[] 1. Cover 2. Table of contents உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள் உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்   என். வி. கலைமணி     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-NC-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/ulaga_varalatril_viduthalai_veerargal} மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/ulaga_varalatril_viduthalai_veerargal This Book was produced using LaTeX + Pandoc இந்த மின்னூலைப் பற்றி உங்களுக்கு இம்மின்னூல், இணைய நூலகமான, விக்கிமூலத்தில் இருந்து கிடைத்துள்ளது1 இந்த இணைய நூலகம் தன்னார்வலர்களால் வளருகிறது. விக்கிமூலம் பதிய தன்னார்வலர்களை வரவேற்கிறது. தாங்களும் விக்கிமூலத்தில் இணைந்து மேலும் பல மின்னூல்களை அனைவரும் படிக்குமாறு செய்யலாம். மிகுந்த அக்கறையுடன் மெய்ப்பு செய்தாலும், மின்னூலில் பிழை ஏதேனும் இருந்தால் தயக்கம் இல்லாமல், விக்கிமூலத்தில் இம்மின்னூலின் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கலாம் அல்லது பிழைகளை நீங்களே கூட சரி செய்யலாம். இப்படைப்பாக்கம், கட்டற்ற உரிமங்களோடு (பொதுகள /குனு -Commons /GNU FDL )2 [3] (http://www.gnu.org/copyleft/fdl.html) இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே, இந்த உரையை நீங்கள் மற்றவரோடு பகிரலாம்; மாற்றி மேம்படுத்தலாம்; வணிக நோக்கத்தோடும், வணிக நோக்கமின்றியும் பயன்படுத்தலாம் இம்மின்னூல் சாத்தியமாவதற்கு பங்களித்தவர்கள் பின்வருமாறு: - Muthulakshmi kaniyam - Info-farmer - The employee kaniyam - Arun kaniyam - Balajijagadesh - Guruleninn உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம். பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை. இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம். Universal (CC0 1.0) Public Domain Dedication This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode No Copyright The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission. This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx. வங்கம் தந்த விடுதலைச் சிங்கம் - நேதாஜி “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது” என்று நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பாடியதற்கு ஏற்ப உலகத்துக்கு ஒரு புதுமையாக அகிம்சை வழியிலே அறப்போர் நடத்தி இந்திய நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்தார் மகாத்மா காந்தியடிகள். அந்த காந்தீய நெறியைப் பின்பற்றி உலகத்திலே பலர் அகிம்சை வழியிலே சமுதாய விடுதலையும் பெற்றுத் தந்துள்ளார்கள். குறிப்பாக அமெரிக்காகாந்தி மார்டீன் லூதர் கிங், அயர்லாந்து காந்தி டிவேலர்லரா போன்ற பலர் காந்திய வழியைப் பின்பற்றினார்கள். இந்தியத் திருநாட்டு சுதந்திரத்திற்காக காந்தீய வழியில் ஜவஹர்லால் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, வ.உ.சிதம்பரனார், காமராஜர், சுப்பிரமணிய சிவா, இராஜாஜி போன்ற எண்ணற்ற தேசப் பக்தர்கள் விடுதலை அறப்போரில் ஈடுபட்டு அளவற்ற தியாகங்கள் செய்துள்ளார்கள். இது, உலகவிடுதலைப் போரில் இதுவரை யாரும் வழிகாட்டியிராத ஒரு புதுமையானபோர் முறையாகும். “கொலைவாளினை எடுடா, மிகு கொடியோர் அறவே, குகைவாழ் ஒரு புலியே உயர் குணமேவிய தமிழா” என்ற புரட்சி பாடலுக்கேற்ப காந்தியடிகளுக்கு மாறுபட்ட போக்கில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு வேறு வழியில் நாட்டு விடுதலைக்காகப் போராடி தங்களது இன்னுயிரை ஈந்த உலக வீரர்கள் பலர். அவர்களுள் மாஜினி, கரிபால்டீ, லெனின், பர்மிய வீரர் அவுன்சான் போன்றவர்கள் உண்டு. இவர்கள் ஈடுபட்டுள்ள போர்முறை வன்முறை என்றாலும் இவர்கள் உள்ளத்தில் அவரவர் நாட்டின் விடுதலையும் சமுதாய முன்னேற்றக் கருத்துக்களும் செஞ்சுடர் பரப்பிக் கொண்டிருந்த தேச பக்திக் கனல் ஒன்றுதான். இந்த வகையில் காந்தியடிகளைப் பின்பற்றி நடந்தோர்க்கும் மற்றவர்களுக்கும் இடையே வேறுபாடே இல்லை. அந்த தேசபக்த மாவீரர்களின் வரிசையிலே முதலிடம் வகிப்பவர் வங்கம் தந்த விடுதலைச் சிங்கம் நேதாஜி ஆவார். விடுதலை வீரர் சுபாஷ் சந்திர போஸை மக்கள் நேதாஜி என்றும் அழைப்பதுண்டு. அவர் விடுதலைப் போர் முறையிலே காந்தியடிகளிடம் வேறுபட்டு இருந்தாரே தவிர மாறுபட்டவராக இருக்கவில்லை. போர்முறையில் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் நேதாஜி, மகாத்மா காந்தியினை மதிப்பிற்குரிய தலைவராக இறுதிவரை எண்ணியவராவர். காந்தியடிகளின் அறப்போர், சூரியன் மறையாத பிரிட்டீஷ் சாம்ராஜியத்தை இந்தியாவில் வேர் அறுக்குமா என அவர் உள்ளத்தில் தோன்றிய எழுச்சியின் விளைவாக விடுதலைக்கு தனிவழியே சென்று போராடினாரேயன்றி காந்தியடிகளுக்கு விரோதமாகச் செயல்படவேண்டும். என்பது அவர் நோக்கம் அல்ல. இந்திய நாடு விடுதலை பெற்றபின்னர்நேதாஜி உயிருடன் இருக்கும் வாய்ப்பினை பெற்றிருப்பாரானால் காந்தி வழிதான் வலிமைபடைத்தது என்ற அகிம்சை உண்மையினை அறிந்து அடிகளின் தலைமையினை மீண்டும் ஏற்றுநம்முடைய இந்திய நாட்டு குடியரசை முன்னேற்றுவிக்கும் அரும்பணியில் முன்வரிசையில் நின்றிருப்பார். அந்தப் பெரும் பேறு நமக்கு கிடைக்காதது துரதிர்ஷ்டமே ஆகும். ஆனாலும், நமக்கு பிரதமராக இருந்த பண்டிதர் நேரு அவர்கள் தலைமையில் அமைந்த பாரத குடியரசு, வங்கம் தந்தவிடுதலைச்சிங்கம் நேதாஜியின் வீரமிக்கவிடுதலைப் போராட்டத்தை இந்திய சுதந்திரப்போராட்டமாகவே ஏற்று அவருக்குபெருமையும் புகழையும் மதிப்பையும் வழங்கப் பின்வாங்கவில்லை. எந்த வழியிலே நின்று நோதாஜி போராடிஇருந்தாலும் அவருடைய மனத்தில் குமுறி நின்ற இலட்சியம், குறிக்கோள், இந்திய சுதந்திரம் என்ற ஒன்றே தான். எனவே நேதாஜியும், காந்தியவழியில் விடுதலைக்காகப் போராடியவர் என்றுதான் பாரதமக்கள் கொண்டாடுகிறார்கள்.இந்த மக்கள் நோக்கத்தை அறிந்த நேருஜி அரசு, நேதாஜிக்குரிய நன்றி உணர்ச்சியைப் பிரதிபலித்துள்ளது. வங்கச் சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பெற்றோர்கள் ஜானகி நாத் போஸ், பிரபாவதி ஆகியோருக்கு ஒன்பதாவது புதல்வராகப் பிறந்தார். கட்டாக் நகரில் உள்ள ஓர் ஆரம்பப் பள்ளியில் சுபாஷ் கல்வி கற்றார். அந்தப் பள்ளியில் ஆங்கிலேய மாணவர்களே அதிகமாக படித்துக்கொண்டிருந்தார்கள். அந்தப் பள்ளியில் போஸ் ஆறு ஆண்டுகள் கல்வி கற்றபின்னர் ராவென்ஷா உயர்நிலைப் பள்ளியில் மெட்ரிக்குலேஷன் வரை படித்தார். அதற்குப் பிறகு வங்காளத்தில் ஒரு கல்லூரியில் சேர்ந்து ஆனர்ட்ஸ் பட்டம் பெற்று முதல் மாணவராகத் திகழ்ந்தார். பிறகு இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஐ.சி.எஸ். பட்டம் பெற்றார். இந்த நேரத்தில், இந்தியாவில் காந்தியடிகள் ஒத்துழையாமைப் போர் என்ற ஒரு போராட்டத்தை துவக்கினார். அது உலகமெங்கும் ஓர் அரசியல் விழிப்புணர்ச்சியையும் வியப்பையும் உருவாக்கியது. இந்திய நாட்டில் காந்தியடிகள் மூட்டிய விடுதலைத் தீயின் புகை மூட்டத்தை போஸ் இங்கிலாந்தில் இருந்த படியே உணர்ந்தார். அவரது மனதில் தேசபக்தி உணர்ச்சி பொங்கி எழுச்சி பெற்றது. உடனே ஐ.சி.எஸ். பட்டத்தைத் தூக்கி எறிந்து விட்டு இந்தியாவிற்கு வந்தார். காந்தியடிகளை பம்பாயில் சந்தித்து அவரது ஆசியைப் பெற்றார். வங்கத்தில் ஒத்துழையாமைப் போரை ஏற்று நடத்திக் கொண்டிருந்த சித்தரஞ்சன் தாஸ் அவர்களையும் சந்தித்தார். சித்தரஞ்சன் தாஸை இந்திய மக்கள் சி.ஆர்.தாஸ் என்று அன்புடன் அழைப்பார்கள். அவர் சுபாஷ் சந்திர போஸ் இங்கிலாந்தில் படித்துக் கொண்டிருந்தபோதே அறிமுகமானவர். அதனால் ஐ.சி.எஸ். பட்டத்தை உதறித் தள்ளிவிட்டு தன்னை வந்து பார்த்த சுபாஷை பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுப் பாராட்டினார்.கடமை உணர்ந்த தேசிய விடுதலை வீரன் என்று மக்களிடையே அறிமுகப் படுத்தினார். சுதந்திரப் போராட்ட செய்திகளை நாடெங்கும் பரப்பவும் போராட்டக் கொள்ளைகளுக்கு விளக்கம் தந்து வழிகாட்டவும் ‘முன்னோற்றம்’ என்ற பெயரில் பத்திரிக்கை ஒன்றை சி.ஆர். தாஸ் துவக்கினார். அதன் ஆசிரியர் பொறுப்பை அவர் சுபாஷ்க்கு வழங்கினார். பெரும் மகிழ்ச்சியுடன் ஆசிரியராகப் பொறுப்பேற்ற சுபாஷ் தனது எழுத்து வன்மையால் நாட்டிற்கு அருந்தொண்டு ஆற்றினார். இந்திய சுதந்திரப் போராட்டம் மகாத்மா தலைமையில் தீவிரமாக நடந்து கொண்டிருந்தபோது, சுபாஷ் முழுநேரத் தொண்டராகப் பொதுவாழ்வில் ஈடுபட்டார். கனல் கக்கும் தனது பேச்சு வன்மையால் இளைஞர்களைக் கவர்ந்தார். அவர்களை சக்திவாய்ந்த தொண்டர்காளாக உருவாக்கினார். அதனால் புதிய ஒரு தொண்டர் படையை அமைத்து அதன்தளபதியாக செயலாற்றினார். நாடெங்கும் இருந்த தீவிர இளைஞர்களைத் திரட்டி இராணுவம் போல கட்டுப்பாட்டுடன் அந்தப் படையை நடத்தினார். தீவிரவாதிகள் அனைவரும் போஸ் தலைமையில் திரண்டனர். தீவிரமான திட்டங்களையும் தீட்டினர். உணர்ச்சிமிக்க கருத்துக்களை பேசினர். இப்படிப்பட்ட புரட்சிகரமான போக்கில் சுபாஷ் செல்வாரேயானால் ஒரு பயங்கரபுரட்சியாளனாக எதிர்காலத்தில் மாறிவிடுவாரே என்று ஆங்கிலப் பேரரசு அஞ்சி நடுநடுங்கியது. சுபாஷ் மீது பலவிதமாக பழிகளை பிரிட்டிஷ் அரசு சுமத்தியது. பக்கத்து நாடான பர்மாவுக்கு நாடு கடத்தியது. அங்கே மாந்தலே சிறையில் வைக்கப்பட்டார். அதே நேரத்தில் தீவிரவாதிகளை எல்லாம் பிரிட்டிஷ் அரசு கொடுமைப்படுத்தி சிறையில் அடைத்தது. சிறைக் கொடுமை சுபாஷை வாட்டிவதைத்தது. பலமிக்க அவர் உடல் வாடியது. நோய்க்கு இலக்கானார். பிரிட்டிஷ் அரசு அவரை உடனே விடுதலை செய்தது. போஸுக்கு நோய் மிகவும் மோசமாக இருந்ததால் ஐரோப்பாவில் உள்ள வியன்னாநகர மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். அப்பொழுது இந்தியாவிலே நடந்த காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் சுபாஷ் சந்திர போலை தலைவராக காங்கிரஸ் கட்சி தேர்ந்தெடுத்தது. குஜாராத் மாநிலத்திலுள்ள அரிபுரா என்ற நகரில் காங்கிரஸ் பேரவை கூடியது. மக்கள் இலட்சக் கணக்கில் திரண்டு சுபாஷ் சந்திரபோஸ் தலைமையை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்கள். அப்போது அவர் ஆற்றிய தலைமை உரை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைக் குலைநடுங்க வைக்கும் வீரஉரையாக அமைந்தது. அடுத்த ஆண்டும் சுபாஷ் சந்திர போஸ் அகில இந்திய காங்கிரஸ் பேரரவையின் தலைவர் ஆனார். பிரிட்டிஷ் பேரரசு இன்னும் ஆறு மாதங்களுக்குள் இந்திய நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று அவர் எச்சரித்தார். போஸின் தீவிரமான இந்தப் பேச்சு காங்கிரஸ் பேரவையின் உள்ளும் புறமும் பலத்த எதிர்ப்பை கிளப்பியது. தீவிரமாக இருந்த இளைஞர்கள் எல்லாம் போஸ் பிரகடனத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. காங்கிரசுக்கு போதிய பலம் இல்லாத நிலையில் இந்த பயங்கரப்புரட்சி நடவடிக்கையில் ஈடுபட்டால் எங்கே விடுதலைப் போராட்டத்திற்குத் தோல்வி வந்து விடுமோ என்று காங்கிரஸ் அஞ்சியது. ஆனால் சுபாஷ் சந்திரபோஸ் தனது முடிவில் உறுதியாக நின்றார். தனது போக்கை மாற்றிக்கொள்ள மறுத்து விட்டார். இந்திய தேசிய காங்கிரஸ் பேரவையில் தனது கருத்துக்களை ஏற்றுக்கொள்வோர் பெரும்பான்மையாக இல்லை என்பதைப் புரிந்துகொண்ட சுபாஷ் சந்திரபோஸ் பேரவையின் தலைமைப் பெறுப்பிலிருந்து விலகிவிட்டார். தனது இலட்சியம் எதுவோ அதே பாதைக்கு வழிவகுத்து நடமாடத் துணிந்துவிட்டார். அப்போது, இராண்டாவது உலகப்போர் துவங்கியது. உலகமெங்கும் ஒரே பரப்பரப்பு சூழ்நிலை.இந்தநேரத்தில், சுபாஷ் சந்திர போஸின் அதிதீவிர நடவடிக்கைகளைக் கண்டு பிரிட்டிஷ் பேரரசு பீதியடைந்தது. போர்க்கால நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டு சுபாஷ் சந்திரபோஸ் புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடுமே என்று கலங்கி அவரைச்சிறையில் அடைத்தது. என்னை சிறையில் அடைத்தது ஏன்? காரணம் என்ன உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் விசாரணையின்றி என்னை சிறையில் அடைத்து வைத்ததை எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொள்வேன் என்று சூளுரைத்து உண்ணாவிரதம் இருந்தார். ஆங்கிலப் பேரரசு பலமுறை கேட்டுக்கொண்ட பிறகும் கூட அவர் உண்ணாநோன்பை நிறுத்தமாட்டேன் என்று அறிவித்தார். பிரிட்டிஷ் அரசு உடனடியாக அவரை விடுதலை செய்தது. ஆனால் அவருடைய வீட்டைச் சுற்றிலும் போலீஸ்காரர்களை நிறுத்தி அவருடைய நடமாட்டங்களை கூர்ந்து கவனித்தது. அரசு அனுமதியில்லாமல் போஸ் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று தடை விதித்தது. ஆன்மிக ஆராய்ச்சியில் ஈடுபட இருப்பதாக போஸ் கூறினார்.தமது அறையைச்சுற்றிலும் கருப்புத்திரை ஒன்றை கட்டச்செய்தார். தாம் தனிமையை விரும்புவதால் உணவுப் பொருள்களைக் கூட யாரும் தன்னிடம் நேரடியாகக் கொண்டு வராமல் திரைவழியாக உள்ளே வைத்துவிட்டால் போதும் என்று ஏற்பாடு செய்தார். ஒரே ஒரு முஸ்லீம் மட்டும் மருத்துவர் என்ற முறையில் தினமும் அவரை சந்தித்து வந்தார். உலகப் போர் தீவிரம் அடைந்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்திய நாட்டின் விடுதலைக் கிளர்ச்சியை மிகக் கடுமையாக நசுக்க விரும்பும் என்று சுபாஷ் உணர்ந்தார். இந்த நிலையில் தேசத் தொண்டர்கள் மன நிம்மதியோடு செயற்பட முடியாது என்று அவர் எண்ணினார். எனவே, நாட்டை விட்டு எப்படியாவது வெளியேறி, அயல்நாடு சென்று அங்குள்ள இந்தியர்களைத் திரட்டி இராணுவப் பயிற்சி அளித்து, பிரிட்டிஷ் ஆட்சி மீது போர்ப் பிரகடனம் செய்யவேண்டும் என்று போஸ்திட்டமிட்டார். வழக்கமாக தன்னைச் சந்திக்க வரும் முஸ்லீம் மருத்துவரைப் போல வேடமிட்டு போஸ் தனது வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அவர் சென்றது யாருக்குமே தெரியாது. வீட்டிற்குள் அவர் இருப்பதாகவே ஆங்கில அரசு நினைத்துக் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியினர் அவர் மீது தொடர்ந்த வழக்கு மீது விசாரணை வந்தது. போலீஸார் அவரை அழைத்து வர வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வெறும் அறைதான் இருந்தது தவிர போஸ் அங்கு இல்லை. துப்பறியும் துறையினரும், காவலரும் பரபரப்பு அடைந்து நாடெங்கும் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. ஆனால், அவர் அயல்நாடு சென்றார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இமயமலைச்சாரலில் உள்ள கைபர் கணவாயைக் கடந்து ஆப்கானிஸ்தானத்திற்கு செல்லும் முயற்சியில் சுபாஷ் சந்திரபோஸ் ஈடுபட்டிருந்தார். கைபர் கணவாய் அருகே உள்ள மக்கள் புஷ்டு மொழி பேசுபவர்கள். அந்த மொழி அவருக்குத் தெரியாது. அதனால் அம்மொழி தெரிந்த பகத்ராம் என்ற ஒருவரை உடன் அழைத்து சென்றிருந்தார். இருவருமே எல்லைப் புற முஸ்லீம்களைப்போல வேடமிட்டிருந்தார்கள். ஜியாஉதின் என்ற பெயரை போஸ் வைத்துக்கொண்டார்.இரகமத்கான் என்ற பெயரை பகத்ராமுக்கு சூட்டினார். ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை நோக்கி இருவரும் நடந்து சென்றார்கள். வழியில் ஒரு லாரியை பிடித்துக்கொண்டு மூட்டையோடு மூட்டையாக கிடந்து காபூல் நகர்போய் சேர்ந்தார்கள். காபூலில் பேசப்படும் பாரசீக மொழி இரண்டு பேருக்கும் தெரியாததால் தங்குமிடம் எங்கே என்று விசாரிக்க முடியவில்லை. அதனால் பல தொல்லைகளை ஏற்று ஒரு சத்திரத்தில் குதிரை லாயத்தில், குதிரைகளுக்கு மத்தியில் தங்க இடம் கிடைத்தது. துர்நாற்றம் வீசும் அந்த இடத்திலே அவர்கள் உறங்கினார்கள். அந்த இடத்திலும் பத்திரமாக இருக்க முடியவில்லை. காவலர் தொல்லைகள் அதிகரித்தன. அங்கிருந்து இரஷ்யாவிற்குத் தப்பிச் சென்று விடலாமா என்று யோசித்தனர். அகமத்கான் என்ற பெயரிலே உள்ள பகத்ராமின் பழைய நண்பர் ஒருவர் காபூலில் தங்கியிருந்தது நினைவிற்கு வந்தது. பகத்ராம் அவரிடம் சென்று தங்க இடம் கேட்டார். போஸ் மாறுவேடத்தில் மறுபெயரில் காபூல் வந்திருப்பது கண்டு உத்தம் சந்த் என்ற அந்த பகத்ராமின் நண்பர் வியப்பு அடைந்தார். என்றாலும் திகைப்போ பரபரப்போ ஏதும் அடையாமல் இந்திய நாட்டின் மாபெரும் புரட்சி வீரனுக்கு தஞ்சம் அளிப்பதில் பெருமைப்பட்டார். உத்தம்சந்த் வீட்டில் தங்கி இருந்தபோது சுபாஷ் சந்திரபோஸ் இத்தாலி நாட்டுத் தூதருடன் தொடர்பு கொண்டு அவருடைய உதவியினால் தந்திரமாக விமானத்தில் ரோம் நகர்சென்றடைந்தார். அங்கிருந்து ஜெர்மனி சென்றார். உலகத்தைக் கலக்கிக் கொண்டிருந்த சர்வாதிகாரியான இட்லரைச் சந்தித்தார். அவரிடம் தமது திட்டங்களைக் கூறி தனது நாட்டு விடுதலைக்கு தாம் மேற்கொள்ளும் முயற்சியில் உதவிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சுபாஷ் சந்திரபோஸின் நாட்டுப்பற்றையும், அஞ்சா நெஞ்சையும், அற்புத ராஜ தந்திரங்களையும் அவரிடம் கேட்டு இட்லர் பிரமிப்பும் மதிப்பும் கொண்டார். அவருடைய செயல்களுக்கு தாம் முழு ஆதரவும், உதவியும் அளிப்பதாக வாக்குறுதி அளித்தார். உலகப்போர் அப்போது மத்திய கிழக்கு நாடுகளிலும் பரவியிருந்தது. பிரிட்டிஷாருக்காக போரிட்ட பல இந்திய வீரர்கள் அப்போது ஜெர்மானியர் வசம் போர்க்கைதிகளாக இருந்தனர். அவர்களையெல்லாம் எந்த நிபந்தனையுமின்றி இட்லர் விடுதலை செய்தார். விடுதலை செய்யப்பட்ட போர் வீரர்களுடன் போஸ் தொடர்பு கொண்டார். தம்முடைய திட்டங்களை அவர்களிடம் கூறினார். பிரிட்டிஷாரிடம் அடிமைக் கூலிகளாக இருந்து அவதிப்பட்டதைவிட சொந்தநாட்டை மீட்கும் சுதந்திரப் படை வீரர்களாக நீங்கள் விளங்க வேண்டும். அந்த தேசபக்திச் சேவையிலே நீங்கள் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பாரத வீரர்கள் போஸ் கூறியதைக் கேட்டு மகிழ்ச்சி பொங்கினார். சுபாஷின் திட்டத்தை ஏற்றனர். அவர் தலைமையில் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராட தயாராகினர். சுபாஷ் சந்திரபோஸ் ஒரு இராணுவத் தளபதிக்கான எல்லாப் பயிற்சிகளையும் நிறைவாகப் பெற்று, சுதந்திரப் படையின் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். கடுமையாக நடந்து கொண்டிருந்த உலகப் போரில் ஜப்பானும் குதித்தது. மலேயா, பர்மா ஆகிய நாடுகளிலிருந்த பிரிட்டிஷ் அரசு படைபலத்தை ஆறே மாதத்தில் ஜப்பான் விரட்டியடித்தது. அந்தச் சமயத்தில் சுபாஷ் சந்திரபோஸிற்கு வியக்கத்தக்க பக்கத்துணை ஒன்று கிடைத்தது. ராஸ்ட் பிகாரி போஸ் என்ற புரட்சி வீரர் ஆங்கிலேயரால் நாடு கடத்தப்பட்ட இந்தியர். அவர் ஜப்பானில் குடியேறியிருந்தார் புரட்சி வீரர் சுபாசுடன் தொடர்பு கொண்டார். சுபாஷை ஜெர்மனியிலிருந்து அழைத்துவந்து, இந்தியர்கள் இலட்சக் கணக்கில் வாழும் கிழக்காசிய நாடுகளில், இந்திய சுதந்திர இயக்கத்தை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார். ஜப்பானும் ஜெர்மனியும் அப்போது நட்பு நாடுகளாயின. அதனால் ராஸ்ட் பீகாரி போஸின் திட்டங்கள் வெற்றியடையத் துவங்கின. ஜப்பானியப் பிரதமரான டோஜோவை ராஸ்ட் பீகாரி போஸ் அப்போது சந்தித்து சுபாஷ் சந்திரபோஸின் திட்டத்துக்கு ஜப்பான் உதவியையும் ஆதரவையும் பெற்றார். சுபாஷ் சந்திரபோஸ் தனது திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாக, பாரத மக்களுக்கும், காந்தியடிகளுக்கும் வானொலி மூலமாக தனது நிலையை விளக்கினார். இந்திய விடுதலை அரசின் தலைமையகம் ஒன்றை சுபாஷ் சந்திரபோஸ் தற்காலிகமாக சிங்கப்பூரில் அமைத்தார். அதன் தலைவராகத் தம்மைப் பிரகடனம் செய்து கொண்டார். அவருக்கு ஆலோசனை கூற ஓர் அமைச்சரவையையும் உருவாக்கிக்கொண்டார். பிரிட்டிஷ் அரசு மலேயாவிலிருந்து தோல்வி கண்டு பின்வாங்கிச் சென்றபோது இந்தியர்கள் பலர் அடங்கிய இராணுவப் பிரிவுகள் ஜப்பானியர்களிடம் சரணடைந்து இருந்தனர். போஸின் தலைமையை ஏற்று இந்தியாவை மீட்கும் படையணியில் அந்த இந்தியர்கள் படைகள் இரண்டற கலந்துவிட்டன. இப்போது, இராணுவத்தின் பிரதம தளபதி என்ற முழுபெறுப்பை ஏற்றுக் கொண்டு போஸ் விடுதலை முழக்கமிட்டார். கிழக்காசியப் பகுதிகளில் வாழ்ந்த இந்தியக் குடிமக்களும் சுதந்திர வீரப் படையினரும் சுபாஷ் சந்திரபோஸை ‘நேதாஜி’ என அழைத்துப் பெருமைப்படுத்தினார்கள். அப்பகுதி இந்தியப் பெருமக்கள், விடுதலைப் படை உதவிக்கென்று பெரும் பொருளை வாரிவாரித்தந்தனர். நேதாஜி விடுதலைப் படையில் பல்லாயிரக்கணக்கில் இந்தியர்கள் இராணுவத்திலும் சேர்ந்தனர். ஆண்கள் மட்டுமன்றி, அந்தப் பகுதியில் பெண் மக்களும் நேதாஜியின் தலைமையை ஏற்று விடுதலை முழக்கமிட்டு வீரிட்டு எழுந்தனர். இராணுவப் பயிற்சி பெற்று வீராங்கனையாக ஆர்ப்பரித்தனர். பெண்களின் படைக்கு ஜான்சி இராணி பெயர் சூட்டப்பட்டது. கேப்டன் இலட்சுமி அதன் தலைவரானார். பாரத நாட்டின் காங்கிரஸ் பேரரவை தனது கட்சிக் கொடியாக அமைத்து இருந்த இராட்டைச் சின்னம் பொறித்த மூவண்ணக் கொடியே நேதாஜியின் விடுதலைக் கொடியாகப் பட்டொளி வீசிப் பறந்தது. நேதாஜி அமைத்த சுதந்திர அரசாங்கத்தை ஒன்பது நாடுகள் அங்கீகரித்தனர். அப்போது, அந்தமான், நிக்கோபார் தீவுகளை ஜப்பான் பிடித்து அந்தத் தீவுகளை நேதாஜியின் பொறுப்பில் விட்டிருந்தது. கிழக்காசிய நாடுகளில் வசித்த முப்பது லட்சத்திற்கு அதிகமான இந்திய மக்கள் சுதந்திர அரசாங்கத்தின் குடிமக்களானார்கள். நாணயச் செலாவணிக்கு வங்கி ஒன்றும் நிறுவப்பட்டது. விடுதலை சர்க்காரின் தலைமைச் செயலகம் சிங்கப்பூரிலிருந்து இரங்கோனுக்கு மாற்றப்பட்டது. “டில்லி சலோ!” என்ற வானதிர்ந்த முழக்கத்தோடு சிங்கப்பூரிலிருந்து விடுதலைப் படை தனது இலட்சியத்தை நோக்கி புறப்பட்டது. தேசிய இராணுவம் தாய்லாந்தை சுற்றிக் கொண்டு பர்மா வந்து சேர்ந்தது. அந்தப் படைகளுக்கு ஷாநவாஸ், சேகல், தில்லான் ஆகிய மூவரையும் தளபதிகளாகத் தேர்ந்தெடுத்து நியமித்தார் நேதாஜி. இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் நேதாஜியின் சுதந்திரப் படை தனது வெற்றிகரமான முதல் தாக்குதலை அறக்கான் யோமா, பெகு யோமா என்ற மலைச் சாரல் வழியாகத் தொடர்ந்தது.