது கஷ்டமாக இருந்தது. கம்பெனிக்கு மட்டும் நகருக்குள் ஒரு பெரிய வீடு கிடைத்தது. அங்கேயே குடும்பத்தினரும் தற்காலிகமாகத் தங்கி யிருந்தார்கள்.கம்பெனிசாமான்கள் தியேட்டரில்வந்து இறங்கின. பட்டக்காரர் பங்களா தியேட்டரின் அருகே இருந்ததால் பல லாரிகளில் வந்து இறங்கிய எங்கள் நாடகசாமான்களைப் பார்க்கப் பட்டக்காரர் நல்ல தம்பி சர்க்கரை மன்றாடியாரும், கைவல்ய சாமியாரும் வந்தார்கள். வீடு கிடைக்காத நிலையைப்பற்றி அவரிடம் பேசிக் கொண்டிருந்தோம். ஏன் நம்முடைய பங்களா காலியாக தான் இருக்கிறது. எங்களுக்குச் சில அறைகள்தான் வேண்டும். பின்புறம் முழுதும் நீங்களே தங்கிக்கொள்ளலாம். வேறு இடம் பார்த்துச் சிரமப்படவேண்டாம்” என்று பரிவோடு கூறினார் பட்டக்காரர். எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. அன்றே மீனாட்சி அக்காள், பகவதி தம்பதிகள், சிவதாணு தம்பதிகள் எல்லோரும் பட்டக்காரர் பங்களாவில் குடியேறினார். எனக்கும் அங்கேயே தனியாக ஒர் அறை ஒதுக்கித் தர ஏற்பாடு செய்தார் பட்டக்காரர். நாடகங்களைப் பார்ப்பதற்காகப் பட்டக்காரர் குடும்பத்தார் அடிக்கடி பங்களாவில் வந்து தங்குவார்கள். அவர்களுக்கும் எங்கள் குடும்பத்தாருக்கும் நெருங்கிய நட்பு ஏற் பட்டது.  கைவல்ய சாமியார் பட்டக்காரர் நாடகம் பார்க்க வரும்போதெல்லாம் கை வல்ய சாமியாரும் வருவார். சாமியார் சிறந்த ஆராய்ச்சியாளர். உலாகானுபவம் நிறைந்தவர். காவி கட்டாத வெள்ளை வேட்டிச் சாமியார் இவர். இவரது பகுத்தறிவுக் கட்டுரைகளைப் பெரியாரின் ‘குடியரசு’ வார இதழில் தொடர்ந்து படித்தவன் நான். மேலட்டையைப் புரட்டியதும் முதல் பக்கத்தில் கைவல்ய சாமியாரின் கட்டுரை தான் காணப்படும். சாமியாரிடம் மிகுந்த அன்பு செலுத்தி வந்தார் பட்டக்காரர். பங்களாவின் முகப்பிலுள்ள ஹாலில் நான் சாமியாரைச் சந்திப்பேன். சிரிக்கச் சிரிக்கப் பேசுவார் இவர். எல்லோரும் இவரை “சாமி” என்றே அழைப்பார்கள். பட்டக்காரரின் இரண்டாவது மகன் திரு. அர்ச்சுனன் முற்போக்கான இளைஞர். சுயமரியாதைக் கொள்கைகளைப் பின் பற்றுபவர். பெரியாரிடம் மிகுந்த ஈடுபாடுடையவர். கைவல்ய சாமியாரின் உபதேசத்தால்தான் இளையவர் அர்ச்சுனன் கெட்டுப் போய் விட்டார் என்று பங்களாவிலுள்ள ஊழியர்கள் பேசிக் கொண்டார்கள். சாமியாரே இதை என்னிடம் கூறினார். “பட்டக்காரரின் இளைய பையனை நான் தான் கெடுத்து விட்டேன் என்று. எல்லோரும் முணுமுணுக்கிறார்கள். என்மீது வீண்பழி” என்றார். சாமியார் கூறியது முற்றிலும் உண்மையென்பது எனக்குத் தெரியும். அர்ச்சுனன் அவர்கள் துடிப்பான இளைஞர். அவர் இளமைப் பருவத்திலேயே காலமானது தமிழகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு என்றே சொல்ல வேண்டும். கைவல்ய சாமியாரின் மீது இளையவரைக் கெடுத்து விட்டதாகக் குறை சொல்லப் பட்டாலும், அவருக்குரிய மரியாதையினைச் செலுத்த யாரும் தவற வில்லை. சாமியாரோடு பேசிக்கொண்டிருப்பதில் எனக்குத் தனி இன்பம். அவ்வளவு சுவையாகப் பேசுவார் அவர். பட்டக் காரரின் மூத்த மகன் நல்லசேனதிபதி சர்க்கரை மன்றாடியார் நல்ல கலையுணர்வுடையவர். சிறந்த நாடக ரசிகர். அவர் ஒருநாள் சிவ லீலா நாடகத்திற்குத் தலைமை தாங்கினார். எனக்கு ஒரு தங்கச் சங்கிலி பரிசளித்துப் பாராட்டினார்.  அவசரத் தந்தி நாடகம் தொடர்ந்து நடந்து வந்தது. ஒருநாள் சேலத்திலிருந்து அவசரத் தந்தி கிடைத்தது. அதில் என் மனைவி மீனாட்சியின் நிலை அபாயம் என்று கண்டிருந்தது. உடனே காரில் சேலம் சென்றேன். மனைவியைப் பார்த்தேன், என்னைக் கண்டவுடன் அழுதாள். என் கண்களும் கலங்கின. அழகே வடிவாக இருந்த அவள் மெலிந்து நலிந்துபோன நிலையில் படுக்கையில் கிடந்தாள். மைத்துனார் சுப்பிரமணியம் தங்கைக்கு காசநோய் என்றும் பெருந்துறை சானிட்டோரியம் கொண்டுபோய் உடனடியாகச் சிகிச்சை செய்யும்படி டாக்டர் கூறியதாகவும் உருக்கத்தோடு சொன்னார். நான் டாக்டரைச் சந்தித்தேன். மனைவியின் உடல் நிலைப்பற்றி விபரமாக அறிந்தேன். உடனே ஈரோட்டிலுள்ள பெரியண்ணாவுக்குத் தந்திமூலம் தகவல் கொடுத்தேன். உடனடியாகப் பெருந்துறை சானிட்டோரியத்தில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மறுநாளே மனைவியைப் பெருந்துறைக்குக் கொண்டுபோய் சானிட்டோரியத்தில் சேர்த்தேன். தனியறையில் வைத்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தேன். மருத்துவமனை மேலதிகாரி விசுவநாதனும், டாக்டர் முத்துசாமியும் மிகுந்த  பரிவுடன் என் மனைவிக்கு சிகிச்சை அளித்தார்கள். மனைவியுடன் அவரது தமக்கையார் மட்டும் உடனிருந்தார்கள்.  ஈரோடும் பெருந்துறையும் காசநோயின் கொடுமையைப் பற்றி அறிய அதற்குமுன் எனக்கு வாய்ப்பு ஏற்படவில்லை! மனைவியை சானிட்டோரியத்தில் சேர்த்த பிறகுதான் அதைப்பற்றி நன்கு தெரிந்து கொண்டேன். கரூர் பண்டித இராமசர்மாவுக்கு மனைவியின் நிலையைப்பற்றி விவரமாக எழுதினேன். உடனே பதில் கிடைத்தது. “தங்கள் மனைவிக்குக் காசநோய் என்பது எனக்கு முன்பே தெரியும். அதனால்தான் அவர்களை ஊருக்கு அனுப்பி வைக்கும்படி கூறினேன். இதனால் தங்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதனால் தங்களுக்குச் சில மருந்துகள் கொடுத்தேன். இப்போது தங்களைப் பொறுத்தவரை எதுவும் இல்லை. தங்கள் மனைவிக்குக் குணம் உண்டாக இறைவனப் பிராத்திக்கிறேன்” என்று எழுதியிருந்தார். சர்மா இதை முன்பே என்னிடம் கூறியிருந்தால் சில மாதங்களுக்கு முன்பே நோயின் ஆரம்ப நிலையிலேயே தக்கபடி சிகிச்சை செய்திருக்கலாமே என்று தோன்றியது.  இப்போது மனைவியின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. அவள் தொடர்ந்து இருமுவதைக் கேட்கும்போது என் உள்ள மெல்லாம் உருகும். அவளுடைய தாங்க முடியாத வேதனையை எண்ணி நான் துன்பப்படுவேன். அருகிலிருந்து ஆறுதல் கூறுவேன். ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிவரை மனைவியோடிருப்பேன். அதற்கு மேல் ஈரோட்டுக்கு வருவேன். நாடகத்தில் எனது கடமையை நிறைவேற்றுவேன். நாடகம் முடிந்ததும் உடனே காரில் பெருந்துறை சென்று மனைவிக்குத் துணையாக அவள் அறைக்கு வெளியேயுள்ள தாழ்வாரத்தில் படுத்துக் கொள்வேன். இப்படியே பகல் முழுவதும் பெருந்துறையிலும், இரவு பாதி நேரம் ஈரோட்டிலுமாக ஏறத்தாழ மூன்று மாத காலம் அலைந்தேன். இந்த நிலையிலுங்கூட நான் ஈரோட்டிலிருந்து நாடகம் முடிந்து திரும்பும் வரை மனைவி உறங்குவதில்லையென்று அவள் தமக்கையார் கூறினார். அவள் உள்ளத்தில் என்னென்ன எண்ணங்கள் அலமோதிக் கொண்டிருந்தனவோ ; இறைவனே அறிவான்!   பெரியாரின் பெருங்குணம் 1943 அக்டோபர் 30ஆம் நாள். குடும்ப விளக்கு சிறிது சிறிதாக மங்கத் தொடங்கியது. டாக்டர் வந்து பார்த்தார். கண் கலக்கத்தோடு நின்ற எனக்கு ஆறுதல் கூறினார். அதிகமாகப் போனல் இன்னும் ஒரு வார காலந்தான்... நீங்கள் விரும்பினால் இப்பொழுதே ஈரோட்டுக்குக் கொண்டு போகலாம். இனிநாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை” என்றார். இது நான் முன்னரே எதிர் பார்த்ததுதான். எனவே புதிதாக அதிர்ச்சி எதுவும் ஏற்பட வில்லை. குடும்பத்தார் அனைவரும் வந்து பார்த்தார்கள். பெரியண்ணாவிடம் கலந்து பேசினேன். மனைவியை ஈரோட்டுக்கே கொண்டு வந்து விடலாம் என முடிவு செய்தோம். ஆனால் புதிய சிக்கல் ஏற்பட்டது. காச நோயால் பீடிக்கப்பட்டுக் காலனின் வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் என்காதல் மனையாளை ஈரோட்டில் எங்கே படுக்க வைப்பது? இன்னும் இரண்டு நாளில் இறந்து விடுவாள் என்ற நிலையில் பட்டக்காரர் பங்களாவில் படுக்க வைப்பது எனக்கே சரியாகத் தோன்றவில்லை. தனி வீடு தேடி அலைந்தேன். நிலமையை அறிந்த எவரும் எங்களுக்கு வீடு கொடுக்க முன்வரவில்லை. பிறந்தவர் யாவரும் இறப்பது உறுதி என்பது எல்லோருக்கும் தெரியும். என்றாலும் வீடுகொடுக்க அஞ்சினார்கள். அப்போது ஒளவையார் நாடக நூல் பெரியாரின் தமிழன் அச்சகத்தில் அச்சாகி முடிந்திருந்தது. அதற்குப் பதிப்புரை எழுத வேண்டியதுதான் பாக்கி. சிந்தனையைச்சிறிது இலக்கியத் துறையில் செலுத்த எண்ணித் தமிழன் அச்சகத்திற்குள் நுழைந்தேன். துணையாசிரியர் புலவர் செல்வராஜ்அவர்களிடம் நிலைமையைச் சொல்லிக் கொண்டிருந்தேன். உள்ளிருந்து ஈ. வெ. ரா. பெரியார் வந்தார். “என்ன மிகவும் சோர்ந்திருக்கிறீர்களே; மனைவி எப்படி யிருக்கிறார்?” என்று அன்போடு விசாரித்தார். டாக்டர்கள் கைவிட்டதையும் மனைவியை ஈரோட்டுக்குக் கொண்டுவர இருப்பதையும் கூறினேன். பெரியார் மிகவும் கவலையோடு ஆறுதல் கூறினார். “மனைவியை இங்கு கொண்டு வந்து படுக்க வைக்க வீடு கிடைக்காமல் திண்டாடுகிறேன்” என்றேன். உடனே பெரியார் அவசர அவசரமாக ஒரு சாவியை என்னிடம் கொடுத்தார். பக்கத்தில் நம்முடைய புதிய வீடு இருக்கிறது. சுயமரியாதை சங்கத்திற்காக வாங்கியது, சுண்ணாம்பு அடித்துச் சுத்தமாக வைத்திருக்கிறது. உடனே அங்கே கொண்டு வந்து படுக்க வைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றார். நான் சற்றும் இதை எதிர்பார்க்கவில்லை. பெரியாருக்கு நன்றி கூறிவிட்டுப் பெருந்துறைக்கு விரைந்தேன். அன்று மாலையே என் மனைவி ஈரோட்டுக்குக் கொண்டுவரப்பட்டாள்.  விளக்கு அணைந்தது சேலத்திற்குத் தகவல் அறிவிக்கப்பட்டது. உறவினார்கள் வந்தனார், இளமைக் கனவுகள் நிறைவேற்றாமல் ஏக்கத்தோடு என்னை விட்டுப்போகும் இல்லாள் மீனாட்சிக்காக எல்லோரும் கண்ணிர் விட்டனார்.  நவம்பர் முதல்நாள் மாலை உற்றார் உறவினார் சூழ, உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் மீனாட்சி படுக்கையிலே கிடந்தாள். “அவளை அமைதியாக இருக்க விடுங்கள்” என்று எல்லோரிடமும் சொல்லிவிட்டு வெளியே வந்தேன். அருகிலுள்ள தமிழன் அச்சகத்திற்குள் நுழைந்தேன். எழுதாமல் விட்டிருக்கும் ஒளவை நாடக நூலின் பதிப்புரையினை எழுதத் தொடங்கினேன். சிந்தனையை ஒருமுகப்படுத்திக் கொண்டு ஒருவாறு எழுதி முடித்தேன். யாரோ வந்தார்கள். மனைவி என்னைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னார்கள். விரைந்து சென்றேன். மனைவியின் அருகில் அமர்ந்தேன். தனியே பேச விரும்பியதால் எல்லோரும் சற்று விலகி நின்றார்கள்.  “இன்னும் இரண்டு நாட்களில் நான் இறந்துவிடப் போகிறேன் என்று டாக்டர் சொல்லிவிட்டாரா? இதற்காகத்தான் என்னை ஈரோட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறீர்களா?” என்று கேட்டாள். அவள் கேள்வி என் நெஞ்சை உருக்கியது. யாரோ அவளிடம் சொல்லியிருக்கிறார்கள். அறிவிருக்கும் நிலையில் நல்ல நினைவோடு படுத்திருக்கும் அவள் தாங்க இயலாத இந்த வேதனையை எவ்வாறு தாங்கிக் கொள்ள முடியும்? “இன்னும் இரண்டு நாட்களில் நான் இறந்துவிடப் போகிறேன்” என்ற நினைவே மரண வேதனையைத் தருவதல்லவா? இந்த வேதனையை அவள் எப்படித்தான் தாங்கினாளோ இறைவனுக்குத்தான் தெரியும். அவள் கேள்விக்கு நான் என்ன பதில் கூறுவது? மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு “அப்படியொன்றும் இல்லை; நீ அமைதியாக உறங்கு” என்று சொன்னேன்...  மறுநாள் 2-11-1943 அன்று மாலை ஆறு மணியளவில் என் குடும்ப விளக்கு அணைந்தது. மீனாட்சி என்னை விட்டுப் போய் விட்டாள். மறுநாள் முற்பகல் 11 மணிக்கு, காவிரிக் கரையில் என் அருமை மனைவியின் சடலத்திற்கு நானே எரியூட்டினேன்.  அடுத்த வாரம் திராவிடநாடு இதழில் இருண்ட வீடு என்னும் தலைப்பில் அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு தலையங்கம் தீட்டி எனக்கு ஆறுதல் கூறி யிருந்தார்.                                                          அண்ணாவின் சந்திரோதயம்   பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய முதல் நாடகம் சந்திரோதயம். அஃது காஞ்சிபுரத்தில் ஒத்திகைப்போல் ஒருமுறை நடைபெற்றது, ஈரோட்டில் பெரியார் அவர்கள் முன்னிலையில் தான் அந்நாடகத்தின் உண்மையான அரங்கேற்றம் நடைபெறப் போகிறது என்று அண்ணாவே என்னிடம் கூறினார். அண்ணாவிடம் , பற்று கொண்டிருந்த எங்கள் நடிகர்களுக்கெல்லாம் ஒரே ஆனந்தம். நாடகத்தில் அண்ணாவே முக்கிய வேடம் தாங்கி நடிக்கப் போகிறார். என்பதை அறிந்ததும் எங்களுக்கெல்லாம் எல்லையற்ற மகிழ்ச்சி. நாடகத் தேதியை எதிர்பார்த்துக் காத்தி திருந்தோம். 19-11-43இல் சந்திரோதயம் நடைபெறப் போவதாக விளம்பரம் செய்யப் பெற்றது  தேதியும் நெருங்கியது. சந்திரோதயம் நாடகத்திற்கு முதல் நாள் எங்கள் சம்பூர்ண இராமாயணம் நடைபெற்றது. காலை 6 மணிவரை நடைபெறும் நாடகமல்லவா? நாடகம் முடிந்ததும் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு, காலை எட்டு மணிக்கே சாப்பாட்டை முடித்துக் கொண்டு எங்கள் நடிகர்கள் அஃனவரும் நன்றாக உறங்குவது வழக்கம். ஆனால், அன்று மேடையில் சந்திரோதயத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றதால், எங்களில் பெரும்பாலோர் உறங்கவில்லே. இரவு நாடகத்திற்காக நாடக மேடையில் தேவையான காட்சிகள்-நடிகர்களுக்குரிய உடைகள் யாவற்றையும் ஒழுங்குபடுத்துவதில் பெரும் பங்கு கொண்டோம்.  பெரியார் முன்னிலையில் சந்திரோதயம் நடிகர்களுக்கு ஒப்பனை செய்வதில் நாங்கள் எல்லோரும் பங்கு கொண்டோம். சி. வி. இராஜகோபால் எம். எல். சி.,வி. எம். அண்ணாமலை எம். எல். ஏ, ஈழத்து அடிகள் முதலியோர் அன்று நாடகத்தில் நடித்ததாக நினைவிருக்கிறது. மற்றவர் களைப்பற்றி எனக்குச் சரியாக நினைவில்லை. நாடகம் நன்றா யிருந்தது, அண்ணாவின் ஜமீந்தார் நடிப்பு அற்புதமாக அமைந்தது. நாடகப் பேராசிரியர் பம்பல் சம்மந்த முதலியாரைப் போலவே அண்ணா நாடகாசிரியராகவும் நாடகத்தில் முக்கியப்பொறுப்பேற்றது எங்களுக்கெல்லாம் பெருமை அளிப்பதாக இருத்தது. கோவை விஞ்ஞான மேதை ஜி. டி, நாயுடு அவர்கள் அன்று தலைமை தாங்கியதாக நினைக்கிறேன். பெரியார், நாடகத்தைப் பிரமாதமாகப் பாராட்டினார். என்னையும் சில வார்த்தைகள் பேசும்படியாகக் கேட்டுக் கொண்டார். பெரியார் அவர்களின் ஆணைப்படி நானும் பேசினேன். இப்படியே தொடர்ந்து சில நாடகங்களில் அண்ணா அவர்கள் நடித்துவிட்டால் பரம்பரை நடிகர்களான எங்களையெல்லாம் மிஞ்சி விடுவார் போல் தோன்றுகிறது. நாடகத்தையே தொழிலாகக் கொண்ட நாங்கள் பல நாட்கள் பயிற்சி பெற்று, ஒத்திகைகள் நடத்தி அதன் பிறகு நாடகங்களை நடிக்கிறோம். அத்தகைய வாய்ப்பும் வசதியும் இல்லாமல், பல்வேறு துறைகளில் பணிபுரிந்துவரும் திராவிட நடிகர் கழகத்தினர் இன்று நடிப்பதைப் பார்த்தால், எங்களை போல் நிரந்தரமாகவே இவர்கள் நாடகத்துறையில் ஈடுபடுவர்களானால், நாங்களெல்லாம் இந்தத் தொழிலையே விட்டுவிட வேண்டியதாக இருக்குமென நினைக்கிறேன்” என்று கூறினேன். அவ்வளவு அருமையாகவும் இயற்கை யாகவும் நடித்தார் அறிஞர் அண்ணா.  என் காலைத் தூக்கி மேலே வை நாடகத்தில் ஒரு கட்டம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. அண்ணா ஜமீந்தராக வந்து ஜமீந்தாரிசத்தின் ஆணவம், சோம்பேறித்தனம், மற்றவர்களை அலட்சியமாகக் கருதும் மனப் போக்கு அத்தனையையும் அப்படியே அப்பட்டமாகக் காட்டினார். எதிரே நின்ற வேலையாளிடம், “அடே, என் காலைத் தூக்கி மேலே வை” என்று சொல்லி, காலைத் தூக்குவதற்குக் கூடப் பண மூட்டைகளுக்குப் பணியாட்கள் வேண்டுமென்ற உண்மையை மிக அழகாகக் காட்டினார். சாய்மான நாற்காலியில் சாய்ந்து கொண்டு எதிரேயிருந்த முக்காலியைச் சுட்டிக் காட்டி அவர் வெளிப்படுத்திய அந்த மெய்ப்பாடு பிரமாதமாக இருந்தது.  எல்லோரும் பாராட்டிப் பேசிய பிறகு நன்றி கூற வந்த அண்ணா எங்களைப் பாராட்டினார். முத்தமிழ்க்கலா வித்துவ ரத்தின டி. கே. எஸ். சகோதரர்களின் நாடக அரங்கில், அவர்களுடைய அற்புதமான காட்சிகளோடு நடிக்க எங்களுக்குக் கிடைத்த அரிய வாய்ப்பினை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம், நான் நன்றாக நடித்ததாகப் பாராட்டுப் பெறுவதற்குரிய வகையில் ஏதாவது நடித்திருந்தால் அதற்கெல்லாம் டி.கே. எஸ். சகோதரர்களின் நடிப்பைத் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பார்த்து வந்ததே காரணமாகும் என்பதை மிகுந்த நன்றியுடன் தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன் என்று கூறினார் .  அவருடைய அந்த நன்றியுரை எங்களுக்குப் பாராட்டாக அமைந்ததோடு அறிஞர் அண்ணா அவர்கள் எங்கள் பால் வைத்துள்ள அன்புக்கு எடுத்துக் காட்டாகவும் விளங்கியது.  நாடகம் கேட்டேன் சந்திரோதயம் முடிந்த மறுநாள் நாங்கள் அண்ணாவிடம் உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது நான் மிகுந்த ஆர்வத்தோடு கேட்டேன்.  ‘சந்திரோதயம்’ போன்ற அப்பட்டமான பிரசார நாடகங்களை நாங்கள் நடிக்க இயலாது. எங்களைப் போன்றவர்கள் நடிக்க இயலாத கருத்துக்கள் இந்த நாடகத்தில் இருக்கின்றன. எனவே, பொதுவான சமுதாய சீர்த்திருத்தக் கருத்துக்களை வைத்து ஒரு நாடகம் எழுதித்தாருங்கள்; நடிக்கிறோம்” என்றேன். விரைவில் எழுதித் தருவதாக வாக்களித்தார் அண்ணா. ஆனால் அந்த அரிய வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை. நடிப்பிசைப் புலவர் கே. ஆர். இராமசாமிக்குக் கிடைத்தது. அவற்றைப் பின்னல் கூறுவேன். இரு குழுவினருக்கும் பாராட்டு  அன்று மாலை 20-11-48 இல் காஞ்சி திராவிட நடிகர் கழகத்தார்க்கும் எங்களின் ஸ்ரீ பால சண்முகானந்த சபையார்க்கும் கோவை மாவட்டத் திராவிடக் கழகத்தின் சார்பில் ஒரு தேநீர் விருந் தும் பாராட்டும் நடைபெற்றன. இருகுழுவினரும் கலந்து கொண்டனார். பெரியார், பெருமாள் முதலியார் எம். ஏ.எல். டி. பழைய  கோட்டை அர்ச்சுனன் முதலியோர் பாராட்டிப் பேசினார். நான் நன்றி கூறுகையில்,  “இராமாயணம், சிவலீலா, கிருஷ்ணலீலா, கந்தலீலா, மகாபாரதம் முதலிய புராண இதிகாச நாடகங்களையே பெரும் பாலும் நடித்து வரும் எங்கள் குழுவுக்கும், நேற்று சந்திரோதயம் என்னும் ஒர் அருமையான சீர்திருத்த நாடகத்தை நடித்துப் பெருமை பெற்றுள்ள அண்ணா அவர்களின் திராவிட நடிகர் குழுவுக்கும் சேர்த்து இந்தப் பாராட்டை நடத்தியது, கோவை மாவட்டத் திராவிடக் கழகத்தின் பெருந்தன்மைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்றது. ஆனால் நாங்கள் இந்தப் பாராட்டுக்கு தகுதியுடையவர்கள் அல்லர் என்பதை மிகப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினேன்.  எனக்கு அடுத்தபடியாக நன்றி கூற வந்த அறிஞர் அண்ணா அவர்கள் என் பேச்சை மறுத்தார்.  தோழர் டி. கே. ஷண்முகம், தாம் இந்த பாராட்டுக்குத் தகுதியுடையவர் அல்ல என்று கருதினார். அது அவருடைய அடக்கத்தைக் காட்டுகிறது. அவர் கூறிய நாடகங்களுக்காக மட்டும் இந்தப் பாராட்டினை வழங்கவில்லை. அன்றும் இன்றும் அவர்கள் நடத்தி வரும் குமாஸ்தாவின் பெண், வித்தியாசாகரர், பதிபக்தி, பம்பாய் மெயில், மேனகா, தேசபக்தி போன்ற சமுதாயச் சீர்திருத்த நாடகங்களுக்காகத் தான் பெரியார் அவர்கள் ஷண்முகம் குழுவினரைப் பாராட்டுகிறார். இனியும் பாராட்டுவார். எங்களைப்போல் முழுதும் சீர்திருத்தப் பிரசாரக் குழுவாக டி. கே. எஸ். குழு இருக்க வேண்டுமென்று நாங்கள் எதிர்பார்க்க வில்லை யென்பதை கழகத்தின் சார்பில் நான் சொல்லுகிறேன். அவர்களுடைய ஒளவையார் நாடகத்தில் புராணக் கற்பனைகள் சில இருந்தாலும் தமிழுணர்வினை ஊட்டும் சிறந்த நாடகமாக அது அமைந்திருப்பதை நாம் மறந்துவிடுவதற்கில்லை” என்று கூறிவிட்டுப் பெரியாரைப் பார்த்தார். பெரியார் அவர்கள் சிரித்துக்கொண்டே அதனை வரவேற்பது போல் தலையை அசைத்தார். அன்று அண்ணா அவர்கள் பேசிய அழகிய பேச்சு இன்னும் பசுமையாக என் நெஞ்சத்தில் நிலைத்திருக்கிறது.      முதல் நாடகக் கலை மாநாடு   “எல்லோரும் மாநாடுகள் கூட்டுகிறார்களே; நாடகக்கலை வளர்ச்சிக்காக நீங்கள் ஏன் ஒரு தனி மாநாடு கூட்டக்கூடாது?” என்றார் எங்கள் அருமை நண்பர் மதுரை கருப்பையா. எங்களுக்கும் இந்த எண்ணமுண்டு. என்றாலும் நாள்தோறும் நாடகங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஒருமாநாட்டின் பொறுப்பினை ஏற்று நடத்துவது மிகவும் சிரமமானது என்று கருதினுேம். மதுரை கருப்பையா பிடிவாதக்காரர். தேசீய மாநாடுகள் சிலவற்றை நடத்திப்பழக்கப் பட்டவர். 1941இல் மதுரையில் நாங்கள் இருந்த போது எங்கள் அரங்கிலேயே ஒரு மாநாட்டைக் கூட்டி அதில் என்னையும் பங்குபெறச் செய்தவர். நகைச்சுவை நடிகர் டி. என் சிவதாணு, நண்பர் கருப்பையாவின் கருத்தினை ஆதரித்தார். கருப்பையாவுடன் தானும் பொறுப்பேற்றுக் கொள்வதாகச் சொன்னார். சிவதாணுவும் கருப்பையாவும் செயலாளர்களாக இருந்து பணிபுரிய ஆர்வத்தோடு முன் வந்தார்கள். செயலாற்றுவதற்கு இருவர் சித்தமாக இருந்ததால் நானும் உற்சாகத்துடன் ஒப்புதல் அளித்தேன். பெரியண்ணாவிடமும் அனுமதி பெற்றேன். ஈரோடு நகரப் பிரமுகர்களும், நகரசபையாரும் ஏனைய அதிகாரிகளும் எங்களோடு ஒத்துழைப்பதாக உறுதி அளித்தார்கள். மாநாட்டுக்குரிய வேலைகளைத் தொடங்க சிவதாணு, கருப்பையா இருவருக்கும் அனுமதி அளிக்கப் பட்டது.  வரவேற்புக் குழுவினர் மாநாட்டுச் செயலாளர்கள் இருவரும் சுறுசுறுப்பாகப் பணி புரிந்தார்கள். ஒருவாரக் காலத்திற்குள் வரவேற்புக் குழு அமைத்தார்கள். குழுவினார் நகரின் முக்கிய பிரமுகர்களாகவும், நாடகக் கலை வளர்ச்சியில் ஆர்வமுடையவர்களாகவும், எல்லோருடைய நம்பிக்கைக்குப் பாத்திர முடையவர்களாகவும் இருந்தார்கள்.  வரவேற்புக் குழுவினார் தலைவர்: பொருளாளர்;  திரு. ஆர். கே. வெங்கடசாமி நாயக்கர் திரு எஸ். மீனாட்சிசுந்தர (நகரசபைத் தலைவர், ஈரோடு) முதலியார் பி. ஏ. எல். டி.  செயலாளர்கள் திரு டி. என், சிவதானு (நகைச்சுவை நடிகர் ஸ்ரீ பாலஷண்முகானந்த சபா  திரு எம். கருப்பையா (தேசபக்தர்)  நிருவாக உறுப்பினார்கள் திரு கான்சாகிப் ஷேக் தாவுதுசாய்பு, ஈரோடு  “ நல்ல சேனாபதி சர்க்கரை மன்றாடியார், பழையக் கோட்டை  “ எம். சிக்கைய நாயக்கர், ஈரோடு  “ ஈ. எம். அண்ணாமலைப்பிள்ளை பி. ஏ. பி. எல். ஈரோடு  “ வி. வி. சி. ஆர். முருகேச முதலியார், ஈரோடு  “ கே. என். பழனிச்சாமிக் கவுண்டர், நகரசபைத் தலைவர் திருப்பூர்  “ ஈ. வே. கிருஷ்ணசாமி நாயக்கர், ஈரோடு  “ எஸ். கிருஷ்ணசாமி முதலியார், ஈரோடு  “ எம். எஸ். முத்துக் கருப்பஞ் செட்டியார், ஈரோடு  “ என். சி. இராஜகோபால், ஆடிட்டர், ஈரோடு  “ டி.கே.சண்முகம் ஸ்ரீ பால ஷண்முகா னந்தசபா  குழுவினரின் ஏற்பாடுகள் வரவேற்புக் குழுவினர் கூடி நன்கு விவாதித்து இரண்டு வார காலத்திற்குள் மாநாட்டுத் தலைவரையும் பேச்சாளர்களையும் முடிவு செய்தனார். காலை மாலை இரு வேளைகளிலும் நிகழ்ச்சிகளை அமைத்துக் கொள்வதென்றும் மாநாட்டன்று இரவு, ஒளவையார் நாடகத்தை நடத்திக் கொடுக்கும்படி டி. கே. எஸ். சகோதரர்களைக் கேட்டுக் கொள்வதென்றும் ராவ்பகதூர் சம்பந்த, முதலியார், எம். என். எம். பாவலர், எம். கே. தியாகராஜ பாகவதர், டி. கே. ஷண்முகம் ஆகியோருக்குப் பட்டங்கள் வழங்கிப் பாராட்டுவதென்றும், மாநாட்டுக்குக் கட்டணம் வைத்து நடத்தவேண்டுமென்றும் ஒருமனதாக முடிவெடுத்தனார்.  குழுவினரின் முடிவுப்படி சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடிதங்கள் எழுதியும், நேரில் சந்தித்தும் ஒப்புதல்கள் பெறப் பட்டன. 1944 பிப்ரவரி 11ஆம் தேதி ஈரோடு சென்ரல் தியேட்டரில் மாநாடு சிறப்பாக நடைபெறுமென விளம்பரம் செய்யப்பெற்றது.  நிகழ்ச்சிகளின் பட்டியல் தொழில்முறை சபைகள், பயில்முறை சபைகள் என்ற வேறு பாடின்றி எல்லோருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்போது தமிழ்நாட்டிலிருந்த பெரும்பாலான நாடக சபைகளின் பிரதிநிதிகள் மாநாட்டின் பேச்சாளர்களாகக் கலந்து கொண்டார்கள். இலங்கைத் தமிழரின் பிரதிநிதியாக ஏ. கே. இராமலிங்கம் என்பவர் மாநாட்டில் பங்குகொண்டார். முற்போக்கான கொள்கைகளைக் கொண்ட சீர்திருத்தவாதிகளும் தம் கருத்துக்களை வெளிப்படையாக எடுத்துச்சொல்லி மாநாட்டைச் சிறப்பித்தனார். காலை-மாலை நிகழச்சிகள் பின் வருமாறு ஒழுங்கு செய்யப் பெற்றன.    காலை நிகழ்ச்சிகள் -------------------------------- ----- ------------------------------------- கொடியேற்று விழா ... ராவ்பகதூர் சம்பந்த முதலியார் திறப்பு விழா ... எம். கே. தியாகராஜ பாகவதர் வரவேற்புரை ... ஆர். கே. வேங்கடசாமி தலைமைப் பேருரை ... சர் ஆர். கே. சண்முகம் கே. சி. ஐ. ஈ. சங்கரதாசர் படத்திறப்பு ... எம். என். எம். பாவலர் கந்தசாமி முதலியார் படத்திறப்பு ... டி. கே. ஷண்முகம் -------------------------------- ----- -------------------------------------     மாலை நிகழ்ச்சிகள் +---------------------------+---+-------------------------------+ | நாடகமும் அதன் பயனும் | … | நவாப் டி.எஸ். இராஜமாணிக்கம் | | | | (ஸ்ரீ தேவி பால வினேத சங்கீத | | | | சபா ) | +---------------------------+---+-------------------------------+ | இலக்கியமும் சம்பிரதாயமும் | … | சி. ஆர். மயிலேறு எம். ஏ. | | | | (பேராசிரியர் அண்ணாமலைப் | | | | பல்கலைக்கழகம்) | +---------------------------+---+-------------------------------+ | நாடகத்தில் பெண்கள் | … | பி.எஸ். சிவபாக்கியம் | | | | (ஸ்பெஷல் நாடக நடிகை, மதுரை) | +---------------------------+---+-------------------------------+ | நாடகமும் சினிமாவும் | … | நகைச்சுவையரசு | | | | என். எஸ். கிருஷ்ணன் | +---------------------------+---+-------------------------------+ | இன்றைய நாடகம் | … | ஏ. ஆர். அருணாசலம்  | | | | (ஸ்ரீராம பாலகான வினேத சபா) | +---------------------------+---+-------------------------------+ | கலையின் நிலைமை | … | சி. என். அண்ணாதுரை எம். ஏ. | | | | (திராவிட நடிகர் | | | | கழகம்-காஞ்சீபுரம்) | +---------------------------+---+-------------------------------+ | நடிகர் வாழ்க்கை | … | கே. டி. சுந்தானம் | | | | (ஸ்ரீ மங்கள பால கான சபா) | +---------------------------+---+-------------------------------+ | நாடகக் கலை | … | கி. ஆ. பெ. விசுவநாதம் | | | | (திருச்சி நகர அமைச்சூர் சபை) | +---------------------------+---+-------------------------------+ | நடிகர்களின் கடமை | … | எம். எம். சிதம்பரநாதன் | | | | (ஸ்பெஷல் நாடக நடிகர்-மதுரை) | +---------------------------+---+-------------------------------+ | நாடகக்கலை வளர்ச்சி | … | பூவாளுர் அ. பொன்னம்பலனார் | | | | (சீர்திருத்தக் | | | | கழகம்-பூவாளுர்) | +---------------------------+---+-------------------------------+ | நடிப்புக் கலையால் இன்பம் | … | ஏ. கே. இராமலிங்கம் | | | | (இலங்கை நாடகசபைகளின் | | | | பிரதிநிதி) | +---------------------------+---+-------------------------------+ | சீர்திருத்த நாடகங்கள் | … | எஸ். ஆர். சுப்பரமணியம் | | | | (நாடக ரசிகர்-திருப்பூர்) | +---------------------------+---+-------------------------------+ | ஒழுக்கம் வேண்டும் | … | என். தண்டபாணிப்பிள்ளை | | | | (நாடக ரசிகர்-சிதம்பரம்) | +---------------------------+---+-------------------------------+ | நல்ல நாடகங்கள் | … | எஸ். மீனாட்சி சுந்தர | | | | முதலியார் பி. ஏ., எல். டி  | | | | (நாடக ரசிகர். ஈரோடு) | +---------------------------+---+-------------------------------+ | நாடும் நாடகமும் | … | எம். வி. மணி (நடிகர், சென்னை) | +---------------------------+---+-------------------------------+ | நன்றியுரை | … | டி. என். சிவதானு | +---------------------------+---+-------------------------------+   28ஆண்டுகளுக்கு முன் இவ்வாறு பல்வேறு கொள்கை யாளர்களை ஒருங்கு சேர்த்து, கட்டணமும் வைத்து ஒரு நாடக மாநாட்டினை நடத்த முன் வந்தது வியப்புக்குரிய செய்தி யல்லவா? அதுவும் ஒரு நாடக சபையின் பின்னணியிலேயே இதனை நடத்துவதென்பது தனிச் சிறப்பு வாய்ந்ததல்லவா?  முத்தமிழ் நுகர்வோர் சங்கம் மாநாட்டின் தேதியும் நிகழ்ச்சிகளின் பட்டியலும் விளம்பரப் படுத்தப்பட்ட உடனேயே ஈரோட்டில் புதிதாக ஒரு சங்கம் தோன்றியது இதன் பெயர் முத்தமிழ் நுகர்வோர் சங்கம். இச்சங்கத்தைப் பற்றிய செய்திகள் விடுதலை, குடியரசு இதழ்களில் வெளிவந்தன. நாடகக்கலை மாநாட்டினைப்பற்றி வாரந்தோறும் பெரியாரின் குடியரசு வார இதழில் 1, 2, 3, என்று எண்கள் போட்டுத் தலையங்கம் எழுதப் பட்டது. நாடககலை மாநாட்டை நாங்கள் ஏதோ உள்நோக்கத்தோடு நடத்துவதாகப் பெரியாரிடம் யாரோ சொல்லியிருக்க வேண்டுமென நினைக்கிறேன். அதனால் அவர் மாநாட்டை அழுத்தமாகக் கண்டித்து எழுதினார். மாநாடுக்குக் தலைமை தாங்க வரும் ஆர். கே. சண்முகம் செட்டியாருக்குக் கறுப்புக் கொடி பிடிக்கவேண்டுமென்று முத்தமிழ் நுகர்வோர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாக ஈரோட்டிலுள்ள எங்கள் நண்பர்களில் சிலர் பேசிக் கொணடார்கள். இந்தச் செய்தி எனக்குக் கவலையைத் தந்தது; நான் பெரியார் அவர்களைச் சந்தித்துப் பேச விரும்பினேன். அவர் ஊரில் இல்லையென்றும் சேலத்தில் இருக்கிறாரென்றும் தகவல் கிடைத்தது. கடிதம் எழுதினேன்.  மாநாட்டுத் தேதி நெருங்க நெருங்க எனக்கு மிகுந்த கவலை ஏற்பட்டது. மாநாட்டுத் தலைவரை ரயில் நிலையத்தில் வரவேற்கும்போது கறுப்புக்கொடி காட்டச் சிலர் முயல்வதின் காரணத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. மாநாட்டுக்கு ஒருவாரத்திற்கு முன்பே பெரியார் சேலம் போய்விட்டதால் அவரைச் சந்தித்துப் பேசவும் வாய்ப்பு கிட்டவில்லை. மாநாட்டுக்கு முதல் நாள் காலை அறிஞர் அண்ணா காஞ்சியிலிருந்து வந்தார். அவரைச் சந்தித்துப் பேசினேன். பெரியார் கோபத்தைப் பற்றியும், முத்தமிழ் நுகர்வோர் சங்கம் கறுப்புக்கொடி பிடிக்க இருப்பது பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தேன். அண்ணா “ஒரு குழப்பமும் நேராது; மாநாடு ஒழுங்காக நடைபெறும்” என்று உறுதி கூறினார்.  நிருவாகக் குழுக் கூட்டம் மாநாடு நடைபெறுவதற்கு முந்திய நாள் மாலை நிருவாக குழுக் கூட்டம் சென்ட்ரல் தியேட்டரில் நடைபெற்றது. நூற்றுக்கு மேற்பட்ட தீர்மானங்கள் வந்திருந்தன. அவற்றில் முத் தமிழ் நுகர்வோர் சங்கத்தார் புராண-இதிகாச நாடகங்களைக் கண்டித்துச் சில தீர்மானங்களை அனுப்பியிருந்தனர். டி. கே. எஸ். சகோதரர்கள் சார்பில் நாங்களும் சில தீர்மானங்களை இம் மாநாடு நிறைவேற்ற வேண்டுமெனக் கோரி அச்சிட்டு அனுப்பி யிருந்தோம். நீண்டநேரம் விவாதித்த பின் குழப்பம் நேருவதைத் தவிர்ப்பதர்காக, எந்தத் தீர்மானமும் மாநாட்டில் நிறைவேற்ற வேண்டியதில்லையென்றும் நூற்றுக்கு மேற்பட்ட தீர்மானங்கள் வந்திருப்பதால் அவற்றையெல்லாம் நன்கு பரிசீலனை செய்து அடுத்த மாநாட்டில் வைக்க வேண்டுமென்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டி. கே. எஸ். சகோதரர்கள் அனுப்பி யுள்ள தீர்மானங்களை நிறைவேற்றினல் ஆக்க பூர்வமாகச் செயலாற்ற நல்ல வாய்ப்பு கிட்டுமென்று நான் எவ்வளவோ வற்புறுத்தினேன். ஏற்கனவே குழப்பம், கறுப்புக்கொடி, கலகம் இவற்றைப்பற்றிப் பரவலாக நகர் முழுவதும் பேச்சு பரவி யிருந்ததால் நிருவாகக் குழுவினார் எந்தத் தீர்மானமும் நிறை வேற்ற இயலாதென உறுதியாக மறுத்து விட்டனார்.  மாநாட்டைச் சிறப்புற நடத்துவதில் எங்களுக்குத் தவறான உள்நோக்கம் எதுவும் இல்லையென்பதையும் நாடகக் கலை வளர்ச்சி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயலாற்ற முனைந்தோம் என்பதனையும் பின்னே வரும்.எங்கள் தீர்மானங்கள் எடுத்துக் காட்டும்.  தமிழ்நாடு நாடகக் கலை அபிவிருத்தி மாகாட்டிற்கு டி. கே. எஸ். சகோதரர்கள் அனுப்பியுள்ள தீர்மானங்கள்  1. நாடகக் கலை வளர்ச்சிக்கு உருப்படியான தொண்டாற்றத் “தமிழ்நாடு நாடகக்கலை வளர்ச்சிக் கழகம்” என்ற பெய ரால் கழகம் ஒன்று நிறுவ வேண்டுமென்றும், கழகத்தின் நேக்கங்களும் நிபந்தனைகளும் கிழ்க்கண்டவாறு இருக்கவேண்டு மென்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.  நோக்கங்கள் (அ) தமிழர்களின் முன்னேற்றத்தையும், தமிழ்மொழி வளர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டு சிறந்த நாடகங்களை இயற்ற எழுத்தாளர்களைத் துண்டுவதும், அவ்வாறு எழுதப்பட்ட நாடகங்களுக்குப் பரிசுகள் வழங்குவதும், அந்நாடகங்களைக் கழகத்தின் சார்பிலேயே புத்தகமாக வெளியிடுவதும்.  (ஆ) கழகத்தினரால் ஒப்புக்கொள்ளப்பட்ட நாடகங்களை நடிக்கும் சபையாருக்கும் சிறந்த நடிகருக்கும் பரிசுகள் வழங்குவது.  (இ) தற்போது தமிழகத்தில் நிரந்தரமாகத் தொழில் நடத்தும் நாடக சபைகளைக் கொண்டு மேற்படி நாடகங்களை நடிக்கத் துரண்டுவது.  (ஈ) ஒவ்வொரு ஊரிலும் நாடகக் கழகங்கள் அமைத்து, நாடக வருவாயை எதிர்பாராத அறிஞர்களை அங்கத் தினார்களாக்கி, மேற்குறித்த நாடகங்களை நடிக்கச் செய்வது.  (உ) கழகத்தின் சார்பில் மாநாடுகள் நாடெங்கும் கூட்டி நாடகக் கலையின் மேன்மை பற்றிப் பிரசாரம் செய்வது.  (ஊ) நாடகக் கலை வளர்ச்சிக்கென்று பத்திரிக்கைகள் தோற்றுவிப்பது.  (எ) நகரசபைகளின் நிர்வாகத்திலுள்ள ஒவ்வொரு நகரங் களிலும் கலை வளர்ச்சிக்காகவும், பொது உபயோகத் திற்காகவும் ஒவ்வொரு தியேட்டர் (திருச்சி நகரசபை ஹாலைப் போல) அமைக்கும்படி நகரசபைகளைத் தூண்டுவது.  (ஏ) கழகத்தின் சார்பில் நிதி திரட்டி, தமிழ்நாட்டின் முக்கிய  நகரங்களில் நாடகசாலைகள் நிறுவுவது.  நிபந்தனைகள் (க) மேற்கண்ட நோக்கங்களை ஒப்புக்கொண்ட எவரும் இக் கழகத்தில் அங்கத்தினராக இருக்க உரிமையுடை யவராவர்.  (ங) அங்கத்தினார்கள் வருடச் சந்தா ரூ. 6 - செலுத்த வேண்டும்.  (ச) நிருவாகிகள் அங்கத்தினார்களின் பெயரால் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.  2. அடுத்த மாநாடு கழகத்தின் பேரால் கூட்டப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை கீழ்க்கண்டவர்களை இக்கழகத்தின் நிருவாகிகளாக இருந்து செயலாற்ற வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.  தலைவர்; சர் பி. டி. இராஜன் அவர்கள்  உபதலைவர்; ராவ் பகதூர் பி. சம்பந்த முதலியார் அவர்கள்  நிர்வாக அங்கத்தினார்கள்; நாடக கேசரி நவாப் டி. எஸ். இராஜமாணிக்கம் பிள்ளை  நாடக ஆசிரியர் திரு. டி. பி. பொன்னுசாமிப்பிள்ளை  (ஸ்ரீ மங்கள பாலகான சபா)  திரு வயிரம் அரு. அருளுச்சலம் செட்டியார்  (ஸ்ரீ ராமபாலகான சபா)  திருமதி கே. பி. சுந்தராம்பாள்  இசை நாடக ஒளி எம். கே. தியாகராஜ பாகவதர்  நகைச்சுவையரசு என். எஸ் கிருஷ்ணன்  திரு பி. எஸ். வேலுநாயர்  ராவ்சாகிப் வி. ஐ. குமராசாமிப்பிள்ளை (கரந்தைத் தமிழ்ச் சங்கம்)  திரு ஏ. கார்மேகக் கோன் (மதுரைத் தமிழ்ச் சங்கம்)  “ சி. ஆர். மயிலேறு எம். ஏ. (அண்ணாமலைப் பல்கலைக் கழகம்)  “ சி. என். அண்ணாதுரை எம். ஏ.  “ கி. ஆ. பெ. விசுவநாதம்  பேராசிரியர் வ. ரா. (சென்னை)  கான்சாகிப் ஜனப் கே. ஏ. ஷேக்தாவுத் சாகிப்  காரியதரிசி: டி. கே. ஷண்முகம்  பொக்கிஷதார்: டி. கே. பகவதி  3. இக்கழகத்தின் போஷகர்களாகக் கீழ்க்கண்ட பெரியார்களை இம்மாநாடு தேர்ந்தெடுக்கிறது.  4. 1. ராஜா சர். மு. அண்ணாமலைச் செட்டியார் அவர்கள்  2. சர். ஆர். கே. சண்முகம் செட்டியார் “  3. இராமநாதபுரம் சேதுபதி மன்னார் “  4. வள்ளல் அழகப்பச் செட்டியார் “  ஈரோடு 11 – 2– 44 இத் தீர்மானம் மாநாட்டில் ஒரு மனதாக நிறைவேறி யிருக்குமானல் அதன்படி செயலாற்ற என்னைப் பொறுத்த வரையில் சித்தமாக இருந்தேன். இதற்குப் பெரியண்ணாவின் அனுமதியையும் பெற்றிருந்தேன். ஆனால் அன்று எங்களுக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்த பெரியவர்கள், எங்களைப் புரிந்து கொள்ளாமல் செயலாற்றியதால் அந்த அருமையான வாய்ப்பினைத் தமிழகம் இழந்தது என்றுதான் சொல்லவேண்டும்.  இரண்டாவதாக மகாநாட்டுத் தலைவரை மறுநாள் காலை ரயில் நிலையத்திலிருந்து அவர் தங்குமிடமாகிய கான்சாகிப் இல்லம் வரை மேளதாளத்தோடு ஊர்வலமாக அழைத்துவர ஏற். பாடு செய்யப்பட்டிருந்தது. இதுபற்றி ஆர். கே. சண்முகம் அவர்களே ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதற்கிணங்க ஊர்வலம் எதுவும் தேவையில்லையென்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், ஊர்வலத்தில் கறுப்புக் கொடி பிடிக்கத் திட்டமிட்டிருந்த நண்பர்கள் அண்ணா அவர்களின் அறிவுரைக்கிணங்க அந்த எண்ணத்தைக் கைவிட்டனார் என்பதைப் பின்னல் அறிந்தோம்.  மாநாடு தொடங்கியது மறுநாள் 11, 2- 44 காலை 9- 30- மணிக்கு தமிழ் மாகாண நாடகக் கலை அபிவிருத்தி மாநாடு ஈரோடு சென்ட்ரல் நாடக அரங்கில் துவங்கியது. அதிகாலை ஈரோடு வந்து சேர்ந்த மாநாட்டுத் தலைவர் ஆர். கே. சண்முகம் செட்டியார் கான்சாகிப் ஷேக்தாவுத் சாகிப் இல்லத்தில் தங்கியிருந்தார். அவரை அரங்கிற்கு அழைத்து வந்தார்கள். தலைவரைப் பிரேரேபிக்கும் போது அதை எதிர்த்துக் குழப்பம் செய்யத் திட்டமிட்டுச் சிலர் டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதனை யறிந்த ஆர். கே. சண்முகம், “தலைவர் பெயரைத்தான் விளம்பரப்படுத்தியிருக்கிறீர்களே, பின் ஏன் பிரேரணை, ஆமோதிப்பு, எல்லாம் வேண்டும்? அது ஒன்றும் தேவையில்லை. தலைவர் பிரேரணை இல்லாமலையே மாநாட்டைத் தொடங்கி விடலாம்” என்றார். நிர்வாகிகளுக்கும் அதுவே சரியெனப் பட்டது.  மேடையில் முன்திரை விடப்பட்டிருந்தது. அது துாக்கப் பட்டதும் மேலேயிருந்து வரிசையாகப் பூச்சரங்களைத் தொங்க விட்டு மேடை முழுதும் மறைத்திருந்தோம். கொடியேற்று விழாச் சொற்பொழிவினைப் பூச்சரங்களுக்கு முன்புறமே நிகழ்த்த ஏற்பாடு செய்திருந்தார்கள். திறப்புரையின்போது ஒருகயிற்றைப் பிடித்துத் திறப்பாளர் இழுத்ததும் மேடையை மறைத்துத் தொங்கவிடப் பெற்றுள்ள பூச்சரங்கள் அப்படியே மேலுயர்ந்து விலகி மேடையை மறைக்காமல் இருபுறமும் அழகாகத் தொங்கி கொண்டிருக்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்தார்கள் எங்கள் காட்சி அமைப்பாளர்கள்.  முதலில்; ‘நாட்டினுக் கணிகலம் நாடகக் கலேயே’ என்னும் கவி ஆறுமுகனார் பாடலே அப்போது எங்கள் கம்பெனி முக்கிய நடிகரும் சிறந்த பாடகருமான எஸ். சி. கிருஷ்ணன்இனிமையாகப் பாடினார். ராவ்பகதுரர் சம்பந்தமுதலியார் அவர்கள் நாடக அரங்கின் சின்னம் வரையப் பெற்ற மஞ்சள் வண்ண நாடகக் கலைக் கொடியினை அரங்கிற்கு வெளியே உயர்த்தி வைத்துவிட்டு மேடையில் வந்து சொற்பொழிவாற்றினார். அச்சொற்பொழிவின் சுருக்கம் இது:  ‘தமிழ் நாடகாபிமானிகளே, தமிழ் அன்பர்களே, உங்கள் அனுமதியின்மீது நான் இப்போது வெளியில் ஏற்றி வைத்த தமிழ் நாடகக் கலைக் கொடியானது என்றும் அழியாப் புகழுடன் தமிழ் நாடகத்தின் பெருமையைத் தமிழ் பேசப்படும் நாடுகளிலெல்லாம் பிரகாசிக்குமாறு செய்ய எல்லாம் வல்ல இறைவன் இணையடியினைப் போற்றுகிறேன்.  இந்திய நாட்டில் எங்கும் இதுவரை நாடகத்திற்குத் தனியாக மகாநாடு நடைபெற்றதில்லை. அந்தப் பெருமை தமிழ் மக்களாகிய நமக்குத்தான் கிடைத்திருக்கிறது. இந்தப் பாக்கியத் தையும் பெருமையையும் எனக்குக் கொடுத்த இந்நாடக மகா நாட்டைக் கூட்டிய சங்கத்தார்க்கு என் மனமாாந்த வந்தனத்தைச் செலுத்துகிறேன்.  53 வருடங்களுக்கு முன் நான் தமிழ் நாடகங்களில் ஆட ஆரம்பித்தபோது தமிழ் நாடகம் இருந்த நிலைமையையும், அது தற்காலம் இருக்கும் நிலையையும் கருதுமிடத்து நான் மிகவும் சந்தோஷப்பட வேண்டியவகை இருக்கிறேன். நாடகமாடுவதென்றால் மிகவும் இழிவான ஒரு தொழிலாக எல்லோராலும் கருதப் பட்டு வந்தது. என்னப் பற்றிய ஒரு உதாரணத்தைக் கூறினாலே போதும். நான் நாடகமாடுவதைக் கேள்விப்பட்ட என் நெருங்கிய பந்து ஒருவர், ‘என்ன சம்பந்தம் கூத்தாடியாகப் போய்விட்டானாமே’ என்று கூறினராம். அக்காலத்தில் கூத்தாடி என்பது ஒரு வசை மொழியாகக் கருதப்பட்டது. அக்காலமெல்லாம் போய், பிறகு நாடகம் ஆடுவதில் இழிவில்லை; கற்றவர்களும் அப்படிச் செய்ய லாம், எல்லா வர்ணத்தாரும் செய்யலாம்; குலஸ்திரீகளும் அதில் பங்கெடுத்துக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டதற்காகத் தமிழ் நாடக அபிமானிகள் யாவரும் சந்தோஷப்பட வேண்டும்.  நான் இந்த நாடக மகாநாட்டிற்குப் புறப்பட்டபோது சென்னையிலிருக்கும் எனது நண்பர் ஒருவர் “தமிழ் நாடகம் தான் சினிமா வந்தபிறகு செத்துப் போய்விட்டதே. இதற்காக நீங்கள் ஈரோட்டுகுப் போவானேன்?’ என்று கேட்டார். இதற்குப் பதில் சொல்ல வேண்டியது என் கடமையாகும். தமிழ் நாடகக் கலையானது அழிந்து போகும் என்று ஒரு நாடகாபிமானியும் பயப்பட வேண்டியதில்லை. கிராமபோன் ரிக்கார்டுகள் வந்த பிறகும் அவற்றைப் பாடிய சங்கீத வித்துவான்களை நேரில் கேட்க நாம் அதிகமாக விரும்புவதில்லையா? பேசும் படத்தில் நடித்த நடிகர்களை நாம் நேரில் பார்க்க ஆசைப்படுவதில்லையா? இந்த உணர்வு இருக்கும் வரை நாடகம் ஒரு நாளும் அழியாது என்று நான் உறுதியாக கூறுவேன்.”  பம்மல் முதலியார் அவர்கள் இவ்வாறு பேசி முடித்ததும் எம். கே. தியாகராஜ பாகவதர் மாநாட்டைத் திறந்து வைத்தார். அவர் சூத்திரக் கயிற்றை இழுத்ததும் மகேந்திர ஜாலம்போல் மேடையை மறைத்துக் கொண்டிருந்த பூச்சரங்கள் அப்படியே இருபுறமும் உயர்ந்து விலகி மேடையை அலங்கரித்துக் கொண்டு நின்றது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. மாநாட்டுக்கு வந்திருந்த ரசிகப் பெருமக்கள் பெருத்த கைதட்டலுடன் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். மேடையின் நடுவே அமர்ந்திருந்த தலைவர் ஆர்.கே. சண்முகம் “இதுவும் ஒரு நாடகம்போலிருக்கிறதே!” என்றார். திறப்புரை நிகழ்த்திய திரு. தியாகராஜ பாகவதர் தமது பேச்சில் முக்கியமாகக் குறிப்பிட்ட கருத்து இது.  “பெரியோர்களே, தாய்மார்களே!”  நம் தமிழ் நாடகத்தில் எடுத்ததற்கெல்லாம் பாட்டாகவே பாடி விடுகிறார்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இது ஒரளவு குறைய வேண்டியதுதான். என்றாலும், ஒரேயடியாய்ப் பாட்டுக்களைக் குறைத்து விட்டால் பொதுமக்களின் ஆதரவு கிடைக்குமென்று நான் நம்பவில்லை. ஏனென்றால் நாடக மேடை யில் பாட்டு அதிகமாக ஏற்பட்டது இன்று நேற்றல்ல. முற் காலத்தில் நம் நாடகம் முழுவதுமே பாட்டாகதான் இருந்தது என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. வரவர அது குறைந்து தான் வந்து கொண்டிருக்கிறது. ஒரேயடியாகப் பாட்டைத் தள்ளிவிடக் கூடாது. இயலையும், இசையையும் தன்னுள் கொண்டதாகவே இருக்க வேண்டும் நாடகம். கதைக்குத் தகுந்த முறையில் பாடல்கள் அமைக்க வேண்டும் “.  பாகவதர் பேச்சுக்குப் பின் ஈரோடு நகரசபைத் தலைவர் திரு. ஆர். கே. வேங்கடசாமி எல்லோரையும் வரவேற்றார் . அவரது வரவேற்புரையில் ஒரு பகுதி,  “அன்பர்களே, இவ்வளவு காலமும் இல்லாமல் இப்பொழுது ஈரோட்டிலுள்ள சில பெரிய மனிதர்களுக்கு நாடகக் கலை அபிவிருத்தியைப் பற்றி என்ன அக்கரை வந்தது? இதில் உள்ளூர ஏதேனும் சூழ்ச்சி இருக்குமோவெனச் சிலர் நினைக்கக் கூடும். எவ்விதச் சூழ்ச்சியுமில்லை, தந்திரமும் இல்லையென்று நான் உறுதியாகக் கூறுவேன். சென்ற ஏழெட்டு மாத காலமாக டி. கே. எஸ், சகோதரர்களின் நாடகங்களை இந்நகரில் பார்த்தபின் நாடகக் கலையின் மேன்மையும் அது மக்களிடையே பெற்றுள்ள செல்வாக்கையும் அதனால் ஏற்படும் பயனையும் ஒருவாறு நன்குணர்ந்தோம். அதன் காரணமாக இக் கலையை நல்ல முறையில் போற்றி வளர்ப்பதற்குத் தமிழ் நாட்டிலுள்ள அறிஞர்களையெல்லாம் ஒருங்கு கூட்டி யோசிக்கவும், இயலுமானால் உருப்படியான திட்டங்கள் வகுக்கவும் முடிவு செய்தோம். அதற்கிணங்க, கலை வளர்ச்சி எல்லோருக்கும் பொதுவென்ற முறையில் பல்வேறு கொள்கையுடையவர்களும் ஒன்று சேர்ந்து, தொழில் நடத்தும் கம்பெனியாரின் பூரண ஒத்துழைப்பையும் பெற்றதால் இன்று மகாநாடு நடைபெறுகிறதேயன்றி, தனிப் பட்ட சிலருடைய பெருமைக்கோ, புகழுக்கோ அல்லவென்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாடகக் கலை அபிவிருத்தி மகாநாடு முதல் முதலாக இந்நகரில் கூட்டப்பட்டது இந்நகருக்கும் நகரமக்களுடைய கலையுணர்ச்சிக்கும் பெருமை யளிப்பதாக நான் கருதுகிறேன்.”  வரவேற்புரை முடிந்த பிறகு தலைவர் ஆர். கே. சண்முகம் அவர்களுக்கும் பம்மல் சம்பந்த முதலியார் அவர்களுக்கும் ஈரோடு நகர சபையின் சார்பில் வரவேற்புப் பத்திரம் படித்துக் கொடுக்கப்பட்டது. நாடகத் துறையில் ஈடுபட்டுள்ள பெரு மகனார் ஒருவருக்கு நகர சபையின் சார்பில் வரவேற்புப் பத்திரம் அளித்தது இதுவே முதல் தடவையென்பதை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். இந்த வகையில் ஈரோடு நகரசபை மற்ற நகர சபைகளுக்கு வழிகாட்டியாக நின்றதுபோற்றுதற்குரிய ஒன்றாகும். நாடகப் பேராசிரியருக்கு நகர சபை வரவேற்பளிக்க வேண்டு மென்ற எண்ணத்தை உருவாக்க, நாங்கள் அந்த நாளில் பெரு முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது என்பதை அடக்கத் தோடு சொல்லிக் கொள்கிறேன்.  தலைவர் பிரேரணையின் போது தகராறு நகரசபைத்தலைவர் வரவேற்புப் பத்திரங்களே வாசித்தளித்த பின் மாநாட்டுத்தலைவர் ஆர். கே. சண்முகம் தலைமையுரை நிகழ்த்த ஒளி பெருக்கியின் முன்னே வந்து நின்றார். அப்போது பெஞ்சிலிருந்தும் தரையிலிருந்தும் சிலர் எழுந்து நின்று “தலைவரைப் பிரேரேபிக்க வேண்டும்” என்று கூச்சல் போட்டார்கள். “தலைவர் பிரேரணை இல்லாமல் ஆர். கே. சண்முகம் பேசக் கூடாது” என்றார்கள். முத்தமிழ் நுகர்வோர் சங்கத்தாரால் முன் கூட்டியே திட்டமிட்டு டிக்கட் வாங்கிக் குழப்பம் செய்ய வந்த கூட்டம் இது. தலைவரைப் பிரேரேபித்ததும் எழுந்து நின்று கூச்ச லிட்டார்கள். உடனே மேடைமீது நின்ற சின்னண்ணா டி. கே. முத்துசாமி ஒலிபெருக்கி முன்னல் வந்து எழுந்து நின்றவர்களை உட்காரும்படி கையமர்த்தியப்படி,  ‘அன்பர்களே, மகாநாட்டின் தலைவர் சர். ஆர். கே.சண்முகம் செட்டியார் என்பதை அழைப்பிதழில் தெளிவாகப் போட்டிருக்கிறோம். விளம்பரச் சுவரொட்டிகளிலும் தலைவர் பெயர் இருக்கிறது. அதன் பிறகு, இங்கே தலைவரை ஒருவர் பிரேரேபிக்கவும், மற்றொருவர் ஆமோதிக்கவும் வேண்டுமென்ற அவசியம் இல்லை. வெறும் சடங்குதான். முற்போக்காளர்கள் அதிகமாகப் பங்கு பெறும் இந்த மகாநாட்டில் பழைய மூட நம்பிக்கைச் சடங்கெல்லாம் தேவையில்லையென்று தான் தலைவர் பிரேரேணையை நிறுத்தி விட்டோம். அமைதியாக உட்காரும்படி கேட்டுக் கொள்கிறேன். தலைவர் அவர்கள் பேசுவார்” என்று கூறினார்.  பெரும்பாலான ரசிகப் பெருமக்கள் “உட்கார், உட்கார்” என்று, எழுந்து நின்ற கூட்டத்தை உட்காரச் செய்தார்கள். சுமார் பத்துப்பேர் மட்டும் முணுமுணுத்துக் கொண்டு வெளியே சென்றார்கள். கூட்டத்தில் அமைதி ஏற்பட்டது. தலைவர் சொற்பொழிவாற்றினார். அதன் சுருக்கத்தை மட்டும் இங்கு தருகிறேன்.  “நண்பர்களே, நகரசபைத் தலைவர் அவர்களே, அங்கத்தினர்களே, நமது நாட்டிலே நாடகக்காரர்களைக் கூத்தாடிகள் என்று கேலியாகப் பேசுகிறார்கள். மேனாடுகளிலே அவர்களைப் பாராட்டுகிறார்கள். நகரசபைகள் நாடகக் கலைக்காக உதவி செய்கின்றன. மேடுைகளில் காணப்படும் பெரிய தியேட்டர்கள் நகர சபைகளுக்குச் சொந்தமானவைகளே. பாரீஸ் பட்டணத்திலுள்ள பெரிய அருமையான நாடகக் கொட்டகை அந்த ஊர் நகர சபையின் சொந்தக் கட்டிடம். அதுபோலவே மேனாடுகளிலே மற்ற இடங்களிலும் நாடகக் கொட்டகைகள், நாட்டிய சாலைகள் எல்லாம் நகரசபைகளுக்குச் சொந்தம். இனி இங்கும் நகரசபைகள் நாடகக் கலைக்கு ஆதரவு தருமென்று நம்புகிறேன்.  நாடகக் கலையென்பது நமது தமிழ்நாட்டிலே பழமையானது. 2000 ஆண்டுகட்கு முன்பும் இருந்தது. ஆனால் இன்று சிலர் நாடகம் என்ற சொல் கூடத் தமிழல்ல, சமகிருதம் என்று கருதுகிறார்கள். நாடகம் என்ற சொல் நடை என்ற தமிழ்ச் சொல்லின் கருத்தைக் கொண்டது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்திலே நாடகக்கலை இருக்கிறது.  பழங்காலத்திலே நாடகங்களை மூன்று வகையாகப் பிரித்திருந்தார்கள். ஒன்று பக்தி ரசமான புராணக் கதைகள். இவைகளைக் கோவில்களிலே நடத்திவந்தார்கள். மற்றொன்று வீரர் கதைகள். இவை அரசர்கள் முன்னிலையிலே மாளிகைகளிலே நடிக்கப் பட்டன. மூன்றாவது அறிவு வளர்ச்சிக் கதைகள். இவைகளே மக்கள் முன்னிலையில் நடத்தி வந்தார்கள். இப்பொதோ நாடகங்கள் யாவும் புராணக் கதைகளாக உள்ளன.அவைகளைப்பார்க்கும். போது கஷ்டமாகத்தானே இருக்கிறது. புதிய கருத்துள்ள சீர் திருத்த நாடகங்கள் நடத்த வேண்டும்.  “பழங் காலத்திலிருந்து வளர்ந்து வரும் இந் நாடகக் கலையை அபிவிருத்தி அடையச் செய்யவே இன்று இந்த மகாநாடு நடைபெறுகிறது.”[1]  தலைமைப் பேருரை முடிந்ததும் எம். என். எம். பாவலர் அவர்கள் தமிழ்நாடகத் தலைமையாசிரியர் தவத்திரு தூ.தா சக்கரதாஸ் சுவாமிகளின் திருவுருவப் படத்தினைத் திறந்து வைத்தார். தமிழ் நாடகத் துறை வளர்ச்சியில் சுவாமிகளுக்கிருந்த முதன்மையை விரிவாக விளக்கி நீண்டதொரு சொற்பொழிவு நிகழ்த்தினார். அதனையடுத்துச் சமுதாயச் சீர்திருத்த நாவல் நாடகாசிரியர் திரு எம். கந்தசாமி முதலியார் அவர்களின் திருவுருவப் படத்தினை அடியேன் திறந்து வைத்து, அந்த மறுமலர்ச்சி நாடகப் பெருந்தகையின் தனிச் சிறப்புக்களையும் நடிப்பினைப் பயிற்றுவிப்பதில் அவருக்கிருந்த ஆற்றலையும் எடுத்து விளக்கினேன்.  இத்துடன் காலை நிகழ்ச்சிகள் பகல் 1 மணிக்கு முடிந்தன. பகல் உணவுக்குப் பின் மாலை 4 மணிக்கு மாநாடு தொடர்ந்து நடைபெற்றது. நாடகக் கலையரசு நவாப் டி. எஸ். ராஜமாணிக்கம் பிள்ளை, நாடகமும் அதன் பயனும் என்னும் தலைப்பில் பேசினார். அவரது நீண்ட சொற்யொழிவின் சுருக்கம் வருமாறு:  “அறிவிற் சிறந்த தலைவர் அவர்களே, அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,  அரிய பெரிய நூல்களைப் படிப்பதற்கு அவகாசம் இல்லாதவர்களுக்கும், படிக்கத் தெரியாதவர்களுக்கும் நல்லறிவு புகட்டவே நாடகம் ஏற்பட்டது. இயல்-இசை-நாடகம் என்னும் முத்தமிழுள் இயலும் இசையும் படித்தாலும் கேட்டாலும் மாத்திரமே இன்பம் தரும். நாடகமோ, அந்த இரண்டு இன்பங்களோடு காண்பதற்கும் இன்பம் தரும்.  உயர்ந்த வேடங்கனைத் தரித்து மெய் மறந்து நடிக்கின்றவர்களுடைய உள்ளங்களில், மேற்படி பாத்திரங்களின் உயர்ந்த நற்குணங்கள் படிவது இயற்கை, இந்தக் குணங்கள் நாளடைவில் மிகுவதால் அந்த நடிகர்கள் தெய்வீகத் தன்மையை அடைகின்றனார்.  நம்நாட்டில் நல்வழி புகட்டும் நூல்களை மூன்று வகையாகப் பிரித்திருக்கிறார்கள். அவை 1, வேதங்கள் 2, புராணங்கள் 3, நாடகம் முதலிய காவியங்கள்.  இவைகளில் முதலாவதான. வேதம் அரசனைப்போல் கட்டளையிட்டு, நல்ல காரியங்களைச் செய்ய ஏவுகிறது. இரண்டாவதான புராணங்கள், ஆருயிர் நண்பனைப்போல நயமொழிகளால் கதைகளின் மூலம் நல்ல செயல்களைக் செய்யத் தூண்டுகின்றன. நாடகங்களோவெனில் அழகும் கற்பும் அமுதமொழியும் அமைந்த மனேவி, கணவனைத் திருத்துவதுபோல் கெட்ட ஒழுக்கம் உள்ளவரையும் நல்லொழுக்க முள்ளவராக்குகின்றன.  இத்தகைய தெய்வக் கலையை, மாசற்ற கலையை, உலகம் போற்றும் உத்தமர் மகாத்மாவுக்குச் சத்திய வழி காட்டிய கலையை, கல்வியறிவு இல்லாதவர்களுக்குக் கல்வி புகட்டும் கலையை, தானும் பயனுற்றுப் பிறருக்கும் பயனைக் கொடுக்கும் பண்புள்ள கலையை, தீண்டாமையை ஒழிக்கும் கலையை, ஜாதி பேதம் போக்கும் கலையை, தாய்நாட்டின் பெருமையை உயர்த் தும் தவக்கலையை நன்கு உலகுக்குப் பயன்படுத்த வேண்டுமானல் அரசாங்கத்தாரும் பொதுமக்களும் நடிகர்களும் ஒத்துழைத்து, இவ்வரும் பெரும் நாடகக் கலை தன் பழம்பெரும் சிறப்புகளி லிருந்து என்றும் குன்றாது வளர்ந்தோங்கி வர, எல்லாம் வல்ல அன்னை ஆதிசக்தி அருள்புரிவாளாக!”  நவாப் அவர்கள் பேசியதும் இலக்கியமும் சம்பிரதாயமும் என்னும் தலைப்பில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி.ஆர் மயிலேறு எம். ஏ. அவர்களும், நாடகத்தில் பெண்கள் என்னும் தலைப்பில் பிரபல நடிகை திருமதி பி. எஸ். சிவபாக்கியம் அவர்களும் சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து நகைசுவை மன்னர் என். எஸ். கிருஷ்ணன் நாடகமும் சினிமாவும் என்ற பொருளை நகைச்சுவை ததும்பப் பேசினார். அவரது பேச்சின் சுருக்கம் பின்வருமாறு.  “தலைவர் அவர்களே, பெரியோர்களே, அன்பர்களே எல்லோரும் சொல்கிறர்கள் நாடகக் கலை எங்கேயோ மறைந்து போய் விட்டதென்று. அது இருந்த இடத்தையே கானோம்; முன்பு உச்சாணிக் கொப்பில் இருந்தது. இப்பொழுது பாதாளத்தில் விழுந்து விட்டது என்று இந்தப் பேச்சுக்களெல்லாம் வெறும் பொய். உண்மை கலவாத பொய். நாடகக்கலை எங்கும் போய்விட வில்லை. அது முழுக்க முழுக்க நோய் நொடி ஒன்றுமில்லாமல் உயிரோடு இருக்கிறது. வளர்ந்து கொண்டும் வருகிறது.  “ஆஹா! அந்தக் காலத்தைப்போல் வருமா? முந்தி அப்படி யெல்லாமிருந்தது; இப்படியெல்லாமிருந்தது என்ற வீண் புகழ்ச்சி உளுத்துப்போன பழைய போக்கு. நான் சொல்லுகிறேன்; பண்டைக் காலத்தில் நாடகக்கலை மாட்டு வண்டி வேகத்தில் இருந்து வந்தது. இப்போது அது விமான வேகத்தில் இருந்து வருகிறது. மாட்டு வண்டி வேகத்திலிருந்து திடிரென்று விமான வேகம் வந்துவிடவில்லை. படிப்படியாகதான் வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது.  “காளை மாடு பூட்டிய கட்டை வண்டி வேகத்தில் ‘தெருக் கூத்து'களும், சைக்கிள் முதலியவற்றின் வேகத்தில், ஸ்பெஷல் நாடகங்களும் மேட்டார் வேகத்தில் முறைப்படி தொழில் நடத்தும் கம்பெனியாரின் நாடகங்களும் முன்னேறித்தான் வந்திருக்கின்றன. அதிலும் நவாப் ராஜமாணிக்கம் அவர்களும் டி.கே.எஸ். சகோதரர்களும் நான் முன் குறித்த விமான வேகத்திற்கே வந்து விட்டார்கள் என்று கூறலாம்.  “நிலைமை இப்படியிருக்கும்போது, கொஞ்சம்கூட அஞ்சாமல் சினிமா வந்து நாடகத்தைக் கொன்றுவிட்டதென்று பழி போடுவது ஞாயமா? நீங்களே சொல்லுங்கள்! இது மிகவும் அபாண்டமான பொய்ப் பழி.  “நாடகமும் சினிமாவும் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் தான். இரண்டு பேருக்கும் நல்ல வலுவிருக்கிறது. ஒருவரை யொருவர் கொல்ல முடியாது. நடிப்பு இருவருக்கும் பொதுச் சொத்து. இதை இருவரில் யார்வேண்டுமானலும் வாரியெடுத்துக் கொள்ளலாம். அவரவர் திறமையைப் பொறுத்த விஷயம். இது. எடுக்க எடுக்கக் குறையாத சொத்து. இதில் சண்டையென்ன, சச்சரவென்ன?”  “நாடகக் கலை அபிவிருத்தி அடைந்துவிட்டது என்பது உண்மையானால் இந்த மாநாடு எதற்கு? என்று கேள்வி உண்டாகிறதல்லவா? இதெல்லாம் ஒரு விளம்பரந்தானே! என்னென் னவோ மகாநாடுகள் நடக்கின்றன. ஏன் நாங்கள் மட்டும் ஒரு மகாநாடு நடத்தக் கூடாது?”  “நாடகமும் சினிமாவும் ஒன்றுதான். ஒன்று உண்மை யுருவம், மற்றொன்று நிழல். இதில் எதுவும் சாகவில்லை. சாகப் போவதும் இல்லை. இன்றிருக்கும் நிலையிலிருந்து நாடகக் கலை வளர வேண்டுமானால் நடிகர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நல்ல வாழ்க்கை வசதி வேண்டும், தன் வாழ்க்கை முழுதும் நாடகத் தொழிலில் உழைத்துவிட்டு, கடைசியில் வயிற்றுச் சோற்றுக்கு வாடும்படியான நிலையில் நடிகர்கள் இருப்பார்களானல் நாடகக் கலை அபிவிருத்தி அடைய முடியாது.”  கலைவாணர் இவ்வாறு சிரிக்கச் சிரிக்கப் பேசினார். ஆனால் சிந்தனைக்கு வேலை கொடுப்பதாகவும் அந்தப் பேச்சு அமைந்தது. அடுத்து இன்றைய நாடகம் என்னும் தலைப்பில் ஸ்ரீ ராம பால கான சபா வைரம் அருணாசலம் செட்டியார் அவர்கள் சார்பில் திரு ஏ. ஆர். அருணாச்சலம் பேசினார். அவரைத் தொடர்ந்து அறிஞர் அண்ணா அவர்கள் ஒலிப்பெருக்கியின் முன்னே வந்து நின்றார். அவருக்குக் கொடுத்திருந்த தலைப்பு கலையின் நிலைமை என்பது. அவையில் முழு அமைதி நிலவியது. அண்ணா பேசத் தொடங்கினார்.  “நாடக அபிமானிகளும், நாடகக் கலையிலே ஈடுபட்டுள்ள தோழர்களும் இசைவாணர்களும் கலாரசிகர்களும் நிரம்பியுள்ள இந்த மகாநாட்டிலே எனக்கும் பேச ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது பற்றி மிக்க மகிழ்ச்சியடைகிறேன். நாடகக் கலையின் முன்னேற் றத்திற்காக இந்த மகாநாடு நடைபெறுகிறது. காலையிலே தலைவர் சர் சண்முகம் அவர்கள் சொற்பெருக்காற்றினார். வேறு பல அன்பர்களும் பேசினார். இயலே வளர்க்கவும் இசையை வளர்க்கவும் அமைப்புகள் இருக்கின்றன. நாடகக் கலை வளர்ச் சிக்கான அமைப்பும் முயர்ச்சியும் இல்லை. எனவே எனது தோழர் சிவதானு இதற்கான ஒரு தனி மாநாட்டை முதன்முறையாகக் கூட்டியதுபற்றி நான் அவரைப் பாராட்டுகிறேன்.”  “நாடகக் கலை முன்னேற்றத்திற்குப் பல காரியங்கள் நடை பெற வேண்டியிருக்கின்றன. முதலிலே ஊருக்குத் தியேட்டர் வசதி வேண்டும். இப்போது எல்லாம் சினிமாக் கொட்டகைகள் ஆகிவிட்டன. நாடகத்திற்கெனத் தனித் தியேட்டர்கள் இல்லை. திருச்சி நகரசபைஒன்றில் மட்டும் தனித் தியேட்டர் அமைக்கப் பட்டிருக்கிறது. அதுபோல ஒவ்வொரு நகரசபையும் செய்ய முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும், சர்க்காரும் செல்வவான்களும் நாடகக்கலை அபிவிருத்திக்கு உதவியளிக்க வேண்டும். இவைகளுக் கெல்லாம் பொதுமக்கள் முயலவேண்டும்.  “பொதுவாக நாடகக்காரர் என்றால் முன்பெல்லாம் மதிப்பு கிடையாது. நையாண்டி செய்வார்கள், பொது மக்களுக்கும் நடிகர்களுக்கும் தொடர்பு இருப்பதில்லை. இப்போது நடிகர்களிடம் நன்மதிப்பும் நல்ல தொடர்பும் ஏற்பட்டிருக்கிறது. இத் தொடர்பு நீடிக்கவேண்டும். இதனால் தக்க பயனும் ஏற்பட வேண்டும். என் நண்பர் என். எஸ். கிருஷ்ணன் அவர்கள் அழகுறக் கூறினார். நாடகக்கலை அபிவிருத்தியடைய வேண்டு மென்றால் நாடகக் கலையின் முக்கிய அம்சமாக விளங்கும் நடிகனுக்கு நல்ல சம்பளம் வாழ்க்கை வசதி முதலியன கிடைக்க வேண்டும். இலாபப் பங்கீடும் தரப்படவேண்டும். பங்குதாரர்கள் கொண்ட ஒரு லிமிடெட் கம்பெனி அமைக்கப்படவேண்டும். அதிலே சீர்திருத்த நாடகங்கள் நடத்தப்பட வேண்டும். அதன் வருவாயை நாடகத் தொழிலாளருக்கு இலாபப் பங்கீடாகத் (Bonus) தரப்படவேண்டும். அப்போதுதான் திருப்தியான மனமுடைய நடிகர்கள் இருப்பார்கள். நடிப்பு நேர்த்தியாக இருக்கும். நாடகக் கலையும் வளரும். வேதனை நிரம்பிய வாழ்க்கையிலேயுள்ள வித்துவான் பாடுகிற காம்போதி கூட முகாரியாகத் தானே இருக்கும்! பத்து வருடங்களுக்கு முன் பிரபல நடிகர்களாக இருந்துவிட்டு இன்று பிழைக்கும் வழியற்றுள்ள மாஜி நடிகர்களைப் பார்க்கிறேன். மீசையைத் தடவியபடி நானுந்தான் ராஜபார்ட்டாக இருந்தேன் என்று கூறிக்கொள்வதைவிட அவர்களுக்கு வேறோர் சுவை இல்லை. இப்படி நடிகர்களின் வாழ்வு நொடித்துப் போகிறதென்றால் எப்படிப் படித்தவர்களும் பண்புள்ளவர்களும் நாடகத் தொழிலிலே ஈடுபட முடியும்? ஆகவே நாடகக் கலை அபிவிருத்தியிலே அக்கரை கொண்டவர்கள் முதலிலே முக்கியமாகக் கவனிக்கவேண்டியது நடிகர்களின் - நாடகத் தொழிலாளர்களின் நலத்தைத்தான் - அது நடைபெற்றால்தான் நாடகக்கலை முன்னேறும்.  “இன்று நடத்தப்படும் நாடகங்கள் பெரிதும் புராணங்கள். இவைகளைக் காண்பதால் மக்களுக்கு என்ன பயன் உண்டு? மூடப் பழக்க வழக்கங்கள் வளரத்தானே இந்த நாடகங்கள் பயன்படுகின்றன. சமூக சீர்திருத்த நாடகங்களையே நாடகக்காரர்கள் பெரிதும் நடத்த வேண்டும். அதுதான் கலை அபிவிருத்தி. இந்த உணர்ச்சி இன்று எங்கும் பரவியிருக்கிறது. பொதுமக்களும் இனி நாடு சீர்திருத்த நாடகங்களையே காண விரும்புகிறது என்பதை நாடகக்காரர்கள் உணரும்படி செய்ய வேண்டும்.  அண்ணா மேலும் தொடர்ந்து பேசுகையில், காலையில் தலைவர் கூறிய சில கருத்துகளுக்கு விடையளித்தார். தலைவர் ,ேப ச் சிலே அவற்றையெல்லாம் குறிப்பிடவில்லையாதலால் அவற்றுக்களித்த பதில்களையும் குறிப்பிடாமல் விட்டேன். முன் கூறியபடி ‘நாடக உலகில் அண்ணா’ என்னும் நூலில் இவ் விரிவுரைகளைக் காணலாம்.  இதன் பிறகு ஸ்ரீ மங்கல பாலகான சபையின் சார்பில் கே. டி. சந்தானம் அவர்கள் நடிகர் வாழ்க்கை என்னும் தலைப்பில் மிக அருமையாகப் பேசினார். நாடகக் கலை பற்றி முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்களும், நடிகர்களின் கடமை என்னும் தலைப்பில் கலைஞர் எம். எம். சிதம்பரநாதன் அவர்களும், நாடகக்கலை வளர்ச்சி பற்றி பூவாளுர் அ. பொன்னம்பலனார் அவர்களும், நடிப்புக் கலையில் இன்பம் என்பது பற்றி இலங்கை ஏ. கே. இராமலிங்கம் அவர்களும் சீர்திருத்த நாடகங்கள் என்னும் தலைப் பில் திரு எஸ்.ஆர். சுப்பிரமணியம் அவர்களும், ஒழுக்கம் வேண்டும் என்பது பற்றிச் சிதம்பரம் என். தண்டபாணி பிள்ளை அவர்களும் பேசினார்கள்.  கடைசியாகத் தலைவர் தமது முடிவுரையில் கீழ் வருமாறு குறிப்பிட்டார்.  “நான் இந்த மகாநாட்டுக்குக் காலையிலே வந்ததும் சில பேர் என்னிடம் வந்து, இந்த மகாநாட்டிலே ஏதோ கலகம் விளையப் போவதாகவும் மகாநாடு கலைக்கப் பட்டுவிடப் போவ தாகவும் சொன்னார்கள். “யார் இவ்விதம் செய்யப் போகிறார்கள்?” என்று கேட்டேன். அவர்கள் சிலருடைய பெயரைக் குறிப்பிட்டார்கள். உடனே நான், அப்படியெல்லாம் அவர்கள்  நடக்க மாட்டார்கள் என்று கூறினேன். மகாநாடு அமைதியாக நடைபெற்றது. பல அரிய சொற்பொழிவுகள் நடைபெற்றன. இப்போது ராவ் பகதூர் சம்பந்த முதலியார், எம். கே. டி. பாகவதர், எம். என். எம். பாவலர் இவர்கட்கு முறையே நாடகப் பேராசிரியர், இசை நாடக ஒளி, நாடக மணி என்று பட்டங்கள் வழங்கப்பட்டன. பட்டங்கள் வழங்கும் அதிகாரத்தைச் சர்க்கார் எனக்கு அளித்தால் நான் சர், திவான் பகதூர் போன்ற பட்டங்களே நமது நடிகர்களுக்கு அளிப்பேன். மேடுைகளிலே சிறந்த நடிகர்களின் சேவை பாராட்டப் பட்டு அவர்களுக்கு டாக்டர், நைட் போன்ற பட்டங்கள் அளிக்கப் படுகின்றன.  “மாநாட்டில் பேசிய பலரும் கூறியதைப்போல் சீர்திருத்த நாடகங்கள் நடத்தப் படவேண்டும். நண்பர் அண்ணாதுரை சக்திரோதயம் என்ற நாடகம் எழுதி நடித்துக் கொண்டுவருகிறார். அதைப்போல ஒன்று போதுமா? நூற்றுக்கணக்காக எழுதி நடிக்க வேண்டும். யாரும் நடிக்க முன் வராவிட்டால் நண்பர் அண்ணா துரை எழுதும் நாடகத்தில் நான் நடிக்கிறேன்.  இனி இம் மகாநாட்டை இவ்வளவு நன்முக நடத்திய நண்பர்களுக்கு என் நன்றியறிதலைக் கூறிக்கொண்டு என் முடிவுரையை நிறுத்திக் கொள்கிறேன்.”  தலைவர் முடிவுரைக்குப்பின் மாநாட்டுச் செயலாளர் டி. என். சிவதானு அவர்கள் நன்றி கூற மாநாடு முடிவுபெற்றது. மாநாடு முடிந்த சில நிமிடங்களில் ஒளவையார் நாடகம் தொடங்கிச் சிறப்பாக நடை பெற்றது. மாநாட்டில் கலந்து கொண்ட பெருமக்கள் அனைவரும் நாடகத்தை இறுதி வரையில் இருந்து ரசித்தார்கள். நாடகம் முடிந்ததும் மாநாட்டு வரவேற்புக் குழு சார்பில் எனக்கு ‘ஒளவை’ என்னும் பட்டம் அளிக்கப்பட்டது. அதற்குரிய வெள்ளிப் பேழையினை சர். ஆர். கே. சண்முகம் அவர்கள் வழங்கிப் பாராட்டினார். அப்போது,  “நான் என்வாழ்க்கையில் கண்ட நாடகங்கள் யாவற்றிலும் ஒளவை'தலைச்சிறந்த நாடகம். இந்த நாடகத்தை நான் காணத் தவறியிருந்தால் ஒரு அரிய சந்தர்ப்பத்தை இழந்திருப்பேன் . டி. கே. எஸ். சகோதரர்கள் ஒளவை நாடகத்தின் மூலம் தமிழ் நாடக உலகில் முதலிடம் பெற்று விட்டார்கள் என்பதில் ஐயமில்லை” என்று கூறினார்.  கலைவாணர் என். ஏஸ். கிருஷ்ணன் எதிரே அமர்ந்திருந்தார். அவர்மிகுந்த உணர்ச்சியோடு தாமே மேடைக்கு வந்து,  “இரண்டொரு வார்த்தைகளாவது இதைப் பற்றிப் பேசாமலிருக்க என்னல் முடியவில்லை. சர்.சண்முகம், டி.கே. ஷண்முகத் திற்கு ஒளவை’ என்றபட்டம் அளித்தது முற்றிலும் பொருந்தும். நான் சமீபத்தில் ஒரு மலையாள நாடகத்திற்குத் தலைமை வகித்த போது, மலையாள நடிகர்களைப்போல் தமிழ் நடிகருலகில் எவரும் இல்லையென்று கூறினேன்.அதை இன்று ‘வாபஸ்’ பெற்றுக்கொள்கிறேன். எனது சகோதரன் ஒளவை சண்முகம் ஒருவராலேயே தமிழ் நாடகக்கலை வளர்ந்தோங்குமென்று உறுதியாய்க் கூறுகிறேன்.”  என்று உணர்ச்சி பொங்கக் கூறி என்னைத் தழுவிக் கொண் டார். நான் எல்லோருக்கும் நன்றி கூறும்போது, குழப்பம் கலகம் எதுவுமில்லாமல் மாநாடு அமைதியாக நடந்தது குறித்து இறைவனுக்கு நன்றி கூறினேன்.  முதல் நாடகக்கலை அபிவிருத்தி மாநாட்டினை மிகச் சிறப்பாக நடத்தியமைக்காகச் செயலாளர்கள் இருவரையும் எல்லோரும் பாராட்டினார்கள். மாநாடு முடிந்தபின் அடுத்தவாரம் வெளி வந்த குடியரசு இதழில் நாடகக் கலை மாநாடு பெருந்தோல்வி அடைந்ததாகச் செய்தி வெளிவந்தது. அதே வாரத்தில் காஞ்சி புரத்திலிருந்து வெளிவந்த அறிஞர் அண்ணா அவர்களின் திராவிட நாடு இதழில் நாடகக் கலை மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றதாகச் செய்தி வந்திருந்தது. இரு பத்திரிக்கைகளையும் படித்து நாங்கள் சிரித்தோம்.  1. தலைவர் சண்முகம் அவர்களி தலைமைப் பேருரை முழுவதும் ‘சங்கரதாஸ் சுவாமிகள் மன்றம்’ வெளியிட்டுள்ள ‘நாடக உலகில் அண்ணா’ என்னும் தனி நூலில் உள்ளது.                                                                                      மூன்று இலக்கிய நாடகங்கள்   ஈரோடு ரசிகப்பெருமக்கள் அளித்தபேராதரவுஎங்களுக்கு மிகுந்த உற்சாகம் ஊட்டியது. அந்த உற்சாகத்தில் மூன்று இலக்கிய நாடகங்கள் தயாராயின.மூன்றையும் வரலாற்று நாடகங்களாகவே குறிப்பிடலாம். ஒன்று மராத்தி நாடகத்தின் தழுவல், மற்றொன்று தமிழ்க்கவியரசரின் வாழ்க்கைச்சித்திரம். மூன்றாவது வட மொழிக் கவிஞரின் வரலாறு. இம் மூன்று நாடகங்களில் இருநாடகங்கள் நாடகக் கலை மாநாட்டுக்குப் பின்னும், ஒரு நாடகம் மாநாட்டுக்கு முன்னும் நடைபெற்றன. மூன்று நாடகங்களும் நாடகக் குழுவின் தரத்தினை உயர்த்தியவென்றே சொல்ல வேண்டும்.  