[] 1. Title Page 2. Cover 3. Table of Contents உறவுகள் சுகமே உறவுகள் சுகமே   லாவண்யா ஶ்ரீராம்   lavanya.sriramprabhu@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-NC-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/uravugal_sugamae மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/uravugal_sugamae This Book was produced using LaTeX + Pandoc பகுதி 1 அந்த அகண்ட தெரு இன்று மிகவும் அழகாக இருந்தது. காலையிலிருந்து பெய்த லேசான மழை ஓய்ந்துவிட்டபோதும் இன்னும் கார்மேகங்கள் ஆதவனைச் சுத்தமாய் மறைத்திருந்தது. பளிச்சென்று இருந்த தார்ச் சாலை, இருபுற மரங்கள், லேசான காற்றில் மர இலைகளிலிருந்து சிந்தும் மழைத் துளிகள். அந்தக் காட்சி ரம்மியமாய் இருந்தது. ரசித்தபடி வீட்டை அடைந்த மீரா மதில் கதவைத் திறந்தாள். அவள் வீட்டுத்தோட்டம் இன்னும் அழகாக இருந்தது. பெரும்பாலும் பூ வகைகள். முல்லை, மல்லி, செம்பருத்தி, ரோஜா. எல்லாம் அவளும் அவள் அன்னை ராதாவும் அமைத்தது. செடிகள் அழகாயிருந்த போதும், மழையால் செடிகளின் அடிப்பகுதியில் காய்ந்த இலைகளும் பூக்களும் சிதறியிருந்தன. சுத்தம் செய்ய வேண்டும் என்று எண்ணிய படி மீரா, அம்மாவைத் தேடி ஓடினாள். அவளாற்றிய விரிவுரைக்கு அனைவரின் பாராட்டையும் பெற்றிருந்தாள். இதைப் பகிர்ந்துகொள்ளத்தான் அம்மாவைத் தேடினாள். பெரும்பாலும் மீரா வீட்டிற்கு வரும்போது ராதாவும் வந்து விடுவாள். ராதா ஒரு பள்ளியின் அலுவலகத்தில் வேலை செய்துவந்தாள். பள்ளி மூன்று மணிக்கு முடித்தாலும் அலுவலகப் பணி சில நாட்களில் ஐந்து ஆறுவரை இருக்கும். அதுவும் மாதத்தொடக்கத்திலும் கடைசியிலும் ராதா ஆறு மணிக்குத் தான் வருவாள். இன்று தேதி பத்தை தாண்டிவிட்டது. அம்மா நிச்சயம் வந்திருப்பாள் என்று எண்ணி நேரே சமையல் அறைக்குச் சென்றாள் “அம்மா” என்று அழைத்தபடி. அம்மாவின் தோள்களைக் கட்டிக்கொண்டு “அம்மா, இன்று நான் எடுத்த செமினார் பிரமாதம் னு எல்லாரும் சொன்னார்கள்” என்றாள். “அப்படியா! இதற்குத் தானே ஒரு வாரமாகப் பயந்து கொண்டிருந்தாய். ஒரு வழியாக நன்றாக முடித்துவிட்டாய்.” “நான் எப்போது அம்மா பயந்தேன்? நன்றாகச் செய்ய வேண்டும் என்று சற்று கவலையோடு இருந்தேன். அவ்வளவுதான்” என்றாள் மிடுக்காய். “சரி, சரி, முகம் கழுவி வா, டிபன் எடுத்து வைக்கிறேன்” என்று ராதா சிரித்துக்கொண்டே சொல்ல, “அப்பா வந்தாயிற்றா?” என்றாள் மீரா. “இன்னும் இல்லை, வந்து விடுவார்” “என்னம்மா, ஊருக்குச் சென்றால் மட்டும் அப்பாவுக்கு வர மனசே வராது போல. நான் கல்லூரிக்குச் செல்லும் முன் சென்றார். இன்னும் வரவில்லை. நானும் ஜீவாவும் கூடப் பரவாயில்லை. அப்பா தான் இன்னும் அம்மா பைத்தியமாக இருக்கிறார்” என்றாள் கேலியாக. அம்மா ஓரக்கண்ணால் முறைப்பதைப் பார்த்துவிட்டு “உங்களைச் சொல்லவில்லை அம்மா, அப்பாவின் அம்மாவைச் சொன்னேன்” என்று சிரித்துக் கொண்டே முன் அறைக்கு வர அப்பா கோபாலன் உள்ளே வருவது தெரிந்தது. அப்பாவைக் கண்டதும் குடிக்கத் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்துவிட்டு அவர் அருகில் அமர்ந்தாள். ” ஊரில் அனைவரும் நலமா ?” என்று விசாரித்தபடி ராதா சிற்றுண்டி தட்டுடன் வந்தாள். “ஹ்ம்ம், இதோ அம்மா எதோ பலகாரம் கொடுத்தனுப்பினார்கள்.” என்று ஒரு பையை மனைவியிடம் நீட்டினார். அதை வாங்கிக்கொண்டு “மீரா, இரவு உணவுக்குச் சப்பாத்தி குருமா செய்யட்டுமா?” என்றாள் மகளைப் பார்த்து. ” சரி அம்மா. உடை மாற்றிக் கொண்டு வந்து தோட்டத்தில் கொஞ்சம் சுத்தம் செய்ய வேண்டும். முடித்துவிட்டு வந்து காய்களை நறுக்கித்தருகிறேன்.” என்று உள்ளே ஓடினாள். கோபாலன் முகவாட்டத்தைப் பார்த்து “என்ன ஆயிற்று ? முகமே சரியில்லையே!” என்றபடி கணவனின் அருகில் அமர்ந்தாள். “நாம் நம் ஊருக்குச் சென்று விடலாம் ராதா” என்றார் கோபாலன். “என்ன?” என்று திகைத்த ராதா கணவனின் முகத்தைப் பார்த்து “இப்போது என்ன திடீர் என்று. அங்கே ஏதும் பிரச்சனையா ?” என்றாள் மெதுவாக. ” அம்மா அப்பாவிற்கு இப்போது நாம் தேவை. தம்பியும் தனியாகப் போகத் திட்டமிட்டிருக்கிறான். தம்பியுடன் அம்மாவும் அப்பாவும் போகமாட்டார்கள். எனக்கு அப்பாவைப் பற்றித் தெரியும். வயதான காலத்தில் அவர்கள் தனிமையில் விட என்னால் முடியாது. ” என்று கோபாலன் சொல்ல அமைதியாய் அமர்ந்திருந்தாள் ராதா. “அவர்கள் நம்மை ஏற்கவில்லை தான். அதற்காக அவர்கள் செய்ததை நாமும் செய்ய வேண்டுமா ?” என்று மனைவியின் முகத்தைப் பார்த்தார். “நாம் அங்க வர வேண்டும் என்று யாரேனும் கேட்டார்களா?” என்றாள் ராதா. கோபாலன் ஏதோ சொல்லத் தொடங்கியவர் “போ, மீரா வந்துவிட்டாள். பிறகு பேசலாம்” என்று சொல்லிவிட்டு நகரத்தார். ” மழை இப்போதுதான் ஓய்ந்திருக்கிறது. தோட்டத்திற்குள் போகாதே. காலையில் பார்த்துக் கொள்ளலாம். சமையல் அறையில் எனக்கு உதவி செய்” என்றாள் ராதா. இரவு உணவிற்குப் பிறகு மகள் உறங்கச்சென்றதும் கோபாலன் மீண்டும் தொடங்கினார் “இந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் ஏதேதோ நடந்து விட்டது. அப்பாவின் ஆலையை வேறு யாரோ தான் பார்த்துக்கொள்கிறார்கள். தம்பி அப்பாவின் எந்தத் தொழிலும் ஆர்வம் காட்டுவதில்லை. இப்போது தனியே வீடு கட்டி அங்கே குடிபுகப் போகிறான், அப்பாவின் விருப்பமின்றி.” ராதா குழப்பமாய் பார்க்க “தம்பியும் தங்கை கணவனும் செய்யும் ஏற்றுமதி தொழில் மிகச் சிறப்பாகச் செல்கிறதாம். அதைக் கவனிக்கவே நேரம் போதவில்லையாம். ஆலையை லீஸ்க்கு விட்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. அப்போதிருந்தே அப்பாவுக்கும் தம்பிக்கும் மனஸ்தாபம். அதன் விளைவு தனி வீடு. இனி அம்மா அப்பா தனியே இருக்க வேண்டும். இருவரும் மிகவும் சோர்ந்து இருக்கிறார்கள்.”உன்னை அப்போது தள்ளி வைத்தேன். இப்போது உன் தம்பி எங்களைத் தனியே விட்டுப் போகிறான்” என்று அம்மா அழத்தொடங்கிவிட்டார்கள். நீங்கள் எங்களோடு வந்து விடுங்கள் என்று சொல்லத்தான் நினைத்தேன். ஆனால் அதற்குள் “இனியேனும் நீ என்னோடு இருப்பாயா ?” என்று அம்மா கேட்கிறார்கள். நான் என்ன சொல்வேன் ராதா “. “வீட்டுப் பெரியவர்களைப் பார்த்துக்கொள்ளும் கடமை பிள்ளைகளுக்கு இருக்கிறது. நான் மறுக்கவில்லை. உங்கள் தம்பி தங்கை எப்போதும் உங்களை மதித்ததே இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் அப்பா என்னையும் நம் பிள்ளைகளையும் அந்த வீட்டில் ஏற்பாரா ?”. என்றாள் ராதா.” ராதாவின் கவலைக்குக் காரணம் இருந்தது. இவர்களின் காதல் திருமணம் கோபாலனின் வீட்டாருக்குப் பிடிக்கவில்லை. அதனால் அங்கே யாரும் இன்றுவரை இவர்களிடம் அக்கறைகாட்டியதில்லை. ராதாவிடம் இருந்த வெறுப்பு பிள்ளைகளிடமும் பாய்ந்தது. விடுமுறைகளில் தாத்தா பாட்டி வீட்டுக்குச் செல்வது பிள்ளைகளுக்குத் தண்டனையாகத் தெரிந்தது. கோபாலனின் தம்பி தங்கை பிள்ளைகளைக் கொஞ்சும் பாட்டி இவர்களுடன் பேசுவதே அபூர்வம். அத்தையும் சித்தியும் எப்போதும் இவர்களைத்தான் குறை கூறுவார்கள். பிள்ளைகளிடம் வருத்தம் தெரிய கோபாலன் தன் பெற்றோர் வீட்டுக்கு அவர்களை அனுப்பு வதை ஒரேயடியாக நிறுத்தினார். இப்படியாக விலகியிருந்த குடும்பம் இப்போது அவர்களுடன் சென்று வசிப்பது எப்படி ? ஏற்கனவே வேலையில் ஓய்வு பெற்றிருந்த கோபாலன், ஆரோக்கியம் குன்றியிருந்த அன்னையைப் பார்க்க அடிக்கடி சென்று வருவார். சில சமயம் ராதாவும் செல்வாள். அங்கே இவர்களைப் பெரிதாக யாரும் வரவேற்பதில்லை என்றாலும் பெற்றவர்களை ஒதுக்கி வைக்கக் கோபாலனால் முடிந்ததில்லை. பெரிய குடும்பமாக இதுவரை இருந்தவர்கள் தனித் தனியே செல்வது கோபாலனின் பெற்றோருக்கு எவ்வளவு பெரிய வேதனை என்பதை உணர்ந்து ராதா அவர்களுடன் சென்று வசிக்கச் சம்மதித்தாள். அதுமட்டுமின்றி அவளை வீட்டில் யாரும் ஏற்கவில்லை என்ற கவலை ராதாவுக்கு இன்று வரை இருந்தது. இனி அது மாறும் என்று நம்பினாள். இரண்டொரு மாதங்களில் அவர்கள் ஊருக்குச் செல்வது என்று முடிவானது. செல்வதற்கு முன் பல ஏற்பாடுகள் செய்யவேண்டியிருந்தது. ராதா வேலையை விடவேண்டியிருந்தது. பிள்ளைகளில் இருவரில் படிப்பு பாதிக்காமல் சிலது செய்யவேண்டியிருந்தது. அவர்கள் வீட்டை நல்ல குடும்பத்திற்கு வாடகைக்குப் பேசியிருந்தனர்.கோபாலனின் மகன் ஜீவன் சென்னையில் மேலாண்மை படித்துக்கொண்டிருந்தான். மாதம் ஒருமுறை வந்து செல்லும் அவனுக்கு எதுவும் மாற்றத் தேவை இருக்கவில்லை. ஆனால் கோவை கல்லூரியில் இளநிலை இறுதியாண்டிலிருந்த மீராவிற்குக் கல்லூரி விடுதியில் இடம் கிடைக்கவில்லை. பாதுகாப்பு கருதி தனியார் விடுதிகளில் சேர்க்கக் கோபாலன் விரும்பவில்லை. கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் அவ்வளவு தொலைவில்லையே. ஆம், அவர்கள் இப்போது செல்லவிருப்பது மேட்டுப்பாளையம். அதனால் ஏற்கனவே இறுதியாண்டில் மூன்று மாதங்கள் முடிந்திருந்த நிலையில், இனி தினமும் காலை ஒன்றரை மணிநேரம் மாலை ஒன்றரை மணி நேரம் பிரயாணம் மீராவுக்கு. இப்படியாக எல்லாம் முடிவானது. பகுதி 2 விடுமுறையில் வந்த ஜீவனிடம் விஷயத்தைச் சொன்னதும் அதிர்ந்தான். தந்தையிடம் எதுவும் சொல்லாமல் தாயிடம் சென்று பேசினான் “அம்மா! அப்பா ஏன் இப்படியொரு முடிவை எடுக்க வேண்டும்? அந்த வீட்டில் யாரும் நம்மை மதிக்கக் கூட மாட்டார்கள். அங்கே ஒரு நாள் கூட நம்மால் இருக்க முடியாது.” என்றான் ஜீவன். “அப்படி இல்லை ஜீவா. இன்னும் சில நாட்களில் பாட்டி தாத்தா இருவர் மட்டும் தான் அங்கே இருக்கப் போகிறார்கள். இத்தனை நாள் சித்தப்பா தான் பார்த்துக் கொண்டார். இன்னும் சில மாதங்களில் அவர் புது வீடு கட்டி சென்றுவிடுவார். பாட்டி தாத்தா இருவருக்கும் மருதனூர் தான் சரியாக இருக்கும். இருவரும் வயதானவர்கள். தனியே விட அப்பாவுக்கு எப்படி மனம் வரும்.” ” ஓஹோ, இப்போது யாரும் இல்லையென்று நாம் தேவைப்படுகிறோம்! நல்ல கதை. ” என்றால் மீரா ஏளனமாக. “போதும். உங்களிடம் யாரும் கருத்தோ ஆலோசனையோ கேட்க வில்லை. அந்த வயதும் உங்களுக்கு இல்லை. நாம் அங்கே செல்கிறோம். அவ்வளவு தான்” ராதா கோபமாகச் சொல்ல, ஜீவா அதிர்ந்தான். இந்தக் கோபத்தை தாயிடம் எதிர்பார்க்கவில்லை. அன்னைக்கும் அவர்களைப் போல் அங்கே செல்ல விருப்பம் இருக்காது என்று தான் ஜீவா நினைத்திருந்தான். எப்படியும் அன்னை தந்தையிடம் பேசி இந்த முடிவை மாற்றிவிடுவாள் என்று எதிர் பார்த்தான். ஆனால் அவன் எதிர்பார்த்தது நடவாமல் போனது. பலமுறை ராதாவும் பொறுமையாகச் சொல்லிப்பார்த்தாள். ஜீவனும் மீராவும் கேட்பதாக இல்லை. அவர்கள் இருவரிடமும் தகுந்த காரணம் இருந்தது. பண்டிகை விழாக்களுக்குத் தாத்தா வீட்டிற்குச் சென்றதுண்டு. அங்கே அவர்களை நடத்திய விதம் அவர்கள் நினைவில் இன்னும் இருக்கிறது. அவர்கள் செய்யும் சிறு தவறுகளுக்கு எல்லாம் அவர்கள் அன்னையும் நிறையே சொல் கேட்கவேண்டியதாக இருந்தது. “என்ன பிள்ளைகளை வளர்த்து வைத்திருக்கிறாய்?” என்று பாட்டி ராதாவைச் சொன்னது இன்னும் ஜீவனுக்கு நினைவிலிருந்தது. தவறு யார் மீது இருந்தாலும் சரி குற்றவாளி ராதா தான். பலமுறை இதை ஜீவன் கவனித்து இருக்கிறான். அதுமட்டுமின்றி, செல்வச்செழிப்பில் இருக்கும் உறவுகளின் பார்வையில் எப்போதும் ஒரு ஏளனம் இருக்கும். இதில் எதைச் சொன்னாலும் “இப்போது அப்படி இல்லை” என்றாள் ராதா. ஒருமுறை தந்தையிடம் பேசிப்பார்த்தாள் மீரா. ” முன்பு நிகழ்த்தவைகளை மட்டும் மனதில் வைத்துக் குழம்பாதே. இப்போது பாட்டி நம் வரவை ஆர்வமாய் எதிர்பார்த்து இருக்கிறார்கள்” என்றார். ’ஏன் அப்பாவுக்குப் புரியவில்லை? இதுவரை இல்லாத பிரியம் இப்போது ஏன் வந்தது ? யாரும் இல்லாதபோது நம்மேல் வரும் பாசத்தை எப்படி ஏற்க முடியும் ? பிள்ளைகள் இருவரும் பேசிப் பலன் இல்லாமல், பெற்றோருடன் புறப்படத் தயாராகினர் சிறிதும் பிரியமின்றி. தன் அறையிலிருந்த புத்தகங்களை எடுத்துவைத்து கொண்டிருந்தாள் மீரா. பழைய மற்றும் புதிய புத்தகங்களைத் தனி தனி பெட்டிகளில் அடுக்கினாள் மனதில் சிறிதும் உற்சாகமின்றி. முன் அறையில் இரு பெண்கள் பேசியது தெளிவாகக் கேட்டபோதும், அவள் மனதில் எதுவும் பதியவில்லை. இந்த அறை, இந்த வீடு எல்லாவற்றையும் விட்டுச் செல்ல வேண்டுமென்று எண்ணும்போது அவளை அறியாமல் கண்ணீர் பொங்கியது. பக்கத்துக்கு வீட்டு அம்பிகா ஆண்டி அம்மாவிடம் பேச வந்திருக்கிறாள் என்று தெரிந்தும் மீரா அறையை விட்டு வெளியே வந்து பார்க்கவில்லை. வெளியே செல்லும் முன் அவள் முகத்தைச் சாதாரணமாக வைத்துக்கொள்ள முயற்சி செய்துகொண்டிருந்தபோது அம்மாவின் குரல் கேட்டது. “மீரா, கொஞ்சம் வாம்மா, அம்பிகா ஆண்டிக்கு குடிக்க ஏதேனும் கொண்டுவா” “ஒன்றும் வேண்டாம் ராதா, உங்களுக்கே நிறைய வேலை இருக்கும். நாளை இன்னும் பிஸியாக இருப்பீர்கள் என்று தான் இப்போது வந்தேன்.” என்ற படி வெளியே வந்த மீராவை பார்த்து “என்னம்மா எல்லாம் எடுத்து வைத்தாயிற்ற? நீயும் ஜீவனும் இல்லாமல் சிவாவும் ரதியும் ரொம்ப போரடித்து போவார்கள்” என்றாள் அம்பிகா. லேசாகப் புன்னகைத்துவிட்டு சமையலறைக்கு சென்று காப்பி எடுத்து வந்தாள் மீரா. “பத்து பனிரெண்டு வருடங்களாக ஒன்றாக இருந்து விட்டு இப்படி திடீரென்று நீங்கள் கிளம்புவது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது” என்று வருத்தப்பட்டாள் அம்பிகா. “என்ன அம்பிகா? நாங்கள் எதோ வெகுதூரம் போவது போல் பேசுகிறீர்கள். இங்கிருந்து மேட்டுப்பாளையம் ஒருமணி நேரம்தான். அதுவுமின்றி மீரா இங்கேயே தான் படிக்கப் போகிறாள். நாங்களும் அடிக்கடி இங்கே வருவோம்” என்றாள் ராதா. “என்ன இருந்தாலும் தினமும் பார்ப்பது போலாகுமா? சரி, நாளை நீங்கள் எதுவும் சமைக்க வேண்டாம். உணவு எங்கள் வீட்டில் தான். இங்கே ஆட்கள் எடுத்து வைத்துக் கொண்டிருப்பார்கள். அதனால் அங்கே வந்துவிடுங்கள். சௌகரியமாக இருக்கும். வேறு எது வேண்டுமானாலும் கேளுங்கள்” என்று சொல்லி விட்டுப் புறப்பட்டாள் அம்பிகா. “என்ன மீரா எல்லாம் எடுத்து வைத்தாயிற்றா?” என்றாள் ராதா. “இன்னும் கொஞ்சம் இருக்கும் மா” என்று தயங்கியவாரே “அங்கே செல்லத்தான் வேண்டுமா? நம் வீட்டைவிட்டு ஏன் அங்கே செல்ல வேண்டும்?” என்றாள் மீரா. “அதுவும் நம் வீடு தான் மீரா. இன்னும் இரண்டு மாதங்கள் உனக்குக் கொஞ்சம் சிரமமாக இருக்கும். கல்லூரி விடுதியில் இடம் கிடைக்க வில்லை. இறுதி ஆண்டு, அதுவும் கல்வி ஆண்டின் இடையே எதுவும் காலி இல்லை என்று விட்டார்கள். என்ன செய்வது?” ” இரண்டு மாதமா? இப்பொது தான் செப்டம்பர். இந்தச் செமஸ்டரில் இன்னும் மூன்று மாதம். கடைசி செமஸ்டரில் ஆறு மாதம். எப்படி அம்மா ? தனியார் விடுதியிலும் வேண்டாம் என்கிறீர்கள்.” “மீரா, ஏற்கனவே பேசியது தான். இது நம் அப்பாவிற்காக. அப்பாவின் சந்தோஷத்துக்காக. ஏன் நீங்களும் அங்கே செல்ல எவ்வளவு ஆர்வமாக இருப்பீர்கள்”. என்று ராதா சொல்ல. “அது சிறு வயதில்.” என்று குரல் கேட்க இரு பெண்களும் திரும்பிப் பார்த்தனர். ஜீவன் உள்ளே வந்துகொண்டிருந்தான். அவன் கண்கள் அவன் கோபத்தைத் தெளிவாகக் காட்டியது. “விடுமுறையில் கூட நாங்கள் அங்கே செல்ல விரும்புவதில்லை. சிறுவயதில் அங்கே கூடி விளையாட இன்னும் நால்வர் இருக்கிறார்கள் என்று எண்ணினோம். இப்போதுதான் அவர்களைப் பற்றித் தெரிந்து கொண்டோமே. நீங்கள் ஏனம்மா இதற்கு ஒத்துக்கொண்டீர்கள் ?” என்று ஜீவா முடிக்கும் முன். “போதும் ஜீவா! இன்னும் இதைப் பற்றிப் பேச வேண்டாம். காலைப் பத்து மணிக்கு வண்டி வந்துவிடும். அங்கே சென்று எல்லாம் எடுத்து வைக்க நான்கைந்து நாட்கள் ஆகும். உங்களுக்கு ஒரு வாரத்துக்குத் தேவையானதைத் தனியே எடுத்து வைக்கச் சொல்லிருந்தேனே!” சொல்லிக்கொண்டே போன ராதா இருவரையும் பார்த்து “எல்லோரும் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இப்போது தாத்தா பாட்டிக்கு நம் தேவை இருக்கிறது. மற்றவர்களைப் பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டாம். அப்பா பார்த்துக்கொள்ளவார். இனியும் இதைப் பற்றிப் பேசினால் அப்பாவை அவமதிப்பது போலாகும். செல்லுங்கள்” என்றாள் ராதா. அண்ணன் அறைக்குச் சென்று உதவலாம் என்று பின் சென்ற மீரா, அவள் அண்ணன் இன்னும் கோபத்துடன் அமர்ந்திருப்பதைக் கண்டாள். தங்கையைப் பார்த்து “நமக்குத் தேவை என்றபோது உடன் இல்லாதவர்களுக்காக நாம் ஏன் நம் வீட்டை விட்டுவிட்டு அவர்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும் ? உன்னிடம் சொல்லி என்ன பயன். உனக்குத் தான் அந்த வீடு பிடிக்குமே. நீ தான் அப்பாவின் பக்கமாயிற்றே”. என்றான் ஜீவா. பெரும்பாலான வீடுகளைப் போல் ஜீவா, அம்மாவின் பக்கமும், மீரா தந்தையின் பக்கமும் பேசுவது வழக்கம். அதை ஜீவா இப்போது குறிப்பிட்டதும், “எனக்கும் நம் வீட்டைவிட்டு அங்கே செல்லப் பிடிக்க வில்லை. நம் வீட்டைவிடப் பெரிய வீடு. விளையாட நிறைய இடம் இருக்கும் என்று எப்போதோ அந்த வீடு பிடிக்கும் என்றேன். அங்கே இருப்பவர்களுக்கு நம்மைப் பிடிப்பதில்லை என்று தெரிந்த பின்னும் அந்த வீடு எனக்கு எப்படிப் பிடிக்கும் ? உனக்குப் பரவாயில்லை. விடுமுறைக்கு மட்டும் தான் வருவாய். ஆனால் நான் அங்கே தான் இருக்க வேண்டும். நானும் உன்னைப் போல் சென்னை கல்லூரியில் சேர்த்திருந்தால் தொல்லையே இல்லை.” என்று சோர்ந்தாள். சோர்ந்த தங்கையின் முகத்தைப் பார்த்து “சரி விடு. நீ முதுகலை படிப்பின் நுழைவுத்தேர்வை எழுது. பின்பு நீயும் சென்னை கல்லூரியைத் தேர்வு செய்து வந்துவிடலாம். நாம் இருவரும் சென்றால் அம்மா அப்பா நிச்சயம் நம்முடன் வந்துவிடுவார்கள்.” என்றான் ஜீவன். பிள்ளைகள் இருவரும் சென்னையில் தனியாக இருக்கிறார்கள் என்றால் பெற்றோரும் உடன் வந்து விடுவார்கள் என்று அண்ணனும் தங்கையும் திட்டம் போட்டார்கள். ஆனால் அவர்கள் திட்டம் வெற்றியடையாது என்று அவர்களுக்கு அப்போது தெரியாது. “பரவாயில்லையே, எல்லாம் ஓரளவு பெட்டியில் அடுக்கிவிட்டாயே! மீரா, ஜீவன் எங்கே ?” அப்பா கோபாலனின் குரல் கேட்டது. “அவர்களும் உள்ளே அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள். நான் காபி எடுத்து வருகிறேன். ஜீவா! அப்பா வந்துவிட்டார் பார்.” என்று சொல்லிக்கொண்டே சமையல் அறைக்குச் சென்றாள். பிள்ளைகள் இருவரும் வர “நிறையவும் அலட்டிக்கொள்ளாதீர்கள். நாளை ஆட்கள் வந்து எல்லாம் செய்துகொள்வார்கள்.வந்து உட்காருங்கள்” என்றார் கோபாலன். அலைந்துதிரிந்து வந்ததில் தந்தை முகத்தில் சோர்வு இருந்தது ஆனால் அவர் கண்ணிலிருந்த ஓளி. பிள்ளைகள் இருவரும் கவனிக்கத் தவறவில்லை. ஊருக்குச் செல்லும் முடிவு எடுக்கப்பட்டதிலிருந்து கோபாலனின் உற்சாகத்திற்கு அளவே இல்லை. தினமும் மனைவியிடமும் மீராவிடமும் அந்த வீட்டைப் பற்றியோ, பண்ணையைப் பற்றியோ, ஊரைப்பற்றியோ சொல்லிக்கொண்டே இருப்பார். மீராவுக்குப் பல சமயம் அந்தப் பேச்சு ருசித்ததில்லை. ‘உங்களுக்கு எப்படி அந்த வீடோ அதே போல் தான் எனக்கு இந்த வீடும்’ என்று மீரா சொல்ல நினைத்ததுண்டு, ஆனால் தந்தையின் உற்சாகம் குறைத்துவிடுமோ என்று அவள் அதைச் சொன்னதில்லை. பகுதி 3 தன் முன் இருந்த ஒப்பந்த பாத்திரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான் ஆனந்தன். இன்னும் மூன்று மாதங்கள் தான். அதற்குப் பிறகு இந்த இடமும் தொழிலும் அவன் கையை விட்டுப் போய்விடும். சரத் வந்தபோது “இனியும் நீ இதை நம்பிக் கொண்டிருக்காதே. அந்த மனிதர் எப்போது என்ன முடிவெடுப்பார் என்று யாருக்கும் தெரியாது? திடீர் என்று வெளியே போ என்று சொன்னாலும் சொல்லுவார். நீயும் திருப்பூரில் ஒரு ஆலையை வாங்குவதாக முடிவெடுத்துவிட்டாய். இது போனால் போகட்டும்.” என்றான் சரத். அனந்தனால் அப்படி விட முடியவில்லை. நண்பன் எதுவும் பேசாமல் இருக்க “டேய், நான் பேசுகிறது காதில் விழுகிறதா ?” இப்போதும் பதில் இல்லை. ” உன்னிடம் பேசிப் பயன் இல்லை. சரி மறக்காமல் நாளை மாலை வந்துவிடு, நான் கிளப்புகிறேன்.” ஒரு விருந்திற்கு நண்பனை அழைக்கவந்தவன், அழைப்பைவிடுத்துப் புறப்பட்டான். ” நண்பன் சென்றதும் சிறிதுநேரம் அப்படியே அமர்ந்திருந்தான். சரத் சொல்வதும் சரிதான். இந்த ஒப்பந்தம் முடித்தால் என்ன ? இதோ இப்போது ஒரு தொழிற்சாலையை வாங்கத் தேதி கூட முடிவாகிவிட்டது. அந்தத் தொழிற்சாலையைப் பார்த்துக் கொள்ளவே அவனுக்குச் சரியாக இருக்கும். என்ன தான் சமாதானம் சொல்லிக்கொண்டாலும் மனதிற்குள் ஏதோ கவலை இருந்து கொண்டே இருந்தது. யோசித்தபடி அவன் அலுவலக அறையை விட்டு வெளியே வந்தான். தந்தையும் தாயும் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். ” அவன் முகத்தைப் பாருங்கள். எதையோ பறிகொடுத்தது போல்” அன்னை பத்மா கணவனிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். பேச்சு தன்னை பற்றித் தான் என்று தெரிந்ததும் அங்கிருந்து நகரத்தொடங்கினான். “ஆனந்த், இங்கே வா”, சுந்தரம் மகனை அழைத்தார். மகன் அருகில் வந்ததும் “உட்கார். என்ன இன்னும் கே வி நிறுவனத்தைப் பற்றி யோசித்துக்கொண்டே இருக்கிறாயா ? முதலிலேயே நான் உனக்குச் சொன்னேன். அது நமக்குச் சொந்தமாகாது என்று. லீஸ் முடிந்தது. மீண்டும் உனக்கே லீஸ் வர வாய்ப்பில்லை என்று விட்டனர். அவ்வளவுதானே. இருப்பதை விட்டுப் பறப்பதற்கு ஆசைப்படுபவன் நீ இல்லை. திருப்பூர் ஆலையைச் சரியாக நடந்து. அது போதும் நமக்கு.” என்றார். ” பார், ஆனந்த். உன்னை வேண்டாம் என்பது அவர்களுக்குத் தான் நஷ்டம். உன் அப்பா சில நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருந்த போதும் நாம் சந்தோசமாக இருந்தோம். இன்று நீ ஒரு நிறுவனத்தை வாங்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறாய். ஆனாலும் உன்முகத்தில் மகிழ்ச்சியே இல்லை. இருப்பதை வைத்துச் சந்தோசமாய் வாழப் பழகிக்கொள்.”. லேசாகப் புன்னகைத்து விட்டு “சரி அம்மா” என்றான் அங்கிருந்து நகர்ந்தபடி. கரை எடுத்துக்கொண்டு புறப்பட்டான் ஆனந்த். கே வி மீல்ஸ். அவன் இன்றைய வளர்ச்சிக்கு அச்சாரம். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை. வெளிநாடு சென்று வேலை பார்க்க வாய்ப்பும் கிடைப்பதாக இருந்தது. அப்போதுதான் கே வி மில்ஸ் பற்றிச் சுந்தரம் சொன்னார். அந்த நிறுவனத்தில் பத்து வருடங்களுக்கு மேல் ஆலோசகராக இருந்தார் சுந்தரம். ஒர்கிங் பார்ட்னராக நம்பிக்கையான அட்டைகளைத் தேடுவதாகச் சொல்லிக்கொண்டிருந்தார். ” நாம் ஏன் அப்பா செய்யக் கூடாது?” என்றான் ஆனந்த். ஆச்சரியமாக மகனைப் பார்த்தார் சுந்தரம். “இல்லையப்பா, அது கொஞ்சம் கஷ்டம். முழு வேலைகளையும் நாம் தான் பார்க்க வேண்டும். எல்லா வற்றையும் நான் தனியே பார்ப்பது கஷ்டம்”, என்றார். “தனியே எதற்கு? நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் இப்போது போல் எனக்கு ஆலோசனை கொடுங்கள்” என்றான் மகன். ” பெங்களூர் வேலையே உனக்கு அதிகமாக இருக்கிறது. சனி ஞாயிறு கூட நீ உன் லேப்டாப்பில் வேலை செய்துகொண்டே இருக்கிறாய். அது மட்டும் இல்லை. முழுநேரமும் அங்கே மேற்பார்வை செய்ய வேண்டும். இப்போது இருக்கும் ஆட்கள் யாரும் சரியாக இல்லை. இன்னும் பல சிக்கல்கள். இதைப் பற்றி ஆலோசனை செய்துகொண்டிருந்தபோது தான் என்னிடம் நம்பிக்கையான ஆட்களைப் பரிந்துரை செய்யுமாறு கூறினார்.” என்று முடித்தார் சுந்தரம். ” நான் வேலையை விட்டு விடுகிறேன். இந்த நிறுவனத்தை நாம் பார்த்துக் கொள்வோம். ” என்ற மகனை ஆராய்ந்தார் சுந்தரம். ” உன் மென்பொருள் நிறுவனம்போல் இது இலகுவான வேலை இல்லை ஆனந்த். ” என்றார் தந்தை. ” தெரியும் அப்பா. எனக்கு இந்தப் பெங்களூரு வேலை பிடிக்கவில்லை. வேறு யாரோ சொல்வதை அப்படியே செய்து தருவதில் என்ன சுவாரசியம் இருக்கிறது. அது மட்டும் இல்லை. மாத சம்பள வேலையில் திருப்தி கொள்ள என்னால் முடியாது.” அவன் செய்ய வேண்டும் என்று நினைப்பதை நல்லபடியே செய்து முடிப்பது அவன் வழக்கம். அவன் தந்தை செல்லும் நிறுவனங்களின் தொழில் முறையை நன்கு அறிவான். மகனின் திறமையைப் பற்றித் தெரிந்த சுந்தரம் இதற்குச் சம்மதித்தார். முதல் வருடம் தந்தை சொன்னது போல மிகச் சிரமமாக இருந்தது. சரியான பராமரிப்பின்றி பல எந்திரங்கள் இயங்கவில்லை. மேற்பார்வையாளர்கள் யாரும் அனுபவமுடையவர்களாக இல்லை. இவை எல்லாவற்றையும் சரி செய்வதற்குள் கே வி மில்ஸ்-ன் வாரிசுகள் யாராவது வந்து தங்கள் அதிகாரத்தைப் பறைசாற்றிக் குறை சொல்லிவிட்டுப் போவார்கள். ஆனந்த்-ன் ஈடுபாடும் தொழிலாளர்களின் திருப்தியும் முழு பொறுப்பையும் அவனே ஏற்கும்படி செய்தது. யார் குறுக்கீடும் கேள்வியுமின்றி அவனே எல்லாவற்றையும் செய்தான். தந்தையின் ஆலோசனைகள் தேவைப்படும்போது பெற்றுக்கொண்டான். நல்ல லாபம் வரத் தொடங்கியது ஆலையை விரிவாக்க எண்ணினான். ஆனால் இது அவன் சொந்த நிறுவனம் இல்லையே. எல்லாம் அவனே ஏற்று நடத்தினாலும் அவனுக்கென்று ஒரு எல்லை அந்த நிறுவனத்திலிருந்தது. அதைப் பெரிது படுத்த வில்லை என்றாலும் மனதில் ஒரு குறை இருந்ததை அவனால் மறுக்க முடியாது. அதைப் போக்கத் தான் திருப்பூரில் உள்ள ஒரு ஆலையை வாங்கத் திட்டமிட்டான். முழு தொகையும் செலுத்த முடியாது என்பதால் வங்கிக் கடன் எடுத்தான். முதலில் கடன் தொகையை எண்ணி அஞ்சிய சுந்தரம், மகனின் உழைப்பையும் திறமையையும் எண்ணிச் சம்மதித்தார். அதில் அவருக்குப் பெருமையும் இருந்தது. தான் செய்யாத ஒன்றை மகன் செய்கிறான் என்ற பெருமை. சுந்தரமும் சிறு வயதில் சொந்தமாகத் தொழில் செய்ய ஆசைப்பட்டார். ஆனால், கடன், நஷ்டம் என்ற பயம் அவரை ஆலோசகராகவே வைத்திருந்தது. மகன் முற்சிக்கிறான் என்றதும் தன்னால் ஆன முழு ஆதரவையும் தந்தார். மகனும் நல்ல வளர்ச்சியை அடைந்தான். இதெல்லாம் நேற்று நடந்தது போல் இருந்தது. காரை மெதுவாகப் பெரிய மதில்சுவற்றை தண்டி சென்று நிறுத்தினான். வழக்கம்போல் ஆலைக்குள் சென்று சரி பார்த்துவிட்டு அலுவலக அறைக்குள் நுழைந்தான். அன்று ஞாயிறு என்பதால் அலுவலகத்தில் யாரும் இல்லை. தன் அறைக்குச் சென்று சில கணக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்தான். திடீர் என்று கதவு திறப்பதை உணர்ந்து நிமிர்ந்தான். தன்னிடம் பணிபுரியும் யாரும் கதவைத் தட்டாமல் உள்ளே வருவதில்லை. அவன் நினைத்தது போல் கே வி-ன் வாரிசுகளில் ஒருவனான ஜெய் நின்றுகொண்டிருந்தான். “என்ன ஆனந்த், இன்றும் வேலை செய்கிறீர்களா? நான் கூட இந்த நிறுவனத்திற்காக இவ்வளவு உழைத்தது இல்லை”. என்றான் கேலியாக. ‘உன்னைப் போல் என்னால் இருக்க முடியாது’ என்று சொல்ல வந்ததை விழுங்கி “என்ன விஷயம், ஜெய்? அதிசயமாக இங்கே வந்திருக்கிறாய். உன் அப்பா வற்புறுத்தி அழைத்தாலே வரமாட்டாய்.” இரண்டு தலைமுறைகளின் உழைப்பால் நன்கு வளர்ந்திருந்த நிறுவனம் ஆனந்தின் கைக்கு வர முக்கிய காரணம் ஜெய்யும் விஜயும் தான். ” இன்று அப்பா வேறு இடத்துக்கு அழைத்தார். அதிலிருந்து தப்பிக்க இங்கே வந்துவிட்டேன்” என்றான் சோபாவில் அமர்ந்த படி. எந்த இடம் என்று ஆனந்த் கேட்காமலேயே ஜெய் விவரம் சொன்னான். ” இன்று பெரியப்பா குடும்பம் இங்கே வருகிறார்கள். அவர்களைப் பார்க்க எல்லோரும் செல்கிறார்கள். நானும் விஜய் அண்ணாவும் தப்பித்து இங்கே வந்துவிட்டோம்” என்று சொல்லிமுடிக்கும் போதே. “ஹாய் ஆனந்த்” என்ற படி உள்ளே வந்தான் விஜய். விஜய் வந்ததும் “மேட்ச் பார்க்கவில்லை?” என்ற படி டீவி ரிமோட்டை தேடினான். அந்தப் பெரிய அலுவலக அறையில் ஒரு பகுதி சோபா, இருவர் உணவருந்தச் சிறிய மேஜை நாற்காலிகள் மற்றும் டீ வி என்று ஒரு சிறிய சூட் போலவே இருக்கும். அந்தப் பகுதியை ஆனந்த் அதிகம் பயன்படுத்துவதில்லை. இப்போது விஜயும் ஜெய்யும் அங்கே அமர்ந்து தான் டீ வி பார்க்கப் போகிறார்கள். ஆனந்த் வேலை செய்யும்போது தொந்தரவு செய்யமாட்டார்கள்தான் என்றாலும், அவர்கள் இங்கே வந்துவிட்டால், அவனுக்கு வேலை ஓடாது. இதுவரை செய்த வேலைகளைக் கணிப்பொறியில் பதிவிட்டு விட்டுக் கிளப்ப ஆயத்தமானான். “ஆனந்த், நீங்கள் முன்னரே ஒப்பந்தத்தை நீட்டித்து இருக்க வேண்டும். நாளை முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறலாம்” என்று கொஞ்ச நேரம் மறந்திருந்த விஷயத்தை மீண்டும் ஞாபகப்படுத்தினான் விஜய். நடப்பது நடக்கட்டும் என்று அங்கிருந்து கிளப்பினான் ஆனந்த். காரில் ஏறியதும் அவன் அலைப்பேசி ஒலித்தது. மார்டன் மில்ஸ் சம்மந்தமான பேச்சுவார்த்தைக்கு அதன் உரிமையாளர்கள் அழைத்திருந்தார்கள். ஏற்கனவே எல்லாம் முடிவாகி இருந்தது. பத்திரப்பதிவு மட்டும் தான் பாக்கி. அதற்கான தேதியை முடிவு செய்யும் படி ஏற்கனவே ஆனந்திற்கு சொல்லிருந்தார்கள். இப்போது எதற்கு அழைக்கிறார்கள் என்று யோசித்தபடி தொலைப்பேசி-ஐ எடுத்தான். மாடர்ன் மில்ஸ்-ன் இப்போதைய உரிமையாளர் முருகேசன் பத்திரப் பதிவைச் சீக்கிரம் வைத்துக்கொள்ளும் படி கேட்டார். சிங்கப்பூரில் இருக்கும் பிள்ளையுடன் இனி காலத்தைக் கழிக்க திட்டமிட்டிருந்தார். அவரைச் சந்திக்க விரைவில் வருவதாகக் கூறிவிட்டு நேரே வீட்டுக்குச் சென்றான். தந்தை சுந்தரத்திடம் விஷயத்தைச் சொன்னான். “பதிவாளரிடம் சொல்லி ஏற்பாடு செய்து விடலாம். ஒன்றும் சிரமமில்லை” என்றார் சுந்தரம். தந்தை மகன் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்தது விட்டு “நாள் நட்சத்திரம் எல்லாம் பார்க்க வேண்டும். இருங்கள் வருகிறேன்” என்று உள்ளே சென்று பஞ்சாங்கத்தை எடுத்து வந்தாள்.”வரும் வியாழன் நல்ல நாள். அன்றே வைத்துக்கொள்ளுங்கள்” என்றாள் பத்மா. லேசாகச் சிரித்தபடி தலையைச் சாய்த்துப் பார்த்துக்கொண்டிருந்த மகனை “உன்னிடம் நான் சொல்லவில்லை, அப்பாவிடம் சொன்னேன்” என்றாள். இதுபோல் நேரம், நல்ல நாள் என்று பார்ப்பதில் ஆனந்திற்கு நம்பிக்கையில்லை. பலமுறை அன்னையைக் கிண்டல் செய்வதும் உண்டு. என்ன தான் கேலி பேசினாலும், நம்பிக்கை இல்லையென்றாலும் அன்னை மனம் நோகக் கூடாது என்று அவள் சொல்வதைத் தட்டியதில்லை. பத்மா சொன்ன நாளில் எல்லாம் சிறப்பாக நடந்தது. பத்திரங்களைச் சரிபார்த்துக்கொண்டிருந்தான் ஆனந்த். ” சாப்பிட வா என்று எத்தனை முறை அழைப்பது ?” என்று அருகில் நின்ற தாயை அப்போது தான் கவனித்தான். தன்முன் இருந்த கணிப்பொறி-ஐ காட்டி “ஒரு சின்ன வேலை. முடித்து விட்டு வருகிறேன்” என்றான். ” எல்லாம் பிறகு பார்க்கலாம் வா. ” என்று அழைத்துச் சென்றாள். உணவு மேஜையில் அமர்த்தும் “ஒன்றும் கவலைப் படாதே ராஜா, எல்லாம் நல்லதாகவே நடக்கும். நீ வேண்டுமென்றால் பார்! கே வி மில்ஸ் ஒப்பந்தமும் உனக்குத் தான் கிடைக்கும்”, என்றாள். ஆனந்த் அதைப் பற்றித் தான் யோசித்துக்கொண்டிருந்தான். சொல்லாமலேயே அம்மா கண்டுகொண்டாளே என்று வியந்தபடி “யார் சொன்னது சாமியா ? இல்லை எதாவது ஆசாமியா ?” என்றான். மகன் சிறிது கவலையாக இருந்தாலும் கோயிலுக்குச் செல்வது, பரிகாரம் செய்வது பத்மாவின் வழக்கம். அப்படி பரிகாரம் செய்துவிட்டால் எல்லாம் சரியாகி விடும் என்ற நம்பிக்கை. அர்ச்சகர் சொன்னார் என்று சிலதை செய்வாள். சில முறை பரிகாரம் செய்வதுபோல் கனவு வந்தால் ‘சாமியே செய்யச்சொல்கிறது’ என்பாள். அதை நினைவில் வைத்துக்கொண்டே மகன் அப்படிக் கேட்டான் என்று பத்மாவுக்கும் தெரியும். “யாரும் சொல்லவில்லை. நான் தான் சொல்கிறேன்” என்றாள். தன்னை ஆறுதல் படுத்த அம்மா சொல்கிறாள் என்று அதற்கு மேல் கேலி செய்யாமல் இருந்தான் ஆனந்த். பகுதி 4 மேட்டுப்பாளையம் அருகே மருதனூரில் கோபாலன் குடும்பம் நல்ல வசதியான குடும்பம். அவர்கள் குடும்பத்தின் பெயர் சுற்றியுள்ள ஊர்களில் நல்ல பரிட்சியம். கோபாலனின் தந்தை கிருஷ்ணசாமி ஒரு தொழிற்சாலையைத் தொடங்கினார். விவசாயத்தைத் தவிர வேறு வருமானமின்றி இருந்த ஊர் மக்களுக்கு அந்த ஆலை நிரந்தர ஊதியம் தருவதாக இருந்தது. அதனாலேயே கிருஷ்ணசாமியின் தொழில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஊர் மக்களும் வளர்ச்சி அடைத்தனர். தொழில் வளர வளர ஊருக்கும் நிறையச் செய்தார் கிருஷ்ணசாமி. இரு மகன்கள், இரு மகள்கள், மனைவி விஜயம், தாய் தந்தை என்று பெரிய குடும்பம் கிருஷ்ணசாமியுடையது. மூத்தவள் நாயகி. இரண்டாவது கோபாலன். மூன்றாவது நாராயணன். நான்காவது கமலா. தனக்கு பெரும் படிப்பறிவு இல்லையென்றாலும் தன் பிள்ளைகள் நன்று படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அந்த ஆசையை நிறைவேற்றியது கோபாலனும் கமலாவும் தான். மற்ற இருவரும் படிப்பில் ஆர்வம் காட்ட வில்லை. கோபாலனின் கல்லூரி முடிந்ததும், கோவையில் ஒரு தொழிற்சாலையில் வேலையில் சேர்ந்தார். அது தங்களுடைய தொழிற்சாலையைவிட மிகப்பெரியது, அது மட்டுமின்றி வெறும் நிர்வாகம் மட்டும் செய்வதில் அவருக்கு விருப்பமில்லை. இயந்திரங்களின் இயக்கம், அதில் வரும் கோளாறுகள் அதைச் சரிசெய்வது என்று எல்லாம் பழக மூன்று ஆண்டுகாலம் சென்றது. அந்த ஆர்வமும் பொறுப்பும் தந்தைக்கு மகனின் மேல் இருந்த நம்பிக்கையைப் பன்மடங்கு அதிகரித்தது. அந்த நம்பிக்கையினால் அணைத்துப் பொறுப்பையும் மகனிடம் ஒப்படைத்தார் கிருஷ்ணசாமி. எல்லாம் இனிதே சென்றது, கமலாவின் திருமணப்பேச்சு எழும் வரை. கமலாவுக்கு வரன்கள் வந்தவண்ணம் இருக்க, மிகச் சிறந்ததாக ஒன்றை முடிவு செய்யத் திட்டமிட்டார் கிருஷ்ணசாமி. அப்படி அவர் தேர்ந்தெடுத்த வரன் குடும்ப பிரிவிற்குக் காரணமாகும் என்று யாரும் எண்ண வில்லை. கமலாவுக்கு வந்த வரன் பெண் கொடுத்துப் பெண் எடுக்கலாம் என்று சொல்ல அனைவரும் மகிழ்ந்தனர், கோபாலனைத் தவிர. தங்கை திருமணத்திற்குப் பிறகுத் தன் காதலை அனைவரிடமும் சொல்ல எண்ணியிருந்தார் கோபாலன். வேறு வழியின்றி கோபாலன் தன் விருப்பத்தைச் சொல்லக் குடும்பத்தில் பூகம்பம் வெடித்தது. ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த பெண்ணை மருமகளாக ஏற்க மறுத்தனர். கோபாலனும் தன் எண்ணத்தை மாற்றிக்கொள்வதாக இல்லை. ஒரு வழியாகக் கிருஷ்ணசாமி, அவர் நினைத்த படி மகள் திருமணத்தை முடித்தார். மகளின் நாத்தனார் லட்சுமி அவர் வீட்டு மருமகளும் ஆனாள், நாராயணனின் மனைவியாக. கோபாலனை வீட்டை விட்டு வெளியேற்றினார். வீட்டை விட்டு வெளியேறிய கோபாலன் பழைய வேலையைத் தொடர்ந்தார். கோபாலன் வீட்டில் சம்மதம் கிடைக்க வில்லை என்று விலகிச் செல்ல ராதா நினைத்தாள். இருவரும் பேசி முடிவெடுத்தனர். ஆனால் வேறொரு பெண்ணை மணக்கக் கோபாலன் விரும்பவில்லை. ராதாவும் வேறு திருமணத்திற்கு ஒப்பவில்லை. இரண்டு வருடங்கள் கடந்தும் மூத்த மகன் திருமணம் செய்யவில்லை என்று மனைவி விஜயத்தின் வற்புறுத்தலுக்கு இணங்க மகனை அழைத்துப் பேசினார். கோபாலனின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றானதும், மகன் விரும்பிய பெண்ணையே திருமணம் முடித்து வைத்தார். ஆனாலும் அவர்களை விலக்கியே வைத்தார் கிருஷ்ணசாமி. ஜீவன் மீரா பிறந்த பின்னும் அந்த இடைவெளி அப்படியே இருந்தது. பண்டிகை விழா என்று சந்தித்து வந்தனர். பெரிய குடும்பத்தில் வளர்ந்த கோபாலன் பிள்ளைகளுக்கு அந்த வாய்ப்பு இல்லை என்று மிகவும் வருந்தினார். அதனாலேயே அவ்வப்போது பிள்ளைகளுடன் மருதனூர் சென்று வருவார். பிள்ளைகளிடமும் யாரும் பிரியம் காட்டவில்லை என்று உணர்ந்ததும், அங்கே செல்வதை அடியோடு நிறுத்தினார். கோபாலனும் ராதாவும் தனியே நின்றார்கள். ராதாவின் பக்கம் ஆதரவு இருந்தது என்றாலும் பெரிய பொருளாதார பின் புலன் இல்லை. இருவரும் முதலில் சிரமப்பட்டார்கள். சிறுகச் சேர்த்து அவர்களுக்காக ஒரு வீடு, சேமிப்பு என்று ஒருவாறு நிலைக்கு வரப் பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆனது. பல வருடங்களுக்குப் பிறகு, கோபாலனின் சகோதரி நாயகியின் மகன் திருமணத்தில் தான் மீண்டும் அனைவரும் சந்தித்தனர். பல ஆண்டுகளுக்குப் பின் குடும்பம் சந்தித்தாலும் திருமணத்தில் யாரும் இவர்களுடன் அதிகம் பேசவில்லை. அந்தக் குடும்பம் அவர்களின் உறவு என்று மீராவும் ஜீவனும் எப்போதும் நினைக்கவில்லை. அப்படியிருக்க இப்போது அவர்களுடன் ஒரே வீட்டில் இருக்கச் செல்கிறார்கள். கார் நிற்கவும் எல்லோரும் அந்தப் பெரிய வீட்டின் முன் இறங்கினர். அதை வீடு என்று சொல்வது பொருந்தாது. ஒரு மாளிகை என்று சொல்ல வேண்டும். “வாருங்கள்” என்று புன்னகையுடன் வரவேற்றார் நாராயணன். அவர்கள் உள்ளே செல்லும் முன் ஆரத்தி தட்டுடன் ஒரு பெண் வர, அவளைப் பிடித்துக்கொண்டு விஜயா சற்று சிரமப்பட்டு படியிறங்கி வந்தார். “இதெல்லாம் எதற்கு அம்மா” என்று கோபாலன் கேட்க, புன்னகையும் கண்ணீருமாய் விஜயா ஆரத்தி எடுத்தார். “வாருங்கள் அண்ணா, அண்ணி” என்றபடி கமலா வந்தாள். பின்னோடு லக்ஷ்மியும். “எல்லோரும் சுகமா” என்று ராதா கேட்க “பிள்ளைகள் நன்கு வளர்த்து விட்டார்கள்” என்று பின் நின்ற ஜீவன் மீராவைப் பார்க்க இருவரும் புன்னகைத்தனர். “பிள்ளைகள் எல்லோருக்கும் எதோ வேலை என்று வரவில்லை. உன்னைப் பார்க்க வேண்டுமென்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள் அண்ணா” என்றாள் கமலா. “உங்களைப் பார்க்கத் தான் வந்தோம். நீங்கள் ஓய்வெடுங்கள். அடுத்த வாரம் சந்திக்கலாம்” என்று சிறிது நேரத்தில் கமலா விடைபெற்றுக்கொண்டாள். நாராயணனும் லக்ஷ்மியும் எதோ பேசிக்கொண்டிருக்க, அதற்குள் கிருஷ்ணசாமி “பிள்ளைகளை ஓய்வெடுக்கச் சொல். ஜீவா இன்று இரவு கிளம்ப வேண்டும். நாளை மீரா கல்லூரிக்குச் செல்ல வேண்டும்” என்றார். இது தான் சரியான நேரம் என்று இருவரும் அங்கிருந்து நகர்ந்தனர். அவர்களுக்கென்று தனித்தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அவர்கள் பொருட்கள் மொத்தமாக ஒரு அறையில் இறக்கி வைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த தங்கள் பெட்டியை எடுக்கச் சென்றதும் “எது வேண்டும் என்று சொன்னால் நான் எடுத்து வந்து தருகிறேன் அய்யா” என்று ஒருவன் வந்துநின்றான். வேண்டாம் என்றாலும் கேட்காமல் அவனே செய்தான். அவன் மணி. அந்த வீட்டில் பல வருடங்களாக வேலை செய்கிறவன். அவன் மனைவி வள்ளியும் அந்த வீட்டில் தான் வேலை செய்தாள். எல்லா வேலைகளுக்கும் ஆட்கள் இருந்தனர். அதில் மணியும் வள்ளியும் பெரியவர்களுக்கு மிகவும் நம்பிக்கையானவர்கள். அந்த வீடு நான்கு பகுதியாக இருந்தது. வீட்டின் முன் புறம் பெரிய திண்ணைகள். அது கோவையில் அவர்கள் இருந்த வீட்டின் அறையைவிடப் பெரியது. உள்ளே பெரிய முற்றம். அதன் ஒருபுறம் இன்னொரு பெரிய அறையும் ஒட்டியே சமையலறையும் இருந்தது. மூன்றாவது பகுதியில் நிறைய அறைகள் எதிரெதிராக. இரண்டு புற அறைகளுக்கு நடுவே பெரிய முற்றம். மேற்தளத்திற்குச் செல்லப் படிகள் இருந்தது. இன்றைய நவீன வீடுகளைப் போல் இல்லாமல் அது ஒரு அறையினுள் இருப்பது போல் இருந்தது. பின் பகுதியில் பெரிய ஊஞ்சலும் சில இருக்கைகளும் என்று அமைக்கப்பட்டிருந்தது. வீட்டின் முன்புறம் பின்புறம் தோட்டம். திரைப்படங்களில் வரும் பழைய அரண்மனைபோலவே இருந்தது. இது எதுவும் மீராவுக்கு உற்சாகத்தைக் கொடுக்கவில்லை. ” நான் புறப்படுகிறேன்” என்று ஜீவாவின் குரல் கேட்டது. அதற்குள்ளா என்று கைக்கடிகாரத்தைப் பார்த்தால் மணி ஆறு முப்பது. அவன் புறப்படும் ரயிலுக்கு இன்னும் ஒருமணி நேரம் தான் இருந்தது. “இரவு உணவு ?” என்று மீரா கேட்க “ஸ்டேசனில் பார்த்துக் கொள்கிறேன். வரட்டுமா. தினமும் போன் செய்.” என்றான். இருவரும் முன்னறைக்கு வந்ததும், ஜீவனை அழைத்துச்செல்ல மணி தயாராக இருந்தான். உணவு பொட்டலமும் தயாராக இருந்தது. அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினான். உணவு முடிந்து முற்றத்தில் அமர்ந்து பாட்டி விஜயாவிடம் பேசிகொண்ருந்தனர் அப்பாவும் சித்தப்பா நாராயணனும். தாத்தா அவர்கள் உரையாடலில் கலந்து கொண்டதாகத் தெரியவில்லை. மறுநாள் தான் செல்லப் பேருந்து எண்கள் மற்றும் நேரம்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தந்தையை நாடினாள். தனக்கு கார் ஏற்பாடு செய்திருப்பதாகச் சொன்னார் அப்பா கோபாலன். ” எதற்கு அப்பா? நான் பேருந்திலேயே போய்க் கொள்வேன். ” என்றால் மீரா. ” இங்கிருந்து பேருந்துக் காலை எட்டு மணிக்குத்தான் அம்மா, அது உனக்குச் சரியாக இருக்காது. தினமும் மணி உன்னை அழைத்துச் செல்வான்” என்றார் நாராயணன். ” நான் அப்பாவின் ஸ்கூட்டர்-ஐ எடுத்துக் கொண்டு மேட்டுப்பாளையம் சென்று அங்கிருந்து பேருந்தில் சென்று கொள்கிறேன்” என்றாள் மீரா. ” வேண்டாம்! பெண்பிள்ளை தனியே வண்டியில் எல்லாம் வேண்டாம்.” என்றார் விஜயா. காலையும் மாலையும் தனக்கென்று ஒரு வண்டி வீட்டிற்கும் கல்லுரிக்கும் செல்வது மீராவிற்குப் பிடிக்க வில்லை. அவர்களை எதிர்த்துப் பேசவும் முடியாமல் அங்கிருந்து சென்றாள். முதல் நாள் அவர்கள் சொன்னது போல் செய்தலும், இரண்டாவது நாளிலிருந்து மருதனூரிலிருந்து மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம்வரை காரிலும் அங்கிருந்து பேருந்தில் செல்ல ஒரு வழியாகச் சம்மதம் வாங்கினாள். ஆனால் அதற்கு ஒரு ஏளனப்பேச்சு எழுந்தது. ” எங்கள் பிள்ளைகள் எல்லாம் பேருந்தில் ஏறவே மாட்டார்கள், கார் தான் அவர்களுக்கு வசதி. இவ்வளவு நாள் தான் வசதி இல்லை. இப்போதுதான் இங்கே வந்துவிடீர்களே. இங்கே எதற்கும் கணக்குப்பார்ப்பதில்லை” என்றாள் லட்சுமி. அவளுக்கு மீரா பதில் கொடுக்க எண்ணும் முன் ராதா “காலையில் ஜீவா அழைத்திருந்தான். உன்னைப் பேசச்சொன்னான்.” என்று பேச்சை மாற்றினாள். தாயின் முகத்தைக் கோவமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் மீரா. வீட்டில் பெரும்பாலும் நாராயணனின் பிள்ளைகள் இருப்பதில்லை. அவர்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்த கமலா வீட்டில் தான் பெரும்பாலும் இருந்தனர். எப்போதாவது வருவார்கள். கல்லூரிக்குச் சென்று களைத்து வரும் மீரா அவர்களுடன் அதிகம் பேசியதில்லை. ஒரு முறை அண்ணன்கள் விஜய், ஜெய் என்று இருவரை அறிமுகம் செய்து வைத்தார் நாராயணன். அவர்கள் பெயரைத் தவிர வேறொன்றும் அறிந்தாளில்லை. அத்தை கமலாவின் பிள்ளைகள் சாருமதி, சந்துரு இருவரும் வந்திருந்தனர். நாராயணனின்` புது மனை புகு விழாவிற்கு அழைப்பும் அதற்காகப் புது ஆடைகளும் வந்திருந்தது. அந்த விழாவிற்காக அவளை விடுப்பு எடுக்கச் சொன்னார் நாராயணன். கல்லூரியில் தேர்வு இருப்பதாகச் சொன்னாள் மீரா. அது உண்மையும் தான். அதனால் அவள் தந்தைக்கு கோவத்தை ஏற்படுத்தியிருந்தாள் என்று அவளுக்குத் தெரியாது. பகுதி 5 மாடர்ன் மில்ஸ் தொடர்பான அணைத்து பத்திரங்களையும் சரிபார்த்து, தந்தையிடம் கொடுத்தான் ஆனந்த். ” அப்பா. இன்னும் ஒன்றிரண்டு மாதங்கள் உங்கள் பங்கு அதிகம் தேவை இருக்கிறது. கே வி மில்ஸ்-ல் மேற்பார்வை மட்டும் போதுமானது. ஆனால் இந்தத் திருப்பூர் மார்டன் மில்ஸ்-ல் நிறைய மாற்றங்கள் தேவைப்படலாம். நிர்வாக மாற்றம் என்பதால் அங்கே பணியாற்றும் அனைவரின் நம்பிக்கையையும் பெற வேண்டும். புதியது வந்ததும் பழையதைக் கண்டுகொள்ளவில்லை என்று யாரும் சொல்லிவிடக் கூடாது. அதனால் நீங்கள், எல்லாம் சீராகும்வரை கே வி மில்ஸ்-ஐ பார்த்துக்கொள்ளுங்கள்.” என்றான் ஆனந்த். ” கே வி மில்ஸ் தான் அவர்களே பார்த்துக்கொள்வார்கள் என்றாயே. லீஸ் பற்றி ஏதும் தகவல் சொன்னார்களா ? நமக்கில்லை என்றுவிட்டால் நாம் ஏன் பார்க்க வேண்டும் ?” என்றாள் பத்மா. ” இன்னும் நம் லீஸ் முடிய இரண்டு மாதங்கள் இருக்கிறது அம்மா. நாம் எப்படி அதைவிட முடியும். நானும் அப்பாவும் நிர்வாகத்தை ஏற்று நடத்துவதாகச் சொன்னபோது எந்த மறுப்புமின்றி ஒத்துக்கொண்டார் சாமி சார். இப்போது போய் நான் வேறு நிறுவனத்தைப் பார்க்கப்போகிறேன். உங்களுடையதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று எப்படிச் சொல்வது “என்றான் ஆனந்த். “நான் ஒன்றும் அப்படிச் சொல்லவில்லை. நீ மார்டன் மில்ஸ்-ஐ வாங்கியிருப்பது அவர்களுக்குத் தெரியும் தானே. இதுவரை அவர்களுக்குப் பொறுப்பை ஏற்க யாரும் இல்லை என்றுதான் நமக்குக் கொடுத்திருந்தார்கள். இப்போது தான் அவர்கள் பிள்ளைகளே செய்வதாய் சொல்கிறார்களே. இப்போது அவர்களுக்கும் சௌகரியமாகத்தானே இருக்கும்.” என்றாள் பத்மா. ” சாமி சாரின் மகன் பலநாட்களுக்குப் பின் வருவதாகவும், ஒருவேளை அவர் இனி பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளலாம் என்றும் மேலாளர் ராஜன் சார் சொன்னார். சாமி சாரும் ஒப்பந்த நீட்டிப்பு பற்றி இதுவரை எதுவும் பேசவில்லை. எனக்குத் தெரிந்த வரை ஒப்பந்த நீட்டிப்புக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. நாமும் வேறு ஏற்பாடுகளைச் செய்துவிட்டோம். என்ன ! கே வி மில்ஸ் இன்னும் ஒரு மூன்று வருடம் நம் கையிலிருந்தால் வங்கியில் வாங்கிய கடனைச் சுலபமாக அடைத்துவிடலாம். ஆனந்தின் விருப்பமும் சீக்கிரம் நிறைவேறிவிடும். அதன் பின் நம் விருப்பத்தை நிறைவேற்றுவான்.” என்றார் சுந்தரம் மகனைப் பார்த்தபடி. எதுவும் கேட்காதது போல் மகன் அமர்ந்திருக்க “போதும், இப்போதுதான் அவன் கொஞ்சம் இயல்பாக இருக்கிறான். நீங்கள் மீண்டும் மில் கைவிட்டுப் போகிறது என்று ஆரம்பிக்காதீர்கள். நான் சென்று சிற்றுண்டி எடுத்து வருகிறேன் என்று உள்ளே சென்றாள் பத்மா. “என்ன ஆனந்த், நீ எதுவும் சொல்லவில்லை” என்றார் சுந்தரம் கையிலிருந்த கோப்பை புரட்டியபடி. தலையைத் திருப்பாமல் பார்வையை மட்டும் அப்பாவிடம் திருப்பினான். “என்ன கேட்டீர்கள்? அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தீர்கள். என்னிடம் எதுவும் கேட்டதாகத் தெரியவில்லையே!” என்றான் சாதுவாக. “உன் சாமர்த்தியத்தை எல்லாம் என்னிடம் காட்டாதே. நான் என்ன கேட்டேன் என்று உனக்கு நன்றாகத் தெரியும்” என்றார் கோப்பை மூடியபடி. லேசாகச் சிரித்தபடி “அப்பா, உங்களிடம் என் சாமர்த்தியத்தைக் காட்டி என்ன செய்யப் போகிறேன். நீங்கள் என்னிடம் எதுவும் கேட்கவில்லை”. “ஹ்ம்ம், எங்கள் ஆசை நிறைவேற்றுவதைப் பற்றிச் சொன்னேனே! காதில் விழவில்லை ?” “ஓ, விழுந்ததே. முதலில் என் ஆசை நிறைவேற வேண்டும் என்று நீங்களே சொல்லி விட்டீர்களே. அது நிறைவேறட்டும். பிறகு பார்க்கலாம்”. பின் இருபதுகளில் இருக்கும் ஒரே மகனான ஆனந்திற்கு திருமணம் செய்வதைத் தவிர வேறு என்ன ஆசை அவன் பெற்றோருக்கு இருந்துவிடப் போகிறது. பெங்களூரு வேலையிலிருந்திருந்தால் இப்போது அவனுக்கு நிச்சயம் திருமணம் செய்துவைத்திருப்பார்கள். தொழில் என்று தொடங்கியதும், கொஞ்சமேனும் அதில் வளர வேண்டும் என்று நினைத்து அப்போதைக்கு திருமணப்பேச்சு எழவில்லை. நல்ல வளர்ச்சியை அவன் தொட்டதும், ‘இது போதாது, நாம் சொந்தமாக ஆலை வாங்கியதும் பிறகு இதைப் பற்றிப் பேசலாம்’’ என்றான். இப்போதோ அந்த ஆலைக்காக வங்கியில் வாங்கியிருக்கும் கடனைப் பாதியேனும் அடைக்க வேண்டும் என்கிறான். அவன் தொழிலில் காட்டும் ஆர்வம் சொந்த வாழ்க்கையிலும் காட்ட வேண்டும் என்று அவ்வப்போது சுந்தரம் இப்படி பேசுவதுண்டு தான். ஆனால் மகனின் முடிவில் மாற்றம் வராது என்று அவருக்கும் தெரியும். பத்மா சிற்றுண்டி தட்டுகளுடன் வர “ஆனந்த், நாளைக் காலைக் கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும். சீக்கிரம் தயாராகி விடு. பின்பு தாமதம் ஆகிவிட்டது நீங்கள் மட்டும் செல்லுங்கள் என்று சொல்லாதே”. தட்டுகளை டீபாயில் வைக்க, அதில் ஒரு பெரிய பாத்திரத்தில் சுண்டலும், ஒருசிறிய பாத்திரத்தில் வெள்ளமும் தேங்காயும் போட்ட அவலும் இருந்தது. உடன் மூன்று தட்டுகளும் ஸ்பூன்களும். அவரவர்க்குத் தேவையானதைத் தட்டுகளில் வைத்துத் தந்துவிட்டு தனக்காக ஒன்றை நிரப்பிய படி, “கண்ணா, இப்போதெல்லாம் திருமணம் செய்வதென்றால் ஒரு ஆண்டுக்கு முன்னரே வேலையைத் தொடங்க வேண்டும். எங்கள் காலத்தில் ஜாதகம் பொருத்தினால் அடுத்த முகூர்த்தத்தில் திருமணம் முடிந்து விடும். இப்போது எவ்வளவு பார்க்க வேண்டியிருக்கிறது. ஜாதகம் பொருந்த வேண்டும், பின் இருவருக்கும் பிடிக்க வேண்டும், படிப்பு வசதி குணம் என்று எல்லாம் பொருந்தியிருக்கிறது என்றதும் தேதிகுறித்து, மண்டபம் பிடிக்க வேண்டும். இப்போதெல்லாம் ஆறு மாதத்திற்குப் பின் தான் மண்டபம் கிடைக்கிறதாம்.” என்றாள். “நேரடியாகக் கேட்டாலே உன் மகன் எதுவும் சொல்லமாட்டான். இப்போது எதற்கு நீட்டி முழக்குகிறாய். விசயத்திற்கு வா” என்றார் சுந்தரம். ” எல்லாம் நீங்கள் கொடுக்கும் இடம். அவன் சொல்வதற்கெல்லாம் சரி சரி என்றுவிடுகிறீர்கள். அதனால் தான் அவன் என் பேச்சைக் கேட்பதில்லை.” “உன் பிள்ளை எதோ நான் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கிறான் என்றா நினைக்கிறாய்? அவன் யார் சொன்னாலும் கேட்கமாட்டான்” என்றார் அவர் தட்டில் இருந்ததை சாப்பிட்டபடி. “அதைத்தான் நானும் சொல்கிறேன். இது எல்லாம் நீங்கள் கொடுத்த இடம்” என்றாள் பத்மா கோபமாக. “ஒன்று சொல்வதற்குள் பிள்ளைக்காக வரிந்துகட்டிக் கொண்டு வருவது நீதான். இப்போது என்மேல் பழி போடுகிறாய்” அன்னை தந்தையின் செல்லச் சண்டையை ரசித்தபடி சுண்டலை ருசித்துக்கொண்டிருந்தான். “பார், உன்னால் நாங்கள் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறோம்.” என்றாள் பத்மா. “உங்கள் பிரச்சனை தான் என்ன? எனக்கு ஒன்றும் வயதாகிவிடவில்லை. இன்னும் ஓரிரு வருடம். அதன் பின் உங்கள் இஷ்டம் போல் செய்யுங்கள்” என்றான் ஆனந்த். ” அதற்குத் தான் இப்போதே பெண் பார்க்கத் தொடங்க வேண்டும் என்கிறேன் “. ” ஐயோ, அம்மா. ஒரு வேலை நீங்கள் பார்க்கும் முதல் பெண்ணிற்கே என்னைப் பிடித்துவிட்டால், என்ன செய்வது? உடனே திருமணம் செய்வதும் என்னால் முடியாது. அந்தப் பெண்ணிடம் ‘இரண்டு வருடம் எனக்காகக் காத்திரு’ என்று எப்படிச் சொல்வது? “. ” தற்பெருமையைப் பார்!” என்றார் சுந்தரம் ” ஏன், நம் ஆனந்தை எந்தப் பெண் வேண்டாமென்பாள்? ” “முடியவில்லை! நான் கிளப்புகிறேன். இரவு வரத் தாமதம் ஆகலாம். கொஞ்சம் வேலை இருக்கிறது” என்று கிளப்பினான் ஆனந்த். ஆனந்த் பெரும்பாலும் அலுவலகம், ஆலை அதன் வளர்ச்சி என்று தான் அலைவான். என்றேனும் நண்பர்களுடன் செல்வதுண்டு. இன்னும் இரண்டுநாளில் சரத்தின் பிறந்தநாள் கொண்டாட்டம். பெரும்பாலும் அவன் அறிந்தவர்களே இருந்தனர். ” ஹாய் ஆனந்த், வா டா. எங்கு வராமல் இருந்துவிடுவாயோ என்று நினைத்தேன்” என்றான் சரத். “அவ்வளவு பிஸி யா?” என்றான் உடனிருந்த பாலு. ” பின்னே, இரண்டு நிறுவனங்களைக் கட்டி மேய்க்கும் டைரக்டர். சும்மாவா” என்றான் சரத். “கேள்விப்பட்டேன்! பிரமாதம் ஆனந்த். என்ன கே வி -ன் ஒப்பந்தமும் நீண்டுவிட்டதா ?என்றான் பாலு. ” இன்னும் இல்லை. இப்போது திருப்பூர் மில் மட்டும் தான் என் பொறுப்பு. பார்க்கலாம்” என்றான் ஆனந்த். ” நான் சொல்வது போல் செய்தால் கே வி மில்ஸ் என்றும் உன்னிடம் இருக்கும். நீ தான் மாட்டேன் என்கிறாய்” என்றான் சரத். ” அப்படி என்னடா யோசனை?” இது பாலு. ” அந்த சாமி சாரின் பேத்தி சாருவைத் திருமணம் செய்துகொண்டால் போதும். இப்போதைய தலைமுறையினர் யாரும் நிர்வாகத்தைக் கவனிக்கத் தயாராக இல்லை. அப்படி இருக்க இவன் சரியாகச் செய்தாலே எல்லா பொறுப்பும் இவனுக்கு வந்துவிடும். ஆனால் ஆனந்துக்கு அதில் விருப்பமில்லை. எனக்கு இப்படியொரு சந்தர்ப்பம் கிடைத்தால் நான் விடமாட்டேன்” என்றான். “இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை. முயற்சிசெய்துதான் பாரேன்” என்றான் பாலு. ” ஹ்ம்ம், என்ன செய்வது. பேசக்கூடச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.மெய்க்காப்பாளர் போல் எப்போது யாராவது உடன் இருக்கிறார்கள்.” என்றான் சரத். நண்பர்கள் சேரும்போது இதுபோல் பேசுவது இயல்பு தான். இந்தப் பேச்சு ஆனந்திற்கு எரிச்சலை மூட்டியது. இன்னும் டீனேஜர்கள் போல் பெண்களைத் தொடர்வது, காதலிப்பது என்று கூட்டம் கூடிப் பேசுவது அவனுக்குப் பிடிக்கவில்லை. அதற்காகக் காதலை வெறுப்பவன் அல்ல ஆனந்த். அது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான தனிப்பட்ட விஷயம். ஒருவரின் பிறப்பு, பின் புலன் என்று ஆராய்ந்து வருவது காதலாக இருக்க முடியாது என்று நம்பினான் அவன். பகுதி 6 மேட்டுப்பாளையம் நகர்ப்புறம் தாண்டியதும் இருந்தது அந்தப் பகுதி. இன்னும் விடிந்திருக்கவில்லை. என்றாலும் அந்தப் புது வீட்டின் அழகை அங்கே அமைத்திருந்த மின் விளக்குகள் காட்டத் தப்பவில்லை. இரண்டு அடுக்குகளாகப் பெரிய வீடு. சுற்றிலும் தோட்டம், புல்தரை என்று மிக அழகாக இருந்தது. உள்ளே பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது. பூஜைக்கு வெளியாட்கள் யாரும் இல்லை. கிருஷ்ணசாமியின் நான்கு பிள்ளைகளுக்கும் அவர்கள் பிள்ளைகள் என்று அளவான கூட்டம். நண்பர்களுக்குத் தனியே மாலையில் விருந்து ஏற்பாடு செய்திருந்தனர். நாயகியின் இரு மகன்களில் ஒருவன் மற்றும் ஜீவாவை தவிர அனைவரும் இருந்தனர். பூஜை முடிந்ததும் இளசுகள் தனியே கூட்டம் போட்டுப் பேசிக்கொண்டிருந்தனர். மீரா அவள் அன்னையை ஒட்டி நின்றதைப் பார்த்து “போ மீரா நீயும் அவர்களுடன் சேர்ந்துகொள்” என்றார் பாட்டி விஜயா. அவர்கள் யாரும் அழைக்காமல் அங்கே செல்ல மீராவுக்கு அவர்களிடம் செல்ல மனம் இல்லை. “இல்லை பாட்டி. கல்லூரிக்குச் செல்ல வேண்டும். நேரம் ஆகிறது” என்றாள். “ஓ, சரி மணியை அழைத்துக்கொண்டு நீ கிளப்பு” என்றாள் பாட்டி. யாரேனும் இப்படிச் சொல்லமாட்டார்களா? என்று காத்திருந்த மீரா உடனே கிளப்பிவிட்டாள். காலையில் பரிச்சை மதியம் செய்முறை வகுப்பு என்று எல்லாம் முடித்து விட்டு வந்தால் முகூர்த்த தினம் என்று பேருந்து கூட்டமாய் இருந்தது. வீடு வரும்போது நேரே சென்று படுக்கையில் விழ வேண்டும் போல் இருந்தது மீராவுக்கு. அவள் வீட்டை அடையும்போது கூடத்தில் அப்பா அமர்ந்திருந்தார். இதே கோவை வீடு என்றால் அப்பாவிடம் சென்று அமர்ந்திருப்பாள். லேசாகப் புன்னகைத்துவிட்டு அவள் அறைக்குச் சென்றாள். பின்னோடு ராதா வந்து “டிபன் சாப்பிடுகிறாயா இல்லை காபி தரட்டுமா” என்று கேட்டுக்கொண்டு இருந்தபோது, கோபாலனும் உள்ளே வந்தார். “நீ செய்வது கொஞ்சமும் சரி இல்லை மீரா” என்றார். ஒன்றும் புரியாமல் மீரா விழிக்க “நீ இன்று நடந்து கொண்டது உனக்கே சரி என்று படுகிறதா ? நம் சித்தப்பா வீட்டு விழா. ஒரு நாள் விடுப்பு எடுத்தால் என்ன ? சரி அது கூடப் பரவாயில்லை. நம் உறவினர்களிடம் நலம் விசாரிப்பதற்கு என்ன ? நீ அங்கே யாருடனும் பேசி நான் பார்க்க வில்லை. இப்படி இருந்தால் உன் அம்மாவின் வளர்ப்பைத் தான் குறை கூறுவார்கள்”. இருந்த களைப்பில் சட்டென்று கோபம் வந்தது மீராவுக்கு “அது எப்படி அப்பா ? இதுநாள் வரை எங்களின் எல்லா செயல்களிலும் உங்களுக்கும் அம்மாவுக்கும் பங்கு இருந்தது. இப்போது மட்டும் எதாவது குற்றம் என்றால் அதற்குப் பொறுப்பு அம்மா மட்டும் தானா?” “போதும் மீரா. இது என்ன புது பழக்கம். அப்பாவை எதிர்த்துப் பேசுவது. நல்லதைச் சொன்னால் எடுத்துக்கொள்ளாமல், எதிர்த்துப் பேசுகிறாய்” என்றாள் ராதா. ” நான் பேசுவது உனக்காகத்தான் அம்மா” என்றாள் மீரா கண்ணீரை அடக்கியபடி. “எனக்காகப் பேச யாரும் தேவை இல்லை. உன் அப்பா, என்னை அப்படி ஒன்றும் வைத்திருக்கவில்லை”. மீரா மீண்டும் வாயைத் திறக்கும் முன் “அப்பாவிடம் மன்னிப்பு கேள்” என்றாள் ராதா. மீரா அங்கிருந்து நகர்ந்தாள் மன்னிப்பு கேட்காமலே. இரண்டு நாட்கள் ஆகியும் அவர்களிடம் இயல்பு திரும்பவில்லை. இதை விஜயா கவனிக்கத் தவற வில்லை. ராதாவிடம் கேட்க “அப்பா மகளுக்கு எதோ சண்டை. இரண்டு நாளில் சரியாகிவிடும் அத்தை” என்றாள் அது வாரமாகியும் சரியாக வில்லை. ஒரு நாள் கோபாலன் அவளை அழைத்து வரச் சென்றபோது மீரா வழி முழுவதும் அவர் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொன்னாளே தவிர வேறு எதுவும் பேசவில்லை. “என்ன மீரா, உன் நல்லதுக்கு தானே சொன்னேன். அதற்காக இன்னும் இப்படி முகத்தைத் தூக்கிவைத்திருக்கிறாயே!” மகள் எதுவும் பேசவில்லை. அதற்குமேல் அவரும் எதுவும் பேசவில்லை. அந்த வாரம் ஜீவா வந்திருந்தான். காலை உணவின்போது அனைவரும் ஒன்றாகவே உணவருந்தினர். உணவு முடித்ததும் மீரா தன் அறையில் சென்று முடங்கினாள். சிறிது நேரம் தாத்தா பாட்டியுடன் பேசிக்கொண்டிருந்த விட்டுத் தங்கையிடம் வந்தான் ஜீவா. அவள் படித்துக்கொண்டு தான் இருந்தாள். ” இந்தச் செமஸ்டரில் நீ தான் முதல் மதிப்பெண் எடுப்பாய் போல. என் தங்கைக்குப் படிப்பில் இவ்வளவு ஆர்வம் இருப்பது இன்று தான் தெரிகிறது” அவள் புத்தகத்தைப் பார்த்தபடி” நிறையப் படிக்க வேண்டுமா ?” என்றான். லேசாகத் தலையைத் திருப்பி “கொஞ்சம் இருக்கிறது” என்றாள். ” அப்போது வா, நாம் வெளியே செல்லலாம் ” “எங்கே?” “சும்மா, தோட்டம்வரை சென்று வரலாம்” “இல்லை, நான் வரவில்லை.” “உனக்கு அப்பாமேல் தானே கோபம்.” “புகார் கொடுத்தது யார், அம்மாவா? அப்பாவா? சமாதானம் செய்ய உன்னை அனுப்பினார்களா?” என்றாள் மீரா. “சமாதானம் செய்யும் அளவு சண்டையா?” என்று தங்கையின் முகத்தைப் பார்த்தான். அவள் எதுவும் பேசவில்லை ” யாரும் ஒன்றும் சொல்லவில்லை. நீ வா. போகலாம். ” அவள் அசையாது இருக்கவும் “மீரா, என்ன நடந்தது ?” அவன் கேள்வியை முடிக்கும் முன் அவள் கண்ணில் நீர் நிறைத்தது. “எனக்கு இங்கு இருக்கப் பிடிக்கவில்லை” என்றாள். “உன்னை யார் என்ன சொன்னார்கள். என்ன ஆயிற்று ?” “என்னைச் சொன்னால் பரவாயில்லை. எல்லாரும் அம்மாவைத்தான் எப்போதும் ஏதோ ஒன்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அத்தையும் சித்தியும் அம்மாதான் குடும்பத்தைப் பிரித்தார் என்று சமயம் கிடைக்கும்போது சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.” “எப்போது சொன்னார்கள்” என்றான் சாதுவாக. ” உனக்குத் தேதி நேரம் எல்லாம் குறித்துச் சொல்லவேண்டுமா?” என்றாள் கோபமாக. “இல்லை மீரா, யார் முன் அப்படிச் சொன்னார்கள்?” ” என் முன்தான் ” “அப்பா, பாட்டி, தாத்தா யாரேனும் இருந்தார்களா?” “இப்போது அதுதான் முக்கியமா? அம்மாவைச் சொன்னால் யாருக்கும் எதுவும் இல்லை. உனக்கும் கூட ஒன்றும் தோன்றவில்லை” என்று வேகமாக எழுந்தாள். “முதலில் உட்கார், நான் சொல்வதைக் கேள். அத்தையோ சித்தியோ அனைவரின் முன்னிலையிலும் இப்படிப் பேசி யாரும் அதைக் கேட்கவில்லை என்றால் உன் கோபம் நியாயம். அவர்கள் அம்மாவிடம் மட்டும் சொல்கிறார்கள் என்றால் அதை ஏன் பொருட்படுத்த வேண்டும்.” ஜீவன் தொடர்ந்தான் “அவர்கள் நாம் இங்கு வருவோம் என்று எதிர்பார்க்க வில்லை. அவர்கள் தாத்தா பாட்டி முன் எதுவும் பேச வில்லை என்றாலே அவர்கள் வம்பிழுக்க ஏதோ பேசுகிறார்கள். அதைப் பெரிதாக எடுத்துக்கொண்டு நீ அப்பாவிடம் சண்டைபோட்டாயா ?” ” அவர்கள் அப்படிப் பேச அப்பாதான் காரணம்” என்றாள் மீரா. சிரித்துக்கொண்டே “அப்பாவா ? அவர் என்ன செய்தார் ?” “அவர் எதுவும் செய்யவில்லை. அது தான் பிரச்சனையே. அம்மாவை அவர்கள் பேசுகிறார்கள் என்றால், அப்பா ஏன் அவர்களைக் கண்டிக்கவில்லை ?” “இது என்ன சிறுபிள்ளைத்தனம். அம்மாவே குடும்பத்தில் பிரச்சினை வேண்டாம் என்று தான் எதையும் கண்டுகொள்வதில்லை. நாம் இங்கு வந்த சில நாட்கள் தான் ஆகிறது. அதற்குள் நம்மால் இங்கே ஏதும் சண்டை வேண்டாம் மீரா” “அதற்காக அவர்கள் என்ன பேசினாலும் கேட்டுக்கொள்ள வேண்டுமா?” “உன்னை யார் பேசாமல் இருக்கச் சொன்னது?” கோபாலனின் குரல் கேட்க இருவரும் திரும்பினர். உடன் ராதாவும் நின்றுகொண்டிருந்தாள் சிரித்தபடி. “நான் கேட்கவில்லை என்றால் என்ன? உன் அம்மாவிற்காக நீ பேசவேண்டியது தானே” என்றார் கோபாலன். “கொஞ்சம் சும்மா இருங்கள். அப்புறம் உங்கள் மகள் எல்லாரிடமும் சண்டை போடுவாள்” என்றால் ராதா. “உன் மகள் சண்டை போடுவது உன்னிடத்திலும், என்னிடத்திலும் தான். பார் என்னிடம் அவள் பேசிப் பத்து நாட்களுக்கு மேல் ஆகிறது” என்றார் கோபாலன். ” எட்டு நாட்கள் தான்” என்றாள் மீரா மெதுவாக. மூவரும் சிரித்துவிட்டனர். “இங்கே வந்ததிலிருந்து அப்பா என்னிடம் பேசுவதே இல்லை. அப்படியே பேசினாலும், இப்படி ஏன் செய்தாய்? அதைச் செய்யாதே என்று குறை கூற மட்டும் தான் பேசுகிறார். என்னுடன் அமர்ந்து பேசி எத்தனை நாட்கள் ஆகிறது தெரியுமா ?” ஜீவனைக் கேட்டாள். ” சாரி டா. நான் அன்று பேசியது கூட என் மகளை யாரும் குறை சொல்லக் கூடாது என்பதால் தான். நான் தாத்தா பாட்டிக்காக மட்டும் இங்கு வரவில்லை. உங்களுக்காகவும் தான். இருபது ஆண்டுகளாக உங்களுக்குக் கிடைக்காத உரிமை உறவு எல்லாம் உங்களுக்கு வேண்டும் என்றுதான். மற்றவர்களை விடு. இப்போது நம் குடும்பத்தில் பாட்டி தாத்தா சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் உங்களை எதுவும் சொல்லவில்லையே ? பின் என் அவர்களுடன் நீ ஒதுங்கி இருக்கிறாய் ? ” மகளுடன் கோபாலன் பேசிக்கொண்டிருக்க “பாருங்கள் அம்மா, நான் எதோ மீரா உன்மேல் உள்ள பிரியத்தில்தான் அப்பாவுடன் சண்டை போட்டாள் என்று நினைத்தேன். இப்போது தான் தெரிகிறது, அப்பா சரியாகப் பேசவில்லை என்று சண்டை போட்டிருக்கிறாள்”. என்றான் ஜீவா “நீ எதற்கு எனக்கும் அம்மாவுக்கும் சண்டை மூட்டுகிறாய்” என்று அண்ணனிடம் சண்டை தொடங்கினாள். இவர்களின் சிரிப்பும் உற்சாகமும் அந்த வீட்டில் இழந்த ஒன்றை மீட்டெடுத்தது. பகுதி 7 மார்டன் மில்ஸ்-ல் ஆனந்த் நினைத்தது போல் அதிக மாற்றம் தேவை இருக்க வில்லை. ஒரு மாதத்திலேயே தான் நினைத்தது போல் எல்லாம் இயல்பாக நடந்தது. புது நிர்வாகம் என்றாலும் அவர்களுக்குக் கிடைத்த சலுகைகளை எதுவும் குறைக்கவில்லை என்றதும் அங்கே பணியாற்றியவர்களுக்குத் திருப்தியை ஏற்படுத்தியது. சில கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து அணைத்துப் பிரிவுகளிலும் குறைகளையும் ஆலோசனைகளையும் கேட்டுக்கொண்டான். அவன் பெரும்பாலும் மாடன் மில்-இல் இருக்க நேர்ந்தது. கே வி மில்ஸ்-ன் பொறுப்புகளை முழுதும் தந்தைதான் பார்த்துக்கொண்டிருந்தார். இன்னும் ஒரு மாதத்தில் கே வி மில்ஸ் ஒப்பந்தம் முடிந்துவிடும். அதைப் பற்றித் தெளிவாகப் பேசிவிட வேண்டும் என்று தந்தை சொல்லாயிருந்தார். அதற்காக அந்த மாதக் கணக்குகளைச் சரிபார்த்துக் கொண்டு இருந்தான். “எங்களுடன் நீயும் கோவிலுக்கு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” பதமா தொடங்கினாள். ” அம்மா, ஏதோ காலையில் சென்று மாலையில் திரும்பினால் பரவாயில்லை. நீங்கள் திருப்பதி சென்று வர மூன்று நாள் ஆகும். இங்கு யாரும் இல்லாமல் இருப்பது சரிவராது. எல்லாம் எடுத்துவைத்தாயிற்றா ? இன்னும் அரை மணி நேரத்தில் கிளம்ப வேண்டும். ” என்றான் கோப்புகளைப் பார்த்தபடி. “எல்லாம் ஆச்சு. நீ ஒழுங்காக நேரத்துக்கு வீடு வந்துவிடு. வேலை என்று அங்கேயே கிடக்காதே. வேலைக்காரம்மா காலையும் இரவும் உணவு செய்துதருவார்கள். ஒழுங்காகச் சாப்பிடு.” “உன் மகன் என்ன இன்னும் சின்னக் குழந்தையை ? கிளப்பு” என்றார் சுந்தரம். மணியைப் பார்த்து விட்டுப் பெட்டியைக் காரில் எடுத்து வைத்தான் ஆனந்த். “டாக்ஸி பிடித்துக் கொள்ளலாம் என்றால், வேண்டாம் என்று விட்டாய்.” என்றார் சுந்தரம். “உங்களை வழி அனுப்பக்கூட வர முடியாத அளவுக்கு நான் பிஸி இல்லை அப்பா”. பெற்றோர் செல்லும் ரயில் கிளம்பும் வரை இருந்து விட்டு வீடு வந்தான். வந்ததும் படுத்துவிட்டான். காலையில் அலைப்பேசி ஒலித்ததும் எழுந்தான். வந்து சேர்த்துவிட்டதாக அப்பா தகவல் சொன்னார். குளித்துக் கிளப்பி வரக் காலை உணவு தயாராக இருந்தது. அம்மாவின் ஏற்பாடு. ” இரவு உணவு ஆறு மணிவாக்கில் வந்து செய்து வைத்துவிடுகிறேன் தம்பி. இன்று கொஞ்சம் சீக்கிரம் செல்ல வேண்டும்” என்றாள் வேலைக்காரம்மா தயங்கியபடி. ” உங்களுக்கு வேலை இருந்தால் நான் வெளியே சாப்பிட்டுக்கொள்வேன். ஒரு ஆளுக்காக நீங்கள் மீண்டும் இங்கே வந்து சமைக்க வேண்டாம்” என்றான் ஆனந்த். காலை நேரம் மட்டும் வந்து வேலைகளை முடித்துவிட்டுப் போகும் அந்த அம்மா, அவனுக்குச் சமைக்க மட்டும் வரவேண்டியிருந்தது. வீட்டில் அம்மா இல்லை என்றாலே பெரும்பாலும் அவன் உணவை வெளியிலேயே முடித்துக் கொள்வான். அதனாலேயே கிளப்பிக்கொள்ளும்படி அந்த அம்மாளிடம் சொல்ல “வேண்டாம் தம்பி, எனக்குச் சிரமமில்லை. நீங்கள் உணவுக்கு வீட்டுக்கே வந்துவிடுங்கள்” என்றாள். சரி என்று தலையாட்டிவிட்டுக் கிளம்பினான். திருப்பூர் ஆலைக்குக் கிளம்பக் காரைக் கிளப்பியதும், ராஜனின் தொலைப்பேசி வந்தது. ஒப்பந்தம்பற்றிப் பேச சாமி சார் வீட்டிற்கு வரச்சொன்னதாகச் சொன்னார். நேரே காரை மேட்டுப்பாளையத்திற்குச் செலுத்தினான். கே வி ஆலையைப் பார்வையிட்டு விட்டு மருதனூர் சென்றான். காரிலிருந்து சில ஆவணங்களை எடுத்துக்கொண்டு இறங்கினான். வீட்டின் முன் இருபுறமும் திண்ணையும் இரண்டிற்கும் நடுவில் பெரிய கதவும் இருக்கும். பெரிய திண்ணையில் ஒருபுறம் சோபாவும் சிறு மேஜையும் இருந்தது. மறுபுறத் திண்ணையில் ஒரு சாய்வு நாற்காலியும் ஒரு திவானும். சில சிறு சிலைகளும், சுவரில் ஓவியங்களும் பொருத்தமாக இருந்தது. இரண்டு நாற்காலிகள் மட்டும் இருந்த இடத்தில் இந்த ஏற்பாடு மிக அழகாக இருந்தது. திவானில் சாய்ந்தவாறு விஜயா அமர்ந்திருந்தார். அருகில் அமர்ந்து ஒரு இளம் பெண் ஏதோ படித்துக்கொண்டிருந்தாள். இவன் வருவதைக் கவனித்து மெல்ல எழுந்து வந்த அந்தப் பெண் முகத்தில் ஏதோ இருந்தது. குழப்பமோ, பயமோ. சரியாகக் கண்டுகொள்ளமுடியவில்லை. அருகில் வந்த அவள் “வாருங்கள், அத்தை மாமா நலமா ?” என்றாள். ஆனந்த் யோசனையோடு பார்க்க “வாருங்கள், அமருங்கள். குடிக்க எதாவது கொண்டுவருகிறேன்” என்று திருப்பியவளை “இல்லை வேண்டாம், சாமி சாரை பார்க்க வந்தேன்” என்றான். அதற்குள் “யார் அம்மா ?” என்று கேட்டபடி எழுந்தாள் விஜயா. ஆனந்தை கண்டுகொண்டதும் “வா தம்பி, நன்றாக இருக்கிறாயா ? அவர் இப்போதுதான் தோட்டம்வரை சென்றார். வந்து உட்கார்” என்றாள். பழச்சாறுடன் வந்த மீராவிடம் “மணியிடம் தாத்தாவை அழைத்துவரும் படி சொல். ஆனந்த் வந்திருப்பதாகச் சொல்” என்றார். பெயரைக் கேட்டதும் மீரா ஒருமுறை ஆனந்தை பார்த்தாள். பெரிய அத்தை மகன் ரகு மேட்டுப்பாளையம் வந்திருப்பதாகவும், பாட்டி தாத்தாவைப் பார்க்க மதியம் வருவதாகவும் முன்தினம் பேசிக்கொண்டிருந்தார்கள். ரகுவை அவன் அண்ணன் திருமணத்தில் கூட மீராவிற்குப் பார்த்த ஞாபகம் இல்லை. எப்படியும் மற்றவர்களை எல்லாம் இப்போது நன்கு தெரியும். புதிதாக வருபவன் ரகு. அவனிடம் தந்தை சொன்னது போல இயல்பாகப் பேச வேண்டும் என்று யோசித்து வைத்திருந்தவள், ஆனந்த் வந்தவுடன் யோசித்து வைத்திருந்ததைப் பேசினாள். பாட்டி பெயரைச் சொன்னதும் புரிந்துவிட்டது. சமாளித்துக்கொண்டு “மணி அண்ணாவும் அப்பா தாத்தாவுடன் சென்றுள்ளார். இதோ நான் சென்று அழைத்துவருகிறேன்” என்றாள் மீரா. ” வேண்டாம், நான் காத்திருக்கிறேன். படித்துக்கொண்டிருந்த உங்களைத் தொல்லை செய்து விட்டேன்” என்றான். ” சும்மா தான் படித்துக்கொண்டிருந்தேன்” என்றபடி புத்தகங்களை அங்கிருந்த மேஜை மேலிருந்து அகற்றினாள். “என் பேத்தி மீரா. கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கிறாள்” என்றாள் பாட்டி விஜயா. ஆனந்த் எதுவும் பேசவில்லை. ஒருமுறை அவளைப் பார்த்ததுபோல் இருந்தது. மெதுவாக உள்ளே சென்றாள். பின் வாசல் வழியே அப்பாவும் தாத்தாவும் வருவது தெரிந்தது. நேரே அவர்களிடம் சென்று ஆனந்த் வந்திருப்பதைத் தெரிவித்துவிட்டு உள்ளே சென்றாள். ” என்னப்பா, ஆளையே பார்க்க முடியவில்லை, சுந்தரம் தான் வருகிறார். இந்த ஆலையை மறந்து விட்டாய் போல” என்றபடி அங்கு வந்து அமர்ந்தார் கிருஷ்ணசாமி. உடன் கோபாலனும் வந்தார். இருவரையும் அறிமுகம் செய்து வைத்தார் கிருஷ்ணசாமி. “திருப்பூரில் கொஞ்சம் வேலை அதிகம் சார்” “கேள்விப்பட்டேன், சந்தோஷம் தம்பி. என்ன ? இங்கே உன்னைப் போல் இன்னொருவர் கிடைப்பது தான் கஷ்டம்” என்றார் கிருஷ்ணசாமி. ஆனந்த் யோசனையோடு பார்க்க “நீ இருந்தவரைக் கவலையின்றி இருந்தேன். இனி வரும் ஆட்கள் எப்படியோ ? என்றார். “வேறு ஆளா? இனி நீங்களும் உங்கள் பிள்ளைகளும் பார்த்துக் கொள்வதாகக் கேள்விப்பட்டேன்” என்றான். சற்றே தயங்கி “ராஜன் சார் தான் பொறுப்பை உங்கள் மகன் ஏற்பார் என்றார். அதனால் தான் நானும் ஒப்பந்தம் பற்றி மீண்டும் பேச வில்லை சார். நீங்கள் வேறு ஆள் தேட வேண்டாம். நானே பார்த்துக்கொள்வேன்” என்றான். “முழு பொறுப்பை ஏற்க என்னாலும் முடியாது தம்பி. இப்போது அப்பா செய்வது போல் மேற்பார்வை மட்டும் செய்வேன். அதைத் தான் ராஜன் தவறாகப் புரிந்துகொண்டார் போலும்” என்றார் கோபாலன். “திருப்பூர் மேட்டுப்பாளையம் என்று இரண்டு இடங்களில் உன்னால் எப்படிச் சமாளிக்க முடியும். சிரமம் இல்லையா ?” என்றான் கிருஷ்ணசாமி. ” சிரமம் ஒன்றும் இல்லை. இந்த வயதில் உழைக்கக் கஷ்டப்பட்டால் எப்படிச் சார் ?” என்றான். லேசாகச் சிரித்தார் கிருஷ்ணசாமி. ” சரி, அப்படியானால் ஒப்பந்தம் தயார் செய்ய ராஜனிடம் சொல்லிவிடுகிறேன். பழைய ஒப்பந்தத்தில் மாற்றம் ஏதும் இல்லை” என்றார். ஆனந்தால் நம்ப முடியவில்லை. இங்கே வரும்போது கூடப் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டுக் கிளப்பவேண்டியதுதான் என்று எண்ணிவந்தான். மூவரும் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு கார் வந்து நின்றது. காரிலிருந்து பலர் இறங்கினர். சட்டென்று கோபாலன் எழுந்து சென்று வரவேற்றார். அவர்கள் கிருஷ்ணசாமியின் பேரப்பிள்ளைகள் இனி இங்கிருந்து கிளம்பவேண்டியதுதான் என்று எண்ணிக் கொண்டிருந்தபோது, “ரகு (நாயகியின் இரண்டாவது மகன்), அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறான்.” என்று அவர் முடிக்கும் முன் தாத்தாவிடம் வந்து நலம் விசாரித்தான் ரகு. “அப்போது கணக்குகளை இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம் சார், நான் கிளம்புகிறேன்” என்று அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு காரருகே சென்றான். ” ஒரு நிமிடம்” என்ற குரல் கேட்க நின்றான். அழைத்தது மீரா “என் புத்தகங்களை எடுக்கும்போது உங்கள் ஒரு கவரும் வந்துவிட்டது, சாரி” என்றாள். கிருஷ்ணசாமி சாரிடம் காட்ட வேண்டியதை ஒருபுறமும் வேறுசிலவற்றை அங்கிருந்த புத்தகத்தின்மேல் வைத்திருந்தான். புத்தகங்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கும்போது நடுவே மாட்டியிருக்கும். “தட்ஸ் ஓகே” என்று அவள் நீட்டியதைப் பெற்றுக்கொண்டான். “புதிய உறவினர்கள் சிலர் வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்தோம். உங்களை அவர்கள் என்று நினைத்துவிட்டேன்” என்றாள் மெதுவாக. அவன் ‘புரிந்தது’ என்பது போல் தலையாட்ட லேசாகப் புன்னகைத்துவிட்டு அவள் உள்ளே சென்றாள். இங்கு வந்து பலநாட்களுக்குப் பிறகு மீரா ஓரளவு அனைவரிடமும் சகஜமாகப் பேசினாள். விஜயும் ஜெய்யும் ரகுவிடம் அமெரிக்கா விவரங்களை வெகுநேரம் பேசிக்கொண்டிருக்க “போதும். வேறு எதாவது பேசுங்கள்” என்றான் ரகு. ” இப்போதே சாரு கொட்டாவி விடுகிறாள். இப்படியே பேசிக்கொண்டிருந்தாள் உறங்கிவிடுவாள்.