கடுமையான மோதலுக்குப் பின்னர் பிரிட்டிஷ் இராணுவம் தோல்வி கண்டு பின்வாங்கி ஓடியது. நடைபெற்றுவந்த உலகப்போரில் எதிர்பாராதவிதமான சில திருப்பங்கள் தோன்றின.இரஷ்யா, ஜப்பான்மீது போர் தொடுத்தது. அணு குண்டுகளை வீசி ஜப்பானிய மக்களை அமெரிக்கா படுகொலை புரிந்தது. இருமுனைத் தாக்குதலைத் தாங்கமாட்டாமல் ஜப்பான் சரணடைந்தது. நேதாஜி பெரும் மனக்குழப்பம் அடைந்தார். நீண்ட யோசனைகளுக்குப் பிறகு தம்முடைய உதவியாளர்களுடன் நேதாஜி செய்கோன் வந்து சேர்ந்தார். அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு பயணம் செய்த பொழுது விமானம் விபத்துக்குள்ளானது. வங்கம் தந்த விடுதலைச் சிங்கம் நேதாஜி வீரமரணம் அடைந்தார். நேதாஜி நினைத்தது நடக்கவில்லை. ஆனால் அவருடைய இலட்சியம் வெற்றி பெற்றுவிட்டது. விடுதலை பெற்ற இந்திய நாடு வீரமரணம் அடைந்த நோதாஜியின் தியாகத்தை, நாட்டுப் பற்றை, தேசப் பக்தியை தன்னலம் பாரா மக்கள் சேவையை என்றும் மறக்காது. ஜெய்ஹிந்த்! விஞ்ஞான சோசலிச வித்தகர்! - காரல் மார்க்சு உலக நாடுகளெல்லாம் விழித்து எழுந்து தங்களது எதிர்கால வாழ்க்கைக் கோட்டைக்கு சோசலிச அடிப்படையினையே அஸ்திவாரமாக்கிக் கொண்டு இயங்கி வருகின்றன. நம்முடைய இந்திய நாடும் அரசும் சோசலிச சமுதாய அமைப்பே நமது இறுதி இலட்சியம் என திட்டவட்டமாக அறிவித்து அதனை அடைவதற்கான செயல்முறைகளில் கவனம் செலுத்தி வருகிறதைப் பார்க்கிறோம். இந்திய அரசு விரும்பும் ஜனநாயக சோசலிசத்திற்கும், சோவியத் யூனியனின் நடைமுறைகளில் இருக்கும் சோசலிச முறைகளுக்கும் இடையே செயல்முறை வேறுபாடுகள் உண்டு. ஆனால் அஸ்திவார இலட்சியம் ஒன்றே ஒன்று தான். சோசலிசம் என்ற இந்தச்சமநீதி சமுதாய அமைப்புமுறை அன்று உலகப் பாட்டாளி மக்களின் இனிய கனவாக இருந்தது. சோவியத் ரஷ்யாவிலே இந்த சீர்மிகு அமைப்புமுறை இன்ப நினைவாக, இனிய அனுபவமாகக் காட்சி தருகின்றது. வறுமைக் காட்டிலே வனவிலங்குகளாய் அலைந்து கொண்டு இருக்கின்ற மக்களின் வீழ்ச்சிக்கான அடிப்படையைப் பற்றிச் சிந்தித்து, அவர்களுடைய வாழ்க்கையைப் பலப்படுத்தி கைதூக்கி விடுவதற்கான கருவியினை விஞ்ஞானமுறையிலே உருவாக்கி விளக்கிய முதல் அறிஞன் காரல் மாக்ஸ், ஒரு சிந்தனைச் செம்மல், தத்துவப் பேராசிரியர், ஏழைகள் வாழ்க்கையைச் சிந்தித்தவர். முதாலாளிகளின் முதுகெலும்பை முறித்தவன். அவன் துவக்கி வைத்த பேரியக்கம், இன்றும் உலகத்தில் பல நாடுகளிலே, பல தத்துவங்களிலே, பாட்டாளி மக்களின் வாழ்க்கையிலே உயிரோட்டமாக ஜீவ களையோடு ஒளிவிடுகின்றன. தத்துவ ஞானி காரல் மார்க்ஸ் 1818ஆம் ஆண்டு மே திங்கள் 5-ம் நாள் ஜெர்மனி நாட்டில் உள்ள டிரியா என்னும் ஊரில் பிறந்தார். யூத வழக்கறிஞரான ஹீன்ரிச்சு இவருடைய தந்தையாவார். அன்றைய ஜெர்மன் அரசு யூத இனத்தவரிடம் விரோதம் காட்டுவதைப் பழிவாங்குவதை அறிந்த அவர் சீர்திருத்த கிருஸ்துவ சமயத்தைத் தழுவிக்கொண்டார். காரல் மார்க்ஸ் தான் பிறந்த ஊரிலே ஆரம்பக் கல்வி கற்றார். படிப்படியாக கல்வியில் உயர்ந்து, தத்துவம், வரலாறு, சட்டம் ஆகிய மூன்று கலைகளிலும் தேர்ச்சி பெற்றார். 1831ஆம் ஆண்டில் தத்துவப் பேராசிரியர் பட்டத்தைப் பெற்றார். பான் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிய வேண்டும் என்பது அவருடைய ஆசை. ஆனால் அதற்கேற்ற சூழ்நிலை அமையவில்லை. அதனால் எண்ணத்தை விட்டுவிட்டார். அதற்குக் காரணம் இருந்தது. அன்றைய அரசு, மக்கள் பேச்சுரிமை, எழுத்துரிமைகளுக்கு விரோதமாக இருந்தது.சுருங்கச்சொன்னால் மக்கள் அறிவு வளர்ச்சி பெறுவதையே அரசு விரும்பவில்லை. பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் அரசு விருப்பம்போல் ஆடும்படி அடிமைப்படுத்தப்பட்டனர். சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை.இந்தக் காரணத்தால்தான் காரல் மார்க்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் எண்ணத்தைக் கைவிட்டார். அதிசயிக்கத்தக்க அறிவும், ஆராய்ச்சித்திறனும், உரிமை உணர்ச்சியும் கற்றவராக காரல் மார்க்ஸ் திகழ்ந்தார். அதைக் கண்ட அவருடைய தந்தையார் இவ்வளவு திறமைமிக்க தன் மகன் அடிமை வேலையில் ஈடுப்படக்கூடாது என்று எண்ணினார். ஆனால் அதற்குள் அவர் இறந்து விட்டார். 1838-ல் தன் தகப்பனார் இறந்தபின், காரல் மார்க்ஸோ குடும்பச்சுமையை சுமந்தார். கோலூன் என்னும் இடத்தில் புதிய செய்தித்தாளை ஒருவர் துவங்கினார். மார்க்ஸ் அதற்கு கட்டுரைகள் எழுதினார். அதனால் அவருடைய பெயரும், புகழும் நாடெங்கும் பரவின.சிலமாதங்களுக்கு பிறகு அவர் பதிப்பாசிரியர் ஆனார். அந்தப் பத்திரிக்கையின் மூலமாகப் புரட்சிக் கருத்துகளையும், உணர்ச்சிகளையும், எழுச்சிகளையும் மக்களிடையே அதிகமாகப் பரப்பினார். அதனை அந்நாட்டு அரசு கண்காணித்து வந்தது. ஒரு கட்டுரையை ஒருமுறை அல்லது இருமுறை படித்துப் பார்த்துப் பிறகு வெளியிட வேண்டுமென அரசுகட்டளையிட்டது.இவ்வாறு செய்தும் கூட செய்தித்தாளின் போக்கு மாறவில்லை. அரசாங்கம் பத்திரிக்கை வெளிவராதபடி தடுத்து விட்டது. நாட்டுரிமை, பொருளாதாரம் முதலிய துறைகளில் அவர் பெற்றிருக்கும் அறிவு போதாது என்று மேலும் பல நூல்களை ஆர்வத்தோடு கற்றார். அவர் எழுதிய கட்டுரைகள், நூல் முதலியவற்றின் வாயிலாக இவர் கொள்கை நாடெங்கும் பரவி மக்களிடையே விழிப்பையும், பரபரப்பையும் உருவாக்கின. மதம், கலை, விஞ்ஞானம் இவற்றை மக்கள் சிந்திக்கும் முன், உண்பது, உடுப்பது போன்ற உலக வாழ்விற்குத் தேவையான செயல்களில் அக்கறை செலுத்த வேண்டும் என்று மார்க்ஸ் கூறினார். இவரது கொள்கை உலகத்திற்கு புதியது அல்ல, இவர் அதனை மக்கள் வாழ்க்கையோடு இணைத்து பழக்கத்திற்கு கொண்டு வர முயற்சித்தார். நாகரீக சமுதாயத்திலே அரசியல், சட்டத்திட்டம் முதலிய அனைத்தும் பொருளாதார வளர்ச்சியின் அடைப்படையில் இருக்கவேண்டும் என்று எண்ணினார்.இந்தக் கருத்துகளை யெல்லாம் அவர் ‘மூலதனம்’ என்ற நூலிலே விளக்கினார். வான் வெஸ்ட்பேலன் என்பவளை இவர் 1843ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். அவள் செல்வக் குடும்பத்தில் பிறந்தவள். அவள் தந்தையும், மார்க்ஸ் தந்தையும் இணைபிரியா நண்பர்கள், அவள் சிறுமியாக இருந்தபோது அவளைத் தந்தையார் அழைத்துக்கொண்டு, மார்க்ஸின் வீட்டிற்கு வருவார். அப்போது மார்க்சும் வெஸ்ட் பேலனும் ஒருவருக்கொருவர் அன்பு கொண்டனர். தன்னுடைய படிப்பு முடிந்தபின் அவளை மணந்து கொள்வதாக மார்க்ஸ் கூறியிருந்தார். பத்திரிக்கை ஆசிரியர் பணியை விட்டுவிட்ட ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு மார்க்ஸ், அவளை மணந்தார். கூர்மையான அறிவும், தெளிவான சிந்தனையும் உடைய, அந்த பெண் வாழ்நாள் முழுவதும் கணவனுக்கு உற்றத் துணையாக வாழ்ந்து வந்தாள். பண்டங்களின் உற்பத்தி முறையையும், அதனால் உண்டாக்கப்படும் முதலாளி இனத்தையும், அவ்வினத்தை இயக்கும் பொதுவிதியையும், ‘மூலதனம்’ என்ற நூலில் மார்க்ஸ் ஆராய்கிறார். முதலாளிகளின் மூலதனத்தை இருவகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று நிலையான மூலதனம், மற்றொன்று மாறும் மூலதனம். இயந்திரக் கருவிகள் முதலியவற்றிற்காக செல்வத்தை முடக்குவது நிலையான மூலதனம். இந்த மூலதனத்தால் பண்டங்களின் மதிப்பு பெரிதும் உயர்வதில்லை. மூலப்பொருள்களை திருத்தியப் பண்டமாக அமைத்து தரும் உழைப்பாற்றலே மாறும் மூலதனம்என்பது.அதுவே பண்டங்களுக்கு மிகுந்த மதிப்பு உண்டுபன்னுகிறது. பண்டங்களின் மதிப்பு உயரும்போது முதலாளிக்கு ஆதாயம் அளிக்கிறது. ஆதலால் உழைக்கும் ஆற்றலின் அடிப்படையிலே இலாபத்தைக் கணக்கிடவேண்டும் என்று மார்க்ஸ் கூறினார். பண்டங்களின் இயல்புகளை மார்க்ஸ் பல கோணங்களிலிருந்து ஆராயும் போதும் பல அரிய உண்மைகளை விளக்குகிறார். பண்டங்களின் உற்பத்தியையும், பண்ட மாற்றத்தையும் பற்றிப் பின்னர் விரிவாகக் கூறுகிறார். பண்டமாற்றம் செய்யும்போது கிடைக்கும் ஆதாயத்தில் பெரும் பங்கு உழைக்கும் ஆற்றலுக்கே சொந்தம் ஆக வேண்டும். தொழிலாளர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியத்தை முதலாளிகள் கொடுப்பதில்லை. அதனால் தொழிலாளர்கள் முன்னேற்றமில்லாமல், எப்போதும் வறியவர்களாய் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலை நீடித்தால் தொழிலாளர்வர்க்கம் அழிந்து போகும். இதைத் தவிர்க்க புரட்சி ஒன்றே வழி என்று அவருக்குத் தோன்றியது. தொழிலாளர்கள் ஒற்றுமையோடு உரிமைக் கிளர்ச்சி செய்ய வேண்டும். தொழிச்சாலைகளை தேசியமயமாக்க வேண்டும். தனிமனிதனுக்கு உரிமை, என்ற நிலை மாறி பொதுவுடைமை ஆகவேண்டும். முதலாளிக்கு ஈட்டுப் பணம் கொடுக்கலாகாது என்று மார்க்ஸ் கூறுகிறார். முதலாளியினம் இருக்கும் வரை, தொழிலாளிக்கு முன்னேற்றமே இல்லை என்பது அவரது கருத்து. புரட்சியின் மூலம் தொழிற்சாலைகளைப் பொதுவுடைமை ஆக்கிவிட்டால், தொழிலாளிகள் இப்போது உழைப்பதைவிட, மிக ஆர்வமாக, ஊக்கமாக உழைப்பார்கள். நாட்டில் உற்பத்தி பெருகி, எங்கும் செல்வமும் செழிப்பும், நிலவும். தொழிலாளர் ஏவுவாரின்றி இயங்கும் இயந்திரம் போல, பிறர் தூண்டுதல் இல்லாமலே வியக்கத்தக்க முறையில் உழைத்து உற்பத்தியைப் பெருக்கி நாட்டை, செல்வ நாடாகச் செய்வர். உலகம் முழுவதும் இந்தக் கொள்கை பரவும்போது ஒழுங்கும், அமைதியும் தாமாகவே நிலவும். அந்த நிலையை அடைவதற்குப் புரட்சியே ஒரு கருவியாக உள்ளது என்பது மார்க்ஸ் முடிவு. ஆகவே, இவர் அதனால் ஏற்படும் தீய விளைவுகளையும் கருதாமல் அதனை வலியுறுத்துகிறார். தன்னலம், விருப்பு, வெறுப்புயின்றி நடுநிலையில் இருந்து ஆராய்பவர்கள் இந்த முடிவுக்கே வந்து தீர்வார்கள் என்பது மார்க்ஸின் துணிவு. மார்க்ஸின் கொள்கை சோசலிசம் என்பதிலிருந்து சற்று மாறுபட்டதாகும். சோசலிசமும் தனியுரிமைகளை தேசிய மயமாக்க விரும்புகிறது. ஆனால் அது மிதமான போக்கில் மேற்கொள்கிறது. மார்க்ஸ் கொள்கை மிகத்தீவிரமாக புரட்சி முறையைக் கூறுகின்றது. அது, விஞ்ஞான சோசலிசம் அல்லது கம்யூனிசம் எனப்படும். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது உழைப்பிற்கேற்றவாறு பலனை அளிக்க வேண்டும் என்று அது கூறுகிறது அது வாயிலாக மனிதனை மிகுதியாக உழைக்கும்படி அது தூண்டுகிறது. கம்யூனிசம் அவனவன் ஆற்றலுக்குத் தக்கவாறு பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வழிவகுக்கிறது. மனிதன் பேரிழப்பை மேற்கொள்வதற்கு வேண்டிய தூண்டுதல் பொதுவுடைமையில் இல்லை. இவ்விரு கொள்கைகளில் கடவுள் நம்பிக்கைக்குப் பெரும்பாலும் இடமில்லை எனலாம். மார்க்ஸ் கொள்கைகள் மக்களிடையே பரவினபோது அவர்களிடையே விழிப்பு ஏற்பட்டது. 1848–ஆம் ஆண்டு ஒரு பெரிய கிளர்ச்சியைத் தொடங்கினார்கள். மார்க்சும் அந்த இயக்கத்தில் கலந்து கொள்ளவே, அப்போது ஜெர்மன் அரசாங்கம் அவரையும் அவர் மனைவியையும், நாட்டைவிட்டு வெளியேற்றியது. கணவனும் மனைவியும், பாரிஸ் சென்றனர். அங்கும் அரசாணை துரத்தியது. பின்னர், பிரஸ்ஸல்ஸுக்குச் சென்றார்கள். அங்கும் புரட்சியின் சின்னங்கள் தோன்றின. மார்க்சும் அவரது மனைவியும் சிறைப்பட்டனர். புரட்சிக்குப் பிறகு அவர்கள் இங்கிலாந்துக்கு நாடு கடத்தப்பட்டனர். தொழிலாளர்களுக்காக உழைக்க வேண்டும் என நோக்கம் உடையவர் மார்க்ஸ். இவர் இலண்டனிலும் பிரஸ்ஸல்சிலும் இருந்த பல புரட்சிக்குழுக்களுடன் சேர்ந்து இடைவிடாது உழைத்தார். முதலாளியினமும், அரசாங்கமும் இவரைத் தாக்கினர். தொழிலாளிகளிலும் சிலர் இவரை உணர்ந்து கொள்ளாமல் அவநம்பிக்கை கொண்டார்கள். படிப்படியாக மார்க்ஸ் கூறும் கொள்கையின் உயர்வையும் அதனால் தமக்கு ஏற்படும் நன்மையையும் எண்ணி தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்தனர். மார்க்ஸ் தொழிலாளர்கள் முன்னனியில் நின்று புரட்சி செய்தார். ஜெர்மனில் ஜனநாயக ஆட்சி ஏற்பட்டது. மார்க்ஸ் தமது வாழ்நாள்களிலே அதைக் காணும் வாய்ப்பைப் பெற்றார். இந்த இயக்கங்களில் எல்லாம் மார்க்சுக்கு நல்ல நண்பராய் இருந்தவர் பிரட்ரிக் எங்கெல்ஸ் என்பவர் ஆவர். இருவரும் இணைபிரியா நண்பர்கள். ஒரே விதமான சிந்தனையாளர்கள், உண்மையான நட்பு இவர்களிடையே இருந்தது. எங்கல்ஸ்-காரல் மார்க்ஸின் மாணவர். நூல் வெளியீட்டில், துணையாசிரியர். இவர்களுடைய கொள்கைகளைப் பரப்புவதிலும் எண்ணங்களை எடுத்துச்சொல்லுவதிலும், இவருக்கு வருவாய் தேடுவதிலும் பெரும் உதவியாக இருந்து வந்தார். மார்க்ஸ் குடும்பம் லண்டனில் வறுமையுடன் போராடியது. அன்பான மனைவி, உண்மையுள்ள ஒரு பணிப்பெண், குழந்தைகள், இவர்கள் அடங்கியக் குடும்பம். பணமில்லாமல், வருவாயில்லாமல் தவித்தது. வறுமையினால் நோயும் அவர்களைப் பற்றியது. ஆகவே குழந்தைகள் இரண்டு இறந்தன. நோயினால் மார்க்ஸ் வேதனைப்பட்டார். செல்வத்திலே பிறந்த இவருடைய மனைவி, வறுமையில் நலிந்து கிடந்தாள். எங்கல்ஸின் பெருந்தன்மை இவர்களுக்கு பொருளாக உருவெடுத்தது. மார்க்ஸ் நூல்கள் பல இயற்றி இருந்தாலும், அவற்றுள் ‘மூலதனம்’ என்ற நூல் மிகச்சிறந்த நூலாகும். தொழிலாளர்களுக்கு அது ஒரு மறை நூலாக கருதப்படுகிறது. உலக மொழிகள் பலவற்றில் மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது. 1859–ஆம் ஆண்டில் உலகப் புகழ் பெற்ற டார்வின் உயிரினங்களின் தோற்றம். என்ற ஒரு நூலை எழுதி அப்பொழுதுதான் வெளியிட்டார். அதே நேரத்தில், அரசியல் பொருளாதார திறனாய்வு என்ற நூலை மார்க்ஸ் எழுதியிருந்தார். காரல் மார்க்சுக்கு பலமொழிகள் தெரியும். அவருடைய தாய்மொழி ஜெர்மன், அத்துடன் ஆங்கிலம், பிரஞ்சு, ருசியா ஆகியமொழிகளையும் கற்றார். ஓய்வின்றி மார்க்ஸ் உழைத்ததின் பயனாக அவருடைய உடலில் கல்லீரல் கட்டி உண்டாயிற்று. அதனால் உடல்நலம் குன்றினார். சிறந்த மருத்துவர்களால் அந்நோய் குணமானது. உடனே ப்ளுரசி என்ற நோயால் தாக்கப்பட்டார். அச்சமயத்தில், அவருடைய மனைவி புற்றுநோயால், தீராத துன்பத்தை அடைந்தார். 1881-ல் மார்க்ஸ் மனைவி இறந்தாள். அதற்கு பிறகு 1883-ம் ஆண்டில் அவருடைய மூத்த மகள் திடீர் என மறைந்தாள். அந்த ஆண்டிலேயே சாய்வு நாற்காலி ஒன்றிலே சாய்ந்த படியே மார்க்சும் காலமானார். மார்க்ஸ் தனது வாழ்நாளில் பெரும் பகுதியை அயல் நாடுகளிலே கழித்தார். இங்கிலாந்தில் இவர் வாழும் பொழுதுதான். இவர் புகழ் பரவியது. அவர் பிறந்த ஜெர்மனி நாடு 19-ஆம் நூற்றாண்டு வரையிலும் பொருளாதாரத் துறையில் சீர்குலைந்திருந்தது. அந்தச் சூழ்நிலையில் அவர் ஜெர்மனியிலே வாழ்ந்திருந்தால், முதலாளித்துவத்தின் அநீதிகளை, கொடுமைகளை அறிந்திருக்கமாட்டார். இங்கிலாந்தில் அவர் இருந்தபோது பிரிட்டிஷ் நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னேறியிருந்தது. அப்போது அங்கே தங்கியிருந்த மார்க்ஸ் பொருளாதாரத் துறையில் சிறந்த ஞானத்தை, அறிவு நுட்பத்தைப் பெற்றார். காரல் மார்க்ஸ் கம்யூனிசக் கொள்கையை ருசியா, சீனா போன்ற நாடுகளும் கூட முற்றிலும் ஏற்றுக்கொள்ளவில்லை.அவரது கொள்கையை பொருளாதார நிபுணர்கள், தத்துவ வித்தகர்கள், சிந்தனையாளர்கள், சமுதாயச் சீர்திருத்தச் சிற்பிகள் நாட்டின் அன்றைய முன்னேற்றத்தை விரும்பியவர்கள் அனைவரும் கண்டித்தார்கள். அவருடைய கொள்கையைப் போற்றியவர்களை விடத், துற்றியவர்கள்தான் அதிகமாக இருந்தார்கள். ஏனென்றால், அவருடைய கொள்கை அடிப்படையிலேயே தவறு என்றும் அவருடைய எண்ணங்கள் எதிர்காலத்தில் நிறைவேறாதது மட்டும் அல்ல, எதிர் பார்த்ததற்கு நேர் எதிராகவும் முடியக்கூடும் என்றும் பேசினார்கள். முதலாளிகளின் ஆதிக்கத்தில் தொழிலாளர்கள் வறுமையில் வாடுவார்களேயன்றி, மகிழ்ச்சியுடன் இருக்க மாட்டார்கள் என்றும் மார்க்ஸ் கூறினார். ஆனால்,  அமெரிக்கா ஐக்கிய நாடுகளிலும், தொழிலாளர்கள் இன்பமாக வாழ்ந்து வருகிறார்கள். எவ்வளவு சிறந்த கொள்கையாக இருந்தாலும்.அதனை அடைகின்ற நெறியும் சிறந்ததாக இருக்கவேண்டும். மார்க்ஸ் கூறும் வழி தொழிலாளர்களின் வாழ்வுக்குக் கொடுமையாகவும், கொலையும், குருதியும் நிறைந்ததாகவும் இருக்கின்றது. இந்தக் காரணங்களைக் காட்டி பெட்ரண்ட் ரஸ்சல், பெர்னாட்சா போன்ற பேரறிஞர்கள் வன்மையாக கண்டனம் செய்தார்கள். பெர்னாட்சா கூறும் போது தொழிற்சாலைகளைத் தேசிய மயமாக்கினால், முதலாளிகளுக்கு ஈடு வழங்கப்படவேண்டும் என்றும், அப்போதுதான் நாட்டின் வளமும், நலமும், அன்பும், அமைதியும் நிலையாக நிற்கும் என்றார். ஒரு நாட்டில் உள்ள மக்கள், கல்வியிலும், பகுத்தறிவிலும் முன்னேற்றம் அடைந்து இருந்தால், அந்த மக்கள் தங்களது உரிமைகளுக்கு அழிவு தேடும் எந்தக் கொள்கையையும் ஏற்றுக் கொள்ளவோ, வரவேற்கவோ மாட்டார்கள். அவர்களுக்கு உணவும், உடையும் மட்டும் தான் பெரியவை அல்ல. நாட்டின் உரிமையும், பேச்சுரிமையும், வாழ்க்கையுரிமையும் முக்கியமானவை என்றே கருதுவார்கள். மார்க்ஸின் கொள்கைகளை பலர் குறை கூறிக் கண்டனம் செய்திருந்தாலும், இவரால் மனித இனத்திற்கு உழைக்கும் மக்களுக்கு விளைந்த நன்மைகள் ஏராளம் ஆகும். ஏனென்றால் தொழிலாளர்கள் மனித இனத்தின் உயிர்நாடிகள் என்றார். அவர்களுடைய உரிமைகள், தடையின்றி வழங்கப்படவேண்டும் என்றும், வளர்க்கப்பட வேண்டும் என்றும், அந்த நோக்கத்தின் அடிப்படையில் பண்பாட்டையும், நாகரீகத்தையும் புதிய முறையில் உருவாக்கித்தந்து மார்க்ஸ் பெருமை பெற்றார். பழமையின் பிடிப்பிலே இயங்கிக் கொண்டிருந்த சமுதாயத்திற்கு, மார்க்ஸ் கொள்கை, ஒரு மின் தாக்குதல் போல் அதிர்ச்சியை அளித்தது. அதனால் இவரது புரட்சிக் கொள்கை ஏழை மக்களிடையே நன்கு பரவியது. பொருளாதார நிலையில் பெருத்த வேற்றுமை இருக்கக் கூடாது என்ற உண்மையை, மக்களும், ஆட்சியாளர்களும் ஒப்புக்கொண்டார்கள். அதற்குப் பிறகு, எந்த வழியில் தொழிலாளர்களுக்கு உதவிகளைச் செய்யலாம், எப்படி செய்யலாம் என்று அரசினர்கள் சிந்திக்கலானார்கள். அதன் பயனாக தொழிலாளர்கள் வேலை நேரம், ஊதியத்தின் விடுமுறை, தங்குமிடம், மருத்துவ ஒய்வு, மருத்துவ வசதி, பதவி நீடிப்பு, வயோதிகர்க்கான பாதுகாப்பு, ஓய்வூதிய பலன்கள் கிடைத்தன. காரல் மார்க்ஸ் இவ்வாறு ஏழைத் தொழிலாளர்கள் வறுமையைப் போக்க, அவர்களது துன்பத்தை நீக்க, ஓய்வு ஒழிச்சலின்றி நாடு நாடாக அலைந்து அனுபவிக்க முடியாத துன்பங்களையும், வேதனைகளையும் ஏற்று, அனுபவித்து அந்தந்த நாட்டு ஆட்சியாளர்களின் அடக்கு முறைகளுக்கெல்லாம் பலியாகி இறுதியிலே தனது கொள்கைக்கு சிறந்த வெற்றியைத் தேடித் தரும் தத்துவச்சூழ்நிலையை மக்களிடையேயும், தொழிலாளர்களிடையேயும் உருவாக்கியதற்கு பின்பே இவ் உலகை விட்டு மறைந்தார். வறுமையில் வாடும் ஏழைத் தொழிலாளர்களின், துன்பத்தை நீக்கி, இன்பவாழ்வை ஓங்கச் செய்ய காரல் மார்க்ஸின் கொள்கை சிறந்த வழிகாட்டியாக அமைந்துவிட்டது. பகுத்தறிவும், நேர்மையுமுடைய எந்த மனிதருக்கும் எந்தக் கட்சிக்கும், எந்த அரசுக்கும், கருத்து வேற்றுமை இருக்க இயலாது. ஆனால், அந்த உயர்ந்த தத்துவ முறையை தொழிலாளர்கள் அடைவதற்குத் துன்பங்களும், துயரங்களும் ஏற்படலாம். குறிக்கோள் சிறந்ததாக இருத்தல் மட்டும் போதாது, அதனை பெறுகின்ற நெறியும், தூயதாக இருக்கவேண்டும். மார்க்ஸின் தொழில் துறைத்தத்துவம், சிறந்த நெறியின் மூலம் அடையக்கூடும்.