வீர சிவாஜி வீர சிவாஜி நாடகம் 1944 ஜனவரி 1 ஆம் தேதி அரங்கேறியது. இந்நாடகம் பாலக்காட்டில் இருந்தபோதே எங்களுக்குக் கிடைத் தது. தஞ்சை டி. வி. இரத்தினசாமி அவர்களால் எழுதப் பெற்ற நாடகம். நாடக அமைப்பு மிக நன்றாயிருந்தது. உரையாடல்கள் நல்ல தமிழில் இலக்கிய நயத்துடன் எழுதப் பெற்றிருந்தன. நாடகத்தின் இடையே வரும் காதல் காட்சிகளைத் திருக்குறள் காமத்துப் பாலிலுள்ள சில குறள்பாக்களே அடிப்படையாக வைத்துச் சிறப்பாக எழுதியிருந்தார் ஆசிரியர். சிவாஜியின் நேர் மையையும் நெஞ்சுறுதியையும் விளக்கிக் காட்டும் நாடகம் இது. இந்நாடக ஆசிரியர் இதனை மராத்தி நாடகத்தின தழுவல் என்று முன்பே கூறியிருக்கலாம். அதனால் அவருடைய திறமை உறுதியாக மேலும் உயர்ந்திருக்கும். அதற்கு மாறாக, ஆசிரியர் ரத்தின சாமி இந்நாடகம் என் சொந்தக் கற்பனையென்று தேவையற்ற ஒரு பொய்யைச் சொல்லி விட்டார். கெட்டிக்காரன் புளுகுக்கும் எட்டு நாட்கள்தானே கணக்கு வைத்திருக்கிறார்கள்!  தஞ்சையிலிருந்து ஒரு கடிதம் வந்தது. சிவாஜி நாடகம் மராத்தியில் வெளிவந்த சந்திர கிரகணம் என்ற நாடகத்தின் தழுவல் என்றும், டி. வி. இரத்தினசாமி அதைத் தன்னுடைய நாடகம் என்று சொல்லியிருப்பதாகவும் நண்பர் ஒருவர் எழுதி யிருந்தார், அத்தோடு மராத்தி மொழியிலுள்ள, சந்திர கிரகண்” நாடக அச்சுப் பிரதியையும் அனுப்பியிருந்தார். ஆனால் இந்தக் கடிதம் வந்தபோது ரத்தினசாமி தஞ்சையில் இருந்தார். பாலக்காட்டிலேயே மேற்படி நாடக உரிமையை எங்களுக்குக்கொடுத்து விட்டார். நாடகம் தயாரிக்கும் போது வருவதாகச் சொல்லிப் போனார். உண்மை தெரிந்தபின் நாங்கள் அவருக்குக் கடிதம் எழுதினோம். அதற்குப் பதிலே இல்லை. அதற்குள் சென்னை பிரபல கண் டாக்டர் டி. எஸ். துரைசாமி அவர்களிடமிருந்து மற்றொரு கடிதம் வந்தது, அதில் வீர சிவாஜி நாடகம் தனக்குச் சொந்தமானதென்றும் அதனுடைய முழு உரிமையையும் பல ஆண்டுகளுக்கு முன்பே மராத்தி நாடக ஆசிரியரிடமிருந்து தான் வாங்கியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே, நாடகக் கதை மராத்தி ஆசிரியருடையது. அதைத் தமிழில் எழுதியவர் தஞ்சை டி. வி. இரத்தினசாமி, தமிழ் நாடகத்தின் உரிமை யாளர் டாக்டர் டி. எஸ். துரைசாமி, வேடிக்கையாக இருக் கிறதல்லவா? கடைசியாக நாங்கள் டாக்டர். துரைசாமி அவர்களிடம் அனுமதி பெற்று அவருக்கு ‘ராயல்டி’ கொடுத்துதான் நாடகத்தை நடித்தோம். “டாக்டர் துரைசாமி உரிமைபெற்றது என்று கூடப் போடவில்லை. “நாடக ஆசிரியர் - டி. எஸ். துரைசாமி” என்றே விளம்பரத்தில் போட்டோம். இத்தனை குழப்பங் களுக்கிடையே புதிய நாடகம் அரங்கேறியது.  கதாநாயகனக இராஜேந்திரன் நாடகத்தின் பெயர் வீர சிவாஜி என்றிருந்தாலும் உண்மை யில் நாடக நாயகன் ஜெயவந்த் என்னும் தளபதி தான். இந்தப்பாத்திரம் இராஜேந்திரனுக்குக் கொடுக்கப் பட்டது. அவர் கதாநாயகனாக நடித்த முதல் நாடகம் வீர சிவாஜி. ஜெயவந்த் பாத்திரத்தை அருமையாக நடித்தார். தம்பி பகவதி சிவாஜியாக நடித்தார். அவரது கம்பீரமான தோற்றம் சிவாஜிக்குப் பொருத்தமாக இருந்தது. குரல், நடை, உடையாவும் பகவதியை சிவாஜி யாகவே காட்டின. சிவாஜியை எதிர்க்கும் வீரன் ஜெகதேவாக நான் நடித்தேன். நாடகம் நல்ல வசூலுடன் சிறப்பாக நடை பெற்றது. பிரண்டு ராமசாமியும் டி. என். சிவதாணுவும் ஹிக்குமத் துக்குமத் என்னும் இரு வீரர்கள் நடித்தனார். இவ் விருவருடைய நகைசுவைக் காட்சிகள் மேலும் மெருகூட்டி நாடக வெற்றிக்குத் துணைபுரிந்தன.  காளமேகம் கவியரசு காளமேகத்தின் பாடல்களைப் படித்த நாளிலிருந்து அப்புலவர் பெருமானுடைய வாழ்க்கையை நாடகமாக நடத்த ஆவல் கொண்டிருந்தோம். சின்னண்ணா ஏற்கனவே குமாஸ்தாவின் பெண், ராஜாபர்த்ருஹரி, வித்யாசாகரர் ஆகிய மூன்று நாடகங்களை எழுதிஅவை வெற்றியோடு நடந்து விட்டதல்லவா? அந்த உற்சாகத்தில் இப்போது காளமேகத்தையும் அவரே எழு தினார். அதற்குத் தேவையான நூல்கள் அனைத்தையும் வாங்கிப் படித்தார். தனிபாடல் திரட்டிலுள்ள கவி காளமேகத்தின் நகைசுவை மிகுந்த பாடல்களுக்குச் சிறப்பிடம் கொடுத்து நாடகத்தை உருவாக்கினார். நாடகக்கதை பெரும்பாலும் விநோத ரச மஞ்சரி யிலுள்ள காளமேகப் புலவரின் கதையைத் தழுவியே அமைக்கப் பெற்றது.  ஆயர் குலப் பெண்ணாெருத்தி காளமேகம் களைத்து வரும் போது குடிப்பதற்கு மோர் கொடுக்கிறாள். தண்ணிர் மிகுதியாகக் கலந்த மோர். மேரைக் குடித்துவிட்டுப் புலவர் பாடுகிறார். வானத்திலிருக்கும்போது இந்த மோருக்குக் ‘கார்’ என்று பெயர். மழையாகத் தரையில் விழுந்த பின் இதற்கு ‘நீர்’ என்று பெயர். இவரைப்போன்ற ஆய்ச்சியர் கையில் வந்தபிறகு ‘மோர்’ என்று பெயர் பெற்று விடுகிறது. மோர் தண்ணிராக உள்ளது என்பதைக் கவினார்,  காரென்று போர்படைத்தாய் ககனத் துறும்போது  நீரென்று பேர்படைத்தாய்நெடுந்தரையில் வந்ததன்பின்  வாரொன்று மென்முலையார் ஆய்ச்சியர்கை வந்ததன்பின்  மோரென்று பேர்படைத்தாய் முப்பேரும் பெற்றாயே!"  என்று நகைக்சுவையாகப்பாடி வியப்படைவதுபோல் முடிக்கிறார். இச்சுவை நிறைந்த கவிக்காக ஒரு காட்சியை உருவாக்கி னோம். கவியாக மட்டும் இதனைப் படிக்கும் போது ஏற்படாத ஒரு நிறையுணர்வு காட்சி வடிவாகப் பார்க்கும்போது ஏற்படுகின்றதல்லவா? இப்படியே காளமேகப் புலவரின் நகைச்சுவை பாடல்கள் பலவற்றைக் காட்சிப் படுத்தியிருந்தார் சின்னண்ணா. நாடகத்தில் திருவரங்கம் கோயில், மடப்பள்ளி, திருவானைக்கா ஆலயம், முதலிய காட்சிகள் வருகின்றன. இவற்றையெல்லாம் தயாரித்திருந்தோம்.  எமகண்டம்!  இறுதியில் காளமேகம் எமகண்டம் பாடும் காட்சியினைப் பிரமாதமாக அமைத்திருந்தோம். கவி காளமேகம் எமகண்டம் பாடுவதற்குச் சிரமப்பட்டாரோ என்னமோ, எனக்குத் தெரியாது. காளமேகமாக நடித்த நான் எமகண்டம் பாடுவதற்கு உண்மையாகவே சிரமப்பட்டேன். மேலே நான்கு சங்கிலிகளில் கட்டப் பெற்ற பலகையின் மீதிருந்து பாடவேண்டும்.நான் உட்கார்ந்திருக்கும் பீடமோ சங்கிலிகளில் தொங்கிக் கொண்டிருக்கிறது. கீழே பெரிய அக்னிக் குண்டம். அதில் நெருப்பு எரிந்து கொண்டிருப்பதுபோலத் தந்திரக் காட்சி அமைக்கப் பெற்றிருந்தது. இடையிடையே சாம்பிராணி புகை போட்டு மேலேயிருக்கும் என்னத் திணற அடித்துவிட்டார்கள் காட்சியமைப்பாளர்கள். சுற்றிலும் திருமலைராய மன்னனின் சமஸ்தானப் புலவர்கள் உட்கார்ந்தபடியே பல கேள்விகளைக் கேட்கின்றனார். அவர்கள் கேள்விகனாக் கெல்லாம் உடனுக்குடன் காளமேகம் அலட்சியமாகச் சிரித்துக் கொண்டே பாடவேண்டும் நான் சிரிக்கத்தான் முயன்றேன். ஆனால் வியர்த்து விறுவிறுத்துப்போன அந்நிலையில் சிரிப்புக்களை முகத்தில் தோன்றியதா? இல்லையா? என்று அன்று நாடகம் பார்த்த ரசிகர்கள் தாம் சொல்லவேண்டும்! ஆம் உண்மை! தாய் மொழியாகிய தமிழின் மீது நான் கொண்டிருந்த எல்லையற்ற பற்றின் காரணமாகத்தான் இந்த எமகண்டத்தைத் தாங்கிக் கொண்டேன். பாடிய பாடல்களின் பொருளிலே உள்ளம் திளைத்திருந்ததால்தான் அந்தச் சிரமம் எனக்குத் தெரியவில்லை. காளமேகம் நாடகம் 17-2-1944 இல் தொடங்கி 13 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. நாடகத்தை ஈரோடு நகரமக்கள் பிர மாதமாக ரசித்தார்கள்.  மண்மாரிப் பொழிந்தது நாடகத்தின் இறுதிக் காட்சியில் கவி காளமேகம் மனம் நொந்து அறம் பாடுகிறார். மண்மாரி பொழிகிறது. அத்தோடு நாடகம் முடிகிறது. இக்காட்சி சிறப்பாக அமைய வேண்டும் என் பதற்காக ஏதேதோ செய்து பார்த்தோம். வழக்கம்போல மின்னல் இடி, மழை, அதற்கேற்ற ஒசை இவற்றையெல்லாம் காண்பித் தோம்; ஆனால் எங்களுக்கு மன நிறைவு ஏற்படவில்லை. பத்து நாட்கள் நாடகங்கள் நடந்தபின் ஒரு புதிய யோசனை தோன்றி யது. மேலே பரண்மீது பல இடங்களில் இருந்து மரத்துரள்களை அப்படியே தூவிக் கொண்டிருந்தால் மண்மாரிப் பெய்வது போல் இருக்குமெனத் தோன்றியது. அப்படியே காலையில் ஒத்திகை பார்த்தோம். பிரமாதமாக இருந்தது. இரவு நாடகத்திலும் அப்படியே செய்யத் திட்டமிட்டோம். பெரியண்ணாவுக்கு எங்கள் திட்டம் தெரியாது.  இரவு நாடகத்தில் எமகண்டம் பாடிவிட்டுக் கீழிறங்கினேன். கோபத்தோடு அறம் பாடினேன்.  கோளர் இருக்கும் ஊர்: கோள்கரவு கற்ற ஊர்:  காளைகளாய் நின்று கதறும் ஊர் காளையே விண்மாரி யற்று வெளுத்து மிகக் கருத்து  மண்மாரிப் பெய்கஇந்த வான்  கேதார கௌளை ராகத்தின் நான் வெண்பாவை ஆவேசத்தோடு பாடி முடித்ததும் திட்டப்படி ‘சோ’ என்று மழை ஒசையும் மின்னல் மின்னி இடியும் முழங்கின. மேலிருந்து மரத்துாள் மண் மாரியாகப் பொழிந்தது. சபையோரெல்லாம் ஆரவாரத்தோடு பிரமாதமாகக் கைதட்டிப் பாராட்டினார்கள். எங்களுடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. நாடகம் முடிந்ததும் மேலிருந்து முன்மாரியாகப் பெய்த மரத்துாள் மாரியைத் துடைத்துச் சுத்தப்படுத்துவதுதான் பெரும்பாடாக இருத்தது.  “நேற்று மண்மாரி பொழியும் காட்சி ரொம்பப் பிரமாதம்!” என்று யாரோ பெரியண்ணாவிடம் சொன்னார்கள் போலிருக்கிறது. அந்தக் காட்சியைப் பார்க்க அவரும் ஆர்வத்தோடு வந்திருந்தார். காட்சி நடைபெற்றது. எங்கள் துரதிர்ஷ்டம் அன்று, காற்று கொஞ்சம் அதிகமாய் இருந்தது. மேலிருந்து மரத் துரள்களைத் தூவிய போது அது மேடையிலிருந்து சபைக்குப் பறந்து சென்றது. முன்னலிருந்த பக்க மேளக்காரர்கள் திண்டாடினார்கள். ஆர்மோனியம், மிருதங்கம், கிளாரிநெட், பிடில் ஆகிய இசைக் கருவிகளெல்லாம் மரத்துாள் புகுந்துகொண்டு அவர்களைத் திக்குமுக்காடச் செய்தது. நாடகம் முடிந்து சபையோர் வெளியே போகும்போது “மேடையில் பெய்ய வேண்டிய மண் மாரி நம்மீது பெய்து விட்டதே” என்று சபித்துக் கொண்டே சென்றார்கள். மண்மாரி மீது பெரியண்ணாவுக்கு ஒரே கோபம். “என்னடா இது மண்மாரி மீது நாடகம்? மேடை சபை எல்லாம் அலங்கோலப்படுத்தி விட்டீர்களே! இந்த நாடகம் இனி நமக்குத் தேவையில்லை. நீ எமகண்டம் பாடுவதைப் பார்க்கும் போது எனக்குப் பரிதாபமாக இருந்தது. வேண்டாம். இந்த அறம் பாடும் நாடகமே நமக்கு வேண்டாம். நாளையோடு நிறுத்தி விடுங்கள். இந்த மரத்துாள் மாரியும் நாளை வேண்டாம்” என்று சொல்லிவிட்டார். இதற்கு மேல் அப்பீல் ஏது?  இதற்கேற்றாற்போல் காளமேகம் கடைசி நாளன்று 29.2.1944 ஆம் தேதி இரவு 10 மணிக்கு எங்கள் சிற்றப்பா திரு. டி. எஸ். செல்லம்பிள்ளை அவர்கள் காலமானதாகத் தந்தி வந்தது. எல்லாம் சேர்ந்து நன்றாக உருவாகியிருந்த காளமேளம் நாடகத்தைத் தொடர்ந்து நடத்த வாய்ப்பின்றி நிறுத்தும் படியாக நேர்ந்தது.  பில்ஹனன் திருச்சி வானெலி நிலையம் 29.8-1943ல் பில்ஹணன் நாடகத்தை ஒலிபரப்பியது. நாடகத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர் பங்கு கொண்டார். எனவே அதனை ஆர்வத்தோடு கேட்டோம். நாடக உரையாடல்கள் நன்றாக இருந்தன. அதன் ஆசிரியர் ஏ. எஸ். ஏ. சாமி என்பதை அறிந்தோம். அவரோடு தொடர்பு கொண்டோம், வானெலி நாடகத்தை மேடை நாடகமாக்கித் தருமாறு கேட்டோம். அவர் ஈரோட்டுக்கு வந்து எங்களைச் சந்தித்தார். நாடகத்தைப் படித்தோம். எங்களுக்கு நிரம்பவும் பிடித்தது. நகைச்சுவைக் காட்சிகள் சிலவற்றை எழுதிச் சேர்த்தார் சின்னண்ணா. மதுரகவி பாஸ்கரதாஸ் பாடல்களை எழுதினார். ஏற்கனவே புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பில்ஹணியத்தைப் படித்து அதன் சுவையை அனுபவித்தவன் நான். நாடகத்தின் பிற்பகுதி அதனைத் தழுவியிருக்க வேண்டுமெனக் கூறினேன். ஏ. எஸ். ஏ. சாமி ஏற்றுக்கொண்டார். அதன்படியே எழுதித் தந்தார். அவருடைய உரையாடல்கள் சின்னஞ்சிறு வாக்கியங்களாக புதிய நடையில் அமைந்திருந்தன. ஏ. எஸ். ஏ. சாமி திரைப்படத் துறையில் சிறந்த வசனகர்த்தாவாகப் புகழ் பெறுவார் என்று அப்போதே கூறினேன். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்குப் பில்ஹணன் நடைபெறவிருப்பது பற்றி எழுதினேன். “தங்கள் பில்ஹணியத்திலுள்ள புரட்சிக்கவியின் அடிப் படையில்தான் நாடகத்தின் பிற்பகுதி அமைந்திருக்கிறது. அதனைப் பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டிருந்தேன், அதற்கு பாவேந்தரிடமிருந்து பதிலில்லே. ஒரு வாரத்திற்குப் பின் மீண்டும் எழுதினேன். அதற்கும் பதில் இல்லை. மூன்றாவது முறையாக ஒரு கடிதம் எழுதினேன்.  “தங்கள் புரட்சிக் கவியிலுள்ள சில கருத்துக்களை ‘பில்ஹணன்’ நாடகத்தில் கையாளப்போகிறோம். அதற்குத் தங்களின் அன்பான அனுமதி தேவை. இந்த மூன்றாவது கடிதத்திற்கும் தங்களிடமிருந்து பதில் கிடைக்காவிட்டால் தாங்கள் அனுமதி யளித்ததாகவே கருதப்படும் என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.”  என்று எழுதினேன். அதற்கும் பதில் இல்லை. சரி இனி நேரில் கண்டு சொல்லிக்கொள்ளலாம் என்ற துணிவோடு நாடகத்தை நடத்தினோம். 1944 மார்ச்சு 13ஆம் தேதி பில்ஹனன் அரங்கேறியது.  நிலவுக் காட்சி பில்ஹணனுக்கென்று சில காட்சிகளைத் தயாரித்தோம். பில்ஹணனின் ஆசிரமம், யாமினியின் பூஜை அறை, சூரிய பகவானின் சிலை, கலைபயில் மண்டபம், நிலவுக்காட்சி, சிறைச் சாலை. நாடகத்திற்குப் புதிய ஆடையணிகளும் தயாராயின, ஒரு சிறந்த இலக்கிய நாடகத்தை எந்தெந்த வகையில் அழகு படுத்த முடியுமோ அந்த வகையிலெல்லாம் பில்ஹணனை அழகு செய்தோம். இந்நாடகத்தில் பில்ஹணனாக நான் நடித்தேன். கதாநாயகி யாமினியாக திரெளபதி நடித்தாள். பில்ஹனனில் அவளுடைய அருமையான நடிப்பினை இப்போதும் எண்ணிப் பார்க்கிறேன்; மறக்க முடியவில்லை! இன்னொருவர் அப்படி நடிக்க முடியுமா என்றே எண்ணத் தோன்றுகிறது. திரெளபதியின் இசைத் திறனும் அபாரமான நடிப்பாற்றலும் பில்ஹணன் நாடகத்தின் தரத்தை பன்மடங்கு உயர்த்தின என்பதில் ஐயமில்லே.  பில்ஹணனைப் பிறவிக் குருடனாக எண்ணியிருக்கிறாள் யாமினி. பாடம் நடந்து கொண்டிருக்கிறது. நேரம் போனதே இருவருக்கும் தெரியவில்லை. அன்று பெளர்ணமி; முழு நிலவு தோன்றுகிறது. கவிஞனின் உள்ளம் துள்ளுகிறது. கவிதை ஊற் றெடுக்கப் பாடுகிறான் பில்ஹணன். இந்தக் கட்டத்தில் புரட்சிக் கவிஞரின் பாடலை அப்படியே சேர்த்துக் கொண்டேன்.  தேன் சொட்டும் கவிதை நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை! கோலமுழு தும்காட்டி விட்டால் காதல் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச் சோலையிலே பூத்ததனிப் பூவோ? நீதான் சொக்கவெள்ளிப் பாற்குடமோ? அமுத ஊற்றோ? காலைவந்த செம்பளிதி கடலில் மூழ்கிக் கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்போ?  பாவேந்தரின் தேன் சொட்டும் உவமை நயம் செறிந்த இந்தக் கவிதையினை பியாகு ராகத்தில் பாடிவிட்டு, மதுரகவி பாஸ்கர தாசரின் “அமுத பூரணக் கலையின் மதி” என்னும் பாடலை அத்தோடு இணைத்துப் பாடி உச்சஸ் தாயையில் நிறுத்துவதும், முழு நிலவு தோன்றுவதும், இளவரசி யாமினி பிறவிக் குருடனை கவிஞன் நிலவை எப்படிப் பார்த்தான் என்று வியப்புணர்ச்சியை  வெளிப்படுத்தி நடிப்பதும் சபையோரை மெய்சிலிர்க்க வைக்கும். திரையைக் கிழித்து யாமினி கவிஞனைப் பார்க்கிறாள். அவனும் அவளைப் பார்க்கிறான். கவிஞன் கண்ணிழந்தவன் அல்லன் என்பதை உணர்கிறாள் யாமினி. அவள் நோய் கொண்டவள் அல்லள் என்பதைக் கவிஞனும் அறிகிறான் . இருவர் கண்களும் சந்திக்கின்றன. கவிஞன் மீண்டும் பாடுகிறான்.  மின்னற் குலத்தில் விளைந்ததோ! வான்  வில்லின் குலத்தில் பிறந்ததோ!  கன்னல் தமிழ்க்கவி வானரின் உளக்  கற்பனையே உருப் பெற்றதோ!  பொன்னின் உருக்கிற் பொலிந்ததோ! ஒரு  பூங்கொடியோ மலர்க்கூட்டமோ!  என்னவியப்பிது! வானிலே-இருந்  திட்டத்தோர் மாமதி மங்கையாய்  என்னெதிரே வந்து வாய்த்ததோ-புவிக்கு  ஏதிது போலொரு தண்ணாெளி?  அடடா! என்ன அருமையான கவிதை! இதைப் போன்ற இலக்கிய நயஞ்செறிந்த நாடகங்களை இனிப் பார்க்கப் போகிறோமா என்றே ஏக்கமுண்டாகிறது.  பில்ஹனனில் யாமினியின் தந்தை மன்னன் மதனனாக நடித்தார் தம்பி பகவதி. மன்னன், யாமினி, பில்ஹணன் மூவரும் வாதிடும் கட்டம் சபையோரிடையே சொல்லுக்குச் சொல் கை தட்டலைப் பெற்றது. அவ்வளவு உணர்ச்சிகரமான உரையாடல்களை எழுதியிருந்தார் ஏ. எஸ். ஏ. சாமி.  பில்ஹனனில் நகைச்சுவைப் பகுதி நாங்கள் எதிர்பார்த்த தைவிடச் சிறப்பாக அமைந்தது. மெய்க்கவியாக டி. என். சிவதானு தோன்றிச் சபையோரை வயிறு குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்தார்.  யாமினியின் கனவுக்காட்சிகள் திரைப்படக்காட்சிபோன்று மிக உயர்ந்த முறையில் அமைக்கப் பெற்றிருந்தன. துஷ்யந்தன் சகுந்தலை சந்திப்பு; ராமர் சீதை கன்னிமாடச் சந்திப்பு; அம்பிகாபதி அமராவதி காதல்; குலோத்துங்கன் கோபாவேசத்தோடு வந்து வாளை வீசுதல் ஆகிய காட்சிகளை யாமினியின் படுக்கை அறையில் மெளன நாடகங்களாக மெல்லிய திரையுள்ளே நடித்துக் காட்டச் செய்தோம். ஒவ்வொரு காட்சி மாறும்போதும் சபையோர் ஆரவாரத்தோடு கரகோஷம் செய்தனார்!  திரைப்படத் துறை வரவேற்றது ஏ. எஸ். ஏ. சாமியின் உரையாடல்கள் நன்றாக இருப்பதாகவும், உடனே வந்து நாடகத்தைப் பார்க்க வேண்டுமென்றும் ஜூபிடர் பிக்சர்ஸ் சகோதரர் சோமுவுக்குக் கடிதம் எழுதினேன். அவரும் தந்தி கொடுத்துவிட்டு மறுநாளே வந்தார். நாடகத்தைப் பார்த்தார். சாமியைச் சந்தித்தார். ஆறு படங்களுக்கு வசனம் எழுத உடனே ஒப்பந்தம் செய்தார். பில்ஹணன் 15 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. நாடகம் முடிந்ததும் சென்னைக்குச் செல்லச் சித்தமானார் ஏ. எஸ். ஏ. சாமி. சாமியை அன்போடு ஆதரித்துத் திரையுலகில் முன்னுக்குக் கொண்டு வரவேண்டு மென்று கலைவாணருக்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தனுப்பினேன். சென்னை சென்ற ஒரு வாரத்திற்குப்பின் சாமியிடமிருந்து கடிதம் வந்தது. கலைவாணர் தனக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்துவருவதாக எழுதியிருந்தார். திரைப் படத் துறையில் பணிபுரிய பல ஆண்டுகளாக முயன்று, பின் அம் முயற்சியையே கைவிட்டவர் ஏ. எஸ். ஏ. சாமி. இப்போது பில்ஹணன் நாடகத்தின் மூலம் அவரை இருகரம் கூப்பி வர வேற்றுக் கொண்டது திரைப்படத் துறை. ஈரோட்டை விட்டு சகோதரர் சாமி சென்னைக்குப் புறப்பட்டபோது அவரை மனதார வாழ்த்தி வழியனுப்பினேன்.  சம்பூர்ண இராமாயணமும் சாத்வீக மறியலும் நாடகக் கலை மாநாடுவரை எங்களிடம் நட்பும் பாசமும் வைத்திருந்தார் பெரியார் ஈ. வே. ரா. அவர்கள். மாநாடு குழப்பம் எதுவுமின்றி நல்ல முறையில் நடந்தபின், அந்தப் பாசமும் பரிவும் சிறிது குறைவதுபோல் தோன்றியது. நான் அச்சகத்திற்கு அடிக்கடி செல்வேன். பெரியார் முன்போல் கலகலப்பாகப் பேசுவது இல்லை. எங்கள் மேல் ஏதோ சிறிது கோபமிருப்பதை நான் புரிந்துகொண்டேன். ஆனாலும் அதனைப் புலப்படுத்திக் கொள்ளாமல் வழக்கம் போல் அன்பாகவே பழகி வந்தேன்.  ஏறத்தாழ 11 மாதங்கள் ஈரோட்டில் நாடகங்கள் நடை பெற்றன. நாடக வளர்ச்சிக்குரிய வகையில் நாடகக் கலை அபிவிருத்தி மாநாடும் நடந்தது. சிவாஜி, காளமேகம், பில்ஹணன் ஆகிய மூன்று இலக்கியச் சிறப்பு வாய்ந்த புதிய நாடகங்கள் அரங்கேறின. அடுத்தபடியாகத் திருப்பூருக்குப் போகத் திட்டமிட்டோம். அதில் ஏதோ சிக்கல் ஏற்பட்டது. எனவே காரைக்குடி ஷண்முக விலாஸ் தியேட்டர் பேசி முடிவு செய்யப்பட்டது. ஈரோட்டில் 1944 ஏப்ரல் 1ஆம் தேதி சம்பூர்ண இராமாயணம் பட்டா பிஷேக நாடகமாக வைக்கப்பட்டது.  நாடகத்திற்கு முந்திய நாள் அதிர்ச்சி தரத்தக்க ஒரு செய்தி பரவலாகக் காதில் விழுந்தது. நாளை நடைபெறவிருக்கும் இராமாயணத்தை யாரோ மறியல் செய்யப்போகிறார்கள் என்று. நான் நம்பவில்லை. நன்கு விசாரித்தேன். செய்தி உண்மைதான் என்று தெரிந்தது. நாடக அரங்கின் நுழைவாயிலில் நின்று கொண்டு, “பகுத்தறிவுக்கு முரணான இந்தப் புராண இதிகாச நாடகங்களைப் பார்க்காதீர்கள்” என்று உள்ளே நுழைவோரிடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்வதாக மறியல் நடத்தும் பெரியார் அவர்களின் தொண்டர்கள் திட்டமிட்டிருப்பதாகச் சொன்னார்கள். காலமெல்லாம் நாங்கள் நடத்திய இராமாயணம், பாரதம், சிவ வீலா, கந்தலீலா, கிருஷ்ணலீலா, மயில்இராவணன் எல்லா நாடகங்களையும் பார்த்துவிட்டு, எங்களுக்குப் பாராட்டுகளும் நடத்திப் பெருமைப் படுத்திய பெரியார் அவர்கள் ஏணிப்படிச் செய்கிறார் என்பது புரியாமல் தவித்தோம்.  பெரியண்ணா இச்செய்தியை அறிந்ததும் நாடகத்தன்று காலை போலீஸ் பெரிய அதிகாரியைச் சந்தித்தார். பெரியார்.அவர்களின் தொண்டர்கள் மறியல் செய்வதைத் தாம் தடை செய்ய வில்லையென்றும், பொதுமக்களுக்குத் தொந்தரவு ஏற்படாதவகையில் அமைதியாக மறியல் நடைபெறும்படி பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். போலீஸ் அதிகாரி தாம் வேண்டிய நடவடிக்கையெடுத்துக் கொண்டு அமைதி காப்பதாக வாக்களித்தார்.  எல்லோரும் வருந்தினர் நான் பெரியார் அவர்களைச்சந்திக்க முயன்றேன். அவர் அச்சகத்திலும் இல்லை; வீட்டிலும் இல்லை. எங்கு போய்ச் சந்திப்பது? பெரியாரின் தமையனார் ஈ. வே. கிருஷ்ணசாமி நாயக்கர் அவர்களைச் சந்தித்து விபரங்களைச் சொன்னேன். அவர் மிகவும் வருத்தப்பட்டார். பெரியார் அவர்களின் கடவுள் பற்றிய கொள்கையில் கருத்து வேறுபாடுடைய நண்பர்கள் ஈரோட்டில் ஏராளமாக இருந்தனார். அவர்களெல்லாம் செய்தியைக் கேட்டு வருந்தினார்கள். இராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்ற கிளர்ச்சி சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்த காலம் அது. அந்தக் கொள்கையிலே நாங்கள் முற்றிலும் மாறுபட்டு நின்றோம்.  சமுதாய சீர்திருத்தக் கொள்கைகளிலே பெரியார் அவர்களோடு எங்களுக்கு நெருங்கிய உடன்பாடு இருந்தது. அவரது பெருமைக்குரிய தொண்டினை நாங்கள் சிறிதும் குறைத்து மதிப்பிடவில்லை. பெரியார் அவர்கள் என்றும் எங்கள் மதிப்புக்கு உரியவர்தாம். ஆனாலும் எங்கள் அடிப்படையான சில கொள்கைகளை இதற்காக இழக்க முடியாதல்லவா?  மாலை 6 மணி ஆயிற்று. அறிஞர் அண்ணா ஈரோட்டில் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். அவரைச் சந்திக்க இயல வில்லை. நாடக அரங்கின் முன் போலீசாரின் நடமாட்டம் அதிகரித்தது. ஆங்காங்கு சிலர் கூட்டங் கூட்டமாக நின்றார்கள். ஏதோ நடைப்பெறப் போவது போன்ற சூழ்நிலை காணப்படது. மணி 8 அடித்தது. டிக்கட் கொடுக்கும் அறை திறக்கப்பட்டது. மக்கள் ஆண்களும் பெண்களுமாக சாரி சாரியாக வந்து டிக்கெட் வாங்கினார்கள். வாயில் திறக்கப்பட்டது. பெரியண்ணாவும், கொட்டகைச் சொந்தக்காரர் முதலாளி சாய்புவும் சாய்மான நாற்காலிகளில் நுழை வாயிலருகே அமர்ந்திருந்தார்கள்.  சிவதானு பெற்ற பட்டம் சரியாக 9.30க்கு நாடகம் தொடங்கப் பெற்றது. உள்ளிலும் வெளியிலுமாக மக்கள் குழுமியிருந்தனார். மரியல் எதுவும் நடை பெறவில்லை. எவ்விதக் குழப்பமும் இல்லை. நாடகம் அமைதியாக நடந்தது. அதற்கு முன் நடந்த எல்லா இராமாயண நாடகங்களையும் விட அன்று மிகச் சிறப்பாக் நடந்தது. தமிழ் நாடகக்கலை அபிவிருத்தி மாநாட்டினைப் பொறுப்பேற்று முன்னின்று நடத்திய எங்கள் நகைச்சுவை நடிகர் சிவதானுவை நாடக மாநாட்டின் வரவேற்புக் குழுவினரும், நகரப் பொதுமக்களும் பாராட்ட விரும்பினார். அதற்கு முன் கூட்டியே எங்கள் அனுமதியையும் பெற்றனார். ஈரோடு நகரப் பொது மக்கள் சார்பில் நகரசபைத் தலைவர்.திரு ஆர். கே. வேங்கடசாமிநாயக்கர் அவர்கள்.சிவதாணு வின் நாடகக்கலை ஆர்வத்தினையும் நகைச்சுவைத் திறனையும் பாராட்டி நகைச்சுவைச் செல்வன் என்ற சிறப்புப் பட்டம் பொறிக்கப் பெற்ற பொற்பதக்கத்தை வழங்கினார்.  அண்ணா தலையீட்டால் அமைதி நிலவியது மறுநாள் விடிந்ததும் அறிஞர் அண்ணா அவர்கள் தலையீட்டினல் முன்னாள் இரவு மறியல் நடைபெறவில்லை என்பதை அறிந்தேன். நாடகக்கலை மாநாட்டன்று தலைவர் ஆர். கே. சண்முகம் அவர்களுக்கு கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடை பெறாமல் தடுத்ததும் இப்போது இராமாயணம் நாடகத்தை மறியல் செய்ய இருந்தவர்களுக்கு அறிவுரை கூறித் தடுத்து நிறுத்தியதும் அறிஞர் அண்ணா அவர்களிடம் நான் வைத்திருந்த மதிப்பைப் பன்மடங்கு உயர்த்தின. அவருக்கு நன்றி கூறி நீண்ட கடிதம் எழுதினேன்.  இந்த நிகழ்ச்சிக்குப் பின்னும் பெரியார் அவர்கள்மீது என்னை பொறுத்த வரையில் மனத்தாங்கல் எதுவும் இல்லை. ஏப்ரல் 20 ஆம் தேதி கொட்டகை முதலாளி கான்சாகிப் சேக்தாவுத் அவர்கள் கம்பெனிக்கு ஒரு பெரிய விருந்து நடத்தினார். நகரப்பிரமுகர்கள் எல்லோரும் கலந்து கொண்டார்கள். பெரியார் அவர்கள் வந்து கலந்துகொள்ளாதது எனக்குப் பெருங்குறையாக இருந்தது, இருந்தாலும் விருந்து முடிந்ததும் நான் மட்டும் பெரியார் அவர்கள் இல்லம் சென்று வழக்கம்போல் எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டேன். மறுநாள் புறப்பட்டு காரைக்குடி வந்து சேர்ந்தோம்.                                        பாகவதரின் கலைக் குடும்பம்   காரைக்குடி வைரம் அருணசலம் செட்டியாரின் தியேட்டரில் 5.5.44-இல் சிவலீலா தொடங்கியது. தியேட்டரில் நாடகம் நடத்துவதற்கு லைசென்ஸ் கொடுக்க நகர சுகாதார அதிகாரி ஏதோ தகராறு செய்தார். அவரைச் சரிபடுத்தி லைசென்ஸ் வாங்குவதற்குள் 14 நாட்கள் ஓடிவிட்டன. ஏப்ரல் 21ம் தேதி காரைக்குடிக்கு வந்தோம். மே 5-ம் தேதிதான் நாடகத்திகுரிய லைசென்ஸ் கிடைத்தது.  சிவலீலா தொடர்ந்து நல்ல வசூலில் நடைபெற்றது. சூல மங்கலம் பாகவதரின் பிள்ளைகளான டாக்டர் மீனாட்சி சுந்தரமும் சங்கீத பூஷணம் ராதாகிருஷ்ணனும் திருமயத்தில் இருந்தார்கள். டாக்டர் மீனாட்சி சுந்தரம் சிறந்த ரசிகர். அவருடைய மனைவி கற்பகம் அம்மையார் அவரைவிடப் பிரமாத ரசிகை. கணவனும் மனைவியும் குழந்தைகளோடு இரண்டு நாளைக்கு ஒரு முறை சிவ லீலா பார்க்க வருவார்கள். வரும்போதெல்லாம் எங்களுக்குச் சாப்பிட ஏதாவது கொண்டு வருவார்கள். பலகாரங்களைச் சுவை யோடு தயாரிப்பதில் கற்பகம்மாளுக்கு நிகர் அவரேதான். கொண்டுவரும் காபிக்காகவும், கோதுமை அல்வாவுக்காகவும் எங்கள் சிவதாணுவும், பிரண்டு ராமசாமியும் காத்துக் கிடப்பார் கள். கற்பகம்மாளின் அன்புக்கும் ஆர்வத்துக்கும் ஈடு இணை சொல்ல முடியாது. நல்ல சங்கீதக் குடும்பம் அது. டாக்டரும் அவர் துணைவியும் பேசிக் கொள்வதைக் கேட்பதற்கே சுவையாக இருக்கும் டாக்டர் மீனாட்சி சுந்தரம் ஏதாவது சொல்லுவார்; உடனே கற்பகம் அம்மையார் “பாத்தேளோ! இப்படித்தான் இவர் சதா ஏதானும் உளறிண்டிருப்பார். இவாளுக்கெல்லாம் என்ன தெரியும்? எல்லாம் பெரியவாள் போட்ட பிச்சை, ஏதோ அந்தக் குடும்பத்தில் வந்து, அவர் புள்ளையாப் பொறந்த தனாலே இவாள்ளாம் மனுஷா மாதிரி நடமாடறா!” என்று மாமனார் சூலமங்கலம் பாகவதரை எப்போதும் உயர்த்தியே பேசுவார். மாமனரிடம் இந்த அளவுக்கு அன்பும் மரியாதையும் காட்டும் ஒரு மருகியை நான் இதுவரை கண்டதில்லை. பாகவதர் குடும்பம் நாடகத்திற்கு வந்து விட்டால் ஆயிரம் ரசிகர்கள் வந்தது போல, எங்களுக்கெல்லாம் ஒரே குதுரகலமாயிருக்கும்.  அக்குடும்பத்தாரின் ஒவ்வொரு செயலிலும் கலையம்சம் நிறைந்திருக்கும். குலமங்கலம் பாகவதர் அவர்களுடைய ஒவ்வொரு பேச்சிலும் நகைச்சுவை ததும்பி நிற்கும். அனுபவப் பேருண்மைகளை அனாயசமாகக் கொட்டுவார். இத்தகைய புலமையும் அன்பும் நிறைந்த பெரியவர் 1943-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி இறைவன் திருவடியில் அமைதி பெற்றதை அறிந்தபோது நாங்கள் அனைவரும் பெரும் துக்கத்தில் ஆழ்ந்தோம். அவருடைய திருப்பெயரால் குலமங்கலத்தில் ஒரு சங்கீதமகால் நிறுவ அப்போது நிதி சேகரித்துக் கொண்டிருந்தார் கள். அந்த நிதிக்கு நாங்களும் ஒருநாள் நாடக வசூலை காணிக்கையாக அளித்தோம்.  22வது நாள் நடந்த சிவ லீலாவுக்கு குமரராஜா முத்தையா செட்டியார் அவர்கள் வந்திருந்தார். மூன்று பெரிய வெள்ளிக் கோப்பைகளைப் பரிசாக வழங்கிப் பாராட்டினார். மொத்தம் 37 நாட்கள் சிவலீலா நடைபெற்றது. 37 வது சிவலீலா நாடகம் சூலமங்கலம் பாகவதர் நிதிக்காக நடத்தப் பெற்றது. அன்று ஆயிரம் ரூபாய்களுக்கு மேல் வசூலாயிற்று. அந்தத் தொகையை அப்படியே டாக்டர் மீனாட்சி சுந்தரத்திடம் கொடுத்தோம். 1937-இல் ஐம்பதும் நூறும் வசூலான காரைக்குடியில் இப்போது ஆயிரக்கணக்கில் வசூலாயிற்று.  தனி வீட்டில் குடியிருந்தேன் கம்பெனிக்கு ஒரு பெரிய வீடும், அதற்கு ஒரு பர்லாங் துரத்தில் திரெளபதி தம்பதிகள், அக்கா மற்றும் பெண்களுக்காக ஒரு வீடும் பார்த்துக் குடியிருந்தார்கள். ஒத்திகை முதலியவை பார்ப்பதற்கு வசதியாக நானும் எனக்குத் துணையாக எங்கள் குழுவின் நீண்ட காலப் பணியாளர் அனந்தன் நாயரும் குடியிருந்தோம். அனந்தன் கம்பெனியில் ஆரம்பகால முதலே இருந்து வருபவர். இடைக்காலத்தில் ஆடை அணிவிப்போராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர். என்னிடம் மிகுந்த அன்பு கொண்டவர். இடையே சில ஆண்டுகள் நோயினல் பீடிக்கப்பட்டு காசி-கயா முதலிய வட இந்தியத் தலங்களுக்கெல்லாம் சென்று சன்னியாசியாகவே காலம் கழித்தவர். மதுரையில் 108-வதுநாள் சிவலீலா நடைபெற்ற போது ஏறத்தாழ ஆயிரம் பரதேசிகளுக்கு அன்னம் பாலித்தோம். அப்போது பரதேசிகளுள் ஒருவராக வந்த அனந்தனை நாங்கள் அடையாளம் கண்டு பிடித்தோம். சந்நியாசிக் கோலத்தைக் களைத்து விட்டுக் கம்பெனியிலேயே இருக்கும்படி கேட்டுக் கொண்டோம். அதன் பிறகு அனந்தன் எனக்கு அன்புப் பணியாளராகக் கம்பெனியிலேயே இருந்தார்.  கம்பெனிப் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் முறைப்படி பரத நாட்டியம் கற்றுத்தர பிரபல நட்டுவனார் திரு முத்துக்குமா சாமிப்பிள்ளையைக் கம்பெனியில் சேர்த்துக் கொண்டோம். அவர் அதிகாலையிலேயே நீராடி பூஜை புனஸ்காரங்களெல்லாம் செய்யக் கூடியவர். நானிருந்த தனிவீட்டிலேயே அவருக்கு ஒர் அறை ஒதுக்கிக் கொடுத்தேன். தினமும் காலை 10 மணிமுதல் 12மணி வரை நானிருந்த இடத்திலேயே நடனப் பயிற்சி நடைபெறும். கம்பெனிப் பிள்ளைகளில் சிறப்பாக ஜெயராமன், செளந்தராஜன், சங்கரன் ஆகிய மூவரும் மற்றும் சிலரும் இவரிடம் மிகுந்த சிரத்தையோடு நடனம் கற்றுக் கொண்டார்கள். அவர்கள் மூவரும் இப்போது பரதநாட்டிய ஆசிரியர்களாக நல்லமுறையில் பணியாற்றி வருகிறார்கள்.  ஈரோட்டில் வந்த இளஞ் சிறுமியர் ஈரோட்டில் சிவலீலா நடை பெற்ற போது, எங்கள் கம்பெனியின் பழைய பலசாலி கோபாலபிள்ளை தம் சொந்த ஊராகிய கோட்டயத்திலிருந்து இரு சிறுமியரை அவர்கள் தந்தையோடு அழைத்து வந்தார். இருவரில் மூத்தவள் சீதாவுக்குப் பதினான்கு வயதிருக்கும். நன்றாகப் பாடினாள். அவள் தங்கை இரத்தினம் சுமாராகப் பாடினாள். இருவருக்கும் குரல் நன்றாயிருந்தது. எனவே, கம்பெனியில் சேர்த்துக் கொண்டோம். இரு சிறுமியரும் சின்னஞ்சிறு வேடங்களில் நடித்தார்கள். சீதா இராமாயணத்தில் பால சீதையாக நன்றாக நடித்தாள். பில்ஹணன் நாடகம் தயா ரான போது யாமினியின் தோழி மஞ்சுளா வேடத்தைச் சீதாவுக்குக் கொடுத்தோம். அதனையும் அழகாகச் செய்தாள். எதிர் காலத்தில் சிறந்த நடிகையாக வருவதற்குரிய அறிகுறிகள் அவளிடமிருந்தன. இவ்விரு சகோதரியரும் முத்துக் குமாரசாமிப் பிள்ளையிடம் நடனப்பயிற்சி பெற்றனார்.  கடையம் சகோதரிகள் இவர்களைப் போலவே மற்றும் இரு சகோதரியர் காரைக்குடியில் சேர்ந்தார்கள். அவர்களுக்கும் இதே வயதுதான் இருக்கும். இருவருக்கும் நல்ல குரல். மூத்தவள் பெயர் ராஜம். இளையவள் சந்திரா. இவ்விருவரும் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் துணைவியார் திருமதி செல்லம்மாள் பாரதியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த கடையம் என்ற சிற்றுார். எனவே ராஜம் சந்திரா சகோதரியரைக் கடையம் சகோதரிகள் என்றே நாங்கள் குறிப்பிட்டு வந்தோம். இவ்விளம் சிறுமியரும் நட்டுவனார் முத்துக்குமாரசாமிப் பிள்ளையிடம் மிகுந்த ஆர்வத்தோடு நடனப் பயிற்சி பெற்றார்கள்.  வள்ளல் டாக்டர் அழகப்பச் செட்டியார் காரைக்குடியில் தமிழ்க்கடல் ராய சொக்கலிங்கம்அவர்கள். தேசபக்தர் சா. கணேசன் அவர்கள், பட அதிபர் ஏ. வி.மெய்யப்பன் அவர்கள் ஆகிய எல்லோரும் ஒளவையார் நாடகம் பார்க்க ஆர்வத்தோடு வந்தார்கள். ஒளவையார் தொடர்ந்து ஒருமாதத்திற்கு மேல் நடைபெற்றது. 26-8-44இல் நடந்த ஒளவையார் நாடகத்திற்குக் கோட்டையூர் கொடை வள்ளல் டாக்டர் அழகப்ப செட்டியார் அவர்கள் தலைமை தாங்கி அருமையாகப் பேசினார். பெரிய வெள்ளிக் கோப்பையொன்று பரிசளித்தார். தமிழ் வளர்ச்சிக்குரிய புதிய நாடகம் ஏதாவது தயாரிக்கும் போது, அதற்குரிய காட்சித் தயாரிப்புச் செலவு முழுவதையும் தாமே ஏற்றுக் கொள்வதாகத் தமது செயலாளரிடம் சொல்லி யனுப்பினார். எங்களுக் கெல்லாம் நிரம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒளவையாருக்கு ஆச்சியர் வருகை நாளாக ஆக அதிகமாகிக் கொண்டே வந்தது. தாய்மார்களுக்காக ஆண்கள் பகுதியிலிருந்தும் கொஞ்சம் இடம் ஒதுக்கினோம்.  