[] 1 ஈழம் - வந்தார்கள் வென்றார்கள் [] ஜோதிஜி. திருப்பூர் மின்னஞ்சல் : powerjothig@yahoo.com வகை : வரலாறு வெளியீடு : த. ஸ்ரீனிவாசன் http://FreeTamilEbooks.com மின்னஞ்சல் : tshrinivasan@gmail.com ஈழம் - வந்தார்கள் வென்றார்கள் ஜோதிஜி. திருப்பூர் வெளியீடு : http://FreeTamilEbooks.com ஈழம் - வந்தார்கள் வென்றார்கள் Copyright © 2013 This book was produced using PressBooks.com. 2 உரிமை [Creative Commons License] This ebooks is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US You are free to: - Share — copy and redistribute the material in any medium or format - - The licensor cannot revoke these freedoms as long as you follow the license terms. Under the following terms: - Attribution — You must give appropriate credit, provide a link to the license, and indicate if changes were made. You may do so in any reasonable manner, but not in any way that suggests the licensor endorses you or your use. - NonCommercial — You may not use the material for commercial purposes. - NoDerivatives — If you remix, transform, or build upon the material, you may not distribute the modified material. - No additional restrictions — You may not apply legal terms or technological measures that legally restrict others from doing anything the license permits. 3 காணிக்கை []   ஈழத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்த்தப்பட்ட அடக்குமுறைகளில், உருவாக்கப்பட்ட கலவரங்களில், நடத்தப்பட்ட போரில் தங்கள் உடைமைகள், உயிர் இழந்த ஒவ்வொரு தமிழ்ச் சொந்தங்களுக்கும் இந்த நூலை காணிக்கையாக்குகின்றேன். Contents - ஈழம் - வந்தார்கள் வென்றார்கள் - உரிமை - காணிக்கை - டாலர் நகரம் - Main Body - அறிமுகம் - அகதியா? அவலமா? - பாகம் ஒன்று - 1. வந்தார்கள் வென்றார்கள் - 2. சர்வதேச கழுகுகள் - 3. இலங்கைக்கு நடந்தே போயிடலாம் - 4 மூத்த குடிப் பெருமை - 5. இனக்குழுக்கள் - 6. எடுத்தவர்களும் கொடுத்தவர்களும் - 7. சிங்கம் புணர்ந்து வந்தவர்கள் - 8. சிங்களர்களும் தமிழர்களும் - 9. வந்தவர்களும் வீழ்ந்தவர்களும் - 10. வெந்து தணிந்தது தீவு - 11. மன்னர்களும் மாட்சிமை தாங்கியவர்களும் - 12. பச்சைத்தீவு - 13. பரதேசியின் கதைக்களம் - 14. கண்ணீர்த்தீவு - பகுதி இரண்டு - 1. தூங்காத ரா (RAW) வுகள் - 2. ராஜிவ் ஜெயவர்த்னே ஒப்பந்தம் தொடக்க ரகஸ்யங்கள் - 3. இந்திய அமைதிப்படை(IPKF) வேரும் விழுதுகளும் - 4. பிரபாகரன் பொதுக்கூட்டம் - 5. அமைதிப்படை தொடக்கமும் நடுக்கமும் - 6. காந்திய பாதையில் அழிவுப்படை - 7. தொடங்கியவரும் இழந்தவர்களும் (IPKF) - 8. பேனா போர் கொஞ்சம் அவலம் - 9. அமைதிப்படை(IPKF) உருவாக்கிய பாதை - 10. அமைதி வெடியும் ஆறுமாதமும் - 11. விடாது துரத்திய கருப்பு முள்ளிவாய்க்கால் வரைக்கும் - 12. வழங்கிய முனிவர் வாங்கிய பிரபாகரன் - பகுதி - முன்று - 1. விதி ராஜீவ் மதி பிரபாகரன் - 2. ராஜீவ் படுகொலை புலனாய்வு பாதை - 3. சிவராசன் தணு மற்றும் பலர் - 4. சிவராசன் உருவாக்கிய ஐவர் கூட்டணி - 5. வெறியின் வெற்றி சிதறிய ராஜீவ் காந்தி - 6. ராஜீவ் என்றொரு சதை துணுக்குகள் - 7. சிவராசன் வலைபின்னல் - 8. நாகபட்டிணம் இராமேஸ்வரம் வழி டெல்லி - 9. சிவராசன் சுபா கூட்டணி அதிரடிப்படை இறுதிக்கட்டம் - பகுதி - நான்கு - 1. தயாநிதி மாறன் -- மலையாய் மாறிய (ஸ்பெக்ட்ரம்) அலை - 2. சீனாவின் பொருளாதார அடியாள் ஆனந்தகிருஷ்ணன் - 1 - 3.சீனாவின் பொருளாதார அடியாள் -- 2 - 4. சீனாவின் பொருளாதார அடியாள் 3 - 5. முற்றுகைக்குள் இந்தியா --1 - 6. முற்றுகைக்குள் இந்தியா 2 - 7. முற்றுகைக்குள் இந்தியா 3 - 8. முற்றுகைக்குள் இந்தியா -- 4 - 9. ரத்தச் சகதியின் காலடித் தடங்கள் 1 - 10. ரத்தச் சகதியின் காலடித் தடங்கள் 2 - 11. ராஜாதி ராஜா மகிந்த ராஜா - 12. சீனா -- முத்துமாலை திட்டம் - 13. சீனாவின் கண்பார்வையில் இந்தியா - 14. ராஜபக்ஷே அல்வா வியாபாரி - 15. ராஜபக்ஷே மகா கெட்டிகாரர் - பகுதி ஐந்து - 1. வேலுப்பிள்ளை பிரபாகரன் - 2. வேலுப்பிள்ளை பிரபாகரன் பதில்கள் - 3. வேலுப்பிள்ளை பிரபாகரன்--தமிழீழம் என்றொரு பிரதேசம் - நன்றி - Free Tamil Ebooks எங்களைப் பற்றி 4   [] [] எல்லா கருத்துகளும் நூல் ஆசிரியருடையவையே. [pressbooks.com] Main Body அறிமுகம் வணக்கம். ஜோதிஜி என்ற பெயரில் ‘தேவியர் இல்லம்’ என்ற வலைபதிவில் 2009ஆம் ஆண்டு முதல் எழுதி வருகின்றேன். தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி என்ற ஊருக்கு அருகே உள்ள கிராமத்தில் பிறந்த நான் கடந்த 1992முதல் தொழில் நகரமான திருப்பூரில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றேன். ஆய்த்த ஆடைகள் ஏற்றுமதி தொழிலில் இருக்கின்றேன். எனது தளத்தில் தமிழர்கள், தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகள், எனது திருப்பூர் வாழ்வியல் குறித்த அனுபவங்கள் குறித்து பல கட்டுரைகள் எழுதிக் கொண்டு வந்த போது 2009 ஆம் ஆண்டு நடந்த ஈழ நான்காம் கட்ட போருக்குப் பின் விடுதலைப்புலிகள் இயக்கம் குறித்து, அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்து தமிழ்நாட்டில் வந்த ஏராளமான புத்தகங்களை வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு புத்தகத்திலும் எழுதியவர் அவரவர் திறமைகளைக் காட்டியிருந்தார்கள். குறிப்பாக வணிக ரீதியாக அந்த புத்தகங்கள் அதிகம் விற்பதற்கான சாத்தியக்கூறுகளை உருவாக்கியிருந்தார்கள். இந்த சமயத்தில் ஈழம் குறித்து அதிகம் தெரிந்து கொள்ள ஆர்வம் எற்பட பல நூறு புத்தகங்களை படிக்க வாய்ப்புகள் உருவானது. நான் தொழில் ரீதியான எழுத்தாளர் அல்ல. ஆனால் நான் படித்த புத்தகங்கள் வாயிலாக நான் அறிந்த ஈழம் குறித்த விபரங்களை தவறாமல் என் வலைபதிவில் எழுதிக் கொண்டே வந்தேன். பல தரப்பட்ட விமர்சனங்கள் எனக்கு கிடைத்தது. இதன் காரணமாக மேலும் மேலும் நான் வாசித்த பலதரப்பட்ட புத்தகங்கள் மூலம் என்னளவில் சில புரிதல்களை உருவாக்கிக் கொண்டேன். ஆனால் என் வலைபதிவில் நான் ஒவ்வொரு தொடர் தொடங்கும் பொழுதும் அதனை வாசித்தவர்கள் இதனை புத்தகமாக கொண்டு வரப் போகின்றீர்களா? என்று கேட்டனர். ஆனால் வரலாறு என்பது மிகவும் கவனமாக கையாளப்படவேண்டிய ஒன்று. அதன் தகுதிகள் எனக்கு இருப்பதாக தெரியவில்லை. இதுவரையிலும் நான் ஈழத்திற்குச் சென்றதும் இல்லை. மேலும் தங்களின் தனிப்பட்ட வணிக லாபத்திற்காக ஈழத்தை வைத்து செயலாற்றியவர்கள் போல எனக்கு செயல்பட வேண்டும் என்று தோன்றாத காரணத்தால் திருப்பூர் குறித்து நான் எழுதிய “டாலர் நகரம்” நூல் ஸ்விஸ்சர்லாந்தில் இருந்து செயல்படும் இணையதளமான http://www.4tamilmedia.com/குழுமத்தின் சார்பாக திரு. மலைநாடன் அவர்களின் நேர்த்தியான கைவண்ணத்தின் மூலம் எனது முதல் படைப்பாக வந்தது. எனக்கு அதன் மூலம் பாராட்டுகளும் அங்கீகாரமும் கிடைத்தது. விகடன் குழுமத்தின் மூலம் அது அனைவர் கையிலும் போய்ச் சேர்ந்தது. நம்மால் இனி எழுத முடியும் என்ற நம்பிக்கை வந்த பின்பு நான் வலைபதிவில் எழுதியுள்ள ஈழம் சார்ந்த கட்டுரைகளில் உள்ள முக்கிய பதிவுகளை கட்டுரைகளாக இந்த மின் நூலில் மாற்றி உங்களின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளேன். இது முழுமையான ஈழ வரலாறு அல்ல. ஆனால் இந்த நூலை முழுமையாக வாசித்து முடிக்கும் பொழுது உங்கள் மனதில் உள்ள ஈழம் சார்ந்த பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். இன்று வரையிலும் தமிழ்நாட்டில் ஈழம் குறித்து முழுமையாக அறிந்தவர்களின் எண்ணிக்கை வெகு சொற்பமே. ஆனால் ஒவ்வொருவரும் அவரவர் அறிந்து வைத்துள்ள விபரங்களின் அடிப்படையில் ஈழம் சார்ந்த பிரச்சனைகளைப் பற்றி பேசும் மூன்று கேள்விகளை எழுப்புகின்றனர். பிழைக்கப்போன இடத்தில் இவர்கள் ஏன் உரிமை கேட்கின்றார்கள்?. ஏன் ராஜீவ் காந்தியை விடுதலைப்புலிகள் கொன்றார்கள்? 2009 ஆம் ஆண்டு நடந்த ஈழப் போரில் ஏன் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் வெல்ல முடியவில்லை? இதை மட்டுமே மையமாக வைத்து இந்த மின் நூலை உருவாக்கியுள்ளேன். மீண்டும் சொல்கின்றேன். நான் தொழில் முறை எழுத்தாளர் அல்ல. எழுதியவற்றில் வரலாற்றுப் பிழைகள் இருக்கலாம். முடிந்தவரைக்கும் நான் வாசித்த பலதரப்பட்ட புத்தகங்களை, எதிர்மறை, நேர்மறை கருத்துக்களை ஆதாரமாகக் கொண்டு அதன் அடிப்படையில் எழுதி உள்ளேன். இதற்கு மேலாக தமிழ்நாட்டில் ஒவ்வொரு காலகட்டத்திலும் நான் வாசித்த பத்திரிக்கைச் செய்திகளின் அடிப்படையிலும் இந்த கட்டுரைகளை எழுதியுள்ளேன். உங்கள் புரிதலை அவசியம் எனக்குத் தெரியப்படுத்துங்கள். எழுத்துப்பிழைகள் இருந்தால் அது என்னுடைய தவறாக எடுத்துக் கொள்ளுங்கள். எழுதியவற்றில் தவறு ஏதேனும் இருக்குமானால் தயை கூர்ந்து என் மின் அஞ்சல் வாயிலாக எனக்குத் தெரியப்படுத்துங்கள். பலருக்கும் கொண்டு சேர்க்க உதவுங்கள். இந்த கட்டுரைகளில் உள்ள பலவற்றை பல இடங்களில் படித்து இருக்கலாம். பலவற்றை செவி வழிச் செய்தியாக கேள்விப்பட்டு கூட இருக்கலாம். ஆனால் இவற்றை எவராவது ஆவணப்படுத்துவார்களா? என்ற எண்ணம் உங்களுக்கு உருவாகியிருக்கக்கூடும். அந்த எண்ணமே என்னுள்ளும் இருந்தது. எனக்கு இதனை ஆவணப்படுத்தி வைத்து விடலாம் என்று உழைக்க வைத்தது. எவ்வித லாபநோக்கமின்றி நான் ஈழம் சார்ந்து கற்றதையும் பெற்றதையும் மின் நூலாக மாற்றி உங்களுக்குத் தந்துள்ளேன். இந்த மின் நூல் உருவாக காரணமாக இருந்த என் நண்பர் திரு. சீனிவாசன் (FreeTamilEbooks.com)அவர்களுக்கு என் நன்றி. நான் வலைபதிவில் எழுதத் தொடங்கிய காலம் முதல் இன்று வரையிலும் என் மேல் தனிப்பட்ட அதிக அக்கறை கொண்ட நண்பர் திரு. இராஜராஜன் எனது ஈழம் சார்ந்த தேடலுக்கு தேவைப்பட்ட பலதரப்பட்ட புத்தகங்களை என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பதை ஒரு கடமையாகவே வைத்திருந்தார். அவருக்கு எங்கள் தேவியர் இல்லத்தின் அன்பையும் பிரியத்தையும் இங்கே எழுதி வைக்க கடமைப்பட்டுள்ளேன். வாழ்க வளமுடன். நட்புடன் ஜோதிஜி திருப்பூர் 19.12.2013 மின் அஞ்சல் முகவரி powerjothig@yahoo.com வலை தள முகவரி http://deviyar-illam.blogspot.in/ -0o0- அகதியா? அவலமா? ஒவ்வொரு முறையும் இலங்கையில் பிரச்சனை, கலவரங்கள், கோரங்கள் என்று தினசரிகளில் வாசித்து முடிக்கும் போது அப்போது எனக்கு உடனடியாக நினைவுக்கு வருகின்றவர்கள் என்னுடன் ஆரம்பப் பள்ளியில் படித்த என் ஈழ நண்பர்களே. 1980 ஆம் ஆண்டு தான் பல நண்பர்கள் எனக்கு அறிமுகமானார்கள். ஈழத்தில் நடந்த கலவரங்களினால் அங்கிருந்து இந்தியாவிற்கு வந்து பல இடங்களில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். நான் வாழ்ந்த கிராமத்திற்கு அருகே பலரும் வந்து சேர்ந்திருந்தனர். இன்று வரையிலும் என் பழைய நண்பர்களை நினைத்துக் கொள்வதுண்டு. ஒவ்வொரு சமயத்திலும் தமிழ்நாட்டு பத்திரிக்கைகளில் ஈழத்தில் நடந்த போர்களைப் பற்றி செய்திகளாக வரும் பொழுது இவர்களின் மனோநிலை எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்ப்பதுண்டு. எத்தனை வருடங்கள் என்றாலும் அவர்களின் “தொப்புள் கொடி உறவுகள்” குறித்து நினைத்துப் பார்ப்பார்களா? அங்கு தங்கள் சொந்தங்கள் எப்படி இருப்பார்கள்? என்ற பதைபதைப்பு அவர்களிடம் இருக்குமா? என்று யோசிப்பதுண்டு. ஆனால் நான் படித்த பள்ளியின் தொடக்க வகுப்புகளில் ஒரு நாள் திடீர் என்று பசங்களும் பொண்ணுகளும் திமுதிமுவென்று அத்தனை பெஞ்சுகளிலும் வந்து ஆக்ரமித்தனர். நல்ல உயரமும் வேகமான பேச்சும் இருந்த காரணத்தால் தேர்வு ஏதும் இல்லாமலே வகுப்புத் தலைவர்கள் ஆனார்கள். அவர்களின் தமிழ் உச்சரிப்பு மட்டும் சற்று வித்தியாசமாக இருந்தது. நானும் அவர்களின் கூட்டணியில் கலந்து விட்ட பிறகு எனக்கு சுவாரசிய பள்ளிப் பருவமாக அமைந்தது. அவர்கள் உருவாக்கும் கற்பனை காட்சிகள், எம்.ஜி.ஆர் திரைப்பட சாகசங்கள் அத்தனையும் சேர்த்து என்னை அவர்களின் பின்னால் செல்ல வைத்தது. அவர்கள் அத்தனை பேர்களுக்கும் அன்று எம்.ஜி.ஆர். தான் கடவுள். சிவாஜியைப்பற்றி பேசினால் பிடறி பேந்து விடும். அன்று அவர்கள் அத்தனை பேருக்கும் எம்.ஜி.ஆர். ஆதர்சன கடவுளாக ஏன் இருந்தார்? என்பது எனக்கு அன்று புரியவில்லை. இன்று மொத்த இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வியலில் மக்கள் திலகத்தின் பங்களிப்பு குறித்து அறிந்து கொண்ட பிறகு ஆச்சரியமாக உள்ளது. என் அம்மா திடீரென்று ஒருநாள் என்னிடம் கேட்டார். எங்கு பார்த்தார்கள்? எப்படி தெரிந்து கொண்டார்கள் எனக்குத் என்பதெல்லாம் தெரியாது? ” என்னடா இலங்கை அகதிகள் அதிகமாக பள்ளிக்கூடத்தில் வந்த சேர்ந்து இருக்கிறார்கள் போல”? என்று கேட்ட போது கூட இலங்கை சம்மந்தபட்ட விசயங்கள் எதுவும் புரியவில்லை. எப்போதும் போல இலங்கை என்றால் அப்துல் ஹமீது, ராஜா, திரைப்பாடல்களின் தொகுப்பு, நல்ல தமிழ், கரகரப்பு இல்லாத அலை சேவை என்று மிக உயர்வான எண்ணத்தில் வாழ்ந்த காரணமும் ஒன்று. கல்லூரி படிப்பு முடித்து, திருப்பூர் வந்து சேர்ந்தேன். ஏற்றுமதி துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது கணினி தொடர்பு வழியே திடீர் என்று ஈழத்தமிழர்கள் உள்ளே வரும் போது அவர்கள் அறிமுகம் செய்து கொள்வதற்கு முன்னே அவர்களின் ஆழகான தமிழ்ப் பெயர்கள் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதை உணர வைத்துவிடும். காரணம் அந்த மாதிரியான தமிழ் பெயர்கள். தமிழ்நாட்டில் தமிழர்கள் நினைத்தே பார்க்க முடியாத தமிழ். ஈழத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் நடந்த அலங்கோல வாழ்க்கை தந்த பயத்தில் பரிதாபமாய் தமிழ்நாட்டிற்கு வந்த என் நண்பர்களின் குடும்பம் இன்றைய சிவகெங்கை புதுக்கோட்டை மாவட்டத்திறகு நடுவில் கோடு பிரிக்கும் இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு அரசு வசிப்பிடம் அமைத்து கொடுத்து இருந்தது. அதனை தொடக்கத்தில் காலணி என்று அழைத்தார்கள். பிறகு சுதந்திரபுரம் என்று பெயர் மாறியது. அத்தனை பேர்களிடமும் காலணி என்றால் அடிக்க வருவார்கள். குறுகிய காலத்தில் அதற்கு சுதந்திரபுரம் என்று பெயர் சூட்டி இன்று பேரன் பேத்தி கூட நாற்பது வயதிற்குள் பெற்று பலரும் தாத்தவாக மாறியுள்ளனர். எங்கும் போக விருப்பம் இல்லாமல் அதே இடத்தில் இன்று வரையிலும் உழன்று கொண்டுருக்கிறார்கள். எங்கள் வகுப்பிற்கு தலைவனாக இருந்த வை.சிதம்பரத்தை ஒவ்வொரு முறையும் ஊருக்குச் செல்லும் போது பார்ப்பேன். “என்னப்பா? எப்பவாவது உன் தாத்தா ஊரை நினைத்து பார்ப்பதுண்டா” ? என்று கேட்பேன். அவன் எங்கள் ஊரில் உள்ள அரிசி ஆலைகளிலிருந்து அரிசி வாங்கி தமிழ்நாட்டில் உள்ள பல ஊர்களுக்கு அனுப்பிக் கொண்டிருப்பவன். ஊரில் இருந்து அரிசி லோடு ஏற்றி திருப்பூருக்கு அனுப்ப ஆவணங்களை சரி பார்த்துக்கொண்டுருந்தவன், “திருப்பூரில் நாலு கடை தெரிஞ்சா அறிமுகப்படுத்துடான்னா இப்படி போட்டு அறுத்து எடுக்கிறியே” ? என்றான். இன்று அரிசியுடன் மரக்கட்டை தொழிலும் செய்து கொண்டு இருக்கின்றான். ஊர்ப்பக்கம் உள்ள காடுகள் மற்றும் யூகப்லிட்ஸ் மரங்களை மொத்தமாக விலைபேசி அவற்றை கட்டைகளாக மாற்றி லாரியில் பல ஊர்களுக்கு அனுப்பிக் கொண்டும் இருக்கின்றான். குத்தகைகாரராக நடுத்தர வர்க்க வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருக்கின்றான். நான் குறிப்பிட்ட சிதம்பரம் மட்டுமல்ல. எனக்குத் தெரிந்த நூற்றுக்கணக்கான ஈழத்தில் இருந்து வந்த இளைஞர்கள், பழக்கத்தில் இல்லாத அந்தப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அத்தனை பேர்களும் அவர்களின் தினந்தோறும் உண்டான வாழ்க்கை போராட்டத்தில் தான் கவனம் கொண்டு வாழ்ந்து இருக்கின்றார்கள். எங்கள் ஊரில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளில் தான் ஒவ்வொரு குடும்பத்தினரும் பணிபுரிந்தனர். தொடக்கத்தில் இந்த அரசி ஆலைகள் அவர்கள் அத்தனை பேர்களுக்கும் வருமானம் தந்து கொண்டிருந்தது. இன்று நவீன சாதனங்கள் உள்ளே வந்து அத்தனை அரிசி ஆலைகளும் வெளிநாட்டு இறக்குமதி சாதனங்கள் மூலம் சரக்கு வாகனங்களில் ஆயிரக்கணக்கான அரிசி மூட்டைகளை தினந்தோறும் பல ஊர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். பலருக்கும் வேலை குறைந்து கிடைத்த வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். “மாடர்ன் ரைஸ் மில்” என்ற நவீன சித்தாந்தம் அவர்களின் வாழ்க்கையையும் அழ வைத்துக்கொண்டு இருக்கின்றது. ஊரில் இருந்து நான்கு மைல்கள் தூரத்தில் அவர்கள் வாழ்ந்த சுதந்திரபுரம் இருந்தாலும், அதிகாலையில் அவசர அவசரமாக வந்து ஆலைகளுக்கு முன்னால் வரிசையில் நிற்பதும், அன்றாட வேலையில் தன்னை, தங்களை தேர்ந்தெடுக்க பேசிக் கொண்டுருப்பதையும் பார்க்கும் போது அவர்கள் கதைத்த கதைகள் கண்ணீர் வாழ்வியலாக எனக்குத் தெரியும். ஆனாலும் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் பெரிதாக இல்லை. காரணம் பெரிதான ஆசைகளும் இல்லை. அதே சுதந்திரபுரத்தில் இன்று எல்லா நடிகர்களுக்கும் ரசிகர் மன்றம் இருக்கிறது. அவர்களின் மொத்த வாழ்க்கை முறைகளும் மாறிவிட்டது. பிறக்கின்ற குழந்தைகளின் பெயர்களும் மாறிக்கொண்டே வந்து இன்று த்ரிசா தொடங்கி ஸ்ரீ யில் முடிகின்றது. மூன்று வேளையும் நிம்மதியாக உணவு கிடைக்காதா? என்று ஏங்கும் வாழ்க்கை அமைந்தவர்கள் எங்கே போய் வாழ்வுரிமையைப் பற்றி யோசிக்க முடியும்? இவர்கள் வாழ்க்கை பரவாயில்லை. ஆனால் தமிழ்நாட்டில் அகதிகள் முகாம் என்ற பெயரில் தினந்தோறும் உள்ளே வெளியே என்று ஆட்டம் காட்டிக்கொண்டுருக்கும் அதிகார வர்க்கத்தின் நடவடிக்கைகளினால் தினந்தோறும் நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் எத்தனையோ முகம் தெரியாத ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரம் குறித்து எவர் சிந்திக்க முடியும்? ஈழத்தில் உள்ள தமிழர்களின் அழிவுக்கு அங்கே உள்ள ஆட்சியாளர்கள் தான் காரணமெனில் தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்தவர்களுக்கு கால் நூற்றாண்டு காலம் ஆன போதிலும் நல்லதொரு வாழ்க்கையைக் கூட அமைத்துக் கொடுக்க இங்குள்ள ஆட்சியாளர்களுக்கு மனம் இல்லாமல் இருப்பது தான் கொடுமையின் உச்சம். எந்த நீதிமன்றத்தில் போய் முறையிட முடியும்? தமிழ்நாட்டுக்குள் வாழ்ந்து கொண்டுருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட ஈழத் தமிழரின் சார்பாளனாகத் தான் சிதம்பரத்தைப் பார்க்கின்றேன். வாழ்க்கையின் நிதர்சனத்திற்காகவே இதை குறிப்பிடுகின்றேன். இவர்களும் அட்டைப் புழுவாகவே வாழ பழகிக்கொண்டனர். சர்வதேச அளவில் அகதிகளின் ஓப்பந்தத்தில் இன்று வரையிலும் இந்தியா கையெழுத்து இடாமல் இழுத்துக் கொண்டு வந்து கொண்டுருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. காரணம் என்ன? இந்தியாவில் திபெத்தில் இருந்து வந்தவர்கள் ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் ஈழத்தமிழர்களுக்கு மட்டும் இயல்பான வாழ்க்கை கூட அமையவில்லை. அரசியல், திரை உலகம், எழுத்தாளர்கள், பத்திரிக்கை உலகம், பதிவு உலகம் என்று ஐந்து முனைகளும் ஈழப் பிரச்சனையை பற்றி அவரவருக்கு உண்டான காரண காரியங்களோடு, அக்கறையோடு, அக்கறையின்மையோடு அணுகிக்கொண்டு இருந்தாலும் இன்று வரையிலும் எந்த நம்பிக்கை முனையும் ஈழத் தமிழர்களுக்கு கிடைத்தபாடில்லை. தமிழர்களிடத்தில் ஒற்றுமையில்லை. ஒன்றுபடவில்லை. விடுதலைப்புலிகள் நடத்திய ஆயுதப்போராட்டம் என்பதை மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கும், ஈழத்தை குறிவைத்து தங்களின் வணிக லாபத்திற்கு கழுகு பார்வை பார்த்துக் கொண்டிருக்கும் சர்வதேச நாடுகளைப் பற்றியும் இந்த கட்டுரைகளின் வாயிலாக சில தகவல்களாவது உங்களால் தெரிந்து கொள்ள முடியும் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. ஏன்? என்ன காரணங்கள்? யார் பின்னால் உள்ளவர்கள்? வெளியே தெரியாதவைகள் என்ன? புரிய வைத்தது என்ன? இந்த ஐந்து புரியாத பூதங்களைப் பற்றி தெரிந்து கொள்ள பயணிப்பதே இதன் நோக்கம். []     பாகம் ஒன்று 1. வந்தார்கள் வென்றார்கள் மே 16 2009. ஜோர்டான் நாடு. இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே, உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஜோர்டான் நாட்டில் இருந்தவருக்குக் கிடைத்த செய்தி அவர் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி. ஒரு வேளை இது உண்மைதானா? என்று பலமுறை கேட்டு உறுதிபடுத்தி இருக்கலாம். தன்னுடைய சகோதரர் கோத்தபய ராஜபக்ஷேவை நம்பாமல் இருக்க முடியுமா? இலங்கை முப்படைகளின் முதன்மை பொறுப்பில் இருந்து கொண்டு வழிகாட்டிக்கொண்டு பாதுகாப்பு செயலாளராகவும் இருப்பவர். அவருடைய கண் அசைவில் நடத்தப்பட்டுக் கொண்டுருந்த இறுதி ராணுவ நடவடிக்கையின் முடிவு ஜோர்டான் நாட்டில் இருந்த அதிபர் ராஜபக்ஷேவுக்குத் தெரிவிக்கப்படுகிறது. எல்லாவகையிலும் உறுதிபடுத்தப்பட்ட பிறகு இறுதியில் அங்கிருந்தேபடியே அறிக்கை விட்டார். “இறுதியாக விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள். விடுதலைப்புலிகளிடமிருந்து முழுமையாக விடுதலையான நாட்டிற்கு நான் நாளை திரும்புகிறேன்” #-#-# மே 17 2009. கொழும்பு சர்வதேச விமான நிலையம். தான் பயணித்து வந்த விமானத்தின் படிக்கட்டுகளில் இருந்து இறங்கியவர் முழுங்காலிட்டு மண்ணைத் தொட்டு வணங்கி, வெற்றிப் பெருமிதத்துடன் கூடியிருந்தவர்களைப் பார்த்த பார்வை முற்றிலும் புதிதானது. இதுவரைக்கும் ஆண்டு விட்டுச் சென்ற பத்து பிரதமர்களுக்கோ, நான்கு அதிபர்களுக்கோ கிடைக்காத வாய்ப்பு. அப்போது ராஜபக்ஷே பார்த்த பார்வை என்பது “தீவிரவாதத்தில் இருந்து நாட்டை மீட்டெடுத்து விட்டேன்”. புரிந்தவர்களுக்குத் தெரியும் அது சர்வதேசத்திற்கான அழைப்புமணி. இதற்காக இவர் உழைத்த உழைப்பு அசாதாரணமானது, காரணம் மே 2009க்கு முன் 33 மாதங்கள் படிப்படியாக உழைத்த உழைப்புக்குக் கிடைத்தது இந்த வெற்றி, ஈழ நான்காம் யுத்தம் என்று சொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் கூடிய யுத்தம் முடிவுக்கு வந்து இருந்தது. கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக, தமிழர் – சிங்களர் என்ற இரண்டு இனங்களுக்கு இடையே நடந்து கொண்டுருந்த அரசியல் போராட்டங்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, இனி எப்போதும் இலங்கை என்பது “சிங்களர்களின் தேசம் ” என்பதைச் சொல்லாமல் சொல்லியது. மகிழ்ச்சி என்ற வார்த்தைக்கு மேலே வேறு எந்த வார்த்தைகளாவது இருக்குமா? என்று மனதிற்குள் யோசித்தபடி அவரின் வாகன வரிசைகள் கொழும்புக்குள் அணிவகுத்துச் சென்றது. #-#-# மே 18 2009. அமைதிக்குள் பேரமைதி பரப்புரைகளும் வதந்திகளும் இறக்கை இல்லாமலேயே பறந்து கொண்டிருந்தது; வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்த செய்திகள். உறுதிப்படுத்துபவர்கள் எவரும் இல்லை. அதிபர் மாளிகை உருவாக்கி இருந்த மயான அமைதி சர்வதேச தமிழர்களை வாழ்ந்த நாடுகளில் அணி திரள வைத்தது. அவர்களின் கண்ணீர், கூக்குரல், கோரிக்கைகள் எல்லாமே வெறும் வேடிக்கைப் பொருளாக, ஊடக செய்தியாக மட்டும் இருந்தது. #-#-# மே 19 2009 சர்வதேசத்திற்கான சமிக்ஞை உரை அதிமேதகு மகிந்த ராஜபக்ஷே பாராளுமன்றத்தில் தனது உரையைத் தொடங்கினார். இலங்கை ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் வாங்கிய பின்பு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமர் சேனநாயகா போலவே தமிழில் தான் ராஜபக்ஷேவும் தனது உரையைத் தொடங்கினார். இலங்கையின் எதிர்க்கட்சியான (Sri Lanka Freedom Party) சுதந்திர கட்சியின் மூன்றாம், இரண்டாம் கட்ட தலைவர் பதவிகளில் இருந்து படிப்படியாகத் தன்னை வளர்த்து, எதிர்பாராத அதிர்ஷ்ட திருப்புமுனையில் அதிபராக உள்ளே வந்தவர் தான் மகிந்த ராஜபக்ஷே. அதிபராக இருந்த சந்திரகா குமாரதுங்காவின் ஒத்துழைப்பு இல்லாத போதும் கூடத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர். சந்திரிகாவின் நம்பிக்கையைப் பெற்றிருந்த வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அந்த வாய்ப்பு தமிழர் என்பதால் மறுக்கப்பட்டது. அவர் பெயர் லஷ்மணன் கதிர்காமர். அவர் அமர வேண்டிய பதவியைத் தட்டிப்பறித்து உள்ளே வந்த ராஜபக்ஷே இன்று சிங்கள மக்களில் ஆதர்ஷ்ண கடவுள்.   [] அப்போது அறிவித்த அவரின் பாராளுமன்ற உரை இலங்கை வாழ் மக்களுக்கானது அல்ல. “சர்வதேச வியாபார சமூகமே நீங்கள் இனி தயக்கம் இல்லாமல் உள்ளே வரலாம். இலங்கை என்பது இனி இரண்டே இனத்தால் ஆனது. ஒன்று இலங்கையை நேசிக்கும் இனம். மற்றொன்று வெறுக்கும் இனம்”. அரசியல்வாதிகளுக்கே உரிய வார்த்தை ஜாலங்களுடன் அவரது நீண்ட உரையை முடித்த போதும் அத்தனை பேர்களும் ஆவலுடன் எதிர்பார்த்த வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. அது தான் ராஜபக்ஷே அரசியல். எதைச் சொல்ல வேண்டும். அதையும் எப்போது சொல்ல வேண்டும் என்பதை உணர்ந்தவர். ஆனால் சிங்கள மக்களைப் பொறுத்தவரையிலும் அன்றைய நாள் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த கொண்டாடித் தீர வேண்டிய விடுமுறை தினம். ஆரவாரங்கள். வீதியெங்கும் திருவிழா. அசைத்துக்கொண்டு செல்ல அரசாங்கத்தின் சார்பாக வழங்கப்பட்ட, சிங்கக்கொடிக்குக் கூடக் கொழும்புவில் வாழ்ந்த தமிழ் வியாபாரிகள் தான் தேவையாய் இருந்தார்கள். கொழும்புவில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகம் தான். கதவை மூடிக்கொண்டு வீட்டின் உள்ளே முடங்கிக் கிடந்தாலும் கதவைத்தட்டி வீதிக்கு வரவழைக்கும் சிங்கள இனவாதிகளின் கொண்டாட்ட தினத்தைப் பார்க்கும் துணிவில்லாமல் பயத்தோடு தான் இருந்தார்கள். நிதி வசூல் என்று தொடங்கி ஆர்ப்பாட்டத்துடன் அவர்கள் கொண்டாடினர். அநீதியாய் முடிக்கப்பட்ட ஒரு இனத்தின் வாழ்வுரிமைப் போராட்டங்களைப் பற்றி வெகுஜன சிங்கள மக்களுக்கு எதுவும் தெரியாது. இன்றும் தமிழர்களின் பிரச்சனைகளை உண்மையாக உணர்ந்த எத்தனையோ சிங்களர்கள் உள்ளே வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். தமிழனத்தைப் போலவே இவர்களும் திருவாளர் பொதுஜனமே. இவர்களை மந்த புத்தியாகவும் கொடூர இனவாத எண்ணம் உள்ளவர்களாகவும் மாற்றி வளர்த்தவர்கள் சிங்களத் தலைவர்கள் மட்டுமே.. “இது சிங்களர்களின் தேசம். சிங்களர்கள் மட்டுமே ஆள வேண்டிய தேசம்”. இவ்வாறு சொல்லி மக்களை வெறியூட்டி வாக்கு கேட்டு வந்தவர்களும், கடந்த காலத்தில் உருவாக்கிய பல இனக்கலவரங்களுமாய் மாறி மாறி ஒவ்வொருவரும் ஆட்சியில் வந்து அமர்ந்ததும், அவர்களால் நடத்திக்காட்டிய இனவாத அரசியலில் இன்றைய தினம் ராஜபக்ஷேவின் பங்கு. அதற்கு உறுதிப்படுத்தும் விதமாக நடந்த எத்தனையோ கொண்டாட்டங்களில் இன்று நடப்பது மொத்தத் இலங்கை வரலாற்றிலும் முக்கியமான விழா. ஈழ நான்காம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர இலங்கை அதிபருக்கு ஆதரவுக்கரம் நீட்டி வெளியேயிருந்து பயமும் படபடப்புமும் பார்த்துக்கொண்டுருந்த சர்வதேச சமூகத்திற்கு இப்போது நிம்மதி பெருமூச்சு. இனி “பயங்கொள்ளத் தேவையில்லையடி பாப்பா” என்று பாடலாம் போலிருந்தது. காரணம் கொடுக்கப்பட்ட ஆயுதங்களும், வழங்கப்பட்ட பயிற்சியும், அக்கறையாய் நடத்திக்காட்டிய பயிற்சி வகுப்புகளுக்கும் உண்டான பலன் இன்று நல்ல முறையில் முடிந்துள்ளது. இலங்கைக்குக் கொடுக்கப்பட்ட கடன்களுக்கு ஈடுகட்டும் விதமாக உள்ளே கடைவிரிப்பை நடத்தியாக வேண்டுமே? சீனாவின் பின்னால் போகாதே என்று இந்தியாவும், இந்தியாவை விடத் தவணை முறையில் உங்கள் இடத்திலேயே வந்து ஆயுதங்களைக் கொண்டு வந்து தருகின்றேன் என்ற சீனாவும் வெளியே நின்று கொண்டு இருக்கிறது. இரு நாடுகளும் முண்டியடித்துக்கொண்டு செய்த உதவிகளைப் பெற்ற ராஜபக்ஷே மற்றச் சிங்கள தலைவர்களைக் காட்டிலும் அதிர்ஷ்டக்காரர் தான். பாகிஸ்தான், ரஷ்யா, இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் என்று நேச நாட்டு கூட்டணியுடன் இந்தியப் படைகள் ஒவ்வொரு வேலையைச் செய்து முடிக்க முடிவுக்கு வந்தது ஈழ நான்காம் யுத்தம். அதிபர் பாராளுமன்றத்தில் உரையாற்றிய, மே 19 2009 உடன் ராஜராஜசோழன், சங்கிலி மன்னன், பண்டார வன்னியன், வழித்தோன்றல்களை ரத்தமும் சதையுமாகப் பிய்த்து நிலமெங்கும் ரத்தமாக மாற்றி விட்டார்கள். எத்தனை பேர்கள் இறந்தார்கள்? எப்படி இறந்தார்கள்? எல்லாவற்றுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டும் தான் காரணமா? வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் இருந்த இயக்கத்தை அழிக்க இத்தனை நாடுகள் உள்ளே வர வேண்டிய தேவை தான் என்ன? ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றது முதல் இலங்கையென்பது “சிங்களர்களின் நாடு” என்று பல பேர்கள் கனவு கண்டார்கள். இதற்காகவே தங்களை இனவாத தலைவர்களாக மாற்றி எந்த அளவிற்கு இலங்கையின் சரித்திர பக்கங்களைக் கேவலமாக மாற்ற முடியுமோ அந்த அளவிற்கு வாழ்ந்த ஒவ்வொரு ஆட்சியாளர்களும் வாழ்ந்து காட்டினார்கள். தங்களையும் பலிகொடுத்தும் அப்பாவி பொதுமக்களையும் பலியாக்கி, உணராமலேயே அடுத்தவருக்கு வழிகாட்டியாய் வாழ்ந்து முடித்து இருந்தனர். வாழ்ந்த அத்தனை பேர்களும் இலங்கை என்ற நாட்டின் தேச அரசியல் தலைவராக மட்டும் இருந்தவர்கள். ஆனால் இன்று சாதித்துக் காட்டி சர்வ தேசத்தையும் தனக்குச் சாதகமாக மாற்றிய அதிபர் மகிந்த ராஜபக்ஷே இன்று சிங்களர்களுக்கு மாமன்னர். அப்படித்தான் இறுதிக்கட்ட போருக்குப் பின் நடந்த வெற்றிவிழா கொண்டாட்டத்தின் போது புத்த பிக்குகள் அதிபரை வரவேற்று உயரிய சிங்கள விருதளித்துப் பேசினார்கள். “மகாசேனனும், துட்டகை முனுவும் செய்யாததை நமது மாமன்னர் ராஜபக்ஷே செய்துவிட்டார்” காலசக்கரத்தை சற்று பின்னோக்கி திருப்பி விடலாம். தொடர்வோம்……..       2. சர்வதேச கழுகுகள் 3. இலங்கைக்கு நடந்தே போயிடலாம் இலங்கை சுதந்திரம் பெற்றதும் முதல் பிரதமராகப் பதவியில் அமர்ந்த சேனநாயகா உருவாக்கிய அரசாங்கத்தை நடத்திக் கொண்டுருந்தவர்கள் அப்போது வாழ்ந்து கொண்டிருந்த தோட்ட முதலாளிகளும், வெள்ளை துரைமார்களுமே ஆகும். ஆனால் அப்போது கட்சி ரீதியாக உள்ளே இருந்த கம்பூனிஸ்ட்டுகளும், தமிழ் தலைவர்களும் பதவியில் இருந்தார்களே தவிர வெள்ளையர்களும் அவர்களின் சார்பாளர்களும் தான் ஆட்சியை நடத்திக் கொண்டு இருந்தனர். இவர்களுக்குப் பதவி ஒரு பொருட்டல்ல. மேற்கித்திய நாடுகளுக்கு அன்றும் இன்றும் என்றும் செயல்படுத்திக்கொள்ள வேண்டிய ஆட்கள் மட்டுமே போதுமானது. அதுவே தான் இன்று ராஜபக்ஷே அரசாங்கம் வரைக்கும் தொட்டு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. சிங்கள இனவாதம், தமிழர் சிறுபான்மை போன்ற வார்த்தைகளெல்லாம் வியாபாரிகளுக்குத் தெரியவேண்டிய அவசியமில்லை, இவர்கள் உருவாக்கும் சர்வதேச அரசியலும் அதன் கொள்கைகளும் சாதாரணப் பொதுமக்களுக்குத் தெரிந்தால் என்ன தெரியாவிட்டால் தான் என்ன? [] சுதந்திரம் பெற்ற போது இருந்த 33 சதவிகித தமிழர்கள் சிறு புள்ளியாக மாற்றப்பட்டனர். இனக்கலவரத்திற்குப் புதிய அத்தியாயம் வகுத்துக்கொடுத்தவர் பின்னால் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்த்னே ஆவார். அவர் ஆட்சியை பிடித்த போது முதல் தடவை பிரதமராகவும் இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்த போது அதிபராகவும் இருந்து உருவாக்கிய ஆட்டம் மொத்தமாக இன்று முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைகளும், ஆயுதம் ஏந்தி போராடியவர்களின் ’தனித் தமிழீம்’என்பதும் ஏன் இன்று சூன்யமாய்ப் போய் முடிவு தெரியாமல் நிற்கிறது. இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் உருவான இனவாத சிங்கள அரசியலின் இன்றைய வயது 200 ஆண்டுகள். அனாரிகா தர்மபாலா 1810 அன்று உருவாக்கிய சிறு புள்ளியது. அதுவே இன்று படிப்படியாக வளர்ந்து வந்தது. ஒவ்வொருவரும் ஆட்சிக்கு வரும் போது தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளச் செய்யப்பட்ட ஒவ்வொரு காரியங்களுக்குப் பின்னாலும் பாதிக்கப்பட்டது தமிழினமே. “இலங்கை என்பது தமிழர் சிங்களர் இருவரும் சேர்ந்து வாழ வேண்டிய நாடு. நாம் அனைவரும் சேர்ந்து ஆங்கிலேயர்களை வெளியேற்ற வேண்டும்” என்பதற்காக முதல் தலைமுறை தமிழ் தலைவர்கள் போராடினார்கள். அரசியல் அரிச்சுவடியை தமிழர்களிடத்தில் பெற்றுக் கற்றுக்கொண்ட சிங்களர்களே இறுதியில் தங்களை ஈழத்தின் மண்ணின் மைந்தர்களாகவும், தாங்கள் மட்டுமே ஈழத்தை ஆட்சி செய்ய வேண்டியவர்களாகவும் மாற்றிக் கொண்டனர். அன்று முதல் இன்று வரைக்கும் தமிழர்களால் புரிந்து கொள்ளப்பட முடியாத ஒன்றாகவே இந்த அரசியல் இருக்கின்றது. ஆனால் இலங்கை ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற பொழுது சிங்கள தலைவர்கள் தங்கள் தந்திரங்களால் பலரையும் விலைக்கு வாங்கினர். விலைக்கு வாங்கப்பட்ட தமிழ் தலைவர்களை வைத்தே முதல் அரசாங்கத்தை உருவாக்கினார் சேனநாயகா. சேனநாயகா காட்டிய வழி இது. தொடக்கத்தில் சிங்கள தலைவர்கள் வாய் வார்த்தைகளாக இனவாதத்தை வளர்த்துக் கொண்டுருந்தார்கள், அப்போது ஆதரவு கொடுத்த தமிழ் தலைவர்களை வைத்தே கடைசியில் அதிகாரபூர்வமாகச் சட்டமாக உருவாக்கினார்கள். சட்டம் உருவாக உதவி புரிந்த தமிழ்த் தலைவர்கள் முரண்பட்டு பிரிந்து நின்றார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனி கணக்கு. ஜீஜீ பொன்னம்பலம், தந்தை செல்வா வரைக்கும் அரசியல் சக்தியாக வளர்ந்தார்கள். தமிழ் மக்கள் கொடுத்த வாக்குகளையும், பெற்ற பாராளுமன்ற பதவிகளையும், ஆதரவுகளையும் சிங்களர்களுக்கே தாரை வார்த்தார்கள். சிங்கள தலைவர்கள் வசதியாக அமர்ந்து கொண்டார்கள். குனிய வைத்து குத்தவும் செய்தார்கள். குனிந்து இருந்த போதும் கூட வெட்கப்படாமல் கையேந்தி பார்த்தார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் இறுதியில் ஜெயித்தது சிங்களர்களின் தந்திர அரசியலே. இலங்கையின் தேச அரசியல் போய் இன்று சர்வதேச அரசியலாக மாறி விட்டது. இன்று சர்வதேச அரசியலே பிரதான பங்காகி இலங்கையை நாகரிக பிச்சைக்கார நாடாக மாற்றி உள்ளது. அதனால் என்ன? விரும்பியபடி 3000 ஆண்டுகள் பாரம்பரியமுள்ள ஒரு இனத்தையே அழித்து முடித்தாகி விட்டது. பௌத்த நாட்டைச் சிங்களர்கள் ஆண்டால் என்ன? சீனா ஆண்டால் என்ன? மொத்தத்தில் இலங்கை என்பது தமிழர்களுக்கான நாடல்ல. இலங்கைக்குள் இருந்த சிங்கள தமிழர் அரசியல் என்பது மாறி சீனா அரசியல், இந்தியா அரசியல் என்று தொடங்கி உலக அரங்கில் பாவமாய் நிற்கும் பாகிஸ்தான் அரசியல் வரைக்கும் உள்ளே நுழைந்து இந்தக் குட்டித் தீவை கெட்டியாகப் பிடித்து வைத்து இருக்கிறது. இயல்பாகவே உணர்ச்சி பெருக்கில் உலகமெங்கும் வாழும் தமிழனத்திற்குச் சர்வதேச அரசியலின் வலை பின்னல்களை குறித்து இந்த சமயத்திலாவது உணர்ந்தே ஆகவேண்டும். சராசரி பார்வை கொண்டவர்கள் விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தை வெறுப்பதைப் போல “சொர்க்க தேசம்” என்று பண்டைய தமிழ் இலக்கியங்கள் வர்ணித்த இந்த ஈழத்திற்குள் ஏன் இத்தனை தீராத பிரச்சனைகள்.? காபிக்கொட்டையும், பச்சை தேயிலைச் செடிகளுமாய்ப் பசுமையாய்ப் போர்த்தியிருந்த இந்த இலங்கைத் தீவை இன்று கண்ணிவெடி சூழ்ந்து இரண்டு இனங்களையும் கதற வைத்துள்ளது. நாம் இவற்றை முழுமையாக அறிய ஈழ வரலாற்றுப் பக்கங்களை பின்னோக்கி பாரபட்சம் இல்லாமல் பார்க்க வேண்டும். அதன் மூலம் இனவாத அரசியல் உருவாக்கிய பாதைகளும், கிடைத்த வாய்ப்புகளை நழுவ விட்ட மொத்த தமிழ் தலைவர்களையும் நாம் புரிந்து கொள்ள முடியும். [] ஒற்றுமையில்லாமல் வாழும் எந்த இனத்திற்கும் இறுதியில் கிடைக்கும் அடிமை வாழ்க்கையை அப்போது தான் நாம் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும். ஆனாலும் அருகில் உள்ள இந்தக் கண்ணீர்த் தீவுக்கு ஒரு காலத்தில் நடந்தே போயிடலாம்ன்னு சொன்னா நீங்க நம்புவீங்களா? தொடர்வோம்………………. 4 மூத்த குடிப் பெருமை மொத்த இந்தியர்களுக்கும் இந்திய வரைபடத்தின் கீழே இருக்கும் குமரி முனையை முக்கியமானது. அதைப் போலவே, தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம், மொத்த இந்துக்களுக்கும் ஒரு நம்பிக்கை முனை. இலங்கை தமிழனத்திற்கு இந்த நூற்றாண்டின் மறக்க முடியாத முள்ளிவாய்க்கால் போல் வாழ்ந்த மொத்த நூற்றாண்டு காலத்திலும் மற்க்க முடியாத இடம் இராமேஸ்வரத்தில் உள்ள மண்டப முகாம். வாழச் சென்ற இலங்கைக்கு வழி அனுப்பிய இடமாகவும், வாழ்க்கையைத் தொலைத்து வந்து இறங்கிக் கொண்டிருபவர்களுக்கு வரவேற்கும் இடமாகவும் இருக்கும் இந்த இராமேஸ்வரம் போல் வேறு எந்த இனத்திற்கும் ஒரு இடம் இருக்குமா? என்பது சந்தேமே. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் உருவான பஞ்சத்தில் வாழ வழியில்லாமல் போனவர்களின் காலடித்தடங்களைப் பதிவு செய்து கொண்டதைப் போலவே வந்து இறங்குபவர்களின் அவலங்களையும் உள் வாங்கிக்கொண்ட இந்தக் கடல் அலைகள் வந்து மோதும் இராமேஸ்வரம் விஞ்ஞானக் கால மாற்றத்தில் ரொம்பவே மாறியுள்ளது.. ஆனால் எந்தக் கால மாற்றமும் இலங்கைத் தமிழர்களின் அவல வாழ்க்கையையும், அவர்களின் வாழ்வுரிமைப் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வரவில்லை. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக முடிவு இல்லாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து இலங்கைத்தீவை நோக்கி நகர்ந்தவர்கள், அங்கேயே தலைமுறையாய் வாழ்ந்தவர்கள் என அத்தனை பேர்களும், ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டங்களிலும் பாதி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இன்று வரையிலும் இங்கே வந்து இறங்கிக்கொண்டேயிருக்கிறார்கள். இந்தியாவில், தமிழ்நாட்டில் 1980க்கு முன் நீங்கள் பிறந்து இருந்தால் இலங்கையில் இருந்து ஒலிபரப்பான தமிழ் திரை இசை பாடல்களைக் கேட்டுக்கொண்டு சிறிய செய்திகளாக வந்து கொண்டுருந்த இந்த இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டங்களை படித்து இருக்கலாம். காலப்போக்கில் துண்டு துண்டாகச் சிதைக்கப்பட்ட தமிழர்களின் உடம்பை ரத்தமும் சதையுமாகத் தாங்கி வந்த ஊடகச் செய்திகள் மொத்தமும் உங்களை உருக்குலைத்துருக்கும். அன்றும் இன்றும் தமிழ்நாட்டில் இது வெறும் செய்திகள் மட்டுமே. ஆனால் தங்களது வாழ்க்கையை, சொந்தங்களை, சொத்துக்களை இழந்து வந்தவர்கள், வல்லத்தில், படகில்,தோணியில் வரும் போதும் தண்ணீரில் மூழ்கி இறந்தவர்கள், சுடப்பட்டு இறந்தவர்கள் என்று எத்தனையோ கண்களுக்குத் தெரியாத சோகங்கள் இன்று வரைக்கும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.. [] உருவான நவீன விஞ்ஞான மாற்றத்தில், மனித உரிமை என்ன என்பதே தெரியாமல் இன்று வரை தமிழ்நாட்டின் கரையை நோக்கி வந்து கொண்டிருக்கின்றார்கள். வாழப்போன இடத்தில் வாழ்வாதார உரிமைகள் மறுக்கப்பட்டு அகதியாகவும், வாழ்க்கையைத் தேடி வந்த தமிழ்நாட்டிலும் அகதியாகவே மாற்றம் பெற்ற இவர்களின் கண்ணீர் எந்தத் தெய்வங்களுக்கும் எட்டவில்லை? செய்திகள், அறிக்கைகள், போராட்டங்கள் என்று தொடங்கி, தொடர்ந்து வந்த இறுதிக்கட்ட தாக்குதலான முள்ளிவாய்க்கால் (மே 2009) கோரச்சுவட்டின் இறுதியில் வந்து நிற்கிறது. ஆனால் ஏதோ ஒரு வழியில் இன்னமும் தொடர்ந்து கொண்டுருக்கத்தான் போகின்றது.. ஒரு இனத்தின் வீழ்ச்சியை, அழிவை, தங்களது வெற்றியாகக் கருதிக்கொண்டு இந்த நாளை கொண்டாடித் தீர்க்க வேண்டும் என்று விடுமுறை கொடுத்த ஜனநாயக அரசாங்கம் உலகத்தில் இலங்கையைத் தவிர வேறு எங்கும் இருக்குமா? வெற்றிக் கொண்டாட்டங்களாகக் கொண்டாடிய சிங்களர்களைப் பற்றி அவர்கள் வாழ்ந்து வந்த வரலாற்றை நீங்கள் உணர வேண்டுமென்றால் சிங்கம் புணர்ந்து வந்த அந்தச் சிங்களர்களின் கதையைத் தெரிந்து கொள்ள வேண்டும். இது தமிழர் என்றொரு இனத்தின் கதையோ, அவர்களின் கண்ணீர் வரலாற்றுச் சுவடுகள் மட்டுமல்ல. தற்போதைய சர்வதேச சமூகத்தில், தங்களது அரசியல் வெற்றிக்காக, ஆளுமையை நிலைநாட்டுவதற்காக ஒவ்வொருவரும் எத்தனை தூரம் பயணிப்பார்கள் என்பதை நாம் உணர்வதற்காகத் தங்கள் வாழ்க்கையை இழந்து உலகத்திற்கென்று வாழ்ந்து காட்டிய இனம் தான் இலங்கையில் வாழ்ந்த தமிழினம். 25, 332 ச கி மீ பரப்பளவும் நான்கு புறமும் நீர் சூழ்ந்த இந்தக் குட்டித் தீவை பண்டைய தமிழ் இலக்கியங்கள் சொக்கதேசம் என்று அழைத்தது என்று சொன்னால் நம்புவீர்களா? தொடக்க வரலாற்றில் தம்பப்பண்ணி என்றும், பின்னாளில் ஈழம், இலங்கை, என்று மாறிய பெயர்கள் போர்த்துகீசியர்கள் உள்ளே வந்து சிலோன் (ஸீலான்) என்று மாறி, இறுதியில் சமஸ்கிருத கலப்புடன் ஸ்ரீலங்கா என்று மாற்றம் பெற்ற இன்றைய இந்த இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசை ( Democratic Socialist Republic of Sri Lanka) )அழிந்து கொண்டுருக்கும் தனுஷ்கோடி போய் நின்று கொண்டு தூரத்தில் கண்களுக்குச் சிறு புள்ளியாகத் தெரியவாய்ப்பு இருக்குமா? என்று ஆராய்ந்து பார்க்க நினைத்தால் சுற்றி வரும் ரோந்து கப்பல்களுக்கு நீங்கள் தீவிரவாதியாகத் தெரிய வாய்ப்புண்டு. இலங்கை என்ற நாட்டின், சிங்களர் தமிழர் என்ற இனங்களின் அடிப்படைப் பிரச்சனைகள், மொத்த அரசியல் மற்றும் அவர்களின் வரலாறு என்பதெல்லாம் தாண்டி இந்தக் கண்ணீர்த் தீவின் கதையை நாம் தெரிந்து கொள்ள ஒவ்வொரு ஒவ்வொரு சதுர அடியாக நடந்து பாதுகாப்புடன் முன்னேறிச் செல்ல வேண்டும். [] இன்று வரையிலும் சிங்களர்கள் நாங்கள் தான் பூர்வகுடி என்கிறார்கள்? இங்கு வாழ வந்தவர்களே தமிழர்கள். தமிழர்கள் எப்போதும் சிங்கள மரத்தில் பற்றிப் படரும் ஒட்டுண்ணிகள் என்று அகம்பாவத்துடன் பேசுகிறார்கள். அதுவே இன்று பெரும்பான்மையினர் சிங்களர்களின் விருப்பங்களோடு சிறுபான்மையினராகத் தமிழர்களின் நலன் குறித்துச் சிந்திப்போம் என்கிற அளவில் சரித்திர பக்கங்கள் மொத்தமாய் மாற்றம் பெற்றுள்ளது. இந்தச் சிங்களர்கள் சொல்லும் அவர்களின் பூர்வகுடிகளை நாம் ஆராயத் தொடங்கினால் அவர்களின் பூர்வாசிரமத்தையும் பார்க்கத்தானே வேண்டும்? உலகச் சரித்திர வரலாற்றில் ஹிட்லருக்குப்பிறகு கோரத்தை மொத்தமாக வைத்துக் கொண்டு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் இலங்கையில் வாழ்ந்த தமிழனத்தைக் கல்லறையாக மாற்றிய மகிந்த ராஜபக்ஷே வரைக்கும் வந்து சேரும் போது தான் இன்றைய ஈழ மக்களின் கதியும், பின்னால் உள்ள மொத்த அரசியல் சதிகளையும் நம்மால் உணர முடியும். உலகில் அழிந்தே விட்டது என்று கருதப்பட்ட யூதர் இனம் கூட இன்று தலை நிமிர்ந்து வாழ்வதோடு பல நாடுகளின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்களாக இருக்கிறார்கள். “முன் தோன்றா மூத்த குடி” என்ற பெருமை பெற்ற மொத்த தமிழன வரலாறு தொடங்கிய சரித்திர பக்கங்களின் கடைசிக் காலக் கட்டத்தில் வந்தவர்கள் தான் அமெரிக்கர்கள் இன்று மொத்த உலகையும் தங்கள் ஆளுமைக்குள் வைத்துள்ளார்கள். மேல் நாட்டு கலாச்சாரங்களும் அவர்களின் ஆதிக்கமும் இன்று உலக அரங்கில் பீடுநடை போட்டுக் கொண்டுருக்கிறது, அத்துடன் வளர்ந்து கொண்டுருக்கும் நாடுகளையும் தங்களின் ஆதிக்கத்தில் வைத்துக் கொண்டு பலவிதங்களில் அவஸ்த்தை படுத்திக்கொண்டுருக்கிறார்கள். இந்த மூத்த குடி மட்டும் புலம்பும் குடியாகவே இருக்கின்றது. புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டுருக்கும் ஒவ்வொரு நாட்டிலும் மூழ்கிக்கொண்டுருக்கும் குடியாகவும் உள்ளது. புலம் பெயர்ந்தவர்களை முறைப்படியாக நாம் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், 175 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டுக் கொண்டுருந்த போது உருவான உருவாக்கப்பட்ட பஞ்சத்தில் இங்கு வாழ முடியாமல் பல்வேறு நாடுகளுக்கு வாழ்ச் சென்றதை பார்க்க வேண்டும். அப்போது இலங்கைக்குப் போய்ச் சேர்ந்தவர்கள் இந்திய வம்சாவளித் தமிழர்கள். அதற்கு முன்னால் அங்கே வாழ்ந்து கொண்டுருப்பவர்கள் பூர்வகுடி தமிழர்கள். தொடர்வோம்……………….. 5. இனக்குழுக்கள் 3000 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் நாகரிகம் உருவாகாமல் குழுவாக வாழ்ந்தது முதல் கல்லணையைக் கட்டி புதிய தொழில் நுட்பத்தை உலகத்திற்கு உணர்த்திக்காட்டிய கரிகாற்பெருவளத்தான் தொடங்கி, சேர சோழ பாண்டிய மன்னர்கள் இலங்கையில் ஆட்சி புரிந்தது வரைக்கும் நாம் பார்க்க வேண்டும். 15 ஆம் நூற்றாண்டில் பேர்த்துகீசீயர்கள் வந்த போது ஆண்டுக் கொண்டுருந்த சங்கிலி மன்னன், பண்டார வன்னியன் போன்ற தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்து வாழ்ந்த அந்த இலங்கையின் சரித்திர சுவடுகளும் இன்று எங்கேயோ மறைந்து போய்விட்டது. தொடக்கம் முதல் இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ்ந்த வரலாற்றுப் பக்கங்கள் கவனமாகப் பதிவு செய்து உள்ளது. ஆனால் இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் இன்னமும் அங்கு வாழ்ந்து கொண்டுருக்கும் தமிழர்கள் சிங்களர்களிடத்தில் உயிர்ப்பிச்சையும் அதிகாரப் பிச்சைக்காகவும் வாழ வேண்டிய சூழ்நிலை. தொடக்கத்தில் இன்று போல் பல கண்டங்களாகப் பிரியாத நிலையில் இருந்த போதும், கண்டத்தின் தட்டுக்கள் நகர்ந்த நகர்வில், அன்றைய காலகட்டத்தில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் இருந்தது கடந்து செல்லும் தூரம்தான். இப்போது அழைக்கும் பாக், நீரிணையோ, மன்னார் வளைகுடாவோ அல்ல. பத்துலட்சம் ஆண்டுகளில் எட்டு லட்சம் ஆண்டுகள் ஒன்றிணைந்த பகுதியாகத் தான் இலங்கை இந்தியாவுடன் சேர்ந்து இருந்ததைச் சரித்திர சான்றுகள் மூலம் நாம் நம்பித்தான் ஆகவேண்டும். கடந்து செல்லும் அளவிற்கு இருந்த இந்தத் தீவில் குடியேறியவர்கள், தொடக்கத்தில் வேடர்களாக நாகர்களாக இறுதியாக இனக்குழுக்களாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இலங்கை தீவின் உள்ளே சென்றவர்கள் அத்தனை பேர்களுமே இந்தியாவில் இருந்து குறிப்பாகத் தென்னிந்தியாவின் வழியாகத்தான் சென்றார்கள் என்பது தொல்லியல் தரும் ஆதரப்பூர்வமான சான்றுகள் ஆகும். காலப்போக்கில் படிப்படியாக உருவான இடப்பெயர்ச்சிகளும் குடியேற்றங்களும் இலங்கையில் உருவாக ஆரம்பித்தது.. கண்டத்திட்டு நகர்வில் அப்போது பிரிந்த மாலத்தீவு தூரமாய்ப் போனதால் அங்குக் குடியேற்றம் குறைவு. இலங்கையின் தொடக்கக் காலப் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனித நாகரிகம் இருந்ததாக அறியப்பட்டுள்ளது. அங்குப் பல்வேறு இடங்களில் இருந்து பெயர்ச்சியாகி உள்ளே வந்து வாழ்ந்து கொண்டுருந்த கண்டு கொள்ள முடியாத வகையில் பல்வேறு இனங்களாகப் பரவித் திரிந்த கூட்டத்தினர் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகரும் போதும், பின்னாளில் கால மாற்றத்தினால் தொழில், தொடர்பு, வாணிகம் என்று பின்னால் வளர்ந்து புதிய பண்பாட்டு கலப்பின கலாச்சாரங்கள் தோன்றியது. 3000 ஆண்டுகளுக்கு முன் தான் முழுமையான மாற்றங்களும் இனம் கண்டு கொள்ளக்கூடிய குழுக்களும் தோன்றின.. இன்றைய இலங்கை 7000 ஆண்டுகளுக்கு முன்னால் கூட அதுவொரு தனி நாடு அல்ல. அதுவும் ஏறக்குறைய தமிழ்நாட்டை ஒட்டிய ஒரு நிலப்பகுதி. இலங்கைக்கும் இன்றைய தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள குட்டித்தீவுகளையும் ஆழம் இல்லாத கடற்பகுதிகளையும் நடந்து சென்று அடைந்து விடலாம் என்றால் உங்களுக்கு எப்படியிருக்கும்?. யாழ்பாணத் தீபகற்பம் பாக் நீரிணையைக் கடந்து வருபவர்களுக்குத் தலைவாசல் போல இருந்தது. சங்கத்தமிழ் செய்யுள்களில் மாவிலங்கை தொல்மாவிலங்கை என்று காணக்கிடைக்கும் சொற்களைப் போலத் தொடக்கத்தில் தென்னிலங்கை என்று தான் தமிழ்நாட்டுடன் சேர்த்து அழைக்கிறார்கள். தொடக்கக் கால இலங்கையின் கடல் சார்ந்த ஒவ்வொரு வணிகம் சார்ந்த தொடர்புகளும், இன்றைய மேற்கு வங்காளம் தொடங்கி கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு என்று கடற்கரை ஓட்டிய பகுதிகள், இங்கு வாழ்ந்து கொண்டுருந்த மக்களும், தாங்கள் உருவாக்கிய வணிகத் தொடர்பும், உருவாக்கிய வியாபார பரிவர்த்தனைகளும் இலங்கையோடு ஒரு நல்ல தொடர்பை உருவாக்க காரணமாக இருந்தது. இலங்கையின் ஒவ்வொரு பகுதியிலும் வந்த வணிகத் தொடர்புகள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. அதுவே தான் தொடக்கக் கால நாகரிக மாற்றங்களாக இருந்தன. மன்னார் வளைகுடா முத்துக்களும், சங்கு,மணி,மீன் மற்றும் கடல் சார்ந்த அத்தனை பொருட்களுமாய் இலங்கையைத் தொடக்கத்தில் “இரத்தினத்தீவு” என்றழைக்கும் அளவிற்கு வணிகச் சிறப்புடன் முன்னேறத் தொடங்கியது. மத்திய, மேற்கு, வடக்கு இலங்கை என்று பிரிக்கப்படாமல் உள்ளே ஒவ்வொரு பகுதியிலும் இருந்த சிறு நகர்ப்பகுதிகளுக்குள் இந்தியாவின் கடற்பகுதியை ஒட்டியவர்கள் வணிகத்தின் வாயிலாக உள்ளே வர காலமாற்றமும் கலப்பின மாற்றமும் நடக்கத் தொடங்கியது. அதுவே உள்ளே இருந்தவர்கள் குழுக்களாக மாறி, ஒவ்வொரு குழுக்களும் அந்தந்த பகுதிகளை ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு வளர்ந்தது. விஞ்ஞான அடிப்படை என்பதோடு நம்முடைய பண்டைய இலக்கியச் சான்றுகள் மூலம் இந்தத் தென்னிலங்கை எவ்வாறு அழைக்கப்பட்டது என்பதை நாம் உணர முடியும். ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளில் திருஞானச் சம்பந்தர் பாடிய தேவாரத்தில் இலங்கையின் வடமேற்கில் உள்ள மாதோட்ட நகரின் திருக்கேதீச்சரத்தை துதித்துப் பாடியுள்ளார் (தென்னிலங்கையர் குலபதி மலைநலிந்தெடுத்தவன்….) ஆனால் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் இன்றைய இலங்கையில் தமிழர் சிங்களர் என்ற எந்தப் பிரிவும் இல்லை. பல்வேறு இனக்குழுக்கள். பேசிய மொழி என்ன? வாழ்ந்த வாழ்க்கை என்ன? என்பதெல்லாம் பாலி மொழியில் சொல்லப்படும் ஒரு சில சான்றுகளை வைத்துத்தான் ஓரளவிற்கு நம்மால் ஊகித்துக்கொள்ள முடியும். சிங்கள மொழியொன்று அப்போது இல்லை. மொத்தமாகப் பாலி மொழியில் எழுதப்பட்ட வரலாற்றுச் சம்பவங்களை வைத்து தான் மூன்றாம் நூற்றாண்டின் இறுதி வரைக்கும் ஒரு வரையறைக்குள் கொண்டுவர முடிகின்றது. பாலி மொழி வரலாற்றில் மிகப் பழைமை வாய்ந்த காப்பியம் தீபவங்ஸ நூல். அதனையொற்றி எழுதப்பட்டது மகாவங்ஸ நூல். இந்த நூல்களே இன்று வரைக்கும் சிங்களர்களால் போற்றிப் பாதுகாக்கப்படும் புனித நூலான தீபவம்சம், மகாவம்சமாகும் இதன் மூலம் அநுராதபுரம் அரசு பற்றிய தகவல்களும், பௌத்த சங்கம் குறித்த விபரங்களும் பெறமுடிகின்றது. இனக்குழுவில் இருந்ததாகச் சொல்லப்படும் தமிழர்கள் குறித்த தகவல்கள் இதில் மிகக் குறைவு. பின்னாளில் வந்த உயர் குழுவினர் பயன்படுத்திய பிராகிருத மொழியின் மூலம் கல்வெட்டுக்களும், மலைக்குகையில் எழுதப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு தமிழ் பௌத்தர்கள், அவர்களின் தானங்கள் குறித்து ஓரளவுக்குச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கலாச்சார,பண்பாடுகள் தோற்றம் பெறக் காரணமாக இருந்த வணிகத் தொடர்பின் மூலம் ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முன் இன்றைய இலங்கையின் தோற்ற வாயிலான நாகத்தீவு, களணி, தம்பப்பண்ணி ஆகிய இடங்களில் குறுநில அரசுகளும் தோற்றம் பெற்றது. காலப்போக்கில் அநுராதப்புரத்தில் பௌத்த சமண சிவ மதங்களின் எழுச்சியும், அசோக மன்னரது வருகைக்குப்பிறகு பிராகிருத மொழியின் எழுச்சியுமாய் மாற்றம் பெற்றது. அதுவே அநுராதபுரத்தை ஆண்டுக் கொண்டுருந்த மன்னர் பௌத்த மதத்தைத் தழுவியிருந்த ஒரே காரணத்தினால் மட்டுமே அப்போது பிராகிருத மொழி ஆளுமையில் இருந்தது. ஆனால் வணிகத் தொடர்பும் வந்து இறங்கிக்கொண்டுருந்த தமிழர்களின் தமிழ் மொழியும் ஆதிக்கம் செலுத்த இரு வேறு குழுக்களாகப் பிரிந்து குறிப்பிட்ட இடங்களில் ஆளுமை செய்யத் தொடங்கினர். இந்த இரு வேறு குழுக்களில் அவ்வப்போது தோன்றிய எழுச்சி என்பது இலங்கைக்கு வெளியேயிருந்து உள்ளே வந்து கொண்டுருந்த வணிகத் தொடர்பின் காரணமாக முன்னேறுவதும் பின்னேறுவதுமாக நடந்தேறியது. 6. எடுத்தவர்களும் கொடுத்தவர்களும் இலங்கையில் போர்த்துகீசியர்கள் ஆண்டபோது, 17 ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க மதக் குருவான பெர்ணாஓ த கெய்ரோஸ் (FERNAO DE QUEYROZ) போர்த்துகீசிய மொழியில் முதன்மையான இலங்கை குறித்த வரலாறு எழுதப்பட்டது. பின்னாளில் வந்த ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட மொத்த வரலாறுகளும் ஏற்கனவே பாலி மொழியில் எழுதப்பட்ட திரிபு அடிப்படைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. நம்ப முடியாத விசயங்களை வைத்துப் படைக்கப்பட்ட மகாவம்சம், தீபவம்சம் நூல்கள் உருவானது. . இனக்குழுவாக இருந்தவர்களில் சிங்களர்களே முறையான பூர்வகுடி மக்கள் என்று புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள் என்ற பெயரில் திரிபு வரலாற்றைத் தொடங்கி வைத்தனர். இந்த வரலாற்றுப் பிழைகளுக்குச் சரித்திர சான்றுகளாக அன்றே பல விதங்களிலும் உருவாக்கப்பட்டது. இந்தச் சதிகள் பல நூற்றாண்டுகள் கடந்தும் மாற்ற முடியாமல் தொடர்ந்து கொண்டே இருந்தது. இறுதியில் மறக்க முடியாத சம்பவங்களாக இன்று வாழ்ந்து கொண்டுருக்கும் எஞ்சிய தமிழர்களுக்குக் கொடுத்து விட்டது. உலகச் சரித்திர பக்கங்களில் நீக்கவே முடியாத அளவிற்கு இடம் பெற்ற ஹிட்லரின் நாசிக் கொள்கைகளுக்குச் சார்பாக மொத்த வரலாற்றைத் திரிபு என்று சொல்லும் அளவிற்கு உருவாக்கிய ஜெர்மானிய வரலாற்றாசிரியர்கள் போலவே இலங்கையின் மொத்த வரலாற்றுப் பக்கங்களிலும் இந்தத் திரிபு தான் அதிகமாக உள்ளது. இதைப்போலவே மற்றொரு ஆச்சரியம், அன்று முதல் இன்று வரையிலும் இலங்கையில் வாழ்ந்து கொண்டுருக்கும் தமிழர்கள் தங்களைத் தாங்களே பிரித்து வைத்துக்கொண்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பூர்வகுடி தமிழர்கள், இந்திய வம்சாவளித் தமிழர் கடைசியாக இலங்கை முஸ்லீம்கள். இதிலும் பிழைப்புத் தேடிப்போன கொழும்புச் செட்டிகள் என்ற சிறு குழுவினர் என ஒவ்வொருவரும் தனித்தனியாக இருக்கின்றனர். இலங்கைத் தமிழர்கள் என்ற இந்த ஒரு வார்த்தைக்குப் பின்னால் பல பிரிவுகளாக ஜாதி, இனம், மதம் என்றும் நான் பெரியவர் நீ சிறியவன் என்றும் வாழ்ந்தனர். தங்களுக்கு நிகர் தாங்களே என்று வேறு எவருடனும் சேராமல், கடைசி வரையிலும் மற்றவர்களைத் தங்களுடன் சேர்க்காமல் தனித்துவமாய் வாழ்ந்தது முதல் கொடுமை என்றால், ஒரு இனமே அழிந்து போன இன்றைய சூழ்நிலையில் கூட தங்களை மாற்றிக் கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இன்று கூடார வாசிகளாக, இருப்பிடமற்ற அலையும் பழைய கால நாடோடிகளாக மாறிய போதும் இன்னும் உணராமல் இருப்பது அடுத்த மகத்தான சோகம். மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த இனம் என்று பெருமை பெற்றதாகச் சொல்லப்படும் தமிழன் என்பவனுக்குத் தனியாகக் குணம் உண்டு என்பதைப் போல இலங்கையில் வாழ்ந்த தமிழனத்தை அழித்து முடிக்கவென்று உருவான அரசியல் சதிகள் உருவானது இன்று நேற்றல்ல. இதன் தொடக்கம் ஆங்கிலேயர்கள் உருவாக்கியது. அவர்கள் அன்று உருவாக்கியதை தொடக்கம் முதலே கெட்டியாகப் பிடித்து வெற்றி பெற்றவர்கள் சிங்களர்கள். தன்னையும் உணர்ந்து கொள்ளாமல், தமிழினம் என்பதை விடத் தங்கள் இனம் ஜாதி என்ற குறுகிய எண்ணம் கொண்டவர்களால் தொடங்கியது இந்தத் தமிழினத்தின் வீழ்ச்சி. இதன் முடிவு இன்றைய தினத்தில் இலங்கையில் சர்வதேச அரசியலின் எழுச்சியாய் வந்து முடிந்துள்ளது. தவறான அரசியல் கொள்கைகள் எந்த அளவிற்கு மொத்த சமூகத்தையும் சீர்குலைக்கும் என்பதைப் போல தவறானவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு எந்த அளவிற்கு மோசமான பாதைக்குச் செல்லும் என்பதற்கு இலங்கையில் ஆட்சி புரிந்தவர்களே மிகச் சிறந்த உதாரணம். இலங்கையின் மொத்த வரலாற்றுப் பாதைகளைப் பார்த்தோமென்றால் ஒவ்வொரு காலகட்டத்திலும் சிங்கள சரித்திரத்தை சிறப்பானதாக மாற்றுவதற்கென்ற பல தலைவர்கள் உழைத்துள்ளனர். உழைத்தவர்களைப் போலத் தமிழர்களின் தடங்களையும் கவனமாக அழித்துள்ளனர். அதுவே மறக்கப்படும் அளவிற்கு அவர்கள் உழைத்த உழைப்பு ஆச்சரியமாக உள்ளது. நமக்குத் தமிழர்களின் வரலாறு கற்றுக்கொடுக்கும் வாழ்க்கைப் பாதையை விட மற்றொரு ஆச்சரியத்தைக் கவனித்தால் நமக்குப் புரியும். ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங்கள் உருவானது மாற்றங்களின் மூலம் உருவான அரசியல் கணக்குகளை உணர்ந்து கொள்ளாதவர்கள் எப்படித் தலைவனாக மாற்றம் பெறமுடியும்? என்பதைக் காலக்கண்ணாடி போல் தமிழர்களின் கடந்து வந்த பாதைகள் நமக்கு உணர்த்துகிறது. காரணம் அன்று முதல் இன்று வரை அரசியல் என்பது ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல. கணக்குகளை அடிப்படையாகக் கொண்டது. எல்லாமே சாத்தியம். அது எப்போதும் அரசியலில் மாத்திரமே என்பதை நம்மால் ஈழ வரலாற்றின் மூலம் புரிந்து கொள்ள முடியும்.. இலங்கையில் வாழ்ந்த திருவாளர் அப்பாவி தமிழ் பொதுஜனம் முதல் எங்களுக்கான உரிமை வேண்டும் என்று அரசியல் மூலமாக அஹிம்சை வழியில் போராடியவர்கள் வரை கேட்டது ஒன்றே ஒன்று தான். எங்களை வாழ விடு என்பது தான். மறுக்கப்பட்ட போது தான் “எங்களின் உரிமைகளைப் பெற ஆயுதமேந்துவதைத் தவிர வேறு வழியில்லை” என்று ஆயுதப் பாதையைத் தேர்ந்தெடுத்தனர். தங்களின் குரலை வேறுவிதமாக உயர்த்தினார்கள். இவர்கள் அத்தனை பேர்களும் ஆட்சிபுரிந்து கொண்டுருந்தவர்களிடம் கேட்டது “எங்கள் தனித்தன்மையான கலாச்சராத்துடன் நாங்கள் வாழ எங்களுக்கான இடத்தைக் கொடு” என்று போராடிப் பார்த்தார்கள். இறுதியில் மண்ணோடு மண்ணாய் கலந்து மாவீரர்களாகப் போனார்கள். “எங்கள் நிலத்தை எடுத்துக்கொண்டாய். எங்களின் பிணத்தை எங்குக் கொண்டு புதைக்கப் போகிறாய்?” என்று கேட்டவர்களின் தனித் தமிழீம் எதிர்காலத்தில் வெல்லக்கூடிய சாத்திய கூறுகள் உள்ளதா? 7. சிங்கம் புணர்ந்து வந்தவர்கள் தென்கிழக்கு ஆசியா முதல் இந்தியா, தென்னிந்தியா வரைக்கும் சமஸ்கிருதம் ஆட்சி புரியத் தொடங்கிய போது மொத்த வரலாற்றின் போக்கும் வேறொரு திசையில் பயணிக்கத் தொடங்கியது. ஒவ்வொரு ஆட்சியாளர்கள் தங்களுடைய வம்சத்தை உயர்ந்ததாகக் காட்டிக்கொள்ளப் பல் வேறு புனைக்கதைகளை உருவாக்கி பரப்பத் தொடங்கினர். இதன் தொடர்பாக உருவானது தான் சிங்களர்கள் “சிங்கம் புணர்ந்து வந்தவர்கள் ” என்றொரு அசிங்கக் கதையும் நிலைபெறத் தொடங்கியது. சிங்களர்களின் புனித நூல் என்ற சொல்லப்படும் மகாவம்சத்தில் சொல்லப்படும் அந்தப் புனைவு கதையின்படி விஜயன் என்ற இளவரசன் தற்போதை இந்தியாவில் உள்ள மேற்கு வங்க மாநிலம் பகுதியிலிருந்து இலங்கைக்கு உள்ளே சென்றதில் இருந்து தொடங்குகிறது. அப்போது இந்தியாவில் இதில் குறிப்பிடப்படும் வங்க மாநில பகுதியில் ஆண்டுக் கொண்டுருந்த மன்னரின் மகள் பெயர் சுபதேவி. இவளை வனராஜா சிங்கம் கடத்திக்கொண்டு சென்று குகையில் அடைத்து வைத்துருந்தது. சிங்கம் சுபதேவியுடன் குடும்பம் நடத்தி ஆண் குழந்தை, பெண் குழந்தை என்று இரண்டு குழந்தைகள் பிறந்தன. பிறந்த ஆண் குழந்தை கால்களும் கைகளும் சிங்கத்தைப் போன்று தோற்றத்தை பெற்று சின்ஹபாஹ என்ற பெயராலும், பெண் குழந்தை சின்ஹவலி என்றும் அழைக்கப்பட்டனர். குகைக்குள் அடைக்கப்பட்ட தனது தாயையும் தங்கையையும் அழைத்துக் கொண்டு தப்பித்து வெளியேறிய சின்ஹபாஹ, தன்னுடைய சகோதரியான சின்ஹவலியையே திருமணம் செய்து கொண்டு சின்ஹபுரம் என்ற நகரை உருவாக்கிக்கொண்டு ஆட்சி புரியத் தொடங்கினான். சினஹவலிக்கு பிறந்த இரட்டையரான ஆண் குழந்தைகளில் மூத்த ஆண் குழந்தையின் பெயர் விஜயன். இரண்டாவது சுமித்தா. வளர்ந்து கொண்டுருந்த விஜயனின் தீய குணங்களை அடக்க முடியாமல் மன்னர் சின்ஹபாஹ, விஜயனையும் துணையாக இருந்தவர்களையும் நாடு கடத்தினார். இவர்கள் மரக்கலத்தின் வாயிலாக இலங்கையில் வந்து இறங்கினர். இவர்கள் வந்த போது இலங்கையின் அப்போதைய பெயர் தம்பப்பன்னி. இவர்கள் குறிப்பிடும் மொத்த இந்தக் கதையின் மூலக்கூறு இந்தியாவின் ஓரிஸ்ஸா மற்றும் மேற்குவங்காளத்தில் (கலிங்கம், வங்கதேசம்) இருந்து தொடங்குகிறது. இவர்கள் உள்ளே வந்த போது புத்தர் மரணமடைந்தார் என்றும் புத்தரின் வாரிசாகத் தங்களை அறிவித்துக்கொண்டு ஆட்சி புரியத் தொடங்கினார் என்று இதன் அசிங்கம் நிறைந்த பல சம்பவங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டு செல்கிறது. இன்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்னால் கூட இன்றைய இலங்கையில் பிரதேச எல்லைகள் என்று எதுவும் இல்லை. அன்று உருவாகியிருந்த வணிகத் தொடர்புகள் தான் எல்லாவகையிலும் ஆட்சி புரியத் தொடங்கியது. அதுவே ஒரு அளவிற்கு மேல் கடந்து தமிழ்நாட்டில் ஆண்டுக் கொண்டுருந்த குறுநில மன்னர்கள் இலங்கையில் இருந்த சிறு இனக்குழுக்களின் மேல் ஆதிக்கம் செலுத்த முற்பட்டுப் பரவலாக்கமாக மாறத் தொடங்கியது. அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தமிழர்களின் மொத்த ஆதிக்க இனக்குழுக்கள் வளரத் தொடங்கியது. சிங்களர்களின் தீபவம்ச நூலில் தொடக்கத் தமிழ் மன்னர்கள் என்று குறிப்பிடப்படும் ஸேன,குத்தக என்ற அநுராதபுர ஆட்சியாளர்களையும், தமிழர்கள் அதிகமாக வாழ்ந்த வவுனியா ( பெரிய புளிங்குளம்), மட்டக்களப்பு (ஸேருவில), அம்பாறை (குடுவில்) மாவட்ட விபரங்கள் மூலம் வாழ்ந்து கொண்டுருந்த இனக்குழுக்களையும், அங்கு வாழ்ந்து கொண்டுருந்த மற்ற இனக்குழுக்களின் மேல் இவர்கள் செலுத்திய ஆதிக்கங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. . மூன்றாம் நூற்றாண்டின் மத்திம பகுதியில் வட இந்தியாவில் பாடலிபுரத்தை ஆட்சி புரிந்து கொண்டுருந்த கலிங்க பேரரசுவின் மன்னரான (இன்றைய பாட்னா) அசோக பெருமன்னன் தன்னுடைய சார்பாளராக மஹிந்த மகாதேரர் என்ற புத்தபிக்குவை அனுப்பி வைத்தார். காரணம் அப்போது நடந்துருந்த கலிங்கப்போர் மன்னனை முழுமையாக மாற்றியிருந்தது. போருக்குப் பின்னால் பௌத்த மதத் தாக்கத்தினால் அமைதி வழியே செல்ல விரும்பிய அசோக மன்னரின் சார்பாகச் சென்றவர், ஆண்டுக் கொண்டுருந்த திஸ என்ற (திசையன்) மன்னன் வந்த தூதுக்குழுவினரை வரவேற்று அசோக மன்னரின் ஆளுமையை ஏற்றுக்கொண்டதும் நடந்தேறியது. அசோக மன்னரின் சார்பாகச் செயல்பட்டு ஆட்சி புரிந்தவர்களுக்குப் பின்னால் வந்த தமிழ் மன்னர்களின் பெயர் என்று தீபவம்சம் கூறுவது எளார என்றழைக்கப்படும் தமிழ் மன்னனாகிய எல்லாளன். ஏறக்குறைய 44 ஆண்டுகள் நீதி வழுவாது ஆட்சி புரிந்து இந்த மன்னரின் தயாள, ஈகை குணங்களைப்பற்றி உச்சமாகப் புகழ்ந்து எழுதி உள்ளனர், உச்சகட்டமாக எல்லாளன் என்ற தமிழ்மன்னரைப் பற்றி, அவரது ஆட்சியில் பெய்த மழைகூட இரவில் மட்டும் பெய்தது என்கிற அளவில் எழுதி வைத்துள்ளனர். பயம் என்பதைப் பயம் கொள்ள வைத்தவர்களின் மரபில் வந்தவர்களை இன்றைய இலங்கை அரசு கடைசி வரைக்கும் நேருக்கு நேர் நின்று போரிடமுடியவில்லை.. இறுதியில் எல்லாளன், துட்டகாமிணி என்றழைக்கப்படும் காமணீ அபய என்ற தெற்கு இலங்கை சிங்கள மன்னரால் தோற்கடிக்கப்பட்ட போது எல்லாளன் என்ற தமிழ் மன்னரின் வயது 73, போரிட்ட சிங்கள மன்னனோ இளைஞன். ஆனால் அன்றைய சூழ்நிலையில் எல்லாளன் ஆட்சியினால் பலனடைந்த சிங்கள தமிழ் தரப்பினர்கள் வைத்திருந்த மதிப்பை மாற்ற விரும்பாத சிங்கள மன்னன் எல்லாளன் சார்பாக நினைவு ஸ்தூபி ஒன்றை உருவாக்கி வழிபடுவதன் மூலம் அனைவரையும் திருப்திபடுத்தினான். இதுவே இலங்கை சுதந்திரத்திற்குப் பிறகு பின்னாளில் ஆட்சிக்கு வந்த ஜெயவர்த்னே இந்த ஸ்தூபியை சிங்கள இனவாத அடையாளமாகக் காட்டப்பட்டு, அமைச்சராக இருந்த அதுலத் முதலி தொல்லியல் ஆராய்ச்சியாளர்களுக்கு மிரட்டல் விடும் அளவிற்கு அவரின் தமிழர் எதிர்ப்பு உச்சத்தில் இருந்தது. ஆனால் மொத்தமாகச் சிங்கள வரலாற்று ஆசிரியர்களால் தரப்படும் மொத்த சான்றுகளும் அநுராதபுரத்தை வைத்தே கொடுக்கப்படுவதால் அந்த நகரின் சிறப்புத் தொடக்கம் முதல் மேம்பட்டு இருப்பதை உணரலாம். இதைத் தொடர்ந்து வரும் ஆட்சியாளர்களில் பலர் வந்து போய்க்கொண்டுருந்தாலும் சிங்கள அனுலா என்ற அரசியின் ஆட்சியும், அவரது ஒழுங்கங்கெட்ட நடவடிக்கைகளும், கணவர், காதலன் என்ற பெயரில் தன்னுடன வாழ்ந்தவர்களை நஞ்சு கொடுத்து கொன்ற காட்சிகளும் உள்ளது. இதுவே காலப் போக்கில் ஒவ்வொரு இனக்குழுவும் ஆதிக்கம் செலுத்தி இலங்கையின் வடக்கில் தமிழ்மொழியின் செல்வாக்கும் சைவ சமயமும், தெற்கில் சிங்கள மொழியும் பௌத்தமும் என்று மாற்றம் பெற்றது. மொத்தமாக நாகர்கள் வாழ்ந்த நாகத்தீவு என்றே பாலி மொழி வரலாறு தெரிவிக்கின்றது. பின்னால் உருவான சிங்கள மொழி என்பது ஒரு இயல்பான மொழியல்ல. கலிங்கப் பேரரசை அசோக மன்னன் ஆண்ட போது, அவரின் சார்பாளர்கள் இலங்கைக்குச் சென்ற போது வழக்கில் இருந்த சமஸ்கிருதத்தில் தொடங்கி, பாலி, கலிங்கம், தமிழ் என்பது வரைக்கும் பல மொழிகள் கலந்து உருவாக்கிய கூட்டுக் கலவை அது. அசோக மன்னரது இலட்சினையான சிங்கமும் எலு என்பதன் எச்சமாகக் கருதப்படுவதும் சேர்ந்து சிங்களம் என்று மாற்றம் அடைந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் ஆறாம் நூற்றாண்டுக்குப் பிறகு உருவான சமய மாற்றங்களும், வீழ்ச்சியடைந்து கொண்டுருந்த பௌத்தமும் கரையேறி பயணிக்கத் தொடங்கியது, அப்போதைய தமிழர்களும், தமிழ் மன்னர்களும் சைவ, வைணவ என்ற பிரிவின் பக்கம் சாயத் தொடங்கியதால் மகாநாம தேரர் என்பவரால் பௌத்த வீழ்ச்சியைத் தடுக்கும் பொருட்டு எழுதப்பட்ட நூலே இன்றைய சிங்களர்களின் புனித நூலாக மதிக்கப்படும் மகாவம்சம். காலமும் சூழ்நிலையும் திரிபுகளையும் இத்துடன் கொண்டு வந்து சேர்க்க கிபி 972 ஆம் ஆண்டு நான்காம் மகிந்தன் என்ற சிங்கள மன்னரால் இதைத் தமிழர் எதிர்ப்புணர்ச்சி என்ற நோக்கத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. [] 8. சிங்களர்களும் தமிழர்களும் ஆறாம் நூற்றாண்டின் இறுதிக்குப்பின்னால் தான் இலங்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் உருவாகத் தொடங்கியது. இந்தியாவில் இருந்த பல்லவ பேரரசுவின் எழுச்சியினால் வணிக ரீதியான மாற்றங்கள் மொத்தமும் இலங்கைக்குச் சென்றடைந்தது. அப்போது இருந்த கடல் வணிகம் அதனைச் சாத்தியப்படுத்தியது. தென்னிந்திய வணிகர்கள் மூலம் இலங்கைக்குத் தென்கிழக்காசியா, மேற்கிழக்காசியாவுடனும் நெருங்கிய வணிக உறவுகள் ஏற்பட்டன. இந்தக் காலகட்டத்தில் உருவான கருத்துப் பறிமாற்றங்கள் தான் உள்ளே உள்ள சமூக அமைப்பையும் புரட்டிப்போட்டது. நீர்பாசன வளர்ச்சிகளும், விவசாய முன்னேற்றங்களும் தொடங்கிப் புதிய முன்னேற்றத்தை உருவாக்கியது. ஒவ்வொரு காலகட்டத்திலும் வணிகம் என்ற நோக்கத்தினால் உள்ளே வந்து சேர்ந்தவர்களால் தமிழ் இனக்குழு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி வளரவும் தொடங்கியது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இலங்கையில் ஆண்டுக் கொண்டுருந்த இனக்குழுவின் ஆளுமையில் இருந்தவர்கள் (சிங்கள தமிழ்) பாரபட்சமில்லாமல் தங்களை, தங்கள் ஆளுமையை, தன் சமய கொள்கைகளை, சொத்துக்களைப் பாதுகாக்க தென்னிந்தியாவில் இருந்து பாதுகாப்பாளர்கள், பிராமணர்கள், ஒவிய சிற்பக் கலைஞர்களை கொண்டு வந்து கொண்டே இருந்தனர். தமிழ் இனக்குழுவின் எண்ணிக்கை மிக அதிகமாகிக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் கட்டுபடுத்த முடியாத சூழ்நிலையும் உருவாகத் தமிழ் இனக்குழு எங்கும் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். மற்றொரு சிறப்பம்சம் பௌத்த ஆளுமையில் இருந்தவர்கள் உருவாக்கி வைத்திருந்த உயர் பதவிகளில் கூடத் தமிழ் இனக்குழு இடம் பெற்று இருந்தனர். இனக்குழுவாக இருந்து கொண்டும், தங்களுக்குத் தேவையான உதவிகளை, படைபலங்களைத் தென்னிந்தியாவில் பெற்றுக்கொண்டு தங்கள் ஆளுமையை நிலைநாட்டிக்கொண்டுருந்தவர்களின் அரசியல் உள் விவகாரங்களில் ஏழாம் நூற்றாண்டின் முற்பாதியில் தொண்டை மண்டலத்தில் ஆட்சிபுரிந்த பல்லவ பேரசு உருவான போது மகேந்திர வர்மன் முதல், முதலாம் நரசிம்மவர்மன் தொடர்ந்து என இலங்கையின் உள் விவகாரங்களின் கலந்து கொள்ளச் சூழ்நிலை உருவானது. முதன் முதலாக உதவி புரியும் நோக்கத்தோடு (680/720) படையெடுத்து இறுதியில் வந்த மானவர்மன் அநுராதபுரத்தின் மன்னராக முடிசூட்டப்பட என்று தொடக்கம் பெற்ற இந்தச் சரித்திர பக்கங்கள் மாறி மாறி அலைக்கழித்து உலகப் பேரரசுக்கு வழிகாட்டியாக இருந்த இராஜராஜ சோழன் வரைக்கும் தொட்டு தொடர்ந்து கொண்டு பயணம் செய்கிறது. சங்க காலம் என்று வழங்கப்படும் வரலாற்றுப்பக்கங்களில் மூன்று நூற்றாண்டுகளைக் கொண்ட சேர, சோழ, பாண்டிய பேரரசுகளின் எழுச்சியும், வீழ்ச்சியும் என்று எல்லாவிதங்களிலும் இலங்கையைப் பாதிக்க, பரவலாக்கம் இல்லாமல் அங்கங்கே ஆதிக்கம் செலுத்திக் கொண்டுருந்த தனித்தனி இனக்குழுக்களின் ஆளுமையிலும் மாற்றம் வந்தது. ஆறாம் நூற்றாண்டுக்கும் பத்தாம் நூற்றாண்டுக்கும் இடையே வணிகர்கள் மூலம் உருவான கலாச்சாரங்கள்,உருவாக்கிய கோவில்கள், பாதுகாப்பாளர்கள், பிராமணர்கள், பெளத்த பிக்குகள் என்று மொத்தமாக ராஜராஜன் நுழையும் வரைக்கும் இனக்குழுக்கள் என்பதையும் தாண்டி வேறொரு புதிய பரிணாமத்திற்கு வந்து இருந்தனர். இந்தக் காலகட்டத்தில் நடந்த முக்கிய மாறுதல்கள் அத்தனையும் பின்னாளில் பத்தாம் நூற்றாண்டு காலத்தில் தமிழ் இனக்குழுவும் சிங்கள இனக்குழு என்றழைக்கபடும் ஹௌ இனக்குழுவும் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் நிலைமை எவ்வாறு இருக்கப்போகின்றது என்பதை உணர்த்துவதாக இருந்தது. ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரைக்கும் தமிழ்நாட்டில் ஆளுமையில் மேலோங்கியிருந்த பல்லவரையும், பாண்டிய பேரரசையும் முடிவுக்குக் கொண்டு வந்தது திருப்புறம்பியத்துப் போர். இது தமிழ்நாட்டில் திருப்புமுனையை உருவாக்கி சோழப் பேரரசை உருவாக்க காரணமாக இருந்தது. ஓன்பதாம் நூற்றாண்டில் உறையூர் பிரதேசத்தில் இருந்து தொடங்கிய விஜயாலாயச் சோழன் தஞ்சாவூரைக் கைப்பற்றி ஒரு புதிய சாம்ராஜ்யத்தை உருவாக்கினார் இவரது மகன் ஆதித்த சோழன், அதற்குப் பிறகு (907) முதலாம் பராந்தகச் சோழன் ஆட்சியில் அரியணையில் அமர்ந்த போது உருவான எதிர்ப்பு வடக்கில் ராஷ்டிரர், சேரர் இவர்களுடன் இணைந்த சிங்கள மன்னர்கள். சூழ்ந்திருந்த சூழ்ச்சியையும், வலிமையில்லாத சோழப்பேரரசின் மொத்த புகழையும் மீட்டு எடுத்த ராஜகேசரி அருள்மொழிவர்மன் என்றழைக்கபடும் ராஜராஜசோழன் காலத்தில் உலகப்பேரரசு என்கிற அளவிற்குத் தமிழ்நாட்டில் தொடங்கிய அவரது ஆளுமை மாலத்தீவு, லட்சத்தீவு, இலங்கை, என்று தொடங்கியது அவரது மகன் ராஜேந்திர சோழன் (1012/1044) கிழக்குக் கடற்கரையோரமாக, கங்கை கரை வரை வென்று வெற்றியுடன் கங்கை கொண்ட சோழன் என்ற வரலாற்றுப் புகழை பெற்றார். அதுவே அன்றைய காலகட்டத்தில் சீனா வரைக்கும் வணிக நோக்கங்களைச் சாத்தியப்படுத்தியது. இவர்கள் காலத்தில் இலங்கையில் வணிகம் முதல் சமயம் வரைக்கும் மொத்தமாக மாற்றம் பெற்றது. குறிப்பாக நீர்ப்பாசன நோக்கங்கள் அத்தனையும் இந்தக் காலகட்டத்தில் புதிய பாதையை அடைந்து புத்தொளி பெறத்தொடங்கியது. 50 ஆண்டுகளாகத் தங்களின் ஆளுமைக்குள் வைத்திருந்த இவர்களின் இலங்கை ஆட்சி என்பது பின்னாளில் வந்த சிங்கள ஆதிக்கத்தால் கூட அன்று இவர்களால் உருவாக்கப்பட்ட நிகழ்வுகளைப் பின்னாளில் முழுமையாக மாற்றமுடியவில்லை என்பதும் சரித்திரப்பக்கங்கள் தரும் ஆச்சரியமான தகவல்கள். ஆனால் நீண்ட கால நோக்கம் எதுவும் இல்லாத சோழ அரசின் நோக்கங்கள் இலங்கையின் முழுமையையும் தங்களுடைய ஆதிக்கத்தில் கொண்டு வராத காரணத்தால் அங்கங்கே சிங்கள இனக்குழுவின் ஆளுமை இறுதிவரைக்கும் இருந்து இதுவே சோழப்பேரரசு வீழ்ச்சி அடையும் வரைக்கும் பின்னாளில் பல விபரீதங்களையும் உருவாக்கியது. சோழப் பேரரசின் ஒரு அங்கம் தான் இலங்கை என்பதாகத் திருப்திபட்டுக் கொண்டார்கள். இவர்கள் காலத்தில் தங்கள் ஆளுமையில் இருந்த இலங்கையைச் சோழ நிர்வாக மண்டலமாக வைத்துக்கொண்டு ஆட்சிபுரிந்தனர். இதற்கென்று சோழ இளவரசர்களை அங்கங்கே அனுப்பி வைத்தனர். இவ்ர்கள் உருவாக்கிய சிவன் கோவில் (மாதோட்டத்துத் திருக்கேதீஸ்வரம்) திருகோணமலையின் கோணேஸ்வரமும் பின்னாளில் வந்த 17 ஆம் நூற்றாண்டியல் உள்ளே வந்த போர்த்துகீசியர்களால் உடைக்கப்பட்டு அவர்கள் நிர்வாகப் பரிபாலனத்திற்காக உருவாக்கப்பட்ட கோட்டைக்கு உதவியது. மேற்காசியாவிலிருந்து வணிக ரீதியாக உள்ளே வந்த (பாரசீகம், ஈரானியம், அரேபியா) இஸ்லாமியர்களின் வருகையும், அவர்களின் கடற்கரைக்கு அருகே உள்ளே குடியிருப்புகளை உருவாக்கினார்கள். இதுவே இறுதிவரையிலும் மொத்த முஸ்லிம் மக்களும் கடற்கரை ஓரமாகவே தங்கள் வாழ்க்கையை அமைத்து வாழ்ந்து வந்தனர். இவர்களைப் பற்றிய மொத்த புரிதல்களும் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு தான் சரித்திரம் பதிவு செய்துள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இடப்பெயர்ச்சியாய் பல்வேறு நோக்கத்திற்காக உள்ளே சென்றவர்கள் எந்த இனக்குழுவுடன் கலந்து சேர்கிறார்களோ காலப்போக்கில் அவர்களே பின்னாளில் சிங்கள மொழி பேசிய சிங்களர்களாக மாற்றம் பெற்று விடுகின்றனர். அதுவே தான் தமிழ் இனக்குழுவுடன் வந்து சேர்பவர்கள் தமிழ் மக்களாக இறுதி வரைக்கும் வாழ்கின்றனர். இந்தச் சூழ்நிலை ஐரோப்பியர்கள் உள்ளே நுழையும் 1505 வரைக்கும் இப்படித்தான் இருக்கிறது. 