[] 1. Title Page 2. Cover 3. Table of Contents உயிரின் உறவே உயிரின் உறவே   லாவண்யா ஶ்ரீராம்   lavanya.sriramprabhu@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA-NC கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/uyirin_uravae மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/uyirin_uravae This Book was produced using LaTeX + Pandoc பகுதி - 1 அறையில் அந்த மேஜை மீது மட்டும் ஒளி தருவது போல் மேஜை விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. அருகில் சில கோப்புகள் திறந்து கிடந்தன. கணிப்பொறியையும் கோப்புகளையும் மாறி மாறிப் பார்த்தவண்ணம், எண்களை ஒப்பிட்டுக்கொண்டிருந்தான் அருண். கண்கள் எரியத் தொடங்கி இருந்தது. ஒருமுறை சென்று முகத்தை நன்கு கழுவி வந்தான். மீண்டும் கணிப்பொறியின் திரை பார்த்தால் கண்கள் இன்னும் அதிகமாக எரிந்தது. திரையில் ஓரத்தில் காண்பித்த நேரத்தைப் பார்த்தான். மணி அதிகாலை மூன்று. அதிகபட்சம் இன்னும் ஒரு மணி நேரம் கண்விழித்தால் வேலை முடிந்துவிடும். ஆனால் கண்கள் ஓய்வு வேண்டும் என்றது. மெதுவாக எழுந்து அவன் அறையை ஒட்டி இருந்த மேல்மாடத்துக்கு வந்தான். கைகளைத் தலைக்கு மேல் உயர்த்தி சோம்பல் முறித்தான். அவன் நின்ற இடத்திலிருந்து பார்த்தால் வீட்டின் பக்கவாட்டிலிருந்த தோட்டம் முழுவதும் தெரியும். லேசாக நோட்டம் விட்டவன், தோட்டத்திலிருந்த மரத்தில் அருகில் அவன் வளர்க்கும் செல்ல நாய் அமர்ந்து கொண்டிருந்தது. இரவு நேரங்களில் அதை அவிழ்த்து விடுவது வழக்கம். அது வீட்டைச் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும். அப்படி இல்லாத நேரத்தில் அதற்கென்று அமைக்கப்பட்ட சிறு வீடு போன்ற பகுதியில் சென்று படுத்துக் கொள்ளும். இன்று அது மரத்தின் அருகே படுத்திருக்கவும், உற்று நோக்கினான். அங்கே இருந்த அமர்வில் யாரோ அமர்ந்திருப்பது தெரிந்தது. இந்த நேரத்தில் வெளியாள் யாரும் வந்திருக்க வாய்ப்பில்லை. வந்திருந்தால் அவன் செல்ல நாய் டாமி நிச்சயம் கடித்துக் குதறி இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் தான். ஆனால் இந்த நேரத்தில் யார் உறங்காமல் விழித்திருப்பது. வேகமா கீழே சென்றான். அங்கே அமர்ந்திருந்தது சிவநாதன். அருணின் தந்தை. வேகமாக அருகில் சென்றான். முதலில் அவனுக்குப் பதற்றம். உடலுக்கு ஏதும் சரியில்லையா ? அருகில் சென்றதும் “என்ன அப்பா? இங்கே உட்கார்ந்திருக்கிறீர்கள்.” “அருண் ! நீ தூங்க வில்லை?” “கொஞ்சம் வேலை இருந்தது. நீங்கள் ஏன் இங்கே அமர்த்திருக்கிறீர்கள் ?” “ஒன்றும் இல்லை ! தூக்கம் வரவில்லை.” “என்ன அப்பா ! மணி மூன்றுக்கு மேல் ஆகிறது. இப்படித் தூங்காமலிருந்தால் உடம்பு என்ன ஆகும் ?” “இப்போது தான் வந்தேன் ! திடீரென்று தூக்கம் கலைந்துவிட்டது. மீண்டும் தூக்கம் வரவில்லை. அதுதான் அப்படியே தோட்டம் பக்கம் வந்தேன்.” தூக்கம் வராத அளவுக்கு அப்பாவுக்குப் பெரும் கவலை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அவரின் தொழில் மிகச் சிறப்பாகவே நடக்கிறது. பாதி பொறுப்பை இப்போது அருண் தான் பார்த்துக்கொள்கிறான். காய்கனிகளை ஏற்றுமதி செய்யும் தொழிலில் நல்ல லாபம். பூர்வீக தொழிலான விவசாயத்தை மட்டும் பார்த்தால் முன்னேற முடியாது என்று நேரே சந்தையில் சென்று வியாபாரம் செய்யத் தொடங்கி, இப்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ந்திருந்தார் சிவநாதன். வறுமை என்று எப்போதும் வாடியதில்லை என்றாலும் சாதாரண நடுத்தர குடும்பம் என்று இருந்த நிலையை மாற்றி இப்போது பலருக்கு வேலை தருகிறார். குடும்பத்திலும் இறைவன் அருளால் எல்லாம் சிறப்பாகவே இருந்தது. மனைவி பார்வதி கணவன் பேச்சை அப்படியே கேட்கும் சாது. மூத்த மகன் அருண் இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, இரண்டு ஆண்டுகளாகத் தந்தைக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி, இப்போது புது தொழில் தொடங்க வேலை செய்துகொண்டிருக்கிறான். இளைய மகன் சத்யன் இன்னும் படித்துக் கொண்டிருக்கிறான். சிவநாதனுக்கு கவலை பட ஒரு காரணம் இருந்தது. படுக்கையில் இருக்கும் அவரின் அன்னை துளசியம்மாள். வயோதிகத்தால் சில மாதங்களாக அவர் நடமாடுவது வெகுவாகக் குறைந்துவிட்டது. தந்தை தூக்கமின்றி இருப்பது மகனுக்குக் கவலையாக இருந்தது. அருண் மெல்லக் கேட்டான், “பாட்டியைப் பற்றிக் கவலைப்படுகிறீர்களா ?” “அது ஒருபுறம் இருக்கிறது. இன்னொரு புறம் அண்ணன் நினைவு அடிக்கடி வருகிறது. அவர் விஷயத்தில் ஏதோ தவறு செய்து விட்டேனோ என்று ஒரு கவலை.” “பெரியப்பா விஷயத்தில் நீங்கள் என்ன செய்திருக்க முடியும் ? அவர் உடல் நலமின்றி நம்மை விட்டுப் போய்விட்டார். இப்போது ஏன் அவரைப் பற்றி நினைக்கிறீர்கள் ?” “பெரியப்பாவின் குடும்பம் ! நான் அவர்களைக் கண்டுகொள்ளவே இல்லையே !” “அதில் உங்கள் தவறு எதுவும் இல்லை. அது தாத்தாவின் முடிவு? தேவை இல்லாமல் யோசித்து உடலைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். வாருங்கள் சென்று படுக்கலாம்.” என்று மகன் அழைத்தான். கையிலிருந்த கடிகாரத்தில் மணியைப் பார்த்தார். மணி இப்போது நான்கு. “இனி எங்கே உறங்குவது. மெதுவாக ஒரு நடைப்பயிற்சி செய்தால் விடிந்துவிடும்.” என்றார் சிவநாதன். “கொஞ்ச நேரம் ஓய்வெடுங்கள். என் வேலை முடிந்ததும் நாம் இருவரும் சென்று நடப்போம்.” என்றான் அருண். “என் உடல் நலனைப் பற்றிப் பேசிவிட்டு, நீ மட்டும் என்ன செய்கிறாய் ? நீ சென்று கொஞ்சம் ஓய்வெடு” என்றார் சிவநாதன். “சென்னைக்கு காரில் செல்லும்போது தூங்கிக் கொள்வேன். இன்னும் ஒரு மணி நேர வேலைதான்” என்று சமாதானம் சொன்னான். சிவநாதன் அவர் அறைக்குள் செல்வதைப் பார்த்தபின், அவன் அறைக்கு வந்தான். சில நிமிடங்கள் தந்தையின் வார்த்தைகள் அவன் வேலையைச் செய்ய விடவில்லை. ‘இப்போது ஏன் அப்பா திடீரென்று அவர்கள் நினைவாக இருக்க வேண்டும்?’ தலையைச் சிலிர்ப்பி கொண்டு வேலையைத் தொடர்ந்தான். புதிதாகச் சென்னையில் அவன் தொடங்கவிருக்கும் உட்புற வடிவமைப்பு சார்ந்த முதலீடுகுறித்த விவரங்கள். ஏற்கனவே நண்பன் ஒருவன் செய்துகொண்டிருந்த தொழிலை இப்போது இருவரும் சேர்ந்து விரிவுபடுத்தப் போகிறார்கள். ஏற்கனவே ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தின் அலுவலகத்தை வடிவமைக்க ஒப்பந்தம் செய்துவிட்டார்கள். இன்னும் இரண்டு நாளில் வடிவமைக்க வேண்டிய கட்டிடத்தைச் சென்று பார்த்து வேலையைத் தொடங்க வேண்டும். அருணின் நண்பன் சிபி சென்னையில் செய்துவந்த தொழில் என்பதால் முன்பிருந்த அலுவலகத்தை இவர்கள் அலுவலகமா பயன்படுத்திக்கொள்ளத் திட்டம். இவன் தங்குவதற்கு இப்போதைக்கு ஹோட்டலில் தான். சிபி பார்த்து வைத்திருக்கும் வீடுகளில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். வேலைகளை முடித்துவிட்டு மீண்டும் கீழே வந்தான். சிவநாதன் இன்னும் உறங்கிக்கொண்டிருந்தார். இரவு முழுவதும் விழித்திருந்ததால் அவனுக்குப் பசியெடுத்தது. நேரே சமையல் அறைக்குச் சென்று பார்த்தான். முட்டைகளை எடுத்து ஆம்லெட் செய்து அங்கேயே நின்று உண்ணத் தொடங்கினான். “தம்பி என்னைக் கூப்பிட்டிருக்கலாமே”, என்று மெல்லிய குரலில் கேட்டுக்கொண்டே வந்தாள் சமையல் செய்யும் பெண்மணி வள்ளி. “பரவாயில்லை, உங்கள் வேலையைப் பாருங்கள்.” என்று பாட்டியின் அறைக்குச் சென்றான். பாட்டியைப் பார்த்துக்கொள்ளும் செவிலியர் இன்னும் உறங்கிக்கொண்டிருந்தாள். பாட்டியும் எழுந்ததாகத் தெரியவில்லை. வேறு பெண் உறங்கும்போது உள்ளே செல்ல மனமில்லாமல் மெதுவாகக் கதவைச் சாத்தி விட்டு வரவும், “பாட்டி விழித்து விட்டாரா ?” என்று கேட்டபடி பார்வதி வந்தாள். “இல்லை அம்மா !” “நீ ஏன் சீக்கிரம் எழுந்தாய் ! எப்போது கிளம்ப வேண்டும்.” என்றாள். “பத்து மணிக்கு மேல்.” என்று தாயின் பின் நடந்தான். இரவு முழுவதும் வேலை செய்ததை அன்னையிடம் சொல்லவில்லை அதற்குள் காபியுடன் வள்ளி வர, “சத்யா வேறு எழுப்பச்சொன்னான். ஒன்றை அவன் அறையில் கொடு.” என்று இளைய மகனின் அறைக்கு ஒரு காபியை அனுப்பிவிட்டு, சாப்பாடு மேசை நாற்காலியில் மூத்த மகனுடன் அமர்ந்தாள்.”உன் அப்பா இன்னும் நன்றாக உறங்குகிறார். காலை நடைப் பயிற்சிக்கு நேரமாகிறது. எழுப்பவா, வேண்டாமா?” என்று அவர்களின் அறையின் பக்கம் எட்டிப் பார்த்தாள். தந்தை உறங்காமல் விழித்திருந்ததைச் சொன்னால் தாய் வருந்தக்கூடும் என்றெண்ணி, “காலையில் இல்லை என்றால் மாலையில் நடக்கட்டும். நான் சென்று புறப்படுகிறேன்.” என்று அங்கிருந்து நகர்ந்தான். அருண் சென்னை செல்லத் தயாராகி வரும்போது அத்தை வேதவல்லி, தந்தையின் சகோதரி வந்தாள். அவளுடன் அவள் மகள் கீர்த்தியும். இரண்டு தெரு தள்ளித் தான் அவள் வீடு. அவள் அடிக்கடி தன் அன்னையைப் பார்க்க வருவாள். “அருண், இன்று சென்னை கிளம்புவதாக அண்ணன் சொன்னார். எத்தனை நாள் அங்கே இருக்க வேண்டும்”. என்றாள் வேதவல்லி. “தெரியவில்லை அத்தை ! குறைந்தது ஆறு மாதம் அங்கேயே இருக்க வேண்டும். பிறகு வேலையைப் பொறுத்து மாதத்தில் பாதி நாள் இருந்தால் போதும்.” “இடையில் வந்து போவாய் இல்லையா ? நீ இல்லாமல் அண்ணன் அண்ணி ரொம்ப வருந்துவார்கள்” “வாரம் ஒரு முறை நிச்சயம் வருவேன்.” என்றான். “ஏன் மாமா உனக்கு வேண்டாத வேலை? ஜாலியாக இங்கேயே தொழிலைப் பார்ப்பதை விட்டுவிட்டு, ஊர் விட்டு ஊர் போய் ஏன் கஷ்டப்படுகிறாய்.” இது கீர்த்தி. “எனக்கு இதில் ஒரு கஷ்டமும் இல்லை.” என்றான் அருண். “வரும்போது நான் கேட்ட லேப்டாப்-ஐ மறந்துவிடாதே !” என்றவாறு மாடியிலிருந்து இறங்கி வந்தான் சத்யன். “நான் மறக்கமாட்டேன் ! நீ ஏன் இன்னும் கல்லூரிக்குக் கிளம்பவில்லை?” “இதோ கிளம்பி விட்டேன் ! சீக்கிரம் வந்துவிடு. நீ இல்லாமல் போரடிக்கும்.” என்று சொல்லிவிட்டு ஓட்டமாய் சென்றான் சத்யன். உடன் கீர்த்தியும். இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். சத்யன் இரண்டாம் ஆண்டு. கீர்த்தி இறுதி ஆண்டு. இருவரும் ஒன்றாக சத்தியனின் பைக்கில் செல்வார்கள். சில நாள் கீர்த்தி இங்கே வந்துவிடுவாள். அப்படி அல்லாத நாட்களில் சத்யன் அவள் வீட்டிற்குச் சென்று அவளைக் கூட்டிச்செல்வான். இருவரும் சென்றது, பாட்டியிடம் சென்று விடைபெற, அவர் நெற்றியில் விபூதி வைத்துவிட்டார். அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான் அருண். பெரும்பாலும் தொலைதூரம் செல்கையில் ஓட்டுநர் ஒருவரை அழைத்துச் செல்ல வேண்டும் என்பது சிவநாதனின் உத்தரவு. அதுவும் அருண் இரவு உறங்கவில்லை என்றால் நிச்சயம் தனியே செல்ல அனுமதிக்க மாட்டார். வீட்டில் எப்போதும் உதவிக்கு இருக்கும் மகேஷ், வள்ளி அம்மாவின் மகன் இப்போது உடன் செல்கிறான். அருணை சென்னையில் விட்டுவிட்டு, இரவு ரயிலில் மகேஷ் திரும்பி வந்துவிடுவான். அருணின் வீடு மதுரையிலிருந்து மேகமலை செல்லும் பாதையில் அமைத்திருந்தது. மதுரையில் சித்திரை வெயில் கொளுத்தும் போதும் அவன் வீடு இருக்கும் பகுதி, வெயில் அதிகம் இல்லாமல் இதமாகவே இருக்கும். இப்போது மழைக்காலம். எங்குத் திரும்பினாலும் பசுமை. கண்களுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. சென்னையில் இதேபோல் எங்கேனும் இருக்கக்கூடுமா ? பகுதி - 2 சென்னையில் அண்ணா நகர்ப் பகுதியில் ஒரு வீடு. காலை வேளையில் எல்லோர் வீட்டில் இருக்கும் பரபரப்பை மிஞ்சும் விதமாக அந்த வீட்டில் அனைவரும் சுற்றிக்கொண்டிருந்தனர். சமையல் அறையில் இரண்டு பெண்கள் சேர்ந்து வேலை செய்து கொண்டிருந்தனர். காலை உணவை மேசையில் வைத்து, மதிய உணவைக் கலந்து இரண்டு டப்பாக்களில் போட்டுக்கொண்டிருந்தார் மற்றொருவர். “அனிதா ! உன் ரெகார்ட் இன்னும் இங்கே இருக்கிறது. மறக்காமல் எடுத்து வை.” என்ற குரல் உள் அறையிலிருந்து வந்தது. “இதோ வருகிறேன்” என்று குரல் வந்த அறைக்குச் சென்று ரெகார்டை எடுத்துக்கொண்டு வந்து பையில் திணித்தாள் அனிதா. இதைப் பார்த்துக் கொண்டிருந்த செல்வம் “உனக்கு எல்லாம் ஒருவர் சொல்லவேண்டுமா ! அடுத்த ஆண்டு நீ கல்லூரியில் சேர வேண்டும். இன்னும் நீ பொறுப்பு இல்லாமல் இருந்தால் எப்படி ?” என்று கேட்டார். அந்த வீட்டின் தலைவர் செல்வம் என்கிற செல்வநாதன். “சாப்பிடும்போது கொஞ்சம் உங்கள் அறிவுரையை நிறுத்திக்கொள்ளுங்கள். பிள்ளைகள் சாப்பிடட்டும்” என்றாள் குடும்பத் தலைவி சுமதி. “ஏய் ! முதலில் நீ வந்து சாப்பிடு. உன் பேருந்திற்கு நேரமாகிறது பார்.” என்று சுமதி உரத்த குரலில் சொல்ல, அவசரமாக வந்து ஒரு இட்லியைத் தட்டில் போட்டுக்கொண்டு அப்படியே நின்றபடி சாப்பிடத் தொடங்கினாள் நித்யா. “முதலில் நீ உட்கார்ந்து சாப்பிடு” என்று சொல்லிக்கொண்டு தோசை ஒன்றை நித்யாவுக்கு மட்டும் எடுத்து வந்தாள் சாந்தா, செல்வத்தின் தங்கை. “அவளுக்கு மட்டும் என்ன தோசை ?” என்றார் செல்வம். “காலையில் அவளுக்கு இட்லி இறங்காது. மதியமும் அவள் அலுவலகத்தில் தான் சாப்பிடுகிறாள்.” என்றாள் சாந்தா. “உனக்கு எத்தனை முறை சொல்வது! அவளுக்கு மட்டும் செல்லம் தராதே என்று. பிள்ளைகள் மூவருக்கும் ஒரு மாதிரி செய்.” என்றார் செல்வம். “ஒரு தோசையில் என்ன செல்லம். நீ சாப்பிடுடா !”என்று நித்யாவை பார்த்துக் கண்ணடித்துவிட்டு உள்ளே சென்றாள் சாந்தா. “நீங்கள் என்ன சொன்னாலும் உங்கள் தங்கை கேட்கப்போவதில்லை. எல்லோரும் சாப்பிட்டு விட்டுச் சீக்கிரம் கிளப்புங்கள்.” என்று உள்ளே சென்று இரு மதிய உணவு டப்பாக்களை எடுத்து வந்தாள் சுமதி. செல்வம் ஒன்றையும் அனிதா ஒன்றையும் எடுத்துக் கொள்ள, “நீ ஒழுங்காக மதியம் கேன்டீனில் சாப்பிடு. படிப்பு படிப்பு என்று உடம்பை கெடுத்துக் கொள்ளாதே. சுவர் இருந்தால் தான் சித்திரம்.” என்று சுமதி சொல்லிக்கொண்டிருந்தது அரவிந்துக்கு. “இது மட்டும் அறிவுரை இல்லையா ?” என்றார் செல்வம். அரவிந்த், அனிதா, நித்யா மூவரும் சிரித்தனர். நித்யா இளங்கலை முடித்து வேலைக்குச் செல்லத் தொடங்கி இருக்கிறாள். அனிதா இப்போது பன்னிரண்டாம் வகுப்பு. அரவிந்த் மருத்துவம் மூன்றாம் ஆண்டு. நித்யா அலுவலகத்தில் நல்ல தாரமா உணவு வழங்கப்படும். அரவிந்துக்கும் கல்லூரி கேன்டீன் உணவு தான். கல்லூரி முதல் ஆண்டு மட்டும் வீட்டிலிருந்து எடுத்துச் சென்றவன், நண்பர்கள் எல்லோரும் கேன்டீனில் சாப்பிடும்போது, அவன் மட்டும் டப்பாவில் எடுத்துச் சென்றால் ஒரு மாதிரி இருக்கும் என்று சுமதி, அவனைக் கேன்டீனில் சாப்பிடும்படி கூறினாள். அனிதா செல்வத்துடனும், நித்யா அரவிந்துடன் புறப்பட, வழியனுப்பி வைத்துவிட்டு உள்ளே வந்தாள் சுமதி. நால்வரையும் காலையில் அனுப்பி வைக்கும் வரை சுமதிக்கும், சாந்தாவிற்கும் மூச்சுவிடக் கூட நேரம் இருக்காது. காலை மதிய உணவு சமைத்த பாத்திரங்களைச் சுத்தம் செய்து, வீட்டைச் சுத்தம் செய்து, இவர்களும் சிற்றுண்டி சாப்பிட்டு முடிக்கவும், கடையில் வேலை செய்பவர் வரவும் சரியாக இருக்கும். இரு பெண்களும் சேர்ந்து ஒரு ஆடை தைக்கும் கடையை நடத்துகிறார்கள். பல வருடங்களாக இருவரும் சிறப்பாகச் செய்வதால் நிறைய வாடிக்கையாளர்கள். இவர்கள் இல்லாமல் இரு பெண்கள், ஒரு ஆண் என்று மூவர் வேலை செய்கிறார்கள். இவர்களிடம் பணி செய்யும் கலா மற்றும் அன்னம் இருவரும் இருபதுகளில் இருப்பவர்கள். முருகன் இவர்கள் தொழில் தொடங்கிய காலத்திலிருந்து தைத்துக்கொடுப்பவர். இருவரும் சென்று வீட்டை ஒட்டியே இருந்த அவர்கள் கடையைத் திறந்தனர். சென்னையில் சற்று நெரிசல் இல்லாத பகுதி என்றாலும் வீடுகள் அதிகம் இருக்கும் பகுதி. முன்புறம் சிறு தோட்டமாக இருந்ததை, பெண்களில் தொழில் சிறப்பாகச் செல்வதால் அவர்களுக்காகத் தனியே ஒரு பெரிய அறையைக் கட்டிக் கொடுத்தார் செல்வம். வீட்டின் முன்பகுதியில் கடை அமைந்திருந்தது. வீட்டின் மதில் உள்ளே வந்தால் முதலில் தெரிவது அவர்களில் கடைதான். கடையினுள் வருவதற்கு வீட்டுக்குள்ளேயே ஒரு வழி அமைந்திருந்தது. வீட்டில் மற்ற வாயிலைப் பூட்டிவிட்டு இவர்கள் கடையின் உள்ளே சென்றால், மதிய உணவுக்கு மீண்டும் வீட்டிற்குள் வருவார்கள். இடையில் வேலை குறைவாக இருந்தால் மட்டும் சிறிது நேரம் ஓய்வு எடுப்பார்கள். நித்யா வேலை செய்யும் நிறுவனத்தில் பேருந்து ஏற்பாடு செய்திருந்தனர். காலையும் மாலையும் அவள் பேருந்தில் சென்று வருவாள். பெரும்பாலும் கல்லூரிக்குச் செல்லும் முன் அரவிந்த் நித்யாவை அவள் பேருந்து நிறுத்தத்தில் விட்டு விட்டுச் செல்வான். அவள் அலுவலகத்திற்குச் செல்லச் சாலை நெரிசலில் ஒரு மணி நேரமாகும். நித்யா கல்லூரியில் படிக்கும்போது வேலை கிடைத்தது. கல்லூரி தோழிகள் சிலர் அதே நிறுவனத்தில் பணியாற்றினார்கள். அவளின் அலுவலகம் பத்து மாடிகள் கொண்ட கட்டிடத்தில் முதல் நான்கு தளத்திலிருந்தது. இவளுக்கு நான்காவது தளம். இன்னும் ஒரு வாரத்தில் அவளின் பயிற்சி காலம் முடிகிறது. பயிற்சி முடிந்ததும் ஒரே பிரிவில் அவளுக்கும் அவள் தோழி அருணாவுக்கும் வேலை அமைந்தால் நன்றாக இருக்கும். அதைப் பற்றி யோசித்துக்கொண்டே தன் இருக்கையில் அமர, அருணா ஏற்கனவே வந்திருந்தாள். கல்லூரியிலிருந்தே இருவரும் நல்ல தோழிகள். “முதலில் ஈமெயில்-ஐ பார்” என்றாள் அருணா. “என்ன ?” என்று கேட்டபடி அவள் கணினியை இயக்கினாள். “இன்று மாலைக்குள் வேலை குறித்தும், அவர்கள் வேலை செய்யவிருக்கும் குழுபற்றிய தகவல் வரும் என்று செய்தி வந்திருந்தது.” என்றாள் சற்றே கவலையாக. கல்லூரியில் தேர்வாகி இருவரும் ஒன்றாக வேலையில் சேர்ந்தனர். பயிற்சி காலத்திலும் இருவரும் ஒன்றாகவே அமைந்தது. ஆனால் ப்ரொஜெக்ட்டும் அப்படி அமையும் என்று சொல்ல முடியாது. நித்யாவிற்கு சற்றே கவலையாக இருந்தது. அவள் படித்த கல்லூரியிலிருந்து பலர் இதே நிறுவனத்தில் சேர்ந்திருந்தாலும், இவளுடன் அருணா மட்டுமே ஒன்றாகப் பயிற்சிக்கு வந்தாள். மற்றவர்களுக்கெல்லாம் வேறு தளங்கள். வேறு மென்பொருள் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி. மதியம் வரை இருவரும் சேர்ந்து இதுவரை பயின்றதைக் கலந்துரையாடினர். இன்னும் ஒரு வாரம் நிச்சயம் இருவரும் ஒன்றாக இருக்கலாம். அதன் பின் எப்படியோ ? மாலையில் வீட்டை அடைந்தாள் நித்யாவிற்கு அலுவலகம்பற்றி நினைப்பே இருக்காது. அரவிந்த் அனிதாவுடன் வம்பிழுப்பது, அம்மாவுக்கும் அத்தைக்கும் ஏதாவது உதவி செய்வது என்று நேரம் பறந்துவிடும். அதுவும் இப்போது அவள் வீட்டை அடையும்போது இரவு ஏழாகி விடும். சிலமுறை வழியில் விற்கும் மசாலா பொறி, சோன்பப்டி என்று ஏதாவது வாங்கி வருவாள். முன்பெல்லாம் எல்லாவற்றையும் ஒரு கைப்பார்க்கும் அரவிந்த், மருத்துவம் பயிலத் தொடங்கியதிலிருந்து, “அது கூடாது, இது கெடுதல், இவை சுத்தம் இல்லாமல் தயாரிக்கப் படுவது” என்று மற்றவர்களையும் உண்ண விடுவதில்லை. இன்று வரும்போது வழியில் மசால் பொறி அவளை இழுத்தது. ஒரே பொட்டலம் மட்டும் வாங்கி வீட்டிற்குள் செல்லும் முன் சாப்பிட்டு விடலாமா ? என்று யோசித்தாள். அனிதாவுக்கு இது பிடிக்குமே ! அவளை விட்டுச் சாப்பிடவும் மனம் வரவில்லை. அரவிந்துக்கு தெரியாமல் அவளிடம் கொடுக்கலாம் என்று இரண்டு பொட்டலங்களை வாங்கினாள். அவள் வீட்டை அடையும்போது சாந்தா, சுமதியின் கடையில் இன்னும் ஆட்கள் இருந்தனர். பண்டிகை நேரம் தவிரப் பணி செய்யும் மூவரும் ஆறு மணிக்கு மேல் இருக்க மாட்டார்கள். அதற்குப் பின் வரும் வாடிக்கையாளர்களைக் கவனிப்பது வீட்டுப் பெண்கள் தான். வீட்டிற்குள் செல்லும்முன் கடைக்குள் சென்று உதவி தேவையா? என்று விசாரித்துவிட்டு பிறகு வீட்டிற்குள் செல்வது நித்யாவின் வழக்கம். ஆனால் இன்று உதவி செய்ய நேர்ந்தால், பொறி நமைத்துப் போய்விடும். நேராக அனிதா இருந்த அறைக்குச் சென்றாள். மூன்று படுக்கை அறைகள் கொண்ட வீடு. சமையலறை, அதை ஒட்டியே டைனிங் ஹால். டைனிங் ஹாலிலிருந்து ஒரு படுக்கை அறைக்குச் செல்ல வேண்டும். சமையலறை, டைனிங் ஹால் மற்ற இரண்டு படுக்கை அறைகளை இணைப்பது போல் ஒரு பெரிய ஹால். டைனிங் ஹாலில் ஒட்டிய அரை அனிதா நித்யா உடையது. சந்தாவுக்கு அந்த அறை தான். இடையில் இருப்பது செல்வம் சுமதியின் அறை. அடுத்து அரவிந்தின் அரை. வீட்டையும் கடையையும் இணைக்கும் கதவு அரவிந்தின் அறையை ஒட்டித் தான் இருக்கும். அவனுக்குத் தெரியாமல் எடுத்துச் செல்ல வேண்டும் என்று சத்தமின்றி சென்றாள். அரவிந்தின் அறைக் கதவு பாதி மூடப்பட்டிருந்தது. அனிதா ஏதோ எழுதிக்கொண்டிருந்தாள். சத்தம் இல்லாமல், அருகில் சென்று இரண்டு பொட்டலங்களை அனிதாவிடம் காண்பித்தாள். “ஹய் !மசாலா பொரி” என்று அலறினாள். “உஷ்ஷ் ! அரவிந்த் வந்துவிடப் போகிறான் !’ என்று இருவரும் ஆளுக்கொன்று திறந்து உன்ன தொடங்கினர். தள்ளுவண்டியில் வாங்கி அப்போதே சாப்பிடும் சுவை இல்லைதான். துருவிய கேரட், வெங்காயம் தக்காளியின் ஈரப்பதம் பொறியைக் கொஞ்சம் நமைத்துப் போகச் செய்திருந்தது. இருந்தாலும் இருவரும் சுவைத்துக்கொண்டிருக்க,”என்ன திருட்டுத் தனம் !” என்று நித்யாவின் காதைத் திருகினான் அரவிந்த். இருவரும் திருதிருவென்று விழித்தனர். இரண்டு பொட்டலங்களைப் பார்த்து, இரண்டையும் அப்படியே குப்பையில் கொட்டினான். “டேய் ! எதற்கடா கொட்டினாய் !” என்று அரவிந்த்தின் தலையில் கொட்டினாள் நித்யா. “உனக்கு எத்தனை முறை சொல்வது! தெருவில் விற்பதை வாங்காதே என்று.” “எல்லாம் உன்னால் தான் ! நீ கத்திய கத்தில் அவன் இங்கே வந்து எல்லாவற்றையும் கீழே போட்டுவிட்டான்.” என்று அனிதாவை முறைத்தாள். “அவள் கத்தும் முன்பே நான் வந்துவிட்டேன். பூனைபோல் சத்தம் இல்லாமல் வீட்டிற்குள் நீ வரும்போதே, இதுபோல் ஏதாவது இருக்கும் என்று நினைத்தேன். குரங்கு தான் கெட்டதும் இல்லாமல் வனத்தையும் கெடுக்குமாம் ! நீ உண்பதும் இல்லாமல் அவளுக்கும் கொடுக்கிறாய்.” என்றான் அரவிந்த். “நீ தான் குரங்கு. நாளை நான் அங்கேயே நின்று சாப்பிடுவேன். அப்போது என்ன செய்வாய்.” என்றாள் நித்யா. மீண்டும் அவள் காதைத் திருகி “வீட்டில் சொல்லிவிடுவேன். அனிதாவுக்கும் வாங்கித் தருகிறாய். அவள் வயிற்றுக்கு ஒவ்வாததை வாங்கித்தருவதாகச் சொல்லிவிடுவேன்”. வீட்டில் அனிதாவுக்கு மட்டும் கொஞ்சம் பார்த்துச் செய்ய வேண்டும்.சில ஆண்டுகள் முன்புவரை சாதாரண கடைகளில் வாங்கும் உணவு அவளுக்குப் பலமுறை சேரவில்லை என்பதால் வாங்குவதை நல்ல தரமான கடைகளில் வாங்குவார் செல்வம். அனிதாவின் ஒவ்வாமை முன்போல் இல்லை என்றாலும், வீட்டில் மற்றவர்களும் அதைத்தான் கடைப்பிடிப்பார்கள். நித்யா அவ்வப்போது தெருவில் விற்பதை வாங்கி உண்பாள் பெரியவர்களுக்குத் தெரியாமல். முதலில் அரவிந்தும் செய்தான். ஆனால் இப்போது அரை மருத்துவன் என்பதால் எப்போதும் எல்லாவற்றிலும் கவனத்துடன் செயல்படத் தொங்கினான். “காதை விடு வலிக்கிறது. நான் உன்னைவிடப் பெரியவள். என்னைப் பயமுறுத்தாதே.” “நீ அப்படி நடந்து கொள்வதே இல்லையே ! முதலில் வீட்டுக்கு வந்ததும் கைகளையேனும் சுத்தம் செய்தாயா ?” என்றான் அரவிந்த். “இல்லை” என்றாள் அனிதா. சின்னவளை முறைத்துப் பார்த்துவிட்டு “உனக்குப் போய் வாங்கி வந்தேன் பார் !” என்று வேறு மாற்று உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் சென்றாள் நித்யா. இரவு உணவு செய்யச் சாந்தா உள்ளே வந்தபோது இவர்களின் சண்டை முடிந்திருந்தது. சந்தாவிற்கு உதவி செய்ய நித்யா செல்லவும், மற்ற இருவரும் படிக்கத் தொடங்கினர். இரவு உணவு அனைவரும் சேர்ந்து உண்பது வழக்கம். அவரவர் கதையைப் பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள். உணவுக்குப் பின் பிள்ளைகள் மூவரும் படிக்கச் சென்றுவிடுவார்கள். பெரியவர்கள் மட்டுமாகச் சிறிது நேரம் தொலைக்காட்சி பார்ப்பார்கள். நித்யாவிற்கு படிக்க ஒன்றும் இல்லை என்றாலும் அனிதாவுக்குப் படிப்பில் உதவி செய்வாள். இல்லையென்றாலும் ஏதாவது வரைவாள். இவள் வரைவதை இவர்கள் ஆடைகளில் எம்ப்ராய்டரியாகவோ இல்லை பேப்பிரிக் பைன்டிங்காவோ செய்வது சுமதியின் வேலை. சில வருடங்களுக்கு முன்பு சுமதியும் சந்தாவும் பெரிய அளவில் தையல் தொழிலைத் தொடங்கவில்லை. மூன்று பிள்ளைகளின் படிப்பு, வீட்டுச் செலவு எல்லாம் செல்வத்தின் சம்பளத்தில் அடக்க வேண்டும். அப்போது மிகவும் சிக்கனமாகவே இருந்தார்கள். பண்டிகைக்குப் பிள்ளைகளுக்குப் பெரிய விலையில் ஆடைகள் எடுக்க முடியாது. சாதாரண துணியில் எம்பிராய்டரி, கல் வேலை என்று பதித்து அழகாக்கிவிடுவாள் சுமதி. சுமதியின் வேலையைப் பார்த்துச் சாந்தாவும் கற்றுக்கொண்டாள். கணவனை இழந்து பிறந்த வீட்டிற்கு அவள் வந்தபோது பெற்றோர்கள் உயிருடன் இல்லை. அண்ணனும் அண்ணியும் அவளைச் சிறு தயக்கமின்றி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு அவளால் ஆன உதவியைச் செய்ய முடிவெடுத்தாள். செல்வமும் வேலை இட மாற்றம் என்று சென்னைக்கு குடும்பத்துடன் வந்தார். அப்போது ஊரிலிருந்த வீட்டை விற்று இங்கே வந்ததும் ஒரு மனையை மட்டும் வாங்கினார்கள். பிள்ளைகளின் படிப்பைச் செல்வத்தின் நிர்வாகம் அவர்களின் பள்ளியில் இலவசமாகத் தந்தது. முதலில் சிறியதாக ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டு இருந்தனர். வீட்டின் வருமானத்தை எப்படியாவது பெருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தபோது, நித்யா அனிதாவின் ஆடைகளைப் பார்த்து அருகில் இருப்பவர்கள் அவர்களுக்கும் தைத்துத் தரும் படி கேட்டனர். அப்படியே வாடிக்கையாளர்கள் பெருகினார். வீட்டு வருமானமும் பெருகியது. வீட்டைப் பெரிதாக்கினர். பெண்களின் தொழிலுக்கான தனி கட்டிடம் என்று அமைத்துக்கொண்டனர். கடந்த மூன்று ஆண்டுகளாக, கணக்கு பார்க்காமல் செலவு செய்ய முடிந்தது. பிள்ளைகள் மூவருக்கும் கஷ்டம் தெரியாமல் வளர்க்க வேண்டும் என்று அவர்கள் முயன்றாலும், நித்யாவுக்கும் அரவிந்துக்கும் வீட்டின் நிலைமை புரியத்தான் செய்தது. அனிதா சிறு பெண். அவளுக்காகப் பெரியவர்கள் விட்டுக் கொடுக்க அவளுக்கு வீட்டின் கஷ்டம் எதுவும் தெரியாது. இருந்தாலும் அவள் நித்யா, அரவிந்த் பேச்சை அப்படியே கேட்பாள். செல்வத்தின் திட்டத்தினால் பிள்ளைகளுக்கு வரும் செலவுக்கேற்ப வைப்புத்தொகையும் செய்துவைத்தார். முதலில் நித்யா அரவிந்தின் படிப்புக்கு அதிக செலவு செய்ய முடியுமா என்று பயந்தாலும், அவர்கள் இருவரும் அதிக மதிப்பெண்கள் எடுத்ததால் அவர்களுக்கு ஊக்கத்தொகையும் கிடைத்தது. வீட்டில் எப்போதும் கலகலப்பு இருந்து கொண்டே இருக்கும். பகுதி - 3 சென்னை வந்தது சிபியைப் பார்க்கச் சென்றான் அருண். அவனுக்கு ஏற்கனவே பார்த்து வைத்த வீடுகளைச் சென்று பார்த்து ஒன்றை முடிவு செய்தான். அப்போதே இரவாகி விட்டது. உடன் வந்த ஓட்டுநரைப் புறப்படும் படி பணித்து விட்டுச் சிபியின் வீட்டிற்குச் சென்றனர். புது இடம், வேறொருவர் வீடு எதுவும் அவன் தூக்கத்தைப் பாதிக்கவில்லை. காலை ஏதோ சத்தம் கேட்டுத்தான் எழுந்தான். “அம்மா அவனே இன்னும் தூங்குகிறான். அவனுக்குக் காபி கொடுக்க என்னை ஏன் எழுப்புகிறாய் ?” என்று சிபியின் குரல். மணி எட்டைத் தாண்டி இருந்தது. எழுந்து தயாராகி வரவும், காலை உணவு தயாராகி இருந்தது. சிபியும் அருணும் உணவருந்திவிட்டுக் கிளம்பினார்கள். செல்லும்முன் சிபியின் தாய்க்கு நன்றி தெரிவித்து விட்டுக் கிளம்பினான். வடிவமைக்க வேண்டிய இடத்திற்கு சென்றனர். ஏற்கனவே இருந்த அமைப்புகளை முழுவதும் கலைத்து விட்டனர். இருவருமே மேற்பார்வை செய்துவிட்டு, புதிய சரக்குகளை இறக்க ஆட்களுக்குக் கட்டளையிட்டான் அருண். இவர்கள் செய்வது மேற்பார்வை என்றாலும், கவனம் தவறினால் பொருட்களை வீணடித்து விடுவார்கள். வேலை நேரத்தில் சிபி அல்லது அருண் இங்கேயே இருக்க வேண்டும். அவர்கள் அமர்வதற்கு என்று ஒரு சிறு மேஜை நாற்காலி மட்டும் ஒதுக்கி வைத்துவிட்டு, மற்ற பொருட்களை எங்கே வைக்க வேண்டும் என்று ஒவ்வொன்றாகத் திட்டமிட்டுக் கொண்டிருந்தனர். முதலில் சீலிங் வேலைகளை முடிக்க வேண்டும் என்பதால், பால்ஸ் சீலிங், விளக்குகள், ஒலிபெருக்கி அதன் மின்சார இணைப்புகளைச் சரி பார்க்கும் வேலையைத் தொடங்கினர். அப்போது அருணின் செல் அதிர்ந்தது. வேலை நேரத்தில் ஒலியைக் குறைத்து விடுவது அவன் வழக்கம். அன்னை தான் அழைத்தாள். “ஊருக்குச் சென்று ஒரு போன் கூடச் செய்யவில்லை. எல்லாம் சௌகரியமாக இருக்கிறதா ?” என்றாள் பார்வதி. “எல்லாம் நன்றாக இருக்கிறது. நானே அழைக்கலாம் என்றிருந்தேன். எல்லோரும் நலம் தானே !” என்றான். “இங்கே எல்லோரும் நன்றாக இருக்கிறோம். நீ உன்னை ஒழுங்காகக் கவனித்துக்கொள்ள. வீடு பிடித்துவிட்டதாக மகேஷ் சொன்னான். பொருட்கள் எல்லாம் வாங்க வேண்டுமே. நானும் அப்பாவும் வரட்டுமா ?” “நீங்கள் இங்கே வந்தால் பாட்டியை யார் பார்த்துக்கொள்வது ?” “ஓரிரு நாளைக்கு வேதா அத்தை பார்த்துக்கொள்வாள். நான் வரட்டுமா ?” “வேண்டாம் அம்மா ! அது ஒரு இரண்டு மணிநேர வேலை. கடையில் தேர்வு செய்து வைத்துவிட்டால் அவர்களே கொண்டு வந்து இறக்கி விடுவார்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்”. “சரி ! நீ வேலையைப் பார். நான் இரவில் மீண்டும் அழைக்கிறேன்.” என்று வைத்தாள் பார்வதி. சென்னை வந்ததும் குறுஞ்செய்தி அனுப்பியதுடன் சரி, அவன் ஊருக்கு அழைத்துப் பேசவே இல்லை. இனிமேல் இப்படிச் செய்யக் கூடாது. தினமும் முதலில் வீட்டிற்கு அழைத்துப் பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தபோது, “போகலாமா?” என்றான் சிபி. “எங்கே ?” என்றான் அருண். “வெறும் வீட்டிலா இருப்பாய். சென்று வேண்டியதை வாங்கி விடலாம். அவர்கள் வீட்டில் கொண்டுவந்து போட ஓரிரு நாள் ஆகலாம். இப்போது சொல்லிவிட்டேன் பொருட்கள் வரும் வரை நீ என் வீட்டில் தான் இருக்க வேண்டும். நேற்று போல் வெறும் வீட்டில் இருக்கிறேன், ஹோட்டலுக்கு போகிறேன் என்று மீண்டும் தொடங்காதே !” சிபியின் வீடு ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு. அதிக அறைகள் இல்லை. இவன் இருக்கும் நேரம் வேறுயாராவது வந்தால் அங்கே தங்க அதிக அறைகள் இல்லை என்பதால் முதல் நாள் ஹோட்டலில் தங்குவதாகக் கூறினான். ஆனால் சிபி விடவில்லை. மீண்டும் அங்கே செல்ல அவனுக்குத் தயக்கமாக இருந்தது. சிபிக்கோ அவன் பெற்றோருக்கோ தொல்லையாக இருக்குமோ என்று பயந்தான். சீக்கிரம் அவன் இருக்கும் வீட்டைச் சரியாக அமைக்க வேண்டும் என்று உடனே இருவரும் புறப்பட்டனர். வீட்டிற்குத் தேவையான பொருட்களைப் பெரும்பாலும் ஒரே கடையில் வாங்க அவர்களும் மறுநாளே பொருட்களை வீட்டில் கொண்டு வந்து இறக்குவதாகக் கூறினார். இரண்டு நாட்களில் கிடைத்த நேரத்தில் மெதுவாக வீட்டை அமைத்தான் அருண். அந்த வாரம் ஊருக்கு ஒரு முறை சென்று வரத் திட்டமிட்டான். காரில் சென்று வருவது வீண் அலைச்சல் என்று ரயிலில் சென்றான். சென்னை வேலைபற்றி எல்லோரிடமும் கலந்து பேசினான். மறுநாள் ஞாயிறு என்று மேகமலை கூட்டிப் போகும்படி சத்யா கேட்கவும், அவனுக்கும் ஒரு பயணம் தேவைப்பட்டது. “அத்தையை விட்டு நான் வரமாட்டேன். நீயும் தனியாகப் போக வேண்டாம்” என்றாள் பார்வதி. “நாள் முழுவதும் நீ அம்மாவைப் பார்த்துக் கொள்கிறாய். இப்போது அம்மா நன்றாகத்தான் இருக்கிறார். நீ சென்று வா.” என்றார் சிவநாதன். சிவநாதன் வர மறுக்க, பார்வதியையும் சத்யாவையும் அழைத்துச் செல்ல, அத்தை மகள் கீர்த்தியும் உடன் சேர்ந்து கொண்டாள். சனிக்கிழமை மதிய உணவை முடித்துக்கொண்டு கிளப்பினார். அவர்கள் வீட்டிலிருந்து மூன்று மணி நேரம் பிரயாணம். சிவந்தானின் நண்பர்கள் மூவரும் சேர்ந்து ஒரு சிறிய எஸ்டேட் மற்றும் வீட்டை வாங்கி போட்டிருந்தனர். நான்கு குடும்பங்களில் இரண்டு, அதிகம் வெளிநாட்டுப் பயணத்தைச் செய்வதால் அவர்கள் பெரும்பாலும் மேகமலைக்கு வருவதில்லை. மற்ற நண்பரும் பிள்ளைகள் வெளிநாட்டிலிருந்து வரும்போது மட்டும் அங்கே தங்குவார்கள். இப்போது யாரும் அங்கே இல்லை என்பதால், இவர்கள் சென்று வரத் தடை இல்லை. எஸ்டேட் வீட்டில் மேலாளர் குடும்பம் ஒரு பகுதியிலிருந்தனர். வீட்டைப் பராமரிப்பது எஸ்டேட் வேலைகளைப் பார்ப்பதும் அவர் வேலை. இவர்கள் அங்கே செல்லும்போது வேலைக்கு ஒரு ஆளையும் ஏற்பாடு செய்துவிடுவார். அதிக நாள் என்றால் வள்ளியையும் அழைத்துச் செல்வார்கள். இப்போது ஒரு நாள் மட்டும் என்பதாலும், பாட்டியின் உணவில் கவனமாக இருக்க வேண்டும் என்பதாலும் வள்ளி செல்லவில்லை. இரண்டு வேளைக்குத் தேவையான பொருட்களை மட்டும் எடுத்து வைத்திருந்தாள். பார்வதி அதிகம் வெளியே சுற்ற விரும்புவதில்லை. முன்புறம் இருக்கும் சிட்டவுட்டில் அமர்ந்து கொண்டு புத்தகம் படிப்பாள். அவளுக்கு அதுவே பெரும் புத்துணர்ச்சி தருவதாகச் சொல்வாள். அருண் சத்யன், கீர்த்தியை அழைத்துக்கொண்டு கொஞ்ச நேரம் சுற்றி விட்டு வரும்போது இருட்டத் தொடங்கிவிட்டது. இவர்கள் வருவதற்குள் பார்வதி சப்பாத்தியும் காய்கறி சப்ஜியும் செய்து வைத்திருந்தாள். ஏற்ற இறக்கத்தில் நடந்ததால் உண்டவுடன் களைப்பு என்று சத்யாவும் கீர்த்தியும் படுக்கச் சென்றுவிட, பார்வதியுடன் சிறிது நேரம் பேசலாம் என்று அவளிடம் சென்றான். “நீ படுக்கவில்லையா?” என்றாள் பார்வதி. “இப்போதுதானே சாப்பிட்டோம். உங்களுடன் கொஞ்சம் பேசலாம் என்று வந்தேன்.” “சென்னையில் வீடெல்லாம் சௌகரியமாக இருக்கிறதா ?” “அதெல்லாம் சிறப்பாக இருக்கிறது.” “சமையலுக்கு ஆள் கிடைப்பார்களா ? நீ சமைப்பதென்றால் உனக்கு நேரம் இருக்க வேண்டுமே !” “அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் கவலைப்படாதீர்கள் ! இங்கே இருக்கும் செய்தியைச் சொல்லுங்கள்” “இங்கே என்ன பெரிய செய்தி. நீ சென்றதும் வீடே கொஞ்சம் வெறுமையாக இருக்கிறது. சத்யாவும் கீர்த்தியும் வீட்டில் இருப்பதே இல்லை. கல்லூரி முடித்ததும், படிக்கிறேன் என்று அறைக்குச் சென்று விடுகிறான். இல்லை வெளியே சுற்றப் போகிறான். அப்பாவும் இப்போது எதோ யோசனையில் இருக்கிறார்.” “பாட்டியின் உடல் நலம் பற்றி அப்பாவுக்குக் கவலை.வேறெதுவும் இல்லை அம்மா.” என்று அம்மாவைத் தேற்ற முயற்சி செய்தான் அருண். “அது மட்டும் இல்லை கண்ணா !” என்று தொடங்கியவள் பேச்சை நிறுத்திக் கொண்டாள். “என்னிடம் என்ன தயக்கம், சொல்லுங்கள்”. முதலில் ஆரோக்கியத்தில் ஏதேனும் குறைய என்று பதறினான் அருண். “சென்ற ஆண்டு செய்த உடல் பரிசோதனையில் அப்பாவுக்கு எல்லாம் சரியாக இருந்தது. இப்போது மருத்துவர் ஏதும் சொன்னாரா ?” “அப்பா உடம்புக்கு ஒன்றும் இல்லை !ஆனால் மிகவும் கவலையாக இருக்கிறார். கேட்டால் என்னிடம் சொல்லவில்லை. நீ ஊருக்குச் செல்லும் முன் அவரிடம் பேசிப்பார்.” ஏற்கனவே ஒரு முறை பேசியபோது தந்தை சொன்ன காரணத்தைத் தாயிடம் சொல்லலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, “பாட்டி வேறு அடிக்கடி உன் பெரியப்பா பேச்சை எடுக்கிறார். அவர் கவலைக்கு அது காரணமாக இருக்கலாம் ! என்று தோன்றுகிறது.” அவன் யூகம் சரியே! அப்பாவின் கவலை பெரியப்பாவைப் பற்றி. இல்லை! அவர் குடும்பத்தைப் பற்றி. அவர்களுடன் பல ஆண்டுகளாகத் தொடர்பில்லை. அவர்களாக வீட்டை விட்டுச் சென்றுவிட்டனர். இதில் அப்பா தவறு என்ன இருக்க முடியும் என்று மகனின் எண்ணம். சென்னைக்குப் புறப்படும் முன், அப்பாவிடம் பேச வேண்டும் என்று தோன்றியது மறுநாள் ரயில் நிலையத்திற்குச் செல்லும் முன் சிவநாதனிடம் பேசினான். துளசி அம்மாவின் அறையிலிருந்த தந்தையிடம் பேச வேண்டும் என்றான். முதலில் தொழில் விஷயம் என்று எண்ணிய சிவநாதன், மகன் வேறு விஷயம் பேச, மௌனமாக இருந்தார். “அப்பா ! அம்மாவும் உங்களைப் பற்றிக் கவலைப் படுகிறார். பெரியப்பா குடும்பத்தைப் பற்றி இன்னும் யோசித்துக்கொண்டு இருக்கிறீர்களா ?”. “அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பாட்டி அடிக்கடி பெரியப்பா பிள்ளைகளைப் பற்றிப் பேசுகிறார்.” “பெரியம்மா அவர்கள் பெற்றோர் வீட்டுக்குத் தானே சென்றிருப்பார்கள். வேண்டுமென்றால் நான் சென்று அவர்களை அழைத்து வருகிறேன்.” என்றான். “நானும் அது பற்றித்தான் யோசிக்கிறான் ! முதலில் அவர்கள் பழைய இடத்தில்தான் இருக்கிறார்களா என்று விசாரித்து நானே சென்று கூட்டி வர வேண்டும்.” “அவர்கள் விலாசம் கொடுங்கள் ! நான் விசாரிக்கிறேன்.” “நண்பர் ஒருவரிடம் சொல்லி இருக்கிறேன். அவர் விசாரிப்பதாகச் சொல்லி இருக்கிறார்.” என்றார் சிவநாதன். “அவருக்கு முடியவில்லை என்றால் சொல்லுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன். பாட்டிக்கு அவர்களைப் பார்ப்பது சந்தோஷம் என்றால் நாம் நிச்சயம் செய்வோம்.” என்று தந்தைக்கு ஆறுதல் சொல்லி விட்டுப் புறப்பட்டான். பாட்டி அடிக்கடி தன் மூத்த புதல்வன் பேச்சை எடுப்பதாகப் பார்வதி கூறவும், அவர்களைத் தந்தை தேடுவதாக நினைத்தான். மற்றபடி பாட்டி அவர்களைப் பார்க்க வேண்டும் என்று கேட்டதாகத் தெரியவில்லை. எப்படியோ தந்தையின் கவலையைக் குறைக்க வேண்டும் என்று எண்ணினான். சென்னை வந்ததும் வேலையில் அவன் அதைக் கொஞ்சம் தள்ளிப்போட்டான், என்றாலும் மறக்கவில்லை. பகுதி - 4 அலுவலகத்தில் லிப்ட்டில் செல்வதுதான் நித்யாவின் வழக்கம். ஏற்கனவே ஒரு மணி நேரப் பேருந்தில் பிரயாணம் செய்து வந்து மீண்டும் நான்கு மாடிகள் படிகளில் ஏறினால், அலுவலகத்திற்குள் செல்லும்போதே சோர்வுடன் தான் செல்ல வேண்டும். அந்தக் கட்டிடத்தில் வேறுபல நிறுவனங்களும் இருப்பதால், அறிமுகம் இல்லாத பலர் லிப்ட்டில் வருவது வழக்கமே. அதுவும் காலையில் சற்றே நெரிசலாக இருக்கும். அன்று அவள் தான் முதலில் ஏறினாள். அவளுக்குப் பின் பலர் ஏற நான்காவது தளத்தில் அவள் இறங்குவது கடினம் போல் இருந்தது. அதுவும் அவளுக்கு முன் நிற்கும் ஒருவன் சிலைபோல் அசையாமல் அப்படியே நின்றான். அவன் அலைபேசியில் வேறு பேசிக்கொண்டிருந்தான். அவனை இருமுறை அழைத்துப்பார்த்தாள். அவன் திரும்புவதாக இல்லை. வேறு வழியின்றி ஒரு விரலால் அவன் கையை இடித்தாள். பக்கவாட்டில் பார்த்தவன், “நான் இறங்க வேண்டும்”, என்றதும் வழிவிட்டான். நன்றி உரைக்க அவன் முகத்தைப் பார்த்தாள். ஒரு கணம் அப்படியே நின்றாள். அதற்குள் அவள் பெயர் சொல்லி யாரோ அழைக்க, “ஏய் நித்தி! நீ இங்கே இருந்தாயா !”. திரும்பினாள். அவள் தோழி அருணா. அதற்குள் நான்காம் தளம் வந்தது. அவனுக்கு நன்றி சொல்லாமலேயே இறங்கினாள். இறங்கிச் செல்லும்முன் ஒரு முறை அவனைத் திரும்பிப் பார்த்தாள். எங்கேயோ பார்த்த முகம். அவள் யோசனையுடன் நிற்பதைப் பார்த்து, “என்ன ஆச்சு?” என்றால் அருணா. “தெரிந்தவர்போல் யாரோ இருந்தார்கள்!” “பெண்ணா ?” “இல்லை” “அதுதானே பார்த்தேன் ! நீ நின்று திரும்பிப்பார்த்தாய் என்றால் ஆள் பிரமாதமாக இருக்க வேண்டும்.யார்? உனக்கு வழிவிட்டு நின்ற அந்த உயரமான ஆள் தானே ?”. நித்யா ஆம் என்பது போல் தலையாட்ட “நினைத்தேன். ஆள் நல்ல ஸ்மார்ட். மீண்டும் பார்க்க முடியுமா தெரியவில்லை.” “நம் கல்லூரி சீனியராக இருக்குமோ” என்றாள் நித்யா. “நான் சரியாகக் கவனிக்கவில்லை. நீ அவரை விலக்கிக்கொண்டு வரும்போது பார்த்தேன். முகம் சரியாகப் பதியவில்லை.” “முகம் சரியாகப் பதியாமல், எப்படி ஸ்மார்ட் என்றாய்.” “ஏய் ! பார்த்தவுடன் தோன்றும் இல்லையா! நல்ல உயரம். எனக்கு உயரம் என்றாலே பிடிக்கும்.” அருணா சற்று உயரம் குறைவு அதனால் உயரமாக யாராக இருந்தாலும் ஸ்மார்ட் என்பாள். இருவரும் நண்பர்கள் ஆன பிறகு நித்யாவிடம் அருணா அடிக்கடி சொல்வாள்,” உயரம் அதிகமாகி இருந்தாலே கம்பீரம் தானாகவே வந்துவிடும். நீ சாதாரணமாக நடந்தாலே ஒரு கம்பீரம் தெரிகிறது. நான் தான் குட்டை கத்தரிக்காய் மாதிரி இருக்கிறான்.” என்பாள். “நம் கம்பீரம் என்பது நம் எண்ணத்தில் தான் இருக்கிறது. நான் சிறந்தவள் என்று நினைத்தால் கம்பீரம் தானாக வரும். எண்ணில் என்ன சிறப்பு இருக்கிறது என்று நீ யோசித்தால், நாம் எப்போதும் கம்பீரத்துடன் இருக்க முடியாது.”என்றாள் நித்யா. “போப்பா ! உனக்கு அது புரியாது.” என்றாள் அருணா. “சரி விடு ! உனக்கு மாப்பிள்ளை பார்க்கும்போது நிச்சயம் ஆறடிக்கு மேல் இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து விடுவோம்.” என்றாள் நித்யா. பேசியவாறு அவர்கள் இருப்பிடத்தில் அமர, அவர்களின் குழுத் தீர்மானம் ஆகிவிட்டதாகச் சொன்னார்கள். இருவருக்கும் வேறு வேறு குழு. அதுமட்டுமின்றி வேலையும் வேறு தளங்கள். நித்யா அருணா இருவருக்கும் ஏமாற்றம். முதலில் மேலாளரிடம் பேசிப்பார்களாம் என்று நினைத்தார்கள். ஆனால் அவர் இப்போது எதுவும் செய்ய முடியாது, சில மாதங்களுக்குப் பிறகு பார்க்கலாம் என்றார்கள். குழுவில் இணைவதற்கு முன் சில பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இருவருக்கும் வேறு வேறு பயிற்சிகள். அதனால் இருவருக்கும் அடிக்கடி அரட்டை அடிக்க முடியவில்லை. முக்கியமாக அவ்வப்போது வகுப்பில் நடக்கும் நகைச்சுவைகளைப் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. அதனால் உணவுண்ணும் நேரம் மட்டும் இருவரும் பேசிக் கொண்டனர். அப்படியொரு நாள் மதிய உணவை முடித்துவிட்டு, அமர்ந்திருக்க அருணாவின் குழுத் தலைவர் ஒரு கூட்டத்திற்கு அழைத்திருந்தார். அருணா அப்படியே விழுந்தடித்துக் கொண்டு செல்லும்போது அவள் அடையாள அட்டையை மேஜையில் மேல் வைத்து விட்டுச் சென்றுவிட்டாள். அவர்கள் அலுவலகத்தில் எங்குச் சென்றாலும் அந்த அடையாள அட்டை கையில் இல்லை! கழுத்தில் இருக்க வேண்டும். அருணாவிடம் கொடுக்க வேகமாக ஓடினாள் நித்யா. கூட்டம் வேறு தளம் என்பதால் அருணா லிப்ட்டின் முன் இருக்க, கதவு திறந்தும் அருணா உள்ளே நுழைந்தாள். “ஏய் அருணா!” என்று இவள் அழைக்க லிப்ட் கதவு மெதுவாக மூடத் தொடங்கியது. அவளும் தோழியின் குரலைக் கேட்டுக் கதவைத் திறக்கும் பொத்தானை அழுத்தினாள். “உன் ஐடி” என்று நீட்ட அருணாவின் பின் நின்ற இளைஞன் மீண்டும் நித்யாவின் கவனத்தை ஈர்த்தான். அன்று அவள் முன் வழியை மறித்து நின்ற அதே இளைஞன். “தேங்க்ஸ் மா” என்று அருணா வாங்கிக்கொள்ள, மீண்டும் நித்யாவின் பார்வை அந்த இளைஞனிடம் சென்றது. அப்போது அவனும் அவளைத் தான் பார்த்துக்கொண்டிருந்தான். அதுவரை அவன் யார் என்று யோசிப்பதை மறந்திருந்தாள். இப்போது மீண்டும் மூளை, அவனை எங்கே பார்த்திருக்கிறோம் என்று யோசிக்கத் தொடங்கியது. அருணா திரும்பி வந்ததும் மீண்டும் அவளிடம் கேட்டாள். “ஏய் ! இன்று பார்த்தாயா ?” “யாரை ?” “உன் பின்னால் நின்ற இளைஞன். அன்று சொன்னாயே ஸ்மார்டான ஆள் என்று !” “பின்னால் நிறைவரை எப்படிப் பார்க்க முடியும் ? இன்றும் தவற விட்டேனே” என்றாள் அருணா. ஆனால் அருணா வருத்தம் விரைவாகத் தீர்ந்தது. அந்த வாரத்திலேயே ஒரு நாள் இருவரும் கீழ்த்தளத்தில் பழச்சாறு அருந்திக் கொண்டிருந்தபோது, அவனும் அங்கே வந்தான். அவனையே பார்த்தால் தவறாக இருக்கும் என்று நித்யா பழச்சாறை பார்த்தவண்ணம் இருக்க, அருணா அவனைப் பார்த்தாள். ஆள் உயரம் மட்டும் இல்லை, பார்க்கவும் ஜம்மென்று இருந்தான். அவனும் இவர்கள் பக்கம் தான் பார்த்தான். உடனே திரும்பிவிட்டாள். “ஏய் ! அவனும் இங்கே தான் பார்க்கிறான்” என்று ரகசியமாய் சொன்னாள் அருணா. நித்யா அருணா சொன்னதை உறுதிசெய்யப் பார்த்தால், அவனும் அவளைத் தான் பார்த்துக்கொண்டிருந்தான். இனி இங்கே இருக்க வேண்டாம் என்று தோழியை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டாள் நித்யா. நித்யாவுக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. ஒரு அந்நியனை இவள் பார்த்துக் கொண்டிருக்க அவனும் பார்த்துவிட்டானே. இனி அப்படி நேராமல் இருக்க வேண்டும். ஆனால் அருணாவிடம் கேட்டாள், “நம் கல்லூரியில் பார்த்த மாதிரி இருக்கிறதா ?” “இல்லையே ! எனக்கு ஞாபகம் இல்லை.” “எனக்கு மட்டும் எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது.” “ஒரு வேளை உன் உறவுக்காரராக இருக்குமோ ?” “அப்படி யாரும் இல்லை.” “அப்போது பூர்வ ஜென்ம நினைவோ” என்றாள் அருணா. “ஏய் ! உன்னை” என்று தோழியை அடிக்கக் கை ஓங்கினாள். நாட்கள் மெல்ல நகரத் தொடங்கியது. நித்யாவும் அருணாவும் அடிக்கடி சந்திக்க முடியவில்லை. பயிற்சி காலத்தில் எல்லாம் சரியான நேரத்தில் நடக்கும். உணவு இடைவேளை கூடச் சொன்ன நேரத்தில் இருக்கும். ஆனால் இப்போது அப்படி இல்லை. இருவரும் சந்திக்கும் நேரம் கிடைப்பதே இல்லை. இதில் நித்யாவின் குழுவிற்கு வேலை அதிகமாக இருந்தது. அன்று மதிய உணவைக் கூட நித்யா உண்ணவில்லை. வேலையை முடிக்கும்போது மணி இரண்டை தாண்டிவிட்டது. இப்போது அலுவலக உணவகத்தில் உணவு இருக்காது. ஒரு பழச்சாறை வாங்கிவர முதல் தளத்திற்குச் சென்றாள். திரும்பி வரும்போது லிப்பிட்டில் ஏறியவள், மூடும் பொத்தானை மட்டும் அமுக்கிவிட்டு அவள் இறங்க வேண்டிய தளத்தின் பொத்தானை அழுத்த வில்லை. ஏற்கனவே சிலர் லிப்பிட்டில் இருக்க, இன்னும் ஒருவன் ஏறினான். அதே இளைஞன். அன்று போல் மீண்டும் சங்கடம் நேரக் கூடாது என்று, அவள் அவனைப் பார்க்காமல், அவள் செல்லை நோண்டினாள். ஆனால் அவன் அவளைப் பார்ப்பதுபோல் இருந்தது. நித்யா கண்டுகொள்ளாதவள் போல் இருந்தாள். செல்லில் குறுஞ்செய்தியைப் பார்த்துக்கொண்டிருந்தவள், இன்னுமா அவள் தளம் வரவில்லை ! என்று தலையை நிமிர்ந்தாள். லிப்ட் இப்போது ஐந்தாவது தளத்தில் நின்றது. இப்போது அவளுக்கு நினைவிற்கு வந்தது. அவள் சரியான பொத்தானை அழுத்த வில்லை என்று.சலிப்புடன் ஒரு மூச்சை வெளியிட்டாள். சிலர் அவளைத் திரும்பிப் பார்த்தனர். லேசாகச் சிரித்து விட்டு, மீண்டும் செல்லைப் பார்த்தாள். இனி லிப்ட் பத்தாவது மாடி சென்று திரும்பி வரும்போது தான் இறங்க வேண்டும். அவளுக்கே எரிச்சலாக இருந்தது. வேலை அதிகமானதால் அடிக்கடி மற்றதை மறந்துவிடுகிறாள். லிப்ட் பத்தாவது தளத்தில் நிற்க, அந்த இளைஞன் இறங்கும் முன் “இப்போதாவது சரியான தளத்தில் இறங்குங்கள் !” என்றான். இவனிடம் கேட்டுவிடலாமா ? என்று யோசித்து “நீங்கள் எஸ் எம் கல்லூரியில் படித்தீர்களா ?” என்று விட்டாள். அவன் நின்று “இல்லை. நீ என்ன முயல்கிறாய் என்று புரிகிறது. ஆனால் எனக்கு அதில் எல்லாம் ஆர்வம் இல்லை. எனக்காக உன் நேரத்தை வீணாக்காதே.” என்று விட்டுச் சென்றான் அவன். முதலில் அவன் சொல்வது புரியவில்லை நித்யாவிற்கு. புரிந்ததும் ஆத்திரம் வந்தது. இவனிடம் அவன் படித்த கல்லூரி விவரம் தானே கேட்டோம். இவனுக்கு என்ன பெரிய அழகன் என்ற நினைப்பா ? அவனைப் பற்றி அவன் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும். நித்யாவை அவன் பின்னால் அலைபவள் என்று எப்படி நினைக்கலாம் ? அதுவும் ஒருமையில் பேசி விட்டல்லவா செல்கிறான் ? ஆத்திரத்துடன் தன் இருக்கைக்குச் சென்று அமர்ந்தாள். “என்ன ஆச்சு?” என்றான் ரவி. இப்போது அவள் டீம் லீடர். டீம் லீடர் என்று எந்த அலட்டலும் இல்லாமல், புதிதாக வந்தவர்களுடன் இயல்பாக இருப்பவன் ரவி. “ஒன்றும் இல்லை ரவி !” என்று சமாளித்தாள். “வேலை கொஞ்சம் அதிகம் தான் இருக்கிறது. டென்ஷன் ஆக வேண்டாம். இன்னும் ஓரிரு வாரத்தில் வேலைப் பளு குறைந்துவிடும். சரியா !” என்றான். சரி என்று தலையாட்ட, “அப்புறம் இன்று போல் லஞ்ச் -ஐ ஸ்கிப் செய்யாதே !” என்று விட்டுச் சென்றான். அவனின் அக்கறையான பேச்சு, அவளுக்குச் சற்று ஆறுதலாக இருந்தது. அவனுக்குக் கீழ் இருப்பவர் எல்லோர் மேலும் எப்போதும் அவர் பார்வை இருந்து கொண்டே இருக்கும். எல்லோரிடமும் ஒரே மாதிரி பழகுவது மட்டுமில்லை, எல்லோரையும் அரவணைத்து வேலை வாங்கவும் தெரியும். எப்போதும் வீடு சென்றால் அலுவலகத்தில் நடந்தவற்றை மறந்து விடுபவள், இன்று லிப்ட்டில் நடந்ததை மறக்க முடியவில்லை. வீட்டிற்குச் சென்றதும் அரவிந்த் அனிதாவுடன் நேரம் கழிப்பவள், இன்று தொலைக்காட்சி முன் அமர்ந்தாள். ஏதோ அலைவரிசையைத் தட்டினாள். ஒரு புதிய படத்தின் காட்சி. கதாநாயகி கதாநாயகன்பின் ஓயாமல் சுற்றுவதுபோல், கதாநாயகன் என்ன உதாசீனப்படுத்தினாலும், மீண்டும் அவனைத் தேடிப்போவது போல் காட்சி. ” அதைப் பார்த்ததும் நித்யாவிற்கு ஆத்திரம் வந்தது. தொலைக்காட்சி-ஐ அணைத்துவிட்டு ரிமோட்டை தொப்பென்று சோபாவில் வீசினாள். “ஆல் ஆர் இடியட்ஸ்” என்றாள். புத்தகத்துடன் வந்த அரவிந்த் “யாரைத் திட்டுகிறாய் ?” “எல்லாம் இந்தப் படத்தின் இயக்குநரை. பெண்கள் என்றால் முட்டாள்களா ? எப்படி காட்சி அமைத்திருக்கிறான் பார்.” அரவிந்த் அவளை ஆச்சரியமாகப் பார்த்தான். சிரிப்பும் வந்தது. “இந்த நடிகைக்கும் அறிவே இல்லை ! இப்படியொரு கதாபாத்திரத்தை ஏன் ஏற்கிறாள் !” என்று கூறிக்கொண்டு அறைக்குச் சென்றாள். அரவிந்த் பின் தொடர்ந்தான். அவள் சென்று படுக்கையில் அமர்ந்தபடி அருகில் கிடந்த புத்தகத்தைப் புரட்ட, அரவிந்த் மெல்லக் கேட்டான். “நித்தி ! எல்லாம் ஓகேவா”. முறைத்துக்கொண்டு, “என்ன ஓகேவா ?” என்று எரிந்து விழுந்தாள். “இப்போது எதற்கு என்மேல் எரிந்து விழுகிறாய். சம்பந்தம் இல்லாமல் பெண்களுக்குக் கொடி பிடிக்கிறாய். அலுவலகத்தில் ஏதும் பிரச்சனையா ?” என்றான். “அதெல்லாம் ஒன்றும் இல்லை” என்று வெளியே சென்று மீண்டும் சோபாவில் அமர்ந்தாள். “அக்காவுக்கு என்னாச்சு ! நீ ஏதும் சொன்னாயா ?” என்றாள் இருவரையும் கவனித்துக்கொண்டிருந்த அனிதா. “நான் ஒன்றும் சொல்லவில்லை” என்று நித்யாவிடம் மீண்டும் சென்றான். “என்ன ?” என்றாள் மீண்டும் கோபமாக. கைகளைக் கட்டிக்கொண்டு, அவளைப் பார்த்தான். “இன்று ஒரு முட்டாள் என்னைக் கோபப்படுத்தி விட்டான்.” “என்ன செய்தான் ?” “அந்த இடியட் நான் அவன் பின்னால் சுற்றுவதாக நினைத்துக்கொண்டான்.” “என்ன ?” என்று சிரிப்பும் ஆச்சரியமுமாய் கேட்டான்,“யார் அவன் ? உன்னை ஏன் அப்படி நினைத்தான் ?” “அது அந்த மர மண்டையைத்தான் கேட்க வேண்டும். ஸ்டுபிட், இடியட், முட்டாள்” “சரி ! அவன் யார் ? உன் டீமா ?” “இல்லை ! அவன் யாரென்றே தெரியாது. லிப்ட்ல பார்த்தேன். அவ்வளவுதான்.” “அவ்வளவுதானா ? நீ அவனிடம் எதுவும் பேசாமலேயே, அவன் அப்படிச் சொல்லி விட்டானா ?”