கலைவாணர் வருகையும் கலையுணர்வும் கந்தலீலா நாடகம் ஒருமாத காலம் தொடர்ந்து நடைபெற்றது. திடீரென்று ஒரு நாள் கலைவாணரும், ஏ. எஸ். ஏ. சாமியும் காரில் வந்து நான் தங்கியிருந்த தனி வீட்டின் முன் இறங்கினார்கள். நான் அவர்களை வரவேற்றேன். கலைவாணர் உள்ளே வந்து என்னோடு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். சாமி, பெரியண்ணாவைப் பார்த்து வரச்சென்றார். கே. ஆர். இராமசாமியைப்பற்றிக் கேட்டேன். “இராமசாமி இனி நாடகத்துக்கு வருவது சந்தேகம். திரைப்படத் துறையில் அவனுக்கு நல்ல சந்தர்ப்பம் இருக்கிறது” என்று கூறினார் கலைவாணர். முத்துக்குமாரசாமி நட்டுவனரை நான் அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன், “ஓ! இவரைப் பற்றி நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன்.” என்றார் கலைவாணர். நட்டுவனார் மிகுந்த ஆர்வத்தோடு ‘சிறிது அபிநயம் பார்க்கிறீர்களா?’ என்று சொல்லிவிட்டு கலைவாணரின் அனுமதிக்காகக் காத்திராமல் உட்கார்ந்த நிலையிலேயே பாடி அபிநயம் பிடிக்க ஆரம்பித்துவிட்டார். கலைவாணர் அவரைத் தடுத்து நிறுத்தாமல் முழுதும் கேட்டார். பாட்டு முடிந்ததும் தன் சட்டைப் பையிலிருந்த 10 ரூபாய் நோட்டை யெடுத்து ‘மன்னிக்க வேண்டும்; இப்போது என் கையிலிருப்பது இதுதான்; கட்டாயம் நீங்கள் பெற்றுக் கொள்ளவேண்டும்’ என்று நட்டுவனார் கையில் கொடுத்தார். நட்டுவனார் இயன்றவரையில் நோட்டை வாங்க மறுத்தார். கலைவாணர் விடவில்லை, “தங்களைப் போன்ற கலைஞர்களுக்கு நான் எவ்வளவோ செய்ய வேண்டும். தற்சமயம் இதை வாங்கிக் கொள்ளுங்கள். சென்னைக்கு வரும்போது அவசியம் என்னை வந்துபாருங்கள்” என்றார். கலைவாணரின் அந்த உணர்வைக் கண்டு என் மெய்சிலிர்த்தது. பின்னும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுச் சென்றார் கலைவாணர். நாடகம் பார்க்க வருமாறு அழைத்தேன், “வேறு காரியமாக வந்தேன். இருந்தால் வருகிறேன்” என்று புறப்பட்டு விட்டார்.  சென்னைப்பயணம் பில்ஹணன் நாடக நூலை அச்சிட விரும்பினோம். சென்னையில் அச்சிட வேண்டுமென்று ஆசைப்பட்டார் ஆசிரியர் சாமி. எங்கள் சார்பில் அதன் முழுப்பொறுப்பையும் தாம் ஏற்றுக்கொள்வதாக வாக்களித்தார். பெரியண்ணாவின் ஒப்புதலோடு சென்னையில் அதற்கான வேலைகளைத் தொடங்கினார். ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் அதற்குப் பொறுத்தமான நிழற்படங்களை வரைய ஏற்பாடு செய்தார். நாடகத்தை மூன்று அங்கங்களாகப் பிரித்து, மொட்டு, மலர், மணம் என்று மூன்று அங்கங்களுக்கும் பெயர்சூட்டி ஒவ்வொன்றுக்கும் தனியேஒவியங்கள் தீட்டச் செய்தார். சென்னை கமர்ஷியல் பிரிண்டிங் அச்சகத்தில் பில்ஹணன் அச்சாகிக் கொண் டிருந்தது, ஈரோட்டில் நடந்த தமிழ் மாகாண நாடகக்கலை அபிவிருத்தி மாநாட்டு நடவடிக்கைகளையும் அப்படியே அச்சிட விரும்பினார். மாநாட்டின் செயலாளர் சிவதாணு. அந்நூல் காரைக் குடி குமரன் பவர் பிரஸ்ஸிலேயே அச்சிடப்பெற்றது. மேலட்டையை மட்டும் சென்னையிலேயே அச்சிட ஏற்பாடு செய்தோம். இருநூல்களுக்குமான வரைபடங்கள் சென்னையிலிருந்து வந்தன. இவை சம்பந்தமான வேலைகளைக் கவனிக்க நான் சென்னைக்குப் பயணமானேன்.  சென்னையில் கலைவாணரைச் சந்தித்தேன். ஜூபிடர் அலுவலகத்தில் ஏ. எஸ். ஏ. சாமியைப் பார்த்தேன். பில்ஹணன் நாடக நூலின் மேலட்டை மிக அழகாக இருந்தது. கண்ணைக் கவரும் முறையில் அச்சிடப் பெற்றிருந்தது. நடிப்பிசைப் புலவரையும் பார்த்தேன். நான்கு நாட்கள் அங்கு தங்கினேன். நாடகக் கலை மாநாட்டு நூலின் மேலட்டையையும் பில்ஹணன் நாடக நூலையும் விரைவாக அனுப்பச் சொல்லி விட்டுக் காரைக்குடிக்கு வந்து சேர்ந்தேன்.  நாடகக்கலை மாநாட்டு நூல் நாடகக்கலை மாநாட்டு நூல் அழகாக அமைந்தது. அப்போது தமிழ் நாட்டிலிருந்து வந்த அத்தனை நாடக சபையினரும் விளம்பரம் கொடுத்து ஆதரித்தனார். மாநாட்டுக்கு,  நன்கொடை வரவு ரூ. 1154-00  மாநாட்டன்று டிக்கட் விற்பனை வரவு ரூ. 1819-00  ஆக மொத்த வரவு ரூ 2973-00  2973–0–0 செலவு விபரம் ரூ. 2365-3-0  இருப்பு ரூ. 607.13-0  இருப்புத் தொகையையும் விளம்பரத் தொகையையும் வைத்துக் கொண்டு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தமிழ் மாகாண நாடகக்கலை அபிவிருத்தி மாநாடு என்னும் நூலை மிகச் சிறப்பாக வெளியிட்டார் சிவதாணு. காரைக்குடியில் பில்ஹணன் நாடகம் நடை பெற்றபோது மாநாட்டு நூலும், பில்ஹணன் நாடக நூலும் வெளியிடப் பெற்றன. பில்ஹணன் காரைக்குடியில் ஒரு மாத காலம் நடைபெற்றதால் நாடக அரங்கிலேயே முன்னுாற்றுக்கும் மேற்பட்ட நாடக நூல் விற்பனை ஆயிற்று.  அடுத்தபடியாக திருச்சிராப்பள்ளியில் நாடகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. 1-11-44 இல் மனோகராவை பட்டா பிஷேக நாடகமாக நடத்தி முடித்துக் கொண்டு திருச்சிக்குப் பயணமானோம்.                                                      தமிழ் நாடகப் பரிசுத் திட்டம்   நவம்பர் 4 ஆம் நாள் திருச்சி சேர்ந்தோம். நாடகம் நடை பெறும் நகர சபைத் தியேட்டரில் தங்கினோம். கம்பெனிக்கு வீடு தேடியலைந்தோம். எங்கும் கிடைக்கவில்லை. பெண்களுக்கு மட்டும் தென்னுரில் ஒரு வீடு கிடைத்தது. நாங்கள் எல்லோரும் தியேட்டரிலேயே குடியிருக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. சமையல்மட்டும் பக்கத்திலுள்ள ஒருசிறிய வீட்டில் செய்து கொட்டகையில் கொண்டு வந்து பரிமாறினார்கள். இதனால் நாடகத்தைத் தொடங்கவும் தாமதம் ஏற்பட்டது. கரூர் வெண்ணெய் மலை செட்டியாருக்குத் தென்னுாரில் பெரிய வீடு இருந்தது. அவர் தேவகோட்டையில் இருந்தார். அவரைப் பார்த்துவர தம்பி பகவதி தேவக்கோட்டை போய்த் திரும்பினார். செட்டியார் ஊரில் இல்லை.வேறு வழியின்றிக் கொட்டகையிலேயே தங்கியிருந்தோம்.  17.11.44இல் திருச்சியில் சிவலீலா தொடங்கியது. 1939 இல் திருச்சியில்தான் சிவலீலாவை அரங்கேற்றினோம். அப்போது வருவாயில்லை. இப்போது அதேதிருச்சியில், அதே நாடக அரங்கில் நான்காண்டுகளுக்குப் பின் சிவலீலாவை அமோகமாக வரவேற்றார்கள். ஞாயிறு புதன்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கும்,மற்ற நாட்களில் இரவு 9-30 மணிக்குமாக நாடகம் தொடர்ந்து 60 நாட்கள் நடைபெற்றது. வைரவிழா கொண்டாடினோம். தஞ்சை நகரசபைத் தலைவர் திரு ஏ. ஒய். அருளானந்தசாமி காடார் சிவ லீலா வைர விழாவுக்குத் தலைமை வகித்துப் பாராட்டினார்.  தமிழ் நாடகப் பரிசு சிறுகதைப் போட்டிப்பரிசு; தொடர்கதைப் போட்டிப்பரிசு; கட்டுரைப்பரிசு என்றெல்லாம் பத்திரிகைகள் நடத்துகின்றனவே நாடகப்பரிசு என்று ஏன் ஒருவரும் நடத்தவில்லை? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இரண்டு மூன்று நாட்கள் இதைப் பற்றி நன்கு சிந்தித்தேன். ஏன்?நாமே ஒரு போட்டி நடத்தினுலென்ன? என்று தோன்றியது. பெரியண்ணா சின்னண்ணா இருவரிடமும் கலந்து யோசித்தேன். 1000 ரூபாய்கள் பரிசுக்காக ஒதுக்கலா மென்று பெரியண்ணா கூறினார். மறுநாளே அதற்கான ஒரு பெரியதிட்டம் வகுத்தோம். பரிசுக்குரிய நாடகங்களைத் தேர்ந் தெடுப்பதற்கு நீதிபதிகளாக யாரைப்போடலாம் என்றவிவாதம் எழுந்தது. இந்தப் பிரச்சினைகளைப்பற்றி திருச்சியிலுள்ள எழுத் தாள நண்பர்கள் சிலருடன் கலந்து ஆலோசித்தோம். எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒரு மனப்பட்ட கருத்து உருவாகவில்லை. ஒருவருக்குப் பிடித்த நீதிபதி மற்றொரு எழுத்தாளருக்குப் பிடிக்க வில்லை. எங்களுடைய நடுநிலை உணர்வில் எனக்கு நம்பிக்கை யிருந்தது. எல்லோரிடமும் நன்கு விவாதித்த பின் கடைசியாக நாங்களே நீதிபதிகளாக இருந்து நாடகங்களைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தோம். 1-12-44ல் தமிழ் நாடகப்பரிசு என்ற துண்டுப் பிரசுரத்தின் மூலம் எங்கள் திட்டத்தைப் பத்திரிகைகளுக்கு அறி வித்தோம். போட்டிப் பரிசு என்னும் சொல்லை இந்தத் திட்டத்தில் பயன்படுத்த நாங்கள் விரும்பவில்லை. அதனால்தான் ‘தமிழ் நாடகப் பரிசு’ என்று அறிவித்தோம். நாங்கள் பத்திரிகைகளுக்கு அனுப்பிய பிரசுரம் இதுதான்.  தமிழ் நாடகப் பரிசு ரூ. 1000  தமிழ் நாடகக் கலை வளர்ச்சியில் நாட்டங் கொண்ட எழுத்தாளர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.  1. தமிழ் நாட்டின் முன்னேற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்டு தமிழர்களின் இன்றைய சமூக வாழ்க்கையையோ, பழந்தமிழ் மன்னார்களின் சரித்திரத்தையோ அடிப்படையாக வைத்துக் கற்பனையாக எழுதவேண்டும்.  2. மொழிப்பெயர்ப்போ, தழுவலோ கூடாது.  3. மூன்று மணி நேரத்தில் மேடையில் நடிப்பதற்கேற்ற முறையில் 25 காட்சிகளுக்கு மேற்போகாமல் இருக்க வேண்டும்.  4. நாடகத்துடன் கதைச் சுருக்கமொன்றும், காட்சி விபரக் குறிப்பொன்றும் இணைக்கப்பட வேண்டும்.  5. 1945 ௵ ஜூன் மாதம் 1௳ க்குள் எமக்குக் கிடைக்கும் படி அனுப்பப்பட வேண்டும்.  6. எல்லாவற்றிலும் சிறந்ததென்று கருதப்படும் நாடகத்திற்கு முதற்பரிசாக ரூ. 600ம், இரண்டாவதாகக் கருதப் படும் நாடகத்திற்கு ரூ400ம் அளிக்கப்படும்.  7. பரிசுக்குரிய நாடகங்களைத் தேர்ந்தெடுக்கும் சகல பொறுப்பும் எம்மைச் சேர்ந்தது.  8. பரிசு பெறும் நாடகங்களின் சகல உரிமைகளும் எம்மைச் சேர்ந்தது.  9. பரிசு பெறும் நாடகங்களில் எந்தவிதத் திருத்தமும் செய்து நடிக்க எமக்கு உரிமையுண்டு.  10. பரிசு பெறாதவைகளில், நடிப்பதற்கேற்றவை என்று கருதப்படும் நாடகங்களை, ஆசிரியர் அனுமதியின் மேல் பரிசளித்து ஏற்றுக் கொள்ளப்படும்.  11. 1945 ௵ செப்டம்பர் மாதம் 1.ந்தேதி பரிசின் முடிவு அறிவிக்கப்படும்.  டி. கே. எஸ். சகோதரர்கள்  1- 12, 44. திருச்சி.  பத்திரிகைகளின் பாராட்டு எங்களுடைய இந்த ஆத்மார்த்தமான முயற்சியினை வர வேற்றும், பாராட்டியும், தலையங்கம் தீட்டியும் உற்சாகப் படுத்திய பத்திரிகைகள் பல, அவற்றில் எனக்குக் கிடைத்தவை.  பாரததேவி - ஹிந்துஸ்தான்  சிவாஜி - கலாமோகினி  கிராம ஊழியன் - சினிமா  உலகம் நாரதர் - பிரசண்ட விகடன்  நவயுவன் - செட்டி நாடு  ஹனுமான் - சினிமா நிலையம்  கலை வாணி - குமரன்  பத்திரிக்கை மூலம் இவ்வாறு கிடைத்த பாராட்டைவிட நூற்றுக் கணக்கான நாடக ரசிகர்கள் எங்களுடைய இந்த முயற்சிகளைப் பாராட்டி நாங்கள் இதில் வெற்றி பெற வேண்டுமென நல்லாசி கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது.  தமிழ் நாடகப் பரிசு சம்பந்தமான இந்தப் பிரசுரங்களை, எங்களுக்கு அறிமுகமான தனிப்பட்ட எழுத்தாளர்கள் பலருக்கும் அனுப்பியிருந்தோம். பத்திரிக்கைகளிலே வந்த செய்திகளைப் பார்த்து, எங்களுக்கு எழுதிக் கேட்ட எழுத்தாளர்கள் பலருக்கும் பிரசுரங்களை அனுப்பி வைத்தோம். இந்தத் திட்டத்தில் புராண இதிகாச நாடகங்கள் வேண்டுமென்று நாங்கள் கேட்கவில்லை. சமூக நாடகங்களையும் சரித்திர நாடகங்களையும்தான் கேட்டிருந்தோம். ஈரோட்டில் நாடகக்கலை அபிவிருத்தி மாநாடு கூட்டிய எங்கள் நோக்கத்தில் சூழ்ச்சியோ தந்திரமோ எதுவும் இல்லையென்பதை இதன் மூலம் தெளிவுப்படுத்தி இருந்தோம். புதிய நாடகக்தை உருவாக்கப் போதுமான அவகாசம் கொடுத்திருந்தோம். ஆனால் முதல் நாடகம் 8- 1-45ல் எங்களுக்குக் கிடைத்தது, உற்சாகமளிப்பதாக இருந்தது. தொடர்ந்து வாரத்திற்கு இரண்டொரு நாடகங்கள் வந்து கொண்டேயிருந்தன. பிரசுரத்தில் குறித்தபடி 1. 6. 45 வரை காத்திருந்தோம். அதற்குப் பின்னார் நானும் சின்னண்ணாவும் தனித் தனியாகப் படித்துக் குறிப்பெடுத்தோம். மொத்தம் வந்த 59 நாடகங்களில் 10 நாடகங்களை முதலில் தேர்ந்தெடுத்தோம். அவற்றை மீண்டும் படித்தோம்.  பரிசுக்குரிய நாடகங்கள் இறுதியாகப் பரிசுக்குரிய இரு நாடகங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டன. குறித்தபடி 1. 9. 45இல் எங்கள் முடிவினைப் பிரசுரமாக வெளியிட்டுப் பத்திரிக்கைகளும் போட்டியில் கலந்து கொண்ட எழுத்தாளர்களுக்கும் அறிவித்தோம். ஒரு தினசரிப் பத்திரிகை யிலும், வார இதழிலும், எங்கள் முடிவை விளம்பரமாகவும் கொடுத்தோம். நடுநிலையுணர்வோடு நாங்கள் அளித்த தீர்ப்பு இது.  தமிழ் நாடகப் பரிசு ரூ 1000  முடிவு விவரம் இப்பரிசுத் திட்டத்தில் கலந்துகொண்டு நாடக மெழுத முன் வந்த எழுத்தாளர்கள் அனைவருக்கும் எங்கள் அன்பு நிறைந்த வணக்கங்கள்.  முதற் பரிசு ரூ. 600       இரண்டாவது பரிசு ரூ. 400   அவள் விபசாரியா?       இராஜராஜசோழன்   சமூக நாடகம்            சரித்திர நாடகம் ல. சேதுராமன், அரவங்குறிச்சி அரு. இராமநாதன், கண்டனூர்  நடிப்பதற்கேற்றவை யென்று கருதி ஆசிரியரின் அனுமதி பெற்ற நாடகங்கள்.  புயல் (சமூக நாட்கம்)    வீரப்பெண் (சரித்திரநாடகம்)  ‘அகிலன்’                  பி. எக்ஸ். ரங்கசாமி பி. ஏ.                              பாளையங்கோட்டை  இப்பரிசுத் திட்டம் 1. 12. 44ல் வெளியிடப்பட்டது.  290 எழுத்தாளர்களுக்குத் தனிப்பட்ட முறையில் அழைப்புகள் அனுப்பப்பட்டன.  குறித்தபடி 1- 6. 45 வரை வந்த நாடகங்களின் மொத்த எண்ணிக்கை-59.  பரிசுத் தொகை 1- 9. 45ல் அனுப்பி வைக்கப்பட்டது.  இதர நாடகங்கள், குறித்த விலாசப்படி திருப்பியனுப்பி வைக்கப்படும்.  எங்களுடைய இம்முயற்சியை வரவேற்று ஆசி கூறிய அன்பர்களுக்கும் குறிப்புகள் வரைந்த பத்திரிக்கைகளுக்கும் இதய பூர்வமான நன்றி.  டி. கே. எஸ். சகோதரர்கள் உரிமையாளர்கள் ஸ்ரீபாலஷண்முகானந்தசபா 1. 9. 45. முகாம். திருச்சி  1945 இல் தமிழ் நாடகப் பரிசுகள் மூலம் எங்களுக்குக் கிடைத்த இராஜராஜ சோழன் நாடகத்தைத்தான், பத்தாண்டுகளுக்கு பின் 1955இல் அரங்கேற்றினோம். அதனைப் பற்றிய விவரங்களைப் பின்னால் அறிவிப்பேன்.  தமிழ் நாடகக் கலை வளர்ச்சிக்காக இப்படி ஒரு பரிசுத் திட் டத்தை 28 ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் நடத்தினோம் என்ற செய்தியினை இன்றையத் தலைமுறையினார் அறிந்திருக்க முடியாதல்லவா? அதனால்தான் சற்று விவரமாக இதனைக் குறிப்பிட்டேன்.  தமிழ் நாடகப் பரிசினை நாங்கள் வெளியிட்டதற்கும், அது பற்றிய முடிவினை அறிவித்ததற்கும் இடைப்பட்ட நீண்டகால இடைவெளியில் எத்தனையோ சுவையான நிகழ்ச்சிகளும், கவலை தரும் சம்பவங்களும் நடந்துள்ளன. பரிசு பற்றிய செய்தினைத் தொடர்பாக அறிவித்துவிட எண்ணியே இடைப்பட் நிகழ்ச்சிகளைச் சிறிது ஒத்தி வைத்தேன்.      மேதைகளின் விசித்திரப் பண்புகள்   காரைக்குடியில் இருந்தபோது புரட்சிக் கவினார் பாரதிதாசன் கானாடுகாத்தான் வந்திருப்பதாகச் செய்தி கிடைத்தது. கவிஞரை நேரில் காணவும் பில்ஹணன் சம்பந்தமான அனுமதியைப் பெறவும் எண்ணிக் கானடுகாத்தான் சென்றேன். எங்கள் நண்பர் திரு வை. சு. சண்முகம்செட்டியார் இல்லத்தில் இருப்பதாக அறிந்து அங்கு சென்றேன். செட்டியார் அவர்களைப் பார்த்தேன். செய்திகளை விபரமாகச் சொன்னேன், வை. சு. ச. அவர்கள் மகாகவி பாரதியோடு நெறுங்கி பழகியவர். கவினார்களோடு எச்சரிக்கையாகப் பழகவேண்டுமென்று எனக்குச் சில அறிவுரைகளையும் கூறினார். பாரதிதாசன் 10 நிமிடங்களுக்கு முன்புதான் பள்ளத்துரர் போயிருப்பதாகச் சொன்னார். பாரதியாரைப்பற்றி ஒரு விசித்திரமான செய்தியையும் அறிவித்தார்.  நூறு ரூபாய் கோட்டு ஒருநாள் செட்டியார் இல்லத்திற்குப் பாரதியார் வந்து தங்கியிருந்தபோது, திடிரென்று “எனக்கு அவசரமாக ஒரு நூறு ரூபாய் வேண்டும்; கொடுப்பீரா?” என்றாராம் பாரதி. உடனே வை.சு.ச. “இதோ கொடுக்கிறேன்” என்று பெட்டியைத்திறந்து ஒரு நூறு ரூபாய் எடுத்து வந்து பாரதியிடம் கொடுத்தார். பாரதி நோட்டை இருபுறமும் திருப்பிப் பார்த்துவிட்டு, “இது எனக்குத் தானே?” என்றார்.  “ஏன்? என்ன சந்தேகம்?” என்றார் வை. சு. ச.  “இல்லை; எனக்குச் சொந்தமான இந்த நோட்டை நான் எப்படி வேண்டுமானலும் பயன்படுத்திக்கொள்ள எனக்கு உரிமை யுண்டல்லவா?” என்றார் பாரதி.  “தாராளமாக, எப்படி வேண்டுமானலும் உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.” இது வை. சு. ச. வின் பதில், மீண்டும் பாரதியார் நோட்டைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக்கொண்டே எழுந்து நின்றார். வை. சு. ச. வுக்கு ஒன்றும் புரியவில்லை. “ஏன்? ஏதாவது தேவையானால் வாங்கி வரச் சொல்கிறேனே?” என்று அவரும் எழுந்தார். அதற்குள் கண்மூடித் திறப்பதற்குள் பாரதியார் தம் கையிலிருந்ந நூறு ரூபாய் நோட்டைச் சுக்கு நூருகக் கிழித்துப் போட்டு விட்டார். வை. சு. ச. வுக்கு ஒரே வியப்பு. “ஏனய்யா கிழித்தீர்?” என்று கேட்டாராம். “என் நோட்டை நான் என்ன வேண்டுமானலும் செய்வேன். உமக்கென்னேயா அக்கறை?” என்று சொல்லிக் கொண்டு கலகலவென்று சிரித்தாராம் பாரதி. இந்த நிகழ்ச்சியைக் சொல்லிவிட்டு, மேதைகளான கவினார்களின் விசித்திரப் பண்புகளை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. புரட்சிக் கவிஞரும் அந்தப் பாரதியாரின் தாசன்தானே? அவருடைய குணத்தில் இவருக்கு பாதியாவது இருக்குமல்லவா?” என்றார்.  நான் செட்டியாரிடம் விடைபெற்றுப் பள்ளத்துTர் சென்றேன். பள்ளத்தூர் வந்த கவினார் நான் வந்திருப்பதைச் கேள்விப் பட்டு நச்சாத்துப் பட்டிக்குப் போய்விட்டதாகத் தகவல் கிடைத்தது; கடைசியாகப் போன ஊரில் பாரதிதாசன் என்னைத்சந்திக்க விரும்பாமல் பாண்டிசேரிக்கே காரில் போய் விட்டதாக நண்பர்கள் சொன்னார்கள். நானும் பல இடங்களில் அலைந்து அலைந்து அலுத்துப்போய் ‘இது மேதைகளின் இயல்பு’ என்று கவிஞரைப் பார்க்காமலை காரைக்குடிக்குத் திரும்பினேன். கடைசியில் பில்ஹணன் நாடக நூலில் நான் நினைத்தபடி புரட்சிக் கவிஞரின் இரு பாடல்களைச் சேர்க்க முடியவில்லை.  “புரட்சிக்கவினார் பாரதிதாசன் அவர்களின் புரட்சிக்கவியிலுள்ள கருத்துக்கள் சில இந்நாடகத்தில் இடம் பெற்றுள்ளன. கவினார் அவர்களுக்கு நாங்கள் என்றும் கடமைப் பட்டிருக்கிறோம்” என்று மட்டும் என்னுடைய பதிப்புரையில் குறிப்பிட்டேன்.  புரட்சிக் கவினார் நிதிக்கு நாடகம் திருச்சிக்கு வத்தபின் (சிவலீலா நடந்து கொண்டிருக்கை யில் கவிஞரோடு கடிதத் தொடர்பு கொண்டேன். “திருச்சியில் தங்களுக்கு ஒரு நாடகம் நடத்திக் கொடுக்க விழைகிறோம். அதை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கும் ஒரு வாரத்திற்குமேல் பதில் இல்லை. எனக்கு மிகவும் கவலையாகத்தான் இருந்தது. 10 நாட்களுக்குப் பின் ஒரு கடிதம் வந்தது.  “1945 ஜனவரி மாதம் 20ஆம் தேதி நடைபெறும் ராஜா பர்த்ருஹரி நாடகம் எனக்கு” என்று மட்டும் குறிப்பிட்டிருந்தது. நாங்கள் உடனே ஒப்புதல் அளித்தோம்.  திருச்சியில் 20-1-45இல் நடைபெற்ற ராஜா பர்த்ருஹரி முதல் நாடகம் புரட்சிக் கவினார் நிதிக்காகக் கொடுக்கப்பட்டது. கவிஞரே நேரில் வந்து அன்றைய வசூல் 1251ஐயும் பெற்றுக் கொண்டார். இரண்டு நாட்கள் திருச்சியில் தங்கினார். பில்ஹணனைப் பற்றி அவரிடம் பேச்செடுத்தேன். “அது சரிதாம்பா நடத்துங்க, நடத்துங்க” என்றார். பாண்டிச்சேரி சென்றபின், நாடகம் நடத்திக் கொடுத்ததற்கு நன்றி கூறிப் பெரியண்ணாவுக்கு ஒரு கடிதமும் தம் கைப் பட எழுதினார்.  கலைவாணர் கைது செய்யப்பட்டார் திருச்சியில் சிவலீலா தொர்ந்து நடந்து கொண்டிருக்கும் பொழுது டிசம்பர் 29ஆம் தேதி தினமணியில் கலைவாணர் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியினைப் படித்து அதிர்ச்சி யடைந்தோம். இலட்சுமிகாந்தன் என்னும் ஒருவர் இந்துகேசன் என்ற வார இதழை நடத்தி வந்தார். அவ்விதழில் கலைவாணர், தியாகரா பாகவதர் போன்ற விளம்பரம் பெற்ற பெரியார்களின் சொந்தநடவடிக்கைகள் பற்றிப் புரளியாக வாரந்தோறும் செய்தி வெளியிட்டு வந்தார். இவைபோன்ற பத்திரிகைகளை மஞ்சள் பத்திரிகைகள் என்று குறிப்பிடுவார்கள். இவ்வாறு வெளிவரும் மஞ்சள் பத்திரிகைகள் பெரும்பாலான பொதுமக்களை எளிதில் கவர்ந்து விடுகின்றன. இலட்சுமிகாந்தன் இதை ஒரு வியாபாரமாகவே செய்துவந்தார். உண்மையான கலைஞன் எவனும் இந்தப் புரளிகளைப்பற்றிக் கவலைப்பட மாட்டேன். நான் காரைச்குடியிலிருந்து சென்னைக்குச் சென்றிருந்த சமயம் கலைவாணரிடம் அதைப்பற்றி யாரோ கேட்டார்கள். “இலட்சுமிகாந்தனைச் சும்மா விடக்கூடாது. சட்டப்படி வழக்குத் தொடர வேண்டும்” என்றார்கள். உடனே கலைவாணர், “ஒரு பத்திரிகைக்காரன் கிளப்பிவிடும் புரளிகளால், காலமெல்லாம் நாம் செய்து வரும் கலைப்பணியை மக்கள் மதிக்கவில்லையென்றால் போகட்டுமே. அதனால் பொது மக்களுக்கு நஷ்டமே தவிர நமக்கொன்றும் நஷ்டம் இல்லை” என்றார். இப்படிச் சொல்லிய அப்பழுக்கற்ற கலைமேதையின் மீது அந்தப் பத்திரிகையாளரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டியது மிக மிகக் கொடுமையல்லவா? கலைவாணரும் பாகவதரும் சென்னை சிறைச்சாலையில் இருப்பதாக அறிந்து வருந்தினோம். இந்த வழக்கு சம்பந்தமான செய்திகளைப்பத்திரிகைகளில் பரபரப்போடும் கவலையோடும் படித்து வந்தோம். 28.4-45 இல் கலைவாணரைப் பார்க்க நான் சென்னை சென்றேன். அப்போது என். எஸ். கே. நாடக சபையின் முழுப் பொறுப்பையும் சகோதரர் எஸ்.வி. சகஸ்ரநாமம் ஏற்று நடத்தி வந்தார். அவரோடு தங்கினேன்.  களங்கமற்ற பசலை முகம் முற்பகல் 11 மணியளவில் சகஸ்ரநாமத்தோடு சிறைச் சாலைக்குச் சென்றேன். நாங்கள் இருவரும் ஜெயில் சூப்பரின் டெண்டுடன் அமர்ந்திருந்தோம். கலைவாணரை உட்புறமிருந்து அழைத்து வந்தார்கள். அவர் வரும்போதே, “என்ன ஷண்முகம் எப்போ வந்தே? திருச்சியிலே வசூல் நல்லா ஆகுதா? அண்ணாச்சி யெல்லாம் செளக்யமா?” என்று கேட்டுக் கொண்டே எப்போதும் போல் கலகலப்போடு வந்தார்.  என் கண்களில் நீர் நிறைந்து விட்டது. பொங்கி வரும் அழு கையை அடக்க எவ்வளவோ முயன்றேன். முடியவில்லை. அவ ருக்கு ஆறுதல் கூறவந்த நான் கலங்கி நிற்பதைக் கண்டு, எனக்கு அவர் ஆறுதல் கூறினார். “30ம் தேதி நம் கே. எம். முன்ஷியின் வாதம் முடிந்ததும் எனக்கு விடுதலை கிடைத்து விடும். எல்லோரையும் கேட்டதாகச் சொல்லு” என்றார். நாங்கள் இருந்த நேரம் வரையில் அவர்தான் உற்சாகத்தோடு பேசிக் கொண்டிருந்தாரே தவிர நான் பேசவே இல்லை. சிறிதும் களங்கமற்ற அந்தப் பசலை முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். கீழ்ப் பாக்கம் சென்று கலைவாணரின் துணைவி மதுரம் அம்மையாரைப் பார்த்து ஆறுதல் கூறினேன்.  கல்கியின் மேதைப் பண்பு அதன்பின் கல்கி அலுவலகம் சென்று ஆசிரியர் திரு ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களைப் பார்த்தேன். சுபத்திரையின் சகோதரன் சிறுகதையை நாடகமாக்கித் தரும்படியாக வேண்டி னேன். கல்கி சிரித்துக் கொண்டே சொன்னார். “மிஸ்டர் ஷண்முகம், கிருஷ்ணமூர்த்தி என்ன, சகலகலாவல்லவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அதெல்லாம் ஒன்றுமில்லை. எனக்கு நாடகம் எழுதவராது. உங்களுக்குப் பிடித்தமான நாடக எழுத்தாளர் யாரையாவது எழுதச் சொல்லுங்கள். அந்த எழுத்துப் பிரதியை எனக்கு அனுப்பி வையுங்கள். நான் சரி பார்த்துக் கொடுத்து விடுகிறேன்.”  என்றார் ஆற்றல் வாய்ந்த எழுத்தாளர் கல்கி. எந்த எழுத் தாளர் இப்படித் தன் திறமையைக் குறைத்துக் கொண்டு சொல்வார்! மாமேதை கல்கிக்குத்தான் அந்தத் துணிவு இருந்தது. இப்படித் தைரியமாகத் தன்னைப் பற்றி ஒப்புக்கொள்ளவும் ஒரு தனிப் பண்பு வேண்டுமல்லவா?  கல்யாணி ராமசாமி இணைப்பொருத்தம் அன்றிரவு என்னெஸ்கே நாடக சபையின் ஸ்ரீ கிருஷ்ணலீலா ஒற்றைவாடையில் நடைபெற்றது. ஒவியர் மாதவன் அவர்களின் ஒப்பற்ற கைவண்ணத்தைக் கண்டு களித்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டனவல்லவா? அன்று மீண்டும் அவர் படைத்த அற்புதக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தேன். கே. ஆர். இராமசாமி ஸ்ரீ கிருஷ்ணனாகவும், செல்வி கல்யாணிருக்மணியாகவும் நடித்தார்கள். இருவரையும் மேடையில் பார்த்த போது இணைப்பொருத்தம் பிரமாதமாக இருந்தது. நாடகம் முடிந்ததும் கம்பெனி வீட்டி லேயே தங்கும்படி சகஸ்ரநாமம் கூறினார்.  மறுநாள் காலை ஆசிரியர் எம்.எஸ். முத்துக்கிருஷ்ணனோடும் மற்றும் பழைய நண்பர்களோடும் பேசிக் கொண்டிருந்தேன். அப் போது கே. ஆர். இராமசாமிக்கும் செல்வி கல்யாணிக்கும் விரை வில் திருமணம் செய்து வைத்து விடுமாறு கூறினேன். ராமசாமி யும் என்ைேடு இருந்தார். அவருக்கும் அந்த எண்ணம் இருப் பதை எல்லோரும் உணர்ந்தோம். என். எஸ்.கே. சிறையிலிருந்து வந்ததும் அப்படியே நடத்திவிடாலாமென்றார் முத்துகிருஷ்ணன்.  அன்று மாலையும் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தியையும் டி. சதாசிவம் அவர்களையும் சந்தித்தோம். 19.5.45இல் திருச்சி யில் நடைபெறவிருக்கும் எங்கள் ஒளவையார் நாடகத்திற்குத் தலைமை தாங்கும்படி கேட்டுக்கொண்டேன். கல்கி மகிழ்வோடு ஒப்புக் கொண்டார். அதன்பின் சென்னையில் பல்வேறு நண்பர் களைச் சந்தித்தேன். நான் எப்போது சென்னைக்கு வந்தாலும் எங்களோடு மேனகாவில் நடித்த கே.டி. ருக்மணியைச் சந்திக் காமல் போவதில்லை. அவரையும் சென்று பார்த்து வந்தேன். அன்றிரவும் சகோதரர் சகஸ்ரநாமத்தோடு தங்கினேன்.  கே. எம். முன்வியின் வாதத்திறன்  30 ஆம் தேதி முற்பகல் உயர்நீதிமன்றம் சென்று இலட்சுமி காந்தன்கொலை வழக்கு விசாரணையைப் பார்த்தேன்.கலைவாணர் பாகவதர் இருவரையும் கைதிக்கூண்டிலே பார்த்தபோது என்னல் தாங்க முடியவில்லை, கைதிக் கூண்டிலேயே நாற்காலிகள் போட்டுக் கலைமணிகள் இருவரையும் சென்ட்ரல் ஸ்டுடியோ ஸ்ரீராமுலு நாயுடு அவர்களையும் உட்கார வைத்திருந்தார்கள். கே. எம். முன்ஷியின் திறமையான வாதம் நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டுக் கூண்டிலிருப்பவர்களின் உள்ளத்தில் கோடி கோடி எண்ணங்கள். அல மோதிக் கொண்டிருக்குமல்லவா? அதுதானே இயல்பு! பாகவதர், நாயுடு இருவருக்கும் அப்படி இருந்திருக்கலாம். ஆனால், கலைவாணர் எதைப் பற்றியும் சிந்தித்ததாக எனக்குத் தோன்றவில்லை. அவர் உற்சாகத்தோடு பாகவதரின் முதுகைத்தட்டி நான் கோர்ட்டுக்கு வந்திருப்பதைச் சிரித்துக் கொண்டே சுட்டிக் காட்டினார் . துன்பத்தின் எல்லையிலும் இன்பத்தைக் காணும் இந்த உயரிய நிலை மேதைகளுக்கே உரிய விசித்திரப் பண்பல்லவா? அன்று மாலையே புறப்பட்டு மறுநாள் காலை திருச்சிக்கு வந்துசேர்ந்தேன்.  நான் திருச்சிக்கு வந்த நான்காம் நாள் காலைப் பத்திரிகைகளில் நெஞ்சந் திடுக்கிடும் செய்தி வந்திருந்தது. கலைவாணர், பாகவதர் இருவருக்கும் தீவாந்திர தண்டனை விதிக்கப்பட்டது என்ற துயரமிக்க செய்தி. இதனைப் படித்ததும் கம்பெனி நடிகர்கள் சிலர் அழுதார்கள். நானும் ஒர் அறைக்குள் புகுந்து கதவை மூடிக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதேன்.  பாரதி மண்டபத்துக்கு ஒளவையார்   ஒருவார காலம் கலைவாணர் பாகவதர் ஆகியோரின் தீவாந்திர தண்டனையைப் பற்றிய பேச்சாகவே இருந்தது.நீண்ட கால உழைப்பினல் சோர்வுற்றிருந்த பெரியண்ணா டி.கே. சங்கரன் அவர்கள் கம்பெனித் தொல்லைகளிலிருந்து சிறிது ஓய்வு பெற எண்ணினார். சின்னன்ணா டி. கே. முத்துசாமி அவர்களிடம் நிர் வாகப் பொறுப்பினை ஒப்படைத்து விட்டு 16.5.45இல் அவர் நாகர்கோவில் சென்றார்.  கல்கி தலைமையில் ஒளவையார் எட்டையபுரம் பாரதி மண்டப நிதிக்காக 19-5.45 இல் ஒளவையார் நாடகம் நடைப்பெற்றது. இந் நாடகத்திற்கு ‘கல்கி’ ஆசிரியர் திரு. ரா. கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி மிக அருமை யாகப் பேசினார். சென்னை, தஞ்சை, திருச்சி முதலிய நகரங்களி லுள்ள பத்திரிகை ஆசிரியர்கள் பலருக்கும் ஒளவையாரை வந்து பார்த்து வாழ்த்துமாறு அழைப்புகள் விடுத்திருந்தோம். பல அன்பர்கள் வந்து பார்த்தார்கள். பத்திரிகையில் விமர்சனங்கள் வரைந்தார்கள். அவர்களிலே குறிப்பிடத்தக்கவர்கள் திருவாளர்கள் நாரண துரைகண்ணன் (பிரசண்டவிகடன்) நவீனன் (நவ யுவன்) வல்லிக்கண்ணன் (கிராம ஊழியன்) ஏ. எஸ். ரங்கநாத சிரோமணி (ஹிந்துஸ்தான்) ராஜகோபாலன் (கலாமோகினி) ப. நீலகண்டன்(கலைவாணி) சீனிவாசராவ் (நாரதர்) சாவி (மாலதி) திருலோகசீதாராம் (சிவாஜி) மேற்குறிப்பிட்ட பத்திரி கைகள்தாம் திருச்சியில் எங்களுக்குக் கிடைத்தவை. இன்னும் பலர் எழுதியிருக்கலாம். ஆக, பத்திரிகையாளர்களின் இந்த விமர்சனங்களெல்லாம் சேர்ந்து ஒளவையாருக்கு 1942இல்மதுரை யில் கிடைக்காத வருவாயை 1945ல் திருச்சியில் கிடைக்கும்படி செய்தன என்பதை நன்றியோடு குறிப்பிட விரும்புகிறேன்.  உயிர்ச் சத்தான ஒரு சொல் ‘கர்நாடகம்’ என்னும் புனைபெயரில் ரா. கிருஷ்ணமூர்த்தி கல்கியில் எழுதிய விமர்சனத்தில் ஒளவையாராக நடிக்கும் ஷண்முகத்திற்கு இந்த நடிப்புக்காகவே நோபல் பரிசு வழங்கலாம்!’ என்று எழுதினார். நான் அதற்குத் தகுதியுடையவனா, அல்லவா என்பது ஒருபுறமிருக்கட்டும். அந்த ஒரு சொல் எனக்கு எவ்வளவு உற்சாகத்தைக் கொடுத்தது! தொடர்ந்து 50 நாட்கள் ஒளவையாராக நான் நடிப்பதற்கு அந்த சொல்தான் உயிர்ச்சத்தாக... ‘டானிக்'காக இருந்தது என்பதில் ஐயமில்லை. கல்கி மேலும் எழுதுகையில்,  “இந்த நாடகத்தைப் பார்த்து வந்தபோதும் அதன் முடிவிலும் எனக்கு என்ன தோன்றியது என்றால், நம் கையில் மட்டும் அரசாங்க அதிகாரம் இருந்தால் இந்த நாடகக் கம்பெனியையும் இந்த ஒளவையார் நாடகத்தையும் உடனே நாட்டின் பொதுவுடமையாக ஆக்கிவிடவேண்டும் என்பதுதான். ஆம், தமிழ் நாட்டிலுள்ள எல்லாக் குழந்தைகளும் இந்த நாடகத்தைப் பார்த்துவிட வேண்டும். மேற்கூறியவாறு ஒளவை நாடகத்தைப் பொதுவுடமையாகச் செய்யும் காரியத்திற்காக மேற்படி நாடகக் கம்பெனியின் செலவுக்கு சர்க்காரிலிருந்து வருஷம் மூன்றுலட்சம் ரூபாய் நன்கொடை கொடுக்கும்படி இருக்கலாம். இந்த மூன்று. லட்ச ரூபாய்ச் செலவினல் தமிழ் நாட்டின் குழந்தைகள் எத் தனேயோ பல லட்ச ரூபாய் செலவில் அடைய முடியாத நன் மைகள் அல்லவா அடைந்து விடுவார்கள்! ஒளவையார் நாடகம் தமிழரின் வாழ்வையே உயர்த்தக் கூடிய நிர்மானத் திட்டத்தைச் சேர்ந்தது.”  என்று குறிப்பிட்டிருந்தார். அன்பர் நாரண-துரைக்கண்ணன் அவர்கள் தமது பிரசண்ட விகடன் இதழில் எழுதிய நீண்ட விமர்சனத்தில், “தமிழில் நாடகமில்லை என்று பிதற்றும் மேதாவிகள் ஒளவையார் நாடகத்தைப் போய்ப் பார்க்கட்டும். ஸ்ரீபால ஷண்முகானந்த சபை நாடக அரங்கில் நாடகக்கலை சீரிளமைத் திறங் குன்றாது இருப்பதை அவர்கள் காண்பார்கள்” என்று சுட்டிக் காட்டியிருந்தார். இவ்வாறு ‘எழுதப்பட்ட விமசனங்களின் உந்துதலால் ஒளவையார் தொடர்ந்து, நடைபெற்று வந்தது.  தலைவரைச் சந்தித்தேன் எங்களோடு மிகநெருங்கிய தொடர்பு கொண்டிருந்த ‘ஜன சக்தி’ வார இதழில் 18.6.45இல் ஔவையார் விமர்சனம் வந்திருந்தது. ஜனசக்தியிலிருந்து யாரும் நாடகம் பார்க்க வரவில்லையாதலால், எழுதியவர் யாரென்று பார்த்தேன். ம. பொ. சிவஞான கிராமணி என்று போட்டிருந்தது. விமர்சனத்தைப் படித்தேன். நாடகத்தைப் பாராட்டி விரிவாக எழுதிவிட்டு இறுதியாக ஒன்று குறிப்பிட்டிருந்தார் விமர்சகர்.  “டி.கே.எஸ். சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள். நாடகத்தின் இறுதியில் ‘ஒளவையார்’ விண்ணெய்தும் முன்னார், தமிழர் மேன்மையை விளக்கும் பாடலொன்றைப்பாடி, ஜனங்கள் கொட்டகையை விட்டுச் செல்லும்போது அவர்கள் காதுகளில் தமிழோசையை முழக்கித் தமிழுணர்ச்சியை யூட்டுவது நல்லது.”  இதைப் படித்தவுடன் எனக்குச் சிறிது வியப்பாகவே இருந்தது. முழுக்க முழுக்கத் தமிழ்நாட்டின் பெருமையும் தமிழ்மொழியின் சிறப்பும் நாடகம் முழுதும் பேசப் பெறுகிறது; பாடப் பெறுகிறது. இதைப் பார்த்த பிறகும் மன நிறைவு பெறாமல் வேண்டுகோள் விடுத்திருக்கிறாரே என்று யோசித்தேன். அப்போதுதான் சில நாட்களுக்கு முன் அவரைச் சந்தித்ததும் பேசியதும் நினைவுக்கு வந்தது. 26.6.45 அன்று மாலை பொதுவுடமைக் கட்சித் தலைவர் தோழர் பி. இராமமூர்த்தி எங்களைப் பார்க்க வந்தார். அவரோடு முன்பே எங்களுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. இராமமூர்த்தியோடு ஒல்லியான உருவமுடைய மற்றொருவரும் வந்தார். வந்தவருடைய அடர்ந்த கம்பீரமான மீசை என் கவனத்தைக் கவர்ந்தது. தமிழனுக்குரிய வீரம் அவருடைய கண்களிலே பளிச்சிட்டது. உற்று நோக்கினேன். இவர்தான் ம.பொ. சிவஞான கிராமணியார் என்று அவரை அறிமுகப்படுத்தினார் இராமமூர்த்தி. இப்படித்தான் நான் முதன் முதலாக தலைவர் சிலம்புச் செல்வர் ம. பொ. சி. அவர்களைச் சந்தித்தேன். அன்றிரவு நாடகத்திற்கு அவரையும் அழைத்துவரும்படி தோழர் இராமமூர்த்தியைக் கேட்டுக் கொண்டேன். அதன்படி இரவு அவரும், ம.பொ. சியும், இஸட், அகமது என்னும் தோழரும் நாடகம் பார்க்க வந்தார்கள். அன்றைய நாடகத்தைப் பார்த்து விட்டுத்தான் விமர்சனம் எழுதியிருக்கிறார் என்பது புரிந்தது. விமர்சனத்தில் வெளியிட்டிருந்த கருத்து எனக்கு நிரம்பவும் பிடித்தது. அதற்கு நன்றி கூறி ஜனசக்தி மூலமாக ம.பொ. சி. அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதன் பிறகு தான் “வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே” என்ற பாரதி பாடலை நாடகத்தின் இறுதியில் பாடும் வழக்கத்தை தாங்கள் மேற்கொண்டோம். இடையே ஒரு நாள் நாடகத்திற்கு தேசீயக் கவினார் நாமக்கல் வெ. இராமலிங்கம்பிள்ளை தலைமை தாங்கி எங்களைப் பாராட்டினார். 