15 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் உள்ளே நுழைந்த போது, அதுவே அவர்கள் ஆளுமைக்குள் இலங்கையைக் கொண்டு வந்த போது கத்தோலிக்கக் கிறிஸ்துவ மதத்திற்கு மாற்ற கட்டாயப்படுத்தியதும், மாறாதவர்கள் துன்புறுத்தி சாகடிப்பதும் என் இலங்கையின் வரலாற்றுப் பக்கங்களில் கிறிஸ்துவம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது அதுவே பின்னாளில் டச்சு அதைத் தொடர்ந்து ஆங்கிலேயர்கள் என்று உள்ளே வந்தவர்கள் வணிக நோக்கத்தையும் தாண்டி கலாச்சாரச் சீரழிவு தொடங்கிப் பல கண்ணீர் வரவழைக்கும் வாழ்க்கை முறையையும் உருவாக்கினர். இன்றைய பெரும்பாலான இலங்கை ஆட்சியாளர்கள் அத்தனை பேர்களும் கிறிஸ்துவத்தில் தொடங்கி, அதன் உட்பிரிவில் மாறி, இறுதியில் சிங்கள காப்பாளராக மாறி ஒரு புதிய பிறப்பாகத் தங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்ட பாக்யசாலிகளைப் பெற்றது தான் இலங்கை அரசாங்கம். சோழர்கள் மொத்தமாக 1070 ஆம் ஆண்டு வரைக்கும் வட இலங்கையைத் தங்களுடைய ஆளுமையில் முழுமையாக வைத்திருந்தனர். இறுதி ஆண்டுகளில் சரிந்து கொண்டுருந்த சோழப்பேரரசை, வீழ்ச்சிகளில் இருந்தவர்களை வெற்றிக் கொண்டு விஜயபாகு என்ற சிங்கள மன்னர் ஆட்சிக்கு வந்த (1053) பொலன்னறுவையில் நிறுவினார். மத மாச்சரியம் இல்லாத மக்கள் தலைவனாக இவரது ஆட்சி சிறப்புடன் இருப்பது மற்றொரு மகத்தான் ஆச்சரியம். இன்றைக்குப் பிரபல்யமாக இருக்கும் மத நல்லிணக்கத்தை அன்றே சாத்யப்படுத்திச் செயலாக்கத்தில் காட்டியவர். இவர் காலத்தில் சிங்கள தமிழர் இணைப்பு சாத்யமானது. எந்த அளவிற்கு என்றால் வலுவிழந்த சோழர்களுடன் சேர விரும்பாத இவன் தனது தங்கை மித்திராவை பாண்டிய இளவரசனுக்கு மனம் முடித்தான். இவர்களுக்குப் பிறந்த முதலாம் பராக்கிரமபாகு விஜயபாகு காலத்தில் தான் சிங்கள தமிழ் இனக்கலப்பும் உருவாகத் தொடங்கியது.. இந்த இனக்கலப்பு என்பது சமீப கால இலங்கை ஆட்சியாளர்கள் வரைக்கும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது, ஆட்சியில் இருந்த பண்டாரா நாயகா, ஜெயவர்த்னே வரைக்கும் தமிழ் மரபில் வந்தவர்கள் தான் என்பதை ஆதாரங்கள் மூலமாக நம்மால் புரிந்து கொள்ள முடியும். தமிழ் மற்றும் சிங்கள என்று வெவ்வேறு இனக்குழுக்களாக இருந்தாலும், மொழி, கலாச்சாரம், வழிபாட்டு முறைகள் என்று எல்லாவிதங்களிலும் வேறுபட்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருந்தாலும் வடக்கு தெற்கு என்று மொத்த இலங்கையையும் இயற்கையாக உருவாகியிருந்த மிகப் பெரிய காடு இவர்களைப் பிரித்து வைத்திருந்தது முதல் ஆச்சரியம். 14 ஆம் நூற்றாண்டில் வர்த்தகம் வளர்ச்சியடைந்த போது லவங்கம் என்ற பட்டையை உரிக்கக் காடுகளில் கூடுதலாகத் தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். சிங்கள மன்னர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்த சாலியர் (நெசவுத் தொழில்) என்ற சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்களை அழைத்து வந்தனர். இவர்கள் சிங்கள இனக்குழுவில் ஐக்கியமாக, இவர்களே காலப்போக்கில் தனியாகத் தனிச் சமூகப் பிரிவாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டு இறுதியில் சிங்கள இனக்குழுவாக மாறினர். இறுதிகாலம் வரையிலும் இவர்கள் சிங்கள சமூகத்தில் தாழ்த்தப்பட்ட சமூகப்பிரிவாகவே உருவாகியிருந்தனர். வடக்கு ஆதிக்கம் என்பது தமிழர்களிடத்திலும், தெற்குப் பகுதி சிங்களர் என்றும் உருவாக்கியது. . ஆனால் இதில் மற்றொரு குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் என்னவென்றால் அந்தந்த இனக்குழுவும், ஆளுமையில் இருந்தவர்களும் அமைதியாகத் தான் வாழ்ந்து உள்ளனர். ஐரோப்பியர்கள் உள்ளே நுழையும் வரைக்கும் இந்த இரண்டு இனக்குழுவிற்கிடையே உருவான பரஸ்பர போர்கள் என்பதெல்லாம் தங்களுடைய ஆளுமையை நிலைநாட்டக் கூடிய வகையில் தான் இருந்துள்ளது. இரண்டு இனக்குழுவாக இருந்தவர்கள் தவிர்த்து உள்ளே வந்த மலாய், (பின்னால் வரும் தந்தை செல்வா மலேசியாவில் ஈப்போவில் பிறந்து இலங்கையில் வந்து கத்தோலிக்கக் கிறிஸ்துவ மதத்திற்கு மாறி தமிழர்களின் தந்தையாக மாற்றம் பெற்றவர்) ஐரோப்பியர்கள் என்று தங்களுடைய குடும்பங்கள் தவிர்த்து இங்கேயும் மணம் புரிந்து புதிதான குழுக்களை உருவாக்கினர். பல தமிழ்த் தலைவர்கள் வந்து தொடக்கத்தில் ஆண்டுக் கொண்டுருந்த ஐரோப்பியர்களைத் திருமணம் செய்து சிறப்புச் சலுகைகள் பெறும் அளவிற்குப் புதிய மேல்தட்டு கலாச்சார வாழ்க்கையையும் தொடங்கி வைத்தனர். இலங்கையின் தொடக்கக் காலத் தமிழ் தலைவர்கள் பெரும்பாலோனோர் ஐரோப்பிய பெண்மணிகளை மணந்து மேல்தட்டு வாழ்க்கையும் தமிழ் பெயர்களையும் கொண்டு வாழ்ந்தனர். போர்த்துகீசியர்கள் எதிர்பாராத விதமாக இலங்கைக்கு எந்த நோக்கமும் இல்லாமல் உள்ளே வந்தனர். உள்ளே வந்தவர்கள் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, ஒற்றுமை இல்லாமல் இருந்தவர்களை தங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்து தங்கள் வணிக நோக்கத்தை சாத்தியப்படுத்திக் கொண்டனர். வணிக நோக்கமே அடிப்படை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் அளவிற்கு ஆளுமையையும் உருவாக்கினர். மொத்த மக்களின் வாழ்க்கையை மாற்றவும் செய்தனர். இலங்கையில் இந்தக் காலகட்டங்களில் தான் கிறிஸ்துவம் அதிகமாக ஆழமாக ஊடுருவியது அதுவே இறுதி வரைக்கும் கவனமாகப் பாதுகாத்து உள்ளே இருப்பதும் சம கால இலங்கை வரலாற்றுப் பக்கங்கள் வரைக்கும் இருப்பதும் மொத்தத்திலும் ஆச்சரியமான ஒன்று. தமிழராகப் பிறந்து, கலப்பினத்தில் உருவாகி, கிறிஸ்துவப் பிரிவில் நுழைந்து,பௌத்த காப்பாளராக மாறியும் கலந்து கட்டிய சமத்துவபுரங்களாக தங்களை மாற்றிக் கொண்ட ஒவ்வொரு சிங்கள தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை என்பது அரசியல் அதிகாரத்தைப் பிடிக்க எந்த அளவிற்கு வேண்டுமானாலும் செல்வோம் என்பதாகத்தான் உள்ளது. ஆனால் புத்தரின் கொள்கைப்படி வாழ்கிறோம் என்று சொன்ன அத்தனை சிங்கள தலைவர்களும் மறந்தும் கூடப் புத்தரின் கொள்கைகளைப் பின்பற்றவில்லை. ஆசையின் எல்லை எது என்பது உணர்ந்து வாழ்ந்து காட்டிய அவர்களின் வரலாறு எந்த வார்த்தைகளாலும் வர்ணிக்க முடியாது. புத்தரின் “ஆசையைத் துற” என்ற போதனை இன்று இலங்கைத் தீவின் தென்னை மரக் கூட்டங்களுக்கிடையே காற்றில் அலைந்து கொண்டுருக்கிறது. கிறிஸ்துவச் சிங்களரும் மன்னிக்கத் தயாராக இல்லை. இனவாதத்தை பௌத்த சிங்களரும் மறக்க விரும்பாத காரணத்தால் இன்று பாவமன்னிப்பு தரும் புத்த ஆலயத்தின் சுவர்களின் ஒவ்வொரு பகுதியிலும் நீக்கமுடியாத அளவுக்கு ரத்தக்கறை படிந்துள்ளது. சுயலாபத்தோடு, இனிவெறி கொள்கையோடு வாழ்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய ஆட்சியாளர்களின் வெற்றி என்பது இலங்கையில் வாழ்ந்து மடிந்த மொத்த அப்பாவி சிங்கள தமிழர்களின் சமாதியின் மேல் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து பயணிப்போம். 9. வந்தவர்களும் வீழ்ந்தவர்களும் இலங்கைத் தீவில் ஆங்கிலேயர்கள் பதினேழாம் நூற்றாண்டின் முடியும் தருணத்தில் தான் உள்ளே வந்தனர். தொடக்கத்தில் கிழக்கிந்திய நிறுவனம் தான் உள்ளே வந்தது. இந்தியாவிற்குள் வந்தது போல் எதிர்பாரதவிதமாய் அல்ல. சொர்க்கத்தீவின் வளமையைப் புரிந்து கொண்டவர்கள் காத்திருந்து கச்சிதமாகக் காய் நகர்த்தி உள்ளே வந்தார்கள். இந்தியாவில் இருந்து கொண்டே இலங்கையில் நடந்து கொண்டிருந்த ஒன்வொன்றையும் கவனத்துடன் கவனித்துக் கொண்டுருந்தனர். தொடக்கத்தில் கிழக்கிந்திய நிறுவனம் இலங்கைக்குள் நுழைந்த போதிலும் முறைப்படி இலங்கை என்பது பிரிட்டனின் மன்னரின் சாம்ராஜ்யத்திற்குள் உண்டான ஒரு பகுதி என்பதாக அவர்கள் அறிவிக்க இரண்டு ஆண்டுகளை எடுத்துக்கொண்டனர். இவர்களுக்கு முன்னால் இலங்கைத் தீவின் அந்நிய முதல் வருகையாளர் என்ற பெருமையைத் தட்டிக்கொண்டு செல்வபவர்கள் போர்த்துகீசியர்கள். பதினைந்தாம் நூற்றாண்டின் (1505) தொடக்கத்தில் போர்த்துகீசியர்கள் இலங்கையில் கால் வைத்தது ஒரு எதிர்பாரதத் திருப்புமுனை. டான் லுரன்கோ டி அல்மெடியா தலைமையில் வந்த அந்தக் கப்பல், எதிர்பாரதவிதமாக அடித்த புயல்காற்றில் சிக்கி தவித்து இந்திய பெருங்கடலுக்குள் நுழைந்தது. அவர்கள் செல்ல வேண்டிய பயணத் திட்டத்தை முற்றிலும் மாற்றிய சம்பவம் இது. அப்போது அவர்கள் பயணம் செய்து வந்த கப்பல் இலங்கைத் தீவு இருந்த பக்கம் நகர போர்த்துகீசியர்களின் வணிகப் பயணம் என்பது இலங்கையின் வரலாற்றுப் பக்கங்களில் இடம் பிடிக்கத் தொடங்கியது. இவர்களின் கப்பல் வந்து நின்ற இடம் இலங்கை வரைபடத்தின் கீழ்பகுதியில் நெற்றிப்புருவம் போலிருக்கும் காலி என்ற பகுதி. வரலாற்று ஆசிரியர் மார்கோ போலா என்பவர் வர்ணித்த வார்த்தைகளின் படி இலங்கை என்பது பூமியின் சொர்க்கத் தீவு. ஆனால் இவர்களின் நுழைவுக்குப் பிறகு தங்களின் வழிபாடுகளையும், அன்றாட வாழ்க்கைப் பாடுகளையும் பார்த்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருந்த இனக்குழுவும், அவர்களை ஆளுமையில் வைத்திருந்த குறுநில மன்னர்களின் வாழ்க்கையும் வேறு திசையில் பயணிக்கத் தொடங்கியது. எட்டாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்தவர்களுக்கு இதுவொரு எதிர்பாராத திருப்புமுனை, உள்ளேயிருந்த அத்தனை பேர்களின் அடிப்படை வாழ்க்கை முறைகளையே இவர்கள் திசை திருப்பப் போகின்றார்கள் என்பதை அன்று உணர்ந்தவர் எவரும் இருந்துருப்பார்களா என்பது சந்தேகமே? சிங்களர்கள், தமிழர்கள் என்று இரு வேறு திசையாக, வெவ்வேறு கலாச்சாரங்களுடன் வாழ்ந்து கொண்டிருந்தனர். ஒற்றுமையில்லாமல் அங்கங்கே சிதறி குழுக்களாக வாழ்ந்து கொண்டுருந்தவர்களைப் பார்த்ததும் வந்து இறங்கியவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. பாதிப் பயணத்தில் வந்து இறங்கியது போர்த்துகீசியர்களின் அதிர்ஷ்ட நாட்களே. போர்த்துகீசியர்களின் தூர தேச வணிக நோக்க பயணத்தில் இந்தத் தீவு அவர்களின் பட்டியலில் இல்லை. 1498 ஆம் ஆண்டுக் கடல்பயணத்தின் மூலமாக வாஸ்கோடகமா இந்தியாவை கண்டு பிடித்த பின்பு தான் உலகமெங்கம் அன்றைய காலகட்டத்தில் தேசங்களின் வணிக வரலாறு வேறு திசையில் செல்லத் தொடங்கியது. எவரிடமிருந்தோ வாங்கி விற்பவர்களின் வணிக நோக்கங்களின் அடுத்தக் கட்டமாக நேரிடையான கொள்முதல் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு நாட்டினரையும் கடல் கடக்க வைத்தது. முடிந்தவர்கள் கடல் கடந்து சென்று தாங்கள் விரும்பியதை சாதித்துக்கொண்ட காலகட்டமிது. கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவிற்குள் வந்ததும் இதைப்போல நேரிடையான வர்க்கத்திற்கே. ஆனால் போர்த்துகீசியர்களுக்கு அதிர்ஷ்ட பரிசு போல் எதிர்பாரதவிதமாய் இலங்கைத் தீவு அமைந்தது. அப்போது இலங்கையில் பிரபல்யமாக இருந்த லவங்கப்பட்டை உற்பத்தி செய்து கொள்ளக் கொழும்புவை ஆண்டுக் கொண்டுருந்த சிங்கள மன்னரான வீர பராக்கிரமபாஹ உடன் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கிக் கொண்டனர். மொத்தமாக உள்ளே இதற்கென்று ஒரு தொழிற்சாலையை உருவாக்கிக்கொள்வது. அதே சமயம் உள்நாட்டுக்குத் தேவைப்படும் இலவங்கப்பட்டையையும் அளிப்பது என்பது தான் இருவர் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின் சராம்சம். இவர்களுக்கு அதிர்ஷ்டக் காற்று இன்னும் பலமாக மன்னர் இறப்பு மூலம் உருவானது. மன்னருக்கு பிறகு யார் ஆள்வது என்பதில் மன்னரின் இரண்டு மகன்களுக்குத் தோன்றிய வாரிசுப் போரை போர்த்துகீசியர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர். ஏற்கனவே போட்டுருந்த ஒப்பந்தத்தை மறுபடியும் மாற்றி அமைத்து உள்ளே நுழைந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு (1518) இலங்கையின் கடலோரப்பகுதி மொத்தத்தையும் தங்கள் ஆளுமையில் கொண்டு வந்தனர். வர்த்தக மேலாண்மைக்கு என்று சொல்லிக்கொண்டு கொழும்புவில் ஒரு கோட்டையையும் கட்டிக் கொண்டனர். உள்நாட்டுக் குழப்பங்களை மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டு தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட போர்த்துகீசியர்களின் கவனம் யாழ்பாணத்தின் மேல் விழுந்தது. முதலில் கிறிஸ்தவக் கத்தோலிக்க மதத்தைப் பரப்புவதற்காகக் கிபி 1544 ஆம் ஆண்டுத் தென்னிந்தியாவில் இருந்து பிரான்சிஸ் சேவியர் என்ற பாதிரியாரை யாழ்பாணத்திற்கு வரவழைத்தனர். முதலில் இவர்கள் யாழ்பாணத்தில் உள்ள மன்னாரில் பல குடும்பங்களை மதம் மாற்றத் தொடங்க அப்போது ஆண்டுக் கொண்டுருந்த சங்கிலி மன்னன், மாறிய அத்தனை பேர்களுக்கு மரணத் தண்டணை விதித்தான். இதைக் காராணமாக வைத்துக்கொண்டு கோவாவில் இருந்து வந்த படைகளின் துணையோடு மன்னார் பகுதியையும், இறுதியாக யாழ்பாணம் முழுமையையும் தங்களுடைய ஆளுமைக்குள் கொண்டு வந்தனர். 1591 ஆம் ஆண்டு அண்ட்ரே பர்டாடோ தலைமையில் நடந்த போரின் இறுதியில் தங்கள் சார்பாக ஒரு பொம்மை சிங்கள மன்னனை உருவாக்கி ஆட்சி புரிய வைத்து தைரியமாகக் கிறிஸ்துவ மத மாற்றத்தை செயல்படுத்தினார்கள். இதைப் பார்த்துக்கொண்டுருந்த சிங்களர்களுக்கு இரண்டு விதத்தில் பயத்தை உருவாக்கியது. சிங்களர்களைப் பௌத்த மதத்தில் இருந்தது கிறிஸ்துவத்திற்கு மாற்ற என்ற காரணங்களை வைத்துக் கொண்டு துன்புறுத்த தொடங்கினர். மேலும் இவர்களிடம் இருந்த நவீன ரக ஆயுதங்களைப் பார்த்து வேறு பயந்து கொண்டு இனி இவர்களை இங்கிருந்து எப்படி நகர்த்துவது என்று யோசிக்கத் தொடங்கினர். வானத்தில் இருந்து யாராவது வந்து குதித்து நம்மைக் காக்க வரமாட்டார்களா? என்று காத்துக்கொண்டுருந்தவர்களுக்கு அந்த நாளும் வந்தது. வந்தது தேவகுமாரன் அல்ல. டச்சுக் கடற்படை தளபதி வடிவில். போர்த்துகீசியர்கள் இலங்கையின் உள்ளே நுழைந்த போது உள்ளே ஆண்டுக் கொண்டுருந்த தமிழ் மன்னரின் பெயர் சங்கிலி குமரன். அந்நியர்கள் உள்ளே வருவதற்கு முன்பே இலங்கை என்பது கப்பல் மூலம் செய்யும் வாணிபத்தில் அட்டகாச பாதையில் பயணித்துக்கொண்டுருந்தது. கிபி 1344 பயணியாக வந்த மேல்நாட்டு பயண அறிஞர்கள் அப்போது இலங்கையின் உள்ளே வெகு சிறப்பாக நடந்து கொண்டுருந்த கப்பல் வணிகத்தைப் பாராட்டி எழுதியுள்ளனர். அவர் எழுதிய பயணக்குறிப்புகளின்படி 100 கப்பல்கள் அணிவகுத்து வந்து போய்க்கொண்டுருப்பதாகக் குறிப்பிடும் அளவிற்கு இலங்கையின் ஒவ்வொரு காலக் கட்ட வளர்ச்சிக்கும் கடல் வணிகம் பல சிறப்புகளை உருவாக்கிக் கொடுத்துக் கொண்டு இருந்தது. இறுதியில் வண்ணார் பொன்னை என்ற இடத்தில் நடந்த போரில் கைக்கூலியின் காட்டிக்கொடுப்புக் காரணமாகச் சங்கிலி குமரன் போர்த்துகீசியர்களிடம் தோற்றார். உள்ளே வந்து இறங்கியது முதல் ஏறக்குறைய 150 ஆண்டுகள் போர்த்துகீசியர்கள் இலங்கையைத் தங்கள் ஆளுமைக்குள் வைத்து இருந்தனர். இங்கே ஆட்சி புரிந்த கரிகாற்பெருவளத்தான் தொடங்கி, ராஜராஜசோழன், அதற்குப் பின்னால் பாண்டிய மன்னர்கள் என்ற மொத்த தமிழ் மன்னர்கள் இலங்கையில் உருவாக்கிய காலத்தால் அழிக்க முடியாத கலைப் பொக்கிஷங்களையும், ஆலயங்களையும் போர்த்துகீசியர்கள் அழித்ததோடு மட்டுமல்லாமல், அழிக்கப்பட்ட இடிபாடு பொருட்களை வைத்துத் தங்கள் நிர்வாகத்திற்குத் தேவையான கோட்டைகளையும் உருவாக்கிக் கொண்டனர். வரலாற்றுச் சுவடுகள் இருந்தால் வந்த பாதையை நினைத்து ஏங்குவார்கள் அல்லவா? வீணாக ஏன் பழையவற்றை நினைக்க வைக்க வேண்டும் என்ற நல்லெண்ணமாக இருந்துருக்கலாம். இலங்கையில் தொடக்கத்தில் உள்ளே வந்த தமிழ் மன்னர்கள் கஷ்டப்பட்டுக் கப்பல் மூலம் கொண்டு வந்து சேர்த்த பொருட்களால் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு கலைச்சின்னங்களையும் இவர்கள் இஷ்டப்பட்டு அழித்துச் சிக்கனமாய்ச் சிறப்பாய் தங்களுக்குத் தேவையானவைகளை உருவாக்கினார்கள். சிங்களர்களர்களின் பௌத்த ஆலயங்களும் அழிக்கப்பட்டது. தொடர்ச்சியாக மற்றொருபுறம் கட்டாய மத மாற்றம். கிறிஸ்துவக் கத்தோலிக்க மதத்திற்கு மாறாதவர்களைத் துன்புறுத்த தொடங்க சொர்க்கத்தீவின் மக்கள் வாழ்க்கை முறையில் நரகம் எட்டிப்பார்க்கவும் தொடங்கியது. இந்த மத மாற்றத்திற்கு மற்றொரு காரணம் அப்போது இந்தியாவில் கோவா பகுதியில் போர்த்துகீசியர்கள் ஆட்சி புரிந்து கொண்டுருந்தனர். அங்கு நடந்து கொண்டுருந்த மதமாற்றங்கள் இங்கும் வரத் துவங்க தமிழர், சிங்களர், பின்னாளில் வர்த்தகம் மூலம் வந்த இஸ்லாமியர்கள் என்ற மூன்றாவது இனத்திற்குப்பிறகு கிறிஸ்துவம் என்பது நான்காவது திசையாக மாறத் தொடங்கியது. மக்களின் வாழ்க்கையும் நாறத் தொடங்கியது. பெரும்பான்மை இனக்குழுவான சிங்கள தமிழர்கள் என்று இரண்டு வேறு கூறாக அவரவர் திசையில் அப்போது பிரித்து வாழ்ந்து கொண்டுருந்தாலும், இந்த இரண்டு கூறுகளையும் பல கூறுகளாக வைத்து விளையாடிக் கொண்டுருந்த போர்த்துகீசியர்களை வெளியேற அடுத்து உள்ளே நுழைபவர்கள் டச்சு. இவர்களை இன்று வரைக்கும் இலங்கையின் வரலாற்றுப் பக்கங்கள் ஓக்லாந்தர் (ஹாலாந்து) என்று அழைக்கின்றது. 1602 ஆம் ஆண்டு டச்சு நாட்டு கப்பல் படைத்தளபதி ஜோரிஸ் ஸ்பில்பெர்க் தான் கொழும்பு கடற்கரையின் உள்ளே நுழைந்தவர், இவர்கள் நுழைந்த போது யாழ்பாணம் மற்றும் கோட்டை அரசு முழுமையாகப் போர்த்துகீசியர்களின் வசம் இருந்தது. அதனை உணர்ந்து கொண்டு அப்போது அவர் நேரிடையாகக் கண்டி வந்து ஆண்டுக் கொண்டுருந்த மன்னரை சந்தித்தனர். கண்டி மன்னர் விண்ணப்பத்தின் பேரில் டச்சுப் படைகள், உள்ளே இருந்த போர்த்துகீசியர்களுடன் மோதத் தொடங்கினர். போர்த்துகீசியர்களின் மோதி வென்ற பகுதிகளை ஒப்பந்தப்படி கண்டி மன்னரிடம் கொடுக்காமல் தாங்களே வைத்து ஆளத் தொடங்கினர். ஏறக்குறைய 138 ஆண்டுகள் (கிபி 1658 முதல் கிபி 1796 வரை) யாழ்பாணக் கோட்டையை ஹாலந்து தங்கள் வசம் வைத்து இருந்தனர். இவர்களுக்கு முன்னால் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட சதுர வடிவ கோட்டைகளை இடித்து விட்டு ஐங்கோண வடிவில் கோட்டைகளை யாழ்பாணத்தில் கட்டினார்கள். இந்தக் காலகட்டத்தில் இந்தப் பகுதி முழுவதும் தமிழர்களின் ஆளுமையில் இருந்தது. [] குறிப்பாக வன்னிப் பகுதியில் வன்னியன் என்ற தமிழ் மன்னனின் ஆட்சி நடத்திக் கொண்டுருந்தார்.. போர்த்துகீசியர்களும், டச்சக்காரர்களும் தங்களை இந்த மண்ணில் நிலைநாட்டிக்கொள்ளச் சண்டையிட்டுக் கொண்டார்களே தவிரத் தங்கள் நாட்டுக்கு அனுப்பிக்கொண்டுருந்த இயற்கை வளங்களும், சூறையாடப்பட்ட செல்வங்களும் நாளுக்குக் நாள் அதிகமாகத் தான் இருந்தது. அப்போது கூட இலங்கையின் உள்ளேயிருந்த முடியாட்சிக்கு உயிர் இருந்தது என்பது ஆச்சரியமே.. பதினேழாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் (1799) ஆங்கிலேயர்கள் உள்ளே வரும் வரைக்கும் டச்சு மக்கள் இலங்கையின் மொத்த மக்களையும் பிச்சுப் பந்தாடினார்கள். இவர்கள் உருவாக்கிய மதமாற்றம் ஒரு பக்கம். போர்த்துகீசியர்களை அடக்கவென்று தொடுக்கப்பட்ட போர்களின் கோரச்சுவடுகள். இறுதியில் டச்சுப் படைக்குப் போர்த்துகீசியர்களே பரவாயில்லை என்கிற அளவிற்குக் கொடூரமாக நடந்து கொண்டனர். தங்கள் மதத்தைத் தவிர வேறு எந்த மதத்தையும் இவர்களும் அனுமதிக்கத் தயாராய் இல்லை. பௌத்த, இந்து, முஸ்லீம் மக்கள் மீது இதற்கென்று சிறப்பு வரிகள் என்று போட்டனர். பேய்க்கு பயந்து பிசாக்கு வாக்கப்பட்ட சூழ்நிலை. ஆனால் இவர்கள் காலத்தில் நடந்த மற்றொரு சிறப்பு, ஏற்கனவே இறு வேறு கலாச்சாரத்தின், மொழியின் அடிப்படையில் வாழ்ந்து கொண்டுருந்த சிங்கள தமிழ் மக்களை (இனக்குழுக்கள்) எந்த வகையிலும் அடிப்படை கட்டுமானத்தின் மேல் கை வைக்கவில்லை. இவர்கள் உருவாக்கிய ஆட்சி முறைகள் கூட இரு வேறு மக்களுக்கென்று தனித்தனியாக உருவாக்கப்பட்டதாகவே இருந்தது. தங்களுடைய வணிகத்திற்காக, தங்கள் ஆளுமையை நிலைநாட்டிக்கொள்ள என்று அவர்களை வாட்டி வைத்தனரே தவிர அவர்களின் அடிப்படை உரிமைகளை எந்த வகையிலும் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் இறங்கவில்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. அப்போது இவர்கள் உருவாக்கியது தான் இலங்கையின் மொத்த கடற்கரை ஓரப் பகுதிகளை ஆறு மாவட்டங்களாகப் பிரித்தது. யாழ்பாணம், திருகோணமலை, மட்டக்கிளப்பு என்ற மூன்று பகுதிகள் தமிழர்களுக்கென்றும், கொழும்பு, புத்தளம், கற்பிட்டி என்ற இந்த மூன்று பகுதிகள் சிங்களர்களுக்கென்றும் பிரித்து வைத்து ஆண்டனர். முதல் மூன்றுக்கும் தலைநகரம் யாழ்பாணம். சிங்களப் பகுதிகளுக்குக் கொழும்பு. அப்போது இவர்கள் உருவாக்கியது தான் யாழ்பாணம் பகுதிக்கு மட்டும் தனியாக ஒரு கவர்னர், மற்றும் அதற்கென்று வித்யாசமான அரசியல் அமைப்பு. இலங்கையை ஒட்டு மொத்தமாக நிர்வாகம் செய்யக் கடலோரப் பகுதிகளை மூன்று பகுதிகளாகப் பிரித்தனர். கொழும்பு, யாழ்பாணம், கல்லெ என்று பிரித்து அதற்கென்று மூன்று துணை நிலை கவர்னர்களை நியமித்தனர். யாழ்பாணத்திற்கென்று உருவாக்கப்பட்ட சட்டங்கள் கொண்டு அந்தக் கவர்னர் தனியாக ஆளுமை செய்து கொண்டுருந்தார்கள். தொடர்ந்து பயணிப்போம்….. 10. வெந்து தணிந்தது தீவு ஸ்பானீஷ், டச்சு, போர்த்துகீசியர்கள் என்று ஒவ்வொருவரும் தங்கள் வணிக நோக்கத்திற்காக ஒவ்வொரு நாட்டிற்குள் சென்றாலும் சூரியன் அஸ்தம்பிக்காத நாடு என்ற பெருமையைப் பெற்றுருந்த பிரிட்டன் மட்டும் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு இருந்ததை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். மற்றவர்கள் வணிக நோக்கத்தையும் மீறி, சரியான விலை கொடுக்காமல் ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல், எதிர்த்தவர்களை நடுக்கடலில் கொண்டு போய்த் தள்ளி அழிப்பது வரைக்கும் செய்தனர். இதனோடு தங்கள் மதம் சார்ந்த அத்தனையையும் வலுக்கட்டாயமாக மக்கள் மீது திணித்தனர். ஆனால் ஆங்கிலேயர்களுக்கு வணிகம் முக்கியம். அத்துடன் மதம் என்பது அதுவொரு கிளைநதி. உள்ளே அதுபாட்டுக்குத் தனியாக வேறொரு பாதையில் போய்க் கொண்டே இருக்கும். எதுவுமே வெளிப்படையாகத் தெரியாது. உலகத்திற்கே இன்று வரை அவர்கள் மிகச் சிறந்த ராஜதந்திரிகளாக ஏன் இருக்கின்றார்கள்? என்பதற்கு இதை விட வேறு உதாரணம் நமக்குத் தேவையா? தொடக்கத்தில் இலங்கையின் உள்ளே ஆங்கிலேயர்கள் நுழைந்த போது அப்போது பிரிட்டனுக்கு ஹாலந்துக்கும் போர் நடந்து கொண்டுருந்தது. இதன் (1782) எதிரொலியாக ஆங்கிலேயர்கள் சென்னையில் இருந்து அனுப்பப்பட்ட படையின் மூலம் திருகோணமலையில் இறங்கி கைப்பற்றினாலும் மீண்டும் 1795 ஆம் ஆண்டுத் தான் உள்ளே நுழைந்தனர். இலங்கையில் இருந்த பொக்கிஷ புதையலை இறைவன் மற்றவர்களுக்காகவா படைத்தான்? அது போக இயற்கை கொடையாகப் படைத்து இருக்கும் திருகோணமலை துறைமுகம். யோசித்தவர்கள் செயலில் இறங்கினர். 1796 ஆம் ஆண்டுப் பிரிட்டிஷார் இலங்கையில் டச்சுக்காரர்கள் பிரித்து வைத்திருந்த மூன்று பகுதிகளையும் கைப்பற்றியதோடு, மற்றப் பகுதிகளையும் (கிபி 1776 பிப்ரவரி) முழுமையாகக் கைப்பற்றினார்கள். கைப்பற்றப்பட்ட பகுதிகளைக் கிழக்கிந்திய கம்பெனியின் சென்னையில் கவர்னராக இருந்த ஹோபர்ட் பிரபு என்பவரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.. ஆங்கிலேயர்கள் தங்களுடைய ஆளுமைக்குள் மொத்த இலங்கையையும் கொண்டு வந்தாலும் முறைப்படியான நிர்வாக அமைப்பை கொண்டு வருவதில் அவசரம் காட்டவில்லை. அப்போது ஐரோப்பாவில் பிரெஞ்ச் மாவீரன் நெப்போலியன் படையெடுப்பென்பது அன்றைய சூழ்நிலையில் பீதியை கிளப்பிக் கொண்டுருந்து. பெரிய நாடுகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளப் பகீரப்பிரயத்தனத்தில் இருந்தன. தங்களுடைய ஆளுமையில் இருந்த நெதர்லாந்தை பெற்றுக்கொண்டு இலங்கையைக் கொடுத்து விடலாம் என்ற எண்ணம் இருந்தது. இது தொடர்பாக உருவாகும் செலவினங்களுக்காக முறைப்படி ஆட்சி அதிகாரம் ஆளுமையை உருவாக்காத ஆங்கிலேயர்கள், தேவைப்படும் நிதிக்காக இலங்கையின் உள்ளே ஒரு நிர்வாக அமைப்பை ஏற்படுத்தினார்கள். ஏதோ ஒரு வகையில் உள்ளே இருந்து நிதியை திரட்டுவது. பசுமைப்பூமியில் வேறு என்ன இருக்க முடியும்? அன்றைய சூழ்நிலையில் தென்னை மரங்கள் தான் அதிகமாக இருந்தது. தென்னை வைத்திருந்தவர்கள் மேல் மரத்திற்கு வரி (1796) என்று ஒரு புதிய கணக்கை தொடங்கி வைத்துக் கடைசியில் தோல்வியில் முடிந்து ஒரு வருடத்தில் அதைத் திரும்பப் பெற்றனர். இலங்கையின் மொத்த ஆளுமைப் பொறுப்பையும் இங்கிலாந்து மன்னர் வசம் (1798) ஓப்படைக்கப்பட்டது. நிர்வாகமென்பது மன்னரின் பிரதிநிதிகள் வசம் ஒப்படைக்கப்பட்டாலும், வர்த்தகம் தொடர்பாகத் தேவைப்படும் அனுமதியென்பது சென்னையில் இருக்கும் கிழங்கிந்திய கம்பெனி மூலம் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஹாலந்து நாட்டுடன் (1802) ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்த உடன்படிக்கையின் படி டச்சு ஆதிக்கத்தில் இருந்த மற்ற அத்தனை பகுதிகளும் பிரிட்டன் குடியேற்றப்பகுதியாக அறிவிக்கப்பட்டு ஆங்கிலேயர்களின் ராஜபாட்டைத் தொடங்கியது. தொடக்கத்தில் ஆங்கிலேயர்களால் (1803) உருவாக்கப்பட்ட வரைபடத்தின் படி அன்றே ஈழத் தமிழர்களின் தாயகம் என்பதை வடக்கில் சிலாவ், கிழக்கில் மடாவ்ச்சி, தெற்கில் படவில்குளத்தில் இருந்து திருகோணமலை மாவட்டம், மட்டக்கிளப்பு மாவட்டம் என்பது வரைக்கும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களுடன் புத்தளக் கரையோரப் பகுதியையும் உள்ளடக்கிய பகுதியாகும். இது இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 32 சதவிகிதம் ஆகும். மேலும் இலங்கையின் மொத்தக் கடற்பரப்பில் 60 சதவிகிதம் இந்தத் தமிழர் தாயகத்தில் அடங்கியிருந்தது. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கும்புக்கன் ஆறு, வடமேற்கு மாகாணத்தின் மகா ஓயாவும், அதன் இரு எல்லைகளாக் காட்டப்பட்டு மகாவலி கங்கை, படிப்பனை ஆறு, கந்தளாய்க்குளம், ஜான் ஓயா, அருவி ஆறு போன்ற ஆற்றுப் படுகைகளும் அதன் எல்லைப் பிரதேசமாகக் காட்டப்பட்டுள்ளது. இது தான் பின்னாளில் சிங்களர்கள் கையில் ஆங்கிலேயர்களால் ஓப்படைக்கப்பட்டது. ஆனால் ஆங்கிலேயர்கள் ஆளுமைக்குள் மொத்த இலங்கையும் வந்துவிட்டாலும் கூட உள்ளே அப்போதும் கூட உள்ளே முடியாட்சி இருந்தது முதல் ஆச்சரியம் என்றால் சிங்கள மன்னராக இருந்த அவர் உண்மையிலேயே தமிழர் என்பது அடுத்த மகத்தான அதிசயம் ஹாலந்து படைகளுடன் மோதி அவர்களை வென்று, ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வந்த போதும் அவர்களுக்குச் சிம்ம செப்பமனமாக இருந்த (1790) குலசேகர வைரமுத்து பண்டார வன்னியன் என்ற தமிழ் மன்னன் சிறப்புடன் இருப்பதும் மொத்தத்திலும் மறுக்கமுடியா வரலாற்றுத் தடங்கள். இவர் தான் பின்னால் வந்த கொரில்லா போர்த் தந்திரங்களின் பிதாமகன். தொடர்ந்து பயணிப்போம்… 11. மன்னர்களும் மாட்சிமை தாங்கியவர்களும் கண்டி என்பது இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதி. கிபி 14 ஆம் நூற்றாண்டு காலம் முதல் தனி ராஜ்யமாகவே மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது. ஆண்டுக் கொண்டுருந்தவர்கள் சிங்கள தமிழ் மன்னர்களாக இருந்தாலும் இரு இன மக்களும் ஒன்றாகத்தான் வாழ்ந்தார்கள். இதே நிலைமை தான் மொத்த தீவுப் பகுதியிலும் இருந்தது. பெரும்பான்மை சிறுபான்மை என்ற வார்த்தைகள் பின்னால் வந்தவர்கள் தங்கள் வசதிகளுக்காக உருவாக்கியது. ஆதிக்கம் செலுத்த விரும்பியவர்கள், இறுதியில் அதில் ஜெயித்து வருவர்களும் தானே ஆட்சியில் அமர முடியும்?. சிங்களர்களின் கடைசி மன்னராகக் கண்டிப்பகுதியில் இருந்தவர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கே. இவருடைய உண்மையான பெயர் கண்ணுச்சாமி. சிங்களராக மாறியவர். இவர் மன்னராக வருவதற்கு முன்பு முந்தைய மன்னராக இருந்தவர் ஸ்ரீ ராஜாதி ராஜசிங்க. இவரும் தென்னிந்தியாவிலிருந்து சென்றவர். ஆழ்ந்த புலமையும், சிறந்த அறிவுடன் இருப்பவர்களுக்கு ஏதோ ஒரு குறை இருப்பது தானே உலக நியதி. குழந்தை பாக்யம் இல்லாத ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கேவின் மரணம், எப்போதும் ராஜா ராணி கதைகளில் வருவது போல் அங்கு அதிகாரப் போட்டியும் ஆரம்பமானது. மன்னர் இறக்கும் தருவாயில் தனக்குப் பிறகு வரவேண்டியவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பைத் தலைமை அமைச்சராக இருந்த பிலிமத்தலாவிடம் ஒப்படைத்திருந்தார்.. வாரிசு யாரென்று தேர்ந்தெடுக்கும் படலம் ஆரம்பமான போதே உள்ளே குடுமிபிடி சண்டையும் தொடங்கியது. இறந்த மன்னரின் மனைவி உபேந்திரம்மாவின் சகோதரர் கோதாவில் குதித்தார். ஆனால் தலைமை அமைச்சர் இறுதியாக மன்னராகத் தேர்ந்தெடுத்தது கண்ணுச்சாமி என்ற மேலே சொன்ன ஸ்ரீ விக்கிரம ராஜ சிங்கேவை. இவர் தென்னிந்தியாவில் இருந்த நாயக்கர் இனத்தைச் சேர்ந்தவர். எப்போதும் போலப் பட்டம் சூட்டியதும் தனது பெயரை மாற்றிக்கொண்டு முழுமையான சிங்களராக மாறினார். இவரின் அதிர்ஷ்ட கதவுகள் திறந்த போதே அவஸ்த்தைகளும் ஜன்னலின் வழியாகச் சூறைக்காற்றாக உள்ளே வரத் தொடங்கியது. ஆட்சி காலம் முழுக்கச் சதிகளுடன் ஓயாத போராட்டங்கள் தான். வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஒரு பக்கம். இவரின் வம்சக் கோளாரை ஆராய்ந்து அவஸ்த்தை கொண்டவர்கள் மறுபக்கம். கல்வி முதல் கலை வரைக்கும் மொத்தத்தில் புத்திசாலியாகவே வாழ்ந்த இவருக்கும் சதிகாரர்களை வெல்லும் அளவிற்குச் சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக அமையவில்லை. போதாத குறைக்கு அப்போது பிரிட்டிஷ் வேறு முடியாட்சியை முடித்துக் கட்டும் நோக்கத்தில் அலைந்து கொண்டுருந்தனர்.. இவரைக் கவிழ்த்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிகொண்டுருந்த எலப்போலா என்பவரின் பின்னால் இருந்த சிங்கள கூட்டங்களை வேறு சமாளிக்க வேண்டும். மன்னரை முடித்துக்கட்ட வேண்டும் என்ற வாய்ப்புக்காகக் காத்துக் கொண்டுருந்தவர்களின் வாசல் கதவின் அருகே வந்து நின்றார்கள் ஆங்கிலேயர்கள். ஆங்கிலேயர்களுடன் எலப்போலா கூட்டணி அமைக்க மன்னர் தலைமறைவாகி கண்டி காடுகளுக்குள் தஞ்சம் புகுந்தார். எலப்போலாவின் நாசகாரப்படைகள் மன்னரின் மனைவியைக் கண்டு கொள்ள இறுதியில் மன்னரும் சரண் அடைய தமிழ்நாட்டு வேலூர் சிறையில் சாகும் வரைக்கும் அடைக்கப்பட்டார். இவர் உருவாக்கிய சிங்கம் பொறித்த கொடி தான் இன்று வரையிலும் இலங்கை அரசாங்கத்தின் தேசிய கொடி. பின்னாளில் இலங்கை சுதந்திரம் பெற்ற போது எந்தக் கொடியை இலங்கைக்குப் பயன்படுத்துவது என்ற கேள்வி எழுந்த போது இந்தக் கொடியை சிங்களத் தலைவர் பிரதமராக வந்த சேனநாயகா சுட்டிக் காட்டினர். மூன்று இனங்களுக்கும் பொதுவான சின்னம் பொதித்த கொடி வேண்டுமெடும் என்று வந்த ஆலோசனைகளை புறக்கணித்தார். அப்போது சேனநாயகா “இப்போது இந்தக் கொடியை ஏற்றிக்கொள்வோம். பிறகு மாற்றத்தைப் பற்றி யோசிப்போம்” என்றார். அதற்கு அப்போது ஒரு சப்பைக்கட்டு வேறு சொன்னார்கள். கடைசிக் கண்டி மன்னர் சிங்களராக வாழ்ந்தாலும் அடிப்படையில் அவர் ஒரு தமிழர் தானே என்பதாகச் சொல்லி விரும்பியதை சாதித்துக்கொண்டார்கள். கண்டி மன்னர் மீது பிரிட்டிஷ் இராணுவ நடவடிக்கை எடுக்கக் காரணமாக இருந்த பத்துப் பேர்களில் நம்மால் அடையாளம் காணக்கூடிய ஒருவர் உண்டு. அவர் பெயர் ரத்வட்டே. பின்னாளில் சிங்கள தலைவராக வரப்போகும் சந்திரகா குமார துங்காவின் கணவர் வழி பாட்டனார். ஆங்கிலேயர்களுக்கு உதவும் போதே இந்த நேசக்கூட்டணியினர் பத்து கட்டளைகளை கொடுத்து இருந்தனர். ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கேவை கண்டி மன்னர் பதவியில் இருந்து நீக்கப்படுவது, அவருக்குப் பின் யாரும் அந்த உரிமை கோராமல் இருப்பது, மன்னர் சார்ந்த அத்தனை பேர்களையும் நாடு கடத்தப்படுவது. இதற்கெல்லாம் மேலாக கண்டியின் உள்ளே வாழ்ந்து கொண்டுருக்கும் மொத்த தமிழர்களையும் வெளியேற்றுவது, அவர்கள் மறுபடியும் திரும்பி உள்ளே வந்தால் அபதாரம் விதிப்பது என்று ஏசுநாதரின் கட்டளைகள் போல் போய்க் கொண்டே இருக்கின்றது. கடைசியாக அவர்கள் சொன்ன “புத்தமதத்தை அரசாங்க மதமாக அங்கிகரிப்பது” என்ற கருப்பு வார்த்தைகள் தான் பின்னாளில் இலங்கை என்பது நிலமெல்லாம் ரத்தமாக மாற்றப்போகிறது என்பதை அன்று உணர்ந்தவர் யாருமில்லை. அன்றைய தினம் ஆங்கிலேயர்களின் பார்வையென்பது இனி இலங்கைக்குள் முடியாட்சி என்று எவரும் வாய்த் திறக்கக்கூடாது. சிங்களர்களுக்கோ ஆங்கிலேயர்கள் ஆண்டாலும் பரவாயில்லை. “இந்த நாடு சிங்கள நாடு. மதம் என்பது எப்போது பௌத்தம்” என்பதாக இருக்க வேண்டும் என்ற அக்கறை. வினை விதைத்தவன் எதை அறுக்கமுடியும்? புத்திசாலி ஆங்கிலேயர்களுக்கு உதவிய எலப்போலா எதிரியாக மாற்றம் பெற உள்ளேயே அப்போது உருவான ஒரு கலவரம் காரணமாக இருந்தது. உருவான கலவரத்தால் இந்த எலப்போலா நாடு கடத்தப்பட்டு மொரிஷியஸ் தீவில் அடைக்கப்பட்டு, கடைசியில் மீளாத் துயரில் போய்ச் சேர்ந்தார். ஏற்கனவே உள்ளே வந்த போர்த்துகீசியர்களும், ஹாலந்து ஆட்சியாளர்களும் உள்ளேயிருந்த செல்வ வளத்தைத் தங்கள் நாட்டுக்குக் கொண்டு போகத்தான் நினைத்தார்களே தவிர ஆங்கிலேயர்கள் போல் நீண்ட காலத் திட்டங்கள் எதுவும் வைத்திருந்தார்களா? என்பது தெரியவில்லை. ஆனால் வெள்ளையர்கள் அப்போது பிடித்த நாடுகளில் எழுதிக்கொண்டுருந்த கருப்புப் பக்கங்களை இங்கேயும் முயற்சிக்க உருவானது தான் பிரித்தாளும் சூழ்ச்சிகளும் பின்னால் உருவான இனங்கள் சார்ந்த எழுச்சியும். அந்நியர்கள் எவரும் இல்லை. உள்ளே இருந்தது கடைசிச் சிங்கள முடியாட்சியையும் முடித்தாகி விட்டது. காட்டிக் கொடுப்பதற்கும், கவிழ்த்து விடுவதற்கும் வேறு தீவிலா போய்த் தேட வேண்டும்? கடைசியில் காட்டிக்கொடுத்தவர்களும் கண்ணீர் விட்டு தனிமைச் சிறையிலிருந்து போய்ச் சேர்ந்தார்கள். சிங்கள பக்கங்களுக்கு மங்களம் பாடியாகி விட்டது. அடுத்து மூத்தகுடி ஒன்று பாக்கி உள்ளதே? அவர் தான் தமிழ் மன்னர் பண்டார வன்னியன். இலங்கையில் உள்ள வன்னிப்பகுதியின் மற்றொரு பெயர் அடங்காப்பற்று, நல்ல மாப்பாணான் (1790) என்ற மன்னனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர் தான் பண்டார வன்னியன். வெள்ளையர்கள் (1803) கண்டி சிங்கள மன்னரின் மேல் படையெடுத்த போதே இவர் ஆண்டு கொண்டிருந்த பகுதிகளின் மேலேயும் படையெடுப்பை நிகழ்த்தினர். ஆனால் அந்தச் சமயத்தில் படையெடுப்பை சமாளித்து வெற்றி கொண்டதோடு மட்டுமல்லாமல் அப்போது ஆனையிறவு, இயக்கச்சிபைல், வெற்றிலைக்கேணி ஆகிய கோட்டைகளையும் கைப்பற்றி வந்தவர்களுக்குப் பீதியூட்டி வைத்துருந்தார். ஆங்கிலேயர்களுக்கு முன்னால் வந்தவர்களுக்கும் இந்தக் கதிதான் நடந்தது. ஆளைவிட்டால் போதும் என்ற நோக்கத்தில் அன்று அவர்கள் காத்த அமைதி, இப்போது உள்ள ஆங்கிலேயர்களிடம் செல்லுபடியாகுமா? தமிழர்களின் மொத்த வரலாற்றில் கடைசிப் பாண்டிய ராஜ்யங்கள் வரைக்கும் ஆள்காட்டி தானே மொத்த தமிழன சரித்திர பக்கங்களைத் தரித்திர பக்கமாக மாற்றியுள்ளது. காக்கை வன்னியன் என்பவனால் காட்டிக்கொடுக்கப்பட்டு (1811) உடையாவூர் நேரிடைப் போரில் பண்டார வன்னியன் கொல்லப்பட்டார். ஆட்டம் இப்போது முடிவுக்கு வந்து விட்டது. எதிர்ப்பவர்கள் யாருமில்லை. எதிரிகளைக்கூட ஏறக்குறைய ஒழித்தாகி விட்டது. இப்போது முடியாட்சி இல்லை. முனங்குபவர்கள் கூட யாருமில்லை. ராஜா, ராணி, மந்திரி என்று மொத்தப் பொறுப்பும் சூரியன் அஸ்தம்பிக்காத நாட்டின் ஆளுமைக்குள் வந்து விட்டது. ஆனாலும் இவர்கள் தொடக்கத்தில் கோட்டை அரசு, யாழ்பாண அரசு, கண்டி அரசு என்று பிரித்து வைத்துக்கொண்டு அப்போதைய சென்னையின் மகாண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து ஆட்சி புரிந்தனர். தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் (1797) ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒரு கலகம் உருவானது. ஒவ்வொன்றும் சென்னை மகாண கவர்னர் உத்திரவுக்காகக் காத்துருப்பது பல பிரச்சனைகளுக்குக் காரணமாக அமைந்துவிட இலங்கையைக் காலணி நாடு என்ற அந்தஸ்து கொடுத்து தனி ஆளுநரைக் கொண்டு ஆள்வது என்று முடிவெடுத்தனர். இலங்கையின் முதல் ஆளுனராக (1798) பிரைடெரிக் நார்த் என்பவர் கீழ் தென்னைத்தீவின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறத் தொடங்கியது. 12. பச்சைத்தீவு நாம் இப்போது இந்தியாவுடன் சேர்த்து இலங்கையையும் ஆண்டுக் கொண்டுருக்கும் ஆங்கிலேயர்களைப் பற்றிச் சற்று புரிந்து கொள்ள முயற்சிப்போம். 16 ஆம் நூற்றாண்டில் வணிகத்திற்காக இந்தியாவிற்குள் வந்தார்கள். வந்தவர்களுக்கு இந்தியா என்ற நாட்டின் சூழ்நிலை,தட்பவெப்ப நிலை பற்றி எதுவும் தெரியாது. உள்ளே பேசிக்கொண்டுருந்த மொத்த மொழியைப் பற்றிக் கூடத் தெளிவாக அறிந்துருப்பார்களா என்பதும் சந்தேகமே. கிழக்கிந்திய கம்பெனியின் தைரியமே அவர்களை இங்குக் கொண்டு வந்து சேர்த்துருக்க வேண்டும். நேரிடையான கொள்முதல் என்பதோடு இந்தியாவைப் பற்றிய அப்போதைய பல புனைக்கதைகளும் மேற்கித்திய நாடுகளில் உலவிக் கொண்டிருந்ததும் ஒரு காரணமாக இருந்தது. இங்குள்ள மக்களுக்கு செல்வத்தின் அருமை தெரியாதவர்கள். இரத்தினங்கள் ஆங்காங்கே குவியல் குவியலாக கிடந்தாலும் மக்களுக்கு அதன் அருமை தெரியவில்லை. இது போன்ற அவர்கள் செவி வழியே கேள்விப் பட்ட பல செய்திகளே அவர்களை இந்தியாவிற்கு கொண்டு வந்து சேர்த்தது. அன்று நம்பிக்கையுடன் வந்தவர்களை அவர்கள் பார்க்காத இந்திய வெயில் தான் வரவேற்றது. அன்று வெயிலை வென்று நின்றவர்கள் மொத்த இந்தியாவையும் தங்கள் ஆளுமைக்குள் கொண்டு வந்து கணக்கில்லா செல்வங்களையும் தங்கள் நாட்டுக்குக் கொண்டு போய்ச் சேர்த்தனர். அன்று வந்து இறங்கியவர்களின் எண்ணிக்கையும், அப்போது இந்தியாவின் உள்ளே வாழ்ந்து கொண்டுருந்தவர்களின் எண்ணிக்கையையும் இன்று நாம் யோசித்துப் பார்த்தால் வியப்பும், விரக்தியுமே இயல்பாய் தோன்றும். ஒரு வகையில் பார்த்தால் அடுத்தவரிடம் அடிபணியும் குணம் என்பது நமக்கு இயல்பானதாக இருந்துருக்குமோ என்று தோன்றுகிறது. நீ என்ன எதிர்பார்க்கிறாய்? நானே அதற்கு முன் உன் முன்னால் மண்டியிட்டு நின்று விடுகின்றேன் என்பதாகத் தான் தொடக்ககால இந்திய இலங்கை சரித்திர பக்கங்கள் காட்டுகிறது. ஆங்கிலேயர்கள் இப்போது எப்படி இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பொதுவாக இருந்து கொண்டு தங்கள் ஆளுமையை நிலைநிறுத்தி இருக்கிறார்களோ இதைப்போலவே தொடக்கத் தமிழ் மன்னர்களான கரிகால் பெருவளத்தான் தொடங்கி 13 ஆம் நூற்றாண்டில் ஒற்றுமையின்மையால் சரிந்த பாண்டிய சாம்ராஜ்யங்கள் வரைக்கும் இந்த இலங்கை என்பதும் பொதுவானதாகத் தான் இருந்தது. அன்றைய சூழ்நிலையில் சிங்களம் என்றொரு மொழியே இல்லை. இன்னும் சொல்லப்போனால் அன்றைய இலங்கையென்பது தமிழர்களின் மற்றொரு பூமியாகத்தான் இருந்தது. தமிழ்நாட்டிலிருந்து சென்று ஆண்ட மன்னர்கள் அத்தனை பேர்களும் தொலைநோக்குப் பார்வை என்பதைத் தொல்லை நோக்கமாகக் கருதியிருப்பார்கள் போலும். வாழ்ந்து விட்டுச் சென்ற மொத்த மன்னர்கள் காலத்தின் மிச்சத்தில் எச்சமாகக் கூட இறுதியில் எந்தத் தடயமும் நிலைபெறவில்லை. உள்ளே வந்த போர்த்துகீசியர்கள் தொடங்கி 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற கருப்பு ஜுலை கலவரத்தின் வரைக்கும் இருந்த மிச்சம் மீதி அத்தனையும் தமிழர்களின் ஆவணங்களையும் ஆதிக்க மனப்பான்மையில் சிங்கள ஆட்சியாளர்கள் தீயிட்டு மகிழ்ந்தார்கள். முதல் 13 நூற்றாண்டுகளில் சேர்த்து வைத்த அத்தனை கலைப் பொக்கிஷங்களும் அடுத்து வந்த எட்டு நூற்றாண்டுகளுக்குள் ஏதுமின்றி நீக்கப்பட்டுப் புதிய கட்டுக்கதைகள் மூலம் வரலாறு மாற்றப்பட்டது. இலங்கையின் உள்ளே அப்போது இரண்டு இனக்குழுக்களாக இருந்தவர்கள் மொத்தமாக ஒற்றுமையின்றி வாழ்ந்ததும், வந்த அந்நியர்கள் தங்களை ஆட்டிப்படைகின்றார்கள் என்று தெரிந்த போதும் மீற முடியாமல் தவித்ததும், அந்நியர்கள் ஒருவர் பின் ஒருவராக உள்ளே வந்து அமளி துமுளியான போதும் கூட அக்கறையில்லாமல் வாழ்ந்தது என்பது ஒரு மகத்தான ஆச்சரியம். போர்த்துகீசியர்கள் (கிபி 1505 முதல் 1658 வரை) முழுமையாக 150 ஆண்டுகள் இருந்து விட்டு, அவர்களைத் தொடர்ந்த வந்த டச்சு ஆதிக்கம் (கிபி 1658 முதல் 1796 வரை) என்று இருவரும் மூன்று நூற்றாண்டுகள் முழுமையாக உள்ளே இருந்தார்கள் என்றால் எந்த அளவிற்கு உள்ளே வாழ்ந்தவர்கள் வாழ்ந்து இருப்பார்கள்? 16 ஆம் நூற்றாண்டு வரைக்கும் மேம்பட்ட கப்பல் வாணிபமும், கிரேக்க, ரோமபுரி வணிகத் தொடர்பும் சேர்ந்து அன்றைய அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்பட்டதாகத்தானே மாற்றியிருக்க வேண்டும். ஏன் மாறாமல், தங்களை மாற்றிக்கொள்ளாமல் இருந்தார்கள்? நவீன ஆயுதங்கள், அவர்கள் உருவாக்கிய அச்சங்கள் என்று ஆயிரம் காரணங்கள் அணிவகுத்து நம் முன்னால் நின்றாலும் ஏன் ஒன்று சேரவில்லை? அன்று அவர்களை ஒன்றாகச் சேர விடாத காரணம் என்னவென்று யோசித்துப் பார்த்தால் மொத்த வீழ்ச்சிக்கும் காரணம் அவர்களிடம் இல்லாத ஓற்றுமையின்மை தான் என்று சொல்லத் தோன்றுகிறது. மன்னர்களாக இருந்தவர்களும்,ஆளுமையின் மூலம் சகல சந்தோஷங்களையும் அனுபவித்துக் கொண்டுருந்தவர்களும் அன்றைய சூழ்நிலையில் அவர்களுக்கு அதுவொரு அதிகாரப் போட்டி. அவ்வளவு தான். தங்களின் இருப்பை நிலை நிறுத்துவது. மற்றவர்களை முன்னேறி வர விடாமல் தடுப்பது. அதனால் தான் கூறு பிரித்துக் கொண்டு காட்டுக்கு அந்தப்பக்கம் நீ, இந்தப்பக்கம் நான் என்பதாகத் தங்கள் வாழ்க்கையையும் எண்ணங்களையும் சுருக்கிக்கொண்டு வாழ்ந்தார்கள். கடல் பயணத்தின் மூலம் வந்தவர்களுக்கு இவர்கள் காட்சிப்பொருளாக மாறியதில் ஆச்சரியமில்லை. இன்று வரையிலும் ஏன் மேலை நாடுகளின் ஆதிக்கத்தை நம்மால் நிறுத்த முடியவில்லை?. கல்வியறிவு, தங்கள் எண்ண உயர்வு என்பதெல்லாம் மீறி அவர்களின் ஒவ்வொரு பார்வையும் ஒரு கணக்குப் பார்வை தான். ஆள்பவர்களுக்கும், ஆள வர நினைப்பவர்களுக்கும் அந்தக் கணக்கு தெரியவில்லை என்றால் அதோகதி தான். ஆங்கிலேயர்கள் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் அடி எடுத்து வைக்கும் போதே இந்த எதிர்காலக் கணக்குகளை, வணிகம் சார்ந்த விசயங்களையும் மனதில் வைத்துக்கொண்டு தான் தங்களுடைய ஆட்சி அதிகாரத்தை, ஆளுமை சட்ட திட்டங்களையும் உருவாக்கினார்கள். இயற்கை வளம் இருக்கும் நாட்டில் பெரிதான கஷ்டம் இல்லை. இல்லாத நாட்டில் எதிர்காலத் தங்களின் வளத்திற்கான அத்தனை முன்னேற்பாடுகளைத் தொடக்கம் முதலே செய்யத் தொடங்கினர். ஆனால் இந்தியாவைப் போல இலங்கை சொஸ்தமான பூமியல்ல. வயலும் வயல் சார்ந்த இடமும், மலையும், முகடுகளும்,சுற்றிலும் சுகப்படுத்திக்கொண்டுருக்கும் கடலும், கடல் சார்ந்த விசயங்களும் தான் அங்கு இருந்தன. இதற்கு முன்னால் உள்ளே வந்தவர்கள் முடிந்தவரை சுருட்டிக்கொண்டு, மிரட்டிக்கொண்டு இருந்தவர்கள். அதற்கு மேல் அவர்கள் ஆசைப்பட்டார்களா இல்லை கர்த்தர் ஊழியத்தில் மட்டும் கவனமாக இருந்தார்களா என்பதை நாம் ஆராய வேண்டியதில்லை. ஆனால் இப்போது உள்ளே வந்துருப்பவர்கள் வெள்ளை மனம் படைத்தவர்கள். அவர்களின் திட்டம் என்பது முன்னால் வந்து இறங்கியவர்களைப் போல் மட்டமாகவா இருக்கும்? அன்றைய இலங்கையின் சூழ்நிலையில், மிஞ்சிப் போனால் ஒரு இளநீர் குடித்து விட்டு அப்படியே மொத்த இலங்கையையும் ஒரு சுற்று சுற்றி வரலாம். காற்று இதமாக இருக்கும். படித்த ஆங்கிலக் கவிதைகளை முணுமுணுத்துக்கொணடு உற்சாகமாக நடை பயிலலாம். பசித்தால் ரெண்டு மீன்களைப் பிடித்துச் சுட்டுச் சாப்பிடலாம். மெனக்கெட்டு இத்தனை தூரம் உள்ளே வந்தவர்கள் காற்று வாங்கவா வந்துருப்பார்கள்.? அவர்கள் எழுத நினைத்த கவிதைகளின் விதைகள் இப்போது வெறும் பாறாங்கல்லாக, மலையாக, பயன்படுத்த முடியாத பூமியாக இருந்தது. அவர்களின் அன்றைய தீர்ககதரிசனப் பார்வை தான் பின்னாளில் இலங்கையை உலகில் தலைசிறந்த தேயிலை, காபிக்கொட்டை விளையும் பூமியாக மாறக் காரணமாக இருந்தது. [] சங்க இலங்கியங்கள் சொல்லும் முத்துத் தீவு பின்னாளில் முழுமையாகப் பச்சைத் தீவாக மாறியது. அவர்களின் அன்றைய சிந்தனைகள் தான் மலையகத் தமிழர்கள் என்றொரு புது இனத்தை உருவாக்கியது. அவர்கள் தான் இந்தியாவில் இருந்து இலங்கையில் தேயிலை தோட்டத்தை உருவாக்குவதற்கென்று அழைத்துச் செல்லப்பட்டவர்கள். இலங்கை சரித்திரப் பக்கங்களில் காலப்போக்கில் புதைபொருளாய் மாறியவர்கள். இந்தியாவில் இருந்து ஏன் சென்றார்கள்? 13. பரதேசியின் கதைக்களம் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் கிழக்கிந்திய நிறுவனம் என்ற பெயரில் உள்ளே வந்த (கிபி 1600/1700) காலத்தில், கிழக்கிந்திய நிறுவனத்தில் கேயன் என்பவர் கவர்னராக இருந்தார். இவர் தான் முதன் முதலாக இங்குள்ளவர்களின் வறுமையைப் பயன்படுத்தித் தங்கள் ஆளுமையில் இருந்த நாடுகளுக்குக் கூலியாக அழைத்துச் செல்லும் புனிதப் பணியைத் தொடக்கத்தில் தொடங்கி வைத்தவர். கிபி 18,19 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் தொடர்ச்சியாக 24 பஞ்சங்கள் தாக்கியது. இதன் காரணமாக அடிப்படை மக்களின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன் இந்தியாவைப் பல்வேறு மன்னர்கள் அங்கங்கே ஆண்டுக் கொண்டுருந்த போது அவர்கள் மக்களுக்குப் போட்ட வரி என்பது விளையும் நிலத்தில் ஆறில் ஒரு பங்கு அல்லது மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. ஆனால் பின்னால் வந்த ஆங்கிலேயர்களுக்கு இந்தப் பஞ்சமென்பது ஒரு பொருட்டே அல்ல. ஆங்கிலேயர்கள் விளையாத நிலத்திற்கும் சேர்த்து வரியை போட தொடங்கினார்கள். அந்த வரிகளைக் கட்ட முடியாதவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள எங்கேயாவது பயணப்பட வேண்டிய சூழ்நிலை இயல்பாகவே உருவானது. அப்போது தான் புலம் பெயர்ந்த பயணங்கள் அதிகமாகத் தொடங்கியது. உலகமெங்கும் தேவைப்படும் வேலைக்குக் கிளம்பத் தொடங்கினார்கள். குறிப்பாக அப்போது தென்னிந்தியாவில் தான் அதிக வெளியேற்றம் நடந்தது. ஜாதியால் ஒடுக்கப்பட்டு, அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனைகளுடன் வாழ்ந்து கொண்டுருந்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்று மொத்தமாகக் கூட்டம் கூட்டமாகத் தென் ஆப்ரிக்கா, பீஜீத்தீவு, மொரிசியஸ், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா, வியட்நாம், என்று தொடங்கி எங்கெங்கு வாய்ப்பு இருக்கிறதோ அங்கேயெல்லாம் பயணப்படத் தொடங்கினார்கள். தென்னிந்தியாவின் கடற்கரை ஓட்டிய கிராமங்களுக்கு அன்றைய காலகட்டத்தில் அருகே தெரிந்த இலங்கைத் தீவு உண்மையிலேயே சொர்க்கத் தீவாகத் தான் தெரிந்திருக்க வேண்டும். கண்டி முடியாட்சியை முடிவுக்குக் கொண்டு வந்ததும் ஆங்கிலேயர்கள் புத்தளத்தில் இருந்து கண்டி வரைக்கும் தோட்டங்களை உருவாக்கிக் கொண்டுருந்தார்கள். கண்டியை தங்கள் ஆளுமைக்குள் கொண்டு வந்த அடுத்த ஐந்து வருடங்களுக்குப் பிறகு (1820) காபி பயிர் செய்வதற்கான பூர்வாங்க வேலையைத் தொடங்க ஆரம்பித்தனர். [] தொடக்கத்தில் அவர்களின் முயற்சி வெற்றி அளித்த போதிலும் முழுமையான பலன் கிடைக்கவில்லை. பார்னஸ் என்ற ஆங்கிலேயர் பேராதனைப் பூங்காவிற்கு அருகில் கன்னொருவில் என்ற இடத்தில் காபி பயிருக்கென்று ஒரு தோட்டத்தை அமைத்தார். கம்பளை (1823) சிங்கபிட்டிய பகுதியில் இராணுவ சேவை செய்து கொண்டுருந்த கேப்டன் ஹென்ரி பர்ட் என்பவர் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 14 குடும்பத் தொழிலாளார்களைப் பயன்படுத்திக் காப்பிச் செடி வளர்த்து 600 பவுண்ட சம்பாரித்தார். இதன் தாக்கத்தில் உருவானது தான் 1880 வரைக்கும் மலையகம் முழுவதும் காப்பிப் பயிர் மட்டும் என்ற நிலை உருவானது. கரடு முரடான பாறைகளும், மலையின் கற்களை நீக்கி சமதளமாக்கி தோட்டமாக மாற்றி மகத்தான சாதனைகளை உருவாக்கியவர்கள் அத்தனை பேர்களும் கல்வி அறிவு இல்லாத, தங்களின் உழைப்பு ஒன்றினால் மட்டுமே சாதித்துக் காட்டியவர்கள். இவர்களின் உழைப்பே, படிப்படியாக இலங்கை என்ற காலணியாதிக்க நாட்டின் பெருத்த வருமானத்திற்கும் காரணமாக அமைந்தது. அடிப்படை வசதிகள் கூட இல்லாத எட்டுக்கு பத்து என்ற லயன் வீடுகள் தான் கடைசிக் காலக் கட்டத்தில் அவர்கள் பெற்ற பெரும் வசதிகள். இந்த இடத்தில் இருந்து கொண்டு, தங்களையும் அழித்துக்கொண்டு ஆங்கிலேயர்களின் வணிக லாபத்திற்காகத் தங்கள் வாழ்க்கை தொலைத்தவர்கள் தான் இந்த மலையகத் தமிழர்கள். மலையக தமிழர்களின் வரலாறு என்பது பூர்வாங்கமாக 1824 முதல் தொடங்குகிறது. தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட 5,000 ஏக்கரில் 10,000 பேர்கள் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் பணம் கொழிக்கும் தோட்டமானது வளர்ந்து 1881 வரைக்கும் உயர்ந்த 2,60,000 ஏக்கராக மாற்றம் பெற்றது. இந்தத் தோட்டம் முழுமையும் அப்போது இலங்கையின் உள்ளே இருந்த ஐரோப்பியர்களிடம், மேல் தட்டு வர்க்கத்தினரிடமும் இருந்தது. தொடக்கத்தில் ஆங்கிலேயர்களால் 6 ஷில்லிங் என்ற அளவிற்குத் தோட்டம் உருவாக்க நினைப்பவர்களுக்கு இடங்கள் விற்க்கப்பட்டது, நவீன கடல் பயணங்கள் உருவாகாத காலமிது, இலங்கைக்குப் பயணிக்க வேண்டியவர்கள் இராமேஸ்வரத்திற்குச் சென்று தனுஷ்கோடியில் இருந்து சிறுபடகு, வல்லத்தின் மூலமாகத் தலைமன்னார் துறைமுகத்திற்குப் போய்ச் சேர வேண்டும். இறங்கும் இடத்தில் இருந்து பல மைல்கள், பல நாட்கள் நடந்து போய்க் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றடைய வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்றபடி, தோணி, சிறு படகு, கப்பல் என்று மாறி மாறி இவர்களை அழைத்துச் சென்று கொண்டுருந்தார்கள். பாதுகாப்பு இல்லாத காலகட்டத்தில் செல்லும் கப்பல்கள் விபத்துக்குள்ளாவதும், அந்தப் பயணம் பரிதாபமாய்ப் பாதியில் முடிவது அன்றாட நிகழ்ச்சியாக இருந்தது. இந்தக் கூலி கப்பலை அழைத்துக்கொண்டு சென்ற ஆதிலெட்சுமி என்ற கப்பல் மூழ்கி அதில் பயணித்த அத்தனை பேர்களும் இறந்தனர். இந்தக் காலகட்டத்தில் மேலை நாட்டில் டைட்டானிக் கப்பல் மூழ்கியதும் நடந்தது. அந்தக் கப்பலுக்குப் பின்னாளில் கிடைத்த புகழ் கூடத் தமிழர்கள் பயணித்த கப்பலுக்கும் கிடைக்கவில்லை. இலங்கையைப் பசுமை பூமியாக மாற்றியவர்களுக்கும் உண்மையான அங்கீகாரம் இறுதி வரைக்கும் கிடைக்காதது அழ கூடத் தேம்பில்லாமல் வாழ்ந்தவர்களின் சோக வரலாறு.. இந்த மலையகத் தமிழர் என்ற கிளை நதி மூலம் தான் ஆங்கிலேயர்களின் வருமான நதி வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியது. தலைமன்னாரில் இறங்குபவர்கள் கால்நடையாகவே மலையகம் போய்ச் சேர வேண்டும். மலையகம் போய்க் கண்டி போய்ச் சேர்வதற்கு ஒரு மாதம் கால அவகாசம் கூட ஆகலாம். அப்போது துணை கலெக்ட்ர் பொறுப்பை வகித்த பிரிப்ஸ் ஏ டம்பளர் தயாரித்த அறிக்கையின்படி 1867 ஆம் ஆண்டுப் புறப்பட்டவர்களின் எண்ணிக்கை 639 பேர்கள். மலையகம் போய்ச் சேர்ந்தவர்கள் 186. மற்றவர்கள் அத்தனை பேர்களும் செல்லும் வழியிலேயே இறந்தனர். போய்ச் சேர்ந்தவர்கள் அங்கு உயிர் பிழைத்து வாழ்வதும் அடுத்த மகத்தான சாதனை. 1841 க்கும் 1846க்கும் இடையிலான ஆறு ஆண்டுகளில் சென்று அடைந்தவர்களில் மொத்தமாக 90 ஆயிரம் பேர்கள் இறந்து போனார்கள். உலக நாகரிகம் வளரத் தொடங்கிய போது மனித நாகரிகமும் வளரத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக மனிதர்களை அடிமையாக வைத்து வேலை வாங்குதல் என்றொரு கேவல நாகரிகமும் வளரத் தொடங்கியது. மனிதர்களை அடிமையாக வைத்துக்கொள்ளும் அமெரிக்க நாகரிகமும், கருப்பின மக்களின் அவஸ்த்தைகளும் நாம் படித்த மொத்த சரித்திர பக்கங்களும் உணர்த்தியதாக இருப்பதால் அது இங்கே தேவையில்லை . கருப்பின மக்களை விடுவிக்க அன்றொரு லிங்கன் உருவானார். ஆனால் இந்த மலையக மக்களின் வாழ்க்கையின் இறுதி வரைக்கும் எவருமே அவர்களின் நல்வாழ்வு என்ற நோக்கத்தில் அணுகியதில்லை. இலங்கை சுதந்திரம் பெற்ற போதும், அதற்குப் பிறகும் பாதிக்கப்பட்டதில் இவர்களே முதன்மையானவர்களாக இருக்கின்றார்கள். உலகில் கூலி என்ற சொல் அறிமுகமானதே பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட (1833) அடிமை ஒழிப்புச் சட்டத்திற்குப் பிறகு தான். அதன் பிறகு தான் அடிமை என்ற வார்த்தை மாறி கூலி என்ற சொல் உருவானது. வெள்ளை மக்களுக்கு அன்றைய காலகட்டத்தில் இந்தியர்கள் என்பவர்கள் அத்தனை பேர்களுமே கூலிகள் தான். மகாத்மா காந்தி பாரிஸ்டர் பட்டம் வாங்கிய போதும் அவர்கள் அழைத்த பெயர் பாரிஸ்டர் கூலி. கப்பலோட்டிய வஉசியின் கப்பலுக்குக் கூலி கப்பல் என்று தான் அழைத்தார்கள். இலங்கையில் தேயிலைத் தோட்ட உருவாக்கத்திற்காக ஆங்கிலேயர்கள் முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டுருந்ததைப் போலவே பக்கத்து மலேசியா தீபகற்பத்தையும் ரப்பர் காடாக மாற்ற முயற்சித்துக் கொண்டுருந்தனர். அப்போது ரப்பர் உற்பத்தில் பிரேசில் உலகின் முதன்மையான நாடாக இருந்தது. 1877 ஆம் ஆண்டுச் சர் ஹென்ரி விக்ரஹாம் என்ற ஆங்கிலேயர் பிரேசிலிலிருந்து 20 ரப்பர் மரக் கன்றுகளைத் திருட்டுத்தனமாகக் கொண்டு வந்து மலேசியா பூமியில் நட்டார். 20 ரப்பர் மரக்கன்றுகள் என்பது சென்ற தமிழர்களின் உழைப்பால் பிற்காலத்தில் மலேசியா முழுக்க ரப்பர் காடாக மாறியது. போர்த்துகீசியர்களின் ஆளுமையில் இலங்கை இருந்த போது எப்படி இந்தியாவில் இருந்து வந்த போர்த்துகீசிய படைகள் வந்து உதவியதோ அதே போல் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இருந்த பக்கத்து நாடுகளும் இந்தக் கூலி பண்டமாற்ற முறையும் தொடங்கி வைக்க நான்கு புறமும் தண்ணீர் என்பது போல ஆங்கிலேயர்களுக்கு நான்கு திசைகளுமே சாதகமாக இருந்தது.. ஏன் இலங்கையின் உள்ளே வாழ்ந்து கொண்டுருந்தவர்களைத் தோட்ட வேலைக்குக் கொண்டு செல்லவில்லை? முதலும் முக்கியமான காரணம் அழைத்துச் செல்லப்பட்ட கூலிக்கான சம்பளம் என்பது சில தேங்காய்கள், மரக்கால் அரிசி, தங்குவதற்குத் துணியால்,தென்னங்கீற்றால் வேயப்பட்ட கூடாரம். அதுவும் சரிந்த ஏதோ ஒரு மலைக்குன்றுகளின் ஓரத்தில் அமைந்து இருக்கும். தொற்று நோய், விஷக்காய்ச்சல், மர்மநோய்கள்,பூச்சிக்கடிகள் என்று தொடங்கி அத்தனை அவஸ்த்தைகளையும் அவர்களின் அன்றாட வாழ்க்கை எதிர்கொண்டது. பிழைத்து உழைத்தவர்கள் பாக்யவான்கள். அப்போது இறந்தவர்கள் புண்ணியவான்கள். இந்த மலையகத்திற்கு நடந்து வரும் போது இறந்தவர்களின் பிணத்தைக் கூட எடுக்க ஆள் இருக்காது. அப்படியே மக்கிப்போய், நடந்து செல்லும் பாதையிலேயே எலும்புக்கூடுகளும், அதுவே மெதுவாகச் சுண்ணாம்பு போல் மாறி அந்தத் தடம் மாறியிருப்பதும் கடந்து செல்வபவர்கள் இயல்பாகக் காணும் காட்சியாக இருந்தது. ஆனால் இவர்களை இங்குக் கொண்டு வந்து சேர்க்கவும், அதற்குப் பின்னால் இருந்த ஆங்கிலேயர்களின் வலைபின்னல் நிர்வாக அமைப்பும், அதற்கென்று பாடுபட்ட நல்லவர்களுக்கு ஆங்கிலேயர்கள் வைத்திருந்த பெயர் கங்காணிகள். கண் காணிப்பவர்கள் என்பது தான் கங்காணிகள் என்று மாறியது. தமிழ்நாட்டில் இருந்து சென்று கங்காணி வேலை பார்த்தவரின் மகன் தான் பின்னாளில் தோட்டத் தோழிலாளர்களின் தலைவராக இருந்த தொண்டைமான். இன்று வரையிலும் ஆங்கிலேயர்கள் என்பவர்கள் இந்தியாவில் வந்து இருக்காவிட்டால் நாம் இந்த அளவிற்கு நாகரிகம் பெற்றவர்களாக மாறியிருக்க மாட்டோம் என்ற ஒரு கருத்தைப்போல, ஆங்கிலேயர்களின் புத்திசாலிதனத்தையும் தங்களுடைய சுரண்டல் மனப்பான்மைக்காக எந்த அளவிற்குச் செல்வார்கள் என்பதை உள்ளே நுழைந்து பார்ப்போம். அப்போது தமிழ்நாட்டில் உருவாகியிருந்த பஞ்சம், ஆங்கிலேயர்கள் வசூலிக்கும் ரயத்துவாரி வரிக் கொடுமைகள் என்று வாழ முடியாமல் வாழ்ந்து கொண்டுருந்தவர்களை ஆள்பிடி கூட்டம் அலைந்து திரிந்து இவர்களைப் பொட்டலம் போல் மாற்றி ஏற்றிக்கொண்டுருந்தது. ” உங்கள் நல்வாழ்வு இலங்கையில் இருக்கிறது. உணவு உடை, தங்குமிடம், போக்குவரத்துச் செலவு இலவசத்துடன் நல்ல சம்பளம் ” என்று கூவிக்கூவி இந்தக் கூட்டத்தைக் கடல் கடக்க வைத்துக்கொண்டுருந்தனர். இதற்கென்று ஏற்கனவே இலங்கை தோட்டங்களில் பணிபுரிந்து ஓரளவிற்கு அனுபவம் உள்ளவர்களைக் கங்காணிகள் என்று பெயரிட்டுத் தமிழ் நாடு முழுக்க அனுப்பி வைத்துருந்தனர். இவர்கள் தான் அன்றைய ஆள்பிடிகள். இதற்கென்று தமிழ்நாடு முழுவதும், செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென்னாற்காடு, சேலம், கோயமுத்தூர், திருச்சிராப்பள்ளி,புதுக்கோட்டை, தஞ்சாவூர்,திருநெல்வேலி, இராமநாதபுரம் என்று அத்தனை பகுதிகளிலும் அலுவலகம் திறக்கப்பட்டது. இதற்குப் பெயர் எஸ்டேட் மேனேஜ்மென்ட் ஆபிஸ் என்றழைக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அந்தந்த பகுதிகளில் இருக்கும் கிராம முன்சீப், நிர்வாக வருவாய்த்துறை ஆய்வாளர்கள் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்படும். செல்பவர்களின் குடும்ப முழுவிபரங்கள் சேகரிக்கப்பட்டு அந்தந்த பகுதி காவல்துறை ஒத்துழைப்புடன் பெரும்பாலும் ரயில் மூலமாக மண்டபம் முகாமிற்குக் கொண்டு வந்து சேர்க்கப்படுவார்கள். மண்டபம் வந்து சேர்பவர்களைத் தனுஷ்கோடி மார்க்கமாகத் தலைமன்னாருக்கும், திருநெல்வேலியில் உள்ள வாஞ்சி மணியாச்சியில் உள்ள இடைத்தங்கல் முகாமான தட்டப்பாறையில் இருந்து தூத்துக்குடி வழியாகக் கொழும்புக்கு, புத்தளம் பகுதிக்கும் கொண்டு செல்லப்பட்டனர். இலங்கைக்குக் கொண்டு செல்வதற்கு முன் உருவாக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாமில் இருக்கும் ஆங்கில அதிகாரிகள் வந்தவர்களைப் பரிசோதித்து, தடுப்பு ஊசிகள் போடப்பட்டுக் கவனமாக அவர்களின் உடல் ஆரோக்கியத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு மிஞ்சுபவர்களை மட்டும் அனுப்பி வைத்துக்கொண்டு இருந்தனர். ஒவ்வொருவரும் அவரவர் சொந்த ஊரில் இருந்து ஒவ்வொரு இடமாக மாறி கடைசியாக முகாமிற்கு வருவது வரைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாள எண் வழங்கப்பட்டு இறுதிவரைக்கும் அந்த மனிதர்கள் உயிரற்ற ஜடமாகத்தான் கருதப்பட்டு நகர்த்திக்கொண்டு வந்தனர். இலங்கையின் சீதோஷ்ண நிலையின் காரணமாகச் செல்வதற்கு முன் ஒவ்வொருவருக்கும் ஒரு கம்பிளி, வேஷ்டி, சட்டை, சேலை வழங்கப்படும். இலங்கையில் எந்தப் பகுதியில் போய் இறங்குகிறார்களோ, அங்கிருந்து குறிப்பிட்ட தோட்டத்திற்கு நடந்து தான் செல்ல வேண்டும். இடையே திருடர்கள், விலங்குகள், வித்யாசமான பருவநிலை, உணவு, நீர் இல்லாமல் வறண்ட நாக்கும், மெலிந்த தேகமுமாய்ப் போய்ச் சேர்பவர்கள் மிகக் குறைவு. உழைக்கத் தொடங்கியவர்கள் இடையில் திரும்பி வர முடியாது. அதற்கென்று சிறப்புக் கட்டுப்பாடுகள். அப்படியும் தப்பித்து வர நினைப்பவர்கள் இதற்கென்று வளர்க்கப்படும் நாய்களின் கடிகளில் இருந்து அத்தனை எளிதாகத் தப்பி வெளியே வந்து விட முடியாது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் ஊரில் இருந்து கிளம்பியது முதல் தோட்டத்திற்கு வந்து சேர்ந்து வரைக்கும், உணவு, பெற்ற உடை, அழைத்து வந்த கங்காணிகளின் கூலி அத்தனையும் இவர்களின் உழைப்பினால் கிடைத்த சம்பளத்தில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட கொடுமையும் நடந்தது. காபி பயிறுக்கு பிறகு உருவான தேயிலை தோட்டங்களும், இதன் தொடர்பாக அமைக்கப்பட வேண்டிய சாலை மற்றும் புற வசதிகளை ஈடுகட்டும் பொருட்டு இந்தியாவில் இருந்து மேன்மேலும் ஆட்கள் தருவிக்கப்பட்டனர். ஆள் கிடைக்காத பட்சத்தில் அங்கங்கே ஆங்கிலேயர்களால் செயற்கையாகப் பஞ்சத்தை உருவாக்கப்பட்டது. ஆந்திராவில் (1833/34) குண்டூர் பகுதியில் உருவாக்கப்பட்ட பஞ்சாத்தால் 30 முதல் 50 சதவிகித அடிப்படை மக்கள் இறந்து போனார்கள். 1876 முதல் 78 வரைக்கும் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் பகுதியில் 40 லட்ச மக்கள் இந்தப் பஞ்சத்தால் செத்து மடிந்தனர். மலையகத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகமானது. 1869 ஆம் ஆண்டு உருவான புதிய நோயினால் (கெமிலியா வெஸ்ரிதா டிறிக்ஸ்) பெருமளவு காபி பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டதால் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பஞ்சடைந்த கண்களுடன் திரும்பி வந்தனர். இதன் காரணமாக மாற்று பயிராகத் தேயிலை உருவாக்கப்பட்டு அதன் மீது கவனம் திரும்பியது. 1867 ஆம் ஆண்டு ஜேம்ஸ் ரெய்லர் தெல்தொட்டைக்கு அருகில் லூல் சுந்தரத் தோட்டத்தில் முதலாவது வர்த்தக ரீதியான தேயிலைத் தோட்டத்தை அமைத்தார். இவர் தான் இன்றைய இலங்கை தேயிலை தோட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுகின்றார். 1877 ஆம் ஆண்டுக்குள் 1.46.000 பேர்கள் கொண்டு வந்து குடியமர்த்தப்பட்டனர். கேரளாவில் இருந்து சென்ற மலையாளிகள் தோட்டப்பகுதியின் உள்ளே தேநீர் கடை உரிமையாளர்களாகவும், மற்ற மலையாளிகள் சிறு ஆலைகளிலும் பணிபுரிந்தனர். மீதம் உள்ள ஆலைகளில் பணிபுரிந்தவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் அங்குள்ள ஏழ்மையான சிங்களர்கள். தோட்டத் தொழிளாலர் களில் இருந்த தமிழர்களின் எண்ணிக்கை மட்டும் 1951 ஆம் கணக்குப்படி 6,25,000 பேர்கள். தோட்டத்தில் பணி புரிந்தவர்கள் ஒரு தோட்டத்தில் இருந்து மற்றொரு தோட்டத்திற்குச் செல்ல முடியாது. அவர்கள் வேலை முடிந்ததும் அவர்களின் குடியிருப்புக்குள் தான் முடங்கிக்கொள்ள வேண்டும். பக்கத்து தோட்டத்திற்குள் செல்ல வேண்டுமென்றால் கூட அனுமதி சீட்டு வாங்கித் தான் செல்ல வேண்டும். பெரும்பாலும் அனுமதி அளிக்கப்படாது. தீவுக்குள் தீவாக முடக்கப்பட்டனர். உள்ளே வாழ்ந்து கொண்டுருந்த மற்ற மக்களுக்கும் இவர்களுக்கும் தொடக்கம் முதலே எந்தத் தொடர்பும் இல்லாத அளவிற்கு மிகத் தெளிவாக முதலாளி துரைமார்களால் உருவாக்கப்பட்டது. இவர்கள் சிந்திக்கத் தொடங்கினால், சூழ்நிலையும் மாறிவிடும் அல்லவா? இருபதாம் நூற்றாண்டின் இறுதி வரைக்கும் உருவான மந்தமான பொருளாதாரம், விலை போகாத தேயிலை என்று தோன்றிய அத்தனை பிரச்சனைகளும் இறுதியில் அரை வயிறு கஞ்சி குடித்துக் கொண்டுருந்த இவர்களின் வாழ்க்கையைத் தான் வந்து தாக்கியது. அந்தச் சமயத்தில் இவர்களை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள். ஒவ்வொரு சமயத்திலும் இந்த உள்ளே வெளியே ஆட்டம் நடந்து கொண்டே இருந்தது. கூலிகளை ஏற்றுமதி இறக்குமதி போல் கையாண்டு கொண்டுருந்தார்கள். இவர்களைத் தான் பின்னாளில் இந்தியத் தமிழர்கள் என்றும், மேலும் பல்வேறு அடைமொழிப் பெயர்களுடன் அழைத்தனர் உள்ளே வாழ்ந்து கொண்டுருந்த பூர்வகுடி தமிழர்கள். தொடர்ந்து பயணிப்போம்….. 14. கண்ணீர்த்தீவு இப்போது ஆங்கிலேயர்கள் உள்ளே நுழைந்து அரை நூற்றாண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. உள்ளே இருந்த மொத்த மக்களின் பழக்கவழக்கங்கள் சற்று மேம்பட்டதாகி விட்டது. ஆங்கிலம் என்பது வாழ்க்கை மொழியாக மாற்றம் பெறத் தொடங்கிய காலமிது. எங்கெங்கு காணினும் கிறிஸ்துவம் கூட ஒரு சமயமாக ஏற்றுக்கொண்டதாகி விட்டது. இனக்குழுவாக இருந்தவர்கள் இப்போது தங்களுடைய இனம் சார்ந்த சிந்தனை என்கிற அளவிற்குச் சற்று மேம்பட்டு உள்ளே உழன்று கொண்டிருக்கிறார்கள். ஒன்றை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அப்போது உலகமெங்கும் பௌத்தம் வளர்ந்து இருந்தது. வளர்ந்து இருந்த நாடுகளில் இருந்தவர்கள் சிங்களர்கள் அல்ல. ஆங்கிலேயர்கள் இலங்கையின் உள்ளே வந்த போதும் இந்தத் தமிழ் மொழியும், பௌத்தமும் இருந்தது. கிபி 112. முதல் 134 வரைக்கும் ஆண்ட சிங்கள மன்னராக இருந்த ஜெயபாகு முதல் கிபி 1815 வரைக்கும் ஆண்ட ஸ்ரீ விக்கிரம ராஜ சிங்ககே மன்னர் வரைக்கும் அவர்களின் மதம் பௌத்தமாக இருந்தாலும் மொழி என்பது தமிழ் மொழி தான். இன்றைய சிங்கள மொழியின் தொடக்கமான எலு என்பதில் எச்சமும் மிச்சமும் விடாமல் சிறிது சிறிதாகப் பல மொழி கலப்புகளுடன் மாறிக்கொண்டே வந்தது. தொடக்கக் காலகட்டத்தில் இலங்கையில் பௌத்த மதத்தைத் தழுவியர்கள் அத்தனை பேர்களும் தமிழர்களே. அப்போது அவர்களைப் பௌத்த தமிழர்கள் என்றழைக்கப்பட்டனர். பின்னாளில் சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய அத்தனை புனைவுகளின் மூலமாகப் பௌத்த சமயத்தைத் தழுவியர்கள் முழுமையான சிங்கள வம்சத்தைச் சேர்ந்தவர்களே என்று முடித்து எளிதாக ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து விட்டார்கள். இலங்கை சுதந்திரம் வாங்கும் வரைக்கும், பின்னாளில் உருவாகப் போகும் பல சிங்கள சார்பாளர்கள், தலைவர்கள் வரைக்கும் தமிழ் மொழியைப் பேசியதும், எழுதியதும், முக்கிய ஆவணங்களில் தமிழிலேயே கையெழுத்துப் போட்டதும் இங்குக் குறிப்பிட்டே ஆக வேண்டும். கண்டி முடியாட்சியை முடித்து வைக்க உதவிய சிங்கள கூட்டணியில் மூன்று பேர்களைத் தவிரச் சந்திரிகா குமார துங்கே கணவர் வழி பாட்டனார் ரத்வட்டே வரைக்கும் அன்று ஆங்கிலேயர்களிடம் உருவாக்கிய ஒப்பந்தத்தில் தமிழில் தான் கையெழுத்து போட்டு இருக்கின்றனர். ஆவணங்களும், ஓலைச்சுவடிகளும் பாதுகாப்பாக இலங்கையை விட்டு வெளியே சென்று இங்கிலாந்தில் உள்ள ஆவணக் காப்பகத்தில் வைத்து காவல் காத்துக் கொண்டுருக்கிறார்கள். ஆனால் தொடக்கம் முதலே இலங்கை மட்டுமல்லாது உலகம் முழுக்கத் தமிழர்களின் உண்மையான வரலாற்றை, சான்றுகளை ஆவணமாக்குவதில் எவருக்கும் அக்கறையும் இருக்கவில்லை. அதற்கான அவஸ்யங்களையும் மற்றவர்களைப் பார்த்து யோசிக்கவும் இல்லை என்பது இன்று வரையிலும் மகத்தான ஆச்சரியம். இதுவரைக்கும் மொத்த இலங்கையையும் ஆங்கிலேயர்கள் மூன்று பகுதிகளாக வைத்துக்கொண்டு தான் ஆட்சி புரிந்து வந்தனர். நிர்வாகச் சிரமத்தின் பொருட்டுக் கோல்புரூக் என்ற ஆங்கிலேயர் (1833) தலைமையின் கீழ் குழு அமைத்து ஆலோசனை கேட்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் உள்ளே நுழைந்து இப்போது 35 வருடங்கள் ஆகிவிட்டது. காரணம் நிர்வாகத்திற்குத் தேவையான உண்மையான பணப்பயிர் தோட்டங்கள் மெதுவாக உருவாகிக் கொண்டுருந்து. உபகரணங்கள் எதுவுமே இல்லாமல் மனிதர்களைக் கொண்டே புதிதாக உருவாக்கப்பட்ட நிலச் சட்டத்தை வைத்துக்கொண்டு உள்ளே வாழ்ந்து கொண்டுருப்பவர்களிடமிருந்து பிடுங்கப்பட்ட நிலங்களைக் கொண்டு ஆங்கியேலயர்களின் வசதிக்காக அத்தனை அஸ்திவாரங்களும் உருவாக்கப்பட்டது. பிடுங்கப்பட்ட நிலங்கள் மொத்தமும் வந்து இறங்கும் துரைமார்கள் கையில் கொடுக்கப்பட்டது. இதில் குறிப்பிட்டுக் காட்டவேண்டிய முக்கிய அம்சம் ஒன்று உண்டு. இவர்கள் உள்ளே நுழைந்த ஐந்து வருடத்திற்குள் (1803) தமிழர்களின் எல்லைகள், சிங்களர்களின் எல்லைகள் என்று அப்போதே வரைபடம் உருவாக்கி வெளியிட்டார்கள். உள்ளே வெவ்வேறு கலாச்சாரம், மொழி கொண்டு வாழ்ந்து கொண்டு இருப்பதை உணர்ந்து ஒவ்வொன்றையும் ஆங்கிலேயர்கள் ஆவணமாக்கினார்கள். ஆனால் ஏன் மொத்தமாகச் சேர்த்து இனி ஆள வேண்டும் என்று யோசித்தார்கள்?. கிரேக்க புவியாளர் தாலமி முதல் இலங்கையை விட்டு ஆங்கிலேயர்கள் வெளியேறியது வரைக்கும் மொத்த ஆவணங்களிலும் தமிழர் சிங்களர்கள் வாழ்ந்த புவி அமைப்பின் மொத்தத்தையும் ஆவணப்படுத்தி இருக்கின்றார். கோல்புரூக் பரிந்துரைக்குப் பிறகு தொடக்கத்தில் 5 மகாணங்களாக மாற்றப்பட்டது. இதுவே பின்னாளில் 9 மகாணங்களாகவும் பிறகு 20 மாவட்டங்களாகவும் ஆனது. இதன் மூலம் தமிழர்களின் பகுதியில் படிப்படியாகச் சிங்களர்களைக் குடியேற்றுவதும் நடக்கத் தொடங்கியது. அப்போது தமிழர்களின் தாயகமாக இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 26500 சதுர கிலோ மீட்டர் இருந்தது. ஆங்கியேலர்கள் பிரித்தாளும் சூழ்ச்சிக்காக ராஜதந்திர விளையாட்டுக்களை தொடங்கி வைத்தனர். விளைவு கடைசியில் (1948) கிழக்கு மகாணத்தில் 7000 சதுர கிலோ மீட்டரும், வடக்கு மகாணத்தில் 500 கிலோ மீட்டரையும் தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி கொழும்பு அரசு அங்கீகாரம் கொடுத்து சிங்கள குடியேற்றத்தை நிறைவேற்றியதில் முடிந்தது. கோல்புரூக் பரிந்துரைக்குப் பிறகு தான் இலங்கை என்ற சரித்திர பக்கங்களின் உண்மையான ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தொடக்கமானது. நாகர்கள், வேடர்கள், நாடோடிகள், இனக்குழுக்கள், மன்னர்கள், குறுநிலமனனர்கள், தமிழ், சிங்களம் என்பதெல்லாம் அழிந்து ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் அதுவரையிலும் வளராமல் இருந்த வக்கிரமும் விரைவாக வளரத் தொடங்கியது. உருவாக்கியதற்கு முக்கியக் காரணம் ஆங்கிலேயர்கள் தான் என்றாலும் இறுதிவரையிலும் அதை உணர்ந்தவர்கள் யாருமில்லை. ஆனால் ஆங்கிலேயர்களை எதிர்த்து உருவான தொடக்க கால தமிழ்த்தலைவர்கள் தமிழ் சிங்கள ஒற்றுமை என்ற நோக்கில் தான் பாடுபட்டார்களே தவிர சிங்களர்களின் தந்திரங்களை புரிந்து கொள்ளத் தெரியாமல் அதற்கே பலியானது தான் தமிழர்களின் வீழ்ச்சியின் தொடக்கம். அதுவே இன்றைய இனவாத பௌத்த ஆட்சியாளர்களின் கொள்கை ரீதியான அடிப்படையாக மாறியுள்ளது. இதற்குப் பிறகு உருவானவைகள் தான் சொர்க்கத் தீவின் கதை என்பது கண்ணீர்த் தீவின் கதையாக மாறியது (முற்றும்) [] பகுதி இரண்டு 1. தூங்காத ரா (RAW) வுகள் [] ஈழம் - இந்திய அமைதிப்படை இந்தியா உருவாக்கிய ஒப்பந்தத்தின்படி இலங்கையில் அமைதியை நிலைநாட்ட என்ற கொள்கையின் படி அமைதிப்படை வீரர்கள் உள்ளே நுழையப் போகிறார்கள். இது இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வு. சமகாலத்தில் வெளி வந்த மொத்த பிரபாகரன் குறித்த புத்தகங்கள், விடுதலைப்புலிகளின் எதிர்ப்பு விருப்பம் சார்ந்த அத்தனை புத்தகங்களிலும் இந்த நிகழ்வுகளையும் மேம்போக்காகவே எழுதப்ப்பட்டு இருக்கிறது. சொல்லப்போனால் சென்றார்கள் தோற்றார்கள் என்கிற அளவில். இந்த IPKF (INDIAN PEACE KEEPING FORCE) குறித்து எழுதி உள்ளனர். அமைதிப்படை இலங்கையில் நுழைந்தது முதல் வெளியேறியது வரைக்கும் முழுமையான புரிதல்களை நாம் கண்டுணர வேண்டும். காரணம் தொடங்கப்போகும் அடுத்த அத்தியாயம் என்பது ஐபிகேஎப் முதல் ராஜீவ் காந்தி இறப்பு மற்றும் அதன் புலனாய்வு பக்கங்கள் வரைக்கும் உள்வாங்க வேண்டுமென்றால் முதலில் இந்தச் சுவடுகளையும் நாம் கடந்து செல்ல வேண்டும். ஆனால் அதற்கு முன்னால் வேறு சிலவற்றையும் உள்வாங்கிக்கொள்ளுங்கள். விடுதலைப்புலிகள் ஏன் சிறப்பானவர்கள்? மற்றவர்களுக்கும் அவர்களும் என்ன பெரிதான வேறுபாடுகள் என்ன? என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்தியாவின் தத்துப்பிள்ளையும், ரா சிறப்புக் கவனம் செலுத்திய டெலோ இயக்கத்தைப்பற்றி அப்போது டைம் இதழ் (ஏப்ரல் 3 1989) கூறிய வாசகம் நினைவு கூறத்தக்கது. ” உளவு மற்றும் சீர்குலைவு வேலைகளில் பயிற்சி அளிப்பதற்காகக் கொண்டு வந்த டெலோ இயக்கத்தில் தெளிவற்ற நபர்களும் என்ன கொள்கை என்ன சித்தாந்தம் என்பதைப் பற்றிய புரிதல்கள் இல்லாமல் நிறைந்துருந்தனர். சிறீசபாரெத்தினம் தலைமைப்பொறுப்பில் செயல்பட்டு இருந்தாலும் அப்போதை டெலோ இயக்கம் என்பது ஐந்தாறு சிறு குழுக்கள் போல் தான் ஒழுங்கற்ற இயக்கமாய் இயங்கிக்கொண்டுருந்தனர். எந்தவித இலக்கும், நோக்கமும் இல்லாத ரா வுக்கு ஏற்ற, ரா விரும்பிய சிறப்பான கூலிப்படையாகச் செயல்பட்டுக் கொண்டுருக்கிறது. இது எங்கள் தனிப்பட்ட கருத்து அல்ல. பயிற்சி கொடுத்துக்கொண்டுருக்கும் இந்திய அதிகாரி கொடுத்த தகவலின் அடிப்படையிலானது” ஓரே காரணம் அப்போது தமிழ்நாட்டு ரா அலுவலகப் பொறுப்பாளராக இருந்த அதிகாரிகள் தமிழர் ரவி என்பவரும் மற்ற அவருக்குத் துணையான மேனன் என்பவரும் இருந்தனர். இவர்களுடன் சந்திரஹாசன் மிகுந்த நெருக்கமும் செல்வாக்கு உள்ளவராகவும் இருந்த இந்த ஒரே காரணமே டெலோ மட்டும் தத்துப்பிள்ளையாக ரா சுவீகரித்துக்கொண்டது. தொடக்கத்தில் ரா நேரிடைப்பார்வையில் இவர்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுக்கப்பட்ட இடங்கள் மண்டபம், கும்பகோணம், மசூலிப்பட்டிணம். [] இது போகச் சென்னை சர்வதேச விமான நிலையம் அருகிலும், அண்ணா நகரிலும் சிறிய முகாம் போன்ற அலுவலகம் வாயிலாக அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. தொடக்கப் பயிற்சிகளில் சிறப்பாய் முன்னேறியவர்களை உயர்தர ராணுவப் பயிற்சிக்காக வட நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இமயமலை அடிவாரத்தில் உள்ள முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இங்குள்ள “நிறுவனம் 22″ மூலம் இவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இது பக்கத்தில் உள்ள திபெத் ஆட்சி கவிழ்ப்பு, உள் நாட்டுக் கலவரங்கள் போன்றவற்றுக்கு என்றே உருவாக்கப்பட்ட அமைப்பு. மேலும் துணை ராணுவ பயிற்சிக்கூடங்கள் மூலமாகக் காலாட்படை பயிற்சி, பீரங்கி தாக்குதல்கள், எறிகணை, ராக்கெட், கண்ணிவெடிகள்,தகவல் தொடர்பு, வரைபடம் போன்றவற்றுடன் கொரில்லா தாக்குதல்கள் போன்ற போர் தந்திரங்களைப் பயிற்றுவிக்கப்பட்டன. [] பயிற்சி பெற்றவர்களில் 600 பேர்கள் டெலோ இயக்கத்தினர். மற்றப் போராளிக்குழுவினர் 50 முதல் 100 பேர்கள் என்ற அளவில் இருந்தனர். பின்னால் நுழைந்த விடுதலைப்புலிகளில் இரண்டு தலைவர்களும் பயிற்சி பெற்றனர். ஒருவர் மாத்தையா மற்றொருவர் கிட்டு. ரா பிரிவில் இருந்த அதிகாரி உன்னிகிருஷ்ணன் மூலம் ஒவ்வொரு நிகழ்வுகளும் இலங்கைக்குத் தகவல்கள் போய்க்கொண்டுருந்ததை இங்குக் குறிப்பிட்டே ஆக வேண்டும். புள்ளிவிபரங்கள், பெயர்ப்பட்டியல்கள் போன்ற அத்தனை விபரங்களும் கனஜோராய் சென்று கொண்டுருந்தது.. இந்த அதிகாரி சி.ஐ.ஏ எஜெண்ட் என்று கண்டுபிடிப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன் நடந்த நிகழ்ச்சி இது. இவருடைய இந்தச் சிங்கள பாசத்தை இவரிடம் பணிபுரிந்த டிரைவர் சொன்ன போது மொத்தமாய்ச் சுதாரித்துக்கொண்டு இவரை உளவு பார்க்க ஆரம்பித்தனர். காரணம் ராஜபக்ஷே ஆட்சிக்கு வந்தபிறகு சமீபகாலத்தில் தூதுக்குழுவாகச் சென்றவர்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அழகிரி சொன்ன ஒரு விசயத்தைக் கேட்டு ஆச்சரியப்படாதீர்கள். ” இந்தியாவிடம் இருக்கும் விபரங்களை விட இலங்கையில் அவர்களிடம் இருக்கும் மொத்த விடுதலைப்புலிகள் குறித்த தகவல்கள் மிகுந்த ஆச்சரியம் அளிப்பதாக இருக்கின்றது. காரணம் தமிழ்நாட்டில் உள்ள ஊர்முதல், சந்து பொந்து வரைக்கும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களின் பெயர் பட்டியல் முதல் அவர்கள் சார்ந்த அத்தனை விபரங்களும் விரல் நுனியில் வைத்து இருக்கிறார்கள்” என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார். விடுதலைப்புலிகள் இந்தியாவைச் சார்ந்து இராமல் தனித்தன்மையாக வளர்ந்தது ஒரே நாளில் நடந்து விடவில்லை. எந்தந்த இயக்கங்களுக்கு வெளிநாட்டில் உள்ளவர்களின் ஆதரவு கிடைத்துக்கொண்டுருந்ததோ அவர்களைக் கண்டு உணர்ந்தது அவர்களைத் தங்கள் வழிக்குக் கொண்டு வந்து மொத்த நிதி ஆதாரங்களையும் தங்கள் பாதைக்கு வரும் வரைக்கும் ஒவ்வொருவரையும் அங்கங்கே இருப்பவர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் கருணாநிதியின் செல்லப்பிள்ளையான டெலோ போல எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகன் போல் பிரபாகரன் இருந்த மற்றொரு காரணமும் அவர்களின் விரைவான வளர்ச்சிக்கு உதவியது. அப்போது விடுதலைப்புலிகளுக்கு உதவ என்று செயல்பட்ட பல பேர்கள் எம்.ஜி.ஆருக்கு பின்னால் இருந்தார்கள். அதிலும் குறிப்பாக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் மகாதேவன் என்ற அதிகாரி அதிகாரப் பூர்வ ராணுவ ஆலோசனை நபராக முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டுருந்தார். டெலோ இயக்கம் பெற்ற பயிற்சி போல விடுதலைப்புலிகள் செய்த மற்றொரு காரியம் அப்போதைய பிரிக்கப்படாத தென்னாற்காடு, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள், வீரர்கள் என்று தேர்ந்தெடுத்து அவர்களுக்குச் சம்பளம் என்ற அடிப்படையில் நியமித்து விடுதலைப்புலிகள் தங்களது வீரர்களை அனுப்பி அவர்கள் மூலமும் பயிற்சி எடுக்க வைத்தனர். 