[] இரு அறிவியல் நண்பர்கள் (18அறிவியற் சிறுகதைத் தொகுப்பு)      பொன் குலேந்திரன் (கனடா)   இரு அறிவியல் நண்பர்கள் (18அறிவியற் சிறுகதைத் தொகுப்பு)  ஆசிரியர் : பொன் குலேந்திரன் (கனடா),   kulendiren2509@gmail.com   அட்டைப்படம்,   மின்னூலாக்கம் : பிரசன்னா, udpmprasanna@gmail.com     எழுத்துப் பிழை திருத்தம் : வித்யா ஶீ, vidhyasreethirugnanam@gmail.com மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com     உரிமை : CC-BY-SA – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.        பொருளடக்கம் ஆசிரியர் பேனாவில் இருந்து...   கதை 1 : புதுமைப் பெண்   கதை 2 : காலம்   கதை 3 : விண்கல்   கதை 4 : விநோதன்   கதை 5 : சக்தி மாற்றம்   கதை 6 : மெனன் குவின்   கதை 7 : மலடி  கதை 8 : பரம இரகசியம்   கதை 9 : அறிவின் ஆராய்ச்சி   கதை 10 : விளைச்சல்   கதை 11 : கயிலைமலைக்கு கிரகவாசி வருகை  கதை 12. : செந்தூரனின் செவ்வாய் பயணம்  கதை 13 : புரோக்சிமா அல்பா கிரகவாசி   கதை 15 : வானத்தின் மீது மயில் ஆடக் கண்டேன்   கதை 16 : காலக்காணொளி   கதை 17 : சிவலிங்கபுரம்   கதை 18 : இரு அறிவியல் நண்பர்கள்   +-----------------------------------------------------------------------+ | ஆசிரியர் பேனாவில் இருந்து... | +-----------------------------------------------------------------------+   அன்பின் வாசகர்களே. நான் ஒரு பௌதிகவியல் சிறப்புப்பட்டதாரியும்,தொலை தொடர்பு பொறியியலாளருமாவேன். அறிவியல் கதைகளைப் புனைவதற்க்கு ஆழமான  கற்பனை தேவை. அறிவியலில் ஈடுபாடு இருக்கவேண்டும்.அறிவியல் கதைகள் எழுதுவோர்  மிகக்குறைவு. அதற்கு ஒரளவுக்கு  அறிவியலில் அறிவு அவசியம் தேவை . இந்த அறிவியல் ‘கதை தொகுப்பு’ கடைசி கதையான  ‘இரு அறிவியல்  நண்பர்கள்’என்ற தலைப்பைக் கொண்டுள்ளது . காரணம், இயற்கையில் பல அறிவியல் இரகசியங்கள் புதைந்து உள்ளது என்பதை இந்தக் கதை எடுத்துச் சொல்கிறது .‘புதுமைப் பெண்’ என்ற முதலாவது  கதை அறிவியல் மூலம் புது கண்டுபிடிப்பினை  சொல்கிறது. அதற்க்கு  அடுத்து ‘காலம்’ என்ற கதை  X,Y, Z  ஆகிய மூன்றுபரிமாணங்ளோடு சேர்ந்து காலம் என்ற  நான்காம் பரிமாணம் பற்றியது . இந்த கதை ஐன்ஸ்டீன் என்ற அறிவியல் மேதையின் சார்புக் கொள்கையுடன் தொடர்பு உள்ளது ,   ஒளியின்  வேகத்துக்கு மிக அருகில்  பயணிக்கும் போது நீளத்திலும் , திண்மத்திலும்  மாற்றம் ஏற்படும்  . இதில் இருந்தே   சக்திக்கும்  திண்மத்திற்க்கும், ஒளியின்  வேகத்திற்க்கும்  தொடர்புள்ள சமன்பாடு E= mc2தோன்றியது . இதுவே சக்தி மாற்றத்துக்கு விளக்கம் கொடுக்கிறது.  ஆகவே,  இரண்டாம்  கதையான  காலத்தின்   கரு  சார்புக் கொள்கை சார்ந்தது .   விண் வெளியில் எமது சூரிய குடும்பதை போல், கோடிக் கணக்கான  நட்சத்திரக்  குடும்பங்கள்  உண்டு. ஆகவே  விண் வெளியில்    பல  சம்பவங்கள்  இடம் பெறுகிறது . அதோடு தொடர்பு உள்ள  கதைகள் இத்தொகுப்பில்  உண்டு.  மூடநம்பிக்கைகளுக்கு அறிவியல் விளக்கம் கொடுக்கும் கதைகள் இத் தொகுப்பில்  அடங்கும்   . அறிவியல் கதைகள்  என்றாலே புனைவு தான். சில சமயம் புனைவு சாத்தியமாக மாறலாம். உதாரணத்திற்க்கு , விந்து மாற்றம் குழந்தைப் பாக்கியத்தைக் கொடுக்கிறது. இயற்கையில் மறைந்துள்ள  சில இரகசியங்களை இக்கதை எடுத்துச் சொல்கிறது. இவை போன்ற சுவையான பதினெட்டு  கதைகள் இத்தொகுப்பில்  அடங்கும் .  வான்வெளியில் தினமும் இடம்பெறும் சம்பவங்கள் வியப்புக்குறியது. புதுப் புது கண்டுபிடிப்புகள் அவை சார்ந்தவை .பிரபஞ்சம் தோன்றியது சுமார் 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் என்கிறார் பிரபல விஞ்ஞானி ‘ ஸ்டீபன் ஹாக்கின்ஸ்’ (Prof Stephen Hawkins). “ பிரபஞ்சத்தில் சூரிய குடும்பம் பெரும் வெடிப்பினால் தோன்றி 4.6 பில்லியன் ஆண்டுகள் ஆகிறது” என்பது விஞ்ஞானிகள் கணிப்பு. நேரம் பிரபஞ்சத்தின் தோற்றத்தின் போது ஆரம்பித்தது. நேரம் 5 பில்லியன் ஆண்டுகளுக்கு பின் முடிவடையும் என்கிறார்கள் பௌதிக விஞ்ஞானிகள். இதெல்லாம் ஒரு கணிப்பே. எப்போது என்பது நிட்சயமாக சொல்லமுடியாது. பெரும் வெடிப்பினால் சூரிய குடும்பம் தோன்றியது என்பது ஆராச்சியாளர்கள் கருத்து. அந்த குடும்பத்தில் பூமி ஒரு அங்கம். அது எவ்வளவுக்கு உண்மை என்பதற்கு போதுமான ஆதாரமில்லை. ஆனால் பல கிரகங்களையும் ‘மில்கிவே’(Milky Way)  எனப்படும் பால் வழியையும் காலப்போக்கில் கண்டுவருகிறார்கள். பெரும் வெடிப்பின் போதும் வால்நட்சத்திரத்தில் இருந்தும் தோன்றியவை தான் விண்கற்கள் என்பது இத்தொகுதியின்  மூன்றாவதுகதை.    இத்தொகுப்பில் உள்ள கதைகள் பல விஞ்ஞான தத்துவங்களையும் ஆராய்ச்சிகளையும் கருவாகக் கொண்டவை. இப்படியும் நடக்கலாம் என கற்பனை செய்து எழுதப்பட்டவை. காலம் சென்ற ஆர்தர் சி .கிளார்க் பிரபல அறிவியல் கதைகள் பல எழுதியவர். செய்மதி வானில் மிதக்கும் முன்பே 1945ஆம் ஆண்டில் தன் விஞ்ஞான நாவலொன்றில் அதைபற்றி எழுதியிருந்தார். ஒருவேலை விஸ்வாமித்திர மகரிஷி உருவாக்கிய ‘திரிசங்குவின்  சொர்க்கம்’  என்ற கதையை அவர் வாசித்திருப்பாரோ என்னவோ தெரியாது.  ஐயின்ஸ்டைனின் சார்புக் கொள்கைகளை (Theory of Relativity) மையமாக வைத்து,காலம்,சக்தி மாற்றம் என்ற கதைகள் எழுதப்பட்டது. வெளிக்கிரகங்களோடு தொடர்பை வைத்து ‘விநோதன்’  என்ற கதை உருவாகிற்று. ‘மலடி’ விந்து மாற்றத்தைக் கருவாகக் கொண்டது ரெசனன்ஸ் (Resonance_)  எனப்படும் ஒத்த அதிர்வை  மூலமாக வைத்து எழுதப்பட்ட கதை    பரமரகசியம். மனிதர்களைப்போல் ஏன் பொம்மைகளும்,மிருகங்களும்,பறவைகளும் உறவாட முடியாது? இதை கருவாகக் கொண்ட கதைகள் தான் ‘ மெனன்குவின்னும்,அறிவின் ஆராய்ச்சியும்’ . நீங்கள் ஒரு பசுமை விரும்பியா? விவசாயியா? அவசியம் விளைச்சல் என்ற கதையை வாசிக்க வேண்டும்.ஒலியின்   சக்தி விளைச்சல் அதிகரிக்க   உதவுகிறது  என்பது ஆராய்ச்சி மூலம் கண்ட உண்மை . ‘கிரகவாசி வருகை’  என்ற கதை சிகரத்தை யாரும் தொடாத கைலாயமலையை கருவாகக் கொண்டு எழுதப்பட்டது. அமரத்துவம் கதை  ஆயள் நீடிப்பைக் கருவாகக் கொண்டு, வித்தியாசமான சிந்தனையோடு எழுதப்பட்டது .கொல்லி வாய் பிசாசு ,மூட நம்பிக்கைக்கு அறிவியல் விடும் சவால். நான்  சில கதைகளின் கருக்களைச் சொல்லி விட்டேன். கதைகளை வாசியுங்கள்,இரசியுங்கள்,  சிந்தியுங்கள்,விமர்சியுங்கள்.   பொன் குலேந்திரன் – மிசிசாகா, ஒன்றாரியோ, கனடா.   +-----------------------------------------------------------------------+ | கதை 1 : புதுமைப் பெண் | +-----------------------------------------------------------------------+   “ஏதோ  முற்பிறவியில்  செய்த கர்மாக்களோடு உங்கடை குடும்பத்திலை வந்து பிறந்திருக்கிறாள் உண்டை மகள். எதற்காக அவளுக்குச் சரஸ்வதி என்று பெயர் வைத்தாயோ தெரியாது. இவளால் பேசமுடியாது, எழுத முடியாது, கண்பார்வையில்லை. காது மட்டும் கேட்டால் போதுமா? நீயும் உன் புருஷனும் இல்லாத காலத்தில் இவள் எப்படித் தான்வாழப் போகிறாளோ, கடவுளுக்குத் தான் தெரியும்.இப்படி அங்கக் குறைகளோடு வாழ்வதிலும் பார்க்க இவள்  கேதியிலைபோய் சேர்ந்திட்டால் நல்லது”, பொரிந்து கொட்டினாள் சீதாப்பாட்டி என்ற எண்பது வயதைத் தாண்டிய சிவகாமியின் தாய் சீதாலஷ்மி. “அம்மா ஒன்றுமே தெரியாத என்  மகள் சரஸ்வதியைத் திட்டாதே. நாங்கள் இல்லாத காலத்திலை இவளின் அண்ணன்ஆதித்தன் இருக்கிறான் இவளைக் கவனித்துக் கொள்ள. இவள் அழகுக்கு இவளைப் போல் குறைபாடு உள்ளவன் ஒருவன் கணவனாக வராமலா போவான்”? சிவகாமி தாயுக்கு உரத்த குரலில் பதில் அளித்தாள். தாயினதும் பாட்டியினதும் உரையாடலை அவர்களின் வாய் அசைவு மூலம் அறிந்து கொள்ளும் புத்திக்கூர்மை சரஸ்வதிக்கு இருந்தது. அதைத் தன் முகத்தில் ஒரு புன்சிரிப்பு மூலம் வெளிப்படுத்தினாள். சிவராசா, சிவகாமி தம்பதிகளுக்கு முதலில் பிறந்தது ஆண் குழந்தை ஆதித்தன். அவனுக்கு நான்கு வருடங்களுக்குப்பிறகு பிறந்தவள் சரஸ்வதி. அழகுக்குக் குறைவில்லை. ஆனால் அவள் அங்கங்களில் தான் குறையிருந்தது. பெற்றோர் பேசுவதெல்லாம் அவளுக்குத் தெளிவாகப் புரியும். மௌனமாக கேட்டுக்கொண்டு இருப்பாள். அவளது முகபாவனையில்இருந்து பெற்றோருக்குத் தெரியும், அவளுக்குத் தாங்கள் பேசியது புரிந்து விட்டதென்று. டி.வியில் போகும் நகைச்சுவைகாட்சிகளைப் பார்த்து கெக்கட்டம் விட்டுச் சிரிப்பாள். சோக காட்சிகளைக் கண்டு அழுவாள். அவள் விரும்பிப் பார்ப்பது ‘ குறும் படங்கள்.’  அதனால் அவளின் சிந்தனையிலும் புது அறிவியல் கதைகள் தோன்றின என அறிந்ததற்கு உதாரணம், அவள் விரும்பிப் பார்ப்பது ‘ஸ்டீபன் ஸ்பில்பேர்க்கின்’  அறிவியல் சார்ந்த படங்கள். ஆதித்தன் ஒரு மருத்துவ பௌதீக துறையில் (Medical Physics) முனைவர் பட்டம்பெற்றவன்.  இவன்மருத்துவத்தோடு சம்பந்தப்பட்ட கருவிகளைப் பற்றி முற்றிலுமாக அறிந்திருந்தான். ஆதித்தன், தன் தங்கையின் குறைப்பாட்டினை நிவர்த்தி செய்ய தான் ஏதாவது ஒரு வழி ஒன்று செய்தாக வேண்டும்,  என முடிவு எடுத்தான். தனதுபேராசிரியர் வில்லியத்திடம் அதுபற்றி அவன் உரையாடிய போது அவர் சொன்ன விபரங்களைக்  கேட்டு ஆச்சரியப்பட்டான்.   “ஆதித்தா  , சில நூற்றாண்டுகளாக மனிதனின் மனதில் தோன்றும் எண்ணங்களைக் கற்பனையில் இருந்து நகர்த்தி எழுத்து வடிவில் மாற்றுவதே மனிதனின் ஒரு லட்சியமாக இருந்து வந்தது. சில மாதங்களுக்கு முன், விஞ்ஞானிகள்குழு மனிதனின் சிந்தனைகளை, கருவி மூலம் வாசித்து எழுத்து, பேச்சு வடிவங்களில் மாற்றும் ஒரு தொழில் நுட்பத்தை உருவாக்கமுடியும் என அறிவித்தார்கள்.” “என்ன சார்  சொல்லுகிறீர்கள். அப்படியானால் என் தங்கச்சியின் பிரச்சனைக்கு விமோசனம் உண்டு என்கிறீர்களா”? “ஏன்   உன் தங்கச்சி பேச, எழுத முடியாதவளா”? “ஆமாம்  சார். அவள் காதும் பார்வையும் கூர்மையானது. ஆனால் வாயும் கைகளும் தான் பிறந்தது முதல், செயல்இழந்துவிட்டது. அவளது முக பாவனையில் இருந்து எதைச் சொல்லுகிறாள் என்று எங்களுக்கு புரிந்துவிடும். அதுமட்டமல்ல, பிறர் பேசும்போது அவர்களின் வாய் அசைவில் இருந்து என்ன பேசுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும்ஆற்றல் படைத்தவள். சரியான புத்திக்கூர்மை உள்ளவள். அறிவியல் படங்களைப் பார்ப்பதில் மிகவும் ஆர்வம் உள்ளவள். கடவுள் அவளுக்கு குறைவைத்தாலும், மறுபக்கத்தில் அபாரமான அறிவைக் கொடுத்திருக்கிறார். அவளது ஐகியூ(IQ)எனப்படும் நுண்ணறிவின் ஈவு 190 என்றால் நம்ப மாட்டீர்கள். இறைவன் அவள் உடலில் செயல்படும் சக்தியைக்குறைத்து மறுபக்கத்தில் சிந்திக்கும் சக்தியைக் கூட்டியிருக்கிறார். “நீ சொல்வதைக் கேட்க எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. அப்போ நல்ல கற்பனை வளம் இருந்தால் அவள்பெண் படைப்பாளி ஆகலாமே”? “அது எப்படி முடியும்? அவளுக்குத்தான் பேசவும் எழுதவும் முடியாதே“. “அது பிரச்சனையில்லை. நீ அவள் சிந்தனையில் தோன்றும் சிந்தனை அலைகளை எழுத்து வடிவிற்க்கு மாற்றக் கூடிய கருவிஒன்றைக் கண்டுபிடி. அப்போ பிரச்சனை தீர்ந்தது. அவள் அறிவியல் கதைகள் எழுதி பிரபல்யமான எழுத்தாளர்களானஆத்தர் ஏ. சி. கிளார்க், ஐசாக் அசிமோவ்,எச். ஜி.வெல்ஸ், பிலிப் டிக் போன்று வரலாம்”. “இது மகத்தான தாக்கங்களை உண்டு பன்னும் தொழில் நுட்ப வளர்ச்சி தான். பக்கவாதம் மூளை பாதிப்பு மூலம் பேசும்சக்தியையும், கைகள் வழங்காது போன பலரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். இக்கருவியைக் கண்டு பிடித்தால்மருத்துவர்கள் நோயாளிகளின் சிந்தனைச் சக்தி அறிந்து அதற்கு ஏற்ப வைத்தியம்செய்ய முடியும். அதுமட்டுமல்ல தாம்செய்த குற்றத்தை ஒப்புக் கொள்ளாத குற்றவாளிகள் மனதில் என்ன இருக்கிறது என அறியவும் முடியும். இது ஒரு வகைபொய் சொல்வதைக் கருவி மூலம் கண்டு பிடிக்கும் வழியாகும். நீதிபதிகள் குற்றம் புரிந்த நபர்கள் உண்மைக்கூறுகிறார்களா ? என அறிந்து தீர்ப்பு வழங்க முடியும். அதுவுமல்லாமல் காதலர்கள் ஒருவர் மனதை ஒருவர் அறியக்கூடியதாக இருக்கும். அவ்வளவு பயன்கள் இருந்தும்,எண்ணங்களை இரகசியமாக ஒட்டுக் கேட்க இது உதவும்”.    “எதற்கும் சிந்தனை அலைகளை, எழுத்து வடிவில் ஆக்குவதற்கு, பரிசோதனைக்கு உட்பட்டவரின் சம்மதம் அவசியம்தேவை. ஏன் என்றால் , அவரின் சம்மதம் இல்லாமல் அவர் தலையில் மின்வாய்த்தடை எனப்படும் எலக்டுரோட்இணைப்பு கொடுக்கப்படமுடியாது. சிந்தனை அலைகளைத் தலையில் பொருத்தப்பட்ட இந்த எலக்டுரோட்டுகள் சேமித்து மின்அலைகளக மாற்றி கணினிக்கு சமர்ப்பிக்கும். அந்த மின் அலைகளை எழுத்துவடிவில் மாற்றக்கூடிய மென்போருள் ஒன்றை எழுதவேண்டும். தற்போது பேச்சினை எழுத்துவடிவில் மாற்றும் வாய்ஸ் ரெகக்னிசன் தொழில் நுட்ப முறை ( Voice RecognitionTechnology) இயங்கி வருகிறது என்பது உனக்குத் தெரியும் தானே ஆதித்தா” வில்லியம்ஸ் கேட்டார். “ தெரியும் சார். ஆனால் முதலில் யாரிடம் இதைப் பரிசோதிப்பது என்று தான் யோசிக்கிறேன்”? “ இதென்ன கேள்வி...! உன்னோடு ஆராய்ச்சியில் ஈடுபடும் உன் காதலி வாணி இருக்கிறாளே, அவள் உன்னை உண்மையில்காதலிக்கிறாளா என்று அறியவும் முடியும்”, என்று சொல்லிச் சிரித்தார் வில்லியம்ஸ். *** ஒருவருட தீவிர ஆராச்சி செய்து, சிந்தனை அலைகளை ஒலி அலைகளாகவும், எழுத்து வடிவத்தில் மாற்றும்கருவியை கண்டு பிடித்ததினால், ஆதித்தனுக்கும் ,வாணிக்கும் பெருமிதம். சிந்தனை அலைகளை ஒலியாகவும் ,எழுத்தாகவும் மாற்றும் மென்பொருளினை ஆதித்தன் , வாணி, பேராசிரியர் வில்லியம்ஸ் மூவரும் சேர்ந்தே ஜாவா, C++ மொழியினைப் பாவித்து எழுதினார்கள். தான் உருவாக்கிய கருவியை வாணியின் சிந்தனைகளை முதலில் எழுத்து வடிவிலும் பேச்சு வடிவிலும் மாற்ற ஆதித்தன்பரிசோதித்து வெற்றிகண்டான். அதன் பின் தன் சகோதரிமேல் அதைப் பாவிக்க பெற்றோரின் அனுமதிபெற அவர்களோடு பேசினான். “அம்மா இனி சரஸ்வதி மனதில் என்ன சிந்திக்கிறாள் ?  என்று என்னால் அறிய முடியும். அவளோடு நாம் பேசவும்முடியும். அவளது கற்பனைத்திறனை எழுத்துவடிவில் வெளிக் கொண்டு வர முடியும்”. “என்னடா ஆதித்தா சொல்லுகிறாய்...! உன் தங்கச்சி பிறவி ஊமை . அதுவுமல்லாமல் அவள் கைகள் செயல்படாது. அதனாலை அவளால் பேசவும், எழுதவும் முடியாது. அதற்கு வைத்தியம் இல்லை” என்றாள் சிவகாமி. “வைத்தியம் தேவையில்லை அம்மா. தொழில் நுட்பம் இருக்கவே இருக்கு அவளைப் பேச எழுத வைக்க. “ ஆதித்தன் பெற்றோருக்கு விளங்கும் விதத்தில் எடுத்துச் சொல்லி அவர்கள் சம்மதத்தைப் பெற்று, தன் தங்கையின் சம்மதத்தைப்பெற அவளோடு பேசினான். “சரஸ்வதி உன் சிந்தனையில் இருப்பதை எழுத்து வடிவிலும் பேச்சுவடிவிலும் மாற்றப் போகிறேன். அதேபோல் நாங்கள்உன்னோடு பேசும் போது அதற்கான பதிலை,நீ சிந்தித்துத் தந்தால் அதை ஒலி வடிவிலும், எழுத்து வடிவிலும், இந்தக் கணினித் தரும்.இதாலை நீ கதைகள் எழுதி பிரபல்யமாகலாம். உனக்கு இந்தப் பரிசோதனைச் சம்மதமா சரஸ்வதி”? ஆதித்தன் தன் தங்கையைக் கேட்டான். தனக்குச் சம்மதம் என்பதை முகத்தில் சிரிப்போடு தலையை ஆட்டிக் காட்டினாள் சரஸ்வதி . ஆறு எலக்டுரோடுகளை அவள் தலையில் பொருத்தி கணினியோடு இணைப்பு கொடுத்தான். ஆதித்தன் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தான். “உன் பெயர் என்ன தங்கச்சி?” “சரஸ்வதி” “உன் அப்பா அம்மா பெயர்கள் என்ன “? “அப்பா சிவராசா, அம்மா சிவகாமி”. “நான் யார்? என் பெயர் என்ன சரஸ்வதி “? “நீ என் ஆசை அண்ணா. உன் பெயர் ஆதித்தன்” கைதட்டிச் சிரித்து தன் மகிழ்ச்சியைக் காட்டி, தன் சிந்தனைஅலைகள் மூலம் பதில் சொன்னாள் . “சரஸ்வதி, எங்கள்  குடும்பத்தில் எவரை உனக்குப் பிடிக்கும்”? “உங்கள்  எல்லோரையும் பிடிக்கும். முக்கியமாக உன்னையும் அம்மாவையும்”. “உனக்கு  என்ன செய்ய விருப்பம்”? “கதை எழுத  விருப்பம் அண்ணா”. “என்ன  விதமான கதைகள்”? “சையன்ஸ்  சம்பந்தப் பட்ட கதைகள்”. “சரி,  நீயே கற்பனை  செய்து ஒரு சிறுகதையை உருவாக்கு.  அதை நான் பத்திரிகை ஒன்று நடத்த விருக்கும் போட்டிக்குஅனுப்புகிறேன். முதலாம் பரிசு பத்தாயிரம் டாலர்கள்” “அண்ணா பரிசு கிடைத்தால் அந்தக் காசு உன் ஆராய்ச்சிக்கு என் பரிசு”. அவள் பதிலை கேட்டு ஆதித்தன் தன் மேல் சரஸ்வதி எவ்வளவுக்கு அன்பு வைத்திருக்கிறாள் என்று அறிந்ததும் அவன்கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டது . உடனே தங்கையைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டான். “சரஸ்வதி, உன் முதல் கதைக்கு என்ன பெயர் வைக்கப் போகிறாய் ”? ஆதித்தன் கேட்டான்“புதுமைப் பெண்”. அவளின் பதிலைக் கேட்டு இருந்தவர்கள் எல்லோரும் அதிர்ந்து போனார்கள். நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த சீதாப்பாட்டி வாயடைத்துப்போனாள். சிவகாமி, “ இவள் உங்கள் குடும்பத்துக்குக் கிடைத்த வைரம்” என்றாள் சீதாப்பாட்டி  தன்னையறியாமலே. +-----------------------------------------------------------------------+ | கதை 2 : காலம் | +-----------------------------------------------------------------------+ எனது ஒரே மகன் அகஸ்த்தியன் ஒரு பைலட். என்  மருமகள் வத்சலா  ஒரு டாக்டர் . இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். எனதும், என் மனைவி பூர்ணிமாவினதும் சம்மதத்தோடு தான் அவர்கள் திருமணம் நடந்தது. அகஸ்த்தியன் எங்களின் ஒரே மகன் என்றபடியால் சம்மதித்துதானே ஆகவேண்டும். அவர்களுக்கு  அகஸ்த்தியன் தம்பதிகளுக்கு அபிமன்யூ என்ற மகன் பிறந்தான்.  அபி படிப்பில் வெகு கெட்டிக்காரன். வகுப்பில் எப்போதும் முதல் மாணவனாகவே வருவான்.   பெங்களூரில் வசிக்கும் அகஸ்த்தியன் குடும்பம் அடிக்கடி லீவில் சென்னை வருவார்கள். அகஸ்த்தியனுக்கு தான் எப்போதாவது ஒரு நாள் விண்வெளிப் பயணியாக வேண்டும் என்ற கனவு பல காலமாக இருந்து வந்தது.   “நான் நினைப்பது நடக்குமா அப்பா”? என்று என்னை அடிக்கடி கேட்பான். “அகஸ்தியா, உன் கனவு நனவாகுமா?  என்பதை நாம் நாடி சாஸ்திரக்காரனிடம்  கேட்டு விடுவோமே” என்று அவனுக்குச் சொன்னேன். “அப்பா அது நல்ல ஐடியா தான். நாடி சாஸ்திரத்தைப்பற்றி கேள்விபட்டிருக்கிறேன். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை அப்பா” என்றான். மூன்று நாள் லீவில் தனது வருங்காலத்தைப் பற்றி அறியும் திட்டத்தோடு அவன் மட்டுமே சென்னைக்கு வந்தான்  .  அவனை அழைத்துக்கொண்டு வைத்தீஸ்வரன் கோவில் இருக்கும் ஊருக்கு யாமிருவரும் மட்டுமே போனோம். என் மனைவி பூர்ணிமாவிற்க்கு உடம்பு சரியில்லாததால் எங்களோடு வரவில்லை.  இக்கோவில் உள்ள ஊர் சென்னையில் இருந்து சுமார் 300 கி.மீ தூரத்திலும், சீர்காழிக்கு அருகே 7 கி.மீ தூரத்திலும் உள்ளது. செவ்வாய் கிரகத்துக்கான கோவிலது. நாடி சாஸ்திரக்கார்கள் பலர் வாழும்  ஊர்.  அனேகர் தமது சென்ற காலம் , நிகழ் காலம், வருங்காலத்தைப் பற்றி அறிய  இங்கு செல்வதுண்டு. அவர்கள் நாடி சாஸ்திரம் சொல்வதற்கு பாவிக்கப்படுவது, பல நூற்றாண்டுகளுக்கு முன் வட்ட எழுத்தில் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகள். இது “வேதகாலத்தில் சித்தர்களால் எழுதப்பட்டது”  என்பது பலர் நம்பிக்கை. இந்த சாஸ்திரம் நம்பிக்கையின் அடிப்படையில் இயங்கிவருகிறது. நாடிச்சென்று சாஸ்திரம் கேட்பதால் ‘ நாடிசாஸ்திரம்’  என்ற பெயர் வந்தது என்பர் சிலர். சாஸ்திரம் கேட்பவர் ஆண் ஆகில் வலது கையின் பெருவிரலின் ரேகையும்,பெண்ணாகில் இடது கையின் பெரு விரல் ரேகையும் பிரதி எடுத்து, ஓலைச்சுவடிகளைத் தேடியப்பின் பல கேள்விகளை சாஸ்திரம் கேட்க வருபவர்களிடம் கேட்டு,  ஆம் அல்லது இல்லை என்று அவர்கள் சொல்லும் பதில்கள் மூலம் தாம் சாஸ்திரம் சொல்லப் போவது சரியானவருக்கா? என உறுதி செய்த பின்னர் சாஸ்திரம் சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.  