9.7.45இல் 50வது பொன் விழா பிரபல அமைச்சூர் நடிகர் எப். ஜி. நடேசய்யர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நாடகாசிரியர் திரு எதி ராஜுலு நாயுடுவுக்குக் கம்பெனியின் சார்பில் ஒரு பொற்பதக்கம் பரிசளிக்கப்பட்டது. நாடகாசிரியரையும் நடிகர்களையும் பிரமாத மாகப் பாராட்டிப் பேசினார் நடேசய்யர்.  நாமக்கல் கவிஞருக்கு நாடகம் 19-7.45இல்தொடங்கிய முதல் சிவாஜி நாடகம் நாமக்கல் கவிஞரின் நிதிக்காக நடத்திக் கொடுக்கப் பெற்றது. அன்று வெங்களத்தூர் சாமிகாத சர்மா அவர்கள் தலைமை தாங்கினார். அருமையாகப் பாராட்டிப் பேசினார். திரு அ. சீனிவாசராகவன், நண்பர் சாவி ஆகியோரும் பாராட்டிப் பேசினார்கள். அன்றைய வசூல் ரூ 1201 நிதியின் பொருளாளர் திரு சக்தி வை. கோவிந்தள் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  23.7.45இல் நடைபெற்ற சிவாஜி நாடகத்திற்கு மேற்படி நாடகாசிரியரும் பிரபல கண் வைத்தியருமான டாக்டர் டி. எஸ். துரைசாமி அவர்களின் தமையனார் திரு டாக்டர் டி.எஸ். திருமூர்த்தி தலைமை தாங்கிப் பாராட்டினார். 15-8-45இல் நடைபெற்ற சிவாஜி நாடகத்திற்கு பிரசண்ட விகடன் ஆசிரியர் திரு. காரண துரைக்கண்ணன் தலைமை தாங்கி, டி. கே. எஸ். சகோதரர்கள் விரைவில் சென்னைக்குவந்து,தலைநகரிலுள்ள ரசிகர்களையும் மகிழ் விக்க வேண்டுமென்று கூறிப் பாராட்டினார். திருச்சியில் சிவாஜி நாடகம் தொடர்ந்து 35 நாட்கள் நடைபெற்றது.    அந்தமான் கைதி   ஒளவையார் நாடகம் நடந்து கொண்டிருக்கும்பொழுது கவிஞர் கு. சா. கிருஸ்ணமூர்த்தி அவர்கள் ஒரு நான் நாடக அரங்கில் என்னைச் சந்தித்தார். 1941இல் என்ன மதுரையில் சந்தித்து ஒரு நாடகக் கையெழுத்துப் பிரதியைக் கொடுத்ததாகவும் நினைவு படுத்தினார். ‘எனக்கு நினைவிவில்லை, மன்னியுங்கள்’ என்றேன். “இல்லை, பாதகமில்லை. அந்த நாடகத்தையே இப்போது அச்சுவடிவில் புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறேன். நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்” என்றார். நாடக நூலை வாங்கி முதல் பக்கத்தைப் புரட்டினேன். கலை மன்னன் ராஜா சாண்டோவின் படமும், நாடக நூலை அவருடைய நினைவுக்குக் காணிக்கை யாக்கியிருப்பதாகப் படத்தின் கீழே ஒரு கவிதையும் இருந்தது. அதைப் பார்த்தவுடனேயே கவினார் கு. சா. கி. யை எனக்குப் பிடித்துவிட்டது. “படிக்கிறேன்; நன்றாயிருந்தால் நடிக்கிறேன்” என்று கூறினேன். பிறகு ராஜா சாண்டோ அவர்களைப் பற்றி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.  நாடகம் நன்றாயிருந்தது நாடகத்தைப் படித்தேன். நான்கு நாட்களுக்குப் பின் மீண்டும் அவரைச் சந்தித்தேன். “நாடகம் திருத்தம் எதுவும் செய்யாமல் அப்படியே மேடையேற்றக் கூடியவகையில் அமைந்திருக்கிறது. இதுவரை இப்படி ஒருவரும் நாடகம் கொண்டு வந்து கொடுத்ததில்லை. இதனை எப்படித் தங்களால் உருவாக்க முடிந்தது?” என்று கேட்டேன். அவர் சிசித்துக் கொண்டே ‘நானும் ஒரு நடிகன்தானே’ என்றார். பிறகு பாய்ஸ் கம்பெனிகளின் அனுபவங்கள் பற்றியும், எங்கள் ஆசிரியர் கந்தசாமி முதலியார் அவர்களிடம் அவர் நடிப்புப் பயிற்சி பெற்ற விபரங்களைப் பற்றியும், நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.  அந்தமான் கைதி நாடகம் எனக்கு நிரம்பவும் பிடிந்திருந்தது நாங்கள் நடத்த வேண்டுமென்று விரும்பிய கல்கியின் சுபத்திரையின் சகோதரன் கதைக் கருவை உள்ளடக்கியதாக நாடகம் அமைந்திருந்தது. நாடகம் சரியாக நடத்தப்பட்டால் மகத்தான வெற்றிபெறும் என்று கவினார் கு. சா. கி. அவர்களுக்கு நான் அப்போதே உறுதி கூறினேன்.  சிவாஜி நாடகத்தில் எஸ்.எஸ். இராஜேந்திரன் கதாநாயகன் ஜெய்வந்தாக மிகவும் நன்றாக நடித்ததால் அந்தமான் கைதியிலும் அவரே கதாநாயகன் பாலுவாக நடிக்கலாம் என்று நான் கூறினேன். “அப்படியானால் நீங்கள் எந்தப் பாத்திரத்தை ஏற்கப் போகிறீர்கள்?” என்றார் கு.சா. கி. “இந்த நாடகத்தில் நான் ஒய்வெடுத்துக் கொள்ளப் போகிறேன்” என்றேன். அவருக்குத் கொஞ்சம் வருத்தம். நான் நடிக்காவிட்டால் நாடகம் வெற்றி பெறுமா? என்பதில் அவருக்குச் சந்தேகம். “அப்படியானல், நடராஜன் பாத்திரத்தை நீங்கள் போடலாமே” என்றார் கவினார். என்னைவிடத் தம்பி பகவதி அந்த வேடத்திற்கு மிகவும் பொருத்தமானவர். தங்களுக்குக் சிறிதும் கவலை வேண்டாம். நாடகத்தை வெற்றியோடு நடத்திய பிறகுதான் நான் ஒய்வெடுத்துக் கொள்ளப்போவேன் என்றேன்.  குண்டு கருப்பையா எல்லோருக்கும் பாடம் கொடுக்கப் பெற்றது, நகைச்சுவை நடிகர் குண்டு கருப்பையா திருச்சியில்தான் எங்கள் குழுவிற்கு வந்துசேர்ந்தார். அவருடைய சரீரமே நகைச்சுவைக்கு வாய்ப்பாக இருந்ததால் புதிய நாடகத்தில் அவருக்கும் ஒருவேடம் கொடுக்க எண்ணினோம். அதேபோல் குட்டி நகைச்சுவை நடிகர்களில் அப்போது எங்கள் குழுவில் முதன்மையாக இருந்தவர் துவரங்குறிச்சி சுப்பையன். அவருக்கும் அந்தமான் கைதியில் ஒரு பாத்திரத்தைப் படைக்க முனைந்தோம். சமையல் கணபதி ஐயர் என்ற பாத்திரத்தை நகைச்சுவையோடு உருவாக்கிக் குண்டு கருப்பையாவுக்கும், திவான் பகதூரின் வேலையாள் வேடத்தை சுப்பையனுக்கும் கொடுத்தோம். இவ்விரண்டு வேடங்களும் நகைச்சுவை காட்சிகளுக்கு மேலும் மெருகூட்டவும், காட்சிகள் தாமதமின்றி நடைபெறவும் துணையாக அமைந்தன.  நாடகத்திற்கான பாடல்கள் சிலவற்றைக் கவினார் கு. சா கி. யே புதிதாக எழுதினார். புரட்சிக் கவினார் பாரதிதாசனின் “அந்த வாழ்வுதான், எந்த நாள் வரும்” “சோலையிலோர் நாள் எனயே” “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ” என்னும் மூன்று பாடல்களிையும் தக்க இடங்களில் சேர்த்துக் கொண்டோம். பாரதியின் “செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்ற பாடலை மிகுந்த சுவையாக நடராஜன் தன் தங்கை லீலாவுக்குச் சொல்லிக்கொடுப்பதுபோல் அமைத்துக் கொண்டோம். தேவையான ஒரு சில காட்சிகளும் தயாராயின. அந்தமான் கைதியைப் பொறுத்த வரையில் காட்சிகளுக்கு நாங்கள் முதன்மை அளிக்கவில்லை. சமூக நாடகமாதலால் ஆடை அணிபணிகளுக்கும் அவசியம் ஏற்படவில்லை. சுருக்கமான செலவில் கதையை முதன்மையாக வைத்து நாடகம் தயாராயிற்று. 20-9-45இல் அந்தமான் கைதி அரங்கேறியது.  குமாஸ்தாவின் பெண்ணுக்குப்பின் சிறந்த சமூகநாடகமாகக் அந்தமான் கைதி விளங்கியது. பேராசிரியர் வ. ரா. அவர்கள் ஒருநாள் நாடகத்திற்குத் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் “கவினார் கு. சா. கிருஷ்ணமூர்த்தி ஒன்றும் அறியாத சாது போல இருந்துகொண்டு ஒரு அற்புதமான நாடகத்தைப் படைத்து விட்டாரே!” என்று கூறிப் பாராட்டினார்.  அறிஞர் அண்ணா அவர்கள் இந் நாடகத்தைப் பார்க்க வேண்டுமென நான் ஆசைப்பட்டேன். அவருக்குக் கடிதமும் எழுதினேன். நாடகக்கலை மாநாட்டுக்குப் பின் ஏற்பட்ட சில விரும்பத்தகாத விளைவுகளின் காரணமாக அவர் எனக்குப் பதில் எழுத வில்லை. அந்தமான் கைதி நடைபெற்ற நேரத்தில் அறிஞர் அண்ணா திருச்சியில் ஒரு மாநாட்டில் கலந்துகொண்டார். நான் அவரைச் சந்திக்க முயன்றேன்; இயலவில்லை. மாநாட்டுக்கூட்டம் அந்தமான் கைதிக்கு வந்திருக்கிறது என்பது எங்களுக்குத் தெரிந்தது.  லீலா தன் காதலனிடம் அண்ணனைப் புகழ்ந்து பேசுகிறாள். காதலன் பாலு, அவருடைய சொற்பொழிவுத் திறனைப் பற்றி அவளிடம் பாராட்டிப் பேசுகிறான்; பாலு: ... அடடா, இன்றையக் கூட்டத்தில் உன் அண்ணா பேசியிருக்கிறார் பார். அதைப்பற்றி என்ன அபிப்பிராயம்சொல்வதென்றே எனக்கு விளங்கவில்லை.  லீலா: .... தாங்கள் முழுமையும் கேட்டீர்களா? அடடா; நான் கேட்கமுடியாமல் போய்விட்டதே: எதைப்பற்றிப் பேசினார்? என்னென்ன பேசினார்?  பாலு:- பால்ய விவாகத்தின் தீமைகளைப் பற்றியும், காதல் மணம், மறுமணம் இவற்றின் அவசியத்தைப் பற்றியும் அழகாகப் பேசினார். இன்னும் மொழிப்பற்று, நாட்டுப்பற்று, அடிமை வாழ்வின் கேவலநிலை; சுதந்திரம் அடைய வேண்டியதன் அவசியம், பெண்கள் முன்னேற்றம், விபசாரத்தின் இழிவுத்தன்மை, தற்காலக்கல்வி முறையின் சீர்கேடு, கைத் தொழில், கிராம முன்னேற்றம் அடடா, இனிமேல் சொல்ல வேண்டியது என்பதாக ஒன்றும் பாக்கியில்லை. அப்பப்பா! என்ன கம்பீரமான பேச்சு, உயர்ந்த உபமானங்கள்; ஆணித் தரமான எடுத்துக்காட்டுகள்; ஒவ்வொரு வார்த்தைக்கும் சபையில் கரகோஷமும் ஆரவாரமும்தான். உன் அண்ணாவும் இவ்வளவு உயர்வாகப் பேசுவாரென்று நான் எதிர் பார்க்கவேயில்லை. எனக்கே ஆச்சரியமாகப் போய்விட்டது, போயேன்!  இந்த உரையாடலில் அண்ணா என்ற சொல் வரும் நேரத்தில் சபையில் பெருத்த கைத்தட்டல் ஏற்பட்டது. ஒரே ஆரவாரம்! இதைச் சொல்பவர் எஸ்.எஸ். இராஜேந்திரன். அவர் ஏற்கனவே அறிஞர் அண்ணா முதலியவர்களோடு தொடர்பு கொண்டவர். கேட்க வேண்டுமா? மாநாடு நடைபெற்ற இரண்டு நாட்களிலும் இந்தக் காட்சியில் மக்களின் பாராட்டு அதிகமாக இருந்தது.  அந்தமான் கைதி 1938 இல் எழுதப்பெற்ற நாடகம்! நாங்கள் அதனை நடிக்குமுன்பே அமைச்சூர் சபையினரால் நான்கு முறை நடிக்கப் பெற்றுள்ளது. எங்கள் குழுவில் நடிக்கப்பட்டப் பின் நாடகம் மகத்தான வெற்றி பெற்றது.    அந்தமான் கைதியைப் படைத்ததன் மூலம் கவினார் கு. சா. கி. தமிழ் நாடக உலகில் அழியாத இடம் பெற்றுவிட்டார். தமிழ் நாட்டிலும், இந்தியாவின் பிறமாநிலங்களிலும் சிங்கப்பூர், மலைசியா, இலங்கை, பர்மா, தென்னப்பிரிக்கா முதலிய தமிழர் வாழும் பிரதேசங்கள் அனைத்திலும் அந்த நாளில் அந்தமான் கைதியை நடத்தாத அமைச்சூர் சபைகளே இல்லையெனலாம். திராவிடக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், தமிழரசுக் கழகம் இன்னும் சமுதாய முற்போக்குக் கொள்கைகளை ஆதரிக்கும் எல்லாக் கட்சியினரும் தமது நாடக சபைகளில் அந்தமான் கைதியை நடித்திருக்கின்றனார். நம்முடைய நண்பர் திரு ஏ.வி. பி. ஆசைத்தம்பி எம். எல். ஏ. அவர்கள் இதில் நடராஜன் பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் என்பது மகிழ்ச்சிக் குரியதாகும். இதற்கெல்லாம் மேலாகத் தமிழில் வெளிவரும் நாடக இலக்கியங்களுக்குப் பரிசு வழங்கும் முறையில் சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகம் அந்தமான் கைதி நாடக நூலுக்குப் பரிசு வழங்கிப் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.                                                                                                          முள்ளில் ரோஜா   அந்தமான் கைதியில் எனக்குக் கிடைத்த ஓய்வை நான் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டேன். எனக்கு முழங் காலுக்குக் கீழே ஒரு கழலை இருந்தது, அதனல் வலியோ வேறு தொந்தரவோ இல்லையென்றாலும் ஒரு சிறுகட்டிபோல் இருந்தது ஒருநாள் எங்கள் நண்பர் டாக்டர் பாலு அதைப் பார்த்தார். “இதைச் சுலபமாக எடுத்துவிடலாமே ஒரு வாரம் ஓய்விருந்தால்போதும்” என்றார். அந்தமான்கைதி அரங்கேறிய மறுவாரம் நான் டாக்டர் பாலுவிடம் அந்தக் கழலைக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். அப்போது தென்னுாரில் ஒரு தனி வீட்டில் தங்கியிருந்தேன்.  திரைப்பட இயக்குகர் ப. நீலகண்டன்  திருச்சியில் சிவலிலா வெற்றியோடு நடைபெற்றபோதுபுதுக் கோட்டை கலைவாணி ஆசிரியர் ப. நீலகண்டன் அவர்கள் 5-1-45 இல் சிவலீலா பார்க்க வந்திருந்தார். நாடகம் முடிந்ததும் நானும் அவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். திரைப்படத் துறையில் அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. “ஏதாவது ஒரு நாடகம் எழுதிக்கொடுங்கள். அதன் மூலம் திரைப்படத் துறை தங்களைத் தானாக வரவேற்கும்” என்று கூறினேன். ஏற்கனவே அவர் ‘தாசிப்பெண்’ என்னும் பெயரில் ஒரு குறுநாவல் எழுதியிருந்தார். அதை நான் முன்பே படித்திருந்தேன். அதையே நாடகமாக்கலாம் என்று கூறினேன். அவரும் ஒப்புக்கொண்டார். “என்னுடன் கூடவேயிருந்து நாடகம் எழுதினால் நன்றாக அமையலாம். அப்படி எழுதத் தங்களுக்கு வசதி படுமா?” எனக் கேட்டேன். அவரும் அதையே விரும்பினார். கு. சா. கி. யும் ப. நீ. யும் நெருங்கிய நண்பர்கள். ‘அந்தமான் கைதி’ நாடகத் திற்குப் ப. நீ. யும் வந்திருந்தார். அறுவை இகிச்சையில் கிடைத்த ஒய்வு நாட்களைப் புதிய நாடகம் எழுதப் பயன் படுத்திக் கொண்டோம்.  இருவரும் நீண்டநேரம் விவாதித்து முள்ளில் ரோஜா என்று நாடகத்திற்குப் பெயர் வைத்தோம். நண்பர் ப. நீலகண்டன் விரைவாக எழுதுவார். எழுத்துக்கள் பிழையில்லாமல் தெளிவாக இருக்கும். “நான் எழுதியிருப்பது தங்களுக்குப் பிடிக்கவில்லே யென்றால் கூச்சப்படாமல் சொல்லுங்கள் வேறு எழுதுகிறேன்” என்று முன்கூட்டியே சொல்வி விடுவார்.  சிறந்த ரசிகர் அவர். தான்படிக்கும்போது என்முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பார். என் உள்ளத்தின் ரசனையை முகத்தைப் பார்த்தே புரிந்து கொள்வார். சரி, பிடிக்கவில்லை போலிருக்கிறது. சொல்வதற்குக் கூச்சப்படுகிறீர்கள். வேறு எழுதிவிடுகிறேன்” என்று சொல்வி உடனே தாம் எழுதிய காகிதத்தைக் கிழித்து போட்டு விடுவார்.  முள்ளில் ரோஜாவில் ஒரு உணர்ச்சிக்கரமானகாட்சி. ராம நாதனை அவனுடைய தோழர்கள் தாசி விட்டுக்கு அனுப்புகிறார்கள். அவன் அனுபவமில்லாதவன். அப்பாவி. தாசி செல்லத்தின் படுக்கையறைக்குள் நுழைகிறான். உள்ளே வந்து மிரள மிரள விழிக்கிறான். கைகள் நடுங்குகின்றன. செல்வத்தைப் பார்க்கிறான். கிரிக்கமுயல்கிறான். உண்மையான சிரிப்பு வரவில்லை. அசடு வழிகிறது. செல்லம் “எங்கே வந்நீர்கள்?” என்று கேட்கிறாள். ராமநாதன் திகைக்கிறான். இந்தக் காட்சியில் செல்லம் அவனுக்கு அறிவுரை கூறும் முறையில் ஆத்திரத்தோடும் ஆவேசத்தோடும் பேசுகிறாள். ‘அந்தப் பேச்சு இயல்பாக இருக்க வேண்டும். எழுச்சியோடு அமையவேண்டும். வார்த்தைகள்தங்கு தடையில்லாமல் வரவேண்டும். புரியாத வார்த்தைகளைப் போட்டுக் குழப்பாமல் எளிமையாகப் பேச வேண்டும். ஆனால் கொச்சை நடையாக இருக்கக் கூடாது’ என்றெல்லாம் சொல்லி விட்டு எழுதுங்கள் என்றேன். எழுதினார். முழுதும் எழுதிவிட்டுப் படித்தார், நான் முகத்தை சுளித்தேன். உடனே கிழித்துப் போட்டார். மீண்டும் எழுதினார். ஏறத்தாழப் பத்துமுறையாவது அந்த ஆவேசப் பேச்சை எழுதியிருப்பாரென நினைக்கிறேன். கடைசியாக எழுதி முடித்த பேச்சு அற்புதமாக அமைத்தது. அதைப் பலமுறை சொல்விச்சொல்லி நானே ரசித்தேன்.  முள்ளில் ரோஜா பாடம் கொடுக்கப்பட்டது. எங்கள் கம்பெனியின் கவினார் க. ஆ. ஆறுமுகனார் முள்ளில் ரோஜாவுக்கு அருமையான பாடல்களை இயற்றித்தந்தார். மகாகவி பாரதியாரின் ‘மோகத்தைக் கொன்றுவிடு,’ அன்பென்று கொட்டு முரசே,’ புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின், ‘பெண்களால் முன்னேறக்கூடும்,” “அண்ணி வந்தார்கள் எங்கள் அண்ணாவுக்காக” ஆகிய பாடல்களையும் பொருத்தமான இடங்களில் சேர்த்துக் கொண்டோம். இந்தப் பாடல்கள் நான்கும் நாடகத்திற்காகவே எழுதப் பெற்ற பாடல்களைப்போல் சிறப்பாக அமைந்தன.  முள்ளில் ரோஜாவின் கதாநாயகன் இராமனாதன் பாத்திரமும் எஸ். எஸ். இராஜேந்திரனுக்கே கொடுக்கப் பெற்றது. அந்த நாடகத்திலும் நான் ஒய்வெடுத்துக் கொண்டேன். ஒய்வு என்றால் வேடம் புனைவதிலிருந்து ஒய்வு பெற்றேனே தவிர நாடகத்தின் பொறுப்பு முழுவதையும் நான்தான் ஏற்றுக் கொண்டிருந்தேன்.  22. 12-42-இல் முள்ளில் ரோஜா நாடகம் அரங்கேறியது  நாடகம் என்மனத்திற்கு முழுநிறைவினைத் தந்தது. பொது மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள். எல்லா நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்தார்கள். அன்றைய நாடக வசூல் 1070.60. இத் தொகையை ஒரு தாம்பாளத்தில் வைத்து நாடகாசிரியர் ப. நீல கண்டன் அவர்களின் நாடகத் திறமையைப் பாராட்டி, அவர் மேலும் தொடர்ந்து பல நாடகங்களைத் தமிழுக்கு அளிக்க வேண்டுமென்று வாழ்த்தி அவரிடம் கொடுத்தேன்.  அந்தமான் கைதி ஒரு துன்பியல் நாடகமாக அமைந்தது. அதேபோல முள்ளில் ரோஜாவையும் துன்ப நாடகமாகவே முடித்திருந்தோம். அந்தமான் கைதியில் நடராஜன் அந்தமான் கைதியாக இருக்கும் நிலையில், தன் தங்கையும் அவள் காதலனும் மறுமணம் புரிந்து கொண்டு மகிழ்வோடு வாழ்வார்கள் என்பதை எண்ணிப் பார்க்கிறான்.அப்போது அவன் மனத்தில் எண்ணுவதை மேகத்தில் காட்சி வடிவாகக் காட்டுவோம். அவன் தங்கை லீலாவும் பாலுவும் மணமாலை சூட்டிய தம்பதிகளாக மேகக் கூட்டத்தில் காட்சியளிப்பார்கள். முள்ளில் ரோஜாவில் அந்தச் சிறு மகிழ்ச்சிகூட இல்லை. கதாநாயகி செல்லம் தன் காதலன் இராமனாதனுக்கு ஒரு உருக்கமான கடிதம் எழுதி அனுப்பிவிட்டு ஆற்றில் விழுந்து தற்கொலே செய்து கொள்கிறாள். அவள் கடிதத்தைப் படித்த இராமனாதன் அலறிக் கொண்டு ஓடுகிறான். ஆற்றுப் பாலத்தின் மீதிருந்து செல்லம் குதித்ததும் அவளைத் தொடர்ந்து ஒடி வந்த இராமனாதனும் ஆற்றில் குதிக்கிறான். அடுத்த காட்சியில் கைகோர்த்தபடி இருக்கும் இரு சடலங்களையும் கரையில் எடுத்து போட்ட நிலையில் உறவினரும் பொதுமக்களும் கண்ணிர் விட்டபடி நிற்கிறார்கள். “மலர்ந்த ரோஜா மலரே மடிந்தாயோ” என்ற பாடல் பின்னணியில் ஒலிக்கிறது. அத்தோடு நாடகம் முடிகிறது.  முதல் நாள் நாடகம் முடிந்ததும் முள்ளில் ரோஜா நாடக முடிவினைப்பற்றி பொது மக்கள் தங்கள் கருத்தினை எழுதி யனுப்ப வேண்டுமென வேண்டுகோள் விடுத்தோம். அதன்படி நூற்றுக்கணக்கான விமர்சனக் கடிதங்கள் வந்தன. சமுதாயத்தோடு போராடி வெற்றி பெறாமல் தற்கொலை செய்து கொள்வதாக நாடகத்தை முடித்திருப்பது சீர்திருத்தவாதிகளுக்கு உற்சாகம் அளிப்பதாக இல்லையென்றும், காதலர் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக நாடகத்தை முடிக்கவேண்டுமென்றும் சிலர் எழுதியிருந்தார்கள். இப்படிக் கருத்தறிவித்த கடிதங்கள் ஏறத்தாழ 50க்கு மேலிருந்தன. ரசிகர்கள் வேண்டுதலுக்கிணங்கத் துன்பியலிலேயே முடிந்த முள்ளில் ரோஜாவை இன்பியலிலேயே முடிப்பதாக விளம்பரம் செய்தோம். இரண்டாவது வாரமுதல் ஆற்றிலே விழப்போகும் செல்லத்தை இராமனதன் ஓடிவந்து காப்பாற்றுவதாகவும், அடுத்த காட்சியில் இருவருக்கும் திருமணம் நிகழ்வதாகவும் நாடகத்தை முடித்தோம். இந்த முடிவு ரசிகர்களின் உள்ளத்தில் அனுதாபத்தை உண்டாக்கவில்லை.  இன்பியலில் நாடகத்தை முடிக்க வேண்டுமென்று கடிதம் எழுதிய ரசிகர்களில் நாற்பதுக்கு மேற்பட்டவர்கள் மீண்டும் துன் பியலிலேயே முடிந்ததுதான் பொது மக்கள் உள்ளத்தில் நிலைத்து நின்றதென்று கடிதம் எழுதினார்.  சீர்திருத்தக் கருத்துக்களை சமுதாயம் ஏற்றுக்கொள்ள வேண்டுமானல் அவர்கள் மனத்திலே மாற்றம் காணச் செய்வது தான் நல்ல வழி. அதற்கு மாறாகப் பெற்றோர்களையோ சமுதாயத்தையோ எதிர்த்து இளைஞர்கள் இன்பமாக வாழ்ந்தார்கள் என்று காட்டுவது இளம் உள்ளங்களை மட்டுமே நிறைவு செய்யும். பெரும்பாலானவர்கள் சமுக சீர்திருத்தத்தை ஏற்க வேண்டுமானால் - அதற்காக நடைபெறும் நாடகங்கள் துன்பியலில்தான் முடியவேண்டும் என்பது அறிஞர்கள் கருத்து. நாடக ஆசிரியரின் கருத்தும் இதற்கு ஒத்திருந்தது. எனவே மூன்றாவது வாரம் முதல் முள்ளில் ரோஜா நாடகத்தைத் துன்பியலிலேயே முடித்தோம்.                                                                                                              சிறப்புக்குரிய நிகழ்ச்சிகள்   திருச்சியில் நாங்கள் இருந்த 1945-46இல் சிறப்புக்குரிய நிகழ்ச்சிகள் பல நடைபெற்றன. அவற்றில் நாடகத் துறையின் வளர்ச்சியினை விரும்பும் கலா ரசிகர்களுக்கு, மகிழ்வளிக்கக் கூடிய நிகழ்ச்சிகள் இரண்டு. ஒன்று ஈரோடு மாநாட்டினைப் பின்பற்றி 31-3.45இல் தஞ்சையிலுள்ள கரந்தை தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடந்த இரண்டாவது நாடகக்கலை மாநாடு.சங்கத் தலைவர் திரு ஐ. குமாரசாமிப்பிள்ளை முன்னின்று இதனை நடத்தினார். இந்த மாநாட்டில் எங்கள் நாடக சபையின் சார்பில் சின்னண்ணா டி. கே. முத்துசாமி கலந்து கொண்டார். முதல் நாடகக்கலை மாநாட்டின் செயலாளர் டி. என். சிவதாணு இம் மாநாட்டிலும் செயலாளராக இருந்து மாநாட்டைச் சிறப்புற நடத்தி வைத்தார்.  இரண்டு, 9.2.46இல் சென்னையில் நடைபெற்ற முன்றாவது நாடகக்கலை மாநாடு. இதனை முன்னின்று நடத்தியவர் நாடகமணி எம். என். எம். பாவலர். இந்த மாநாட்டிலே தான் கே. ஆர் இராமசாமிக்கு கடிப்பிசைப் புலவர் என்றபட்டம் வழங்கப்பட்டது இந்த மாநாட்டிலும் டி. என், சிவதாணு கலந்து கொண்டார். இம் மூன்று மாநாடுகளுக்குப் பின், சென்ற 28 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நாடக வளர்ச்சிக்கென்று மாநாடு எதுவும் இன்று வரை நடைபெற வில்லையென்பது குறிப்பிடத்தக்கதாகும்.  பழைய முதலாளி பழனியாபிள்ளை எங்கள் பழைய நாடக முதலாளி திரு. பழனியாபிள்ளை திருச்சியில் எங்களைச் சந்தித்தார். அவர் மிகவும் சிரமமான நிலையிலிருந்தார். ஸ்ரீமீனலோசனி பால சற்குண நாடக சபாஎன்னும் பெயரால் ஒரு நாடக சபையைப் பல ஆண்டுகள் சிறப் பாக நடத்தியவர். இலங்கைக்கும் சென்று பெரும்புகழ் பெற்றவர். திரு. டி. எஸ். துரைராஜ்,எம். ஆர். சாமிநாதன் சி.வி. முத்தப்பா, சபாபதி முதலிய எத்தனையோ நடிகர்கள் அந்தக்குழுவிலிருந்து பெருமைப் பெற்றார்கள். அந்தப் பெரியவர், கம்பெனி யெல்லாம் கலைந்துவிட்ட நிலையில் தன்னந்தனியாக வந்திருந்தார். அவருக்கு உதவ வேண்டியது எங்கள் கடமையென்பதை உணர்ந்தோம். 5-3-45இல் நடந்த குமாஸ்தாவின் பெண் நாடகத்தின் வசூல் முழுவதையும் அவருக்குக் காணிக்கையாக மேடையிலேயே அளித்தோம்.  கவியின் கனவு 23-4-45இல் ஸ்ரீசக்திநாடக சபாவின்கவியின் கனவு நாடகம் பார்ப்பதற்காக நாகப்படடினம் சென்றிருந்தேன். திரு. சக்தி கிருஷ்ணசாமி அவர்களின் பெரு முயற்சியால் அந்த நாடக சபை புதிதாக உருவாயிருந்தது. காட்சிகளையெல்லாம் புதிய முறையில் அமைத்திருந்தார்கள். கவியின் கனவு ஒரு புரட்சிக்கரமானதேசிய சரித்திர நாடகம். இந்நாடகத்தை எழுதியவர் இப்போது சங்கீத நாடக சங்கத்தின் செயலாளராகப் பணி புரிந்துவரும் கவிஞர் கலைமாமணி எஸ்.டி.சுந்தரம் அவர்கள், மக்களுககு எழுச்சியும் உணர்ச்சியும் ஊட்டத்தக்க முறையில் நாடகத்தின் உரையாடல்கள் அமைந்திருந்தன. பாலக்காட்டில் எங்களை விட்டுப் பிரிந்த எஸ். வி. சுப்பையா அவர்களை மீண்டும் அந்த மேடையிலேதான் நான் பார்த்தேன். நாடகத்தில் அவர் புரட்சிக் கவிஞனாகவந்து அற்புதமாக நடித்தார். திரு. எம். என். நம்பியார் சர்வாதிகாரியாக நடித்தார். அவருடைய திறமையான நடிப்பு, வட இந்தியத் திரைப்பட நடிகர் சந்திரமோகனை நினைவூட்டியது. நாடகத்தை நான் மிகவும் ரசித்தேன்.  நாடகம் முடிந்ததும் திரு. எஸ். டி. சுந்தரம், திரு. சக்தி கிருஷ்ணசாமி இருவரையும் மனமாரப் பாராட்டினேன். நண்பர் எஸ். வி. சுப்பையாவுக்கு வாழ்த்துக் கூறினேன். மறுநாள் நாகையிலேயே தங்கி, அவர்கள் கம்பெனி வீட்டிலேயே விருந்துண்டு 24- 4. 45இல் திருவாரூர் வந்தேன். அங்கு காரைக்குடி ஸ்ரீராம பாலகான சபையாரின் எதிர்பார்த்தது என்னும் சமூக நாடகம் பார்த்தேன். இந்நாடகம் திரு. நா. சோமசுந்தரம் அவர்களால் எழுதப் பெற்றது. உரையாடல்கள் புதியநடையில் எழுதப்பெற். றிருந்தன. நாடகம் நன்றாயிருந்தது. நடிகர்களும் சிறப்பாக நடித்தார்கள். கவியின் கனவு, எதிர்பார்த்தது ஆகிய இரு நாடகங்களும் எனக்குப் புதிய உற்சாகத்தை தந்தன. இரு நல்ல நாடகங்களைப் பார்த்த களிப்புடன் திருச்சிக்குத் திரும்பினேன்.  பூவளூர் பொன்னம்பலனார் பெரியார் அவர்கள் கண்ட சுயமரியாதை இயக்கத்தோழர்களில் பூவாளுர் அ. பொன்னம்பலனார் அவர்கள் குறிப்பிடத்தக்க தலைவராவார். சிறந்த சொற்பொழிவாளர். கோட்டையூரில் சண்டமாருதம் என்னும் வார ஏட்டினை அவர் நடத்தி வந்தார். எங்கள்பால் மிகுந்த அன்புடையவர். பெரியண்ணாவுக்குப் பொன்னம்பலஞரிடம் பெருமதிப்பு உண்டு. நீண்ட காலமாக அவர்தம்முடைய ஊருக்கு வரவேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய விருப்பத்தை ஏற்று, முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பே. விசுவகாதம் அவர்களுடன் 1.5-45 இல் நானும் பெரியண்ணா, பகவதி எல்லோரும் பூவாளுர் சென்றோம். பொன்னம்பலனார் இல்லத்தில் விருந்து புசித்தோம். பூவாளுர் உடற் பயிற்சிக் கழகத்தார் எங்களுக்கு ஒரு பாராட்டுக் கூட்டம் நடத் தினார்கள். அங்கிருந்து லால்குடி சென்றோம். லால்குடி திரு வள்ளுவர்கழகத்தில் எங்களுக்கு வரவேற்பு நடந்தது. திரும்பு கையில் திருச்சி வரும்வரை முத்தமிழ்க்காவலரும் நானும் மிகவும் பயனுள்ள ஒரு நாடகக் கதை அமைப்பினைப்பற்றி உரையாடிக் கொண்டு வந்தோம். சில ஆண்டுகளுக்குப் பின் முத்தமிழ்க் காவலர் அவர்கள் உருவாக்கிய தமிழ்ச்செல்வம் நாடகக்கதை அன்றைய உரையாடலிலே உருவானதுதான் என்பதுகுறிப்பிடத் தக்கதாகும்.  மகாத்மா காந்தியடிகள் திருச்சிக்கு வருகை தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் 2. 2. 46ல் திருச்சிக்கு வருகை புரிந்திருந்தார். அன்று திருச்சி மாநகரமே விழாக்கோலம் கொண்டிருந்தது. நாங்கள் செய்த தவப்பேற்றின் காரணமாக அன்றுதான் எங்கள் தேசபக்தி நாடகமும் திருச்சியில் ஆரம்பமானது. 1931இல் நாங்கள் மரையில் அரங்கேற்றியபோது தேச பக்தியின் மூலக்கதையான பாணபுரத்து வீரன் நாடகாசிரியர் திரு வெ. சாமிகாத சர்மா அவர்கள் தமிழ்நாட்டில் இல்லை. பர்மாவில் இருந்தார். அப்போது அந் நாடகநூல்தடை செய்யப்பட்டிருந்த தால் அவரைத் தேடிப்பிடித்துச் சிறப்பிக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிட்டவில்லை. எனவே, திருச்சியில் அந்தச் சிறப்பினச் செய்ய விழைந்தோம். காந்திஜியின் அன்றைய திருச்சி வருகை அதற்கு மேலும் உயர்வளிப்பதாக அமைந்தது. அன்றிரவு தேச பக்திநாடகம் நடைபெற்றது. அன்றைய வசூல் 1122-12.0 ஐயும் வெ. சாமிநாதசர்மா அவர்களுக்குக் காணிக்கையாகக் கொடுத் தோம். அன்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காந்திஜியைத் தரிசித்தேன். ஏற்கனவே ஒருமுறை அடிகளை நாகர் கோவிலில் பார்த்திருக்கிறேன். என்றாலும் அன்று அவரைத் தரிசித்தது எனக்குப் புதிய உணர்வினைத் தந்தது.  தேசபக்தி நாடகம் முன்பெல்லாம் நடைபெற்றதைவிடச் சிறப்பான முறையில் இப்போது தயாரிக்கப் பெற்றிருந்தது. “ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே” என்ற பாடலைப் புதிதாகச் சேர்த்து, பாணபுரம் விடுதலை பெற்றபின் சிறுமியர் ஆடிப் பாடுவதாகக் கூட்டு நடனம் அமைத்திருந்தோம். இந்த நாட்டியத்தை அழகிய முறையில் தயாரித்திருந்தார். டி. என். சிவதாணு. நாமக்கல் கவினார் அவர்களின் ‘சுதந்திரம் இல்லாமல் இருப்பேனோ’ என்ற பாடலை முக்கியமான ஒரு கட்டத்தில் சேர்த்திருந்தோம்.  பேராசிரியர் வ. ரா.  தேசபக்திநாடகம் 19.2.46இல் நடைபெற்றபோது பிரபல எழுத்தாளர் பேராசிரியர் வ. ரா. அவர்கள் தலைமை தாங்கினார். நாடகத்தை ரசித்த அவர் பாராட்டிப் பேசுகையில், இப் படிப்பட்ட ஒரு புரட்சிகரமான நாடகத்தை 1931 முதல் நடித்து வரும் டி. கே. எஸ். சகோதரர்களை நான் எவ்வளவு பாராட்டினலும் போதாது.இந்த தேசம் விடுதலை பெற்றபின் சுதந்திர இந்தியாவில் இந்தக் கலைஞர்களெல்லாம் கட்டாயம் கெளரவிக்கப்படவேண்டும். என்றுகூறினார்.பேராசிரியர் வ.ரா. மிகப் பெரிய சிந்தனையாளர். அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது புதிய புதிய கருத்துக்களையெல்லாம் அயைாசமாகக் கொட்டுவார். அவருடைய எழுத்தோவியத்தை நான் முதலா வதாகப் படித்தது காலணு விலையுள்ள காந்தி பத்திரிகையில். திரு. வி. க., பெரியார் ஈ. வே. ரா. முதலியோரைப் பற்றி அவர் எழுதி வந்த குறிப்புகள் என் உள்ளத்தைக் கவர்ந்தன. அதன் பிறகு நான் மணிகொடி இலக்கிய ஏட்டின் தோழனானேன். வ. ரா. விடம் எனக்கு ஒரு தனி மதிப்பு. அவரைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல். கோவையில் நடைபெற்ற தமிழ் மாகாண மாநாட்டுக்குச் சென்று, பாரதி பாடல்களைப் பாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அத்த மாநாட்டிலேதான் உடலுழைப்பில்லாத காங்கிரஸ் உறுப்பினார்கள் நூல்சந்தா கொடுக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தலைவர் ராஜாஜி அவர்கள் அந்தத்தீர்மானத்தைப் பற்றி விளக்கிக்கொண்டிருந்த பொழுது, “அந்தத் தீர்மானந்தின் வாசகம் சரியில்லை. திருத்தம் வேண்டும்” என்று பிரதிநிதிகள் கூட்டத்திலிருந்து ஒரு குரல் கம்பீரமாக ஒலித்தது. அதைத் தொடர்ந்து ஒர் உருவமும் எழுந்து நின்றது. உடனே ராஜாஜி, எழுந்து நின்ற அந்த உருவத்தை நோக்கி “ஸ்ரீமான் வ. ராமசாமி ஐயங்கார் வாசகத்தைச் சரியாகத் திருத்திக் கொடுப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை’. என்று கூறினார். அன்றுதான் வ. ரா. அவர்களை நான் முதன் முதலாகச் சந்தித்தேன். ‘ஐயங்கார்’ என்றதும் பட்டைநாமம் , பஞ்சகச்சம், இவைகலெல்லாம் என் கண்முன் நின்றன. பார்த்தேன்; உண்மையாகவே பிரமித்துப் போனேன். அருகிலிருந்த நண்பரிடம் வ. ரா. அவர்கள் ‘ஐயங்காரா?’ என்று கேட்டேன், “பூணூலைக்கூட வெகு நாட்களுக்கு முன்பே அறுத்தெறிந்து விட்ட புரட்சி வீரர்” என்றார் நண்பர். இதைக் கேட்டதும் வ. ரா. அவர்களிடம் நான் வைத்திருந்த அன்பும் மதிப்பும் பன் மடங்கு உயர்ந்தன. 1945இல் தான் நான் அவரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிட்டியது. சில மணி நேரங்களே அவருடன் கழித்தேன். அது மறக்க முடியாத நாள். எனக்கேற்பட்டிருந்த மனத் தளர்ச்சி, உற்சாகக் குறைவு எல்லாம் எங்கேயோ ஒடி மறைந்துவிட்டன. வ. ரா. அவர்களின் எழுத்தில் நான் கண்ட அதிசயம் ஒன்று. புத்தகத்தைப் படிக்கிறோம் என்ற உணர்ச்சி மறைந்து, அவர் நம்முடன் பேசிக் கொண்டிருப்பது போலவே உணருவோம். மகாகவி பாரதியாரின் புகழைப் பரப்பியவர்களில் முதலாவதாகக் குறிப்பிடத்தக்கவர் பேராசிரியர் வ. ரா. அவர்களே ஆவர்.  நாம் இருவர்-தாகசாந்தி  பேராசிரியர் வ. ரா அவர்களைப் பார்க்கச் சென்னைக்குச் சென்றிருந்த பொழுது என்னெஸ்கே நாடக சபையின் நாம் இருவரை ஒற்றைவாடை அரங்கில் பார்த்தேன். ப. நீலகண்டன் அவர்களின் இரண்டாவது நாடகம் இது. முள்ளில் ரோஜா திருச்சியில் நடந்து கொண்டிருக்கும் போதே சகோதரர் எஸ். வி. சகஸ்ர நாமத்தின் அழைப்பினை ஏற்று என்னெஸ்கே நாடக சபைக்கு நாம் இருவர் நாடகத்தைக் கொடுத்திருந்தார் ப. நீலகண்டன். நாடகத்தை மிகவும் உன்னதமாகத் தயாரித்திருந்தார் சகஸ்நாமம். இப்போது கே. ஆர். இராமசாமி தனியே கிருஷ்ணன் நாடக சபை என்ற ஒரு புதிய சபையைத் தஞ்சாவூரில் தொடங்கி விட்டதால் நாம் இருவரில் சகஸ்ரநாமமே கதா நாயகனாக நடித்தார். திரு வி. கே. ராமசாமி டி. ஏ. ஜெயலட்சுமி முதலியோரும் இதில் நடித்தனார். நாடகம் ப. நீலக்கண்டனின் நாடகப்புகழை மேலும் பலபடிகள் உயர்த்தியது. மறுநாளும் சென்னையில் தங்கினேன். ஸ்ரீ ராம பாலகான சபையாரின் தாகசாக்தி நாடகத்தை சென்னை சுகுண விலாச சபா நாடக அரங்கில் பார்த்ததாக எனக்கு நினைவு. இப்போது பிளாசா டாக்கீஸ் என்ற பெயரில் நடந்து வரும் அதே தியேட்டர்தான் அப்போது சுகுணவிலாச சபைக்குச் சொந்தமான நாடக அரங்காக இருந்தது. தாகசாந்தி நாடகத்தை நாஞ்சில் இராஜப்பா நல்ல முறையில் தயாரித்திருந்தார்.  நாஞ்சில் இராஜப்பா வைரம் அருணாசலம் செட்டியாரின் ஸ்ரீ ராமபால கான சபாவில் நாஞ்சில் இராஜப்பா நடிகராகவும் ஆசிரியராகவும் இருந்தார். இவர் ஒரு சிறந்த நடிகரும் எழுத்தாளரும் ஆவர். பக்தசாருக தாசராக இவர் நடித்ததை நான் ஒரு முறை காரைக் குடியில் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். புயலுக்குப்பின் என்று மற்றொரு சரித்திர நாடகத்தையும் பார்த்திருக்கிறேன். இதில் திரு. கே. ஆர். ராம்சிங் அவர்கள் மிக அற்புதமாக நடித்தார். இவருடைய அபாரமான நடிப்பு பிரபாத் டாக்கீசாரின் அமர்ஜோதியில் நடித்த சக்திரமோகனின் நடிப்பை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும். வைரம் செட்டியார் கம்பெனியில் பல நடிகமணிகள் தோன்றிப் புகழ் பெற்றனார். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் எம்.கே. முஸ்தபா, குலதெய்வம் ராஜகோபால், சட்டாம்பிள்ளை வெங் கட்ராமன், சாயிராம், ஏ. ஆர். அருணாசலம் எம். எஸ். எஸ். பாக்கியம், கே. மனோரமா, ஆர். முத்துராமன் ஆகியோராவர்.  