மீரா, இன்னும் நான் ஜீவாவை தான் பார்க்கவில்லை. அவன் எப்போது வருவான் ?” என்றான். பார்த்துக் கொஞ்ச நேரத்திலேயே இயல்பாக அவள் பெயரை இங்கே யாரும் இதுவரை சொன்னதில்லை. சற்றே ஆச்சரியமாகப் பார்க்க “உன் அண்ணன் பேர் ஜீவா தானே ? தப்பாகச் சொல்லிவிட்டேனா ?” என்றான் ரகு. “ஜீவா அடுத்த வாரம் வருகிறான்” என்றாள். இருவரும் என்ன படிக்கிறார்கள் என்று விவரம் கேட்டான். அவர்கள்பற்றிக் கேட்க இவனுக்காவது தோன்றியதே ! என்று எண்ணிக்கொண்டு விவரம் சொன்னாள். “நீ மேலே படிப்பாயா? இல்லை இதுகளைப் போல் பேருக்கு ஒரு பட்டம் போதும் என்று இருந்துவிடுவாயா ?” என்றான். ” நீ வெளிநாடு சென்று படிக்கிறாய் என்று ரொம்ப அலட்டிக்கொள்ளாதே.” என்றான் விஜய். ” கொஞ்சம் விட்டால் ரொம்ப பேசுவான். நாம் போகலாம் “என்று அங்கிருந்து நகர்ந்தான் ஜெய். “நானும் வருகிறேன். சாரு நீயும் வா. தோட்டம்வரை சென்று வரலாம்” என்றான் விஜய். “படிப்பைப் பற்றிப் பேசினால் தெறித்து ஓடிவிடுவார்கள்” என்றான் ரகு அவர்களுக்குக் கேட்கும்படி. “சரி வா நாமும் போகலாம். நானும் இங்கு வந்து வெகுநாட்கள் ஆகின்றது” என்றான். மறுநாள் வரை அனைவரும் இருந்ததில் மீரா அனைவரையும் பற்றி நன்கு தெரிந்துகொண்டாள். விஜயும் ஜெய்யும் படிப்பை முடித்துவிட்டு பேருக்கு நாங்களும் தொழிலைப் பார்த்துக்கொள்கிறோம் என்று அவ்வப்போது அலுவலகம் சென்று வருவது, நண்பர்களுடன் ஊர் சுற்றுவது என்று பொழுதைப்போக்கி கொண்டிருந்தனர். இவர்களுடன் சந்துருவும் அவ்வப்போது சுற்றினாலும், தந்தைக்கு உதவியாக வெளியூர் கொள்முதல் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தான். சாரு பேசுவதே அபூர்வம். பேசும்போது மீராவை விட அவள் சிறந்தவள் என்று காட்டிக்கொள்ளத் தவறவில்லை. மற்றவர்களைவிட ரகு இயல்பாகப் பழகியதாகவே தெரிந்தது. அவளிடம் மட்டுமின்றி கோபாலனிடமும் ராதாவிடமும் சகஜமாகப் பேசினான். பகுதி 8 இரவு வெகுநேரம் மார்டன் மில்ஸ்-ல் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, காலைத் தாமதமாக விழித்தான். வீட்டில் மதிய உணவை முடித்துக்கொண்டுதான் மேட்டுப்பாளையம் கிளம்பினான். இந்த ஒருவாரத்தில் ஆனந்தின் உற்சாகம் பன்மடங்கு பெருகியிருந்தது. அவன் எதிர்பாராதது நடந்தது அவனுக்கு அளவில்லா சந்தோஷத்தைத் தந்தது. கே வி மில்ஸ்-ன் பொறுப்பையும் சேர்த்துப் பார்ப்பதில் அவனுக்கு நேரம் சரியாக இருந்தது. இருந்தாலும் அவன் அன்று கிருஷ்ணசாமி சார் வீட்டில் கிடைத்த இன்ப அதிர்ச்சியை அவ்வப்போது நினைத்துக்கொண்டிருந்தான். அந்த நினைவு வரும்போதெல்லாம் மீராவின் நினைவும் வரத்தவறவில்லை. அவன் நினைவு எங்கோ இருந்தாலும் கார் சரியாக மேட்டுப்பாளையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. “அத்தை மாமா வரவில்லையா?” அவள் குரல் இப்போதும் கேட்பது போலிருந்தது. கிருஷ்ணசாமியின் குடும்பத்திற்குச் சுந்தரத்தைப் பல ஆண்டுகளாகத் தெரியும் என்றாலும், உறவுமுறை சொல்லி யாரும் அழைத்ததில்லை. மீராவும் வேறுயாரோ என்றெண்ணித்தான் அப்படிச் சொன்னாள் என்று விஜயா அறிமுகப்படுத்தியபோது அவள் பார்த்த பார்வை அவனுக்குப் புரியவைத்தது. மீராவின் அன்றைய செயல் பலமுறை அவளைப் பற்றி யோசிக்கவைத்தது. என்றும் வேலையாட்கள் கொண்டுவரும் பானம், அவளே கொண்டுவந்தாள். இதுவரை இவன் வந்திருப்பதை அந்த வீட்டில் பொருட்படுத்தமாட்டார்கள். குடிக்க ஏதேனும் வேலையாள் கொண்டுவந்து கொடுப்பாள். வீட்டுப் பெண்கள் யாரும் அவனிடம் பேசியதுகூட இல்லை. அவன் யார் என்று தெரிந்த பிறகும் அவளே அந்தக் கவரை அவனிடம் கொண்டுவந்து கொடுத்தாள். கிருஷ்ணசாமியின் வாரிசுகளில் இவள் தனி. இப்படியாக எங்கோ ஆரம்பித்த யோசனை மீராவிடம் வந்து நிற்க லேசாகப் புன்னகைத்தான் அவனை அறியாமலேயே. அலைப்பேசி ஒலிக்கக் காரை ஓரமாக நிறுத்தினான். இயந்திர கோளாறு சரியாகிவிட்டதாகச் சூப்பர்வைசர் தகவல் சொல்ல, இயந்திர இயக்கத்தைத் தொடங்கும் படி சொல்லிவிட்டுக் காரை மீண்டும் கிளப்பினான். அவன் கார் முன் சற்று தள்ளிப் பேருந்து ஒன்று நின்றுகொண்டிருந்தது. ஏதோ கோளாறு காரணமாகப் பயணிகள் அனைவரும் கீழே நின்றுகொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் மீரா போல் யாரோ நிற்பது தெரிந்தது. ” எனக்குப் பைத்தியம் தான் பிடித்துவிட்டது. அவள் எதற்கு இங்கே நிற்கப்போகிறாள்” என்று யோசித்தபடி காரை நகர்த்தினான். அருகில் செல்லச்செல்ல அது மீரா தான் என்று தெளிவாகத் தெரிந்தது. காரைப் பேருந்தின் முன் நிறுத்திவிட்டு இறங்கி அவளிடம் சென்றான். ” ஹாய் ” குரல் கேட்டுத் திரும்பிய மீரா ஆனந்தை கண்டதும் “ஓ ஹலோ. நீங்கள் எங்கே இங்கே ?” லேசாகத் தலையைச் சாய்த்து” அதை நான் கேட்க வேண்டும். நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? ” என்றான். “பேருந்துக் கோளாறு. அடுத்த பேருந்துக்காகக் காத்திருக்கிறேன்” கிருஷ்ணசாமியின் பேத்தி பேருந்திற்காக நிற்பதா ? யோசித்தபடி “ஏன் பேருந்தில் செல்ல வேண்டும் ?” புரியாதவள் போல் பார்க்க “நான் ஆலைக்குத் தான் செல்கிறேன். வாருங்கள்! நான் உங்களை வீட்டில் விடுகிறேன்” என்றான். ” இல்லை, உங்களுக்குச் சிரமம் வேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன் “. “உங்களை நடுவழியில் பார்த்து இப்படி விட்டுவிட்டுச் செல்ல எனக்கு மனம் இல்லை. வேண்டுமானால் வீட்டுக்கு என்னுடன் வருவதாகப் போனில் சொல்லிவிடுங்கள்”. யோசித்துவிட்டு “தேவையில்லை, நான் வருகிறேன்” என்றாள். கார் கிளம்பியதும் “நீங்கள் ஏன் காரில் வரவில்லை. பேருந்து நெரிசலில் ஏன் சிரமப்பட வேண்டும்” என்றான். “தினமும் செல்ல எதற்கு வீண் செலவு என்று பேருந்தில் செல்வது தான் என் வழக்கம்.” ஒரு நிமிடம் அவளைப் பார்த்துவிட்டுப் படிப்பைப் பற்றிக் கேட்டான். ” இன்று என்ன அரைநாள் தான் வகுப்புகளா? இந்த நேரத்தில் வருகிறீர்கள்!” என்றான். லேசாக உதட்டைக் கடித்துக்கொண்டு “கிளாஸ் கொஞ்சம் போர். நாளை அண்ணாவும் வருகிறான். அதுதான் சீக்கிரம் வந்துவிட்டேன்” என்றாள் மெதுவாக. சிரித்துவிட்டு அவள் அண்ணனைப் பற்றிக் கேட்டான். பின்பு மருதனுர் வீடு மாற்றங்களையும் ஓவியங்களையும் பற்றிச் சொன்னான். ” ஓவியங்கள் மட்டுமே நான் வரைந்தது. அந்த அமைப்பு அம்மாவின் யோசனை.” என்றாள். அதற்குள் வீடு வந்து விட்டது. ” ஐயோ, என்னை மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் விட்டிருக்கலாம். இவ்வளவு தூரம் வந்திருக்கவேண்டியதில்லை. பேசிக்கொண்டே வந்ததில் நானும் கவனிக்கவில்லை” என்றாள். ” எனக்கு ஒன்றும் சிரமமில்லை. நான் வரட்டுமா” என்றான். “இவ்வளவு தூரம் வந்து விட்டு அப்படியே சென்றால் எப்படி? உள்ளே வாருங்கள்” எதுவும் சொல்லாமல் உடன் சென்றான். அங்கே விஜயாவும் ராதாவும் அமர்த்துக்கொண்டிருந்தனர். இவர்களைப் பார்த்ததும் ” என்ன ஆயிற்று மீரா. இப்போது வருகிறாய்” என்று படபடத்தாள் ராதா. ” ஒன்றும் இல்லை அம்மா! கிளாஸ் போர் அடித்தது என்று மதியமே கிளப்பிவிட்டேன். வரும் வழியில் பஸ் வேறு நின்றுவிட்டது. சார் தான் அழைத்துவந்தார் “. ” நீங்கள்!” என்று ராதா இழுக்க “ஆனந்த் தான் நம் அலையைப் பார்த்துக் கொள்வது. வாப்பா உட்கார்” என்றாள் விஜயா. ” அமருங்கள், இதோ வருகிறேன்” என்று உள்ளே ஓடினாள் மீரா. “அன்று நீங்கள் வந்தபோது, நான் வீட்டில் இல்லை, பண்ணைவரை சென்றிருந்தேன்.” என்று அறிமுகம் செய்துகொண்டாள் ராதா. “மீராவிற்காக இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள். ரொம்ப நன்றி” ” அதெல்லாம் ஒன்றும் இல்லை. நான் இங்குத் தான் வந்து கொண்டிருந்தேன். வழியில் பார்த்து அழைத்து வந்தேன். ” அதற்குள் மீரா மோருடன் வந்தாள். ” இதற்குத் தான் தினமும் காரில் செல்லச்சொன்னேன். பார் இன்று இப்படியாகிவிட்டது” என்றாள் விஜயா. “இப்போது என்ன ஆயிற்று பாட்டி. இன்று கொஞ்சம் சிரமம் இருந்தது. அவ்வளவுதான். பள்ளிக்கே பல மயில் நடந்து செல்கிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள் பாட்டி” என்றாள் மீரா. இருவரும் பேசிக்கொண்டிருக்க “நான் கிளம்புகிறேன்” என்று விடைபெற்றுக்கொண்டான் ஆனந்த். மறுநாள், ஜீவன் வந்ததும் பின்புற தோட்டத்தில் நடந்தபடி இருவரும் கதைபேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஆனந்தை பற்றியும் முதல் முறை அவனைப் பார்த்ததும் அவள் பேசிய விதத்தையும் சொல்ல ” சரி விடு. யாதும் ஊரே யாவரும் கேளிர். அதனால் அவரையும் நம் உறவாக எண்ணிவிட்டாய் போலும். அது சரி! அத்தை மகன் எப்படி” என்றான். ” நல்லவர்போல் தான் தெரிகிறது. நேற்று நான் வந்த பேருந்துக் கோளாறு என்பதால் என்னை வீட்டிற்கே அழைத்துவந்து விட்டார். நல்ல திறமைசாலி என்று தாத்தாவும் அடிக்கடி சொல்லிக் கேட்டிருக்கிறேன். அப்பா கூட அப்படி தான் சொன்னார். பெங்களூரில் வேலையை விட்டு விட்டு இப்போது தொழிலை வெற்றிகரமாகச் செய்கிறாராம் “. “நீ யாரைப் பற்றிச் சொல்கிறாய்?” ” ஆனந்த் சாரை பற்றி ” கைகளைக் கட்டிக்கொண்டு லேசாகத் தலையைச் சாய்த்து தங்கையைப் பார்த்தான் “நான் ரகுவை பற்றிக் கேட்டேன். நீ ஆனந்த் பற்றிச் சொல்கிறாய்”. ஒரு கனம் அதிர்ந்து அண்ணனைப் பார்த்துவிட்டு “நீ எப்போது ரகுவை பற்றி விசாரித்தாய் ?” ” அத்தை மகன் என்றேன். நீ தான் ஆனந்த் நினைவிலேயே நின்றுவிட்டாய்” என்றான் கேலிச்சிரிப்புடன். ” ஏய்! கொஞ்சம் கூடச் சரியில்லை. நா… நான் யார் நினைவிலும் இல்லை.என்னை வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கிறாய். ரகு என்று பேரைச்சொல்லிக் கேட்டிருக்க வேண்டும். ” ” ஓ. அப்படியா ? அப்போது ஆனந்தை பற்றிக் கேட்க வேண்டுமென்றால் ‘அத்தை மகன்’ என்று குறிப்பிடவேண்டுமோ ?” என்றான் ஜீவன். “இப்போது என்னிடம் அடி வாங்கப் போகிறாய்”. ” ஐயோ, பயமாய் இருக்கிறது. என்னை அடித்துவிடாதே. நான் பாவம். அடி தாங்கமாட்டேன்” என்று பயந்ததுபோல் நடிக்க, “உன்னை” என்று அருகில் கிடந்த ஒரு பிரம்பை எடுத்துக்கொண்டு துரத்தினாள். ” வேண்டாம் மீரா! என்று அவனும் ஓட வீட்டின் முன் வந்துவிட்டார்கள். தந்தையைப் பார்த்துச் சட்டென்று ஜீவா நின்றுவிட “உன்னை இன்று அடிக்காமல் விடமாட்டேன்” என்று பின்னோடு வந்த மீரா சொல்ல “என்ன மீரா இது. இப்படியா நடந்துகொள்ளவாய். இன்னும் நீ சிறுபிள்ளை இல்லை. இப்படிக் கத்திக்கொண்டிருந்தால் தாத்தா பாட்டிக்குத் தொந்தரவாக இருக்காதா ?” என்றார் கோபாலன். திண்ணையில் அமர்ந்திருந்த கிருஷ்ணசாமி “அவர்கள் இன்னும் சிறு பிள்ளைகள் தான். பிள்ளைகள் ஓடியாடி விளையாடினாள் தான் வீடு நன்றாக இருக்கும். அவர்களை ஏன் அடக்குகிறாய் ?” என்றார். மீரா ஜீவன் ஆச்சரியமாய் பார்க்க “உன் அப்பன் கிடக்கிறான். அவன் செய்யாததா ?” என்றார் விஜயா. “நாயகியும் உன் அப்பா செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லை. எப்போதும் வீட்டில் பெரிய பிள்ளைகள் அமைதியாகவும், சிறுசுகள் சேட்டை செய்வதுமாய் இருக்கும். இங்கே தலைகீழ். நாராயணனும் கமலாவும் இருக்கும் இடம் தெரியாது”. ” ஐயோ, அம்மா! நீங்கள் கொஞ்சம் சும்மா இருங்கள். இவர்கள் இருவரும் செய்த வேலைகள் உங்களுக்குத் தெரியாது. அங்கே எப்போதும் பக்கத்து வீட்டார் புகாருடன் வீட்டின் முன் நிற்பார்கள்.” என்றார் கோபாலன். ” அப்படியா! வந்ததிலிருந்து அப்படி ஒன்றும் தெரியவில்லையே” என்றார் விஜயா. ” அவர் சொல்வது சரிதான் அத்தை. இருவருக்கும் விடுமுறை வந்துவிட்டால் என்பாடு திண்டாட்டம்தான். ஜீவனைக் கூடச் சமாளித்துவிடலாம். இவள் இருக்கிறாளே!” என்று மீராவைச் சுட்டிக் காட்டினாள் ராதா. ” ஆம் பாட்டி. இவள் செய்த அட்டகாசம் தாங்காமல் எத்தனை பேர் அந்தத் தெருவைக் காலி செய்து போனார்கள் தெரியுமா!” என்றான் ஜீவன் “இல்லை பாட்டி, இவன் பொய் சொல்கிறான். இவன் செய்வதை என்மேல் சொல்லிவிடுவான்” என்றாள் மீரா. “போதும் போதும். இன்னும் சண்டை போட்டுக்கொண்டு.” என்றார் கோபாலன். அவர்கள் பேசிக்கொண்டிருக்க தொலைப்பேசி ஒலித்தது. மீரா சென்று எடுக்க, பேசியது ரகு. எல்லோரும், ஊட்டி செல்லத் திட்டமிட்டிருப்பதாகவும். மறுநாள் காலை செல்லத் தயாராக இருக்கும்படி சொன்னான். ” எல்லாருமா? ” என்றாள் மீரா. பாட்டி வீட்டில் நடப்பதற்கே சிரமப்படுகிறார்கள். அவர்கள் வெளியே செல்வதே அரிது. தாத்தாவும் இதற்கு ஒப்புவாரா என்று தெரியவில்லை. ” ஆம், இங்கே விஜய், ஜெய், சந்துரு, ஜீவன், நான், நீ. என்ன சரிதானே ” ” பெரியவர்கள் யாரும் வர வில்லையா?” “பெரியவர்களா? நாம் அனைவரும் பெரியவர்கள் தானே ?” “நான் அம்மா அப்பாவிடம் கேட்டுச் சொல்கிறேன்” என்று தொலைப்பேசியை வைத்தாள். இதில் அவளுக்கே விருப்பமில்லை என்றாலும் விஷயத்தைப் பெற்றோரிடம் சொன்னாள். அவர்களுக்கு இந்தப் பிரயாணம் பிடிக்க வில்லை. ” பெரியவர்கள் இல்லாமல் எப்படி? நீங்கள் செல்ல வேண்டாம்” என்றாள் ராதா. ” சரி அம்மா” என்றார்கள் இருவரும். இதைக் கவனித்துக் கொண்டிருந்த விஜயம் “இருவரையும் நன்றாக வளர்த்திருக்கிறாய் ராதா.” என்றார். இதைக் கேட்ட மீராவுக்கு அவ்வளவு சந்தோசம். பாட்டி அம்மாவை மெச்சுகிறார்கள் என்றால் சும்மாவா ? பல தலைமுறைகளாய் வசதி படைத்தவர்கள் என்றாலும், பிள்ளைகள் பெற்றோர் பேச்சைத் தட்டாமல் கேட்பது கிருஷ்ணசாமியின் குடும்பத்தில் கட்டாயமான ஒன்று. கிருஷ்ணசாமி அப்படித்தானே இருந்தார். விஜயாவும் பிள்ளைகளை அப்படித்தான் வளர்த்தார். பணம் கொட்டிக்கிடந்தாலும், ஆடம்பர செலவுகள் செய்தலும், எல்லாவற்றிற்கும் ஒரு கணக்கு இருக்கும். அவர்களின் ஆடம்பரம் நல்ல உடைகள், நிறைய நகைகள், வசதியாகச் சென்று வர வாகனங்கள் இப்படியான ஆடம்பரங்கள் தான் இருக்கும். ஆனால் பேரப்பிள்ளைகள் செலவுக் கணக்கு மிக அதிகப்படி என்று விஜயாவை எண்ணவைத்தது. நண்பர்களுக்கு விருந்து, கேளிக்கை கொண்டாட்டம் என்று அடிக்கடி வெளியே செல்லத் தொடங்கினார்கள். அதுவும் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே. இதுபோல் கொண்டாட்டங்கள் வாரம் ஒருமுறையேனும் நடக்கும். முதலில் வீட்டில் உணவு, ஆட்டம் பாட்டம் என்று தொடங்கி, இப்போதெல்லாம் ஹோட்டல்கள், சுற்றுலா தளங்கள் என்று பகட்டான செலவுகள் அதிகம் செய்யத் தொடங்கினார்கள். எல்லாவற்றையும் விட, வீட்டில் பெரியவர்கள் யாரேனும், ’இது வேண்டாம், இன்னொரு நாள் வைத்துக்கொள்ளலாம் ’என்று சொன்னால், அதைக் கேட்கும் பொறுமை யாருக்கும் இருப்பதில்லை. முதலில் அனுமதி கேட்டு நின்ற பேரப்பிள்ளைகள், இப்போதெல்லாம் தகவல் மட்டும் சொல்லிவிட்டுச் செல்கிறார்கள். அதுவும் பெற்றோர்களிடம் மட்டும். இப்போதுகூட இங்கே இருந்துவிட்டுச் செல்லும்போது, தாத்தா பாட்டியிடம் சொல்ல வேண்டும் என்று எண்ணவில்லை. தனியாகச் செல்ல வேண்டாம் என்று நிச்சயம் நாராயணனோ, கமலாவோ சொல்லி இருப்பார்கள். அதையும் கேட்கமாட்டார்கள். மீராவும் ஜீவனும் அவர்களை ஓத்த வயதுதான். பெற்றோர் பேச்சுக்கு மறுவார்த்தை சொல்லவில்லை. இன்று மட்டும் இல்லை. இங்கே வந்ததிலிருந்து இருவரும் அப்படித்தானே. அதற்கு முன்னும் அப்படித்தானே இருந்திருக்க வேண்டும். இதுவே விஜயாவுக்கு ராதாவின் மேல் இருந்த வெறுப்பு எல்லாம் மறைந்தது. பகுதி 9 புது வீட்டின் வேலைகள் முடிந்த நிலையில், வீட்டில் மரவேலைகள், அலங்கார பொருட்கள், தோட்டம் அமைத்தல் என்று பெரும்பாலும் நாராயணனும் லக்ஷ்மியும் மருதனூரில் இருப்பதே இல்லை. சிலசமயம் கமலா வீட்டிலேயே தங்கி விடுவதும் உண்டு.பிள்ளைகள் அனைவரும் ஊட்டிச் சென்றுவிட, நாராயணன், லட்சுமி மருதனூர் வந்திருந்தனர். உடன் சாருவும் வந்திருந்தாள். பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்க ஜீவனும் மீராவும் சதுரங்கம் விளையாடிக்கொண்டிருந்தனர். ” சாருவையும் அழைப்பதுதானே” என்றான் ஜீவன் மீராவுக்கு மட்டும் கேட்கும்படி. தங்கை இன்னும் சாருவுடன் நெருக்கம் காட்டவில்லை என்று ஜீவனுக்குத் தெரியும். “சதுரங்கத்தில் மூன்று பேர் விளையாட முடியும் என்று எனக்கு இன்று வரை தெரியாதே” என்றாள்.” ஆம் இவள் ஏன் ஊட்டிக்குச் செல்லவில்லை?” “பாவம், தனியே அமர்ந்திருக்கிறாள். நம்முடன் வந்தாள் எதாவது பேசுவாள். நீயும் விளையாட்டில் வெல்ல உதவக்கூடும்” என்றான். அதுவரை காய்களையும் ஆராய்ந்துகொண்டிருந்த மீரா, சட்டென்று ஜீவனைப் பார்த்து “செக் மேட்” என்றாள். மீரா அந்த ஆட்டம் ஜெயித்திருந்தாள். “எப்படி?” என்றான் ஜீவன். “உன் கவனம் இங்கே இல்லையே. அதோ அங்கே இருக்கிறது” என்று சாரு அமர்ந்திருந்த பக்கம் பார்த்தாள். ” என்ன? பழிவாங்குகிறாயா ?” ” இல்லையே! உண்மையைச் சொன்னேன். கவனம் இங்கிருந்தால் எப்படி இவ்வளவு எளிதில் தோற்பாய் ” “சட் அப் மீரா. யாரவது காதில் விழுந்தால் என்ன நினைப்பார்கள்.” மீரா சில சமயம் ஜீவனை இப்படிச் சீண்டுவது வழக்கம். தொலைக்காட்சியில் வரும் பெண்ணையோ, புத்தக அட்டைப்படப் பெண்ணையோ காண்பித்து “இந்தப் பொண்ணு உனக்குப் பொருத்தமாக இருக்கும்” என்பாள். தலையில் ஒரு குட்டு நிச்சயம் விழும். இன்று அவன் கோவம், தான் எல்லை மீறியதை உணர்த்தியது. ” நீயும் அவர்களுடன் சேர்த்துக்கொள் சாரு” கோபாலனின் குரல் கேட்டது. “சாரு யாரிடமும் எளிதில் ஒட்டமாட்டாள். வா! நாம் உள்ளே சென்று டிவி பார்ப்போம்” என்றாள் லட்சுமி. ” அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நீ ஜெய், விஜயிடம் எப்படிப் பேசுகிறாய். இவர்களும் உனக்கு அப்படித்தானே. ” என்று விஜயா முடிக்கும் முன், “அது எப்படி அத்தை? என் பிள்ளைகள் சாருவிடம் சிறு வயதிலிருந்து ஒன்றாக இருக்கிறார்கள் அவர்களும் புதிதாக வந்த ஜீவனும் ஒன்றா ? அதுவும் ஜீவா மாமன் மகன். எப்படி சகஜமாகப் பேச முடியும் ?” லக்ஷ்மியின் பேச்சு மீராவின் காதில் விழுந்தது. “இது என்ன பேச்சு ? நாம் அந்நியர்கள் என்று சொல்லிக்காட்டுகிறார்கள். உன்னுடன் பேசினால் நீ என்ன அவளைத் தின்றுவிடுவாயா ?இதற்கு யாரும் எதுவும் மறுத்துப் பேசமாட்டார்களா ? என்றாள் கோபமாக.” ஜீவன் மறுப்பாய் தலை அசைத்து ‘எதுவும் பேசாதே’ என்று ஜாடை செய்தான். அவனைப் பொருட்படுத்தாமல் மீரா எழ ஜீவனும் சட்டென்று எழுந்து பெரியவர்கள் இருக்கும் இடம் சென்று “பரவாயில்லை சித்தி, சாருவிற்குச் சங்கடமாக இருந்தால் விட்டுவிடுங்கள்.” என்று சாருவைப் பார்த்து “சாரு, புது மனிதர்களிடம் எல்லாராலும் சகஜமாகப் பழக இயலாது. உனக்கான சமயத்தை நீ எடுத்துக்கொள்.சித்தி சொல்வது போல், ‘மாமன் மகன், எப்படிப் பேசுவது.’ என்றெல்லாம் நீ தயங்கத் தேவையில்லை. முடிந்தால் நீ சந்துரு விடம் எப்படிப் பேசுகிறாயோ !அப்படியே என்னிடமும் பேசலாம். மீராவைப் போல் நீயும் எனக்கு ஒரு தங்கை.” என்று புன்னகைத்தபடி நகர்ந்தான். அதற்குமேல் லக்ஷ்மியால் ஒன்றும் சொல்லமுடியவில்லை. கைதட்ட வேண்டும் போலிருந்து மீராவிற்கு. இப்படிப் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணியபடி அனைவரையும் பார்த்தாள். சித்தியின் முகத்தில் அசடு வழியவில்லை. அவள் கண்ணில் கோபம் தெரிந்தது. தோல்வியின் வெளிப்பாடு. மீரா அங்கிருந்து நகர “நானும் உன்னுடன் வருகிறேன்” என்று எழுந்தாள் சாரு. பின்புற தோட்டத்தில் நடந்தவாறு இருவரும் உரையாடிக்கொண்டிருந்தனர் அவள் உடன் வந்ததில் மீராவால் மகிழ்ச்சி கொள்ளமுடியவில்லை. சாரு பேசுவது ஆடைகளைப் பற்றியோ ஒப்பனையைப் பற்றியோ தான் இருக்கும். அதில் தவறொன்றும் இல்லை ஆனால் மீராவின் ஆடைகளைக் குறை கூறாமல் விடமாட்டாள். அது மீராவுக்குச் சற்று எரிச்சலாக இருக்கும். நல்ல நண்பர்களாகிய பிறகு “உனக்கு இது சரி, இது சரியில்லை’ என்பது வேறு. வீட்டில் இருக்கும் போதும் ஒப்பனையுடன் மிகவும் விலை உயர்ந்த வேலைப்பாடுகள் நிறைந்த உடைகளை உடுத்தி இருப்பது மீராவுக்குப் பிடிக்காது. சாதாரண பருத்தி ஆடை, அதுவும் பிரகாசமான கண்களைப் பறிக்கும் வண்ணமும் இல்லாமல் தான் தேர்ந்தெடுப்பாள். கல்லூரிக்குச் செல்லும்போதும் அதிகப்படி ஒப்பனை செய்வதில் மீராவிற்கு விருப்பமில்லை. இரண்டு மூன்று முறை அவளைப் பார்த்து விட்டு “இந்த வீட்டில் இருக்கும்போது இப்படி இருந்தால் யாருக்கும் பிடிக்காது. நல்ல பளிச்சென்று இருக்க வேண்டும். நல்ல பிரகாசமான உடைகள், நல்ல ஒப்பனை என்று இருக்க வேண்டும்.” என்றாள் ஒருமுறை. அது உண்மை என்று மீரா நினைக்கவில்லை. இதுவரை யாரும் இவள் உடையைப் பற்றிக் குறை சொல்லவில்லை. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் பாட்டி விஜயா கூடப் பெரும்பாலும் பருத்தி ஆடைகள் தான் அதுவும் சாதாரணமாகவே இருக்கும். எப்போதும் பளிச்சென்று உடைகளைத் உடுத்துவது லக்ஷ்மியும் சாருவும் தான். “ஏன் மீரா? உனக்கு உடைகளை யார் தேர்வு செய்வார்கள் ?” என்றாள் சாரு. ஒரு பெரிய மூச்சை உள்ளிழுத்து “நான் தான்” என்றாள். ” உன்னுடைய டேஸ்ட் கொஞ்சம் சரியில்லை. உனக்கு நான் தேர்வு செய்துதருகிறேன். உன் நிறத்திற்கு என்னைப் போல் எல்லா நிறமும் செட்டாகாது. அதனால் பார்த்துத் தேர்வு செய்ய வேண்டும். ” “தேவையில்லை சாரு. எனக்கு மற்றவர்கள் தேர்வு செய்வது பிடிக்காது” “இல்லை, மீரா, நான் சொல்வதைக் கேள். உன் ஆடைகள் உன்னை இந்த வீட்டிற்குச் சற்றும் பொருந்தாதவள் போல் காட்டுகிறது. இங்கே யாருக்கும் இப்படி இருந்தால் பிடிக்காது” மீரா சட்டென்று நின்றாள் “நான் ஏன் இந்த வீட்டிற்குப் பொருந்த முயற்சிசெய்ய வேண்டும் ? யாருக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அதைப் பற்றி எனக்கு ஒன்றும் இல்லை. என்னைப் பிடித்தவர்களுக்கு நான் எப்படி இருந்தாலும் பிடிக்கும். மற்றவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.இது போன்ற யோசனைகளை நீ எனக்குச் சொல்ல வேண்டாம் சாரு” சாரு மீண்டும் தொடங்கும்முன் முன் “உன்னைவிட வயதில் பெரியவாளிடம் இப்படியா பேசுவது ? என்ன பெண் நீ?” என்று லட்சுமி-யின் குரல் கேட்டது சற்றே உரக்க. வயதில் பெரியவளா ? மிஞ்சிப்போனால் சாரு மீராவை விட ஒரு வருடம் பெரியவளாக இருப்பாள். இப்போது மீரா அப்படி என்ன பேசிவிட்டாள் என்று யோசித்துக்கொண்டிருக்க, “என்ன? என்ன ஆயிற்று ?” ராதா கேட்க, “மீராவுக்குப் பெரியவர்களிடம் எப்படிப் பேசுவதென்றே தெரியவில்லை. இனியேனும் நீங்கள் கற்றுக் கொடுத்தால் நல்லது. நீ வா சாரு” என்று சாருவுடன் உள்ளே சென்றாள் லட்சுமி. மீரா கண்களில் நீர் திரை பளபளத்தது. “மீரா” என்று ராதா பேசத்தொடங்கும் முன் “ஐ எம் ரியலி சாரி மா” என்று அங்கிருந்து நகர்ந்தாள். சிறிது நேரத்தில் நாராயணன் லட்சுமி மற்றும் சாரு கிளம்பினார்கள், மின்விளக்குகளை புது வீட்டிற்குத் தேர்வு செய்ய வேண்டும் என்று. அவர்களுக்கு விடைகொடுத்துவிட்டு எல்லோரும் வீட்டினுள் செல்வதற்கு முன் “மீரா, கொஞ்சம் இங்கே வா” விஜயா அழைத்தார். மெதுவாகப் பாட்டியின் அருகில் செல்ல, “உட்கார், எதற்கு அப்போது மன்னிப்பு கேட்டாய் ?” என்றார். ஆண்கள் மூவரும் வியப்பாய் நோக்க, ராதா “நேரமாகிறது அத்தை நீங்கள் உள்ளே வாருங்கள், சாப்பிடலாம்” என்றாள். “உன் மகள் அழுதாளே! ஏன்? என்ன ? என்று கேட்கவில்லை” என்றார் ராதாவைப் பார்த்து. ” மீரா ஏன் அழுதாள்? என்று கோபாலன் கேட்க “நீ சொல்லு டா” என்று தொடர்ந்தார் விஜயா. மீண்டும் அழுகை வரத் தயாராக இருப்பது தெரிந்து “உஷ்ஷ், என்ன ஆச்சு ?” “ஒன்றும் இல்லை” “ஒன்றும் இல்லையா? ஒன்று சாருவுடன் சண்டை போட்டிருக்க வேண்டும், இல்லை லட்சுமி திட்டியதற்காக இருக்க வேண்டும். எதற்கு அழுதாய்” மீரா மௌனமாக அமர்ந்திருப்பதைக் கண்டு “விடு அழுது ஓய்ந்த அவளை நீயே மீண்டும் அழவைப்பாய் போலிருக்கிறது” என்றார் கிருஷ்ணசாமி. “நீ சொல்லாமல் விடமாட்டேன். நீ என்ன செய்தாய் ? எதற்காக உன் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டாய் ?” “என்னால் எல்லோரும் அம்மாவைக் குறை கூறுகிறார்கள்” என்றாள் மீரா. “உன் அம்மாவை யார் என்ன சொன்னார்கள்?” “நீ மீண்டும் ஆரம்பித்துவிட்டாயா? எழுந்து போ. எப்போதும் எதையாவது கற்பனை செய்து கொண்டு எல்லோரையும் காயப்படுத்துவது. நீ செய்வது சரி இல்லை மீரா” அதட்டினார் கோபாலன். எழுந்து உள்ளே ஓடச் சென்றவளைத் தடுத்து “நீ சும்மா இருடா. மீராவை நீ எதுவும் சொல்லாதே. உன்னை யாரும் இங்கே அழைக்க வில்லை. போ இங்கிருந்து” என்றார் விஜயா. ” நீ சொல்லு, இரண்டில் எதற்கு அழுதாய் ” “இரண்டுக்கும் இல்லை” ” வேறென்ன?” ” ஏன் எது நடந்தாலும் எல்லோரும் அம்மாவின் மேல் பாய்கிறார்கள் ” “உன் அம்மாவின் மீதா?” ” நான் எதாவது செய்தாலும் அம்மாவைக் குறை கூறுகின்றார்கள் ” “இப்போது உன் அம்மாவை யார் என்ன சொன்னார்கள்?” “எனக்கு இனியேனும் நல்லதைக் கற்றுத்தரவேண்டுமாம்! அப்படி என்றால் இதுவரை அம்மா எனக்கு ஒன்றும் சொல்லித் தர வில்லை என்று தானே அர்த்தம்” சட்டென்று ஜீவா “உன்னைப் போல் யாராலும் இப்படி எல்லாம் யோசிக்க முடியாது ! நீயே கற்பனை செய்துகொண்டு எதோ பேசாதே” ” அவள் சரியாகத்தான் புரிந்து கொண்டிருக்கிறாள்” என்றார் கிருஷ்ணசாமி. “இது எல்லாம் உன்னால் வந்தது ஜீவா. உன் சித்திக்குச் சரியான பதிலடி கொடுத்தாய். அதை உங்களில் யாரிடமாவது திருப்பித்தர வில்லை என்றால் லக்ஷ்மிக்கு தூக்கம் வராதே. இதுபோல் சங்கடங்களைத் தவிர்க்க வேண்டும் என்றால் பேசாமல் அமைதியாய் இருப்பது நன்று”. மீரா சற்றே அதிர்ச்சியாய் பார்த்தாள். சித்தியின் எண்ணம் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. யாரும் அவர்களை எதிர்த்துப் பேசமாட்டார்கள். இதற்கு என்ன அர்த்தம் கொள்வது. அவர் என்ன சொன்னாலும் எல்லோரும் கேட்டுப் பேசாமல் இருந்து விட வேண்டுமா ? இவளுக்காகவோ, இவள் அம்மாவுக்காகவோ இல்லை அண்ணனுக்காகவோ யாரும் இந்த வீட்டில் பேசமாட்டார்கள். இப்படியெல்லாம் யோசித்துக்கொண்டிருக்கும் பொது “இந்த வீடு நிறையப் பார்த்துவிட்டது. அவர்கள் போக்கு அப்படித்தான். எல்லா நேரமும் எல்லாரும் பொறுமையாக இருக்க முடியாது.” என்ற தாத்தா “மீரா, உன் சித்தி பேசியதைப் பெரிது படுத்தாதே. அவள் சொல்வது எல்லோரின் கருத்தும் இல்லை. பெரிதாக அலட்டிக்கொள்ளாதே” என்றுவிட்டு தன் அறைக்குச் சென்றார். எல்லோரும் அமைதியாய் அவர் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்தனர் “மீரா, போதுமா உனக்கு ! தாத்தா சொன்னதைக் கேட்டாய் அல்லவா ! இனியேனும் மனதில் கண்டதை எல்லாம் போட்டுக் குழப்பிக்கொள்ளாதே.” என்றார் கோபாலன். அப்பா இப்படிச் சொன்னது பெரிதாகத் தெரியவில்லை. இங்கு வந்ததிலிருந்து சமாதானம் சொல்வதுண்டு. பாட்டியும் அவ்வப்போது அக்கறை காட்டத் தவறியதில்லை. ஆனால் தாத்தா அவளுக்காக விளக்கம் கொடுப்பார் என்று மீரா எதிர்பார்க்கவில்லை. பெரும் ஆறுதலும் சந்தோஷமுமாக இருந்தாலும், அவள் அறியாத பல விஷயம் இன்னும் இருப்பதாகத் தோன்றியது. பகுதி 10 மீராவால் இப்போதெல்லாம் உற்சாகமாக இருக்க முடிந்தது. ஜீவன் வரும் நாட்களில் மட்டும் இருந்த உற்சாகம் இப்போது எந்நேரம் அவளிடம் காணப்பட்டது. கல்லூரி சென்று வந்த களைப்பு என்று அறைக்குள் முடங்குவது கிடையாது. கோவை வீட்டிலிருந்தது போல் வீட்டில் இருக்கும் நேரம் அன்னையின் பின் சுற்றுவாள். சில சமயம் ஏதேனும் வரைந்து அதற்குப் பொருத்தமான வண்ணம் தீட்டுவாள். ஜீவன் வரும்போது அவனுடன் கோவை சென்று சுற்றிவிட்டு வருவாள். எதைப் பற்றியும் அதிகம் யோசிக்காமல் அவள் வேலைகளில் கவனம் செலுத்தி வந்தாள். தலைக்குமேல் வேலை இருந்தாலும் ஆனந்த் மீராவை நினைக்காத நாள் இல்லை எனலாம். ஏதோ ஒரு வேளையில் அவள் முகம் மின்னல் போல் வந்து செல்லும். கிருஷ்ணசாமியின் வீட்டுப் பிள்ளைகள் இப்படி இருப்பார்களா என்று அவனுக்கு முதலில் ஆச்சரியம். இதுவரை அவன் பார்த்த மற்றவர்கள் எப்போதும் ஆடம்பர வாழ்வை விட்டு ஒரு நொடிகூட அகலாதவர்களாக இருந்தனர். தாத்தா அப்பா சம்பாதித்தது இருக்க நான் உழைக்கத்தேவையில்லை என்ற மனப்போக்கு விஜய், ஜெய் இருவரிடமும் அதிகம் இருக்கும். நாராயணனின் உழைப்பும் நேர்மையும் பிள்ளைகளிடம் இல்லை என்பதை ஆனந்த் அறிந்திருந்தான். மீரா அப்படி இல்லை. அந்தக் குடும்பத்தில் யாரைப் பற்றி நினைத்தாலும் அவன் எண்ணம் மீராவிடம் வந்து நிற்கும். ஆயுத பூஜை நாளில் ஆலையில் சிறப்புப் பூஜை மற்றும் தொழிலாளிகளின் குடும்பத்தாருக்கு மதிய உணவும் வழங்கும் ஏற்பாடு செய்திருந்தார் கிருஷ்ணசாமி. இது எல்லா ஆண்டுகளிலும் செய்யப்படும் வழக்கம். பூஜையின் முதல் நாளிருந்தே வேலைகள் தொடங்கி விடும். ஆனந்த் கே வி யை அடையும்போது, பெரிதாக ஒன்றும் தொடங்கவில்லை. நேரே ஆலைக்குள் சென்று பார்த்துவிட்டு வரும்போது கிருஷ்ணசாமியின் கார் வந்து நின்றது. அவரிடம் செல்ல முற்பட்டபோது, அவருடன் கோபாலனும் மீராவும் வந்திருப்பது தெரிந்தது. அவனை அறியாமல் அவன் வேகம் அதிகரித்தது.”வாருங்கள் சார் “. “ஏனப்பா என்ன அவசரம்? இப்படி ஓடி வருகிறாய்!” சற்றே நிதானித்துக்கொண்டு “அதெல்லாம் ஒன்றும் இல்லை சார்” என்று மீராவைப் பார்த்து “வாருங்கள் மீரா” என்றான். “ஏனப்பா? திருப்பூர் ஆலைக்குப் பூஜை ஏற்பாடுகளைச் செய்துவிட்டாயா ?” “பெரிதாக ஒன்றும் இல்லை சார். நாளை ஆலைக்கு விடுமுறை. தொழிலாளிகள் அனைவருக்கும் பொறி கடலை, மற்றும் வெல்லம் இன்று மாலையே வழங்க ஏற்பாடு செய்தாயிற்று”. “உன் அப்பா சுந்தரம் எதுவும் சொல்லவில்லையா? நம் வளத்திற்குக் காரணமான தொழில் நிறுவனம்.ஒரு பூஜை செய்வதற்கு என்ன ?” அப்பா சொன்னார் தான். ஆனால் ஆனந்த் தேவை இல்லையென்று விட்டான். அவன் பேசாமல் நின்றிருப்பதைப் பார்த்து, “உன் அப்பா சொல்லியிருப்பார். நீ கேட்கவேண்டுமே ?” என்று கோபாலனைப் பார்த்து “வா !நாம் செல்வோம்” என்றார். தன்னை பற்றிச் சரியாகக் கணித்திருக்கிறார் என்று எண்ணியபடி அவன் பார்த்துக்கொண்டிருக்கையில் மீரா கோபாலனைப் பின்தொடர்ந்து செல்லத்தொடங்கினாள். இயந்திரங்கள் இருக்கும் பகுதியை நெருங்கும்போது அதன் இரைச்சல் செவிகளைச் செவிடாக்குவது போல் இருந்தது. தன்னை அறியாமல் காதுகளைப் பொத்திக்கொண்டாள் மீரா. சட்டென்று ஒரு கை அவள் கையைப் பற்றியது. அது ஆனந்த். “ஒரு நிமிடம். ஆலைக்குள் செல்வதானால் உங்கள் துப்பட்டா பறக்காதது போல் பற்றிக்கொள்ள வேண்டும். இயந்திரங்கள் ஓட்டத்தில் அது உள்ளே இழுத்துக்கொள்ளும்.” என்றான். அவன் இதைச் சொல்லவந்தபோது இவள் காதுகளைப் பொத்திக்கொண்டிருந்தாள். ஆகவே தான் அவன் அவள் கரம்பற்றி நிறுத்தவேண்டியிருந்தது. மீராவுக்கும் இது புரிந்தது. இதைக் கவனித்த கோபாலன் “நான் இதைக் கவனிக்கவேயில்லை. ரொம்ப நன்றி” என்றார். மீராவும் தன் பங்கிற்கு “நன்றி” என்றபடி தன் துப்பட்டாவைச் சரிசெய்ய முயன்றாள். ” மீரா, இப்போது வேண்டாம். இன்னும் கொஞ்ச நேரத்தில் இயந்திரங்கள் நிறுத்தப்படும் அப்போது நீ வரலாம். நீ இங்கேயே இரு” என்றார் கோபாலன். சரியென்பதுபோல் தலையாட்டிவிட்டு நின்றாள். ” நான் இவர்களை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்கிறேன் சார். நீங்கள் பார்த்துவிட்டு வாருங்கள் “. என்றான் ஆனந்த். கோபாலன் சம்மதிக்க இருவரும் அலுவலகம் நோக்கி நடந்தனர். அங்கே யாரும் இல்லை. மீரா சுற்றுமுற்றும் பார்க்க, அதைக் கவனித்தவன் “லஞ்ச் பிரேக்” என்றான். மேலாளர் ராஜன் இருக்கையில் இருப்பது தெரிந்தது. மீராவைக் கண்டு அவள் அருகில் வர “வா மா. எப்படி இருக்கிறாய்” “நன்றாக இருக்கிறேன் அங்கிள். ஆண்ட்டி சுகமா” மருதனூர் வந்ததும் ராஜனைப் பலமுறை சந்தித்திருக்கிறாள் மீரா. அவர் குடும்பத்துடன் ஒருமுறை வீட்டிற்கு வந்திருந்தார். “எல்லாரும் சுகம். குடிக்க ஏதும் கொண்டுவரச் சொல்லவா ?” “அதெல்லாம் வேண்டாம் அங்கிள், இப்போது தான் வீட்டில் சாப்பிட்டேன். நீங்கள் பாருங்கள்” என்றாள். ஆனந்தை பார்த்து “இன்னும் போனவார டிஸ்பட்ச் வவுச்சர்ஸ் வரலை. மத்த டீடெயில்ஸ் எல்லாம் ரெடி” என்றார் “ஓகே சார். நான் பாக்கறேன்” என்று உள்ளே இருந்த அறைக்குச் செல்லும் முன் “இங்கே நீங்கள் வெயிட் பண்ணுங்கள்” என்று இன்னொரு கதவை மீராவுக்குக் காட்டினான். “ஆனந்த், அந்த அறையைச் சுத்தம் செய்யச்சொல்லி இருக்கிறேன். செய்துகொண்டிருக்கிறார்கள். சீக்கிரம் முடிந்துவிடும்” என்றார் ராஜன். ” ஓ. அப்படியானால் நீங்கள் இங்கேயே அமரலாம்” என்று தன் அறையின் கதவைத் திறந்துவிட்டான். ” பரவாயில்லை, நான் இங்கேயே இருக்கிறேன். உங்களுக்குத் தொந்தரவு வேண்டாம்” என்று மீரா முடிக்கும் முன் “தாத்தாவும் அப்பாவும் வரக் குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும். நீ உள்ளே உட்கார் அம்மா” என்றார் ராஜன். ” மேஜை மேல் இருப்பதை எடுத்து விளையாடாமல் இருந்தால் எனக்கு ஏதும் தொந்தரவு இருக்காது” என்றான் ஆனந்த். ராஜன் சிரித்தபின் தான் மீராவிற்கு அவன் பரிகாசம் புரிந்தது. லேசாகச் சிரித்த விட்டு உள்ளே சென்றாள். சில வார இதழ்களை அவளிடம் நீட்டி “வேறு ஏதும் தேவை இருந்தால் சொல்லுங்கள்”. அதைப் பெற்றுக்கொண்டு “என்னை வா, போ என்று அழையுங்கள். நீங்கள் என்று அழைப்பது கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது”. அவளைச் சில கணம் ஆராய்ந்துவிட்டு “சரி. ஜீவா விடுமுறைக்கு வரவில்லையா ?” என்றான். “அண்ணனும் அம்மாவும் கோவைவரை சென்றிருக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார்கள்.” அதன் பின் இருவரும் அதிகம் பேசவில்லை. புத்தகங்களில் மீரா மூழ்கிவிட, ஆனந்த், அவன் வேலையில் மூழ்கினான். சிறிது நேரத்தில் புத்தகத்தில் ஆர்வம் குறைந்து, அந்த அறையிலிருந்த பொருட்களை ஆராய்ந்தாள். சில புகைப்படங்கள் தவிர எதுவும் பெரிதாக இல்லை. கோப்புகள் நிறைந்த அலமாரியும், ஒரு பெரிய பெட்டகமும் மேஜை நாற்காலிகளும். ” என்ன மீரா? அதற்குள் போரடித்துவிட்டதா ?” ஆனந்தின் குரல். ஆனந்த் அவளைக் கவனித்ததை அவள் கவனிக்கவில்லை. சட்டென்று சுதாரித்து “கொஞ்சம்” என்றாள். கையிலிருந்த கோப்பை மூடிவைத்துவிட்டு எழுந்தான் “சரி வா ! உனக்கு அலுவலகத்தைச் சுத்திக்காட்டுகிறேன்”. “ஐயோ, எனக்காக உங்கள் வேலையைப் பாதியில் விட வேண்டாம். அப்பா சீக்கிரம் வந்துவிடுவார்.” கடிகாரத்தைப் பார்த்துவிட்டு “அவர் வர இன்னும் நேரம் இருக்கிறது. அதுவுமின்றி உனக்காக என் வேலையைப் பாதியில் நிறுத்தவில்லை. யாருக்காகவும் நான் அப்படிச் செய்யமாட்டேன். என் வேலை முடிந்தது. போகலாம்” அவனுடன் சென்றாள். உணவு முடித்து அனைவரும் திரும்பி இருந்தனர். பொதுவாக அறிமுகம் செய்துவைத்துவிட்டு, அலுவலகத்தில் உள்ள பிரிவுகள்பற்றிச் சொன்னான். அங்கே நடக்கும் பணிகளைப் பற்றியும் சொன்னான். அவளுக்கு அவன் சொன்ன எதிலும் ஆர்வம் இல்லை. அவன் அதை உணர்ந்திருக்க வேண்டும். அலுவலகத்தை விட்டு வெளியே வந்தனர். ” என்ன? எதிலும் ஆர்வம் இல்லை போல ?” திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள். இதைக் கண்டுகொள்ளப் பெரிய சாதுரியம் ஒன்றும் தேவையில்லை. ஒவ்வொன்றாக அவன் சொல்லிக்கொண்டிருந்தபோது அவன் சிறு இடைவெளி விட்டான், மீரா ஏதும் கேட்கக்கூடும் என்று. ஆனால் அவள் அப்படிச் செய்யவில்லை. நேராக அவன் எதிரில் நின்றாள். “ஐ எம் சாரி, எனக்கு இந்தத் தொழிற்சாலை விஷயங்களில் ஆர்வம் சிறிதும் இல்லை. நீங்கள் என்னிடம் கேட்ட போதே சொல்லியிருக்க வேண்டும். மன்னித்துக்கொள்ளுங்கள்”. ” உன்னிடம் ஆர்வத்தை எதிர்பார்த்தது என் தப்பு தான் ” அவன் குரலில் ஒரு கடுமை தெரிந்தது. மீரா புரியாமல் பார்க்க “உன் அப்பா வந்துவிட்டார்” என்று சொல்லிவிட்டு அவரிடம் சென்றான். சிறிது நேரத்திற்கெல்லாம் ஜீவனும் ராதாவும் வந்துவிட்டனர். பொதுவாகச் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுச் சென்றனர். மறுநாள் பூஜை என்பதால் அலுவலகத்தைச் சுத்தம் செய்யத் தொடங்கினர். தரையைச் சுத்தம் செய்துகொண்டிருந்த பெண்ணிற்குச் சற்று உயரத்திலிருந்த சாமி படங்களைச் சுத்தம் செய்ய முடியவில்லை. அதைக் கழட்டமுடியாதபடி பின்புறம் கட்டப்பட்டிருந்தது. இதைப் பார்த்துக்கொண்டிருந்த மீரா அங்கிருந்த ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டாள். அதன் மேல் எரியும் படங்களை முழுதாகத் துடைக்கமுடியவில்லை. அதற்குள் ஜீவன் வந்துவிட்டான்.” உன் உயரத்திற்கு ஏற்ற வேலையைப் பார்க்க வேண்டும். இறங்கு” என்றான். ” என் உயரத்திற்கு என்னவாம்? உன்னைவிடக் கொஞ்சம் தான் குறைவு” என்றபடி கீழே இறங்கினாள். ” அது நீ ஹீல்ஸ் அணியும்போது” என்றவன் அவள் கையிலிருந்த துணியை வாங்கி நாற்காலியின் மேல் ஏறினான். “நீங்கள் செய்ய வேண்டாம். இதோ மணி வந்துவிட்டார்” என்றான் அவசரமாய் அங்கு வந்த ஆனந்த். ” பரவாயில்லை, இதோ முடிந்து விடும்” என்று தொடர்தான் ஜீவன். ஜீவனை ஆச்சரியமாய் பார்த்துவிட்டு, மீராவிடம் திரும்பினான். அவள் பார்வை ஜீவன் துடைப்பதிலிருந்தது. சற்றே அவளின் பார்வை விலகி ஆனந்தின் மேல் பட, அவன் அவளைத் தான் பார்த்துக்கொண்டிருந்தான் லேசான புன்னகையுடன். சிறிது நேரத்திற்கு முன் இவன் தான் முகத்தில் கடுப்புடன் சென்றான். அது எதற்கென்று அவளுக்குப் புரியவில்லை. இப்போது இந்தச் சிரிப்பின் காரணமும் புரியவில்லை. கீழே இறங்கிய ஜீவன் “மறக்காமல் உன் ஸ்டூலை போட்டுக்கொள்ள. குனிந்து உன்னைப் பார்க்கக் கழுத்து வலிக்கிறது” என்றான். அவன் காட்டிய இடத்தில் அவள் கழற்றி விட்ட அவளின் காலணிகள் இருந்தன மேலே ஏறச் சௌகரியமாய் இருக்க அவள் கழட்டிவிட்டிருந்தாள். “நிறையப் பேசாதே. உன்னைவிட ஒரு நான்கு சென்டிமீட்டர் தான் குறைவு” “சென்டிமீட்டர் இல்லை இன்ச்” என்றுவிட்டு நகர்ந்தான். அவனை அடிக்கக் கை ஓங்கிவிட்டு அருகில் ஆனந்த் நிற்பதைப்பார்த்துவிட்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள். அதிகாலை பூஜைக்கு எல்லாம் எடுத்து வைத்துவிட்டுக் கிளம்பினார். செல்லும்முன் ஆனந்தை மறுநாள் காலையில் வரும்படி கேட்டார் கோபாலன். அதுமட்டுமின்றி ஆனந்தின் பெற்றோரிடமும் பேசினார். மறுநாள் கிருஷ்ணசாமியின் வாரிசுகள் அனைவரும் இருந்தனர். இந்த நாள் சென்னையில் இருக்கும் நாயகியின் குடும்பமும் வரத் தவறுவதில்லை. ஆனந்தும் குடும்பத்துடன் வந்திருந்தான். தொழிலாளிகள் பலர் குடும்பத்துடன் வந்திருந்தனர். பூஜை முடியும் வேளையில் ஆலைக்குள் செல்ல எல்லோரும் தயாராகையில், மீரா துப்பட்டாவைப் பின்புறம் முடியிட அருகில் நின்ற ஆனந்த்,” இன்று தேவை இருக்காது. இயந்திரங்கள் இப்போது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும்படி. அவள் லேசாகச் சிரித்துவிட்டு “ஆரத்தி தட்டை எடுக்கச் சௌகரியமாய் இருக்கும்.” சொல்லிவிட்டு கீழே இருந்த தட்டை எடுத்துக்கொண்டு நடந்தாள். லேசாகச் சிரித்துவிட்டு அவனும் நடந்தான். அன்று மருதனூர் வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. வீடு நிறைய ஆட்கள். சென்னையிலிருந்து வந்திருந்த நாயகி குடும்பம் வெகுநாட்களுக்குப் பிறகு இங்கே இரவு தங்க ஏற்பாடு செய்திருந்தனர். இரவு உணவுக்கு வீட்டில் இருக்கும் இரு வேலையாட்கள் செய்வது கடினம் என்று ராதாவும் மீராவும் சமையல் அறையில் உதவி செய்துகொண்டிருந்தனர். ” ஏதும் உதவி தேவையா ?” என்று நாயகியின் குரல் கேட்டது. ” எதுவும் வேண்டாம் இன்னும் இருபது நிமிடங்களில் எல்லாம் தயாராகி விடும். நீங்கள் சென்று அமருங்கள்” என்றாள் ராதா. ” மதிய உணவே நிறைய மீதி இருக்குமே. இப்போது எதற்குப் புதிதாகச் சமைக்கிறீர்கள். அதையே சூடுபடுத்திச் சாப்பிட்டிருக்கலாம் ” ‘என்ன? மதிய உணவை இப்போது சாப்பிடுவதா?. இந்த வீட்டில் அப்படி யார் சாப்பிடுவார்கள்? தோசை கொஞ்சம் ஆறிப்போனாலே சாப்பிடமாட்டார்கள்.”’ என்று எண்ணியபடி மீரா தட்டுகளை எடுத்துவைத்துக் கொண்டிருந்தாள். “இல்லை அண்ணி, வெகுநாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். பிள்ளைகள் யாரும் இரவு சாதம் விரும்புவதில்லை.” “அதுவும் சரிதான்” என்று மீரா பக்கம் திரும்பினாள். ” ஹாலில் இருக்கும் ஓவியங்கள் நீ வரைந்தா ? மிகவும் நன்றாக இருக்கிறது. ஓவியம் பயின்றாயா?” “அதெல்லாம் இல்லை அத்தை, சும்மா வரைந்தது தான்” மறுநாள் நாயகியின் குடும்பம் சென்னை கிளப்புவதால் உணவு முடிந்தபின்னும் வெகுநேரம் அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர். பெரியவர்கள் ஒருபுறமும். பிள்ளைகள் ஒருபுறமும் அளவளாவிக்கொண்டிருந்தனர். அனைவரும் கூடி இருப்பது எவ்வளவு ஆனந்தம் என்று மீரா உணர்ந்தாள். ஒரு பெரிய குடும்பத்தில் அவள் ஒரு அங்கம் எனும்போது அவள் மனம் ஆனந்தத்தில் மிதந்தது. கூட்டுக்குடும்பம் என்பது பெரும்பாலும் மறைந்துவிட்டாலும், தோழிகள் சிலர் விழாக்காலங்களில் உறவுகளுடன் கழித்த பொழுதுகளைப் பற்றிப் பேசுகையில் மீராவுக்கு ஏக்கமாக இருந்தது. அப்படி ஒன்று நன்கு விவரம் தெரிந்தபின்பு அவள் வாழ்வில் இல்லையே என்று வருந்தி இருக்கிறாள். மருதனூர் வரும்போதும் இப்படி அனைவரும் சேர்ந்திருக்கும் சந்தர்ப்பம் வரும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. சாரு, சந்துரு, விஜய், ஜெய் நால்வரும் அவளிடம் பேசக்கூடத் தயாராக இல்லை. பிறகு பேசத்தொடங்கிய சாரு பேசாமல் இருந்தால் போதும் என்று தோன்றவைத்தாள். இன்று அப்படி ஏதும் அவள் பேசவில்லை. சென்ற முறை மீரா அவளை எச்சரித்ததின் காரணமாக இருக்க வேண்டும். இதுவே நல்லது என்று எண்ணிக்கொண்டாள். ஆனந்தின் வீட்டில் இரவு உணவிற்குப் பின் அன்றைய தினம்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். “நீயும் அடுத்த முறை நம் ஆலையில் இப்படித்தான் பூஜை செய்ய வேண்டும். எவ்வளவு நன்றாக இருந்தது” என்றாள் பத்மா. ஆனந்த் பேசுமுன் “அப்படியே செய்துவிடலாம். இம்முறையே செய்திருக்க வேண்டும். இன்று சாமி சார் கூடச் சொன்னார்” என்றார் சுந்தரம். “சொல்லிவிட்டாரா?” என்று சலித்துக்கொண்டான் ஆனந்த். “பெரியவர்கள் சொன்னால் அதில் அர்த்தம் இருக்கும்” என்ற பத்மா தொடர்ந்தாள் “சாமி சாரின் பேரப்பிள்ளைகள் மொத்தம் எத்தனை பேர்கள். குடும்பமே பெரும் கூட்டமாக இருந்தது.” “ஆறு பேரன்கள், இரண்டு பேத்திகள், மொத்தம் எட்டு” என்றார் சுந்தரம். “நம் குடும்பம் தான் சிறியதாகி விட்டது. ஆனந்திற்கு பார்க்கும் பெண் சாமி சாரின் குடும்பம்போல் பெரிதாக இருக்க வேண்டும்.” “உனக்கு எதைப் பற்றிப் பேசினாலும், உன் பிள்ளையின் திருமணத்தை இணைத்து விடுவாய்” “என்ன செய்வது? எனக்கு இருக்கும் குறை அது ஒன்றுதானே !” “உன் குறையைச் சீக்கிரம் போக்கிவிடலாம்” “நீங்கள் சொல்கிறீர்கள்! இவன் வாயைத் திறக்கவேயில்லை” என்றாள் மகனைப் பார்த்து. எதுவும் கேளாதவன் போல் அங்கிருந்து நகர்ந்தான் ஆனந்த். மகன் அமைதியாகச் செல்வதைப் பார்த்துப் பத்மா சிரிக்க, சுந்தரம் கேள்வியாய் மனைவியைப் பார்த்தார். கணவன் அருகில் சென்று அமர்ந்து “விரைவில் நம் வீட்டில் திருமணம் நடக்கும்.” என்றாள். “ஏன்? பெண் பார்த்துவிட்டாயா ?” “நான் பார்க்கவில்லை. உங்கள் பிள்ளையே பார்த்துவிட்டான் என்று தோன்றுகிறது” “உன் பிள்ளைக்கு அதற்கெல்லாம் நேரம் இருக்கிறதா? நீயே கற்பனை செய்து கொள்ளாதே ! பின்பு நீ தான் ஏமாற்றமடைவாய்” ஒருவேளை கணவன் சொல்வதுதான் உண்மையா ? இன்று அவள் பார்த்தது ஒன்றும் இல்லையா ? அந்தப் பெண்ணுடன் மகன் பேசிக்கொண்டிருந்தானே. ஆண் பெண் பேசினாலே காதலிக்கிறார்கள் என்று எண்ணுபவள் இல்லை பத்மா. ஆனால் மகனின் நடவடிக்கைகளில் உள்ள மாற்றத்தை நன்கு அறிந்தவள் அவள். சில பெண் தோழிகள் அவனுக்கு உண்டு. அவர்களுடன் இருக்கும்போது இல்லாத ஒன்று இன்று மகனிடம் கண்டாள். அந்தப் பெண் மீராவைச் சந்தித்து ஓரிரு மாதங்களே இருக்கும். அவளுடன் சகஜமா பேசிக்கொண்டிருந்தான். இதை மட்டும் வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாதே. ஆனால் தாயின் கணிப்பு தவறாகுமா? பகுதி 11 உறவினர்கள் அனைவரும் சென்றுவிட வீடு மிகவும் கலையிழந்து இருந்தது. அந்த ஞாயிறன்று ஜீவனும் வரவில்லை. படிப்பு சம்பந்தமான வேலையையும் முன்தினமே முடித்தாயிற்று. தன்னை அறியாமல் மனம் சோர்வதை மீரா உணர்ந்தாள். ஓரிரு நாட்கள் அனைவருடன் இருந்துவிட்டு, இப்போதுள்ள தனிமை ஏனோ அவளால் சகிக்கமுடியவில்லை. தாத்தா பாட்டியை நினைத்தால் வருத்தமாக இருந்தது. மெதுவாகத் தோட்டத்தில் நடந்துகொண்டிருந்தாள். ” என்னடா டல்லா இருக்கே” அப்பாவின் குரல். புன்னகைத்தபடி “இல்லையே” என்றாள். “அப்படியா?” என்று மகளைக் கூர்ந்து பார்த்தார் கோபாலன். அதற்குமேல் அவளால் நடிக்க முடியவில்லை. “ரொம்ப போர். அண்ணாவும் வரவில்லை. வீடே என்னவோ போல் இருக்கிறது. எனக்கே இப்படி என்றால் தாத்தா பாட்டிக்குத் தனியா இருப்பது எவ்வளவு கடினம் ?” “அதற்காகத்தான் நாம் இங்கே வந்தது” “இந்த வீட்டில் அனைவரும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். சித்தப்பா ஏன் தனியே செல்ல வேண்டும். இங்கேயே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” “சில சமயம் எல்லோருடனும் கூடியிருக்கத் தோன்றும். ஆனால் அது நடந்தால் வீட்டில் தினமும் சண்டை சச்சரவு என்றாகிவிடும்” தயக்கத்துடன் மகள் கேட்டாள் “நான் ஒன்று கேட்கலாமா ? சித்தப்பா ஏன் தனியாகச் சென்றார். பாட்டி தாத்தா ஏன் அவர்களுடன் செல்லவில்லை. உங்களைவிடத் தாத்தாவிற்கு சித்தப்பாவை பிடிக்கும்”. லேசாகச் சிரித்துவிட்டு “பெற்றோருக்கு எல்லா பிள்ளைகளையும் பிடிக்கும். பிள்ளைகள் செய்யும் தவறு, பெற்றோருக்கு அவர்கள்மேல் கோவத்தை உருவாக்கும். அதனால் அவர்களைப் பிடிக்காமல் போய்விடுவதில்லை” “ஹ்ம்ம், நல்ல கதை. அப்படியானால் அந்தக் கோவம் உங்கள்மேல் இருபது வருடத்திற்கு மேல் இருந்ததே!” “இதில் அவர் கோவம் மட்டும் இல்லை. என் வீம்பும் இருக்கிறது. நான் எதிர்பார்த்த வேளையில் தாத்தாவின் கோபம் குறையவில்லை. கோபம் இருக்கும்வரை விலகி இருக்கலாம் என்று நானும் இருந்துவிட்டேன். ஒருவேளை நான் விலகாமலிருந்திருந்தால், நாம் முன்பே சேர்த்திருக்கலாமோ என்னமோ ?”. “உங்கள் அப்பா அம்மாவை விட்டுத் தரமாட்டீர்கள்!” ” நீ யாரிடமாவது எங்களை விட்டுத் தருவாயா?” “அது எப்படி? மை பதர் ஈஸ் தி பெஸ்ட்” என்றாள் நிமிர்வுடன். “எனக்கும் அப்படித்தான்” என்று சிரித்தார் கோபாலன். கோபாலன் அன்று தனியே ஆலைக்குச் செல்கிறார் என்றதும் மீராவும் உடன்சென்றாள். இயந்திரங்களின் ஓட்டத்தை இதுவரை பார்த்ததில்லை என்ற ஆர்வத்தில் சென்றாள். இயந்திரங்கள் இரைச்சலில் அவளால் ஐந்து நிமிடம் கூட நிற்க முடியவில்லை. தலை வலிக்கத் தொடங்கியது. தந்தையிடம் தான் வெளியே செல்வதாக ஜாடை செய்துவிட்டு வந்தவழியே செல்ல நினைத்தாள். அவள் நின்ற இடத்தின் அருகில் இன்னொரு கதவு இருந்தது. வெளியே சென்றால் போதும் என்ற எண்ணத்தில் படிகளைச் சரியாகக் கவனிக்க வில்லை. முன்பு வந்த வழியில் ஐந்து ஆறு படிக்கட்டுகள் இருந்தன. இங்கே இரண்டு மட்டும் இருந்தன. ஒரு காலைத் தாழ்த்திய பிறகே படிகளின் உயரத்தை உணர்ந்தாள். நிலை தடுமாறி கீழே விழுந்தாள். சுதாரித்து ஏழும் முன் “ஆர் யூ ஓகே?” என்று ஆனந்தின் கரம் அவள் எழுந்து நிற்க உதவியது. அன்றைய மேற்பார்வையை முடித்துவிட்டு அலுவலகத்தை நோக்கி நடந்தவன், மீரா வெளி வருவதைக் கண்டான். அவளை நெருங்க இரண்டடி வைக்கும் முன் அவள் விழுவதைப் பார்த்து ஓடிவந்தான். “ஐ எம் பைன்” என்றபடி தன் முழங்கையைத் தொட்டுப்பார்த்தாள். அங்கே ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அதை ஆனந்தும் கவனித்துவிட்டான். “பார்த்து வரக் கூடாது?” என்றபடி அவன் கைக்குட்டையில் ரத்தம் வரும் இடத்தை இருக்கக் கட்டினான். ” ஆபீஸ்-ல் பிரஸ்ட் எயிட் கிட் இருக்கிறது. வா” என்று அழைத்துச் சென்றான். அவள் மெதுவாக நடப்பதைக் கவனித்து அவன் தன் வேகத்தைக் குறைத்துக்கொண்டான். அன்று ஞாயிறு என்பதால் யாரும் அலுவலகத்தில் இல்லை. ஒரு நாற்காலியில் அமரவைத்து கைக்கு முதலுதவி செய்தான். அவள் முகம் வலியில் சுருங்குவதைக் கண்டு ரொம்ப வலிக்கிறதா? சின்னக் காயம்தான். கொஞ்சம் பொறுத்துக்கொள். முடிந்தது” என்ற படி சிறிய கட்டை போட்டுவிட்டபடி அவளை மீண்டும் பார்த்தான். அவள் இன்னொரு கை அவளின் முழங்காலை இருக்கப் பற்றியது. “காலிலும் அடிபட்டுவிட்டதா?” என்று பார்த்தான். பாதங்களின் பக்கவாட்டில் ஒரு பெரிய சிராய்ப்பு. “சொல்வதற்கு என்ன?” என்று அவள் காலணியைக் கழற்றினான். மீரா சட்டென்று “வேண்டாம்” என்று காலை இழுக்க முயற்சித்தாள். “உஷ், அசையாமல் இரு” “வேண்டாம், நானே பார்த்துக்கொள்கிறேன்” “பேசாமல் உட்கார்” என்றுவிட்டு அவனே மருந்திட்டான். ” உன் அப்பாவை வரச் சொல்லவா?” “வேண்டாம். வேலையைப் பாதியில் விட்டுவிட்டு வருவார். நான் காத்திருக்கிறேன். எனக்கு ஒன்றும் இல்லை”. ” உன் முகம் வேறு சொல்கிறது ” சட்டென்று அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். அவள் முகத்திலிருந்து இவன் எல்லாம் கண்டுகொள்கிறான். உடனே சமாளித்து “ஒன்றும் இல்லை. கொஞ்சம் தலை வலிக்கிறது” அங்கே பிளாஸ்கில் இருந்த காபியை ஊற்றிக்கொடுத்தான். “இது போதுமா ? மாத்திரை ஏதும் வேண்டுமா?” “இது போதும்” என்று காபியைப் பெற்றுக்கொண்டாள். அவன் சென்று ஒரு கோப்பை புரட்டிக்கொண்டிருந்தான். மீராவுக்கு அவனின் அன்றைய கோபத்திற்கான காரணத்தைக் கேட்க வேண்டும் போல் இருந்தது. கேட்டுவிடலாம் என்ற அவனைப் பார்த்தாள். அவன் வேலையில் மூழ்கியிருந்தான். இப்போது கேட்க வேண்டாம் என்று முடிவெடுத்தாள். ஆனால் அவன் கேட்டான் “என்ன?” இல்லை என்று மறுப்பாய் தலை அசைத்தாள். அவன் கூர்ந்து நோக்க “ஒன்று கேட்க வேண்டும்” என்றாள். கோப்பை மூடிவைத்து ‘நீ கேட்கலாம்’ என்பது போல் கைகளைக் கட்டிக்கொண்டு கவனிக்களானான். சற்று யோசித்துவிட்டு “அன்று ஏன் என்மேல் கோபம் கொண்டீர்கள் ?” “என்று?” அவனுக்கு நினைவிருந்தது. ஆனால் அவன் ஒன்றும் அவளிடம் கத்தவில்லை. லேசாக முகம் மாறியது. உடனே அங்கிருந்து நகர்ந்தான். மீரா கவனித்திருக்கமாட்டாள் என்று எண்ணினான். ” பூஜைக்கு முன்தினம்” என்றாள். அவன் இருக்கையிலிருந்து எழுந்து அவள் அருகில் வந்தான். ” நீங்கள் பேசிய விஷயத்தில் எனக்கு ஆர்வம் இல்லை. அதை வெளிப்படையாகக் கூறி மன்னிப்பும் கேட்டுவிட்டேன். ‘உன்னிடம் எதிர்பார்த்தது தவறு’ என்று ஏன் சொன்னீர்கள்?” மீரா கேட்டது அவனுக்கு ஆனந்தமாய் இருந்தது. அவனின் சிறு கோபம் அவளைப் பாதித்ததா ? புன்னகையுடன் கூறினான் “அது கோபம் இல்லை. ஏமாற்றம்” என்றான். புரியாமல் மீரா பார்க்க “இது உன்னுடைய நிறுவனம். அதை நீ அறிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் நீ ஆர்வம் இல்லை என்று விட்டாய்”. “இது என்னுடையது இல்லை” ” நாளை உன்னுடையதாகலாம். ஒரே நாளில் எல்லாம் தெரிந்துகொள்ள முடியாது” “இது எப்போதும் என்னுடையதாகாது. ஒரு வேலை பின்னாளில் அண்ணன்கள் பார்த்துக்கொள்வார்கள்” ” விஜய் மற்றும் ஜெய் பார்த்துக்கொள்வார்கள் என்று எண்ணினால் அதை மறந்துவிடு. அவர்கள் பார்ப்பதானால் நான் இங்கே இருந்திருக்க மாட்டேன்.ஒரு வேலை ஜீவா பார்த்துக்கொள்வானானால், அவனுக்கு நீ உதவியாய் இருக்கலாம் அல்லவா ?” ” நான் அந்த அளவு யோசிக்கவில்லை.” ” இனிமேல் யோசி. இது உன் தாத்தா தொடங்கியது. அதன் வளர்ச்சியில் அக்கறை உங்கள் எல்லோருக்கும் இருக்க வேண்டும். என்னைப் போல் மூன்றாவது நபர் இதை நடத்துவது ….”என்று தோள்களை உயர்த்தி இருக்கைகளையும் விரித்துக் காட்டினான். இந்த நிறுவனத்தைப் பற்றி அவள் யோசிப்பதா ? வீட்டில் அவளைப் பொருத்திக்கொள்ளவே அவளுக்கு இத்தனை நாள் தேவைப்பட்டது. இவனுக்கு இருக்கும் அக்கறை ஏன் மற்றவர்களுக்கு இல்லை ? அண்ணன் இந்தப் பொறுப்பை ஏற்பானா ? அவனுக்கு இதில் ஆர்வம் இருக்குமா ? ஆனந்த் இல்லை என்றால் யார் இதைப் பார்த்துக்கொள்வார்கள்? தந்தையும் தாத்தாவும் மேற்பார்வை தவிர வேறு செய்வதில்லை. உள்ளீடு, வெளியீடு, கணக்கு வழக்கு, நினைக்கையில் பெரும் மலையாய் தெரிந்தது. அவள் மிரண்டுபோனது கண்டு “ஹலோ” என்று அவள் முகத்தின் முன் சொடுக்கு போட்டான். அதிர்ச்சியிலிருந்து வெளி வந்தவள் மிரண்டு பார்த்தாள். “இவ்வளவு யோசிக்கத் தேவையில்லை.” அப்போது கோபாலன் உள்ளே வந்தார். “என்னம்மா கிளப்புவோமா ?” என்றபடி ஆனந்தை பார்த்தார்.”நீங்கள் சீக்கிரம் வந்துவிட்டிர்கள் போல “. சட்டென்று எழுந்த மீரா லேசாகத் தடுமாறினாள். கோபாலன் “என்னம்மா, என்ன ஆச்சு” என்று அருகில் வர “ஒன்றும் இல்லையப்பா. லேசா கால் வலித்தது” அவள் முடிக்கும்முன் அவள் அருகில் வந்து கையிலிருந்த கட்டை பார்த்தார். ” படி இறங்கும்போது கால் இடறிவிட்டது. சின்னக் காயம் தான் அப்பா ” “வேறெங்கும் அடிபட்டு விட்டதா?” ” காலில் ஒரு சிராய்ப்பு” என்றான் ஆனந்த். ” என்னை அழைத்திருக்கலாமே?” “இல்லை அப்பா, அதற்குள் ஆனந்த் வந்து விட்டார். மருந்திட்டார். உங்களை அழைப்பதாகச் சொன்னார். நான் தான் வேண்டாம் என்று விட்டேன்.” ” வலிக்கிறதா?” என்று கோபாலன் கேட்க, எதோ மிகவும் சிறு பிள்ளையைப் போல் உணர்ந்தாள். “ஒன்றும் இல்லை அப்பா, நாம் கிளம்புவோம்” “ரொம்ப நன்றி! ஆனந்த்” “பரவாயில்லை சார்.” மீண்டும் நன்றி உரைத்துவிட்டு தந்தையுடன் கிளம்பினாள். பகுதி 12 காரில் வீடு நோக்கிச் செல்கையில் ஆனந்த் சொன்னதை பற்றித் தந்தையிடம் பேசினாள். எல்லாவற்றையும் சொல்லவில்லை. கே வி -ன் எதிர்காலத்தைப் பற்றிக் கேட்டாள். கோபாலனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தன் மகள் எப்போது இதைப் பற்றி எல்லாம் எண்ணத் தொடங்கினாள் என்று. கோபாலன் ஏன் பொறுப்பை ஏற்க வில்லை? என்றும் கேட்டாள். காரை ஓரமாக நிறுத்திவிட்டு மகளைப் பார்த்தார். மகளுக்கு விளக்கம் கொடுத்தார். இதே போல் ஒரு நிறுவனத்தில் பணியாற்றினாலும், அவர் அலுவலக கணக்கு வழக்குகளை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தார். சரக்குகள் கொள்முதல், தயாரித்த பொருட்களின் சந்தை நிலவரம், தொழிலாளிகளின் பிரச்சனைகள், இவைகள் சம்பந்தமாகத் தொடர்புகள் என்று பல இருக்கிறது. ஆரம்பத்தில் இயந்திரங்களைப் பற்றி நன்கு அறிந்திருந்தார் கோபாலன். அலுவலக பணியும் சிரமம் இல்லைதான். ஆனால் வெளி தொடர்புகள் ? அது தான் மிக முக்கியம். அறிந்துகொள்வதில் சிக்கல் இல்லை என்றாலும், அடிக்கடி நடக்கும் நிர்வாக மாற்றம் வாடிக்கையாளர்களிடையே நம்பிக்கையைக் குறைத்துவிடும். அது ஒரு நிறுவனத்தில் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தும். எல்லாவற்றிற்கும் மேல் குடும்ப சிக்கல் இருந்தது. கமலாவின் கணவன் குடும்பம் அதாவது லக்ஷ்மியின் பிறந்த வீட்டின் ஏற்றுமதி தொழில் பன்மடங்கு லாபத்தைக் கொடுத்தது. அதில் லட்சுமிக்கும் பங்கு இருந்தது. மேலும் அவர்கள் சமீபத்தில் தொடங்கிய கன்ஸ்டரக்க்ஷன் தொழிலுக்கு ஒரு பெரிய முதலீடு தேவைப்பட்டது. அப்போது கே வி நிறுவனத்தை விற்கத் திட்டமிட்டனர். கிருஷ்ணசாமி ஒப்பவில்லை. எப்படியும் பின்னாளில் அது நாராயணன் மற்றும் கமலாவிற்குச் சேர வேண்டியது என்பது அவர்கள் வாதம். நாயகி எப்போதும் கே வி-ல் தலையிட்டதில்லை. கோபாலனும் உரிமைகோரப்போவதில்லை என்று அவர்கள் நினைத்தனர். ஆலை இயக்கம் குறைந்துவிட்டால் மனிதர் தானாகச் சொத்தை விற்றுவிடுவார் என்று கணக்குப் போட்டனர். ஆனால் இந்தப் பேச்சு எழுந்தவுடன் கிருஷ்ணசாமி சுதாரித்தார். பின்னாளில் பிள்ளைகளிடையே கருத்துவேறுபாடு வரக் கூடாது என்று மற்ற சொத்துக்களைப் பிரித்துக்கொடுத்தார். கே வி-ன் பங்குகளை மட்டும் தன்னிடமே வைத்துக்கொண்டு ஆலையை லீசுக்கு விட்டார். அதன் பின் குடும்பத்தில் சில விரிசல்கள் வர நாராயணன் தனியே செல்லத் திட்டமிட்டார். தன் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்கவில்லை என்ற ஆதங்கத்தில் எடுத்த முடிவு. லட்சுமி தன் பங்கிற்குக் கணவனை அதிலிருந்து விலகாமல் பார்த்துக்கொண்டாள். கோபாலன் வரவை யாரும் எதிர்பார்க்க வில்லை. இப்போது கோபாலன் எல்லா பொறுப்புகளையும் ஏற்றால் மேலும் குடும்பத்தில் சிக்கல் வரும் என்று விலகியே நிற்க முடிவெடுத்தார். ” இந்தக் குடும்பத்தில் ஆளுக்கொரு திசையில் செல்லும் நாள் வரும் என்று நான் நினைத்ததே இல்லை. இதைத் தொடங்கியவன் நான். இப்போது என்னால் முடிந்தது இங்கே தாத்தா பாட்டியுடன் இருப்பது தான். அதைத்தாண்டி எதையும் செய்யும் உத்தேசம் எனக்கு இல்லை. “. மீண்டும் வண்டியைக் கிளப்பினார். வீடு வந்ததும் அவள் காயத்தைப் பார்த்து ராதா பதறினாள். சிறிய காயம் என்றதும் அமைதியானாள். மறுநாள் ஜீவனிடம் ஆலையைப் பற்றித் தொலைப்பேசியில் பேசினாள். அவனுக்கு ஓரளவு தெரிந்திருந்தது. ” அண்ணா, நீ பின்னாளில் பொறுப்பை ஏற்பாயா ?” “என்ன? உனக்கு என்ன ஆயிற்று ? இப்போது எதற்கு இதைப் பற்றிப் பேசுகிறாய் ? நாளை நடப்பதைப் பற்றி யோசித்து இன்றைய படிப்பைக் கோட்டை விட்டுவிடாதே. படிக்கிற வேலையைப் பார். செமினாருக்கு தயார் செய்ய வேண்டும். பை” அவன் சொன்னது சரிதான். தேவையின்றி அதிகம் யோசிக்கிறோம் என்று நினைத்து வேறு வேலையைச் செய்ய முற்பட்டாள். இருப்பினும் நிர்வாகம் தொடங்கியது முதல் இன்று வரை எப்படி வளந்திருக்கிறது என்று ஆராய்ந்தாள். விஜயாவிடம் அவ்வப்போது கேட்பாள். தனக்கு தெரிந்தவற்றைச் சொல்வார். சில முறை தந்தையிடம். தாத்தாவிடம் செல்ல ஒரு தயக்கம் இருந்தது. அதுவும் ஜீவா அடுத்தமுறை இங்கு வந்தபோது அந்தத் தயக்கமும் மறைந்தது. ஜீவனிடம் அவள் அறிந்தவற்றை ஒப்பித்தாள். இன்னும் தன் பாட்டனாரின் திறமையை வெகுவாகப் பாராட்டித்தள்ளினாள். அனைவரும் உணவருந்துகையில், “தாத்தா உங்களுக்குப் பி ஏ தேவையென்றால் சொல்லுங்கள். ஆள் தயாராக இருக்கிறார்கள்” என்றார் ஜீவன். “எனக்குப் பி ஏ வா?” என்று வியந்தார். “ஆம், நம் மீரா தான்” அனைவரும் வியப்பாய் பார்க்க “ஆம் தாத்தா, பல விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறாள் !” “அப்படி என்ன தெரிந்துவைத்திருக்கிறாள்? சொல் கேட்போம்”. தான் செய்யும் ப்ரொஜெக்ட்டிற்காக என்று சமாளித்து எல்லாவற்றையும் ஒப்பித்தாள். நிறுவனம் தொடங்கிய கதை, அதன் முதலீடு, வளர்ச்சி, சட்டச் சிக்கல்கள், தொழிலாளர் சலுகைகள் என்று பல விவரம் சொன்னாள். அவள் சொல்லிமுடித்ததும் “பரவாயில்லையே. எல்லாம் நல்ல நினைவில் வைத்திருக்கிறாள். ஒரு நாள் என்னிடம் கேட்டாள். எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன். இந்தச் சட்ட விஷயம் எல்லாம் யார் சொன்னார்கள்” என்று விஜயா கேட்க,“அது என் உபயம்” என்றார் கோபாலன். ” நல்லது. ” என்று லேசாக முகம் வாடினார் கிருஷ்ணசாமி. ” அப்படியென்றால், நான் எல்லாம் தெரிந்துகொள்ளலாமா தாத்தா ? ஒன்றும் பிரச்சனையில்லையே” என்றாள் மீரா ஆர்வமாக. “பிரச்சனையா ? நம் நிறுவனம்பற்றி நீ தெரிந்துகொள்வதால் என்ன பிரச்சனை ? உன் ப்ரொஜெக்ட்க்கு என்ன விவரம் வேண்டுமோ கேள்” என்றார். படிப்பு விஷயத்திற்காகக் கேட்கவில்லை அவள்.” என் ப்ரொஜெக்ட்டுக்கு இப்போது உள்ள விஷயங்கள் போதும். ஆனால் நம் ஆலைபற்றி எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்” என்றாள். எல்லோருக்கும் வியப்புதான், என்றாலும் ஆர்வக்கோளாறு என்றே நினைத்தனர். இறுதி செமெஸ்டரில் பெரும்பாலும் ப்ராஜக்ட் வேலை என்று விடுமுறை இருந்தது. அந்த ப்ராஜக்டும் கே வி யைச்சார்ந்தே செய்தாள். அவள் அறிக்கையைப் பார்த்த கிருஷ்ணசாமியும் கோபாலனும் பாராட்டினார்கள். இவை அனைத்தும் தியரி தான். இன்னும் நடைமுறையைப் பற்றி அவள் தெரிந்து கொள்ள நிறைய இருந்தது. தந்தையிடம் கேட்டபோது அதற்கு ராஜனிடம் பேசுவதாகச் சொன்னார்.ரிபோர்டின் காபியை அவரிடம் கொடுத்தார் கோபாலன்.ஆனால் ராஜனுக்கு வேலை பழு அதிகமாக இருந்ததால் ஒருவாரத்திற்கு மேல் எந்தப் பதிலும் இல்லை. ஆனந்திடம் கேட்க எண்ணினாள். ஒரு நிர்வாகத்தில் இருக்கும் ராஜன் சார் மும்மரமாக இருக்கும்போது, ஆனந்தால் எப்படி முடியும் என்று அந்த எண்ணத்தைக் கைவிட்டாள். அந்த வார இறுதியில் ஆனந்தை சந்திக்க நேர்ந்தது. பழைய எந்திரங்களைப் பழுது பார்ப்பது சம்மந்தமாகக் கிருஷ்ணசாமியிடம் பேச வீட்டிற்கு வந்திருந்தான். அப்போது கிருஷ்ணசாமி வீட்டில் இல்லை. பெண்கள் மூவரும் இருந்தனர். ஏற்கனவே தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வரும் நேரம்பற்றிச் சொல்லிருந்தான்.கோபாலன் கிருஷ்ணசாமி வரும் வழியில் வண்டி பழுதடைத்துவிட்டதாகவும். வேறு ஏற்பாடு செய்யத் தாமதமாகிவிட்டதாகவும். இன்னும் இருபது நிமிடங்களில் வந்து விடுவதாகவும் ராதா கூறினாள். அங்கேயே காத்திருப்பதாக முடிவு செய்தான். ” அப்பா வருவதற்குள் இதைப் படித்துப் பார்க்கிறீர்களா?” என்று மீரா ஒரு கோப்பை நீட்டினாள். என்ன என்பதுபோல் ஆனந்த் பார்க்க “கல்லூரிக்காகச் செய்த அறிக்கை. ஆலையைப் பற்றியது” என்றாள் மீரா. “இவரை ஏன் தொல்லை செய்கிறாய் ?” என்று ராதா முடிக்கும்முன், அறிக்கையை மீராவிடமிருந்து பெற்றுக்கொண்டான். ” தொல்லை எதுவும் இல்லை. நான் பார்க்கிறேன்“. பண்ணையிலிருந்து ஆட்கள் சிலர் வந்திருந்தனர். அவர்களுடன் பேச ராதா அங்கிருந்து சென்றாள். “எனக்கு இன்னும் நேரில் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும். ஆலைக்குள் நடப்பது பற்றி அப்பா காண்பித்தார். இன்னும் அலுவலக விஷயங்கள்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். ராஜன் சாரிடம் கேட்டிருக்கிறேன். அவருக்கு இப்போது வேலை அதிகமாக இருக்கிறதாம்” வருத்தமாகச் சொன்னாள் மீரா. பார்வையை மட்டும் உயர்த்தி அவளைப் பார்த்தான். அறிக்கையை மூடிவைத்துவிட்டு “இதையெல்லாம் கல்லூரி மதிப்பெண்ணுக்காகவா? இல்லை கே வி மேலுள்ள அக்கறையா ?” “இரண்டும் தான். உங்களிடம் கேட்கலாம் என்று நினைத்தேன். நீங்களும் ரொம்ப பிஸி.” ” எப்போது அறிக்கையைக் கொடுக்க வேண்டும் “. “ஏற்கனவே கொடுத்தாயிற்று. ஆனால் இன்னும் தெரிந்துகொள்ள நிறைய இருக்கிறதே” ” திடீர் என்று என்ன இவ்வளவு ஆர்வம் ” “நீங்கள் தானே அன்று சொன்னீர்கள். எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று” புரியாமல் கேட்டாள். ” என் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்துச் செய்கிறாய்யென்றால், நான் கட்டாயம் உனக்கு உதவ வேண்டும். அடுத்த சனிக்கிழமை வரும்போது பார்க்கலாம் ” மீராவின் சந்தோசம் தாளவில்லை. ஆனந்த் சொன்னது போல் வரம் ஒருமுறையேனும் அவளுக்காக நேரம் ஒதுக்கி நிர்வாகத்தைப் பற்றிப் பல விஷயங்கள் கற்றுத்தந்தான். கல்லூரி அறிக்கையாக மேலோட்டமாய் கோபாலன் சொன்ன பல விஷயங்களை ஆனந்த் இன்னும் தெளிவாக விலக்கினான். அதுமட்டுமேயின்றி அவன் திருப்பூர் ஆலையில் உள்ள வேறுபாடுகளையும் அவ்வப்போது எடுத்துரைத்தான். சிலநேரம் அவர்களுடைய பழங்கதைகளையும் பேசினார்கள். அப்படிப் பேசுகையில் தனக்கு இந்தத் தொழிலின் மேல் இருந்த ஆர்வத்தைப் பற்றிப் பேசினான். நிர்வாகத்தை ஏற்கும் முன் நடந்த சிக்கல்களைப் பற்றியும், அவன் நெருங்கிய நண்பர்களே அவனுக்குத் தொல்லை தந்ததையும் பற்றிச்சொன்னான். அதனால் தொழில் விஷயத்தில் நிரந்தரமாக யாரும் நண்பர்களாக இருப்பதில்லை என்றும் இது சில சமயம் உறவுகளுக்கும் பொருந்தும் என்றான். சற்றே வியப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். “அதனால் பல விஷயங்களை ரகசியம் காப்பது முக்கியம். லாப நஷ்டம், வாடிக்கையாளர்கள், நமக்குக் கிடைக்கும் சலுகைகள் இப்படி பலதும் யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது” என்றான். சிந்தித்தபடி “அப்படியானால் நீங்கள் இதுபோல் பலவிஷயங்களை என்னிடம் பகிர்ந்தீர்களே ! ஏன்?” “உன் குடும்பத்துக்குச் சொந்தமான நிறுவனத்தைப் பற்றி உன்னிடம் சொல்வதில் என்ன இருக்கிறது ?” “அதெப்படி ? இப்போது இது உங்களின் பொறுப்பில் இருக்கிறது. பின்னாளில் ஒருவேளை நாங்கள் பொறுப்புகளை ஏற்கும்போது, நான் அவர்களுக்கு உதவலாம். அப்போது உங்கள் நிறுவனத்திற்குப் போட்டியாக இருக்கும் அல்லவா” என்று ஒரு சிறு இடைவெளி விட்டு “அதுமட்டும் இல்லை, நீங்கள் உங்கள் நிர்வாகத்தைப் பற்றியும் நிறையச் சொல்லியிருக்கிறீர்கள். ஒருவேளை நாளை நானே உங்களுக்குப் போட்டியாக வரலாம்.” என்றாள் கடைக் கண்ணில் ஆனந்தை பார்த்தபடி. அவன் சிறு புன்னகையுடன் “அப்படி ஒன்று நடந்தால் நான் மிகவும் சந்தோசம் கொள்வேன். தன்னிடம் பயின்ற மாணவன் சிறந்து விளங்கினால் நிச்சயம் ஆசிரியருக்குப் பெருமைதான்.” என்றான். “இனி நான் எதுவும் பேசுவதற்கில்லை!” ஜீவன் வரும் சமயங்களில் தான் கற்றதை பற்றிச் சொல்வாள். ஜீவன் பெரும்பாலும் முன்னமே அறிந்திருந்தான். அவன் இளங்கலை படிக்கும்போதே தந்தையின் வேலையில் உதவுவான். அது மட்டுமின்றி நிர்வாகம்பற்றிப் பயிலும் அவனுக்கு அது ஒன்றும் கடினமாக இல்லை. சிலசமயம் அண்ணன் தங்கையும் ஒரு கண்காட்சி பார்க்கச் செல்வது பற்றி விவாதித்துக்கொண்டிருந்தனர். மறுநாள் நடக்கும் அந்தக் கண்காட்சிக்கு இருவரும் செல்லலாம் என்று திட்டமிட்டு தந்தையிடம் கேட்டனர். கோபாலனுக்கு ஏதோ நெருடியது. இருவரும் கண்காட்சிக்குச் செல்வது புதிதல்ல. புத்தகம், கைவினை பொருட்கள், வீட்டிற்குத் தேவையானவை என்று குடும்பமாய் கோவையில் இருந்தவரை சென்றதுண்டு. சில சமயம் வாகனங்களைப் பற்றியதாக இருந்தால் ஜீவன் கோபாலனுடம் செல்வான். இப்போது நடப்பது நவீன எந்திரங்களின் கண்காட்சி. ” அங்கே எதற்கு நீங்கள் செல்ல வேண்டும்” என்றார். அருகிலிருந்த கிருஷ்ணசாமி “அவர்கள் சென்று வரட்டும். பிரியப்படுகிறார்கள். நீயே அழைத்துப் போயேன்” என்றார். தந்தையை மறுத்துப் பேச மனமின்றி அழைத்துச்சென்றார். அவர்கள் செல்லும்போது கூட்டம் அதிகமாக இருந்தது.பிள்ளைகள் இருவரும் மேலோட்டமாகப் பார்க்காமல் ஒவ்வொன்றையும் ஆராய்வது கோபாலனுக்கு மகிழ்ச்சியைத் தர வில்லை. அன்றிரவே கோபாலன் மீராவிடம் மேல்படிப்பிற்காகத் தயாராகும் படி கூறினார். மீராவின் திட்டமும் சிலநாட்களுக்கு முன் அதுவாகவே இருந்தது. ஆனால் இப்போது அவள் கவனம் முழுவதும் கே வி பற்றியதாக இருந்தது. சில நாட்களாகவே அதுபற்றி மறந்தும் விட்டாள். மீரா அதுபற்றி எண்ணிக்கொண்டிருக்க ” என்ன ? மேலே படிக்கும் எண்ணம் இருக்கிறதா? இல்லை அப்படியே சும்மா பொழுதைப் போகலாம் என்ற எண்ணமா ?” கோபாலனின் குரலில் கடுமை தெரிந்தது. இரவு உணவின்போது தான் கோபாலன் இதுபற்றிப் பேசினார். வீட்டில் மற்றவர் அனைவரும் கோபாலனின் குரலின் வேறுபாட்டால் அவரையே பார்த்துக்கொண்டிருக்க “இன்னும் இப்போதைய படிப்பே முடியவில்லை ! அதற்குள் என்ன ? அதுவும் இப்படிக் கத்த வேண்டுமா ?” என்றார் விஜயா. தாய் சொன்னதும்தான் தான் குரல் உயர்த்திப் பேசியது கோபாலனுக்குப் புரிந்தது.” தேர்வு முன்பே எழுதினால் தான் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும். அதற்கு நிறையப் படிக்க வேண்டும். உன் தங்கை எந்த அளவில் இருக்கிறாள் ஜீவா ?” மகனைப் பார்த்து. ஜீவன் இங்கு வரும்போது நுழைவுத்தேர்வுக்கான பயிற்சியைத் தங்கைக்குக் கொடுப்பது வழக்கம். இப்போது சில வாரங்களாக இருவரின் கவனமும் பயிற்சியில் இருக்கவில்லை. இப்போது உண்மையைச் சொன்னால் நிச்சயம் அப்பாவின் கோபம் அதிகரிக்கும் என்று “பெரும்பாலும் பயின்று விட்டாள். இன்னும் கொஞ்சம் பயிற்சி தேவைப்படும். பரீட்சை நாட்களுக்குள் தயாராகிவிடுவாள்”. அத்துடன் விடவில்லை அவர். ” இனி உன் கவனம் படிப்பில் இருக்க வேண்டும். வேறெதிலும் உன் கவனம் சிதறக் கூடாது” என்றார். தந்தையின் இன்றைய பேச்சு அவளுக்குக் குழப்பத்தை உண்டாக்கியது. பிள்ளைகள் அவர்கள் விருப்பமானதைப் படிக்க வேண்டும் என்று கோபாலன் எப்போதும் சொல்வர். இந்தப் படிப்புக்காக உன்னைத் தயார்ப்படுத்திக்கொள் என்று ஜீவனையோ இல்லை மீராவையோ அவர் கட்டாயப்படுத்தியது கிடையாது. ஜீவன் படிப்பில் சுட்டி. அவனாகவே தன் இலக்கைத் தேர்வு செய்தான். முதலில் பொறியியல் பிறகு மேலாண்மை என்று அவன் சொன்னபோது அப்படியே ஏற்றுக்கொண்டார். மீராவிடமும் அப்படியே. தந்தையின் இந்த மாற்றத்திற்கான விடை விரைவிலேயே கிடைத்தது. மீராவிடம் எல்லாவற்றையும் சொல்லக் கோபாலனால் முடியவில்லை. அவள் இன்னும் சிறு பெண். குடும்பத்தில் நடக்கும் எல்லா சச்சரவும் மகளுக்குத் தெரிய வேண்டாம் என்று நினைத்தார். கோபாலன் குடும்பம் இங்கு வந்தது தம்பி தங்கை குடும்பத்தாருக்கு ஏமாற்றத்தை அளித்தது. கடந்த இருபது வருடங்களாக நிர்வாகத்தின் வளர்ச்சியில் சரிபாதி பங்கு நாராயணனுக்கு இருந்தது. நாராயணன் ஆலையை விற்க நினைத்தபோது, தந்தை கிருஷ்ணசாமி அதை ஏற்காதது மட்டுமின்றி எந்த முடிவும் நாராயணன் மட்டும் எடுக்க முடியாது என்றார். அவரின் மற்ற மூன்று பிள்ளைகளையும் மனதில் வைத்துத்தான் அவர் முடிவெடுப்பதாகச் சொன்னார். நாராயணனின் முடிவிற்குக் கமலா மறுப்பு சொல்லவில்லை. நாயகி எப்போதும் நிர்வாக விஷயமோ இல்லை பங்குகளைப் பற்றியோ உரிமை கொண்டாடியதில்லை. ‘தம்பிக்கு எப்படி வேண்டுமோ செய்யுங்கள்’ என்றாள். மீதம் இருப்பது கோபாலன்.கோபாலன் முன்பே எதுவும் வேண்டாம் என்றிருந்தார். இப்போது புதிதாக வந்து உரிமைகொண்டாட மாட்டார். அப்படியே கேட்டாலும் ஒரு பங்கை அவருக்குக் கொடுப்பதில் நாராயணனுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால் கிருஷ்ணசாமி முடிவில் மாறவில்லை. தங்கள் பிள்ளைகள் யாரும் இதைப் பார்க்கப்போவதில்லை என்று நாராயணன் சொல்லிருந்தார். அதாவது வருங்காலத்தில் வாரிசுகள் யாரும் பார்க்கமாட்டார்கள் என்று உணர்த்தவிரும்பினார். கோபாலனிடமும் இதுபற்றி நாராயணன் பேசியிருந்தார். ” அண்ணா, அப்பாவின் பிடிவாதம் குறைவதாக இல்லை. இப்போதே நிர்வாகத்தை விற்கலாம் என்றால் மறுக்கிறார். நாளை யார் பார்ப்பார்கள். இப்போது எனக்கிருக்கும் பணத்தேவையை அப்பா புரிந்துகொள்ளவே இல்லை. ” நாராயணன் சொல்வதை அப்படியே கோபாலனால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ” அப்பாவின் முடிவைப்பற்றியோ, உன் எண்ணத்தைப் பற்றியோ என்னால் எதுவும் சொல்ல முடியாது. பல ஆண்டுகளாக இவை எல்லாவற்றையும் விட்டு விலகியே இருந்துவிட்டேன். இன்னும் அப்படித்தான். ” என்றார் கோபாலன். இந்த உரையாடல் நடக்கும்போது லக்ஷ்மியும் உடன் இருந்தாள். தன் கணவனிடம் “என்ன நீங்கள் ? விவரம் புரியாமல் பேசுகிறீர்கள் ! உங்கள் பிள்ளைகள் பார்க்கவில்லை என்றால் என்ன ? ஒருவேளை உங்கள் அண்ணன் பிள்ளைகள் பார்ப்பார்கள் அல்லவா. உங்கள் அப்பாவிற்கும் அதே எண்ணம் தான். என்ன செய்வது ? இத்தனை ஆண்டுகாலம் நீங்கள் உழைத்ததற்கு யார் மரியாதையைத் தருகிறார்கள்” லக்ஷ்மி பேசியது தவறு என்று கோபாலன் நினைக்கவில்லை. பல ஆண்டுகளாக நாராயணன் உழைத்து உயர்த்திய நிறுவனம். அதில் அவருக்கு இல்லாத உரிமையா ? கோபாலனும் அவன் பிள்ளைகளும் நிர்வாகத்தில் தலையிடாமல் இருப்பதே நன்று. அவரால் செய்ய முடிந்ததும் அதுதான். அதனாலேயே பொறுப்பை ஏற்க முடியாதென்று தந்தையிடம் கூறினார் கோபாலன். தன் பிள்ளைகள் யாரும் நிர்வாகத்தில் தலையிடக் கூடாது என்று முடிவெடுத்தார். பகுதி 13 மீரா தன் மேல்படிப்பு பற்றி ஆனந்திடம் கூற தொலைப்பேசியில் தொடர்பு கொண்டாள். பலமுறைக்குப் பிறகு தொடர்பு கிடைத்தது. அவள் விஷயத்தைச் சொல்லவும் “என்னோடு போட்டிப்போடத் தயாராகிவிட்டாய் போலிருக்கிறது” என்றான் அவன். மீராவுக்குப் புரிய சிலகணங்கள் எடுத்தது, “சரியாகக் கண்டுபிடித்துவிட்டீர்கள். போட்டிக்குத் தயாராக இருங்கள். ஆனால் கவலை வேண்டாம். என் குரு என்ற சலுகை எப்போதும் இருக்கும்.” “மிக்க நன்றி. எப்போதும் இதை மறவாமல் இருக்க வேண்டும்.