. இப்போது நித்யா ஒரு பெருமூச்சை விட்டாள். “அவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. எங்கள் கல்லூரியா? என்று கேட்டேன்.” இப்போது அரவிந்துக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. நித்யாவுக்கு இப்போது அரவிந்த் மேல் கோபம் வந்தது. “எதற்குச் சிரிக்கிறாய் ?” “பின்னே ! யூத் இடையே பேச்சைத் தொடர முதலில் சொல்வது, ’உன்னை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே ? ’என்றுதான். நீ அதையே வேறுவிதமாகக் கேட்டிருக்கிறாய். அதுவும் முன்பின் தெரியாத, உன் அலுவலகத்தில் இல்லாத ஒருவனை ! நீ மடத்தனம் செய்து விட்டு இங்கே வந்து எல்லோரையும் திட்டுகிறாய்.” இந்த அரவிந்தோடு இதொரு தொல்லை. நிலைமையை அலசி ஆராய்ந்து சரியாக விஷயத்தைக் கண்டுபிடித்துவிடுவான். நம்ம வீட்டுப் பெண்ணுக்கு ஆறுதலாகப் பேசலாம் என்று இல்லாமல், அவளைக் கேலி செய்கிறான். அவன் சொல்வது சரியே என்றாலும், நித்யாவுக்கு அவன் சிரிப்பு ஆத்திரத்தை அதிகரித்தது. “டேய் ! உன்னை !” என்று அருகிலிருந்த குஷனை எடுத்து அவனை அடித்தாள். “சரி விடு !” என்று சிரிப்பை அடக்க முயற்சித்தான். நித்யா அவனை வேகமாகவே அடித்தாள். “ஏய் ! வலிக்கிறது” என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, “நித்யா ! உனக்கு எத்தனை முறை சொல்வது. எதற்கு அவனை அடிக்கிறாய் ?” என்று சுமதி உள்ளே வந்தாள். “இவன் தான் என்னைச் சீண்டுகிறான்” மீண்டும் அரவிந்த் சிரித்தான். “உங்கள் இருவரையும் வைத்துக்கொண்டு என்ன செய்வது? சிறுபிள்ளைகளாய் இருந்தபோது ஒருவருக்கொருவர் அமைதியாகப் பிரியமாக இருந்தீர்கள். இப்போது என்னடா என்றால் அடித்துக்கொண்டு விளையாடுகிறீர்கள். நீங்களே இப்படிச் செய்தால்! அனிதா உங்களைப் பார்த்துத்தான் கற்றுக்கொள்வாள்.” இப்போது இருவரும் ஒன்றும் பேசாமல் அமர்ந்தார்கள். சுமதி அங்கிருந்து சென்றதும், மீண்டும் அரவிந்தை ஒரு அடி அடித்துவிட்டுத் தான் நித்யா சென்றாள். பகுதி - 5 மதுரையில் துளசி அம்மாவின் உடல்நிலை கொஞ்சம் மோசமாகத் தொடங்கியது. உணவு மிகவும் குறைவாக உண்பது மட்டுமில்லாமல், யாரையேனும் பிடித்துச் சில அடிகள் எடுத்து வைத்த கொண்டிருந்தவர், இப்போது கட்டிலைவிட்டு இறங்கக் கூட இல்லை. அதுநாள் வரை ஈஸ்வரன் பெயரை அவ்வப்போது குறிப்பிட்டவர், இப்போது ஈஸ்வரன் பிள்ளைகளை ஒரு முறை பார்க்க வேண்டும் என்று கேட்டார். சிவநாதன் நண்பர் மூலம் விசாரிக்க ஏற்கனவே சொல்லியிருந்தார். “அம்மா ! அண்ணியும் பிள்ளைகளும் உன்னைப் பார்க்க நிச்சயம் வருவார்கள் ! கவலைப்படாதீர்கள்.” என்றார் சிவநாதன். அவ்வப்போது அன்னையைப் பார்க்க வரும் வேதவல்லியும், இப்போது அங்கேதான் இருந்தாள். “திடீரென்று அவர்களை ஏன் கேட்கிறீர்கள் ? அண்ணி, பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு போய்ப் பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டது.” என்றாள் வேதவல்லி. “நீங்கள் ஏன் அவர்களைப் பற்றி நினைக்கப் போகிறீர்கள் ! நீங்கள் எல்லோரும் எல்லா வளத்துடனும் இருக்கிறீர்கள். அவள் இரு பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு போனாள். இப்போது என்ன பாடுபடுகிறாளோ? பிள்ளைகள் எல்லாம் என்ன செய்கிறார்களோ ? உங்கள் அண்ணியை விடுங்கள், உங்கள் அண்ணன்மேல் கொஞ்சமேனும் பிரியம் இருந்திருந்தால், உங்கள் அண்ணன் பிள்ளைகளை இப்படி விட்டிருப்பீர்களா?” என்று கண்ணீர் விட்டார் துளசி. “நாங்கள் என்னம்மா செய்தோம். அண்ணி அவள் பிறந்த வீட்டிற்குச் சென்று விட்டார்.” என்று மீண்டும் வேதவல்லி சொல்ல, “நீ சும்மா இரு.” என்று தங்கையை அடக்கிவிட்டு, “அம்மா ! ஏற்கனவே திருச்சியில் என் நண்பரிடம் சொல்லி இருக்கிறேன். அவர்கள் விசாரித்துச் சொன்னதும் நானே சென்று அண்ணியையும் பிள்ளைகளையும் அழைத்து வருகிறேன்.” என்றார் சிவநாதன். ““நான் சாகும் முன் அவர்களைப் பார்க்க வேண்டும். எனக்காக அவர்களை அழைத்து வா !” “உங்களுக்கு ஒன்றும் ஆகாது. நீங்கள் மனதைத் தளர விட வில்லை என்றால், இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியமாக இருப்பீர்கள். உங்களுக்கு அண்ணன் பிள்ளைகளைப் பார்க்க வேண்டும். அவ்வளவு தானே. உங்களுக்காக நான் அவர்களை அழைத்து வருவேன். நிச்சயமாகச் செய்வேன் அம்மா !” என்று தாய்க்கு வாக்கு கொடுத்தார் சிவநாதன். முன்பே நண்பரிடம் சொல்லியிருந்தாலும், இப்போது வேலையைத் துரிதப்படுத்தினார். ஆனால் நண்பருக்கு, அவர்கள் இப்போது அங்கே இல்லை என்பதைத் தவிர வேறு தகவல்கள் கிடைக்கவில்லை. இப்படியொரு தகவலை அன்னையிடம் சொல்ல சிவநாதனுக்கு மனம் வரவில்லை. பாட்டியைப் பார்க்க வந்த அருணிடம், விவரம் கூறினார். அருணுக்கு அவர்களைப் பற்றி அதிக விவரம் தெரியாது. பிள்ளை பருவத்தில் ஒரு சிறுவன் ‘அண்ணா, அண்ணா’ என்று இவன்பின் சுற்றியது கொஞ்சம் நினைவிலிருந்தது. பெரியம்மாவின் முகமும் கொஞ்சம் நினைவிலிருந்தது. ஆனால் அவர்கள் ஏன் இங்கே இருக்க வில்லை? என்று அவனுக்குத் தெரியாது. பெரியப்பா மறைத்தபின் பிறந்த வீட்டிற்குச் சென்று விட்டார் பெரியம்மா என்று தெரிந்துகொண்டான். அதன் பின் அவர்கள் ஏன் இங்கே வருவதே இல்லை? இங்கிருந்தும் யாரும் செல்லவில்லை என்று யோசித்ததுண்டு. தாத்தாவுக்கு அவர்களைப் பிடிக்கவில்லை என்று பதில் வந்தது. அதற்கு மேல் இவன் அறிந்து கொள்ளவில்லை. அதற்கு அவசியமும் இருக்கவில்லை. இப்போது அவனுக்குத் தெரிய வேண்டும். அவர்களைப் பார்த்து இங்கே கூட்டி வரும் முன், எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும். சிவநாதனிடம் விவரம் கேட்டான். துளசியம்மாள், நீலகண்டன் தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். இரண்டு மகன்கள், ஒரு மகள். மூத்த மகன் ஈஸ்வரன், தந்தையுடன் விவசாயம் செய்யாமல், புதிதாகத் தொழில் செய்கிறேன் என்று இரண்டு முறை நட்டம் அடைந்தார். மகனுக்குப் பொறுப்பில்லை என்று நீலகண்டன் வெகுவாக வருந்தினார். அதனாலேயே மூத்த மகனுக்குத் திருமணம் செய்யாமல் வெகுகாலம் காத்திருந்தார். தன்னை நம்பி இல்லாமல் மகன் சொந்தக் காலில் நின்றபிறகு திருமணம் செய்வது என்றிருந்தார் ஈஸ்வரன் தனது முப்பது வயதிற்கு மேல் கொஞ்சம் சம்பாதிக்கத் தொடங்கியிருந்தார். அவருக்குத் திருமணம் செய்துவைத்தார். சில ஆண்டுகள் எல்லாம் நன்றாகவே இருந்தது. பெரும் முதலீடு செய்து தொடங்கிய தொழில் நன்றாகச் செல்ல, ஆடம்பரமாகச் செலவு செய்தார்.மனைவிக்குப் பிள்ளைகளுக்கு நகைகள், ஆடைகள் என்று வாங்கி குவிப்பார். உதவி என்று வருவோர்க்கு நன்றாகச் செய்தார். எல்லோரும் மெச்சும் வண்ணம் வாழ்ந்தவர், திடீரென்று மரணம் வரக்கூடும் என்று எண்ணவில்லை. கூட்டாளிகள் சேர்ந்து அவருக்கென்று ஒரு பங்கைக் கொடுத்துவிட்டு தொழிலை எடுத்துக்கொண்டனர். வெளி உலகம் தெரியாத மனைவியும், பணத்தை என்ன செய்வதென்று தெரியாமல், தெரிந்தவரிடம் கொடுத்துத் தொலைத்து விட்டாள். நீலகண்டன் மகன் இறந்தது ஒருபுறம் இருக்க, அவன் மீதம் வைத்துச்சென்ற பணத்தையும் தொலைத்துவிட்ட மருமகளை வெறுக்கத் தொடங்கினர். மருமகள் இரு பிள்ளைகளை அழைத்துக் கொண்டு பிறந்த வீட்டிற்குச் சென்று விட்டாள். நீலகண்டன் மறைவுக்கு மட்டும் ஒரு முறை வந்தவள் அதன் பின் வரவேயில்லை. நீலகண்டனுக்கு அவர் செய்தது சரி என்று தான் இறக்கும்வரை நினைத்திருந்தார். கணவனை எதிர்க்கும் துணிவு துளசி அம்மாளுக்கு இருந்ததில்லை. ஆனால் துளசி அம்மாவுக்கு மருமகளைத் திருப்பி அழைத்து வராதது வருத்தமே. கணவன் இல்லை என்றால் பிறந்த வீட்டில் வாழத் தொடங்கும் பெண்கள் ஏராளம். இதில் தவறு எதுவும் இல்லை. ஆனால் நம் வீட்டு வாரிசுகளைக் கண்டுகொள்ளாமல் விட்டது, துளசியம்மாளின் பெரும் குறை. பாட்டியைப் பார்த்துவிட்டுச் செல்லும் முன் பெரியம்மாவின் பிறந்த வீட்டைப் பற்றி விவரங்கள் கேட்டுக் கொண்டான். சென்னையில் சென்று பணிகளைச் சிபியிடம் ஒப்படைத்துவிட்டு திருச்சிக்குச் சென்று விசாரித்தான். சிவநாதனின் நண்பர் மேலோட்டமாக மட்டும் விசாரித்திருந்தார். பெரியம்மாவின் தந்தை பெயர் சண்முகம். அவர் வெகு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அவரின் பிள்ளைகள் பூர்வீக வீட்டை விற்றுவிட்டு வேறு ஊருக்குப் போய்விட்டார்கள் என்பது மட்டும் சிவநாதனின் நண்பர் கொடுத்த தகவல். அவர்கள் வாழ்ந்த வீடு இப்போது இரண்டு கை மாறிவிட்டது. இப்போதைய உரிமையாளருக்கு வேறு தகவல் எதுவும் தெரியவில்லை. முதலில் ஏதோ மூன்றாவது நபரை விசாரிக்கச் சொல்லியிருக்கிறார் என்று நினைத்த சிவநாதனின் நண்பர், தேடுவது நெருங்கிய உறவினரை என்றதும், “உன் அப்பா மேலோட்டமாகச் சொல்லவும், நான் சாதாரணமாக நினைத்துவிட்டேன். அவர்களைப் பற்றி வேறு விவரம் ஏதும் தெரியுமா ?” என்று கேட்க, “அவர்கள் வீட்டு முகவரி பெயரைத் தவிர ஒன்றும் தெரியாது. பெரியம்மாவின் அப்பா பெயர் சண்முகம், பெரியம்மா பெயர் லட்சுமி. அவருக்கு ஒரு சகோதரர் இருந்ததாக அப்பா சொன்னார். இங்கே ஏதோ ஆலையில் கணக்கராகப் பணியாற்றினார். எந்த ஆலை என்பது அப்பாவுக்குத் தெரியவில்லை.” என்றான். “அந்தச் சகோதரன் பெயர் தெரியுமா உங்களுக்கு ? எப்போதும் அடுத்த தலைமுறையினர் பற்றிப் பேசும்போது மகனைப் பற்றித் தான் குறிப்பிடுவார்கள். அவர் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள் விசாரிக்கலாம்.” என்றார். தந்தைக்கு அழைத்தான் அருண். “அவர் பெயர் செந்தில்நாதன் என்று நினைக்கிறேன்.” என்றார் அவர். “இரண்டு நாளில் விசாரித்துச் சொல்கிறேன்” என்றார் தந்தையின் நண்பர். சென்னையில் வேலையும் இருப்பதாகச் சிபி அழைக்க, தகவல் கிடைத்ததும் அழைக்கும்படி அவன் எண்ணைக் கொடுத்து விட்டுச் சென்றான் அருண். சென்னைக்கு வந்தவன் சிபியுடன் வேலைகளைச் செய்தாலும் அவன் சற்று சோர்வாக இருக்க, சிபி என்னவென்று கேட்டான் “தெரிந்தவர்கள் ஒருவரைத் தேட வேண்டும் !” என்றான் அருண். “தெரிந்தவர்களை ஏன் தேட வேண்டும் ?”. “மிக நெருங்கிய உறவினர். பல வருடங்களுக்கு முன் தொடர்பு விட்டுப்போனது. பாட்டி அவர்களைப் பார்க்க விருப்பப்படுகிறார்.” “ஒ! அதற்குத்தான் திருச்சி சென்றாயா ?” என்றான் சிபி. “ஆமாம்! ஆனால் விவரம் எதுவும் கிடைக்கவில்லை. அவர்கள் ஊரை விட்டுப் போய்விட்டார்கள்.” “அக்கம் பக்கத்தில் விசாரித்தாயா ?” “இல்லை ! அப்பாவின் நண்பர் ஒருவர் விசாரிப்பதாகச் சொல்லியிருக்கிறார்.” நண்பனுக்கு உதவ வேண்டும் என்று நினைத்து, “நமக்கு வேலை நடக்க வேண்டும் என்றால் நாம் தான் செய்ய வேண்டும். உன் அப்பாவின் நண்பர் என்றால் நிச்சயம் வயசு ஐம்பதுக்கு மேல் இருக்கும். அவர் தொழிலைப் பார்ப்பவர் என்றால், அவருக்குக் கீழ் இருப்பவரை விசாரிக்கச் சொல்வர். இப்படி இடையில் பலர் இருந்தால் தகவல் எப்படிச் சரியாக வரும்” என்றான். சிபி சொல்வது முற்றிலும் சரி. அவனே சென்று விசாரித்தால் தான் சரியாக வரும். அடுத்த இரு நாட்களில் புது ஒப்பந்தங்களைக் கையெழுத்துப் போட்டுவிட்டு மீண்டும் திருச்சி செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். கையெழுத்திடும் ஒப்பந்தம், மாலில் உள்ள ஒரு பெரிய கடை புதிய வடிவமைப்பு வேலை. ஆட்கள் எப்போதும் வந்துபோகும் இடம் என்பதால், பொருட்களைக் கொண்டு செல்வதும் வருவதும் இரவு நேரத்தில் மட்டும் தான் செய்ய முடியும். அதை ஆராய்வதற்காக அருணும் சிபியும் சென்றார்கள். இருவரும் எல்லாம் பார்த்துவிட்டு வர, சத்யன் சொன்ன மடிக்கணினி-ஐ இதுவரை அருண் வாங்கவில்லை. அங்கிருந்த ஒரு கடையில் மடிக்கணினி வைக்கப்பட்டிருந்ததைப் பார்க்கவும் நினைவு வந்தது. அப்படியே சென்று பார்த்துவிட்டு வரலாம் என்று உள்ளே சென்றான். நிறைய வாடிக்கையாளர்கள் கடையிலிருந்தனர். சத்யன் கேட்ட மாதிரி தற்போது இல்லை என்றும், ஒரு வாரத்திற்குள் கிடைக்கும்படி செய்வதாகவும் கூறினர். சத்யனுக்கு அழைத்தான். “உனக்கு வேறு மாடல் ஓகேவா” என்றான். “நான் குறிப்பிட்ட இயக்கங்கள் இருக்க வேண்டும்” என்றான் சத்யன். “சரி விசாரித்துப் பார்க்கிறேன்.” என்று இணைப்பைத் துண்டித்தான். விற்பனையாளரைக் கேட்கவும், “ஒரு நிமிடம்” என்றுவிட்டு வேறொருவனைக் கேட்டு வந்தான். அருண் கேட்கும் ஒவ்வொரு விவரங்களுக்கு அவன் சென்று கேட்டு வருவது அருணுக்கு எரிச்சலை மூட்டியது. “உங்களுக்குத் தெரியாது என்றால் தெரிந்தவரை அனுப்புங்கள்” என்று சிடுசிடுத்தான். “சாரி சார் ! எல்லோரும் வாடிக்கையாளருடன் இருக்கிறார்கள். இதோ அவர் முடித்ததும், உங்களைக் கவனிக்கச் சொல்கிறேன்” என்று எதிரில் இருந்த ஒருவனைக் காண்பித்தான். அவன் வேறொரு பெண்ணுக்கு விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தான்.” “சரி !நான் அவரிடம் கேட்கிறேன்” என்று அங்கே சென்றான். இவன் அருகில் செல்கையில் அந்தப் பெண்ணுடன் வேறொரு இளைஞனும் வந்து சேர்ந்தான். சற்று தள்ளி நின்றாலும் அவர்களில் பேச்சு காதில் தெளிவாக விழுந்தது. “ஏன் லேட்?” என்று அந்தப் பெண் கேட்க. “ப்ரொபசர் பிடித்துக் கொண்டார்” என்றான் புதிதாக வந்த இளைஞன். இவர்கள் இருவரும் கதை பேசட்டும் என்று நினைத்து, விற்பனையாளரிடம் இவன் கேள்விகளைக் கேட்க, “மேடம் நீங்கள் பாருங்கள் ! அவருக்கு என்ன வேண்டுமோ பார்க்கிறேன் !” என்று அந்தப் பெண்ணிடம் அனுமதி கேட்டான். அந்தப் பெண்ணும் “விலைப் பட்டியலில் மட்டும் கொடுத்துவிட்டு போங்கள்” என்று சொன்னாள். அப்போது தான், அருண் அவள் முகத்தைப் பார்த்தான். லிப்ட்டில் பார்த்தவள். அவள் பெயர் கூட அவனுக்கு ஞாபகம் இருந்தது. நித்தி! அவள் தோழி அவளை அழைக்கும்போது கேட்டிருக்கிறான். நித்யாவாக இருக்க வேண்டும் என்று எண்ணினான். அவள் இவனைப் பார்த்ததாகத் தெரியவில்லை. “சார் சொல்லுங்கள் !” என்று கேட்டான் விற்பனையாளன். அவனுக்கு வேண்டியதைக் கேட்கச் சில பாம்லட்களை எடுத்துக் கொடுத்தான். “இதில் நீங்கள் கேட்ட மாடல்கள் மற்றும் அதற்குச் சமமானவற்றின் விவரங்கள் இருக்கின்றன.” என்று விளக்கத் தொடங்கினான். மீண்டும் நித்யா, விற்பனையாளனை அழைத்தாள். “அவருக்கு விளக்கிவிட்டு இங்கே வாருங்கள்” என்று சொல்லும்போது அருகில் நின்றவன் முகத்தைப் பார்த்தாள். ‘ஐயோ! இவனா ?’ மெல்ல நடந்து சென்று அரவிந்தின் மறுபுறம் நின்று கொண்டாள். கல்லூரி முடிந்து சற்று தாமதமாக வந்து அவளுடன் இணைந்து கொண்டது அரவிந்தன் தான். வீட்டிற்குப் புதிதாக ஒரு கணினி வாங்க வேண்டும். வீட்டில் இருக்கும் பழையது, அவள் படிக்கும்போது தந்தை அலுவலகத்தில் நண்பர் ஒருவர் வீட்டிலிருந்த பழையதை எடுத்து வந்து கொடுத்தார். இப்போது அது மிகவும் மக்கர் செய்யத் தொடங்கியது. கடைக்குச் சென்று பார்த்துவிட்டு வரலாம் என்று முடிவெடுத்தனர். அரவிந்த் கணினி போதும் என்றாலும் நித்யா மடிக்கணினி வாங்க வேண்டும் என்று நின்றாள். இவர்கள் ஒரு முடிவுக்கு வருவதற்கு விற்பனையாளன் காத்திருக்க, அரவிந்த் எல்லா விவரங்களையும் பார்த்துக்கொண்டிருந்தான். நித்யா ஒரு புறத்திலிருந்து மறுபுறம் வந்து நிற்க, இருபுறமும் பார்த்தான் அரவிந்த். அருகில் அசைவு தெரியவும் அருணும் அவர்கள் பக்கம் பார்த்தான். அருணும் அரவிந்தனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ” என்ன ஆச்சு நித்தி” என்றான் அரவிந்த். “ஒன்றும் இல்லை ! நீ சீக்கிரம் பார். நாம் கிளம்பலாம்.” அவர்களின் பேச்சு தெளிவாக அருணுக்குக் கேட்டது. இப்போது இந்தப் பெண் செய்தது பார்த்தால் இவன் ஏதோ அவளிடம் சில்மிஷம் செய்ததாக அல்லவா நினைப்பார்கள். இவன் இரு கைகளின் முஷ்டியும் இறுக, சிபி “இந்த மாடல் நன்றாக இருக்கிறது. இது ஸ்டாக் இருக்கிறதா என்று கேள் ?” என்றான். சிபி அருணின் முகத்தைப் பார்க்காமல் பேசிக்கொண்டிருந்தான். பார்த்திருந்தால் நண்பனின் முக மாற்றம் அவனுக்குத் தெரிந்திருக்கும். சிபி சொன்னதைப் பார்த்து விட்டுத் திரும்பும்போது, அருகில் நின்ற இருவரும் இல்லை. இப்போது அவனுக்குக் கோபம் குறைவதாக இல்லை. சிபி கேட்ட மாடல் இப்போதே இருப்பதாகச் சொல்லவும் பில் போடும் படி கேட்டுவிட்டு, பணத்தைச் செலுத்த பில்லிங் பகுதிக்குச் செல்ல, அந்த நித்யாவும் அவளுடன் வந்தவனும் அங்கே காத்திருந்தனர். அந்தக் கடையில் கூட்டம். பில்லிங் பகுதியில் இவனுக்கு முன் சிலர் நின்றுகொண்டிருந்தனர். அங்கே சென்று அந்தப் பெண்ணின் பின் நிற்க வேண்டுமா என்று யோசித்துக் கொண்டிருந்தான். பார்வை அவர்கள் பக்கம் தான் இருந்தது. அரவிந்த், “ஏய் நித்தி ? ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய் ? அருகில் நின்றவன் எதுவும் தொல்லை செய்தானா ?” என்றான். “அதெல்லாம் ஒன்றும் இல்லை ! இவன் தான் அந்த இடியட்!” “எந்த இடியட் ?” “அன்று சொன்னேனே !” என்று நித்யா சொல்லவும் அரவிந்துக்கு நினைவு வந்துவிட்டது. சற்று விழிகள் விரிய நித்யாவை பார்த்தான். அவனுக்குச் சிரிப்பும் வந்தது. சட்டென்று அவனை அடித்தாள். சற்று தள்ளி நின்ற அருணுக்கு அவர்கள் பேசியது எதுவும் கேட்க வில்லை என்றாலும், அவர்களின் செய்கை தெளிவாகத் தெரிந்தது. “எதற்கு இங்கே நிற்கிறாய் ? வா பில் போடலாம்!” என்றான் சிபி. “அங்கே நிறையப் பேர் இருக்கிறார்கள். பிறகு போகலாம்.” “அதற்குள் வரிசை பெரிதாகலாம்”. என்றான் என்று அவன் சென்று வரிசையில் நிற்க இவனும் வேறுவழியின்றி சென்றான். சிபியாக முன் நின்றவரிடம் பேச்சுக்கொடுத்தான். அதாவது அரவிந்திடம்,“ஏன் ! இவ்வளவு தாமதிக்கிறார்கள்.” பின் நிற்பவன் பொதுவாகப் பேசினாலும் நித்யா புதியவனுக்கு ஏன் பதில் தர வேண்டும் ? என்று எதுவும் பேசாமல் நின்றாள். ஒருவேளை திரும்பினால் அந்த லிப்ட் இடியட் நிற்கலாம். அவனைத்தான் பார்க்கிறோம் என்று அந்த இளவரசன் மீண்டும் நினைக்கலாம். அரவிந்த் திருப்பி “பில் போடுபவர் பணிக்குப் புதியவராக இருக்கலாம். இன்று சில சலுகைகளும் இருக்கிறது. எல்லாவற்றையும் சரியாகச் செய்ய அவர்களுக்கு நிச்சயம் நேரமெடுக்கும்” என்றான். அதற்குள் நித்யாவின் முறை வந்தது. அவள் சில கேள்விகளைக் கேட்டு விட்டு, பணத்தைச் செலுத்தினாள். செல்கையில் அரவிந்த் மட்டும் சிபியைப் பார்த்துப் புன்னகைத்து விட்டுச் சென்றான். அருகில் நின்ற அருணை பார்த்தான். முன்பு போல் அவன் முகத்தில் எந்த மாற்று உணர்வுகளும் இல்லை. அருணை பார்த்துப் புன்னகைத்தான். அருணுக்கு வியப்பாக இருந்தது. அவள், அந்த நித்யா அவனைப் பற்றி ஒன்றும் சொல்ல வில்லையா. எதுவும் தப்பாகச் சொல்லியிருந்தால், அவளுடன் வந்தவன் எப்படி அவனைப் பார்த்துப் புன்னகைக்க முடியும். ‘நாம் தேவை இல்லாமல் யோசித்தோமா ?’ என்று எண்ணும்போது “பில்லை கட்டு ! கிளம்பலாம்”என்றான் சிபி. இருவரும் புதிய லேப்டாப் -ஐ வாங்கிக் கொண்டு கிளம்பினார்கள். செல்லும்போது நித்யா கேட்டாள் “அவனைப் பார்த்து ஏன் சிரித்தாய் !” என்று அரவிந்தை கேட்டாள். “அவருடன் வந்தவர் என்னிடம் பேச்சுக் கொடுத்தார். அதனால் கிளம்பும்போது தலையாட்டி விட்டு வந்தேன்.” நித்யா அரவிந்தை முறைத்துவிட்டு வேகமாக நடக்கத் தொடங்கினாள். “சரி ! இனி அப்படிச் செய்யமாட்டேன். அவர் என்னிடம் பேசினால் கூடப் பேசமாட்டேன். போதுமா ?” என்றான் அரவிந்த். “அவரா ? அவன் போதும் ! அவனுக்கெல்லாம் என்ன மரியாதை?”. “ஏய் நித்தி ! அன்றைய தவறு முழுவதும் அவர்மேல் இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது” என்றான். நித்யா மீண்டும் முறைக்கவும், “சரி விடு ! அவரை எங்கே பார்த்தாய் என்று ஏதாவது நினைவு வந்ததா ?” ” அவனைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்க எனக்கு வேறு வேலை இல்லை ! அவன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், என்னைப் பொறுத்தவரை அவன் ஒரு இடியட், முட்டாள்” என்றாள். அவள் முட்டாள் என்று திட்டியவன், இவர்கள் இடையே பின்னாளில் பல சண்டைகள் வரக் காரணம் ஆவான் என்று இருவருக்கும் தெரியாது. பகுதி - 6 நித்யா அந்த லிப்ட் நபரைப் பற்றி யோசிக்கவில்லை என்று அரவிந்த் இடம் சொன்னாலும், அவள் சில நேரம் அவனைப் பற்றி நினைத்தது உண்டு. முன் போல் அவன் யார் என்று யோசிப்பதில்லை. அவளைத் தவறாக எண்ணியது மட்டுமில்லாமல், அரவிந்த் அவன் பக்கம் பேசுவது அவளுக்கு இன்னும் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. கடந்த சில நாட்களாக வேலை சற்று குறைவாக இருக்க, அருணாவும் நித்யாவும் சந்தித்து பேசிக் கொண்டனர். அருணாவிடம் கூட அரவிந்த் அவளுக்குச் சாதகமாகப் பேசாமல் இருந்தது பற்றிச் சொன்னாள். முதலில் அருணா சிரித்தாலும், “அவனுக்கு என்ன திமிர். முதல் முறை ஒரு பெண்ணிடம் பேசுகிறான். இப்படியா பேசுவார்கள் ?” என்றாள். இருவரும் வேலைகுறித்து சிறிது நேரம் பேசிவிட்டுக் கிளம்பினார்கள். சென்னையில் ஏற்பாடுகளைச் செய்து விட்டு, சிபியிடம் மீதம் இருந்த வேலைகளை ஒப்படைத்துவிட்டு, திருச்சி செல்லத் தயாரானான் அருண். ஏற்கனவே தந்தையிடம் இதுபற்றிப் பேசியிருந்தான். அவரும் வருவதாக முதலில் சொன்னபோது, அருண் மறுத்து விட்டான். அவர்கள் இருக்கும் இடம் உறுதியானதும் தந்தை வரட்டும் என்று நினைத்தான். அதிகம் சுற்றி அலைய வேண்டும் என்று திருச்சிக்கு அவனது காரில் தான் சென்றான். செல்லும் முன் சிபி சொன்ன யோசனையை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டான். ஒருவேளை தந்தையின் நண்பருக்கு, ஏதும் விவரம் கிடைக்கவில்லை என்றால், முதலில் பெரியம்மாவின் வீடு இருந்த பகுதிக்குச் சென்று விசாரிப்பது என்று முடிவெடுத்தான். இல்லையென்றால், அவர்களது வீட்டை முதலில் அவர்களிடமிருந்து வாங்கியவருக்கு நிச்சயம் ஏதாவது தெரிந்திருக்கும். அந்த நபரைத் தேடிப் பிடிக்க வேண்டும். ஒருவேளை அதுவும் முடியவில்லை என்றால் ஏதாவது செய்தித்தாளில் விளம்பரம் கொடுக்கலாம் என்று நினைத்தான். ஆனால் தந்தையின் நண்பர் சில விவரங்களைச் சேகரித்து வைத்திருந்தார். அதாவது பெரியம்மாவின் வீட்டை முதலில் வாங்கியவர் விவரம் கிடைத்திருந்தது. “தம்பி ! நானே அழைக்கலாம் என்று நினைத்தேன். நீங்களே வந்து விட்டீர்கள்.” என்றார் அவருக்கு வருவதாகக் கூடத் தகவல் சொல்லாமல் தான் அருண் அவர் முன் சென்று நின்றான். அவனுக்கு அவன் தந்தையின் கவலையைப் போக்க வேண்டும். பாட்டிக்குப் பல நாட்கள் பாரத பேரன் பேத்தியைக் காண்பிக்க வேண்டும் என்று மட்டும் எண்ணினான். அதற்காக மூன்றாவது நபரைத் தொல்லை செய்கிறோம் என்று இப்போது தான் உறுத்தியது. “மன்னித்துக் கொள்ளுங்கள் ! உங்களுக்கு முன்பே சொல்லி இருக்க வேண்டும். திடீரென்று வந்துவிட்டேன்.” என்று மன்னிப்பு கேட்டான். “அதெல்லாம் ஒன்றும் இல்லை ! உன் அப்பாவுக்கு எவ்வளவோ செய்யலாம். இதெல்லாம் ஒன்றும் இல்லை.” என்று சிரித்தவர் தொடர்ந்தார். “நீங்கள் கொடுத்த விலாசத்தில் நன்கு விசாரித்தேன். பெயர்கள் எல்லாம் சரியா ?” என்றார். “ஏன் அங்கிள் அப்படி கேட்கிறீர்கள்.” “நீங்கள் கொடுத்த விலாசம் இருக்கும் வீடு, ஒரு நான்கு வருடங்களுக்கு முன் கட்டி இருக்கிறார்கள். கட்டியவர்கள் வீட்டை லாபத்திற்கு விற்கவே அப்படிச் செய்திருக்கிறார்கள். இப்போது அது மூன்று கைகள் மாறி விட்டது. அதன் மூலப் பத்திரம் நீங்கள் சொன்னவர் பெயரில் இல்லை.” என்றார். “மூலப்பத்திரம் என்றால் எழுவது அல்லது எண்பது வருடங்களுக்கு முன் இருப்பது. அதில் பெரியம்மா பெயரோ, ஏன் அவர் தந்தை பெயர் இருப்பது கூடச் சந்தேகம் தான்.” என்றான். “அதனால் தான் வரிசையாக அதற்கு அடுத்த பாத்திரங்களைப் பார்க்கலாம் என்று பார்த்தேன். நீங்கள் சொன்ன சண்முகம் என்பவர் பெயர் இருந்தது. ஆனால் அவர் சொத்தை யார் பெயரிலும் எழுதவில்லை. அவருக்கு அடுத்து செல்வநாதன் என்ற பெயர் இருக்கிறது. அன்று உன் தந்தை செந்தில்நாதன் என்றல்லவா சொன்னார்.” என்றார். ஒரு நிமிடம் அருண் யோசித்தான். செந்தில்நாதன், செல்வநாதன். இரண்டு பெயர்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. அதுமட்டுமின்றி தந்தை சிவநாதன் அவர்களுடன் அதிக தொடர்பிலிருந்ததில்லை. எதற்கும் தந்தையிடம் பேசலாம் என்று எண்ணினான். “என் பெயரில் பாதி அவருக்கு இருந்தது மட்டும் தான் ஞாபகம். ஒருவேளை செல்வநாதனாக இருக்கலாம்”. என்றார். இனி அந்தப் பகுதியில் சென்று விசாரிக்கலாம் என்று முடிவெடுத்தேன். தந்தையின் நண்பரை அழைத்துச் சென்று அலைக்கழிக்க மனமின்றி அவன் மட்டும் சென்றான். ஆனால் உடன் அந்தப் பகுதி பற்றித் தெரிந்த ஒரு ஆளை அவனுடன் அனுப்பினார் அந்தப் பெரியவர். அந்தப் பகுதியில் பல நாட்களாக இருக்கும் கடைக்குச் சென்று முதலில் விசாரித்தான் அருண். அந்தக் கடையின் விவரம் எல்லாம் உடன் வந்தவன் கூறியதுதான். என்ன தான் டிபார்ட்மென்ட் ஸ்டோர் என்று வந்தாலும் இன்னும் பழைய அண்ணாச்சி கடை என்று ஒன்று எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். அதேபோல் தான் இந்தக் காடையும் என்று நினைத்தான். கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. அருண் காரிலிருந்து இறங்கி வருவதைக் கண்டு, அவனுக்கு முன் வந்த பலரை விட்டுவிட்டு அருணிடம் “உங்களுக்கு என்ன வேண்டும்” என்றான் கடையில் இருந்த ஒரு இளைஞன். “ஒரு விலாசம் தெரிய வேண்டும்” என்றான் அருண். அவன் சலிப்புடன், “வேறு எங்காவது விசாரியுங்கள்”என்று வேறு வாடிக்கையாளரிடம் சென்றான். “தம்பி நான்கு பிஸ்கட் பாக்கெட் கொடு” என்றான். “என்ன பிஸ்கட்” என்றான் கடை பையன். அவனுக்கும் வியாபாரம் கொடுத்துவிட்டுக் கேட்டான் அருண். இப்போதும் அவன் பொறுமையாக ஒன்றும் சொல்லவில்லை. மற்றவர்களையும் கவனித்துக்கொண்டு, “விலாசம் என்ன ?” என்றான். வீட்டின் எண்ணைக் குறிப்பிட்டதும். “சார், நம்பர் எல்லாம் தெரியாது. தெருப் பெயர் சொல்லுங்கள்.” என்றான். “நான்காவது குறுக்குத்தெரு”என்றான். ” உங்களுக்கு யாரைப் பார்க்க வேண்டும் ?” என்றான். “நான் தேடுபவர், இந்த ஊரில் இல்லை. அவர் முன்னாளில் நான் சொன்ன விலாசத்திலிருந்தார். அவரை இருப்பிடம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.” என்றான் அருண். அப்போது அங்கே கல்லாவில் இருந்த பெரியவர், “அவர்கள் எப்போது ஊரை விட்டுப் போனார்கள் என்று தெரியுமா ?” என்றார். “பத்து வருடங்களுக்கு மேல் இருக்கும்.” “பத்து வருடங்களுக்கு மேல் என்றால், எனக்கே தெரியாது. நீங்கள் சொன்ன விலாசம், அடுத்த தெரு தான். அங்கே இருப்பவர்களுக்குத் தெரியுமா என்பது உறுதி இல்லை. அந்தத் தெருவில் இரண்டாவது வீட்டில் ஒருவர் இருக்கிறார். ரொம்ப நாட்களாக இதே பகுதியில் இருப்பவர். ஆனால் நல்லா வம்பு பேசுவார். அவரிடம் கேட்டுப்பாருங்கள்.” என்றார் கடைக்காரர். கடைக்காரர் சொன்ன ஆளைக் கண்டுபிடிக்க அதிக சிரமம் இல்லை. கடைக்காரர் சொன்னதுபோல் இரண்டாவது வீட்டின் முன் திணையில் அமர்ந்திருந்தார். இவர்கள் அருகில் சென்றது,“யார் வேண்டும்” என்றார் பெரியவர். “இங்கே செந்தில் இல்லை செல்வநாதன் என்பவர் பற்றித் தெரிய வேண்டும்.” “செல்வநாதனா ? அப்படி யாரும் இங்கே இல்லையே” என்றார் பெரியவர். “இப்போது இல்லை ! ஒரு பத்து வருடங்களுக்கு முன் இங்கே இருந்தார்கள்.” சற்று யோசித்தவர், “ஓ ! செல்வத்தைச் சொல்கிறாயா ?நீ யார் ?” என்று ஒருமையில் பேசத்தொடங்கினார் பெரியவர். “நான் அவரின் தூரத்து உறவு”. “தூரத்து உறவா ? எப்படி உறவு ?” என்று மேலும் குடைந்தார். இவரிடம் தகவல் கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால் இவரிடம் பதில் சொல்லாமல் எதுவும் பேச முடியாது என்று அருண் புரிந்து கொண்டான். “நான் அவர் தங்கை கணவரின் வீட்டிலிருந்து வருகிறேன்” என்றான். “சாந்தாவின் வீட்டு ஆள்களா ?” என்றார். பெரியம்மா பெயர் லட்சுமி ஆயிற்றே என்று ஒரு கணம் யோசித்தான். பெரியம்மா பெயரில் அப்பா தவறு செய்ய வழி இல்லை. “என் பெரியம்மா பெயர் லட்சுமி” என்றான். “அதுதான், சாந்தலக்ஷ்மி. இங்கே சாந்தா என்றால் தான் தெரியும்.” என்று தொடர்ந்தார் பெரியவர். “பாவம் ! சின்ன வயசிலேயே புருஷனைப் பறிகொடுத்துவிட்டாள். இங்கேதான் இரண்டு பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு வந்தாள். அப்புறம் குடும்ப கஷ்டம் எல்லாவற்றையும் விற்று விட்டு எங்கோ போய் விட்டார்கள்.” ‘குடும்ப கஷ்டமா ! பிறந்த வீட்டில் யாரும் அவருக்கு உதவவில்லையா ?’ அப்படியானால் அவர்கள் வறுமையில் கஷ்டப்பட்டார்களா ? அவனை அறியாமல் அவன் உடல் பதறியது. “இப்போது எங்கே இருக்கிறார்கள் ?” என்றான் பரபரப்புடன். “யாருக்குத் தெரியும் ?” “அவர்களின் அண்ணன் உடன் தானே இருந்தார்கள் ? அவர்களை விட்டு எப்போது போனார்கள் ?” ” எல்லோரும் ஒன்றாகத்தான் ஊரை விட்டுப் போனார்கள். எங்கே என்று சரியாகத் தெரியாது. உன்னைப் பார்த்தால் நல்லா வசதியாகத் தெரிகிறது. உங்கள் வீட்டுக்கு வந்த பெண்ணை ஒன்றும் இல்லாமல் திருப்பி அனுப்பி விட்டீர்களே!” என்று இப்போது பெரியவர் அருணின் குடும்பத்தைக் குறை கூற தொடங்கினர். அருணுக்கு எரிச்சலாக வந்தது. இவருக்கு என்ன தெரியும் அவன் குடும்பத்தைப் பற்றி? ஒருவேளை பெரியம்மா சாந்த லக்ஷ்மி இவர்களிடம் எல்லாம், புகுந்த வீட்டைப் பற்றித் தவறாகச் சொல்லிருக்கக் கூடுமே ? வம்பு பேசும் பெரியவர் சொல்வதை எண்ணி யாரையும் எடை போடக் கூடாது என்று நினைத்தான். “வேறு யாருக்கு அவர்களைப் பற்றித் தெரியும் ?” என்றான் அருண். “இங்கே இருப்பவர்கள் யாருக்கும் அவர்கள் விவரம் தெரியாது”. அருண் யோசித்தான், இந்தத் தெருவை விட்டால் வேறெங்கும் தகவல் கிடைக்காது என்று உறுதியாக எண்ணினான். வேரென்ன இவருக்குத் தெரிந்திருக்கக்கூடும். சட்டென்று தோன்றியது அருணுக்கு, “செல்வநாதன் இங்கே ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாரே ! அது எந்த நிறுவனம் ?” என்றான். “அதுவா இங்கேதான், பெரிய மில்” என்றார். பெரிய மில் என்பது அந்தப் பகுதியில் பல வருடங்கள் முன் அமைக்கப்பட்ட பெரிய தொழில் நிறுவனம்.அரிசி ஆலை, சர்க்கரை ஆலை, உணவுப் பொருட்கள் கொள்முதல், மற்றும் வியாபாரம் என்று பல பிறவிகளை ஒன்றாக அமைத்த ஒரு நிறுவனம். பெரியவர் சொன்னதும்” சார் ! பொன்னி இண்டஸ்ட்ரீஸ். அதை இந்தப் பகுதியில் இப்படித்தான் சொல்வார்கள்.” என்றான் அருண் உடன் வந்தவன். அந்த நிறுவனத்திற்குப் பல தொழில்களும் இருந்தது அருண் அறிவான். அவர்களுக்குத் தமிழ்நாடு முழுவதும் கிளைகள் இருந்தது. அங்கே சென்று விசாரிக்கலாம் என்று நினைத்தான். முதலில் தந்தையிடம் தகவல் சொன்னான். “அப்பா ! இப்போதைக்கு எதுவும் நம்ப முடியாது. ஆனால் அந்த நிறுவனத்தில் விசாரித்தால் தெரியலாம்”, என்றான். “சரிப்பா ! நீ முடிந்தால் பார் ! இல்லையென்றால் நான் வருகிறேன்.” என்றார் சிவநாதன். “நீங்கள் வந்தாலும், நான் செய்வதைத் தானே செய்வீர்கள். நானே பார்க்கிறேன்.” “நீ வேலையை விட்டு விட்டு அலைகிறாயே !” “எல்லாம் சிபி பார்த்துக்கொள்வான் ! நீங்கள் எதையும் யோசிக்காதீர்கள்”. என்று சொல்லிவிட்டு பொன்னி இண்டஸ்ட்ரீஸ் அலுவலகத்துக்குச் சென்றான். அவர்கள் முதலில் எதுவும் தெரியாது என்றுதான் சொன்னார்கள். மீண்டும் சென்று கேட்டபோது, ரொம்ப பழைய ரெகார்ட. பார்ப்பது சிரமம் என்றார்கள். இரண்டு நாள் கழித்து வரும்படி சொன்னார்கள். இப்போது தந்தையின் நண்பர் துணைக்கு வந்தார். மேலாளரிடம் நேரே சென்று பேச முடிந்தது. அவர் அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. “ஓ ! செல்வநாதன் ! இப்போது சென்னையில் இருக்கிறார்.” என்றார் அவர். “அவர் தான் முதலில் எனக்குப் பயிற்சி கொடுத்தார். அதனால் தான் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. இங்கிருந்து சென்னை கிளையில் வேலையில் சேர்ந்தார். இப்போதும் அங்கே தான் இருக்கிறார்.” “அவர் வீட்டு விலாசம் எதுவும் தெரியுமா ?” என்றான் அருண் படபடப்புடன். “இல்லை ! அவ்வப்போது வேலை விஷயமாகப் பேசுவோம் ! மற்றபடி எதுவும் தெரியாது. அவர் பர்சனல் எண்ணைத் தர முடியாது. இது அவர் அலுவலக எண்” என்று விவரங்களை எழுதிக் கொடுத்தார் அந்த மேலாளர். தந்தையின் நண்பருக்கு நன்றி தெரிவித்து விட்டு அப்போதே சென்னை புறப்பட்டான். தந்தைக்கும் தகவல் சொன்னான். அருணுக்கு இருப்புக் கொள்ளவில்லை. செல்வநாதனின் எண்ணுக்கு முயற்சி செய்தான். அவர் இரண்டு நாட்கள் விடுமுறையில் இருப்பதாகச் சொன்னார்கள். வீட்டு விலாசத்தைத் தருவதற்கில்லை என்றுவிட்டனர். இன்னும் இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டும். அந்த இரண்டு நாட்கள் அவனுக்குத் தூக்கம் சுத்தமாக இல்லை. அந்த வம்புப் பேச்சுப் பெரியவர் சொன்னதுபோல், பெரியப்பா பிள்ளைகள் வறுமையிலிருந்தால், அப்பா இன்னும் களங்கக்கூடும். பாட்டி அதை எப்படி ஏற்றுக்கொள்வர். பொன்னி நிறுவனத்தில் நல்ல வேலையில் அந்தச் செல்வநாதன் இருக்கிறார். ஆனால் அவர் எப்படி என்று தெரியாதே! அவருக்கென்று ஒரு குடும்பம் இருந்தால், முதலில் அதற்குத்தான் முக்கியத்துவம் தருவார். மனதுக்குள் பல விஷயங்கள் ஓடின. நித்யாவிற்கு அன்று இரவு தூக்கம் வரவில்லை. பரணில் இருந்த பழைய புத்தகங்களை எல்லாம் எடுத்துக்கொண்டிருந்தாள் நித்யா. மூவரில் பழைய புத்தகங்கள் எல்லாம் பரணில் போடுவது வழக்கம். வீட்டில் கரப்பான் தொல்லை இருந்ததால், பரனை எல்லாம் சுத்தம் செய்யும்படி சுமதி சொல்லியிருந்தாள். அவற்றையெல்லாம் அகற்ற இறக்கிக்கொண்டிருந்தபோது பழைய புகைப்படங்களும் கிடைத்தது. புத்தகங்களை எடைக்குப் போட்டுவிட்டு, புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள் நித்யா. அரவிந்துக்கு ஆர்வம் இல்லை. அனிதா சிறிது நேரம் பார்த்துவிட்டு, “நான் பிறகு பார்க்கிறேன். இன்னும் ரெகார்டை முடிக்கவில்லை” என்று சென்றுவிட்டாள். நித்யா மட்டும் பார்த்துக்கொண்டிருந்தாள். பெரும்பாலும் அவர்களின் பிள்ளைப்பருவ புகைப்படங்கள். அவற்றில் ஒன்று அரவிந்தின் முதல் பிறந்தநாள் புகைப்படம். அதில் நித்யாவோ அவள் பெற்றோரோ இல்லை. அத்தையின் புகுந்த வீட்டில் எடுத்தப்படம். மாமா அரவிந்தை வைத்திருந்தார். பக்கத்தில் அவரின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்கள். இந்தப் புகைப்படத்தை அவள் இதற்கு முன்னும் பார்த்திருக்கிறாள். அத்தை சாந்தா அடிக்கடி அனிதாவுக்குக் காட்டுவாள். அனிதாவிற்கு அவள் தந்தை முகம் நினைவிருக்கா வாய்ப்பில்லை. அனிதா பிறந்து சில மாதத்தில் சாந்தாவின் கணவன் ஈஸ்வரன் இறந்துவிட்டார். அரவிந்த் அனிதாவிற்குத் தந்தை வீட்டாரைத் தெரிய வேண்டும் என்று சாந்தா இந்தப் புகைப் படத்தைப் பிள்ளைகளுக்குக் காண்பிப்பாள். விவரம் தெரியத் தொடங்கியதும், அனிதா பல கேள்விகள் கேட்கத் தொடங்கினாள். தந்தை இல்லை என்பதைப் புரிந்து கொண்டாலும் “அப்பா வீட்டுக்குப் போகலாமா ! அங்கே பாட்டி தாத்தா இருப்பார்களா ? அவர்கள் ஏன் என்னைப் பார்க்க வரவில்லை ?” என்று நிறையக் கேட்கவும், சாந்தா அவர்களைப் பற்றிப் பேசுவதோ இல்லை புகைப்படத்தைக் காண்பிப்பதோ இல்லை. பிள்ளைகளுக்குச் சொந்தங்கள் தெரிய வேண்டும் என்றுதான் சாந்தா நினைத்தாள். ஆனால் அவர்கள் பிள்ளைகளை ஏற்பார்கள் என்று சாந்தா நம்பவில்லை. அப்படி ஏற்பதனால், இவள் என்ன ஆனால் என்று கூட அவர்கள் நினைக்கவில்லை. மாமனார் நீலகண்டன் இறந்த தகவலைக் கூடச் சாந்தாவுக்குத் தெரியப்படுத்தவில்லை. கேள்விப்பட்டதும் சென்று அவள் துளசி அம்மாளிடம் சிறிது நேரம் இருந்துவிட்டு வந்தாள். அதன் பின் இந்தப் புகைப்படம் பரணுக்குச் சென்றது. நித்யாவுக்கு ஓரளவு இதெல்லாம் தெரியும். சலிப்புடன் அந்தப் புகைப்படத்தை உள்ளே வைக்கச் செல்லும்போது, அந்த முகம். லிப்ட்டில் பார்த்தவன். அவன் எப்படி இதில். அதுவும் பல வருடங்களுக்கு முன் எடுத்த புகைப்படத்தில். இது அவன் இல்லை. மாமாவின் அருகில் நின்ற ஒருவரிடம் அவன் சாயல் கொஞ்சம் தெரிகிறது. உற்றுப் பார்த்தாள். ஒருவேளை அத்தையின் உறவோ அவன். அவன் சாயலில் இருப்பவர் யார் என்று அத்தையிடம் கேட்கலாமா ? வேண்டாம். கேட்டு மட்டும் என்ன ஆகப்போகிறது. கிட்டத்தட்ட மறந்தே விட்ட உறவுகளை மீண்டும் நினைவு படுத்தி, அந்த உறவுகள் உதாசீனப்படுத்தி அனுப்பியதை அத்தைக்கு ஏன் நினைவூட்ட வேண்டும். வீட்டில் தேவையில்லாத சங்கடம் வரக்கூடும். இரு பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு, கணவன் இல்லாமல், பாவம் அத்தை. ஒரு வேலை அப்பா அத்தையைச் சரியாகப் பார்த்துக் கொள்ளவில்லை என்றால், அத்தை என்ன செய்திருக்க முடியும்? அத்தை பிள்ளைகளுடன் தந்தையிடம் வந்தபோது, நித்யாவிற்கு ஏக சந்தோஷம். வீட்டில் இன்னும் இரு பிள்ளைகள். அவள் பின்னாலேயே சுற்றும் அரவிந்த், இன்னும் ஒரு குட்டி பாப்பா அனிதா. வளர வளர, பெரியவர்கள் பேச்சில் சில விஷயங்கள் புரியத்தொடங்கியது. அத்தையின் அழுகை வெகுவாக முதலில் பிள்ளைகள் மூவரையும் பதித்தது. செல்வம் சுமதி, சாந்தாவைத் தேற்றி இயல்பாக இருக்க வைக்க, சில மாதங்கள் ஆகின. நித்யா புரிந்துகொண்டது, அத்தையின் புகுந்த வீட்டில் ஏதோ அதிகமாகத் திட்டி விட்டார்கள். அதனால் அத்தை அழுதுகொண்டே இருக்கிறாள் என்று நினைத்தாள். கணவனை இழந்த சில மாதங்களில் கணவன் வீட்டார் பேசியதை, அத்தையால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எதோ பண விஷயத்தில் அத்தை ஏமார்ந்துவிட்டார். நம்பிக்கை இல்லாதவர்களிடம் பணத்தை இழந்தது மட்டுமில்லாமல், அதற்குக் காரணம் சாந்தாவின் பணத்தாசை என்ற வசைச்சொல்லை ஏற்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். கணவரின் நினைவு நாள் நெருங்கும் சமயம் சாந்தா வெகுவாக ஓய்ந்து விடுவாள். இரவில் பல நேரம் அழுவாள். அவளைச் சமாதானப்படுத்தச் சுமதியும் செல்வமும் அவளுடன் பேச்சுக்கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். இப்போது போல் முதலில் பெரிய வீடு இல்லை. வெறும் மூன்று அறைகள். மெல்லப் பேசினால் கூட எல்லா அறைகளிலும் கேட்கும். பிள்ளைகள் உறங்குகிறார்கள் என்று நினைத்துப் பெரியவர்கள் பேசுவதை அவ்வப்போது நித்யா கேட்டுப் புரிந்துகொண்டாள். சில வருடங்களாக அதுபோல் அத்தை ஓயும் வரை அழுவதில்லை. இப்போது போய்க் கணவர் வீட்டு உறவுகளைப் பற்றி விசாரித்து, பல வருடங்களை மறந்ததை ஏன் நினைவு படுத்த வேண்டும் ? இரண்டு நாட்களுக்குப் பிறகு அருண், செல்வநாதன் அலுவலகத்துக்குச் சென்றான். அலுவலகம் திறக்கும் நேரத்தில் அவன் அங்கிருந்தான். வரவேற்பிலிருந்த பெண்ணிடம் செல்வநாதனை சந்திக்க வந்திருப்பதாகச் சொன்னான். “என்ன விஷயமாகப் பார்க்க வேண்டும் ?” உறவு என்றால் அலுவலக நேரத்தில் பார்க்க முடியாது என்று விட்டால் ! ஏற்கனவே அந்த நிறுவனத்தைப் பற்றித் தெரிந்திருந்தாலும், திருச்சியில் இருந்த மேலாளர் கூறிய தகவலை வைத்தும், “ஒரு பிசினஸ் விஷயமாக.”, அவன் செய்யும் தொழிலை வைத்தே பேசி விடலாம் என்று, அவன் விசிட்டங் கார்டை நீட்டினான். ” உங்கள் அலுவலகத்தில் ஏதும் மாற்றம் தேவை என்றால், நாங்கள் அதை ஏற்றுச் செய்வோம்.” நல்ல வேலையாக அதற்கு மேல் அந்தப் பெண் எதுவும் கேட்கவில்லை. “சார் இப்போது தான் வந்திருக்கிறார். அவரிடம் கேட்டு விட்டுச் சொல்கிறேன். கொஞ்சம் காத்திருங்கள்” என்றாள் அந்தப் பெண் பணிவாக. அருணுக்குப் பரபரப்பு அதிகமானது. இன்றே பெரியம்மாவைப் பார்த்துவிடலாம், அவர்கள் இந்த செல்வநாதனுடன் இருந்தால்! அப்படி இல்லையென்றால் ? கொஞ்சம் பயமும் எட்டிப்பார்த்தது அவனுக்கு. கற்பனைகள் விரிவதற்குள், செல்வநாதன் அழைப்பதாகத் தகவல் வந்தது. அவருக்கென்று இருந்த ஒரு சிறிய அறை. அவருக்கென்று மேஜை நாற்காலி, மேலும் இரு நாற்காலிகள். கோப்புகளைப் பார்த்துக்கொண்டிருந்த செல்வநாதன் அருணை பார்த்ததும், “உட்காருங்கள்.” என்றார். அவன் அமர்ந்ததும் மீண்டும் கோப்புகளைப் பார்க்கத் தொடங்கினர். சில நிமிடங்கள் வேலையைப் பார்த்தவர், கோப்பை மூடி வைத்தார். ” இதற்கு முன்னும் என்னைப் பார்க்க வந்ததாக, குறிப்பில் இருக்கிறது. இப்போதைக்கு இங்கே ஏதும் மாற்றங்கள் செய்வதாக இல்லையே ! என்னை அணுக வேண்டும் என்று யார் சொன்னார்கள் ? ” “என் பெயர் அருண். மதுரையில் இருந்து வருகிறேன்.” அதற்குள் கதவைத் தட்டிவிட்டு உள்ளே ஒரு பெண் வரவும் அவர் பார்த்துக் கொண்டிருந்த கோப்பை கொடுத்து, “மார்க் செய்திருப்பதைச் சரி பார்க்கச் சொல்லுங்கள் !” என்று மீண்டும் அவன் புறம் திரும்பினார் “காபி சாப்பிடுவீர்கள் தானே !” என்றார். “ஒன்றும் வேண்டாம் சார் !” என்றான் அருண். இருந்தாலும் ஒரு காபியைக் கொண்டு வரும்படி சொல்லிவிட்டு “சொல்லுங்கள்”என்றார். “நான் உங்கள் தங்கை சாந்தலக்ஷ்மியை தேடி வந்திருக்கிறேன்” “சாந்தாவையா ? நீங்கள் என்ன விஷயமாகப் பார்க்க வேண்டும் ?” என்று நிறுத்தினர். அருண், “நான் அவர்கள் கணவரின் தம்பி மகன். என் அப்பா பெயர் சிவநாதன். பாட்டி இப்போது படுக்கையில் விழுந்து விட்டார். அவர்கள் பெரியம்மாவையும் அவர்கள் பிள்ளைகளையும் பார்க்க ஆசைப்படுகிறார். அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் உங்களுடன் தானே இருக்கிறார்கள் ?” என்று படபடத்தான். செல்வம் அவன் முகத்தைப் பார்த்து, லேசாகச் சிரித்தார். அந்தச் சிரிப்பில் ஏளனம் இருந்தது. அருணுக்கு அது நன்றாகவே புரிந்தது. “சாந்தாவும் பிள்ளைகளும் என்னுடன் தான் இருக்கிறார்கள்.” என்றார். “நான் அவர்களைப் பார்க்க வேண்டும்.” என்றான் அருண். “உங்களை எனக்கு முன்பின் தெரியாது ! நீங்கள் சொல்வதை வைத்து உடனே என் தங்கையிடம் எப்படிக் கூட்டிப் போவது ?” அதிர்ந்தான் அருண். இதில் யாரேனும் பொய் சொல்வார்களா ? உலகத்தின் போக்கு இப்போது எல்லோரையும் சந்தேகத்துடன் பார்க்கத்தான் சொல்லும். சற்று பொறுமையாக, “உங்களுக்கு என் தந்தையைத் தெரிந்திருக்கும் ! அவரை இங்கே வரச் சொல்கிறேன். பிறகு எங்களைப் பெரியம்மா விடம் அழைத்துச் செல்லுங்கள்.” என்றான். சற்று யோசித்தவர், “தேவை இல்லை ! என்னால் இப்போது முடியாது !” அருணுக்கு இப்போது கோபம் வந்தது. படுக்கையில் ஒருவர் இருப்பதாகச் சொன்னாலும், இந்த மனிதர் இப்படிப் பேசுகிறாரே ! மேலும் பேசத் தொடங்கினர், “எனக்கு சில முக்கியமான வேலைகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் விட்டு விட்டு உங்களுடன் வர முடியாது ! நீங்கள் மாலை ஒரு ஆறு மணிக்கு மேல் வந்தால் நான் கூட்டிப் போகிறேன்.” என்றார். முதலில் மனிதர் பேசியதைப் பார்த்தால், இப்போதைக்கு அவர் அழைத்துப் போகமாட்டார் என்று நினைத்தான் அருண். அவர் மாலை என்றதும் அவனுக்கு நம்ப முடியவில்லை. “ரொம்ப நன்றி சார் !” என்றான். ’ எப்போதோ வீட்டை விட்டு அனுப்பி விட்டு, இப்போது வந்து கூப்பிட்டால் உடனே வர வேண்டுமா ? உங்கள் பாட்டி எப்படிப் போனால் எனக்கென்ன ? ’ என்றெல்லாம் சொல்வாரோ என்று எண்ணினான். இன்னும் அதிகமாகக் கூடச் சொல்லலாம். அதற்காகவே தந்தையைக் கடைசியாக அழைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தான். முதலிலேயே குற்ற உணர்வுடன் இருக்கும் சிவநாதன், இப்போது இது போன்ற பேச்சுக்கள் கேட்டால் இன்னும் மனம் வருந்துவார் என்று எண்ணினான் அருண். ஆனால் செல்வம் அப்படி ஒன்றுமே சொல்லவில்லை தந்தைக்கு அழைத்துப் பேசினான். சிவநாதனுக்கு ஏக மகிழ்ச்சி. அடுத்த விமானத்தில் சென்னை வருவதாகச் சொன்னார். பகுதி - 7 செல்வம் தங்கைக்குத் தொலைப்பேசியில் தகவல் சொன்னார். “நான் என்ன செய்வது ?” என்றாள் சாந்தா. “உனக்கு எது சரி என்று படுகிறதோ செய் ! உன் விருப்பத்திற்கு நான் தடை சொல்லமாட்டேன். மாலையில் நான் வரும்போது அழைத்து வருகிறேன்.” என்றார் செல்வம். சாந்தாவுக்கு அன்று வேலை ஓடவில்லை. சுமதியும் நிலைமையைப் புரிந்து கொண்டு, வீட்டில் இருக்கும்படி சொல்லிவிட்டு கடையை அவள் தனியாகப் பார்த்துக்கொண்டாள். தனிமையில் சாந்தாவுக்கு எல்லா பழைய நினைவுகளும் வரத்தொடங்கியது. பெரியவர்கள் பார்த்து நிச்சயித்த திருமணம் சாந்தா ஈஸ்வரனுடையது. திருமணம் ஆனதும் ஈஸ்வரனின் தந்தை நீலகண்டன் தன் மூன்று பிள்ளைகளுக்கும் தனித்தனியே மனைகளைக் கொடுத்துவிட்டார். ஈஸ்வரனுக்கு உடனே புதிதாக வீட்டைக் காட்டினார். திருமணம் ஆனா நான்கு மாதங்களில் தனிக்குடித்தனம். இதை யாரும் தவறாகப் பேசவில்லை. நீலகண்டனும் அதைத்தான் விரும்பினார். பிள்ளைகள் அருகருகே அவரவர் வாழ்க்கையைப் பார்க்கட்டும் என்று. மூன்று பிள்ளைகளுக்கும் வரிசையாக மனை இல்லாமல் வேறு தெருக்களில் மனையை வாங்கியிருந்தார். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தபோதே, சொத்துக்களைப் பிரித்துக் கொடுத்து விட்டார். அவரின் விவசாய நிலத்தை இரு மகன்களுக்கும், பெண்ணுக்கு அதற்கு நிகராக நகைகளையும் கொடுத்தார். ஈஸ்வரன் விவசாயத்தில் ஆர்வம் இல்லை என்பதால், தம்பி சிவநாதனுக்கே குத்தகைக்குக் கொடுத்தார் என்றாலும் கராராக இருந்ததில்லை. அவர் வியாபாரத்திலேயே ஈஸ்வரனுக்கு நல்ல வருமானம். சாந்தாவிடம் பிரியமாக இருந்தார். சில ஆண்டுகள் ஆகியும் பிள்ளைகள் இல்லை என்று யாரும் குறை சொல்லவில்லை. அதற்குள் சிவநாதன் பார்வதிக்கு திருமணம் முடிந்து, அருண் பிறந்துவிட்டான். ஈஸ்வரன் தங்கை வேதவல்லிக்கும் திருமணம் முடிந்தது. குடும்பத்தில் எல்லோரும் சந்தோசமாகவே இருந்தார்கள். ஈஸ்வரன் தொழில் விஷயம் எதுவும் சாந்தாவுக்குச் சொன்னதில்லை. வருமானம் வரும் வரை எதுவும் பெரிதாகத் தெரியவில்லை. தொழிலில் கொஞ்சம் சிக்கல் வரவும், இருந்த சேமிப்பை மீண்டும் தொழிலில் முடக்கினார். பின் மனைவியின் நகைகள். எல்லாம் ஒருவாறு சமாளித்து மீண்டும் வளரும்போது, ஈஸ்வரன் திடீரென்று காலமானார்.