அறிஞர் அண்ணா சந்திப்பு திருச்சியில் நாடகம் தொடங்கியபோது வீடு கிடைக்காமல் தியேட்டரிலேயே தங்கியிருந்ததாகக் குறிப்பிட்டேனல்லவா? சில மாதங்களுக்கு பின் தென்னுாரில் வீடு கிடைத்தது. இப்போது தென்னுாரில் வெண்ணெய் மலைச் செட்டியார் இல்லத்தில் குடி யிருந்தோம், 4-3-46இல் முற்பகல் 10 மணி இருக்கும். திடீரென்று அன்புத் தோழர் அறிஞர் அண்ணா அவர்கள் வந்தார். ஈரோடு நாடகக் கலை மாநாட்டுக்குப் பின்னங்களிடையே சந்திப்பு ஏற்பட வில்லை. கடிதத் தொடர்பும் நின்றுவிட்டது. எனவே, எதிர் பாராத அவரது வருகை எனக்கு வியப்பைத் தந்தது. நான் மகிழ்வோடு வரவேற்றுப் பேசினேன். “புதிய நாடகங்களையெல்லாம் தாங்கள் எப்போது பார்க்கப் போகிறீர்கள்? அந்தமான் கைதி, முள்ளில் ரோஜாவெல்லம் தங்களுக்கு நிரம்பப் பிடிக்கும். திராவிட நாட்டில் அவற்றிற்கெல்லாம் விமர்சனம் வரவில்லையே. ஏன்?” என்று கேட்டேன். வேலைகள் அதிகமாகி விட்டதென்றும், இப்போதெல்லாம் ஒய்வே கிடைக்கவில்லையென்றும் கூறினார். கே. ஆர். இராமசாமிக்கு நாடகம் எழுதிக் கொடுக்கப் போவதாகக் கேள்விப்பட்டேன். எங்களுக்குத்தான் அந்தப் பேறு கிடைக்கவில்லை. ஆலுைம் பரவாயில்லை. எங்கள் ராமசாமிக்குத் தானே கொடுக்கிறீர்கள்! தங்கள் நாடகம் அமோகமாக வெற்றி பெற இறைவனே வேண்டுகிறேன் என்றேன். இறைவனை வேண்டுவதைவிடத் தோழர் ராமசாமியை வேண்டினல் பய னுண்டு. நாடகத்தை நனருக நடத்தும்படி கே. ஆர். ஆருக்கு எழுதுங்கள்’ என்றார். ஏறத்தாழ இரண்டு மணிநேரம் பல்வேறு விஷயங்களைப்பற்றி பேசிகொண்டிருந்துவிட்டு விடை பெற்றுச் சென்றார். நீண்ட காலத்திற்குப்பின் அண்ணா அவர்களைச் சந் தித்தது எனக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது.  கிருஷ்ணன் நாடக சபா நடிப்பிசைப் புலவர் கே.ஆர். இராமசாமி தஞ்சையில் ஒரு நாடக சபையைத் தொடங்கினார். சிறையிலிருக்கும் கலைவாண ரின் நினைவாக அந்த நாடக சபைக்கு, கிருஷ்ணன் நாடக சபை என்று பெயர் வைத்தார். அந்தப் பெயரே நடிப்பிசைப் புலவ ரின் நன்றியுணர்வினைக் காட்டியது. கிருஷ்ணன் நாடக சபையின் முதல்நாடகமாக மனோகரா தொடர்ந்து நடைபெற்றது.7.3.46ல் மனோகரா நாடகம் பார்க்க நான் தஞ்சைக்குச் சென்றிருந்தேன். சுதர்சன சபா ஹாலில் மனோகரா நடைபெற்றது. கே. ஆர். இராமசாமி என்னெஸ்கே நாடக சபையில் மனோகரனக நடித்த போது அதனைப் பார்க்க எனக்கு வாய்ப்பு கிட்டவில்லை. தொடர்ந்து பலநாட்களாக அவர்மனோகரனாகநடித்தது எனக்கு வியப்பாகவே இருந்தது. நான் இரண்டு நாட்களுக்கு மேல் தொடர்ந்து மனோகரனாகநடித்ததேயில்லை. அப்படி நடிக்க என்னல் முடிவதில்லை. எங்கள் கம்பெனியில் அவர் இருந்த காலத்தில் நான் அவரை மனோகரனக நடிக்க எத்தனையோ முறை வற்புறுத்தியிருக்கிறேன். பணிவோடு மறுத்துவிட்டார். அவரது மனோகரன் நடிப்பைப் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஒரே ஆர்வமாக இருந்து. பார்த்தேன்; ரசித்தேன்; வியந்தேன்; பாராட்டினேன்.  வி. சி. கணேசனின் பத்மாவதி நடிப்பு  அன்று மனோகரனின் தாயார் பத்மாவதியாக நடித்த இளைஞரின் நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. 1922ஆம் ஆண்டு முதல் 1946ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நான் மனோகரன் பாத்திரத்தை ஏற்று நடித்து வந்திருக்கிறேன். ஆண்களும் பெண்களுமாக எத்தனையோ நடிக-நடிகையர் என்னுடன் பத்மாவதியாக நடித்திருக்கிறார்கள். ஆனால் அன்று பத்மாவதியாக நடித்த அந்த இளைஞரைப்போல் அவ்வளவு துணுக்கமாகவும் திறமையாகவும் யாருமே நடித்ததில்லையென உறுதியாகக்கூறலாம். அநேகமாகப் பாய்ஸ் கம்பெனி நடிகர்கள் எல்லோரையும் ஒரளவுக்கு நான் அறிவேன்.இந்த இளைஞர் எனக்குப் புதியவராகஇருந்தார். அருகிலிருந்த கம்பெனியின் நாடக ஆசிரியர் எம்.எஸ்.முத்துக்கிருஷ்ணன் என்னுடைய பழைய நண்பர். என்னோடு சுவாமிகள் கம்பெனியில் நடித்தவர். அவரிடம் கேட்டேன். “இந்த பத்மாவதி யார்?” என்று. “இவரைத் தெரியாதா? இவர்தான் வி, சி. கனேசனின்” என்றார் அவர், அன்றுதான் முதல்முறையாக திரு. கணேசனின் நடிப்பைப் பார்த்தேன். நாடகம் முடிந்ததும் கே. ஆர். இராம சாமியைச் சந்தித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். பத்மாவதியின் நடிப்பைப்பற்றி மிகவும் பாராட்டினேன். இந்த இளைனார் விரைவாக முன்னுக்கு வரக்கூடியவர். இவரை விட்டு விட வேண்டாம்” என்று கூறினேன்.  முன்னாள் நடிகமணிகள் இதன் பிறகு கே. ஆர். இராமசாமி, தான் என்னெஸ்கே நாடக சபையிலிருந்து பிரிந்து தனியே கம்பெனி தொடங்கி யதற்கான காரணங்களை விளக்கினார். அவர் கூறிய காரணங்கள் சரியோ, தவறோ எனக்குத் தெரியாது. ஆனால் சிறையிலிருக்கும் கலைவாணர் பெயரால் என்னெஸ்கே நாடகசபை என்று ஒன்றும் கிருஷ்ண நாடகசபை என்று ஒன்றுமாக இரு நாடகக் குழுக்கள் இயங்கி வருவதும் இவ்விரு குழுக்களையும் நடத்துபவர்கள் எங்கள் குழுவின் முன்னாள் நடிகமணிகள் எஸ். வி. சகஸ்ரநாமமும், கே. ஆர். இராமசாமியும் என்பதிலே நான் பெருமை அடைவதாகவும் கூறினேன். உடனே இராமசாமி சட்டென்று “யார் பெயரால் நடத்துகிறோமோ அந்தப் பெயருக்குரிய கலைவாணரும் நம் கம்பெனியின் நடிகர்தானே!” என்றார். அவர் அவ்வாறுமணம் விட்டுக் கூறியது என்னை மேலும் பெருமைப் படுத்துவதாக இருந்தது. நன்றி கூறிவிட்டுத் திருச்சிக்குத் திரும்பினேன்.  வானொலி நிலையத் தொடர்பு நாங்கள் திருச்சிக்கு வந்த முதல் மாதத்திலேயே திருச்சி வானொலி நிலையத்தோடு தொடர்பு ஏற்பட்டு விட்டது. எங்கள் குழுவின் இளம் நடிகர்கள் பக்ததுருவன், கந்தலீலா ஆகிய இரு நாடகங்களில் நடித்தார்கள். தம்பி பகவதி பக்தமீராவில் ராணாவாக நடித்தார். 23. 3- 45இல் மனோகரா நாடகத்தைப் பெரும்பாலும் நாங்களே நடித்தோம். பெ. கோ. சுந்தரராஜன் அவர்களின் ஸ்ரீஹர்ஷன் என்னும் சரித்திர நாடகத்திலும் நான் நடித்தேன். நிலையத்திலுள்ள எழுத்தாள நண்பர்கள் சுகி. சுப்பிரமணியம், கே. பி. கணபதி (மாறன்) எம். பி. சோமு, ஆறுமுகம் குகன், இசை இயக்குநர் கே. சி. தியாகராஜன் முதலியவர்களுட னெல்லாம் எனக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அகிலன், ‘சிவாஜி’ ஆசிரியர் திருலோக சீதாராம், ‘கிராம ஊழியன்’ ஆசி ரியர் வல்லிக்கண்ணன், ‘கலாமோகினி’ ஆசிரியர் இராஜ கோபால் முதலிய திருச்சி எழுத்தாளர்களோடெல்லாம் எங்களுக்கு நெருக்கமான நட்பு ஏற்பட்டது. திருச்சியில் ஒவ்வொரு நாளும் நாடகம் முடிந்த பிறகு தியேட்டருக்கு முன்புறமுள்ள முற்ற வெளியில் ஒர் இலக்கியக் கூட்டமே நடைபெறும். எங்கள் நாடகங்களைப் பற்றிய பல்வேறு வகையான விமர்சனங்களை நாங்கள் ரசனையோடு கேட்டுக் கொண்டிருப்போம். அந்த இன்ப நாட்களையெல்லாம் இப்போது நினைத்தாலும் இதயம்பூரிக்கிறது. திருச்சியில் ஒன்றரை ஆண்டு காலமாக நாடகம் முடிந்த பிறகு இவ்வாறு இலக்கியச் சிந்தனைகளில் ஒவ்வொரு நாளும் திளைத்திருந்தோம்.  வாழ்வு சிறிது வளர்கலை பெரிது “உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்” என்ற வாக்கியத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் முன்திரையில் எழுதித் தொங்கவிட்டிருப்பது பற்றிச் சில நண்பர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். ஒரு நாள் மாலை நாடகம் முடிந்த பிறகு வழக்கம்போல் கூடும் இலக்கிய நண்பர்கள் கூட்டத்தில் இதைப்பற்றி விவாதித்தோம், கலை சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு வாக்கியத்தை அமைப்பது நல்லதென சிவாஜி ஆசிரியர் திருலோக சீதாராம் யோசனை கூறினார். எங்களுக்கும் அவருடைய யோசனை சரி யாகப்பட்டது. தோழர் ஜீவானந்தம் அவர்களைத் திருச்சியில் சந்தித்தபோது அவருடனும் கலந்து பேசினோம். கலைத்தொடர்புடைய ஒரு வாக்கியத்தைத் தேர்ந்தெடுத்துச் சொல்லும்படி அவரைக் கேட்டுக்கொண்டோம். “Life is short, art is great” என்னும் ஆங்கில வாக்கியத்தை அவரே எடுத்துச் சொன்னார். அந்த வாக்கியத்தைத் தமிழில் அழகாக மொழி பெயர்த்தார் திருலோக சீதாராம். மறுநாளே வாக்கியம் முன்திரையில் எழுதப் பட்டது. வாழ்வு சிறிது; வளர்கலைப் பெரிதே!  ஆம், இந்த வாக்கியம் கலை சம்பந்தமான எங்கள் குறிக்கோளின் விளக்கமாகவும் அமைந்தது. திருச்சியில் 31. 3. 46 இல் பட்டாபிஷேக நாடகமாக மனோகராவை நடத்தி விட்டுக் கோவைக்குப் பயணமானோம்.            பில்ஹணன் திரைப் படம்   கோவை தியேட்டர் ராயல் புதிய நாடக அரங்கம். அது 15.4.46க்குள் கட்டி முடிந்து விடும் என்று எங்களுக்குச்சொல்லப் பட்டிருந்தது. 19ஆம் தேதி நாடகம் தொடங்கலாம் என்ற திட்டத்துடன் 4-4-46 இல் கோவை வந்து சேர்ந்தோம். சரியாக ஒன்றரை மாத காலம் தியேட்டருக்காகக் காத்திருக்க நேர்ந்தது. கம்பெனி வீடு நகருக்குள் கிடைக்கவில்லை. தியேட்டரிலிருந்து ஒன்றரை மைல்தொலைவில் இராமநாதபுரத்தில் தங்கியிருந்தோம் அதிக தூரம் என்றாலும் வீடு மிகவும் வசதியாக இருந்தது. அருகிலேயே பெண்களுக்குத் தனி வீடும் கிடைத்தது.  ஷண்முகா அரங்கம் கோவை நகரப் பிரமுகர்கள் சிலருடன் சின்னண்ணா கலந்து ஆலோசித்தார். நாடகத்திற்காக ஒரு நல்ல அரங்கம் கோவையில் கட்டுவதற்குத் திட்டமிட்டார். பிரிமியர் சினிடோன் உரிமையாளர் திரு ஏ. என். மருதாசலம் செட்டியார், சர். ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்களின் மருமக்கள் திரு ஏ. சண்முகம் சகோதரர்கள், திரு டி. கே. சங்கரன் சகோதரர்கள், திரு. சி. எஸ். இரத்தின சபாபதி முதலியார் அவர்கள் மகன் திரு சதாசிவ முதலியார் ஆகியோர் பங்குதாரர்களாகச் சேர்ந்து கோவை மேட்டுப் பாளையம் சாலையில் தியேட்டருக்குத் தேவையான இடத்தை வாங்கினார். ஷண்முகம் கம்பெனி என்ற பெயருடன் ஒரு கூட்டுக் கம்பெனியை நிறுவினார். கட்டப்படும் நாடக அரங்குக்கு சண்முகா அரங்கு எனப் பெயர் வைப்பதாக ஒரு முகமாக முடிவு செய்யப் பெற்றது.  22. 4. 1946 இல் சண்முகா அரங்குக்கு அடிப்படைக் கல் காட்டு விழா விமரிசையாக நடைபெற்றது.  ஷண்முகம் கம்பெனிக்கு முதல் நிர்வாக டைரக்டராக ஏ. என். மருதாசலம் செட்டியார் பொறுப்பேற்றார், அரங்க அமைப்பு வேலைகள் விரைவாக நடைபெறத் தொடங்கின.  தியேட்டர் ராயலில் சிவலீலா 10.5-46ஆம் தேதி தியேட்டர் ராயலில் சிவலீலா நாடகம் தொடங்கியது. நாங்கள் எதிர் பார்த்ததைவிட அதிகமாக வசூலாயிற்று. திங்கட்கிழமை தோறும் விடுமுறை விடும் வழக்கத்தை மேற்கொண்டோம். தினசரி நாடகம் நடைபெறுவதிலிருந்து ஒருநாள் ஒய்வு கிடைத்தது நடிகர்களுக்கும் ஏனைய தொழிலாளர்களுக்கும் ஆறுதலாக இருந்தது. தியேட்டருக்குப் போகவும் வரவும் வசதியாக இருக்கும் பொருட்டு ஒரு பழய ‘வேன்’ வாங்கினோம். அதில் 20 பேர்வரை போகலாம். இரண்டு தடவைகளில் நடிகர்கள் எல்லோரையும் கொட்டகையில்கொண்டு சேர்ப்பதற்கு ‘வேன்’ மிகவும் செளகரியமாக இருந்தது.  பில்ஹணன் பட முயற்சி வெற்றிகரமாக நடைபெற்று வந்த பில்ஹணன் நாடகத்தை வெள்ளித்திரையில் கொண்டுவரச் சின்னண்ணா விரும்பினார். புதுத் தியேட்டர் கட்டுவதற்குக் கூட்டுச் சேர்ந்திருந்த நிலையில் மேலும் படப்பிடிப்பில் பணத்தைச் செலவு செய்வது சிரமமாக இருக்கு மென்று பெரியண்ணா கருதினார். குமாஸ்தாவின் பெண் படத்தில் கூட்டு டைரக்டராகப் பணி புரிந்த திரு. கே. வி. சீனிவாசன் பில்ஹணனைத் தாமே தனியாக டைரக்ட் செய்ய விரும்பினார். அவரும் சின்னண்ணாவும் இதில் அதிக ஆர்வம் காட்டியதால் அந்த ஆர்வத்தைத் தடை செய்ய பெரியண்ணா விரும்பவில்லை. சேலம் சண்முகா பிலிம்ஸ் கூட்டுறவோடு பில்ஹணனச் சென்ட்ரல் ஸ்டியோவில் ஆறு மாத காலத்திற்குள் எடுத்து முடித்து விடலாம் என்று டைரக்டர் கே. வி. சீனிவாசன் உறுதி கூறினார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. நாடகக் குழுவின் நடிக-நடிகையரைக் கொண்டே பில்ஹணனைப் படமெடுக்க முடிவு செய்யப் பட்டது. சேலம் ஷண்முகா பிலிம்ஸ் திரு கந்தசாமி செட்டியாருடன் கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது.  நீதிபதி செளத்திரி பாராட்டு அந்தமான் கைதியிலும், முள்ளில் ரோஜாவிலும் எஸ்.எஸ். இராஜேந்திரன் கதாநாயகனக நடித்ததால் எனக்கு ஒய்வு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மேலும் சில நாடகங்களில் ஒய்வுபெற விரும்பினேன். என் எண்ணம் நிறைவேறவில்லை. எஸ்.எஸ். இராஜேந்திரன் கோவையிலேயே விலகிக்கொண்டார். ஆராய்ச்சிமணி என்னும் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் காரணமாக அவரைக் கம்பெனியிலேயே இருக்கும்படி வற்புறுத்த நாங்கள் விரும்பவில்லை. கோவையில் இராஜேந்திரன் இல்லாததால் 10.6.46இல் ஆரம்பமான அந்தமான் கைதியில் கதாநாயகன் பாலுவாக நானே நடிக்க நேர்ந்தது. 11-6-46இல் நடைபெற்ற அந்தமான் கைதிக்கு நீதிபதிசெளத்திரி அவர்கள் தலைமை தாங்கி மிக நன்முகப் பாராட்டிப்பேசினார்.  இந்த நாடகம் நீதிபதியாகிய எங்களுக்கு வழி காட்டும் நாடகமாக அமைந்திருக்கிறது. குற்றம் செய்பவர்கள் எந்தச் சூழ்நிலைகளில் எல்லாம் அதைச் செய்கிறார்கள் என்பதை இந் நாடகத்தின் மூலம் நாங்கள் புரிந்துகொள்ளுகிறோம். கொலைக்குற்றம் செய்தவனுக்கு அதற்குரிய தண்டனையைக் கொடுக்கும் நாங்கள் அந்தக் குற்றத்தை அவன் ஏன் செய்கிறான்? எப்படிச் செய்கிறான்? எந்தச் சூழ்நிலையில் செய்கிறான்? என்பனவற்றை யெல்லாம் நன்கு ஆராய்ந்து தீர்ப்பளிக்க வேண்டும் என்பதை இந்த நாடகம் எடுத்துக் காட்டுகிறது”  என்று கூறினார் நீதிபதி செளத்திரி. அன்றைய வசூல் ரூ. 1275ம் நாடகாசிரியர், கவினார் கு.சா.கிருஷ்ணமூர்த்திக்கு அன்பளிப்பாக வழங்கப் பெற்றது.  வளையாபதி முத்துக்கிருஷ்ணன் அந்தமான் கைதி நல்ல வசூலில் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேல் நடைபெற்றது. 9.7-46இல் தம்பி பகவதி திடீரென்று மனைவியின் உடல்நிலை காரணமாக நாகர்கோவில் செல்ல நேர்ந்தது. அப்போது நான் பகவதி நடித்த நடராஜன் வேடத் தைப் புனைந்தேன். பாலு வேடத்திற்கு வளையாபதி முத்துக கிருஷ்ணனுக்குப் பயிற்சி அளித்தேன். முத்துகிருஷ்ணன் அதற்கு முன்பெல்லாம் அதிகமாக வேடம் புனைவதில்லை. வெளியே வேறு அலுவல்களைப் பார்த்து வந்தார். அவரது தோற்றம் கதா நாயகன் வேடத்திற்குப் பொருத்தமாக இருந்ததாலும், நடிப்புத் துறையில் ஈடுபட அவருக்கு ஆர்வம் இருந்ததாலும் அவரைப் பாலுவாக உருவாக்கினேன். நாலைந்து நாடகங்களில் நடித்த பின் அவருக்குப் பாலு மிகவும் பொருத்தமாக இருந்தது. தம்பி பகவதி திரும்பியபின் எனக்கு மீண்டும் அந்தமான் கைதியில் ஒய்வு கிடைத்தது.  10.10-46 முதல் தியேட்டர் ராயல் வாடகை உயர்த்தப் பட்டதாலும் நாங்கள் சொந்தமாகக் கட்டி வந்த கொட்டகை முடியாததாலும் எங்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. பில்ஹனன் படப்பிடிப்புக்குத் தேதி நிச்சயித்து விட்டதால் கேவைக்கு அருகிலேயே இருக்கவேண்டிய சூழ்நிலையும் உருவானது.  பில்ஹணன் தொடக்க விழா 6-11-46இல் பில்ஹணன் படப்பிடிப்பு தொடக்கவிழா சென்ட்ரல் ஸ்டுடியோவில் கோலாகலமாக ஆரம்பமாயிற்று. திருச்சி திருலோக சீதாராம் மற்றும் நண்பர்களெல்லாம் வந்திருந்து விழாவினைத் தொடங்கி வைத்தார்கள். பில்ஹனன் நாடக ஆசிரியர் ஏ. எஸ். ஏ. சாமி அப்போது சென்ட்ரல் ஸ்டுடி யோவில் ஜபிடர் பிக்சர் ஸின் ஸ்ரீ முருகன் படத்திற்கு வசன கர்த்தாவாக நன்கு வளர்ச்சி பெற்றிருந்தார். அவரேபில்ஹனன் திரைப்படத்துக்குரிய உரையாடல்களையும் எழுதித் தர ஒப்புக் கொண்டார். நாடக பில்ஹணனைத் திரைப்பட பில்ஹணனாக எழுதும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பில்ஹணன் தொடக்கவிழா முடிந்ததும் 9-11-46இல் கோவையில் பட்டாபிஷேகம் முடித்துக்கொண்டு பாலக்காடு செல்ல முடிவு செய்தோம். பாலக்காடு கவுடர் பிக்சர் பாலஸ் அதிபர் திருமலைக் கவுடர் அவர்கள் எங்கள்பால் மிகுந்த அன்புடையவர். எனவே அவருடைய தியேட்டர் எளிதாகக் கிடைத்தது. கம்பெனி பாலக்காடு சென்றது.  சேரன் செங்குட்டுவன் ஒருநாள் சென்ட்ரல் ஸ்டுடியோவில் நானும் ஜூபிடர் சோமசுந்தரம் அவர்களும் கலந்து உரையாடினோம். அப்போது புதிய கதைகளைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். சேரன் செங்குட்டுவனைத் திரைக்குக் கொண்டு வந்தால் மகத்தான வெற்றி கிடைக்குமென்று நான் கூறினேன். சோமு அதனை வரவேற்றார். கதையை உருவாக்குவதற்குத் தகுதிவாய்த்த ஓர் எழுத்தாளரைக் குறிப்பிடுமாறு என்னைக் கேட்டார். நான் உடனே சிறிதும் தயக்கமின்றி அறிஞர் அண்ணாவின் பெயரைக் கூறினேன். “அவர் எழுதித் தருவாரா”? என்றுகேட்டார் சோமு. “அவருக்கு எழுதிச் சம்மதிக்க வைக்கிறேன். அவர் ஒப்புக் கொண்டால் நாமிருவரும் சென்னைக்கு சென்று அவரை நேரில் சந்திக்கலாம்” என்றேன். அன்றே அண்ணா அவர்களுக்குக் கடிதம் எழுதினேன். இரண்டு நாட்களில் பதில் கிடைத்தது. இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.  தங்கள் கடிதம் கிடைத்தது. மகிழ்ச்சி. நன்றி. கொஞ்சம் ஆச்சரியப்பட்டேன், சேரன் செங்குட்டுவனைத் திரை உலகு நினைவில் கொண்டு வந்தது பற்றி. தங்கள் யோசனைப்படி, நான் கதை வசனம் தீட்டத் தடையில்லை. முன்கூட்டி, கதைப்போக்கு எவ்வண்ணம் இருக்க வேண்டும் - என்னென்ன சம்பவங்கள் மட்டும் மக்களிடம் காட்ட விருப்பம் என்பது பற்றி, ஜுபிடரைக் கலந்து பேசுவது அவசியம் என்று கருதுகிறேன்.ஆவன செய்யும் படி அவர்கட்குக் கூறவும்.  அன்பன் அண்ணாதுரை  இக்கடிதத்தை ஜூபிடர் சோமுவிடம் காண்பித்தேன். அவர் கூறியபடி காஞ்சியில் விரைவில் நேரில் சந்திப்பதாக அண்ணா அவர்களுக்குக் கடிதம் எழுதினேன். 10-11-46இல் இருவரும் சென்னைக்குக் காரிலேயே புறப்பட்டோம். 11 இல் சென்னை வந்து உட்லண்ட்ஸ் ஒட்டலில் தங்கினோம். 11ஆம் தேதி என். எஸ் கே. நாடகசபையின் பைத்தியக்காரன் நாடகம் பார்த்தேன். சகோதரர் எஸ். வி. சகஸ்ரநாமம் உருவாக்கிய நாடகம் இது என்பதை அறிந்த போது மிகவும் பெருமிதமுற்றேன். நாடகத்தைப் பேராசிரியர் வ. ரா. வும் நானும் ஒன்றாக இருந்து பார்த்து ரசித் தோம். அருமையான நாடகம்; உணர்ச்சி மிக்க உரையாடல்கள்; எஸ். வி. எஸ். ஸின் நடிப்பு பிரமாதமாக இருந்தது.  என். எஸ் கே. சந்திப்பு  12ஆம் தேதி மகாஜன சபையில் எழுத்தாளர் கூட்டம் நடை பெற்றது. நண்பர்கள் பலரைச் சந்தித்தேன். திரு நாரண துரைக்கண்ணன் அவர்களைக் கண்டேன். உயிரோவியத்தை நாடகமாக்குவதுபற்றி விவாதித்தோம். 13ஆம் தேதி திருநாரண துரைக்கண்ணன் இல்லத்தில் பகல் உணவருந்தினேன். அன்று மாலை நானும் ஜூபிடர் சோமுவும் சிறையில் கலைவாணர் என். எஸ். கே.யைச் சந்தித்தோம். அன்றிரவு ஸ்ரீராம பாலகான சபையின் குடும்ப வாழ்க்கை நாடகம் பார்த்தேன். கதை யமைப்பு எனக்கு நிறைவளிக்கவில்லை. 14 ஆம் தேதி சோமுவும் நானும் காஞ்சீபுரம் சென்றோம். அண்ணா அவர்கள் ஊரில் இல்லாததால் திரும்பினோம். அன்று மாலையே நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியாரைச்சந்தித்து மனோஹரா திரைப்பட உரிமையைக் கேட்டார் சோமு. “ஷண்முகம் மனோகரனாக நடிப்பதாக இருந்தால் தருகிறேன். வேறு எண்ணமிருந்தால் சொல்லுங்கள்” என்றார் பேராசிரியர்; உடனே, “இப்போதைய நிலையில் என்னைத்தான் நடிக்கச் சொல்கிறார். பின்னால் இருக்கும் நிலைமைகளை அனுசரித்து மாறவும் கூடும். எனவே நிபந்தனை எதுவும் போடாமல் கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்டேன். சோமு அவர்கள், “இல்லை; இல்லை, ஷண்முகந்தான் மனோகரனாக நடிக்க போகிறார். தேவையானால் அந்த நிபந்தனையைத் தாங்கள் போட்டுக் கொள்ளலாம்” என்றார். நான் தான் வற்புறுத்தி, நிபந்தனை எதுவும் போடாமல் மனோகராவின் உரிமையை வாங்கிக் கொடுத்தேன்.  15ஆம்தேதி ஓர் இரவு நாடகம் பார்க்கத்தஞ்சை வந்தேன், பெருத்த மழையினால் அன்று நாடகம் நிறுத்தப்பட்டு விட்டது. 16ஆம் தேதி பில்ஹணனுக்குப் பாடல்கள் எழுத மதுர பாஸ்கரதாஸ் வருவதாக அறிவித்திருந்ததால் மறுநாள் தங்கி நாடகம் பார்க்கும் வாய்ப்பின்றி 16ஆம் தேதி கோவை வந்து சேர்ந்தேன். மதுர பாஸ்கரதாஸுடன் இரண்டு நாட்கள் இருந்து பாடல்கள் பற்றி விவாதித்து விட்டு 19 ஆம் தேதி பாலக்காடு சேர்ந்தேன்.  கடினமான உழைப்பு பில்ஹணன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததால் பகலில் கோவையிலும் இரவில் பாலக்காட்டிலுமாக நாள் முழுதும் உழைக்க நேர்ந்தது. என்னதான் உள்ளத்தில் உற்சாக மிருந்தாலும் இந்தக் கடினமான உழைப்பை உடல் தாங்க வில்லை. மாலை 5 மணி வரை கோவையில் படப்பிடிப்பு. அதற்கு மேல் காரில் புறப்பட்டுப் பாலக்காடு வருவேன். நாடகத்தில் உழைப்பேன். நாடகம் முடிந்ததும் உடனே புறப்பட்டுக் கோவை சென்று படுத்துறங்குவேன். காலை 6 மணிக்கெல்லாம் எழுந்து படப்பிடிப்புக்கு ஆயத்தமாக வேண்டும். ஒளவையார் நாடகம் தொடங்கிய பின் உண்மையிலேயே நான் மிகவும் சோர்ந்து விட்டேன். பகல் முழுதும் படப்பிடிப்பில் இருந்து விட்டு இரவில் ஒளவையாராக நடிப்பது என் சக்திக்கு மீறிய உழைப்பாக இருந்தது. என் சிரமத்தை நான் வெளியே சொல்லவில்லை என்றாலும் தொண்டைக் கட்டிக் கொண்டது. உடல் நலமும் குன்றிய தால் 26. 1. 47 இல் எங்கள் நண்பர்களான பாலக்காடு டாக்டர்கள் ராகவன், சிவதாஸ் இருவரிடமும் உடலைப் பரிசோதித்துக் கொண்டேன். இரண்டு நாள் நன்கு சோதித்த பின் மூன்று மாதங்கள் கட்டாயம் ஒய்வெடுத்துக் கொள்ள வேண்டுமென்றும், இரவில் 10 மணிக்கு மேல் கண்விழிக்கக் கூடாதென்றும், இப்படியே தொடர்ந்து உழைத்தால் 40 வயதுக்கு மேல் நரம்புத் தளர்ச்சி ஏற்படுமென்றும் கூறினார் டாக்டர் ராகவன். அன்றைய நிலையில் நான் ஒய்வு பெறுவது எப்படி? டாக்டரிடம் நிலைமையை எடுத்துக் கூறினேன். ஒய்வு பெறுவதைத் தவிர வேறு ஏதாவது வழி சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். பிறகு டாக்டர் ராகவனும் சிவதாஸு கலந்து யோசித்தார்கள். நிலைமை அவர்களுக்கே தெரியுமாதலால் அதற்கேற்றபடி எனக்கு மருந்துகள் எழுதிக் கொடுத்தார்கள். அவர்கள் யோசனைப்படி தினந்தோறும் ஊசிபோட்டுக் கொள்ளவும், குறிப்பிட்ட சில மருந்துகளைக் காலை மாலை இரு வேளைகளிலும் தொடர்ந்து சாப்பிட்டு வரவும் ஒப்புக் கொண்டேன். பாலக்காட்டில் இருக்கும்போது அவர்களிடம் ஊசிப்போட்டுக் கொண்டேன். கோவையில் இருந்தபோது எனது நண்பர் டாக்டர் கிருஷ்ணசாமியிடம் போட்டுக் கொள்வேன். இப்படியே பில்ஹணன் படம் முடியும்வரை மருந்திலேயே காலம் கழித்தேன்.  மனுஷ்யன் நாடகம் ஒருநாள் திங்கள்கிழமை ஒய்வு நாளன்று பாலக்காடு வாரியார் ஹாலில் மனுஷ்யன் என்னும் மலையாள நாடகம் பார்த்தேன். நாடகக் கதை எனக்கு நிரம்பவும் பிடித்தது. நாடக ஆசிரியர் திரு முதுகுளம் ராகவன் பிள்ளை, அதில் பிரண்டாக நடித்தார். டாக்டராக பிரபல மலையாள நடிகர் அகஸ்டின் ஜோசப் நடித்தார். அவருடைய நடிப்பை முன்பே கொச்சியில் ஏசு நாதர் நாடகத்தில் ஒரு முறை பார்த்திருக்கிறேன். இப்போது மனுஷ்யன் நாடகத்தில் அவரை டாக்டராகப் பார்த்ததும் அவர்மீது எனக்குப் பெருமதிப்பு ஏற்பட்டது. காட்சிகளின் கவர்ச்சியோ ஆடம்பர உடைகளோ எதுவுமில்லாமல் அந்த நாடகம் என்னைக் கவர்ந்தது.  இதே நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து நல்ல காட்சி யமைப்புகளோடு நடித்தால் நாடகம் அபார வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. நாடகம் முடிந்ததும் நாடக ஆசிரியரையும் அகஸ்டீன் ஜோசப் அவர்களையும் பாராட்டினேன். நாடகத்தைத் தமிழில் நடிக்க விரும்புவதாகக் கூறினேன். முதுகுளம் ராகவன் பிள்ளை மிகவும் மகிழ்ந்தார். “விரும்பினல் அப்படியே செய்யலாம். அது எனது பாக்யம்” என்றார். அதற்குப் ஏற்பாடு செய்வதாகக் கூறிவிட்டு விடைபெற்றேன்.  கலையுலகின் எல்லையற்ற மகிழ்ச்சி ஒருநாள் வாளையார் பகுதியில் வெளிப்புறக் காட்சியில் நடித்துவிட்டு வீடு திருப்பினோம். எல்லையற்ற மகிழ்ச்சி எங்களுக்காகக் காத்திருந்தது. ஆம் கலைவாணரும் பாகவதரும் விடுதலைப்பெற்றார்கள் என்ற நல்ல செய்தியினைக் காதாரக் கேட்டோம். உள்ளம் மகிழ்ச்சிக் கடலிலே மிதந்தது. 23. 5. 47இல் கலைவாணருக்குப் பட்சிராஜா ஸ்டுடியோவிலும் 24. 5. 47இல் எங்கள் ஷண்முகா தியேட்டரிலும் வரவேற்பு விருந்துகள் நடந்தன. நானும் இந்த வரவேற்புக்களிலே கலந்து கொண்டேன். என். எஸ். கே. தமது சிறை அனுபவங்களை விரித்துச் சொன்னபோது என்னல் தாங்க முடியவில்லை. கண்கள் கலங்கின.  பாலகாட்டில் வசூல்குறைந்தது. கோவையில் பில்ஹணன் படமும் முடியவில்லை. கோவைக்கு அருகிலுள்ள திருப்பூர், தாராபுரம் ஆகிய இடங்களில் தியேட்டர் கிடைக்கவில்லை. எனவே கம்பெனி திண்டுக்கல் சென்றது. 27. 5. 47 இல் திண்டுக்கல்லில் நாடகம் தொடங்கப் பெற்றது. திண்டுக்கல்லிலிருந்து அடிக்கடி கோவை படப்பிடிப்புக்காக வந்து போய்கொண்டிருந்தோம்.  வானெலியில் முதல் பேச்சு தமிழ் நாடகமேடை வசனங்கள் என்னும் தலைப்பில் திருச்சி வானெலி நிலையத்தார் என்னைப் பேச அழைத்தனார். அவர்கள் அழைப்பினை ஏற்றுக்கொண்டேன். 30.7. 47இல் அந்தப்பேச்சை பதிவு செய்யத் திருச்சிக்குச் சென்றேன். பண்டைக்கால நாடகங்களில் வசனங்கள் இருந்த நிலையையும், அதன் பிறகு தவத்திரு சுவாமிகள், பம்மல் சம்பந்தனார் வசனங்களையும் விமர்சித்தேன். தேசபக்தியில் வெ. சாமிநாத சர்மா, அந்தமான் கைதியில் கவினார் கு. சா. கி. முள்ளில் ரோஜாவில் ப. நீலகண்டன் கவியின் கனவில் எஸ். டி. சுந்தரம் குமாஸ்தாவின் பெண்ணில் டி. கே. முத்துசாமி ஓர் இரவில் அறிஞர் அண்ணா ஆகியோர் கையாண்டுள்ள வசன நடை அழகைப்பற்றி ஆய்வுரை செய்தேன். திருச்சி நிலைய எழுத்தாள நண்பர்கள் என் ஆய்வுரையினை வெகுவாகப் பாராட்டினார்கள். அடுத்த வாரத்தில் என்னுடைய வானெலிப் பேச்சு பிரசண்ட விகடனில் வெளிவந்தது. ஆசிரியர் நாரண துரைக்கண்ணன் அவர்களும் அதனைப் பாராட்டிக் கடிதம் எழுதினார். வானெலிப் பேச்சுக்காய்த் திண்டுக்கல்லிலிருந்து திருச்சிக்குச் சென்ற அன்றே முற்பகல் பேச்சைப் பதிவு செய்து விட்டுத் தஞ்சை வந்து அன்றிரவே அறிஞர் அண்ணா அவர்களின் வேலைக்காரி நாடகம் பார்த்தேன். வசனங்கள் அற்புதமாக இருந்தன. கதை அமைப்பும் புதுமையாக இருந்தது. கே. ஆர். இராமசாமி இந்நாடகத்தில் மிக உருக்கமாக நடித்தார். சில நாட்களுக்குப்பின் 13-8- 47இல் குடந்தைக்குச் சென்று கே. எஸ் இரத்தினம் அவர்களின் தேவிநாடக சபாவில் ‘சூறாவளி’ என்னும் நாடகம் பார்த்தேன். நாடகத்தின் ஆசிரியர் திரு. ஏ. கே. வேலன் அவர்கள் இந்த நாடகத்திலும் வசன நடை எழுச்சி வாய்ந்த தாக இருந்தது. நண்பர் கே. என். இரத்தினமும், திரு. ஏ. கே. வேலனும் விரும்பியபடி அன்று நாடகத்திற்குத் திண்டுக்கல் தலைமை தாங்கி தேவி நாடக சபாவை மனமாரப் பாராட்டி விட்டுத் திரும்பினேன்.  சுதந்திரத் திருநாள் 1947 ஆகஸ்டு 15ஆம்நாள். ஆங்கில ஏகாதிபத்தியம் ஒன்றுபட்ட இந்தியாவை பாகிஸ்தான் இந்தியா என்று இரு கூறுகளாகப் பிரித்துவிட்டு வெளியேறியது. சுதந்திரத் திருநாள் இந்தியா முழுதும் பட்டி தொட்டிகளிலெல்லாம் கொண்டாடப் பெற்றது. திண்டுக்கல்லில் விடுதலை விழாவினைக் கோலாகலமாகக் கொண்டாடினோம் வெள்ளை ஏகாதிபத்தியம் வெளியேறும் இந்த மகத்தான விடுதலைத் திருநாளைத் துக்ககாள் என்று கொண்டாடினார் பெரியார் ஈ.வே. ரா. இன்ப நாள் என்று கொண்டாடினார் அறிஞர் அண்ணா. அண்ணா அவர்களும் பெரியார் ஈ வே. ரா அவர்களும் தலைவர் ம. பொ. சி. அவர்களும் திராவிட நாடு, விடுதலை, தமிழ் முரசு ஆகிய இதழ்களில் இந்தச் சுதந்திரத் திருநாளைப்பற்றி எழுதியுள்ள தலையங்கங்களை நாங்கள் அனைவரும் ஆர்வத்தோடு படித்தோம். தலைவர் ம. பொ. சி., அறிஞர் அண்ணா ஆகியோரின் கருத்துரைகள் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தன. இருவரும் ஒன்று சேர வேண்டுமென்று என்னுடைய ஆர்வத்தை வெளியிட்டு இரு அறிஞர்களுக்கும் நீண்ட கடிதங்கள் எழுதினேன். சுதந்திரத் திருநாளன்று திண்டுக்கல் நகர முழுவதும் விழாக் கோலம் கொண்டிருந்தது, நான் தரகுமண்டி குமாஸ்தாக்கள் சங்கத்திலும் மற்றும் மூன்று இடங்களிலும் சுதந்திரக் கொடியினை ஏற்றி வைத்துப் பேசினேன். அன்று நடைபெற்ற எங்கள் சிவாஜி நாடகத்தில் இந்த மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் முறையில் தக்க இடங்களில் வசனங்களைச் சேர்த்துப் பேசி ரசிகப் பெருமக்களின் பாராட்டுதல்களைப் பெற்றோம்.  திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு 1946ஆம் ஆண்டிலேயே திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து பிரிந்து, திருவிதாங் கூரிலுள்ளப் தமிழ் பகுதிகளைத் தமிழகத்தோடு இணைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் என்ற அமைப்புத் தோன்றியது. திருவாளர்கள் எஸ். நதானியல் ஆர். கே. ராம், பி. எஸ். மணி, எஸ். ரீவிதாஸ் , வி. மார்க்கண்டன் இரா. வேலாயுதப் பெருமாள் முதலிய தேசபக்தர்கள் அந்த அமைப்பைத் தோற்றுவிப்பதற்கு பெருமுயற்சி யெடுத்துக் கொண்டனார். திருவிதாங்கூரில் தமிழியக்கத்தை வளர்ப்பதற்கு இந்த அமைப்பைச் சார்ந்த பெருமக்கள் அரும்பாடுபட்டார்கள். தமிழ்நாட்டிலிருந்து இந்த அமைப்புக்குத் தொடக்கக் காலத்திலேயே பேராதரவு காட்டினார் தலைவர் ம. பொ. சிவஞானம்.அவர்கள். நாங்களும் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்களும் திரு-தமிழர் இயக்கத்திற்கு ஆரம்ப நாள்தொட்டே ஆதரவளித்து வந்தோம். தாய்த்தமிழகத்தோடு இணைய விரும்பும் இவர்களுடைய முயற்சிகளை வரவேற்றுத் தமிழ்நாடு காங்கிரஸ் நிதிக்காக 24. 8. 47இல் திண்டுக்கல்லில் தேசபக்தி நாடகத்தை நடத்தினோம். அன்றைய வசூல் ரூபாய் 1035ம் திரு.தமிழரியக்க நிதிக்காக அவர்களிடம் எங்கள் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டது. மேடையில் நான் பேசிய போது, திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசின் முயற்சிகள் வெற்றி பெறவும், அங்குள்ள தமிழ்ப்பகுதிகளான தேவிகுளம், பீர்மேடு, செங்கோட்டை ஆகிய தாலுக்காக்களும் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து பிரிந்து தாய்த் தமிழகத்தோடு சேரவும் வாழ்த்துக்கூறினேன்.  பாரதி மண்டபத் திறப்பு விழா எட்டையபுரம் பாரதி மண்டபத் திறப்பு விழாவுக்கு அழைப்பு வந்திருந்தது. சென்னையிலிருந்து ‘பிரசண்ட விகடன்’ ஆசிரியர் திரு நாரண துரைக்கண்ணனும் கடிதம் எழுதியிருந்தார். 11-10-72ல் அவர் திண்டுக்கல் வந்தார். மறுநாள் நாங்களிருவரும் புறப்பட்டுப் பகலில் எட்டையபுரம் சேர்ந்தோம். தமிழக முழுவதிலுமிருந்து எழுத்தாள நண்பர்கள் பலர் விழாவில் கலந்து கொண்டனார். பேராசிரியர் சீனிவாசராகவன், கு. அழகிரி சாமி, திருலோக சீதாராம், புத்தனேரி சுப்பிரமணியம், கவினார் தே. ப. பெருமாள், பெ. தூரன் முதலிய பலர் எனக்குப் பழக்கமானவர்கள் இருந்தார்கள். எல்லோரும் எட்டைய புரம் அரசரின் மைத்துனார் திரு அமிர்தசாமி பங்களாவில் தங்கினோம். மாலையிலும் இரவிலும் இசைவாணி திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி, இசையரசு திரு எம். எம். தண்டபாணி தேசிகர் ஆகியோரின் இன்னிசை அமுதினைப் பருகினோம். மக்கள் வெள்ளம் போல் குழுமியிருந்தனார். ஒரே நெருக்கடி; வரவேற்புக் குழுவினரால் கூட்டத்தைச் சமாளிக்க முடியவில்லை. தமிழ்நாடே எட்டைய புரத்திற்குள் இருப்பது போன்ற ஒரு பிரமை எனக்கு ஏற்பட்டது. முதல் நாள் விழா முடிந்து நாங்கள் உறங்குவதற்கு இரவு மூன்று மணி ஆயிற்று.  மறுநாள் அதிகாலையில் எழுந்து பாரதி மண்டபத் திறப்பு விழாவில் கலந்து கொண்டோம். தலைவர் இராஜாஜி அவர்கள் அப்போது வங்காளத்தின் கவர்னராக வந்து விழாவில் கலந்து கொண்டார். கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எல்லோரையும் வரவேற்று மிக அருமையாகப் பேசினார். தலைவர் ம. பொ. சி. தோழர் ப. ஜீவானந்தம் ஆகிய இருவரின் பேச்சும் உணர்ச்சிக் கனலாக அமைந்தன.  ஜெய பேரிகை கொட்டடா!  அன்றைய விழாவில் பாட வேண்டுமென்று என் உள்ளம் துடித்தது. முன்னால் சிலர் பாடினார்கள். அவர்கள் பாட்டிலே இனிமையிருந்தது; இசைத்திறன் இருந்தது; ஆனால் பாரதி பாடல்களுக்குத் தேவையான எழுச்சியும் உணர்ச்சியும் இல்லை. நான் கீழே அமர்ந்திருந்தேன். பாரதி பாடல்களை நான் பாடுவதைக் கேட்ட நண்பர்கள் சிலர் பக்கத்திலே இருந்தனார். அவர்கள் என்னைப் பாடும்படியாகத் தூண்டினார். என்னல் அமைதியாக, உட்கார்ந்திருக்க முடியவில்லை. நேராக எழுந்து மேடைக்குச் சென்றேன். தலைவர் இராஜாஜியை வணங்கி விட்டு “நான் ஒரு. பாரதி பாடலைப்பாட அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டேன். அப்போது இராஜாஜிக்கு நான் அறிமுகமில்லாதவன். அவர், “இல்லையில்லை, நேரமில்லை. இனி அனுமதிப்பதற்கில்லை” என்றார். நல்லவேலையாகத் தலைவர் திரு காமராஜ் அவர்கள் இராஜாஜியின் அருகில் இருந்தார். அவர் என்ன அறிந்தவராதலால், “ஷண்முகம் பாரதி பக்தர்; நன்றாகப்பாடுவார்; பாடச்சொல்லுங்  கள்,” என்றார், கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தியும் எனக்காக இராஜஜியிடம் பரிவுரை செய்தார். அதன் பிறகு இராஜாஜி “அப்படியானால் ஏன் நிகழ்ச்சியில் சேர்க்கவில்லை?” என்று சொல்லிக்கொண்டே “சரிசரி, பாடுங்கள்,” என்றார். நான் ‘மைக்’ கின் முன்னால் வந்து நின்றவுடனே என்னையறிந்தரசிகர்கள் கையொலி எழுப்பினார்கள். நான் உணர்ச்சிப்பிழம்பாக நின்றேன்.  ஜெய பேரிகை கொட்டடா  கொட்டடா கொட்டடா ⁠(ஜெய)  உச்சத்தில் குரலெழுப்பிப் பாடினேன். வெள்ளம்போல் இருந்த மக்கள் கூட்டம் மந்திர சக்தியால் கட்டுண்டதுபோல் நிசப்தமாக இருந்தது. பாட்டு முடிந்ததும் கடலலைபோல் கரவொலி எழுந்தது. நான் சபையை வணங்கிவிட்டுத் திரும்பியதும், தலைவர் இராஜாஜி “மிகநன்றாகப் பாடினீர்கள், இனி யாரும் பேசவோ பாடவோ வேண்டியதில்லை. நன்றி உரை மட்டும் போதும்,” என்றார்.... ...  