இதுவே இந்தக் குருவின் வேண்டுகோள்.” ” நிச்சயம் குருநாதா! ” இருவரும் நகைத்தனர். ” சரி வைக்கட்டுமா” என்று ரிசீவரை தாழ்த்தியவள் மீண்டும் செவிகளில் பதித்து “ஹெலோ ஹெலோ இருக்கிறீர்களா ?” என்றாள். “சொல் மீரா” “உங்கள் செல் நம்பர் தர முடியுமா?” என்று கேட்டுவிட்டு நாக்கைக்கடித்துக்கொண்டாள். எதற்கென்று கேட்டால் என்ன சொல்வது? இதுவரை அலுவலக எண்ணிற்கே தொடர்புகொண்டு பேசியிருக்கிறாள். எப்படி சமாளிப்பது என்று எண்ணிக் கொண்டிருக்கையில், அவன் சொல்லத்தொடங்கினான். குறித்துக்கொண்டாள். கல்லூரி இறுதி தேர்வு மற்றும் மேல்படிப்பிற்கான நுழைவுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டது. இரண்டிற்கும் அதிக இடைவெளி இல்லை என்பதால் சற்று அதிகமாகவே தன்னை தயார்ப்படுத்திக்கொண்டிருந்தாள். வீட்டில் அவள் இருக்கிறாள் என்பதே மற்றவர் அறியாவண்ணம் தன் அறையிலேயே அதிகம் அடைந்துகிடந்தாள். தேர்வும் ஒரு வழியாக முடிந்தது. ” தேர்விற்குத் தயார் செய்ததில், மிகவும் கலைத்துவிட்டாள் மீரா. முகமே சோர்ந்து இருக்கிறது” விஜயா ராதாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். மீராவும் அருகில் தான் இருந்தாள். ” தேர்விற்குப் படித்ததில் களைப்பா ? இல்லை சரியாகச் செய்யாததால் வந்த பயமா ? ” மகளைச் சீண்டினாள் ராதா. “பயமா ?எனக்கா ? நீங்களே ஆச்சரியப்படும் அளவு மதிப்பெண்கள் வரும்” “பார்க்கலாம். எப்படி ஆச்சரியப்படுத்துகிறாய் என்று” சிணுங்கிக்கொண்டு தன் அறைக்குச் சென்றாள் மீரா. பாட்டி சொன்னது சரிதான். அவளின் முகம் சோர்ந்திருக்கிறது. ஏனோ ஒரு உற்சாகமின்மை. தேர்வைப் பற்றிய பயம் இல்லை அது. அதற்கான விடை அன்றிரவே மீராவுக்குப் புலப்பட்டது. இரவு குடும்பமாய் பேசிக்கொண்டிருந்தபோது சாருவின் திருமணத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். ஏற்கனவே சிலர் பெண் கேட்டிருப்பதாகவும் விரைவில் திருமணத்தை நடத்த திட்டமிடவைப்பதாகவும் கமலா தெரிவித்திருந்தாள். “நல்ல வசதியை மட்டும் பார்த்தால் போதாது. நம் வீட்டு பெண்ணை அனுசரித்தும் போக வேண்டும். அவளுக்குக் கடவுள் யாரை எழுத்திருக்கிறாரோ ? நாம் நினைப்பதெல்லாம் நடக்குமா ?” விஜயா கவலையுடன் சொன்னார். ராதா “என்ன அத்தை ? இப்படிச் சொல்கிறீர்கள். நம் சாருவுக்கு எல்லாம் சிறப்பாக அமையும். நீங்கள் ஒன்றும் கவலைகொள்ள வேண்டாம்” என்றாள். ஒரு பெருமூச்சை வெளியிட்டார் விஜயா. சாரு திருமண விஷயத்தில் எதோ ஒரு கவலை தன் மாமியாருக்கு இருப்பதாய் உணர்ந்தாள் ராதா. இரவு உணவை முடித்துக்கொண்டு ஆண்கள் இருவரும் உலவச்சென்றபோது விஜயாவிடம் மெல்லக் கேட்டாள். “சாரு அதிகம் வளர்ந்தது இங்கே தான். அவள் எப்போதும் அவள் அன்னையை விட லக்ஷ்மியிடம் அதிகம் ஓட்டுவாள். லட்சுமி சொல்வதுதான் அவளுக்கு வேதம். ஒரு வயதுவரை சரி. ஆனால் இப்போதும் அவள் அப்படி இருப்பதுதான் ஒரு கவலை. லக்ஷ்மியைப் போல் சட்டென்று பேசமாட்டாள் என்றாலும், அவள் சொல்லுக்கு அப்படியே ஆடுவாள்.” “அதனால் என்ன அத்தை ? அவள் சின்னப் பெண். பெரியவர்கள் சொல்வதைக் கேட்கிறாள்.” அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது தொலைப்பேசி ஒலித்தது. “யாரென்று பார்!” என்று மகளைப் பணித்தாள். “ஹலோ” “நான் ஆனந்த்.” மீராவின் முகம் பிரகாசமடைந்தது “எப்படி இருக்கிறீர்கள் ?” “நான் சுகம். உன் தேர்வு முடிந்ததா ? எப்படிச் செய்திருக்கிறாய் ?” “சூப்பர். நீங்கள் சொல்லுங்கள். இரண்டு ஆலைகளும் எப்படி இயங்குகின்றன” “ஹ்ம், இது மாணவியின் சந்தேகமா ? இல்லை எஜமானியின் விசாரணையா ?” “இரண்டும் இல்லை. சும்மா உங்களின் வேலை பழு எப்படி என்று கேட்டேன் ?” “நல்லது. தாத்தாவிடம் அக்கவுண்ட் தயாராக இன்னும் ஒருவாரம் ஆகும் என்று சொல்லிவிடுகிறாயா ?” “நிச்சயம்!” பேசிக்கொண்டிருந்தபோதே கிருஷ்ணசாமி வந்தார். “யாரம்மா ?” “ஆனந்த் பேசுகிறார்” என்று கிருஷ்ணசாமியிடம் கொடுத்தாள். அவள் அங்கிருந்து தன் அறைக்குச் சென்றபோது எதேச்சையாகக் கண்ணாடியில் அவள் பிம்பம் தெரிந்தது. அவள் முகத்தில் அப்படியொரு பிரகாசம். முன்பு பார்த்த கலைப்பு இல்லை. ஏன்? ஆனந்தின் குரலைக் கேட்டதாலா ? ’ என்ன மடத்தனம். இப்படி எல்லாம் யோசிக்கக் கூடாது.’ என்று தன்னை தெளிவுபடுத்திக்கொண்டாள். ஆனால் மனம் எப்போது எப்படி மாறும் என்று யாருக்குத் தெரியும் ! மறுநாள் அன்னையுடன் கோவைக்குச் சாப்பிங் சென்றாள் மீரா. முன்பு சாரு சொன்னது நினைவில் வந்தது. சற்று பிரகாசமான ஒன்றிரண்டை அணிந்து அன்னைக்குக் காண்பித்தாள். “அதிசயமாக இருக்கிறது. எப்போதும் வெளிர் நிறங்களைத் தானே தேர்வு செய்வாய்” “சும்மா, எனக்கு இது பொருந்துமா என்று பார்த்தேன்.” “உனக்கு எல்லா நிறங்களும் பொருந்தும். ஆனால் சாதாரணமான நாட்களில் இதை அணிய முடியாது. முக்கிய நிகழ்வுகளில் அணிய வைத்துக்கொள்.” “ஐயோ ! இதை நான் அணிவதா? இதன் ஸ்டோன் ஒர்க் கண்ணைப் பறிக்கிறது. அத்தனை சௌகரியமாக இல்லை அம்மா. எனக்கு வேண்டாம்” என்று ட்ரையல் அறைக்குச் சென்றாள். அவள் வருவதற்குள் மீரா தேர்வு செய்த வண்ணங்களில் வெறும் எம்பிராய்டரி மற்றும் சிறிய குந்தன் வேலைப்பாடுகளுடன் உள்ள சிலதை தேர்வுசெய்து வைத்திருந்தாள் ராதா. மீரா வேண்டாம் என்றபோது “எல்லா நேரங்களிலும் ஒரே மாற்றி உடையணிய முடியாது. மற்றவர்கள் சொல்லும் அளவிற்கு வைத்துக்கொள்ளக் கூடாது.” அன்னையின் முகத்தை ஆச்சரியமாகப் பார்த்தாள். ஒரு வேலை அன்று சாரு சொன்னதை அன்னை அறிந்திருந்தாளா ? மற்றவர்களுக்காக நம்மை மாற்றிக்கொள்ளக் கூடாது என்று ராதா சொல்லியிருக்கிறாள். இப்போது எதற்காக மாற வேண்டும். மீரா கேட்டும் விட்டாள். “சாருவிற்காக மாறச்சொல்லவில்லை. இன்னொரு முறை சாரு சொல்லும்படி வைத்துக்கொள்ள வேண்டாம் என்கிறேன்” “உனக்குப் புரியவில்லை அம்மா. இப்போது இது போன்ற உடைஅணித்தால், இதுவரை அப்பாவிடம் அதிகப் பணம் இல்லை சாதாரணமாக உடுத்தினார்கள். இப்போது தாத்தா பணம் கொண்டு வாங்குவதாகப் பேசுவார்கள்.” ராதா சற்று திகைத்தாள். மகள் சொல்வது உண்மைதான். முன்னாள் சென்றால் முட்டும். பின்னல் வந்தால் உதைக்கும் என்பார்களே அதுபோல் தான் பேசுவார்கள். மீராவின் தேர்விற்கே விட்டால் ராதா. அன்னைக்காகக் குந்தன் வேலைசெய்திருந்த ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டாள். சேலைகள் இருக்கும் பகுதிக்குச் சென்றனர். ராதா தேர்ந்தெடுக்கும் ஒன்றையும் மீரா ஒப்பவில்லை. அவள் ஒவ்வொன்றாய் நிராகரிப்பதை ரசித்துக்கொண்டிருந்தார் ஒரு நடுத்தர வயது பெண்மணி. தன்னை யாரோ கவனிக்கிறார்கள் என்று திரும்பிப்பார்த்த மீரா உடனே கண்டுகொண்டாள். அது ஆனந்தின் தாயார் பத்மா. ஆலையில் நடந்த பூஜையின்போது பார்த்தது நினைவில் வந்தது. “எப்படி இருக்கிறீர்கள் ஆன்ட்டி ?” மீரா பேசுவதைப்பார்த்து ராதாவும் கவனித்தாள். பொதுவாக நலம் விசாரித்துக் கொண்டனர். “மீரா போல் எனக்கு ஒரு மகள் இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது. உங்களுக்காக என்னமாய் தேர்வு செய்கிறாள்” “பெண் வேண்டும் என்று ஆசைப்படுவது சரிதான். ஆனால் மீராவைப் போல் வேண்டும் என்று நீங்கள் ஆசைகொள்ள வேண்டாம். பிறகு உங்கள் விருப்பத்திற்கு எதுவும் செய்ய முடியாது. எனக்குப் பிடித்த ஒன்றையும் எடுக்க விடமாட்டாள்” என்றார் ராதா. ” அருகிலிருந்த இரு சேலைகளைக் கையில் எடுத்து “ஆண்டி, இதில் எது என் அம்மாவுக்கு எடுப்பாக இருக்கும் என்று நீங்கள் சொல்லுங்கள்” என்றாள் மீரா. மீரா தேர்வு செய்ததையே பத்மாவும் சொல்ல,“பாருங்கள், என் தேர்வு தான் சரி என்று ஆண்டி சொல்லிவிட்டார்கள். நான் எனக்குப் பிடித்ததை எடுக்கவில்லை. என் அம்மாவிற்கு எது நன்றாக இருக்குமோ அதைத் தேர்வு செய்கிறேன்” என்று அன்னையின் கன்னத்தை லேசாகக் கிள்ளினாள். “என்ன மீரா இது. கையை எடு.” என்று செல்லக் கோபம் கொண்டாள் ராதா. சிறிது நேரத்தில் மூவரும் கடையிலிருந்து புறப்பட்டனர். பத்மா மற்ற இருவரையும் வீட்டிற்கு அழைத்தாள். மற்றொருநாள் வருவதாகச் சொல்லிவிட்டு அவரவர் வழியில் சென்றனர் வீடு வந்ததும் “என்ன கடையே வாங்கியாயிற்றா ?” என்று கேலிசெய்தார் கோபாலன். “இல்லை அப்பா ! விலைக்குத் தர மறுத்துவிட்டார்கள். அந்தக் கோபத்தில் ஆடைகள் கூடக் குறைவாகத்தான் எடுத்தோம்” அனைவரும் சிரித்துவிட்டனர். “இப்போதுதான் என் பேத்தி முகத்தில் பழையமாதிரி இருக்கிறது” என்றார் விஜயா. பாட்டி சொல்வது உண்மைதான். அவளின் உற்சாகத்தைத் திரும்பப் பெற்றிருந்தாள். பகுதி 14 மீரா பழைய உற்சாகம் கொண்டிருந்தாள். விடுமுறையில் கே வி யைப்பற்றி இன்னும் சில வற்றை அறிந்துகொள்ளப் பழைய கோப்புகளைப் பார்க்க எண்ணி தந்தையிடம் சென்றாள். “அப்பா, பழைய கோப்பு எல்லாம் நான் பார்க்கட்டுமா ?” “எதற்கு ?” ” சும்மா ரிப்போர்ட் ரெடி பண்ண!” “இப்போது என்ன ரிப்போர்ட் ? கல்லூரி தான் முடிந்ததே ?” “அப்பா, இது கல்லூரிக்காக இல்லை. நான் இன்னும் நமது மில்லை பற்றி நிறைய விஷயம் தெரிஞ்சுக்கணும்.இந்தத் தலைமுறையில் யாரும் மில்லை கண்டுகொள்ளவில்லை. நானாவது கற்றுக்கொண்டால் தாத்தா சந்தோசப்படுவாரில்லையா?”. கோபாலனின் முகத்தில் கவலை படர்வதை மீரா கவனிக்கவில்லை. “அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். வேறு வேலை இருந்தால் பார்” என்றார் சற்று கோவமான குரலில். இப்போது தந்தையின் முகத்தைப் பார்த்த மீரா எதோ சரியில்லை என்று உணர்ந்தாள். “என்ன ஆச்சு அப்பா ?” என்றபடி தந்தையின் கையை மெதுவாகப் பற்றினாள். மகளின் முகத்தைப் பார்த்ததும்” வேண்டாம் டா ! நீ செய்கிற விஷயம் குடும்பத்தில் நிறையச் சிக்கலைக் கொண்டு வரும். அப்பா சொல்கிறதை கேள். கே வி பற்றி நீ அதிகம் யோசிக்காதே. பல வருசத்துக்கு முன்னாடியே மில்லுக்கும் எனக்கும் இருந்த தொடர்பு இல்லைனு ஆயாச்சு. உனக்கும் அப்படித்தானே. நீ உன் படிப்பைப் பார். இந்தத் தொழில், மில் எதுவும் நமக்கு வேண்டாம். மேலே எதுவும் பேசாதே. போ” என்றார். அவரின் இந்தப் பேச்சு மீராவை மேலும் குழப்பியது. அவனுடைய தலைமுறையில் யாரும் காட்டாத ஆர்வத்தை அவள் காட்டுகிறாள் என்றாள், அதை ஏன் தடுக்க வேண்டும் ? அதன் பின் அவள் யாரிடமும் அதைப்பற்றிப் பேசவில்லை. சில மாதங்களுக்கு முன் என்றால் அவள் தாத்தா எதோ சொல்லியிருக்க வேண்டும் என்று எண்ணிருப்பாள். இப்போது அப்படி ஏதும் தோன்றவில்லை என்றாலும் எதோ சிறு உறுத்தல். மகளின் மனநிலையை யூகித்த கோபாலன் அவளைத் திசைதிருப்ப மேற்படிப்பிற்காகத் திட்டங்களிடும்படி ஏவினார். கோவையில் உள்ள கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்தனர். கல்லூரி விடுதியில் சேர்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. கோவையில் இருந்து வரும்போது சென்னை கல்லூரிக்குச் சென்று விட வேண்டும் என்ற வீம்பு எல்லாம் மறத்தேபோனது மீராவுக்கு. அவள் தொடங்கிய ஒரு காரியத்தை இடையில் விடுவது அவளுக்கு வருத்தத்தை அளித்தது. எல்லாவற்றுக்கும் முழுக்கு போடும் முன் ஆனந்திடம் தெரியப்படுத்த எண்ணினாள். மில்லுக்கு சென்றால் தந்தை கோபப்படக்கூடும் என்றெண்ணி தொலைப்பேசியில் தொடர்புகொள்ள எண்ணினாள். என்ன பேசுவது என்று தீர்மானித்துக்கொண்டு அவன் எண்ணைத் தொடர்பு கொண்டாள். இரு முறை அழைப்பை ஏற்கவில்லை என்று வந்தது. அவன் எதோ முக்கிய வேளையில் இருக்க வேண்டும் என்றெண்ணி மீண்டும் முயற்சிக்க வில்லை. சில நிமிடங்களில் தொலைப்பேசி ஒலிக்க மீராவே அதை எடுத்தாள். ” ஹலோ ” “சொல்லு மீரா. எதற்குக் கூப்பிட்டே” ஆனந்த் தான். எப்படி அறிந்துகொண்டான். வீட்டிலிருந்து யார் வேண்டுமானாலும் அழைக்கலாம். அது மீரா தான் என்று எப்படி அவனுக்குத் தெரியும் ? “நான் தானென்று எப்படித் தெரியும்” ” உங்கள் வீட்டிலிருந்து வேறுயாரும் இந்த நேரத்தில் கூப்பிடமாட்டார்கள் ” மணியைப் பார்த்தாள். பிற்பகல் வேலை. அவன் சொல்வது சரிதான். அப்பா தாத்தா அவனைக் காலையில் ஆலையில் சந்தித்து இருப்பார்கள். அவர்களைத் தவிர ஆனந்திற்கு தொடர்பு கொள்வது மீராதான். அசடு வழிந்ததை நல்லவேளையாகப் போனில் பார்க்க முடியாது.”ஆமாம் ! நான் உங்களிடம் ஒன்று சொல்லத்தான் கூப்பிட்டேன் ” ” சொல்லு ” அவனின் ஒற்றை வார்த்தை அவளை ஏனோ தயக்கமுறச்செய்தது. ” நீங்கப் பிஸியா இருந்த அப்புறம் கூப்பிடுகிறேன் ” ” அதெல்லாம் இல்லை. சொல்லு ” ” அது… நான் எம்பி ஏ சேரப்போகிறேன். அட்மிஷன் கூடச் சீக்கிரம் வரப்போகிறது.” “ஹ்ம்ம்” “பெரும்பாலும் ஹாஸ்டலில் தான் இருப்பேன். இனிமே கே வி பற்றி எதுவும் கத்துக்க முடியாது. அது தான் உங்ககிட்ட சொல்லலாமென்று” மறுமுனையிலிருந்து எந்தச் சத்தமும் இல்லை “ஹலோ …” ” கேட்டுக்கொண்டு இருக்கிறேன் ” “நீங்க எதுவும் சொல்லலை ?” ” நான் சொல்ல என்ன இருக்கிறது. இது உன் முடிவு. சரி அவ்வளவு தானே ?” அந்த உரையாடலைத் தொடர அவன் விரும்பவில்லை போலும். அவனுக்குப் பல வேலைகள் இருக்கும் என்று எண்ணியபடி “அவ்வளவு தான் வைக்கிறேன்” என்று முதலில் அவள் வைத்துவிட்டாள். கல்லூரி தொடங்கும் நாள் நெருங்க, விடுதிக்குச் செல்லத் தயாரானாள். பொருட்களை வாங்கக் கோபாலனுடன் சென்றிருந்தபோது தந்தையிடம் தன் சந்தேகத்தைக் கேட்டாள். “அப்பா, ஆலைபற்றி நான் தெரிந்துகொள்ள விரும்பியது உங்களுக்குப் பிடிக்கவில்லை. இல்லையா?” சற்றே திடுக்கிட்டார் கோபாலன். “அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நீ படிக்க வேண்டும் என்று கண்டித்தேன் அவ்வளவு தான்” “என் அப்பாவை எனக்குத் தெரியும்” என்றாள் சிறு புன்னகையுடன். மகளின் தலையை லேசாக வருடி “தாத்தாவிற்கு வீண் ஆசையைத் தூண்டிவிடக் கூடாது. நீயும் ஜீவனும் பொறுப்பேற்பீர்கள் என்று தாத்தா எண்ணிவிடக் கூடாது” “அது நல்ல விஷயம் தானே அப்பா. தாத்தா சந்தோசப்படுவார்” ” தாத்தாவிற்கு பிறகு முழு உரிமையும் சிற்றப்பாவிற்குத் தான் இருக்கிறது. நாம் யார் தலையிட்டாலும் சரிவராது. சித்தப்பா ஆலையை விற்க எண்ணுகிறார். தாத்தா தொழிலைவிட விரும்பவில்லை. இப்போது நம் தலையீடு குடும்பத்தில் இன்னும் விரிசலை அதிகப்படுத்தும். ” மீரா ஏதோ யோசிக்க “யாரும் கெட்டவர்கள் இல்லை அம்மா. விருப்பங்கள் மாறுபடும்போது சில விரிசல்கள் வரத்தான் செய்யும். நம் தலையீடு தாத்தாவை நம்மீது நெருக்கத்தையும் சித்தப்பாவின் மீது பிரிவையும் அதிகரிக்கும். அது வேண்டாம்” “ஆம் நீங்கள் சொல்வது சரிதான் அப்பா. ஆனால் ஆலை, அதில் வேலை செய்பவர்களின் நிலை ?” மீராவின் கேள்வி. கோபாலன் அவர் குடும்பத்தை மட்டும் தான் யோசித்தார். “ஒரு நிறுவனத்தை நடத்த அனுபவமுள்ள ஆட்கள் தேவை. நிர்வாகத் தலைமை மாறினாலும் அங்கு வேலை செய்பவர்களை யாரும் நீக்கமாட்டார்கள். யாருக்கும் சிரமம் இருக்காது” என்று சமாளித்தார். அது முழு உண்மை இல்லை என்பது அவருக்குத் தெரியும். மீரா மேலும் பேசுமுன் “நீ படிப்பில் கவனம் செலுத்து. அண்ணனைப் போல் நன்றாகப் படிக்க வேண்டும்.” என்று பேச்சைத் திசை மாற்றினார். மீரா கல்லூரியும் தொடங்கியது. அதே சமயத்தில் சாருவின் திருமணமும் முடிவானது. திருமண வேலைகள் என்று குடும்ப பெரியவர்கள் எல்லோரும் ஈடுபட்டனர். ஆடைகள் தேர்விற்குக் காஞ்சிபுரம் சென்னை என்று சென்றனர். பெரும்பாலும் கோபாலனும் ராதாவும் எல்லா நிகழ்வுகளிலும் கலந்து கொண்டனர். மீரா பெரும்பாலும் விடுமுறைநாட்களில் வீட்டிற்கு வந்தாலும், சில முறை விடுதியில் தங்கி விடுவாள். முழு நாளும் அறைக்குள் அடைத்திருக்காமல், அவர்களில் கோவை வீட்டில் அருகிலிருந்த நண்பர்களைப் பார்க்கச் செல்வதுண்டு. அப்படியொரு நாள் சென்று வரும் வழியில் ஒரு கார் அவளைக் கடந்து சென்று நின்றது. காரைக் கண்டதும் அடையாளம் கண்டுகொண்டாள். அனந்தன் தான். அவன் இறங்கி வர “எப்படி இருக்கிறீர்கள் ?” என்றாள் மீரா. ” நான் நலம் ! நீ எங்கே இங்கே ?” காரில் ஆனந்தின் பெற்றோரும் இருந்தனர். ” எங்கள் வீடு இங்கே தான் இருக்கிறது. பழைய நண்பர்களைப் பார்க்க வந்தேன் ” “உங்கள் வீடா ?” “ஹ்ம்ம், மேட்டுப்பாளையம் வரும் முன் நாங்கள் இங்கே தான் இருந்தோம்.” சற்று குழப்பத்துடன் பார்த்தான் “படிப்பு எப்படிச் செல்கிறது?” “பரவாயில்லை” காரினுள் ஆனந்த்தின் பெற்றோர் இருப்பதைக் கவனித்து விட்டு, அவர்களிடம் நலம் விசாரித்தாள். “எங்கு செல்ல வேண்டும் ? ஏறிக்கொள். உன்னை அங்கே விடுகிறோம்”என்றார் சுந்தரம். “பரவாயில்லை, நான் பார்த்துக்கொள்கிறேன் அங்கிள். நீங்கள் புறப்படுங்கள்” “அதெல்லாம் இல்லை, அப்படியே வழியில் விட்டுவிட்டுச் செல்வதா ? பெண்ணை வீட்டிற்கு அழைக்காமல் அப்படியே இறக்கி விடுவதாகச் சொல்கிறீர்கள். ஏறிக்கொள் அம்மா ! முதலில் வீட்டிற்குச் செல்வோம்” என்றார் பத்மா. “வேண்டாம் ஆண்ட்டி ! இன்னொரு நாள் வருகிறேன்” “அன்றும், நீயும் உன் அம்மாவும் இப்படித்தானே சொன்னீர்கள் ! இன்று நீ கட்டாயம் வர வேண்டும்.” என்றாள் பத்மா. மறுக்க முடியாமல் உடன் சென்றாள். “இப்போது விடுதியில் சேர்த்திருப்பதாகத் தாத்தா சொன்னார். எல்லாம் சௌகரியமாக இருக்கிறதா ?” என்றார் சுந்தரம் “இப்போது தான் முதல் முறை விடுதியில் இருக்கிறேன். கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கிறது அங்கிள்.” கிருஷ்ணசாமியின் மூத்த மகன் வெளியூரிலிருந்து வருவதாகத்தான் ஆனந்தன் கேள்விப்பட்டு இருந்தான். கோவையில் இருந்ததாக மீரா சொல்லவும் சற்று குழம்பினான். அவர்கள் குடும்ப விஷயத்தில் அதிகம் தலையிடக் கூடாது என்று அதுபற்றி மேலும் கேட்காமல் பொதுவாகப் பேசிக்கொண்டு சென்றனர். ஆனந்தின் வீடு கோவையில் நகர்ப்புற எல்லையில் மேட்டுப்பாளையம் செல்லும் வழியிலிருந்தது. அதிக நெரிசல் இல்லாத பகுதி. சற்றே பெரிய வீடுகள் அதிகம் இருந்தது. பெரும்பாலான வீடுகளின் அமைப்பை வெளியே இருந்து காண முடியாத படி உயரமான மதில்சுவர்கள். ஆள் நடமாட்டம் பெரிதும் இல்லாத அமைதியான தெரு. ஒரு பெரிய வீட்டின் முன் கார் நின்றது. லேசாக ஹார்ன் ஒளி எழுப்ப, காவலாளி உடையணிந்திருந்த ஒருவர் கதவைத் திறந்தார். வீடு பார்க்க நல்ல அமைப்பைக்கொண்டிருந்தது. ” வீடு ரொம்ப அழகா இறுக்கு ஆண்ட்டி” கண்களை மூடி எதோ நுகர்வதுபோல் செய்து “இங்கே மனோரஞ்சிதம் இருக்கிறதா ஆண்ட்டி? எனக்கு அதன் மனம் ரொம்ப பிடிக்கும்” என்றாள். ” இருக்கிறது அம்மா. உள்ளே வா” என்றார் சிரித்தபடி. ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது சாருவின் திருமணம்பற்றிப் பேச்சு எழுந்தது. திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதத்திற்குக் குறைவாகவே இருந்தது. ” எல்லோரும் திருமண வேளையில் பிஸியாக இருக்கிறார்கள். அண்ணாவும் சில வாரங்களாக வரவில்லை. எனக்குத் தான் போர்” என்றாள் மீரா. “அண்ணாவிற்கு இது படிப்பில் இறுதி ஆண்டு தானே” என்றார் சுந்தரம். “ஆம் அங்கிள், ஆறு மாதங்கள் சிங்கப்பூரில் சென்று பயிற்சி செய்ய அறிக்கைகளைத் தயார் செய்துகொண்டிருக்கிறான்.” இரவு உணவிற்குத் தயார் செய்வதாகப் பத்மா சொன்னபோது, “இல்லை ஆண்ட்டி ஏழு மணிக்கு மேல் வெளியே இருக்கக் கூடாது. நான் கிளம்புகிறேன்” என்று எழுந்தாள். ” அடுத்த முறை உணவருந்தக் கட்டாயம் வர வேண்டும். இதோ ஆனந்த் உன்னை அழைத்துச் செல்வான்.” என்றார் பத்மா. “ஒரு நிமிடம்”என்று உள்ளே சென்று சில பாரிஜாத மலர்களை மீராவிடம் தந்தாள். ” ரொம்ப தேங்க்ஸ் ஆண்ட்டி” என்று அதைப் பெற்றுக்கொண்டு புறப்பட்டாள். இப்போது வாகன நெரிசல் சற்று அதிகமாக இருந்ததால், கார் மெதுவாகச்சென்றது. ” நான் உங்களிடம் சாரி கேட்க வேண்டும்” இது மீரா. “எதற்கு?” ” கே வி பற்றிய பயிற்சியைப் பாதியிலேயே நிறுத்திவிட்டேன். நீங்கள் நான் கேட்டதற்காக உங்கள் நேரத்தை ஒதுக்கி நிறைய கற்றுத் தந்தீர்கள். திடீர் என்று நிறுத்தும் படி ஆயிற்று.” “அதனால் என்ன ? படிப்பை முடித்துவிட்டு வந்து இன்னும் நீ சிறப்பாகச் செயல்படலாம்.முதலில் சற்று வருத்தம் இருந்தது. ஆனால் வேறு ஒன்றால் படிப்புக்கு இடைஞ்சல் இருக்கக் கூடாது. நீ நன்றாகப் படி. இன்னும் இரண்டு வருடங்கள் தானே. கே வி நிச்சயம் உனக்காகக் காத்திருக்கும் !” ‘நான் எப்போதும் கே வி யில் பொறுப்பேற்கப்போவதில்லையே’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டாள். சட்டென்று ஏதோ தோன்றியவளாய் “ஒரு சந்தேகம், தாத்தாவைப் பொறுத்த வரையில் நீங்கள் மிகச் சிறப்பாகச் செய்கிறீர்கள். எப்போதும் உங்கள் பொறுப்பில் ஆலை இருந்தால் அனைவருக்கும் நலம் தானே ? அதாவது மீண்டும் நிர்வாக மாற்றம் ஏற்படாது. அதனால் தொழிலில் எந்தச் சறுக்கல்கள் இருக்காது. என்னைப் போல் அரைகுறையாக வந்து பொறுப்பேற்றால் நிர்வாகம் பெரிய சரிவைச் சந்திக்குமே ? இதில் உங்களுக்கும் நஷ்டம் தானே ?” “பரவாயில்லையே ? மூளை பயங்கரமாக வேலை செய்திருக்கிறது. நீ சொல்வதும் சரிதான் ! ஆனால் உன்னிடம் யாரும் நாளையே எல்லா பொறுப்புகளையும் தரமாட்டார்கள். நீயும் ஜீவனும் நாளைப் பார்க்கப்போவதாக இருந்தாலும், உன் அப்பா, தாத்தா உடன் இருப்பார்கள். உங்களால் முடியும் என்ற பின் தான் எல்லா பொறுப்பும் உங்களுக்கு வரும். நிர்வாக மாற்றம்பற்றிப் பெரிதாகப் பயப்படத் தேவையில்லை. இப்போது நான் ஒர்கிங் பார்ட்னர். ஒருவர் விலகிச் செல்வதால் பெரிய நஷ்டம் வந்துவிடாது” “ஆனால் உங்களுக்கு ஒரு ஆலை கைவிட்டுப் போகுமே ?” சிரித்துக்கொண்டே “என்மேல் இவ்வளவு அக்கறையா ? மிக்க நன்றி. ஆனால் நீங்கள் வரும்போதே வேறு ஏற்பாடுகளைச் செய்துகொண்டேன். உன் அப்பா பொறுப்புகளை ஏற்பார் என்றுதான் நான் வேறு ஆலையைப் பார்க்கச் சென்றதே. கே வி யை நீங்களே பார்த்துக்கொண்டால், நான் என் ஆலையை விரிவுபடுத்திக்கொள்வேன். போதுமா விளக்கம்.” அதற்குள் விடுதி வந்திருந்தது. ” உன் இடம் வந்தாயிற்று ” மீராவின் முகத்தில் ஒரு பெரும் குழப்பம் இருந்தது “ஏய் ! இதை எல்லாம் இன்னும் இரண்டு ஆண்டிற்கு மறந்துவிடு.கே வி கு ஒன்றும் ஆகாது. சரியா ?” சரி என்பது போல் தலையாட்டிவிட்டு விடைபெற்றுக்கொண்டாள். மீரா சென்றதும் சிறு பெண்ணிற்குப் பெரிய சுமையை ஏற்றிவிட்டோமோ என்று தோன்றியது ஆனந்தனுக்கு. இதுவரை ஆலையின் பொறுப்பைப் பற்றிச் சில வருடங்கள் பழகிய ஜெய் விஜயிடமும் கூட இவன் பேசியதில்லை. ஜீவனிடம் கூடப் பேசியதில்லைதான். ஆனால் இவன் சொன்னான் என்பதற்காக வேறு யாரும் இப்படி சிரத்தை எடுப்பார்கள் என்று அவன் எதிர்ப்பார்க்க வில்லை மீராவின் இயல்பு அவனுக்கு மிகவும் பிடித்திருந்ததன் காரணம், அவளின் எளிமை. மற்ற யாரிடமும் அந்த எளிமையைப் பார்க்க வில்லை. முதலிலிருந்தே முதலாளி தன்மையைக் காட்டித்தான் மற்றவர்கள் நடந்துகொள்வார்கள். பெரியவர்கள் அப்படிச் செய்வதில் ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் அவனைவிடச் சிறியவர்களாக ஜெய்யும் விஜயும் சாருவும் அப்படித்தானே நடந்துகொண்டனர். அவனிடம் மட்டும் அல்ல பல ஆண்டுகளாக மேலாளராக இருக்கும் ராஜனிடமும் அப்படி தான். பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள். ‘சார்’,‘அங்கிள்’ என்று எந்த அடைமொழியும் சொல்வதில்லை. ஜீவனிடம் அதிகம் பேசியதில்லை என்றாலும் அவன் மீராவை போல்தான் பழகினான். பேருந்தில் செல்வது, வீட்டிற்கு வருகிறவர்கள் அனைவரையும் குடும்ப உறுப்பினர்களே கவனிப்பது, ஏன் இப்போது அவன் வீட்டிற்கு வந்தது. இதுவரை கிருஷ்ணசாமியின் வீட்டிலிருந்து யாரும் அவன் வீட்டிற்கு வந்ததில்லை. சில நாட்கள் இல்லாத மீராவின் நினைவு அவனை மீண்டும் ஆட்கொண்டது. அவள் கோவையில் இருந்ததாகச் சொன்னது மட்டும் அவனின் மனதை உறுத்தியது. தந்தையிடம் கேட்க எண்ணினான். சுந்தரத்திற்கும் முழு விவரமும் தெரிந்திருக்கவில்லை. அப்பா பிள்ளைக்கு மனஸ்தாபம்(கிருஷ்ணசாமி- கோபாலன்). பிரிந்தவர்கள் மறுபடியும் சேர்த்திருக்கிறார்கள். இது மட்டுமே சுந்தரம் அறிந்தது. கோபாலன் குடும்பம் கோவையில் இருந்தது அவருக்கும் தெரியாது. ஆனந்த் விவரங்கள் அறிய விரும்பியது மீராவைப் பற்றி அவன் அறிந்துகொள்ளத்தான். மீரா அவன் மனதைக் கவர்ந்துவிட்டாள். எப்போதே ! ஆனால் குடும்ப நிலை தடையாக இருக்குமோ என்ற கவலை அவனுக்கு இருந்தது. இவனுடைய உழைப்பில் இன்னும் பல படிகள் ஏறுவான் என்பது உறுதி. ஆனால் கிருஷ்ணசாமியின் குடும்பத்திற்கு இணையாகுமா என்றால் மிகக் கடினம். வசதியைப் பெரிதாகப் பார்ப்பார்கள் என்று சொல்லமுடியாவிட்டாலும், நிச்சயம் பெரிய இடத்தில் தான் திருமண சம்பந்தம் செய்வார்கள். இப்போது சாருவுக்குப் பார்த்திருக்கும் இடமே சென்னையில் பல கிளைகள் கொண்ட ஒரு துணிக்கடையின் உரிமையாளர்கள். அதுபோல் தான் பார்ப்பார்கள். அன்று ஆனந்திற்கு உறக்கம் வர வெகுநேரம் பிடித்தது. கிடைக்காத ஒன்றிக்கு ஆசைப்படுகிறோமோ என்ற எண்ணம், பிடித்ததை இழக்க நேரிடுமோ என்ற கவலை. மீராவைப் பற்றி நினைக்கக் கூடாது என்று எண்ணிக்கொண்டான். அவன் நினைத்த மாத்திரத்தில் செய்யக்கூடிய காரியமா அது. ஆனால் சாருவின் திருமண வரவேற்பில் மீராவைப் பார்த்தபோது, ஆனந்திற்கு புரிந்தது, மீரா அவனுக்கு எட்டாத உயரத்தில் இருக்கிறாள் என்று. அதுவரை யாரும் மீராவை அப்படிப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. மணப்பெண்ணுக்கு இணையாக ஜொலித்தாள். இதுவரை பேத்திக்கு எதுவும் செய்ததில்லை என்று ஒரு வைர செட்டை மீராவிற்கு வாங்கியிருந்தார் விஜயா. யாரும் குறை சொல்லிவிடக் கூடாது என்று மீராவும் சிறிய ஒப்பனைகளைச் செய்துகொண்டாள். அம்மாவின் பின் சுற்றிக்கொண்டிருந்தவள், பத்மாவை பார்த்ததும் அவள் அருகில் வந்து சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தாள். ஆனந்தின் மனம் அவளை மறக்க முயற்சித்துக்கொண்டிருந்தது. இன்னும் இங்கே இருக்க முடியாது என்று” அம்மா, கிளம்புவோம்” என்றான். “அதற்குள்ளாகவா ? இன்னும் மணமக்களை நீங்கள் சந்திக்கவே இல்லை” என்றாள் மீரா. “மணமேடையில் கூட்டம் அதிகமாக இருக்கிறது” என்றான் வேறெங்கோ பார்த்தபடி. “முதலில் சாப்பிட வாருங்கள். அதற்குள் கூட்டம் குறைந்துவிடும்” என்றாள். அதற்குள் நாராயணன் அருகில் வந்து அவர்களை மேடைக்கு அழைத்துச்சென்றார். ஆனந்தின் பெற்றோர் மணமக்களை வாழ்த்திவிட்டுச் சென்றனர். ஆனந்தின் இறுக்கத்தை மீரா கவனித்திருந்தாள். வீடு சென்று சிறிதுநேரம் அறையில் அடைந்து கிடந்தான் அனந்தன். இருப்புக் கொள்ளாமல் வெளியே சென்றான். அவன் மனம் சமநிலைக்கு வர வெகு சிரமப்பட்டான். மறுநாள் இயல்பாகத் தொடங்க திட்டமிட்டான். திருப்பூர் ஆலைக்குச் சென்று வேலைகளைத் தொடங்கியதும் எல்லாம் சரியானது போல் உணர்ந்தான். மறுநாள் அதிகாலை முகூர்த்தம் என்பதால் முக்கிய சடங்குகள் எல்லாம் முடித்ததும், பாட்டியை வீட்டிற்கு அழைத்துச்செல்ல மீரா உடன் சென்றாள். வீட்டிற்குச் சென்று சிறிது நேரத்தில் பாட்டி உறங்கிவிட்டாள். ஆனந்தின் நினைவுவர அவன் செல்லுக்குத் தொடர்புகொண்டாள். திரையில் எண்ணைப் பார்த்ததும் மீரா என்று அறிந்துகொண்டான். எடுக்கக் கூடாது என்று எண்ணியவனால் முடியவில்லை. “ஹலோ” என்றான் கோபமாக. அவனின் குரல் மாற்றத்தை உணர்ந்தவள் “ஆர் யூ ஆல்ரைட் ? நேற்றே ஒருமாதிரி இருந்தீர்கள். இப்போதும் வாய்ஸ் சரியில்லையே ? உடம்புக்கு ஏதும் சரியில்லையா ?” ஒரு நொடி கண்களை மூடித்திறந்தான் “என்ன விஷயம் ?” ” ஒன்றும் இல்லை நீங்க டல்லா இருந்தீர்கள். அதனால் தான்” அவள் முடிக்கும்முன் “தேங்க்ஸ் பார் யுவர் கான்செர்ன். நிறைய வேலை இருக்கிறது. தேவை இல்லாமல் போன் பண்ணி டிஸ்டர்ப் செய்யாதே” அழைப்பைத் துண்டித்தான். மீராவுக்கு ஒன்றும் புரியவில்லை. வேலை நேரத்தில் இதுபோல் பலமுறை அழைத்திருக்கிறாள். ஆனால் இன்று போல் பேசியதில்லை. அவன் செய்ததில் தவறொன்றும் இல்லை. ஆனால் ஏனோ மீராவின் மனம் வெகுவாகச் சோர்ந்து. திருமண வேலைகளை முடித்துக்கொண்டு எல்லோரும் வீட்டை அடைய இரவு ஆகிவிட்டது. மறுநாள் அனைவரும் அவரவர் வேளைகளில் ஈடுபட வேண்டும். ஜீவனிற்கு விடுமுறை என்பதால் அவன் இன்னும் சில நாட்கள் இங்கே தங்குவான். அதனால் மீராவும் அதுவரை விடுதிக்குச் செல்ல வேண்டாம் என்று முடிவெடுத்தாள். முன்போல் விளையாட்டு வேடிக்கை என்று எதுவுமின்றி படிப்பு பற்றியே இருவரும் அதிகம் பேசினார்கள். ஒருமுறை இவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த கிருஷ்ணசாமி, ஜீவனின் அடுத்த திட்டத்தைப் பற்றிக் கேட்டார். ஜீவன் குடியியல் பணிகள் தேர்வு எழுதத் திட்டமிடுவதாகச் சொன்னான். அவன் அதற்காக அவன் பள்ளியிலிருந்தே தன்னை தயார்ப் படுத்திக்கொண்டிருந்தான். படிப்பு முடிந்த பின் தேர்வு எழுத நினைத்திருந்தான். இதற்கிடையே அவனின் சில மாதங்கள் சிங்கப்பூர் சென்று படிக்க வாய்ப்பும் கிடைத்திருந்தது. அதற்காகத் தன்னை தயார்ப் படுத்திக்கொண்டிருந்தான். கிருஷ்ணசாமி முகத்தில் ஒரு சிறு ஏமாற்றம்.இருப்பினும் “நன்றாகச் செய்” என்றார். ” மீரா, உன் திட்டம் என்ன ? “என்றார். “தாத்தா, ஜீவனைப் போல் என்னையும் நினைத்து விடாதீர்கள். எனக்கு எப்போதும் பெரிய திட்டம் எல்லாம் ஒன்றும் இல்லை” என்றாள். “ஆமாம் தாத்தா ! படிப்பு முடிந்தவுடன் ஒரு மாப்பிள்ளையைப் பார்த்துத் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும். திட்டம் ஒன்றும் இல்லையாம்”. “ஏய், உன்போல் கலெக்டர் ஆக எண்ணம் இல்லை என்றால், நான் மட்டமா ? எனக்கும் வேறுபல எண்ணங்கள் இருக்கின்றன.” “என்ன பெரிய எண்ணம். வீடு சுவரில் சொட்டை இல்லாமல் படம் வரைந்து மாட்டுவதைத் தவிர ?” மீராவின் ஒரே ஈடுபாடு அதுவாகத்தான் இருந்திருக்கிறது. இருவரும் வம்பு வளர்த்துக்கொண்டிருக்க, கிருஷ்ணசாமி எண்ண ஓட்டம் வேறாக இருந்தது. தன்னிடம் ஏதேனும் ஆலோசனை கேட்பார்கள் என்று எதிர்பார்த்தார் அவர். ஆனால் பேரப்பிள்ளைகள் யாரும் அவரிடம் எதிலும் கலந்து ஆலோசனை கேட்க வில்லை. இப்போது வந்த ஜீவன் மீரா உட்பட. கிருஷ்ணசாமி தன் பிள்ளைகளைப் போல் அவர் உருவாக்கிய நிறுவனத்தைப் பேரப்பிள்ளைகள் பார்க்க வேண்டும் என்று நினைத்தார். நாராயணனின் பிள்ளைகள்மீது அவர் நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் அவர்களின் அன்னையின் திட்டம் வேறாக இருந்தது. தன் பிள்ளைகள் செய்யும் வேலை சிரமமில்லாததாக இருக்க வேண்டும் என்று எண்ணினாள். தன் பிறந்த வீட்டில் அவள் தந்தையும் அண்ணனும் செய்த தொழில் இன்னும் சிறந்ததாகத் தோன்றியது பிள்ளைகளை அதற்குத் தயார்ப் படுத்த எண்ணினாள். இதனை ஓரளவு ஊகித்த கிருஷ்ணசாமி, நாராயணனை தன் பிடியில் வைத்துக்கொண்டு பேரப்பிள்ளைகளை தன் வழிக்குக் கொண்டுவர எண்ணினார். இதனால் குடும்பத்தில் பல சச்சரவுகள். இறுதியில் மகனின் பிடியையும் இழக்கத் தொடங்கினர் கிருஷ்ணசாமி. நாராயணனுக்கு ஆலையில் ஆர்வம் குறைந்தது. மைத்துனரின் தொழிலில் ஆர்வம் காட்டினார். லக்ஷ்மியின் பிறந்த வீட்டாரும் அவளுக்குச் சேர வேண்டிய பங்கைத் தர, நாராயணனுக்கு கிருஷ்ணசாமியின் தயவே தேவை அற்றுப் போனது. நாராயணன் சளைக்காமல் உழைப்பவர். அதனால் புது தொழிலும் வெற்றிதான். அதே போல் சேர்க்கைகளும். விளைவாக நகர்ப் புறத்தில் புதிய மளிகை கட்ட திட்டம் இட்டார். புதிய தொழில் நல்ல லாபம் என்றாலும், பெரியதாக வீடு கட்ட அவர் சேமித்த நிதியைத் தொட மனம் வர வில்லை. கே வி ஆலை வளர்ச்சிக்குத் தான் ஆற்றிய பங்கிற்குத் தந்தை முழு பொறுப்பையும் தன்னிடம் ஒப்படைப்பார். ஒப்படைத்தவுடன் அதை விற்று வீட்டையும் தொழிலையும் விஸ்தரிக்க வேண்டும் என்று திட்டம் வைத்திருந்தார். ஆனால் இது எதுவும் நடக்கப் போவதில்லை என்று தெரிந்ததும், தந்தையிடம் நேரடியாகக் கேட்டார் நாராயணன். இறுதியில் மகன் உழைத்ததிற்காக இத்தனை வருடங்கள் வந்த லாபத்தில் பங்கு தருவதாக முடித்தார். அதன் பின் மகனின் மீதிருந்த கொஞ்ச நம்பிக்கையும் இழந்தார் கிருஷ்ணசாமி. பகுதி 15 சாருவின் திருமணத்திற்கு பின் கமலா அடிக்கடி மருதனூர் வரத் தொடங்கியிருந்தாள். மகளின் பிரிவினால் தாயின் அருகாமை தேவை பட்டது. வரும் போதெல்லாம் சாரு எப்படி சமாளிக்கிறாளோ ? என்று புலம்புவாள். பெண்களைப் பெற்ற அன்னைக்கு இருக்கும் பயம் தான். ஆனால் கமலா சற்று அதிகம் பயம்கொண்டிருந்தாள். காரணம் சாரு அதிகம் லட்சுமியிடம் தான் வளர்ந்தாள். “நீங்கள் ரொம்ப கவலை படுகிறீர்கள். நம் சாரு எல்லாவற்றையும் சமாளிப்பாள்.” என்று ராதா கமலாவை சமாதனப்படுத்துவாள். ஆனால் கமலா வெளிப்படையாகச் சொல்லாத சில விஷயங்கள் இருந்தது. அது பூதாகரமாக வெடிக்கும் வரை ராதா அறியவில்லை. லட்சுமி சாருவிற்கு சில போதனைகளைச் செய்திருந்தாள்.” சென்ற சில நாட்களில் அவள் விருப்பு வெறுப்பை தெரியப்படுத்தி விட வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அவர்கள் விருப்பம்போல் உன்னை ஆட்டிப் படைத்துவிடுவார்கள். பின்னாளில் உன் விருப்பம் ஏதும் அங்கே நிறைவேறாது. முக்கியமாக உன் கணவனிடம் முன்பே உன் உரிமையை நிலைநாட்டிவிடு. அவர் சொல்வதற்கெல்லாம் தலை ஆட்டதே. ” என்று பலதும் சொல்லியிருந்தாள். லட்சுமி புகுந்த வீட்டிற்கு வந்தபோது இப்படித்தான் செய்தாள். அதனால் லக்ஷ்மியின் கொடி எப்போதும் உயர பறக்கத் தொடங்கியது, அவள் சொல்லுவதை எதிர்த்து யாரும் ஏதுவும் சொல்லமாட்டார்கள். வீண் சண்டை எதற்கென்று மற்றவர் விலகிச் சென்றதை அவள் வெற்றியாகப் பார்த்தாள். நாராயணனும் சில நாட்கள் மனைவியிடம் சொல்லிப்பார்த்தார். அவள் கத்த தொடங்குவாள். வீட்டில் ஒரே இரைச்சலாக இருக்கும். பெற்றோர் மனம் நோகுமோ என்றெண்ணி, மனைவி சொல்வதெற்கெல்லாம் அப்படியே தலையாட்டினார் நாராயணன். கமலா அதற்கு நேர்மார். கணவன் சொல்லுமுன் எல்லாவற்றையும் அவன் விருப்பம்போல் செய்வாள். சொல்வதெற்கெல்லாம் ஆடுவாள். பெரிய சாமர்த்தியம் இல்லை என்று மனைவியை ஏளனமாக நினைத்தார் கமலாவின் கணவன். இரு தம்பதியினர் இடையே உள்ள வேறுபாடுகள் நன்கு புரிந்துகொண்டாள் சாரு. அவளுக்கு அம்மவை போல் வாழ்க்கை வேண்டாம். அவள் அத்தையைப் போல் இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள். அதனால் அவள் போதனை அவளுக்குத் தெய்வ வாக்காய் தெரிந்தது. அதனால் கடிவாளம் கட்டிய குதிரையைப் போல் ஓடினாள். அதில் அவள் புரிந்துகொள்ளத் தவறியது அவள் கணவனின் சுபாவத்தை. பழைய கால மனிதர்கள்போல் மனைவியைத் தன் கட்டுக்குள் வைக்க நினையாதவன் அவன். அவளுக்கென்று பல சுதந்திரங்களை கொடுக்கத்தான் செய்தான். சாருவிற்கு பிடிக்காதவற்றை மாற்றிக்கொண்டான். ஆனால் எல்லாம் அவள் விருப்பம்போல் இருக்க வேண்டும் என்று அவள் சண்டை போடுவதை ஏற்க அவன் தயாராக இல்லை. இருவருக்கும் வாக்குவாதம் வரத் தொடங்கியது. பிறகு சண்டை முற்றியது. இனி மனைவிக்காக எல்லாவற்றையும் விட்டுகொடுக்க அவன் தயாராக இல்லை. விளைவாகச் சாரு மேட்டுப்பாளையம் வந்துவிட்டாள். திடீர் என்று ஒருநாள் சாரு வந்திருப்பதாக ஓடிவந்த கமலா,” இந்தப் பெண் ஏதோதோ சொல்கிறாள் அம்மா. எனக்குப் பயமாக இருக்கிறது.” என்று கண்ணீர் வடித்தாள். “‘எனக்கு அங்கு செல்லப் பிடிக்க வில்லை’ என்று சாரு சொல்கிறாள்”என்று அழுதாள். அவள் வந்து ஒருவாரம் ஆகிவிட்டதாம். இன்னும் கணவன் வீட்டிற்கு செல்லாமல் இருக்கிறாள்” என்று புலம்பினாள். செல்லமாக வளர்ந்த பெண் சிறு வருத்தம் ஏற்பட்டாலும் இதுபோல் பேசுவது ஒன்றும் புதிதில்லை என்றாள் ராதா. ” ஐயோ, உங்களுக்குப் புரியவில்லை ! அவள் செய்வது சரி என்று அங்கு அனைவரும் ஓதுகிறார்கள். ” என்றாள் கமலா. ” நீங்கள் சொல்லிப் புரியவையுங்கள்! ” “அவள் என் பேச்சைக் கேட்கமாட்டேன் என்கிறாள். திருமணம் ஆகி இரண்டு மாதம் தான் ஆகிறது. அதற்குள் சண்டைபோட்டுக்கொண்டு வந்திருக்கிறாள்” “நீங்கள் என்ன பிரச்னை என்று தெளிவாகப் பேசிப்பாருங்கள்.” “என்ன பெரிய பிரச்னை ? அவர்கள் சொல்வதற்கு ஏட்டிக்கு போட்டியாகப் பேசியிருக்கிறாள். இப்படி செய்யக் கூடாது என்று மாப்பிள்ளை சொல்லி இருக்கிறார். என் விருப்பம்போல் தான் இருப்பேன் என்று சண்டை பிடித்திருக்கிறாள். லட்சுமி அண்ணியும் அவள் செய்தது சரி என்றே பேசுகிறார். நான் யாருக்கு சொல்வது” “கண்கெட்டதற்கு பிறகு சூரிய நமஸ்காரம்” என்றார் விஜயா. ” என்ன அம்மா ! இப்படி சொல்கிறாய் ?” “பின்னே, உன் அண்ணி அவளைப் போலவே உன் மகளையும் தயார் செய்திருக்கிறாள். எல்லாரும் அனுசரித்து போவார்களா ?” “என்ன செய்வது என்று சொல்லாமல் இப்படி பேசினால் நான் என்ன செய்வேன்” என்று கலங்கினாள் கமலா. “உன் மகள் யார் சொல்வதையும் கேட்கமாட்டாள். இனி நான் என்ன சொல்வது” என்றாள் விஜயா. “மாப்பிள்ளை வீட்டில் என்ன சொன்னார்கள் ?” என்றாள் ராதா. “சம்மந்தி அம்மா ஒன்றும் நடக்காதது போல் தான் பேசினார்கள். சாரு எப்போது வருவாள் என்று தான் கேட்டார்கள்.