அப்போது அரவிந்துக்கு மூன்று வயது, அனிதா இரண்டு மாத குழந்தை. உயிருடன் இருக்கும் வரை அவரிடம் பண உதவி பெற்றவர்கள் யாரும் திருப்பித்தர வரவில்லை. யாருக்கு எவ்வளவு கொடுத்தார் என்றும் சாந்தாவுக்குத் தெரியாது. நீலகண்டன் மகன் நன்றாக வளர்கிறான் என்று தான் எண்ணி வந்தார். ஆனால் மகனின் மறைவுக்குப் பின் தான், தொழில் பல அடிகள் என்பது தெரிந்தது. தொழிலையும் தொடர்ந்து நடத்த சாந்தாவுக்குத் தெரியாது. வேறுவழியின்றி தொழிலை அப்படியே விட வேண்டியதாயிற்று. ஈஸ்வரனின் கூட்டாளிகள் கொஞ்சம் பணத்தைச் சந்தாவிடம் கொடுத்துவிட்டு தொழிலை எடுத்துக்கொண்டனர். இப்போதைக்கு வீடு மட்டும் இருக்கிறது என்று நினைத்தால், ஈஸ்வரன் இறந்த சில நாட்களில், வீட்டைத் தன்னிடம் அடகுவைத்திருப்பதாக ஒருவர் வந்து பத்திரத்தை நீட்டினார். வீட்டை அவருக்கே விற்று கடன்களை அடைத்து இறுதியில் மிஞ்சியது ஒரு லட்சத்துச் சொச்சம். அப்போதைக்கு அது பெரிய தொகையே ! நீலகண்டன் பிள்ளைகள் பெயரில் வங்கியில் போடச் சொன்னார். சாந்தாவுக்கு வங்கி வேலைகள்பற்றி ஒன்றும் தெரியாது. சந்தாவிற்கு உதவியது வேதவல்லியின் கணவன் ராஜன். அவன் செய்தது உதவியா இல்லை துரோகமா ? என்று இதுவரை சாந்தாவுக்குத் தெரியவில்லை. அதிக வட்டி வாங்கி தருவதாகவும், பின்னாளில் பிள்ளைகளுக்கு உதவும் என்றும் ஒரு சீட்டு நிறுவனத்தில் போடச் சொன்னார். அதுவும் ராஜன் சொன்ன நிறுவனத்தில் தான் சாந்தாவும் பணத்தைப் போட்டாள். அவளின் நேரம் என்றுதான் சொல்ல வேண்டும். மூன்று மாத வட்டிக்கு மேல் எதுவும் திரும்ப வரவில்லை. நீலகண்டனுக்குத் தெரிந்ததும் ருத்திர தாண்டவம் ஆடினார். “பெரியவர்கள் சொல்வதைக் கேட்காமல் செய்தால் இப்படிதான்.” என்றார். சாந்தா இப்போது வேறொருவரைச் சார்ந்துதான் வாழ வேண்டும். ” எல்லோருக்கும் அவரவர் குடும்பம் என்று இருக்கிறது. உன்னையும் உன் பிள்ளையையும் பார்த்துக்கொள்ள யாரால் முடியும். இங்கே பணம் ஒன்று கொட்டிக் கிடக்கவில்லை. பணத்தாசையால் இருந்ததை இப்படித் தொலைத்துவிட்டு நிற்கிறாயே !” என்றார். வீட்டில் எல்லோரும் கூடியிருந்த நேரம், நீலகண்டன் அப்படிப் பேசினார். பணத்தைச் சீட்டு நிறுவனத்தில் போடச் சொன்ன ராஜன் எதுவும் பேசவில்லை. வேறு வழியின்றி “ராஜன் அண்ணா தான் போடச் சொன்னார்.” என்றாள் சாந்தா. நீலகண்டன் கோவத்திற்குப் பயந்தோ இல்லை பழியை ஏற்க மனமின்றியோ, “கணவனை இழந்து நிற்கிறாய் என்று எதுவும் பேசாமல் இருக்கிறேன். அபாண்டமாக என்மேல் பழி போடாதே.” என்ற ராஜன், “மாமா! எனக்கு இந்த அவமானம் எல்லாம் வேண்டியதுதான். அதிக வட்டி வருவது போல் ஒரு வங்கியைத் தேர்வு செய்யச் சொன்னேன் ! மற்றபடி எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை” என்றார் நீலகண்டனைப் பார்த்து. “விடுங்கள் மாப்பிள்ளை ! தப்பை ஒத்துக் கொள்ள மனம் இல்லாமல், கிடைத்தவர் மேல் பழி போடுகிறாள். நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.” என்றார் நீலகண்டன். “என்ன அப்பா ! அவ்வளவு சாதாரணமாகச் சொல்லிவிட்டீர்கள். அண்ணி எப்படி என் கணவர்மேல் பழி சொல்லலாம். அண்ணி பணத்தாசைக்கு எங்கள்மேல் பழி போடுவதா?” என்றாள் வேதவல்லி. அன்றைய நிகழ்வு சாந்தாவை ‘இனி வீட்டில் இருக்கக் கூடாது’ என்ற முடிவை எடுக்க வைத்தது. என்ன தான் பிறந்த வீட்டிற்கு வந்துவிட்டாலும், புகுந்த வீட்டில் அவளை இப்படிப் பேசி விட்டார்களே என்று வெகுநாள் வருந்தினாள். அப்படியே அவள் செய்திருந்தாலும், அவளுக்குக் கொஞ்சமேனும் ஆதரவு தர வேண்டும் என்று நினைக்காமல், அவள் வீட்டை விட்டு வந்ததும், விட்டது தொல்லை என்று எல்லோரும் இருந்துவிட்டார்கள். நீலகண்டன் மறைவைக்கூட இவளுக்குச் சொல்லவில்லை. தகவல் அறிந்து இவள் சென்று பார்த்தபோது எல்லா காரியங்களும் முடிந்துவிட்டது. சிறிது நேரம் துளசி அம்மாள் அருகிலிருந்துவிட்டு வந்துவிட்டாள். மாலையில் அருணுடன் சிவநாதன் இருப்பதைப் பார்த்துவிட்டு, நலம் விசாரித்தார் செல்வநாதன். செல்வநாதன் ஸ்கூட்டரில் தொடர்வது கடினமாக இருக்கும் என்று விலாசத்தைச் சொல்லிவிட்டு முன்னே சென்றார். சாலை நெரிசலில் அருணின் கார் செல்லும் முன் செல்வநாதன் வீட்டை அடைந்திருந்தார். உள்ளே செல்லாமல் இவர்களுக்காகக் காத்திருந்தார். ஏற்கனவே செல்வநாதன் தகவல் சொல்லியிருந்ததால், எல்லோரும் இயல்பாக இருக்க முயற்சி செய்தார்கள். செல்வநாதன் வீட்டில் இருப்பவர்களை அறிமுகம் செய்துவைத்தார். பிள்ளைகள் யாரும் வீட்டில் இல்லை. அருண் பெரியம்மா என்றதும் முதலில் சற்று வயதான பெண்மணி என்று நினைத்தான். ஆனால் அவர் பார்க்க அவன் அன்னை வயது அல்லது அதற்கும் குறைவாக இருக்கக்கூடும் என்று நினைக்க வில்லை. முதலில் யார் பேசுவது என்று எல்லோரும் தயங்கி நிற்க, “அத்தை இப்போது எப்படி இருக்கிறார்கள் ?” என்றாள் சாந்தா. “நிலைமை கொஞ்சம் மோசம்தான் அண்ணி ! உணவு உண்பது கூட மிகவும் குறைந்துவிட்டது. உங்களைப் பார்க்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்.” என்ற சிவநாதன் தொடர்ந்தார் “பிள்ளைகள் நலமா ! அவர்கள் எங்கே ?” “அனிதாவுக்கு இன்று சிறப்பு வகுப்பு. இப்போது வந்துவிடுவார்கள். அவளை அழைத்து வர அரவிந்த் சென்றிருக்கிறான்.” என்று சாந்தா சொல்லும்போதே, ஒரு பைக் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. “இதோ வந்துவிட்டார்கள்” என்றாள் சுமதி. உள்ளே இருவரும் வர, அரவிந்த் பின் ஒளிந்து கொண்டு நின்றாள் அனிதா. ஏற்கனவே அரவிந்துக்கு உறவினர்கள் வருவதைச் சொல்லி இருந்தார்கள். அவனும் தங்கைக்குச் சொல்லித்தான் அழைத்துவந்தான். சிவநாதன் நலம் விசாரிக்க, அருணுக்கு அரவிந்துக்கும் ஒருவரை ஒருவர் பார்த்த ஞாபகம் இருந்தது. அருண் தொடங்கினான், “உன்னை அந்தக் கணினி கடையில் பார்த்தேன். உனக்கு நினைவிருக்கிறதா ?” என்றான். எல்லோரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். “நினைவிருக்கிறது” என்றான் அரவிந்த். அருணுக்கு அப்போது உடன் வந்த பெண் யார்? என்று ஒரு கணம் தோன்றியது. அதற்குள்,“பார்த்தும் அடையாளம் தெரியாத அளவில் விலகிப் போய் விட்டோம்.” என்றார் சிவநாதன். வேறு யாரும் எதுவும் பேசவில்லை. சிவநாதன் தொடர்ந்தார், “தவறு எங்கள் பக்கம் தான் இருக்கிறது. தந்தையை மீறி எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மன்னிப்பு கேட்பதால் எதுவும் சரியாகாது. ஆனால் வேறு என்ன செய்ய முடியும்.” என்று வருத்தத்துடன் முடித்தார். “முடிந்ததை பற்றிப் பேசி ஏன் வருத்தப்படுகிறீர்கள்? பழைய பேச்சுக்கள் பேசி ஏன் கலங்க வேண்டும். அடுத்ததை பற்றிப் பேசுங்கள்.” என்று சுமதி சொல்ல, சிவநாதன் கேட்கும் முன், “நான் அத்தையைப் பார்க்க வருகிறேன். நாளை அல்லது மறுநாள் இங்கிருந்து புறப்படும்படி பார்க்கிறேன்” என்றாள் சாந்தா. முதலில் சிவநாதனுக்கு மகிழ்ச்சி. ஆனால் அன்னை பிள்ளைகளையும் பார்க்க வேண்டும் என்றாளே ! மெதுவாகக் கேட்டார் சிவநாதன். “அம்மா, பிள்ளைகளையும் பார்க்க விரும்புகிறார்.” “அண்ணா ஏற்கனவே சொன்னார் ! அனிதாவுக்குப் பரீட்சைகள் நடக்கிறது. அரவிந்த்துக்கும் விடுமுறை இல்லை. இன்னும் நான்கு நாட்களில் இருவருக்கும் விடுமுறை வருகிறது. அப்போது வேண்டுமானால் அவர்களையும் அழைத்து வருகிறான்.” என்றாள் சாந்தா. “அப்படியானால் வரும் வெள்ளி இரவுக்குப் பயண ஏற்பாடுகளை நான் செய்துவிடுகிறேன்.” என்றான் அருண். “நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் ! உங்களுக்குச் சிரமம் வேண்டாம்.” என்றாள் சாந்தா. “சிரமம் ஒன்றும் இல்லை பெரியம்மா ! இவர்கள் வகுப்பு எப்போது முடியும் என்று சொல்லுங்கள். அதற்குத் தகுந்தாற் போல் டிக்கெட் போட்டு விடுகிறேன்” என்றான் அருண். “பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள் ?” என்றார் சிவநாதன். “சொல்லுங்கள்!” என்று இப்போது அனிதா, அரவிந்தை பார்த்துச் சுமதி சொல்லவும், அனிதா அரவிந்த்தின் கையைப் பற்றிக்கொண்டு அப்படியே நின்றாள். “அனிதா இப்போது பன்னிரண்டாம் வகுப்பு. நான் மூன்றாம் ஆண்டு மருத்துவம்.” என்றான் அரவிந்த். “பலே ! நம் வீட்டில் ஒரு மருத்துவர்” என்றார் சிவநாதன். ஒரு புறம் மகிழ்ச்சியும் ஒருபுறம் வேதனையும் அவர் மனதிலிருந்தது. அப்போது புதிதாக யாரோ உள்ளே வர, எல்லோர் கவனமும் அங்கே சென்றது. செல்வநாதன் அறிமுகம் செய்தார், “என் மகள் நித்யா”. ஒரு கணம் நித்யாவும் அருணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அதற்குள் செல்வநாதன், “இவர்கள் மாமா வீட்டிலிருந்து வந்திருக்கிறார்கள். மாமாவின் தம்பியும் அவர் மகனும்.” என்றார். ஒரு சிரிப்பைப் பெரியவரிடம் மட்டும் உதிர்த்துவிட்டு “வீட்டில் எல்லோரும் நலமா ?” என்றாள். “எல்லோரும் நலமாக இருக்கிறோம். நீ என்ன செய்கிறாய் அம்மா ?” “சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன்.” என்றாள். அவள் ஒரு முறை கூட அருண் இருக்கும் பக்கம் பார்க்கவில்லை. சிறிது நேரத்தில் வந்தவர்கள் கிளம்பினார்கள். அவர்கள் கிளம்பியதும் நடந்தவற்றை நித்யா கேட்டுத் தெரிந்து கொண்டாள். மற்றபடி வீடே சற்று அமைதியாக இருந்தது. மறுநாள் அலுவலகத்திற்குச் செல்லும்போது, அரவிந்த் கேட்டான்,“நேற்று நம் வீட்டில் அருண் அண்ணாவைப் பார்த்தபோது எப்படி இருந்தது ?” “யார் அது அருண் அண்ணா ?” “தெரியாதது போல் நடிக்கக் கூடாது ?” “சரி ! இப்போது அதற்கு என்ன ?” “எங்கோ பார்த்தது போல் என்றாயே? நமக்கு உறவுக்காரர். ஆனால் பல வருடங்கள் இரு குடும்பங்களுக்கும் தொடர்பே இல்லை. ஆனால் எப்படி உனக்குத் தெரிந்தது? ஒருவேளை தேஜாவு போல் ஏதாவது ?” “ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை ! உன் முதல் பிறந்தநாள் புகைப்படத்தில் பார்த்திருக்கிறேன்.” “முதல் பிறந்தநாள் புகைப்படத்தில் அருண் அண்ணா சிறு பிள்ளை ஆயிற்றே ?” “உன் பெரியப்பாவின் சாயல் உன் அண்ணனுக்கும் இருக்கிறது.” “பெரியப்பா இல்லை சித்தப்பா ! எப்போது கண்டுகொண்டாய் ? என்னிடம் சொல்லவில்லை !” “பழைய புத்தகங்களை அகற்றியபோது ஒரு போட்டோ ஆல்பம் கிடைத்தது. அதில் பார்த்தேன்.” “அப்போதே நீ கேட்டிருக்கலாம் அல்லவே ?” “யாரிடம் என்ன கேட்பது ! எனக்கு அவசியமும் இல்லை ! அந்த ஆளைப் பற்றி இனி என்னிடம் பேசாதே.” அதற்குள் அவள் இறங்கும் இடம் வந்துவிடு, வண்டியை நிறுத்தினான் அரவிந்த். “அவர் என் அண்ணன். நினைவிருக்கட்டும் !” என்றான். நித்யா திரும்பி முறைத்து விட்டுச் சென்றாள். பகுதி - 8 சாந்தா மற்றும் பிள்ளைகளை அழைத்துச் செல்ல, அருண் வருவதாகச் சொல்லியிருந்தான். அவன் வரும் நேரத்தில் அங்கே இருக்கக் கூடாது என்று முதலில் நினைத்தாள் நித்யா. நம் வீட்டுக்குச் செல்ல இவன் என்ன தடை என்று வழக்கம்போல் சென்றாள். இவள் வீட்டை அடையும்போது அவன் வந்திருக்கவில்லை. சாந்தா எல்லாம் எடுத்து வைத்துத் தயாராக இருந்தாள். இரவு உணவை வீட்டில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று மேஜையில் எடுத்து வைக்கும்போது, அருண் வந்தான். அவனையும் உணவருந்த அழைக்கவும் முதலில் மறுத்தவன், செல்வநாதன் வற்புறுத்தி அழைக்கவும் சரி என்றான். பயணத்தில் எளிதான உணவாக இருக்கட்டும் என்று இட்லி மட்டும் செய்திருந்தார்கள். இப்போது அருண் வரவும் தோசைக்கல்லை அடுப்பில் வைக்கும்படி நித்யாவுக்கு சுமதி சொல்லிக்கொண்டிருந்தாள். நித்யா சமையல் அறையை விட்டு வரவில்லை. “எங்கள் உணவு முறை உனக்குப் பிடிக்குமா தெரியவில்லை!” என்றாள் சாந்தா. “உணவில் எதையும் நான் ஒதுக்குவதில்லை. எல்லாம் எனக்குப் பிடித்தமானது தான்.” என்றான். உணவை முடித்துக்கொண்டு நால்வரும் புறப்பட்டனர். அப்போது மட்டும் நித்யா வெளியே வந்தாள். ரயில் நிலையத்திற்கு காரில் அழைத்துச் சென்றான். செல்லும் வழியில் நண்பனை அழைத்துக் காரை நிறுத்திய இடம்பற்றிச் சொல்லி மீண்டும் வீட்டிற்கு எடுத்துச் செல்லும்படி கூறினான். ஏற்கனவே ஒரு சாவியை அவனிடம் கொடுத்திருந்தான். அருணும் அவர்களுடன் மதுரைக்குச் சென்றான். மதுரை ரயில் நிலையத்திலிருந்து கார் அவர்களுக்குத் தயாராக இருந்தது. சிவநாதனும் வந்திருந்தார். சாந்தா அறிந்த வீடு இதில்லை. அவள் அறிந்தது ஒரு ஓட்டு வீடு. இப்போது மூன்று தளங்கள் கொண்ட பெரிய வீடு. வீட்டில் இருப்பவரை அரவிந்துக்கும் அனிதாவுக்கும் அறிமுகம் செய்து வைத்தார் சிவநாதன். எந்நேரமும் இங்கேயே இருக்கும் வேதவல்லி இன்று இல்லை. “பாட்டி இன்னும் எழவில்லை. நீங்கள் வருகிறீர்கள் என்று இரவு வெகுநேரம் உங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே தூங்கவில்லை. அதற்குள் நீங்களும் குளித்துவிட்டு வாருங்கள். பிரயாண களைப்பு கொஞ்சம் குறையும்” என்று ஒரு அறையைக் காட்டினாள் பார்வதி. அவர்களுக்குக் கொடுத்த அறையில் குளித்துத் தயாராகி முதலில் துளசி அம்மாளைப் பார்க்கச் சென்றனர். துளசி அம்மாளைப் பார்த்துக் கொள்ள ஒரு பெண்ணை நியமித்திருந்தார்கள். அவள் முழு நேரமும் அங்கேயே இருக்க வேண்டும். அவள் குடும்பமும் அருகிலிருந்ததால், துளசியம்மாள் பகலில் உறங்கும் நேரம் அல்லது பார்வதி அருகில் இருக்கும் நேரம் அவள் வீட்டுக்குச் சென்று வருவாள். குடும்பத்தார் அல்லது உறவினர்கள் யாரும் வந்தால் வெளியே சென்று விடுவாள். அதிக நேரம் ஆகும் பட்சத்தில் பார்வதியே அவளை வீட்டுக்கு அனுப்பி விடுவாள். இப்போதும் அப்படியே அந்தப் பெண்ணை மதியத்திற்கு மேல் வந்தால் போதும் என்று அனுப்பி விட்டாள். துளசியம்மாள் மூவரையும் பார்த்தது பெரும் மகிழ்ச்சி. வெகுநேரம் அவர்களிடம் பேசினார். “நீ வரமாட்டாயோ என்று நினைத்தேன. இவர்களிடம் சொல்லிப் பல நாட்கள் ஆகிவிட்டது. ஏதாவது காரணம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். உனக்கு வர விருப்பம் இல்லையோ என்று பயந்தேன்.” “பிள்ளைகளுக்குப் பரிச்சை. அதனால் தான் கொஞ்சம் தாமதமாகி விட்டது அத்தை.” “சிவநாதன் சொன்னான் ! பேரன் டாக்ட்ராமே !”என்றார் துளசியம்மாள். “இப்போது தான் படித்துக்கொண்டிருக்கிறான்.” என்றாள் சாந்தா. பிள்ளைகள் இருவரையும் அருகில் அமர்த்திக்கொண்டார். சிறிது நேரம் கழித்து, பார்வதி வந்தாள். அதுவரை யாரும் அந்தப் பக்கம் வரவில்லை. “அத்தை, அவர்கள் இன்னும் சாப்பிடவில்லை ! நீங்களும் சாப்பிட வேண்டும்.” என்றாள். “ஆமாம் ! இவர்களைப் பார்த்த சந்தோஷத்தில் சாப்பிடக்கூடச் சொல்லவில்லை. முதலில் சாப்பிடுங்கள்” என்றார். “எனக்குப் பசியில்லை ! முதலில் பிள்ளைகள் சாப்பிடட்டும்.” என்று இருவரையும் பார்வதியுடன் அனுப்பினாள் சாந்தா. “எங்கள்மேல் உனக்கு வருத்தம் இருக்கும் ! நாங்கள் யாரும் இத்தனை வருடங்கள் உன் பக்கத்தில் இல்லை. பிள்ளைகளை வளர்க்க என்ன சிரமப்பட்டாயோ ?” என்றார் துளசியம்மாள். “எல்லோருக்கும் ஏதாவது ஒரு கஷ்டம் இருக்கும் தானே அத்தை. அவர் என்னை விட்டுப் போய்விட்டார். நான் வாங்கி வந்த வரம் அப்படி. மற்றபடி அண்ணன், அண்ணி என்னையும் பிள்ளைகளை நன்றாகவே பார்த்துக் கொண்டார்.” “நாங்கள் செய்ய வேண்டியதை, உன் அண்ணன் செய்திருக்கிறான்.எல்லாம் உன் மாமா செய்தது.” “இப்பொழுது ஒருவரை ஒருவர் குறை கூறி என்ன ஆகப்போகிறது அத்தை. முடிந்ததை விடுங்கள். நீங்கள் இப்படி இருக்கக் கூடாது. மனதைத் தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்”. “இனி நான் ஆரோக்கியமாக இருந்து என்ன செய்யப்போகிறான்?” என்றார் விட்டேற்றியாய். “இப்படிச் சொன்னால் எப்படி அத்தை! உங்கள் பேரப்பிள்ளைகள் திருமணத்தைப் பார்க்க வேண்டாமா ? கொள்ளு பேரப்பிள்ளைகளைக் கொஞ்ச வேண்டாமா ?” என்றாள் சாந்தா. “நீ சொல்வது சரிதான் !” என்று சிரித்தார். “என் கதையை விடு. இப்போது சென்னையில் இருப்பதாக சிவநாதன் சொன்னான். எத்தனை வருடங்கள் ஆகிறது அங்கே சென்று ?” ” அங்கே சென்று பதினைந்து வருடங்கள் ஆகிறது.” “ஓ ! அப்படியா ! உன் அண்ணனுக்கு எத்தனை பிள்ளைகள் ?” “ஒரு மகள் மட்டும் தான்.” வெகுநேரம் சாந்தா துளசியம்மாள் பக்கத்தில்தான் இருந்தாள். இடையில் உணவு உண்ண மட்டும் சென்று வந்தாள். பிள்ளைகள் இருவரும் அங்கேயே இருந்தார்கள். அப்போது பார்வதி வந்து, “அத்தை கொஞ்ச நேரம் தூங்குவார்கள். நீங்களும் கொஞ்சம் ஓய்வெடுங்கள்.” என்றாள். “களைப்பில்லை !” என்றாள் சாந்தா. “அப்படியானால் நாம் வெளியே உட்கார்ந்து பேசுவோம். பிள்ளைகளும் எத்தனை நேரம் இப்படியே இருப்பார்கள்.” நால்வரும் முன்னறைக்கு வந்தார்கள். சிவநாதனும் அருணும் அங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். சத்யனும் அங்கே தான் அமர்ந்திருந்தான். “அருண், இவர்களை வெளியே எங்காவது கூட்டிப்போ !” என்றாள் பார்வதி. “இல்லை வீட்டிலேயே இருக்கிறோம் !” என்றான் அரவிந்த். “கொஞ்ச நேரம் அப்படியே சுற்றிவிட்டு வாருங்கள்.” பிள்ளைகள் நால்வரும் ஒரு காரில் கிளம்பினார்கள். சிவநாதனும் அவரின் அலுவலக அறைக்குச் செல்ல, பெண்கள் இருவரும் அமர்ந்து பேசினார்கள். “வேதவல்லி எப்படி இருக்கிறாள் ? அவளுக்கு ஒரு மகள் தானே ?” என்றாள் சாந்தா. “நன்றாக இருக்கிறாள். அவள் மகள் கீர்த்தியும் அரவிந்தும் ஒரே வயதுதான்!” என்றாள் பார்வதி. “அரவிந்த் நான்கு மாதம் பெரியவன்” என்றாள் சாந்தா. இரு பெண்களும் இருவரின் கதைகளைப் பேசினார்கள். வெளியே சென்ற பிள்ளைகளும் அவர்கள் கதையைப் பகிர்ந்து கொண்டனர். ஆண்கள் மூவரும் நிறையப் பேசினாலும் அனிதாவுக்குக் கொஞ்சம் சலிப்பாக இருந்தது. அவளைப் பார்த்து, “கீர்த்தியை அழைத்து வந்திருக்கலாம். அனிதாவுக்குத் துணையாக இருந்திருக்கும்.” என்றான் சத்யன். “அவள் ஏன் இன்று வீட்டுக்கு வரவில்லை” என்றான் அருண். “தெரியவில்லை” இது சத்யன். “யார் கீர்த்தி ?” என்றாள் அனிதா. “நம் அத்தை மகள். வேதவல்லி அத்தை உனக்குத் தெரியுமா ?” என்றான் அருண். “அம்மா சொல்லியிருக்கிறார்கள்” என்றாள் அனிதா. “ஏய் ! நம் வீட்டில் உங்கள் மூவர் பெயரும் ‘அ’ வில் தான் ஆரம்பிக்கிறது. நானும் கீர்த்தியும் மட்டும் தப்பித்தோம்” என்றான் சத்யன். “எதிலிருந்து தப்பினீர்கள்.” என்றாள் அனிதா. “எல்லா வகுப்பிலும் முதலில் உங்களைத் தான் பிடித்துக் கொள்வார்கள். தேர்வில், பயிற்சி வகுப்பில், லாபில் எல்லாம் நீங்கள் தான் முதலில் இருப்பீர்கள்.” என்றான் சத்யன். “நன்றாகப் படிப்பவர்களுக்கு அது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை.” என்றான் அருண். “எல்லோரும் உன்னைப் போல் இருக்கமாட்டார்கள்” என்றான் சத்யன். “நிச்சயம் அரவிந்தும் அப்படித்தானே இருக்க வேண்டும் ! இல்லையென்றால் மருத்துவம் படிக்கச் சென்றிருக்க மாட்டான்.” என்று அருண் சொல்ல “ஆமாம் அண்ணா ! அரவிந்த் அண்ணாவால் எனக்குத் தான் சிக்கல். நித்யா அக்கா பள்ளியில் முதல் மதிப்பெண். அரவிந்த் அண்ணா மாநில அளவில் இரண்டாவது இடம். இப்போது நான் குறைந்தது பள்ளியில் முதல் இடம் எடுக்க வேண்டும். இல்லையென்றால் யாரும் என்னை மதிக்கமாட்டார்கள்.” என்றாள் அனிதா. “அது யார் நித்யா ?” என்றான் சத்யன். “எங்கள் மாமாவின் மகள், சென்னையில் நாங்கள் எல்லோரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம்”. என்றாள் அனிதா. “ஓ ! நித்யா என்ன படிக்கிறாள் ?” என்றான் சத்யன். “அவள் உன்னைவிடப் பெரியவள் ! மரியாதையுடன் பேசு ! அவளுக்குச் சாப்ட்வேரில் வேலை” என்றான் அருண். “அப்போது நீ மட்டும் அவள், இவள் என்கிறாய் ? உனக்கு அவளை, இல்லை அவர்களை முன்பே தெரியுமா ?” “அவள் என்னைவிட வயதில் குறைத்தவள் தான் ! சென்னையில் பார்த்திருக்கிறேன்” என்றான் அருண். இப்போது அரவிந்த்துக்குச் சிரிப்பு வந்தது. “எதற்குச் சிரிக்கிறாய் ?” என்றாள் அனிதா. நித்யாவை ‘அவள்’ என்று சொல்வதை மரியாதையை குறைவு என்கிறான் அருண். ஆனால் நித்யா அருணை திட்டியது தெரிந்தால் ! “ஒன்றும் இல்லை” என்று சமாளித்தான். அதற்குள் கார் நின்றது. அரவிந்த் அவர்களை அழைத்து வந்த இடம் அவர்களின் தோட்டம். நீலகண்டன் காலத்திலிருந்து அவர்கள் வாழ்வின் ஆதாரம் இதில் தான் தொடங்கியது. பெரும்பாலும் தென்னை, மாமரங்கள். மற்றவை காய்கறிகள். இன்றைய காலத்தில் எல்லோரும் சொட்டு நீர் விவசாயம் செய்யும் நிலை வந்தாலும், அவர்களின் தோட்டத்தில் வாய்க்காலில் நீர் பாய்ந்தது. அனிதாவுக்கு அதைப் பார்த்து ஏக சந்தோஷம். உடனே செருப்பைக் கழற்றி விட்டு வாய்களில் இறங்கி நடக்கத் தொடங்கினாள். தோட்டத்தில் வேலை செய்பவர் அவர்களைப் பார்த்ததும் அருகில் வந்தார். “எல்லோருக்கும் இளநீர் வெட்டுங்கள் !” என்றான் அருண். சத்யனும் இளநீர் எடுத்துவரச் சென்றுவிட்டான்.அனிதா முன்னும் பின்னும் வாய்க்காலில் நடந்தவள், சற்று தொலைவில் நடந்து கொண்டிருந்தாள். அப்போது அரவிந்த்தின் செல் ஒலித்தது. அழைத்து நித்யா. “ஹலோ ! சொல் நித்தி !” “மெசேஜ் பார்க்கவில்லையா ?” “இல்லை ! எனக்கு எதுவும் வரவில்லை !” என்று சரி பார்த்தவன், புதிதாக வந்ததாக அதில் காண்பிக்கவில்லை. அவன் படிக்கும் முன்னே யாரோ அதைப் பார்த்திருக்க வேண்டும். அதில் வயிற்று வலிக்கு எந்த மாத்திரை தர வேண்டும் என்று கேட்டிருந்தாள் நித்யா “அம்மாவோ, அனியோ பார்த்திருக்கலாம். யாருக்கு மருந்து?” என்றான். “கலா அக்காவுக்கு” அவன் விளக்கம் கொடுத்துவிட்டு வைத்தான். பேச்சை ஒரு முனையில் மட்டும் கேட்ட அருண், “சென்னையில் யாருக்கேனும் உடல் நலம் சரியில்லையா ?” என்றான். “கடையில் வேலை செய்யும் அக்காவுக்கு. அவர்களுக்கு மாத்திரையைக் கேட்கத்தான் நித்யா அழைத்திருந்தாள்.” “நித்யா தரமணியில் உள்ள கம்பெனியில் வேலை பார்க்கிறாள் அல்லவா.” என்று அருண் கேட்க அரவிந்துக்குச் சிரிப்பு வந்தது. அருண் கேள்வியாய் நோக்கியவன், உடனே “நித்யா என்னைப் பற்றிச் சொல்லிருக்க வேண்டும் !” என்றான் அருண். “நீங்கள் யார் என்று தெரியும் முன்னரே சொன்னாள்.” அருண் புருவத்தை உயர்த்தி பார்க்க,” எல்லாவற்றையும் சொன்னாள். உங்கள்மேல் அவளுக்குப் பெரும் கோபம். அன்று கம்ப்யூட்டர் கடையில் கூட” என்று தொடங்கியவன் நித்யா அருணை திட்டியது கூடச் சொல்ல வேண்டும் என்று நினைத்து, பேச்சை மாற்றினான்.”அவள் சித்தப்பாவின் புகைப்படத்தைப் பார்த்திருக்கிறாள் ! அந்தப் புகைப்படத்தில் சித்தப்பா இருப்பது போல் நீங்கள் இப்போது இருக்கிறீர்கள். அதனால்தான் அவள் உங்களிடம் பேச வந்தாள். ” “ஆனால் அவள் என் கல்லூரிபற்றிக் கேட்டாள்.” “முதலில் அவளுக்குச் சரியாக நினைவு வரவில்லை. கம்ப்யூட்டர் கடையில் பார்த்தபோது கூட இல்லை. அதன் பின் அவளுக்கு நினைவு வந்தது என்று சொன்னாள்.” அருணுக்கு இப்போது சற்று வருத்தமாக இருந்தது. அவன் பேசியது கூட அவளைக் காயப்படுத்தி இருக்கும். அடுத்த முறை சந்திக்கும்போது பேச வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். மறுநாள் துளசி அம்மாள், பார்வதியிடம் பல நாட்களுக்குப் பிறகு வந்திருக்கும் பிள்ளைகளுக்கு ஆடைகள் வாங்கித் தரும்படி சொன்னாள். சாந்தா வீட்டிலேயே இருப்பதாகச் சொல்லவும், அரவிந்தையும் அனிதாவையும் அழைத்துச் சென்றாள். பெரியவள் உறங்க, அறையின் ஒரு புறம் இருந்த ஜன்னல் அருகே வந்து வெளியே பார்த்தபடி நின்றிருந்தாள் சாந்தா. அப்போது அறைக்குள் வந்த சிவநாதன், அன்னை உறங்குவதைப் பார்த்து, சாந்தா நிற்குமிடம் வந்தார். “நீங்கள் வந்ததில் அம்மாவுக்கு மிக்க மகிழ்ச்சி ! அதுவும் பிள்ளைகளைப் பார்த்ததில் அவர் இன்று கலகலப்பாக இருக்கிறார். ரொம்ப நன்றி அண்ணி !” மெல்ல சாந்தா, “நீங்கள் நன்றி சொல்லும் அளவுக்கு நான் ஒன்றும் செய்து விடவில்லை. அவர்களுக்கு அவர் பேரப்பிள்ளைகளைப் பார்க்க எல்லா உரிமையும் இருக்கிறது. அத்தையைப் பார்த்துக் கொள்வது என் கடமையும் கூட. இத்தனை நாள் ஒரு மருமகளாக அவருக்கு நான் எதுவும் செய்ததில்லை. நினைத்தால் வேதனையாக இருக்கிறது.” “அப்படிப் பார்த்தால், தவறு என்மேல் இருக்கிறது. அப்பாவை எதிர்க்க மனம் இல்லாமல் உங்களை வெளியே செல்ல விட்டுவிட்டோம்.” “விடுங்கள் ! பழையது பேச வேண்டாம். எல்லோருக்கும் கஷ்டம். இப்போது எல்லோரும் நன்றாகவே இருக்கிறோம்.” “இதுவரை உங்களுக்கு நாங்கள் எதுவும் செய்யவில்லை ! உங்களுக்கோ பிள்ளைகளுக்கோ எதுவும் தேவை என்றால் தயங்காமல் கேளுங்கள்.” சிவநாதன் பண உதவியைக் குறிப்பிடுகிறார் என்று புரிந்ததும், “நீங்கள் கேட்டதே மகிழ்ச்சி ! இறைவன் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கிறது. அரவிந்த்துக்கு உதவித்தொகை இருக்கிறது. அனிதாவும் நன்றாகவே படிக்கிறாள். அவள் கல்லூரி செலவுக்கு ஏற்கனவே அண்ணன் சேமித்து வைத்திருக்கிறார். இப்போதைக்குத் தேவைகள் என்று எதுவும் இல்லை. அப்படி ஏதாவது தேவைப்பட்டால் நிச்சயம் கேட்கிறேன்” என்றாள் சாந்தா. “அருண் சென்னையில் தான் இருக்கிறான். நீங்கள் என்ன தேவை என்றாலும் அவனுக்குக் கூப்பிடுங்கள். பண உதவி அல்லாமல் வேறே ஏதாவது தேவை என்றாலும் தயங்காமல் கேளுங்கள்.” என்றார் சிவநாதன். “நிச்சயமாக !” என்று முடித்தாள் பார்வதி. அவர்கள் பேசியது வெளியே தன் செல்ல நாயுடன் விளையாடிக்கொண்டிருந்த அருணுக்குக் கேட்டது. சாந்தா பேசிய விதம், அவனுக்குப் பெரும் ஆச்சரியத்தை வரவழைத்தது. ‘முன்னாளில் நீங்கள் உதவி செய்யவில்லை’ என்று குறை கூறவில்லை. இப்போது செய்ய வரும் உதவியையும் நாசுக்காக மறுத்துவிட்டார் எத்தனை பேர் இப்படி இருப்பார்கள் ? பல ஆண்டுகளாய் திரும்பிக்கூடப் பார்க்காத குடும்பம். ஒரு குறையும் கூறாமல், கேட்டவுடன் படுக்கையில் இருக்கும் பாட்டியைப் பார்க்க வந்தார். பிள்ளைகளிடமும் எந்த வெறுப்போ வேண்டாமையோ இல்லை. இதையே சிவநாதன் கேட்டார். “உங்களுக்கு எங்கள்மேல் கோபம் இல்லையா?” “இல்லை என்று பொய் சொல்லமாட்டேன். முதலில் கொஞ்ச நாள் இருந்தது. பிறகு அப்படியே குறைத்துவிட்டது. உங்களுக்கே தெரியும். அரவிந்த் எங்களுக்குத் திருமணம் ஆகி சில வருடங்களுக்குப் பிறகு பிறந்தான். நானும் பொறுப்புள்ள மருமகள் என்று குடும்பத்தை எப்போதும் கவனித்ததே இல்லை. சிறு பிள்ளைபோல் தான் சுற்றிக்கொண்டிருப்பேன். அதற்காக எப்போதும் என்னை அத்தையோ மாமாவோ குறை கூறியதே இல்லை. வெகுவாகக் கஷ்டப்பட்டு குடும்பத்தை ஒரு நிலைக்குக் கொண்டு வர மாமா என்ன பாடுபட்டார் என்று தெரியும். பணத்தை இழந்து விட்டேன் என்றதால் தான் வீட்டில் ஒரு சண்டை நடந்தது. தப்பு என்றால் எல்லோர் மேலும் இருக்கிறது. பக்குவம் வரும்போது அடுத்தவர் நிலையிலும் யோசிக்கத் தொடங்க, எதுவும் பெரும் தப்பு இல்லை என்று தோன்றத் தொடங்கியது. ஒரே குறை பிள்ளைகளுக்குத் தந்தை வழி உறவுகள் இருந்தும் யாரையும் தெரியவில்லையே என்று. இப்போது அதுவும் இல்லை.” என்றாள் சாந்தா. வேதவல்லி அத்தை சொன்னது நினைவுக்கு வந்தது. “அம்மா கேட்கிறார் என்று நீங்கள் அழைக்கப் போனாள், இப்போது எதற்காக வந்தீர்கள் ? என்று கேட்பாள்.இல்லை நம் இப்போதைய நிலைமையைப் பார்த்து இங்கேயே இருந்து விட நினைப்பாள்.” சிவநாதன் “அண்ணி இந்த இரண்டில் எதைச் செய்தலும் நியாயமே ! ஒருவேளை அவர்கள் இங்கே இருக்க விரும்பினால், அவர்கள் தாராளமாக இருக்கலாம். அவர்களுக்கு இல்லாத உரிமையா வேதா ?” என்றார். “அவளுக்கு என்ன உரிமை இருக்கிறது ? எல்லாம் நீ சம்பாதித்தது. கணவன் சம்பாதித்ததைத் தொலைத்து, அப்பாவின் பேச்சைக் கேட்காமல் வீட்டை விட்டுப் போனாள். அவளுக்காக நீ ஏன் செய்ய வேண்டும் ?” “வேதா, அவர் நம் அண்ணி ! மரியாதையுடன் பேசு. ஒரு வேளை அவர் இங்கேயே இருந்திருந்தால், நான் எல்லாம் செய்திருப்பேன் இல்லையா ? அதை இனிமேல் செய்வேன்.” “என் கணவரை அவமானப் படுத்தியவள் அவள். அவளுக்கு நான் மரியாதை தரமாட்டேன். அன்று அவள் பேசியது இன்னும் என் நினைவில் இருக்கிறது. என் கணவர்தான் அவள் பணம் தொலையக் காரணம் என்று சொன்னாள். அவள் இருக்கும்போது நான் வரமாட்டேன்.” என்றாள் வேதவல்லி. அவள் சொன்னது போல இந்த இரண்டு நாள் இந்தப் பக்கம் அவள் வரவில்லை. கடைக்குச் சென்றவர்கள் திரும்பி வந்தார்கள். துளசி அம்மாள் சொன்னாள் என்றதற்காக ஒன்று இரண்டு என்று இல்லாமல், அள்ளிக்கொண்டு வந்திருந்தாள் பார்வதி. முதலில் எதற்காக இத்தனை என்று சாந்தா கேட்டாள். “நீ சும்மா இரு ! பிள்ளைகள் வேண்டாம் என்றுதான் சொன்னார்கள். நான்தான் கட்டாயப்படுத்தினேன்” என்று பார்வதி சொல்ல அதற்குமேல் சாந்தா ஒன்றும் சொல்லவில்லை. ஞாயிறு மாலை கிளம்பும் முன் “இன்னும் இரண்டு நாட்கள் இருக்கக் கூடாதா!” என்றார் துளசி. “பிள்ளைகளுக்கு விடுமுறை இல்லை ! அவர்கள் விடுமுறையில் இங்கே அதிக நாள் இருக்கும்படி அழைத்து வருகிறேன் அத்தை” என்றாள் சாந்தா. “நான் இன்னும் எத்தனை நாள் இருப்பேன் என்று தெரியாது. அடுத்த விடுமுறைக்கு நிச்சயம் அவர்களை அழைத்து வா ! எப்போது விடுமுறை ?” என்றார். “அனிதாவுக்கு மார்ச்சில் தேர்வுகள் முடிந்து விடும். அரவிந்த்துக்கு மே மாதம் தான்.” என்றார் சாந்தா. “அப்படியானால் முதலில் அனிதாவை விடுமுறை தொடங்கியதும் அனுப்பி வை” இதுவரை அவள் தனியாக எங்கேயும் இருந்ததில்லை என்றாலும் “சரி அத்தை !” என்று சாந்தா புறப்படத் தயாரானார். “உன் அண்ணனுடன் நான் பேச வேண்டும்” என்றார் துளசி. போன் போட்டுக் கொடுத்தாள் சாந்தா. “ரொம்ப நன்றி செல்வம். என் பேரப்பிள்ளைகளை நன்றாக வளர்த்திருக்கிறாய்”. “அவர்கள் என் தங்கை பிள்ளைகளும் தான் அத்தை. அவர்களை வளர்ப்பது என் கடமை. நீங்கள் நன்றி சொல்லும் அளவுக்கு நான் ஒன்றும் செய்து விடவில்லை.” என்றார் செல்வம். “நாங்கள் செய்யாததை நீ செய்திருக்கிறாய். எங்கள்மேல் உனக்குக் கோபம் இருக்கலாம். எங்களை மன்னித்துவிடு” என்றார் துளசி. தன் அன்னை வயதில் இருப்பவர் மன்னிப்பு கேட்பது, செல்வத்திற்கு ஒரு மாதிரி இருந்தது. “அதெல்லாம் ஒன்றும் இல்லை. நீங்கள் தேவை இல்லாமல் எதையும் யோசிக்காதீர்கள். சீக்கிரம் குணமானதும் நிச்சயம் நீங்கள் இங்கே வர வேண்டும்.” என்றார் செல்வம். “நான் வருவது இருக்கட்டும், அடுத்த முறை நீ உன் மனைவி மகளை அழைத்து வா.” என்றார். வெறும் வார்த்தை என்று இல்லாமல், அருணிடம் அடுத்த முறை எல்லோருக்கும் விடுமுறை இருக்கும்போது அனைவரையும் இங்கே கூட்டி வர வேண்டும் என்றார். இடையில் ஒரு முறை செல்வமும் சாந்தாவுடன் சென்று துளசியம்மாளை பார்த்து வந்தார். அடுத்த முறை குடும்பத்தையும் அழைத்து வரச்சொன்னார். பகுதி - 9 நித்யா மாலை சற்று அதிக நேரம் இருக்க வேண்டியிருந்தது. சிலரைத் தவிர எல்லோரும் சென்றுவிட்டனர். வேலைகளை முடித்துக் கொண்டு வெளியே வர, அந்த வராண்டா காலியாகவே இருந்தது. லிப்ட்டின் அருகே அருண் நின்று இருந்தான். நித்யா அவனைப் பார்த்தபோதும் பார்க்காதவள் போல் நகர, “நித்யா!” என்று அழைத்தான் அருண். கோவமாக அவன் அருகில் வந்து “என்ன ! எதோ ரொம்ப தெரிந்தது போல் பேர் சொல்லிக் கூப்பிடுகிறீர்கள் ! அதுவும் எல்லோர் முன்னும் இப்படி அழைத்து என் பெயரை ஏன் ஊர் முழுக்க பரப்புகிறீர்கள் ?” என்றாள். “ஊர் முழுக்காவ ? இது நீ வேலை செய்யும் நிறுவனம். பலருக்கு உன்னைத் தெரிந்திருக்கும். அப்படியே உன் பேரைச் சொல்வதால் என்ன ஆகிவிடப்போகிறது.” “நீங்கள் இப்படி அழைத்தது எனக்குப் பிடிக்கவில்லை !” “பிறகு எப்படி அழைப்பது ! நித்தி என்றா ?” அவளுக்குக் கோபம் வந்தது. அவளுக்கு மிகவும் நெருங்கியவர்கள் தவிர வேறு யாரும் அப்படி அழைப்பதில்லை “நீங்கள் என்னை ஏன் அழைக்க வேண்டும் ?” “உன்னிடம் பேச வேண்டும்” “ஏன் ? இப்போது உங்களுக்கு ஆர்வம் வந்து விட்டதா ? அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால் நான் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.” என்று நகரத்தொடங்கவும், “இப்படிச் சொன்னால், அன்று நான் சொன்னது உண்மை என்றாகிவிடும்.” என்றான் அருண். அவன் சிரிப்பைப் பார்த்தவளுக்குக் கோபம் இன்னும் அதிகமானது. “உன்னிடம் அன்று நடந்ததைத் தெளிவு படுத்த வந்தேன். அப்போது ஒருவரை ஒருவர் தெரியாது. இப்போது அப்படி இல்லை. நம்முள் மனக்கசப்பு எதுவும் வேண்டாம் என்று நினைக்கிறேன்.” “வேறொருவராக இருந்தால் அவமானப் படுத்தலாமா ?” “அவமானப்படுத்தினேனா ! நான் ஒன்றும் அப்படிப் பேசி விடவில்லையே ?” “அன்று நீங்கள் பேசியதின் பொருள் என்னவோ ?” “பிடித்த ஒருவருடன் பேச முயல்வது தவறு என்று நான் எண்ணவில்லை. நீ என்னிடம் பேச முயல்கிறாய் என்று நினைத்தேன். அதனால் எனக்கு ஆர்வம் இல்லையென்றேன். மற்றபடி நான் எதுவும் உன்னை அவமானப்படுத்த வில்லை நித்யா !” நித்யாவிற்கு அவன் விளக்கம் கேட்க விருப்பமில்லை. இன்னும் பேசிக்கொண்டு நிற்கவும் பிரியமில்லை. “அப்படியா ? சரி நான் கிளம்புகிறேன். எனக்கு நேரம் ஆகிறது.” “நான் வேண்டுமானால் உன்னை வீட்டில் விடுகிறேன்” என்றான். “தேவையில்லை !” என்றுவிட்டு லிப்ட் பொத்தானை அழுத்தினாள். இருவரும் ஒன்றாகவே லிப்ட்டில் வந்தாலும் அதன்பின் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அதன்பின் அடிக்கடி அவனைச் சந்திக்க நேர்ந்தது. முக்கியமாக அவன் ஊருக்குச் சென்று வரும் போதெல்லாம் அவர்கள் தோட்டத்தில் விளைந்தது, எஸ்டேட்டிலிருந்து வந்தது என்று ஏதாவது ஒரு பெட்டியைக் கொண்டு வருவான். பழங்கள், காய்கறிகள் என்று ஏதாவது வரும். “எதற்கு நீங்கள் சிரமப்பட வேண்டும்.” என்று ஒருமுறை செல்வம் சொன்னார். “சிரமம் ஒன்றும் இல்லை மாமா ! நானா சுமந்து வருகிறேன் ? இன்னொன்று, என்னை நீங்கள் என்றெல்லாம் சொல்லாதீர்கள். நானும் அரவிந்த் போலத் தான் மாமா.” என்றான். அவ்வப்போது எல்லோருடனும் சேர்ந்து உணவருந்துவான். ஒருமுறை அவன் அலுவலகத்திற்கு எல்லாரையும் அழைத்துச் சென்றான். முதல் முறை செல்வத்தைத் தான் அழைத்தான். ஒரு ஞாயிறு அன்று வந்தான். இம்முறை கொண்டு வந்தது சேலத்து மாம்பழங்கள். நண்பன் சிபி கொடுத்ததாகவும், அவன் எல்லாவற்றையும் சாப்பிட முடியாது என்று ஒரு பெட்டி நிறைய மாம்பழங்களைக் கொண்டு வந்தான். அப்போதுதான் முதல் முறை செல்வம் அருணின் தொழில் குறித்துக் கேட்டார் “இன்டீரியர் டிசைனிங் மாமா. பெரிய அலுவலகங்கள், கடைகள் போன்ற இடங்களுக்கு டிசைன் செய்து தருகிறோம்.” ” சென்னையில் மட்டும் தானா ? வேறு ஊர்களில் கிளைகள் இருக்கின்றதா ?” “இல்லை மாமா ! இப்போது தான் தொடங்கினோம். நண்பன் ஒருவன் வீடுகளுக்கு மட்டும் செய்து தந்துகொண்டிருந்தான். இப்போதுதான் முதல் அலுவலகம் செய்துகொண்டிருக்கிறோம். இன்னும் ஒரு வாரத்தில் வேலை முடிந்துவிடும். அடுத்து மால் ஒன்றின் கடை.” என்று சொல்லிக்கொண்டு இருந்தவன், “இன்று உங்களுக்கு வேறு ஏதும் வேலை இல்லை என்றால், வாருங்கள் சென்று வருவோம்.” என்று அனைவரையும் அழைத்தான். “இல்லை அருண் ! அதெல்லாம் வேண்டாம்.” “இல்லை மாமா ! வீட்டுப் பெரியவர்கள் யாரும் இதுவரை வந்து என் வேலையைப் பார்க்கவில்லை. அம்மா அப்பா இங்கே வந்து பார்க்கவில்லை. நீங்கள் வந்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.” என்றான். செல்வத்திற்கு எப்போதும் இதுபோல் மற்ற தொழில்களைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும். “சரி வாருங்கள் எல்லோரும் போய் வரலாம்” என்றார் செல்வம். முதலில் மறுத்தது நித்யா தான். “நீங்கள் சென்று வாருங்கள். எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது” “என்ன அக்கா வேலை ? நான் வேண்டுமானால் வந்து உதவி செய்கிறேன்.” என்றாள் அனிதா. அதற்குள் செல்வம் “காலையிலிருந்து வீட்டுக்குள்ளேயே தானே இருக்கிறாய், வா சென்று வரலாம்” என்றார் செல்வம். “எல்லோரும் செல்வதனால் டாக்ஸி சொல்ல வேண்டும் அப்பா. நான் இருக்கிறேன்.” என்றாள் நித்யா. “டாக்ஸி எல்லாம் வேண்டாம். என் காரில் எல்லோரும் வரட்டும். நீயும் அரவிந்தும் பைக்கில் வந்து விடுங்கள்”என்றார் செல்வம். “அதுதானே ! வாருங்கள் கிளம்பலாம்.” எல்லோரும் எதுவும் சொல்லாமல் தயாராக ஒரு முக்கியமான காரணம், அருணின் நெருக்கம். அடிக்கடி வீட்டுக்கு வருபவன், சாந்தா, அரவிந்த் அனிதா மட்டுமில்லாமல், செல்வம் சுமதியிடமும் இயல்பாகப் பழகினான். செல்வத்திடம் அவர் வேலையைப் பற்றியோ, அரசியல் பற்றியோ பேசுவான். சுமதியிடம் இயல்பாக, “எனக்கு ஒரு கப் காபி கிடைக்குமா அத்தை? என்று சமையலறை வரை செல்வான். அருணை எல்லோருக்கும் பிடித்திருந்தது. நித்யாவை தவிர. அருண் வடிவமைக்கும் இடம், அவனுடைய அலுவலகம் மற்றும் அவன் தங்கியிருக்கும் வீடு எல்லாவற்றையும் காட்டிவிட்டு, இரவு உணவுக்கும் ஒரு உணவகத்திற்கு அழைத்துச் சென்றான். எல்லோரிடமும் இயல்பாகப் பழகினான் என்றாலும் நித்யா மட்டும் விலகித்தான் நின்றாள். முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்லவில்லை என்றாலும் அவன் வரும் நேரம் கடைக்குள் புகுந்து கொள்வாள். அவள் எங்கே இருந்தாலும் அவளுடன் இரண்டு வார்த்தையேனும் பேசிவிட்டுச் செல்வான். இன்று வந்தவன், இரவு உணவுக்கு அங்கேயே இருக்கும்படி சொல்லவும், சரியென்று அங்கேயே இருந்தான். வழக்கம்போல் நித்யா கடைக்குள் சென்று அவள் வழக்கமாகச் செய்யும் வேலைகளைச் செய்துகொண்டிருந்தாள். வெட்டி எறிந்த துணிகளைச் சுத்தம் செய்வது, தையல் இயந்திரத்தைச் சுத்தம் செய்வது, அவசரத்தில் எழுதப்படும் அளவுகளை, திருத்தமாக எழுதி வைப்பது, தைக்கத் தேவையான பொருட்கள், ஊசி, நூல், பொத்தான்கள் மற்றும் அலங்கார நாடாக்கள் போன்ற பொருட்கள் ஸ்டாக் சரிபார்ப்பது என்று ஏதாவது செய்வாள். அன்னையும் அத்தையும் இரவு உணவு செய்யச் சென்றதால், கடையிலிருந்த வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஏற்கனவே கொடுத்த ஆடைகளை வாங்க வந்தவர்களுக்கு எடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்தாள். “நித்யா, அடுத்த வாரம் ஒரு கல்யாணம் வருகிறது. ஒரே ஒரு பிளவுஸ் தைத்துத் தர முடியுமா ?” என்று அந்தப் பெண்மணி கேட்டுக்கொண்டிருக்க “ஒன்று மட்டும் என்றாள், செய்துவிடலாம்” என்று சொல்லிக்கொண்டிருக்க “இது யார் ? புதிதாக !” என்ற அந்தப் பெண்மணி நித்யா பின்னால் பார்த்தபடி. திரும்பியவள் அருண் நிற்பதைக் கண்டாள். இவன் எங்கே இங்கே வந்தான் ? “இது அரவிந்த், அனிதாவின் அண்ணன் அருண். சாந்தாவின் மைத்துனர் மகன்” என்றார் பின்னோடு வந்த தந்தை. அந்தப் பெண்மணி சென்றவுடன், “கடையின் அமைப்பு நன்றாக இருக்கிறது” என்றான் அருண். ” தையல் கடை என்றால் எல்லாம் களைந்து, கடையில் இருப்பவர் தவிர வேறு யாரும் எதையும் கண்டுபிடிக்க முடியாத படி இருக்கும். இங்கே எல்லாம் தெளிவாக இருக்கிறது. “எல்லாம் நித்யாவின் ஏற்பாடு ! சாந்தாவும் சுமதியும் தவிர மூவர் வேலை செய்யும்போது, அவர்களுக்கும் தெரியும் படி எல்லாம் இருக்க வேண்டும் என்று எல்லாவற்றையும் அமைத்தது நித்யா தான்.” என்றார் செல்வம். “மணி எட்டாகிறது ! கடையை மூடலாம் ! யாரேனும் வருவதாகச் சொன்னார்களா?” என்று செல்வம் கேட்க,“இல்லை அப்பா ! மூடிவிடலாம்” என்றாள் நித்யா. “நீங்கள் செல்லுங்கள், நான் எல்லாம் அடைத்து விட்டு வருகிறேன்.” என்றார் செல்வம். எப்போதும் அது செல்வத்தின் வேலை. கதவு ஜன்னல்கள் எல்லாம் அடைத்து, மின் சாதனைகளை எல்லாம் அனைத்து பூட்டிவிட்டு வருவார். அருணும் தந்தையுடன் வரக்கூடும் என்றெண்ணி அவள் செல்ல, அவன் பின்தொடர, லேசாகத் திரும்பிப் பார்த்தாள். “எத்தனை நாள் இப்படி ஓடுவாய் ?” என்றான் அருண். “நான் ஒன்றும் ஓடவில்லை. மெதுவாகத்தான் நடக்கிறேன்.” “நான் வந்தால், ஏதோ ஒரு இடத்தில் சென்று ஒளிந்துகொள்கிறாய்.” “நான் எங்கேயும் ஒளியவுமில்லை. வீட்டிற்குள் தானே இருக்கிறேன்.” “நான் உன்மேல் தெரியாமல் சொன்னதை, இப்போது நீ என்னைச் செய்ய வைக்கிறாய்.” என்று அருண் சொல்ல, அவள் புரியாமல் திரும்பிப் பார்க்க, “உன்னிடம் பேச முயற்சி செய்கிறேன். நீ தவிர்த்துச் செல்கிறாய்.” அதற்குள் வீட்டினுள் வந்துவிட்டார்கள். “நான் ஒன்றும் உங்களைப் பேசச் சொல்லவில்லை ! நீங்களும் என்னைத் தவிர்த்துப் பேசாமல் இருக்கலாம். யாரும் உங்களைப் பேசு என்று வற்புறுத்தமாட்டார்கள்.” அப்போது அரவிந்தின் சிரிப்புச் சத்தம் அவர்கள் இருவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. “என்ன சிரிப்பு!” “அண்ணன் சொன்னதை இன்னும் எத்தனை நாள் பிடித்துக்கொண்டிருப்பாய்.” என்றான் அரவிந்த். “நான் எதையும் பிடித்துக் கொண்டு இல்லை. உடனே உன் அண்ணனுக்குத் துணைக்கு வந்துவிடுவாயே !” “அப்படியானால், இயல்பாக என்னிடம் பேசு” இது அருண். “அந்நியர்களிடம், இதுதான் என் இயல்பு.” “அந்நியனான ! நானா ! நம் சொந்தம் தெரியும் முன்னரே நீதான் முதலில் என்னுடன் பேசினாய்.” அவள் முறைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் “மீண்டும் ஓடுகிறாய்”அன்று அருண் சொன்னதும், திரும்பி வந்து, “என்ன செய்வது ! இயல்பாகப் பேசினால், பின்னாடி அலைவதாக நினைக்கிறார்கள். அப்படி நினைப்பவர்களிடமிருந்து விலகி இருப்பதே நல்லது.” அருண், அரவிந்த், நித்யா மூவரும் பேசுவதைப் பார்த்துவிட்டு, “இங்கேயே ஏன் நிற்கிறீர்கள் ? வாருங்கள்.” என்று அருணை அழைத்தார். இரவு உணவை முடித்துக் கொண்டு கிளம்பினான் அருண். அவன் சென்றதும், அரவிந்த் நித்யாவை கேட்டான், “ஏய்! உனக்கே கொஞ்சம் ஓவராக இல்லை. அண்ணன் இறங்கி வந்து பேசுகிறார். நீ கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் பேசுகிறாயே !”. “உன் அண்ணனுக்கு அப்படி என்ன நான் மரியாதை தரவில்லை? அவர் வந்து வம்பிழுத்தார். அதுதான் திரும்பக் கொடுத்தேன் !” “நித்தி ! அண்ணன் ஒன்றும் வம்பிழுக்க வில்லை. உன்னிடம் அவர் சாதாரணமாகத் தானே பேசினார்.” “உன் அண்ணன் ஒன்றும் இறங்கி வந்து என்னிடம் பேச வேண்டாம். என்னிடம் பேசாமல் இருந்தால் ரொம்ப சந்தோஷம்.” “நீ இன்று பேசியது, அவரை உன்னைப் பற்றித் தவறாக நினைக்கக்கூடும்.” “அவர் என்ன நினைத்தால் எனக்கு என்ன ? நானும் பார்க்கிறேன், நீ உன் அண்ணனுக்கே வக்காலத்து வாங்குகிறாய். ரத்த பாசமோ ?” என்று முறைத்தாள் நித்யா. “நான் உன்னை யாரும் தப்பாக நினைக்கக் கூடாது என்று நினைக்கிறேன்.” “எனக்கு அப்படித் தோன்றவில்லை.” இப்போது அரவிந்த்துக்குக் கோபம் வந்தது. அவளை முறைத்துவிட்டு அவன் அறைக்குச் சென்றான். இரண்டு மூன்று நாட்கள் இருவரும் சரியாகப் பேசிக்கொள்ளவில்லை. துளசியம்மாள் அடிக்கடி சென்னையில் இருப்பவர்களிடம் தொலைப்பேசியில் பேசினார். பேசும்போதெல்லாம் மதுரைக்கு வரும்படி அழைப்பார். விரைவில் சித்திரை திருநாள் விழாவிற்கு எல்லோரும் வர வேண்டும் என்றவள், இடையில் ஒரு முறை சாந்தாவை வந்து பார்க்கும்படி சொன்னார். அனிதாவின் தேர்வுக்கு நாட்கள் நெருங்க, வீட்டில் எந்நேரமும் அமைதியாகவே இருந்தது. அவள் தனியே படிக்கும் நேரம் இல்லாமல், மற்ற நேரம் அவளுக்குப் பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தாள் நித்யா. அனிதாவைத் தேர்வு முடிந்ததும் மதுரைக்கு அனுப்பும் படி அருணின் அன்னை பார்வதியும் கேட்டாள். அனிதா தனியே அனுப்ப சாந்தாவுக்கு மனமில்லை. அரவிந்த்துக்கும் விடுமுறை இல்லை.ஆனால் பார்வதியும் துளசிம்மாளும் வற்புறுத்த, நித்யாவை உடன் செல்லும்படியும் இரண்டு மூன்று நாட்கள் அவளுடன் இருந்துவிட்டு வரவும் சொன்னார்கள். “மதுரைக்கு அனிதாவைத் தனியே அனுப்ப முடியாது. நானும் இப்போதுதான் சென்று வந்தேன். கடையில் வேறு வேலை இருக்கிறது. அரவிந்தும் நிறையப் படிக்க வேண்டும். என்ன செய்வது ?” என்றாள் சாந்தா. “கடையில் கொஞ்சம் வேலையை ஒதுக்கி வையுங்கள். சுமதி சமாளிக்கும் அளவுக்கு மட்டும் ஆர்டர் எடுங்கள். இன்னும் பரீட்சை முடிய நாள் இருக்கிறதல்லவா?” என்றார் செல்வம். “ஏற்கனவே இருக்கும் ஆர்டர்களை முடிக்கவே நேரம் ஆகும்.” என்றாள் சாந்தா. “நான் பார்த்துக் கொள்கிறேன் ! நீ சென்று வா சாந்தா.” என்று சுமதி சொல்ல. “அண்ணி, இருக்கும் வேலையை உங்கள் ஒருவரால் முடியாது. முருகனும் இடையில் விடுமுறை வேண்டும் என்று கேட்கிறான். நான் ஒரு நாள் இரவின் சென்று அப்படியே திரும்பலாம் என்றால், அத்தை விடமாட்டார்கள்.” “ஒன்று செய்யலாம் ! அனிதாவுக்குத் துணையாக நித்யாவை அனுப்பலாம். அவளை அங்கேயே விட்டுவிட்டுத் திரும்பி வந்து விடட்டும்.”சொன்னது சுமதி. “எனக்கு அங்கே யாரையும் தெரியாது ! அவர்கள் வீட்டிற்கு நான் எப்படிச் செல்வது.” என்றாள் நித்யா. “நீ ஒன்றும் அங்கே தங்க வேண்டாம். இரவு ரயிலில் அங்கே சென்று அனிதாவை விட்டுவிட்டு, காலையில் பஸ்ஸில் வந்துவிடு.” என்றாள் சாந்தா. “எப்படி அத்தை ?” என்று தயங்கினாள் நித்யா. “அருணிடம் கேட்டால் நிச்சயம் செய்வான். ஆனால் நமக்காக அவனைத் தொல்லை செய்ய வேண்டாம்.” என்றாள் சாந்தா. “ஆம் நித்தி ! ஒவ்வொரு முறையும் அருண் தான் பயண ஏற்பாடுகளைச் செய்கிறான். அவன் செய்கிறான் என்று எப்போதும் அவனிடம் கேட்க முடியாது அல்லவா ?” என்றார் செல்வம். நித்யாவும் வேறு வழி இல்லாமல் சம்மதித்தாள். பயண ஏற்பாடுகளைச் செய்தார் செல்வம். முன்பு பேசியதுபோல், வெள்ளி அன்று மதியம் கிளம்பி, சனி அன்று நித்யா மட்டும் திரும்பி வருவதாக ஏற்பாடு செய்தார்கள். இரவு நித்யாவும் அனிதாவும் மதுரையில் இறங்க, சிவநாதன் அவர்களை அழைத்துச் செல்ல வந்திருந்தார். பார்வதியையும், சத்யனையும் நித்யாவுக்கு அறிமுகம் செய்துவைத்தார் சிவநாதன். சத்யன் “நீங்கள் தான் நித்யாவா ? சென்ற முறை உங்களைப் பற்றித்தான் அனிதா பேசிக்கொண்டிருந்தாள்.” என்றான். லேசாகச் சிரித்து விட்டு “நீங்கள் என்ன படிக்கிறீர்கள்?” என்றாள் நித்யா. “பார்த்தீர்களா ! என்னைப் பற்றி யாரும் ஒன்றும் உங்களிடம் சொல்லவில்லை. ஏய் அனிதா! நீயாவது நித்யா அக்காவுக்குச் சொல்லிருக்க வேண்டுமல்லவா ?” என்றான் சத்யன். “நீங்கள் கல்லூரியில் படிக்கிறீர்கள் என்று தெரியும். முதல் முறை பார்க்கும்போது இதுபோல் தானே பேச முடியும்”. என்றாள் நித்யா. “அப்பாடா ! வேறு ஒன்றும் இல்லை அக்கா ! இங்கே என்னைப் பற்றி யாரும் பொருட்படுத்துவதே இல்லை. எல்லாம் அருண் தான். அருண் என்ன செய்தேன், அருண் எங்கே இருக்கிறான், அருண் இப்படி, அருண் அப்படி என்று இங்கே எப்போது அருண் புராணம் தான் பாடுவார்கள். என்னை எப்போதும் மறந்து விடுவார்கள். அதனால் தான் உங்களிடம் யாரும் என்னைப் பற்றிச் சொல்லவில்லையே என்று நினைத்தேன்.” “பாரம்மா இவன் பேசுவதை ! இவன் எந்நேரமும் இங்கே தான் இருக்கிறான். அருண் தான் வெளியூரில் இருக்கிறான். அவனைப் பற்றிக் கவலை தாய்க்கு இருக்குமல்லவா. ஆனால் இவன்மேல் அக்கறை இல்லை என்பது போல் பேசுகிறான்.” என்றாள் பார்வதி. “அது பிள்ளைகளுக்கு இருக்கும் ஈகோ ஆண்டி. என்னைத் தவிர மற்றவருக்குத் தான் முக்கியத்துவம் தருகிறார்கள் என்று நினைக்கத் தோன்றும்.” என்று சத்யனுக்கு சாதகமாக நித்யா பேச, “ஆண்டி எல்லாம் வேண்டாம் அத்தை என்று சொல்” என்றாள் பார்வதி. “உங்களுக்கு இதுபோல் அனுபவம் உண்டு என்று நினைக்கிறேன்” என்றான் சத்யன். “நிறைய ! அதுவும் வீட்டில் பெரிய பிள்ளையாக இருந்தால், இன்னும் அதிகம் கட்டுப்பாடுகள் இருக்கும். நமக்கு மட்டும் ஏன் ? என்று தோன்றும்” “போச்சுடா ! நீங்களாவது எனக்குச் சப்போர்ட் செய்வீர்கள் என்று நினைத்தேன். ஆனால் நீங்களும் அருண் அண்ணாவுக்குச் சாதகமாகப் பேசுகிறீர்கள்.” ஒரு கணம் நித்யா யோசித்தாள். நான் எப்போது அருணுக்குச் சாதகமாகப் பேசினேன். இவள் தன்னை பற்றித் தானே கூறினாள். “விடாமல் இரவு முழுவதும் நீ பட்டிமன்றம் வைப்பாய். அவர்கள் முதலில் உணவருந்திவிட்டு ஓய்வெடுக்கட்டும்” என்றார் சிவநாதன். மறுநாள் காலை நித்யா கிளம்ப வேண்டும் என்றால் யாரும் அங்கே ஒப்பவில்லை. டிக்கெட் கிடைக்காது என்று நித்யா காரணம் சொன்னால். “அதெல்லாம், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.” என்றார் பார்வதி. நித்யா என்ன சொன்னாலும் அங்கே யாரும் கேட்கவில்லை. இவர்கள் சென்ற நேரம் துளசி அம்மாள் தூங்கிவிட்டார். மறுநாள் காலையில் எழுந்தபோது, அவர் இவர்களுக்காகக் காத்திருந்தார். முன்பு போல் இல்லாமல் வீட்டுக்குள் ஒருவர் துணையுடன் நடக்கத் தொடங்கியிருந்தார். நித்யா அனிதா இருவரையும் பார்த்ததும், “நீங்கள் வருமுன் நான் தூங்கி விட்டேன் அம்மா !” என்றார் வருத்தமாக. “பரவாயில்லை பாட்டி ! விடுமுறையில் நான் இங்கே தானே இருப்பேன். நாம் தினமும் கதை பேசலாம்.” என்றாள் அனிதா. “இதுதான் செல்வத்தின் மகளா ?” என்றார் நித்யாவை பார்த்து. “ஆமாம் ! இது நித்யா அக்கா” என்றாள் அனிதா. “உனக்கும் விடுமுறையா நித்யா ?” என்றார் துளசியம்மாள். “பாட்டி ! அக்கா வேலைக்குப் போகிறாள். என்னை இங்கே விட வந்தாள்.” என்றாள் அனிதா. “அட ! சென்ற முறை உன் அப்பா வந்தபோதே சொன்னார். நான் தான் மறந்துவிட்டேன். சரி வாங்கச் சாப்பிடலாம்.” என்று எல்லோரும் சிற்றுண்டி அருந்தும்போது கார் ஒன்று வந்து நின்றது. வந்தது வேதவல்லியும் கீர்த்தியும். வந்தவர்கள் நித்யா அனிதாவைப் பொருட்படுத்தவே இல்லை. பார்வதி நித்யா அனிதாவை இருவரையும் அருகிலேயே வைத்துக் கொண்டார். பார்வதி இருவருக்கும் பூக்களைத் தொடுத்துச் சூட்டிவிட்டார். பார்த்துக்கொண்டிருந்த துளசியம்மாள், “பார்வதிக்குப் பெண் பிள்ளைகள் என்றால் விருப்பம். இரண்டும் ஆணாகிவிட்டது.” என்றார். உடனே வேதவல்லி, “அதற்குத்தான் கீர்த்தி அடிக்கடி இங்கே வந்து விடுகிறாள்.” என்றாள். சத்யன் அங்கே தான் இருந்தான். “கீர்த்தி வருவதுண்டு. ஆனால் அவள் எப்போது அம்மாவுக்காக வந்தாள் ? ஒன்று என்னுடன் அரட்டை அடிப்பாள். இல்லை தொலைக்காட்சியில் படம் பார்ப்பாள்.” இப்போது வேதவல்லிக்குக் கோபம் வந்தது. புதிதாக வந்தவர்கள் முன் ஏன் தன் மகளைக் குறைத்துப் பேச வேண்டும்? “முன்பென்றால், உன் அம்மா எப்போதும் பாட்டியுடன் தான் இருப்பாள். அவள் இங்கே வந்து என்ன செய்வாள் பாவம்” என்று மகளுக்காகப் பேசினாள். நித்யாவும் அனிதாவும் எதையும் கண்டுகொள்ளவில்லை. அப்போது பார்வதி, “சரி ! நீங்கள் இங்கே இருக்கிறீர்கள் தானே. நான் சென்று நித்யா, அனிதாவுக்குக் கொஞ்சம் ஆடைகள் எடுத்து வருகிறேன். சென்ற முறை கூட அவசரமாக எதையும் சரியாகப் பார்க்காமல் எடுத்து வந்தோம்.” என்றாள் பார்வதி, வேதவல்லியைப் பார்த்து. “எனக்கு வேலை இருக்கிறது ! நான் செல்ல வேண்டும்” என்றாள் வேதவல்லி. “எங்களுக்கு எதுவும் வேண்டாம் அத்தை. அதுவும் இல்லாமல் அனிதா இங்கே தானே இருக்கப் போகிறாள். இன்னொரு நாள் கூட நீங்கள் பொறுமையாகச் செல்லலாம்.” என்றாள் நித்யா. பார்வதி பெரும்பாலும் வீட்டிலேயேதான் இருப்பாள். துளசியம்மாள் உடன் எப்போதும் ஆள் வேண்டும் என்பதோடு, வெளியே செல்வதானால் தனியே செல்ல வேண்டும். கணவரும் பிள்ளைகளும் அவளுடன் வருவது வெகு அபூர்வம். யாரேனும் துணைக்கு கிடைக்கமாட்டார்களா? என்று பார்வதி பார்த்துக்கொண்டிருந்தாள். தனக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் ஆடைகளைத் தேர்வு செய்வது பார்வதிக்கு ரொம்ப பிடிக்கும். சென்ற முறை அனிதாவுக்கும் அரவிந்துக்கும் வாங்கி இருந்தாலும், மற்றவர்களுக்கு வாங்கவில்லை. இப்போது அதைச் செய்ய நினைத்தாள். பார்வதி பேசும்முன், “நாங்கள் கிளம்புகிறோம்” என்று புறப்பட்டாள் வேதவல்லி மகளையும் அழைத்துக்கொண்டு. பார்வதிக்கு முகம் வாடியது. அதைப் பார்த்த துளசியம்மாள், “நீ அவர்களை அழைத்துப் போ ! இங்கே தான் நர்ஸ் இருக்கிறாளே” என்று சொன்னார். சத்யனும் சொன்னான், “அம்மா ! நீங்கள் செல்லுங்கள். நான் இருக்கிறேன். ஆனால் இன்று விடுமுறை நாள். கூட்ட நெரிசல் இருக்கும். பார்த்துக் கொள்ளுங்கள்.” “சரி விடு ! இன்னும் ஒரு மாதத்தில் சித்திரை திருநாள் வருகிறதல்லவா ! அப்போது எல்லோருக்கும் எடுத்துவிடலாம்.” என்றார் துளசியம்மாள். பகுதி - 10 நித்யா ஞாயிறு இரவு ரயிலில் தான் சென்னை புறப்பட்டாள். அவள் காலையில் சென்னை ரயில் நிலையத்தில் இறங்கி வீட்டிற்கு செல்லத் தந்தை அல்லது அரவிந்தை அழைக்கலாமா ? என்று யோசித்துக்கொண்டிருந்தாள். சென்னை எழும்பூரை அடைய இன்னும் ஒரு முப்பது நிமிடம் ஆகலாம். வீட்டில் அனைவரும் காலையில் அவசரமாகக் கிளம்பி வேண்டும். இவளை அழைக்க வந்தால், அவர்கள் வேலைக்குச் செல்லத் தாமதம் ஆகும். இன்று ரயில் வேறு தாமதமாகச் சென்றடையும். தந்தைக்கு அழைத்துத் தானே வீட்டிற்கு வருவதாகச் சொல்லலாம் என்று எண்ணும்போது, அவள் செல் ஒலித்தது. புது எண். யாராக இருக்கும் என்று யோசித்துக்கொண்டு எடுத்தாள். “ஹலோ, நித்யா ! நான் ரயில் நிலையத்தில் தான் இருக்கிறேன். இறங்கியதும் கூப்பிடு !” என்றது ஒரு ஆண் குரல். அருண் தான் அழைத்திருந்தான். “உங்களுக்கு எதற்குச் சிரமம். நான் பார்த்துக்கொள்கிறேன் ! ட்ரெயின் வர இன்னும் அரைமணி நேரம் ஆகும்.” “பரவாயில்லை ! நான் காத்திருக்கிறேன்” அதற்குமேல் நித்யா பேச இடம் கொடுக்காமல் இணைப்பைத் துண்டித்தான். இவன் எதற்கு வந்தான்? இவனுக்கு எப்படித் தெரியும்? மதுரையில் கிளம்பும் முன்பு தந்தைக்குப் பேசி, அழைத்துச் செல்ல வரும்படி கூறியிருந்தாள். தந்தை ஏன் வரவில்லை ? ரயிலிலிருந்து இறங்கியதும், நித்யா கண்ணில் பட்டது அருண் தான். அவள் பையை வாங்க அவன் கையை நீட்டியதும்,“நானே எடுத்துக் கொள்வேன் !” என்றாள். அதற்குமேல் அவன் ஒன்றும் பேசவில்லை. இருவரும் காரில் அமர்ந்தும், “எங்கள் ஊர் எப்படி இருந்தது ?” என்றான். “தெரியவில்லை !” என்றாள். அவன் சாலையிலிருந்து திரும்பி அவள் புறம் பார்த்து, “ஏன் ?” என்றான். “நான் உங்கள் ஊரைப் பார்க்கவில்லை !” என்றாள். அவள் இரவில்தான் மதுரையில் இறங்கினாள். அங்கிருந்து இரண்டு நாட்களும் அவள் வெளியே எங்கும் செல்லவில்லை. அவனுக்கும் அது தெரியும். அவனுக்குச் சிரிப்பு வந்தது. “அடுத்த முறை பார்க்கலாம்” என்றான். “அடுத்த முறை நான் எதற்கு உங்கள் ஊருக்கு வரப்போகிறேன் ?” “சித்திரை விழாவிற்கு” “நான் வரமாட்டேன்” “ஏற்கனவே டிக்கெட் எல்லாம் எடுத்தாயிற்று !” நித்யா ஆச்சரியமாகப் பார்த்தாள். “பாட்டி சொல்லிக் கொண்டே இருந்தார். நேற்று தான் உன் அப்பாவிடம் பேசி எல்லோரும் மதுரை செல்ல டிக்கெட் புக் செய்தோம்.” என்றான். “அரவிந்துக்கு லீவு இல்லை” என்றாள். “அதனால் நானும் அரவிந்தும் காரில் திருவிழா முன்தினம் வருவோம். நீங்கள் எல்லோரும் இரண்டு நாட்களுக்கு முன்னரே சென்று விடுவீர்கள்.” என்றான். “எனக்கு விடுமுறை கிடைக்காது.” என்றாள் நித்யா. மீண்டும் சிரித்தான். அதற்குள் வீடு வந்துவிட்டது. இறங்கியவள் அவனை வீட்டிற்குள் அழைக்காமல், நன்றி சொல்லாமல் உள்ளே சென்றுவிட்டாள். இவளைப் பார்த்ததும் செல்வம், “அருண் எங்கே !” என்றார். இவள் விழிப்பதைப் பார்த்துவிட்டு, “கிளம்பிவிட்டாரா!” என்று கேட்க, அருண் உள்ளே வந்தான். “இல்லை மாமா ! இன்று டிபன் இங்கே தான்.” என்றான். “வா வா ! அப்படியே சென்று விட்டாயோ என்று நினைத்தேன்.” என்றார். நித்யா சென்று வேகமாகக் குளித்து உடை மாற்றி வரும்போது, எல்லோரும் உணவருந்திக் கொண்டிருந்தார்கள். “அம்மா ! லேட் ஆச்சு ! பஸ் சென்றுவிடும் ! நான் ஆபீஸில் சாப்பிட்டுக் கொள்கிறேன் !” என்றாள் நித்யா. அரவிந்தும் கிளம்ப, “இரு, என்னை பஸ் ஸ்டாப்பில் இறக்கி விடு” என்றாள். “நான் உன்னைக் கொண்டு விடுகிறேன். நீ முதலில் சாப்பிடு” என்றான் அருண். “ட்ரைனில் வந்திருக்கிறாய். இரவும் சரியாகச் சாப்பிட்டு இருக்க மாட்டாய். முதலில் உட்கார்” என்று அவளை அமரவைத்து தட்டில் பரிமாறினாள் சாந்தா. “அப்போது நான் புறப்படுகிறேன். பை” என்று அருண் நித்யா இருவரையும் ஒரு முறை பார்த்துவிட்டுச் சென்றான் அரவிந்த். “நீங்கள் எதற்கு வீணாக அலைகிறீர்கள். நான் பார்த்துக்கொள்கிறேன். இல்லை அப்பாவுடன் போய்க் கொள்வேன்” என்றாள் நித்யா. “எனக்கொன்றும் ஆபீஸ் டைமிங் எல்லாம் இல்லை. கொஞ்சம் தாமதமாகச் சென்றால் யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள்.” “தொழிலில் நல்ல ஈடுபாடு” என்றாள் நித்யா நக்கலாக. “உனக்கு உதவி செய்ய வந்தால் அவரையே நீ கேலி செய்கிறாய் !” என்று கண்டித்தாள் சுமதி. வேகமாக உண்டு முடித்துத் தன் பையை எடுக்கும்போது, அதுவரை பேசாமல் இருந்த செல்வம், “நீ கிளம்பு அருண். நான் இவளை ஆபீஸில் விட்டுவிட்டு வேலைக்குச் செல்கிறேன். உன் வேலையும் இப்போது அருகில் உள்ள மாலில். இவள் ஆபீஸ் வேறு வழியில் அல்லவா இருக்கிறது. உனக்கு எதற்கு வீண் அலைச்சல்.” என்றார். அவன் நித்யாவின் அலுவலகத்தின் மேல் தளத்தின் வேலையை முடித்திருந்தான். இப்போது அங்கே செல்ல அவனுக்கு அவசியம் இல்லை என்று செல்வத்திற்குத் தெரியும். “அதெல்லாம் ஒன்றும் இல்லை மாமா ! இன்று எனக்கு அந்தப் பக்கம் கொஞ்சம் வேலை இருக்கிறது. அது மட்டும் இல்லை. நித்யாவை பிடித்து வைத்துக் கொண்டு என் அம்மா தான், இவள் பிரயாணத்தை மாற்றினார். அதனால் தானே இந்தத் தாமதம் எல்லாம். உங்களுக்கும் அவள் அலுவலகம்வரை சென்று வருவது, உங்கள் வேலைக்கு மிகவும் தாமதம் ஆகும்” என்றான். சாந்தாவின் உறவைப் பெரிதாக நினைத்து வரும் அருணிடம், அளவுக்கு அதிகமாக உதவியை எதிர்பார்க்கக் கூடாது என்று செல்வம் நினைத்தார். சுமதிக்கு அதே எண்ணம் தான். “நித்யா நீ வேண்டுமானால், ஸ்கூட்டியை எடுத்துக்கொள். அப்பா ஆட்டோவில் செல்லட்டும்” என்று சுமதி சொல்ல, “அடடா, என்னை இவ்வளவு அந்நியமாக நினைப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை அத்தை. என்னிடம் ஏன் இவ்வளவு தயக்கம்” என்றான் அருண். “அதுதானே ! அனிதாவுக்கு என்றால் அருணிடம் தயக்கம் இல்லாமல் கேட்போம் தானே ! நித்யா ! நீ அருணுடன் கிளம்பு. எல்லோரும் பேசிக்கொண்டு