அன்று மாலையிலேயே புறப்பட்டுத் திண்டுக்கல் வந்து சேர்ந்தோம்.  ஜனசக்தி நாளிதழாக வர ரூ. 5000  திண்டுக்கல்லில் முள்ளில்ரோஜா நாடகம்பார்ப்பதற்காக தோழர் ஜீவானந்தமும் வந்திருந்தார். அவரோடு நீண்ட நேரம் உரையாடிக்கொண்டிருந்தோம். ஜனசக்தி வார இதழை நாள் இதழாகக் கொண்டு வரத் தீவிர முயற்சிகள் செய்வதாகவும், குறிப்பிட்ட ஒரு அச்சு இயந்திரத்தை வாங்குவதற்கு ரூ. 5000 தேவைப்படுகிறதென்றும், அந்தத் தொகையைக் கடனாகக் கொடுத்தால் இரண்டு மாதத் தவணையில் திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் கூறினார். அப்போது எங்களுக்குப் பண நெருக்கடி அதிகம். கோவை ஷண்முகா தியேட்டர் இன்னும் கட்டி முடியவில்லை. அதற்கு எங்கள் பங்குத் தொகையைக் கேட்டு அடிக்கடி தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் போட்ட திட்டத்தைவிட ஷண்முகா தியேட்டர் அதிகமான தொகையை விழுங்கிக் கொண்டிருந்தது. பில்ஹணன் படப்பிடிப்பும் திட்டமிட்டபடி விரைவில் முடியவில்லை. ஆறு மாதத்தில் படத்தை  முடிக்கலாமென்று எண்ணினோம். பல்வேறு தகராறுகளால் ஏறத்தாழ ஒராண்டாகியும் படம் முடியவில்லை. இந்தநிலையில் தோழர் ஜீவா கேட்ட தொகையைக் கொடுத்து உதவுவது எங்கள் சக்திக்கு மீறிய ஒன்றாகத் தோன்றியது. இதுபற்றிப் பெரியண்ணாவும் நானும் கலந்து யோசித்தோம். தோழர் ஜீவாவின் லட்சியத்திலும் அயராத உழைப்பிலும் பெரியண்ணாவுக்கு அபார நம்பிக்கை இருந்தது. ஆழ்ந்து சிந்தித்த பிறகு எப்படியும் அவர் கேட்கும் தொகையைக் கொடுத்து உதவ உறுதி கொண்டார். மறுநாள் தோழர் ஜீவானந்தத்திடம் ரூ. 5000/-ரொக்கமாகவே கொடுக்கப் பெற்றது. முறைப்படி அதற்காக கடன் பத்திரமோ ரசீதோ எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை.  சென்னை சென்ற ஜீவா நன்றிக்கடிதம் எழுதினார். ஒருவார காலத்திற்குள் கம்யூனிஸ்டுகள் பலர் கைது செய்யப்பட்டதாகவும் தோழர் ஜீவானந்தம் தலைமறைவாகிவிட்டதாகவும் அறிந்தோம். எங்கள் பணத்திற்காக நாங்கள் கவலைப்படவில்லை. தோழர் ஜீவாவைச் சந்திக்கும் வாய்ப்பினை இழந்தமைக்காகவருந்தினோம்.  ஷண்முகா தியேட்டர் திறப்புவிழா கோவையில் கட்டப்பெற்று வந்த ஷண்முகா அரங்கம்கட்டி முடிக்கப்பட்டு விட்டதாகவும் திறப்புவிழா நடைபெறப் போவதாகவும் அழைப்பு வந்தது. சின்னண்ணா மட்டும் விழாவில் கலந்துகொண்டார். 25. 10. 47இல் திவான் பகதூர் சி. எஸ். இரத்தின சபாபதிமுதலியார் அவர்களால் கோவை ஷண்முகா அரங்கு திறந்து வைக்கப் பெற்றது. எங்களையும் பங்குதாரர் களாகக்கொண்டு கட்டப்பட்ட நாடக அரங்கு ஆதலால் தியேட்டர் வாடகை கொஞ்சம் சாதகமாக இருக்குமென்று எதிர் பார்த்தோம். ஆனால்ஒரு மாதத்திற்கு முன்பே வாடகையை நிர்ணயம் செய்வதில் தகராறு வந்துவிட்டது. வாடகை அதிக மாகக் கொடுக்கவேண்டுமென்ற நிலையேற்பட்டதும் பெரியண்ணா சொந்தத் தியேட்டரில் நாம் நாடகம் நடத்தத்தான் வேண்டுமா என்பது பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டார். பெரியண்ணாவின் கோபம் நியாயமானது என்பதைப் பங்குதாரர்கள் உணர்ந் தார்கள். அதன்பின் கோவை ஷண்முகா அரங்கில் நாடகம் நடத்துவது உறுதி செய்யப்பட்டது. கோவைக்குப்பயணமானோம்.            எங்கள் நாடக அரங்கம்   நாடகவாழ்க்கையில் பல ஆண்டுகள் உழன்று தட்டித் தடுமாறி வந்த நாங்கள் எங்கள் நாடக அரங்கு என்று உரிமை யோடு சொல்லிக் கொள்ளத்தக்க வகையில் ஷண்முகா அரங்கம்உருவாகியிருப்பது குறித்து எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.  சொந்தத் தியேட்டரில் முதல் நாடகமாக 11- 11. 47இல் ஒளவையார் நாடகம் நடைபெற்றது. சுதத்திரம் பெற்ற இந்தியாவின் முதல் நிதியமைச்சர் திரு. ஆர். கே. சண்முகம் செட்டியார் அன்று தலைமை தாங்கினார். மனம் திறந்து பாராட்டினார்.  கே. ஆர். சீதாராமன் ஒளவையார்  பில்ஹணன் படப்பிடிப்பும் தொடர்ந்து நடைபெற்று வந்ததால், இரவில் நாடகத்திலும் பகலில் படத்திலுமாக நடித்து வந்தேன். அடிக்கடி தொண்டை கட்டிக்கொண்டு நாடகம், படம் இரண்டுக்கும் இடையூறு ஏற்படும்போல் தோன்றியது. இரவில் படப்பிடிப்பை வைத்துக் கொள்வதற்கும் முடியாமலிருந்தது. ஒளவையாருக்கு நல்ல வசூலாகியதால் அதனை நிறுத்தவும் விரும்பவில்லை. எனவே எங்கள் குழுவின் நீண்டகால அனுபவம் பெற்றநடிகரான கே. ஆர் சீதாராமனை ஒளவையாராக நடிக்க வைக்கலாம் என்று முடிவுசெய்தேன். 19.11.47 முதல் கே ஆர். சீதாராமன் ஒளவையாராக நடித்தார். மாலை 6மணிக்குமேல் நான் தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட நேர்ந்ததால் நாடகத்தைப் பார்க்க இயலவில்லை. படப்பிடிப்பு ரத்து செய்யப் பட்டதால் அதைப்பயன் படுத்திக் கொண்டு ஒருவருக்கும் சொல்லாமல் சபையில் இருந்து நாடகத்தைப் பார்த்தேன். தம்பி சீதாராமன் ஒளவையாராக மிக அருமையாக நடித்தார். அற்புதமாகப் பாடினார். தொடர்ந்து அவரே ஒளவையாராக நடிக்கலாம்  என்ற உறுதி எனக் கேற்பட்டது. நாடகம் முடிந்ததும் உள்ளே சென்று சீதாராமனைப் பாராட்டி உற்சாகப் படுத்தினேன்.  ஔவை ஆசிரியருக்குக் காணிக்கை ஒளவை நாடகத்தின் உரிமையை திரு. பி. எதிராஜூ அவர் களிடம் நாங்கள் பெற்றபோது அவருக்கு ஒரு சிறு தொகை தான் அன்பளிப்பாகக் கொடுக்க முடிந்தது. எனவே ஆயிரக் கணக்கில் வசூலாகும் கோவையில் அவருக்குக் காணிக்கையாக. ஒரு நாடகம் நடத்திக் கொடுக்க விரும்பினோம். 30.11-47 இல் நடைபெற்ற ஒளவையார் நாடகவசூல் ரூ.1619.8.0ஆசிரியருக்குக் காணிக்கையாகக் கொடுக்கப் பெற்றது. ஒளவையார் முழுவதை யும் பார்த்து, நாடகத்தின் தமிழ்ச்சுவையை நன்முக ரசித்து, நாடகத்தின் மங்களப் பாடலும் தமிழ் மொழி வாழ்த்தாக இருக்க வேண்டுமென்று விமர்சனம் வரைந்த தலைவர் சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்களின் திருக்கையாலேயே இந்தக்காணிக்கையை ஒளவை ஆசிரியருக்கு அளிக்கச்செய்தோம். ஆம்; அன்று சிலம்புச்செல்வர்தான் தலைமை தாங்கி வாழ்த்தினார்.  சிலம்புச் செல்வரோடு மேலும் தொடர்பு 1946இல் கோவையில் இருந்த போது, திரு ம. பொ. சி. அவர்கள் நடத்தி வந்த திங்கள் இதழைத் தொடர்ந்து படித்து வந்தேன். 1946 ஆகஸ்டு இதழில் “கண்ணகிக்குக் கோயில் உண்டா?” என்னும் தலைப்பில் சிலம்புச்செல்வர் எழுதியிருந்த சிறிய கட்டுரை எனக்கு மிகவும் பிடித்தது. ஒரு பெரிய ஆராய்ச்சிக்குத் தோற்றுவாயாக அக்கட்டுரை அமைந்திருந்தது. தமிழ்ப் பேராசிரியர்கள் பலரும் செய்யாத ஒரு சிறந்த ஆராய்ச்சிக்கு வித்திட்டது போன்றிருந்தது அக்கட்டுரை. அவரது கட்டுரையினை பாராட்டி ஒரு கடிதம் எழுதினேன். இக்கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு மேலும் நன்கு. ஆராய்ந்து ஒரு நூல் எழுதுமாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து கடிதங்கள் மூலமே எங்கள் உறவு வளர்ந்தது.  1947 நவம்பரில் நடைபெற்ற தமிழரசுக்கழக மாநாட்டிற்கு 100 ரூபாய்கள் நன்கொடை அனுப்பினேன். அதன் காரணமாக நட்புறவு மேலும் வளர்ந்தது. நவம்பர் முன்றாவது வாரத்தின் தலைவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. உடல்நலம் மிகவும் குன்றி யிருப்பதாகவும், வயிற்று நோய் அதிகரித்திருப்பதாகவும், எங்காவது பத்து நாட்கள் சென்னையைவிட்டு வெளியே போய் ஒய்வு பெற விரும்புவதாகவும் எழுதியிருந்தார். கோவை இராமனத புரத்தில் படப்பிடிப்பை முன்னிட்டு ஒரு பெரிய வீட்டில் தங்கி யிருப்பதாகவும், விரும்பினல் எங்கள் இல்லத்திலேயே தங்கிப் பூரண ஒய்வு பெறலாமென்றும் பதில் எழுதியிருந்தேன். தலைவர் அவர்கள் என் அழைப்பினை ஏற்றுக் கொண்டார். 1947 நவம்பர் கடைசி வாரத்தில் கோவைக்கு வந்து எங்களோடு தங்கிளுர், ஒய்வு பெறும் நோக்கத்தோடு தான் வந்தார். ஆனால் நண்பர்கள் அவரை ஒய்வுபெறவிடவில்லை. தினமும் யாராவதுவந்து அவருக்கு அன்புத் தொல்லை கொடுத்துக் கொண்டேயிருந்தார்கள். திங்கட்கிழமை எனக்கு ஒய்வு நாள். அன்று நானும் தலைவரும் திரைப்படம் பார்க்கச் செல்வோம். திரைப்படத்தில் அவருடைய கவனம் அதிகமாகச் செல்லுவதில்லை, வேறு ஏதாவது இலக்கியங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார். 30-11-47இல் அவர் எங்களோடிருந்தால் அவரையே இந்தக் காணிக்கையை அளிக்கப் பயன்படுத்திக் கொண்டோம்.  சி. ஏ. அய்யாமுத்துவின் கஞ்சன் படம்  மறுநாள் 1-12-47இல் இருவரும் கஞ்சன் படம் பார்த்தோம். எனது பெருமதிப்புக்குரிய நண்பர் கோவை சி. ஏ. அய்யாமுத்து அவர்களால் எழுதப் பெற்ற கதை அது. வசனம் பாட்டு அனைத்தையும் அவரே அருமையாக எழுதியிருந்தார். தமிழர் காட்டிலே தமிழர் ஆட்சியே தழைத்திடச் செய்யடா தமிழா ! என்று படத்திலே ஒரு பாடல் வருகிறது. இந்தப் பாடலே மிக உணர்ச்சியோடு பாடியிருந்தார் என் அருமைத் தோழர் எம். எம், மாரியப்பா. பாட்டு மேலும் தமிழர்களுக்குத் தணிக்கொடி வேண்டு மென்றும் முழக்கி முடிகிறது. இந்தப் படத்தைப் பார்த்ததில் தலைவருக்கும்எனக்கும் அளவற்றமகிழ்ச்சி.திரு சி.ஏ.அய்யாமுத்து அவர்களைப் பாராட்டி மறு நாள் கடிதம் எழுதினேன். கஞ்சன் படத்தில் சிறிதும் கஞ்சத்தனம் செய்யாமல் கருத்தை விளக்கமாகப் பாடல் மூலம் முக்கியதற்காக அவரைப் பாராட்டினேன்.  ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம் பகல் நேரங்களில் பில்ஹணன் படப்பிடிப்புக்குத் தலைவர் அடிக்கடி என்னோடு வந்தார். அங்கும் இலக்கியப் பேச்சுத்தான். வ்ந்த இடத்தில் வேடிக்கையாக படப்பிடிப்பைப் பார்த்துக் கொண்டிருக்கலாமல்லவா? ஸ்டூடியோவுக்குள் வந்தும் அங்கு நடைபெறும் வினோதங்களைப் பார்க்காமல் இலக்கியம் பேசிக் கொண்டிருந்தது எல்லோருக்கும் வியப்பாக இருந்தது. 9.12.47 இல் நடைபெற்ற முள்ளில் ரோஜா முதல் நாடகத்திற்கும் ம. பொ. சி தலைமை தாங்கினார். நாடாகாசிரியர் ப.நீலகண்டன் அவர்களை மனமாரப் பாராட்டினார். அன்று காலை கோவைக்கு அருகிலுள்ள பேரூருக்குச் சென்றிருந்தோம். ஆலயத்திலுள்ள அழகிய சிற்பங்களைக் கண்டு ம. பொ. சி. அதிசயப்பட்டார். தலைவர் எங்களோடு தங்கியிருந்த பதினேந்துநாட்களும் எங்களுக்கு உற்சாகமாக இருந்தது. எங்கள் பெரியண்ணா திரு டி.கே.சங்கரன் ஒர் அதிசய மனிதர் என்பதை முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். ஒழுக்கத்தின் உறைவிடம் அவர். அதிகமாக யாரோடும் பேச மாட்டார். அவரை எப்படியோ கவர்ந்து விட்டார் தலைவர் டி. பொ. சி. ஒய்வு நேரங்களில் தலைவரும் பெரியண்ணாவும் தனியேயிருந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். 10. 12. 47இல் எங்களிடம் விடைபெற்றுக் கொண்டு சிலம்புச் செல்வர் சென்னைக்குப் புறப்பட்டபோது எங்களுக்கெல்லாம் வருத்தமாக இருந்தது அவர் தங்கயிருந்த நாட்களில் ஒருவரை யொருவர் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டதால் எங்கள் நட்புறவு மேலும் வளர்ந்தது.  உயிரோவியம் அரங்கேற்றம் திரு. நாரணதுரைக்கண்ணன் அவர்கள் திருச்சிக்கு ஒளவயா ரைப் பார்க்க வந்திருந்தபொழுதே அவரது உயிரோவியம் நாவலை நாடகமாக்கித் தர வேண்டினோம். கோவை முகாமில் நாடகத்துக் கான காட்சிகளுக்குக் குறிப்புகள் எடுத்தோம். நாடகத்தை உயரியமுறையில் அமைத்துத்தந்தார் ஆசிரியர். கவினார். கு. சா. கிருஷ்ணமூர்த்தி உயிரோவியத்திற்கான பாடல்களை எழுதினார். உயிரோவியத்தைப் பற்றிய பல்வேறு சிறப்புக்களை இரண்டாவது பாகத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்குமெனக் கருது கிறேன். தமிழ்க் காதலை உயர்ந்த முறையில் விளக்கும் ஓர் ஒப்பற்ற நாடகமாக உயிரோவியம் அமைந்தது. மூன்று நாட்கள் தொடர்ந்து மேடை ஒத்திகைகள் நடைபெற்றன. இலண்டன் மாநாகரத்திலிருந்து டிம்மர் செட் ஒன்று வரவழைத்திருந்தோம். எட்டு அடி சமசதுரமுள்ள ஒரு சிறிய இரும்புக் குழாய் மேடை யுடன் அது வந்திருந்தது. அதனை எவ்வாறு இயக்குவது என்பது: புரியவில்லை. எங்கள் கம்பெனி மின்சார நிபுணர் டி.வி. ஆறுமுகம் தாம் அதை இயக்குவதாகக்கூறி, சில மணி நேரங்களில் வெற்றி கரமாக இயக்கிக் காட்டினார். உயிரோவியம் நாடகத்தில் உள் நாடகக் காட்சி ஒன்று வருகிறது. துரோபதை என்னும் நாடகம் கல்லூரி அரங்கில் நடைபெறுகிறது. நாடகத்தின் லட்சிய முடி வினைச் சூசனையாகச் சுட்டிக்காட்டும் உள் நாடகம் துரோபதை. இந்த நாடகக்காட்சிக்கு அந்த எட்டடி மேடையை நல்ல முறை. யில் பயன்படுத்திக் கொண்டோம். வெளியிலுள்ள விளக்குகள் முழுவதையும் அணைத்துவிட்டு டிம்மர் செட் டின் துணையோடு: உள்மேடையில் துரோபதை நாடகம் நடைபெறுவது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். 14. 1. 48ல் உயிரோவியம் கோவை ஷண்முகா அரங்கில் அரங்கேறியது. கோவைக்கிழார் சி. எம். ராமச்சந்திர செட்டியார் அவர்கள் நாடகத்திற்குத் தலைமை தாங்கினார். அன்றைய நாடக வசூல் ரூ. 1259. 14.0 ம். நாடக ஆசிரியர் திரு. நாரண துரைக்கண்ணன் அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பெற்றது.  இரண்டாவது நாள் நடைபெற்ற நாடகத்தில் மாறுங் காட்சியின்போது எனக்கு முகத்தில் பலத்தஅடிப்பட்டது. மூக்குக் கண்ணாடிக்காக ‘பிரேம்’ மாத்திரம்போட்டிருந்தேன். அடிப்பட்ட போது அந்த பிரேம் அப்படியே என் கண்களுக்கு அடிப்பகுதியில் பதிந்து ரத்தக் காயம் உண்டாக்கி விட்டது. கண்ணாடி இருந்தால்: அது உடைந்து கண்களே. ஊறுபடுத்தியிருக்கும், ‘பிரேம்’ மட்டும் போட்டிருந்ததால் கண்கள் பிழைத்தன. எல்லோரும்: நாடகத்தால் ஏற்பட்ட கண் திருஷ்டி என்றார்கள். நாடகம் முடிந்ததும் நேராக எங்கள் நண்பர் டாக்டர் கிருஷ்ணசாமியிடம் சென்று மருந்து போட்டுக் கொண்டேன்.                                          தமிழ் மாகாண 43வது அரசியல் மாநாடு   1948 ஜனவரியில் தமிழ் மாகாண 43-வது அரசியல் மாநாடு கோவையில் நடைபெற்றது. அந்த மாநாட்டு நிதிக்காக 17-1-48இல் நாங்கள் உயிரோவியம் நாடகம் நடித்து அதன் வசூல் ரூ. 1448.00 முழுவதையும் மாநாட்டின் தலைவர் திரு காமராஜ் அவர்களிடம் கொடுத்தோம். முதல் அமைச்சராக இருந்த திரு ஒமந்துர் ராமசாமி ரெட்டியார் அன்று தலைமை தாங்கிப் பேசினார். தலைவர் காமராஜ் அவர்களும் பாராட்டினார். நாடக ஆசிரியர் திரு நாரண.துரைக்கண்ணன் அவர்களுக்கும் பொற் பதக்கமும் வழங்கினார்.  இருபெரும் தலைவர்கள் போட்டி 19.1-48இல் நடைபெற இருந்த அந்த மாநாட்டுத்தலைவர் தேர்தலிலே தான் திரு ம. பொ. சி. அவர்கட்கும் திரு காமராஜ் அவர்கட்கும் பலத்த போட்டி ஏற்பட்டது. திரு ம. பொ. சி. அவர்கள் பெறும் பதவிக்காகப் போட்டியிடவில்லை. அதை அவரே தமது ‘தமிழ் முரசு’ இதழில் விளக்கமாக எழுதியிருந்தார். வேங்கடமலை குமரி முனைக்குள் அடங்கிய தமிழ் மாகாணம் அன்மய வேண்டும் என்பதற்காகவே திரு ம. பொ. சி போட்டி யிட்டார். ஆனால் அவர் வெற்றி பெறவில்லை. மூன்றில் ஒரு பங்கு வாக்குகளே அவருக்குக் கிடைத்தன. கிடைத்த வாக்குகள் 111. காங்கிரஸ்காரராகிய திரு ம. பொ. சி. தோல்வியடைந்ததிைக், கேலி செய்யும் முறையில் அப்போது நடைபெற்று வந்த ஒரு. காங்கிரஸ் நாளிதழ் ‘கிராமணியாருக்குப் பட்டை நாமம்’ கட்டம் கட்டிப் பிரசுரித்திருந்தது.  ‘கிராமணியாருக்குப் பட்டை நாமம்’ என்ற தலைப்பைப் படித்ததும் என் மனம் வருந்தியது. ஒரு காங்கிரஸ் நாளிதழ் மற்றொரு காங்கிரஸ் ஊழியர் தோல்வி அடைந்ததை இவ்வாறு நையாண்டி செய்திருந்தது எனக்கு வியப்பாகவே இருந்தது.  பக்தவத்சலனார் தீர்மானம் 1948 ஜனவரி 18,19இல் தமிழ் மாகாண அரசியல் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அம்மாநாட்டில் நானும் கலந்து கொண்டு துவக்கத்தில் பாடல்கள் பாடினேன். இரண்டாம் நாள் மேடையில் அன்றைய முதல் அமைச்சர் திரு ஓமந்துTர் ராமசாமி ரெட்டியார் அவர்களும், அன்றையத் தமிழ்நாடு காங்கிரஸ் தலை வரும், மாநாட்டின் தலைவருமாகிய திரு காமராஜ் அவர்களும் திரு ஜி. டி. நாயுடு போன்ற உள்ளுர்ப் பிரமுகர்களும், ஏனைய அமைச்சர்கள் சிலரும், திரு ம. பொ. சி. அவர்களும் வீற்றிருந்தார்கள். நானும் மேடையில் அமர்ந்திருந்தேன். மாநாட்டிலே அமைச்சர் பக்தவத்சலம் அவர்கள் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்கள்.  இந்தியாவில் மொழி வழிப்பட்ட மாகாணங்கள் அமையும் போது தமிழர் பெருவாரியாகவாழும் தொடர்ந்தாற்போலுள்ள பகுதிகளைக்கொண்ட தனி மாகாணம் அமைக்க வேண்டும் என்று அத்தீர்மானம் கூறியது. இது திரு ம, பொ. சி. அவர்களையும் அவரை ஆதரித்தகாங்கிரஸ் காரர்களையும் திருப்திப் படுத்துவதற். காகவே கொண்டுவந்த தீர்மானம். ஆனால் தீர்மானம் மொழி வழி மாகாணங்கள் அமைக்க வேண்டுமென்று உறுதியாகச் சொல்லாமல் அமையும்போது என்று சொல்லப்பட்டது குறித்து திரும, போ.சி. அதிருப்தியடைந்தார். அவர் எழுந்து தம்முடைய கருத்தை அறிவித்தார். அத்தோடு, வடக்கே வேங்கடமலையும் தெற்கே குமரி முனையும் உள்ள தமிழ்நாடு வேண்டும் என்ற திருத்தத்தைப் பிரேரபித்தார். ஆம்; பின்னல் நடைபெற்ற வட எல்லைப் போராட்டத்திற்கு அன்றே ம. பொ. சி. வித்திட்டா ரென்றே நினைக்கிறேன். மாநாட்டுத் தலைவர் திரு காமராஜ், திரு. ம. பொ. சி. அவர்களின் திருத்தலத்தில் வேங்கடம், குமரிமுனை ஆகிய எல்லைகளைப்பற்றிய பகுதியை ஏற்றுக் கொண்டு தமிழ்நாடு கோரும் பகுதியை நிராகரித்தார்.  கிச்சலும் குழப்பமும் இந்தியாவிலிருந்து பிரிந்துபோகக்கூடிய ‘தனித் தமிழ்நாடு ம. பொ. சி. கேட்பதாக, அவர் பொருள் கொண்டு விட்டார். காரணமின்றி இவ்வாறு மாதாட்டுத் தலைவர் தமிழ்நாடு கோரும் பகுதியை நிராகரித்தது எனக்கு மட்டுமல்ல, மாநாட்டில் கூடி யிருந்த பிரதிநிதிகள் யாவருக்கும் வருத்தமாக இருந்தது. தலைவர் காமராஜ் அவர்களின் தவறான கருத்தைப் போக்குவதற்காக நிராகரிக்கப்பட்ட பகுதிக்கு விளக்கம் தர ம.பொ.சி முனைந்தார். ஆனால், தலைவர் காமராஜ் அவரைப் பேசவிடவில்லை. மேடையில் உட்கார்ந்திருந்த எனக்கு மிகவும் ஆத்திரமாக இருந்தது. என்னைப்போல் பிரதிநிதிகள் பலரும் ஆத்திரமடைந்தனார். ‘கிரா மணியார் பேசட்டும், கிராமணியார் பேசட்டும்’ என்று சபையில் ‘பெருங்கூச்சல் எழுந்தது. ஆம், திரு ம. பொ. சி. அவர்களைக் கிராமணியர்’ என்றுதான் காங்கிரஸ்காரர்கள் அழைப்பது வழக்கம். அப்போதும் காமராஜர் அவரைப் பேச அனுமதிக்கவில்லை. ம. பொ. சி ஒலிபெருக்கியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இடத்தை விட்டு நகராமல் சிங்கம்போல் நின்றார். ஒன்றுபட்ட இந்தியாவைப் போற்றி வரும் ம. பொ. சி. தனி நாடு பிரித்துத் துண்டாட விரும்புகிறார் என்று காமராஜர் பொருள்கொண்டதை யாரால்தான் பொறுக்கமுடியும்? சபையில் கூச்சல் அடங்கவில்லை. பதினைந்து நிமிடங்கள் ஒரே குழப்பமாய் இருந்தது. மேடையில் இருந்தவர்கள் சிலரும், குறிப்பாகத் திரு. சி.சுப்பிரமணியம், திரு சி. பி. சுப்பையா, காலம் சென்ற ஜகுப் உபையத்துலலா முதலியோரும் கிராமணி யாரைப் பேச விடுங்கள் என்று தலைவர் காமராஜரைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள். முடிவில் ம. பொ. சி. பேச அனுமதிக்கப் பட்டார்.  கட்டுப்பாட்டைக் காத்த கண்ணியா!  “நான் கேட்பது இந்தியாவிலிருந்து பிரிந்து போகும் தனி நாடல்ல” என்பதை விளக்கினார். அப்போதும் பிடிவாதமாகத் திருத்தத்தை ஏற்க மறுத்தார் காமராஜர். மீண்டும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அதற்குள் விபரீதம் ஏற்படாமலிருக்கப் போலிஸ் லாரிகள் வந்து பந்தலைச் சுற்றி அணிவகுத்து விட்டன. ஆத்திரப்பட்ட பிரதிநிதிகள் கூட்டம் ஒன்றுக்கொன்று மோதிக்  கொள்ளும் நிலையில் இருந்தது. பலாத்காரத்தில் இறங்கிவிடும் அறிகுறிகள் தென்பட்டன. இது கண்ட ம. பொ. சி. மீண்டும் ஒலிபெருக்கி அருகில் வந்து நின்று “தமிழ்ப் பெரு மக்களே! நான் காங்கிரஸ்காரன். அதன் கட்டுப்பாட்டை விரும்புகின்ற ஒரு படைவீரன். நான் தலைவரின் நிராகரிப்பை ஏற்கவில்லையென்றா லும்,அதனைத்தொடர்ந்து எதிர்ப்பதன்மூலம் இந்தமாநாடு குழப்பத்தில் கலைவதை விரும்பவில்லை. என்ன ஆதரிக்கும் அன்பர்கள் இப்போது என் வேண்டுகோளை ஏற்று, அமைதி காக்குமாறு வேண்டுகிறேன். தலைவர் விருப்பம்போல் நடத்திக்கொள்ளலாம்” என்று கெம்பீரமாகக் கூறிவிட்டுத் தம் இடத்தில் வந்தமர்ந்தார். மேடையிலிருந்த பலரும் அவரைப் பாராட்டினார். தலைவர் காமராஜ் அவர்களும் கட்டுப்பாடுகாத்த ம.பொ. சி அவர்களைப் பாராட்டினார். அந்த நிலையில் குழப்பத்திற்குக் காரணமாயிருந்த அந்த ஒரு தீர்மானத்திற்கு மட்டும் மறுநாள் காலை ஷண்முகா தியேட்டரில் மாநாட்டைக் கூட்டி அதன் மீது ஒட்டெடுத்து முடிவு கூறப் போவதாகக் காமராஜ் அறிவித்தார். ஆனால் அப்படி ஒரு மாநாடு நடைபெறவே இல்லை.  அன்று ம. பொ.சி. அவர்கள்காட்டிய உறுதியும்,கொள்கைப் பற்றும், நாட்டுப் பற்றும் எனக்கு அவர்பால் இருந்த மதிப்பை மேலும் உயர்த்தின. மறுநாள் ஜி. டி. நாயுடு அவர்கள் இல்லத் திற்கு நாங்கள் சென்றிருந்தபோது, “நீங்கள் ஒலிபெருக்கியைப் பிடித்துக் கொண்டு அஞ்சா நெஞ்சுடன் சிங்கம்போல் நின்ற நிலையைக் கண்டு நான் உங்களைக் காதலித்து விட்டேன்” என்று கூறினார் நாயுடு.  திரு ம.பொ.சி.க்கு நிதி திரட்ட வேண்டுமென்று 1948இல் திரு சின்ன அண்ணாமலை முயற்சி செய்தார். கோவை தேசபக்தர் திரு சுப்ரி மூலம் 500 ரூபாய்கள் நிதி திரட்டியதாகநினைவு.இதைக் குறித்து திரு ம. பொ. சி. எனக்குக் கடிதம் எழுதினார். “இது என் அனுமதியில்லாமல் நடைபெறுகின்றது. இந்த முயற்சியை நான் விரும்பவில்லை” என்று அறிவித்திருந்தார். இதன் பிறகு திதி திரட்டும் முயற்சி கைவிடப்பட்டது. அப்போது ம. பொ. சி. அவர்களின் ஐம்பதாண்டு நிறைவுநாளில் நானே வரவேற்புக் கழகத் தலைவராயிருந்து நிதி திரட்டிக் கொடுத்துக் கெளரவிக்க வாய்ப்பு ஏற்படுமென்று சிறிதும் எண்ணவே இல்லை.    அறவழி காட்டிய அண்ணலின் மறைவு   ஜனவரி 30ஆம் நாள். மக்கள் குலத்திற்குத் துக்க நாள் உலகமே அதிர்ச்சியடைந்தது. இதயம் படைத்தவர் எல்லோரும் அழுதனார். மாலை 6 மணிக்கு அகில இந்திய வானெலி மகாத்மா காந்தியடிகள் மறைந்தார் என்ற அவலச் செய்தியினைப் பலமுறை அலறியது. புதுதில்லியில் அன்று மாலை நான்கு மணி அளவில் ஒரு வெறிபிடித்த இந்துவால் காந்தி மகாத்மா சுடப்பட்டார் என்ற கல்லும் உருகும் செய்தியினைக் கேட்டுக் கலங்கினோம். உடனே நாடகத்தை நிறுத்திவிட்டு மேற்கொண்டு செய்திகளை அறியத் துடித்தோம். இரவு முழுதும் உறக்கமில்லை. மறுநாள் நடை பெற்ற மெளன ஊர்வலத்தில் கம்பெனி முழுதும் கலந்து கொண்டது.  பாரதி பாடல் உரிமை பிப்ரவரி 2 ஆம் நாள் பாரதி பாடல் உரிமை சம்பந்தமாக ஏ. வி. எம். அவர்களின் நோட்டீஸ் வந்தது. அதுபற்றி எங்கள் வக்கீல் திரு தாண்டவன் செட்டியார் அவர்களைக்கலந்து ஆலோசித்தோம். பில்ஹணன் நாடகத்தில் “தூண்டிற் புழுவினப்போல்” என்னும் மகாகவி பாரதியின் பாடலை நாங்கள் நாட்டியப் பாட லாக அமைத்திருந்தோம். அப்பாடல் பில்ஹணன் படத்திலும் பதிவு செய்யப்பட்டது. பாரதியின் பாடல்களை இசைத் தட்டு களிலும் திரைப்படத்திலும் பதிவு செய்யும் உரிமை சட்டப்படி தம்மைச் சேர்ந்ததென்றும், ஆகவே, பில்ஹணன் படத்திலிருந்து அப்பாடலை நீக்கிவிட வேண்டுமென்றும், அப்பாடலுடன் பில்ஹணன் படம் திரையிடப்படுமானல் தாம் நஷ்டயீடு கோரி  நடவடிக்கை எடுத்துக் கொள்ள நேருமென்றும் நோட்டீசில் குறிப்பிட்டிருந்தது. வக்கீலின் யோசனைப்படி,  பாரதி பாடல்கள் தமிழ்நாட்டின் பொதுச்சொத்தென்றும் அவற்றிற்குத் தனி மனிதர் உரிமை கொண்டாடுவதை ஒப்புக் கொள்ள முடியாதென்றும் நாங்கள் பதில் நோட்டீஸ் கொடுத்தோம்.  காவிரியில் காந்தி அண்ணலின் அஸ்தி கரைப்பு காந்தியடிகளின் அஸ்தியினை இந்தியாவின் புண்ணிய நதி களிலெல்லாம் கரைக்க வேண்டுமென்று பாரதப் பேரரசு விரும்பியது. அதன்படி திருச்சிராப்பள்ளியில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபக் கரையருகில் அஸ்தி கரைக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது. புனிதமான அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நானும் திரு ஏ. என். மருதாசலம் செட்டியார், திரு ஏ. கிருஷ்ணசாமி செட்டியார் முதலியோரும் திருச்சிக்குச் சென்றிருந்தோம். 12. 2. 48இல் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அம்மா மண்டபக் கரையருகில் மக்கள் வெள்ளம் அலைமோதியது. கூட்ட நெருக்கடியில் போக வேண்டாமென்று நண்பர்கள் என்னைத் தடுத்தார்கள். உணர்ச்சிப் பிழம்பாக நின்ற நான் அந்தக் கூட்டத்தில் “வாழ்க நீ எம்மான்” என்ற மகாகவி பாரதியின் பாடலைப் பாடவேண்டுமென்று துடித்தேன். போலீசார் தங்களால் இயன்ற அளவு பெரு முயற்சி செய்து ஜன சமுத்திரத்தில் மூழ்க இருந்த என்னைக் காப்பாற்றி மைக் அருகிலே கொண்டு போய்ச் சேர்த்தார்கள். கண்ணிர் விட்டுக்கொண்டே “மகாத்மா நீ வாழ்க, வாழ்க!” என்ற பாரதி யின் பாடல்களைப் பாடிக் கதறினேன். அன்று நான் பிழைத்ததே ஆண்டவன் அருள் என்றுதான் சொல்ல வேண்டும்...இரவு 12 மணிக்கு, கடமையை நிறைவேற்றிய உணர்வோடு கோவை வந்து சேர்ந்தோம்.  அகிலனின் ‘புயல்’ அரங்கேற்றம் தமிழ் நாடகப் பரிசுத் திட்டத்தில் வந்த நண்பர் அகிலன் அவர்களின் புயல் நாடகத்தினைக் கோவையில் அரங்கேற்றவிரும்பினோம். எங்கள் அழைப்பினை ஏற்று அகிலன் கோவைக்கு வந்தார்.  இருவரும் நாடகத்தைப் பற்றி நன்கு விவாதித்தோம். ஒரு வார காலத்திற்குள் நாடகத்தைத் திருத்தி எழுதிக்கொடுத்தார். நான் எதிர்பாராத அதிசயம் என்னவென்றால், நாடகத்திற்கான பாடல் களேயும் அவரே எழுதிக் கொடுத்தார். பாடல்கள் நன்றாக இருந்: தன. அதற்கு மெட்டுகள் அமைக்கும் பொறுப்பினே அப்போது எங்கள் குழுவில் நடிகராக இருந்த திரு ஆத்ம நாதனிடம் ஒப்படைத்தேன். ஆத்மநாதன் அப்போதே பாடல்களும் எழுது வார். அவரைப் பற்றிய விரிவான குறிப்புக்களை இரண்டாவது பாகத்தில் சொல்லவிருப்பதால் இங்கு சுருக்கிக் கொள்கிறேன். பாடல்களுக்கு ஆத்மநாதன் அமைத்திருந்த மெட்டுக்கள் அருமை யாக இருந்தன. நான் பாரதி பாடல் உரிமை சம்பந்தமாக. சென்னை செல்ல முன் கூட்டித் திட்டமிட்டிருந்ததால் புயல் நாடகத்தில் வேடம் புனைய வாய்ப்பில்லாது போய்விட்டது.  13.4-48இல் புயல் நாடகம் அரங்கேறியது. நாடகத்தின் கதையமைப்பு நன்முக இருந்தது. நடிகர்கள் அனைவரும் திறமை. யாக நடித்தார்கள். 20 நாட்கள் நாடகம் தொடர்ந்து நடை பெற்றது. நாடகத்தை அரங்கேற்றி விட்டு 18-4-48 இல் நான் சென்னைக்குப் பயணமானேன்.  பாரதியின் விடுதலைப் பயணம் சென்னையில் பாரதிபாடலை நாட்டின் பொதுச்சொத்தாக்கு. வது சம்பந்தமாகப் பேராசிரியர் வ. ரா., பரலி சு. நெல்லையப்பர், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் ஆகியோரை நானும் என் ஆத்மசகோ தரர் நாரண-துரைக்கண்ணனும் சந்தித்துப் பேசினோம். எங்கள் முயற்சிகள் வெற்றிபெற அப்பெரியவர்கள் மூவரும் நல்லாசி” கூறினார்கள். அன்றிரவு நாரண - துரைக்கண்ணன் வல்லிக் கண்ணன், இருவருடனும் கடற்கரை சென்று பாரதி பாடல் விடுதலை முயற்சி பற்றி இரவு 12 மணிவரை உரையாடிக் கொண்டிருந்தோம். மறுநாள் இரவு 10.30க்கு வல்லிக்கண்ணன், நாரண-துரைக்கண்ணன், ஆகியோருடன் பாரதி விடுதலைக்காகத் திருநெல்வேலிக்கு யாத்திரை புறப்பட்டேன்...  மறுநாள்கால திருச்சிவந்து வானெலிநிலையம் சென்றோம். நிலைய எழுத்தாளர் நண்பர் கே. பி.கணபதியைப் பாரதி விடுதலை யாத்திரையில் எங்களுடன் நெல்லைக்கு வருமாறு வேண்டினோம்.  அவர் ஆர்வத்தோடு இசைந்தார். சிவாஜி பத்திரிசை அலுவலகம் சென்று நண்பர் திருலோகசீதாராம் அவர்களையும் அழைத்தோம். அன்று எங்களோடு புறப்பட அவருக்கு வாய்ப் பில்லை. மீண்டும் வானெலி நிலையம் சென்றோம். அங்கு எதிர்பாராது பேராசிரியர் அ. சீனிவாசராகவன் அவர்களே ச் சந்தித்தோம். அவரும் எங்களோடு புறப்படச் சம்மதித்தார். அன்றிரவே செங்கோட்டைப் பாசஞ்சரில் ஐவரும் நெல்லைக்குப் பயணமானோம். இடநெருக்கடியால் பயணம் மிகவும் சிரமமாக இருந்தது. 22-4-48இல் காலை 10-மணிக்கு திருநெல்வேலி வந்து கஸ்தூரிகபே'யில் தங்கி உணவருந்தினோம்.  செல்லம்மா பாரதியைச் தரிசித்தோம்!  பாரதியின் துணைவியார் திருமதி செல்லம்மாபாரதி அவர்களையும், அவரது மூத்த மகள் திருமதி தங்கம்மா பாரதி அவர்களையும் அவர்கள் இல்லத்திற்குச் சென்று சந்தித்தோம்; பாரதி பாடல்களைத் தேசத்தின் பொதுச் சொத்தாக்குவதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையென்று திருமதி செல்லம்மாபாரதி எழுதிக் கொடுத்தார். திருமதி தங்கம்மாபாரதியும் அதில் கையெழுத்திட்டார். அதன்பின் நெல்லை நகரசபைத் தலைவர் திரு ப. ரா. அவர்களைக்கண்டு பேசினோம். இரவு தாமிரபரணி சிந்துபூந்துறையில் நாங்கள் ஐவரும் மற்றும் நெல்லை எழுத்தாள நண்பர்கள் சிலரும் கூடினோம். பாரதியின் கவிதைகளே நான் உரத்த குரலில் பாடி எல்லோரையும் மகிழ்வித்தேன். மறுநாள் பிற்பகல் பேராசிரியர் அ. சீ. ரா. அம்பாசமுத்திரம் சென்றார். மற்ற நால்வரும் ஊருக்குத் திரும்பினோம். திண்டுக் கல்லில் நண்பர். கே. பி. கணபதியை வழியனுப்பிவிட்டு மற்ற மூவரும் கோவை வந்து சேர்த்தோம். மறுநாள் இரவு வல்லிக்கண்ணன், நாரண-துரைக்கண்ணன் இருவரும் சென்னைக்குப் புறப்பட்டார்கள். புனிதமான இந்தப் பாரதி விடுதலைப் பயணம் வெற்றிபெற வேண்டுமென்று வாழ்த்தி அவர்களிருவரையும் வழியனுப்பிவைத்தேன்.  திரு நாரண-துரைக்கண்ணனிடமிருந்து இரண்டாம் நாள் கடிதம் வந்தது. பாரதி விடுதலைக்குத் தம் அருமை மகனைப் பலி கொடுத்து விட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். நாங்கள் திருநெல்வேலியிலிருந்த 23. 4. 48 இல் அவரது அருமைத் திரு. மகன் காலமாகி விட்டான். துரைக்கண்ணன் போயிருக்கும் இடம் தெரியாத காரணத்தால் அவருக்குத் தகவல் கொடுக்க இயலவில்லை. மகனின் சடலத்தை வைத்துக்கொண்டு அன்று முழுதும். துரைக் கண்ணனே எதிர்பார்த்திருக்கிறார் அவரது துணைவியார். பயனில்லை. 26.4-48 இல் துரைக்கண்ணன் அவர்கள் தம் இல்லத் திற்குச் சென்ற பிறகுதான் செல்வமகன் மறைந்து விட்ட செய்தி தெரிந்தது. சடலத்தைக் கூடப் பார்க்க முடியாமல் போய். விட்டதே என்று கதறியழுதிருக்கிறார் துரைக்கண்ணன், என்ன செய்வது? சகோதரருக்கு ஆறுதல் கூறி, நீண்ட கடிதம் எழுதினேன்.  1. 5.48இல் கோவைக்கு வந்திருந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு காமராஜ் அவர்களேக் கண்டேன். பாரதி பாடல் விடுதலை சம்பந்தமாக, பாரதியின் துணைவியாரைச் சந்தித்த, விபரங்களை அவரிடம் கூறினேன். சென்னை ராஜ்ய முதலமைச்சர் விரைவில் அதுபற்றி நடவடிக்கை எடுத்துக்கொள்வாரென தலைவர் காமராஜ் அவர்கள் உறுதி கூறினார்.                                                          மூன்றாவது தமிழ் எழுத்தாளர் மாநாடு   தமிழ் எழுத்தாளர் மூன்றாவது மாநாடு நாகர்கோவிலில் திரு. நாரண.துரைக்கண்ணன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.மாநாட்டை முன்னின்று நடத்திய அதன்செயலா வளர்கள், திரு வெ. நாராயணன், திரு பி.மகாலிங்கம் இருவரும் கோவைக்கு வந்திருந்தனார். மாநாட்டுக்கு நிதி சேகரிப்பதற்காக அவர்களோடு ஒருநாள் முழுதும் இருந்து உதவினேன். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் மாநாட்டை நடத்துவதில் மிகுந்த அக்கறையெடுத்துக் கொண்டார். அந்த மாநாட்டில் நான் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுமென்று கூறியிருந்தார். 12. 5. 48இல் நானும் தலைவர் ம.போ.சி. அவர்களும் கோவையிலிருந்து விமானத்தில் திருவனந்தபுரம் சென்று, அங்கி ருந்து நாகர்கோவில் போய்ச் சேர்ந்தோம். நான் விமானப் பயணம் செய்தது. அதுவே முதல் முறையாகும். 14- 5. 48 ஆம் தேதி காலே மாநாட்டில் கலந்து கொண்டேன். தலைமையுரை முடிந்து எழுத்தாள அன்பர்களின் சில சொற்பொழிவுகளும் நடந்தேறிய்பின் நாடகமும் பத்திரிகையும் என்னும் தலைப்பில் நான் பேசினேன். என் பேச்சு வருமாறு;  “அன்பர்களே நீங்கள் அறிஞர்கள். எதிர்காலத்தின் சிருஷ்டி கர்த்தர்கள். புதுயுகத்தை மலரச் செய்பவர்கள். உங்கள் பேனு முனேக்கு அணுகுண்டைவிட வலிமையுண்டு. உங்கள் முன்னிலை யில் நாடகக் கலையின் பயனைப் பற்றியோ, அதன் வளர்ச்சி நிலையைப் பற்றியோ, நான் அதிகமாக எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.  நாடகம் கலைக்கரசு; நாட்டின் நாகரீகத்திற்குக் கண்ணாடி: “பாமரமக்களின் பல்கலைக்கழகம்” என்பனவற்றை யெல்லாம் எழுத்தாளர்களாகிய நீங்கள் நன்கறிந்தவர்கள்.  நமது கவிமணி அவர்கள் ஈரோட்டில் முதலாவதாக நடந்த நாடகக்கலை மாநாட்டிற்கு ஒரு ஆசிச் செய்தி அனுப்பி யிருந்தார்கள். அதில்...... “ஆதிகாலத்தில் தமிழில் நாடகம் இருந்ததோ இல்லையோ என்ற ஆராய்ச்சி அவசியமேயில்லை. இப்பொழுது தரித்திரளுயிருக்கிற ஒருவன், அவனுடைய முப்பாட்டன் கப்பலோட்டி வியாபாரியாய் இருந்தான் என்ற கதையைக் கூறிக் கொண்டிருப்பதானால் யாதும் பயனுண்டா? தரித்திரன் முயற்சி செய்து குபேரன் ஆவதில் ஆட்சேபமில்லையே” என்று குறிப்பிட்டிருந்தார்கள். பொன்னான வார்த்தைகள்!  