1985 ஆண்டில் சென்னையில் வீழ்ச்சி அடைந்த மின்ணணு சாதனங்கள் விலை என்பது இலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட கடத்தல்களின் அடிப்படையில் நடந்த நிகழ்ச்சி. அது போக அப்போது போதைப் பொருட்களின் கூடாரமாகச் சென்னை விளங்க பிளாட் இயக்கத்தில் இருந்தவர்கள் புகுந்து விளையாடினர். ஒவ்வொன்றும் கோர்த்து மாலையாக மாற்றம் பெற க்யூ பிராஞ்ச் மொத்த விடுதலைப்புலி போராளிகளையும் சென்னையை விட்டு 1986ல் வெளியேற்றவதில் முழுக்கவனம் செலுத்தினர். மற்றொரு கொடுமையும் உண்டு. போராளிக்குழுக்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பிரித்து, ஒருவருக்கொருவர் பார்க்காத வரையிலும் பிரித்தாளும் சூழ்ச்சியை கடைபிடித்தனர். புத்திசாலித் தனமாகச் செயல்பட்ட ரா உளவுத்துறை இவர்களைப் பற்றி மொத்த ஆவணக்கோப்பாக மாற்ற காலதாமதம் செய்த காரணத்தால் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதிகார வர்க்கத்தினருக்கே குழப்பம் உருவாகி வேறு சில வேண்டாத நிகழ்வுகளும் நடந்தது. ஒவ்வொரு நாட்டின் உளவுத்துறைக்கும் எதிர் உளவு ( Counter – Intelligence) ரொம்ப முக்கியம். தங்களுடைய ஆட்களைச் சம்மந்தப்பட்ட இடங்களுக்கு அனுப்பி அவர்கள் மூலம் ஒற்றறிதல். ஆனால் இதிலும் கொடுமை. இவர்களால் அனுப்பப்பட்டவர்கள் யாழ்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலையில் எவர் ஆதிக்கம் பெற்று இருந்தார்களோ அவர்களுடன் சேர்ந்து கொண்டு அவர்கள் கொடுக்கும் “பரிசு” களில் மனம் மயங்கி மொத்தத்தையும் கோட்டை விட்டதும் நடந்தது. ரா உளவுத்துறையினர் நினைத்தவாறு இவர்களால் செயல்பட முடியவில்லை. இதன் காரணமாக ரா அமைப்பினர் இவர்கள் மூலம் திரட்ட முடியாத சமாச்சாரங்களையும் பத்திரிக்கையாளர்கள் மூலம் பெற்று கோப்புகளை நிரப்பினர். இந்திய இலங்கை ஒப்பந்தம் நிறைவேறப்போகும் இந்தக் காலகட்டம் வரைக்கும் அலட்சிய மனப்பான்மை உள்ள இந்திய ஆதிக்க வர்க்கத்தின் செயல்பாடுகள் இந்த அளவில் தான் இருந்தது என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்? போராளிகளை வளரவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். ஆனால் இவர்களே வளர்க்கும் சூழ்நிலையும் உருவானது. ஆனாலும் ஒவ்வொரு சமயத்தில் போராளிகளை அழித்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டனர். ஆனால் ஒருவரை அழிக்க என்று அனுப்பப்பட்டவர்களே “ஆசைப்பட்டு”க் கட்சி மாறியதும் நடந்தது. ஒவ்வொரு நாட்டின் தூதுக்குழு, வர்த்தகப் பிரதிநிதிகள் என்று இந்தியாவிற்குள் வந்த செய்திகளை நாம் அன்றாடம் படிக்கும் செய்திகளுக்கு முன்னால் பல விசயங்கள் இங்கே தீர்மானமாய் செயல்படுத்தப்பட்டு இருக்கும். ஒப்பந்த காட்சிகள் என்பது வெளிப்பார்வைக்கு மட்டுமே. சொல்லப்போனால் அன்று கையெழுத்து போடும் வைபவம் மட்டும் தான் நடந்தேறும். இது போலத்தான் இந்த இலங்கையில் நடந்தேறிய ஜெயவர்த்னே ராஜீவ் காந்தி ஒப்பந்தமும். இந்த ஒப்பந்தம் என்பது பிரபாகரன் மூலம் நடத்தப்பட்ட பேரங்கள், ஜெயவர்த்னே மூலம் கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் என்பதையும் தாண்டி பல நிகழ்வுகள் கண்ணுக்குத் தெரியாமல் நடந்தேறியது. 1987 ஆம் ஆண்டுத் தொடக்கத்திலேயே இலங்கைப் பிரச்சனையில் இந்தியா தலையிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாகத் தொடக்கப் பெற்ற பேச்சுவார்த்தைக்கென்று உள்ள குழுவில் இருந்தவர்களை தேர்ந்தெடுத்தவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? அதிபராக இருந்த ஜெயவர்த்னே அமைச்சரவையில் இருந்த காமினி திசநாயகா, கொழும்பில் இருந்த தொழில் அதிபர் சி.டி.ஏ.ஸ்காப்டெர் கடைசியாக இந்தியாவின் சார்பாகத் தி ஹிண்டுவில் அப்போது துணை ஆசிரியராக இருந்த என்.ராம். இது எப்படித் தொடங்கியது? அப்போது காமினி திச நாயகா இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவராகவும் இருக்கப் புரிந்துணர்வின் அடிப்படையில் இந்திய (அப்போதைய) கிரிக்கெட் வாரிய தலைவர் என்.கே.பி. சால்வே மூலம் இந்திய அரசாங்கத்திடம் செய்திகள் கடத்தப்பட்டது. இந்த இடத்தில் மற்றொரு விசயம். இந்திய இலங்கை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக ஒன்று சேர்ந்து பேசிய ஆண்டு ஜுலை 12 1987. ஆனால் அதற்கு முன்னால் பல இந்திய ஜவான்களை (ஜுன் 25) ஐலேண்டு பிரைடு கப்பலில் ஏற்றப்பட்ட நிவாரணப்பொருட்களுடன் ஒன்றாகக் கலந்து வந்து மறைவிடத்தில் தங்க வைக்கப்பட்டனர். மற்றொரு கொடுமை வந்தவர்கள் தங்கியிருந்த இடங்களில் செய்த கொடுமைகளும், போட்ட பார்ட்டி கூத்துகளும் அவர்களை வெளிப்படையாகக் காட்டிகொடுத்து விட்டது. அன்று முதல் இன்று வரைக்கும் இந்தியாவில் உள்ள அதிகாரவர்க்கத்தினருக்கு இருக்கும் ஆசைகளும், செய்து கொண்டுருக்கும் செயல்பாடுகளுக்குச் சம்மந்தம் என்பதே நீங்கள் காணமுடியாது. தீர்க்கமான பார்வையோ, தீர்மானமான கொள்கையோ ஏதும் இல்லை. நோக்கம் தவறாக இருக்கலாம். ஆனால் பாதைகள் தெளிவாக இருந்தால் தானே கொடுத்த பொறுப்பை நிறைவேற்ற முடியும்? இந்தக் கொடுமை தான் இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிப்படையிலும் தொடர்ந்தது. தோற்றுப் போய் திரும்பி அழைத்துக்கொண்ட போதும் இறுதியில் ராஜீவ் மரணம் வரைக்கும் விடாது கருப்பு போல் தொடர்ந்து கொண்டுருந்தது. அப்படி என்றால் இப்போது? இவர்களை முழுமையாக நம்பியிருந்தால் ஏன் சோனியா காந்தி தன் மகளை விட்டுச் சிறைச்சாலையில் நளினியை சந்திக்க ஏற்பாடு செய்துருப்பாரா? ராஜீவ் காந்தி புலனாய்வில் ஈடுபட்ட ஒரு அதிகாரியை எக்காரணம் கொண்டு இனி என்வீட்டுப் பக்கம் வராதீர்கள் என்று சொல்லி விரட்டி அடித்து இருப்பாரா? 2. ராஜிவ் ஜெயவர்த்னே ஒப்பந்தம் தொடக்க ரகஸ்யங்கள் தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளுக்கு, இலங்கையில் போராடிக்கொண்டுருந்த மற்றப் போராளி குழுக்களுக்கு இருந்த ஆதரவு மொத்தமும் பறிபோனதற்கு முக்கியக் காரணம் தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் மனிதவெடி குண்டு மூலம் படுகொலை செய்யப்பட்ட அமரர் ராஜீவ் காந்தி என்று தான் பலரும் நினைத்துக்கொண்டுருக்கிறோம். ஆனால் ஈழத்தில் 2009 ஆம் ஆண்டு நடந்த போரில் இந்தியா இலங்கைக்குப் பின்னால் நின்றதற்கு வேறு பல காரணங்களும் உண்டு. [] சொல்லப்போனால் ராஜீவ் மரணம் என்பது அதுவும் ஒரு காரணம். அதுவே முக்கியக் காரணம் அல்ல. பத்துக் காரணங்களில் அதுவும் ஒன்று. பின்னால் வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம். கூடவே ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னால் உள்ள மர்மங்கள் குறித்து டி.ஆர். கார்த்திகேயனின் புலனாய்வுப் பக்கங்களை ஆற அமர பார்க்க வேண்டும். காரணம் விடுதலைப்புலிகளின் மொத்த ஆளுமையும், நம்முடைய அதிகார வர்க்கத்தின் அலட்சிய மனப்பான்மையும் அந்தக் கிளைத்தொடரின் மூலம் நமக்கு மிகத் தெளிவாகத் தெரியும். ஒவ்வொரு இந்தியனாகப் பிறந்தவனும் ராஜீவ் மரணம் என்பதை எந்த விதத்திலும் மேம்போக்காகவோ, நியாயப்படுத்தவோ முடியாது. அது பிரபாகரன் தமிழர் என்பதாலோ, பட்ட வேதனைகளுக்கு உண்டான பழிவாங்கல் என்று எல்லாவிதங்களிலும் எடுத்துக்கொண்டாலும் இலங்கையில் கடைசித் தமிழன் வாழும் வரைக்கும் இந்த அவப்பெயரும் இருந்து கொண்டேதான் இருக்கும். மன்னிக்கவே முடியாத குற்றம் தான். சந்தேகம் என்பதே இல்லை. ஆனால் ஏன் ராஜிவ் காந்தி இத்தனை அவசரப்பட்டார்? என்ன தான் நடந்தது? ஜெயவர்த்னே பங்களிப்பு என்ன? யாருக்குப் பிரயோஜனம்? என்று ஒன்றன்பின் ஒன்றாக அலைஅலையாய் ஆயிரம் கேள்விகள். அவரைக் கொல்லும் அளவிற்கு உண்டான நிகழ்வுகள் என்ன என்று பார்க்கப்போனால் தொடக்கம் முதல் அதில் உள்ளே நுழைய வேண்டும். [] முதலில் ராஜீவ் ஜெயவர்த்னே ஒப்பந்தம் என்ன சொல்கிறது? என்பதைப் பார்ப்பதற்கு முன் அதன் நதி மூலம் ரிஷிமூலத்தைப் பார்த்துவிடலாம். இதற்கான குரு ஒருவர் மட்டுமே. ஒருவகையில் பார்க்கப்போனால் இவர் தான் ராஜீவ் காந்தி விடுதலைப்புலிகளால் கொலை செய்யப்படக் காரணமாக இருந்த அந்த ஒப்பந்தத்தை உருவாக்கியவர். அமல்படுத்தியே ஆகவேண்டும் என்று மற்றவர்களையும் விடத் துடிப்போடு செயல்பட்டவர். தனிப்பட்ட அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட மொத்த ராஜதந்திர வேலைகளையும் முன் நின்று நடத்தியவர். கடைசி வரைக்கும் ராஜீவ் காந்தி மனம் மாறிவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தவர். ஒரு வகையில் பார்க்கப்போனால் மனோவசிய பொம்மை போலத் தான் இந்த ஒப்பந்தத்தில் ராஜீவ் காந்தியின் பங்களிப்பு. ஜே.என்.தீட்சித். இவர் உருவாக்கியது “இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வு” என்ற நாடகம். வெகு கவனமாகக் காய்கள் ஒன்றன் பின் ஒன்றாக நகர்த்தப்பட்டது. ஈழத்தின் வடமராட்சிப் பகுதியிலும், முல்லைத் தீவிலும் இலங்கை இராணுவம் கொலை வெறியாட்டம் நடத்திக் கொண்டுருந்த போது ஜெயவர்த்னே அழைப்பின் பேரில் என்று சொல்லிக்கொண்டு சம்மந்தம் இல்லாமல் (ஜுலை 16) தீட்சித் ஜெயவர்த்னே கூட்டப்பட்ட (12 இலங்கை அமைச்சர்கள்) கூட்டத்தில் திட்டத்தை முன் வைத்தார். அப்போது மற்றவர்களுக்கு அந்தத் திட்டமானது ஜெவர்த்னேவால் உருவாக்கப்பட்டது என்பதும் பரப்பப்பட்டது. ஆனால் உருவாக்கியதும், வழி நடத்தியதும், முன் மொழிந்ததும் இவரே. ஒரு வகையில் அன்று ஜெயவர்த்னேவுக்குக் கொடுக்கப்பட்ட மறைமுக நிர்ப்பந்தம். இலங்கையின் வடக்குக் கிழக்கு மகாணங்களை இணைத்து தமிழர் பிரதேசமாக அங்கீகரிக்கும் புதிய திட்டம் உருவாகி இருப்பதாக வதந்திகள் பரப்பப்பட்டது. ஈழ மக்களின் மொத்த வாழ்வுரிமையைச் சம்மந்தப்பட்டவர்களின் ஆலோசனை இல்லாமல் கொழும்பு மற்றும் டெல்லியில் உட்கார்ந்து கொண்டு வடிவமைக்கப்பட்டது. வலுக்கட்டாயமாகப் பிரபாகரனை இந்திய ராணுவ ஹெலிகப்டர் மூலமாக யாழ்பாணத்தில் இருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். டெல்லியில் அசோகா ஹோட்டலில் ஏறக்குறைய சிறை வைக்கப்பட்டது போல் இக்கடான சூழ்நிலையை உருவாக்கி அதன்பிறகே அவருக்கு உத்தரவு போல கொடுக்கப்பட்டது. “முடிவு செய்தாகி விட்டது. மற்ற அத்தனை பேர்களும் ஒத்துக்கொண்டார்கள். நீங்களும் இதில் கையெழுத்துப் போட்டுத்தான் ஆக வேண்டும்” என்று மிரட்டல் விடுக்கப்பட்டது. அப்போதைய சூழ்நிலையில் எதிர்ப்பை காட்டினாலும் பிரபாகரனுக்கு வேறு வழியில்லை. பிரபாகரன் வாழ்வில் சென்னையில் உமா மகேஸ்வரனுடன் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு, அங்கே தி நகரில் நடந்த சம்பவங்கள் மூலம் காவல்துறை சட்ட ஏற்பாட்டுக்குப் பிறகு மொத்தமாக மற்றவர்களிடம் பணிந்தது இங்கு தான். அவரின் மொத்த வாழ்விலும் இந்த இரண்டு சம்பவங்கள் மட்டுமே? தமிழ்நாட்டு முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர் கூட அன்று ஒரு வேடிக்கையாளராகத் தான் இருக்க முடிந்தது என்பது மற்றொரு ஆச்சரியம். அந்த அளவிற்கு அதிகார மட்டத்தில் தெளிவாகக் காய் நகர்த்தப்பட்டது. ஜுலை 26 அதாவது சரியாகப் பத்து நாட்களில் ஒப்பந்த நகலை உறுதிபடுத்தும் வேலை. ஆமாம் திணிக்கப்பட்டது என்பது தான் சரியான வார்த்தை. இது ஜெயவர்த்னே உருவாக்கிய திட்டமல்ல. அவரையும் மிரட்டி நிர்ப்பந்தப்படுத்தப்பட்ட ஒப்பந்தம். கையொப்பமிட்டு அடுத்த எட்டு நாட்களில் மொத்த ஆயுதப்போராளிகளின் ஆயுதங்களை ஒப்படைக்க வைத்து அவர்களை நிராயுதபாணியாக ஆக்குவது. ஒப்பந்த இறுதி நகலில் ராஜீவ் காந்தி ஜெயவர்த்னே மட்டும் தான் கையெழுத்திடுவார்கள். ஈழப் போராளிகளில் எவர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்களோ உடனடியாகச் சிறையில் அடைப்பது. அமைதிப்படை என்ற பெயரில் தமிழர்களின் வாழ்க்கையை மேம்படுத்த இந்திய இராணுவ வீரர்கள் இலங்கையில் ஒப்பந்தம் அமலாகும் வரைக்கும் மொத்த சட்ட ஒழுங்கை பாதுகாப்பது. ஒப்பந்த ஷரத்துக்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் சிறிய நாடான இலங்கையின் மீது இந்தியா படையெடுக்கும் என்று ஜெயவர்த்னேவுக்கு அன்புடன் கூடிய மிரட்டல். இந்த முதல் கட்டம் டெல்லியில் இவ்வாறு தொடங்க, இதன் அடுத்தக் கட்டம் சென்னையில் நடந்தது. EPRLF மற்றும் TELO. PLOT என்பவர்களை ஒரு கூட்டணியாகவும், ENTLF என்ற மற்றொரு கூட்டணிகளையும் தனித்தனியாகப் பிரித்து வைத்து இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதாகக் கையெழுத்து வாங்கப்பட்டது. இந்த இரண்டு கூட்டணிகளையும் ஏற்கனவே ரா உளவு அமைப்பால் பிரபாகரனின் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிராக ஏற்கனவே மாற்றி வைத்து இருந்தனர். சென்னை சாந்தோமில் உள்ள ரா அலுவகத்தில் தலைமையதிகாரி நாராயணன் மூலம் நேரிடையான கண்காணிப்பில் ஒவ்வொன்றும் மிகச் சிறப்பாகத் திட்டமிட்டு நடத்தப்பட்டுத் தலையாட்டி பொம்மையாக மாற்றி வைத்து இருந்தனர். அப்போது இந்தக் கூட்டத்தில் நாராயணன் கூட உடன் இருந்தவர் அப்போதைய இலங்கைக்கான இந்திய தூதர் கேப்டன் குப்தா. ஒப்பந்த பிரதிகளை எந்தப் போராளிக்குழுக்களுக்கும் வழங்கப்படவில்லை. கையெழுத்து வாங்கியதும், வாய்வழியே சொன்னதும் மட்டும் தான். இது போக அமிர்தலிங்கம் தனியாக ஒப்பந்த நகலில் கையெழுத்து போட்டு கொடுத்து விட்டு அமைதியாகிப் போனார். அப்போது கால்கள் ரணமாகி எழுந்து நடமாட முடியாத நிலைமையில் இருந்த EROS பாலகுமாரன் குண்டுக்கட்டாகத் தூக்கிப் போகப்பட்டு, நிர்ப்பந்தம் செய்யப்படத் தொடக்கத்தில் பிரபாகரன் போலவே முரண்டு பிடித்தவர் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அவரும் கையெழுத்து போடவேண்டியதாகி விட்டது. அடையாள அட்டையும், தினசரி பேட்டாவும் வழங்கப்பட்டு ஒவ்வொருவரும் கண்காணிப்பில் இருந்தனர். ஆதிக்கம் செலுத்துவதில் முக்கியப் பங்கு வகித்த பிரபாகரனுக்கு மட்டும் இந்திய அரசாங்கத்தால் மாதம் 50 லட்சம் வழங்கப்படும் என்றொரு மறைமுக ஒப்பந்தம் ஒன்றையும் வாய் வார்த்தையாக சொல்லியிருந்தனர். காரணம் அப்போது நிர்வாக வசதிக்காக வரி வசூல் மூலம் விடுதலைப்புலிகள் ஆட்சி செலுத்திக்கொண்டுருந்தனர். ஒப்பந்தம் அமலானதும் இந்தத் தொகையும் ஒரு மாதம் மட்டுமே கைக்குப் போய்ச் சேர்ந்தது. அப்புறம் பணால். தொடக்கத்தில் இந்த ஒப்பந்தம் குறித்து ஏதும் தெரியாமல் பிரபாகரன் சொன்ன வாசகம் இது. ” 30 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த இலங்கை பிரச்சனைகள் இன்னும் ஒரு வாரத்தில் தீர்வு காணப்பட்டு விடும்” அதே பிரபாகரன் மொத்தமும் புரிந்த போது சொன்னது, “தமிழர்களின் உரிமையைப் புறக்கணிக்கும் எந்த ஒப்பந்தமும் வெறும் காகிதமாகத்தான் இருக்கும். இது தமிழர்களின் மேல் திணிக்கப்பட்ட ஒப்பந்தம். அளவற்ற துன்பங்களை அனுபவித்துக்கொண்டுருக்கும் மக்களை விட்டு விட்டு இந்திய அரசாங்கம் மொத்தமாக இலங்கையுடன் இணைந்து செயல்படுவது போல் தான் இருக்கிறது. சில தவறான புரிதல்களைக் களைந்து செல்வதற்காகப் பிரதமருடன் பேச வரும்படி தந்திரமாக அழைத்து வரப்பட்டேன். அதன் பிறகு திருப்தியற்ற இந்த ஒப்பந்தத்தை இருவரும் சேர்ந்த நாடகம் போல் நடத்தி ஏமாற்றப்பட்டதை நினைத்து வருந்துகிறேன். விவாதம் என்பது இல்லாமல் தலையாட்ட வேண்டும் என்பதை மட்டும் மனதில் கொண்டு அவர்கள் நினைத்ததைச் சாதித்துக்கொண்டார்கள்” அசோகா ஹோட்டலில் நடந்த உரையாடலில் பிரபாகரன் மிரட்டப்பட்டதும், உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்த பிரபாகரன் நிலைமை கண்டு, வைகோ, நெடுமாறன் தலையிட்டதும் இதன் தொடர்ச்சியே. வெளியே வந்து எத்தனை தான் புலம்பினாலும் “எவர் எதிர்த்தாலும் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றியே தீருவோம்” என்று சூளுரைத்து இறுதியில் செயல்படுத்தியும் காட்டினர். தொடக்கத்தில் சிங்கள இராணுவ சிப்பாயிடம் பின் மண்டையில் ராஜீவ் காந்தி வாங்கிய அடி, இறுதியில் ஸ்ரீபெரும்புதூரில் மொத்த உடம்பும் உருக்குலைந்து வழித்து அள்ளும் அளவிற்கு அவருக்குக் கிடைத்த பரிசு தான் மொத்த உலகத்தையும் கதற வைத்துவிட்டது. அடுத்த நூற்றாண்டுக்கு சென்றாலும் அழியாத கறையாகிப் போனது. அன்று அதிகாரவர்க்கத்தினர் உருவாக்கிய அலங்கோலத்தில் சிதறிய புள்ளியாகி நம் மனதில் மட்டும் இன்றும் வாழ்ந்து கொண்டுருக்கிறார். 3. இந்திய அமைதிப்படை(IPKF) வேரும் விழுதுகளும் கோணல் புத்தியும், குறுக்கு வழியும் எங்கேயாவது ஜெயித்து இருக்கிறதா? ஜெயித்தாலும் அது நீடித்துப் பார்த்து இருக்கிறீர்களா? நீடித்து இருந்தாலும் நிதர்சமான வெற்றிகளை அடைந்து இருக்கிறார்களா? வெற்றி கிடைக்குமோ இல்லையோ வெறி அதிகமாகும். உருவாக்கும் வெறி வெற்றியையும் தராது. இறுதி வரைக்கும் வெறியும் அடங்காது. இது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பொருந்தும். ஆடம்பர மணவிழா முடிந்து விட்டது. உலக ஊடகம் முன் எப்போது சிரிக்காத மூஞ்சி ஜெயவர்த்னேவும், எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் மலர்ச்சியான முகத்தைப் பெற்ற ராஜீவ் காந்தியும் மனம் கொண்ட மகிழ்ச்சியைப் புகைப்பட ஆவணமாக்கி இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்துப் (29 ஜுலை 1987) போட்டாகி விட்டது. வந்த விருந்தினரை சும்மா அனுப்பி விட்டால் இலங்கை மரியாதை என்னவாகும். அணிவகுப்பு மரியாதையின் வாயிலாகப் பெற்ற அத்தனை மரியாதையும் ராஜீவ் காந்தி கூட (அடித்த கடற்படை வீரனின் பெயர் விஷயமுனி விஷிதா ரோகண டி சில்வா) தலைகுனிந்து தப்பி விட்டார். ஒருவன் தான் பின்பக்கமாக அடிக்க உயர்த்தினான். அடித்த கட்டைக்கு முன் இருந்த கத்தி படாமல் இருந்தது நேரு செய்த புண்ணியமா? அம்மா இந்திரா காந்தி செய்த தவமா? இல்லை தான் கற்று வைத்திருந்த பயிற்சி கொடுத்த முன் எச்சிரிக்கையா? அந்தக் கூட்டணியில் இருந்த மற்ற வீரர்கள் அமைதியாய் இருந்த காரணம் நாம் செய்த புண்ணியம். இல்லாவிட்டால் அன்றே சிங்கள வெறி எந்த அளவிற்கு இருக்கும் என்பதை இந்தியா மட்டுமல்ல உலகமே பார்த்து இருக்கும்? மொத்தத்தில் முடிந்து விட்டது. எப்போதும் போலச் சிரித்துக்கொண்டே அதையும் மறந்து விட்டார் நம்ம ராஜீவ் காந்தி. விடுதலைப்புலிகள் அமெரிக்க அதிபரை இது போல் வெடிகுண்டு தாக்குதல்களை விடுதலைப்புலிகள் கொன்று இருந்தால் என்னவாயிருக்கும்? துடைத்து இருப்பார்கள். அதையே சற்று மாற்றி யோசித்துப் பாருங்கள்? அமெரிக்க அதிபருக்கு இது போல் அணிவகுப்பு மரியாதையில் நடந்து இருந்தால்? வேண்டாம்? எல்லாவற்றையும் யோசித்துக் குழப்பிக்கொள்ள வேண்டாம். காரணம் ராஜீவ் மட்டும் விரும்பிய ஒப்பந்தம் இது. மொத்தத்தில் ஆசியாவின் கனவு ஒப்பந்தம். உலகம் முழுக்க இன்று தான் விரும்பிய அளவிற்கு ஒரு தாக்கத்தை உருவாக்கியாகி விட்டது. இது ஒன்றே போதும். காந்தி தேசம் அல்லவா? வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டு மறப்போம் மன்னிப்போம். ஆனாலும் சில கேள்விகளை இப்போது நாம் உரைத்துப் பார்க்க வேண்டும். இந்திய அமைதிப்படை இலங்கைக்குச் சென்றது குறித்து உங்கள் கருத்து என்ன? நீங்கள் சரிதான் என்பவரா? இல்லை மொத்தமும் தவறு என்பவரா? பிரபாகரன் என்ற சக்தியை இப்போது மறந்து விடுங்கள். அவர் பாவம். மனக்குமுறலோடு முதன் முறையாக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய செய்திகளைத் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் போல் தாளில் எழுதிக்கொண்டு இருக்கிறார். காரணம் சுதுமலை பிரகடனம் என்ற முதல் பொதுக்கூட்டத்தை நடத்தப் போகிறார். செயல் மட்டும் தான் முக்கியம் என்று பேசிப்பழக்கமில்லா அவருக்கு உரையாற்ற வேண்டிய உரையை அடித்தல் திருத்தமின்றிப் படித்துப் பார்த்துப் பயிற்சி எடுத்துக்கொண்டுருக்கிறார். எனவே இப்போது நீங்கள் இதையும் கடந்து வாருங்கள். ஆண்டுக் கொண்டுருந்த ஜெயவர்த்னேவுக்கு வேறு வழியில்லை. கிழக்குத் திசையில் இந்திய ரா உளவுப்படை. சூரியன் உதிக்கிறதோ இல்லையே இவர்களின் தொல்லைபேசியும், சவடால்களும் அதிகம். மேற்குப் பக்கம் தமிழீழம் மட்டும் தான் வேண்டும் என்கிற போராளிகள். சூரியன் மறைகிறதோ இல்லையோ தினந்தோறும் எத்தனை இலங்கை இராணுவ வீரர்கள் விடுதலைப்புலிகளால் மண்ணுக்குப் போவர்கள் என்பதை உச்சிதமாகச் சொல்ல முடியவில்லை. தெற்கில் பிரேமதாசா மற்றும் ஜேவிபி மற்றும் அரசாங்க எதிர்பாளர்கள். மீதி ஒரு பக்கம் தான் இருக்கிறது. புத்த பிக்குகள். ” பண்டாராநாயகா எப்படிப் போய்ச் சேர்ந்தார் என்பதை மறந்து விட்டாயா?” என்பது போல் தினந்தோறும் ஆசிர்வாதம் தேடி வந்து கொடுத்து போய்க் கொண்டிருக்கின்றார்கள். “பிடிக்கவில்லை ஆனால் பிடிக்கும் அளவுக்கு நடந்து கொள்ளத்தான் வேண்டும் ” என்று ஜெயவர்த்னே வேறு வழியில்லாமல் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டாலும் அவர் உருவாக்கிய பாதை தான் இந்தியாவிற்கும் போராளிகளுக்கும் உள்ள எதிர்கால மொத்த புரிதல்களையும் தவிடுபொடியாக்கியது. ஆனால் இதற்கு மேலும் ஏன் இந்த ஒப்பந்தத்தை ஜெயவர்த்னே ஏற்றுக்கொண்டார்? எளிதில் மசியக்கூடியவரா? அதற்குள்ளும் ஒரு காரணம் இருக்கிறது. அன்றைய தின இலங்கையின் படைபல பலவீனமும், விடுதலைப்புலிகளின் வளர்ச்சியும், ஆட்சி எந்த நேரத்திலும் கவிழ்க்கப்படலாமென்ற அச்சமும் ஒரு காரணம். அவருக்கு எந்த அளவிற்கு எதிர்ப்பு இருந்தது என்றால் உள்ளே இருந்த மொத்த அமைச்சர்களும் ஒரே எதிர்ப்பு அணியில் திரண்டதும் ஒரு காரணமாக இருந்தது. கூடவே அடுத்து பதவிக்கு காத்துக் கொண்டிருந்த பிரேமதாசா ” அண்ணன் எப்ப இடம் விடுவான் ” என்று காத்துக் கொண்டிருந்தார். வேறு வழி. மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி. 1. இலங்கையின் உள்ளே சென்ற அமைதிப்படை எதை நோக்கி இந்தப் பயணம்? என்பதைத் தெரிந்து கொள்ளாமல் நுழைந்த ஆண்டு 30 ஜுலை 1987. போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட என்று திரும்பி வந்த ஆண்டு மார்ச் 24 1990. மொத்த காலத்தையும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். 2. அமைதிப்படை இலங்கைக்குச் சென்ற போது டெல்லியில் ஆண்டு கொண்டுருந்தவர் ராஜீவ் காந்தி. திரும்பி வந்த போது வி.பி.சிங் (VISWANATH PRATHAP SINGH). 3. சென்ற இந்திய அமைதிப்படைக்குத் தலைமை தாங்கி பூரிப்போடு சென்றவர் ஜெனரல் திபேந்திர சிங். திரும்பி வந்த போது வாடிப்போன முகத்தோடு மனதிற்குள் குமுறலோடு தலைமையேற்று வந்தவர் ஜெனரல் அமர்ஜித் சிங். 4. “இவனுங்க பொடியன்கள். இவர்களைக் குறித்தா பயப்படுறீங்க. சும்மா ஊதித் தள்ளிவிடலாம் ” என்ற மொத்த எண்ணங்களும் தவிடுபொடியாக்கி உயிர் இழந்த அப்பாவி இந்திய இராணுவ வீரர்கள் அதிகமில்லை ஜென்டில்மேன், பாகிஸ்தானுடன் மோதி பங்களாதேஷ் என்ற புதிய நாட்டை உருவாக்க பாடுபட்ட போது நடந்த போரில் உயிர் இழந்த இராணுவ வீரர்களை விட அதிகம். 5. இலங்கையின் உள்ளே நுழைந்த போது எரிச்சலுடன் வரவேற்றது ஜெயவர்த்னே. கழுத்தை பிடித்துத் தள்ளாத குறையாக வெளியே அனுப்பியது பிரேமதாசா. 6. தமிழ்நாட்டில் தொடக்கத்தில் எம்.ஜி.ஆர். அதுவே துறைமுகத்தில் அவமானத்தோடு வந்து இறங்கிய போது ” இது அமைதிபபடை அல்ல. அழிவுப்படை” என்று தன்னுடைய முழுமையான தந்திரமில்லா எதிர்ப்பைக்காட்டிய ஆட்சியில் இருந்த முதல் அமைச்சர். கலைஞர் மு.கருணாநிதி. ஒரு வகையில் பார்க்கப்போனால் மொத்த அமைதிப்படையும் திருப்பி அழைக்கப்படக் காரணமாக இருந்தவர் கலைஞர். இவர் கொடுத்த அழுத்தமும், மத்திய அரசாங்கத்திற்கு இவர் கொடுத்துக்கொண்டுருந்த ஆதரவும் முக்கியக் காரணம். தேர்தலில் அப்போது விபி சிங் தேர்தலின் போது தமிழ்நாட்டு வாக்காளர்களுக்குக் கொடுத்த முக்கிய வாக்குறுதியும் கூட. அந்த அளவிற்கு இந்த அமைதிப்படை தமிழ்நாட்டில் முக்கிய விவாத பொருளாக இருந்தது என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. 7. இந்த இடத்தில் மற்றொரு நகைச்சுவை. விவேகம் அதிகம் பெற்ற, உண்மையிலேயே இலங்கைத்தமிழர்களுக்குப் பாடுபட எல்லாவகையிலும் முயற்சித்த இந்திரா காந்தி காலத்தில் செயல்பட்ட தூதர் தமிழர் ஜீ. பார்த்தசாரதியைக் கண்டாலே ஜெயவர்த்னேவுக்கு எள்ளும் கொள்ளும் முகத்தில் வெடிக்கும். அதன் பிறகு பின்னால் பிரதமாக இருந்த நரசிம்மராவ் இந்தப் பிரச்சனையில் நுழைந்த போது இந்திய தூதராக ஜீ. பார்த்தசாரதி இலங்கைக்குச் சென்ற போது கொழும்பு விமான நிலையத்தில் இருந்து அவருக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டிய வாகன வசதிகள் கூட அளிக்கப்படாமல் அவமானபடுத்தியதும், அவர் அமைதியாக அதைப் பொறுத்துக்கொண்டு எப்போதும் போலச் சிரிக்காமல் போய் அவர்கள் முன் அமர்ந்ததும் நடந்தது. காந்தியவாதிகள் எப்போது கண்ணியமாகத்தான் நடந்து கொள்வார்கள். ஆனால் இப்போது ஜீ. பார்த்தசாரதிக்குப் பிறகு முக்கியக் கதாநாயகன் ஜே.என். தீட்சித். ஒரு வகையில் இவரை நாம் பாராட்டலாம். அட்டகாசமாகக் கால் மேல் கால் போட்டுக்கொண்டு பி.எஸ். வீரப்பா போல் ஜெயவர்த்னே முன் அமர்ந்து கொண்டு சுருட்டுப் புகையை விட்டுக்கொண்டு மொத்த இலங்கை அதிகாரவர்க்கத்தையும் டர்ர்ர்ர் ஆக்கிக்கொண்டுருந்தார். அன்று ஜெயவர்த்னே முகம் எப்படி இருந்துருக்கும்? 8. பொடியன்களைச் சமாளிக்க முடியாத வல்லரசு கொண்டு போய்ச் சேர்த்த ஆயுத தளவாடங்களின் பட்டியல் சரவணபவன் பட்டியலை விட நீளமானது. பயந்து விடாதீர்கள். இது அத்தனையும் இலங்கையில் அமைதியை நிலைநாட்ட மட்டுமே? நவீன AVF கவச வண்டிகள், ரஷ்யாவிடமிருந்து வாங்கிய 45 டன் எடையுள்ள T 72 ரக அதிவேக நவீன போர்முனை (வடக்கு மகாண காட்டுக்குள் செல்வதற்கு ஏற்ற) டாங்கிகள், உள்ளே இருந்த கொரில்லா போராளிகளை அழிக்க என்று பிரத்யோக பயிற்சி பெற்ற 31 வது ஆயுத டிவிசனைச் சேர்ந்த 65வது ரெஜிமெண்ட் படை வீரர்கள். இது போக 20 டன் எடையுள்ள ரஷ்ய தயாரிப்பான BMP 2 ஆயுத கவச வண்டிகள். இந்த வண்டிகளுடன் பராமரிக்க, பாதுகாக்க, ஈடுபட, மற்ற ஏற்பாடுகளுக்கென ஒரு படை பட்டாளங்கள். இந்தப் பட்டியல் இயல்பாய் முன்னமே போய்ச் சேர்ந்தவர்களுடன் சேர்த்து விடாதீர்கள். இவர்கள் தனி. அவர்கள் தனி. ஏனிந்த சிறப்பு மக்கள்? புலிகள் உருவாக்கி வைத்திருந்த கண்ணி வெடிகள் என்பது நமது வீரர்களைத் தேங்காய் போடாத சட்னி போல் ரத்தச் சகதியை அறிமுகப்படுத்திக்கொண்டுருந்தத காரணத்தால் தினந்தோறும் செத்து சுண்ணாம்பாகிக் கொண்டுருந்தார்கள். பட்டியல் முடியவில்லை. போரில் உக்கிரம் தொடங்க விட்ட குறை தொட்ட குறையாகத் தரைப்படை, வான்படை, கடற்படையுடன் அதி நவீன ஆயுதங்களுடன் பிரெஞ்சு ஜாகுவார் மற்றும் ரஷ்ய தயாரிப்பான மிக் 25 ரகப் போர்விமானங்கள்,அப்போது தான் புதிதாக வாங்கப்பட்ட ரஷ்ய MI 25 ரக ஹெலிகாப்டர், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஆட்கள் பயணிக்க MI 8 வகை ஹெலிகாப்டர். இந்த இடத்தில் மற்றொரு ஆச்சரியம். இது போன்ற ஹெலிகப்டர் அத்தனை வகையிலும் எப்போது வேண்டுமானாலும் செயல்படக்கூடிய எறிகணை தாக்குதலுக்கு உதவி புரியக்கூடிய எந்திர அமைப்புகள் என்று எல்லாவிதத்திலும் புதிய தொழில் நுட்பத்தோடு உருவாக்கப்பட்டு இருந்தது. இந்திய இராணுவ தொழில் நுட்ப மக்கள் இரவு பகலாக உழைத்துக் கொண்டுருந்தனர். இன்னும் சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் உலகின் நான்காவது பெரிய ராணுவ பலம் உள்ள இந்தியாவின் மொத்த படைபலத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை இலங்கையில் கொண்டு போய்க் குவித்து இருந்தது. போர் உக்கிரம் அடைய ஒரு நாளைக்குச் செலவிழித்த தொகை உத்தேசமாக இந்திய ரூபாய் 300 கோடி ரூபாய். மொத்த காலத்திலும் செலவழித்த தொகை அரசாங்க கணக்குப்படி ஆயிரம் கோடி. ஆனால் ஊடகத்தில் வந்த கணக்குப்படி 2000 கோடிக்கும் மேல். காரணம் அமைதியை நிலைநாட்ட? நாட்டினார்களா? நா தழுதழுக்க, முகம் வெளிறி மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க வைத்தது தான் மிச்சம். பணமா நமக்கு முக்கியம். காந்தி சொல்லிவிட்டுப் போன அமைதிப் பாதைக்கு இன்னும் கூடச் செலவளிக்கலாம் அல்லவா? ஏனிந்த அவமானம்? யார் மேல் தவறு? 4. பிரபாகரன் பொதுக்கூட்டம் கூட்டத்திற்கான தலைப்பு ” நாம் இந்தியாவை நேசிக்கின்றோம்” யாழ்பாணத்தில் உள்ள சுதுமலை அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல் முறையாக லட்ச மக்களுக்கு மேல் திரண்டுருந்த பொதுக்கூட்டத்தில் பினவருமாறு உரையாற்றினார். அன்பிற்கும் மதிப்பிற்குரிய தமிழீழ மக்களே, ” இன்று எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. நமது சக்திக்கு அப்பாற்பட்ட, உருவாக்கப்பட்ட இந்த நிகழ்வின் இறுதி என்பது சாதகமா இல்லை பாதகமா? என்பதை நாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இந்த ஒப்பந்தம் எங்கள் இயக்கத்தையோ, போராளி குழுக்களையோ கலந்து ஆலோசிக்காமல் திடுமென நிர்ப்பந்தத்தில் உருவாக்கப்பட்ட ஒன்று. டெல்லிக்கு என்னை வரவழைத்த போது கூட முழுமையான விபரங்கள் தெரியாது. மொத்த விபரங்களையும் சொன்ன போது இந்திய அரசின் தந்திரம் எங்களுக்குப் புரிந்தது. நம்முடைய நலத்தை விட இலங்கை இந்தியாவின் பிராந்திய நலத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு இருப்பதை உணர்ந்த நாங்கள் எதிர்ப்பதை தவிர வேறு ஒன்றும் எங்களுக்குத் தோன்றவில்லை. ஆனால் எங்களின் எதிர்ப்பு மொத்தமும் அர்த்தமற்றதாய்ப் போய்விட்டது. அவர்களின் ஆதிக்கத்திற்கு நாங்கள் அணிபணிந்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தம். வேறு வழி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த ஒப்பந்தம் எங்கள் இயக்க வழிமுறைகளை, நோக்கங்களை, கடந்து வந்த மொத்த செயல்பாடுகளையும் பாதிக்கின்றது. 15 வருடங்களாகப் பாதுகாத்து பயணித்து வந்த பாதை இன்று கேள்விக்குறியில் வந்து நிற்கிறது. எங்களை நிராயுதபாணிகளாக மாற்றுவதில் இந்தியா வெற்றிக் கண்டுருக்கிறது. இனவாத சிங்கள அரசின் மீது என்றும் எமக்கு நம்பிக்கை வரப்போவது இல்லை. ஆனால் பாரதப்பிரதமர் அதற்கென்று சில தனியான வாக்குறுதிகள் தந்துள்ளார். எமது மக்களின் நல்வாழ்வில் அக்கறை இருப்பதாகத் தெரிவித்துள்ளார். சிங்கள படைகள் இனி தமிழர் அழிப்பு என்ற நோக்கத்தில் இறங்காது என்பதில் நம்பிக்கை வைத்துள்ளோம். இதன் அடிப்படையில் எங்கள் ஆயுதங்களை இந்தியாவில் இருந்து வந்துள்ள அமைதிப் படையிடம் ஒப்படைக்க என்று முடிவு எடுத்தோம். எமது மக்களின் பாதுகாப்புக்காக நல்வாழ்வுக்காக நாம் எத்துணைப் போராட்டங்களை, இழப்புகளைச் சந்தித்துள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். நமது மக்களின் பாதுகாப்புக்காக வைத்துள்ள ஆயுதங்களையும் இந்தியாவிடம் நாம் ஒப்படைக்கின்றோம் என்றால் மொத்த பாதுகாப்பும் இனி இந்தியாவின் பொறுப்பு என்று அர்த்தம். இந்த நிகழ்வு எங்களுக்கான பின்னடைவு என்றபோதிலும் நம் மக்களின் விடிவுகாலம் என்பதில் உறுதியாக இருப்பதால் நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்தியாவிடம் ஒப்படைக்கின்றோம். நாங்கள் இந்த ஆயுதங்களை ஒப்படைக்காமல் போனாலும் இந்திய ராணுவத்துடன் மோத வேண்டிய துர்பாக்ய நிலைமை ஏற்படும். இதை நாங்கள் விரும்பவில்லை. நாம் இந்தியாவை நேசிக்கின்றோம். இந்திய வீரனுக்கு எதிராக எங்கள் ஆயுதம் போராடாது. இனி எங்கள் மக்களைப் பாதுகாக்கும் மொத்த பொறுப்பும் இந்திய வீரர்களுக்குச் சொந்தமாகின்றது. ஈழத் தமிழன் ஒவ்வொருவர் உயிருக்கும் உடைமைக்கும் இனி இந்தியாவே பொறுப்பு. இந்தச் சூழ்நிலையில் நாங்கள் இந்தியாவுடன் ஒத்துழைப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. ” தமிழீழ தனியரசே தமிழீழ மக்களுக்கு நிரந்தர இறுதி தீர்வாக இருக்கமுடியும் ” என்ற என்னுடைய அசையாத நம்பிக்கை என்றும் மாறப்போவது இல்லை. இந்த நோக்கத்திற்காகவே இறுதிவரை நான் போராடுவேன் என்பதை இங்கு அழுத்தமாகத் தெரியப்படுத்த விரும்புகிறேன். போராட்ட களம் மாறலாம். ஆனால் எமது லட்சியங்கள் மாறப்போவது இல்லை. இந்த லட்சியம் நாம் அடைய வேண்டுமென்றால் உங்கள் அத்தனை பேர்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவையாய் இருக்கிறது. தமிழீழ மக்களின் நலன் கருதி இடைக்கால அரசில் பங்கு பெற, அல்லது தேர்தலில் போட்டிட வேண்டிய அவஸ்யம் எமது இயக்கத்திற்கு ஏற்படலாம். ஆனால் நான் எந்தக் காலத்திலும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. முதலமைச்சர் பதவியையும் ஏற்கப் போவது இல்லை. இதை நான் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன் “ பிரபாகரன் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர் அல்ல. உணர்வுகளும் அத்தனை சீக்கிரமாக அவரைப் பாதிப்பதும் இல்லை. ஆனால் அன்றைய பொதுக்கூட்டம் முடிக்கும் போது எந்த மனோநிலையில் இருந்து இருப்பார் என்பதை மொத்த நீண்ட உரையைப் படிக்கும் போது சின்னக்குழந்தைக்குக் கூடப் புரியும்? மிகப்பெரிய ஆச்சரியம் உலக ஊடகங்களும், இந்திய பத்திரிக்கைகளும் இந்தப் பேச்சை வெகுவாகப் பாரட்டின. முக்கியவத்துவம் கொடுத்து முதல் பக்கத்தில் வெளியிட்டன. ஏறக்குறைய பிரபாகரனுக்கு இரண்டு பக்கமும் சிக்கிக்கொண்டு உள்ளே அழுந்திக்கொண்டு உணர்வுகளை வெளியே காட்டிக்கொள்ள முடியாத இக்கட்டான சூழ்நிலை. இந்தப் பொதுக்கூட்டம் என்பது கூட அப்போது அவருக்குள் இருந்த உணர்வுகளுக்கு வடிகால் போலத் தான் இருந்திருக்க வேண்டும். இது போன்ற சூழ்நிலையில் சராசரி மனிதன் மூர்ச்சையாகி விழுந்து விடும் சூழ்நிலை தான் அதிகமாக இருக்கும். அமைச்சர் பதவி பிடுங்கப்பட்ட அடுத்தநாளே இதயவலி வந்துவிடும் தியாகிகளுக்கும் 15 ஆண்டுகளாக உயிர் வெறுத்து போராடிய, களமாடியவருக்கும் உள்ள இந்த நிகழ்வை உங்களால் வித்யாசம் கொண்டு பார்க்க முடிகின்றதா? ஆனால் பிரபாகரனுக்கு மட்டுமல்ல ஆயுத ஒப்படைப்பு என்ற சடங்கில் நடந்த நிகழ்வின் போது மற்றப் போராளிகளின் ஆத்திரமும், அவநம்பிக்கையும் வெளியே காட்டுவதாக இருந்தது. அந்த அளவிற்கு ஒவ்வொருவருக்கும் உள்ளே இருந்த உணர்வலைகள். ஏறக்குறைய சாவுச் சடங்கு போல் தான் அது நடந்தது. வெளியே சிரிப்பு. உள்ளே அழுகை. பிரபாகரனுடன் டெல்லிக்கு பயணித்தாரே யோகி, முதன் முதலாகத் தான் வைத்திருந்த துப்பாக்கியை ஒப்படைக்க வந்த காத்திருந்த (இலங்கை பாதுகாப்பு செயலாளர், இந்திய திபேந்தர் சிங், மற்றப் பல அதிகாரிகள்)வர்களிடம் கையில் கொடுக்காமல் மேஜை மீது வைத்து விட்டு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். இதற்கென்று வரவழைக்கப்பட்ட மொத்த உலக ஊடக மக்களுக்கும் ஏமாற்றம். வேறென்ன செய்யமுடியும்? அதிகாரவர்க்கத்தினர் எப்போதும் போல ஜாலியோ ஜிம்கானா தான். பிரபாகரன் தாங்கள் வைத்திருந்த மொத்த ஆயுதங்களையும் ஒப்படைத்து இருப்பார் என்றா கருதுகிறீர்கள்? லொக்கடா, டக்கடா இந்திய வகை ஆயுதங்கள் அதற்கென்று பொறுக்கி எடுத்து வைத்திருப்பார். இவர் பக்கம் இந்த மாதிரி அழுகுணி ஆட்டம். இவர்கள் ஒப்படைத்த இந்த ஆயுதங்களுடன், ரா உளவுப்படை கொண்டு வந்து சேர்த்து இருந்த மற்ற ஆயுதங்களையும் சேர்த்து தான தர்மமாக உள்ளே வலுவிழந்து வாழ்ந்து கொண்டுருந்த EPRLF,PLOTE.TELO போன்ற மற்றப் போராளிக்குழுக்களுக்குக் கனஜோராக இந்திய அமைதிப்படை வழங்கிக்கொண்டுருந்தது. இது அந்தப் பக்கம் கண்ணாமூச்சி ஆட்டத்தின் தொடக்கம். அப்படியென்றால் நம்முடைய அரசியல் ஞானி செய்து கொண்டுருக்கிறார்? ராஜீவ் காந்தி சொன்னபடி ” இடைக்கால நிர்வாக அரசு” எப்போது உருவாக்கப் போகிறீர்கள்? என்ற விடுதலைப்புலிகள் கேட்ட போது கொட்டாவி விட்டு தூக்க கலக்கத்தில் எழுந்தவர் போல் இந்தியாவையும் விடுதலைப்புலிகளையும் பார்த்துத் திருத் திருவென்று முழித்தார். சிந்தனை அதிகம் பெற்றவர் மறப்பது இயல்பது தானே? புது ரத்தம் பாய்ச்சப்பட்ட மற்ற போராளிக்குழுக்களுக்கும் வந்த மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டுமே? இரவு வேளைகளில் ரகசியமாய்க் கிழக்கு மகாண கரையோரப் பகுதிகளில் கொண்டு போய் இந்தியாவின் உதவியோடு இறக்கப்பட்டனர். மன்னார் மாவட்ட கடற்கரை கிராமத்துப் பக்கம் டெலோ இயக்கத்தினர் பறபறவென்று பல்லை கடித்துக்கொண்டு காத்துருந்தனர். தலைவலி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, பல்வலியோடு இரண்டு காலும் வீங்கியிருந்தால் ஒருவனுக்கு எப்படியிருக்கும்? அந்த நிலைமையில் தான் பிரபாகரன் இருந்தார். புதுரத்தம் பாய்ச்சப்பட்டவர்களிடம் இருந்து விடுதலைப் புலிகளைக் காக்க வேண்டும். ரா உளவுத்துறை திருவிளையாடலை மறு பக்கம் சமாளிக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் ரத்தம் குடிக்கக் காத்துருக்கும் இலங்கை இராணுவம். இப்போது இந்திய வீரர்கள் பேசும் (ஹிந்தி) மொழியும் புரியவில்லை. அவர்களின் ஆதரவும் கிடைக்குமா என்ற சந்தேகம். வெறியுடன் வாழ்ந்தவரை நீ ஒரு வெகுளி? என்பது போல் எச்சமாக நினைத்த வல்லரசு தான் வகையாக மாட்டிக்கொள்ளப்போகிறோம் என்பதை அறியாமலே வலை பின்னத் தொடங்கியது. வகைவகையான வலைபின்னலை பார்த்து வளர்ந்த பிரபாகரன் அவசரப்படவில்லை. ஏன் வந்த ஆத்திரத்தைக்கூட உள்ளேயே அடக்கிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை. தன் முன்னால் மூத்திரம் போக அஞ்சியவர்கள் கூட இன்று ரவுண்டி கட்டி அடிக்கக் காத்துக்கொண்டுருப்பது கண் முன்னே தெரிகிறது. அவர்களால் சிலரைக்கூட இழந்தாகி விட்டது. நாம் கைவைத்தால் மொத்தமும் நம்மால் தான் நடந்தது என்று சுபம் போட்டு முடித்து விடுவார்கள். அவர்களின் தைரியம் என்பது பின்னால் உள்ள இந்தியா கொடுக்கும் தைரியம். நாம் என்ன தவறு செய்தோம்? இந்தியா விரும்பிய அத்தனை இழுப்புக்கும் தானே போய்க் கொண்டுருக்கிறோம்? இன்னமும் நம்மை விரும்பாமல் ஏன் அவர்களை வளர்க்க ஆசைப்படுகிறார்கள்? மக்கள் முன்னால் பேசிய பேச்சு மாறிவிடுமோ என்ற அச்சம் அவரை அலைக்கழித்தது. இப்போது எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையும் செய்து விடமுடியாது. உலகம் முழுக்கக் கவனித்துக் கொண்டுருக்கிறது. என்ன செய்யலாம்? என்று யோசித்துக்கொண்டுருந்த போது தீலிபன் தன்னுடைய உண்ணா நோன்பு போராட்டத்தைத் தொடங்கி விட்டார். [] காரணம் தீலிபனுக்கு டெல்லியில் நடந்த மொத்த ” GentlemenAgreement ” முழுமையும் தெரியும். ஏமாற்றத்தின் தொடக்கம் புரிந்து விட்டது. ஒரு வகையில் உண்ணாநோன்பு இறுதியில், இறந்த தீலீபன் மரணம் என்பது எந்தவித தாக்கத்தை உருவாக்கியது தெரியுமா? வல்லரசு தலையில் எழரை பகவான் வந்து அமர்ந்த தருணமிது. 5. அமைதிப்படை தொடக்கமும் நடுக்கமும் இந்தியா இலங்கையின் உள்ளே நுழைந்த போதும், அதற்கு முன்னாலும் ஊடகத்தில் சொன்ன வாசகம் இது. “72 மணிநேரம் எங்களுக்குப் போதும். மொத்த பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டு அமைதியை நிலைநாட்டி விடுவோம்” ஆனால் அன்று மொத்த அதிகாரவர்க்கத்தினருக்கும் முன் இருந்த சவாலான நோக்கம் என்ன தெரியுமா? பத்து லட்சம் என்று பிரபாகரன் தலைக்கு வைத்திருந்த ஜெயவர்த்னே திட்டத்தின்படி ஒன்று மொத்த விடுதலைப்புலிகளையும் நிராயுதபாணியாக ஆக்க வேண்டும். மற்றொன்று, குறிப்பாகப் பிரபாகரனை தனிமைப்படுத்தவேண்டும். இத்துடன் ஜெயவர்த்னே உருவாக்கியுள்ள ஒப்பந்தத்தை நிறைவேற்றி இந்தியாவின் பிராந்திய நலனுக்கு எதிர்காலத்தில் எந்தவித பிரச்சனைகளும் வந்து விடக்கூடாது என்ற இந்த நோக்கங்கள் தான் முக்கியக் கடமைகளாக இருந்தது. அமைதிப்படை உள்ளே வந்ததும், ஆரம்பரமாக விழா நடத்தி பரஸ்பர புரிந்துணர்வுகளை உருவாக்குகிறோம், அமைதியை மொத்தமாக நிலைநாட்டுகிறோம் என்பதன் அடிப்படையில் கண்ணாமூச்சி ரே ரே என்பது போல் ஆயுத ஓப்படைப்பு வைபவமும் நடந்து முடிந்தது. [] இதற்கிடையில் விடுதலைப்புலிகளிடம் இருந்து பெறப்பட்ட ஆயுதங்கள், மற்றும் இந்தியா கொண்டு போயிருந்த ஆயுதங்கள் என்று தரம் வாரியாகத் தராதரம் இல்லாத குறிப்பாகப் பிரபாகரனுக்கு எதிர் அணியில் உள்ளவர்களிடம் ஒப்படைத்துக்கொண்டுருக்கும் நிகழ்ச்சியும் கனஜோராக மறுபுறம் நடந்தேறிக்கொண்டுருந்தது. காத்து இருந்தவர்கள், வாய்ப்பை எதிர்பார்த்து ஆவலுடன் இருந்தவர்கள், மனம் முழுக்கச் சொல்லமுடியாத வெஞ்சினத்துடன் இருந்தவர்கள் என்று மொத்தமாகக் குலுக்கல் போடாத குறையாகத் தேர்ந்தெடுத்து அவர்களை ரா உளவுப்படையின் சிந்தாந்த அடிப்படையில் உருவாக்கிக் கொண்டுருந்தனர். தினவெடுத்த தோள்கள் என்ன செய்யும்? இது இந்தப்பக்கம்? ஒப்பந்த ஷரத்துப்படி வடக்குக் கிழக்கு மகாணங்கள் உருவாக்கபட்டு, முறைப்படியான மற்ற வேலைகள் தொடங்கப்பட வேண்டும். அதற்குப் பிறகு தமிழர்களின் பிரதிநிதிகள் போன்ற சடங்கு சமாச்சாரவேலைகள். இது இந்தப்பக்கம். இதற்கு மேலும் உள்ளே இருந்த மற்றப் போராளிக்குழுக்கள் உன் பங்கு என் பங்கு எத்தனை? என்று கணக்கீடுகள். ரா வின் ஆசிர்வாத வார்த்தைகள் அவர்கள் அத்தனை பேர்களையும் மொத்தமாக மாற்றி இருந்தது. தொடக்கம் முதல் மற்றப் போராளிக்குழுக்களை ஒப்பிடும் போது EPRLF பத்பநாபா சொல்லிக்கொள்ளும் அளவிற்கு மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டு இருந்தார். ஆனால் இந்திய அமைதிப்படையும், அதிகாரிகள் உருவாக்கிய புரிந்துணர்வும் அவரையும் இந்த மாயையில் விழும் அளவிற்கு மாற்றினார்கள் என்பது மிகுந்த ஆச்சரியம். அதுவரைக்கும் யாழ்பாணம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் இந்திய அமைதிப்படை உள்ளே வந்ததும் சிங்கள குடியேற்றங்கள் அட்டகாசமாக உருவாகிக் கொண்டுருந்தது. எல்லாச் சாலைகளும் ரோம் நோக்கி என்பது போல எல்லாப் பிரச்சனைகளும் பிரபாகரன் நோக்கி என்ற போதிலும் கூட அவரால் அந்தச் சூழ்நிலையில் அமைதியாய் இருப்பதைத் தவிர வேறொன்றும் செய்யும் அளவிற்கு இல்லை. ஆனால் தொடக்கம் முதலே இந்தியாவிற்குத் தெளிவான பார்வை? பிரபாகரன் எந்தக் காலத்திலும், எப்போதும் நமக்குச் சாதகமாக இருக்கமாட்டார்? அமைதி ஒப்பந்தத்தின்படி ஒவ்வொன்றையும் வரிசைக் கிரமமாக இந்தியா தான் உருவாக்கும், நேரிடையாக ஜெயவர்த்னேவுடன் எவரும் பேசக்கூடாது. இந்தியா உருவாக்கியிருந்த வெளியில் சொல்லாத சட்டம் இது. வடக்குக் கிழக்கு மகாண பிரதிநிதிகள் என்று தேவைப்படும் 12 பேர் அடங்கிய பட்டியலில் பிரபாகரன் கொடுத்த ஏழு பேர்கள் நேரிடையாக ஜெயவர்த்னே கைக்குச் சென்றது. காரணம் இந்த நேரம் மிக முக்கியம். மற்றப் போராளிக்குழுக்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும்பட்சத்தில் எதிர்காலப் பிரச்சனைகளை உருவாக்கலாம். தான் தேர்தலில் நிற்கமாட்டேன் என்று தொடக்கம் முதலே பிரபாகரன் அறிவித்த காரணத்தால், தான் தேர்ந்தெடுக்கும் ஆட்களைச் சபையில் உருவாக்க வேண்டிய அவசர அவஸ்யங்கள் அவருக்கு. இதனைக்கண்ட இந்தியா ” இந்தியா இலங்கை ஒப்பந்தத்திற்கு விடுதலைப்புலிகள் குந்தகம் விளைவித்தால் இந்தியா கடும் நடவடிக்கை எடுக்கும்” என்று மிரட்டலோடு வானொலியில் (2.10.1987)விடுதலைப்புலிகளைத் திட்டிதீர்த்தது. வந்தது அமைதியை நிலைநாட்ட. ஆனால் அமைதியை உருவாக்குவதைவிட , உருவாகாமல் இருக்க என்னன்ன காரணக் காரியங்கள் தேவையோ அத்தனையும் தொடர்ந்து நடத்திக்கொண்டுருந்தது. என்ன காரணம்? பிரபாகரன் ஒரு சக்தி. இந்தியா மற்றொரு மிகப்பெரிய சக்தி. ஒரே நோக்கம் பிரபாகரனுக்கு இனி நாம் பணிந்து தான் ஆகவேண்டும். வேறு வழியில்லை. ஆனால் இந்தியாவிற்கோ எப்போதும் இந்தியாவிற்கு இலங்கை அடிபணிந்து இருக்க வேண்டும். எல்லாம் சரிதான். பிரபாகரன் தனது வீரர்களுக்கு கட்டளையிட்டால் அதிகபட்சம் பத்து நிமிடம். முடிவு தெரிந்து விடும். ஆனால் இந்தியாவிற்கு? ராஜீவ் காந்தி முதல் கடைசி இராணுவ வீரன் வரைக்கும் மிகப்பெரிய ஜனநாயக வலைபின்னல். இயல்பான வலைபின்னல் என்றாலும் பரவாயில்லை. பிரதமர், பிரதமரின் தனிச் செயலாளர், மற்றச் செயலாளர்கள், ராணுவ செயலாளர்கள், தலைமைத் தளபதி, அயலுறவுக்கொள்கை அதிகாரிகள், பாதுகாப்புத்துறை சம்மந்தப்பட்ட அத்தனை நபர்கள் என்ற நீண்ட தண்டவாளமாகப் போய்க்கொண்டே இருக்கிறது. பிரபாகரன் ராஜீவ் காந்தி என்ற இந்த இரண்டு தண்டவாளங்கள் மட்டும் இருந்து இருக்குமேயானால் நிச்சயம் அன்றே ஒரு முடிவுக்கு வந்து இருக்கும். ஆனால் இடையில் மற்றொருவர்? அவர் தான் ஜே.என்.தீட்சித். மொத்த வலைபின்னல்களையும் தனக்குச் சாதமாக மாற்றியதும், இராணுவ அதிகாரிகளின் பின்னால் சொல்லப்பட்ட பேட்டிகள் வாயிலாக நாம் உணரப்போகும் விசயங்களும் எந்த அளவிற்கு ஒரு தனி மனித ஈகோவால் ஒரு இனம் அழிக்கப்படக் காரணமாக இருந்ததைத் தொடரும் போது உங்களுக்குப் புரியும்? அன்றைய சூழ்நிலையில் இந்தியாவை விட ஜெயவர்த்னேவுடன் அனுசரித்து மொத்த பிரதிநிதிகளை உருவாக்கிவிடலாம் என்ற பிரபாகரன் மனதிற்குள் கொண்டுருந்த நம்பிக்கையும் இந்தியா தவிடுபொடியாக்கிக் கொண்டு இருந்தது. ஜெயவர்த்னே மனதில் எத்தனை எதிர்காலத் திட்டங்கள் இருந்து இருக்குமோ? அத்தனை திட்டங்கள் பிரபாகரன் மனதிலும் இருந்து இருக்கத்தான் வேண்டும். காரணம் இப்போதைய சூழ்நிலையில் சாட்சிகாரன் காலில் விழுவதை விடச் சண்டைக்காரன் காலில் விழுந்து தொலைத்து விடலாம் என்கிற மனோநிலை. அமைதி என்கிறார்கள். அமைதியைத் தவிர அத்தனை அலங்கோலங்களையும் நடத்திக்கொண்டுருக்கிறார்கள். பேசினால், உட்கார்ந்தால், நடந்தால் குற்றம்? என்ன செய்யவது? ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்ற பழமொழி அன்றைய தினத்தில் இந்திய நடவடிக்கைகளில் தான் அதிகம் தெரிகிறது. சமாதானமா கிலோ என்ன விலை? என்று கேட்டுக் கொண்டுருப்பவர் கையைத் தூக்கிக்கொண்டு முன் வர ஐயோ நீ கையைத் தூக்கியதும் தவறு என்பதாக இந்தியாவின் நடவடிக்கைகள்? இது போன்ற காரணக் காரியங்களைச் சுருதி சுத்தமாக நிறைவேற்ற தான் தேர்ந்தெடுத்து வைத்திருந்த PLOTE இயக்கத்தினர். செல்வம் தலைமையில் இருந்த TELO. பத்பநாபா தலைமையில் இருந்தவர்கள், EPRLF போன்றவர்களை மற்றொரு பக்கம் அங்கங்கே களம் இறக்கிக்கொண்டுருந்தார்கள். இவர்கள் உருவாக்கிய கிழக்கு மகாண பகுதியில் நடந்த மொத்த கூத்துகளும், தொடக்கத்தில் இவர்கள் போட்ட வம்புச்சண்டைகளில் அழிக்கப்பட்ட விடுதலைப்புலிகளைப் பார்த்துத் தன்னைத் தங்களை ஒவ்வொருவரும் உயர்வாகக் கருதத் தொடங்கினார்கள். காரணம் பின்னால் இந்தியா இருந்து கொண்டு கொம்பு சீவிக்கொண்டுருக்கிறது. மேலும் தங்கள் புனிதப்பணிகளைத் தொடங்கினர். இதன் உச்சக்கட்டம் அப்போது PLOTE அமைப்பில் இருந்து செயல்பட்டுக்கொண்டுருந்த மாணிக்கதாசனும், எஸ்.காஸ்ட்ரோவும் கொடுத்த அறிக்கை இங்குக் குறிப்பிடத்தக்கது. ” விடுதலைப்புலிகள் அமைப்பு இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள வரவில்லையென்றால் நாங்களே அவர்களைக் கொன்று அழிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” இவர்கள் மூலம் நடந்த சண்டையில் அப்போது ஏறக்குறைய 200 விடுதலைப்புலிகள் இறந்தனர். இவர்களிடம் தப்பிக்க ஓடியவர்களை அமைதிப்படை விரட்டி அடித்தது. தொடர்ச்சியான வன்முறை. கலவரங்கள், வன்முறைகள். தொடக்கத்தில் தொடங்கியது அவர்கள். ஆனால் மொத்தத்தையும் இறுதியில் முடித்து வைத்தது பிரபாகரன். பாதகமான சூழ்நிலையை உருவாக்கியது அவர்கள். ஆனால் சாதகமாக்கிக்கொண்டவர்கள் விடுதலைப்புலிகள். இதன் தொடர்ச்சியாகத் தினந்தோறும் ஒரு மணி நேரம் “அமைதி நிகழ்ச்சி” என்று வானொலியில் தினந்தோறும் விடுதலைப்புலிகளை இந்தியா திட்டி தீர்த்தது. பொறுத்து பார்த்த பிரபாகரன் இறுதியாக ” இந்தியா தனது உளவுப்படையை வைத்துக்கொண்டு தேவையில்லாத நபர்களை வளர்த்து அவர்களுக்கு அந்தஸ்த்து கொடுத்து எங்கள் வாழ்வுரிமை போராட்டங்களை முடக்க நினைக்கின்றது ” என்றார். ஒப்பந்தப்படி செப்டம்பர் 10ந் தேதி பூர்வாங்க வேலைகள் தொடங்கப்பட வேண்டும். ஆனால் அதைவிட யாழ்பாணம் அமைதிக்கான சூழ்நிலையில் தற்போது இல்லை என்று ஆட்சி அதிகாரத்தைத் தான் கைப்பற்றும் நோக்கோடு இந்தியா முயற்சிக்க ஒவ்வொன்றும் கோர்த்து முட்டுச் சந்தில் கொண்டு போய் நிறுத்தியது. வெறுத்துப்போனவர்களின் திலீபனும் ஒருவர். அவர் உண்ணா நோன்பு போராட்டம் தொடங்கியதும், அதை இலங்கையும் இந்தியாவும் வேடிக்கை பார்த்ததும், இறுதியில் அவர் இறந்த போது இந்தியாவில் இருந்து சென்ற அமைதிப்படையின் தலையில் ஏழரை பகவான் தன்னுடைய முதல் சுற்றைத் தொடங்கியிருந்தார்? திலீபன் ஏன் இறந்தார்? 6. காந்திய பாதையில் அழிவுப்படை இந்தியா பேசியபடி எதுவும் நடந்த பாடில்லை. பிரபாகரனுக்கோ இப்போது அமைதியாய் இருப்பதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை. ஆனால் தினந்தோறும் பலவிதமான வலிகள். இதற்கிடையே தங்களை விழுங்கத்துடிக்கும் மற்றச் சகோதர போராளிக்குழுக்கள். நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் பிரச்சனைகள் பூதாகரமாகிக்கொண்டுருந்தது. இந்த நிலைமையில் தான் திலீபன் ” நான் உண்ணாவிரம் இருக்கப் போகின்றேன். இந்தியா நம்மை ஏமாற்றி விட்டது ” என்று (செப்டம்பர் 15) சாகும் வரைக்கும் உண்ணாவிரதம் என்று காந்திய பாதையைத் தேர்ந்தெடுத்து தொடங்கினார். இவரின் உண்மையான பெயர் இராசையா பார்த்திபன். இவர் அப்போது விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவில் பணியாற்றிக்கொண்டுருந்தார். மொத்த ஒப்பந்தத்தையும், பின்னால் பேசப்பட்ட ரகசிய பேரங்களையும் நன்றாக அறிந்தவர். பின்னாளில் சுப. தமிழ்செல்வனை ஆன்டன் பாலசிங்கம் தனக்கு உதவியாக வளர்த்தெடுத்ததைப் போலவே இப்போது இந்தத் திலீபன் பாலசிங்கத்தால் வளர்க்கப்பட்டுக் கொண்டுருப்பவர். அமைதிப்படை உள்ளே நுழைந்தது முதல் மொத்த நிகழ்வுகளையும் பார்த்துக்கொண்டுருந்த ஜே.என்.தீட்சித் திலீபன் உண்ணாவிரதம் தொடங்கியதும் பறந்து வந்து பிரபாகரனை மிரட்டத் தொடங்கினார். “உங்களால் மொத்த அமைதியும் சீர்குலைந்து விடுமோ? ” என்று அஞ்சுகிறேன் என்றார். ஆனால் அப்போது இவர் பிரபாகரனை பார்ப்பதற்கு முன் அமைதிப்படை தளபதிக்கு இட்ட கட்டளை ” பிரபாகரனை கைது செய்து விடுங்கள். முடிந்தால் பேச்சு வார்த்தைக்கு வரும் போது சுட்டுக்கொன்று விடுங்கள்”. என்றார். அவரின் கட்டளை மறுக்கப்பட்டது. முதல் காரணம் முறைப்படியான அறிவிப்பு இராணுவ தலைமை தளபதியிடம் இருந்து வரவில்லை. மற்றொன்று அமைதிக்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டுருக்கும் போது தான் தோன்றித்தனமாகக் கோழைத்தனமாகச் சுட்டுக்கொல்வதில் விரும்பாத அமைதிப்படை தளபதி தீட்சித் கொடுத்த கட்டளையை மேலே அனுப்பினார். அதுவே அப்போது இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் ஒரு சலசலப்பை உருவாக்கியது. இந்த நிகழ்வுகள் அத்தனையும் பின்னாளில் தளபதி ஊடகத்தில் சொன்ன போது தான் அன்றைய தீட்சித் கோர முகம் அனைவருக்கும் புரிந்தது. ஏற்கனவே போராடிக்கொண்டுருந்த மிதவாத தலைவர்களை இலங்கை ஆட்சியாளர்கள் பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தம் என்று பழியெடுத்துக்கொண்டுருந்தார்கள். நம்பியவர்களும், நம்பவைத்தவர்களும் இப்போது இல்லை. ஆனால் மொத்த நோக்கத்தையும் இந்தியா வேறொரு பாதையில் தீட்சித் என்றொரு ஆளுமையில் கேள்விக்குறியாய் மாற்றிக்கொண்டிருந்தது. இப்போது இந்தியா பிரபாகரனை வறுத்துக்கொண்டுருந்தது பிரபாகரன் ஆயுதப்பாதைக்குத் திரும்பிய நாள் முதல் இன்று தான் முதன் முதலாக இயக்கத்தில் உள்ளவர் காந்திய பாதையின் வழியே சென்று உண்ணாநோன்பு (நல்லூர் கந்தசாமி கோவில்) போராட்டம் தொடங்கியது இலங்கைக்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. செப்டம்பர் 26 தண்ணீர் கூட அருந்த மறுத்து உயிர் துறந்தார் திலீபன். இலங்கைக்கு எப்போது இது குறித்து அக்கறையில்லை. காரணம் அவர்கள் அரை இறுதி ஆட்டத்தை எதிர்பார்த்துக் காத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் காந்தி தேசத்திற்கோ எப்போதும் போல “இதுவும் கடந்து போகும்” என்பது போல் அலட்சியம். மக்கள் மத்தியில் கேள்விக்குறி உருவாகத் தொடங்கியது. இது முதல் கோணல். தீலிபன் கேட்ட உடனடி சிங்கள குடியேற்றங்களைத் தடுத்தல், ஒப்பந்தப்படி விரைவான நடைமுறைகள், தொடர்ச்சியாகச் சிங்கள அரசாங்கம் போட்டுக் கொண்டுருக்கும் போலித்தனமான குற்றச்சாட்டுகளை நிறுத்துதல், பயங்கரவாதிகள் என்று சொல்லிக்கொண்டு உள்ளே சிறையில் அடைத்து வைத்துருப்பவர்களை விடுதலை செய்தல், தமிழர் பகுதியில் நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட்டுருக்கும் ராணுவ முகாம்களை மூடுதல். ஆனால் அவரைச் சவக்குழியில் தான் இறுதியில் மூடினார்கள். ஆனால் இவருடைய சாவு எதற்கு உதவியது தெரியுமா? அந்த நிமிடம் வரைக்கும் ஏற்கனவே பேசிய அமைதி உடன்படிக்கை பற்றிப் பேசி புரிந்துணர்வுகளை உருவாக்க பலாலி இராணுவ தளத்திற்கு வருமாறு பிரபாகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஒரு வேளை திலீபன் சாகவில்லை என்றால் தொடக்கப்புள்ளி கூடத் தொடங்காமல் அன்றே முற்றுப்புள்ளியாய் முடிந்து இருக்கும். விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் உருவான இந்த இறப்பு மக்கள் மத்தியில் ஒரு சலசலப்பையும், இந்திய அமைதிப்படை குறித்த தவறான எண்ணங்களையும் உருவாக்கக் காரணமாக மட்டும் தான் இருந்தது. மிச்ச சொச்சம் என்று நம்பிக்கைகள் குறித்தான எண்ணங்கள் மக்கள் மத்தியில் இருந்து இருக்கலாம். அதைப்போலவே பிரபாகரன் மனதிலும் ஊசலாட்டம் தொடங்கியிருந்ததே தவிர அது முழுமையாக வெறுப்பு என்று மாற்றம் பெற்றது எப்போது தெரியுமா? விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த குமரப்பா மற்றும் புலேந்திரன் இறந்த போது. இவர்கள் அப்போது கமாண்டர்கள் என்ற பதவியில் இருந்தவர்கள். இலங்கை இராணுவத்திற்குச் சிம்ம சொப்பனமாக இருந்து பல தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள். ராமேஸ்வரத்தில் இருந்து இவர்கள் இருவரும் மற்றப் பதினைந்து பேர்கள் என்று மொத்தமாக 17 பேர்கள் இலங்கையை நோக்கி வந்து கொண்டுருந்தனர். இப்போது இலங்கை இராணுவத்தினர் அத்தனை பேரும் ஹாயாக ஓய்வெடுத்துக்கொண்டுருக்க மொத்த பாதுகாப்பு இந்திய அமைதிப்படையின் கைகளில். எங்கெங்கு காணினும் இந்திய ராணுவத் தலைகள். பயணித்துக்கொண்டு வந்த விடுதலைப்புலிகளுக்கு அலாதியான நம்பிக்கை. இப்போது மொத்த பாதுகாப்பும் அமைதிப்படையின் கைகளில் இருக்கிறது. நமக்கு ஏதும் நேராது? விதி அங்கிருந்து தான் விளையாடத்தொடங்கியது. பகவான் நேரிடைப் பார்வைபடப் பட்டாசு வெடிக்கக் காலன் பார்த்திருந்த நேரம் உருவான காலம் அது. வந்தவர்களை அமைதிப்படை கைது செய்து விடத் தகவல் பஞ்சாய் பறந்து ஜெயவர்த்னேவுக்குச் சென்றது. போதாதா? பாதுகாப்புத்துறை அமைச்சர் லலித் அதுலத் முதலி தன்னுடைய அன்றாடக் கடமைகளை அத்தனையும் அக்கட ஒதுக்கிவைத்து விட்டு இவர்களைத் தொடர ஆரம்பித்தார். பலாலி என்ற இடத்தில் இருந்து அவர்கள் கொழும்புக்குக் கொண்டு வர ஆணை. இந்த இடத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம். அமைதிப்படைக்குத் தலைமை தாங்கி வந்த தலைமைத்தளபதியின் குணாதிசியங்கள். அவருக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை இலங்கையின் உள்ளே உருவாக்கப்பட வேண்டிய அமைதி. ஆனால் உள்ளே வந்தது முதல் நடந்து கொண்டுருக்கும் மொத்த அரசியல் மற்றும் அதைச் சார்ந்த தேவையில்லாத விமர்சனங்கள் அவருக்குக் கண்களைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. போர் என்றால் வெளியே சென்று போராடலாம். ஆனால் போர் செய்யக்கூடாது. ஆனால் போராட தயாராய் இருக்க வேண்டும். இதைப்போன்ற வினோதமான மனோநிலையில் எந்த வீரனை எப்படித் தயார் படுத்துவது. அவரே அன்று குழப்பிப்போயிருந்தார் என்பது தான் சரியாக இருக்கும். இது போகத் தீட்சித் கட்டளை என்பது அடியாளுக்கு இடப்படுவது போல். முறைப்படி பெற்ற பயிற்சி என்பதற்குச் சம்மந்தம் இல்லாமல் அன்றாடம் ஒவ்வொரு கட்டளையும் மாறிக்கொண்டே இருந்தது, இந்தப் போர்க்களம் என்பது இங்கு அவரின் போதாத காலத்தை நினைவு படுத்துவதாக இருந்தது. இவரின் தீவிர முயற்சியும் பலிக்கவில்லை. பிடிபட்ட வீரர்களை கொழும்பு கொண்டு செல்லப்படுவதில் எந்த மாற்றமும் இல்லை. இந்தியா முயற்சி செய்ததே தவிர முழுமை இல்லை. இந்த இடத்தில் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒன்று. மொத்த அதிகாரமும் ஜெயவர்த்னே கையில் இருந்ததே தவிர உள்ளே உள்ள ஆளுமை அத்தனையும் அமைதிப்படையிடமும், அதன் ரிமோட் இந்தியாவிடமும் இருந்தது. உண்மையான அக்கறையிருந்து இருந்தால் அன்றைய நிகழ்வு வேறு விதமாக மாற்றம் பெற்றதாக இருந்தது இருக்கும். ஒப்பந்தப்படி உண்டான வாக்குறுதிகள் கூட அந்தச் சமயத்தில் காற்றில் பறக்கவிடப்பட்டன. பிடிபட்டவர்கள் கொழும்பு சென்றால் என்ன நடக்கும்? கொழும்பு நாலாவது மாடி சித்ரவதை என்பது இன்று வரையிலும் புகழ்பெற்றது. ரசித்து ருசித்துச் சிங்களர்கள் செய்யும் அலாதியான வேலைப்பாடு நிறைந்த நுணுக்கமான சித்ரவதைக்கூடம். இவர்கள் புலிகள் வேறு. கொண்டாட்டத்திற்குச் சொல்லவா வேண்டும். அன்றைய மொத்த ஆட்சியாளர்களும் இந்த 17 பேர்கள் மேல் தான் கவனத்தில் வைத்து இருந்தார்கள் என்றால் அது மிகையல்ல. கொழும்பு செல்லப்படுவதற்கு முன் பிரபாகரன் கொடுத்து அனுப்பிய 17 சயனைடு குப்பிகள் அவர்கள் வீரமரணத்தை உலகிற்கு உணர்த்தி அதிர்ச்சியலையை உருவாக்கியது. இந்தியாவிற்கு ஆயாசத்தை ஏற்படுத்தியது. இலங்கைக்கு ஆவேசத்தை உருவாக்கியது. பிரபாகரன் நெற்றிக்கண் வேலை செய்யத் தொடங்கியது. ஆட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டுருந்த இந்திய அமைதிப்படையின் தாயக்கட்டை தவறாக விழுந்து பாம்பு வாயில் சிக்கி கீழே இறங்கத் தொடங்கியது. அமைதி காக்க போனவர்கள் அழிவுப்படையாக மாற வாங்க ராசா என்ற வரவேற்ற பொதுமக்கள் அத்தனை பேரும் விடுதலைப்புலிகளின் பின்னால் அணிதிரளத் தொடங்கினர். கோப்பில் உள்ள புள்ளிவிபரங்களை நம்பிக்கொண்டு ராஜீவ் காந்தி ஒரு பக்கம். இந்திய இராணுவ தலைமை தளபதி சுந்தர்ஜி பார்வையாளராக மறுபக்கம். இவர்கள் நடுவில் தீட்சித் இவருக்குத் துணையாக ரா உளவுத்துறை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஜெயவர்த்னே. எப்படிச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற அவரின் சிஷ்யகோடிகள் மறுபக்கம். குற்றால குறவஞ்சி கொண்டாட்டத்தில் இலங்கை இராணுவத்தினர். இந்த இரு அணிகளுக்கும் இடையே பிரபாகரன். இவருக்கு வெளியே ஆட்டத்தின் கோட்டுக்கு அருகே காத்துக்கொண்டுருக்கும் மற்றப் போராளிக்குழுக்கள். காரணம் இவர்கள் ஆட்டத்தில் பங்கெடுப்பதை விட வெற்றிக்கோப்பையை எப்படிக் கைப்பற்றலாம் என்ற எண்ணத்தில் மட்டும் இருந்தனர். காரணம் நடக்கப்போகும் தேர்தலில் தங்களுடைய ஆளுமையை எப்படி நிலைநிறுத்தலாம் என்ற எண்ணத்தில் தயாராக இருந்தனர். புலி பசித்தால் புல்லை உண்ணுமா? பிரபாகரன் அப்போதைய சூழ்நிலையில் உண்ணும் சூழ்நிலையில் இருக்க வைத்தது விதியா? அவர் நம்பாத சக்தியா? 7. தொடங்கியவரும் இழந்தவர்களும் (IPKF) போர் என்றால் பரஸ்பர அழிவு. அது குறித்து எப்போதும் யாருக்கும் எந்த அக்கறையும் இருக்கப்போவதில்லை. பழைய மன்னர்கள் வீரத்தை பறை சாற்றத் தொடங்கினார்கள். படையெடுப்பாளர்களின் நோக்கம் வேறுவிதமானது. மதத்தை நிலைப்படுத்த, வளத்தைச் சூறையாட மற்ற இலவச பரிசாகத் தான் விரும்பும் மனநோய்க்கு ஒப்பானது போன்ற பலதரப்பட்ட சித்ரவதைகளை மக்கள் மேல் திணித்தார்கள். ஆங்கிலேயர்கள் நோக்கம் மொத்தத்திலும் பொருளாதாரம் சார்ந்தது. ஆனால் என்றும் ஊற்றுக்கண் வற்றாத ஜீவநதிக்கான ஆதாரத்தைத் தொடக்கத்திலேயே உருவாக்கி வைத்தார்கள். பக்கத்தில் இருப்பவர்கள் சேர்ந்து விடக்கூடாது. சேர்ந்தாலும் தீராத பிரச்சனைகளைக் கொண்டு தான் வாழ வேண்டும். நாம் மட்டுமே காலம் முழுக்க ஆள வேண்டும். வளர்ந்த நாடுகள் மற்றும் உலகில் பெரியண்ணன் அமெரிக்காவின் அரசியலும் இன்று வரைக்கும் இதுதான். இந்தியாவிற்குள் மட்டுமல்ல. உலகத்தில் மற்ற நாடுகளை ஆண்டு வந்த ஸபானிஷ் மக்கள் முதல் இந்தியாவிற்குள் வந்த மொகலாயர்கள் வரைக்கும் ஊன்றி கவனித்துப் பார்த்தால் தனி மனித வக்கிரம் தான் அதிகமாக வெளியே தெரிகிறது. ஆனால் இந்தத் தனி மனித வக்கிரம் தான் இந்த இலங்கை அமைதிப்படை வீரர்கள் அநியாயமாகச் சாவதற்கும் காரணம் என்றால் அது தான் உண்மையும் கூட. விடுதலைப்புலிகளின் நெற்றிகண் திறக்க மொத்த காரணம் இந்தியா. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாய் உள்ளே நுழைந்தது சுயநலத்துக்கு மட்டுமே. எங்கு வேண்டுமானாலும் சத்தமாகவே சொல்ல முடியும். கேட்ட, விரும்பிய அத்தனைக்கும் ஒத்துக்கொண்டவர்களை வம்புக்கு இழுப்பது போல் ஒவ்வொன்றும் நடந்து கொண்டே இருக்கக் கடைசியில் அது நடக்கவே ஆரம்பித்து விட்டது. யுத்தம் தொடங்கியே விட்டது. ஆட்டத்திற்கு நாங்கள் ரெடி? நீங்கள் ரெடியா என்பது போல் தொடக்கம் பெற்றது. அங்கங்கே தங்களுடைய மொத்த ஆதிக்கத்தையும் அமைதிப்படை நிலை நிறுத்தி இருந்தது. ஆனால் இது போன்ற இடங்களில் தான் பிரபாகரன் குறித்த உண்மையான புரிதல்கள் நமக்குத் தேவைப்படும். ஒருவர் மேல் சந்தேகம் என்று தொடங்கிவிட்டால் அது சாவாக முடியும் வரைக்கும் சந்தேகம் தான். பின்னால் வரப்போகும் பிரேமதாசா , ராஜீவ் காந்தி மரணம் வரைக்கும் அந்தத் திட்டமிடல் குறித்துக் குறிப்பிட்டே ஆக வேண்டும். தவறு சரி என்பதைப் பின்னால் பார்த்துக்கொள்ளலாம். ” யாழ்ப் போரில் இந்தியா வென்றது” ” யாழ்பாணத்தை இந்திய இராணுவம் கைப்பற்றியது / விடுதலைப்புலிகள் தப்பி ஓட்டம்” இப்படித்தான் தொடக்கத்தில் நடந்த 15 நாள் போராட்டத்தின் தொடக்கத்தில் பரப்புரைகள் உலா வரத்தொடங்கின. ஆனால் அன்று 2000 விடுதலைப்புலிகளிடம் போரிட்ட இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 15,000 வீரர்கள். கடும் போருக்கும், பெரும் இழப்புக்கும் பின் தான் யாழ் நகரை கைப்பற்றினர். யாழ் பகுதிக்கு பொறுப்பேற்று இருந்த இந்தியத் தளபதி திபீந்தர்சிங் ” போர் ஓயப்போவது இல்லை” என்பதைச் சூசகமாகத் தெரியப்படுத்தினார். அவர் சொன்ன மற்றொரு வாசகம் ” போர் தொடங்கியதும் 1200 விடுதலைப்புலி கொரில்லா வீரர்கள் யாழ் நகரை விட்டு வெளியேறிவிட்டனர். அவர்கள் ஒவ்வொருவரும் பத்து வீரர்களின் உயிரைக் குடிக்கப் போராடுபவர்கள்” போர் தொடங்கியதும் இந்தியா செய்த உடனடி செயல் விடுதலைப்புலிகளின் வானொலி நிலையங்களைத் தகர்த்ததோடு மட்டுமல்லாமல், யாழ் நகரில் இருந்து வெளிவந்து கொண்டுருந்த இரண்டு தமிழ் பத்திரிக்கை அலுவலகங்களையும் அழித்தனர். ஏற்கனவே ஜேவிபி என்ற சிங்கள இடதுசாரிக்கு இந்திய அமைதிப்படை உள்ளே வந்தது முதல் கடுப்போ கடுப்பு. அவர்கள் தங்கள் பங்குக்கு வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்துக்கொண்டுருந்தனர். இப்போது அமைதிப்படை ஒவ்வொன்றாகச் செய்யத் தொடங்கினர். தங்களுக்கு எதிராக, உள்ளே நடக்கும் உண்மை நிலவரங்களைக் களத்தில் இருந்து சேகரிக்கும் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடக மக்களைக் கவனமாகப் பார்த்து பொறுக்கி எடுத்து வெளியேற்றினார்கள். தாங்கள் கொடுக்கும் செய்திகளை இந்தியா மற்றும் வெளிநாட்டில் பரப்ப இந்திய அமைதிப்படையினருக்குப் பின்னால் பல ஜாம்பவான்கள் அற்புத பங்காற்றிக்கொண்டுருந்தனர். உள்ளே என்ன நடக்கிறது? என்றே பலருக்கும் அந்த நேரத்தில் புரியவே இல்லை. இந்திய அமைதிப்படையினர் மொத்த இடத்தையும் கைப்பற்றி விட்டதாக, வெற்றிப் பெற்றதாகத் தம்பட்டம் அடிக்காத குறைதான். அப்படித்தான் இந்திய ஆங்கில ஊடகங்கள் பறைசாற்றின. ஒத்து ஊதுகுழல் போல் அங்கங்கே அறிவுஜீவிகளின் அற்புத உரையாடல் தனியாகப் பரப்புரையாகப் பரப்பப்பட்டது. ஆனால் என்ன தான் நடந்து கொண்டுருக்கிறது. [] ” நாங்கள் சாகத் தயார். ஆனால் நாங்கள் கௌரவமாகச் சாவோம். வியட்நாமில் அமெரிக்காவும், ஆப்கானிஸ்தானில் ரஷ்யாவும் போல இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் மொத்த பேர்களும் இறந்தாலும் இந்தியாவின் இழப்பு என்பது பெரிய எண்ணிக்கையில் இருக்கும்” என்று சூளுரைத்தார் அப்போது பொறுப்பில் இருந்த மாத்தையா. இதே மாத்தையா தொடர்ச்சியாக அந்தச் சமயத்தில் சொன்ன வார்த்தைகள் இது. ” இந்தியாவை ஒப்பிடும் போது நாங்கள் மிகச் சிறிய இயக்கமே. இது எங்கள் நாடு. எங்கள் பூமியின் ஒவ்வொரு அங்குலத்தையும் நாங்கள் அறிவோம். எங்கள் சுதந்திரத்தை விரும்பியதால் சிங்களர்களோடு நாங்கள் போரிட்டோம். என்னதான் இருந்தாலும் சிங்களர்களும் இந்த மண்ணின் மைந்தர்களே. இங்கு வரவும், எங்களுக்குக் கட்டளையிடவும் இந்தியாவிற்கு யார் உரிமை கொடுத்தது” என்று கோபத்தின் உச்சத்தில் போர் வியூகங்களை உருவாக்கிக் கொண்டுருந்தார்கள். அக்டோபர் 6ந் தேதிக்குப்பிறகு தான் பொறி பறக்க ஆரம்பித்தது. அந்த ஆட்டத்தையும் தொடங்கி வைத்தது இந்தியா தான். ஏறக்குறைய இதே தினத்தில் தான் ராஜீவ் காந்தி விடுத்த அறிக்கையின் வாசகம். ” அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய அமைதிப்படை கடும் நடவடிக்கை எடுக்கும். பயங்கரவாதிகளைக் கைது செய்து ஆயுதங்களைப் பறிக்கும்” என்றார். அக்டோபர் 8,9 ந்தேதிகளில் கிழக்கு மகாணத்தில் இருந்த 15க்கும் மேற்பட்ட போராளி முகாம்களைச் சூழ்ந்து கொண்டு மொத்த ஆயுதங்களையும் கைப்பற்றியதோடு, 500 போராளிகளையும் கைது செய்தது. இது போன்ற நடவடிக்கைகளில் இலங்கை இராணுவமும் சேர்ந்து கொண்டனர். இதற்கு ” இடி முழக்க நடவடிக்கை ” என்று பெயர் வைத்தனர். இதற்கு மேலும் இந்திய தளபதி திபீந்தர்சிங் மாத்தையா, பாலசிங்கம் இருவரையும் வரவழைத்து ” ஒப்பந்தம் உங்களால் இடையூறு என்றால் மொத்த நபர்களையும் முடித்துக் கட்டி விடுவோம் ” என்று எச்சரித்தார். தெளிவான தாக்குதல் என்று இரண்டு தரப்பும் மோதிக்கொண்ட நாள் அக்டோபர் 10. ஆனால் இதற்குக் காரணம் என்று அப்போது அமைதிப்படை கூறியது. “பிரபாகரன் மொத்த இந்திய தளபதிகளையும் தாக்க உத்தரவிட்ட செய்திகள் கிடைக்கப்பெற்றோம். அதன் காரணமாகத்தான் இந்தத் தாக்குதல்கள்’ என்றார்கள். ஆனால் இருவர் ஆட்டத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டுருந்த ஜெயவர்த்னே அக்டோபர் 4ந்தேதி முழு மூச்சாகத் திருகோணமலையில் இருந்து தாக்குதல்களைத் தொடங்க அமைதிப்படையின் உயர் அதிகாரிகளுக்கு மறைமுக உத்தரவிட்டு இருந்தார். முறைப்படியான ஒப்புதல் பெற தீட்சித் உடனடியாக டெல்லி பறந்தார். இந்த மறைமுகச் சமிக்ஞை கிடைக்கப்பெற்ற இலங்கை இராணுவத்தினர் சோம்பலில் இருந்து விடுபட்டு தங்களது வேட்டையைத் தொடங்கினார்கள். இதன் தொடர்ச்சியாக இழந்த விடுதலைப்புலிகளின் எண்ணிக்கையின் காரணமாக, பின்னால் இருந்து செயல்பட்டுக் கொண்டுருந்த அமைதிப்படையின் மொத்த செயல்பாடுகளையும் பார்த்துக் கொண்டுருந்த பிரபாகரன் அப்போது தான் மணி அடித்துத் தொடங்காத குறையாகத் தனது ஆட்டத்தைத் தொடங்கினார். 200 இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். போதாதா? இதைத் தானே எதிர்பார்த்து காத்துக்கொண்டுருந்தனர். அமைதிப்படையும் ஆட்டத்தைத் தொடங்கினர். நன்றாகக் கவனித்துக்கொள்ளுங்கள். 4ந் தேதி ஜெயவர்த்னே உருவாக்கிய மாய வலை இது. தீட்சித் பறந்து போய் டெல்லியில் பெற்ற அனுமதி காரணமாக 8ந் தேதி தலைமைத் தளபதி சுந்தர்ஜீ இலங்கையின் உள்ளே வந்து மொத்தத்தையும் கேட்டு விட்டு, அப்போதைய இந்திய இராணுவ அமைச்சர் கே.சி. பந்த் உடன் கொழும்பு சென்று மொத்தமாக மினி மீட்டிங் போட்டனர். பேச்சு அமைதி நிலைநாட்டுவது குறித்து?. ஆனால் நடந்த பேச்சோ இன்னும் இரண்டு நாட்கள் கழித்துத் தொடங்கப்போகும் முறைப்படியான சண்டைக்கான அச்சாரம். இத்தனையும் உள்ளே வைத்துக் கொண்டு அமைதிப்படையின் சார்பாக, ” அக்டோபர் 10ந் தேதி யாழ் நகரில் மாலை 2,45 மணிக்கு நெல்லிப்பாலையில் 4,30 மணிக்கும் விடுதலைப்புலிகள் நவீன ரக ஆயுதங்களைக் கொண்டு தாக்கத் தொடங்கினார்கள். இதன் பொருட்டுத் தான் எங்கள் தாக்குதல்களைத் தொடங்கினோம்” என்றார்கள். இதுபோக அமைதிபபடை உருவாக்கிய மற்றொன்றும் ஆச்சரியம் வரவழைக்கக்கூடியது. யாழ்வளைகுடா பகுதியில் EPRLF. TELO.PLOTE போன்ற இயக்க நபர்களை ” மூன்று நட்சத்திர கூட்டணியாக ” வைத்துக்கொண்டு அவர்களை உள்ளே சுதந்திரமாகச் செயல்பட வைத்தனர். மொத்த விடுதலைப்புலிகளின் செயல்படுகளையும் தடைசெய்தனர். இந்தச் சமயத்தில் இந்த இயக்கங்களிலும் இருந்து பிரிந்து போன மொத்த சிறு சிறு குழுக்களையும் ஒன்றாக இணைத்து ENTLF என்று (இப்போது இருக்கும்) டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வைத்து உத்திரபிரதேச மாநிலத்தில் பயிற்சி அளித்து உள்ளே இறக்கினார்கள். ஆனால் இந்தச் சமயத்தில் இலங்கை எதிர்க்கட்சி தலைவி பண்டார நாயகா சொன்ன வாசகத்தை நீங்கள் தெரிந்து கொண்டே ஆகவேண்டும். ” இங்குத் தொடர்ச்சியாக இந்திய ராணுவம் இருப்பது புதிரானது. ஆபத்தானதும் கூட. அவர்கள் கொண்டு வந்துள்ள ஆயுதங்கள், கனரக ஆயுதங்கள், மோட்டார் வகையிலான தானியங்கி ஆயுத தளவாடங்கள் அத்தனையும் இலங்கைக்கு புதிது. நம்முடைய இறையாண்மையை நாமே கெடுத்துக் கொள்ளப் போகிறோம் என்பதன் தொடக்கம் இது” 8. பேனா போர் கொஞ்சம் அவலம் இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடன் தொடங்கிய போரில் முதல் 15 நாட்கள் பற்றிப் பார்க்கலாம். சாதகமான பத்திரிக்கையாளர்களைத் தவிர இந்திய அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேற்றினாலும் பத்திரிக்கை மக்கள் சாதாரணமானவர்களா? ஒவ்வொரு பத்திரிக்கையும் ஒவ்வொரு போர் காலத்திலும் உள் பகுதி வரைக்கும் ஊடுருவி செய்தி சேகரித்த நிகழ்வுகள் எல்லாம் நாம் கனவிலும் நம்ப முடியாத ஆச்சரியங்கள். இன்றைய இலங்கையின் மொத்த நிகழ்வுகளையும் இன்று வரைக்கும் உலகம் ஊன்றி கவனித்துக்கொண்டுருக்க இந்த ஊடகமே காரணம். ஆனால் அன்று மொத்தமாய் அவஸ்த்தைப்பட்டவர்கள் இவர்கள் தான் என்றால் அது ஆச்சரியமல்ல. இவர்களுக்கோ செய்தி வேண்டும். அமைதிப்படைக்கோ தாங்கள் பெற்றுக்கொண்டுருக்கும் அவமானங்கள் காற்றில் பறந்து விடக்கூடாது என்ற நோக்கம். ஆனால் அத்தனையும் மீறி காற்றில் பறக்கத்தான் தொடங்கியது. அப்போது ஊடகத்தில் வந்த ஒவ்வொருவரின் அனுபவமும் ஒவ்வொரு வகையானது. பாலசந்தர் (நியூஸ் டைம்) இந்திய ராணுவம் இன்று என்றில்லை. இன்னும் எத்தனை நாட்கள் இங்கு இருந்தாலும் புலிகளை அடக்கிவிடமுடியாது. கோபமாய் இருக்கும் யாழ் மக்களுக்குச் சோறும், மருந்தும் கொடுத்துச் சாந்தப்படுத்தி விடலாம் என்ற தப்புக்கணக்கு போட்டுச் செயல்பட்டுக்கொண்டுருப்பது இறுதியில் தோல்வியில் தான் முடியும். இங்குள்ள ஒவ்வொரு தனி மனிதர்களும் மிகத் தெளிவாகப் புத்திசாலித்தனமாக இருக்கிறார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களுடைய வாழ்க்கையில் இனி அமைதி திரும்பிவிட்டது என்று எண்ணம் கொண்டு அமைதிப்படையை வரவேற்றவர்கள் இன்று அப்படியே திரும்பி அடிக்கத் தொடங்கி விட்டார்கள். கே.வி. நாராயணன் (UNI) வியட்நாமில் கூட எங்களின் சொந்த ரிஸ்கில் சென்று வந்துள்ளோம். ஆனால் இங்கு யாழ் கோட்டை வாயிலோடு எங்களைத் தடுத்து நிறுத்தியது மொத்தத்திலும் கொடுமை. அவர்களின் வார்த்தைகளைப் போலப் போராடிக் கொண்டுருந்த இராணுவ வீர்ர்களின் வார்த்தைகள் மொத்தத்திலும் கொடுமையிலும் கொடுமை. ” போர் தொடங்கி இரண்டு வாரங்கள் தான் முடிந்துள்ளது. எந்த யுத்தத்திலும் இந்த அளவிற்கு நாம் வீரர்களை இழந்தது இல்லை. இது வரைக்கும் 153 பேர்கள் இழந்துள்ளோம். 538 பேர்கள் படுகாயமுற்று சாவுக்குப் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். 