இன்னும் தாமதம் ஆகப்போகிறது.” என்றாள் சாந்தா. அனிதாவும் நித்யாவும் ஒன்றா ? நித்யாவின் பெற்றோர்களுக்கு அந்த வார்த்தை சமாதானமாக இருந்தாலும், நித்யாவுக்கு எரிச்சலை மூட்டியது. இவனிடம் நான் உதவி பெற வேண்டுமா அதுவும் தயக்கமின்றி. இவனைச் சந்திக்காமல் இருக்க எல்லா முயற்சியும் அவள் எடுத்துக் கொண்டிருக்க, இந்த அத்தை இப்படிச் சொல்கிறாளே ! சாந்தாவின் பேச்சு அருணுக்குப் பிடிக்கவில்லை. அனிதாவும் நித்யாவும் அவனுக்கு ஒன்றல்லவே ! அரவிந்து கல்லூரி செல்லும் போதெல்லாம் வீட்டில் நடந்தவை தான் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அருண் தானாக நித்யாவை ரயில் நிலையத்திலிருந்து அழைத்து வருவதாகச் சொன்னது, செல்வம் வேண்டாம் என்ற போதும், அலுவலகம், கல்லூரி தாமதம் என்று ஒரு நீள உரையை ஆற்றிச் சம்மதிக்க வைத்தான். அருண் பேசியது செல்வத்துடன் தான் என்றாலும், செல்வம் பேசியதைக் கேட்ட அரவிந்த்தால் அவர்களின் உரையாடல் ஊகிக்கமுடிந்தது. இன்னொன்று, அவனுக்கு மாமா குணம் நன்றாகத் தெரியும். மற்றவர்களிடம் உதவி கேட்பதை இயலாமை என்று நினைப்பவர். பிள்ளைகளுக்கும் அதையே கற்றுக்கொடுத்திருந்தார். அருணுடன் இயல்பாகப் பேசினாலும், பழகினாலும், செல்வத்திற்கு அருண் ஒரு உறவினர் தான். அவனிடம் ‘எனக்காக இதைச் செய்’ என்று கேட்கவும் மாட்டார். அருணாக முன்வந்து செய்தலும் ‘வேண்டாம்’ என்று சூசகமாகத் தவிர்க்கத்தான் பார்ப்பார். அரவிந்த் அனிதா விஷயத்தில் அவரால் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்க முடியவில்லை. ஆனால் நித்யாவுக்கு அவன் செய்ய முன்வருவது செல்வத்திற்குச் சங்கடமாக இருந்தது. அரவிந்துக்கு அது புரிந்தது. ஆனால் அருண் அவரை விடாப்பிடியாகச் சம்மதிக்க வைத்துக் காலையில் நித்யாவை ரயில் நிலையத்திலிருந்து அழைத்து வந்து விட்டான். அத்துடன் இல்லாமல், அலுவலகத்திற்கும் அழைத்துச் செல்வதாகச் சொல்லவும், அரவிந்துக்கு ஆச்சரியமே. நித்யா உதாசீனப்படுத்தினாலும் அவளிடம் வழியச் சென்று பேசுவதேன்? ஒருவேளை அருணுக்கு நித்யாவை பிடித்திருக்கிறதா ? முன்பே இப்படி யோசித்தாலும், புதிய உறவினர்களுடன் சுமுகமாக இருக்க அவளுடன் பேசுகிறான் என்று நினைத்தான். ஆனால் இன்று அருண் நித்யாவிடம் காட்டும் அதிகப்படி அக்கறை அரவிந்தை யோசிக்க வைத்தது. விருப்பம் இல்லாமல் தான் நித்யா அருணுடன் சென்றாள். “என்னிடம் மட்டும் எதற்கு உனக்கு இவ்வளவு தயக்கம் நித்தி !” என்று தொடங்கினான் அருண். நித்தி யா ! அவளுக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே இப்படி அழைப்பது. இவன் எப்படி அழைக்கலாம். “நீங்கள் என்னை நித்யா என்றே சொல்லுங்கள்” “ஏன் ! உன் வீட்டில் எல்லோரும் நித்தி என்றுதானே அழைக்கிறார்கள் !” “மிக நெருக்கமானவர்கள் மட்டும் தான் என்னை அப்படி அழைப்பார்கள். நமக்குள் அப்படியொரு நெருக்கம் இன்னும் வரவில்லை” “இனிமேல் வரலாம் இல்லையா !” அவனை முறைத்துவிட்டு,” எப்போதும் வராது “. “ஏனோ ! பார்த்தவுடன் என் அம்மா, தம்பியிடம் ரொம்ப இயல்பாகப் பேசினாயாம். என்னிடம் மட்டும் ஏன் வேறுபாடு” “அவர்கள் யாரும் என்னைக் கேவலமாக நினைக்க வில்லை, உங்களைப் போல்.” காரை ஓரமாக நிறுத்தினான். “உனக்குப் பல முறை விளக்கம் கொடுத்துவிட்டேன். அதையே பிடித்துக் கொண்டு பேசுகிறாய். என்னிடம் உன் நேரத்தை வீணாக்காதே என்றேனே தவிர, நீ என்னிடம் பேச வந்ததைத் தவறு என்று நான் சொல்லவில்லை. கொஞ்சம் யோசித்துப்பார். நாம் சந்தித்த போதெல்லாம் என் முகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாய். சம்மந்தம் இல்லாமல் நான் இருக்கும் தளத்திற்கு வந்தாய். வேறு நான் என்ன நினைக்கட்டும்?” அரவிந்த் சொன்ன அதே காரணம். “ஏன் ! நிஜமாகவே இதற்கு முன் எங்கோ பார்த்திருக்கலாம் அல்லவா !” நித்யா சொன்னதும் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டான். “அம்மா தாயே ! என்னை மன்னித்துவிடு. தெரியாமல் பேசிவிட்டேன். ஆனால் சத்தியமாக நீ நினைப்பதுபோல் உன்னைத் தவறாக என்றும் நினைக்கவில்லை.” என்று கையைக் கூப்பி தலைக்குமேல் உயர்த்தினான். நித்யாவுக்கு கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. சிரிப்பும் வந்து விட்டது. “ஒரு வழியாகச் சிரித்து விட்டாய் ! இப்போது எல்லாம் ஓகேவா ! கிளம்பலாமா?” என்றான். சரி என்பது போல் தலையாட்டினாள். அதற்குப் பின் இருவரும் ஒரு வழியாக இயல்பாகப் பழகினார்கள். ஆனால் அது அதிக நாள் நீடிக்கவில்லை. மதுரையிலிருந்து அனிதாவுக்கு நாட்கள் நன்றாகவே நகர்ந்தது. முதல் ஒரு வாரம் மட்டும். பார்வதி அனிதாவுக்குப் பிடித்தது என்று வித விதமாக உணவுகள் செய்து தருவது, அவளுடன் சேர்ந்து தாயம் பல்லாங்குழி என்று விளையாடுவாள். துளசியம்மாள் கூட சில சமயம் இவர்களுடன் விளையாடுவர். துளசியம்மாள் கொஞ்சம் ஆரோக்கியமாகத் தெரிந்தார் என்பதால் அவரைச் செவிலியரிடம் விட்டுவிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில், கடை வீதி என்று அவ்வப்போது அழைத்துச் செல்வாள். சத்யனுக்கும் கீர்த்திக்கு இன்னும் கல்லூரி விடுமுறை இல்லை என்பதால், இருவர் மட்டும் ஊர் சுற்றுவார்கள். அவ்வப்போது சத்யன் கேலி செய்தான், “அம்மா, அனிதா வந்ததும் நீங்கள் வீட்டிலேயே இருப்பதில்லை. எந்நேரமும் சுற்றிக் கொண்டே இருக்கிறீர்கள். பாட்டி நீங்கள் இதை எல்லாம் கண்டிக்கமாட்டீர்களா ?” என்று சண்டை மூட்டுவான். துளசியம்மாள் எப்போதும் மருமகளை அரவணைத்துச் செல்பவர். “அப்படிக் கண்டிப்பதனால் முதலில் உன்னைத்தான் கண்டிக்க வேண்டும்” என்பார். அவனும் முடிந்தளவுக்கு அனிதாவுடன் நேரம் கழிப்பான். சில நேரம் அவன் கல்லூரி வேலையைக் கூட அனிதாவிடம் செய்துதரச் சொல்வான். அனிதாவுக்குப் படம் வரைவது என்றால் பிரியம். சில சமயம் குறிப்புகள் கூட எடுத்துத் தருவாள். அவனும் சில அனிமேஷன் படங்களை அவளுக்கென வாங்கி வருவான். அவ்வப்போது கீர்த்தி வேதவல்லி இருவரும் வருவார்கள். அவர்களிடம் இயல்பாக இருக்க அனிதா முயற்சி செய்தாலும் அவர்கள் இவளை உதாசீனப் படுத்துவார்கள். அவளுக்கு வாங்கிய புதிய ஆடைகளைப் பார்த்ததும் ஒரு நாள் வேதவல்லி, “இது போன்ற விலை உயர்ந்த ஆடைகளை எல்லாம் இவள் அம்மாவோ, இல்லை மாமாவோ எப்படி வாங்கித்தர முடியும். பாவம்.” என்பாள். வேதவல்லி சொல்வது போல் அதிக விலையுள்ள ஆடைகளை அதிகம் எடுப்பதில்லை என்றாலும், யாரும் குறை சொல்லும்படி எப்போதும் இருந்ததில்லை. அனிதாவுக்கு முகம் வாடி விடும். அதைப் பார்த்ததும் பார்வதி,” எப்போதும் பிள்ளைகளின் தேவைகளைச் சரியாகச் செய்திருக்கிறார் செல்வம் அண்ணன். விலையில் என்ன இருக்கிறது? அவர் மகளுக்குச் செய்வது போலவே அரவிந்துக்கும், அனிதாவுக்குச் செய்திருக்கிறார்.” “சும்மாவா செய்தார். சாந்தாவும் சம்பாதிக்கிறாள் தானே. எதோ அவரே எல்லாம் செய்தது போல் பேசுகிறீர்கள்.” என்றாள் வேதவல்லி. அனிதாவுக்கு வேதவல்லியின் பேச்சு பிடிக்கவில்லை. பார்வதியை மரியாதையுடன் பேசும் வேதவல்லி, தன் அன்னையை ஒருமையில் அழைப்பது அவளுக்கு வருத்தமாக இருந்தது. மற்றொன்று என்ன பேசினாலும் அனிதா வளர்ந்த பொருளாதார நிலையைக் குறை சொல்வது. இங்கே வரும் வரை அனிதாவுக்கு வீட்டின் பொருளாதாரம் பற்றி ஒன்றும் தெரியாது. அவள் கேட்டது அவளுக்குக் கிடைத்திருக்கிறது. அவள் அதிகப்படியாக எதையும் கேட்டதில்லை என்றாலும், உடன் படிக்கும் பிள்ளைகள் இவளைப் பார்த்து ஆசைப்படும் அளவுக்குத்தான் எப்போதும் இவள் உடைகள் எல்லாம் இருந்திருக்கின்றன. ஆனால் வேதவல்லி பேசுவது அனிதாவுக்கு வேதனையாக இருந்தது. நீங்கள் நினைப்பது போல் இல்லை என்று பேச முடியவில்லை. அப்படிச் சொன்னாலும் அவர்கள் நிலைமையை ஒப்பிட்டால் இவள் வளர்த்த நிலை குறைவே. அனிதாவின் சோர்வைக் கண்டு, கீர்த்தியோ வேதவல்லியோ வந்தால், தன்னுடனே அனிதாவை வைத்துக்கொண்டாள் பார்வதி. பார்வதியின் அக்கறையும் பாசமும் அனிதாவுக்கு நன்றாகப் புரிந்தது. அதனால் மாற்றத்தைப் பெரிதுபடுத்தவில்லை. தினமும் சென்னையில் இருக்கும் அன்னையுடன் பேசினாலும், இங்கே மற்றவர்கள் பேசுவதை அங்கே சொல்லவில்லை. பகுதி - 11 நித்யா மீண்டும் மதுரைக்குச் செல்லாமல் இருக்க என்ன செய்ய முடியும் என்று யோசித்தாள். மிக எளிய வழி ‘வேலை அதிகம், விடுமுறை கிடைக்காது’ என்பதே. ஆனால் இப்போது அவளுக்கு வேலைப் பளு மிகக் குறைவு. அதுவுமின்றி சென்ற ஆண்டுக்கான சம்பளத்துடன் கூடிய விடுமுறைகளே இன்னும் பாக்கி இருந்தது. ஆனால் அங்கே செல்லவும் மனம் விரும்பியது தான். முக்கிய காரணம் பார்வதி. அவள் இருந்த இரண்டு நாளும் புது இடம் என்ற எண்ணம் வராமல் நன்றாகவே கவனித்துக் கொண்டது மட்டும் இல்லை, அவளிடம் பிரியமாகவே பழகினார். துளசி அம்மாளும் அனிதாவிடம் காட்டும் பிரியத்தை அவளிடமும் காட்டினார். நித்யாவுக்கும் பல நாட்கள் பிறகு உறவினர்களுடன் சேர்ந்து கழிப்பது சுகமாகவே இருந்தது. தந்தை வழியில் சாந்தா தவிர வேறுயாரும் இல்லை. தாய் வழியில் மாமாக்கள் இருவர் இருக்கிறார்கள் என்றாலும், சாந்தாவையும் அவள் பிள்ளைகளின் பொறுப்பைச் செல்வநாதன் ஏற்றதும் சிலபல பேச்சுகள், அவர்களுடன் விரிசலை ஏற்படுத்தியது. நித்யாவிடம் அவர்கள் பிரியமாகவே இருந்தார்கள் என்றாலும் அரவிந்த் அனிதாவிடம் பாகுபாடுகளைக் காட்டினார். அதன் பின் அவர்கள் வீட்டுக்குச் செல்வதும் அவர்கள் வருவதும் குறைந்து விட்டது. சென்னை வந்தபிறகு முற்றிலும் நின்று போனது. விசேஷங்களுக்கு மட்டும் சந்தித்துக் கொண்டார்கள். தோழிகள் எல்லோரும் விடுமுறைக்கு உறவினர் வீட்டுக்குச் சென்று வந்த கதைகளைக் கூறி இருக்கிறார்கள். அத்தை வீட்டு சமையல், மாமா வீட்டுத் தோட்டம், சித்தி ஊரின் கோவில். இன்னும் நிறையக் கேட்டிருக்கிறாள். நித்யாவுக்கு அப்படி எந்தக் கதைகளும் இருந்ததில்லை. சில முறை வருத்தப்பட்டாலும், எப்போதும் உடன் இருக்கும் அத்தை, எப்போதும் பின்னாடியே சுற்றும் அவளின் பிள்ளைகள். மற்றவர்களைவிட அவளுக்கு அதிக நேரம் உறவுகளுடன் இருக்கலாம். ஆனால் அவர்கள் அவள் வீட்டவர்கள் தானே. உறவினர்கள் என்று எண்ணவும் முடியவில்லை. இப்போது மதுரைக்குச் செல்வது பற்றி நினைத்தாள். மனதிற்கு இதமாகவே இருந்தது. ஆனால் அவர்கள் அத்தை வழி உறவே. அடிக்கடி சென்றால் அவர்கள் எப்படி ஏற்பார்கள். இன்னும் திருவிழாவிற்கு இன்னும் பத்து நாட்கள் மட்டுமே இருக்கிறது. முதலில் விடுமுறை பற்றிப் பேசிப் பார்க்கலாம். ஒருவேளை அதிக நாள் எடுக்கக் கூடாது என்று விட்டால், அதையே காரணமாகச் சொல்லிவிடலாம் என்று நினைத்தாள். அவள் யோசித்துக் கொண்டிருந்தபோது அருணா செல்லில் அழைத்தாள். “என்ன மேடம் ரொம்ப பிசியா ? ஆளைப் பார்க்கவே முடியவில்லை”. “ஹாய் அருணா ! இப்போது பார்க்கலாமா ?” “சரி நான் வருகிறேன்” என்றாள் அருணா. இருவரும் சென்று காபியைக் குடித்தபடி பேசினார்கள். “கொஞ்சம் வேலை பா. அதுதான்.” “சென்ற வாரம் வெள்ளிக்கிழமை மதியம் நான் வந்தேன் ! உன்னைக் காணவில்லை. நீ சென்று விட்டதாக உன் டீமில் சொன்னார்கள்.” அருணாவிடம் ஏற்கனவே அத்தையின் குடும்பத்தார் தேடி வந்ததையும், அவர்கள் மதுரை சென்று வந்ததையும் ஏற்கனவே நித்யா கூறியிருந்தாள். “அனிதாவை மதுரையில் விடச் சென்றேன். அதுதான் அன்று மதியமே கிளம்பிவிட்டேன்.” “ஓ, அந்த அளவுக்கு உறவு பலப்பட்டு விட்டதா ?” “ஹ்ம்ம்” “அது சரி, வேறு எதுவும் விஷயம் இருக்கிறதா ?” என்றாள் அருணா. “வேறு என்ன ? மீண்டும் அடுத்த வாரம் நாங்கள் குடும்பத்துடன் மதுரைக்குச் செல்கிறோம். சித்திரைத் திருவிழாவிற்கு”. என்றாள் நித்யா. “அப்புறம் ?” நித்யா இப்போது அருணாவிடம் திரும்பி “வேறென்ன ! ஒன்றும் இல்லை. நீ சொல். உனக்கு வேலை எல்லாம் எப்படிப் போகிறது.” “என் வேலை கிடக்கட்டும். என்னிடம் சொல்ல உனக்கு வேறெதுவும் இல்லையா ?” நித்யா கேள்வியாய் பார்த்தாள். “உன் புது பிரென்ட் பற்றி ! பிரெண்ட்? பாய் பிரெண்ட்?” என்று வினவினாள் அருணா. நித்யா புரியாமல் “என்னடி கேட்கிறாய் ? ஒன்றும் புரியவில்லை !” “காலையில் காரில் வந்து இறங்கினாயே ! லிப்ட் பார்ட்டிதானே” அருணா எப்போது பார்த்தாள் என்று ஒரு நிமிடம் யோசித்தவள், காலையில் நித்யா நுழைவாயிலில் நிறுத்தும்படி சொல்லியும் அருண் அவள் அலுவலக வாசல்படி வரை காரைச் செலுத்தி வந்தான். அப்போது பார்த்திருக்கக்கூடும் என்றெண்ணி “ஓ ! காலையில் பார்த்தாயா ? அவர் அருண். அத்தை வழி உறவு.” ” மதுரையில் இருக்கும் அத்தை குடும்பமா ?” என்றாள் அருணா. “ஹ்ம்ம் ! அவர் அத்தையின் மைத்துனர் மகன். சென்னையின் இன்டிரியர் டிசைனிங் செய்கிறார்.” “அப்படியானால் முன்பே உனக்கு அவரைத் தெரியும். அதனால் தான் எங்கோ பார்த்தது போல் என்று முன்பே சொன்னாயா ! நான் கூட மோதலில் ஆரம்பித்துக் காதலில் முடிந்ததோ என்று நினைத்தேன்.” “நான் தான் அப்போதே உன்னிடம் சொன்னேனே ! எனக்கு அவரைத் தெரியாது. எப்போதோ ஒரு புகைப்படத்தில் பார்த்திருக்கிறேன். இப்போது அத்தையைத் தேடி வந்தார். அதனால் தெரியும்.” “ஹாய் நித்யா” என்ற குரல் கேட்க இருவரும் திரும்பினார். அழைத்தது ரவி. “நான் கேட்ட ரிப்போர்ட் ரெடியா ?” என்றான். “முடிந்தது. உங்களுக்கு அனுப்பிவிட்டேனே !” என்றாள் நித்யா. “மீட்டிங் முடித்து நேரே வெளியே வந்துவிட்டேன். இன்னும் ஈமெயில் பார்க்கவில்லை. இன்று மாலைக்குள் மேனேஜருக்கு அனுப்ப வேண்டும்.” என்றான் ரவி. அருகில் நின்ற அருணாவைப் பார்த்து, “இவர்கள் நம் டீமா ?” என்றான். “சாரி, அறிமுகப்படுத்தவில்லை. என் தோழி அருணா. ஒரே கல்லூரியில் படித்தோம். இவர் என் டீம் லீடர் ரவி” என்று அறிமுகம் செய்து வைத்தாள். சிறிது நேரம் மூவரும் பேசிக்கொண்டிருந்தனர். ரவியிடம் அவள் விடுமுறையைப் பற்றிக் கேட்க, “சென்ற ஆண்டு விடுமுறைகளைச் சீக்கிரம் எடுத்து முடியுங்கள். அவை ஏப்ரல் இறுதிக்குள் எடுக்க வேண்டும். இல்லை என்றாள் பயன் இல்லாமல் போகும்.” என்றான். சென்ற ஆண்டு விடுப்புகள் மட்டும் ஐந்து நாட்கள் இருந்தன. இரு வார விடுமுறையுடன் எடுத்தால் ஒன்பது நாள். மதுரைக்குச் சென்று வந்தபிறகு நன்றாக வீட்டில் கழிக்கலாம் என்று, விண்ணப்பத்தை ரவியிடம் கொடுத்தாள். முதலில் எதற்கு இத்தனை நாள் என்ற செல்வம், நித்யா விடுப்புகள் காலாவதியாவதைத் சொல்லவும் சரியென்று விட்டார். ஆனால் அரவிந்த்தும் நேர்மாறாக ஒரு நாள் மட்டுமே கிடைத்தது. அதுவும் சனிக்கிழமை பாதி நாள் வகுப்பை முடித்துக்கொண்டு, ஞாயிறு திங்கள் இரண்டு நாள் விடுமுறை. ஏற்கனவே அரவிந்த் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லிருந்ததால், அரவிந்து பயணச் சீட்டு சனிக்கிழமை மதியத்திற்கு எடுத்திருந்தார்கள். அருணும் அரவிந்த்துடன் இணைந்துகொள்வதாகத் திட்டம். மற்றவர்கள் வெள்ளிக்கிழமை மதியம் சென்று, திங்கள் இரவு திரும்புவதாக இருந்தனர். மதுரைக்கு செல்லும்முன் அங்கே அனைவருக்கும் புது ஆடைகள் வாங்க வேண்டும் என்று சாந்தா நினைத்தாள். சென்ற முறை வெறும் கையுடன் சென்றாள். இம்முறை திருவிழாவிற்குச் செல்லும்போது எல்லோருக்கும் உடைகள் எடுக்க வேண்டும். நித்யாவைத்தான் கடைக்கு அழைத்துச் சென்றாள். பெண்கள் உடை சுலபமாக முடிந்தது. ஆனால் அருண் சத்யனுக்கு எப்படி எடுப்பது என்று யோசித்தாள் சாந்தா. நித்யாவை அதற்குத்தான் உடன் அழைத்துச் சென்றாள். அரவிந்த்துக்கு பெரும்பாலும் நித்யா தான் தேர்வு செய்வாள். அருண் மற்றும் சத்யனின் அளவுகுறித்து சந்தேகமாக இருந்தது. அனிதாவை அழைத்துக் கேட்கலாம் என்று அழைத்தாள் நித்யா. அவளுக்கும் சொல்லத் தெரியவில்லை. போனை பார்வதியிடம் கொடுத்தாள் அனிதா. “எதற்கு இதெல்லாம் !” என்றாள் பார்வதி. “பண்டிகைக்கு வருகிறோம் ! இது கூட இல்லாமல் எப்படி ? நீங்கள் அளவு சொல்லுங்கள்.” என்றாள் சாந்தா. பார்வதி சொல்ல, அதற்குத் தகுந்தார் போல் தேர்வு செய்தார்கள். எல்லோருக்கும் சற்றே விலை உயர்ந்ததாகவே எடுத்தார்கள். மதுரை செல்லும்முன் இருமுறை அருண் வீட்டுக்கு வந்தான். பெரும்பாலும் மாலை நேரத்தில் வந்தால் இரவு உணவை முடித்துக்கொண்டு தான் செல்வான். நித்யா அருணிடம் இயல்பாகப் பேசுவதை அரவிந்த் கவனிக்கத் தவறவில்லை. நித்யாவிடம் கேட்டான். “உன் அண்ணா பாவம் என்று மன்னித்துவிட்டேன்” என்றாள் “அதற்குள்ளாக மன்னித்து விட்டாயா ?” வியப்பாகப் பார்த்துவிட்டு, “நீதானே என்னிடம் சொன்னாய். விட்டுவிடு என்று” “அதற்காகத்தானா?” “பிறகு வேறெதற்கு ? உங்களைப் பார்க்கவும் உன் அண்ணன் அடிக்கடி வருகிறார். நான் மட்டும் முறைத்துக் கொண்டு நின்றால், சரியாக இருக்காது. அது மட்டும் இல்லை உன் அண்ணனும் மன்னிப்பு கேட்டார். ஒரு மனிதன் இதற்கு மேல் என்ன செய்ய முடியும்? அதனால் தான்.” என்றாள் நித்யா. “ஓ” என்று முடித்துக் கொண்டான் அரவிந்த். செல்வம் வேண்டாம் என்று சொல்லியும் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல அருண் வந்தான். அவர்களை வழி அனுப்பிவிட்டு, அரவிந்தையும் அவனுடைய பிளாட்டிற்கு அழைத்துச் சென்றான். “தனியாக இருக்க வேண்டாம். என் பிளாட்டில் வந்து இரு.” என்றான். அருணின் நடவடிக்கை செல்வநாதன் சுமதியை மிகவும் கவர்ந்தது. தந்தை சொன்னதற்காகச் செய்கிறான் என்று முதலில் எண்ணியவர்கள், ஒவ்வொன்றையும் தம்பி தங்கைக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்கிறான் என்றதும் அவன்மேல் நல்ல அபிப்பிராயம் வந்தது. சிறுவயதில் ஒன்றாகவே வளர்ந்திருந்தால் கூட இந்நாளில் பலர் இவ்வளவு அக்கறையுடன் இருப்பதில்லை. மற்றவர்களை வழி அனுப்பிவிட்டு பிளாட்டை அடைந்ததும், ஒரு அறையைக் காண்பித்து, “நீ இந்த அறையைப் பயன்படுத்திக்கொள். காலையில் நானே உன்னை ட்ராப் செய்கிறேன்” என்றான் அருண். மறுநாள் காலை அரவிந்த் எழுந்து வரும் போதே, அருண் காலை உணவைத் தயார் செய்திருந்தான். பெரிதாக ஒன்றும் இல்லை. தோசையும், அதற்கு ஒரு சட்னியும். இருவரும் உணவருந்தும்போது, அரவிந்த் மெல்லக் கேட்டான், “அக்காவுடன் சமாதானம் ஆகிவிட்டீர்கள் போல !” “ஒரு வழியாக !” என்று சிரித்தான் அருண். “உறவு என்பதால் சமாதானம் ஆக முற்சித்திருக்கிறீர்கள். எங்களுக்காக இல்லை என்றால் நீங்கள் ஏன் அவளிடம் பேசப் போகிறீர்கள்? அவளும் எங்களுக்காகத் தான் உங்களுடன் பேசுகிறாள். யாருக்கும் சங்கடம் இருக்காது.” அருண் முகம் சட்டென்று இருண்டது. அரவிந்த் சொல்வதன் பொருள் நித்யா அவனை மன்னித்து விடவில்லை. வேறு வழியின்றி பேசுகிறாள் என்பதுதான் அது. இன்னும் நித்யாவுக்கு அருண் அன்னியனே. அருணின் முக மாற்றத்தை அரவிந்த் கவனிக்கத் தவறவில்லை. அரவிந்தின் மனதில் ஒரு குறுகுறுப்பு இருந்து கொண்டே இருந்தது. அருண் நித்யாவிடம் காட்டிய அதிகப்படி அக்கறை. தம்பி தங்கையைப் பார்க்க வந்தாலும் நித்யாவுடன் பேசாமல் சென்றதில்லை. அதுவும் அவள் அவனிடம் வெறுப்பைக் காட்டினாலும். செல்வமும் சுமதியும் சாந்தாவும் அருணை இயல்பாக வரவேற்றனர் என்றாலும், அருணின் முன் கூட வர விரும்பாத நித்யாவிடம் இவன் ஏன் பேச முயல்கிறான் ? முன்பு நடந்தது முற்றிலும் அவன் தவறில்லை என்ற போதும், புதிதாகப் பார்த்த பெண்ணிடம் ஏன் இறங்கிப் போக வேண்டும் ? இவனுடன் பழகிய சில நாட்களில், வீட்டில் இருப்பவர்கள் தவிர மற்றவரிடம் ஒரு நிமிர்வுடன் தான் பழகுவான். ஒருவேளை இவள் உறவுக்காரி என்பதால் இறங்கிப் போகிறானா? தன்னை மதிக்காத ஒரு பெண்ணுக்கு இறங்குபவன் அருண் இல்லை என்பது அரவிந்தின் எண்ணம். அவன் யூகம் அருணுக்கு நித்யா மேல் ஏதோ ஈர்ப்பு இருக்கிறது. ஆனால் அப்படி ஈர்ப்பு இருந்தால் முதலில் ஏன் அவளிடம் வேற மாதிரி பேசினான் ? அதன் பின் அவளைப் பிடித்தது என்றால், ஏன் ? நேரடியாக அருணிடம் கேட்க முடியவில்லை. இவை எல்லாம் அரவிந்தின் யூகங்கள் மட்டுமே. ஒருவேளை புதிதாக வந்தவனை எளிதில் நம்பமுடியவில்லையோ ? இயல்பாக நடக்கும் ஒன்றை இவனாகக் கற்பனையில் பெரிதாக்குகிறானோ ? இன்னும் அருணை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தான். பகுதி - 12 வீடு முழுவதும் ஆட்கள் நிறைந்திருந்தார்கள். பார்வதிக்கு ஆனந்தமாக இருந்தது. பார்வதியும் ஒரே மகள் என்பதால் அவள் வீட்டிலிருந்து பெற்றோருக்குப் பின் யாரும் வருவதற்கு இல்லை. அடிக்கடி வருவது வேதவல்லி குடும்பம் மட்டும் தான். வந்தாலும் அவள் எப்போது சிவநாதனிடம் இல்லை துளசிம்மாளிடம் அதிக நேரம் இருப்பாள். கீர்த்தியும் சத்யனுடன் இல்லை அருணுடன் சென்றுவிடுவாள். இன்று சாந்தா, சுமதி இருவரும் கதைகள் பேசிக்கொண்டு எல்லா வேலைகளையும் பகிர்ந்துகொள்வது ஆனந்தமாக இருந்தது. வீட்டில் கூட்டம் அதிகம் சேர்ந்தால், சமையல் அறையில் வேலை அதிகமாக இருக்கும். எப்போதும் பணிப்பெண்ணுடன் தனியே நின்று தான் பார்வதி செய்ய வேண்டும். முதல் முறை வந்திருந்தாலும் சுமதி, நான் காய்களை நறுக்குகிறேன் என்று வருகிறாள். புதுமையாகச் செய்யும் மாங்காய் போட்டு அரைத்து ஒரு மோர்க் குழம்பு செய்தாள். அரவிந்த் அனிதாவின் கதைகள் பகிர்ந்தவாறே சமைக்கிறாள். சாந்தாவும் உடன் நின்று உதவினாள். அவ்வப்போது நித்யா வந்து “நான் எல்லோருக்கும் ஜூஸ் போடுகிறேன்.” என்று ஏதாவது உருட்டுவாள். ஏற்றுமதி வேலைகளைப் பார்க்க எப்போதும் சென்றுவிடும் சிவநாதன், செல்வம், பிள்ளைகள் மூவரும் சேர்ந்து படம் பார்த்தார். துளசியம்மாள் இன்று சமையல் அறையில் மற்ற பெண்களுடன் சேர்த்துக் கதை பேசினார். திருவிழா சமயம் கோவிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்று முன்தினமே ஒரு முறை எல்லோரும் சென்று வந்தனர், துளசியம்மாள் தவிர. நெரிசல் அதிகமாக இருக்க அடுத்த நாள் யாரும் செல்ல வேண்டாம் என்று முடிவெடுத்தனர். திருவிழாவுக்கு எடுத்து வந்த ஆடைகளைச் சாந்தா கொடுக்கவும், பார்வதியும் அவள் எடுத்த ஆடைகளை அனைவருக்கும் கொடுத்தாள். வேதவல்லி வராதது குறித்து சாந்தா கேட்டாள். சிவநாதன் தான் “மாப்பிள்ளைக்கு வேலை. வெளியூர் சென்றிருக்கிறார். அவர் வந்தபிறகு வருவதாகச் சொன்னாள். ஒருவேளை அவர் வரத் தாமதம் ஆகியிருக்கும்.” என்றார். இரவு உணவை எல்லோரும் முடித்த பின்னரே, அருணும் அரவிந்தும் வந்தனர். அவர்கள் வந்ததும் சிறுவர் அணி பெரியவர்கள் அணி என்றானது. “எப்போதும் நான் தான் கடைக்குட்டி என்று என்னை எல்லோரும் ஒரு வழி செய்வார்கள். எனக்குக் கிடைத்த அடிமை அனிதா. நான் சொல்வதை எல்லாம் அப்படியே செய்கிறாள். எனக்கு நோட்ஸ் எல்லாம் எழுதினாள்.”என்றான் சத்யன். “இவளா ? இவள் ரெகார்டையே நான் தான் வரைவேன் ! இவள் எப்படி உனக்கு உதவினாள் ?” என்றான் அரவிந்த். “எப்போது நான் வரைவது மோசமாக இருக்கும். அதனால் உன்னைக் கேட்பேன். இங்கே சத்யன் வரைவது என்னைவிட மோசம்.” என்றாள் அனிதா. “நேற்று வரை ஊமைக் கோட்டான் மாதிரி இருந்தாய். இப்போது பார் வாயை !” என்றான் சத்யன். “அதெல்லாம் அப்படித்தான். அண்ணன் அக்கா இருக்கும் தைரியம்.” என்றாள் அனிதா. “அப்படியா ! அவர்கள் சென்றதும் உனக்கு இருக்கிறது. அடுத்த செமஸ்டர் நோட்ஸ் எல்லாம் எழுதவைக்கிறேன்.” “நானும் அவர்களுடன் சென்னைக்குச் சென்று விடுவேன்” என்றாள் அனிதா. “அந்த பயம் இருக்கட்டும். அது சரி, சென்னையில் எப்படி ? இவர்கள் உன்னிடம் வேலை எல்லாம் வாங்குவார்களா ?” “நாங்கள் தலைகீழ். எங்களுக்கு அக்கா தான் செய்வாள். என் மெடிக்கல் ரெகார்டஸ் கூட சில முறை அவள் வரைந்து தருவாள்.” என்றான் அரவிந்த். “அப்படி என்றால், எனக்கும் அந்தச் சலுகை கிடைக்கும் தானே” என்றான் சத்யன். “மொத்தத்தில் உன் வேலையை நீ செய்யும் எண்ணம் இல்லை” என்றான் அரவிந்த். “உங்களுக்கு என்ன தெரியும் என் கஷ்டம் ? உங்கள் இருவருக்கும் உதவி செய்ய உங்கள் அக்கா இருக்கிறாள். என் அண்ணனும் இருக்கிறானே !” முதலில் பெரியவர்களுடன் பேசிவிட்டு சற்றே தாமதமாகச் சிறுவர் அணிக்கு வந்தான் அருண். சத்யனின் பின் கழுத்தைப் பற்றிக்கொண்டான் அருண். “என்னைப் பற்றி என்ன புகார் சொல்லிக் கொண்டிருக்கிறாய் ?” என்றான். “உன்னைப் பற்றிப் புகாரா ? பெருமையை அல்லவே சொல்லிக்கொண்டிருந்தான்.” என்றான் சத்யன். “எனக்கு வேறுவிதமாகக் கேட்டதே !” “இல்லவே இல்லை ! நீ இவர்களிடம் கேட்டுப் பார்.” என்று மற்றவரைத் துணைக்கு அழைத்தான். “சரி ! நீங்கள் பேசுங்கள். எனக்குத் தூக்கம் வருகிறது.” என்று எழுந்தாள் சென்றாள் நித்யா. அருண் முகம் இறுகியது. அரவிந்த் சொன்னது சரிதான். நித்யா இன்னும் அவனை மன்னிக்கவில்லை, அதுவும் அவன் அவ்வளவு இறங்கி வந்தும். மறுநாள் காலை எழுந்ததும் டாமியுடன் விளையாடியபடி நடந்து கொண்டிருந்தான் அருண். அனிதா பூக்களைப் பறித்துக்கொண்டு இருந்தாள். அவளையும் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது டாமி. அப்போது நித்யா அங்கே வர, டாமி நாலுகால் பாய்ச்சலில் அவளிடம் செல்ல, அலறினாள். நாயைப் பார்த்து அப்படியே நின்றாள் நித்யா. தூரத்திலிருந்து பார்த்த அருண், நித்யாவின் பயத்தைக் கண்டுகொண்டான். “டாமி கம் ஹியர் நவ்” என்றதும் அவனை நோக்கிச் சென்றது. அனிதா சிரித்தபடி அருகில் வர, “அக்கா ! டாமி ஒன்றும் செய்யாது. நீ ஏன் இப்படி பயப்படுரே.” “அதை ஏன் அவிழ்த்து விட்டாய் !” என்று அனிதாவிடம் சீறினாள் நித்யா. “நான் இல்லை ! அண்ணன் தான் விளையாடிக்கொண்டிருந்தார்.” என்றாள். அருணும் அருகில் வந்தான். “உனக்குப் பயம் என்று தெரியாது.” என்றான். “பரவாயில்லை.” என்று உள்ளே செல்ல அங்கே சிவநாதன் வந்து, “அடடா ! நானும் சொல்ல மறந்து விட்டேன். நித்யா சென்ற முறை வந்தபோதே பயந்து விட்டாள். அதனால் தான் காலையில் நான் கார் ஷெட் பக்கம் கட்டிவைத்தேன்.” என்றார். “சாரி நித்யா” என்றான் அருண் மீண்டும். “இட்ஸ் ஓகே. விடுங்கள்.” என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டாள். காலை உணவுக்கு வேதவல்லி குடும்பத்துடன் வந்திருந்தாள். வந்ததும் கீர்த்திக்காக எடுத்த ஆடையைக் கொண்டு வந்து கொடுக்கும் படி அனிதாவிடம் சொன்னாள் சாந்தா. அனிதா சென்று எடுத்து வந்து நீட்டினாள். “எனக்கெதற்கு ?” என்றாள் கீர்த்தி சலிப்பாக. பார்வதி, “அத்தை உனக்காக ஆசையாக எடுத்து வந்திருக்கிறார். வாங்கிக்கொள் !” என்றாள். வாங்கியவள் பிரித்துக் கூடப் பார்க்காமல், அப்படியே வைத்தாள். சாந்தா மனம் வாடினாலும் காட்டிக்கொள்ளவில்லை. அனிதாவின் முகம் மாறியதை நித்யா கவனித்துவிட்டாள். அதுவும் அவர்கள் வந்தபின், அனிதா கலகலப்பு முற்றிலும் மாறியது. வேதவல்லியின் கணவன் உணவை முடித்துக்கொண்டு கிளப்பிவிட்டார். அவர் யாரிடமும் சரியாய் பேசவில்லை. வீட்டில் இருப்பவர்களுடனும் சரி, புதிதாக வந்தவர்களிடமும் சரி. உணவு கூட முதல் ஆளாக யாருடனும் சேராமல் தனியே சாப்பிட்டு முடித்தார். அவரின் ஆதிக்கம் புரிந்து செல்வம் வீட்டார் யாரும் அவர் இருக்கும் இடம் பக்கம் செல்லவில்லை. அதன் பின் எல்லோரும் பண்ணை, தோட்டம் எல்லாம் கூட்டிச் செல்லலாம் என்று சிவநாதன் சொன்னார். மதிய நேரம் வெயில் தாக்கம் இருக்கும் மாலையில் செல்லாமல் என்றாள் பார்வதி. வேதவல்லியின் வருகை எல்லோரின் கலகலப்பையும் குறைத்தது. அப்படியே வெளியே சென்று வருவதாகச் செல்வம் சொல்லவும், சிவநாதன் உடன் சென்றார். துளசியம்மாள் சுமதியிடம் ஏதோ பேசிக்கொண்டிருக்க, வேதவல்லி மெதுவாகத் தோட்டத்தின் பக்கம் சென்றாள். அவளைப் பின்தொடர்ந்த பார்வதி, “நீ செய்வது சரியில்லை. வீட்டிற்கு வந்தவர்களிடம் இப்படியா நடந்து கொள்வது. நலம் விசாரிக்கக் கூட இல்லை” “அண்ணி, நீங்கள் நேற்று இரவு அழைத்ததால் தான் இன்று இங்கே வந்தேன். கீர்த்தியின் அப்பாவுக்கு வர விருப்பமே இல்லை. அவர் சரியாகச் சாப்பிடக் கூட இல்லை. இவளும் இவள் பிள்ளைகளும் இருக்கும் இடத்தில் எங்களால் எப்படி இருக்க முடியும். எதோ உங்கள் முகத்திற்காக வந்தேன்.” என்றாள். “எல்லோரும் பழசை மறந்து இருக்கும் நேரம், நீ மட்டும் இப்படிப் பேசுவது சரியில்லை. பிள்ளைகள் என்ன செய்தார்கள் ?” “அவள் பிள்ளைகள் என்ற ஒரு காரணம் போதாதா ! நடந்ததை நீங்கள் மறக்கலாம். என்னால் முடியாது. என்னை வற்புறுத்தினால், இப்போதே என் வீட்டுக்குக் கிளம்புகிறேன்” “சரி சரி ! நீ எங்கும் கிளம்ப வேண்டாம். உன் இஷ்டம் போல் இரு” காலையிலிருந்து அவள் செல்லைப் பார்க்கவில்லை என்று அதை எடுக்க அறைக்கு வந்த நித்யா, இந்தப் பேச்சை முழுவதும் கேட்டாள். அவளுடன் வந்த அனிதாவும். “அந்த அத்தைக்கு என்னைப் பிடிக்கவில்லை. நம் யாரையும் பிடிக்கவில்லை.” நித்யாவுக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது. ஒரு நீண்ட மூச்சை எடுத்துவிட்டு, “பார் அனிதா ! நாம் ஒன்றும் அந்த அத்தை வீட்டில் இல்லை. உன் சித்தப்பா வீட்டில் இருக்கிறோம். இங்கே இருப்பவர்கள் எல்லோரும் உன்னிடம் எப்படிப் பழகுகிறார்கள் என்பது மட்டும் தான் முக்கியம். மற்றவர்கள்பற்றிக் கவலைப் படாதே” என்றாள் நித்யா. அனிதா மீண்டும் தொடரும் முன், சத்யன் வந்தான். “இருவரும் இங்கே என்ன செய்கிறீர்கள் ? ஹோம் தியேட்டரில் ஒரு படம் பார்க்கலாம்” என்றான். “இதோ” என்று அனிதாவையும் இழுத்துச் சென்றாள் நித்யா. ஒரு ஆங்கிலப்படம் எடுத்து வைத்திருந்தார்கள். தொடர் கொலைகள் கண்டுபிடிக்கும் ஒரு துப்பறியும் படம். சற்றே வன்முறை அதிகமாகவே இருந்தது. அனிதாவுக்கு நித்யாவுக்கும் பார்க்க முடியவில்லை. அருண் இருவரையும் கவனித்துவிட்டு, “இந்தப் படம் வேண்டாம்.”. என்று வேறு படத்தைத் தேர்வு செய்தான். அது கீர்த்திக்குப் பிடிக்கவில்லை. “செம போர் ! எனக்கு இந்தப் படம் பிடிக்கவில்லை. முதல் படத்தைப் போடுங்கள் அருண்.” என்றாள். “அனிதாவுக்கு அந்தப் படம் ஏற்றதல்ல. இது நல்ல நகைச்சுவை படம் தான்” என்றான். “இதை நான் ஏற்கனவே பார்த்து விட்டேன். எனக்கு வேண்டாம் !” என்று எழுந்து சென்றாள். “அவள் போகட்டும். நாம் பார்க்கலாம். எனக்கு இந்தப் படம் பிடிக்கும்” என்றான் சத்யன். கீர்த்தியின் காதில் அது விழுந்தது. “கொறிக்க ஏதும் இருந்தால், நன்றாக இருக்கும” என்றான் சத்யன் மீண்டும். “இதோ நான் எடுத்து வருகிறேன்.” என்று நித்யா எழுந்தாள். “படம் போய்விடும்” என்று சத்யன் சொல்ல, “பெயர்கள் போட்டு முடியும் முன் வந்து விடுவேன்.” என்று சொல்லியபடியே கீழே சென்றாள். அம்மாவும் இரண்டு அத்தைகளும் துளசியம்மாள் அறையில் பேசிக்கொண்டிருந்தனர். மெதுவாகச் சென்று சமையல் அறையிலிருந்த தீனிகளைத் தட்டில் வைத்துக்கொண்டிருந்தாள். அருகில் பேச்சுக் குரல் கேட்டது. சமையல் அறைக்கு அருகிலிருந்த ஒரு அறையிலிருந்து வந்தது. அது வேதவல்லியின் அறை என்று பார்வதி சொல்லிருந்தாள். அருகிலேயே வீடு இருந்தாலும், வேதவல்லியின் கணவன் ராஜன் வெளியூர் செல்லும் நேரங்களில் அவள் அந்த அறையில் தங்குவது வழக்கம். “எல்லாம் நம்ம தலையெழுத்து. என்ன செய்வது”. வேதவல்லியின் குரல் “எனக்குப் புரியவில்லை ! நேற்று வந்தவர்களுக்காக நம்மை உதாசீனப்படுத்துகிறார்கள். இந்த வீட்டில் நம்மை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அதுவும் என்னைவிட அந்த அனிதா முக்கியமாக விட்டாளா ? அவளுக்குப் பிடித்த உணவு, அவளுக்குப் பிடித்த சிற்றுண்டி, அவளுக்குப் பிடித்த படம். இந்த சத்யன் கூட அவர்களுடன் தான் பேசிக் கொண்டிருக்கிறான்.” என்றாள் கீர்த்தி. “நன்றாக இருந்து குடும்பத்தைக் கெடுக்க வந்திருக்கிறார்கள். இந்த பார்வதி அண்ணிக்குக் கொஞ்சமும் புத்தியே இல்லை. முதலில் அண்ணனிடம் தெளிவாகப் பேசிவிட வேண்டும்.வருங்கால மருமகள் உன்னைவிட யார் முக்கியம் ? அவர்களுடன் உறவு கொண்டாடி நமக்குள் விரிசல் வர வைத்து விடுவார்கள் போல.” சத்தமின்றி தீனியை எடுத்துக்கொண்டு நகர்ந்தாள் நித்யா. அவளுக்காகப் படத்தை நிறுத்திவைத்திருந்து காத்திருந்தார்கள். அவள் சென்றதும் எல்லோரும் படத்தைப் பார்த்தார்கள். நித்யாவின் மனதில் ஏதோ வலி. பல நாட்களுக்குப் பின் தன் புகுந்த வீட்டில் ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்று சாந்தா அத்தை மிகவும் சந்தோசப்பட்டாள். ஆனால் அவர்கள் வருகையால் இங்கே குழப்பம் என்றால், அவளால் ஏற்க முடியவில்லை. படத்தில் அவள் கவனம் இல்லை. எல்லோரும் சிரிக்கும் சத்தம் கேட்கவும், திரும்பிப் பார்த்தாள். அரவிந்த் கேட்டான், “என்ன செமினார் வகுப்பில் இருப்பது போல் கவனிக்கிறாய்”. “ஒன்றும் இல்லை. வேறெதோ யோசித்துக்கொண்டிருந்தேன்.” இருளில் அவளின் முகவாட்டம் அரவிந்துக்கு தெரிந்தது. “என்ன உடம்பு சரியில்லையா ?” என்றான். “லேசாகத் தலை வலிக்கிறது. அதிக சத்தத்தால் இருக்கும்.” என்றதும் “சத்யனிடம்,”சத்யா கொஞ்சம், சத்தத்தைக் குறைத்து வை” என்றான் அரவிந்த். “படத்தை இப்படிப் பார்த்தால் தான், நன்றாக இருக்கும்” என்றான் சத்யன். “நித்திக்கு தலை வலிக்கிறதாம். கொஞ்சம் குறைத்துக் கொள்.” வீட்டில் திரையரங்குபோல் அமைத்துச் சத்தம் வெளியே கேட்காத வண்ணம் சவுண்ட் புரூப் செய்திருந்தார்கள். அருணின் ஏற்பாடு. கதவுகள் அடைத்திருந்தால் வெளியே யாருக்கும் கேட்காது. தலை வலி என்றதும் சத்தத்தைக் குறைத்தான் சத்யன். அதற்குள் யாரோ கதவைத் தட்டினார்கள். பார்வதி தான். “படம் பார்த்தால் உங்களுக்கு நேரம் போவதே தெரியாது. சாப்பிட வாருங்கள்.” என்று எல்லோரையும் அழைத்தாள். சாப்பிட்டு முடித்ததும் எல்லோரும் பண்ணைக்குச் செல்வதாகத் திட்டம். ஒரே காரில் எல்லோரும் செல்ல முடியாது என்பதால், இரண்டு கார்களை எடுத்தார்கள். ஒன்று எட்டு பேர் அமரக்கூடிய கார். மற்றொன்று ஐந்து பேர் செல்லக்கூடியது. பெரிய காரை அருணும், சிறியதாய் சிவநாதனும் ஓட்டினார்கள். எல்லோரும் தோட்டம் சுற்றிக்கொண்டிருக்க, முதலில் பெரியவர்கள், பிறகு பிள்ளைகள் என்று நடந்துகொண்டிருக்க, வேதவல்லி மட்டும் யாருடனும் பேசாமல் தனியே நடந்துகொண்டிருந்தாள். அவளை யாரும் கவனிக்கவில்லை. அன்னையுடன் கீர்த்தியும் செல்லத் தொடங்கினாள். வித்யாவுக்குச் சங்கடமாக இருந்தது. இப்போது அவளுக்கு நிஜமாகவே தலை வலித்தது. அவள் வேகத்தை வெகுவாகக் குறைத்துக்கொண்டாள். அப்போது தான் அருண் அவளிடம் மாத்திரை வேண்டுமா? என்று கேட்டான். நித்யா சோர்வைக் கண்டு, “இப்போதும் தலை வலி இருக்கிறதா ?மாத்திரை வாங்கி வரவா ?” என்று கேட்டான் அருண். அவன் கேட்டது முன்னே சென்ற மற்றவர்களுக்குக் கேட்டிருக்காது. இவர்கள் இருவரையும் பார்த்து அரவிந்தும் வந்து சேர்ந்தான். எல்லோரும் அவள் பக்கம் கவனம் செலுத்தத் தொடங்கினால் நன்றாக இருக்காது என்று, “எல்லோரும் பார்த்தால், இங்கே வந்த மகிழ்ச்சியே இல்லாமல் போகும். எனக்கு ஒன்றும் வேண்டாம். போகலாம்” என்றாள் நித்யா. “அவர்கள் எல்லோரும் நம் வீட்டவர் தானே. யாரும் வேற்று மனிதர்கள் இல்லை. இதுவும் ஒன்றும் சுற்றுலா தளமும் இல்லை. இன்று இல்லை என்றால் நாளை வரலாம்.” என்றான் அருண். அவளுக்காக எல்லோரும் திரும்புவதா ? “லேசான தலைவலிதான். நான் சமாளித்துக் கொள்வேன்.” வேகமாக நடக்கத் தொடங்கினாள் நித்யா. அருண் அரவிந்த் முகத்தைப் பார்த்தான்.”அவளை மாத்திரை சாப்பிட வைப்பது ரொம்ப கஷ்டம். அதற்கான ஏற்பாடே தனி. விடுங்கள் அண்ணா வீட்டிற்குச் சென்று பார்த்துக் கொள்ளலாம்.” என்று அரவிந்த் சொல்ல, லேசாகச் சிரித்து விட்டு இருவரும் நித்யாவை பின் தொடர்ந்தார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு, அருண் அரவிந்த் இருவரையும் காணவில்லை. எங்கே என்று தேடும்போது, வெகுதொலைவில் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். கதிரவன் மறைய தொடங்கியதும், எல்லோரும் காருக்குத் திரும்ப, அருண் ஓட்டிவந்த காரின் பம்பரில் பெரிய ஒடுக்கு. எல்லோர் கண்ணிலும் படும்படி பெரியது. முதலில் கேட்டது செல்வநாதன் தான். “இதென்ன, காரில் ஒடுக்கு. வரும்போது இல்லையே !” சட்டென்று அருண் சொன்னான்,” ஒன்றும் இல்லை, நான் தான் கல்லில் இடித்துவிட்டேன் மாமா.” என்றான். “கல்லா, இங்கே அந்த உயரத்தில் கல் எதுவும் இல்லையே !” என்று சுற்றும் முற்றும் பார்த்தார். அதற்குள் சத்யன்,“ஹய்ய. நீயும் இடித்துவிட்டாயா! இப்போது நீயும் நானும் சமம். இல்லை என்றால் எப்போதும் அப்பா, அண்ணாவைப் பார், வாகனம் ஓட்டும்போது அவன்போல ஓட்ட வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.” என்றான். அதற்குள் சிவநாதன், “அவன் பம்பரில் தான் ஒடுக்காக்கி இருக்கிறான். நீ எதிரில் இருந்த வேனில் வண்டியை விட்டாய்.” என்றார். அப்போது பேச்சு சத்யன் செய்த விபத்தை விசாரிப்பது பற்றித் திரும்பியது. “அப்போது யாருக்கும் ஒன்றும் அடி படவில்லையே !”என்றார் செல்வநாதன். “ஒன்றும் இல்லை. நின்றுகொண்டிருந்த வேனில் மோதியதால் ஒன்றும் ஆகவில்லை. வண்டிக்கு மட்டும் அதிக சேதாரம். ராசி இல்லை என்று அப்போதே விற்றுவிட்டோம். சரி ! எல்லாம் வீட்டில் போய்ப் பார்த்துக் கொள்ளலாம். புறப்படலாம்” என்றார் சிவநாதன். “இப்போது நான் ஓட்டவா !”என்றான் சத்யன். “இருட்டத் தொடங்கிவிட்டது ! அருணே ஒட்டட்டும்.” என்று பார்வதி எல்லோரையும் கிளப்பினாள். வழியிலேயே வேதவல்லியையும் கீர்த்தியையும் அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு வந்தான் அருண். அடுத்த நாள் சென்னை செல்ல, செல்வநாதன் குடும்பம் கிளம்பத் தயாராகினர். “அடுத்த முறை, இன்னும் நான்கு நாள் இருக்கும்படி வாருங்கள். அப்படியே மேகமலைக்குச் சென்று வரலாம்.” என்றாள் துளசி அம்மாள். அதற்கென்ன, “நாளை காலை சென்றால் போகிறது.” என்றாள் பார்வதி. “ஐயோ ! எனக்கு லீவு இல்லை” என்றான் அரவிந்த். “ஒரு நாள் மட்டும் லீவு போடு ! நாளையும் மறுநாளும் அங்கே இருந்துவிட்டு வரலாம். இப்போதுதான் நன்றாக இருக்கும்.” என்றான் சத்யன். “இன்னும் ஒரு நாள் லீவு எடுத்தால் மதிப்பெண்ணைக் குறைத்து விடுவார்கள். என்னால் முடியாது” என்றான் அரவிந்த். “அண்ணா, ப்ளீஸ் எனக்காக ! நீ வந்தபின் செல்லலாம் என்று தான் நான் இருந்தேன்.” என்றாள் அனிதா. “அனிதா ! அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம். மாமாவுக்கும் லீவு இல்லை” என்றாள் சாந்தா. “சரி அப்படியானால், நீங்கள் செல்லுங்கள். நானும் அனிதாவும் நித்யா அக்காவும் சென்று வருகிறோம்” என்றான் சத்யன். “எனக்கு லீவு இல்லை” என்று நித்யா சொல்ல, “இது பொய் ! நீங்கள் ஒரு வாரம் வீட்டில் இருக்கப் போவதாகச் சொன்னீர்கள் தானே !” என்றான் சத்யன். முன்பு பேசும்போது நித்யா அனிதாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். சத்யன் அப்போது கேட்டிருக்கக்கூடும். “அதுதானே ! அரவிந்த் அடுத்த முறை வரட்டும். இப்போது நாம் சென்று வரலாம்.”என்றாள் பார்வதி. செல்வநாதன் சுமதி இருவரும் தயங்கவும், “அண்ணா ! இன்னும் நீங்கள் எங்களை அந்நியமாகப் பார்க்கிறீர்கள். எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது” என்றாள் பார்வதி. “நித்யா இருந்தால் அனிதாவுக்கு நன்றாக இருக்கும். அவளும் எவ்வளவு நேரம் பார்வதி பின்னால் சுற்றுவாள். அதுவும் நித்யாவும் லீவில் தானே இருக்கிறாள்.” என்று சிவநாதன் சொல்ல, நித்யாவை இன்னும் இரண்டு நாட்கள் இருந்து விட்டு வரும்படி சொன்னார் செல்வநாதன். “நானும் அக்காவுடன் சென்னை திரும்பி விடுகிறேன்.” என்றாள் அனிதா. “பார் அம்மா ! அவள் அக்கா வந்ததும் அவளுடன் ஒட்டிக்கொண்டதை” என்றான் சத்யன். “நீங்கள் தான் எப்போதும் உங்கள் நோட் எல்லாம் என்னை எழுதச் சொல்கிறீர்கள்.” என்று எல்லோர் முன்னும் பிள்ளைகளின் ரகசியத்தைப் போட்டு உடைத்தாள் அனிதா. பார்வதி “சத்யா !” என்றதும், வேகமாக அவன் அறைக்கு ஓடத் தொடங்கினான். “என்னிடம் நீ சிக்குவாய்” என்று அனிதாவை எச்சரித்துவிட்டு ஓடினான். எல்லோருக்கும் சிரிப்பு. கிளம்பும் முன் சாந்தா கேட்டாள், “ஏனம்மா அதற்குள் சென்னை வர வேண்டும் என்கிறாய் ?”. “உங்களை எல்லாம் விட்டு விட்டு அதிக நாள் இருந்ததே இல்லையா ! கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.” என்றாள் அனிதா. முதலில் மகளுக்கு எதுவும் சிரமம் இங்கே இருக்குமோ என்று பயந்தாள் சாந்தா. ஆனால் பார்வதியின் அன்பின் மேல் நம்பிக்கை இருந்தது. எதற்கும் மகளிடம் கேட்டுக் கொள்ளலாம் என்று தான் கேட்டாள். மகள் சொன்ன காரணம் சரியென்று பட மேகமலை சென்று வந்தபின் சென்னை வரும்படி சொன்னாள். செல்வநாதனின் வருமானத்தில், குடும்ப செலவு தாண்டி ஒரு வீட்டைக் கட்டி, அத்தியாவசியங்களைப் பார்க்கவே சரியாக இருந்தது. பெண்கள் வருமானம் கொண்டே பிள்ளைகளின் பெயரில் வைப்புநிதி சேர்க்க முடிந்தது. சுற்றுலா, கேளிக்கை என்று அதிக விரயம் செய்ய முதலில் முடியவில்லை. முடியும் நேரத்திலும், செல்வநாதன் கணக்கு பார்த்துத்தான் செய்வார். பிள்ளைகளுக்கு ஏற்றார் போல் திரைப்படம் எதுவும் வந்தால் கூட்டிச் செல்வார். மற்றபடி கடற்கரை, பூங்கா என்பதோடு சரி. கோடையில் மலைப்பிரதேசம், இல்லை சிறிய மகிழ்வுலா என்றெல்லாம் அதிகம் சென்றதில்லை. பள்ளியில் அழைத்துச் செல்லும் ஒருநாள் சுற்றுலா தவிர வேறெங்கும் சென்றதில்லை. அனிதாவுக்கு இப்போது ஒரு வாய்ப்பு கிடைக்க, அதைவிட மனம் வரவில்லை. எப்படியேனும் அங்கே செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டாள். ஒரு வழியாக நித்யாவையும் சம்மதிக்க வைத்தாள். நித்யா, அனிதாவைத் தவிர செல்வநாதன் குடும்பத்தில் எல்லோரும் சென்னை புறப்பட்டனர். எந்நேரமும் யாரோ ஒருவர் இருக்க, அனிதா நித்யாவிடம் எதுவும் பகிரவில்லை. அன்று இரவு அனிதா நித்யாவை கேட்டாள். “அக்கா ! அம்மா ஏன் மாமாவின் வீட்டுக்கு வந்தார்.” “மாமா வீடா? அது நம் வீடு.” “முதலில் வரும்போது அது மாமா வீடுதானே !” அனிதாவின் பேச்சிலிருந்த கவலை நித்யாவுக்கு ஏதோ செய்தது. வீட்டில் எப்போது இதுபற்றி யாரும் பேசியதில்லை. முக்கியமாகப் பிள்ளைகள் இருக்கும்போது. நித்யாவுக்கும் முழு விவரங்களும் தெரியாது ! “இங்கே இருப்பதை விட, நம் வீட்டில் இருப்பது சௌகரியமாக இருந்திருக்கும்.” “இங்கே ஏன் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை.” இன்று ஏன் அனிதா கடந்ததை பற்றி இவ்வளவு கேட்கிறாள்? “அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நீயாகக் கற்பனை செய்யாதே.” “நான் ஒன்றும் கற்பனை செய்யவில்லை. தாத்தா தான் அம்மாவை வீட்டை விட்டுத் துரத்தினாராம்.” என்றாள் அனிதா தழுதழுத்த குரலில். “அப்பா இறந்தவுடன் அம்மாவை ஏன் வீட்டை விட்டுத் துரத்த வேண்டும்.” நித்யாவுக்கு பதறியது. நித்யா அறிந்தவரை, அவர்களுடன் இருந்த கருத்து வேறுபாட்டால், சாந்தா பிறந்த வீட்டிற்கு வந்துவிட்டாள். ஆனால் அவளை விரட்டினார்கள் என்று அனிதா சொல்வது, நித்யாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. “அப்படி எல்லாம் இல்லை” என்று நித்யா சமாதானம் சொல்ல, “இல்லை, அந்தக் கீர்த்தியின் அம்மா பேசும்போது கேட்டேன். தாத்தா இருந்தவரை, அம்மாவைச் சேர்த்துக் கொள்ளவே இல்லையாம். பாட்டி தான் எங்களைப் பார்க்க வேண்டும் என்று எங்களைச் சேர்த்துக்கொண்டாராம். இங்கே யாருக்கும் அம்மாவைப் பிடிக்கவில்லை.” நித்யாவுக்கு அனிதா சொல்வது முற்றிலும் சரி இல்லை என்றே தோன்றியது. துளசி அம்மாளின் பாசம் உண்மை. அவருக்காக மற்றவர் நடிக்கிறார்கள் என்றால், அவர் இல்லாத போதும் கலகலப்பாகப் பேசும் பார்வதி, அண்ணி என்ற மரியாதையைக் காட்டும் சிவநாதன். மூன்றாவது நபரான நித்யாவிடம் கூடக் காட்டும் பாசம். சாந்தாவின் மேல் வெறுப்பு இருந்தால் எப்படி முடியும்? ஒருவேளை வேதவல்லிக்கு சாந்தாவின் வரவு பிடிக்காமல் இருக்கலாம். அப்படித்தான் இருக்க வேண்டும். நித்யாவே அவர்கள் பேச்சைக் கேட்டாளே ! “அனிதா! உன் சித்தி சித்தப்பா உன்மேல் பிரியமாக இருக்கிறார்கள் தானே! உன் அண்ணன்களும் அப்படித்தானே. மற்றவர்பற்றி யோசிக்காதே. இன்னும் இரண்டு நாட்கள். அதன் பிறகு எப்போதாவது தான் வருவீர்கள். உறவுகள் என்றால் இதுபோல் இருக்கும். எல்லாருக்கும் நம்மைப் பிடிக்க வேண்டும் என்று இல்லை.” “ஆனால் எனக்கு இவர்கள் எல்லோரையும் பிடித்திருக்கிறது. எனக்கு யார் மேலும் எந்த வருத்தமும் இல்லை. சமயம் கிடைக்கும் போதெல்லாம் இவர்களுடன் இருக்க வேண்டும் என்று தான் தோன்றுகிறது. ஆனால் நான் இருந்தால் இங்கே வரப் பிடிக்கவில்லை என்று கீர்த்தி அக்கா சொல்கிறாள்.” என்றாள் அனிதா. இப்போது நித்யாவுக்கு ஆத்திரம் வந்தது. “உன் முன்னே அப்படிச் சொன்னாளா!” என்று கேட்கவும். அனிதாவின் கண்களில் நீர் மணிகள். “ஏய் ! அனிதா அழக் கூடாது! அவள் எப்போது சொன்னாள்.” “சத்யன் அண்ணா ‘ஏன் வீட்டுப் பக்கம் வரவில்லை’ என்று கீர்த்தி அக்காவைக் கேட்டான். யார் யாரோ வருகிறார்கள் போகிறார்கள். இங்கே வருவதென்றால் பிடிக்க வில்லை என்றாள்”. “இதோ பார் ! இது ஒன்றும் அவள் வீடில்லை ! அவள் சொன்னதுக்கு நீ ஏன் அழுகிறாய் ?” “நான் என்ன செய்தேன் ! என்னை ஏன் பிடிக்கவில்லை” என்று அழுதாள் அனிதா. அனிதா வீட்டில் எல்லோருக்கும் செல்லம். பள்ளியில் கூட நித்யா அரவிந்த் இருவரின் தங்கை என்பதால் எல்லோரும் அவளிடம் நன்றாகவே பழகுவார்கள். தோழிகள் கூட எப்போதும் இதமாக இருப்பார்கள். வெறுப்பு என்ற ஒன்றை அவள் இதுவரை சந்தித்ததில்லை. இப்போது அவளை ஒருவருக்குப் பிடிக்கவில்லை. அதுவும் காரணமின்றி என்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. “நீ ஒன்று செய்யவில்லை ! அவளுக்கு உன்மேல் வருத்தம். ஒரு வித போட்டி. உன்னை இங்கே எல்லோரும் நன்றாகக் கவனித்துக் கொள்கிறார்கள். இதுவரை அவளை மட்டுமே வீட்டில் எல்லோரும் கவனித்து வந்தார்கள். இப்போது நீயும் வர, அவள் இடம் பறிபோன கோவம் அவ்வளவு தான். இனியும் அவளைப் பற்றி யோசிக்காதே ! நீ இப்படி எல்லாம் பேசுவது இந்த வீட்டில் இருப்பவர்கள் கேட்டால் எத்தனை வருத்தப் படுவார்கள். அதுவும் உன் சித்தி உன்னை எப்படி எல்லாம் கவனிக்கிறார்கள்.” “ஆம் அக்கா ! சித்தி ரொம்ப நல்லவர்கள்.” என்றாள் அனிதா. “அவர்கள் எப்போதும் உன்னிடம் பிரியமாகத்தான் இருப்பார்கள். மற்றவர்களைப் பற்றி ஒன்றும் நினைக்காதே. இனியும் மற்றதைப் பற்றி யோசிக்காதே ! படுத்துத் தூங்கு !” என்றாள் நித்யா. அனிதா சிறிது நேரத்தில் உறங்கினாலும், நித்யாவுக்கு உறக்கம் வரவில்லை. ஒரு சிறிய பெண்ணை இப்படி மனம் நோகடித்திருக்கிறாளே இந்தக் கீர்த்தி. அவளுக்குச் சமயம் வரும்போது திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். காலையில் உணவைச் சீக்கிரம் முடித்துக் கொண்டு, மேகமலைக்குக் கிளப்பினார்கள். இம்முறை பார்வதியும் சிவநாதனும் வரவில்லை. முதலில் பெரியவர்கள் யாரும் இல்லையே என்று யோசிக்கும்போது வேதவல்லி வருவதாகச் சொன்னாள் பார்வதி. உடன் கீர்த்தியும். அவர்கள் பெயர் கேட்டதும் முகம் வாடினாள் அனிதா.” அவர்களால் நாம் சோர்வடைவது அவர்களுக்கு வெற்றி ஆகிவிடும். அவர்களையோ, அவர்கள் பேச்சையோ கண்டுகொள்ளவில்லை என்றால் அவர்களே நிறுத்திக் கொள்வார்கள்.” என்று நித்யா அனிதாவிடம் சொல்லித் தேற்றினாள். அருணும் சத்யனும் முன் இருக்கையில் அமர, நித்யாவும் அனிதாவும் நடுவில் இருக்கும் சீட்டில் அமர்ந்தாள். வேதவல்லியின் வீட்டில், அவர்கள் ஏறும்போது, “ஏய், பின்னால் சென்று உட்கார். அம்மா உட்கார வேண்டும்.” என்றாள் கீர்த்தி அனிதாவைப் பார்த்து. இவள் யார் உத்தரவு போடா ! சட்டென்று நித்யா, “நான் பின்னால் சென்று உட்காருகிறேன், கீர்த்தி நீ என்னுடன் பின்னால் வந்து உட்கார். அனிதா இங்கேயே இருக்கட்டும்.” என்றாள். “எனக்குப் பின்னால் அமர்வது சரிவராது.” என்றாள் கீர்த்தி. “நானே உன்னுடன் வருகிறேன் அக்கா !” என்று பின் இருக்கைக்குச் சென்று அமர்ந்தாள். மலைப் பாதையில் பிரயாணம் நன்றாக இருந்தது. அதோ அந்த மரத்தைப் பார். அங்கே இருக்கும் பூவைப்பார் என்று எல்லாவற்றையும் ரசித்தபடி அனிதாவும் நித்யாவும் பேசிக் கொண்டு வர, “நாங்கள் எத்தனை முறை பார்த்துவிட்டோம். புதிதாக மிட்டாய்க் கடையை யாரோ பார்த்தார்களாம். அதேபோல் தொணதொண என்று பேசிக்கொண்டே வருகிறீர்கள். எனக்குத் தலை வலிக்கிறது” என்றாள் வேதவல்லி. “உங்களுக்கு முடியவில்லை என்றால், நீங்கள் பாட்டியிடம் இருந்திருக்கலாம். நாங்களும் அம்மாவையே அழைத்து வந்திருப்போம்.” என்றான் சத்யன். “உன் அம்மா இப்போதெல்லாம், ஊர் சுற்றுவதில் தான் குறியாக இருக்கிறார். வீட்டிலிருந்து என் அம்மாவைக் கவனிக்கப் பிடிப்பதில்லை. அதுவும் உறவினர்கள் வந்ததிலிருந்து எந்நேரமும் வெளியே செல்ல என்னை அமர்த்திவிட்டு நாள் முழுவதும் சென்று விடுகிறார்.” என்று பார்வதியைக் குறை கூற, சத்யன் பேசும்முன் அருண் ஒரு பார்வையால் அவனைத் தடுத்து விட்டான். பின் சீட்டிலிருந்த நித்யாவுக்கு இது தெரியாது. “என்னமோ ஆண்டி! நிறையப் பேர் இப்போதெல்லாம் பெற்றவர்களைப் பார்க்கக்கூடத் தயங்குகிறார்கள். ஆனால் பார்வதி அத்தை, மாமியாரைக் கவனிப்பதில் யாரும் மிஞ்சி விட முடியாது. பாட்டிக்கு முடியாமல் சென்றதிலிருந்து எந்நேரமும் பாட்டியுடன் தான் இருக்கிறாராம். அதிகம் கடைகளுக்குக் கூடச் செல்வதில்லையாம். பாட்டியே சொன்னார்கள்.பெற்ற பிள்ளை சென்னையில் சில மாதங்களாகத் தனியே இருக்கிறான் என்றாலும் ஒரு முறை கூட வந்து பார்க்கவில்லை. இந்தக் காலத்தில் எத்தனை பேர் இப்படி இருக்கிறார்கள் ? மருமகள் என்றால் பார்வதி அத்தை மாதிரி இருக்க வேண்டும் என்று பாட்டியே சொல்கிறார்.” என்று நித்யா முடித்தாள். முதலில் தொடங்கியபோது குறை சொல்வது போல் பேசி, பிறகு பார்வதியின் பெருமையைப் பேச, அருணுக்கு மனதில் ஏக சந்தோஷம். ரியர் வியூ கண்ணாடியில் நித்யாவை சில வினாடிகள் பார்த்தான். மீண்டும் சாலையில் பார்த்த போதும் அவனின் முகத்தில் புன்சிரிப்பு. மேகமலைக்குச் செல்லும்போது மதிய உணவு தயாராக இருந்தது எல்லோரும் உண்டு முடித்தனர். சத்யன், அனிதா வெளியே சுற்ற வேண்டும் என்று சொல்லவும், வேதவல்லி எனக்குத் தூக்கம் வருகிறது என்று படுத்துக்கொண்டாள். அருண் கொஞ்சம் வேலை இருப்பதாகச் சொல்லவும், “சரி வீட்டைச் சுற்றி அருகிலேயே நடக்கிறோம்.” என்று சத்யன் சொல்ல, “நீயும் கீர்த்தியும் பார்த்து மற்ற இருவரையும் அழைத்துச் செல்லுங்கள். ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும். பாதைகள் சறுக்கும்.” என்றான். “நான் செல்லவில்லை, நீங்கள் செல்லும்போது உங்களுடன் நான் வருகிறேன்” என்று அருணிடம் குழைந்தாள் கீர்த்தி. அருண் எதுவும் சொல்லாத போதும், “உன் விருப்பம்போல் செய், வாருங்கள் நாம் செல்லலாம் !” என்று சத்யன் முன்னே சென்றான். மூவரும் ஒன்றாக நடக்க, சத்யன் அனிதாவிடம் ஜாடை செய்தான். முன்னே சென்ற நித்யா இதைக் கவனிக்க வில்லை. அவர்கள் சென்றது ஒற்றையடிப் பாதைபோல் இரு புறமும் புதர். சத்யனும் அனிதாவும் சட்டென்று ஒரு புதரின் இடையில் மறைந்து கொண்டனர். தனியாகப் பேசிக்கொண்டு சில அடிகள் நடந்த நித்யா திரும்பிப் பார்க்கும்போது இருவரையும் காணவில்லை. அனிதாவின் சிரிப்பொலி வெகு அருகில் கேட்கவும், மற்ற இருவரும் விளையாடுவது புரிந்து, “எனக்கு ஒன்றும் பயமில்லை. நான் முன்னே செல்கிறேன்” என்று சொல்லியவாறு நடந்தாள். சத்யனும் அனிதாவும் அருகிலிருந்த ஒரு மேட்டில் ஏறினார்கள். அங்கேயும் ஒரு ஒற்றையடிப் பாதை தான். நித்யா செல்லும் பாதையும் இவர்கள் இருவரும் செல்லும் பாதையும் ஒரு சிறு திருப்பத்தை அடுத்து ஒன்றாகச் சேரும். இடையில் வேறு பிரிவு இல்லை. அதனால் முன்னே சென்று நித்யாவுக்கு பயமுட்ட வேண்டும் என்று சத்யன் அனிதாவையும் அழைத்துக் கொண்டு சென்றான். நித்யாவும் செல்ல, அருகிலிருந்த ஒரு புதரின் அருகில் பேச்சுக் குரல் கேட்க, சத்யன் அனிதா என்று நினைத்து, “கண்டுபிடித்து விட்டேன் வெளியே வாருங்கள்” என்றாள். புதரிலிருந்து வேறு இருவர் வெளியே வந்தார்கள். இருவரும் குடித்திருக்க வேண்டும். நெடி நித்யாவின் மூக்கை துளைத்தது. சற்றே பதறினாலும், அவர்களிடம் காட்டாமல், “என்னுடன் வந்தவர்கள் என்று நினைத்து விட்டேன்” என்று நகர முயன்றாள். சட்டென்று அதில் ஒருவன் அவள் முன் பாதையை மறித்தான். “உன்னுடன் எத்தனை பேர் வந்தார்கள் ? இந்தப் பாதையில் காட்டு விலங்குகள் திரியும். தனியே செல்வது ஆபத்து. வா நாங்கள் உடன் வருகிறோம்” என்றான். “வேண்டாம் ! நான் போய்க் கொள்வேன்.” என்று கடக்க முயன்றாள். அவன் மீண்டும் வழி மறித்தான். திரும்பச் சென்று விடலாம் என்று திரும்பினாள். இன்னொருவன் வந்த பாதையை மறித்தான். நித்யாவுக்கு கை கால் உதறத் தொடங்கியது. எப்போதேனும் சென்னையில் வாலிபர்கள் வம்பு செய்தால், தைரியமாகத் திரும்பப் பார்த்தாலே சென்று விடுவார்கள். அங்கெல்லாம் ஆள் நடமாட்டமும் இருக்கும். தனியே எங்கும் இதுபோல் மாட்டிக் கொண்டது இல்லை. பயத்தைக் காட்டாமல் வந்த வழியே செல்ல முயற்சிக்கவும், ஒருவன் அவள் கையைப் பற்றினான். “விடு கையை” என்று முழு பலத்தைக் கொண்டு உதறவும், அவனும் விட்டுவிட்டான். சட்டென்று நிலை தடுமாறி கீழே விழுந்தாள். அந்தப் புதியவர்கள் இருவரும் அருகில் வர, நித்யாவுக்கு கண்களில் நீர் கோர்த்தது. அவளால் எழவும் முடியவில்லை. ஐயோ இனி என்ன ஆகுமோ ! என்று பயத்தை சமயத்தில், யாரோ அவள் கையைப் பிடித்துத் தூக்கினார்கள். அவனைப் பார்த்ததும் அவனை ஒட்டி நின்றாள். “யார் நீங்கள் ? இங்கே என்ன செய்கிறீர்கள் ?” என்றான் அருண் அதட்டலாக. “எஸ்டேட்டில் வேலை செய்கிறோம் ! சும்மா இந்தப் பக்கம் வந்தோம்.” என்றார்கள் இருவரும். “எந்த எஸ்டேட் ! உங்கள் பெயர் என்ன ?” என்றான். அவர்கள் பெயரைச் சொன்னதும், “உரிமையாளர் பரந்தாமன் சார் தானே” என்று அவன் சொல்லவும், அந்தப் புதியவர்கள் இருவரும் இன்னும் நடுங்கினார்கள். “நாங்கள் ஒன்றும் செய்யவில்லை. முதலாளியிடம் ஒன்றும் சொல்லாதீர்கள்.” என்று கெஞ்சினார். “இன்னொரு முறை ஏதேனும் கேள்விப்பட்டேன், உங்கள் முதலாளியிடம் இல்லை, போலீசில் சொல்லிவிடுவேன்” என்றதும், “இந்தப் பக்கம் வரமாட்டோம். எங்களை விட்டு விடுங்கள்” என்று ஓட்டம் பிடித்தனர். நித்யா அருகில் வந்து நின்றவுடன், இயல்பாக அவளைப் பாதுகாப்பது போல் அவள் தோள்களை அணைத்தவாறு கைகளை வைத்திருந்தான். “ஒன்றும் இல்லை ! அவர்கள் சென்று விட்டார்கள்.” என்றான். அவள் உடல் இன்னும் நடுங்குவதைப் பார்த்து, அவளை அணைத்துக் கொண்டான். “சென்னையில் வளர்ந்த பெண். இப்படிப் பயப்படலாமா ?” என்றான் மெதுவாக. “அவள் கண்ணீர் அவன் சட்டையை நினைப்பது தெரிந்தது. மெல்ல அவள் தலையைக் கோதினான். “இட்ஸ் ஓகே. அழக் கூடாது” என்றான். எவ்வளவு நேரம் அப்படி நின்றார்களோ தெரியாது. அவள் நடுக்கம் கொஞ்சம் குறைய மெல்ல விலகி “சாரி ! கொஞ்சம் பயந்து விட்டேன்” என்றாள். “எதற்குச் சாரி ! நீ ஏன் தனியாக இருக்கிறாய் ! சத்யன் அனிதா எங்கே ?” என்றான். நித்யா இன்னும் பாதைகள் இணையும் இடத்திற்கு வரவில்லை என்றதும், சத்யனும் அனிதாவும், நித்யாவை தேடி வந்தார்கள். “நீயும் வந்து விட்டாயா ! எங்கே நித்யா இன்னும் வரவில்லை என்று நினைத்தோம்.” என்றான் சத்யன். “இருவரையும் ஒன்றாகத் தானே கூட்டிக்கொண்டு போகச்சொன்னேன். புது இடத்தில் ஏதும் நடந்தால் நாம் தானே பொறுப்பு.” என்று சத்யனை கத்தினான் அருண். “இங்கே என்ன ஆபத்து ! மேட்டில் இருக்கும் பாதையில் சென்றோம். அக்கா கீழே நடந்துவந்தாள். நான் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்.” என்றான். “என்ன பார்த்தாய் ?” என்று மீண்டும் சீற, அனிதா அருணின் சட்டையில் இருந்த இரத்தத்தை பார்த்து, “உங்கள் சட்டையில் என்ன ?” என்றாள். குனிந்து பார்த்தவன், சட்டென்று நித்யாவின் கையைப் பற்றி உள்ளங்கையைப் பார்த்தான். கையில் பெரிய சிராய்ப்பு. இரத்தம் அதிகம் வரவில்லை என்றாலும், உள்ளங்கை முழுவதும் ரத்தம் இருந்தது. “என்ன ஆச்சு?” என்று பதறினான் சத்யன். “கீழே விழுந்துவிட்டேன் !” என்றாள் மெதுவாக. “சாரி ! சும்மா விளையாட்டாய் ஒளிந்து கொண்டோம். இப்படி ஆகும் என்று தெரியாது” என்று சத்யன் சொல்ல. “பரவாயில்லை. சிறிய காயம் தான்.” என்றாள் நித்யா. “எல்லோரும் திரும்பலாம். முதலில் காயத்திற்கு மருந்திட்டு வேண்டும்.” என்று மூவரையும் அழைத்துச் சென்றான் அருண். இவர்கள் பேசியதை மேட்டிலிருந்த பாதையிலிருந்தபடி கேட்டுக்கொண்டிருந்தாள் கீர்த்தி. சத்யன் அனிதா வரும் முன் அவர்கள் நின்றதையும் பார்த்திருந்தாள். அதற்கு முன் நடந்தது அவளுக்குத் தெரியாது. வீட்டை அடைந்ததும் சத்யன் ஓடிச் சென்று மருந்தை எடுத்துவர, அனிதா முதலில் காயத்தைத் துடைத்தாள். நித்யாவுக்கு வலிக்குமோ என்று பயந்து மெல்ல ஒற்றி எடுத்தாள். காயத்தின் இடையே இருந்த மண் இன்னும் அப்படியே இருந்தது. “நீ நகரு” என்று தங்கையை நகர்ந்து அமரும்படி சொல்லிவிட்டு, அருண் நித்யாவின் காயத்தைச் சுத்தம் செய்யத் தொடங்கினான். சற்று அழுத்தமாகவே துடைத்தான். வலியில் கையைப் பின்னுக்கு இழுத்தாள் நித்யா. அவள் இழுக்க முடியாத படி கையைப் பலமாகப் பற்றினான். “கொஞ்சம் பொறுத்துக் கொள்.” என்று அவன் காயத்தைச் சுத்தம் செய்து முடிக்கும் முன் அவன்பற்றி இருந்த இடம் சிவந்துவிட்டது. மருந்திட்டு மெல்லச் சிவந்த இடத்தைத் தேய்த்து விட்டான். தூக்கத்திலிருந்து விழித்த வேதவல்லி எல்லோரும் ஒன்றாக அமர்ந்திருப்பதைப் பார்த்து, “என்ன அதற்குள் வந்துவிட்டீர்கள் !” என்று அருகில் வந்தாள். நித்யா கையைப் பார்த்ததும், “என்ன ? கீழே விழுந்து விட்டாயா ? பார்த்துச் செல்லக் கூடாது !” என்று சுற்றிப் பார்த்தவள். “கீர்த்தி எங்கே ?”என்றாள். அப்போது தான் உள்ளே வந்தாள் கீர்த்தி. “நீ தனியாவா சென்றாய் ?” என்றாள் வேதவல்லி. “நான் எங்கும் செல்லவில்லை. தோட்டத்தில் தான் இருந்தேன்.” என்று மற்றவர்களைக் கோவமாகப் பார்த்துவிட்டு உள்ளே சென்றாள். “இவளுக்கு என்ன ஆயிற்று !” என்றான் சத்யன். “கொஞ்ச நேரம் ஓய்வெடுங்கள். பிறகு எல்லோரும் அப்படியே சுற்றிவிட்டு வரலாம்.” என்றான் அருண். இரவு உணவு முடித்ததும், நித்யாவுக்கு ஒரு மாத்திரையை எடுத்து வந்து கொடுத்தான் அருண். “இரவில் குளிருக்கு வலி எடுக்கலாம். காய்ச்சல் கூட வரலாம். இந்த மாத்திரையைப் போட்டுக்கொள்ள.” என்று நீட்டினான். நித்யா ஒரு மிரட்சியுடன் பார்த்தாள். அப்போது பாக்கெட்டில் இருந்த ஒரு சாக்லேட்டை எடுத்து நீட்டினான். “இது என்ன ? சின்னப் பிள்ளைகளுக்குச் செய்வதுபோல் !” என்று சிரித்தான் சத்யன். “அக்கா எப்போதும் அப்படித்தான். இன்னும் பக்கத்தில் சர்க்கரை, பிஸ்கட் என்று கடை பரப்பி வைத்தால்தான் சாப்பிடுவாள்” என்றாள் அனிதா. “உனக்குத்தான் தெரியுமே ! உன் அக்காவுக்கு அந்த ஏற்பாடுகளைச் செய்” என்றான் அருண். அனிதா உள்ளே சென்று சர்க்கரை மற்றும் பிஸ்கட் எடுத்து வந்தாள். வேதவல்லியும் உண்டு முடித்ததும் தொலைக்காட்சியில் அவள் பார்க்கும் தொடரைப் பார்க்க முன்னறைக்குச் சென்றுவிட்டாள். அதுவரை அன்னையுடன் இருந்த கீர்த்தி, சிரிப்புச் சத்தம் கேட்டு மற்றவர்கள் இருந்த டைனிங் ஹாலை எட்டிப் பார்த்தாள். எல்லோரும் நித்யாவை சுற்றி நின்று கவனித்தது, கீர்த்திக்கு இன்னும் எரிச்சலை அதிகரித்தது. பேசாமல் நகர்ந்து விட்டாள். சில நிமிடங்கள் மாத்திரையை மிரட்சியுடன் பார்த்தாள் நித்யா. மூவரும் அவளைப் பார்த்துக் கொண்டிருக்க, “நான் என் அறையில் சென்று சாப்பிட்டுக் கொள்கிறேன்.” என்று எழ முயன்றாள். “உன்னைப் பற்றி அரவிந்த் சொன்னான். முதலில் சாப்பிட்டு விட்டு அப்புறம் அறைக்குப் போ.” என்றான் அருண். நித்யாவுக்கு எப்போதும் மாத்திரை மருந்து என்றாள் பயம். சாப்பிட்டதும் குமட்டும். முதலில் சிலமுறை வாயில் வைத்துக் கொண்டு, யாருக்கும் தெரியாமல் துப்பி விடுவாள். இவளின் திருட்டு தனம் தெரிந்ததும், எப்போதும் இவளுக்கு மாத்திரை தர வேண்டும் என்றால் குறைத்து இருவர் இவளைக் கவனித்துக் கொண்டே இருப்பார்கள். கொஞ்சம் சிறிய வயதில் பெற்றோர்கள் கவனிப்பார்கள். இப்போதெல்லாம், நித்யாவை மாத்திரை விழுங்க வைப்பது, அனிதா அரவிந்தின் வேலை. ஆனால் அவன் ஏன் அருணிடம் சொல்ல வேண்டும்? சென்ற முறை பண்ணையில் தலைவலி மாத்திரை வாங்க சென்றபோது அரவிந்த் சொல்லி இருந்தான், ‘நித்யாவை மாத்திரை சாப்பிட வைப்பது சுலபம் இல்லை’ என்று. பலரும் மாத்திரையை விழுங்க அருகில் இனிப்பு வைப்பது வழக்கம் தான். இருந்தாலும் அரவிந்திடம் கேட்டுத் தெரிந்து கொண்டான். நித்யா இன்னும் மாத்திரையைப் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள். “இன்னும் எத்தனை நேரம் பார்க்கப் போகிறாய்.சீக்கிரம்”என்றான் அருண். சத்யனும் அனிதாவும் இருவரும் நித்யாவை பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தனர். வயதில் சிறியவர்கள் சிரிப்பது போல் நடந்து கொள்வதா ? சட்டென்று மாத்திரையை விழுங்கினாள். அருகில் இருந்த சர்க்கரையும் பிஸ்கட்டையும் ஒன்றாக வாயில் திணித்தாள். மீண்டும் சிரிப்புச் சத்தம் கீர்த்தி கோபத்தை உச்சிக்குக் கொண்டு சென்றது. எல்லோரும் முன் அறைக்கு வர, வேதவல்லி “நான் தூங்க போறேன். நீங்களும் சீக்கிரம் படுங்கள்.” என்று எழுந்தாள். “நாங்கள் கொஞ்ச நேரம் படம் பார்க்கிறோம்.” என்றான் சத்யன். அன்னையுடன் செல்ல எழுந்த கீர்த்தி அப்படியே அமர்ந்தாள். நித்யா தூங்க போவதாகச் சொல்லி விட்டு, அவளுக்குக் கொடுத்த அறையில் சென்று படுத்துகொண்டாள். முதல் படம் முடிந்தது. அடுத்த படம் பார்க்கலாம் என்று சத்யன் சொல்ல, அனிதாவும் “எனக்குத் தூக்கம் வருகிறது” என்று அவள் அறையை நோக்கி நடந்தாள். “போதும் ! எல்லோரும் சென்று படுங்கள்.” என்ற அருண்,“அனிதா, நித்யாவுக்கு காய்ச்சல் ஏதும் இருக்கிறதா என்று பார் !” என்றான். உள்ளே சென்று பார்த்தவள் “காய்ச்சல் இல்லை” என்றாள். எல்லோரும் உறங்கிப் போனார்கள். கீர்த்திக்கு உறக்கம் வரவில்லை. அருண் நித்யாவின் மேல் காட்டும் அக்கறை, அவளை வெகுவாகப் பாதித்தது. ஒருவேளை, அவர்கள் ஒருவரை ஒருவர் அணைத்தது போல் நிற்பதை பார்க்க வில்லை என்றால், கீர்த்திக்கு ஒன்றும் தெரிந்திருக்காது. அதைப் பார்த்தபின், அவள் கவனம் அருண் நித்யா இருவர் மேல் தான் இருந்தது. அருண் அவளைக் கவனிக்கும் விதம், அவளிடம் காட்டும் அக்கறை கீர்த்தியின் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளிக்குக் காட்டும் கவனிப்பு அல்ல அது. நித்யாவை பார்க்கும்போது, அவன் கண்களில் இருக்கும் கனிவு கீர்த்தியிடம் கூடக் காட்டியதில்லை. அவள் காயத்துக்கு அவனே மருந்திட்டான். ஒரு மாத்திரையை அவளுக்குக் கொடுக்க என்னவெல்லாம் செய்தான். முதலில் அருணின் செயலை ஆராய்ந்தவள், எல்லாவற்றிக்கும் நித்யா தான் காரணம் என்று முடிவெடுத்தாள். யாரும் அறியாமல் அருணை அவள் பக்கம் இழுக்க பார்க்கிறாள். எல்லோர் முன் விலகி இருக்கும் நித்யா, சுற்றி யாரும் இல்லாதபோது, அவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டு நின்றாள். அவள் எண்ணம் அருணிடம் பழகி, அவன் அன்பை சம்பாதிப்பது. அப்படி செய்து விட்டால், வசதியான வாழ்க்கையை வாழலாம். இது அவளாகச் செய்யும் வேலையா ? இல்லை குடும்பமாகச் சேர்ந்து செய்கிறார்களா ?எப்படியானாலும் சரி அவளை அருண் பக்கம் நெருங்க விடக் கூடாது. முதலில் அன்னையிடம் இதுபற்றிப் பேசலாம் என்று எண்ணினாள். அருகில் நன்கு உறங்கிக் கொண்டிருக்கும் அன்னையை நள்ளிரவில் எழுப்ப மனம் வரவில்லை. விடிந்ததும் பேச வேண்டும். அந்த நித்யா சென்னை கிளம்பும் முன், அவள் அருண் பக்கம் திரும்பாதவண்ணம் நன்றாகக் கொடுக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். ஒருவேளை கீர்த்தியின் பேச்சைக் கேட்டும், நித்யா அருணை நெருங்கினாள் அப்போது பெரியவர்களிடம் சொல்லலாம் என்று முடிவு செய்தாள். இரவு முழுவதும் தூங்காமல் யோசித்துக்கொண்டு இருந்ததாள். அவள் காலையில் மிகத் தாமதமாக எழுந்தாள். அவள் தயாராகி வரும்போதே எல்லோரும் ஊருக்குக் கிளம்ப தயாராக இருந்தனர். வேதவல்லி உட்பட. மழை பெய்து கொண்டிருந்ததால், வெளியே எங்கும் சுற்ற முடியாது. அதுவும் இல்லாமல், அதிக மழை பெய்தால் செல்லும் வழி சற்று மோசமாகிவிடும். பெட்டிகளைக் காரில் எடுத்து வைத்து, எல்லோரும் காரில் அமர, கீர்த்தி முன்புறம் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்தாள். “ஏய்! அது என்னிடம்” என்றான் சத்யன். “வரும்போது நீதானே இங்கே உட்கார்திருந்தாய் ! இப்போது நான் தான் உட்காருவேன்” என்றாள். “முடியாது ! நான் தான் முன்புறம்” என்றான் சத்யன். “சரி விடு அவள் உட்காரட்டும். நீ போய்ப் பின்னால் உட்கார்.” என்று சத்யனுக்கு சொன்னான் அருண். நித்யா பின் இருக்கைக்குச் செல்ல முயன்றபோது, “நீ அத்தை பக்கத்தில் உட்கார், சத்யனும் அனிதாவும் பின்னால் உட்காரட்டும்.” என்றான் அருண். கையில் இருக்கும் காயத்துடன் எதையும் பிடிக்காமல் பின் இருக்கைக்குச் செல்வதும் வெளியே வருவதும் கஷ்டமே. அவள் அதை யோசிக்கவில்லை. அருண் சொல்லவும் சரி என்று தலையாட்டினாள் நித்யா. கீர்த்திக்கு இது எரிச்சலை தந்தது. ஏற்கனவே அமர்ந்தவள் இருவரையும் முறைத்துக் கொண்டிருக்க அருண் அடுத்து செய்தது அவளுக்கு இன்னும் ஆத்திரத்தை கிளப்பியது. நித்யா அமர்த்தும், தரையில் உரசுவது போல் இருந்த அவள் துப்பட்டாவை குனிந்து எடுத்து அவள் முன் நீட்டினான். நித்யா ’தேங்க்ஸ் ; என்று சொல்லச் சிரித்தபடி அவள் பக்கம் இருந்த கதவைச் சாத்திவிட்டு காரை எடுத்தான். இந்த அருண் மாமாவுக்கு என்னதான் ஆனது? அவளுக்கு ஓடி ஓடி வேலை செய்கிறார். இப்படியே போனால் நல்ல திற்கில்லை. குறைந்த பட்சம் நித்யாவை விட அருணிடம் தனக்கு தான் உரிமை இருக்கிறது என்று காட்ட வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள் கீர்த்தி. அவள் செய்த மடத்தனம் நித்யாவுக்கு சாதகமாகும் என்று அவள் நினைக்கவில்லை. கார் கிளம்பிய சிறிது நேரத்தில், வேதவல்லி தூங்கிவிட்டாள். பின்னால் பேசிக்கொண்டு வந்த அனிதாவும் சத்யனும் கூட லேசாகத் தூக்க கலக்கத்தில் அமைதியாவே வந்தார்கள். இரவில் படத்தைப் பார்த்தது மட்டுமில்லாமல், அதிகாலையில் சூரிய உதயத்தை பார்க்க வேண்டும் என்று கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து விட்டார்கள். மழை காரணமாகச் சூரிய உதயத்தையும் பார்க்கவில்லை, மீண்டும் தூங்கலாம் என்றாலும் உணவை முடித்துக் கொண்டு ஊருக்குக் கிளம்பலாம் என்று விட்டான் அருண். இரவில் நன்றாகத் தூங்கியது நித்யாவும் வேதவல்லியும் தான். கீர்த்திக்கு ஒரு யோசனை வந்தது. அவளும் தூங்குவது போல் ஒரு முறை அருணின் மேல் சாய்ந்தாள். அவன் எதுவும் சொல்லவில்லை என்றாலும் அவன் கண் ஒருமுறை ரியர் வியூ மிரறில் நித்யாவின் பக்கம் சென்றது. அவள் வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள். சிறிது தூரம் சென்றதும் வண்டியை ஓரமாக நிறுத்தினான். ஏன் கார் நிற்கிறது என்று பார்த்தபோது, மெதுவாகக் கீர்த்தியின் தலையை அவன் தோள்மேல் இருந்து நகர்த்தினான். “கீர்த்தி” என்று அவளை எழுப்பினான். அவள் தூக்கத்திலிருந்து எழுவது போல், “என்ன மாமா” என்று அப்பாவியாகக் கேட்டாள். “நீ பின்னால் சென்று உட்கார்” “ஏன் மாமா?” “உனக்குத் தூக்கம் வருகிறது. நீ போய் அத்தை பக்கத்தில் உட்கார்.” “இனி நான் தூங்க வில்லை !பின்னால் மூன்று பேர் உட்கார்ந்தால் இடைஞ்சலாக இருக்கும். நான் இங்கேயே உட்காருகிறேன்”. “சொன்னால் கேள் கீர்த்தி. நீ தூங்கினால் கூடப் பரவாயில்லை. என்மேல் சாய்கிறாய். நான் எப்படி காரை ஓட்டுவது. உனக்குப் பின்னால் நெருக்கமாக இருக்குமானால், நித்யா முன்னாள் வரட்டும்.” என்றவன், நித்யாவை பார்த்து, “நீ முன்னால் வந்து உட்கார்” என்றான். “அவள் எதற்கு ? அம்மா வரட்டும்” என்றாள் கீர்த்தி. இவர்கள் பேசுவது எதுவும் வேதவல்லியின் தூக்கத்தை கலைக்கவில்லை. “இப்போதைக்கு தெளிவாக இருப்பது நித்யா மட்டும் தான். இப்போதே மெதுவாகச் செல்கிறோம். மழை அதிகமாவதற்குள் மலையிலிருந்து கீழே இறங்க வேண்டும்.” என்றான். அவனின் குரலில் கொஞ்சம் சலிப்பு தெரிந்தது. இன்னும் இங்கேயே அமர்ந்திருந்தால், திட்டி விடுவானோ, அதுவும் நித்யாவின் முன். பின்னால் சென்று அமர்ந்தாள். கதவை அவள் சாத்திய வேகத்தில் தூங்கிக்கொண்டிருந்த எல்லோரும் எழுந்து விட்டனர். “என்ன ? என்ன ஆச்சு ?” பதறிப்போய் கேட்டாள் வேதவல்லி. “ஒன்றுமில்லை அத்தை ! கீர்த்திக்கு தூக்கம் வருகிறதாம்.” என்றான் அருண். புருவங்களை உயர்த்தி ஒரு பெருமூச்சை விட்டான். காரை மீண்டும் கிளப்பினான். கீர்த்தி இப்போது மீராவை முறைத்துக் கொண்டிருந்தாள். இதுவரை எதுவும் பேசாமல் வந்த அருண், இப்போது அவளிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டே வந்தான். “இன்னும் எத்தனை நாள் விடுமுறை” “இந்த வாரம் முழுவதும். திங்கள் வேலைக்குச் செல்ல வேண்டும்.” “ரிட்டர்ன் டிக்கெட் எடுக்க வேண்டுமா?” “இல்லை, எடுத்துவிட்டேன். நாளை காலை ட்ரெயின்” “அதற்குள் ஏன் கிளம்புகிறாய் ? இன்னும் விடுமுறை இருக்கிறதே !” “அரவிந்துக்கு பரீட்சை வரப்போகிறது. “நீயா அவனுக்குப் பதில் படிக்கப் போகிறாய் !” அவள் சிரித்தபடி, “இல்லை, ஆனால் அவ்வப்போது அவன் படிக்கும்போது உதவுவேன். அது மட்டும் இல்லை.கடையில் புதிய கல்வி ஆண்டு என்று நிறைய யூனிபோர்ம்கள் தைக்க வரும். அதற்கான கொள்முதல்கள் நிறைய இருக்கும். நான் இருந்தால் அம்மாவுக்கும் அத்தைக்கும் உதவியாக இருக்கும்.” “நீ பல துறைகளைக் கட்டியாள்கிறாய் போல ! ஆடை வடிவமைப்பு, மருத்துவம், சாப்ட்வேர். இன்னும் என்ன என்ன திறமைகளை வைத்திருக்கிறாய்?.” “நீங்கள் பேசுவது வஞ்சப்புகழ்ச்சி போல் இருக்கிறது !” “பலே ! தமிழ் இலக்கணம் கூடத் தெரியும் போல !” “நிச்சயம் எனக்குச் சளி பிடிக்கும். ஒரே ஐஸ்.” அப்படியே பேச்சு எங்கெங்கோ சென்றது. எல்லோரும் வீட்டுக்கு வந்தனர். மறுநாள் காலை மீண்டும் சென்னைக்கு புறப்பட வேண்டும் என்று தயாராகத் தொடங்கினாள் நித்யா. மெல்ல அருகில் வந்த அனிதா, “நானும் உன்னுடன் வரட்டுமா அக்கா ?” என்றாள். “திடீரென்று கிளம்பினால், எல்லோரும் தவறாக நினைப்பார்கள் !” “வேண்டுமானால், இன்னும் ஒரு பத்து நாள் கழித்து மீண்டும் சித்தியுடன் வந்து இருக்கிறேன்.” இருவரும் பேசிக்கொண்டிருக்க, பார்வதி உள்ளே வந்தவள் “என்னமா, இன்னும் ஒரு இரண்டு நாள் இருக்கலாம் இல்லையா ?” என்றாள். “ஐயோ இல்லை அத்தை. நிறைய வேலை இருக்கிறது. கடையிலும் அம்மாவுக்கு உதவி தேவைப்படும் என்றுதான் நான் லீவ் போட்டேன்.” என்றாள் நித்யா. “சித்தி நானும் அக்காவுடன் செல்லட்டுமா ?” என்றாள் அனிதா. “நீ ஏன் செல்ல வேண்டும் என்கிறாய் ? அங்கே போய் நீ என்ன செய்யப்போகிறாய் ?” என்றாள் பார்வதி. “நான் இவ்வளவு நாள் தனியே இருந்ததே இல்லை. நான் மீண்டும் ஒரு பத்து பதினைந்து நாள் கழித்து வருகிறேன். அதுமட்டும் இல்லாமல் கல்லூரி தேர்தெடுக்க, நண்பர்கள், ஆசிரியர்களுடன் பேசலாம் என்று இருக்கிறேன்.” என்றாள் அனிதா. “பார் உன்னால் இவளும் கிளம்புகிறாள். நாளை முதல் சத்யனும் கல்லூரிக்குச் சென்றுவிடுவான். வீடே காலியாகி விடும்.” என்றாள் பார்வதி. “அவள் வேண்டுமானால் இருக்கட்டும் அத்தை ! மீண்டும் அப்பாவோ, அத்தையோ வந்து அழைத்து வரட்டும்.” என்றாள் நித்யா. இந்த யோசனை சிவநாதனுக்கு சரி என்று தோன்ற வில்லை. “எத்தனை முறை அவர்கள் அலைவார்கள். அனிதாவுக்கு போக வேண்டும் என்றால், நாளைக் கிளம்பட்டும். மீண்டும் அடுத்த முறை அருண் வரும்போது வரட்டும்.” “ஏனம்மா பாட்டியை விட்டு விட்டுக் கிளம்ப வேண்டும் என்று நினைக்கிறாய் ?” என்றார் பாட்டி துளசியம்மாள். இந்தப் பேச்சுகள் நடக்கும்போது, வேதவல்லி, கீர்த்தி அங்கே தான் இருந்தார்கள். “உங்களுடன் எப்போதும் அவளை வைத்துக்கொள்ள முடியுமா ? அவள் வீட்டுக்குப் போக வேண்டும் என்றால் போகட்டும்.” என்றாள் கீர்த்தி. எல்லோருக்கும் அவள் பேச்சு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. வீட்டிற்கு வந்த ஒரு பெண்ணை, இருத்தால் இரு, இல்லையென்றால் கிளம்பு என்பதுபோல் கீர்த்தி பேசியது சற்று அநாகரீகமாக இருந்தது. சிவநாதன் சமாளித்து, “இதுவும் அவள் வீடுதான். அவள் எப்போது வேண்டுமானாலும் இங்கே வரலாம். சென்னைக்குச் செல்ல வேண்டும் என்றால் சென்று வரலாம். எல்லாம் அனிதாவின் இஷ்டம். ஆனால் தனியே செல்ல நான் அனுமதிக்க மாட்டேன்.” என்றார். “நித்யாவுடம் செல்ல டிக்கெட் இருக்கிறதா ?நாளைக்கு என்றாள் டிக்கெட் கிடைக்குமா” என்றாள் பார்வதி. “அது ஒன்றும் தொல்லை இல்லை. ஒரு ஓபன் டிக்கெட் எடுத்துக்கொண்டு சென்று விடுவோம்.” என்றாள் நித்யா. “அதெல்லாம் வேண்டாம். இரவு டிக்கெட் இருக்கிறதா என்று பார்க்கிறேன்.” என்றான் அருண். “அதுவும் சரிதான் !” என்றார் சிவநாதன். வாரத்தின் நடுவில் என்பதால் டிக்கெட்டும் கிடைத்தது. எல்லோரும் அவரவர் வேலையைப் பார்க்கத் தொடங்கினர். அப்போது கீர்த்தியைத் தனியே அழைத்துச் சென்று பார்வதி புத்திமதி சொல்லினாள். “கீர்த்தி ! நீ ஏன் அப்படிப் பேசினாய்? நம் வீட்டுக்கு வந்தவர்களைப் போ என்பது போல் பேசலாமா ? உன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்?” “நான் என்ன அத்தை தப்பாகப் பேசிவிட்டேன் ? அனிதா தான் செல்ல வேண்டும் என்றாள். நான் ஒன்றும் அவளைத் துரத்தவில்லையே.” “அப்படிப் பேசக் கூடாது கீர்த்தி. உன்னைத்தான் தவறாக நினைப்பார்கள். அதுவும் அனிதா உன் மாமா மகள். அருண் சத்யனிடம் இப்படிப் பேசுவாயா ?” “அவர்களும் இந்த அனிதாவும் ஒன்றா ?” என்று சீறினாள் கீர்த்தி. “ஆம்! அவர்களைப் போல் தான் அனிதாவும், அரவிந்தும்.” “எனக்கு அவர்களைப் பிடிக்கவில்லை” என்று கீர்த்தி சொன்னதும் பார்வதியின் பொறுமை போனது. “கீர்த்தி ! அவர்கள் உன் வீட்டில் இருக்கும்போது நீ எப்படி வேண்டுமானாலும் பேசு. என் … இந்த வீட்டில் இன்று போல் நீ பேசக் கூடாது. எனக்குப் பிடிக்கவில்லை.” என்று கோபமாக நகர்ந்தாள் பார்வதி. என் வீடா ? அதுதானே பார்வதி சொல்ல வந்தாள். இன்று வந்த அந்த அனிதாவிற்காக, இவளைத் தூக்கியெறிந்து பேசுவதா ? எதிரில் யார் வந்தாலும் அவர்களைக் குதறும் வெறியில் தான் கீர்த்தி இருந்தாள். அப்படியே வேகமாகத் தோட்டத்தின் பக்கம் வந்தாள். அங்கே இன்னும் ஒரு நாடகம் நடந்து கொண்டிருந்தது. டாமியை அவிழ்த்துவிட்டு விளையாடிக்கொண்டிருந்தனர் சத்யனும் அனிதாவும். நித்யா அங்கே இருந்த பென்சின் மேல் கால்களைத் தூக்கி வைத்துக் கொண்டு, “வேண்டாம் சத்யன் ! அதை இங்கிருந்து கூட்டிப்போ !” என்றாள். “எப்போது பழகுவது. டாமி ஒன்றும் செய்யாது. உங்களுடன் விளையாட வருகிறது.” என்றான் சத்யன். சிறிய நாய்க்குட்டி என்றாலும் பரவாயில்லை. டாமி முன்கால்களை தூக்கினால், நித்யாவின் தோள்மேல் வைக்கக்கூடும். வேண்டுமென்றே நித்யா இறங்க முயன்றபோது, அவள் பக்கம் பந்தை வீசுவார்கள். மீண்டும் அவள் இறங்காமல் காலை மேலே வைத்துக்கொள்வாள். இவர்களைப் பார்த்துவிட்டுச் சிவநாதன்,“போதும் ! நாயைக் கட்டுங்கள். நித்யாவை ஏன் பயமுறுத்துகிறீர்கள்?” என்றார். “இருங்கள் அப்பா ! அக்கா டாமிக்கு ஒரு ஷேக் ஹேண்ட் தரும் வரை விடுவதில்லை.” என்றான் சத்யன். சிவநாதன் சிரித்துக்கொண்டே உள்ளே செல்ல, “டாமி”என்று அழைத்தான் அருண். அவன் அழைப்புக்கு அவனிடம் ஓடியது. அவன் அதைப் பின்புறம் அழைத்துச் சென்றான். “அண்ணா ! இன்னும் கொஞ்ச நேரம். நித்யா அக்கா பயம் போய் விடும்.” என்று அவன்பின் சத்யன் தொடர, அனிதாவும் சென்றாள். இப்போது கால்களைக் கீழே வைத்து நிம்மதியாகப் பெருமூச்சு விட்டாள். “நடிப்பு பிரமாதம்”, என்ற குரல் கேட்டுப் பார்த்தால் கீர்த்தி அருகில் நின்றுகொண்டிருந்தாள். நித்யா புரியாமல் பார்க்க, “அருண் மாமாவை மயக்கி, உன்வசம் இழுக்க என்னவெல்லாம் செய்கிறாய். இங்கே யாருக்கும் உன் திட்டம் புரியவில்லை.” “என்ன உளறுகிறாய் !” என்று கோவமாய் எழுந்தாள் நித்யா. “உன் வேஷம் எனக்குத் தெரிந்து விட்டது என்று பயமா ?” “உன் கற்பனைக்கு நான் பதில் சொல்லத் தேவையில்லை” என்று நகர முயன்றவளைத் தடுத்து, “திட்டம் யாருடையது ? உன்னுடையதா ? இல்லை உன் அத்தையுடையதா ? பிள்ளைகளை இங்கே அனுப்பியது பத்தாது என்று உன்னையும் இங்கே அனுப்பி வைத்து இங்கேயே வந்து விடலாம் என்ற திட்டமா ? நான் சொல்கிறேன். எப்போதும் அது நடக்காது. ஏதோ பாட்டிக்காக எல்லோரும் உங்களை வீட்டில் அனுமதித்தார்கள். இல்லையென்றால் குடும்பத்தையே பிரிக்க நினைத்த அந்தப் பேராசை பிடித்த பெண்ணையும் அவள் பிள்ளையும் யார் ஏற்பார்கள்? ஒருவேளை வைத்துச் சமாளிக்க முடியவில்லை என்று உன் பெற்றோரும் அவர்களை இங்கே தள்ளி விட முயல்கிறார்களா ?” கீர்த்தி அவள் மொத்த குடும்பத்தையும் கேவலமாகப் பேசவும் கைகளை இறுக்கிக் கொண்டு, “நீ எங்கள் குடும்பத்தைப் பற்றிப் பேசுவது போல் உன்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறாய் ! எங்களுக்கு உங்களிடம் எந்தத் தேவையும் இல்லை. அத்தையை இங்கே அழைத்து வந்த சிவநாதன் மாமாவுக்கும் அது தெரியும். இடையில் இல்லாதது, பொல்லாதது சொல்லி அத்தையை இங்கே வரக் கூடாது என்று நினைப்பது நீ தான். இப்போது குடும்பத்தைப் பிரிக்க நினைப்பது யார்?” என்றாள் ஏளனமாக. ஒரு சிரிப்புடன் “எங்களுக்குக் குடும்பத்தைப் பிரிக்க எந்தத் தேவையும் இல்லை. ஒரு வேலை நீ சொல்வது சரியாகக் கூட இருக்கலாம். எங்கே உன் அத்தையால் மீண்டும் எங்கள் குடும்பத்தில் பிரச்சனை வருமோ என்று தான் அவர்களை ஒதுக்க நினைக்கிறோம். இங்கே வந்து உட்கார்ந்து கொண்டு, எதைச் சுருட்ட முடியும் என்று பார்த்துக் கொண்டிருப்பது மாமாவுக்குத் தெரியாமல் இருக்கலாம். எனக்குத் தெரியும்.” “அப்படி உனக்கு என்ன தெரியும் ? சொல் நானும் தெரிந்து கொள்கிறேன் !” அவள் பேச்சுக்குச் சோர்ந்து விடக் கூடாது என்று உறுதியாக நின்றாள் நித்யா. “நீயே கேட்பதால் சொல்கிறேன். ஒன்றும் இல்லாமல் வந்துவிட்டு, இங்கே வந்த பத்து நாளில் உன் அத்தை மகள் எத்தனை உடை எடுத்திருக்கிறாள் என்று தெரியும். படிப்புச் செலவுக்கென்று தன் பெயரில் ஒரு வங்கி கணக்கைத் தொடங்கி அதில் கணிசமான தொகையையும் போடும் படி செய்திருக்கிறாள், அவள் அண்ணனுக்கும் சேர்த்து! பல லட்சம் மதிப்புள்ள காரை ஓட்டத் தெரியாமல் இடித்து அதற்குச் செலவு எத்தனை தெரியுமா ?இப்படியொரு ஒட்டுண்ணி குடும்பத்தைத் துரத்த யார் தான் நினைக்கமாட்டார்கள்.” அனிதாவுக்கு அளவுக்கு அதிகமாக ஆடைகள் வாங்கியது தெரியும். ஆனால் அது பார்வதியின் கட்டாயத்தில் எடுத்தாள் என்று நித்யாவுக்கு தெரியும். ஆனால் அவள் சொன்ன மற்ற விஷயங்கள் எதுவும் தெரியாது. அனிதாவின் குணம் அறிந்த யாரும் அதை நம்ப மாட்டார்கள். சற்றே யோசித்தவள் காரின் விஷயத்தைப் பற்றிச் சொன்னது பொய். இவளும் தானே அங்கே இருந்தாள். அருண் ஓட்டியபோது நடந்ததாகச் சொன்னானே ! இப்போது நித்யாவுக்கு புரிந்தது. முன்பே கீர்த்தியின் செயல்களுக்கு ஒரு விளக்கம் கிடைத்திருந்தது. புதிதாக வந்தவர்களில் மேல் உள்ள பொறாமையால் கொஞ்சம் திமிராக நடந்துகொள்கிறாள். இப்படி தான் நித்யா நினைத்திருந்தாள். அதற்காக அவள் பேசியதை அப்படியே விட முடியாது. “கீர்த்தி ! உன் கற்பனைகளை நிறுத்திக்கொள். உன் பொய்களை நம்ப நான் ஒன்றும் முட்டாள் இல்லை. என் குடும்பத்தைப் பற்றி எனக்குத் தெரியும். கார் விஷயத்தில் நடந்தது என்ன என்று இங்கே எல்லோருக்கும் தெரியும். உன் கற்பனைகளையும் பொய்களையும் குறைத்துக்கொள்.” இப்போது சீறினாள் கீர்த்தி, “யார் பொய் சொல்கிறார்கள்? அருண் மாமா எப்படி கார் ஓட்டுவார் என்று எனக்குத் தெரியும். அவர் இடித்தார் என்றால் நானும் நம்ப மாட்டேன். உண்மையை உன் அத்தை மகன் அரவிந்த்திடம் கேள்.” சற்று இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தாள்.”உன்னிடம் போய்ச் சொல்கிறேன் பார். நீயும் அந்தக் கூட்டம் தானே. இங்கே ஒன்றும் தெரியாதவள் போல் நிற்கிறாய். நேற்று அருண் மாமாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டு நின்றது எனக்குத் தெரியும். இதைச் சொன்னால் அருண் மாமாவின் பெயரும் அடிபடும் என்று சும்மா இருக்கிறேன். எல்லா முறையும் அமைதியாக இருக்க மாட்டேன். பார்த்து நடந்துகொள்.” என்று எச்சரித்து விட்டுச் சென்றுவிட்டாள் கீர்த்தி. நித்யா அப்படியே நின்றாள். என்னவெல்லாம் சொல்லிவிட்டாள். முதலில் அதிர்ந்தாலும் சில விநாடிகளில் சுதாரித்தாள். அனிதாவை பற்றித் தெரியும். அவர்கள் பணம் யாருக்கு வேண்டும் ? அவர்கள் கொடுத்தாலும் அத்தை வாங்க மாட்டாள். ஆனால் கார் ?ஒருவேளை இவள் சொல்வது உண்மையா ? காரை இடித்தது அரவிந்தா ? அன்று முழுவதும் அரவிந்த் சரியாகப் பேசவில்லை தான். நேற்று நடந்தது இவளிடம் என்னவென்று சொல்வது. இவள் மற்றவர்களுக்குச் சொன்னால், எல்லோரும் என்ன நினைப்பார்கள் ?ஒரு ஆபத்து என்று அவன் உதவினான். பயந்ததால் அவளும் அவனை ஒட்டி நின்றாள். அவ்வளவு தான். ஆனால் கீர்த்தி அந்த நிகழ்வுக்குப் பூசும் சாயம் நித்யாவுக்கு அருவெறுப்பாக இருந்தது. பகுதி - 13 சென்னை வரும் வரை, நித்யாவால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அதுவரை பார்வதியின் அன்பாலும் கவனிப்பாலும் பழகியிருந்த வீடு, அவளுக்கு வெகு அந்நியமாகி போனது. கிளம்பும் வரை யாரிடமும் அதிகம் பேசாமல் அறையினுள் அமர்ந்திருந்தாள். அனிதா பலமுறை வந்து அழைத்தாலும், அலுவலகத்திலிருந்து அழைப்பு வரும் என்று சொல்லிவிட்டாள். சென்னையில் வீட்டிற்குள் வந்ததும் தான் அவளுக்கு நன்றாக மூச்சு கூட விட முடிந்தது. அரவிந்த் கல்லூரிக்குத் தயாராகிக் கொண்டிருந்தான். இப்போதே அவனிடம் கேட்டாக வேண்டும் என்று நேரே அவன் அறைக்குள் சென்றாள் நித்யா. “என்ன மேடம் ! மதுரை வாசம் எப்படி இருந்தது ?” என்றான் அரவிந்த் புத்தகங்களை எடுத்து வைத்தபடி. அவன் முன் வந்து நின்று, “கேட்பதற்கு மட்டும் பதில் சொல். அன்று மதுரையில் யார் காரை மோதியது ?” என்றாள் நித்யா கோபத்துடன். அவள் முகத்தைப் பார்த்துச் சற்றே பயந்துதான் போனான் அரவிந்த். நிச்சயம் அவளுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது என்பது அரவிந்துக்கு புரிந்தது. “அது வந்து ….” என்று மெல்ல இழுத்தான். “நீதானே காரை இடித்தாய் !” அவள் கண்கள் சிவந்தது. நீர் மணிகள் கீழே சிந்த தயாராக இருந்தது. பதறிப்போய், “பெரிதாக ஒன்றும் இல்லை. அங்கே இருந்த ஒரு கல்லில் இடித்துவிட்டேன். மற்றபடி வேகமாக எல்லாம் ஓட்டவில்லை. குறுகிய பாதையில் ஓரத்தில் இருந்த கல்லை நான் கவனிக்கவில்லை. கொஞ்சம் இடது புறமாகத் திருப்பி இருக்க வேண்டும். நான் நேராக விட்டுவிட்டேன்.” என்று விளக்கம் கொடுத்தான். “அன்றே ஏன் சொல்லவில்லை ?” “அண்ணா தான் அவர் செய்ததாகச் சொன்னார். நான் ஓட்டி இடித்தது என்றால் எல்லோரும் பயப்படுவார்கள் இல்லை அதிகம் திட்டுவார்கள் என்று அண்ணா தான் சொன்னார்.” “உன் அண்ணா சொன்னால் ? உனக்கு” என்று நித்யா கத்திக் கொண்டிருந்த போதே, “லேட் ஆகுது அரவிந்த் ! சீக்கிரம் வந்து சாப்பிடு !” என்று அழைத்தார் செல்வம். “புது உறவுகள் வந்ததால், எங்களிடம் பொய் சொல்லும் அளவுக்கு வந்துவிட்டாய். ரொம்ப சந்தோஷம்.” என்று வேகமாக அவன் அறையை விட்டு வெளியேறியவள் நேரே தன் அறைக்குச் சென்று மெத்தையில் விழுந்தாள். அழுகையை அடக்க வெகுவாகச் சிரமப்பட்டாள். அந்தக் கீர்த்தியிடம் என்ன திமிராய் பேசினாள். இனி அப்படி பேச முடியுமா ? அவர்களின் உதவியே தேவை இல்லை என்று சொன்னாளே ! இப்போது அரவிந்த் செய்திருக்கும் காரியம் ! அவர்களுக்கு ஒரு நஷ்டத்தை உண்டாக்கி விட்டு, அதை அனைவரிடமும் மறைத்திருக்கிறான். விபத்து என்பதை எதிர்பாராமல் நடப்பது.உண்மையைச் சொல்லிருந்தால் செல்வம் நிச்சயம் திட்டி இருப்பார், ஆனால் வேறு எதுவும் கடுமையாகச் செய்திருக்க மாட்டார். ஆனால் அரவிந்த் மறைத்தது, மதுரையில் இருப்பவர்களுக்குத் தெரிந்தால் என்ன நினைப்பார்கள் ? செல்வம் மிகவும் பொல்லாதவர். அரவிந்தின் தவறை பொறுத்துக் கொள்ள மாட்டார் என்றல்லவா நினைப்பார்கள். இல்லை தெரிந்துகொண்டே பொருட்செலவை ஏற்க மறுக்கிறார் என்று நினைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. இது எதுவும் உண்மை இல்லை என்று எப்படி அவர்களுக்குப் புரியவைப்பது ? இங்கே இருப்பவர்களுக்குத் தெரிந்தால் இவளைப் போல எல்லோரும் வருந்துவார்கள். சாந்தா அத்தை மிகவும் வேதனைப்படுவர். நித்யாவுக்கு ஒரு யோசனை தோன்றியது. பெரியவர்களுக்குத் தெரியாமல் காருக்கான செலவைத் திரும்பத் தர வேண்டும். அருணிடம் கொடுத்துவிடலாம். ஆனால் தொகை என்ன என்பது நித்யாவுக்கு தெரியாது. அவள் மதுரையில் இருந்து புறப்படும் நாளில் அரவிந்த் மோதிய கார், பழுது பார்க்கப்பட்டு வந்திருக்கவில்லை. அங்கே யாரும் செலவு கணக்கைப் பற்றிப் பேசவில்லை. இப்போது எப்படி தெரிந்து கொள்வது ? காரின் பெயர் அவளுக்குத் தெரியும் தானே. முதலில் ஒரு கார் பழுதுகளை சரி செய்யும் பணிமனைக்கு அழைத்தாள். வீட்டில் வேறு யாருக்கும் தெரியாமல் தான். அந்தப் பணிமனையில் கேட்ட கேள்விகளில் பாதிக்கு மேல் அவளுக்குத் தெரியாது. கார் தயாரிக்கப்பட்ட ஆண்டு, காரின் மாதிரி, இன்னும் பல கேள்விகள். ஆத்திரத்தில் இடையிலேயே போனை வைத்து விட்டாள். மாலையில் அரவிந்த் இடம் வேறு யாரிடமும் இதுபற்றிப் பேச வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். முடிந்தால் அருணிடம் செலவு விவரங்கள் கேட்டுச் சொல்லும்படி சொன்னாள். அரவிந்தும் முயற்சி செய்தான். “உனக்கு எதற்கு அதெல்லாம் ! எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்”, என்று விட்டான் அவன். ” மாமா ஆன செலவைத் திரும்பக் கொடுக்க நினைக்கிறார் என்று சொல்வது தானே” என்று தொலைப்பேசியை வைத்ததும் அரவிந்த்திடம் பாய்ந்தாள். “அப்படிச் சொன்னால், அண்ணா மாமாவிடம் பேசுவார் அல்லவா ! அப்போது மாமாவுக்குத் தெரிந்துவிடுமே!” என்றான் அரவிந்த் பாவமாக. நித்யாவுக்கும் அது சரி என்று தோன்றியது. “இப்போது கேட்டு என்ன செய்ய முடியும் ?” என்றான் அரவிந்த் மெதுவாக. “பணத்தை அவர்களுக்குக் கொடுத்து விட்டால், நம்மை யாரும் ஒன்றும் சொல்லமாட்டார்கள்.” “அங்கே வேறு யாருக்கும் தெரியாது ! அண்ணா சொல்லவும் மாட்டார்.” “உன் அண்ணா சொல்ல வில்லை என்றாலும், வேறு யாருக்காவது தெரிய வரலாம். பல வருடங்களாகக் கார் ஓட்டும் உன் அண்ணன் இப்படியொரு விபத்தைச் செய்வாரா ? என்று யாருக்காவது தோன்றினால், உண்மை வெளிவரும்போது தவறு செய்தது மட்டுமில்லாமல் அதை மறைக்க நினைத்தோம் என்று மேலும் நம்மை வெறுத்து விடக் கூடம்.” என்றவள், “இனியேனும் எதையும் மறைக்காதே ! எல்லோரும் நல்லவர்கள் இல்லை ! நமக்குப் பின்னால் நம்மைப் பற்றித் தவறாகப் பேசுவார்கள். நம்மைக் கேவலமாகக் கூட நினைக்கலாம். உறவுக்குள் யாரும் நம்மை எதுவும் குறை சொல்லக் கூடாது. புரிந்து நடந்துகொள்.” அரவிந்த், “சாரி. நான் இவ்வளவு யோசிக்கவில்லை. சித்தி சித்தப்பா ரொம்ப நல்ல மாதிரி. நீ அதிகம் யோசிக்காதே ! அவர்கள் ஒரு நாளும் நம்மைத் தவறாக நினைக்கமாட்டார்கள்.” என்றான். இவனிடம் அதிகம் பேசிப் பரீட்சை நேரத்தில் அவனைக் குழப்பி விடக் கூடாது என்று நினைத்து, “நீ ஒழுங்கா படி. மாற்றத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றாள் நித்யா. “அண்ணாவும் இதைத்தான் சொன்னார்” என்றான் அரவிந்த். அவனை மீண்டும் முறைத்துவிட்டுச் சென்றுவிட்டாள். விடுமுறை முழுவதும் அவளுக்குப் பல வேலைகள் இருந்தது. தையல் கடைக்குச் சில கொள்முதல்கள், அனிதாவின் பொழுது போக்குக்குப் புத்தகங்கள், அவள் கல்லூரி தேர்வுபற்றி விசாரிப்புகள் என்று வாரம் முழுவதும் வேலை என்றாலும் அரவிந்தின் தவறை சரி செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தாள் நித்யா. மீண்டும் அலுவலகம் செல்லத் தொடங்கியதும் எல்லாம் இயல்புக்கு வந்ததுபோல் இருந்தது. வேலை சற்றே சுலபமாக இருக்க, குழுவில் எல்லோருமாய் அவ்வப்போது அரட்டை அடித்துக் கொண்டு வேலை செய்வார்கள். அப்போது குழுத்தலைவன் ரவி புதிதாக ஒரு கார் வாக்கப்போவதாகச் சொன்னான். பலரும் பல கேள்விகள். “ஏற்கனவே பதிவு செய்து விட்டீர்களா ?” “என்ன பிராண்ட் ? என்ன மாடல் ? என்ன நிறம் ?” என்று எல்லோரும் கேட்க, ரவி காரின் பிராண்ட் பற்றிச் சொன்னதும், நித்யாவுக்கு மூளை சுறுசுறுப்பானது. பேச்சில் மிகுந்த ஆர்வம் காட்டினாள். மெதுவாக ரவியிடம், “எனக்கொரு உதவி செய்ய வேண்டும்” என்றாள். முதலில் வேலை சம்பந்தமாக என்றென்னியவன் அவள் கேட்டகவும் முதலில் வியந்தான். “அந்த விவரங்கள் உனக்கு எதற்கு ?” சில நாட்களாக ஒருமையில் தான் பேசத்தொடங்கிருந்தான் ரவி. “என் தம்பி ஒரு உறவினர் காரை மோதிவிட்டான். அதைச் சரி செய்யப் பணம் தர வேண்டும். அதற்குத்தான்”, என்றாள். “அவர்களிடமே கேட்க வேண்டியது தானே ?” “அவர்கள் அதுபற்றி எதுவும் பேசவில்லை. என்றாலும் நம் தவறை நாம் தானே சரி செய்ய வேண்டும் !” “கேட்காதவரை லாபம் என்று விட வேண்டியது தானே” “சரி விடுங்கள் ! நானே எப்படியோ விசாரித்துக் கொள்கிறேன்.” என்று நித்யா நகரவும், “சரி ! சரி! காரைப் பற்றி விவரங்கள் சொல்.” என்று கேட்டான். கேட்கும்போதே ஒரு முறை புருவத்தை உயர்த்தினான். அவனுக்குத் தெரிந்த ஒரு பணிமனைக்குப் பேசினான். பேசியவுடன்,“நிச்சயம் அவர்களுக்குப் பணத்தைத் தரவேண்டுமா ?” என்றான். “ஆமாம்” என்றாள் நித்யா உறுதியாக. ரவி சொன்ன தொகை நித்யாவை தலை சுற்ற வைத்தது. அவளது ஒரு மாத சம்பளம் போதாது என்றான் ரவி. அதுவும் ஒடுக்கைச் சரி செய்து, புது வண்ணம் பூச அந்தத் தொகை. ஒருவேளை கார் நிறுவனத்தின் பணிமனைக்குச் சென்றால், ஒடுங்கிய பகுதியைப் புதிதாக மாற்றிவிடுவார்களாம். அதற்கு இன்னும் அதிகமாகும் என்றான் ரவி. அவள் வங்கி கணக்கில் அவள் பல மாத சம்பளம் அப்படியே இருந்தது. தொகையைத் திருப்பித் தர ஒன்றும் சிரமம் இல்லைதான் என்றாலும், அவ்வளவு பெரிய தொகையை இழக்க மனம் கொஞ்சம் வலித்தது. அதே போல் அந்தத் தொகையை ஒருவருக்கு வீண் செலவாக இழுத்துவிட்டது அரவிந்த்தின் தவறு. அவர்கள் கேட்கவில்லை என்று விட்டால், கீர்த்தி சொன்னது உண்மையாகும். பணத்தை வங்கியிலிருந்து எடுக்கும் முன், மீண்டும் அரவிந்திடம் விசாரிக்கச் சொன்னாள். காரின் ஒடுக்கை சரி செய்தார்களா? இல்லை புதிதாக மாற்றினார்களா என்று ? அதற்கும் அருண் பதில் சொல்லவில்லை. மீண்டும் இதுபற்றிப் பேசக் கூடாது என்று விட்டான். இப்போது வேறு வழியில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று இரண்டு மாத சம்பளத்தை எடுத்துக்கொண்டாள். வீட்டுக்குத் தெரியாமல் செய்வது அவளுக்கு ஒரு மாதிரி தான் இருந்தது. ஆனால் இப்போது எல்லோருக்கும் சொல்லி ஒரு பெரிய சங்கடத்தை உருவாகி, அரவிந்தை எல்லோரும் திட்டித் தீர்ப்பார்கள். இப்போதைக்குச் சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். அருண் மதுரையிலிருந்து அன்று காலையே வந்து விட்டதாகத் தெரிந்து கொண்டு, அவன் அலுவலகத்திற்குச் சென்றாள். அவள் சென்ற நேரம் அருண் அங்கு இல்லை. அருணின் நண்பனிடம் விவரம் கேட்டாள். “அவன் ஒரு வாரம் வேலையைப் பார்க்க வில்லை என்று இப்போது சைட்டுக்கு போயிருக்கிறான். மாலை வரலாம். இல்லை நாளை காலை தான். நீங்கள் போன் செய்துவிட்டு வந்திருக்கலாமே !” என்றான் சிபி. “அவசரத்தில் வந்துவிட்டேன். நான் மீண்டும் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டாள். நித்யா அலுவலகம் செல்ல ஆட்டோ தான் ஏறியிருப்பாள். அவள் செல் ஒலித்தது. அருண் தான் அழைத்தான். “ஹலோ !” “என்னைப் பார்க்க வந்திருந்தாயா ?” “ஆமாம் ! உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்று வந்தேன். மீண்டும் நீங்கள் எப்போது வருவீர்கள் என்று சொல்லுங்கள். நான் மீண்டும் வருகிறேன்” “ஏதும் முக்கியமான விஷயமா ?” முக்கியமான விஷயம் தான் அவளுக்கு. ஆனால் அவனுக்கு அது எப்படியோ தெரியாதே ! “அவசரம் ஒன்றும் இல்லை. வேறொரு நாள் பேசலாம்”. “இன்று மாலை நானே உன்னை உன் அலுவலகத்தில் வந்து அழைத்துக் கொள்கிறேன்.” என்றான். கீர்த்தி சொன்னது நினைவு வர, “வேண்டாம் ! உங்கள் அலுவலகத்திற்கு வந்ததும் சொல்லுங்கள். நானே வருகிறேன்.” என்று வைத்துவிட்டாள். அன்று வேலை எதுவும் சரியாக ஓடவில்லை. அவனிடம் எப்படி பேச வேண்டும் என்று ஒத்திகை பார்த்துக் கொண்டாள். அருண் அலுவலகத்தில் இருப்பதாகக் குறுஞ்செய்தி அனுப்பவும், மணியைப் பார்த்தாள். அவள் புறப்படும் நேரம் தான். உடனே அருண் அலுவலகத்திற்கு சென்றாள். அவள் சென்ற நேரம் அங்கேயும் எல்லோரும் கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தனர். நேரே அவன் அறைக்குச் சென்று கதவைத் தட்டினாள். “கம் இன்” என்ற குரல் கேட்டு உள்ளே சென்றாள். உள்ளே இருந்தவர்களை பார்த்ததும் ஒரு கணம் அவளுக்கு அதிர்ச்சி. எதற்காக இங்கே இவள் வந்திருக்கிறாள் ? சிபியும் அருணும் ஒரே அறையைப் பயன்படுத்தி வந்தார்கள். பக்கவாட்டில் நீளமான அரை. ப வடிவ மேசை. இருபுறமும் இரு நாற்காலிகள். அந்தப் பகுதியைத் தாண்டிச் சென்றால், இருவர் அமரக்கூடிய சோபா இரண்டு எதிர் எதிராக இருக்கும். அந்தச் சோபாவில் ஒருபுறம் கீர்த்தியும், கீர்த்தியின் தந்தை ராஜனும் அமர்ந்திருந்தார்கள். மறுபுற சோபாவில் அருண் அமர்ந்திருந்தான். “வா ! நித்யா, உட்கார். கீர்த்திக்கு இங்கே ஏதோ பயிற்சியும். அதுபற்றி விசாரிக்க வந்திருக்கிறார். உனக்கு இந்த நிறுவனம்பற்றி எதுவும் தெரியுமா?”என்று ஒரு கோப்பை நீட்டினான். அதை வாங்கும்போது,“இவள் எதற்கு இங்கே வந்தாள் ?” என்றாள் கீர்த்தி. இவளுக்கு என்ன சொல்வது ? நீ சொன்னது உண்மைதான். அரவிந்த் தான் காரை இடித்தான். என்று ஒத்துக்கொள்வதா ? இல்லை அதற்கான பணத்தை தர வந்தேன் என்று சொல்வதா ? நித்யா யோசிக்கும்போதே,“அடிக்கடி இங்கே வருவாளா ?” கீர்த்தியின் வார்த்தைகள். அது மற்றவர்களுக்கு ஒரு பொதுவான கேள்வி. ஆனால் நித்யாவுக்கும் கீர்த்திக்கும் தான் அந்தக் கேள்வியின் உண்மையான பொருள் புரியும். அருணை மயக்க நித்யா முயற்சிப்பதாகக் கீர்த்தி முன்பே குற்றம் சொன்னாள். இப்போது அவனைத் தேடி அவள் வந்திருக்கிறாள் என்றால் பல காரணம் இருக்கலாம். ஆனால் கீர்த்தி என்ன நினைப்பாள் என்று நினைத்தபோது, நித்யாவுக்கு அவளுக்கு எரிமலை குழம்பை அவள்மேல் ஊற்றுவது போல் எரிந்தது. இப்போதே இங்கிருந்து சென்று விட வேண்டும் என்ற வேகம் அவளுள் எழுந்தது. நித்யா எதையும் பேசுவதற்கு முன் “நான் தான் வரச்சொன்னேன் ! அனிதாவுக்கு வாங்கிய புத்தகங்களைக் கொடுத்தனுப்ப, நித்யாவை அழைத்தேன்” என்றான் அருண்.ஒருவேளை கீர்த்தி பேச்சின் உள்ளர்த்தம் அவனுக்கும் புரிந்ததா? முகத்தில் எதையும் காட்டாமல், அருண் கொடுத்த கோப்பை வாங்கிக்கொண்டு, கொஞ்சம் தள்ளி இருந்த நாற்காலியில் அமர்ந்தாள் நித்யா. அவளுக்கு ஏற்கனவே தெரிந்த நிறுவனம் தான் அது. பயிற்சிகள் நன்றாக இருந்தாலும் பயிற்சிக்குப் பின் வேலைவாய்ப்பு தருவதாகச் சொல்லி, பிறகு அதற்குத் தனியே ஒரு பெரும் தொகையை வசூல் செய்வதாக, கல்லூரியில் அவள் படிக்கும்போது சொல்லியிருந்தார்கள். அதையே நித்யா சொல்ல, உன் கருத்து யாருக்கு வேண்டும் என்பது போல் “ஏற்கனவே எல்லாம் விசாரித்து விட்டோம். நாளை காலை கீர்த்தியை சேர்க்கப்போகிறோம். ஹாஸ்டல் கூடப் பார்த்தாயிற்று” என்றார் ராஜன். நித்யா எதுவும் பேசாமல் நிற்க, “எல்லாம் சரிதான் மாமா ! மதுரையில் கூட இதுபோல் பல நிறுவனங்கள் இருக்கின்றன. புது ஊரில் எதற்காகக் கீர்த்தி தனியே இருக்க வேண்டும்.” என்றான் அருண். ராஜன் சற்றே யோசிக்க “தனியாகவா! அதுதான் நீங்கள் இருக்கிறீர்களே மாமா !” என்று சொல்லிக்கொண்டே அருணின் அருகில் வந்து அமர்ந்தாள் கீர்த்தி. “அதுதானே ! நீ பார்த்துக் கொள்ள மாட்டாயா !” என்றார் ராஜன். ” நான் பார்த்துக் கொள்வது இருக்கட்டும். கீர்த்திக்கு ஒருவேளை தான் வகுப்பு. மீதி நேரம் அவளுக்கு அதிக வேலை இல்லை. இங்கே அவள் என்ன செய்வாள். தோழிகள் என்றும் யாரும் இல்லை. நான் எவ்வளவு நேரம் அவளுடன் இருக்க முடியும். ” என்றான் அருண். “நான் கிளாஸ் முடிந்ததும் இங்கே வந்து விடுவேன். உங்களுக்கு ஒரு தொல்லையும் தராமல் இங்கேயே அமர்ந்து கொள்வேன்.மாலை ஒன்றாகச் செல்லலாம். என் கிளாஸ் இங்கிருந்து பத்து நிமிடம் தான். அப்படியே உங்கள் வேலையையும் கற்றுக்கொள்கிறேன். பின்னால் உங்களுக்கு உதவியாக இருப்பேன்.” என்று கொஞ்சலாகச் சொன்னாள் கீர்த்தி. அருணிடம் நெருங்கி அமர்வதும், அவளைக் கவனித்துக் கொள்வது அருணின் பொறுப்பு என்று பறை சாற்றுவதும், பின்னாளில் நான் உதவுவேன் என்று சொன்னதும் நித்யாவுக்கு கீர்த்தி அருணை விரும்புகிறாளோ என்று என்ன வைத்தது. சீ ! என்ன மடத்தனம் ! ஒரு பெண் ஆணுடன் பழகினால் காதல் என்று நினைக்கும் அளவுக்கு அவள் அறியாதவள் அல்ல. ஆனால் கீர்த்தியும் அவள் அன்னையும் அன்று பேசினார்களே. கீர்த்திதான் அருணை மணக்கப்போகிறாள் என்று. கீர்த்தியும் அப்படித்தானே பேசினாள். கீர்த்தி என்ன செய்தால் நித்யாவுக்கு என்ன ? ஆனால் ஏனோ கீர்த்தியின் செய்கை அவளுக்கு ஆத்திரத்தை மூட்டியது. எதையும் கவனிக்காதவள் போல் சிறிது நேரம் இருந்துவிட்டு, மெல்ல எழுந்தாள். “நான் புறப்படுகிறேன்.” என்றாள். “ஒரு நிமிடம்” என்ற அருண் ஒரு பையை அவள் கையில் கொடுத்தான். “அனிதாவிற்கு வாங்கினேன். கொடுத்து விடு” என்றான். சரி என்று தலையாட்ட,“நாங்களும் கிளப்பி விட்டோம். உன்னையும் அப்படியே வீட்டில் விடுகிறேன்” என்றான் அருண். கீர்த்திக்கு அது பிடிக்கவில்லை. “எனக்கு ஒரே சோர்வாக இருக்கிறது மாமா ! எங்கெல்லாம் அலைவது. நம் வீட்டுக்குப் போகலாம். அவள் வேண்டுமானால் டாக்ஸியில் செல்லட்டும்” என்றாள் கீர்த்தி. அருண் கீர்த்தியை பார்த்துவிட்டு, நித்யாவிடம் திரும்பியவன் “நித் …” என்று சொல்லத் தொடங்குமுன், “நான் பார்த்துக்கொள்கிறேன். புத்தகம் தந்ததற்கு நன்றி !” என்றுவிட்டு வேகமாக வெளியேறிவிட்டாள் கீர்த்தி மதுரையில் ஆத்திரமூட்டும் படி பேசியதால் நித்யா விலகிச் சென்று விடுவாள் என்று நம்பவில்லை. பெரியவர்களிடம் சொன்னாலும் யார் நம்புவார்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை அது கீர்த்திகே எதிராகப் போகலாம். பார்வதி கீர்த்தியிடம் பேசும் விதத்தில், எவ்வளவு மாறி இருக்கிறாள் என்று தெரியும். கீர்த்தியின் புத்தி தான் தவறு என்று சொல்லக்கூடும். மற்றபடி பண விஷயம் பேசினால், நிச்சயம் மாமா சிவநாதனே, கீர்த்தியைக் கண்டிப்பார். அதனால் நித்யாவிடம் பேசிய விஷயத்தை அவள் யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் அருணுடன் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தாள். அருண் இப்போது சென்னையில் இருக்கிறான். அப்படியானால் அவளும் சென்னைக்குச் செல்ல வேண்டும். கல்லூரியில் ஒரு பயிற்சி நிறுவனம்பற்றிச் சொன்னார்கள். அது சென்னையில் மட்டும் இருப்பதாகத் தெரிந்துகொண்டாள். உடனே பெற்றோரிடம் பயிற்சி வகுப்பில் சேர வேண்டும் என்றாள். முதலில் வேதவல்லி மறுத்தாலும், கெஞ்சி, கொஞ்சி அவளைச் சம்மதிக்க வைத்தாள் கீர்த்தி. கீர்த்தி முடிவெடுத்த நேரம் பயிற்சி தொடங்க உடனே சென்னையில் இருக்க வேண்டும் என்றார்கள் அந்த நிறுவனத்தார். தந்தையை அழைத்துக்கொண்டு உடனே கிளம்பிவிட்டாள். கீர்த்தி சென்னை வந்து முதல் நாளே, நித்யா அருணின் அலுவலகத்திற்கு வந்தது, இதுவரை கீர்த்தி நித்யாவை பற்றி நினைத்தது எல்லாம் சரியே என்று எண்ணினாள். நித்யாவுக்கு வியப்பு. கீர்த்தி ஏன் சென்னையில் பயிற்சி பெறுகிறாள். அதுவும் அது போன்ற நிறுவனம் எல்லா ஊர்களிலும் இருக்கும். வேலை வாய்ப்புகள், நேர்காணல்கள், அதற்கான பயிற்சி போன்று சிலவற்றைச் சொல்லிக் கொடுப்பார்கள். வெறும் பதினைந்து நாள் பயிற்சி. அதனால் பெரிய உபயோகம் என்று சொல்ல முடியாது. வீண் விரயம் என்று கல்லூரி பேராசிரியர் சொல்லியிருந்தார். அந்தப் பயிற்சிக்காக ஊரை விட்டு இங்கே வந்து விடுதியில் சேர்ந்து ! வேண்டாத வேலை என்று நித்யா நினைத்தாலும், தனக்கும் இதற்கும் ஒன்றும் சம்பந்தம் இல்லை என்று விட்டாள். அவள் ஒரே முக்கியமான வேலை, பணத்தை அருணிடம் கொடுப்பது. இரவில் அருண் ஒரு குறுஞ்செய்தி மட்டும் அனுப்பி இருந்தான். நாளை நிச்சயம் சந்திக்கலாம் என்று. அவள் சரி என்று மட்டும் குறுஞ்செய்தியில் பதில் அனுப்பினாள். நித்யாவுக்கு அருணின் மேல் வருத்தம் தான். நித்யா காரணம் சொல்லவில்லை என்றாலும், அவளாக அவனைப் பார்க்க வேண்டும் என்று சொன்னதும் வேண்டுமென்றே அவன் அவளைத் தவிர்க்கிறானோ? அவளை அலட்சியம் செய்கிறானோ ?என்று எண்ணினாள்.