அவ்வூரில், நாடி சாஸ்திரம் பார்த்துவிட்டு நானும்  மகன் அகஸ்தியனும் வீடு திரும்பும் வழியில் அவன் கேட்ட பல கேள்விகளுக்கு நான் பதில் சொல்லவேண்டி இருந்தது.  “அப்பா, நாடிசாஸ்திரக்காரர், உங்கள் பெயர் சந்திரசேகரன் ,அம்மா பெயர் பூர்ணிமா, என் பெயர், என் மனைவி பெயர் எல்லாம் சரியாகச் சொன்னார். உங்களுக்கு நான் ஒருவன்தான் பிள்ளை என்றும், நான் காதலித்து பிடித்த பெண்ணைத் திருமணம் செய்ததாகவும் சொன்னார் .  நான் பிரபல வான்வெளி பயனியாவேன் என்றும் என் மகன் வைத்தியத் துறையில் சர்ஜனாவான் என்றும்,   என் மனைவி அரசியலில் ஈடுபட்டு அமைச்சராவாள்  என்றார். என் குடும்பத்தின் வருங்காலத்தைப் பற்றி அவர் சொன்னது நடக்குமா?  என்பது எனக்குச் சந்தேகம். டாக்டர் தொழில் செய்யும் என் மனைவி வத்சலா , எப்படியப்பா அரசியலில் ஈடுபட்டு அமைச்சராக முடியும்? எனது மகள் சர்ஜனாவான் என்று சாஸ்த்திரத்தில் சொன்னபடி நடந்தால் நான் சந்தோஷப்படுவேன். அது தான் நான் எதிர்பார்பதும். நாடி சாஸ்திரம்  சொன்னவர் பெயர் என்னப்பா”?  “ அவர் பெயர் சிவசங்கர். அவர் எனக்குத் தெரிந்தவர்களுக்குச்  சொன்னது நடந்திருக்கிறது. பிரான்சில் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த  தீர்க்கத்தரிசி மைக்கேல் டி நோஸ்திரதாம் (எ) நாஸ்ட்ராடமஸ்(Nostradamus) என்பவர் பற்றி கேள்விபட்டிருப்பியே. அவரை போல் என்று சொல்”   “நாடி சாஸ்திரம் சொல்லும் போது அவர் கையில் இருந்த ஏட்டுச் சுவடிகளைப் பார்த்து வாசித்தாரே. அச்சுவடிகள்  என்ன ?அவரின்  டைம் மெசினா? கடந்த காலத்துக்கும், நிகழ்காலத்துக்கும், நிகழப்போகும் காலத்துக்கும் கையில் இருக்கும் ஏட்டைப்பார்த்து சொல்லுகிறாரே அதெப்படி?  “அகஸ்தியா, காலத்தில் ஏற்படும் மாற்றத்தைப்பற்றிய சார்புக் கொள்கையினை  பௌதிக விஞ்ஞானி ஆல்பர்ட் ஐயன்ஸ்டைன் எற்கனவே சமன்பாடுகள் மூலம் விளக்கியிருக்கிறார். ஒளியின் வேகமானது ஒரு செகண்டுக்கு சுமார் மூன்று இலட்சம் கிமீ.  இதுவே  நாமறிந்த ஆக கூடிய வேகம். ஓளி, ஒரு வருடத்தில் செல்லும் தூரத்தை  ஒளி வருடம் என்று வான்வெளியாளர்கள் அழைப்பார்கள். அந்த தூரத்தை ஆங்கிலத்தில் ‘லைட் இயர்’ (Light Year) என்பார்கள்.”  என்  மகன் பௌதிகத்திலும் விண்வெளித்துறையிலும் அதிக ஆர்வம் உள்ளவன் என்பது எனக்குத் தெரியும். சந்திரனில் முதன் முதலில் கால் அடி எடுத்து வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் என்பவரைப் பற்றி  வாசித்து அறிந்த பின், “ பைலட்டாக வேலை செய்யும் தானும் ஒரு விண்வெளி வீரனாக வேண்டும்,”  என்று அடிக்கடி சொல்லுவான்.  வானியல் பற்றிய பல நூல்கள் அவன் கேட்டு, நான் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். ஆகவே அவனுக்குப் பௌதீகத்துறையில் பேராசிரியரான நான் வாண்வெளிப் பயணம் பற்றி விளக்கம் கொடுத்தேன்.  “அகஸ்தியா, நீ விண்வெளி  வீரனாக வர வேண்டுமானால் விண்வெளியில் தூரத்தை கணிப்பது எப்படி?  என்று முதலில்தெரிந்து வைத்திருக்கவேண்டும்”, என நான் சொன்னேன்.  “அப்பா, நீங்கள் பொளதிகத் துறை பேராசிரியராச்சே. வான்வெளியில் பூமிக்கும் கிரகங்களுக்கும் இடையிலான தூரத்தை எப்படி கணிப்பது என்று சொல்லுங்கள்.”.  “ அகஸ்தியா ,விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொண்டப்படி ஒளியின் வேகம் தான், நாமறிந்த வேகங்களில் ஆகக்கூடிய வேகம். ஒளி செகன்டுக்கு சுமார் 300,000 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது என பரிசோதனைகள் மூலம் கணித்துள்ளார்கள். ஒரு வருடத்தில் ஒளி பயணம் செய்யும் தூரத்தைக் கணிப்பதென்றால் 300,000 கி.மீ  தூரத்தை ஒரு வருடத்தில் உள்ள செகன்டுகளை 300,000 கி.மீ ஆல் பெருக்கினால் சுமார் 9.5 டிரிலியம் கி.மீ தூரம் வரும்.. இந்த  தூரத்தை ‘ ஒரு ஒளி ஆண்டு தூரம்’  என்றார்கள் பல வான்வெளி ஆராச்சியாளர்கள்.”  “ அடெயப்பா நினைத்து பார்க்க முடியாத அவ்வளவு தூரமா அப்பா”?  “ஆமாம் பூமியில் இருந்து சூரியனதும், நட்சத்திரங்களினதும் கிரகங்களினதும் தூரத்தை ‘ ஒளி வருடத்திலும்’ அல்லது ‘ வானியல் அலகு’  எனும் ‘அஸ்டிரோனோமிக்கல் யூனிட்டிலும்’  (Astronaumical Unit) சொல்லுவார்கள். ஒரு வானியல் அலகு  என்பது பூமிக்கும் சூரியனுக்கு இடையிலான தூரம் .கிட்டத்தட்ட 150 மில்லியன் கி.மீ. அதாவது  ஒளி சூரியனில் இருந்து பூமியை வந்து சேர கிட்டத்தட்ட  8.3 நிமிடங்கள் எடுக்கும். இத்தூரத்தை ஒரு வானியல் அலகாகக் கருதுகிறார்கள். ஒரு ஒளி வருடத்தையும் வானியல் அலகு இணைக்கும் ஒரு ஒளி வருடமானது 63241 வானியியல் அலகுக்கு சமனாகும். பூமியில் இருந்து வெகு தூரத்தில் உள்ள நெப்டியூனுக்கு போகும் தூரம் சுமார் 29 வானியல் அலகாகும். இவ்வலகை 63241ஆல் பெருக்கினால் ஒளி ஆண்டு தூரம் வரும்.  “முடிவில்லா தூரம் என்று சொல்லுங்கள். இதனால் தான் இந்து மதத்தில் ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருள் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த வானியல் தூர கணிப்பைப்பற்றி நான் வாசித்திருக்கிறேன் அப்பா”  “சரியாகச் சொன்னாய். அகஸ்தியா இன்னொன்றை தெரிந்து வைத்துக்கொள். நேரமானது வேகத்தாலும் , ஈரப்பு விசையாலும் பாதிப்படையும். வேகம் ஒளியின் வேகத்தை நெருங்கும் போது, நேர மாற்றம் அதிகரித்து கொண்டே போகும். இதை விண்வெளி வீரர்கள் அவதானித்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் பயணம் செய்தால் மட்டுமே நேர மாற்றத்தை அவதானிக்க முடியும் என்பதில்லை. ஈரப்புச் சக்தி அதிகம் உள்ள ‘பிளாக் ஹோல்’  (Black Hole)  என்ற கருந் துளைக்கு அருகே சென்றால் அதன் ஈர்ப்பு விசை நேரத்தை  பாதிக்கும்.”  “அப்பா நான் நாடிசாஸ்திரத்தில் சொன்னபடி விண்வெளி பயணியாக வந்தால் நான் யாரும் செய்யாத ஒரு சாதனையைப் படைப்பேன்”  “ என்ன சாதனைப் படைப்பாய் அகஸ்தியா”?  “ பூமிக்கு அருகே உள்ள கருந்துளைக்கு பயணத்தை மேற்க்கொண்டு காலத்தில் ஏற்படும் மாற்றத்தைக் கண்டறிந்து அது உண்மையா?  என்று அறிய விரும்புகிறேன்”.  “ நல்ல சிந்திக்க முடிந்த இலட்சியம் தான், ஆனால் அகஸ்தியா , நீ நினைப்பது சாத்தியமாகுமா என்பது எனக்கு சந்தேகம். வெகு தூரத்தில் உள்ள கருந்துளையை அடைவது அவ்வளவு இலகுவான காரியமல்ல. கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் பயணித்தால் மாத்திரமே கருந்துளையை அடைய முடியும். அதற்குள் போனால் அதன் ஈர்ப்பு விசையில் இருந்து தப்பமுடியாது என்பதை நீ அறிந்து கொள்.”   “ தெரியும் அப்பா. நான் பெங்களுரில் உள்ள  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு நான் விண்வெளி வீரனாகும்  விருப்பத்தை தெரிவித்து விண்ணப்பிக்கப்போறேன். நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் திருவனந்தபுரத்தில் உள்ள ராக்கெட் விண்வெளிக்கு அனுப்பும் ‘தும்பா’  என்ற இடத்தில் பயிற்சி கிடைக்கும். அதுசரி அப்பா நீங்கள் பல்கலைக்கழகத்தில் பௌதிகத்துறை பேராசிரியராயிற்றே...! கருந்துளை பற்றி மேலும் சொல்லமுடியுமா”?  “கருந்துளை (Black Hole) என்பது  விண்வெளியின் ஒரு பகுதியாகும். இது மிகவும் அடர்த்தி வாய்ந்த ஒன்று. எனவே, இதனுள் ஒளி கூட புக முடியாது. இந்தக் கருந் துளை தனக்கு அருகில் இருக்கும் அனைத்தையும் ஈர்த்துக் கொள்ளும் ஈர்ப்புச் சக்தி கொண்டது. இதனால் ஏற்படும் வெப்பம் காரணமாக, ஒளித்துகள்கள் மின்னும் கதிர்களை வெளியிடும் தன்மை கொண்டவையாக உள்ளன. இந்த ஒளிக் கதிர்கள் 'குவர்சார்' (Quarsar) என்று அழைக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட ஒரு கருந்துளையை சீனாவில் உள்ள விண்வெளி ஆய்வாளர்கள் 2.4 மீட்டர் குறுக்களவு கொண்ட தொலை நோக்கி உதவியுடன் கண்டுப்பிடித்துள்ளனர். கருந்துளைகளை  அதன் நிறையை வைத்து நான்கு வகையாக வகுத்துள்ளனர். நான்காம் வகையைச் சேர்ந்த சூரியனை விட பல கோடி அதிகமான நிறையுள்ள கருந்துளை பூமியில் இருந்து 1,280 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு கருந்துளை இருப்பதை அமெரிக்காவும், சிலி (Chile) நாடும் உறுதி செய்துள்ளன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கருந்துளைகளிலேயே இதுதான் மிகவும் பெரியதாகவும், இதன் ஒளிக்கதிர்கள் அதீத வெளிச்சம் கொண்டதாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. நட்சத்திர இறப்பினால் தோன்றும் கருந்துளை  சூரியனின் நிறையிலும் சுமார் மடங்கு கூடியது. சூரியனிலும் பார்க்க,  பல மில்லியன் நிறை கூடிய கருந்துளைகள் உயர் வகுப்பை சேர்ந்தவை . சூப்பர் நோவாவில் (Super Nova)  உள்ள நட்சத்திரங்கள் இறந்தபோது தோன்றிய கருந்துளை இதில்ஏ616 மொன் (Mon) என்று பெயரிடப்பட்ட கருந்துளை பூமியில் இருந்து சுமார் 3000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இக்கருந்துளை “ சூரியனின் நிறையை விட 9 முதல் 13 வரை கூடுதலான நிறை உள்ளது”  என கணித்துள்ளார்கள் . இதற்கு அடுத்த அருகே உள்ள கருந்துளை 6000 ஒளி ஆண்டுகள் துரத்தில் உள்ளது. இது சூரியனை விட  15 மடங்கு நிறைகொண்டது.  “ கேட்பதற்கு எவ்வளவு சுவரசியமாக இருக்கிறது அப்பா. இதைப்பற்றி மேலும் வாசித்தறிய விருப்பப்படுகிறேன். நான் விண்வெளி வீரனாகும் சந்தர்ப்பம் கிடைத்தால் இதைப்பற்றி அறிந்து வைத்திருப்பது நல்லதல்லவா. ஒருவேளை என்னை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் நேர்காணலுக்கு அழைத்து கேள்விகள் கேட்டால் பதில் சொல்ல நான் தயாராக இருக்கவேண்டாமா”?  “வீட்டுக்குப் போனதும் எனக்கு நினைவு படுத்து, கிப்ஸ் தோர்ன் (Kips Thorn) எழுதிய “கருந்துளையும் நேர பாதிப்பும்” (Black Hole Time Impact) என்ற  நூலொன்று எனது லைப்பிரரியில் இருக்கிறது. அதைத் தருகிறேன், அந்நூலை வாசி. அப்போது பிரபஞ்சத்தைப் பற்றி அறிவாய்”, நான் அகஸ்தியனுக்குச் சொன்னேன்.  அகஸ்தியனும்நானும் வீடு திரும்பியதும், இரவு உணவு சாப்பிட்டபின்  பின், நித்திரைக்குப் போகும் முன், அந்நூலை மறக்காமல் என்னிடம் கேட்டு வாங்கிக்கொண்டான் . தூங்கும் முன் நூல் முழுவதையும் வாசித்துவிட்டு அதை தன் நெஞ்சில் வைத்தப்படியே அதன் நினைவாகவே தூங்கிவிட்டான். ****** அகஸ்தியன் எதிர்பார்த்தபடியே ஏ616 மொன் என்ற கருந்துளை நோக்கி பயணிக்க இருக்கும் 3 பேரைக் கொண்ட  விண்வெளி வீரர்களில் அகஸ்தியனும் ஒருவனாக தேர்ந்து எடுக்கப்பட்டான். மற்ற இருவரும் வடநாட்டவர்கள். மூவர் குழுவுக்கு பூனாவைச் சேர்ந்த பாரத் என்பவர் கேப்டனாக இருந்தார் . மற்ற வீரரின் பெயர் சௌத்திரி கல்கத்தாவை சேர்ந்தவர். கருந்துளையைப்பற்றிய அகஸ்தியனின் அறிவைக் கண்டு பயணிகள் குழுவின் தெரிவுக்காக நேர்காணல் கண்டவர்கள் வியந்தார்கள். அவன் விரும்பியபடி  அவனது விண்வெளிப் பயணம் 2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் திகதி காலை 9 மணிக்கு கேரளாவில் உள்ள பாம்பா (Pampa) விண்வெளி ராக்கெட்டுகள் பயணிக்கும் இடத்தில் இருந்து ஆரம்பமானது என்பதை ராக்கெட்டில் உள்ள கடிகாரம் காட்டியது. அகஸ்தியன் பயணம் செய்த ராக்கெட்டின் பெயர் “சாட்டேர்ன்” (SATURN)). கருந்துளை நோக்கிய பயணமாவதாலோ என்னவோ சனியை குறிக்கும் சாட்டேர்ன் பெயர் ராக்கெட்டுக்குப் பொருத்தமாக இருந்தது. பெற்றோர், மனைவி வத்சலா, மகன் அபிமன்யூ ஆகியோரிடமிருந்து உயிரை பணயம் வைத்து அகஸ்தியன் விடைபெற்றான். அப்போது நான் ரிட்டையராக ஆறுமாதங்களே இருந்தன.  ஓளியின் வேகத்தின் தொன்னூற்றி எட்டு விகிதத்தில் ராக்கெட் பயணம் செய்தால் சில வருட பயணத்தின் பின் பல கிரங்களைத் தாண்டி கருந்துளையை நோக்கிச் செல்லக்கூடியதாக இருந்தது. பயணத்துக்கு போதுமான எரிபொருள் இருக்கிறது என்பதை மீட்டர் காட்டியது,  குழுவுக்கு நிம்மதியைக் கொடுத்தது. குழுவின் கேப்டன் பாரத்,  பல தடவை வான்வெளியில் பயணம் செய்த அனுபவசாலி. குழுவில் இரண்டாவது பயணி சௌத்ரி, ஒரு பிரமச்சாரி. அவரும் இரு தடவை வான்வெளியில் பயணம் செய்தவர். அகஸ்தியனுக்கு இப்பயணம் புது அனுபவம். பயிற்சியின் போது ராக்கெட்டில் உள்ள கருவிகளை இயக்குவதையும், மீட்டர்களை வாசிப்பதை பற்றி கற்றுக்  கொடுத்திருந்தார்கள். உண்பதற்கு சத்துள்ள மாத்திரைகள் உட்கொள்ளவேண்டியிருந்தது. ஈர்ப்பு சக்தியில் நடக்கக்  கூடிய விதத்தில் ஆடைகள் அணிந்திருந்தான். அதற்கான பயிற்சியும் கொடுக்கப்பட்டது. எவ்வளவு தூரம் ராக்கெட் பயணித்துள்ளது என்பதை  ஒளி ஆண்டு அலகில் மீட்டர் காட்டியது. ராக்கெட் பயணிக்கும் வேகத்தை ஒளியின் வேகத்தின் விகிதத்தில் காட்டியது. “வேகம் ஒளியின் வேகத்தை நெருங்கும் போது நேர மாற்றம் பெரிதாகிக் கொண்டு போகும்”  என்று தன் தந்தை சொன்னது அகஸ்தியன் ஞாபகத்துக்கு வந்தது.  அதுவுமல்லாமல் கருந்துளையை வெகு சீக்கிரம் போயடையலாம், எனப் பாரத் சொன்னார்   “கருந்துளைக்குள் போனால்  வெளியேறமுடியாது” என்று விண்வெளி ஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கை செய்து பயணிகளை அனுப்பியிருந்தது. 2900 ஒளி ஆண்டு தூரத்துக்கு பயணம் செய்து கருந்துளைக்கு அண்மையில் ராக்கெட்டை நிறுத்தி கருந்துளையை அவதானித்து குறிப்புகள் எடுத்து திரும்பவேண்டும்,  என்பது குழுவுக்கு ஆராய்ச்சி நிலையம் இட்ட கட்டளை. அதன்படி ‘சாட்டெர்ன் ராக்கெட்’   கருந்துளையில் இருந்து 10 ஒளி ஆண்டு தூரத்தோடு பயணத்தை தொடராமல் நிறுத்தியது.   தங்கள் குழுவுக்கு ஐஎஸ்ஆர்ஓ (ISRO) என்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இட்ட வேலையை  சரிவர செய்து முடித்து, திரும்பவும் பூமிக்கு குழு திரும்பிய போது ராக்கெட்டில் உள்ள கடிகாரம் ஜனவரி 20 திகதி 2015 ஆண்டு எனக் காட்டியது. ராக்கெட்டில் இருந்த கடிகாரம் காட்டியபடி  கிட்டத்தட்ட பத்துவருடங்கள் கருந்துளைக்குப் போய் வர எடுத்தது, என்பதை நினைத்து பார்க்கும் போது “தாம் எவரும் படைக்காத சாதனையைப் படைத்துவிட்டோம்”  , என குழு நினைத்தது. பூமியை ராக்கெட் வந்தடைந்த போது பாம்பாவில் உள்ள ஐஎஸ்ஆர்ஓ பரிபாலன நிலையத்தில் இருந்த கடிகாரம் 2038 ஆண்டு ஜுன் மாதம்  20 -ஆம் திகதியைக் காட்டியது.   “பூமியின் நேரத்தின்படி நான் என்ன 23 வருடங்கள் இளமையாகிவிட்டேனா? அப்போ நாங்கள் புறப்படும்போது இருந்தவர்கள் இப்போது விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில்  வேலை செய்யமாட்டார்களே”, என்றார் குழுவின் கேப்டன் பாரத்.  23 வருடங்கள் இளமையாகி வீடு திரும்பிய அகஸ்தியனுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது, ராக்கெட் இறங்கிய நிலையத்துக்கு தன்னை வரவேற்க மனைவி வத்சலா ஒரு பெரிய கூட்டத்தோடு, பல போலீஸ் அதிகாரிகள் புடைச்சூழ வந்திருந்தாள். அவளோடு அபிமன்யு தன் மனைவியோடும் இரு பிள்ளைகளோடும் வந்திருந்தான். அகஸ்தியனின் கண்கள் அவனது பெற்றோரைத் தேடிற்று. அபிமன்யுவிலும், வத்சலாவிலும் பல  மாற்றங்கள். வத்தசலாவின் முகத்தில் வயதின் முதுமை தெரிந்தது. தலை மயிர் நரைத்துவிட்டது.  “ அப்பாவும் அம்மாவும் எங்கே” ? பதட்டத்தோடு அகஸ்தியன் மனைவி வத்சலாவைக் கேட்டான்.  “ அவர்கள் இறந்து 15 வருடங்களாகிவிட்டது” வத்சலா சொன்ன பதில் அவனை அதிர வைத்தது.  “ அது சரி வத்சலா டாக்டரான உனக்கேன் இவ்வளவு போலீஸ் பாதுகாப்பும் கூட்டமும் ”?  “ நான் இப்போ டாக்டராக வேலை செய்வதில்லை . நான் இப்போ ‘மாநில கல்வி அமைச்சர்,’  இவர்கள் என்மக்கள் திராவிட தமிழர்கழக கட்சித் தொண்டர்கள்.” வத்சலாவிடம் இருந்துபதில் வந்தது.  குழப்பம் அடைந்த  அகஸ்தியன் அபிமன்யுவைப் பார்த்தான். “ அப்பா நீங்கள் இன்னும் இளமையாக இருக்கிறீர்கள். என்னை யார் என்று அடையாளம்தெரிகிறதா? நான் தான் உங்கள் மகன் அபிமன்யூ. இது என் மனைவி அகிலா. இவ ஒரு கிட்னி கன்சல்டன் டாக்டர். அவளுக்கு பக்கத்தில் நிற்பதுஎன் மகன் சேகரனும், மகள் பூர்ணிமாவும். உங்கள் அப்பா அம்மா நினைவாக அவர்கள் பெயரை என் குழந்தைகளுக்கு வைத்திருக்கிறேன். நானும் அகிலாவும் மருத்துவக் கல்லூரியில் ஒன்றாகப்படித்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.”  “அபி நீ இப்ப என்னவாக வேலை செய்கிறாய்”? அகஸ்தியன் மகனைக் கேட்டான்.  “நான் ஒரு ஹார்ட் சர்ஜன் அப்பா. “அவனிடம் இருந்துபதில் வந்தது  “உங்கள் அனுமதி பெறாமல் உங்களை வரவேற்க நாங்கள் வந்ததுக்கு மன்னிக்கவும்” வத்சலா சொன்னாள்.  ஐயோ கடவுளே....! நாடி சாஸ்திரக்காரன் சொன்னது போல நடந்துவிட்டதா? காலம் அவ்வளவு கெதியிலை கடந்து விட்டது” தன்னையும் அறியாமலே புலம்பினான் அகஸ்தியன்.  அவன் புலம்பல் குரல் கேட்டு நானும் மனைவியும் அவன் அறைக்குள் போனோம்.  “தம்பி அகஸ்தியா  ஏன் புலம்புகிறாய்? எதாவது கெட்ட கனவு கண்டாயா”?, நான் அவனின் உடலை உசுப்பியப்படி கேட்டேன்.  “அகஸ்தியா, இப்டித்தான் வெகு நேரம் உன் வீட்டில் தூங்குவாயோ?.காலை பத்து மணியாகிவிட்டது. இதோ சூடான காப்பி கொண்டுவந்திருக்கிறேன். குடித்துவிட்டு முதலிலை வத்சலாவுக்கு போன் செய். வத்சலா வைத்தியசாலையில் இருந்து உன்னைக் கேட்டு போன் செய்தவள். எப்போ நீ பிளைட்டில் பெங்களூர் திரும்புகிறாய்?  என்று கேட்டாள்”, பூர்ணிமா மகனுக்கு செய்தி சொன்னாள்.  “ என்ன அதஸ்தியா நான் தந்த கருந்துளை நூல் முழுவதையும் வாசித்து முடித்துவிட்டாய் போலத் தெரிகிறது. கருந்துளை பற்றி கனவு ஏதும் கண்டாயா” நான் சிரித்தபடி அவனைக் கேட்டேன்.  அவன் திரு திரு என்று முழித்தான். நடப்பது யாவும் அவனுக்கு குழப்பமாயிருக்கிறது என்பதை அவன் முகம் காட்டிற்று, அவனுக்குப் பக்கத்தில் உள்ள மேசையில் இரவு பல மணி நேரம் வாசித்த என் “கருந்துளையும் நேர பாதிப்பும்”  என்ற நூல் அவனைப்பார்த்து கண்சிமிட்டியது. ****** +-----------------------------------------------------------------------+ | கதை 3 : விண்கல் | +-----------------------------------------------------------------------+ பௌதீகத் துறை பேராசிரியர் ராஜன்  ‘ அஸ்டிரோ பிசிக்ஸ்’  (Astro Physics) எனப்படும் வானியியற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர். விண்கல் தோற்றமும் அதனால் பூமியின் பாதிப்பு பற்றி அவர் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம்  பெற்றவர்.  வானியல் சம்பந்தப்பட்ட பல கட்டுரைகளை ‘ விஞ்ஞானி’  என்ற சஞ்சிகைக்கு எழுதிவருபவர். வான்சாஸ்திர வல்லுனர்கள் பலரின் வரலாறு பற்றி அறிந்து வைத்திருந்தார். அவ்வல்லுனர்களில் அவரை முக்கியமாக கவர்ந்தவர்கள் ஆல்பர்ட் ஐயின்ஸ்டைனும், ஸ்டீபன் ஹாக்கின்சுமேயாகும். உலகம் போற்றும் ஆல்பர்ட் ஐயின்ஸ்டைனின் நினைவாகத் தன் மகனுக்கு ‘ ஆல்பர்ட்’  எனப் பெயர் சூட்டினார் ராஜன்.  ஆல்பர்ட்  தன்னைப்போலவே வானியியற்பியலில் படித்து பட்டம் பெற்று  உலகம் போற்றும் ஆல்பர்ட் ஐயின்ஸ்டைனைப் போன்று விஞ்ஞானி ஆகவேண்டும், என்பதே அவர் ஆசை. மகனை ஊக்குவிப்பதற்காக 500 டாலர்கள் கொடுத்து வானில் நடக்கும் காட்சிகளைத் தெளிவாகப் பார்கக்கூடிய திறமை வாய்ந்த ‘ ஓரியன்  டெலெஸ்கோப்’  ஒன்றை பிறந்த நாள் பரிசாக மகனுக்கு புரொபசர் ராஜன் வாங்கிக் கொடுத்தார். ஆல்பர்ட் வானியியற்பியல் சம்பந்தப்பட்ட கட்டுரைகளை வாசிப்பதில் அதிக ஆர்வம் காட்டிவந்தான். வானில் நடக்கும் விசித்திரங்களைப் பற்றி அறிவது அவனது பொழுது போக்கு. ஆத்தர் சி. கிளார்க் (Arthur C Clerk)  , அசிமோவ்  (Asimov) ,  ஏச். ஜி .வெல்ஸ் (H G Wells) போன்ற எழுத்தாளர்கள் எழுதிய அறிவியல் நாவல்ளை வாசித்து தானும் அவர்களைப் போன்று அறிவியல் கதைகள் எழுதும் எழுத்தாளனாக வரவேண்டும் என்பது அவன் ஆவல்.   தினமும் தனது ஓரியன் டெலஸ்கோப்பினூடாக வானத்தைப் பார்த்து ஆராய்ச்சி செய்தபடியே ஆல்பர்ட் தினமும் இருப்பான். டெலஸ்கோப் இல்லாமல் நேரடியாகப் பார்க்க முடியாத பல கிரகங்களை அவனால் பார்க்கக்கூடியதாக இருந்தது, ஓரியன் டெலஸ்கோப்பின் முக்கிய கண்ணாடியின் விட்டம் பெரிதாக இருப்பதால் வானில் காட்சிகள் தெளிவாகத் தெரிந்தன. சூரிய குடும்பத்தில் பெரிய கிரகம் வியாழன். அதன் மேகப் பட்டைகளையும் கலீலியோ கண்டுபிடித்த  நான்கு பெரிய சந்திரன்களையும் ஆல்பர்ட்டால் பார்க்கமுடிந்தது. பூமியை விட விட்டத்தில் பதினொரு  மடங்கு பெரிதான வியாழன் கிரகத்தில் பெரிய விண்கற்கள் அடிக்கடி  தாக்குதலை கண்டு அதிசயத்தான். 