அது தொழிலாளர் உலகிற்கு மிகச் சிறந்த நன்மையாக காட்சித்தரும். தூக்கு மேடை முழக்கம் - ஜீலியஸ் பியூசிக் எனது தாய் நாடு சுதந்திரம் அடைய வேண்டும். அந்த மண்ணின் சுதந்திரக் காற்றை நான் சுவாசிக்க வேண்டும். செக்கோஸ்லேவியா நாட்டின், விடுதலை வீரன் ஜீலியஸ்பியூசிக், துக்கு மேடையிலே முழக்கமிட்டார். “ஏ. கொடுங்கோலர்களே, எனது நாட்டின் உயிர் நாடிகள், உயிர்மூச்சைக் கொன்றுவிட்டதாக எண்ணி மனப்பால் குடிக்காதீர்கள். நீங்கள் நினைப்பதுபோல் நான் குற்றவாளி அல்ல. என் நாட்டு மண் சுதந்திர பூமியாகக் காட்சி தர வேண்டும் என்று ஆசைப்படும் நான் குற்றவாளியா? ஊருக்குள் எல்லை தாண்டி உத்திரவிடாமல் போர்க்கோலம் பூண்டு என் தாய்நாட்டிலும் கால்வைத்த கொள்ளையர்களே நீங்கள் தான் குற்றவாளி. நான் தான் நீதிபதி. இந்தத் தூக்குமேடைதான் நீதிபதியாகிய என்னுடைய நீதிமன்றம், இந்த நீதிமன்றத்திலிருந்து நீதிபதியாகிய நான் உங்களுக்குத் தீர்ப்பு அளிக்கிறேன். உங்கள் ஆட்சிக்கு கடைசிக் காலம் நெருங்கிவிட்டது. உங்கள் சவக்குழியை நீங்களே தோண்ட தயார் ஆகுங்கள்”. என்று துக்குமேடையிலே நின்று விடுதலை வீரன் ஜீலியஸ் பியூசிக் என்று முழக்கமிட்டார். தூக்கு மேடையிலே நின்று கொண்டு அந்த மாவீரன் தீர்பளித்ததற்காக, அவன் உயிரைவிட்டது என்னவோ உண்மை, ஆனால் அந்த மேடையிலே நின்ற அந்த மாவீரன் அளித்த நீதித்தீர்ப்பினைகாலம் பிறகு நிறைவேற்றியது. 1942-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ம் நாளில் இட்லரின் இரகசிய போலீஸ் அந்த விடுதலை வீரனைக் கைது செய்தது. பிரேக் நகர சிறையிலே அடைத்தது. சித்திரவதையும், கொடுமையும் செய்தது. அவரை ஒரு துரோகி என்று இட்லரின் படை நாஜி வெறியர்கள் பழி சுமத்தினார்கள். ஆனால், அந்த நாட்டு மக்கள் அவர் ஒரு வீரர், தேசத் தியாகி, விடுதலை வீரர் என்று எதிர்குரல் எழுப்பினார்கள். 1943ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், பெர்லின் நகரில் அந்த நாஜி வெறியர்கள் அம்மாவீரனைத் தூக்கிலிட்டுக் கொன்றார்கள். தூக்கு மேடையிலே நின்ற, அந்த விடுதலைச் சிங்கம் ஜீலியஸ் பியூலிக், அலட்சியமாக நகைத்தது. மனிதகுலத்தின் கொடிய எதிரிகளை நாஜி வெறியர்களை நோக்கி கேலியாகச் சிரித்தார். இன்பத்திற்காக வாழ்ந்தேன், இன்பவாழ்விற்காக போர்க்களம் புகுந்தேன், இன்பம் தரும் சுதந்திரத்திற்காகவே இப்போது செத்துக்கொண்டிருக்கிறேன். ஆகவே துன்பம் என் பெயரோடு என்றுமே இணைக்கப்படக் கூடாது. அது முறையல்ல. நான் சாகும் போதும் இன்பத்துடன், இனிய சிந்தனையுடன் அஞ்சாநெஞ்சன் வீரத்துடன், தேசபக்தி எண்ணத்துடன் இருந்தேன் என்பதை இந்த உலகம் புரிந்துகொள்ளவேண்டும். ஜீலியஸ் பியூஸ்க் அன்று தூக்குமேடையிலே மாண்டார். ஆனால், சாவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னால், மரணமில்லா புகழ் படைத்த இலக்கியம் ஒன்றின் ஆசிரியராக விளங்கினார் என்பதை, கொஞ்சம் காலம் கடந்துதான் உலகம் உணர்ந்தது. தூக்குமேடை ஏறுவதற்கு முன் நாள் இரவு, தனது சிந்தனையிலே வழிந்து கொண்டிருந்த சிந்தனை ஊற்றுப் பெருக்கை அள்ளி மக்களுக்கு வழங்க எனக்கு வாய்ப்பு இல்லையே என பியூஸ்க் மனம் புழுங்கிக் கொண்டிருந்தார். அப்போது “அய்யா” என்று ஒரு குரல் கேட்டது. அந்த விடுதலை வீரன் திரும்பிப் பார்த்தான். சிறைக் கம்பிகளுக்கு வெளியே நின்றுகொண்டிருந்த அந்தக்காவலன் வணக்கம் என்றான். கனல் தெறிக்கும் கண்ளோடு என்ன என்று கேட்டார். அய்யா தாய்நாட்டு மக்களின் தெய்வம் என தங்களைப் போற்றுபவர்களில் நானும் ஒருவன். இறுதி காலத்தில் ஏதோ உங்களுக்கு ஓர் அற்ப உதவி செய்தேன் என்ற பேறு எனக்கு கிடைக்குமா என்றான். பியூஸிக், மகிழ்ச்சியோடு அவனை நோக்கி எழுதுவதற்கு கொஞ்சம் தாளும், எழுதுகோலும் கொடுப்பாயா என்று கேட்டார். என் உயிர்போவதானாலும் நான் கவலைப்படவில்லை. கொண்டு வந்து கொடுக்கிறேன் தலைவா என்று சென்று எழுதுகோலும், தாளும் கொண்டுவந்து கொடுத்தான். அவற்றைப் பெற்ற அந்த மாவீரன் இரவெல்லாம் எழுதினான். பொழுது விடிய விடிய தன்னுடைய சிறை வரலாற்றை எழுதிக்கொண்டே இருந்தார். ஊற்றெடுத்த சிந்தனைக் கருவூலங்களைத் தாள்களில் எழுதினார். அன்று காலை காவலனை அழைத்து, நான் எழுதிய இந்த வரலாறு எனக்கு உயிர் நாடி போன்றது. இதைப் பாழ்படுத்தாமல் என்னுடைய மனைவியிடம் கொண்டுபோய் கொடுப்பீரா என்று மனமுருகிக் கேட்டார். கவலைப்படாதீர்கள். என்னுடைய உயிரை விட அதிக அக்கறையுடன் தங்கள் கட்டளைகளை, நிறைவேற்றியே தீருவேன் என்றான் காவலன். தன்னுடைய வாக்குறுதிப்படி பியூசிக்கின் மனைவியிடம் கொண்டு சேர்த்தான். பியூஸிக்கின் மனைவி அகஸ்டினா பியூஸிக் அந்த வரலாற்றை 1945-ம் ஆண்டு தூக்குமேடைக் குறிப்புகள் என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டார். இந்த நூல் உலகப் பெரும் புகழ் பெற்றது. பியூஸிக் எழுதிய கடைசி நூல் என்றாலும், அதில் தனது சிறை வாழ்க்கையின் 311 நாட்கள் அந்த புத்தகத்தில் விவரமாக எழுதப்பட்டிருந்தன. அந்தக் காலத்தில், அந்த நேரத்தில் இப்படி பட்ட ஓர் உணர்ச்சியைத் தூண்டும் சிறை இலக்கியம், அன்று வரை தோன்றியதே இல்லை என்று உலக இலக்கிய மேதைகள் அந்த நூலைப் போற்றி புகழ்ந்துள்ளார்கள். உலகப் புகழ்பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜேம்ஸ் ஆல் ரிஜட் அந்த நூலைப் பற்றிக் கூறும்போது ஒரு வெற்றி வீரரின் உன்னத வீரம் என்று பாராட்டினார். மனிதனுடைய உள் உணர்வின் அஞ்சா நெஞ்சத்திற்கு, அது ஒரு சத்திய சாட்சி இலக்கியம். நெஞ்சை உருக்கும் கதை. பொருட் செறிவு, உள்ளடக்கம் நிறைந்த, தெளிவு நிறைந்த சிறந்த படைப்பு என்று அந்த நூலைப் பற்றி நியூ டைம்ஸ் என்ற பத்திரிக்கை புகழ்ந்து எழுதியிருந்தது. இத்தகைய அஞ்சா நெஞ்சம் கொண்ட விடுதலை மாவீரன் ஜீலியஸ் பியூஸிக் செக்கோஸ்லேவியா என்ற நாட்டிலுள்ள, பிரேக் நகரில் 1903-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23ம் தேதி பிறந்தார். அவர் ஓர் ஏழை உருக்காலைத் தொழிலாளியின் மகன். பிரேக் பல்கலைக் கழகத்தில் அம்மாவீரன் இலக்கியம், இசை, கலை ஆகிய துறைகளில் பயிற்சி பெற்றார். கல்வி கற்கும் காலத்தில் மாணவர் இயக்கங்களில் தீவிரமாகத் தொண்டாற்றினார். 1929ஆம் ஆண்டில் சிருஸ்டி என்ற ஒரு பத்திரிக்கை ஆசிரியராக இருந்தார். கனல் கக்கும் அவருடைய தேசபக்தி எழுத்துகளைக் கண்டு விடுதலைத் தத்துவத்திற்கு எதிரானவர்கள் கலங்கினார்கள், அஞ்சினார்கள். எப்படியெல்லாம் அவரைத் துன்பங்களில் சிக்க வைக்கலாம் அல்லது அழிக்கலாம் என்று திட்டமிட்டார்கள். தாய் மண்ணுக்கு விரோதமான இந்தத் துரோகிகளின் போக்கினை அம்மாவீரன் தெரிந்து கொண்டார். எந்த விதக் காரணமும் இல்லாமல் இந்த சூதுமதியினரின் சூழ்ச்சியில் சிக்கிச் சாவதைவிட, நாட்டுக்காக தொண்டாற்றி சாவதே மேல் என்று தனது உடலில் கடைசி மூச்சு உள்ள வரை நாட்டுக்குத் தொண்டாற்றுவதையே உன்னத நிலை, உயர்ந்த சேவை என்று கருதிய பியூஸிக் தலைமறைவாகத் தப்பிவிட்டார்.  அவரின் தலைமறைவு வாழ்க்கையின் போதும் ஓய்ந்து கிடக்கவில்லை, அப்போதும் கூட ஒரு செய்தித் தாளை துவக்கி நடத்தினார். மக்கள் மத்தியிலே அந்தப் பத்திரிக்கை பெரும் புகழ் பெற்றது. ஆனால், அதை அச்சு அடிக்கும் இடத்தை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் முகவரியும் தெரிந்துகொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் இட்லரின் நாஜிப் படையை எதிர்த்து நூற்றுக்கணக்கான சிறு சிறு துண்டுகளை வெளியிட்டார். பிறகு 1930ஆம் ஆண்டில் சோவியத் யூனியனுக்கு அவரை செக்கோஸ்லேவியா நாட்டுத் தொழிலாளர்கள் அனுப்பி வைத்தார்கள். அங்கே சென்று திரும்பி வந்த பியூஸிக் சோவியத் யூனியனின் சோசலிசத் தத்துவத்தின் சிறப்புகளை கண்டு ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார். இவ்வாறு அவர் பல நூல்களை எழுதினார். அவற்றில் ஒன்று தாயகத்தை நேசிக்கிறோம் என்ற நூல். இந்த நூல் விடுதலைப் போராட்டக் காலத்தில் செக் நாட்டு தொழிலாளர் வர்கத்தின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு எழுச்சியை உருவாக்கிப் புரட்சியைத் தூண்டிவிட்டது. பியூஸிக் எழுதிய கவிதைகள் ஏராளம். அவரது கவிதைகள் ஒவ்வொன்றும் மக்களிடையே தேசபக்திக் கனலை தூண்டிவிடும் போர்க்கருவியாக இருந்தது. ’உலகின், நண்பர்களான உங்கள் அனைவரையும் நெஞ்சார நேசிக்கிறேன். அயர்ந்துவிடாதீர்! விழிப்புடன் இருங்கள். ஆம்! விழிப்புடன் இருங்கள் என்று தன் மனைவிக்கு எழுதிய தூக்குமேடை குறிப்புகள் என்ற வீர வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார். ஒரு நாடு விடுதலை அடைவதற்கு எத்தகைய எழுச்சிகள், எப்படிப்பட்ட உணர்ச்சிகள் மக்களிடையே உருவாக வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கிய சுதந்திர மாவீரன் தூக்குமேடையில் முழங்கிய முழக்கம் அவன் இறந்ததற்கு பிறகு செக் நாட்டு மக்களின் உயர் வாழ்க்கை முழுமையடைய வேண்டும் என்ற சுதந்திர தாகத்தை ஊட்டியது.   கிரேக்க நாட்டின் அரசியல் கலைஞர் - ஜார்ஜ் பாபன் திரியோ 1964-ஆம் ஆண்டு கிரேக்க நாட்டுப் பொதுத் தேர்தல் இரண்டு கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டன. ஒன்று ஐக்கிய கட்சி. மற்றொன்று கம்யூனிஸ்ட் கட்சி. மத்திய ஐக்கிய நடைபெற்ற தேர்தலில் 53 சதவிகிதம் வாக்குகள் பெற்று வெற்றிபெற்றது. கம்யூனிஸ்ட் கட்சி 13 சதவிகிதம் வாக்காளரின் ஆதரவு மட்டுமே பெற்றது. அதனால் தோல்வி அடைந்தது. 1961ஆம் ஆண்டு அக்டோபரில் நடந்த பொதுத் தேர்தலுக்கு பின் கிரேக்க அரசியலில் நெருக்கடி ஏற்பட்டது. மத்திய ஐக்கிய கட்சி அப்போது இருந்து தீவிரப் பிரச்சாரம் செய்தது. அடுத்த பொதுத் தேர்தல் நேர்மையாக நடைபெறவும், ஜனநாயகம் மீண்டும் நாட்டில் நடைபெறவும் அது முழுமூச்சுடன் பாடுபட்டது. ஆட்சி நிர்வாகப் பொறுப்பை 1950ஆம் ஆண்டு முதல் 52 வரையில் ஏற்றிருந்த அந்தக் கட்சி இரண்டாவது முறையாக இப்போது பதவியை ஏற்றிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பதவியில் இருந்த பிரதமர் கரமன் லிஸ்ட் ஆட்சியின் கீழ் உருக்குலைந்தது ஜனநாயகம். பிரதமர் பதவிக்கு இன்று வந்துள்ள ஜார்ஜ் பாபன் திரியோவின் கீழ் ஜனநாயகம் மீண்டும் நாட்டில் நிலைபெற ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. முதுமையடைந்த பிரதமர் ஒய்வு எடுத்து கொண்டு அமைதியாக அமரவேண்டியவர் இப்படி இருந்தும் தம் சொந்த நலனைப் புறக்கணித்துவிட்டு ஜனநாயகத்துக்கு தொண்டாற்ற அவர் முன்வந்தார். ஒர் இளைஞனின் ஆர்வமும் ஊக்கமும் காட்டுகிறார். இவர் தேர்தலில் வாகை சூட இவருக்கு உதவியவை இரண்டு. ஒன்று இவர் சிறந்த சொற்பொழிவாளர். இவருடைய நாவன்மையால் திறமைமிக்க சொல்லாற்றலால், இந்தத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். இரண்டாவது இவருக்கு உதவியாக இருந்தது, தொழிலாளர்களிடையே மனம் குமுறி இருந்த வேதனைகளும், விரக்திகளும், வாழ்க்கை நெருக்கடிகளும், அதிருப்தி நிலைகளை உருவாக்கின. கஷ்டங்களைப் பாராமல் இவர் நாட்டிலே எட்டுத் திசைகளிலும் பன்முறை சுற்றிச்சுற்றி வந்து மக்கள் கூட்டங்களிலே சொற்பொழிவு ஆற்றினார். தொழிலாளர் துயரங்களையும், வேதனைகளையும் படும் கஷ்டங்களையும் மக்களிடையே விளக்கி முழக்கமிட்டார். கரமன் லிஸின் ஆட்சி நிர்வாகத்தை அதன் அலங்கோலத்தை, ஆணவப் போக்கை, ஏதேச்சாதிகாரத்தன்மையை, நிர்வாகப் பலவீனத்தை மக்களிடையே வன்மையாகக் கண்டித்து காரணகாரியங்களோடு சுட்டிக் காட்டினார். இவருடைய நீண்ட கால அரசியல் அனுபவமும், அரசியல் வாதிகளிடையே இவருக்கு இருந்த கவுரமும், மக்கள் மன்றங்களிடையே இவர் உருவாக்கி வைத்திருந்த மதிப்பும், மரியாதையும் இவரது வயதும் மக்களிடம் போராதரவு பெற மிக உதவிகரமாக இருந்தன. ஜார்ஜ் பாபன் திரியோ மிகச்சிறந்த நாவலர். இன்று வரையில் இவரைப்போல் நாவன்மை படைத்த, நுட்பமான இராஜ தந்திரம் மிக்க ஒரு பேச்சாளரை அந்த நாடு கண்டதில்லை. நாடாளும் அனுபவங்கள் ஏராளமாகப் பெற்றவர், படித்த மேதை, சிறந்த கல்வியாளர், இலக்கியத்தில் வரம்பு மீறிய பற்றுக் கொண்டவர், வசனம், கவிதை இந்தத் துறைகளை விட நாடக இலக்கியத்தில் இவருக்குக் கவர்ச்சி அதிகம். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இவர், கல்வி அமைச்சராகப் பதவி வகித்து நாட்டு நிர்வாகத்தில் பதவி ஏற்றபோது, நாட்டில் தேசிய நாடக அரங்கு ஒன்றை நிறுவினார். அதனால் அந்த நாட்டில் இவர் ஒரு கலைஞராகத் திகழ்ந்தார்.இவர் சகலகலா வல்லுனராகத் திகழ்ந்தார். முதல் உலகப்போர் முடிவடைந்த பிறகு, அந்த நாட்களில் புகழ்பெற்ற அரசியல் பயிற்சிகளைப் பெற்றார். அந்த நாட்களிலே தனது நாட்டு அரசியலில், தமக்கென சிறப்பான ஓர் இடத்தை இவர் பெற்றார். போராட்டங்களிலே கலந்து கொண்டு பலதடவை சிறை சென்றார். நாடுகடத்தல் போன்ற இன்னும் பல தண்டனையை அனுபவித்தார். இரண்டாம் உலகப்போரில் உலகை உலுக்கி எடுத்த இட்லரின் துருப்புகள் அவருடைய தாய்நாட்டை ஆக்கிரமித்துத் தாக்கியது. அதனால் இவர் அண்டைய நாட்டிற்கு சென்று தேசிய மாற்று அரசாங்கம் ஒன்றை உருவாக்கி அதன் நிர்வாகத்தை இயக்கினார். 1950-52 ஆம் ஆண்டுகளில் உதவிப் பிரதமராக பொறுப்பேற்று இருந்த இவர், அப்போது கிரேக்க புகையிலைக்கு ஜெர்மனியில் மார்கெட் தேடித் தந்தார். தனது தாய்நாட்டுக்கு இவர் செய்த சேவை மிகவும் சிறப்பாய் குறிப்பிடத்தக்கது, மக்களின் குடியுரிமை உணர்ச்சியைத் தூண்டியதுதான். இவருடைய தலைமையின் கீழ் இயங்கும் மக்களின் ஐக்கிய கட்சி இப்போது பதவிக்கு வந்தது, நாட்டில் ஒரு புதிய யுகம் உதயமாக இருப்பதின் அறிகுறியாகும். பிரதமரின் கவனம் பல துறைகளில் சீர்திருத்தங்கள் செய்வதில் ஈடுபடுவது நிச்சயம். சைப்ரஸ் பிரச்சனைக்கு தீர்வு காண இவர் வகுத்து இருக்கும் தீர்வை அந்நாட்டு மக்கள் ஆதரிக்கிறார்கள். பலவித இலவசக் கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்பக் கல்வி துறைகள், பல்கலைக் கழகம் முதலியவற்றை நிறுவுவதற்கு இவர் வழி வகுப்பார். பாட்டாளிகளின் கடன் தொல்லைகளைத் தீர்க்கவும், வேளாண்மை அபிவிருத்திக்கு முக்கியமான உதவிகளை வழங்கவும் வழிகண்டார். தொழிலாளரின் வருவாயில் 12 சதவிகிதம் உயரவும், தொழிலாளர் சங்கங்களுக்கு வேண்டிய உரிமைகளையும் வழங்கினார். அரசியல் நிர்வாகத்தில் பதவி வகிக்கும் பிரதமர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்கட்சித்தலைவர்கள் அவர்களுடைய உறவினர்கள் ஆகியோர்கள் அரசியலில் தங்கள் பதவியை, பொதுநலத்திற்குப் பயன்படுத்தாமல் சுயநலத்திற்கு உபயோகித்தால் அவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்குவதற்கான ஒரு மசோதாவை இவர் உருவாக்கினார். பொதுவாக இந்த நாள் வரையில் நாட்டில் நடமாடிய ஊழல்களைக் களைந்து நேர்வழியில் நிர்வாகத்தை இயக்கி நாட்டுப் பொருளாதார அபிவிருத்திக்கு வேண்டிய திட்டங்களை மேற்கொண்டார். திட்டமிட்டு இருக்கின்ற இவரது அரசுப் பணியில் வெற்றி கிடைத்தால், சமுதாய, பொருளாதார, அரசியல் துறைகளில் போதிய அளவு பலன்களை மக்கள் அனுபவிப்பார்கள். தோல்வி நேர்ந்தால் இவருக்கும் இவர் பதவிக்கு வரவிரும்பிய கட்சிகளுக்கும், மக்களிடையே இருக்கின்ற செல்வாக்குப் போய்விடும். இவருக்கு ஆதரவு அளித்த அரசியல் கட்சிகள் பல ஆனாலும், அரசியல் சமுதாய ஜனநாயகத்திற்கு அடிக்கல் போல் தோன்றும் தொழிலாளர் கட்சி மட்டும் இவரை ஆதரிக்கவில்லை. நாட்டின் அரசியலிலே தொழிலாளர் கட்சி என்று ஒன்று இடம்பெறவில்லை. இந்தக் குறைகளுக்கும் பிரதமர் பரிகாரம் கண்டு வெற்றி பெற்றார். மக்கள் அவரை மனமாரப் பாராட்டுகிறார்கள். டொமினிகன் சுதந்திர சிற்பி ‘ஜூவான் பாஷ்’ உலக நாடுகளின் சுதந்திர சிற்பிகளில் டொமினிகன் நாட்டில் குடியரசுத்தலைவராகத் திகழ்ந்தவர் ஜூவான் பாஷ். டொமினிகன் குடியரசு இலத்தீன் அமெரிக்காவில் மேற்கு இந்தியத் தீவுகள் ஒன்றில் உள்ளது. இதன் பரப்பளவு ஐரோப்பாக் கண்டத்தில் உள்ள பெல்ஜியம் என்ற நாட்டைப் போல இரண்டு மடங்கு பெரியது. ஒரு தீவின் பாதியில் டொமினிகன் மறுபாதியில் ஹெய்டி நாடும் உள்ளன. பின்தங்கியுள்ள நாடு முன்னணியில் இடம் பெற்று வருவதற்கும், மக்களாட்சி ஆட்சி முறை மறுபடி வரப் போராடியதற்கும் டொமினிகன் குடியரசு ஒர் எடுத்துக்காட்டு. ஒரு சிறிய குடியரசின் ஜனாதிபதியாக இருந்தாலும் ஜூவான் பாஷ் உலகப் புகழ் பெற்றவராக ஆனார். ஒருநேரத்தில் டொமினிகன் நாடு ட்ருஜில்லோ என்ற கொடுங்கோலன் ஆட்சியின் கீழ் அகப்பட்டுத் தத்தளித்து இருந்தது. அந்த நாட்டில் சுதந்திரம் என்ற பேச்சே இல்லை. பட்டியில் அடைக்கப்பட்ட ஆடு, மாடுகள் போல மக்கள் நடத்தப்பட்டார்கள். எழுத்துரிமை, பேச்சுரிமை அந்த நாட்டில் கிடையாது ‘ம்’ என்றால் சிறைவாசம் ‘ஏன்’ என்றால் வனவாசம் என்ற நிலையில் மிருகங்களுக்கும் மக்களுக்குமிடையே வேற்றுமையே இல்லை. அந்த அளவிற்கு நாட்டில் கொடுங்கோல் ஆட்சி நீடித்துக் கொண்டிருந்தது. ட்ருஜில்லோ கொடுங்கோலர்கள் ஜூவான் பாஷை இருபது ஆண்டுகளுக்கு மேலாக நாடு கடத்தினார்கள். புரட்சிக்காரரை நாட்டைவிட்டுத் துரத்திவிட்டால், நாட்டில் புரட்சியே அஸ்தமித்துவிடும் என்று அந்தக் கொடுங்கோலர்கள் எண்ணினார்கள். ஆனால் அவர்கள் எண்ணம் ஈடேறவில்லை. நாடு கடத்தப்பட்ட ஜூவான் பாஷ் தன்னைப் போல நாடு கடத்தப்பட்ட நாட்டு பற்றுள்ள வீரர்களையெல்லாம் தேடிக்கண்டுபிடித்து புரட்சி இயக்கம் ஒன்றை உருவாக்கினார். அங்கிருந்த படியே தாய்நாட்டின் கொடுங்கோலர்கள் மிரண்டு பீதி அடையுமாறு சுதந்திர இயக்கத்தை நடத்தினார். இவ்வாறு, கால் நூற்றாண்டு காலமாக சுதந்திரப் போரை ஜூவான் பாஷ் நடத்தி இறுதியில் வெற்றி பெற்றார். டொமினிகன் நாடு விடுதலை பெற்றது.  