அந்த எண்ணம் அவளுக்குப் பெரும் வருத்தமாக இருந்தது. ஏன் ? கீர்த்தியின் முன் அவளால் பதில் பேச முடியவில்லை. அருணை பார்க்க வந்ததன் காரணம் சொல்ல முடியவில்லை. கீர்த்தியின் அந்தப் பார்வை, அவளின் ஏளனம். நித்யாவுக்கு பெரும் அவமானமாக இருந்தது. ஒருவேளை முன்பே அருண் கீர்த்தியும் ராஜனும் வந்திருப்பதைச் சொல்லியிருந்தால் அந்தச் சங்கடமான சந்திப்பைத் தவிர்த்திருக்கலாமே ! நித்யாவின் சங்கடத்தைப் பற்றி அருணுக்கு என்ன வந்தது. இப்படியே எண்ணங்கள் அங்குமிங்குமாய் அழைத்துக் கொண்டு இருந்தது. மறுநாள் முன் தினம்போல் நேரே செல்லாமல், முதலில் அவனுக்கு அழைத்தாள். வேறு யாரும் புதிதாக அங்கே இல்லை என்று அறிந்ததும் அவனைச் சந்திக்கச் சென்றாள். இவள் உள்ளே செல்லும்போது சிபியும் அருணும் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். இவளைக் கண்டதும் “ஒரு ஐந்து நிமிடம்” என்றவன் சிபியிடம் தொடர்ந்தான். வேலை தாமதம் ஆவது பற்றி இருவரும் பேசினார்கள். முடித்துவிட்டு வரட்டும் என்று அங்கிருந்த சோபாவில் சென்று அமர்ந்தாள். சிறிது நேரத்தில் அருண் அவள் முன் வந்தமர்ந்தான். “ரொம்ப சாரி நித்யா. நேற்று மாமா வருவார் என்று தெரியாது ! நான் கிளம்பி வரும்போது கூட யாரும் சொல்லவில்லை. திடீரென்று விமான நிலையத்திலிருந்து நேரே இங்கு வந்து விட்டார்கள். இருமுறை அலைய வைத்துவிட்டேன்.” “பரவாயில்லை.” “அனிதாவுக்குப் புத்தகம் பிடித்ததா ?” என்றான். அப்போதுதான் ஞாபகம் வந்தது நித்யாவுக்கு. அது வானியல் பற்றிய புத்தகம். அனிதாவின் ஆர்வம் பற்றித் தெரிந்து கொண்டவன், அதை அவளுக்காக வாங்கி இருந்தான். அனிதா புத்தகத்தைப் பார்த்ததும் ஆர்வமாய் படிக்கத் தொடங்கினாள். “ஆர்வமாய் படிக்கிறாள்” என்றாள் நித்யா. “எதுவும் சாப்பிடுகிறாயா ?” “இல்லை வேண்டாம் !” என்றவள் பையிலிருந்து பணத்தை எடுத்து அவன் முன் வைத்தாள். புருவம் சுருங்க அவளைப் பார்த்தவன், “எதற்கு ?” என்றான். “அரவிந்த் காரை இடித்ததற்கு ! நீங்கள் சரியான தொகையைச் சொல்லவில்லை. அதனால் நான் விசாரித்தபோது சொன்ன தொகையைக் கொண்டு வந்திருக்கிறேன். எடுத்துக்கொள்ளுங்கள்.” “இதற்காகப் பல வேலைகளைச் செய்திருக்கிறாய் போல. ஆனால் அரவிந்த் ஒன்றும் செய்யவில்லையே !” என்றான். “எனக்கு எல்லாம் தெரியும் ! உங்கள் அனுபவத்திற்கு அப்படியொரு விபத்து நடந்திருக்க வாய்ப்பில்லை. அரவிந்தும் ஒப்புக்கொண்டான். அவனுக்காக நீங்கள் பழியை ஏற்க வேண்டாம். அதனால் இதை எடுத்துக்கொள்ளுங்கள்.” என்றாள். “நித்யா! சத்யன் செய்திருந்தாலும் இதைத் தான் நான் செய்திருப்பேன். இருவரும் எனக்கு ஒன்றுதான். பணத்தை எடுத்து உள்ளே வை.” “சத்யன் உங்கள் தம்பி !” “அரவிந்தும் எனக்குத் தம்பிதான்.” “உடன் பிறந்தவர்கள் வேறு, அரவிந்த் வேறு.” “நான் அப்படி நினைக்கவில்லை.” “அது உங்கள் பெருந்தன்மை. ஆனால் அரவிந்த் செய்ததைச் சரி செய்வது எங்கள் பொறுப்பு. வேறு யாரும் அவனையோ அத்தையையோ தவறாகப் பேசி விடக் கூடாது !” “உனக்கு அரவிந்த் மேல் இருக்கும் அக்கரைக்கு என் பாராட்டுக்கள். அவனை யாரும் தவறாக எண்ண மாட்டார்கள். அதற்கு நான் பொறுப்பு. போதுமா!” என்றான் அருண். “நான் கிளம்புகிறேன் !” என்று எழுந்தாள். “பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பு” என்றான் அருண். “அரவிந்த் செய்யும் எல்லாவற்றுக்கும் நாங்கள் தான் பொறுப்பு. அதிலிருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம்.” இப்போது அருணுக்குக் கோபம் வந்தது. நித்யா இப்போது அவன் குடும்பத்தைக் குறை கூறுகிறாள். அவர்களின் கடமையைத் தட்டிக்கழித்து விட்டதாகக் கூறுவது போல் இருந்தது. “நித்யா ! என்னைக் கோபப்படுத்தாதே ! பெரியவர்களுக்குள் என்ன நடந்தது என்று உனக்கும் தெரியாது ! எனக்கும் தெரியாது ! அப்படி இருக்க நீ எங்கள் வீட்டைப் பற்றிப் பேசுவது, சரியில்லை.” நித்யா அருணின் குடும்பத்தைப் பற்றிக் குறைகூற எதையும் சொல்லவில்லை. இனிமேலும் அரவிந்தையும், அனிதாவையும் பார்த்துக் கொள்ள அவள் வீட்டில் முடியும் என்று பொருளில் தான் அவள் சொல்ல நினைத்தாள். அவன் கூறியது புரியாமல் ஒரு கணம் யோசித்தவள், “உங்கள் வீட்டாரை நான் எதுவும் சொல்லவில்லை ! என் வீட்டாரைப் பற்றி மட்டும் தான் சொல்கிறேன். இதுநாள் வரை, அப்பா அவரால் முடிந்ததைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். இனிமேலும் செய்வார். அரவிந்த்தால் உங்களுக்கு ஒரு நஷ்டம். அதைச் சரி செய்ய இந்தப் பணம். உங்கள் பணம் எங்களுக்குத் தேவையில்லை.” என்றாள். அவளை முறைத்துக் கொண்டிருந்தேன், “உன் அப்பா கொடுத்தனுப்பினாரா ?” என்றான். அவள் இங்கே வந்ததும், வருவதற்கான காரணமும் யாருக்கும் தெரியாதே! இவன் அப்பாவுக்கு அழைத்து ஏதும் பேசினால் ? “இல்லை ! அப்பாவுக்கு எதுவும் தெரியாது !” என்றாள் மெதுவாக. “இருவர் உன்னை அக்கா என்று அழைப்பதால், நீ பெரிய மனுஷி என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா ? உன் அப்பாவுக்கு அழைக்கிறேன்” என்று செல்லைக் கையில் எடுத்தான். “வேண்டாம் !” என்று நித்யா படபடத்தாள். “ஏன் ?” “அப்பாவுக்கு எதுவும் தெரியாது ! தெரிந்தால் அரவிந்தை நன்றாகத் திட்டுவார். இடித்தது மட்டுமல்லாமல், அதை யாரிடமும் சொல்லாமல் மறைப்பதற்கு அதிகமாகக் கோபப்படுவார். இன்னும் ஒரு வாரத்தில் அவனுக்குப் பரிச்சை. இப்போது எதுவும் சொல்ல வேண்டாம்.அவன் பரீட்சை முடிந்ததும் நானே அப்பாவிடம் சொல்லிக் கொள்வேன். அவரும் உங்களிடம் வந்து பேசுவார்” அருண் அவளைச் சில வினாடிகள் பார்த்தான். அரவிந்தை யாரும் குறை கூறக் கூடாது, அதே சமயம் அவன் செய்ததற்கு இழப்பீடும் தந்துவிட வேண்டும், பரீட்சை நேரம் அவன் மனம் வேறு எதிலும் சிதறக் கூடாது. அவனுக்காக இவ்வளவு யோசிக்கிறாளே ! மெதுவாக அவள் அருகில் வந்தவன்,” யாரும் என்னிடம் வந்து பேசத் தேவையில்லை. ஒன்றும் இல்லாத ஒன்றை நீ தான் பெரிதாக்குகிறாய் !” “உங்களுக்கு இந்தத் தொகை ஒன்றுமில்லாததாக இருக்கலாம். எங்களுக்கு அப்படி இல்லை. அப்பாவுக்குத் தெரிந்தால் அவரும் இதைத்தான் செய்வார். தயவுசெய்து இத்தோடு இதை முடித்துக் கொள்வோம்.” என்றாள். “சரி முடித்துக் கொள்வோம் ! முதலில் பணத்தை எடுத்து வைத்துக்கொள் !உன்னிடம் இந்தப் பணத்தைப் பெறுவேன் என்று நீ நினைத்திருந்தால், அது உன் முட்டாள்தனம். ஒருவேளை உன் அப்பா வந்து கொடுத்தால், அவரிடம் பேச வேண்டிய விதத்தில் பேசி அவரிடமே திரும்பிக் கொடுத்திருப்பேன்.” நித்யா பொறுமை இழந்தாள். “உங்கள் வீட்டில் எங்கள் பெயரைக் கெடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா ? ஒன்று சேர்ந்த சில நாளில் உங்கள் பணத்திற்காக ஒட்டிக் கொண்டார்கள் என்று அத்தையை நினைப்பவர்களுக்கு, அதுதான் உண்மை என்று ஒரு சான்றை வைக்கப் போகிறீர்கள். அப்படித்தானே !” “என் வீட்டில் யார் அப்படி நினைப்பார்கள் என்கிறாய் ! நீயாக ஒன்றைக் கற்பனை செய்து கொண்டு, இங்கே வந்து ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறாய்” என்று சீறினான் அருண். நாடகம். அந்தக் கீர்த்தி சொன்ன வார்த்தைகள் எல்லாம் நினைவுக்கு வந்தது. “கற்பனையா ? நீங்கள் சொன்னீர்களே பெரியவர்கள் சண்டை நமக்குத் தெரியாது என்று ! உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அதனால் முதலில் தெரிந்து கொள்ளுங்கள். ஏன் அத்தையை வீட்டை விட்டு விரட்டினார்கள் ? இத்தனை வருடம் ஏன் அவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை ? இப்போது அவரைப் பற்றி யார் யார் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள். பிறகு வந்து சொல்லுங்கள், என் கற்பனையைப் பற்றி.” என்றாள் கோபமாக. அருணுக்கு முதலில் எதுவும் தெரியாது தான். ஆனால் சமீப காலமாகச் சிவநாதன் அடிக்கடி தான் தவிர விட்ட கடமைகளைப் பற்றிப் பேசும்போது, முக்கியமாகச் சொன்னது, தன் அண்ணன் பிள்ளைகளைக் கவனிக்காமல் விட்டது தான். சாந்தா பெரியம்மா, தாத்தாவுடன் இருந்த ஒரு மனஸ்தாபத்தில் வீட்டை விட்டு வெளியேறினார் என்பது மட்டும் தான் அவனுக்குத் தெரியும். அவ்வப்போது வேதவல்லி அத்தை சொன்னதுபோல் பணத்தாசை கொண்டு தான் வீட்டில் பிரச்சனை செய்து வெளியே சென்றுவிட்டார் சாந்தா என்று நம்ப அருணால் முடியவில்லை. இதுவரை சிவநாதனோ, பார்வதியோ இல்லை பாட்டி துளசியம்மாளோ சாந்தாவைப் பற்றி எந்தக் குறையும் சொன்னதில்லை. அப்படி இருக்க நித்யா இப்படியொரு குற்றச் சட்டை வைத்து விட்டுச் சென்றது அருணுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அருணிடம் எதையும் மறைத்துச் செயல்படும் பழக்கம் வீட்டில் இருந்ததில்லை, முக்கியமாக அவன் வளர்ந்து படிப்பை முடித்ததும், சின்ன சின்ன விஷயங்களில் அவன் கருத்தைக் கேட்டுத் தான் முடிவெடுப்பார்கள். அதே போல் சத்தியனிடம் ஒளிவு மறைவு என்று எதையும் மறைப்பதில்லை. சாந்தாவையும் பிள்ளைகளையும் அழைத்து வருவது முதல், அவர்களுடன் எல்லோரும் எப்படிப் பழக வேண்டும், அவர்களுக்கு எத்தனை முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சிவநாதன் இரு பிள்ளைகளுக்கும் சொன்னது மட்டும் இல்லை, தன் பிள்ளைகளுக்கு இருக்கும் அதே உரிமை வீட்டில் அவர் அண்ணன் பிள்ளைகளுக்கும் இருக்கும் என்று சொன்னார். இதில் வேதவல்லி அத்தை தவிர வேறு யாருக்கும் ஆட்சேபனை இருக்கவில்லை. இதெல்லாம் நித்யாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவளும் அவன் வீட்டில் சில நாட்கள் இருந்தாலே ! நித்யாவிடம் கூட எல்லாரும் எப்படிப் பழகினார்கள் ! அவளுக்கு அங்கிருந்தவர்களின் பாசம் புரியவில்லையா ! ஒருவேளை அவளிடத்தில் யாரேனும் வேறுவிதமாக நடந்துகொண்டார்களா ? வாய்ப்பு இல்லை. மதுரையில் இருந்தவரை நித்யாவும் கலகலப்பாகத்தானே எல்லோரிடமும் பழகினாள். நித்யா சொன்னது போல அவன் வீட்டில் யாரும் நினைக்கவில்லை. அவனுக்கு அதில் நிச்சயமே. நித்யாவை தடுத்து நிறுத்தினான். “நீ யாரைச் சொல்கிறாய் ! என்னையா ? என் அம்மா அப்பாவையா ? இல்லை பாட்டியையா ? அவர்கள் யாரேனும் கோபத்தையோ வெறுப்பையோ காட்டினார்களா ? இன்னும் சொல்லப்போனால், அவர்களுக்குச் சந்தோஷம். பிரிந்த குடும்பம் சேர்ந்திருக்கிறது என்று. உனக்குத் தான் புரியவில்லை.” “எனக்கு எல்லாம் நன்றாகப் புரிந்ததால் தான் சொல்கிறேன். உங்கள் அத்தை என்ன நினைக்கிறார்கள் ?கீர்த்தி என்ன நினைக்கிறாள் ? தெரியுமா உங்களுக்கு ?” “அவர்கள் என்ன நினைக்கிறார்கள் ?” “நீங்களே போய்க் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். சாந்தா அத்தை திரும்ப வந்தது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவர்கள் உங்கள் வீட்டுக்கு வரக் கூடத் தயங்குகிறார்கள் ! எங்களால் உங்கள் உறவில் எந்த விரிசலும் வேண்டாம்.” “நித்தி ! அத்தை என்ன வேண்டுமானால் நினைக்கட்டும். நாங்கள் அப்படி நினைக்கவில்லை. நீ இப்போது பேசுவது சரியா என்று கொஞ்சம் யோசித்துப் பார்.நாங்கள் அரவிந்த் அனிதா மேல் வைத்திருக்கும் அன்பை நீ குறைத்துப் பேசுகிறாய்.” இல்லை. நித்யா அவர்களைச் சொல்லவில்லை. “நான் உங்கள் பெற்றோரையோ ! உங்கள் வீட்டில் இருப்பவர்களையோ சொல்லவில்லை. உங்கள் அத்தை வீட்டில் …” நித்யாவை தடுத்து, “அவர்கள் என்ன வேண்டுமானாலும் நினைக்கட்டும். அவர்களுக்குள் சிறு வருத்தம் இருக்கலாம். அவர்கள் கெட்டவர்கள் இல்லை.” யாரும் கெட்டவர்கள் இல்லை தான். ஒருவர் நெருங்கினால், இன்னொருவர் விலகுவர் என்றால் புதிதாக வந்தவர்கள் விலகுவது நல்லது. அதுவும் அவன் வருங்கால மனைவிக்குப் பிடிக்கவில்லை என்றால். “எப்போதும் ஒரே மாதிரி இருப்பது நல்லது. இப்போது எல்லோரும் நெருங்கிப் பழகி விட்டு, பின்னாளில் விரிசல் என்றால் எல்லோருக்கும் கஷ்டம் தான்.” என்று நித்யா சொல்ல “பின்னாளில் ஏன் விரிசல் வர வேண்டும் ?” “ஒரு வேளை உங்கள் வருங்கால மனைவிக்கு எங்களைப் பிடிக்கவில்லை என்றால் …” நித்யா முடிக்கும் முன் சிரித்து விட்டான் அருண். “ஏய் நித்தி ! என்னவெல்லாம் யோசிக்கிறாய் ? ஒரு சிறிய கார் ரிப்பேர் வேலை. அதற்கு என் கல்யாணத்தை எல்லாம் இணைத்துப் பேசுகிறாய் !” “எல்லாவற்றையும் யோசிப்பது நல்லது” என்றாள் மெல்லத் தரையைப் பார்த்து அமர்ந்தாள். அவள் முகம் ஏனோ கன்றிச் சிவந்தது. அந்நியன் இல்லை என்றாலும், ஒரு ஆணிடம், அதுவும் அதிக பழக்கம் இல்லாதவனிடம் அவன் திருமணத்தைப் பற்றிப் பேசியிருக்கக் கூடாது என்று தோன்றியது. அவள் மாற்றத்தைக் கவனித்தவன் அவளுக்குக் குடிக்கத் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தான். சில கணங்களுக்குப் பின் “அப்படியானால், வருங்காலத்தில் உன் கணவன் என்ன சொல்வான் என்று யோசித்துவைத்திருக்கிறாயா ?” என்றான் அருண். அவனும் இப்படிக் கேட்க, அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவள் திருமணத்தைப் பற்றி அவள் இதுவரை யோசிக்கவில்லை. “திருமணத்திற்கு முன்பே தெளிவாகப் பேசிவிடுவேன்.” “ஓ ! ஆனால் நான் பேசக்கூடத் தேவையில்லை.” அவள் குழப்பமாகப் பார்க்க, “என் வருமானத்தில் என் மனைவிக்கு உரிமை இருக்கிறது. ஆனால் என் தந்தை சம்பாதிப்பதில் அவளுக்கு உரிமை இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம், என் வருங்கால மனைவி நீ பயப்படுவது போல் நிச்சயம் குடும்பத்தில் விரிசல் வர விடமாட்டாள். எனக்கு நிச்சயம் தெரியும்”. கீர்த்தியின் மேல் இவனுக்கு அவ்வளவு நம்பிக்கையா ? ஆனால் அவள் அப்படி இல்லையே ! “ஒருவேளை உங்கள் வருங்கால மனைவி உன் தாத்தாபோல் நினைத்தால் ?” அருணுக்கு இப்போது ஏதோ உறுத்தியது. முதலில் முழு குடும்பத்தைப் பற்றிப் பேசியவள், பிறகு வருங்கால மனைவி என்றாள். இப்போது வருபவள் தாத்தாபோல் நினைத்தால் என்ன செய்வது என்று கேட்கிறாள். தாத்தா என்ன நினைத்தார் என்று நித்யாவுக்கு எப்படித் தெரியும். அது அருணுக்கே தெரியாதே ! “சாந்தா பெரியம்மா, உன்னிடம் எதுவும் சொன்னாரா ?” மெல்ல அவன் முகத்தைப் பார்த்து, “அவர் சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா ? அத்தை உங்கள் யாரைப் பற்றியும் ஒரு வார்த்தை கூட எங்களிடம் தவறாகப் பேசியதில்லை ! உங்கள் எல்லோர் மேலும் அவர்களுக்குப் பிரியம்.” ஏனோ நித்யாவிற்கு கண்ணீர் உருண்டோடியது. வெறும் கற்பனை மட்டும் செய்து கொண்டு நித்யா எதுவும் பேசவில்லை. அவளிடம் யாரோ ஏதோ சொல்லிருக்க வேண்டும். அவளை மேலும் இதுபற்றிப் பேசி நோகடிக்க அவனுக்கு மனம் இல்லை. “சரி ! நான் பணத்தை எடுத்துக் கொள்கிறேன். நீ எனக்காக ஒன்றைச் செய்வாயா ?” ‘என்ன ?’ என்பது போல் அவள் பார்க்க, அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டு, “தேவை இல்லாமல் நிறைய யோசிக்காதே. சத்யன் எப்படியோ அரவிந்தும் அனிதாவும் எனக்கு அப்படித்தான். என் பெற்றோருக்கும். பெரியம்மாவைப் போல் எங்கள் வீட்டிலும் எல்லோரும் பிரியத்துடன் இருக்கிறார்கள்.” இருவரும் ஒருவாய் ஒருவர் பார்த்துக் கொண்டு இருக்கும்போதே, செல் ஒலித்தது. இருவரும் யாருடையது என்று தெரியாமல் இருவரும் போனை எடுக்க, அழைப்பு வந்தது நித்யாவுக்கு. வீட்டிலிருந்து தான். அவள் வரும் நேரம் தாண்டிவிட்டது என்று அழைத்திருந்தார்கள். அப்போதுதான் மணியைப் பார்த்தாள். அவள் தாமதம் ஆகும் என்றால் வீட்டுக்குச் சொல்லாமல் இருக்க மாட்டாள். இன்று அருணை சந்தித்தவுடன் சென்றால் எப்போதும் செல்லும் நேரத்தில் சென்று விடலாம் என்று நினைத்தாள். ஆனால் இப்போது அவள் வீட்டை அடைத்திருக்கும் நேரத்தைத் தாண்டி இருந்தது. “நான் கிளம்ப வேண்டும்.” என்று எழ, அவள் கையைப் பிடித்து, “இரு நானே உன்னை விடுகிறேன்” என்றான். வேண்டாம் என்றாலும் அவன் கேட்க வில்லை. ஆனால் இம்முறை வீட்டுக்குள் வரவில்லை. கொஞ்சம் வேலை இருக்கிறது என்று சென்று விட்டான். பகுதி - 14 ஏதோ நித்யாவுக்குச் சமாதானம் சொன்னாலும், வேதவல்லியின் கோபமும், நடவடிக்கையும் அருணுக்குப் பல கேள்விகளை எழுப்பியது. பார்வதியிடம் இதுபற்றிப் பேசினான். “ஏன் அம்மா ! பெரியம்மா நாம் அழைக்கும் வரை இங்கே வரவே இல்லை ? அத்தைக்கு ஏன் அவர்கள்மேல் கோபம் ?” “என்ன அருண் ? திடீர் என்று அதைப் பற்றிக் கேட்கிறாய்” “சொல்லுங்கள் ! நான் தெரிந்துகொள்ளக் கூடாது என்று ஏதும் இருக்கிறதா ?” “அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை ! பழைய கதை இப்போது எதற்கென்று தான் !” “பெரியப்பா இறந்தவுடன் பெரியம்மா வீட்டை விட்டுச் சென்று விடவில்லை தானே ! பிறகு என்ன நடந்தது ?” “உன் பெரியப்பா இருந்த வரை, அவருக்கு என்ன செல்வாக்கு தெரியுமா ? தொழில் நல்ல வருமானம். தனக்கென்று இல்லாமல், உன் அப்பாவுக்கும் சரி, உன் அத்தைக்கும் சரி கணக்கு பார்க்காமல் செய்வார். அப்போதெல்லாம் நம்மிடம் அவ்வளவு வசதி இல்லை. தாத்தா பிரித்துக் கொடுத்த பூமியில் விவசாயம் செய்து கொண்டிருந்தோம். உன் பெரியப்பா பங்கையும் உன் அப்பாதான் பார்த்துக் கொண்டார். அதற்காகப் பணம் கூடப் பெற்றுக் கொள்ளவில்லை அவர். அண்ணன் தம்பிக்குள் என்ன கணக்கு என்று சொல்வார். உன் அப்பாவாக வற்புறுத்தி அவ்வப்போது ஒரு தொகையை அவரிடம் கொடுத்துவிடுவார். உன் பெரியம்மாவும் அப்படித்தான். போதாதா காலம். தொழில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. எங்கள் யாருக்கும் தெரியாது. அவராக எல்லாவற்றையும் சரி செய்ய முயற்சி செய்தார். ஓரளவு நஷ்டத்தை ஈடு செய்யும் நேரம் திடீரென அவர் காலமாகி விட்டார். உன் பெரியம்மாவுக்கு அவர் தொழில் விஷயம் பெரிதாக எதுவும் தெரியாது. தொழிலை அவர் கூட்டாளிகள் எடுத்துக்கொண்டனர்.பெரியப்பா சேர்த்த சொத்துக்களை விற்று இருந்த கடனை அடைத்து மிச்ச தொகையை உன் பெரியம்மாவிடம் கொடுத்தார்கள். உன் தாத்தாவும் அப்பாவும், குழந்தைகள் பெயரில் வைப்புத்தொகை செய்யும்படி சொன்னார்கள். அதற்குள் பெரியம்மா ஒரு தனியார் நிறுவனத்தில் அதிக வட்டி தருகிறார்கள் என்று அங்கே பணத்தைக் கொடுத்தார். சில மாதங்களிலேயே நிறுவனம் மோசடி செய்துவிட்டது. பணம் பறிபோவதற்கு உன் பெரியம்மாவின் பேராசை தான் காரணம் என்று உன் தாத்தா சொல்லிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் உன் பெரியம்மாவால் இங்கே இருக்க முடியவில்லை. பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வெளி ஏறி விட்டார்.” என்று ஓரளவு தனக்குத் தெரிந்ததைப் பார்வதி சொல்ல, “பெரியம்மாவுக்கு வெளி உலகம் தெரியாது என்றால், அப்பாவோ தாத்தாவோ, ஏன் பணத்தைப் பெரியம்மாவிடம் கொடுக்க வேண்டும். இவர்கள் அல்லவவோ பொறுப்புடன் அவருக்கு உதவி இருக்க வேண்டும்.” “உன் தாத்தா எப்போதும் அவரவர் குடும்பம், அவரவர் பொறுப்பு என்று சொல்லுவார். அப்படித்தானே இருந்தோம். உன் பெரியப்பா இறந்த பின், இயல்பாகச் சென்று பொறுப்புகளை ஏற்க உன் தாத்தா தயாராக இல்லை. உன் அப்பாவுக்கும் கொஞ்சம் பயம். தாத்தா என்ன சொல்வாரோ என்று. இன்னொரு சிக்கலும் இருந்தது. உன் பெரிய வாங்கியிருந்த கடன் எல்லாம் லட்சங்களில். எல்லா கடனும் அடைத்துவிட்டாலும், திடீரென்று யாரேனும் வந்து நிற்பார்களோ என்ற பயம். எல்லோரும் ஒதுங்கியே நின்றோம். கடைசியாக இருந்த வீட்டையும் விற்கும் நிலைமை. அதில் மிஞ்சிய பணம் தான் பறிபோனது. இரு பிள்ளைகளை வைத்துக்கொண்டு, தாத்தா பாட்டியுடன் கொஞ்ச நாள் இருந்தார். தாத்தா பேச்சைக் கேட்க முடியாமல், இங்கிருந்து புறப்பட்டு விட்டார்.” “தாத்தாவின் வருத்தம் புரிகிறது. அவர் சொன்னதுபோல் பெரியம்மா செய்யவில்லை. ஆனால் இதில் பெரியம்மா தவறு என்ன இருக்கிறது ?இரண்டு பிள்ளைகளை வளர்க்க வேண்டுமே ?” என்றான் அருண். “அதே தான் நானும் சொன்னேன். ஆனால் இடையில் இன்னொரு சம்பவமும் நடந்தது.” என்று பார்வதி அருணின் பரபரப்பை அதிகரித்தாள். “அது என்ன ?” “உன் பெரியம்மா சொன்ன ஒரு விஷயம் இங்கே ஒரு பெரும் குண்டாய் விழுந்தது. முதலில் தாத்தாவின் வார்த்தைகளைப் பொறுத்துக் கொண்டு வந்த உன் பெரியம்மா, ஒருநாள்,”ராஜன் அண்ணா தான் பணத்தை அந்த நிறுவனத்தில் போடச் சொன்னார். அவர் நண்பர் தான் பணத்தை என்னிடம் வாங்கி சென்றார். அவர்மேல் இருந்த நம்பிக்கையில்தான் எல்லாம் செய்தேன்” என்றார். “தவறு செய்தது மட்டுமில்லாமல், பழியை வீட்டின் மருமகன் மேல் போடுகிறாள், வேதவல்லியின் வாழ்க்கை என்னாவது ?” என்று உன் தாத்தா சொல்ல, உன் அத்தை “நம் குடும்பத்தையே பிரிக்க வந்தவள். என் கணவனை அவமானப்படுத்திவிட்டாள். இந்த வீட்டுக்கு நான் இனி எப்படி வருவேன்” என்று குதித்தாள். அன்றே ‘என்னால் யாருக்கும் சங்கடம் வேண்டாம்’ என்று பிள்ளைகளை அழைத்துக் கொண்டு போய்விட்டாள்.” “யாரும் தடுக்கவில்லையா ?” என்றான் அருண். “நானும் உன் அப்பாவும் தடுத்தோம். ராஜன் அண்ணாவும், அவள் இருந்தால் இந்த வீட்டுக்கு நான் வரமாட்டேன் என்றார். அதற்கு மேல் யாரும் யாரையும் தடுக்கவில்லை.” “உன் அப்பா தான், பஸ்ஸில் ஏற்றி விட்டு வந்தார். அதன்பின் உன் தாத்தா மறைவுக்கு மட்டும் உன் பெரியம்மா வந்தார்.” பார்வதி கண்களில் கண்ணீர் உருண்டோடியது. அருண் பதறிப்போய்,“சாரி அம்மா ! உங்களை அழ வைத்து விட்டேன்.” என்றான். கண்களைத் துடைத்துக் கொண்டு,” அதெல்லாம் ஒன்றும் இல்லை கண்ணா ! அன்று உன் பெரியம்மா இரு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு சென்றதைப் பார்த்தால் யாருக்கும் கண்ணீர் வரும். யோசித்துப்பார். உன் பெரியம்மாவுக்கு வயது என்னைவிட சில மாதங்கள் குறைவே.வீட்டை விட்டுக் கணவன் துணையின்றி கடைக்குக் கூடப் போனதில்லை. இனி அவள் எல்லாவற்றையும் தனியாகச் சமாளிக்க வேண்டும். அவள் செய்த புண்ணியம் அவள் அண்ணா அவளை ஏற்றுக் கொண்டார். இல்லையென்றால் என்ன செய்திருப்பாள் ?” அன்னையின் பேச்சை இடைமறித்தான், “வீட்டை விட்டுத் தனியாக எங்கும் சென்றதில்லை என்றால் பணம் போட்ட அந்த நிறுவனத்தைப் பற்றி எப்படி பெரியம்மாவுக்குத் தெரியும் ?” “உன் மாமா ராஜன் தான் அதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். பணம் வாங்கி சென்றதும் அவர் நண்பன் தான். ஆனால் ’நான் பணத்தை அங்கே போடாச் சொல்லவில்லை. வந்து பணம் வாங்கிச் சென்றது என் நண்பன் இல்லை. தேவை இல்லாமல் என்னை அசிங்கப்படுத்துகிறாள்.” என்று விட்டார்.” “அதெப்படி அம்மா ! தெரியாத ஒரு ஆளிடம் பணத்தைக் கொடுப்பார்கள்” என்று மீண்டும் கேட்டான் அருண். “பணத்தை வாங்கியது உன் மாமாவின் அறிமுகப்படுத்தியவர் தான். அது எனக்கே தெரியும். ஆனால் உன் தாத்தாவிடம் யாரால் பேச முடியும் ? பெரியம்மா சென்றதும் உன் அப்பாவிடம் சொன்னேன். உன் அப்பாவும் தாத்தாவிடம் பேச முயன்றார்.’அவள் பேச்சு இனி என் வீட்டில் கூடாது என்று விட்டார்.”பார்வதி சொல்லி முடிக்கவும் சிவநாதன் உள்ளே வந்தார். “அம்மாவும் மகனும் அப்படி என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள் ?” என்றார். “ஒன்றுமில்லை ! எல்லாம் பழங்கதைகள் தான் !” என்று பார்வதி சொல்லிவிட்டு எழுந்து சென்று கணவனுக்கும் மகனுக்கும் சிற்றுண்டி எடுத்து வந்தாள். அருண் ஆழ்ந்த யோசனையிலிருந்தான். ஏமாற்றியவன் என் நண்பன் என்று யாரும் அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்கொள்வதில்லை. கணவனின் எல்லா நடவடிக்கைகளையும் அறியாத வேதவல்லி, கணவனின் பக்கம் தவறு இருக்கும் என்று கூட யோசிக்காதது ஆச்சரியம் இல்லை. வேதவல்லியின் கோபத்தின் காரணம் புரிந்தாலும், வீட்டை விட்டுச் சென்று இரு பிள்ளைகளைத் தனியே வளர்த்திருக்கிறாள் என்ற உணர்வு கொஞ்சமும் இல்லையா ? கணவன் என்றால் மற்றதெல்லாம் மறந்து போகுமா ? “என்ன அப்படியொரு யோசனை !” என்றார் சிவநாதன். “ஒன்றும் இல்லை அப்பா !” அவன் எல்லா யோசனையும் இப்போது நித்யாவை பற்றி இருந்தது. அவளுக்கு இங்கே நடந்தது எந்த அளவுக்குத் தெரியும் ? அவள் ஏன் அன்று அத்தனை கோபப்பட்டாள். நித்யாவின் செயல்களைப் புரிந்து கொள்ள அவனுக்குச் சிரமமாக இருந்தது. முதலில் யாரென்று தெரியாமல், அவனிடம் வந்து பேசினாள். பின்னர் ஒரு நாள், அருகில் நிற்கவே பயந்தாள். உறவென்று தெரிந்த பின்னும் ஒதுங்கி நின்றாள். ஒரே நாளில் இவன் வீட்டில் இருக்கும் அனைவரிடமும், இயல்பாகப் பழகினாள். பின்னர் மேகமலையில் சிறுபிள்ளை போல் பயந்து வந்து ஒட்டிக்கொண்டாள். இப்போது ஒரு புது சங்கடத்தை அவளாகத் தொடங்கி இருக்கிறாள். அவள் தந்தைக்குக் கூடத் தெரியாமல், தம்பி செய்த தவறை சரி செய்ய முயல்கிறாள். தனியாக எல்லாவற்றையும் சமாளிக்க முயல்கிறாள். அவள் துணிச்சல் ஒருமுறை அவனைக் கவர்ந்தது, மறுமுறை அவள் கோபம் அவனைத் தொல்லை செய்யும். அவள் யார் எனக்கு ? அவள் கோபம் கொண்டால் எனக்கென்ன ? என்று ஒரு நாளும் அருணால் ஒதுக்க முடியவில்லை. அன்று லிப்ட்டில் அவளைத் தவிர்க்க நினைத்தாலும், அவள் பார்வை அவன் மனதில் பதிந்து விட்டது. ‘உன் நேரத்தை வீணாக்காதே’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தவன், அவனின் ஓய்வு நேரத்தில் அவளைப் பற்றி நினைக்காமல் இல்லை. அவள் மீண்டும் அவனைத் தேடி வரமாட்டாளா என்று பலமுறை நினைத்தான். ஆர்வமாய் அவனைப் பார்க்கும் கண்களை அவன் பலமுறை தேடினான். மீண்டும் அவளைச் சந்தித்தபோது, அவள் ஒதுங்கிச் சென்றதை அருணால் ஏற்க முடியவில்லை. நித்யாவை சந்திக்க வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டு அடிக்கடி அவள் வீட்டுக்குச் சென்று நின்றான். பெரியம்மா, அரவிந்த் அனிதா மூவரையும் சந்திக்கச் செல்ல வேண்டும் என்றால், நித்யா இல்லாத சமயம் கூடச் செல்லலாம்தான். ஆனால் நித்யா இருக்கும் சமயம் தான் அதிகம் செல்வான். அரவிந்த் கூட ஒருமுறை நித்யாவின் கோபம் பற்றிச் சொன்னதும், அவளை எப்படி சமாதான படுத்த வேண்டும் என்று வெகுவாக யோசித்தான். ஆனால் அதற்குத் தேவையே இல்லத்தால், மேகமலை சென்று வரும்போது சாதாரணமாகவே இருந்தாள். இப்போது மீண்டும் விலகி ஓடுகிறாள். அவளுடன் இயல்பாகப் பழக வேண்டும் என்று எத்தனை ஆசை கொண்டான் என்று வேறு யாரும் அறிந்திருக்க முடியாது. அவளை நினைத்தபோது லேசாக ஒரு சிரிப்பு எட்டிப்பார்க்கும் . இப்போது கூட அப்படித்தான். அவன் சிரித்தபடி நிமிர்ந்தவன், சத்யன் அவனையே பார்த்துக் கொண்டு நிற்பதைக் கண்டான். “என்ன?” என்றான் தம்பியைப் பார்த்து. “அதை நீதான் சொல்ல வேண்டும் !” என்றான் அவன். “நான் என்ன சொல்வது” “எதற்கு விட்டத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தாய் ?” “அது ஒன்றும் இல்லை. சென்னையில் நடந்ததை நினைத்துக் கொண்டிருந்தேன்.” ஒரு கணம் தன் அண்ணை பார்த்துவிட்டு,“நித்யா அக்காவைப் பற்றித் தானே.” என்றவுடன், சட்டென்று தம்பியின் முகத்தைப் பார்த்தான். சத்யன் சிரித்துக்கொண்டே,“நினைத்தேன் ! சென்னை என்று சுற்றி வளைத்துச் சொல்லும் போதே நினைத்தேன்.” என்று மீண்டும் சிரித்தான். “நான் ஒன்றும் நித்யா பற்றி நினைத்தாகச் சொல்லவில்லையே !” என்றான் அருண். “நீ சொல்லவில்லை. நானே கண்டுபிடித்துவிட்டேன். உன் முகத்தில் எழுதி இருக்கிறது.” “அதெல்லாம் ஒன்றும் இல்லை” என்று எழுந்து தன் அறைக்குச் சென்றான். சத்யன் விடுவதாக இல்லை. “என்னிடம் தப்பிக்க முடியாது. நானும் பார்த்துக்கொண்டே தான் இருக்கிறேன். நீ நித்யா அக்காவிடம் நடந்துகொள்வதைப் பார்த்தேன்.” “முதலில் போய்ப் படிக்கிற வேலையைப் பார்.” என்று தம்பியை விரட்டினான். “எதுவும் உதவி வேண்டுமானால், தயங்காமல் கேட்கலாம்.” என்று சொல்லிவிட்டுத் தான் சென்றான். இன்னும் அருண் முகத்தில் சிரிப்பு. தம்பிக்குத் தெரியும் அளவுக்கு நடந்து கொண்டோமா ? என்று யோசித்து, இனிமேல் கவனமாக இருக்க வேண்டும். இம்முறை அவன் சென்னை திரும்புகையில் கீர்த்தியும் உடன் வந்தாள். அன்றிலிருந்து அவனுக்குப் புது வேலை, அவளைக் காலையும் மாலையும் விடுதிக்கும் அவள் வகுப்புக்கும் மாற்றி மாற்றிக் கொண்டு விடுவது. வேலை என்று ஒருநாள் செல்லவில்லை என்றால், மதுரை வரை புகார் சென்றுவிடும். முதலில் அவள் அம்மாவுக்குப் பிறகு சிவநாதனுக்கு. சிவநாதன் பெரிதாகக் கண்டிக்க மாட்டார் என்றாலும், அவருக்குத் தங்கை கொடுக்கும் குடைச்சலைத் தவிர்க்க, அருணால் முடிந்தவரைச் செய்தான். இப்போது புதிதாகப் பல ஆர்டர்கள் வந்தன. வேறு வேறு இடங்கள். அருணும் சிபியும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டாலும், கொஞ்சம் அலைச்சல் அதிகமாக இருந்தது. திடீரென்று ஒரு ஞாயிறு, அரவிந்த் அலுவலகத்திற்கு வந்து நின்றான். “ஏய் ! நீ என்ன செய்கிறாய் ?” என்றான் அருண் அவனைப் பார்த்ததும். “பரவாயில்லையே ! என்னை இன்னும் மறக்காமல் அடையாளம் கண்டுகொண்டீர்கள் !” என்றான் அரவிந்த். அவன் கையில் ஒரு பெரிய பை இருந்தது. அதைப் பார்த்ததும், “என்ன உன் அக்கா இன்னும் ஏதாவது பண மூட்டையைக் கொடுத்தனுப்பினாளா ?” என்றான் அருண். “பணமா! எதற்கு ? எதுவும் டிசைனிங் செய்ய வேண்டுமா ?” என்றான் சிபி. ஓரளவு சிபிக்கு அருணின் உறவினர்கள் எல்லோரும் பரிச்சயமே. சிபியின் முன் பேசி விட்டோமே என்று நினைக்க, அரவிந்த் என்ன சொல்வதென்று யோசிக்க,” அதெல்லாம் ஒன்றும் இல்லை.” என்று முடித்து விட்டான் அருண். “நீங்கள் வந்து வெகுநாட்கள் ஆகிறது என்று அம்மா உங்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்து வரச் சொன்னார்கள்.” என்று பையை மேஜை மேல் வைத்தான். “என்ன இது?” என்றான் அருண். “உங்களுக்குச் சாப்பாடு !” என்றான் அரவிந்த். “உன் அண்ணனுக்கு மட்டும் தானா ?” என்றான் சிபி. “உங்கள் இருவருக்கும் தான். இன்று கூட வேலை இருப்பதாக மெசேஜ் செய்திருந்தீர்கள். எப்படியும் இரண்டு பெரும் ஒன்றாக இருப்பீர்கள் என்று அம்மா உங்கள் இருவருக்கும் தான் கொடுத்தனுப்பினார்.” என்று சொல்லியபடி “சாப்பிட்டு விட்டு உங்கள் வேலையைப் பாருங்கள்.” என்றான். அருண் சிபி இருவருக்கும் பசி எடுத்திருந்தது. இருவரும் உன்ன தொடங்கினர். “நீ சாப்பிடவில்லை !” என்றான் அருண் அரவிந்தை பார்த்து. “நான் காலை உணவு தாமதமாகச் சாப்பிட்டேன். வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுக் கொள்வேன்.” என்றான். “தினமும் இப்படி நேரத்துக்கு யாராவது கொண்டு வந்து கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் !” என்றான் சிபி. “என் அம்மாவிடம் சொன்னீர்கள் என்றால், டாக்டர் என்று கூடப் பாராமல் என்னைத் தினமும் டெலிவரி பாய் வேலை செய்யச் சொல்வார்கள்.” என்றான் அரவிந்த். “உன் பரீட்சை தான் முடிந்ததே ! மதுரைக்கு ஒரு முறை எல்லோரும் சென்று வாருங்கள்.” என்றான் அருண். “ஐயோ ! இப்போது இல்லை ! அனிதாவின் முடிவுகள் இந்த வரம் வந்துவிடும். அதற்குப் பின் கல்லூரியில் சேர்த்துவிட்டுத் தான், அடுத்த வேலையைப் பார்க்க வேண்டும். இல்லை என்றால் இராட்சசி கடித்துக் குதறிவிடுவாள் !” என்று அரவிந்த் சொல்ல, “அனிதா ரொம்ப சாது. அவளைப் போய் இராட்சசி என்கிறாயே ?” என்று சிபி கேட்க, “அவன் சொல்வது அனிதாவை அல்ல !” என்றான் அருண். “ஓ ! நித்யாவா. நித்யாவும் பாவம் பா ! ரொம்ப அமைதி.” என்று சிபி சொல்லி முடிக்கும் முன் “நித்யா பாவமா !” என்று இரு சகோதரர்களும் ஒன்றாகச் சொல்ல, சிபி இருவரையும் மாறி மாறிப் பார்த்தான். இருவரும் உண்டு முடித்ததும், டப்பாக்களை எடுத்துவைத்த படி, சிபி அரவிந்தை கேட்டான். “நீ நித்யாவை இராட்சசி என்றால் உனக்குப் பல ஆண்டுகளாய் தெரியும். அருணுக்கும் ஏன் நித்யா இராட்சசி ஆனால் ?”. “அது உங்கள் நண்பரைத் தான் கேட்க வேண்டும்.” என்று சிரித்தான் அரவிந்த். ‘நீ சொல்’ என்பது போல் அருணை இருவரும் பார்க்க, “போய் வேலையைப் பாருங்கள். அரவிந்த் எப்படி வந்தாய்? டிராப் செய்ய வேண்டுமா ? இல்லை என் காரில் கூட ஏறக் கூடாது என்று உன் அக்காவின் சட்டமா ?” என்றான். சிபி அப்போது அறையை விட்டு வெளியேறிவிட்டான். “பைக்கில் தான் வந்தேன். காரில் வருவது பற்றி ஒன்றுமில்லை. நான் காரை ஓட்ட நினைத்தால், தொலைந்தேன். அதுவும் நித்யாவுக்கு தெரிந்தால் என் கையை உடைத்து விடுவாள்.” “அவளிடம் உன்னை யார் உண்மையைச் சொல்லச் சொன்னது !” என்றான் அருண். “மதுரையிலிருந்து வந்ததும் வராததுமாக, பத்திரகாளி போல் முன்னே வந்து நின்றால், எப்படிப் பொய் சொல்வது. அதுவும் அவளுக்கு ஏற்கனவே நீங்கள் சொல்லிவிட்டீர்களோ! என்ற பயம்.” “நான் யாரிடமும் சொல்லவில்லை. நம் இருவரைத் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.” “அவளுக்கு எப்படித் தெரிந்தது ? எப்படியோ மாமாவிடம் சொல்லவில்லை. மாமா கூடப் பரவாயில்லை. அம்மாவுக்குத் தெரிந்தால் பெரிய பிரச்சனை தான்.” அருணுக்குப் பார்வதி சொன்னது நினைவு வந்தது. மெல்ல அரவிந்திடம் கேட்டான். “நாம் ஒன்று சேரும் முன் பெரியம்மா எங்களைப் பற்றி உன்னிடம் ஏதாவது சொல்லியிருக்கிறார்களா? எங்கள்மேல் பெரியம்மாவுக்குக் கோபம் இப்போதும் இருக்கிறதா ?” அருணின் கேள்வி சற்றே ஆச்சரியப்படுத்தியது. ” சின்னப் பிள்ளையாக இருக்கும்போது சொல்வார்கள். அனிதா அதிகம் கேள்வி கேட்பாள். எப்போது அவர்கள் எங்களைப் பார்க்க வருவார்கள் ? நாம் எப்போது அங்கே போவோம் ?என்று. அதன் பின் அம்மா உங்களைப் பற்றிப் பேசுவதைக் குறைத்துக் கொண்டார்கள். அப்படியே நின்றும் போனது. ஆனால் அவர்கள் என்றும் யார் மேலும் கோபம் இருப்பதாகச் சொன்னதில்லை. ” அருண் மெல்லச் சிரிக்க, “உங்கள் மனம் வருந்தும் என்று நான் எதையும் மறைக்க வில்லை. ஒருவேளை அம்மாவுக்குக் கோவம் இருந்திருந்தால் உங்கள்மேல் அக்கறை கொண்டிருக்க மாட்டார்கள்.” என்று அரவிந்த் சொல்ல, “உன் அக்காவுக்கு மட்டும் ஏன் இத்தனை கோபம் ?” என்றான் அருண். “அது நீங்கள் செய்தது !” “இல்லை ! அங்கே இருந்த வரை நன்றாகத்தான் பேசினாள். இப்போது அப்படி இல்லை.” “நானும் கவனித்தேன் ! உங்களிடம் பணத்தைக் கொடுத்து விட்டு வந்ததிலிருந்து, ஒரு மாதிரி தான் இருக்கிறாள். உங்களுக்குள் அப்படி என்ன நடந்தது ?” அப்போது யாரோ அறைக் கதவைத் தட்டாமல் உள்ளே வந்தார்கள். இருவரும் திரும்பிப் பார்க்க, கீர்த்தி உள்ளே வந்தாள். “என்ன மாமா ! என்னுடன் போனில் பேசக் கூட நேரம் இல்லையா ?” என்றாள் பொய் கோபத்துடன். அரவிந்தை அங்கே பார்த்ததும் அவள் கோபம் நிஜமானது. அரவிந்தை காணாததுபோல் சென்று அமர்ந்தாள். “எப்படி இருக்கிறாய் கீர்த்தி ! ஊரில் அம்மா அப்பா எல்லோரும் நலமா ?வகுப்புகள் எல்லாம் எப்படிச் செல்கிறது.” “உனக்கு யார் என்னைப் பற்றிச் சொன்னது !” என்றாள் கீர்த்தி. “முதலில் அரவிந்த் கேட்டதுக்குப் பதில் சொல். அவன் உன்னிடம் நலம் விசாரிக்கிறான் ! அதற்குப் பதிலும் சொல்லவில்லை ! இங்கே இருப்பவர்கள்பற்றிக் கேட்கவும் இல்லை ! என்ன பழக்கம் இது ?” என்றான் அருண். “நீங்களும் அத்தை போல் அறுக்காதீர்கள் ! எல்லோரும் நலம். போதுமா !” என்றாள் எங்கோ பார்த்தபடி. அவள் அத்தை என்று குறிப்பிட்டது பார்வதியை என்று அருணுக்குப் புரிந்தது. “அம்மா உன் நன்மைக்குத் தான் சொல்வார்கள்.” என்றான். இனியும் இங்கே இருக்க வேண்டாம் என்று “சரி நான் கிளம்புகிறேன் ! அடுத்த முறை கீர்த்தியையும் வீட்டுக்கு அழைத்து வாருங்கள்” என்று எழுந்தான் அரவிந்த். “இரு ! உன் பேங்க் அக்கவுண்ட் சரியா என்று பார். பணத்தைத் திரும்பச் செலுத்தி விடுகிறேன்.” என்றான் அருண். “ஐயோ ! அது உங்களுக்கும் ராட்சஷிக்கும் இடையில் இருப்பது. என்னை ஆளை விடுங்கள் !” என்றான். “எப்போதும் அவள் பக்கமே பேசு !” என்றான் அருண். “அவளும் இதே தான் சொல்கிறாள் ! நான் உங்களுக்குச் சப்போர்ட் செய்கிறேன் என்று ! மத்தளத்துக்கும் இரண்டு பக்கமும் இடி என்பார்கள். என் விஷயத்தில் அது மிகச் சரி.” என்று புலம்பியவாறு வெளியேறினான். அப்போது நித்யாவை சமாதான படுத்த பணத்தை எடுத்துக்கொண்டாலும், அவள் கொடுத்தது அவளின் சேமிப்பிலிருந்து என்று அருணுக்குப் புரிந்தது. எப்படியும் அவளிடம் சேர்த்துவிட வேண்டும் என்று அவளிடம் வாங்கும் போதே நினைத்தான். “அவனுக்கு எதற்குப் பணம் ! நீங்கள் ஏன் தருகிறீர்கள். அதுதான் மாமாவே அவர்களுக்கு நிறையப் பணம் கொடுக்கிறாரோ ! அவர்களுக்கு அதுவும் போதவில்லையா ?” என்றாள் கீர்த்தி. “கீர்த்தி ! உனக்கு யார் சொன்னது, மாமா பணம் கொடுத்தார் என்று ?” “அது அம்மா தான் சொன்னார்கள் ! அவர்களுக்கென்று புது வங்கிக் கணக்கு, படிப்புச் செலவுக்கென்று பணம். எல்லாம் மாமா கொடுத்திருக்கிறார். மீண்டும் உங்களிடம் வேறு பணம் கறக்கப் பார்க்கிறார்கள் !” “போதும் கீர்த்தி ! தெரியாமல் எதுவும் பேசாதே ! அப்பா அவர்களுக்குத் தர வேண்டும் என்று எண்ணியிருந்தார். ஆனால் பெரியம்மா மறுத்துவிட்டார். அவர்கள் யாரிடமும் எதையும் எதிர்பார்க்கவில்லை.” “பிறகு உங்களிடம் எதற்குப் பணம் கேட்கிறார்கள்.” “அவர்கள் கேட்கவில்லை. இது வேறு விஷயம். உனக்குத் தெரியாததைப் பற்றிப் பேசாதே !” “எல்லாம் எனக்குத் தெரியும் மாமா ! அம்மா சொன்னார்கள். வேண்டாம் வேண்டாம் என்றால் தான் செய்யத் தோன்றும். அந்தக் குடும்பம் ஒன்றும் சாதாரணமானவர்கள் இல்லை. இல்லையென்றால் மாமா கூப்பிட்ட மாத்திரத்தில் வந்திருப்பார்களா ?” பேசிக்கொண்டே போனாள். அருணுக்கு அதிக வியப்பு ஒன்றும் இல்லை. வேதவல்லி அத்தை பேசியதை இவள் திரும்பச் சொல்கிறாள். இவன் என்ன சொன்னாலும் கீர்த்தி கேட்கப்போவதில்லை. அதற்காக அவள் பேசுவதையும் கேட்டுக்கொண்டு இருக்க முடியாது. “என்ன விஷயமாக வந்தாய் ?” என்றான். “ஹாஸ்டல் உணவு நன்றாக இல்லை. ஓட்டலுக்குத் தனியாகச் செல்லலாம் என்றால் ஒருமாதிரி இருந்தது. அதுதான் உங்களை அழைத்துப் போக வந்தேன்.” “எனக்கு வேலை இருக்கிறது. வேண்டுமானால் உனக்குப் பார்சல் வரவழைத்துத் தருகிறான்.” “பார்சல் வாங்கி சாப்பிட்டால், திருப்தியாக இருக்காது. எப்படியும் நீங்கள் சாப்பிட வேண்டும் இல்லையா! கூட்டம் குறைவான ஒரு ஹோட்டலுக்கு போய்ச் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு வரலாம்.” “நான் ஏற்கனவே சாப்பிட்டுவிட்டேன். இன்று ஞாயிறு. எந்த ஹோட்டலில் கூட்டம் இல்லாமல் இருக்காது.” “இப்போது தான் மணி ஒன்று. அதற்குள் சாப்பிட்டு விட்டீர்களா ? ப்ளீஸ் எனக்காக வாருங்கள் !” “கீர்த்தி ! வேலை இல்லாமலா இன்று வந்து இங்கே உட்கார்ந்திருக்கிறேன் ? புரிந்து கொள். இன்னும் சின்னப் பிள்ளைபோல நடந்துகொள்ளாதே. எந்த ஹோட்டலில் வேண்டும் என்று சொல். ஆர்டர் செய்கிறேன்.” என்று கணினியைத் தட்ட ஆரம்பித்தான். “அந்த அரவிந்த்திடம் பேச மட்டும் உங்களுக்கு நேரம் இருக்கும். எனக்காக உங்களால் நேரம் செலவு செய்ய முடியாது ! அவர்கள் தான் உங்களுக்கு முக்கியம். அப்படித்தானே !” வேதவல்லி அத்தையின் அதே வார்த்தைகள். ‘புதிதாக வந்தவர்கள் தான் முக்கியமாகி விட்டார்கள்’ என்று கண்ணீர் வடிப்பாள். கீர்த்தி அழவில்லை. அவ்வளவுதான். அருணுக்குச் சலிப்பாக இருந்தது. “கீர்த்தி ! எனக்கு நீ வேறு அவன் வேறு இல்லை. நீயும் அத்தை மாதிரியே பேசிக்கொண்டிருந்தால், எனக்குச் சலிப்பு தான் வரும். பெரியவர்களுக்குள் நடந்த மனவருத்தங்களை நாமும் எடுத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் வெறுப்பது சரி இல்லை. இனியேனும் அவர்களுடன் ஒழுங்காக நடந்து கொள். சரியாகத் தெரியாமல் அவர்களைப் பற்றித் தப்பாகப் பேசாதே !” என்றான். அதற்குள் சிபியும் வர, ஆண்கள் இருவரும் வேலையைத் தொடர கீர்த்திக்குப் பேச முடியவில்லை. இடையில் அவளுக்காக என்ன வேண்டும் என்று கேட்டு உணவை வரவழைத்துத் தந்தான். அங்கேயே அமர்ந்து சாப்பிட்டு விட்டு மாலைவரை காத்திருந்தாள். வேலை முடிந்ததும் ஹாஸ்டலில் கொண்டு விட்டானே தவிர வேறெதுவும் பேசவில்லை. பகுதி - 15 கடந்த சில வாரங்களாகவே, அருணுக்கு வேலை அதிகமாகவே இருந்தது. புதிதாக வீடுகளை வடிவமைக்கும் வேலை. எப்போதும் பெரும் கட்டிடங்களுக்கு மட்டும் வடிவமைப்பது என்பது எல்லா நேரங்களிலும் நடப்பதில்லை. அவன் இதுவரை முடித்த இரண்டு வேலைகள் அப்படித்தான் என்றாலும், புதிதாக வந்த ஆர்டர் இன்னும் மூன்று மாதங்களுக்குப் பிறகு தான். அதுவரை சும்மா இருப்பதை விட, வீடுகளுக்குச் செய்யலாம் என்று நினைத்தார்கள். அப்படியொரு ஆர்டர் வந்தது. ஏற்கனவே கட்டி முடிந்த அடுக்குமனை குடியிருப்பு. ஏற்கனவே முடிவாகிருந்த வடிவமைப்பாளர்கள் சில வேறுபாடுகளால் பின்வாங்கி விட, இப்போது புது நிறுவனத்தைத் தேடிக் கொண்டிருந்தார்கள். அருண் சிபியின் ’விஸ்வகர்மா ’வுக்கு அந்த ஆர்டர் வந்தது. ஒரே வடிவமைப்பை எல்லா வீடுகளுக்கும் செய்ய வேண்டும் என்றால் சுலபமே. ஆனால் வீடுகளின் கட்டுமானம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். இருந்த அறுபது வீடுகளில் மொத்தம் ஐந்து கட்டுமான அமைப்புகள். ஒவ்வொன்றுக்கும் குறைத்து மூன்று வடிவமைப்புகள். மொத்தம் பதினைந்து வடிவமைப்புகளை இரண்டு வாரங்களுக்குள் முடித்துக் காண்பிக்க வேண்டும். அத்துடன் உரிமையாளர்கள் கேட்கும் டிசைன்கள் மேலும் ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும். ஆட்கள் அதிகம் தேவை. வேலை தெரிந்தவர்களைப் பிடித்துவிடலாம். ஆனால் அவர்கள் நம்பிக்கையானவர்களாக இருப்பார்களா தெரியாது. தற்காலிக வேலைவாய்ப்பு என்றால் சிலர் மெத்தனமாகச் செய்யப்படுவது வழக்கம். எப்போதும் மேற்பார்வை தேவை படும். ஆட்களைத் தேடி பிடித்து, சுழற்சி முறையில் நாள் முழுவதும் வேலை வாங்க திட்டம். அப்போதுதான் குறித்த நேரத்தில் வேலை முடியும். ஒரே நேரத்தில் பலரை மேற்பார்வை செய்வதும் கடினம். ஒவ்வொன்றாகத் திட்டமிட்டு ஒரு வழியாக எல்லாம் சரியாக நடக்கும் நேரத்தில், ஏற்கனவே கொடுத்த டிசைன் வேண்டாம் புதிய டிசைன் வேண்டும் என்று சில வீட்டு உரிமையாளர்கள் வந்தார்கள். அருணுக்கும் சிபிக்கும் நிற்க நேரம் இல்லாமல் பறந்தனர். முதல் இரண்டு வாரங்களிலேயே வெகுவாகக் களைப்பு தோன்றியது. முக்கிய காரணம் இருவரும் சரியான நேரத்தில் உண்ணவில்லை. உறக்கமில்லை. மகனின் நிலையை அறிந்து வருந்திய பார்வதி சாந்தாவிடம் சொன்னாள். “இந்தப் பிள்ளை என்ன செய்கிறானோ தெரியவில்லை. எப்போது பார்த்தாலும் வேலை வேலை என்று ஓடுகிறான். சரியாகச் சாப்பிடுவது கூட இல்லை. என்னால் அங்கு வர முடியவில்லை. வந்தாலாவது கொஞ்சம் கண்டித்து நேரத்திற்கு உண்ண வைப்பேன். அதுவும் முடியவில்லை.” என்றாள் பார்வதி. செல்வத்தை அழைத்துக்கொண்டு ஒரு முறை சென்ற சாந்தாவுக்கு, பார்வதி படும் கவலை சரி என்று தோன்றியது. செல்வமும் அதே தான் நினைத்தார். முதலில் இவர்களிடம் பேசக்கூட நேரமில்லை தான் அருணுக்கு. “என்னப்பா அருண்! உன் அம்மா கவலை படுவது சரிதான். இப்படி இளைத்துப் போய் விட்டாய். முதலில் உடல் ஆரோக்கியம் தான் முக்கியம்.” என்று சாந்தா சொல்ல, “ஒரு இரண்டு நாளில் எல்லாம் சரியாகி விடும்.” என்றான். அதன்பின் அடிக்கடி சாந்தா அரவிந்தோடு அவன் வீட்டிற்கு சென்று தேவையானதை வாங்கி வைப்பது, எளிதில் சூடுபடுத்தி சாப்பிடும் வகையில் உணவுகளைச் செய்து வைப்பது என்று அவ்வப்போது செய்வது வழக்கம் ஆகிற்று. அதற்குச் சௌகரியமாக ஒரு வீட்டு சாவியை சாந்தாவிடம் கொடுத்து வைத்தான் அருண். அப்படி செல்லும் ஒரு நாளில், அரவிந்துக்கு வேலை வந்துவிட்டது. அவன் பேராசிரியர் போனில் அழைத்திருந்தார். அவரை இடையில் தடுக்க முடியாமல் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தான். அவன் அழைப்பு முடிவதாக இல்லை. நித்யாவும் அலுவலகத்தில் விடுமுறை. “நித்யா ! நீ வா டா. நாம் போய் வரலாம். வேலை வேறு நிறைய இருக்கிறது.” என்றாள். “நான் வரமாட்டேன். நீங்கள் ஆட்டோவில் சென்று வாருங்கள். இல்லை இவனை அழைத்துக் கொண்டு செல்லுங்கள்.” என்றாள் நித்யா அரவிந்தை காட்டி. என்னால் இப்போது முடியாது என்று செய்கை செய்தான் அரவிந்த். பேராசிரியர் ஒரு விரிவுரைபற்றிக் குறிப்பெடுத்து மாலைக்குள் தருமாறு சொல்கிறார் என்று அருகில் இருந்த புத்தகத்தில் எழுதிக் காட்டிவிட்டு, அவன் அறைக்குச் சென்று விட்டான். “ஏய்! இந்நேரத்தில் ஆட்டோ இங்கே கிடைக்காது. அத்தை எப்படி இதை எல்லாம் தூக்கிக்கொண்டு நடப்பார்கள். சீக்கிரம் கிளம்பு.” என்றாள் சுமதி. தையல் கடையிலும் இப்போது நிறைய வேலை தான். அடுத்த கல்வி ஆண்டு என்று நிறைய சீருடைகள் தைக்க கொடுத்திருந்தார்கள். இதற்கிடையில் சாந்தா அருணை கவனிக்க வென்று, தனியே இன்னும் கொஞ்சம் வேலை பார்த்துக்கொண்டிருந்தாள். நித்யாவுக்கு எரிச்சல் தான் வந்தது. அருண் என்ன சின்னப் பிள்ளையா ? ஒருவர் கவனித்துக் கொள்ள ! அத்தைக்காகச் செய்வோம் என்று எழுந்து சென்றாள். அருண் பெரும்பாலும் வீட்டில் இருப்பதில்லை என்று சாந்தா சொல்லிருந்தாள். அவனைச் சந்திக்க தேவையில்லை என்று தைரியமாகச் சென்றாள் நித்யா. வீட்டைத் திறந்து உள்ளே சென்றால், வீடு வேறு மாதிரி இருந்தது. முன்பு ஒருமுறை நித்யா வந்திருக்கிறாள். எல்லோரையும் அருண் வீட்டுக்கு அழைத்து வந்தபோது. அப்போது வீடு பளிச்சென்று சுத்தமாக இருந்தது. இப்போது உணவு மேசை, நாற்காலி, சோபா என்று எங்குப் பார்த்தாலும் காகிதங்கள் கோப்புகள். “கதவைச் சாத்திக் கொண்டு வா ! என்று உள்ளே சென்றாள் சாந்தா. நித்யாவும் பின் தொடர்ந்தாள். இரண்டு நாட்களுக்கு முன் கொண்டு வந்த உணவுகளைக் கொட்டிவிட்டு, புது உணவுகளைப் பிரிட்ஜில் வைத்துவிட்டு, வாங்கி வந்த பழங்களைத் தோலுரித்து நறுக்கி, “இதைக் கூடச் செய்ய வேண்டுமா ?” என்றாள் நித்யா சலிப்புடன். “அருணுக்கு நேரமே இல்லை பாவம் !” என்றாள் சாந்தா. இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போதே, ஒரு கதவைத் திறந்து கொண்டு வந்தான் அருண். தூக்க கலக்கத்தில், தலை முடியைக் கூடச் சரி செய்யாமல் பல நாள் ஷேவ் செய்யாத தாடியுடன் வந்தான். முன்தினம் அலுவலகத்துக்கு அணிந்திருந்த ஆடையை மாற்றாமல் தூங்கி இருக்க வேண்டும். கசங்கிய சட்டை பாண்ட் உடன் வந்து நின்றான். “இப்போதுதான் வந்தீர்களா ?” என்று கேட்டுக்கொண்டே வந்தவன், அரவிந்துக்கு பதில் நித்யா வந்திருக்க, “இன்று சென்னையில் நிச்சயம் மழை வரும். நித்யா வந்திருக்கிறாள்.” என்றான். அவனின் கோலத்தைப் பார்த்ததும் அத்தை செய்வது ஒன்றும் அதிகப்படி இல்லை என்று தோன்றியது. “என்னப்பா ! இன்னும் கிளம்பவில்லையா? ஒரு காபி போடட்டுமா ?” என்றாள் சாந்தா. “காலையில் ஏழு மணிக்குத் தான் வந்து படுத்தேன். கிளம்ப வேண்டும். குளித்துவிட்டு வருகிறேன்”, என்று மீண்டும் உள்ளே சென்றான். காலை ஏழு மணிக்குப் படுத்தானா ? இப்போது மணி பத்து. மூன்று மணி நேரத் தூக்கமா ? எப்படி போதும். சென்ற முறை எடுத்து வந்த உணவு கூடப் பாதி அப்படியே இருந்தது. நித்யாவுக்கு கவலை தொற்றிக்கொண்டது அவன் வருவதற்குள் நித்யாவும் சாந்தாவும், காலை உணவாக ஒரு பெரிய ஆம்லெட்டும், ஒரு பழச்சாறையும் மேசைமேல் வைத்துவிட்டு எல்லா வேலைகளையும் முடித்துப் புறப்படத் தயாராக இருந்தனர். “அருண் ! முதலில் சாப்பிடு” என்று சாந்தா சொல்ல, சாப்பிட அமர்ந்தவன், “எனக்கு ஜூஸ் வேண்டாம் ஒரு காபி பெரியம்மா !” என்றான். “இதோ” என்று பார்வதி சொல்ல, “நான் காபி கலக்குகிறேன்” என்று சென்றாள் நித்யா. அவள் காபியைக் கொடுக்கவும், “இந்த ஜூஸை நீ குடித்துவிடு”, என்று நித்யாவிடம் கொடுத்தாள் சாந்தா. அவன் உண்டு முடித்ததும் ஒன்றாக மூவரும் கிளப்பினார். “அருண் ! நேரத்துக்குச் சாப்பிடு ! திரும்பத் திரும்பச் சொல்கிறேன் ! மீண்டும் இளைத்த மாதிரி தெரிகிறாய். இல்லை நான் உன் அம்மாவிடம் சொல்லி அவர்களை இங்கே வரச் சொல்கிறேன்.” “அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் ! நான் அப்படியேதான் இருக்கிறேன் பெரியம்மா !” என்றான். “இல்லை அருண் ! சுவர் இருந்தால் தான் சித்திரம். இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றே தெரியவில்லை !” என்றாள் கவலையாக. “உங்கள் மகன் ஒன்றும் இளைத்துவிட வில்லை ! முதலில் தலையில் இருக்கும் முடியை ஒழுங்காக வெட்டித் தாடியை ஷேவ் செய்தாலே போதும். முதலில் அதைச் செய்யச் சொல்லுங்கள் !” என்றாள் நித்யா. கேலியாய் சொன்னாலும், இவன் முன் அப்படிப் பேசியிருக்கக் கூடாது என்று நாக்கை கடித்துக் கொண்டாள். அவன் எப்படி எடுத்துக்கொண்டானோ என்று அவன் முகத்தைப் பார்க்க, அவனும் அனிச்சையாக அவன் முடியைத் தொட்டுப் பார்த்துக்கொண்டிருந்தான். “சாரி, அரவிந்த்திடம் சொல்வதுபோல் சொல்லிவிட்டேன்” என்று நித்யா மன்னிப்பு கேட்க, “அவள் சொல்வதும் சரிதான். முதலில் அதைச் செய்” என்றாள் சாந்தா. பேசிக்கொண்டே வண்டி நின்ற இடத்திற்கு வந்தார்கள். “பார்த்து ! மெதுவாகச் செல்லுங்கள் !” என்றான் அருண். அவர்கள் செல்வதைக் கண் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தான். நித்யா சொன்னது அவன் முகத்தில் ஒரு ஆனந்தம் தந்தது. அவள் அவனைக் கவனித்தது மட்டுமல்லாமல், அவன் சிகையைச் சரி செய்யும் படி சொன்னது அவனுக்கு உற்சாகமே ! அத்துடன் நிற்காமல்” ஆரோக்கியத்தில் கவனம் தேவை” என்று ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினாள். அருணின் செயல்களைச் சாந்தா பார்வதிக்குச் செல்லவும், பார்வதியால் மதுரையில் இருக்க முடியவில்லை. மகனைக் கவனித்துக் கொள்ள உடனே சென்னை செல்ல வேண்டும் என்று தோன்றியது. ஆனால் துளசி அம்மாளை விட்டுச் செல்ல மனம் தயங்கியது. மருமகளை நன்கு அறிந்த துளசியம்மாள், மருமகளைச் சென்னைக்கு அனுப்பி வைத்தாள். வீட்டில் யார் துணையுமின்றி இப்போது நடமாடும் தனக்கு மருமகள் துணை நிச்சயம் தேவை என்று இல்லை. முதலில் தயங்கிய பார்வதிக்குப் பல சமாதானங்கள் சொல்லி அனுப்பினார் சிவநாதன். உடன் சத்யனும் சென்றான். முதலில் மகனின் உழைப்பைக் கண்டு வெகுவாக வருந்தினாலும், இவள் வருத்தம் அவனைப் பாதிக்கும் தவிர, அவனுக்கு எந்த விதத்திலும் உதவாது என்று கலகலப்பாக மகனுக்குத் தேவையானதை நேரத்தில் செய்தாள். சத்யனும் அவ்வப்போது அருணுடன் சென்று அவனுக்குச் சில உதவிகள் செய்தான். செல்வம் குடும்பத்தில் இருந்தும் முன்போல் ஒருநாள் விட்டு ஒருநாள் சாந்தாவும் அரவிந்தும் அனிதாவும் வந்து விடுவார்கள். சாந்தாவின் வேலையை அறிந்த பார்வதி, செல்வத்தின் வீட்டிற்குச் செல்லவும் தொடங்கினாள். சத்யனும் கூட. அன்னைக்கும் தம்பிக்கும் சௌகரியமாக வெளியே சென்று வர ஓட்டுனருடன் ஒரு காரை ஏற்பாடு செய்திருந்தான் அருண். பார்வதி சென்னை வந்த முதல் வாரம் முழுவதும் அருணை கவனிக்க எந்நேரமும் வீட்டில் எதையாவது செய்துகொண்டிருந்தாள். ஆனால் காலையில் செல்லும் மகன் மாலையில் தான் வீட்டிற்கு வருகிறான். சத்யனும் அருணுடன் செல்லும் நாட்களில், சாந்தாவை நாடி பார்வதி வரத் தொடங்கினாள். பிறகு சத்யனும். அருண் சென்றவுடன் வருவார்கள். இரவு அருண் வரும் நேரம் தான் திரும்புவார்கள். கோடையின் தாக்கத்தால் அதிகம் வெளியே சுற்ற மனம் இல்லாமல், வீட்டிலேயே ஏதாவது செய்ய வேண்டி இருந்ததால், பெரும்பாலும் எல்லோரும் செல்வத்தின் வீட்டில் தான் அதிக நேரம் கழித்தார்கள். புது இடம் என்ற தயக்கம் எதுவுமின்றி பார்வதி சத்யன் பழகியது எல்லோருக்கும் ஆனந்தமாய் இருந்தது, முக்கியமாக நித்யாவுக்கு. அந்தக் கீர்த்தியை போல் பார்வதிக்கு சாந்தாவின் மேல் எந்த மனக்கசப்பும் இல்லை என்பது புரிந்தாலும், அவர்கள் வாங்கித்தருவதை மறுத்துவிட வேண்டும் என்று அனிதாவுக்கு எச்சரித்திருந்தாள். நாசுக்காக மறுக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தாலும், அனிதாவுக்கு அதைச் சரியாகச் செய்யத் தெரியவில்லை. அனிதாவுக்குத் தேர்வு முடிவுகள் வந்ததும், முதல் நாளே கல்லூரியில் சேர்க்க என்று செல்வமும், நித்யாவும் பரபரப்புடன் எல்லா ஏற்பாடுகளையும் செய்தனர். அனிதா நல்ல மதிப்புகளுடன் தேர்ச்சி பெற்றதால் அவள் விரும்பிய கல்லூரியில் அவள் விரும்பிய பாடமே கிடைத்தது. அவளைப் பாராட்டப் பார்வதி பரிசுகளை வாங்க அனிதாவை அழைத்துச் சென்றாள். செல்லும்போதே நித்யா எச்சரித்துதான் அனுப்பினாள். ஆண்களின் ஆடைகள் பகுதியில் புகுந்தனர் சத்யனும் அரவிந்தும். பெண்களுக்கான பிரிவில் பார்வதியும் அனிதாவும். கடை ஊழியர் எதைக் காட்டிலும், நித்யா சொன்னது நினைவில் இருக்க ஒன்றே ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு மாற்றத்தைப் பிடிக்கவில்லை என்று விட்டாள் அனிதா. அரவிந்தும் அப்படித்தானே செய்தான். ஏற்கனவே பல ஆடைகள் உடுத்தாமல் இருப்பதாகச் சொல்லி ஒரு சட்டையை மட்டும் வாங்கிக் கொண்டான். சத்யன் மட்டும் வாங்கி குவித்தான். இதைப் பார்த்த பார்வதி, “ஏய் ! நாம் முக்கியமாகக் கடைக்கு வந்தது அனிதாவுக்கு எடுக்க. அவளே ஒன்று தான் வாங்கினாள். உனக்கெதற்கு சத்யா, இத்தனை ஆடைகள் ?” என்றாள் கிண்டலாக. “அவள் வாங்கவில்லை என்றால், நான் என்ன செய்வேன். ஒருவேளை அவளுக்கு இந்தக் கடைப் பிடிக்கவில்லையோ என்னமோ ? நாம் வேண்டுமானால் வேற கடைக்குப் போகலாம். எனக்கும் இங்கே பேண்ட்கள் பிடிக்கவில்லை” என்றான் சத்யன். “அதுவும் சரிதான், அவளுக்கு எதுவும் பிடிக்கவில்லை. நாம் வேறு கடைக்குச் செல்வோம்” என்று பார்வதி சொல்ல, “அதெல்லாம் வேண்டாம் சித்தி. எங்களுக்கு இதுவே போதும்.” என்றான் அரவிந்த். “அதெல்லாம் இல்லை ! இன்னும் இரண்டு கடைக்குப் போய்ப் பார்க்கலாம்.” என்றாள் பார்வதி. அடுத்த கடையில் எல்லோரும் பெண்கள் பிரிவுக்குச் சென்று அமர, அனிதா என்ன மறுத்தாலும், பார்வதி அவளாகச் சிலவற்றைத் தேர்வு செய்தாள். “இவை உனக்கு நன்றாக இருக்கும். அப்படியே நித்யாவுக்கும் இரண்டை தேர்வு செய்” என்றாள். பார்வதி தேர்வு செய்து கொண்டிருக்க, மிரட்சியுடன் அனிதா “ஐயோ ! நித்யா அக்கா என்னைக் கொன்றே விடுவாள். என்னையே அதிகம் வாங்காதே என்றாள். அவளுக்கும் எடுத்தால், நான் தொலைத்தேன்” சொல்லிவிட்டாள். பார்வதி,“ஏன் அப்படி ! நித்யா அக்காவுக்கு உன் தேர்வு பிடிக்காத ?” என்றான் சத்யன். எப்படிச் சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த அரவிந்துக்கு, சத்யனே எடுத்துக் கொடுத்து விட்டான். “ஆம் ! நித்யாவுக்கு வேறு யாரும் தேர்வு செய்தால் பிடிக்காது !” என்றான் “அவள் ஏதும் சொன்னால், நான் தான் வாங்கினேன் என்று சொல்லிவிடு” என்று கண் சிமிட்டினாள் பார்வதி. இறுதியாகப் பார்வதி அவள் விருப்பத்திற்கு எல்லோருக்கும் வாங்கி குவித்து விட்டாள். இவர்கள் வரவும், அருண் வரவும் சரியாக இருந்தது. அன்று வாங்கி வந்ததை, எல்லோருக்கும் காட்டிக் கொண்டிருக்க, நித்யாவுக்கு தேர்வு செய்த ஆடைகள் பார்வதி எடுக்கவும்,“நித்யா எங்கே ?” என்று பார்வதி கேட்க, “வந்து விடுவாள் ! எதோ வேலை கொஞ்சம் அதிகமாம் !” என்றாள் சுமதி. உள்ளே இவர்கள் பேசிக்கொண்டிருக்க, அருண் வெளியே நின்றபடி செல்லில் பேசிக்கொண்டிருக்க, வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அருண் பார்த்துக் கொண்டிருந்தபோதே, அந்தக் காரிலிருந்து நித்யா இறங்கி வந்தாள். முதலில் அவளைப் பார்த்ததும் மலர்ந்த அருணின் கண்கள், இடுங்கின. காரணம் மறுபுறம் இறங்கிய இன்னொருவன் நித்யாவை நிறுத்தினான். “ஏய் ! உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்” என்றான் அந்த இளைஞன். மதிலின் உட்புறம் நின்று கொண்டிருந்த அருணை இருவரும் கவனிக்க வில்லை. “என்ன ரவி ?