47 வீரர்கள் காணாமல் போயுள்ளனர். இது நாங்கள் யோசித்ததை விடக் கடுமையாகப் போய்க்கொண்டிருக்கிறது. கடந்த ஐந்து நாட்களாக ஒரு விநாடி கூடத் தூங்காமல் போராடிக்கொண்டுருக்கிறோம். எங்களை நோக்கி வரும் சிறுவர் சிறுமியர் கூடக் கையிலிருக்கும் கண்ணிவெடியை எங்கள் வாகனத்தின் உள்ளே வீசிவிட்டு மறைந்து விடுகின்றனர். வரும் பெண்கள் அத்தனை பேர்களும் புடவையின் உள்ளே இருந்து திடீர் என்று வெடிகுண்டுகளை எடுத்து எங்களை நோக்கி வீசி விட்டு செல்கின்றனர். இந்த வித்யாசமான சூழ்நிலையை எப்படிச் சமாளிக்கப்போகின்றோம் என்பதே புரியவில்லை “ இந்த இடத்தில் மற்றொரு விசயத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். இந்திய அமைதிப்படையின் அடிப்படை ஒப்பந்தத்தின்படி மொத்த இலங்கை இராணுவமும் அவரவர் முகாமில் இருப்பார்கள். மொத்த ஆளுமையும் அமைதிப்படையின் கையில் தான் இருக்கும் என்றது. ஆனால் யுத்தம் தொடங்க காரணமாக இருந்த அமைதிப்படைக்கு மேலே உள்ளவர்களின் தனிப்பட்ட ஈனப்புத்தியின் காரணமாகப் போரில் ஈடுபட்ட நேரிடையான இந்திய இளநிலை ராணுவ அதிகாரிகள் தொடக்கம் முதலே அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். மேலும் அப்போதே ஒப்பந்தமும் ஒவ்வொன்றாக மீறப்பட்டது. ஒவ்வொரு நிகழ்விலும் இலங்கை இராணுவத்தினரையும் கூட்டணியில் சேர்த்துக்கொண்டனர். [] ஒப்பந்தத்தின்படி கிழக்கு மகாண பகுதியில் இருந்த சிங்கள கிராமங்களில் அமைதிப்படை செல்லாது. அது போலவே அமைதிப்படை இருக்கும் இடங்களிலும் இலங்கை இராணுவத்தினர் செல்லமாட்டார்கள் என்பதெல்லாம் அப்பட்டமாக மீறப்பட்டது. சிங்கள கிராம குடியிருப்புகள் பத்திரமாகப் பாதுகாக்க நம்முடைய வீரர்களும் உடந்தையாக இருந்தனர். கனரக ஆயுதங்கள் பயன்படுத்துவதில்லை, ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல்கள் இருக்காது போன்றவைகளும் மீறி மேலிருந்து குடியுருப்புகள் முதல் மொத்த இடங்களிலும் சரமாரியாகக் குண்டுமழை பொழியப்பட்டது. நோக்கம் புலிகள். பாதிக்கப்பட்டது அப்பாவி வாழ்வாதாரங்கள். அமைதிப்படை போட்ட குண்டுவீச்சின் கரும்புகையைப் படம்பிடித்து விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட சீரழிவுக்காட்சிகள் என்று தொலைக்காட்சியில் காட்டப்பட்டதை அப்போதைய தி வீக் நிருபர் வின்சென்ட் டிசௌஸா போட்டு உடைத்தார். யாழ்பாணத்தில் இருந்து பயந்து சென்னைக்கு அகதிகளாக வந்தவர்கள் ” சிங்களர்களின் தாக்குதல்களை விட அமைதிப்படையின் தாக்குதல்கள் கோரமாக இருக்கிறது” என்றனர். தொடக்கத்தில் விமானத் தாக்குதல்களை மறுத்த அமைதிப்படை பிறகு, புலிகளின் கோட்டையான யாழ் பகுதியை கைப்பற்றி விட்டோம். இனி எங்கள் நோக்கம் சாவகச்சேரி மட்டுமே. இழப்புகளைத் தடுக்க, விரைவுபடுத்தும் பொருட்டு வான் தாக்குதல்களைத் தொடங்கினோம் என்று உளற ஆரம்பித்தனர். சண்டையினால் சின்னாபின்னமான யாழ் நகரின் விதிகளில் முதன் முறையாக ஊடக மக்களை அழைத்துக்கொண்டு சென்ற போது திகைத்துப் போய்விட்டனர். ஏறக்குறைய மயான அமைதி. சீர்குலைந்து மக்கள் நடமாட்டம் இல்லாத இடமாகக் காட்சியளித்தது. மத்திய தந்தி அலுவலகம், துறைமுக நிர்வாக அலுவலகம், என்று அங்கு இருந்த அத்தனை முக்கிய நிர்வாக ஸ்தலங்களும் அழிக்கப்பட்டுச் சீர்குலைந்து போய் இருந்தன. அத்தனையும் கண்களை மூடிக்கொண்டு நடத்தப்பட்ட வான்தாக்குதல் காரணமாக உருவான காட்சிகள் இது. முள்ளிவாய்க்கால் கடைசிகட்ட கோர காட்சியில் உலகமெங்கம் ஊடக ஒப்பாரி வைத்த ஒரு வசனம் நம்முடைய அனைவரின் கண்களுக்கும் வந்து சேர்ந்து இருக்கும். அதாவது ” புலிகள் பொதுமக்களை ஆயுத கேடயமாக வைத்துக்கொண்டு அவர்களை வெளியே விடாமல் இம்சிக்கின்றார்கள் ” என்றது. இதே வசனத்தை அன்றைய அமைதிப்படையும் ஊடகத்தில் பரப்பியது. “தெருவில் மொத்தமாகக் கூட்டமாக வருகின்றார்கள். முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள் என்று அவர்கள் பின்னால் இருந்து கொண்டு எங்களைத் தாக்குகிறார்கள். எங்களால் ஒன்றுமே செய்யமுடியவில்லை” ஆனால் பொதுமக்கள் அத்தனைபேரும் புலிகள் பின்னால் நின்றதற்கு முக்கியக் காரணம் என்ன தெரியுமா? ஒரு குறிப்பிட்ட இடத்தில் போர் தொடங்கப் போகிறது என்றால் முதல் நாளே வந்து அந்த இடத்தில் உள்ளவர்களை ஒன்றிணைத்து அவர்கள் அனுமதியுடன் போரிடத் தொடங்கினர். போரிடத் தொடங்கும் போது பொதுமக்களே தங்களால் ஆன உதவிகளையும் செய்யத் தொடங்கினார். இதுவே மொத்த அமைதிப்படைக்கும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் சவாலாக இருக்கத் தொடங்கியது. காரணம் எந்தப் போராளிக்குழுக்களும் ஒரு தடவை இரண்டு தடவை வேண்டுமானால் வலுக்கட்டாயப்படுத்திப் பொதுமக்களைப் பலிகடா ஆக்க முடியும். ஆனால் ஒவ்வொரு நாளும் இதே போல் நடக்கின்றது என்றால் பொதுமக்கள் அனுமதி இல்லாமல் நடக்க வாய்ப்பே இல்லை. ஆனால் இதையும் மீறி அமைதிப்படை தனது வேகத்தைக் குறைத்தபாடில்லை. இந்திய வீரர்களின் மனோதிடம் குறையக் குறைய அது தவறான பாதையையும், வக்கிர பாதையையும் உருவாக்கத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாகத் தான் பாராசூட்டில் இருந்து இறங்கிய இந்திய வீரர்களைப் பிரபாகரன் தாக்குதல் நடத்தி வந்து இறங்கிய அத்தனை இந்திய வீரர்களையும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இதுவே மிகப் பெரிய திருப்பு முனையாக உருவாக்கப்பட்டு “இலங்கைக்குச் சென்றது அமைதிப்படை அல்ல. மொத்த படையும் அழிவுப்படை” என்று தமிழ்நாட்டில் கூக்குரல் தொடங்கப் பெற்றது. ஏன் இந்த அளவிற்குப் பிரபாகரன் உள்மத்தம் பிடித்து அலைந்தார் என்பதற்கு மற்றொமொரு சம்பவம். அப்போதைய பிடிஐ நிருபர் சொன்ன வாசகம் இங்கே குறிப்பிடத்தக்கது. “பெயரை குறிப்பிட விரும்பாத இரண்டு போராளிக்குழுக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை பிரபாகரனை கொல்வதற்கு என்று சிறப்புப் பயிற்சி கொடுக்கப்பட்ட உளவுத்துறை அவர்களை முடுக்கிவிட்டுக் கொண்டுருந்தது. அவர்கள் தினசரி வேலையே பிரபாகரன் குழுவினரை கவனிப்பது மட்டுமே” இத்தனை பெரிய இந்திய இராணுவத்தின் வீரம் என்பது ஏன் கேலியாகப் போனது? ஒரே காரணம் சுயநலம். பெரிய நாட்டுக்கு தன்னுடைய இறையாண்மைக்காகச் சுயநலமாக இருப்பது கூடப் பராவாயில்லை. ஆனால் ஈடுபட்ட அத்தனை மேல்மட்ட அதிகாரிகளுக்கும் ஒரே நோக்கம் பிரபாகரனை அழித்து விட வேண்டும். காரணம் அவ்வாறு அந்த மொத்த அதிகாரிகளையும் மனம் மாற்றி வைத்து இருந்தார்கள். டெல்லி அரசியல் லாபியும் ரா வின் தவறான வழிகாட்டுதல்களும். பிரபாகரனை அழிந்து விட்டால் மொத்தமும் ஒரு முடிவுக்கு வந்து விடும் என்று நம்பியது, அந்த நம்பிக்கையே அவர்களை வழி நடத்தியது, அதன் படியே நம்பவைத்தது மட்டுமல்லாமல் பல்லாண்டு காலம் பயிற்சி பெற்ற அதிகாரிகளையும் . வீரர்களையும் இழக்க வைத்தது தான் சோகத்தின் உச்சம். அமைதிப்படைக்கு இலங்கை இராணுவம் என்பது ஒத்துழைப்பு என்பது உப்புசப்பில்லாதது. சொல்லப்போனால் அன்றைய சூழ்நிலையில் அவர்கள் ஆளை விட்டால் போதுமடா சாமிங்ற அளவிற்கு இருந்தவர்கள் தான். ஆனால் நமது அமைதிப்படைக்கு மேலே இருந்தவர்கள் கட்டளையிட்டவர்கள் அத்தனை பேர்களும் நடைமுறை தெரியாமல் தப்பு மேல் தப்புச் செய்து கொண்டுருந்தார்கள். இதில் உச்சகட்டம் என்ன தெரியுமா? முறைப்படியான போர் தொடக்கம் பெறுவதற்கு முன்பே அக்டோபர் 8ந் தேதியே இந்தியாவில் இருந்து ஆறு ஐ ஏ எஸ் அதிகாரிகளையும் இரண்டு ஐ பி எஸ் அதிகாரிகளைக் கொண்டு போய் உருவாக்கப்போகும் (?) நிர்வாகப் பரிபாலணத்திற்காகத் தயார் படுத்தி வைத்தனர். அதாவது முதல் இரவு நடக்கப் போவதற்கு முன்பே பிறக்கப்போகும் பிள்ளைக்குப் பெயர் தேர்ந்தெடுத்த புத்திசாலி மக்கள். . இது போகப் பொதுமக்களின் வாழ்வாதாரங்கள் கேள்வி குறியாக்கப்பட்ட அந்த ஒரு காரணமே மொத்த மக்களும் பிரபாகரன் பக்கம் சேரத் தொடங்கினர். அதுவே பிரபாகரன் தொடக்க வெற்றிக்குக் காரணமாக இருக்கத் தொடங்கியது. இது தவிர இலங்கையின் உள்ளே உள்ள அடிப்படை புவியியல் அறிவு பெற்றவர்களுக்கும் அந்த அறிவு மற்றவர்கள் மூலம் கற்றவர்களுக்கும் நடந்த போர் எங்குக் கொண்டு வந்து நிறுத்தும். வியட்நாமில் அமெரிக்கா பெற்ற பாடம் , ஆப்கானிஸ்தானில் ரஷ்யா பெற்றது போல இங்கு இந்தியா பெற்றது மிக வருத்தமான விசயம். ஆனால் வெறி அடங்குவதாக இல்லை. வெறியுடன் மட்டும் வாழ்ந்து கொண்டுருந்தவர்களை அவர்கள் விரும்பும் ஒரு வேலிக்குள் கொண்டு வரவும் முடியவில்லை. போகப்போகச் சிக்கல் வலைபின்னலாகி, அவிழ்க்க முடியாத சின்னாபின்னமாக்கியது. மழை விட்டாலும் தூவானம் நிற்கவில்லை. 9. அமைதிப்படை(IPKF) உருவாக்கிய பாதை திலீபன் இறந்த சமயத்தில் நான் அங்குப் பயணப்பட்டேன். அந்தச் செய்தி அப்போது தான் பொது மக்கள் மத்தியில் தாக்கத்தையும் இந்தியாவின் மீது சொல்லமுடியாத எரிச்சலையும் அதிகப்படுத்தியிருந்தது. விடுதலைப்புலிகள் கையில் ஒப்படைக்கப்பட்ட பண்டத்தரிப்பு என்ற இடத்தில் மக்கள் ஏராளமாகக் கூடியிருந்தனர். அவர்கள் இறப்பு நிகழ்ச்சிக்குக் கூடினார்கள் என்பதை விட அடுத்து என்ன நடக்கப்போகின்றதோ? என்ற அச்சம் தான் முக்கியமாக இருந்தது. ஆனால் அடுத்த நாள் புலிகள் தரப்பில் மக்களைக் கூட்டி ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தின் இறுதியில் அமைதிப்படை அதிகாரிகளிடம் மகஜர் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுருந்தது. ஆனால் அதிகாரிகள் அதை வாங்க மறுத்தனர். பலாலிக்குச் செல்லும் அத்தனை பாதைகளிலும் இராணுவ முகாமும், வீரர்களின் தலைகளைத் தாண்டித்தான் அலுவலகத்தைச் சென்று அடைந்தனர். அதிகாரிகள் எவரும் மக்களின் தார்மீக கோபத்தையோ, அவர்கள் கொண்டு வந்த மகஜர் குறித்து அக்கறை ஏதுமின்றி ” உங்களைக் காப்பதற்குத் தான் நாங்கள் இங்கு வந்துள்ளோம். மகஜர் தேவையில்லை ” என்று மறுக்க ஆசேமடைந்த பொதுமக்கள் கல்வீச்சில் இறங்கினர். அங்கே தேவையில்லாத பதட்ட சூழ்நிலை உருவானது. புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் சண்டை தொடக்கம் பெற்ற போது இருதரப்பில் கடுமையான சேதம் உருவான செய்திகள் வரத்தொடங்கிய போது கயட்ஸ் தீவுக்கு வந்து விட்டேன். மூளாய்க்கும், காரைநகர் கடற்படைத்தளத்திற்கும் இடையே இருந்த கடல்பாலத்தைப் புலிகள் தாக்கி அழித்து இருந்தனர். அப்போது சிங்கள இராணுவத்தினர் அந்தப் பாலத்தை உருவாக்குவதில் ஈடுபட்டுக்கொண்டுருந்தனர். காரணம் அப்போது அங்குக் கடுமையான உணவுப் பஞ்சம். விலைகள் மூன்று மடங்காகத் தாறுமாறாக ஏறத் தொடங்கியது. ஒரு மழை ஓய்ந்துருந்த போது திடீர் என்று வந்து இறங்கிய இந்திய இராணுவத்தினர் ஹெலிகாப்டலில் இருந்தபடியே காரைநகர் தளத்தில் இருந்து குண்டு வீசத் தொடங்கினர். அரைமணி நேரத்திற்குப் பிறகு தான் அந்தப் புகைமூட்டத்தில் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள மக்கள் ஓடத் தொடங்கினார்கள். தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அருகில் இருந்த கோவிலுக்குள் சென்ற மொத்த மக்களையும் சுற்றி வளைத்து, பரிசோதனை செய்யப்பட்டு இறுதியில் 35 பேர்களைப் பிரித்துச் சுட்டுக்கொன்றனர். பிடியில் இருந்த பெண் கற்பழிக்கப்பட்டதும், அவர் அன்றே தூக்கில் தொங்கியதும் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த இடத்தில் இருந்த புலிகள் யுத்தம் தொடங்கிய போதே வெளியேறி விட்டார்கள். வெளியேறியவர்களை, உள்ளே தான் இருக்கிறார்கள் என்றபடி வந்தவர்கள் அடைந்த ஏமாற்றமும் அதுவே இறுதியில் வானொலியில் தீவு கைப்பற்றப்பட்டது என்றும் ஒலிபரப்பப்பட்டது. [] மொத்தமாக ஒவ்வொரு இடத்திற்கும் கமாண்டர்கள் வருவதும், மொத்த மக்களையும் கூட்டத்தை ஒரு இடத்தில் நிறுத்தி ” உங்களில் புலிகள் எவராவது இருந்தால் எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள்” என்ற கேட்டு இறுதியில் ஏமாற்றத்துடன் சிலரை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு போய் அடித்து உதைத்து பாதி வழியில் விட்டுவிட்டு சென்று விடுவதும் தொடர்ச்சியாக நடந்து கொண்டுருந்தது. நடு இரவில் வழி தெரியாமல் வந்த ஒரு இராணுவ சிப்பாய், பேசிய ஹிந்தி மொழி புரியாமல் மொத்த மக்களும் சூழ்ந்து கொண்டு காப்பாற்றிக் கொண்டு வந்து சேர்த்தனர். அவர் பேசியதே பரிதாபமாக இருந்தது. மூன்று நாட்களாகச் சாப்பிட வழி இல்லாமல், மறுபடியும் முகாம்க்கு போக வழியும் தெரியாமல் இருந்தவரை மக்கள் பார்க்கச் சென்ற போது அவர் பயந்து போய் வானத்தைப் பார்த்து சுட ஆரம்பித்தார். இவர் இருப்பதைக் கேள்விப்பட்டுப் புலிகள் வந்து சேர அவர்களைச் சமாதானப்படுத்திப் பொதுமக்கள் அனுப்பி வைத்தனர். அவர் பேசிய ஆங்கிலத்தில், இலங்கை இந்திய ராணுவத்தின் மொத்த பயமும், இந்தியாவிற்குத் திரும்பிச் செல்ல எப்போதும் செல்ல தயாராய் இருக்கும் துயர வாழ்க்கையும் புரிந்தது. கயிட்ஸ் தீவில் உணவுப்பஞ்சம் கடுமையாக இருக்க யாழ்பாணம் சென்று விடலாம் என்று நினைத்தோம். நெடுந்தீவு மக்கள் பட்டினியால் செத்துக்கொண்டுருந்தார்கள். அப்போது இலங்கை கடற்படையினர் தங்களின் உணவுகளைச் சிறிதளவு கொடுத்து உதவினார்கள். அப்போதைய சூழ்நிலையில் யாழ்பாணம் முழுக்க இந்திய இராணுவம் வைத்ததே சட்டம். அவர்களைப் பார்த்தவுடன் சைக்கிளில் சென்றாலும் இறங்கி நடந்து செல்ல வேண்டும். குறிப்பிட்ட தூரத்தில் இருந்து கைகளைத் தூக்கியபடியே செல்ல வேண்டும். ஆண், பெண் என்ற பேதம் இல்லாமல் அவர்களே உடம்பு முழுக்கச் சோதனை என்ற பெயரில் அவர்கள் செய்யும் வக்கிரங்களை வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது. புலிகளைப் பிடிக்கிறோம் என்று கைகளில் படங்களை வைத்துக்கொண்டு ஒவ்வொரு வீடாக வீரர்கள் உள்ளே வரும் போது மக்கள் மொத்தமாகப் பயந்து கொண்டு வீட்டின் பின்புறம் வழியாகத் தப்பி ஓடி மறைவும் அன்றாட நிகழ்ச்சியாய் இருந்தது. யாழ்பாணம் முழுக்கக் கடுமையான பஞ்சம் நிலவியது. எவரும் அன்றாடப் பணிகளைக்கூடச் செய்ய முடியாமல் துன்பப்பட்டனர். மண்டை தீவுக்கு அருகே இந்தியா ஒரு பெரிய போர்க்கப்பலை நிறுத்தியுள்ளனர். மீனவர்களை மீன்பிடிக்கு அனுமதிப்பது இல்லை. யாழ்பாணத்தில் இருந்து கிளிநொச்சிக்கு வந்து சேர்ந்தேன். வழியெங்கும் இராணுவ முகாம்களும், அவர்களின் சோதனைகளும் தாண்டி வர வேண்டியதாய் இருந்தது. யாழ்பாணத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குப் போக வேண்டுமென்றால் கச்சேரி என்ற இடத்தில் போடப்பட்டு இருந்த இராணுவ முகாமில் போய் அனுமதிசீட்டு வாங்க வேண்டும். தங்க வசதிகள் இல்லாத காரணத்தால் சர்ச்சிலில் அடைக்கலம் கிடைத்தது. காலையில் வவுனியா செல்ல திட்டமிட்டேன். கிளிநொச்சியில் ENTLF ( THREE STARS CAMP) தனியாக முகாம் அமைத்துள்ளார்கள். புலிகளுக்கு எதிரான மற்ற இயக்கங்களை ஒன்றாக இணைத்து இந்திய இராணுவத்தின் பாதுகாப்புடன் மொத்த சோதனைகளும் அவர்கள் மூலம் நடந்து கொண்டுருந்தது. அவர்கள் தாண்டி எவரும் சென்றுவிடமுடியாது. வவுனியாவுக்கு வரும் வழியில் மாங்குளத்துக்கு அருகே சுமார் 1500 சீக்கியர்கள் கொண்ட முகாம் இருந்தது. இது போக மொத்தவழியிலும் இராணுவ தலைகளாகவே தென்பட்டது. உடன் இருக்கும் இலங்கை காவல்துறைக்கும் இந்திய இராணுவத்தினர்களுக்கும் முட்டல் மோதல் தொடர்ந்து கொண்டே இருந்ததைப் பார்க்கமுடிந்தது. பேரூந்து வரும் வழியில் ஓமந்தை கிராமத்தில் இருந்த மொத்த வீடுகளையும் இந்திய இராணுவத்தினர் ஆக்ரமித்துக் குடியேறியிருந்தனர். அவர்கள் கேம்பில் பரிசோதனைகள் என்ற பெயரில் ஆண் பெண் பேதம் இன்றி ஆடைகளுக்குள் கையை விட்டு வக்ரத்தை நிறைவேற்றிக்கொண்டுருந்தனர். வவுனியா நகரை வந்தடைந்த போது ஏழு முறை பரிசோதனைகளும், இடையில் நிறுத்தி அடையாள கேள்விகளும் முடிந்து சேர்ந்த போது மூச்சு திணறியது. வழக்கமாக இரண்டு மணிக்கு சற்று குறைவாக வந்தடைய வேண்டிய தூரத்தை பரிசோதனைகள் காரணமாக 6 மணிக்கு மேலாகக் கடந்து வந்து அடைந்த போது ஆயாசமாக இருந்தது. வவுனியா நகரில், இந்திய இராணுவத்தினர், இலங்கை இராணுவத்தினர், இந்திய மத்திய ரிசர்வ் போலிஸ், இலங்கை போலிஸ், இது போக விடுதலைப்புலிகளுக்கு எதிரான த்ரி ஸ்டார் போராளிக்குழுக்களின் கேம்ப் என்று எங்குப் பார்த்தாலும் இவர்களின் தலைகள் தான் அதிகமாகத் தெரிந்தது. மாலை 4 மணி முதல் மறு நாள் காலை 6 மணி வரையிலும் மொத்தமாக இங்கு ஊரடங்குச் சட்டம் வேறு அமலில் இருந்தது. வரும் வழியில் த்ரி ஸ்டார் போராளிக்குழுக்கள் பரிசோதனை முடிந்தது ஒவ்வொருவரிடமிருந்து கட்டணம் என்று வாங்கி அப்பட்டமாகக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். இலங்கை காவல்துறை போல் இந்த த்ரி ஸ்டார் செயல்பட்டுக்கொண்டுருக்கிறது. சிங்கள கிராமத்தில் இருந்த சிங்களர்களுக்கும் இந்திய இராணுவத்தினர் மீது பயமாக இருந்தனர். ” உங்களைக் காக்க வந்தவர்களே இன்று உங்களைக் கொன்று குவிக்கிறார்களே? இவர்கள் எங்களையும் கொன்று விடுவார்களோ? ” என்று கிழக்கு மகாண சிங்கள மக்கள் சொன்ன பயம் பொதுவாக அங்குள்ள எல்லோரிடத்திலும் இருந்தது. புலிகள் மீது மதிப்பும், இந்திய இராணுவத்தினர் அப்பாவி மக்களைத் தாக்குவதால் தான் புலிகளை அவர்களைத் திருப்பித் தாக்குகிறார்கள் என்ற ஆதங்கம் பொதுமக்கள் மத்தியில் இருந்தது. அதுவே புலிகளுக்கு மறைமுக ஆதரவாக மாறிக்கொண்டுருந்தது. யாழ்பாணப் பொதுமருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர்கள், தாதியர்கள், நோயாளிகளை இந்திய இராணுவத்தினர் வெறியாய்ச் சுட்டுக்கொன்றது மக்கள் மனதில் ஆழமான வடுவாய்ப் போய்விட்டது. கொக்குவில், உரும்பிராய் பகுதிகளில் பெரும்பாலான வீடுகள் தரைமட்டமாய் இருந்தது. அழுகிய சடலங்களை எடுக்க ஆள் இல்லாமல் நாறிக்கொண்டுருந்தது. இலங்கை இராணுவத்தினர் கூடப் புலிகளைப் பார்த்து, அவர்களைத் தேடி போர் செய்தனர். ஆனால் இவர்களுக்குத் தமிழ் மக்கள் எல்லோருமே புலிகளாகத் தெரிந்தனர். யாழ்பாணப் பல்கலைக்கழக வளாகம் இப்போது மொத்தமாக இந்திய இராணுவத்தினர் கட்டுப்பாட்டில். இவர்கள் உருவாக்கிய பிரச்சனையால் மொத்தமாக இந்தப் பகுதியின் பொருளாதாரமே இன்னும் 25 வருடங்கள் பின்தங்கிடப்போகின்றது என்ற அச்சம் அனைவரிடத்திலும் இருந்தது. குறிப்பிட்ட நேரம் மட்டும் தான் மின்சாரம். எந்த அடிப்படை வசதிகளும் இராணுவத்தினர் கட்டளையின்படி நடந்தது. இதற்கிடையே அகில இந்திய வானொலியின் தொடர்ச்சியான பொய்த்தகவல்கள். ஈழமுரசு தாக்கப்பட்டு அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சில நாட்களிலேயே சிறிய அளவுகளில் பிரசுரமாக வெளியிடத் தொடங்கினார்கள். காரணம் அகில இந்திய வானொலி ஆகாச புளுகுணியாக ஒலிபரப்பிக்கொண்டுருந்தது. மொத்தத்தில் மக்கள் அத்தனை பேர்களும், இந்திய இராணுவம் அமைதி என்ற பெயரில் உள்ளே வந்து விட்டது. இனி இவர்கள் இதைவிட்டு நகர இன்னும் 25 வருடங்கள் ஆகும் என்று அவரவர் தீர்மானமாக நம்பி எதிர்க்கத் தொடங்கினார்கள். (போர் தொடங்கிய காலத்தில் அங்குப் பயணப்பட்ட பெர்ணாண்டஸ் என்ற பத்திரிக்கையாளரின் மொத்த அனுபவத்தின் சுருக்கப் பகிர்வு.) 10. அமைதி வெடியும் ஆறுமாதமும் மற்றப் போராளிக்குழுக்கள் வலிமை இழந்ததும், விடுதலைப்புலிகள் மட்டும் மக்கள் ஆதரவு பெற்றதும் ஏன்? என்பதை ஊன்றிக்கவனித்துப் பார்த்தால் இந்திய அமைதிப்படை உள்ளே இருந்தபோது நடந்த ஒவ்வொன்றும் நமக்குப் பல விசயங்களை உணர்த்தும். பிரபாகரன் சர்வாதிகாரம், சந்தர்ப்பவாதம் என்ற எத்தனையோ குற்றச்சாட்டுக்களைப் பக்கத்தில் வைத்துப் பார்த்தாலும் கூட இந்திய ” அமைதி படையே வெளியேறு ” என்று போராடிய விடுதலைப்புலிகளுடன் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து போராடிய காட்சிகளும், வயது முதிர்ந்தோர்கள் கூடத் தங்களால் முடிந்த பங்களிப்பை பார்த்தோமேயானால் அவர்களைப் போலத் தமிழ் மக்கள் என்ற சொல்லில் தங்களை அடக்கிக்கொண்டு வாழ்ந்து கொண்டுருக்கும் தமிழ்நாட்டில் எப்போதாவது நடக்குமா என்பது சந்தேகமே? சில நிகழ்வுகளைப் பாருங்கள். இந்திய இராணுவச் சிப்பாய்களை ஏற்றிக் கொண்டு லாரிகள் வரிசையாகப் புறப்படுகின்றன. நகரின் எல்லையில் ஒரு குறுகிய வளைவில் திரும்புகிறது. சற்றுத் தூரத்தில் ஒரு வீட்டின் முன்புறம் வாசலில் கிழவி ஒருவர் வெற்றிலையைப் பாக்குடன் அமைதியாக இடித்துக் கொண்டுருக்கிறார். முதல் இராணுவ லாரி அவரைக் கடந்து செல்கிறது. உடனே தனக்குப் பின்னால் வைத்திருந்த ஒயரை மற்றொரு ஒயருடன் சேர்த்து இணைத்து விட்டு மீண்டும் தனது வேலையைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார். பின்னால் வந்த அத்தனை லாரிகளும் பல காத தூரம் தீப்பிழம்புடன் வெடித்துச் சிதறுகிறது. மொத்த வீரர்களும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று இறங்கி ஓட்டம் பிடிக்கிறார்கள். பெண்கள், சிறுவர்கள் இராணுவ வீரர்களை நோக்கி வருவது போல் இல்லாமல் வேடிக்கை பார்க்கும் நோக்கம் போலக் கடந்து செல்கிறார்கள். எப்போது தங்கள் உடம்பில் மறைத்து வைத்திருந்த குண்டுகளை இராணுவ வாகனத்தில் வீசினார்கள் என்று யோசிப்பதற்குள் வண்டி சிதறுகிறது. இவர்களைப் போல மற்றப் பெண்கள் வேறொரு பாதையில் போராடிக்கொண்டுருப்பதையும் பார்த்துவிடலாம். அன்னம்மா டேவிட், நேசம்மா வடிவேலு ஆகிய இரு தாய்மார்கள் மட்டக்கிளப்பு முருகன் கோவிலில் சாகும் வரை உண்ணாவிரதம் என்ற போராட்டத்தைத் தொடங்குகிறார்கள். அவர்களின் கோரிக்கை ” இந்திய அரசே போரை நிறுத்து. விடுதலைப்புலிகளுடன் பேச்சு வார்த்தையைத் தொடங்கு” . [] பின்னாளில் சென்னையில் வந்து இறங்கிய ஒவ்வொரு இந்திய வீரர்களும், அதிகாரிகளும் மறைக்காமல் பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்தனர். ” நாங்கள் நினைத்துச் சென்றது போல் விடுதலைப்புலிகள் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்களின் தீரம் வியப்புக்குரியது. ஆச்சரியமாக அதிசியமாக இருக்கிறது ” என்றார்கள். காரணம் அவர்கள் சந்தித்த அன்றாட ஒவ்வொரு நிகழ்வுகளும் அவர்களுக்கு உணர்த்தியது ஒன்றே ஒன்று தான். போராளிக்குழுக்கள் என்பதெல்லாம் தாண்டி, வீரம் என்பதை வீரனாக ஒவ்வொரு தனிப்பட்ட விடுதலைப்புலிகளும் தான் களமாடியது மூலம் நிரூபித்துக் காட்டினார்கள். இந்தியாவின் நவீன உபகரணங்கள் அத்தனையும் அவர்களின் சுதேசி சிந்தனைகள் மூலம் உருவானவைகளின் முன்னால் கண் முன்னாலே பொடிப் பொடியாக உதிர்ந்தது. உதாரணமாக இராணுவ வாகனங்கள் கடந்து செல்லும் போது தென்னை மரத்தில் இருந்து வந்து அடிக்கும் வெடிகுண்டுகளும், சுதாரிப்பதற்குள் வாகனங்கள் முகர்ந்து பார்க்கும் கண்ணி வெடிகளுக்குள் காணாமல் போயினர். கண்ணிவெடி வைப்பதில் புதிய உத்திகளைக் கையாண்டனர் விடுதலைப்புலிகள். கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்க இந்திய ராணுவம் உலோக சாதனங்களைப் பயன்படுத்தினால் அவர்கள் தாங்கள் உருவாக்கி வைத்திருந்தவைகளை நவீன உபகரணங்கள் கண்டுபிடிக்காத அளவிற்குத் திரவக் கண்ணி வெடிகளைப் பயன்படுத்துகிறார்கள். இதில் இருந்து தப்பிக்கும் நோக்கத்தில் அப்போது பிரான்சில் இருந்து சிறப்பு மோப்ப நாய்களைக் கொண்டு வந்தனர். இதிலும் தோற்றுப்போய் வீடு வீடாக உள்ளே புகுந்து விடுதலைப்புலிகளைத் தேடுகிறோம் என்று தொடங்கிக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட போது இதற்கென்று தயாரிக்கப்பட்ட பெட்டிகளை வைத்து வீரர்களை வீட்டுக்கு வரவழைக்க, அந்தப் பெட்டியே வெடிகுண்டாக அவர்களின் உயிரைப் பறித்தது. விடுதலைப்புலிகள் அன்று முதல் கடைசி வரைக்கும் போராட்ட களத்தில் வென்றெடுக்க முக்கியக் காரணங்கள் பல என்றாலும் இந்தக் கண்ணிவெடி நுட்பம் தான் அவர்கள் மேல் பலருக்கும் பயம் கொள்ள வைத்தது. அதுவே மனித வெடிகுண்டு தாக்குதல்கள் என்று தொடக்கம் பெற்ற போது ஒவ்வொருவரும் உயிர்ப்பிச்சை என்று கேட்கும் அளவிற்கு ஆனது. பிரேமதாசாவிற்குப் பிறகு ஆட்சி அதிகாரத்திற்கு வரும் வாய்ப்பு இருந்தவர்கள் கூடப் பயந்து ஒதுங்கியதும் நடந்தது. இவையெல்லாம் கோரம், கொடுமை என்று எத்தனை வார்த்தைகள் போட்டு நமக்கு நாமே சமாதானங்கள் சொல்லிக்கொண்டாலும் சிங்கள வெறி என்பது கொடுமையானது. அதிலும் சிங்கள ஆட்சியாளர்களின் மூலம் தூண்டப்பட்ட தமிழர் வேட்டை என்பது மொத்தத்திலும் வெட்கக் கேடானது. தந்தை செல்வா அமைதி வழியில் போராடுகின்றேன் என்ற 1949 ஆம் ஆண்டுத் தொடங்கப் பெற்ற தமிழரசு கட்சி உருவாகி 9 ஆண்டுகளுக்குள் 1958 ஆம் ஆண்டு வெளிப்படையாகச் சிங்களர்கள் உள்ளே வைத்திருந்த வன்மத்தை கட்டவிழ்த்த போது அன்று போராடிக்கொண்டுருந்தவர்களால் அதை நிறுத்தவும் தெரியவில்லை. மக்களைக் காக்கவும் வழி தெரியாமல் மாண்டவர்கள் பல பேர்கள். தமிழினமே அன்று தான் சாவுக்குழியை நோக்கி பயணப்படத் தொடங்கியது. அன்று பிரபாகரனுக்கு நான்கு வயது. இதனால் உருவான இயக்கம் என்பதைப் பிரபாகரன் தொடக்கத்தில் சொன்னபோதிலும் மிகத் தெளிவாக அவரால் உருவாக்கப்பட்டது என்ன தெரியுமா? பயம். ஆமாம் பயம் ஒன்றே சிங்களர்களைப் பணியவைக்கும். பேச்சு வார்த்தைகள் என்பது அவர்களைப் பொறுத்தவரையிலும் விளையாட்டு. அது போலத்தான் பாராளுமன்றத்திற்குள் அடிபட்டு இரத்தம் சொட்டச் சொட்ட உள்ளே வந்த அமிர்தலிங்கத்தைக் காயம் பலமோ? என்று கிண்டலுடன் வரவேற்றனர். இது போன்ற பல செய்திகளை, நடந்த நிகழ்வுகளைக் கேட்டு படித்து, பார்த்து வந்த பிரபாகரன் உருவாக்கிய பயமென்னுபதும், பயந்தவர்களை மேலும் மேலும் பணியவைக்க அவரிடம் இருந்த மூர்க்கம் உதவியது. அதுவே அவருக்கு இறுதிவரைக்கும் முகவரியாய்ப் போய்விட்டது. ஆனால் சிங்களர்களுக்கு என்று தொடக்கம் பெற்றதே தவிர இந்தியாவுடன் கொண்டு போய் இப்போது இதை வைத்துக்கொண்டு விளையாடலாம் என்று நினைத்தே இருக்க வாய்ப்பு இல்லை. இவர்கள் உருவாக்கிய பாதை மொத்தமும் சிங்களர்கள் உருவாக்கிய சாவுக்குழியை விட மிக மோசமாகச் சாக்கடை குழியாகப் போய்விட அதுவரையிலும் உள்ளே தூங்கிக் கொண்டுருந்த மிருகம் வெளியே வந்தது. பிரபாகரன் மேல் இங்குள்ள அறிவுஜீவிகள் சொல்லும் அத்தனை புறக்காரணங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு பார்த்தால் இலங்கையின் உள்ளே வந்த இந்திய அமைதிப்படையுடன் போராட வேண்டும் என்று சூழ்நிலைக்கு வருவதற்கு முன் ஒரு தடவை அல்ல கிடைத்த கிடைக்காத அத்தனை வாய்ப்புகளைப் பார்த்து முயற்சித்தவர் பிரபாகரன் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்? நான் உங்களிடம் இனி அடங்கிப் போகிறேன் என்று பிரபாகரன் ஜெயவர்த்னேவிடம் கொடுத்த மகாண சபை நபர்களை வைத்து அன்றே இந்தியா மேலாதிக்கம் செய்து ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துருக்க முடியும்? அப்போதும் இந்தியாவிற்குச் சட்டாம்பிள்ளைத்தனம் தான் முன்னால் வந்து நின்றது. நான் இருக்கும் போது நீ ஏன் முந்திக்கொண்டு அவரிடம் செல்கிறாய்? நீ வாழ்ந்து விடுவாயா பார்க்கலாம்? என்ற அசிங்க ஒரங்க நாடகம் அரங்கேற பல அணர்த்தங்களும் தழைத்தோங்கியது. [] “புலிகளை ஒடுக்கிவிட்டோம் ” என்று ஊடகத்தில் அறிக்கை கொடுத்துக்கொண்டே பல இழப்புகளையும் தொடர்ச்சியாகச் சந்தித்துக்கொண்டே இருந்தனர். இந்தியா அப்போது தான் ரஷ்யாவில் இருந்து பி.எம்.பி 2 அதி நவீன ஆயுத வாகனத்தை இங்குப் பயன்படுத்தினர். இதன் சிறப்பு அம்சம் இரவில்கூடத் தெளிவான பார்வையும், எளிதில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லக்கூடிய வசதியும், இதற்கு மேலும் ஹெலிகாப்டரில் மிக எளிதில் பொருத்தி செயல்படக்கூடிய, இதற்கப்பாலும் அணு ஆயுத போர் நடந்தாலும் பாதுகாப்பாய் பல்முனை தாக்குதல்கள் நடத்தக்கூடிய பலவித முன்னேற்பாடுகள். ஆனால் இது போன்ற ஐந்து ஆயுத வாகனங்களைப் புலிகள் தகர்த்து அழித்தனர். அழிவுகள் அதிகமான போது, இழப்புகள் இந்தியாவிற்குத் தொடர்ந்து வந்து கொண்டுருந்த போது இதை வேறு விதமாகச் சொல்லி ஊடகத்தின் கவனத்தைத் திசை திருப்பினார்கள். ” 1971 ஆம் ஆண்டு வங்க தேச போராட்டத்திற்குப் பிறகு களத்திற்குப் பிறகு இப்போது தான் நாங்கள் களத்தில் இறங்குகிறோம். மேலும் இதற்கு மற்றொரு முக்கியக் காரணம் ஏற்கனவே கொள்முதல் செய்துள்ள, தரமில்லாத ஆயுதங்கள் தான் முக்கியக் காரணம்” என்றனர். இதையே காரணம் காட்டி அமைதிப்படை அதிகாரிகள் கடைசி வரைக்கும் சப்பைக்கட்டு கட்டிக்கொண்டுருந்தார்கள். இந்திய வீரர்களின் கோரமான நடவடிக்கைகளும், இதற்கு மேலான கற்பழிப்பு நிகழ்ச்சிகளும் பிரபாகரன் பக்கம் வேறொரு வகையில் அதிர்ஷ்ட காற்று அடிக்கத் தொடங்கியது. பெண்கள் அதிகளவு போராளிகளாக மாற்றம் பெறத் தொடங்கினர். இதற்கு மேலும் சிறுவர், சிறுமியர் என்று தொடங்கி முதியவர்கள் வரைக்கும் உணவு, ஆயுதங்கள், செய்தித் தொடர்பு என்று எல்லாவகையிலும் உதவி புரியத் தொடங்கினர். ஒவ்வொரு இடத்திலும் விடுதலைப்புலிகளின் துப்பாக்கிச் சூட்டில் இறக்கும் இந்திய வீரரைப் பார்த்த மற்ற இந்திய வீரர்கள் படைபட்டாளத்துடன் வந்து குவிந்து விடுகிறார்கள். யாழ் நகர் கடைவீதியை மொத்தமாக முற்றுகையிட்டனர். அந்தக் குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்த அத்தனை மக்களையும் வெட்ட வெளியில் நிறுத்தி வெயிலில் நாள் முழுக்க நிற்க வைத்து வாட்டி எடுத்தனர். மொத்தமாக எதிர்ப்பு கிளம்பியதும் கையில் பட்டவர்களை அடித்துச் சித்ரவதை செய்துவிட்டு கலைந்து போயினர். விடுதலைப்புலிகளையும் பிடிக்க முடியவில்லை. அவர்களின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கவும் முடியவில்லை. பொது மக்கள் ஆதரவையும் பெற முடியவில்லை. ஆனால் தினந்தோறும் வானொலி மட்டும் சகஜநிலைமை திரும்பிவிட்டது என்ற ஒரே பல்லவியைப் பரப்பிக் கொண்டேயிருந்தது. முதல் ஆறு மாதங்களில் எதற்காக இந்திய அமைதிப்படை இலங்கைக்குச் சென்றதோ அதன் முதல் அடியைக் கூட எடுத்து வைக்கவில்லை என்பதை விட அது தொடர்பாக எந்தவித முன்னேற்பாடுகளைக்கூட ஏற்பாடு செய்ய விருப்பமில்லாமல் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் தான் கொண்ட கொள்கையிலேயே முன்னேறிக்கொண்டுருந்தது. பிரபாகரன் தவறானவர். அவரை ஒடுக்கப்பட வேண்டியவர். எதிர்கால இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கப் போகின்றவர் என்று எத்தனை கணக்குகள் தனக்குள் வைத்துக்கொண்டாலும் அதை அங்கே செயல்படுத்திக் காட்டிக்கொண்டுருக்கும் விதம் தான் நாளுக்கு நாள் கோரத்தின் வாயிலில் போய் நின்று கொடுமையின் நுழைவு வாயிலை இலங்கை தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்தது. விடுதலைப்புலிகளை விரும்பாதவர்கள், த்ரி ஸ்டார் என்று இந்தியா வளர்க்கும் ஏனைய மற்றப் போராளிக்குழுக்களை வெறுப்பவர்கள், எந்தப் போராட்டத்திற்கும் நாங்கள் சம்மந்தம் இல்லாதவர்கள் என்ற இது போனற திருவாளர் பொதுஜனம் ஏதோ ஒரு வகையில் அமைதிப்படையில் உள்ள வீரர்களின் அக்கிரமத்தால் பாதிக்கப்பட்டு இனி வேறு வழியே இல்லை. இவர்களை விரட்ட விடுதலைப்புலிகளை ஆதரித்துதான் ஆக வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்து. திடீர் என்று யாழ் முற்றுகையிடப்பட்டது. தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் ஊரடங்கு அமுல். இரண்டு லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்டு மொத்த அந்தப் பரப்பில் இந்தத் தொகைக்கு நாலில் ஒரு பங்கு இராணுவ துருப்பைக் கொண்டு போய் நிறுத்தினர். மொத்த மக்களையும் வெளியே வரச்செய்து, தாங்கள் உருவாக்கி வைத்திருந்த த்ரி ஸ்டார் ஆள்காட்டிகளை வைத்துக்கொண்டு ஒவ்வொருவரையும் அடையாளம் காண அணிவகுப்பு பேரணி நடத்தினார், இறுதியில் மிஞ்சியவர்கள் கொண்டு செல்லப்பட்டு ” கவனிக்கப்பட்டனர்”. அது உண்மையான விடுதலைப்புலிகளா? இல்லை ஆள்காட்டிகளுக்குப் பிடிக்காத ஆட்களா? எவருக்குத் தெரியும். இந்தியாவிற்கு விடுதலைப்புலிகள் ஒழித்து விட வேண்டும். ஆள்காட்டிகளுக்குத் தனக்குத் எதிராக எவரும் உள்ளே இருந்து விடக்கூடாது. நோக்கம் ஒன்று. அணர்த்தங்கள் பலப்பல. தமிழ்மக்களுக்கு மட்டுமல்ல. நாளாகச் சிங்கள மக்களுக்கும் பெருத்த சந்தேகம் எழத் தொடங்கியது. இவர்கள் இனி மொத்தமாக இலங்கை முழுக்க ஊடுருவி நம்மை இவர்கள் ஆளப்போகிறார்கள்? என்று உருவான அச்சம் பல பிரச்சனைகளை உருவாக்கத் தொடங்கியது. தமிழ்நாட்டில் உருவான விலைவாசி உயர்வும், கொண்டு போய்க் கொட்டிக் கொண்டுருக்கும் ராணுவ ஓதுக்கீடுகளும், சென்னையில் இருந்து கொண்டு போய்க்கொண்டுருக்கும் காய் முதல் அடிப்படை மளிகை சாமான்கள் வரைக்கும் இங்குச் சராசரி பாமரன் தலையில் விழ ராஜீவ் காந்திக்கு எதிர்ப்பு என்பது இயல்பாக உருவாக ஆரம்பித்தது. முதல் ஆறு மாதங்களில் செலவழித்தது என்று 600 கோடிகள் என்று இந்தியா கணக்கு சொன்னாலும் எவரும் நம்பத் தயாராக இல்லை. ஆயிரம் கோடியை தாண்டியிருக்கும் என்று பரவலாகப் பேச்சு வலுப்பெற படையணி திரும்பப் பெறு என்ற கோஷமே ஒரு வருடத்தின் இறுதியிலும், மகாணசபை தேர்தல் முஸ்தீபுகள் என்று ராஜீவ் காந்தி வேறொரு கணக்குப் போய்க் காய் நகர்த்த தொடங்கினார். தனக்கு வசதியாகத் தமிழ்நாட்டில் கவர்னர் ஆட்சியும் நீட்டிக்கப்பட்டது. “ஆப்கானிஸ்தானில் ரஷ்யா பெற்ற பாடங்கள், வியட்நாமில் அமெரிக்கா பெற்ற பாடங்கள் போல அல்ல. இது உண்மையான அமைதியை நிலைநாட்டுவதற்கான அக்கறை” என்று எத்தனை சமாதானங்கள் சொல்லிக்கொண்டாலும் அன்றைய பொழுது இந்தியாவிற்கு ஒரு அடி அல்ல ஒரு இன்ஞ் கூட முன்னேற்றம் இல்லை என்பது தான் சரியாக இருக்கும். இத்தனை அடிவாங்கிக்கொண்டுருக்கும் போது ஏன் ராஜீவ் காந்தி யோசிக்க மறந்தார்? என்பது மில்லியன் டாலர் கேள்விக்கான பதில் ஒன்றே ஒன்று தான். தெற்காசியாவில் தன் ஆளுமை நிலை நாட்ட வேண்டிய அவசரம், வங்கதேசம், பூடான், பாகிஸ்தான், மியன்மர் போன்ற நாடுகள் தங்கள் தலைமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உணர்த்த வேண்டிய அவசியம். இராணுவம், உளவுத்துறை கொடுத்துக் கொண்டுருக்கும் நம்பிக்கை புள்ளி விபரங்கள், இதற்கு மேலும் உள் நாட்டில் எழுந்த செல்வாக்கை மேலே கொண்டு வரக்கூடிய அவசர அவசியங்கள் என்று ஒன்றுடன் ஒன்ற கோர்த்து மாலையாகி அதுவே இறுதியில் இலங்கை அப்பாவி மக்களின் பிணத்தின் மேல் போடும் சவமாலையாக மாற்றம் பெற்றது. 1983 அன்று சிங்களர்கள் உருவாக்கிய கருப்பு ஜுலை கலவரத்திற்கு எதிராக ஒன்று சேர்ந்த தமிழ் மக்கள் போல நான்கு வருடங்களுக்குப் பிறகு மொத்த மக்களிடத்திலும் ஒரு புதிய எழுச்சி தோன்றியதும், அதுவே இந்திய அமைதிப்படைக்கு எதிராக வலுப்பெறத் தொடங்கியதும் முதல் ஆச்சரியம் என்றால், யாழ் நகர வீதியில், ஒவ்வொரு முனைக்கும் இரண்டு என்று பதுங்கு குழி மூலம் இந்திய இராணுவ துருப்புகள் காவல் காத்ததும், உள் நாட்டு மக்களையே அனுமதி சீட்டு பார்த்து அவர்களை நடமாட அனுமதிக்க வைத்ததும் அடுத்த உச்ச கட்ட சோகம். 11. விடாது துரத்திய கருப்பு முள்ளிவாய்க்கால் வரைக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. வேறு வழியே இல்லை. இந்தியா ஓப்பந்தம் மூலம் சொன்னாலும் ஜெயவர்த்னே வேறுவழியின்று ஒத்துக்கொண்டு இருந்த போதிலும் இந்தத் தேர்தல் நடத்தத்தான் வேண்டுமா? என்று இருவருமே நினைக்கும் அளவிற்குத் தள்ளிப் பார்த்தார்கள். ஆனால் மொத்தமாக எல்லை மீறிப் போய்விடுமோ? என்ற அச்சத்தில் அறிவித்தே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருந்தார்கள் என்பது தான் பொருத்தமாக இருக்கும். இது வரையிலும் இந்திய அமைதிப்படையுடன் பிரபாகரன் புரிந்த வீரதீர சாகசங்கள், மற்றப் போராளிக்குழுக்களை இந்தியா ஒன்றிணைத்து த்ரி ஸ்டார் என்று பெயரும் சூட்டி தங்களுக்குக் கீழே வைத்துக் கொண்டு பல புனித சேவைகளை இவர்கள் மூலம் உருவாக்கிக்கொண்டுருந்ததையும் பார்த்தோம். ஆனால் இப்போது தேர்தல் காலம். மொத்தமாக இவர்களின் தராதரம் குறித்துப் பார்க்க வேண்டும். அப்போது தான் பிரபாகரன் குறித்துச் சில விசயங்கள் நமக்குப் புரியும். என்னதான் மொத்தமாக இலங்கை அரசாங்கத்துக்குப் பிரபாகரன் என்ற ஆளுமை சிம்ம சொப்பனமாக இருந்தாலும் கூட யாழ்பாணத்தில் கிழக்குப் பகுதியில் மக்கள் செல்வாக்குப் பெற்றவர்கள் EPRLF மற்றும் EROS போன்றவர்களும் தான். காரணம் மலையக மக்களின் ஆதரவும், முஸ்லீம் மக்களின் ஆதரவைப் பெற்றவர்கள். இதற்குப் பல காரணங்கள். யாழ்பாண மேலாதிக்கம், பிரபாகரன் குறித்து அச்சங்கள் என்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு மேலாகவும் மேல் சாதிக்காரர்கள் என்ற வகையில் வருபவர்களுக்குப் பிரபாகரன் என்றாலே அலர்ஜி. அந்த அளவிற்கு இவரும் புரிதலை உருவாக்கவில்லை. உருவாக்கும் சூழ்நிலையில் காலமும் அவருக்கு அவகாசம் வழங்கவில்லை. இதுவே தான் பின்னாளில் கருணாவை பொறுப்புக்குக் கொண்டு வரும் வரைக்கும் நடந்தது. கருணா ஆளுமையைக் குறை சொன்னாலும் நான் இனியும் நீடிக்க வேண்டுமென்றால் உளவுத்துறை தலைவர் பொட்டு அம்மான், அரசியல் பொறுப்பாளர் நடேசன் இருவரையும் நீக்க வேண்டும் என்ற போது தான் அவரின் உள் மன ஆசையைப் பிரபாகரன் அன்று முழுமையாகப் புரிந்து கொண்டார். தாமதமான கருணாவைப்பற்றிய இந்த முதல் புரிதல் முதல் ஆச்சரியம். புலம் பெயர்ந்தவர்கள் என்பதையும் தாண்டி பரவலாக மற்ற நாடுகளிலும் வேறு வழியே இல்லாமல் பிரபாகரனுக்குத் தொடக்கம் முதல் ஆதரவை வழங்கி வந்தவர்கள், மனதார விரும்பியவர்கள், ஆதர்ஷ்ணமாகக் கருதி வணங்கியவர்கள் என்று தொடர்ந்து கொண்டே வரும் கூட்டத்தில் இந்தக் கூட்ட மக்களையும் நாம் கருத்தில் கொள்ளத்தான் வேண்டும். அச்சம் என்பது பணிய வைக்குமே தவிர அன்பை உருவாக்குமா? என்ற கேள்வியை இந்த இடத்தில் கேட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் அதையும் உருவாக்கி கருணா இறுதியில் பிரியும் போது சொன்ன வாசகம் ” ஒவ்வொரு மாதமும் பிரபாகரன் தலைமைக்கு 50 ஆயிரம் கோடி வருமானம் வந்து சேர்கிறது. என்னுடைய பகுதிக்கு ஒரு கோடி தான் கொடுக்கிறார்கள். நான் எப்படி இதில் திருட முடியும்” என்பதில் இருந்தே கடைசிகட்ட 5 ஆண்டுகளில் தந்தை செல்வாவிற்கு அதிகபட்சமாக இலங்கை தமிழ் மக்கள் கொடுத்த 16 சீட்டுக்கள் போல உச்சபட்ச நிர்வாகப் பரிபாலண நிர்வாகத்தை உள்ளே நடத்திக்கொண்டுருந்தார். சொல்லப்போனால் புலம் பெயர்ந்தவர்கள் விரைவில் தனித் தமிழ் ஈழத்தில் நாம் வாழ முடியும் என்ற நம்பிக்கை செடியாக மரமாக மாறிக்கொண்டுருந்தது. விடுதலைப்புலிகள் அழித்த சீறி சபாரெத்தினத்தை, இவர்களே அழிக்காமல் இருந்து இருந்தாலும் அவருடைய TELO இயக்கமே அழித்துத் தான் இருக்கும். காரணம் டெலோ இயக்கம் என்பது பெயர் ஒன்றே தவிரச் சிறு சிறு குழுக்கள் போலத்தான் செயல்பட்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையில் பயணித்துக்கொண்டுருந்தனர். தன்னுடைய கட்டுப்பாடு என்பது இனி செல்லுபடியாகாது என்பதை உணர்ந்த சிறீ சபாரெத்தினம் அடங்காதவர்களை அழித்ததும், அழிக்க முற்பட்ட போது சபாரெத்தினத்திடம் இருந்து தப்பியவர்களே இவரைத் துரத்திக்கொண்டுருந்ததும் ஒரு பக்கம் நடந்து கொண்டுதான் இருந்தது. யாழ் தளபதி கிட்டு முந்திக்கொண்டார். முடித்தவர்கள் விடுதலைப்புலிகள் என்ற பெயரும் உருவாகிவிட்டது. என்ன லாபம்? மற்றவர்களிடம் ” இனி இங்கு நாங்கள் தான் . ஜாக்கிரதையாக இருங்கள் ” என்ற பயத்தை உருவாக்க பயன்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஈராஸ் பாலகுமார் கூடப் போதுண்டா சாமி என்று பிரபாகரன் பக்கம் சாய்ந்து விட்டார். அப்போதும் கூட ஈபிஆர்எல்எ பத்பநாபா தெளிவாகத்தான் இருந்தார். ஜெயவர்த்னே அரசில் இருந்த அமிர்தலிங்கத்தை மக்கள் நலன் இல்லாதவர் என்று தங்களுடைய ஈழப் பேராளி என்ற பத்திரிக்கையில் கேலிச்சித்திரம் மூலம் தங்கள் எதிர்ப்பை காட்டினார்கள். காலத்தின் கோலத்தில் அமைதிப்படை உள்ளே வந்ததும் பதவி ஆசையில் மொத்த கொள்கைகளும் மாற்றம் பெற்றது. இதிலும் பிரிவு உருவாகி டக்ளஸ் தேவனாந்தா வேறொரு ஜீவனாக மாறியிருந்தார். கருணா போல் இவரும் தப்பிப் பிழைத்ததும் இன்று வரையிலும் உயிருடன் இருப்பது அடுத்த ஆச்சரியம். தன்னுடைய ஆதிக்கத்தை மட்டும் நிலைநாட்டுபவர் என்று பிரபாகரன் குறித்துச் சொன்ன இவர்களின் அத்தனை வார்த்தைகளும் இவர்களே ஒவ்வொருவரும் பிரிந்து தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட நடத்தப்பட்ட போராட்டங்களும், விழுந்த தலைகளும், ரத்தமும் இவர்களுக்குள்ளே எவரையும் திருப்திபடுத்தவில்லை. திருந்தவும் தயாராய் இல்லை. பிரபாகரன் இவர்களை ஒப்பிடும் போது பரவாயில்லை. ஆமாம். நான் இப்படித்தான் என்று வெளிப்படையாக அறிவித்துத் தன் மேலாதிக்கத்தை நிலை நிறுத்தியவர். இவர்கள் கத்திக்கொண்டு வெளியே வந்து ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுக் கொண்டு அடித்துக் கொண்டு வாழ்ந்தவர்கள். சார்ந்த மக்களையும் சாகடித்தவர்கள். இன்னமும் தெளிவாகப் புரிய வேண்டுமென்றால் EPRLF ஆட்சி அதிகாரம் என்று வந்ததும் தாங்கள் உருவாக்கிய அடியாள் பட்டாளமும், இந்திய அமைதிப்படை மூலம் உருவாக்கப்பட்ட ” குடிமக்கள் படை” என்ற ஆள் தூக்கிகளும் எவருக்கும் இன்றும் நினைவில் இருக்கும். எவரைப் பார்த்துச் சர்வாதிகாரம் என்று சொன்னார்களோ இவர்களே அந்தச் சர்வாதிகாரத்தையும், தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் போலத்தான் தங்கள் கைக்கு ஆட்சி அதிகாரம் என்று வந்ததும், சுத்தமான அரசியல்வாதியாக வாழ்ந்தார்கள். மக்கள் நலன் என்பது அந்தப்பக்கம் என்பதாகத் தான் செயல்பட்டார்கள். பிரபாகரன் மூலம் பத்பநாபா கொல்லப்பட முக்கியக் காரணம் பிரேமதாசாவுடன் வெளியே தெரியாத ஒப்பந்தமே முக்கியக் காரணம் ஆகும். பிரேமதாசா இலங்கையின் உள்ளேயிருந்த சங்கரி என்பவர் மூலம் பத்பநாபாவால் பிரபாகரனை அழிக்க என்று உருவாக்கப்பட்டது. இவர்களுக்கு முன்பே அதை உணர்ந்த பிரபாகரன் வேறு வழியே இல்லாமல் பத்மநாபாவையும் செலவு கணக்கில் கொண்டு போய்ச் சேர்த்தார். அமைதிப்படை வெளியேறியதும், பொம்மை அரசில் இருந்த முதல் அமைச்சர் வரதராஜப்பொருமாளும், பத்பநாபாவும் சென்னையில் அடைக்கலம் ஆக வேண்டிய சூழ்நிலையில் தான் வீராதி வீரர்களாக உள்ளே வாழ்ந்தனர். விடுதலைப்புலிகள் ரவுண்டு கட்டி தங்கள் தாக்குதல்களைத் தொடுத்தனர். இவர்கள் விடுதலைப்புலிகளிடம் இருந்து தப்பித்துக் கிளம்பிச் சென்றவர்கள் இருக்கும் இடத்தில் அமைதியாகக் கிள்ளாமல் இருந்தால் பரவாயில்லை. ஆசை யாரை விட்டது? சென்னையில் இருந்து கொண்டே பிரபாகரனை கிள்ளத் தொடங்கியதும் வேரோடு சாய்க்கப்பட்டனர். அதில் இருந்தும் தப்பியவர் வரதராஜப் பெருமாள். ராஜீவ் காந்தி மரணத்திற்கு முன்பே இவரைக் கண்டு பிடிக்க விடுதலைப்புலிகளின் முயற்சி இறுதி வரைக்கும் தோல்வியில் தான் முடிந்தது. வட நாட்டில் ஏதோ ஒரு மூலையில் இவரை இந்திய உளவுப்படையினர் பொத்தி பொத்தி வைத்திருந்தனர். ராஜஸ்தான், டெல்லி வரைக்கும் அலைந்த போது கூட விடுதலைப்புலிகளின் சார்பாளராக வந்தவர்கள் இவரின் நிழலைக்கூடக் கண்டு பிடிக்க முடியவில்லை. காரணம் அந்த அளவிற்கு உளவுத்துறையினர் தங்கள் மக்கள் சேவையைத் திறம்படச் செய்து கொண்டுருந்தனர். இன்றுவரையிலும் அரசாங்க செலவில் வாழ்ந்து கொண்டு மகளை நடிகையாக்கி கலைச்சேவை புரியவைக்க ஆசைப்படுவர் தான் இந்த முன்னாள் மக்கள் சேவகர். சிதறிக்கிடந்த நெல்லிக்காய்கள் போல் இருந்த பிளாட் இயக்கமும் அமைதிப்படை உள்ளே வந்த போது முடிந்தவரைக்கும் போராடித்தான் பார்த்தார்கள். உமா மகேஸ்வரன் கூட இந்தியாவைப் பகைத்துக்கொண்டு ” வங்கம் தந்த பாடம் ” என்ற இந்திய உளவுத்துறைக்கு எதிராக வெளியீடுகளை வெளியிட்ட போதும், இந்தியா தொடக்கத்தில் அமைதிப்படை உள்ளே வருவதற்கு முன்பு இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்தவர்கள் என்று ரா உளவுத்துறை தான் என்ற உண்மையைப் போட்டு உடைத்து ஊடகத்தில் பேட்டியாகச் சொன்ன போதே அவரின் விதி தீர்மானமாய் முடிவு பாதைக்கு வந்து இருந்தது. மொத்த ரகஸ்யங்களையும் வெளியிட்ட சில தினங்களில் தான் அவர் இயக்கத்தில் இருந்தவர்களால் கொல்லப்பட்டார். உடன் இருந்தவர்கள் கொன்றார்கள் என்று அந்தக் கோப்பு முடிவுக்கு வந்தது. ஆனால் அதற்குப் பின்னாலும் திரைமறைவு ரகஸ்யங்கள் உண்டு என்பதை உணர்ந்தவர்கள் பல பேர்கள். அப்போதைய சூழ்நிலையில் உள்ளே பிரபாகரனை பகைத்துக்கொண்டால் சாவு என்பது போல் ரா உளவுத்துறையை முறைத்துக்கொண்டாலும் சாவு தான் என்பதை உணர்த்திக்காட்டிய சம்பவங்கள் இது. பிரபாகரனோ எவராவது எங்களின் வாழ்வுரிமை போராட்டத்திற்குத் தொந்தரவு கொடுத்தால் இது தான் முடிவு என்றவர். உளவுத்துறையினரே நீங்கள் ஆதரவு கொடுத்தால் இது தான் கதி என்பதைக் காட்டி கதிகலக்கியவர்கள். மத்தளத்திற்கு ரெண்டு பக்கமும் இடி என்பது இது தான். யாழ்பாண மேயர் ஆல்பர்ட் துரையப்பாவை பிரபாகரன் சுட்டுக்கொன்ற முதல் சம்பவத்தின் போது அவரின் வயது 21. அப்போது முதல் மற்றவர்களிடம் பயத்தை உருவாக்கி வைத்து தன்னுடைய திறமையால், கொண்டு வாழ்ந்த தன்னம்பிக்கையால், தன்னை மட்டும் நம்பி தன் ஆளுமையை வளர்த்துக் கொண்ட பிரபாகரன் அவரை அறியாமலே சில தவறுகளைக் கண்டும் காணாமல் தன்னிடமே வைத்திருந்தார், தன்னை ஏற்றுக் கொள்ள மறுக்கும் இலங்கையின் கிழக்கு மகாண மக்கள் குறித்து அக்கறையோ, அதனை மாற்றிவிட வேண்டும் என்ற எண்ணமே இருந்ததா? என்று தெரியவில்லை. இனிமேல் நீங்கள் மாறித்தான் ஆக வேண்டும் என்ற தன்னம்பிக்கை ஒரு காரணமாக இருந்து இருக்கலாம். இதைத்தவிர யாழ்பாணம் என்றால் மற்ற மகாண மக்களுக்கு ஒரு விலகல் எப்போதுமே இருந்தது என்பதை இங்குக் குறிப்பிட்டே ஆக வேண்டும். தொடக்கம் முதலே சாதீயப் பார்வை, மேலாதிக்க எண்ணங்கள், மேல்தட்டு வாழ்க்கை என்று அவர்களின் வாழ்க்கை முறைகளும், அரசாங்க பதவிகளின் மூலம் பெற்ற பொறாமைப்பட்டுத் தான் தீர வேண்டிய வாழ்க்கை அமைப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். இதற்கெல்லாம் மீறி ஆச்சரியப்பட வேண்டிய சமாச்சாரம் ஒன்று உண்டு. இலங்கையின் ஒரு பகுதியான யாழ்பாணத் தீபகற்பத்திற்கும் இலங்கை வரைபடத்தில் கீழே லேசான புருவ நெற்றி போல் இருக்கும் காலி (இந்த இடத்தில் தான் முதன் முறையாக டச்சு படையினர் வந்து இறங்கினர்) என்ற இடம் வரைக்கும் உள்ளே வாழ்ந்து கொண்டுருந்த மொத்த இலங்கை வாழ் தமிழ் மக்களின் வாழ்க்கை முறையும் நம்பவே முடியாத ஆச்சரியம் அதிசயம். யாழ்பாண மக்களின் வாழ்க்கை முறைகளும், வழிபாடு, கலாச்சாரம், உணவு முறைகள் அத்தனையும் மன்னார் மாவட்டத்தில் மிகுந்த வேறுபாடு. இரண்டு வன்னியாக இருக்கும் வன்னிப்பகுதியில் அதைவிட இந்த இரண்டு வாழ்க்கை முறையும் மொத்த வேறுபாடுகள். தலைநகரம் கொழும்புவில் வாழ்பவர்கள் மொத்தத்திலும் வேறொரு தளத்தில் தான் வாழ்ந்தார்கள். கடற்கரையோர மொத்த இலங்கையில் வாழ்ந்து கொண்டுருப்பவர்கள், தமிழ் மொழி பேசிக்கொண்டு தமிழ்நாட்டுக் கலாச்சாரத்தை நினைவு படுத்தும் விதமாக இருக்கும் முஸ்லிம்களின் வாழ்க்கை முறையும் வேறானது. உருது, வேறு சில மொழிகள் என்று வாழும் முஸ்லீம்கள் என்று அவர்கள் ஒரு தனி அத்தியாயம். மொத்தத்தில் ஜாதியால், மதத்தால், இனத்தால், கலாச்சாரப் பின்பற்றுதல் என்ற முறைகளால் முறைத்துக்கொண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் பிரிந்து வாழ்ந்து கொண்டுருந்த ஒன்றுபடாத தமிழின மக்களைப் பிரபாகரனின் அச்சம் கலந்த ஆளுமை தான் ஒரு புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தியது. வேறு வழியில்லை என்பதாக ஒரு புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தியதாகவும் இருக்கலாம். இனி வேறு வழியில்லை என்பதாகவும் இருக்கலாம்.. காரணம் இலங்கை சுதந்திரம் பெற்று நாற்பது ஆண்டுகள் ஆன போதும் கூட ஜாதியால் தீண்டத்தகாதவர்கள், வெறுக்கப்பட வேண்டியவர்கள் என்பவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் சேரும் அளவிற்கு பிரபாகரன் உருவாக்கினார். பின்னாளில் ஜாதி இல்லாத தன்மையை பிரபாகரன் மெதுமெதுவாக உருவாக்கியதை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். யாழ்பாணத்தில் சைவ வேளாளர் என்ற இனமே மேலாதிக்கம் நிறைந்தவர்கள். தமிழ்நாட்டைப் போலப் பிராமணத்தன்மை இலங்கையில் இல்லாத போதும் கூட நெருக்கமான அடுத்தவர்கள் நுழைய முடியாத அளவிற்கு இவர்களின் கட்டுக்கோப்பு மற்றவர்களை விலக்கி வைத்திருந்தது. இதற்கு அடுத்தப் பிரிவில் வரும் பிரபாகரன் குறித்து இந்த ஆதிக்க மக்கள் கடைசி வரைக்கும் தங்கள் பார்வையை மாற்றிக்கொள்ளவும் தயாராய் இல்லை பிரபாகரனுக்கு ஆதரவு கொடுக்கவும் முன்வரவில்லை. நீ என்னை விரும்புகிறாய்? விரும்பவில்லை? என்பது எனக்கு முக்கியமில்லை. விடுதலைப்புலிகளின் கொள்கைகள் உனக்குப் பிடிக்கவில்லை? பிடிக்கிறது? என்பது எனக்குத் தேவையில்லை. உன்னுடைய தனிப்பட்ட கொள்கைகள் நோக்கங்கள் விருப்பங்கள் எதுவும் எனக்கு முக்கியமல்ல. வீட்டில் ஆண் பிள்ளைகள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள்? ஒருவரை இயக்கத்திற்குத் தந்து விடு? என்ன வருமானம் வருகிறது? வரியாகத் தீர்மானிக்கப்பட்டுள்ள தொகையைக் கொடுத்து தான் ஆக வேண்டும். பணமா இல்லை நகையா இல்லை வேறு ஏதோ ஒரு வழியில் நீயும் இதில் பங்கெடுத்து தான் ஆக வேண்டும். நான் ஜாதி மதம் இனம் எதையும் பார்ப்பது இல்லை? எனக்குத் தேவை தனித் தமிழ் ஈழம். அதை நான் அடைய இந்தப் பாதை தான் சிறந்தது என்று ஏற்கனவே தீர்மானித்து விட்டேன். உன்னுடைய ஆலோசனை இருக்கட்டும். வலி பெற்றவனுக்கு வழி தெரியாமலா இருக்கும். நான் கேட்டதை முடிந்தால் கொடுத்து உதவியாய் இரு. வெளிநாட்டில் இருக்கிறார்களா? அவர்களிடம் சொல். இல்லாவிட்டால் எமது ஆட்கள் அவர்களைத் தொந்தரவு செய்யக்கூடும். எந்த வகையிலும் நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஆதரவு கொடுத்து தான் ஆக வேண்டும். ஏற்கனவே இருந்தவர்கள் அத்தனை பேர்களும் உருவாக்கிய உருக்குலைத்த பாதைகளைப் பேசி உட்கார்ந்து தீர்மானித்து ஒரே நேர்கோட்டில் அனைவரையும் இனி நான் கொண்டு வர வேண்டுமென்றால் எனக்கு அடுத்த நூற்றாண்டு ஆகி விடும். உனக்கு அது புரியாது? சர்வாதிகாரம் தான். காரத்தை விரும்பித்தான் ஆக வேண்டும். சர் பொன்னம்பலம் அருணாச்சலம், சர் பொன்ம்பலம் இராமநாதன், தந்தை செல்வா பாதைபோல இது வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதை. ஆனால் இவை அத்தனையும் இந்த இந்திய அமைதிப்படை உருவாக்கிய அலங்கோலங்களின் காரணமாக உள்ளே உள்ள விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் ஆர்வம் இல்லாத மக்களின் மனத்தை மாற்றியதும் உண்மை. தமிழர்களின் வாழ்க்கையை மீட்டு எடுக்க வேண்டும். பிரபாகரன் எதிர்பார்க்காத மொத்த மக்களின் ஆதரவும் ஒருங்கே பெற்றதும் இதன் தொடர்ச்சியே. உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தின்படி தேர்தலை அறிவிக்க எத்தனை காரணங்கள் இருந்ததோ அத்தனை ரகஸ்யங்களும் இருக்கத்தான் செய்தது. இலங்கை தேர்தல்களில் இந்தியா தலையிடாது என்ற தீட்சித் ஊடகத்தில் கிளிப்பிள்ளைப் போல் ஒப்புவித்தாலும் அவரின் முழுமையான வேலையே பேரங்களும், ரா வை முடுக்கிவிடுவதும் தான். மொத்த புரிதலுடன்படி இவர்கள் விரும்பியபடியே யாழ்பாணத்தில் வடக்குப் பகுதியில் ஈபிஆர்எல்எப் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தேர்தலை புறக்கணிக்கச் சொன்ன விடுதலைப்புலிகளின் கோரிக்கையை மீறி ஒவ்வொன்றும் இந்திய உளவுத்துறையின் மேற்பார்வையில் நடந்தேறிக்கொண்டு இருந்தது. ஆனால் மக்களும் ஓட்டுச் சாவடிக்கு வந்து ஓட்டளித்தனர். காரணம் மக்கள் ஓட்டளித்த பல இடங்களில் இந்திய அமைதிப்படையின் தாக்கம் என்பது எந்த அளவுக்கு இருந்தது என்பது பற்றி தெரியாத சூழ்நிலையில் வாழ்ந்த காரணமே இதற்கு முக்கியம். இந்தியா தொடக்கம் முதலே போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற காரணம் என்பது ஏன் என்று இறுதியில் தான் புரிந்தது? இப்படித்தான் நடக்கும் என்று ஏற்கனவே புரிந்து கொண்ட பிரபாகரன் தேர்தலை புறக்கணிக்கின்றோம் என்று சொன்ன வார்த்தைகள் ஆச்சரியமல்ல. வடக்கே விடுதலைப்புலிகளுக்கு அஞ்சி தேர்தல் பணி செய்ய எவரும் முன்வரவில்லை. இந்திய ராணுவ விமானங்கள் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டது. கொழும்புவில் இருந்து ஜெயவர்த்னே எதிர்ப்புகளை மீறி தேர்தல் அதிகாரிகளைத் தூக்கி வந்து, மனுத்தாக்கல் போன்ற சம்பிரதாயங்களை மாற்றிக் கிழக்குப் பகுதியிலும் ராணுவ ” பாதுகாப்பில் ” தேர்தல் நடத்தப்பட்டது. முழுக்க EPRLF ஆளுமையில் நடந்தேறியது. 64 இடங்களை ” பெற்று ” அறுதிப்பெரும்பான்மை கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது. போட்டியிட வந்து முஸ்லிம் வேட்பாளர்கள் துரத்தியடிக்கப்பட்டதும், வாக்குச் சாவடிகளை EPRLF தங்களுடைய ஆளுமைக்குள் வைத்திருந்ததும், அவர்கள் எத்தனை தூரம் இந்த வாய்ப்புக்காகக் காத்து இருந்தார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். இந்திய வெளிப்படையான அரசாங்க கணக்குப்படி ஆயிரம் கோடிகளுக்கு மேல் கொண்டு போய் இலங்கையின் உள்ளே அமைதியை நிலைநாட்டுகிறோம் என்று சொல்லி கொட்டினார்கள். விரும்பியபடியே பொம்மை அரசாங்கத்தையும் நிறுவினார்கள். நிறுவிய அரசாங்கத்தையும் இந்தியா வெளியேறிய பிறகு ஜெயவர்த்னே கண்டு கொள்ளவில்லை. பின்னால் வந்த பிரேமதாசாவுக்கு இதை வைத்துக்கொண்டு எப்படி ஆட்டத்தைத் தொடங்கலாம் என்ற தனிக் கணக்கு. இந்தியா ஒப்பந்தபடி, பேசியபடி அதிகாரங்கள் வழங்கப்பட வில்லை. அவர்களும் சரியான முறையில் நடந்து கொள்கிறாரா? என்பதைக் கவனிக்க இந்தியாவிற்கும் அதற்குப்பிறகு அக்கறையும் இல்லை. பதவிக்கு வந்தவர்களும் தங்களுடைய ஆளுமையை நிலைநாட்டும் அளவிற்கு அவர்களிடம் வலிவும் இல்லை. அவமானத்துடன் வீரர்கள் திரும்பினார்கள். எதற்காக இறந்தோம்? ஏனிந்த அவமானம் என்று ஆறாத ரணத்துடனும் இந்தியாவிற்குத் திரும்பி வந்து இறங்கிய வீரர்களை வரவேற்க யாருமில்லை. படை விலகல் என்று படிப்படியாய் மாறி மொத்தமும் விலகி மூன்றாவது நாளில் இரண்டாவது முறையாக அனிதா பிரதாப் என்ற செய்தியாளருக்கு பிரபாகரன் நீண்ட பேட்டி அளித்தார். பேட்டி முடிந்ததுமே அன்றைய அவரது பிறந்த நாளான 26ந் தேதியில் எடுத்துக்கொண்ட ஓய்வில் ஒரு வேளை ராஜீவ் காந்தி ” கணக்கு ” குறித்துச் சிந்தித்து இருக்கலாம்? தன்னுடைய தன்னம்பிக்கை தவிர வேறு எதையும் நம்ப மறுக்கின்ற பிரபாகரன் தொடக்கம் முதல் வைத்திருந்த கொள்கை தொடக்கத் தேதியான 8 முடிவு என்று வரக்கூடிய 8 வரக்கூடிய எந்த நாட்களிலும் தனக்குச் சாதகமாக வரவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு அந்த நாட்களில் அவர் எதையும் செய்வதில்லை. ஆனால் இந்தக் கணக்கு எங்குக் கொண்டு வந்து நிறுத்தியது. முள்ளிவாய்க்கால் மே 17 வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தியது. ஒவ்வொரு வீரத்திற்கும் ஒவ்வொரு கணக்கு. நாம் நம்ப மறுக்கின்ற காலத்திற்கும் அது போட்டு வைத்திருப்பதும் தனிக் கணக்கு. சில சமயம் காலங்கள் தோற்று ஓதுங்கி விடும். அதற்கும் நம் முன்னால் உதாரணமாகக் காட்சியளித்தவர் யாசர் அரபாத், பிடல் காஸ்ட்ரோ. முறைகள் வேறு. முயற்சிகளும் வெவ்வேறு. ஜெயவர்த்னே கூட இனி போதும்டா சாமி என்கிற மனோநிலையில் ஓய்வெடுக்கத் தயாராய் இருக்கப் பிரேமதாசா உள்ளே நுழையும் தருணம் இது. 12. வழங்கிய முனிவர் வாங்கிய பிரபாகரன் 947 முதல் தொடங்கிய இந்திய ஜனநாயகப் பாதை இன்றைய சூழ்நிலையில் இலங்கையில் பெற்ற அவமானம் என்பது நினைத்தே பார்க்க முடியாதது. இந்திய அதிகாரவர்க்கத்தின் உள்கட்டமைப்பு எந்த அளவிற்கு இருந்தது என்று உலகம் முழுக்க முரசு அறிவிக்காத குறைதான். ஏன்? முக்கியக் காரணம் உளவுத் துறையின் மோசமான செயல்பாடுகள். அதுவே தான் இன்று வரைக்கும் தொடர்ந்து கொண்டுருக்கிறது. பிராந்திய நலன் முக்கியம் என்ற அளவிற்கு அதை மீட்டு எடுக்க உபயோகித்த முறைகள் தான் மொத்தத்திற்கு அவமானத்தைப் பரிசாகப் பெற்றுத் தந்தது. உள்ளே நுழைந்து பூர்வாங்க ஏற்பாடுகளைக் கவனிக்காமல் இருக்க அதுவே தீலிபன் மரணம் வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தியது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பாளராகயிருந்த தீட்சித்க்கு அப்போது உளவுத்துறை கொடுத்த கேவலமான அறிக்கை, ” இதற்குப் பிறகு புலிகளின் அரசியல் தந்திரம் இருக்கிறது” என்பதாக இருந்தது. மொத்த அமைதிக்கும் சட்ட ஒழுங்குமுறைகளுக்கு இந்திய அமைதிப்படை தான் இனி பொறுப்பு என்ற சூழ்நிலையில் படகில் இலங்கையை நோக்கி பயணித்து வந்த 17 விடுதலைப்புலிகளைக் கைது செய்தது முதல் தவறு என்றால், அவர்களை இலங்கையிடம் ஒப்படைத்தது முக்கியத் தவறாகவும் முடிந்து விட்டது. அமைதிப்படை நினைத்து இருந்தால் அந்தக் கைது சம்பவம் வெளியே தெரியாமல் அப்போதே அதை முடித்து இருக்கலாம். மோப்பம் பிடித்த ஜெயவர்த்னே துள்ளிக் குதித்து வந்ததும், இதையே காரணம் காட்டி பாதுகாப்பு அமைச்சராக இருந்த அதுலத் முதலி ” அவர்களை விடுதலை செய்யக் காரணமாக நீங்கள் இருந்தால் நானும் என்னைச் சார்ந்தவர்களும் அமைச்சரவையில் இருந்து வெளியேறிவிடுவோம் ” என்று மிரட்டத் தொடங்க ஜெயவர்த்னே அமைதியாகி விடவேண்டிய சூழ்நிலை. உறுதியான முடிவு எடுக்க வேண்டிய தீட்சித் அப்போதும் அமைதி காக்க, கொழும்பு சென்றால் சித்ரவதைக்கு ஆளாக நேரிடும் என்று சயனைடு சுவைத்து பிடிபட்டுருந்த 17 பேர்களும் மரணமடைய பிரச்சனைகள் விஸ்ரூபம் எடுத்தது. அப்போது தான் குமரப்பா, புலேந்திரனுக்குத் திருமணம் ஆகியிருந்தது. இவர்களுக்கு எப்படி இருந்து இருக்கும். இலங்கை ராணுவத்திற்குச் சிம்ம சொப்பனமாக இருந்த இவர்களின் மரணம் பிரபாகரனுக்கு எத்தனை பாதிப்புகளை உருவாக்கியிருக்கும்? ஆனால் இதைத் தடுக்க முயற்சித்த இந்தியத் தூதுவர், தளபதி ஜெனரல் ஹக்கிரட் சிங், போன்றவர்களின் மொத்த உழைப்பும் அதுலத் முதலியின் கடுமையான பிடிவாதத்தால் தோற்றுவிட்டது. அவர்கள் ஜெயித்தார்கள் என்பதை விட இவர்கள் அதற்குக் காரணமாக இருந்தார்கள் என்பது தான் இங்கு முக்கியம். இந்தக் குழப்பத்திற்கிடையே இந்திய அமைப்படைக்குத் தலைமையேற்று வந்த தளபதிக்கும் அரசாங்கம் சார்பாளரான தீட்சித்க்கும் சரியான புரிந்துணர்வு இல்லை. மறைமுகமாக இருவரின் பகைமையும் வளர்ந்து கொண்டேயிருந்தது. தீட்சித்க்கு நான் சொல்வதை நீ கேள்? என்ற மனோபாவம். தளபதிக்கோ எனக்குக் கட்டளையிட நீ யார்? என்ற நியாயமான கோபம், அன்றைய சூழ்நிலையில் நேர்மையான வழியில் அமைதிப்படையின் செயல்பாடுகளைக் கொண்டு செல்ல அத்தனை முயற்சிகளை எடுத்தவர் என்றால் இந்தத் தளபதி தான். கைது செய்யப்பட்ட புலிகளை ஒப்படைத்தால் முற்றிலும் வேறு பாதைக்குப் பயணிக்க வேண்டியிருக்கும் என்று அவர் கதறியது எவருக்கும் அப்போது புரியவில்லை. புரிந்தபோது மொத்தமும் கைமீறியிருந்தது. ஜெயவர்த்னே எதிர்பார்த்துக்கொண்டுருந்த கலவரம் வெடிக்க அதுவரைக்கும் புலிகளுக்குக் கொடுக்கப்பட்டுருந்த பொதுமன்னிப்பை விலக்க அது மேலும் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் ஆயிற்று. கலவரங்களை இந்தியாவிற்குத் தெரிவிக்க, நடந்த மந்திர ஆலோசனைகளுக்குப் பிறகு விடுதலைப்புலிகளின் கையில் உள்ள ஆயுதங்களை வலுக்கட்டாயமாகப் பிடுங்க உத்தரவு வர பொங்கியிருந்த பானையைத் தரையில் போட்டு உடைத்தாகிவிட்டது. பிறகென்ன? அவசரம். அலங்கோலம், இறுதியில் அவமானம். உச்சகட்டமாய் இனி இந்தியாவுடன் போரிட்டுத்தான் ஆக வேண்டும் என்று பிரபாகரன் தீர்மானமாய் நம்புவதற்கு முன் அவர் தரப்பு விசயங்களை, ராஜீவ் காந்திக்கு (12.10.1987 முதல் 13,01,1988) வரைக்கும் கடிதம் வாயிலாகத் தெரியப்படுத்த ஒவ்வொரு கடிதமும் ராஜீவ் கைக்குக் கிடைத்த போது அவருக்கு உளவுத்துறை கொடுத்த தகவல் ” அவர்கள் வலுவிழந்து கொண்டுருக்கிறார்கள் ” என்கிற அடிப்படையில் இருந்த காரணத்தால் ராஜீவ் அந்தக் கடிதங்களைப் பொருட்படுத்தாமல் இருக்க முற்றியது தீராப் பகை. மக்களை மிரட்டுதல், தாக்குதல், எறிகணை வீச்சு, அப்பாவிகள் சாவு, என்று தொட்டுத் தொடரும் சொந்தங்கள் போல் மக்கள் மொத்த அமைதியையும் இழந்த போது பாரபட்சம் இல்லாமல் விடுதலைப்புலிகளின் பின்னால் அணிதிரளத் தொடங்கினர். காட்டுப்பாதை புதிது. மேலே இருந்து வரும் கட்டளைகளும் வினோதம். எவரை அடிப்பது? எவரை பிடிப்பது? இந்திய வீரர்கள் மாண்டு போனார்கள். உளவுத்துறை கொடுத்துக்கொண்டுருக்கும் தகவல்களுக்கும், போரை தலைமையேற்று நடத்திக்கொண்டுருந்த தளபதி மூலம் அனுப்பப்பட்ட, உள்ளே நடந்து கொண்டுருக்கும் எதார்த்த சூழ்நிலை அறிக்கைக்கும் முரண்பாடுகளின் மொத்த வடிவமாய் இருந்தது. ஆட்சியாளர்கள் உளவுத்துறைக்குக் கொடுத்த மதிப்பு என்பதைக் கடைசி வரைக்கும் உண்மை நிலவரத்திற்கும் கொடுத்து இருந்தாலே புதிய பாதை அன்றே கிடைத்து இருக்கும். கொடுக்க எவருமே இல்லை என்பதை விட அந்த அறிக்கைகள் ராஜிவ் காந்திக்குச் சென்றுவிடக்கூடாது என்பதிலும் கடைசி வரைக்கும் உறுதியாய் இருந்தனர். தலைமைத் தளபதி திபேந்தர் சிங் பின்னாளில் இதை அவர் புத்தகத்தில் சொல்லி வருத்தப்பட்டுருக்கிறார். தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பொம்மை அரசு என்பதை இந்தியா மட்டும் எதிர்பார்க்கவில்லை. ஜெயவர்த்னேவும் அது போன்ற ஒரு பொம்மையைத் தான் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டுருந்தார். வலுவானவர்கள் வந்தால் அதுவே எதிர்காலத்திற்கு விபரீதத்தை உருவாக்கிவிடும் அல்லவா? சிங்கள தந்திரத்தில் அன்றைய இந்திய ஆட்சிப் பொம்மைகள் என்ன செய்வார்கள்? என்ன செய்ய முடியும் என்பதைக்கூட உளவுத்துறை உணரத் தயாராய் இல்லை என்பது மொத்ததிலும் சோகமான ஆச்சரியம். இந்தப் பொம்மை அரசு மூலம் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வரதராஜப்பெருமாள் தங்களுடைய ஆட்சி அதிகார அலுவலகத்தைத் திருகோணமலையில் வைத்து ஆள விரும்பினர். இதில் விருப்பம் இல்லாத ஜெயவர்த்னே அங்கு அவர்களுக்குத் தேவைப்படும் கட்டிடங்கள் கொடுக்க மறுக்கத் தேர்ந்தெடுத்தவர்கள் நொந்தவர்களாக இருந்தனர். ஒப்பந்தப்படி அதிகாரப் பகிர்வும் கொடுக்கத் தயாராய் இல்லை. ஜெயவர்த்னே அரசியல் ஓய்வு பெற்ற 1988 இறுதி வரைக்கும் இப்படித்தான் போய்க்கொண்டுந்தது. இவர்களை ஆட்சி என்ற பெயரில் உள்ளே அமர வைக்க வேண்டும் என்பதை விரும்பிய இந்தியா அவர்கள் வலுவானவர்களாக மாற்ற ஏன் முயற்சிக்க வில்லை என்பதை விடப் பிரேமதாசா உள்ளே வந்த போது கூட இதில் எவரும் அக்கறை செலுத்தவும் தயாராய் இல்லை. இந்திய வரிப்பணத்தைக் கொண்டு போய்க் கொட்டி தீர்த்து ஆடி அலங்கோலப்படுத்தி அவமானப்பட்டு இறுதியில் இது போன்ற முறைப்படியான விசயங்களில் கூட ராஜீவ் காந்திக்கு தெளிவான முறையில் எவரும் புரிய வைக்கத் தயாராய் இல்லை. இந்தியா என்ற இறையாண்மை மிக்க நாட்டின் கௌரவம் என்பதை சாக்கடையில் கொட்டி கவிழ்த்த அதிகார வர்க்கத்தினர் ராஜீவ் காந்திக்கு வாழ்நாள் முழுக்கப் போக்க முடியாத களங்கத்தை உருவாக்கியிருந்தனர். பின்னால் வந்த பிரேமதாசாவிடமும் முரண்பட்டு முட்டி மோதிக்கொண்டு இருந்தனர். பல விதங்களிலும் தன்னுடைய செல்வாக்கை இழந்து இருந்த ராஜீவ் காந்தி அப்போது இந்தியாவில் தொடங்கப் போகின்ற தேர்தல் அறிவிப்புக் காரணமாகத் தன்னுடைய தோல்வி மொத்தமும் வெளியே தெரிந்து விடுமோ என்று அமைதிப்படை இலங்கையில் இருந்து வெளியேறவேண்டிய விலகலை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தார். இந்தப் பிரச்சனைகளில் தொடக்கம் முதல் பாய்ந்தவர்கள் இந்திய உளவுத்துறையினர். இவர்களுக்கு மேலே வானளாவிய அதிகாரம் உள்ளவராகப் பாய்ச்சல் காட்டியவர் தீட்சித். இறுதியில் பலிகடா ஆகியதென்னவோஅமரர் ராஜீவ் காந்தி. ஆனால் இத்தனை விசயங்களிலும் தோற்ற உளவுத்துறையினர் ஒரு வகையில் அன்றே சில அவர்கள் பாணியிலான நல்ல விசயங்களைச் செய்யத் தொடங்கினர். பிரபாகரனுக்குச் சமமாக இருந்த மாத்தையாவை வளைத்துப் போட்டதும், விடுதலைப்புலிகளின் உளவுத்துறை தலைவர் பொட்டு அம்மன் பயணித்த காரில் வெடிகுண்டு வைக்கும் அளவிற்கு அவரை மாற்றியதும், கிட்டு மேல் வெடிகுண்டு வீசி அவரின் காலைப் போக்கியதும் நடந்தது. அதுவே இறுதி வரைக்கும் மாற்றம் பெறாமல் ஆயுதக்கொள்முதல் செய்துவிட்டு, கிட்டு பயணித்து வந்த கப்பலை மாத்தையா மூலம் கண்டு கொண்ட இந்திய கப்பற்படை சுற்றிவளைக்க ஆயுதக்கப்பலையும் தன்னையும் அழித்துக்கொண்டு விடுதலைப்புலிகளின் வரலாற்றில் கிட்டு வீரமரணம் எய்தினார். அன்று தான் இந்திய உளவுத்துறையிடம் விலை போயிருந்த மாத்தையாவின் துரோகத்தைக் கண்டு உணர காரணமாக அமைந்தது. இது போன்ற மூன்றாந்தரக் காரியங்களில் கெட்டியாக இருந்தவர்கள் ராஜீவ் காந்தி மரணத்திலும் இருந்து இருக்கலாமே? ஆனால் இதை விட மொத்ததிலும் கொடுமை இந்திய அமைதிப்படையின் தொடக்கம் முதல் கதாநாயகன் போல் காட்சியளித்தவரும், பிரபாகரனை அழிக்காமல் விட்டு விடுவேனா என்று டெல்லி அசோகா உணவு விடுதி முதல் இறுதி படை விலக்கல் வரைக்கும் உறுமிக்கொண்டுருந்த தீட்சித், பின்னால் அவர் எழுதிய புத்தகத்தில் நடந்த நிகழ்வுகளைப்பற்றி, பிரபாகரனைப் பற்றி எப்படி எழுதியுள்ளார் தெரியுமா? “நான் பார்த்தவரைக்கும் மற்றப் போராளிகுழுக்களின் தலைவரை விட எல்லாவிதங்களிலும் பிரபாகரன் மேம்பட்டவராகக் காணப்பட்டார். இவரைப் பற்றித் தப்பாகப் புரிந்து வைத்துருக்கின்றேன். இவரது ஆழமான லட்சியம், அரசியல் அறிவு, ராணுவ போர்த்தந்திரங்கள், போர்த்திறமைகளை நான் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இவருடைய மதிநுட்பம் நிறைந்து பல சாதனைகளைப் போற்றத்தான் வேண்டும். அமைதிப்படைகளின் போருக்குத் தாக்குப் பிடித்துத் தொடர்ந்து போராட்டத்தை முன் நடத்திய காரணத்தால் இவர் மக்களின் ஆதர்ஷ்ண நாயகனாக மதிப்பைப் பெற்றார் “ ” தமிழீழ லட்சியத்தில் பிரபாகரனிடமிருந்த தணியாத வேட்கை, தீராத வெறி, தொடர்ந்த போராட்டங்கள் அத்தனையிலும் இழக்காத மன உறுதி ஆகியவற்றை நாங்கள் குறைவாக மதிப்பீடு செய்தமையே இந்தியா செய்த மாபெரும் தவறாகும் “ வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்ற பட்டம் போல? காரணம் இவரும் முனி பிடித்தவர் போலத்தான் எப்போதும் கோபப்பார்வையாய் வாழ்ந்தவர். இவர் எளிதாகப் பாராட்டுரை வழங்கி விட்டுப் போய்விட்டார். இவர் உருவாக்கிய இவரால் உருவாக்கப்பட்ட உருக்குலைத்த அடிப்படை இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமை போராட்டங்களின் எச்சமும் மிச்சமுமாய் உலகை ஸ்தம்பிக்க வைத்த காந்தி, இந்திரா மரணத்திற்குப்பிறகு ராஜிவ் காந்தி மரணம் வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தியது. அவருக்கென்ன போய்விட்டார்? அகப்பட்டவர் ராஜிவ் காந்தி? பகுதி - முன்று 1. விதி ராஜீவ் மதி பிரபாகரன் []   புலன்களால் அறியப்படும் அத்தனை விசயங்களையும் நமக்கு விஞ்ஞானம் உணர்த்துகிறது. விஞ்ஞானத்தைப் பொறுத்த வரையில் இறுதி முடிவு என்பதைத் தீர்மானமாய் காட்டி விடும். இல்லையென்றால் அதைக் குறித்து எவரும் கவலைப்படுவதில்லை. அடுத்த ஆராய்ச்சிக்கு அவர்கள் நகர்ந்து விடுவார்கள். காரணம் கிடைக்கும் முடிவு முக்கியம். வெகுஜனம் ஏற்றுக்கொள்வது அதைவிட முக்கியம். வளர்ந்த வளரும் விஞ்ஞானத்தின் அடிப்படையே இது தான். விஞ்ஞானத்தால் முகம் தெரியாமலே நீங்களும் நானும் உறவாட முடிகின்றது. மெய்ஞானத்தின் பாதை என்பது முற்றிலும் வேறானது. முடிந்தவரைக்கும் அன்பை எண்ணங்களால் கடத்த முடியும். அன்பு சூழ் உலகம் என்பதை நாம் உள்ளுற உணர்ந்தால் மட்டுமே உணர முடியும். எதனையும் அறிவால் பார்த்து ஒவ்வொன்றையும் உணராமல் உளற முடியும். உருக்குலைக்குவும் நம்மால் முடியும். வாழ்க்கையில் பாதிப்பு என்பது சோதனைகள் வந்தால் மட்டுமே தெரியும். அதன் பாதிப்புகள் நமக்கு உணர்த்தும். உணர்ந்தவர்கள் அனுபவசாலிகள். வாழும் வரைக்கும் உணராதவர்கள் தான் மட்டுமல்லாது தங்களின் தலைமுறைகளையும் மனதின் வலிமையை, சக்தியை உணராதவர்களாக மாற்றி விடுகின்றனர். மேலை நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் உள்ள வேறுபாடு என்பதே இங்கிருந்து தான் தொடங்குகிறது. புலன்களுக்கு அப்பாற்பட்ட விசயங்களில் கவனம் செலுத்தியவர்கள் இந்தியாவில் தான் அதிகம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே இந்தியாவில் உருவான கலாச்சாரம் என்பது மேற்கித்திய நாடுகள் ஒவ்வொன்றும் உருவாவதற்கும் முன்னாலே உருவானது. இந்தியா ஒவ்வொன்றிலும் உச்சத்தில் இருந்து. பொருளாதாரத்தில், கலைகளில், பண்பாட்டில், நாகரிகத்தில் மேம்பட்டு இருந்தார்கள். படையெடுப்புகளும், போர் என்ற பெயரில் இந்தியாவை ஆதிக்கம் செலுத்தி இங்கிருந்து திருடிச் சென்ற செல்வங்களால் மட்டுமே இன்றைய ஒவ்வொரு மேலைநாடுகளும் வளர்ந்த நாடுகளாக இன்று மாறி உள்ளது. மேலை கலாச்சாரத்தின் தொடக்கமென்பது ஒன்று எண்ணங்களை இங்கிருந்து கடன் பெற்று இருப்பார்கள் அல்லது வந்து கற்று இருப்பார்கள். ஆனால் இன்று மொத்தமாக மாறியுள்ளது. தனிப்பட்ட கொள்கையாக இருந்தாலும், தொழில் ரீதியான சிந்தனைகளாக இருந்தாலும் மேற்கத்திய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்தால் மட்டுமே மரியாதை என்கிற ரீதியில் அடிமை மனோபாவத்தில் நம் சிந்தனைகள் மாறியுள்ளது. பாரதப் பண்பாட்டை வைத்து இந்த நாட்டை ஆன்மிக நாடு என்று அழைத்தார்கள். உணர்ந்தவர்களை ரிஷிகள், ஞானிகள், முனிவர்கள்,யோகிகள், சித்தர்கள் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டனர். அவர்களால் உலகிற்கு உணர்த்தப்பட்ட அத்தனை விசயங்களும் நவீன கால விஞ்ஞானத்திற்குச் சம்மந்தம் இல்லாதது. விஞ்ஞானம் என்பது மனிதனின் புறவாழ்க்கையைப் பற்றி யோசிக்கின்றது. மெய்ஞானம் என்பது மனிதர்களின் அக வாழ்க்கையைப் பற்றி கற்றுக் கொடுக்கின்றது. [] இந்தியாவில் உருவான ஒவ்வொரு தத்துவங்களும் முதலில் உன்னை நீ உணர் என்பதாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இடைச்செருகல் உருவாகி இன்று ஒவ்வொருவரும் நான் கடவுள். நானே கடவுள் என்று வேடம் போட்டுக்கொள்ளும் அளவிற்கு உருமாற்றம் அடைந்துள்ளது. உணர்ந்தவர்கள் உருவாக்கிவிட்டுச் சென்ற வானவியல் சாஸ்திரம் என்பது அடிப்படை மக்களின் மூலக்கூறு. அவர்கள் பணம் செலவழிக்காமல் மனம் என்ற பாதையில் சென்று கண்டறிந்தவர்கள். இன்று அத்தனையும் மறுக்கப்பட்ட முடக்கப்பட்ட வெறும் மூட நம்பிக்கை என்பதாக மாறியுள்ளது. ஒவ்வொரு தத்துவங்களும் ஏடுகளாக, சுவடிகளாகப் புரியாத அர்த்தத்தில் இருந்தது. இறுதியில் புதைபொருளாகவும் மாறிவிட்டது. இன்று பகுத்தறிவால் ஒத்துக்கொள்ள முடியாதது என்பதில் வந்து நிற்கின்றது. இடையில் பலர் உருவாக்கிய மூட நம்பிக்கைகளும் சேர்ந்து அதன் மிச்சமுள்ள மூச்சையும் நிறுத்திவிடும் சூழ்நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. உள்வாங்கியவர்களில் அதை ஊருக்குச் சொல்ல வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர்களும் மிஞ்சவில்லை. அவர்கள் சொல்லிவிட்டுப் போன புலன்களை அடக்கியாள வேண்டும் என்பது இப்போது எந்த வடிவத்தில் வந்துள்ளது? நவீன யோகா என்று பெயர் மாற்றத்துடன் சர்வதேச சாமியார்கள் என்ற காம அவதாரத்தில் வந்து முடிந்துள்ளது. நம்முடைய கலையை நம்மிடமே விற்று காசு பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இதனாலேயே இன்றைக்கு மெய் ஞானம் என்ற வார்த்தை கேள்விக்குறியாகக் மாறியுள்ளது. ஒன்றை நம்புவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் எப்போதுமே பிரச்சனைகள். நல்லதோ கெட்டதோ எதையும் நம்மபாமல் தன் முயற்சியே இறுதியில் வெற்றி தரும் என்பவர்கள் மூலம் தான் இந்த உலகம் மாறியுள்ளது. இவர்களை சமூகம் புரட்சி நாயகன் என்கிறார்கள். இவர்கள் மூலம் ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் அமைதி இழந்து அது தான் வாழ்க்கை என்பதாகவும் மாறியுள்ளது. வாழ்வில் நாம் அடையும் பொருளாதார ரீதியான வெற்றி என்பது வேறு. நாம் பெறும் மன அமைதி என்பதும் வேறு. இரண்டுமே வெவ்வேறு முனைகள். ஒவ்வொருவரும் தாங்கள் கொண்டுள்ள வாழ்க்கையின் வாயிலாகவே இதனை அடைகின்றார்கள். ” ராஜீவ் காந்தி படுகொலை ” என்ற இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இன்று வரை நம்முடைய கண்களுக்குப் புலனாகாத சர்வதேச அரசியலைப் போல அறிவுக்கு எட்டாத பல விசயங்களும் கலந்தே உள்ளது. இந்தியாவில் கடந்த அரை நூற்றாண்டுகளின் பக்கத்தில் நடந்த மகாத்மா காந்தி, இந்திரா காந்தி படுகொலைகளுக்கு அடுத்து ராஜீவ் காந்தி கோர மரணம். சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதை செய்தித் தாளில் படித்து விட்டு நகர்ந்து விடுகின்றோம். மாணவர்களுக்கு விடுமுறை, பத்திரிக்கைகளுக்கு அதன் புலனாய்வு அறிக்கைகள், தலைவர்களுக்கு அதிகாரப் போட்டி. ஆனால்? இந்தியாவில் நடந்த மூன்றிலும் ஏராளமான ஓற்றுமைகள். ஏறக்குறைய ஒன்று. பாதைகள் வேறு. நோக்கம் வேறு. முடிவு ஒன்று. காந்தி சுடப்படுவதற்கு முன்பு, இவரைச் சுடப்போகிறார்கள் என்று உள் வட்டாரத்திற்குள் இருந்த அத்தனை பேர்களுக்கும் தெரியும். காந்திக்கே என்னுடைய இறுதி நேரம் நெருங்கி விட்டது என்பதை அவர் உள் மனம் உணர்த்தி விட்டது. அவரே அவரது தினசரி குறிப்பில் கூட எழுதி வைத்து விட்டார். அப்போது இதை உணர்ந்தவர்களில் காப்பாற்றுபவர்கள் எவரும் தயாராய் இருக்கவில்லை என்பதை விடக் காந்தி எப்போது சாவார் என்பதைத்தான் எதிர்பார்த்து காத்துக் கொண்டுருந்தார்கள். அவரை உண்மையிலேயே காப்பாற்றி விட வேண்டும் என்று நினைத்தவர்களைக் கூடப் பிர்லா மாளிகையில் இருக்க ” சூழ்நிலை ” அனுமதிக்கவில்லை. முடிவுக்கு அவரும் காரணம். முயன்றவர்களின் நோக்கமும் காரணமாக இருந்தது. இந்திரா காந்தி சுடப்படுவதற்கு முன்பு, உளவுத்துறை அறிக்கை தினந்தோறும் கதறியது. உள் வட்டாரத்தில் பாதுகாப்புச் சமாச்சாரத்தில் சீக்கியர்கள் எவரும் வேண்டாம். ஒவ்வொரு நிகழ்வையும் உற்றுக் கவனியுங்கள் என்று. ஆனால் அன்று ” நாங்கள் மேம்சாஹிப்பை கொல்லக் கூடியவர்களா?” என்று கண்ணீர் விட்டுக் கேட்டவர்களை நம்பி ஆர்.கே.தவாண் அனுமதித்த அனுமதி என்பது இறுதியில் இந்திரா காந்திக்குக் காலனிடம் செல்ல கொடுத்த அனுமதி சீட்டாக மாறியது. என்றோ தீர்மானிக்கப்பட்ட ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலகட்டத்தில் வந்து முடிந்து விடுகிறது. இதுவொரு புலம்பல் என்று எடுத்துக்கொள்வதை விட இறப்பதற்கு முதல் நாள் முந்தைய வாரம் வீட்டில் வயதானவர்கள் நடவடிக்கைகளை உற்றுக் கவனித்துப் பாருங்கள். நம்மிடம் அப்போது அவர்கள் சொன்னதை இன்று நினைவில் கொண்டு வாருங்கள். ” நாளை நான் இருக்க மாட்டேன் ” என்று தைரியமாகச் சொல்லிவிட்டு அதே போல் தலைசாய்ந்தவர்களும் இருக்கிறார்களே? எப்படி? அதீத மனோரீதியான காரணங்கள், உள் மன வேகம் என்று எத்தனையோ நமக்குச் சாதகமான விஞ்ஞான வார்த்தைகளைப் போலச் சமாதானப்படுத்திக்கொண்டாலும் தீர்மானிக்கப்பட்டவைகள் திசை திரும்பாமலே அதன் பயணத்தைத் தொடங்கி முடியும் நேரத்தில் முடிவாய் வந்து நிற்கிறது. இந்த ” சூழ்நிலை” தான் ராஜீவ் மரணத்திலும் இருக்கிறது. கொல்வதற்கான காரணங்கள், கொல்ல வேண்டும் என்று நினைத்தவரின் நியாயங்கள் என்ற இரு பக்கத்தையும் விட ஸ்ரீபெரும்புதூர் என்ற இடத்திற்கு இவரைக் கொண்டு வந்து சேர்த்தது முதல் ஆச்சரியம் என்றால், அவரும் இங்கு வந்து தான் நிற்பேன் என்று பிடிவாதமாய் வந்து நின்றதும் அடுத்த ஆச்சரியம். ராஜீவ் காந்தி இறந்த தினம் மே 21 1991 இரவு 10.20. தேர்தல் பொதுக்கூட்டத்திற்காக டெல்லியில் இருந்து கிளம்பியது மே 20 . பயணத்தை முடித்து விட்டு டெல்லிக்கு மீண்டும் வந்து சேர்வதற்காகக் குறிக்கப்பட்ட தினம் மே 22. அவருடைய மொத்த வாழ்க்கையின் விதி 48 மணி நேரத்திற்குள் முடிக்கப்படவேண்டும் என்று எழுதப்பட்ட சூத்திரம் எப்போது தொடங்கியது தெரியுமா? இதன் ஏற்பாடு வருட தொடக்கத்தில் தொடங்கியிருந்தாலும் ஏப்ரல் 30 1991 நள்ளிரவில் கள்ளத்தோணி மூலமாகக் கோடியக்கரை கடற்கரை பகுதியில் உள்ளே வந்து இற்ங்கிய சிவராசன் என்பவர் மூலம் தன்னுடைய பயணத்தைத் தொடங்கியது. ராஜீவ் காந்தி இறப்பதற்கு 20 நாட்களுக்கு முன்பு. சென்னையில் சிவராசன் வாழ்ந்து இருந்தாலும், ஏற்கனவே ஒப்படைக்கப்பட்ட பத்பநாபாவை கொன்று அழித்த பணி நிறைவுக்கு வர, இலங்கை சென்று பாராட்டுரை வாங்கி நம்பிக்கை நாயகனாக மாறி, ஓப்படைக்கப்பட்ட அடுத்தப் பணிக்கு உள்ளே வந்து இறங்கிய தினம் இது. அன்றைய தினம் அங்கேயே தங்கி விட்டு மறுநாள் தான் சென்னைக்குக் கிளம்பி வந்தனர். கூட்டணியினரின் உழைப்பென்பது உழைப்பாளர் தினத்தில் இருந்து தான் தொடங்கினர். சிவராசனுக்கு இறங்கும் வரைக்கும் எந்தத் தடங்கலும் இல்லை. வருகின்ற தோணி கரையைத் தொடும் முன்பு எப்போதும் போலக் கரையில் இருப்பவர்கள் கொடுக்கும் சங்கேத பாஷை தான் அவர்களின் மொத்த அனுமதிக்கான கடவுச்சீட்டு. அனுமதி இல்லையென்றால் அலையை ரசித்துக்கொண்டு நடு இரவென்றாலும் மிதந்து கொண்டே இருக்க வேண்டியது தான். கரையில் இருந்தவர்கள் சங்கேத பாஷைகளைத் தாமதமாகப் புரிந்து கொண்டவர்களால் உருவான தாமதம் ஒன்று மட்டும் தான் தோணி கரைக்கு வராமல் தூரத்தில் நின்று கொண்டுருந்தது. ஆனால் சிவராசன் அதற்குள்ளே அங்கிருந்து நீந்தி கரைக்கு வந்து விடப் படகில் இருந்தவர்களும் கரை சேர்ந்தனர். பிரபாகரன் பார்வையில் பட்ட துடிப்பானவர்கள் என்றால் அவர்களின் திறமையின் துள்ளல் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். கடைசியில் கடமையிலும் கண்ணாய் இருந்து காரியத்திலும் ஜெயித்தனர். [] டெல்லியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் கட்சியால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட “கிங் ஏர்” விமானத்தின் மூலம் முதலில் ஓரிஸ்ஸா, ஆந்திரா பிறகு தமிழ்நாடு கடைசியாகக் கர்நாடகா. இது தான் பயணத்திட்டம். ஆந்திராவில் விசாகபட்டினத்தில் இருந்து தமிழ்நாட்டுக்குச் சென்னை வந்து சேர வர பயணத்திட்டம். கிளம்ப நினைத்த போது விமானத்தில் இருந்த கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்ளும் ரேடார் கருவி பழுதடைந்து விட்டது. முன்னாள் விமான ஓட்டியான ராஜீவ் முயன்றும் சரி செய்ய முடியவில்லை. நாளை கிளம்பலாம் என்று விருந்தினர் மாளிகைக்குத் திரும்ப அதற்குள் விமானி சரி செய்து விட அவரின் திரும்பி வர முடியாத இறுதி பயணத்தை அங்கிருந்து தான் தொடங்கினார். உருவான தடங்கல்களை மீறி சரியான நேரத்தில் சரியான நபர்களிடம் கொண்டு வந்து சேர்த்த ஆச்சரியங்கள் நிறைய உண்டு. அன்று மவுனமாகச் சிரித்த விதியைப் போலவே வென்றவர்களும் சிரித்திருப்பார்கள். வாழப்பாடி இராமமூர்த்தி இங்கு நீங்கள் வரவேண்டாம் என்று இறுதி வரை போராடிப் பார்த்தவர். அவருக்கு இரண்டு காரணங்கள். வலுவான கூட்டணி. இது போக இயல்பிலேயே போராட்டக்குணம் நிறைந்த அவரின் ஆளுமையை மீறி ராஜீவ் காந்திக்கு இருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள். ஆனால் மூப்பனார் ராஜீவ் காந்தி வந்து தான் ஆக வேண்டும் என்று விரும்பினார் என்பதை விட ராஜீவ் காந்தியின் வருகைக்கு முக்கியக் காரணம் வேறொன்றும் இருந்தது. ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மரகதம் சந்திரகேசர் என்ற அம்மா வயதை ஒத்த பெண்மணிக்கு நன்றி கடன் காட்டும் விதமாக வந்து தன்னையே கடனாகக் கொடுத்து போய் மறைந்தார். மரகதம் சந்திரசேகர் இந்திரா குடும்பத்தில் உள் அறை வரைக்கும் சென்று உலாவிவிட்டு வருபவர். ராஜிவ் காந்தியால் ஆன்ட்டி என்று அழைப்படுபவர். அதற்கும் மேலே அவர் மேலே வைத்திருந்த பாசத்தின் காரணமாக ஆந்திராவில் இருந்து கிளம்பிய போது உருவான தடங்கல்களையும் மீறி வந்து சேர்ந்தார். ராஜீவ் காந்தி டெல்லியில் இருந்து பயணத்தை தொடங்கிய பொழுதே தனது பயணத் திட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீ பெரும்புதூர் இருக்கின்றதா? என்பதை மீண்டும் ஒரு முறை சோதித்துப் பார்த்துக் கொண்டு தான் தனது பயணத்தை தொடங்கினார். அவரைப் பொறுத்தவரையிலும் தான் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக என்பதை விடத் தான் மரியாதை வைத்திருந்தவருக்கு வாக்கு சேகரிக்க என்ற ரீதியில் தான் ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்திற்கு வந்து சேர்ந்தார். அவரின் வாழ்க்கையைப் பொறுத்தவரையில் முடிவு பெற வேண்டிய இறுதிக்கட்டம் இது. 2. ராஜீவ் படுகொலை புலனாய்வு பாதை ராஜீவ்காந்தி படுகொலை என்பதைத் தனியாக ஒரு குழு அமைத்து விசாரிக்கப்பட வேண்டும் என்று டெல்லி உயர் அதிகார வட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. படுகொலை என்பதை விடக் கோரமான முறையில் நடந்தேறியது ஒரு புறம். மகாத்மா காந்தி, இந்திரா காந்தி போல நேரிடையான சாட்சிகள், சம்பவங்கள் ஏதும் இல்லை. இதுவே மொத்த அதிகாரவர்க்கத்தினருக்குள் ஏராளமான கிலியை ஏற்படுத்தியிருந்து. அப்போது சிபிஐ இயக்குநராக இருந்தவர் விஜய்கரண். இந்த வழக்குச் சிபிஐ மூலமே புலன் விசாரனை செய்யப்பட வேண்டும் என்று அரசாங்கம் தீர்மானித்தவுடன், பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு இறுதியாகத் தலைமை பொறுப்புக்கு அழைக்கப்பட்டவர் பெயர் டி.ஆர்.கார்த்திகேயன். இவரைப்பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அமைதிப்படை இலங்கையில் இருந்த இறுதிகாலக் கட்டத்தில் அதிகார வட்டத்தில் இருந்த டி.என்.சேஷன் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டவர். அந்த நிமிடம் வரைக்கும் டெல்லியைப் பொறுத்தவரையிலும், தமிழர் அல்லாதவர்கள் தான் இந்த இலங்கைப் பிரச்சனையைக் கையாண்டு கொண்டுருந்தனர். இந்திராகாந்தி காலத்தில் இருந்த பார்த்தசாரதிக்குப் பிறகு கார்த்திகேயன். இந்திய அரசாங்கத்தின் சார்பாக இலங்கைக்குச் சென்றவர். இலங்கையின் உள்ளே நடக்கும் உண்மையான நிகழ்வுகள் குறித்து மத்திய அரசு இவரிடம் அறிக்கையாகக் கேட்டது. அப்போதைய இந்திய அரசாங்கத்தின் அனுமதி இல்லாத காரணத்தால் இவரால் அன்றைய சூழ்நிலையில் விடுதலைப் புலிகளுடன் மட்டும் பேசக்கூடிய வாய்ப்பு அமையவில்லை. இது போன்ற இக்கட்டான சூழ்நிலையிலும் இலங்கையின் உள்ளேயிருந்த முக்கிய அதிகார வர்க்கத்தினரிடம் மட்டும் பேசாமல் இலங்கையில் உள்ள மக்களிடம் அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று ஆலோசித்தவர். குறிப்பிட்ட இடங்களில் விடுதலைப்புலிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் போர் நடந்து கொண்டுருந்த போது கூடத் தன்னுடைய உயிர் போய் விடும் என்ற பயமின்றி சகல இடங்களிலும் நுழைந்து வெளிவந்தவர். அன்று அவர் கொடுத்த அறிக்கையின் சராம்சம் ” விடுதலைப்புலிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் உள்ளே நடந்து கொண்டுருக்கும் பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டு வந்து விடமுடியாது”. அன்றைய டெல்லி அதிகாரவர்க்கத்தினரருக்குள் விடுதலைப்புலிகள் குறித்து அபிப்ராயப் பேதம் இருந்த போதிலும், மாற்றுக்கருத்து இருந்தவர்கள் கூட இவரின் அறிக்கையை குறை கூறுபவர் எவரும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. [] அனைவருக்கும் தெரிந்தே தான் இருந்தது. ஆனால் யார் பூனைக்கு மணியைக் கட்டுவது? என்ற லாபியின் காரணமாகத் தான் இவரின் அறிக்கையும் அன்று காகிதத்தாளாக மாறியது. கார்த்திகேயனைப் பொறுத்தவரையில் எப்போதும் போலத் தன்னுடைய கடமையைச் சரிவரச் செய்த திருப்தி. அத்துடன் அன்று அதில் இருந்து ஒதுங்கி விட்டார். தன்னிடம் இந்தப் புலனாய்வு பொறுப்பை ஒப்படைத்த போது அவர் மனதிற்குள் நினைத்து இருந்த யோசனை இன்னும் வியப்புக்குரியது. “இந்தப் படுகொலையில் எந்த நிலையிலும் விடுதலைப்புலிகள் சம்மந்தப்பட்டுருக்கக் கூடாது”. ஆனால் காலம் செய்த கோலம் அலங்கோலமாய்ப் போய்விட்டது. ஒரு தமிழர் என்ற விதத்தில் விடுதலைப்புலிகளின் எந்தக் கொள்கைகளையும் தன்னுடைய தனிப்பார்வையால் விமர்சிக்காதவர். தான் பணிபுரிந்து கொண்டுருந்த கடமையைக் கண்ணும் கருத்துமாய் நேர்மையான முறையில் கொண்டு சென்றவர். கோயம்முத்தூரில் பிறந்தவர். விவசாயம் மற்றும் சட்டத்தில் பட்டம் பெற்றவர். தன்னுடைய 35 வயதில் இந்திய காவல் துறை பணியில் சேர்ந்தவர். கர்நாடக மாநிலத்தில் பணியில் சேர்ந்து உச்சகட்டமாக முதல் அமைச்சராக இருந்த குண்டுராவ் நம்பிக்கையைப் பெற்று அவரின் கண் இமை போல் இருந்தவர். கடைசி வரையிலும் முறையற்ற வாழ்க்கை வாழாமல், மூட நம்பிக்கைகள் இல்லாத ஆன்மிகத்தையும் வளர்ந்து கொண்டுருக்கும் விஞ்ஞான அறிவையும் தன் இரு கண்களாகப் பாவித்தவர். இவரிடம் புலனாய்வு பொறுப்பை ஒப்படைக்கும் முன்பு இவருக்கு மேல் இருந்து அத்தனை அதிகாரிகளும் பயந்து ஓதுங்கிய காரணத்தினால் மட்டுமே இந்தப் பொறுப்பு இவரிடம் வந்து சேர்ந்தது. வந்து சேர்ந்த பொறுப்பையும் பலரும் அச்சப்டுத்திய வார்த்தைகளும் இவரின் மனஉறுதியை ஆட்டம் காண வைத்த போதிலும் உறுதியாய் நின்றவர். இறுதியில் ஜெயித்தவர். தலைமைப்பண்புக்கு உரிய அத்தனை குணங்களும் பெற்றவர். இந்திய ஜனநாயகத்தில் உள்ள அரசியல் புழுக்களை உணர்ந்த காரணத்தினால் எந்த அளவிற்குத் தன்னால் முடியுமோ? முடிந்தவரைக்கும் முயற்சித்துப் பார்த்தவர். இந்தப் புலனாய்வை முடிவுக்குக் கொண்டு வந்த போது இவர் மேலும் விமர்சனங்கள் எழுந்தது. தமிழ்நாட்டில் வைகோ, அவர் தம்பி ரவிச்சந்திரன், ராஜீவ் காந்தி இறந்த நாள் அன்று ஏற்பாடு செய்து இருந்த அன்றைய பொதுக்கூட்டத்தை ரத்து செய்த திமுக அதன் தொடர்பான தலைவர்கள் என்று நீண்ட பட்டியலில் உண்டு. எழுந்த சந்தேகத்தின் போது விசாரிக்க வேண்டியவர்களை விசாரிக்காமல் விட்டதும், அதற்கு மேலும் அவர்களை விசாரிக்க அனுமதி அளிக்காமல் போனதும் என்று தூற்றுவார்கள் இன்று வரையிலும் உண்டு. அது குறித்து இறுதியில் பார்க்கலாம். இவருடைய புலனாய்வு குழுவினருக்கு மாற்று ஏற்பாடாக ராஜீவ் காந்திக்கு நியமித்து இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் என்ன குளறுபடிகள் நடந்து இருந்தது? என்பதைக் கண்டதறிவதற்காக உருவாக்கப்பட்டது தான் வர்மா கமிஷன் மற்றும் ஜெயின் கமிஷன். இதன் கண்டனங்கள் என்று தனியான பாதை ஒன்று உண்டு. குறை நாடி குற்றமும் நாடி என்று எடுத்துப் பார்த்தால் இந்தியாவில் உள்ள ஓட்டை சட்டங்களுக்கிடையே, பணம், பதவி, அதிகாரம் பெற்றவர்களையும் தாண்டி, அவர்களின் தொடர்ச்சியான மிரட்டல்கள், அச்சுறுத்தல்களை மீறி கார்த்திகேயன் வென்றார். இவர் மூலம் கிடைத்த விடைகள் என்பது வியப்புக்குரியது மட்டுமல்ல ஒரு குழுவினரின் சாதனை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கார்த்திகேயன் புலனாய்வு குழுவின் தலைமைப் பொறுப்பில் வந்து அமர்ந்த போது அப்போது பார்த்துக்கொண்டுருந்த பணி மத்திய ரிசர்வ் போலீஸ் ஐ.ஜி பொறுப்பில் இருந்தார். அரசு வழங்கிய புதிய பொறுப்பில் வந்து அமர்ந்த போதும் கூடத் தான் தான் வகித்த பழைய பதவியிலும் இருப்பேன் என்று அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று இரண்டு பதவியிலும் இருந்தார். இவர் சிபிஐயின் கிளை அலுவலகத்தைச் சென்னையில் உருவாக்கிய போது அதற்குத் தேவையான அதிகாரிகளை CPRF. NSG.TAMIL NADU POLICE போன்ற பல்வேறு துறைகளில் இருந்து தகுதி, நேர்மையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்தார். அலுவலக கட்டிடம் பல்வேறு போராட்டத்திற்குப் பிறகே அரசிடமிருந்து கிடைத்தது. சென்னை கீரின்வேஸ் சாலையில் எவரும் பயன்படுத்தாமல் இருந்த ” மல்லிகை” இல்லத்தைச் சீரமைத்துத் தங்களுக்கு உரியதாக மாற்றினார்கள். அலுவலகம் உருவாக்கியது முதல் புலனாய்வு குழுவினருக்குத் தேவையான் அத்தனை உள் கட்டமைப்பு வசதிகளையும் மிகுந்த போராட்டத்தின் மூலமே சாதிக்க முடிந்தது. அதிகாரத்தில் இருந்துவர்கள் அனைவரிடத்திலும் பயந்து ஓதுங்கிக்கொள்ளும் அளவிற்கு “விடுதலைப்புலிகள்” குறித்தான பயமே அன்று நிலவியது. உச்சகட்டமாக இந்திய இராணுவத்தின அதிகார வர்க்கம் கூட “விடுதலைப்புலிகள் குறித்த எந்த விசயங்களையும் எங்களுடன் சம்மந்தப்படுத்தாதீர்கள் ” என்கிற அளவிற்குத் தான் ஒதுங்கினார்கள். அவர்கள் பெற்று இருந்த கடந்த காலப் பாடங்கள் அவ்வாறு அவர்களைப் பேச வைத்தது. ஸ்ரீ பெரும்புதூரில் இன்னிசை நிகழ்ச்சி நடத்திய சங்கர் கணேஷ் குழுவினர் மூலம் எடுக்கப்பட்ட படங்களைப் போலவே கவனமாகக் கைப்பற்ற ஹரிபாபு எடுத்த புகைப்படங்கள் மட்டுமே அன்றைய சூழ்நிலையில் இவர்களுக்குக் கிடைத்த ஓரே ஆதாரம். அந்தப் புகைப்படங்களும் புலனாய்வு குழுவினர் கைக்கு வந்து சேர்வதற்குள் ஹிண்டு பத்திரிக்கைக்குச் தடயவியல் துறையினர் மூலம் சென்று அதுவும் மறுநாள் பத்திரிக்கையிலும் வந்து விட வழக்கின் தொடக்கமே குறுக்குப் பாதையில் போகத் தொடங்கியது. கொழும்பு சென்று தகவல்கள் திரட்டுதல், சம்பவம் நடந்த இடத்தில் நடந்த நிகழ்வுகளை விசாரித்தல், நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தப்பிப்பிழைத்து இருந்தவர்களை அழைத்து வேறு ஏதாவது தடயம் கிடைக்குமா? என்ற அலசல் என்று எத்தனை முறை சுற்றி சுற்றி வந்தாலும் புகைப்படத்தில் பார்த்த சிவராசன் தணு நளினி குறித்து எதுவும் சேகரிக்க முடியவில்லை. புகைப்படத்தில் சந்தன மாலையுடன் நின்று கொண்டுந்த தணு தான் வெடிகுண்டாக மாறியவர் என்பதைச் சிதைந்த வடிவில் திரட்டப்பட்ட உடைகளும், அதில் ஒட்டியிருந்த திசுக்களையும், இறந்து கிடந்த தணு உடம்பில் உள்ள திசுக்களையும் ஒப்பிட்டு (ஹைதராபாத் சென்டர் பார் செல்லுலர் அண்டு மாலிக்யூலர் பயாலாஜி) உறுதிப்படுத்திய போது தான் தணு என்பவர் தான் இதற்குப் பயன்பட்ட சூத்திரதாரி என்பதை முதலில் புரிந்து கொண்டனர். அதன் தொடர்ச்சியாகப் படங்களில் தணுவுடன் இருந்த சிவராசன் மற்றும் அவர் அருகில் இருந்த நளினி போன்றவர்கள் பார்வைக்கு வந்தனர். இதற்குப் பின்னால் உள்ள ” வட்டம் ” என்று அப்போது தான் புலனாய்வு பார்வை உருவானது. உருவாக்கம் பெற இவர்களின் கற்பனை மட்டுமே அப்போது முதலீடாக இருந்தது. ஆனால் உண்மைகள் என்பது வெகு தொலைவில் இருந்தது? மே 22ந் தேதி உள்ளே வந்த கார்த்திகேயன், வழக்கை பதிவு செய்த 24ந்தேதி இரண்டு நாட்களுக்குள் உலகம் முதல் உள்ளுர் வரை உள்ள ஊடகங்கள் பட்டாசு வெடித்துப் பரபரப்பை ஆரம்பித்து இருந்தது. எது உண்மை? எது பொய்? என்பதை இனம் பிரித்து மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்குவதே பெரும்படாக இருந்தது. ஆனால் அப்போது இவர்கள் எதிர்பார்க்காத ஹரிபாபு அப்பா கொடுத்த சம்மந்தம் இல்லாத அறிக்கையான ” என் மகனுக்கும் விடுதலைப் புலிகளும் தொடர்பு இல்லை.” என்ற செய்தி பத்திரிக்கைகளில் வர அப்போது தான் சந்தேகம் என்ற புள்ளியின் பயணம் தொடங்கியது. இந்தக் கொலைக்குப் பின்னால் சார்ந்து இருந்த முக்கியப் புள்ளிகளை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. தங்கள் கையில் இருந்த புகைப்படங்களைப் பத்திரிக்கைளில் வெளியிட்டு, இவர்களைப் பற்றித் தெரிந்தவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று செய்தி வெளியே வர, வந்த அழைப்புகளில் துப்புக்கு உதவக்கூடிய முக்கியமான அழைப்பு வில்லிவாக்கத்தில் இருந்து வந்தது. ” எங்கள் வீட்டுக்கு அருகில் வசித்தவர் இந்தப் புகைப்படத்தில் உள்ள நளினி. அவர்களைப் பார்க்க வருபவர் இந்த ஒற்றைக்கண் மனிதர். நளினியுடன் தங்கியிருந்தவர்கள் மற்ற இரு பெண்கள். படுகொலை நடந்து முடிந்த அடுத்த இரண்டு மூன்று தினங்களும் இங்கே இருந்தார்கள். நளினி அடையாறில் பணிபுரிந்தவர். இவர்களைப் பார்க்க தாஸ் என்பவர் வருவார். மே 26ந் தேதிக்கு மேல் எவரும் வருவதில்லை” பாதை புலப்பட்டது? 3. சிவராசன் தணு மற்றும் பலர் ராஜீவ் காந்தி படுகொலைக்குச் செயல்பட்ட குழுவிற்குத் தலைமை தாங்கிய சிவராசனின் உண்மையான பெயர் பாக்கியச் சந்திரன். யாழ்பாணத்தில் உடிப்பிடியைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஆங்கிய வழிக்கல்வி பள்ளிக்கூடத்திற்கு ஆசிரியராக இருந்தவர். இவரின் சகோதரர் பெயர் ரவிச்சந்திரன். இவர் புலிகள் இயக்க மாணவர் பிரிவில் செயல்பட்டுக் கொண்டு இருந்தவர்.ரவிச்சந்திரனின் மற்றொரு பெயர் தில்லை அம்பலம் சுதந்திர ராஜா. இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த போது அவர்களால் இந்த ராஜா பிடிபட்டு சிறைக்குச் சென்றவர். சிவராசன் இலங்கையின் மின்வாரியத்தில் மட்டக்களப்பில் பணிபுரிந்த அரசு ஊழியர். முதலில் தான் ஈடுபட்டுருந்த டெலோ இயக்கத்தில் இருந்து விலகி விடுதலைப்புலிகளின் இயக்கத்திற்கு வந்தவர். தொடக்கத்தில் இந்தியா போராளிக் குழுக்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கிய போது அதில் பயிற்சி எடுத்தவர்களில் இவரும் ஒருவர். இலங்கை ராணுவத்தினருடன் (1987) போரிட்ட போது தனது ஒரு கண்ணை இழந்து பின்னாளில் ஒற்றைக்கண் சிவராசன் என்றும் பாக்கியசந்திரனின் சுருக்கமான பாகி அண்ணா என்று இயக்கத்தில் அழைக்கப்பட்டவர். புலனாய்வு பக்கங்களில் சிவராசன் என்ற ரகுவரன் என்ற பெயரைப்பெற்றவர். தொடக்கத்தில் விடுதலைப்புலிகளின் இராணுவ பயிற்சி பெற்றுப் பின்னாளில் பொட்டு அம்மான் தலைமையில் இருந்த உளவுப் பிரிவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்திய அமைதிப்படை முழுமையாகப் படை விலகி இந்தியாவிற்குத் திரும்பத் தொடங்கிய 1990 பிப்ரவரி மாதத்தில் சிவராசன் வழிகாட்டலின்படி சுதந்திர ராஜா குருவி பயணத்தின் மூலம் சென்னை வந்து கோடம்பாக்கத்தில் உள்ள தொழிற் நுட்ப கல்லூரியில் சேர்ந்தார். இந்தக் கல்லூரியும் இலங்கைத் தமிழரால் நடத்தப்பட்டுக்கொண்டுருந்தது. அருகே உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இருந்தவர்கள் பத்பநாபா தலைமையில் இருந்த ஈபிஆர்எல்எப் அலுவலகம் இயங்கிக் கொண்டுருந்தது. சுதந்திர ராஜாவிற்குக் கொடுக்கப்பட்ட வேலை என்பது EPRLF அலுவலகம் செல்வது, அவர்களுடன் பழகுவதும், அவர்களின் நம்பிக்கையைப் பெற்று அவர்களின் ஒரு நபராக மாறியிருப்பது மட்டுமே. கொடுக்கப்பட்ட உத்திரவின்படி மிகத் தெளிவாக நடந்து அங்கிருந்தவர்களின் நம்பிக்கையும் ராஜா பெற்று இருந்தார். ஜுன் மாத இறுதியில் EPRLF பத்மநாபா யாழ்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் யோக சங்கரியுடன் சேர்ந்து சென்னையில் கூட்டம் நடத்தப் போவதை ராஜா இலங்கையில் இருந்த சிவராசனிடம் தெரிவிக்கக் கடற்புலி குழுவினருடன் சென்னைக்கு வந்து, திட்டமிட்டமிட்டபடி உள்ளே வெடிகுண்டு, ஏ.கே.47 உடன் நுழைந்து 13 பேர்களைக் கொன்று அழித்தனர். அப்போது வீசி எறிந்த வெடிக்காத ஒரு குண்டும் சிதறிக்கிடந்த சிதறல் மிச்சமும் என்று அங்குக் கிடைத்த வெடிகுண்டுகளின் உள் கட்டமைப்பும் ராஜீவ் காந்தி புலனாய்வுக்குச் சிறப்பான முறையில் உதவியது. [] அப்போது தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சியில் இருந்தது. ராஜீவ் காந்தி படுகொலை சென்னையில் நடந்த போது கலைஞர் தில்லியில் இருந்தார். பாதிக்கப்பட்டது முழுக்க முழுக்க அவர் மட்டுமே, இதையே காரணம் காட்டித்தான் கவர்னர் ஒப்புதல் இல்லாமலே அவருடைய ஆட்சியும் பிறகு கலைக்கப்பட்டது. கோடம்பாக்கத்தில் இவர்களின் காரியம் முடிந்ததும் தப்பிச் செல்ல பயன்படுத்திய அம்பாசிடர் கார் பாதியில் மக்கர் செய்யச் சாலையில் வந்த மாருதி ஆம்னியை மிரட்டி கைப்பற்றி மல்லிப்பட்டினம் சென்று ஒரு நாள் ஓய்வெடுத்து மறுநாள் இலங்கைக்குப் பயணப்பட்டனர். இடையில் மறித்த காவல்துறை அன்று அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. அன்றைய அரசாங்கத்தின் இலங்கை தமிழர் ஆதரவு என்ற கொள்கை அந்த அளவிற்கு இவர்களுக்குப் பயன்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து கிளம்பி இலங்கை சென்றவர்களுக்குக் கிடைத்த பாராட்டைப் போலவே சிவராசன் மேல் அப்போது தான் பிரபாகரனின் முதல் நம்பிக்கை பார்வை உருவானது. இதன் தொடர்ச்சியாகத் தான் சிவராசனிடம் ராஜீவ் காந்தி பொறுப்பு பொட்டு அம்மான் மூலம் ஒப்படைக்கப்பட்டது. 1991 ஏப்ரல் 28 அன்று மதகல் என்ற இடத்தில் பொட்டு அம்மான் தலைமையில் குழு ஒன்று கூடியது. அப்போது பெண்புலிகளின் தலைவியான அகிலா மூலம் சுபா, தணுவை அழைத்து வந்து நடந்த கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார். ஆனால் அன்றே அவர்கள் இந்தியாவிற்கு வந்து சேர முடியாத பயணத் திட்ட மாற்றத்தால் மொத்த குழுவினர்களும் ஏப்ரல் 30 அன்று கோடியக்கரை வந்து சேர்ந்தனர். இந்தியாவிற்கு வந்த சிவராசன் இந்தப் பொறுப்புக்கு சுதந்திர ராஜாவையே (இவருக்கு வேறு பெயர்களும் உண்டு) உதவியாளராக வைத்துக்கொண்டு மே 1 முதல் அடுத்த 20 நாட்கள் வேலைக்காகத் திட்டமிடத் தொடங்கினர். சிவராசன் பற்றிய மொத்த விசயங்களும் புலானய்வு குழுவினர் திரட்டியது உயிருடன் பிடிபட்ட இந்த ராஜா மூலமே. விடுதலைப்புலிகளுக்குத் தொடக்கம் முதல் எல்லா வகையிலும் உதவிக்கொண்டுருந்தவர் கோடியக்கரையில் இருக்கும் மிராசுதார் சண்முகம். கடற்கரையோரப் பகுதியில் ஒரு தனிக் கடத்தல் சாம்ராஜ்யத்தையே வைத்து ஆண்டுக் கொண்டுருந்தவர்.இவருடைய மாமனாரும் இதே தொழிலில் தான் இருந்தார். விடுதலைப்புலிகளுக்குத் தேவையான பெட்ரோல், டீசல், எரிபொருட்கள் முதல் இயக்கத்திற்குத் தேவைப்படும் அத்தனை பொருட்களையும் தன்னுடைய இலங்கைத்தமிழர்களுக்கு உதவி மற்றும் பணம் சார்ந்த ஆசையினால் பக்க பலமாக இருந்தவர். இவர் ஆளுமையில் இருக்கும் பகுதியில் மக்கள் உள்ளே செல்லவும் அஞ்சுவார்கள். காவல் துறையும் அந்த அளவிற்கு உள்ளே செல்ல முடியாத அளவிற்கு அவருடைய செல்வாக்கு கொடி கட்டி பறந்தது. விடுதலைப் புலிகளின் நீண்ட காலத் திட்டம் என்றால் அகதியாக இராமேஸ்வரம் வந்து தங்களைப் பதிவு செய்து கொண்டு உள்ளே இருந்து களப்பணி ஆற்றுவது. வந்து போவது என்றால் கோடியக்கரை முதல் இராமேஸ்வரம் இடையில் உள்ள அத்தனை கடற்கரையோரப்பகுதிகளும் அவர்களின் ஆளுமையில் தான் 1983 க்குப்பிறகு இருந்தது வந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இரண்டு அல்லது மூன்று யமஹா என்ஜின் பொருத்தப்பட்ட பைபர் ஆப்டிக் படகு என்பதும் அதன் உந்து விசை என்பதும் ஏறக்குறைய ஓலியைப் போலத்தான். தண்ணீரை கிழித்துக்கொண்டு வரும் என்பதை விடக் கண் இமைக்கும் நேரத்தில் மாயமாய் மறைத்து விடும் உயர் தொழில் நுட்பம் உடையது. பொருத்தப்பட்ட என்ஜின்கள் தரும் வேகம் என்பது பறந்து வரும் துப்பாக்கி தோட்டா கூடத் தோற்று விடும். விடுதலைப்புலிகள் இந்தியாவிற்குள் எளிதாக வந்து போன காலகட்டத்தில் இலங்கை இராணுவத்தினரின் எந்தத் தாக்குதல்களும் இந்திய மீனவர்கள் மேல் நடந்தப்பட்டவில்லை என்பதை குறிப்பிட முடியும். கோரச்சாவுகளும் கொடுமையான அனுபவங்களும் மிக மிகக் குறைவு. காரணம் அந்த அளவிற்கு இலங்கை கடற்படையினர் விடுதலைப்புலிகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்வதில் கருத்துடன் இருந்தனர். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட காலகட்டத்தில் விற்பனையான யமஹா மோட்டர்கள் அத்தனையும் விடுதலைப்புலிகளால் தனித்தனியாகக் கழற்றி தங்களுக்குத் தேவையான பாகங்களை மட்டும் எடுத்துக்கொள்வதும் திருச்சியின் சுற்றுவட்டார கிராமப்புற விவசாயிகளிடம் அந்த மாவட்ட யமஹா என்ஜின் மொத்த விற்பனையாளர்கள் வியப்புடன் வந்து விசாரித்தது வரைக்கும் இதற்குப் பின்னால் பல கதைகள் உண்டு. தொடக்கக் காலத்தில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கொடைக்கானல் பகுதியை தங்களின் பயிற்சிக்காகத் தேர்ந்தெடுத்து வைத்து இருந்தனர். தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாவட்டங்களிலும் விடுதலைப் புலிகளுக்காகப் பணிபுரிந்தவர்கள் பல பேர்கள் உண்டு. குறிப்பாகத் தொழில் நகரங்கள் அவர்களுக்குப் பல விதங்களிலும் உதவியது. கோடியக்கரை என்பது அவர்களுக்கு மற்றொரு யாழ்பாணம் அல்லது வன்னிப்பகுதி.அடுத்த மூன்று மாதங்கள் அல்லது குறிப்பிட்ட காலகட்டம் வரைக்கும் தேவைப்படும் அத்தனை பொருட்களும் கோடியக்கரை சதுப்பு நில பூமிக்கடியில் உள்ள பாதுகாப்புப் பகுதியில் பாதுகாக்கப்படும். இலங்கையில் நடக்கும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு ஒவ்வொன்றும் அதன் பயணத்தைத் தொடங்கும். சர்வதேச சந்தையில் ஆயுத தளவாடங்கள் கொள்முதல் செய்து பிரபாகரனுக்கு நம்பிக்கையாக இருந்தவரின் பெயர் கேபி என்றழைக்கப்பட்ட நிழல் மனிதர். இவர் கூடக் கடைசிக் காலத்தில் பிரபாகரன் நம்பிக்கை இழந்து போய் வேறு நபருக்கு அந்தப் பொறுப்பை மாற்றியது கூட நடந்தது. ஆனால் இந்தச் சண்முகம் புலனாயவு குழுவினர் வந்து சுற்றி வளைத்த போது, வேறு வழியே தெரியாமல் தன்னுடைய மாமனார், “தேச துரோகம் செய்து விட்டாயே” என்று பேசிய பேச்சில் காவல்துறையினரிடம் இருந்து தப்பித்து ஓடும் போது அருகில் கிடைத்த கயிற்றைப் பயன்படுத்தி மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்lடார். சாகும் வரைக்கும் விடுதலைப்புலிகளின் மொத்த நம்பிக்கையையும் பெற்று இருந்தார் என்பதும் மறுக்கமுடியாத உண்மை. விடுதலைப்புலிகள் தங்களின் முக்கியக் காரியங்கள் மற்றும் கொள்முதல்களுக்காக முதலில் கோடியக்கரைக்குத் தான் வருவார்கள். இங்கு அவர்கள் வந்து இறங்குவதற்குள் விரும்பியது தயாராய் இருக்கும். வருவதும் போவதும் எவருக்கும் தெரியாது. இதைப் போலத் தான் இயல்பாக அன்று கரைக்கு வந்து சேர்ந்தவர்கள் ராஜீவ் காந்தியின் படுகொலைத்திட்டத்திற்கு வந்தவர்கள் என்று சண்முகத்திற்கே தெரியாது. காரணம் விடுதலைப்புலிகள் சார்பாக சென்னையைத் தளமாக வைத்துக்கொண்டு இங்கே பல்வேறு குழுக்கள் இயங்கிக் கொண்டுருந்து. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி. அச்சகப் பணி, உளவு, அரசியல் முதல் அச்சத்தைத் தரும் வெடிகுண்டுகளுக்குத் தேவையான மூலப்பொருட்களைக் கோர்ப்பது வரைக்கும். பல சமயம் முழுமையான வெடிகுண்டுகளாகவும் இங்கிருந்து கொண்டு செல்வர். கோயமுத்தூரில் ஒரு சாதாரண லேத்தை வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலையாக மாற்றி நீண்ட நாட்களாக வைத்து இருந்ததும் பிறகு தான் கண்டு பிடிக்க முடிந்தது. இயக்கத்தின் முக்கியக் கொள்கை ஒன்றை இங்கே குறிப்பிட வேண்டும். எந்த முக்கியக் காரியமும் நடந்து முடியும் வரைக்கும் அதன் மொத்தமும் தெரிந்தவர்கள் பிரபாகரன், பொட்டுஅம்மான் இறுதியாகப் பங்கெடுக்கும் நபர்கள். இதைத்தான் பலமென்று கடைசி வரைக்கும் பிரபாகரன் நம்பினார். இயக்க உளவுத்துறை என்றாலும் அவர்களிலும் பிரிவு உண்டு. பிரிந்து செயல்படுபவர்கள் அவர்களின் பணி என்பது உத்தரவை நிறைவேற்றுவது மட்டுமே. ஏன் ? எதற்காக? என்பது இவர்களின் சாவின் வாசலில் நிற்கும் போது கூடத் தெரியுமா என்பது சந்தேகமே? அதற்கு மேல் பிரபாகரனை சந்தித்து இருப்பார்களா என்பதும் அதை விட ஆச்சரியம். முதல் கட்டம் என்பது பிரபாகரன் என்ற ஒரு நபர் மட்டுமே. இரண்டாம் கட்டத்தில் அரசியல் குழு, உளவுக்குழு, திட்டமிடுதல், செய்தித் தொடர்பு, காரியத்திற்காக களத்தில் இருப்பவர்கள் போன்ற பல பேர்கள். இரண்டாம் கட்டத்தில் உள்ளவர்களிலும் குறிப்பிட்ட சிலர் மட்டுமே பிரபாகரனை சந்திக்க முடியும். இது வணங்கத்தக்க உருவமாக வைத்திருந்தார்களா இல்லை வெளியே உள்ள எதிரிகளிடம் இருந்து தங்கள் தலைவரை காக்க உருவாக்கினார்களா என்பது நினைத்துப் பார்க்க முடியாத அதிசயம். இந்தச் செயல்பாடு பல விதங்களிலும் பிரபாகரனை பாதுகாக்க உதவினாலும் பல தவறான புரிதல்களின் தொடக்கமாகவும் இருந்தது. இந்த கொள்கையே சர்வதேச சமூகத்திடம் நெருங்க முடியாத அளவிற்கும் பிரபாகரனை ஒதுக்கி வைத்திருந்தது. 2009 ஆம் ஆண்டு நடந்த கடைசிகட்ட போரின் போது இந்தியாவில் உள்ள வட நாட்டு ஊடக மக்கள் அத்தனை பேர்களும் ராஜபக்ஷே ஊதுகுழல் போல் ஒருங்கே நின்றதற்குப் பல காரணங்களில் இதுவும் ஒன்று. பிரபாகரனை நேரிடையாக பேட்டி கண்ட பெண் பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப்பிற்குக் கிடைத்த வாய்ப்புத் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்ற ஆதங்கமாகக்கூட இருந்துருக்கலாம். பரபரப்பை மட்டும் முதலீடாக வைத்து வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கு வாழ்நாள் முழுக்கப் படபடப்புடன் வாழ்ந்தவரின் தர்க்க நியாயங்கள் எப்படி புரியும்? சிவராசனுடன் பயணித்து வந்த குழுவினர் சண்முகத்தின் பிரத்யோக காட்டேஜ்ல் தங்கி ஓய்வெடுத்து விட்டு மறுநாள் சென்னைக்கு வந்து சேர்ந்தனர். ராஜிவ் காந்தி படுகொலைக்கு என்று விடுதலைப்புலிகளால் ஓதுக்கப்பட்ட நிதி என்பது வெறும் ஐந்து கிலோ தங்கக்கட்டி மட்டுமே. அதை விற்றுத்தான் கிடைத்த பணமான 17.25 லட்சம் பெற்று தான் தங்களுடைய காரியங்களைத் தொடங்கினார்கள். இந்த இடத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் பிரபாகரன் எதிர்பார்ப்பு எப்படியிருக்கும் என்பதை உணர்த்து வைத்திருந்த சிவராசன் தான் செலவு செய்யும் ஒவ்வொன்றுக்கும் தொடக்கம் முதல் குறிப்பேட்டில் எழுதிக்கொண்டு வந்தார். “ராஜிவ் காந்தி படுகொலையைச் செய்தது நாங்கள் அல்ல, தாக்குதலை நடத்தியவர்கள் இலங்கை தமிழர்கள் அல்ல ராஜிவ் காந்தி மரணம் என்பது வெறும் துன்பியல் சம்பவம் அதற்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை” என்று அறிக்கை வாயிலாக விடுதலைப்புலிகள் இயக்கம் கூறிக் கொண்டே இருந்தது. ஆனால் கார்த்திகேயன் குழுவினர் திரட்டிய ஆதாரங்கள் அத்தனையுமே மேலைநாடுகள் கூட நினைத்துப் பார்க்க முடியாதது. பிரபாகரன் தான் வைத்திருந்த தன்னம்பிக்கை சார்ந்த எண்ணங்களைப் போலவே புலனாய்வுக்குழுவினர் தங்கள் திறமைகளை மட்டுமே வைத்துக்கொண்டு களத்தில் இறங்கினர். அந்தத் தனிப்பிட்ட பங்கெடுத்த ஒவ்வொருவரின் திறமையே அத்துவான காட்டில் நடந்த கோரத்தின் மொத்த பின்ணனியை வெளி உலகத்திற்குக் கொண்டு வர உதவியது. உண்ணா நோன்பு இருந்து இறந்து போன தீலீபன் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் யாழ்பாணத்தில் உடுப்பிடி என்று சிறிய ஊரில் நடந்த போது அதில் இரண்டாவது நபராகப் பேச அழைக்கப்பட்டவர் பாகி என்ற பாக்யசந்திரன் என்ற சிவராசன். அவர் அப்போது தோளில் தொங்கிய துப்பாக்கியுடன் பேசியது ” எனக்குப் பேச தெரியாது. பேசிப் பழக்கமில்லை. நாம் பேசிப்பேசியே இதுவரை காலத்தை வீணடித்து விட்டோம். எனவே பேச்சில் நாம் நம்பிக்கை இழந்து விட்டோம். ஆகவேதான் ஆயுதங்களைக் கையில் ஏந்தி இருக்கிறோம். ஆயுதப் போராட்டத்தின் மூலம் மட்டுமே நாம் வளர முடியும். இந்தியாவை நாம் நம்பி இருந்தால் எப்போதே நம்மை அழித்து இருப்பார்கள். நம் கனவு நனவு ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை இந்த ஒலி ஒளி நாடா என்ற வலுவான ஆதாரம் புலனாயவு குழுவினருக்கு கிடைத்த பின்பே பல குழப்பங்கள் தீர்ந்தது. இறுதி வரைக்கும் பல வெற்றிகளையும் வெறியின் மூலத்தையும் காண உதவியது. இதைப் போலவே மனித வெடிகுண்டாகச் செயல்பட்ட தணு என்பவரைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ள உதவியது விடுதலைப் புலிகளின் ” மண் மீட்பிற்கே உயிர் நீத்த மா வீரர்களின் குறிப்பேடு ” என்ற புத்தகத்தின் மூலம் கிடைத்தது. ஒவ்வொரு வீரர்களின் இறப்பையும், அவர்களைப் பற்றிய குறிப்பும் மிகுந்த பொக்கிஷமாக ஆவணத்தில் ஏற்றும் விடுதலைப்புலிகள் இவரின் இறப்பை இலங்கை ராணுவத்தினருடன் போரிட்ட நாட்களில் உள்ள கணக்கில் கலைவாணி ராஜரத்தினம் என்கிற கேப்டன் அகினோ என்று வரவு வைத்திருந்தனர். ஆனால் விடுதலைப் புலிகளால் தனிப்பட்ட முறையில் குறிப்புகள் ஏதும் கொடுக்காத போதும் கூடப் பயிற்சி முடிந்து சீருடையில் கொடி பிடித்து நடை பயின்று வரும் முதல் ஆளாக வந்தவர் இந்தத் தணு. ராஜீவ் என்ற திட்டத்தின் முறைப்படியான திட்டமிடுதல் என்பது இறுதியில் வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கை சிவராசன் மனதிற்குள் இருந்தாலும் அதற்காக அவர் எடுத்துக் கொண்ட சில முன்னெடுப்புகளையும் நாம் பார்க்க வேண்டும். அந்தத் திட்டமிடுதல் எந்த அளவிற்கு இருந்தது என்றால் ராஜீவ் காந்தி கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக ஒத்திகை என்று தன்னை ஒரு பத்திரிக்கையாளராக மாற்றிக்கொண்டு சிவராசன் விபி சிங் (1991 மே 7)கூட்டத்தில் முதல் வரிசையில் அமர்ந்து இருந்ததைப் பிறகு புலனாய்வு குழுவினர் கண்டு பிடித்தனர். காரணம் சென்னையில் நடந்த அந்தக் கூட்டத்தை ஒரு பத்திரிக்கையாளர் முழுப் படமாக எடுத்து இருந்தார். அதைக் கண்டு பிடித்த போது தான் இதன் திட்டமிடுதலும் அதற்காக இவர்கள் உழைத்த உழைப்பும் புரிந்தது. முதலில் ராஜீவ் காந்தியின் மரணம் என்பது டெல்லியில் வைத்து நடத்தப்படுவதாகத் தான் திட்டமிட்டப்பட்டது. ஆனால் அங்கு மொழி, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதில் உள்ள பிரச்சனை, வாகனம் ஓட்டுவதில் உள்ள சாலை போக்குவரத்துச் சிக்கல்கள் என்ற பல இருந்த போதிலும் அங்கும் சென்று தொடக்கத்தில் அடிப்படை ஏற்பாடுகளை உருவாக்கினார்கள். அங்கேயே ஒரு வயர்லெஸ் தொடர்பு உருவாக்கி அமைக்கும் வரைக்கும் உழைத்தனர். அப்போது தினமும் வெளிவந்து கொண்டுருக்கும் தினமணி செய்திகளைப் பார்த்து இதன் மூலமே ராஜிவ் காந்தியின் அடுத்தக் கட்ட நகர்வை புரிந்து கொண்டு தமிழ்நாட்டில் உள்ள பிரச்சாரக்கூட்டத்தை மையமாக வைத்துக்கொண்டு காரியத்தில் இறங்கினர். இந்த இடத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க சம்பவம் பொட்டு அம்மான் பொறுத்தவரையிலும் இந்தப் படுகொலையைத் தமிழ்நாட்டில் உள்ளவர்களை வைத்து நிறைவேற்றி விடலாம் என்பதாக இருந்தது. ஆனால் பிரபாகரன் பார்வையில் “வலியை பெற்றவர்கள் உருவாக்கும் வலி என்பது ஒரு பெண் மூலமாக இருக்க வேண்டும்” என்பதாக இந்த திட்டத்தை உருவாக்கினார். விடுதலைப்புலிகளிடம் உள்ள பல திறமைகளில் வயர்லெஸ் சாதன தொடர்பு என்பதும் அதில் அவர்கள் கையாண்ட யுத்தி என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. யாழ்பாணத்தில் பொட்டு அம்மான் கட்டுப்பாட்டில் உள்ள தொடர்பு எண் 91. சென்னையில் சிவராசன் கட்டுப்பாட்டில் தொடர்பு எண் 95. இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் 1991 தொடக்கம் முதல் இந்திய உளவு நிறுவனங்கள் மண்டையைப் பிய்த்துக்கொள்ளும் அளவிற்கு இருந்தது. சென்னையில் இருந்து வெளியே ஏதோ ஒரு சங்கேத பாஷை வயர்லெஸ் செய்தியாக சென்று கொண்டிருக்கின்றது எனபதை கண்டுபிடித்தனர். ஏதோ ஒரு தொடர்பு உள்ளே இருக்கிறது. ஆனால் அவர்களால் அதனை இடை மறித்து கேட்க முடியவில்லை. கோர்வையாகவும் இல்லை. எங்கிருந்து போகின்றது என்பதை உணர முடியாமல் கோட்டை விட்டுக் கொண்டுருந்தனர். அந்த அளவிற்கு விடுதலைப்புலிகள் தொழில் நுட்ப அறிவை கற்று வைத்திருந்தனர். மற்றொரு ஆச்சரியம் சிவராசனுக்கென்று தனியான தொடர்பு என்பதைப் போல மற்ற பணிகளில் இருந்த ஒவ்வொருவருக்கும் இதைப் போலவே தனித்தனி அலைவரிசை. உத்தரவு ஒருவர். இயங்குபவர்கள் பலர். நோக்கம் ஒன்று. பாதைகள் வெவ்வேறு. பிரபாகரனுக்குத் தனித் தொடர்பு எண் 14. செயற்கைகோள் மூலம் பேசக்கூடிய கைபேசி பிறகு வந்தது. இந்த வயர்லெஸ் தொடர்புகளைக்கூட ராஜீவ் மரணத்திற்குப் பிறகு கூடப் பாதி அளவிற்குத்தான் கண்டு கொள்ள முடிந்தது. மற்றொரு ஆச்சரியம் இதையும் நடமாடும் வயர்லாஸ் கட்டுப்பாட்டு என்பதான அமைப்பில் வைத்திருந்தனர். இது போன்ற தொழில் நுட்பத்தில் ஒரு பிரச்சனை. தொடர்பு கொள்ளும் போது அருகில் உள்ள வீடுகளில் உள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்குக் கர் புர் என்று காட்சி மாறி கத்தத் தொடங்கி விடும். சில சமயம் தெளிவற்ற குரல்கள் கேட்கலாம். ஆனால் முழுமையாகப் படமும் தெரியாது. கடத்தும் வார்த்தைகளும் புரியாது. தொடர்பில் வரும் இடைவிடாத சப்தங்கள் சம்மந்தப்பட்ட துறை சார்ந்தவர்களுக்கு இனம் கண்டு கொள்ள வைத்துவிடும். பொட்டு அம்மன் பல முறை இவர்களிடம் பகல் நேரத்தில் பயன்படுத்தினால் பொதுமக்கள் இனம் கண்டு கொள்வார்கள். கவனமாக இருங்கள் என்று கூறியிருந்த அறிவுரையையும் மீறி அவசரத்தில் இவர்கள் பயன்படுத்திய போது இவர்களை அறியாமலே புலனாய்வு வலையில் மாட்டத் தொடங்கினர். புலன் விசாரனை தீவிரப் பாதையில் வந்து கொண்டுருக்கும் போது ஒவ்வொரு இடமாக மாறிக்கொண்டு தப்பித்து வந்தார்கள். கோயமுத்தூரில் எல்லைப் பகுதியில் (துடியலூர்) வீட்டில் இருந்த போது பகல் நேரத்தில் யாழ்பாணத்துடன் தொடர்பு கொண்ட போது ஏற்கனவே புலனாய்வு குழுவினர் சொல்லி வைத்திருந்தபடி மக்கள் அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் செய்ய அங்கிருந்து கிளம்பும்படி ஆயிற்று. துரத்தல்கள் ஒரு பக்கம். தூக்கம் இழந்தாலும் இயக்கத்திற்குத் தொல்லை வந்து விடக்கூடாது என்று லட்சிய வேட்கை மறுபக்கம். 4. சிவராசன் உருவாக்கிய ஐவர் கூட்டணி இந்திய அமைதிபடை இலங்கையில் இருந்த போது மற்றப் போராளிக்குழுக்களை விடப் பிரபாகரனின் விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் மட்டும் தனித்தன்மையோடு இருந்ததற்குப் பல காரணங்கள் இருந்தாலும் அப்போது நடந்து முடிந்த பல நிகழ்வுகளுக்குப் பிறகு இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல இளைஞர்களுக்குப் பிரபாகரன் என்பவர் ஆதர்ஷணமாக மாறியிருந்தார், இலங்கையில் இருந்தவர்கள் மட்டுமல்லாது, புலம்பெயர்நது வாழும் தமிழர்கள் என்பவர்களோடு தமிழ்நாட்டில் கூடப் பிரபாகரன் என்பவர் அதற்குப் பிறகு தான் தனித்தன்மையாகத் தெரிய ஆரம்பித்தார். விடுதலைப்புலிகளின் முதல் பலம் ஊடகம். இயக்கம் வலுவடையத் தொடங்கிய காலம் முதல் பிரபாகரன் ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஆவணமாக்குவதில் மிகுந்த கவனமாக இருந்தார். பிரபாகரன் ஊடகத் தொடர்புக்கு என்று உருவாக்கியிருந்த நபர்கள் உலக ஊடகங்களிடம் இயக்கம் சார்ந்த மொத்த விசயங்களையும் கொண்டு சேர்த்துக் கொண்டிருந்தனர். பிரபாகரன் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் அளவிற்கு மிகச் சிறப்பாகப் பங்காற்றிக் கொண்டிருந்தனர். ராஜபக்ஷே ஆட்சிக்கு வந்த போது இலங்கை அரசாங்கத்தின் ஊடகத் தொடர்பு அந்த அளவிற்குப் பரிதாபமாகத் தான் இருந்தது. உள்ளே நடந்த மொத்த நிகழ்ச்சிகளையும் சாதக அம்சங்களை அளவுக்கு அதிகமான வெற்றிப் பார்வையிலும் பாதக அம்சங்களை லேசாகக் கோடிட்டு காட்டியும் உலகத் தமிழ் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்ததில் தமிழ் நெட் என்ற விடுதலைப் புலிகளின் ஆதரவு தளம் முக்கியப் பங்கு வகித்தது. இந்தத் தளத்தின் மூலம் மட்டுமே தமிழ் மக்கள் மட்டுமல்லாது செய்தியாளர்களும் தெரிந்து கொள்ள முடிந்தது. கோத்தபய ராஜபக்ஷே முப்படைகளின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதும், இதை முடிவுக்குக் கொண்டு வர தனித்தன்மையோடு பல புதிய விசயங்களை உருவாக்கத் தொடங்கினார். ஒவ்வொரு நாளும் இலங்கை இராணுவம் பெற்ற வெற்றிகளைக் கொண்டு ஊடகம் மூலம் சர்வதேச சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார். ஊடகத்துறைக்குச் சிறிதும் சம்மந்தம் இல்லாதவரை ஏறக்குறைய ஓய்வு நிலையில் இராணுவத்தில் பணியாற்றியவரை இதற்கென்று தலைமைப் பொறுப்பில் நியமித்து விடுதலைப்புலிகளின் பாணியில் ஒவ்வொன்றாக உருவாக்கத் தொடங்கினார்கள். அதன் பிறகு தான் இலங்கையின் ராணுவ வெற்றிச் செய்திகள் வெளிவரத் தொடங்கியது. தொடக்கத்தில் இலங்கை ஆட்சியாளர்கள் முயற்சித்தாலும் விடுதலைப்புலிகளின் இயக்கத்துடன் போட்டி முடியாத காரணத்தால் கடைசியாக உருவாக்கியது தான் அழிப்பு வேலை. அந்த விசயத்தில் மற்றவர்களை விட எப்போதும் சிங்களர்களுக்னென்று சிறப்பான தகுதி அதிகம் உண்டு. விடுதலைப் புலிகளின் ஊடக தளத்தை அழித்ததோடு, ஆதரவாகச் செயல்பட்டுக்கொண்டுருக்கும் அத்தனை விசயங்களையும், நபர்களையும் களையெடுக்கத் தொடங்கினார்கள். அதன் பிறகு தான் ஒரு முடிவுக்குக் கொண்டு வர முடிந்தது. இதன் காரணமாகத் தான் இலங்கையின் உள்ளே இருந்த பல ஊடக மக்கள் காணாமல் போவதும், கைதும், திரும்பி வராமலேயே மேலோகம் சென்றதும் கோத்தபய ராஜபக்ஷே மூலம் நடந்தேறத் தொடங்கியது. அப்போது கோத்தபய சொன்ன வாசகம் இங்கு நினைவுகூறத் தக்கத்து. இரட்டைக்கோபுர தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மேல் போர் தொடுக்க ஆய்த்த ஏற்பாடுகள் தொடங்கிய போது அமெரிக்க உள்துறை அமைச்சர் காலின் பாவெல் சொன்னது போல் “எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வில்லை என்றால் நீ எங்களுக்கு எதிரியாக இருக்கிறாய் என்று அர்த்தம்”. சர்வாதிகார மனப்பான்மை தான் கோத்தபய ராஜபக்ஷேவுக்கு அவரால் உருவாக்கப்பட்ட நிர்வாகக் கட்டமைப்பை ஒரு ஒழுங்கு கொண்டு வர முடிந்தது. இலங்கையில் நடந்த தமிழர் போராட்டங்களில் தொடக்க காலத்தில் ஆயுதப் பாதையைத் தேர்ந்தெடுத்த சிவகுமரன் முதல் பிரபாகரனுக்குச் சமமாக வளர்ந்த எத்தனையோ பேர்கள் ஏன் தன்னுடைய ஆளுமையைச் செலுத்த முடியவில்லை என்பதையும் நாம் இந்த சமயத்தில் புரிந்து கொள்ள வேண்டும்? தங்களுக்கு சமமாக உள்ளே எவரு எந்த இயக்கமும் இருந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் உள்ளே இருந்த மற்ற இயக்கங்களை அழித்தொழிக்க விடுதலைப்புலிகளின் இயக்கம் தீவிரமாக ஈடுபட்டபோதிலும் தன்னுடைய கொள்கையில் எப்படிப் பிடிவாதமாக இருந்தாரோ அந்த அளவிற்குத் தானும் நேர்மையான மனிதராக சொந்த வாழ்க்கை கொள்கை முதல் இயக்க கொள்கைகள் வரைக்கும் பிரபாகரன் இருந்தார். பிரபாகரன் அதிகம் பேசுவதும் இல்லை. ஒய்வென்றால் குறிப்பிட்ட காலம் வரைக்கும் பிரபாகரனுக்குப் புத்தக வாசிப்பு தான் அதிகபட்ச விருப்பமாக இருந்தது. பிரபாகரன் குடும்ப வாழ்க்கை வாழ்ந்தாரே தவிர அந்த வாழ்க்கையை எந்த அளவிற்கு அவருடைய சுபாவம் வாழ வைத்துருக்கும் என்பதை யோசித்துப் பார்த்தால் அது மிகப் பெரிய வெற்றிடமாகத் தான் இருக்கும். பிரபாகரன் மனைவி மனைவி மதிவதனி தான் தியாகத்தின் உச்சகட்டம். இவரைப் போலவே இலங்கை அரசாங்கத்தில் கோத்தபய ராஜபக்ஷே. இவரின் தனிப்பட்ட வாழ்க்கை என்பது எவருடனும் இரண்டு வார்த்தைகளுக்கு அதிகமாகக்கூடப் பேசும் பழக்கம் இல்லை. சாந்தசொரூபி என்ற அர்த்தம் அல்ல. காரியத்தில் கண். முப்படைகளின் தலைமைப் பொறுப்பு என்ற இந்தப் பதவி என்பது அவர் விரும்பி வந்தது அல்ல. அமெரிக்காவில் பேராசிரியர் பொறுப்பில் போய் அமைதியாக வாழ வேண்டும் என்று நினைத்து அங்கேயே வாழ்ந்து கொண்டிருந்தவரை வலுக்கட்டாயப்படுத்தி தான மகிந்த ராஜபக்ஷ இலங்கைக்கு அழைத்து வந்தார். ஏறக்குறைய ஒரே மனோபாவத்தில் தான் இருவரும் இருக்கின்றார்கள். இருவருக்கும் அதிகப் பேச்சு என்பதே கூடாது. செயல் மட்டும் தான் முக்கியம். ஒருவருக்குத் தமிழர் என்ற ஒரு இனமே உள்ளே இருக்கக்கூடாது. இவருக்கோ தமிழர்களுக்கு ஒன்று என்றால் சிங்கள ஆட்சியாளர்கள் ஒருவர் கூட இருக்கக்கூடாது. பிரபாகரன் பார்வையில் சிங்கள வெறுப்பு என்றால் அது கடைசி வரைக்கும் ஆட்சியாளர்கள் மட்டுமே. கோத்தபய பார்வையில் தமிழர்கள் ஒவ்வொருவருமே ஒரு பிரபாகரனாகத் தான் தெரிந்தார்கள். முள்ளிவாய்க்கால் போர் என்பது 2009 மே என்று நாம் அனைவருக்கும் தெரிந்து இருந்தாலும் அதன் நதி மூலம் ரிஷி மூலம் என்று பார்த்தால் அதற்கு முந்தைய மூன்று வருடங்களும் அதற்காக உழைத்துள்ளனர். ஏறக்குறைய ராஜபக்ஷே பதவிக்கு வந்து அமர்ந்தவுடன் அமைதி ஒப்பந்தம் என்று வாய் கிழிய பேசினாலும் அப்போதே அவர் உள்ளுற எடுத்த முடிவு அது. கூடயிருந்த அவரின் இரண்டு தங்க கம்பிகளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அது குறித்துப் பின்னால் பார்க்கலாம். காரணம் ஆண்டு விட்டுப் போன மற்றவர்களை விட ராஜபக்ஷேவின் மிகப் பெரிய பலம் என்பது அவருடைய சகோரர்கள். ஆனால் பிரபாகரனின் மூத்த சகோதரர் இன்று வரைக்கும் ஊடகத்தால் வெளிக் கொணரப்படவேயில்லை. அவரது பெயர் மனோகரன். டென்மார்க்கில் இருப்பதாக மட்டும் வெளியே தெரிகிறதே தவிர முழுமையாக விபரங்கள் இன்று வரைக்கும் எவருக்கும் தெரியாது. பிரபாகரன் நம்பியிருந்தது தன் கருத்து ஒத்தவர்களை மட்டுமே. அதுவும் தான் சொல்வதைக் கேட்பவர்களை மட்டுமே. விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு வாழ்க்கையில் பாதிப்படைந்து, விருப்பப்பட்டு, நிர்ப்பந்தமாக என்று பல விதமான வழியில் இளைஞர்கள் இயக்கத்தின் உள்ளே வந்தாலும் இறுதியில் பலவிதமான களையெடுப்புகளும் சோதனைகளுக்குப் பிறகு மட்டுமே வந்தவர்கள் இருப்பார்களா? இல்லை இறப்பார்களா? என்பதைத் தீர்மானிக்க முடியும். அவரவர் தனித்திறமையைப் பொறுத்து உருவாக்கப்பட்டட வட்டத்திற்குள் தான் இயக்க பணிகள் செய்ய முடியும். இறுதிவரையிலும் பிரபாகரன் என்பவரின் தனித்தன்மை என்பது திறமையை வைத்து மட்டும் வைத்தே ஒருவரை மதிப்பிடுவது. அடிமட்ட நிலையில் உள்ள தொடக்கப் போராளியாக இருந்தாலும் சரி, ஆளுமையில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி. அவர்களின் திறமை ஒன்றே மூலதனம். இரண்டாம் மூன்றாம் உள்வட்டத்தில் நுழைந்து தங்கள் உழைப்புகளைக் காட்ட வாய்ப்புக் கிடைக்குமேயானால் பிரபாகரனை சந்திக்க வாய்ப்பு உருவாகலாம். அந்த அளவிற்கு இருக்கும் சில பேர்களின் உளவுத்துறைத் தலைவர் பொட்டு அம்மான் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். பிரபாகரனின் மூளை என்று சொன்னால் மிகையில்லை. பல போராட்டக் களத்தில் இலங்கையின் உளவுத்துறையிலே ஊடுருவி அவர்களின் வயர்லெஸ் செய்திகளை இடைமறித்து இவர்கள் கேட்டுக்கொண்டு அதற்குத் தகுந்தாற் போல் களம் மாற்றிய காட்சிகளும் உண்டு. சிங்கள இராணுவத்தில் இருப்பவர்களே இவர்களுக்குச் சாதகமான விஷயங்களைச் செய்ததும் உண்டு. அவர்களின் ஊழல் ஒரு பக்கம். இவர்கள் மேல் கொண்டுள்ள பயம் மறுபக்கம். இந்தப் பயம் என்பது எந்த அளவிற்கு ஒவ்வொருவருக்கும் இருந்தது என்றால் சற்று வியப்பாக இருக்கும். இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஒரு தமிழர் ஆட்சிப்பொறுப்பில் அலங்கரிக்க வேண்டிய சூழ்நிலையில் வந்தவர் லஷ்மணன் கதிர்காமர் என்ற தமிழர். சந்திரிகா குமாரதுங்காவின் வலது இடது கையைப் போலவே இருந்தவர். சந்திரிகாவே இவர் பெயரை பரிந்துரைத்தவர். சுதந்திரகாலத் தமிழ் தலைவர்களைப் போலவே மிகுந்த புத்திசாலி. இவர் தமிழர் என்ற ஒரு நோக்கத்தை வைத்துக்கொண்டு இந்த வாய்ப்பை தட்டிப்பறித்து ஆட்சியைப் பிடித்தவர் தான் ராஜபக்ஷே. இன்றைய விடுதலைப்புலிகளின் சர்வதேச தடைக்கு முக்கியக் காரணமாக இருந்தவரும் இதை மட்டுமே மனதில் கொண்டு உழைத்தவரும் லஷ்மண் கதிர்காமர் மட்டுமே. ஆனால் இவரே தான் சாவதற்கு முன் சுட்டுக்கொல்லப்பட்டுத் தான் சாகப்போகின்றேன் என்று வாக்குமூலம் கொடுத்து அதன்படியே நீச்சல் குளத்தில் இருந்து வெளியே வரும் போது மேலோகம் அனுப்பப்பட்டார். அவர் உருவாக்கிய சர்வதேச வலைபின்னால் பின்னால் வந்தவர்களுக்குப் பலவிதங்களிலும் உதவியாய் இருந்தது. ஆனால் இவர் உழைப்புகள் அனைத்தும் ஒவ்வொரு காலகட்டத்திலும் சிங்களர்களுக்குச் சாதகமாக இருந்ததே தவிர தனிப்பட்ட முறையில் கூட தமிழர்களுக்கு செய்ததாகத் தெரியவில்லை. இத்தனை திறமை உடையவர்கள் உருவாக்கிய ராஜீவ் காந்தி படுகொலை திட்டமிடுதல் என்பது சிவராசனிடம் ஒப்படைக்கும் முன்பே பாதி வடிவம் அடைந்து இருந்தது. ஒரு வகையில் சொல்லப்போனால் சிவராசன் என்ற நபர் ஏற்கனவே உருவாகியிருந்த நிகழ்வுகளுக்குக் குழுவை வழி நடத்துபவராக வந்தவர். மனித வெடிகுண்டாக மாற்றி வைத்திருந்த தணுவை கொண்டு போய் இலக்கில் சேர்க்க வேண்டிய பொறுப்புக்கு வந்தவர். தணுவுக்கு ஏதோ ஒன்று என்றால் உடன் வந்த சுபா. சுபாவுக்கே ஏதோ ஒரு பிரச்சனை என்றால் சிவராசனே அந்தப் பொறுப்பை நிறைவேற்ற தயாராய் இருக்கக்கூடியவர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. சிவராசனைப்பற்றித் தனியாக நிறைய நாம் புரிந்து கொள்ள வேண்டும். எந்த வகையிலும் தோல்வி என்பது விடுதலைப்புலிகளின் இயக்க அகராதி விரும்பாத வார்த்தை. இந்தப் படுகொலையில் புலனாய்வு குழுவினரால் குற்றஞ்சாட்டப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 41. வேலுப்பிள்ளை பிரபாகரன், பொட்டு அம்மன், அகிலா (பெண் போராளிக்குழுக்களின் தலைமை) என்ற மேல்மட்ட அமைப்பு முதல் பங்கெடுத்த சிவராசன், தணு,சுபா என்று தொடங்கி இதற்கு உறுதுணையாய் இருந்த இந்தியர்களான சுபா சுந்தரம், பாக்யநாதன், புகைப்படம் எடுத்து இறந்து போன ஹரிபாபு என்று தொடங்கிய ஒரு பெரிய கூட்டமே இருந்தது. இவர்கள் அத்தனை பேர்களும் உருவாக்கிய திட்டமிடுதல் என்பது மிகுந்த அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தரக்கூடியது. சிவராசனிடம் ஏப்ரல் (1991) மாதத்தில் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு இதில் முழுமூச்சாக மே 2 முதல் உழைக்கத் தொடங்கினாலும் இதன் தொடர்பாக ஆண்டின் தொடக்கம் முதலே இதற்கான அஸ்திவாரத்தை உருவாக்கி இருந்தனர். ஆனால் அப்போது இதற்காக உழைத்துக்கொண்டுருந்தவர்கள் எவருக்கும் இதற்காகத் தான்? என்று எவருக்குமே தெரியாது. பங்கெடுத்த இந்தியர்களுக்கும், விடுதலைப்புலிகளின் மற்ற உளவுப்பிரிவினருக்கும் முழுப் பரிணாமம் தெரியாது. ஆனால் அபபோது அவர்கள் உணர்ந்தது இப்போது மிகப் பெரிய ஏதோ ஒன்று. அந்த அளவிற்குத் தான் அவர்கள் உள் மனம் சொல்லியது. எப்போதும் போல அவர்களின் அர்பணிப்புக்கு அந்தக் கேள்வியே தேவையாய் இருக்க வில்லை. இந்தக் கூட்டணியில் சேர்ந்து இருந்த சுபா சுந்தரம் சென்னையில் பிரபலமான புகைப்படக்காரர். அவரது நிறுவனமும், அவர் பழகி வைத்துள்ள அரசியல் திரைப்படத்துறை சார்ந்த பிரபலங்களும் கணக்கில் அடங்கா. அவரைத் தெரியாதவர்கள் எவரும் இல்லை என்கிற அளவிற்குப் பிரபல்யமான நபர். தொடக்கக் காலம் முதல் இவர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்தவர். இவர் இலங்கை சென்று பிரபாகரனை சந்தித்து வந்தவர். இவரைப் போலவே பேபி சுப்ரமணியம் என்பவர் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கென்று பலம் வாய்ந்த மக்கள் தொடர்பாளர். இருவரும் நெருங்கிய நண்பர்கள். 1980க்கு பிறகு சுபா சுந்தரத்திடம் வேலைக்குச் சேர்ந்த பாக்யநாதன், பேபி சுப்ரமணியடத்திடம் தொடர்பு உருவாக்கிக்கொண்டு அதன் மூலம் தமிழ்நாட்டுக்கு வரும் விடுதலைப்புலிகளிடம் நல்ல தொடர்பை உருவாக்கிக் கொண்டவர். சுபா சுந்தரத்திடம் புகைப்படக்காரராகப் பணியாற்றிக் கொண்டுருந்தவர் ஹரிபாபு. இவர் வாழ்க்கையும் நளினியைப் போலவே எதிர்பாராத திருப்புமுனை. அவர் வாழ்க்கை சிறைக்குக் கொண்டு வந்தது. இவர் வாழ்க்கை சிட்டுக்குருவி போல் உயிர்க்குருவியை மேலே பறக்க வைத்து விட்டது. காந்தியைப் பற்றிப் பேசும் வரைக்கும் கோட்சே என்ற பெயர் இருப்பது போல ராஜீவ் காந்தி படுகொலைப்பற்றிப் பேசும் போது இவரும் இவர் பயன்படுத்திய புகைப்படக் கருவியும் பேசப்படும்.? பாக்யநாதனைப் போலவே முத்து ராஜா என்பவரும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக இருந்தவர். இவர் மேற்கு மாம்பலத்தில் விடுதலைப்புலிகளின் ஆதரவோடு எடுக்கப்பட்ட வீட்டில் இருந்து செயல்பட்டுக் கொண்டுருந்தார். இந்த வீட்டின் ஒரு அறையைத் தான் பேபி சுப்ரமணியம் தன்னுடைய அலுவலகம் மற்றும் வீடாகப் பயன்படுத்திக் கொண்டுருந்தார். இங்கு தான் விடுதலைப்புலிகளுக்குத் தேவையான பிரசுரங்கள், ஒலி ஒளி நாடா, மற்றும் அவர்கள் பிரச்சாரத்திற்குத் தேவைப்படும் அத்தனை சமாச்சாரங்களும் தயார் நிலையில் இருக்கும். தேவைப்படும் சமயத்தில் இலங்கைக்குச் சென்று கொண்டிருக்கும். சிவராசன் தமிழ்நாட்டில் உள்ளே நுழையும் மே மாதத்தில் சென்னையில் இருந்த விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமாக அச்சகம் மிகக் குறைந்து விலைக்குப் பாக்யநாதனுக்கு விற்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படவேண்டும் என்ற ஒப்புதலுடன். பாக்ய நாதனின் சகோதரி தான் ராஜிவ் காந்தி இறப்பு அன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தில் உள்ள நளினி. நளினி தன் தாயாருடன் வசித்து வந்த வீட்டில் இருந்து அவருடன் சண்டை பிடித்துக் கொண்டு தனியாக வெளியே வந்தார். வெளியே வந்தவரை முத்து ராஜா தன் அம்மா மற்றும் சகோதரியுடன் தங்க வைத்தார். இதன் தொடர்ச்சியாகப் பெண்கள் தங்கும் தங்கும் விடுதி என்று கடைசியாக வில்ல்வாக்கத்தில் ஹைகோர்ட் காலனியில் கொண்டு போய்க் குடியமர்த்தினார். நளினி வில்லிவாக்கத்தில் இருந்து அடையாறில் உள்ள அனபாண்ட் சிலிகன் பிரைவேட் லிமிட் என்ற தனியார் நிறுவனத்திற்கு (சம்பளம் மாதம் 1700) போய்க் கொண்டு இருந்தார். திமுக ஆட்சியை விடுதலைப்புலி ஆதரவு நோக்கத்தில் கலைக்கப்பட உள்ளே இருந்த விடுதலைப்புலி ஆதரவாளர்களும், தமிழ்நாட்டில் தங்கியிருந்த விடுதலைப் புலிகளும் கைதாகிக் கொண்டுருந்தனர். கெடுபிடி அரசாங்க நிர்வாகத்திலும் விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டில் வந்து இறங்கி அவர்களுக்குண்டான வேலைகளைப் பார்த்துக்கொண்டு தான் இருந்தனர். இதன் தொடர்ச்சியாக இலங்கையில் இருந்து உளவுப்பிரிவில் இருந்து அழைத்து வரப்பட்ட முருகன் இந்த வட்டத்திற்குள் இருந்த நளினியை சந்தித்து நட்பாக்கிக் கொண்டார். ஆங்கிலம் கற்க வேண்டும் என்று சொல்லி முருகன் டுட்டோரியல் கல்லூரிக்கு போய்க்கொண்டுருந்தபோதே நளினியுடன் நெருக்கமாகப் பழகியதும், தான் ஒரு விடுதலைப்புலி என்ற உண்மையை நளினியிடம் சொல்லி இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த அட்டகாசங்களை நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் சொல்லிச் சொல்லியே நளினியை ஒரு மாதிரியாக மாற்றி வைத்திருந்தார். தனக்கு உதவியாளர் ஒருவர் தேவை என்று சொல்லி அப்போது சுபா சுந்தரத்திடம் பணிபுரிந்து கொண்டுருநத் ஹரிபாபுவை வைத்துக்கொண்டார். முருகன் நளினியுடன் வைத்திருந்த தொடக்க நட்பு காதலாக மாறியது. காதல் கடைசியில் கர்ப்பத்தில் முடிந்தது. கர்ப்பத்தில் முடிந்த போது திருப்பதிக்குச் சென்று திருமணம் செய்து கொண்டது வரைக்கும் சென்றது. எப்போது சென்றார்கள்? ராஜீவ் காந்தி இறந்த போது வேண்டுதல் நிறைவேற்றிய திருப்தி. வீட்டை விட்டு பிரிந்து தனியாக இருந்த நளினியின் வீட்டுக்கு முருகனிடம் பேசி வைத்திருந்த படி சிவராசன் தன்னுடன் அழைத்து வந்த சுபா தணுவை நளினியுடன் சேர்ந்து தங்க வைக்க இந்த இரண்டு பெண்களையும் நளினிக்கு பிடித்து விட்டது. இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த அத்தனை விசயங்களையும் வந்தவர்களும் புரிய வைக்க நளினி ஏறக்குறைய இலங்கை தமிழராகவே மாறியிருந்தார். முருகன்,சுபா,தணுவுடன் சுற்றிய சுற்றலில் பேசிய பேச்சின் மூலம் நளினியை மூளைச் சலவை போல் மாற்றி வைத்திருந்தனர். சிவராசன் குழுவினர் கோடியக்கரையில் இருந்து சென்னையின் உள்ளே வந்ததும் தொடக்கத்தில் குழுவினர் தங்குவதற்கு வீடு கொடுங்கையூரில் முத்தமிழ் நகரில் தயாராக இருந்தது. சிறப்பான ஏற்பாட்டைச் செய்து இருந்தவர் ஜெயக்குமார். இவர் 1990 டிசம்பர் மாதத்திலேயே இந்த வீட்டை பிடித்து வைத்து இருந்தார். ஆனால் ஜெயக்குமார் 1984 ஆம் ஆண்டு முதல் சென்னையில் இருப்பவர். தமிழ்நாட்டு பெண்ணான சாந்தியை மணம் செய்து கொண்டு யாழ்பாணம் சென்றவர் மறுபடியும் 1987 திரும்பி வந்து சென்னை வாசியானவர். இவரின் சகோதரி கணவர் ராபர்ட் பயஸ். ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் இந்திய அமைதிப்படையால் பிடிக்கப்பட்டுச் சிறையில் இருந்தவர்கள். இவர்கள் இராமமேஸ்வரம் வழியாகத் தங்களை அகதியாகப் பதிவு செய்து கொண்டு உள்ளே வந்து களப்பணி ஆற்றிக்கொண்டுருப்பவர்கள். இவர்களின் மொத்த செலவுகளையும் கவனித்துக் கொண்டவர்கள் விடுதலைப்புலிகள். தங்களுடைய உளவு வேலைக்காக நிக்சன் என்பவரையும் அவர்களுடன் இணைத்துவிட உருவானது நிக்சன் தலைமையிலான INTELIGENCE GROUP. பிரபாகரனின் தொடக்கக் காலத் தோழரான கலாபதி என்பவர் போரூரில் வசித்து வந்தார். இவருடைய முக்கியப் பணி அகதிகளாக வருபவர்களுக்கு வீடு பிடித்துக் கொடுப்பது. இதற்கு இவருக்கு உதவி செய்ய உதவியாய் இருந்தவர் மளிகைக்கடை வைத்துக் கொண்டு தனியாகத் தரகர் வேலை பார்த்துக்கொண்டுருந்த மற்றொருவரும் இருந்தார். இவர் மூலம் ஜெயக்குமார் பெயரில் எடுக்கப்பட்ட வீடு இந்த உளவு மக்கள் கூடும் இடமாக இருந்தது. சிவராசன், நிக்சன், காந்தன், ஒயர்லெஸ் ஆப்ரேட்டர் ரமணன் போன்றவர்களின் அடுத்தக் கட்ட ஆய்த்தப்பணிகளை இங்கிருந்து தான் உருவாக்கினார்கள். ஆனால் சிவராசன் உள்ளே வந்து இவர்களுடன் சேர்ந்து இருந்தாலும் தான் செய்யப்போகும் காரியம் எதையும் இவர்களிடம் கலந்து ஆலோசிக்கவில்லை. காரணம் பொட்டு அம்மன் உத்தரவின் படி இந்தத் திட்டம் என்பது உள்ளே களப்பணியாற்றிக்கொண்டுருக்கும் மற்ற எவருக்கும் தெரியக் கூடாது. அந்த அளவிற்கு இந்தத் திட்டமென்பது ரகசியமாக பாதுகாக்கப்பட்டது. அவர்கள் பணி தனி. இவருடைய நோக்கம் வேறு. இயக்கத்தின் கொள்கை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றானதால் எவருக்கும் எந்தக் காலத்திலும் பிரச்சனைகள் வருவதில்லை. சிவராசன் இந்தக் கூட்டத்தில் இருந்து வெளியேறி தனியாகத் தன்னுடைய திட்டத்திற்குத் தொந்தரவு இல்லாத வேறு ஒரு வீடு இருந்தால் வசதியாக இருக்கும் என்று அதன் பிறகு பிடிக்கப்பட்ட வீடு தான் கொடுங்கையூர் வீடு. இதுவே தான் சிவராசனின் அலுவலகமாயிற்று. இந்த வீட்டில் ஜெயக்குமாரையும் அவர் மனைவியையும் மட்டும் அழைத்துக்கொண்டு சென்று குடும்பம் போல் வெளியே தெரியும் படி உருவாக்கி விட முதல் பிரச்சனை முடிவுக்கு வந்தது. மேற்கொண்டு சந்தேகம் வராமல் இருக்கக் காபிக்கொட்டை அறைக்கும் இயந்திரத்தை விடுதலைப் புலிகளின் இயக்கம் சார்பாக அமைத்துக்கொடுக்க அதன் மூலம் தொலைபேசி இணைப்பும் வாங்க முடிந்தது. சிறப்பான ஏற்பாடுகள் முடிந்து விட்டது. சுபா, தணு, சுதந்திர ராஜா, ராபர்ட் பயஸ் என்று உள்கட்டமைப்பும் பிரச்சனையும் முடிவுக்கு வந்து விட்டது. ஆனால் முருகன் மூலம் நளினி அறிமுகத்தில் இறுதியில் வில்லிவாக்கம் வந்து சேர சிவராசன், சுபா,தணு,நளினி என்ற நால்வர் கூட்டணியும் நடக்கும் நிகழ்ச்சியைப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று அழைத்துச் செல்லப்பட்ட சுபா சுந்தரம் அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டுருந்த ஹரிபாபு என்ற ஐந்தாவது நபரும் ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்திற்குச் செல்லும் வீடாக நளினியின் வீடு அமைந்து விட்டது. அம்மாவை விட்டு நளினி பிரிந்த போது விதி எழுதத் தொடங்கியது. முருகனை விரும்ப ஆரம்பித்த போது சிரிக்க, சுபா தணுவையும் நேசிக்க நாசப்பாதையைக் கொண்டு போய்க் காட்டி அடுத்த 20 வருடங்களை ஆள் அரவமற்ற இருட்டுக்குள் கொண்டு வந்து முடித்தும் விட்டது. வருடங்கள் கடந்தும் இன்று வரையிலும் மீண்டு வர முடியாதது மகத்தான சோகம். 5. வெறியின் வெற்றி சிதறிய ராஜீவ் காந்தி சென்னையில் சிவராசன் விரும்பிக் கேட்ட இரண்டு சக்கர வாகனம் (காவாஸகி பஜாஜ்) உள்ளுர் இருந்தவர் பெயர் வைத்து வாங்கியாகி விட்டது. இதன் மூலம் இரண்டு பலன். நினைத்த இடத்திற்கு விரைவாகச் செல்ல முடியும். மற்றொன்று தேவைப்படும் போது இதன் பேட்டரியை பல விதங்களிலும் பயன்படுத்திக்கொள்ள முடியும். இத்துடன் இலவச இணைப்பு போல் தனியாக வாங்கிய கார் பேட்டரி என்பது வயர்லெஸ் தொடர்பு இயக்குவதற்குப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. மனதில் வைத்திருந்தபடியே மொத்த பூர்வாங்க ஏறபாடுகளையும் முடித்தாகி விட்டது.. இலங்கை என்றால் எதற்கும் ஒத்திகை தேவையில்லை. வெடித்துச் சிதறும் காட்சி உறுதியாய் ஊடகத்தில் தெரியவரும். இது இந்தியா. ஓத்திகை வேண்டும் என்ற நிணைத்த சிவராசன் நந்தனத்தில் விபி சிங் பேசிய பொதுக்கூட்டத்திற்கு மே 7 (1991) இந்த ஐவர் கூட்டணியுடன் சென்றார். சிவராசன் எப்போதும் போலக் குர்தா உடையில் பத்திரிக்கையாளர் வரிசையில் அமர்ந்து இருந்தார். இதற்கென்று ஏற்கனவே நகலாக உருவாக்கப்பட்ட பல ஆங்கிலத் தமிழ் பத்திரிக்கைகளின் முகவரி ஒட்டிய அடையாள அட்டை பையில் தயாராக இருந்தது. ஏற்கனவே பேசி வைத்திருந்த திட்டப்படி சுபா, தணு இருவரும் விபி சிங் அருகே சென்று கொண்டு போயிருந்த மாலையைப் போட வேண்டும். இதை நளினி புகைப்படமாக எடுக்கப்படவேண்டும். ஆனால் கூட்ட நெரிசலில் இருவரும் விபி சிங் அருகே மிக அருகே செல்ல முடிந்த போதிலும் அதை நளினியால் புகைப்படமாக எடுக்க முடியவில்லை. ஆனால் அப்போது சிவராசன் நளினி மூலம் உணர்ந்து கொண்டது முக்கியமாக ஸ்ரீ பெரும்புதூரில் பயன்பட்டது. தமிழ்நாட்டில் பொதுக் கூட்டத்திற்கு வரும் தலைவர்கள் அருகில் செல்ல வேண்டுமானால் அதற்கென்று தனி உழைப்பும் உள்ளுர் சாமிகளைக் கவனித்தும் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டார், இப்போது வருத்தப்பட்டு என்ன செய்ய முடியும்? ஆனால் அன்றே அவர்களுக்கு உறுதியாய் தெரிந்து விட்டது. நாம் போகும் பாதை வெற்றிப்பாதை தான். சந்தேகம் என்பதே வேண்டாம். கம்பியில்லா தகவல் தொடர்பில் ஒத்திகையின் வெற்றியை உடனடியாகச் சம்மந்தப்பட்டவர்களுக்கு கூடத் தெரிவித்தாகி விட்டது. அவர்கள் அப்போது யாழ்பாணத்தில் சொன்னது முக்கியமான ஒன்று. ஈழத்தவராக இல்லாவிட்டாலும் ஆபிஸர் பெண்மணி (நளினி) ஒத்துழைப்பு மிக அற்புதம் என்ற செய்தியை கடத்தியிருந்தார்கள். இனி என்ன? நேரிடையாக மே 21 செல்ல வேண்டியது தான். மே 20 சிவராசன் சம்மந்தபட்ட மொத்த கூட்டணியினரையும் பாக்யநாதன் வீட்டுக்கு வரவழைத்து சிறிய கூட்டத்தை ஏற்பாடு செய்து இருந்தார். என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதைத் தெளிவாக விளக்கிவிடக் கூட்டம் கலைந்தது. இந்த இடத்தில் நளினியைப் பற்றி நாம் புரிந்து கொள்ளவேண்டும். காரணம் நளினியை புலனாய்வு குழுவினர் கைது செய்த போது இரண்டு மாத கர்ப்பவதி. சிறையிலேயே பிறந்த குழந்தை, பின்னால் புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டுருந்தவர்கள் மூலம் வெளிநாட்டுக்கு குழந்தை வளர அனுப்பப்பட்டது. வளர்ந்த குழந்தையின் முகத்தைக் கூடப் பார்க்க முடியாமல் சிறைக்கூடத்தில் வாடிக்கொண்டுருப்பவர். அந்தக் குழந்தைக்காகவே தன்னுடைய மீதி நாட்கள் நன்றாக அமையவேண்டும் என்று தன்னை ஆறுதல் படுத்திக் கொண்டு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருப்பவர். ஒரு மனித வாழ்வில் பாதி நாட்களைச் சிறையிலேயே கழித்தவர். தமிழ்நாட்டில் நடந்த வெடிகுண்டு வழக்குகளில் கூட எத்தனையோ அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் கூட அரசாங்க விடுமுறை முதல் மற்ற அத்தனை சலுகைகளையும் கணக்கில் கொண்டு 9 முதல் 10 வருடங்களில் வெளியே வந்துள்ளனர். ஆனால் இவர் இன்னமும் வெளியே வர முடியவில்லை. வெளியே கொண்டு வர வாய்ப்பு இருந்தும், இவருக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றிய கருணை கூட இவரின் கண்ணீர் வாழ்க்கையை முடிவுக்கு இன்னமும் கொண்டு வரமுடியவில்லை.. இவர் செய்த வேலையென்பது முருகனுடன் உருவான காதல் காரணமாக வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது. அவர்களுடன் உடந்தையாக இருந்தாரே தவிர உண்மையான குற்றவாளி அல்ல. இவர் கைதுக்குப் பிறகு தான் திட்டத்தின் அடித்தளமே புலனாய்வு குழுவினருக்குப் புரிந்தது. மேலும் பிடிபட்டவர்கள் ஒவ்வொருவரும் சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல வாக்கு மூலம் கொடுத்தார்களே தவிர நளினி அளவிற்கு முழுமையாக ஒப்புவித்தவர் எவருமில்லை. இபிகோ சொல்லும் உடந்தைக்கு உண்டான தண்டனை என்பதைச் சட்டம் நிர்ணயித்ததைவிட அதிகப்படியாகவே பெற்றும் விட்டவர். ஆனால் இன்னமும் நம்பிக்கையை மட்டும் சுமந்து கொண்டு நெருப்பு நாட்களைக் கழித்துக்கொண்டுருப்பவர்.. தனக்குக் கிடைத்த தண்டனைக் காலத்தைக்கூட வீணாக்காமல் பல பட்டய மற்றும் பட்டப்படிப்புகளைப் படித்து முடித்துச் சாதனை புரிந்தவர். நளினி செய்த முதல் பாவம் முருகனிடம் மனதை பறிகொடுத்தது. முருகனால் மூளைச் சலவை செய்யப்பட்டவர். தாயிடம் இருந்து வெளியே வந்தவர் தேடிய அன்பு முருகன் மூலம் கிடைத்ததால் தன்னை மறந்தவர். முருகன் மேல் உருவான காதலால் சிவராசன், சுபா, தணுவுடன் பழகியவர். இந்த மூளைச்சலவை தான் மே 21 அன்று சிவராசன் ” நீங்கள் இன்று உங்கள் அலுவலகத்திற்கு விடுமுறை சொல்லிவிட்டு வந்து விடுங்கள் ” என்றதும் அதே போல் அரை நாள் அலுவலக விடுமுறை எடுக்க வைத்தது. இவரின் அம்மா பத்மா செவிலியராக (NURSE) வேலைப்பார்த்தவர். பணிபுரிந்த மருத்துவ மனையில் புகைப்பட நிறுவனம் நடத்திக் கொண்டுருக்கும் சுபா சுந்தரம் மனைவி (இதில் பின்னால் வரப்போகும் பிரபல்யத்தின் மனைவி) குழந்தைபேறுக்காக வந்த போது நளினியின் அம்மா அவருடன் நெருக்கமாக பழகினார். அந்தத் தொடர்பு மூலம் தன்னுடைய மகன் பாக்யநாதனை 1987 தொடக்கத்தில் சுபா சுந்தரம் நிறுவனத்தில் சேர்த்து விட்டார். சுபா சுந்தரம் விடுதலைப்புலிகளின் ஆதரவு என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அங்குப் பாக்யநாதனுக்கு உருவான விடுதலைப்புலிகளின் வரிசையான தொடர்பு கடைசியில் தனியாகப் பிரிந்து வாழ்ந்து கொண்டுருந்த நளினி விடு வரைக்கும் கொண்டு வந்து சேர்த்தது. விடுதலைப்புலி இயக்க தொடர்புகளை உருவாக்கியவர் சகோதரர் பாக்யநாதன். அதன் மூலம் நளினியின் வீட்டுக்கு உள்ளே வந்தவர் முருகன். விடுதலைப்புலிகளின் இயக்க உளவுத்துறை வேலைக்காக இலங்கையில் இருந்து வந்தவர் முருகன். முருகன் நளினி மேல் கொண்ட காதல் சிவராசனுக்குப் பலவிதங்களிலும் உதவியது. பெரும்புதூருக்கு நளினியை உடன் கூட்டிச் செல்லவேண்டும் என்பது சிவராசனின் பல்வேறு திட்டமிடுதலின் அடிப்படையில் கூட இருக்கலாம். திட்டத்தை முழுமையாகத் தெரிந்தவர் காரியம் முடியும் தருணத்தில் வெளியில் இருந்தால் தவறாக முடியலாம் என்ற எண்ணமாகவோ, அவர்களின் மொத்த திட்டத்தின்படி எவரையோ ஒருவர் மாட்டிக்கொள்ள வைக்க என்பதாகவும் இருக்கலாம். ஆனால் தொடக்கம் முதல் நளினியிடம் சிவராசன் எதிர்பார்த்தது ஒன்றே ஒன்று தான். சுபா, தணு இருவரும் திட்டம் முடியும் வரைக்கும் எவருடனும் பேசிவிடக்கூடாது. பேசினால் அவர்களின் இலங்கைத் தமிழ்மொழி காட்டிக் கொடுத்துவிடும். திடீர் என்று கூட்டத்தில் எவராவது பேசும்பட்சத்தில் நளினியை வைத்துச் சமாளித்துக் கொள்ளலாம் என்பதாகத்தான் இருந்தது. . மே 21 இரவு, பாக்யநாதன் அன்று இரண்டாம் ஆட்ட திரைப்படத்திற்குச் சென்று விட்டார். முருகன் இரவு சாப்பாடு முடித்து உறங்கப் போய் விட்டார். ஆனால் நளினியின் விதி சுபா வாயால் பேச வைத்தது. “துரோகி ராஜீவை கொன்று இன்று தணு புதிய சரித்திரம் படைக்கப் போகிறார். நீங்களும் வாருங்களேன் ” என்று சுபா அழைத்தும் சற்று கூட யோசிக்காமல் அவர்களுடன் கிளம்பினார். ஆனால் கிளம்புவதற்கு முன் சுபா மாட்டிவிட்ட தணுவின் உடையில் உள்ளே இருந்த புதிய வித்யாசமான ஆடைகளைப் பார்த்தவர். அதன் முழு வீர்யம் அப்போது உணர்ந்தாரா என்பதும், அதன் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதையும் யோசிக்காமல் கிளம்பினார். “இளங்கன்று பயமறியாது” என்பது எந்த அளவிற்கு உண்மையோ அந்த அளவிற்குக் “காதலுக்குக் கண் இல்லை” என்பதும் இந்தத் துக்கச் சரித்திரத்தின் தொடக்கமாகப் போய்விட்டது. நளினி வில்லிவாக்கம் வீட்டில் இருந்து குழுவினர் கிளம்பிய நேரம் பிற்பகல் 3 மணி. நால்வரும் பாரிமுனைக்கு வந்த நேரம் 4.30, அங்கு இவர்கள் வருகைக்காகக் காத்துருந்த புகைப்படம் எடுக்கத் தயாராய் இருந்த ஹரிபாபு பூம்புகார் கடையில் வாங்கிய சந்தன மாலையுடன் ஸ்ரீபெரும்புதூர் வந்து இறங்கிய போது நேரம் ஏறக்குறைய 7.30 (?). ஸ்ரீபெரும்புதூர் அத்துவான பொட்டல்காடு. செங்கல்பட்டு மாவட்டம் முதல் காஞ்சிபுரம் வரைக்கும் இன்று பரவியுள்ள வெளிநாட்டு வணிகத் தொடர்பு நிறுவனங்கள் எதுவும் வராத காலம். இவர்கள் வந்து இறங்கிய போது ஏறக்குறைய இருட்டாகத் தான் இருந்தது.. தலைவர் பேசும் கூட்டத்திற்கு கூட்டம் வந்து சேராதா? என்று காத்துக் கொண்டுருப்பவர்களுக்கு வருபவர்கள் ஒவ்வொருவரும் சந்தோஷமளிப்பவர்கள் தானே. வந்த இந்த ஐவர் கூட்டணியினரை அங்கேயிருந்தவர்கள் கண்டு கொள்ள வாய்ப்பும் இல்லை.. அரைக் குறை இருட்டும் அப்போது இவர்களுக்குச் சாதகமாகவே இருந்தது. இதற்கெல்லாம் மேல் பல தீவிரவாத அச்சுறுத்தல்கள் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அங்கு உருவாக்கப்பட்ட பாதுகாப்புச் சமாச்சாரங்கள் அத்தனையும் நகைச்சுவை போலத்தான் இருந்தது. முள்ளிவாய்க்கால் இறுதி கட்ட போருக்குத் தன்னால் ஆன முழு ஒத்துழைப்பையும் வழங்கி தன்னுடைய பங்களிப்பையும் அளித்த அப்போதைய ஐ.பி உயர் அதிகாரி நாராயணன் துறை மூலம் வழங்கப்பட்ட ரகசிய அறிக்கையில் விடுதலைப்புலிகள் குறித்து எந்தப் புரிந்துணர்வும் உருவாக்கவில்லை என்பதும் இங்குக் குறிப்பிட்டே ஆக வேண்டும். உள்ளே வந்ததும் தணு,சுபா,நளினி மூவரும் முதலில் பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்திற்குச் சென்றார்கள். சிவராசன், ஹரிபாபு வேறு பக்கம் பிரிந்து போய் விட்டனர். ராஜீவ்காந்தி பயணித்த விமானம் சென்னை மீனப்பாக்கம் விமான நிலையத்தை வந்து அடைந்த நேரம் 8.20, ராஜீவ் காந்தியுடன் குண்டு துளைக்காத கார், மீனம்பாக்கத்தை விட்டு வெளியே வந்து ராஜீவ் பயணித்த காரில் பயணம் செய்தவர்கள், வாழப்பாடி ராமமூர்த்தி, வேட்பாளர் மரகதம் சந்திரசேகர் பிரத்யோக பாதுகாப்பு அதிகாரி இவர்களுடன் பேட்டி கேட்டுருந்த கல்ப் நியூஸ், நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கையாளர்கள். ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தை ஏற்பாடு செய்து மொத்த பொறுப்பையும் ஏற்றுருந்தவர் மரகதம் சந்திரசேகரின் பிரத்யோக உதவியாளர் ஏ.கே.தாஸ். எவரெல்லாம் ராஜீவ் காந்திக்கு மாலை அணிவிக்கப்பட வேண்டும் என்பதில் தொடங்கி, நடந்து வரும் போது அவருடன் அறிமுகப் படுத்தப்பட வேண்டியவர்கள், மாலை போட அனுமதிக்கப்பட வேண்டியவர்கள் என்பது வரைக்கும் மிகவும் பரபரப்பாகப் பட்டியல் தயாரித்து அலைந்து கொண்டிருந்தார். அதற்கும் மேலே அங்குச் சேர்ந்து இருந்த கூட்டத்தை நிலை நிறுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுருந்த சங்கர் கணேஷ் இன்னிசை நிகழ்ச்சி நடந்து கொண்டுருந்தது. ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் வந்து இறங்கியதும் திட்டமிட்டபடி சாலையின் தொடக்கத்தில் இருந்த இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட வேண்டும். அதனைத் தொடர்ந்து நடந்து வந்து தரையில் போட்டுருந்த சிவப்புக் கம்பளம் வழியே நடந்து மேடைக்குச் செல்ல வேண்டும். செல்லும் போது கம்பளத்தின் ஓரத்தில் நின்று கொண்டுருக்கும் முக்கியமானவர்களைச் சந்திப்பதும், அவர்கள் அணிவிக்கும் மாலை மரியாதை ஏற்றுக்கொண்டு பொதுக்கூட்ட மேடையை அடையவேண்டும். ஓரமாகப் போட்டுருந்த தடுப்புக் கட்டைகளுக்குப் பின்னால் பொதுமக்கள் கூட்டம். வேட்பாளர் மரகதம் சந்திரசேகரரின் மகள் லதா பிரியகுமார். இவர் உதவியாளர் பெயர் லதா கண்ணன். லதா கண்ணனின் அப்பா ஒரு கவிதை எழுதி அதனை ஹிந்தியில் மொழிபெயர்த்து வைத்திருந்ததை மகள் கோகிலா மூலம் வரும் ராஜீவ் காந்தியிடம் வாசித்துக்காட்ட சிறப்பு அனுமதி பெற்று வரிசையில் காத்திருந்தனர். மொத்த 23 பேர்களில் இந்தக் கோகிலா தவிர மற்ற அனைவரும் ஆண்கள். தணு இப்போது இந்தக் கூட்டத்தில் இல்லை. இந்த 23 பேர்களில் மூவர் மட்டும் மாலை போட அனுமதி பெற்றவர்கள். மற்ற அனைவரும் உரையாடலுக்கு அனுமதி பெற்றவர்கள். இந்தச் சடங்குகளை முடித்து விட்டு ராஜீவ் காந்தி நேரிடையாக மேடைக்குச் செல்ல வேண்டும். உள்ளே பாதுகாப்புப் பணியில் இருந்த தமிழ்நாடு காவல் துறை தலைமை அதிகாரி ராகவனுக்கோ எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டுருந்தது. பாதுகாப்புக்காக ஈடுபட்டுருந்த காவல்துறையினரின் எண்ணிக்கை வெறும் 300 மட்டுமே. அத்துவான காட்டில் அப்போது உருவாக்கியிருந்த திடீர் வெளிச்சம் மட்டுமே உறுதுணையாக இருந்தது. இதுவும் திடீர் என்று நின்று போனால் கும்மிருட்டு தான். இதற்கிடையே தொண்டர்கள் என்ற பெயரில் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் குளறுபடி செய்து கொண்டுருந்தனர். எவரையும் திருப்திபடுத்த முடியவில்லை. அங்கிருந்த எவருமே காவல்துறையினர் உத்தரவுகளுக்குக் கீழ்படியும் சூழ்நிலையில் இல்லை. சப் இன்ஸ்பெக்டர் அனுசுயா தலைமைப்பொறுப்பில் பணியில் இருந்தவர். இவருக்கு மேல் அதிகாரி ராஜேந்திரன். ராஜீவ் காந்தியை சந்திக்கும் கூட்டத்தை ஒழுங்குபடுத்திச் சந்திப்பை முடித்து வைக்க வேண்டும். அவருக்கு அணிவிக்கும் மாலைகளைத் துண்டுகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட வேண்டும். முறைப்படி முழுமையாக அதுவும் நடக்கவில்லை. வரிசையில் நிற்பவர்களின் பெயர்கள் சோதிக்கப்பட்டு ஆவணமாகச் செய்துருக்க வேண்டும். இதுவும் செய்தபாடில்லை. ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் வந்து இறங்கிய நேரம் இரவு 10.10 உள்ளே நடந்து வந்து தொடக்கத்தில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு மாலை போட்டு முடிப்பதற்குள் ஓரளவிற்கு ஓழுங்கு படுத்தியிருந்த கூட்டமும் மொத்தமும் கலைந்து அவரவர் முண்டியடித்துக் கொண்டு ராஜீவ் காந்தியை நோக்கி முன்னேறினர். பொறுப்பில் இருந்த தாஸ் கொடுத்த பட்டியலை வைத்துக்கொண்டு ஒரு சிலரை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதித்தனர். ஒழுங்குபடுத்தப்பட்ட கூட்டம் திமுதிமுமென்று திசைமாறி தருணத்தைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறினர். அப்போது கவிதை படிக்கக் காத்திருந்த கோகிலா பின்னால் வந்து தணு நின்று கொண்டு இருந்தார். இந்தச் சந்தோஷ தருணத்தில் இருந்த கோகிலாவோ அவர் அம்மாவோ தங்கள் அருகே நின்று கொண்டிருந்த தணுவை கவனிக்கும் சூழ்நிலையில் இல்லை. தணுவுக்கு மொத்தமும் சாதகமாகி விட்டது. ராஜீவ் காந்தி தன் அருகே வருவதற்குக் காத்துக் கொண்டிருந்தார் தணு. கவனிக்கும் தூரத்தில் சிவராசன். அதற்கும் சற்றுத் தொலைவில் சுபா, நளினி. இவர்கள் அத்தனை பேர்களையும் வேறொருவரும் அங்குக் கவனித்துக்கொண்டுருந்தார். அவரைச் சுபா, தணு,ஹரிபாபு எவருக்குமே தெரியாது. உடன் வந்த அயல்நாட்டு பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டி கொடுத்து முடித்து விட்டு பயணித்து வந்த காரை விட்டு இறங்கிய ராஜீவ் காந்தி அவர்களை வேறொரு காரில் அனுப்பி விட்டு நடந்தார். உடன் வந்த வாழப்பாடி ராமமூர்த்தி மேடையை நோக்கி முன்னேறிச் சென்று விட்டார். வந்து இறங்கிய போது வரவேற்ற கருப்பையா மூப்பனார் இந்திரா காந்தி சிலைக்கு மாலையிட்ட நிகழ்ச்சி முடிந்ததும், ராஜீவ் காந்தியை மரகதம் சந்திரகேசரருடன் அனுப்பி விட்டு மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தார். ராஜீவ் காந்தியுடன் வந்து கொண்டுருந்த மரகதம் சந்திரசேகர் வரிசையில் நின்று கொண்டுந்த ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து கொண்டே வந்தார். சால்வை போட்ட தொண்டர் ஒருவர் ராஜீவ் காந்தி கையைப் பலமாகப் பற்றிக்கொண்டு விட மறுக்க அப்போதைய அந்தச் சூழ்நிலை சற்றுத் தர்மசங்கடத்தை உருவாக்கியது. அங்கிருந்த வீடியோ புகைப்படக் காரர்களுக்குத் தேவைப்படும் மின்சாரம் மேடையில் இருந்து வந்து கொண்டிருந்ததால், மின்சாரம் இல்லாத சூழ்நிலையில் எவரும் இந்த நிகழ்வுகளைப் புகைப்படம் எடுக்க முடியாமல் கருவிகளை நிறுத்தி விட்டு அமைதியாக இருந்தனர். ஆண்கள் பகுதியின் அறிமுகம் முடிந்ததும் இப்போது ராஜீவ் காந்தியை பெண்கள் வரிசையாக நின்று கொண்டுருக்கும் பகுதிக்கு மரகதம் சந்திரகேசர் அழைத்து வந்து அறிமுகத்தைத் தொடங்கியிருந்தார். அப்போது நடந்த சில வித்யாசமான சம்பவம் ராஜீவ் காந்தி உடன் நடந்து வந்துகொண்டுருந்த மரகதம் சந்திரசேகர் கையை மற்றொருவர் பிடித்துக்கொண்டு அவரை மேடையை நோக்கி அழைத்து சென்று கொண்டிருந்தார். கவிதையை வாசித்து முடித்த கோகிலாவை தாண்டிய ராஜீவ் காந்தி தணுவை நெருங்கியிருந்தார். அப்போது தான் பாதுகாப்புப் பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் அனுசுயா தணுவைப் பார்க்க, பட்டியலில் இல்லாத இவரை ஒதுக்கித்தள்ள முன்னால் வர பாதி நீட்டிய சந்தனமாலையுடன் நின்ற தணுவை ஒதுக்க வேண்டாம் என்ற சாடையால் காட்டிவிட்டு அவர் போட்ட சந்தனமாலையைக் கழுத்தில் வாங்கிக்கொண்டார். அப்போது பார்க்கும் தொலைவில் நின்று கொண்டுருந்த சிவராசன் கண் ஜாடையால் நகரச் சொல்லிவிட்டு இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்டில் உள்ள முதல் பொத்தனை அமுக்கிவிட்டு ராஜீவ் காந்தியை வணங்குவதுபோல் குனிய இரண்டாவது பொத்தானும் அழுத்தப்பட்டது. நடந்த நிகழ்வுகளைப் படங்களாக எடுத்துக் கொண்டிருந்தார் ஹரிபாபு. கடைசியாக அவர் எதிர்பார்த்துக் கொண்டுருந்த இந்தப் படத்தை எடுக்கத் தயாராக இருந்தார். தனது பார்வையைப் புகைப்படக்கருவியில் உள்ள லென்சு வழியே கூர்மைப்படுத்தினார். அங்கே உருவாகியிருந்த கூட்ட நெரிசலில் சரியாக எடுக்கப்படாமல் போய்விடுமோ என்ற அச்சம் உருவாக முன்னேறி உள்ளே வந்தார். தணு என்ற மனித வெடிகுண்டு வெடித்தது. அந்த காட்டில் இருந்த இருட்டில் அப்போது திடீர் என்று உருவான தீப்பிழம்பையும், மனித கதறல்களையும் மௌனமாக உள்வாங்கி மீண்டும் அமைதியானது. [] கத்திய கதறல்களும், அலங்கோலமும், சிதைந்த உடல்களும், கருகிய வாசனையும், உருக்குலைந்த சடலங்களுக்கும் இடையே ராஜீவ் காந்தி எங்கே? என்று தேடத் தொடங்கினர். முன்பே மேடைக்கு போய்ச் சேர்ந்திருந்த வாழப்பாடி ராமமூர்த்தியும் தூரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த கருப்பையா மூப்பனாரும் கதறிக்கொண்டு வந்து தேடத் தொடங்கினர். 