விடுதலைப் புரட்சிக்கு வித்திட்ட வீரராக திகழ்ந்த ஜூவான் பாஷ் ஒரு சிறந்த இலக்கிய வித்தகர். இன்றைய தலைமுறையின் இலத்தின் அமெரிக்கா எழுத்தாளர்களில் ஜூவான் பாஷக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. அரசியல், சமுதாய, முற்போக்குக் கருத்துக்களைக் கொண்ட நூல்கள் மட்டுமன்றி சிறந்த சிறுகதைகளையும் எழுதியுள்ளார். தம்முடைய தாய்மொழியில் இவர் எழுதிய பல நூல்கள் ஆங்கிலம், ப்ரெஞ்சு மொழிகளில் மொழி பெயர்க்கபட்டுள்ளன. டொமினிகன் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னால் ஐரோப்பிய நாடுகளில் இவர் சுற்றுப்பயணம் வந்தார். அந்தந்த நாடுகளில் அரசியல்வாதிகள் சமுகத்தொண்டர்கள் தொழிலதிபர்கள், தொழிலாளர் சங்கத் தலைவர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், கல்வி அதிகாரிகள் போன்றவர்களைச் சந்தித்து அவர்களுடன் அளவளாவி அவர் அனுபவம் பெற்றுத் திரும்பி வந்தார். உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஐரோப்பிய தலைவர்களையும் லத்தின் அமெரிக்காவைப் பற்றி எழுதியுள்ள நூலாசிரியர்களையும் பேட்டி கண்டார். டொமினிக்கன் குடியரசுக்கு சமுதாய அரசியல் துறைகளில் எப்படிச் சீர்திருத்தங்கள் செய்யப் போகிறார் என்ற கேள்வி இந்தப் பேட்டியில் கேட்கப்பட்டது. இதற்கு ஜூவான் பாஷ் பதில் கூறும் போது எங்கள் நாட்டு மக்களுக்கு, மக்களாட்சி என்னவென்று தெரியாது. பொருளாதார, சமுதாய, அரசியல் துறைகளில் சுதந்திரம் பெறுவது என்பது கனவிலும் பெறாத ஓர் அனுபவம். எனவே, ஏட்டுச் சீர்திருத்தங்கள் ஏட்டளவிலே இல்லாமல் பயன்தரத்தக்க அளவில் செயல்படச் செய்வது கால அட்டவணையில் முதலிடம் பெற வேண்டும். மற்றொரு கேள்வி அவரிடம் கேட்டப்பட்ட போது விவாசாயத் துறையில் இவர் சீர்திருத்தம் செய்வதற்கு என்ன திட்டம் போடுவார் என்பதற்கு அவர்கூறிய பதில் வருமாறு: “சர்வாதிகாரி ட்ருஜில்லோ ஆட்சியில் நாட்டில் பெருவாரியான நிலம், சர்வாதிகாரியான அவருடைய சுற்றத்தார்க்குச் செந்தமாக இருந்தது. இப்போது அந்த நிலத்தை பாட்டாளிகளுக்குப் பங்கிடுவது முதல் சீர்திருத்தமாகும். பிறகு கூட்டுறவு இயக்கத்தை தோற்றுவித்து அதன் மூலம் இந்த நிலத்தின் விளைச்சல் பொருளை விற்பனை செய்து பாட்டாளிகளுக்கு போதிய அளவு ஊதியம் கிடைக்க வழி தேடவேண்டும். பாட்டாளிகள் ஒவ்வொருவருக்கும் மாதம் ஒன்றுக்கு ஏறத்தாழ நூறு டாலர் விகிதம் பெற தக்க ஊக்கம் அளிக்க வேண்டும். உழைப்பாளிகளுக்கு நிலம் தங்கள் சொத்து என்கின்ற உறுதியும் கூட்டுறவு இயக்கம் தங்கள் பொருளாதார உதவிக்கு முன்னேற்றதிற்கு அமைந்த ஒரு கருவி என்ற மனப்பான்மையும் வளர அடிகோல வேண்டும் என்று கூறினார்” டொமினிகன் நாட்டிற்கு அண்டை நாடான ஹெய்டியில் சர்வாதிகாரமான நிர்வாகம் இயங்குகிறது. எல்லைப் புறத்தில் இத்தகைய நிர்வாகம் நடப்பது நாட்டிற்கு தீமை விளைவிப்பதாகும். எனவே ஜூவான் பாஷ் இந்த பிரச்சனைக்கு மிகவும் எச்சரிக்கையுடன் தீர்வுகண்டார். இவர் சிறு வயதில் ஹெய்டி நாட்டில் பிறந்து வளர்ந்தவர். அதனால் அந்த நாட்டின் மீது அவருக்கு ஒரு தனி அபிமானம் இருந்தது. ஆதலால் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் ஹெய்டி நாட்டுடன் சண்டை சச்சரவு, தகராறு, கலவரம் எதுவும் உருவாகாத விதத்தில் தீர்க்கப்பட வேண்டும் என்று சிந்தித்து முடிவுகண்டார். ஜூவான் பாஷ் தலைமையில் இயங்கும் டொமினிகன் குடியரசு நாடு எதிர்காலத்தில் மிக உயர்ந்த உன்னத சிறப்படையும் என்று மக்கள் எதிர்பார்த்து வாழ்கிறார்கள். அவர்கள் எண்ணம் என்னவோ அதற்கேற்றவாறு ஆட்சியும் நடைபெற்றது. அமெரிக்க காந்தி மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்க நாட்டின் வெள்ளைகாரர்கள் அங்குபோய் ஒண்டி வாழ்ந்து வந்தவர்கள். அங்குள்ள நீக்ரோ மக்களை அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்தி சொல்லமுடியாத கொடுமைகளுக்கு ஆளாக்கி அழிக்க முற்பட்டனர். நிக்ரோ இனத்தவரிடையே அடிக்கடி இனஉரிமை உணர்ச்சி எழுந்தது. ஆனால் அந்த உணர்ச்சி பலாத்கார வெறி உணர்ச்சியாகப் பல முறை வெடித்தது. வெள்ளைக்காரர்கள் நிக்ரோ மக்களின் இனஉரிமை போராட்டத்தை வன்முறைகளைக் கொண்டே அழித்து வந்தார்கள். இந்த நேரத்தில் மார்ட்டின் லூதர் கிங் புது வாழ்க்கையில் ஈடுபட்டார். வன்முறை வெறிக் கிளர்ச்சி எந்த காலத்திலும் வெற்றி பெறாது என்பதை கிங் உணர்ந்தார். சட்டத்திற்கு உட்பட்ட அகிம்சை அடிபடையிலான அறப்போர் என்றும் தோல்வியுறாது என்பதைப் புரிந்தார். கத்தியின்றி, இரத்தமின்றி, அறப்போராட்ட அடிப்படையிலே அடிமைத் தளையை அறுத்தெறிந்து விடுதலை பெற்று சுதந்திர சுகம் அளிக்கும், காந்தியடிகளின் அகிம்சைத் தத்துவம் மார்ட்டின் லூதர் கிங்கிற்கு ஒரு பாடமாக அமைந்தது. ஆனால் காந்தியடிகளை தனது அரசியல் ஆசானாக ஏற்றுக் கொண்டதினால் அவரை அமெரிக்க காந்தி என்று நீக்ரோ மக்கள் அழைத்தார்கள். தனது இனமக்களின் உரிமை உணர்வை ஒற்றுமைப்படுத்தி, ஒழுங்குபடுத்தி, அதன் போக்கை, செயலை, நடவடிக்கைகளை, காந்திய வழியில் திருப்பிவிட்டார். நீக்ரோ மக்களின் உரிமை நோக்கத்தை அமெரிக்கா முன்னாள் குடியரசுத் தலைவர் கென்னடி மனப்பூர்வமாக ஏற்று அதைச் சட்டமாக்க வழிவகுத்தார். அவருக்கு பிறகு ஜனாதிபதி ஜான்சன் தனது மனப்பூர்வமான அங்கீகாரத்தை அளித்து நீக்ரோ மக்களின் சாசனத்தை சட்ட வடிவமாக்கி நிலைநிறுத்திவிட்டார். “வன்முறை வெறி முயற்சி அடிப்படையில் எங்களுடைய கிளர்ச்சி நடைபெற்றிருக்குமானால் உலக மக்களின் அனுதாபத்தை எங்களால் பெற்றிருக்க முடியாது, மாறாக இழந்திருப்போம். வெறும் ஆயுதங்களின் பலம் கொண்டு அந்தக் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டிருக்கும் அல்லது நசுக்கப்பட்டிருக்கும்.காந்திய வழியை நான் முழு மனதோடு நம்பினேன், ஏற்றேன். காந்தி நெறிகளிலே இருந்து எள்ளளவும் தவறாமல் கிளர்ச்சிகளை நடத்தி வருகிறேன். வெள்ளையர்களின் வெறித்தனத்திற்கு எதிராக நடத்தப் பட்டிருக்கும் இன உரிமைக் கிளர்ச்சியிலே நல்ல மனம் படைத்த மனித நேயம் கொண்ட ஆங்கிலேயர்கள் ஏராளமாகப் பங்கேற்றார்கள். இந்த அற்புதச் சாதனைக்கு நான் காந்தியத்தைக் கடைபிடித்ததுதான் காரணம். எங்களுடைய கிளர்ச்சி தனிப்பட்ட யார் மீதும் பகை உணர்ச்சியைத் தூண்டவில்லை. அது அநீதிக்கு எதிரான அகிம்சைப் போராட்டமாக அமைந்தது. எனவே நீதியிலே, நேர்மையிலே நம்பிக்கையுடைய யாராலும் எங்களை அலட்சியப்படுத்த முடியவில்லை என்று மார்ட்டின் லூதர் கிங் பெருமிதத்துடன் முழக்கமிட்டார்.” 1964-ம் ஆண்டு, நோபல் சமாதானப் பரிசை கிங் பெற்றார். இந்த உலகப் பரிசு காந்திய தத்துவத்திற்காகக் கிடைத்த உலகப் பரிசு என்று கூறலாம். ஐக்கிய அமெரிக்கா நாட்டில் இன ஒதுக்கல் கொள்கையை எதிர்த்து மார்ட்டின் லூதர்கிங் போராடினார். அதன் விளைவாக இன ஒதுக்கல் கொள்கையை சட்டவிரோதமானது என சிவில் உரிமை அமெரிக்க அரசினால் 1964-ல் சட்டமாக்கப்பட்டது.இந்தச் சமாதான் பணியின் தலைவர் என்ற காரணத்திற்காக அவர் நோபல் பரிசு பெற்றார். அமெரிக்காவில் நோபல் பரிசு பெற்றவர்களின் வரிசையில் கிங் 14-ம் இடத்தில் இருக்கிறார். நீக்ரோ சமுகத்தினரின் இரண்டு பேர் மட்டுமே இந்த பரிசை பெற்றிருக்கிறார்கள். அவர்களில் இரண்டாம் நபர் நம்முடைய கிங். அமெரிக்காவில் ஜியார்ஜியா அட்லாண்டா நகரில் லூதர் கிங் பிறந்தார். இவருடைய தந்தை அந்த வட்டார கிருத்துவ தலைவர், மகனும் தன்னைபோலவே ஒரு மதகுருவாக விளங்கவேண்டும் என்பது தந்தையின் விருப்பம். அந்த எண்ணத்தில் லூதர் கிங் பாஸ்டன் பல்கலைக் கழத்தின் கிருத்துவ மதத் தத்துவங்களைக் கற்று 1954-ம் ஆண்டில் சமயத்துறைக்கான டாக்டர் பட்டம் பெற்றார். நீக்ரோ மக்கள் படும் தொல்லைகளையும் அனுபவிக்கும் கொடுமைகளையும் கண்ணாரக் கண்டு அவர் அடிமைத்தனத்தை ஒழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டார். இதன் காரணமாக மதத்தலைவராகப் பயிற்சி பெற்ற கிங் மக்கள் தலைவரானார். தனது இன மக்களான நீக்ரோவினர், தாய்நாட்டில் வெள்ளையரின் பயங்கரக் கொடுமைகளுக்குப் பலியாகி நலிந்த காட்சி கிங் நெஞ்சத்தை உருக்கியது. காந்தியடிகளின் தத்துவம் உலகத்துக்கு ஒரு புதுமையாக விளங்கியதால். அதன் வழிவகைகளும் கிங் சிந்தனையைத் தூண்டிவிட்டன. தன் இனத்தவர் முன்னேற, சமத்துவம் பெற, காந்திவழி அல்லாமல் வேறு வழியில்லை என்ற முடிவிற்கு கிங் வந்தார். காந்தியடிகளின் தத்துவம் பற்றி பல மேடைகளில் கருத்துரையாற்றி நீக்ரோ மக்களின் மனத்தை பண்படுத்தி உரம் ஏற்றினார். இவருடைய காந்திய தத்துவ சொற்பொழிவினால் ஈர்க்கப்பட்ட வெள்ளையர் பலர் ஆவர். ஆங்கில இளைஞர்களும், மாணவிகளும் கிங் ஆற்றிய தத்துவ விளக்கத்தால் அவரைப் பின்பற்றலானார்கள். கிங்கினுடைய இலட்சியப் போராட்டத்திற்கு உலக மக்களது ஆதரவும், அனுதாபமும் ஏற்பட்டன. அவரதுக் கருத்துகளை கேட்க உலகமெங்கும் உள்ள முற்போக்கு வாதிகள், பகுத்தறிவுவாதிகள், மனித நேயவாதிகள் விருப்பம் கொண்டனர். உலகத்தின் பல பாகங்களுக்கும் சொற்பொழிவாற்ற வருமாறு அவருக்கு அழைப்புகள் வந்தன. கிங் நடத்திய முதல் போராட்டம் பேருந்துக் கிளர்ச்சி அறப்போராகும். அமெரிக்காவில் பஸ்களில் பயணம் செய்யும் போது வெள்ளையர்கள் ஏறினால் நீக்ரோக்கள் எழுந்து தம்முடைய இருக்கையை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். தவறினால் அடி, உதை, குத்து, வெட்டு, ஆங்கிலேயர்களான பஸ் அதிபர்களும் நீக்ரோக்களுக்கு எதிராகவே செயல்பட்டனர். கிங் இந்தப் பழக்கவழக்கத்தை எதிர்த்தார். நீக்ரோக்கள் அனைவரும் பேருந்துகளை பகிஷ்கரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவர் கூறியவாறு நீக்ரோ மக்கள் பஸ்ஸில் ஏறுவதை நிறுத்திவிட்டார்கள். இதனால் பஸ் அதிபரின் பாடு நெருக்கடி ஆகிவிட்டது. பஸ்ஸில் கூட்டம் படு மோசமாக குறைந்துவிட்டது. பஸ் நிறுவனங்களில் முக்கியமான வேலைகளை வகித்து வந்த நீக்ரோக்கள் தங்களது வேலைகளைத் தூக்கி எறிந்து வெளியேறினார்கள். இதனால் பஸ் தொழிலே நிலைகுலைந்தது. பேருந்து உரிமையாளர்கள் கிங்கிற்கு இலஞ்ச ஆசை காட்டி மயக்கினார்கள். மயங்கவில்லை லூதர்; மிரட்டிப் பார்த்தார்கள், மிரளவில்லை லூதர். கடைசியாக எல்லா பஸ் அதிகாரிகளும் ஒன்று கூடி கிங் மீது வழக்குத் தொடுத்தார்கள். கிங் தூண்டுதலால் பஸ் தொழிலே நசிந்துவிட்டதாக குறைகூறினார்கள். நாட்டின் பெரிய வழக்குரைஞர்களெல்லாம், பஸ் உரிமையாளர்களுக்கு ஆதரவாக வாதாடி வந்தார்கள். மார்ட்டின் லூதர் கிங் தானே தனித்து நின்று வெள்ளையர்களை எதிர்த்து, தனது இன மக்களுக்காக வாதாடினார். உலக மக்களைக் கவர்ந்த அந்த வழக்கு இறுதியில் நீக்ரோ மக்களுக்கு ஆதரவான தீர்ப்பு வழங்கியது. பஸ்களில் வெள்ளையருக்கு சமத்துவமான உரிமை நீக்ரோ மக்களுக்கு உண்டு என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார். வழக்கின் முடிவு கிங்கிற்கு உலகப் புகழைப் பெற்றுதந்தது. அது முதல் இவர் உலகம் புகழும் தலைவரானார். இந்த வழக்கு நடைபெறும் போது லூதருக்கு வயது என்ன தெரியுமா?26 வயது. ஆங்கில இனவெறிக் கொள்கை வெள்ளையர் வட்டாரத்தில் இந்த பஸ் வழக்கிற்குப் பிறகு பெருமளவில் பேய்விரித்து ஆடியது. பள்ளிகளில் நீக்ரோ மாணவர்கள் அவமானப் படுத்தப்பட்டார்கள், சிற்றுண்டிச் சாலையில் அடித்து நொருக்கப்பட்டார்கள், பொது இடங்களில் நடமாடவே முடியவில்லை. 28-9-1964-ம் ஆண்டில் மார்ட்டின் லூதர் கிங் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தினார். இரண்டு லட்சம் நீக்ரோ மக்கள் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். வெள்ளையரும், வெள்ளை இனத்தவர்களான மாணவ, மாணவிகளும் ஆயிரக்கணக்கில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள். அந்த ஆர்ப்பாட்டப் பேராட்டம் ஊர்வலம் வாஸிங்டன் நகரில் ஆப்ரகாம்லிங்கன் நினைவுச் சின்னத்தின் அருகே சென்று அடைந்தது. அங்கு நடைபெற்ற மாபெரும் கண்டனக் கூட்டத்தில் லூதர் கிங் ஆற்றிய சொற்பொழிவு உலகப்புகழ் பெற்ற உரிமைப் போர் முழக்கமாகத் திகழ்ந்தது. இந்த மகத்தான அறப்போரின் விளைவாக அமெரிக்க அரசு உடனடியாக அசைந்து கொடுத்து ஆவன செய்ய முன்வந்தது. தலைமுறை தலைமுறையாக நடைமுறையில் இருந்து வந்த இனவெறி மனப்பான்மையைத் தடைசெய்து சிவில் உரிமை மசோதாவாக அமெரிக்க ஆட்சியினர் சட்டமாக்கினர். இனி அமெரிக்காவில் எந்த நிலையிலும் நீக்ரோ இன மக்களுக்கு சம உரிமை உண்டு. அந்த உரிமையைத் தடுப்பவர்கள் சட்டபடி குற்றவாளியாவார்கள். இந்த நீக்ரோ இன சமத்துவ சட்டம் மனிதநேய உரிமையைப் பாதுகாக்கும் சட்டம் அமெரிக்கா அரசினால் கொண்டுவரபடுவதற்கு, காந்தியடிகளது அறப்போர் வழியைப் பின்பற்றி அகிம்சா தத்துவப்படி போராடிய அமெரிக்க காந்தி என்று அழைக்கப்படும் மார்ட்டின் லூதர் கிங் தனது இன மக்களுக்காகத் துப்பாக்கியால் சுடப்பட்டு துடிதுடித்து பலியானார். சரித்திரம் சமைத்த சான்றோன் சர்ச்சில் சூரியன்மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அதிகாரம் நாஜி போர் வெறியன் இட்லரால் பறிபோய் விடுமோ என்ற பயங்கர நிலை இரண்டாவது உலக யுத்த காலத்தில் இங்கிலாந்து நாட்டிற்கு இருந்தது. கொஞ்சம் அயர்ந்திருந்தால் அல்லது அலட்சியமாக இருந்திருந்தால் இங்கிலாந்து என்ற நாடே தெரியாமல் சுடுகாடாக மாறிவிட்டிருக்கும். சுதந்திரத்திற்கு சவாலாக அமைந்த நெருக்கடியான அந்தப் போர்க்கால நேரத்தில் துணிந்து முன்வந்து பொறுப்பேற்று இங்கிலாந்து நாட்டைக் காப்பாற்றிய பெருமைக்குரிய இரும்பு மனிதர் சர்வின்சென்ட் சர்ச்சில்.  இங்கிலாந்தின் சிறப்பிற்கும், பெருமைக்கும், புகழுக்கும், முன்னேற்றத்திற்கும் உழைத்த எத்தனையோ பெருமக்கள் அந்த நாட்டில் தோன்றினார்கள் என்றாலும் இங்கிலாந்து நாட்டின் சுதந்திர சிற்பி என்ற புகழிற்கு இலக்காக இருந்தவர் பிரதமர் சர்.வின்சென்ட்சர்ச்சில்தான். இங்கிலாந்து நாட்டை இழந்தாலும் இழப்போம், ஆனால், ஷேக்ஸ்பியர் இலக்கியத்தை இழக்கமாட்டோம் என்று உலக இலக்கிய உலகிற்கு சவால் விட்ட இலக்கிய மேதை பிரதமர் சர்.வின்சென்ட்சர்ச்சில்.90 வயதுக்குமேல் பழுத்த பழமாக, கனிந்த கனியாக, நிறை வாழ்வு வாழ்ந்து சரித்திரம் சமைத்த சான்றோன் என்ற பெருமையை நிலைநாட்டிவிட்டு மறைந்த மாமேதை தான், பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் சர்.வின்ஸ்சென்ட்சர்ச்சில். அவர் உயிர் வாழ்ந்த காலத்தில் மறக்கமுடியாத அற்புத ராஜதந்திரியாக விளங்கியவர். அவருடைய அறிவாற்றல் மிக்க நாவன்மைப் பேச்சுகள், சுறுசுறுப்பான சாதனைகள், நுட்பமான சிந்தனைகள், நுண்மாண் நுழைப்புல நூலறிவுகள், கம்பீரமான தோற்றத்தின் உணர்வுகள் ஆகியவற்றால் அவர் உலகத்தின் மாமனிதராக நடமாடினார். விடுதலைப் போராட்டக்காலத்திலே சர்ச்சில் இந்தியருக்கு நேர் விரோதியாக இருந்தார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலிருந்து இந்தியாவைப் பிரிப்பதா என்றார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மணிமுடியிலிருந்து இந்தியா என்ற ஒளிமிக்க ஒரு வைரத்தை தூக்கி எறிவதற்காக நான் ஆட்சி பொறுப்பை ஏற்கவில்லை என்று சர்ச்சில் பிரதமராக இருந்த போது அன்றைய பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் முழக்கமிட்ட அந்த ஆவேசம் இந்தியர்கள் நெஞ்சைத்திலே எரி ஈட்டிபோல் எரிந்தன. இவ்வாறு அவர் முழக்கமிட்டபேச்சின் உணர்வுகளிலே பொங்கி வழிந்த அவரது தேசபக்தியை நாம் தெளிவாகப் பார்க்கமுடிகிறது. இவருக்கு இருந்த அந்த உணர்வு இந்திய மக்களுக்கு இருக்காதா? சர்ச்சிலின் மனப்பண்பை இரண்டு கோணங்களில் நின்று பார்க்கலாம். இரண்டும் ஒன்றுக்கொன்று நேர் எதிரான துருவ கோணங்களாகும். இந்திய விடுதலைப் போர் காந்தியடிகள் தலைமையிலே நடைபெற்றபோது, இர்வின் பிரபு 1931-32ம் ஆண்டில் இந்தியாவின் வைசிராயாக இருந்தார். அக்காலத்திலே காந்தி-இர்வின் ஒப்பந்தம் என்ற ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. அந்தப் பேச்சின்போது காந்தியடிகள் கலந்து கொண்டதைப் பற்றி இங்கிலாந்து பாராளுமன்றத்திலே வின்ஸ்டன் சர்ச்சில் என்ன பேசினார் தெரியுமா? “ஒரு காலத்தில் இரண்டாந்தர வழக்குரைஞராக இருந்த காந்தி, இப்போது அரசநிந்தனைப் பரதேசியாகி இருக்கும் இந்த ஆள், அரசப் பிரதிநிதியின் மாளிகைப் படியிலே அரை நிர்வாணப் பக்கிரிக்கோலத்தோடு ஏறி இருக்கிறார். மாட்சிமை மிக்க மன்னரின் பிரதிநிதியுடன் சரிசமானமாய் அமர்ந்து பேசுகிறார். இந்தக் காட்சியை நினைக்கும் போது என் நெஞ்சம் கொந்தளிக்கின்றது. அருவருப்பும் - அவமானமும் அடைந்து நான் துடிக்கிறேன்.” என்றார். அடுத்து. இந்தியாவில் ‘ஜாலியன் வாலாபாக்’ என்ற படுகொலை நடந்த நேரம். இந்தப் படுகொலையை பிரிட்டிஷ் அரசு சார்பாக ஜெனரல் டயர் என்ற கொடியவன் நடத்தினான். இந்தச் செய்தியை கேள்விப்பட்ட சர்ச்சில் துடிதுடித்து “மன்னர் பிரானின் அன்புக்குப் பாத்திரமான மக்களை ஈவிரக்கம் கொஞ்சமும் இல்லாமல் படுகொலை செய்தவன் எவனாக இருந்தாலும், அவனைக் கடுமையாகத் தண்டித்தே ஆகவேண்டும்” என்றார். இந்த இரண்டு பேச்சுக்களால் நாம் புரிந்து கொள்வது என்னவென்றால், சர்ச்சில் இந்திய மக்களை வெறுக்கவில்லை; தனிப்பட்ட முறையில் அவர் காந்தியடிகளையும் கோபிக்கவில்லை; ஆனால், இந்தியா பிரிட்டிஷ் பேரரசின் ஒரு பகுதியிலே இருந்து பிரிந்து போகிறதே என்ற சாம்ராஜ்ய மனப்போக்கு, இந்தியாவை இழப்பதைப் பற்றிய சிந்தனை, அவரது மனத்திலே கொந்தளிக்கும் கோபத்தை உண்டாக்கி விட்டதை அல்லவா தெரிவிக்கின்றது? இதுபோலவே, 1950-ம் ஆண்டிலே மற்றொரு சம்பவம். நம்முடைய பண்டித நேரு அவர்கள், இந்தியாவின் பிரதமர் பொறுப்பை ஏற்ற பிறகு, அமெரிக்கா சென்றிருந்தார். திரும்பி இந்தியாவரும் போது, இங்கிலாந்து நாட்டில் குறிப்பாக லண்டன் மாநகரில் சில நாட்கள் தங்கியிருந்தார். அப்போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் அட்லி பிரபு. அவர் ஒரு விருந்து நமது நேரு அவர்களுக்குக் கொடுத்தார். அந்த விருந்தின் போது அட்லி பிரபு பண்டிதநேருவுக்கு சர்சிலை அறிமுகப்படுத்தினார். நட்புறவோடு சர்ச்சில் நேருவின் கைகளைப் பற்றிக் குலுக்கித் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தபோது; "எனக்கு ஒர் ஆசை, நானும் உங்களுடன் அமெரிக்காவுக்குச் சென்று அமெரிக்க மக்களுக்கு உங்களை அறிமுகப்படுத்த வேண்டும். அத்தகைய ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கும்போது என்ன சொல்லுவேன் தெரியுமா? “இதோ இந்தப் பெரிய மனிதர் பகைமையையும், பயத்தையும் வென்றவர்!” என்று தான் கூறியிருப்பேன்" என்றார் சர்ச்சில். சர்ச்சிலின் பாராட்டுரையைக் கேட்ட பிரதமர் நேரு, இது எனது தகுதிக்கு மீறிய மிக உயர்ந்த புகழுரை என்று அவருக்கு நன்றி தெரிவித்தார். உடனே சர்ச்சில் பிரதமர் நேருவைக் கட்டித் தழுவிக் கொண்டு, ‘மிஸ்டர் நேரு’ இது முகஸ்துதியல்ல; உடனே எனது உள்ளத்தில் உந்திய பேச்சுமல்ல; இதைப் பற்றி நான் மிகவும் சிந்தித்து வைத்திருக்கிறேன். எனது மனப்பூர்வமான ஆசையைத்தான் அப்படிக் குறிப்பிட்டேன்" என்றார். இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு, பிரிட்டிஷ் ஆட்சியின் நேர் எதிரியாக இருக்கும் என்று சர்ச்சில் நினைத்தார். ஆனால், இந்தியா இன்றும் காமன்வெல்த் நாடுகளுடன் இணைந்து ஒரு நட்பு நாடாகவே திகழ்வதற்கு காரணம் பகைபாராட்டாத நேருவின் ஜனநாயகப் பண்பல்லவா? இந்தப் பண்பை சர்ச்சில் சாகும்வரை எண்ணி மகிழ்ச்சியுடன் அன்றே, நேரு எதிரிலேயே கண்ணீர் விட்டார். எந்த சர்ச்சில், பெருமகனார் காந்தியடிகளாரைச் சுடு சொற்களால் தாக்கிக் கடுமையாகக் கண்டனம் செய்து பேசினாரோ, அதே சர்ச்சில் பிறகு, காந்தியடிகளைப் பற்றிப் பாராட்டிப் பேசியபோது, "பகைவரை வெல்லுவதுதான் மிஸ்டர் காந்தியின் நோக்கம் என்று எண்ணினேன். ஆனால், அவர் பகைமையை வென்று என்னைப் பெரும் வியப்பில் ஆழ்த்திய மகான் என்றார்! சுதந்திரத்தின் அழியாச் சின்னம் - ஆபிரகாம் லிங்கன்! பாரதப் பூமியின் சுதந்திரத் தந்தை காந்தியடிகளாரைப் போல, அமெரிக்காவின் சுதந்திர பூமியின் அழியாச் சின்னமாக விளங்கியவர். ஆப்பிரகாம் லிங்கன்! மகாத்மா காந்தியடிகள், கத்தியின்றி ரத்தமின்றி வெள்ளையனை எதிர்த்துப் போர் தொடுத்து சுதந்திரம் பெற்றுத்தந்தார் நமது இந்தியாவுக்கு. ஆனால், பெற்ற சுதந்திரத்தை அமெரிக்க மக்கள் பகிர்ந்து அனுபவிக்க அரும்பாடுபட்டு வெற்றிமுரசு கொட்டியவர் என்ற புகழுக்குக் காரணமாக இருந்தவர் ஆபிரகாம் லிங்கன். மக்களுக்கு, மக்களுக்காக, மக்களால் ஆளப்படும் ஆட்சியே உண்மையான ஒருமக்கள் ஆட்சி என்ற தத்துவத்துக்காக, தான் சுடப்பட்டுச் சாகும்வரை உழைத்தவர் அவர். இவ்வாறான மக்கள் சேவைகளில் காந்தியடிகளுக்கும், அமெரிக்க மனித சுதந்திரச் சிற்பி ஆபிரகாம் லிங்கனுக்கும் ஒற்றுமை இருப்பதை அந்த இரு மேதைகளின் மக்கள் தொண்டுகளில் நாம் காணமுடிகின்றது. அதுபோலவே, அந்த மாபெரும் இன விடுதலை வீரர்கள் இருவரும் கொலை வெறியர்கள் இருவரின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாகி. சாவிலும் ஒற்றுமையை நிலைநிறுத்திய மாவீரர்களாக மக்களால் போற்றப்படுகின்றார்கள்.  