லட்சுமி அண்ணிதான் ‘இன்னும் ஒரு வாரம் இங்கே இருக்கட்டும்’ என்றார்.” “அவர்களே பெருந்தன்மையாகப் பேசும்போது, நீ ஏன் உன் மகளை இங்கே வைத்திருக்கிறாய். அவள் வீட்டிற்கு அனுப்பு” என்றார் விஜயா. மீண்டும் கமலா சோர்ந்தாள். அவள் சொல்லி மகள் கேட்டால் தான் எந்தத் தொல்லையும் இல்லையே ! “மாப்பிள்ளையிடம் பேசினீர்களா ?” என்று ராதா கேட்க, இல்லை என்று சோகமாகத் தலையாட்டினாள். “அவரிடம் பேசிப்பாருங்கள்” என்றாள் ராதா. “நான் என்ன பேசுவது ?” “உங்கள் மகளுக்காக நீங்கள் தான் பேச வேண்டும்”. தயக்கத்துடன் செல் போனில் தொடர்புகொண்டாள். கமலா பேசிவிட்டு வரும் வரை ராதாவும் விஜயாவும் காத்திருந்தனர். “மாப்பிள்ளை அவர் வீட்டில் ஏதும் சொல்ல வில்லையாம். இருவரும் நன்றாகச் சண்டை பிடித்திருக்கிறார்கள் போலத் தெரிகிறது.” “பரவாயில்லை. நிம்மதியாக இருக்கிறது” என்றாள் ராதா. “என்ன அண்ணி ? இப்படி சொல்கிறீகள்.” “உங்கள் மாப்பிள்ளையைப் பற்றித் தெரிகிறதல்லவா ? அதைச் சொன்னேன். தங்கள் பிரச்னைகளை அவர்களுக்குள் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறார். பெற்றவர்களிடம் சொல்லி விஷயத்தைப் பெரிது படுத்தாமல் பக்குவமாக நடந்துகொள்கிறார்.அதை எண்ணி சந்தோஷப்படுங்கள்” ” என் மகளுக்குப் புத்தி வேண்டுமே !” “நீ பேசாமல் ராதாவிடம் அவளை ஒரு ரெண்டு நாளைக்கு கொண்டுவந்து விடு. எல்லாம் சரியாகும்” என்றார் விஜயா. ” இல்லை அம்மா. அது சரி வராது. அவளை நானே சரி செய்கிறேன்.” என்று புறப்பட்டாள். ராதா பின்னோடு சென்று வழியனுப்பி வைத்தாள். அடுத்த வாரம் தன் பிறந்த நாளைப் பெற்றோருடன் கழிக்க வீட்டிற்கு வந்திருந்தாள் மீரா. அதற்கு முன் தினம் சாரு கணவன் வீட்டிற்கு புறப்படுவதாகவும் விவரம் சொன்னாள் கமலா. கோயில், சிறப்புப்பூஜை, உணவு என்று எல்லாம் முடித்துவிட்டு அனைவரும் முற்றத்தில் அமர்த்திருந்தனர். கமலா அப்போதுதான் உள்ளே வந்தாள். அனைவரும் அமர்த்திருப்பதை பார்த்துவிட்டு, “அடடே எல்லாரும் இருக்கிறீர்கள் ! என்ன மீரா இன்று விடுமுறையா?” என்றபடி உ ள்ளே வந்தாள். “என்ன மகளை அனுப்பிவிட்டாயா ?” என்று விஜயா கேட்க, “ஒரு வழியாக” என்று பெரும்மூச்சுவிட்டாள். மீராவுக்கு ஒன்றும் புரியவில்லை. “அத்தைக்கு குடிக்க எதாவது எடுத்துவா” என்று மீராவை கிளப்பினாள். “சரி, நீ இரும்மா ! நானும் அப்பாவும் புறப்படுகிறோம்.” என்றார் கோபாலன். “இன்றைக்கு ஏன் தாமதம்?” என்றாள் கமலா. “இன்று மீராவின் பிறந்தநாள். எல்லோரும் கோவிலுக்குச் சென்று வரத் தாமதம் ஆகிவிட்டது” என்றார் கோபாலன். “அட, யாரும் சொல்லவே இல்லையே” என்றாள் கமலா. “நான் என்ன சின்னக் குழந்தையா அத்தை !” என்று கேட்ட படி மீரா வந்தாள். “முன்பே தெரிந்திருந்தால் உனக்குப் பரிசு வாங்கி வந்திருப்பேன். பரவாயில்லை” என்ற படி தன் கைப்பையைத் திறந்து அதிலிருந்து சில நோட்டுகளை மீரா கையில் திணித்தாள். “வேண்டாம் அத்தை” “வேண்டாம் என்று எல்லாம் சொல்லக் கூடாது” என்று வைத்தாள். தந்தைக்கும் தாத்தாவிற்கும் விடையளித்து விட்டு உள்ளே வந்தாள். பெண்கள் மூவரும் பேசிக் கொண்டிருந்தது கேட்டது. மீராவைப் பார்த்ததும் “நீ உள்ளே சென்று படி” என்றாள் ராதா. “ஏன் அண்ணி அவளை உள்ளே அனுப்புகிறீர்கள். அவளும் எல்லாம் தெரிந்துகொள்ளட்டும்” என்றாள் கமலா. அவர்கள் பேசும்போது தான் இருக்கக் கூடாது என்று அம்மா எண்ணுகிறார் என்று மீரா புரிந்துகொண்டாள். “எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது. இதோ வருகிறேன்.அத்தை” என்று உள்ளே செல்ல ஒரு எட்டு எடுத்து வைத்தாள். “உங்கள் மகள் சமர்த்து அண்ணி. நீங்கள் சொல்வதைப் புரிந்துகொண்டு உள்ளே ஓடி விட்டாள்” என்றாள் கமலா. “உன் மகள் கதையைச் சொல்” என்றாள் விஜயா. “ஏன் ? உன் பேத்தி என்று கேட்பதுதானே !”என்றாள் கமலா முறைத்த படி. ” என் பேத்திக்கு எப்படி புத்தி வந்தது ?” நடந்ததைச் சொன்னாள் கமலா ” இப்படியே இருந்தால் மாப்பிள்ளை உன்னை வெறுத்துவிடலாம். உன் வாழ்க்கை நீயே முடிவுசெய்துகொள் ” லட்சுமி அண்ணியும் ‘நம் பெண்ணை அவனுக்குப் பிடிக்காமல் போகுமா ?’ என்று அவளை ஏற்றி விட்டுக்கொண்டிருந்தார். “எல்லாம் மாப்பிள்ளை அவர் வீட்டில் சொல்லாமல் இருக்கும் வரை தான். சொல்லி விட்டால் அவர் பெற்றோர் நிச்சயம் விஷத்தைப் பெரிதாக்கி விடுவார்கள். இவள் இங்கிருக்கிறாள். மாப்பிள்ளையின் மனத்தில் இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி விடுவார்கள். பின் அவரும் இவளை வெறுக்கத் தொடங்கிவிடுவார். ’ என்றேன்”. “வெறுப்பு வந்து என்ன செய்துவிடுவார்கள்” என்றாள் சாரு. “என்ன செய்வார்களோ ? அது அவர்களுக்குத் தான் தெரியும். ஆனால் உங்கள் பிரச்சனை பெரியவர்கள் பேசினாள் இன்னும் பெரிதாகத்தான் முடியும். கோவத்தில் இந்தப் பெண் வேண்டாம் என்றால் என்ன செய்வது. நீ இங்கேயே தங்கி விட வேண்டியது தான்” “அப்படியெல்லாம் சொல்வார்களா ?” என்று பயத்துடன் கேட்டாள் சாரு. மகள் பயத்தை உணர்ந்து “அவர்கள் என்ன சொன்னாலும் அம்மா, அத்தை எல்லோரும் உன்னுடன் இருப்போம். பார்த்துக்கொள்ளலாம்.” “உன் அம்மா சொல்வது போல் எல்லாம் அவர்கள் செய்யமாட்டார்கள். நீ பயப்படாதே ! வா நாம் ஷாப்பிங் செல்வோம்” என்றாள் லட்சுமி. “இல்லை! நான் வரவில்லை நீங்கள் சென்று வாருங்கள்.” என்றாள் சாரு. சிறிது நேரம் கழித்து அன்னையிடம் வந்தாள். ” அவர் அம்மா அப்பாவிடம் சொல்லிருப்பாரா ?” “எனக்கு எப்படித் தெரியும் ? நீயே கேட்டுப்பார்” “சொல்லியிருந்தால் என்ன செய்வது ?” மகளை உற்றுப் பார்த்தாள் கமலா. ” அவர் சொல்லியிருந்தால், உங்கள் இருவருக்கும் இடையே இனி பெரியவர்கள் இருப்பார்கள். இதில் நானும் உன் அப்பாவும் அடக்கம். உங்கள் செயல்களை ஆராய்வோம். உங்கள் இடையில் ஏதும் பிரச்சனையா என்று ஆராய்த்துக்கொண்டே இருப்போம். இதை மாப்பிள்ளை விரும்பவில்லை. இதுவரை அவர் யாரிடமும் சொல்லவில்லை. அவர் உனக்குக் கெட்ட பெயர் வரக் கூடாது என்று நினைக்கிறார். ஆனால் நீ என்ன செய்துவைத்திருக்கிறாய் ? உனக்கு அவர் தகுதியானவர் என்று நிரூபித்துவிட்டார். ஆனால் நீ அவருக்குத் தகுந்தவள் போல் நடந்து கொண்டாயா என்று யோசித்துப்பார்.” சாருவுக்கு விட்டுக்கொடுத்தல் என்பதைப் புரியவைக்கவேண்டி இருந்தது. சில தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுப்பார்கள். சில இடங்களில் ஒருவர் மட்டுமே விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். ஒருவர் மட்டும் விட்டுக்கொடுக்கும் இடங்களில் நாளடைவில் காதல் மறைந்துபோகும். கட்டாயத்திற்காக வாழத்தொடங்குவார்கள். அப்படி வாழ்வதில் யாருக்கு நிம்மதி இருக்கும். சாரு எதுவும் பேசவில்லை. சாரு விருப்பத்திற்காகப் பார்த்துப் பார்த்துச் செய்பவன், அவனுக்காக இவள் என்ன செய்தாள் ? இப்போது கூட இவள் எல்லோரிடமும் கணவனைப் பற்றிப் புலம்பினாள். ஆனால் அவன் ? மறுநாளே அவள் புறப்படுவதாகச் சொன்னாள். அவள் கணவன் வந்து அழைத்துப்போவதாகச் சொல்லியும் கேட்காமல் அண்ணன் சந்துருவை அழைத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டாள். மகிழ்ச்சியில் கமலா மிதந்தாள். “அண்ணி உங்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.அவளிடம் கெஞ்சிக் கொஞ்சி பேசி ஒன்றும் பலிக்கவில்லை. பயமுறுத்தச் சொன்னீர்கள். சரியாக வேலை செய்துவிட்டது” என்றாள் கமலா. “ஓ, ராதாவின் திட்டமா?” என்றார் சிரித்தார் விஜயா. இங்கே மூவரும் கலகலப்பாகப் பேசிக்கொண்டிருக்க, மீரா புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தாள். அவள் கவனம் புத்தகத்தில் இல்லை. இந்தப் புத்தகம் ஆனந்தை நினைவு படுத்தியது. இல்லை. அதிகம் நினைவுபடுத்தியது. அறிக்கை தயார் செய்தபோது அடிக்கடி அவனிடம் பேசநேர்ந்தது. இடையில் தேர்வுக்குத் தயார் செய்தபோது சில நாட்கள் பேசவில்லை. என்றாலும் இருவருக்கும் இடையே விரிசல் என்று எதுவும் இல்லை. ஆனால் சாரு திருமண நாள் அன்று அவன் பேசிய விதம், இவளை வெகுவாகப் பாதித்தது.இனி பேச எதுவுமில்லை என்பது போல் அவன் பேசியது பெரிய ஏமாற்றத்தை அளித்தது. அதிக வேலை காரணமாக அப்படிப் பேசியிருக்கலாம் என்று அவளைச் சமாதானப்படுத்திக்கொண்டாலும் அதற்குப் பிறகு அவனுடன் பேசவில்லை. வீட்டிலிருந்தபோது வாரம் ஒருமுறையேனும் அவன் அழைப்பை இவள் எடுக்க நேரிடும். இப்போது விடுதிக்குச் சென்றபின் அதுவும் இல்லை. இப்போது அவளிடம் அலைபேசி இருக்கிறது. அவன் எண்ணும் அவளுக்குத் தெரியும். ஆனால் பேசத் தைரியம் இல்லை. அன்று பேசியது போல் அவன் பேசிவிட்டாள் ? ஏனோ அவளை மீறி அழுகை வரத்தொடங்கியது. ஏன் என்று அவளுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. தன்னிடம் பேச விருப்பம் இல்லாதவனை நினைத்துக்கொண்டிருக்கிறாள் என்று அவள்மீதான வெறுப்பா ? அவனுடன் பேச வேண்டும் என்ற தவிப்பா ? இல்லை அவன்மீதான கோவமா ? இவை மூன்றும் நல்லதில்லை என்று திருப்பத் திருப்ப அவளுக்குச் சொல்லிக்கொண்டாள். மனம் தான் அதை ஏற்காமல் முரண்டு பண்ணிக்கொண்டிருந்தது. அவளை மீட்டெடுக்க சரியான நேரத்தில் ஜீவன் அழைத்துவிட்டான். அவன் அழைப்பு அவளை ஓரளவு ஆனந்தின் நினைவிலிருந்து விலக்கியது. அதன் பின் அவள் தனியே இருக்க விரும்பவில்லை. பாட்டி அன்னையுடன் கலந்துகொள்ள எண்ணினாள். அப்போது மதிய உணவு தயாராக இருந்தது. பெண்கள் உண்டுமுடித்தபின் கமலா மீராவை அழைத்துக்கொண்டு ஷாப்பிங் செல்வதாகச் சொன்னாள். சாரு அவசரமாகப் புறப்பட்டதால் எதுவும் வாங்கித்தர முடியாததால் அவளுக்காக வாங்க வேண்டும். மீராவிற்கும் ஏதாவது வாங்கித்தர வேண்டும் என்று நின்றாள். அன்று மாலை மீரா விடுதிக்குச் செல்வதாக நினைத்திருந்தாள்.கமலாவே அவளை விடுதியில் விட்டுவிடுவதாகச் சொன்னாள். மீராவிற்கும் எங்காவது செல்ல வேண்டும் என்று இருந்தது. சரி என்று விட்டாள். கோவையில் மகளுக்காக ஆடைகளை வாங்கிக் குவித்தாள் கமலா. மீராவிடம் ஒவ்வொன்றுக்கும் ஆலோசனை கேட்டுக்கொண்டாள். மீராவிற்கும் பலவற்றை எடுத்தாள். வேண்டாம் என்றாலும் விடவில்லை. எல்லாம் முடிந்ததும் மீராவை விடுதியில் விட்டுவிட்டுக் கிளம்பினாள். மீரா தன் அறைக்கு வந்ததும், மதியத்திலிருந்து அடக்கி வைத்திருந்த அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தன் அறையைப் பகிரும் தோழி அப்போது நல்லவேளையாக அறையில் இல்லை. சிறிது நேரத்தில் அப்படியே உறங்கியும் போனாள். இரண்டு மூன்று நாட்களில் பழைய நிலைக்கு ஒருவாறு திரும்பினாள். இனி ஆனந்தை பற்றி நினைக்கவே கூடாது என்று முடிவெடுத்தாள். பகுதி 16 நாட்கள் மிக மெதுவாகவே நகர்ந்தது மீராவுக்கு மட்டும் இல்லை. ஆனந்த் இரு ஆலைகளையும் அவனே பார்த்துக்கொண்டான். அதற்கு முக்கியமா ஒரு காரணம். மீராவைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதுதான். ஆனால் அப்படி ஒன்று நடக்கவே இல்லை. சில சமயம் ஏதோ ஒரு சாக்கிட்டு வீட்டிற்குச் சென்று பார்க்கலாம் என்று கூட யோசித்து அந்த எண்ணத்தைக் கைவிட்டான். பலமுறை அவள் கல்லூரி வழியில் சென்றான். அவளைப் பார்க்க வாய்ப்பு கிடைக்குமா என்று பார்த்தான். மீரா அவளுக்கு எட்டாக் கனி என்று என்னதான் சொல்லிக்கொண்டாலும், அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் குறைந்தபாடில்லை. ஒரு அலுவல் முடித்துக்கொண்டு முன்பொரு முறை மீராவை அவன் பெற்றோருடன் சந்தித்த அதே தெரு வழியாக வர நேர்ந்தது. அவள் இங்கே இருப்பாளா ? என்ன மடத்தனம் இன்று கல்லூரி விடுமுறை கூட இல்லை இங்கே அவள் கல்லூரி வேளையில் எதற்கு வரப்போகிறாள் என்று தன்னை கடிந்துகொண்டு காரின் வேகத்தைக் கூட்ட எண்ணியவன் மீரா ஒரு கதவைத் திறந்து கொண்டு வெளியே வருவதைக் கண்டான். சட்டென்று காரை நிறுத்தினான். கிறீச் என்ற சத்தம் கேட்டு மீரா இவன் இருந்த திசையைப் பார்த்தாள். அவள் உடன் இருந்த பெண்மணியும் இவன் காரைத்தான் பார்த்துக்கொண்டிருந்தனர். ஒருகணம் யோசித்தான். மெதுவாகக் காரை அவள் அருகில் செலுத்தினான். மீரா காரை அடையாளம் கண்டிருக்க வேண்டும். அவளும் காரை நோக்கி நடந்து வர இவனும் இறங்கிவந்தான். “உங்களுக்கு ஒன்றும் இல்லையே” சற்றே பதற்றத்துடன் கேட்டாள் மீரா. “ஒன்றும் இல்லை ஒரு நாய் குறுக்கே வந்துவிட்டது” மீராவுடன் நின்றிருந்த பெண்ணும் அருகில் வந்தாள்.”இவர் ஆனந்த். தாத்தா ஊரில் பழக்கம்.” என்று அந்தப் பெண் கேட்கும் முன் அறிமுகம் செய்து வைத்தாள். “இவர் அம்பிகா ஆண்டி.” “வாருங்கள் தம்பி !” என்று அழைத்தாள் “நான் இன்னொருமுறை வருகிறேன். மீராவைப் பார்த்ததால் நிறுத்தினேன்.” அம்பிகாவின் மகனுக்கு ஒரு சிறிய விபத்து. கையில் முறிவு. அவனைப் பார்க்கவும் அவனுக்குச் சில புத்தகங்களைக் கொடுக்கவும் மீரா வந்திருந்தாள் என்பதைத் தெரிந்துகொண்டான். விடை பெற்றுக்கொள்ளும் முன். “உன்னை எங்கேனும் கொண்டு விட வேண்டுமா?” என்றான். “விடுதிக்குத்தான் செல்கிறேன். ஆட்டோ பிடித்துக் கொள்வேன். நீங்கள் புறப்படுங்கள்” . அவள் சொல்லி முடிக்கும் முன் லேசாகத் தூரல் போட்டது வானம். மழையை ஆனந்த் இன்று போல் என்று வரவேற்றான் என்பது அவனுக்கு நினைவிலில்லை. இவர்கள் இருவரும் பேசும் முன் “நீ இவருடன் செல் மீரா. இல்லை அங்கிள் வரும் வரை காத்திரு. இப்படியே சென்றால் நனைந்து விடுவாய்” என்றாள். “அங்கிள் வரத் தாமதம் ஆகலாம். நான் இவருடன் செல்கிறேன் ஆண்டி. இன்னொரு முறை வருகிறேன்” என்று ஆனந்துடன் காரில் ஏறிக்கொண்டாள். அவள் ஏறும் வரை காத்திருந்ததுபோல் மெதுவாகத் தூரிய மேகம், சட சட வென்று கொட்டத் தொடங்கியது. முக்கியச்சாலையை அடையும் வரை இருவரும் எதுவும் பேசவில்லை. ஆனந்த் தான் பேச்சைத் தொடர்தான் “படிப்பு எப்படிப் போகிறது” “பரவாயில்லை” “உங்கள் வேலை எப்படிப் போகிறது” “அப்பாவிற்குச் சற்றே ஓய்வு கொடுக்க வேண்டும் என்று இரண்டு இடத்திலும் நான் தான் பார்த்துக்கொள்கிறேன்.” வேலை அதிகம் என்பதால் தான் இவன் அன்றும் அப்படிப் பேசினானா என்று அவள் யோசனை செய்துகொண்டிருந்தாள். அவள் முகத்தைப் பார்த்துவிட்டு “என்ன ? பலத்த யோசனை. கூடிய சீக்கிரம் பொறுப்பேற்கப் போகிறாயா ?” “நிச்சயம் இல்லை” “ஏனோ ?” “அப்பாவிற்கு” என்று தொடங்கியவள்,” எனக்கு ஆர்வம் இல்லை” அதற்குள் அவள் விடுதி வந்திருந்தது. ஆனால் மழை ஓய்ந்தபாடில்லை.அவள் இறங்க எண்ணியபோது காரின் சென்ட்ரல் லாக் செய்யப்பட்டிருந்தது. “நான் இறங்கிக்கொள்கிறேன்” “மழை சற்றே ஓயட்டும்”. “உங்களுக்கு நேரமாகி விடும். இதோ நான் கேட்டி ல் சிறிது நேரம் நின்றுவிட்டு உள்ளே ஓடிவிடுவேன்” “வேண்டாம்” அதற்குள் அவள் செல் சிணுங்கியது. அம்பிகா ஆண்டி. “ஹலோ ! நான் வந்துவிட்டேன். சரி ஆண்டி” என்று தொடர்பைத் துண்டித்தாள். “என்மேல் கோவமா ?” என்றாள் மீரா. “எதற்கு ?” “எனக்குப் பொறுப்பேற்க விருப்பமில்லை என்றேனே” “அவ்வளவு ஆர்வத்துடன் காற்றாய். இரண்டு மாதத்தில் ஏன் இப்படியொரு மாற்றம் ?” என்ன சொல்வது என்று தெரியவில்லை மீராவுக்கு. ஒரு கணம் பார்த்து விட்டு” நீங்கள் மேட்டுப்பாளையம் வரும் முன் எங்கு இருந்தீர்கள்.” என்று பேச்சை மாற்றினான். “இங்கே தான்” “இங்கே என்றால் ?” “கோயம்புத்தூரில், இன்று என்னை ஏற்றிக்கொண்டு வந்தீர்களே, அதுக்கு அடுத்த வீடு தான். ஏன் ?”. “ஒன்றுமில்லை. ஜீவா சென்னையில் படிப்பதால் அங்கே இருந்திருப்பீர்களோ ? என்று தான் கேட்டேன்.” “இல்லை, இல்லை, பிறந்தது, வளர்த்தது எல்லாம் இங்கே தான். ஜீவா தான் மேல்படிப்பிற்குச் சென்னை சென்றான்.” மழை சற்றே ஓய்ந்தது.” நான் செல்கிறேன்” என்றாள் மீரா. காரின் லாக் திறந்த சத்தம் கேட்டதும் அவள் “பை” என்று இறங்கிச் சென்றாள். மறுநாள் ராஜனிடம் கோபாலன் குடும்பத்தைப் பற்றிக் கேட்க வேண்டும் என்று யோசித்துக்கொண்டு காரைக் கிளப்பினான். கண்ணாடியில் பின்புறம் வரும் வண்டிகளைப் பார்த்தபோது, மீரா உள்ளே செல்லாமல் நின்று கொண்டிருக்க உள்ளிருந்து பல பெண்கள் வெளியே வந்துகொண்டிருந்தனர்.வண்டியை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்றான். “என்ன ?” ” கல்லூரி விடுமுறையாம்.கல்லூரி நிறுவனர் காலமாகிவிட்டாராம். இன்றும் நாளையும் விடுமுறையாம். ” “நீ என்ன செய்யப் போகிறாய்” ” இன்று வியாழன், நாளையும் விடுமுறை என்றால் நான்கு நாட்கள் விடுமுறை. ஊருக்குச் செல்ல வேண்டியது தான்.” “சரி வா. போகலாம்” “எங்கே ?” ” உன்னை வீட்டில் விடுகிறேன் ” “நான் மேட்டுப்பாளையம் செல்ல வேண்டும்” “அது எனக்குத் தெரியும்.” ” அறையிலிருந்து சில பொருட்களை எடுக்க வேண்டும்” “எடுத்து வா ! நான் இங்கே நிற்கிறேன்” “ஐயோ ! வேண்டாம் !” அவன் முறைத்தபடி “எப்பொழுதும் பல முறை கேட்டால் தான், சம்மதிப்பாயா?” அவனுடன் ஒருமணி நேரத்திற்கு மேல் பிரயாணம். வேண்டாம் என்று சொல்ல எப்படி மீராவுக்கு மனம் வரும். “அடுத்த முறை நீங்கள் கேட்கும் முன் வருகிறேன். பத்து நிமிடம்”சொல்லிவிட்டு உள்ளே ஓடினாள். மீண்டும் மழை தொடங்கியது. அறையில் தோழிகள் எப்படிச் செல்வது என்று குழம்பிக்கொண்டிருந்தனர். ஆனந்திடம் கேட்கலாம். அவன் காரில் காத்திருந்தபோது செல் ஒலித்தது. புது எண். “ஹலோ, ஆனந்த் ஹியர்” “நான் மீரா. ஒரு சிறிய உதவி.என் தோழிகள் இருவரை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் விட வேண்டும். ஓகேவா ?” “நோ ப்ராப்லம்” என்றான் சிரித்தபடி. தோழிகள் இருவரையும் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு கார் மேட்டுப்பாளையம் நோக்கிச் சென்றது. “தேங்க்ஸ்” என்றாள் மீரா. “எதற்கு இவ்வளவு பர்மாலிட்டி.” “ஆண்டி அங்கிள் எப்படி இருக்கிறார்கள் ?” “இப்போதாவது கேட்கத்தோன்றியதே ! நன்றாக இருக்கிறார்கள்” “நீங்களும் தான் என் வீட்டைப் பற்றிக் கேட்கவே இல்லை” “தினமும் உன் அப்பாவிடமும் தாத்தாவிடமும் கேட்பேனே !” “ஓ” சிறிது நேரம் மௌனம். மழை வேகம் அதிகரிக்க, கார் வேகம் குறைந்திருந்தது. “ரொம்ப சிரமமாக இருந்தால், கொஞ்ச நேரம் வண்டியை நிறுத்திவிடுங்கள்.” ” தேவையில்லை. எனக்குப் பழக்கம் தான் ” அவன் கவனம் சாலையிலிருந்தது. அவன் முகத்தை ஆராய்த்துக்கொண்டிருந்தாள். “என்ன கேட்க வேண்டுமோ கேட்டுவிடு” சட்டென்று துள்ளி விழுந்தாள். ஒருமுறை அவளைத் திரும்பிப் பார்த்து “என்ன ?” “ஒவ்வொரு முறை ஒவ்வொரு மாதிரி பேசுகிறீர்கள். உங்களிடம் எப்படிப் பேச வேண்டும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஒருமுறை சாதாரணமாக இருக்கிறீர்கள். கேலிசெய்தால் சிரித்துக்கொண்டே பதிலளிப்பீர்கள். இன்னொருமுறை திடீர் என்று கோபமாகப் பேசுவீர்கள்.” “உன்மீது நான் கோபப்பட்டேனா? எப்போது ?” “முதல் முறை அலுவலகத்தில். இரண்டாம் முறை சாருவின் திருமணத்தில்” அவன் சிரித்தான். “இப்போது எதற்குச் சிரிக்கிறீர்கள் என்று கூடப் புரியவில்லை” “அன்று அலுவலகத்தில் உன்மீது வருத்தம் தான் கோபம் இல்லை என்று அன்றே சொன்னேன்” ” சாருவின் திருமணத்தில் ? ” இது மீரா. அப்போதும் அவனுக்கு அவள்மீது என்ன கோவம். ஏமாற்றம் மட்டும் தான். அதுவும் அவன் மேலே தான். அதை அவளிடம் சொல்ல அவனால் முடியவில்லை. “அதுவும் உன் கற்பனையே ! எனக்கு எப்போதும் உன்மீது கோபம் இருந்ததில்லை.” “நம்புவதுதான் கடினம்” “ஏனோ” “பிறகு ஏன் என்னிடம் பேசவே இல்லை ?” “நான் பேசுவதா ?நீதான் விடுதியில் தங்கச் சென்றுவிட்டாய். ஆலைக்கு வரவில்லை. நேரில் பார்த்தும் பேசாமல் சென்றது போல் சொல்கிறாய்” “எனக்கு ஞாபக சக்தி அதிகம். திருமண மண்டபத்தில் என்னிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை” வண்டியை ஓரமாக நிறுத்தினான். ஏன் நிறுத்துகிறான் என்று புரியாமல் பார்க்க, இரு கைகளையும் தலை மேல் கூப்பி “மன்னித்துவிடுத் தாயே!” என்றான். மீராவினால் சிரிப்பை அடக்க முடியவில்லை. குபீரென்று சிரித்தாள். “அப்பா! பெண்களிடம் தப்பிப்பது ரொம்ப கடினம் ?” என்றான். “பெண்களா ? நிறையப் பேரைத்தெரியும் போல ?” “ஓ !தெரியுமே. ஆனால் மாட்டிக்கொண்டது இருவரிடம் தான்” என்றான் அவன். அதற்கு மேல் அவள் எதுவும் கேட்கவில்லை. இப்போது அவன் தொடங்கினான் “இதே குற்றச்சாட்டுகளை உன்மேல் நானும் சொல்லலாம்” “இது பொய்க் குற்றச்சாட்டு. அப்போதும் நான் தான் உங்களைத் தொடர்பு கொண்டேன் . நீங்கள் ஒருமுறை கூட எனக்கு அழைத்ததில்லை”. “செல் நம்பர் கொடுத்திருந்தால் பேசியிருப்பேன்” “நீங்கள் தான் அன்று ஒருமாதிரி பேசினீர்களே. என்னோடு பேச நேரமில்லை என்று நினைத்தேன்” “ஒரு சந்தர்ப்பத்தையும் விடமாட்டாய்” “விடமாட்டேன்” பேச்சு அப்படியே தொடர்ந்தது. வீடும் வந்துவிட்டது. இறங்கும் முன் “முன்பு அழைத்தது என் எண்” என்றுவிட்டு இறங்கினாள். “நீங்களும் உள்ளே வாருங்கள்” என்றாள். “இன்னொருமுறை பார்க்கலாம்”, என்று புறப்பட்டான். மீண்டும் இப்படியொரு வாய்ப்பு எப்போது கிடைக்குமோ ? பகுதி 17 வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இருவரும் அதைச் சரியாகவே செய்தார்கள். முதலில் அவளுடன் இருக்கும் நேரம் போதும் என்று எண்ணினான். பிறகு அவளைத் தன்னால் நன்கு பார்த்துக்கொள்ள முடியும் என்று எண்ணி தன் தாழ்வு மனப்பான்மையைத் தூக்கி எறிந்தான். தினமும் பேசினார்கள். வாரம் ஒருமுறையேனும் சந்தித்தார்கள். ஜீவனின் முதல் நிலை தேர்வு முடியும் வரை அவன் ஊருக்கு வரப்போவதில்லை என்றான்.இப்போது படிப்பு சம்பந்தமாகவும் ஆனந்திடம் நிறையே பேசினாள். பொதுவாக வார இறுதியில் சந்திப்பது தான் அவர்கள் வழக்கம். அவனுடன் செல்வதற்காகவே எப்போதும் வெள்ளி இரவே வீட்டிற்குப் புறப்படுபவாள், சனிக்கிழமை காலையில் அவனுடன் காரில் செல்வாள். திங்கள் காலைக் கோபாலன் அல்லது மணி அழைத்துச் செல்வது வழக்கமாயிற்று. ராதா மகள் அடிக்கடி ஆனந்துடன் வருவதைப் பற்றிக் கேட்டாள். மீரா ‘நாங்கள் நண்பர்கள்’ என்று விட்டாள். காதலிக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளவில்லை என்றாலும் ஒருவர் மனம் மற்றவருக்குப் புரிந்தது. நாட்கள் இனிமையாக நகர்ந்தது. திடீரென்று ஒருநாள் மாலையில் விடுதிக்கு வந்திருந்தான். அவளுக்காக ஒரு பரிசைக் கொண்டு வந்திருந்தான். சாலையில் நின்று பேசுவதற்குப் பதிலாக எதிரில் இருந்த ஒரு பழச்சாறு அங்காடியில் சென்று அமர்ந்தனர். ” என்ன திடீரென்று ! நேற்று பேசியபோது ஒன்றும் சொல்லவில்லை. மெசேஜ் கூட இல்லை” “ஒரு சின்ன சர்ப்ரைஸ். ஒரு கையிலிருந்த ஒரு பார்ஸலை எடுத்து அவளிடம் நீட்டினான்.” “என்ன கிப்ட் ? இன்றைக்கு என்ன விசேஷம் ?” “உனக்கு ஞாபகம் இல்லையா ?” “இன்றைக்கு இருவரின் பிறந்தநாளும் இல்லை ! வேரென்ன ?” “அப்போது கிப்ட்-ஐ திருப்பிக்கொடு” “கொடுத்தையெல்லாம் திருப்பிக் கேட்கக் கூடாது. என்ன என்று சொல்லுங்கள் ?” “பஸ்ட் இயர் அணிவெர்சரி” சிறிது நேரம் யோசித்து “அணிவெர்சரியா ?” அவன் கண்களைக் கூர்மையாக்கி அவளைப் பார்ப்பதைக் கண்டவுடன் “சத்தியமா தெரியவில்லை பா. நீங்களே சொல்லிவிடுங்கள்.ப்ளீஸ்” என்றாள் மீரா முகத்தைச் சோகமாக வைத்துக்கொண்டு. “நாம் இருவரும் சந்தித்து ஒரு வருடம் ஆச்சு” “இன்றா ? ஓ தாத்தாவைப் பார்க்க நீங்கள் வீட்டிற்கு வந்திருந்தீர்கள்.சாரி பா. முதலில் மீட் பண்ணினது ஞாபகம் இருக்கிறது. ஆனால் தேதி ஞாபகம் இல்லை” அவளைக் கோபமாகப் பார்ப்பதுபோல் ஒருகணம் பார்த்தான். “இனிமேல் எல்லா வருஷமும் நான் மறக்காமல் சொல்வேன். ஓகே வா” என்றாள் மீரா. “சரி சரி. கிப்ட்டை பார் ?” அவள் பிரித்துப் பார்த்தாள்.அது ஒரு சிறிய மரத்தின் முப்பரிமாண ஓவியம். “இது என்ன? இதற்கு என்ன அர்த்தம்.” “மனோரஞ்சிதம் செடி. என்வீட்டில் உனக்கு மிகவும் பிடித்தது. இது வீட்டில் இருக்கும் செடியின் புகைப்படத்தை வைத்துச் செய்தது”. அவளுக்குப் பிடித்த மலர் என்று அவன் வீட்டில் ஒரு முறை சொல்லி இருக்கிறாள். “நீங்களே செய்தீர்களா?” “ஐடியா மாத்திரம் எண்ணுடையது. நண்பன் ஒருவன் நமக்குப் பிடித்தவற்றை இதுபோல் செய்து தருவான்.” “இதனுடன் ஒரு மனோரஞ்சித பூவையும் பறித்து வந்திருந்தால் இன்னும் 100 மதிப்பெண் உங்களுக்குக் கொடுத்திருப்பேன்.” “ஓ !இப்போது எவ்வளவு மார்க்” “99” “எனக்கு 99 தே போதும். பூவேண்டுமென்றால் நீ என் வீட்டிற்கு வந்தால்தான் கிடைக்கும்.” “இப்போது வரட்டுமா ?” என்றாள் விளையாட்டாக. “தாராளமா ! இப்போதே போகலாம் ! ஆனால் அதன் பின் அதுதான் உன் வீடு. உனக்குச் சம்மதமா ?” அவள் கண்களை விரித்த விதத்தைப் பார்த்து, “ஏய் என்ன ?” என்று அவள் முகத்தின் முன் சொடுக்கு போட்டான். “என்ன போகலாமா ?” என்று சிரித்தான். அவள் புன்னகைத்தபடி வேறெங்கோ பார்க்க” ரொம்ப யோசிக்காதே ! முதலில் போய்ப் படிக்கிற வேலையைப் பார்.” என்று அவள் தலையில் லேசாகத் தட்டிவிட்டுப் புறப்பட்டான். வீடு வந்தவன் பத்மா சுந்தரத்திடம் அவன் விருப்பத்தைச் சொன்னான். பத்மாவுக்கு ஏக சந்தோசம். சுந்தரம் சற்றே தயங்கினான், கிருஷ்ணசாமி இதற்குச் சம்மதம் தெரிவிப்பார் என்று. மகனிடம் காட்டிக்கொள்ளவில்லை. பத்மா சீக்கிரமே கல்யாணம் பேசிவிடலாம் என்று பரபரத்தாள். ” அவள் இன்னும் படித்துக்கொண்டிருக்கிறாள். படிப்பு முடியட்டும் “. “நம் வீட்டிற்கு வந்தபிறகு படிக்கட்டும்”. “இனி உன் அம்மாவிற்குப் பொறுமை இருக்காது.” என்ற சுந்தரம் “அவர்கள் வீட்டில் தெரியுமா ?” என்றார். “இன்னும் இல்லை அப்பா” “இப்போது தான் முதல் ஆண்டு இல்லையா ?.இன்னும் நாள் இருக்கிறது.இதில் அவசரப் படக் கூடாது.” என்று மனைவியைக் கட்டுப்படுத்தினர். ஆனந்த் எதிர்பார்த்தும் அது தான். அன்று இரவு இருவருக்குமே தூக்கம் வரவில்லை. மறுநாள் காலை விடிந்து விடிந்ததுமாய் அவளுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினான். “சம்மதமா?” அலைபேசியில் அழைத்தால் அவள் தூக்கம் களைத்துவிடுமோ என்றுதான் குறுஞ்செய்தி அனுப்பினான். செய்தி சென்றடைந்த மறுகணம் அவள் அவனுக்கு அழைத்தாள். “தூங்கிக்கொண்டு இருப்பாய் என்று நினைத்தேன் ?” “இல்லை. இப்போதுதான் எழுந்தேன்” “சரி, சொல். சம்மதமா ?” “விளையாட்டு வேண்டாம் ஆனந்த் !” “ஐ’ம் டேம் சீரியஸ்” ” நான் வீட்டில் பேச வேண்டும். எனக்குக் கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறது “. “வீட்டில் பேச நேரம் வேண்டுமென்றால் சரிதான். இப்போது தான் நிம்மதியாக இருக்கிறது. ஆனால் நான் சொன்னதை பற்றி முடிவெடுக்க உனக்கே சமயம் தேவைப்படுகிறது என்று சொல்லிவிடுவாயோ என்று பயந்தேன். உனக்குச் சம்மதம் என்று வைத்துக்கொள்ளலாம் தானே !” “நான் மறுப்பேன் என்று தோன்றுகிறதா ?”. அவள் அப்படிச் சொன்னாலும் மனதிற்குள் ஒரு தடுமாற்றம். ஒருவர் சந்தோஷத்தின் உச்சியில் இருக்க, மற்றொருவர் பெரும் குழப்பத்தின் பிடியில். மீரா ஆனந்துடன் வீட்டிற்குச் சென்ற போதே ராதா, மகளிடம் பேசினாள். மற்றவரிடம் உதவி கேட்பதை விரும்பாத மீரா, இப்போது நடந்துகொள்வது அவளுக்கு வித்தியாசமாகப் பட்டது. மகளிடம் ஒளிவு மறைவின்றி பேச நினைக்கும் ராதா மகளிடம் கேட்டாள். ராதா கேட்ட சமயத்தில் மீரா ஆனந்த் இடையே காதல் என்று சொல்லும் அளவுக்கு வளரவில்லை. ஆனந்துடன் நேரம் கழிப்பது பிடித்திருந்தது. அதனால் ‘நாங்கள் நல்ல நண்பர்கள் என்று முடித்துவிட்டாள்’ மீரா. இப்போது ஆனந்துடன் அடுத்த கட்டத்தைப் பற்றிப் பேசுமுன், பெற்றவர்களுடன் இதுபற்றிப் பேச வேண்டும் என்று முடிவெடுத்தாள். ஆனந்த் அழைப்பைத் துண்டித்தபிறகு கோபாலனுக்கு அழைத்தாள். அலைபேசியில் விஷயத்தைப் பேச விருப்பமின்றி மாலை வீட்டிற்கு வருவதாகத் தெரிவித்தாள். “உடம்புக்கு ஏதும் சரி இல்லையா ? நானும் அம்மாவும் வரட்டுமா ?” “ஒன்றும் இல்லை அப்பா ? சும்மாதான் வர வேண்டும் என்றிருந்தது.” “சரி! நான் மதியம் அங்கு ஒருவேளையாக வரவேண்டி இருக்கிறது. நானே உன்னை அழைத்துவருகிறேன்” “சரி அப்பா” என்றாள்“. மாலை தந்தையுடன் வீடு செல்லும் வரை பொதுவான விஷயங்களையே பேசினார்கள். ஜீவாவின் தேர்வு இன்னும் சில நாட்களில் நடக்கவிருந்தது.அதுபற்றியே அதிகம் பேசினார்கள். அவன் ஊருக்கு வந்து வெகுநாட்கள் ஆகிவிட்டது. இரவு உணவிற்குப் பிறகு பெற்றோரிடம் சென்றாள். தாத்தா பாட்டி முன்னிலையில் பேச அவளுக்குத் தயக்கம் இருந்தது. மகள் எதுபற்றிப் பேசப்போகிறாள் என்று இருவரும் ஒருவாறு ஊகித்திருந்தார்கள். அவள் பெற்றோர்கள் அல்லவா ! பெற்றோரின் அறைக் கதவருகே நின்று கொண்டு “கொஞ்சம் பேச வேண்டும் அப்பா”. “உள்ளே வாடா ?” தயங்காமல் விஷயத்தைத் தொடங்கினாள். “ஆனந்த் பற்றிக் கொஞ்சம் பேச வேண்டும்”. பல முறை ஒத்திகை பார்த்திருந்தாள் என்பதால் சட்டென்று சொல்லிவிட்டாள். பெற்றோரின் யூகம் சரியாக இருந்தது. “ஆனந்தை பற்றி நீ என்ன சொல்ல வந்தாய்?” என்றாள் ராதா. குரலில் கடுமை இருந்தது போல் தோன்றியது. ராதாவின் முகத்தைப் பார்த்தாள். அன்னையின் முகம் சாதாரணமாகவே இருந்தது. “எங்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்திருக்கிறது.” “அன்று ‘நாங்கள் நண்பர்கள் என்றாய்’.” “உண்மையில் நீங்கள் கேட்ட சமயத்தில் நண்பர்களாகத்தான் இருந்தோம். இப்போது அப்படி இல்லை. உங்களிடம் சொல்லவிட வேண்டும் என்று தான் …” “என்ன முடிவு செய்து இருக்கிறாய்” இது ராதா. இம்முறை அவள் குரலில் கோபம் இருந்தது. “முடிவு செய்யும் அளவுக்கு இப்போது ஒன்றும் இல்லை அம்மா. நான் யோசிப்பது சரியா என்று தெரியவில்லை.” மகள் எதோ குழப்பத்தில் இருக்கிறாள் என்று இருவரும் புரிந்துகொண்டனர். ” நீ என்ன சொல்ல வேண்டுமோ, தயங்காமல் சொல்” என்றார் கோபாலன் “ஆனந்த் நல்லவர். நல்ல திறமைசாலி. கண்ணியமானவர் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனால் அவர் உங்கள் மகளை விரும்புகிறாரா இல்லை தாத்தாவின் பேத்தியாக விரும்புகிறாரா என்று தெரியவில்லை. இதை அவரிடம் கேட்கவும் தயக்கமாக இருக்கிறது” மகளின் குழப்பம் ராதாவிற்குப் புரிந்தது. ஆனால் கோபாலன் “இரண்டும் நீ தானடா ! இதில் என்ன குழப்பம்” “உன் கேள்வி சரிதானா மீரா?” என்றாள் ராதா. “உன் மகள் என்ன பிதற்றுகிறாள்” என்றார் கோபாலன். ராதா தொடர்ந்தாள் “எந்த உறவும் ஒருவர் மீது ஒருவருக்கு ஏற்படும் உணர்வு. இதில் இன்னாருடைய மகள், இன்னாருடைய பேத்தி என்று உணர்வு மாறுபடுமென்றால், அந்த உறவு உறுதியானது இல்லை. இப்போது சொல். உன் கேள்வி சரியா என்று ?” மகள் கேட்டது கோபாலனுக்கு விளங்கவில்லை. மனைவி பேச அவருக்கு விளங்கியது. ஆனந்த் குடும்ப அந்தஸ்துக்கு முக்கியத்துவம் கொடுப்பானா ? என்று மகள் குழம்பி நிற்கிறாள். இப்போது அவர்கள் இந்த ஊரிலேயே வசதியானவர்கள் தான். ஆனால் ஒரு வருடம் முன்பு வரை ஒரு சாதாரண குடும்பம். இன்று வரை கோபாலனுக்கே அவர் பூர்வீக அந்தஸ்தைத் தோளில் போட்டுக்கொள்ள யோசனை தான். மிகவும் எட்ட நிற்பதுபோல் பெரியவருக்குத் தோன்றக் கூடாது என்று எதையும் காட்டிக்கொண்டதில்லை. மகளின் குழப்பம் தவறென்று சொல்ல அவருக்கு மனம் வரவில்லை. இது அனைத்தும் தன்னால் தான் என்ற குற்ற உணர்வு அவருக்குத் தோன்றாமல் இல்லை. அதில் உழன்றுகொண்டிருப்பதில் பயனும் இல்லை. இப்போது மகளுக்கான ஒரு தெளிவைத் தர வேண்டும். “அம்மா சொல்வதைச் சிந்தித்துப் பார். உனக்கு ஆனந்தையும், ஆனந்தருக்கு உன்னையும் பிடிக்கும் என்றால், அடுத்து உன் யோசனை இருவரின் பெற்றோரிடம் சம்மதம் வாங்குவதாக இருக்க வேண்டும். அதை விடுத்தது ஒருவர் மீது இருக்கும் நேசம் எதனால் வந்தது என்ற எண்ணம் தோன்றினால் …… வேண்டாம் அம்மா! இதனை இத்தோடு விட்டுவிடு.” ஒரு கணம் மீரா பதறிப்போனாள். பெற்றோர் அவள் காதலை வேண்டாம் என்கிறார்கள். அவள் குழப்பத்தைப் போக்க ஆலோசனை கேட்க வந்தாள். ஆனால் எதோ கேட்க, அவர்கள் தன் காதலில் புரிதல் இல்லை என்று சொல்லிவிட்டனர். “இல்லை அப்பா ! இல்லை. ஆனந்தை பற்றி எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை . நான் தான் குழம்புகிறேன். இல்லை நான் சரியாக உங்களிடம் சொல்ல வில்லை . அது அது ..” மீரா வெகுவாகத் திணறினாள். மகளை அருகில் அழைத்து ,” எங்களிடம் சொன்னதை நீ யாரிடம் சொன்னாலும் , உனக்கு ஆனந்தின் மேல் நம்பிக்கை இல்லை என்று தான் நினைப்பார்கள் . எல்லா உறவுகளிலும் நம்பிக்கை முக்கியம் .” கண்களில் நீர் திரையிட்டது “நீங்கள் சொல்வது எல்லாம் புரிகிறது அப்பா ! ஆனால் புது உறவில் எல்லாம் தாத்தாவின் அந்தஸ்தால் கிடைக்கிறதோ என்ற எண்ணம் . எதோ எனக்குத் தகுதி இல்லாத ஒன்றிற்கு ஆசைப்படுகிறோமோ என்று ஒரு தாழ்வு மனப்பான்மை .” கலகலவேன சிரிக்கத் தொடங்கிவிட்டார் கோபாலன். மீரா அழுகை நின்று திருதிருவேன விழித்தாள். “எதற்கு இப்போது சிரிக்கிறீர்கள்” என்று கோபமாகக் கேட்டாள் ராதா . “மகள் அழுதுகொண்டிருக்கிறாள் . அப்படி என்ன சிரிப்பு ?” “உனக்கு ஒன்றும் நினைவு வரவில்லையா ராதா ?” “என்ன ?” ” இருபத்தி ஐந்து வருடத்திற்கு முன் நீயும் இப்படி தான் புலம்பினாய் .” செல்லமாகக் கணவனை அடித்துவிட்டு “போதும் பழங்கதை . மகளைச் சமாதானப்படுத்துங்கள்”. சிரிப்பை அடக்கிக்கொண்டு ” உன் அம்மா இப்படித்தான் ஒருநாள் வந்து அழுதாள் . அவளுக்குக் காரணம் இருந்தது . இங்கே தாத்தா எங்களுக்குச் சம்மதம் தர வில்லை . அதனால் உன் அம்மா பயந்தாள் .ஆனால் நீ காரணமேயின்றி இப்படிக் குழம்புகிறாய் ! ராதா வளர்த்த மகளா நீ ” சட்டென்று நிமிர்த்து உட்கார்ந்தாள். ” ராதாவின் வளர்ப்பு தான் . அதனால் தான் தைரியமாக உங்களிடமே வந்து விஷயத்தைச் சொன்னேன் ” என்றாள் மீரா . “வெளியே இப்படிச் சொல்லிவிடாதே ! மகள் என்றாள் அப்பாவிடம் நிமிர்த்து பேசக்கூடப் பயப்படவேண்டும் . உன்னைப்போல் இருக்கக்கூடாது” என்றாள் ராதா . “அம்மா, என் அப்பா சர்வாதிகாரி இல்லை , அவரை பார்த்து நடுங்குவதற்கு . அவர் அரசர் நான் அவரின் செல்ல இளவரசி .” என்றாள் மிடுக்காக . “வாய் ரொம்ப நீள்கிறது . தைத்துவிடுவேன். ஜாக்கிரதை” என்றாள் ராதா . “ஊசியில் நூல் கோர்த்து எடுத்து வரவா” மகளின் காதை வலிக்காமல் திருகிவிட்டு “இளவரசனுக்குத் தெரியுமா?” என்றாள் ராதா . இல்லை என்று தலை ஆட்டினாள் மீரா . “அப்பா ! நீங்கள் முன்பு சொன்னது நிஜமா ?” “எது உன் அம்மா புலம்பியதா ?” “உங்களுக்கு இருந்த கவலை எனக்கு இல்லை என்றது” “கில்லாடி ! பேச்சின் இடையில் சொன்னதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாய்” என்றவர் “முதலில் படிப்பு முடியட்டும் . பிறகு மற்றது”. “நிச்சயம் அப்பா . நாளை கல்லூரிக்குச் செல்ல வேண்டும் . காலையில் என்னைப் பேருந்து நிலையத்தில் விடுங்கள் .