6. ராஜீவ் என்றொரு சதை துணுக்குகள் சிவராசன் குழுவினர் எதிர்பார்த்தபடியே ராஜீவ் காந்தி படுகொலையென்பது மனித வெடிகுண்டு மூலம் நிகழ்த்தியாகிவிட்டது. இருபது அடி உயரத்துக்கு எழும்பிய புகைமூட்டமும், உருவான கூச்சலும் குழப்பமும் அங்கு என்ன நடக்கிறது? என்பதே பலருக்கும் புரியவில்லை. காவலுக்கு இருந்த பல போலீஸ்காரர்கள் அலறி அடித்து ஓடிக்கொண்டிருந்தனர். தைரியமான காவல் துறையைச் சேர்ந்தவர்களும், கட்சிக்காரர்களும் மனோதிடத்துடன் அங்கேயே நின்று கொண்டுருந்தனர். தேடி வந்த வாழப்பாடியும், மூப்பனாரும் சிதறிக் கிடந்த சதை குவியலில் ராஜீவ் காந்தியின் உடலை தேடினர். அந்தச் சூழ்நிலையில் அத்தனை சுலபமாக இல்லை. ஐந்து நிமிடத்திற்கு முன் உயிருள்ள மனிதர்களாக நின்று கொண்டுருந்தவர்கள் அத்தனை பேர்களும் இப்போது சதை துணுக்குகளாக, தலை கை கால் வேறு வேறாகச் சிதறிக் கிடந்தார்கள். அடையாளம் காண்பதற்காக ” ஒவ்வொன்றையும் ” புரட்டிப் பார்க்க வேண்டியிருந்தது. இறுதியாக மனத்துணிவுடன் பார்த்தவர்கள் கண்களில் சிக்கியது ராஜீவ் காந்தி அணிந்து வந்த லோட்டோ ஷீ. அதன் மூலம் மட்டுமே அவரது உடலை கண்டு பிடிக்க முடிந்தது. அரற்றிக் கொண்டுருந்த மூப்பனார் மனத்துணிவுடன் குப்புறவாக்கில் கிடந்த உடலை திருப்பிய போது சதை துணுக்குகளாய் கோரமாய் இருக்க உருக்குலைந்து கிடந்த உடம்பில் துணியைப் போட்டு மூடினார். மேற்கொண்டு எதுவும் குண்டுகள் வெடிக்குமோ என்று உடன் இருந்தவர் மூப்பனாரை அங்கிருந்து நகர்த்த முற்பட அப்போது அவர் சொன்ன வாசகம். ” தலைவனே போயிட்டார் இனிமேல் என்னயிருக்கு” என்றார். அந்த நிமிடம் வரைக்கும் கம்பளம் எறிந்து கொண்டுருந்தது. லதா கண்ணன், கோகிலா, ஹரிபாபு,ராஜீவ் காந்தியின் பிரத்யோக காவல் அதிகாரி,மாவட்ட காவல்துறை அதிகாரி இக்பால் உட்பட ஒன்பது காவல்துறையைச் சேர்ந்தவர்களும் தணுவுடன் இறந்திருந்தனர். அருகில் இருந்த பலருக்கும் பலத்த காயம். அரசாங்க அறிக்கை என்பது பின்னாளில் வந்து சம்பிராதயக் கணக்குகளைச் சொன்னதே தவிர உண்மையிலேயே அப்பாவிகள், பார்க்க வந்தவர்கள், உள்ளே இருந்தவர்கள் எத்தனை பேர்கள் இறந்தார்கள் என்பது போய்ச் சேர்ந்த ராஜீவ் காந்தி ஆன்மாவுக்குத் தான் தெரியும்? தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டுருந்த சிவராசனுக்குத் திருப்தி மனதிற்குள் இருந்தாலும் அந்தச் சூழ்நிலையில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் படபடப்பு தான் உருவாகியிருந்தது. அந்தச் சூழ்நிலைதான் அப்போது அவர்களை விரைவாக இந்த இடத்திலிருந்த வெளியேற வேண்டும் என்று உந்தித் தள்ளியது. சுபா, நளினியை அழைத்துக் கொண்டு முக்கிய சாலைப்பகுதியை நோக்கி விரைந்தனர். அருகில் இருந்த வீட்டில் படபடப்பை அடக்கத் தண்ணீர் வாங்கிக் குடித்து விட்டு ஆட்டோ, பேரூந்து மூலம் சென்னை வந்தடைந்தனர். இத்தனை தெளிவாகச் சிறப்பாக ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செயல்படுத்தி ஜெயித்த சிவராசன் எதிர்பார்க்காதது ஹரிபாபு மரணம். ஆவணத்திற்காக அந்தப் புகைப்படம் வேண்டும். எந்த அளவிற்கு வெடிகுண்டின் தாக்கம் இருக்கும்?. எந்த இடத்தில் நின்று கொண்டு புகைப்படத்தை எடுக்க வேண்டும் என்ற உத்தரவை மீறி ஹரிபாபு சென்றாரா? அல்லது அவரின் விதியும் அவரைக் கொண்டு போய்ச் சேர்த்ததா? என்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் இல்லை. ஆனால் மொத்தமாய் அன்று ஸ்ரீபெரும்புதூர் இருட்டில் நின்று கொண்டு சிரித்த விதி உருவாக்கிய மாய வலை வேறு ஒன்றையும் உருவாக்கியிருந்தது. ஹரிபாபு பயன்படுத்திய புகைப்படக்கருவி சதைக்குவியல் மேல் கிடந்தது முதல் ஆச்சரியம். எந்தப் பிரச்சனையும் இல்லாமல் எடுக்கப்பட்ட புகைப்படம் லட்டாகப் புலனாய்வு குழுவினர் கைக்குக் கிடைத்ததென்பது அடுத்த அதிசயம். அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கடமை தவறாத காவல்துறை அதிகாரி ராகவன் சம்மந்தப்பட்ட இடத்தை வளைத்துக் கவனமாகக் காவல் காத்ததும் அந்தப் புகைப்படக் கருவி வந்து சேர வேண்டிய இடத்திற்கு மிகக் கவனமாக வந்து சேர்ந்ததும் முக்கியக் காரணமாக இருந்தது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அப்போது அங்கே உருவான அக்னிபிழம்பு அந்தப் புகைப்படகருவிக்கு எந்தச் சேதாரத்தையும் உருவாக்காத காரணத்தால் அதன் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் விடுதலைப்புலிகள் மேல் வைத்திருந்த மொத்த மதிப்பும் தமிழ்நாட்டு மக்களை வெறுப்பாக மாற்ற உதவியதன் தொடக்கப்புள்ளி அது. காரணம் அப்போது வரைக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை விரும்புவர்களும், வெறுப்பவர்களும் தமிழ்நாட்டில் இருந்த போதிலும் அத்தனையும் மீறி ஒரு மொத்தமான நல்ல பார்வை அவர்கள் மேல் இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. அறிவுஜீவிகளின் லாவணி அன்று முதல் இன்று வரை ஒரே மாதிரியாக இருந்தாலும் ராஜீவ் காந்தி மரணத்திற்குப் பிறகு அவர்களின் கச்சேரி என்பது சுருதி சுத்தமாய் ஒலிக்கத் தொடங்கியது. அவசரமாய் வரவழைக்கப்பட்ட ஸ்டிரச்சரில் சிதைந்த ராஜீவ் உடலை ஏற்றி சென்னை அரசினர் பொது மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு துரிதகதியில் நடந்தது காவல்துறை வண்டியில் ஏற்றப்பட்டு அனுப்பப்பட்டது. இந்த இடத்தில் ராஜீவ் காந்தியை படுகொலை செய்யப்பட வேண்டும் என்ற திட்டத்திலும் அது எவ்வாறு நிகழ்த்தப்பட வேண்டும் என்று உள் கட்டளைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே சாவு என்பதை விட இதை ஒரு பெண் மூலம் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்பதற்கு ஒரு காரணமும் இருந்து இருக்க வேண்டும். அந்தச் சாவும் மிகக் கோரமான சாவாகத்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்தவர்கள் அதன்படியே உருவாக்கி இருந்தார்கள். ராஜீவ் காந்தியின் முகத்துக்கு அருகே நிற்கும் தருணத்தில் வெடிகுண்டு வெடித்தால் மட்டுமே எதிர்பார்த்த வெற்றி. காரணம் உருவாகும் மரண விளைவு என்பது விபரீதத்தின் உச்சமாக இருக்க வேண்டும். அந்த அளவிற்குத் தான் இறுதியில் நடந்து முடிந்து இருந்தது. மிஞ்சியிருந்த துண்டு துணுக்குகள், பாகங்களைப் பொட்டலாமாகக் கட்டி கொண்டு போய்ச் சேர்த்து இருந்தாலும் போஸ்மார்டம் செய்த மருத்தவரின் (டாக்டர் செசிலியா சிரில்) அறிக்கையும் படித்துப் பார்க்கத்தான் வேண்டும். ” தலையில் கபாலப்பகுதி எலும்புகள் நொறுங்கி பெருத்த சேதமுற்று மூளை சிதறிவிட்டிருந்தது. முகத்தில் உதடுகளும், மூக்கும், கண்களும் நாசமாகி இருந்தன. முகவாட்டை எலும்புகள் நொறுங்கி இருந்தன. வயிற்றுப் பகுதியிலும் குடல்கள் கல்லீரல் வெளியே வந்திருந்தன. இடது நுரையீரல் மிகச் சிதைந்து காணப்பட்டது. கை பெருவிரலும், ஆள்காட்டி விரலும் சேதமாக இருந்தன. எக்ஸ்ரே செய்து பார்த்ததில் உடலில் இருந்த கிட்டத்தட்ட எல்லா எலும்புகளும் உடைந்து இருந்தன. உடல் முழுவதும் சிறு சிறு குண்டுகளால் துளைக்கப்பட்டு இருந்தது “ இதே போல் வெடித்துச் சிதறிய தணுவின் தலை, சிதைந்த கை கால்கள் போன்றவைகள் பார்ப்பதற்குக் கோரமாகக் கொடுமையாக இருந்தது. அவர் அணிந்து இருந்த பெட்டிகோட் போன்ற உள்ளாடை ஜாக்கெட் வடிவத்தில் இறுக்கமாகத் தைக்கப்பட்டு இருந்தது, உள்ளே உருவாக்கப்பட்ட வெடிகுண்டுகளுடன் இணைக்கப்பட வேண்டிய ஓயர்கள் செல்ல வேண்டிய பாதைக்குக் குழாய் போன்ற வடிவத்தில் வெளியே தெரியாத அளவிற்குச் சிறப்பான முறையில் தைக்கப்பட்டு இருந்தது. சிறப்பான தையற்கலை வல்லுனர் தோற்றுப்போகும் அளவிற்குத் தைக்கப்பட்டு இருந்தது. வீர்யம் மிக்க மருந்துக்களைச் சிறு குண்டுகளாக மாற்றப்பட்டு மொத்தமாகக் கோர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டு இருந்தது. மிகச் சிறய அளவிலான குண்டுகளை ஒன்றன்பின் ஒன்றாக கோர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த ஜாக்கேட் இறுக்கமாகவே இருந்தது. இறுக்கம் தளராமல் இருக்கப் பெல்ட் வடிவ அமைப்பு கீழே உருவாக்கப்பட்டு இருந்தது. அணிபவரின் உடல் பருமன் என்பது நபருக்கு நபர் மாறக்கூடும். ஆனால் பெல்ட் இருப்பதால் எவர் அணிந்தாலும் ஒரு உருவத்திற்குள் கொண்டு வந்து விட முடியும். பெல்ட்டை இழுத்து மாட்டிக்கொண்டால் மொத்தமும் ஒரு ஒழுங்குக்கு வந்து சிறப்பாக உடலுடன் பொருத்திக்கொள்ள முடியும். ஜாக்கெட்டுக்குள் வரிசைகிரமமாக வைக்கப்பட்ட வெடி குண்டுகளைக் கொண்டு ஜாக்கிரதையாகத் தைக்கப்பட்ட மொத்த அமைப்பையும், வெடிக்க வைக்கப்பட வேண்டிய ஓயர்களுக்கான கட்டுப்பாட்டின் பொத்தான் என்பதும் இடுப்புக்கு கீழே வரும்படி உருவாக்கப்பட்டு இருந்தது. இதன் நோக்கமென்பது குனியும் போது கைக்கு எட்டும் உயரம். உள்ளாடையின் உள்ளே மொத்த வெடிகுண்டுகளையும் கட்டுப்படுத்துவது இரண்டு பொத்தான்கள். முதல் என்பது இயக்கும் விசையென்பது ஏதும் தவறுதலாக அழுத்தப்படும் பட்சத்தில் மொத்த இயக்கத்தையும் நிறுத்துவதற்குப் பயன்படும். இரண்டாவது என்பது வெடிக்கச் செய்யும் வீர்யம். இத்தனையும் நவீன தொழில் நுட்பமோ, வெளிநாட்டு இறக்குமதியோ அல்ல. [] இது சிங்களர்களுக்கென்று பிரபாகரன் மனதில் உருவாக்கப்பட்ட அமைப்பு பிரபாகரன் துப்பாக்கி சுட கற்றுக்கொண்டது முதல் இது போன்ற வெடிபொருட்கள், பின்னால் வந்த நவீன ரக ஆயுதங்கள் அத்தனையும் பயிற்சி எடுத்து கற்றுக் கொண்டது அல்ல. புத்தகங்கள் படித்துக் கற்றுக்கொண்டது. தணு மாட்டியிருந்த வெடிகுண்டு அமைப்பு அமெரிக்காவில் டெட்டராய்ட் நகரில் வெளியிடப்பட்ட புத்தகம் மூலம் உருவாக்கப்பட்டது. ஆண் பெண் கரும்புலிகள் என்பது முழுக்க முழுக்கப் பிரபாகரன் சிந்தனையில் உருவானது. . கரும்புலிகளுக்கென்று உருவாக்கப்பட்டவர்கள் இதில் தங்களை அர்பணித்தவர்களை இயக்கத்தில் உள்ள மற்றவர்களிடத்தில் இருந்து தனியாகத் தேர்ந்தெடுப்பது முதல் அவர்களுக்கென்று உருவாக்கப்பட்ட பயிற்சி வகுப்புகள், பாடங்கள் வரைக்கும் வித்யாசமான சூழ்நிலையில் இருக்கும். உள்ளேயுள்ள மற்ற அமைப்புகளுடன் சம்மந்தம் இருக்காது. எவரவர் இதில் இருப்பார்கள்? மற்றவர்களுக்குத் தெரியுமா என்பதும் சந்தேகமே. கரும்புலிகளாக இருப்பவர்களுக்கும் அவர்களின் இலக்கு என்பதும், எந்த நாள் வரைக்கும் இந்த உயிர் உடலில் இருக்கும் என்பதும் அவர்களுகே தெரியாது. நாளை, மறுநாள், அடுத்த வாரம், அடுத்த மாதம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மனோதிடத்தின் உச்சம். மற்றத் தீவிரவாத அமைப்புக்கும் விடுதலைப்புலிகளின் அமைப்புக்கும் உள்ள் மிகப்பெரிய வித்தியாசமே இது தான். இங்குத் தான் ஆரம்பமாகிறது.. மற்ற இயக்கங்கள் ஒரு குடும்பத்தில் உள்ள ஏழ்மையைப் பயன்படுத்தி அவர்களின் குடும்பத்திற்காகக் கொடுக்கப்படும் நிதி என்பதன் மூலம் ஒருவரை தேர்ந்தெடுக்கிறார்கள். அந்தக் குடும்பத்தின் எதிர்கால வாழ்வுக்காக ஒருவர் இந்த மனித வெடிகுண்டாக மாறுகின்றார். ஆனால் இங்கே என்ன தான் மூளைச்சலவை என்று தொடங்கினாலும் ஒரு அளவிற்கு மேல் இயக்கத்தின் வெற்றிக்காக தங்களால் ஆன முன்னேற்பாடு என்ற அளவிற்கு கரும்புலிகளாக மாறுகின்றனர். அவர்களின் மனோ திடம் இந்தப் பாதையில் கொண்டு வந்து அவர்களை நிறுத்திவிடுகின்றது.. தீர்மானிக்கப்பட்ட நாளுக்கு முன் அல்லது அவர்களின் இலட்சியத்திற்கான பயணம் தொடங்கப்படுவதற்கு முன் பிரபாகரன் உடன் உணவு அருந்தும் வைபோகத்துடன் அவர்களுக்கும் விடுதலைப்புலி இயக்கத்திற்கும் உள்ள உறவு முறிந்து விடுகின்றது. அப்போது தொடங்கும் அவர்களின் பயணமென்பது அவர்களின் இறுதி வாழ்க்கை பயணத்தின் தொடக்கப் பாதை. கடைசியாக “அக்னிக்குழந்தைகள்” என்றும்,” மண் மீட்பிற்காக உயிர் நீத்த மாவீர்கள்” என்ற உருவாக்கப்படும் ஆவணப் பெயரில் வந்து விடுகிறார்கள். சிங்களர்களுக்கென்று உருவாக்கப்பட்ட கரும்புலிகள் இன்று ராஜீவ் காந்திக்கு என்று மாற்றப்பட்ட கொடுமை என்பது இந்தியாவிற்கு மே 22 அன்று புலர்ந்த காலை என்பது கதறும் நாளாக இருந்தது. சமூக விரோதிகளுக்குச் சொத்துக்களைச் சூறையாடுதல் தொடங்கிப் பிடிக்காதவர்களைப் போட்டுத் தள்ளும் பைபவம் வரைக்கும் கொண்டு செலுத்தியது. அன்றைய தினம் அதிகமாகப் பாதிக்கப்பட்ட திராவிட முன்னேற்ற கழக அடிமட்ட தொண்டர்களும், இயக்கத்தில் இருந்தவர்களுமே ஆவார்கள். தமிழ்நாட்டின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. குறிவைத்துச் சொத்துக்கள் சூறையாடப்பட்டது. செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டுருந்த மொத்த வாகனங்களும் நிறுத்தப்பட்டன. கலவரத்தீயின் நாக்கு மெதுவாக முன்னேறிக்கொண்டுருந்தது. வரிசையாக நின்று கொண்டுருந்த ஆயிரக்கணக்கான பேரூந்துகளும் நிறுத்தப்பட்டது. முடக்கப்பட்டது என்ற வார்த்தை தான் சரியாக இருக்கும். எவருக்கும் எதுவும் தெரியவில்லை. அவரவருக்குத் தெரிந்த வார்த்தைகள் கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். எவர் வாயில் இருந்து ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார் என்று வரவேயில்லை என்பது மிகப் பெரிய ஆச்சரியம். காரணம் நான் அப்போது சென்னையில் இருந்து ஊருக்கு பயணித்து வந்து கொண்டு இருந்தேன். நான் பயணித்த பேரூந்து ராஜீவ் காந்தி படுகொலை நடந்து முடிந்த இடத்தில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் சாலையில் நின்று கொண்டிருந்தது. என் பேரூந்துக்கு முன்னால் பின்னால் எத்தனை ஆயிரம் பேரூந்துகள் நின்று கொண்டுருந்த கணக்கு சொல்லிவிட முடியாது? அன்று செங்கல்பட்டில் நடு இரவு 2 மணிக்குச் சிறப்புச் சேவையாக விடப்பட்ட ரயில் மூலமாகப் புளி மூட்டையாக ஒருவர் மேல் ஒருவர் உட்கார்ந்து இடித்துக் கொண்டு மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தேன். சென்னைக்கு மீண்டும் வந்து சேர்ந்த போது ரயில் நிலையத்தில் வைத்து விற்பனை செய்து கொண்டுருந்த முதல் பாதிப் பக்க செய்திகள் கருப்பு எழுத்தில் ராஜீவ் காந்தி மரணத்தைச் சொன்னது. அன்று அந்த அலற வைத்த செய்தியதை பார்த்த படித்த பலதரப்பட்ட செய்திகள் மூலம் உணர்ந்தவன் இது போன்ற ஒரு தொடர் எழுதவேண்டும் என்பது விதி தானே? தமிழகக் கவர்னராக இருந்த பீஷ்ம நாராயணன் இந்த படுகொலையை மத்திய சிபிஐ அமைப்பினர் புலனாய்வு செய்ய வேண்டும் என்று அறிக்கை வாயிலாகத் தெரிவித்தார். தமிழ்நாட்டு மக்கள் மனங்களில் ராஜிவ் காந்தி படுகொலை என்பது ஆறாத ரணத்தை உருவாக்கியிருந்தது.. காரணம் இந்தியாவிற்குச் சுதந்திரம் பெற்றது முதல் இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் என்பது புதிது. ஊடகங்கள் அவரவருக்குத் தெரிந்த தெரியாத பரபரப்புச் சம்பவங்களை அள்ளித் தெளித்துக் கோர்த்து சேவை புரிந்தார்கள். ஆனால் சிறப்பு விமானம் மூலம் வரவழைக்கப்பட்ட சோனியா, பிரியங்கா மிச்சம் மீதி இருந்த உடலையும், பிரேத பரிசோதனைக்குப்பிறகு கிடைத்தவற்றைப் பெட்டியில் போட்டுக் கொண்டு டெல்லிக்குக் கொண்டு சென்றார்கள். அன்றைய தினம் இந்தப் படுகொலைக்குப் பின்னால் உள்ள காரணங்கள் எவருக்கும் தெரியவில்லை. பல்வேறு யுகங்கள். இந்து மதத் தீவீரவாதம், சீக்கியர்களின் கோபம், காஷ்மீர் தீவிரவாதம்,சிஐஏ முதல் எந்தந்த வகையில் கற்பனைக் குதிரைகளைத் தட்டிவிட முடியுமோ அந்த அளவிற்குச் செய்திகள் தறிகெட்டுப் பறந்தது. உருவாக்கப்பட்ட புலனாய்வு குழுவின் தலைமைப் பொறுப்பிற்கு வந்தவர்கள், அதில் பங்கெடுத்து இருந்தவர்கள் முதல் இந்திய இராணுவ உயர் மட்டம், இந்திய புலனாய்வு குழுக்கள் வரைக்கும் எவருமே இதை விடுதலைப்புலிகள் இயக்கம் தான் செய்து இருக்கும் என்பதை நம்பத்தயாராய் இல்லை என்பது இங்குக் குறிப்பிட்டே ஆக வேண்டும். ஆனால் இதற்குக் காரணமாக அவர்கள் அத்தனை பேர்களும் சொன்ன வார்த்தைகள் அதைவிட நிதர்சனமான உண்மை. ” இந்தியாவை எப்போதும் சார்ந்து இருக்க வேண்டிய அவர்கள் இது போன்ற முட்டாள் தனமாகக் காரியத்தைச் செய்யத் துணிச்சல் வராது ” என்றார்கள். அதுவே பின்னாளில் முறைப்படியான விசாரணைக்குப் பிறகு தெரிய வந்த போது உருவான கருமை என்பது ஒவ்வொரு தமிழர்களின் மனமும் கலங்கிய மனமாக மாறியது. பிரபாகரன் மனம் என்பது எப்படி இருந்து இருக்கும் என்பது அவர் விரும்பும் இயற்கைக்கு மட்டும் தான் தெரிந்து இருக்கும்? அவர் விரும்பிப் படிக்கும் வரலாறு எதிர்காலத்தில் அவரைப்பற்றி என்ன சொல்லும் என்பதை உணர்ந்து இருப்பாரா? அவரே சொல்லியிருப்பது போல் ” என்னுடன் உடன் இருப்பவர்கள். பழகியவர்கள், உயிராக நான் நினைத்தவர்கள் என்று அத்தனை பேர்களும் பல்வேறு போராட்டகளத்தின் வாயிலாக நான் இழந்த போது அடையும் மனத்தளர்ச்சிக்கு அளவே இல்லாமல் இருக்கும். இதில் இருந்து நாம் மீண்டு வந்து தான் ஆகவேண்டும் என்று என்னைத் தேற்றிக்கொண்டு மீண்டு வருவதுண்டு”. ஆனால் இந்தக் கோர நிகழ்வில் இருந்து எப்போது அவர் மனம் மீண்டு வந்தது என்பதை இறுதிவரைக்கும் சொல்லவில்லை என்பதை விட ராஜீவ் காந்தி மரணம் என்பது ” துன்பியல் சம்பவம்” என்று எளிதாக நகர்ந்து அடுத்த வேலைக்குச் சென்று விட்டார். 7. சிவராசன் வலைபின்னல் தமிழ்நாட்டு காவல் துறை Q branch தொடக்கம் முதல் விடுதலைப்புலிகள் விசயங்களில் மிகுந்த முன்னேற் பாடுகளையும் முடிந்த அளவிற்கு ஆதாரங்களையும் திரட்டி வைத்திருந்தார்கள். தமிழ்நாட்டில் ஒவ்வொரு சமயத்திலும் ஆட்சி மாறும் போது அவர்களின் தொடர்ச்சியான பணியும் அலங்கோலமாய் முடிந்து மறுபடியும் தொடக்கத்தில் இருந்தே தொடங்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கும். அவர்களின் பணியென்பது என்பது செய்திகளை, ஆதாரங்களைத் திரட்டுவது மட்டுமே. முடிவு எடுக்ககப்பட வேண்டியவர்கள் அவவ்போது வந்து அமரும் ஆட்சியாளர்கள். ஆட்சிக்கு வருபவர்களின் கொள்கைகள், நோக்கங்கள், தனிப்பட்ட நிர்ப்பந்தம், தெரிந்தும் நழுவல் என்ற கொள்கையினால் அவ்வப்போது அது வெறும் காகிதமாகக் கோப்புகளில் உறங்கிக் கொண்டு இருக்கும். அப்படி உறங்கிய ஒன்று பத்பநாபா கொலைவழக்கு. அவர்களின் பணி இப்போது சற்று வேகம் பிடித்து இருந்தது. இத்தனைக்கும் புலனாய்வுக் குழுவினருக்கும் அவர்களுக்கும் சம்மந்தம் இல்லை. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் என்ன பிரச்சனைகள் நடந்தாலும் அனைவரும் ஒரே குரலில் கேட்பது உடனே சிபிஐ விசாரணை வேண்டும். அப்படி என்றால் மாநிலத்தில் உள்ள காவல்துறை மற்றும் மாநில உளவுத்துறை என்ன செய்து கொண்டுருப்பார்கள்? அவர்கள் பலம் பலவீனம் என்பது தான் என்ன? இந்தத் துறையில் இருக்கும் உண்மையான நேர்மையான அதிகாரிகள் வருந்தத்தான் செய்வார்கள். காரணம் மத்திய சிபிஐ ஒன்றும் கொம்பு முளைத்த வினோத மிருகம் அல்ல. சிபிஐ மாநிலத்திற்குள் வந்தாலும் அவர்களும் தங்களுடைய தொடக்கப் புலனாய்வு பாதைகளை உணர வேண்டுமென்றால் இவர்களைச் சார்ந்து தான் இருக்க வேண்டும். பாடு படுபவர்கள் எப்போதும் போலக் கீழே தான் இருப்பார்கள். பட்டத்துக்கு வரும் இளவரசன் கணக்காய் சிபிஐ மேலே வந்து அமர்ந்து கொண்டு நோகாமல் நோண்டி கிண்டி கிழங்கெடுத்துக் கொண்டு இருப்பார்கள் . ஆனால் இப்போது உருவாக்கப்பட்ட சிபிஐ (எஸ்ஐடி) சற்று வித்யாசமானது. குறிப்பாக இதன் அலுவலகம் சென்னையில். தலைமைப் பொறுப்பில் ஒரு தமிழர். அரசியல் நிர்ப்பந்தம் இல்லாத அளவிற்குத் தெளிவான முறையில் உருவாக்கப் பட்டது. தொடக்கம் முதல் கார்த்திகேயன் போட்ட ஒப்பந்தம் என்பதே இது தான். Q branch போலவே ராஜீவ் காந்தி படுகொலை நிகழ்ச்சியில் புகைப்படம் எடுத்த ஹரிபாபு வீட்டில் புலனாய்வு குழுவினரும் வீட்டில் சென்று சோதனையிட்டார்கள். அவருடைய ஏழ்மையான வீட்டில் ஒன்றும் கிடைக்காத போதும் அன்று அதிர்ஷ்டம் அவர்கள் பக்கம் இருந்தது. ஹரி பாபுவின் வீட்டின் பின்புறம் சென்றவர்கள் எதிர்பார்க்காத வகையில் அவர் அங்கே வைத்திருந்த கத்தை கடிதங்கள் மறைவு பகுதியில் இருந்து கைப்பற்றினார்கள். கைப்பற்றியதை புலனாய்வுக்குழுவினருக்கு உதவியாய் இருக்கலாம் என்று மல்லிகை இல்லத்திற்கு அனுப்பினர். அங்கிருந்து கைப்பற்றப்பட்ட காகித குப்பைகள் அத்தனையும் பொக்கிஷம். பல விதமான கடித பரிமாற்றங்கள். பல கடிதங்களுடன் ஹரிபாபு விரும்பிக்கொண்டுருந்த பெண்ணின் கெஞ்சல் கடிதமும் இருந்தது. ஹரிபாபு விடுதலைப்புலி இயக்கத்துடன் வைத்திருந்த தொடர்பு, அவர் ஈடுபட்டுருந்த அபாயகரமான பணி என்று மொத்தமும் அதன் மூலம் புரிந்து கொள்ள உதவியாய் இருந்தது. இதில் தான் தணு ராஜீவ் காந்தியை கொல்வதற்கு உபயோகித்த சந்தன மாலை பூம்புகார் விற்பனை அங்காடியில் வாங்கிய ரசீதும் இருந்தது. இப்போது ஹரிபாபுவைப்பற்றிச் சற்று புரிந்து கொள்வோம். இவர் ஒரு திருவாளர் அப்பாவி. இளவயதுக்குரிய முறுக்கும் சாகசமும் நிறைந்த எண்ணங்கள் அவரை இந்தக் குழிக்குள் தள்ளியது. இவர் செய்த முதல் தவறு சுபா சுந்தரத்தின் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தது. இரண்டாவது விடுதலைபுலிகளின் யாழ்பாணம் போல் இருந்த சுபா சுந்தரத்தின் அலுவலகத்திற்கு வந்து போனவர்களால் ஹரிபாபுவின் எண்ணங்களும் மாறத் தொடங்கியது., அப்போது ஏற்பட்ட தொடர்புகளால் கவரப்பட்டுத் தானும் இலங்கைத்தமிழ் மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று எண்ணத்தையும், சாரசரி தமிழ்நாட்டு இளைஞன் போலவே பிரபாகரன் என்ற பிம்பத்தின் மேல் ஒரு கவர்ச்சியும் வந்தது. ராஜீவ் படுகொலையைத் தொடர்ந்து சுபா சுந்தரம் செய்த அலங்கோலமான அவசர குடுக்கை சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் போய் இறுதியில் அவரைக் கைது செய்யும் அளவிற்கு உருவாக்கியது. அவர் ஹரிபாபு தன்னிடம் வேலை செய்யவில்லை என்பதில் தொடங்கி, குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வாங்கலாம் என்ற நோக்கத்தில் ஹரிபாபுவின் அப்பாவை அறிக்கை விடச் செய்தது வரைக்கும் அவரைக் கொண்டு போய் மாட்டி விட்டது. இதற்கிடையே சிறப்புப் புலனாய்வு குழுவினரில் ஒரு பகுதியினர் துரத்திக் கொண்டுருந்த சோதனைகள் மூலம் விடுதலைப்புலிகளுக்குத் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு அச்சக பணியை நிறைவேற்றி கொடுத்துக் கொண்டு இருந்தவர்களை முற்றுகையிட்டனர். அதன் மூலம் 1987 முதல் 1990 வரையிலும் இலங்கையில் இந்திய அமைதிப் படையினர் நடத்திய மொத்த நிகழ்வுகளையும், அது குறித்த உலக ஊடகங்கள் வெளியிட்ட கட்டுரைத் தொகுப்பை அடிப்படையாக வைத்து ” சாத்தானின் படைகள்” என்ற புத்தக வடிவில் தயாராக இருந்த மொத்த பிரதிகளும் கைப்பற்றப்பட்டது. அச்சிட்டவர் தலைமறைவானர். அப்போது, தமிழ்நாட்டு காவல் துறை தஞ்சாவூரில் வைத்து ரூசோ என்ற சங்கர் கோணேஸ்வரன் என்ற விடுதலைப்புலியை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து இருந்தனர். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சீட்டில் சென்னையில் இருந்த நளினி, தாஸ் என்பவர்களின் தொலைபேசி எண்களும், போரூரில் இருந்த எபிசேனர் மளிகைக்கடை தொலைபேசி எண்ணும் கிடைத்தது. நளினியின் எண் மூலம் அவர் அடையாறு அனபான்டு சிலிக்கன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்தவர் என்ற உண்மையைக் கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் பிடிபட்ட சங்கர் மூலம் பெறப்பட்ட தகவல், திருத்துறைப்பூண்டியில் உள்ள ஒரு கடத்தல் புள்ளியை நெருங்க முடிந்தது. அவர் மூலம் சிவராசன் பற்றிய உண்மைகள் வெளிவர ஆரம்பித்தது. ஹரிபாபுவின் நண்பர் மூலம் தலைமறைவான அச்சகம் நடத்தி வரும் பாக்யநாதன் பற்றிய உண்மைகள் கிடைக்கப்பெற்றது. பாக்யநாதனை விசாரித்த அதிகாரிக்குப் புகைப்படத்தில் இருந்த நளினி இவரின் சகோதரி தான் என்பதும் புரிந்தது. ஆனால் இரண்டாம் முறை பாக்யநாதனை விசாரிக்கும் போது தான் நளினியை தனது மூத்த சகோதரி என்பதையும் தெரிவித்தார். சங்கர் மூலம் தொடக்கத்தில் கைப்பற்றப்பட்ட நளினி தொலைபேசி எண் மூலம் அடையாறு சென்ற வேறொரு குழுவினர் அங்கு நளினியிடம் விசாரித்தனர். அப்போது நளினி சந்தேகப்படும்படி எதையும் பேசவில்லை. அவரிடமிருந்து உருப்படியான தகவல் இல்லை என்பதோடு நளினியும் இதில் சம்மந்தபட்டுருக்கிறார் என்பதை அன்று சென்றவர்களால் யூகிக்க முடியவில்லை. ஆனால் வில்லிவாக்கத்தில் இருந்த வந்த தொலைபேசி அழைப்பின் மூலம் நளினி வீட்டை சென்றடைந்த புலனாய்வு குழுவினருக்கும் பூட்டிய வீடு தான் வரவேற்றது. நளினி தப்பி விட்டார். கைது செய்யப்பட்ட பாக்யநாதன் மூலம் இந்தச் சதித்திட்டத்திற்குப் பின்னால் உள்ள அடிப்படை விசயங்கள் புரிய ஆரம்பித்தது. திட்டம் சரியாக நிறைவேறியதும் சிவராசன் குழுவினர் கொடுங்கையூர் வந்து சேர்ந்தனர். மறுநாள் எப்போதும் போல நளினி வேலைக்குச் சென்று விட்டார். ஆனால் புலனாய்வு குழுவினர் ஊடகத்தில் (மே 24) தணுவின் புகைப்படங்கள் முதல் ஒவ்வொன்றாக வெளியிடத் தொடங்க சிவராசன் கூட்டணியினரின் ஒட்டமும் தொடங்கியது. மே 25 பாக்யநாதன் ஏற்பாடு செய்து கொடுத்து இருந்த டாக்ஸியில் திருப்பதி சென்றதும், அங்கு முருகன் நளினி திருமணம் முடித்ததும், மீண்டும் ஒரு முறை முருகன் நளினி மட்டும் தனியாகத் திருப்பதி சென்று, முருகன் மொட்டை போட்டுக்கொண்டது வரைக்கும் வெளிவந்தது. பாக்யநாதனுடன் கைது செய்யப்பட்ட அவரது தயார் பத்மா மூலம் மேலும் சில புதிர்களுக்கான விடைகள் கிடைத்தது. பத்மா பணிபுரிந்து கொண்டுருந்த மருத்துவமணையில் உள்ளே பணிபுரிந்தவரிடம் கொடுத்து வைத்த ரகசிய கவர் கிடைக்கப்பெற்றது. பத்மாவின் கைது நிகழ்ந்ததும், மருத்துவமனையில் பத்மாவுடன் பணிபுரிந்த மற்றொரு நர்ஸ் பெண்ணே புலனாய்வு குழுவினரை அழைத்து ஒப்படைக்க உள்ளே இருந்த பூதம் பலவிதங்களிலும் புலனாய்வு குழுவினருக்கு உதவியது. ஓயர்லெஸ் குறியீடுகள், எண்ணும் எழுத்தும் அடங்கிய சங்கேத பாஷைகள், முருகனின் மற்றொரு பெயரான இந்து மாஸ்டர் போன்ற பல விபரங்கள் கிடைத்தாலும் சுற்றிச் சுற்றி வட்டத்திற்குள் வந்தாலும் இதற்கு மையப் புள்ளியான சிவராசன் குறித்தோ அதற்கு மேல் உள்ள முக்கியப் புள்ளி குறித்தோ தகவல் ஒன்றும் கிடைத்தபாடில்லை. கூட்டணிக் குழுவினரின் புகைப்படம் வெளியானதும் தமிழ்நாடு முதல் இந்தியாவின் மற்ற மாநிலங்கள் வரைக்கும் சரியான தவறான தகவல்கள் மல்லிகை இல்லத்திற்கு வந்து கொண்டே இருந்தது. இந்தச் செய்திகளுக்கிடையே திருமணம் முடிந்து மொட்டை தலை முருகனுடன் நளினி திருப்பதியில் இருந்து வந்து மதுரைக்கு நளினியின் தோழி வீட்டுக்குச் சென்றனர். அங்கு மறுக்கப்படக் கர்நாடகாவில் உள்ள தாவன்கெர இடத்திற்குச் செல்ல அங்கும் உதவி செய்ய மறுக்க அங்கிருந்து கிளம்பி விழும்புரம் வழியாகச் சென்னை வந்து இறங்கிய போது வந்த தகவல்கள் அடிப்படையில் அவர்களைத் துரத்திக்கொண்டுருந்த புலனாய்வு குழுவினர் சைதாப்பேட்டை பேரூந்து நிறுத்தத்தில் இருந்து இறங்கிய போது இருவரையும் கைது செய்து மல்லிகை இல்லத்திற்க்கு கொண்டு வந்தனர். அப்போது தான் நளினி இரண்டு மாத கர்ப்பபமாக இருந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட முருகன் மூலம் மடிப்பாக்கத்தில் உள்ள வீட்டில் உள்ள மற்றப் போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. பிடிப்பட்ட ஒவ்வொருரின் வாக்குமூலம் வெவ்வேறு திசையில் இருந்து பல விசயங்களையும் புரியவைத்தாலும் இன்னமும் முன்னேற முடியவில்லை. ஆனால் பத்திரிக்கைகளில் கொடுக்கப்பட்டு இருந்த விளம்பரம் மூலம் கிடைத்த மற்றொரு அற்புத ஆவணம் சிவராசனின் உண்மையான புகைப்படம். மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சிவராசனுக்கு இரண்டு சக்கர ஓட்டுநர் உரிமம் வழங்கியிருந்தது. அதன் மூலம் சிவராசனின் புகைப்படத்தோடு, ராபர்ட் பயஸ்,மகேஸ்வரன் புகைப்படங்களும் இது தொடர்பான வழங்கப்பட்ட அத்தாட்சி சான்றிதழ்கள், ஆவணங்கள் என்று மொத்தமும் கிடைக்கப்பெற்றது. இதன் மூலம் ராபர்ட் பயஸின் போரூர் முகவரி தெரியவந்தது. தஞ்சாவூரில் பிடிபட்ட சங்கர் என்ற விடுதலைப்புலி மூலம் பெறப்பட்ட தொலைபேசி எண் என்பது ராபர்ட் பயஸ் வீட்டுக்கு அருகில் இருந்த மளிகைக்கடைக்காரருக்குச் சொந்தமானது. வட்டம் இறுகியது. அறிவு, ராபாட் பயஸ்,ஜெயக்குமார் என மொத்தமும் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே சென்னையில் இருந்து வயர்லெஸ் மூலம் செய்திகள் கடத்தப்பட்டுக் கொண்டுருந்த போதிலும் உளவுத்துறையினரால் முழுமையாக ஊடுருவ முடிய வில்லை. கடினமான சங்கேத வார்த்தைகள் ஒரு புறம், நவீன தொழில் நுட்பம் மறுபுறம். ஐம்பது சதவிகிதம் உள்ளே நுழைந்தால் செய்தியை கடத்திக்கொண்டுருப்பவர்கள் அடுத்த அலைவரிசைக்கு மாறி மற்றச் செய்திகள் வழக்கம் போலப் போய்க்கொண்டுருந்தது. புலனாய்வுக்குழுவினர் எதிர்பார்க்கும் நவீன உபகரணங்கள் கிடைக்காதது ஒரு புறம், இந்தியாவிடம் விடுதலைப்புலிகள் வைத்திருந்த உபகரணங்களுக்குச் சமமான தொழில் நுட்பம் அடங்கிய உபகரணங்கள் இல்லை என்பது ஆச்சரியமும் சோகமும் கூட. தொலை தொடர்புதுறையில் சிறப்பாகப் பங்காற்றிக் கொண்டுருக்கும் சாம்பிட்ரோடா வரைக்கும் தொடர்பு கொண்டு பெற முடியாதது அடுத்த ஆச்சரியம். அந்த அளவிற்கு விடுதலைப்புலிகள் இயக்கம் உலக நவீனங்களை அன்றைக்கு உள்ளபடி மாற்றிவைத்துப் பயன்படுத்திக்கொண்டு இருந்தார்கள். ஆனால் சென்னையில் தனிப்பட்ட முறையில் செயல்படுத்திக்கொண்டுருந்த ஹேம் அலைவரிசை பயன்படுத்துவோர் உதவ முன்வந்தாலும் இறுதி வெற்றி கிடைக்கவில்லை. அப்போது புலனாய்வு குழுவினர் நவீன உபகரணங்கள் கேட்டு தொடர்பு கொண்ட துறையையும் பார்த்து விடலாம். DEFENCE ELECTRONIC RESEARCH LAB/ CHENNAI TELEPHONE DEPT./INTERNATIONAL MONITAR CENTER/WIRELESS PLANNING AND CO ORDINATION UNIT/ INIDAN MILITRARY SIGNAL REGIMENT. அன்றைய காலகட்டத்தில் இல்லாத வசதிகள் நம்பிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு புலனாய்வு குழுவினரை போராட வைத்தது. இவர்கள் விரும்பிய கருவி HIGH FREQUENCY DIRECTION BINDER. ஆனால் இவர்களுக்கு அப்போது ஹைதராபாத்தில் இருந்து கிடைத்த கருவி HIGH FREQUENCY COMMUNICATION RECEIVER , இதன் மூலம் எந்தத் திசையில் இருந்து செய்திகள் செல்கின்றது என்பதை மட்டுமே உணர முடியும். எந்த இடத்தில் இருந்து வருகின்றது என்பதை உணர முடியாது. இதற்கென்று உருவாக்கப்பட்ட வல்லுநர் குழு இந்தக் கருவியை வைத்துக்கொண்டு சென்னையில் புலிகாட் ஏரி, வியாசர்பாடி போன்ற பகுதிகளில் நின்று கொண்டு பல நாட்கள் காத்து இருந்த செய்திகள் ஊடகத்தில் வந்ததும் தற்காலிகமாகக் கடத்திக்கொண்டுருந்த செய்திகளும் நின்று போனது. ஆனால் இத்தனை துரதிஷ்ட்டத்திற்கு மத்தியிலும் கூட அப்போது இடைமறித்த ஒரு செய்தி மூலம் சென்னை எல்டாம்ஸ் சாலையில் உள்ள ஒரு இலங்கையைச் சார்ந்த பொறியியல் வல்லுநர் வீட்டில் நடக்க இருக்கும் சந்திப்பு என்ற செய்தி கிடைக்கப்பெற்றது. [] அங்குச் சிவராசனும், உளவுத் துறையில் உள்ள சாந்தனும் சந்திக்க இருப்பதாகக் கிடைத்த செய்தியின் அடிப்படையில் குறிப்பிட்ட இடத்தைக் கண்காணித்தனர். அந்தப் பொறியியல் வல்லுநர் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்று ஏற்கனவே உளவுத்துறையினர் முதல் புலனாய்வு குழுவினர் வரைக்கும் தெரியும். மேல்தட்டு மக்கள் வசிக்கும் அந்தப் பகுதியில் பல நாட்கள் காத்து இருந்தும், குடிநீர் வடிகால் வாரிய ஆட்கள் போலப் புலனாய்வு அதிகாரிகள் வீட்டிற்குள் உள்ளே போய் வந்தும் எந்த உருப்படியான தகவல்களையும் பெற முடியவில்லை. இவர்கள் இங்குக் காத்திருந்தது சிவராசன் மற்றும் சாந்தனுக்காக. ஆனால் வீட்டுக்கு வந்து கடிதம் கொடுத்து விட்டு சென்றவர் ஒரு பெண்மணி, அந்தக் கடிதம் வாங்க வந்தது சிவராசன் சார்பாகப் பெண்மணி. சாந்தன் சார்பாக டிக்சன் என்பவர். அவர்களைப் பொறுத்தவரையில் காரியம் வெற்றி. இதை எதிர்பாரதவர்களுக்குப் பலத்த அதிர்ச்சி. அப்போது தான் மத்திய உளவுத்துறையில் இருந்து டிக்சனின் புகைப்படத்தைப் புலனாய்வு குழுவினர் வாங்கினர். 8. நாகபட்டிணம் இராமேஸ்வரம் வழி டெல்லி கொடுக்கப்பட்ட விளம்பரங்கள், சந்தேகப்படுவர்களின் அணி வகுப்பு, தமிழ்நாட்டின் உள்ளே வாழ்ந்து கொண்டுருந்த ஈழத்தமிழர்கள் என்று எத்தனையோ வழிகளில் தங்களுடைய பார்வையைப் புலனாய்வு குழுவினர் செலுத்தினாலும் எந்த முன்னேற்றமும் இல்லை. மொத்த வலைபின்னலை முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் இவர்கள் இறங்கிய இடத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும் என்று விடுதலைப்புலிகள் கரை இறங்கிய நாகபட்டிணம் வந்து சண்முகத்தைத் தேடத் தொடங்கிய போது அவரும் தலைமறவானார். ஆனால் அவரிடம் நீண்ட நாட்களாகப் படகோட்டியாகப் பணிபுரிந்து கொண்டுருந்த (இவரும் யாழ்பாணத்தைச் சேர்ந்த ஈழத்தவரே) மகாலிங்கம் என்ற மீனவரை பிடித்தனர். இவர் தான் விடுதலைப்புலிகள் சம்மந்தப்பட்ட அத்தனை வேலைகளுக்கும் 1984 முதல் சண்முகத்திடம் பணிபுரிந்த தனிப்பட்ட முக்கியப் படகோட்டி. புலனாய்வு குழுவினர் தேடிப்போன சண்முகத்தை விட இவருக்கும் மொத்தமும் தெரிந்து இருந்தது. புலனாய்வு குழுவினருக்கு அப்போதைய சூழ்நிலையில் விடுதலைப்புலி இயக்கம் தான் இதை நிகழ்த்தியது என்று தெரிந்து இருந்தாலும் விடுபட்ட இடங்கள் நிறைய இருந்தது. வலைபின்னலை நெருங்கி இருந்தாலும் அது அத்தனை தூரம் முழுமையடைந்த பாடில்லை. கைது செய்யப்பட்ட சாட்சிகள் உண்டு. ஆனால் சட்டம் எதிர்பார்க்கும் அழுத்தமான ஆதாரங்கள் இல்லை என்பதை விடச் சிக்கியவர்கள் எவருமே அவரவர் பங்குகளைச் சொன்னார்களே தவிர முழுமையாக எதையும் சொல்லவில்லை. ஒவ்வொரு சாட்சியும் அவர் தொடர்பில் இருந்த மற்றவர்கள் சிக்கியவுடன் தான் ஓரளவிற்குக் கக்கினார்கள். சிவராசன் எங்கு இருக்கிறார் என்பதோ? எப்படித் தப்பினார் என்பதோ எவரும் சொல்லவில்லை. காரணம் உள்ளே இருந்தவர்களுக்குச் சிவராசன் இருக்கும் இடம் முதல் தப்பியது வரைக்கும் தெரிந்து இருந்த போதிலும் மூச்சு விடவில்லை. ஆனால் படகோட்டி மகாலிங்கம் சிக்கியபிறகு தான் திட்டத்தின் முழுப் பரிணாமும் புரிய ஆரம்பித்தது. விடுதலைப்புலிகள் இந்தப் படுகொலைக்குக் காரணம் என்பதும் அவர்களின் மொத்த தொடக்க வலைபின்னலும் புலனாய்வு குழுவினருக்கு முழுமையாகப் புரிந்தது. இவர்கள் ராஜீவ் காந்தி படுகொலை விசாரணையில் இருந்த போது உள்ளே இருந்த இயக்கத்தவர்கள் மூலம் இதற்கு முன்னால் வேறொரு விடுபட்டுருந்த பணிக்கான ஆய்த்த ஏற்பாடுகள் நடந்து கொண்டுருந்ததும் அப்போது தான் புரிந்தது. பத்பநாபா படுகொலையைப் போலவே, விடுதலைப்புலிகள் மற்றொருவரை துரத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் துரத்திக்கொண்டுருந்தது இலங்கை வடகிழக்கில் முதலமைச்சராகயிருந்து இந்தியாவில் உளவுத்துறை மேற்பார்வையில் தஞ்சம் புகுந்து இருக்கும் வரதாஜப் பெருமாள். அவர் இருந்த இடம் ராஜஸ்தான் மாநிலத்தில் குவாலியர் பகுதியில். மோப்பம் பிடித்தவர்கள் இந்தப் படகோட்டி சண்முகத்தை அழைத்துக்கொண்டு செல்வதாகத் திட்டம். வரதராஜப் பெருமாளின் ஆயுள் கெட்டியாக இருந்துருக்கும் போல. பல விதங்களிலும் இவர்களின் பயணம் தள்ளிப் போனது. அப்போது படகோட்டி மகாலிங்கம் மூலம் பெறறப்பட்ட வாக்குமூலம், 1990 ஜுனில் சிவராசன் மற்றும் கடற்புலித் தலைவர் டேவிட் போன்றவர்களுடன் தமிழ்நாட்டுக்கு வந்து பத்பநாபாவை கொன்று முடித்தவர்களை இலங்கையில் கொண்டு போய்ச் சேர்ந்ததும் இந்த மகாலிங்கமே. இரண்டாவது திட்டம் வரதாஜப்பெருமாள். வடஇந்தியாவில் இதற்கென்று ஒரு களம் அமைக்க முயற்சித்தனர்.டெல்லியை தலைமையிடமாக வைத்துக் கொண்டு செயல்படச் சிவராசன் வருவதற்கு முன்பு ஆதிரை என்ற பெண்புலி உள்ளே வந்து இருந்தார். அதற்குள் ராஜீவ் காந்தி படுகொலைக்காகச் சிவராசனுடன் வந்த சுபா தணுவுடன் இன்னும் ஐந்து பேர்கள் ஆக மொத்தம் எட்டுப் பேர்கள் உள்ளே வந்தனர். மற்ற ஐந்து பேர்கள் ரூசோ, கீர்த்தி, நேரு, சுதந்திர ராஜா, சுரேஷ் குமார் என்ற சிவரூபன் (இவர் ஒற்றைக்காலுடன் வாழ்ந்தவர்). ஏற்கனவே பிடிபட்ட முருகன் காட்டிய மடிப்பாக்கம் இல்லத்தில் கைப்பற்ற ஆவணத்தில் ஒன்று சுரேஷ் குமார் கோல்டன் ஹோட்டல் ஜெய்பூர் என்று ஒன்று இருந்தது. ராஜஸ்தானில் இருந்த சுரேஷ் குமார் தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து வேறு இடத்திற்கு மாற முயற்சித்த போது கைது செய்யப்பட்டார். இந்த ஒற்றைக்கால் சுரேஷ் குமார் கைது செய்யப்பட்டபோது கைப்பற்றப்பட்ட ஆவணத்தில் இருந்த இரண்டு தொலைபேசி எண்கள் மூலம் சென்னையில் ராபர்ட் பயஸ் கைது செய்யப்பட்டார். இவர் மூலம் தமிழ்நாட்டுக்குப் புதிதாக வந்து திருதிருவென்று முழித்துக் கொண்டுருந்த ரூசோ தஞ்சாவூரில் ரயில் பயணத் தொடக்கத்தின் போதும் வளைக்கப்பட்டார்.. எப்போதும் போலப் புலனாய்வுக்குழுவினர் தொடர்ச்சியாக அங்கங்கே உருவாக்கியிருந்த தொடர் சோதனையின் போது போது விஜயானந்தன் என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்த விஜயானந்தன் மூலம் அவர் தங்கியிருந்த மடிப்பாக்க வீட்டின் உரிமையாளரை புலனாய்வு குழுவினர் விசாரித்த போது சிவராசனின் அடுத்தக் கட்ட நடவடிக்கை முழுக்கப் புரிந்து போனது. காரணம் டெல்லியில் ஒரு வீடு பிடித்த தங்கவேண்டும் என்பதும், அங்கிருந்தபடி செய்ய வேண்டிய மற்ற வேலைகளையும் முடித்துவிட்டு நேபாளம் வழியாகத் தப்பும் எண்ணம் என்பதையும் புரிந்து கொண்டனர். ஆனால் முடிந்தவரைக்கும் மற்றவர்கள் நேபாளம் வழியாகத் தப்ப வைக்கும் எண்ணம் இருந்தாலும் சுபா,நளினி,சிவராசன் போன்றோர்களை இலங்கைக்குத் திருப்பி அழைத்துக்கொள்ள வேண்டும் என்ற விடுதலைப்புலிகளின் முயற்சியும் முறியடிக்கப்பட்டது. ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு வெளியிடப்பட்ட சிவராசன் புகைப்படத்தை மடிப்பாக்க வீட்டின் உரிமையாளரும், டெல்லியில் வீடு பிடிக்க ஏற்பாடு செய்து கொண்டுருந்த சபாபதி பிள்ளை என்பவரும் செய்திதாள்களில் பார்த்ததும் திடுக்கிட்டு போயினர். தங்கள் வீட்டிலிருந்த சிவராசனை வேறு எங்கேயவாது போய்விடுங்கள் என்று எச்சரிக்கச் சூளைமேட்டில் இருந்த ஈழத்தமிழர் வீட்டில் தஞ்சம் அடைந்து இருந்தனர். இந்த இருவரையும் புலனாய்வு குழுவினர் துரத்தி பிடிப்பதற்குள் இவருமே தப்பிவிட்டனர். தேடிக்கொண்டுருந்த இருவரின் உறவினர்களையும் துரத்திய புலனாய்வு குழுவினருக்கு வேறொரு தகவல் கிடைத்தது. தமிழ்நாட்டுக்கு சிவராசன் குழுவினருக்கு முன்னால் வந்து உள்ள இருந்த ஆதிரை என்ற பெண் விடுதலைப்புலி டெல்லியை நோக்கி கிராண்ட் எக்ஸ்பிரஸ் மூலம் பயணித்துக் கொண்டுருந்தது தெரியவந்தது. பயணித்துக் கொண்டுருந்தவர் பெண் என்றதும் நிச்சயம் தணுவுடன் இருந்த சுபாவாகத் தான் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் உள்ள அனைத்துச் சிபிஐ அலுவலகத்திலும் தகவல் தெரிவித்தனர். வழியில் அவர்கள் பயணித்த இருக்கையைக் கண்டு அவர்களுடன் பயணித்து டெல்லியில் இறங்கிய போது கைது செய்தனர். பயணம் செய்து கொண்டுருப்பது சுபா என்று தேடிப்போனவர்களுக்கு வியப்பு. ஆதிரை பெண்ணாக இருந்தாலும் எந்த வாகனத்தையும் எந்த இடத்திலும் சிறப்பாக ஓட்டும் ஓட்டுநர் பயிற்சி பெற்றவர். இதற்கு மேலாக ஓயர்லெஸ் சங்கேத பாஷையான கிரிட்ப்லாஜியில் கைதேர்ந்தவர். ஆனால் தொடக்கத்தில் இந்த ஆதிரை மூலம் டெல்லியில் வைத்தே ராஜீவ் காந்தியை கொலை செய்யத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு இருந்ததும் அதன் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது தப்பவைக்க என்ற நோக்கத்தில் சிவராசன் உருவாக்கி வைத்திருந்த சபாபதி பிள்ளை மற்றும் வீட்டின் உரிமையாளர் இருவரும் டெல்லிக்குப் பயணம் செய்து அங்குப் போலியான கடவுச்சீட்டுக்கள் மூலம் வெளிநாட்டுக்கு ஆள் அனுப்பும் நபர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உருவாக்கி வைத்திருந்தனர். துரத்தல் தொடர்ந்து கொண்டேயிருந்தது. ஜுன் மாத இறுதியில் பிடிபட்ட பாஸ்கரன் மூலம் கடைசியாகச் சிவராசன் தங்கியிருந்த வீடும் கண்டுபிடிக்கப்பட்டது. சிவராசன் குழுவினர் வெளியேறியதும் அந்த வீட்டில் விஜயன் என்பவர் தன் மனைவியுடன் வசித்து வந்தார். புலனாய்வு குழுவினர் துருவி விசாரித்த விசாரணையில் மனைவி சமையல் அறையில் புதைத்து வைத்திருந்த வயர்லெஸ் செட்டை காட்டிக் கொடுத்தார். புலனாய்வு குழுவினர் இவர்கள் எந்தத் திசையில் இருந்து செய்தி கடத்திக் கொண்டிருக்கின்றார்கள்? என்று மண்டையை உடைத்துக் கொண்டுருந்தார்களே? அந்தச் செய்தி மல்லிகை இல்லத்திற்கு மிக அருகிலேயே கொடுங்கையூரில் எவரெடி காலணியில் இருந்து கடத்தப்பட்டுக் கொண்டுருந்ததை அப்போது தான் கண்டுபிடித்தார்கள். தேசப்படுத்தப்பட்ட அந்த உபகரணங்களை வைத்து ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் வைத்துப் பிடிபட்ட ஆதிரை மூலம் முக்கியமான தகவல் ஒன்று பெறப்பட்டது. சிவராசனுக்கு உதவியாகத் தொடக்கம் முதல் செயல்பட்டுக்கொண்டுருந்த சுதந்திர ராஜாவை உயிருடன் பிடித்தனர். அதுவும் எப்படி? ஆதிரை சொன்ன தகவலின்படி பல்லாவரம் அருகில் உள்ள பம்மல் என்ற பகுதிக்கு சுதந்திர ராஜா அழைத்துச் சென்றார் என்பதைத்தவிர வேறு ஏதும் அவரால் சொல்லத் தெரியவில்லை. ஆனால் அந்த வீட்டிற்கு அருகில் படிக்கும் குழந்தைகளைப் பற்றிச் சொல்லவும், அந்தக் குழந்தைகள் போட்டுருந்த பள்ளிச்சீருடை மூலம் பள்ளியை கண்டுபிடித்து, குழந்தைகள் மூலம் சுதந்திராஜா தங்கியிருந்த வீட்டை அடைந்தனர். தூங்கிக்கொண்டுருந்தவர் இவர்களைப் பார்த்ததும் சயனைடு குப்பியை கடிக்க முயற்சிக்க, தடுத்து கைது செய்தனர். இவர் கைதானபிறகு தான் சிவராசன் பற்றிய முழுமையான அத்தனை விசயங்களும் புலனாய்வுக் குழுவினருக்குத் தெரியவந்தது. காரணம் இவர் தான் தொடக்கம் முதல் சிவராசனுக்கு உதவியாளராய் செயல்பட்டவர் [] 9. சிவராசன் சுபா கூட்டணி அதிரடிப்படை இறுதிக்கட்டம் பயமும் பரிதாபமாய் ரங்கநாத் மனைவி மிருதுளா பெங்களூர் நகரக் காவல்துறையிடம் பேசி முடித்ததும், துணை கமிஷனர் ஒருவரை காரில் அழைத்துக்கொண்டு தூரத்தில் இருந்தபடியே சிவராசன் குழுவினர் தங்கியிருந்த தங்களுடைய வீட்டை அடையாளம் காட்டினார். சிவராசன், சுபாவுடன் திருச்சியில் இருந்து தப்பித்த ரங்கன், மற்றும் சுரேஷ் மாஸ்டர் கூட்டணியினர் உள்ளே இருந்தனர். கோனனகுண்டேவில் அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் என்ன நடக்கிறது என்பதை அந்த வீட்டின் மிக அருகில் ஓட்டியிருந்த வீட்டின் குளியல் அறையில் இருந்தபடியே பார்க்க முடியும். துணை கமிஷனர் மற்றும் சில காவல்துறையினருடன் சேர்ந்து அந்த வீட்டைக் கண்காணித்தபடி இருந்தனர். இவர்கள் மறைவிடத்தில் நிறுத்தியிருந்த வாகனத்தை வெளியே வந்த ரங்கன் பார்த்துவிட்டு பின்வாங்கியபடியே போய்த் தப்பிவிட்டார். இரவு முழுக்கச் சுற்றிலும் பாதுகாப்பு படையினருடன் கண்காணிக்கப்பட்டது. முழுமையாக உறுதிப்படுத்த வேண்டும். மனைவியைக் காவல்துறையினர் பிடித்துவிடப் பயந்து போன ரங்கநாத் லாட்ஜ்ல் தங்கி விட்டு மறுநாள் கோனனகுண்டேவிற்கு வர பொதுமக்கள் அடையாளம் காட்டி பிடித்துக் கொடுத்து விட்டனர். அவர் சயனைடு விழுங்க முயற்சித்து அந்த முயற்சியும் முறியடிக்கப்பட்டது. இரவு பகல் பராமல், குடும்ப வாழ்கை மறந்து மொத்த குழுவினரின் ஒரே லட்சியமான சிவராசனை துரத்திக்கொண்டு வந்தவர்கள் இப்போது எதிரே உள்ளே வீட்டுக்குள் இருக்கிறார் என்று தெரிந்தும் ஒன்றும் செய்யமுடியாமல் தடுமாறிக்கொண்டுருந்தனர். உள்ளே உடனடியாக நுழைய அனுமதி கிடைக்கவில்லை. டெல்லி அதிகார மக்கள் மிகுந்த புத்திசாலி. இந்த இடம் தான் கடைசி வரைக்கும் புலனாய்வு குழுவில் பணிபுரிந்தவர்களுக்கும், SIT என்று உருவாக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வு குழுவினரை தலைமைப்பொறுப்பில் இருந்து வழிநடத்திக் கொண்டுருந்த கார்த்திகேயனுக்கு மிகுந்த அயர்ச்சியையும், தர்மசங்கடத்தையும் கொடுத்தது என்றால் அது மிகையில்லை. ஏன் உடனடியாக உத்தரவு வரவில்லை? கொடுக்கப்படவில்லை? என்பதற்கு இரண்டு விதமாக யோசித்துப்பார்க்கலாம். தப்பிச்செல்ல சூழ்நிலை அவர்களுக்குக் கிடைத்தால் நல்லது. மீண்டும் அவர்களைப் பிடிக்க முடியும் என்பது உத்தரவு கொடுக்க வேண்டியவரின் வாதம். அல்லது எதனால் அவர் அவ்வாறு கொடுக்கவில்லை என்பதும் அவரை இயக்கிய சக்தி அப்போது என்னவாக இருந்துருக்கும் என்பது இறந்த ராஜீவ் ஆன்மாவுக்குத் தான் தெரியும். காரணம் ஏற்கனவே நடந்த நிகழ்வில் உருவான ஒவ்வொரு நிமிட தாமதமும் வீட்டுக்குள் இருந்த சிவராசன் குழுவினர் சயனைடு சுவைக்க உருவாக்கிய தருணங்கள் அது. அவர்களைப் பொறுத்தவரையில் உயிரை விடக் கொள்கை பெரிது. கொள்கையை விட இயக்கம் அதன் கட்டுப்பாடு அத்தனை உன்னதமானது. உணர்ந்து என்ன பிரஜோயனம்? ஜனநாயக கட்டுப்பாடு கட்டுக்களைத் தான் போட்டு இருந்தது? மொத்த குழுவினர்களுகளுடன் பொதுமக்களும் சூழ்ந்து அந்தப் பகுதியே ஒரு விதமான அசாதரணமாகச் சூழ்நிலை நிலவிக்கொண்டுருந்தது. அதிரடியாக உள்ளே நுழைந்து விடலாமா? என்று ஆலோசிக்கப்பட்டது. பால்கார பெண்மணியை அனுப்ப யோசித்தார்கள். அவரையும் உள்ளே பிடித்து வைத்துக்கொண்டால்? வீட்டின் உள்ளே செல்லும் குழாயில் மயக்க மருந்து கலக்கலாமா? வாதப்பிரதி வாதங்கள். உள்ளுர் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. அவசர ஊர்தி உடனடியாக ஏற்பாடு செய்து இருந்தனர். ஏற்கனவே நடந்துருந்த சயனைடு மரணங்கள் காரணமாக மருத்துவகுழு எல்லாம் வந்து இறங்கிய பிறகு சிபிஐ இயக்குநரும் வந்து சம்பவ இடத்திற்கு வந்து இருந்தார். அத்தனையும் அவர் மேற்பார்வையில் நடந்து கொண்டுருந்தது. அதிரடிப்படையினர் தயாராக இருந்தனர். 1991 ஆகஸ்ட் 19 அதிகாலை வேளை. அந்தத் தெருவின் வழியே வந்த டிரக் எதிர்பாரதவிதமாகப் பழுதாகி மிகச் சரியாக அந்த வீட்டுக்கு முன் நின்று கொண்டு அவர்கள் சரி செய்யத் தொடங்க சம்மந்தம் இல்லாத சூழ்நிலையை உள்ளே இருந்தவர்கள் தவறாகப் புரிந்து கொண்டு சுடத் தொடங்கினர். புலனாய்வு குழுவினர் ஓளிந்து இருந்து பார்த்த குளியலைறை நோக்கி குண்டுகள் சரமாரியாக வரத்தொடங்கின. அப்போது புலனாய்வு குழுவினர் அங்கே இல்லாத காரணத்தால் எவருக்கும் பிரச்சனை இல்லை. அதிரடிப் படையினரும் சுட ஆரம்பிக்க, வீட்டின் உள்ளேயிருந்து வந்து கொண்டுருந்த குண்டுகள் அதிரடிப்படையில் உள்ள ஒரு வீரருக்கும் ஒரு காவல்துறை அதிகாரியையும் வந்து தாக்கியது. அடுத்த அரை மணி நேரத்தில் வீட்டுக்குள் இருந்து வந்த கொண்டுருந்த குண்டு முழக்கம் ஓய்ந்தது. கடந்த 24 மணிநேரமாக வெளியே காத்துக்கொண்டருந்த அதிரடிப்படையினர், உத்தரவு கிடைக்கப்பெற்று காலை ஆறுமணிக்கு நுழைந்தனர். நிகழ்ச்சிகளை தூதர்ஷன் நேரிடையாகப் படம் பிடித்துக்கொண்டிருந்தது. உள்ளே இருந்தவர்கள் அத்தனை பேர்களும் இறந்து கிடந்தனர். சயனைடு சாவு, வெடித்த குண்டுகள், இதற்கு மேலும் சிவராசன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைச் சுட்டுக்கொண்டு இறந்து கிடந்தார். சிவராசன், சுபா, நேரு, சுரேஷ் மாஸ்டர்,அம்மன், டிரைவர் அண்ணா,முதல் நாள் வந்து சேர்ந்து இருந்த ஜமுனா. இருந்து கிடந்தனர். கோடியக்கரைக்கு வந்து இறங்கியவர்களும் எட்டுபேர்கள் வந்து இறங்கினர். அதே போல் வேறு வகையில் உருவானவர்கள் ஒன்றிணைந்தவர்கள் உள்ளே இறந்து கிடந்தனர். அதிரடிபடையினர் தாமதமாக உள்ளே நுழைய எல்லாம் முடிந்து போயிருந்தது.. சரியாக அன்றைய தினம் ஆகஸ்ட் 20. ராஜீவ் காந்தியின் பிறந்த தினம். [] மயிரிழையில் அங்கிருந்து வெளியே தப்பியிருந்த ரங்கன் கூட்டணியினர் உத்தரவுபடி வெள்ளைநிறமாக மாற்றப்பட்ட மாருதி ஜிப்ஸியில் சென்னைக்கு வந்துருந்தார். ஆவடியில் தங்கியிருந்தவர் குறிப்பிட்ட டிராவல் ஏஜென்ஸிக்கு வர அங்குக் காத்து இருந்த புலனாய்வு குழுவினரை பார்த்ததும், சாலையில் ஓடத் துவங்க, திரைப்படச் சாகச காட்சி போலத் துரத்திச் செல்ல சயனைடு குப்பியை கடிக்க முற்படும் போது தடுத்து அவர் மூலம் பெற்ற தகவல் தான் சிவராசன் குழுவினர் டேங்கர் லாரியின் உள்புறம் ஒளிந்து தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவிற்கு சென்றதை கண்டுபிடிக்க முடிந்தது. இப்போது மொத்தமும் ஒரு முடிவுக்கு வந்து விட்டது. சர்வதேச இன்டர்போல், அயல்நாட்டுத் தூதரங்கள், இ.பி.கோ, தடா, பொடா, தேவைப்டும் ஆவணங்கள், தனி மனித வழிகாட்டல், குழுவினரின் தியாக மனப்பான்மை, உறக்கம் மறந்த நாட்கள் என வெறும் வெள்ளை காகிதம் போல் இருந்த சதிவலையை இதற்குப் பின்னால் நேரிடையாக மறைமுகமாகச் செயல்பட்டவர்கள் என அத்தனை பேர்களையும் ரவுண்டு கட்டி வட்டத்திற்குள் கொண்டு வந்து நிறுத்தியாகி விட்டது. புலனாய்வு குழுவினரை, செய்திதாள்கள், தனிப்பட்ட அதிகார வர்க்கம், பாராட்டுரைகள் வழங்கியதைப் போல இதற்குப் பினனால் நாம் இப்போது பேச வேண்டியது? ஏன் ராஜீவ் காந்தி படுகொலை நடந்தது? புலனாய்வு குழுவினர் குறித்த மொத்த புரிதல்கள் என்ன? முழுமையாகக் கார்த்திகேயன் மற்றும் அவரது குழுவினரும் ஜெயித்து விட்டார்களா? பகுதி - நான்கு 1. தயாநிதி மாறன் -- மலையாய் மாறிய (ஸ்பெக்ட்ரம்) அலை மழைக்காலம், வெயில் காலம் என்பது போலவே இப்போது இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது ஸ்பெக்ட்ரம் காலம். திமுகவின் ஆட்சியைக் காவு வாங்கிய காரணங்களில் ஒன்றாக இருந்த இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றி நாளொரு மேனியும் புதுப்புது வண்ணத்துடன் செய்திகள் வந்து கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு செய்திக்குள்ளும் ஓராயிரம் மர்ம முடிச்சுகள். முதலில் திஹாருக்குத் தனியாகப் போன ராசா துணைக்கு ஒரு கூட்டத்தையே சேர்த்து அழைத்துக் கொண்டார். இப்போது ‘ மெல்லிய மலர் வாடுகின்றது’ என்ற தத்துவத்தைக் கலைஞர் உதிர்க்கும் அளவிற்குக் கனிமொழி பேசும் மொழி திஹார் மொழியாக மாறி நிபந்தனை ஜாமீனில் வெளியே இருக்கின்றார். ஆனால் இந்திய புலனாய்வு அமைப்பான சிபிஜயின் வலையில் சிக்கியது அத்தனை கெண்டை கெளுவை மீன்கள் மட்டுமே. இன்னும் சுறா மீன்கள் சிக்கியபாடில்லை. ஆட்சியில் இருக்கும் வரைக்கும் சம்மந்தப்பட்ட காங்கிரஸ் தலைகளுக்கும் கவலையில்லை.. இதில் விட்டகுறை தொட்டகறை ஒன்று உள்ளது. அவர் தான் திருவாளர் தயாநிதி மாறன். தொலைக்காட்சி துறையில் தொழில் தொடங்கிய குறுகிய காலத்திற்குள் மாறன் குடும்பம் பெற்ற வளர்ச்சி அசாதரணமானது. 15 வருடங்களுக்குள் உலகப் பணக்காரர் வரிசையில் கோலோச்சியவர்கள் செய்த உள்ளூர் தாதாதனங்கள் இப்போது தான் மெதுவாக வந்து கொண்டிருக்கிறது. தயாநிதி சோனியாவை ஆண்டி என்றாலும் அம்மா தாயே என்றாலும் கூட உச்சநீதி மன்றத்தால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஆப்பை கழட்ட முடியாது போலிருக்கு. அவரின் அதளபாதாளம் கண்ணுக்குத் தெரிவதால் அண்ணாத்தே நீ என்றைக்கு? என்பது போல் நிலவரம் சூடாய் போய்க் கொண்டிருக்கிறது. நாம் இப்போது பார்க்கப் போவது காங்கிரஸ், திமுக, மாறன் வகையறாக்களைப் போல இதுவரைக்கும் வெளியே தெரியாத ஒரு நபரும் உண்டு. ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது அலைக்கற்றை மூலம் இந்தியாவின் கஜானாவிற்கு முறைப்படி சேர வேண்டிய பணத்தைத் திருடியவர்களின் காவிய கதை. ஆனால் சன் குழுமமத்தால் தொழில் ஒப்பந்தம் போட்டிருக்கும் மலேசிய நிறுவனமென்பது (ASTROI) ஒருங்கிணைந்த இந்தியாவை எதிர்காலத்தில் துண்டாக்கி விடக்கூடிய சீன உளவு நிறுவனத்தின் கைப்பாவையாகும். அதன் முதலாளி வெகுஜன ஊடகம் எதுவும் இதுவரையிலும் சுட்டிக்காட்டப்படாத மலேசிய தொழில் அதிபர் தமிழர் ஆனந்தகிருஷ்ணன். இவருடன் சன் தொலைக்காட்சி போடப்பட்ட ஒப்பந்தங்களுக்காகப் பலிகிடா ஆக்கப்பட்டவர் தான் இப்போது பரபரப்பாய் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் சிவசங்கரன். யாரிந்த ஆனந்தகிருஷ்ணன்? . இவருக்கும் ஈழத்தில் நடந்த கடைசிக் கட்ட போராட்ட நிகழ்வுக்கும் சம்மந்தம் உண்டென்றால் நம்பமுடியுமா? இவரின் கைங்கர்யம் வெறுமனே தமிழ்நாடு, இந்தியா என்றில்லாமல் தெற்காசியா முழுக்கப் பரவியுள்ளது. குறிப்பாக ஈழம் சார்ந்த அத்தனை பொருளாதார உடன்படிக்கைகளுக்கும் சீன அரசு இவரை முன்னிறுத்தியே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேம்போக்கான பார்வையில் இவர் மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி. மலேசியாவின் அசைக்க முடியாத ஆளுமை. மலேசியாவின் எதிர்க்கட்சி ஆளுங்கட்சி எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவரின் தயவும் வேண்டும். ஆனால் இவர் அடிப்படையில் சீனாவின் பொருளாதார அடியாள். இன்று வரையிலும் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்த விமர்சனத்திறகு பஞ்சமில்லை. ஏன் விடுதலைப்புலிகள் இயக்கம் போரில் தோற்றது? எப்படித் தோற்கடித்தார்கள்? ஏன் இத்தனை நாடுகளும் ஒன்றாகச் சேர்ந்து இலங்கைக்கு உதவி செய்தது? இந்தியாவுக்குப் பிரபாகரன் மட்டும் தான் பிரச்சனையா? போன்ற ஏராளமான கேள்விகளுக்கு நாம் பதில் தேடினால் அதில் முக்கிய இடத்தைப் பிடிப்பவர் இந்த மலேசிய தொழில் அதிபர் ஆனந்த கிருஷ்ணன். மகிந்த ராஜபக்ஷே ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு நாடும் இலங்கையின் மேல் வைத்திருந்த கண்ணும், எதிர்பார்த்துக் காத்திருந்த தருணங்கள் போன்ற அத்தனையும் அனந்த கிருஷ்ணன் வாழ்க்கை வரலாற்றை நாம் தோண்டும் போது கப்பு வாடை நம் மூக்கை துளைக்கும். மனித உரிமை மீறல், அனாதை ஆக்கப்பட்ட ஈழத்தமிழர்கள், முகாமில் உள்ளவர்கள் என்று தேய்ந்து போன வார்த்தைகளுக்குப் பின்னால் இருப்பது ஒவ்வொன்றும் சர்வதேச ஒப்பந்தங்களும் அதற்காக அடித்துக் கொண்டிருக்கும் சர்வதேச நாடுகளுமே ஆகும். 2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஈழத்திற்குள் கொண்டு வரப்பட்ட ஒவ்வொரு சீன ஒப்பந்தங்களுக்குப் பின்னாலும் அனந்த கிருஷ்ணனின் பங்களிப்பும் உண்டு. இவரைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்பு துக்கடா வேடத்தில் துட்டுக்காக அடித்துக்கொண்டிருக்கும் இவர்களைப் பார்த்து விடலாம். தொழில் அதிபர் சிவசங்கரன் யார்? திருவண்ணாமலை பகுதியில் பிறந்த 54 வயதான பி.ஈ பட்டதாரி. தொடர்ச்சியாக எம்.பி.ஏ பட்டத்தை அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பெற்றவர். உலகம் முழுக்கப் பரவியிருக்கும் இவரின் சொத்து மதிப்பு ஏறக்குறைய 20 ஆயிரம் கோடி ரூபாய். இன்று உலகம் முழுக்க இரும்புத்தொழிலில் சக்ரவர்த்தியாகக் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் இந்தியரான சுனில் மிட்டலின் தொழில் தத்துவத்தைப் போலவே சிவசங்கரனும் நலிந்த நிறுவனங்களை வாங்கி, அதனை வளர்த்து, சந்தையில் நல்ல லாபத்திற்கு விற்றுவிட்டு அடுத்தத் தொழிலை நோக்கி நகர்ந்து போய் விடுவது என்ற கொள்கையை வைத்திருப்பவர். இவர் வைக்காத துறையே இல்லை என்கிற அளவிற்குத் தொழில் மூளையைக் கொண்டவருக்குத் தேடிக் கொண்ட தொழில் ரீதியான எதிரிகளும் அதிகம். கணினி, காற்றாலை முதல் பாமாயில், மின் திட்டங்கள் வரைக்கும் அத்தனை துறைகளிலும் ஆட்சி செலுத்திக் கொண்டிருப்பவர். பின்லாந்து முதல் இந்தோனேசியா வரைக்கும் இவரின் வேர்கள் பரவாத நாடுகளே இல்லை என்கிற அளவிற்கு மல்டி பில்லியனர். இவரின் மற்றச் சுயதிறமைகளைப் பார்ப்பதை விட இவருக்கும் மாறன் சகோதர்களுக்கும் உருவான மோதலின் ஆணி வேரை பார்த்துவிடலாம். இவருக்கு வேறெங்கும் உருவாகத பிரச்சனைகள் இவருக்கு இந்தியாவில் மட்டும் உருவாகக் காரணம் என்ன? சன் தொலைக்காட்சி சேட்டிலைட் துறையில் காலடி வைப்பதற்கு முன்பே இந்தத் துறையில் இருப்பவர்கள் ஜீ ( ZEE ) குழுமம். இந்தக் குழுமத்தின் தலைவர் சுபாஷ் சந்திரா. இவர்கள் தான் மாறன் சகோதரர்களுக்கு நேரிடையான போட்டியாளர்கள். ஆனால் இன்று வரைக்கும் தமிழ்நாட்டில் ஜீ தொலைக்காட்சி அரசாங்கம் நடத்தும் பொதிகை போலவே பெயருக்கென்று தான் ஓடிக் கொண்டிருக்கிறது. . காரணம் சன் நிறுவனத்தின் ஆதிக்கத்தை .தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு நன்றாகவே தெரியும். மாறன் சிவசங்கரனை துரத்தி துரத்தி பழிவாங்கி நாட்டைவிட்டே ஓட வைத்த சம்பவங்கள் எதற்காக? . ஜனவரி 5 2005 முதல் சிவசங்கரன் சுபாஷ் சந்திராவுடன் கைகோர்த்து டிஷ்நெட் நிறுவனத்தை நடத்த தங்களின் தொழில் எதிரியுடன் சேர்ந்த சிவசங்கரன் சன் நிறுவனத்திற்கு நிரந்தர எதிரியாக மாறிப்போனார். முரசொலி மாறனுக்கு நண்பராக இருந்த சிவசங்கரன் மகன்களுக்கு நிரந்தர எதிரியாக மாற மாறன் சகோதர்களின் அரசியல் செல்வாக்குச் சிவசங்கரனை நாடு விட்டு ஓடும் அளவிற்கு உருவாக்கத் தொடங்கியது. சிவசங்கரன் இந்தியாவில் நடத்திக் கொண்டிருந்த தொழில்களுக்கு உண்டான பாதிப்புகள் ஒரு பக்கம். ஜீ குழுமத்துடன் தான் நடத்தி வந்த டிஷ்நெட் தொழிலுக்கு உருவான இடைஞ்சல்கள் என்று சன் குழுமத்தால் உருவாகத் தாக்கு பிடிக்க முடியாமல் தடுமாறத் தொடங்கினர். இதைத்தான் சிபிஜ வசம் சிவசங்கரன் வாக்குமூலமாகக் கொடுத்துள்ளார் என்று நம்பப்படுகின்றது. தயாநிதி மாறன் மிரட்டலின் மூலம் சிவசங்கரனின் ஏர்டெல் நிறுவனத்தின பங்குகளைப் பெற்ற அஸ்ட்ரோ நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்தகிருஷணன் பற்றியும், ஈழத்தில் ராஜபக்ஷே ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, வந்த பிறகு நடந்த சர்வதேச ஒப்பந்தங்களைப்பற்றியும் இனி பார்க்கலாம். இதன் தாக்கம் எதிர்கால இந்தியாவிற்கு எவ்விதமான அச்சுறுத்தல்களை உருவாக்கும்??? அதுவே நமக்கு இந்திய உளவுத்துறையின் “சிறப்பு” அம்சங்களையும் நமக்குப் புரியவைக்கும். தோழர் பாமரன் அவர்கள் முருகன் என்பவர் எழுதிய அழிவின் விளிம்பில் தமிழினம் (முற்றுகைக்குள் இந்தியா) என்ற கோப்பை எனக்கு அனுப்பியிருந்தார். அச்சுக்காகத் தயாராக இருந்த அந்தப் பிடிஎப் கோப்பு ஏராளமான அதிர்ச்சிகளைத் தந்தது. இலங்கையை முன்னிறுத்தி சீன செய்து வரும் அத்தனை தில்லாலங்கடி வேலைகளையும் ஆதாரப்பூர்வமாகப் பல்வேறு தகவல்களுடன், இணையதளங்கள் உதவியுடன் எழுதியிருந்தார். ஒரு வருடத்திற்கு மேலான போதும் இந்தப் புத்தகம் வெளிவந்துள்ளதா என்பது குறித்துத் தகவல் இல்லை. இனி வரும் பெரும்பான்மையான தகவல்கள் அவரின் கோப்பிலிருந்து எடுத்தாளப்படுகின்றது. 2. சீனாவின் பொருளாதார அடியாள் ஆனந்தகிருஷ்ணன் - 1 “எல்லோரும் செய்வதை நாங்கள் செய்வதில்லை. பணம் பண்ண வேண்டுமென்றால் நாளைக்கான தொழிலை நாம் இன்றே கண்டறிய வேண்டும். நாளைக்கான பணத்தை இன்றைக்கே சம்பாரிக்க வேண்டும். இன்றுக்கான தொழிலை செய்து பணம் சம்பாரிக்க நினைத்தால் அதில் கிடைக்கும் லாபம் சிறிது. நாளைக்கான தொழில் வளர்வதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். ஆனால் கிடைக்கப் போகும் லாபமோ மிகப் பெரிது.” 2006 ஆம் ஆண்டு BUSINESS TIMES பத்திரிக்கைக்கு ஆனந்த கிருஷ்ணன் கொடுத்த இந்தப் பேட்டியின்படி தான் கடந்த 36 வருடங்களாகத் தனது தொழில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார். [] 1938 ஆம் ஆண்டுச் சாதாரண அரசு ஊழியரின் மகனாகப் பிறந்தவர் தத்பாரனந்தம் ஆனந்த கிருஷ்ணன். ஆனால் 2000 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் அவர் அடைந்த உயரம் மலேசியாவின் இரண்டாவது பணக்காரர். இப்போது உச்சத்தில் இருப்பதோடு உலகத் தமிழர்களின் பணக்காரர் வரிசையில் முதன்மை இடத்தில் இருப்பவரும் இவரே. எதிர்க்கட்சி ஆளுங்கட்சி என்ற பிரிவு மட்டும் தான் மலேசிய அரசியலில் இருக்குமே தவிர இவர் இரண்டு பக்கமும் முக்கியமான நபராக இருப்பவர். 1976 ஆம் ஆண்டு மலேசியாவில் நிதி மந்திரியாக இருந்த கு லி என்றழைக்கப்படும் ராஜலே ஹம்சாவுக்கு ஆலேசகராகச் செயல்பட்டதோடு 1981 முதல் 2003 வரை ஆட்சியில் இருந்த மஹாதீர் முகம்மதுக்கு வலதுகரமாகவும் செயல்பட்டவர். [] இதில் மகத்தான ஆச்சரியம் என்னவென்றால் கு லி மற்றும் மஹாதீர் இருவரும் வெவ்வேறு துருவங்கள். நம்மூர் ஜெயலலிதா, கருணாநிதி போல. இருவருடன் கூடிய உறவை எல்லை வகுத்து வேலி தாண்டாத வெள்ளாடு போலவே இருந்து இருவர் மூலமும் அத்தனை ஆதாயங்களையும் பெற்றவர். இது எந்த அளவுக்கு இருந்தது என்றால் இந்த இரு அரசியல் தலைவர்களுக்கிடையே சர்ச்சைகளும், சண்டைகளும் அதிகமான போது இருவரையும் தனது வீட்டுகே வரவழைத்துப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உருவாக்கி புதிய கெமிஸ்ட்ரி வாத்தியராகச் செயல்பட்டவர். மஹாதீருக்குப் பிறகு வந்த அப்துல்லா அகமது படாவியுடன் பசையாக ஒட்டிக்கொண்டு தனது தொழில் வாழ்க்கையின் குறியீட்டை நினைத்துப் பார்க்கவே முடியாத அளவிற்குச் செங்குத்தாக உயர்த்திக் கொண்டவர். 1984 ஆம் ஆண்டுத் தனது உஷா டெகஸ் (USHA TEGAS) என்ற தனியார் முதலீட்டு நிறுவனத்தின் மூலம் பெட்ரோல் நிறுவனங்களைத் தோண்டுவதற்குரிய உபகரணங்கள் மற்றும் பல சிறிய தொழில்களைச் செய்து வந்தாலும் இவருக்குப் பம்பர் லாட்டரி அடிக்கத் தொடங்கியது மஹாதீர் முகம்மது தொடர்பு உருவான போது தான். அதன் பிறகே 1980 ல் மலேசிய அரசுக்கு சொந்தமான .BANK NEGARA மற்றும் மலேசியாவின் பெட்ரோலிய நிறுவனமான PETRONAS என்ற இரண்டு நிறுவனங்களிலும் இயக்குநராக அமர்த்தப்பட்டார். இவர் வகித்த இந்த இரண்டு நிறுவன பதவிகளும் இவரின் சொந்த தொழில்களுக்கு வாய்க்கால் தோண்ட அவஸ்யமில்லாமல் பாலாற்றைப் பாய்ச்சி கொண்டிருந்தது. 1987 முதல் இதுவே இவரின் தொழில் வாழ்க்கையின் உச்சத்தைத் தொட வைத்தது. ஓரு வேளை அந்தச் சமயத்தில் தான் இவருக்குச் சுக்கிர பகவான் பங்காளியாகிருப்பார் போல? 1980 முதல் இவர் செய்து வந்த தொழில்களில் ஒன்று லாட்டரி சீட்டு. அதன் பெயர் PAN MALAYSIA SWEEPS. மஹாதீர் முகம்மதுவின் கடைக்கண் பார்வையினால் மலேசிய அரசாங்கம் நடத்திக் கொண்டிருந்த BIG SWEEP என்ற நிறுவனத்தையும் ஆனந்த கிருஷ்ணனிடம் ஓப்படைக்க அடுத்தப் பண ஆறு இவரின் வாழ்க்கையில் கரை கடக்கத் தொடங்கியது. இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் மலேசிய அரசாங்கம் நடத்திக் கொண்டிருந்த லாட்டரி என்பது மலேசியாவில் உள்ள சமூகப் பொது நல திட்டங்களுக்கு நல்ல முறையில் பயன்பட்டுக் கொண்டிருந்ததாகும். ஆனால் ஆனந்த கிருஷ்ணன் நிர்வாகத்திற்கு வந்தவுடன் அரசாங்க லாட்டரி நிறுவனங்கள் தள்ளாடத்தொடங்கியது. இந்தச் சமயத்தில் தான் மகாதீர் மகத்தான் ஆச்சரிய அறிவிப்பு ஒன்றை (இவர் முன்னோர்கள் கேரளாவில் இருந்து சென்ற இந்தியர்கள்) வெளியிட்டார். “இஸ்லாமிய கொள்கையின்படி லாட்டரி தொழிலை அரசாங்கம் செய்யாது. ஆனால் தனியார் நிறுவனங்கள் இதைத் தராளமாகச் செய்யலாம் “ வேறெதுக்கு? மலேசிய லாட்டரி தொழிலில் தனிப்பெரும் ஆளுமையாக ஆனந்த கிருஷ்ணன் உருவானார். இது தவிர மலேசியாவில் உள்ள குதிரைப் பந்தயத் தொழிலிலும் வெற்றிக் கொடி நாட்ட உதவியவரும் மஹாதீர் முகம்மதுவே. இந்த இடத்தில் ஒரு இடைச் செருகல் உண்டு. ஆனந்த கிருஷ்ணனுடன் தொழில் ஒப்பந்தம் போட்டுள்ள சன் தொலைக் காட்சி நிறுவனத்தைப் பற்றி ஏராளமான காழ்ப்புணர்ச்சிகள் இருந்தாலும் கலாநிதி மாறனைப் பொறுத்தவரையிலும் எந்த இடத்தில் எந்தப் பதவியில் எவரை அமர்த்த வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர். ஒரு தொழில் நிறுவனத்தின் தனிப்பட்ட கொள்கை எப்படி வேண்டுமானலும் இருக்கலாம். ஆனால் அவர்களின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாகச் செயல்படுபவர்கள் இந்தத் தனிச்சையான நிர்வாகத்தினரே. இன்று வரையிலும் சன் குழுமம் பெற்ற வெற்றிகள் எப்படி அரசியல் அதிகாரத்தால் விரைவாக உயரமுடிந்ததோ அதே அளவிற்குக் கலாநிதி மாறனை சுற்றியுள்ள போர்ப்படை தளபதிகளும் முக்கியக் காரணமாக இருப்பவர்கள். [] இந்த இடத்தில் இவற்றைக் குறிப்பிடக்காரணம் ஆனந்தகிருஷ்ணனின் வளர்ச்சிக்குப் பினனாலும்,ஒவ்வொரு இன்ஞ்சிலும் இந்த அரசியல் அதிகாரங்கள் தான் அதிக அளவிற்கு உதவியுள்ளது. இதற்கு மேலும் இவர் ஒவ்வொரு தொழிலுக்கும் நியமித்த நம்பத்தகுந்த சீனர்களும், அவர்களுக்கு இவர் நிறுவனம் வழங்கிய குறிப்பிட்ட பங்குகளும் முக்கியக் காரணமாக இருந்தது. இதுவே இவரின் நிறுவன பங்குகளைச் சந்தையில் வாங்குபவர்களுக்கு நல்ல பங்காளியாக இருக்க மிக விரைவில் உச்சத்தை எட்டினார். மஹாதீர் இவருக்குச் செய்த உபகாரங்கள் எந்த அளவிற்கு இருந்தது என்பதை ஒரே ஒரு உதாரணம் மூலம் பார்க்கலாம். சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இன்று வரையிலும் ஒரு வித்யாசமான சூதாட்டம் உண்டு. அது எண்கள் அடிப்படையில் இருக்கும். நாம் எந்த எண்களைச் சொல்கிறோமோ அந்த எண்களின் பேரில் நாம் பணம் கட்டி வாங்க வேண்டும். சீனர்களுக்கு இயல்பாக இந்தச் சூதில் அதிக ஆர்வம் உண்டு. 1989 முதல் மஹாதீர் உத்தரவின்படி குதிரைப்பந்தயத்தையும், இந்தச் சூதாட்டத்தையும் ஆனந்த கிருஷ்ணனின் நிறுவனத்திற்குத் தாரை வார்த்ததை மேலே பார்த்தோம் அல்லவா? ஆனால் இதற்குப் பின்னால் அரசாங்கத்திற்கும் இவரின் நிறுவனத்திற்கும் உள்ள உடன்பாடு எப்படி இருந்தது தெரியுமா? மொத்த வருவாயில் இவருக்கு 45 சதவிகிதம் குதிரைப் பந்தய நலவாரியத்திற்கு 5 சதவிகிதம் மீதியுள்ள 50 சதவிகிதம் குதிரை பந்தயக் கிளப்புகளுக்கு. அரசாங்கம் உருவாக்கியுள்ள அமைப்பில் நாட்டாமை செய்வதற்கு இவருக்கு. அதிகாரப்படி பாதிக்கு பாதி. இது தவிரக் கணக்கில் வராதது எப்போதுமே மற்றவர்களின் கண்களுக்குத் தெரியாதது தானே? அரசியல்வாதிகள் என்றாலே எல்லா நாடுகளிலும் மணம்,திடம்,குணம் ஒன்று தான் போலிருக்கு. ஓரே காரணம் மஹாதீர். ஆனந்தகிருஷ்ணன் அடைந்த லாபத்திற்குப் பினனால் இந்த இவரின் பங்கு சதவிகிதம் எங்கெங்கு பாயும் என்பதை நாமே எளிதில் புரிந்து கொள்ள முடியும். [] மலேசிய நாட்டுக்குள் மட்டும் கில்லாடியாக இருந்த ஆனந்த கிருஷ்ணனின் தொழில் பார்வை வேறொரு பக்கம் திரும்பியது. அதற்கு இவர் உருவாக்கிய தந்திரம் தொழில் உலகத்தில் இருந்த மொத்த மக்களையும் தாவாக்கட்டையில் கையை வைத்து ஏக்கத்தோடு இவரைப் பார்க்க வைத்தது. அது குறித்து…………….? 3.சீனாவின் பொருளாதார அடியாள் -- 2 இன்று அமெரிக்காவின் பொருளாதாரத்தின் ஆணிவேராக இருக்கும் யூதர்களைப் போலவே தெற்காசியாவின் பெரும்பாலான தொழில்களுக்குச் சொந்தக்காரர்கள் சீனர்களே. இவர்கள் வாழும் நாடுகள் வேண்டுமென்றால் வெவ்வேறாகயிருக்கும். ஆனால் அடிப்படையில் தன் இனம், மொழி எதையும் விட்டுக் கொடுக்காமல் கலாச்சாரப் பிடிமானத்தோடு வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள். . மலேசியா, சிங்கப்பூர் தொடங்கி ஹாங்காங் வரைக்கும் உள்ள அத்தனை நாடுகளிலும் வாழும் சீனர்களின் தொழில் ரீதியான அத்தனை ஆணி வேர்களும் சீனாவில் தான் இருக்கிறது. சீனர்கள் எங்கு வாழ்ந்தாலும் சீனர்களாகத்தான் வாழ்வார்கள் இருப்பார்கள். இவர்கள் தாங்கள் செய்யும் தொழில் லாபத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள். ஆனால் ஆனந்த கிருஷ்ணன் மலேசியாவில் வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டிருப்பதும் இந்தச் சீனர்களுக்கு மத்தியில் தான் என்பதையும் இப்போது நினைவில் கொள்ளவேண்டும். இன்று வரையிலும் கூட ஆனந்த கிருஷ்ணன் தன்னுடைய தனித்தன்மையை நிரூபித்துக் கொண்டிருப்பவர். இப்போது இவர் சீனர் ஒருவருக்குப் பெப்பே காட்டிய தில்லாங்கடி ஆட்டத்தைப் பார்க்கும் போது தான் இவரின் தொழில் மூளையை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். TANJONG என்பது மலேசியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனம். இதன் செயல்பாடு என்பது பித்தளை சுரங்கப்பணியில் ஈடுபடுவதாகும். 1980 ஆம் ஆண்டு வாக்கில் இதன் சுரங்க அனுமதி முடிந்து விட்ட காரணத்தால் செயலற்றுப் போய் இருந்தது. ஆனந்த கிருஷ்ணன் ஆடிய தொழில் விளையாட்டில் இந்த நிறுவனமும் இவரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆனால் இந்த நிறுவனத்தைக் கைப்பற்ற ஆனந்த கிருஷ்ணன் ஆடிய விளையாட்டு தான் மற்றவர்களுக்கு அதிக ஆச்சரியத்தைக் கொடுத்தது. குறிப்பாகச் சீனர்களுக்கு. TANJONG TIN DREDGING LTD என்ற முழுப் பெயர் கொண்ட இந்தச் சுரங்க நிறுவனத்தின் 70 சதவிகித பங்குகளை வைத்திருந்தவர் பெயர் ராபர்ட் குவோ கின் (ROBERT KUOK). ஹாங்காங்கில் வசித்துக் கொண்டிருந்தவரிடம் நேரிடையாகப் போய் நின்று ” எனக்கு உங்களிடமுள்ள பங்குகள் வேண்டுமென்று” கேட்டால் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடுவார். காரணம் சீனர்களைத் தவிர அந்தப் பங்குகளை வேறு எவருக்கும் விற்க மாட்டார். இதைத் தெரிந்து வைத்திருந்த ஆனந்த கிருஷ்ணன் தனது சீன நண்பரான KHOO TEIK CHOOI ன் உதவியோடு Marlestone Investment Ltd. என்ற நிறுவனத்தை உருவாக்கி ஹாங்காங்கில் பதிவு செய்தார். சீன நண்பரை முன்னிலைப்படுத்தி 1991 பிப்ரவரி 13 அன்று ராபர்ட் குவோக்கிடம் இருந்த 70 சதவிகித பங்குளையும் எளிதாகக் கைப்பற்றினார். முதல் பிரச்சனை முடிவுக்கு வந்தது. செயலற்றுப் போயிருக்கும் நிறுவனத்தின் பங்கின் விலை சந்தையில் எப்படியிருக்கும்? வெறும் காகிதமாகத்தான் இருக்கும். இது போன்ற நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதால் ஆனந்த கிருஷ்ணனுக்கு என்ன லாபம்? அதில் உள்ள சூட்சமத்தின் மூலம் தான் இவரின் உண்மையான தொழில் மூளையை நம்மால் புரிந்து கொள்ள முடியும்?. அடுத்து அதளபாதளத்தில் இருக்கும் இந்தப் பங்குகளுக்கு உயிரூட்ட வேண்டுமல்லவா? தன்னுடைய பிரதான நிறுவனமான உஸா டெகஸ் மூலம் ஏற்கனவே எண் சூதாட்ட பந்தயத்திற்கென்று உருவாக்கப்பட்ட Pan Malaysian Pools என்ற நிறுவனத்தை இதற்காகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டம் தீட்டப்பட்டது. ஏற்கனவே இந்தச் சூதாட்ட நிறுவனத்தின் மூலம் மூன்று போக விளைச்சல் போல ஆனந்த கிருஷ்ணன் அள்ளிக்குவித்துக் கொண்டிருந்த பணத்தை இப்போது நம் நினைவில் கொண்டு வர வேண்டும். ஹாங்காங்கில் தனது சீன நண்பரை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட Marlestone Investment Ltd. நிறுவனத்திற்கும் தனது சூதாட்ட நிறுவனத்திறகும் திடீர் என்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் தனது சூதாட்ட நிறுவனத்தின் மூலம் 9 கோடி டாலர் ஏற்பாடு செய்யப்பட்டு டம்மியாக ஏற்பாடு செய்திருந்த மேரிஸ்டோன் நிறுவனத்திடம் இருந்து மொத்த 70 சதவிகித பங்குகளையும் தனது பிரதான நிறுவனமான உஸா டெக்ஸ்க்கு மாற்றிக் கொண்டார். வெற்றிகரமாக இரண்டாவது படிக்கட்டில் ஏறியவர் அடுத்தப் படிக்கட்டில் ஏற வேண்டிய அவஸ்யமில்லாமல் சூது மூலம் வந்து கொண்டிருந்த பணம் இந்தப் பங்குகளை அழைத்துச் செல்ல ஆரம்பித்தது. . இப்போது TANJONG நிறுவனத்தின் மொத்த கட்டுப்பாடும் ஆனந்த கிருஷ்ணன் கைவசம் வந்து விட்டதல்லவா? இத்துடன் ஹாங்காங்கில் உருவாக்கப்பட்ட மேரிஸ்டோன் நிறுவனமும் இவரின் முக்கிய நிறுவனத்தின் அங்கத்தினராக மாறியது. சூதாட்ட நிறுவனத்துடன் இணைத்துக் கொண்ட TANJONG நிறுவனத்தின் பங்கின் விலையும் இப்போது வானமே எல்லையென்று தாறுமாறாகப் பறக்கத் தொடங்கியது. 1991 ஆம் ஆண்டு இரண்டு ரூபாயாக இருந்த பங்கின் விலை அடுத்த ஒரு வருடத்தில் ஆறு மடங்காக உயர்ந்து விட்டது. இத்தனைக்கும் செயலற்றுப் போயிருந்த நிறுவனத்தின் பங்கு இப்படிப் பறக்க ஒரே காரணம் ஆனந்த கிருஷ்ணன் வைத்திருந்த சூதாட்ட நிறுவனத்தின் அங்கமாக மாறியிருந்ததே முக்கியக் காரணம் என்பதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதளப் பாதாளத்தில் கிடந்த பங்குகளை வளர்க்க இனி வேறு எவரும் சொல்லியா தரவேண்டும். சந்தையில் இந்தப் பங்குகளும் முக்கியத்துவம் பெற இதனைத் தொடர்ந்து ஆனந்த கிருஷ்ணனின் பார்வை மலேசியாவில் மின்சார உற்பத்தித் துறையில் இறங்கினார். மிகக் குறுகிய காலத்தில் TANJONG நிறுவனத்தின் மூலம் (பங்குகளின் மதிப்பு உயர வேண்டுமல்லவா?) மூன்று மெகா மின் நிலையங்கள் உருவாக்கப்பட்டது. இப்போதைய சூழ்நிலையில் ஆனந்த கிருஷ்ணனின் வாழ்க்கையில் தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம். அதனால் தான் இப்போது மண் கூடப் பொன்னாக மாறியது. மலேசிய சட்டவிதிகளையே உடைத்து அரசாங்கத்தின் நிலத்தையே வாங்கி அதை அரசாங்கத்திடமே விற்று லாபம் பார்த்த கெட்டிக்காரர் என்றால் இவருக்கு என்ன பட்டம் கொடுப்பீங்க?. கோலாலம்பூரில் உள்ள ஒரு பகுதி சிலாங்கூர். இங்கே சிலாங்கூர் குதிரைப் பந்தய மையம் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருந்தது. இது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அமைப்பு. இவர்கள் கைவசம் இருந்த 240 ஏக்கர் பரப்புளவு உள்ள இடம் இருந்தது. கோலாலம்பூர் பகுதிக்காக ஒரு பெரிய பூங்கா ஒன்று உருவாக்கித்தர வேண்டும் என்று மலேசியா அரசாங்கம் (1982) இந்த அமைப்பிடம் சொல்லியிருந்தது. இது போன்ற அரசாங்கத்தின் இடங்களைத் தனியார்கள் எவரும் வாங்க முடியாது. ஆனால் ஆனந்த கிருஷ்ணன் சட்ட விதிகளைப் பற்றிக் கவலைப்படாமல் இந்த (1989) இடத்தைக் கைப்பற்றினார். அரசாங்கத்திற்கும் அரசாங்கம் உருவாக்கியிருந்த குதிரைப் பந்தய மையத்திற்கும் இடையே இருந்த அத்தனை விதிகளும் காற்றில் பறக்க ஆனந்த கிருஷ்ணனுக்குச் சொந்தமான SERI KUDA என்ற நிறுவனம் 150 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. ஆனால் அப்போதைய சந்தை மதிப்பு என்பது வேறு. இது அப்போது பலத்த சர்ச்சையை உருவாக்கியது. இப்போதைய காலகட்டத்தில் ஆனந்த கிருஷ்ணனின் செல்வாக்கு எந்த அளவுக்கு இருந்தது தெரியுமா? வாங்கிய இடத்தை அலங்கரித்து அப்படியே மலேசியாவின் PETRONAS நிறுவனத்திற்கு இந்த நிலத்திற்கான 51 சதவிகித உரிமையை விற்று விட்டார். வாங்கும் போது 150 கோடி. நிலத்தை அலங்கரிக்க 430 கோடி. விற்றது 900 கோடி. மலேசியா அரசவையில் பிரதமர் மஹாதீரும், அன்றைய நிதி அமைச்சர் அன்வர் இப்ராகிம் (ஓரினச் சேர்க்கை குற்றச்சாட்டின் மூலம் தனது அரசியல் வாழ்க்கையை இழந்தவர்) ஆனந்த கிருஷ்ணனிடம் இருந்து PETRONAS வாங்கியது சரிதான் என்று வக்காலத்து வாங்கிச் சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தனர். ஆனந்த கிருஷ்ணன் மச்சமுள்ள ஆளில்லை. உடம்பு முழுக்கவே மச்சத்துடன் பொறந்த ஆளாகயிருப்பார் போல? [] இந்த நிலத்தை வளர்த்தெடுக்கக் கேஎல்சிசி (Kuala Lumpur City Center – KLCC) என்ற நிறுவனம் 1992 ல் தொடங்கப்பட்டது, இதன் மூலம் தான் உலகிலேயே உயரமான (அப்போதைக்கு) கட்டிடம் என்ற 85 மாடிகளைக் கொண்ட இரட்டைக் கோபுரம் கட்டப்பட்டது. இதற்கு முக்கியக் காரணமும் ஆனந்த கிருஷ்ணனே. இந்தக் கேஎல்சிசி யில் தன்னிடம் இருந்த 48 சதவிகித பங்குகளையும் பெட்ரோனாஸ் நிறுவனத்திற்கே விற்ற வகையில் 1900 கோடி ரூபாய் லாபமும் கிடைத்தது. இந்தக் காலகட்டத்தில் தான் மலேசிய நாட்டிலிருந்த அத்தனை அதிகார வர்க்கத்தினருக்கும் ஆனந்த கிருஷ்ணன் என்றால் பயம் கலந்த மரியாதை உருவாகத் தொடங்கியது. அடுத்து ஆனந்த கிருஷ்ணன் நுழைந்த துறை செல்போன் துறை. தரையில் கிடந்த பங்குகளையே தாறுமாறாகப் பறக்க வைத்த ஆனந்த கிருஷ்ணனுக்கு வேட்டை ஆரம்பமானது. 