அமெரிக்கக் குடியரசுத் தலைவராக விளங்கியவர் ஆபிரகாம் லிங்கன். ஆனால், நமது தேசப்பிதா சுதந்திரத்துக்காக எண்ணற்ற போராட்டங்களையும், சிறை வாழ்க்கைக் கொடுமைகளையும் ஏற்று, நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்த பின்பும் கூட, அவர் எந்தப் பதவியையும் விரும்பாத வெறும் மகாத்மாவாகவே படுகொலையானார்! உலக வரலாறு உள்ளவரை, இந்த இருபெரும் மனிதநேயப் பிறவிகளின் தொண்டினை, மதம், நிறம், நாடு, என்ற வேறுபாடுகளை எல்லாம் கடந்து, எக்காலத்தவரும் புகழ்ந்து பாராட்டுவார்கள். துருக்கியின் விடுதலை வீரர் - முஸ்தபா கமால் பாஷா! ஐரோப்பாக் கண்டத்தில் நோயாளி நாடு எது என்று கேட்டால், உடனே உலக வரலாறு “துருக்கி நாடு” என்று கூறும். ஆனால், இன்று அதேநோயாளி நாடு தான், தனது தீராத அடிமை ஆதிக்க முடியாட்சி என்ற நோயை, விடுதலை வீரன் முஸ்தபா கமால் பாஷா என்ற குடியாட்சி டாக்டரால் குணமாக்கி ஐரோப்பாவிலே மட்டுமல்ல, உலக வரலாற்றிலேயே வீறுபெற்ற விடுதலை நாடாக விளங்குகின்றது. மாவீரன் முஸ்தபா. கி.பி.1881-ம் ஆண்டில், சலோனிகா என்ற துறைமுகத்தில் மிகச் சாதாரண எடுபிடி வேலையாளாகப் பணியாற்றிய அலிரிசா என்பவருக்கும், சபீதா என்ற இஸ்லாமியப் பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தார். அலிரிசா என்ற துறைமுகப் பணியாள் ஒரு வேலைக்காரனாக இருந்தாலும் கூட, அவர் ஒரு சிந்தனையாளராகவும் இருந்தார். இருந்து என்ன பயன்? சிந்தித்ததைச் சுறு சுறுப்புடன் உடனடியாக முடிக்காமல், நாளை, நாளை என்று நாள் கடத்திவரும் திறமையற்ற ஓர் அப்பாவி மனத்திறன் இல்லாத, உடற் திறனில்லாத ஓர் அச்சம் வாய்ந்த சோம்பற் பிறவி அதனால் அவரது மனைவி சபீதா குடும்பப் பாராத்தைச் சுமந்து வாழலானார், பாவம்! தந்தையைவிட, தாய் எடுத்தக்காரியத்தை உடனுக்குடன் முடிக்கும் திறன்பெற்ற பெண்ணாக இருந்தார். சபீதா தனது மகன் முஸ்தபாவை அருமையாக வளர்த்து, தன்னால் முடியும் அளவுக்குரிய கல்வியைக் கற்றுக் கொடுக்க கணவரின் நண்பர் ஒருவர் உதவியால், முஸ்தபா சலோனிகாநகரிலுள்ள ராணுவப் பள்ளியிலே சேர்ந்தார். இராணுவப் பள்ளியினர் நடத்திய தேர்வு ஒன்றில், வியக்கத்தக்க அளவுக்கு முஸ்தபா எழுதி போதிய மதிப்பெண் பெற்றதால், அவர் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.  பெயர்தான் ராணுவப்பள்ளியே தவிர, பள்ளியில் சேர்ந்ததுமே ராணுவக் கல்வியைக் கற்றுக் கொடுப்பதில்லை. முதலில் பொது அறிவூட்டும் சிறப்புக் கல்வியைப் பயிற்சி அளித்தபின்னர் தான், ராணுவக் கல்வியை அப்பள்ளியிலே கற்பிப்பார்கள். பொதுக்கல்வியிலும் நல்ல பாராட்டும் புகழும் பெற்ற முஸ்தபா, அதே பள்ளிக்கு உதவி ஆசிரியராகவும் தனது பதினேழாம் வயதிலேயே வந்தார். அதற்குப் பிறகு மொனாஸ்டர் என்ற நகரிலே உள்ள ராணுவப் பள்ளிக்கு அனுப்பப்பட்டு, அங்கேயும் பாராட்டப்படும் வகையில் ராணுவப் பயிற்சியாளரானார்! அந்தப் பள்ளியிலே ஏற்பட்ட ஒரு சிக்கல் என்னவென்றால், இராணுவ ஆசிரியர் பெயரும் முஸ்தபா! பயிற்சி பெறப்போன மாணவனது பெயரும் முஸ்தபா! இருவர்கள் பெயர்களும் ஒரே பேராக இருந்ததால் எல்லா நிலைகளிலும் குழப்பம், சிக்கல் ஏற்பட்டுவிட்டது. அதனால் இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்காக, பள்ளியின் ஆசிரியர் தனது பயிற்சி மாணவனது பெயருக்குப் பின்னால், ‘கமால்’ என்ற தனது அன்புப் பெயரைச் சூட்டி ‘முஸ்தபா கமால்’ என்று அழைக்கலானார்! வெறும் முஸ்தபா என்று சென்ற ராணுவப் பயிற்சி மாணவன், உலகமும், துருக்கியும் வியந்து அழைத்த முஸ்தபா கமால் பாஷாவாக ஆனான் என்பது வரலாறு போற்றும் உண்மையானது. இராணுவப் பயிற்சி முடிந்த முஸ்தபா கமால் துணைப்படை ஒன்றுக்குத் தளபதி ஆனார். அந்த நேரத்தில் அவரது தாயார் சபீதா மறுமணம் செய்து கொண்டதால், தாயாரை வெறுத்தார் இருவருக்கும் எந்த உறவுமில்லை என்று கட்டறுத்து விட்டு, தன்மனம் போல தனிமையான வாழ்வை ஏற்றார்! கமால், கான்ஸ்டாண்டி நோபிள் என்ற நகரில், அரசியல் தொடர்புடைய பல சங்கங்களது கொள்ளைகளைப் புரிந்து கொண்டார். துருக்கி நாட்டை அப்போது ஆண்டு கொண்டிருந்த சுல்தான் அப்துல் அமீது, ஒரு கொடுங்கோல் மன்னனாக மாறி, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டு, மக்களைக் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தார். அந்த சுல்தானுடைய ஆணவ ஆட்சியை அகற்றி புரட்சிகரமான ஓர் ஆட்சியை அமைத்திட அப்போதைய வாலிபர்கள் திட்டமிட்டுக் கொண்டிருந்த சங்கங்களிலே கமாலும் ஓர் உறுப்பினரானார்! சுல்தானுடைய கொடுங்கோல் அதிகாரிகள் அந்தப் புரட்சி இளைஞர்களை எல்லாம் வேட்டையாடிப் பிடித்தார்கள்! விசாரணை செய்தார்கள்! சிறையிலே தள்ளினார்கள்! சித்திரவதை செய்தார்கள்! இவர்களில் முஸ்தாபா கமால் ஒருவர்தான் தப்பினார்! தப்பினார் என்றால், அதிகாரிகளை ஏமாற்றிவிட்டுத் தப்பியோடிவிட்டார் என்பதல்ல; முஸ்தாபா கமாலின் ராணுவத்திறமை படை நடத்தும் பயிற்சி திட்டமிட்டுச் செயலாற்றும் யூகம் இவற்றை மனத்தில் கொண்ட சுல்தான், என்றாவது ஒருநாள் கமால் மனம் மாறும்போது, அந்தத் திறமைகள் அனைத்தும் சுல்தானின் எதிரிகளை எதிர்கொண்டு சமாளிக்க உதவும் என்ற சுயநல எண்ணத்தால்" முஸ்தபாவை மட்டும் விடுதலை செய்து, டெமாஸ்கஸ் நகரத்துக்கு அனுப்பப்பட்டார்! போன இடத்திலாவது கமால் சுகபோகமாக இருந்தாரா என்றால் இல்லை! அங்குள்ள புரட்சிவாதிகளின் இயக்கங்களிலே, அவர்களது அரசியல் புரட்சிச் சதிகளிலே ஈடுபட்டார். அதிகாரிகள் அவரைக் கைது செய்யச் சென்ற போது கமால் தப்பி சொந்தஊரான சலோனிகா நகருக்கு ஓடிவிட்டார். சரோனிகா சென்ற கமால், அங்குள்ள புரட்சிக்காரர்களுடன் சேர்ந்து, அவர்களுக்குத் தலைவரானார். ஆனால், எதிலும் அவசரப்படாமல், அரைகுறை புரட்சித் திட்டங்களில் ஈடுபடாமல் காலத்துக்காக அவர் காத்திருந்தார். அந்த நேரத்தில் மாசிடோனியாவின் கிழக்குப்பகுதியில் அன்வர் என்பவர் தலைமையில் திடீரென ஒரு புரட்சி ஏற்பட்டது. அதை அடக்கிடச் சென்ற ராணுவம் அந்தப் புரட்சிக்காரர்களுடனேயே சேர்ந்துவிட்டது. தான் நம்பி அனுப்பிய ராணுவப்படையே நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதைக் கண்ட சுல்தான், தனது ஆலோசனை சபையைக் கலைத்துவிட்டார். புரட்சிக்காரர்களுக்கு அழைப்பு விடுத்தார். அவர்களிடம் சமரசம் பேசி புரட்சிக் காரர்கள் பங்கேற்ற ஓர் ஆலோசனை சபையைப் புதிதாக உருவாக்கினார். சுல்தான் சந்தர்ப்பச் சூழ்நிலைக்கு ஏற்றவாறுதான் புதிய சபையை உருவாக்கினார்! அதே நேரத்தில் சுல்தான் எடுபிடிகள், ஜால்ராக்கள், ஆதரவாளர்கள், எல்லோருமாக தனித்தனிப் பலத்தோடு சுல்தானிடம் பணம் பெற்றுப் புரட்சிக்காரர்களுக்கு லஞ்சமாகக் கொடுத்து அந்த ஆலோசனை சபையினர்களையே துரத்தியடித்தார்! மாசிடோனியா புரட்சிவாதியான அன்வரை, முஸ்தபா கமால் சந்தித்து, இருவரும் ஒரு திட்டம் தீட்டி சிதறுண்ட புரட்சிக்காரர்களைப் படையாகத் திரட்டி, அங்குள்ள சுல்தானின் படையோடு மோதவிட்டு, முறியடித்தார்கள். துருக்கி சுல்தானாக இருந்த அப்துல் ஹமீது பதவியிலே இருந்து விரட்டப்பட்டார். புரட்சிக்காரர்களின் எண்ணத்திற்கேற்ப, ஒரு புதிய சுல்தானை அன்வர் விருப்பப்படி முஸ்தபா நியமனம் செய்தார். துருக்கியில் ஏற்பட்ட அந்த சுல்தான் விரட்டல் புரட்சியில் முஸ்தபா கமால் உழைப்பு, யோசனை, வியூகப் போர் அதிகமிருந்தன என்று தெரிந்திருந்த அன்வர், முஸ்தபாவை ஒரு படைக்குத் தளபதியாக்கி விட்டு, வேண்டுமென்றே புதிய சுல்தானை உருவாக்கியதை, முஸ்தபா ஆழ்ந்து யோசித்த படியே இருந்தார். அன்வரால் நியமிக்கப்பட்ட சுல்தானின் புரட்சிக்காரர்கள், கடமை தவறி நடப்பனவற்றை எல்லாம் முஸ்தபா உணர்ந்தார். இதே எண்ணத்தை, கமால் நண்பர்களாக உள்ள புரட்சிக்காரர்களும் தெரிந்திருந்தார்கள். இதனால், அன்வருக்கும் முஸ்தபாவுக்கும் அடிக்கடி ஆலோசனைக் கலவரம் ஏற்பட்டு, மனத்தாங்கல்கள் மலையென உருவெடுத்து, கசப்பும் கண்டனமும் தலைதூக்கிய படியே இருந்தது. அந்த நேரத்தில் அதாவது 1911-ம் ஆண்டில், அக்டோபர் மாதத்தின்போது, இத்தாலி நாடு, துருக்கியின் பக்கத்து முஸ்லிம் நாடான திரிப்போலியை காரணம் ஏதுமின்றிப் படைபலத்தால் பிடித்தது. இந்த ஆக்ரமிப்பைக் கண்ட துருக்கி, அண்டை நாட்டுக்கு உதவ வேண்டும் என்று எண்ணியதால், அன்வர் தலைமையில் படை ஒன்று புறப்பட்டது. அந்தப் போரில் அன்வர் முஸ்தபாவுக்கு வழங்கவேண்டிய மரியாதையை, பொறுப்பைக் கொடுக்காமல், படைத்தலைவனாக முஸ்தபா இருக்கும்போது அன்வரே படைத்தளபதியாக மாறி, துருக்கிப் படைக்குத் தலைமை தாங்கிச் சென்றது முஸ்தபாவுக்கு பெருத்த அவமானமாகப்பட்டது. இதனால், அன்வரும் முஸ்தபாவும் பகிரங்கமாக, நேரிடையாகவே மோத ஆரம்பித்தார்கள். ஆனால், இவர்கள் இருவருக்கும் இடையே சிலர் செய்ய முயன்ற சமாதான முயற்சி தோற்றது. திரிப்போலியில், இத்தாலிக்கும்-துருக்கிக்கும் இடையே போர் ஏற்பட்டபோது தனது மனக்குறைக்கு மதிப்பளிக்காமல், முஸ்தபா துருக்கிப் படைக்குத் தளபதியாக இருந்து போர் நடத்தினார். ஆனால், போரில் சமாதான நிலைதான் ஏற்பட்டது. அதனால், துருக்கியைச் சுற்றிலும் பகைவர்களின் ஆதிக்கம் அதிகமானது. அதைக் கண்ட ரஷ்யர்களும், ஆங்கிலலேயர்களும் துருக்கியைப் பிடிக்க அவரவர் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார்கள். அன்வர் ஜெர்மன் நாட்டின் உதவியை நாடினார். அதன் உதவியால் சிதறிய தனது துருக்கிப் படையை ஒழுங்குபடுத்தினார். இந்தச் சீரமைப்புப் பணி ஜெர்மன் படைத்தளபதி லிமான் வான் திட்டப்படி நடந்தது. காரணம் அவர்தான் திரிபோலி போரின்போது துருக்கிப் படைக்குரிய ஆலோசகராக இருந்தார். இரஷ்சியர்களையும், ஆங்கிலேயர்களையும் எதிர்த்து நடைபெற்ற அந்தக் கடுமையான சண்டையில், முஸ்தபா கமால் மிகப்போர்த் தந்திர யூகங்களோடு வியூகங்களை அமைத்துப் போரிட்டதால், அவரது வீரத்தின் விளைவுகளை மக்கள் கண்டார்கள் கமால் போராற்றலை பெரும் வியப்போடு பாராட்டி மகிழ்ந்தார்கள். துருக்கி மக்களிடையே இந்த முஸ்தபாகமால் பெருமை, புகழ் அதிகமாக ஆக, அன்வருக்கு அழுக்காறு ஏற்பட்டது. அதனால், கமால் புகழைக் கெடுக்க அவதூறுகளையும், பழிகளையும் முஸ்தபாமீது பரப்பினான். துருக்கி சுல்தானை தனது கைப்பொம்மையாக்கிக் கொண்டு ஒரு முறை முஸ்தபா கமாலை அன்வர் பதவியைவிட்டு இறக்கிவிட்டார். சுல்தானுக்கு அதனால் உள்நாட்டு மக்களது எதிர்ப்பு வலுத்தது கலகங்கள் பரவலாக உருவாகின. அப்போது முஸ்தபா பிரிட்டன் படையுடன் போரிட்டு விரட்டியடித்தார். இதனால் துருக்கி சுல்தான் இருந்த இடம் தெரியாமல் எங்கோ தலைமறைவாகினார். புதிய பாராளுமன்றத்தை துருக்கி மக்கள் உருவாக்கினார்கள். அதன் தலைவராக முஸ்தபா கமால் ஆக்கப்பட்டார். இதனால் துருக்கி நாட்டில் கலவரங்கள் ஏற்பட்டன. மக்களின் தாக்குதல்களை எதிர்த்து நிற்க முடியாத துருக்கி துரோகிகள் கிரேக்க நாட்டுக்கு ஓடினார்கள். அங்கே ஓடிய அவர்கள் கிரேக்கர்களைத் தூண்டிவிட்டு துருக்கியைத் தாக்குமாறு கூறினார்கள். 1922-ம் ஆண்டு துருக்கியை எதிர்த்து, துரோகிகள் படைகளும் கிரேக்கப் படைகளுடன் சேர்ந்து கொண்டு போராடின. ஆனால், கமால் ஓய்ந்து விடாமல், முன்பைவிடப் பலமாக, பயங்கரமாகக் கிரேக்கப் படைகளையும், துரோகப் படைகளையும் தாக்கிப் போராடினார். அதனால் எல்லாப் படைகளும் முஸ்தபாவின் போரை எதிர்த்து நிற்க முடியாமல் புறமுதுகு காட்டி ஓடின. முஸ்தபா, மக்களுடைய மன நிலையை உணர்ந்து, சுல்தான் ஆட்சிக்கு ஒரு முடிவுகட்டி, முதன் முதலாகத் துருக்கியில் குடியரசு ஆட்சியை நிலைநிறுத்தினார். அதற்கான சட்டதிட்டங்களையும் உருவாக்கினதுடன் அவரே முதல் குடியரசுத்தலைவராகவும் பொறுப்பேற்றார். முஸ்தபா குடியரசுத் தலைவரானதும், நாட்டின் பழைய நிலைகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு பல சீர்திருத்தங்களைச் செய்தார். முஸ்தபா செய்த சீர்திருத்தங்களை எல்லாம் முஸ்லிம் மதவாதிகள் ஒன்று கூடி எதிர்த்தார்கள். அவர்களது எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல், அவர் வெற்றி பெற்று ஆட்சியை நிலைநாட்டினார். துருக்கிநாட்டில் பெண்களது வாழ்க்கை படு பயங்கரமாக இருப்பதை முஸ்தபா கண்டார். அடிமைகளாக மதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு, பெண்ணுரிமைச் சுதந்திரங்களை வழங்கினார். அவர் ஆட்சியின் போதுதான் இஸ்லாம் பெண்கள் அணியும் படுதா முறைகளை நீக்கினார். துருக்கி நாட்டுப் பெண்கள் எல்லாம் அவரது ஆட்சிக் காலத்தில் புதுமைப் பெண்களாக வாழ்ந்திட விழிப்புணர்ச்சி பெற்றார்கள். இது போன்ற பல சீர்திருத்தங்களைத் துருக்கி நாட்டு மக்களது நலவாழ்வுக்காக சட்டத்தின் மூலம் செய்து சாதனைகளைப் படைத்த முஸ்தபா கமால் பாஷா 1938-ம் ஆண்டு நவம்பர் 31-ஆம் நாள் மறைந்தார். அவருடைய ஆட்சியில் துருக்கிநாடு சொர்க்க பூமியாக மாறி வளம் பெற்றது. ‘எஜமானன் நூ’ பர்மா முதல் பிரதமர் ஆனார்! பர்மா மொழியில் ‘தக்கின்’ என்றால் ‘எஜமானன்’ என்று பொருள்! இந்தப் பட்டத்தைப் பர்மா இளைஞர்களும் பள்ளி மாணவர்களும் தங்கள் பெயர்களுக்கு முன்னால் வைத்துக்கொண்டு, பர்மா நாட்டின் பட்டி தொட்டிகள், நகரங்கள் உட்பட்ட பல இடங்களில் கோலாகலமாக ஊர்வலம் வந்தார்கள். ‘தக்கின்’ என்ற பட்டப்பெயரைச் சூட்டிக்கொண்டவர்கள் எல்லாம், பர்மா நாட்டுக்கும், மொழிக்கும் தங்களது உயிரையும் கொடுக்கத் தயாரான தேசபக்தர் படையிலே, சுதந்திர அணிகளிலே பக்தி பெற்றவர்களாவர். அதன் அறிகுறியாகத்தான் பர்மிய மக்கள் அந்த நாட்டிலே ஒரு பெரும் புரட்சியை உருவாக்கிய படைகளுடன் நாட்டுப் பற்றோடு இரண்டறக் கலந்து, எதற்கும், அஞ்சாத விடுதலை வீரர்களாகப் பணியாற்றினார்கள். அந்நாட்டு மக்களது விடுதலை வேட்கையின் உட்பொருள் என்னவென்றால், “பர்மா நாட்டிற்கு நாங்களே எஜமானர்கள் - பிரிட்டிஷ்காரர்கள் அல்ல!” என்ற சுதந்திர வெறிதான் காரணமாகும்! இவ்வாறு அவர்கள் தங்களைத் தாங்களே ஏன் அவ்வாறு அழைத்துக் கொண்டார்கள்? ஆங்கிலேய வெள்ளையர்களை எங்கு பார்த்தாலும் சரி, அல்லது அவர்களுடன் பேசும் நெருக்கம் பெற்ற நண்பர்களானாலும் சரி, அவர்களைக் கண்டதும் பர்மியர் கூறும் முதல் விடுதலை கீதம், அதாவது ஜெய்ஹிந்த், வந்தே மாதரம், சுயராச்சியம் எமது பிறப்புரிமை என்ற சுதந்திர உரிமை உணர்ச்சியூட்டும் கோஷங்களைப்போல, பர்மியர்களும் ‘தக்கின்’ என்பார்கள் நாங்கள் பர்மாவின் எஜமானர்கள் என்று எடுத்த எடுப்பிலேயே பர்மியர்கள் முழக்கமிட்ட பின்புதான், பிறகு எதையாவது மற்றவர்களுடன் பேசுவார்கள். அதனாலேதான் பர்மியர்கள் தங்களைத் தாங்களே எஜமானர்கள் என்ற சங்கநாத வணக்கம் செய்து கொண்டார்கள். பர்மியர்களின் இந்த ஆச்சரியமான போராட்டத்தின் மூலகர்த்தா யார்? அவர்தான் ‘நூ’ என்ற புரட்சி மனம் படைத்த இளைஞராவார். ‘பர்மாவின் எஜமானர் நாங்களே’ என்று அறிவித்துக் கொண்ட அந்த வீரரின் பின்னாலே எண்ணற்ற இளைஞர்கள், மாணவர்கள், பொது மக்கள் எனப்படுவோர் விடுதலை முழக்கப்பணிகளைச் செய்து கொண்டே ஓர் இராணுவ அமைப்பைப் போல இரும்பு நெஞ்சுடன் போராடினார்கள். இந்த ‘நூ’ தான் பிறகு ஒரு நாள் பர்மிய மக்கள் அனைவருக்கும் பிரதமரானார் என்பது விடுதலை உணர்வு கொண்ட ‘தக்கின்’ படையினருக்கு வியப்பாகவே விளங்கியது. இந்த ‘நூ’ என்பவர், 1907-ம் ஆண்டில் பர்மா வியாபாரி ஒருவருக்கு மகனாகப் பிறந்தார் சிறுவனாக இருந்தபோதே அவருக்கு இளைஞர் தாதா என்ற ரவுடித்தனப் பட்டமும் கிடைத்துவிட்டது.அவ்வளவு பெரிய போக்கிரியாகப் பேர் பெற்றார். பெற்றோர்கள், நண்பர்கள், உறவுகள் யாருமே இந்த ‘நூ’வை ’வா’ என்று கூட அழைப்பது இல்லை! இந்த போக்கிரி போனால் போதும் என்று அவருள்ள இடத்திலிருப்போர் பேசுவார்கள். பள்ளிப் படிப்பை எப்படியோ முடித்து கல்லூரிப் படிக்கட்டுகளிலேயும் காலடி வைத்துவிட்டார்! என்னவோ அவரது பழைய பழக்க வழக்கங்கள் எல்லாம் மாறி, குறைந்து, கல்வியாளர்களும் பொதுமக்களும் பாராட்டும் அளவிற்குக் கவிதைகளை எழுதித்தள்ளும் ஒரு பாரதியாக மாறிவிட்டார் ‘நூ’ பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மறம்பாடி வீரத்தை எழுப்புவார் மக்களுக்கு தனக்குப் பிடிக்காதவர்கள் என்றால் வசைபாடி எழுதுவார், விருப்பமானவர்களானால் அவர்கள் மீது புகழ்மாலை புனைந்து சூட்டுவார்! பர்மா விரோதிகள் எட்டப்பர்களாக விளங்குவோர் என்று எண்ணிவிட்டாரானால், உடன் அந்தத் துரோகிகள் மீது அறம் பாடுவார்! ’நூ’இவ்வாறு எழுதும் கவிதைகள் நாளடைவில் சுதந்திர வீர முழக்கங்களான கவிதை உணர்வுகளை ஊட்டிடும் புரட்சி மனப்பானமையோடு பர்மா பத்திரிகைகளிலே வெளிவரும். 