இவ்வளவு நேரம் காரில் தானே வந்தேன்.” என்றாள் நித்யா. “கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது ! எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை !” என்றான் அந்த ரவி. “நீ தப்பாக நினைக்கக் கூடாது !” “அது நீங்கள் சொல்வதைப் பொறுத்து” “அது வந்து …” என்றவன் சற்றே யோசிக்கவும், “யோசித்து பொறுமையாகச் சொல்லுங்கள் ! ஏற்கனவே இன்று லேட்! நான் கிளம்ப வேண்டும். பை” என்று திரும்பியவள் யாரோ மிக அருகில் நிற்பதைப் உணர்ந்து, துள்ளி விழுந்தாள். தடுமாறி காரின் மேல் சாய்ந்தாள் நித்யா. “ஏய்! பார்த்து” என்று அவளைத் தாங்கக் கையை நீட்டினான் ரவி. ஆனால் அதற்குள் அந்தப் புதியவன் அவளைப் பற்றி இழுக்க, அவன் மோதி நிற்கும்படி ஆனது நித்யாவுக்கு. “ஏய் !மிஸ்டர் யார் நீ ?” என்றான் ரவி கோபமாக. அவளைப் பிடித்தது யார் என்று பார்த்த நித்யா “நீங்களா ! பயந்து விட்டேன். இருட்டில் இப்படியா அருகில் வந்து திடீரென்று நிற்பது ?” என்றாள் நித்யா அவனிடமிருந்து சற்று விலகி நின்றபடி. நித்யா பேசிய விதத்தில் அவளை இழுத்தவன் அவளுக்கு அறிந்தவன் என்று ரவி அறிந்தான். மெல்ல “யார் ?” என்று கேட்டான். “என் கசின் அருண். இவர் என் நண்பர் ரவி” என்று இருவரையும் அறிமுகம் செய்து வைத்தாள். ரவி “ஹாய்” என்று கையை நீட்டினான். பதிலுக்குக் கைகுலுக்கிவிட்டு,“ஏன் லேட்?” என்றான் அருண் நித்யாவிடம். “கொஞ்சம் வேலை !” என்று அருணை பார்த்துவிட்டு, “பை ரவி ! நாளைப் பார்க்கலாம்.” என்று அவனை அனுப்பி வைத்தாள். வீட்டில் பேச்சுச் சத்தம் அதிகமாக இருக்க, “எல்லோரும் எப்போது வந்தீர்கள் !” என்று அருணிடம் கேட்டாள். “இப்போதுதான்.” பேசியபடி இருவரும் வீட்டுக்குள் நுழைந்தார்கள். இருவரும் ஒன்றாக வருவதைப் பார்த்த பார்வதி கண்கள் சிமிட்ட சில கணங்கள் மறந்தே போனாள். “அட ! நீ வந்தாச்சா ! சீக்கிரம் கைகள் கழுவி வா ! எல்லோரும் சாப்பிடலாம்” என்றாள் சாந்தா. அதற்குள்,“நித்யா ! இது உனக்காக. எப்படி இருக்கிறது என்று பார்” என்று இரண்டு பையை நீட்டினாள் பார்வதி. “இப்போது எனக்கெதற்கு ?” என்று நித்யா தயங்கவும், “இதென்ன கேள்வி ? போட்டுக்கொள்ளத் தான். பிரித்துப் பார் !” என்றாள் பார்வதி. சங்கடத்துடன் பார்வையை அங்கும் இங்குமாய் செலுத்தியவள் “எனக்கு வேண்டாம் ! நிறைய இருக்கிறது ! அனிதாவுக்குக் கொடுங்கள் !” என்று சொல்லவும் பார்வதியின் முகம் சற்றே சுருங்கிவிட்டது. இதைக் கவனித்த சுமதி, “நித்யா ! அத்தை உனக்குப் பிரியமாக வாங்கி தருகிறார்கள். வாங்கிக்கொள்” என்று சொல்ல, தயக்கத்துடன் கையில் வாங்கினாள். “உனக்குப் பிடிக்கவில்லை என்றால், மாற்றிக்கொள்ள. கடையில் கேட்டுவிட்டுத்தான் வந்தேன். ரசீது இருந்தால் மாற்றித் தருவார்கள்.” என்றாள் பார்வதி. “உங்கள் தேர்வு நன்றாக இருக்கும் ! தாங்ஸ் அத்தை.” அதற்குள் “இதற்கா நீ அப்படிப் பயந்தாய் ! நித்யா அக்காவுக்குப் பிடிக்காது, கத்துவாள் என்றாயே !” என்றான் சத்யன் அனிதாவை பார்த்து. அரவிந்தும் அனிதாவும் ஒருவரை ஒருவர் பார்க்க, அனிதா சற்றே மிரட்சியுடன் நித்யாவை பார்த்தாள். நித்யா இப்போது அனிதாவை முறைத்துப் பார்த்துவிட்டு உள்ளே சென்றாள். தங்கை பயப்படுவதை அறிந்த அரவிந்த் மெல்ல அவள் தோள்களில் தட்டிக்கொடுத்தான். அப்போது இன்னும் இரு பைகளைக் காட்டி “இது கீர்த்திக்கு. எப்படி இருக்கிறது”என்று காண்பித்தாள் பார்வதி. ஆடைகளின் நிறங்களை மட்டுமே வித்தியாசம். நித்யா வெளியே வரும்போது, “என்னால் இங்கேயும் அங்கேயும் அல்லாட முடியவில்லை. அங்கே இருந்தால் அருணை பற்றிக் கவலை, இங்கே இருந்தால் அத்தை என்ன செய்கிறாரோ என்று கவலையாக இருக்கிறது.” என்றாள் பார்வதி. “இதற்கு ஒரே வழி தான். சீக்கிரம் அண்ணனுக்குத் திருமணம் செய்து வைத்து விடுங்கள்” என்றான் சத்யன். தம்பியின் தலையில் ஒரு குடை வைத்தான் அருண். “அவனை ஏனடா அடிக்கிறாய் ! சத்யன் சொல்வது தான் சரி” என்றாள் பார்வதி. “அப்படியானால் செய்துவிட வேண்டியது தானே” என்றாள் சாந்தா. இந்தப் பேச்சைக் கேட்டு நித்யா அப்படியே நின்று விட்டாள் நித்யாவுக்கு இப்போது கீர்த்தியின் நினைவு வந்தது. ஒருவேளை அருணின் திருமணம் கீர்த்தியுடன் நடந்தால் எல்லோரும் இப்படி இருக்க முடியுமா ? கீர்த்தி என்னவெல்லாம் நினைக்கிறாள் என்று நித்யாவுக்கு நன்றாகத் தெரியும். அருணை திருமணம் செய்தபின் அவள் நித்யாவை காயப்படுத்தியது போல் அவள் வீட்டில் எல்லோரிடமும் பேசலாம். இன்று அவள் இங்கிருந்திருந்தால் என்ன பேசுவாள் என்று ஒரு கற்பனை அவள் கண் முன் வந்தது. நேரம் நித்யாவுக்கு பெரும் மனஉளைச்சலாய் இருந்தது. எத்தனை முறை அனிதாவிடம் சொன்னாள். அளவாக ஒன்றை எடுத்துக்கொண்டு வந்திருந்தால் பரவாயில்லை. அனிதாவுக்கு மட்டும் ஐந்து. இது போதாது என்று நித்யாவுக்கு கூட இரண்டு. அதுவும் ஒவ்வொன்றும் சில ஆயிரங்கள். விருந்தினர்கள் கிளம்பியதும் பெரியவர்கள் மூவரும் தையல் வேலைகளைச் செய்யக் கடைக்குள் நுழைந்தார்கள். சுமதியும் சாந்தாவும் தையல் வேலைகளைச் செய்ய, தைத்த உடைகளைச் சீராக மடித்து இஸ்திரி செய்து பைகளில் வைத்துக்கொண்டிருந்தார் செல்வம். இன்றைய விருந்தினர் வருகையால் இரவு தூக்கத்தை சில மணி நேரம் தியாகம் செய்ய வேண்டியிருக்கும். எப்போதும் நித்யா உதவுவாள். இன்று அவளுக்கு மனம் இல்லை. அவள் மனக்குமுறலைக் கொட்டச் சரியான நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள். நித்யாவுக்கு பயந்தே வெகுநேரம் அனிதா, நித்யா இருக்குமிடம் செலவில்லை. நித்யா உறங்கி இருக்கக் கூடம் என்று மெல்ல எட்டிப்பார்த்தாள். அவள் இன்னும் அமர்ந்துகொண்டிருந்தாள். சத்தமின்றி கதவைச் சாத்திவிட்டுச் செல்லலாம் என்றால், “உள்ளே வா ! எத்தனை நேரம் ஒளிந்து கொண்டிருப்பாய் !” என்றாள் நித்யா. அரவிந்த் ஹாலில் தான் அமர்ந்திருந்தான். நித்யாவின் குரலிலிருந்த கோபம் அறிந்து தங்கைக்கு உதவியாக அவனும் நித்யா இருந்த இடத்திற்குச் சென்றான். “உனக்கே தெரிகிறதில்லையா ? தப்பு என்று ! பின்பு என் செய்தாய் ?” நித்யா கேட்க, “நான் சொன்னால் சித்தி கேட்கவில்லை.” என்றாள் அனிதா. நம்பாதவளாய் நித்யா முறைத்துப் பார்க்க, “அவளை ஏன் முறைக்கிறாய் ? எதுவும் பிடிக்கவில்லை என்று அவள் சொல்லவும் வேறு கடைக்குச் செல்லலாம் என்று சித்தி அழைத்துச் சென்றார். என்ன சொல்லியும் கேட்காமல், அவராகவே தேர்வு செய்து வாங்கி விட்டார்.” “நீங்கள் என்ன இன்னும் சிறு பிள்ளையா ? நாசுக்காக எப்படி மறுக்க வேண்டும் என்று கூடத் தெரியாதா?” என்றாள் நித்யா. அனிதா, “சாரி அக்கா !” என்றாள். “இப்போது என்ன குடி மூழ்கி விட்டது என்று இப்படி முறைத்துக் கொண்டு நிற்கிறாய். சித்திக்கு வாங்கி தர வேண்டும் என்று தோன்றியது. வாங்கி தந்தார்கள். விடு.” என்றான் அரவிந்த். “அன்றே சொன்னேன் ! அவர்களிடம் எந்த உதவியும் பெறக் கூடாது என்று. இன்று என்ன செய்துவைத்திருக்கிறீர்கள் ?” “இது உதவி அல்ல ! அவர்கள் கொடுத்த அன்பளிப்பு. எப்படி மறுப்பது ?” என்ற அரவிந்த். “ஏன்? இத்தனை நாள் நமக்கு யார் அன்பளிப்பு கொடுத்தார்கள். இப்போது அவர்கள் கொடுக்கவில்லை என்றால் நாம் ஒன்றும் குறைந்து விடமாட்டோம். எங்களுக்கு வேண்டாம் என்று சொல்வதற்கு என்ன ? அதுவும் ஒன்றை வாங்கி வந்திருந்தால் பரவாயில்லை. இப்படி வாங்கி குவித்திருக்கிறீர்கள். நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் ?” “ஒன்றும் நினைக்கமாட்டார்கள். அன்று கார் விஷயத்தில் என்மேல் தப்பு இருந்தது. அதனால் நீ சொன்னது சரி என்று சும்மா இருந்தேன். இன்று நாங்கள் ஒன்றும் செய்து விடவில்லை. சும்மா குதிக்காதே !” அரவிந்தும் நித்யாவும் சண்டையில் தீவிரமாக, மெதுவாகப் பெரியவர்கள் இருக்கும் இடம் சென்று விடலாம் என்று அனிதா மெல்ல நகர்ந்து சென்று விட்டாள். சிறு வயதில் இவர்கள் எப்போதாவது சண்டை போட்டால் அழுதுகொண்டு பெரியவர்களிடம் ஓடிவிடுவாள். இப்போது அழுகை மட்டும் இல்லை. மற்றபடி சண்டையின்போது அவர்கள் நடுவில் நிற்க அவளுக்கு எப்போதும் பயமே “குதிக்கிறேனா ? என் உங்கள் இருவருக்கும் புரியவில்லை ! அவர்கள் வாங்கி தருவது அதிக ஆசை வந்து விட்டது. இங்கே இதுவரை தந்தது போதவில்லை என்று தானே தோன்றும்.” அவள் முடிக்கும் முன் அரவிந்த், “ஓ! உனக்கு எங்களைப் பற்றி இவ்வளவு நல்ல எண்ணம் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. நாங்கள் ஏதோ அவர்கள் வாங்கி தருவதற்கு அலைவது போல் பேசுகிறாய் !” என்று கத்தினான் அரவிந்த். “ஏய்! நான் என்ன சொல்கிறேன், நீ என்ன பேசுகிறாய் ?” “போதும் நிறுத்து ! என்னிடம் எதுவும் பேசாதே !” என்று கோபமாக வெளியேறினான். “ஏய் ! அரவிந்த் !” அவன் பின்னால் செல்ல, அதற்குள் மற்ற எல்லோரும் வந்துவிட்டார்கள். “என்ன ? மீண்டும் சண்டையா ?” என்றார் செல்வம். அவர்பின் ஒளிந்து நின்றாள் அனிதா. “ஒன்றும் இல்லை மாமா! வழக்கம்போல் தான் !” என்று அவன் அறைக்குள் சென்றான். நித்யா அவனைப் பார்த்தாள், “விடு ! அவன் கிடக்கிறான். நீ போய்ப் படு ! மணி பன்னிரண்டு. நாளை ஆபீஸ் போக வேண்டாமா ?” என்று இழுத்துச் சென்றாள் சாந்தா. அன்றிரவு அவர்கள் பேசச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. மறுநாள் நித்யா அலுவலகம் செல்லும்முன் அரவிந்தை தேடினால் அவன் வீட்டில் இல்லை. சில நாள் உடல் பயிற்சி என்று காலையில் வெளியே சென்று விடுவான். அப்படி எண்ணி ஒன்றும் பெரிதாக நினைக்கவில்லை நித்யா. பகுதி - 16 அலுவலகத்திற்கு வந்த நித்யா சிலமுறை அரவிந்த் செல்லுக்கு முயற்சி செய்து பார்த்தாள். அவன் பதில் அளிக்கவில்லை. அவன் கோபமாக இருக்கிறான் என்று புரிந்து கொண்டாள். மாலையில் நேரில் பேசிக் கொள்ளலாம் என்று வீடு வந்தால், அவன் வீட்டில் இல்லை. அரவிந்த் அனிதா இருவரும் மீண்டும் பார்வதியுடன் சென்று விட்டதாக வீட்டில் சொன்னார்கள். அதுமட்டும் இல்லாமல் இரண்டு நாட்கள் இருவரும் அருண் வீட்டிலேயே தங்கிவிட்டார்கள். மற்றவர்கள் யாரும் பெரிதாக எண்ணவில்லை என்றாலும், நித்யாவால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. இரண்டு நாளில் பார்வதி மதுரை சென்றுவிட்டால் வந்து விடுவார்கள் என்று எண்ணினாள் நடந்தது வேறு. அனிதாவை அழைத்துக்கொண்டு பார்வதி மதுரைக்குச் சென்றுவிட்டாள். கல்லூரி தொடங்கும் வரை மதுரையில் இருக்கட்டும் என்று அழைத்துச் சென்றாள். அவ்வப்போது வகுப்புகள் இருக்கும் என்று அரவிந்த் செல்லவில்லை. ஆனால் அவன் அருண் வீட்டிலேயே இருக்க, நித்யாவால் ஏற்க முடியவில்லை. நேரே அருண் வீட்டிற்குச் சென்றாள். அலுவலகத்திற்கு செல்லும்முன், அரவிந்த்திடம் பேசிவிட வேண்டும் என்று நினைத்தாள். நித்யா அங்கே சென்றபோது, அருண் அரவிந்த் இருவருமாய் காலை உணவைத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். ” இங்கே என்ன செய்கிறாய் ?” என்றாள் நித்யா. கேளாதவன் போல் எதுவும் பேசாமல் நின்றுகொண்டிருந்தான் அரவிந்த். “அரவிந்த் ! உன்னிடம் தான் கேட்கிறேன்” என்றாள் நித்யா. இப்போதும் அரவிந்த் பேசவில்லை. “என்மேல் தானே உனக்குக் கோபம். அதற்கு ஏன் வேறொருவர் வீட்டில் வந்து அமர்ந்திருக்கிறாய். என்ன பழக்கம் இது ? முதலில் நம் வீட்டுக்கு வா !” என்றாள் நித்யா. “வேறு யாரோ வீடா ! இது என் அண்ணன் வீடுதான்” என்றான் அரவிந்த். சட்டென்று சிரித்துவிட்டான் அருண். இப்போது நித்யாவின் பார்வை அருணின் பக்கம் திரும்பியது. அவள் கண்ணில் கோபத்தைக் கண்டதும், “எனக்கு ஆபீஸ்க்கு நேரம் ஆகிறது. நீங்கள் பேசுங்கள்.” என்று அங்கிருந்து நகர்ந்தான். “முதலில் வீட்டுக்கு வா !” என்றாள் நித்யா. “நீ தானே சொன்னாய் ! எனக்கு இதுவரை கிடைத்தது போதவில்லை என்று. நீ சொல்வது சரிதான். எனக்கு இங்கே இருக்கும் வசதி அந்த வீட்டில் இல்லை. நான் இங்கேயே இருக்கிறேன்.” என்றான் அரவிந்த். “நான் உன்னை அப்படிச் சொல்லவில்லை. மற்றவர்கள் அப்படி எண்ணக்கூடும் என்று தான் சொன்னேன்.” “ஓ ! அந்த மற்றவர்கள் யார் ?” நித்யா சற்றே யோசிக்க, “எனக்குத் தெரிந்து உன்னைத் தவிர வேறு யாரும் அப்படி யோசிக்க வில்லை. எப்போதும் நீ நினைப்பது தான் சரி! மற்றவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்ற எண்ணம் உனக்கு. ஒரு வேலை அப்படி இல்லை என்றால் அன்று நீ சொன்னது உன் எண்ணமே. இப்போது, இல்லாத மற்றவர்கள்மீது பழி போடுகிறாய். ஏன் நித்யா உனக்கு இந்தக் காம்ப்ளக்ஸ்? இத்தனை ஆண்டுகளாய் ஒன்றாய் தானே வளர்ந்தோம். எங்களில் மேல் உனக்கு இருக்கும் புரிதல் அவ்வளவு தானா ?” நித்யாவுக்கு அரவிந்த் மிகவும் அந்நியமாகத் தெரிந்தான். இவள் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக நம்புகிறான். அவர்களை நித்யா புரிந்து கொள்ளவில்லை என்கிறான். இவர்களுக்குத் தான் புரியவில்லை. மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று. அந்த மற்றவர்கள் யாரோ முன்பின் தெரியாதவர்கள் அல்ல. அவன் அண்ணனின் வருங்கால மனைவியும் மனைவியின் குடும்பமும். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் அந்தக் கீர்த்தி அருண் திருமணம் நடந்தால் அதன் பின் அவள் என்ன என்ன பேசுவாள். இப்போது அம்மாவும் மகளும் தனியாக ரகசியமாகப் பேசிக் கொள்வதை எல்லோர் முன்னும் சத்தமாகச் சொல்லலாம். அப்போது யார் இவர்களுக்காக நிற்பார்கள் ?இப்போது அண்ணன் என்று சொல்பவன் மனைவியை விட்டு ஒன்று விட்ட தம்பி தங்கைக்காகப் பேசுவானா ! இல்லை பார்வதி அத்தை தான் மருமகளை விட்டுக் கொடுப்பாளா ! இவர்கள் மீண்டும் வேண்டாதவர்களாகத் தானே மாறிவிடுவார்கள் ! இதெல்லாம் தெரியாமல் நித்யா புரிந்து கொள்ளவில்லை என்கிறானே. நித்யாவின் கண்களில் கண்ணீர்த் துளிகள் சிந்தத் தயாராக இருந்தது. இவனிடம் நின்று இன்னும் விளக்கம் சொல்ல அவளுக்குப் பிடிக்கவில்லை. “நீயும் என்னைப் புரிந்து வைத்திருப்பது அவ்வளவு தான். உனக்குப் பிடித்ததைச் செய். இனி நான் எதுவும் கேட்கமாட்டேன். பை”. நித்யா அதற்குமேல் அங்கே நிற்கவில்லை. அவள் வெளியே செல்லவும் அருண் அவன் அறையிலிருந்து வெளி வரவும் சரியாக இருந்தது. “என்ன ! உங்கள் சண்டை தீர்த்ததா ? எங்கே உன் அன்பு அக்கா !” என்றான் அருண். “சண்டையெல்லாம் ஒன்றும் இல்லை !” “நம்பிவிட்டேன்! சரி முதலில் சாப்பிடு.”என்றான் அருண். அருணின் வீட்டிலிருந்து கிளம்பிய நித்யாவுக்கு அலுவலகம் செல்ல மனம் இல்லை. மீண்டும் வீட்டுக்குத் தான் வந்தாள். நேரே சென்று தன் அறைக்குள் புகுந்தாள். அப்படியே மெத்தையில் விழுந்தாள். ஏனோ அழுகை அவளை மீறி வந்தது. என்ன ஆயிற்று ! சில மாதங்களுக்கு முன் இந்த வீட்டிலிருந்த பிணைப்பு ஏதோ ஒரே நாளில் இல்லம் போனது போல் உணர்ந்தாள். எல்லோர் வீட்டிலும் நடக்கும் பிள்ளைகள் சண்டை இங்கேயும் இருக்கும். ஆனால் எப்போதும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்ததே இல்லை. நித்யா இரண்டு வருடம் பெரியவள் என்றாலும் எப்போதும் அரவிந்த் தான் பக்குவமாக நடந்து கொள்வான். இன்று அவனே எப்படி எல்லாம் பேசிவிட்டேன். வெகுநேரம் ஏதேதோ யோசனைகள். வெகுநேரத்திற்கு பின் கொஞ்சம் தெளிந்தாள். மற்றவர்கள் என்ன பேசினாலும் சரி, தன் குடும்பத்தைப் பற்றி அவளுக்குத் தெரியும். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று இனி யோசிக்கக் கூடாது. அனிதாவையும் அரவிந்தையும் யாரும் காயப்படுத்திவிட கூடாது என்று நினைத்தாள். ஆனால் எத்தனை நாள் நித்யா அவர்களைக் காக்க முடியும். அவர்களுக்குப் புரியும் வரை இவள் சொல்வதெல்லாம் தவறாகத் தெரியும். அவர்களாக எல்லாம் தெரிந்து கொள்ளட்டும். ஒருவேளை அவர்களுக்கு ஏதும் மனவருத்தம் நேர்ந்தால் நித்யா எப்போதும் அவர்களுடன் இருப்பாள். அவர்களுக்காக நிற்பாள். அவளுக்குள் இப்படியாகப் பல சபதங்களை மனதுக்குள் எண்ணிக் கொண்டிருந்தவள் அப்படியே உறங்கிப்போனாள். மதுரையில் அனிதாவுக்கு நாட்கள் சுகமாகக் கழிந்தது. சென்னை வீட்டில் தனியாக அமர்ந்து டிவி பார்ப்பதைவிட, இங்கே என்னேரமும் அவளைச் சுற்றி யாரேனும் இருந்தார்கள். பார்வதியுடன் மதிய நேரங்களில் போர்டு கேம்ஸ் விளையாடுவாள். பாட்டியுடன் கதை பேசுவாள். அவ்வப்போது சத்யனுடன் படம் பார்ப்பாள். சிலமுறை சிவநாதன் கூட அவளுடன் கதை அடித்துக் கொண்டிருப்பார். எல்லாம் நன்றாவே சென்றது. வேதவல்லி கீர்த்தி வரும் வேலைகளைத் தவிர. அவர்கள் ஒன்றும் பேச விடவில்லை என்றாலும், இவளை ஒரு பொருட்டாக மதிக்காமல் நடந்து கொண்டது அனிதாவுக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் அவள் பெரிதாக எண்ணவில்லை. காரணம் நித்யா சொன்ன அறிவுரை. நிராகரிக்கும் ஒருவருக்காகக் காத்திருப்பதோ இல்லை அவர்களில் நல்லுறவுக்காக ஏங்குவது முட்டாள்தனம். அவர்களைப் பொருட்படுத்தாமல் விடுவதே சரி. அப்படியே இருக்க பழகிக் கொண்டாள். இன்றும் அதுபோல் வேதவல்லி வந்ததும் அவளுக்காகப் பழச்சாறை கொடுத்துவிட்டு, பாட்டியின் அறைக்குச் சென்றாள் அனிதா. சிறிது நேரத்தில் அங்கே வந்த வேதவல்லி கீர்த்தியின் திருமண பேச்சை எடுத்தாள். துளசியம்மாளிடம் முதலில் சொன்னாள். “கீர்த்திக்கு படிப்பும் முடிந்துவிட்டது. அவள் அப்பா விரைவில் திருமணம் செய்யலாம் என்கிறார். நிறைய இடங்களில் கூடக் கேட்கிறார்கள்” என்றாள். “ரொம்ப சந்தோஷம் ! மாப்பிள்ளை சொன்னால் அப்படியே செய்துவிடலாம்.”வெகுநாட்களுக்கு பிறகு நம் வீட்டில் நடக்கும் விசேஷம். எங்கே பேரப்பிள்ளைகள் திருமணத்தைப் பார்க்காமலே கண் மூடி விடுவேனோ என்று நினைத்தேன். சீக்கிரம் எல்லாம் நல்ல படியே அமையட்டும்.” என்றாள் துளசியம்மாள். “எனக்கு ஒரு ஆசை ! உன்னிடம் முதலில் சொல்லலாம் என்று நினைக்கிறேன் அம்மா ! நீ தான் எனக்காகப் பேச வேண்டும்.” “என்னம்மா சொல் !” “கீர்த்திக்கு அருணை பேசலாம் என்று நினைக்கிறேன்.” “இதில் உனக்கு என்ன தயக்கம் ! நேரே உன் அண்ணனிடம் பேச வேண்டியது தானே !” “எனக்காக நீ கொஞ்சம் பேசிப் பார் !” என்று சொல்லிவிட்டு சென்றாள். மாலையில் மகனிடம் இதுபற்றித் துளசியம்மாள் பேசினார். “கீர்த்திக்கு அருணுக்கு திருமணம் முடிக்க வேதா ஆசைப்படுகிறாள். நீ என்ன சொல்கிறாய் ?” “பெரியவர்கள் விருப்பம் முக்கியமில்லை. திருமணம் செய்பவர்களுக்கு ஒருவரை ஒருவர் பிடித்தால் செய்துவிடலாம். ஆனால் இப்போதெல்லாம் நெருங்கிய உறவில் திருமணம் செய்வது சரியில்லை என்கிறார்கள். அது பற்றியும் யோசிக்க வேண்டும் அம்மா !” என்றார் சிவநாதன். “நீ சொல்வதும் சரிதான் ! முதலில் அருணிடம் பேசிப்பார். நம் விருப்பத்தைப் பிள்ளைகள்மேல் திணிக்கக் கூடாது.” என்றார் துளசி அம்மாள். இந்தப் பேச்சுக்கள் நடக்கும்போது பார்வதியும் சத்யனும் அனிதாவும் அங்கேயே தான் இருந்தார்கள். பார்வதி அருணிடம் பேசிம்போது திருமணம்பற்றிப் பேச வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள். ஆனால் சிவநாதன் நேரில் பேசிக் கொள்ளலாம் என்று சொல்ல, வழக்கமான பேச்சுடன் வைத்துவிட்டாள் பார்வதி. சத்யன் அவன் போனை நோண்டியபடி, “அம்மா ! கொஞ்சம் உன் ஆசைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள் ! ரொம்ப எதிர்பார்க்காதீர்கள்.” என்றான். “என்னடா ! நான் என்ன ஆசைப்பட்டேன் !” என்று புரியாமல் கேட்டாள் பார்வதி . “அண்ணனின் திருமணத்தைப் பற்றிச் சொன்னேன்.” “ஏன்? அதில் என்ன?” “அண்ணா கீர்த்தியை திருமணம் செய்யச் சம்மதிப்பான் என்று எனக்குத் தோன்றவில்லை.” பார்வதி மகனின் பேச்சில் பொருள் புரிந்து, “உன் அண்ணன் வேறு யாரையும் விரும்புகிறானா ?” “அப்படித்தான் நினைக்கிறேன்.” இப்போது அனிதா, “அருண் அண்ணாவின் லவ்வர் யார் ?” என்றாள் . அதுவரை இருவரும் அவள் அங்கிருந்ததை மறந்து விட்டார்கள் . “ஏய் ! நீ போய் டிவி பார் . இதெல்லாம் நீ பேசக் கூடாது” என்றாள் பார்வதி . “அம்மா ! அவள் என்ன சின்னக் குழந்தையா? அவளும் கல்லூரி செல்லவிருக்கிறாள் .” என்றான் சத்யன் . “நீ சும்மா இரு ! அவள் சின்னப் பெண் தான் . நீ போய் டிவி பார் . நான் பேசிவிட்டு வருகிறேன்” என்றாள் பார்வதி . “சித்தி, அண்ணன் காதலிக்கிறான் என்பதுவரை தெரிந்துவிட்டது . பெண் யார் என்று தெரிவதில் என்ன ஆகிவிடும்” என்றாள் அனிதா . “ஏய் வாண்டு ! இரு உன் அம்மாவிடம் சொல்கிறேன் .” “சொல்லுங்கள் ! எனக்குப் பயம் இல்லை ! நானா காதலிக்கிறேன் . அருண் அண்ணா தானே !” என்றாள் . “இந்தப் பெண்ணின் பேச்சைப் பார் . எல்லாம் காலத்தின் கொடுமை . சிறு பெண்கள் எல்லாம் இப்படி பேசுகிறார்கள் .” என்றாள் பார்வதி . “சித்தி ! நீங்கள் நினைப்பது போல் இல்லை ! என் வகுப்பில் கூட சில பெண்கள் காதல் கீதல் என்று சுற்றுகிறார்கள் . ஆனால் டீனேஜில் வரும் ஒரு ஈர்ப்பைப் பெரிதாக எண்ணி மற்றதைக் கோட்டை விடுகிறார்கள் . நான் அப்படி எல்லாம் எதுவும் செய்யமாட்டேன் . குறைந்தது இன்னும் சில வருடங்களுக்கு . அதனால் நீங்கள் பேசுவதைக் கேட்டு, தவறான வழியில் சென்றுவிடுவேன் என்று பயப்படாதீர்கள் .” என்றாள் தெளிவாக . “சபாஷ் ! சூப்பர் அனிதா” என்றான் சத்யன் . “அது கிடக்கட்டும் ! பெண் யார் ?அதைச் சொல்லுங்கள்!” பெண்கள் இருவரும் சத்யனை பார்க்க, “அது இன்னும் எனக்கு நூறு சதவிகிதம் உறுதியாகத் தெரியாது . என் யூகம் தான் .” “ரொம்ப பீடிகை போடாதே ! சீக்கிரம் சொல்” என்றாள் பார்வதி . “அட ! இப்படி அவசரப்பட்டால் எப்படி ? நான் சொன்னதும் உங்களுக்குப் பெரும் ஏமாற்றமாகக் கூட இருக்கலாம் !” “முதலில் சொல்” “உங்களுக்கு மருமகள் எப்படி இருக்க வேண்டும் ?” “டேய் ! என்னிடம் அடி வாங்குவாய்” “சொல்லம்மா ! அந்தப் பெண் உன் விருப்பத்திற்கு இருக்கிறாளா ? என்று தெரிந்துவிடும் . பிறகு சொல்கிறேன் .” “நீ சொல்லவே வேண்டாம் ! நானே அருணிடம் கேட்டுக்கொள்கிறேன் .” என்று பார்வதி எழ, “சரி உங்களுக்கு ஒரு க்ளூ தருகிறேன் . அருண் அண்ணா விரும்பும் பெண், இல்லை இல்லை விரும்புவதாக நான் நினைக்கும் பெண், நம் எல்லோருக்கும் தெரிந்த பெண் .” “எனக்கும் அவர்களைத் தெரியுமா ?” என்று அனிதா கேட்க, “உனக்கும் தெரியும்” என்று முடித்தவுடன் பார்வதி கண்டுகொண்டாள் . “அப்படியானால் கீர்த்தி அக்கா தானே !” என்று அனிதா சொல்ல, “இல்லை” என்று சத்யனும், பார்வதியும் ஒன்றாகச் சொன்னார்கள் . “என்ன அம்மா ! கண்டுபிடித்து விட்டீர்கள் போல !” என்று சத்யன் கேட்க, “நானும் நினைத்தேன் . ஆனால் எனக்கும் நிச்சயமாகத் தெரியவில்லை .” “ஐயோ ! யார் என்று சொல்லுங்கள் ? எனக்குத் தலையே வெடித்து விடும் போல் இருக்கிறது .” என்றாள் அனிதா . “இதை நீ யாரிடமும் சொல்லக் கூடாது . முக்கியமாகச் சென்னையில் . புரிகிறதா ?” என்றான் சத்யன் . “ஏன் ?” “அது அப்படித்தான் . குறைத்து அண்ணன் சொல்லும் வரையில் ! ஓகே வா ?” “சரி” “எல்லாம் உன் அக்கா நித்யா தான்” என்றான் சத்யன் . இவர்கள் பேசுகையில் பார்வதி ஏதோ யோசித்துக்கொண்டிருந்தாள் . “இது எப்படி முடியும் . நித்யா அக்கா எனக்கு அக்கா என்றால் அருண் அண்ணனுக்கும் அக்கா இல்லை தங்கை தானே !” என்றாள் அனிதா அப்பாவியாக . “மண்டு ! நீ அக்கா என்று அழைத்தால் அக்காவா ! அவள் உனக்கு மாமன் மகள் . அண்ணனுக்கும் அப்படித்தான் .” என்று சத்யன் அனிதா தலையில் கொட்டினான் . பார்வதி மெல்ல, “எதுவும் சிக்கலாகி விடுமோ என்று பயமாக இருக்கிறது .” “இதில் என்னம்மா சிக்கல் . அண்ணனுக்கு ஒரு பெண்ணைப் பிடித்தால் அவன் விருப்பத்திற்கு தானே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் .” “எனக்கும் அதுதான் ஆசை ! ஆனால் உன் அத்தை என்ன சொல்வாளோ என்று பயமாக இருக்கிறது . அவளுக்கு முதலே சென்னையிலிருந்து இங்கே யார் வந்தாலும் பிடிக்கவில்லை . இப்போது அங்கிருந்து அவள் மகளுக்குப் போட்டியாக ஒருவள் வந்தால்” பார்வதி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சத்யன் அன்னையின் கையை அழுத்தினான் . அனிதா அங்கிருப்பது மறந்து பேசிவிட்டாள் பார்வதி . மகனின் எச்சரிக்கவும் பதறிப்போய், “நான் எதோ பதட்டத்தில் உளறி விட்டேன் …அது வந்து வேதவல்லி இல்லை கீர்த்தி …” என்று சமாளிக்க, அனிதா மெல்லப் பேசினாள்,“எனக்குத் தெரியும் சித்தி ! நீங்கள் பதட்டப்படாதீர்கள் . வேதவல்லி அத்தைக்கும் கீர்த்தி அக்காவுக்கும் எங்களைப் பிடிக்கவில்லை என்று முதல் முறை இங்கே வந்த போதே புரிந்துவிட்டது . ஒருவேளை அவர்களிடம் பிரியமாக இருந்தால், என்னிடமும் பிரியமாக இருப்பார்கள் என்றுதான் எண்ணினேன் .” சற்றே நிறுத்தியவள், “பரவாயில்லை . எல்லோருக்கும் நம்மைப் பிடித்திருக்க வேண்டும் என்று இல்லையே . நித்யா அக்கா சொன்னது போல், அன்பாகப் பேசினால் அன்பாக நடந்து கொள்ளலாம் அப்படி இல்லை என்றால், அவர்களிடம் விலகி இருக்கலாம் . அவ்வளவு தான் .” என்று பார்வதியின் முகத்தைப் பார்த்தாள் . அப்போது தான் அனிதாவுக்குப் புரிந்தது, சமாதானம் செய்யாமல் மேலும் அவர்களைக் காயப்படுத்தி விட்டோம் என்று . முன்பு எல்லோரும் விலகி இருந்ததைத் தேவை இல்லாமல் இப்போது நினைவு படுத்தியது போல் ஆயிற்றே ! சட்டென்று, “ஆனால் அவர்கள் எப்படியோ இருக்கட்டும் ! எனக்கு ஒன்றும் இல்லை . அதற்குப் பதில் தான் நீங்கள் எங்கள்மேல் இவ்வளவு அன்பு காட்டுகிறீர்களே ! அதுவே போதும் .” என்றாள் அனிதா . ஒருவாறு பார்வதிக்கு நிம்மதி ஆயிற்று . சிறிய பெண். உறவுகள் உதாசீனப்படுத்துவது பெரும் மனஉளைச்சலை உண்டாக்கி விடுமோ என்று பயந்தவள், இப்போது அனிதா தெளிவாகப் பேசியதில் அவள் வயதுக்கு இந்தப் பக்குவம் எங்கிருந்து வந்தது என்று ஆச்சரிய பட்டத்தோடு மெச்சவும் செய்தாள் . இவர்கள் மூவரும் பேசிக்கொண்டதை யாரிடமும் சொல்லவில்லை . மெல்ல அருணிடம் பேசலாம் என்று மட்டும் எண்ணியிருந்த சிவநாதன், மறுநாள் தங்கையும் அவள் கணவனும் வந்து முடிவைக் கேட்க, அவருக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது . “அவன் ஊரிலிருந்து வந்ததும் பேசலாம் என்று நினைத்தேன் . என்ன அவசரம் ?” “உனக்கென்ன அண்ணா ! ஆண் பிள்ளைகளை வைத்திருக்கிறாய் ! பெண் பிள்ளை வைத்திருக்கும் என் கவலை உனக்கு எப்படிப் புரியும்” “என்ன பேசுகிறாய் ! கீர்த்திக்கு என்ன வயதாகிவிட்டது ? படித்திருக்கிறாள், நல்ல பெண் . அவளை யார் வேடம் என்பார்கள்! எதற்குப் புலம்புகிறாய்” “எல்லாம் சரி தான் ! அப்படி இருந்தும் நீங்களே யோசிக்கிறீர்களே!” இது ராஜன், வேதவல்லியின் கணவன் . “அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை மாப்பிள்ளை ! முதலில் பிள்ளைகளின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமல்லவா ! அதனால் அவர்களிடம் பேசலாம் என்று நினைத்தேன் . இன்னும் இரு தினங்களில் அருண் வருகிறான் . பேசி விடலாம் . நீங்களும் கீர்த்தியின் விருப்பத்தைக் கேளுங்கள்”. என்றார் சிவநாதன் . “நாங்கள் சொன்னால் அவள் மறுக்கமாட்டாள்” என்றார் ராஜன் . இப்போது அருணை கேட்காமல் முடிவு சொல்ல வேண்டும் . பெரியவர்கள் எடுக்கும் முடிவுக்கு அவனைச் சம்மதிக்க வைக்க வேண்டும் . இதுதான் ராஜன் எதிர்பார்ப்பது . ஆனால் சிவநாதனுக்கு அதில் விருப்பம் இல்லை . “அது மட்டும் இல்லை மாப்பிள்ளை ! இருவரும் நெருங்கிய ரத்த உறவு . இப்போது மருத்துவத்தில் வேறு இரத்த உறவுகளுள் திருமணம் வேண்டாம் என்கிறார்கள். அதையும் நான் யோசிக்க வேண்டும் .” “உங்களுக்குக் கீர்த்தியை மருமகளாக ஏற்க விரும்பவில்லை . நேரடியாகச் சொல்லுங்கள் ! முதலில் மகனைக் கேட்க வேண்டும் என்றீர்கள் . இப்போது ரத்த உறவில் வேண்டாம் என்கிறீர்கள் . எனக்கு இன்னமும் புரியவில்லை என்றால் என்னைவிட முட்டாள் இந்த உலகத்தில் இருக்க முடியாது !” என்று மனைவியைப் பார்த்து, ” நீ தான் உன் அண்ணா குடும்பத்தில் உறவு இன்னும் வலுவாகட்டும் என்றாய் . அவர்கள் என் முகத்தில் கரியை பூசி விட்டார்கள் .” என்று கோபமாக எழுந்தார் . துளசியம்மாள், “கொஞ்சம் பொறுமையாக இருங்கள் மாப்பிள்ளை ! உங்களை யாரும் அவமான படுத்த என்ன வில்லை . கீர்த்தி அருண் இருவரும் எனக்குப் பேரப்பிள்ளைகள். அவர்கள் திருமணம் செய்வதென்றால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே . ஆனால் அவர்கள் எதிர் காலத்தையும் பார்க்க வேண்டும் இல்லையா . நான் சிவநாதனிடம் பேசியதும் என்னிடமும் இதையே தான் சொன்னான் .” என்றார் . “எனக்குப் புரிந்து விட்டது. என் மகளுக்கு உங்களைவிடச் சிறப்பான இடங்களில் எல்லாம் தேடி வருகிறார்கள் . ஏதோ வேதா ஆசைப்பட்டாள் என்று கேட்டேன் . அவ்வளவுதான் . நான் கிளம்புகிறேன் .” என்று வேகமாக வெளியேறிவிட்டார் . வேதவல்லியும் சென்றுவிட்டாள் . ராஜன் இதை அவமானமாகவே எண்ணினார் . ஆனால் வேதவல்லியின் எண்ணம் வேறு . பகுதி - 17 நித்யாவுடன் இருக்கும் சண்டைக்காக, வீட்டிற்கு அதிக நாள் செல்லாமல் இருக்க கூடாது என்று அன்று மாலையே வீட்டிற்கு வந்தான் அரவிந்த் . நித்யா அவனிடம் பேச முயற்சிக்க வில்லை . இவர்கள் இருவரின் நடவடிக்கை பெரியவர்களுக்கு நன்றாகவே புரிந்தது . செல்வம் மகளிடம் தான் தவறு என்று நினைத்தார் . மகளுடன் பேசலாம் என்று அழைத்தார் . “என்ன நித்தி, அரவிந்திடம் என்ன சண்டை என்றார் .” “ஒன்றும் இல்லை அப்பா !” “ஒன்று இல்லாமலா அவன் இரண்டு நாள் வீட்டுக்கு வராமல் இருந்தான் ?” நித்யா வீட்டில் பெரியவர்களுக்கு எதையும் கவனிக்கவில்லை என்று நினைத்தாள் . அது அவளின் முட்டாள்தனம் . செல்வம் எப்போதும் பிள்ளைகளின் மாற்றத்தை எளிதில் கண்டுகொள்வது வழக்கம்தான் . உண்மையை மறைக்க நித்யாவால் முடியவில்லை . அவள் யாரிடமேனும் அவள் மனதில் உள்ளதை சொல்ல வேண்டும் . “ஒரு சின்ன சண்டை” என்றாள் மெல்ல . “சண்டை என்று எனக்கும் தெரிகிறது ! அதுதான் என்ன ? நிச்சயம் அரவிந்தின் மனதை காயப்படுத்தும்படி நீ எதோ செய்திருக்கிறாய் !” தந்தை கூட அவள்மேல் பழி சொல்கிறாரா ? “ஏன் அப்பா ! எல்லோரும் என்மேல் தவறு என்கிறீர்கள் ! அரவிந்தை காயப்படுத்தி எனக்கு என்ன கிடைக்கப் போகிறது ?” “அப்படி இல்லை நித்யா . இதுவரை நீ அவர்களுடன் அக்கா என்று பழகி வந்தாய் . இப்போது அவன் கல்லூரியில் படிக்கிறான் . இந்த வயதில் பெற்றோர்கள் புத்திமதி சொன்னால் கூட பிடிக்காது . அவனை எல்லாவற்றிக்கும் கட்டுப்படுத்தாதே . அரவிந்த் உன்னைவிட எல்லாம் சரியாய் செய்வான் .” “அது எனக்குத் தெரியும் அப்பா ! ஆனால் நான் சொல்வது அவன் பின்னாளில் வருந்தக் கூடாது என்றுதான் .” சிரித்தார் செல்வம் . “அவனைவிட உனக்கு உலக அனுபவம் மிக அதிகம் என்று நினைக்கிறாய் ?” “நிச்சயம் ! பள்ளியிலும், கல்லூரியிலும் நடக்கும் போட்டிகள் சண்டைகள் சங்கடங்கள் தவிர அவனுக்கு எதுவும் தெரியாது . உறவுக்காரர்கள் என்ன பேசுவார்கள், என்ன நினைப்பார்கள், எப்போது எப்படி நடப்பார்கள் என்று அவனைவிட எனக்கு நன்றாகவே தெரியும் .அதனால் புது உறவுகளுடன் அதிகம் நெருங்கலாம் இருக்க சொல்கிறேன் .” என்றாள் செல்வத்திற்கு நித்யா சொல்வது புரியவில்லை . மகள் என்ன சொல்ல வருகிறாள் என்று அவர் யோசிக்க, “அம்மாவின் அண்ணன் தம்பிகள் அரவிந்தை அனிதாவை பற்றி என்ன சொன்னார்களோ அதையே ஏன் மதுரையில் இருக்கும் உறவினர்கள் பேசக் கூடாது ? அப்படி பேசும் அளவுக்கு நாம் ஏன் நடந்துகொள்ள வேண்டும் . விலகி இருப்பதே நல்லது .” செல்வம் மேலும் குழம்பினார் . அவர்கள் என்ன சொல்வார்கள் . அவர்களை நம்பி நாம் இல்லையே !மகளிடம் அதையே சொல்ல, “அம்மாவின் உடன் பிறந்தவர்களிடம் கூட நாம் எதுவும் கேட்டதில்லை . ‘உன் தங்கைக்காக என் தங்கையை நாடு ரோட்டில் நிறுத்துவாயா?’ என்று உங்களிடம் சண்டை போடா வில்லை . அத்தை அப்போது என்ன பாடு பட்டார்கள் . அவர்களைத் தேற்ற நீங்களும் அம்மாவும் என்ன சிரமம் பட்டீர்கள் .அப்போது இந்த விஷயம் அத்தைக்கு மட்டும் தான் தெரியும் . இப்போது அரவிந்துக்கும் அனிதாவுக்கும் எல்லாம் புரியும் . அவர்களை ஏன் காயப்படுத்த வேண்டும் .” நித்யா சொன்னதெல்லாம் நடந்த ஒன்றே . அவளுக்கு அப்போது புரியும் வயதில்லை என்று செல்வம் நினைத்தார் . ஆனால் புரிந்தது மட்டும் இல்லை இன்னும் நினைவு வைத்திருக்கிறாள் . ஆனால் இப்போதைய கவலை தேவை இல்லாதது என்று தோன்றவும் செல்வம் சொன்னார், “நித்யா மா ! நீ சொல்வது எனக்குப் புரியவில்லை . உன் அம்மாவின் சகோதரர்கள் என்னிடம் சண்டை போட்டபோது நம்மிடம் எந்த வசதியும் இல்லை . அவர்களிடம் உதவி கேட்டு விடுவோமோ என்று பயந்தார்கள் . அதனால் அப்படியெல்லாம் பேசினார்கள் . ஆனால் சிவநாதன் மாமா அப்படி எல்லாம் நினைக்கமாட்டார் . அது மட்டுமில்லாமல் அவர்களிடம் நாம் உதவி என்று கேட்கவே இல்லை . கேட்க்கப்போவதும் இல்லை .” “அது எனக்கும் தெரியும் அப்பா ! உதவி என்பது பணம் மட்டும் இல்லை . அவர்கள் இன்று அன்பளிப்பு என்று நினைத்துச் செய்வதை நாளை உதவி என்று நினைத்தால் .” “அப்படி யாரும் அங்கே நினைக்கவில்லை நித்யா .” “ஒருவேளை, அவர்கள் வீட்டிற்கு வரும் மருமகள் நினைத்தாள் ?” “புரியவில்லை ! இல்லாத ஒருவருக்கு ஏன் பயப்படுகிறாய் ?” “அந்தக் கீர்த்தி தான், அதுதான் அரவிந்தின் அத்தை மகள் . அவளைத் தான் பேசி இருக்கிறார்கள் போலத் தெரிகிறது . அவர்கள் சாந்தா அத்தையை எப்படி உதாசீனப்படுத்துகிறார்கள் என்று உங்களுக்கே தெரியும் .” மதுரை சென்றிருந்தபோது செல்வம் அவர்கள் நடந்து கொண்டதைப் பார்த்தார் தான் . அதனால் அவர் மறுத்துப் பேசவில்லை . நித்யா தொடர்ந்தாள், “அவர்கள் பேசியதை நான் கேட்டேன் . அவர்களிடம் பணம் பெறவே உறவைத் தொடர்கிறோம் என்று நினைகிறார்கள் . இப்போதே இப்படிப் பேசுபவர்கள், நாளை ஒரே குடும்பம் என்றானதும் என்ன பேசுவார்கள் ?நமக்கு இது தேவையா ?” நித்யா கீர்த்தி பேசியதை முழுவதும் சொல்லவில்லை . அதை நிச்சயம் இந்த வீட்டில் வேறு யாராலும் ஏற்க முடியாது . செல்வம் இப்போது வெகுவாகக் குழம்பினார். மகள் சொல்வது அவருக்கு மெல்லப் புரிந்தது. அவள் சொல்வது சாந்தாவுக்காக . முன்பே சாந்தாவை வீட்டை விட்டு அனுப்பியபோது பணம் தான் காரணமாக இருந்தது . இப்போது இப்படியொரு காரணத்தைச் சொன்னால் சாந்தா தாங்குவாளா ? பிள்ளைகளுக்கு அது மன உளைச்சலைத் தரும் . மதுரையில் உறவுகளின் நெருக்கம் காட்டத் தொடங்கியதிலிருந்து சாந்தா மிகவும் ஆனந்தமாக இருக்கிறாள் . அதில் மீண்டும் இடி விழுந்தால் . நித்யாவுக்கு செல்வத்தின் முகம் இறுக்கத்தைக் கண்டதும் மெல்லத் தந்தையின் கையைப் பற்றினாள், “அப்பா ! நீங்க ரொம்ப கவலைப் படாதீர்கள் . மெல்ல அரவிந்துக்கு சொல்லிப் புரிய வைக்கிறேன் . அவன் கலங்காமலிருந்தால் போதும், அத்தையும் அனிதாவும் தைரியமாக இருப்பார்கள் . அவனிடம் பேசும்போது தான் இருவருக்கும் சண்டை வந்து விட்டது . எல்லாம் சரியாகி விடும் .” என்று தைரியம் சொன்னாள் . நித்யா தந்தையிடம் சொன்ன விஷயங்கள் அவரை வெகுவாகக் கலங்கடித்தது . அரவிந்த் கொஞ்சம் பக்குவமாக இருந்தாலும், இதுவரை இல்லாமல் அவர்களிடம் அதிகம் ஒட்டிக்கொள்கிறான் . அனிதா கேட்கவே வேண்டாம் . மதுரைக்குச் சென்று தனியே அவர்களுடன் நாட்களைக் கழிக்கத் தொடங்கிவிட்டாள் . திடீரென்று ஒரு நாள் இது எதுவும் நடவாது என்றால் எப்படி ஏற்பார்கள்? அரவிந்திடம் பேசலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தார் . ஒரே நாளில் எல்லாம் சொல்ல முடியாது . மெல்ல மெல்ல அவனுக்குப் புரிய வைக்க வேண்டும் . இரவு அவன் படித்துக் கொண்டிருந்தபோது, மெல்ல அவன் அறைக்குச் சென்றார் . “இன்னும் தூங்கவில்லையா?” “இல்லை மாமா ! கொஞ்சம் படிக்க வேண்டும் . நீங்கள் இன்னும் படுக்க வில்லையா ?” “தூக்கம் வரவில்லை . உன் அறையில் விளக்கு எரிந்தது . அதுதான் பார்க்க வந்தேன் .” “இன்னும் ஒரு பத்து பக்கங்கள் . முடிந்துவிடும்” என்று தன் மாமாவின் முகத்தைப் பார்த்தவன், அவர் ஏதோ சொல்ல நினைப்பதை உணர்ந்து, புத்தகத்தை மூடி வைத்து விட்டு, “என்னிடம் எதுவும் சொல்ல வேண்டுமா மாமா ?” என்றான் . இவனிடம் எப்படிப் பேசுவது . “ஒன்றுமில்லை ! அனிதா எப்போது வருகிறாள் ?” “அருண் அண்ணா நாளை மறுநாள் சென்னை வரும்போது, வருவதாகச் சொன்னாள் . உங்களிடம் சொல்லவில்லையா ?” “உன் அம்மாவிடம் சொல்லி இருப்பாள் ! அவள் கல்லூரியில் சேர இன்னும் எத்தனை நாள் இருக்கிறது ?” செல்வம் எதோ சொல்லத் தயங்குவது புரிந்தது அரவிந்துக்கு . அரவிந்த் வளர்ந்து அவன் விஷயங்களை அவனே கவனித்துக்கொண்டாலும் அவனின் முக்கியமான நாட்களை அவர் மறந்ததில்லை . அனிதா குறித்து எல்லா விஷயங்களும் இன்னும் செல்வம் தான் பார்த்துக் கொள்வார் . அவளின் எல்லா விவரங்களும் அவருக்கு அத்துப்படி . இப்போது தெரியாதது போல் அவர் கேட்க அரவிந்த் புரிந்துகொண்டான் . “மாமா ! ஏதும் பிரச்சனையா ?” என்றான் . “அதெல்லாம் ஒன்றும் இல்லை . நீ படி” என்று செல்ல முயன்றவர் தடுத்து,“மாமா ! என்னிடம் ஏன் இத்தனை தயக்கம் ? சொல்ல வந்ததைச் சொல்லுங்கள்” தயக்கத்துடன் ஆரம்பித்தார் .” உன் சித்தி, சித்தப்பா எல்லோரும் மிகவும் பிரியமானவர்கள் . எல்லோரும் உங்களிடம் நிறைய அன்பு வைத்திருக்கிறார்கள் . ஆனால் …” என்று தாங்கியவர், “விரைவில், உன் அண்ணனுக்குத் திருமணம் ஆகும் . வரப்போகும் பெண் எப்படி இருப்பாள் என்று தெரியாது . ஒருவேளை அவளுக்கு நீங்கள் வேண்டாத சொந்தமாக இருக்கலாம் அல்லவா !” என்றார் . அரவிந்தும் செல்வம் சொல்ல வருவது புரியவில்லை . குறுக்கிடாமல் கேட்டான் . “உன் சித்தி அன்று சொன்னார் ! அருணுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று ! ஒரு வேலை அந்தப் பெண் உங்களை ஒதுக்கினால், நீ அதைப் பெரிதுபடுத்தக் கூடாது . யார் உன்னுடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீ தான் பக்கபலம் . நீ தைரியமாக இருந்தால் நாங்கள் எல்லோரும் தைரியமாக இருப்போம் . உன் மனம் எப்போதும் கலங்கக் கூடாது .உனக்கு எப்போதும் நான் இருப்பேன் .” அரவிந்துக்கு ஆச்சரியமாக இருந்தது . வெகுநாட்களுக்குப் பிறகு மாமா அவனுக்குத் தைரியம் சொல்கிறார் . முன்பெல்லாம் அவன் கலங்கி நிற்கும்போது சொல்வர். ஆனால் இப்போது ஏன் சொல்கிறார் ? ஒருவேளை நித்யாவுடன் நடந்த சண்டை இவருக்குத் தெரிந்துவிட்டதா? “மாமா ! நான் இந்த வீட்டில் இருப்பவரைத் தவிர வேறு யாரையும் இதுவரை பெரிதாக நினைத்ததில்லை . இப்போது சித்தி சித்தப்பா உறவாகக் கிடைத்திருக்கிறார்கள் . அதற்காக அவர்களும் நீங்களும் ஒன்றில்லை . இது என் வீடு ! மற்றதெல்லாம் உறவினர் வீடு ! உறவுகளிடம் எவ்வளவு எதிர்பார்க்கலாம் என்று எனக்கு நன்றாகத் தெரியும் . நீங்கள் அதிகம் கவலைப் படாதீர்கள் . இன்னொன்றும் சொல்கிறேன் . எப்போதும் உங்களுக்கு நான் இருப்பேன் . நித்யா சீக்கிரம் வேறு வீட்டுக்குச் சென்றுவிடுவாள் . அனிதா கூட ஒரு நாள் செல்லத்தான் போகிறாள் . உங்களுடன் எப்போதும் இருக்கப்போவது நான் தான் . நான் சொல்வது சரிதானே !” என்றான் . செல்வத்துக்கு மனம் மிக லேசானது . நித்யா சொன்னது போல் அரவிந்த் உலகம் அறியாதவன் இல்லை . அவனுக்கு எத்தனை பக்குவம் ! மெல்லச் சிரித்தார் . “நீ சொன்னது நூறு சதவிகிதம் உண்மை . நித்யா தேவை இல்லாமல் என்னையும் பயமுறுத்தி விட்டாள் .” என்றார் . அரவிந்துக்கு இப்போது இன்னும் நித்யாவின் மேல் ஆத்திரம் வந்தது . அவளிடம் சென்று கேட்கலாம் என்று நினைத்தபோது, இரவு வெகுநேரம் ஆகிவிட்டது . அவளிடம் பேசலாம் என்று அரவிந்த் சென்றான் . அவள் போனில் பேசியபடி தயாராகிக் கொண்டிருந்தாள் . “இன்னும் ஒரு முப்பது நிமிடம் . வந்து விடுவேன் .” அரவிந்தை பார்த்து “என்ன?” என்றாள் . “மாமாவிடம் என்ன சொன்னாய் ?” என்றான் . “எனக்கு ஒரு முக்கியமான வேலை . வந்து பேசலாம்” என்று கிளம்பிவிட்டாள் . அவளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தோன்றியது . அதற்குள் அவள் சென்றுவிட்டாள் . அவள் அருகிலிருந்த மாலுக்கு தான் சென்றாள் . அருணா அவளை அழைத்திருந்தாள் என்று அவளைச் சந்திக்கச் சென்றாள் . ஏதோ முக்கியமான விஷயம் என்றாள் தோழி அருணா . அப்படி என்ன முக்கியமான விஷயம் என்று கேட்டாலும் நேரில் வா என்றாள் . நித்யாவுக்கு ஒரு மாற்றம் தேவை . சில நாட்களாகவே அவள் மனதில் பல கவலைகள் . எல்லாவற்றையும் கொஞ்ச நேரம் மறந்து அருணாவிடம் செலவிடலாம் என்று நினைத்துச்சென்றாள். அருணாவைத் தேடிக் கண்டுபிடித்துச் சென்று அவளுடன் அமர்ந்தாள் . “என்னப்பா ! ஏதோ முக்கியமான விஷயம் என்றாய் !” என்றாள் நித்யா . “சொல்கிறேன் ! நீ ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய் !” “அதெல்லாம் ஒன்றும் இல்லை . கொஞ்சம் சரியாகத் தூங்கவில்லை .” “அனிதா, அரவிந்த் எப்படி இருக்கிறார்கள் ?” “ஏய் ! இரண்டு நாள் முன் தானே பார்த்தோம் . ஏதோ பல நாள் பார்க்காத மாதிரி விசாரிக்கிறாய் !” “அது… ஒன்றும் இல்லை . சும்மா தான் ! எப்போதும் போல் தான் கேட்டேன்” தோழியின் திணறல் நித்யாவின் பார்வையைக் கூர்மை ஆகியது . “கொஞ்சம் மேக்கப் செய்திருக்கிறாள் . ஆடை கூடக் கொஞ்சம் பளிச்சென்று இருந்தது . என்ன காரணம் என்று யோசித்தவள்,”சரி ! வா அப்படியே ஒரு படம் பார்க்கலாம் . சொல் எந்த படத்திற்குப் போகலாம் .” என்றாள் . அந்த மாலில் ஆறு ஏழு திரையரங்குகள் இருந்தன . ஏதோ ஒரு படத்துக்குப் போகலாம் என்று கேட்டாள் நித்யா . “அதில்லை ! எனக்கு வேறு திட்டம் இருக்கிறது !” சற்றே ஆச்சரியமாய், “என்ன திட்டம் ?” என்று கேட்கும்போது, அருணாவின் செல் ஒலித்தது . அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தைச் சொன்னாள் அருணா . “வேறு யாரும் வருகிறார்களா ?” நித்யா கேட்டாள் . “ஆம்! ஒரு முக்கியமானவரை உனக்கு அறிமுகம் செய்யத்தான் உன்னை அழைத்தேன் .” நித்யாவுக்கு புரிந்துவிட்டது . தோழியின் அதிகப்படி அலங்காரம் . பேச்சில் தயக்கம் . “எத்தனை நாளாகப் பழக்கம் ?” அருணா வெட்கத்துடன், “இப்போதுதான் கொஞ்ச நாளாக . உன்னிடம் நான் எதையும் மறைத்ததில்லை . உன்னிடம் தான் முதலில் சொல்கிறேன்” என்று பேசிக்கொண்டே போன தோழியை நிறுத்த, “ஆள் யார் ? அதைச் சொல்” என்றாள் . “இதோ அவரே வந்து விட்டார் !” என்று அருணா ஒருபுறம் பார்க்க, அவள் பார்வை சென்ற இடத்தில் பார்த்தால் நித்யா வாயடைத்துப் போனாள். பகுதி - 18 நித்யா திரும்பி வரும் வரை காத்திருந்தான் அரவிந்த். ஆனால் அவள் வந்த நேரம் எல்லோரும் வீட்டிலிருந்தார்கள் . இப்போது பேசினால் எல்லோருக்கும் முன் ஒரு சண்டையாக மாறி விடும் . இரவில் பேசலாம் என்று காத்திருந்தான். நித்யா செல்லில் பேசிக்கொண்டே மாடிக்குச் செல்வதை அரவிந்த் பார்க்கவும் பின் தொடர்ந்தான். நித்யா பேசிக்கொண்டு தான் இருந்தாள் . “என்னிடம் சொல்லவே இல்லை . இன்று என்னை வரச் சொல்லிவிட்டு அம்போ என்று என்னை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் படத்துக்குப் போகிறீர்கள். கொஞ்சமும் சரி இல்லை . என்னை இப்படி ஏமாற்றி விட்டீர்கள் . உங்களுக்கு என்னைப் பற்றித் தெரியவில்லை . நீங்கள் செய்ததைச் சரி செய்ய ஒருவாரம் அவகாசம் . இல்லை நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது .” அவள் பேசி முடிக்கும் முன்னரே, “நித்யா!” என்றான் அரவிந்த் . “நான் பிறகு அழைக்கிறேன் .” என்று இணைப்பைத் துண்டித்து விட்டு, அரவிந்த்திடம் திரும்பினாள். “என்ன” “மாமாவிடம் என்ன சொன்னாய் ?” “நான் என்ன சொன்னேன் ?” “அதைத் தான் நான் கேட்கிறேன் . உன் கற்பனைகளை எல்லாம் மாமாவிடம் சொன்னாயே ? நேற்று மாமா முகமே சரி இல்லை . என்னிடம் வந்து எனக்குத் தைரியம் சொல்கிறார் . அவரிடம் என்னவெல்லாம் பேசினாய் ?” “உன்னிடம் பேசியதை தான் பேசினேன் .” “உன்னுடைய காம்ப்லெஸ் ஐ விட்டு வெளியே வா, நித்தி .உனக்கு இருக்கும் ஒரு இன்செக்குரிட்டியை தூக்கிப் போடு . அவர்கள் தப்பாக எண்ணுவார்கள், இவர்கள் என்ன சொல்வார்கள் என்று யோசிப்பதை விடு .” “நீ மருத்துவம் படிக்கிறாய் என்பதால், ஏதோ பெரிய மனோதத்துவ நிபுணர்போல் பேசாதே . உன்னைவிட என்னைப் பற்றி எனக்கு நிறையவே தெரியும் .” என்று நகர்ந்தாள் . இவனிடம் எல்லாம் சொல்லிவிடலாமா ? ஏதோ எனக்கு மன நோய் என்று நினைக்கும் அளவுக்குச் சென்று விட்டான் . இது காம்ப்ளக்ஸ் இல்லை . அவள் பட்ட அவமானம் வீட்டில் வேறு யாரும் படக் கூடாது என்று நினைக்கிறாள் . வீட்டின் சிட்டௌட் பகுதி வீட்டின் மற்ற பகுதியைவிட சீலிங் உயரம் சற்றே குறைவாக இருக்கும் என்பதால் அதற்குச் செல்ல இரண்டு படிகள் அமைத்திருந்தார்கள் . அந்தப் படியில் தான் எப்போதும் அமர்ந்து அரட்டை அடிப்பார்கள் . கீழ் இருந்து பார்த்தாலோ அல்லது படிகளும் மாடியும் சேரும் இடத்திலிருந்து பார்த்தாலோ அந்த இடம் தெரியாது . அந்தப் பகுதியில் இருள் சூழ்ந்திருந்தது . தெரு விளக்கின் ஒளி கொஞ்சம் கருமையைக் குறைக்கும். மெல்ல அவள்பின் சென்று நின்றான் . மேல் படியில் அமர்ந்து கீழ் படியில் கால்களை வைத்துக் கொண்டு, அமர்ந்திருந்தாள் . அருகில் நின்ற அவனுக்கு நித்யா கன்னத்தைத் துடைப்பது தெரிந்தது . அழுகிறாளா ? என்று அவள் அருகில் அமர்ந்தான். நித்யா ஒன்றும் தோட்ட சிணுங்கி அல்ல . எதற்கும் சீக்கிரம் அழமாட்டாள் . அவனை “ஏய் ! என்ன ஆச்சு ?” “ப்ளீஸ், என்னைத் தனியே இருக்க விடு .” “இப்போது எதற்கு அழுகிறாய் ! இப்படியே உன்னை எப்படி விட்டுவிட்டுப் போவது ? எதற்கு அழுகிறாய் என்று முதலில் சொல் . இல்லை அத்தை மாமாவை அழைத்து வருகிறேன் . அவர்களிடம் சொல் .” என்றான் . அவள் மௌனமாக இருக்கவும், எழுந்து செல்ல இருந்தவனைத் தடுத்து, “எனக்கு இருப்பது காம்ப்ளக்ஸ் இல்லை . நான் சொல்வது கற்பனை இல்லை என்றால் நம்புவாயா ?” இப்போது இவளிடம் விளக்கம் கூறினால், சொல்ல வருவதைச் சொல்லாமல் விட்டுவிடுவாள் . அவள் போக்கில் போக விட்டுப் பின்பு புரியவைக்க வேண்டும் என்று எண்ணினான் அரவிந்த் . “நீ எதையும் மறைக்காமல் என்னிடம் சொல் . உன்னை நம்புகிறேன்” என்றான் . “உன் சித்தி சித்தப்பா எல்லோரும் நல்லவர்கள் தான் . அவர்களை நான் எதுவும் நினைக்கவில்லை . ஆனால் உன் அத்தை வேதவல்லி அப்படி நினைக்கவில்லை . அவர்களுக்கு உங்களுக்காகச் செய்யும் செலவுகளை ஏற்க முடியவில்லை .” “அது எனக்கும் தெரியும் !” “அப்படி இருக்கும்போது அவர்களிடம் விலகி இருப்பது தானே நல்லது .” “அவர்களிடம் யார் இப்போது நெருங்கிப் பழகினார்கள் ? அவர்களை மட்டுமில்லாமல் நீ சித்தி சித்தப்பா வீட்டாரையும் ஒதுக்கி வைக்கச் சொல்வது தான் எனக்குப் புரியவில்லை .” “அவர்கள் எல்லோரும் இதுவரை மிக நெருக்கமாக இருந்தார்கள் . இப்போது நம்மால் அவர்களுக்குள் ஒரு பிரிவு . அதுமட்டும் இல்லாமல், கீர்த்திக்கு உங்களைப் பிடிக்கவில்லை .” “கீர்த்தியை ஏன் இதில் உள்ளே இழுக்கிறாய் . அவள் சின்னப் பெண் . அவளுக்குப் பிடித்தால் என்ன ? பிடிக்கவில்லை என்றால் என்ன ?” “ஒருவேளை அவள் உங்கள் அண்ணியாகும் பட்சத்தில், அவர்களுக்குள் எத்தனை குழப்பம் வரும் . அதற்காக யாரையும் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை . அவர்களிடமிருந்து வரும் அதிகப்படியான பொருட்கள் நமக்கு வேண்டாம் . நமக்கு அப்படி ஒன்றும் தேவையும் இல்லாத பட்சத்தில் அவர்கள் உறவு மட்டும் போதும் . உதவி வேண்டாம் .” அரவிந்தும் நித்யாவை பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது . இவளுக்கு என்ன ஆயிற்று . வருங்காலத்தில் என்ன நடக்கும் என்று இவளாக ஒரு கற்பனை செய்து அதற்குத் தகுந்தாற்போல் இப்போதிருந்தே நடக்கச் சொல்கிறாள் . அவள் மனதைப் படித்துவிட்டாளா என்று எண்ணும் வண்ணம், அவளும் அதையே சொன்னாள் . “இதுவும் என் கற்பனையோ இல்லை காம்ப்ளெக்சோ என்று நினைக்காதே . கீர்த்தியே என்னிடம் சொன்னாள் . நிறையச் சொன்னாள் . எல்லாவாரையும் சொல்ல ….” என்று நிறுத்தியவள் “இப்போதும் அவள்மேல் வீண் பழி போடுகிறேன் என்று நினைத்தால், நினைத்துக்கொள் .” இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள் . கீர்த்தி இவளிடம் என்ன சொன்னாள் ? எப்போது சொன்னாள் ? அரவிந்த் சிறிது நேரம் யோசித்தான் . ஆனால் அருண் கீர்த்தி திருமணம்பற்றிச் சொன்னதை அவனால் நம்ப முடியவில்லை . அவன் நினைத்தது வேறு . ஒருவேளை அவன் நினைத்துத் தான் கற்பனையோ ?இன்று மாமா கூட அருணின் திருமணம் பற்றியும் அவனின் வருங்கால மனைவி பற்றியும் பேசினார் .