4. சீனாவின் பொருளாதார அடியாள் 3 நீங்கள் சந்திக்கும் உங்கள் நண்பர் புதிதாகச் செல்போன் ஒன்று வாங்கி இருக்கிறேன்? என்று சொன்னால் உங்கள் எண்ணம் எப்படியிருக்கும்? என்ன மாடல் என்று வேண்டுமானால் கேட்பீர்கள்? காரணம் இன்று ரோட்ரோட காய்கறிக்கடை பாட்டியம்மா கூடப் பேசிக்கொண்டிருக்கும் செல்போனுக்கு எந்த மதிப்புமில்லை. வேண்டுமென்றால் நம்மால் ஒழுங்காக அனுபவிக்க முடியாத 2ஜி 3ஜி வகையான கைபேசிகளை வைத்துருப்பவர்களைப் பார்த்து வேண்டுமென்றால் காதில் புகைவர பார்த்துக் கொண்டிருப்போம். [] ஆனால் ஆனந்த கிருஷ்ணன் இந்த அலைபேசி துறையில் காலடி எடுத்து வைத்த ஆண்டு 1993. இப்போது தொடக்க அத்தியாயத்தில் ஆனந்த கிருஷ்ணன் தனது தொழில் கொள்கையான அதிக லாபத்திற்காகக் காத்திருக்க வேண்டிய அவஸ்யத்தையும், அதற்காகத் தேர்ந்தெடுக்க வேண்டிய தொழிலையும் பற்றி அவர் சொன்ன சமாச்சாரங்களையும் இப்போது உங்கள் மனதிற்குள் கொண்டு வர வேண்டும். மலேசியாவில் 1983 ஆம் ஆண்டு வாக்கில் தொலைபேசித் துறையில் தனியார் மயமாக்கல் நடந்தாலும் இது முழு வீச்சாகச் செயல்படத்தொடங்கிய ஆண்டு 1990. 1993 முதல் 1995 வரை நிலைத்த தொலைபேசி அமைப்புகளை (FIXED LINE TELEPHONE) நிறுவ ஐந்து உரிமங்கள் மலேசிய அரசாங்கத்தால் தனியாருக்கு வழங்கப்பட்டது. இந்த ஐந்து உரிமங்களில் ஆனந்த கிருஷ்ணனுக்குச் சொந்தமான Maxis Communications நிறுவனமும் ஒன்று. இந்த உரிமங்களில் முதல் உரிமம் 1985 ஆம் ஆண்டிலும் இரண்டாவது உரிமம் 1989 ஆம் ஆண்டிலும் மலேசிய அரசாங்கத்தில் வெளியிடப்பட்டது. ஆனால் மேக்ஸிஸ் நிறுவனம் மூன்றாவது உரிமத்தை கைப்பற்றிய ஆண்டு 1993. இந்த மேக்ஸிஸ் நிறுவனம் தான் இப்போது சன் குழுமத்துடன் ஒப்பந்தம் போட்டுச் சிவசங்கரனிடம் இருந்து ஏர்செல் நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளதுமான நிறுவனம்) இந்த மேக்ஸிஸ் நிறுவனம் முறைப்படி 1995 முதல் செயல்படத் தொடங்கியது. இதன் வளர்ச்சி 2000 ஆம் ஆண்டில் மலேசியாவின் தொலை தொடர்புத் துறையில் இரண்டாவது பெரிய நிறுவனமாகவும் 12 லட்சம் என்கிற அளவிற்கு வாடிக்கையாளர்களைக் கொண்டதாகவும் இருந்தது. இப்போது தான் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் வேறொரு பாதையை நோக்கி திரும்பியது. தன்னுடைய பிராட்பேண்ட் சேவைகளை உள்நாட்டுப் பிரச்சனைகள் அதிகமுள்ள பகுதிகளில், நாடுகளில் தனது விரிவாக்க சேவையை விரைவு படுத்தியது. அதுவும் தான் கைப்பற்றிய ஏர்செல் மூலம் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் மற்றும் சீனாவின் நேரிடையான கண்காணிப்பு உள்ள பகுதிகளில் தன்னுடைய வாடிக்கையாளர்களைக் கவரும் வேலையைத் தொடங்கியது. இப்போது இந்த இடத்தில் கிளைக்கதையாகச் சிவசங்கரன் வடகிழக்கு மாநிலங்களில் தனது ஏர்செல் நிறுவனத்திறகாக உரிமம் கேட்ட போது தயாநிதி மாறன் நொண்டிச் சாக்குச் சொல்லி கிடப்பில் போடப்பட்டதும் அதுவே . ஏர்செல் ஆனந்த கிருஷ்ணன் நிறுவனமான மேக்ஸிஸ் கைவசம் வந்ததும் எந்தக் கேள்விகளும் இல்லாமல் சட்டென்று திரைவிலகி காட்சிகள் மாறி உடனடி ஒப்புதல் கிடைத்ததையும் நாம் நினைவில் கொண்டு வரவேண்டும். ஏன்? எதற்காக? என்பதெல்லாம் மேக்ஸிஸ் நிறுவனத்தின் பரந்த சாம்ராஜ்யததையும் அதன் மூலம் சன் குழுமம் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதையும் உணரும் போது நம்மால் புரிந்து கொள்ள முடியும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் விடுதலைப்புலிகளுடன் கூடிய கடைசிக் கட்ட ஈழ போராட்டத்தின் போது தமிழ்நாட்டில் உள்ள தொலைக்காட்சி ஊடகங்களும், வடநாட்டில் உள்ள என்டிடிவி போன்ற இன்னும் பல நிறுவனங்களும் ஆனந்த கிருஷ்ணனுக்குச் சொந்தமான சாட்டிலைட் மூலம் தான் தங்கள் ஒலிஒளி பரப்பை செய்து கொண்டிருந்தார்கள். மீதி உங்கள் யூக்த்திற்கு இப்போது விட்டு விடுகின்றேன். தொடர்ந்து பின்னால் வேறு சில விசயங்களைப் பார்க்கலாம். ஏன்? எதனால்? எப்படி? என்பதைப் பார்ப்பதற்கு முன்பு இப்போது வண்டியை ரிவர்ஸ் எடுத்து இலங்கை பக்கம் நாம் இப்போது செல்ல வேண்டும். இந்திய தேசிய பாதுகாப்பு செயலாளர் சிவசங்கர மேனன் மற்றும் நாராயணனும் ராஜபக்ஷேவுக்கு உடன்பிறவாத தம்பிகள் போலத்தான் தொடக்கம் முதலே செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள். இவர்களைச் சொல்லிக்குற்றமில்லை. காரணம் இது போன்ற அதிகாரிகளை இயக்குவதும், பேசவைப்பதும் யார் என்று தெரிந்தால் நமக்கு இன்னும் பல விசயங்கள் புரியும். ஆனால் அதற்கான களம் இதுவல்ல.. இவர்கள் இருவரும் இலங்கை குறித்து பேசும் போது தவறாமல் ஒன்றை குறிப்பிடுவர். “நாம் இலங்கை விவகாரத்தில் ரொம்ப நெருக்கடி கொடுத்தால் நம் இடத்தைச் சீன அரசு எடுத்துக் கொள்ளும்” என்பார்கள். இவர் மட்டுமல்ல. மத்திய அரசாங்கத்தில் உள்ள ஒவ்வொரு அதிகாரியும் இந்த ஈழப்பிரச்சனையைப் பற்றிப் பேசும் போது கணக்கா சீனாவை நினைத்துக் கொண்டே பார்க்கும் ஒரு மேம்பட்ட சிந்தனை இன்று மன்மோகன் சிங் அரசாங்கத்தில் உருவாக்கி உள்ளது. இதுவே தான் இன்று ராஜபக்ஷேவுக்கு இந்தியாவைப் பார்க்கும் போது கிள்ளுக்கீரையாகத் தெரிகின்றது. அவரும் வெல்லக்கட்டி போல இனித்துப் பல பக்கமும் நாட்டுக்கொரு விதமாக நடித்துக் கொண்டு இன்று வரையிலும் தன் விளையாட்டைக் காட்டிக் கொண்டிருக்கிறார். இதுவரைக்கும் ஆனந்தகிருஷ்ணன் என்ற தனிமனிதரை அரசு ஊழியரின் மகனாகப் பிறந்தது முதல் அவரே மலேசிய அரசாங்கத்தின் மிகுந்த செல்வாக்கான ஆளானது வரைக்கும் பார்த்தோம். ஆனால் இவர் இப்போது சீனாவிற்கு எந்த அளவிற்கு முக்கிய ஆளாக இருக்கிறார் என்பதைப் பார்க்க வேண்டும்? சீனா இவரை வைத்து எந்தவித காரியங்களைச் சாதித்துக் கொண்டிருக்கிறது? இதன் மூலம் இந்தியா எதிர்காலத்தில் எவ்விதமான பிரச்சனைகளைச் சந்திக்க நேரும் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். ஆனந்த கிருஷ்ணன் என்பவர் வெறும் தொழில் அதிபராக இருக்கும் வரைக்கும் அவரும் சராசரியாகச் சுனில் மிட்டல், அம்பானி போன்ற ஒரு மகா கோடீஸ்வரர் வட்டத்தில் தான் வந்து நிற்பார். ஆனால் நமக்கு முக்கியமென்பது ஆனந்தகிருஷ்ணன் செய்து கொண்டிருக்கும் தொழிலும் அதன் மூலம் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் விஷயங்களுமேயாகும். அது தெரிந்தால் தான் ராஜபக்ஷே இப்போது காட்டிக் கொண்டிருக்கும் படங்களைப் பற்றி ஓரளவுக்கு நம்மால் புரிந்து கொள்ள முடியும்? நாம் பார்த்துக் கொண்டிருக்கும் ஆனந்த கிருஷ்ணன் பச்சை தமிழர் தான். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் தொழில் அதிபர்களுக்கு இனம், மொழி, பச்சை, சிவப்பு என்ற பாகுபாடும் இருக்காது. செய்யப் போகும் தொழில் மூலம் பெருத்த லாபம் உண்டா இல்லையா? இது தான் முக்கியம். [] அதுவும் இவரைப் போன்ற தொழில் மூளையுள்ளவர்களின் லாபம் என்பது பில்லியன் என்பதை மையமாகக் கொண்டு தான் ஒவ்வொரு தொழிலிலும் வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டிருக்கிறார். இவர் தொடக்கம் முதலே பல தொழில்களைச் செய்து கொண்டிருக்கும் சீனா போன்ற நாடுகளில் இவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. காரணம் இன்றைய சீன அரசாங்கமே தனது மொத்த நாட்டு மக்களையும் அடிமையாகவே வைத்துள்ளது. உனக்குப் புரட்சி வேண்டுமா? இல்லை பணம் வேண்டுமா? இரண்டே கேள்வி தான். இந்த எண்ணத்தை உருவாக்கி ஒரு போட்டி சமூகத்தை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு துறையிலும் படித்து வரும் இளைஞர்களுக்கும், தொழில் திறமையுள்ளவர்களுக்கென்றும், அவரவருக்குத் தகுந்த அத்தனை வாய்ப்புகளையும் அரசாங்கமே அங்கு உருவாக்கி கொடுத்துக் கொண்டேயிருப்பதால் இன்று சீனப் பொருட்கள் இல்லாத நாடே இல்லை என்கிற அளவுக்குச் சீனா உலகச் சந்தைப் பொருளாதாரத்தில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. பிழைக்க வழியிருக்க வாய்ப்பு இருக்கும் போது யாராவது புரட்சியைப் பற்றி யோசிப்பார்களா? இதற்கு மேல் அங்கேயுள்ள கம்யூனிச நிர்வாக அமைப்பு. வெளியே இருந்து பார்த்தால் சீன அரசாங்கமென்பது கம்யூனிச நாடு. ஆனால் உண்மையிலே இப்போது அக்மார்க் முதலாளித்துவ நாடு. அமெரிக்காவைப் பார்க்கும் போது அதன் முதலாளித்துவம் வெளிப்படையாக உலகத்திற்குத் தெரிகின்றது. அது போன்று நாம் சீனாவை சொல்லிவிட முடியாது. இது ஒன்று தான் முக்கியமான வித்தியாசம். கடந்த 30 ஆண்டுகளில் சீனா பெற்ற வளர்ச்சியென்பது மந்திரவாதி வைத்துள்ள மந்திரக்கோல் மூலம் பெற்ற வளர்ச்சிக்கு ஒப்பானது. இன்னும் சுருங்க கூறவேண்டுமென்றால் இன்றைய சீனா அமெரிக்காவில் முதலீடு செய்துள்ள பல ட்ரில்லியன் டாலர்கள்தான இன்றைய அமெரிக்காவை காத்துக் கொண்டிருக்கிறது என்றால் யோசித்துக் கொள்ளுங்க. இன்று வரைக்கும் சீனா முதலாளிகளை மட்டுமே வளர்த்துக் கொண்டிருக்கும் நாடாகவும் மாறியுள்ளது. இன்றைய சீனாவால் நினைத்த நேரத்தில் ஒரு நகரையே காலி செய்து மக்களை வேறு பக்கம் நகர்த்தி விட முடியும். [] அரசாங்க திட்டங்களுக்கென்று எங்கங்கு நிலங்கள் இருக்கிறதோ அத்தனையும் நொடிப் பொழுதில் எடுத்துக் கொள்ள முடியும். எவரும் ஏன் என்று கேட்க முடியாது. கேட்டாலும் கேட்ட ஆள் இருப்பார்ரா? என்பதும் சந்தேகமே. ஆனால் ஈழத்தில் மட்டும் அந்த வாய்ப்பு இல்லாத காரணத்தால் ஒரு இனத்தையே காவு வாங்கி ரத்தச் சகதியில் நனைந்து இவரைப் போன்ற பல தொழில் அதிபர்கள் தங்கள் தொழிலை வளர்க்க வேண்டியதாகி விட்டது. பணம் அதிகமாகச் சேர்ந்து விட்டால் பணக்காரர்கள் என்ன செய்வார்கள்? தனது செல்வாக்கை காட்ட அரசியல் துறையில் நுழைந்து நாட்டமையாக மாற எண்ணுவதைப் போல இப்போது சீனாவுக்கும் அந்த ஆசை தான் மேலோங்கிக் கொண்டேயிருக்கிறது. இதன் காரணமாகத்தான் தெற்காசியா முழுக்கத் தனது ஆக்டோபஸ் கரங்களை அகல விரித்து இன்று அஸஸாமில் பிரம்மபுத்திரா நதியை இஷ்டத்திற்கு வளைக்கும் அளவிற்கு அச்சமூட்டும் ஆளுமையாக இந்தியாவிற்குப் படம் காட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியா? இப்போது ராஜபக்ஷே இந்த அளவுக்கு ஆட்டம் போட காரணம் என்ன? இவருக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? அப்படியென்ன ஈழத்தில் பாலும் தேனும் ஒட அதை அள்ளிக்குடிக்கச் சீனாவும் அதைப் பார்த்து இந்தியாவும் முந்திக் கொண்டு ஓடுகிறார்கள்? விடுதலைப்புலிகளுடன் கூடிய ஈழ இறுதிக்கட்ட போரில், போருக்கு முன்னால் இந்தியாவின் செயல்பாடுகள் எப்படியிருந்தது. கேள்விகளைத் துரத்தி ஓடுவோம்? 5. முற்றுகைக்குள் இந்தியா --1 நாம் இப்போ ஒரு பத்து வருஷம் பின்னால போக வேண்டும். அப்போது தான் இப்போது நடந்து கொண்டிருக்கும் கதைக்கு ஒரு முடுச்சு போட முடியும். இது வரைக்கும் நாம் பயப்பட வேண்டிய ஒரு ஆளைப் பற்றிப் பார்த்துக் கொண்டு வந்தோம். இனிமே கொஞ்சம் லகுவா பேசிக்கிட்டே போகலாம். இந்த இலங்கை என்ற நாட்டுக்கு யார் யாரோ உண்மையாக உழைத்துவிட்டு செல்ல இன்று ஆனந்த கிருஷ்ணன் அவருக்குப் பினனால் சீனா, சீனாவை விரட்ட இந்தியா, இவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவுக்குக் கூட்டாகப் பிரிட்டன் என்று ஒரு பக்கமும் மற்றொரு புறம் “நாளைக்குப் புதுசா ஒரு துப்பாக்கி வருது? ரெண்டு தமிழர்களைச் சுட்டுப் பார்க்கிறாயா?” என்று இஸ்ரேலும், ரஷ்யாவும் இலங்கைக்கு இன்று கூவிக்கூவி விற்றுக் கொண்டிருக்கிறார்கள். விட்டகுறை தொட்ட குறையாக நம்ம பங்களாளி பாகிஸ்தான். ஏன்? என்ற கேள்விக்கு ஒரே காரணம் இந்தியா. இந்தியாவின் ஜனநாயகம். உலக நாடுகளுக்குத் தேவைப்படும் மனிதவளம், கனிமவளம் இதற்குமேலாக ஒவ்வொரு நாடுகளும் விரும்பும் சந்தைப்பொருளாதர வாய்ப்புகள் இந்தியாவில் மலிவாகக் கிடைப்பதே முக்கியக் காரணமாகும். ஆனால் சீனாவால் நேரிடையாக இந்தியாவை எதிர்த்துக் கொள்ள முடியாது. காரணம் அமெரிக்கா. அமெரிக்காவால் இந்தியாவிற்கு ஓரளவுக்கு மேல் தொந்தரவு கொடுக்கவும் முடியாது. காரணம் தற்போதைய சூழ்நிலையில் அமெரிக்காவிற்கு இந்தியாவின் சந்தையும், இந்தியாவின் மேல் வலிய திணித்துப் பெற்றுக்கொள்ள வேண்டிய ஆதாயங்களுமே முக்கியக் காரணமாக இருக்கிறது.. ஆனால் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இந்தியாவின் சந்தை முக்கியமானதாகத் தெரிகின்றதோ அந்த அளவுக்கு இந்தியாவின் நிலைத்தன்மை என்பது எப்போதும் கேள்விக்குறியாகவே இருந்து விட வேண்டும் என்பதில் குறியாகவே இருக்கிறார்கள். உலகில் ஆச்சரியப்படக்கூடிய இந்தியாவின் ஜனநாயக அமைப்பும், அடித்தாலும் பிடித்தாலும் அண்ணன் தம்பி நீயும் நானும்டா என்கிற கனவை மெதுமெதுவாகச் செல்லறிக்க வைக்க வேண்டும். அதைத்தான் இபபோது இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் இந்தியாவைச் சுற்றியுள்ள வளைகுடா நாடுகளாகட்டும், தெற்காசியாவின் பிற நாடுகளாகட்டும் எங்கும் இந்தியாவைப் போல நிலைத்தன்மை இல்லாத ஒரு தடுமாற்ற சூழ்நிலையில் தான் உள்ளது. அதிலும் பாதிக்கு மேற்பட்ட நாடுகள் அமெரிக்காவின் நாட்டாமையில் பெயருக்கென்று இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவின் நிலைப்பாடு முற்றிலும் வேறானது. அமெரிக்கா இந்தியா மேல் செலுத்தும் ஆதிக்கம் தெரிந்ததே. ஆனால் முழுமையான அடிமையாக இருக்க மாட்டோம் என்று விடாமல் நகர்ந்து கொண்டேயிருக்கிறது. இந்திய நாட்டை ஓட்டு என்ற உரிமையின் மூலம் ஜனநாயகம் என்ற சக்கரத்தை 120 கோடி இந்தியர்களும் தெரிந்தோ தெரியாமலோ சுற்ற வைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். அளவு கடந்த சகிப்புத்தன்மை, வாழ்க்கை குறித்த புரிந்துணர்வு என்று காலம் காலமாகக் கற்பிக்கப்பட்டு வந்த கலாச்சாரம் என்ற மாயை இந்தியர்களை ஒருங்கிணைத்து வைத்துள்ளது. என்னதான் சுயநலம், லஞ்சம், ஊழல், அதிகாரதுஷ்பிரயோகம் என்று அடுக்கடுக்கான குற்றாச்சாட்டுகள் இந்தியாவின் ஆணிவேரை அசைத்துப் பார்த்தாலும் நாம் ஓழுங்கான முறையில் இங்கு வாழ்ந்தால் இந்த இந்திய பூமி என்றும் சொர்க்கபூமியே என்பதை உணர்ந்து தான் ஒவ்வொரு இந்தியனும் அமைதி காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இலங்கையின் கதையோ கண்ணீருக்கு பஞ்சமில்லாத நாடு. காரணம் இலங்கை என்ற நாடு இன்றைய சூழ்நிலையில் சிங்கப்பூர் போலவே ஒரு நல்ல பொருளாதார வளமிக்க நாடாக வந்து இருக்க வேண்டிய நாடு. சொல்லப்போனால் வாங்கி விற்க மட்டுமே உதவும் சிங்கப்பூரே இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்றால் இலங்கையின் உள்ள இயற்கை வளம், துறைமுகம், சுற்றுலா, மனிதவளம் என்று எல்லாவகையிலும் எவ்வளவு தூரம் சிறப்பாக முன்னேறியிருக்க வேண்டும்.? ஆனால் இலங்கை பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்னாலே அதற்கான வாய்ப்புகள் போய் விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இலங்கையின் முதல் பிரதமர் சேனநாயகா மற்றும் அவர் பதவிக்கு வர உதவிய அவர் சகோதர்கள் வளர்த்துவிட்ட சிங்களர் தமிழர் என்ற இனவாதம் தான் இன்று வரைக்கும் பாடாய் படுத்தி இன்று இலங்கையைப் பிச்சைக்கார நாடாக மாற்றியுள்ளது. உலகத்தின் பார்வையில் இன்று பாகிஸ்தான் எவ்வளவு பாவமான நாடாகத் தெரிகின்றதோ அதைவிட மொத்த உலக மானுட சமூகப் பார்வையில் ஒரு அருவருப்பை உருவாக்கக்கூடிய நாடாக இன்று இலங்கை உள்ளது. நமக்கு அருவருப்பா முக்கியம். அறுவடை தான் முக்கியம் என்று ராஜபக்ஷேவின் மொத்த குடும்பமும் சுருட்டியது போக வந்தவர்கள் போனவர்கள் என்று முடிந்தவர்கள் சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள். உலகத்திலே மிகப் பாவமான மக்கள் இரண்டு பேர்கள். ஒன்று ஈழத்தில் உள்ள சிங்கள மக்கள். மற்றொன்று தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள். காரணம் இலங்கையில் உள்ள சிங்களர்களுக்குத் தேவையான போது வெறியேத்த சிங்கள இனவாதம் அங்குள்ள அரசியல்வாதிகள் கையில் இருக்கிறது. இதை வைத்துக் கொண்டே இன்னும் 50 வருடங்களை ஓட்டிவிடுவார்கள். இங்குள்ள தமிழர்களுக்குத் திரைப்படமும், அரசியல் பிரிவினைகளும் இதற்கென்று ஜிங்ஜாங் அடிக்க ஒரு பெரிய கூட்டமும் இருக்கக் கடைசி வரைக்கும் இந்தத் தமிழர்கள் மயக்கத்திலே இருந்து செத்து விட வேண்டியது. [] இப்பொழுது நாம் பின்னோக்கி பயணிக்க வேண்டிய ஆண்டு ரணில் விக்ரமசிங்கே பதவிக்கு வந்த ஆண்டு. 2002 பிரதமராக வந்தமர்ந்த ரணில் விக்ரமசிங்கே வேண்டுகோளின்படி நார்வே நாடு சமாதான முயற்சிகளை முன்னெடுக்கச் சொல்ல புதிய பாதை உருவானது. இதைத்தான் ரணில் பாராளுமன்ற உரையில் தெரிவித்தார். ” 2001ல் போருக்காக ரூபாய் 8 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகை செலவழிக்கப்பட்டுருக்கிறது. கடந்த 19 ஆண்டுகளில் 50 ஆயிரம் கோடி போருக்காகச் செலவிடப்பட்டு நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டங்கள் கட்டுப்பாடற்று வளர்ந்து நாட்டைச் சீரழிவு நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது ” என்றார். ரணில் விக்ரமசிங்கேவுக்கும் விடுதலைப்புலி இயக்கத்திற்கும் நடைபெற்ற சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஆறு சுற்றாகத் தாய்லாந்தில் செப்டம்பர் 16 2002 ல் தொடங்கி ஜப்பான் நாட்டில் ஹக்கோனெ நகரில் 2003 மார்ச் மாதம் முடிவ்டைந்த போது வேறொன்றும் உள்ளே நடந்து முடிந்திருந்தது. . வெவ்வேறு திசையில் முட்டி மோதிக் கொண்டுருந்த சந்திரிகாவும் ரணில் விக்ரமசிங்கேயும் ஒன்று சேர்ந்து உருவாக்கிய சர்வதேச ஒப்பந்தங்கள் அமெரிக்காவுடன் சுதந்திர வான்வெளி ஓப்பந்தம்,. இதன் மூலம் அமெரிக்காவின் சகல விமானங்களும் எந்தத் தேவைகளுக்காகவும் இலங்கையின் வான்வெளி எல்லைக்குள் பறந்து செல்லலாம். எந்த விமான நிலையத்தையும் பயன்படுத்திக் கொள்ளவும் எரிபொருள் நிரப்பவும் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. திருகோணமலை நிலத்தடியில் உள்ள 100 எண்ணெய் குதங்களில் 15 ஐ இந்தியப் பெட்ரோலியக்கட்டுப் பாட்டு ஸ்தாபனத்திற்கு கொடுக்கவும் இலங்கையில் 100 பெட்ரோல் நிரப்பு விற்பனை நிலையங்களை நடத்தவும் புதுடெல்லியில் கையெழுத்து இடப்பட்டது. [] இலங்கையில் பயங்கரவாத ஒழிப்புக்க இராணுவ ஒத்துழைப்பு தரக்கூடிய கடல் பிராந்திய ஒப்பந்தம் அத்துடன் இலங்கையின் கடற்பரப்பில் ஆழ்கடல் மீன் பிடிப்பதற்கும் சீனாவுடன் ஒப்பந்தம், . ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்புவதற்கான ஒப்பந்தம் பெல்ஜீயத்தின் தலைநகரான பிரஸெல்ஸ்சில் கைச்சாந்திடப்பட்டது. . அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம். இதன் மூலம் இராணுவ ஆயுத வழங்கல் மற்றும் பயிற்சி ஆலோசனைகள் அமெரிக்காவிடம் இருந்து திட்டவட்டமாகப் பெறப்படும். இந்தியாவில் இலங்கையின் அதிரடிப்படைப் போலீசாருக்கு விசேட பயிற்சி, . இதன் மூலம் வட கிழக்குப் பகுதிகளில் இருந்து வரும் அதிரடிப்படைப் போலீசார் நவீன பயிற்சியும் படைக்கலன்களும் பெறுவார்கள். ஏற்கனவே செய்து கொள்ளப்பட்டுருந்த இந்திய இலங்கை வர்த்தக ஒப்பந்தங்கள் மீள் ஆய்வு செய்யப்படும் தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே பெரிய பாலம் அமைக்கப்பட்டுத் திரிகோணமலைக்கான தரைவழி நெடுஞ்சாலை அமைக்கப்படும். திரிகோணமலை புதிய நிர்மாணம் செய்யப்படும். இது இந்தியாவால் மேற்கொள்ளப்படும். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இந்தியாவிடம் கொடுக்கப்பட்டு அதன் மூலம் காங்கேசன் துறைமுகமும் இந்தியாவின் பொறுப்பில் விடப்படும். அமெரிக்கா ஐரோப்பிய யூனியன் ஜப்பான் ஆகியவற்றுடன் மேலும் விரிவான பொருளாதார வர்த்தக ஒப்பந்தங்கள் கைசாந்திடப்பட ஏற்பாடு நடந்தது. எந்த அளவிற்கு இந்த ஒப்பந்தங்கள் எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கத்திற்க உதவப் போகின்றது என்பதை உணராத விடுதலைப்புலிகள் உள்ளே அமைதிக் காற்றைச் சுவாசித்துக் கொண்டுருந்தனர். அதிபர் சந்திரிகாவும் பிரதமர் ரணிலும் அமெரிக்கப் பயணம் அடுத்தடுத்து பறந்து அமெரிக்க அதிபர் புஷ்ஷை சந்தித்தித்து மில்லினியம் சேலஞ்ச் திட்டத்தின் கீழ் பலகோடி டாலர் உதவி பெற வழிவகுத்தனர். ஆனால் இந்தச் சர்வதேச ஓப்பந்தங்களும், சர்வதேசங்களை இலங்கைக்குள் கொண்டு வந்தே ஆகவேண்டும் என்று துடியாய் துடித்தவர் ஜே.ஆர். ஜெயவர்த்னே. இவர் அன்று உருவாக்கிய பாதையின் முடிவு தான் இப்போது ரணில் விக்ரமசிங்கேவுக்கு உதவியது. ஜெயவர்த்னே விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பின்னால் மொத்த மக்களும் ஒன்று சேர வேண்டும் என்று மறைமுகமாகச் செய்து காட்டியவர். 1983 ஜுலை கலவரம் என்பது இவரை “இனவாதத்தின் தந்தை” என்றே உலகத்திற்குக் காட்டியது. இவர் சர்வதேசங்களையும் இலங்கைக்குள் கொண்டு வந்தே ஆகவேண்டும் என்ற ஆர்வத்திற்குக் காரணம் இந்தியா. மொத்த இந்தியாவை வெறுப்பாகப் பார்த்ததைப் போலவே தமிழர்கள் என்றாலே அளவு கடந்த விஷத்தை கக்கிய இவரும் அடிப்படையில் தமிழரே. இவரைப்பற்றிய ஆதாரப்பூர்வமான தகவல்களைப் பார்த்து விட்டு சர்வ தேச ஒப்பந்தங்களுக்குப் பின்னால் இருக்கும் மர்மக் கடலுக்குள் ஓடத்தை நகர்த்துவோம். ஓடத்தை நகர்த்துவோம்……….. 6. முற்றுகைக்குள் இந்தியா 2 இலங்கையில் பிரதமராக 1978 பிப்ரவரி 4 அன்று பதவிக்கு வந்தவர் ஜே.ஆர். ஜெயவர்த்னே. முதலில் இவரைப் பற்றிப் புரிந்து கொள்வோம். இவரது மூன்னோர்கள் 17 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் இருந்து இலங்கையில் குடியேறிய செட்டியார் வம்சத்தைச் சேர்ந்தவர்கள். 18 ஆம் நூற்றாண்டில் சிங்கள வம்சமாக மாறி குடும்பப் பெயராக ஜயவர்த்னே என்ற பெயரைப் பெற்று அதுவே தங்களது குடும்பப் பெயராகவும் வைத்துக் கொள்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயர்களுக்குச் சேவகம் புரிந்து கௌரவம் பெற்ற டொன் ஏட்ரியன் விஜேஸிங்ஹ ஜயவர்த்ன 1830 ல் இறந்த போது தம்பி முதலியார் என்றும் அழைக்கப்பட்டார். இவரது வழித்தோன்றலில் வந்த ஜெயவர்த்னே அரசியலில் நுழைந்த போது தன்னைப் பௌத்தராக மாற்றிக்கொண்டார். இவரின் முழுப்பெயர் (Junius Richard Jayewardene ) ஜுனியஸ் ரிச்சர்ட்ஜெயவர்த்னே. இவரது தந்தை இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக இருந்தவர். சேனநாயகா உருவாக்கிய முதல் அமைச்சரவையில் ஜெயவர்த்னே நிதி அமைச்சராக இருந்தவர். முப்பது வருடங்கள் காத்திருந்து இந்தப் பதவியை அடைந்தவர். அரசியலில் துரதிஷ்டசாலியாகவே கடைசிவரைக்கும் வாழ்ந்த டட்லி சேனநாயகாவிற்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தவர். ஆட்சியைப் பிடித்ததும் தமிழர்கள் குறித்து எந்தப் புகார் பட்டியல் வந்தாலும் உடனே “அதிகாரங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று தான் தொடங்கி வைப்பார். உருவாகும் கலவரங்கள் முடிவுக்கு வரும் போது தமிழர்களின் சொத்தும், வாழ்வாதாரமும் சூறையாடப் பட்டு இருக்கும். [] ஒரே பாதை. ஒரே கொள்கை. இவர் இரண்டு முறை ஆட்சியில் இருந்த போதும் தமிழர் எதிர்ப்பு என்ற தனது கொள்கையை மாற்றிக்கொள்ளவே இல்லை. இலங்கையில் ஆட்சிக்கு வரும் அரசியல்வாதிகள் தாங்கள் கொண்டுள்ள இனவாத கொள்கையில் எந்தப் பாரபட்சமும் காட்டக்கூடாது என்பதை மற்றவர்களுக்கு உணர்வு பூர்வமாக வாழ்ந்து காட்டியவர். கடைசி வரைக்கும் தன்னைச் சிறப்பான சிங்களத் தலைவராகக் காட்டிக் கொண்ட இவரைப் போல இலங்கை வரலாற்றில் வேறு எவரும் இருப்பார்களா என்பது சந்தேகமே? ஈழ அரசியல் வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தமிழரும் நேரிடையாக மறைமுகமாகச் சிங்கள தலைவர்களுக்குத் தங்களால் முடிந்த அத்தனை உதவிகளையும் செய்து அவர்களை வளர்த்துள்ளனர். இலங்கை சுதந்திரம் பெற்றதும் முதல் பிரதமராக வந்த சேனநாயகா அரசாங்கத்தில் தனது அந்தர்பல்டி கொள்கையின் மூலம் அமைச்சராக இருந்த தமிழ்த்தலைவரின் பெயர் ஜீஜீ.பொன்னம்பலம். இவர் தான் இன்றைய அரசியல்வாதிகளுக்கு முன்னோடி. சேனநாயகா கொண்டு வந்த மலையகத் தமிழர்களை நாட்டைவிட்டு அனுப்ப உதவிய தீர்மானத்திற்கு இவரின் ஒத்துழைப்புக்கு பிரதி உபகாரமாகத்தான் அமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டார். ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக மாறியதும் இலங்கையில் வாழ்ந்து தோட்டத் தொழிலாளர்களை இந்தியாவிற்கு அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது. இலங்கையில் வாழ்ந்து தமிழர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது. ஜெயவர்த்தேனே இரண்டாவது முறையாக அதிபராக ஆட்சிக்கு வந்த போதும் ஒரு தமிழர் ஜெயவர்த்னேவுக்குச் செய்த உதவி மகத்தானது. அதுவும் இலங்கை தமிழனத்தின் தந்தையாகப் போற்றப்படும் தந்தை செல்வாவின் மருமகனும் கனடா பல்கலைகழகத்தில் அரசியல் துறை பேராசிரியாகப் பணிபுரிந்து ஏ.ஜெ.வில்சன் முயற்சியினால் இலங்கையின் மொத்த அரசியல் அமைப்பும் மாற்றப்பட்டது. இவருக்குப் பின்னால் அந்தப் பட்டத்தைத் தட்டிக் கொண்டு செல்பவர் சந்திரிகா குமாரணதுங்கேவுக்கு வலதுகரமாக இருந்த லஷ்மண் கதிர்காமர். பிரபாகரன் வீழ்ச்சிக்கு முக்கியப் பங்காற்றிச் சர்வதேசத்தையும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக ஒரே அணியில் கொண்டு வந்தவரும் இவரே ஆவார். ஏ.ஜெ.வில்சன் உருவாக்கிக் கொடுத்த புதிய அரசியலமைப்பு சட்டத்தின்படி இதுவரைக்கும் இலங்கையில் பிரதமராக இருந்து ஆட்சி புரிந்தவர்களின் மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த ஜெயவர்த்னே வானாளாவிய அதிகாரம் படைத்தவராகவும் மாறினார். இதன் மூலம் இலங்கை அரசியல் வரலாற்றில் அதிபர் பதவி உருவானது. ஜெயவர்த்னே அதிபராக ஆட்சிக்கு வந்த போது இலங்கையின் தேச அரசியல் என்பது மாறி சர்வதேச அரசியலுக்கு நகரத் தொடங்கியது. காரணம் ஏ.ஜெ.வில்சன் மூலம் உருவான அரசியல் அமைப்பு என்பது முற்றிலும் வேறானது. இலங்கையின் சட்ட அமைப்பு இங்கிலாந்து சட்டதிட்டத்தின்படி தான் இருந்தது. அதைப் பிரான்ஸ் நாட்டு அரசியல் அமைப்பின்படி மாற்றினார். பல அச்சுறுத்தல்களைத் தமிழர்களுக்கு வழங்க காரணமாக இருந்த சிங்களகளுக்கு மட்டுமே தந்தையாக இருந்த சேனநாயகா போய் இப்போது சிங்கள இனவாத அரசியல் ஞானியாக ஜெயவர்த்னே தனது ஆட்டத்தைத் தொடங்கினார். 1956 ஆம் ஆண்டு முதல் 1977 வரை தேசியமயமாக்கப்பட்ட அரசுத்துறை நிறுவனங்களின் அடிப்படையில் அமைந்த பொருளாதாரத்தையே இலங்கை கடைபிடித்து வந்தது. இதன் காரணமாக மற்ற நாடுகளின் தொடர்பு அதிக அளவு உருவாகாமலேயே இருந்தது. 1977 ஆம் ஆண்டு ஜெயவர்த்னே தங்களது ஐக்கியத் தேசிய கட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். இவர் ஆட்சிக்கு வந்த போதே இந்தியா குறித்து ஒரு முடிவோடு வந்திருப்பார் போல. அதற்குத் தகுந்தாற் போல மேற்கித்திய நாடுகளை இலங்கையில் முதலீடுகள் செய்ய அழைக்க ஒவ்வொரு நிறுவனமாக உள்ளே வரத் தொடங்கியது. தமிழர்களுக்கு எதிராகத் தேவைப்படும் ராணுவ உதவிகளையும் ராஜதந்திர உதவிகளையும் தொடர்பிலிருக்கும் நாடுகளைக் கொண்டே சாதித்துக் காய் நகர்த்த தொடங்கினார். இலங்கைக்குள் யார் வேண்டுமானாலும் வரலாம்? என்னவொன்று? இந்தியாவுக்கு மாற்று ஏற்பாடாக இருக்க வேண்டும் என்பதான அவரின் கொள்கையை இந்தியா கவனித்துக் கொண்டேயிருந்தது. ஜெயவர்த்னே புண்ணியத்தால் நடத்தப்பட்ட ஜுலை கலவரத்தின் மூலம் ஏறக்குறைய பத்து லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் புலம் பெயர்ந்தனர். இது போக இலங்கையின் உள்ளே இருக்கும் மீதியுள்ள தமிழர்களை அடக்கி வைத்திருக்க வேண்டியது அவஸ்யமல்லவா? 1983 க்குப்பிறகு அமெரிக்காவின் உதவியால் இஸ்ரேலின் பாதுகாப்பு படையான ஷின் பெத் (SHIN BETH)ம், பாலஸ்தீன மக்களைக் கொல்வதில் கைதேர்ந்த இஸ்ரேலின் உளவுப்படையான மொஸார்ட்டும் (MOSSAD) அமைப்பையும் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதற்காக அழைத்து வந்தார். இந்தச் சமயத்தில் ஜெயவர்த்னே உருவாக்கிய மகத்தான் விசயம் ஒன்று உண்டு. இஸ்ரேலில் இருந்து இலங்கைக்கு வரும் எவருக்கும் எந்த விசாவும் தேவையில்லை என்பதன் மூலம் இஸ்ரேலின் டிகிரி தோஸ்தாக மாறினார். இது தவிர இங்கிலாந்து நாட்டின் BRITISH SPECIAL AIR SERVICE என்ற அமைப்பின் மூலம் தமிழர்கள் வாழும் இடங்களுக்கு அருகே குண்டு வீசி பயிற்சி எடுக்கவும் அனுமதிக்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டின் உதவியால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கீனி மீனி சர்விஸஸ் (KEENIE MEENIE SERVICES (KMS) ) என்ற அமைப்புக்குத் தனியான சிறப்பம்சம் உண்டு. அதாவது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கொலை நிறுவனம். தேவைப்படும் சமயத்தில் தேவைப்படும் நபர்களை நோக்கி செலுத்த உதவும் இந்த நிறுவனம் தான் இலங்கை இராணுவத்தின் சிறப்புப் பாதுகாப்பு படைக்கு (SPECIAL TASK FORCE) பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த அமைப்பின் முக்கியக் குறிக்கோள் வளர்ந்து கொண்டிருக்கும் தமிழர் அமைப்புகளை எப்படி நசுக்குவது என்பதைப் பாடம் எடுப்பதே ஆகும். இதே சமயத்தில் தான் தென் ஆப்ரிக்காவில் இருந்து பெருவாரியான இராணுவத் தளவாடங்கள் இறக்குமதி செய்ய ஆரம்பித்தனர். மொத்தத்தில் இப்போது ஜெயவர்த்னேவுக்குத் தலைகால் புரியவில்லை. ஆகா இந்தியாவிற்கு எதிரான நாடுகளுடன் நாம் ஒன்று சேர்ந்துவிட்டோம். நமக்கு இந்தியாவின் தயவு தேவையில்லை. இவர்கள் சொல்வதையும் நாம் கேட்க வேண்டியதில்லை என்ற எண்ணத்தில் பெரிய இடி விழுந்தது. 1987 ஆம் ஆண்டு ஜுன் மாதம் யாழ்பாணத்தை இலங்கை இராணுவம் முற்றுகையிட்ட போது இந்தியா விடுத்த கோரிக்கை எதையும் ஜெயவர்த்னே காதில் வாங்கிக் கொள்ளத் தயாராகயில்லை. இதே சமயம் சர்வதேச அளவில் தன் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று ராஜிவ் காந்தி நினைத்துக் கொண்டிருந்த தருணமும் கூட. யாழ்பாண மக்களுக்குத் தேவையான உணவு பொட்டலங்களை இந்திய இராணுவ விமானங்கள் வானில் இருந்து போட்டது. இத்துடன் இன்னோரு கட்டளையும் இந்தியாவிடம் இருந்து ஜெயவர்த்னேவுக்கு அனுப்பப்பட்டு இருந்தது. “மகனே இந்திய இராணுவத்தை எதிர்த்தாய் தொலைச்சுப்புடுவேன். மீறி ஏதாவது ஏடாகூடம் என்றால் இந்தியா போர் தொடுக்கவும் தயங்காது?” வேறென்ன செய்ய முடியும். ஜெயவர்த்னே கப்சிப். அடி மேல் அடி வைத்து ஒவ்வொன்றும் இடியாய் நகர்த்தி ஒரு வழியாகப் பிரபல்யமான (1987 ஜுன் 27) இந்திய இலங்கை ஒப்பந்தம் ஜெயவர்த்னே மற்றும் ராஜிவ் காந்திக்கு இடையே கையெழுத்தானது. இதைப்பற்றி ஏற்கனவே விபரமாக பார்த்த போதிலும் தற்பொழுது சுருக்கமாக பார்த்து விடலாம். 1. இலங்கைக்குள் இந்தியா தனது இராணுவத்தை அனுப்பும். 2. உள்ளே இருக்கும் போராளிகளின் ஆயுதங்களை இந்திய இராணுவமே களையும் பணியில் ஈடுபடும். 3. முக்கியமாக இலங்கை இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டு படைகளுடனும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது. 4. உள்ளே இருக்கும் மற்ற நாட்டுப் படைகளையும் உடனடியாக அனுப்பி வைத்துவிட வேண்டும். இது தான் இந்தியாவின் முக்கிய அம்சங்கள். இதற்குப் பிறகே உள்ளே உள்ள தமிழர்கள் நலம், இணைப்பு, வெங்காயம், கருவேப்பில்லை, கொத்தமல்லி போன்ற மற்ற அத்தனையும். [] அப்போது தான் ஜெயவர்த்னே புரிந்து கொண்டார். இந்தியா காலைச் சுற்றிய பாம்பல்ல. கழுத்தை சுற்றியுள்ள பாம்பு. இந்த இடத்தில் மற்றொரு உண்மையையும் ஜெயவர்த்னே அப்போது தான் உணர்ந்து கொண்டார். இந்தியா தலையிட ஆரம்பித்தவுடன் மற்ற நாடுகள் அத்தனையும் பின்வாங்க ஆரம்பிக்க இந்தியாவின் தலையாட்டி மொம்மையாக ஜெயவர்த்னே மாறிப்போனார். ஆனால் இறுதியில் வென்றது ஜெயவர்த்னே தான். 1990 ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேறியதும் இலங்கை அரசு 1957 ஆம் ஆண்டு முதல் சீனாவுடன் கொண்டிருந்த நட்பு காலகட்டங்களைத் தூசி தட்டத் தொடங்கியது. 1993 ஆம் ஆண்டுத் தென் மேற்கு இலங்கையில் உள்ள கல்லே பகுதியில் உள்ள கப்பற்படை தளத்தில் சீனாவின் நோரிங்க்கோ நிறுவனம் [China North Industries Corporation (NORINCO)] மிகப் பெரிய ஆயுதக்கிடங்கு ஒன்றினை திறப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் இலங்கைக்குத் தேவையான அத்தனை ஆயுதங்களையும் இந்தக் கிடங்கிலிருந்து வாங்கிக் கொள்ளலாம். இந்தக் கிடங்கைத் தவிர இலங்கை வேறு எவரிடமும் வேறெந்த ஆயுதங்களும் வாங்கிக் கொள்ளக்கூடாது. மேலும் அவசியமாக முக்கியமான ஆயுதங்கள் வெளியே வாங்க வேண்டுமென்றால் எழுத்துப் பூர்வ அனுமதி பெற்றுருக்க வேண்டும். மேலும் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை இந்த ஒப்பந்தத்தைப் புதுப்பித்தாக வேண்டும். இந்த இடத்தில் நாம் யோசிக்க வேண்டிய ஒரு விடயம் உண்டு. எதற்கும் சிரிக்காத அப்போது மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த பிரதமர் நரசிம்மராவ் இதைக் கண்டு கொள்ளவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நோரிங்க்கோ நிறுவனத்தை இலங்கைக்குள் கொண்டு வந்த விதத்தில் ஜெயவர்த்னே வாழ்நாள் சாதனையாகப் பீற்றிக் கொண்டார். இதன் அதி நவீன சாதனங்களைச் சீனாவிடமிருந்து இலங்கை பெற்று விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்ட போதிலும் 1990 வாக்கில் பிரபாகரன் கையே ஓங்கியிருந்தது என்பதை இங்கே குறிப்பிடுவதில் தவறில்லை. ஆனால்…….? தொடர்வோம்……………… 7. முற்றுகைக்குள் இந்தியா 3 1990 வாக்கில் விடுலைப்புலிகள் வீரத்துடன் போரிட்டு அடுத்தப் பத்தாண்டுகள் பல களங்களை வெற்றிப் பெற்றிருந்தாலும் கூட இந்தக் காலகட்டத்தில் மொத்த உலகமும் வேறொரு பாதையில் தனது பயணத்தைத் தொடங்கியிருந்தது. 1990 ஆம் ஆண்டுக்கு முன்னால் இருந்த உலகளாவிய இராணுவ அரசியல் சூழ்நிலையும் வெகுவாக மாறத் தொடங்கியது. காரணம் அதுவரைக்கும் நீ அந்தப்பக்கமா? இல்லை இந்தப்பக்கமா? என்று இரண்டு தாதாக்கள் இருந்தனர். ஒன்று அமெரிக்கா மற்றொன்று சோவியத் யூனியன் என்ற இருதுருவங்களில் சோவியத் யூனியன் துருவம் துருப்பிடித்துப் போக உலகமெங்கும் உலகமயமாதல் தராளமயமாக்குதல் என்ற வார்த்தைகளை உலகத்தை ஆட்சி புரிய ஆரம்பித்தது. அதுவரைக்கும் இலங்கை சந்தையில் அதிக அளவு இறக்குமதியாகிக் கொண்டிருந்த ஜப்பான் பொருட்களை விட இந்தியா இறக்குமதிகள் ஆட்சி புரியத் தொடங்கின. 1990 /1996 ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் இலங்கையில் இந்தியப் பொருட்கள் ஏறக்குறைய 556 விழுக்காடு கூடியிருந்தது. ஆக இந்தியாவின் பார்வையும் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது. 1994 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சந்திரிகா ஒவ்வொன்றையும் கூட்டிக் கழித்துக் கணக்குப் போட்டு ஒவ்வொரு காயாக நகர்த்தத் தொடங்கினார். காரணம் இதே காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் சந்திரிகா கண்களில் மட்டுமல்ல உடம்பு முழுக்க விரல் விட்டு ஆட்டும் அளவுக்குப் பலமாய் இருந்தனர். இலங்கையை நோக்கி படையெடுத்து வந்து கொண்டிருக்கும் இந்திய முதலாளிகளைக் கொண்டு காய் நகர்த்த அவருக்குச் சாதகமான அம்சங்கள் வந்து சேரத் தொடங்கியது. [] 1998 ஆம் ஆண்டு அப்போது இருந்த வாஜ்பாய் அரசுடன் சந்திரிகா அரசாங்கம் இந்திய இலங்கை சுதந்திர வியாபார ஒப்பந்தம் ((Indo Lanka Bilateral Free Trade Agreement – ILBFTA) கையெழுத்தானது, இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவில் இருந்து இலங்கைக்கோ, இலங்கையிலிருந்து இந்தியாவுக்கோ ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு முழுமையான வரிவிலக்கோ, அல்லது குறைந்தபட்ச வரியோ இரு நாட்டு அரசுகளால் விதிக்கப்பட வேண்டும். மேலும் தொழில் நிறுவனங்கள் தொடங்கும்பட்சத்தில் கூடுதல் வரிச்சலுகைகள் வழங்கப்பட வேண்டும். இதே காலகட்டத்தில் உலகமெங்கும் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த GATT மற்றத் தராள பொருளாதர ஒப்பந்தங்களுக்கு உறுதுணை புரிந்த நாடுகளுக்கிடையே இருந்த புரிந்துணர்வு ஒப்பந்த விசயங்களும் உதவி புரிந்தன. 2001 ஆம் ஆண்டு முதல் இது போன்ற ஒப்பந்தங்களினால் இரு நாடுகளின் வியாபார வளர்ச்சியும் செங்குத்தாக உயரத் தொடங்கியது. இலங்கையில் தொடர்ந்து முதலீடுகளைக் கொண்டு வந்து குவித்துக் கொண்டிருக்கும் இந்திய தொழில் அதிபர்களுக்காகவே இலங்கை அரசு 2005 மே மாதம் பெங்களூரில் இலங்கை முதலீட்டு வாரியத்தின் ( BOARD OF INVESTMENT –Bol) சிறப்புக் கிளை ஒன்று தொடங்கப்பட்டது. சமகாலத்தில் இலங்கைப் பொருட்களைத் தவிர்ப்போம் என்ற கொள்கை அங்கங்கே எழுந்து மறுபடியும் மறைந்து விடுகின்றது. ஆனால் நாம் எந்தந்த நிறுவனங்கள் இலங்கை சந்தையில் வலுவாகக் காலூன்றி இருக்கிறது என்ற பட்டியலை மட்டும் இந்தப் பதிவில் பார்த்து விடுவோம். இது போல இலங்கை நிறுவனங்களின் பட்டியல்களையும் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் உள்ள இந்திய நிறுவனங்கள். 1. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி 2. எல்,ஐ,சி, 3. அரவிந்த் மில் 4. பார்தி ஏர்டெல் 5. அன்சால் வீட்டு வசதி நிறுவனம். 6. சியெட் டயர் நிறுவனம் 7. அப்போல்லோ மருத்துவமனை 8. ஏசியன் பெயிண்ட்ஸ் 9. தாஜ் ஹோட்டல், டாடா டீ, வி.எஸ்.என்.எல் டாடா குழுமம் 10, ஸ்வீடன் நாட்டின் ஹோல்சிம் சிமெண்ட் (ஏ.சி.சி. மற்றும் குஜராத் அம்புஜா சிமெண்ட்டின் புதிய முதலாளி) 11. ராம்கோ குழுமம் 12. அல்ட்ரா டெக் சிமெண்ட், கார்பன் ப்ளாக் தொழிற்சாலை (பிர்லா குழுமம்) 13. இந்தியன் ஆயில் 14. மகேந்திரா அண்ட் மகேந்திரா மோட்டார் வாகன நிறுவனம் 15. பிராமல் கண்ணாடி நிறுவனம் 16. கேடிலா மருந்துக் கம்பெனி 17. எக்ஸைடு பேட்டரி 18. பிரிட்டானியா பிஸ்கெட் நிறுவனம் 19. டி.வி.எஸ் குழுமம் 20. ஜெட் ஏர்வேஸ் 21. யு.டி.ஐ. நிறுவனம் 22. சஹாரா ஏர்வேஸ் 23. CAIRN INDIA ( PETROL COMPANY) இது தவிர உள்ள சிறிய நிறுவனங்களை இந்தப் பட்டியலில் கொண்டுவரவில்லை. இந்தியாவில் உள்ள இலங்கை நிறுவனங்கள். 1. MAS HOLDINGS ஆயத்த ஆடைகள் 2. தம்ரோ (DAMRO கட்டில், நாற்காலிகள் 3. Ceylon Chocolates Pvt. Ltd., சாக்லேட் நிறுவனம் 4. Maliban பிஸ்கட் நிறுவனம் 5. Edina சாக்லேட் நிறுவனம் 6. Keels – ஆயதத உணவுகள் 7. Milesna – தேயிலைப் பொருட்கள் 8. DSI – ரப்பர் செருப்புகள் ரப்பர் பொருட்கள் 9. Gloves Lanka Pvt.Ltd – பின்னல் கையுறைகள் 10. Lanka Walltiles – செராமிக் டைல்கள் 11. Eclar Toys – மரப் பொம்மைகள் 12.Tandon Associated Lanka Pvt.Ltd – Dual Inline Memory Modules 13. Skyspan Asia Ltd – substitute to conventional roofing systems 14. Tantri Trailers – Trailers / Long Vehicles 15. Link Natural – ஆயுர்வேத மருந்துகள் 16. Sri Lankan Airways (பட்டியல்கள் சுருக்கப்பட்டுள்ளது) இது போன்ற நிறுவனங்களின் மூலம் 1998 ஆம் ஆண்டு இலங்கையில் இந்தியாவின் முதலீடு 40 லட்சம் அமெரிக்க டாலர். இதுவே 2006 ஆம் ஆண்டில் 1500 லட்சம் அமெரிக்க டாலர். இப்போது சொல்லுங்க? ஈழத்திலிருந்து எடுத்துக் கொண்டிருந்த லாபங்கள் முக்கியமா? இல்லை, ஒரு காலத்தில் இந்தியாவில் இருந்து போன அங்கு வாழும் ஈழத் தமிழர்கள் இந்தியாவிற்கு முக்கியமா? 8. முற்றுகைக்குள் இந்தியா -- 4 சென்ற அத்தியாயத்தில் இந்தியா இலங்கையில் உருவாக்கிய தொழில் ஒப்பந்தங்கள் மூலமும், அங்கே கொண்டு போய்க் கோடி கோடியாய் கொட்டிய தொழில் முதலீடுகளின் மூலம் அள்ளிக்குவித்த லாபங்களைப் பார்த்தோம். இயல்பாகவே நமக்கு ஒரு சந்தேகம் வர வேண்டும். நம் நாடு தான் அங்கே பலமான பட்டறையைப் போட்டுருக்கே?. அப்புறம் எதுக்கு இலங்கை சீனா ஆதரவைத் தேடி ஓடுகின்றது? நாம் ஏன் பயப்படவேண்டும்? அங்கேதான் வில்லங்கமே தொடங்குகின்றது. உலகில் பார்வையில் அப்பாவியாகத் தெரியும் ரணில் விக்ரமசிங்கே எப்படித் தந்திரமாகக் காய் நகர்த்திக் கருணாவை விடுதலைப்புலிகள் இயக்கத்தை விட்டு வெளியே கொண்டு வந்தாரோ அதைப்போலவே அவரின் ஆட்சியில் தான் பல விசயங்களை மறைமுகமாகச் செய்யத் தொடங்கினார். சந்திரிகா அதிபராகவும் ரணில் பிரதமராகவும் வந்த போது இருவரும் வெவ்வேறு கட்சிகள் வெவ்வேறு பாதைகள் என்று சென்று கொண்டிருந்தாலும் இருவருக்கும் ஒரு விசயத்தில் மட்டும் ஒத்த கருத்து உண்டு. நாம் சிங்களர்கள். இது சிங்கள நாடு. இந்த நாட்டைச் சிங்களர்கள் மட்டுமே ஆள வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் தமிழர்கள் நம் தலைமேல் மொட்டை அடித்து மிளகாயை மிக்ஸியில் போட்டு அரைத்தும் தடவி விடக்கூடும் என்பதில் மிகவும் கவனமாகவே இருந்தார்கள். இந்தக் காலகட்டத்தில் தான் அதிக அளவு சர்வதேச ஒப்பந்தங்களை இருவரும் பறந்து பற்ந்து போய்க் கொண்டு வந்து இறக்கினார்கள். இதற்கு மற்றொரு காரணமும் உண்டு. காரணம் கடந்த முறை ஆட்சியில் இருந்து சந்திரிகா அம்மையார் போட்ட ஆட்டத்தில் இருந்த மொத்த கஜானாவும் போர் பக்கம் கொண்டு கொட்டிவிட, கொட்டி கவிழ்த்த பானை போலவே இலங்கை நிதியம் இருந்தது. தமிழர்களை அப்புறம் பார்த்துக் கொள்வோம். முதலில் கடன் வாங்க வேண்டும். அதற்குப் போர் நிறுத்தம் வேண்டும். ஒவ்வொருவரும் நாம் சென்றாலே கதவை சாத்துகிறார்கள். இப்போதைய சூழ்நிலையில் அதட்டிக் கேட்கவும் முடியாது என்ற இந்த எண்ணமே சந்திரிகாவையும் ரணிலையும் ஒரே புள்ளியில் கொண்டு வந்து சேர்த்தது. காரணம் தொடக்கம் முதல் இலங்கையில் உள்ள ஐக்கியத் தேசிய கட்சிக்கு இந்தியா என்றாலே பச்சை மிளகாய் போலவே இருக்கும் போல? 2002 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் ரணில் சீன பெட்ரோலிய நிறுவனமான SINOPEC ஐ உள்ளே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டார். ரணிலின் நோக்கம் இலங்கை அரசாங்கத்திற்குச் சொந்தமான (Ceylon Petroleum Corporation – CPC) 1070 பெட்ரோல் விநியோக மையங்களைச் சீனாவுக்குக் கொடுப்பதே ஆகும். இந்தத் திட்டத்தை வாஜ்பாய் அரசு கடுமையாக எதிர்த்தது. இந்த இடத்தில் தான் ராஜிவ் காந்தி ஈழ மக்களுக்காகப் போட்டப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்த வாசகங்கள் இந்தியாவுக்கு உதவியது. இதைத்தான் இந்திய அரசு ரணிலுக்குச் சுட்டிக்காட்டி மிரட்டியது. திருகோணமலையில் உள்ள எண்ணெய் கலங்களை இந்தியாவுக்கே வழங்கப்பட வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்ய ரணில் சீனாவுக்கு முழுமையாகக் கொடுக்க எண்ணிய திட்டம் கைவிடப்பட்டது. குறிப்பிட்ட சதவிகிதம் சீனாவுக்கு வழங்கப்பட்டது. சிங்களர்களை நம்ப முடியுமா? [] இதற்காக ஒப்பந்தம் 2002 டிசம்பர் 5 அன்று இலங்கை சிபிசி க்கும் இந்தியாவின் இந்தியன் ஆயில் கார்ப்ரேஷனுடன் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி இலங்கை, இந்திய மற்றும் சீனா நிறுவனங்கள் மட்டும் தான் அடுத்த ஐந்தாண்டுகள் பெட்ரோலிய பொருட்கள் விற்க முடியும். வேறு எவரும் விற்கமுடியாது. முதல் ஐந்து வருடங்கள் இந்திய நிறுவனத்தின் மீது எந்த வரியும் விதிக்கக்கூடாது. அடுத்துவரும் வருடங்களில் இலங்கையில் நடைமுறையில் இருந்து 35 சதவிகிதத்திற்குப் பதிலாக 15 சதவிகிதம் வரியே விதிக்கப்பட வேண்டும். இந்தியாவிலிருந்து ஐஓசி இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரியில்லை. இதன் தொடர்ச்சியாகத் திருகோணமலையின் சீன வளைகுடாப் பகுதியில் இருந்த 99 எண்ணெய் கலன்களை நிர்வகிப்பதற்கான உரிமையும் இந்தியாவிற்கு வழங்கப்பட்டது. இந்தக் கலன்கள் இராண்டாம் உலகப் போர் தொடங்கிய காலகட்டத்தில் உருவாக்கப்பட்டதாகும். ஆக மொத்தத்தில் பெட்ரோல் மொத்த வியாபார உரிமையும், சுமார் 100 பெட்ரோல் விநியோக மையங்களும் 2003 பிப்ரவரியில் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டது. இது அடுத்த 35 ஆண்டுகளுக்கான உரிமையாகும். இதன் அன்றைய மதிப்பு 375 கோடி. இது தவிர இலங்கையில் பெட்ரோலிய பொருட்களைச் சேமித்து வைக்கும் அரசு நிறுவனத்தில் Ceylon Petroleum Storage Terminals Limited (CPSTL) மூன்றில் ஒரு பங்கு உரிமமும் இந்திய நிறுவனமான ஐஓசிக்கு வழங்கப்பட்டது. இந்த ஒரு பங்கு உரிமம் கொடுப்பதிலும் இலங்கை அரசு ஒரு தில்லாலங்கடி வேலையைக் காட்டியது. மூன்றில் ஒரு பங்கை வெளிப்படையாக ஏலமிட விருமப இந்தியாவின் நிர்ப்பந்தத்தால் அதையும் நிறுத்தி வைக்கப்பட வேண்டியதாகி விட்டது. காரணம் வெளிப்படையாக ஏலமிடுவதன் மூலம் இந்த உரிமையைச் சீன அரசுக்கு கொடுத்து விடலாம் என்ற ரணிலின் எண்ணத்தையும் இந்தியா தவிடுபொடியாக்கியது. இப்போது பொதுவான ஒரு விசயத்தைப்பற்றியும் பேசிவிடலாம். ஏன் இலங்கைக்கு இந்தியா மேல் கசப்பு? ஒரே காரணம் தமிழ்நாடு. இங்கு வாழும் தமிழர்கள். இந்தியா போன்ற நாட்டில் உள்ள ஜனநாயக ஆட்சியில் தமிழ்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களும் மிக முக்கியமானவர்கள். இந்தியாவின் ஒரு பகுதி தமிழ்நாடு. இதற்கு மேல் தமிழர்கள். இந்தப் பாழாய்போன தமிழினம் தானே இங்கே இன்னும் வாழ்ந்து கொண்டு நம்மைச் சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை கலவரங்கள் நிகழ்த்திய போதிலும் குறிப்பிட்ட எண்ணிக்கை இருந்து கொண்டேதான் இருக்கிறது. முழுமையாக அழிக்கவும் முடியவில்லை. முடியும் போது கஜானாவில் பணமும் இருப்பதில்லை. இங்கே ஏதாவது ஒன்றால் தமிழ்நாட்டில் சுயநலமாய்ப் பொதுநலமாய்க் குய்யோ முய்யோ என்ற சப்தம் வேறு வந்து தொலைத்து மொத்தத்தையும் கெடுத்துவிடுகின்றது. இந்திய அரசாங்கம் பம்மி விடுகின்றது. என்ன செய்வது? இப்போதைய சூழ்நிலையில் இந்தியாவின் ஆதிக்கத்தை நிறுத்தவும் முடியாது. ஆனால் இவர்களை இங்கே பெரிய அளவில் வளர்த்து விடவும் கூடாது. இந்தியாவைத் தவிர எந்த நாடுகள் இலங்கைக்குள் உள்ளே வந்தாலும் அவரவர் தொழில் உண்டு லாபம் உண்டு என்று பொட்டியை கட்டிக் கொண்டு சென்று விடுகிறார்கள். ஆனால் இந்தியாவிற்கு மட்டும் இது விதிவிலக்காக இருக்கிறது. வாஜ்பாயிடம் எந்த உதவி கேட்டாலும் தமிழ்நாட்டை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே கொள்ளைப் புறமாகவே வரச்சொல்கிறார்? எத்தனை நாளைக்கு இந்தக் கண்ணாமூச்சி? பேசாமல் இந்தியாவிற்கு மாற்றாகச் சீனாவுடன் உறவு கொண்டால் தெரு வரைக்கும் ஆயுதங்களைக் கொண்டு வந்து கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். கடன் வேறு. கடனுக்கு வட்டியும் இல்லை. விலை மலிவும் கூட. ஆனால் பாழாய் போன இந்தியா ஒவ்வொரு முறையும் உர் என்று பார்த்துக கொண்டேயிருக்கிறதே? நிச்சயம் ஈழத்தலைவர்கள் இப்படித்தான் யோசித்து இந்தியா மேல் வெளியே காட்டிக் கொள்ளமுடியாத கசப்பை கடைவாயில் வைத்திருக்கக்கூடும். ஒரு பெரிய ஆச்சரியம் என்னவென்றால் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் வியாபார ரீதியான எத்தனையோ உறவுகள், புரிந்துணர்வுகள் இருந்த போதிலும் இராணுவ ரீதியான எந்தவித முன்னேற்பாடுகள், உதவிகள் என்பது நடைபெறவேயில்லை. இந்திய அமைதிப்படை திரும்பி 1990 முதல் 2003 வரைக்கும் பெரிதான அளவில் இல்லை என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அதிலும் ராஜிவ் காந்தி கோர மரணத்திற்குப் பிறகும் கூடப் பெரிய அளவில் ஒரு முன்னேற்றமும் இல்லை. 1993 ஆம் ஆண்டு நரசிம்மராவ் ஆட்சியில் இருந்த போது விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பலான எம்.வி.அஹாத் தினை இந்திய கப்பற்படை மறித்து மூழ்கடித்தது போன்ற ஒரு சில நிகழ்வுகள் மட்டுமே நடந்து கொண்டிருந்தது. வாஜ்பாய் அரசாங்கத்திடம் இலங்கை அரசு ஆயுதங்கள் கேட்ட போதிலும் கூட இங்குள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தானிடம் வாங்கிக் கொள்ளுங்க என்று வாஜ்பாய் ஒதுங்கியே இருந்தார். ஆனால் யாழ்பாணத்தில் விடுதலைப்புலிகளால் இலங்கை இராணுவம் சுற்றி வளைக்கப்பட்ட பிறகே ரோந்து கப்பலான SLN SAYURA வழங்கப்பட்டது. இதைப் போலவே 1990 முதல் 2003 வரைக்கும் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த எவரும் இலங்கைக்குச் செல்லவில்லை. முதல் முறையாக 2003 ஆம் ஆண்டு இந்திய கப்பற்படையின் தலைவர் அட்மிரல் மாதவேந்திர சிங் இலங்கைக்குச் செல்ல திட்டம் வகுக்கப்பட்டது. சிங்களத் தலைவர்கள் தான கெட்டிக்காரர்களாச்சே? இதே சமயத்தில் பாகிஸ்தான் முப்படைத் தளபதியும், கார்கில் போருக்குத் தலைமை தாங்கியவருமான ஜெனரல் முகம்மது அஜிஸ் கான் தனது ஏழு நாள் சுற்றுப்பயணத்தை இலங்கையில் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்வில்லை. மோப்பம் பிடித்த இந்தியா கப்பற்படை தலைவர் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது. அப்போது இந்தியா கொடுத்த மிரட்டலில் இலங்கை ஆட்சியாளர்கள் சாக்குபோக்குச் சொல்லி சமாளித்தாலும் உள்ளே கருவிக்கொண்டிருந்தார்கள் என்பதே உண்மை. சிங்களர்கள் இந்தியாவை “நண்பேண்டா” என்றார்கள்? எப்போது? மன்மோகன் சிங் பிரதமராக வர “எல்லாமே” சிறப்பாக நடைபெறத் தொடங்கியது. 9. ரத்தச் சகதியின் காலடித் தடங்கள் 1 மற்றத் துறைகளை விட அரசியலில் அதிர்ஷடமென்பது கொஞ்சம் கூடுதலாகவே தேவைப்படும் சமாச்சாரம். அதுவும் இந்தியாவில் இந்த அதிர்ஷ்ட சமாச்சாரம் தான் முக்கிய இடத்தை வகிக்கின்றது. கால், அரை, முக்கால், முழு அதிர்ஷ்டம் என்று ஒவ்வொரு வகையாகப் பிரிந்து கிடந்தாலும் நாம் இப்ப பார்க்கப்போகும் மன்மோகன் சிங் முழுமையான அதிர்ஷ்ட சாலியே. பிரணாப் முகர்ஜிக்கு கீழே வேலை ரிசர்வ் வங்கி கவர்னராக பணி புரிந்தவர். இப்பொழுது அவருக்கே கட்டளை போடும் பிரதமர் பதவி? சோனியாவுக்கு பிரதமராக வாய்ப்பு இருந்த போதிலும் கூட உள்ளேயிருந்த ஆசையைக் கடவாய்க்குள் அடக்கி வைத்தேயிருக்க வேண்டிய சூழ்நிலை. மன்மோகன் சிங் இந்தியாவின் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளச் சம்மதம் தெரிவித்த விசயம் சோனியாவிற்கு மட்டுமல்ல மொத்த அமெரிக்கத் தொழிலதிபர்களுக்குமே சந்தோஷமாகத் தான் இருந்திருக்க வேண்டும். காரணம் திருவாளர் மன்மோகன் சிங் படித்தவர், பண்பாளர், திறமையானவர் என்பதெல்லாம் விடத் தாராளமயமாக்குதல், தனியார்மயமாக்குதலை அட்சரம் பிறழாமல் கடைபிடிக்க நினைப்பவர். சுருக்கமாகச் சொல்லப்போனால் கடைத் தேங்காயை எடுத்து வழியில் பார்க்கும் பிள்ளையாருக்கு உடைக்கும் பக்தி மான். அக்மார்க் அமெரிக்கா பக்திமான். உலகமே வேறொரு பாதையில் போய்க்கொண்டிருக்கும் போது இந்தியா மட்டும் ஏன் தனிமைப்பட்டு நிற்கவேண்டும் என்பதைத் தனது தீர்க்க தரிசன பார்வையில் கண்டு கொண்டு ஆட்சிக்கு வந்த சித்தர். [] இவர் ஆட்சிக்கு வந்த போது இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உள்ள கடல்புலிகள் கன்னாபின்னாவென்று வளர்ந்து இருந்தார்கள். இலங்கையில் பெரும்பாலான கடல் பகுதிகள் அவர்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. விடுதலைப்புலிகளின் இயக்கத்திற்கு ஜீவதாரமாக இருந்தவர்கள். முக்கியமாக விடுதலைப்புலிகளுக்கு வந்து கொண்டிருக்கும் ஆயுதக்கப்பல்கள் அத்தனையும் நினைத்த நேரத்தில் விரும்பும் இடத்தில் நிறுத்தி தங்கள் பகுதிகளுக்குக் கொண்டு வந்து சேர்க்கும் அளவுக்கு வலுவானவர்களாகக் கடல்புலிகள் இருந்தார்கள். இந்திய உளவுத்துறை கொடுத்த தகவல்களின் அடிப்படையில் மன்மோகன் சிங் அரசாங்கம் இதைத்தான் முக்கியமானதாக எடுத்துக் கொண்டது. 2004 ல் இந்திய கப்பற்படை தலைவராகப் பதிவியேற்ற அட்மிரல் அருண் பிரகாஷ் தன் முதல் வேலையாக இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கடற்புலிகளை அடக்குவது குறித்த ஆலோசனைகளை இலங்கை கப்பற்படையுடன் பேச்சு வார்த்தை மூலம் பல புதிய திட்டங்களை உருவாக்க முடிவெடுக்கப்பட்டது. இப்போது இந்த இடத்தில் நாம் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த நாடாவது இந்தியாவுடன் ஒரு தொழில் ரீதியான ஒப்பந்தம் போட்டு அது செய்தித் தாளில் வருகின்றதென்றால் அதற்குப் பின்னால் ஒரு பெரிய லாபச்செயல் இருக்கிறது என்று அர்த்தம். இரண்டு நாடுகளுக்குமே அந்த லாபம் இருக்கும். இது தான் ஒவ்வொரு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமே. இப்போது மன்மோகன் சிங் அரசாங்கம் 2004 அக்டோபர் 15ந் தேதியன்று இலங்கையுடன் ஒரு ஒப்பந்தம் போட்டது. அதாவது இலங்கைக்கு 15 கோடி டாலர் கடனாக இந்தியா கொடுப்பதாக அந்த ஒப்பந்தம் கூறியது. இதன் மூலம் இலங்கை இந்தியாவிலிருந்து பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்து கொள்ளலாம். அதன் பிறகு இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் சிரில் ஹெராத் தும் மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ரஞ்சித் இஸ்ஸாரும் அக்டோபர் 18 அன்று சந்தித்தனர். அக்டோபர் 19 பூனைக்குட்டி வெளியே வந்தது. அது அறிக்கையாக வெளியே வந்த போது பின்வருமாறு இருந்தது. [] இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி தமிழ் போராளி இயக்கங்களைப் பற்றி உளவு சார்ந்த விசயங்களை இரு நாடுகளும் பறிமாறிக் கொள்வது. இருநாடுகளையும் பாதிக்கக்கூடிய சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகளைக் கூட்டு நடவடிக்கைகள் மூலம் கண்காணிப்பது. இதன் தொடர்ச்சியாக இருநாடுகளும் பல விதமாகக் கூட்டு நடவடிக்கைகளை எதிர்காலத்தில் மேற்கொள்வது. இது தான் அதன் சராம்சம். இந்த அறிக்கை வெளியானதும் இந்தியாவின் ராணுவத் தளபதி என்.சி.விஜ் 2004 நவம்பர் 1 அன்று இலங்கை சென்று ஊடக மக்களிடம் சொன்ன வாசகங்கள் இது. “இப்போது இலங்கை அமைதியான காலகட்டத்தில் இருந்த போதிலும் இரண்டு நாடுகளுக்கும் இராணுவ ரீதியான பறிமாற்றம் அவஸ்யம் தேவை. இலங்கை இராணுவ வீரர்களுக்குப் பயிற்சியளிப்பதும், ஆயுதப்பறிமாற்றமும் முக்கியமாகும்” என்றார் இலங்கையில் இருந்து அவமானகரமாக இந்திய அமைதிப்படை திரும்பியதற்குப் பிறகு முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் இருந்து சென்றவர் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்தியா இராணுவத் தளபதி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த போது சந்திரிகா டெல்லிக்கு வந்து பிரதமர் மன்மோகன் சிங்கை 2004 நவம்பர் 3 -7 அன்று சந்தித்தார். ஏற்கனவே வாங்கிய தொகையுடன் இப்போது மன்மோகன் சிங் தனது அடுத்த அன்புப்பரிசை அதாவது இலங்கையின் ஊரக வளர்ச்சிக்காக 10 கோடி டாலரை வழங்குவதாக அறிவித்தார். சந்திரிகா இப்போது வந்தது வெறுமனே கடன் வாங்க மட்டுமல்ல. கண்களை உறுத்திக் கொண்டேயிருக்கும் புலிகள் இயக்கத்தை ஒரு கை பார்த்து விட வேண்டும் என்பதன் ஆதாரப்புள்ளியையும் இங்கேயிருந்து தான் தொடங்கி வைத்தார். சந்திரிகா கரைத்த விதத்தில் மன்மோகன் சிங் மூலம் அடுத்த அறிக்கை வெளியானது. “இலங்கைக்குத் தேவைப்படும் அனைத்து விதமான இராணுவ உதவிகளை இந்தியா வழங்கும். வடக்குக் கிழக்குப் பகுதிகளில் உள்ள விமானத் தளங்களை இந்தியா சீரமைத்து கொடுக்கும். விடுதலைப்புலிகளின் கடற் போக்குவரத்தையும், கடல்புலிகளின் செயல்பாடுகளையும் இந்தியா கவனித்து இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளும். இந்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்து இடப்படும்” என்று அந்த அறிக்கை சொன்னது. ஏன் விடுதலைப்புலிகளின் கடல்புலிகளைக் குறிவைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றும். அது தான் பிரபாகரன்? கடல்புலிகள் வலுவாக இருந்த பகுதிகளுக்குள் சிங்கள கப்பற்படை மறந்தும் கூட நுழைந்து விட மாட்டார்கள்? அவ்வளவு மரியாதை என்றால் நீங்களே யூகித்துக் கொள்ளுங்க. இதன் சார்ந்த மற்ற விசயங்களைப் பின்னால் பார்க்கலாம். இதே சமயத்தில் அதாவது 2004 மார்ச்சில் தான் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா வெளியேறினார். ஒவ்வொரு தமிழர்களும் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத அளவுக்குத் தன் திறமையைக் காட்டிய மகிந்தா ராஜபக்ஷேவும் இப்போது களத்திற்கு வந்து விட்டார். 10. ரத்தச் சகதியின் காலடித் தடங்கள் 2 இப்போது ராஜபக்ஷே உள்ளே வந்துள்ள நேரம். இவரைப்பற்றி நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இவர் முதன் முதலாகப் பிரதமர் பதவிக்கு வந்த விதத்தையும், பிறகு அதிபராக மாறிய வித்தைகளை நாம் இப்போது அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். . இலங்கையில் இதுவரைக்கும் ஆண்டுவிட்டுச் சென்ற பிரதமர்கள், அதிபர்களை விட மகிந்தா மிக லாவகமாகக் கம்பி மேல் நடக்கும் வித்தையைக் கற்று வைத்திருபவர். [] இலங்கை அரசியலில் ஏறக்குறைய மூன்றாம் நிலை தகுதியில் இருந்தவர். இந்த அளவுக்கு மேலேறி வர எப்படிச் சாத்யமானது? காரணம் இவர் ஆட்சி அதிகாரத்தில் வந்தபிறகே அடுத்தடுத்த 33 மாதங்கள் ஈழத் தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வுகளாக இருந்தது. இப்போது சரித்திர பாதைக்குள் சென்று மீண்டும் இங்கே திரும்பி வந்து விடலாம். இலங்கைக்குச் சர்வதேச நதி உதவி கோருவதற்கான மாநாட்டை 2003 ஜுன் ஜப்பானில் டோக்கியோ நகரில் நடத்த ஏற்பாடாகியிருந்தது. இந்த ஏற்பாட்டைச் செய்து இருந்தவர்கள் அமெரிக்கா,ஐரோப்பிய யூனியன்,நார்வே,ஜப்பான் மற்றும் சார்பு நாடுகள். விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் நார்வே நாட்டின் தூண்டுதல் மூலம் ரணில் விக்கிரமசிங்கே சமாதான ஒப்பந்தங்கள் முன்னெடுத்துச் சென்றார் என்று பார்த்தோம் அல்லவா? அதனைத் தொடர்ந்து திட்ட வரைவுக்காக அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் 2002 ஏப்ரலில் ஒரு கூட்டம் நடத்த ஏற்பாடாகியிருந்தது. ஏற்கனவே அமெரிக்கா விடுதலைப்புலி இயக்கத்தைத் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக வைத்திருந்த காரணத்தால் கடவு சீட்டுக்கான அனுமதியும் கலந்து கொள்ள அனுமதியும் அளிக்கவில்லை. இது வரை ரணில் அரசாங்கத்துடன் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த ஒவ்வொரு சுற்று பேச்சு வார்த்தையின் போது உறுதியளித்திருந்தபடி எந்தச் செயல்பாடுகளும் நடைமுறைக்கு வந்தபாடியில்லை. இதுவே பிரபாகரன் மனதில் ஏராளமான கேள்விகளை உருவாக்கி அளவு கடந்த வெறுப்பையும் உருவாக்கியிருந்தது. திட்ட வரைவுக்காக இப்போது வாஷிடங்டனில் நடக்கப் போகும் கூட்டத்தில் விடுதலைப்புலி இயக்க சார்பாளர்களைகளைக் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு ஏராளமான பிரச்சனைகளை உருவாக்கினார்கள். ஆனால் இதற்குப் பின்னால் இருநது செயல்பட்டவர் ராஜீவ் நம்பியார். அது பின்னாளில் தான் வெளியே வந்தது. அமெரிக்காவில் நடைபெறப் போகும் கூட்டத்தில் அனுமதி மறுத்த நிலையில் பிரபாகரனுக்குக் கோபத்தை உருவாக்க “பொறுத்தது போதும். பொங்கியெழு” என்று பிரபாகரன் சமாதான பேச்சு வார்த்தையில் இருநது விலகின்றோம் என்று அறிவித்தார். இதற்குப் பிறகு தான் ஒவ்வொன்றும் கோணலாக நகரத் தொடங்கியது. விடுதலைப்புலிகள் இயக்கம் சமாதான பேச்சு வார்த்தைகளில் இருந்து விலகி நிற்கப் போவதாக ஒருதலை பட்சமாக அறிவித்தது. அமெரிக்காவில் வாஷிடங்டன் மாநாடு ஏப்ரல் 14 /15 அன்று விடுதலைப்புலிகள் இயக்கம் கலந்து கொள்ளாமலேயே நடந்தது. இதன் காரணமாக ஜுன் 9 மற்றும் 10 தேதிகளில் ஜப்பான் நகர் டோக்யோவில் நடந்த ஈழப் புனரமைப்புக்கான உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தையும் விடுதலைப் புலிகள் புறக்கணித்தனர். ரணில் ஆட்சியில் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த ஒவ்வொரு பேச்சு வார்த்தையின் போது இந்தியா வெளியே இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டுருந்தது. உடல் நலம் குன்றியிருந்த ஆன்டன் பாலசிங்கம் இந்தியாவில் இருந்து கொண்டு எளிதாகச் சிகிச்சை பெற அனுமதி கேட்ட போது கூட மறுத்து விட்டார்கள். இதன் மூலம் நடந்து கொண்டிருக்கும் பேச்சு வார்த்தைகளில் இந்தியாவையும் கலந்து கொள்ள வைக்க வேண்டும் என்று எண்ணியிருந்த புலிககளின் நோக்கமும் அடிபட்டுப் போனது. ஆனால் புலிகள் இயக்கத்திற்குப் பன்னாட்டு நிர்ப்பந்தம் வேறு வகையில் உருவாக்கப்பட்டது. ஜப்பான் மற்றும் நார்வே பிரதிநிதிகள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சி முகாமில் பிரபாகரனை சந்தித்தனர். டோக்கியோ மாநாட்டில் சந்திக்க அழைப்பு விடுத்தும் பிரபாகரன் அதனை நிராகரித்தார். ஏற்கனவே நடந்த பலசுற்று பேச்சுவார்த்யின் போது பேசியபடி வட கிழக்கிற்கான இடைக்காலச் சபையை முழுமையாகவும் உடனடியாகவும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆன்டன் பாலசிங்கம் இலங்கை பிரதமருக்கும் நார்வே அரசுக்கும் கடிதம் எழுதினார். இலங்கைக்குப் பன்னாட்டு நிதி கிடைத்தாலும் புனரமைப்பு என்பது வெறும் கண்துடைப்பாக இருக்கும் என்பதை உணர்ந்து கொண்ட பிரபாகரன் புறக்கணிப்பு என்பதில் பிரபாகரன் உறுதியாக இருந்தார். . 51 நாடுகள், 22 சர்வதேச அமைப்புகள் ஈழ புணரமைப்பு என்ற பெயரில் இலங்கை பெற்ற நிதியென்பது விடுதலைப்புலிகளின் மாநாட்டில் கலந்து கொள்ளாமலேயே எளிதில் கிடைத்தது இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்துப் போயிருந்த 3000 கோடி தொகையை விட 4500 கோடி நிதியை டோக்யோ மாநாட்டில் அதிகமாகப் பெற்று மகிழ்ச்சியாகத் திரும்பினர். . தள்ளாடிக் கொண்டுருந்த இலங்கை அரசாங்கத்திற்கு இப்போது தண்ணீர் வரத்து காய்ந்த நிலத்தில் பாய்வது போல பாயத் தொடங்கியது. சர்வதேச கரன்சிகள் வரத்தொடங்க காத்திருந்த சந்திரிகா கனகச்சிதமாகக் காய் நகர்த்த தொடங்கினார். ரணில் செல்வாக்கை மட்டுப்படுத்த வேண்டுமென்றால் ஆட்டத்திலிருந்து நீக்க வேண்டும். நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைக்க வேண்டும். ஆனால் அதைச் செய்வதற்கு முன்பு உள்ளேயிருந்த ஜேவிபியுடன் கூட்டணியையும் வெற்றிகரமாக அமைத்திருந்தார். ஆட்சிக்கு வருபவர்கள் உள்ளேயிருக்கும் தமிழர் கட்சிகளைக் கருவேப்பிலை மாதிரி எப்படிப் பயன்படுத்துவார்களோ அதே போலத்தான் உள்ளேயிருக்கும் சிங்கள கட்சிகளும். இந்தியாவில் மைனாரிட்டி ஓட்டுக்கள் எத்தனை முக்கியமோ அதுபோல இந்தச் சிங்கள உதிரிக்கட்சிகளின் ஓட்டுக்களும் இலங்கை ஆட்சியாளர்களுக்கு ரொம்பவே முக்கியம். ரணிலின் பிரதமர் பதவி முடிய இன்னும் 3 ஆண்டுகள் இருக்கிறது. அடுத்த மூன்றாண்டு காலத்தை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு ரணில் அமெரிக்கா சென்ற சமயத்தில் பார்த்து 2004 பிப்ரவரி 7 அன்று சந்திரிகா நடாளுமன்றத்தை கலைத்தார். சந்திரிகா எதிர்பாத்ததைப் போலவே ஏப்ரல் 2ல் நடந்த தேர்தலில் சிங்கள இனவாத கட்சிகளாக ஜேவிபி மற்றும் ஜாதிக ஹெல உறமயவுடன் கூட்டு சேர்ந்து வெற்றி பெற்றார். விடுதலைப்புலிகள் மீதான கடும் விமர்சனத்தைத் தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்த போதும் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தான் வெற்றி பெற முடிந்தது. அதுவே பின்னாளில் “ அவசரப்பட்டு ஆட்சியைக் கலைத்தது தவறு. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் ஐக்கியத் தேசிய கட்சியும் சேர்ந்து அமைதிக்கு பாடுபட்டுருக்க வேண்டும் ” என்பதைச் சூசமாக அவர் வாயாலே சொல்லவும் வைத்தது. காரணம் கூட்டணி வைத்து போட்டியிட்ட ஜேவிபியும் சிங்கள கட்சியும் வலுவாகத் தங்கள் கால்களை ஊன்றியிருந்தனர். தனது அதிபர் பதவியை விட்டுக் கொடுக்க விருப்பமில்லாமல் தன்து கட்சியில் தனது கட்சியைச் சேர்ந்த மகிந்த ராஜபக்சேவை ஏப்ரல் 6 2004 அன்று பிரதமராக நியமித்தார். மகிந்த ராஜபக்ஷே இலங்கை வரலாற்றில் 13 வது பிரதமர் கூடவே எந்த நாட்டு அரசியல்வாதிகளும் விரும்பும் துறையான நெடுஞ்சாலைத்துறை அமைச்சக பொறுப்பும் வந்து சேர்ந்தது. இப்போது தான் தன்னுடைய மாமா பாணியில் தோளில் ஒரு நீண்ட அங்கியை அணிய ஆரம்பித்தார். தனக்கென்று ஒரு அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காகவும், விவசாயப் பயிரான வரகுப் பயிரை நினைவுப் படுத்தும் விதமாகவும் அணிவதாக ஊடக பேட்டியில் தெரிவித்தார். டிசம்பர் 26 2004 உருவான ஆழிப்பேரழையில் விடுதலைப்புலிகளின் நிர்வாகப் பகுதிக்குள் இருந்த 15000க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். பிரபாகரன் இறந்து போனதாகத் தமிழ்நாட்டில் இதற்கென்று காத்திருந்த ஊடகங்கள் ஒப்பாறி போல் பாடிக் கொண்டுருந்தது. சுனாமி பேரவலத்தைப் போக்க வெளிநாட்டு நிதியை எதிர்பார்த்து காத்துக் கொண்டுருந்த இலங்கை அரசாங்கத்தை எதிர்பார்க்காமலேயே பிரபாகரன் பாதிக்கப்பட்ட அத்தனை பகுதிகளையும் நேரிடைப் பார்வையில் களத்தில் இறங்கி அவசர கதியாய் செயல்பாடுகளை முடுக்கி விட்டுக் கொண்டுருக்க வேறொரு முக்கிய நிகழ்வும் அப்போது நடந்தேறியது. [] இதே வருடம் மார்ச் மாதம் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா என்ற வினாயகமூர்த்தி முரளீதரன் வெளியேற வெற்றிகரமாக இரண்டாவது கோணல் உருவானது. டோக்யோ மாநாட்டில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த விடுதலைப் புலிகளின் இயக்கத்தை மேலைநாடுகள் பார்த்த பார்வைக்கும் இப்போது கருணா இயக்கத்தை விட்டு வெளியே வர, காத்துக் கொண்டுருந்த இலங்கை அரசாங்கத்திற்கும், கருணாவை வெளியே கொண்டு வர உழைத்த உளவுப் படைகளுக்கும் கொண்டாட்டமாகப் போனது. கருணாவை கொழும்புக்குக் கொண்டு போய்ச் சேர்ந்த முக்கியமானவர் ஒரு முஸ்லீம் அரசியல்வாதி, கருணா கிழக்கு மகாணத்தின் தளபதியாக இருந்தவர். கருப்பு ஜுலை கலவரத்திற்குப் பிறகு இயக்கத்தில் இணைந்து 1984ல்தமிழ்நாட்டில் சேலத்தில் பயிற்சி பெற்றவர். புலிகளின் புலனாய்வு பிரிவில் பணியாற்றியதோடு பிரபாகரனின் மெய்காப்பளாராகவும் பணியாற்றியவர். 2004 மார்ச்சில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறி கருணா தனியாகத் “தமிழ் ஈழ மக்கள் விடுதலைப்புலிகள்” என்றொரு இயக்கத்தைத் தொடங்கினார். வன்னிப் பேரரசை பிரபாகரன் உருவாக்கியிருந்தாலும் உள்ளேயிருந்த கிழக்குப் பிராந்தியங்கள் முழுவதும் கருணாவின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. இதற்கு மேலாக இவர் தனக்கென்று தொடக்கம் முதல் உருவாக்கி வைத்திருந்த அடிப்படை கட்டமைப்புகளை விடுதலைப்புலி இயக்கத்தால் ஒன்றும் செய்ய முடியாத அளவிற்கு இருந்தது. இலங்கை அரசாங்கத்தின் ஆள்காட்டியாக மாறினார். அதுவே அவரின் உயிரைக் காப்பாற்றி இன்று அவரும் ஒரு மந்திரியாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். ஆனால் விடுதலைப்புலிகளுக்குப் பயந்து அவரின் ஓடி ஒளிந்த ஓட்டத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள் இந்தியாவின் ரா அமைப்பினர். இந்திய உளவுத்துறையான ரா மூலம் கேரளாவிலும் மலேசியாவிலும் இவரை ஒழித்து வைத்து காப்பாற்றும் அளவிற்கு இவர் முக்கியமானவராகத் தெரிந்தார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உருவான இந்த இரண்டாவது கோணல் பின்னால் உருவாகப் போகும் விபரீதமான பாதைக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. சந்திரிகாவுடன் விடுதலைப்புலிகள் இயக்கம் சுனாமி நலத்திட்டத்திற்காகக் கையெழுத்திட்டு இருந்தனர். சுனாமிக்கு பிறகு செயலாக்க நடைமுறைகளை விடுதலைப்புலி இயக்கத்தோடு சேர்ந்து செய்யக்கூடாது என்று எதிர்த்த சிங்கள கட்சிகள் சந்திரிகாவையும் எதிர்க்கத் தொடங்கினர். அதிபர் பதவிக்குக் காத்துக் கொண்டுருந்த மகிந்த ராஜபக்ஷே உருவான வாய்ப்பை கனகச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டார். சிங்கள கட்சிகளான ஜேவிபி, ஜாதிக ஹெல உறுமய போன்ற உதிரிக்கட்சிகளின் முக்கியக் கோரிக்கை ஒன்றே ஒன்று தான். சுனாமி பேரவலத்தைப் போக்க வரும் எந்த வெளிநாட்டு நிதியும் தமிழர்கள் வாழும் பகுதிக்குச் சென்றுவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தனர். அதைப்போலவே புலிகள் இயக்கம் வெளிநாட்டில் நடத்திக்கொண்டுருந்த சமாதான உடன்படிக்கை மாநாட்டுக்களை நிறுத்தி விட வேண்டும். நார்வே தலையீட்டை தடுத்தி நிறுத்தி விடவேண்டும் என்பது போன்ற பக்கம் பக்கமாக அடித்தாலும் சோர்வு தருகின்ற அத்தனை கோரிக்கைகளையும் மகிந்தா ஏற்றுக் கொள்ளச் செப் 13 2005 ல் கண்டியில் மகிந்தாவுக்கும் இனவாத கட்சிகளுக்குமிடையே உடன்படிக்கை உருவானது. நீதிமன்றத்தின் மூலம் இடைக்கால உத்தரவு வர உருவாகியிருந்த சுனாமி புனரமைப்பு நிர்வாகம் புழுக்கம் காணத் தொடங்கியது. ஆனால் இந்த ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தால் பாதிக்கப்பட்டது முழுக்க முழுக்கத் தமிழர்கள் வாழும் பகுதிகளே. அதிலும் கடற்கரையோரமாக வாழ்ந்த முஸ்லீம் மக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். தேவைப்படும் நிதியும் வராமல் காப்பாற்ற நாதியுமில்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் பிணமாக மாறியது தான் மிச்சம். [] நவம்பர் 17 2005 நடந்த தேர்தலில் அதிபர் தேர்தலுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பா மகிந்த ராஜபக்ஷேவும் ஐக்கியத் தேசிய கட்சியின் சார்பாக ரணில் விக்ரமசிங்கேயும் போட்டியிட்டனர். பண்டரா நாயகா உருவாக்கிய இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் சந்திரிகாவின் ஆளுமையையும் மீறி, சந்திரிகா விரும்பிய அவரின் தம்பியையும் ஓரங் கட்ட வைத்து மகிந்த ராஜபக்ஷே அதிபர் வேட்பாளராக மாறினார். எதிர் வேட்பாளராகச் சந்திரிகா நினைத்துருந்தால் அவரின் வலது இடது கரமாகச் செயல்பட்டுக் கொண்டுருந்த தமிழர் லஷ்மணன் கதிர்காமர் வந்துருக்க முடியும். ஆனால் இலங்கை அரசாங்கத்தில் ஒரு தமிழர் அதிபர் பதவிக்கு வரமுடியுமா? இனிமேல் மகிந்த ராஜபக்ஷே பெறப் போகும் அத்தனை வெற்றிகளுக்கும் அடிகோலியவர் கதிர்காமர் தான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. காரணம் ராஜீவ் காந்தி படுகொலை என்ற நோக்கத்தில் இந்தியா மட்டுமே விடுதலைப்புலி இயக்கத்தைப் பயங்கரவாத இயக்கமாகத் தடை செய்து இருந்தது. ஆனால் சந்திரிகாவின் 10 ஆண்டுக் கால ஆட்சியில் இலங்கை தீவின் நான்கு புறமும் நீர் என்பது போல இலங்கைக்கு வெளியே உள்ளே மேலை நாடுகள் அத்தனையையும் புலிகள் இயக்கத்திற்கு எதிராக மாற்றி வெற்றிகண்டவர் தமிழர் லஷ்மணன் கதிர்காமர். ஆனால் நடந்த தேர்தலில் பிரபாகரன் பார்வை எப்படி மாறியதோ? அடுத்த நான்காவது கோணல் உருவானது. விடுதலைப்புலிகள் இயக்கம் அறிவித்தபடி பெரும்பாலான தமிழர்கள் ஓட்டுப் போடாமல் புறக்கணிக்க மகிந்த ராஜபக்ஷே மயிரழையில் தப்பிப் பிழைத்து அதிபராக மாறினார். மகிந்தா பெற்ற வாக்கு 50,29 சதவிகிதமும் ரணில் 48.43 பெற மகிந்தா அதிபராக உள்ளே வந்தார். நான்கு கோணல்கள். இப்போது விடுதலைப்புலி இயக்கத்திற்கு இலங்கைத் தீவின் நான்கு புறமும் எதிரிகள். இப்போது இந்தியா முதல் ஏறக்குறைய 30 நாடுகள் விடுதலைப்புலி இயக்கத்தைத் தடை செய்து இருந்தனர். தமிழர்களின் ஆதரவு இல்லாமலேயே தேர்தலின் வென்று மகிந்த ராஜபக்ஷே அதிபராக வந்தார். நவம்பர் 23 2005 ல் அதிபர் பதவிக்கு வந்த மகிந்த ராஜபக்ஷே தனது திருப்பணிகளைச் செய்யத் தொடங்கினார். 11. ராஜாதி ராஜா மகிந்த ராஜா “பெரிய அளவிலான மோதல்கள் 2006 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் மீளவும் ஆரம்பித்துள்ளன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷேவும் அவரது சகோதரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷேவும் குடிமக்களது பாதுகாப்பில் கரிசனை ஏதுவுமின்ற நாட்டின் வடக்குக் கிழக்கில் ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டுருக்கின்றனர்” நியூயார்க்கில் இருந்து செயல்படும் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டு அறிக்கை இது. இந்த அறிக்கையை மனித உரிமைக் கழகம் வெளியிட்ட போது மகிந்தா முதல் ஆண்டு ஆட்சிக்காலத்தைக் கூட முடித்து இருக்கவில்லை. மகிந்தா ஆட்சிப் பொறுப்புக்கு உள்ளே வந்ததும் மிகத் தெளிவாகத் தொடக்கம் முதலே செயல்படத் தொடங்கினார். காரணம் இது வரை ஆண்டுவிட்டுப் போன எந்தப் பிரதமர்களுக்கும் அதிபர்களுக்கும் இல்லாத அதிர்ஷட வாய்ப்புகளை நிறைவே இருந்தது. ஒவ்வொருவரும் உருவாக்கி விட்டுப் பாதியில் சென்ற காரியங்களைத் தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டு கனகச்சிதமாகச் செயல்படத் தொடங்கினார். தன் மனதில் வைத்திருந்த ஒவ்வொன்றையும் திட்டமிட்டு நடத்தத் தொடங்கினார். ராஜபக்ஷேயின் தந்தையின் பெயர் டான் ஆல்வின் ராஜபக்ஷே, சுருக்கமாக டி.ஏ. ராஜபக்ஷே. இவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை உருவாக்கிய பண்டாரநாயகாவின் வலதுகரம் போல் செயல்பட்டு விவசாய மற்றும் நிலம் துறைகளுக்கு அமைச்சராக இருந்தவர். ராஜபக்ஷேவின் பெரியப்பாவும் பிரபல அரசியல்வாதி. தந்தை இறப்புக்குப் பிறகு ராஜபக்க்ஷே 1969 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் முதன் முதலாகப் போட்டியிட்டு சொற்ப வித்யாசத்தில் ஜெயித்துப் பாராளுமன்றத்திற்குள் வந்தவர். தனது 24 வயதில் நுழைந்து. மிக இளம் வயது பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றவர். [] ராஜபக்ஷே 1976 ஆம் ஆண்டு இலங்கையின் சட்டக்கல்லூரியில் படிப்பை முடித்தவர். குடும்பத்தினரைப் போலவே அரசியல் தந்திரங்களில் கரைதேர்ந்தவர். இடையில் 1977 ல் பெற்ற தோல்விக்குப் பிறகு இவரின் அரசியல் வளர்ச்சி அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்த 1989 முதல் ஏறுமுகமாகவே இருந்து அதிபர் பதவி வரைக்கும் கொண்டு வந்து சேர்த்தது. இவரின் மனைவி பெயர் ஷிராந்தி விக்ரமசிங்கே. 1978 ஆம் ஆண்டு மிஸ் இலங்கையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். உலக அளவிலான பல அழகிப் போட்டிகளிலும் கலந்து கொண்டவர். 1983 மே 13ந் தேதி துரத்தி காதலித்து வந்த ராஜபக்ஷேவை மணம் முடித்தார். ராஜபக்ஷேவுக்கு மூன்று ஆண் குழந்தைகள். அதில் ஒருவர் இப்போது அப்பாவைப் போல வளர்ந்து வரும் இளம் அரசியல்வாதி. இலங்கையில் ஆண்ட அரசியல்வாதிகள் நடத்திய பாதயாத்திரையைப் போலவே இவரும் 1992 ஆம் ஆண்டுப் பிரேமதாசாவிற்கு எதிராக நடத்திக் காட்டிய பாதயாத்திரை தான் இவரின் பெயரை இலங்கை முழுக்கப் பரப்ப உதவியது. 