குட் நைட்” என்று துள்ளிக்கொண்டு ஓடினாள் . மகள் சென்றவுடன் “காலம் மாறிவிட்டது . நாம் எப்படிப் பயந்தோம் . இவள் சாதாரணமாகப் பேசிவிட்டுச் செல்கிறாள்” என்றாள் ராதா. “அவள் குழந்தை என்றே இன்றுவரை பார்த்துவந்தேன். மகள் வளர்த்துவிட்டாள் என்று இன்றுதான் புரிகிறது என்றார்” கோபாலன் . பகுதி 18 பெற்றோருடன் பேசிய பிறகு மகிழ்ச்சியாக இருந்தாலும் சிறு வருத்தம் . ஆனந்தை தவறாக நினைத்ததற்காக. அதற்காக அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்தாள் . உடனே அவனுக்கு அழைத்தாள் .எடுத்தவுடன் ‘சாரி’ என்றாள் . ஒரு நொடி யோசித்துவிட்டு “எதற்கு ?”. சற்றே தயங்கினாள் மீரா. “உங்களைத் தவறாக நினைத்துவிட்டேன் !” அவனுக்கு ஒன்றும் புரியவில்லை . “அப்படி என்ன நினைத்தாய் ?” எங்கிருந்து ஆரம்பிப்பது . பெற்றோரின் திருமணத்திலிருந்து இன்றுவரை அவர்களின் வாழ்வின் சம்பவங்கள் அவன் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தவற்றை எல்லாம் சொன்னாள் . பொறுமையாகக் கேட்ட அவன் “இதில் என்னை எதற்குத் தவறாக நினைத்தாய் ?” என்றான் . “இவர்களுடன் சகஜமாக இருக்க ரொம்பவே சிரமப்பட்டேன் . முன்பு இங்கிருப்பவர் செய்ததை மறக்க என்னால் முடியவில்லை . தாத்தா எங்களை ஏற்பதற்கு முன் இருந்த நிலை இப்போது இல்லை என்றாலும் ,இப்போது இவர்கள் காட்டும் பாசமும் பரிவும் தாத்தாவிற்காக மட்டும் தான் என்று எனக்குத் தோன்றுவதுண்டு. இந்த நிலையில் உங்கள் மேலும் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது . ஒரு வேலை தாத்தா வீட்டிற்கு வரவில்லை என்றால் , இன்று நாங்கள் ஒரு சாதாரண நடுத்தர குடும்பமாக இருந்திருப்போம் . அப்படி இருந்திருந்தால் நீங்கள் என்னை விரும்பியிருப்பீர்களா ? என்று நினைத்தேன் .” சற்று இடைவெளி விட்டாள் . அவன் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறானா ? என்று அவளுக்குச் சந்தேகம் வந்தது . கோவத்தில் இணைப்பைத் துண்டித்து விட்டானா ? “ஹலோ ! ஆனந்த் !” “கேட்டுக்கொண்டிருக்கிறேன் .” அவன் குரலில் இருப்பது என்ன ? கோபமா? வெறுப்பா ? ஐயோ ! அவன் அவளை வெறுத்துவிட்டானா ? கண்களில் கண்ணீர் உருண்டோடியது . “அப்படி நினைத்தது தவறு தான் . சோ சாரி . கோபப்படாதீர்கள் ! ப்ளீஸ்”. அவள் குரல் தழுதழுத்தது . அவன் எதுவும் பேசவில்லை .”இங்கே மற்றவர்களிடம் எனக்கு இருக்கும் சந்தேகம் ,உங்களிடமும் வந்தது . என்னை மன்னித்துவிடுங்கள் . ப்ளீஸ் “. அவள் அழுதாள் . “மீரா ! ஐ லவ் யூ மோர் தேன் எவர்” காதுகளை அவளால் நம்ப முடியவில்லை . “என்ன ?” என்றாள் . அவள் அவனைச் சந்தேகப்பட்டதாகக் கூறியிருக்கிறாள் .இவன் இப்போது காதலைத் தெரிவிக்கிறான் . குழம்பிப்போனாள் . “ஆனந்த் !” “நானும் ஒரு முறை உன்னைத் தவறாக நினைத்ததுண்டு . கே வி குடும்பத்தில் இருக்கும் பெண் என்னை விரும்புவாளா ? என்று நினைத்தேன் . அதுவும் அன்று திருமண விழாவில் பார்த்த போது , நானே முடிவு செய்து கொண்டேன் . உனக்கு என்னைப் பிடிக்காது என்று . அதற்கு என் தாழ்வு மனப்பான்மை தான் காரணம் .உன் மேல் எந்த தவறும் இல்லை . பிறகு உன்னை நன்றாகப் பார்த்துக்கொள்ள என்னால் முடியும் என்ற நம்பிக்கையை எனக்கு நானே சொல்லிக் கொண்டு மீண்டும் உன்னை அணுகினேன் . இன்றுவரை உன்னிடம் அதுபற்றி சொல்ல வேண்டும் என்று நான் நினைக்கவில்லை . ஆனால் நீ என்னிடம் ஒளிவு மறைவின்றி பேசிவிட்டாய்”. சற்று யோசித்து “நீங்கள் நினைத்ததில் தவறில்லை . என்னை நேசிக்கத் தொடங்கும் முன் இருந்த குழப்பம் . ஆனால் நான் உங்களுடன் பழகிய பிறகும் தவறாக நினைத்துவிட்டேன்”. “உன் நிலையிலிருந்து பார்த்தால் , நீ நினைத்ததில் தவறொன்றும் இல்லை . அதுவும் எனக்கு முன்பிருந்தே அதே குழப்பம் . என்னால் புரிந்துகொள்ள முடிகிறது”. “ஆனால்” என்று மீரா இழுத்தாள் . “விட்டுவிடு மீரா . இனியும் அதுபற்றி பேசி நம்மைக் காயப்படுத்திக் கொள்ள வேண்டாம் . பழகிய சில நாட்களில் ஒருவரை ஒருவர் முழுவதும் புரிந்துகொள்ள முடியாது . ஆனால் என்ன நடந்தாலும் இன்று போல் பேசி தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும் . ஒருநாள் கோபம் அடுத்த நாளைக்குச் செல்லக் கூடாது . புரிகிறதா ?” “அப்படி என்றால் , என்மேல் கோபம் இல்லையா ?” முகம் மலர்ந்தது . “இன்னும் அடுத்த நாள் வரவில்லையே ! நாளை கோவம் போய்விடும் .” என்று சிரித்தான் . “கோபம் என்றால் என்னோடு ஏன் பேசுகிறீர்கள்” என்றாள் . “எனக்குப் பனிப்போர் பிடிக்காது .” “அப்படி என்றால் நான் பனிப்போரை தொடங்குகிறேன்” “அதைத் தான் பார்த்தேனே ! நான் கோவப்பட்டுவிட்டேனோ என்று பயந்து அழுததை .” “நீங்கள் அங்கிருந்து எப்படிப் பார்ப்பீர்கள் ?” “இதோ பார்த்துக்கொண்டிருக்கிறேன் !” ” அப்படியானால் , நான் இப்போது எங்கே இருக்கிறேன் சொல்லுங்கள் “. “இப்போது வீட்டில் உன் அறையின் ஜன்னல் வழியே வானத்தைப் பார்த்தபடி பேசிக்கொண்டிருக்கிறாய் . கண்களில் அப்போது வந்த கண்ணீரைச் சரியாகத் துடைக்காமல் இன்னும் உன் இமைகளில் ஓரத்தில் சிறு ஈரம் தெரிகிறது . நான் சொன்னதும் அதைத் தொட்டுப் பார்க்கிறாய் . சரி தானே ?” அவன் சொன்னது அப்படியேதான் நடந்தது . “ஆனந்த்! நான் ஊருக்கு வந்தது எப்படித் தெரியும் ?” “எனக்குத் தெரியும் . எப்படி என்று இன்னொரு நாள் சொல்கிறேன் . இதுவரை நான் சொன்னது சரிதானா ? அதைச் சொல் !”. “நூறு மார்க்” என்றாள் புன்னகையுடன் . வெகு நேரம் பேசினார்கள் . மறுநாள் கல்லூரிக்குச் செல்லும் முன் ஜீவனிடம் தானே அவள் காதல் விஷயத்தைச் சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள் .அவன் என்ன சொல்வான் ? எப்படியெல்லாம் கேலி செய்வான் ? நாட்கள் சுகமாக நகர்ந்தது . ஜீவன் தேர்வை முடித்துக்கொண்டு இருநாள் விடுமுறை எடுத்துக்கொண்டு வந்திருந்தான் . அவன் சிங்கப்பூர் பயணம் விரைவில் தொடருகிறது . மீராவிற்கு விடுமுறை இல்லை. வாரக் கடைசி வரை இருவரும் சந்தித்துக்கொள்ள வில்லை. வெள்ளியன்று தங்கையை அழைத்துப்போவதாகச் சொல்லிருந்தான் . அவனைப் பார்த்ததும் அடையாளம் தெரியாத அளவு இளைத்திருந்தான் . “மீதி பாதி ஜீவனை அழைத்து வார வில்லையா ?” முறைத்துவிட்டு ” நீ மட்டும் ஏன் இரண்டு மீராவாக வந்து நிற்கிறாய் ?” “ஏய் நான் அப்படியே தான் இருக்கிறேன். நீ தான் ஒட்டடை குச்சியாய் இருக்கிறாய் . சாப்பிடக் கூட நேரமில்லாமல் படித்தாயா ?” “சிவில் சேவை பயிற்சியும் தீவரமாகச் செல்கிறது .” ஹோட்டலுக்கு சென்று இருவரும் உணவருந்தினார்கள் . ஜீவனிடம் ஆனந்தை பற்றிச் சொன்னாள் . “ஓ” “என்ன ஓ ? அம்மா உன்னிடம் முன்பே சொல்லிவிட்டார்களா ?” “இல்லையே !” என்றவன் “ஏய் ! அம்மாவிற்கு தெரியுமா ?” என்றான் ஆச்சரியமாக . “சமீபத்தில் தான் அம்மா அப்பாவிடம் சொன்னேன் . உன் தேர்வு முடிந்தவுடன் உன்னிடம் சொல்லலாம் என்று இருந்தேன்”. “நான் வேறு மாதிரி நினைத்தேன் ! என்னிடம் தூது போகச் சொல்வாய் என்று நினைத்தேன் .” “சும்மா எதாவது சொல்லாதே !” “நீ மேலே படிக்கவே மாட்டாய் என்று தான் நினைத்தேன் .” “என்ன உளறுகிறாய் ?” “அன்று தாத்தாவிடம் சொன்னேன் ஞாபகம் இருக்கிறதா ? இவளுக்கு மாப்பிள்ளை பார்க்கலாம் என்று , அப்போதே எனக்கு உன்மேல் சந்தேகம் தான்” சற்றே யோசித்துவிட்டு ” ஏய் ! அப்போது எங்களுக்குள் ஒன்றும் இல்லை ” “அப்படியா?” என்றான் கேலியாக . அதற்குள் அங்கே ஆனந்த் வந்துவிட்டான் . “ஹாய் ஜீவா” “ஹாய் ஆனந்த் , நீங்கள் எப்படி?” என்று ஒரு நொடி யோசித்துவிட்டு, தங்கையைப் பார்த்து ” ஓ! எல்லாம் திட்டம் போட்டுத் தான் நடக்கிறதா ? உட்காருங்கள் .” என்று ஆனந்தை உபசரித்தான் ஜீவன் . “திட்டம் எல்லாம் ஒன்றும் இல்லை . ஆனந்த் ப்ரீயாக இருந்தால் வெள்ளிக்கிழமை சந்திப்போம் . இன்று நீ வருகிறாய் என்றேன். உன்னைப் பார்க்க வந்திருக்கிறார் .” “என்னைப் பார்க்கவா ! ரொம்ப நன்றி . ஆனால் இவள் சொன்னதில் ஒன்று தெளிவாகப் புரிந்தது . சிவபூஜை கரடியாக இருக்கிறேன் போல” அருகிலிருந்த போர்க்கை எடுத்து ,“அதிகம் பேசினாள் ,குத்திவிடுவேன் !” என்று மிரட்டுவது போல் கண்களை உருட்டினாள் . “சரி நான் கிளப்புகிறான்” என்று எழுந்தான் ஜீவா. “பொறு , வீட்டிற்குப் போக டிரைவர் வேண்டும் . அதனால் உட்கார்” அண்ணன் தங்கை பேசுகையில் சம்பந்தம் இல்லாதவன் போல் கண்ணத்தில் கைவைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். அவன் அப்படி அமர்ந்திருப்பதைப் பார்த்து ” என்ன ஒன்றும் பேசாமல் இருக்கிறீர்கள் !” என்றாள் மீரா . “நான் இருப்பது இப்போது தான் கண்தெரிகிறது” என்று சர்வரை அழைத்து அவனுக்கு ஒரு காபி மட்டும் சொன்னான் .” இனி என்னை உனக்கு மறந்தே போகும் . உன் அண்ணன் வந்துவிட்டான் . ” என்றான் பொய் கோபத்துடன் . “மாற்றிச் சொல்கிறீர்கள் ஆனந்த் . அவள் என்னை, இல்லை, இல்லை எங்கள் மூவரையும் மறந்துவிட்டாள் .போனில் எப்போதும் உங்கள் புராணம் தான் .” “பொய் சொல்லாதே . அவரை பற்றி நான் எப்போது பேசினேன்” “நான் பொய் சொல்லவில்லை .ஆலையை ஒரு ரிப்போர்ட் செய்தலே அப்போதிருந்தது நான் பரீட்சைக்குத் தயாராகிறேன் என்று சொல்லும்வரை உங்களைப் பற்றித்தான் அதிகம் பேசினாள் .” இப்படியே ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டிருக்கச் சட்டென்று ஜீவன் ” உங்கள் இருவருக்கும் கண்டவுடன் காதல் மலர்ந்து விட்டதா?” என்றான். சற்றே அதிர்ந்து மீராவும் ஆனந்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர் . சற்றே தடுமாறி “அப்படி எல்லாம் இல்லை” என்றாள் மீரா . “நம்பமாட்டேன் . முதலில் அவரை பார்த்தபோது என்ன சொன்னாய் நினைவிருக்கிறதா ?ஆனந்தை மட்டும் இல்லை அவர் அம்மா அப்பாவையும் உறவு கொண்டாடத் தொடங்கிவிட்டாயே !” ஜீவன் சொல்லும் நிகழ்வு நினைவில் வர ” அது ரகு என்று நினைத்துக் கேட்டது ” “நான் நம்பமாட்டேன்” என்றான் ஜீவன் . மீண்டும் இருவரும் வாங்குவாத்தில் இறங்க ,” ஜீவா சொல்வது போல் இருந்தால் சந்தோசம் தான் ” என்றான் . அண்ணன் தங்கை இருவருமே வாய் அடைத்துப் போனார்கள் . சற்று நேரம் பேசிவிட்டு இருவரையும் வழியப்பிவைத்துவிட்டு அவனும் கிளம்பினான் இரு வீட்டாருக்கும் தெரியும் என்பதால் மீராவைச் சந்திக்க பத்மா அவ்வப்போது வருவாள். பொதுவாக உணவருந்துவது, ஷாப்பிங் செல்வது என்று செய்வார்கள் . கோபாலன் ராதாவுக்குச் சொல்லிவிட்டு செய்வார்கள் . ஆனால் இவர்கள் மறந்திருந்த ஒரு விஷயம் இருந்தது . அது கிருஷ்ணசாமியின் சம்மதம் !. பகுதி 19 எப்போதும் சந்தோசத்தைத் தந்தால் நாம் இறைவனை மறந்துவிடுவோம் என்று அவ்வப்போது சில சோதனைகளையும் அவர் தருவார் என்று சிலர் நம்புவதுண்டு . அப்படி கடவுள் தாத்தா சோதனையை இல்லை இவர்கள் சரியாகச் செய்யாத ஒரு செயலின் விளைவா ? தெரியவில்லை இவர்களின் மகிழ்ச்சிக்கு ஒரு தடங்கல் வந்தது . நாயகியின் மகன் ரகுவிற்கு சென்னையில் திருமணம் என்று எல்லோரும் சென்னை சென்றார்கள் . ஜீவன் அப்போது பயிற்சிக்காகச் சிங்கப்பூர் சென்றிருந்தான். திருமணம் நல்ல முறையாக நடந்தது . அடுத்த திருமணம் யாருக்கு என்ற பேச்சு எழக் கமலாவின் மகன் சந்துருவிற்கு என்றாள் லட்சுமி . லக்ஷ்மியின் மகன் விஜய் என்றாள் கமலா. சட்டென்று விஜயா மீரா மேலே படிக்காமலிருந்திருந்தால் அவளுக்குச் செய்திருக்கலாம் என்றாள் விஜயா . “அதெற்கென்னம்மா , கல்யாணத்துக்குப் பிறகு படிக்கட்டும் . நீ விருப்பப்படுகிறாய் என்றால் சொல் உடனே வேலையைத் தொடங்கிவிடலாம்” என்றாள் நாயகி. “மாப்பிள்ளை கூட தேட வேண்டாம். இன்றே என்னிடம் ஒருவர் கேட்டார்” என்றாள் . “என் பேத்திக்கு இதைப் போல் சிறப்பாகச் செய்ய வேண்டும்” என்றாள் விஜயா . “நாம் பேசி என்ன செய்வது . அண்ணா நீ என்ன நினைக்கிறாய் ?” என்றாள் கமலா கோபாலனைப் பார்த்து . “முதலில் அவள் படிப்பு முடியட்டும் .” இனியும் தாமதிக்கக் கூடாது, பெற்றவர்களுடனும் மீரா ஆனந்தின் விஷயத்தைச் சொல்லிவிட வேண்டும் என்று ராதாவும் கோபாலனும் முடிவெடுத்தனர் . சட்டென்று கமலா , “நீ சரி என்று சொல் . இப்போதே சந்துருவிற்கு முடிவு செய்துவிடலாம்” என்றாள் . அப்போது இளம் தலைமுறையினர் யாரும் இல்லை . கோபாலனுக்குச் சங்கடமாக இருந்தது . எல்லோர் முன் மகளின் விஷயத்தைப் போட்டு உடைக்க முடியாது . முன்பே அப்பா அம்மாவிடம் சொல்லியிருக்க வேண்டுமோ என்று கவலை அடைந்தார் . இப்போது என்ன சொல்லவேண்டும் என்று யோசித்தார் . ராதாவாலும் எதுவும் பேச முடியவில்லை . சரி என்று சொல்ல முடியாது . வேண்டாம் என்றாலும் தப்பாகத்தான் முடியும் . ஒருவாறு கோபாலன் ஒரு விடையைக் கண்டு பிடித்தார் . “நம் முடிவு மட்டும் போதுமா? பிள்ளைகளின் விருப்பமும் முக்கியமல்லவா ?” என்றார் . “நாம் சொன்னால் கேட்டுக்கொள்ளமாட்டார்களா ?சந்துரு நிச்சயம் சரி என்றுதான் சொல்வான் .நீ மீராவிடம் கேள்” என்றாள் கமலா . “இப்போது என்ன அவசரம் . அவள் படிப்பு முடியட்டும் .” என்று பட்டும் படாமல் பேசினார் கோபாலன் . “படிப்பு முடியும் போது முடியட்டும் . இல்லை நாங்கள் படிக்கவைக்கிறோம்” இது கமலாவின் கணவர் . அப்போது மீரா சாருவுடன் அங்கு வந்தாள் . “இதோ மீராவே வந்துவிட்டாள் . அவளிடம் கேட்கலாம் .” “என்ன கேட்க வேண்டும் அத்தை” எதுவும் தெரியாமல் மீரா கேட்க , “உனக்கு சந்துருவைப் பிடித்திருக்கிறதா ?” என்றாள் கமலா . பெற்றோரின் முகத்தைப் பார்த்தாள் மீரா. “உனக்குக் கொஞ்சம் கூட விவஸ்தை இல்லையடி. இப்படியா எல்லோரையும் வைத்துக்கொண்டு கேட்பாய்” என்றாள் நாயகி . “அதுவும் சரிதான் . நீ உன் அம்மாவிடம் முடிவைச் சொல் . சரியா ?” மீரா கோவத்தின் உச்சியிலிருந்தாள். கோபாலன் சட்டென்று மகளிடம் வந்து “அத்தை தன் விருப்பத்தைச் சொல்லிவிட்டாள் . நாம் ஊருக்குச் சென்று இது பற்றிப் பேசலாம்”. அவள் சட்டென்று அங்கிருந்து நகர்ந்தாள் . “வெட்கம் வந்துவிட்டது போல” என்று சொல்லிக்கொண்டு அவள் பின் சென்றாள் சாரு . கிருஷ்ணசாமியும் விஜயாவும் இன்னும் இரண்டு நாட்கள் சென்னையிலிருந்துவிட்டு வருவதாகச் சொல்ல , மற்றவர்கள் ஊருக்குத் திரும்பினார் . சென்று வந்த களைப்பில் அவரவர் வீட்டிற்குச் சென்று விட்டனர் . மீராவின் இறுக்கத்தைக் கண்டு “நான் பார்த்துக்கொள்கிறேன் . பரிச்சைக்குப் படி .கவனம் சிதறவேண்டாம்” என்று கோபாலன் அவளைத் தேற்றினார் .இதே காரணத்தைச் சொல்லி தங்கையிடமும் பொறுமையாக இருக்குமாறு சொல்லிவிட்டார் . ஆனால் மீராவின் வாட்டம் குறைய வில்லை . ஆனந்தை அடிக்கடி பார்க்க நேர்ந்தாலும் மகளின் காதலைப் பற்றி வெளிப்படையாகக் கோபாலன் பேசியதில்லை . என்றாலும் ஆனந்தின் வீட்டிற்கும் தெரியும் என்பது அவருக்கு உறுதி .இப்போது கோபாலனுக்கு பெரும் குழப்பம் . கிருஷ்ணசாமியிடம் எப்படி விஷயத்தைச் சொல்வது . ஒருவேளை , கமலா மீரா பற்றிக் கேட்டது , ஆனந்த் குடும்பத்திற்குத் தெரிந்தால் சிக்கல் வருமா ? மீரா ஆனந்திடம் பேசியிருப்பாளா? இப்போது அவர் யாருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ? ராதாவிடம் பேசினார் . ” பெண்ணென்று இருந்தால் , பிள்ளையை வைத்திருப்பவர்கள் கேட்பார்கள் ! முதலில் மாமாவிடம் பேசுங்கள் . முதலில் அவர்களுக்குத் தெரிய வேண்டும் . உங்கள் தங்கைக்குச் சொல்வது பிறகு பார்த்துக் கொள்ளலாம் . அதுவும் அத்தை பெரிதாகக் கற்பனை செய்துகொண்டிருக்கிறார் . நாம் முன்பே பேசியிருக்கலாம் என்று தோன்றுகிறது ” “எனக்கும் அப்படித்தானே தோன்றுகிறது . அவர்கள் வந்தவுடன் சொல்லிவிடலாம்” ஆனால் கோபாலனால் அதனை எளிதில் சொல்ல முடியவில்லை. மீரா வெகுவாக சிரமப்பட்டே படிப்பில் கவனம் செலுத்தினாள். ஆனந்திடம் செல்லில் பேசியபோது ,அவள் வாட்டத்தைக் கண்டுகொண்டான் .” என்ன ? குரல் சரியில்லையே . ” “ஒன்றும் இல்லை . எதோ யோசித்துக்கொண்டிருந்தேன்”. “அது தான் என்ன ?” இவனிடம் சொல்லலாமா என்று ஒருநொடி யோசித்துவிட்டு ” செமஸ்டர் பற்றித் தான் “. “சரி நீ படி . டென்ஷன் இல்லாமல் ரிலாக்ஸ இரு. ப்ரீயா இருக்கும் பொது கூப்பிடு” “சாரி !” “எதற்கு சாரி . போய் படி .வைக்கிறேன்” என்றான் . எல்லா கவலையும் மறைந்தது . ஆனந்தை போல் எத்தனை பேர் இருப்பார்கள் ? அவள் குரலில் உள்ள வித்தியாசம் கண்டுபித்துவிட்டான் . படிக்கவேண்டும் என்றால் சரி என்றான் . தன் தோழி வித்யாவின் காதலன் எப்போதும் சண்டைதான் . படிக்க வேண்டும் என்றால் ‘என்னோடு பேசக் கூட நேரம் இல்லையா ?’ என்று சண்டை பிடிப்பான் . அவனைச் சமாதானப்படுத்த இவள் ஒரு மணிநேரமாவது மன்னிப்பு கேட்க வேண்டும் . ஆனந்தை நினைத்துப் பெருமைகொண்டாள் . ஒருவாறு பரிச்சை எல்லாம் முடிந்தது . முன்தினமே ஆனந்த் மத்திய உணவிற்குச் சந்திக்கலாம் என்று சொல்லிருந்தான் . உணவு முடிந்தவுடன் அவனே அவளை வீட்டில் கொண்டு விடுவதாகத் திட்டம் . அவள் முகம் மிகவும் வாட்டமாக இருந்தது. அதைப் பார்த்து ” ஏதேனும் எனர்ஜி டானிக் கொடுத்துத்தான் உன்னைத் தேற்றவேண்டும் என்று நினைக்கிறேன் . ஒரு பரீட்சைக்கு என் மீரா இப்படிச் சோர்ந்திருப்பதா ?” அவன் சொன்ன ‘என் மீரா’ அவள் முகத்தில் ஒளியூட்டியது . சன்னமாக ஒரு புன்னகை எட்டிப்பார்த்தது . உணவருந்தி விட்டு நெடுஞ்சாலையில் செல்கையில் அவள் ஏதும் பேசாமல் வரவே ” உடம்பு ஏதும் செய்கிறதா ?” என்றவன் காரை பக்கவாட்டில் நிறுத்தினான் . இல்லை என்று தலை ஆட்டினாள் . “ரொமப் ஒருமாதிரி இருக்கிறாய் . என்ன? என்று சொல்!” என்றான் வாஞ்சனையாக .இனியும் இவனிடம் சொல்லாமல் இருக்க அவளால் எப்படி முடியும் . சந்துருவிற்காக இவளை பெண்கேட்டாது பற்றிச் சொன்னாள் . அவன் முகத்தை அவள் பார்த்திருந்தாள் நிச்சயம் பாய்ந்திருப்பாள் . அவன் ஸ்டேரிங்கை பிடித்திருந்த பிடி இறுகியது .கண்களில் தீ பொறி பறந்தது . “சோ” ஒற்றை வார்த்தையில் பேசினான் . இரு வீட்டிலும் காதலைச் சொல்லியாயிற்று . இப்போது மீரா சொல்வதின் அர்த்தம்தான் என்ன . அவன் கோபம் எல்லையைக் கடந்து சென்றிருந்தது . “இவர்களால் எப்படி இப்படிக் கேட்க முடிகிறது ஆனந்த்” அவள் குரல் தழுதழுத்தது . அவன் முகத்தைச் சாதாரணமாக வைத்துக்கொண்டு அவளைப் பார்த்தான் . சரியாக அவளும் இவன் புறம் திரும்பினாள் . ” நாங்கள் கோவையில் இருந்தபோது , எங்களை ஒரு பொருட்டாக மதித்தில்லை . இங்கே வந்து பல நாட்கள் எங்களோடு சரியாய் பேசவில்லை . இது அவர்களுக்கு ஒன்றுமே இல்லை . ஆனால் எங்கள் நால்வருக்கும் அவமானம் . இதை எல்லாம் எப்படி மறப்பது . அம்மா அப்பாவிற்கு இது தெரியும் . யாரிடம் நாங்கள் சொல்வது .மேட்டுப்பாளையம் வரும்வரை நமக்கு வேறு உறவு யாரும் இல்லை என்று இருந்தோம் . இங்கே வந்தால் எல்லா உறவுகளும் கிடைக்கும் என்றுதான் அப்பா சொன்னார் . அப்படி எதுவும் நடக்க வில்லை. எதையும் பெரிதுபடுத்தக்கூடாது என்று தான் நினைக்கிறேன் . அம்மா அப்பா அவர்கள் வயதிற்கு எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கிறார்கள் . என்னால் முடியவில்லை . எனக்கு அந்த வீட்டிற்குப் போகப் பிடிக்கவில்லை” என்றாள் அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டு . முதலில் மீரா காதலை முறித்துக்கொள்ளப் பேசுகிறாள் என்று தான் நினைத்தான் . ஆனால் அவள் வேறு கவலையில் இறுக்கினாள் என்று புரிந்ததும் , அவளைச் சமாதானப்படுத்த முயற்சி செய்தான் . “நான் உன்வீட்டில் பேசட்டுமா ?” “உங்களுக்குப் புரியவில்லை ஆனந்த் . அம்மா அப்பா நம் காதலை எதிர்க்கிறார்கள் என்றால் நீங்கள் பேசலாம் . அவர்களுக்கு இதில் சம்மதம் . ஆனால் மற்றவர்களிடம் எப்படிச் சொல்வது என்று புரியவில்லை . யார் மனமும் புண்படக்கூடாது என்று அப்பா பார்க்கிறார் . அவர் ஏற்கனவே ஒரு முறை அனைவரையும் காயப்படுத்தி விட்டதாக நினைக்கிறார் . அதற்காக அவர்கள் இத்தனை ஆண்டுகள் செய்தது , நடந்துகொண்டது எல்லாம் என்னால் மறக்கமுடியாது .” மீரா அவ்வப்போது சொன்னதிலிருந்து அவள் குடும்பம் பற்றி அறிந்திருந்தான் . இப்போது இவனால் என்ன செய்ய முடியும் என்று அவனுக்கும் தெரியவில்லை . இருவரும் சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தனர் . ” தேர்வு முடியட்டும் என்று அப்பா இதுவரை தள்ளிப் போட்டுவிட்டார் . கூடிய விரைவில் மீண்டும் இந்த பேச்சை அவர்கள் தொடங்கும் முன் , எதாவது செய்யவேண்டும் ” என்றாள் மீரா . “நேராக நீ உன் தாத்தாவிடம் பேசு” “தாத்தாவிடமா ?” “முதலில் நம் விஷயத்தை விடு . ஒருவேளை உன் வாழ்வில் நான் இல்லையென்றாலும், உன்னால் உன் அத்தை சொல்வதை ஏற்றிருக்க முடியுமா ?” ஒரு கணம் கூட யோசிக்காமல் “நிச்சயம் இல்லை . ஒரே குடும்பமாக இருக்கும் இடத்தில் , பேசாமலேயே இருக்க முடியாது என்ற காரணத்தால் அவர்களுடன் பேசத் தொடங்கினேன் . இப்போது வெறுப்பு இல்லை என்றாலும் , அவர்களிடம் எனக்கு நெருக்கம் இதுவரை உண்டாகவில்லை .” “ஒரு முறை உன் தாத்தா பாட்டியிடம் உன் கருத்துக்களைச் சொல் . அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால் , பிறகு என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.” அவள் செல் ஒலித்தது. “இன்னும் ஒரு மணி நேரம். வந்துவிடுகிறேன்”. என்று அழைப்பைத் துண்டித்தாள் . அவள் வீட்டிலிருந்து அழைத்திருக்க வேண்டும். அவனும் காரை கிளப்பினான் . வீட்டை அடைந்த போது கிருஷ்ணசாமி முற்றத்தில் தான் அமர்ந்திருந்தார் . ஆனந்தத்துடன் மீரா வந்து இறங்கிய போது ,” நம் கார் வரவில்லையா ?” என்றார் . “இல்லை தாத்தா . நான் தான் வேண்டாம் என்றுவிட்டேன்” “ஆனந்தை என் தொல்லை செய்கிறாய்” “அதெல்லாம் ஒன்றும் இல்லை சார் !நான் கிளப்புகிறேன்” என்று ஆனந்த விடைபெற்றுக்கொண்டான் . மதிய உணவின் போது அனைவரும் சேர்ந்து அருந்திக்கொண்டிருந்தனர் . முடிக்கும் தறுவாயில் ,” தாத்தா , நான் உங்களிடம் பேச வேண்டும் . பாட்டி உங்களிடமும் ” என்றாள் மீரா . கோபாலனும் ராதாவும் சற்றே பதறினார் . இவள் பெரியவர்களிடம் ஏதேனும் காயப்படும்படி பேசிவிடக் கூடாது என்ற கவலை . என்ன என்று வினவினார் கிருஷ்ணசாமி . “நானும் ஆனந்தும் ஒருவரை ஒருவர் விரும்புகிறோம்” பெரியவர் நால்வருக்கும் அதிர்ச்சி . மகள் சட்டென்று இப்படி விஷயத்தைப் போட்டு உடைப்பாள் என்று கோபாலனும் ராதாவும் எதிர்பார்க்கவில்லை. “என்ன மீரா கண்ணு , இப்படிச் சொல்கிறாய் ? நாங்கள் வேறு கனவு கண்டுகொண்டிருந்தோம் . கமலா அத்தை அன்றே உன்னிடம் கேட்டாளே ! அப்போது ஏன் சொல்லவில்லை ? சந்துரு மிகவும் நல்ல பிள்ளை . பிரிந்த குடும்பத்தில் உன் திருமணத்தால் மீண்டும் ஒரு நெருக்கம் வரும் என்று எதிர்பார்த்தோமே !” என்று பேசிக்கொண்டே போனார் விஜயா. “நீ சும்மா இரு ! அவள் பேசட்டும்” என்று மனைவியை அடக்கினார் கிருஷ்ணசாமி . மீரா தொடர்ந்தாள் .”அன்று எல்லோர் முன்னும் சொல்ல முடியவில்லை .சொல்லி இருந்தாலும் இன்று நீங்கள் செய்தது போல் எல்லோரும் என் மனதை மாற்றும் முயற்சியைச் செய்திருப்பீர்கள் . இல்லை நான் செய்தது பெரும் குற்றம் என்றும் , அம்மா அப்பா வளர்ப்பைக் குறை கூறி இருப்பார்கள் அவர்கள். எல்லோரையும் சங்கடப்படுத்த விரும்பவில்லை நான்” “இப்போதும் அதைத் தான் செய்துகொண்டிருக்கிறாய்” என்றார் விஜயா கோவமாக . “உங்கள் கோபம் எனக்குப் புரிகிறது . ஆனால் நான் சொல்வதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் !” மீரா தொடர்ந்தாள் ” நான் இன்னொருவரை விரும்புகிறேன் என்பதால் சந்துருவை வேண்டாம் என்று சொல்லவில்லை. என்னால் சந்துருவை ஒருபோதும் திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதால் சொல்கிறேன் ” “ஏனோ?” இம்முறை கேட்டது கிருஷ்ணசாமி . “ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வரை , இங்கே இருப்பவர் யாரும் என்னுடன் கலகலப்பாகப் பேசியதாகக் கூட நினைவில் இல்லை . அண்ணன்கள் ஜெய் , விஜய் ஆகட்டும் , சாரு , சந்துருவாகட்டும் எப்போதும் என்னை ஏளனமாகத்தான் பார்த்திருக்கிறார்கள் . இங்கே வந்து பல நாட்கள் அவர்கள் பேச்சில் ஏளனம் இருந்திருக்கிறது . அவர்களைப் பொருட்படுத்தாமல் இருக்கப் பழகிக்கொண்டேன் . பார்த்தால் இரு வார்த்தை பேசவேண்டும் . அதுவும் உங்கள் அனைவரின் நிம்மதிக்காக. எனக்கு அவர்களுடன் இருக்கும் சம்பந்தம் அவ்வளவுதான் . ஒருவேளை இப்போது சந்துருவோ இல்லை அண்ணனோ என்னிடம் சாதாரணமாக இருக்க நினைத்தாலும் ‘நேற்று ஏன் அப்படி நடந்துகொண்டார்கள்’ என்று ஆராயத்தோணும் .எட்ட நிற்கும் உறவுகளோடு நிராசையும் ஏமாற்றமும் பெரிதாகத் தெரியாது . ஆனால் திருமண உறவில் …” சற்றே நிறுத்தினாள் . “நான் யாரையும் குறை சொல்ல வில்லை . தவறு என்னிடம் தான் . திடீரென வரும் பாசத்தையும் அக்கறையும் ஏனோ எனக்கு ஏற்கமுடியவில்லை . சந்தேகத்துடன் பார்க்கிறேன் . என்னை மன்னித்துவிடுங்கள் . உங்கள் அனைவரின் விருப்பத்திற்கும் என்னால் சம்மதிக்க முடியவில்லை.” என்றாள் மீரா . சில நிமிடம் அங்கே நிசப்தம் . “உனக்குப் பிடிக்க வில்லை . அவ்வளவுதானே !விடு நான் பார்த்துக்கொள்கிறேன்”. என்றார் கிருஷ்ணசாமி . பேத்தி செல்வதைப் போல் மற்றவர்கள் நடந்துகொண்டது உண்மைதான் . இப்போது அவர்கள் இயல்பாகவே இருக்கிறார்கள் . ஆனால் அவள் வயதிற்கே இருக்கும் ஈகோ . அவள் சொல்வதுபோல் , திருமணத்திற்கு முன்பே இப்படி ஒரு சங்கடம் இருக்கும்போது , பின்னாளில் அவர்கள் எப்படி நிம்மதியா இருக்க முடியும் . “அப்பா , அவள் பேசியதை மன்னித்துவிடுங்கள் !. தவறு என்பேரிலும் இருக்கிறது .பிள்ளைகளின் சங்கடத்தைப் போக்காதது என் தவறு .” என்றார் கோபாலன் . “அது உன்னுடைய தவறு மட்டும் இல்லை . இந்த குடும்பத்தில் எல்லோருக்கும் அதில் பங்கு இருக்கிறது . கமலாவிடம் இன்றே பேசிவிடலாம் .” என்று எழுந்து சென்றார் . விஜயாவிற்கு ஏமாற்றம் தான் . நேரில் சென்று பேசிவிடலாம் என்று மகனை அழைத்துக்கொண்டு புறப்பட்டார் கிருஷ்ணசாமி . “உனக்கு முன்னமே விஷயம் தெரியும் .அப்படித்தானே !” தந்தை கண்டறிந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை . மீரா பேசும்போது கோபாலனும் ராதாவும் எதுவும் பேசாமல் இருந்ததே காட்டிக்கொடுத்து விட்டது . மகன் மௌனமாக இருக்க ,“மீராவால் அன்று பேச முடியவில்லை . சரி . கமலா இந்த பேச்சை ஆரம்பித்தபோதே நீ சொல்லியிருக்கலாம் இல்லையா?”. “எப்படி அப்பா சொல்வது ? இருபத்தி ஐந்து வருடத்திற்கு முன் இதே போல் அவர்களைத் தட்டிக்கழித்தவன் நான் .அதை மனதில் வைத்துக்கொள்ளாமல் இப்போது என் மகளைக் கேட்கிறார்கள் . கமலா என்னிடம் தனியாக கேட்டிருந்தால் நிச்சயமாகச் சொல்லியிருப்பேன் . சபையில் எல்லோர் முன்னும் பேசிவிட்டாள் . அவள் கணவனும் இதற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டார் . என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை அப்பா !” “என்ன செய்வதாக உத்தேசித்திருந்தாய் ?” “உங்களிடம் நானே பேச வேண்டும் என்று தான் நினைத்திருந்தேன் . ஏனோ பயம் . மீண்டும் உங்களின் வெறுப்பைச் சம்பாதித்து விடுவேனோ என்று”. மகனை சில கணங்கள் பார்த்தார் . மகனின் கையை பற்றிக்கொண்டு “ஒருபுறம் சந்தோசம் . என் பிள்ளை எனக்காகவும் , அவன் பிள்ளைகளுக்காகவும் எவ்வளவு யோசிக்கிறான் என்று . மறுபுறம் நான் அப்படி இருக்கவில்லை என்ற வருத்தம்”. “என்ன அப்பா நீங்கள் ? எங்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதா ?நாங்கள் சுயநலவாதிகள் அப்பா . எங்கள் குடும்பம் எங்கள் பிள்ளைகள் என்று மட்டுமே வாழ்பவர்கள். ஆனால் நீங்கள் அப்படியில்லை . பல குடும்பங்களை மனதில் வைத்து அவர்கள் நலனைப் பெரிதாக நினைத்து வாழ்பவர்” பிள்ளைகள் பெற்றோரின் செயல்களைப் புரிந்து கொள்வது வெகு அரிது . சிறு மன வருத்தம் நேர்ந்தாலும் அவர்களை வெறுக்கத் தொடங்கும் பிள்ளைகள் இப்போதைய தலை முறையில் ஏராளம் . சிலர் பெற்றோரை ஒதுக்கியே விடுகின்றனர். இத்தனை வருடம் உடன் இருந்த நாராயணனே , அவன் விருப்பத்தை நிறைவேற்றவில்லை என்றதும் , விலகிச் செல்லத் தொடங்கிவிட்டான் . வெறும் வீம்புக்காக ஆலையை வைத்துக்கொண்டு போராடுகிறார் என்றுதான் நாராயணன் நினைத்திருக்க வேண்டும் . ஆனால் இருபது வருடம் ஒதுங்கி நின்ற, இல்லை ஒதுக்கிவைக்கப்பட்ட மகன் , அவரை நன்கு புரிந்துவைத்திருக்கிறான் . கிருஷ்ணசாமியின் கண்களில் நீர் கோர்த்திருந்தது . அதற்குள் கமலா வீடு வந்துவிடத் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டார் . கமலா மட்டும் தான் வீட்டிலிருந்தாள் என்பதால் சுற்றி வளைக்காமல் விஷயத்தைச் சொன்னார் கிருஷ்ணசாமி . “இந்த திருமண பேச்சை விட்டுவிடுவோம்” கிருஷ்ணசாமியிடம் பேசவே தயங்கும் பிள்ளைகள் , இப்போது மட்டும் எப்படிப் பேசுவார்கள் . அவர் சரி என்றால் சரி . இல்லை என்றால் இல்லை . ஏன் சரி ? ஏன் இல்லை என்று யாரும் கேட்டதில்லை . ஒரு முறை பேசியதற்காகக் கோபாலன் பட்டது மற்ற பிள்ளைகளுக்கு நன்கு தெரியும் . கமலா எதுவும் கேட்கவில்லை . தன் அண்ணனைப் பார்த்தாள் . “எதுவானாலும் என்னிடம் கேள் கமலா .” என்றார் தந்தை . “உங்களுக்கு விருப்பமில்லையா அப்பா ?” என்றாள் தயக்கத்துடன் . “இந்த கிழவனின் விருப்பத்தில் என்ன இருக்கிறதம்மா ? பிள்ளைகளின் விருப்பம் தான் முக்கியம் .” “அப்படியென்றால் மீராவுக்குப் பிடிக்க வில்லையா ?அன்று அவளிடம் கேட்ட போது எதுவும் சொல்லவில்லையே ?” “அப்போது எல்லோர் முன்னும் சொல்ல முடியவில்லை . இன்று எங்களிடம் சொன்னாள்” “ஏன் அப்பா ! என் மகனுக்கு என்ன குறை ?” “உன் மகனுக்கு ஒரு குறையும் இல்லை . குறை நம்மிடையே தான் இருக்கிறது . முக்கியமாக என்னிடம் .” “என்ன அப்பா சொல்கிறீர்கள் .” கோபாலனைப் பார்த்து “நீயாவது சொல் அண்ணா! அப்பா என்ன சொல்கிறார் ?”. ” அவன் என்ன சொல்வான் ? இருத்தலைக் கொள்ளி எறும்பாய் இருக்கிறான் . மகள் என்று பார்ப்பானா? இல்லை தங்கை என்று பார்ப்பானா ? மீரா இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று முன்பே சொல்லிவிட்டாள் . நம்மிடம் எப்படிச் சொல்வது என்று இவனும் இன்று வரை யோசித்துக்கொண்டிருக்கிறான் . என் கெளரவம் என்று வெகு நாட்கள் என் பிள்ளையை ஒதுக்கி வைத்தேன் . எனக்காக நீங்களும் இவனுடன் நெருக்கம் காட்டவில்லை . ஆனால் நாம் யாரும் ஒரு தவறும் செய்யாத பிள்ளைகளைப் பற்றி யோசிக்கவேயில்லை. என் பேரப்பிள்ளைகள் மனதில் ஆறாத ரணத்தை நானே உண்டாகிவிட்டேன் . இப்போதேனும் அவர்களைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும் .மீரா விருப்பத்திற்கு நான் மதிப்பு கொடுக்க வேண்டும் “.அப்போது கமலாவின் கணவரும் சந்துருவும் உள்ளே வந்தனர் .”அடடே ! வாருங்கள் மாமா. மாமா வருவதை என்னிடம் ஏன் சொல்லவில்லை “. என்றார் மனைவியிடம் . “நாங்கள் திடீர் என்று புறப்பட்டு வந்தோம் . அவளுக்கே தெரியாது மாப்பிள்ளை .ஒரு விஷயம் பேசிவிட்டுப்போகலாம் என்று வந்தோம் .” மீரா திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததை மட்டும் சொன்னார் . “எங்களுக்கு வேறு பெண் கிடைக்காமல் மீராவைக் கேட்கவில்லை . ஏதோ கமலா விருப்பப்பட்டாள் என்று தான் இதற்குச் சம்மதம் தெரிவித்தேன் . சந்துருவை விடச் சிறப்பான ஒருவன் உங்கள் பேத்திக்கு எங்கு கிடைப்பான் . பெரியவர்கள் நீங்கள் தான் அவளுக்குப் புரிய வைக்க வேண்டும் . அதை விடுத்து அவள் சொன்னால் என்று இங்கே வந்து நிற்கிறீர்கள் .” என்றார் கோவமாக . “உங்கள் தகுதிக்கு உங்கள் மகளைப் பெண் கேட்டது எங்கள் பெருந்தன்மை.” என்றார் வெடுக்கென்று கோபாலனை பார்த்து. “கோவத்தில் நீங்கள் ஏதேதோ பேசுகிறீர்கள்” என்று கணவனைக் கமலா தடுக்க . “அதே தான் . நாங்களும் நினைக்கிறோம் . நடுத்தர குடும்பத்தில் வளர்ந்த என் மகள் உங்கள் வீட்டில் எப்படிப் பொருந்துவாள் என்று தான் எங்கள் கவலையும் . உங்கள் பெருந்தன்மை எங்களுக்குப் புரிகிறது . அதனால் தான் அன்றே உங்களிடம் மறுக்க முடியவில்லை . இப்போது சொல்கிறோம்” என்றார் கோபாலன் . தான் மகளைத் தானே குறைத்துப் பேசுவதற்கு மனதிற்குள் தன்னைத்தானே கடிந்துகொண்டார் . என் மகளுக்கு என்னைப் புரியும் என்று நினைத்துக் கொண்டார் . இப்போது கமலாவின் கணவரிடம் “என் மகளுக்குத் தகுந்த இடம் இது இல்லை” என்று அவருக்குச் சமமாய் பேசக் கோபாலனால் முடியும் . அப்படிப் பேசுவதால் மீண்டும் குடும்பத்தில் ஒரு பெரும் விரிசல் வரும் . “நீ என்ன பேசுகிறாய் என்று புரிகிறதா ?” என்று கிருஷ்ணசாமி கேட்க ,“உண்மையைத் தானே அப்பா சொல்கிறேன் . நம் மாப்பிள்ளை வசதிக்கும், எனக்கும் எப்படிப் பொருந்தும் .” என்றார் கோபாலன் . சில நொடிகள் யாரும் எதுவும் பேசவில்லை . “நாங்கள் புறப்படுகிறோம் !சிந்தித்துப் பார்த்தால் நான் சொன்னதில் தவறில்லை என்று உங்களுக்கே புரியும் . நாம் போகலாம் அப்பா !” என்று அங்கிருந்து புறப்பட்டனர் . வீட்டிற்கு வரும் வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை . இருவரிடம் ஒரு இறுக்கம் . வீட்டின் உள்ளே வந்தவுடன் , பின்னோடு வந்த மகனைப் பார்த்து ” எதற்கடா அப்படிச் சொன்னாய் ?” என்றார் உரத்த குரலில் மகனைப் பார்த்து . மற்றவர் முன் தன் கோபத்தைக் காட்டி விடக்கூடாது என்று அதுவரை கட்டுப்படுத்தி வைத்திருந்தார் . இவர்கள் வரவை எதிர்ப்பார்த்திருந்த பெண்கள் மூவரும் , பெரியவரின் குரலைக் கேட்டதும் நடுங்கிப்போனார்கள் . “உன் தகுதி ! உன் நிலை என்று சொன்னாயே ? நீ என் மகன் என்பது மறந்துவிட்டதா ? ஏதோ மீராவுக்குத் தகுதியில்லை என்றாயே ! அவள் என் பேத்தி . அவள் தகுதியைக் குறைத்துப் பேச உனக்கு எப்படித் தோன்றியது ? எதோ என் எண்ணத்திற்கு மதிப்பு கொடுக்கிறாய் என்றாயே ! அது எல்லாம் பொய் ! உனக்கு என் மகன் என்று சொல்வதில் விருப்பம் இல்லை . அப்படித்தானே !” “ஐயோ ! அப்படி நான் நினைக்கவே இல்லை அப்பா ! நான் கமலா வீட்டிற்குச் செல்லும்போது சொன்னதுதான் நிஜம் .” “பிறகு ஏன் அப்படிச் சொன்னாய் ?” “நான் அப்படிச் சொல்லாமல் இருந்திருந்தால் , மாப்பிள்ளை வீட்டை நாம் குறைவாக நினைப்பதாக அவர் நினைத்துக்கொள்வார் . மீராவை உயர்த்திப் பேசி கமலா நிம்மதியைக் கெடுத்துவிடக்கூடாது என்று தான் அப்படிச் சொன்னேன் .உங்களை ஒருபோதும்` நான் குறைவாக நினைத்ததில்லை . அப்படி நினைத்திருந்தால், அம்மா சொன்னவுடன் , எல்லாவற்றையும் தூக்கி போட்டுவிட்டு இங்கே வந்திருக்க மாட்டேன் . நீங்க கோபப்படாமல் யோசியுங்கள் . அவர் பேசியதற்கு வேறு எப்படிப் பேசினால் சுமுகமாகச் சிக்கலைத் தீர்க்கமுடியும் .” தன்னால் ஒரு பெரும் குழப்பம் நேர்ந்துவிட்டது என்று பயந்தாள் மீரா . அழுகையை அடக்க முயற்சி செய்துகொண்டிருந்தாள் . மகன் சொன்னதில் உண்மை இருப்பதை உணர்ந்தார் . சற்றே நிதானத்திற்கு வந்தார். அங்கே நடந்தவற்றைப் பெண்களிடம் சொன்னார் கோபாலன் . “அப்பா கோவம் நியாயம் தான் . எனக்கும் நீ செய்தது பிடிக்கவில்லை . ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் உன் மகளைக் குறைத்துப் பேசிவிட்டாயே ! என்றார் விஜயா . “யோசித்ததால் தான் அம்மா அப்படிப் பேசினேன் .” “நீங்கள் செய்ததும் சரி என்று தான் தோன்றுகிறது” என்றாள் ராதா . “நல்ல ஜாடிக்கேற்ற மூடி . எல்லாவற்றுக்கும் ஆமாம் சாமி போடு” என்று ராதாவை முறைத்தார் விஜயா . “மீரா பேசிய போது , அவள் சிறுபிள்ளைத்தனமாக எல்லாவற்றையும் பெரிது படுத்துகிறாள் . எண்ணங்களைச் சரி செய்ய அவள் பக்கம் நிற்க வேண்டும் என்று நினைத்துத்தான் கமலா வீட்டிற்குச் சென்றேன் . அங்கே சென்று பிறகு தான் , அவள் நினைத்ததில் தவறொன்றும் இல்லை என்று புரிகிறது . கமலா கணவருக்கு மீரா யாரோ மகளாக மட்டும் தான் தெரிகிறாள் . என் பேத்தி என்ற எண்ணம் அவருக்கு இல்லை . அதனால் தான் இந்த திருமணம் அவரின் பெருந்தன்மை என்று நினைத்திருக்கிறார் .” என்றார் . அதுபோல் கோபாலனும் மகளின் எண்ணங்களைப் பற்றி நினைத்ததுண்டு . பலவற்றை அவள் பெரிது படுத்துகிறாள் என்று எண்ணியதுண்டு . “போகட்டும் அப்பா ! இனியும் அங்கு நடந்தவற்றை ஆராய வேண்டாம். இதனால் கமலாவுக்குச் சிக்கல் இல்லாமல் இருக்க வேண்டும்”. என்றார் கோபாலன் . “அதெல்லாம் ஒன்றும் வராது . அவள் பார்த்துக்கொள்வாள் . இப்போது உன் மகளின் விஷயத்திற்கு வருவோம் . சுந்தரத்திடம் எப்போது பேசலாம் .” இதென்ன ஒரே நாளில் எல்லாம் சரியாகிவிட்டதா ? மீரா அழுகை மறைந்தது. கனவா ? தன்னை கிள்ளி பார்த்துக்கொண்டாள் . “அவள் படிப்பு இன்னும் முடியவில்லை”. “அது முடியும் போது முடியட்டும் . ஒரு வார்த்தை கலந்து பேசிவிடலாம்”. “அவர்கள் வீட்டில் தெரியுமா ?”என்றார் பேத்தியைப் பார்த்து . தெரியும் என்பதுபோல் தலையாட்டினாள் . “அப்படியென்றால் ஒரு நல்ல நாள் பார்த்து அவர்களிடம் பேசிவிடலாம் .” என்றார் கிருஷ்ணசாமி . “கொஞ்சம் பொறுங்கள் அப்பா ! கமலா வீட்டில் சந்துருவுடன் திருமணம் வேண்டாம் என்று தான் சொல்லியிருக்கிறோம் . ஆனந்தை பற்றி ஒன்றும் சொல்ல வில்லை. அதற்குள் ஏதேதோ பேசிவிட்டு வந்துவிட்டேன்.முறையாக அவர்களிடம் தம்பியிடமும் சொல்ல வேண்டும் .” என்றார் கோபாலன் . “அவர்களிடம் முடிவு செய்தவுடன் சொல்லிவிடலாம் !” என்றார் கிருஷ்ணசாமி . “முதலில் நம் பிள்ளைகளிடம் சொல்லிவிட்டு பிறகு பேசலாம் . அது தான் சரி .” அப்போது வெளியே கார் வந்து நின்றது தெரிந்தது . வந்திருந்தது அனந்தன் . இவன் இங்கே எதற்கு வந்தான் என்று எல்லோரும் யோசித்துக்கொண்டிருக்க, கூடத்தில் ஐவரும் இருப்பதைப் பார்த்தான் . அவளை வீட்டில் இறக்கிவிட்டதிலிருந்து அவனுக்கும் கவலை தான் . வீட்டில் பேசியிருப்பாளா ? பெரியவர்கள் என்ன சொன்னார்கள் ? புரிந்துகொண்டார்களா ?இல்லை அவளைத் திட்டித் தீர்த்தர்களா? அவள் செல்லுக்குப் பலமுறை அழைத்தான் . ஒருமுறை கூட அவள் பதிலளிக்கவில்லை . நேரே சென்று பார்த்து விட வேண்டும் என்று கிளம்பிவிட்டான் . ஆனால் என்ன சொல்வது என்று தெரியாமல் ” நீங்கள் இருவரும் ஆலைக்கு வர வில்லை என்று பார்க்க வந்தேன் ” என்று சமாளித்தான் . அவன் சொல்லும்போது பார்வை மீராவின் மேலிருந்தது. அவள் கண்கள் சிவந்திருப்பதைக் கண்டுகொண்டான் . இவர்களிடம் என்ன சொல்லவேண்டும் என்று ஒத்திகை மனதில் பார்த்துக்கொண்டிருந்தான் . அதற்குள் “பரவில்லையே ! என் மீது இவ்வளவு அக்கறை இருக்கிறது ! வா உட்கார் . ஒருமுறை உன் அப்பாவிடம் நான் பேச விரும்புவதாகச் சொல்” என்றார் கிருஷ்ணசாமி . அவரை ஒருமுறை பார்த்துவிட்டு, மீராவின் முகத்தைப்பார்த்தான். அவள் அன்னையின் பின்னால் பாதி மறைத்துத் தரையைப் பார்த்துக்கொண்டு நின்றாள். ஒரு நொடியில் எல்லோர் முகத்தையும் பார்த்தான். எல்லோர் முகத்திலும் குறுஞ்சிரிப்பு. புரிந்துவிட்டது. அவனும் புன்னகையை மறைத்தபடி, கிருஷ்ணசாமி பக்கம் பார்த்தான். “ஹ்ம்ம், எல்லாம் சொல்லிவிட்டாள். உன் பெற்றோருக்கும் சம்மதம் தானே.” “ஆமாம் சார்.” “மாப்பிள்ளை வீட்டார் வந்து பேசுவது தான் முறை. எங்கள் வீட்டில் மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும். எல்லாம் பேசியவுடன் சொல்கிறேன். சரிதானே ?” “நீங்கள் சொன்னால் சரிதான் சார்” “இனிமேல் தாத்தா என்று சொல். என்ன பார்த்துக்கொண்டிருக்கிறாய் ? குடிக்க ஏதேனும் எடுத்துவாருங்கள்”. மீரா சாமர்த்தியசாலி என்று ஆனந்துக்குத் தெரியும்.ஆனால் காலையில் அவள் இருந்த நிலையைப் பார்த்து எப்படிச் சமாளிப்பாளோ என்று பயந்துகொண்டிருந்தான். ஆனால் அதற்குள் எப்படி இதெல்லாம் என்று யோசித்துக்கொண்டிருந்தான். அதற்குள் தட்டில் பலகாரங்களுடன் ராதா வந்தாள். மீரா அருகில் வரவில்லை. வந்திருந்தால் மட்டும் இவன் என்ன பேசியிருக்க முடியும். பொதுவாகப் பேசிவிட்டுக் கிளம்பினான். அவன் நிச்சயம் அழைப்பான் என்று செல்லை எடுக்கத் தன் அறைக்கு ஓடினாள். அவன் இருபது முறைக்கு மேல் அழைத்திருந்தான். குறுஞ்செய்திகள் பல. அவள் தாத்தாவிடம் பேசச் சென்று பிறகு போன்-ஐ பார்க்கவே இல்லை. அப்பாவும் தாத்தாவும் சென்றவுடன் ராதா வெகுநேரம் அவளை வறுத்தெடுத்தாள். ஏன் தாத்தாமுன் அப்படிப் பேசினாய் என்று. பிறகு பாட்டியைச் சமாதான படுத்த ராதாவும் மீராவும் போராடினர். விஜயாவுக்கு பெரிய ஏமாற்றம். கண்டிப்பாக இருக்கத் தெரியாத அவர், வெகுநேரம் புலம்பினார். அவருக்கு ஒருவாறு மீரா புரியவைப்பதற்குள், தாத்தாவும் அப்பாவும் வந்துவிட்டனர்.பாவம் ஆனந்த். இவளிடம் பேசப் பல முறை முயற்சிசெய்து முடியாமல் பதறியடித்து கொண்டு வந்திருக்கிறான். மீரா அவனிடம் பேச அவன் எண்ணை அழுத்தியபோது, அவனே அழைத்தான். “ஏய் ! என்ன செய்தாய் ? காலையில் அப்படிப் புலம்பினாய். இப்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டது. நான் எவ்வளவு பயந்தேன் தெரியுமா ? என்ன மந்திரம் போட்டாய்” “எனக்கே நம்ப முடியவில்லை !” என்று சுருக்கமாகச் சொன்னாள். “அப்படி என்றால் நாளையே என் அப்பா அம்மாவை வரச் சொல்லவா ?” “இன்னும் ஒரு பிரச்சனை இருக்கிறது”. “இன்னொன்றா ?அது என்னம்மா ?” “சித்தப்பா, அத்தை வீட்டில் நம்மைப் பற்றிப் பேச வேண்டும்” “ஓ !இனி அவர்கள் சம்மதம் வேறு பெற வேண்டுமா?” “சம்மதம் என்று இல்லை. அவர்களுடன் சொல்ல வேண்டும் என்றார் அப்பா” ““ஹ்ம்ம், உன் தாத்தாவும் சொன்னார். எப்போது விடுமுறை முடியும் ?”. “இன்று தான் ஆரம்பித்திருக்கிறது இன்னும் 8 நாள் இருக்கிறது” “அதுவரை பார்க்காமல் இருக்க வேண்டுமா ? கஷ்டம்மா !” “இப்போதுதானே பார்த்தோம். பிறகு என்ன ?” “எது பத்தடி தள்ளி நின்றாயே ? அதுவா ? கொஞ்சம் காதலுடன் பேசினால் ரொம்ப தான் செய்கிறாய். நேரில் சந்திக்கும்போது வைத்துக்கொள்கிறேன்.” “என்ன செய்வீர்களாம்” “நான் சொல்லமாட்டேன். பை” என்று வைத்தான் பகுதி 20 கமலா வீட்டில் கிருஷ்ணசாமியும், கோபாலனும் சென்றவுடன் , கமலாவிற்கு அர்ச்சனை நடந்தது. கணவனிடம் இப்போது சண்டை போட இப்போது மனமில்லை அவளுக்கு . கமலாவின் கணவன் நினைத்தைப் போல் இல்லாமல் , அண்ணன் மகளை ஆசையாகவே மருமகளாக்க எண்ணினாள் . மீராவின் நேர்த்தி , பக்குவம் ,துடுக்கு எல்லாம் அவளுக்குப் பிடித்திருந்தது . ஆனால் கணவன் வேறுமாறி பேசிவிட அவளுக்குச் சங்கடமாக இருந்தது . அண்ணன் , அப்பா அவளை என்ன நினைத்திருப்பார்கள் . இதில் உழன்றுகொண்டிருக்க , லட்சுமி அன்று மாலை வந்தவள் , நடந்ததை அறிந்ததும் ,“நல்லதாய் போயிற்று . எனக்கு இதில் அன்றே உடன்பாடில்லை. நம் சந்துருவிற்கு அவளுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது . சரியான திமிர் பிடித்தவள் . ஒன்றும் இல்லாமல் வந்த போதே சாருவிடம் வம்பிழுத்தாள் . நான் நன்றாகத் திருப்பிக் கொடுத்துவிட்டேன். நம் குடும்பத்திற்கு அவள் சரி வரமாட்டாள் .” “பார் !உன் பேச்சை நம்பி நானும் சம்மதம் தெரிவித்தேன்.” என்றார் கமலாவின் கணவன் கமலாவை ஏளனமாக ஒருபார்வை பார்த்து. சற்றென்று எழுந்தாள் கமலா. “நல்ல வேலை . கல்யாணம் வரை செல்ல வில்லை” என்று சமையல் அறைக்குச் சென்றாள் . “இவளுக்கு எல்லாம் தாமதமா தான் புரியும். உன்னைப் போல் சாமர்த்தியம் எல்லாம் அவளுக்கு ஏது” என்று தங்கையைப் புகழத்தொடங்கினார். சந்துரு அன்னையிடம் சென்றான் , “நீங்கள் சொன்னதன் பொருள் அவர்களுக்குப் புரியவில்லை . அவர்கள் வேறு புரிந்துகொண்டார்கள் .” என்றான் . “ஏன் ? உனக்குப் புரிந்துவிட்டதா ?” “நீங்கள் உங்கள் அண்ணனுக்குச் சாதகமாகப் பேசினீர்கள் . கல்யாணம் நடக்காமல் உங்கள் அண்ணன் மகள் தப்பித்துக் கொண்டாள் என்று தானே நினைத்தீர்கள்”. “இந்த வீட்டில் உன் ஒருவனுக்காவது நிஜம் புரிந்ததே” மகன் பார்வை கூர்மை அடைய ” பின்னே என்ன டா ? உன் அப்பாவும் அத்தையும் என்ன பேசுகிறார்கள் ? இவர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது ? என் திருமணம் ஆனதிலிருந்து இன்று வரை இப்படி தான் பேசிக்கொண்டிருக்கிறார் . உலகிலேயே அவர்கள் தான் சிறந்தவர்கள் என்ற எண்ணம் . இத்தனை வருடம் என்னை மட்டம் தட்டிப் பேசி சந்தோசப்பட்டார்கள் . பேரன் பேத்தி எடுக்கும் வயசு வந்து விட்டது . இன்னும் அப்படித்தான். நல்லவேளை என் அண்ணன் மகளுக்கு இதைக் கேட்கத் தேவையிருக்காது . ” “நீ அப்பாவிற்கு எடுத்துச் சொல்வது தானே.!” “எடுத்துச் சொல்வதை கேட்கும் பொறுமை உன் அப்பாவிற்கு இல்லை . அவருக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற நினைப்பு . எப்படியோ போங்கள் . ஆனால் அண்ணன் என்ன நினைத்தாரோ ? நான் தான் முதலில் இந்த பேச்சைத் தொடங்கினேன் . ஆனால் உன் அப்பா அவர்களை என்னவெல்லாம் சொல்லிவிட்டார் ? நாளை சென்று அவர்களிடம் பேச வேண்டும்”. “என்னவோ செய்யுங்கள் .இப்போதைக்கு என் தலை தப்பித்தது .” என்று மகன் அங்கிருந்து நகர்ந்தான் . மறுநாள் சென்று தந்தையையும் அண்ணனையும் கண்டு பேசினாள் . சந்துரு சொன்னதுபோல் அவர்கள் இருவரும் எதையும் மனதில் வைத்துக்கொள்ளவில்லை . “அண்ணா ! நான் மிகவும் விருப்பப்பட்டுத் தான் மீராவை மருமகளாக்க எண்ணினேன் . அவர் எதோ கோவத்தில் பேசிவிட்டார் . நீங்கள் எதையும் மனதில் வைத்துக்கொள்ளாதே.” “விடு! மாப்பிள்ளை பேசியதற்கு நீ என்ன செய்வாய் . போய் வேறு வேலையைப் பார்” என்று கிருஷ்ணசாமி சென்றுவிட்டார் . ” எனக்கு எந்த வருத்தமும் இல்லை . உனக்கு ஏதும் சங்கடம் வந்துவிடுமோ? என்று தான் கவலையாக இருந்தது. மாப்பிள்ளை உன்னிடம் ஏதும் கோவித்துக்கொள்ள வில்லையோ ” . என்றார் கோபாலன் . “அதெல்லாம் ஒன்றும் இல்லை அண்ணா .அண்ணி எதுவும் தவறாக நினைத்திருப்பார்களோ ?” என்று சொல்லும்போது ராதா அங்கு வந்தாள் . “அதெல்லாம் இல்லை. நீங்களும் எதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம்”. சற்று நிறுத்தி கோபாலன் தொடர்ந்தார் . “கமலா , நேற்று நாங்கள் பேசவந்ததில் பாதிதான் பேசினோம்”. சற்றே தயங்கி ” மீரா வேறொருவரை விரும்புகிறாள் என்று முன்பே சொல்லியிருந்தாள். அன்று சென்னையில் இந்த பேச்சு வருவதற்கு வெகு நாட்களுக்கு முன்பாகவே . அவள் படிப்பு முடிந்தவுடன் பேசலாம் என்று இருந்தேன் .” கமலாவின் முகம் மாறியதை இருவரும் கவனித்துக் கொண்டுதான் இருந்தனர் . “நீ தவறாக எடுத்துக்கொள்ளாதே . அன்றே சொல்லிருந்தால் , உனக்கு இன்னும் சங்கடம் ஆகியிருக்கும் அல்லவே !” “நான் எதுவும் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை .அன்று நான் பேசாமல் இருந்திருந்தால் , எல்லாம் நன்றாக இருந்திருக்கும்” என்று சோர்ந்தாள் . “அதெல்லாம் ஒன்றும் இல்லை ! நீ தேவை இல்லாமல் யோசிக்காதே . முடித்ததை நினைப்பதில் என்ன பயன்” “அதுவும் சரிதான் அண்ணா ! ஆமாம் , மீரா சொன்ன பையனைப் பற்றி விசாரித்தீர்களா ? குடும்பம் எப்படி ?” அவள் உற்சாகத்துடன் பேசவும் ,“எல்லாம் தெரிந்த இடம் தான் . நம் ஆலையை பார்த்துக்கொண்டிருக்கிறாரே , ஆனந்த் .” “ஓ ! நல்ல பையன் என்று தான் கேள்விப்பட்டேன் . சீக்கிரம் பேசி முடியுங்கள் . நல்ல விஷயத்தைத் தள்ளிப் போடக்கூடாது .” “அவள் படிப்பு முடியட்டும் .” “பொல்லாத படிப்பு . இப்போது தானே சேர்த்தாள் . படிப்பு முடிய இன்னும் இரண்டு வருஷம் ஆகும் . அதுவரை தள்ளிப்போடக் கூடாது . பேசி முடிவாவது செய்து வையுங்கள்” என்றாள் . “உன்னிடமும் , நாராயணனிடமும் பேசிவிட்டுச் செய்துவிடலாம். உன் கணவர் எப்படி எடுத்துக் கொள்வார் என்று தெரிய வில்லை” . “அவர் என்ன சொன்னால் என்ன ? அவரை நான் பார்த்துக் கொள்கிறேன். மீரா எங்கே ? அவளிடம் நான் கேட்கிறேன்” . நாராயணனும் கமலா சொன்னதை தான் சொன்னார் . ஜீவன் வரும்போது எல்லோரும் மீராவின் திருமணத்தைப் பற்றித் தான் பேசினார்கள் . “நான் அப்போதே சொன்னேன் ! இவளுக்கு மேல் படிப்பு எல்லாம் வேண்டாம்” என்று கேலி செய்தேன் . “ஏய் ! ரொம்ப பேசினால் , கொன்று விடுவேன் .” “இதற்கெல்லாம் கமலா அத்தை தான் காரணம். அவர்கள் மட்டும் கல்யாண பேச்சை எடுக்காமலிருந்திருந்தால் , நான் யாருக்கும் சொல்லிருக்க மாட்டேன் .” அப்போது கமலாவும் அங்கே தான் இருந்தாள் . ” செய்வதையெல்லாம் செய்து விட்டு என் மேல் பழிபோடுகிறாயா ?” என்று மீராவின் காதைத் திருகினாள் .”எனக்கு எல்லாம் தெரியும் . இங்கே எல்லோருக்கும் தெரியும். ” “சரியாகச் சொன்னீர்கள் அத்தை .” என்றான் ஜீவன் . “பாருங்கள் அப்பா ! என்னைக் கேலி செய்வதை .நான் செல்கிறேன்” என்று எழுந்தாள் மீரா. ” போ ! போ !. உன்னவருடன் பேசத்தானே! ” என்றான் ஜீவன் . செல்லும்போது அவன் தலையில் கொட்டிவிட்டுச் சென்றாள் . வெகுநாட்களுக்குப் பிறகு இந்த வீட்டில் நடக்கும் விஷேசம் . இப்போதைக்கு நிச்சயம் திருமணம் இன்னும் ஒரு வருடத்திற்குப் பின் என்று பேசி வைத்திருந்தனர் . மீரா கல்லூரி தொடங்கும் முன் நிச்சயம் செய்துவிடலாம் என்று நினைத்தார்கள். ஆனால் நாட்கள் மிகவும் குறைவு என்பதால் இப்போதைக்குத் தேதி முடிவு செய்வதுதான் திட்டம் . வீட்டில் அனைவரும் பரபரப்பாக இருந்தனர் . நாளை மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்கள் என்றதும் நாராயணன் காலையிலேயே வந்துவிட்டார் . கமலாவும் உடன் வந்தாள் . இவர்கள் யாரும் எதுவும் செய்யவேண்டியதில்லை என்றாலும் ஆளுக்கொரு வேலையை மேற்பார்வை செய்தார்கள் . மாலை வேளையில் லட்சுமி வந்த போது , எல்லா வேலைகளும் முடிந்திருந்தது . அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். மறுநாள் செய்ய வேண்டிய சிற்றுண்டி மற்றும் இனிப்பு வகைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர் . “மாப்பிள்ளை வீட்டிலிருந்து எத்தனை பேர் வருகிறார்களா ?” “அதிகம் இல்லை . நாளை மாப்பிள்ளையின் பெரியப்பா குடும்பமும் , மாமா குடும்பமும் உடன் வருகிறார்கள் .” என்றார் கோபாலன் . “சாரு நிச்சத்திற்கு மட்டும் 200 பேருக்கு மேல் வந்திருந்தனர் . நீங்கள் ஏன் சாதாரணமாகச் செய்கிறீர்கள்” என்று ஏளன குரலில் கேட்டாள் லட்சுமி . “நாளை நாள் குறிக்கத் தானே வருகிறார்கள் . நிச்சயம் சிறப்பாகச் செய்யலாம் . என்ன அண்ணா சொல்கிறீர்கள்.” என்றார் நாராயணன் . “ஆடம்பரம் எல்லாம் எதற்கு வீண் செலவு . சாதாரணமாக இருந்தால் போதும் என்று நினைக்கிறேன் . மாப்பிள்ளை வீட்டில் எப்படி என்று பார்த்துவிட்டு முடிவு செய்யலாம்” என்றார் கோபாலன் . “நன்றாக நினைத்தாய் ! சாருவின் திருமண போல் தான் மீராவின் திருமணமும் செய்ய வேண்டும்” என்றாள் விஜயா . மறுநாள் அனைவரும் பேசினார்கள் . முதலில் இன்னும் ஒரு மாதத்தில் நிச்சயமும் , ஒரு வருடத்திற்குப் பிறகு திருமணம் என்று பேசினார்கள் . அப்போது ஆனந்தின் பெரியப்பா ,“நான் என் கருத்தைச் சொல்கிறேன் . யாரும் தவறாக நினைக்கவேண்டாம் . எங்கள் குடும்பத்தில் நிச்சயம் , திருமணம் எல்லாம் ஒரு வாரத்திற்குள் நடத்திவிடுவோம் . இப்போது மண்டபம் கிடைக்க சமயம் வேண்டும் என்பதால் சில மாதங்கள் இடைவெளி இருக்கும் . அவ்வளவு தான் . இதை நான் சுந்தரித்திடம் சொன்னேன் . பெண் இன்னும் படித்துக்கொண்டிருக்கிறாள் என்றான் . அதனால் என்ன ? எங்கள் வீட்டிற்கு வந்து படிக்கட்டும். அதை யாரும் தடை சொல்லப் போவதில்லையே! எனக்குத் தோன்றியதைச் சொன்னேன் .” என்றார் . சட்டென்று கமலா “நானும் என் அண்ணனிடம் இதைத் தான் சொன்னேன் . ஏதோ வெளியூரில் படிக்கிறாள் என்றால் யோசிக்கலாம் , படிப்பை எப்படித் தொடர்வது என்று ? எல்லாம் ஒரே ஊர்தான் . நீங்கள் சொல்வது ரொம்பவும் சரி !” என்றாள் . “நீங்கள் பெரியவர்கள். நீங்கள் சொல்லுங்கள்” என்றார் கிருஷ்ணசாமியைப் பார்த்து . “நானும் அப்படித்தானே நினைக்கிறேன். நல்ல காரியத்தை எதற்குத் தள்ளிப்போட வேண்டும் ?” என்றார். “பாருங்கள் , நாங்கள் எல்லோரும் ஒரே மாதிரி தான் நினைக்கிறோம் .பிள்ளையைப் பெற்றவர்கள் தான் தள்ளிப்போடுகிறார்கள்.” என்றார் ஆனந்தின் உறவினர் ஒருவர் . “அது , அவர்கள் இருவரும் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை” என்று சுந்தரம் மகனைப் பார்த்தார் . இப்போது அவன் என்ன சொல்ல வேண்டும் . என்ன சொன்னாலும் நிச்சயம் கேலிசெய்வார்கள் . அவன் விழிப்பதைப் பார்த்த “அவனிடம் என்ன கேட்பது. நீ சொல் சுந்தரம்” என்றார் ஒருவர் . “நீங்கள் சொல்வது போல் செய்வதில் எனக்கும் சந்தோசம் தான்.” என்று மனைவியைப் பார்த்தார். “என் மருமகளை இன்றே அழைத்துச் செல்வதானாலும் எனக்குச் சம்மதமே” என்ற பத்மா, “நீங்கள் சொல்லுங்கள் ?” என்றார். “மாப்பிள்ளை வீட்டார்கள் கேட்டுவிட்டார்கள். நீங்கள் சொல்லுங்கள் அண்ணி” என்றாள் கமலா ராதாவிடம். “நான் என்ன சொல்வது ? மாமா எப்படிச் சொல்கிறாரோ அப்படியே செய்யலாம்” என்றாள். அங்கிருந்தவர்களில் பெரியவர் கிருஷ்ணசாமி தான். எல்லோரும் அவர் முகத்தைப் பார்த்துக்கொண்டிருக்க, “அப்படியானால், சீக்கிரமே கல்யாண தேதியையும் முடிவு செய்து விடலாம்.என் பேத்தி கணவன் வீட்டிலிருந்து படிப்பைத் தொடரட்டும்.” என்றார். அன்றே எல்லா தேதிகளும் முடிவு செய்தனர். எல்லாம் நலமாகவே சென்றது. ஆனால் முன்போல் ஆனந்தும் மீராவும் சந்திக்க வாய்ப்புகள் கிடைக்கவே இல்லை. அவள் விடுமுறை நாட்களில் எல்லாம் ஆடைகள் தேர்வு, நகைகள் தேர்வு என்று அழைத்துச் சென்று விடுவார்கள்.தொலைப்பேசியில் பேசுவதோடு சரி. எல்லோருக்கும் நாட்கள் வேகமாக நகர்ந்தது. திருமண வேலைகள் ஓரளவு முடிந்துவிட்ட நிலையில் கிருஷ்ணசாமி கோபாலனையும் ஜீவனையும் மீராவையும் அழைத்துப் பேசினார். “உங்களுக்கு இதுவரை நான் எதுவும் செய்ததே இல்லை. இப்போது நான் செய்வது உங்களுக்குச் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதுவரை ஆலையைத் தவிர எல்லாவற்றிலும் என் மற்ற பிள்ளைகளுக்குச் சரியாகப் பிரித்துக் கொடுத்துவிட்டேன். உங்களுக்குச் சேரவேண்டிய பங்கு இப்போது என் பேரிலும் விஜயா பேரிலும் இருக்கிறது. அதை மாற்றி எழுதிவிடலாம் என்று பார்க்கிறேன்.” “இப்போது எதற்கு அப்பா அதெல்லாம் ?” “எப்போதோ செய்திருக்க வேண்டும். செய்திருந்தால் கமலா மாப்பிள்ளை அப்படிப் பேசியிருப்பாரா ?” ” அவர் கோவத்தில் எதோ பேசினார்! அதை விடுங்கள் அப்பா !” “இல்லை, நான் முடிவு செய்துவிட்டேன். ஜீவா சிவில் சர்வீஸ் பக்கம் செல்லவிருப்பதால். ஆலை பொறுப்பை மீரா பேரிலும் மற்றதை ஜீவன் பேரிலும் மாற்றி எழுத முடிவெடுத்துவிட்டேன். ஆலையை ஆனந்த் பார்த்துக் கொள்வான். மீரா திருமணம் முடியும் முன் இதைச் செய்ய வேண்டும்”. என்றார். “இப்போது எதுவும் வேண்டாம் அப்பா.” என்றார் கோபாலன். “நான் உன்னிடம் அனுமதி கேட்கவில்லை. தகவல் சொல்கிறேன் . அவ்வளவுதான் !” கோபாலன் என்ன சொல்வது என்று தயங்கினார். “நீங்கள் கொடுப்பதை வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் மற்றவர்களுக்குச் சரியாகப் பிரித்துக் கொடுத்துவிட்டீர்கள். ஆனால் ஆலையில் தம்பிக்குப் இருப்பது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. இன்று ஆலையை வளர்த்ததில் உங்களுக்கு அடுத்த பங்கு நாராயணனுக்கு இருக்கிறது. அவன் இதற்காக நிறைய உழைத்திருக்கிறான். கொஞ்சம் யோசியுங்கள் அப்பா.” “அவனுக்குத் தரக் கூடாது என்று நான் என்றும் நினைக்கவில்லை. ஆனால் அவன் புது தொழில் தொடங்கியவுடன் இதைத் தூக்கி எரிந்து விட்டான். அவன் நன்றாக இருந்தால் போதுமா ? இங்கே வேலை செய்யும் குடும்பங்கள். அதைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இப்போதும் அவனிடம் பொறுப்பைத் தர நான் தயார். நான் இருக்கும் வரையேனும் அவனை ஒழுங்காக ஆலையை நடத்தச் சொல்.” “ஏதேதோ பேசுகிறீர்களே அப்பா !” என்று பதறினார் கோபாலன்.”அவனை அழைத்துப் பேசுங்கள்.அவனுக்கு ஆலையில் பங்கு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.” என்றார். சற்று யோசித்துவிட்டு “அவனை வரச்சொல்” என்றார் கிருஷ்ணசாமி. தந்தை அழைக்கிறார் என்றதும் உடனே வந்தார் நாராயணன். விவரத்தைச் சொன்னதும் “உங்கள் விருப்பம் அப்பா” என்றான். “உனக்கு ஏதும் வருத்தம் இல்லையே” “நீங்கள் அண்ணனுக்குக் கொடுப்பதில் வருத்தம் இல்லை. உங்கள் விருப்பம்போல் நான் நடந்துகொள்ளவில்லை. அதற்காக என்னை மன்னியுங்கள். இரு தொழிலையும் என்னால் பார்க்க முடியவில்லை. ஜெய்யும் விஜயும் எப்படி என்று உங்களுக்கே தெரியும். அவர்களுக்கு விருப்பமான தொழிலைத் தொடங்கி அவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தேன் . அவ்வளவுதான்.” என்றான். “அதையாவது உன் பிள்ளைகளை ஒழுங்காகச் செய்யச்சொல். விரைவில் நான் பத்திரங்களைப் பதிவு செய்யப் போகிறேன்” என்றார். மகன்களிடம் பேசிவிட்டு அன்று இரவு மனைவியிடமும் பேசினார் கிருஷ்ணசாமி. முதலில் விஜயா எதுவும் சொல்லவில்லை. பின் கோபாலன் நாராயணனுக்கு ஆலையில் பங்கு இருக்கிறது என்று சொன்னதைக் கூறியதும், “பெரியவன் சொல்வதும் சரிதான். நாராயணன் அளவுக்கு வேறு யாரும் செய்யவில்லை.” என்றார் விஜயா. “அவனுக்கான பங்கைச் சரியாகச் செய்துவிட்டேனே. அவன் உழைப்பிற்காகத்தான் அவனுக்குச் சொத்தைப் பிரிக்கும்போது அதிகமா செய்தேன். எதோ நான் அவனுக்கு அநியாயம் செய்தது போல் எல்லோரும் ஏன் நினைக்கீறீகள் ? அப்படி அவனுக்கு நான் என்ன குறை வைத்துவிட்டேன்.” “நீங்கள் அவனுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. அவன் நிலையை நீங்கள் கொஞ்சம் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று தான் நினைக்கிறேன்.” “என்ன பெரிய நிலைமை ? மனைவியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு , இங்கே எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டுப் போக எண்ணினான். சரி போ என்றேன்.அவ்வளவு தான்.” “நீங்கள் இன்னும் உங்கள் பிள்ளை உங்கள் சொற்படி ஆட வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அவன் உங்கள் பிள்ளை மட்டும் இல்லை. அவனுக்கு ஒரு குடும்பம் இருக்கிறது. அவன் குடும்பத்தின் தேவையை அவன்தானே செய்ய வேண்டும்.” “தேவையா? இந்த வீட்டில் அவர்களுக்கு மட்டும் என்ன குறை வந்துவிட்டது.” “குறை என்றால், பணத்தைப் பற்றி இல்லை ! லட்சுமிக்கு சில விருப்பங்கள். அதை நிறைவேற்ற வேண்டியது அவன் கடமை இல்லையா ?” “அவள், இந்தக் குடும்பத்தைத் தூக்கி எறிய வேண்டும் என்று விருப்பப்பட்டாள். அவன் செய்துவிட்டான்.” “ஏன் இப்படிப் பேசுகிறீர்கள் ? அவள் பிறந்த வீட்டின் தொழிலில் கணவன் ஈடுபட வேண்டும் என்று நினைத்தாள். இதில் என்ன தவறு.” மனைவியை முறைத்துப் பார்த்துவிட்டு “நீ ஞானி ஆகிவிட்டாய் ! அவள் விருப்பத்திற்கு அவனை மாற்றிவிட்டாள். அது உனக்குத் தெரியவில்லை.” விஜயா சிரித்துவிட்டு, “திருமண உறவில் ஒருவருக்கேற்ப இன்னொருவர் மாறத்தான் வேண்டும்.இல்லையென்றால் குடும்பம் நிலைத்திருக்காது. இந்த வயதில் உங்களுக்கு இதெல்லாம் நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா ?” “ஏன் இவன் மாற வேண்டும் ? அவள் மாறி இருக்க வேண்டும்”. “அது உங்கள் விருப்பம் ! ஒரு வேளை கமலா அவள் கணவனை நம் தொழிலில் ஈடுபடுத்தியிருந்தால் சந்தோசமாக வரவேற்றிருப்பீர்கள் தானே ! அதே உங்கள் மருமகள் செய்தால் வலிக்கிறது” மனைவியை முறைத்துப்பார்த்துவிட்டு, “மாப்பிள்ளை அவர் தொழிலைவிட்டு இங்கே வருவதென்றால் நான் சம்மதித்து இருக்க மாட்டேன்.தலைமுறைகளாய் செய்யும் தொழிலின் அருமை தெரிந்தவன்.” சிரித்துக்கொண்டே விஜயா பேசினாள் “சரி உங்களுக்கு, அருமை தெரியும். லக்ஷ்மிக்கு அது தெரியவில்லை. என்ன செய்வது ? அதற்கு நாராயணன் என்ன செய்ய முடியும் ? பிள்ளைகளும் மனைவியின் பக்கம் நிற்கும்போது அவனால் என்ன செய்ய முடியும் ? ஒரு வேளை நீங்கள் சொல்வதை மட்டும் செய்திருந்தால், அவன் தினமும் மனைவியிடம் சண்டை பிடித்தவண்ணம் வாழக்கையை நடத்தவேண்டி இருந்திருக்கும்.” சற்றே நிறுத்தினாள். ” பிள்ளைகள் திருமணத்திற்குப் பின்பு, அவர்கள் வாழ்க்கைத் துணையை முன்னே நிறுத்துவது, இனி பெற்றோர் நமக்குத் தேவை இல்லை என்பதால் அல்ல. நம் பெற்றோர்கள் நம்மைப் புரிந்துகொள்வார்கள் என்று தான். பிள்ளைகள் நிம்மதியா இருப்பது தானே நம் மகிழ்ச்சியும். இப்போது அவன் வேறு தொழில் தொடங்கி முன்னேறித்தானே இருக்கிறான். நீங்கள் கொடுத்ததை அழித்துவிடவில்லையே ! தலைமுறைகள் மாறும்போது வழக்கங்கள் நிறைய மாறுகிறது. அன்று கோபாலன் காதலை எதிர்த்தோம். இன்று மீரா சொன்னதை அப்படியே ஏற்றோம். அதுபோல் விஜய், ஜெய் விருப்பத்தை ஏற்கவேண்டாமா ?“. சில கணங்கள் மௌனமாக எங்கோ பார்த்தபடி அமர்ந்திருந்தார் கிருஷ்ணசாமி. “நாராயணனைப் போல் ஜெய்யும், விஜய்யும் பொறுப்பாக நடந்து கொள்ளவில்லையே.” “அதைச் சரி செய்துவிடலாம். இன்னும் சிறு பிள்ளைகள் தானே. நாராயணனிடம் சொல்லுங்கள். பிள்ளைகள் செய்வதைச் சுட்டிக்காட்டுங்கள்.” “சுட்டிக்காட்டினால் மாறிவிடுவார்களா ?” என்றார் கேள்வியாக. “உங்கள் அலுவலக அறையில் ஒரு வாசகம் இருக்கிறதே, அது நினைவிருக்கிறதா ?கடமையைச் செய், பலனை எதிர்பாராதே ! என்று. எனக்குத் தூக்கம் வருகிறது.” என்று படுத்துவிட்டாள் விஜயா. முதுகைக் காட்டி படித்திருந்த மனைவியைச் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். மனைவியிடம் ஆலோசனை கேட்பதை பெரும்பாலும் கிருஷ்ணசாமி செய்வதில்லை. ஆனால் அப்படிக் கேட்ட நேரங்களில் அவரையே வியக்க வைத்துவிடுவார் விஜயா. மனைவியின் பக்குவத்தை மெச்சிக்கொண்டே உறங்கச்சென்றார். பகுதி 21 அன்று இரவே ஒரு முடிவிற்கு வந்தார். மறுநாள் காலை இரு பிள்ளைகளின் குடும்பத்துடன் ஆனந்தின் குடும்பத்தையும் அழைத்துப் பேசினார் கிருஷ்ணசாமி. தன் பேரில் இருக்கும் இதர சொத்துக்கள் அனைத்தையும் ஜீவன் மீரா இருவரின் பேரில் சமமாகப் பிரித்து எழுதுவதாகவும், தன் காலத்திற்குப் பிறகு அவர்கள் விருப்பம்போல் விற்கவோ மாற்றவோ விருப்பம் தெரிவித்தார். யாருக்கேனும் மாற்றுக் கருத்து இருக்கிறதா ?என்று கேட்டார். “நீங்கள் உங்கள் சம்பாத்தியத்தைப் பிரித்து எழுதுவது உங்கள் விருப்பம். இதில் நாங்கள் எதற்கு.” என்றார் சுந்தரம். “பொறுங்கள் ! இதில் உங்களுக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது. ஆலையின் பாதி நிர்வாகத்தை நான் நாராயணனிடம் கொடுக்கிறேன்.” நாராயணன் ஆச்சரியமாகப் பார்த்தனர். “அப்பா நானா?” என்று அதிர்ந்தான் மகன். “இன்னும் நான் முடிக்கவில்லை. இன்னொரு பாதி ஆனந்திடம் சுந்தரத்திடம்.இதில் ஒருவர் விலக நினைத்தால் மற்றொருவர் முழு பொறுப்பையும் ஏற்கலாம். என் காலம் இருக்கும் வரை விற்பது கூடாது. நிர்வாகத்தை உங்கள் இருவருக்கும் கொடுக்கிறேன். ஆனால் சொத்து மதிப்பாக விஜய், ஜெய், ஜீவா, மீரா நால்வருக்கும் சமமாய் சேரும். இவர்களில் யாரேனும் நிர்வாகம் செய்ய நினைத்தால் நான் இருக்கும் வரை நான் தீர்மானிப்பேன் . பிறகு நாராயணனும் ஆனந்தும் கலந்து பேசி முடிவெடுக்கலாம்.யாருக்கேனும் கருத்து இருந்தால் சொல்லலாம். நிச்சயம் ஏற்றுக்கொள்வேன் என்று சொல்ல முடியாது, பரிசீலிப்பேன்.” என்று முடித்தார் கிருஷ்ணசாமி. நாராயணன் முந்திக்கொண்டார்.” உங்கள் முடிவில் எனக்கு ஒன்று சொல்ல வேண்டும். நான் ஆலையைச் சில ஆண்டுகளாகவே கவனிக்கவில்லை. ஆனந்த் பொறுப்பாகப் பார்த்து வந்திருக்கிறார் அவரே முழு நிர்வாகப் பொறுப்பையும் பார்க்கட்டும். நான் பொறுப்பைத் தட்டிக் கழிக்கவில்லை. அவர் நம் வீட்டு மாப்பிள்ளை. இது நான் அவருக்குக் காட்டவேண்டிய மரியாதை.” என்றார். அவர் முடிக்கும் முன்னரே “நிர்வாகப் பொறுப்பை மீரா பார்ப்பாள்” என்றான் ஆனந்த். அங்கிருந்த எல்லோரும் அதிர்ந்தனர், மீரா உட்பட.”அவளுக்கு என்ன தெரியும்? அவளுக்கு அனுபவமும் இல்லை” என்றார் கோபாலன். “அவள் ஓரளவு கற்றிருக்கிறாள். அவள் அனுபவம் பெறும்வரை, நான் உதவுகிறேன். நீங்கள் இருக்கிறீர்கள். அவள் கற்றுக்கொள்வாள்.ஒரு வேலை நாளை அவன் அண்ணன்கள் யாரேனும் நிர்வாகத்தில் இணைய ஆர்வம் காட்டினாள், என்னிடம் வரத் தயக்கமாக இருக்கலாம். ஆனால் மீராவிடம் அவர்களுக்கு இலகுவாக இருக்கும்” என்றான். ஆனந்த் பேசிய விதம் கிருஷ்ணசாமியின் ஆசையைத் தூண்டியது. அவர் விருப்பப்பட்டதும் அது தான். அவர் வாரிசுகள் இந்தத் தொழிலைத் தொடர வேண்டும் என்று. அவர் யோசிக்கும் போதே ஆனந்த் சொன்னான் “நான் தவறாகப் பேசியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்”. என்றான். இறுதியில் ஆனந்த் சொன்னது போல் தான் நடந்தது. ஆனந்த் மீரா திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது. எல்லோரும் அவரவர் வேலைகளைத் தொடங்க வேண்டும் என்று திட்டம் வைத்திருந்தனர். மனைவி அதிக விடுமுறை எடுக்கக் கூடாது என்று எல்லா சடங்குகளையும் மூன்று நாளில் முடிக்க வேண்டும் என்று முன்பே சொல்லிவைத்தான். மூன்றாவது நாள் ஆனந்தின் பெற்றோர் தவிர மற்ற உறவினர்கள் எல்லாம் முன்பே புறப்பட்டுவிட்டனர். இரவு அனைவரும் சற்றே ஓய்வாக அமர்ந்திருந்தனர். “அப்பா ! சில சடங்குகளை இரண்டு நாள் கழித்துச் செய்திருக்கலாம்” என்றாள் கமலா. “என்ன செய்வது, ஆனந்த தான் மீரா படிப்பு கெடும். மூன்று நாளைக்குள் எல்லாம் செய்ய வேண்டும் என்றான். இளசுகள் இவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. நமக்குத் தான் சோர்ந்துவிட்டது.” என்றாள் பத்மா. பெண்கள் அணி, ஆண்கள் அணி என்று சற்றே தளி அமர்த்திருந்ததால், ஆண்கள் அணியில் இது கேட்டிருக்க வாய்ப்பில்லை ஆனால் சாரு அனைவரும் கேட்கும் வண்ணம், “பாரேன் அக்கறையை ! மனைவிக்காக என்னமாய் யோசிக்கிறார்.அத்தை நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என்றாள் பத்மாவை பார்த்து. “ஏய் !இவர் உனக்குப் பெரியம்மா ! அத்தை இல்லை” என்றாள் லட்சுமி. “அடடா ! உன் மாமியாரிடம் எச்சரிக்க மறந்துவிட்டானே !” என்று சோகமாகச் சொன்னான் சந்துரு, சாருவைப் பார்த்தபடி. “அந்தச் சாமர்த்தியம் எல்லாம் எனக்கு இல்லை” என்றாள் சாரு. “அதைத்தான் மூன்று நாளாகப் பார்த்தோமே !” என்றான் விஜய். எல்லோரும் சிரிக்க “புது தம்பதிகள் இருக்க, எங்களைப் பற்றிப் பேசவேண்டுமா ?” என்றான் சாருவின் கணவன். “அதெல்லாம் இல்லை !உங்கள் திருமணம் முடிந்தவுடன் சாருவை அழைத்துக்கொண்டு சென்று விட்டீர்கள். இப்போதுதானே எங்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கிறது. எங்களுக்குப் பொழுதுபோக்கே நீங்கள் நால்வரும்தான்”. என்றான் ஜெய். உணவை முடித்துக்கொண்டு மீராவை வழியனுப்பிவைத்தனர் “செல்லும் வழியில். அத்தை இவர் என்னை நன்றாக மாட்டிவைத்து விட்டார்”. என்றாள். “அது இன்று தான் தெரிகிறதா ?” என்று கண்சிமிட்டினான். “என்னால் எப்படி உங்களைப் போல் சிறப்பாக நிர்வாகம் செய்ய முடியும் ?” “என் மீராவால் எல்லாம் முடியும்” ” எதைக் கேட்டாலும் இப்படித்தான் சொல்கிறார் அத்தை “. என்று காரின் இருந்த பத்மாவிடம் முறையிட்டாள். “மீரா ! நான் இன்று சொல்வதுதான். இவனிடமிருந்து எங்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டது. இனி நீ தான் இவனைச் சமாளிக்க வேண்டும். நான் சொல்வது சரிதானே” என்று கணவனைப்பார்த்துச் சிரித்தாள் பத்மா. “ஆல் தி பெஸ்ட் மா !” என்று இருவரும் சிரித்தனர். கணவனைப் பார்த்து மீரா விழிக்க, அவன் சிரித்துக்கொண்டே அவள் சிரத்தை பற்றி ஆட்டினான். “நீங்கள் ஏன் பொறுப்பை என்னிடம் கொடுக்கச் சொன்னீர்கள் ?” என்றாள் மீரா. “உன்மேல் உள்ள நம்பிக்கையில் தான்”. “எனக்கு நம்பிக்கையில்லை” “யாரிடம் ? என்னிடமா, உன்னிடமா ?” “நீங்கள் சொல்வதில் ?” “ஏனோ ?” “ஒரு அறிக்கை தயார் செய்ததைத் தவிர எனக்கு என்ன தெரியும்?” அவன் ஒன்றும் பேசவில்லை. அவள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். பத்மா “மீரா ! நாளை எப்போது கல்லூரிக்குச் செல்ல வேண்டும்.” என்று பேச்சை மாற்றினாள். சிறிது நேரத்தில் வீடும் வந்தது. அவர்கள் அறைக்குச் சென்றதும் “நீங்கள் இன்னும் பதில் சொல்லவில்லை ?” என்றாள் மீரா. “என்ன சொல்வது ?” “எனக்குப் பயமாக இருக்கிறது. என்னால் தொழில் ஏதேனும் சரிவு வந்தால்.” “அதற்கு நான் விடமாட்டேன்.” என்றான்.” நீங்களே நிர்வாகம் செய்யுங்கள், நான் உங்களுடன் உதவி செய்கிறேன் “. வேண்டாம் என்று தலையாட்டினான்.”உன் தாத்தாவிற்கு இதில் தான் மகிழ்ச்சி.” “தாத்தாவிற்காகவா ?” “கொஞ்சம் எனக்காகவும்”மீரா புரியாமல் பார்க்க “நான் என்ன தான் செய்தாலும்,‘திரு. கிருஷ்ணசாமி வளர்த்த நிறுவனத்தை, ஆனந்த் பார்த்துக்கொள்கிறேன்’, என்று தான் சொல்வார்கள்.இதில் என்ன பெருமை எனக்கு இருக்கிறது. அதே நீ சிறப்பாகச் செய்தால், இந்தக் குடும்பத்தில் பெண்கள் கூடத் திறமைசாலிகள் என்று பாராட்டுவார்கள்.” என்று மனைவியை அணைக்க அருகில் சென்றான். அவனைத் தள்ளி விட்டு,“அப்படியென்றால், மனைவி வீட்டில் தரும் பொறுப்பை ஏற்பது உங்களுக்குக் கௌரவ குறைச்சல் அப்படித்தானே ?” என்று விலகிச் சென்றாள். “என் கணவருக்கு மிகவும் பெருந்தன்மையான குணம் என்று நினைத்திருந்தேன்.” என்றாள் சலிப்பாக. “என் தன்மானத்தை விட்டுக் கொடுக்கும் பெருந்தன்மை எல்லாம் எனக்கு இல்லையம்மா!” என்று பின்னோடு அணைத்தான். “இனி நான் ஒன்றும் பேச முடியாது. உங்கள் தன்மானத்தைக் காக்கும் பொறுப்பு எனக்கும் இருக்கிறது.” என்றாள். அப்போது அவர்கள் நின்ற இடம் அவர்கள் அறையின் ஜன்னல் பக்கமாக. பே விண்டோ ! அதில் அமர்வதற்கு ஒரு மேடையும், மெத்தை குசனுடன் சோஃபா போல் இருந்தது. அதில் அவன்மீது சாய்ந்து வானத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். “நாளைக் கல்லூரிக்குச் செல்ல வேண்டும். தூக்கம் வரவில்லையா ?” என்றான். “இல்லை !” என்றவள் நிமிர்ந்து உட்கார்ந்தாள்.” அன்று நான் வானத்தைப் பார்த்து அமர்ந்திருப்பதாகச் சொன்னீர்களே! எப்படிச் சொன்னீர்கள்?” என்றாள். “அது ரகசியம் ! சொல்லமாட்டேன்.” “நமக்குள் ரகசியம் இருக்கக் கூடாது என்று நீங்கள் தானே சொன்னீர்கள் !சொல்லுங்கள்”. அவளைப் பார்த்துச் சிரித்தபடி “நானும் இதே இடத்தில், அப்படித்தானே அமர்ந்திருந்தேன்.” “நான் ஊருக்குச் சென்றது எப்படித் தெரியும்.உங்களிடம் நான் சொல்லிருக்கவில்லையே.” “அன்று நான் பேசிய விஷயத்தைப் பற்றிப் பேச ஊருக்குச் செல்வாய் என்று யூகித்தேன்.விடுதியிலிருந்தால் யாரேனும் பேசும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். அன்று அமைதியாக இருந்தது.” “உங்கள் துப்பறிவு திறன் அபாரம்” “இது துப்பறியும் திறன் இல்லை. காதலியை அறியும் திறன்” என்று அவள் மூக்கை பிடித்து ஆட்டினான். அவன் கையைத் தட்டிவிட்டு,“என்னைப் போல் அன்று நீங்களும் அழுதீர்களா ?”. அவளை முறைத்துப் பார்த்துவிட்டு “இல்லை ஆனந்த கூத்தாடினேன்” “நான் அழுததிற்காகவா?” என்று பார்வையைக் கூர்மையாக்கினாள். “என் வெறுப்பையும் கோவத்தையும் தாங்கமுடியாத என் தேவதை என்னை எவ்வளவு காதலிக்கிறாள் என்று புரிந்ததால்.” இவர்களின் காதல் என்றும் தொடரும். FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.