1930-ம் ஆண்டின் போது, பாரதியாரைப் போல் விடுதலை விடுதலை என்ற பொருளை வழங்கும் பர்மா மொழியிலே கவிதையைப் பாடியபடியே வீதிவலம் வந்து, ஒரு பொதுமேடையிலே ஏறி, சிங்கநாதம் செய்தார். அந்த சிங்கநாதம் என்ன தெரியுமா? ‘வெள்ளையனே பர்மாவை விட்டு ஒடு! இல்லையென்றால் துரத்துவோம்! என்ற பொருளிலே அன்று அவர் பாடிய அந்த சுதந்திரப் போர் கவிதை, கேட்ட மக்களை வேங்கைகளாக்கியது! சினந்து எழுந்தார்கள் ’தக்கின்நூ’ ’எங்கள் எஜமானர் நூ’வே வாழ்க என்றார்கள். மேடைகள் மட்டுமா? பத்திரிகைகளிலே பல கட்டுரைகளை எழுதினார் பத்திரிகை ஆசிரியர் ஊ-பா-சோ;நூ வின் நண்பரானார்! பத்திரிகை வெள்ளையர் ஆட்சி மீது வெறுப்பு நெருப்பைக் கொட்டியபடியே தவறாமல் வெளிவந்தது. பார்த்தனர் பிரிட்டிஷார்! ஏவினர் அடக்குமுறைச் சட்டங்களை! நூ-சிறையிலே தள்ளப்பட்டார்! பத்திரிகை ஆசிரியர் பத்திரிகையைப் பயந்துபோய் நிறுத்திவிட்டார். சும்மா இருப்பாரா ‘நூ’ சிறையில்? சிறைச்சாலை தேசபக்தர்களை என்ன செய்யும் என்றபடியே, சிறைக்குள் அவர் கம்யூனிச இலக்கியங்களைப் படித்தார் சோசலிசச் சித்தாந்தங்களைப் புரிந்து சிறைக்குள்ளேயே பல சிங்கங்களை உருவாக்கிச் சிலிர்த்தெழ வைத்தார்! ஏன்? எப்படியும் பார்மாவைப் பிரிட்டிஷாரிடம் இருந்து விடுதலை பெறச் செய்திட வேண்டும் என்ற ஒரே இலட்சியத்திலே, சிறைக்குள்ளேயே விடுதலை உணர்வுப் படைகளை உருவாக்கினார். இதைக்கண்ட பிரிட்டிஷ் ஆட்சி, ‘நூ’ வால் சிறை ஒழுங்கு கெடுகிறது எனக் காரணத்தைக் காட்டி அவரை விடுதலை செய்தது. சிறையிலே இருந்து வெளிவந்த ‘நூ’ ரங்கூன் கல்லூரியிலே சேர்ந்து 1936-ம் ஆண்டு வழக்குரைஞரானார். தேசபக்தியால், அவர் பிரிட்டிஷாரின் சட்டத்தை மீறி பல போராட்டங்களைச் செய்து கைதானார். பிறகு விடுதலையானார் மறுபடியும் மாறி மாறி கைதாகும் நிலையை நாட்டிலே உருவாக்கி, பர்மிய மக்கள் மனதிலே விடுதலை நெருப்பை மூட்டி விட்டுவிட்டார்! பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் போன்ற பல்துறையினரின் ஆதரவை ‘நூ’ பெற்றார். அந்தப் பொதுப்பலம், வெள்ளையர்கள் ஆட்சியை வேரறுக்கும் வேலைகளை ஆங்காங்கே செய்து வந்ததால், பிரிட்டிஷ் அரசு திணறித்திணறி பெருமூச்சுவிட்டபடியே இருந்தது. இரண்டாவது உலகப்போர் கடுமையாக நடந்து கொண்டிருந்த நேரம், ஐப்பானியர்கள் பர்மாவைத் தாக்கி எப்படியும் நாட்டைப் பிடித்துவிட தீவிர திட்டம் இயற்றி படைபலத்தோடு முன்னேறிவந்தார்கள். பிரிட்டிஷ் படை திணறிக் கொண்டிருந்ததைக் கண்ட ‘நூ’ பர்மாவுக்கு விடுதலை தருவதாக இருந்தால், ஜப்பான் படைகளை எதிர்த்துப் போரிடுவோம். இல்லாவிட்டால் போருக்கு ஆதரவு தரமாட்டோம் என்று அறிக்கைவிட்டார்! அரசுக்கும் அறிவித்தார்! ஆங்கிலேயர் அரசு ‘நூ’ திட்டத்தை ஏற்க மறுத்தது. அதனால் ‘நூ’ அரசுக்கு ஒத்துழைப்புத் தரமாட்டோம் என்று பொதுமக்கள் இடையே பகிரங்கமாக அறை கூவலிட்டார். வெள்ளை ஏகாதிபத்தியம் வேடிக்கையா பார்க்கும்? பிடி ‘நூ’ வை; அவரது புரட்சிக்காரர்களை என்று 1940-ம் ஆண்டில் அனைவரையும் கைதுசெய்து கொடுஞ்சிறையில் அடைத்தது! ஐப்பான் தாக்கியது பர்மாவை. தாக்குப்பிடிக்க முடியாத பிரிட்டன் பிடரியில் அடிப்பட்ட சிங்கம் போல ஓடியது! இதனால், பர்மாவை ஐப்பான் போரில் பிடித்துக் கொண்டு வெற்றிக்கொடி நாட்டியது! உடனே ஐப்பான் ‘நூ’வையும், அவரது புரட்சிப் படையினரையும் விடுதலை செய்தது. ’நூ’ கேட்டுக்கொண்டபடி ஐப்பான் அப்போது ஓர் இடைக்கால அரசை அமைத்தது. இந்த அமைச்சரவையில் ‘நூ’ அயல்நாட்டு மந்திரி என்ற பொறுப்பை ஏற்றார் பிறகு ஐரோப்பாவிலே உள்ள இட்லர், முசோலினி ஆகியோர் நேசநாடுகளிடம் தோல்வி கண்டதால், ஐப்பானியரும் பர்மாவில் நடந்த பிரிட்டிஷ் ஐப்பான் யுத்தத்தில் தோற்றுவிட்டனர், மீண்டும் பிரிட்டன் பர்மாவைப் பிடித்து வெற்றிபெற்றது. வெள்ளையர் வெற்றி பெற்றார்களே தவிர, மறுபடியும் பர்மிய மக்களை அடக்கி ஆள்வது முடியாத செயல் என்பதைத் திட்ட வட்டமாக உணர்ந்ததால் பர்மாவுக்குச் சுதந்திரம் வழங்க முடிவு செய்தனர்! அப்போது ‘ஊ அவுங்சான்’ தலைமையில், பாசிச எதிர்ப்பு முன்னணிக்கட்சி என்ற ஒரு கட்சி பர்மா சுதந்திர ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தி வந்தது. நாட்டின் அரசியல் சட்டத்தை எழுதும் ஓர் அரசியல் நிர்ணய சபைக்கு ’நூ’தலைவரானார்! பர்மா தேசிய விடுதலை பெற்ற ஓரிரு மாதங்களில் பர்மாவிலே ஒரு பயங்கரம் நடந்தது. அதாவது, 1947-ம் ஆண்டில் அப்போது பாசிசஎதிர்ப்புமுன்னணி ஆட்சிக்குப் பிரதமராக இருந்த ’ஊ அவுங்சானும், அவருடைய அமைச்சரவைக் குழுவைச் சேர்ந்த ஏழு அமைச்சர்களும் எதிரிகளால் பாராளுமன்றத்திலேயே படுகொலையானார்கள். இது மக்கள் இடையே பெரிய நட்டத்தையும் பரபரப்பையும் உருவாக்கிவிட்டது. அப்போது இருந்த பர்மிய அரசியல் சூழ்நிலைகள் காரணமாக, 1948- ஜனவரி 4-ம் தேதியன்று ‘நூ’ பிரதமரானார் பர்மாநாடு குடியரசு நாடானது. ஆங்கிலேயரின் பொருளாதாரச் சுரண்டல் ஆசையால் வளமிழந்திருந்த பர்மாநாடு, குடியரசு நாடாக மாறியதும், ‘நூ’ அந்த நாட்டை வளம் கொழிக்கும் பூமியாக மாற்றிவிட்டார். நிலச் சீர்திருத்தங்களாலும், பிற விவசாயப் பணிகளாலும், பர்மா விவசாயிகள் வளமாகவும், நலமாகவும், சுதந்திர உரிமையோடும் வாழலானார்கள். தொழில்களை ‘நூ’ தேசியமயமாக்கினார்! லஞ்ச லாவண்ய கொள்ளையர்களைத் திருத்தும் சட்டங்களைக் கொண்டு வந்தார். புதிய தொழிற்சாலைகள் பல அமைத்து தொழில் வளத்தைப் பெருக்கிக் காட்டினார்! பர்மாவின் உள்நாட்டிலும், அயல்நாடுகளில் இருந்தும் ‘நூ’ வுக்கு அரசியல் எதிர்ப்புகள் பெருகின. பர்மாவில் வாழும் கரீன்கள் என்ற பிரிவினை வாதிகள் கரீன் இனத்திற்கு தனி நாடு தேவை என்று ‘நூ’ வுக்கு எதிராக கலகம் செய்தார்கள். சீன எல்லை பர்மாவை ஒட்டியிருந்ததால் கம்யூனிஸ்டுகள் தொல்லைகளும் சூழ்ந்தன. இவற்றை ‘நூ’ சாமர்த்தியமாக இரும்புக் கரம் கொண்டு சமாளித்தார்! அதே நேரத்தில் பர்மிய மக்களின் தேசிய உணர்வுகளை மதித்து அவர்களை ஒற்றுமைப்படுத்தினார்! கம்யூனிஸ்டுகளின் தொல்லைகளை சூழ்நலைக்கு ஏற்றவாறு சமாளிக்க, புத்தமதத்தைப் பர்மாவிலே பரப்பினார். அதற்காக, புத்தமத மறுமலர்ச்சி இயக்கத்தை உருவாக்கினார். கம்யூனிஸ்டுகள் மத விரோதிகள் என்ற காரணத்தை மக்களுக்கு விளக்கிக்காட்டி, கம்யூனிஸ்டுகளின் இரும்புத் திரை ஆட்சியை எதிர்த்து, மக்களின் ஆன்மிகஉணர்வுகளுக்கு மரியாதை தந்தார். எட்டாண்டு கால அரசியல் வாழ்வுக்குப் பிறகு, ‘நூ’ பெளத்த பிட்சுவாகி துறவு பூண்டார்! மக்களது சேவைக்காக முழுநேரத்துறவியானார். அயர்லாந்தின் விடுதலை - வீரன் டிவேலரா பகட்டான விளம்பரமே அவனுக்குப் பகை! பணி செய்து தியாகத் தழும்புகள் ஏற்பதே அவனுக்கு நகை! கடமை உணர்ச்சிகளே அவனுக்கு மனசாட்சி! கட்டுப்பாடான அரசியல் அறமே அவனது உணர்ச்சி கண்ணியமிக்கப் போராட்ட உணர்வான எழுச்சி! இவைகளை மக்களுக்கு செய்வதே புரட்சி! அயர்லாந்து நாட்டு மக்கள் இடையே இத்தகையத் தேசிய உணர்ச்சிகளைத் தட்டிஎழுப்பிக் கொண்டிருந்தான் அயர்லாந்து நாட்டின் விடுதலைத் தந்தையெனப் போற்றப்பட்ட மாவீரன்டிவேலரா! ஐரிஷ் மக்களுக்காக அயராது உழைத்த அருந்தலைவன் என்று அயர்லாந்து மக்களால் புகழப்பட்டதால், அவனை உலக விடுதலை வரலாறு அயர்லாந்து நாட்டின் விடிவெள்ளி என்றும், ஐரிஷ் மக்களின் தந்தை என்றும் போற்றுகின்றது. அந்த நாட்டு மக்களும் அவனிடம் அளவிடற்கரிய அன்பையும், பெருமையையும், நம்பிக்கையையும் வைத்திருந்தார்கள். இன்றைக்கு ஏறத்தாழ நூற்றுப்பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு ஸ்பானிய நாட்டுத் தந்தைக்கும் அயர்லாந்து நாட்டு மாதரசிக்கும், அமெரிக்காவிலே உள்ள நியூயார்க் என்ற மாநகரிலே பிறந்தவர்தான் இந்த டிவெலரா! இவரது மூன்றாவது வயதிலேயே பெற்றோர்களை இழந்து, ஆனாதையானார்! அதனால் தாய்மாமனால் வளர்க்கப்பட்டார். இளம் வயதிலேயே தாய்தந்தையை இழந்த டிவேலரா, அங்குள்ள மக்களது அனுதாபத்தாலும், மாமனின் அன்பாலும் சிறிதுசிறிதாக கல்விப் பயிற்சி பெற்றுத் தேர்ந்து, கல்லூரிக் கல்வியையும் அரும்பாடு பட்டுப் பெற்று, பிறகு அமெரிக்கக் கல்லூரியிலே கணிதப் பேராசிரியர் பதவியைப் பெற்று பணியாற்றி வந்தார்! இவ்வாறு கல்லூரி ஆசிரியராக இருந்தபோது, அரசியல் துறையிலே ஆர்வம் கொண்டார். அதற்கான வாய்ப்புகளும் அவரை அப்போது தேடி வந்தன. கி.பி.1910-ஆம் ஆண்டில், தனது தாயின் தாய்நாடான அயர்லாந்து வந்து சேர்ந்தார். அப்போது அந்த நாட்டில் தேசிய எழுச்சிப்போர் பரவலாக உருவாகிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். அந்த தேசிய எழுச்சியிலே கூட அவர் ஈடுபடாமல், மக்களுக்கு சேவை புரியும் இயக்கத்திலே சேர்ந்து, பொதுநலத் தொண்டிலே ஈடுபட்டார். பெயர் தான் மக்கள் பொது நலத் தொண்டு. ஆனால், அந்தத் தொண்டிலே தீவிரமாக ஈடுபட்டுச் சேவை புரிந்தவர்கள். பலர் தங்களது உயிர்களை இழக்கும் நிலை ஏற்பட்டது. அதற்குக் காரணம், அப்போது அயர்லாந்தில் நடந்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஏற்பட்ட மக்களது தேசிய எழுச்சியின் கடுமையான போராட்டங்கள்தான். அத்தகைய உயிர் பாதுகாப்பற்ற போராட்டத்திலே, பொதுநலத் தொண்டு செய்து உயிர் இழக்காமல் பிழைத்த ஒரு சிலரிலே ஈமன் டிவேலராவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அயர்லாந்து நாட்டு மக்களின் தேசிய உணர்ச்சி நெருப்பு கொழுந்து விட்டு எரியும் எழுச்சியைப் பார்த்தார் டிவேலரா. இது எதிர்காலத்தில் இந்த மக்களது பேராட்டம் வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையை அவருக்கு அளித்தது. அதனால், அயர்லாந்து நாட்டு மக்களின் வாழ்வும், தாழ்வும் வெவ்வேறு அல்ல, நமது சொந்த வாழ்க்கையிலே ஏற்படும் வாழ்வும் தாழ்வும் வேறு அல்ல என்பதை அவர் பிரித்துப் பார்க்காமல், பொது நலமே தனது வாழ்வியல் நலம் என்று உணர்ந்தார். கி.பி. 1919-ஆம் ஆண்டில் அயர்லாந்து மக்கள் இடையே உருவான தேசியப் புரட்சியை, அப்போதைய அந்த நாட்டு பிரிட்டிஷ் அரசு, தேசியக் கலகம் என்ற பெயரைச் சூட்டி அடக்கு முறைகளை ஏவியது. இருந்தாலும், 1913-ஆம் ஆண்டு முதல் ஐரிஷ் நாட்டின் இளைஞர்கள் பலர் ஆயுதப் புரட்சிக்கு திட்டம் வகுத்து, அயர்லாந்து நாடு முழுவதும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஆயுதப் புரட்சியை உருவாக்கி செயல்பட்டு வந்தார்கள். அந்த இளைஞர்கள் அணியிலே டிவேலரா சேர்ந்து ஒரு சிறு அணியைத் தலைமை தாங்கி நடத்தினார். இதற்கு முன்பு டிவேலராவுக்கு ராணுவ முறைப் பயிற்சியோ, ஆயுதப் புரட்சிக்குரிய ஆக்கப் பணிகளோ ஏதும் தெரியாது. என்றாலும், ஆயுதப் புரட்சியைச் செய்த மற்ற இளைஞர் அணிகளின் வீரதீர சாகச போர்த்திட்டங்களைவிட, அரிய முறையிலே தனது அணியை நடத்தி, மற்ற ராணுவ அனுபவ சாலிகள் எல்லாம் வியந்து பாராட்டும் அளவுக்கு டிவேலரா செயல்பட்டார்! இத்தகைய வீரப்போர் புரியும் ஆற்றல் பெற்ற டிவேலரா, கி.பி.1919-ஆம் ஆண்டில் நடந்த அயர்லாந்து மக்களின் தேசிய எழுச்சிப் போராட்டத்தின் போது பொதுநலத் தொண்டிலே மட்டுமே ஈடுபட்டாரே, ஏன்? 1919-ஆம் ஆண்டின் பிரிட்டிஷ் ஆட்சி எதிர்ப்பு ஆயுதப் புரட்சியாளர்கள், தாங்கள் நடத்திய அப்போதைய புரட்சி நன்றாகத் திட்டமிட்டு நடத்தப்படாததால், தடி தூக்கியவன் எல்லாம் புரட்சிக்காரன் என்று தங்களையே சிலர் அவ்வாறு எண்ணிக்கொண்டு மனம்போன போக்கிலே புரட்சியை நடத்தியதால், அந்தத் தேசிய எழுச்சியானது புரட்சியாக மற்றவர்களுக்குப் புலப்படாமல் தேசியக் கலகமாகத் தோற்றமளித்தது. அதனால் டிவேலரா அந்த எழுச்சியில் நேரிடையாக ஈடுபடாமல், மக்கள் பொதுநலச் சேவைப் பிரிவில் சேர்ந்து தொண்டாற்றிடும் நிலை ஏற்பட்டது. அது மட்டுமல்ல; புரட்சியை நடத்த முற்பட்ட ஆயுதமேந்திய இளைஞர் படைகள் எல்லாம். தங்களது வெற்றியிலேயே தங்களுக்குள் நம்பிக்கை அற்றவர்களாகச் செயல்பட்டார்கள். அவர்களுக்குள் ஏன் அந்த எண்ணம் ஏற்பட்டுவிட்டது என்றால், நாம் நடத்தும் ஆயுதப் புரட்சி ஓர் அடையாளம்தான் என்ற அளவோடு அந்த இளைஞர்களது படை திருப்தி அடைந்து விட்டதும் ஒரு காரணமாகும். இந்த ஆயுதம் தாங்கிய புரட்சிப் படைகளுக்கு இடையேதான், டிவேலரா தலைமை தாங்கி நடத்திய எழுச்சிப்படை மூர்க்கத்தனமாகவும், திறமையாகவும் செயல்பட்டதால், ராணுவப் பயிற்சி பெற்றிருந்த அந்த ஆயுதப்புரட்சியாளர்கள் எல்லாம் டிவேலரா தலைமையைக் கண்டு பெருமூச்சுவிட்டு ஆச்சரியப்பட்டார்கள். டிவேலராவின் அந்த ஆயுதப் புரட்சிப்படையின் செயல் திறனைக் கண்ட பிரிட்டிஷ் தளபதிகளிலே ஒருவர், “எல்லாருமே டிவெலராவைப் போலவே திட்டமிட்டு அணி வகுத்துப் புரட்சியை நடத்திய திறமை சாலிகளாக இருந்திருந்தால், ஐரிஷ் கலகத்தை எளிதில் அடக்கி இருக்கமுடியாது” என்று ஆவேசத்தோடும் வியப்போடும் கூறினர். தேசிய எழுச்சிப் புரட்சியின் போது பலவீனப்பட்டுத் தோற்றுப்போன படையினர், பிரிட்டிஷார் படையினரிடம் சரணாகதி அடைந்து விட்டார்கள். ஆனால், டிவேலரா மட்டும் சரணடையாமல் தனது படையின் அணிவகுப்பைத் தளரவிடாமல், சோர்வடைய விடாமல் மூர்க்கத்தனமான வெறியோடு போராடவைத்தார். இருந்தாலும், டிவேலரா அணியிலே இருந்த ஒரு சில கோழைகளின் நச்சரிப்புத் தாங்க முடியாமல், கடைசியில் டிவேலராவும் பிரிட்டிஷ் படையினரிடம் சரணடைந்தார். பிரிட்டிஷ் ஆட்சி, டிவேலராவையும், அவருடன் வீர தீரமாகப் போரிட்ட நண்பர்கள் ஆறுபேரையும் கைது செய்து, நீதிவிசாரணை நடத்தி, அவர்களுக்கு ஆயுள் தண்டனையை வழங்கியது. அவர்கள் லீவிஸ் என்ற சிறையிலே அடைக்கப்பட்டார்கள். டிவேலராவையும், அவருடன் தீவிரமாகச் செயல்பட்ட ஆயுதமேந்திய இளைஞர்களையும் ஆயுள் தண்டனை கொடுத்துச் சிறையிலே பூட்டிவிட்டதால், அயர்லாந்திலே இனி புரட்சி வெடிக்க வழியில்லை என்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தப்புக்கணக்குப் போட்டது. வீரன் எங்கிருந்தால் என்ன? அவனுக்கு சிறையும் - வீடும், நாடும் ஒன்றுதான் என்று சிந்தித்த டிவேலரா, தன்னுடன் இருந்த நண்பர்களையும், மற்ற சரணாகதி அடைந்த இளைஞர்களையும் ஒன்று திரட்டி, பல விதமான புரட்சிகளைச் சிறைக்குள்ளேயே செய்து கொண்டிருந்தார். சிறை அதிகாரிகள் சரணாகதியடைந்தவர்களை நேர்மையாக, மனிதாபிமானத்தோடு, நடத்தாமல், கொடுமைகளைக் கட்டவிழ்த்துவிடும் கொடுங்கோலர்களாக இருக்கிறார்கள் என்ற காரணத்தை டிவேலரா பிரிட்டிஷ் ஆட்சிக்கு உணர்த்தி, சிறைக்குள்ளேயே ஒரு புரட்சி இயக்கத்தை நடத்தி ஆட்சியினரை, சிறை அதிகாரிகளை ஆட்டிப்படைத்தபடியே இருந்தார். எதற்கும் அஞ்சாமல் ஓர் ஏகாதிபத்திய ஆட்சியை எதிர்த்து சிறைப் புரட்சி நடத்தும் டிவேலராவை, வேறு ஒரு சிறைக்கு மாற்றியது ஆங்கில ஆட்சி! சிறையிலே உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வந்த டிவேலராவின் சிறைப்புரட்சிச் செயல்கள், நாட்டு மக்களிடையே பெரும் கிளர்ச்சியையும், எழுச்சியையும், உணர்ச்சிகளையும் உருவாக்கி, டிவேலராவின் நாட்டுப்பற்றுத் தியாகங்கள் மீது பெரும் நம்பிக்கையை, மரியாதையை, மதிப்பை உருவாக்கியது மட்டுமல்ல; டிவேலராதான் நமக்குரிய தலைவர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தின. எதிர்பாராமல் டிவேலரா 1917-ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்! மக்கள் அவர்மீது வைத்திருந்த உண்மையான நம்பிக்கையால், அவருக்கு மாபெரும் வரவேற்பை வழங்கி, வாழ்த்தினார்கள். அன்றைய வரவேற்புக் கூட்டத்தில் டப்ளின் நகர மக்கள் கடல்போலத் திரண்டு வந்திருந்தார்கள். சிறையிலே இருந்து விடுதலை பெற்ற டிவேலரா, மனம் மாறிக் காணப்பட்டார். ஓர் ஏகாதிபத்திய ஆட்சியை வன்முறைப் புரட்சிகளால் தூக்கி எறிய முடியாது. சட்டத்துக்கு உட்பட்ட செயல்முறைகளால் தான் அந்த அரசை அகற்ற முடியும் என்று உணர்ந்தார்.அதாவது, ஈமன் டிவேலரா என்ற அந்தப் புரட்சியாளன் கத்தியின்றி. ரத்தமின்றி, அகிம்சா முறைகளாலான சட்டத்துக்குட்பட்ட போராட்டங்களால் தான் ஐரிஷ் மக்களுக்குரிய சுநந்திரத்தைப் பெற்றுத் தரமுடியும் என்ற அயர்லாந்து காந்தியடிகளானார். தனது காந்தீய சிந்தனைக் கேற்றவாறு, அயர்லாந்து மக்களுக்காக ஐரிஷ் என்ற கட்சி, அதாவது ஐரிஷ் மொழியிலே சின்ஃபின் இயக்கம் என்ற ஒரு கட்சியைத் துவக்கினார். இந்தக் கட்சியிலே, நாட்டு மக்களை உறுப்பினராக்கினார்! அயர்லாந்து நாட்டு மக்களது விடுதலைக்காக அரும்பாடுபட்டு வந்தார்: “உடல் மண்ணுக்கு, உயிர் நாட்டு விடுதலைக்கு” என்று விடுதலைத் தாரக மந்திரத்தை உருவாக்கி மக்கள் இடையே மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தினார். பிரிட்டிஷ் சட்டசபைக்கான தேர்தல், 1917-ஆம் ஆண்டு நடைபெற்றது. டிவேலரா கிஷேர் என்ற மாநிலத்தின் தொகுதியிலே இருந்து போட்டியிட்டு வாகைசூடினார். வெற்றிபெற்ற டிவேலரா, “சட்டமன்றத்தில் இருந்து கொண்டே அயர்லாந்து சுதந்திரத்திற்காக வாதாடிப் போராடி நாட்டை மீட்பேன்” என்று சங்க நாதம் செய்தார்! மக்கள், தங்கள் தலைவனின் தளராத போராட்ட உணர்வைக் கேட்டுப் போற்றி மகிழ்ந்தார்கள். ஆங்கில சட்டசபையில் அயர்லாந்தின் சுதந்திரம் பற்றி முழக்கமிட்டதற்காக, 1918-ஆம் ஆண்டின் போது டிவேலரா கைது செய்யப்பட்டார். ஏன் கைது செய்யப்பட்டார்? அந்த நேரத்தில் ஜெர்மனி நாட்டுடன் பிரிட்டிஷ் கடும் போரில் ஈடுபட்டிருந்தது. அயர்லாந்து நாட்டு மக்கள் ராணுவச் சேவைக்காக கட்டாயமாகச் சேரவேண்டும் என்று பிரிட்டிஷ் ஆட்சி கட்டாயக் கட்டளையிட்டது இந்த ஏதேச்சாதிகார உத்தரவை எதிர்ந்து அயர்லாந்து நாடு வெடித்தெழுந்தது. எங்கு பார்த்தாலும் மக்கள் கிளர்ச்சி வீறிட்டது. இந்த உத்தரவை எதிர்ந்து டிவேலரா வீரமுழக்கம் செய்து மக்களை விழிப்படையச் செய்தார் என்ற காரணத்தைக் குற்றமாகச் சாட்டி அவரைக் கைது செய்தது ஆங்கில ஆட்சி! பிரிட்டிஷ் ஆட்சியின் ஏகாதிபத்திய ஆணவத்தின் முதுகெலும்பான இந்தக் கட்டாயக்கட்டளையை எதிர்த்துக் கட்டுக்கு அடங்காமல் கலகம் செய்து கொண்டிருந்த மக்களை ஆங்கிலேய அரசு கைது செய்தது அல்லவா? அந்தக் கிளர்ச்சிக் காரர்களுடன் டிவேலராவையும் சேர்ந்து லிங்கன் என்ற சிறையிலே அடைக்கப்பட்டார். இதனால் அயர்லாந்து மக்கள் கொதிப்படைந்து, கடலலைகளைப் போல பொங்கி எழுந்தார்கள். ஆங்கிலேய ஆட்சியின் உத்தரவுக்காக ராணுவத்தில் கூலிப்பட்டாளமாகச் சேருவதை விட, ‘அயர்லாந்து நாட்டுக்குச் சுதந்திரம் கொடு! இல்லையானால் போராடிச் சாவோம்’ என்ற விடுதலைக் கோஷங்களை வீதி வீதியாக எழுப்பிக் கொண்டு மக்கள் டப்ளின் நகரத்தையே முற்றுகையிட்டார்கள். இந்தச் சுதந்திரக் கொந்தளிப்பு அயர்லாந்து முழுவதும் வீராவேஷமாகப் பரவியது. “எங்கள் தலைவர் டிவேலரா வாழ்க! அவர் என்ன கூறுகிறாரோ அதைத்தான் கேட்போம். பிரிட்டிஷ் உத்தரவை மதிக்கமாட்டோம்; மீறுவோம் அயர்லாந்து பிரிட்டிசுக்கு ஒத்துழைப்புத் தராது பிரிட்டிஷ் ஆட்சியே அயர்லாந்தை விட்டு வெளியேறு” என்று மக்கள் எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பியபடியே, வாழ்க டிவேலரா! ஓங்குக ஐரிஷ் இயக்கம் என்று ஊர்வலம் சென்றார்கள்! இந்த ஊர்வலத்தினர் வன்முறையிலும் ஈடுபட்டார்கள். 1919 ஆம் ஆண்டு சனவரி மாதம் ஐரிஷ் சட்டமன்றத்தின் முதற்கூட்டம் கூடியது. சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் அப்போது சிறையிலே அடைக்கப் பட்டிருந்ததால், சிலர்தான் சபைக்கூட்டத்துக்குப் போக முடிந்தது. அந்த நேரத்தில் ஆங்காங்கே நகரில் பரவலாகக் குழப்பங்கள், கலகங்கள், சண்டைச் சச்சரவுகள் மூண்டன. மக்கள்-போலீஸ்காரர்களோடும், ராணுவத்தோடும் ஆங்காங்கே ரகசியமாக மோதி பலரைக் கொன்றுக் குவித்தார்கள். பிரிட்டிஷ் ஆதரவாளர்கள் வீடுகளுக்கு தீயிடப்பட்டன! எங்கும் நெருப்பு வெடிப்பு; ஜூவாலை அலைகள்; மக்கள் ஓட்டக்கோஷங்கள்! ஒழிக பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சி என்ற கோஷங்களை மக்கள் ஆக்ரோஷமாக எழுப்பிக்கொண்டு சுதந்திர வெறியர்களாய் அலைந்தார்கள். இந்தக் கிளர்ச்சியின் போது வீழ்ந்த பிணங்களை ஒன்றின்பின் ஒன்றாக, நீளவரிசையில் அடுக்கிப் பார்த்தால், ஏறக்குறைய 650 மைலுக்கும் நீளமாக பிணங்கள் வீழ்ந்துகிடந்தன என்று ஒரு முறை ‘ரீடர்ஷ் டைஜஸ்ட்’ பத்திரிகை எழுதி சோகத்தை வெளியிட்டது. அந்த அளவுக்கு பிணக்களம் போல அயர்லாந்து காணப்பட்டது. இந்த நேரத்தில்தான், டிவேலரா லிங்கன் சிறையிலே இருந்து அதிசயமாகத் தப்பி ஓடினார். ஆனால், வளர்கின்ற நாட்டுப்பற்று அவரது குரலையே எதிர்நோக்கிக்கொண்டே நின்றது. தப்பியோடிய டிவேலரா நேராக மான்ஜெஸ்டர் நகருக்குச் சென்று தலைமறைவானார். அவர் தலைமையில் ஏறு நடைபோட்ட சின்ஃபின் இயக்கத்திற்குக் கூட அவர் எங்கிருக்கிறார் என்ற தகவலை அவர் தெரிவிக்கவில்லை. டப்ளின் நகரத்திலுள்ள அரண்மனை ஒன்றில் நடந்த மக்கட்கட்சியினர் கூட்டத்தில் டிவேலராவைப் பற்றி ஏதேனும் புதிய செய்திகள் உண்டா? என்று ஒருவர் எழுந்து கேட்டார். ஆனால், அக் கூட்டத்தினர் யாரும் ஒன்றும் கூறாமல் ஊமையாக இருந்துவிட்டார்கள். அந்த நேரத்தில் ஒன்றும் கூறாமல் இருந்து விடக்கூடாது என்று நினைத்து மைக்கேல் காவின்ஸ் என்பவர், டிவேலராவிடம் இருந்து தனக்கு ஏதோ ஒருசெய்தி வந்ததுபோல காட்டிக்கொண்டார். “நான் லிங்கன் சிறையில் இருந்தபடியே நாட்டுக்குரிய விடுதலைத் தொண்டுகளைச் செய்து கொண்டிருக்கிறேன்.” என்று அவர், தனக்கு வந்த செய்தியில் குறிப்பிட்டிருப்பதாகக் கூறினார். மைக்கேல் காலின்ஸ் சொல்லியது உண்மைதான என்றாலும், டிவேலரா தன்னைப் பற்றி அப்படிச் சொல்ல நினைக்க மாட்டாரே! நாட்டுத் தொண்டே அவர் செய்து கொண்டிருப்பதனால், அதற்காக, ‘நான் ஓடினேன்’ என்று அவர் கூற வேண்டியதில்லை. சிலநாட்களுக்குள் அவர் அயர்லாந்துக்கே கொண்டுவரப்பட்டார். டிவேலரா சட்டசபைத் தலைவராக இருந்ததால், அவர் தலைமறைவாக இருந்தபோதும் ஆங்கில ஆட்சியினைப் பொருட்படுத்தாமல், வருவது வரட்டும் ஒருகை பார்ப்போம் என்ற மன உறுதியோடு, அயர்லாந்து நாட்டை ஆளத் தொடங்கியது. ஆனால், இதற்குப் பணம் தேவை அல்லவா? பணம் கிடைக்கும் இடம் அமெரிக்கா நாடுதான் என்று நினைத்த டிவேலரா, உடனே நியூயார்க் நகர் போய் சேர்ந்தார். தேவைக்கான பணமும் அவருக்குக் கிடைத்துவிட்டது. ஆனால், அயர்லாந்து நாட்டில் சண்டை பலமாக மூண்டுவிட்டது. இந்தச் சண்டை 1921-ஆம் ஆண்டு சிறுபோராக, நடந்து கொண்டே இருந்தது. இந்த நேரத்தில் டிவேலரா மக்களுக்காக இந்தச் சண்டை நடுவிலே தோன்றினார். இதைக் கண்ட அயர்லாந்து மக்கள் அனைவரும் டிவேலராதான் எங்கள் தலைவர் என்று கோஷமிட்டார்கள். ஒருவாறாக அந்த இருபிரிவினர்களுக்கு இடையே அமைதி உருவானது. டிவேலராவால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள், லண்டன் மாநகருக்குச் சென்று அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் லாயிட் ஜார்ஜ் என்பவரைச் சந்தித்தார்கள். உடன்படிக்கையில் கையொப்பம் செய்தார்கள். ஆனால், டிவேலரா தன்னிடம் காட்டாமல் எந்த உடன்படிக்கையிலும் கையெழுத்துப் போடக்கூடாது என்று கூறியிருந்தார். ஆனால், அந்தப் பிரதிநிதிகள் கையெழுத்துப் போட்டுவிட்டார்கள். ஏனெனில் லாயிட் ஜார்ஜ், உடனே உடன்படிக்கையில் கையெழுத்துப் போடாவிட்டால் பெரிய போரே துவங்கும் என்று எச்சரித்தார். அதனால் டிவேலரா பிரதிநிதிகள் கையெழுத்தைப் போட்டுவிட்டார்கள். ஐரிஷ் சட்டசபையில் அந்த உடன்படிக்கை வந்தபோது, அயர்லாந்து நாட்டுக்குத் தேவையான சுதந்திரம் கொடுக்கப்படவில்லை என்று டிவேலரா சாந்த உடன்படிக்கையைக் கண்டனம் செய்து தள்ளிவிட்டார். ஆனால், அவருக்கு அந்த உடன்படிக்கையை நிராகரித்து ஒரே ஒரு ஓட்டுரிமை தேவை என்பதால், பிரதிநிதிகளில் ஒருவராகிய ஆர்தர் சிரிவித் என்பவர் சட்டசபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் உடன்படிக்கையைக் கண்டித்தபோது, மக்களைக் கவனியாது தாம் கொண்ட கொள்கையில் உறுதியான நம்பிக்கை மிகுதியாக வைத்திருந்தார். நீண்ட நெடுநாட்களாக அயர்லாந்து மக்கள் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போர் செய்ததும், சொல்ல முடியாத வேதனைகளையும், கஷ்ட நஷ்டங்களையும் ஏற்றுக் கொண்டதும் அரைகுறையான சுதந்திரத்துக்காக அல்ல. தாங்கள் இழந்துவிட்ட முழு ஆதிக்கத்தைப் பெறுவதற்கே என்பதையே டிவேலரா நினைத்துக்கொண்டிருந்தார். ஆங்கில நிலை முதலாளிகள் விவாசாயிகளுக்குக் கொடுமை செய்யாதிருந்தால் மாத்திரம் போதும் என்று நினைக்கவில்லை. முழு சுதந்திரம் தவிர வேறொன்றையும் டிவேலரா பொருட்படுத்தவில்லை. மறுபடியும் உள்நாட்டுச் சண்டை தொடங்கியது; அப்போது டிவேலரா குடியரசுக் கட்சிப் படையில் ஒரு தொண்டராய் சேர்ந்து உழைத்தார். அந்த நேரத்தில் மக்களில் பெரும்பாலோர் அவரைத் தலைவராக ஏற்கவில்லை ஏனென்றால், செயலுக்குக் கொண்டு வரக் கூடாத ஒன்றை அவர் விடாப்பிடியாய்ப் பிடிக்கும் முயலுக்கு மூன்று கால் என்ற பித்துப் பிடித்தவர் என்று அவரைக் குறித்து எண்ணியதால் அவரைத் தலைவராக ஏற்கும் எண்ணம் இல்லாதவராகப் பலர் இருந்தார்கள். 