1994 ஆம் ஆண்டுச் சந்திரிகா குமாரதுங்கே இவரைத் தனது மந்திரிசபையில் தொழிலாளர் முன்னேற்றத் துறை அமைச்சராக நியமித்தார். தொடர்ந்து மீன்வளத் துறை அமைச்சரானார். ஏற்கனவே சந்திரிகாவுக்கு உதவியாய் பாதுகாப்புத் துறையில் இருந்தவர் அவரது மாமா. ஆனால் பதவிக்கு வந்த ராஜபக்ஷே தனது தம்பி கோத்தபயாவை பாதுகாப்பு செயலாளராக அமர வைத்தார். [] கோத்தபாய மே 1972ல் இலங்கை இராணுவத்தில் இரண்டாம் நிலை லெஃப்டினன்டாக வேலைக்குச் சேர்ந்தவர். இவரின் முழுப்பெயர் ஜார்ஜ் நந்தசேனா கோத்தபய ராஜபக்ஷே., 1980 ல் ரெஜிமெண்டின் தளபதியாக உயர்ந்தவர். ஓய்வு பெற வேண்டிய இறுதி காலத்தில் ராணுவ பயிற்சி கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்து இளம் இராணுவ வீரர்களை உருவாக்கிக் கொண்டுருந்தவர். 1992ல் அமெரிக்காவில் குடியேறி அந்த நாட்டின் குடியுரிமையையும் பெற்றுருந்தவர். 2005 ல் ஆட்சிக்கு வந்த அண்ணணுக்கு வாழ்த்துச் சொல்ல வந்தவரை மகிந்தா பாதுகாப்புச் செயலாளராக அமர வைத்தார். தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது போல ஆட்சியின் தொடக்கத்திலேயே அட்டகாசமாக ஒவ்வொன்றையும் செயல்படுத்த தொடங்கினர். [] மகிந்தா ராஜபக்ஷே ஆட்சியில் அமர்ந்ததும் முதன் செய்த முதல் வேலை பாதுகாப்பு மற்றும் நிதித்துறை தன் கையில் வைத்துக் கொண்டது. அடுத்து யாழ்பாணத் தளபதி சரத் பொன்சேகாவை ராணுவ தளபதியாக்கியது. பொன்சேகா 1970 ல் தரைப்படை வீரராகச் சிம்ஹா ரெஜிமெண்டில் வேலைக்குச் சேர்ந்தவர். 1950 டிசம்பர் 18ல் பிறந்தவர். சந்திரிகா ஆட்சியில் விடுதலைப்புலிகளுடன் நடந்த பல போரில் முக்கியப் பங்கு வகித்தவர். விடுதலைப்புலிகளின் வீரச்செறிந்த யாழ்பாணத்தில் நடைபெற்ற சமரில் சிக்கி காப்பற்றப்பட்டவர். வடக்குப் பகுதிக்கு தலைமையக தலைவராகச் செயலாற்றியவர். மகிந்தா ஆட்சிக்கு வந்த சீஃப் ஆஃப் ஸ்டாப் பதவியில் இருந்த போது இவருக்கு முன்னால் வரிசையில் இருந்தவர்களைத் தள்ளிவிட்டு இவரை மகிந்தா ராணுவ தளபதியாகக் கொண்டு வந்தார். இவருக்கு அந்தத் தகுதி இருந்தது என்பதோடு இவரின் கடந்த கால அனுபவங்கள் தனக்குத் தேவைப்படும் என்பதோடு தம்பி கோத்தபாயவுடன் ஒன்றாகப் பணியாற்றிவர் என்ற முறையில் மகிந்தா இவருக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னால் கொண்டு வந்தார். கடைசியாக இலங்கையில் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு ஆட்சியாளர்களும் செய்யும் சம்பிராதயக் கடமையான இந்தியாவை வந்து பார்த்துக் குசலம் விசாரித்தது. மகிந்த ராஜபக்ஷே, கோத்தபயா ராஜபக்ஷே, சரத்பொன்சேகா. பிரபாகரன் இதுவரையில் எதிர்பார்ககாத தந்திரம், முரட்டுத்தனம், களமாடிய அனுபவ பெற்ற இந்தப் புதிய மூவர் கூட்டணி உருவானது பிரபாகரன் யோசித்து இருக்கக்கூடும்? புதியவரான மகிந்தாவுக்கு என்ன தெரியும்? என்ன சாதிக்க முடியும்? என்ற நோக்கம் இங்கிருந்து தான் அடிபடத் தொடங்கியது. இதற்கு மேலாக மகிந்தாவுக்கு முக்கிய ஆதரவு கொடுத்துக் கொண்டுருப்பது சிங்கள இனவாத கட்சியான ஜேவிபி.. ராஜபக்ஷேவால் அவர்களைப் பகைத்துக் கொள்ள முடியுமா? நாட்டின் அமைதியை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். தன்னுடைய மாமாவிடம் கற்றுக் கொண்டதை, முன்னால் போட்டுக் கொள்ளும் துண்டை சரிசெய்தபடி உள்ளே அலட்டிக் கொண்டுருப்பவர்களைக் கணக்கு எடுக்கத் தொடங்கினர். இப்போது இவர்கள் கண்களில் முதலில் தென்பட்டது இலங்கை பாராளுமன்றத்திற்குள் வந்து மக்கள் சேவை செய்து கொண்டுருக்கும் தமிழர்களின் ஜனநாயக காவல்ர்கள். வேட்டை நாய் போல வேட்டையாடத் தொடங்கினர். மட்டக்களப்பு நாடளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் டிசம்பர் 24 2005 ல் நள்ளிரவு மட்டக்களப்பில் கிறிஸ்து பிறப்பு நாள் வழிபாட்டில் கலந்து கொண்டுருந்த போது உள்ளே வைத்து சுட்டுக் கொல்லப்பட்டு முதல் பலியை தொடங்கி வைத்தனர். இவருக்கு அடுத்து வன்னியசிங்கம் விக்னேஸ்வரன் பாராளுமன்ற வேலைக்காகச் செல்லும் வழியில் ஏப்ரல் 7 2006 சுட்டுக் கொல்லப்பட்ட போது ஒரு பகுதி முடிவுக்கு வந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் தேர்வு பட்டியலில் இருந்த ஆறுமுகம் செந்தில்நாதன், யாழ்பாண நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், அம்பாறை நாடாளமன்ற முன்னாள் உறுப்பினர் சந்திர நேரு என்று தொடங்கி இவர்களின் வேட்டையாடல் தொடர்ந்து கொண்டுருந்தது. இந்தக் கணக்கில் முக்கியமான ஒரு நபர் உண்டு. புலம் பெயர்ந்த தமிழ் மக்களால் அதிகம் படிக்கப்பட்டுக் கொண்டுருந்த புலிகள் ஆதரவு இணையதளத்தை நடத்திக் கொண்டுருந்த பத்திரிக்கையாளர் தர்மரத்தினம் என்ற தராகிச் சிவராம். ஒவ்வொருவரையும் சுற்றி வளைத்து உள்வட்டம் வெளிவட்டம் ஒவ்வொன்றின் கணக்குகளையும் பார்த்துப் பார்த்துச் செயல்படுத்திக் கொண்டுருந்தனர். வடக்குக் கிழக்குப் பகுதிகளில் உள்ள ஊடக மக்களை மிரட்டலில் தொடங்கி ஆள் கடத்தல் வரைக்கும் நடந்தேற இதற்கிடையே இராணுவத்தினருடன் சேர்ந்து கொண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிர் அணியில் இருந்த ஆயுத குழுக்களும் ஆள் காட்டி வேலைகளைச் செய்து கொண்டுருந்தனர். மேலைநாடுகளின் அழுத்தம் மெதுவாக மேலே வரத் தொடங்கியது. கோத்தபயாவின் தத்துவம் மிக எளிமையானது. எதிரிகள் முக்கியம். அதைவிட எதிரிகளுக்கு உதவி கொண்டுருப்பவர்கள் அதை விட முக்கியம். அதையே தொடக்கத்திலேயே கோத்தபயா தெளிவாகச் செய்ய மனித உரிமைக் கழகம் அறிக்கை விடும் அளவிற்கு வந்து நின்றது. தனது முயற்சியில் மனம் தளராத விக்ரமாதித்தன் போலத் தன்னுடைய கடமைகளை ஒவ்வொன்றாக ரசித்து ருசித்துக் கோத்தபயா செய்து கொண்டுவர உள்ளேயிருந்த பத்திரிக்கைகள் கூட மௌனிக்கத் தொடங்கியது. இம் என்றால் சிறைவாசம். ஏன் என்றால் சிவலோக பதவி. நார்வே தூதுவர் எரிக் சோல்கைம் பிரபாகரனுடன் நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பிறகு ஜெனிவாவில் நடத்தப்படும் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்வதாக விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்தது. விடுதலைப்புலிகளின் அறிவிப்புக்கு மகிந்தா அரசு வேறொரு வகையில் பரிசு கொடுத்தது. விடுதலைப்புலிகளின் மேஜர் கபிலன் சுட்டுக் கொல்லப்பட்டதோடு விடுதலைப்புலிகளின் நடத்திக் கொண்டுருந்த புனர்வாழ்வு கழகத்தின் 3 ஊழியர்களையும் அரசுபடைகளுடன் செயல்பட்டுக் கொண்டுருந்த ஆயுதபடைகள் கடத்திச் சென்றனர். பேசியபடி ஜெனிவா மாநாட்டில் அரசு சார்பில் கொடுக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை அரசு நிறைவேற்றக்கூடாது என்று ஜாதிக ஹெல உறுமய கட்சி கூச்சலிட அனைத்துக்கட்சி கூட்டம் மகிந்தாவால் கூட்டப்பட்டது. பாராளுமன்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு மட்டும் அழைப்புக் கொடுக்காமல் சிங்கள இனவாத கட்சிகளை வைத்துக் கூட்டத்தை நடத்தி கும்மி தட்டி முடித்து வைத்தார். கூட்டத்தின் கூக்குரலாக எழுந்த அமைதி பேச்சு வார்த்தை என்ற பெயரில் பஞ்சாயத்துச் செய்து கொண்டுருக்கும் நார்வேயை நீக்க வேண்டும் என்பதோடு முடிவுக்கு வந்தது. மற்றொரு அதிர்ஷ்ட வாய்ப்பு மகிந்தா காதுக்குச் செய்தியாக வர அடுத்தக் கட்ட நகர்வுகள் அப்போது தான் உண்மையிலேயே நகரத் தொடங்கியது.. சரத் பொன்சேகா கொடுத்த தகவலான கருணா உதவியோடு விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடிக்க முடியும் என்று முடிவாகக் காரியங்கள் நடந்தேறத் தொடங்கியது. 12. சீனா -- முத்துமாலை திட்டம் இப்போது மகிந்த ராஜபக்ஷே. தன் தம்பி கோத்தபய மூலம் உள்ளே நடத்திக் கொண்டிருந்த வீரவிளையாட்டுகளைக் கவனித்துக் கொண்டிருந்ததைப் போலவே மற்றொரு காரியத்திலும் கவனமாக இருந்தார். விடுதலைப்புலிகளைக் கூண்டோடு அழித்து முடிக்க வேண்டும். காரணம் அந்த அளவுக்கு உள்ளேயிருந்த சிங்கள இனவாத கட்சியான ஜேவிபி மகிந்தாவை படாய்படுத்திக் கொண்டிருந்தார்கள். கூட்டணியின் போது போட்ட ஒப்பந்தங்களைத் திரும்பத் திரும்ப ராஜபக்ஷேவுக்கு நினைவூட்டிக் கொண்டிருந்தனர். விடுதலைபுலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடிக்க வேண்டும். இது ஜேவிபியின் முக்கியக் கொள்கையாக இருந்தது. ஜேவிபியை விடப் புலிகளை ஒழித்தே ஆக வேண்டும் என்று மகிந்தாவுக்கும் உள் மனதில் ஆசை தான். ஆனால் போர் என்றால் ஆயுதங்கள் வேண்டும். அதற்கு மாளாத பணம் வேண்டும்? என்ன செய்யமுடியும் என்று ஒவ்வொன்றின் சாதகப் பாதகங்களைப் பட்டியலிட்டுப் பார்த்தார். எந்த மேற்கித்திய நாடுகளும் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு என்று கேட்டால் அனைவருமே பணம் தரத் தயாராகயிருக்கிறார்கள். ஆனால் இராணுவ ரீதியான முன்னேற்பாடுகளுக்கு ஒரு பயபுள்ளைகளும் திரும்பிப் பார்க்கத் தயாராக இல்லை. ரணில் காலத்தில் ஜெனிவா ஒப்பந்தம் போட்டபிறகு ஒவ்வொரு நாட்டிலும் போய் இலங்கையால் பிச்சை எடுக்க முடிந்தது. ஆனால் இப்போது என்ன செய்வது? எதைச் சொல்லி கேட்பது. விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடிக்க வேண்டும் எனறால் எவராவது பணம் தருவார்களா? போய்யா போ.. போய் உள்ளேயிருக்கும் புள்ளகுட்டிகளைப் படிக்கவைக்கப் பாருய்யா என்று எட்டி உதைத்து அனுப்பிவிடுவார்கள். இடையிடையே புலிகளை அடித்து ஒடுக்க முற்பட்ட போது இந்த மேற்கித்திய நாடுகள் தான் சமாதானம் என்ற புறாவை பறக்கவிட்டார்கள். என்ன ஆச்சு? விடுதலைப்புலிகள் கொழும்பு அரசவைக்கு வராதது தான் மிச்சம். அந்த அளவுக்கு முன்னேறிவிட்டார்கள். இதை இப்படியே வைத்திருக்கக்கூடாது? என்ன செய்யலாம்? இந்தியாவில் இப்போதுள்ள மன்மோகன் சிங் அரசாங்கம் எத்தனை உதவிகள் செய்து கொண்டிருந்தாலும் அதன் ஒவ்வொன்றுக்கும் பின்னாலும் ஓராயிரம் விசயங்களை விட்டுக்கொடுத்து தான் இந்தியாவின் உதவியைப் பெற முடிகின்றது. காலம் காலமாக இந்தியா நம் மேல் சவாரி செய்வதை அனுமதிக்கக்கூடாது? நாம் தான் அவர்களைக் குனிய வைத்து கும்மி தட்ட வேண்டும். அதற்கு நமக்கு ஒரே ஆள் சீனா தான். பார்க்கலாம் ! ஒரு ஆட்டம் ஆடி பார்த்து விடலாம் என்ற மகிந்தா நினைத்தபடியே அடுத்தக் கட்ட நகர்வுகள் நகர ஆரம்பித்தது. தம்பி கோத்தபய மூலம் உள்ளேயிருக்கும் ஜனநாயகவாதிகள் முதல் சந்தேகப்படுபவர்கள் வரைக்கும் புதைக்குழிக்குள் அனுப்பும் பணியும் சுணங்காமல் போய்க் கொண்டேயிருந்தது. ஆனால் தம்பியின் பணி தொடர்ந்து முன்னேற வேண்டுமென்றால் ஆயுதங்கள் தேவை. அதற்குச் சீனாவை இலங்கையின் பங்காளியாக மாற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்ட மகிந்தா அதன்படியே செயல்பட ஆரம்பித்தார். ஆனால் இந்தியாவைப் பகைத்துக் கொள்ள முடியாது. 2008 ஆம் ஆண்டு இந்தியாவின் விருப்பதிற்கேற்ற இலங்கை சந்தையை Comprehensive Economic Partnership Agreement (CEPA) முழுமையாக இந்தியாவிற்காகத் திறந்து விடத் தயாராக இருந்த போதிலும் நிச்சயம் ஒர் அளவுக்கு மேல் இந்தியாவைப் பக்கத்தில் வைத்துக் கொள்ள முடியாது. இந்தியாவின் கூட உருவாகப் போகும் ஒப்பந்தமென்றாலும், போரும், போருக்குப் பின்னால் உருவான தமிழர் அழிப்புகளைத் தமிழ்நாட்டில் எழும் கூக்குரல் திசைதிருப்பி விடக்கூடும். ஆனால் நிச்சயம் மற்றவர்கள் போல இந்தியாவை ஓர் அளவுக்கு மேல் சார்ந்து இருக்காமல் இருக்கச் சீனாவை இலங்கையின் முக்கியமான பங்காளியாக மாற்ற வேண்டும். சந்திரிகா, ரணில் ஏற்கனவே தோற்றது போல் நாமும் இந்த முறை தோற்றுப் போய்விடக்கூடாது இது போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமென்றால் சீனாவின் உதவி நமக்கு ரொம்பத் தேவை. மேலும் 1957 ஆம் ஆண்டு முதல் சீனாவுடன் கூடிய புரிந்துணர்வு இன்று வரைக்கும் நன்றாகவே உள்ளது. இவ்வாறு மகிந்தா மனதில் நினைத்துக் கொண்டிருந்ததைப் போலவே சீனாவும் மற்றொரு கணக்கு போட்டுக் கொண்டிருந்தது. அமெரிக்காவுடன் இந்தியா சேர்ந்து கொண்டு அடிக்கும் லூட்டிகளுக்கு அளவில்லாமல் போய்க் கொண்டேயிருக்கிறது. அமெரிக்கா வணக்கம் என்று சொன்னாலே இந்திய அரசியல்வாதிகள் சாஷ்டாங்கமாகக் கீழேயே விழுந்து கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை இப்படியே விட்டுவிட்டால் நமக்குப் பின்னால் பல விதமான பிரச்சனைகள் உருவாகக்கூடும். இந்தியாவைத் தெற்காசியாவில் தனிமைப்படுத்த வேண்டுமென்றால் இலங்கையை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். [] இதன் காரணமாகத் தான் சீனா தனது முத்துமாலை என்ற திட்டத்தை உருவாக்க ஆரம்பித்தது. சீன அரசின் கொள்கையான வங்காள தேசம், பர்மா, இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுடன் கொண்ட கொள்கைகளால் திட்டமிட்டு நகர்த்த தொடங்கின. படத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள நட்சத்திர குறீயிடுகள் முழுமையும் சீனாவின் திட்டமானதாக இருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளையே சீனா தனது எரிபொருள் தேவைகளுக்காக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. இங்கிருந்து சீனாவை நோக்கிச் செல்லும் எண்ணெய் கப்பல்களின் பாதுகாப்பு என்பது சீனா அரசுக்கு மிக முக்கியமானதாகும். இதனைச் சாத்தியப்படுத்துவற்காகவே சீனா எகிப்தில் தொடங்கிப் பாகிஸ்தான் இலங்கை, வங்காளதேசம், பர்மா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் தனது கால்களைப் பலமாக ஊன்றிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு செயல்பாடுகளும் தங்களது கண்காணிப்பு மூலம் கவனிக்க முடியும். இதன் காரணமாக்கத்தான் அந்தந்த நாடுகளுடைய கடற்படையுடன் தன்து கடற்படையை ஒன்று சேர்ந்து செய்ல்பட வைக்க விரும்புகின்றது. பாகிஸ்தானின் (Gwadar),க்வாடார், வங்காள தேசத்தின் சிட்டாங், பர்மாவின் சிட்வி, (Sittwe), தாய்லாந்தின் (Kra Canal) க்ரா கால்வாய், வியட்நாமிற்கு 500 மைல் கிழக்கில் அமைந்துள்ள (Woody Islands)வுடி ஐலேண்டு விமானத்தளம், சீனாவின் ஹைனான் தீவு போன்ற இடங்களில் சீனாவின் கடற்படை நிலை கொள்வதற்காகப் பணிகள் நடந்து வருகின்றது. இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சீனா இலங்கையிடம் விரும்பி கேட்பது கடற்கரை நகரமான ஹம்பன் தோட்டா, இதைச் சீனா மிகப் பெரிய சரக்குப் பெட்டமாக வளர்த்தெடுக்க விரும்புகின்றது எனவே தான் சீனா இந்தியப் பெருங்கடலில் தனது நீண்ட நாள் பாதுகாப்பின் பொருட்டு இந்த முத்துமாலைத் திட்டத்தைச் செயல்படுத்த விரும்புகின்றது. இதனைப் புரிந்து கொண்ட மகிந்தா நிச்சயம் சீனா நமக்கு உதவும் என்று உறுதியாக நம்பினார். ராஜபக்ஷே தனது தம்பி கோத்தபயவிடம் உன் கடன் பணி செய்து கிடப்பதே என்று ஆசி வழிங்கி விட்டு அடுத்தக் கொள்முதல் வேலையில் இறங்கினார் 13. சீனாவின் கண்பார்வையில் இந்தியா ” இலங்கை அரசுக்குச் சொந்தமான சொத்திணை நட்பு நாட்டவருக்குப் பகிர்ந்து கொடுப்போம். இதன் மூலம் அவர்களின் நன்மதிப்பையும் நட்பையும் பெறுவோம். இவ்வாறு பெற்ற துணையைக் கொண்டு இந்தியாவின் இராணுவ தலையீடுகளிலிருந்து இலங்கையைக் காப்போம்” 1977 ஆம் ஆண்டு ஜெயவர்த்னே கூறிய வாசகம் இது. காரணம் தொடக்கம் முதலே இலங்கை ஆட்சியாளர்களுக்கு இந்தியாவின் மகா எரிச்சல். அதற்கான காரணத்தையும் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். இந்தியா இலங்கையில் உருவாக்கியுள்ள தொழில் முதலீடுகளின் மூலம் அதிக லாபத்தை ஈட்டிக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது உள்ளே வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களை வைத்துக் கொண்டு மிரட்டிக் கொண்டிருப்பதே முக்கியக் காரணமாக இருந்தது. 2003 செப்டம்பர் மாதத்தில் ரணில் விக்ரமசிங்கே சீனா சென்றிருந்த போதிலும் முழுமையான புரிந்துணர்வை உருவாக்க முடியவில்லை. ஆனால் இலங்கையைத் தாக்கிய ஆழிப்பேரலையின் தாக்கத்தால் 2004 டிசம்பருக்கு பிறகே சீனாவின் பார்வை சற்று மாறத் தொடங்கியது. இலங்கையின் மீது இப்போது சற்று மேம்பட்ட கரிசனம் உருவாகியிருந்தது. காரணம் சீனா தனது ஆயுதக்கிடங்கை உருவாக்கியிருந்த கல்லே என்ற கடற்கரை பகுதியில் ஆழிப்பேரலைகள் உருவாக்கியிருந்த சீரழிவை போக்க இலங்கைக்கு 14 லட்சம் டாலர் வழங்கியது. இதன் தொடர்ச்சியாகச் சந்திரிகாவை சீனா தங்களது நாட்டுக்கு வரவழைத்து அடுத்தக் கட்டத்திற்கான செயல்பாடுகளைச் செய்யத் தொடங்கியது. தென் இலங்கையில் இருந்த ஹம்பன்தோட்டா துறைமுகத்தை விரிவுபடுத்துவதற்கும், அங்கு ராட்சத எண்ணெய் கலன்களை அமைப்பதற்கும், மேற்கு இலங்கையில் புத்தளத்திற்கு அருகாமையில் அமர்ந்துள்ள நோரோச்சோலைக் கடற்கரை கிராமத்தில் 900 மெகாவாட் திறனுள்ள அனல் மின் நிலையம் ஒன்றை அமைப்பதற்கும் சீனாவின் உதவி தேவையென்று சந்திரிகா சீனா சென்றிருந்த போது அவர்களிடம் கோரிக்கை வைத்ததார். இலங்கை வைத்த கோரிக்கைகள் சீனாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. ஏன் எனில் ஹம்பன்தோட்டா சீனாவின் கீழ்வரும் பட்சத்தில் இந்துமகா சமுத்திரத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சீனாவை நோக்கி வந்து கொண்டிருக்கும் எரிபொருள் நிரம்பிய கப்பல்களைக் கண்காணிப்பது எளிதாகிவிடும். மேலும் நோரோச்சோலையின் மின் நிலையம் அமைக்கும்பட்சத்தில் 70 கீமீ வடமேற்கு அருகேயுள்ள சேதுசமுத்திர திட்டத்தினைத் தங்கள் கண்காணிப்பில் கொண்டு வந்து விடமுடியும். 2004 ஏபரல் முதல் 2006 ஜுலை வரைக்கும் இலங்கை இராணுவத்தினர் விடுதலைப்புலிகளின் மீது இராணுவ ரீதியான தாக்குதல்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்திக் கொண்டேயிருந்தது. ரணிலும் ஆட்டத்தை விட்டு விலகி மாஜியாகிவிட் இப்போது மகிந்தாவுக்குப் பம்பர் லாட்டரி போல ஒவ்வொன்றும் பழமாக மாறத் தொடங்கியது. இப்போது மகிந்தாவுக்குச் சீனாவை வெறும் ஆயுத வியாபாரியாகப் பார்ப்பதை விட இலங்கையின் முக்கியமான கூட்டளியாக மாற்றிக் கொள்ள வேண்டிய அவஸ்யத்தை உணர்ந்து ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்தார். இந்தியாவுடன் நட்பாக இருப்பதை விடச் சீனாவை மிக நெருங்கிய கூட்டாளியாக உள்ளே கொண்டு வந்து விட்டால் பாதிப் பிரச்சனைகள் முடிந்துவிடும் என்று ராஜபக்ஷே தீர்மானமாய் நம்பி அதற்கான காரணக் காரியங்களில் கவனம் செலுத்தினார். காரணம் சீனாவை உள்ளே கொண்டு வந்தால் சீனாவின் ஆதரவு நாடுகளிடமிருந்து ஏராளமான உதவிகளை, ஆயுதங்களைப் பெற வாய்ப்பாக இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டார். அதுவரையிலும் புதுப்பிக்கப்படாமலிருந்த சீனாவின் நோரிங்க்கோ நிறுவனத்தின் ஒப்பந்தத்தைத் தூசி தட்டி மீண்டும் சீனாவை உள்ளே கொண்டு வரும் முயற்சியில் இறங்கினார். 2006 ஆம் ஆண்டுக் கருப்பு ஜுலை கலவர நினைவு நாளுக்கு மூன்றாம் நாள் அதாவது ஜுலை 26 ஆம் தேதி இலங்கை விமானப்படையின் விமானங்கள் திருகோணமலை மாவட்டத்திலுள்ள மாவில் ஆறு அணையைச் சுற்றியிருந்த விடுதலைப்புலிகளின் முகாம் மேல் தொடர்ச்சியாகக் குண்டு போட்டுத் தாக்குதல்களைத் தொடங்கியது. விடுதலைப் புலிகள் மாவிலாறு அணையைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு தண்ணீர் திறக்க மறுக்கிறார்கள் என்ற காரணத்ததிற்காக இந்தத் தாக்குதல் என்று கூறியது. இத்துடன் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இருந்த சமாதான உடன்படிக்கு முறிநது வெளிப்படையான தாக்குதல்கள் உருவாகத் தொடங்கியது. 14. ராஜபக்ஷே அல்வா வியாபாரி இப்போது விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை இராணுவத்திற்கும் போர் வெடித்து விட்டது. இலங்கைக்குள் இருந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் ஆள்காட்டிகள் மூலம் அடையாளம் கண்டு கொண்டவர்கள் வரைக்கும் அழித்து முடிப்பதற்கு இலங்கை இராணுவத்திற்குப் பெரிய அளவுக்கு ஆயுதங்கள் தேவையில்லை. ஆனால் இப்போது போரை தொடங்கியாகி விட்டது. வெளியே சென்று வாங்கவும் கஜானாவில் டப்பும் இல்லை. 2006 ஆம் ஆண்டுச் சீனாவின் நோரிங்கோ நிறுவனத்துடன் கூடிய ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க நினைத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் ஏற்கனவே சீனாவிடமிருந்து வாங்கிய ஆயுதங்களுக்குக் கடனாக 200 மில்லியன் டாலர் வேறு கொடுக்க வேண்டியுள்ளது. இப்போதுள்ள சூழ்நிலையில் இந்தக் கடனைக் கூடத் திருப்பிக் கொடுக்க முடியாது. எனவே தான் ராஜபகேஷ சீனாவை ஆயுத வியாபாரியாக மட்டும் பார்க்க விரும்பாமல் தன் நேச கூட்டாளியாக மாற்றிக் கொள்ள வேண்டிய அவஸ்யத்தை உணர்ந்தார் இன்று வரைக்கும் இறுதிக்கட்ட போர் தொடங்குவதற்குக் காரணம் மாவிலாறு அணையை விடுதலைப்புலிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பிரச்சனை செய்கிறார்கள். இதை நம்பி பாசனம் செய்து கொண்டிருக்கும் தமிழர், சிங்களர், முஸ்லீம் மக்கள் பாதிப்படையக்கூடாது என்பதற்காகவே தொடங்கினோம் என்ற இலங்கையின் கூற்றைத்தான் உலகம் நம்பிக் கொண்டிருக்கிறது. விடுதலைப்புலிகளே இந்த யுத்தத்தைத் தொடங்க காரணமாக இருந்தார்கள் என்று தான் இன்று வரைக்கும் நம்பப்படுகின்றது. ஆனால் உண்மை என்பது வேறு? [] இதே காலகட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடை செய்ததைத் தொடர்ந்து இலங்கை இராணுவத்தினரால் உள்ளே நடத்தப்பட்டுக் கொண்டிருந்த வன்முறை தாக்குதல்கள் அளவு கடந்து போய்க் கொண்டிருந்தது. இதன் காரணமாக இலங்கை அரசு பிரதிநிதிகளையும், விடுதலைப்புலிகளையும் தனித்தனியாக நார்வே குழுவினர் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் ஜுன் 8 ல் சந்தித்தனர். ஆனால் இந்தியாவின் குறுக்கீடு காரணமாக இருவரையும் சந்திக்க வைக்க முடியாமல் இறுதியில் நார்வேயும் பின்வாங்கியது. ஓஸ்லோவில் இருந்து விடுதலைப்புலிகள் திரும்பி வந்து கிளிநொச்சிக்கு சென்ற மறுநாள் முதல் இலங்கையின் இராணுவமும், கப்பற்படையும் சேர்ந்து தமிழ்மக்களின் குடியிருப்புகளின் மீது தொடர்ச்சியாகத் தாக்குதல்களைத் தொடங்கியது. இந்தத் தாக்குதல் ஏற்கனவே ஏப்ரல் முதலே தொடங்கியிருந்தது. மூதூர் பகுதிக்குள் உள்ளே உணவு, மருந்துப் பொருட்கள் எதுவும் நுழைந்து விடாத அளவுக்கு ரவுண்டு கட்டி அடித்துக் கொண்டிருந்தார்கள். சுமார் 30 ஆயிரம் பேர்கள் குடியிருப்பின்றி அனாதை ஆக்கப்பட்டார்கள். பள்ளிக்குடியிருப்பு, தங்கபுரம், சந்தனவேட்டை, சீனிவாசபுரம், சின்னகுளம், இத்திகுளம், பட்டாளிபுரம் உட்பட 12 கிராமங்களில் வாழ்ந்து கொண்டிருந்த 3000 தமிழ்க் குடும்பங்கள் தண்ணீரில்லாமல் தவித்தன. இந்தப் பிரச்சனைகளைச் சர்வதேச நாடுகளிடம் விடுதலைப்புலிகள் முறையிட்ட போது எந்தத் தீர்மானமான உடனடி நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. விடுதலைப்புலிகளின் குணாதிசியம் தெரிந்தது தானே? நம்மை நோக்கி இவர்களை வரவழைக்க வேண்டுமென்றால் இது தான் ஒரே வழியென்று மாவிலாறு மதகை விடுதலைப்புலிகள் மூடினார்கள். ஆனால் இதை வைத்துக் கொண்டே உள் அரசியல் சதுரங்க காய்களை ராஜபக்ஷே கவனமாக நகர்த்தித் தாக்குதலை தொடங்கினார். இதில் மற்றொரு ஆச்சரியமும் உண்டு. போர் நிறுத்த கண்காணிப்பு குழு முன்னிலையில் உடன்பாடு ஏற்பட்டு விடுதலைப்புலிகளின் தளபதி எழிலன் மதகை திறக்கச் சென்ற போது மாவிலாறு அணையைக் கைப்ற்றுகிறோம் என்று மீண்டும் இலங்கை ராணுவம் குண்டு வீச்சுக்கள் மூலம் விடாமல் தாக்கிக் கொண்டேயிருந்தது. போர் நிறுத்த கண்காணிப்பு குழு தலைவர் பதுங்கு குழியில் மறைந்து உயிர் தப்பினார். மொத்தத்தில் விடுதலைப்புலிகள் எதற்கும் வருவதில்லை என்பதை உலகத்திற்குப் பரப்ப வேண்டும். அதே சமயத்தில் உள்ளேயிருப்பவர்கள் ஓட்டு மொத்தமாக ஒழித்துக் கட்டிக் கொண்டேயிருக்க வேண்டும். அதைத்தான் ராஜபக்ஷே அன் கோ தெளிவாகச் செய்து கொண்டிருந்தது. இதே சமயத்தில் ராஜபக்ஷே மற்றொரு காரியத்தையும் செய்து கொண்டிருந்தார். பாகிஸ்தான் நாட்டிடம் அதாவது 2006 ஆகஸ்ட் மாத இறுதியில் எங்களுக்கு 60 மில்லியன் அளவிலான ஆயுத உதவிகள் தேவை என்று கோரிக்கை வைத்திருந்தார். [] காரணம் பாகிஸ்தானும் இலங்கையுடன் நெருங்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தது. வேறு என்ன காரணமாக இருக்க முடியும்? ஏற்கனவே இந்தியாவுடன் இலங்கை போட்டுருநத தடையற்ற சுதந்திர வியாபார ஒப்பந்தம் போல எங்களுடனும் ஒரு ஒப்பந்தம் போட வேண்டும் என்று மறைமுகமாகக் கோரிக்கை வைத்திருந்தது. இந்தக் கோரிக்கை பாகிஸ்தான் அரசால் 2003 ஆம் ஆண்டு முதல் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தாலும் கூட அப்போது அது கேட்பாரற்று இருந்து. இப்போது பாகிஸ்தானும் இலங்கைக்கு உதவக் காத்திருந்தது. காரணம் பாகிஸ்தான் கோரிக்கையின்படி 2005 ஆம் ஆண்டுப் பிப்ரவரி மாதத்தில் அந்த ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட்டுருக்க இபபோது ராஜபகேஷவுக்கு வசதியாகப் போய்விட்டது. [] ஒரு வேளை சீனா சரியான சமயத்தில் உதவாவிட்டால் என்ன செய்யலாம்? அதற்கும் அடுத்த யோசனை ராஜபகேஷவிடம் தயாராக இருந்தது. சீனாவின் நட்பு நாடான ஈரானினிடம் போய் நின்றது. அதாவது தென் இலங்கையில் உள்ள உமா ஆற்றில் 100 மெகாவாட் திறனுள்ள மின் நிலையம் அமைப்பதற்காகவும் கொழும்பு நகருக்கு அருகேயுள்ள சபுகஸ்கந்தா பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையத்தினை விரிவாக்கம் செய்வதற்காகக் கொடுப்பதன் மூலம் ஈரான் அரசு மூலம் தேவைப்படும் உதவியைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டது. 2007 நவம்பர் மாதம் இது தொடர்பாக ராஜபக்ஷே ஈரான் பயணமானார். எந்தவித டெண்டர் இல்லாமலேயே இவற்றை ஈரானுக்கு வழங்கப்படும் என்ற தனிப்பட்ட உறுதியையும் ராஜபக்ஷே ஈரான் அரசிடம் தெரிவித்தார். 2007 நவம்பர் 29 அன்று ஈரானுடன் இலங்கை எட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இப்போது ராஜபகேஷவின் ஒரே நோக்கம் சீனாவை தன் பக்கம் வரவழைக்க வேண்டும். அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் எதிர்ப்பு நாடுகளைத் தன் பக்கம் கொண்டு வருவதன் மூலம் எளிதாகச் சீனா தங்கள் பக்கம் வந்து விடும் என்று அவர் நம்பி தொடங்கிய ஒவ்வொரு செயல்பாடுகளும் அவருக்கு இறுதியில் பழமாக மாறத் தொடங்கியது. எந்த அளவுக்கு ராஜபக்ஷே இதில் தீவிரமாக இருந்தார் என்பதற்கு இந்தச் சினன உதாரணமே போதுமானது. ஈரான் குறிப்பிட்ட (சபுகஸ்கந்தா சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கம்) தொகையானது அப்போதைய சந்தை நிலவரத்தைக் காட்டிலும் 300 சதவிகிதம் அதிகமாகக் கேட்டது. ஆனால் இதற்கு உடன்பாடு ஏற்படும் பட்சத்தில் ஒரு பெருந்தொகை இலங்கையின் வளர்ச்சி நிதிக்காக வழங்கப்படும் என்ற ஈரான் கொடுத்த உறுதிமொழியின் அடிப்படையில் ராஜபஷே எந்தக் கேள்வியும் கேட்காமல் ஒத்துக் கொண்டார். இதற்குள் மற்றொரு ராஜதந்திரமும் உண்டு. ஒரு வேளை எதிர்காலத்தில் இந்தியா இலங்கைக்கு எதிரணியில் நிற்கும் பட்சத்தில் இலங்கை மண்ணில் ஈரான் இருப்பது பல வகையிலும் உதவக்கூடும் என்ற கணக்கும் உண்டு. இதே சமயத்தில் ராஜபக்ஷே உறுதியளித்தபடியே சீனா 2006 மே மாதம் 900 மெகாவாட் திறனுடைய அனல்மில் நிலையத்திற்காகக் கட்டுமான பணிகள் தொடங்கியது. இந்தத் திட்டத்தை ஏற்கனவே இலங்கை அரசு இந்தியாவின் தேசிய அனல் மின் குழுமத்துடன் (National Thermal Power Corporation – NTPC) செய்து கொள்வதாகச் சொல்லியிருந்ததை மாற்றிவிட்டு இப்போது அதைச் சீனாவின் கையில் கொடுத்து இந்தியாவிற்கு அசல் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவை பரிசளித்தது. ஆனால் நிரந்தரமாக இந்தியாவைப் பகைத்துக் கொள்ள முடியுமா? இந்த இடத்தில் இலங்கை ஆட்சியாளர்களின் தில்லாலங்கடி ஆட்டத்தைப் பற்றிச் சிலவரிகள் மூலம் பார்த்து விடலாம். 1993 ஆம் ஆண்டு அப்போது இருந்த நரசிம்மராவ் அரசின் எதிர்ப்பை மீறி புத்தளத்தில் அமையவிருந்த அரசு சிமெண்ட் நிறுவனத்தை யாருக்கு விற்றார்கள் தெரியுமா? பாகிஸ்தானின் தாவாக்கல் நிறுவனம். இந்த நிறுவனம் பாகிஸ்தானின் உளவு நிறுவனங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்குச் சொந்தமானது இப்போது சீனாவுக்குக் கொடுத்துள்ள அனல்மின் நிலையத்திற்கு ஒரு மாற்று ஏற்பாடு ஒன்றை இந்தியாவிற்குக் கொடுக்க வேண்டும் அல்லவா? இந்த இடத்தில் தான் ராஜபக்ஷேவை நீங்கள் பாராட்டியே ஆக வேண்டும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த தானைத்தலைவன். எப்படித்தெரியுமா? [] 2006 ஆகஸ்ட்டில் விடுதலைப்புலிகளிடமிருந்து கைப்பற்றிய கிழக்கு இலங்கையில் இருந்த சம்பூர் பகுதியை (திருகோணமலைப்பகுதியில் உள்ள பகுதி) இந்தியா வசம் ஒப்படைத்தது. சம்பூர் பகுதியில் 500 மெகாவாட் திறனுள்ள மின் நிலையம் அமைக்க இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை வைத்தது. இலங்கை மின்சார வாரியமும், இந்தியாவின் தேசிய அனல் மின் கழகமும் இணைந்து நிறுவுவதே இதன் திட்டமாகும். இதன் மூலம் என்ன லாபம் என்கிறீர்களா? இதனைச் சுற்றியுள்ள பகுதிகளை இந்தியாவே விடுதலைப்புலிகளிடமிருந்து காத்துக் கொள்ள வேண்டும். திருகோணமலைப் பகுதி என்றால் இந்தியாவுக்குச் சொல்லவா வேண்டும். எப்பூடி? 15. ராஜபக்ஷே மகா கெட்டிகாரர் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு கேள்வி இயல்பாக எழ வேண்டும்? அதென்ன ஸ்பெக்ட்ரம் பிரச்சனை, தயாநிதி மாறன் இவருக்குப் பின்னால் உள்ள மலேசிய தொழில் அதிபர் ஆனந்த கிருஷ்ணன் என்று தொடங்கி இப்போது இந்தக் களம் எங்கங்கோ போய்க் கொண்டேயிருக்கிறது.? கடந்த பல அத்தியாயங்களில் ஆனந்தகிருஷ்ணன் வந்தபாடில்லையே என்ற சந்தேகம் எழு வேண்டும்? உண்மை தான். சர்வதேச தொழில் அதிபர்களின் முதலீடுகள் மட்டும் கனமாக இருக்காது. அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளுமே மர்மமாகவே இருக்கும். இப்போது இந்த அத்தியாயத்தில் ஒரு இடத்தில் நம்ம ஆனந்த கிருஷ்ணன் தலைகாட்ட வருகிறார். அதுவும் எப்படி என்பதை நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். இது தவிர இந்தத் தொடரின் முக்கிய நோக்கமென்பது இறுதி கட்ட போராட்டத்திற்காக முன்னேற்பாடுகளாக ராஜபக்ஷே என்ன செய்தார்? எதையெல்லாம் சர்வதேச நாடுகளிடம் விட்டுக் கொடுத்து இந்த வெற்றியை பெற்றுள்ளார் என்பதோடு இதன் மூலம் இந்தியா எதிர்காலத்தில் சந்திக்கப் போகின்ற சவால்கள் தான் நமக்கு முக்கியமானதாகும். அதில் ஒரு கதாபாத்திரம் தான் ஆனந்த கிருஷ்ணன். சேது சமுத்திர திட்டத்தைப்பற்றி உங்களுக்குத் தெரியும் தானே? குறிப்பாகத் திமுகக் கடந்த மத்திய அரசில் அங்கம் வகித்த போது டி.ஆர்.பாலு தொட்டதெல்லாம் பொன்னாகிக் கொண்டிருந்த காலம். கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டோ கொட்டென்று அவருக்குக் கொட்டியது. ஆனால் இராமர், வானரம் என்று ஆயிரத்தெட்டுக் காரணங்கள் சொல்லி அந்தத் திட்டமும் இறுதியில் அதோகதியாகி பாதியில் நின்று விட்டது. [] நமக்கு இப்போது சேது சமுத்திர திட்டம் முக்கியப் பிரச்சனையில்லை. காரணம் இது போன்ற விசயங்களை நிறுத்த உதவிய, கூலிக்கு மாறடித்த சுப்ரமணியசாமிக்குத் தான் ரொம்ப முக்கியம். அவர் நினைத்தபடியே சுபமங்களம் என்று பாடிவிட்டு நகர்ந்து விட்டார். நம்மவர்களும் இந்தத் திட்டத்தின் மூலம் சுருட்டியவரைக்கும் லாபம் என்று அதைப்பற்றி மறந்து விட்டார்கள். 2005 ஜுலை 2ந் தேதி இந்தத் திட்டம் துவங்கப்பட்டது. மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியது. இதே சமயத்தில் 2006 ஆம் ஆண்டு இறுதியில் சீனா மன்னார் வளைகுடாவில் பெட்ரோலியம் கிடைக்கின்றதா என்பதை ஆராய்ந்து பார்க்கின்றோம் என்று இலங்கையிடம் அனுமதி கேட்டது. 2007 மார்ச்சில் எந்த வித டெண்டரும் இல்லாமல் ராஜபக்ஷே தனது சீன பயணத்தின் போது சீனாவுக்கு வழங்கினார். ஏறக்குறைய சேதுசமுத்திர திட்டம் தொடங்கி 20 மாதங்கள் கழித்து இந்தத் திட்டம் இலங்கையால் சீனாவுக்கு வழங்கப்பட்டது. இந்தச் சமயத்தில் சேதுசமுத்திர திட்டத்தில் பாக் நீரிணைப் பகுதியில் உள்ள பெரும்பாலான பணிகள் நிறைவுக்கு வந்து இருந்தது. இதன் தொடர்ச்சியாக அதன் தெற்குப் பகுதியான ஆதாம் பாலத்தின் மீது செய்யப்பட வேண்டிய பணிகள் துவங்கியிருந்தது. சேதுசமுத்திர கப்பல் கழகம் மும்முரமாகத் தங்கள் உழைப்பை காட்டிக் கொண்டிருந்த நேரமும் கூட. சீனாவுக்கு மன்னார் வளைகுடாவில் பெட்ரோலிய தூரப் பணிகளுக்காக வழங்கப்பட்ட பகுதியென்பது சேது சமுத்திர திட்ட பாதைகளுக்கு அருகே ஏறக்குறைய 20 கீமீ தொலைவில் அமைந்து இருந்தது. மொத்ததில் உள்ளே வரக்கூடிய செல்லக்கூடிய அத்தனை கப்பல்களையும் சீனா தனது கண்காணிப்பில் வைத்துக் கொள்ள முடியும். இதே சமயத்தில் செட்டி நாட்டு சீமான் ப.சிதம்பரம் பலமுறை தொடர்ந்து கூப்பாடு ஒன்றை எழுப்பிக் கொண்டிருந்தார். [] அதாவது சேது சமுத்திர திட்டத்தை விடுதலைப்புலிகள் சீர்குலைக்க அதிகம் வாய்ப்புள்ளது என்பதைத் தொடர்ச்சியாக அறிக்கை வாயிலாகத் தெரிவித்துக் கொண்டிருந்தார். ஆனால் அருகே சீனா செய்து கொண்டிருந்த வேலைகளையும், அதன் கண்காணிப்பில் தான் இந்தச் சேது சமுத்திர திட்டமே நடந்து கொண்டிருப்பதையோ ப.சிதம்பரம் மட்டுமல்ல துறைப் பொறுப்பில் இருந்த டி.ஆர்.பாலு கூட மறந்தும் கூட மூச்சு விடவில்லை. காரணம் என்ன? சரி பெரிய இடத்து விவகாரத்திற்குள் நாம போக வேண்டாம். இந்த இடத்தில் இன்னோரு ஆச்சரியத்தையும் நாம் பார்க்க வேண்டும். 2008 பிப்ரவரி மாதம் இலங்கை அரசு மன்னார் வளைகுடாவில் இருந்த மூன்று பகுதிகளில் பெட்ரோலிய தூரப்பணிகளுக்காக டெண்டர் விட்டது. இந்தியாவின் சார்பாக ஓன்என்ஜீசி நிறுவனத்துடன் மற்றொரு நிறுவனமும் கலந்து கொண்டது. அந்த நிறுவனத்தின் பெயர் Cairn India. [] பெயரில் இந்தியா இருக்கிறதே அப்ப இது இந்திய நிறுவனமா? என்று யோசிக்காதீங்க. இந்த டெண்டரில் குறிப்பாக வடக்கு கிழக்காக உள்ள பகுதிகளில் குறிப்பாக வடக்கில் உள்ள புத்தளத்தை அடுத்துள்ள பகுதியைத்தான் இரண்டு நிறுவனங்களும் கைப்பற்ற போட்டா போட்டி போட்டது. அதற்கும் காரணம் உண்டு. ஆனால் போட்டியின் இறுதியில் 2008 ஆம் ஆண்டு இந்தியா நிறுவனத்திற்கே இந்த டெண்டர் கிடைத்தது. இதற்குப் பின்னால் உள்ள காரணம் புத்தளத்திலும் PEARL 1 என்ற பகுதியிலும் சீனா பெட்ரோலிய ஆராய்ச்சி செய்கின்றோம் என்று வேறொரு ஆராய்ச்சியையும் செய்து கொண்டிருந்தார்கள். அதாவது சீனா உருவாக்கிய உளவு நடவடிக்கைகளை இந்தியா கவனித்து விடக்கூடாது என்பதற்காகவே மட்டுமே ஒன்என்ஜிசி க்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அப்புறம் மற்றொரு விசயத்தையும் நாம் இந்த இடத்தில் பார்க்க வேண்டும். இந்த நிறுவனம் குறிப்பாக இதே இடத்தில் தான் தங்கள் செயல்பாடுகளை அமைக்க வேண்டும் என்பதற்கான காரணம் என்ன? புத்தளத்தில் இருந்து இந்த நிறுவனம் அமைந்த இடத்திலிருந்து தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளத்திற்கு 300 கீமீ. இது தவிரத் தூத்துக்குடிக்கு 250 கீமீ. செய்வினை, சூனியம் போன்றவைகள் எல்லாம் இப்ப உங்க ஞாபகத்திற்கு வரனுமே? சரி, இப்ப இந்த இந்தியா என்று பெயர் வைத்துள்ள இந்த நிறுவனம் யார்ரென்று பார்த்துவிடலாம். [] Cairn India என்ற நிறுவனம் முறைப்படி ஒரு இங்கிலாந்து முதலாளிக்குச் சொந்தமானது.அவர் பெயர் பில் கேம்பெல். (Bill Gammell). இவர் தான் இந்த நிறுவனத்தின் 64 சதவிகித பங்குகளை வைத்துள்ளார். 1979 ஆம் ஆண்டில் Castle Cairn Financial Services என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனத்தின் முக்கியப் பணி என்பது பெட்ரோலிய்ப் பொருட்கள் எங்கங்கு கிடைக்கின்றதோ அங்கே போய்த் தனது செயல்பாடுகளைத் தொடங்குவது. இதன் தொடர்ச்சியாக இந்த நிறுவனம் Cairn Energy என்ற நிறுவனத்தைத் தொடங்கியது. 1996 ஆம் ஆண்டு இந்தியாவில் இயங்கிக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய நிறுவனமான Command Petroleum Ltd பெரும்பாலான பங்குகளை வாங்கித் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இந்தியாவிற்குள் தனது சேவையை விரிவுபடுத்த தொடங்கிய போதே மேல்மட்ட நிலையில் உள்ள அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கத்தினர் போன்ற அத்தனை புனித ஆத்மாக்களோடு நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டது. இந்தியாவிற்குள் தொழில் தொடங்கி அதுவும் நல்ல லாபகரமான நிறுவனமாக வளர வேண்டுமென்றால் முக்கியமாகக் குறுக்குவழியில் சென்றால் தானே முடியும்? அதைத்தான் தொடக்கத்திலே இந்த நிறுவனம் செய்யத் தொடங்கியது. 2000 ஆம் ஆண்டில் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடல் பகுதிகளில் பெட்ரோல் மற்றும் எரிவாயு இருப்பதைக் கண்டறிந்து தனது பணியைத் தொடங்கியது. 2004 ஆம் ஆண்டு ராஜஸ்தானுக்கு அருகே உள்ள கடல்பகுதியில் மிகப் பெரிய பெட்ரோலிய வளம் இருப்பதைக் கண்டு கொண்டது. இந்த நிறுவனத்தில் மலேசிய நிறுவனமான Petronas நிறுவனத்திற்கு 13 சதவிகித பங்குகள் உள்ளது. இந்த மலேசிய நிறுவனத்திறகு யார் முக்கியமான பொறுப்பாளியாக இருப்பவர்? மலேசிய தொழில் அதிபர் ஆனந்த கிருஷ்ணன். சரி, இந்த இந்தியாவின் இயக்குநர் யார்? [] திரு நரேஷ் சந்திரா சேகனா.முக்கிய பொறுப்பில் இருப்பவர். இவரைப்பற்றிச் சிறு குறிப்பு வரைக? 1990 ஆம் ஆண்டு இந்தியாவின் பாதுகாப்பு செயலாளராகவும், உள்துறை செயலாளராகவும், கேபினட் செயலாளராகவும், 1992 முதல் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ்க்கு ஆலோசகராகவும் இருந்தவர். 1995 முதல் குஜராத் ஆளுநராகவும் இருந்தவர். 1996 முதல் 2001 வரை அமெரிக்காவிற்கான இந்திய தூதவராகவும் இருந்தவர். அதிலும் குறிப்பாக 1981 முதல் 1984 வரைக்கும் இலங்கைக்கான ஏற்றுமதி கொள்கைகான காமன்வெல்த் ஆலோசகராவும் இருந்தவர். சற்று மூச்சு விட்டுக கொள்ளுங்க. முறைப்படி இலங்கை கொடுத்த டெண்டரை கைப்பற்றியது மலேசியாவின் பெட்ரோனஸ் நிறுவனம். அதற்குக் காரணகர்த்தவாக முன்னால் நின்றவர் நரேஷ் சந்திரா சேகனா. ஆனந்த கிருஷ்ணன் யாருக்கு நெருக்கமான கூட்டாளி? இந்தியாவிற்கா? சீனாவுக்கா? நம் இந்தியாவில் மகத்தான ஆச்சரியம் ஒன்று எப்போதும் உண்டு. ஒருவர் உயர்ந்த பதவியில் இருந்தாலும், இந்தியாவின் ராஜரகஸ்யங்களைக் காத்திருந்த பதவியாகக்கூட இருக்கலாம். ஆனால் அவர் ஓய்வு பெற்ற பிறகு அவரைப்பற்றி எந்தக் கேள்வியும் இருக்காது. எங்கு வேண்டுமானாலும், எந்த அந்நிய நிறுவனத்தின் கூடவும் புரிந்துணர்வை உருவாக்கிக் கொள்ளலாம். லாபத்திற்கு, தங்கள் சுய லாபத்திற்காக இவர்களைப் போன்றவர்கள் சோரம் போகமாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? ஒன்றோடு ஒன்று முடிச்சுப் போட்டு பார்த்துக் கொள்ளுங்க. இலங்கையைப் பொறுத்தவரையிலும் இநதியாவை பகைத்துக் கொண்டு இந்த டெண்டரை நேரிடையாகச் சீனாவுக்குக் கொடுத்து விட முடியாது. அதே சமயத்தில் சீனா சம்மந்தப்பட்ட ஆனந்த கிருஷ்ணன் நிர்வாகத்தில் உள்ள மற்றொரு நிறுவனத்திற்குக் கொடுத்து விட்டால் பிரச்சனை முடிந்து விட்டது. மொத்தத்தில் இந்தியாவால் வேடிக்கை பார்க்கக்கூடிய சூழ்நிலை. அப்ப இந்தத் தொழில் விளையாட்டில் ஜெயித்தது? இந்தியாவின் இறையாண்மைக்கு,பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு விடுதலைப்புலிகள் காரணமாக இருந்து விடுவார்கள் என்ற இந்த வார்த்தைகளை வைத்துக் கொண்டு இன்று வரைக்கும் ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கும் ராஜபகேஷவை எப்படிப்பட்ட நபர் என்று உங்களுக்குப் புரியுமே? பகுதி ஐந்து 1. வேலுப்பிள்ளை பிரபாகரன் [] [] இலங்கை சுதந்திர பெற்ற காலம் முதல் ஒவ்வொரு காலகட்டத்திலும் சிங்கள ஆட்சியாளர்களால் அங்கு வாழ்ந்த தமிழர்களுக்கு ஏராளமான துன்பங்கள் உருவானது. தமிழ்த் தலைவர்கள் தொடக்கத்தில் காந்திய வழிப் போராட்டதையே தொடங்கினர். அதுவே ஆயுதப் போராட்டமாக மாறியது. சுதந்திர வேட்கை என்பது ஒரு சிறிய விதை மட்டுமே. கொழும்புவில் வாழ்ந்த பிரபாகரன் உறவினர்கள் பெற்ற துன்பத்தை மிகச் சிறிய வயதில் கேட்டு பிரபாகரன் தனக்குள்ளேயே சில உறுதிப்பாடுகளை எடுத்துக் கொண்டு அதன்படியே உருவாக்கிக்கொண்ட வேட்கை ஆலமரமாகப் பின்னால் வானளாவ உயர்ந்து நின்றது. தமிழரசு கட்சியில் இருந்து விலகி ஆசிரியர் தொழில் செய்து கொண்டுருந்த வேணுகோபால் மாஸ்டர் உருவாக்கியது அது. “உரிமை என்பது கேட்டுப் பெறுவது அல்ல. அடித்துப் பெறுவதே. காந்தியின் அமைதி வழி என்பது சிங்களர்களிடத்தில் எதிர்பார்த்தால் இன்னும் ஒரு நூற்றாண்டு ஆனாலும் தமிழன் என்பவன் அடிமையே” என்ற அவரின் தராக மந்திரம் இடைவிடாது ஒலிக்க பிரபாகரனின் தனிப்பாதை உருவானது. அதுவே 1977 ஆம் ஆண்டுக்குப் பிறகு விடுதலைப்புலிகள் இயக்கமாக மாறி வளர்ந்து நின்றது. கால் நூற்றாண்டு காலத்திற்கு மேலாக ஒவ்வொரு சிங்கள ஆட்சியாளர்களையும் விடுதலைப்புலிகள் இயக்கம் என்ற பெயரைக் கேட்டாலோ, வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற பெயரை நினைத்தாலே அச்சப்பட வைத்தது. ” சுதந்திரத்திற்காகப் போராடுகின்ற மக்களின் மீது யாருமே கடைசித் தோல்வியை ஏற்படுத்தி விட முடியாது? இலங்கை தமிழர்களை அழிவுக் குவியலாக மாற்றி விடலாம். ஆனால் நிரந்தர அடிமையாக மாற்றி வைக்க முடியாது” உணர்ந்தவர்கள் ஜெயிக்கக்கூடியவர்கள். 2. வேலுப்பிள்ளை பிரபாகரன் பதில்கள் தனிமைவிரும்பி? “எனது பள்ளிப்பருவத்தில் என்னைக் கவர்ந்தது இந்திய சுதந்திரப் போராட்டமே. ஒழுக்கத்தை, கட்டுப்பாட்டை முன்னிறுத்தி வளர்க்கப்பட்ட சூழலில் தான் நான் வளர்க்கப்பட்டேன். வெளியாட்களுடன் பழக அனுமதிக்கப்படவில்லை” ஓழுக்கம்? “எனது தந்தை (வேலுப்பிள்ளை) அவரது நடத்தையாலே எனக்கு முன் மாதிரியானார். அவர் உணவில் கருவேப்பிலையைக்கூட உண்ண மாட்டார். அவர் அரசாங்க மாவட்ட (நில அளவை) அதிகாரி. அவர் நடந்து சென்றாலே புல்வெளிக்குக் கூடக் காயம்படாதவாறு நடந்து செல்வார் என்று எம் பகுதி மக்கள் கூறுவார்கள். என்னைக் குற்றச் சாட்டும் பொழுதுகூட அப்படிப் பட்டவருக்கு இப்படியொரு பிள்ளையா என்பார்கள். அவர் மிகவும் கடுமையானவர். மொத்த குடும்ப நிகழ்வுகளையும் காரணக் காரியங்களோடு தோழமையோடு உரையாடுவார். எப்படி வாழ வேண்டும் என்பதற்கும் எப்படி வாழக்கூடாது என்பதற்கும் அவர் உருவாக்கிய புரிந்துணர்வு முக்கியக் காரணம். அமைதியாக வாழ்ந்த அவரது வாழ்க்கை முழுக்க மொத்த இனக்கலவரங்களையும் வெறும் வார்த்தைகளாக உரையாடல் மூலம் உணர்ந்து கொள்ள முடிந்தது.வாழ்க்கை இழந்தவர்கள் இழந்து கொண்டே தான் இருந்தார்கள்” நோக்கம்? இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் நேதாஜியின் பங்கு என்னை மிகவும் கவர்ந்தது. குழந்தைப்பருவம் முதலே அவரின் ஆன்மிகத் தேடலில் இருந்த போதும் திரும்பி வந்த போது நான் தனிமையாகத் தனி ஆளாகச் சுற்றி கானக வாழ்க்கை வாழ்ந்த போது இவைகள் தான் என்னை அடைகாத்தன. குறிப்பாக ” எனது கடைசிச் சொட்டு இரத்தம் இருக்கும் வரை எமது மண்ணின் விடுதலைக்காக நான் போராடுவேன்” இந்த வார்த்தைகள் எனக்குள் உருவாக்கிய தாக்கம் தான் இறுதி வரை இழுத்து வந்தது”. எண்ணங்களின் தாக்கம்? ” அநீதிக்கு எதிராகத் திரும்பத் தாக்கியவர்கள் எனப் பலரது வரலாறும் வாழ்க்கையும் எனக்குப் பிடித்தமாக இருந்தது. சிங்களிர்களின் கொடூர எண்ணங்களும், கொடுமையாக (1958) தாக்குதல்களும் தினந்தோறும் தினசரி வாயிலாகப் படித்துக்கொண்டே வந்த போது உருவாக்கிய தாக்கம் மேலும் என்னை என் பாதையை உறுதிபடுத்தியது” கடைசி வரையிலும் கடைபிடித்த இயற்கை என் வழிகாட்டி? “தமிழர்களின் வாழ்வில் நீக்கமற கலந்துருக்கும் மத நம்பிக்கைகளை, பாண்டுராவில் உள்ளே உறங்கிக்கொண்டு இருந்த புரோகிதரை ஒரு கயிற்றுக் கட்டிலில் கட்டி மொத்தமாகப் பெட்ரோல் ஊற்றி சிங்களர்கள் எரித்த போதும், மக்கள் அந்த நிகழ்வுகளையும் செய்தியாகவே பார்த்த போது படித்த போதும், மத எண்ணங்களை விடத் திரும்பி தாக்க முடியாத எங்களது மக்களின் எண்ணங்கள் எனக்கு வேறு விதமான தாக்கத்தை உருவாக்கியது” வாழ்வில் வாசித்த அனுபவமும் வாழ்க்கையை நெறிப் படுத்தியவைகளும்? நடந்து கொண்டுருக்கும் இனகலவரங்களையும், குறிப்பாக 1958 அன்று நடந்த மொத்த கோரங்களையும் வீட்டில் பெற்றோர்கள் பேசிக்கொள்ளும் போதும் உருவான தாக்கம் அளவிடற்கரியது. அப்போது சென்னையில் இருநது வரும் ஆனந்தவிகடன், கல்கி, குமுதம் இதழ்களில் வரும் போர் பற்றிய செய்திகளை ஆர்வமாய்ப் படித்துத் தெரிந்து கொள்வதுண்டு. மேலும் மகாபாரதம் சொல்லும் “நன்மையைத் தீமை அழித்து ஒழிக்கும். இறுதியில் வெல்லும்” என்ற வார்த்தைகள் என்னுடைய வலிமையை அதிகப்படுத்திக்கொண்டே இருந்தது. நான் பள்ளியில் படிக்கும் போது ஹோம் கார்டு பயிற்சிக்காக வி நவரத்னம் என்ற ஆசிரியரிடம் பயின்றேன். அவர் தமிழ் சமஷ்டி கட்சியில் இருந்து வெளியேறியவர். பல இளைஞர்களும் அவரைத் தொடர்ந்து வெளியேறினார்கள். அவர் பல நாடுகளில் நடக்கும் போராட்டங்களையும் விரிவாக எடுத்துரைப்பதோடு பாராளுமன்றத்தால் எதிர்காலத்தில் இலங்கையில் எதுவும் தமிழர்களுக்கு உருவாக்காது என்றவர். அப்போது என்னுடைய வயது 15. அப்போது தான் என்னுள் உருவான தாக்கம் ” நமக்கென்று ஒரு தனி நாடு இங்கு வேண்டும். நாமும் திருப்பித் தாக்க வேண்டும்” ஆதர்ஷ்ண நாயகர்கள்? ” வரலாற்றில் நெப்போலியன் எழுச்சி, மகாபாரதத்தில் பீமன், கர்ணன் இவர்களின் குணாதிசியங்களையும், விவேகானந்தர் சொற்பொழிவு மூலம் கோர்த்து சேர்த்த போது மொத்தமாக இளைஞர்களின் மொத்த சக்தியும் எனக்குப் புதிய புரிந்துணர்வை உருவாக்கியது.” பக்தி உருவாக்கிய தாக்கம்? ” ஊரில் ஆன்மிகச் சொற்பொழிவுகள் (கிருபானந்த வாரியார்) எங்கு நடந்தாலும் விடாமல் போய்க் கேட்டுக் கொண்டே இருப்பேன். பார்த்த சாக்ரடீஸ் நாடகத்தில் உள்ள கதாபாத்திரம் வாயிலாக ஒப்பிட்டுக்கொள்வதுண்டு. நாம் ஏதாவது செய்தாக வேண்டும். ஆனால் செய்வது அத்தனையும் வலிமையாக அவர்கள் உருவாக்கிய வலியை உருவாக்கிய வடுக்கள் மறையும் அளவிற்கு மக்களுக்கு வழிகாட்டும் அளவிற்கு இருக்க வேண்டும் என்று உள்ளுற உணர்வாக மாற்றம் பெற்றுக்கொண்டே வளர்ந்தேன்” ஆயுதம் மட்டுமே சிறந்தது? ” ஆயுதங்கள் இல்லாமல் அமைதி வழியிலேயே அவர்களிடம் வாழும் எம் மக்களை அவர்களால் உருவாக்கப்படும் ஒவ்வொரு பிரச்சனைகளும் வாழ்வாதாரத்தைச் சீர் குலைத்துக்கொண்டு இருந்ததே தவிர வழி தெரிவதாகத் தெரியவில்லை. ஆயுதம் மூலம் மட்டுமே இவர்களின் அடக்குமுறையை ஒரு முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்பதில் உறுதியாய் இருந்தேன்” குடும்பத்தை ஒதுக்கி வாழ்ந்த வாழ்க்கை? ” 19 வயதிலேயே தலைமறைவு வாழ்க்கையைத் தொடங்கி விட்டேன். குடும்பத்துடன் இருந்தால் அது மேலும் மேலும் பல தேவையில்லாத சிக்கல்களை உருவாக்கும் என்று உணர்ந்து 1973 முதல் 1983 வரை தலைமறைவு வாழ்க்கையை அறிமுகம் செய்தது. இராணுவத்தின் வெறியான தேடல்கள் அத்தனையும் என்னையும் என் வெற்றிக்கான பாதையையும் கற்றுத்தந்தது” அரசியல் கொள்கை? ” 33 ஆண்டுகள் இலங்கை பாராளுமன்றத்தில் ஒலித்த எந்த வார்த்தைகளுக்கும் மதிப்பு இருந்ததாக அவர்களின் போராட்டம் எதையும் உணர்த்தவில்லை. மக்கள் அரசியல் தேவை என்றாலும் அது வெறும் வார்த்தைகளால் கொண்டு சேர்க்கப்படும் போது இவர்களுக்கு எங்களின் மக்களின் வலியை புரிந்து கொள்ளும் திராணி இல்லாத காரணங்களினால் என்னுடைய ஆயுதப்போராட்டங்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் வலுப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டி இருந்தது. மாற்றம் காணாத வாழ்க்கை அத்தனையும் இரு பக்கமும் வலியை உருவாக்கிக் கொண்டே இருந்தாலும் அவ்வப்போது கிடைத்த வழிகள் ஒவ்வொன்றும் நான் தேர்ந்தெடுத்த பாதை எனக்கொன்றும் தவறு போல் எனக்கு உணர்த்தவில்லை” தேர்ந்தெடுத்துக்கொண்ட பாதை? ” இந்திய அரசியல் சுதந்திர வரலாற்றில் மகாத்மாவுக்கு எத்தனை முக்கியத்துவம் இருக்கிறதோ அந்த அளவிற்கு நேதாஜிக்கும் முக்கிய இடம் உண்டு. இல்லாவிட்டால் இன்று சீனார்கள் டெல்லிவரைக்கும் வந்து ஆளுமை புரிந்து இருப்பார்கள். எங்கள் ஆயுதப்போராட்டத்தைக் குறை சொல்பவர்கள் அத்தனை பேரும், இந்தியா இன்று வளர்த்துக்கொண்ட இராணுவ மேலாதிக்கத்தினால் மட்டுமே இன்றும் ஆசியா நாட்டில் ஒரு வல்லரசாக இருக்கிறது. அமைதி முக்கியம் சொலும் எந்தச் சர்வதேச நாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் தனது ஆயுதங்களையும் வளர்த்துக்கொண்டு தான் வளர்ந்துள்ளது” இரக்கம் என்பது? வெளிப்படையாகச் சொல்லப்போனால் உலகத்தில் உள்ள மொத்த இராணுவ வாழ்க்கை என்பதே இயல்பாகவே வெளியே அத்தனை சீக்கிரம் தெரிந்து விடாத இரக்கமில்லாத தன்மையை உடையது. எங்களுடைய எதிரிகளால் வெளியே பரப்புரையாகச் சொல்லபடும் எந்த விசயங்களையும் நான் பொருட்படுத்தியதே இல்லை. காரணம் உண்மையான விசயங்கள் உள்ளே வாழ்ந்த மக்களுக்குத் தெரியும். பரபரப்பு ஊடகங்களுக்கு அது தேவையில்லாத விசயங்கள். கண்ணீரும், கதறலும் அவர்களுக்கு வியாபாரம். எங்களுக்கு அதைத் தீர்க்க வேண்டிய கடமை” சகோதர யுத்தங்கள்? “ஆயுதங்கள் கொண்டவர்கள் அதிகாரத்திற்கு ஆசைப் படுகிறார்கள். தவறு இல்லை. ஆனால் அவர்களிடம் அடிப்படையில் இல்லாத ஒழுக்கம் ஒரு சர்வாதிகாரியை அறிமுகப்படுத்துமே தவிர மக்களுக்குத் தேவையான எந்த அதிகாரத்தையும் தந்து விடாது. இரக்கம் இல்லாதவர்களுக்கு மட்டும் தான் எங்களுடைய ஆயுதங்கள் இரக்கம் இல்லாமல் செயல்படும். அப்படிச் செயல்படவில்லை என்றால் எங்கள் வலியை, வலிமையை,எதிர்பார்க்கும் சுதந்திர வாழ்க்கை வந்து அடையாது. கொலை,கொள்ளை,மேலாதிக்கம் போன்ற தொடக்கக் காலச் சகோதரர்களால் எங்களுடைய வழிகாட்டலை தவறு என்று உணர்ந்தவர்களை வேறு எந்த வழியில் அவர்களுக்குப் பாடம் கற்பிக்க முடியும்? என்னைச் சர்வாதிகாரி என்பவர்கள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையையும், என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையும் ஓப்பிட்டுக்கொள்வதில்லை. என்னுடைய ஆசை மக்களின் சுதந்திரம். ஆனால் அவர்களின் ஆசை மொத்தமும் அவர்களின் இருப்பு. எந்தச் சூழ்நிலையிலும் சமாதான கதவை நான் மூடி வைத்ததே இல்லை. எல்லா நல்ல வாய்ப்புகளையும் அடைபடும் சமயத்தில் மட்டுமே என்னுடைய கொள்கைகள் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது” மாவீரர்கள்? சயனைடு சுவைத்து உண்டவர்கள் அவர்கள் மறைமுகமாக எங்கள் போராட்டத்திற்கு வலிமை சேர்த்துவிட்டு செல்கிறார்கள். எங்கள் இயக்கத்தில் நூற்றில் பத்துப் பேர்கள் கூட எதிரிகளின் கையில் சிக்கி விடமாட்டார்கள். சிக்கினால் என்ன நடக்கும் என்பதையும் அவர்கள் நன்றாக உணர்ந்தவர்கள். போராட்டத்தில் உள்ள தலைமைப் பொறுப்புகள் மட்டும் ஆராதனைக்குரியவர்கள் அல்ல. வாழ்வில் பங்கெடுத்த ஒவ்வொரு வீரரும். அதனால் அவர்களுக்கு உண்டான பதில் மரியாதை மாவீரர் தினம். தாங்களும் மதிக்க்ப்படுகிறோம் என்பதை உணர்த்தும் நிகழ்ச்சி இது” ஜனநாயகம்? என்னுடைய கொள்கைகள் சரியில்லாதவைகள் என்றால் ஜனநாயகப் பாதையில் சென்ற தகுதியானவர்கள் வென்றெடுத்த விசயங்களையும் உணர்ந்து கொள்ள வேண்டும். நாங்கள் தமிழின காப்பாளர்கள் என்று வந்தவர்கள் தாங்கள் விலைபோன நிகழ்வுகளையும் உற்று நோக்க வேண்டும். சிங்கள பேரினவாத தந்திர அரசியல் என்பதையும் அவர்களுக்கு எது சரியான மொழி என்பதையும் புரிய வைக்கும். நான் அரசியல்வாதியல்ல. பேச்சுக்கு முன் செயலில் காட்டி நமக்கான உரிமையை வென்று அடைந்த பிறகு தான் பேச்சுக்கு தயாராக வேண்டும். காரணம் சிங்களர்களின் ஆதிகம் என்பது 30 வருடங்கள் கடந்தும் கொள்கைகளால், இரக்கமற்ற குணத்தால், தெளிவான தந்திர முன்னேற்றம் கொண்ட போலியான ஜனநாயகத்தை நாம் வென்று எடுத்து நாம் முன்னேறியவர்களாக இருந்தால் மட்டுமே அவர்களும் நாம் யார் என்று புரியவைக்கும். என்னுடைய காலத்தில் இந்தச் சுதந்திரப் போராட்டம் முடிவடையும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. நான் ஒருவன் முயற்சியில் இருக்கின்றேன். நான் வெல்லாவிட்டால் எனக்குப் பிறகு வேறு ஒருவர் வந்து இதைத் தொடர்வார்கள். தீர்வு என்பது சரியான முறையில் தீர்க்கப்படாத வரையில் இந்தப் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்? ஆயுதமா அன்பா என்பது சிங்களர்களின் கையில் தான் இருக்கிறது? 3. வேலுப்பிள்ளை பிரபாகரன்--தமிழீழம் என்றொரு பிரதேசம் “தமிழர்களுக்கு இனி தனி ஈழம் தான் தீர்வாக இருக்கும்” என்று தீர்மானமாய்ச் சொன்னது பிரபாகரன் அல்ல. இதன் வித்து இலங்கை என்ற நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பே உருவானது. தமிழர்களில் முதல் தலைமுறை தலைவரான அருணாச்சலம் உருவாக்கியது ஆகும். அவர் தனி ஈழம் என்று தான் தொடக்கத்தில் சொன்னார். அதுவே தமிழீழம் என்று பின்னால் மாறியது. அருணாச்சலம் படித்தவர், பண்பாளர், சட்ட மேதை ஆனால் வெகுஜன ஆதரவு பூஜ்யம். அவர் வாழ்ந்த வாழ்க்கை முழுக்கக் கொழும்புவிலும் மேல்தட்டு மக்களுடன் இருந்த காரணத்தால் கடைசி வரைக்கும் மக்கள் ஆதரவென்பது அவருக்கு எட்டாக்கனியாக இருந்தது. இறுதியில் அவர் கொள்கைகளும் கொலையாகி வெகுஜன ஆதரவு இல்லாமல் மறைந்தும் போனது. அருணாச்சலம் முதன் முதலாக உருவாக்கிய இலங்கை தேசிய காங்கிரஸ் சிங்களர்களின் கைக்குப் போன போதே அச்சத்துடன் எதிர்காலத்தில் இனி சிங்களர்களுடன் தமிழினம் சேர்ந்து வாழ முடியாது என்றார். அப்போது இலங்கை சுதந்திரம் பெறுவதற்குக் கால் நூற்றாண்டு காலம் இருந்தது. அவராலும் முடியாமல் அவர் சகோதரர் இராமநாதன் முயற்சியும் தோல்வியாகி கைகள் மாறி கடைசியில் 1972 ஆம் ஆண்டில் செல்வநாயகம் மனம் நொந்து போய்ச் சொல்லும் அளவிற்கு வந்து நின்றது. இதையே பிரபாகரன் உரத்துச் சொன்ன போது மற்றவர்களால் வினோதமாகப் பார்க்கப்பட்டது. சர்வதேச அரசியல் புரியாமல் இதென்ன அடம் என்பதாக இன்று வரைக்கும் பேசப்படுகிறது. அருணாச்சலம் புத்தியால் ஜெயிக்க முடியாமல் செல்வநாயகம் சக்தியாலும் வெல்ல முடியாமல் கடைசியில் பிரபாகரன் பலத்தாலும் வெல்ல முடியாமல் கலவரங்களும், யுத்தங்களும் தொடர்ச்சியாக வந்து மொத்த தமிழர்களின் உயிரும் உடைமையும் இழந்து இன்று நாங்களும் வாழ்ந்தால் போதும் என்கிற அளவிற்கு வந்து நிற்கின்றது. இதுவே இன்று இலங்கையில் உயிர்பிழைத்தவர்கள் நான் தமிழர் என்று சொல்ல பயந்து வாழும் நிலைமைக்குக் கொண்டு வந்துள்ளது. தொடக்கக் காலத்தில் அருணாச்சலமும், இவர் சகோதரர் இராமநாதனும் எழுதியுள்ள புத்தகங்கள் தமிழர்களுக்கு மட்டுமல்ல இன்று வரைக்கும் சிங்களர்களுக்கே பாடபுத்தகங்கள். சிங்களர்களுக்கு அரசியலை கற்றுக்கொடுத்தவர்கள் மறைந்து கிடைத்து இருக்க வேண்டிய மரியாதையின்றி இறந்தும் போனார்கள். இவர்களிடம் கற்றுக் கொண்ட மாணவர்கள் ஆட்சியாளர்களாகவும் மாறி சிங்கள இனவாதத்தின் ராஜாவாகவும் மாறிப் போனது சரித்திர ஆச்சரியங்கள். தங்களுக்குச் சிறப்பாகக் கற்றுக்கொடுத்தவர்களின் பெயர்களை இன்று அவலமாய் வந்து நின்ற தமிழர்களுக்கு உருவாக்கப்பட்ட திறந்த வெளி முகாம்க்குச் சூட்டப்படும் நன்றிக்கடனையையும் தீர்த்துள்ளார்கள். வாழ்ந்து சென்ற தமிழ் தலைவர்களின் அதிர்ஷ்டம் அவ்வளவு தான். அருணாச்சலம் முகாம், இராமநாதன் முகாம், ஆனந்த குமாரசாமி முகாம் என்று உருவாக்கப்பட்டது. மொத்த இலங்கை மக்களும் நினைவில் கொள்ளத்தக்க வகையில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கைப் பெயர்கள் இன்று நிர்க்கதியாய் நிற்பவர்கள் வாழ்க்கை உதவியாய் உள்ளது என்பது பெரும் சரித்திர சோகம். பிரபாகரன் இவர்களைப் போலப் படித்தவரோ, பட்டம் வாங்கியவரோ அல்லது புத்தகங்கள் எழுதியவரோ அல்ல. அத்தி பூத்தாற் போலக் கொடுத்த ஊடக பேட்டிகளும் வருடந்தோறும் உரையாற்றிய மாவீரர் தின பேச்சுகளுமே அவரைப் பற்றி அவரின் கொள்கைகளையும் நம்மால் ஓரளவிற்குப் புரிந்து கொள்ள முடியும். போர் வெறியர்,மனநோயாளி, புதிய தலைமுறைக்குப் பயங்கரவாதத்தைக் கற்றுக்கொடுத்தவர், உலகத்திற்கு மனித வெடிகுண்டு என்பதை அறிமுகம் செய்தவர் என்று சொல்லப்படுவரின் நியாய வாதங்கள் எதுவும் இன்று எவர் காதிலும் போய் விழாது. பிரபாகரன் செய்த சாதனைகள் ஒவ்வொன்றும் இவருக்கு முந்தைய தலைமுறை தலைவர்கள் எவரும் செய்யாதது மட்டுமல்ல. நினைத்தே பார்க்க முடியாதது. அவர்கள் ஜனநாயகம் காட்டிய வழியில் சென்று தங்களை நம்பியிருந்த வழிகாட்டாமல் மறைந்தவர்கள். இவரோ தான் கொண்ட கொள்கை சரி என்று நம்பி அதையே செய்தும் காட்டியவர். தன்னுடைய தன்னம்பிக்கை மட்டுமே வழி காட்டும் என்று கடைசிவரையிலும் கொண்ட கொள்கையில் பிடிவாதமாய் உறுதியாய் நின்றவர் அரசியல் தெரியாதவர் என்று சொல்லப்படுபவர்கள் பிரபாகரனின் மாவீரர் தின உரைகளைப் படித்துப் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும். தன் வாழ்நாளில் நம்பிக்கைகளும், அவமானங்களுக்கும் இடையே போராடிப் பார்த்த அத்தனை நிகழ்வுகளையும் நமக்குப் புரியவைக்கும். பிரபாகரன் உருவாக்கிய தமிழீழத்தின் சமூகக் கட்டமைப்பு வெளி உலகத்தால் அதிகம் பார்க்கப்படாத பார்வைகள்., நான்கு புறமும் நீர் என்பதான தீவில் எட்டு புறமும் எதிரிகளாக இருந்தவர்களுடன் வாழ்ந்தவர் உருவாக்கிய ஒவ்வொன்றும் கடைசியில் அவரைப் போலவே இன்று கேள்விக்குறியாய் சூன்யத்தில் நிற்கிறது? 1985 ஆம் ஆண்டுத் தமிழர் புனர்வாழ்வு கழகம் தொடங்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்டு வறுமை நிலைமைக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கும், சொந்த இடங்களை விட்டு விட்டு வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கும், அகதி முகாமில் ஆதரவற்று இருந்தவர்களுக்கும், தற்காலிக குடிசைகளிலும் இருந்தவர்களை இனம் கண்டு அவர்களை அரவணைத்து வாழ்க்கை கொடுப்பது இதன் கடமையாக இருந்தது. இதன் உருவாக்கத்திறகு முன்னதாகப் புலிகளின் ஊடகப்பிரிவு செயல்படத் தொடங்கியது. முதலில் வானொலியில் ஆரம்பித்து இறுதியில் தொலைக்காட்சி சேவை வரைக்கும் கொண்டு வந்தார்கள். மிகுதியான பால் உணர்வை தூண்டும் காட்சிகளைத் தணிக்கை செய்யப்பட்டு அத்துடன் செய்தி அறிக்கைகள், நடப்பு நிகழ்வுகளைத் துல்லியமாகக் காட்டும் அளவிற்குக் கடைசி வரைக்கும் தொடர்ந்து தமிழீழத்தில் ஒலிபரப்பு சேவை நடத்தப்பட்டது. இந்திய அமைதிப்படை உள்ளே நுழைந்த போது முதலில் தாக்கப்பட்டது இந்த வானொலி சேவையே ஆகும். யுத்தத்தினால் பெற்றோரை, பாதுகாவலர்களை இழந்த பெண் பிள்ளைகளின் பராமரிப்புக்காகச் செஞ்சோலை சிறுவர் இல்லம். 1991 இல் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போரில் பெற்றோரை இழந்த ஆண் பிள்ளைகளைப் பாதுகாக்க 1993 ஆம் ஆண்டு. காந்த ரூபன் அறிவுச்சோலை தொடங்கப்பட்டது. வெற்றிமனை என்ற அமைப்பின் மூலம் நடந்த போர்கள் மூலம் கண் முன்னால் உறவுகளைப் பறி கொடுத்து அடைந்த மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மனநிலை பாதிக்கப்பட்ட வர்களுக்கும் உயரிய சிகிச்சை அளித்து அவர்களைப் பராமரித்து மறுவாழ்வு அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது. மூதாளர் பேணகம் என்ற அமைப்பின் மூலம் போரினால் தமது பிள்கைளை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட முதியோரையும், சொந்த பந்தம் இல்லாமல் இருப்பவர்களையும், உறவினர்கள் இருந்தும் கைவிடப்பட்ட முதியோர்களையும் பாதுகாக்க உருவாக்கப்பட்டது 1992 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் கலை பண்பாட்டுக் கழகம் என்ற அமைப்பின் மூலம் தமிழர்களின் தமிழ் மொழியையும் அழிந்து கொண்டுருக்கும் கலை மற்றும் பண்பாடுகளையும் மீட்டெடுப்பதற்காக உருவாக்கப்பட்டது. தியாகி திலீபன் மருத்துவச் சேவையின் மூலம் அரசாங்கம் உருவாக்கிய தடைகளை மீறி ஒவ்வொரு காலக் கட்டத்திலும் உருவாக்கிய மருத்துவமனைகள் மூலம் அத்யாவஸ்யமான மருந்துப் பொருட்களை வரவழைத்தும், பயிற்சியளிக்கப்பட்ட போராளிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. தமிழீழ படைத்துறைப் பள்ளியின் மூலம் வளர்ந்து கொண்டுருக்கும் இளையர் கூட்டம் போரினால் அவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டது. தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகமும், இதனைத் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டுத் தமிழீழ சட்டக் கல்லூரி உருவாக்கப்பட்டது. இதே ஆண்டில் பொதுக்கல்வி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களைப் பாராட்டி வருடந்தோறும் பரிசு வழங்க தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை தொடங்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டுத் தமிழீழத்தின் பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக வேளாண்மையும் கைத்தொழிலையும் உருவாக்கி சிறப்பானவர்களுக்குப் பரிசு கொடுத்து சிறப்பிக்க உருவாக்கப்பட்டது. . மக்களின் வங்கி சேவைக்காகத் தமிழீழ வைப்பகம் சட்டத் தேவைகளுக்காகத் தமிழீழ நீதி நிர்வாகத்துறை, நகர் நிர்வாகத்திற்காகத் தமிழீழ காவல் துறை இது போக மாணவர்களுக்கென்று விளையாட்டுத் துறையும் தொடங்கப்பட்டது. மொத்தத்தில் தமிழீழ பகுதிகளில் வாழ்ந்த மக்களின் பொருளாதாரச் சமூகக் கட்டமைப்புத் துறையில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டது. பிரபாகரன் உரையாற்றிய மாவீரர் உரைகள் என்பது பல விதங்களில் பயன் உள்ளதாக இருந்தது. போரில் இறந்த வீரர்களுக்குக் கௌரவம் செலுத்தும் விதமாக அதே சமயத்தில் தமிழ் மக்களுக்குத் தமிழீழ விடுதலைப்புலிகளின் நோக்கத்தையும், சர்வதேச சமூகத்திற்குப் புலிகள் இயக்கம் விடுக்கும் கோரிக்கை என்பதாகப் பல தளங்களில் விவாதப் பொருளாக அணைவராலும் உற்றுக் கவனிக்கக் கூடிய வகையில் இருந்தது. பிரபாகரனின் நோக்கத்தையும் விருப்பத்தையும் தனிப்பட்ட கொள்கைகளையும் புரிந்து கொள்வதாகவும் உள்ளது. சங்கர் இறந்த தினமாக நவம்பர் 27 என்பதைக் கணக்கில் கொண்டு மாவீரர் தினம் என்று உருவாக்கப்பட்டு முதன் முதலாக இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்து கடைசிகட்ட உக்கிர தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது இனம் தெரியாத அடர்ந்த காட்டில் இருந்து கொண்டு உரையாற்றிய பிரபாகரனின் உரை என்பது 2008 வரைக்கும் 19 வருடங்கள் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட அதே தினத்தில் ஒலிபரப்பப்பட்டது. உலக ஊடகங்களும், உலகத்தமிழர்களும் ஏன் சிங்கள ஆட்சியாளர்களுமே இதை வைத்து தான் புலிகளின் அடுத்தக் கட்ட நகர்வை புரிந்து கொள்ளும் அளவிற்கு இருந்தது. மொத்த 19 வருட உரைகளின் மூலம் நம்பிக்கைகளுக்கும் விருப்பங்களுக்கும் இடையே போராட்டங்களும், ஒவ்வொரு காலக் கட்டத்திலும் தான் மாறத் தயாராய் இருந்த போதும் மதிக்காத சிங்கள ஆட்சியாளர்களின் மேல் இருந்த அவநம்பிக்கையின் ஊசலாட்டத்தையும் நமக்குப் பல விதமாகப் புரிய வைக்கின்றது. பிரபாகரன் முதல் மாவீரர் உரை தொடங்கிய போது புலிகளின் அதிகாரப்பூர்வமான இறந்தவர்களின் எண்ணிக்கை 1207 பேர்கள்.. இதுவே 19 வருடங்களுக்குப் பிறகு 17,903 பேர்கள் இறந்ததாக மாவீரர் தின உரையில் குறிப்பிட்டார். “ஓர் இனத்தைப் பொறுத்தவரையிலும் வீரர்களை, பெண்களை, அறிவாளிகளையும் மதிக்காத இனம் காட்டுமிராண்டியாக அழிந்து விடும். எமது இயக்கத்தில் இப்போது வீரர்களுக்குப் பஞ்சமாக இருக்கிறது. எமது போராளிகளை நினைவு கூறும் தினத்தை ஒரே நாளில் வைப்பதால் வீரச்சாவு அடைந்த மேல்மட்ட தலைவர்கள் முதல் அடிப்படையான வீரர்களை வரை ஒரே மாதிரி நினைவு கொள்ளப்படுகிறார்கள். காலப்போக்கில் குறிப்பிட்ட சில சில ஆட்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அந்த மரியாதை சிலருக்கு மட்டும் போவதை தடுப்பதற்காக இதை வருடந்தோறும் கொண்டாடப் போகிறோம்.” “நான் உயிருக்கு உயிராய் நேசித்த தோழர்கள், என்னுடன் தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள், நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போராளிகள் களத்தில் விழ்ந்த போதெல்லாம் எனது இதய்ம் வெடிக்கும். ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புகள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் மேலும் உரமூட்டி இருக்கின்றன” “நாம் இனத்துவேசிகள் அல்லர். போர்வெறிக் கொண்ட வன்முறையாளர்களும் அல்லர். நாம் சிங்கள மக்களை எதிரிகளாவோ விரோதிகளாகவே கருதவில்லை. நாம் சிங்கள தேசத்தை அங்கீகரிக்கின்றோம். சிங்களப் பண்பாட்டைக் கௌரவிக்கின்றோம். சிங்கள மக்களின் தேசிய வாழ்வில் அவர்களது சுதந்திரத்தில் நாம் எவ்விதமும் தலையிட விரும்பவில்லை”. “நாம் எமது வரலாற்றுத் தாயகத்தில் ஒரு தேசிய மக்களினம் என்ற அந்தஸ்துடன் நிம்தியாகச் சுதந்திரமாகக் கௌரவமாக வாழ விரும்புகிறோம். எம்மை நிம்மதியாக வாழவிடுங்கள் என்பது தான் எமது மக்களின் எளிமையான அரசியல் அபிலாஷைகள். இந்த நியாயமான நீதியான நாகரிகமான எமது மக்களின் வேண்டுகொளை சிங்கள அரசு எப்போது அங்கீகரிகரிக்கின்றதோ அப்போதுதான் ஒரு நிரந்தரச் சமாதானமும் தீர்வும் ஏற்பட வாய்ப்பு உண்டு.” “ஆயுத பலத்தால் தமிழீனத்தை அடக்கி ஆள வேண்டும் என்றும், சிங்கள பௌத்த பேரின வாதத்தின் ஆதிக்க மனோநிலையில் சிறிதளவேனும் மாற்றம் எதுவும் நிகழ்ந்து விடவில்லை. இனத்துவேச அரசியல் சேற்றில் சிங்கள தேசம் மூழ்கிக் கிடக்கும் வரை தமிழரின் தேசிய அபிலாசைகள் பூர்த்தியாகது. நீதியான நியாயமான அரசியல் தீர்வை நாம் சிங்கள ஆளும் வார்க்கத்திடம் இருந்தது எதிர்பார்கக முடியாது.” “மனித நீதி எனும் அச்சில் இவ்வுலகம் சுழவில்லை என்பதை நாம் அறிவோம். இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு நாடும் தங்கள் பக்கமுள்ள நியாயங்களை முன் வைக்கிறது. இவ்வுலகில் ஓழுங்கு அமைப்பை பொருளாதார மற்றும் வணிக நலன்களே தீர்மானிக்கின்றன. இன்றோ சார் நீதியிலோ மக்களின் உரிமை சார்ந்தோ நிற்கவில்லை. நாடுகளுக்கிடையேயான சர்வதேச உறவுகளும் அரசியல் நெறிகளும் இத்தகைய நல்களைச் சார்ந்தே தீர்மானிக்கபடுகின்றன. எனவே எங்களது அறம் சார்ந்த நியாயங்கள் உடனடியாகச் சர்வதேச சமகத்தான் அங்கிகரிக்கபடும் என் எதிர் பார்க்க முடியாது. ஆனால் அதே நேரம் அந்த அங்கீகாரத்திற்காகப் போராடியே ஆக வேண்டும். உலகில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.” “சமாதானத்திற்கான போர் என்றும் தமிழரை விடுதலை செய்யும் படையெடுப்பு என்றும் பரப்புரை செய்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆக்கிரமிப்புப் போர் தமிழரின் அமைதியக் குலைத்து தமிழரை அகதிகளாக்கி தமிழரை அடிமைகளாக்கி தமிழரின் சமூகப் பொருளாதார வாழ்வைச் சீரழித்துத் தமிழருக்கும் என்றுமில்லாத பெரும் அவலத்தைக் கொடுத்து இருக்கிறது. சமாதானத் தத்துவம் பேசி உலகத்தை ஏமாற்றிய போதும் இது தமிழருக்கு எதிரான போர் என்பதை அரசு நடையில் காட்டியுள்ளது. இராணுவ ஆட்சி நடைபெறும் தமிழ் பகுதிகளில் மிக மோசமான ஒரு இன அழிப்புக் கொள்கை மறைமுகமாகச் செயற்படுகிறது என்பதையே இது காட்டுகிறது.” “நாம் சமாதானத்திற்கான விரோதிகள் அல்லர். அன்றிச் சமாதான வழியில் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு எதிரானவர்களும் அல்லர். தாம் வேண்டுவது உண்மையான சமாதானத்தையே. எமது மக்கள் எமது மண்ணில் நிம்மதியாகச் சுதந்திரமாக அந்நியத் தலையீட இன்றி அமைதியாக வாழ்ந்து தமிழ் அரசியல் வாழ்வைத் தாமே தீர்மானிக்ககூடிய உண்மையான கொளரவமான நிரந்தரமான சமாதானத்தையே நாம் விரும்புகின்றோம். இந்தச் சமாதான வாழ்க்வை தமிழருக்கு வழங்க சிங்கள பெயத்த பேரினவாத சக்திகள் இனங்குமா என்பது சந்தேகத்திற்கு உரியதே.” “தமிழரின் தாயகம், தமிழரின் தேசியம், தமிழரின் தன்னாட்சி உரிமை ஆகியவற்றை அங்கீகரித்து அவற்றின் அடிப்படையில் ஒரு அரசியற் தீர்வுத் திட்டம் வகுப்பட வேண்டுமென்ற நாம் திம்புக் காலத்தில் இருந்து வலியுறுத்தி வருகிறோம்.” “சிங்களம் ஒரு பெளத்த நாடு. அன்பையும் அறத்தையும் ஆன்மீக ஞானத்தையும் போதித்த காருணிய மகானை வழிபடும் தேசம். தர்மத்தின் தத்துவத்தில் தழைத்த பௌத்த சமகத்தில் இனக்குரோதமும் போர் வெறியும் விஸ்வரூபம் பெற்று நிற்பது எமக்கு வியப்பாக இருக்கிறது. தமிழர் தேசம் போதையும் வன்முறையையும் விரும்பவில்லை. அமைதி வழியில் அகிம்சை வழியில் தர்மத்தை வேண்டி நின்ற எமது மக்கள் மீது வன்முறை திணித்தவர்கள் யார்? நாம் எமது உயிரையும் உடைமையும் பாதுகாக்க ஆயுதமேந்தி போராட வேண்டிய நிர்பபந்த சூழ்நிலையை உருவாக்கிய விட்டவர்கள் யார்? சிங்கள பௌத்த தீவிரவாதமே தமிழர்களை ஆயுதபாணிகளாக்கி தேச சுதந்திர போராட்டத்தில் குதிக்க வைத்தது.” “ஆட்பலம், ஆயுதபலம், இராணுவ பலம், மக்கள் பலம் என்கிற ரீதியில் சகல பலத்தோடு நாம் வலுப்பெற்று நின்ற போதும் எமது தாயகத்தை மீட்டெடுக்கும் போதிய சக்தி இருந்த போதும் நாம் சமாதான பாதையைக் கைவிடவில்லை. உயிர் அழிவையும் இரத்தக் களரியையும் தவிர்த்து சமாதான வழியில் நாகரிகமான முறையில் தமிழரின் சிக்கலை தீர்ககவே நாம் விரும்புகிறோம்.” “தமிழர் தாயகத்தில் அமைதி நிலை தோன்றினாலும் இயல்புநிலை தோன்றவில்லை. உயர் பாதுகாப்பு வளையங்கள் என்ற போர்வையில் எமது மக்களின் வாழ்விடங்களைச் சமூகப் பொருளாதர பண்பாட்டு மையங்களைச் சிங்கள ஆயுதப் படைகள் ஆக்கிரமித்து நிற்கின்றன. சிறிய அளவிலான புவியற் பரப்பில் குடிசன நெரிசலும் கொண்ட யாழ்பாணக் குடாநாட்டை 40 000 படைகள் ஆக்ரமித்து நிற்கின்றனர். எமது மக்கள் தமது இயல்பபு வாழ்க்கை நடத்த முடியாதவாறு மூச்சுத் திணறும் ஆக்கிரமிப்பு என்றுமே பதட்ட நிலையைத்தான உருவாக்குகின்றது.”. “பேச்சு வார்த்தைகளின் தொடக்கத்திலேயே எமது மக்களின் அடிப்படை பிரச்சனைகளை ஆரம்பித்தலேயே தீர்த்து விட வேண்டும் என்பதே எங்கள் தலையாயக் கோரிக்ககை.” “முடிவில்லாத ஒரு துன்பியல் நாடகமாகத் தமிழரின் இனப் பிரச்சனை தொடர்கிறது. எமது பிரச்சினைக்குத் தீர்வு காண ஆளும் கட்சி முயற்சிப்பதும் எதிர்ககட்சி எதிர்பபதும் பின்பு எதிர்க்கட்சி ஆளுங்கட்சியாக மாறி மீண்டு அதே முயற்சியும் அதே எதிர்ப்புமாக இந்தச் சிங்கள அரசியல் வரலாற்று நாடகம் தொடர்ச்சியாக ஒரே பாணியில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக மேடையேறி வருகிறது.” “இடைக்காலத் தீர்வுமின்றி நிரந்தரத் தீர்வுமின்றி நிலையான அமைதியும் இல்லாமல் நிம்மதியான வாழ்வும் இன்றி நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்க முடியாது. சிங்கள தேசமானது தமிழனத்தை அரவணைத்து இணைத்து வாழவும் விரும்பவில்லை. அதே சமயம் அரவணைத்து இணைத்து வாழவும் விருப்பமில்லை. அதே சமயம் பிரிந்து சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை. இரண்டுங் கெட்டான் நிலையில் வீடின்றி விடுதலையின்றி எதிர்காலச் சுபிட்சமின்றிச் சூனியமாக அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்து வாழ முடியாது. பொறுமைக்கும் எதிர்பார்ப்புக்கும் எல்லை கோடுகளுள்ளன. அந்த எல்லைக் கோடுகளை நாம் அடைந்து விட்டோம்.” “பண்டைய இதிகாசங்கள் புனைந்து விட்ட புரளிகளால் சிங்கள இனம் வழி தவறி சென்று கொண்டுருக்கிறது. தொடர்ந்தும் பேரினவாதச் சகதிக்குள் வீழ்ந்து கிடக்ககிறது. இதனால் சிங்கள பௌத்த பேரினவாதம் இன்றோரு தேசியச் சித்தாந்தமாகச் சிங்கள தேசத்தில் மேலாதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தக் கருத்தாக்கம் பாடசாலைகள் பல்கலைக்கழங்களில் இருந்தும் பத்திரிக்கை துறை வரை ஊடுருவி நிற்கிறது. மாணவர்களோ, புத்திஜீவிகளோ, எழுத்தாளர்களோ அரசியல்வாதிகளோ சுயமாகச் சிந்திக்க முடியாதபடி சிங்கள மூலத்தை இந்தக் கருத்தாக்கம் சிறைப்பிடித்து வைத்து இருக்கிறது. பௌத்த பேரினவாத கருத்துக்கள் சிங்கள மனிதனின் மன அமைப்பின் ஆழத்தில் அழியாத கோடுகளாகப் பொறித்து விடப்பட்டு இருக்கின்றன. இதனால் சிங்கள தேசம் போர் வெறி பிடித்துப் போர் முரசு கொட்டுகிறது.” “பௌத்தம் ஒர் ஆழமான ஆன்மிகத் தரிசனம். அன்பையும் அறத்தையும் ஆசைகள் அற்ற பற்றற்ற வாழ்வையும் தர்மத்தையும் வலியுறுத்தி நிற்கும் தார்மிகத் தத்துவம். இந்தத் தார்மீக நெறியை 2000 ஆண்டுகளுக்கு மேல் கடைபிடிப்பதாகக் கூறிக்கொள்ளும் சிங்களம் 2000 ஆண்டுகளுக்கு மேலாக இனவாத விசத்தினுள் மூழ்கிக் கிடக்கிறது. சிங்கள இனவாத விசம் இன்று மிருகத்தனமாக வன்முறையாகக் கோரத்தாண்டவம் ஆடுகிறது. [] 60 ஆண்டுகளாக வன்முறையற்ற அகிம்ச வழியிலும் ஆயுதவழியிலும் தமிழர் நீதிகேட்ட சிங்கள உலகிலே சிறிதும் மனமாற்றம் நிகழவில்லை. எத்தனையோ இழப்புகள், அழிவுகள், எண்ணற்ற உயிர்பலிகள் நிகழ்ந்த போதும் சிங்கள தேசம் மனம் திருந்தவில்லை. இதற்குச் சர்வதேச சமூகத்தின் பொருளாதார இராணுவ உதவிகளும் அரசியல் தார்மீக ஆதரவும் இராஜதந்திர முண்டு கொடுப்புகளும் ஒரு பக்கச் சார்பாகத் தலையீடுகளும் தான் காரணம்.” [] “எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர் கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திரத்திற்காகப் போராடுவோம். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.” “எங்கள் காலத்தில் எங்கள் லட்சியத்தை அடைந்து விடுவோம் என்பதைவிட நியாயமான தீர்வுகள் எட்டப்படாதவரைக்கும் இந்தப் போராட்டம் அடுத்து வருபவர்கள் முன்னெடுத்து செல்வார்கள்.” (வேலுப்பிள்ளை பிரபாகரன் பேசிய மாவீரர் உரைகளை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப் பட்ட கட்டுரை இது.) [] [] [] 1 நன்றி வாசித்த உங்களுக்கு என் நன்றி. வணிக நோக்கத்தின் அடிப்படையில் இந்த கோப்பு பயன்படுத்த தடை செய்யப்படுகின்றது. ஜோதிஜி திருப்பூர் தேவியர் இல்லம். மின் அஞ்சல் முகவரி powerjothig@yahoo.com மின்நூல் ஆக்கத்தில் உதவி – “வீடு” சுரேஷ்குமார் திருப்பூர் திருப்பூர் [] நன்றி – மனமே வசப்படு படங்கள் http://www.4tamilmedia.com/ 2 Free Tamil Ebooks எங்களைப் பற்றி   மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள் : மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள் : ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள் : தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி ? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா ? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா ? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார் ? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர் /பதிவருக்கு என்ன லாபம் ? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா ? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது ? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும் ? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை ? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். www.freetamilebooks.com  எனும் தளம் தயார் நிலையில் உள்ளதா ? தற்சமயம் இல்லை. கூடிய விரைவில் தயார்நிலைக்கு வந்துவிடும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி ? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார் ? - Shrinivasan tshrinivasan@gmail.com - Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org - Arun arun@fsftn.org -  இரவி Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/