நித்யா சொன்னதை மாமா கேட்டுவிட்டுப் பேசலாம் . ஆனால் நித்யா சொல்வதை முற்றிலும் ஒதுக்க முடியாது . பகுதி - 19 வேதவல்லி கணவனை எதிர்த்து அவளால் எதுவும் செய்ய முடியாது என்று தெரிந்ததும், மகளிடம் சென்றாள் . மகளை வைத்து எப்படியாவது இந்தக் கல்யாணத்தை நடத்தி விட வேண்டும் என்று எண்ணினாள் . செல்லமாக வளர்ந்த மகள், தெரியாத புது வீட்டிற்குச் சென்றாள் சிக்கல்கள் வரும் . அதுவே அண்ணன் வீட்டுக்கு மருமகளானால் அவளுக்கு அந்தத் தொல்லையும் இருக்காது . மெல்ல மக்களிடம் பேசினாள் “கீர்த்தி, உனக்கு அருணை பிடிக்கும் தானே !” “ஆனால் அப்பா தான் அவர்கள் சம்பந்தம் வேண்டாம் என்கிறாரே” “நான் கேட்டதுக்குப் பதில் சொல் ! உனக்கு அருணை பிடித்திருக்கிறதா இல்லையா ?” “பிடிக்கும்” “அப்படி ஆனால் நீ தான் எல்லோரின் சம்மதத்தையும் வாங்க வேண்டும்” “நானா ? என்னால் எப்படி முடியும் ? அருண் மாமாவுக்கே என்னைப் பிடிக்கவில்லை .” “உனக்கெப்படி தெரியும் ?” “பின்னே சென்னையில் நான் பயிற்சி என்று சென்றபோது வேலை, வேலை என்று ஓடிக் கொண்டு இருந்தார் . என்னைவிட வேலை முக்கியம் என்றால், என்னைப் பிடிக்கவில்லை என்று தானே அர்த்தம் .” “அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை . நீ குழந்தைபோல் செய்திருப்பாய் ! ஆனால் யோசித்துப் பார் ! அருண் என்றால், இங்கேயே அருகிலேயே இறக்கலாம் . பார்வதி அத்தை சின்ன வயதிலிருந்து பழக்கம் . மாமாவும் உன்மேல் எப்போதும் பிரியமாக இருப்பார் . நீ ஏதேனும் தவறாகச் செய்தலும் யாரும் பெரிதாக ஒன்றும் சொல்லமாட்டார்கள் . அதுவே தெரியாத வீடு என்றால், என்ன என்ன கட்டுப்பாடுகள் இருக்கும், நீ எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள் என்றே தெரியாதே ! யோசித்துப்பார் !” “ஆனால் பார்வதி அத்தை இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படிச் செய்யக் கூடாது என்று சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள் .” என்றாள் கீர்த்தி . “ஏய்! இங்கே உன் பார்வதி அத்தை பேச்சு ஒன்றும் செல்லுபடி ஆகாது . நான் உன் அப்பா சொல்வது தான் . அதுவும் உன் அப்பா கோபப்பட்டால், எல்லோரும் அடங்கிப் போய் விடுவார்கள் . உன் பெரிய அத்தை இத்தனை ஆண்டுகளாய் இங்கே யாரும் அழைக்கவில்லை . முக்கியமான காரணம் . உன் அப்பாவின் மேல் உள்ள மரியாதை, பயம் . இதைப் புது இடத்தில் எதிர்பார்க்க முடியாது .” கீர்த்திக்கு அன்னையின் பேச்சில் உள்ள உண்மை புரிய,“நான் என்ன செய்வது ?” “முதலில் அருண் சம்மதிக்கும் படி செய் . ‘உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் . உங்களைத் தான் திருமணம் செய்து கொள்வேன்’, என்று பேசி அவனைச் சம்மதிக்க வை .பிறகு உன் அப்பாவையும் சம்மதிக்க வைத்து விடலாம் . அப்புறம் எல்லாம் சுலபம் தான் .” என்றாள் வேதவல்லி . அண்ணனையும் மகளுமாய் போட்டத் திட்டம் எல்லாம் அருண் முன் சில நிமிடங்களில் தவிடுபொடி ஆனது . வேலைகள் ஓரளவு குறைய, நண்பனிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு ஊருக்குச் சென்றான் . திருமண பேச்சு அதன் பின் ராஜனின் கோபம், அவரைச் சமாதானப்படுத்த சிவநாதன் சென்று அவரிடம் ராஜன் பேசாமல் இருந்தது பற்றியெல்லாம் பார்வதி மகனிடம் சொன்னாள் . “வந்தும் வராததுமாய் அவனிடம் எல்லாம் கொட்ட வேண்டுமா ?” என்றார் சிவநாதன் . “எப்போது தான் சொல்வது ? போனில் வேண்டாம் . ‘அவனுக்கு அங்கே வேலை அதிகம் . இதேயே நினைத்துக்கொண்டு இருப்பான்’ என்றீர்கள் . இப்போது சொல்வதில் என்ன ஆகிவிட்டது ?” என்றாள் பார்வதி கணவனை முறைத்தபடி . “சரி விடுங்கள் ! இப்போது என்ன செய்வது ? நானும் அப்பாவும் மீண்டும் மாமாவிடம் சென்று பேசிவிட்டு வரட்டுமா ?” என்றான் . “அப்படியென்றால் உனக்குக் கீர்த்தியை திருமணம் செய்யச் சம்மதமா ?” என்று பார்வதி கேட்டாள் . “நான் அப்படி சொல்லவில்லை . மாமாவைச் சமாதானம் செய்யச் செல்லட்டுமா என்றேன் .” அருண் சொல்ல, சத்யன் சிரித்தான் . “எதற்குச் சிரிக்கிறாய் !” என்று அருண் கேட்க, “நீ என்ன சொல்வாய் என்று ஆர்வமாய் அம்மா கேட்டார்களா ! நீயும் நேராகப் பதில் சொல்லவில்லை. அதுதான் சிரித்தேன்” “எனக்கு ஒன்றும் புரியவில்லை .” என்றார் சிவநாதன் . “அண்ணனுக்குக் கீர்த்தியை திருமணம் செய்யச் சம்மதமா ? என்று அம்மா சுத்தி வளைத்துக் கேட்கிறார்கள் . நீயாவது நேராகப் பதில் சொல் அண்ணா”. “எதுவாக இருந்தாலும் சொல் .” என்றார் சிவநாதன். “எனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை அப்பா .” “ஹ்ம்ம் , உன் மாமாவைத் தான் எப்படி சமாதானம் செய்வது என்று தெரியவில்லை .” “உங்களுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமா அப்பா ?” என்றான் அருண் . “எனக்கும் இல்லை தான் . நெருங்கிய உறவில் திருமணம் வேண்டாம் என்று தான் நினைத்தேன் . ஆனால் ஒரு வார்த்தை உன்னைக் கேட்கலாம் . ஒருவேளை உனக்கு விருப்பம் இருந்தால், ஏதும் மருத்துவ பரிசோதனையில் பின்னாளில் சிக்கல் வருமா என்று பார்த்துவிட்டுப் பிறகு யோசிக்கலாம் என்று இருந்தேன் .” என்றார் சிவநாதன். இதில் சற்றே ஏமார்ந்தது துளசியம்மாள் தான் . ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை . “மாப்பிள்ளை தான் கோவித்து கொண்டார் .” என்றார் . “நான் பார்த்துக்கொள்கிறேன் பாட்டி”. என்று அப்போதே வேதவல்லி -ராஜன் வீட்டுக்குச் சென்றான் . ராஜன் வீட்டில் தான் இருந்தார் . அவருக்கு ஒரு சின்ன ஆசை . அருண் ஒருவேளை அவர் மகளைப் பிடித்து இருக்கிறது என்று சொல்லிவிட்டால் . ஆனால் முகத்தில் காட்டாமல், ஏதோ தீவிரமாக வேலை செய்வது போல் கோப்புகளைப் புரட்டிக்கொண்டிருந்தார் . அருண் உள்ளே வந்ததும் “வா அருண், ஏய் வேதா அருண் வந்திருக்கிறான் .” என்றதோடு வேறெதுவும் பேசவில்லை . வேதவல்லி மட்டும் வந்து கண்ணீருடன் சொன்னாள், “என் மகளை எல்லோரும் இப்படி உதாசீனப்படுத்தி விட்டார்கள் .” என்றாள் . “அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை அத்தை . நீங்களே யோசித்து பாருங்கள் . அப்பா சொல்வது சரி என்று புரியும் .” “பார் ! நீயும் அப்படி தானே பேசுகிறாய் . என் மகளை உனக்குப் பிடிக்கவில்லை . அப்படித்தானே !” “பிடிப்பது, பிடிக்காதது வேறு ! ஆனால் அப்பா சொல்வது வேறு . கீர்த்தியை பிடிக்காமல் இல்லை .” அவன் பேசிக்கொண்டிருந்த போதே கீர்த்தி வந்தாள் . “அப்படியானால் என்னைப் பிடிக்கும் தானே உங்களுக்கு !” என்றாள் கீர்த்தி . “அதில் என்ன சந்தேகம் .” “அப்போது ஏன் திருமணத்தை மறுக்க இத்தனை காரணங்கள் சொல்கிறீர்கள் .” என்றாள் கீர்த்தி . “மாமா ! நம் குடும்பத்தில் உறவில் திருமணம் செய்வது புதிதல்ல . பாட்டி தாத்தா இருவருக்கும் கூட இரத்த உறவு இருக்கிறது . நீங்களும் கூடத் தாத்தாவின் ஒன்று விட்ட தங்கை மகன் தான் . இப்படி பல தலைமுறைகளாக உறவில் செய்வது சரி இல்லை மாமா ! அப்பா, நான் சொல்வதை விடுங்கள் . நீங்களே ஒரு மருத்துவரிடம் பேசுங்கள் . அப்பா சொல்வது நம் குடும்ப நலனுக்காகத் தான் .” கணவன் யோசிப்பதை பார்த்ததும், “என் மகள் ஆசைப்பட்டுவிட்டாளே ! அவள் என்ன செய்வாள்”, என்றாள் வேதவல்லி . “அவள் சின்னப் பெண் அத்தை ! இதுவே தவறான ஒரு ஆளைத் தேர்வு செய்திருந்தால் புத்திமதி சொல்லி மனதை மாற்றி இருப்பமே ? இப்போதும் அப்படித்தான் .” “உன்னிடம் அவள் வெறுக்கும் அளவுக்கு அப்படி என்ன இருக்கிறது .என்னைதான் சொல்ல வேண்டும் . நான் தான் அவள் மனதில் ஆசையை வரர்த்துவிட்டேன் . நானே இப்போது எப்படி அவளிடம் பேசுவேன் .” என்று மீண்டும் கண்ணீர் விட்டாள் . “நான் அவளுக்குப் புரிய வைக்கிறேன் அத்தை” என்று கீர்த்தியை அழைத்தான். மகள் எப்படியும் அருணின் மனதை மாற்றிவிடுவாள் என்று நம்பினாள் வேதவல்லி . இருவரும் தோட்டத்தில் அமர்ந்து பேசத்தொடங்கினார் . “உனக்கு என்னை ஏன் பிடிக்கும் கீர்த்தி ?” “இது என்ன கேள்வி ? நீங்கள் என்னை நன்றாகக் கவனித்துக் கொள்வீர்கள் .அத்தை மாமாவும் என்மேல் பிரியமாக இருப்பார்கள் . சத்யன் கூட எனக்கு நல்ல நண்பன் .” “என்னை ஏன் பிடிக்கும் என்றுதானே கேட்டேன் ! அதற்கு மட்டும் காரணம் சொல் .” “அதுதான் சொன்னானே ! நீங்கள் என்னை நன்றாகப் பார்த்துக் கொள்வீர்கள் என்று !” “உனக்கு எப்படி அது நிச்சயம் ?” இந்தக் கேள்விக்குக் கீர்த்தியிடம் பதில் இல்லை . “அது …எனக்குத் தெரியும்” “எப்படி ? இதுவரை அப்படி நான் உனக்காக நேரம் ஒதுக்கியதாக எனக்கு நினைவில்லை ! அப்படி இருக்க நீ எப்படித் தெரிந்து கொண்டாய்?” உண்மையில் அவளுக்கே தெரியாது . வேதவல்லி சொன்னதை நம்பினாள் . அவ்வளவே . மற்றபடி அருண் பார்க்க நன்றாக இருக்கிறான் . அம்மா சொன்னது போல் இப்போது போல் எப்போதும் இருக்கலாம் . மாமனார் மாமியார் என்று புது ஆட்கள் யாரும் வரமாட்டார்கள் . அதையே சொல்லவும் அருண் மெல்லக் கேட்டான், “உனக்கு இதெல்லாம் நிச்சயம் என்று தெரியுமா ? ஒருவேளை நான் உண்மையில் உன்னை நன்றாகப் பார்த்துக் கொள்ளாமல் போகலாம் . அம்மா உன்மேல் கோபப்படலாம் . ஒருவேளை உன்னிடம் நான் தினமும் சண்டை பிடிக்கலாம் . இதெல்லாம் உனக்கு ஓகே வா” அவன் முகத்தில் கேலி கிண்டல் இல்லை . ஒருவேளை உண்மையாகவே இவன் சொல்வது போல் நடக்குமா ? சற்றே பயந்தவள், இவன் இவளைப் பயமுறுத்தச் சொல்கிறான் என்று நினைத்து “அப்படி எல்லாம் நடக்காது . நீங்களும், அத்தையும் எதுவும் சொன்னால், மாமா பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள் . மாமாவுக்காக நீங்கள் என்னை நன்றாகப் பார்த்துக் கொள்வீர்கள் .” என்றாள் . அருணுக்குச் சிரிப்பு வந்தது . இவள் எவ்வளவு அப்பாவியாக இருக்கிறாள் . புகுந்த வீட்டில் யாரும் இவளை எதுவும் சொல்லாமல் இருக்க அருணை திருமணம் செய்ய விரும்புகிறாளா ? இவளுக்குப் பக்குவமாகச் சொன்னால் புரியாது என்று சற்றே கடுமையாக,” அப்பாவுக்காக உன்னைப் பார்த்துக்கொண்டாள் போதுமா ?” அவள் புரியாமல் பார்க்க, “உன்மேல் எனக்குக் காதல் இல்லை . ஒருவேளை எல்லோரும் சொல்கிறார்களா என்று உன்னைத் திருமணம் செய்து கொண்டால் உனக்குச் சம்மதமா ?” அவள் கண்களில் நீர் கோர்த்தது . “என்னைப் பிடிக்கும் என்று சொன்னீர்கள் தானே !” “கீர்த்தி, உன்மேல் வெறுப்பு இல்லை . காதலும் இல்லை . நீ அழும் அளவுக்கு ஒன்றும் ஆகிவிட வில்லை . உன் அம்மா ‘நான் தான் உனக்குப் பொருத்தமானவன்’ என்று சொல்லாமல் இருந்தித்திருந்தால் நீ என்னையும் சத்யன் போல் ஒரு நண்பனாக மட்டும் பார்த்திருப்பாய் .” அவன் மேலே பேசும்முன்,” உங்களுக்கு நித்யாவை பிடித்திருக்கிறது . அதனால் தானே என்னை வேண்டாம் என்கிறீர்கள் . ” சற்றே அருண் திகைக்க,” எல்லாம் அவளால் தான் . உங்களை நன்றாக மயக்கி விட்டாள் . ஒன்றும் இல்லாமல் இருந்தவள் இங்கே இருக்கும் வீடு, வசதி எல்லாம் பார்த்து உங்களை மயக்கி விட்டாள் . அன்றே எல்லோரிடமும் சொல்லிருக்க வேண்டும் . சொன்னால் புரிந்து கொள்வாள் என்று எச்சரித்தேன் . ஆனால் அவளுக்கும் புரியவில்லை . உங்களுக்கும் புரியவில்லை . அவள் உங்கள் பணத்திற்காக உங்களை விரும்புகிறாள் . எல்லோரும் குடும்பமாய் சேர்ந்து திட்டம் போடுகிறார்கள் . அவ்வப்போது செய்யும் உதவிகள் போதாதென்று, உங்களை வளைத்துப்போடக் குடும்பமாய் சதி செய்கிறார்கள் .” கீர்த்தி பேசிக்கொண்டே போனாள் . அருணுக்கு அவன் குழப்பங்கள் எல்லாம் தீர்ந்தது . அத்தை வேதவல்லி, சாந்தா பெரியம்மாவை இப்படி எல்லாம் பேசினாள் என்பது இவனுக்கே தெரியும் . இப்போது கீர்த்தி நித்யாவையும் அவர்களுடன் சேர்த்துப் பேசுகிறாள் . நித்யாவிடம் இவள் இதே போல் பேசியிருக்க வேண்டும் . நித்யாவின் ஒதுக்கம் பற்றி வெகுவாக யோசித்தான் . காரணம் இதுவரை தெரியவில்லை . நித்யாவுக்கு அருணின் மேல் எந்த விருப்பமும் இல்லை . ஆனால் இவன் ஒருவாறு அவள் மனதில் இடம் பிடிக்கலாம் என்று முற்சிக்கும்போதெல்லாம், அவள் விலகிச் சென்றுவிட்டாள் . அதுவும் இந்தச் சில நாட்களில் அவனிடம் பேசக் கூட வெகுவாக யோசித்ததன் காரணம் அவனுக்குப் புரிந்தது . கீர்த்தி பேசியதை நித்யா யாரிடமும் சொல்லிருக்க வில்லை என்பது நிச்சயம் . இது போன்ற இதைவிட மோசமாகத் தான் கீர்த்தி பேசியிருக்க வேண்டும் . நித்யாவின் வீட்டில் இது தெரிந்திருந்தால் , நிச்சயம் அவர்கள் இன்னும் இயல்பாகப் பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள் . ஏன் மீண்டும் பழைய மாதிரி எல்லோரும் விலகிப் போய் இருக்கலாம் . அவள் இதே காரணத்தால் தான் யாரிடமும் சொல்லாமல் இருந்திருக்க வேண்டும் . உடனே அவளைச் சந்தித்து அவளின் எல்லா சங்கடங்களையும் போக்க வேண்டும் என்று தோன்றியது . அதே சமயம் கீர்த்தியின் இந்த மனப்போக்கைச் சரிசெய்ய வேண்டும் என்று எண்ணினான் . “உனக்கு இப்படி எல்லாம் பேச யார் கற்றுத் தந்தார்கள் ? நீ பேசுவது கொஞ்சமும் சரி இல்லை .” “நான் என்ன தவறாகச் சொன்னேன் ? உண்மையைத் தான் சொன்னேன் .” “எது உண்மை ?” “அவள் உங்களை மயக்கி விட்டாள் என்பது ?” அருண் மெல்லச் சிரித்தான், “அது உண்மை தான் . நான் அவளை விரும்புவதால் அப்படிச் சொல்லலாம் . நீ என்னை விரும்புவதாகச் சொன்னாயே ! அப்படியானால், மாமாவின் பணத்திற்காக நான் உன்னை மயக்கி விட்டேன் என்று சொல்லலாம் தானே !” என்றான் . “நீங்கள் அப்படி இல்லை ! நாம் ஒரே குடும்பம்” என்றாள் . “கீர்த்தி ! முதலில் நீ ஒன்றைப் புரிந்து கொள் . பணம் ஒன்றைத் தவிர நாம் மற்ற எல்லா விஷயத்திலும் நித்யாவை விடப் பல படிகள் கீழே தான் . அன்பு, அக்கறை, பாசம், பரிவு இன்னும் நிறையச் சொல்லலாம் . இப்போதும் கூட உனக்கு அவள் செல்வ நிலை மட்டுமே தெரிகிறது . யோசித்துப்பார், ஒருவேளை சாந்தா அத்தை இங்கே நம்முடன் இருந்திருந்தால், உன் அப்பா உனக்குச் சமமாக அவர்கள் பிள்ளைகளை வளர்த்திருப்பாரா ? நீ அதைப் பொறுத்திருப்பாயா ? உனக்குக் கிடைப்பதை விட அதிகமாக உன் அம்மாவும் அப்பாவும் வேறொருவருக்குச் செய்தால், நீ ஏற்பாயா ? அவர்களை யாரும் காயப்படுத்தி விடக் கூடாது என்று பாடுபடுவாயா ? ஏன் நான் கூடச் செய்யமாட்டேன் . இல்லை என்றால் இப்போது நீ காயப்படும் படி பேசிக் கொண்டிருக்க மாட்டேன் .” கீர்த்தி எதுவும் பேசாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் . “இன்னொரு முறை நித்யாவை பற்றித் தவறாகப் பேசி உன்னை வெறுக்கும் படி செய்து விடாதே ! முதலில் இது போன்ற தவறான எண்ணங்களை மனதிலிருந்து தூக்கி எறி .ஒருவரை எடைபோடுமுன் மற்றவர்களின் நிலையிலிருந்து யோசிக்கக் கற்றுக்கொள் . யாரிடமும் நல்லதை மட்டும் பார் . நான் சொன்னதை நன்றாக யோசித்துப் பார் . நான் கிளம்புகிறேன் .” என்று புறப்பட்டுவிட்டான் . வேதவல்லி வெகுநேரம் இருவரும் உள்ளே வராததைக் கவனித்து வெளியே வந்தாள் . மகள் மட்டும் தனியே அமர்ந்திருக்க, “அருண் என்ன சொன்னான் .” என்றாள் அருகில் வந்து . “ஒன்றும் இல்லை” என்ற பதில் மட்டும் வந்தது . அருண் வீட்டுக்கு வந்ததும் சிவநாதன் விவரம் கேட்டார் . “எல்லாம் சரியாகி விடும் அப்பா !” என்பதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை . அவரும் அதற்கு மேல் எதுவும் கேட்காமல் சென்று விட்டார் . மகன் சோர்வாக அமரவும், அருகில் அமர்ந்தாள் பார்வதி . “என்ன கண்ணா ! மாமா எதுவும் கோபமாகப் பேசினாரா ?” “அதெல்லாம் இல்லை அம்மா ! வேறு எதுவோ யோசித்து கொண்டிருந்தேன்” என்று சிரித்தான் அருண் . “நித்யாவை பற்றியா ?” அருகிலிருந்த தண்ணீரை எடுத்துக் குடிக்கச் சென்றவனுக்கு, புரையேறி விட்டது . அன்னையை ஆச்சரியமாகப் பார்க்க,“அவளைப் பற்றித் தானே நினைத்துக்கொண்டிருந்தாய் ! என் யூகம் சரிதானே !” என்றாள் பார்வதி . “உங்களுக்கு எப்படித் தெரியும் ?” என்றான் . “அம்மாவுக்குப் பிள்ளையைப் பற்றித் தெரியாமல் இருக்குமா ?அப்பாவிடம் சொல்லலாம் என்று இருந்தேன் . எதற்கும் உன்னிடம் உறுதி செய்து கொண்டு சொல்லலாம் என்று நினைத்தேன் .” என்றாள் பெருமையாக . “அம்மா, நிறைய சீன் போடாதீர்கள் . நான் சொல்லவில்லை என்றால் உங்களுக்கு எப்படித் தெரிந்திருக்கும் .” என்றான் சத்யன் . “உன் வேலையா இது !” என்று அருண் முறைக்க, “நான் இனிமேல் உங்களை மாமா என்று அழைக்க வேண்டுமா இல்லை நித்யா அக்காவை அண்ணி என்று அழைக்க வேண்டுமா ?” என்றாள் பின்னால் வந்த அனிதா . “ஊருக்கே பரப்பி விட்டாயா ?” என்றான் அருண் . “அதெல்லாம் இல்லை . அப்பாவுக்கும் பாட்டிக்கும் தெரியாது .” என்றான் சத்யன் . “நான் கேட்டதுக்குப் பதில் சொல்லவில்லையே !” என்றாள் அனிதா . “இனிமேல் உன் அக்காவை அண்ணி என்று அழைக்கப் பழகிக்கொள் .” என்றான் அருண் . அருணின் கன்னத்தை வருடி முத்தமிட்டாள் பார்வதி .”உங்களுக்கு ஓகே தானே அம்மா !” என்றான் . “இல்லை என்றால் என்ன செய்வாயாம்?” என்றான் சத்யன் . “நீ சும்மா இருடா ! அவள் ரொம்ப நல்ல பெண் . எனக்குப் பரிபூரண சம்மதம் .” என்றாள் பார்வதி . “அப்பாவிடம் சொல்லிச் செல்வம் அண்ணாவிடம் பேசச்சொல்கிறேன்.” என்றாள் . “இப்போது வேண்டாம் அம்மா !” என்றான் . “ஏன் ?” ” பெரியவர்கள் சொல்வதற்காக மட்டும் அவள் சம்மதிக்கக் கூடாது . நான் பேசிவிட்டுச் சொல்கிறேன் . அது மட்டும் இல்லை இப்போதே ஆரம்பித்தால், வேதவல்லி அத்தை இன்னும் கோபப்படுவார்கள் . கொஞ்சம் அவகாசம் எடுத்துக்கொள்ளலாம்” என்றான் அருண் . “அதுவும் சரிதான்” என்றாள் பார்வதி. அருண் சொன்னதை பற்றி ராஜன் வெகுவாக யோசித்தார் . மனைவியிடம் சொன்னார், “வேண்டாம் வேதா ! நாம் வேறு நல்ல இடமாகப் பார்க்கலாம் .” என்றார் . “நீங்களும் இப்படிச் சொன்னால் எப்படி . கீர்த்தி பாவம் . அவள் மனதில் ஆசையை வளர்த்துக்கொண்டாளே” என்று சொல்லி முடிக்குமுன், “அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை ! நீ சொன்னதால் தான் சரி என்றேன் . அப்பா எல்லாம் உங்கள் விருப்பம்” என்றாள் கீர்த்தி . வேதவல்லி வாயடைத்துப் போனாள். அனிதா இம்முறை அருணுடன் தான் சென்னை திரும்பினாள் . நித்யாவிடம் எதையும் காட்டிக் கொள்ளக் கூடாது என்று அருண் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவளும் வீட்டில் யாரிடமும் அருணின் காதல் விஷயத்தைப் பற்றிப் பேசவில்லை . அருணும் அனிதாவை முழுவதும் நம்பி விடவில்லை . அவள் வயதுக்கு உண்டான துடுக்கில் எதையாவது சொல்லிவிட்டால் ! சீக்கிரமே நித்யாவிடம் பேசிவிட வேண்டும் என்று எண்ணினான் . அவள் செல்லுக்கு அழைத்தான் . “ஹலோ ! எப்படி இருக்கிறாய் ?” “என்ன வேண்டும் உங்களுக்கு ?” என்றாள் அவள் . “நல்ல உபசரிப்பு !” “நான் வேலையாக இருக்கிறேன் ! சீக்கிரம் சொல்லுங்கள் .” “கொஞ்சம் பேச வேண்டுமே !” “இப்போது முடியாது !” “சரி ! நீயாகச் சொல் எப்போது சந்திக்கலாம் ?” “சந்திக்க முடியாது . போனில் பேசலாம் . இன்னும் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு” போனை வைத்து விட்டாள் . போனை பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தான் அருண் . அப்போது உள்ளே வந்த சிபி, வெகுதீவிரமாக வேலையைப் பற்றிப் பேசத் தொடங்கினான் . சொல்ல வந்ததை எல்லாம் சொல்லி முடித்துவிட்டு, “இப்போது போய் அந்தக் கான்ட்ராக்டரை பார்த்துவிட்டு வரலாம்” என்றான். “இப்போதா ? நாளைப் போகலாமா ?” என்றான் அருண் . “ஏன் ?” “ஒரு போன் செய்ய வேண்டும் !” “சரி செய்துவிட்டு வா ! போகலாம் .” “இல்லை நேரமாகும் . நாளைப் போகலாம் .” நண்பனை உற்று நோக்கினான் . “என்ன கேர்ள் பிரென்ட் கூப்பிடப் போகிறாளா ?” என்று முறைத்தான் சிபி . “ஆமாம்” என்றான் அருண் . “சரி நான் மட்டும் போய் வரட்டுமா ?” அருண் சரியென்று விடச் சிபிக்கு ஆச்சரியமாக இருந்தது . கேலிக்குப் பேசுகிறான் என்று முதலில் எண்ணினான் . இப்போது வேலையை ஒதுக்கும் அளவுக்கு என்றால், உண்மையாகவே காதலியின் அழைப்பிற்காகக் காத்திருக்கிறானா ? என்று சிபி யோசித்தான் . மீண்டும் ஆர்வமாய் நண்பன் முன் வந்து அமர்ந்தான் . “உண்மையாகவே காதலியா ? யார் அது ?” என்றான் . “நீ போய்க் கான்ட்ராக்டரை பார் .” என்று நண்பனை விரட்டினான் . “அப்படி எல்லாம் போக முடியாது ! யார் என்று சொல் ?” அருண் அமைதியாகவே இருக்க, “நான் கண்டு பிடிக்கட்டுமா ?” என்று சிபி சத்தமாக யோசித்தான் . “எனக்குத் தெரிந்து கல்லூரியில் இல்லை . தொழில் முறையிலும் எனக்குத் தெரிந்து யாரும் இல்லையே !” அப்போது அருணின் செல் ஒலித்தது . “பர்சனல் கால் .ப்ளீஸ்” என்று வாயில் கதவைக் காட்டினான் . சிபி வெளியேறியதும்,” சொல் நித்யா” என்றான் . “என்ன பேச வேண்டும் .” “ஒரு முக்கியமான விஷயம் .” “சொல்லுங்கள் ’ “நேரில் தான் சொல்ல வேண்டும் .” “நாம் நேரில் சந்தித்துப் பேச என்ன இருக்கிறது ?” “இருப்பதால் தானே அழைக்கிறேன் . உனக்கு நேரம் இல்லை என்றால் சொல் . வீட்டிலேயே நேரில் சொல்லிவிடுகிறேன் . பிறகு என்மேல் வருத்தப்படக் கூடாது .” என்றான் . அவளுக்கு மீண்டும் அரவிந்த் ஏதாவது செய்துவிட்டனா என்று யோசித்தாள் .” அரவிந்த் இம்முறை என்ன செய்தேன்” என்று பதறினாள் . அருணுக்கு நித்யாவின் குரலில் உள்ள பதட்டம் தெரியவும், அவனுக்குப் பாவமாக இருந்தது . இப்போது பாவம் பார்த்தால் இவன் வேலை நடக்காதே ! “நேரில் சொல்கிறேன் . மாலையில் ஆறு மணிக்கு உன் ஆபீசுக்கு வந்து உன்னை அழைத்துக் கொள்கிறேன்” என்று இணைப்பைத் துண்டித்தான் . அலுவலகம் முன் அவன் காரைத் தேட நித்யாவை பார்த்ததும் அருணே அவள் அருகில் காரைச் செலுத்தினான் . அவள் ஏறியதும் காரை ஓட்டத் தொடங்கினான் . “என்ன ஆச்சு ! அரவிந்த் என்ன செய்தான் . அவன் இன்று கல்லூரிக்குச் சென்று விட்டானே .” என்றாள் . “அவன் என்ன செய்தான் ? ஒன்றும் இல்லையே !” “பிறகு ஏன் என்னை அழைத்தீர்கள்” “சொல்கிறேன்” என்று ஒரு உணவகத்தின் முன் காரை நிறுத்தியவன் “வா, உள்ளே போய்ப் பேசலாம் .”என்றான் . “இப்போது சாப்பாடு ரொம்ப முக்கியமா ?” என்றாள் கோபமாக . “எனக்குப் பசிக்கிறது . வா” என்று காரிலிருந்து இறங்கி உள்ளே செல்ல, வேறு வழியின்றி பின் தொடர்ந்தாள் . இருக்கையில் அமரவும் அவனே ஏதோ ஆர்டர் செய்தான். அவள் முறைப்பதைப் பார்த்து, “சரி விசயத்துக்கு வருகிறேன் . இது அரவிந்தை அனிதாவைப் பற்றி இல்லை . நம்மைப் பற்றி . எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது . என்னைத் திருமணம் செய்து கொள்வாயா ?” என்றான் . அவள் விழிகள் விரிவதைப் பார்த்தான் . முதல் முறை அவனைப் பார்த்தபோது இருந்த ஆச்சரியம் . இல்லை . அதைவிட அதிகம் . அவன் சிரிப்பதைப் பார்த்ததும், அவளுக்கு அவன் பரிகாசம் செய்கிறான் என்று தோன்றிவிட்டது . “உங்கள் ஜோக் எனக்குப் பிடிக்கவில்லை” “ஜோக்கா ! நித்தி, நான் உண்மையாகச் சொல்கிறேன் . நான் உன்னைக் காதலிக்கிறேன்” ஒரு நிமிடம் அவன் முகத்தை ஆராய்ந்தாள் . “ஐ ஆம் சாரி . எனக்கு விருப்பம் இல்லை .” என்று எழுந்தவளைச் சட்டென்று கையைப் பற்றினான் . “ஒரு நிமிடம் உட்கார்” சொல்லிவிட்டு கையை விட்டான் . “காரணம் ?” “உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” “நிச்சயம் இருக்கிறது ! என்னை ஏன் பிடிக்கவில்லை என்று சொல் .” ஒரு கணம் மௌனமாக இருந்தாள் . “நான் வேறு ஒருவரை விரும்புகிறேன்” என்றாள் . சட்டென்று அருண் சிரித்து விட்டான் . “நித்தி ! உனக்குப் பொய் சொல்ல வரவில்லை . முயற்சிக்காதே !” “நான் ஒன்றும் பொய் சொல்லவில்லை .” என்று தலை குனிந்து கொண்டாள் . “ஓகே ! வா போகலாம்” என்று எழுந்தான் . நித்யா இப்போது திரு திரு என்று விழித்தாள் . “வா ! உன்னை வீட்டில் விடுகிறேன்” என்றான் . எதுவும் பேசாமல் அவனைத் தொடர்ந்து சென்றாள் . கார் அருகே சென்றதும்,” நான் போய்க் கொள்வேன் .” என்றாள் . மீண்டும் சிரித்தான் . “கவலைப் படாதே ! உன் வீட்டில் நீ சொன்னது பற்றி நான் எதுவும் சொல்லமாட்டேன் . வா” என்றான் . கார் புறப்பட்டதும், அவன் எதுவுமே நடவாதது போல் மிக அமைதியாக இருந்தான் . ஒரு பெண் அவனை நிராகரித்து விட்டாள் . இவனால் எப்படி இருக்க முடிகிறது என்று அவன் முகத்தைப் பார்த்தாள் நித்யா . ஒருவேளை விளையாட்டுக்காக அப்படிப் பேசினானா ? இல்லை அப்படி இருக்காது . அவன் உண்மையாகவே சொன்னதாகத் தெரிந்தது . ஒருவேளை வீட்டில் சொல்லிவிடுவானோ . அதுவும் செய்யமாட்டேன் என்றானே ! “ரொம்ப யோசிக்காதே ! நீ சொன்ன கதையை நான் நம்ப வில்லை . அவ்வளவுதான் .” என்றான் அவன் . இவள் யோசித்தது அவனுக்கு எப்படித் தெரியும் ! இப்போது நித்யா எதுவும் பேசவில்லை . அவன் வீட்டில் கொஞ்ச நேரம் இருந்து விட்டு வெகு இயல்பாகத் திரும்பிவிட்டான் . நித்யாவுக்குத் தான் ஒன்றும் புரியவில்லை . இது நடந்து இரண்டாவது நாள் அனிதா ஒன்றை ஆரம்பித்தாள் . எல்லோரும் இரவு பேசிக்கொண்டிருக்கையில், “அம்மா ! நான் ஏன் அக்காவை அக்கா என்று கூப்பிடுகிறேன்” என்றாள் அனிதா . “என்ன கேள்வி இது ? பிறகு அக்காவைத் தங்கை என்றா அழைப்பார்கள் ?” என்றாள் நித்யா . “அதில்லை அக்கா ! நீ எனக்கு மாமா மகள் தானே . அப்படி என்றால் உன்னை அண்ணி என்றுதானே அழைக்க வேண்டும் . நான் ஏன் அக்கா என்று அழைக்கிறேன்” நித்யா திகைத்தாள் . இவளுக்கு என்ன ஆயிற்று . இப்போது எதற்கு இந்தக் கேள்வி என்று யோசிக்கும்போது, அருண் சொன்னது நினைவு வர, அனிதாவை முறைத்துப் பார்த்தாள் . இப்போது சாந்தா சொன்னாள்,“நீயாகத்தான் அக்கா என்று அழைத்தாய் .” “நீங்கள் என்னை ஏன் திருத்தவில்லை .” “என்ன திருத்துவது ? வேறு வேலை இல்லை என்றால் போய்த் தூங்கு . அதிகம் பேசாதே !” என்று எரிந்து விழுந்தாள் நித்யா . “அவள்மேல் இப்படிக் கோபப்படுகிறாய் ! அவள் சும்மா ஏதோ கேட்கிறாள்” என்று சுமதி கண்டிக்க, நித்யா, “நான் தூங்கப்போகிறேன்” என்று எழுந்து சென்றாள் . எல்லோரும் படுக்கச் சென்றதும், அனிதா மட்டும் தொலைக்காட்சி பார்க்கப் போவதாகச் சொன்னாள் . ” சீக்கிரம் வந்து படு” என்று சாந்தா சொல்ல, “இன்னும் இரண்டு நாட்கள் . பிறகு வழக்கம்போல் ஓட வேண்டும் . ப்ளீஸ் மா” என்றாள் . “என்னவோ செய் ! அரவிந்த் நீ ?” “ஒரு குறிப்பு எடுக்க வேண்டும் . முடித்துவிட்டுப் படுக்கிறேன்” என்றான் . அன்னை படுக்கச் சென்றதும், வந்து தங்கையின் முன் வந்து தொலைக்காட்சியை மரித்துக்கொண்டு நின்றான் . “எதற்கு அப்படிக் கேட்டாய் ?” என்றான் . “எப்படி ?” “நித்யாவை அழைப்பதைப் பற்றி என்ன புது சந்தேகம்” “அதெல்லாம் ஒன்றும் இல்லை !சும்மா !” “உண்மையைச் சொல் !” என்று தங்கையின் காதைப் பிடித்தான் . “விடு சொல்கிறேன் .”தங்கையின் அருகில் அமர்ந்தான் .”நீ யாரிடமும் சொல்லக் கூடாது ! பிராமிஸ்” என்றாள் . சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு, “ஒருவேளை ! அருண் அண்ணா, நித்யா அக்காவைக் கல்யாணம் செய்து கொண்டால் அண்ணி என்றுதானே அழைக்க வேண்டும் .” என்று சிரித்தாள் . “நம் குடும்பத்தில் எல்லோருக்கும் என்ன ஆயிற்று . எல்லோரும் கண்டபடி கற்பனை செய்கிறார்கள் .” என்று தலையில் அடித்துக் கொண்டான் . “நான் சும்மா சொல்லவில்லை. நீ வேண்டுமானால் அருண் அண்ணாவைக் கேள்” என்றாள் . “என்ன கேட்பது ?” “அண்ணா யாரைத் திருமணம் செய்யப்போகிறார் என்று !” “அதுதான் எனக்குத் தெரியுமே ! கீர்த்தியை” என்றான் . “அதுதான் இல்லை . அருண் அண்ணாவே சென்று கீர்த்தியின் வீட்டில் சொல்லிவிட்டார் . தெரியுமா ?” அரவிந்த் இப்போது ஆச்சரியத்தின் உச்சியில் . நித்யா அன்று வேறு சொன்னாளே . அனிதா மீண்டும் தொடர்ந்தாள், “சித்திக்குக் கூடத் தெரியும் .”. தங்கையை ஆச்சரியமாகப் பார்த்தான் . அரவிந்துக்கு இப்போது ஒரு தெளிவு கிடைத்தது . நித்யாவிடம் பேசும்போது, அருணை மணக்கப் போவதாகக் கீர்த்தி சொல்லி இருக்கிறாள் . அதைப் பிடித்துக் கொண்டாள் நித்யா . ஆனால் அருணுக்கு நித்யாவை தான் பிடித்திருக்கிறது . ஒருவேளை நித்யா அருண் திருமணம் நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் . நித்யாவுக்கு தெரிந்தால் என்ன சொல்வாள் ? அனிதாவிடம் மேலும் விவரமாகக் கேட்டான் . அரவிந்துக்கும் சில நாட்களாகவே கொஞ்சம் குழப்பம் தான் . கீர்த்தியின் போக்கு அரவிந்துக்கும் பிடிக்கவில்லை என்றாலும், அவளும் உறவு என்று எதையும் பெரிது படுத்த வில்லை . ஆனால் அவள் அருணை மணந்து கொண்டால், நிச்சயம் நித்யா சொல்வது போல் இன்னும் உதாசீனப்படுத்துவாள் . அருணுக்கு நித்யாவின் மேல் ஒரு ஈர்ப்பு இருந்தது . ஆனால் ஒரு சமரசத்திற்காக என்று முதலில் எண்ணினான் . அப்படி இல்லை என்று அருணின் செயல்கள் பின்னாளில் தெரிவித்தது . நித்யா, அருண் கீர்த்தி திருமணம்பற்றிச் சொன்னபோது கூட அவன் அதிகம் நம்பிவிட விடவில்லை . நித்யாவும் அருணும் திருமணம் செய்து கொண்டால் இது எதுவும் இருக்காது . இப்போது போல் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கலாம். மறுநாளே இதெல்லாம் நடக்காது என்பதுபோல் நித்யாவின் செயல் இருந்தது . சற்றே தாமதமாக வீட்டுக்கு வந்தாள் அதுவும் உடன் பணி செய்யும் ரவியுடன் . வந்தவள் வெகுநேரம் மீண்டும் தொலைப்பேசியில் பேசத் தொடங்கினாள் . அறையிலிருந்து பார்த்துக் கொண்டு இருந்த அனிதாவுக்குச் சந்தேகம் எட்டிப் பார்த்தது . ஒருமுனை பேச்சு மட்டுமே அவள் கேட்டுக்கொண்டிருந்தாள் . “என்னை ஏன் இப்படிப் பாடு படுத்துகிறீர்கள் ? ஏற்கனவே உங்களுடன் எல்லா ஏற்பாடுகளும் செய்ய உதவி செய்து விட்டேன் . இன்னும் என்ன ?” “காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, இப்படி என்னை டார்ச்சர் செய்கிறீர்கள் ரவி” காதல் என்ற வார்த்தையைக் கேட்டதும் அனிதா முகம் வாடிவிட்டது . ‘நித்யா அக்கா வேறு யாரையோ காதலிக்கிறாளா ?’ . உடனே அரவிந்திடம் சொல்லிவிட்டாள் . அரவிந்த் அதை எளிதில் நம்பி விடவில்லை தான் . ஆனால் நித்யாவின் நடவடிக்கை சில நாட்களாகவே அப்படித்தான் . வெகுநேரம் தொலைப்பேசியில் பேசுவது, நிறையக் குறுஞ்செய்திகள் . எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் அனிதா காட்டிய ஒரு பரிசு . அவள் கப்போர்டில் நித்யா மறைத்து வைத்திருந்த ஒரு பரிசு . இன்னும் பிரிக்கப் படாத ஒரு சிறிய பெட்டி. முதலில் ஏதாவது பரிசுப் பொருள் என்று எண்ணினான் அரவிந்த் . ஆனால் அதிலிருந்த வாக்கியம், “என் வருங்கால மனைவிக்கு” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அரவிந்துக்கு அதிர்ச்சி . நித்யாவுக்கு எப்போதும் வீட்டில் ஒளிவு மறைவு என்று இருந்ததில்லையே ! கல்லூரியில் வந்த காதல் கடிதங்களைத் தந்தையிடமே கொடுத்துவிட்டாள் . “முடியாது என்று விட்டேன் . ஏதும் தொல்லை செய்தால் சொல்கிறேன் !” என்று தைரியமாகச் சொன்னாள் . இப்போது மட்டும் ஏன் மறைக்கிறாள் ? ஒருவேளை இப்போது அவளும் காதலிக்கிறாள் என்பதை வீட்டில் சொல்லத் தயங்குகிறாளா? அனிதா சொன்னதை வைத்துப் பார்த்தால், நித்யா உடன் வேலை செய்யும் ரவியாகத்தான் இருக்க வேண்டும் . அனிதா, வீட்டில் சொல்லிவிடலாம் என்று குதித்தாள் . அவளைப் பொறுமையாக இருக்கும்படி சொல்லிவிட்டு, முதலில் நித்யாவிடம் பேசலாம் என்றான் . எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல், நித்யா விடுமுறையில் வீட்டில் இருப்பதே இல்லை . இரவில் தாமதமாக வருகிறாள் . பெரும்பாலும் அந்த ரவி தான் அவளை வீட்டில் விடுகிறான். அவர்களும் அப்படி ஒன்றும் ரகசியமாகச் செய்யவில்லை . சிலமுறை நித்யாவை விடும்போது அந்த ரவியும் பெரியவர்களிடம் பேசிவிட்டுத் தான் செல்வான் . அப்படி இருக்கும்போது நித்யாவிடம் கேட்கவும் தயக்கமாக இருந்தது. ஆனால் இரண்டு நாட்களுக்கு மேல் நித்யாவிடம் கேட்காமல் இருக்க முடியவில்லை . கொள்முதல் என்று பெரியவர்கள் மூவரும் வெளியே சென்றிருக்க, வழக்கம்போல் கடைக்குள் எதோ செய்துகொண்டிருந்தாள் நித்யா.அவள் போன் அறையில் ஒலிக்க அனிதா எடுத்துப் பார்த்தாள் . அழைப்பு ரவியிடமிருந்து வந்திருந்தது. பேசலாமா வேண்டாமா என்று யோசிக்கும்போது செல் ஒலிப்பது நின்றது . அடுத்த கணமே ஒலிக்கத் தொடங்கியது . இப்போது நித்யா உள்ளே வந்து விட்டாள் . அனிதாவின் கையிலிருந்த போனை வாங்கி பேசினாள் . “ஒரு நாள் கூட என்னை நிம்மதியா விட மாட்டீர்களா ? இப்போது என்ன வேண்டும் ?” என்றாள் நித்யா கோபமாக . “நாளைக்கு நீங்கள் சொன்னது போல் எல்லாம் தயாராக இருக்கும் . போதுமா ?” என்று போனை வைத்துவிட்டு, “இந்தத் தொல்லையிலிருந்து எனக்கு எப்போதுதான் விடுதலையோ என்று தனக்குத்தானே பேசிவிட்டுச் செல்ல, அனிதா மெல்லக் கேட்டாள்,”யார் அக்கா ?” “அதுவா ? என் ஆபீஸ் லூசு” “லூசா? ரவி என்று வந்தது” “அவன்தான். ஒருவாரமாக ஒரே டார்ச்சர் .” என்று மீண்டும் கடைக்குச் சென்று விட்டாள் நித்யா . அனிதா இப்போது பயந்து விட்டாள் . காதலிக்கிறேன் என்று தன் அக்காவை அந்த ரவி தொந்தரவு செய்கிறானா ? நித்யா தைரியமானவள் தான் ஆனால் அனிதாவுக்குப் பயம் தொற்றிக்கொண்டது . பக்கத்து அறையில் படித்துக்கொண்டிருந்த அரவிந்திடம் சென்று எல்லாவற்றையும் சொன்னாள் அனிதா . அரவிந்த் அனிதா அளவுக்குப் பயப்படவில்லை . இனியும் தள்ளிப் போடாமல் நித்யாவிடம் அவள் காதல் பற்றிப் பேசிவிட வேண்டும் என்று முடிவெடுத்தான். மதிய உணவு உண்ண மூவரும் அமரும்போது மெல்ல நித்யாவிடம் பேசினான் அரவிந்த் . “நித்யா ! ஆபீஸில் ஏதும் பிரச்சனையா ?” அவனை வியப்புடன் பார்த்தாள் நித்யா . “ஆஃபீஸிலா !இல்லையே!” “வேறு ஏதும் பிரச்சனையா ?” “ஏன் அப்படிக் கேட்கிறாய் !” “நீ என்னிடம் எதையும் மறைக்கவில்லையே ?” மேலும் ஆச்சரியத்துடன், “என்னைப் பார்த்தால், ஏதோ பிரச்சனையில் இருக்குற மாதிரி இருக்கு ?” “உனக்கு யாரும் தொல்லை கொடுத்தால் சொல்” இப்போது அனிதா சொன்னாள், “மாமாவிடம் சொல்லிவிடலாம் அக்கா!” “என்ன சொல்வது ?” என்றாள் நித்யா . “அதுதான் உன்னை அந்த ரவி லவ் டார்ச்சர் செய்கிறானா !” என்றாள் அனிதா . “லவ் டார்ச்சர் ? ரவியா ? உனக்கு யார் சொன்னது ?” “நீ போனில் பேசும்போது கேட்டேன் !” என்றாள் அனிதா . “எதுவானாலும் சொல்லு ! நான் பார்த்துக் கொள்கிறேன் . நீ அவன் குணம் தெரியாமல் அவனைக் காதலித்திருந்தால் பரவாயில்லை . சீக்கிரம் அவனிடமிருந்து விலகி விடு” என்றான் அரவிந்த் . இப்போது கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினாள் நித்யா .” இருவரின் கற்பனையும் பிரமாதம் ! நான் ரவியைக் காதலிக்கிறேனா ?” என்று மீண்டும் சிரித்தாள் . “சும்மா நடிக்காதே ! நானும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன் . எப்போது பார்த்தாலும் போனில் பேசுகிறாய் ! அடிக்கடி ரவியுடன் வெளியே செல்கிறாய் . அவனும் இங்கே உன்னைவிட வருகிறான் .” என்று அரவிந்த் சொல்லிக்கொண்டே போனான் . அவன் பேசி முடிக்கும் வரை கேட்டுக்கொண்டிருந்த விட்டு,“எல்லாம் சரிதான் . ஆனால் நான் அவரை விரும்பவில்லை . கவலைப்படாதே !” என்றாள் நித்யா . “உன்னை அதற்காக எதுவும் லவ் டார்ச்சர் செய்கின்றனா ?” “ஏய் ! அரவிந்த், அதெல்லாம் ஒன்றும் இல்லை .” “உனக்குக் கிபிட் எல்லாம் கொடுத்திருக்கிறான் ! நீயும் அதை வாங்கி வந்திருக்கிறாய் ! இப்போது ஏன் மறைக்கிறாய் .” மீண்டும் ஒருமுறை சிரித்து விட்டு,“நீ சொல்வதெல்லாம் ஒரு விதத்தில் சரிதான் . ரவி லவ் டார்ச்சர் தான் செய்கிறான் . ஆனால் அவன் என்னைக் காதலிக்க வில்லை . அருணாவைக் காதலிக்கிறான் .” அதற்குள் உணவை முடித்துவிட்டு தட்டை எடுத்துக்கொண்டு சமையல் அறைக்குச் சென்று கொண்டே பேசினாள் நித்யா,“இரண்டும் காதலிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு என்னை டார்ச்சர் செய்கிறார்கள் . இருவரில் யார் சண்டை போட்டாலும் என்னைச் சமாதான தூது அனுப்புகிறார்கள் . முதலில் உன்னிடம் தான் எங்கள் காதலைச் சொல்கிறோம் என்று ஒரு நாள் என்னை மாலுக்கு வரச்சொல்லிச் சொன்னார்கள் . அப்போது சந்தோஷமாக இருந்தது . என் நட்பின் மேல் எவ்வளவு மரியாதை என்று ! அன்றிலிருந்து என்னை இரண்டும் சேர்த்து கொரியர் வேலை செய்ய வைக்கிறார்கள் .” நித்யா பேசிக்கொண்டிருக்க இருவரும் சிரிக்கும் சத்தம் கேட்டது . லேசாக எட்டிப்பார்த்து, “உங்களுக்குச் சிரிப்பாக இருக்கிறது . எனக்குக் கடுப்பாக இருக்கிறது . இதில் அருணாவின் பிறந்தநாளுக்கு ரவி ஊரில் இருக்க மாட்டானாம் . அவளுக்குச் சர்ப்ரைஸ் கொடுக்க, என்னைக் கூட்டிக்கொண்டு ஷாப்பிங் செய்கிறேன் என்று ஒருவாரமாக அலைகிறான் . ஒரே இம்சை . இதில் நீங்கள் என்னவோ புது கதை சொல்கிறீர்கள் . நான் இப்போது சொல்கிறேன் . நான் யாரையேனும் காதலித்தால் முதலில் வீட்டில் சொல்லிவிடுவேன் . யாரிடமும் மறைக்கமாட்டேன் .” “அப்போ அந்த ‘என் வருங்கால மனைவிக்கு’ கிப்ட்டும் அருணாவுக்குத்தானே !” என்றான் அரவிந்த் . “பின்னே ! எனக்கா ?” என்று நித்யா சொல்லும்போது, ‘வருங்கால மனைவியா ?’ என்று வேறு குரல் கேட்டது . சமையல் அறையிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தாள், சோபாவில் அமர்ந்திருந்த அருணை பார்த்து அதிர்ந்தாள் . இவன் எப்போது வந்தான் . கடைக்குள் புகுந்து வந்திருக்க வேண்டும் . வீட்டின் முன் கதவு வழியாக வர வேண்டும் என்றால் பூட்டை திறக்க யாரேனும் சென்றிருக்க வேண்டும் . சத்தமில்லாமல் உள்ள வந்ததும் இல்லாமல், இவர்கள் பேசுவதை வேறு ரகசியமாகக் கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறான் . இந்த அரவிந்தும் அனிதாவும் அருண் வந்ததை கூடச் சொல்லவில்லை . இப்போது நித்யாவுக்கு பெரும் சங்கடமாகிவிட்டது .அருண் திருமணம்பற்றிப் பேசியபோது வேறு ஒருவரைக் காதலிப்பதாகச் சொல்லி விட்டாள் . ஆனால் ‘நான் யாரையும் காதலிக்கவில்லை’ என்று இப்போதுதானே சொன்னாள் . ஒருவேளை கேட்டிருப்பானோ ?நித்யா எப்படிச் சமாளிப்பது என்று யோசிக்கும்போது “அன்று ஒரு கிபிட் இருந்தது அண்ணா ! நானே கொஞ்சம் பயந்துவிட்டேன் . உன்னிடம் சொல்லிவிடலாம் என்று நினைத்தேன் . ஆனால் அரவிந்த் அண்ணா தான் இப்போதைக்குச் சொல்ல வேண்டாம் என்று விட்டான் .” என்று அருணிடம் சொன்னாள் அனிதா . “உன் அண்ணனுக்கு எதற்கு என்னைப் பற்றிச் சொல்கிறாய் !” என்று முறைத்தாள் நித்யா . “அது அப்படித்தான் !” என்றாள் அனிதா . நித்யா மீண்டும் முறைக்க, “முன்பே நீ சொன்னதை நான் நம்பவில்லை .” என்றான் அருண் . அருண் எதைக் குறிப்பிடுகிறான் என்று நித்யாவுக்கு மட்டும் புரிந்தது . “என்ன நம்பவில்லை ?” என்றாள் அனிதா. “அது எங்களுக்குள் இருக்கும் ரகசியம் ! அப்படித்தானே நித்யா” என்றான் அருண் . நித்யா இன்னும் கோபமாக, “இப்போது எதற்கு இங்கே வந்தீர்கள் ?” என்றாள் . “அடடா ! நல்ல விருந்தோம்பல் !” என்றான் அருண் . “அண்ணா ! அக்கா இப்படி எல்லாம் பேசுவது உங்களிடம் மட்டும் தான்” என்றாள் அனிதா . “அதுதான் எனக்குத் தெரியுமே !” என்றான் அருண். “இருவரும் என்ன நினைத்துக்கொண்டு பேசுகிறீர்கள் ! சாப்பிட்டு விட்டீர்கள் என்றால் முதலில் எழுந்து போய்த் தட்டைக் கழுவி வையுங்கள் . உங்கள் அண்ணனுக்கு ஏதேனும் சாப்பிட எடுத்து வாருங்கள் !” என்றாள் நித்யா . “ஏன் அக்கா ! அண்ணாவுடன் நீ தனியாகப் பேசவேண்டுமா ?” என்றாள் அனிதா. நித்யா கோபமாக அவளருகில் ஒரு எட்டு வைக்க, “அனிதா ! அன்றே சொன்னேன் அல்லவா, நீ நித்யாவை அண்ணி என்று அழைக்கப் பழகிக்கொள்ள என்று” என்றான் அருண் . “அருண் ! நான் இதெல்லாம் நடக்காது என்று சொன்னேன் . நீங்கள் இவர்களிடம் எல்லாம் சொல்லி … கொஞ்சமும் நன்றாக இல்லை .” “என்ன நன்றாக இல்லை ? நான் அவர்களிடம் எதுவும் சொல்லவில்லை” என்றான் அருண் . அவள் நம்பாமல் பார்க்கவும், “சத்தியம் .” என்று தலையில் கை வைத்தான் அருண் . “பிறகு அனிதாவுக்கு எப்படித் தெரியும் ?பிறகு ஏன் அனிதா என்னை அண்ணி என்று அழைக்க வேண்டும் என்று யோசிக்கிறாள்” “அவர்களிடமே கேட்பதுதானே !” அரவிந்தை பார்க்க, “எப்போதோ யூகித்தேன் . அனிதா சொன்னதுடன் உறுதியாகத் தெரிந்தது .” என்று அரவிந்த் சொல்ல, “எப்போது யூகித்தாய் ?” அருண் கேட்க, “திருவிழாவுக்கு மதுரை வரும் முன்பு” என்று அரவிந்த் சொல்ல, “என் தம்பி மிகவும் புத்திசாலி” என்று அவனைத் தழுவிக்கொண்டான் அருண் . இருவரும் சிரிக்க,“உங்களுக்கு விளையாட்டாக இருக்கிறதா ?” என்றாள் நித்யா . “நீதான் அப்படி நினைக்கிறாய் ! என்ன செய்தால் நம்புவாய்” “என்னை நம்ப வைக்க நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை . என்னை நீங்கள் தொல்லை செய்யாமல் இருங்கள் போதும் .” அவள் அருகில் வந்து நின்று, “கீர்த்தி உன்னிடம் என்ன சொல்லி இருந்தாலும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்! அவள் சிறு பெண் . தெரியாமல் பேசிவிட்டாள் . அதை நினைத்துக் கொண்டு நீ குழம்ப வேண்டாம் . அதைத் தவிர வேறு காரணங்கள் இருந்தால் சொல். நாம் பேசலாம் .” மெல்ல அரவிந்த் அனிதாவை அங்கிருந்து அழைத்துச் சென்று விட்டான் . “இப்போது சொல்” என்றான் அவன் . “எனக்குச் சொல்ல ஒன்று இல்லை”. நித்யாவின் கைகளை அவன் கைகளில் ஏந்திக்கொண்டு,” கீர்த்தி உன்னை மனம் நோகும்படி பேசிவிட்டாள் என்று எனக்குத் தெரியும். என்ன பேசி இருப்பாள் என்று கூடத் தெரியும் . நம் இருவர் இடையில் அவள் யார் ? அவள் சொன்னதெற்கெல்லாம் நீ என்னிடமிருந்து விலகுவதா? நான் என்ன நினைக்கிறேன் என்று உனக்கு ஒரு முறை கூடப் புரியவில்லையா?” என்று மிக அருகில் வந்து நின்றான் . நித்யாவுக்கு சிலமுறை தோன்றியதுதான் . அதுவும் மதுரை திருவிழாவிற்கு வரவே அதிக நேரம் இல்லை என்றவன், இவளை அழைத்துக்கொண்டு மேகமலை சென்றபோது மனதில் பட்டது . ஆனால் அது தங்கைக்காக என்று ஒதுக்கினாள். கையில் அடிபட்டபோது மருந்திட்டதும், அவளுக்கு மாத்திரை கொடுக்கப் பாடுபட்ட போதும், வேறு யாருக்காவது இப்படிச் செய்வானா ? என்று தோன்றியது . மேகமலையிலிருந்து திரும்பி வரும்போது நித்யாவை முன்புறம் அவனுடன் அமரவைத்தது மட்டுமல்லாமல், ஓயாமல் அவளுக்கும் பிடிக்கும் வண்ணம் பேசிக்கொண்டே வந்தான் . பெரிதாகக் கற்பனை செய்யக் கூடாது என்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தாள் . ஆனால் கீர்த்தி அவளிடம் பேசியது, நித்யாவுக்கு பெரும் அவமானத்தைத் தந்துவிட்டது . அருணிடமிருந்து விலகி இருக்க தொடங்கினாள் . என்றாலும் முற்றிலும் முடியவில்லை . அவன் பேசும்போது எல்லாம் மறந்து அவனுடன் பேசத் துடித்த மனதை சிரமப்படுத்தான் கட்டுப்படுத்தினாள் . அதுவும் அவன் காதலிப்பதாகச் சொல்லும்போது கூட, கீர்த்தி சொன்னது நினைவுவரை, அவர்கள்மிடையில் இவள் வந்துவிட்டாளோ என்று தான் தோன்றியது . இப்போது அருண் அருகில் நின்று நம்மிடையில் வேறு யாரும் இல்லை என்று சொல்லும்போது, மனம் வானத்தில் தான் பறந்துகொண்டிருந்தது . ஆனால் உணர்ச்சி வசப்படக் கூடாது என்று மனதை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றாள். “அப்படியானால் உன் வீட்டில் பேசச் சொல்லட்டுமா ?” “நான் இன்னும் சம்மதம் சொல்லவில்லை !” “ஓகே. எப்போது சொல்வாய் ?” “உங்களுக்கு என்னை ஏன் பிடித்திருக்கிறது ?” “காரணம் சொன்னால், அதற்காக மட்டும் என்று தோன்றும் .” “நிறைய சினிமா பார்ப்பீர்களோ !” “கொஞ்சம்!” “எனக்குச் சினிமா வசனம் வேண்டாம் .” மெல்ல சிரித்துவிட்டு, “பார்த்தவுடன் காதல் என்று சொல்லமாட்டேன் . முதல் முறை உன்னிடம் ‘என்னைத் தொடராதே’ என்று பேசிவிட்டேன். நீயும் சென்றுவிட்டாய் . ஆனால் அதன் பின் என்னை ஆச்சரியமாகப் பார்க்கும் கண்களை நான் தேட தொடங்கினேன் . பலமுறை அதே லிபிட்ல் செல்வேன் . என் பெரியப்பா குடும்பத்தைத் தேடும்போது உன்னைப் பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை . உன்னுடன் பழக வாய்ப்புகளைத் தேடி தேடி அமைத்துக்கொண்டேன் . நீ தான் விலகி ஓடினாய். அரவிந்த் ஒருமுறை சொன்னான்,’ நான் பேசியதை நீ அவமானப்படுத்துவதாக எண்ணுகிறாய் என்று . அதுவரை நான் அப்படி நினைக்கவில்லை .” “பிறகு அன்று நீங்கள் பேசியதன் பொருள் என்ன ?” இடையில் நித்யா கேட்க, “இதற்கு முன்பே விளக்கம் கொடுத்தேனே . அது ஒரு நிராகரிப்பு . அதுவும் ஒருவேளை நீ என்னை விருப்புகிறாயோ என்று எண்ணி சொன்னது .நிராகரிப்பது அவமானம் என்று நினைக்கமாட்டாய் தானே !” அவள் பதில் சொல்லாமல் வேறுபுரம் பார்க்க, “அப்படி நினைத்தாலும் பரவாயில்லை . நீயும் என்னை நிராகரித்தாய் . கணக்கு நேராகி விட்டது .” என்றவன் அவள் பேசாது நிற்கவும், “இன்னும் வேறுதுவும் கேட்க வேண்டுமா ?” சற்று தயங்கியவாறு கேட்டாள் “கீர்த்தியுடன் உங்கள் கல்யாணம் ?அவள் என்னிடம் என்னவெல்லாம் பேசி…என்று தயங்கியவள்,”அது முக்கியமில்லை . கீர்த்தியும் அவள் அன்னையும் வேறு ஆசைப்படுகிறார்கள் . உங்களுக்கும், கீர்த்திக்கும் … “மீண்டும் தயங்கினாள் நித்யா “எனக்கு எப்போதும் அதில் விருப்பம் இல்லை . நான் மட்டும் இல்லை, என் வீட்டில் யாரும் எங்கள் இருவரின் திருமணத்தை யோசித்ததில்லை . அம்மாவுக்கு உன்னை மிகவும் பிடித்திருக்கிறது .” “உங்கள் வீட்டில் சொல்லிவிடீர்களா ?” என்று ஆச்சரியமாய் பார்த்தாள் . “எங்கே சொல்வது ! உன் சம்மதம் இல்லாமல் நான் யாரிடமும் இதைப் பற்றிப் பேசக் கூடாது என்று நினைத்தேன் .” மீண்டும் அவனை இடை மறித்து, “பிறகு எப்படி அனிதாவுக்கு தெரியும் ?” என்றல் நித்யா . “நான் மீண்டும் சொல்கிறேன் . நான் யாரிடமும் இதுபற்றிச் சொல்லவில்லை . ஆனால் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது . அதுதான் எனக்குப் புரியவில்லை . எப்படி என்றால் யூகித்தேன் என்கிறார்கள் . இதில் இன்னொரு கொடுமை என்ன தெரியுமா ?” என்று நிறுத்தினான் . “என்ன ?” “கீர்த்திக்கு கூட என் காதல் தெரிந்திருக்கிறது.” “அவள் நான் உங்களை மயக்கியதாக நினைக்கிறாள் . காதலிப்பதாக அல்ல .” “நான் உன்னிடம் மயங்கியது உண்மைதானே !” “அவள் சொல்வதின் மறைமுக அர்த்தம் . இருவர் எண்ணத்திற்கும் பெரிய வேறுபாடு இல்லை .” “நிறைய இருக்கிறது ! நீ என்னை மயக்கினாய் என்று நான் சொல்லவில்லை . நான் மயங்கினேன் என்று தான் சொல்கிறேன் . இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது . நான் உன்னை விரும்புகிறேன் என்று கீர்த்தி உணர்ந்திருக்க வேண்டும் . உன்னை ஒதுங்கிச் செல்ல வைக்க, கடினமான வார்த்தைகளைச் சொல்லி இருக்கிறாள் . உனக்கு மட்டும் நான் வாய் திறந்து சொல்லியும் என் மனம் புரியவில்லை .” “இப்படி உங்களைப் புரிந்து கொள்ளாத ஒரு பெண்ணை ஏன் மணக்க விரும்புகிறீர்கள் ?” சற்று நேரம் நித்யாவை பார்த்துக்கொண்டிருந்தான் . அவனை மடக்கி விட்டோம் என்று அவள் பெருமிதப்படும் முன், “நீ என்னைப் புரிந்துகொள்ளவில்லை என்பதை விட நான் . அதனால் தான் உன்னை மணக்க விரும்புகிறேன் .” இப்போது நித்யாவுக்கு வியப்பு . இவன் அப்படி என்ன புரிந்து கொண்டான் . கேட்டும் விட்டாள் . “ஒரு குடும்பத்தில் மிக முக்கியம் அன்பு பாசம் அத்துடன் அனுசரணை . ஒருவரை ஒருவர் அனுசரித்து போவது . எல்லோரிடமும் அன்பும் பாசமும் இருக்கும் . ஆனால் சில சந்தர்ப்பங்களில் ஒருவரை ஒருவர் அனுசரித்து போவதில்லை . அதுவே அன்பு குறைய காரணமாகி விடும் . ஆனால் உங்கள் வீட்டில் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை .எனக்குத் தெரிந்தவர்களில் உன் பெற்றோரும் சரி, நீயும் சரி அரவணைப்பதிலும் அனுசரிப்பதிலும் மிகச் சிறந்தவர்கள் .” “நீங்கள் நினைக்கும் அளவுக்கு, நாங்கள் அப்படி ஒன்றும் செய்து விடவில்லை.” “செய்தது ஒன்றும் இல்லை என்கிறாய் பார், அதனால் தான் உன்னை மிகவும் பிடித்திருக்கிறது .” என்று அவள் கரங்களை அவன் கரங்களுக்குள் வைத்துக்கொண்டான் . கைகளைப் பின்னிழுத்தவள், “ரொம்ப ஐஸ் வைக்கிறீர்கள் . முகத்திற்கு முன் புகழ்பவர்களை நம்பவே கூடாது .” என்று சோபாவில் அமர்ந்தாள் . அவனும் அவளை ஒட்டியே அமர்ந்தான் “ஓ ! அப்படியானால் உன்னைப் பற்றி வேறுசில உண்மைகளைச் சொல்கிறேன் . உனக்கு உன் பெற்றோர்கள் அளவுக்குப் பொறுமையும், பக்குவமும் இல்லை .” “அவர்களுக்கு வயது நாற்பதுக்கு மேல் .” “ஹ்ம்ம் தெரியுமே ! ஆனால் பெரியம்மா உங்கள் வீட்டுக்கு வரும்போது உன் அம்மா உன் வயதில் தான் இருந்திருப்பார். அவருக்கு அப்போது இருந்த பக்குவம் உனக்கு இப்போது இல்லை. சரிதானே !” நித்யாவின் பார்வை கூர்மை அடைய, “கொஞ்சம் கோவக்காரி ! கொஞ்சம் இல்லை பெரிய கோவக்காரி . அப்புறம் இன்னும் சொன்னால் அடித்து விடுவாயோ என்று தோன்றுகிறது . இருந்தாலும் முக்கியமான ஒன்று, வெகுபுத்திசாலி என்று எண்ணிக்கொண்டு அவ்வப்போது அசட்டுத்தனமாய் நடந்து கொள்வாய் .” சொல்லிக்கொண்டே அவளிடமிருந்து சற்றே தள்ளி அமர்ந்து அவளைப் பார்த்தான் . அதற்குமேல் என்ன பேச வேண்டும் என்று நித்யாவுக்கு தெரியவில்லை . எழுந்துவிட்டாள் . “ஒன்றும் சொல்லாமல் கிளம்புகிறாயே ? சந்தேகங்கள் தீர்ந்ததா ? இன்னும் கேள்விகள் இருக்கிறதா ?” “ஒன்றும் இல்லை .” “அப்படியானால் உன் வீட்டில் பேசி விடலாம் . திருமணம் உடனே வைத்துக் கொள்ளலாம் தானே !” “நான் இன்னும் சம்மதமே சொல்லவில்லை . அதற்குள் திருமணத்திற்குப் போய்விட்டீர்கள் !” “அது தான் சொன்னானே உன்னை எனக்கு நன்றாகத் தெரியும் என்று !” “என்ன தெரியும் ? நான் முன்பு சொன்ன காரணங்கள் இப்போதும் சொல்கிறேன் .” என்றவளை மேலே பேசவிடாமல், “நானும் முன்பே சொன்னேன் ! நீ சொன்னதை நான் நம்பவில்லை என்று . நேற்று என்னைப் பிடிக்கவில்லை என்று சொல்லிருந்தால் கூட நம்பி இருப்பேன் . நமக்குள் நடந்த விஷயங்கள் அப்படி ! இப்போது அதையும் நம்ப மாட்டேன் .” “ஏன் ?” “பிடிக்காமல் தான் என்னிடம் இத்தனை விளக்கம் கேட்டாயா ? உன்னைப் பிடிக்கவில்லை போடா! என்று சொல்லிவிட்டுக் கிளம்பி இருக்க மாட்டாய் ?” அவன் சொல்வதெல்லாம் உண்மைதான் . அவனைப் பிடிக்காமல் போக என்ன காரணங்கள் இருக்க முடியும் . வேறு பெண்ணை அவன் மணக்க இருக்கிறான் என்ற ஒன்றை மட்டும் வைத்துத்தான் அவள் ஒதுங்கிச் சென்றாள். ஒரு வேளை கீர்த்தி அன்று அப்படிப் பேசாமல் இருந்திருந்தால் இருவரும் இயல்பாகவே பழகி இருப்பார்கள் . அவள் சிந்தனை எங்கெங்கோ சென்று கொண்டிருக்க, “உன் வீட்டில் அம்மா அப்பா பேசுவார்கள் . உன்னிடமும் அம்மா பேச வேண்டுமாம் .நான் இங்கே இருப்பதாய் சொல்லவில்லை .உன் போனுக்கு அழைப்பார்கள்.” அதற்குள்ள ! எப்படி ? அவனைப் பார்த்தாள் . தீவிரமாக அவன் செல்லில் குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருந்தான் . அவள் அவன் போனையும் அவனையும் மாறி மாறிப் பார்க்க, என்ன என்பதுபோல் புருவத்தை உயர்த்தி கேட்டான் . “மெசேஜில் எல்லாம் சொல்லிவிட்டீர்களா ?” என்றாள் . சிரித்துக்கொண்டே, அவள் கையில் அவன் போனை கொடுத்து,” நீயே பார் .” என்றான் . அவள் கையில் கொடுத்த நேரம் போனின் திரை இருண்டு விட்டது . அவள் அதையே பார்த்துச் சிரிக்க, “இருந்த திரையில் என்ன தெரிகிறது என்று சிரிக்கிறாய் ?” என்று மீண்டும் செல்லை வாங்கி மீண்டும் குறுஞ்செய்திகளைத் திறந்து காட்டினான் . நித்யா அதைப் பார்க்கவில்லை . அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள் . அதன் பிறகு வேறென்ன ! இருவரின் திருமணம் விரைவிலேயே நிச்சயம் ஆனது. FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.