67 சந்திரன்களை கொண்ட வியாழனானது எல்லா சந்திரன்களையும் தன் டெலஸ்கோப்பில் ஆல்பர்ட்டால் பார்க்க முடியவில்லை என்பது கவலை. சனி கிரகத்தை சுற்றி உள்ள  வளையங்கள் அத்தகுப் பெருமையைத் தேடி கொடுத்தது. வியாழனுக்கு அடுத்தாக அதிக எண்ணிக்கை உள்ள சந்திரன்களை இக்கிரகம் கொண்டது. பூமியைப் போல் எல்லாக் கிரகங்களுக்கும் சந்திரன்கள் உண்டு என்பதையும் வெகு தூரத்தில் உள்ள நெப்டியூனுக்கு 14 சந்திரன்களும் , யுரேனசுக்கு 27 சந்திரன்களும் இருப்பதை அறிந்தாலும் அச்சந்திரன்களை தன் டெலஸ்கோப்பினூடாகப் பார்க்கக் கூடியதாக இல்லை என்பது அவனுக்குப் பெரும் ஏமாற்றம்.  வின்கற்கள் கிரகங்களைத்  தாக்குவது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. தன் தந்தையிடம் தான் டெலஸ்கோப்பினூடாக கண்ட காட்சியின் சந்தேகத்தைக் கேட்டான்.  “அப்பா,  விண்கற்கள் எரி மழை போல் பொழிகின்றனவே ...!அது ஏன். அவை எங்கிருந்து தோன்றியுள்ளன?”.  “வளிமண்டலத்தினூடாக  வேகத்துடன் வின்கற்கள் பயணம் செய்வதினால் உராய்வு ஏற்பட்டு, வெப்ப நிலை அதிகரித்து, எரியத் தொடங்குகிறது. அதனால் விண்கல்லை ‘ எரிகல்’  என்றும் அழைப்பாரகள். கிரகங்கள் எப்படி பெரும் வெடிப்பின் போது தோன்றினவோ அதே போன்று தோன்றியவைதான் அவை. அதனுடைய பருமனை வைத்து பெரிதாயின் விண்கோள் (Asteroids) எனவும் , சிறுதாயின்  விண்கல்   (Metyeriods) எனப் பெயரிட்டுள்ளார்கள். இதில் விண்கற்கள் சிறிது என்பதால் பூமியை வந்து தாக்கும் சந்தர்ப்பங்கள் அதிகம் உண்டு.”  “தாக்கினால் என்ன நடக்கும் அப்பா”?  “பலர் விண்கல்   தாக்குதலினால் பூமி அழிந்துவிடும் என்று பீதியை அடிக்கடி உருவாக்குறார்கள். விண்கல்   பூமியை வந்து தாக்கும் வாய்ப்பு கல்லின் பருமன் கூடும் போது, குறைந்து கொண்டு போகும்.. உதாரணத்துக்கு 4 மீட்டர் விட்டம் உள்ள விண்கற்கள்  அடிக்கடி பூமியைத் தாக்கக் கூடியவை. 100 கி.மீ விட்டம் உள்ள விண்கல்   சுமார் 5000 ஆண்டுகளுக்கு ஒரு தடவைதான் பூமியைத் தாக்கும். 1000கி.மீ  விட்டம் உள்ள விண்கல்   கிட்டத்தட்ட 450000 ஆண்டுகளுக்கு ஒரு தடவை தான் தாக்கும் என ஆராச்சியாளர்கள் கணித்துள்ளார்கள்.  “பெரிய விண்கல்   வந்து பூமியைத் தாக்கினால் பாதிப்பு பெரிதாக இருக்குமே அப்பா”?  “ஆமாம். 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டயனோசோர்ஸ் என்ற மாபெரும் உயரினம் திடீரென ஒரு நாள் மறைவதற்கு விண்கல்   தாக்குதலே காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதுமட்டுமல்ல பல நாடுகளில் திடீரென  தோன்றிய பள்ளங்கள். இப்பள்ளங்களில் 300 கி.மீ நீளமுள்ள மிகப்பெரிய பள்ளம் தென்ஆப்பிரிக்காவின் ப்ரீ ஸ்டேட் (Free State) மாகாணத்தில் உள்ளது. இப் பள்ளம் விண்கல்   தாக்குதலினால் ஏற்பட்டது. இது போன்றே உலகில் இரண்டாவது பெரிய பள்ளம் கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள சட்பெரி நகரத்தில் விண்கல்   தாக்குதலால் இரண்டு பில்லியன் வருடங்களுக்கு முன் உருவாகியது . 1908 இல்,  சைபீரிய பாலைவனத்தில் தோன்றிய பள்ளம் சுமார் 10 கி.மீ விட்டம் உள்ள விண்கல்லின் தாக்குதலினால் தோன்றியிருக்கலாம் என்பது ஆராச்சியாளர்கள் கணிப்பு”   “ அப்போ அப்பா பூமியை தாக்கும் விண்கல்   மக்கள் வாழும் நிலப்பகுதியைத் தாக்காமல் கடலில் வந்து விழுந்தால் என்ன நடக்கும்”?  “2004ஆம் ஆண்டு டிசம்பரில் கடலுக்குக் கீழ் நடந்த பூகம்பத்தால் தோன்றிய சுனாமி போல் பல அடிகள் உயரமான பேரலைகள் தோன்றி கரையோரப் பகுதிகளையும், தீவுகளையும் அழித்துவிடும். கடலுக்கடியில் ஏற்படும் பூகம்பம் மட்டும் தான் சுனாமியை ஏற்படுத்தும் என்பதில்லை. ஜாவா, சுமத்திர தீவுகளுக்கு இடையேயுள்ள கரகோட்டா என்ற எரிமலை 1883 ஆம் ஆண்டில் வெடித்ததாலும், பங்களா தேசத்தையும்  தனுஷ்கோடியை தாக்கிய புயலாலும் பேரலைகள் தோன்றலாம் ஆல்பர்ட்”.  “கேட்கப் பயங்கரமாக இருக்கிறது அப்பா.”  “ஆங்கிலத்தில் ‘ டீப் இம்பக்ட்’ (Deep Impact) என்ற ஆழமான தாக்கம் என்ற பெயரில் பிரபல அறிவியற் படங்களை தயாரித்த ஸ்டீபன் ஸ்பில்பேர்க்கின் (Stephen Spillberg) படத்தின் வீடியோ கஸட் எனது லைப்ரரியில் இருக்கிறது. நீ அதை அவசியம் போட்டுப் பார் . அப்போது விண்கல்   தாக்குதலால் ஏற்படும் அழிவைப் பார்ப்பாய்.  “நன்றி அப்பா. அவசியம் பார்க்கிறேன்” ஆல்பர்ட் தந்தையோடு கதைத்த பின் விண்கல்   பூமியைத் தாக்கினால் என்ன விளைவு பற்றிய ஸ்டீபன் ஸ்பில்பேர்க்கின் டீப் இம்பக்ட் படத்தின் வீடியோ கஸட்டை எடுத்துக் கொண்டு தன் அறைக்குள் சென்றான்                                                                                  ******* டீப் இம்பெக்ட் படத்தை பார்த்து முடித்துவிட்டு பல வித சிந்தனைகளோடு தன் கட்டிலுக்கு ஆல்பர்ட் நித்திரைக்குப் போன போது அவன் மனதில் அடிக்கடி தோன்றியது , டெலஸ்கோப்பில் தான் அவதானித்த ஒரு பெரும் விண்கல்லின் தோற்றம். அக்கல் பூமியை நோக்கி வருவதாக அவனது கணிப்புக்குப் பட்டது. முதலில் அது ஒரு வால்நட்சத்திரமாக இருக்குமோ என நினைத்த அவன் பின் அதன் தோற்றத்தையும் செல்லும் பாதையையும் கணித்து நிட்சமாக அது பெரிய விண்கல்லாகத் தான் இருக்கும் என்பது அவன் முடிவு. அதற்குத் தன் கற்பனையில் “ஆல்பா” என பெயர் வைத்தான். டீப் இம்பெக்ட் படத்தின் கதைப் படி முதலில் விண்கல்லைத் தனது டெலஸ்கோப்பில் கண்டது ஒரு வான்சாஸ்திரி.   நான் கண்ட ஆல்பா விண்கல்லைப் பற்றி அப்பாவிடம் நான் சொல்லவில்லையே. சொல்லி யிருந்தால் நான் பார்த்த விண்கல் பூமியைத் தாக்கும் சாத்தியக்கூறு இருக்குதா?  என்று கணித்துச் சொல்லியிருப்பார். “ அமெரிக்காவில் நிட்சயம் நாசா (NASA)  விஞ்ஞானிகள் அந்த விண்கல்லை அவதானித்திருப்பார்கள். கட்டாயம் நாசா தக்க நடவடிக்கை எடுக்கும்” என்ற நம்பிக்கையோடு ஆல்பர்ட் தூக்கத்தில் ஆழ்ந்தான். அவன் கனவில் டீப் இம்பக்ட் படத்தில் வந்த காட்சிகள் அடிக்கடி வந்து போயிற்று. அடேயப்பா...! என்ன கற்பனைத் திறமைவாய்ந்த டைரக்டர் ஸ்பில்பேரக். இடி (ET) என்ற வெளிக்கிரகவாசி பற்றிய பிரபல்யமான படத்தை உருவாக்கியவர் ஆயிற்றே. அது போல் அவரது ஜுராசிக் பார்க் டயனோசோரஸ் பற்றிய படம். எவ்வளவு தத்ரூபமான படம். அப்பா சொன்ன மாதிரி அந்த ஜீவராசிகள் திடிரென அழிந்ததற்கு விண்கல்   தாக்குதலா காரணம்? நம்பமுடியவில்லையே. இதுபோன்ற கனவுகளைக் கண்டவாரே ஆல்பர்ட் தூக்கத்தில் ஆழ்ந்தான்.                                                             ******* காலை ஒன்பது மணியாகியும் ஆல்பர்ட் தூக்கத்தைவிட்டு எழும்பவில்லை. “ஆல்பர்ட் கெதியலை எழும்பிப் போய் டிவி நியூசைப் பார்” என்று மகனைத் தட்டி எழுப்பினார் பேராசிரியர் ராஜன். “என்னப்பா அப்படி முக்கியமான நியூஸ் போகுது”? “நேற்று நாங்கள் இருவரும் பேசிய விசயத்தோடு சம்பந்தமுள்ள நியூஸ்தான்” பேராசிரியர் பதில் சொன்னார். தன் கட்டிலுக்கு முன்னால் இருந்த டீ .வியை ரிமோட் கண்டுரோல் மூலம் இயக்கி நியூஸ் சானலை ஆல்பர்ட் பார்த்தான். “200 மீ விட்டமுள்ள விண்கல்   பூமியை ஜி. எம்.டி (GMT) நேரம் இரண்டு மணிக்கு வட துருவத்தை தாக்கியுள்ளது. நல்ல வேலை தாக்கிய பகுதியில் பனி மலைகளைத் தவிர மக்கள் குடியிருப்புக்கள் இல்லை. இந்த தாக்குதல் பூமியின் வடதுருவத்தில் இருந்து கிரீன்லாண்ட் தீவு இருக்கும் திசையில் 200 கீ .மீ தூரத்தில் இடம்பெற்றுள்ளது. விண்கல்   தாக்குதலின் போது வெப்பச்சக்தியால் பல பனி மலைகள் பாதிக்கப்பட்டு உருகத் தொடங்கிவிட்டன. இதனால் கடல் மட்டம் உயரலாம் என நாசா கருதுகிறது. ஆகவே வடதுருவத்துக்கு அருகே உள்ள நாடுகளான கனடா, கிரீன்லாண்ட் , ருஷ்யா, நோர்வே ஆகிய நாடுகளின் வடக்கு கரையோரப் பகுதிகள் சுனாமி தாக்குதலுக்கு உட்படலாம்” எனச் செய்தி வாசித்தவர் சொன்னார். “அப்பா நான் டெலஸ்கோப்பில் கண்ட ஆல்பா விண்கல்   பூமியை நான் நினைத்த மாதிரி தாக்கிவிட்டது. உங்களுக்கு நான் கண்ட ஆல்பாவைப் பற்றி சொல்லாதாதற்கு மன்னிக்கவும்.  கடவுள் புண்ணியத்தில் அது தாக்கிய பகுதி ஆர்டிக் பகுதியான வட துருவம்”, என்றான் ஆல்பர்ட் .                                                                                   ******* (யாவும் கற்பனையே)         +-----------------------------------------------------------------------+ | கதை 4 : விநோதன் | +-----------------------------------------------------------------------+ லஷ்மி அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்றின் பௌதிகவியல் துறையின் விண்வெளி ஆராய்ச்சிப் பகுதியில், கணினித்துறையில் , கம்பியூட்டர் புரொகிராமராக வேலை செய்து கொண்டிருந்தாள். லஷ்மியின் பெற்றோர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த பழமையில் ஊறிய ஐயர் சாதியைச்  சேர்ந்தவர்கள். அவர்கள் குடும்பத்தில் அவள் தனிக் குழந்தை . எவனோ ஒரு சாஸ்திரி லஷ்மி பிறந்தவுடன் அவளின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு இவள் திருமணத்துக்குப் பின் பெரும் பணக்காரி ஆவாள் எனக் கணித்துச் சொன்னான் என்பதற்காக லஷ்மி என்ற பெயரை அவளுக்கு வைத்தார்கள். அவள் பிறந்த காலமோ என்னவோ, லஷ்மியின் தகப்பனார் ‘ வக்கீல் சதாசிவம் ஐயர் ’ என்றுமில்லாத வாறு பல கேஸ்களில் ஜெயிக்கத் தொடங்கினார். பிரபல கிரிமினல் லாயர் என்ற பெயரைப் பெற்றார். பணமும் புகழும் அவரைத்தேடி வந்தது.   “ தமிழ் நாட்டில் பெரிய வசதியுள்ள குடும்பத்தில் பிறந்த பிள்ளைகள் அமெரிக்கா போய் படிப்பது போல் தனது மகளும் அங்குசென்று படித்து கணினித் துறையில் டாக்டர் பட்டம் பெறவேண்டும்” என ஐயர் ஆசைப்படார். அதற்கு வசதியும் அவரிடம் இருந்தது. அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்கு போகும் முன் இந்தியாவில் பல வருடங்கள் படிக்கும் போது அக்கிரகாரச் சூழ்நிலையில் வாழ்ந்தாலும் அவளுக்கு சாஸ்திரம், சம்பிரதாயம், இந்து மதக் கிரிகைகள் எதிலும் நம்பிக்கையில்லை. அவள் வேலை செய்த அதே பொளதிகத் துறையில் வான்இயற்பியலரான ஜெயனை காதலித்து திருமணம் செய்து கொண்டாள்.  ஜெயனின் பெற்றோர்கள் லஷ்மியின் பெற்றோர்களைப் போல் பழமையில் ஊறியவர்கள்.  தீவிரப்  போக்குள்ள கத்தோலிக்கர்கள். தவறாது சர்ச்சுக்குப் போய் வருபவர்கள். ஆனால் ஜெயன் ஒரு முற்போக்கு வாதி. அவனுக்கு எம்மதமும் சம்மதமே. ஞாயிற்றுக் கிழமையில் அவன் தேவாலயத்துக்குப் போவது கிடையாது. பாதிரியார் தன்னை வந்து சந்திக்கும் படி பல தடவை  செய்தி அனுப்பியும் அவன் அதை கணக்கில் எடுத்ததில்லை. அவனுக்கு விண்வெளி ஆராய்ச்சி தான் முக்கியம். ஜெயனின் சிந்தனைகள் முழுவதும் வெளி உலகம்பற்றித் தான். “அஸ்டிரோ பிசிக்ஸ்” எனப்படும் வான்இயற்பியலில் கலாநிதி பட்டம் பெற்று, வானில் வேறு உயிரினங்கள் வாழ்கின்றனவா?  என்பதைக் கண்டுப்பிடித்து, அவர்கள் மொழியைக் கற்று, அவர்களுடன் தொடர்பு கொள்வது தான் அவனது முழு கவனமும். அவர்கள் பூமியில் வாழ்பவர்களை விட எவ்விதத்தில் முன்னேறியவர்கள், அவர்களின் மொழி, கலாச்சாரம், வாழ்க்கை எப்படியானது என்பதை அறியும் வினோதமான ஆராய்ச்சியில் தான் அவன் ஈடுபட்டிருந்தான். பலருக்கு அவன் செய்வது பைத்தியக்காரத் தனமாகப்பட்டது.  அவனின் புதுமையான ஆராய்ச்சிக்கு கணினித்துறையில் பட்டம் பெற்ற லஷ்மி பேருதவியாக இருந்தாள். பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி சாலையிலிருந்து விலை உயர்ந்த உபகரணங்களைப் பாவித்து, விண் வெளியிலிருந்து சேகரித்த ஏராளமான மின் சமிக்ஜைகளைப் பகுத்தாய்ந்து அதனை மொழி பெயர்க்கும் ஒரு                  ‘ அல்கரிதம்’எனப்படும் கணிவியல் செய்முறைப்பாட்டைக் கண்டுபிடிப்பதில் அவள் தன் முழு திறமையையும் சக்தியையும் பாவித்தாள். அந்த சமிக்ஜைகளின் இரகசியத்தை  உடைத்துவிட்டால் அதுவே உலகில் யாராலும் சாதிக்க முடியாத ஒரு வெற்றி!  ஜெயனும் லஷ்மியும் பல்கலைக்கழகப்படிப்பின் போது சந்தித்து, வெகு விரைவில் “ஜெயலஷ்மி” எனப் பலரால் கிண்டலாக அழைக்கும் அளவுக்கு ஒன்றிணைந்தனர். இருவரும் விஞ்ஞானத்திற்கு அடிமையாகி ஆராய்ச்சியே கதியெனக் கிடந்தனர். கியூரி தம்பதிகள் போல் ஜெயலஷ்மி தம்பதிகளும் தங்களின் விஞ்ஞான கண்டுபிடிப்பால் சரித்திரம் படைத்து விடுவார்களோ...!என மாணவர்கள் கருத்து தெரிவிக்கும் அளவுக்கு இரு விஞ்ஞானிகளினதும் வாழ்க்கை அமைந்திருந்தது.  பெற்றோர்களின் சம்மதமின்றி இருவரும் ரெஜிஸ்டர் திருமணம் திடீரென செய்து கொண்டனர். அவர்களுக்குத் தெரியும் தம் பெற்றோரின் தீவிர மதப் போக்கு தங்களை ஒன்று சேர விடாதென்று. அதனால் அவர்கள் பெற்றோர்களின் வெறுப்புக்கு ஆளாகி தனிக் குடித்தனம் போக காரணமாயிருந்தது. அதை அவர்கள் இருவரும் விரும்பினார்கள். இரண்டு அறைகள் உள்ள அப்பார்ட்மெண்டை வாடகைக்கு எடுத்து அவர்கள் ஒரு அறையை படுக்கை அறையாகவும் மற்றதை தங்களது ஆராய்ச்சிக் கூடமாகவும்  நூலகமாகவும் பாவித்தனர். அவர்கள் இருவரினதும் உழைப்பின் பெரும் பகுதி விஞ்ஞான நூல்களுக்கும் உபகரணங்களுக்குமே செலவு செய்யப்பட்டது. உணவின்மீதும் நல்ல ஆடைகள் மீதும் அவர்கள் அவ்வளவுக்கு அக்கறை காட்டவில்லை. ஜெயன் தலைமயிரையும் ஹிப்பியைப் போல் வளர்த்து , தாடியும் வைத்திருந்தான். சவரம் செய்வதற்கோ அல்லது முடி வெட்டுவதில் செலவு செய்யும் நேரத்தை தனது ஆராய்ச்சியில் செலவு செய்யலாம் என்பது தான் அவன் கொள்கை. அவனைப் போன்று லஷ்மிக்கு மற்றைய பெண்களைப் போல் அலங்காரம் செய்வதிலும், உடைகளிலும், நகைகளிலும் அதிக ஆசையிருக்கவில்லை.   விண்வெளியில் இருந்து கிடைக்கும் தகவல்களை ஆராய்யும் புரொகிராம் ஒன்றை எழுதுவதற்கு கம்பியூட்டர் முன்  இருந்துவிட்டால் அவளுக்கு நேரம் போவது தெரியாது. கம்பியூட்டருடன் தன்னையறியாமலே அடிக்கடி பேசிக் கொள்வாள். ஜெயனும் அவளும் காப்பியைக் குடித்தவாறே சாப்பிடாமல் வேலையில் முழு கவனத்தையும் செலுத்தியவாறு எவ்வளவு நேரமும் இருக்கக் கூடியவர்கள். ஆராய்ச்சி நடக்கும் அறைக்குள் போனால் சுவரில் உள்ள வெள்ளை நிறப்பலகையில் எவருக்கும் விளங்காத கணிதச் சமன்பாடுகளையும் ஆல்பா, பீட்டா, காமா, தீட்டா போன்ற கிரேக்க எழுத்துக்களையும் தான் காணலாம். அதன் அர்த்தங்களும் அதற்கு பின்னால் புதைந்துள்ள இரகசியங்களும் அவர்களுக்கு மட்டுமே புரியும். அவர்களின் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பேப்பர்கள் கிறுக்கல்களுடன் நிலத்தில் பரவிக் கிடக்கும்.  திருமணமாகி ஆறு மாதத்துக்குள் லஷ்மி கருவுற்றது அவர்கள் எதிர்பாராத ஒன்றென்றே சொல்லலாம். “ஆராய்ச்சியில் இருந்து உங்கள் இருவருக்கும் அவசியம் ஓய்வு தேவை” எனப் பௌதிக பேராசிரியர் டேவிட்டின் அன்புக்கட்டளையின் பேரில் ஒரு கிழமை தேனிலவுக்கு போய் வந்ததின் விளைவே அது.  பேராசிரியர் டேவிட் இருவருக்கும் தந்தையைப் போன்றவர். அவர்கள் மேல் அளவற்ற அன்பு வைத்திருந்தார். திருமணமாகி மனைவியை இழந்த அவருக்கு பிள்ளைகள் இல்லாத குறையை ஜெயனும், லக்ஷ்மியும் தீர்த்து வைத்தார்கள். ஜெயலக்ஷ்மி தம்பதிகளுக்கு தங்களுக்கு குழந்தை கிடைக்கப் போவது என்பதைப்பற்றி சந்தோஷப்பட நேரம் இருக்கவில்லை. அவர்களின் பெற்றோர்களுக்கு கூட தங்களுக்கு பேரனோ பேத்தியோ கிடைக்கப் போகிறது என்ற செய்தி தெரியாது.  ஸ்கேன் செய்து பார்த்தப்போது தங்களுக்கு பிறக்கப்போவது ஆண் குழந்தை என டாக்டர் சொல்லித்தான் அவர்களுக்கு தெரியவந்தது. தங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு “விநோதன்” என்ற பெயர் வைக்க ஜெயலஷ்மி தம்பதிகள் தீர்மானித்தார்கள். தாங்கள் செய்யும் வினோதமான ஆராய்ச்சிக்கு அந்தப் பெயர் பொருத்தமாயிருக்கும் என்று அவர்கள் நினைத்ததே அப்பெயர் அவர்கள் எண்ணத்தில் உருவாகக் காரணமாகும்.  கருவில் ஜந்து மாதக் குழந்தையாக இருக்கும் போதே வினோதன் தாய்க்கு அடிக்கடி தொல்லை கொடுத்துக்கொண்டிருந்தான். கருப்பையில் அவனது அசைவுகள் சாதாரணக் குழந்தையை விட அதிகமாக இருந்தது. லஷ்மி புரொக்கிராம் எழுதும் போது ஏதாவது தவறுகள் விட்டால் அவள் வயிற்றில் வினோதன் சிறு உதை கொடுப்பதை அவளால் பல தடவை உணர முடிந்தது. “ஏய் அம்மா..!நீ பிழை விட்டுவிட்டாய். அதைத் திருத்து” என்பது போல் அவன் செயல் இருந்தது. சில சமயம் புரொக்கிராம் சரியான முறையில் பிழைகள் இன்றி அவள் எழுதும் போது அவனின் அசைவில் அமைதி இருக்கும். அவளுக்கு குழந்தையின் போக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஜெயனுக்கு அதைப் பற்றி சொன்னால் “ நீ மானிட்டருக்கு முன் அதிக நேரம் இருக்கிறாய், அதில் இருந்து வரும் கதிர் வீச்சு குழந்தையை பாதிக்கிறதாக்கும்”  என விஞ்ஞான ரீதியாக பதில் அளிப்பான். ஒரு நாள் அவள் வழமை போல் கம்பியூட்டரில் புரொகிராம் ஒன்றை எழுதும் போது கம்பியூட்டருடன் பேசிக் கொண்டிருக்கும் போது தனக்குள்  யாரோ கதைப்பது போன்ற ஒரு பிரமை அவளுக்கு ஏற்பட்டது. தான் பேசுவதை விட்டு அதை உற்றுக் கேட்டாள். அது அவளுக்கு உண்மையெனப் பட்டது. ஜெயனைக் கூப்பிட்டு தனது வயிற்றில் குழந்தை இருக்கும் பகுதியில் காதை வைத்து கேட்கும் படி சொன்னாள் அவளின் வேண்டுகோளுக்கு இணங்கி அவன் தன் காதை அவள் வயிற்றில் வைத்து கேட்ட போது அவனால் நம்பமுடியவில்லை. யாரோ முணு முணுப்பது போலிருந்தது. ஆனால் அதைப் பற்றி லக்ஷ்மிக்கு சொல்லி அவளைப் பயமுறுத்த அவன் விரும்பவில்லை. “ என்ன சத்தம் கேட்கிறதா?” என்று அவள் கேட்டாள். “அதொன்றுமில்லை,  எல்லாம் உன் பிரமை” என்று மழுப்பிவிட்டுப் போய்விட்டான் ஜெயன்.                                                                              ******  வினோதன் பிறந்தபோது அவனின் தோற்றம் வினோதமாயிருந்தது. டாக்டர்கள் கூட ஆச்சரியப்பட்டனர். குழந்தையின் விழிகள் பெரிதாகவும், நெற்றி அகலமாகவும் , காதுகள் கூர்மையாகவும், தலையில் மயிர் குறைவாகவும் இருந்தது. கைகளும் கால்களும் குட்டையாக இருந்தன. குழந்தையின் முகத்தில் பிறந்த குழந்தைக்கேற்ற தோற்றமிருக்கவில்லை. பிறந்து சில மணி நேரம் குழந்தை அழவே இல்லை. முதிர்ச்சியான தோற்றம் தெரிந்தது. வைத்தியர்கள் குழந்தையை பரிசோதித்து விட்டு “ தேக நலத்தில் ஒரு வித குறையும்மில்லை . ஆனால் மூளை மாத்திரம் வெகுவாக வளர்ச்சியடைந்து இருப்பது ஆச்சரியத்தைத்  தருகிறது”  என்றார்கள். பிறந்து இரண்டாம் நாள் குழந்தையை டாக்டர் பரிசோதித்துக் கொண்டிருக்கும் போது அவரின் ஸ்டெதஸ் கோப்பை தன் ஒரு கையால் பற்றியபடி அவரைப்பார்த்து குழந்தை சிரித்தது. அவருக்கு  குழந்தையின் செயலை நம்பமுடியவில்லை. அது அதிசயமாக இருந்தது. பல டாக்டர்கள் சேர்ந்து கலந்தாலோசித்து குழந்தையின் மூளையை ஸ்கேன் செய்து பார்த்தனர். மூளையில் வயதிலும் பார்க்க கூடிய வளர்ச்சி இருப்பதைக்கண்டு காரணம்  தெரியாது திகைத்தனர். மற்றப்படி குழந்தைக்கு ஒரு வித குறையுமில்லை. கண்பார்வையிலும் , காது கேட்பதிலும் அங்க அசைவிலும் ஒரு விதமான குறையுமிருக்கவில்லை. குழந்தை அழுவது மிகக் குறைவாகவே இருந்தது. குழந்தையில் ஏதாவது குறையிருக்கிறதோ என்று ஜெயனும் லஷ்மியும் கவலைப்பட்டனர். எல்லா டெஸ்டுகளும் செய்து ரிப்போர்ட் வந்துவிட்டது. “ குழந்தையில் ஒரு வித குறையுமில்லை. இருதயத் துடிப்பும் நன்றாகவே உள்ளது. ஒன்றுக்கும் பயப்படத் தேவையில்லை” என வைத்தியர்கள் ஜெயனுக்கும் லக்ஷ்மிக்கும் ஆறுதல் சொன்னார்கள்.  