இன்றைய நிலையில் நாடக இலக்கிய வளர்ச்சிக்கு நாம் என்ன செய்ய வேண்டும்? எழுத்தாளர்கள் என்ன செய்யவேண்டும்? பத்திரிகைகள் என்ன செய்ய வேண்டும்? என்பனவற்றை ஆராய்வதில் செலவழிக்கும் பொழுதுதான் பயனுடையதாயிருக்கும்.  அன்பர்களே, இலக்கியத்துறையின் பல பிரிவுகளில் நாடகமும் ஒன்று என்பதை நீங்கள் அறிவீர்கள். கட்டுரை, சிறுகதை, நாவல் முதலிய இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகள் வளர்ச்சி பெற்று வருவது போல நாடக இலக்கியமும் வளர வேண்டும் என்பதுதான் உங்கள் கருத்தாக இருக்க முடியும். தமிழ் நாட்டில் நாடக நூல்கள் இப்பொழுதுதான் அரும்புகின்றன! இலக்கியச் சுவையுடைய எழுத்தாளர்கள் இப்பொழுது தான் இந்த உலகத்தில் நுழைய முயற்சி செய்து வருகிறார்கள்.  ஆனால், நாடக இலக்கியம் நூல் வடிவில் மட்டும் வளரும் இலக்கியமல்ல. படித்துமட்டும் ரசிக்கும் இலக்கியமல்ல. பார்த்து ரசிக்கும் இலக்கியம். அழகாக அச்சிட்டு வெளியிட்டால் போதாது. அரங்கத்தில் ஆடியாக வேண்டும். நாடக இலக்கியம் நூல்வடிவில் மாத்திரம் இருக்குமானல் அது வளர்ச்சிபெற்றதாக நாம் பெருமை பாராட்டிக் கொள்ள இயலாது.  இலக்கியப் பிரிவுகளில் நாடகம் தலைசிறந்ததாகவும் அதிகப் பயனுடையதாகவும் கருதப்படுவதன் காரணமே இதுதான்.  கண்ணால் பார்க்கும்போது ஏற்படக்கூடிய உணர்ச்சி காதால் கேட்கும் பொழுதோ படிக்கும் பொழுதோ ஏற்படுவதில்லை யல்லவா?  “ஒரு பொருளே, அல்லது தத்துவத்தை ஜனசமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டுமானல், கட்டுரை வாயிலாக, அல்லது சொற்பொழிவு மூலமாகக் கூறுவதைவிடக் கதை வாயிலாக, நாடகவாயிலாக வெளிப்படுத்துவது பெரும் பயன, அதுவும் உடனடியாகத் தருமென்பது என் கருத்து” என்று நமது தலைவர் திரு நாரண-துரைக்கண்ணன் அவர்கள் எழுதியுள்ளார். நமது புரட்சிக் கவினார் பாரதிதாசன் அவர்களும்,  “ஒரு நாட்டின் வேரிலுள்ள தீமை நீக்கி உட்புறத்தில் புத்தொளியைச் சேர்ப்பதற்கும், பெருநாட்கள் முயன்றாலும் முடியா ஒன்றைப் பிடித்த பிடியில் பிடித்துத் தீர்ப்பதற்கும், பெருநோக்கம் பெருவாழ்வு கூட்டுதற்கும் பிறநாட்டார் நாடகங்கள் செய்வார்” என்று கூறுகிறார். முடிவில் “எந்தன் திருநாட்டில் பயனற்ற நாடகங்கள் சினிமாக்கள் தமிழர்களைப் பின்னே தள்ளும்” என்று முடிக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன் பாடிய பாடல் இது. இன்று தமிழ் நாடக உலகம் பூரணமாகப் பயனுள்ள வழியை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது. ஒரு எழுத்தாளன் தனது துறையில் உச்சநிலையடைய வேண்டு மென்றால்,அவன் ஒரு நாடகாசிரியகை முயற்சிக்கவேண்டும்.அப் போதுதான் பூரணத்வம் பெறுகிறான் என்பது அறிஞர்கள் முடிவு.  நாடகாசிரியனுக ஆகும்போதுதான் எழுத்தாளனின் கற்பனைகள் கருத்துக்கள் எல்லாம் பொது மக்களுக்கு நன்கு பயன்படுகின்றன. ஷேக்ஸ்பியர் மகாகவிதான். ஆனால், நாடகாசிரியர் என்ற பெருமைக்குள்தான் அவரது கவிதா சக்தி அடங்கி யிருக்கிறது. வங்காளக் கவினார் துவிஜேந்திரலால்ராய் அவர்கள் இலக்கியத்தின் பல பிரிவுகளிலும் புகுந்திருந்தாலும் நாடக ஆசிரியர் என்றே மக்களால் அழைக்கப்படுகிரு.ர். பேரறினார் பர்னட்ஷா அவர்கள் கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் எல்லாம் எழுதியிருந்தாலும் பிரபல நாடாகாசிரியர் பர்னட்ஷா என்றே அழைக்கப்படுகிறார். நாம் வெகுதூரம் போகவேண்டாம். தோழர் அண்ணாத்துரை அவர்கள் நாடகாசிரியரான பிறகுதான் அறிஞர்  அண்ணாத்துரையென நம்மால் புகழப்படுகிறார். இதெல்லாம் எதைக் குறிக்கின்றது?... கட்டுரை, சிறுகதை, நாவல், எழுது வதைவிட நாடகம் எழுதுவ்து கஷ்டமானது என்பது மட்டுமல்ல: நாடகம் மக்களுக்கு அதிகப் பயனளிக்கக்கூடியது என்பதுதான் இதன் உண்மை.  அன்பர்களே, நாடகம் மட்டுமல்ல; பொதுவாக எந்தக் கலையை எடுத்துக்கொண்டாலும் அதன் குண தோஷங்களை ஆராய்ந்து பொதுமக்களுக்கு அறிவித்து, கலை வளர்ச்சிக்கு ஆதர வளிக்கும் பொறுப்பு இன்று பத்திரிகைகளிடம் இருக்கிறது. பத்திரிகைகள் நடுநிலையிலிருந்து விருப்பு வெறுப்பின்றி நன்மை தீமைகளை எடுத்துச் சொன்னல்தான் கதைகள் வளர்ச்சி பெறும்.  பகல் முழுவதும் உழைத்துவிட்டு அலுத்துப் போய் வரும். பாட்டாளிக்குச் சிலமணி நேரங்கள் சிரித்து மகிழ்வதுதான் இன்றையத் தேவையாயிருக்கலாம். வேடிக்கையாகப் பொழுது போக்க நாடகம்பார்க்க வருபவர்களுக்கு அரங்கத்திலும்அரசியல் பிரசாரம் செய்வது அவசியமில்லாததாகத் தோன்றலாம். மக்களின் உடனடித் தேவையைப் பயன்படுத்திக்கொண்டு அவர் களின் சிலமணி நேர மகிழ்ச்சிக்காக நாடகங்கள் நடைபெற்றால், போதாது.  மக்களின் வாழ்க்கைநிலை உயர, அவர்கள் நல்வாழ்வுவாழ, என்னதேவை? அவர்களுக்கு நாம் எதைச் சொல்லவேண்டும்? என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு கலைஞர்களிடம் இருக் கிறது. மக்களின் தேவையென்னவென்பதை அவர்களுக்கும். எடுத்துக்காட்டி கலைஞர்களுக்கும் எடுத்துக்காட்டி மக்களின் நல்வாழ்வுக்கு வழிகாட்டும் கலைஞர்களே, கலைகளை, நாடகங்களைப் பாராட்டி ஆதரிக்கும்படிசெய்து, மக்களின் ரசனையை உயர்த்தும். பொறுப்பு, இன்று பத்திரிக்கைகளிடம் இருக்கிறது.  மக்களின் ரசனைக்குத் தக்கவாறு கலைகள் வளர்ந்தால் வளர்ச்சியில் வேகமிருக்காது. மக்கள் கீழே இருக்கிறார்கள் என்பதற்காக இலக்கியமும் கீழே இறங்கி விடாதபடி பத்திரிகைகள் கண்காணிக்க வேண்டும். மக்களுக்குப் புரிகிற பாஷையில் எழுதவேண்டும்; புரிகிற பாஷையில் பேசவேண்டும். புரிகிற பாஷை-புரிகிற பாஷை என்று உரையாடலின் தரத்தைக் குறைத்துக்கொண்டே போவோமானால் சின்னாட்களில் பாஷையே இராது. வேறு உருவத்தில் மாறிவிடும். குறிப்பிட்ட ஒரு நிகலயை நிர்ணயம் செய்துகொண்டு அந்த நிலைக்கு மக்களின் ரசனையை உயர்த்தவேண்டியது விமர்சகர்களின் கடமை. நாடகக்கலையால் மக்கள் திருந்தவேண்டும். மக்களின் ஆராய்ச்சி அறிவிகுல் நாடகக் கலை வளரவேண்டும்.  ஒருநாடகம் குறைந்தது ஒருமாத காலமாவது நடைபெறு கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் நாடகங்களைப் பார்க் கிறார்கள், நாடகப் பயன் மக்களைத் தவருன வழியிலும் திருப்ப லாம், நேரான வழியையும் காட்டலாம். இவ்வாறு மக்களைப் பாதிக்கும் ஒரு அறிய கலையைக் கலைஞர்கள் தவருண பாதையில் கொண்டு செல்லாமல் தடுப்பதும், கண்டிப்பதும், நேரான வழி காட்ட முயன்று ஆதரவு குறையுமானல் அவர்களைப் பாராட்டி ஊக்குவிப்பதும் பத்திரிகைகளின் கடமையல்லவா?... அலட்சிய மனோபாவம் காட்டி இதை புறக்கணிப்பது நாட்டுக்கு நலம் செய்வதாகுமாவென்று கேட்கிறேன். கண்மூடித்தனமான புகழுரைகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாட்டுக்கு நன்மை பயப்பதாயின் பாராட்டுங்கள். சிறந்த அம்சங்களை எடுத்துக் காட்டி ஊக்கமளியுங்கள். தீமை செய்வதாயின் அதையும் எடுத்துக் காட்டித் திருத்துங்கள். நோக்கத்திலேயே பழுதிருந் தால் கண்டியுங்கள். குறை களைந்து தெளிவு பெறத்தக்க முறை யில் மக்களின் அறிவை வளர்த்து அவர்கள் ஆதரவு காட்டும்படி விமர்சனம் செய்யுங்கள் என்றுதான் வேண்டுகிறேன்.  விமர்சனங்களில் நேர்மையிருந்தால்தான் மக்களின்ரளிகத் தன்மை வளரும். மக்களின் ரஸிகத் தன்மை வளர்ந்தால் தான் கலைகள் பூரண வளர்ச்சி பெறும்.  கலைகள் இன்று தொழிலாகத்தானிருந்து வருகின்றன. சர்க்கார் கலைஞர்களை வளர்க்கவில்லை...... கலைஞர்கள் தங்கள் பிழைப்புக்கும் இதிலிருந்துதான் வழி தேடவேண்டும். ஆதலால் பொதுமக்கள் ரசனையைப் புறக்கணிப்பது சாத்தியமில்லை.  நாடகக் கம்பெனிகளின் இன்றையநிலையையும், அவற்றின் நிர்வாகக் கஷ்டத்தையும் அத்துறையிலீடுபட்ட ஒரு சிலர்தான் உணரமுடியும். யுத்தகால வருவாய் இன்றில்லை. சிலமாதங்களாக எல்லா நாடகக் கம்பெனிகளுக்குமே வருவாய் குறைந்துவிட்டது. ஆனால், செலவினங்கள் சிறிதும் குறையவில்லை...... ஆனாலும்  இன்று நடைபெறும் நாடகங்கள் பெரும்பாலும் நாட்டின் நிலையைச் சித்தரிப்பவையாகவும் சமூக முன்னேற்றத்திற்கு வழி காட்டுபவையாகவும் இருக்கின்றன. வெறும் பொழுது போக்கா யில்லை. புத்திக்கும் வேலை கொடுப்பவைகளாயிருக்கின்றன. ஆகவே, பத்திரிக்கைகள் இவற்றை போற்றி வளர்க்க வேண்டும்.  இந்தியா முழுவதும் பார்த்தாலும் நமது தமிழ்நாட்டில் தான் நாடகங்கள் சீரிய முறையில் நடைபெற்று வருகின்றன வென்று உங்கள்முன்னிலையில் நான் ஆணித்தரமாகக் கூறுகிறேன்: தற்புகழ்ச்சியல்ல, உண்மை. இதற்காக நாம் பெருமைப்பட வேண்டும். எல்லாவகையிலும் தன்னைப் பற்றிக் குறைவாக மதிப் பிடுவதும், பிறரை, பிறர் பொருளை, பிறர் செயலை, பிறர் இலக்கியத்தைப் புகழ்வதுமே தமிழனின் நீண்டகாலப் பண்பாகி விட்டதென்று நமது ம.பொ.சி. அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். அது உண்மை...  நான் ஒரு ரஸிகன்: இலக்கியங்களை நன்றாக ரவிக்கத் தெரியும் எனக்கு. எனது ரஸிப்புத் தன்மையில் பூரண நம்பிக்கை வைத்திருக்கிறேன். ஒன்று கூற விரும்புகிறேன்.  ஹிந்தி, குஜராத்தி, முதலிய பிறமொழிகளிலிருந்து மொழி பெயர்த்த பல கதைகளை நான்படித்திருக்கிறேன். உண்மையாகச் சொல்லுகிறேன். குப்பை கூளங்கள் கூட மொழி பெயர்க்கப் படுகின்றன. பிறநாட்டு நல்லறினார்கள் சாத்திரங்களைத்தானே நமதுமகாகவி பாரதியார் மொழிபெயர்க்கச் சொல்லியிருக்கிறார். ........இதுபற்றி எனது நண்பர்களான சில எழுத்தாளர்களைக் கேட்டேன். என்னசார் செய்வது? மொழிபெயர்ப்பு நாடகங்கள் தான் சீக்கரம் விற்பனையாகின்றனவென்று பிரசுரகர்த்தர்கள் கூறுகிறார்கள் என்றார். தமிழ் மக்களின் தாழ்வு மனப்பான்மைக்கு வேறென்ன சான்று வேண்டும்?  இன்று தமிழுலகில் வெளி வந்துள்ள சிறு கதைகளையும், கவிதைகளையும் பிற மொழிகளில் பெயர்த்தால் தெரியும் தமிழனின் இலக்கியத் திறமை. அறிவிலும் கற்பனையிலும் தமிழன் யாருக்கும் இளைத்தவனல்ல என்ற உண்மையை அப்போதுதான் உலகம் தெரிந்து கொள்ளும். நம்மை நாம் குறையாக எண்ணா கிறோம் என்பதைச் சுட்டிக் காட்டதான் இதைக் கூறினேன்:  தமிழ் நாடக நூல்கள் அதிகமாக வெளிவரவில்லை. ஆனால், மேடையில் நாடக இலக்கியம் பிறமாகாணங்களை விடப்பெருமைப் படத்தக்க விதத்தில் வளர்ந்திருக்கிறதென்பதை மறுக்க முடியாது. படவுலகைவிட இன்று நாடக உலகம்தான் மக்களுக்குப் பயன்படுகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை, சினிமா, நாடகத்தைவிட விரைவான பிரசாரக் கருவி என்பது உண்மையேயானலும் இன்று சினிமாவின் நிலை மக்களின் ஒழுக் கத்தைக் கெடுப்பதாய்த்தானிருக்கிறது. நமது கலைவாணரைப் போன்ற ஒருசிலர்தான் வருவாயை மதியாது வாழ்வை முன்னிலை படுத்திக் கலை வளர்க்க முடியும். தலை வாங்கி அபூர்வ சிந்தாமணிக்கும், சந்திரலேகாவுக்கும் மக்கள் காட்டும் ஆதரவைப் பார்த்த பிறகும்கூட நல்லதம்பியைப் போன்ற கதைகளைப் படம் பிடிக்க அபாரத் துணிச்சலும் தன்னம்பிக்கையும் வேண்டும்.  பொதுவாக படப்பிடிப்பாளர்களிடம் பயன் தரும் கதை. களை எதிர்பார்ப்பதில் பயனில்லை. படங்கள் பெரும் பொருட். செலவில் தயாரிக்கப்படுவதால் அவர்கள் அதிக வருவாயை எதிர் பார்த்து பொது ஜனங்கள் விரும்பும் அம்சங்கள் என்னென்ன என்பதைத் துருவித்துருவி ஆராய்ந்து அவ்வழியே சென்று கொண்டிருக்கிறார்கள்.  நாடகக் கம்பெனிகள் அவர்களைப் பின்பற்றவில்லை, ஓரள வுக்கு வருவாய் அவசியமென்றாலும் மக்களுக்குப் பயன் தரும் நாடகங்களை நடித்துப் புகழ் பெறவேண்டுமென்ற லட்சியத்துடன் தொண்டாற்ற முயல்கின்றன. இந்த வேற்றுமையை கவனித்துப் பத்திரிகைகள் தமது ஆதரவைக் காட்டவேண்டும். சமூக முன்னைற்ற நாடகங்களுக்குப் பத்திரிக்கைகள் அதிக ஆதரவளிக்க வேணடும்.  வார மலர்கள் வெளியிடும் தினசரிகள் நாடகச்செய்தி களுக்கும் விமர்சனங்களுக்கும் பக்கங்கள் ஒதுக்க வேண்டும். நாடக வளர்ச்சியை நாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.  பம்பாய், டில்லி மாகாணங்களில் நடிகர் “பிரதிவிராஜ்” அவர்களின் பிரசார நாடகங்கள் சிலவற்றிக்கு தமாஷா வரி இல்லையென்று அறிவிக்கப்பட்டிருந்ததை ஒரு வாரத்திற்கு முன் நமது தினசரிப் பத்திரிகைகளில் பார்த்தேன். அத்தகைய பிரசார நாடகங்கள் தமிழ் நாட்டில் நடைபெருமலில்லை; நடைபெறு  கின்றன. சர்க்கார் அவற்றில் கவனம் செலுத்தவில்லை. சர்க் காருக்கு நாடகப் பயனை எடுத்துக் காட்டி பிரசாரம் செய்ய செல்வாக்குள்ள தினசரி பத்திரிக்கைகள் முன்வரவில்லை. --  பத்திரிகைகள் மனம் வைத்தால்இன்று தமிழ்நாட்டில் நடை பெறும் பல நாடகங்களுக்கு தமாஷா வரி இல்லாமற் செய்ய சர்க்காரைத் துண்டலாம், தமாஷா வரி இல்லாதிருந்தால் நல்ல பிரசார நாடகங்கள் குறைந்த வருவாயிலும் அதிகநாட்கள் நடை பெற உதவி புரிவதாயிருக்கும். தமாஷா வரி விலக்கத்திற்காக வென்றே கல்விப் பிரசார நாடகங்கள் பல தோன்றக்கூடும். மேடை நாடகவளர்ச்சியும் இலக்கிய வளர்ச்சியில் ஒருபிரிவு என் பதைப்பத்திரிகைகளும் எழுத்தாளர்களும் உணர்ந்து செயலாற்றி ல்ை கலைவளரும்; நாடு நலம்பெறும்; இருக்கும் நிலையை எடுத்துக் கூறிப் பரிகாரம் பெறும் நோக்கோடு செய்யப்பட்ட எனது சொற்பொழிவைக் குறை கூறியதாகக் கருதவேண்டாமென்று உங்களைக்கேட்டுக் கொள்ளுகிறேன்:--  “வில்லேருழவர் பகை வரினும் கொள்ளற்க,  சொல்லே ருழவர் பகை”  என்பது நமது தமிழ் மறை...ஆகவே,சொல்லேருழவர் ஸ்தானத்திலிருக்கும் நீங்கள் பகையுணர்ச்சி கொள்ளாமல் எனது சொற் பொழிவின் கருப்பொருளை மட்டும் கருத்தில் கொண்டு நாடகக் கலைக்கு ஆக்கமளிக்குமாறு வேண்டுகிறேன்.”  மாநாட்டில் சிலம்புச்செல்வர் ம.பொ.சி.,ம.ப.பெரியசாமி, துாரன், கி. வா. ஜகந்நாதன், அகிலன், கவினார் புத்தனேரி ரா.சுப்பிரமணியன்,கவினார் தே.ப. பெருமாள் முதலிய பல்வேறு எழுத்தாளர்கள் கலந்துகொண்டார்கள். கலைவாணர் இல்லத் தில் பெரும்பாலோர் தங்கினார்கள். நாகர்கோவிலில் உள்ள எங்கள் இல்லத்தில் எழுத்தாள அன்பர்களுக்கு விருந்தளித்தேன்.  மறுநாளும் மாநாடு நடைபெற்றது. அன்றிரவு ஒரு பொதுக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தார் கலைவாணர். 16.5.48இல் நானும் தலைவர் ம. பொ. சி.யும் புத்தேரி சென்று கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை அவர்களைப் பார்த்து வந்தோம். 18.5.48இல் நான் விமான மூலம் கோவைக்குத் திரும்பினேன்.                                                                                        காதல் திருமணம்   என் முதல் மனைவி மீனாட்சி ஈரோட்டில் காசநோயால் காலமானாள்; அவள் என்னை விட்டுப் பிரிந்தபின் நாடகத் தயாரிப்பிலேயே முழுக்கவனத்தையும் செலுத்தியதால் திருமணத்தைப் பற்றி நான் சிந்திக்கவேயில்லை. அக்கா, நான் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று அடிக்கடி வற்புறுத்தி வந்தார். திருச்சியிலிருந்து பெரியண்ணா அவர்கள் நாகர்கோவில் சென்று ஒய்வெடுத்துக் கொண்டசமயம், எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் நான் விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றும், என்னுடைய ஒப்புதலைத் தெரிவித்தால் உடனே பெண் பார்த்துத் தாம் ஏற்பாடு செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதற்குநான் பதிலெழுதியிருந்தேன். திருமணத்திற்கு இப்போது அவசரமில்லையென்றும் நானே ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துச் சொல்வதாகவும், அப்போது திருமணம் முடித்துக் கொள்ளலாமென்றும் அதில் தெரிவித்திருந்தேன்; உண்மையில் எந்தப் பெண்ணையும் மணந்து கொள்ளும் எண்ணம் அப்போது எனக்கில்லை.  திருமணம் சுவர்க்கத்தில் உறுதி செய்யப்படுகிறது திருமணங்கள் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகச் சிலர் சொல்லுகிறார்கள். அதில் எனக்கு அவ்வளவாக நம்பிக்கையில்லை. ஆனால், எனது இரண்டாவது திருமணம் நடைபெற்றதை இப்போதும் எண்ணிப் பார்க்கிறேன். அப்படித்தான் இருக்குமோவென்ற சிறு நம்பிக்கை இதயத்தின் எங்கோ ஒரு மூலையில் உதயமாகிறது. 1947இல் கம்பெனி திண்டுக்கல்லில் இருந்த போது ஒருநாள் பில்ஹணன் காதல் காவியத்தை நடித்து விட்டு இல்லத்திற்குத் திரும்பினேன், அன்றுதான் மீண்டும் திருமணம்  செய்து கொள்ளும் எண்ணம் என் உள்ளத்தில் அரும்பியது. எத்தனை எத்தனையோ காதல் கதைகளை நான் படித்திருக்கிறேன். என்றாலும் என் வாழ்வில் இப்படியொரு காதல் கதை உருவாகுமென்று நான் எண்ணவேயில்லை.  இதயத்தில் இடம் பெற்றாள் எங்கள் நாடகக் குழுவின் நடிகை செல்வி. சீதாலட்சுமி என் இதயத்தில் இடம் பெற்றாள். நான் அவளைக் காதலித்தேன், அவளும் என்னை நேசித்தாள். அவளேயே திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினேன். காதலிப்பதை வேறாகவும் கல்யாணம் செய்து கொள்வதை வேறாகவும் நான் கருதவில்லை. என் எண்ணத்தை நேராக நின்று பெரியண்ணாவிடம் சொல்ல என்னல் முடியவில்லை. அதற்கான துணிவு எனக்கு ஏற்படவில்லை.  “சீதாலட்சுமியை நான் திருமணம் செய்து கொள்வதாக முடிவுசெய்திருக்கிறேன். அன்புகூர்ந்து ஆசீர்வதிக்கவேண்டும். அனுமதிக்க வேண்டும்.”  என்று கடிதம் எழுதினேன். பெரியண்ணாவின் கையில் கொடுத்தேன். மறுநாள் பதில் கிடைத்தது.  “உன்முடிவை நான் தடுக்கப் போவதில்லை. உன் விருப்பம் போல் செய்து கொள்ளலாம்.”  என்று பெரியண்ணா எழுதியிருந்தார். நான் மகிழ்ச்சியடைந்தேன். சீதாலட்சுமியின் பெற்றேரின் அனுமதியைப் பெற அவர் கள் இருக்குமிடம் சென்றேன். அவளுடைய தந்தையாரைக் கண்டேன். அனுமதி வேண்டினேன். அவர் எளிதில் இசைவளிக்க வில்லை. வேண்டாவெறுப்பாக சம்மதித்தார்.  பாசங்களுக்கிடையே மோதல் கோவைக்குத் திரும்பியதும் பேரதிர்ச்சி எனக்காகக் காத்திருந்தது. பெரியண்ணா நாகர்கோவில் செல்ல முடிவு செய்து விட்டதாகவும், என் திருமணத்திற்கு அவர் கோவையில் இருக்க மாட்டாரென்றும் தெரிந்தது. என்னால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என் நிலைமையை விளக்கி உருக்கமாக மீண்டும் பெரியண்ணாவுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினேன். அக்கடிதத்தை அவர் பார்க்க விரும்பவில்லை. சகோதர பாசத்திற்கும் காதல் பாசத்திற்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. அன்றிரவு முழுதும் நானும் சீதாவும் சிந்தனை செய்தோம். காதல் கதைகளில் வருவது போல எத்தனையோ முடிவுகள் எனக்குத் தோன்றின. சீதா உறுதியாகக் கூறிவிட்டாள். “நீங்கள் என்ன முடிவு செய்கிறீர்களோ அந்த முடிவை நானும் ஏற்றுக்கொள்ளச் சித்தமாயிருக்கிறேன்” என்று.  வாழ்க்கையே ஒரு போராட்டம்தானே? பெரியண்ணா மீது எனக்குக் கோபம் உண்டாகவில்லை; வருத்தமும் ஏற்படவில்லை. அவர் முடிவு செய்தது சரியென்றே என் மனத்திலும் பட்டது. விளைவுகளை ஏற்பது தான் ஆண்மை என்ற முடிவுக்கு நானும் வந்தேன்; நான் இந்த முடிவுக்கு வர, காலை ஐந்துமணி ஆயிற்று. அதற்குமேல் சிந்தனை எதுவுமில்லை. அமைதியாக உறங்கினேன்.  காலை 8 மணிக்கு எழுந்தேன். மீண்டும் சிந்தனை “சாவு ஒன்று தான் எங்களைப் பிரிக்க முடியும்” என்று ஒரு சமயம் நான் பத்திரிகையில் எழுதியிருந்தேன். இப்போது உயிருடன் இருக்கும் போதே பிரிகிறோமே என்று எண்ணினேன்.  காதலயைக் கைப்பிடித்தேன் 1948 மார்ச்சு 31 ஆம் நாள், நான் மறக்க முடியாத நாள். ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் உயிராகப்போற்றும் எங்கள் பெரியண்ணா கம்பெனியை நடிகர்களின் கூட்டு நிர்வாகத்தில் நடத்தும்படி யோசனை கூறிவிட்டு நிரந்தரமாக ஊருக்குப் புறப் பட்டு விட்டார்..........  .................................................................................. நான் என் இதயத்தை இரும்பாக்கிக் கொண்டேன். ஜூன் மாதம் முதல் தேதி சின்னண்ணா என்னை அழைப்பதாகத் தகவல் வந்தது. சென்றேன். நானும் சின்னண்ணாவும் தம்பி பகவதியும் கலந்து யோசித்தோம் கம்பெனியைத் தொழிலாளர் கூட்டுறவில் விடுவதென்றும், கம்பெனி கணக்குப்பிள்ளை ஏ. டி. தர்மராஜுவையும் நீண்ட காலமாக வெளி நிர்வாகத்தில் எல்லாக் காரியங்களையும் கவனித்து வரும் பழம் பெரும் நடிகர் கொல்லம் பாலகிருஷ்ண னையும் பொறுப்பேற்றுக் கொள்ளச் சொல்லலாமென்று ஒரு திட்டம் வகுக்கப் பட்டது. அவ்விருவரையும் அழைத்துக் கேட்டோம். நிர்வாக சிரமங்களை அறிந்தவர்களாதலால் பொறுப்பேற்றுக் கொள்ள அவர்கள் மறுத்தார்கள் ........ சின்னண்ணாவே எல்லாப் பொறுப்புக்களையும் துணிவோடு ஏற்றார்.  1948 ஜூன் 4 ஆம் நாள் சீதாவைத் திருமணம் செய்து கொள்ள பதிவாளர் முன்னிலையில் மனுக்கொடுத்து ரசீது பெற்றேன். அன்றிரவு எங்கள் இல்லத்தில் திருவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. மணமக்களாகப் புத்தாடையுடுத்தி நாங்களிருவரும் விளக்கின் முன் அமர்ந்தோம். இறைவனை வணங்கினோம். சின்னண்ணா; மீனாட்சி அக்காள், சீதாலட்சுமியின் தாய், தந்தை, என் அன்புக்குரிய, என்னை உயிராகக் கருதும் நடிகர். தம்பி எம். கருப்பையா ஆகியோர் முன்னிலையில் என் காதலி சீதாலட்சுமிக்கு நான் மங்கலகாண் பூட்டினேன். திருமணம் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது மெய்தானோ?......                      இமயத்தில் நாம்   வீரமும் காதலும் விரவிக் கிடக்கும் தமிழர்களின் வரலாற்று நாடகங்களை மேடைக்குக் கொண்டுவர வேண்டு மென்பது எங்கள் நீண்ட நாள் ஆசை. அதிலும் சிறப்பாக வட ஆரியர் முடித்தலை மேல் இமயக்கல் கொணர்ந்து பத்தினி கண்ணகிக்குப் படிவம் சமைத்த சேராமாவீரன் செங்குட்டுவனின் செயற்கரும் செயலை நாடகமாக்கி நடிக்க வேண்டுமென்பதில் எங்களுக்கிருந்த ஆர்வம் சொல்வி முடியாது.  ரா. வேங்கடாசலம் அறிமுகம்  செங்குட்டுவனை நாடகமாக எழுதுங்கள் என்று எங்களோடு தொடர்பு கொண்ட எழுத்தாளர்கள் பலரிடமும் கூறினேன். இரண்டொருவர் எழுதுவதாகக் கூறினார்கள். சிலர் காட்சிக் குறிப்புக்கள் வரைவதோடு நிறுத்திக் கொண்டார்கள். திரு ரா. வேங்கடாசலம் அவர்களே திருச்சி வானெலி நிலைய எழுத்தாள நண்பர்கள் கே. பி. கணபதி, ரா. ஆறுமுகம் இருவரும் அறிமுகப்படுத்தி வைத்தார்கள். பத்திரிகைகளில் வெளிவந்தசிறு கதைகளின் வாயிலாக ரா. வே. அவர்களின் கதை புனேயும் ஆற்றலே நான் அறிந்திருந்தேன். அவரை நேரில் சந்தித்துச் சிறிது நேரம் பழகியதும் செங்குட்டுவனே எழுதுவதற்கு அவர் மிகவும் தகுதி வாய்ந்தவர் என்பது எனக்குப் புலப்பட்டது, அவரே ஒரு செங்குட்டுவனாகத் தோன்றினார்.  தமிழ், தமிழ்நாடு, தமிழ்இனம், தமிழ் எழுத்தாளர் என்றால் அதற்கிணை உலகில் எங்குமில்லையென்ற உணர்ச்சிராவே இதயத்தோடு ஒட்டிக் கிடந்தது. தன்னைப் பற்றி, தன் எழுத்துக்களைப் பற்றி சிறிதும் குறைத்து எண்ணும் மனோபாவம் அவரிடமில்லை. தன்னைத் தாழ்வாக எண்ணியெண்ணியே தமிழன் தன்னிகலயழித் தான் என்பது என் உறுதியான கருத்து. தாழ்வு மனப்பான்மை நம்மைவிட்டு ஒழிந்தால்தான் நாம் உலகின்முன் எல்லாத் துறை. களிலும் தலை நிமிர்ந்து நிற்க முடியுமென்ற உறுதி எனக்குண்டு.  பெயரே பெருமையைப் பேசியது நண்பர் ரா. வே. ‘தமிழன் பெருமை’ என்ற ஒருநாடகத்தை. தன்னுடன் கொண்டு வந்திருந்தார். ‘இதை நடிக்கிறீர்களா?’ என்று கேட்டார். நாடகப் பரிசு வைத்து அப்போதுதான் சில நாடகங்களை வாங்கி வைத்திருந்தோம். “இதை நடிப்பதற்கு இயலாது; சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்தை நாடக உருவில் எழுதுங்கள். நன்றாயிருந்தால் நடிக்கிறோம்” என்று கூறினேன். ஆவலோடு ஒப்புக்கொண்டார். முதல்முறை கோவையில் காட்சிக் குறிப்புக்கள் காண்பித்தார். திண்டுக்கல் முகாமில் நாடகம் கொடுத்தார். இமயத்தில் நாம் என்ற நாடகத்தின் பெயரைப் படித்தேன். என் தோள்கள் விம்மின. ரா. வே. அவர்களின் பெருமித உணர்ச்சி அந்தப் பெயரிலேயே பேசியது.  கோவையில் நாடகத்தை அரங்கேற்ற முடிவு செய்தோம்: கவி. ஆறுமுகனார் அவர்கள் பாடல்களை எழுதினார், பாடல்களுக்கு. பண் அமைக்கும் பொறுப்பினை எம். கே. ஆத்மநாதன்ஏற்றுத் தமது பொறுப்பினைச் செம்மையாகச் செய்தார். தம்பி பகவதி செங்குட்டுவளுகவும், நான் இளங்கோவாகவும் பாத்திரங்களே ஏற்றோம். நிமித்திகன் பாத்திரம் குண்டு கருப்பையாவுக்குக் கொடுக்கப்பட்டது. செங்குட்டுவனின் துணைவி வேண்மாளாக எம். கருப்பையா நடித்தார். பொற்றொடி என்று புதிய கற்பனைப் பாத்திரமொன்றைப் படைத்திருந்தார் ரா. வே. அந்தப் பாத்தி ரத்தை எம். எஸ். திரெளபதி ஏற்றார். பி. எஸ் வேங்கடாசலம் சீத்தலைச் சாத்தனராகவும், கே. கோவிந்தசாமி கல் சுமக்கும். கனகவிஜயனாகவும் பாத்திரமேற்று நாடகத்திற்குப் பெருமை சேர்த்தார்கள். ஒத்திகை பார்த்தபோதே நாடகம் பிரமாதமாக இருக்குமெனத் தோன்றியது.  வில்-புலி-கயல் சின்னம்  திரு. விஸ்வேஸ்வரன் என்ற மின்சார நிபுணர் ஒருவர் எங்களுக்குக் கிடைத்தார். அவருடைய யோசனைப்படி பிரமாண்ட் மான ஒரு பெட்டி செய்யப்பட்டது, தமிழ்நாட்டிலிருந்து வட நாடு சென்று இமயத்தின் உச்சியில் வில், புலி, கயல் சின்னங்கள் பொறிக்கும் காட்சியை அந்தப் பெட்டியிலேயே மின்சாரத்தின் துணையோடு அவர் செய்து காண்பித்தார். நாடக ஆரம்பத்தில் அதைப் பயன்படுத்திக் கொண்டோம். விளக்குகள் அணைக்கப் பட்டதும் அரங்கில் தமிழ் நாடு ஒளிக்கோடுகளாகக் காட்சி யளிக்கும். இமயத்தில் நாம் என்ற பாடல் தொடங்கியதும் படிப்படியாக அந்த ஒளிக்கோடுகள் விரிந்து பரந்து இமயம்வரை செல்லும். பாட்டு முடியும்போது இமயத்தின் உச்சியிலே மூவேந்தர்களின் வில்-புலி-கயல் சின்னங்களோடு தமிழ்க் கொடி ஒளிவடிவில் பறக்கும். இதனை மிக அற்புதமாகத் தயாரித்திருந்தார் விஸ்வேஸ்வரன்.  21-6. 48இல் இமயத்தில் நாம் முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவகாதம் அவர்கள் தலைமையில் அரங்கேறியது.  கி. அ. பெ அவர்களின் பேச்சு நாடகத்திற்குத் தெம்பூட்டுவதாக இருந்தது. தமிழ்நாட்டில் முதன்முதலாக நடைபெறும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்நாடகத்தை மக்கள் மகிழ்வுடன் வரவேற்றார்கள். முதல் நாடக வசூல் ரூ. 1222-00 ஆசிரியர் ரா. வே. அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பெற்றது. இமயத்தில் நாம் 87நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது.  தமிழறினார்கள் தலைமை தமிழறினார் பெருமக்கள் இவ்வரலாற்று நாடகத்தைக்கான வெளியூர்களிலிருந்தெல்லாம் வந்து குழுமினார்கள். 1-7-48இல் சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்களும், 11-7-48இல் திரு நாரண - துரைக்கண்ணன் அவர்களும், 24-7-48 இல் சென்னைப் பல்கலை கழக தமிழ் ஆராய்ச்சி துறைத் தலைவர், ரா. பி. சேதுப்பிள்ளை அவர்களும், 25-7-48 இல் தேசபக்தர் சி.பி. சுப்பையா அவர்களும், 1-8-48இல் விருதுநகர் வி.வி. இராமசாமி அவர்களும், 2-8-48இல் கோவைக் கிழார் சி. எம். இராம சந்திரன் செட்டியார் அவர்களும் தலைமை தாங்கி, இது போன்ற வரலாற்று நாடகங்களுக்கு அரசினார் மானிய உதவி வழங்கி ஆதரிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்கள்.                                    மனிதன்   பாலக்காடு வாரியர் ஹாலில் மனுஷ்யன் என்ற ஒரு மளையாள நாடகத்தைக்காணும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டதைப் பற்றி முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். அதன் பின் சில நாட்களில் தமிழ் வித்துவானும் மலையாள மொழியிலே நன்கு பயிற்சி பெற்ற வருமான திரு பா. ஆதிமூலனார் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது மனிதன் நாடகத்தைத் தமிழில் நடிக்க விரும்புவதாகத் தெரிவித்தேன். அவர் தாமே மலையாள நாடகாசிரியர் முதுகுளம் ராகவன் பிள்ளையைச் சந்தித்து, நாடகத்தின் உரிமையை வாங்கித் தமிழில் எழுதித்தருவதாக வாக்களித்தார். கோவை முகாமில் மனிதன் நாடகம் எங்கள் கையில் கிடைத்தது. திரு பா. ஆதிமூலஞரோடு திரு கா.சோமசுந்தரம் அவர்களும் வந்திருந்தார். இவர் ஏற்கனவே வைரம்செட்டியார் கம்பெனிக்கு எதிர்பார்த்தது என்னும் நாடகத்தை எழுதிக் கொடுத்தவர். சோமசுந்தரம் ஆதிமூலஞரின் மாணவர். ஆசிரியரும் மாணவரும் சேர்ந்தே மனிதனை உருவாக்கியிருப்பதாக அறிந்தோம்.  மனிதன் மனுஷ்யனின் தழுவல் மனிதன் மனுஷ்யனின் மொழி பெயர்ப்பு அன்று; தழுவல் என்றே சொல்ல வேண்டும். ஆம்; கருத்து ஒன்றைத்தவிர நாடக அமைப்புகள் முழுவதும் தமிழ் ஆசிரியர்களால் உருவாக்கப் பட்டவையே. மலையாள மனுஷ்யன் நாடகத்திலே இருந்த, குறைபாடுகளையெல்லாம் போக்கி, கதையின் கருத்தைத் தெளிவு படுத்தும் முறையில் புதிய உத்திகள் சிலவற்றைச் சேர்த்து, தமிழ் மனிதனை மிக உயர்வாகப் படைத்திருந்தார்கள் ஆசிரியரும், மாணவரும். நாடகத்தின் கருப்பொருள் எங்கள் உள்ளத்தைக் கவர்ந்தது. இதனை வெற்றிகரமாகத் தயாரிப்பதற்குரிய வழி வகைகளை ஆராய்ந்தோம்.  காட்சிகள் ஓரளவுக்குத் தாயாரிக்கப்பட்டன. எல்லோருக்கும் பாடம் கொடுக்கப்பெற்றது. மனிதன் என்ற பெயருக்குரிய டாக்டர் சுகுமாரனாக தம்பி பகவதியும், ஒவியன் ராஜனாகநானும், டாக்டரின் மனைவி சாவித்திரியாக எம். எஸ். திரெளபதியும், ஓவியனின் தங்கை சரசாவாக எம். கருப்பையாவும், டாக்டரின் சிற்றன்னை பிரேமாவாக கே. ஆர். சீதாராமனும், பிரண்டாக (பிரண்டு) ராமசாமியும், டாக்டரின் தந்தையாக டி. என். சிவதாணுவும் பாத்திரங்களை ஏற்றார்கள்.  உருண்டோடும் மனிதன் மின்சார நிபுணர் விஸ்வேஸ்வரன் இமயத்தில் நாம் ஆரம்பத்தில் தமிழ்க் கொடியை இமயத்தில் பறக்கவிட்டுக் காட்டியது போல் மனிதனிலும் ஒரு புதுமையைச் செய்தார். மதமிலான் - மானியான் - உத்தமன் - மன்னிப்பான் என்ற எழுத்துக்களை தனித்தனியே பெட்டிகளாக செய்து, பல்புகள் போட்டு, சிவப்புக் காகிதங்கள் ஒட்டி ம-னி-த-ன் என்ற ஒவ்வொரு எழுத்தும் தலைகீழாக உருண்டோடுவது போல் காட்டி, இறுதியாக, மனிதன் என்ற எழுத்துகள் நிலைத்து நிற்பதுபோல் மிக அருமையாக செய்திருந்தார்.  5-8-48இல் மனிதன் நாடகம் மிகச்சிறப்பாக அரங்கேறியது. அன்று கோவை நகரசபைத் தலைவர் டாக்டர் நச்சப்பா தலைமை வகித்தார். அன்றைய வசூல் ஆசிரியர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.  கருப்பையா பெண் வேடம்!  சரசுவாக நடித்த எம். கருப்பையாவும், பிரேமாவாக நடித்த கே. ஆர். சீதாராமனும் மிக அற்புதமாக நடித்தார்கள். சீதாராமனும் பெண் வேடத்தில் இளமையிலிருந்தே அனுபவம் பெற்றவர். எம். கருப்பையாவின் நடிப்புத்திறமையை பற்றித் தான் எல்லோரும் வியந்தோம். பல்வெறு உணர்ச்சிகளைக் கொட்டி நடிக்க வேண்டிய பாத்திரம் சரசு. இந்தப் பாத்திரத்தைத் திறமையாக நடித்து எல்லோருடைய பாராட்டுதலையும் பெற்றார் கருப்பையா. பிரண்டு ராமசாமியைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அவருக்குப் பிரண்டுஎன்ற அடை மொழி வந்ததே மனிதன் நாடகத்தின் மூலம்தான். இவருடைய நடிப்பின் சிறப்பினைப் பற்றியும் மனிதன் நாடகத்தின் மகத்தான வெற்றியைப் பற்றியும் இரண்டாவது பாகத்தில்சொல்ல எண்ணி விருக்கிறேன்.  நாடகத்திற்கான பாடல்களையும் வித்துவான் பா. ஆதி மூலனார் எழுதியிருந்தார். மனிதன் நாடகம் ஒழுக்கத்தை வலியுறுத்தும் உன்னதமான நாடகமாக விளங்கியது.  தமிழ் முரசுக்கு உதவி நாடகம் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.அவர்கள் நடத்தி வந்த தமிழ் முரசு என்னும் திங்கள் இதழின் நிதிக்காக 9-6-48இல் வித்தியா சாகரர் நாடகம் நடைபெற்றது. இந்நாடகம் நடைபெறுவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே ம. பொ, சி. அவர்கள் கோவைக்கு வந்திருந்தார். நானும் தலைவருமாகச் சில நண்பர்களிடம் சென்று நாடகத்திற்கென்று நிதியும் திரட்டினோம். ஆக, நடைபெற்ற வித்தியாசாகரர் நாடகத்திற்கு தியேட்டர் வசூல் நிதி வசூல் எல்லாமாகச் சேர்த்து ரூ. 3000 வசூலாயிற்று. இத் தொகையை தலைவரிடம் கொடுத்து தமிழ் முரசுக்கு வாழ்த்துக் கூறினோம்.  15-8-48 வரை மனிதன் நாடகம் தொடர்ந்து நடை பெற்றது. சின்னண்ணா சென்னைக்குச் சென்று ஒற்றை வாடைத் தியேட்டரைப் பேசி முன் பணமும் கொடுத்து வந்து விட்டபடியால் மனிதன் நாடகத்திற்கு நல்ல வசூலாகியும், மேற்கொண்டு நடத்த முடியவில்லை.  16- 8- 48 இல் மனோகராவைப் பட்டாபிஷேகமாக நடத்திக் கோவை நாடகத்தை முடித்துக் கொண்டோம்.  ஏறத்தாழ ஒராண்டுகாலம் கோவையில் நாடகங்கள் நடித்தோம். பில்ஹணன் படம் எடுத்து முடிக்கப் பெற்றது. சமூக நாடகங்கள் மூன்றும், வரலாற்று நாடகம் ஒன்றும் ஆக நான்கு புதிய நாடகங்கள் தயாராயின.  தலைநகராகிய சென்னை மாநகருக்கு வந்து நாடகங்கள் நடத்த வேண்டுமென்று பேரறிஞர் அண்ணா, திரு. நாரண துரைக் கண்ணன், பேராசிரியர் வ.ரா., சொல்லின்செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை, தலைவர் ம. பொ. சி. முதலிய பல அறிஞர்கள் எங்களை அடிக்கடி வற்புறுத்தி வந்தனார். எல்லோருடைய விருப்பத்தையும நிறைவேற்றும் நோக்கோடு, 19-8-48 இரவு கொச்சி எக்ஸ்பிரசில் தலைநகராகிய சென்னை மாநகருக்குப் பயணமானோம்.    (முதல் பாகம் நிறைவுறுகிறது)