1916-ஆம் ஆண்டில் அவரைச் சேர்ந்த மனிதர்களே அவரை இகழ்ந்து பேசினாலும், அவரிடம் வைத்த நம்பிக்கையை இழக்கவில்லை. இப்போது, அவரிடம் நம்பிக்கை வைத்திருந்த பலர், அதனை இழந்துவிட்டார்கள். தம்முடைய அரசியல் வாழ்க்கை தாழ்ந்து போவதைப் பற்றி அவர் வருத்தமோ-வேதனையோ படவில்லை. ஆனால், மக்களுக்குத் தாம் நினைத்தபடி பயன்படவில்லையே என்ற வேதனைதான அவரை மீளா வருத்தத்தில் மூழ்கடித்தது. குடியரசுக் கட்சி, உடன்படிக்கையை எதிர்த்த கட்சி. அது, 1922-ஆம் ஆண்டுத் தேர்தலில் தோல்வி கண்டது. அதற்குச் சில மாதங்கள் கழித்துத்தான் உள்நாட்டுச் சண்டையும், மோதல்களும் தொடங்கின. குடியரசு கட்சியார், மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முழு ஆதிக்கத்திலேயே குறிக்கோளாக இருந்தார்கள். ஆனால், டிவேலராவோ முழு ஆதிக்கத்துடன் மட்டுமல்ல; ஐரிஷ் மக்களின் நன்மையையும், நல்வாழ்வையும் முக்கியமாகக் கருதியிருந்தார். டிவேலரா உடன்படிக்கையை மறுத்த போது, ஒரு வகையாக மக்களின் விருப்பத்தையே அவர் தெரிவித்தார் எனலாம். உடன்படிக்கை கையெழுத்திடப் படாதிருப்பின் தேர்தல் உலகம் அதனைத் தள்ளியிருக்கும். டிவேலரா அந்தச் சமயத்தில் சற்று தாழ்வுற்றிருந்தாலும், அது மறுபடியும் அவர் உயர்வதற்கே காரணமாகவும் ஆனது என்பது குறிப்பிடத்தக்கதாகும். உடன் படிக்கையைத் தழுவின கட்சி கடைசியாக அவமானம் அடைந்தது. மக்களுக்குத் தேவையானது இன்னது என்று முன்னதாகவே அவர் அறிந்தபடி பிறர் எவரும் உணரவில்லை. டிவேலரா, தனது இயற்கை அறிவு செல்லுகின்ற வழியில் அவர் போகுமளவும், மக்கள் என்றாவது எப்படியாவது அவரையே இறுதியாகப் பின்பற்றுவார்கள் என்றும் அப்போதைய ஐரிஷ் நாடு சிந்தித்துக் காத்திருந்தது. 1932-ஆம் ஆண்டில் டிவேலரா கட்சி புது ஆதிக்கத்திற்கு வந்தது. தற்கால நிலையையும், எதிர்கால முடிவையும் பற்றிப் பேசுவது கடினம் என்பதை 1932-ஆம் ஆண்டு உணர்த்தியது. டிவேலரா இப்போது தவறினால், அவருடைய அரசியல் வைராக்கியத்தினாலாவது, பொருளாதாரத்துறையில் தப்பு செய்வதினாலாவது அந்த தவறுதல் ஏற்படாது. இங்கிலாந்திலும் அயர்லாந்திலும் உள்ள பத்திரிகை உலகம் அவ்வாறு கணிக்கலாம். அவருடைய பொருளாதாரக் கொள்கை வெற்றிபெறுதலே ஆகும். பொருளாதாரத் துறையிலாவது, சமுதாயத் துறையிலாவது அவருக்குச் சோதனை வராது. முழு ஆதிக்கக் கொள்கை சார்பாக வேண்டுமானால் சோதனை ஏற்படக் கூடும். டிவேலரா தன்னை மக்களின் தொண்டனாகக் கருதி மக்களுடைய தற்காலத்துக்கு சம்மதித்து விட்டார். முழு ஆதிக்க ஆர்வத்தை அவர் கைவிட்டுவிட்டார் என்பதற்கு அடையாளங்கள் தோன்றுகின்றன. அவ்வாறானால், அதற்கு ஒரு முடிவு தான் அமையக் கூடும். யாருக்காக டிவேலரா தன்னைத் தியாகஞ் செய்தாரோ, அந்த மக்கள் அவரைக் கடைசியாகக் கழித்து விடவும் கூடும். ஏனென்றால், நாட்கள் நகரநகர உச்ச நிலைக்குத் தங்களை நடத்துகின்ற தலைவரைத் தான் மக்கள் பின்பற்றுவார்கள். அயர்லாந்தில் உள்ள கர்வத்தின் உச்சத்தைப் பிறநாட்டினர் எளிதாகத் தெரிந்து கொள்ள முடியாது. ஐரிஷ் மக்கள் தங்களது தலைவரான டிவேலராவை, தங்களை உயர்வழியில் உயர்த்துபவராகவே கருதிவந்தனர். ஆனால், சில நாட்களுக்குள் அதைப்பற்றிய ஒரு சிறிய சந்தேகம் சிலரிடம் தோன்றிவிட்டது. அதனால், அயர்லாந்தில் ஒரு சிறு பொறி விரைவில் ஒரு சுடராக வளர்ந்து, அந்தச் சுடர் சுவாலையாகி விடும். டிவேலரா முற்போக்கினருக்குத் தம்மை எதிரியாகக் காட்டிக்கொண்டார். முன்புள்ள ஆட்சியினர் ஏற்படுத்திய இராணுவ மன்றத்தை ஏற்படுத்திக் குடி அரசினரை அதன் மூலம் விசாரிக்க ஏற்பாடு செய்துள்ளார். குடி அரசு வாரப் பத்திரிக்கையை அடக்கி இருக்கிறார். மற்ற நாட்டில் அவர் நிலையில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு அப்படிப்பட்ட செய்கைகள் அவசியமாய் இருக்கலாம். ஆனால், அயர்லாந்தில் எவ்வளவு திறமை மிக்க அரசியல் தலைமையும் பல நூற்றாண்டுகளாகக் கனன்று கொண்டு, இடையிடையே சுடர் விட்டு எரிகின்ற முழு ஆர்வத்தீயை எதிர்க்குமாயின் அது வெற்றிபெறாது. இந்த நூற்றாண்டின் அயர்லாந்து நாட்டின் தலைவர்களாக வந்தவர்களுள் டிவேலராவைப் போல் ஒரு விடுதலை வீரனைக் காணமுடியவில்லை. டிவேலராவிடம் உள்ள பெருந்தன்மையும், தன்னலங்கருதாமையும், தியாக உணர்ச்சியும், மக்கள்நேய மாண்பும், நெஞ்சுரமிக்க வீர தீர சாகசபோர் வியூகங்களும்; சட்டத்தின் வழிகாட்டுதலில்தான் ஒரு நாடு விடுதலை பெற வேண்டும் என்ற அறப்போராட்ட உணர்வுகளையும், அயர்லாந்து நாட்டுத் தலைவர்களிடையே பார்ப்பதே அரிதாக உள்ளது. அயர்லாந்து நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் டிவேலரா அயர்லாந்து காந்தியாகவே திகழ்ந்தார். அதனால்தான் அவரை, அயர்லாந்து நாட்டின் விடுதலைத் தந்தையாக அந்த நாட்டு மக்கள் போற்றுகிறார்கள். எகிப்து விடுதலை - வீரன் நாசர்! உலக நாகரிகங்களில் ஒன்றாகப் போற்றப்படுவது எகிப்து நாகரிகம்! ஈஜிப்ட் என்று அழைக்கப்படும் இந்த எகிப்து நாடு, உலகத்தின் நதிகளில் மிக நீளமான நதி என்று கூறப்படும் நைல் நதியின் முகத் துவாரத்தின் அருகே உள்ள நாடு. எகிப்து நாடு, பண்டையப் புகழ்வாய்ந்த, நாகரிகத்தின் சின்னமாக விளங்கிய, சிறப்புமிக்க நாடு! அதனால்தான், உலக மகாவீரர்களுள் முதல்வனான ஜூலியஸ் சீசரை தனது மோகவலையில் வீழ்த்தி மயக்கிய உலகப் பேரழகி கிளியோபாட்ரா கூட ‘எனது உயிர் ஈஜிப்டு’ என்று சாகும் வரை போற்றிப் புகழ்ந்த நாடு எகிப்து நாடு! அவ்வளவு பெயரும் புகழும் பெற்ற ஒரு நாடு, உலகத்தில் சீரோடும் சிறப்போடும் போற்றப்பட்ட ஒரு நாடு, வளமிக்க ஒரு நாடாக உலக வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடு, கடந்த நூற்றாண்டில் சுரண்டல்காரர்களின் வேட்டைக் காடாகி தனது பொலிவையும், வளத்தையும் பறிகொடுத்துக் கொண்டிருந்தது. எகிப்து நாட்டுமக்கள் உணவுக்கும், உடைக்கும் குந்தியழுது கொண்டிருக்கும் நிலையில், வந்தவர்கள் எல்லாம் அந்நாட்டில் குடியேறி, வாரி வாரிச் சுருட்டிச் சென்று கொள்ளையடித்துக் கொண்டிருந்தார்கள். இவ்வாறு கொள்ளையடித்தவர்களுள் எகிப்தின் வந்தேறிகளான பிரிட்டிஷாரும் அடங்குவர். பிரிட்டிஷ் என்ற ஆங்கில ஏகாதிபத்தியக்காரர்கள், எகிப்து நாட்டுக்குள் அலையலையாகச் சென்று அகப்பட்டதையெல்லாம் சுருட்டிய கொள்ளைக்காரர்களாக இருந்தார்கள். போரிட்டுக் கொள்ளையடித்தாலும் பரவாயில்லை; வியாபாரிகளாகச் சென்று கொஞ்சம் கொஞ்சமாக இடம்பிடித்து, சொந்த நாட்டுக்காரனைச் சொக்கட்டான் சூதுக்காய்களாக நகர்த்தி நகர்த்தி, ஆசைகாட்டி அவர்களை அடிமைப்படுத்தி, பிறகு தனது விருப்பம்போல கிடைப்பதை எல்லாம் சுருட்டிக் கொண்டு, இறுதியிலே அந்த நாட்டைப் பிடித்துக் கொண்டு, தங்களது ஆதிக்கக் கொடியை அங்கே வானளாவப் பறக்கவிட்டுக் கொண்டு, சொந்த நாட்டாரைச் சோற்றுத் துருத்திகளாக்கி விடுவது பிரிட்டிஷாரின் கைவந்த, நாடு பிடியாசைக் கலைகளுள் ஒன்றாகும். எகிப்தில் இவ்வாறு கொள்ளையடித்த பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தின் கீழ் சூயஸ்கால்வாய் அடிமையானது. இந்த ஒரு கால்வாயை வைத்தே உலகத்தை ஆட்டிப் படைத்தவர்கள் ஆங்கிலேயர்கள். எகிப்து நாட்டை கடந்த நூற்றாண்டின் இடையில் ஆண்ட மன்னன் பரூக். அவன் ஆங்கிலேயர்களின் எடுபிடி மன்னனாக இருந்தான். எப்போதும், எதற்கும் தலையாட்டிப் பொம்மையாக இருந்த பரூக் சுகபோகியாகவும், பெண்பித்தனாகவும் வாழ்ந்து வந்தான். அடிமை மன்னனான அவன், தனது எகிப்து நாட்டை பிரிட்டிஷாரிடம் அடகுவைத்து விட்டு, அவர்கள் கொடுத்த பிச்சைக்காசைக் கொண்டு, பெண் போக உல்லாச, கேளிக்கை வாழ்க்கை நடத்தி வந்தான். நாகரிகத்துக்குச் சொந்தக்காரர்களான எகிப்து நாட்டு மக்கள் ஒரு வாய் உணவுக்கு நாயாய் பேயாய் அலைந்து கொண்டிருக்கும் போது, மன்னன் பரூக் மட்டும் மதுவும் மங்கையுமாக பெண்களிடம் சரசமாடிக் கொண்டு நாட்டையும், மக்களையும் மறந்து உலக நினைவே இல்லாமல் போதை மன்னனாக வாழ்ந்து கொண்டிருந்தான். இந்த மோசமான நிலையில் தனது நாடு நலிந்து உழன்று கொண்டிருக்கும் நேரத்திலேதான் மாவீரன் நாசர் என்பவர் தோன்றி நாட்டிலே புரட்சியை உருவாக்கினார். மது மங்கை மன்னனின் அடிமை இருளிலே இருண்டு கொண்டிருந்த எகிப்து நாட்டை, ஒளிவானமாக்கும் எழு ஞாயிறாகத் தோன்றி மக்கள் மனதிலே சுதந்திர ஒளியைப் பரப்பியவர் மாவீரர் நாசர்! எகிப்திய விடுதலை வீரர் நாசர், கி.பி.1918-ஆம் ஆண்டில் எகிப்து நாட்டில் ஒர் அஞ்சலக ஊழியரின் மகனாகப் பிறந்தார். ஆரம்பக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை கற்றுத்தேறிய நாசர் திடீரென கல்லூரியின் இறுதி ஆண்டுப் படிப்பின்போது, தனது நாட்டின் படுமோசமான சீரழிவைக் கண்டு சிந்தித்து அரசியல் துறையிலே திடீரென்று புகுந்தார்! எகிப்து நாட்டை அடிமைப்படுத்திச் சுரண்டும் பிரிட்டிஷ்காரர்களது சுரண்டலை எதிர்த்துப் போராட்டங்களிலே ஈடுபட்டார். அதுபோலவே, எகிப்து நாட்டின் பொருளாதார வளங்களைச் சூறையாடி வந்த வல்லரசு நாடுகளையும் எதிர்த்துப் போராடினார். அதனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்பு மட்டுமன்று, வல்லரசு நாடுகளின் வன்முறைக் கொடுமைகளும் அவரை வாட்டிக்கொண்டே இருந்தன. நாசரின் தந்தைக்கோ, மகன் புகழ்பெற்ற ஓர் வழக்குரைஞனாக வேண்டும்; அதனால் பொருள் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால், மகனுக்கு அதுவன்று ஆசை. ‘நான் ஒரு வீரன், வீரனுக்குரிய இடம் நீதியின் சன்னிதான்மல்ல’ என்று கூறியபடியே நாசர் ராணுவத்திலே சேர்ந்து பயிற்சி பெற்றார். எகிப்து இராணுவம் சீர்கெட்டுப் போய், அடிமைக்கும் சுரண்டலுக்கும் வளைந்து கொடுத்துவிட்டு, சொந்த நாட்டுணர்வே இல்லாத ராணுவக் கூனர்களாக முதுகெலும்பு வளைந்து கிடப்பதைக் கண்டு வருந்தினார்! ராணுவ வீரர்களை அடிமைக் கூலி பெறும் கூலிப்படைகள் என்று வேதனைப்பட்டார் நாசர். ஆனால், நாசர் ராணுவத்தில் சேர்ந்தது வயிற்றை வளர்க்கவா? நாட்டின் அடிமைத்தனம் என்ற தளையை அறுத்தெறிய ஒரு நல்லவழி ராணுவம் மூலமாவது பிறக்காதா என்ற விடுதலை வேட்கை ஏக்கம் பெருமூச்சுடன் ராணுவத்தில் சேர்ந்தவர் அல்லவா நாசர்! அதனால், அன்றைய அந்த ராணுவ வீரர்களின் நிலையினைக் கண்டு மனம் உடைந்தார் நாசர். இராணுவ வீரர்களிடம் பேசும் போதும், உணவு உண்ணும்போதும், பயிற்சி பெறும்போதும், தனது நாட்டின் அவலநிலைகளையும், பரூக் மன்னனின் பேதைத்தனமான சீரழிவுகளையும் எடுத்துக் கூறி, சிறுகச் சிறுக அவர்களது மனதிலே தேசிய உணர்வு என்ற விதைகளை விதைத்து வந்தார் நாசர் அதனைப்போலவே, அவர் தனது தேசபக்திக் கருத்துக்களைப் புனைப்பெயரில் கட்டுரைகளாக்கி பத்திரிகைகளிலே வெளிவரச் செய்வார்! அதனால் இவரது உணர்வுகளை யாரோ ஒருவர் எழுதுகிறார் என்ற எண்ணத்தில் பத்திரிகைகள் வெளியிடும்! அதே கருத்துக்களை எகிப்திய குக் கிராமத்து மக்கள் எல்லாம் படிக்கும் படியான உணர்ச்சி ஒட்ட மொழியாலே ஓர் எழுச்சியை உருவாக்கியபடி எழுதினார் நாசர்! இரண்டாவது உலகப்போர் 1942-ஆம் ஆண்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் நடுநிலை நாடாக இருந்த எகிப்து நாடு, பிரிட்டிஷ் நரித்தந்திர சூழ்ச்சியால் நேச நாடுகளின் பிணைப்பிலே சேர்க்கப்பட்டது. பிரிட்டன் ஏன் இவ்வாறு எகிப்து நாட்டைப் போர்ச் சூழலிலே சிக்க வைத்தது என்றால், சூயஸ்கால்வாய் கப்பற்படைப் போக்குவரத்து முக்கியத்துவம் பறிபோய் விடக் கூடாதே என்ற காரணத்தால் பிரிட்டன் தனது நேச நாடுகள் அணியிலே எகிப்து நாட்டையும் சேர்ந்துக் கொண்டது. அப்போது எகிப்து ராணுவத்தின் கர்னல் என்ற பொறுப்பை வகித்துக் கொண்டிருந்தவர் நாசர். அவர், பிரிட்டன் செய்துவிட்ட படுபாதக நயவஞ்சக சுயநலச் செயலைக்கண்டு மனம் பதைத்தார்! நாடு இப்படிச் சீரழிகிறதே என்ற கவலையே இல்லாமல் மன்னன் பரூக் சுகபோக மது மங்கைக் களியாட்டங்களிலே மயங்கிக் கிடக்கிறானே என்று நாசர் நெஞ்சம் துடிதுடித்தது. பிரிட்டன் நயவஞ்சக சுயநிலைப் போக்கையும், மயங்கிக் கிடக்கும் மன்னன் பரூக் மனநிலையினையும் எப்படியாவது மாற்றியாக வேண்டும் என்று திட்டம் வகுத்தார் நாசர்! எகிப்து மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ள ஜெனரல் நாகிப் என்ற ராணுவத் தளபதி அப்போது எகிப்து ராணுவத்தின் தலைவர் பதவியை வகித்துவந்தார். கர்னல் நாசர் ராணுவத் தலைவரான நாகிப்பைச் சந்தித்து, தனது புரட்சித் திட்டங்களை அவரிடம் கூறி, அனுமதி பெற்றார். இருவரது விவாதமும் தேசபக்தி உணர்விலே மிதந்த அலைகளாயின! எப்படி வெற்றிக்கரை சேரலாம் என்றே இருவரும் சிந்தித்தார்கள். இறுதியாக புரட்சிக் கட்டம் இறுதிக்கு வந்தது. எகிப்து ராணுவத்தின் மகாப்பெரும் புரட்சி 1952, ஜூலை23-ஆம்தேதி நடைபெற்றது. புரட்சியை நடத்தியது யார் தெரியுமா? நாசர் அல்ல! நாகிப் என்ற ராணுவ மாவீரத் தலைவன்! இராணுவத் தலைவர் புரட்சியை நடத்தினார் என்ற பெயரும், புகழும் நாகிப்புக்குப் போய்ச் சேர்ந்தது! ஆனால் உண்மையில் இந்த ராணுவப் புரட்சிக்கு மூளையாக, முதுகெலும்பாக, திட்டங்களைத் தீட்டி இறுதிவரை நடத்தியவர் மாவீரன் நாசர்தான்! இந்த உண்மை நாகிப்புக்கு மட்டுமே தெரியும் இந்த இருவரின் ராணுவக் கூட்டுப் புரட்சிப் பணிகளை, உலகம் புரட்சிக்குப் பின்னாலே எது உண்மை என்பதைப் புரிந்து கொண்டது! இராணுவத் தலைவர் நாகிப் தொடர்ந்து மன வலிமையுடன் செயல்பட ஏதோ ஓர் அச்சத்தால் தயங்கினார். ஆனால் நாசர், இறுதிவரை மனோ தைரியத்துடன் பணியாற்றியதால் நாசரே ஜனாதிபதி என்ற பொறுப்பை ஏற்றார்! அதற்குப் பிறகு நாகிப், தனது அரசியல் வாழ்வையே துறந்து மறைந்துவிட்டார். நாசர் ஜனாதிபதி பொறுப்பை ஏற்றுக்கொண்டதும், நாட்டை விரைவாகச் சீர்படுத்தினார். நாட்டின் விளை நிலங்களை எல்லாம் நில முதலாளிகளிடம் இருந்து மீட்டார். உழைக்காத சோம்பேறிகளிடம் இருந்த மற்ற நிலங்களையும் பறித்து, உழைக்கும் மக்களிடம் வழங்கியதால் நாட்டில் விவசாயப் பெருக்கம் ஏற்பட்டது. மக்களது உணவுப் பஞ்சமும், அவர்களது பொருளாதார நலிவும் நீங்கி, அவர்கள் இடையே வளம் கொழித்தது. எகிப்து நாட்டின் உயிர்நாடியாக இருக்கும் சூயஸ்கால்வாயை பிரிட்டன் ராணுவப் படைகள் நாற்புறமும் நாசர் பயத்தால் அணிவகுத்துக் காத்து நின்றன. நாசர் அந்தப் படைகளுக்குள்ளே தனது படைகளைப் புகுத்தி விரட்டியடித்தார்! பிரிட்டன் படைகளையும், வல்லரசு சக்திகளையும் அங்கே ஓட ஓடத் துரத்தியடித்தார். சூயஸ்கால்வாயை வருமானம் வரும் கப்பல் போக்குவரத்து கடல் பாதையாக்கினார்! எகிப்து நாட்டின் தேசிய சொத்து சூயஸ் கால்வாய் என்று உலகநாடுகள் உணர நாசர் பிரகடனப்படுத்தினார். கொதித்து எழுந்தது பிரிட்டன் அரசு விமானப்போரை ஏவித் தாக்கியது; தாய்நாட்டுக்குச் சேவை செய்கிறோம் என்ற தேசபக்திக்கனலிடையே, பிரிட்டிஷ் தாக்குதல் நாசர் படைத்தாக்குதலின் முன்பு சருகுகளைப் போல தீய்ந்து சாம்பலானது. பிரிட்டன் நாசரிடம் பின் வாங்கி ஓடிய சம்பவம் உலக நாடுகள் இடையே நாசரின் செல்வாக்கை உயர்த்தும் படிக்கல்லானது. நாளடைவில் நாசர் அதனால் உலக அரசியலில் புகழ்ச்சிகரமாக விளங்கினார். எகிப்து மக்களும் அவருக்குத் துணையாக நின்றார்கள். நாசரின் உலக அரசியல் புகழ் வளர்ச்சி, அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் தீராத எரிச்சலைப் புகையாகப் பரப்பிக் கொண்டிருந்தன. ஆனாலும், இனி எகிப்து நாட்டையும், நாசரையும் ஒன்றும் செய்யமுடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டன. ஆனாலும் விடுமா வல்லரசுகள் நாசரின் புகழையும், நாட்டையும் சீரழித்துக் குலைப்பதற்கு என்ன செய்யலாம் என்று ஆலோசித்தன. குறுக்கு வழியும் கிறுக்கு வழியும் அவர்களது சிந்தனைகளைக் குழப்பிக் கொண்டிருந்ததுதான் மிச்சம்! இந்த நேரத்தில் சோசலிச நாடுகளான ரஷ்யாவும், யூகோஸ்லேவியாவும் நாசருக்குப் பக்கப் பலமாக நிற்பதைக்கண்ட பிரிட்டனும், அமெரிக்காவும் நிரந்தரமான ஊமைகளாகின. வல்லரசுகளின் சூழ்ச்சித் திட்டங்கள் அதனால் தவிடு பொடியாயின என்றாலும், சொறி பிடித்தவன் கை சும்மா இருக்குமா? திரை மறைவில் வல்லரசுகள் வல்லூறு வேலைகளை வட்டமிட்ட படியே செய்து கொண்டேதான் இருந்தன. அதே நேரத்தில் நாசர், எகிப்து நாட்டின் விவசாய வளத்தைப் பெருக்கினார். நீர்ப் பாசனத் திட்டங்களை வகுத்தார். நைல் நதியின் குறுக்கே அஸ்வான் அணையொன்றைக் கட்டி விவசாய வளத்தைப் பெருக்கினார். அஸ்வான் அணைக்கட்டுக்கு அமெரிக்கா பொருள் உதவி செய்வதாக வாக்களித்தது. யாரைவிட்டது பொறாமை? பொருள் உதவி செய்தால் எகிப்து வறுமையிலே இருந்து வளமேறிவிடுமே என்ற பொறாமையால், வாக்களித்த பொருளாதார உதவியை மீண்டும் வழங்கிட மறுத்துவிட்டது. அமெரிக்க நய வஞ்சகத்தைக் கண்டு அஞ்சவில்லை நாசர் சோவியத் யூனியனிடம் பொருள் உதவி வழங்குமாறு கேட்டார். ரஷ்யா சோஷலிச நாடல்லவா? பொருளாதார உதவியை ரஷ்யா செய்தது! இந்த விவகாரத்திலும் அமெரிக்கா அவமானப்பட்டது. எகிப்து நாட்டை நிம்மதியாக வாழவிடக்கூடாது என்ற நயவஞ்சகத்தால், அன்று வரை தங்களுக்கென்று ஒருநாடே இல்லாமல் இருந்த யூத இனத்தை எகிப்துக்கு பகையாக உள்ள ஓர் இனத்தை ஊக்குவித்து துண்டிவிட்டு, இஸ்ரேல் என்ற ஒருநாட்டைப் பூகோளத்திலே அமெரிக்கா தோற்றுவித்தது. அமெரிக்கா அமைத்துத்தந்த இஸ்ரேல் எப்போது பார்த்தாலும் முஸ்லிம் நாட்டின் மீது தாக்குதல் நடந்துவதே அதன் வேலை. அதனால் எகிப்து நாட்டின் வளர்ச்சியும், வேகமும் தடைப்பட்டு நிற்கும்! அவ்வளவுதான். இருந்தாலும், மாவீரன் நாசர் புறத்தாக்குதல்களைச் சமாளித்தார். அதேநேரத்தில் எகிப்து மக்களையும் நாட்டையும் நன்கு செம்மைப்படுத்தினார். மாவீரன் நாசர் போதை மன்னர் பரூக்கின் அடிமைத்தனத்திலே, சிக்கிச் சீரழிந்த எகிப்து மக்களுக்கு விடுதலை வழங்கினார்! பிரிட்டனின் பொருளாதாரச் சுரண்டலை எதிர்த்தும், அடிமைத்தனம் என்ற ஆணிவேரை அறுத் தெறிந்தும் எகிப்து மக்களுக்கு சுதந்திர வாழ்வைப் பெற்றுத் தந்தவர் நாசர்! வல்லரசு நாடுகளின் பொறாமை வம்படி வழக்குகளை எதிர்த்து, எகிப்து நாட்டைக் காப்பாற்றி, எகிப்து நாட்டையும், மக்களையும் மானத்துடன் சுயமரியாதை வாழ்வு வாழ வழிவகுத்துத் தந்தவர் மாவீரன் நாசர்! ஆப்கானிஸ்தான் சுதந்திரம் - பிறைநிலா அமானுல்லா வசூலுக்கென்று ஒரு தனித்துறை அமைக்கப்பட்டதால் இரட்டை ஆட்சிப் புள்ளிகள் வசூல் பணத்தில் ஒரு பகுதியை மோசடி செய்யும் பழக்கமும் ஒழிக்கப்பட்டது. அமானுல்லாவின் இந்த வரி வசூல் முறைகள் இரட்டையாட்சி மோசடிப் பேர்வழிகளைக் கடுமையாகப் பாதித்துப் பலவீனப் படுத்திவிட்டன. அமானுல்லா கையாண்ட மற்றொரு முக்கிய சாதனை என்ன வென்றால், வியாபாரத்துறையில் புதிய ஒரு முறையைப் புகுத்தியதாகும். ‘ஷர்க்கதா’ என்று அந்நாட்டில் கூறப்பட்ட அநேகக் கூட்டு வணிகக் குழுக்கள் அரசு ஆதரவின் கீழ் நிறுவப்பட்ட முறையாகும். ஆனால், அமானுல்லாவின் சீர்திருத்த முயற்சிகளின் முக்கிய திட்டம் பொருளாதாரத்துறையைச் சேர்ந்த ஒன்றாக இருந்தது. பெரிய அளவில் அவர்சாலைகளை அமைத்தார். காபூல் நகருக்கும் பெஷாவர் நகருக்கும் இடையே இந்தோ-ஆப்கான் தொலைபேசி நிறுவனங்களை 1922-ஆம் ஆண்டில் அமைத்தார். தொலைபேசிச் சாதனங்கள் மூலம் ஆப்கான் நாட்டு எல்லா முக்கிய நகர்களையும் இணைத்தது. 1925ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் உலக நாடுகளின் கேபிள் யூனியனிலும், உலக அஞ்சல் குழுவிலும் சேர்க்கப்பட்டது அரிய பணிகளாகும். வானொலி அமைப்புத் திட்டத்தை 1925-ஆம்ஆண்டில் தொடங்கினார். 1929-ஆம் ஆண்டில் நாட்டின் எல்லா முக்கிய நகரங்களுடனும் காபூல் நகரை கம்பி இல்லாதத் தந்தியின் மூலமாக இணைத்தார். ஆப்கான் நாட்டு விடுதலைக்கு முன்பு கல்வித்துறைக்கென்று நாட்டில் உண்டாகி இருந்த நிறுவனங்கள் 1904-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அபிபியா உயர்நிலைப் பள்ளியும், ஓர் இராணுவப் பயிற்சிப் பள்ளியும், ஓர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியும், மற்றும் ஒரு சில ஆரம்பப் பள்ளிகள் மட்டுமே ஆகும். அமானுல்லா பதவிக்கு வந்தபிறகு, மூன்று உயர்நிலைப் பள்ளிகளை உருவாக்கினார். பெண்கள் பள்ளியை அவர் முதன் முதலாக நிறுவினார். மேற்படிப்புக்காக ஏராளமான மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வர ஏற்பாடுகளைச் செய்தார். ஆப்கான் நாட்டின் முன்னேற்றத்திற்காக, இந்தியாவிலிருந்தும், ஐரோப்பா நாடுகளில் இருந்தும் கல்வி நிபுணர்களை அந்த நாட்டிற்கு அழைத்து வந்து கல்வித்துறையை வளர்த்தார். இதனால் வெளிநாட்டுக் கல்விக் கலை நுட்பங்கள் வளர்ந்தன. அதன் உதவியால் மின்சாரம், தீப்பெட்டிகள், சிமெண்ட் பயன்படுத்தும் கட்டடமுறைகள், துணிகளுக்குச் சாயம் போடும் தொழில்கள் சிறு சிறு தொழில்களாக நாட்டில் தோன்றிட வளர்ச்சி பெற்றிட வழிவகுத்தார் அமானுல்லா. பஞ்சு நூற்பாலைகள் திறக்கப்பட்டன. சலவைக் கருவிகள், அச்சு இயந்திரங்கள் சர்க்கரை ஆலை இயந்திரங்கள், போன்றவைகள் நாட்டில் அமைந்து பெருகின. அமானுல்லா ஒரே நேரத்தில் இவ்வாறு மேற்கொண்ட முயற்சிகள் அளவுக்கு அதிகமாகிவிட்டதால், அவருடைய புதுமையான புதுத் திட்டங்களின் செலவுப் பளுக்கள் அதிகரித்துவிட்டன. குறிப்பாக, விவசாயிகள் போன்றவர்கள் மீது அந்தச் செலவினப் பளுக்கள் வரிகளாக விழுந்தன. அதிகப்படியான வரிப்பளு அவர்களை வாட்டிவதைத்தது. இந்த சமூகச் சீர்திருத்தங்கள் ஆப்கான் நாட்டு மக்களை வேதனைகளில் ஆழ்த்தின. அத்துடன், பர்தா என்ற பெண்களின் முக்காடு அணியும் மதச் சடங்கு முறையை அகற்றிவிட்டார். ஐரோப்பா நாடுகளில் உள்ள ஆடைப் பழக்க வழக்க முறைகளை மக்களிடம் புகுத்தினார். இந்த முறைகளை அமானுல்லா நாட்டில் வற்புறுத்தி நுழைத்ததால், மக்கள் தங்களது பொறுமைகளை இழந்து விட்டார்கள். இந்தச் சீர்திருத்த முறைகளால் மக்கள் இடையே கலகங்கள் ஏற்பட்டுவிட்டன. குழப்பங்கள் சூழ்ந்தன. இந்த நேரத்தில்தான் 1929-ஆம் ஆண்டு பாச்சா-இ-சேக்கோ என்ற கொள்ளைக்காரன் ஒருவன் காபூல்நகர் மீது படையெடுத்துப் பிடித்துக்கொண்டான். சிந்தித்தார் அமானுல்லா. இந்த மக்களுக்கு இவ்வளவு சீர்த்திருத்தங்களையும் ஒரே முறையில் அவசரமாக, அவசியம் என்று நுழைத்தது தவறுதான் என்று தனது கடைசி நேரத்தில் உணர்ந்தார். அமானுல்லா என்னென்ன சீர்திருத்தச் சட்டங்களை அந்த நாட்டில் போட்டு அமுல்படுத்தினாரோ, அவை அனைத்தையும் உடனடியாக அவசரம் அவசரமாக பாச்சா-இ-சேக்கோ என்பவன் திரும்பப் பெற்றுக்கொண்டு அனைத்தையும் நிறுத்திவிட்டான். இதன் விளைவு என்னவாயிற்று? துருக்கி நாட்டிற்கு பள்ளிக் கல்விப் பயிற்சிக்காக அனுப்பப்பட்ட பெண்கள் அனைவரும் திரும்பி ஆப்கான் நாட்டிற்கே வரும்நிலை ஏற்பட்டது. முக்காடு அணியும் பர்தா முறையே பழையடி பெண்களுக்கு ஏற்பட்டன. மாதர் சங்கங்கள் எல்லாம் கலைக்கப்பட்டு விட்டன. ஐரோப்பிய நாகரிக ஆடை அணிகள் முறை தடைசெய்யப்பட்டன. இராணுவ வீரர்கள் பீர்களைக் குடிக்கலாம் என்ற அனுமதி பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இவை எல்லாம் காலம் கடந்துவிட்ட செயல்களாக மக்கள் இடையே நினைக்கத் தோன்றின. அமானுல்லா முயற்சிகள் எல்லாம் தோற்கும்படி அந்தக் கொள்ளைக்காரன் செய்துவிட்டதால் மக்களிடம் கலகங்களும், குழப்பங்களும் தோன்றி வலுத்துவிட்டன. இந்த நேரத்தில் அமானுல்லா மக்கள் தரும் குழப்பங்களைத் தாங்க முடியாமல் ஆப்கானிஸ்தான் நாட்டைவிட்டே ஓடிப்போகும் பரிதாபநிலை ஏற்பட்டுவிட்டது. காபூலைப் பிடித்துவிட்ட கொள்ளைக்காரன் பாச்சா இ சேக்கோவின் பத்துமாதப் பயங்கர ஆட்சியில் அமானுல்லா மேற்கண்ட சீர்திருத்தச் சட்டங்கள் எல்லாம் பாழாகி விட்டன. அமானுல்லாவின் சமுதாயச் சீர்திருத்தச் செயல்களை எல்லாம் அந்தக் கொள்ளைக்காரன் பாச்சா நாசமாக்கியதுடன் நில்லாமல், மீண்டும் அமானுல்லா தலைதூக்கக் கூடாது என்ற எண்ணத்தில் அவருடைய செயல்களை எல்லாம் அழித்துவிட்டான். ஆனால், உலகநாடுகள் எல்லாம் இந்த அழிவுச்சக்தியை ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும் காலம் கடந்துவிட்ட அழிவுச் சக்தியை மீண்டும் தடுத்து நிறுத்த அமானுல்லாவுக்கு உதவிசெய்திட காலம் போதாமல் போய் விட்டது. எனவே, அமானுல்லா தேசப் பற்று, மக்கள் இடையே தோற்றுவிட்டது ஆனால், உலகப் பத்திரிகைள் எல்லாம் அமானுல்லாவைப் பற்றி என்ன எழுதின தெரியுமா? “ஆப்கானிய இளைஞர் உலகத்தில் அமானுல்லா சீர்திருத்த விதைகளை விதைத்து விட்டார். அவை ஒரு காலத்தில் முளைத்தே தீரும்.” என்று எழுதி தங்களது ஆறுதல் அனுதாபங்களைத் தெரிவித்தன. சுதந்திர சோஷலிசச் சிற்பி மார்ஷல் டிட்டோ! மார்க்சிய சோஷலிசக் குறிக்கோள் வரவேற்கத்தக்கதுதான்; ஆனால், ரஷ்ய நாட்டு லெனின் நடைமுறைத் திட்டங்கள், சோசலிசத்தை விரும்பும் எல்லா நாடுகளுக்கும் ஏற்றதல்ல என்பது மட்டுமல்ல, பொருந்தவும் பொருந்தாது. சோஷலிச மாளிகையை நிறுவிட, ஒவ்வொரு நாடும் அதனதன் முயற்சியில், நோக்கத்தில் முயற்சி செய்து நிறுவப்படவேண்டும். மேற்கண்டவாறு, சோவியத் ரஷ்யாவை எதிர்த்து அதற்குப் புறம்பான திட்டங்களை வகுத்து ஒரு சோஷலிச அரசை யூகோஸ்லேவியாவில் அமைத்து, அந்த நாட்டின் ஜனாதிபதியாகப் பதவி ஏற்று வெற்றிக்கொடி நாட்டி உலகை வலம்வந்த சோஷலிசச் சிற்பி மார்ஷல் டிட்டோ. உலகத்துக்கு ஒரு புதுமையாக, ரஷ்யாவின் ஜார் மன்னனின் முடியரசு ஆட்சியை மக்கள் பலத்தால் சடசடவென சரித்து புரட்சி எனும் புதுமை ஆயுதத்தால் சோஷலிச ஆட்சியை அமைத்த நாடு சோவியத் ரஷ்யா. கார்ல் மார்க்ஸ் வகுத்துத்தந்த சமநீதி சமுதாய இலட்சிய அடிப்படையில், மாவீரன் லெனின் தீட்டித் தந்த நோக்கங்களின் வழியில் சோவியத் சமநீதிச் சமுதாயம் அமைத்து உலகம் மதித்துப் போற்றத் தகுந்த நல்ல ஆட்சியை நடத்தி வந்த நாடு ரஷ்யா. அந்த நல்லாட்சி, ரஷ்யாவில் லெனினுக்குப் பிறகு, அஞ்சா நெஞ்சன் ஸ்டாலின் தலைமையில் உலகம் வியக்க நடந்து வந்தது. அந்த ஆட்சியின் செயல்முறைத் திட்டங்களைத் தவறு என்று சொன்ன எவரும் அப்போது உயிர் பிழைத்தது இல்லை. ஆனால், மார்ஷல் டிட்டோ என்ற யூகோஸ்லேவிய நாட்டு மாவீரன் ஸ்டாலினை மூர்க்கத் தனமாக எதிர்த்தது மட்டுமல்ல; அவர் தப்பி உயிர் மீண்டது மட்டுமன்று; தனியே ஒரு சோஷலிச ஆட்சியையும் பல இடர்ப்பாடுகளுக்கு இடையில் அமைத்து நடத்திக்காட்டிக் கம்பீரமாக நிமிர்ந்து நின்று வெற்றி பெற்றவர் அந்த மாவீரன் மார்ஷல் டிட்டோ என்ற ஒருவர்தான் என்று உலக நாடுகளின் விடுதலை வரலாறு இன்றும் அவரைப் போற்றுகின்றது. இந்த உண்மையை, புரட்சியில் ஒரு புரட்சியைப் புதுமையாக நடத்திக்காட்டிய செயலை ஏன், உலகத்தையே உலுக்கிக்காட்டிய சோவியத்ரஷ்ய நாட்டையே ஒரு கலக்கு கலக்கிப் புரட்சி செய்து காட்டியவர் இந்த மார்ஷல் டிட்டோ. இத்தகைய ஒர் அற்புத ராஜதந்திரம் படைத்த சோசலிசச் சிற்பியான மார்ஷல் டிட்டோ, கி.பி.1892-ம் ஆண்டு மே மாதம், 15-ம் நாளன்று ஒரு விவசாயினுடைய மகனாகப் பிறந்தவர் ஆவார். அவருடன் பிறந்த உடன் பிறப்புக்கள் மொத்தம் பதினைந்து பேர்கள். அவர்களுள் இவர் ஏழாவது மகனாவார். மார்ஷல் டிட்டோவின் குடும்பம் செல்வச் சீமான்களது குடும்பம் அல்ல; வறுமை ஒன்றே வாழ்வாகக் கொண்ட மிக மிக ஏழைக் குடும்பமாகும். உண்பதற்குக் கூடஒருவேளை உணவும் அற்ற கூலிக் குடியானவர் குடும்பம். இப்படிப்பட்ட ஒரு குடும்பத்திலே தோன்றிய டிட்டோ எந்த வறுமைச் சூழலைப் பற்றியும் கவலைப்படாமல் வளர்ந்துவந்தார். ஏதோ பெயரளவுக்கு கல்வியை ஒரு திண்ணைப் பள்ளிக் கூடத்திலே படித்து வந்தார். அவ்வளவுதான் அவரது கல்வித் தகுதி. அப்படிப்பட்ட குடும்பத்திலே இருந்து வெளியேறி தனியாகவே அவர் அலைந்து திரிந்து வாழ்க்கை நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. டிட்டோ தனது சிறு பிராயத்தில் செய்யாத வேலைகளே இல்லை. ஆடுமாடுகளை மேய்த்தார்; உணவு விடுதிகளிலே வேலை கேட்டு எச்சில் தட்டுக்களைக் கழுவி வயிறு வளர்த்தார். பத்திரிகை அலுவலகங்களுக்குச் சென்று கூலிக்காக அந்தப் பத்திரிகைகளை வீதிவீதியாகச் சென்று கூவிக் கூவி விற்று, அதன் மூலம் வரும் வருவாயைக் கொண்டு ஒருவேளை உணவு உண்டுகாலம் தள்ளிவந்தார். இறுதியாக ஒரு இரும்புப் பூட்டுக் கடைக்குச் சென்று, அந்த தொழிலில் ஈடுபட்டுப் பூட்டுக்களை வீடு வீடாகச் சென்று விற்றுக் கூலிபெற்று வாழ்ந்தார். இது தான் மார்ஷல் டிட்டோவின் இளமைக்கால கோரவரலாறு. பூட்டுத் தொழிலில் டிட்டோ ஈடுபட்ட போதுதான், உலகத்தின் உண்மைத் தோற்றம், வாழ்க்கையில் வயிறு வளர்க்கும் நெளிவு சுளிவுகள் எல்லாம் அவருக்குப் புரிந்தது. அப்போது யூகோஸ்லேவியாவில் பரபரப்பான அரசியல் நிலை சூடு பிடித்து நடந்து கொண்டிருந்தது. அதனால், அரசியல் இயக்கங்களுக்கு இடையே நடந்துவந்த அரசியல் குழப்பங்களைப் பார்த்து. அவரும் அந்த இயக்கங்களை உற்று நோக்கி, தனக்குப் பிடித்த அரசியல்வாதிகளுக்கு எடுபிடி வேலைகளைச் செய்துகொண்டு, அரசியல் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொண்டார். குறிப்பாக அவர், தொழிற் சங்கங்களிலே சேர்ந்து தொழிற்சங்கத் தலைவர்களுடன் நட்புக்கொண்டு உழைத்து வந்தார். அரசியல் கிளர்ச்சிகள், போராட்டங்கள், இவற்றிலே தீவிரமாகவும், ஆர்வத்துடனும் கலந்து கொண்டு பணியாற்றினார். இதனால் அவருக்கு தொழிலாளர்கள் இடையே ஒருவித செல்வாக்கும் புகழும் ஏற்பட்டது. அரசியலில் பங்கு கொண்டு உழைத்தால் மட்டும் போதுமா? உணவுக்கும், உடைக்கும், தங்கி வாழ ஓரிடத்துக்கும், பணம் தேவையல்லவா? அதற்கு அவருக்கு வழியேதும் தெரியாமல் திகைத்தார். கிடைக்கும் பணம் கொண்டு பசியும் பட்டினியுமாக அலைந்து திண்டாடினார். தான் பிறந்த நாடான யூகோஸ்லேவியாவில் பிழைக்க முடியாது என்பதைத் திட்ட வட்டமாகப் புரிந்து கொண்ட டிட்டோ, ஐரோப்பிய நாடுகளுக்கு ஓடினார். ஓடிய ஒவ்வொரு நாட்டிலும் கூட, அவர் பிழைப்பதற்கு அப்படி ஒன்றும் ஒரு பெரிய வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆனால், அந்தந்த நாட்டினுடைய அரசியல் கருத்துக்களும், சமுதாயச் சிந்தனைத் தெளிவுகளும் அவருக்குப் புரியும் ஒருவாய்ப்பு கிட்டியது. அப்போது முதல் உலகப்போர் துவங்கியது. அந்தந்த நாடுகள் இடையே ராணுவ பலத்தைப் பெருக்கும் பரபரப்புக்கள் ஏற்பட்டன. உடனே டிட்டோ மீண்டும் தனது தாய் நாடான யூகோஸ்லேவியாவுக்கு ஓடிவந்தார். தாய் நாடு திரும்பிய டிட்டோ ராணுவத்தில் சேர்ந்தார். போர் முனைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டதால் அவர் படையிலே சேர்ந்து போரிடத் தயாரானார். யூகோஸ்லேவியா நாடு அப்போது ஆஸ்திரியா, ஹங்கேரி போன்ற நாடுகளின் ஆதிக்கத்துக்கு அடிமைப்பட்டுக் கிடந்தது. அந்த நாடு ரஷ்யாவுடன்போர் புரிய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனால் டிட்டோ கட்டாயப் படுத்தப்பட்டு ராணுவப் போர்வீரனாக களம் நோக்கிச்செல்லும் நிலை ஏற்பட்டுவிட்டதால் போர்முனை சென்றார். போர் முனையில் ரஷ்ய மன்னனான ஜார் படையுடன் யூகோஸ்லேவியாப் படைகள் மோதும்போது, டிட்டோ படுகாயமடைந்ததும், அவர் கைது செய்யப்பட்டார். அதனால் டிட்டோ ரஷ்ய நாட்டிலுள்ள சைபீரியா சிறையிலே அடைக்கப்பட்டார். சிறையிலே இருந்த வேதனைகளுக்கு இடையிலே, உலக நாடுகளின் வரலாறுகளையும், அந்தந்த நாட்டு அரசியல் நெருக்கடிகளின் எழுச்சிகளையும், புரட்சிகளையும் உணர்ச்சியோடு படித்து அந்த வரலாற்று வீரர்களைப் போல உருவானார்! எவருக்கும், எதற்கும் அஞ்சாத மனநிலையும், நேர்கொண்ட போக்கும், சிந்தனைகளின் தெளிவும், முற்போக்குச் செயல் முறைகளும் அவருக்கு ஏற்பட்டன. குறிப்பாக, ரஷ்ய நாட்டின் பேரறிஞர் என்று அப்போது மக்களால் போற்றப்பட்டு வந்த லியோ டால்ஸ்டாயின் நூல்களை ஆழ்ந்து கற்றார். மார்ஷல் டிட்டோ ஒரு கம்யூனிஸ்ட் சிந்தனையாளன் என்ற கருத்து எப்படியோ ஜார் மன்னன் ஆட்சிக்குத் தெரிந்துவிட்டது. அதனால் அவரைக் கொலை செய்து விடவேண்டும் என்று ஜார் மன்னனது சிறை அதிகாரிகள் சதிசெய்தார்கள். இந்த அரசியல் கொலைச் சதி டிட்டோவுக்குப் புரிந்துவிட்டது. உடனே அவர் தனக்குள்ள மன பலத்தால் சிறையிலே இருந்து தப்பி ஓடிவிட்டார். ரஷ்யாவில் கம்யூனிஸ்ட்டுகளின் புரட்சி வெற்றி பெற்றது. அங்கே பொதுவுடைமை அரசு உருவானது. ஆனாலும் டிட்டோ, ரஷ்யாவிலே இருந்து யூகோஸ்லேவியாவுக்கு தப்பி ஓடிவந்து சேர்ந்தார். அதுமுதல் அவர் ரஷ்யக் கம்யூனிஸ்ட் ஆட்சியின் முக்கியஸ்தர்களுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். ரஷ்யாவிலே நடந்துவந்த பொதுவுடைமை ஆட்சியை வீழ்த்திட, அந்த நாட்டின் துரோகக் கும்பல்களும், ஜார் மன்னன் படையினரும் முயன்ற நேரத்தில், யூகோஸ்லேவியாவில் இருந்த டிட்டோ, தன்னுடைய ராணுவ நண்பர்களுடன் ரஷ்யா சென்று ஜார் படைகளையும், துரோகக் கும்பலையும் எதிர்த்துப் போர் செய்து, பொதுவுடைமை ஆட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வெற்றியும் பெற்றார். இரஷ்யாவில் பொதுவுடைமை ஆட்சி டிட்டோவின் உள்ளத்தில் ஒரு புதுவித அரசியல் புத்துணர்ச்சியைப் புகுத்தியது.அதனால், தனது தாய் நாடான யூகோவிலும் ஒரு ரஷ்யப் புரட்சியை நடத்தத் திட்டமிட்டார். முதல் உலகப்போர் முடிந்ததும், யூகோஸ்லேவியா, ஆஸ்திரிய, ஹங்கேரி போன்ற நாடுகளின் ஆதிக்கத்திலே இருந்து விடுபட்டு தனிமன்னர் ஆட்சியுடன் தனிநாடானது. ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியைப் போல யூகோவிலும் ஒரு புதுக் கட்சியை டிட்டோ துவக்கினார்! மக்கள் இடையே சுதந்திர எழுச்சியை ஏற்படுத்தினார்; கிளர்ச்சிகளுக்கு வித்திட்டார் ஆங்காங்கே கிளர்ச்சிகள் நடந்தன. இந்த நிலையை உணர்ந்த யூகோ மன்னராட்சி, டிட்டோவை 1929-ம் ஆண்டில் கைதுசெய்தது ஐந்தாண்டு தண்டனை வழங்கி அவரைச் சிறையில் பூட்டியது. சிறைக் கொடுமைகளை டிட்டோ மகிழ்ச்சியுடன் ஏற்று அனுபவித்தார்! பின்னர் தண்டனைக் காலம் முடிந்தவுடன் அவரை மன்னராட்சி விடுதலை செய்து, யூகோ நாட்டில் இருக்கக் கூடாது என்று நாடு கடத்தும் உத்தரவைப் பிறப்பித்தது. இந்த உத்தரவை ஏற்ற டிட்டோ மீண்டும் ஐரோப்பா சென்றார். அங்கிருந்த நாடுகளின் புரட்சியாளர்களுடன் தொடர்புகொண்டு திட்டங்கள் தீட்டினார். இந்த நேரத்தில், யூகோஸ்லேவிய நாட்டுக்கம்யூனிஸ்ட் கட்சி டிட்டோவைப் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்தது. உடனே டிட்டோ தனது தாய் நாட்டுக்குத் திரும்பினார். திரும்பிவந்த டிட்டோ, தனது நண்பர்களுடன் தொண்டர்களைத் திரட்டி புரட்சி நடந்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அப்போது இரண்டாவது உலகப்போர் துவங்கிவிட்டது. இட்லர் யூகோஸ்லேவியாவைப் பிடித்துக் கொண்டார். டிட்டோ தனது தாய் நாட்டை எப்படியாவது இட்லரிடம் இருந்து விடுவிக்க வேண்டும் என்று திட்டமிட்டார். லட்சம் வீரர்களுக்கு மேல் படை திரட்டி ராணுவப் பயிற்சியைக் கொடுத்தார். ரகசியமாக ராணுவம் தயாரானது. அந்த வீரர்களை மலைக் குகைகளிலே மறைத்து வைத்து, திடீர் திடீரென்று தோன்றி இட்லர் படைகளுடன் போரிட்டுக் கடும் சேதத்தை விளைவித்தார். டிட்டோவின் இந்த எதிர்பாராத தாக்குதல்களை இட்லர் படைகளால் சமாளிக்க முடியவில்லை. 1944-ஆம் ஆண்டில் மாவீரன் இட்லரது படைகள் தோற்றுப் பின்வாங்கி ஓடின. அதனால், டிட்டோ தனது தாய்நாட்டை மீட்டு அந்தநாட்டிற்கு அவரே தலைவரானார். தலைவராகிவிட்டதோடு நில்லாமல், டிட்டோ யூகோஸ்லேவியாவை ஒரு குடியரசு நாடு என்று பிரகடனப்படுத்தினார். சோவியத் ரஷ்யாவில் என்னென்ன திட்டங்கள் அந்த நாட்டை முன்னேற்றுவிக்கப் பயன்பட்டனவோ, அதே திட்டங்களைக் கொண்டு தனது தாய் நாட்டையும் முன்னேற்றினார். மிகக் குறுகிய காலத்தில் யூகோ நாடு புயல்வேக முன்னேற்றங்களுடன் உலகில் தலை நிமிர்ந்து நின்றது. யூகோஸ்லேவியாவைத் தொடக்கக்காலத்தில் சோவியத் ரஷ்யாவின் ஓர் அங்கம் போலவே எண்ணிச் செயல்படுத்தினார் டிட்டோ. அப்போது ரஷ்யாவில் ஸ்டாலின் எப்படியெல்லாம் ரஷ்யாவை முன்னேற்ற அரும்பாடு பட்டாரோ, அந்த உழைப்புக்களை எல்லாம் டிட்டோ மதித்தார் மரியாதை கொடுத்துப் பின்பற்றினார். ஆனால், போகப் போக சோவியத் யூனியன், தனது தாய் நாடான யூகோஸ்லேவியாவைப் புறக்கணித்து, அடிமை கொள்ள நினைக்கிறதோ என்ற ஓர் அச்சமும் டிட்டோவுக்கு ஏற்பட்டுவிட்டது. அதனால், சோவியத் யூனியன் ஆட்சியை லட்சியம் செய்யாமல், தனது மனப்போக்கோடு. தனது தாய் நாட்டை முற்போக்குச் சிந்தனைகளோடு ஆட்சி செய்ய ஆரம்பித்தார். டிட்டோவின் இந்தத் தன்னிச்சைப் போக்கு ஸ்டாலினுக்குப் பிடிக்கவில்லை. அதனால் ஸ்டாலின் டிட்டோவைத் துரோகி என்று வசை பாடினார்! சோவியத்அரசுப் பத்திரிகையான ‘ப்ராவ்தா’ டிட்டோவை முதலாளிகளின் கைக்கூலி என்று கடுமையாகத் தாக்கி எழுதியது. பிறகு யூகோஸ்லேவியா நாட்டை சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் அகிலத்தில் இருந்து பிரித்துவிட்டது. ரஷ்யாவைச் சார்ந்து வாழும் கம்யூனிஸ்ட் நாடுகள், டிட்டோவிற்கு எல்லையற்ற தொல்லைகளையும், தீராத கஷ்டங்களையும் பல குறுக்கு வழிகளிலே நயவஞ்சகமாகச் செய்து டிட்டோ ஆட்சியைக் கவிழ்க்கச் சதிசெய்தன. அந்த எதிர்ப்புக்களை எல்லாம் மார்ஷல் டிட்டோ என்ற தன்மானச் சிங்கம் தவிடுபொடியாக்கிவிட்டது.தனது யூகோ நாட்டை தனி நாடாக்கி தன்நிகரில்லா ஏறு நடைப்போட்டார் டிட்டோ. எந்ந அரசியல் சூழ்ச்சிகளாலும் டிட்டோவைக் கவிழ்க்க முடியாது என்ற சவால் விடுத்து, ஸ்டாலினின் எதிர்ப்புத் தொல்லைகளை, அரசியல் சதிகளை வீழ்த்திக் காட்டிவிட்டார். அதற்குப் பிறகு, ரஷ்யாவே டிட்டோவைத் தட்டிக் கொடுத்து, தனது நாட்டுடன் கூட்டுறவை வைத்துக்கொள்ள இடமளித்தது என்றாலும், டிட்டோ அதற்கெல்லாம் ராஜதந்திரமாக நடந்துகொண்டு தனது தாய்நாட்டை சுதந்திர நாடாக வாழவைத்தார்! இட்லர், ஆஸ்திரியா, ஹங்கே சோவியத் யூனியன் போன்ற நாடுகளின் ஆதிக்கப் பிடிப்பிலே இருந்து யூகோஸ்லேவியா நாட்டை மீட்டு, அதை ஒரு சுதந்திர பூமியாக உலகிலே நடமாடவைத்து மறைந்தவர் மாவீரன் மார்ஷல் டிட்டோ. FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.