விநோதன் ஆறு மாதத்திலேயே நடக்கத் தொடங்கியது பெயருக்கு ஏற்ப அவர்களுக்கு குழந்தையின் நடவடிக்கை வினோதமாக இருந்தது. அவன் பேசுவது அவர்களுக்கு விளங்குவது கஷ்டமாயிருந்தது. தங்களுக்கு குழந்தை எதையோ சொல்ல விரும்புகிறான் என்பது மட்டும் அவர்களுக்குப் புரிந்தது. வெற்றுப் பேப்பரில் ஆறுமாதக் குழந்தையாக இருக்கும் போதே அவர்களுக்குப் புரியாத விதத்தில் கிறுக்கி சில உருவங்களை வரைந்திருந்தான். அவன் எழுதும் போது விசித்திரமாக இருந்தது. விஞ்ஞான புத்தகங்களை அவன் கையில் கொடுத்தால் அது போதும் அவனுக்கு. அமைதியாகிவிடுவான். புக்கங்களை ஏதோ வாசிப்பது போல புரட்டிப்பார்ப்பான். இரு கைகளையும் ஒரே நேரம் பாவித்தால்,   அழுவதை நிறுத்திவிட்டான்.  “தங்களுக்கு ஏதோ ஒரு அபூர்வக் குழந்தைதான் பிறந்திருக்கிறது”  என அவர்கள் யோசித்தார்கள். லஷ்மி கம்பியூட்டருக்கு முன் இருந்து வேலை செய்யம் போது தானும் அவள் மடியில் ஏறி இருக்க வேண்டும் , என அடம் பிடிப்பான். மானிட்டரை கண்வெட்டாமல் பார்த்தபடி இருப்பான். அடிக்கடி அதைப் பார்த்து சிரித்து, ஒரு விரலால் மானிட்டரைக் காட்டி எதையோ தாக்குச்சொல்லுவான். ஆனால் லக்ஷ்மிக்கு அவன் என்ன சொல்லுகிறான் என்பது புரிவதில்லை. ஜெயனுக்கும் குழந்தை புரியாத புதிராயிருந்தது. பேராசிரியர் டேவிட்டைக் கண்டதும் அவன் தாவிப் போவான். அவர் விநோதன் கையில் சாக்கிலேட்டைக் கொடுத்தால் அதை அவருக்கு ஊட்டி கைதட்டிச் சிரிப்பான். “உங்களுக்கு கடவுள் தந்த  குழந்தை வினோதன். இந்த சிறுவயதிலேயே இவன் மூளை அபாரமாக வேலை செய்கிறது. வருங்காலத்தில் ஐயின்ஸ்டைனைப் போல் பிரபல்யமான விஞ்ஞானியாக வந்தாலும் வருவான்” என்பார்.   ஆராய்ச்சியில் கிடைத்த சமிக்ஜைகளை பகுப்பாய்ந்து, மறைந்து கிடக்கும் இரகசியத்தை அறிய லக்ஷ்மி எழுதிய புரொகிராமில் எதோ ஒரு பிழையிருந்தது. அந்தத் தவறை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. யோசித்து யோசித்து களைத்துப் போய்விட்டாள். ஜெயனை குழந்தையைக் கவனிக்கும் படி கூறிவிட்டு சற்று நேரம் தூங்கப் போனாள். அன்றைய இரவு உணவை ஜெயன் சமையல் அறையில் தயார் செய்து கொண்டிருந்தான். குழந்தை ஹாலில் விளையாடிக்கொண்டிருந்தது. சிறிது நேரத்துக்குப் பின் விளையாட்டை நிறுத்திவிட்டு கம்பியூட்டரைக்காட்டி தகப்பனுக்கு புரியாத பாஷையில் எதையோ சொல்லிற்று. சமையலில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த ஜெயனுக்கு குழந்தை சொன்னது கேட்கவில்லை. அவன் தொடர்ந்து சமையல் செய்து கொண்டிருந்தான். விநோதன் நடந்து சென்று கம்பியூட்டருக்கு முன் இருந்த திரையில ஏறி அமர்ந்து எந்தவித பதட்டமுமின்றி கம்பியூட்டரை இயங்கவைத்தான். லஷ்மி அரை குறையாக விட்ட புரொகிராமை எடுத்து அதில் மாற்றங்களைச் செய்யத் தொடங்கினான். அவன் “கீ போர்டை” பாவித்தவிதம் ஏதோ முன்பு அதில் பல வருடங்கள் தேர்ச்சி பெற்றவன் மாதிரி இருந்தது.  ஜெயன் சமையல் முடிந்து ஹாலுக்கு வந்த போது அவன் கண்ட காட்சியைப் பார்த்து அவனுக்கு கோபம் மூக்கைப் பொத்துக் கொண்டு வந்தது.  “டேய் விநோதா..!கம்பியூட்டரிலை என்ன செய்கிறாய் ? அம்மா கஷ்டப் பட்டு எழுதிய புராகிராமோடை விளையாடுகிறாயா? என்று உரத்த குரலில் சத்தம் போட்டு குழந்தையை அடிக்க நெருங்கினான்.  குழந்தை மானிட்டிரில் உள்ள செய்தியைக் தன் விரலால் சுட்டிக்காட்டி கைத்தைட்டி சிரித்தது. அதை பார்த்து ஜெயன் அசந்து போனான்.  “லஷ்மி ...!லஷ்மி...!. இங்கை கெதியிலை ஓடி வா. இங்கை வந்து உன் கம்பியூட்டரைப் பார். உன் புரொகிராம் சரியாக வேலை செய்கிறது. நாங்கள் வின்வெளி இரகசியத்தை கண்டுபிடித்துவிட்டோம்” என்று சந்தோஷத்தில் சத்தம் போட்டான்.  ஜெயனின் குரல் கேட்டு லஷ்மி படுக்கையறையிலிருந்து பதறிக் அடித்துக் கொண்டு ஹாலுக்குள் வந்தாள். விநோதன் தன் பாஷையில் தாயுக்கு தான் செய்ததை காட்டி கைதட்டி சிரித்தான். எதோ அவன் தனது பாஷையில் சொன்னது அவர்களுக்கு புரியவில்லை.  லஷ்மியின் கண்களால் மானிட்டரில் உள்ள செய்தியை நம்ப முடியவில்லை. பல மாத காலமாக சரியான விடையைத் தர முடியாது தவித்த தனது புரோகிராம் இப்போது சமிக்கைளை பகுப்பாய்ந்து வின்வெளியில் இருந்து வந்த செய்தியை எம்மொழியில் மொழிபெயர்த்து தந்துவிட்டது. என்னால் செய்யமுடியாததை இந்த குழந்தை செய்து விட்டதே என்று ஆச்சரியப்பட்டாள்.” “ உங்கள் ஆராய்ச்சிக்கு உதவ ஒருவனை உலகுக்கு அனுப்பியுள்ளோம் . கொஞ்சம் பொறுங்கள். இன்னும் சில மாதங்களில் அவன் உதவியுடன் எம்முடன் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்” என்றது செய்தி.  அப்போ விநோதன் அவர்கள் அனுப்பிய உதவியாளனா? அதனால் தானா இவன் ஒரு விசித்திரமான குழந்தையாக இயங்குகிறான்?. ஜெயனும் லஷ்மியும் ஒரே விதமாக சிந்தித்தனர்.  இருவரும் வினோதனை அப்படியே தூக்கி வாரி அணைத்து முத்தமிட்டார்கள்.  விநோதனின் வினோதமான புன்சிரிப்பில் அவர்கள் கட்டுண்டனர்.                                                              ********   +-----------------------------------------------------------------------+ | கதை  5  : சக்தி மாற்றம் | +-----------------------------------------------------------------------+ விஸ்வா பௌதிகத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சக்தி மாற்றத்தைப்பற்றி ஆராய்ச்சி செய்தவர். அறிவியலில் மட்டுமல்ல ஆன்மீகத்திலும் ஈடுபாடுள்ளவர். உயிர் வாழும் எந்த ஜீவனுக்கும் உடல், ஆன்மா என்பது இரு முக்கிய அம்சங்களாகும். உடல் அழிந்தாலும் ஆன்மா அழியாது. உடலானது இறப்பின் போது செயல் இழந்துவிடுகிறது. ஆனால் ஆன்மா என்ற சக்தியானது, சக்தி மாற்றத்தினால் மறுபிறவி மூலம் வேறு புது உடலுக்குள் புகுந்துவிடுகிறது. இந்தத் தத்துவத்தை  கருவாகக் கொண்டே அவரது ஆராய்ச்சியிருந்தது.   மறு பிறவியின் போது எந்த உடலுக்குள் இறந்தவரின் சக்தி புகுகிறது என்பதை இறைவன் தீர்மானிக்கிறான். இது ஒரு பிறவியில் செய்த கர்மாக்களைப் பொறுத்தது என்கிறது இந்து மதம். ஏன் அதை மனிதனால் தீர்மானிக்கமுடியாது என்ற கேள்வி விஸ்வாவின் மனதைக் குடைந்து கொண்டிருந்தது.  சித்தர்களின் தெய்வீகமான சக்தியைப் பற்றி பல நூல்களை வாசித்து  அறிந்தார் விஸ்வா. இவருடைய ஆராய்ச்சியினால், மனதில் புதைத்திருக்கும் சந்தேகங்களைத் தீர்க்கக் கூடியவர் அவரது பாட்டனாரும் ஆன்மீகவாதியுமான  ‘ முருகானந்தா சுவாமிகள்’ என்பதை விஸ்வா அறிவார். முருகானந்தா சுவாமி அவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபடும்முன் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானத்துறையில் படித்துப் பட்டம் பெற்றவர். சுவாமி விபுலானந்தரின் பரம இரசிகர். அதற்கு காரணம் விபுலானந்தரும் ஒரு விஞ்ஞான பட்டதாரியாகி ஆசிரியராக கடமையாற்றி,  ஆன்மீகத்தில் ஈடுபட்டவர். இசைக் கருவி யாழைப் பற்றி ஆராய்ச்சி செய்து, கட்டுரைகள் எழுதியவர்.   விஸ்வா, தனது பாட்டனார் குலசேகரப்பட்டனத்தில் நடத்தி வரும் ஆசிரமத்துக்குச் சென்று அவரோடு உரையாடி, தன் ஆராய்ச்சி தொடர்பான  சந்தேகங்களை நிவர்த்தி செய்யத்  தீர்மானித்தார்.      குலசேகரபட்டணத்தில் இருந்து திருச்செந்தூருக்குப் போகும் பாதையில், கடற்கரை ஓரமாக, அரைமைல் தூரத்தில், அமைதியான சூழலில், ‘ஞான பீட ஆசிரமம்’ அமைந்துள்ளது. ஆசிரமத்துக்கு முன்னால் ஒரு சடைத்த வேப்ப மரம். மரத்தின் கீழ் உள்ள மணலில் அமர்ந்தபடியே ஸ்வாமி முருகானந்தாவும் விஸ்வாவும் உரையாடிக்கொண்டிருந்தனர். ஸ்வாமி தன் உரையாடலின் போது 64 சித்தர்களை பற்றியும் அவர்களில் பலர் தமிழ்நாட்டில் வாழ்ந்ததாகவும் குறிப்பிட்டார். “ சித்தர்களுக்கும் ரிஷிகளுக்கும் என்ன வித்தியாசம் ஸ்வாமி. இருவரும் நடக்கப் போவதை முன்கூட்டியே சொல்லும் வல்லமை படைத்தவர்கள். ஆனால் அவர்கள் வாழ்ந்தது வெவ்வேறு காலத்தில்தானே”?, விஸ்வா கேட்டார்.  “சித்தர்களின் பேசும்  மொழி தமிழ், ஆனால் ரிஷிகள் சமஸ்கிருதத்தை தம் மொழியாக பாவித்தனர். அவர்கள் மன்னர்களின் ஆலோசகர்களாக கடமையாற்றியவர்கள். எல்லா சித்தர்களும் ரிஷிகளாவார்கள். ஆனால் எல்லா ரிஷிகளும் சித்தர்கள் அல்ல. சித்தர்கள் அனுஷ்டித்த யோகா முறையானது ரிஷிகளினது யோகா முறையிலும் இருந்து வேறுபட்டது. ரிஷிகளின் மருத்துவம் வடக்கில் உள்ள மூலிகைகளை அடிப்படையாகக் கொண்டது . ஆனால் சித்தர்களின் மருத்துவம் தெற்கில் உள்ள மூலிகைகளைக் கொண்டது”, ஸ்வாமி சொன்னார். “ ஸ்வாமி, நான் வாசித்து அறிந்தமட்டில் சித்தர்களின் சக்தியானது நேரத்தையும், வெளியையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது, திண்மத்தை மாற்றக் கூடிய சக்தி அவர்களுக்கு இருந்தது. நேரத்தையும், வெளியையும் அவர்கள் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள் என்றால் அவர்களுக்கு 18ஆம் நூற்றாண்டில் ஐயின்ஸ்டீனின் நேரம், வெளி தொடர்பான சார்புக் கொள்கை பல நூற்றூண்டுகளுக்கு முன் கூட்டியே தெரியும்”என நினைக்கிறேன், விஸ்வா சித்தர்களின் செயல்களைப் பொளதீகத்தோடு தொடர்பு படுத்திச் சொன்னார். “ விஸ்வா ,நீர் சொல்வது ஓரளவுக்கு உண்மையாகவும் இருக்கலாம். மேற்கத்தியவர்கள் இந்தியாவில் இருந்தே பண்டைய விஞ்ஞான தத்துவங்களை தங்கள் கண்டுப்பிடிப்புகளுக்குப் பாவித்துள்ளார்கள்”. “சுவாமி, சித்தர்களின்  விஞ்ஞான சக்தியை பற்றி மேலும் விபரமாக எனக்குச் சொல்லமுடியுமா? எனது சக்தி மாற்றம் பற்றிய ஆராய்ச்சிக்கும் சித்தர்களின் சக்திக்கும் தொடர்பு இருப்பதினால் இதை பற்றி மேலும் அறிய ஆவலாக இருக்கிறேன்”, விஸ்வா சொன்னார். “ அவர்கள் ஒரு உடலை அணுவளவு சிறிதாகவும்,  மிகப் பெரிய பருமன் உள்ளதாகவும் மாற்றியவர்கள். உடலின் பருமன் நிறை குறைந்ததாகவும், ஆவியாக மாற்றக் கூடிய வல்லமை படைத்தவர்கள். அவர்கள் தம் உடலை வேறு உடலாக மாற்றக் கூடியவர்கள்”.  “சித்தர்களின்  இச்செயல் பௌதீகத்தில் சக்தி மாற்றத்தத்துவத்தைக் குறிக்கிறது” என்பது என் கருத்து. சக்தியானது பல வடிவங்களில் அமைந்துள்ளது. உதாரணத்துக்கு வெப்பச்சக்தி, ஒலிச்சக்தி, ஒளிச்சக்தி, இயந்திரவியல் சக்தி, இரசாயனச் சக்தி, அணுச் சக்தி, இயக்கச்சக்தி, நிலைச் சக்தி என்பவற்றை குறிப்பிடலாம். இதைப் பின்னனியாக வைத்தே சக்தி, திண்மம், ஒளியின் வேகம் ஆகியவையோடு இணைந்த ஐயின்ஸ்டனின் பிரபல்யமான சமன்பாடு  E=mc 2   கண்டுபிடிக்கப்பட்டது. இதன் படி ஒவ்வொரு பொருளோடு தொடர்புள்ள சக்தியுண்டு. சக்தியில் மாற்றம் ஏற்படும் போது திடப்பொருள் மாறுகிறது. ஓவ்வொரு பொளுக்கும் சக்தியோடு இணைந்த இயற்கையான அலை அதிர்வுண்டு. இவ்வதிர்வுகள் ஒத்துப்போனால் இரு மனங்கள் ஒத்துப்போவதைக் குறிக்கும் என்பது என் விளக்கம் ஸ்வாமி”, விஸ்வா சொன்னார். “ அது சரி விஸ்வா என்ன காரணத்தைக் கொண்டு சக்திமாற்றத்தை வைத்து பரிசோதனைச்  செய்ய இருக்கிறீர்” . ஸ்வாமி கேட்டார். “ இறக்கும்  முன்னரே தனக்கு விரும்பிய உடலுக்குள் சக்தி மாற்றத்தினால் மறு பிறவி எடுக்கக்கூடிய பரிசோதனையைச்  செய்து கொண்டிருக்கிறேன் ஸ்வாமி .” “ விஸ்வா, ஒன்று மட்டும் சொல்லுகிறேன். இயற்கைக்கு எதிராக எதையும் செய்யமுயற்சிக்காதே. உமது முயற்சி வெற்றி பெறட்டும்” என ஸ்வாமி வாழ்த்தினார்.  தனது பரிசோதனை சாலையில் இறந்த பூனை ஒன்றையும்  உயிருள்ள சுண்டெலியையும் வைத்து சக்திமாற்றப் பரிசோதனையை விஸ்வா செய்து கொண்டிருந்தார். இருதயத் துடிப்பின் அதிர்வினால் உருவாகும் சக்தியானது இறந்தவுடன் நின்று விடும். அது நடக்கும் முன்பே அச்சக்தியை ஒரு கருவிக்குள் கவர்ந்து பாதுகாப்பது முக்கியச் செயலாக இருந்தது. உயிருள்ள சுண்டெலியின் இருதயத் துடிப்பினால் உருவாகும் சக்தியை கருவிக்குள் மாற்றியவுடன் பச்சை நிறச் சிக்னல் தோன்றும். எலியின் இருதயத் துடிப்பினது சக்தியானது கருவிக்குள் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டும். கருவியில் உள்ள மானிட்டரில் இருதயத்தின் அதிர்வலைகள்  தெரியத் தொடங்கும். சுண்டெலியின் உடல், செயற்பாட்டை இழந்து விடுகிறது. கருவி சுண்டெலியின் இருதயமாக இயங்குகிறது. அரைமணி நேரத்துக்குள் கருவிக்குள் உள்ள எலியின் உயிர் சக்தியை இறந்த பூனையின் உடலுக்குள் மாற்றியாகவேண்டும். இல்லையேல் சக்தி விரையமாகிவிடும். தாமதிக்காது பூனையின் இருதயத்துக்குள் கருவியில் இருந்து தொடர்பை ஏற்படுத்தி சுண்டெலியின் சக்தியை இறந்த பூனையின் உடலுக்குள் செலுத்தினார். நடக்கப்போகும் விளைவை யோசித்தபடி பூனையின் உடலை அவதானித்துக் கொண்டிருந்தார். இறந்த பூனையின் உடல்  மெதுவாக அசையத் தொடங்கியது. எதிரிகளான இரு ஜீவன்களின் உயிர்கள் தம் உயிர்களைப் பரிமாறிக் கொண்டன. சக்தி மாற்றத்துக்குத் துணைபோன கருவியில் தெரிந்த சிக்னல் படிப்படியாக குறைந்து மறைந்தது. “சுண்டெலியின் சக்தி பூனைக்கு மாற்றப்பட்டுவிட்டது” என்பதை அது காட்டியது. விஸ்வாவால் தன் பரிசோதனை ஓரளவுக்கு வெற்றியடைந்து விட்டது என்பதை அறிந்ததும், தான் காண்பது நிஜமா என்பதை அறிவதற்கு, தன் உடலை விஸ்வா கிள்ளிப் பார்த்தார்.  இறந்த பூனை உயிர்பெற்றுவிட்டது, ஆனால் அதன் குரலிலும், குணத்திலும் மாற்றம் இருக்குமா என்ற கேள்வி விஸ்வாவின் மனதில் தோன்றியது. பாத்திரத்தில் தயாராக வைத்திருந்த பாலை உயிர் பெற்ற பூனைக்கருகே நீட்டினார். என்ன அதிசயம் மியாவ் மியாவ் என்று நன்றி தெரிவித்தபடி பாலைப் பூனை குடித்தது. குடித்து முடிந்தவுடன் பக்கத்தில் உயிரில்லாமல் இருந்த சுண்டெலியைக் கண்டு, அதைத் தன் வாயால் கவ்வியது. விஸ்வாவாவினால் பூனையின் போக்கை நம்பமுடியவில்லை. பூனை பூனைதான். மறு பிறவி எடுத்தாலும் அதன் பிறவிக் குணம் மாறவில்லை என மனதுக்குள் நினைத்துக் கொண்டான். இந்தப் பாரிசோதனை மனிதனுக்கு பொருந்துமா ? என்பது விஸ்வாவின் சிந்தனையில் தோன்றியது ஒரு கேள்விக்குறி. “ இயற்கைக்கு எதிராக எதையும் செய்ய முயற்சிக்காதே” என்று ஸ்வாமி சொன்னது அப்போது நினைவுக்கு வந்தது. +-----------------------------------------------------------------------+ | கதை  6 : மெனன் குவின் | +-----------------------------------------------------------------------+ மோகனுக்குச் சிறுவயது முதற்கொண்டே பொம்மைகள் என்றாலே ப்ரியம். வழக்கத்தில் பெண் குழந்தைகள் தங்கள் பொம்மைகளுக்கு விதம் விதமான ஆடை அணிவித்து மகிழ்வது வழக்கம். மோகன் பெண் பிள்ளைகள் விளையாடுவதைப் போல் பொம்மைகளோடு விளையாடுவதைக் கண்டு பலர் அவனைக் கேலி செய்தார்கள். பெற்றோருக்கு மோகன் ஒரே மகன் என்றபடியால் செல்லம் கொடுத்து வளர்த்தார்கள். அதனால் அவன் எப்படி விளையாடினாலும் அவர்களுக்கு அதைப்பற்றி கவலை இல்லை. அவன் கேட்டதை  வாங்கிக் கொடுத்தார்கள். மோகன் படிப்பில் கவனம். தான் படித்து  மென் பொருள் பொறியியலாளனாக வரவேண்டும் என்பது அவன் ஆசை. அமெரிக்காவில் மைக்கிரோசாப்ட் ஸ்தாபனத்தில் மென் பொருள் பொறியியலாளனாக அதிக சம்பளத்தில் வேலை செய்யும் தாய் மாமனே  இதற்குக் காரணம்.   பொம்மைகளுக்கு ஆடை அணிவித்து விளையாடும் பழக்கம் அவன் வளர்ந்தும் பெரியவனானாலும் அவனை விட்டு அப்பழக்கம் போகவில்லை.  அவனின் பொழுதுபோக்கு விண்டோ சாப்பிங்(window shopping) எனப்படும் கடைகளில் உள்ள சாளரத்தினூடாக விளம்பரத்துக்கு காட்சியாக வைத்திருக்கும் பொருட்களைப் பார்த்து இரசிப்பது.  ஒரு சேலைக் கடையில், அழகிய மெனன்குவின் என்று அழைக்கப்படும் பெண் உருவப் படிவத்துக்கு தினமும்  காஞ்சிபுரம், தர்மபுரம் சில்க், திருபுவனம், சின்னாலம்பட்டு, பனாரஸ், மணிபுரி சேலைகளை தினம் தினம் மாற்றி அணிவித்து சாரளத்தினூடாக வாடிக்கையாளர்களின் பார்வையைக் கவர்ந்தார் “வள்ளி எம்போரியம்” என்ற பிரபல சேலைக் கடையின் சொந்தக்காரர் பழனிச்சாமி செட்டியார். அவரது வணிக யுக்தியால் அவரின் சேலை வியாபாரம் ஓகோ’என்று நடந்தது.  சாரளத்தினூடக பெண் மெனன்குவின் உருவத்தைப் பார்த்து ரசித்த சில வாடிக்கையாளர்கள் “ அப்பொம்மை அணிந்திருக்கும் சேலை போன்று ஒன்று இருந்தால் தாருங்கள்”  என்று கடைக்குள் போய் கேட்பார்கள். அந்த அளவுக்கு அந்தப் வாய் பேசாத  பெண் உருவப்படிவம் மக்களை கவர்ந்துவிட்டது.  பல கடைகளின் சாளரத்தினூடாக பெண் படிவங்களைப் பார்த்து இரசித்தப்படி நடந்து கொண்டிருந்த மோகனுக்கு ஒரு பெண்  மெனன்குவின்  உருவப்படிவம் மிகவும் பிடித்துக் கொண்டது. தனக்கு வரப்போகும் மனைவி எப்படி இருக்கவேண்டும் என்று கனவு கண்டு அவன் மனதில் பதிந்த உருவத்தை அப்படியே அது  ஒத்து இருந்ததே அதற்கு காரணம். ஆனால் ஒரு வித்தியாசம். அந்த மெனன்குவின்னின் தலையில் மல்லிகைப் இருக்கவில்லை. கழுத்தில் நகை இருக்கவில்லை. அது கண்சிமிட்டவில்லை. பேசவில்லை. அதைப்பற்றி மோகன் கவலைப்படவில்லை. அவனுக்கு உடலின் தோற்றமும், அழகிய முகமும், நீண்ட கண்கள் , துடி இடை, மெல்லிய விரல்கள் அதெல்லாம் அவன் கண்ட தன் வருங்கால மனைவியைப் போலவே இருந்தது.  தினமும் மோகன் அக்கடைக்குப் போய் சாளரத்தினூடாக அப்பெண் படிவத்தை உற்றுப் பார்த்து இரசித்தப்படி பல நிமிடங்கள் நிற்பான். அதோடு பேசுவதாக நினைத்து தன் வாயுக்குள் முணுமுணுப்பான். அது பேசாது. அதே நிலையில் அது அசையாது நின்றது அவனுக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தாலும் தன் முணுமுணுப்பை அவன் நிறுத்துவதாக இல்லை.  மோகனின் விசித்திரமான நடத்தையைக் கடைவாசலில் காவலுக்கு நின்ற செக்கியூரிட்டி கவனித்து விட்டான்.  “என்ன இவன் ஒருவன்,  தினமும் வந்து அந்தப் பொம்மையைப் பார்க்கிறான். தன் வாயுக்குள் ஏதோ முணுமுணுக்கிறான். ஒருவேலை பைத்தியக்காரனாக இருக்குமோ?, அல்லது கடையைக் கொள்ளை அடிக்கத் திட்டம் போடுகிறானோ என்று நினைத்தான், செக்கியூரிட்டி. ஒரு நாள் மோகன் அப்பெண் உருவப்படிவத்தைப் பார்த்து இரசித்த படி நின்றபோது செக்கியூரிட்டி அவன் முதுகில் தட்டி, “ ஏய் உன்னைத்தான். ஏன் அப்படி தினமும் வந்து இந்தப் பொம்மையைப் விறைத்து பார்த்தபடி பல நிமிடங்கள்  நிற்கிறாய். வாயுக்குள் முணுமுணுக்கிறாய். உனக்கென்ன பைத்தியமா? வேறு வேலை உனக்கு இல்லையா? அது ஒரு வெறும் பொம்மை. உன்னோடு பேசாது. அசையாது “ என்றான் செக்கியூரிட்டி.  “அது பரவாயில்லை. என் மனதில் நான் கற்பனையில் கண்ட என் வருங்கால மனைவியின் தோற்றத்தைப் போல் இருக்கிறது. அது தான் அதன் அழகைப் பார்த்து  இரசிக்கிறேன்” என்றான் மோகன்.  அவன் சொன்ன பதிலைக் கேட்டுவிட்டு “ அத வெறும் பொம்மை அப்பா. அதோ பார் உன்னைப் பார்த்து கண் சிமிட்டக்கூட இல்லை“,  என்றான் செக்கியூரிட்டி..  “ஏன் அதனால் பேசவோ கண் சிமிட்டவோ முடியாது? “  “நீ என்ன சொல்லுகிறாய். பொம்மை எப்படி பேசும்”? அதிசயத்தோடு செக்கியூரிட்டி  கேட்டான்.  “நான் ஒரு மென்பொருள் பொறியியளாளன். ஆதனால் தான் சொல்லுகிறன். இந்த பெண்ணைப் பேசவும் கண்சிமிட்டவும் வைக்க என்னால் முடியும்” என்றான்.  “நீ என்ன விசர் கதை சொல்லுகிறாய்?எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை” செக்கியூரிட்டி மூளை குழம்பி மோகனைக் கேட்டான்.  “உனக்கு விளங்கும்படி சொல்லப்போனால் நான் ஒரு கம்பியூட்டர் சாப்ட்வேர்  என்ஜினியர். ஒரு கணினி ஆராய்ச்சி ஆய்வகத்தில்  வேலை செய்கிறேன். புதுப் புது கண்டுபிடிப்புகளுக்கு புரோகிராம் எழுதுவது என் தொழில். தற்போது குரல் கேட்டு பதில் சொல்லும்  கருவிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறேன். இதை ' ஸ்பீச் ரெகக்னிஷன் செயல் முறை'  என்பார்கள்.”  “அப்படி என்றால் என்ன”? “உதாரணத்துக்கு நீ  ஒரு கடிதம் எழுதும் போது முதலில் என்ன செய்கிறாய்”?  “கடிதத்தை கம்பியூட்டர்  கீபோர்ட்டை பாவித்து டைப் செய்கிறேன்”.  “உனக்கு டைப் அடிக்கத்  தெரியாவிட்டால் என்ன செய்வாய்?”  “கம்பியூட்டரைப்  பாவிக்காமல் பேனாவைப் பாவித்து பேப்பர் ஒன்றை எடுத்து கடிதத்தை எழுதுவேன்”.  “உனக்கு எழுதவும்  தெரியாவிட்டால் என்ன செய்வாய்.”? செக்கியூரிட்டி விழித்தான்.  “உன்  பிரச்சனையைத் தீர்க்க வழி உண்டு”.  “என்ன வழி”.  “அது தான்  பேசும் குரலை எழுத்தாக மாற்றும் செயற்பாடு. அதாவது நீ எதை சொல்ல விரும்புகிறாயோ அதை உன் வாயால் சொன்னால், அது குரலை எழுத்தாக மாற்றி உன் கடிதத்தை தயார் செய்யும். சிலர் தங்களது செக்கரட்டரிக்கு கடிதத்தை டிக்டேட் செய்வார்கள். அதை அவள் சுருக்கெழுத்து மூலமாகவோ அல்லது நேரடியாகவோ டைப்செய்வாள். நான் சொன்ன செயல் முறையைப் பாவித்தால் செக்கரட்டரி தேவையில்லை” என்றான் மோகன்.  “நீ சொல்வது இது சாத்தியமா?”  “ஏன் சாத்தியமில்லை. இப்பொது இதை செய்கிறார்கள் என்பது உனக்குத் தெரியாதா? ”  “இல்லை, எனக்குத் தெரியாதே”  “நான் சொல்ல வந்தது அதை விட ஒரு படி மேல். அதாவது நான் பேசினால் கம்பியூட்டர் எழுத்தாக மாற்றாமல் குரலாக மாற்றும். உதாரணத்துக்கு உன் பெயர் என்ன? என்று கேட்டால், என் பெயர் மல்லிகா என்று பதில் தரும். உன் வயது என்ன?  என்று கேட்டால் அதற்கு என் வயது பதினாறு என்று பதில் அளிக்கும். நீ உடுத்திருக்கும் சேலை எந்த ரகம்?  என்று கேட்டால், காஞ்சிபுரம் சில்க் என்று பதில் சொல்லும். விலை என்ன?  என்று கேட்டால் ஐயாயிரம் ரூபாய் என்று பதில் சொல்லும்.”   “அதுக்கு எப்படி விலை தெரியும்?” செக்கியூரிட்டி கேட்டான்.  “இது தெரியாதா உனக்கு. ஏற்கனவே சீலைக்கு ஏற்ற விலையை கடை சொந்தக்காரன் கம்பியூட்டரில் பதிவு செய்திருப்பான். செய்யச் சொன்னதைச் செய்வது தான் கம்பியூட்டரின் வேலை. அதைச் செயற் படுத்த வைப்பது புரோகிராமர். கம்பியூட்டருக்கு  சுயமாக சிந்திக்கத் தெரியாது” என்றான் மோகன்.  “நீ சரியான புத்திசாலி. சரி வா ,உன்னை இந்தக கடை முதலாளி பழனிச்சாமி செட்டியாரிடம் அழைத்துச் செல்கிறேன். அவருக்கு நீ எனக்குச் சொன்னதைச் சொல்லி விளங்கப்படுத்து. அவருக்கு உன் திட்டம் பிடித்திருந்தால்  நிட்சயம்  ஏற்றுக்கொள்வார். அதன் பிறகு உன் கனவுக் கன்னியைப் பேசவைக்கலாம்.” என்றான் சிரித்தபடி செக்கியூரிட்டி.                                                              ******  செக்கியூரிட்டியோடு போய் மோகன் வள்ளி எம்போரியம் முதலாளி பழனிச்சாமி செட்டியாரைச் சந்தித்தான். செக்கியூரிட்டி நடந்த கதை முழுவதையும் முதலாளிக்கு எடுத்தச் சொன்னான். அவர் சற்று நேரம் வாயில் விரல் வைத்து யோசித்தார். மோகன் கொடுத்த பிஸ்னஸ் கார்டை வாங்கிப் பார்த்தார்.  “தம்பி உன்னால் நீ சொல்வதுபோல் செய்து காட்ட முடியுமா? உண்மையில் நீ இதைச் செய்ய முடியுமென்றால் இது ஒரு புதுமையான வணிக யுக்தியாக அமையும். நான் எப்பவும் புதுமையை விரும்புகிறவன்” என்றார் செட்டியார்.  “ஐயா உங்களுக்கு ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். உண்மையாகவே ஒரு பெண்ணை அந்தப் பெண் மெனன்குவின் இருக்கும் இடத்தில், சாரளத்தில் கண்காட்சியாக பல மணி நேரம் சற்றும் அசையாமல் ஒரே இடத்தில் நிற்க வைக்க நினைத்தால் அதுக்கு பலர் சம்மதிக்கமாட்டார்கள். அப்படி சம்மதித்தாலும் அவர்களுக்கு அதிக ஊதியம் கொடுக்கவேண்டிவரும். மெனன்குவின் சொல்லப் போகும் சேலையின் விலையை நீங்களே தீர்மானித்து மெனன்குவின்  அணியும் சேலைக்கு ஏற்ப பதிவு செய்யலாம். அதோடு சேலை பற்றிய விபரங்களையும் பதவி செய்யலாம் . வாடிக்கையாளர்கள் அனேகமாக என்ன கேள்விகள் கேட்பார்கள் என்பது உங்களுக்கத் தெரியும் தானே. அதற்கேற்ற பதில்களை தயாரிப்போம். கடுமையான கேள்விக்கு பொருத்தமான பதில் பதிவு செய்திருக்காவிட்டால் மெனன்குவின் “மன்னிக்கவும் உங்கள் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது” என்று சொல்லிவிடும்”. மெனன்குவின் பேசும் போது கண்களை சிமிட்டவும், உதட்டையும், கைகளையும் அசைக்கவும் செய்யலாம். பார்ப்பவர்களுக்கு உண்மையாகவே ஒரு பெண் பேசுவது போல இருக்கும்;”  மோகன் விளக்கம் கொடுத்தான்.  “சரி மோகன் இதை செயல் படுத்திக்காட்ட எவ்வளவு காலம் எடுக்கும் என்று நினைக்கிறீர்” செட்டியார் கேட்டார்.  “உங்கள் ஒத்துழைப்பு இருந்தால் ஒருமாதத்துக்குள் செயற்படுத்திக் காட்டுவேன். ஆனால் ஒன்று…” “ ஆனால் என்ன மோகன்? முன் பணம் ஏதும்  உமக்குத் தேவையா?” “ பணம் தேவையில்லை ஐயா.  ஆனால்  நகல் உரிமை எனப்படும் 'காப்பிரைட்’ எனது”.  “அது நியாயமானதே. எனக்கு திருப்தியாக இருந்தால் மட்டுமே பணம் தருவேன்” என்றரர் செட்டியார்.                                                              *******  நாட்கள் சென்றன. அன்று மோகன் தான் உருவாக்கிய பேசும் மெனன்குவின் எப்படி செயலாற்றுகிறது?  என்பதைப் பார்க்க செட்டியாரின்  “வள்ளி எம்போரியம்” கடைக்கு போயிருந்தான். அந்த மெனன்குவனின் பாதத்தில் “ நான் ஒரு பேசும் மடந்தை” என்று எழுதப்பட்டிருந்தது. அந்தக் காட்சியைப் பார்த்து அவனுக்கு மனதுக்குள் சந்தோஷம். சாளரத்தில் உள்ள பேசும் மெனன்குவின்னின் இனிமையான குரலைக் கேட்க ஒரே கூட்டம்.  “இனி நான் தினமும் வந்து  அதோடு பேசப்போகிறேன். என் காதலியின் குரலை தொடர்ந்து கேட்டு எனக்கு அலுப்பு தட்டிவிட்டது” என்றான் பேசும் மெனன்குவினை பாரத்து இரசித்த ஒரு இளைஞன் ஒருவன் .  மோகன் தனக்குள் சிரித்துக் கொண்டான். மோகனைக் கண்ட செக்கியூரிட்டி உடனே அவனிடம் வந்து, அவன் முதுகில் தட்டி, “நீ சாதித்து விட்டாய் தம்பி” என்றான்.   +-----------------------------------------------------------------------+ | கதை 7 : மலடி | +-----------------------------------------------------------------------+ அபிராமிக்கு நித்திரை வரவில்லை. புரண்டு புரண்டுப் படுத்தாள். அழுது அழுது அவள் முகம் வீங்கிப் போயிருந்தது. தலையணை கண்ணீரில் நனைந்திருந்தது. பக்கத்தில் இருந்த டிஜிடல் கடிகாரத்தைப் பார்த்தாள். அது காலை இரண்டு மணி காட்டியது. பக்கத்தில் தேவனும் அவளைப் போல் தூக்கம் வராமல் விழித்துக் கொண்டிருந்ததை அவளால் உணரமுடிந்தது. அன்று பின்னேரம் டாக்டரிடம் போய் வந்தபின் இருவரும் அதிகம் பேசவில்லை. இரவு உணவு  கூட அவர்களுக்கு வெறுப்பாகயிருந்தது.  ஆனால் அவர்கள் மனதுக்குள் ஒரு முடிவுக்கு வர போராட்டம் நடந்துகொண்டிருந்தது. மௌனமாக இரவு சாப்பாட்டை அவசரம் அவசரமாக முடித்துக் கொண்டு நேரத்தோடு வந்து படுத்தார்கள். வழமையில் தேவன் தான் பொறியிலில் உயர் படிப்பு படித்துக் கொண்டிருக்கும் யூனிவர்சிட்டியில் நடந்ததை கதை கதையாய் சொல்லுவான். அதே போல் அபிராமியும் தான் தற்காலிகமாக வேலை செய்யும் ஒக்ஸ்பேர்ட ஸ்டீரீட்  கடையொன்றில அன்று சந்தித்த வாடிக்கையாளர்களின் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்வாள். ஆனால் அன்று மட்டும் இருவரும் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார்கள். எல்லாவற்றிற்கும் அந்த மெடிக்கல் ரிப்போர்ட் தான் காரணம். என்ன முடிவை நாங்கள்  டாக்டருக்கு சொல்வது.? அவர்கள் எதிர் பார்க்காதவாறு பரிசோதனைக்குப் பின் வந்த ரிப்போர்ட் அமைந்திருந்து. ஊர் நினைத்தது ஒன்று;  ஆனால் உண்மை வேறு.                                                                              *******  அபிராமிக்கு திருமணமாகும் போது வயது இருபத்தி இரண்டு. பல்கலைக் கழகத்தில் கணக்கியலில் சிறப்புச் சித்தி பெற்று, படிப்பு முடித்து அடுத்த சில மாதங்களில் பெற்றோரின் வற்புறுத்தலுக்காக அவள் திருமணத்துக்கு இணங்க வேண்டி இருந்தது. அவள் மேலும் படிப்பைத் தொடர்ந்து எம்.எஸ்.சி செய்ய போட்டிருந்த திட்டமெல்லாம் நினைவேறாமல் போய்விட்டது. காரணம் , அவளின் அப்பாவுக்கு இன்னும் அதிக காலம் தான் உயிரோடை இருக்கமாட்டேன் என்ற பயம் தான் பிடித்துக் கொண்டது. “தனக்கு மாரகத் திசை தொடங்கி விட்டதாம். தான் சாகும் முன் ஒரு பேரப் பிள்ளையையாவது பார்த்தாக வேண்டும்” என்று அவர் காரணம் காட்டினார். அம்மாவுக்கு அபிராமி அவ்வளவு இளமையில் திருமணம் முடிப்பது விருப்பமில்லை. ஆனால் தந்தையின் வற்புறுத்தலின் பேரில் திருமணம் நடந்தது.  தேவன் அவளின் தகப்பனுக்கு தூரத்துச் சொந்தம். மின் பொறியலாளராக கொழும்பில் வேலைபார்த்தவன். அவனுக்கும் அபிராமிக்கும் வயது வித்தியாசம் அவ்வளவுக்கு இல்லை. ஆக மூன்று வயது தான் வித்தியாசம். அபிராமி பெற்றோருக்கு ஒரே மகள். ஓவசியராக இருந்து நிறையச் சம்பாதித்தவர் அபிராமியின் தந்தை தம்பிராசா. ஓவசியர் தம்பிராசா சேர்த்த சொத்தில் யாழ்ப்பாணத்தில் இரண்டு வீடு, கொழும்பு கொள்ளுப்பிட்டியில் ஒரு பெரிய வீடு அவர் பெயரில் இருந்தது. அதில் கொழும்பு வீட்டை அபிராமிக்கு சீதனமாக கொடுத்ததார். தனக்குப் பிறகு தன் சொத்தெல்லாம் அபிராமிக்கு என்றும் அவளுக்குப் பிறகு அவள் பிள்ளைகளுக்கும் என்று அவர் உயில் எழுதி வைத்தார்;. ஆனால் அவர் எதிர்பார்த்த மாதிரி நடக்கவில்லை. அபிராமி கல்யாணமாகி பத்து வருஷமாகியும் பிள்ளை பாக்கியம் அவளுக்கு கிடைக்கவில்லை. அந்தக் கவலை அவளை வாட்டியது. ஊரில் அதை வக்கனையாக பலர் பேசினார்கள். மலடி என்ற பட்டம் அவளை தேடிவந்து ஒட்டிக் கொண்டது. தகப்பன் ஊரை ஏமாற்றி சொத்து சேர்த்தார். அது பிள்ளையினை காட்டிப் போட்டுது என்று மறைமுகமாக சிலர் கதைத்தனர். கல்யாண வீடு, சாமித்திய சடங்கு, சுமங்கலி பூஜை போன்ற நல்ல காரியங்களுக்கெல்லாம் போகாமல் அவள் ஒதுங்கி நின்றாள்.  அவள் சாதகத்தின்படி அவளுக்கு உதயத்து செவ்வாய், அதனால் மணவாழக்கையில்  குறையிருக்கும் என்று சாஸ்திரி சொன்னது அவளுக்கு நினைவுக்கு வந்தது. திருமணத்துக்கு முன் செவ்வாய் கிரகத்துக்கு சாந்தி கூட அவள் பெற்றோர்கள் செய்தார்கள். “அப்ப  ஏன் அப்பா தெரிந்திருந்தும் தான் சேர்த்த சொத்தை அனுபவிக்க ஒரு வாரிசு வேண்டும் என்ற தானே அவசரப்பட்டு கல்யாணம் எனக்கு செய்து வைத்தார்”. அபிராமி தாயிடம் அடிக்கடி குறைப்பட்டுக் கொள்வாள். தேவன் தன் மனைவிமேல் அளவுக்கதிகமாக அன்பு வைத்திருந்தான். அவள் மனது நோக எதுவும் பேசமாட்டான். அதனால் அவள் இரண்டாம் திருமணம் அவனை செய்யச் சொன்ன போது கோபத்தில் இரண்டு நாள் அவன் அவளோடு பேசவில்லை. “அபிராமி நான் பத்து வருஷம் உன்னோடு கூடிவாழ்ந்து போட்டு எப்படி நான் இனி இன்னொருத்தியோடு வாழ முடியும்?. ஒரு குழந்தைக்காக நான் மறுதிருமணம் செய்யவேண்டுமென்றால் ஒரு சமயம் எனக்கு இரண்டாம் தாரமாக வருபவளுக்கும் பிரச்சனையிருந்து குழந்தை கிடைக்காமல் போய் விட்டால்?. தேவன் முற்றிலுமாக மறு திருமணம் செய்ய மறந்துவிட்டான். ஒரு குழந்தையை சுவீகாரம் எடுத்து வளர்க்க கூட அபிராமியின் பெற்றோர் அவ்வளவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை.                                                              *******  மேல் படிப்புக்கான முன்று வருடப் புலமைப் பரிசு பெற்று தேவன் லண்டன் பல்கலைக்கழகத்திற்கு போன போது ,   அவன் கூடவே அபிராமியையும் அழைத்துச் சென்றான். ஊர் வாயில் இருந்து தப்புவதற்கு அது நல்ல சந்தர்ப்பமாகப் அவனுக்குப் பட்டது. அதுவுமன்றி மனைவியைப் பிரிந்து அவனால் நீண்ட காலம் இருக்க முடியவில்லை. தேச மாற்றமாவது ஒரு நல்லதை செய்யட்டும் என்ற ஒரு நம்பிக்கை அவர்கள் இருவருக்கும்.  லண்டன் வந்து சிலமாதங்களில், அவனோடு கொழும்பு ராயல் கல்லூரியில் ஒன்றாகப் படித்த நண்பன் சந்திரனை சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் அவனுக்கு ஏற்பட்டது. கல்லூரி காலத்தில் சந்திரனும் தேவனும் இணைப்பிரியாத நண்பர்கள். சந்திரனும் தேவனும் ஒரே வருடம் பல்கலைககழகத்துக்குள் நுழைந்தவர்கள். சந்திரன் கொழும்பு மருத்துவக் கல்லூரியில் படித்து டாக்டர் பட்டம் பெற்றான். தேவன் சிவில் என்ஜினியரானான். படிக்கும் காலத்தில் பம்பலபிட்டி லோரிஸ் வீதியில் உள்ள ஒரு அறையொன்றில் இருவரும் தங்கிப் படித்தனர். பல்கலைக்கழகப்படிப்புக்குப் பின் அவர்கள் சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால் சந்திரன் தன்னோடு படித்த ஒரு தமிழ்ப் பெண் டாக்டரை காதலித்து மணமுடித்து லண்டன் சென்று விட்டதாக கேள்விப்பட்டான். சந்திரனும் அவன் பெற்றோருக்கு ஒரே பிள்ளை.  சந்திரனைச் சந்தித்த போது தேவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. சந்திரனின் மணவாழ்க்கை சில வருடங்களே நீடித்தது என்றும்  , அவனுக்கும் தன்னைப் போல் குழந்தைகள் இல்லை என்று  அவன் சொன்னபோது தேவனால் நம்ப முடியவில்லை. என்ன நடந்தது என்று கேட்டபோது லண்டன் வந்தபின் தானும் மனைவியும் ஒரு கார் விபத்துக்கு உள்ளானதாகவும் அதில் கற்பமாகயிருந்த தன் மனைவி இறந்ததாகவும் சொல்லி சந்திரன் அழுதான். அவர்கள் திருமணம் காதல் திருமணம் என்று தேவனுக்கு தெரியும் . சந்திரன் மனைவி வசந்தியை கொழும்பில் படிக்கும் போது  பல தடவை சந்தித்திருக்கிறான். படித்தகாலத்தில், தினமும் பம்பலபிட்டி பிள்ளையார்  கோயிலில் சந்திரனோடு அவளைக் காணலாம். நல்ல மனம் உள்ள சந்திரனுக்கு வாழ்க்கையில் இப்படியும் ஒரு துயரமா ! என்று தேவனும் அபிராமியும் கவலைப்பட்டார்கள்.  சந்திரன் லண்டனில் ஒரு கைனகோலஜிஸ்ட்டாக வேலை செய்தான். அவனது கைராசி என்னவோ அவனிடம் வந்த கேஸ்கள் எல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லாமல் குழந்தை வேறு தாய் வேறாக சென்றாதாக கேள்விப்பட்டான். பிள்ளைகள் இல்லாதவர்களின் பிரச்சனைகளை கூட அவன் தீர்த்து வைத்தாக அவன் நண்பர்கள் கூறியதைக் கேட்டு மனதுக்குள் தன் பிரச்சனையையும் அவனோட பேசி ஒரு தீர்வு காணலாமா ? என அபிராமியுடன் கலந்து பேசினான் தேவன். இறுதியில் சந்திரனின் மருத்துவ உதவியை அவர்கள் நாடினார்கள்.  “உனக்கு இந்த உதவியை  நான் செய்யாவிட்டால் எங்களுக்கு இடையே உள்ள நட்புக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். எனக்கு தான் குழந்தைச் செல்வம் இல்லாவிட்டாலும் உனக்காவது கிடைக்க வழியிருக்கா என்று பார்ப்போம்”  என்றான் சந்திரன்.  மருத்துவ பரிசோதனைகளுக்கு பின் தேவனும் அபிராமியும் முடிவை எதிர்பார்த்து நின்றனர்.  வந்த மெடிக்கல் ரிப்போர்ட் சந்திரனை திகைக்க வைத்தது. அதை தேவனுக்கும் அபிராமிக்கும் எடுத்துச் சொல்ல அவனுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது .  ரிப்போர்டின் படி அபிராமியின் கருப்பைபையில் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் சந்திரனின் விந்துக்கள் குழந்தையை உருவாக்கும் சக்தியை இழந்துவிட்டன. சிறு வயதில் அவனுக்கு வந்த ஏதோ ஒரு கடுமையான வருத்தம் அதற்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று சந்திரன் விளக்கம் கொடுத்த போது, தேவன் மனைவியின் கையைப் பிடித்து ஓ' வென்று அழுதுவிட்டான். அபிராமி கலங்கவில்லை.  “எதற்காக இப்ப நீங்கள் அழுகிறீர்கள். எமக்கு கொடுத்து வைத்தது அவ்வளவு தான்” என்றாள் வார்த்தைகள் தழும்ப அபிராமி.  “ஊர்  உனக்கு மலடி என்று பட்டம் சூட்டிற்று. உண்மையில் நான் தான் மலடன். எமது சமுதாயம் எந்தக் குறையிருந்தாலும் முதலில் அந்தப் பழியை பெண்மேல் தான் போடும். என்னை மன்னித்து விடு. திருமணத்துக்கு முன் இதைப்பற்றி தெரிந்திருந்தால் நான் திருமணத்துக்கு சம்மதித்திருக்க மாட்டேன். உன் வாழ்க்கையை பாழடித்திருக்க மாட்டேன்” என்று அபிராமியின் கையைப் பிடித்து அழுதான். அபிராமி பேசாமல் அமைதியாக “என்ன விசர் கதை கதைக்கிறீயள். எது நடக்க வேண்டும் அது நல்லதாகவே நடக்கத்தான் செய்யும். மனம் வருந்தி பயன் இல்லை . இனி நடக்கப் போவதைப் பார்ப்போம். கீதையில் சொன்ன தத்துவம் பேசினாள் அபிராமி. சற்று நேரம் சிந்தித்து விட்டு “டாக்டர் இதுக்கு தீர்வு இல்லையா?” என்றாள் மனத் தைரியத்துடன் அபிராமி. “ ஏன் இல்லை. இந்த நவீன விஞ்ஞான உலகில் இல்லாத தீர்வுகளா” என்றான் டாக்டர் சந்திரன் அமைதியாக. அந்தப் பதிலை தேவனும் அபிராமியும் டாக்டர் சந்திரனிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.  “என்ன சந்திரன் சொல்லுகிறீர்கள்?எங்களுக்குப் குழந்தை கிடைக்க வழியுண்டா?” தேவன் கேட்டான்.   “ஆம் உண்டு. ஆனால் படித்த நீங்கள் இருவரும் உங்கள் இருவருக்குள்ளும் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். இது உங்கள் இருவருக்கும் எனக்குமிடையிலான இரகசியமக இருக்கட்டும்” என்று கூறிவிட்டு செயற்கை முறையில் கருப்பையுக்குள் விந்துவை செலுத்தி குழந்தை பெறவைக்கும் முறையை விபரமாக விளக்கினார் சந்திரன். தேவனும் அபிராமியும் அதைக் கேட்டதும் வாயடைத்து போய் இருந்தார்கள்.  “என்ன பேசாமல் மொளனமாகயிருக்கிறீர்கள். பத்து வருஷமாக உங்களுக்கு குழந்தையில்லை. இப்போ ஒரு வழி இருக்கிறது. அதுவும் நீங்கள் லண்டனில் இருப்பதால் இதை என்னால் நீங்கள் சம்மதித்தால் திருப்திகரமாக நிறைவேற்றி வைக்க முடியும். இருவரும் கலந்து ஆலோசித்து பதில் சொல்லுங்கள் “ என்றார் சந்திரன்.  “யார் விந்தை என் கருப்பைக்குள் செயற்கை முறையில் செலுத்துவீர்கள்” என்ற கேள்வியை எழுப்பினாள் அபிராமி.; “ நிட்சயமாக அது உங்கள் கணவனுடையதாக இருக்கமுடியாது. ஏன் என்றால் அது சக்தியிழந்த விந்துக்கள். அதற்கு ஒரு விந்து வங்கியில் இருந்து உங்கள் இனத்துக்கும் நிறத்துக்கும் பொருத்தமானதொன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு சில விதிமுறைகளும் பரிசோதனைகளும் உண்டு. அந்த விந்துக்கு உரிமையாளர் யார் ? என்பது பரம இரகசியமாக வைக்கப்படும். உங்களுக்குத் தெரியவராது. அதனால் பிற்காலத்தில் கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் வரக் கூடாது. அதுவும் நோய் இல்லாத ஒருவரிடம் பெற்ற விந்துவாக இருக்கும். ஏன் என்றால்  பிறக்கும் குழந்தை அழகான ஆரோக்கியமான, உங்களைப் போல் நிறமுள்ள குழந்தையாக இருக்க வேண்டுமல்லாவா. அதுவும் அபிராமியின் வயிற்றில் வளர்ந்த குழந்தையாக இருக்கவேண்டும். சுவிகாரம் எடுப்பதிலும் பார்க்க இது ஒரு படி மேல். ஏன் என்றால் அபிராமியின் வயிற்றில் வளர்ந்த குழந்தையல்லவா. அக்குழந்தையின் இரத்தத்தில் அபிராமியின் மரபுணுவும் கலந்திருக்கும். அதைதானே நீங்களும் விரும்புவீர்கள் என்ன?” என்றார் சிரித்தபடி சந்திரன்.  தேவன் அபிராமியின் முகத்தை பார்த்தான். அவள் முகத்தில் எதுவித உணர்வுகளும் தெரியவில்லை. கண்கள் கலங்கியது.  “எனக்குத் தெரியும்.  இது உங்களால் உடனடியாக எடுக்க முடியாத முடிவென்று. நீங்கள் இருவரும் அவசரப்படாது ஆழ்ந்து சிந்தித்து பேசி முடிவு எடுத்து விட்டு உஙகள் இருவருக்கும் சம்மதம் இருந்தால் என்னை வந்து சந்தியுங்கள். பின் மற்றவையை நான் கவனிக்கிறேன்’” என்றார் டாக்டர் சந்திரன்.                                                              *******  கட்டிலின் நேர் எதிரான சுவரில் தொங்கிய  படத்தில் சிரித்தபடி பெரும் விரலை சூப்பயிபடி இருந்த அழகிய  குழந்தையைப் பார்த்து பெருமூச்சு விட்டார்கள் தேவனும் அபிராமியும். இது போல இருக்குமா டாக்டர் சொன்ன குழந்தை? இரவோடு இரவாக தேவனும் அபிராமியும் ஒரு முடிவுக்கு வர முடியாது தவித்தது அந்த படத்தில் இருந்த குழந்தைக்கு தான் தெரியும். நடப்பது நடக்கட்டும். எனக்கும் அவருக்கும் தேவை என்மேல் உள்ள மலடி என்ற பட்டத்தை போக்க ஒரு குழந்தை, என்று அபிராமி மனதில் ஒரு முடிவுக்கு வந்தவள் போல் கண்களைத் துடைத்து கொண்டு“அத்தான் நாளைக்கு டாக்டர் சந்திரனுக்கு டெலிபோன் செய்து நாங்கள் வந்து சந்திப்பதாக சொல்லுங்கள்” என்றாள் அபிராமி மனத் தைரியத்துடன்.  “அதைத்தான் அபிராமி நானும் தீர்மானித்தேன். நான் நினைக்க நீ சொல்லிப்போட்டாய்” என்றான் தேவன் அமைதியாக.  படத்தில் இருந்த குழந்தை அவளைப்பார்த்து சிரிப்பது போல் இருந்தது அவனுக்கு. அவளுக்கு தன் வயிற்றில் அதே போல் குழந்தை ஒன்று ஊர்வது போன்ற உணர்வு. தான் தாயாகப் போகிறேன் என்ற பெருமை முகத்தில் பிரதிபலித்தது. இனி சமூகம் தன்னை மலடி என்று ஒதுக்கிவைக்க மாட்டாது. சடங்குகளில் எனக்கும் ஒரு இடமுண்டு.                                                              ******  ஒரு வருடத்துக்குள் அபிராமி ஒரு அழகிய ஆண் குழந்தைக்குத் தாயானாள். தங்களை பார்க்க வந்த சந்திரனுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக தங்கள் இரு கைகளை கூப்பி தேவனும் அபிராமியும் வணங்கினர். “ இதென்ன பழக்கம் தேவன். என் கடமையைத் தான் நான் செய்தேன். நீ என் நண்பன். அதை மறந்துவிடாதே. நீ என்னை கும்பிடுவது எனக்கு மனதுக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது. ”என்று கூறியபடி அவனது இரு கரங்களையும் பற்றி கீழே தாழ்த்தினார் சந்திரன். “ டாக்டர் இவர் படிப்பு இன்னும் நான்கு மாதங்களில் முடியப் போகிறது. அதற்குப் பிறகு நாங்கள் ஊருக்குத் திரும்ப இருக்கிறோம். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தங்களுக்கு பேரப்பிள்ளை கிடைத்ததையிட்டு பெரிய மகிழ்ச்சி. கால் எடுத்து பேசினோம் ”என்றாள் அபிராமி. “ அவர்களுக்கு ஏதாவது சொன்னீர்களா?” என்றார் சந்திரன். “ உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நாங்கள் மீறுவோமா?” என்றார் தேவன். “ நல்லது. நானும் மாற்றலாகி கிலாஸ்கோவுக்கு போகிறேன். இனி உங்களைச் சந்திப்பேனோ தெரியாது. அதனால் உங்கள் குழந்தைக்கு என் சிறிய பரிசு கொடுக்க விரும்புகிறேன்.” என்று ஒரு கடித உறையை அபிராமியிடம் சந்திரன் கொடுத்தார். “ என்ன டாக்டர் இது?.நாங்கள் அல்லவா உங்களுக்கு பரிசு தரவேண்டும் “ என்றாள் அபிராமி. “ சந்திரன் நீர் செய்த இந்த பெரிய உதவி போதாது என்று இதுவுமா?” தேவன்; உணர்ச்சி வசப்பட்டு நடுங்கும் தன் கரங்களினால் சந்திரனின் கைளைப் பிடித்தான். சந்திரன் பதில் பேசாது குழந்தையை தேவனிடம் இருந்து வாங்கினான். குழந்தையின் மிருதுவான கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு தன் கண்களில் வந்த கண்ணீரைத் அவர்கள் காணாத வாறு துடைத்துக் கொண்டு“ சரி நான் வாறன் எனக்கு வேலையிருக்கு” என்று பதிலை எதிர்பார்க்காமல் அறையை விட்டு வெளியேறினான். அவர் நடந்த விதம் அவர்களுக்குப் புரியாத புதிராக இருந்தது. டாக்டர் சந்திரன் அறையைவிட்டு வெளியே போய் சில நேரத்துக்குப் பின் தேவன் கடித உறையை அபிராமியிடம் வாங்கிப் பிரித்தான். அதனுள் சிறு கடிதமும் ஒரு பத்திரம் இருந்தது. கடிதத்தில் இருந்ததை தேவன் வாசித்தான் . அன்பின் நண்பன் தேவனுக்கும் சகோதரி அபிராமிக்கும், இதோடு என் பெயரில் என் இறந்து போன பெற்றோர் எழுதிய  சொத்துக்கைளை எல்லாம் உங்கள் குழந்தையின் பெயரில் எழுதி வைத்திருக்கிறேன். இனி எனக்கு சொத்துக்கள் தேவையில்லை. நான் மறுமணம் செய்து கொள்ளப் போவதில்லை. என் வாழ்வில் எனக்கென ஒரு வசந்திதான். இது உங்கள் மகனுக்கு என் பரிசு. ஒரே ஒரு வேண்டுகோள். என் மனைவி விபத்தில் இறக்கும் போது அவள் ஆறுமாதம் கர்ப்பம். எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால் அவள் வணங்கும் முருகன் பெயரான “அழகன்” என்ற பெயர் வைக்க இருந்தோம். ஆனால் அது எங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை. அதனால் அழகான உங்கள் மகனுக்காவது அந்தப் பெயரை வைப்பீர்கள் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அதை மறக்காமல் நிறைவேற்றுவீர்களா?   இப்படிக்கு , சந்திரன்.     கடிதத்தினதும் உயிலினதும் அர்த்தங்களை அவர்கள் புரிந்து கொண்டார்கள். ஆனால் பகிர்ந்து கொள்ளவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். இப்படியும் ஒரு மனிதனா ...!என்றது அவர்கள் இருவரினதும் உள்ளங்கள்.    ******   +-----------------------------------------------------------------------+ | கதை  8 : பரம இரகசியம் | +-----------------------------------------------------------------------+ “என்ன சிவம் கையுக்குள்ளே எதையோ மூடிவைத்திருக்கிறாய் , எனக்கும் காட்டேன்.”  “முடியாது.அது பரமசிவத்தின் பரம இரகசியம்.”  “உன் நண்பன் சந்திரனான எனக்குத் தெரியக் கூடாத பரம இரகசியமா? உனக்குள் மட்டும் அந்த இரகசியம் இருந்துவிட்டால் அப்படி ஏதும் நடக்கக் கூடாதது ஒன்று உனக்கு நடந்து விட்டால் பிறகு அந்த இரகசியம் ஒருத்தருக்கும் பயன் இல்லாமல் மறைந்து போகும்”  “உண்மைதான். ஆனால் நான் கண்டுபிடித்த விஷயத்தை வேறு யாரும் காப்பியடித்தால் அல்லது பிழையாகப் பாவித்தால்…..”  “சந்திரா. அதுக்குத் தான் காப்பிரைட்டும் பேட்டெண்டும் (Copy Rightt Patent) இருக்கே. நீ யோசிக்காதே. நான் உன்னோடு பல காலம் பழகினவன் அல்லவா. நானும் உன்னைப் போல் தொழில் நுட்பப் பட்டத்தாரிதான். நீ கைக்குள் வைத்திருப்பதை எனக்கு காட்டினால் நான் எதாவது ஆலோசனை சொல்லலாம் அல்லவா?” அவனை நான் விடவில்லை. அவனுக்குத் தெரியும் எனது பிடிவாதக் குணம். “சரி வா,   அந்த  பெஞ்சில் முதலில்  போய் இருப்போம்” என்று என்னை அழைத்துக் கொண்டு போனான் பரமசிவம். அருகில் உள்ள மரத்தின் கீழ் இருந்த பெஞ்சில் இருவரும் போய் அமர்ந்தோம். பரமசிவம்,  கிறுக்குத் தனமானப் போக்குள்ளவன். ஆனால் கிறுக்கன் அல்ல. அதிமேதாவி என்றும் சொல்லலாம். சில சமயம் தான் என்ன செய்கிறேன் என்று அறியாமலே சிந்தித்த படி நடப்பான். ஒரு சமயம் ஷேர்ட்டின் பொத்தானை தலைகீழாக மாட்டிக்கொண்டு, ஒரு காலில் செருப்பும் மறு காலில் சப்பாத்துடனும் என்னோடு புறப்பட ஆயத்தமானான். தலை கூட வாரவில்லை. அவனைப் பார்க்க எனக்கு சிரிப்பு வந்தது. “என்னடா சந்திரா இதென்ன புது பேஷன்” என்றேன் அவன் முதுகில் தட்டிய படி. அப்போது தான் சுயநிலைக்கு அவன் வந்தான். சில சமயங்களில் வானத்தையும், மரங்களையும் பார்த்தபடி சிந்தனையோடு இருப்பான். பார்க்கப் பரிதாபமாக இருக்கும். அவன் நிலையறிந்து அவனுக்குப் பெண்கொடுக்க ஒருவரும் முன்வரவில்லை. பிரமச்சாரியாகவே வாழ்ந்தான். பெற்றோருக்கு அவன் ஒரே பிள்ளை. பெற்றோர் விட்டுச்சென்ற பெரிய வீட்டில் தனிமையாக ஒரு பெரிய அறையில் வாழ்ந்தான். அந்த வீட்டின் பெரும் பகுதியை எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்துக்கு வாடகைக்கு விட்டிருந்தான். அந்த வருமானம் அவனுக்கு போதுமானது. எலக்ரானிக் என்ஜினியராக முதலாம் வகுப்பில் பட்டம் பெற்றும் ஒரு ஸ்தாபனத்திலும் அவனால் நிரந்தரமாக வேலை செய்யமுடியவில்லை. அவனது ஒற்றைப் போக்கு பலருக்கு சரிப்பட்டு வரவில்லை. மற்றவர்களுடன் அவன் தொடர்பு கொள்வதும் அரிது. தலை வாரமாட்டான். உடைகளில் கூட கவனம் கிடையாது. படிக்கும் போது பௌதிகத்திலும் கணிதத்திலும் எனக்குப் போட்டி அவன்தான். சில சமயம் நான் கோட்டை விட்ட கணக்கைக் கூட அவன் சிரமப்படமால் செய்துவிடுவான். பள்ளிக்கூடத்தில் இருந்தே அவன் என் நண்பன். சக மாணவர்கள் அவனோடு பழகத் தயங்கினர் என்னைத் தவிர. அவன் அறை தான் அவன் உலகம். அந்த பெரிய அறையை படுக்கையறையாகவும் தனது ரேடியோ பரிசோதனைக் கூடமாகவும் பாவித்தான். வானொலிகளில் உள்ள பிழைகளை கண்டுபிடித்து திருத்திக் கொடுப்பதில் கெட்டிக்காரன். அதற்கு கூலி கேட்க மாட்டான். கொடுத்தால் வாங்குவான். கிடைத்த உதிரிப்பாகங்களை வைத்து ஒரு புதுமையான சக்திவாய்ந்த வானொலி ஒன்றை உருவாக்கியிருந்தான். அதைப் பார்த்து நான் வியந்தேன். அதன்மூலம் உலகில் பலருடன் தொடர்பு கொண்டு பேசினான். “என்னடா சந்திரா உனது திறமையை இந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சு அறிந்திருந்தால் உன்னை கடத்திக் கொண்டு போய்விடுவார்கள்”  என்றேன். அவன் மௌனமாகச் சிரிப்பான். ஒரு நாள் அவன் உருவாக்கிய  வானொலியில் ஏதோ இருவர் புரியாத பாசையில் பேசவதைக் கேட்டேன். பின்னணியில் துப்பாக்கிச் சூடும் குண்டுகள் விழும் சத்தமும் கேட்டது. என்னடா சிவா யார் பேசுகிறார்கள்?  எனக்கு அவர்கள் பேசும் பாஷை விளங்கவில்லை என்றேன். “அது அரேபிய மொழி” என்றான் சிவம். எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. உனக்கு எப்படி அது அரேபிய மொழி என்று தெரியும் என்று கேட்டேன். அவன் சிரித்தான். அதோ பார் என்று புத்தகங்கள் உள்ள அலமாரியைக் காட்டினான்.அதில் சில அரேபிய மொழி புத்கங்கள் இருந்தன. என்னால் நம்பமுடியவில்லை. “சிவா எனக்கு ஏன் நீ இதை  இவ்வளவு காலமும் சொல்லவில்லை?”. “அது தான்  பரமரகசியம்” என்றான் கண்ணைச்சிமிட்டியபடி.  “உனது மொழி பெயர்ப்பின் படி  அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று எனக்கும் சொல்லேன் என்றேன்.” “போரில்  தாக்குதலைப் எப்படி நடத்த வேண்டும் என்பதைப் பற்றி பேசுகிறார்கள். நாளை ஒரு அமெரிக்க இராணுவத் தளத்தை தாக்கப் போகிறார்களாம். அதற்கான நடவடிக்கைகள் பற்றி குறி மொழி மூலம் பேசுகிறார்கள்”. “எந்த இடமிது…” “அனேகமாக ஆப்கானிஸ்தானாக இருக்கலாம். அவர்கள் பேச்சில் இருந்து கண்டுபிடித்தேன்”  என்றான். “ ஐயோ கடவுளே, அப்போ அல்குவைதா பயங்கரவாதிகளின் சம்பாஷணையை ஒற்று கேட்கிறாயா? என்ன வேலையடா சிவா நீ செய்கிறாய். சரியான ஆபத்தான காரியமாச்சேயடா?” என்றேன் பதட்டத்துடன். “யார் பயங்கரவாதி. இதெல்லாம் தமது சுயநலத்திற்காக கொடுக்கப் பட்டப் பெயர். உரிமைக்காக போராடுபவர்கள் கூட பயங்கரவாதிகள் என பட்டம் சூட்டப்படுகிறார்கள்.” சந்திரன் அமைதியாக பதில் அளித்தான். “சிவா நீ சரியான ஒற்றுக் கேட்பவனாய் இருக்கிறாய். இதை போலீஸ் அறிந்தால் உனக்கு ஆபத்து. கவனமாயிரு.” நான் அவனை எச்சரித்தேன். “அதனால் தான் பரம இரகசியம் என்றேன். உனக்கும் எனக்கும் மட்டுமே இந்த வானொலியின் மகிமை தெரியும். நீ எனக்கு சகோதரனைப் போல” என்றான் அவன். அவன் பேச்சில் நம்பிக்கை தொனித்தது. சிவாவின் செயல் எனக்கு ஆபத்தாகப்பட்டது. நெருப்போடு விளையாடுவது போன்ற உணர்வு எனக்கு. அவன் பள்ளிக் கூடக் காலம் முதல்கொண்டே புரட்சிகரமான கருத்துக்களைக் கொண்டவன். மக்களின் உரிமைகள் ஒதுக்கப் படுவதை முற்றிலும் வெறுப்பவன். உலக அரசியலில் அவனுக்கு நல்ல அறிவு இருந்தது. எந்த எந்த நாடுகளில் மக்கள் ஒடுக்கப்பட்டு புரட்சியாளர்கள் இயக்கம் தோன்றியது போன்ற விபரங்கள் அனைத்தையும் அவன் அறிந்து வைத்திருந்தது எனக்கு நினைவுக்கு வந்தது. அரேபிய மொழியை அவன் எதற்காக கற்றான் என்பது எனக்கு புதிராயிருந்தது. அதுவும் தொழில் நுட்பத் துறையில் ஈடுபாடுள்ளவன் பிற மொழியைக் கற்க வேண்டிய காரணம் என்ன?. என் சந்தேகத்துக்கு முழுமையான விடையை சந்தர்ப்பம் வரும் போது அவனிடமிருந்து பெற்றாக வேண்டும் என்றது என் மனம். அந்த நிலையில் அவன் “பரமரகசியம்” என்று சொல்லிக் கொண்டு ஒரு பொருளை வைத்திருக்கிறான் என்று தெரிந்த  போது அதைப்பற்றி அறிய நான் ஆவல் கொண்டதில் தவறு ஒன்றும் இருந்ததாக எனக்குப் படவில்லை. அதுவும் ஒரு வித ஒற்று வேலை பார்க்கும் கருவியோ? என்று யோசித்தேன் . “சந்திரா ,  நீ பௌதீகத்தில் ஒத்த அதிர்வெண்ணைப் பற்றி படித்திருப்பாயே. அது ஞாபகம் இருக்கிறதா உனக்கு?” என்ற பீடிகையுடன் ஆரம்பித்தான் சிவா “ஏன் இல்லை. பொளதீக ஆசிரியர் ஒத்த அதிர்வெண்ணை விளங்கப்படுத்த அமெரிக்காவில்  காற்று வீசியதால் “ரெசனன்சால்’” முறிந்த கதை சொன்னார். அதற்கும் உன் கையில் வைத்திருப்பதற்கும் என்ன சம்பந்தம்”. “சம்பந்தம் இருக்கு. ஒருவர் நினைப்பதை அறியக் கூடிய வல்லமை படைத்தது நான் கண்டுபிடித்த இந்தக் கருவி”. “என்ன விசர் கதை சொல்லுகிறாய். நீ என்ன ஞானி என்ற நினைப்போ?” “அப்படித்தான் என்று சொல்லேன். இப்போது இக்கருவியின் மகிமையை உனக்கு காட்டப் போகிறேன் பார்க்கிறாயா? ” என்றான் சிவம் .கையில் இருந்த கறுப்புப் பொருள் ஒன்றை விரித்து எனக்குக் காட்டியபடி. அதைச்செய்யுமுன் யாராவது தன்னைப் பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றம் பார்த்தான். அவன் காட்டிய கருவியைப் பார்த்தேன். கைக்குள் அடங்கும் விதத்தில் இருந்தது. மூன்று பொத்தான்கள் தெரிந்தன. அதை வாங்கி பரிசோதிக்க எனக்குப் பயமாயிருந்தது. ஒரு வேளை அவன் சொல்வதில் உண்மையிருக்குமோ. “என்ன யோசிக்கிறாய். உன்னில் தான் நான் முதல் தடவையாக பரீட்சித்துப் பார்க்கப்போகிறேன்.” “ என்னிலா?” “ ஆமாம் அப்போ தான் உனக்கு நம்பிக்கை வரும். இன்னும் சில வினாடிகளில் என்ன நினைக்கிறாய் என்று சொல்லட்டுமா? என்று ஒரு பொத்தனை அழுத்தி தனது தலையுடன் கருவியை வைத்தான். சில நேரத்தில். “ஏய்..! நீ இப்ப உன் மனைவி வீட்டுக்கு வந்திருப்பாளா?என்ன இரவு சாப்பாட்டுக்கு சமைக்கப் போகிறாள். இந்த விசரன் என் நேரத்தை வீணாக்குகிறான் என்று நினைக்கிறாய் அப்படித்தானே” என்றான் சிரித்தபடி. எனக்கு அவன் சொன்னது ஆச்சரியமாய் இருந்தது. நான் நினைத்ததும் அதுவேதான். நான் வாயடைத்துப் போனேன். “ என்ன பேசாமல் இருக்கிறாய். நான் சொன்னது சரியா?” என்றான் சந்திரன். “ஆம். நீ சொன்னதைத் தான் நினைத்தேன். அது எப்படி உன்னால் முடிந்தது”. கொஞ்சம் பொறு விளக்குகிறேன். அதோ நாலைந்து பேர் பாதையில் போய்க் கொண்டு இருக்கிறார்களே பார்த்தாயா? “தெரிகிறது. அவர்களை  என்ன செய்யப்போகிறாய்?”, “அவர்களில் ஒருவனை பரிசோதனைக்கு உட்படுத்தப் போகிறேன். வழுக்கை விழுந்த தலையுடன் போகிறவன் முன்னுக்கு போகிறவனை பிட்பாக்கட் அடிக்கப் போகிறான்”; என்றான் சந்திரன். “என்ன சொல்கிறாய். அதை தடுத்து நிறுத்த வேண்டியது தானே?” என்று நான் சொல்லுமுன் சிவா சொன்ன மாதிரி நடந்து விட்டது.  அந்தச் சம்பவம் என்னை திகைக்க வைத்துவிட்டது. “ஐயோ !பாவம் பணத்தைப் பறிகொடுத்தவனைக் காப்பாற்று” என்றேன். “கொஞ்சம் பொறு. அவனைக் காப்பாற்றத் தேவையில்லை. அவன் மாபியா குழுவைச் சேர்ந்தவன். அந்தக் காசை அவன் சம்பாதித்தது தீய வழியில். அவனது கையில் உள்ள சூட்கேசுக்குள் போதை மருந்து இருக்கிறது. அதை விற்று பணமாக்கும் எண்ணத்துடன் போகிறான்” என்றான் பரமசிவம் . அவன் குறிப்பிட்ட மனிதன் கையில் ஒரு சூட்கேஸ் இருந்தது. அவன் சொன்னது போல் சூட்கேஸ் எதிராக வந்த ஒருவனிடம் கைமாறியது. அவன் பதிலுக்கு சூட்கேஸ் வைத்திருந்தவன் கையில் ஒரு பார்சலை திணித்தான். ஒரு வேளை பணமாக இருக்குமோ? “உடனே போலீசுக்கு போன் செய்யப் போகிறேன் நான்” என்றேன். “அதைச் செய்யாதே பிறகு நாம்  இருவரும் வம்பில் மாட்டிக்கொள்வோம்” என்றான் சிவா. “எனக்கு அங்கிருக்கப் பயம் பிடித்துவிட்டது. “ சிவா நீ ஒரு ஜீனியஸ். உந்தக் கருவியின் செயற்பாட்டை போலீஸ் அறிந்தால் உனக்கு ஆபத்து ஏற்படலாம். அதனால் கவனமாக நட” என்றேன். “உன் உபதேசத்துக்கு நன்றி. இங்கு நடந்தது உனக்கும் எனக்கும் மட்டுமே தெரிந்த விஷயம். என்ன?” என்றான். “அது சரி இன்னும் விளக்கத்தை சொல்லவில்லையே நீ”. “மிகவும் இலகுவானது. ஒவ்வொருத்தருக்கும் இயல்பான அதிர்வெண் உண்டு. அவர்களின் மூளையில் இருந்து வெளிவரும் எண்ண அலைகளின்  அதிர்வெண்ணுடன் ஒத்த அதிர்வெண்ணை இக்கருவிமூலம் சுருதி சேர்த்தால் அவர்கள் மனதில் உள்ளதை அறியலாம். இதைத்தான் முற்காலத்தில் ஞானிகளும் பாவித்தனர். இது உனக்கு புதுமையாக இருக்கலாம். நடக்கக் கூடியதா என்றும் நீ யோசிக்கலாம். நடத்திக் காட்டிவிட்டேனே” என்றான் பரமசிவம். “சரி சரி வா போவோம். எனக்கு பசி வயிற்றைக் கிண்டுகிறது”  என்று அவனை அழைத்துக் கொண்டு புறப்பட்டேன். எனக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை. பயமும் ஒரு காரணம். போகிற வழியில் சிவத்தை அவன் வீட்டில் இறக்கிவிட்டுச்சென்றேன். வீட்டுக்குள் நான் நுழைந்தது தான் தாமதம் “ என்ன இவ்வளவு நேரம். எங்கே போயிருந்தியள்” என்றாள் என் மனைவி. “ஒன்றுமில்லை சிவத்தை சந்தித்தேன். அவனோடு பேசிக் கொண்டிருந்ததில் எனக்கு நேரம் போனது தெரியவில்லை. “ “அந்த விசரனோடை உங்களுக்கு என்ன கதை வேண்டியிருக்கு. உங்களையும் பயித்தியமாக்கி விடுவான்” என்றாள் கோபத்துடன் என் மனைவி. அவளுக்கு சந்திரனைப் பிடிக்காது. “அப்படி சொல்லாதே. அவன் உனக்கு கிறுக்கனாக தோன்றலாம். ஆனால் அவனிலை விஷயம் இருக்குது” என்றேன் நான். “ சரி சரி. கெதியிலை வாருங்கோ , கால் முகம் கழுவிப்போட்டு சாப்பிட”  என்று கட்டளையிட்டு விட்டு மேசைக்கு சாப்பாடு எடுக்கப் போய்விட்டாள். சாப்பாடு முடிந்து நான் படுக்கைக்குப்போக இரவு பத்துமணியாகிவிட்டது. எனக்கு  சந்திரனைப்பற்றிய சிந்தனைகள் சுற்றிக் கொண்டிருந்தது. எவ்வளவு அதிமேதாவி அவன். அந்தக் கருவியை வைத்து எவ்வளவுக்கு பணக்காரன் ஆகலாம். ஏன் அவன் உருவாக்கிய வானொலி கூட விசித்திரமானது. ஆனால் அவன் போக்கு தான் எனக்கு புரியாத புதிராக இருக்கிறது…ஒரு வேளை பயங்கரவாதிகளுடன் அவனுக்குத் தொடர்பு இருக்குமோ? சீ...! அப்படியிருக்காது.. என் மனதை தேற்றிக்கொண்டேன். அவனை  நினைத்தபடி தூங்கிவிட்டேன். ******  விடியற் காலை, போலீஸ் சைரன் ஒலி என்னை தூக்கத்தில் இருந்து எழுப்பியது. நேரத்தைப் பார்த்தேன். காலை ஏழு மணி. ஏதோ விபத்தாக்கும் அது தான் பொலீஸ் சைரன் கேட்கிறது என்று மனதுக்குள் நினைத்தப்படி மறுபக்கம் திரும்பிப் படுத்தேன். வீட்டின் முன் கதவில் யாரோ தட்டக் கேட்டது. அரைத்தூக்கத்தோடு எழும்பிப் போய் திறந்தேன். வாசலில் இரு போலீஸ்காரர் நின்றார்கள்.  “மிஸ்டர்  சந்திரன் என்பவர் நீர்தானா?” என்று கேள்விக்  குறியுடன் என்னைப் பார்த்து கேட்டார்கள்.  “ஆம் ,  நான் தான் சந்திரன்” என்றேன் பதட்டப் படாமல்.  “தயவு செய்து எங்களுடன்  ஜீப்பில் வரமுடியுமா?” என்றார்கள்.  “நான் எதற்காக வரவேண்டும் ?.ஏதும் பிரச்சனையா?” என்றேன் பதட்டத்துடன்.  “ஆமாம் உமது நண்பர் பரமசிவம் விஷயமாக” என்றார்கள்.  “பரமசிவமா..!அவனுக்கு என்ன?. நேற்று தான் அவனைச் சந்தித்தேன் .” “ வாரும் கெதியிலை. ஜீப்பிலை விஷயத்தை சொல்லுறம்” என்றான் அவர்களில் ஒருவன்.  “கொஞ்சம் பொறுங்கள் உடுப்பை மாற்றிக் கொண்டு வாறன்” என்று உள்ளே போனேன். மனைவிக்கு விளக்கம் சொல்ல எனக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. எல்லாம் வந்து சொல்லுகிறேன் என்று சுருக்கமாய் அவளுக்கு பதில் சொல்லிவிட்டு ஜீப்பில் ஏறி போலீசாருடன் போனேன். போகும் வழியில் தான் சந்திரனின் வீடு .அன்று அதிகாலை மூன்று மணிக்கு தீப்பற்றி எரிந்துவிட்டதாகவும், பரமசிவத்தின் பிரேதம் எரிந்து கருகிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் எனக்குச் சொன்னார்கள். “  எனக்கு அவர்கள்  சொன்ன செய்தி அதிர்ச்சியைக் கொடுத்தது. “அட கடவுளே!  என்ன சிவம் இறந்துவிட்டானா? வீட்டுக்கு யார் தீ வைத்தது?” என்று என்னையறியாமலே கத்தினேனன்.  “அது தான் தெரியவில்லை” என்றார் ஜீப்பில் இருந்த ஒரு போலீஸ்காரர்.  எரிந்த சந்திரனின் வீட்டுக்கு முன்னால் ஜீப் போய் நின்றது. நல்ல காலம் பக்கத்தில் வேறு வீடுகள் இல்லை. அங்கு வேடிக்கை பார்க்க ஒரு கூட்டமே நின்றது. மூன்று வேன்களில் போலிசார், தீயணைக்கும் படை , ஒரு ஆம்புலன்ஸ் வேறு நின்றன. “ வீட்டில் இருந்த குடும்பத்துக்கு என்ன நடந்தது என்று கேட்டேன். “  “அவர்கள் லீவில் போய்விட்டார்கள். நல்ல காலம் தப்பினார்கள் அவர்கள்” என்றார் ஒரு போலிசார்.  எரிந்த சந்திரனின் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை. அவனின் மூடிய பிரேதத்தை ஆம்புலன்சில் ஏற்றிவிட்டதாக அறிந்தேன். அவன் எனக்கு காட்டிய அதிசயக் கருவியை என் கண்கள் தேடின. காணவில்லை. அவன் உருவாக்கிய வானொலியையும் காணவில்லை. என் மனதில் பலத்த சந்தேகம் உருவாகியது. இது நிட்சயமாக திட்டமிட்டு செய்த கொலை தான். யாரோ கொலையை மறைக்க வீட்டோடு பரமசிவத்துக்கு தீவைத்திருக்கிறார்கள். ஒருவேளை சந்திரனின் பரமரகசியம் கொலை செய்தவர்களுக்கு தெரிய வந்துவிட்டதோ? பதிலைத் தேடி என் மனம் பரிதவித்தது.   ******   +-----------------------------------------------------------------------+ | கதை 9 : அறிவின் ஆராய்ச்சி | +-----------------------------------------------------------------------+   என் மகன் மிருகசீரீட நட்சத்திரத்தில் பிறந்தபடியால் அவனுக்கு வே, வோ, கா, கீ என்ற முதல் ஏழுத்தில் ஆரம்பிக்கும் பெயர் வைக்கும்படி குடும்ப சாஸ்த்திரியார் சொன்ன படியால் யோசித்து  என்ன பெயர் வைப்பது என்று யோசித்து மூளையை உடைத்துக் கொண்டேன். நான் காஞ்சியில் பிறந்த அறிஞர் அண்ணாவின் அபிமானி. அதனால் காஞ்சி, அறிவு என்ற இருவார்த்தைகளையும் இணைத்து “காஞ்சியறிவு” என்று புதுமையாக வைத்தால் என்ன ? என்று என் மனைவி கயல்விழியைக் கேட்டேன்.  “நீண்ட பெயராக இல்லையா?  அத்தான். வீட்டில் சுருக்கமாக என்ன வென்று நாங்கள் அவனைக் கூப்பிடுவது”?  என்னைக் கேட்டாள் கயல்.  “உன் முழுப்பெயர் கயல்விழி அல்லவா. ஆனால் எல்லோரும் உன்னை கயல் என்று தான் கூப்பிடுவார்கள். அதே போல்…” “ அதே போல்.. “  “அறிவு என்று சுருக்கமாக வீட்டில் கூப்பிட்டால் என்ன?”  “நல்ல பெயராகத் தான் இருக்கிறது. “அறிவு” என்று வீட்டில் கூப்பிட்டால் அவன் அறிவின் சின்னமாக இருக்கட்டும்” என்று என் யோசனைக்கு சம்மதித்தாள் கயல்.  பிறந்து மூன்று மாதத்துக்குள்ளேயே அவனுக்கு என் நண்பன் வாங்கிக் கொடுத்த வெள்ளை நிற நாய் பொம்மையை அறிவுக்கு வெகுவாகப் பிடித்துக் கொண்டது. அது ஒரு புதுமையான, அழகான பொம்மை. அழுத்தினால் குரைக்கும் . பொம்மை நாய் குரைக்கும் போது அழுவதை நிறுத்திவிட்டு கெக்கட்டம் விட்டு கைதட்டிச் அறிவு சிரிப்பான். தூங்கும் போது பொம்மையை அணைத்தப்படியே தூங்குவான்.  அறிவுக்கு ஒரு வயதான போது பிறந்த நாளுக்கு  ஒரு வெள்ளை நிற பொமரியன் நாய் குட்டியொன்றை வெட்டனரி சர்ஜனாக இருக்கும் கயலின் அண்ணன் பரிசாக வாங்கிக் கொடுத்தார் . அறிவுக்கு மாமன் கொடுத்த பொமரியன் நாய் குட்டி உருவத்தில் சிறிதானாலும் அடர்த்தியான  மயிர்கள் நிறைந்த வெள்ளை நிற ஆண்குட்டி . 16 வருடங்கள் மட்டில் வாழக்கூடியவை.  இனிமையான மற்றும் நட்பு தன்மையுள்ள புத்திசாலியான நாய். அனேகமாக மடியில் வைத்திருக்கும் நாய் என்பர்.  இசைமேல் ப்ரியம் உள்ள என் மனைவி கயலின் விருப்பப்படி “மெலடி” என்ற பெயரை அந்நாய் குட்டிக்கு வைத்தோம்.  சிறுவயது முதற்கொண்டே அறிவுக்கு மிருகங்கள், பறவைகள் மீது தனிப் பற்று. பிறந்த நட்சத்திரமோ என்னவோ தெரியாது. படிப்பில் பெயருக்கு ஏற்ற கெட்டிக்காரனும் கூட. பொருட்கள் எதையாவது கொடுத்தால் அதை ஆராய்ச்சி செய்யும் பழக்கம் இருந்தது. எதையாவது கண்டு பிடிக்க வேண்டும் என்பது அவன் ஆவல். டாம் அன் ஜெரி(tom and jerry), வுடி வுட்பெக்கர், மிக்கி மௌஸ், டொனலட் டக், பம்பி போன்ற மிருக , பறவைகள் கதாப்பாத்திரங்களாக பேசி நடிக்கும் பிரபல்யமான கார்டுன்களை அடிக்கடி விரும்பிப் பார்த்து, சிரித்து அறிவு இரசிப்பான். அதுவுமல்லாமல் எங்கள் வீட்டுத்தோட்டத்துக்கு வரும் அணில், முயல்,  ரொபின் குருவிகளைப் பார்த்து அவை போடும் ஒலிகளைக் கேட்டு மெய்மறந்து போய் நிற்பான். அவன் நாய் மெலடி கூட சொல்வதை விளங்கி நடக்கும். மெலடிக்கு அவ்வளவுக்கு பயிற்சி கொடுத்து அறிவு வளர்த்திருந்தான். அறிவுக்கு வயது பத்தாக இருக்கும் போது, ஒரு நாள் என்னை அழைத்து       “ அப்பா இங்கே வாருங்கள் .ஒரு அதிசயத்தைக் காட்டுகிறன்.” “என்ன அதிசயம் அறிவு”? “ மெலடிக்கு கூட்டல் ,கழித்தல் ,கணக்கு செய்யத்தெரியும் அப்பா”. “என்ன நீ சொல்லுகிறாய்? புரியவில்லையே . நாயுக்கு கணக்கு எப்படி தெரியும்?” “ உங்களுக்கு அது புரியாது தான். இதோ பாருங்கள் நடக்கப்போவதை”. மெலடி அறிவு சொல்வதைக் கேட்டபடியே அவன் முகத்தைப் பார்த்தப்படியே அவன் அருகே நின்றது. “மெலடி இரண்டும் ஐந்தும் கூட்டினால் எவ்வளவு” ? மெலடியைப் பார்த்து அறிவு கேட்டான். மெலடி ஏழுதடவை குரைத்து பதில் அளித்தது. நான் ஆச்சரியத்தால்  அசந்து போனேன். “மெலடி ஐந்தும் ஐந்தும் கூட்டினால் எவ்வளவு”? அறிவு மெலடியைக் கேட்டான் மெலடி பத்து தடவை குரைத்துச் சரியாக தன் பாஷையில் பதில் அளித்தது. “மெலடி பத்தில் இருந்து நாலை கழித்தால் எவ்வளவு”? “மெலடி ஆறில் இருந்து ஆறைக் கழித்தால் எவ்வளவு”?                            மெலடி குரைக்கவிலலை. இப்படி பத்துக்குள் பல எண்களை வைத்து பல கூட்டல் கழித்தல் கணக்குளை மெலடியிடம் அறிவு கேட்ட போது எல்லாக் கேள்விகளுக்கும் சரியாக குரைத்து பதில் அளித்தது. என்னால் நடப்பதை நம்ப முடியவில்லை. “அறிவு, சரியான புத்திசாலி நாயாக மெலடி இருக்கிறதே...!” “அப்பா நாங்கள் பேசுவது அதற்கு விளங்குகிறது. ஆனால் குரைப்பதன் காரணம் எங்களுக்கு விளங்குவதில்லை. குரைப்பதை மொழிபெயர்க்கக் கூடிய கருவி ஒன்றை கண்டுப்பிடிக்க ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன்” என்றான் அறிவு. “நீ  சொல்வதை எனக்கு கொஞ்சம் விளக்கமாய் தான் சொல்லேன் அறிவு” “அப்பா  எனது ஆராச்சியின் நோக்கம் முதலில் நாயுடன் உரையாடக் கூடிய சாப்ட்வேர் ஒன்றைக் கண்டுப்பிடிப்பது தான். அதன் மூலம் நாய் குரைத்தால் அந்த ஓசையை வைத்து ஆங்கிலத்தில் நாம் அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் அதோடு பேசி உறவாட முடியும். அது மட்டுமல்ல மற்றைய நாய்கள் குரைத்தாலும் ஏன் குரைக்கிறது என்பதை நாம் அறியலாம். இந்தக கருவியை நான் கண்டு பிடித்து விட்டால் மெலடியோடு நாம் உரையாடலாம். என் ஆராய்ச்சி வெற்றி பெற்றால் பின் பறவைகளோடு கூட நாம் உரையாடலாம்”. அறிவு தன் ஆராய்ச்சி பற்றி எனக்கு விளக்கம் கொடுத்தான்.  எனக்கு அறிவு சொன்னது புதிராக இருந்தது. இது நடக்கக் கூடிய காரியமா நான் யோசித்தேன். “அறிவு உனக்கு என்ன பைத்தியமா”. இது முடியுமா”? நான் அவனைக் கேட்டேன். “ அறிவியலைப் பாவித்து செய்ய முடியாதது ஒன்றுமேயில்லை. முயற்சி செய்தால் நிட்சயம் வெற்றி பெற முடியும் அப்பா” நான் அவனோடு வாக்குவாதத்தில் ஈடுபடவிரும்பவில்லை. “அறிவு நீ  நினைத்ததை சாதிக்கும் குணம் உள்ளவன். நீ உன் பெயருக்கு ஏற்ற  புத்திசாலி என்று எனக்குத் தெரியும். அதனால் தான் உனக்கு உனது பதினைந்தாம் பிறந்த நாளுக்கு விலை உயரந்த லாப்டொப் ஒன்று வாங்கிக் கொடுத்திருக்கிறன். நீ புரோகிராம் எழுதுவதை பாரத்திருக்கிறேன். எனக்கு அது விளங்காது. ஏதோ உன் ஆராய்ச்சியை தொடர்ந்து செய். என் வாழ்த்துக்கள். ஆனால் உன் படிப்பில் கவனம் செலுத்து.” எனது வாழ்த்தோடு அறிவு தன் ஆராச்சியைத் தொடர்ந்தான்.                                                              ******  எஙகள் வீட்டுத் தோட்டத்துக்கு வட அமெரிக்க ரொபின் குருவி ஒன்று அடிக்கடி வந்து போகத் தொடங்கியது. அக்குருவியின் ஆயள் காலம் சுமார் 12 வருடங்கள் என என் மைத்துனர் சொல்லி அறிந்திருந்தேன். மெலடியின் ஆயுட்காலமும் அவ்வளவே. மெலடிக்கு ஒரு கம்பீரத் தோற்றம் இருந்தது, மெலடி எவ்வளவு குரைத்தாலும் பொறுமையாக தோட்டத்துக்கு ரொபின் வந்து போகும். அதன் வருகை இளவேனிற்காலம் ஆரம்பமாகப் போவதைக் குறிக்கும்.  ரொபின்  பார்ப்பவர்களைக் கவரக் கூடிய அழகிய தோற்றமுள்ள குருவி. ஆண் ரொபின் குருவி பெண் குருவியிலும் பார்க்க பிரகாசமான நிறத்தைக்கொண்டது. ஆனால் கண்ணைச்சுற்றி உள் வளையமும், கழுத்தில் உள்ள வெள்ளைநிற அடையாளமும், அதன் வயிற்றில் உள்ள கடும் ஆரஞ்சு நிற வர்ணமும் ஆண் ரொபின் குருவிக்கு இருக்கும். அதுவே பெண் குருவியில் இருந்து  ஆண் குருவியை வேறுபடுத்திக்காட்டும். வீட்டுத் தோட்டத்துக்கு  வருவது பெண் ரொபின் குருவி என்று என்மைத்துனர் சொன்னார். வெட்டினரி சர்ஜனான அவருக்குத் தெரியாததா என்ன.?   ரொபின் போடும் ஓசையானது ஒரு இன்னிசைப்போல இருக்கும்.   ஜுலை முதல் ஆகஸ்ட் மாதங்கள் வரை அவை தன் குரலின் மகிமையை பாடிக்காட்டுவதால் “பாடும் குருவி” என மக்கிளிடையே பெயர் ரொபின் வாங்கியது. தன்னோடு போட்டியாக ஓசை எழுப்ப ஒரு உயிர் வந்ததையிட்டு ஆரம்பத்தில்  மெலடிக்கு பொறாமையாக இருந்தது, அதனால் ரொபின் பாடும் போதெல்லாம் மெலடி குரைக்கும். ஆனால் காலப்போக்கில் ரொபின் போடும் இனிமையான ஓசையால் மெலடி கவரப்பட்டது. அதனால் ரொபினை தோட்டத்தில் இருந்து துரத்திவிட மெலடி விருப்பப்படவில்லை.  எங்கள் தோட்டத்துக்கு அடிக்கடி வந்து போகும் பெண்  குருவி ரொபினும், அணில் ஒன்றும் சில சமயங்களில் ஒன்றாகத் தானியங்களை உண்பதைக் கண்டு மெலடி குரைத்து தன் எதிரப்பைக் காட்டும். ரொபினுக்கும் அணிலுக்கிடையே நட்பு வளர்வதை மெலடிக்கு பிடிக்கவில்லை போலும். முயல்கள் இரண்டும் தம்பதிகள் போல் வருவதால் எங்கே மெலடி தங்களை கடித்துக் குதறி விடுமோ..! என்ற பயம் இருந்ததினால் சில நாட்களில்  அவை இரண்டும் தோட்டத்துக்கு வராமலே நின்று விட்டன.  ரொபினோடு ஆரம்பத்தில் மெலடிக்கு பிரச்சனை இருந்தது. ஆரம்பத்தில் ரொபினைத் தோட்டத்துக்குள் கண்டால் வீட்டுக்குள் இருந்தபடியே குரைத்து, அதைத் தோட்டத்திலிருந்து துரத்த தன்னை வெளியே விடும்படி ஆராவாரப்படும். தோட்டத்துக் போகும் கதவைத் திறந்து விடும்படி வாசற் கதவில் தொங்கும் மணியை மெலடி அடிக்கும். குருவிகளையும் முயல்களையும்  போய் பயமுறுத்த அதற்கு ஆவல். அவைகளை துரத்திய பின்னர் திரும்பி வந்து வீட்டுக்குள் வர கண்ணாடிக் கதவை மெலடி தன் கால்களால் தட்டும்.  “கதவைத் திறவுங்கள்  எனக்கு பசிக்கிறது. நான் சாப்பிட வேண்டும்” என்பது போல் இருக்கும் அதன் செயல்;. மெலடி வீட்டுக்குள் வர கதவைத் திறந்து விட்டால், உடனே அது உணவும் தண்ணீரும் வைத்திருக்கும் இடத்துக்கு ஓடும். தண்ணீரை மடக் மடக் என்று குடித்தபின்னரே தன் உணவைச் சாப்பிடும்.  மெலடிக்கு ஆங்கிலத்திலும் தமிழிலும் நாம் பேசுவது விளங்கும். “மெலடி இரு” என்று ஆங்கிலத்தில் சொன்னால் பதுமையாக இருக்கும். “ மெலடி சத்தம் போடாதே” என்று தமிழில் சொன்னால் குரைப்பதை நிறுத்திவிடும். “மேலடி யூ ஆர் ஏ குட் பாய்” என்றால் வாலை ஆட்டியபடி தனது மகிழ்ச்சியைக் காட்டியவாறு என் அருகே வந்து தன்னைத் தடவச் சொல்லி முகத்தை நீட்டும். அறிவு பள்ளிக்கூடத்துக்கு போய் திரும்பும் வரை முணுமுணுத்தபடியே இருக்கும் .அறிவு வீடு திரும்பியப்பின் சந்தோஷத்தால் அங்கும் இங்கும் ஓடி தன் கவனத்தை அவனிடம் இருந்து கவரப்பார்க்கும்.                                                                                 ******   அன்று தமிழ் புத்தாண்டு தினம். என் மனைவி கயல், சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், வடை ஆகியவற்றை தயார் செய்தாள். சுவாமிக்கு படைக்கும் போது காகம் கனடாவில் இல்லததால் தோட்டத்துக்கு வரும் ரொபினுக்கு படைக்க நினைத்து கொஞ்சம் வெண் பொங்கலையும் சர்க்கரைப் பொங்கலையும் வாழை இலையில் வைத்து தோட்டத்துக்கு வரும் குருவிகள் உண்பதற்க்கு வைத்தாள். இதை கவனமாக மெலடி கவனித்துக் கொண்டிருந்தது. கயல் வீட்டுக்குள் வந்த பின் மெலடி மெதுவாக தோட்டத்துக்குச் சென்றது. கயல் அதைக் கவனித்துவிட்டாள். “ஏய்  மெலடி! ரொபினை சாப்பிட விடு. உனக்கு தனியாக பொங்கல் வைத்திருக்கிறேன்” என்றாள் சத்தம் போட்டு. மெலடி அதை கேட்காதது போல தோட்டத்துக்குப் போய் ரொபின்,  கயல் வாழை இலையில் வைத்த பொங்கலை உண்பதை அமைதியாக அவதானித்தப்படி நின்றது. தன் குரலை உயர்த்திக் குரைக்கவில்லை. ரொபினும் மெலடியைக் கண்டு பறந்து போகவில்லை. சில நேரத்துக் பின் மெலடிக்கு என்ன தோன்றியதோ தெரியாது மெதுவாக தானும் போய் ரொபினோடு சேர்ந்து பொங்கலைப் பகிர்ந்து உண்ண ஆரம்பித்தது.  பொங்கலை உண்ண வந்த அணில் ஒன்றை குரைத்து மெலடி துரத்திவிட்டது. அந்த காட்சியைப் பார்த்து கொண்டிருந்த எனக்கு மெலடியின் செயல் ஆச்சரியத்தைக் கொடுத்தது. என்னால் அக்காட்சியை நம்பமுடியவில்லை. நான் உடனே அறிவையும் கயலையும், கூப்பிட்டு மெலடியின் சகோதரத்துவ உணர்வைத் சுட்டிக் காட்டினேன். கயலால் கூட அந்தக் காட்சியை நம்பமுடியவில்லை. “இப்ப ரொபினும்,மெலடியின் நண்பர்களாகி விட்டார்கள் போலத் தெரிகிறது. அவர்களுக்கிடையே ஒற்றுமையாக வாழ ஒரு உடன்படிக்கை ஏற்பட்டுவிட்டதாக்கும்” என்றேன் நகைச்சுவையாக நான்.  “ஆமாம் நாம் காணமுடியாத  காதல் அவர்களுக்கிடையே உருவாகிவிட்டது அப்பா. ஆரம்பத்தில் மெலடிக்கும் ரொபினுக்கும் இடையே ஊடல். அந்த ஊடல் போய்  காதலாக மாறிவிட்டது , என்றான் அறிவு.  “என்ன அறிவு சொல்லுகிறாய்”? நான் அவனைக் கேட்டேன்.  தனது லாப்டொப்பைக் கொண்டுவந்து மெலடிக்கும் ரொபினுக்கும் இடையேலான பதிவு செய்த உரையாடலைப் போட்டுக் காண்பித்தான். அவ்வுரையாடல் ஆங்கில வார்த்தைகளில் மானிட்டரில் தெரிந்தது. என்னாலும் கயலாலும் அதை நம்பமுடியவில்லை. அறிவு தன் ஆராய்ச்சியில் வெற்றி பெற்றுவிட்டான் , என்றது என் மனம்.  “பிரமாதம் அறிவு உன் கண்டுபிடிப்பு. இதை விருத்தி செய்; இதற்கு நிட்சயம் மிருகங்கள் பறவைகள் வளர்ப்போருக்கிடையே மார்க்கட் இருக்கும். கண்டுபிடித்தால் உன் காப்புரிமையை பதிவு செய்து விடு” என்றேன் நான்.  “காப்புரிமை என்றால் என்ன அப்பா”?  “பேட்டன்ட் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.  இதைக் கண்டுபிடித்த உரிமை உன்னுடையது”  என்பது அர்த்தம் கயல் நான் சொல்வதைகேட்டுக்  கொண்டிருந்தாள்.    “பார்த்தாயா கயல். மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் இடையே கூட காதல் ஏற்பட இனம் தேவையில்லை. ஆண்நாயான மெலடிக்கு தோட்டத்துக்கு வருவது பெண் ரொபின் என்று கூடத் தெரியும் போல எனக்குத் தோனறுகிறது.” என்றேன் நான் சிரித்தபடி.;  “இது ஊடல் போயின் காதல் என்பது போல் மெலடிக்கும் ரொபினுக்கும் இடையே வளர்ந்த காதல். எங்களுக்கு இவ்விசித்திரமான காதல் புரியாது” என்றாள் கயல். இனி எங்கள் மகன் அறிவின் கண்டுபிடிப்பினால் நாய்கள் பறவைளுக்கு இடையேலான உறவை நாம் அறியக் கூடியதாக இருக்கும் “ என்றாள் என் மனைவி கயல்.                                                                                        ******* +-----------------------------------------------------------------------+ | கதை 10 : விளைச்சல் | +-----------------------------------------------------------------------+   என் சினேகிதி கலைச்செல்வி கம்பியூட்டர் சயன்சை தன் பட்டப்படிப்புக்கு தேர்ந்தெடுத்திருக்களாம். எக்காரணத்தால் தாவரவியற் துறையைத் தேர்ந்தெடுத்தாள் ? என்று நான் அவளைக் கேட்டதுக்கு அவள் சொன்ன பதில் என்னை அதிர வைத்தது.  “ பர்ணா, இயற்கைதான் இறைவன். மரங்களும், தாவரங்களும், நதிகளும், ஏரிகளும், மலைகளும் இயற்கையின் பிரதான அங்கங்கள். இயற்கையில் பல விதமான மூலிகைச் செடிகள் உண்டு. ரிஷிகளும், சித்தர்களும் அச்செடிகளைச் சித்த வைத்தியத்துக்குப் பாவித்திருக்கிறார்கள். தீர்க்க முடியாத நோய்களைத் குணப்படுத்த, தற்காலத்தில் பல மூலிகைகளை உபயோகிக்கத் தொடங்குகிறார்கள். நீரழிவுக்கும் , சிறு நீரக வியாதிக்கும் சீனாவில் மூலிகை மருந்துகள் உண்டு. எங்களுடைய கிராமபுரத்து பச்சைப்பசேல் என்ற தோற்றமுள்ள வயல் வெளிகள் பார்பதற்க்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தாலும் , அதனால் கிடைக்கும் பயன்கள் பல. உணவு தருகிறது;விவசாயிகளுக்கு வருமானம் வருகிறது ;வயலில் வேலை செய்வதால் தேகநலம் கெடாது; அதுமட்டுமல்ல புத்தர் போன்ற பல ஞானிகளும், ரிஷிகளும், சித்தர்களும் மரத்தின் கீழ்  இருந்தே தியானம் செய்து முக்தி பெற்றதை நாமறிவோம். இந்துமதத்தில் கூட தல விருட்சத்துக்கு தனி மதிப்புண்டு. குழந்தைச் செல்வம் இல்லாதவர்கள் மரத்தை பல தடவை சுற்றி வந்து வணங்கி பிள்ளை வரம் வேண்டுவார்கள். வட அமெரிக்க பூர்வகுடிமக்கள் இயற்கைக் கொடுத்த மரங்களை தெய்வமாகக் கருதுபவர்கள். மரங்கள், தம்மில் உள்ள நேர்மறைச் சக்தியை தன் கீழ் அமர்ந்து தியானம் செப்பவர்களின் எதிர்மறைச் சக்தியை நீக்கி தன் நேர்மறைச் சக்தியைப் பகிர்ந்து, மனித சக்தியை பரிசுத்தப்படுத்துகிறது. இது முக்திக்கு வழிவகுக்கிறது இவ்வாறு தாவரவியல் துறையில் பட்டம் பெற்ற என் சினேகிதி கலைச்செல்வி மரங்களைப் பற்றி எனக்கு ஒரு லெக்சர் கொடுத்தாள்.  “அது சரி செல்வி , தாவரவியல் கற்றபின் மேலும் ஆராய்ச்சி செய்ய உனக்கு நோக்கம் ஏதும் இல்லாயா?  “ஏன் இல்லை. தாவரங்களின் வளர்ச்சியும் அவையின்  விளைச்சல்கள் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறேன். இது உணவு உற்பத்திக்கு வழிவகுக்கும். உரம் போட்டு வளர்ச்சியையும் விளைச்சலையும் அதிகரிப்பதை நான் ஆதரிப்பவள் அல்ல” என்றாள் செல்வி.  “ஏன் அப்படி சொல்லுகிறாய்”?  “கடைகளில்  கிடைக்கும் உரம், பல  இரசாயனப் பொருட்கள் கலந்தது. நிலத்தை பாலடைய செய்து விடும். வயல்களில் உள்ள நீருடன் இரசாயனம் கலந்து, அந் நீர் வாய்க்கால் வழியே ஓடி, நதியோடு கலப்பதால் நதியை அசுத்தப்படுத்துகிறது.”  “அப்போ வயலில் விளைச்சலை அதிகரிக்க உரம் பாவிக்கக் கூடாது என்கிறாயா’?  “நான் அப்படி சொல்லவில்லை. இயற்கையில் கிடைக்கும் உரமே நல்லது.”  “அதென்ன இயற்கையான உரம்?  “மண் புழு உரம்,  இயற்கை வேளாண்மையின் ஒரு முக்கிய அங்கம். கால்நடைகளின் சாணம்,  இலை, தழை, பாசி வகைகள், கோழி எச்சம், மாட்டுச் சாணம், தென்னை நார்க் கழிவு போன்ற கழிவுகளை உண்டு மண்புழுக்கள் உரமாக வெளியேற்றுகின்றன. கழிவுப் பொருட்கள் அவற்றின் உடலில் செரித்த பிறகு, சத்து மிகுந்த கழிவாக வெளியேற்றுகிறது. இக்கழிவுடன் மண்புழுவின் உடலில் இருந்து வெளிவரும் தாவர வளர்ச்சி ஊக்கிகள், என்சைம்கள், ஹார்மோன்கள் ஆகிய திரவங்களும் வெளியேறுகின்றன. எனவே, பயிர் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் ஒருங்கே அடங்கியுள்ள சிறந்த இயற்கை உரமாக ‘ மண்புழு உரம்’  கருதப்படுகிறது.”“  “அதுசரி செல்வி விளச்சலை அதிகரிக்க வேறு இயற்கையான வழி உண்டா”? நான் கேட்டேன். “ சில மாதங்கள் பொறுத்திருந்து பார் .நான் செய்யும் பரிசோதனை நல்ல முடிவை தருமாகில் விளைச்சலில் புது புரட்சியை உண்டுபன்னலாம் என்ற நம்பிக்கை எனக்குண்டு” என்றாள் செல்வி.                                                              *******  யாழ்ப்பாணத்தில் இருந்து வடக்கே 14 கிமீ தூரத்தில் வழுக்கை ஆறு தழுவிச் செல்லும் கிராமம் அளவெட்டியூர். பசுமை நிறைந்த வயல் வெளிகள்.   பல நாதஸ்வர வித்துவான்களை உருவாக்கிய ஊர். அந்தக் கிராமத்தில் நாதஸ்வர வித்துவான் நாகநாதனை தெரியாதவர்கள் இல்லை. சண்முகம் வீதியில் எப்போதும் நாதஸ்வர ஒலி கேட்டபடியே இருக்கும். நாகநாதனின் தந்தை சண்முக சுந்தரம் அளவெட்டிக்குத் தன் நாதஸ்வர இசை மூலம் சிறப்பைக் கொண்டு வந்தவர். பல விருதுகள் பெற்றவர். ஆறுமுகம் பிள்ளை, அப்புலிங்கம் பிள்ளை ஆகிய வித்துவான்களிடம் தேர்ச்சி பெற்றவர். இசைக் கலை மூலம் செல்வம் சேர்த்து, பல வயற்காணிகளுக்குச் சண்முகசுந்தரம் சொந்தக்காரானார். அவர் செல்வம் சேர்த்த வழியே அவரின் ஒரே மகன் நாகரத்தினமும் தன் சொந்த உழைப்பால் ஒரு பெரிய வீட்டுக்குச் சொந்தக்காரன் ஆனார். அவரின் மகள் கலைச்செல்வியும் நானும் ஒன்றாக சிறுவயது முதற்கொண்டே படித்தவர்கள். என் வீடு செல்வியின் வீட்டில் இருந்து சண்முகம் வீதியில் அவள் வீட்டுக்கு ஐந்து வீடுகளுக்கு வடக்கே  இருந்தது. நாங்கள் வசித்த வீதிக்கு செல்வியின் தாத்தாவும், காலம் சென்ற பிரபல நாதஸ்வர வித்துவானுமாக இருந்த சண்முகசுந்தரத்தின்  நினைவாக ‘ சண்முகம்வீதி’  என்ற பெயர் இருந்து வருகிறது. சண்முகசுந்தரம் பலவருடங்களுக்கு முன் மிக பிரபல்யமான நாதஸ்வர வித்துவானாக இருந்தவர். அவரின் ஒரே மகன் தான்  செல்வியின் தந்தை நாகநாதன் அவரும் பிரபல நாதஸ்வர வித்துவானாக வருவதற்கு அவரின் தந்தையே முக்கிய காரணம். செல்வியின்  அண்ணன் தட்சனாமூர்த்தி, தந்தை நாகநாதன்  நாதஸ்வர வாசிக்கும் கோவில்களிலும் , இசைவிழாக்களிலும்  நிட்சயம் தவில் வாசிப்பான்.  நாகநாதன் குடும்பம் ஒரு ‘ கலைக்குடும்பம்’  என்றே சொல்லாம். அவரின் மகள் கலைச்செல்வி பரதநாட்டியத்தை முறைப்படி கற்றவள். அவளின் தாய் தர்மாம்பாள் ஒரு நல்ல பாட்டுக்காரி. கர்நாடக சங்கீதத்தை விரும்பி கற்றவள். சினிமா பாடல்கள் பாடுவதைத் தவிர்த்தாள்.  ஆனால் தர்மாம்பாள் பாரதியார் பாடல்களை பாடும் போது மெய்மறந்து கேட்டுக்கோண்டிருக்கலாம்.  செல்விக்கும் தந்தை நாகனாதனுக்கும் இசைமட்டுமல்ல,  தாவரங்கள் மீதும்  அதிக ஆர்வமிருந்தது. அவர்களது பெரிய வளவு உள்ள வீட்டில் பல விதமான மலர்செடிகளும், பழம் மரங்களும் இருந்தன. தினமும் தனது வீட்டுத் தோட்டத்தில் இருந்து அரைமணி நேரமாவது நாதஸ்வரம் வாசிப்பதில் நாகநாதன் அமைதி கண்டார். அவரோடு சேர்ந்து அவர் மகன் தட்சணாமூர்த்தியும்  தவில் வாசிப்பான்.  செல்வி தாவரவியலில் படித்து பட்டம் பெற்றப்பின் அளவெட்டி அருனோதயா கல்லூரியில் ஆசிரியையாக இருந்தாள். என்னையும் அத் துறையில் படிக்கும்படி அவள் வற்புறுத்தியும்,  எனக்கு பௌதிகத்தின் மேல் தனி விருப்பம்.  “அபர்ணா  ஏன் உனக்கு பௌதிகத்திலும் கணிதத்திலும் இவ்வளவு மோகமோ தெரியாது. நீயும் தாவரவியலை என்னோடு சேர்ந்து படித்திருக்கலாமே” என்பாள் செல்வி அடிக்கடி.  “செல்வி எந்தப் பாடம் எ னக்கு  விருப்பமோ அதைத் தான் நான் படிக்க விரும்புகிறேன். என் அம்மா ஒரு கணிதம் கற்பிக்கும் ஆசிரியை. எனது அப்பா ஒரு பொளதீக ஆசிரியர். அதுதானோ என்னவோ எனக்கு கணிதத்திலும் பௌதிகத்திலும் ஈடுபாடு வர காரணம்’” என்பேன்.  “அபர்ணா நீ என்னை  போல் பரதநாட்டியம் அல்லது இசை கற்கலாமே”.  “செல்வி உன் குடும்பம்  ஒரு கலைக்குடும்பம். அது உங்களுக்குள் பரம்பரையாக   வந்திருக்கிறது. எங்கள் குடும்பம் அதற்கு முற்றிலும் வேறுபட்டது. எனது தந்தை ஒரு பௌதீகப் பட்டதாரி. மகாஜனா கல்லூரியல் ஆசிரியராக இருக்கிறார். எனது தாய் அதே கல்லூரியில் கணித ஆசிரியராக இருக்கிறார். அவர்களின் பாதிப்பு என்னை பௌதிகத்துறையில் ஆர்வம் காட்ட  வைத்ததால் அத்துறையில் படித்துப் பட்டம் பெற்றேன். அது சரி செல்வி உன்னிடம் ஒருகேள்விகேட்க வேண்டும்.” “கேள் அபர்ணா”  “நீயும் நானும் ஒன்றாக போய் திருநெல்வேலி பண்ணையில் ரோஜா செடிகள் வாங்கி வந்து நட்டோம். ஏன் என் செடிகள் இன்னும் பூக்கவில்லை? எங்கள் வீட்டுத் தோட்டத்து மா மரம் காய்ப்பது குறைவு. ஆனால் அதற்கு எதிர்மாறாக உன் வீட்டு ரோஜா செடிகள்  வளர்ந்து பூத்து குலுங்குகிறது. உங்கள் தோட்டத்து மாமரங்களிலும், பலா மரங்களில் நிரம்ப பழங்கள் உண்டு. அதெப்படி செல்வி “?  “அபர்ணா நான்  சொல்வதை சற்று கவனமாகக் கேள். நான் செய்த பரிசோதனை ஓரளவுக்கு வெற்றியைத் தந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்”  “எனக்கு விளங்கவில்லை. விபரமாய் சொல்”  “இசையை உருவாக்குவது வெவ்வேறு அதிர்வுகள் கொண்ட ஒலி அலைகளே. ரிஷிகள் மந்திரங்கள் ஜெபித்து சாதனைப் படைத்தார்கள் . அதே போல் எங்கள் வீட்டில் நான் பரதநாட்டியம் ஆடும் போது ஒலிக்கும்  சலங்கை ஒலியானது என் வீட்டு ரோஜா செடிகளைப் பூத்துக் குலுங்கவைத்தது. என் அப்பா பின் வளவில் இருந்து இயற்கையை இரசித்தவாறு நாதஸ்வரம் வாசிப்பார். அதோடு மட்டுமல்ல எங்கள் வயற் காணிக்கு அடிக்கடி சென்று அங்கும் வாசிப்பார். அதன் விளைவாகவே  எங்கள் வயற்காணியில் மற்றவர்களின் வயல்களை விட பல மடங்கு விளைச்சல். இதெல்லாம் ஒலி அலைகள் செய்யும் சூட்டசுமம். அவ்வலைகள் மரங்களுக்கும் நெற்கதிர்களுக்கும் எடுத்து செல்வது நேர்மறையான சக்தி. அச்சக்தியைப்  பெற்றதினால் உரம் போடாமல் விளைச்சல் அதிகரித்துள்ளது. இது நான் செய்த பரிசோதனையில் கண்ட உண்மை. இதை நான்  பரிசோதித்தப் பின்னர் அப்பாவை எங்கள் தோட்டத்திலும் வயற்காணியிலும் அவரை நாதஸ்வரம் வாசிக்கச் சொன்னேன். அதன் காரணத்தை விளக்கினேன். அவர் அது சாத்தியமா ? என்று தமிழ் நாட்டில் உள்ள அண்ணாமலை பல்கலைக் கல்லூரி இசைத் துறை சார்நதவர்களிடம் விசாரித்தார். அவர்களும்  அது நடப்பது சாத்தியமே என சொன்னார்கள் அபர்ணா” என்றாள் செல்வி. நான் அதிக விளைச்சலுக்கு அவள் சொன்ன விளக்கததை கேட்டு அதிசயப்பட்டேன். “ஒலியின் மகத்துவம் தான் என்ன?  வெளவால்கள் கூட ஒலி அலைகள் மூலமே திசைளை அறிந்து பறக்கின்றன. அது மட்டுமல்ல வைத்தியத்துறையிலும் ஒலி அலைகள் பாவிக்கப்டுகிறது என்பது எனக்கு தெரியம் . அதை ‘ அல்ட்ராசவுண்ட் ’ என்பார்கள். ஆகவே சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன் செல்வி” என்றேன் நான்.  “அபர்ணா  இன்னொன்று உனக்குச் சொல்ல மறந்து விட்டேனே. எங்கள் வயற்காணிக்கு அரசாங்க விவசாய இலாக்காவில் இருந்து அதிக விளைச்சலுக்காக முதல் பரிசும், விருதும் கிடைத்திருக்கிறது.  “அப்போ செல்வி உங்கள் தோட்டத்து மாமரங்கள் இப்படி இலை தெரியாமல் காய்த்து குழுங்கியதுக்கு பரிசு கிடைக்கவில்லையா” நான் கேட்டேன்.  “ஏன் இல்லை. ஒரு பெட்டி நிரம்ப கறுத்தகொழும்பான், அம்பளவி மாம்பழங்களை உனக்கு என் பரிசாக வைத்திருக்கிறேன்” என்றாள் சிரித்தபடி செல்வி. அதை ஆமோதிப்பது போல் அவள் அண்ணனின் மங்கள தவில் ஓசை கேட்டது.                                                                                 ******   +-----------------------------------------------------------------------+ | கதை 11 : கயிலைமலைக்கு கிரகவாசி வருகை | +-----------------------------------------------------------------------+ முகவுரை  பறக்கும் தட்டில் பூமிக்கு பிற கிரக வாசிகள் வந்ததாக பல கதைகளை கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் எவ்வித தோற்றம் உள்ளவர்கள் என கற்பனையில் சிருஷ்டித்து பல இடி (ET) போன்ற படங்கள் எடுத்திருக்கிறார்கள். பிற கிரக வாசிகள் பூமிக்கு வந்ததாக போதிய ஆதாரங்கள் இல்லை. சில சமயம் அப்படியும் நடந்திருக்கலாம் என அறிவியல் கண்கொண்டு இக்கதை எழுதப்பட்டது. ****  உலகத்திலேயே அதிக உயரமான  29,029 அடிகள் உயரமுள்ள இமயமலையின் சிகரத்தை, பல மனிதர்கள் அடைந்தாலும்,  21,578 அடி உயரமுள்ள கைலாச மலையின் சிகரத்தை ஒருவரும் இது வரை அடையாதது ஆச்சரியத்துக்குரியது.   புனித மலையான கைலாசமலையைப் பற்றி தெரியாத இந்து, பௌத்த, ஜெயின் மதத்தவர்கள்  மிகக் குறைவு. இந்து நதி,  பிரம்மபுத்திரா, கங்கையின் கிளைநதி கர்னாலி, இந்து நதியின் கிளை நதி சட்லெஜ் ஆகிய நான்கு நதிகள் அம்மலையில் இருந்து உருவாகிறது. இந்துக்கள் தமது இதிகாசங்களில் குறிப்பிட்ட இம்மலை இருப்பது பெரும்பான்மையினரான இந்துக்கள் வாழும் இந்தியாவில் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. 1959 இல் சீனா ஆக்கிரமித்த  நாடான திபத்தில் இம்மலை இருந்தாலும், பக்தர்கள் போய் வர பல கட்டுப்பாடுகள் உண்டு. இம்மலையில் சீன அரசின் அனுமதி பெற்று இம்மலையை 1980 இல் இத்தாலிய நாட்டு மலையேறி ஒருவர் திட்டமிட்டு சீன அரசின் அனுமதி கிடைத்தாலும், பின் அவராகவே  சிந்தித்து தன் முயற்சியைக் கைவிட்டார்.    நேபாள தேசத்தின் அருகில் உள்ள நாடு திபத். நேபாளத்தின் தலைநகரான காட்மண்டுவில் இருந்து  கைலாசமலைக்கு 538 கி. மீ தூரம்.                                 ‘சிவபெருமானின் வாசஸ்தலம்’  என்றும், பல ரிஷிகள் நடமாடும் இடம் என்றும் இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இராமாயணத்திலும், மகாபாரதத்திலும் இம்மலைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, எழுதப்பட்டுள்ளது. கைலாசமலை அடிவாரத்தில் இரு ஏரிகள். ஒன்று வட்ட வடிவமான மானசரோவர் ஏரி. அவ்வேரியில் சிவனும் பார்வதியும்  நீராடுவாதாக மக்கள் நம்பிக்கை. அவ்வேரிக்கு அருகே, சந்திரனின் பிறை வடிவத்தில்  ‘ ராஷ்சத்தால்’  என்ற எரி உண்டு. இராவணனோடு இவ்வேரியைத் தொடர்பு படுத்தி இதிகாசக் கதைகள் உண்டு.    கைலாசமலையானது தங்கம், பளிங்கு , கருங்கல் போன்றவையை உள்ளடக்கியமலை.  உண்மையில்லாமல் இதிகாசக் கதைகள் உருவாகாது. உதாரணத்துக்கு விஸ்வாமித்திர மகரிஷி படைத்த திருசங்கு சொர்க்கம் உருவாகிய கதையானது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. அதன் அடிப்படையில் ஆர்தர் சி .கிளார்க் என்ற அறிவியல் கதைகள் எழுதியவர், 1945 செய்மதியை பற்றி தன் நாவல் ஒன்றில் குறிப்பிட்டார். அந்நாவல் வெளிவந்து பல ஆண்டுகளுக்குப் பின் 1957இல் ஸ்புட்னிக் 1 என்ற செய்மதியை முதன் முதலில்  விண்வெளியில் ரஷ்யா மிதக்கவிட்டதை யாவரும் அறிந்ததே .   இனி கதைக்கு வருவோம். நடக்க இருக்கும் பல கண்டு பிடிப்புகள், சம்பவங்கள் மலைக் குகைளில் பதிவாகியுள்ளன என்பது மலையேறியான ஜெய்சிங்கின் கருத்து. அவரைப்போலவே திருவண்ணாமலையில் வாழும் கைலாசநாதனும் சிந்தனை உள்ளவர். பல தடவை திருவண்ணாமலையைச் சுற்றி கிரிவலம் வந்தவர். அதே போல் கைலாச மலையை சுமார் 52 கி.மீ கிரிவலம் வரவேண்டும் என்பது அவர் ஆசை. கைலாசமலையின் தோற்றம் சிவலிங்கம் போன்றது.   திருவண்ணாமலைக்கு கிரிவலம் தரிசனத்துக்கு வந்த நேபாளியான ஜெய்சிங்கோடு எதிர்பாரத விதமாக தொடர்பு கைலாசநானுக்கு கிடைத்தது. கைலாசநாதன் சென்னை பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று, பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டவர்.  எட்மணட் ஹில்லரியோடு முதன் முதலாக இமையமலையின் சிகரத்தை அடைந்த நேபாள தேசத்து  மலையேறியான டென்சிங்கின் பரம்பரை வழி வந்தவர் ஜெய்சிங். “ கைலாச மலையேறி, சிகரத்தைத் தொட்டு, பிரபல்யமாக வேண்டும் என்பது அவரது நோக்கம் மட்டுமல்ல, அவரோடு தொல்லியல் ஆராய்ச்சியாளரான முனைவர் கைலாசநானுடன் சேர்ந்து கைலாசமலையினுள் புதைந்துள்ள இரகசியத்தை ஆராய்ச்சி செய்து அறிய வேண்டும் ”  , என்பது அவர் நீண்ட காலத் திட்டம் . ஜெய்சிங் ஒரு மலைஏறி மட்டும் அல்ல, புது டெல்கியில் ஜியோலஜி என்ற நிலவியல் துறை படித்து, ஆராய்ச்சி செய்து, முனைவரானவர்.   கைலாசமலையின் சுற்றாடலைப் பற்றி அறிந்த நண்பர்களான ஜெய்சிங்கும் , கைலாசநாதனும் தாங்கள் படித்த துறைகளில் தொடர்ந்து கைலாசமலையில் ஆராய்ச்சி செய்ய திட்டமிட்டார்கள். அதற்கு தேவையான  நிதி உதவியை பல இந்துமன்றங்கள் கொடுத்து உதவ முன்வந்தன. கைலாசமலை அருகே வசிக்கும் பலர், அம்மலையின் உச்சியில் இருந்து வானை நோக்கி பிரகாசமான ஒளி சென்றதைக் கண்டதாக சொன்னார்கள். முதலில் ஒருவரும் அதை நம்பவில்லை. பின் மலையடிவாரத்தில் வாழ்பவர்கள் குறித்த நாளில் அவர்கள் சொன்னதில் உண்மை உண்டு ,  என்பதை அறிந்தார்கள்.   ரஷ்யர்கள் தங்களின் ஆராய்ச்சி மூலம் கைலாச மலையை மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு பிரமாண்டமான பிரமிட் என குறிப்பிட்டுள்ளார்கள். கைலாசத்தில ஏதோ ஒரு சக்தி மறைந்திருக்கிறது என்ற முடிவுக்கு வந்த இரு நண்பர்களும் தொடர்ந்து  தமது தொல்பொருள், நிலவியல் அறிவை கைலாசமலையில் புதைந்து கிடக்கும் இரகசியங்களை கண்டறிய திபத் நாட்டுக்கு வந்தார்கள்.   சீன அரசின் பலத்த கட்டுபாடுகளைக் கடந்து மலையின் அடிவாரத்தை அடைந்தார்கள். முதலில்  ஆதி கைலாசம் என்று சொல்லக்கூடிய ‘ ஓம் பர்வதம்’ , ஆண்டின் நான்கு மாதங்கள் தவிர பிற மாதங்களில் பனியால் முழுவதுமாக மூடப்பட்டுவிடும். ஆகவே இந்த நான்கு மாதங்களுக்குள் அவர்கள் தமது ஆராய்ச்சியை முடித்தாக வேண்டும் எனத் தீர்மானித்தார்கள். மலை ஏறும் போது, அவர்களுக்கு பைகளை சுமந்து செல்ல மலையடிவாரத்தில் வாழும் இரு மலை ஏறும் திபத்தர்கள் அமர்த்தப்பட்டனர்.   இந்தக் குறிப்பிட்ட நான்கு மாதங்களில் பனிப் பொழிவானது சமஸ்கிருத மொழியில் உள்ள ‘ ஓம்’  என்ற எழுத்துபோல இம்மலை மீது பரவி இருக்கும். எனவே இது ‘ ஓம் பர்வதம்’  (மலை) என்று அழைக்கப்படுகிறது. காட்மாண்டுவில் இருந்து மானசரோவர் ஏரி, ஆயிரம் கி.மீ. தூரம். மலைப்பாங்கான பகுதியாக இருப்பதால் இதனைக் கடக்க நான்கு நாட்கள் எடுத்தன. காட்மாண்டுவில் இருந்து கிளம்பி, முதலில் சென்றடைந்தது மானசரோவர் ஏரி. இது இயற்கையாகவே அமைந்த ஏரி இமயமலை உட்பட அருகில் உள்ள பல மலைகளில் இருந்து வரும் நீர், இந்த ஏரியை வந்தடைகிறது. கடும் குளிர் காரணமாக ஏரி நீர் சில்லென்று இருக்கும். பக்தர்கள் இங்கு ஸ்நானம் முடித்துப் பூசைகள் செய்வார்கள். கைலாசமலையில் மட்டுமல்ல இந்த ஏரிக்கரையிலும் சிவ தீர்த்தங்கள் கிடைக்கும். விடியற்காலை சூரிய ஓளியில் கைலாசமலையின் தோற்றம் பொன்னைக் கொட்டி வைத்ததுபோல சிகப்பாகச் ஜொலிக்கிறது. மலையை சுமார் 20 கிமீ தூரத்துக்கு கிரிவலம் வந்த பின்னரே மலையில் ஏறத் தொடங்கினார்கள். இம்மலையில் தங்கம் , வெள்ளி, பளிங்கு, கிரைனைட் என்ற கருங்கல் போன்ற கனிமவளங்கள்  உண்டு , என்பதை கைலாசநாதன்  மலைப் பாறைகளை ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்தார்.   கைலாசமலை கிட்டத்தட்ட கடல் மட்டத்தில் இருந்து 21,800 அடிகள் உயரமானது.  இம்மலை 29,029 அடிகள்  உயரமான உலகிலேயே உயரமான இமயமலையோடு ஒப்பிடும் போது இம்மலையின் உயரம் எழுபத்தைந்து விகிதமே. சுமார் 21,500 அடிகள் இருவரும் ஏறியவுடன் ஒரு குகையைக் கண்டார்கள். ஒருவேளை இக்குகைக்குள் இருந்து சிவனும், ரிஷிகளும் தியானம் செய்தார்களோ? அதனுள் பிரவேசித்து ஆராய்ந்த போது குகையின் சுவர்களில் உள்ள பல ஆயிரம் காலத்துக்கு முந்திய சித்திரங்களும், பதிக்கப்பட்டிருந்த எழுத்துகளும், கைலாசநாதனுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. இந்து நதிப்பள்ளதாக்கில், தொல் பொருள் ஆராய்ச்சி அவர் செய்தவராச்சே. உடனே இவ் எழுத்துக்கள் சிந்து நதி பள்ளத்தாக்கு நாகரீக காலத்துக்கு முற்பட்டதாக, கி.மு 26 ஆம் நூற்றாண்டில் இருந்த சுமேரியன் காலத்து எழுத்துகளை விட, பழமை வாய்ந்தவை என்பதை அறிந்தார். “ அவை அச்சித்திரங்கள் மூலமும், எழுத்துக்கள் மூலமும் ஒரு செய்தியை பூமி வாழ் மக்களுக்கு சொல்கிறது”  என்று ஜெய்சிங் நாதனுக்குச் சுட்டிக்காட்டினார். “ இருக்கலாம் ஜெய். எனது கணிப்புப்படி இவை வேற்று கிரகவாசிகள் பதித்த தடையங்களாக  இருக்கலாம்” “ அப்போ செவ்வாய் கிரக வாசிகள்  பதித்த தடையங்கள் என்று சொல்லுகிறீரா நாதன்’? “ செவ்வாய் கிரகம் பூமிக்கு அருகே உள்ள கிரகமானாலும் அது ஒரு வறண்ட கிரகம். நாசா  என்ற விண்வெளி ஆராய்ச்சி மையம், அக்கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்தாக இதுவரை கண்டுப்பிடிக்கவில்லை” என்றார் நாதன்.   “ அப்போ எங்கிருந்து வந்து இம்மலையில் இறங்கியிருப்பார்கள் என ஊகிக்கிறீர் நாதன்”? ஜெய்சிங் கேட்டார்.   “ நல்லகேள்வி. பூமியில் வாழும் உயரினங்களை விட அதிக புத்திசாலித்தனமும், தொழில் நுட்பத்துறையில் முன்னேறிய உயரினமாக இருக்காலம். அவர்கள் தோற்றத்தில் பூமியில் இருக்கும் மானிடர்களைப் போல் இருந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அலை வடிவத்திலும் இருந்திருக்கலாம். ஓளியின் வேகத்தை விட வேகமாக பயணம் செய்பவர்களாகவும் இருந்திருக்கலாம். அதனால் பல ஆயிரம் ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருந்து பூமிக்கு வந்திருக்கலாம். அவர்கள் சூரிய குடும்பத்தை சார்ந்தவர்களாக இருக்க முடியாது என்பது என் கருத்து ஜெய்”.   “ நீர் என்ன சொல்லவருகிறீர் என்று விளக்கமாக சொல்லமுடியமா ? நாதன்”.   “ நான் நினைக்கிறேன் பல  ஆயிரம் ஒளி வருடத் தூரத்துக்கு அப்பால் இருக்கும் பால்வெளியில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம். இவர்களே இந்து மதத் தத்துவத்துக்கு வித்திட்டவர்கள். இந்து மத கடவுள்களை தோற்றுவித்தும்  இருக்கலாம். இந்தத் தோற்றத்தினால் கைலாச மலையில் வாசம் செய்யும் சிவனும் தோன்றி இருக்கலாம். ரிஷிகளும், சித்தர்களும் அவர்கள் உருவாக்கியவர்களே. அதனால் தான் நாம் நினத்துப் பார்க்க முடியாத அதிசயங்களை செய்திருக்கிறார்கள் என்று இந்து ஐதீகங்கள் சொல்கிறது”.   “நாதன் ,  இது  ஒரு புதுமையான சிந்தனை. இது எவ்வளவுக்கு உண்மை என்பதை நாம் மேலும் ஆராய்ச்சி செய்து அறியவேண்டும். இதுவே அம்மலையின் உச்சியை அடைய ஒருவரும் முயற்சிக்காததற்கு காரணம்”, என்றார் ஜெய்சிங்.   “ வாரும் முதலில்  கைலாசமலையின் உச்சியைப் போய்  அடைவோம். இன்னும் 300 அடிகள் ஏற வேண்டியிருக்கிறது நாம் உச்சியை அடைய. வேறு என்ன அதிசயங்கள் அங்கு காத்திருக்கிறதோ தெரியாது” கைலாயநாதன் சொன்னார். “ இதை கேட்டதும் எனக்கு ஒரு ஐதீகக் கதை ஞாபகத்துக்கு வருகுது” என்றார் ஜெய். “ என்ன கதை ஜெய்”? “ சிவனின் உச்சியையும் அடியையும் காண, பிரம்மாவும் விஷ்ணுவும் முறையே அன்னப்பறவையிலும்  வராகத்திலும் புறப்பட்ட கதைதான். யார் பெரிது என்ற ஆணவத்தை அடக்க, சிவன் வைத்த பரிசோதனை. அந்த கதையில் சிவன், முடியும், அடியும் தெரியாத ஜோதி வடிவமாக காட்சி கொடுத்தார் என்கிறது, அதனால்….” ஜெய் சொன்னார். “ அதனால் என்ன?.” “ மலை அடிவாரத்தில் வாழும் மக்கள் கண்ட ஜோதி அந்த ஒளியாக இருக்குமோ என்று நான் யோசிக்கிறேன் நாதன்.”.     “ சிந்திக்க வேண்டியது தான். இப்புவியில் வாழும் நாம் வேற்று கிரகவாசிகளின் அறிவுக்கு ஈடாக வருவதற்கு பல ஆயிரம் ஆண்டுகள்; எடுக்கலாம்” என்றார் கைலாயநாதன்.   “ சரி சரி வாரும் சிவனின் உச்சிக்குப்போவோம். கங்கை உருவாகுவதையும்,   சந்திர பிறையையும் காணலாம்.” என்றார் சிரித்தபடி ஜெய்சிங்.   நண்பர்கள் இருவரதும் ஆராய்ச்சிப் பயணம் தொடர்ந்தது......   ******   +-----------------------------------------------------------------------+ | கதை 12. : செந்தூரனின் செவ்வாய்    பயணம் | +-----------------------------------------------------------------------+ அமெரிக்க நாஸா (NASA) விண்வெளி அமைப்பு செவ்வாய் கிரகத்தை நோக்கி ‘  இன்வெஸ்டிகேட்டர்’  (Investigator) என்னும் பெயர் கொண்ட  விண்கலம் ஒன்றை மூன்று விண்வெளி வீரர்களை  உதவியோடு செலுத்த முடிவெடுத்தது . இந்த வீரர்கள் வான்வெளி அறிவியலில் முனைவர்களாக இருக்க இருக்கவேண்டும். விண்கலத்தை ஒருதடவையாவது  இயக்கிய அனுபவம் இருக்கவேண்டும்.  நல்ல ஆரோக்கியம் உள்ள முப்பது வயதுக்கு குறைந்தவராகவும்  , திருமணமாகாதவராகவும் , ஆங்கிலம் சரளமாக பேசக் கூடியவராக இருக்க வேண்டும். அதுவுமன்றி நுண்ணறிவு  எண்  குறைந்தது 180 ஆக இருக்க வேண்டும். கணினியில்  வல்லுனராக இருக்கவேண்டும்.  இப்படி பல நிபந்தனைகளோடு மூவரை   ஒரு சீட்டிழுப்பு மூலம் அமெரிக்கா ஐரோப்பா ,இந்தியா ஆகிய நாடுகளில்  இருந்து நாஸா தெரிவுசெய்தது . இதில்  அமெரிக்காவின்  கலிபோர்னியாவில் இருந்து வில்லியம்சும் , இங்கிலாந்தில் இருந்து ஜோனும் இந்தியாவில்  இருந்து செந்தூரனும் தெரிவு செய்யப்பட்டனர்.      சூரிய மண்டலத்தில் செவ்வாய் கிரகம் நமக்குப் ‘ பக்கத்து வீடு’  மாதிரி என்றாலும் பல கோடி கிலோமீட்டருக்கு அப்பால் உள்ளது. சந்திரனுக்கு 36 மணி நேரத்தில் கூடப் போய்ச் சேர்ந்து விட முடியும். ஆனால் செவ்வாய் கிரகத்துக்குப் போய்ச் சேர பல மாதங்கள் ஆகும். அமெரிக்கா நாஸா அனுப்புகின்ற ‘ இன்வெஸ்டிகேட்டர்’ விண்கலம் செவ்வாய்க்குப் போய்ச் சேர எட்டரை மாதங்கள் பிடிக்கும். சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் நாம் அனுப்புகின்ற விண்கலம் நேர்கோட்டுப் பாதையில் செல்வது கிடையாது. விண்வெளியில் நேர்கோட்டுப் பயணம் என்பது நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்று. “பூமிக்கும் செவ்வாய்க்கும் உள்ள தூரம் சுமார் 20 கோடி கிலோ மீட்டர். எனினும் விண்கலம் நேர்கோட்டுப் பாதையில் செவ்வாயை நோக்கிச் செல்ல முற்படாது. வளைந்த பாதையில் விண்கலம் செல்வதால் அது பயணம் செய்கின்ற தூரம் 57 கோடி கிலோ மீட்டராகவும் இருக்கும்”  , என்று கணக்கிடப்பட்டுள்ளது. வளைந்த பாதையில் செல்வதில் நன்மை உள்ளது. செவ்வாய்க்கு நேர் கோட்டுப் பாதையில் செல்ல முயன்றால் அது சூரியனுக்கு எதிர் திசையில் செல்வதாக எரிபொருள் கொண்ட ராக்கெட்டை உருவாக்க முற்பட்டால் அது சுமந்து செல்லக்கூடிய விண்கலத்தின் எடையைக் குறைத்தாக வேண்டும். வளைந்த பாதையில் செல்லும் போது அதிக எரிபொருள் தேவையில்லை. அதிக எடை கொண்ட விண்கலத்தை அனுப்ப இயலும்.   இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். விண்கலத்துடன் உயரே கிளம்புகின்ற ராக்கெட் முதலில் பூமியைச் சுற்றி வரும். நிர்ணயிக்கப்பட்ட நேரம் வந்தவுடன் அது மணிக்கு சுமார் 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பாயும். பூமியின் ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபட்டு விண்வெளிக்குச் செல்ல இந்த அளவு வேகம் தேவை. பூமியின் பிடியிலிருந்து விடுபட்ட பிறகு ராக்கெட் (எஞ்சின்) தொடர்ந்து செயல்படத் தேவையில்லை. ