[] [cover image] இலக்கிய இன்பம் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை FreeTamilEbooks.com Public Domain - CC0 இலக்கிய இன்பம் 1. இலக்கிய இன்பம் 1. முன்னுரை : 2. இலக்கிய இன்பம் 3. II 4. III இலக்கிய இன்பம் இலக்கிய இன்பம்   நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை   தமிழாக்கம் -       மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : Public Domain - CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் - G.சுமதி - sumathig000@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/ilakiya_inbam} முன்னுரை : பொ. திருகூட சுந்தரம் எம். ஏ., பி.எல். நாமக்கல் கவிஞர் அவர்கள் இதுவரை தமிழ் நாட்டார்க்கு உயர்ந்த இலக்கியங்களையே சிருஷ்டி செய்து தந்திருக்கிறார்கள். அவர்களுடைய கவிதைகள் தேச பக்தியும் சுதந்திர ஆர்வமும் நிறைந்துள்ள ஜீவ ஊற்றுக்கள் என்பதை எல்லோரும் அறிவார்கள். அவர்களுடைய ‘’என் கதை’‘என்னும் நூல் தமிழ் மொழியில் இதுவரைப் பிறவாத ஒரு அற்புத இலக்கிய இனமாகும். அவர்களுடைய சிறை வாசத்தில் ஜனித்த’’மலைக் கள்ளனை’க் கையில் எடுத்தால் யாரும் இறுதி காணும்வரைக் கீழே வைக்கமாட்டார்கள். இதுவரை இலக்கியங்களைச் செய்து தந்த கவிஞர் அவர்கள் இப்பொழுது இலக்கியத்தில் நாம் காணக்கூடிய இன்பத்தையும் வடித்துத்தர முன் வந்திருக்கிறார்கள். இலக்கியம் என்றால் என்ன? அது தரக் கூடிய இன்பம் யாது? நம்முடைய மனத்தில் நிகழும் காரியங்கள் எண்ணங்கள் என்றும், உணர்ச்சிகள் என்றும் இரண்டு வகைப்படும். ஒருவருடைய எண்ணங்களைப் பிறர் மனத் தில் உண்டாகும்படி செய்வதற்காக ஏற்பட்ட சாதனங்களை அறிவு நூல்கள் (ஸயன்ஸ்) என்று கூறுவார்கள். அதுபோல் ஒருவருடைய மனத்தில் எழும் உணர்ச்சி களைப் பிறருடைய மனத்திலும் உண்டாகும்படி செய்வதற்காக ஏற்பட்ட சாதனங்களை இலக்கிய நூல்கள் (கலை) என்று கூறுவார்கள். அறிவு நூல்கள் நமக்கு நம்முடைய வாழ்வின் லட்சியத்தைக் காட்டும், அதை அடைவதற்கு வேண்டிய சாதனங்களையும் செய்து தரும். லட்சியம் தெரிந்தாலும் போதாது, சாதனங்களைப் பெற்றாலும் போதாது. லட்சியத்தை அடைந்து தீர வேண்டுமென்ற அடங்காத ஆர்வம் உண்டானால் தான் லட்சியத்தை அடைவோம். அத்தகைய ஆர்வத்தை உண்டாக்குவது தான் இலக்கியத்தின் தனிப்பெரும் நோக்கம். ஆயினும் அதன் அற்புத லட்சணம் யாதெனில் லட்சியம் இது என்று அறிவு நூல் கூறுகிறது போல் அதைக் குறித்து விவரித்துக் கூறாமலே நம்முடைய மனத்தில் ஆசையை எழுப்புவதேயாகும். இப்படி அறிவு மூலமாக எதையும் கூறாமல் நம்மை உயர்த்துவதனாலேயே இலக்கியத்தை வாழ்வின் ஜீவ நாடி என்று பெரியோர்கள் கூறுகிறார்கள். ஆகவே எது உணர்ச்சி ஊட்டுமோ அதுவே இலக்கியம். அதனால் உணர்ச்சி ஊட்டப் பெறுவதே இலக்கியத்தால் நாம் அடையும் இன்பம். இதுதான் நாம் இலக்கியத்தால் பெறக்கூடிய பிரதான இன்பமும் நன்மையுமாயினும், இந்த இன்பத்தை இலக்கிய கர்த்தா எந்த விதமான சாதனங்களைக் கையாண்டு நம்முடைய மனத்தில் உண்டாகும்படி செய்கின்றார் என்பதை அறிவதும் ஒருவித இலக்கிய இன்பமாகும். இந்த விதமான இலக்கிய இன்பத்தையே கவிஞர் அவர்கள் இந்த நூலில் நமக்கு எடுத்துக் காட்டுகின்றார். இவ்விதம் அறிவு மூலமாக அறியக்கூடிய இலக்கிய இன்பத்தை நமக்குக் கூறுவதற்காக உலக மகாகவிகளில் ஒருவராகிய கம்பர் பெருமானுடைய இராமாயண காவியத்தையே உபயோகிக்கின்றார். ‘’தமிழுக்குக் கதியாவார் இருவர். க என்பது கம்பனையும் தி என்பது திருவள்ளுவரையும் குறிக்கும்’’ என்று காலஞ்சென்ற செல்வ கேசவராய முதலியார் கூறினார். அந்த இருவர் நூல்களிலும் அனவரதமும் திளைத்து வளர்ந்தவர் நமமுடைய நாமக்கல் கவிஞர். அதனாலேயே அவருடைய மலைக் கள்ளனும் பூங்கோதையும் திருக்குறளையும் கம்ப ராமாயணத்தையும் பெரிதாகப் போற்றுகின்றார்கள். மலைக் கள்ளனுடைய காவலாளிகள் கம்ப ராமாயணத்தில்லுள்ள விஷயங்களையே தங்கள் சமிக்கை வாசகங்களாகக் கூறும் பொழுது நாம் ஆசிரியாருடைய திறமையையும் அவருக்குக் கம்பனிடமுள்ள அபார பக்தியையும் கண்டு ஆனந்தமும் ஆச்சரியமும் அடைகின்றோம். இப்படிக் கவிஞருக்குக் கம்பனிடத்தில் அளவு கடந்த ஈடுபாடு உண்டாயிருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏனென்றால், இம்பர் நாட்டிற் செல்வமெல்லாம் எய்தி அரசாண்டிருந்தாலும் உம்பர் நாட்டில் கற்பகக்கா ஓங்கு நிழலில் இருந்தாலும் செம்பொன் மேரு அனைய புயத்திறல் சேர் இராமன் திருக்கதையில் கம்ப நாடன் கவிதையிற் போற் கற்றோர்க்கு இதயம் களியாதே. புலவர் என்றால் வள்ளுவரையும் கவிஞர் என்றால் கம்பரையுமே எண்ணுபவர் நம்முடைய நாமக்கல் கவிஞர். அவர் ‘’கம்பன் என்ற பெரும் பெயரை நினைக்கும் போதெல்லாம் கவிதை என்ற கன்னிகைதான் வருவாள்’’. ஆதலால் அவர் கம்பராமாயணத்தில் நாம் பெறக் கூடிய பலவிதமான இன்பங்களை எடுத்து இந்த நூலில் தமிழ் மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் பரிமாறுகின்றார். அஹிம்சா தர்மத்தைக் குறித்துக் கம்பர் பாடியிருப்பதாகக் கவிஞர் அவர்கள் எடுத்துக் காட்டும் இலக்கிய இன்பம் இதயத்துக்கு அமுதம் போல் இனிமையாக இருக்கின்றது. அவர் பரிமாறும் இன்பங்களை இவை என்று முன் கூட்டி உரைப்பது நல்லது மில்லை, என்னால் சாத்தியமுமில்லை. அத்துடன் அவர் எடுத்துக் காட்டும் முறையே ஒருவித இலக்கிய இன்பம் தருவதாக இருக்கிறது. அதை எல்லாம் நான் அழித்துவிட விரும்ப வில்லை. அவரையே “மெள்ளக் கீறி மெதுவாகச் சுளை எடுத்துத் தேனும் வார்த்து” உங்களுக்கு விருந்து செய்யுமாறு விட்டு விடுகின்றேன். ஆயினும் எனக்கு அவரிடத்தில் ஒருவிதமாகக் கோபம் உண்டாகிறது என்பதைக் கூறாமல் இருக்க முடியவில்லை. இதுகாறும் இவர் இந்த இன்பங்களை எல்லாம் தனியாகவே நுகர்ந்து வந்திருக்கிறார் என்பதை நினைக்கும் பொழுது என்னைப் போலவே உங்களுக்கும் கோபம் உண்டாகும். இனியேனும் அவர் தாம் கம்பனுடைய இலக்கியப் பூங்கா வனத்திலிருந்து பறித்து வைத்திருக்கும் பச்சிலைகளையும் மலர்களையும் நமக்கு அளிப்பார் என்று நம்புகிறேன். இந்த நம்பிக்கை நிறைவேறுமா? என் ஆப்த நண்பர் சின்ன அண்ணாமலை அவர்கள் நிறைவேற்றி வைப்பார்கள். சந்தேகமில்லை. இலக்கிய இன்பம் ‘இலக்கியம்’ என்ற சொல் ‘இலட்சியம்’ என்ற சொல்லின் திரிபு. ‘இலட்சியம்’ என்ற பதம் ‘லக்ஷியம்’ என்ற வடமொழிப் பதத்தின் தமிழ் உச்சரிப்பு. ‘க்ஷ’ என்னும் எழுத்து தமிழில் இல்லை. அதற்காக - ‘க்ஷ’ என்ற எழுத்துக்கு ‘க்க’ என்ற இரண்டு எழுத்துகளும் சேர்ந்து போலியாக உபயோகப்படுகின்றன. ஆதலால் ‘லக்ஷியம்’ என்ற வடமொழிப் பதம் தமிழில் ‘லக்கியம்’ என்று ஆகிறது. தமிழ் இலக்கண வழக்குப் பிரகாரம் ‘ல’ என்னும் எழுத்து மொழிக்கு முதலில் வராது. அதனால் ‘லக்கியம் என்பது இலக்கியம்’ என்ற உருக் கொள்ளுகிறது. ‘லஷ்மணன்’ என்ற வடமொழிப் பெயர் ‘இலக்குமணன்’ என்று தமிழில் மாறுவது போல. ஆகையினால் ‘இலக்கியம்’ என்னும் சொல் ‘லட்சியம்’ என்னும் வடமொழிப் பதத்தின் திரிபு என்பது தெரிகின்றது. இந்த ‘லட்சியம்’ என்ற சொல்லுக்கு அர்த்தம் என்னவென்றால் - நோக்கம் அல்லது ‘குறிக்கோள் அல்லது பயன்’ என்பதுதான் நோக்கம், குறிக்கோள்’, அல்லது ‘பயன்’ என்ற உடனேயே - நல்ல நோக்கம், நல்ல குறிக்கோள் ‘, அல்லது விரும்பத் தகுந்த பயன்’ என்பதுதான் பொருளாகும். நல்ல நோக்கம் அல்லது நல்ல பயன் என்றே பொருள் தரக்கூடிய இந்த ‘இலக்கியம்’ என்ற சொல்லைத் தமிழர்கள் எழுத்தாலாக்கப்பட்ட எல்லா நூல்களுக்கும் பொதுப்பெயராக வழங்கிவருவதைக் கவனித்தால் தமிழுக்குள்ள ஒரு தனிச்சிறப்பைக் காணலாம் என்ன வென்றால் தமிழ்மொழியில் எழுதப்படுகிற எந்த நூலுக்கும் ஒரு சிறந்த நோக்கம் இருக்கவேண்டும் என்பதையே தமிழர்கள் விரும்பினார்கள் என்பது விளங்குகின்றது. அதாவது உயர்ந்த நோக்கத்தையும் நல்ல பயனையும் குறிக்கோளாகக் கொள்ளாத எந்த எழுத்தையும் தமிழர்கள் ஒரு நூலாகப் பாராட்டிப் போற்றமாட்டார்கள் என்பது புலனாகின்றது. இது தமிழ்மக்களின் ‘பண்பு’ என்பதில் உள்ள தனிச்சிறப்பு களில் ஒன்று என்பதைத் தடையின்றிச் சொல்லலாம். ஏன் எனில் ‘உயர்ந்த நோக்கத்தைக் குறிப்பது’ அல்லது ‘நல்ல பயனைத் தருவது’ என்ற பொருள் தரக் கூடிய லட்சியம் என்ற பதத்தையோ அல்லது அதைப் போன்ற ஒரு நல்ல கருத்தைக் காட்டக்கூடிய வேறு சொல்லையோ, பாதுகாத்துப் பாராட்டிப் படிக்கவேண்டிய தன்னுடைய நூல்களுக்கு பொதுப் பெயராகச் சூட்டியிருக்கிற பாஷை இன்னொன்று இருப்பதாகத் தெரியவில்லை. ‘இலக்கியம்’ என்று தமிழில் சொன்னால் ஒரு நூல் அல்லது ஒரு புத்தகம்’ என்றுதான் அர்த்தமாகும். ‘லட்சியம்’ என்ற வடமொழிப் பதம்தான் ‘இலக்கியம்’ என்று மாறியிருக்கிறது என்பதை மொழிகளைப்பற்றிய ஆராய்ச்சிக்காரர்கள் அறிவார்கள். ஆனால் மொழிகளைப்பற்றிய ஆராய்ச்சிகளைச் சிறிதும் அறியாதவர்கள் ‘இலக்கியம்’ என்ற சொல் ‘ஒரு நூல்’ என்று பொருள் தரக்கூடிய ஒரு தமிழ்ப் பதம் என்றுதான் எண்ணுவார்கள். ‘லட்சியம்’ என்ற வடசொல் ‘இலக்கியம்’ என்று தமிழில் மாறி, ‘ஒரு நூல்’ என்ற பொருளைக் குறிக்கிறபோது அதற்கு வடமொழியில் உள்ள அர்த்தமும் முற்றிலும் மாறிப் போய்விட்டது போல வேறு ஒரு அர்த்தத்தையே கொடுக்கிறதினால் ‘இலக்கியம்’ என்பது ‘லட்சியம்’ என்ற பதத்துக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத தனித் தமிழ்ப்பதம் போலத்தான் இருக்கிறது. ஆனால் உண்மையில் ‘இலக்கியம்’ என்பது ‘லட்சியம்’ என்ற பதத்தின் திரிபுதான். அதன் அர்த்தமும் ‘லட்சியம்’ என்ற பதத்துக்குள்ள ‘நோக்கம்’ - ‘குறிக்கோள் - அல்லது ’பயன்’ என்பதுதான். அந்த அர்த்தத்தை மனதில் வைத்தேதான் அந்தப் பதத்தைத் தம் நூல்கள்ளுக்குப் பொதுப் பெயராகத் தமிழர்கள் உபயோகப் படுத்தி வந்திருக்கிறார்கள் என்பதும் உண்மையே. தமிழன் உலகத்திலுள்ள எல்லா மொழிகளிலிருந்தும் அறிவைத் திரட்டிக்கொள்ளும் இயல்புடையவனாகவே நெடுங்காலமாக வாழ்ந்து வந்திருக்கிறானாகையால் பிற மொழிப் பதமாகிய ‘லக்ஷியம்’ என்ற சொல்லைத் - தன் சொந்தச் சொல்லாகவே மதித்து வந்ததைக் கொஞ்சங்கூட இழிவாக எண்ணுவதில்லை. எனவே ‘இலக்கியம்’ என்றால் மனிதவர்க்கத்தின் நல்வாழ்விற்கு உதவக்கூடிய உயர்ந்த லக்ஷியங்களை - அதாவது உயர்ந்த நோக்கங்களை நினைவூட்டத் தகுந்த ஒரு நூல் என்பது நிச்சயமாகின்றது. எல்லாத் தமிழ் நூல்களிலும் பொதுவாக இந்த ‘உயர்ந்த நோக்கம்’, தெய்வ நம்பிக்கையை வலியுறுத்துவதும் ஒழுக்கத்தைக் காப்பதும் அன்பைப் புகட்டுவதும் அறங்களைச் சொல்லுவதுமாகவே இருக்கும். அன்பையும் அதற்கான அறங்களையும் போதிக்கக்கூடிய நூல்களைத்தான் தமிழ்மக்கள் ‘இலக்கியம்’ என்று போற்றிப் புகழ்ந்து படித்துப் பாதுகாத்து வந்திருக்கிறார்கள். வெறும் சுகபோக வாழ்க்கைக்கான பலவிதக் கைத்தொழில்களைப்பற்றியோ வியாபாரம், விவசாயம், கூட்டுறவு, வரி, வட்டம், அரசியல் முதலியவைகளைப் பற்றியோ தமிழ் நூல்கள் எழுதப்பட்டதாகவோ அவற்றைப் பாதுகாத்ததாகவோ தெளிவாகத் தெரியவில்லை. இந்த விஷயங்களையெல்லாம் அந்தந்தத் தொழிலாளிகளின் குலதர்மத்துக்கான பரம்பரைப் பாடமாகவும் அனுபவத்தில் அறிவிக்கவேண்டிய சிட்சையாகவுமே கருதப் பட்டு வந்திருப்பதால் அவற்றிற்கென்று எழுத்தாலான நூல்கள் இல்லாமற் போனதோ என்றும் அனுமானிக்க இடமிருக்கிறது. உதாரணமாக ஒரு மரத்தச்சன் தன்னுடைய தச்சுவேலை முறையைத் தன்னுடைய இனத்தவரான மாணாக்கர்களுக்கு நேரடியாகத் தொழில் பயிற்சியினாலேயே பழகிக் கற்றுக்கொடுத்தானே யல்லாமல் எப்படி மரத்தைப் பொறுக்குவது, எப்படி அதைச் சாதுரிப்பது, எப்படி அதில் தொளையிடுவது, எப்படி மெருகேற்றுவது என்பதற்கான புத்தகங்களை எழுதி முடித்துக்கொண்டு அதைப் பாடமாகச் சொல்லித்தந்த பிறகு வேலை கற்றுக் கொடுத்ததில்லை. அதே மாதிரி விவசாயம் வியாபாரம் முதலான மற்ற எல்லாத் தொழில்களும் வாழையடி வாழையாக அனுபவ பாடங்களாகவே அறிவிக்கப்பட்டு வந்திருப்பதால் அவற்றிற்கான அறிவை நூல்களாக எழுதிவைக்க வில்லை போலும். அப்படி எழுதிவைத்திருந்தாலும் அவற்றை மனிதவர்க்கத்தின் மேலான நோக்கங்களுக்கு அத்யாவசியமான இலக்கியங்களாகப் பாதுகாக்கப் படாமல் அழிந்து போயினவோ என்னமோ? இதன் உண்மை எப்படியிருந்தாலும் சரி, தமிழில் நமக்கு இலக்கியம் என்று கிடைத்துள்ள நூல்கள் எல்லாம் தெய்வ உண்மையையும் அன்பையும் அறங்களையுமே போதிப்பனவாக இருக்கின்றன. அந்த நூல்களில் சொல்லப்பட்டுள்ள பல வழக்க ஒழுக்க சம்பிரதாயங்கள் இந்தக் காலத்துக்குச் சிறிதும் பொருந்தாதனவாக இருக்கலாம். இருந்தாலும் அந்த நூல்களின் முக்கிய அம்சங்கள் அனைத்தும் இந்தக்காலத்திலும் இனிவரும் எந்தக் காலத்திலும் மனிதன் சிந்தனை செய்தே தீர வேண்டிய கடவுள் சர்ச்சை, அன்பு, அறம் என்பனவற்றைத்தான் குறிப்பாகக் கூறுகின்றன என்பதை மட்டும் எவரும் மறுக்க முடியாது. இந்த கடவுள், அன்பு, அறம், ஒழுக்கம் என்பவற்றைப் பேசுகின்ற எல்லா நூல்களும் பொதுவாக எல்லா பாஷைகளிலும் பெரும்பாலும் கவிதை வடிவிலேயே காணப்படுகின்றன. இதற்குக் காரணம் அச்சடிக்கும் சாதனங்கள் இல்லாத அந்தக் காலங்களில், வேண்டிய படியெல்லாம் பின்னால் விரித்துரைத்து சக்திக்கும் சாமர்த்தியத்துக்கும் ஏற்றவாறு வியாக்யானம் செய்து கொள்ளத் தக்கதாகப், பெருக்கமான விஷயங்களையும் சுருக்கமாக எழுதிவைப்பது கவிதைக்குத்தான் சுலபம் என்பதாக இருக்கலாம். அதைக் காட்டிலும் கவிதையில் கலையழகு இருப்பதே சிறந்த காரணம். காரணம் எதுவானாலும் சிறந்த நூல்கள் எல்லாம் கவிதைகளாகவே இருக்கின்றன. பிற மொழிகளிலாவது சிற்சில வசன நூல்களும் இருக்கின்றன. ஆனால் தமிழ் மொழியில் நெடுங்காலமாக நல்ல இலக்கியங்கள் அத்தனையும் செய்யுள் வடிவிலேயே செய்யப்பட்டு வந்திருக்கின்றன. இன்றைக்கும் கூடத் தமிழன் கவிதையையே சிறப்பாகக் கருதுகின்றான். சோதிடம், வாகடம் முதலான சாஸ்திரங்களையும் கூடத் தமிழன் கவிகளாகச் செய்தே பாடம் செய்துவந்திருக்கிறான் என்பதும் குறிக்கத்தகுந்தது. கவிதை இயற்றும் கலையைத் தமிழ் மக்கள் மிகவும் ஆர்வத்தோடு ஆதரித்தும் அனுபவித்தும் வந்திருக்கி றார்கள் என்பது சரித்திர சாத்தியம். தமிழ்நாட்டைப் பரம்பரையாக ஆண்டுவந்த சேர, சோழ, பாண்டிய மன்னரும், அவர்களுக்குக் கீழிருந்த சிற்றரசர்களும், பாளையத் தலைவர்களும் கவிஞர்களை மிகவும் கெளரவத்துடன் காப்பாற்றி வந்திருக்கிறார்கள். சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஆட்சியில் சமஸ்தானக் கவிஞர்கள் இல்லாத சபைகளே இருந்ததில்லை. கவிஞன் என்று எவன் எப்போது வந்தாலும் அவனை ஆதரிக்காத அரசன் இருந்ததில்லை. இந்த மன்னர்கள் தங்கள் அந்தரங்கக் குடும்ப விஷயங்களிற்கூட தமக்கு அறிவு சொல்லக்கூடிய உரிமையைத் தந்து கவிஞர்களைப் பெருமைப்படுத்தி வந்திருக்கிறார்கள். சேர சோழ பாண்டிய சாம்ராஜ்யங்கள் சிதறிப்போன பிற்பாடும் சிற்றரசர்களும் செல்வவான்களும் பட்டையக்காரர் களும் பண்ணையக்காரர்களும் மிட்டாதார்களும் மிராசுதார்களும் கவிஞர்களை ஆதரிப்பது மிகவும் கண்ணியமான கடமை யென்றும், புண்ணியம் என்றுங்கூடப் போற்றி வந்திருக்கிறார்கள். கவிதைகளை அமைதியுடன் அமர்ந்து கேட்டு அனுபவிக்கவேண்டிய ஆசையும் அவகாசமும் அரிதாகப் போன இந்தக் காலத் திலும்கூட கவிஞர்களுக்குச் சிறப்புச் செய்கிற பணக்காரக் குடும்பங்கள் பல இருக்கின்றன. பணம் கொடுத்து ஆதரித்து கவிதைக் கலையை வளர்த்துவந்த அரசர்களும் பணக்காரர்களும் ஒருபுறம் இருக்க கவிதைகளின் நுட்பங்களை நுகர்ந்து மகிழக்கூடிய ரஸிகர் கூட்டமும் தமிழ்நாட்டில் எப்போதும் ஏராள மாக இருந்து வந்திருக்கிறது. இந்த ரஸிகர்களில் பரம ஏழைகளும் பலபேர் உண்டு. எந்த விஷயத்தையும் பாட்டாகப் பாடச் சொல்லிக் கேட்பதுதான் தமிழ்நாட் டுப் பாமர மக்களுக்கும் மிகவும் பிரியமான பழக்கமாக இருந்து வந்திருக்கிறது. இதனால் கவிகளை இயற்றும் திறமை ஒரு தனிக் கலையாக வளர்க்கப்பட்டு வந்தது. பிற்காலத்தில் அது ஒரு தொழில்போலவும் மாறிவிட்டது. அதனால், இயற்கையாகவே உடன் பிறப்பதாக மதிக்கப்படுகிற கவிதா சக்திகளோடு விளங்கிய பிறவிக் கவிஞர்கள் மட்டுமல்லாமல், இலக்கண வரம்புகளுக்குட்பட்டுச் செய்யுள்களைச் செய்யத் தெரிந்த எண்ணிறந்த புலவர்களும் தமிழ்நாட்டில் ஏற்பட்டார்கள். இப்படிப்பட்ட புலவர் ஊருக்கு ஒருவராவது இருப்பது ஊராருக்கே பெருமையென மதிக்கப்பட்டு வந்தது. இந்தப் புலவர்களிற் பலர் மிகவும் வியக்கத்தக்க வித்தைகளைக் கவிகளில் காட்டியிருக்கிறார்கள். இந்த வித்தைகளில் பல சபைகளில் பகிரங்கமான போட்டிகளை ஊராரே ஏற்படுத்தி விருதுகளும் பணமுடிப்பும் வெகுமதியளித் திருக்கிறார்கள். இந்தப் புலவர்களின் காலத்தில்தான் வெறும் விருத்தம், வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா என்று சொல்லப்படுகிற சாதாரண பாடல் வகைகளோடு சிந்து, வண்ணம், பதம் முதலான புதுப்புது சந்த வகைகளும் யமகம், திரிபு, சிலேடை, பந்தனம் முதலிய யாப்பு வகைகளும் ; சித்திரக்கவி, ஆசுகவி, வித்தாரக்கவி முதலான கவி வேறுபாடுகளும் ; கலம்பகம், தூது, கோவை, அந்தாதி முதலான பிரபந்த பேதங்களும் மிகவும் விரும்பத்தகுந்த விதங்களில் விருத்தியடைந்தன. வேண்டியபோதெல்லாம் பிற மொழிப் பதங்களைப் பிரயோகிக்கக் கொஞ்சங்கூடக் கூசாத தமிழ் மொழியிலுள்ள விஸ்தாரமான சொல்வளமும், தமிழ்மொழிக்கே சிறப்பான சந்தி, விகாரம், நீட்டல், குறுக்கல், வலித்தல், மெலிதல், திரிதல், இரட்டித்தல் முதலான இலக்கணச் சலுகைகளும், இந்தப் பிற்காலப் புலவர்கள் இயற்றிய அழகான சந்தங்களுக்கு மிகவும் அனுகூலமாக இருந்திருக்கின்றன. இப்படிப்பட்ட சந்தங்களை தமிழில் அல்லாமல் வேறு எந்த மொழியிலாவது இயற்ற முடியுமா என்று மொழி ஆராய்ச்சிக்காரர்கள் விழிப்பார்கள். அவ்வளவு அபூர்வமான சந்தங்களையும் விசித் திரமான பதப் பிரயோகங்களையும், மிகப் பெரிய படிப்பாளிகளையும் திகைத்துத் திணறவைக்க வேண்டுமென்ற ஓரே சாமர்த்தியத்திற்காகவே இணைக்கப்பட்ட பாட்டுக்களையும் இந்தப் புலவர்கள் இயற்றியிருக்கி றார்கள். மொழியின் அழகையும் சொல்லடுக்கின் சுவையையும் அனுபவிக்கவென்று படிக்கிறவர்களுக்கு இந்தப் பாடல்கள் மிகவும் இன்பம் பயக்கக் கூடியவைகளே. ஆனால் இந்தக் காலத்துக்கு அந்தப் பாட்டுகளிற் பல ‘பல்லுடைக்கும் பாட்டுக்கள்’ என்று ஏளனத்துக்குத்தான் இலக்காகலாம். காரணம், அவற்றிலுள்ள பதங்கள் இக்கால வழக்கத்துக்குக் கடினமாக இருப்பதுடன் பாட்டின் பொருளும் எளிதில் விளங்காமை தான். பதங்கள் பண்டிதர்கள் நடையில் கடினமாக இருப்பது மட்டுமல்லாமல் இந்தப் பாடல்களில் அநேகம் வேண்டுமென்றே எளிதில் பொருள் கண்டுபிடிக்க முடியாதபடி சித்திரிக்கப்-பட்டுள்ளவை. முன்னே சொன்ன கவிபுனையும் கலைத்திறத்தைக் காட்ட வென்றே இயற்றப்பட்டன. இந்தப் பாட்டுகளில்லுள்ள பதங்களையும் சந்தி விகாரங்களையும் சிக்கறுத்து அவற்றில் அடங்கியுள்ள பல அழகான கருத்துக்களைக் கண்டுபிடித்து விரித்துரைப்பதும் ஒரு வித்தையாக விருத்தி செய்யப்பட்டு வந்த காலம் அந்தக் காலம். அப்படிப்பட்ட பாட்டுக்கள் பாமர மக்களைக் கருதிப் பாடப்பட்டவைகள் அல்ல. அவற்றால் பெரும்பாலும் மக்களுக்கு எவ்வித பிரயோஜனமும் இல்லை. ஆனாலும் அப்படிப்பட்ட கவிகளை ஆதரித்து ரஸிப்பதற் கென்றே ஒரு படிப்பாளிகள் பரம்பரை தமிழ் நாட்டில் எப்போதும் இருந்து வந்திருக்கிறது. அது எப்படிப் போல் என்றால் ஒரு சங்கீத வித்வான் பாடுகின்ற பலவித ராக விந்யாசங்களைப் பெரும்பாலும் ஜனங்கள் அறியமாட்டார்கள். ஒரு ராகத்தையே பாடும்போது கூட அதில் அந்த வித்வான் கையாளுகிற ஆரோகண அவரோகண சமத்காரத்தையும் பாமர மக்கள் அனுபவிக்க முடியாது. அந்த ராகத்தைத் திருப்பித் திருப்பி இழுத்துக் கொண்டிருக்கிற நேரமும் அதற்காக அந்த வித்வான் படுகின்ற பாடுகளும் வீண்காலப் போக்கு போலத்தான் சாதாரண ஜனங்கள் சலிப்படைவார்கள். இந்த இழுப்புகளை நிறுத்திவிட்டு எப்போது அந்த வித்வான் வார்த்தைகள் புரியக்கூடிய உருப்படியான பாட்டுகளைப் பாடுவார்’ என்று அவர்கள் ஏங்கிப் பல்லைக் கடித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பதையும் பார்த்திருக்கிறோம். ஆனால் அந்த வித்வான், ராக விந்யாஸங்களை அறியாத பாமர மக்களை எண்ணி அவற்றைப் பாடுவதில்லை. உண்மையில் ராக விஸ்தார ரகசியங்களை அறியக்கூடிய ரஸிகர்களுக்காகவும் கூட அந்த வித்வான் அவற்றைப் பாடுவதில்லை. அவர் வெறும் சங்கீதக் கலையை உத்தேசித்து தான் பாடுகின்றார். அந்தக் கலையை அனுபவிக்கத் தெரிந்த ரஸிகர்கள் அதைப் பாராட்டு-கின்றார்கள். அதே மாதிரிதான் பழைய காலத்தில் கடின பதங்களுடன் இயற்றப்பட்ட பல கரடுமுரடான கவிகளும் அப்படிக் கவி செய்யும் கலையை எண்ணித்தான் எழுதப்பட்டன. அந்தக் கலையை அனுபவிக்கத் தெரிந்த படிப்பாளிகளும் பழைய காலத்தில் ஏராளமாக இருந்தார்கள். அந்தக் கூட்டம் இக்காலத்தில் மிகவும் குறைந்து விட்டது. அப்படிப்பட்ட கவிகளைப் படித்துப் பார்க் கவோ நின்று கேட்கவோ நமக்கு நேரம் இல்லை. பள்ளிக் கூடத்தில் பரிட்சைக்காகப் படித்துத் தொலைக்க வேண்டிய பாடங்களைத் தவிர பரிட்சைக்குப் பிறகு அறிவுக்கான எல்லா விஷயங்களையும் ஓடுகிற ஓட்டத்தில், காதில் பட்ட வரையிலுந்தான் கவனிக்கலாமே தவிர நிதானமாக ஆராய்ந்து பார்க்கவேண்டிய அவசியமும் அவகாசமும் இக்காலத்தில் இல்லை. வேதாந்த சித்தாந்த விஷயங்களை இக்காலத்தில் வேலையற்றவர்கள் தான் விரும்பக்கூடும். அப்படி வெறும் வேதாந்த சித்தாந்த விஷயங்களில் பொழுதைச் செலவிடுகின்றவர்களை சமுதாயம் விரும்புவதில்லை. இது யாருடைய குற்றமும் அல்ல. காலப் போக்கின் கட்டாயம். ஆகையினால் வெறும் கவி இயற்றும் கலைக்காக வென்றே செய்யப்பட்ட பல பழைய செய்யுள்கள் இப்போது பயனற்றுப் போனதில் அதிசயம் ஒன்றுமில்லை. அடிமை வாழ்வின் பயனாகவும், உலகத்தில் வெவ்வேறு நாடுகளில் இருந்துவரும் பலவித குழப்பங்களின் காரணமாகவும் உணவு கிடைக்காமல் பட்டினி கிடக்கும் பல கோடி பாமர மக்களின் பரதவிப்பினாலும் வெறும் கலை - இலக்கியமாகச் செய்யப்படும் கடின பதங்களடங்கிய பாட்டுக்கள் இப்போது தேவையில்லை. மனித சமூகத்தை இப்போது வாட்டி வதைக்கின்ற அடிமைத்தனம், ஜாதிக்கொடுமை, நிறக்கொடுமை, சோற்றுப் பஞ்சம் முதலான தீமைகளை மாற்றுவதற்கு வழி சொல்லக்கூடிய பிரசாரப் பாட்டுக்கள் தான் இப் போது தேவை. அந்தப் பாட்டுக்களும் பாமர மக்களுக்குப் புரியும்படியான எளிய நடையில் இருக்கவேண்டும். அதனால்தான் பழைய காலத்துப் பாட்டுக்களை நாம் இப்போது மதிப்பதில்லை. இந்தப் பாமர மனப்பான்மையின் வேகம் பல படித்தவர்களையும் பற்றிக்கொண்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்துக்காக பழைய இலக்கியங்களையும் பழிக்கின்றார்கள். மனித சமூகததுக்கு இன்றியமையாத அறங்களையே சொல்லக்கூடிய இலக்கிய இன்பம் மிக உயர்ந்த இலக்கியங்களையும் கூட இகழ்ந்து பேசத் துணிவது இப்போது சமுதாயத்தில் இருந்துவரும் சச்சரவுகளால் தான். ஆனால் இந்த நிலைமை நிரந்தரமானது அல்ல. உலகம் எப்போதும் இதே குழப்பத்தில் இருந்து விடாது. இப்படிப்பட்ட குழப்பங்களையும் அவற்றால் பொங்கிவரும் புரட்சிகளையும் எவ்வளவோ தடவைகளில் இந்த உலகம் கண்டிருக்கும். ஆதலால் இந்தக் குழப்பங்களால் குலைந்து போகாமல் மனித சமூகத்துக்கு நிரந்தரமாக வேண்டிய மெய்யறிவுகளைப் பாது காத்து வருகிற ஒரு சிறு கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அவர்கள் பழைமைகளில் புதுமைகளையும் புதுமைகளில் பழைமைகளையும் பார்க்கக் கூடியவர்கள். பழைமைகள் எல்லாம் பழிக்கத்தக்கனவும் அல்ல, புதுமைகள் எல்லாம் போற்றத்தக்கனவும் அல்ல. இறந்த காலங்களின் அனுபவத்திலிருந்துதான் நிகழ்காலத்தின் அறிவு பிறந்தது. நிகழ்காலத்தைப் பார்த்துத்தான் எதிர்காலத்தை எண்ண வேண்டியிருக்கிறது. இந்த நியாயம் மனிதனுடைய எல்லாச் செய்கைகளுக்கும் பொருந்தும். எழுத்தாலான இலக்கியங்களும் அந்தச் செய்கைகளைச் சேர்ந்தனவே. முன்னிருந்த இலக்கியங்களின் தொடர்புதான் இப்போது தோன்றும் இலக்கியங்கள். இப்போது தோன்றும் இலக்கியங்கள் தான் இனிவரும் இலக்கியங்களுக்கு ஆதாரம். இதை எண்ணுகின்ற ஒரு சிறு தொகுதியினர் பழைய கால இலக்கியத்தின் ஜீவன்களைப் பாது காத்து வருபவர்கள். இதற்கு அசாதாரணமான அறிவோ திறமையோ தேவையில்லை. பழைமையின் தொடர்ச்சிதான் புதுமை என்ற நம்பிக்கைதான் வேண்டும். அந்த நம்பிக்கையோடு பழைய இலக்கியங்களைப் பார்த்தால் அவற்றைப் பழிக்கவேண்டிய பழியைச் செய்ய மனம் இடந்தராது. ஆதலால் இப்போது பயனற்றனவாகத் தோன்றுகின்ற பழைய பாட்டுக்களிலும் சிற்சில இன்பம் இருப்பதை நாம் மறுத்துவிடக் கூடாது. இந்தப் பாட்டுகளில் பல வெறும் சொல்லடுக்கின் அழகுக்காக வென்றே ஆக்கப்பட்டன. இன்னும் பல படிப்பவர்கள் பாதங்களைப் பிரித்துப் பார்த்து சிந்தனை செய்து பொருளைக் கண்டுபிடிக்க வேணுமென்றே மறைபொருளோடு செய்யப்பட்டுள்ளன. மற்றும் பல ‘சந்தி’ ‘விகாரம்’ முதலிய சலுகைகளைக் கொண்டு பதங்களைப் பின்னிக்காட்டும் திறமைக்காகவே பிணைக் கப்பட்டன. இப்படிப்பட்ட கவிகள் பழைய தமிழ் இலக்கியங்களிலும் தனிப்பாடல்களாகவும் ஏராளமாக இருக்கின்றன. ‘இலக்கிய இன்பம்’ என்னும் இந்தக் கட்டுரை இப்படிப்பட்ட பழைய பாட்டுகளை எடுத்துக் காட்டுவதற்காக எழுதப்படுவது அல்ல. இந்தக் கட்டுரையின் நோக்கம் தமிழ் மொழிக்குத் தலை சிறந்த ஒரு இலக்கியத்திலிருந்து சில குறிப்பிட்ட இலக்கிய இன்பத்தை ஒரு மிகவும் புதுமையான முறையில் தொகுத்துக் காட்டி அதில் நான் கண்ட இன்பத்தை இதைப் படிக்கிற எல்லாரும் அனுபவிக்கச் செய்யவேண்டும் என்பதுதான். அந்த இலக்கிய இன்பம் இன்ன தெனச் சொல்லுவதற்கு முன்னால் மேலே சொல்லப் பட்ட கலைத்திறம் காட்ட வென்றே இயற்றப்பட்ட பாடல்களில் சிலவற்றை உதாரணத்துக்காக எடுத்துக் காட்டுவது முற்றிலும் இலக்கிய இன்பம் இல்லாதது ஆகிவிடாது. அப்படிப்பட்ட பாட்டுக்களில் வெறும் வேடிக்கைக்காகவும், சிற்றின்ப சிங்காரத்துக்காகவும், நிந்தாஸ்துதி யாகவும், பொருள் வாங்கப் புகழ்ந்து பேசுவதற்காகவும், வசையாகவும் பாடப்பட்டவைகளை நீக்கி, நல்ல கருத்துக்களையும் - கவிபுனையும் கலைக்காக - வேண்டும் மென்று மறைத்துச் சொல்லுகின்ற சில பாடல்களை மட்டும் இங்கே உதாரணமாகக் காட்டுவோம் அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக்கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக்காப்பான். இந்தப்பாட்டை நம்மிற் பலர் படித்தோ கேட்டோ இருக்கலாம். இதை முன்னாலேயே அறிந்தவர்களைத் தவிர மற்றவர்களுக்கு இதன் பொருள் சுலபமாகப் புரியாது. இந்தப் பாடல் கம்பராமாயணத்தில் ஆரம் பத்திலுள்ள தோத்திரப் பாடல்களில் ஒன்று. இது கம்பன் பாட்டு அல்லவென்று பல அறிஞர்கள் இப் போது கருதுகிறார்கள். ஆனால் இது வெகு காலமாக கம்பன் பாட்டாகவே வழங்கி வந்திருக்கிறது. இது யாருடைய பாட்டாக இருந்தாலும் இருக்கட்டும். இந்தப் பாட்டில் ஒரு நல்ல அர்த்தம், வேண்டுமென்றே சுலபமாக விளங்காதபடிக்கு மறைத்துக் கொடுக்கப் படுகிறது. இதை விரித்துரைத்து விளக்கும் பொழுது அதில் ஒருவிதக் கவிதைக் ‘கலையின்பம்’ காணப் படுகிறது. இனி இந்தப் பாடலின் பொருளைப் பார்ப்போம். இது இராமாயணத்தின் ஜீவ நாடிகளில் மிக முக்யத்வம் வாய்ந்த அனுமானைப் பற்றிய துதி. ராமாயணக் கதையில் அனுமான் செய்த பல அரிய பணிகளில் முதல் தரமானது, அவன் விஸ்வரூப் மெடுத்து, ஆகாய மார்க்கமாகக் கடலைக் கடந்து, சீதையைக் கண்டு, இலங்கைக்குத் தீ வைத்துவிட்டு இராமானிடத்துக்குத் திரும்பி வந்து சீதை ஒருவிதக் குறைவுமில்லாமல் இருப் பதைச் சொல்லி, இராமனுடைய ஏக்கத்தைப் போக்கியதுதான். அதைத்தான் இந்தக் கவியில் புகழ்ந்து பேசி அனுமானைத் துதிக்கப்பட்டிருக்கிறது. அதாவது: ‘வாயு பகவான் புத்திரனாகிய அனுமான் ஆகாச மார்க்கமாகக் கடலைத் தாண்டி பூமாதேவியின் மகளாகிய சீதையைக் கண்டு (பேசி, கணையாழியைக் கொடுத்து, சூடாமணியை வாங்கிக் கொண்டு) இலங்கைக்கு நெருப்பு வைத்துவிட்டு வந்தவன். அவன் நம்மைப் பாதுகாத்து ரட்சிப்பான்’ என்பதுதான் இப் பாடலின் கருத்து. அந்தக் கருத்தைக் கவிஞன் இந்தப் பாட்டில் எப்படி மறைமுகமாகச் சித்திரிக்கிறார் என்பது பதங்களை விளக்கினால் தான் தெரியும். பதப்பொருள் : அஞ்சிலே ஒன்று பெற்றான் - பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய வாயுபகவான் பெற்ற புதல்வனான அனுமான், அஞ்சிலே ஒன்றைத் தாவி – அந்தப் பஞ்ச பூதங்களில் இன்னொன்றாகும் நீராகிய கடலைத் தாண்டி, அஞ்சிலே ஒன்று ஆறாக - அந்தப் பஞ்ச பூதங்களில் மற்றொன்றாகிய ஆகாயத்தின் வழியாக, (ஆறு - மார்க்கம், ஆறாக - மார்க்கமாக), ஆரியர்க்காக ஏகி - மேலோனாகிய இராமனுக்காகச் சென்று, அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு - அந்தப் பஞ்ச பூதங்களில் வேறொன்றாகிய பூமியில் பிறந்த பெண்ணை (சீதையைக் கண்டு), அயலார் ஊரில் - பகைவர்களுடைய பட்டணத்தில், அஞ்சிலே ஒன்றை வைத் தான் - அந்தப் பஞ்ச பூதங்களில் மிச்சமுள்ள ஒன்றாகிய நெருப்பை வைத்தான். அவன் எம்மை அளித்துக் காப்பான் - அந்த அனுமான் நம்மைப் பாதுகாத்து ரட்சிப்பான். முதலில் பார்க்கிறபோது கொஞ்சங்கூடப் புரியாமல் இருந்த இந்தப் பாட்டு இப்போது வெகு சுலபம் போலத் தோன்றுகின்றது. இந்தப் பொருளை அந்தப் பாட்டில் அப்படி மறைத்து வைத்து, அதை நாம் தேடித் தெரிந்து அனுபவிக்கும்படி கவி செய்ததில் ஒரு கலைத்திறம் இருக்கவில்லையா? அதில் நமக்கு ஒரு வித இன்பம் உதிக்கவில்லையா? இன்னொரு சிறு உதாரணம் : ஒரு ஆடவன் ஒரு அழகான இளங் கன்னிகையைத் தனியே சந்திக்கிறான். அவளுடைய அழகைப் பலவாறு புகழ்ந்துவிட்டு அவளோடு சல்லாபிக்கிறான். அவர்களுடைய சம்பாஷணைக்குப் பின் ஒரு கட்டத்தில் அந்தப் பெண் காலாயுதக் கொடியோன் கையாயுத வழியே மாலாயுதம் ஈன்ற மாமணியைத் தானுதிர்த்தாள் என்று கவி பாடுகின்றார். இதில் நமக்கு என்ன தெரியகிறது? காலாயுதமாம், கையாயுதமாம், மாலாயுதமாம். என்ன இது? என்று திகைப்புத்தான் உண்டாகிறது. விடுகதை போலத்தான் இருக்கிறது. சாதாரண ஜனங்கள் எவ்வளவு முயன்றாலும் கண்டு பிடிப்பது கஷ்டம்தான். படித்தவர்கள் கூட மிகவும் பாடுபட்டுத்தான் பொருள் தேட வேண்டும். பொருளைச் சொல்லி விட்டால் படித்தவர்கள் படிக்காதவர்கள் எல்லாருக்கும் சுலபம் தான். படிப்பில்லாதவர்களுக்கும் கூட இதி லுள்ள ஐதீகங்கள் பழக்கமானதுதான். அர்த்தத்தைப் பார்ப்போம் : இதில் என்ன சொல்லப்படுகிறது என்றால், ‘அழுதாள்’ என்ற ஒரே ஒரு சொல்லில் உள்ள பொருள் தான் அவ்வளவு நீளமாக அலங்கரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. பாருங்கள்: காலாயுத - தனது காலையே தன் ஆயுதமாக உபயோகப்படுத்தி (காலால் யுத்தம் செய்கிற) கோழியை, கொடியோன் - தன் கொடியின் சின்னமாக வைத்துக் கொண்டிருக்கிற முருகனுடைய, கையாயுத - கையாயுதமாகிய வேல் போன்ற கண்களின், வழியே - வழியாக, மாலாயுதம் ஈன்ற - திருமாலின் ஆயுதங்களில் ஒன்றாகிய சங்கிலிருந்து பிறக்கும், மாமணியை - முத்துக்களை, தான் உதிர்த்தாள் - அவள் கொட்டினாள். அதாவது ‘வேல் போன்ற அவள் விழிகளிலிருந்து முத்து முத்தாகக் கண்ணீரை உகுத்தாள்’ என்பது தான் இதன் பொருள். ‘அப்பாடா! ’அழுதாள்’ என்று சொல்லுவதற்கு இவ்வளவு பாடா?’ என்று தான் சாதாரணமாகத் தோன்றுகின்றது. இப்படி மறைத்து நீட்டிச் சொல்லுவதில் உலக வாழ்வுக்கு என்ன நன்மை என்ற கேள்வி ஒரு புறம் இருந்தாலும் இதில் ஒரு கலை இருப்பது உண்மைதான். சொல்லும் திறமையைத் தவிர உலக வாழ் வீற்கோ, அறிவின் வளர்ச்சிக்கோ உதவியற்றது என்று சொல்லிவிடக்கூடிய கருத்துக்கள் அடங்கிய பாட்டுகளில் மட்டும் அல்ல, உயர்ந்த ஆன்ம ஞானங்களை உபதேசிக்கவென்று பாடிய பாடல்களிலும் கூட இப் படிப்பட்ட கவிபுனையும் கலையைக் கையாண்டிருக்கிறார்கள் நமது பெரியோர்கள். உலகப் பற்றுக்களை விட்டுவிட வேண்டும், ‘நான்’ என்ற மமதை அடங்கவேண்டும், ஏகாக்ரக சித்தத் தோடு தியானம் செய்ய வேண்டும் என்பன போன்ற பேச்சுக்கள் நம் நாட்டில் அடிக்கடி காதில் விழுகிற ஆன்மஞானக் கருத்துகள். ‘நான்’ என்னும் அகங் காரம் போனபிறகுதான் ஆன்ம சிந்தனைக்கு ஆயத்த மாக முடியும் என்பதற்கு ஒரு கதை சொல்வதுண்டு. அந்தக் கதை :- ஒரு அரசன் ஒரு முனிவருடைய ஆச்ர மத்துக்குப் போனான். ஆச்ரமத்தின் வெளிக்கத வண்டை தன் ரதத்தை நிறுத்தி இறங்கினான். வெளிக் கதவென்பது பிரமாதமான ஆசார வாசலல்ல. ஆச்ர மத்தைச் சுற்றியிருந்த வேலியில் இருந்த ஒரு சிறு வழி தான். உள்ளே இருக்கும் ஆச்ரமத்தையும் அதைச் சுற்றிலுமுள்ள இடங்களில் இருக்கிற எல்லாவற்றை யும் வெளியே இருந்தபடியே யாரும் பார்க்கலாம். வேலிக்கு உள்ளே இருக்கிறவர்களும் வெளியே வருகிற எதையும் காணலாம். ரதத்தைவிட்டு இறங்கும்போதே வேலிக்கு உட்புறத்தில் இரண்டொரு துறவிகள் அங்குமிங்கும் போய்க்கொண்டிருந்ததையும், அவர்கள் தான் வந்ததைப் பார்த்ததையும் மன்னவன் கண்டான். அந்தத் துறவிகளும் ஆடை ஆபரண அலங்காரங்களுடன் ஒரு மனிதன் தேரைவிட்டு இறங்கினதைப் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் அதில் அதிக கவனம் செலுத்தாமல் தங்கள் அலுவல்களை நாடிப் போய்விட்டார்கள். மன்னன் கழிகளால் கட்டப்பட்டிருந்த அந்த வேலிக் கதவண்டை வந்தான். கதவு அடைபட்டிருந்தது. நெடுநேரம் நின்று நின்று பார்த்தான். அவனை வரவேற்பதற்கு யாரும் வரவில்லை. வெகு கோபத்தோடு பல்லைக் கடித்துக்கொண்டு காத்திருந்தான். முன்னே, தான் வந்ததைப் பார்த்துவிட்டு கவனிக்காமல் மறைந்துபோன ஒரு துறவி மறுபடியும் அவ்வழி வந்ததைக் கண்டான். ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு அந்தத் துறவியைக் கைகாட்டி அழைத்தான். அவர் வந்தார். - " நீர் நான் வந்ததைப் பார்க்க வில்லையா?" என் றான் மன்னன். ‘’ஆம் பார்த்ததுண்டு’‘ ’‘நான் வந்து எவ்வளவு நேரமாயிற்று?’‘ ’‘எவ்வளவு நேரமாயிற்று என்பதை நினைக்க வில்லை’‘ ’‘உமக்கு இங்கே என்ன வேலை’‘ ’‘நான் ஒரு சிஷ்யன்’‘ ’‘சிஷ்யனா! நல்ல சிஷ்யன்! மகரிஷிக்கு நல்ல பணிவிடை செய்வீர்! நான் வந்ததைப் பார்த்துக் கொண்டே பேசாமல் போய் விட்டீரே!’‘ ’‘மகரிஷிக்குப் பணிவிடை செய்யத்தான் போனேன்’‘ ’நான் இங்கே எத்துணை நேரமாக நின்று கொண்டிருப்பது?’‘ ’‘ஏன் இங்கே நின்று கொண்டிருக்க வேண்டும்?’‘ ’‘ஓய்! என்ன ஏளனமா செய்கிறீர்? நான் யார் தெரியுமா?’‘ “தெரியாது.’’ ”நான் தான் இந்த நாட்டை ஆளுகின்ற அரசன். அதை அறிந்து கொள்ள முடியவில்லையா உமக்கு?’‘ “அறிந்துகொள்ளா விட்டாலும் அனுமானித்தேன் . அரசனாக இருக்கலாம் என்ற ஐயத்தால் தான் பேசாது போய் விட்டேன்.’’ ”அரசன் என்று அனுமானித்தும் கூடவா வந்தவனை ’வா’ என்று கூடச் சொல்லாமல் மறைந்து விட்டீர்?’’ “நீங்கள் இந்த ஆச்ரமத்தை நாடி வர நியாயம் இருக்காது என்று நினைத்துத்தான் என் வேலைகளைப் பார்க்கப் போய்விட்டேன்.‘’ ’‘ஓ! அப்படியா! நான் இந்த ஆச்ரமத்தை நாடித்தான் வந்திருக்கிறேன். முனிவரைப் பார்க்கவேண்டும். உடனே போய் நான் வந்திருப்பதாகச் சொல்லும்.’‘ ’’முனிவர் இப்போதுதான் அவருடைய ஏகாக்ரஹ அறையில் யோக நிஷ்டையில் அமர்ந்தார். நிஷ்டை கலைகிற வரையில் அவரிடம் யாரும் போகக் கூடாது. ஆகையால் அவரை இப்போது நீங்கள் பார்க்க இயலாது” ‘’ஓய் அதிகமாகப் பேசவேண்டாம். சொன்னபடி செய்யும். உடனே போய் முனிவரிடம் நான் வந்திருக்கிறதாக - இந்த நாட்டுச் சக்ரவர்த்தி - தெரியுமா? - நான் வந்திருப்பதாகச் சொல்லும். நான் வந்திருப்பதை அறிந்தால் அவர் உடனே அழைத்து வர அனுமதி கொடுப்பார். போய் நான் வந்திருப்பதாகச் சொல்லும்’‘ ’‘ஐயோ! இப்போது யாரும் அவர் அருகிற் கூட போகக் கூடாதே! நிஷ்டையைக் கலைத்தால் சபித்து விடுவாரே!’‘ “நான் வந்திருப்பதாகச் சொன்னால் சபிக்கமாட் டார். போய் நான் வந்திருப்பதாக - அரசன் வந்திருப்பதாக - சொல்லும் ’’ ”பார்த்து வருகிறேன்’’ என்று சிஷ்யர் ஆச்ரமத்துக்குள் அடிமேல் அடிவைத்துப்போனார். சிறிது நேரத்தில் சிஷ்யத் துறவி திரும்பி வந்து, அரசனிடத்தில் வேலிக்கு அப்பால் இருந்தபடியே “முனிவர் நிஷ்டையில் அமர்ந்து விட்டார். நிஷ்டையைக் கலைப்பது மகாபாவம். நீங்கள் இன்னொரு நாள் வருவது நல்லது. குறிப்பிட்டு ஒரு நாளில் குறிப்பான நேரத்தில் வருவதாகச் சொன்னால் நான் அதை குரு தேவரிடத்தில் சொல்லித் தங்களை அவர் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்துவைக்கிறேன்’‘என்றார். அந்த ஆச்ரமத்தையே அழித்துவிடவேண்டுமென்று நினைக் கக்கூடிய அவ்வளவு கோபம் அரசனுக்கு உண்டாயிற்று. ஆனாலும் முனிவரை தரிசித்து அவரிடத்தில் சில சந்தேகங்களைச் சொல்லி, உபதேசம் பெற்றுப் போக வேண்டுமென்றே வந்தவனாகையால் கோபத்தை ஒருவாறு அடக்கிக்கொண்டு, சில நாளைக்குப் பின் ஒரு தினத்தைக் குறிப்பிட்டு அன்றைக்கு வருவதாகக் கூறி’‘நான் வந்திருந்ததாக - இந்த நாட்டு அரசன் வந்திருந் ததாக - முனிவருக்கு விவரமாகச் சொல்லி, என்னை அந்தக் குறிப்பிட்ட நாளில் வரவேற்க ஏற்பாடு செய்து வையும்’’ என்று அதிகாரமாகச் சொல்லிவிட்டு அரசன் போய் விட்டான். மன்னவன் குறிப்பிட்டுச் சொல்லிப் போன நாளுக்கு முன் ஒருநாள் அந்த சிஷ்யர் அரசன் வந்திருந்ததையும் அப்போது அவர்களுக்குள் நடந்த சம்பாஷணைகளையும் ஒன்றைவிடாமல் முனிவரிடத்தில் சொல்லி மன்னன் மறுபடியும் வருவதாகக் குறிப்பிட் டிருந்த தினத்தையும் நேரத்தையும் கூறினார். முனிவர் சிஷ்யர் சொன்னதையெல்லாம் கேட்டுவிட்டு ‘’வரட்டும்’’ என்று சொன்னார். குறித்த நாளில் குறிப்பிட்ட நேரத்தில் மறுபடியும் மன்னவன் ஆச்ரமத்தின் வாசலுக்கு வந்தான். சிஷ்யர் உடனே கதவைத் திறந்து அரசனை அழைத்துக் கொண்டு மகரிஷியின் சன்னிதானத்துக்குச் சென்றார். ஆடை ஆபரண அலங்காரங்களின் தடையினாலோ என்னமோ அரசன் முனிவரைத் தாழ்ந்து நமஸ்கரிக்காமல் நின்றபடியே வணங்கினான். முனிவர் வழக்கமாக யாரோடும் அதிகமாகப் பேசுவதில்லை. அவசியமான சமயங்களில் மட்டும்தான் மிகவும் சுருக்கமாகப் பேசுவார். பெரும்பாலும் மெளன விரதத்தையே பின்பற்றுபவர். வணக்கத்தை அங்கீகரித்த அடையாளமாகச் சமிக்கை செய்து, முனிவர் அரசனை அமரும்படி இடத்தையும் கைஜாடையால் காட்டினார். உட்காரும்போதே அரசன், ‘’நான் முன்னே வந்திருந்ததைச் சொன்னார்களா?’‘என்றார். “ஆம்” என்பதற்கு அறிகுறியாக முனிவர் தலையை அசைத்தார். ’‘நான் இந்த நாட்டை ஆளும் அரசன். தங்க ளைப்பற்றி சமீபத்தில் தான் கேள்விப் பட்டேன். தங்க ளைப் பார்ப்பதற்காகத்தான் வந்திருந்தேன்’’ என்றான் மன்னன். அதற்கும் முனிவர் அங்கீகாரம் அறிவிக்கத் தலையை அசைத்தார். ‘’நான் இங்கே வந்து ரதத்தைவிட்டு இறங்கின தைப் பார்த்துக் கொண்டிருந்தும் உங்கள் சிஷ்யர் உங்களிடம் நான் வந்ததை அறிவிக்காமல் இருந்து விட்டார்.’’ அதற்கும் முனிவர் தலையை அசைத்தார். ‘’வெகுநேரம் வெளியிலேயே நின்றுகொண்டே இருந்தேன்.’’ அதற்கும் முனிவர் தலையை ஆட்டினார். “வெகுநேரத்துக்குப் பின் வெளியில் வந்த உங்கள் சிஷ்யரை நானே கூப்பிட்டுப் பேசியும் அவர் என்னைச் சரியானபடி மதிக்கவில்லை. கதவைத் திறந்து உள்ளே வர இடங்கொடுக்காமல் வேலிக்கு வெளியிலேயே நிறுத்திப் பேசி அனுப்பி விட்டார்.’’ முனிவர் புன்முறுவல் செய்து அதற்கும் தலையை அசைத்தார். ‘’இந்த நாட்டை அரசாளும் என்னைத் தங்களுடைய சிஷ்யர் இப்படி நடத்தினது சரிதானா?’’ என்று அரசன் வருத்தப்பட்டான். முனிவர் சற்றே சிரிப்புக்குறி தவழ ‘என்ன செய்திருக்க வேண்டும்’ என்றார். ‘’ஒன்றும் செய்திருக்க வேண்டியதில்லை. ஆனாலும் என்னையும் என்னுடைய ரதத்தையும் பார்த்த உடனேயே அரசன் என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும். வந்தவனை ’வா’ என்றுகூடச் சொல்லக் கூடாதா? அல்லது எங்கே வந்தீர்கள்?‘என்றாவது உடனே கேட்டுப் போகச் சொல்லிவிட வேண்டாமா? கதவுக்கு வெளியிலேயே நின்று காத்துக் கிடக்கச் செய்து விட்டாரே’’ என்றான் அரசன். இதுவரையிலும் புன்சிரிப்போடு கேட்டு வந்த முனிவர் சற்றே வாய்விட்டுச் சிரித்து ‘’இது அரண்மனையல்லவே ஆச்ரமம்தானே?’’ என்றார். ‘’ஆச்ரமம் என்பதை அறிந்துதான் வந்தேன். இது அரண்மனை அல்லவென்றாலும் நான் அரசன் என்பதை அறிந்ததற்காகவாவது எதற்காக வந்தாய்?’ என்றுகூடவா கேட்கக் கூடாது?’’ " சரி. நம்முடைய சிஷ்யர் கேட்காதது குற்றம் தான், அவருக்குப் பதிலாக இப்போது நான் கேட்கிறேன். இங்கே எதற்காக வந்தீர்?’’ ‘’உங்களைக் கண்டு பேசி உபதேசம் பெற வந்தேன்’‘ ’‘உபதேசம் பெறவா?’’ “ஆம் உண்மையாக உபதேசம் பெறத்தான் தங் களை நாடி வந்தேன்’’ ‘’உமக்கு உபதேசம் வேண்டுமானால் நான் செத்துப் போன பிற்பாடுதான் வரவேண்டும்’’ என்றார் முனிவர். அரசன் திடுக்கிட்டு அசையாமல் சற்று நேரம் முனிவரை உற்றுப் பார்த்தான். “என்ன முனிவரே நீங்கள் செத்தபிறகா உபதேசம் செய்வீர்கள்?’’ ‘நான் செத்தபிறகுதான் உமக்கு உபதேசம்’’ ‘’அப்படியானால் நீங்கள் எனக்கு உபதேசம் செய்யமாட்டீர்களா?’’ என்று அரசன் ஆத்திரத்தோடு கேட்டான். ‘’நான் செத்தபிறகுதான்’’ என்று முனிவர் பேச்சை முடித்துவிட்டு வேறு வேலைகளை கவனிக்க வேண்டியவர் போல் எழுந்தார். அரசனும் எழுந்து, நின்றபடியே பல கேள்விகளைக் கேட்டான். அவற்றிற்கெல்லாம் முனிவர் வாய் பேசாமல் தலையை அசைத்தும் கையை ஆட்டியுமே பதில் காட்டிவிட்டார். உடனே அரசன் கோபமும் கொதிப்பும் குமுற முனிவருக்கு முறைமைக்காகவேனும் வணக்கம் சொல்லிக்கொள்ளாமல் விரைந்து வெளியே வந்து ரதத்தில் ஏறி அரண்மனையை அடைந்தான். அரசனுடைய ராஜதானிக்கும் முனிவருடைய ஆச்ரமம் அமைந்திருந்த வனத்திற்கும் வெகுதூரம். என்றாலும் அந்த அடவி அந்த அரசனுடைய ராஜ்யத்துக்குள் அடங்கியது தான். அந்த ராஜ்யத்துக்கே அதிபதியான அரசனை ஒரு ஆண்டியான முனிவன் அப்படி அவமதித்து விட்டதை லேசாக விட்டுவிட முடியுமா? அரசனுக்குக் கோபம் நிலை கொள்ள முடியாமற் செய்துவிட்டது. அந்த முனிவரைப் பற்றித் தன்னிடம் மிகவும் பெருமையாகப் பேசின முதன் மந்திரியை அழைத்து வரக் கட்டளையிட்டான். முதன் மந்திரி ஏதோ அரசாங்க அலுவலாக வெளியே போயிருப்பதாகத் தெரிந்தது. உடனே சேனாதிபதியை அழைத்துவரச் சொன்னான். சேனாதிபதி வந்தான். முனிவர் தன்னை அவமதித்துவிட்டதை அரசன் அவரிடம் சொன்னான். சேனாதிபதிக்கும் கோபம் வந்து அந்த முனிவருக்குப் புத்தி வரும்படியான காரியத்தைத் தான் செய்து வரும் வதாக அரசனுடைய அனுமதியைக் கோரினான். என்ன செய்யலாம் என்பதைப் பற்றி அரசனும் சேனாதிபதியும் பலவித ஆலோசனைகளைச் செய்து முடிப்பதற்குள் தம்மை அரசன் அவசரமாக அழைத்து வரச் சொன்னதாகக் கேள்விப்பட்ட முதல் மந்திரி அங்கே வந்து சேர்ந்தார். அரசன் மந்திரியிடத்தில் நடந்ததையெல்லாம் சொல்லி “உனக்கு உபதேசம் வேண்டுமானால் நான் செத்த பிற்பாடு வா’‘என்று என்னை இவ்வளவு அவமதித்துவிட்ட முனிவனுக்குத் தக்கபடி புத்தி கற்பிக்க வேண்டும். அவனுடைய அகங்காரத்தைப் போக்க வேண்டும்’’ என்று அரசன் துடித்து, தானும் சேனாதி பதியும் அதற்காகச் செய்த ஆலோசனைகளையும் அறியப் படுத்தினான். அரசன் பேச்சைக் கேட்ட மந்திரி அந்த முனிவரின் பெருமைகளை நன்றாக அறிந்தவரானதால் மிகவும் அதிசயப்பட்டு, அதைப்பற்றிச் சிறிது ஆலோசனை செய்து பார்க்கத் தமக்கு அவகாசம் கேட்டார். அரசன் அனுமதித்தான். மந்திரி, சேனாதிபதியை அனுப்பிவிட்டு, அரசனை ஆகாரம் உண்டு கொஞ்சம் ஓய்வு கொள்ளும்படி கேட்டுக்கொண்டு, தாமும் வீட் டுக்குப் போய்விட்டு விரைவில் வருவதாக விடை பெற்றுச் சென்றார். முதல் மந்திரியின் ஆலோசனைக்கு இடங்கொடுக்க வேண்டிய கடமைக்காகக் கட்டுப்பட்டான் என்றாலும், அரசன் தனக்கு நேர்ந்த அவமதிப்பையே நினைத்து நினைத்துப் புகைந்து கொண்டிருந்ததால் அமைதியும் கிடைக்கவில்லை, ஆகாரமும் செல்லவில்லை. உடலிலும் உள்ளத்திலும் நிம்மதி இல்லாமல் ஓய்வு கொள்ளத்தான் முடியுமா? பொங்கிப் புழுங்கிக் கொண்டு மந்திரியின் வரவை எதிர்பார்த்திருந்தான். ஆலோசனை செய்து நல்ல முடிவுக்கு வந்துவிட்டவர்போல் மலர்ந்த முகத்தோடு மந்திரி வந்தார். அவருடைய ஆலோசனையின் முடிவை அறிய அரசன் மிகவும் அசரப்பட்டான். அரசனை ஏகாந்தமான ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்று, அரசன் முனிவரைச் சந்திக்க ஆரம்பித்ததிலிருந்து கடைசி வரையி லும் அவர்களுக்குள் நடந்த சம்பாஷணையை முடிந்த வரையில் ஒரு வார்த்தையைக்கூட விடாமல் அப்ப டியே சொல்ல வேண்டு மென்று மந்திரி கேட்டுக்கொண் டார். மன்னனும் தன்னால் கூடின மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக நினைவுகூட்டி முதல் தடவை ஆச்ரமத்துக்குப் போனது முதல் நடந்ததையெல்லாம் சொன்னான். அரசன் சொல்லச் சொல்ல அமைச்சனுக்கு ஆனந்தம் பொங்கிவிட்டது. மன்னன் சொல்லி முடிந்ததும் மந்திரி வணங்கி நின்று “அரசே முனிவர், தங்களுக்கு உபதேசம் செய்ய விரும்புவதாகத்தானே சொல்லியிருக்கிறார்.’’ ‘என்ன மந்திரி! நீரும் ஏளனமா செய்கிறீர். ’உமக்கு உபதேசம் வேண்டுமானால் நான் செத்த பிற் பாடு வா’ என்று அவர் சொன்னது இன்னும் என் காதில் ஒலித்து என் நெஞ்சைப் பிளக்கிறது. நீர் ‘அவர் எனக்கு உபதேசம் செய்யத்தான் விரும்புகிறார்’ என்று சொல்லுகிறீரே!’’ ‘’அரசே மிகவும் தயவுகூர்ந்து அமைதியாகக் கேட்கவேண்டும். ஒரு குருவை நாடி ஞானோபதேசம் பெறவேணுமானால் அதற்குச் சில நிபந்தனைகள் உண்டு. ராஜரீகம் நடத்துவது வேறு, ஞான உபதேசம் பெறுவது வேறு அல்லவா?’’ ‘’ஆம்’’ ’’அரசு செலுத்துவது அதிகாரம் செய்து மற்றவர்களை நம் ஆணைக்கு அடங்கி நடக்கச் செய்வது. ஆனால் உபதேசம் பெறுவது நாம் அதிகாரி என்பதை முற்றிலும் மறந்துவிட்டு குருவுக்கு அடங்கி நடப்பது. அல்லவா? ‘’அதை யார் இல்லையென்றது?’’ ‘’தயவு செய்து பொறுத்துக் கேளுங்கள். தாங்கள் முனிவரைப் பார்க்க முதல் தடவை ஆச்ரமத்துக்குச் சென்று அங்கிருந்த சிஷ்யரோடு பேசின போதும் இன்றைக்கு முனிவரோடு அதைப் பற்றிக் குறைகூறிக் கொண்டபோதும் அரசன் என்ற அதிகாரத்தோடுதான் பேசியிருக்கிறீர்கள். ’நான் யார் தெரியுமா’ – ‘நான் வந்திருப்பதாகச் சொல் - அரசன் வந்திருக்கிறதாகச் சொல்லு’ - ‘நான் வந்திருந்ததை சொன்னார்களா’…….." நான் - நான் - நான்’ என்றும் அரசன் - அரசன் - அரசன்’ என்றுமே பேசியிருக்கிறீர்கள். அன்றியும் தாங்கள் முனிவரை முதல் முதல் சந்தித்தபோது அவரை வணங்கவேண்டிய முறையில் வணங்கவும் இல்லை. அதனால் ‘நான்’ என்ற அகங்காரமும் ‘மன்னன்’ என்ற மமகாரமும் கொஞ்சங்கூடக் குறையவில்லை - என்பதைச் சுட்டிக்காட்டி, அகங்கார மமகாரங்கள் அடங்கின பிறகுதான் ஆன்ம ஞானோபதேசத்துக்கு ஒருவன் அருகதை-யுடையவன் ஆக முடியும் என்பதையும் இடித்துக் கூறவே ‘உமக்கு உபதேசம் வேண்டுமானால் ’நான்’ செத்த பிற்பாடு வரவேண்டும்’‘என்று சொல்லியிருக்கிறார். ’நான் செத்த பிறகு’ என்பதற்கு முனிவர் செத்த பிறகு’ என்று அர்த்தமல்ல. உங்களிடத்திலுள்ள ‘நான்’ என்ற அகந்தை அழிந்த பிறகு என்றுதான் அர்த்தம். ஆதலால் அரசே! தாங்கள் மன்னவன் என்பதை முற்றிலும் மறந்துவிட்டு ஒரு குருவினிடத்தில் உபதேசம் கேட்கப் போகிற சிஷ்யனுக்கு அத்யாவசியமான அடக்க ஒடுக்கத்துடனும் பணிவு தணிவுகளுடனும் வரவேண்டும் என்று உங்களுக்கு உபதேசம் செய்ய வேண்டிய முதல் பாடத்தை இப்போதே முனிவர் உபதேசித்துவிட்டார்’’ என்றார் மகா புத்திசாலியான மந்திரி . மந்திரி சொன்ன அறிவுரையை அங்காந்து கேட்டுக்கொண்டிருந்த மன்னன் கோபத்தை விடுத்து மதி தெளிந்தவனாகி உண்மையில் உபதேசம் கேட்டுக் கொண்ட சிஷ்யனைப் போலவே தான்’ என்ற அகங்காரம் தணிந்துவிட்டவன் ஆயினான். பிறகு போகவேண்டிய முறையில் போய், வணங்கவேண்டிய முறையில் வணங்கி, அதே முனிவரிடத்தில் அதே அரசன் கேட்கவேண்டிய முறையில் ஞானோப தேசத்தைக் கேட்டுக்கொண்டதாகக் கதை. புது முறையில் சொல்லப்பட்டிருந்தாலும் இந்தக் கதை மிகவும் பழங்கதைதான். இந்தக் கதையின் போதனை என்ன வென்றால்: ‘தான்’ என்ற அகந்தையை விடாமல் ஆன்மஞானம் அடைய முடியாது என்பது தான். இந்தக் கருத்தை எத்தனையோ தமிழ்ப் புலவர்கள் வெவ்வேறு விதங்களில் பாடியிருக்-கிறார்கள். மிகவும் தெளிவாக, எளிய பதங்களில் பாடிப் பரப்ப வேண்டிய இந்த வெகு பிரயோசனமான கருத்தையும் வெறும் கவிபுனையும் கலைத்திறத்தை எண்ணி ஒரு சித்தர் எப்படிப் பாடியிருக்கிறார் என்பதைப் பாருங்கள். பழங்காலத்துப் பாடல்களில் சித்தர்கள் பாடல்கள்’ என்று பதினெட்டு சித்தர்கள் பாடிய ஞான மார்க்கப் பாட்டுக்கள் இருக்கின்றன. அந்தச் சித்தர்களுக்குள் குதம்பைச் சித்தர் என்று ஒருவர். அவர், - தாவாரம் இல்லை தனக்கொரு வீடில்லை தேவாரம் ஏதுக்கடி ? - குதம்பாய்! தேவாரம் ஏதுக்கடி ? என்று பாடியிருக்கிறார். இதில் அவர் அடக்கியிருக்கிற நல்ல அறிவை இந்தப் பாட்டைப் படிக்கிற சிலர் அறியமுடியாது. சாதாரண ஜனங்கள் மட்டுமல்ல, இதன் உட்பொருளை ஏற்கனவே அறியாத நல்ல படிப்பாளிகளும் கூட, இந்தப் பாட்டில் என்ன அர்த்தம் கொள்ளுவார்கள் என்றால் :-‘தனக்கென்று ஒரு வீடில்லாதவனுக்கு, அல்லது ஒரு தாழ்வாரம் கூடத்தனக்கென்று சொந்தமாக இல்லாத ஒருவனுக்கு தேவாரம் முதலிய தெய்வத் தோத்திரங்கள் ஏதுக்கு?’ என்று தான் அர்த்தம் கொள்ளுவார்கள். ‘தேவாரம்’ என்றால் குறிப்பாக நால்வர் பாடிய தோத்திரப் பாடல்களையும் பொதுவாக ‘தோத்திரம்’ என்ற பொருளையும் குறிக்கிறது. அதனால் ஒரு வீடாவது ஒரு தாழ்வாரமாவது தனக்கென்று இல்லாதவனுக்கு தெய்வத் தோத்திரத்தால் என்ன பலன்?‘என்பதுதான் இதில் தோன்றுகின்றது. அப்படியானால் வீடுவாசல் இல்லாதவனுக்கு பக்திப் பாட்டுக்களால் பயனில்லை என்று தான் இந்தப் பாட்டில் சொல்லப்பட்டிருப்பதாக எல்லாரும் எண்ணுவார்கள். ’என்ன ! ஒரு சித்தர்! தெய்வபக்தி வேண்டும் என்றே எவ்வளவோ வேதாந்தக் கருத்துக்களை வேறு பல பாடல்களில் விரிவாகச் சொல்லியிருக்கிற இவர், வீடுவாசல் இல்லாதவனுக்கு தெய்வத் தோத்திரம் எதற்காக என்றா சொல்லுவார்?’ என்று சிந்திக்கப் புகுந்தால்தான் இந்தப் பாட்டின் உண்மையான அர்த்தத்தை அறிய ஆசைவரும். அப்படிச் சிந் திக்கப் போகிறவர்கள் வெகு சிலரே. சிந்தனை செய்து பார்ப்போம் : ‘தா’ என்ற தனி எழுத்துக்குத் தமிழில் ‘துன்பம்’ என்று அர்த்தம். இந்த அர்த்தம் இப்போதும் வழக்கத்தில் இருந்து வரு கிறது. அதை நாம் கவனிப்பதில்லை. ‘தாவில்லை’ என்று சொன்னால் ‘துன்பமில்லை’ அல்லது ‘பாதக மில்லை’ என்பது பொருள். இந்த ‘தாவில்லை’ என்ற சொல்லை தமிழ் நாட்டின் தென் பகுதிகளில் இன்னும் அப்படியே ‘தாவில்லை’ என்றுதான் உச்சரிக்கிறார்கள். தமிழ்நாட்டின் வடபாகங்களில் இந்த ‘தாவில்லை’ என்ற சொல் ‘தேவில்லை’ என்று திரிந்து, இப்போது ‘தேவலை’ என்றும் மாறிவிட்டது. சரியான பதம் ‘தாவில்லை’ என்பதுதான். தா + இல்லை என்பது கூடும் பொழுது தாவில்லை’ என்று ஆகிறது. ‘தா’ என்றால் துன்பம்’ என்பதை இந்தச் சொல்லில் எளிதில் காணலாம். இனி, வாரம்’ என்றால் ‘பங்கு’ என்பது பொருள். இந்த அர்த்தத்தை ‘’என் நிலத்தை வாரத்துக்கு விட்டு விட்டேன்’’ என்று விளைநிலங்களுக்குச் சொந்தக்காரர்கள் சொல்லுவதை அடிக்கடி நாம் கேட்கிறோம். வாரத்துக்கு விடுவது என்றால் பங்குக்கு விடுவது என்று பொருள். அதாவது விளைச்சலில் சரி பங்கு உழுபவன் நிலத்தின் சொந்தக்காரருக்குக் கொடுப்பது என்ற ஒப்பந்தத்தில் விடுவது. இதனால் வாரம்’ என்பதற்கு ‘பங்கு’ என்பது இன்னும் பழக்கத்தில் இருந்து வருகிற அர்த்தம். அதன்பிறகு ‘தனக்கு’ என்ற பதத்துக்கு இங்கே ‘தான்’ என்ற அகங்காரம் என்றும் தன்னலம் என் றும் பொருள் ஆகும். ‘வீடு’ என்பதற்கு ‘விடுபடுவது’ அல்லது ‘விடுதலை’ என்பது அர்த்தம். ‘தேவாரம்’ என்றால் ‘தோத்திரம் பாடுவது’ என்று அர்த்தம். கொள்ளவேண்டும். ‘குதம்பை’ என்றால் ஆபரணம், அதனால் ‘குதம் பாய்!’ என்றால் ஆபரணங்களை அணிந்த பெண்ணே !’ என்பது தமிழ் வழக்கம். இப்போது பாட்டைக் கவனிப்போம். பதத்துக்குப் பதம் மேலே சொன்ன அர்த்தத்தை அமைத்துப் பார்ப்போம். - தாவாரம் இல்லை தனக்கு ஒரு வீடில்லை தேவாரம் ஏதுக்கடி ? - குதம்பாய் ! தேவாரம் ஏதுக்கடி ? துன்பம் பங்கில்லை. ‘தனக்கு’ (என்ற தன்னலம்) ஒரு விதத்திலும் விடுபடவில்லை. தேவாரம் என்னத்திற்காக? பெண்ணே! தேவாரம் என்னத்துக்கு ? இந்த அர்த்தத்தை வைத்துக் கொண்டு கொஞ்சம் ஆழ்ந்து எண்ணிப் பாருங்கள். சித்தருடைய சித்தம் நன் றாகத்தெரியும். சித்தர் என்ன சொல்லுகிறார் என்றால், ‘’பெண்ணே ! பிறருடைய துன்பங்களில் இரக்கம் கொண்டு அந்தத் துன்பத்தில் தானும் பங்குகொண்டு கருணை காட்டாமலும், எந்த நலத்தையும் ’தனக்கு’ ‘தனக்கு’ என்று அலைகிற தன்னலப் பற்றையும் அகந்தையையும் ஒருதரங்கூட விட்டுவிட மனமில்லாமலும் சும்மா தேவாரத்தை மட்டும் சொல்லிவிடுவதால் என்ன பயன்?’’ என்று தான் சித்தர் சொல்லுகின்றார் என்பது தெளிவாகின்றது. ‘பிறருக்கு’ நேரிட்ட துன்பங்களில் பங்குகொண்டு உதவி செய்வதும், ‘தான்’ ‘தனக்கு என்ற அகங்காரத்தையும் ஆசையையும் விட்டுவிடுவதும் தான் உண்மையான தெய்வ பக்தியாகுமே அல்லாமல் வெறும் தோத்திரங்களைப் பாடி விடுவது மட்டும் பக்தியாகிவிட மாட்டாது’ என்ற வெகு உயர்ந்த ஞானத்தை உபதேசிக்கிற இந்தப் பாட்டைப் பார்ப்பதற்கு வேறு பொருள் படும்படியாக, வேண்டுமென்றே செய்தது கவிபுனைவதில் ஒருவித கலைத்திறத்தைக் காட்டவே. இவருடைய பாட்டுக்களில் இன்னொரு அருமையான பாடலைப் பாருங்கள். - மாங்காய்ப் பால் உண்டு மலைமேல் இருப்பார்க்கு தேங்காய்ப் பால் ஏதுக்கடி ? - குதம்பாய்! தேங்காய்ப் பால் ஏதுக்கடி ? இதுவும் மேலாகப் பார்த்தால் புரியாது. முன்னே சொன்ன பாட்டிலாவது மேலாகப் பார்க்கிறபோது ஏதோ கொஞ்சம் அர்த்தம் இருக்கிற மாதிரி தோன்றியது. ‘ஒரு தாழ்வாரம் கூட இல்லாமல், தனக்கு என்று ஒரு வீடுகூட இல்லாமல் வெறும் தேவாரம் பாடி மட்டும் என்ன பயன்’ என்று தோன்றிய அர்த்தத்தில் ‘மக்கள் வெறும் தேவாரத்தைப் பாடிக்கொண்டே இருந்துவிடாமல் தங்களுக்கென்று ஒரு வீடு வாசலை யாவது சம்பாதித்துக் கொள்ளவேண்டும்’ என்று சித்தர் நல்ல புத்திதான் சொல்லுகிறாராக்கும் என்று எண்ணிவிடவாவது இடமிருந்தது. இந்தப் பாட்டில் அப்படிக் கூட ஒரு வேறு அர்த்தம் பண்ணிக்கொள்ள முடியவில்லை. மாங்காய்ப் பாலாம் ! அதை உண்பார்களாம்! அவர்கள் மலைமேல் இருப்பவர்களாம்! அவர்களுக்குத் தேங்காய்ப்பால் எதற்காக? என்பதில் என்ன வேறு அர்த்தமாவது செய்யமுடிகிறது? ஒன்றும் விளங்க வில்லை. ஆனால் சித்தர் இதை அர்த்தமில்லாமல் பாடியிருக்கமாட்டார். பார்க்கலாம். நமது நாட்டில் எத்தனையோ காவியணிந்த துறவிகளையும் காஷாயமில்லாத சாமியார்களையும் காண்கிறோம். அவர்களில் பெரும்பாலோரும் வெறும் பிச்சைக்காரர்கள். சிலர்தான் துறவி பூண்டவர்கள். அதிலும் வெகு சிலர்தான் உண்மைத் துறவிகள். இந்தப் பெரும்பாலோரான பிச்சைக்காரச் சாமியார்களும் உண்மைத் துறவிகள் போலவும் யோகிகள் போலவும் நடிப்பார்கள். அவர்களில் சிலர் ‘பங்கி’ யடித்து மயங்குவதையும் சிலர் கஞ்சா குடித்து வெறிப்பதையும் பலர் கள்ளுண்டு உருளுவதையும் நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். ‘என்ன சாமியாரே! எதற்காகக் கஞ்சா குடிக்கிறீர்?’‘என்று கேட்டால் அதற்கு அவர்’‘கஞ்சா நாமா குடிக்கிறோம்? இந்தக் கட்டை குடிக்கிறது. கஞ்சா குடித்தால் கடவுளைக் காணலாம்’’ என்பார். “பங்கியடிப்பதால் பயன் என்ன சாமியாரே?‘’ என்று கேட்டால்’‘நாமா பங்கியடிக்கிறோம், இந்தக் கட்டை பங்கியடிக்கிறது. பங்கியடிப்பது பரமாத்மாவைப் பார்க்கத்தான்’’ என்பார். ‘’ஏன் சாமியாரே! என்னென்னமோ வேதாந்தம் பேசுகிறீர்? காவி உடுத்து, கமண்டலம் ஏந்தி, விபூதி பூசிக்கொண்டு ருத்ராக்ஷம் போட்டுக்கொண்டு கள்ளைக் குடிக்கலாமா?’ என்றால், ‘’கள்ளை நாமா குடிக்கிறோம்? இந்தக் கட்டை எதைக் குடித்தால் நமக்கென்ன? இந்தக் கட்டை கள்ளைக் குடிப்பது நாம் சித்தத்தை நிறுத்தி சிவனைக் காணத்தான்’’ என்பார். இமயம் முதல் குமரிவரை இப்படிப் பேச்சை எங்கே வேணுமானாலும் இந்த நாட்டின் எந்த பாஷையிலானாலும் கேட்கலாம். இதன் ரகசியம் என்னவென்றால்: நமது முன்னோர்கள் கடவுளைத் தேடும் முயற்சிகளில் மிகவும் கருத்துள்ளவர்கள். கடவுளை அறிவதற்கு அவர்கள் நான்குவித யோகங்களை வகுத்துச் சொல்லியிருக்-கிறார்கள். அவை பக்தியோகம், கர்ம யோகம், ராஜயோகம், ஞானயோகம் என்பன. யோகம் என்றால் சாதனையான முயற்சி என்று அர்த்தம். இந்த நான்கு யோகங்களில் ராஜயோகம் என்பது பலவித தேகாப்பியாசங்களைப் பழகி, தேகத்தை வசப்படுத்திக் கொண்டு, ஐம்புல ஆசைகளை அடக்கி, மனசை ஒரு நிலையில் ஏகாக்ரப்படுத்தி, ஆன்ம தரிசனத்தை அடைய முயல்வது. இந்த முறையில் ஆன்ம தரிசனம் மட்டுமல்லாமல் வேறு பல சித்திகளையும் பெறமுடியும் என்பது சாஸ்திரம். இந்த யோக மார்க்கத்தில் ‘சமாதி நிலை’ என்ற ஒரு அப்யாசம் உண்டு. அந்த அப்யாசத்தால் யோகியானவன் தன் உடலையும் உலகத்தையும் முற்றிலும் மறந்தவனாகி ஜீவான்மாவை வயப்படுத்தி பரமான்மாவோடு ஒன்றுபட்டு நிற்கமுடியும் என்பது பரம்பரையான நம்பிக்கை. பரமாத்மாவை அனுபவிக்க உதவக்கூடிய மார்க்கம் என்பதோடு, தபோபலம், நோயின்மை, ஆயுள் விருத்தி, காயசித்தி முதலான அரிய சித்திகளையும் அடைய முடியும் என்ற நம்பிக்கையினால் இந்தக் கஷ்டமான ராஜ யோகத்தை மிகச் சிறந்த யோகமாகத் தவசிகள் மேற்கொள்ளுவார்கள். நோயின்மை : ஆயுள் விருத்தி முதலான சித்திகளைப்பெற அனுகூலமாக இருக்கும் என்று ராஜயோக அப்பியாசம் செய்கிறவர்கள் இந்த யோக முயற்சிகளோடு வைத்திய சாஸ்திரத்தின் பகுதியான மூலிகைகளின் மர்மங்கள் கல்பம் செய்கிற முறைகள் முதலியவற்றையும் பழகலானார்கள். கொஞ்சம் கொஞ்சமாக ரஸவாதம் செய்கிற ரகசிய முயற்சிகளும் இந்த யோகிகளை ஒட்டிக் கொண்டன. ஆகையினால் வைத்தியத்தையும் ரஸவாதத்தையும் (ரஸவாதம் என்றால் செம்பைத் தங்கமாக மாற்றுவது போன்ற காரியங்கள்) காட்டி ஊராரை ஏமாற்றி ஜீவனம் செய்வதற்கு இந்த ராஜயோகம் தான் பொய்த் துறவிகளுக்கும் சோம்பேறிச் சாமியார்களுக்கும் மிகவும் சாதகமானது. இந்த மோசக்காரப் போலிச் சன்யாசிகள் தான் பங்கியடிப்பதும் கஞ்சா புகைப்பதும் கள்ளுண்பதும் ‘சித்தத்தை நிறுத்திச் சிவத்தைக் காண’‘என்று சொல்லித் திரிவார்கள். இந்தச் சாமியார்கள் பொய்யர்களானாலும் ராஜயோகம் என்பது பொய்யுமல்ல, பிறரை ஏய்த்து வாழ ஏற்பட்டதும் அல்ல. அந்த ராஜயோகத்தில் சொல்லப்படுகிற ’சித்தத்தை நிறுத்திச் சிவத்தைக் காண்பது’ என்ற தத்துவமும் பிறரை ஏமாற்றுவதல்ல. ரஸவாதம் என்பது உண்மை என்றுதான் ஊகிக்க இடமிருக்கிறது. ‘மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்பார்க்குதேங்காய்ப்பால் ஏதுக்கடி’ என்ற பாட்டுக்கு அர்த்தத்தை அறிய நாம் கவனிக்கவேண்டிய விஷயம் இதில் எதுவென்றால் சித்தத்தை நிறுத்திச் சிவத்தைக் காண்பது’ என்பதுதான். ராஜயோகத்தின் வெகு முக்கியமான நோக்கம் எதுவெனில் சமாதி நிலை. சமாதி என்பது நிஷ்டையின் முதிர்ந்த நிலை. அலைந்து கொண்டே இருக்கிற மனசை ஒரே குறிப்பில் ஏகாந்தப்படுத்தி உடலைப் பற்றிய உணர்ச்சி இல்லாமல் கண்களை மூடிக்கொண்டு மூச்சை அடக்கி மற்ற இந்திரியங்களுக்கும் வேலையில்லாமல் உள்ளுக்குள்ளேயே பரமாத்மா என்னும் ஒரு ஜோதியைக் காண முயன்று தியானத்தில் இருப்பது. இப்படிப்பட்ட சமாதிநிலையில் லயித்துவிட்டவர்களுக்கு அந்த நிலை கலைகிற வரையிலும் பசி, தாகம், வலி, களைப்பு முதலிய எந்தவித உபாதையும் இருக்காது. இந்த நிலையிலேயே ஒரு நாள் இரண்டு நாள் அல்ல பல நாள்கள் பல வாரங்கள் பல மாதங்கள் கூட இருந்து விடுவது உண்டு. அந்தக் காலத்தில் ஒரு கல் அல்லது கட்டை போலத்தான் இருப்பார்கள். மூச்சு விடுவது கூட உண்டோ இல்லையோ என்று எண்ணும் படியாக இருக்கும். அந்தச் சமாதி நிலையில் இருக்கும் போது உணவில்லாமல் எப்படி இருக்கமுடியும் என்றால் அது தான் உண்மையான ராஜயோகத்தின் ரகசியம். (அந்த ரகசியத்தை விளக்க முயல்வது வீண். அப்படி விளக்கவேண்டியதும் இப்போது அவசியம் இல்லை. அதை விளக்கிச் சொல்லுவதற்கும் அதைப் பற்றிய படிப்பு மட்டும் போதாது, பழக்கமும் வேண்டும்.) ஆனாலும் ஆகாரம் இல்லாமல் எப்படி உயிரோ டிருக்க முடியும் என்பதைப்பற்றி யோக சாஸ்திரம் சொல்லுகிற நியாயங்களைச் சற்று நினைக்க வேண்டியது தான். அந்த நியாயங்கள் என்னவென்றால் : சமாதியில் இருக்கிற ஒரு யோகி சமாதிக்காக அமர்வதற்குமுன் அந்த யோக சாஸ்திரத்தின் சட்டதிட்டங்களில் விதிக்கப் பட்டிருக்கிறபடி தன்னுடைய குடலிலும் நீர்ப்பையில்லும் மலமோ மூத்திரமோ மிச்சமில்லாதபடி சுத்தப் படுத்திக்கொண்டுதான் நிஷ்டையை ஆரம்பிப்பான். அதனால் மல மூத்திர உபாதைகள் உண்டாகா. பின் உணவுக்கு என்ன வழியென்றால், அதே யோக சாஸ்திரத்தின் விதிகளின்படி, அந்த யோகியின் உடலில் ஏற்கெனவே இருக்கிற ஜீவசத்துக்களே உணவுபோல் உதவி மூளையிலிருந்து குண்டலிப்பால்’ என்று யோக சாஸ்திரம் சொல்லுகின்ற ஒருவித ரஸம் ரத்தாசயமான இதயத்துக்கு வந்து ரத்தம் போல் ஓடி உணவும் நீரும் செய்கிற வேலைகளைச் செய்து உடலையும் உயிரையும் பாதுகாக்கிறதாம். இந்த ஜீவசத்தான அமுதத்தில் ஆகாரத்திலும் தண்ணீரிலும் உள்ள அசத்துகள் சிறிதும் இல்லாததால் மலமோ ஜலமோ கழியவேண் டிய அவசியமே இல்லையென்பது யோக சாஸ்திரம் மலஜலமாக உடலைவிட்டு வெளியே போய் குறைந்து போகிற பொருள் அல்ல அந்த ’குண்டலிப்பால். திருப்பித் திருப்பி அதே சத்து அமுதமாகவும் ரத்த மாகவும் மாறி மாறி ஓடிக் குறையாமல் இருப்பதால் அடுத்தடுத்து ஆகாரம் போடவேண்டிய அவசியமும் அற்றுப் போகிறது. அப்படிப்பட்ட சமாதியில் அநேக நாட்கள், அநேக மாதங்களும் (அநேக வருஷங்கள் கூட) வசித்திருந்த வர்கள் எத்தனையோ பேர் இந்த நாட்டில் இருந்திருகிறார்கள் என்று கேட்கிறோம். அந்தச் சமாதி நிலையில் இருக்கும்போது அவர்களுடைய உடலுக்கு என்ன நேர்ந்தாலும் அவர்களுக்குத் தெரியாது. அப்படி சமாதியில் உயிரற்ற உடல்போல் இருந்த தாயுமான வரைப் பிணமாக்குமென்று தவறாக நினைத்துத் தகனம் செய்யும்போது, பாதி உடல் வெந்து போன பிற சமாதி கலைந்து விழித்துப் பார்த்து நெருப்பில் இட்ட வரைச் சபித்ததாகச் சொல்லப்படுகிறது. இதைப் பொய்க்கதை என்று புறக்கணித்துவிட்டாலும் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றிய உண்மையான சரித்திரமாக நேரில் கண்டவர்கள் எழுதி வைத்தும் பல இடங்களில் சொல்லியும் இருக்கிறதான ஒரு நிகழ்ச்சி உண்டு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சமீப காலத்தில் தோன்றிய ஞானிகளில் சமானமற்றவர் என்பது உலகப் பிரசித்தமானது. அவருடைய அபூர்வ உபதேசங்களை ஐரோப்பியர்களும் அறிந்து அதிசயித்திருக்கிறார்கள். அவரை தரிசித்துப் போக உலகத்தின் எல்லா நாடுகளிலிருந்தும் அறிஞர்கள் வந்து போவது வழக்கம். அவருடைய வேதாந்த மார்க்கத்தில் நம்பிக்கை இல்லாதவர்களும்கூட அவருடைய புகழைக் கேள்விப் பட்டு வெறும் வேடிக்கை பார்க்கவென்றாவது வருவார்கள். (பிற்காலத்தில் அவருடைய பிரதம சிஷ்யராகி அவரைப்பற்றி உலகமெல்லாம் சுற்றிப் பிரசாரம் செய்த ஸ்ரீ விவேகானந்த சுவாமிகளும்கூட அவருடைய தத்துவங்களை நெடுநாள்வரை ஏளனம் செய்து கொண்டிருந்தவர் தான். அவரும் ‘இந்த ராமகிருஷ்ணரிடத்தில் என்னதான் மகிமை இருக்கிறது, இவரை தரிசிக்க இப்படி ஏராளமான ஜனங்கள் போகிறார்கள்? இவற்றைக் கண்டறிவோம்’ என்று வேடிக்கை யாகத்தான் முதல் முதல் வந்தார். வந்தவர், விவரிக்கமுடியாத ஏதோ ஒரு ப்ரேமை உண்டாகி, அவரிடத்திலேயே தங்கிவிட்டார் என்பது சரித்திரம்). அப்படி ராமகிருஷ்ணருடைய தத்துவங்களில் சிறிதும் நம்பிக்கையில்லாத ஒருவர் ஒருநாள் அவரைக் கண்டு பேச வந்தார். அவர் வந்த சமயம் ஸ்ரீ ராமகிருஷ்ணர் நிஷ்டையில் இருந்த நேரம். ஸ்ரீராமகிருஷ்ணர் சமாதி யோகத்தில் சாதனை பெற்றவர். பல நாட்கள் சமாதியில் இருந்துவிடுவர். அவரைப் பார்க்க வந்தவர், அந்த மடத்திலிருந்த சிஷ்யர்களிடத்தில் தாம் வந்த காரியத்தை அறிவித்தார். சிஷ்யர்கள் பரமஹம்ஸர் சமாதியில் அமர்ந்திருப்பதாகவும் அவரைப் பார்க்க முடியாதென்றும் சொன்னார்கள். அப்படியானால் மறுபடியும் எப்போது பார்க்கலாம் என்று வந்தவர் கேட்டார். நிஷ்டை கலைய எத்தனை நாள் ஆகுமோ எவராலும் சொல்லமுடியாது என்று சிஷ்யர்கள் சொன்னார்கள். நிஷ்டை கலைய அநேக தினங்கள் ஆகலாம் என்று சொன்னதைக் கேட்டு அதிசயப் பட்டார் வந்தவர். அந்த நிஷ்டையைப் பற்றிய விவரங்களை விசாரித்தார். வந்தவர் மதிக்கத் தகுந்த மனிதராக இருந்ததைக் கண்டு சிஷ்யர்களும் நிஷ்டையின் மர்மங்களைப்பற்றிப் பேசினார்கள். நிஷ்டையில் இருக்கிறவர்களுக்கு உடலைப் பற்றிய உணர்ச்சியே இருக்காது என்பதைக் கேட்டு அப்படி நிஷ்டை செய்கிறவர்கள் இந்தக் காலத்திலும் இருக்கிறார்களா?’ என்று தமக்குள்ளேயே எண்ணிக்கொண்டு பேச்சை முடித்த பின் அந்த ஆச்ரமத்தைச் சுற்றிப் பார்க்க ஆசைகொண்டு அந்தப் புதுமனிதர் நிதானமாக அதையும் இதையும் நின்று நின்று பார்த்துக் கொண்டிருந்தார். பார்க்கட்டும் என்று விட்டுவிட்டு சிஷ்யர்கள் அவரவர்களுடைய அலுவல்களைக் கவனிக்கப் போய் விட்டார்கள். ஆச்ரமத்தின் எல்லாப் பகுதிகளையும் பார்வை யிட்டுக்கொண்டு வந்த அந்தப் புது மனிதர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் நிஷ்டையில் அமர்ந்திருந்த அறையண்டை வந்தார். பரமஹம்ஸரைப் பார்த்தார். அவர் ஒரு கற்சிலைபோல அசையாது இருப்பதை அறிந்தார். கொஞ்சங் கொஞ்சமாக அருகில் சென்றார். சுற்று முற்றும் பார்த்தார். அருகில் சீடர்கள் யாரும் இல்லை. கொஞ்சம் இருமினார், கனைத்தார். அந்த ஓசைகள் நிஷ்டையில் இருந்தவரை ஒன்றும் செய்யவில்லை. வந்தவருக்கு உடனே ஒரு ஆசை உதித்தது. நிஷ்டையில் இருப்பவர்களுக்கு உடலைப் பற்றிய உணர்ச்சிகளே இருக்காது என்பதன் உண்மையைப் பரிசோதனை செய்து பார்த்துவிட வேணும் என்று. அது குளிர்காலம். குளிர் காலத்தில் கல்கத்தா பிரதேசத்தில் எந்த இடத்திலும் கனப்புச் சட்டிகள் இருக்கும். நாலா பக்கமும் நன்றாகப் பார்த்து எவரும் பக்கத்தில் இல்லையென்று தெரிந்து கொண்டு அந்த மனிதர் சிறிது தூரத்தில் இருந்த கனப்புச் சட்டியில் இருந்த ஒரு நெருப்புத் துண்டை எடுத்து வந்து பழி பாவத்துக்கும் பயப்படாமல் பத்மாஸனமாக வீற்றி -ருந்த பரமஹம்ஸருடைய வலது துடையில் வைத்து விட்டு எட்டச் சென்று மறைந்து கொண்டார். நெருப்பின் சூட்டினால் நிஷ்டை உடனே கலைந்து அந்தத் தணல் துண்டை அவர் தள்ளிவிடலாம், பிறகு அவரைக் கண்டு பேசலாம் என்றுகூட அந்த மனிதர் எண்ணியிருக்கக்கூடும். தூரத்தில் மறைந்திருந்து வெகு நேரம் காத்திருந்தார் அந்த மனிதர். நெருப்புச் சுட்டு விட்டதாகவோ நிஷ்டை கலைந்துவிட்டதாகவோ அனுமானிக்கத்தக்க அறிகுறிகள் காணப்படவில்லை. பார்த்தான் அந்தப் பரிசோதகன். ஆசையும் அச்சமும் அடுத்தடுத்துத் தள்ள மெதுவாக நடந்து, வேறு எதையோ பார்க்கப் போவது போல் பாவனை செய்து மீண்டும் ஸ்ரீ ராமகிருஷ்ணர் அமர்ந்திருந்த அறைக்கு நேராக வந்து ஒன்றும் அறியாதவனைப் போல் திரும்பிப் பார்த்தான். ஸ்ரீ ராமகிருஷ்ணர் முன் போலவே கல்சிலை போல் இருப்பதைக் கண்டான். அருகிற் சென்று தான் வைத்த நெருப்புத் துண்டு என்னவாயிற்று என்று பார்க்க எண்ணி அறைக்கு அருகிற் போகும் சமயத்தில் அங்கே வந்த சிஷ்யர் ஒருவர் இந்த மனிதரைக் கையைப் பிடித்து எட்ட, அழைத்துக்கொண்டு போய் “பாபு! அந்த அறைக்கு யாரும் போகக் கூடாது’’ என்றாராம். தப்பினோம் பிழைத்தோம் என்று அந்த மனிதர் போய்விட்டாராம். ஐந்தாறு தினங்களுக்குப்பின் ஸ்ரீராமகிருஷ்ணரின் யோகம் கலைந்தது. நிஷ்டை கலைந்த உடன் உடலைப் பற்றிய உணர்ச்சிகள் வந்துவிடும். அதனால் வலது காலில் ஒரு வலி உண்டாவதை உணர்ந்தார். வலி உண்டான இடத்தைத் தொட்டுப் பார்த்தார். அங்கே என்னமோ கடினமான பதார்த்தம் கையில் பட்டது. அந்த அறை அதிக வெளிச்சமில்லாத அறை. (யோகிகள் வெளிச்சமில்லாத அறையில் தான் நிஷ்டை யில் உட்காருவார்கள்) கையிற் பட்டது என்னவென்று தெரியவில்லை. சிஷ்யர்களைக் கூப்பிட்டார். அவர்கள் வந்து பார்த்தார்கள். ஒரு நெருப்புக் கரித்துண்டு நிணத்தில் ஊறியிருப்பதைக் கண்டு, யாரோ துடையில் நெருப்புத் துண்டை வைத்திருக்கிறார்கள் என்று கண்டு துணுக்குற்றார்கள். ஆலோசித்துப் பார்த்த பொழுது ஐந்தாறு நாட்களுக்கு முன்னால் வெகு பெரிய மனிதனைப் போல் வந்த புது மனிதர் பேசின பேச்சுக்களாலும் நிஷ்டையைப் பற்றிக் கேட்ட கேள்விகளாலும் அவர் வெகு நேரம் ஆச்ரமத்தில் அதையும் இதையும் பார்க்க விரும்பினவர்போல நடந்துகொண்ட பாவனை களாலும் கடைசியாக அவரை ஒரு சிஷ்யர், பரமஹம்ஸர் நிஷ்டை அறைக்கு பக்கமாகப் பார்த்து கையைப் பிடித்து இட்டுக்கொண்டுபோய் அங்கே போகக்கூடாது என்று சொன்னது நினைவிற்கு வந்ததினாலும் இது அவருடைய வேலைதான் என்று கண்டார்கள். தாங்கள் அவரை ஒரு கனவான் என்று நம்பி ஏமாந்து விட்டதைக் குறித்து வருத்தப்படுவதை குருதேவருக்குத் தெரியப் படுத்தினார்கள். அதை அறிந்த ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு யாரும் அதற்காக வருத்தப்பட வேண்டாமென்று . அறிவித்தாராம். இந்த நிகழ்ச்சியை எதற்காக எழுதுகிறோம் என்றால் உண்மையான நிஷ்டையில் இருப்பவர்களுக்கு உடலைப் பற்றிய உணர்ச்சியே இருக்காது என்பது முற்றிலும் உண்மைதான் என்பதற்காக மட்டும். நிஷ்டை நிலையின் முதிர்ச்சியான இந்தச் சமாதி நிலையை அடைய வேண்டும் என்பது யோகப்பயிற்சி களில் விருப்பமுள்ளவர்களின் முக்யமான முயற்சி. இந்த நிஷ்டைக்கு, மனசை ஒரு நிலையில் நிறுத்தப் பழகுவது தான் முதற்படி. அதைத்தான் ஏகாக்ரம் என்று சொல்லுவார்கள். அதையே தான் தாயுமானவர் ‘’ஆடிய கரங்குபோல் ஓடி உழல் சிந்தையை அடக்கி ஒரு கணமேனும் நான் - காணிலேன் திருவருளை, அல்லது மெளனியாய்க் கண்மூடி ஓடும் மூச்சைக் கட்டிக் கலாமதியை முட்டவே மூல வெம் கனலினை எழுப்ப நினைவும் - பூணிலேன்’‘என்று பாடுகின்றார். இதன் பொருள் என்னவெனில் : ஆடுகின்ற பம்பரம் போல் (கரங்கு = பம்பரம்) ஓடித் திரிகின்ற மனசை ஒரு க்ஷண நேரத்துக்காவது ஒரு நிலையில் நிறுத்தி தெய்வத் திருவருளைக் காண்பேனில்லை. அல்லது (அதற்கு அடுத்த நிலையான) கண்களை மூடி ஓடுகின்ற மூச்சை பந்தனப்படுத்தி சிரசின் உச்சியிலுள்ள ’கலாமதி’ என்னும் அமுத கலசத்தை முட்டி (அதிலிருந்து வரும் குண்டலிப் பாலை உண்டு ஆகாரமில்லாமல் சமாதியில் இருக்க) யோக சித்தியைத் தரக்கூட மூலக் கனலான ஜீவசக்தி நெருப்பைக் கிளப்பவும் பழகினேனில்லை’’ என்பது. இதனால் யோகிகளின் முதல் அப்யாஸம் சிந்தையை அடக்குவது; அதற்குப்பின் தான் சமாதிக்கு வழி. இதற்காக, மனசை ஏகாக்ரப் படுத்துவதற் கென்று பல உண்மையான யோகிகளும் கூட சில செயற்கை வழிகளை முயல்வது உண்டு. அதாவது கஞ்சா, அபின், கள் முதலிய போதை வஸ்துக்களை உட்கொண்டு அந்த வெறியை ஏகாக்ர நிலையைப் பழக உதவும் என்று ஏமாந்து போவது. உண்மையாகவே யோகத்தில் பக்தி சிரத்தை உள்ள நல்லவர்களும் கூட இந்தப் போதைகளில் ஈடுபட்டு அதை யோக முயற்சி என்பார்கள் என்றால், பொய்த் துறவிகளும் போலிச் சாமியார்களும் இந்த போதை உண்பதையேதான் யோகமாகப் பாசாங்கு செய்வார்கள் என்பதில் என்ன தடை? அப்படிப்பட்ட போலித் துறவிகள் மிகுந்து. விட்டதைக் கண்ட குதம்பைச்சித்தர், ‘இந்த போதை உண்பதனால் யோகம் சித்திக்காது, யோக நிலையை அறிந்தவர்களுக்கு போதை எதற்கு உதவும்?’ என்று தான் - மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்கு தேங்காய்ப்பால் ஏதுக்கடி ? - குதம்பாய் எனப் பாடுகிறார். இப்போது இந்தப் பாட்டின் மிக உயர்ந்த பொருள் எளிதில் புரியும் : மாங்காய்ப் பால் உண்டு = (இயற்கை யான முறையில் யோகாப்யாஸம் பழகி, மூச்சைக் கட்டி, மூலக்கனலை எழுப்பி, மூளையின் நடுவே இருக்கும் ‘கலாமதி’ என்னும் அமுத கலசத்தை அசைத்து, அந்த அமுத கலசத்திலிருந்து மாங்காய் வடிவமாக இருக்கும் இருதயத்துக்கு வந்து ரத்தம் போல் ஓடி உயிரைப் பாதுகாக்கும்) மாங்காய்ப் பாலை உண்டுகொண்டு - மலைமேல் இருப்பார்க்கு = பரமாத்மா வோடு கலந்து நிற்கிற (சமாதி நிலையாகிய) மிக உயர்ந்த மலையின் மேல் இருக்கக்கூடிய யோகிகளுக்கு தேங்காய்ப்பால் ஏதுக்கடி = (யோகத்துக்குச் சிறிதும் உதவாத) கள்ளுத் தண்ணி எதற்காக? என்பதுதான் இதன் பொருள். கள்ளோடு மற்ற போதைகளும் சேர்ந்ததுதான். இந்த மிக உயர்ந்த போதனையான கருத்து அந்தப் பாட்டில் அடங்கியிருப்பதைச் சாதாரணமாக எவரும் கண்டுபிடிக்க முடியாது. அதைக் கண்டுபிடிப்பது வெகு கடினமாகும்படி, வேண்டுமென்றே மறைத்துப் பாடி, படிப்பவர்களைத் திணறவைப்பது ஒரு கலைத் திறமையைக் கருதியே. அந்த மறைபொருளைக் கண்டு பிடித்துச் சொன்ன உடனேயே நமக்கெல்லாம் அதிசயத்தோடு கூடிய இன்பம் உண்டாகிறது. இது இலக்கிய இன்பம். அர்த்தங்களை வேண்டுமென்று மறைத்துவைக்காமல் எல்லாருக்கும் எளிதாகத் தெரியக்கூடிய பாட்டுக் களிலும் வெகு சாதாரணமான கருத்துகளையும் சொல்லுகின்ற சாதுரியத்தால் படிப்பவர்களுக்கு இன்பம் உண்டாகும்படி இயற்றுவதுண்டு. அப்படிப்பட்ட பாட்டிற்கு ஒரு உதாரணம் பார்ப்போம். திருவெங்கைக்கலம்பகம் என்பது ஒரு தமிழ் நூல். அதை இயற்றியவர் சிவப்பிரகாச சுவாமிகள் ; அநேக அருமையான நூல்களைச் செய்த பேரறிஞர். அவருடைய பாட்டுக்கள் மிக்க இலக்கியச் சுவை நிறைந்தவை. அந்தத் திருவெங்கைக் கலம்பகத்தில் ஒரு வேடிக்கையான பாடலை இங்கே எடுத்துக் காட்டுவோம் : கலம்பகம் என்ற இலக்கணப் பெயரமைந்த நூலில் பல துறைகள் உண்டு. ‘துறை’ என்றால் ‘நிலை’. ஒரே பொருளைப் பல நிலைகளில் வைத்து, வெவ்வேறு குணங்களையும் அவற்றிற்கான கற்பனைகளோடு பாடுவது. அந்தத் துறை’ என்பதை அறியாதவர்களுக்குப் புரியும்படியாக பாரதியாருடைய பாடல்களில் ஒன்றைச் சுட்டிக் காட்டினால் துறை என்பது என்னவென்று துவங்கிவிடும். பாரதியார் ‘கண்ணன் பாட்டு’ என்று ஒரு சிறு நூல் பாடியிருக்கிறார். அதில் கண்ணனைப் பலபடியாக அனுபவிக்கிறார். கண்ணன் என் ‘காதலி’, ‘கண்ணன் என் வேலைக்காரன்’, ‘கண்ணன் என் தோழன்’ என்று வெவ்வேறு நிலைகளில் கண்ணனை நிறுத்திப் பாடுகிறார். அப்படிப்போல் ஒரு கதாநாயகனை அல்லது ஒரு தத்து வத்தை வெவ்வேறு நிலையில் வைத்துப் பாடுவதற்குத் தான் வெவ்வேறு துறைகள்’ என்று சொல்லுவது. ஒரே மனிதன் குழந்தையாக எப்படி நடந்து கொள்ளு கிறான், மாணவனாக எப்படி நடந்து கொள்ளுகிறான், காதலனாக எப்படி நடந்து கொள்ளுகிறான், கணவனாக எப்படி நடந்து கொள்ளுகிறான், தந்தையாக எப்படி நடந்து கொள்ளுகிறான் என்றெல்லாம் தனித்தனியாக அதற்கேற்ற குணங்களைக் காட்டிச் சொல்லுவது தான் வெவ்வேறு துறை’ அல்லது ‘நிலை’ என்பது. அப்படிப்பட்ட பல துறைகளில் ‘மரம்’ என்பது ஒரு துறை. ‘மறம்’ என்றால் ஒருவன் தன்னுடைய செளரியத்தைப்பற்றி, தன்னை அறியாத வேறொருவனிடத்தில் தானே சொல்லிக்கொள்வது. ‘ஓய்! என்னை யாரென்று எண்ணிக்கொண்டீர். நான் அப்படிப்பட்ட வனாக்கும் இப்படிப்பட்டவனாக்கும் ஜாக்ரதை’ என்று தனது வெற்றிப் பிரதாபங்களை வெளியிட்டு எதிரியின் கருத்தை மறுத்துப் பேசுவதற்கு மறம்’ என்று தமிழ் இலக்கியங்களில் பெயர். திருவெங்கைக் கலம்பகத்தில் : ஒரு வேடர்குலத் தலைவன் அரசன் அனுப்பிய தூதனாகிய மந்திரியின் கோரிக்கையை மறுத்து ‘மறம்’ பேசுகின்றான். கதை என்னவென்றால்: வெங்கை என்பது ஒரு சிறு ஊர். அது ஒரு முருகன் ஸ்தலம். அது ஒரு சிற்றரசு. அதற்குத் தலைவன் ஒரு வேடன். அவனுக்கு மிகவும் அழகு வாய்ந்த மகள் உண்டு. அவள் நந்தவனத்தில் தோழிகளோடு விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது, வேட்டைக்கு அவ்வழியே வந்த பாண்டியநாட்டு இளவரசன் அவளைப் பார்த்துவிட்டான். உடனே அவள்மீது ஆசை வந்துவிடுகிறது. அந்தப் பெண் யாரென்று விசாரிக்கிறான். அவள் தன்னுடைய ஆட்சிக்கு அடங்கின ஒரு வேடர்குலச் சிற்றரசனுடைய மகள் என்பதை அறிந்தான். தன்னுடைய அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்ட ஒரு வேடர் தலைவனுடைய மகளாக இருப்பது மட்டுமல்லாமல் ஜாதியிலும் தனக்கு மிகவும் தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்தவளாக இருப்பதனால் கேட்ட உடனேயே தனக்கு அவளைக் கலியாணம் செய்து கொடுத்து விடுவான் என்று எண்ணிக் கொண்ட இளவரசன் வெகு வேகமாகத் தன்னுடைய தலைநகருக்குச் சென்று தங்கள் முதல் மந்திரியை வேடர்குலத் தலைவனிடம் பெண் கேட்கத் தூது அனுப்புகிறான். பாண்டிய நாட்டுச் சக்கரவர்த்தியிட மிருந்து புறப்பட்ட முதல் மந்திரி, அதுவும் அரசிளங் குமரனுக்குப் பெண் கேட்கப் போகிறவர், எவ்வளவு ஆடம்பரங்களோடு போனார் என்பதை எழுதவே தேவையில்லை. ஏராளமான சீர் வரிசைகளுடன் நால்வகைச் சேனைகளும் முன்னே செல்லப் பலவித வாத்தி யங்களும் முழங்கப் பாண்டி நாட்டு முதல் மந்திரி திரு வெங்கைக்கு வந்தார். எதிர்பாராதபடி அவ்வளவு வைபவங்களோடு வந்த மந்திரியை வேடுவர் தலைவன் வழக்கமான மரியாதைகளுடன் வணங்கி வரவேற்றான். மந்திரியார் தாம் கொண்டுவந்த வெகுமதிகளை யெல்லாம் வேடர்குலத் தலைவனுக்கு வழங்கினார். அவ்வளவு வரிசைகளைப் பெற்று வழக்கமில்லாத வேடர் குலத் தலைவன் திடுக்கிட்டுத் திகைத்து சந்தோஷமும் சங்கடமும் கலந்த மனத்துடன் விஷயம் புரியாமல் விழித்துக்கொண்டு நின்றான். தூதுவந்த பாண்டிய நாட்டு மந்திரி சொல்லுகிறார்: ‘’வேடர்குலத் தலைவரே! உங்களுக்கு வந்த யோகமே யோகம். ஐம்பத் தாறு தேசங்களையும் அரசாளும் மன்னவர்களுக்கும் கிடைக்காத மகிமை உங்களைத் தேடி வந்திருக்கிறது. ஏற்றுக்கொள்ள வேண்டும்’‘என்றார். " என்ன?’‘என்று வியப்போடு கேட்டான் வேடர் தலைவன். பாண்டிய மன்னர் பரம்பரையைப் பற்றியும் வீரதீர பராக்ரமங்களைப்பற்றியும் நீங்கள் அறியாதது ஒன்று மில்லை. பாண்டியன் மிகவும் உயர்ந்த க்ஷத்திரிய பரம்பரையைச் சேர்ந்தவர். ’சூரிய வம்சம்’ ‘சந்திர வம்சம்’ என்று பெரும்புகழ் படைத்த க்ஷத்திரிய பரம்பரைகளின் தொடர்புள்ளவர். குலத்திலும் பலத்திலும் மற்றெல்லாச் சிறப்புக்களிலும் உங்களுக்கு எவ்வளவோ மேற்பட்டவர் என்பது உங்களுக்கே தெரியும். அவருடைய சம்பந்தத்தை அடைவதற்கு எத்தனையோ பெரும் பெரும் அரசர்களெல்லாம் வெகு ஆவலோடு முயன்று வருகிறார்கள். அந்தப் பெரிய அரசர்களுக்கெல்லாம் கிட்டாத ஒரு பெருஞ்சிறப்பு பாண்டியனுடைய சிற்றரசர்களில் ஒருவரான உங்களுக்குக் கிடைப்பது அதிருஷ்டவசத்தால்தான் ’’ என் றார் மந்திரி மிக்க மகிழ்ச்சியுடன். இன்னும் விஷயம் தெரியாமல் வேடர்மன்னன் விழித்தான். ‘’உங்களுடைய மகளை எங்கள் இளவரசர் மணந்துகொள்ள விரும்புகின்றார். சந்தேகப்பட வேண்டாம், இது சத்தியமான பேச்சு. இதோ மண ஓலை கொண்டுவந்திருக்கிறேன்’’ என்று மந்திரி தாம் கொண்டுவந்த மணவோலையை எடுத்து நீட்டினார். அந்த மணவோலையை வாங்கிக்கொள்ளாமல் வேடர் மன்னன் பாண்டிய நாட்டு மந்திரியைப் பலமுறை ஏற இறங்கப் பார்த்தான். அவனுடைய முகம் சிவந்தது. மீசைகள் துடித்தன. விழிகள் விரிந்தன. உதடுகள் பதறின. உடல் வெதும்பிற்று. உள்ளம் குமுறியது. பல பேருக்கு முன்னால் மிகவும் அவமானம் அடைந்துவிட்ட ஒரு மானியைப்போல் அவதியுற்றான். பணத்திலும் பலத்திலும் மற்றச் சிறப்புக்களிலும், வேடர்குலத் தலைவன் பாண்டியனுக்குக் குறைந்தவன் தான் என்பதை அவனே ஒப்புக்கொள்ளுவான் என்றாலும், குலத்தைக் குறைத்துப் பேசிவிட்டதில் அவனுக்குக் கொதிப்பும் கோபமும் உதித்துவிட்டன. வந்திருப்பவரோ முதல் மந்திரி. அனுப்பினவனோ தனக்கு அதிபனான அரசன். அப்படியிருந்தும் சிறிதேனும் அஞ்சாமல் வேடர் தலைவன் மந்திரியின் பேச்சைமறுத்து மறம் பேசுகின்றான். அந்தப் பாடலைப் பாருங்கள் : மறைபொருள் ஒன்றுமில்லாத பாட்டுத்தான். சாதாரணமாக நமக்கெல்லாம் தெரிந்த விஷயங்கள் தான் அதில் சொல்லப்படுகின்றன. உபமான உபமேயச் சிறப்போ வேறு சொந்த கற்பனையோ அதில் இல்லை. ஆனாலும் சொல்லுகின்ற முறையில் அது நமக்கு எவ்வளவு இன்பமளிக்கிறது என்பதைப் பாருங்கள் : வெங்கைமா நகரத்தின் வேடர் தலைவன் பாண்டிய நாட்டு மந்திரியைப் பார்த்துச் சொல்லுகின்றான் : விற்றதார் ? கலைபாதியோடு வனத்திலே அழவிட்டதார் ? வெஞ்சிறைப்புக விட்ட தார் ? துகில் உரிய விட்டு விழித்ததார்? உற்ற தாரமும் வேண்டும் என்று இனி மன்னர் பெண் கொளல் ஓக்குமோ? உமியடா மணம் என்ற வாய்கிழித்து ஓலைகாற்றில் உருட்டடா வெற்றியாகிய முத்தி தந்திடும் வெங்கை மாநகர் வேடர்யாம் விமலரானவர் எமையடுத்து இனிது எங்கள் எச்சில் மிசைந்ததால் பெற்ற வேலன் தனக்கு நாம் ஒரு பெண் வளர்ப்பினில் சந்தனம் பெற்ற பெண்ணைக் கொடுப்பமோ இதென் பேய்பிடித்திடும் தூதரே. படிக்கும்போதே பொருள் நன்றாகப் புரிகிறது. இருந்தாலும் சற்று விளக்கிச் சொன்னால் பின்னும் இன்பமாக இருக்கும். “ஓய் பாண்டிய நாட்டு முதல் மந்திரியவர்களே ! என்ன சொன்னீர்? பாண்டியனுடைய பரம்பரை கூஷத்திரிய பரம்பரையா! சூரியவம்சம் சந்திரவம்சம் முதலான உயர்ந்த இனங்களின் தொடர்புடைய ஜாதியா! நாங்கள் வனத்திலே வசிக்கின்ற வேடர்கள் என்று எங்களை இழிகுலத்தைச் சேர்ந்தவர்களாக எண்ணிப் பேசிவிட்டீரோ! இந்தச் சூரியகுலம் சந்திர குலம் என்பனவற்றைச் சேர்ந்த க்ஷத்திரிய ராஜாக்களின் யோக்யதைகளெல்லாம் எங்களுக்குத் தெரியாது என்று எண்ணிவிட்டீரோ? புத்தியுள்ள எவனாவது இந்த ராஜாக்களுக்குப் பெண் கொடுக்கச் சம்மதிப் பானா? அல்லது பெண்ஜாதி வேண்டுமென்று ஒரு பெண்ணை மணந்து கொள்ள இவர்களுக்குத் தகுதி யாவது உண்டா? கேளும் : விற்றதார் ? - ‘உயிருள்ள வரையிலும் கைவிடாமல் காப்பாற்றுவேன்’ என்று கங்கணங்கட்டிக் கலி யாணம் செய்துகொண்ட மனைவியை வெட்கமில் லாமல் விலைக்கு விற்றுவிட்டுப் போனானே, அந்த அரிச்சந்திரன். அவன் ஒரு அரசனல்லவா? க்ஷத்திரியன் அல்லவா? நீர் சொன்ன சூரிய சந்திர வம்சத்தின் உயர்ந்த பரம்பரைகளைச் சேர்ந்தவன் அல்லவா? கலை பாதியோடு வனத்திலே அழ விட்டதார் ? - தேவர்களை யெல்லாம் கூட வெறுத்துவிட்டுத் தனக்கு மாலை சூட்டின தன் மனைவி தமயந்தியை திக்குத்தெரிய யாத நடுக்காட்டில், நடுச்சாமத்தில், பாழடைந்த மண்டபத்தில் இருவரும் கட்டியிருந்த ஒரே புடவையைப் பாதியாகத் துணித்துக்கொண்டு ’காதலியைக் காரிருளில் கானகத்தில் கைவிட்டப் பாதகனாகிய, நளன் ஒரு அரசனல்லவா? க்ஷத்திரியனல்லவா? நீர் சொன்ன உயர்ந்த இனத்தைச் சேர்ந்தவன் அல்லவா? வெஞ்சிறைப் புக விட்ட தார் ? - பிரிந்திருக்க மாட்டேனென்று கல்லும் முள்ளும் கஷ்டங்களும் நிறைந்த காட்டிற்குத் தன்னுடன் வந்த சீதையை இராவணன் சிறையிற் கொண்டு போய் வைக்கும்படி விட்டுவிட்டுத் தவித்தானே அந்த இராமன் அவன் ஒரு அரசிளங்குமாரன் அல்லவா? க்ஷத்திரியன் அல்லவா? நீர் சொன்ன உயர்ந்த பரம்பரை யான சூரியகுல திலகன் என்று சொல்லப்பட்ட வன் அல்லவா? அதுதான் போகட்டும். துகில் உரிய விட்டு விழித்ததார் ?- ஆயிரக்கணக்கான ஆடவர்கள் நிறைந்த சபையில் தங்களுடைய மனைவியான திரெளபதையை விரோதிகள் மான பங்கம் செய்து துகிலுரிய விட்டுவிட்டு, அதைப் பார்த்துக்கொண்டு வெட்கமில்லாமல் விழித்துக் கொண்டிருந்தார்களே அந்தப் பாண்டவர்கள், அவர்களும் அரசர்கள் அல்லவா? க்ஷத்திரியர்கள் அல்லவா? நீர் சொன்ன உயர்ந்த குலமாகிய சந்திரவம்ச பரம்பரையைச் சேர்ந்தவர்கள் அல் லவா? ஆதலால் உற்றதாரமும் வேண்டுமென்று இனி மன்னர் பெண்கொளல் ஓக்குமோ ? - இனிமேல் இந்த ராஜாக்கள், தங்களுக்கு மனைவியென்று கலியாணம் செய்துகொள்ள ஒரு பெண்ணைக் கேட்கக்கூட யோக்யதை உடையவர்களாவார்களா? உமியடா மணம் என்ற வாய் - எங்கள் பெண்ணுக்கும் உங்கள் இளவரசனுக்கும் ‘மணம்’ என்று சொன்ன அந்த வார்த்தைகூட உன் வாயிலிருக்கக் கூடாது. துப்பு கீழே அந்த ‘மணம்’ என்ற சொல்லை. கிழித்து ஓலை காற்றில் உருட்டடா - மண ஓலை என்று கொண்டுவந்திருக்கும் அந்தப் பனையோலையைக் கிழித்து - நீளத்தில் நடுவிலுள்ள நரம்பை நீக்கி இரண்டாகக் கிழித்து வட்டமாக வளைத்துக் கட்டிச் சிறுவர்கள் காற்றில் உருட்டிவிட்டு விளையாடு வதுபோல - காற்றில் உருட்டு. -எங்களை யா ரென்று எண்ணிக்கொண்டு இப்படி இலேசாகப் பெண்கேட்க வந்துவிட்டீர்கள்? நாங்கள் யார் தெரியுமா? உங்கள் அரசுக்கு அடங்கிய வெறும் சிற்றரசு என்று மட்டும் எண்ணிவிட வேண்டாம். வெற்றியாகிய முத்தி தந்திடும் வெங்கைமாநகர் வேடர்யாம் - வெறும் ஆயுதபலத்தால் அடைகின்ற அற்ப வெற்றியாகிய உங்கள் அரசியல் வெற்றியைப் போல் அல்லாமல் ஞானபலத்தால் கிடைக்கும் உண்மையான வெற்றியாகிய முத்தியைத் தரக் கூடிய முருகக்கடவுள் திருக்கோயில் கொண்டிருக்கிற திருவெங்கை க்ஷேத்திரத்தைச் சேர்ந்த வேடர்களாக்கும் நாங்கள் - குமரக்கடவுளின் அடியார்கள். நாங்கள் என்ன செய்தோம் தெரியுமா ? விமலரானவர் எமையடுத்து இனிது எங்கள் எச்சில் மிசைந்த பின் - விமலராகிய பரமசிவன் எங்களிடத்தில் வந்து நெடுநாள் தங்கியிருந்து எங்கள் குலத்தவராகிய கண்ணப்ப நாயனாரின் எச்சிலை வெகு இன்பமான நைவேத்யமாக உண்டுவந்தபிறகு அதற்காக பெற்றவேலன் தனக்கு - அந்தப் பரமசிவன் பெற்ற வேலனாகிய குமரக்கடவுளுக்கு நாம் ஒரு பெண் வளர்ப்பினில் சந்தனம் - நாங்கள் ஒரு பெண்ணைக் கொடுத்தோம். அதுவும் எந்தப் பெண்ணைக் கொடுத்தோம் தெரியுமா? யாருடைய குழந்தையோ எந்த ஜாதியைச் சேர்ந்ததோ என்றுகூடத் தெரியாமல் காட்டில் அனாதையாகக் கிடைத்து நாங்கள் எடுத்துப் பாதுகாத்த வளர்ப் புப் பெண்ணாகிய வள்ளியைத்தான் கொடுத்தோம். பெற்ற பெண்ணைக் கொடுப்பமோ இதென் பேய்பிடித்திடு தூதரே - அந்தப் பரமசிவனே வலிய வந்து எங்களுடைய எச்சிலைத் தின்று கொண்டிருந்ததற்காக அவன் பெற்ற வேலனுக்கு - எங்கள் குலதெய்வமாகிய வேலனுக்கே - நாங்கள் ஒரு வளர்ப்புப் பெண்ணைத்தான் கொடுத்தோம் என்றால் உங்களுடைய இளவரசனுக்கு நாங்கள் பெற்ற பெண்ணைக் கொடுத்துவிடுவோமா ? இதென்ன பேய் பிடித்தவன் சொல்லுகின்ற பேச்சாக இருக்கிறது. ஓய் தூதரே போய்வாரும்.’’ இந்தப் பாட்டில் வெறும் சில புராணக் கதைகளைச் சேர்த்துச் சொல்லுகின்ற மாதிரியில் ஒரு தனிப்பட்ட இலக்கியச் சுவை உண்டாகின்றதல்லவா? இதுவும் இலக்கிய இன்பம்’. இப்படித் துண்டு துண்டாகப் பல நூல்களில் நாம் பார்க்கிற இலக்கியச் சுவைகள் ஒருபுறம் இருக்க, பெரிய காவியங்களில் உபமான உபமேயச் சிறப்புகளில் லும், கற்பனைகளின் மேன்மையிலும், ஒரு குறிப்பிட்ட கருத்தை ஒருதரம் சொன்ன பின், அதற்குச் சம்பந்தமே இல்லாத பலவேறு விஷயங்களைப் பாடிவிட்டு, மீண் டும் அந்தக் கருத்தையே குறிப்பிடவேண்டிய சமயம் வருகிற போதெல்லாம், முன் சொன்ன தொடர்பு விடாமல் பாதங்களைக் கையாளுகின்ற திறமையிலும், இலக்கிய இன்பம் பயக்கவென்றே அநேக நயங் களைக் கவிஞர்கள் அமைப்பதுண்டு. அப்படிப்பட்ட பலவித கவிநயங்களுள், ஒரு குறிப்பிட்ட உவமானத் தால் ஒரு குறிப்பிட்ட கருத்தைக் கருதி வைத்து, அந்த உபமானத்தையும் கருத்தையும் பின்னால் வரும் கின்ற பல இடங்களிலும் வியக்கத்தக்க விதமாகத் தொடர்ந்து பாடுகின்ற ஒரு கலைத்திறத்தை எடுத்துக் காட்ட வேண்டுமென்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். சிற்சில பாட்டுக்களை மட்டும் இயற்றி ஒரு குறிப்பிட்ட கருத்தைத் தொடர்ந்து பாடிவிடுவது சுலபம். ஆனால் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக் கணக்கில் லும் கவிகளைப் பாடி, அவற்றில் ஒருதரம் சொன்ன உபமானத்தின் தொடர்பையோ அல்லது அதற்குள்ள வேறு சம்பந்தத்தையோ ஆயிரக்கணக்கான பாட்டுக் களுக்கு அப்பாலும் விட்டுவிடாமல் அமைக்கின்ற கலைத்திறம் மிகவும் அபூர்வமான இலக்கிய இன்பம்’ பயப்பதாகும். அதில் வெறும் ஞாபகசக்திப் பெருமை மட்டும் அல்லாமல் கலையழகும் கலந்திருக்கக் காணும் போது அந்த இலக்கிய இன்பம் அதிகப்படுகின்றது. அப்படிப்பட்ட இலக்கியச் சுவையை அனுபவிப்ப தற்கு அந்தக் காவியத்தில் பல இடங்களில் அங்கங்கே கவிஞன் அமைத்திருக்கிற அழகுகளை ஆராய்ந்து படிக் கும் ஆர்வம் வேண்டும். ஆர்வம் இருந்தால் மட்டும் போதாது, அவகாசமும் கிடைக்கவேண்டும். சாதாரணமாகப், படிப்பதற்கு வேண்டிய அவகாசம் அதிகமாக உள்ளவர்களிலும், கவிஞன் தன் இலக்கியத்தில் வேறு இடங்களில் வேண்டுமென்றே அமைத்திருக்கிற சுவைகளைக் கண்டறியும் நோக்கத்தோடு தேடிப் பார்த்து படிக்கிறவர்கள் மிகவும் சிலராகவே இருப்பார்கள். அந்தச் சிலரும்கூட அவர்களுடைய ஆராய்ச்சியின் அனுபவத்தைச் சேர்த்துச் சொல்லி, ஆராய்ச்சிக்கு அவகாசம் இல்லாத பிறருக்கும் பயன் தரக்கூடிய முயற்சிகள் எதையும் செய்வதில்லை. சிற்சிலர் தமது பிரசங்கங்களில் அப்படிப்பட்ட முயற்சி களைச் செய்வது உண்டு; என்றாலும் எழுத்தாக எதை யும் செய்திருப்பதாகத் தெரியவில்லை. ஆகையினால், ஒரு காவியத்தில் அங்கங்கே பல இடங்களில் பரவிக் கிடக்கும் அநேக பாடல்களில் அமைக்கப்பட்டிருக்கிற தொடர்புகளில், மிகவும் சுவைதரக்கூடிய ‘இலக்கிய இன்பம்’ இருப்பதைச் சாதாரண வாசகர்கள் அறிவது சாத்தியமல்ல. ஆனால் அப்படிப்பட்ட பாடல்களைச் சேர்த்துக்காட்டி அவற்றிலுள்ள பொருத்தங்களைக் கூறி அந்தப் பொருத்தங்களில் புலப்படுகின்ற கவித் திறத்தின் கலையழகைக் காட்டினால் எல்லாரும் அந்த இலக்கிய இன்பத்தை அனுபவிக்க முடியும். நாம் சொல்லப்போகிற பாடல்களை ஏற்கனவே சாதாரண முறையில் கதைப் போக்கில் பலமுறை படித்தவர்களும் இருப்பார்கள். அந்தப் பாடல்களில் உள்ள பொருத்தங்களை இப்போது நாம் எடுத்துக் காட்டும்போது அவர்கள் இது வரையிலும் அப்பாட்டுக் களில் அனுபவித்தறியாத இன்பத்தை அடைவார்கள் என்பதில் ஐயமில்லை. அப்படி ஒரு காவியத்தில் வெவ்வேறு பகுதிகளில் இருக்கிற பல பாடல்களைச் சேர்த்துப் பார்த்து, அதனால் அடையக்கூடிய ‘இலக்கிய இன்பத்தை’ எடுத் துக் காட்டுவதே இக்கட்டுரையின் கருத்து. கம்பராமாயணத்தில்……………….. ‘கம்பராமாயணம்’ என்ற உடனேயே அப்பாடா! திருப்பித் திருப்பி இந்தக் கம்பராமாயணம் தானா கிடைத்தது? அதைச் சொல்லத்தானா இவ்வளவு முகவுரை முயற்சிகளும்?‘என்ற சலிப்புக்கூட சிலருக்காவது உண்டாகலாம். அதுவும் அரசியல் மனஸ்தாபங்களையும் சமூகச் சச்சரவுகளையும் எண்ணிக் கொண்டு கம்பராமாயணத்தை வேண்டுமென்றே குறைத்துப் பேசுகின்ற இந்தத் தருணத்தில், சில பேராவது அப்படிச் சலித்துக் கொள்வதை சகஜமாக எதிர் பார்க்கலாம். அவர்களும் கூட அந்தத் தாபங்களைத் தள்ளிவைத்துவிட்டு நான் எடுத்துக் காட்டப்போகிற ’இலக்கிய இன்பத்தை’ மட்டும் ரசித்து இன்புற வேண்டும். கம்பராமாயணம் ஒரு இலக்கிய சமுத்திரம். சப்த சாகரங்களும் ஒன்றாகச் சேர்ந்தது போன்ற ஆழமுள்ளது. சமுத்திரத்தால் பல பேர் பலவிதமான பயன்களை அடைகிறார்கள். சிலர் அதன் விஸ்தாரமான நீர்ப் பரப்பை வியந்து பார்த்து மகிழ்கின்றார்கள். சிலர் அதில் சுருண்டு புரண்டு வரும் அலைகளைப் பார்க்க ஆசை கொள்ளுகின்றார்கள். பலர் அதன் உப்பங்காற்று உடல்நலத்துக்கு மிகவும் உகந்ததென்று நாடுகின்றார்கள். இன்னும் பலர் அந்தக் கடலின் காம்பீரியத்தையும், கடற்கரையின் ஏகாந்தத்தையும் அனுபவித்து ஆனந்திக்கிறார்கள். பலர் படகுகளிற் சென்று மீன்பிடிக்க வலை பரப்புகிறார்கள். ஆராய்ச்சிக்காரர்கள் சமுத்திரத்தில் என்னென்ன பொருள்கள் இருக்கின்றன, எத்தனை வகை ஜீவராசிகள் இருக்கின்றன என்று முழுகிப் பார்க்க முயற்சி செய்கின்றார்கள். சிலர் முத்தெடுக்கிறார்கள். சிலர் பவளம் அடைகிறார்கள். சிலர் விலையிட முடியாத இன்னும் வெவ்வேறு பொருள்களை அடை கிறார்கள். சங்குகளுக்காக சமுத்திரத்தை நாடுகின்ற வர்கள் அநேகர். எண்ணிறந்த மக்கள் அதில் முழுகிக் குளித்து நீந்தி விளையாடுகிறார்கள். இப்படியாகப் பலபேர் சமுத்திரத்தில் பல நன்மைகளையே பார்க்கிறபோது, அந்தச் சமுத்திரத்திலுள்ள பயங்கரமான சில விபரீதப் பிராணிகளை மட்டும் பார்த்துவிட்டு பயந்துபோய் சமுத்திரம் என்றால் சங் கடமாக நினைக்கின்ற வேறு சிலரும் இருக்கத்தான் இருப்பார்கள். சமுத்திரத்திலிருந்து நல்ல பொருள் களைக் கொண்டவர்கள் எல்லாரும் அதை நன்றியோடுதான் எண்ணுவார்கள். உருப்படி தெரியாத விபரீதப் பொருள்களை மட்டும் பார்த்துவிட்டு வெருண்டவர்கள் வெறுப்புத்தான் காட்டுவார்கள். அப்படிப் போலவே, கவிதைக்கலையின் கடலாகிய கம்பராமாயணத்தில் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக அருமை பெருமைகளையே பலகோடித் தமிழர்கள் அனுபவித்து வந்திருக்க சிலர் இப்போது அதற்குச் சிறுமை கற்பிக்க முயல்வதைக் கண்டு வருந்த வேண்டிய-தில்லை. கம்பராமாயணம் தமிழுக்குத் தலைசிறந்த காவியம் என்பது மட்டும் அல்லாமல் அதற்கு இணையான கவிதை வேறு எந்த மொழியிலும் இல்லையென்பதே ஆய்ந்துணர்ந்த அறிவாளிகளின் தீர்ப்பு. வாழ்நாள் முழுதும் கம்பராமாயணம் ஒன்றையே ஆராய்ச்சிக் கண்கொண்டு படித்தவர்களும் கூட அதில் அமைந்துள்ள நயங்கள் அனைத்தையும் கண்டறிதல் அசாத்தியம். தமிழ் மொழிக்குத் தனிப்பெரும் செல்வமாகிய அந்தக் கம்பன் காவியத்தில் அடங்கியிருக்கிற எண் ணிறந்த இலக்கியச் சுவைகளில் ஒரே ஒரு கற்பனையை எடுத்துக்கொண்டு, அந்தக் கற்பனையில் கவிஞன் பிரயோகப் படுத்தியிருக்கிற ஒரு உபமானத்தை எவ்வளவு சிந்தனையோடு கித்திரித்திருக்கிறான் என்பதையும் அந்த உபமானத்தில் தான் கருதிய நோக்கத்தை அநேக ஆயிரம் பாட்டுகளுக்கு அப்பாலும் விடாது தொடர்ந்திருக்கிற விநோதத்தையும் எல்லாரும் அனுபவித்து ஆனந்திக்க வேண்டும். bஉடலும் உயிரும் தசரதன் என்கிற உடலுக்கு ராமன் என்பது உயிராக இருந்தது. ராமன் என்ற உயிர் பிரிந்துபோன உடனே தசரதன் என்ற உடல் பிணமாகிவிடுகிறது. இவ்வளவே இதில் சொல்லப்போகிற விஷயம். உடலில் இருந்து உயிர் பிரிவதற்கு ஒரு காரணம் வேண்டும். போர்க்களத்தில் பகைவர்களால் கொல்லப் பட்டோ, அல்லது ஒரு அபாயத்திற்கு ஆளாகியோ, அல்லது ஒரு நோய் வந்தோ இந்த மூன்றில் ஒரு காரணத்தால்தான் மக்கள் மரணமடைய வேண்டும். கிழட்டுப் பருவம் வந்து இயற்கையாக இறக்கும்போது கூட கடைசியில் ஒரு நோய்தான் மரணத்துக்குக் காரணமாகவேண்டும். நெடுநாள் நோயில் படுத்துக் கிடக்காவிட்டாலும் சரீர சாஸ்திரப்படிக்கும் வைத்திய சாஸ்திரப்படிக்கும் மரணம் என்பது ஒரு நோயினால் தான். மனிதன் எப்படி இறந்தாலும் கடைசிக் காரணம் ஒரு நோய்தான் என்பது வைத்திய சாஸ்திரம். தசரதன் போர்க்களத்தில் மாளவில்லை. எதிர் பாராமல் சரீரத்துக்கு ஏற்பட்ட அபாயத்தினால் இறக்க வில்லை. பின் எப்படி இறந்தான் என்றால் ஒரு வியாதி யினால். அந்த வியாதி அவனுடைய உடலில் உற்பத்தி யானதல்ல. விஷம் தீண்டியதைப்போல வெளியே யிருந்து அவனுடைய தேகத்துக்குள் செலுத்தப்பட்ட டது. விஷம் தீண்டின ஒருவருக்கு உடனே பரிகாரம் தேடினால் அப்போதைக்கு மரணத்தைத் தடுத்துவிட லாம். ஆனாலும் அந்த விஷம் உள்ளே இருந்து கொண்டேயிருந்து கடைசியில் மரணத்துக்கு அதுவே காரணமாகும் என்பது அனுபவம். விஷம் தீண்டினதைப்போல், திடீரென்று கைகேசி ராமன் காட்டிற்குப் போய்விட வேண்டுமென்று கேட்ட வரத்தினால் உண்டான வியாதியினால் ராமன் என்கிற தசரதனுடைய உயிர் பிரிந்து போக தசரதன் இறந்துவிடுகிறான். இதுதான் கம்பன் சித்திரம். கைகேசி வாங்கிக்கொண்ட வரத்தை போர்க்களத்தில் பகைவன் வீசிய வேலாகவும் விஷம் தீண்டின ஆபத் தாகவும், உடலுக்குள் ஊசிபோட்டுச் செலுத்தப்பட்ட வியாதியாகவும் கம்பன் கற்பித்துக் காட்டுகின்ற அழகே இக்கட்டுரை. மேற்சொன்ன கருத்துக்களை நினைவில் வைத்துக் கொண்டு கம்பன் பாட்டுக்களைக் கவனிப்போம். - தசரதனாகிய உடல் - வயிரவான் பூணணி மடங்கல் மொய்ம்பினான் உயிரெலாம் தன்னுயிர் ஓப்ப ஓம்பலால் செயிரிலா உலகினில் சென்று நின்று வாழ் உயிரெலாம் உறைவதோர் உடலும் ஆயினான். இதற்கு ‘உயர்ந்த வயிர ஆபரணங்களை அணிந்த சிங்கத்தைப் போன்ற தசரதன் எல்லா உயிர்களையும் தன்னுயிரைப் போலவே பாதுகாத்து அரசுபுரிந்த தனால் அவனுடைய ஆட்சியில் சண்டை யென்பதே இல்லாமல் இருந்தது. அவன் இடம்விட்டு இடம் பெயர்ந்து இச்சைப்படி ’சென்று’ வாழக்கூடிய ஊர்வன, நடப்பன, பறப்பன முதலிய பிராணிகளின் உயிர்களும், இடம்விட்டு இடம் பெயர்ந்து செல்ல முடியாமல் ஒரே இடத்தில் ‘நின்று’ வாழக்கூடிய செடி, கொடி, மரம் முதலிய தாவர உயிர்களும் ஆக உலகிலுள்ள எல்லா உயிர்களும் பாதுகாப்புக்காகத் தங்கியிருக்கக்கூடிய ஒரே உடலாக இருந்தான்’ என்பது பொருள். உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் அவனே உடலாக இருந்தான் என்பது கருத்து. இதில் ‘சென்று நின்று வாழ் உயிரெலாம்’ என்ற தொடர் மிகவும் கவனிக்கவேண்டியது. நாம் சொல்லப் புகுந்த விஷயத்துக்காக அல்ல. வெறும் அறிவுக்காகக் கவனிக்க வேண்டியது. செடி கொடி மரங்களை உயிர்களாகச் சொல்லப் பட்டிருக்கிறது. செடி கொடி மரங்களும் ஜீவன்கள் என்பது நம்முடைய இந்திய நாட்டு முன்னோர்கள் அநேக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே உபதேசித்த உண்மை. அந்த உண்மை சமீப காலம் வரைக்கும் சாதாரண ஜனங்களுக்கு ‘செடி கொடி மரங்களை முறிக்கக்கூடாது, அது ’பாபம்’ என்ற பாவ புண்ணியப் பேச்சில் மட்டும் தான் அடங்கிக் கிடந்தது. பெயர் பெற்ற தாவரவர்க்க சாஸ்திர ஆராய்ச்சிக்காரரான காலஞ்சென்ற ஜகதீச சந்திர போஸ் என்னும் வங்காளி, ‘செடி கொடிகளும் ஜீவன்கள் தான். அவைகளுக்கும் உடல், எலும்பு, நரம்பு, தசை, ரத்தம் முதலியன உண்டு. அவைகளுக்கும் உணர்ச்சி உண்டு; துக்கம் உண்டு; சந்தோஷம் உண்டு; தூக்கம் உண்டு, விழிப்பு உண்டு’ என்பதையெல்லாம் சிறு சிறு நுண்ணிய எந்திரங்களைக்கொண்டு கண்ணுக்கு முன்னால் நிரூபித்துக் காட்டிய பிறகுதான் ஐரோப்பியரும் அந்த உண்மைகளை அறிய ஆரம்பித்தார்கள். அதன் பிறகு தான் நாமும் நமது முன்னோர்கள் பல அபூர்வ உண்மைகளை அறிந்தவர்கள் என்று நினைத்துப் பார்க்க நேர்ந் தது. அதுவரையிலும் நாம் மேல்நாட்டு மோகங்களிலேயே மயங்கி நம்முடைய மூதாதைகளை முட்டாள்கள் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தோம். அநேக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய அறிஞர்களால் கண்டு பிடிக்கப்பட்ட, சாஸ்திர ஏடுகளில் மந்திரமாக மறைந்துகிடந்து, பாமர மக்களின் பழமொழி களுக்குள் பதுங்கிக்கிடந்த இந்த அறிவைச் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கம்பன் தனது காவியத்தில் மேற்சொன்ன பாட்டில் வெகு அழகாக அமைத்திருக்கிறான். ஏன் ‘அழகாக அமைத்திருக் கிறான்’ என்று சொல்ல வேண்டும் என்றால், கம்பன் காலத்துக்கு ஆயிரம் வருஷங்களுக்குப் பின்னால் வந்த ஜகதீச சந்திர போஸ், - தமிழே அறியாதவர், கம்பராமா யணத்தின் பெயரைக்கூடக் காதால் கேட்டிருப்பாரோ என்னவோ - கம்பன் சொல்லுகின்ற ‘சென்று நின்று வாழ் உயிர்கள்’ என்ற தொடரை அப்படியே மொழி பெயர்த்து வைத்தது போலச் சொல்லுகிறார். அவர் 1925-ம் வருஷத்தில் லண்டன் மாநகரில் ‘இந்தியா ஆபீஸில்’ அநேக ஐரோப்பிய ‘ஸயன் டிஸ்ட்ஸ்’ (இயற்கை சாஸ்திர நிபுணர்கள்) அடங்கிய சபையில், செடி, கொடி, மரங்களுக்கு உயிருண்டு, உணர்ச்சி உண்டு என்ற உண்மைகளைக் கருவிகளைக் கொண்டு நிரூபித்துக் காட்டியபோது சொல்லுகிறார்: b’Friends ! men and other animals are only moving plants and trees; and plants and trees are only stationary animals.’ நண்பர்களே ! மனிதர்களும் மற்றப் பிராணிகளும் இடம்விட்டு இடத்துக்குச் சென்று வாழுகின்ற செடி கொடிகள் தான் ; செடி கொடி மரங்கள் நடமாட்டம் இல்லாமல் ஒரே இடத்தில் நின்று வாழக்கூடிய பிராணிகள் தான்’ என்பது பொருள். இந்த விஷயம் இந்தக் கட்டுரைக்குச் சற்றே புறம்பானதாகத் தோன்றினாலும் இதிலும் ஒரு இலக்கிய இன்பம் இருக்கிறது. இனி தசரதனைத் தொடர்வோம். மேற்சொன்ன பாட்டு ராமன் பிறப்பதற்கு முன்னால் தசரதனுடைய அரசாட்சியின் சிறப்பைக் காட் டு வ தற் காக அவனுடைய இயல்பைக் குறித்தது. தசரதன் எல்லா உயிர்களுக்கும் இருப்பிடமான ஒரே உடலாக இருந்தான். அதாவது எல்லா உயிரை யும் தன்னுயிர்போல் எண்ணினான். மேலே சொல்லப்பட்ட பாட்டு ராமன் பிறப்ப தற்கு முன்னால் தசரதனைப்பற்றிச் சொல்லப்பட்டது. இனி, உலகத்திலுள்ள எல்லா உயிர்களுக்கும் ஒரே உடலாக இருந்த தசரதன் ராமன் பிறந்த பிற்பாடு என்னவாகினான் என்பதைக் கவனிக்கவேண்டும். மேற் சொன்ன பாட்டிற்கு 126 பாட்டுகளுக்குப் பின்னால் ராமன் பிறந்ததினால் தசரதனுக்கு உண்டான சந்தோஷத்தையும் மறுமலர்ச்சியையும் சொல்லுகின்ற கம்பன், - காவியும் ஓளிர் தரு கமலமும் எனவே ஓவிய எழிலுடை ஒருவனை அலதோர் ஆவியும் உடலமும் இலதென அருளின் மேவினன் உலகுடை வேந்தர்தம் வேந்தன். என்று பாடுகின்றான். ‘சித்திரத்தில் வரையப்பட்ட நீலோற்பலமும் பிரகாசமான தாமரையும் போன்ற அழகுள்ளவனாகிய ராமனைத் தவிர வேறு உடலோ உயிரோ இல்லாதவனாகி, உலகத்தை ஆளுகின்ற அரசர்கள் எல்லோர்க்கும் அரசனான தசரதன் மகிழ்ச்சியில் முழுகினான்’ என்பது பொருள். இந்தப் பாட்டினால், இதுவரைக்கும் உலகத்திலுள்ள பிற உயிர்களுக்கெல்லாம் தங்குமிடமாக இருந்த தசரதன் ராமன் பிறந்த பிறகு அந்த ராமனே தன்னுடைய உடலும் உயிரும் என்று, உணர்ச்சியில் மாறிவிடுகிறான். தசரதனுடைய உடலும் உயிரும் ராமனுடைய உடலிலும் உயிரிலும் கலந்துவிடுகின் றது. அதனால் ராமன் தசரதனுக்கு உயிராகி விடுகிறான். அன்றியும் இதுவரையிலும் மற்ற உயிர்கள் ளுடைய க்ஷேமத்தை எந்நேரமும் சிந்தனை செய்து கொண்டுவந்த மன்னன் ராமன் பிறந்த பின் மற்ற உயிர் களையெல்லாம் உடனே மறந்து விட்டவன் போலும் . ராமனைத்தவிர வேறு உயிரே உலகத்தில் இல்லை யென்று எண்ணிவிட்டது போலவும், ராமனுடைய க்ஷேமம் ஒன்றையே சிந்திக்க வேண்டியவன் போலவும் மாறிவிடுகிறான். இந்தப் பாடலினால் ராமனே தசரதனுடைய உயிரும் உடலும் உணர்ச்சியும் ஆகிவிடுகிறான். மிகுந்த பிரியத்தைக் காட்டுவதற்கான இடங்களிலெல்லாம் யாரும் சகஜமாக உயிர் போன்றவன்’, உயிர் போன்றவன்’ என்றுதான் சொல்லுவார்கள். அதிலும் புலவர்கள் நேர்ந்தபோதெல்லாம் இந்த உபமானத்தை உபயோகப்படுத்துவார்கள். ‘அதிகப் பிரியம்’ என்பதைத்தவிர வேறு அர்த்தம் அதற்கு இருப்பதில்லை. ஆனால் கம்பன் இந்த உபமானத்தை இந்த இடத்தில் கையாண்டிருக்கிற விதம் மிகவும் அசாதாரணமான இலக்கிய அழகுடையது. கம்பனுடைய எல்லா ஒப்புவமைகளும் உயர்ந்த கருத்துக்கள் அமைந்தனவாகத்தான் இருக்கும். அவற்றுள் இந்த ‘உயிர்’ என்ற உபமானத்தை எவ்வளவு சிந்தனை யோடும் கற்பனையோடும் திட்டம் போட்ட ஞாபகத்தோடும் பிரயோகித்-திருக்கிறான் என்பது பின்னால் வரும் விஷயங்களிலிருந்து விளங்கும். தசரதனுக்கும் ராமனுக்கும் சம்பந்தம் வருகின்ற இடங்களில் எல்லாம் இந்த ‘உயிர்’ என்ற பதத்தையும் அதன் பொருளையும் எப்படி இணைத்திருக்கிறான் என்று காட்டுவதே இந்த ’ இலக்கிய இன்பத்தின் நோக்கம். ராமன் தசரதனுக்கு ‘உயிர் போன்றவன்’ என்று, தசரதனுக்கு ராமனிடத்திலிருந்த அத்யந்தப் பிரேமையைக் காட்டுவதற்காகமட்டும் சொன்னது போன்றுத் தோற்றுகின்ற இந்த உபமானம் உபமேயத்தோடு கலந்துவிடச் செய்கிறான் கம்பன். அதனால் ராமன் தசரதனுக்கு உயிர் ‘போன்றவன் அல்ல ; ஆனால் ராமன் தசரதனுடைய’ உயிராகவே இருந்தான் என் பதை அணியணியாகச் சொல்லி ராமனுடைய பிரிவு தசரதனுடைய உயிரின் பிரிவாகக் கம்பன் முடிக்கிற விதம் கவிதா தெய்வமே களிக்கவேண்டிய ஒரு அற்புதக் கலை. அந்தக் கலையழகை நாமும் கண்டு களிப்பதற்கு, கம்பன் கலைக் கோட்டையான காவியத்தில் அங்கங்கே பரவிக்கிடக்கின்ற சில பாட்டுக்களை எடுத்து வரிசைக்கிரமத்தில் வைத்துவிட்டால் போதும், கம்ப ராமாயணத்தில் அதிகப் பரிச்சியம் இல்லாதவர்களும் பயனடைந்து பரவசப்படுவார்கள். இதுவரையிலும் எடுத்துக்காட்டப்பட்ட இரண்டு பாட்டுக்களில் முதற்பாட்டில் உலகத்திலுள்ள எல்லா உயிர்களுக்கும் தசரதன் உடலாக இருக்கிறான். இரண்டாவது பாட்டில் தசரதனாகிய அந்த உட லுக்கு ராமன் ஒருவனே உயிராகிவிடுகிறான். இனி அந்த தசரதனாகிய ‘உடலுக்கும்’ ராமன் என்கிற ‘உயிருக்கும்’ உள்ள உறவைக் கம்பன் எப்படித் தொடர்கின்றான் என்பதைக் கவனிப்போம். மேலே சொல்லப்பட்ட இரண்டாவது பாட்டிற்கு இருபத்திரண்டு பாட்டுகளுக்குப் பின் விசுவாமித்திர முனிவர் தம்முடைய வேள்வியைக் காப்பதற்குத் துணையாக ராமனைக் கூட்டிக்கொண்டு போக, தசரத னுடைய சபைக்கு வந்து, ராமனைத் தம்முடன் அனுப்பும்படி, தாம் வந்த காரியத்தைச் சொல்லும்போது தருவனத்துள் யானி யற்றும் தவவேள்விக் கிடையூருத் தவம் செய் வோர்கள் வெருவரச்சென்று அடைகாம வெகுளியென நிருதர் இடை விலக்கா வண்ணம் செருமுகத்துக் காத்திஎன நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதிஎன உயிரிரக்கும் கொடும் கூற்றின் உளையச் சொன்னான் என்கிறார். இதன் அர்த்தம் ‘மரங்கள் அடர்ந்த வனத்தில் நான் செய்யும் தவத்துக்கும் யாகத்துக்கும் இடைஞ்சலாக, தவசிகள் பயப்பட வேண்டிய காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றங்களைப்போல (தாடகை, சுபாகி, மாரீசன் என்னும் மூன்று) அரக்கர்கள் வந்து என் தவத்தையும் யாகத்தையும் கெடுத்து விட வருகிறார்கள். அப்படி அவர்கள் கொடுப்பதைத் தடுத்து, யுத்தம் செய்து, என் வேள்வியைக் காப்பதற்காக உன் புத்திரர்கள் நால்வருக்குள் கருமையான அழகனாகிய ராமன் ஒருவனை மட்டும் எனக்குத் துணையாகத் தரவேண்டும் என்று (விசுவாமித்திரன்) உயிரைக் கேட்கின்ற கொடிய எமனைப்போல் வருத்த மூட்டும் படிச் சொன்னான்’ என்பது. இதில் விசுவாமித்திரன் ராமனைத் தரும்படி தசரதனைக் கேட்டது எமனானவன் ஒரு மனிதனுக்கு முன்னால் நின்று ‘உன் உயிரைக் கொண்டுபோக வந்திருக்கிறேன், கொடு’ என்று சொன்னால் எப்படியிருக்குமோ அப்படிக் கேட்டான் என்று சொல்லப்படுகிறது. அதனால் ராமனைக் கேட்டது தசரதனுடைய உயிரைக் கேட்பது தான் என்று தெரிகின்றது. எனவே இந்தப் பாட்டில், ராமன்தான் தசரதனுடைய உயிர் என்பதை ஊர்ஜிதப் படுத்துகிறான் கம்பன். அந்தக் கருத்தை இன்னும் ஸ்திரப்படுத்த, இதற்கு அடுத்த பாட்டில் எண்ணிலா அருந்தவத்தோன் இயம்பியசொல் மருமத்தில் எறிவேல் பாய்ந்த புண்ணில் ஆம் பெரும்புழையுள் கனல் நுழைந்தால் எனச் செவியில் புகுதலோடும் உள் நிலா வியதுயரம் பிடித்துந்த ஆருயிர் நின்று ஊசலாடக் கண்ணிலான் பெற்றிழந்தான் என உழந்தான் கடும் துயரம் கால வேலான் இதன் பொருள் ‘அளவிடமுடியாத தவ வலிமை யுள்ளவரான விசுவாமித்திரர் சொன்ன சொல், நடு மார்பில் வேலினால் குத்தி உண்டான புண்ணாக இருக்கிற பெரிய துவாரத்தில் கொள்ளிக்கட்டையைச் சொருகியதுபோல் (தசரதனுடைய) காதில் நுழைந்த உடனே அவனுடைய மனதில் ஏற்கனவே இருந்து கொண்டிருந்த துயரமானது பிடித்துத் தள்ள அவனுடைய உயிரானது வெளியே போய்விடவும் விருப்பமில்லாமல், உள்ளே தங்கவும் முடியாமல், உள்ளுக்கும் வெளிக்குமாக ஊசலாட, கண்ணில்லாத குருடன் கண்ணைப் பெற்று மறுபடியும் அதை இழந்துவிட நேர்ந்தால் எப்படியிருக்குமோ அப்படிக் கடுமையான துயரத்தை அடைந்தான் பகைவர்களுக்கு எமனைப் போன்ற வேலாயுதத்தையுடைய தசரதன்.’ என்பது. இந்தப் பாட்டிலுள்ள உபமான விசேஷங்களைச் சிறிது உற்று நோக்கவேண்டும். தசரதனுடைய மனதில் முன்னமேயே ஒரு வேல்பட்ட புண் இருந்ததாம். அது புழையாகப் புரையோடி இருந் ததாம். அந்தப் புண்ணில் நெருப்பைச் சொருகியது போல இருந்ததாம் ‘கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி’ என்று விசுவாமித்திரன் சொன்ன சொல். இவற்றுள் ‘எறிவேல்’ என்பது, தசரதன் முன் ஒரு காலத்தில் யானையாக்கும் என்று எண்ணி, அம்பு விட்டுக் கொன்றுவிட்ட மகனை இழந்த ஒரு முனிவன் இட்ட சாபம். அந்தச் சாபம் என்னவென்றால் ‘என்னைப்போல் நீயும் உன் மகனைப் பிரிந்து அந்தப் புத்திர சோகத்தினால் இறப்பாய்’ என்பது. ராமன் பிறப்பதற்கு வெகு காலத்துக்கு முன்னால் இடப்பட்ட இந்தச் சாபம், ராமன் பிறந்தபின் புண்ணாகிப் புரையோடிய புழையாக இருந்து கொண்டிருந்தது. விசுவா மித்திரர் ராமனைத் தம்முடன் அனுப்பக் கேட்ட போது ராமனைப் பிரிந்து இறந்துபோகும் காலம்தான் வந்துவிட்டதோ என்று தசரதன் வருந்திய வருத்தம், அந்தப் புண்ணில் நெருப்பைச் சொருகினது போல் இருந்தது. இருந்தாலும், ராமனைக் கேட்ட விசுவாமித் திரரோ ‘எண்ணிலா’ அருந்தவத்தோன். அதனால் அவனிடம் இல்லையென்று சொல்லிவிட இயலாமல் ராமனை அனுப்புவதா வேண்டாமா என்பது, உயிர் போவதா இருப்பதா என்று ‘ஆருயிர் நின்று ஊசலாட’ வேண்டியதாகி விட்டது. இந்தப் பாட்டில் ராமன் போவது தசரதனுடைய உயிர் போவதற்குச் சமானமாக கற்பிக்கப் பட்டிருப்பதனால் ராமன் தசரதனுடைய உயிராகவே இருந்ததாக ஆரம்பித்த உபமானத்தைக் கம்பன் இங்கேயும் தொடர்ந்து காட்டுகின்றான். இந்தப் பாட்டிற்கு எட்டுப் பாட்டுகளுக்குப் பின்னால், ராமனும் லஷ்மணனும் விசுவாமித்திரரோடு அயோத்தியை விட்டுப் போவதை கம்பன் எப்படிச் சொல்லுகிறான் என்பதைப் பாருங்கள். விசுவாமித்திரருக்கு ராமனைக் கொடுக்கத் தயங்கி, தசரதன் யாகத்தைக் காக்கத், தானே வருவதாகச் சொன்னான். அதனால் விசுவாமித்திரர் கோபத்தோடு சபையை விட்டுப்போக எழுந்தார். அதைக் கண்ட தசரதனுடைய குலகுருவாகிய வசிஷ்டர், ராமனை விசுவாமித்திரருடன் அனுப்புவதால் நன்மை உண்டென்பதை உணர்ந்து விசுவாமித்திரரை சமாதானப் படுத்தி ராமனை அவருடன் அனுப்பும்படி தசரத னுக்குத் தெரிவிக்கிறார். உடனே தசரதன் ராமனைச் சபைக்கு வரவழைக்கிறார். ராமன் வந்தான் என்றால் லஷ்மணனும் வந்தான் என்று சொல்லவேண்டிய தில்லை. ராமனையும் லஷ்மணனையும் தசரதன் விசுவாமித்திரரிடம் ஒப்படைக்கிறான். குலகுருவின் வார்த்தைக்கு வணங்கி ராமனை தசரதன் விசுவாமித் திரரிடம் ஒப்படைத்தாலும் ராமன் பிரிவது மன்ன னுக்குத் தன் உயிர் போவது போலத்தான் உணர்ச் சியில் இருந்தது என்பதைக் கம்பன் சூசிக்கிறான். அந்தப் பாட்டைப் பாருங்கள். - அன்ன தம்பியும் தானும் ஐயனாம் மன்னன் இன்னுயிர் வழிக்கொண் டால்என சொன்ன மாத வற் றொடர்ந்த சாயைபோல் பொன்னின் மாநகர்ப் புரிசை நீங்கினார். இதன் அர்த்தம் ‘ராமனும் அதைப் போலவே அவனுடைய தம்பியாகிய லஷ்மணனும் விசுவாமித்திர முனிவரை, அவருடைய நிழல் போலப் பின்தொடர்ந்து அயோத்தி மாநகரத்தின் மதில்களைக் கடந்து சென்றார்கள். அப்படி அவர்கள் போனது எப்படி யிருந்தது என்றால் தசரத மன்னனுடைய ’உயிரே’ அவனை விட்டுப் போனதைப்போல் இருந்தது’ என்பது. இந்தப் பாட்டினால் கம்பன் தசரதனை உயிர்போய் விட்ட பிணம்போலச் செய்துவிட்டான். இது மிகவும் அமங்கலமாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த அசுபமான உபமானத்தால் ‘தசரதனுக்கு உயிர் போன்ற ராமன் போய்விட்டான்’ என்று ராமனுடைய சிறப்பைச் சொல்லுவதற்காக மட்டும் சொன்னதல்ல. உண்மையிலேயே தசரதன் ராமன் போனபின் முற்றிலும் செயலற்றவனாகி உயிரில்லாதவனுக்குச் சமானமாகிவிட்டது போலவே கம்பன் கதையை நடத்துகின்ற கவித்திறம் அற்புதத்திலும் அற்புதம். ராமன் தசரதனை விட்டுப் போன பின் தசரதனைப் பற்றிய பேச்சேயில்லை. விசுவாமித்திரருடன் சென்ற ராமன், தாடகையைக் கொன்று, வேள்வியைக் காத்து, அரக்கர்களை வென்று, அகலிகைக்குச் சாபவிமோசனம் அருளி, மிதிலைக்குச் சென்று வில்லை வளைத்து முறித்த பின் சீதா கல்யாணத்துக்காக தசரதனையும் அழைக்க ஜனகனிடத்திலிருந்து அயோத்திக்குத் தூதர்கள் ஓலை கொண்டுவந்து ராமனைப் பற்றிச் சொன்ன பிறகுதான் பிணம் போல் இருந்த தசரதனுக்குக் கொஞ்சம் பிரக்ஞை வந்தது போல் கதை நடக்கிறது. அதன்பின் தசரதன் மிதிலைக்குப் புறப்படுவதுதான் ராமனைப் பிரிந்த பிறகு தசரதனுடைய அசைவு. தசரதன் மிதிலைக்குப் புறப்படுகிற வைபவங்களை யெல்லாம் கம்பன் வெகு அழகாக வர்ணிக்கிறான் என்றாலும் அதில் தசரதன், ராமன் பிரிவதற்கு முன்னாலிருந்த ஜீவகளை இல்லாதவனாகவேதான் இருந்தது போலக் கம்பன் காட்டுகிறான். அயோத்தியை விட்டு இடையே பல களியாட்டங்கள் நடந்தும் - மிதிலைக்குப் பக்கமாக வரும் போது தன்னை எதிர்கொள்ள வந்த ஜனகனுடன் வந்த ராமனைச் சந்திக்கிற வரைக்கும் தசரதன் உயிரில்லாமைக்குச் சமானமாகவே நடத்தப்படுகிறான். ராமனைச் சந்தித்த பிறகுதான் மறுபடியும் தசரதனுக்கு உயிர் வருகின்றது. அதைக் கம்பன் எவ்வளவு அதிசயிக்கத் தகுந்த தாக அமைத்திருக்கிறான் என்பதை அறிந்து அனுபவிக்கும்போது தான் நாம் இலக்கியத்தின் இன்பத்தை அடைகின்றோம். அந்த அதிசயத்தைக் கம்பன் அமைக்காமல் விட்டிருப்பானாகில் முன்னே ‘விசுவாமித்திரனைப் பின் பற்றி ராமன் போனது தசரதனுடைய உயிர் போய் விட்டது போல் இருந்தது’ என்ற அமங்கலம் அகலாமல் தொடர்ந்திருக்கும். உயிர்போன தசரதன் தான் சீதா கல்யாணத்தில் கலந்து கொண்டிருப்பான். அந்த அமங்கலத்தை எப்படிக் கம்பன் மறந்து விடாமல் மாற்றுகிறான் என்பதைப் பாருங்கள். ஆம் - மறந்து விடாமல் கையடைப் படலத்தில், - அன்ன தம்பியும் தானும் ஐயனாம் மன்னன் இன்னுயிர் வழிக்கொண்டால் எனச் சொன்ன மாதவன் ருெடர்ந்த சாயைபோல் பொன்னின் மாநகர்ப் புரிசை நீங்கினார் என்ற பாட்டுக்குப் பின் (1) தாடகை வதைப் படலம் (2) வேள்விப் படலம் (3) அகலிகைப் படலம் (4) மிதிலைக் காட்சிப் படலம் (5) குல முறை கிளத்துப் படலம் (6) எழுச்சிப் படலம் (7) வரைக் காட்சிப் படலம் (8) பூக்கொய் படலம் (9) நீர் விளையாட்டுப் படலம் (10) உண்டாட்டுப் படலம் என்ற பத்துப் படலங்களைப் பாடிய பிற்பாடு, பதினோராவது படலமாகிய ‘எதிர்கோள்’ படலத்தில், இருபத்திரண்டாவது பாட்டில் அந்த அமங்கலத்தை அகற்றிவிட்டு தசரதனை உயிர் வந்தவனாக்கி விவாக மண்டபத்தில் வீற்றிருக்கத் தக்கவனாக்குகின்றான். தசரதனை மீண்டும் உயிர் வந்தவனாகச் செய்கின்ற அந்தப் பாடலைச் சொல்லு முன்னால், தசரதனை முற்றிலும் செயலற்றவனாக்கி, அயோத்தியிலிருந்து மிதிலைக்கு வருகிற வரைக்கும் மத்தியில் நிகழ்ந்த எண்ணரிய இன்பகரமான விஷயங்கள் எதிலும் தசரதனுடைய சந்தோஷமோ சம்பந்தமோ இல்லாதபடி இயற்றியிருக்கிற இலக்கியச் சிறப்பைச் சிறிது சிந்தித்துப் பார்ப்பது தகும். மேலே சொன்ன ‘மன்னன் இன்னுயிர் வழிக் கொண்டால் என’ என்ற பாட்டிற்கும் எதிர்கோள் படலத்தில் அந்த இன்னுயிர் மீண்டும் வந்து மன்னனைச் சேர்ந்துவிட்டதாகச் சொல்லுகிற பாட் டிற்கும் இடையே 790 பாடல்கள் இருக்கின்றன. இந்த 790 பாடல்களும் கதைக்குச் சம்பந்தமே இல்லாத வருணனைகளும் கற்பனைகளுமாகிய கவிதைக் கலையாகவே இருக்கின்றன. ராமாயணத்தில் சீதா கல்யாணத்துக்கு முன்னால்தான் சிங்கார ரஸத்தில் கவிச்சித்திரங்களைக் காட்ட அதிக இடம் இருக்கிறதை அறிந்து கம்பன் அதை மிகவும் பயன்படுத்திக்கொண் டிருக்கிறான். சீதா கல்யாணத்துக்குப் பிறகு பொது மக்களின் சிங்கார நுகர்ச்சிகளைச் சித்திரிக்கப் போது மான சந்தர்ப்பங்கள் பொருந்தவில்லை. சீதா கல்யாணத்துக்குப் பின் அயோத்திக்கு வருகிற வழியில் பரசுராமனோடு நடந்த சச்சரவினால் சந்தோஷத்திற்கு இடமில்லாமற் போய்விட்டது. அதன் பிறகு அயோத்தியா காண்டம் ராமனுக்கு முடி சூட்டி விட்டு தசரதன் தவம் செய்யப் போவதற்கான ஆலோசனைகளில் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் கம்பன் எண்ணியபடி நாடக கதியில் கதையைக் கொண்டு போக அப்படிச் செய்வதுதான் அவனுடைய திட்டத்திற்கு ஒட்டியதாகும். ராமனுக் குப் பட்டாபிஷேகம் செய்யத் தீர்மானித்த பின் கைகேசியின் சூழ்வினை, ராமன் நகர் நீங்கி வனம் - புகுதல், தசரதன் மரணம், பரதன் தாயாரை நிந்தித்துத் துறவு கொள்ளல், பாதுகையின் ஆட்சி, விராதன் வதை, சூர்ப்பணகை பங்கம், கரதூஷண மாரீச வதம், சீதா அபகரணம், அனுமான் சந்திப்பு, சுக்ரீவன் துயரம், சீதையின் ஆபரணங்களைக் கண்டு ராமன் துக்கித்தல், வாலி வதம், சுக்ரீவன் மறதி, அனுமான் சீதையைத் தேடல், லங்கா தகனம், என்று வரிசையாகச் சங்கட சமாச்சாரங்களாகவே இருப்பதனால் இங்கிதத் துக்கும் சிங்காரத்துக்கும் இடமே இல்லை. பிறகு சீதையைக் கண்டு வந்த அனுமான் ‘இன் னும் ஒரு மாதம் தான் உயிரோடு இருப்பேன். அதற்குள் என்னை மீட்காவிட்டால் இறந்து போவேன்’ என்று பிராட்டி கண்டிப்பாகச் சொல்லிவிட்டதாகச் சொன்னதனால், உடனே சேனையைத் திரட்டிப் படை யெடுக்கவேண்டிய அவசர காரியங்களைப் பார்க்க வேண்டியதாகி விட்டது. அதன்பின் யுத்தம் . இராவண சம்மாரம் வரை வேறு பேச்சுக்களுக்கு வேலை யில்லை. யுத்தம் முடிந்த உடன் சீதையின் அக்னிப் பிரவேசம். அதன் பிறகு பரதனுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியின்படி உடனே அயோத்திக்குப் போக வேண்டிய அவசரம். பரத்வாச ஆச்ரமத்துக்கு வந்ததும் பதினான்கு வருடங்கள் பூர்த்தியாகிவிட்டதைக் கண்டு, பரதன் அக்னிப் பிரவேசம் செய்து விடுவான் என்று அஞ்சி அனுமானை முன்னால் அனுப்பி, பின்னால் ராமன் முதலானோர் வருவதை அறிவிக்கச் செய்த அவசரம். இப்படியாக நாடகமுறையில் செல்லுகின்ற கம்பனுடைய கவிப் போக்கில் சீதா விவாகத்துக்குப் பின்னால் வெறும் சிங்காரம், களியாட்டம், கற்பனைகளில் பொழுது போக்க வாய்க்கவில்லை. அதனால் தசரதன் சீதா கல்யாணத்துக்காக அயோத்தியைவிட்டு மிதிலை வந்து சேருகிற வரைக்கும் கதைக்கு சம்பந்தப்பட்ட வேறு நிகழ்ச்சி எதுவும் இல்லாததனால் அந்த வாய்ப்பைக் கலியாணத்துக்கு முன்னால் நடக்கும் களியாட்டங்களைப் போல் சிங்காரக் கற்பனைகளை சித்திரிக்கிறான். அந்தச் சித்திரங்கள் தான் ராமன் என்ற உயிர் தசரதன் என்ற உடலில் மீண்டும் வந்து சேர்ந்துவிட்டதாகச் சொல்லுகின்ற பாட்டுக்கும், முன்னால் ‘தசரதனுடைய உயிர் அவனை விட்டுப் பிரிந்து விசுவாமித்திரரைப் பின்பற்றியது’ என்று சொன்ன பாட்டுக்கும் இடையிலே உள்ள சுமார் எண்ணூறு பாட்டுக்களும். எண்ணூறு பாட்டுக்கள் என்றால் அற்பமா சொற்பமா? கதைக்குச் சம்பந்தமில்லாத இந்த எண்ணூறு பாட்டுக்களையும் இயற்றும் முயற்சியினாலேயே ‘தசரதன் உயிர் விசுவாமித்திரருடன் போய் விட்டதாகச் சொன்ன’ விஷயத்தையே மாற்றக் கவிஞர்கள் மறந்து விட்டிருப்பார்கள். அப்படி மறந்து போயிருந்தாலும் அதை ஒரு குற்றமாகக் கூறமுடியாது. ஆனால் கம்பன் மறந்தானா? மறந்திருந்தால் அவன் கம்பன் ஆவானா? அந்தப் பாட்டைப் பாருங்கள். தசரதனை எதிர்கொள்ள ஜனகனும் மற்றவர்களும் வருகிறார்கள். அவர்களோடு ராமனும் வந்தான். தசரதனை ராமன் அணுகினான், அவ்வளவுதான். அவன் எப்படி அணுகினான்? - காவியும் குவளையும் கடிகொள் காயாவும் ஓத்து ஓவியம் சுவைகெடப் பொலிவதோர் உருவொடே தேவரும் தொழுகழல் சிறுவன் முன் பிரிவதோர் ஆவிவந் தென்னவந்து அரசன்மாடு அணுகினான் அடடா! என்ன அற்புதம்! எவ்வளவு ஞாபகசக்தி! எப்படிப்பட்ட கவித்திறம் ! இந்த இரண்டு பாட்டுக்களையும் எடுத்து, இணைத்து, இடையிலே உள்ள 790 பாட்டுகளையும் எண்ணிப் பார்த்தால்தான் அந்த அற்புதக் கவிதா மேதையை அனுபவிக்க முடியும். இனி, இந்தக் கவியில் அடங்கியுள்ள பதங்களை யும் கருத்துக்களையும் கவனிப்போ-மானால் இலக்கியச் சுவை இன்னும் அதிகமாகும். இதன் பொருள் ‘நீலோற்பலப் பூவையும், குவளை மலரையும் காயாம் பூவையும் ஒத்து, சித்திரத்தையும் தோற்கடிக்கக் கூடியதான வடிவத்தோடு, தேவர்களும் தொழுது வணங்குகின்ற பாதங்களை உடையவனான சிறுவன் (ராமன்) முன்னே (உடலை விட்டுப்) பிரிந்து போன உயிர் (மறுபடியும் அந்த உடலைச் சேர்ந்து கொள்ள) வந்ததென்ன அரசனை (தசரதனை) அடைந்தான்’ என்பது. இதில் ‘ராமனாகிய உயிர் மீண்டும் தசரதனாகிய உடலில் சேர்ந்து கொண்டது’ என்ற சுபஸ்வீகரண மங்கலம் இருப்பது மட்டும் அல்லாமல் அந்த உயிராகிய ராமனை வர்ணிக்க கம்பன் உபயோகித்திருக்கிற பதங்களிலும் முன்னைய ஒரு தொடர்ச்சி இருப்பது அதிகமாக மெருகு தருகின்றது. என்ன வென்றால், ஆரம்பத்தில் ‘ராமனே தசரதனுடைய உயிரும் உடலும் ஆகிவிட்டான்’ என்று சொன்னபோது பிரயோகப் படுத்தின பதங்களையும், அந்த உயிர் பிரிந்துபோய் மறுபடியும் தசரதனுக்கு உயிராக வந்து ஒப்புக்கொள்வதாகச் சொல்லுகின்ற இந்தப் பாட்டில் இருக்கிற பதங்களையும் இணைத்துப்பார்க்க வேண்டும். bதசரதனுக்கு ராமன் உயிரான முதல் பாட்டு: - காவியும் ஒளிர்தரு கமலமும் எனவே ஓவிய எழிலுடை ஒருவனை அலது ஓர் ஆவியும் உடலமும் இலதென அருளில் மேவினன் உலகுடை வேந்தர்தம் வேந்தன். அதே உயிர் உடலை விட்டுப் பிரிந்து போய் மறு படியும் வந்து கூடிவிட்டதாகக் கூறுகின்ற பாட்டு: - காவியும் குவளையும் கடிகொள் காயாவும் ஓத்து ஓவியம் சுவை கெடப் பொலிவதோர் உருவொடே தேவரும் தொழுகழல் சிறுவன் முன் பிரிவதோர் ஆவிவந் தென்னவந்து அரசன் மாடு அணுகினான். இந்த இரண்டு பாட்டுகளிலும் ‘காவி’ என்பதும் ஓவியம்’ என்பதும் பொதுப் பதங்களாக கவிஞன் எண்ணியே வைத்தது போல் இருக்கின்றன. முதற் பாட்டில் ‘காவி’ என்ற புஷ்பத்தோடு கமலம் மட்டும் சேர்ந்தது. இரண்டாவது பாட்டில் ‘காவி’ யோடு குவளைப் பூவும், காயாம் பூவும் கலந்துவிட்டன. ஒரு புஷ்பம் அதிகமாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பூ அதிகம் மட்டுமல்லாமல் ‘ஓவியம்’ என்ற உபமானமும் இரண்டாவது பாட்டில் அதிகமான சிறப்புப் பெறுகின்றது. என்னவெனில் முன் ‘ஓவிய எழிலுடை ஒருவன்’ என்று ராமன் உவமிக்கப்பட்டான். பின்னால் ஓவியம் சுவை கெடப் பொலிவதோர் உருவு’ என்று முன் சொன்ன ‘ஓவியம் போன்ற அழகுக்கும் அதிக மாக ’ஓவியமும் கெட்டது’ என்னும் படியான முன்னி லும் அதிகமான அழகு அமைக்கப்படுகிறது. ஏன்? வெறும் ‘உயிரை’க் காட்டிலும் ’போய் வந்த உயிர் மிகவும் அருமையானது’ என்னும் பொருத்தத் தைப் புலப்படுத்துகின்ற இதிலும் ஓர் இலக்கியச் சுவை இருக்கிறது. ‘தசரதன் என்ற உடலுக்கு ராமன் தான் உயிர்’ என்னும் கருத்தை இன்னும் எப்படியெல்லாம் கம்பன் விடாமல் தொடர்கிறான் என்பதை நாமும் விட்டுவிடாமல் தொடர்வோம். இந்தப் பாடலுக்கு 232 பாடல்களுக்குப் பின்னால் -ஆம் இருநூற்று முப்பத்திரண்டு பாட்டுகளுக்குப் பின்னால் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் – 232 பாட்டுகளுக்குப் பின்னால் : தசரதன் மிதிலையில் இருந்து தன்னுடைய மனைவிகள் குமாரர்கள் மருமகள்கள், அயோத்தியிலிருந்து வந்திருந்த ஜனங்கள், பரிவாரங்கள் முதலான அனைவருடனும் அயோத் திக்குத் திரும்பி வரும் வழியில் பரசுராமன் சந்திக்கிறான். பரசுராமன் தன்னுடைய தந்தையை ஒரு க்ஷத்திரியன் கொன்று விட்டதற்காக 21 தலைமுறைக்கு க்ஷத்திரிய வம்சத்தையே கருவறுத்து விடுவதாகக் கங்கணம் பூண்டவன். அதே கருத்தோடு க்ஷத்திரியனாகிய ராமனைப் போருக்கு அழைத்து வழி மறித்தான். பரசுராமனைக் கண்டதும் தசரதனுக்கு நடுக்கம் உண்டாகிவிட்டது. பரசுராமன் ராமனோடு போர் புரிய வந்திருப்பதாக அறைகூவி ‘ஏ! ராமா! மிதிலையி லிருந்த உளுத்துப்போன வில்லை வளைத்து முறித்து விட்டோம் என்ற இருமாப்புக் கொள்ள வேண்டாம். உன்னுடைய தோளாற்றலைப் பரிசோதிக்க ஆசை கொண்டு வந்திருக்கிறேன். உன்னோடு போர்புரிய வேண்டும் என்று என்னுடைய தோள்கள் தின வெடுக்கின்றன’ என்றான். - அதைக் கேட்ட தசரதன் - அவன் அன்னது பகரும் அளவையின் மன்னவன் அயர்வான் புவனம் முழுவதும் வென்றொரு முனிவர்க்கருள் புரிவாய் சிவனும் அயன் அரியும் அலர் சிறுமானுடர் பொருளோ இவனும் எனது உயிரும் உனது அபயம் இனி என்றான். ‘’அவன் (பரசுராமன்) அப்படிச் சொன்னதும், தசரதன் அயர்ந்து போய், ’உலகம் முழுவதையும் வென்று ஒரு முனிவருக்குத் தானமாகத் தந்துவிட்ட பரசுராமா! சிவனும் பிரம்மாவும் விஷ்ணுவும்கூட உனக்குப் போரில் நிகராக மாட்டார்களே, அப்படி யிருக்க அற்ப மனிதராகிய நாங்கள் உனக்கு ஒரு பொருட்டா? (இவனோடு போர் தொடுக்க வேண்டாம்) இராமனும் என்னுடைய உயிரும் உனக்கு அபயம்’’ என்பது பொருள். பின்னும் தசரதன் பரசுராமனைப் பலவாறு கெஞ்சிக் கேட்டு விட்டு, சலத்தோடு இயைவிலன் என்மகன் அனையான் உயிர் தபு மேல் உலத்தோடு எதிர்தோளாய் எனது உறவோடு உயிர் உகுவேன் நிலத்தோடு உயர் கதிர் வான் உற நெடியாய் உனது அடியேன் குலத்தோடு அறமுடியேல் இது குறை கொண்டனன் என்றான். ‘கல்லுக்குச் சமானமான தோள்களை உடைய பரசுராமா! என் மகன் (ராமன்) கோபமே இல்லாதவன். அவன் இறப்பானாகில் நானும் என்னுடைய சுற்றத்தார் அனைவரும் இறந்து போவோம். பெரியோய்! உமது அடியேனாகிய நான் விண்ணப்பம் செய்து கொள்ளுகிறேன். என்னுடைய ராஜ்யமும் எங்கள் சூரிய வம்சமும் சிறப்படையும்படி தாங்கள் அருள் வேண்டும். நான் பூண்டோடு அழிந்து போகும்படி செய்துவிடக்கூடாது.’ என்பது இதன் அர்த்தம். மேற்சொன்ன இரண்டு பாட்டுக்களாலும் தன்னுடைய உயிர் ராமன் தான் என்பதை தசரதனே சொல்லுகிறான். இப்படியெல்லாம் தசரதன் கெஞ்சிக் கேட்டும் பரசுராமன் இணங்கவில்லை. ராமனோடு போர் தொடுக்கவே விரும்பினான். அதைக்கண்ட தசரதன் தன்னுடைய மகனுக்கு அபாயம் வந்துவிட்டதாக நிச்சயித்து மூர்ச்சையாகி விடுகிறான். மன்னன் மூர்ச்சையாகிக் கிடக்கும்போதே ராமனுக்கும் பரசுராமனுக்கும் சம்வாதம் முற்றி, பரசுராமன் தந்த வில்லை வளைத்து அம்பு தொடுத்து அந்த அம்புக்கு இரையாகப் பரசு ராமனுடைய தவத்தை-யெல்லாம் ராமன் பறித்துக் கொள்ளுகின்றான். தோற்றுப்போன பரசுராமன் ராமனை வணங்கி, மன்னிப்புக் கேட்டுக்கொண்டு அங்கிருந்து போய்விடுகிறான். பரசுராமன் போனபின் மூர்ச்சித்துக் கிடந்த தசரதனை ராமன் தெரிவிக்கிறான். ராமனுக்கு அபா யம் ஒன்றுமில்லை என்ற உணர்ச்சி உண்டான பிறகு தான் தசரதனுடைய உயிர் நிலைக்கிறது என்பதை - அழிந்து அவன் போனபின் அமலன் ஐயுணர்வு ஒழிந்தனன் உயிர் உலைந் துருகு தாதையைப் பொழிந்த பேர் அன்பினால் தொழுது முன்புக்கு இழிந்த வான் துயர்க்கடல் கரை நின்று ஏற்றினான் என்ற பாட்டால் விவரிக்கிறான். இந்தப் பாட்டிற்கு தோற்றுப்போய் பரசுராமன் சென்றுவிட்ட பிறகு ராமன், ஐம்புல உணர்ச்சிகளும் அற்றுப்போனவனாக உயிர் நிற்குமோ நீங்கிவிடுமோ என்ற நிலைமையிற் கிடந்த தந்தையை அன்பினால் அபிஷேகம் செய்து ஆற்றித் தேற்றித் தொழுது வணங்கி, உணர்ச்சி உண்டாக்கித் துக்கக் கடலில் இருந்து கரை யேற்றினான்’ என்பது பொருள். - மேலே சொல்லப்பட்ட மூன்று பாட்டுக்களில், (பரசுராமப் படலம் ) முதல் பாட்டில் ‘இவனும் எனது உயிரும் உனது அபயம்’ இரண்டாவது பாட்டில் ‘என்மகன் உயிர் தபுமேல் எனது உறவோடு உயிர் உகுவேன்’ மூன்றாவது பாட்டில் ’உயிர் உலைந்து உருகும் தாதை ‘ என்ற தொடர்களால் ’ராமனே தசரதனுடைய உயிர்’ என்ற கருத்தைக் கம்பன் உறுதிப்படுத்துகிறான். இதுவரைக்கும், ‘தசரதன் உடல், அந்த உடலுக்கு ராமனே உயிர்’ என்று கம்பன் ஆரம்பத்தில் கற்பித்துக்கொண்டதை எப்படித் தொடர்ந்து சொல்லி யிருக்கிறான் என்பதைப் பார்த்தோம். இனி, அந்த உடலிலிருந்து எப்படி உயிர் பிரிந்து மரணம் உண்டாகிறது, அந்த மரணம் உண்டாவதற்கு உடலுக்கு ஏற்பட்ட நோய் என்ன, அந்த நோய் வந்தவிதம் எப்படி என்பதிலெல்லாம் கம்பன் காட்டுகின்ற கலைத்திறத்தைக் காண்போம். bஉடலுக்கு வந்த நோய் தசரதன் ராமனிடத்தில் ராஜ்ய பாரத்தை ஒப் படைத்து விட்டு தவம் புரிய ஆசை கொண்டு அமைச்சர்களுடன் ஆலோசித்து ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்யத் தீர்மானித்தான். அதையறிந்த கூனியாகிய மந்தரை கைகேசியின் மனசைக் கலைத்துவிடுகிறாள். விதிவசத்தினாலோ அல்லது வேறு என்ன விபரீதத் தினாலோ கைகேசிக்குத், தன் மகன் பரதன் அரசாள வேண்டும் என்ற ஆசை வந்துவிடுகிறது. அந்த ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ளக் கூனியே வழி சொல்லிக்கொடுக்கிறாள். வழக்கம்போல் தசரதன் கைகேசியின் அந்தப் புறத்துக்கு வந்தபோது, கைகேசி அலங்கோலமாகத் தரையில் புரண்டு கிடக்கிறாள். தசரதன் திடுக்கிட்டு அவளை வாரியெடுத்து வருத்தத்திற்குக் காரணம் கேட்டுக் கலங்குகின்றான். கைகேசி அந்த நிலைமைக்கு வேண்டிய பாசாங்குகளை யெல்லாம் செய்து கடைசி யாக முன்னே தனக்குத் தந்திருந்த இரண்டு வரங்களையும் கேட்கிறாள். மன்னன் உடனே தருவதாக ஒத்துக் கொள்ளுகிறான். கைகேசி வரங் கேட்கிறாள் : - ஏய வரங்கள் இரண்டில் ஒன்றினால் என் சேய் அரசாள்வது சீதை கேள்வன் ஓன்றால் போய்வனம் ஆள்வது எனப் புகன்று நின்றாள் தீயவை யாவையினும் சிறந்த தீயாள் ’முன்னே தருவதாக வாக்களித்த இரண்டு வரங்களில் ஒரு வரத்தால் என் மகன் பரதன் அரசாள்வது. இன்னொரு வரத்தால் சீதாராமன் வனத்துக்குப் போய் விடுவது என்று, தீமைகளுக்குள் தீமையாகிய கைகேசி சொல்லி நிறுத்தினாள், - என்பது அர்த்தம். இப்படிக் கைகேசி கேட்டதானது, எங்கிருந்தோ திடீரென்று ஒரு நாகப்பாம்பு கொத்திப் பிடுங்கிவிட் டது போல் இருந்தது, தசரதனுக்கு. அதை - நாகமெனும் கொடியாள் தன் நாவின் சந்த சோக விடம் தொடரத் துணுக்கம் எய்தா ஆகம் அடங்கலும் வெந்து அழிந்து அராவின் வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான். ‘நாகத்தைப் போன்ற கொடிய கைகேசியின் நாக்கிலிருந்து பாய்ச்சப்பட்ட அந்தச் சொற்களால் உண்டான துக்கம் என்னும் விஷமானது தேகத்தில் பரவி, (தசரத மன்னன்) தேகம் முழுவதும் எரிச்சல் உண்டானவனாக வெந்து வெதும்பி அரவந் தீண்டினதால் பலமெல்லாம் ஒடுங்கிப்போன ஒரு யானையைப் போல் விழுந்து விட்டான்’ என்பது பொருள். இந்தப் பாட்டினால் ஒருவித நோயும் இல்லாதிருந்த தசரதனுடைய உடலுக்குள் நோய்க்குக் காரணமாகும் ஒரு விஷம் செலுத்தப்படுகிறது. இந்த விஷம் ஏற்கனவே மன்னனுடைய மனதில் இருந்து கொண்டிருந்த கவலையோடு கலந்து அவனுக்கு மரண வேகத்தைத் துரிதப்படுத்துகிறது என்பதைக் காட்டுவதே கம்பனுடைய கற்பனை. கீழே விழுந்த தசரதன் நெடுநேரம் தன்னினைவு இல்லாமல் துடித்துப் புரண்டுவிட்டு, கொஞ்சம் பிரக்ஞை வந்த உடன் கைகேசியா இப்படிச் சொன்னது ! ராமனிடத்தில் அவ்வளவு பிரியம் வைத்திருக்கிற அவள் சொந்தப் புத்தியினால் இப்படிச் சொல்லியிருக்க மாட்டாள் ‘என்றெல்லாம் எண்ணி’‘இது நீயாக உன் மனம் மாறிப்போய்ச் சொன்னதா, அல்லது வேறு யாராவது செய்த மோசமா?’’ என்று கேட்கிறான். அதற்குக் கைகேசி - திசைத்ததும் இல்லை, எனக்கு வந்து தீயோர் இசைத்ததும் இல்லை, முன் ஈந்த இவ் வரங்கள் குசைப்பரி யோய் ! தான் இன்று கொள்வன், இன்றேல் வசைத் திறம் நின் வயின் வைத்து மாள்வன் என்றாள். ‘நானாக ஒன்றும் மாறிப்போய்ச் சொன்னதும் அல்ல, எனக்கு வந்து யாரோ கெட்டவர்கள் சொல்லிக் கொடுத்துச் சொன்னதும் அல்ல. முன்னே நீங்களே எனக்குக் கொடுத்திருந்த வரங்களை இப்போது நானே கேட்கிறேன். கொடுத்தால் கொடுங்கள், இல்லாவிட்டால் பழியை உங்கள் மேல் போட்டுவிட்டு நான் இறந்துபோகிறேன் என்றாள்’ என்பது இதன் அர்த்தம். இதைக் கைகேசி சொல்லி முடிப்பதற்குள் தசரதன் மனம் சுழன்று திகைப்படைந்து அசரிக்கை மேலிட்டு மறுபடியும் பிரக்ஞையில்லாமல் விழுந்துவிடுகிறான். அதை அடுத்த பாட்டில் கம்பன் அமைத்திருக்கிற அழகைப் பாருங்கள். அந்தப் பாட்டில் அடங்கியிருக்கிற வேறுசில இலக்கிய அழகுகள் மட்டுமல்லாமல், ’ராமன் தான் தசரதனுடைய உயிர் என்ற கருத்தை யும் எப்படித் தொடர்ந்து காட்டுகின்றான் என்பதும் கவனிக்கத்தக்கது. அந்தப் பாட்டு: - இந்த நெடுஞ்சொல் அவ வேழை கூறு முன்னே வெந்த கொடும் புணில் வேல் நுழைந்த தொப்ப சிந்தை திரிந்து திகைத்து அயர்ந்து வீழ்ந்தான் மைந்தன் அலாது உயிர் வேறிலாத மன்னன் ‘இந்தப் பெரிய பேச்சை மிகவும் இரக்க சுபாவ முள்ள அந்தக் கைகேசி சொல்லி முடிக்கும் முன்னால், வெந்துப்போய் இருந்த புண்ணில் வேல்விட்டு ஆட்டிய தைப் போலத் துன்பம் அதிகரித்தவனாகி, சிந்தனை தடுமாறி, திகைத்து, அயர்ந்து விழுந்தான் தசரதன்’ என்பது பொருள். இதில் நாம் கருதிய கட்டுரைக்கு அவசியமானது ‘மைந்தன் அலாது உயிர் வேறிலாத மன்னன் என் பதுதான். இந்தப் பாடல், முன் பரசுராமப் படலத் தில் ’ராமனே தசரதனுடைய உயிர்’ என்பதற்கான கருத்துக்கள் அடங்கின பாடல்களுக்குப்பின் 204 பாட்டுகளுக்கப்பால் இருப்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கட்டுரையின் குறியாகிய ‘ராமனே தசர தன் உயிர்’ என்பதைக் காட்டுவது மட்டுமல்லாமல் இந்தப் பாட்டில் கம்பன் அமைத்திருக்கிற வேறுசில விசேஷத்தையும் இங்கேயே சொல்லிவிடுவது மிகை யாகாது. அந்த விசேஷத்தில் கம்பனுடைய கவி நயம் மட்டும் அல்லாமல் அவனுடைய அபூர்வமான ஞாபக சக்தியும் அடங்கியிருக்கிறது. அதை எப்படி - யென்று பாருங்கள். இந்தப் பாடலில் கைகேசி ’எனக்கு யாரும் சொல்லித்தரவில்லை. நானே தான் கேட்கிறேன். கொடுத்தால் கொடுங்கள், இல்லாவிட்டால் பழிபோட்டுச் சாகிறேன்’ என்ற இந்தப் பெரும் பேச்சைச் சொன்ன உடன் தசரதன் ‘வெந்த கொடும் புண்ணில் வேல் நுழைந்தது ஒப்பத்’ துன்பம் அடைந்ததாகச் சொல்லப் படுகிறது. அதை நாம் படிக்கிறபோது, அது தசரதனுக்கு வந்த அதிக வருத்தத்தைக் காட்டுவதற்கு அழுத்தமான உபமானமாகச் சொல்லப்பட்டிருப்ப தாகத்தான் சாதாரணமாக நினைப்போம். ஆனால் இலக்கியச் சுவையை நாடுகின்ற ரசனையோடு அதை ஊன்றிப் பார்க்கிறபோதுதான் அதில் அமைந்துள்ள ஒரு அற்புத கவித்திறத்தை அனுபவிக்க முடியும். அந்த அழகு, அகஸ்மாத்தாகத் தானாகவே வந்து விழுந்துவிட்டதா, அல்லது அது கம்பனுடைய கவிதா சக்தியின் சிறப்பினால் எண்ணிச் செய்யப்பட்டதா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அப்படிச் சிந்தித்துப் பார்ப்பதற்கு இந்தப் பாட்டிற்கு வெகு தூரம் முன்னால் இருக்கிற இரண்டொரு பாட்டுக்களை யும் இதனோடு இணைத்துப் பார்க்கவேண்டும். அப்படி இணைத்துப் பார்க்கிறபோது பின்னால் சொல்லப் போகிற இந்த அழகு அகஸ்மாத்தாக அமைந்தது அல்ல, ஆனால் கம்பன் கவிதா மேதையினால் அவனே எண்ணிச் செய்தது தான் என்பதும் கம்பனைத் தவிர வேறு எந்தக் கவிஞனும் இதைச் செய்ய மறந்தே இருப்பான் என்பதும் புலப்படும். அந்த அழகு தானாக அமைந்ததோ அல்லது கவிஞன் எண்ணி அமைத்ததோ எப்படியானாலும் சரி அந்த அழகு என்னவென்று பார்ப்போம் : ராமன் பிறப்பதற்கு வெகுநாளைக்கு முன்னால் ஒரு முனிவன் தசரதனுக்கு சாபம் இடுகிறான். அந்தச் சாபம் ’நீயும் என்னைப்போல உன் அருமை மகனைப் பிரிந்து அந்தச் சோகத்தினால் இறக்கக்கடவாய்’ என்பது. அந்தச் சாபத்தின் தாபத்தை தசரதன் அப்போது உணர முடிய வில்லை. ஏன் என்றால் அப்போது அவனுக்குப் பிள்ளை யில்லை. பிள்ளையில்லையே என்ற ஏக்கமும் அவனுக்கு அப்போது இல்லை. மேலும் அப்போது தசரதன் மிகவும் யவ்வன பருவத்தில் இருந்ததனால் அதை அலக்ஷியமாக எண்ணிவிடக் கூடிய நிலைமையில் இருந்தான். அந்தச் சாபத்துக்கு வெகு காலத்திற்குப் பிறகு, தசரதனுக்குக் கிழப்பருவம் ஆரம்பித்து, தன்னுடைய காதுக்கருகிலிருந்த தலைமயிரிற் சில நரைத்து விட்டதைக் கண்ட பின்புதான் தனக்குக் குழந்தை யில்லையே என்ற விசாரம் உண்டாயிற்று. உடனே குலகுருவான வசிஷ்டரிடம் முறையிட்டான். அவர் புத்ரகாமேஷ்டி யாகம் செய்யச் சொல்லுகிறார். யாகம் செய்து, ராமன் முதலானவர்கள் பிறக்கிறார்கள். ராமனுடைய அழகிலும் அறிவிலும் மயங்கிய மன்னன் அளவு கடந்த புத்ரவாஞ்சையினால் ராமனைத் தன் உயிர்போல் நினைத்து மகிழ்ச்சியில் முழுகிவிடுகிறான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முனிவன் இட்ட சாபம் அடிக்கடி நினைவுக்கு வந்து வருத்தத்தொடங்கியது. அதனால் ராமன் தன்னை விட்டு எப்போது பிரிவானோ அப்போது தானும் இறந்து போக நேருமே என்ற கவலை வந்துவந்து வாட் டிக் கொண்டிருந்தது. அதனால் வெறும் ஆசையினால் உயிர்போல் பாவிக்கப்பட்ட ராமன் உண்மையிலேயே தசரதனுடைய உயிராகிவிடுகிறான். (கம்பன் அப்படிக் காட்டுகிறான்). அதனால் ராமனைப் பிரிவதென்றால் உயிரைப் பிரிவது போன்ற துன்பத்தை உண்டாக்கக்கூடிய தாகப் போய்விட்டது. அந்தத் துன்பத்தை விஸ்வாமித்திரர் தமது வேள்வியைக் காக்க ராமனைத் துணையாக அனுப்பும்படி தசரதனைக் கேட்டபோது, எண்ணிலா அருந்தவத்தோன் இயம்பிய சொல் மருமத்தில் எறிவேல் பாய்ந்த புண்ணில் ஆம் பெரும்புழையுள் கனல் நுழைந்தால் எனச் செவியில் புகுதலோடும் உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த ஆருயிர் நின்று ஊசலாட கண்ணிலான் பெற்று இழந்தான் என உழந்தான் என்ற பாட்டில் கம்பன் நன்றாகக் காட்டிவிட்டான். இந்தப் பாட்டில் முனிவர் இட்ட சாபமும், அதனால் மன்னனுடைய மனதில் இருந்து கொண்டிருந்த துயர மும், அந்தச் சாபம் பலித்துவிடும் காலம் வந்து விட்டதோ என்று பயப்படுவதும், அதனால் உண்டான துன்பமும் காட்டப்படுகின்றன. அந்தத் துன்பத்தைக் கம்பன் ‘மருமத்தில் எறிவேல் பாய்ந்த புண்ணில் ஆம் பெரும் புழையுள் கனல் நுழைந்தால் என’ என்ற உபமானத்தால் சொல்லுகிறான். கவனிக்கவேண்டியது இங்கேதான். தசரதனுடைய நெஞ்சில் வேல் பாய்ந்த ஒரு புண் இருந்தது. அது ஆறாமல் புரையோடிப் பெரும் புழை யாகப் பச்சைப் புண்ணாகவே இருந்தது. அந்தப் புண் ணில் நெருப்பைச் சொருகியதுபோல் இருந்தது அந்தத் துன்பம். இன்னும் இதைவிட அதிகமாக எப்படிச் சொல்லுவது ? விசுவாமித்திரருடன் ராமனை அனுப்பி னால் அவனைப் பிரிந்து தான் இறந்துபோக நேருமோ என்று தசரதன் சந்தேகமாக எண்ணுகின்றபோதே கம்பன் இத்தனை உபமானத்தையும் ஏகமாகச் சொல்லி விட்டானே, இனி ராமன் 14 வருஷம் காட்டுக்குப் போய்விட வேண்டும் என்று கைகேசி வரம் கேட்கிற போது ராமன் பிரிந்து, தான் இறந்துபோகும் காலம் வந்துவிட்டது என்பது தசரதனுக்குச் சந்தேகமில்லாமல் தெரிகின்ற அந்தச் சமயத்தில் அவனுக்கு உண்டாகக் கூடிய துன்பத்திற்குக் கம்பன் என்ன உதாரணம் சொல் லப் போகிறான் என்று ஆய்ந்து பார்க்கிறபோது தான் அந்த அழகு தென்படுகின்றது. என்ன, எப்படிச் சொல்லுகிறான் கம்பன் என்பதைப் பாருங்கள். முன்னே விசுவாமித்திரர் ராமனைக் கேட்டபோது உண்டான துன்பத்தைக் காட்டுவதற்குச் சொல்லப் பட்ட எறிவேல் பாய்ந்த புண்ணில் ஆம் பெரும் புழையுள் கனல் நுழைந்தால் என ’ என்ற உபமானத்தை அப்படியே வைத்துக் கொண்டு அதைத் தொடர்ந்து இன்னும் அதிகத் துன்பத்தை உண்டாக்கும் ஒரு உதாரணத்தைச் சேர்க்கிறான். தொடர்ச்சி முறியாமல் அதே உதாரணத்தைப் பின்பற்றுகிற அழகு எதிலே இருக்கிற தென்றால், முன்னைய பாட்டிற்கும் பின்னைய பாட்டிற்கும் இடையில் 1351 பாட்டுகள் இருக்கின்றன என்ற உண்மையில் இருக்கிறது. முன்னைய பாட்டில் - விசுவாமித்திரன் ராமனைக் கேட்டபோது, - ‘எண்ணிலா அருந்தவத்தோன் இயம்பிய சொல் : மருமத்தில் எறிவேல் பாய்ந்த புண்ணிலாம் பெரும் புழையுள் கனல் நுழைந்தால் எனச் செவியில் புகுதலோடும்’ என்று சொல்லப்பட்டது. பின்னைய பாட்டில் கைகேசி ராமன் காட்டுக்குப் போகத்தான் வேண்டும். வாக்களித்த வரத்தை கொடுத் தால் கொடுங்கள். இல்லாவிட்டால் பழி போட்டுவிட்டுச் சாகிறேன்’ என்றபோது, - ‘இந்த நெடுஞ்சொல் அவ் வேழை கூறுமுன்னே வெந்த கொடும்புணில் வேல் நுழைந்தது ஓப்ப’ என்று சொல்லப்படுகிறது. 1351 பாட்டுகளுக்குப் பின் னால் தொடர்ச்சியைப் பாருங்கள். அந்தத் தொடர்ச்சி * வெந்த கொடும்புண்’ என்பதில் இருக்கிறது. அதா வது ‘எறிவேல் பாய்ந்து புண்ணாகியிருந்த பெரும் புழையுள் கனல் நுழைந்து, வெந்துபோயிருந்த கொடும் புண்ணில் வேல்விட்டு ஆட்டியதுபோல் இருந்ததாம் தசரதனுடைய துன்பம். ’வெந்த கொடும் புணில்’ என்பதில் உள்ள ‘வெந்த’ என்ற ஒரே ஒரு பதத்தால் முன்னே சொன்ன அத்தனைக் கருத்துக்களையும் அப்படியே இங்கும் கொண்டுவந்து மேலே அதிகத்தையும் சொல்லுகின்றான் கம்பன். கம்பன் கவிதையிலுள்ள எண்ணிறந்த இலக்கியச் சுவைகளுள் இப்படி வெகு தூரத்துக்கு முன்னால் - ஆயிரக்கணக்கான பாடல்களுக்கும் முன்னால் - சொன்ன விஷயங்களை விடாமல் தொடர்ந்து எடுத்ததை முடிக் கும் ஒப்பில்லாத கவித்திறம் கம்பனுக்கே சொந்தமா னது. வேறு எந்தக் கவிஞனிடத்திலும் இந்த அரிய ஆற்றலைக் காணமுடியாது. இந்த ‘வெந்த கொடும் புண்ணில் வேல் நுழைந்த’ விஷயத்தை, இந்தப் பாட்டிற்கு எண்ணாயிரத்து எழு நூற்றுப் பதினாறு (8716) பாட்டுகளுக்குப் பின்னால் எவ்வளவு அற்புதமான புலமையோடு மீண்டும் கம் பன் பிரஸ்தாபிக்கிறான் என்பதை இங்கேயே எடுத்துச் சொல்லிவிட வேண்டும் என்கிற ஆசை அதிகமாகிறது. ‘தசரதன் என்ற உடலுக்கு ராமன் உயிர்’ என்பதுதான் எடுத்துக்கொண்ட விஷயம். அதற்கு இது வும் சற்றே புறம்பானது என்றாலும் இதிலுள்ள மிகச்சிறந்த இலக்கியச் சுவையைக் கருதி வாசிப்பவர்கள் வருத்தப்பட மாட்டார்கள் என்றே எதிர்பார்க்கலாம். ‘வெந்த கொடும் புண்ணில் வேல் நுழைந்த’ விஷயத்தை மீண்டும் 8716 பாட்டுகளுக்குப் பின்னால் எப்படிக் கம்பன் தொடர்ந்திருக்கிறான் என்பதைப் பார்க்கலாம். ராமன் காட்டுக்குப் போகத்தான் வேண்டும் என்று கைகேசி கேட்ட வரம்தான் வெந்த கொடும் புணில் நுழைந்த ‘வேல்’. இதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த வரத்தை தசரதன் கொடுத்து விடுகிறான். ராமன் காட்டுக்குப் போகிறான். தசரதன் இறந்து போகிறான். பிறகு மற்றக் கதைகளெல்லாம் நடக்கின்றன. ராவண சம்மாரம் முடிந்து, சீதை மீட்கப்படு கிறாள். சீதை தன் தூய்மையை நிரூபிக்க அக்கினிப் பிரவேசம் செய்கிறாள். நெருப்பில் குதித்த சீதையை அக்கினி தேவன் சுடவில்லை. சீதாபிராட்டியின் தெய் விகக் கற்பின் சிறப்பை அக்கினி தேவனும் பிரம்மனும் சிவபிரானும் ராமனுக்குச் சொல்லி சீதையை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகிறார்கள். அந்தச் சமயத்தில் அந்த வைபவத்தைக் கண்டு களிக்கும்படி சொர்க்கத்தி லிருந்த தசரதனை சிவன் முதலான தேவர்கள் பூலோ கத்துக்கு வரச் செய்கிறார்கள். தசரதன் மறுபடியும் மகனைச் சந்திக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தினால் வெகு சந்தோஷத்தோடு வானத்திலிருந்து பூமிக்கு வருகிறான். ஆனால் முன்னிருந்த மனித சரீரத்தோடு அல்ல. தேவ சரீரமாகிய சூஷ்ம சரீரத்தோடு வருகிறான் ……….. சூக்கும சரீரம் என்பது இறந்து போனவர்கள் தேவ லோகத்தில் நடமாடும் சரீரம். அந்த சரீரம் ஆவி ரூபமாக இருக்கும். ஆனால் அவர்கள் விரும்பினால் பழைய மனித உருவம் போலவே பிறருடைய கண்ணுக் குத் தெரியும்படியாகவும் வரலாம். அந்த வடிவம் இறக்கும் போதிருந்த பழைய வடிவம்தான். (இந்த சூக்கும சரீரம் என்பது மெய்யா, பொய்யா; இருக்குமா இல்லையா என்பதை இங்கே ஆராய வேண்டாம். அப்படிப்பட்ட ஒரு நிலை உண்டு என்பதைப் பல நூல்கள் சொல்லுகின்றன. அது உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்புகிறவர்கள் எத்தனையோ பேர்கள் இன்றும் இருக்கிறார்கள். நம்முடைய நாட்டில் மட்டும் அல்ல. உலகெங்கும் அப்படிப்பட்டவர்கள் உண்டு. ஐரோப்பாவில் அநேகர் உண்டு. இங்கிலாந் தில் அதை நம்புகின்றவர்கள் சிறந்த எழுத்தாளர்களின் லும் இருக்கிறார்கள். மிகச் சிறந்த நாவல் ஆசிரியரான காலஞ்சென்ற ‘கானன் டாயில்’ என்பவர் அதைப் பற்றி அநேக கட்டுரைகள் எழுதி, சூக்கும சரீரத்தோடு நடமாடுகிற கந்தர்வர்களைத் தாம் கண்ணாரக் கண்டதாகவும் எழுதுகிறார். அந்தக் கந்தர்வ உருவங்களை ’போட்டோ ’வில் படம் பிடிக்கவும் முடியுமென்று முயன்றிருக்கிறார். அந்த நம்பிக்கை எப்படியோ போகட்டும்……………) தசரதன் பிறருடைய கண்ணுக்குத் தெரியும்படி ராமன், சீதை முதலானவர்கள் இருந்த இடத்துக்கு சூக்கும சரீரத்தோடு வருகிறான். தசரதனைக் கண்டதும் ராமன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறான். வணங்கிய மகனை வாரியெடுத்து மன்னவன் மார்புற இறுகத்தழுவி, ஆனந்தக் கண்ணீரால் அபிஷேகம் செய்து, மகனோடு அயோத்தியில் வாழ்ந்த இன்ப நினைவு - களை எண்ணி மகிழ்ச்சியுற்று, உடனே கைகேசியினால் ஏற்பட்ட துன்ப நினைவுகளும் வந்து வருத்தப்படுத்த ராமனுக்குச் சொல்லலுற்றான் என்பதை, - வீழ்ந்த மைந்தனை எடுத்துத்தன் விலங்கல் ஆகத்தில் ஆழ்ந்து அழுந்திடத் தழுவித் தன் கண்ணின் நீராட்டி வாழ்ந்த சிந்தையின் மனங்களும் களிப்புற மன்னன் போழ்ந்த துன்பங்கள் புறப்பட நின்று இவை புகன்றான் என்ற பாட்டினால் சொல்லிவிட்டு, அடுத்த பாட்டில் அந்த ‘வெந்த கொடும் புண்ணில் வேல் நுழைந்த’ விஷயத்தை தசரதனுடைய வாக்காக வைக்கிறான். கம்பராமாயணப் பிரகாரம் கைகேசி வரம் வாங்கிக்கொண்ட பிறகு ராமன் தசரதனைச் சந்திப்பதே இல்லை. வான்மீகி ராமாயணப் பிரகாரம் ராமன் தசரதனைச் சந்தித்துப் பலவித சம்வாதங்கள் நடந்த பின் தசரதனே ராமனுக்கு விடை கொடுத்து வனத்துக்கு அனுப்புகிறான். அந்த வேறுபாடுகளை இங்கே விவரிக்க வேண்டாம். ஆனால் கம்பராமாயணத்தில் ராமன் தசரதனைப் பார்க்கக்கூட இல்லை என்பதை மட்டும் மனதில் வைக்க வேண்டும் கைகேசியினுடைய பிடிவாதத்தால் மகனைப் பிரிந்து அதனால் உயிர் பிரிந்த தசரதன் மறுபடியும் இங்கேதான் சந்திக்கிறான். ஆகையினால் கைகேசியின் கொடுமையை மகனிடம் சொல்லி சலிப்புகளை ஆற்றிக் கொள்ள ஆசைவந்து, கைகேசி வாங்கிக்கொண்ட வரம் தன் மார்பில் வேல் பாய்ச்சியது போல் குத்திக் கொன்றுவிட்டது என்று சொல்லிக் கொள்ளுகிறான் தசரதன். அந்த அருமையான பாட்டில் கம்பன் தொடர்ந்திருக்கிற கருத்துக்களைப் பாருங்கள் : அன்று கேகயன் மகள் கொண்ட வரம் என்னும் அயில்வேல் இன்று காறும் என் இதயத்தின் இடை நின்றது, என்னைக் கொன்றும் நீங்கலது, இப்பொழுது அகன்றது, உன்குலப் பூண் மன்றல் ஆகமாம் காந்த . மாமணி இன்று வாங்க. ‘மகனே! அன்றைய தினம் கேகயன் மகளாகிய கைகேசி வாங்கிக்கொண்ட வரம் என்ற இரும்பு வேலாயுதம் என் மார்பில் இன்றைய வரையிலும் இருந்து துன்புறுத்திக் கொண்டே இருந்தது. என்னைக் கொன்ற பிறகும்கூட அது நீங்காமல் என்னுடைய சூக்கும சரீரத்திலும் இருந்துகொண்டே யிருந்தது. இன்றைக்குக் காந்தமலை போன்ற உன்னுடைய மார்பை நான் தழுவின பிறகுதான் அது (இரும்பு வேல்) காந்தத் தினால் இழுக்கப்பட்டு நீங்கிற்று’ என்பது இதன் பொருள். முன்னே ‘வெந்த கொடும் புண்ணில் வேல் நுழைந் தது ஒப்ப’ என்று சொல்லப்பட்ட வேல் தான் இங்கே இந்தப் பாட்டில் இருக்கிற ‘அயில் வேல்’. ராமனைப் பிரிந்து இறந்த துக்கம் தசரதனை சூக்கும சரீரத்திலும் தொடர்ந்து, இப்போது மீண்டும் ராமனைச் சந்தித்துத் தழுவிக்கொண்ட பிறகுதான் நீங்கிற்று என்பது கருத்து. சொர்க்கத்திலும் நிம்மதி இல்லாதிருந்த தசரதனுக்கு இனிமேல் தான் சாந்தி உண்டாகிறது. 8716 பாட்டுகளுக்குப் பின்னால் எவ்வளவு அழகாக இந்தக் கற்பனையைத் தொடர்ந்திருக்கிறான் கம்பன் என்று அறிவதினால் உண்டாகும் இலக்கிய இன்பம் எவ்வளவு சிறந்தது என்பதைப் படிக்கிறவர்களே பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். இனி, தசரதன் என்ற உடலையும் ராமன் என்ற உயிரையும் மீண்டும் தொடர்வோம். கடைசியாக ‘தசரதனுக்கு ராமன் தான் உயிர்’ என்ற கருத்தைக் காட்டுவதற்கு நாம் குறிப்பிட்ட பாட்டு இது வாகும் : - இந்த நெடுஞ்சொல் அவ் வேழை கூறுமுன் னே வெந்த கொடும்புணில் வேல் நுழைந்த தொப்ப சிந்தை திரிந்து திகைத்து அயர்ந்து வீழ்ந்தான் மைந்தன் அலாது உயிர் வேறிலாத மன்னன். இந்தப் பாட்டிற்குப் பன்னிரண்டு பாட்டு களுக்குப்பின், தசரதன் கைகேசியை மிகவும் கெஞ்சி, ராமன் காட்டுக்குப் போகவேண்டும் என்பதை மட்டும் மாற்றும்படி கேட்டுக் கொள்கிறான் : - நின் மகன் ஆள்வான் நீ இனிது ஆள்வாய் நிலம் எல்லாம் உன்மயம் ஆமே ஆளுதி, தந்தேன், உரை குன்றேன். என்மகன், என்கண், என் உயிர் எல்லா உயிர்கட்கும் நன்மகன் இந்த நாடு இறவாமை நய என்றான். ‘உன் மகன் பரதனே அரசாளட்டும். நீயே ஆளு. இந்த ராஜ்யம் முழுவதும் உன்னுடைய மயமாகவே இருக்கட்டும். நான் சொன்ன சொல்லில் குறைய மாட்டேன். ஆனால் என் மகனான ராமன், என் கண்ணாகிய ராமன், என் உயிராகிய ராமன், உல கத்திலுள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் (இந்த நாட்டி லுள்ள எல்லாக் குடி ஜனங்களுக்கும்) நல்லவனான ராமன் இந்த நாட்டை விட்டுப் போகாமல் இருக்கும் படியான ஒரு விஷயத்தை மட்டும் நீ தயவு செய்ய வேண்டும்’ என்றான் என்பது இதன் பொருள். இதில் ராமனைத் தசரதன் ‘என் உயிர்’ என்று சொல்லுகிறான். ‘ராமன் போனால் என் உயிரும் போய்விடும்’ என்பது கருத்து. இதன் கருத்தை இதற்கு அடுத்த பாட்டில் இதைவிட அதிகத் தெளி வாகச் சொல்லுகிறான்: - மெய்யே என்றன் வேர் அற நூறும் வினைநோக்கி நையா நின்றேன் நாவும் உலர்ந்தேன் நளினம்போல் கையான் இன்று என் கண் எதிர் நின்றும் கழிவானேல் உய்யேன் நங்காய்! உன் அபயம் என் உயிர் என்றான் ’ ‘கைகேசீ! சத்தியமே என்னை வேரறுக்கும் கருவி யாகி விட்டதைக் கண்டு மிகவும் வேதனைப்படுகிறேன். என் நாக்கும் உலர்ந்து போய்விட்டது - பேசவும்கூட முடியவில்லை - தாமரை போன்ற கைகளையுடைய ராமன் என் கண்ணுக்கு முன்னால் இருந்து கொண் டிருப்பதைவிட்டுப் போய்விடுவானாகில் பெண்ணே! நான் பிழைத்திருக்க மாட்டேன். ஆகையினால் என் உயிர் உனக்கு அடைக்கலம்’ என்றான் என்பது இதன் அர்த்தம். ‘ராமன் என்னுடைய உயிர். அவன் போனால் என் உயிர் போய்விடும்’ என்பது இதில் தெளிவாக விளங்குகின்றது. இப்படியெல்லாம் கெஞ்சிக் கேட்டும்கூட கைகேசி யின் மனம் இளகவில்லை. அதைக்கண்டு மனம் கொதித்து மன்னன் சொல்லுகின்றான் : - ஏவம் பாராய், இனமுறை நோக்காய், அறம் எண்ணாய், ஆ என்பாயோ அல்லை, மனத்தால் அருள் கொன்றாய், நா அம்பால் என் ஆருயிர் உண்டாய், இனி ஞாலம் பாவம் பாராது, இன் உயிர் கொள்ளப் படு கின்றாய். ‘கைகேசீ! நீ உன் குற்றத்தை உணரவில்லை; உறவின் முறையையும் கருதவில்லை; தர்மா தர்மத்தை யும் எண்ணிப் பார்க்கவில்லை. வாயால் வரம் கேட்டு அம்பைப் பாய்ச்சி என் உயிரைப் போக்குகின்றாய். நீ கொஞ்சங்கூட பச்சாத்தாபம் கொள்வாயென்று எனக்குத் தோன்றவில்லை. மனமாற வேண்டுமென்றே ’அருள்’ என்பதைக் கொலை செய்து விட்டாய். இனி இந்த உலகம் பழி பாவத்தைக்கூடப் பார்க்காமல் உன்னைக் கொன்றுவிடக்கூடிய நிலைமைக்கும் இறங்கி விட்டாய்’ என்பது இதன் பொருள். இந்தப் பாட்டில் நா அம்பால் என் ஆருயிர் உண்டாய் என்பது ராமனைக் காட்டுக்குப் போக்க வேண்டும் என்று சொல்லி என் உயிரைப் போக்குகிறாய் என்ற பொருளில் இருப்பதனால் தசரதனுக்கு உயிர் ராமன் என்பது விளங்குகின்றது. என்ன சொல்லியும் கைகேசியின் மனம் மாற வில்லை. கேட்ட வரங்களைக் கொடுத்தே தீரவேண்டும் என்று பிடிவாதம் செய்கிறாள். வேறு வழியின்றி தசரதன் வரங்களைத் தருகின்றான். - ஈய்ந்தேன் ஈய்ந்தேன் இவ்வரம் என்சேய் வனம் ஆள் மாய்ந்தேன் நான் போய் வானுலகு ஆள்வேன் வசைவெள்ளம் நீந்தாய் நீந்தாய் நின்மகனோடும் நெடிது என்றான். ’தந்தேன் தந்தேன் என்னுடைய மகன் (ராமன்) காட் டுக்குப் போகும் இந்த வரத்தைத் தந்தேன். நான் இறந்தே போவேன். நான் வானுலகம் போவேன். ஆனால், இதனால் வரும் பழியாகிய அபகீர்த்தியை நீயும் உன் மகன் பரதனும் அடைந்து அதினின்றும் நெடுங் காலத்துக்குக் கரையேற முடியாது, என்பது இந்தப் பாட்டின் அர்த்தம். இதில் * என் மகன் ராமன் காட்டுக்குப் போவான். நானும் இறந்து போவேன்’ என்பது, தசரதனுடைய உயிர்நிலை ராமன் என்பதை உணர்த்துகிறது. இந்த வரங்களைத் தந்த உடனேயே தசரதன் தன்னை வாள் கொண்டு வெட்டி விட்டது போன்ற நிலைமை யடைந்து மூர்ச்சையாகிவிட்டான். ஆனால் கைகேசியோ தன்னு டைய காரியம் வெற்றி பெற்றுவிட்ட களிப்போடு நிம்மதியடைந்து நித்திரை கொண்டாள் என்பதை : - கூறாமுன்னம் கூறுபடுக்கும் கொலை வாளின் ஏறாம் என்னும் வன்துயர் ஆகத்து இடைமூழ்கத் தேறான் ஆசி செய்கை மறந்தான்; செயல் முற்றி ஊறா நின்ற சிந்தையினாளும் துயில் வுற்றாள், என்ற பாட்டால் சொல்லப்படுகிறது. தசரதன் உணர்வில்லாமல் கிடக்கிறான். கைகேசி தூங்குகிறாள். இப்படியாக இரவு கழிகின்றது. கொஞ் சம் கொஞ்சமாகப் பொழுது விடிகின்றது. அந்த விடியற்காலத்தைக் பல பாட்டுக்களால் நிலைமைக்கு ஏற்றவாறு கம்பன் வர்ணிக்கிறான். இரவின் இருள் போவதைச் சொல்லும் பொழுது, இரவு என்பதை ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி, அந்தப் பெண் கைகேசி என்ற பெண்ணின் செய்கையைக் கண்டு வெட்கப்பட்டு இந்த உலகத்துப் பெண்கள் முகத்தில்கூட விழிக்கக் கூடாதென்று போய்விட்டது போல் சித்திரிக்கப் படுகிறது. அந்தப் பாட்டு : - சேண் உலாவிய நாள்எலாம் உயிர் ஒன்றுபோல்வன செய்து பின் ஏண் உலாவிய தோளினான் இடர் எய்த ஓன்றும் இரங்கிலா வாள் நிலா நகை மாதராள் செயல்கண்டு மைந்தர் முன் நிற்கவும் நாணினாள் என ஏகினாள் நளிர் கங்குல் ஆகிய நங்கையே என்பது. இந்தப் பாட்டின் அர்த்தம் ‘தேவலோகத் தில் (சம்பர அசுரனை வென்றபோது) உலாவிய நாளில் எல்லாம் கைகேசி தன்னுடைய உயிரும் கணவனாகிய தசரதனுடைய உயிரும் ஒரே உயிர் தான் என்று எண்ணி நடந்துகொண்டு, பிறகு இப்போது அவ்வளவு வலிமை பொருந்திய தோளாற்றலுள்ள அந்தக் கணவன் அத்தனை துன்பம் அடைந்து கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டும் இரக்கம் காட்டாத, சந்திர ஒளி வீசக்கூடிய பல் வரிசையுள்ள அழகியான கைகேசி யின் செயலைக் கண்டு மனிதர்களுக்கு முன்னால் நிற்கக் கூட வெறுப்படைந்தவள் போலக் குளிர்ந்த இரவு என்னும் பெண் போய்விட்டாள்’ என்பது. இதில், முன்னே சம்பராசுரனுடன் சண்டை செய்ய தசரதன் தெய்வலோகத்துக்குப் போனபோது அவனுடன் போயிருந்த கைகேசி, சம்பராசுரனால் தன்னுடைய கணவனுடைய உயிருக்கு அபாயம் வரக் கூடிய தருணத்தில், தான் பெண் என்பதையும் மறந்து சம்பரனுடன் போர் புரிந்து கணவனுடைய உயிரைக் காப்பாற்றினாள். அப்படிப்பட்ட கைகேசி இப்போது கணவனுடைய உயிருக்கு நிச்சயமாக அபாயம் வரு. மென்று நினைக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டும்கூட இரக்கம் கொள்ள மறுத்துவிட்டதால் தசரதனுடைய உயிர் போவதானாலும் சரி ராமன் காட்டுக்குப் போக . வேண்டும் என்று பிடிவாதம் காட்டினாள். அதனால் முன்னே ‘உயிர் ஒன்று’ போல்வன செய்த அவளுக்கு இப்போது உயிர் வேறாகப் போய்விட்டது. உயிர் ஒன்று என்ற உணர்ச்சி இருந்தால் ராமனைக் காட்டுக் குப் போகச் சொல்லிக் கணவனுடைய உயிருக்கு வரப் போகிற அபாயம் தன் உயிருக்கும் உண்டு என்பதைக் கண்டிருப்பாள். இங்கேயும் தசரதனுக்கு ராமன் உயிர் என்ற கருத்து காணப்படுகிறது. பொழுது விடிந்தது. தசரதன் மூர்ச்சையாகவே கிடக்கிறான். கைகேசி தூங்கி எழுந்து சந்தோஷத் துடன் இருக்கிறாள். இந்தச் சமயத்தில் முதல் மந்திரி யாகிய சுமந்திரர் ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய் வதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் முடித்து விட்டு, தசரதனைத் தேடி கைகேசியினுடைய மாளி கைக்கு வருகிறார். மந்திரியின் வருகை கைகேசிக்கு அறிவிக்கப்படுகிறது. உடனே கைகேசி விரைந்து வந்து சுமந்திரரை அரண்மனையின் வாசலிலேயே சந்திக்கிறாள். ராமனை உடனே அழைத்து வரும்படி சுமந்திரருக்கு ஆணையிடுகிறாள். ராமனை அவசரமாகக் கைகேசி அழைத்து வரச் சொன்னதும் பட்டாபி ஷேகத்திற்காகத்தான் என்று எண்ணிக் கொண்ட சுமந்திரர், வேகமாகச் சென்று ராமனை - கொற்றவர், முனிவர், மற்றும் குவலயத்து உள்ளார் உன்னைப் பெற்ற அன்று அன்னைப்போலப் பெரும் பரிவு இயற்றி நின்றார் சிற்றவைதானும் ஆங்கே கொணர்கெனச் செப்பினாள் அப் பொன்தட மகுடம் சூடப் போதுதி விரைவின் என்றான். அதாவது ‘ராமா! அரசர்கள் முனிவர்கள் மற்றும் இந்த உலகத்திலுள்ள ஜனங்கள் எல்லாரும் உன்னைப் பெற்றெடுத்தபோது உன் அன்னை அடைந்த சந்தோஷத்தைப் போல் உன் பட்டாபிஷேகத்தை வரவேற்று சந்தோஷப்படுகிறார்கள். அதைப் போலவே சந்தோஷிக்கிற உன் சிற்றன்னையாகிய கைகேசியும் உன்னை உடனே அழைத்துவரக் கட்டளை யிட்டார்கள். அந்தப் பொன் மகுடத்தை அணிந்துகொள்ள விரைவாகப் புறப்படு’ என்று ராமனைச் சுமந்திரர் அழைக்கிறார். உடனே ராமன் கைகேசியினுடைய வீட்டிற்கு வருகிறான். வாசலிலேயே இருந்த கைகேசி, அவனையும் அங்கேயே சந்தித்து ‘பரதன் பட்டாபிஷேகம் செய்து கொள்ள வேண்டும் என்றும், நீ தவக்கோலத்துடன் வனத்துக்குப் போய் பதினான்கு வருஷங்கள் அங்கே வசித்திருந்துவிட்டு வரவேண்டும் என்றும் அரசன் கட் டளையிட்டார்’ என்று சொல்லுகிறாள். உடனே ராமன் அதை ஒத்துக்கொண்டு அங்கிருந்தபடியே விடை பெற்றுக்கொண்டு (தசரதனைக்கூடப் பார்க்காமல்) போய்விடுகிறான்-வனத்துக்குப் புறப்பட. ராமன் கோசலையிடம் வனத்திற்குப் போக விடை பெற்றுக்கொள்ள வருகிறான். ராமன் வனத்துக்குப் போவதாகச் சொன்ன வார்த்தையால் கோசலைக்கு அடக்க முடியாத வருத்தம் வந்து, அதைப்பற்றித் தசரதனிடம் முறையிட்டுக்கொள்ள நினைத்து, கைகேசி யின் மனைக்கு கோசலை வருகிறாள். மயக்கமுற்று உணர் வில்லாமல் கிடந்த மன்னவனைக்கண்டு கோசலை கலங்கிக் கொண்டிருக்கிறாள். அதே தருணத்தில் பட்டாபி ஷேக முகூர்த்தம் நெருங்கி விட்டதைக் கண்ட வசிஷ் டரும் அரசனை நாடி அங்கே வருகிறார். வந்த வசிஷ்டர் அரசன் கிடந்த நிலைமையைப் பார்த்து நிகழ்ந்ததை யெல்லாம் கேட்டு, அரசனுடைய உயிருக்கு அபாயம் வந்துவிட்டதை உணர்ந்து கைகேசிக்கு அறிவு சொல்கிறார் : - முனியும் முனியும் செய்கைக் கொடியாள் முனமே முன்னி ‘இனி, உன் புதல்வற்கு அரசும் ஏனையோர்க்கு இன் உயிரும் மனுவின் வழி நின் கணவற்கு உயிரும் உதவி வசைதீர் புனிதம் மருவும் புகழே புனைவாய் பொன்னே’ என்றான். கோபத்தை யெல்லாம் அடக்கி யாளக்கூடிய முனி வரும் கூட கோபிக்கத்தகுந்த கொடியவளாகி விட்ட கைகேசிக்கு முன்னால் வசிஷ்ட முனிவன் வந்து பொன்னைப் போன்ற கைகேசியே! இனியாவது யோசனை செய்து உன் மகனுக்குப் பட்டம் கட்டிக் கொள். ஆனால் ராமன் காட்டுக்குப் போகவேண்டும் என்பதை விட்டுவிடு. அந்த உபகாரத்தைச் செய்தால் தான் ஜனங்களுக்கு சந்தோஷம் உண்டாகும். மனுவின் மரபில் வந்தவனாகிய உன் கணவனுடைய உயிரும் தப்பிக்கும். அதனால் உனக்கும் வசை நீங்கிப் புகழ் உண்டாகும் என்றான் என்பது இப்பாடலின் அர்த்தம். இதில் ‘நின் கணவற்கு உயிரும் உதவி’ என்பதை ’ராமன் காட்டிற்குப் போகாமல் செய்து என்பதற்கு நிகராக வைத்திருப்பதனால் ’ராமன் போவது உன்னுடைய கணவன் உயிர் போவது என்கிறார் வசிஷ்ட முனிவர். இங்கேயும் ‘ராமன் தசரதனுடைய உயிர்’ என்பதைக் கம்பன் காட்டுகிறான். வசிஷ்டர் மேற்சொன்ன புத்திமதியைச் சொன்னவுடன் கைகேசி அழுது கண்ணீர் விட்டு ‘’வாக்களித்த வரங்களைத் தர மறுத்து அரசன் பொய்யராகி விடுவாரானால் நான் உயிரோடு இருக்கமாட்டேன். என்னுடைய கோரிக்கை நிறைவேறாவிட்டால் இப்போதே இறந்து போகாமல் இருக்கமாட்டேன்’‘என்று புலம்பினாள். அதைக் கண்ட வசிஷ்டருக்குக் கடுங்கோபம் உண்டாகிப் பின்வருமாறு ஏசுகின்றார்.’‘கைகேசீ! உன் கணவர் இறந்து விடுவார் என்பதையும், உன் செய்கையை உலகம் ஒத்துக்கொள்ளாது என்பதையும், இதனால் உனக்குப் பெரும் பழி உண்டாகி அது நாளுக்கு நாள் அதிகப்படும் என்பதையும், இது மிகவும் பாவம் நிறைந்த காரியம் என்பதையும் நீ அறிவாய். அறிந்தும் பிடிவாதம் செய்கிறாய். சொன்னாலும் கேட்க மறுக்கிறாய். இன்னும் உனக்கு நான் என்ன சொல்லுவது? ………….. கொஞ்சம் கூட தாட்சண்யம் இல் லாமல், கணவனுடைய உயிர் போகிற வேதனைகளையும் கவனிக்காமல், புண்ணில் நெருப்பை நுழைத்தது போல, விஷம் போன்ற பேச்சுகளைச் சொல்லுகின்ற நீ பெண் தானா? அல்லது நெருப்பா? அல்லது பேயே தானோ! கொடியவளே! நீ இந்த உலகில் இருந்து என்ன பயன். வசைதான் மிச்சம்………. அரசன் சொல் லாமல் நீயே ராமனைக் கூப்பிட்டு அவனைக் காட்டுக்குப் போகும்படி அரசன் ஆணையிட்டதாக அபத்தம் சொல்லிவிட்டாயே! ராமனோ காட்டுக்குப் போவதில் தவறமாட்டான். மன்னனுடைய புகழைக் கெடுத்து அவனுடைய உயிரையும் பொசுக்குகின்ற தீயவளே! உன்னைப் போன்ற கொடுமைக்காரரை நான் கண்டதே யில்லை. இனிமேல் என்ன செய்ய முடியும்’’ என்பன சொல்லி வசிஷ்டர் வருந்துகிறார். அந்தச் சமயத்தில் கொஞ்சம் பிரக்ஞை வந்த தச ரதன், ராமனைக் காட்டுக்குப் போகும்படி கைகேசியே உத்தரவிட்டதாக வசிஷ்டர் சொன்னதைக் கேட்ட வுடன் துள்ளித் துடித்து விழித்துப் பார்த்து, - தாவில் முனிவன் புகலத் தளரா நின்ற மன்னன் நாவில் நஞ்சம் உடைய நங்கை தன்னை நோக்கி பாவி நீயே வெங்கான் படர்வாயென்று என் உயிரை ஏவினாயோ, அவனும் ஏகினானோ? என்றான் ‘துன்பங்களை ஒழித்த தவசியான வசிஷ்டர் அந்த வார்த்தைகளைச் சொல்லக் கேட்ட மன்னன் துயரம் மிகுந்து நாக்கில் விஷம் உள்ளவளான கைகேசி யைப் பார்த்து ’அடி பாவீ! என் உயிரை காட்டுக்குப் போகும்படி நீயேவா சொல்லிவிட்டாய்! அவனும் போய் விட்டானா?’ என்றான். இதில் ‘என் உயிரை ஏவினாயோ! அவனும் ஏகினானோ?’ என்பதினால் உயிரை ராமனாகவே சொல்லப் படுவதைக் கவனிக்கவேண்டும். இந்த இடத்திலும் ‘ராமனே தசரதனுடைய உயிர்’ என்பதைக் கம்பன் அழகாகக் காட்டுகிறான். இதற்குப்பின் தசரத மன்னன் கைகேசியைப் பல வாறு நிந்தித்து, மகனுடைய பிரிவை நினைந்து பிரலாபிக்கிறான். அப்படிப்பட்ட பல பாட்டுகளுக்குப் பின்னால், - எற்றே பகர்வேன் இனியான் என்னை உன்னில் பிரிய வற்றே உலகம் எனினும் வானே வருந்தாது எனினும் பொற்றேர் அரசே! தமியேன் புகழே! உயிரே ! உன்னைப் பெற்றேன் அருமை அறிவேன் பிழையேன், பிழையேன் என்றான் ‘இனிமேல் நான் என்ன சொல்லி யாது பயன்? என்னை உன்னை விட்டுப் பிரிப்பதை இந்த உலகம் சகித் துக்கொள்ளும் என்றாலும், அதனால் வானுலகம் வருத் தப்படாது என்றாலும் ஏ! ராமா ! என்னுடைய புகழே! என் உயிரே! உன்னைப்பெற்ற அருமை எனக் குத்தான் தெரியும். மனிதரோ தேவரோ மற்றவர் அறியமுடியாது. நான் இனிப் பிழைக்க மாட்டேன், பிழைக்கமாட்டேன்’ என்று தசரதன் புலம்புகின்றான். இதிலும் ‘என் உயிரே !’ என்று தசரதன் ராம னைச் சொல்வது கவனிக்கத்தக்கது. அது வெறும் ஆசை மொழியாகச் சொன்னது மட்டும் அல்ல. கம்பன் கருதி வைத்தது. இப்படிப் பலவாறாகப் புலம்பிக்கொண்டே தசரதன் கொஞ்சம் கொஞ்சமாக நினைவு தடுமாறி, நாக்குளறி இறந்துபோகும் தருணம் வந்து விட்டதோ என்று எண்ணவேண்டிய நிலைமையை அடைந்து விட்டான். அதைக்கண்ட வசிஷ்டர் ‘ராஜனே பயப்பட வேண்டாம் நான் போய் ராமனைக் காட்டிற்குப் போகாதபடி தடுக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு ராமனைச் சந்திக் கப் போகிறார் : என்றே ஓன் சென்று ஒவ்வாது இசைதந்து அரசன் உயிரும் சென்றான் இன்றோடு என்னும் தன்மை எய்தித் தேய்ந்தான் ; மென்தோல் மார்பின் முனிவன் வேந்தே! அயரேல், அவனை இன்று ஏகாத வண்ணம் தகைவென் உலகோடு என்றான், ‘என்று ஒன்றுக்கொன்று பொருந்தாத விதமாக நினைவு தடுமாறிய வார்த்தைகளைச் சொல்லத் தொடங்கி, ’இன்றோடு அரசன் இறந்தான்’ என்று எண்ணும் நிலைமையை அடைந்து மன்னவன் ஒடுங்கி வருவதைக் கண்டு, மெல்லிய மான்தோலை அணிந்த வனாகிய வசிஷ்ட முனிவன் ‘வேந்தே அசரவேண்டாம் ராமன் காட்டுக்குப் போகாதபடி பொது ஜனங்களு டன் நானும் சொல்லி அவன் போவதைத் தடுத்து விடுகிறேன்’ என்றான் - என்பது பொருள். இந்தப் பாட்டிலுள்ள ‘தகைவென்’ என்ற பதத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். அடுத்த பாட்டில் - முனிவன் சொல்லும் அளவில் ‘முடியும் கொல்’ என்று அரசன் தனி நின்று உழல் தன் உயிரைச் சிறிதே தகைவான் “ இந்தப் புனிதன் போனால் இவனால் போகாது ஒழிவான்’ என்ன மனிதன் வடிவம் கொண்ட மனுவும் தன்னை மறந்தான். ‘அப்படிச் சொல்லிவிட்டு வசிஷ்ட முனிவன் போன ’போது, தசரதன்’ ராமன் காட்டுக்குப் போவதைத் தடுத்துவிட முடியுமா?‘என்று எண்ணி, தடுத்து விடக்கூடும் என்று ஆசைப்பட்டு, (உடலின் உள்ளும் தங்காமல் வெளியிலும் போகாமல்) தனியே இருந்து தவித்துக்கொண்டிருந்த தன்னுடைய உயிரை வெளியே போய்விடாதபடி தடுக்க முயன்றான். அப்படி முயல் வதற்கு அனுகூலமாக இருக்கும்படி, முன்னே இருந்து போய்விட்ட அந்த மனு என்பவனே மறுபடியும் பிறந்து வந்ததற்குச் சமானமானவனான தசரதன் * இவர் போய்ச் சொன்னால் ராமன் வனத்துக்குப் போகாமல் நின்று விடுவான்’ என்று எண்ணிக் கொண்டு சற்றே தன் துன்பங்களை மறந்தான்’ - என்பது இதன் அர்த்தம். ராமன் காட்டுக்குப் போகாதபடி வசிஷ்டரால் தடுக்கமுடியும் என்ற எண்ணத்தால் தன்னுடைய உயிரையும் போய்விடாதபடி தசரதன் தடுக்க முடிந்தது என்று கம்பன் கற்பிக்கிறான். முனிவன் ராமனைத் தடுப்பதற்குப் பிரயோகித்த ‘தகை வென்’ என்ற முந் தின பாட்டிலுள்ள அதே பதத்தைப் பிந்தின பாட்டி லும் ‘தனி நின்று உழல் தன் உயிரைச் சிறிதே தகை வான்’ என்று பிரயோகப்படுத்தி யிருப்பதையும் அறிந்து அனுபவிக்க வேண்டும். ராமன் காட்டுக்குப் போவதைத் தடுப்பதும், தசரதன் உயிர் போவதைத் தடுப்பதும் இரண்டும் ஒரே காரியமாகச் சித்திரிப்பதனால் இங்கேயும் தசரதன் உயிர் ராமனே ’ என்ற கற்பனையைக் கவிஞன் தொடர்ந்திருப்பது கண்கூடு. இனி ‘தசரதனுடைய உயிர் ராமனே’ என்ற கற்பனைக்கு முத்தாய்ப்பாக அந்த உயிர் எப்படி, எப் போது பிரிகிறது என்பதில் கம்பன் காட்டுகிற அதி அற்புத கவிதா மேதையைச் சொல்லுவோம். அதை வாசகர்கள் கூர்ந்து கவனிக்கவேண்டும். மேலே சொன்ன பாட்டில் ராமன் வனம் போகாதபடி வசிஷ் டர் தடுத்துவிடலாம் என்ற ஆசையினால் சற்றே ஆறு தல் அடைந்தவனாக மன்னன் மரணவேதனைத் துடிப்புகள் இல்லாமல், பேச்சும் நின்று, களைப்போடு கண்களை மூடிக்கொண்டிருந்த நிலைமையைக் கண்ட கோசலை, கணவனுக்கு அபாயம் வந்துவிட்டதோ என்று அஞ்சி அரசனுடைய பாதத்தையும் உடலையும் முகத்தையும் தன் கைகளால் தடவிப் பார்க்கிறாள். அப்படித் தடவிக் கொண்டே ‘அரசே! குலகுருவாகிய வசிஷ்டர் சொன் னால் நமது ஐயன் ராமன் கேட்பான். வனம் போகாமல் வந்துவிடுவான். தாங்கள் வருத்தப்பட வேண்டாம்!’ என்று சொல்லுகிறாள் : - மெய்யின் மெய்யே! உலகின் வேந்தர்க்கெல்லாம் வேந்தே! உய்யும் வகை நின் உயிரைஓம்பாது இங்ஙன் தேம்பில் வையம் முழுதும் துயரால் மறுகும் முனிவன் உடன் நம் ஐயன் வரினும் வரும் ஆல் அயரேல் அரசே! என்றாள். ‘சத்தியத்தின் வடிவமே! உலகிலுள்ள அரசர்க் ’கெல்லாம் அரசே! எல்லாருக்கும் நன்மையுண்டாகும் படி தாங்கள் உயிர் பிழைத்து இருக்கப் பார்த்துக் கொள்ளாமல் இப்படிக் கலங்குவீர்களானால் உலகம் முழுதும் துக்கத்தினால் துன்பப்பட நேரும். வசிஷ்ட முனிவருடன் நமது ஐயன் ராமன் வந்தாலும் வரலாம். ஆகையினால் தாங்கள் மனம் தளரவேண்டாம்’ என் றாள் - என்பது பொருள். அப்படிச் சொன்ன கோசலைக்கு தசரதன் கீழ்க் கண்டவாறு பதில் சொல்லுகிறான். : - வன் மாயக் கைகேசி வாக்கால் என் தன் உயிரை முன் மாய்விப்பத் துணிந்தா ளேனும் கூனி மொழியால் தன் மா மகனும் தானும் தரணி பெறுமாறு அன்றி என் மா மகனைக் ’கான் ஏகு என்றாள், என்னோ, என்றான். ‘மகா மாயக்காரியான கைகேசி வரங்கேட்டு என்னை (அவளுடைய மகனுக்குப் பட்டம் கட்டிக்கொள் வ தற்கு முன்னால் இறந்து போகச் செய்யவேண்டு மென்றே கூனியினுடைய சதியாலோசனையினால் செய்திருக்கிற வேலை இது. ராமன் பிரிந்தால்தான் என் உயிர் பிரியும் என்பதை அறிந்தே செய்திருக்கிறாள் இல்லாவிட்டால் தானும் தன் மகனும் ராஜ்யத்தை ஆள்வதற்கு, என் மகன் காட்டுக்குப் போய்விட வேண்டுமென்று ஏன் சொல்லுகிறாள்?’ - என்பது இப்பாட்டின் தாத்பரியம். இதிலும் ’ராமன் போவது தசரதனுடைய உயிர் போவதாகக் கம்பன் சூசனை யாகச் சொல்லுகிறான். இதற்கடுத்த பாட்டில் - ‘பொன் ஆர் தோளான் கானே புகும் அப்புகுதல் தவிரான் என் ஆர் உயிரோ அகலாது ஓழியாது, இது கோசலை ! கேள் முன்நாள் ஒரு முனிவன் மொழியும் சாபம் உளது’ என்று அந்நாள் உற்றது எல்லாம் அவளுக்கு அரசன் மொழிவான். ‘கோசலை ! சொல்லுகிறேன் கேள். இரும்புக்கு நிக ரான் தோள்களையுடைய நம் ராமனோ காட்டுக்குப் போகாமல் இருக்கப் போவதில்லை. என் உயிரும் போகாமல் இருக்கப்போவதில்லை. இதுவரையிலும் உன்னிடத்தில் சொல்லாதிருந்த ஒரு விஷயத்தை இப் போது சொல்லுகிறேன் கேள். வெகு காலத்துக்கு முன்னால் ஒரு முனிவன் எனக்கு இட்ட சாபம் ஒன்று உண்டு’ என்று அந்தச் சாபத்தைப் பற்றிய வரலாறு களை அரசன் அவளுக்குச் சொல்ல ஆரம்பித்தான் - என்பது இதன் அர்த்தம். தசரதன் தனக்குச் சாபம்வந்த விதத்தைச் சொல்லு கிறான். ‘’கோசலை ! ராமன் பிறப்பதற்கு வெகு காலத் துக்கு முன்னால் நான் வேட்டையாடச் சென்று, யானை கள் நீரருந்த வழக்கமாக வரக்கூடிய ஒரு நதித் துறைக்கு அருகில் மாலைப் பொழுதில் மறைந்து காத் துக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் இருட்டி விட்ட பிறகு, யானை தும்பிக்கையால் தண்ணீர் இழுப் பது போன்ற ஒரு ஓசை கேட்டது. நான் சிறிதும் யோசனையில்லாமல் சப்தம் வந்த இடத்திற்குக் குறி வைத்து பாணத்தை விட்டுவிட்டேன். அந்தப் பாணம் போய்ப் பாய்ந்த உடனே ’ஐயோ’ வென்று அலறி விழுந்த அந்த மனிதக் குரலைக் கேட்டேன். அடடா! யானை என்று நினைத்து யாரோ மனிதன்மேல் அம்பெய்து விட்டோமே! என்று ஓடிப்போய்ப் பார்த்தேன். அங்கே ஒரு வாலிபன் பாணம்பட்டு துடித்துக் கொண்டிருந்தான். அவன் ஒரு முனிவனுடைய புதல்வன். கண்பார்வை அற்றுப்போன கிழவர்களாகிய தன் தாய் தந்தையருக்குத் தண்ணீர் மொண்டுபோக வந்தவன் அச்சிறுவன். கவலையினால், கைகால் நடுக்கெடுத்துத் தெரியாமல் செய்துவிட்ட குற்றத்துக்கு வருந்தி அவ னுடைய வரலாற்றை விசாரித்தேன். அவன் தன் சரித்திரத்தைச் சொல்லி இரண்டு கண்ணும் இல்லாத விருத்தாப்பியர்களான என் தாய் தந்தையர்களுக்கு தாகம் தீர்க்கத் தண்ணீர் கொண்டுபோக வந்தேன். வினைப்பயனால் இப்படி விளைந்து விட்டது. நீங்கள் வருத்தப்படவேண்டாம். ஆனால் இந்தத் தண்ணீரை மட்டும் அவர்களுக்குக் கொடுத்து, நிகழ்ந்ததைச் சொல்லி என் நமஸ்காரத்தையும் தெரியப் படுத்துங்கள்’ என்று சொல்லிவிட்டு இறந்துபோனான். நான் தாங்க முடியாத துயரத்தோடு அந்தக் கிழவர்கள் இருந்த இடத்திற்கு தயங்கித் தயங்கி வந்தேன். காலடி ஓசை யைக் கேட்ட அந்தக் கண்ணில்லாக் கிழவர்கள் மகனே! ஏன் இவ்வளவு நேரம்? எதனால் இப்படி மெதுவாக நடந்து வருகிறாய்? உன்னைப் பிரிந்து ஏங்கிக் கொண் டிருக்கிறோமே ! ஓடிவா. வந்து தழுவிக்கொள்’ என்று கை நீட்டி அழைத்தார்கள். நான் மிகவும் நடுங்கிக் கொண்டு நாக்குள்றி நடந்ததையெல்லாம் சொல்லி, தெரியாமற் செய்துவிட்ட பிழையை மன்னித்தருள் வேண்டும் என்று அவர்களுடைய பாதங்களை பிடித்துக் கொண்டேன். மகன் இறந்துவிட்டதைக் கேட்ட அவர்களுடைய துன்பத் துடிப்புகளை என்னென்று சொல்லுவேன்! அந்தத் துன்பத்தைக் கண்டு ஆற்றாத வனாகி, நான் அந்த நிமிஷம் முதல் அவர்களுடனேயே இருந்து அவர்களுடைய புத்திரனைப் போலவே பணி செய்து என் பாவத்தைத் தீர்த்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அதற்கு அந்தக் கிழவர்கள் - ‘கண்ணுள் மணி போல் மகவை இழந்தும் உயிர் காதலியா உண்ண எண்ணி இருந்தால் உலகோர் என்னென்று உரையார்? விண்ணின் தலை சேருதும் யாம்; எம்போல் விடலை பிரியப் பண்ணும் பரிமா உடையாய்! அடைவாய் படர்வான்’ என்னா. என்றும் - ‘தாவது ஒளிரும் குடையாய் ! ’தவறு இங்கு இது நின் சரணம் காவாய்’ என்ருய். அதனால் கடிய சாபம் கருதேம் ஏவா மகவைப் பிரிந்து, இன்று எம்போல் இடர் உற்றனை நீ போவாய் அகல்வான், என்னாப் பொன் நாட்டிடை போயினரால் ‘கண்மணியே போன்ற அப்படிப்பட்ட அருமை மகனைப் பிரிந்து, இன்னும் இந்த உயிரின்மேல் ஆசை வைத்துச் சோறு தின்று கொண்டிருந்தால் எங்களை உல கத்தார் என்ன சொல்லமாட்டார்கள் ! நாங்கள் இதோ இறந்து போகப்போகிறோம். சதுரங்க சேனைகளை உடையவனே! நீயும் எங்களைப்போல் உன் அருமை மகனைப் பிரிந்து இறக்கக் கடவாய். தெரியாமல் செய்துவிட்டேன் காப்பாற்றவேண்டும்’ என்று நீ கேட்டுக் கொண்டதனால் இதைக்காட்டிலும் பெரிய சாபம் இட மனம் வரவில்லை. எங்கள் மகனைப் போலவே, எதையும் ஏவாமல் செய்யக்கூடிய சத்புத்திரனைப் பிரிந்து நீயும் அந்தப் பிரிவாற்றாத் துன்பத்தினால் இறப்பாய்’ என்றார்கள். ‘’ஆனால் அப்போது அதனால் நான் சிறிதும் வருத்தமடையவில்லை’’ – - சித்தை தளர்வுற்று அயர்தல் சிறிதும் இலனாய் இன்சொல் மைந்தன் உளன் என்றதனால் மகிழ்வோடு இவண் வந்தனன் ஆல் அந்த முனி சொற்றமையும் அண்ணல் வனம் ஏகுதலும் எந்தன் உயிர் வீகுதலும் இறையும் தவற’ என்றான். ‘’அவர்கள் அப்படி எனக்குச் சாபமிட்டதைப் பற்றி நான் அப்போது கொஞ்சம் கூட வருத்தப்பட வில்லை. அதற்கு மாறாக எனக்குப் புத்திரன் உண்டு என்பது அவர்களுடைய சாபத்தில் அடங்கியிருந்ததை எண்ணிச் சந்தோஷமே அடைந்தவனாக நகரத்துக்கு வந்தேன். அந்த முனிவருடைய சாபம் பலிக்கவேண்டிய காலம் இது. ராமன் வனம் போவதும் அதனால் என் உயிர் போவதும் சிறிதும் தவறா’’ என்றான் - என்பது இந்தப் பாட்டின் அர்த்தம். இந்தப் பாட்டிலும் ராமன் போவதும் தசரத னுடைய உயிர் போவதும் ஒன்றேயாகச் சொல்லப் படுவது குறிப்பிடத்தக்கது. இப்படியாக தசரதன் தனக்குச் சாபம் வந்த சரித் திரத்தை கோசலைக்குச் சொல்லி தனக்கு மரணம் சமீ பித்துவிட்டதை உணர்ந்தான் என்றாலும், எப்படி யாவது வசிஷ்டர் சமாதானம் சொல்லி ராமனைக் காட் டுக்குப் போகாமல் தடுத்துவிட்டால் தாவிலை என்ற சபலத்தினால் வசிஷ்டர் வரவை எதிர்பார்த்துக் கொண்டு உயிரை வைத்துக் கொண்டிருக்கிறான். ராமனைக் காட்டுக்குப் போகாமல் தடுத்துவிடுவ தாக வெளியே வந்த வசிஷ்டரை நகரத்து மக்கள் அரண்மனையில் நடந்த விஷயங்களைப் பற்றி விசாரிக் கிறார்கள். வசிஷ்டர், கைகேசி வரம் வாங்கிக் கொண்டதையும் அதனால் மன்னன் அடைந்துள்ள மரண வேதனையையும் ஜனங்களுக்குச் சொல்லுகிறார். ராமன் காட்டுக்குப் போக வேணும் என்றதைக் கேட்ட மகா ஜனங்கள் அளவுகடந்த துக்கம் அடைந்து எப்படி யாவது ராமன் வனம் போவதைத் தடுத்துவிட நினைக் கிறார்கள், இதற்குள் ராமன், அரண்மனையில் சுமித்திரை முதலான அனைவரிடத்திலும் விடை பெற்றுக்கொண்டு விடாப்பிடியாகத் தாங்களும் காட்டுக்கு உடன் வருவோமென்று துணிந்துவிட்ட சீதை, லஷ்மணன் இருவருடனும் மரவுரி தரித்துக்கொண்டு காட்டுக்குப் பயணம் மாகிறான். அந்த இடத்தில் வசிஷ்ட முனிவர் வந்து, ‘’ராமா! நீ காட்டுக்குப் போனால் அரசன் இறந்துவிடுவான்’‘என்கிறார். அதற்கு ராமன்,’‘தந்தை, தாய்க்குக் கொடுத்த வரங்கள் பொய்யாகிவிடாமல் நடந்து கொள்ள வேண்டியது என் கடமை. அவருக்கு. அதனால் நேரும் துக்கத்தை மாற்றிவைக்க வேண்டியது குலகுருவாகிய தங்களுடைய கடமை. தர்மங்களுக்குப் பாதுகாப்பாளராகிய தாங்கள் என்னுடைய தர்மத்தை நான் செய்வதைத் தடுக்கலாமா?’’ என்று கூறுகிறான். அப்பொழுது முனிவர் வேறு ஒன்றும் சொல்ல முடியாமல் விழிக்கிறார். ராமனும் சீதையும் லஷ்மணனும் சுமந்திரர் தேர்ப்பாகனாக ஒரு ரதத்தில் ஏறிக்கொண்டு வனத்தை நாடிப் போகிறார்கள். நகரத்து மகாஜனங்கள் அவ் வளவு பேரும் ‘நாமும் ராமனுடன் சென்று அவன் தங்குகிற காட்டையும் நாட்டுக்குச் சமமாகச் செய்து விடுவோம்’ என்று ரத்தத்தை விடாமல் பின் தொடர்கிறார்கள். என்ன சொல்லியும் கேட்கவில்லை. பகலெல்லாம் பயணம் செய்து இரவைக் கழிக்க ஒரு இடத்தில் ராமன் தங்குகிறான். ஜனங்களும் தங்கு கிறார்கள். நடு ஜாமத்தில் ஜனங்களெல்லாம் வழி நடந்த அலுப்பினால் அயர்ந்து தூங்கிவிட்ட பிறகு, ராமன் சுமந்திரரை ரகசியமாக அழைத்து ‘’ஜனங்கள் என்னைவிட்டுப் போகமாட்டார்கள். நாங்கள் மூவரும் இப்படியே வனத்துக்குள் போய்விடுகிறோம். நீங்கள் ரதத்தில் நாங்கள் இருப்பது போலவே பாவனை செய்து, ரதத்தைத் திருப்பி அயோத்திக்கே ஓட்டுங்கள். ஜனங்களும் பின்பற்றி அயோத்தியை அடைவார்கள்’’ என்று வேண்டிக் கொண்டான். அப்படியே செய்வதாக சுமந்திரரும் இசைந்தார். ராமன், சீதை, லஷ்மணன் மூவரும் வனத்தில் மறைந்துவிடுகிறார்கள். ரதம் அயோத்தியை நோக்கிப் புறப்படுகின்றது. ஜனங்களும் பின்னால் போகிறார்கள். இது இப்படியிருக்க, ராமனை வனம் போகாமல் தடுத்து விடுவதாகச் சொல்லிவிட்டு அரண்மனையை விட்டு வெளியே வந்த வசிஷ்டர் மறுபடியும் உள்ளே போக மனம் வராமல், சுமந்திரருடைய வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தார். சுமந்திரர் ரதத்தோடு வந்தார். ராமனைக் காட்டில் விட்டுவிட்டு வந்த விவரங் களையெல்லாம் சுமந்திரர் சொல்லக் கேட்ட வசிஷ்டர் வருத்தம் மிகுந்து, வேறு வழியில்லாமல் சுமந்திரரோடு தாமும் அரண்மனைக்குள் புகுந்து அரசன் படுத்து இருந்த இடத்தை அடைந்தார். இதற்குள் ‘ரதம் திரும்பிவந்து விட்டது’ என்று அரண்மனையில் இருந்தவர்கள் செய்த ஆரவாரம் அரண்மனையின் உள்ளும் புறமும் ஒலித்தது. அதைக்கேட்ட தசரதன், போன உயிர் வந்தவன் போலக் கண் விழிக்கிறான். இங்கேதான் ‘ராமன் தான் தசரதனுடைய உயிர்’ என்று ஆரம்பித்த கற்பனையின் கவிதா சக்தியின் சிகரம் சித்திரிக்கப்படுகிறது. ‘தசரதன்’ என்ற உடலைவிட்டு ‘ராமன்’ என்ற உயிர் எப்படிப் பிரிகிற தாக கம்பன் சொல்லுகிறான் என்பதைக் கவனிக்க வேண்டும். அங்கேதான் இந்தக் கற்பனையின் முத் தாய்ப்பு முடிகின்றது. பார்ப்போம் : - இரதம் வந்துற்றது என்று ஆங்கு யாவரும் இயம்பக் கேட்டு, வரதன் வந்துற்றான் என்னா மன்னனும் மயக்கம் தீர்ந்தான் புரைதபு கமலநாட்டம் பொருக்கென விழித்து நோக்கி, விரத மாதவனைக் கண்டான் ’வீரன் வந்தனனோ’ என்றான். ‘ரதம் வந்துவிட்டது’ என்று அங்கிருந்த எல்லா ரும் கூவினதைக் கேட்டு ‘ராமன் வந்துவிட்டான்’‘என்று அரசனும் மயக்கம் நீங்கி, தன்னினைவு வந்த . வனாகி, அதுவரையிலும் மூடிக்கொண்டிருந்த கண் களைச் சட்டென்று விழித்துப் பார்த்தான். எதிரில் நின்ற வசிஷ்டரைப் பார்த்து, வந்துவிட்டானா ராமன் ?’ என்றான் - என்பது பொருள். ராமனை வனம் போகாமல் தடுத்துவிடுவதாகத் தைரியம் சொல்லிவிட்டுப் போனவர் வசிஷ்டரான தனால் வசிஷ்டருடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டுதான் தசரதன் தன்னுடைய உயிரையும் போய்விடாதபடி தடுத்துக்கொண்டிருந்தான். தசரதன் இப்போது கண்ணை விழித்துப் பார்த்தபோது முன்னால் முனிவர் நின்று கொண்டிருப்பதைக்கண்டு ராமன் வந்துவிட்டதாகவே எண்ணிக் கொண்டு, வந்து விட்டானா ராமன்?’ என்று கேட்டான். வசிஷ்டர் என்ன பதில் சொல்லுவார்! - ‘இல்லை’ என்று உரைக்கல் ஆற்றான் ஏங்கினன் முனிவன் நின்றான் நல்லவன் முகமே நம்பி நடந்திலன் என்னும் மாற்றம் சொல்லலும், அரசன் சோர்ந்தான் ; முனிவன் நான் இவ் அல்லல் காண்கில்லேன்’ என்னா ஆங்கு நின்று அகலப் போனான். ’வசிஷ்ட முனிவர் வெட்கத்தாலும் வருத்தத் தாலும் ‘ராமன் வரவில்லை’ என்று சொல்ல வாய் வராமல் ஏங்கி நின்றார். அவருடைய முகமே ‘ராமன் வரவில்லை’ என்பதைச் சொல்லுவதைக் கண்ட மன்னன் சோர்வடைந்தான். அந்தத் துன்பத்தைப் பார்க்கச் சகிக்காதவராக வசிஷ்டர் அவ்விடத்தை விட்டு அப்பால் சென்றுவிட்டார், - என்பது அர்த்தம். வசிஷ்டர் அப்பால் சென்றதும் அவருக்கு அடுத்து நின்ற சுமந்திரனைப் பார்த்து, தசரதன், - நாயகன் பின்னும் தன் தேர்ப் பாகனை நோக்கி, நம்பி சேயனோ? அணியனோ’ என்று உரைத்தலும் அனையான், ‘செய்ய வேய் உயர் கானம் தானும், தம்பியும், மிதிலைப் பொன்னும் போயினன்’ என்றான் ; என்ற போழ்தத்தே ஆவி போனான் ‘தசரத மன்னன் அதன்பிறகு தன் தேர்ப் பாகனாகிய சுமந்திரனைப் பார்த்து ’ராமன் தூரத்தில் இருக்கிறானா, பக்கத்தில் இருக்கிறானா?’ என்று கேட் டான். அதற்கு சுமந்திரன் ‘உயரமான மூங்கில் அடர்ந்த காட்டுக்குள் ராமன் தம்பியோடும் ஜானகி யோடும் போய்விட்டான்’ என்று சொன்ன க்ஷணமே தசரதன் உயிரும் போய்விட்டது’ என்பது. ‘போயினன் என்றான் என்ற போழ்தத் தே ஆவி போனான்’ - என்று கவிஞன் கொடுத்திருக்கிற தீர் மான வேலைப்பாட்டில் அமைந்திருக்கிற இலக்கிய அழகு எண்ணற்கரியது என்பதே இங்குள்ள இலக்கிய இன்பத்தின் சிகரம். உலகத்திலுள்ள எல்லா உயிர்களும் தங்குகின்ற ஒரே உடலாக இருந்த தசரதனுக்கு ராமன் பிறந்த பின் அந்த ராமனே உடலும் உயிரும் ஆகிவிடுகிறான். ஆரம்பத்தில் வெறும் ஆசையினால் உயிர்போலக் கருதப்பட்ட இராமன் சிறுகச்சிறுக உண்மையிலேயே தசரதனுடைய உயிராகவே உணரப்படுகிறான். ராமன யாராவது கேட்டால் தசரதனுக்கு அவனுடைய உயிரைக் கேட்பது போல் உறுத்துகின்றது. ராமனைப் பிரிவதென்றால் தசரதனுக்கு உயிரைப் பிரிவதுபோல் வருத்தம் உண்டாகிறது. கடைசியில் ‘ராமன் போனது தசரதனுடைய உயிர் போனது’ என்று முடிகிறது. இந்தக் கற்பனையைப் படிப்படியாக வளர்த் துக்கொண்டு போயிருக்கிற கவிதா சாதுர்யத்தை அங்கங்கே பரவிக் கிடக்கிற பல பாட்டுக்களையும் தொகுத்துப் பார்க்கிறபோதுதான் காண முடியும். அந்த இலக்கிய இன்பம் தான் இந்தக் கட்டுரையில் பிரதானமாக எடுத்துக் காட்டப்பட்டது. II கம்பன் கவிதையில் அநேகவிதமான இலக்கிய இன்பங்கள் நிரம்பிக் கிடக்கின்றன. அவற்றுள் மற் றெல்லாக் கவிஞர்களும் ‘என்ன சொன்னோம் என் பதைக்கூட மறந்துவிடக்கூடிய வெகு சாதாரண உப் மானங்களையும் வெகு அசாதாரண விதமாகச் சிறிதும் மறக்காமல்’ எடுத்ததை முடிக்கின்ற’ அபூர்வமான ஆற்றல் கம்பனுக்கே ஏகபோகம் என்று தீர்மானமாகச் சொல்லிவிடலாம். கம்பனுடைய உபமானங்கள் ஒவ்வொன்றும் ஆணித்தரமான தாகத்தான் இருக்கும். ஒவ்வொரு உபமானத்தையும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடு தான் உபயோகிப்பான். அந்தக் குறிப்பை அநேக ஆயிரம் பாட்டுகளுக்கும் அப்பால் அமைப்பான். அதை நாம் அறிய நேருகின்றபோது அதி அற்புதமான இலக் கிய இன்பத்தை அடைவோம். வேறு எந்தப் புலவர் னிடத்திலும் அந்த அற்புதத்தைப் பார்க்க முடியாது. அதுவும் பத்தாயிரத்து ஐநூற்று எண்பத்தேழு பாட்டுக்கள் அடங்கினதாக அறியக்கிடக்கிற அவ்வளவு பெரிய காவியத்தில் சிறுசிறு விஷயங்களையும் மறவாமல் தொடர்வது மிகவும் துர்லபமானது. இடைச் செருகல் என்று சில பாடல்களை நீக்கிவிட்டாலும்கூட கம்பன் காவியம் அற்பசொற்பம் அல்ல. ’சாதாரணம்’ என்று நாம் கருதிவிடக்கூடிய ஒரு உபமானத்தை, ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடு சொல்லி, அதைக் கவனித்துப் பார்க்கிறபோது எவ்வளவு அசாதாரண கவித்திறத்தோடு அமைத்திருக் கிறான் என்னும் இலக்கிய இன்பத்தை எடுத்துக்காட்ட ஒரு உதாரணத்தைச் சொல்லுவோம் : கூனியினால் கலைக்கப்பட்ட கைகேசி, தசரதனிடத் .. தில் வரம் வாங்குவதற்காகப் பாசாங்கு பண்ணுகிறாள். அதற்காகத் தன்னை அலங்கோலப்படுத்திக் கொள்ளுகிறாள் : - கூனி போனபின் குலமலர் குப்பை நின்று இழிந்தாள் சோனை வார்குழல் கற்றையில் சொருகிய மாலை வான வார்மழை நுழைதரு மதிபிதிர்ப்பாள் போல் தேன் அவாவுறு வண்டினம் அலமரச் சிதைத்தாள். கூனி போன பிற்பாடு, கைகேசியானவள், பலவித மான உயர்ந்த ஜாதிப் புஷ்பங்கள் பரப்பியிருந்த பஞ்சணையைவிட்டு இறங்கினாள். கன்னங்கரேலென்று இருந்த அவளுடைய கூந்தலில் சொருகப்பட்டிருந்த பூ முடிப்பை, இருண்ட மேகங்களுக்கு இடையே இருந்த சந்திரனை இழுப்பது போல் எடுத்து, அந்தப் பூச்செண் டில் தேனுக்காக நாடிக் கொண்டிருந்த வண்டுகள் பயந்து ஓடும்படி, அந்தப் பூமாலையைச் சின்னாபின்ன மாகப் பிய்த்தெறிந்தாள் என்பது பொருள். அடுத்த பாட்டில், - விளையும் தன்புகழ் வல்லியை வேர் அறுத்து என்னக் கிளைகொள் மேகலை சிந்தினள்; கிண்கிணி யோடும் வளைதுறந்தனள் ; மதியினின் மறுத்துடைப்பாள் போல் அளக வாள் நுதல் அரும்பெறல் திலதமும் அழித்தாள். (ராமனைப் பெற்றவள் கோசலையானாலும் அவ னிடத்தில் அளவற்ற வாஞ்சையுள்ளவளாக அவனை வளர்த்தவள் கைகேசியே ஆனதால் கைகேசிக்கு) விளைந்து, கொடி ஓடிப் படர்ந்து கொண்டிருந்த ‘புகழ்’ என்ற செடியை வேரோடு பிடுங்கியெறிந்து விட்ட தைப்போல தான் அணிந்திருந்த பல கிளைகளுள்ள மேகலை’ என்னும் ஆபரணத்தை எடுத்து முறித்து பூமியில் சிதறப் போட்டாள். மேலும் கிண்கிணி, கையிலிருந்த நவரத்ன வளையல்கள் எல்லாவற்றையும் கழற்றி எறிந்தாள். சந்திரனிடத்திலிருந்து களங் கத்தை எடுத்து விட்டது போல அவளுடைய பூரண சந்திரனைப் போன்ற முகத்தில் நெற்றியில் கறுப்பாக இருந்த பொட்டையும் அழித்தாள் - என்றும், இதற்கடுத்த பாட்டில், - தாவில் மாமணிக் கலன் முற்றும் தனித்தனிச் சிதறி, நாவி நன்குழல் நானிலம் தைவரப் பரப்பிக், காவி உண் கண்கள் அஞ்சனம் கான்றிடக் கலுழாப், பூ உதிர்ந்தது ஓர் கொம்பு எனப் புவிமிசைப் புரண்டாள். குற்றமில்லாத ரத்தின மணிகள் உள்ள மற்ற நகைகளையும் தனித்தனியே எடுத்தெறிந்து-விட்டு, புனுகு கஸ்தூரி முதலியவைகளைக் கொண்டு வாசனை ஊட்டப்பெற்ற அவளுடைய கூந்தல் தரையில் விரிந்து பரவிக் கிடக்க, குவளை மலர்போன்ற அவளுடைய கண்களில் தீட்டப்பட்டிருந்த அஞ்சன மை கரைந்து வழிந்து ஓடும்போடி கண்ணீர்விட்டு அழுதுகொண்டு, பூவெல்லாம் உதிர்ந்துபோன ஒரு கொம்புபோலப் பூமியில் கிடந்து புரண்டாள் - என்றும், கடைசியாக, - நவ்வி வீழ்ந்துஎன நாடக மயில் துயின்று என கவ்வை கூர்தரச் சனசியாம் கடிகமழ் கமலத்து அவ்வை நீங்கும் என்று அயோத்தி வந்து அடைந்த அம்மடந்தை தவ்வையாம் எனக்கிடந்தனள் கைகயன் தனயை. மான் விழுந்துவிட்டது போலவும், கலாபம் விரித்து நடனம் செய்துகொண்டிருந்த மயில் சாய்ந்து விட்டது போலவும், (அயோத்திக்கு) பல துன்பங்கள் இனி வரும்படி அங்கிருந்து அதன் லஷ்மியாகிய சீதை போய்விடப் போகிறாள் என்பதை அறிந்து, அந்த ஸ்ரீதேவி போவதற்கு முன்னாலேயே அயோத்திக்கு வந்துவிட்ட அவளுடைய அக்காள் மூதேவியைப் போலக் கிடந்தாள் கேகய ராஜன் மகளாகிய கைகேசி : - என்றும் மேற்சொன்ன நான்கு பாடல்களால் கைகேசியின் அலங்கோலத்தைக் கம்பன் அலங்கரிக்கிறான். முதல் பாட்டில் மேகத்திடையே இருந்த சந்திரனை இழுத்தெடுத்தது போல கைகேசி தன் தலையில் அணிந்திருந்த புஷ்பங்களை எடுத்தெறிகிறாள். இரண்டாவது பாட்டில் அந்தச் சந்திரனிடத்தில் இருந்த களங்கத்தை எடுத்துவிட்டது போல கைகேசி தன்னுடைய நெற்றி யி லி ருந் த பொட்டைத் துடைத்து விடுகிறாள். மூன்றாவது பாட்டில் அழுகையும் அமங்கலமும் ஆரம்பமாகின்றது. நான்காவது பாட்டில் அயோத்தியின் லக்ஷமீகரம். போய் மூதேவித்தனம் குடிபுகுந்து கொள்ளுகிறது. இந்த நான்கு பாடல்களும் ஒரே குறிப்புக் கொண்டவை. அதாவது, இனிமேல் அயோத்தியில் விளையப்போகிற விபரீதங்களுக்கு அறிகுறிகளாக அமைக்கப்பட்டன. இதில் உபமானமாகச் சொல்லப் படுகிற முக்கிய விஷயம் சந்திரனைப் பிடித்து அதிலிருக் கும் களங்கத்தை அகற்றி விடுவது தான். ’’…………………….. மதியினின் மறுத் துடைப்பாள் போல் அளக வாள் நுதல் அரும்பெறல் திலதமும் அழித்தாள்.” வழக்கமாக ஒரு ஒளிபொருந்திய பொருளில் இருந்து அதிலுள்ள இருளை அகற்றினால் அந்தப் பொருள் முன்னிலும் அதிகப் பிரகாசம் அடைவது நிச்சயம். இங்கே கைகேசி, தன்னுடைய முகத்தி லிருந்த திலகத்தை அழித்தபின் முன்னிலும் அதிக அழகையாவது சந்தோஷத்தையாவது அடைகிறாளா? இல்லை. அதற்கு நேர்மாறாக அழகுக் குறைவையும் துக்கத்தையுமே அடைகிறாள். அப்படியிருக்கக் கம்பன் இந்த உபமானத்தை ஏன் உபயோகித்திருக்கிறான் என்பது இலக்கிய ரஸிகர்கள் எண்ணிப் பார்க்கத் தக்கது. ஒரு சுமங்கலிப் பெண் தன் நெற்றியிலுள்ள திலகத்தை அழிப்பது இந்துக்களுக்குள் அமங்கலத் துக்கு அடையாளம். அதேபோல சந்திரனுக்கு இயல் பாக இருக்க வேண்டிய களங்கம் போய்விடுவது உலகத்துக்கு உண்டாகப்போகிற உற்பாதங்களுக்கு அடையாளம் என்பது இயற்கை சாஸ்திரம். சந்திரனுக்குக் களங்கம் போய்விடுவது, சூரியனுக்குக் களங்கம் தோன்றுவது, மேகம் இல்லாமல் இடி இடிப்பது, நக்ஷத்திரங்கள் இடம் மாறுவது, வால் நட்சத்திரங்கள் வருவது முதலானவைகள் உலகத் துக்கு விபரீத காலம் வரப்போவதை அறிவிக்கக்கூடிய சின்னங்கள் என்பது இந்த நாட்டில் வெகு காலமாக சாஸ்திர, இதிகாச, புராணங்களில் சொல்லப்பட்டு வருகிற சத்தியங்களாக நம்பப்பட்டது. இக்காலத்திய மேல்நாட்டு அறிஞர்களும் இதில் உண்மை இருப்பதாக ஒத்துக் கொள்ளுகின்றார்கள். கம்பன் சிருஷ்டிக்கிற காவிய உலகத்துக்கு, கைகேசி, அவளுடைய நெற்றியிலிருந்த திலகத்தை அழித்ததிலிருந்துதான் துன்பங்கள் ஆரம்பமாகின்றன. வரம் கேட்பதும், ராமன் வனம் போவதும், மன்னன் மரணமடைவதும், பரதன் துறவு கொள்வதும், சீதையை ராவணன் சிறைவைப்பதும், வாலி வதமும், லங்கா தகனமும், யுத்தமும், ராவணாதியரின் அழிவும் என்ற துக்கமான நிகழ்ச்சிகளே நிறைந்திருக்கின்றன. ராவண சம்மாரம் வரையிலும் கம்பனுடைய காவிய உலகத்திற்குத் துன்பகாலமே. ராவண சம்மாரத்துக் குப் பிறகு சீதை மீட்கப்பெற்றவளாகி அவளுடைய மனம் குளிர்ந்த பிறகுதான் கம்பனுடைய உலகத்துக்கு சுபிக்ஷகாலம் மீண்டும் ஆரம்பமாகின்றது. அந்த நல்லகாலம் வருகிறவரைக்கும் கம்பனுடைய லோகத் தில் சந்திரன் களங்கம் இல்லாதவனாகவே இருந்துவந்த தாகக் கம்பன் சொல்லுகிறான். bஎப்படி என்பதைப் பார்ப்போம் : ராவண சம்மாரம் முடிந்தது. ராமன், லஷ்மணனை அனுப்பி விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்யச் சொல்லிவிட்டு, அனுமானை அனுப்பி அசோகவனத்தி லிருக்கும் சீதைக்கு, ராவணன் அழிக்கப்பட்டுவிட்ட சமாசாரத்தை அறியப்படுத்தச் செய்கிறான். அனுமான் அசோகவனத்துக்குச் சென்று, தன்னையே மறந்தவனாக ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இரண்டு கரங்களை யும் கூப்பி உச்சியில் வைத்துக்கொண்டு ராமநாமத் தைப் பறித்துக்கொண்டு சீதைக்கு முன்னால் வந்து - ஏழை ! சோபனம், ஏந்திழை ! சோபனம், வாழி சோபனம், மங்கல சோபனம், ஆ ழி யான அரக்கனை ஆரியச் சூழி யானை துகைத்தது சோபனம். ‘ஏழ்மையை மேற்கொண்டு தவம்புரிந்தவளே ! மங்களம். இனி ஆபரண அலங்காரங்களுடன் செவ்வி யாகப் போகிறவளே ! மங்களம். நிரந்தரமான மங் களம். மங்களம் நிறைந்த சுபசேதி. சமுத்திரத்துக் குச் சமானமான அரக்கன் ராவணனை மேலோனாகிய ராமன் கொன்றுவிட்டான். சோபனம்’ என்று சொன்னான். இதைக்கேட்ட சீதைக்கு உண்டான எல்லையற்ற இன்ப உணர்ச்சியையும் அந்தப் பூரிப்பினால் ஏற்பட்ட பொலிவையும் கம்பன் ஒரு அற்புதமான பாட்டில் அமைக்கிறான். அந்தப் பாட்டை கவனமில்லாமல் சாதா ரணமாகப் பார்க்கும்போது ஏதோ ஒரு நல்ல வர்ணனை மட்டும் தான் தோன்றும். ஆனால் கம்பனுடைய கண்கொண்டு அதன் கருத்தை ஆராயும்போது தான் அழகு புலப்படும். அந்தப் பாடல், - ஒருகலைத் தனிவெண் மதி நா ளொடும் வருகலைக்கு வரும் மறு மான் உறப் பொருகலைக் குலம் பூத்தது போன்றனள் பருகல் உற்ற அமுது பயந்த நாள். இதன் அர்த்தம் - ‘ஒற்றைக் கலையோடுமட்டும் இருண்டு இருந்த அமாவாசைச் சந்திரன், நாளுக்குநாள் ஒவ்வொரு கலையாக வளர்ந்து பூரண சந்திரன் ஆவதை விட்டு, பதினாறு நாட்களில் ஒவ்வொன்றாக வளர வேண்டிய எல்லாக் கலைகளும் ஏககாலத்தில் கூடி, அந்தச் சந்திரனுடைய களங்கமும் அதன் இயல்பான மான் வடிவத்தை அடைந்துவிடும்படி பூரணம் பெற்றுவிட்ட சந்திரனைப்போல பூரிப்படைந்து பிரகாசித்தான் சீதை - அந்த அமுர்தம் போன்ற சுபசேதியைக் காதுவழியாகக் குடித்த அந்தச் சமயத்தில்’ என்பது. இதில், ராவணன் கொல்லப்பட்டுவிட்ட தனக்கு இதமான சேதியைக் கேட்ட சீதை, அமாவாசைச் சந்திரனைப்போல ஒளி மழுங்கியிருந்த நிலைமை திடீ ரென்று மாறி, உடனே பூரண சந்திரனைப்போலப் பிரகாசம் அடைந்தாள் என்பதுதான் முக்கிய கருத்து. அதற்கு ‘அமாவாசைச் சந்திரனைப்போல் மங்கியிருந்த ஜானகி அந்தச் சேதியைக் கேட்ட க்ஷணத்திலேயே பூரணசந்திரனாகப் பொலிவடைந்தாள்’ என்று மட்டும் சொன்னாலே போதுமானது. அதைவிட்டுக் கம்பன் சுற்றி வளைத்து ‘நாளொடும் வருகலைக்கு வரும் மறு மான் உற’ என்று ‘அந்தக் கலைகளோடு அதன் களங்கமும் பூரண உருவோடு பொருந்திக்கொள்ளும்படி’ என்று களங்கத்தை அவசியம் போல வலிந்து வரு வித்துச் சொல்லுவானேன்? ஏனென்றால் முன்னே ‘மதியினின் மறுத்துடைப் பாள் போல் - அளக வாள் நுதல் அரும்பெறல் திலத மும் அழித்தாள்’ என்றபடி கைகேசி வரம் கேட்பதற் காகத் தன்னை அலங்கோலப்படுத்திக் கொண்டபோது சந்திரனிடத்திலிருந்து களங்கத்தை எடுத்துவிட்டாள். அதனால் கம்பனுடைய லோகத்தில் பல விபரீதங்கள் விளைந்தன. ராவணன் ஒழிகின்றவரையிலும் அந்த விபரீதத்தின் துன்பங்கள் விடவில்லை. அதற்குப்பிறகு தான் அந்தத் துன்பங்கள் மாறி, விபரீதங்கள் விட் டொழிகின்றன. ஆதலால் துன்பகாலம் நீங்கி இன்ப காலம் ஆரம்பிக்கிற இதேசமயத்தில் முன்னே சந்திர னிடத்திலிருந்து நீக்கிவிட்ட களங்கத்தை மறுபடியும் அதனுடன் சேர்த்து விடாவிட்டால் அந்த விபரீத சந்திரன் இருந்துகொண்டே இருப்பான் என்றுதான் கம்பன் இந்தப் பாட்டில் வேண்டுமென்றே களங் கத்தை வலிய வருவித்துப் பேசுகின்றான். கைகேசி வரம் கேட்குமுன் ‘மதியினின் மறுத் துடைப்பாள் போல’ என்று களங்கத்தை எடுத்து விட்ட பாடலுக்கும் இப்போது சீதாபிராட்டியின் துன்பங்களெல்லாம் தொலைந்து சுபிக்ஷம் ஆரம்பிப்ப தற்கு அறிகுறியாக ‘வரும் மறு மான்உற’ என்று களங்கத்தைச் சந்திரனிடத்திலேயே திருப்பிச் சேர்த்து விட்ட இந்தப் பாடலுக்கும் மத்தியில் எட்டு ஆயிரத்து அறுநூற்றுப் பதினாறு பாடல்கள் இருக்கின்றன என்பதை எண்ணும்போதுதான் கம்பனுடைய கவிதா சக்தியின் பெருமையும் அதனால் நாம் அடையும் இலக் கிய இன்பமும் சிறப்படைகின்றன. III bவிதியாவது ஒன்றாவது ! எந்த நியாயத்தையும் கட்டாயப்படுத்தாமல் கற் பிப்பது கம்பனுடைய கலைத்திறங்களில் ஒன்று. ‘விதி’ என்ற விஷயத்தை நெடுங்காலமாக எல்லா அறிஞர்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்த ‘விதி’ யை ‘ஊழ்’, ‘வினைப்பயன்’, ‘தலையெழுத்து’, ‘கர்ம பலன்’, ‘தெய்வசித்தம்’ என்ற பல பெயர்களால் குறிப்பிடுகிறார்கள். நம்முடைய நாட்டு இலக்கியங்களில் இதற்கு ஏராளமான இடம் கொடுக்கப்பட்டடிருக்கிறது. அன்னிய மொழி இலக்கியங்களிலும் ‘விதி’ என்பதன் கருத்து விரவியிருக்கின்றது. தெய்வ நம்பிக்கை’ என்ற குறிப்பிட்ட கொள்கை இல்லாதவர்களும்கூட இந்த ‘விதி’ என்பதிலுள்ள அர்த்தத்தை அங்கீகரிப்பதாகத்தான் எழுதியிருக்கிறார்கள். பொதுவாக உலகத்தின் சிறந்த எழுத்தாளர் கள் எல்லாரும் இதைக் கையாண்டிருக்கிறார்கள். ஆனாலும் மனித சமூகத்திற்கு அறிவுவந்த நாள் தொட்டு இந்த ‘விதி’ என்பதும் ’ கடவுள் உண்டா இல்லையா என்பதைப்போலவே விவாதத்துக்கான விஷயமாகத்தான் இருந்து வந்திருக்கிறது. ‘விதி’ என்பது நாம் செய்யும் காரியத்தின் பலன் தான் என்பதை ஏறத்தாழ எல்லாரும் ஒப்புக்கொள்ளு வார்கள். அந்தக் காரியம் நாம் அறிய, நமது கண்ணுக்கு முன்னால் நடந்து அதன் பலனை நேரடியாக அனுபவிக்கிறபோது அது சரியான காரண காரியம்’ ஆகிவிடுகிறது. அப்போது அதை மறுக்க மனம் வருவதில்லை. ஆனால் அந்தக் காரணச் செயலை நாம் கண்ணாரக் காணாத காலத்தில் அதை ஒப்புக்கொள்ள முடிவதில்லை. அதுவும் ஒரு குறிப்பிட்ட காரியம் நேர்ந்துவிட்டதற்குக் காரணம் சமீபத்தில் நடந்த . எதுவும் அல்ல. ஆனால் ஏதோ முன் ஜன்மம் என்று சொல்லுகிறார்களே அதில் நடந்த காரியத்தின் பலன் இது, என்கிறபோது அதை நம்புவது எளிதல்ல. எல்லாச் சமயத்திலும் எல்லாக் காரியங்களிலும் அப்படி நம்பிவிடுவதும் சரியல்ல. விதியை நம்புவதாக எடுத்ததற்-கெல்லாம் ‘விதி’, ‘தலையெழுத்து என்றே - சொல்லிக்கொண்டு சொந்த முயற்சிகளை விட்டு சோம்பி விட நேர்ந்துவிடுகிறது. ’விதி’யை நம்பாததாக, எந்தக் காரியத்தையும் இஷ்டம் போல முடித்துவிட முடியும் என்ற வெறும் அகங்காரத்தில் அழுந்திப் போகவும் நேரிடுகிறது. இந்த இரண்டு தீமைகளுக்கும் இடையில் ’விதி’ என்பதைச் சரியான முறையில் மதித்து நடந்துகொள்வது கஷ்டம்தான் என்றாலும் - அப்படி நடந்து கொள்வதுதான் அறிவு. நம்முடைய இஷ்டம்போல நாம் கோரிய எல்லா ‘விஷயங்களும் கூடிவருகிறபோது நாம் ’விதி’ என் பதை மதிப்பதே இல்லை. அன்றியும் அதை மிகவும் அவமதித்து ஏளனம் செய்கிறோம். ‘விதி’யை நம்பு . கின்றவர்களும்கூட ஜனங்களுக்கு ஆத்திரத்தையும் ஆவேசத்தையும் மூட்டிவிட்டுத் தங்களுடைய அற்ப ஆசைகளைத் தீர்த்துக் கொள்ளுவதற்காக ’விதியாவது, ஒன்றாவது ? விதியென்று சொல்லுவது வீணர்கள் பேச்சு. சோம்பேறி வேதாந்தம்’ என்று சொல்லி விடுகிறார்கள். ஆனாலும், ‘கர்ம பலன்’ என்கின்ற ‘விதி’ என்பது உண்மைதான், அதை மதித்து நடந்து-கொள்வது தான் அறிவுடைமை என்பதை எல்லா இலக்கியங் களும் போதிக்கின்றன. அந்த இலக்கிய போதனை இல்லாமலும் கூட இந்த விதியை நம்ப வேண்டிய கட்டாயம் நமக்கே வந்துவிடுகின்றது. எல்லாக் காரி யங்களும் நம்முடைய இஷ்டம் போல் முடிகிறபோது ‘விதி’ என்பதைச் சிறிதும் நினைக்காத நாம், ஒரு காரியத்தை எவ்வளவோ ஜாக்ரதையுடன் கண்ணும் கருத்துமாக முயற்சி செய்தும் அது முடியாமலோ அல்லது நாம் எதிர்பார்த்த பலனுக்கு முற்றிலும் விரோத மான பலனைக் கொடுப்பதாகவோ போய்-விடு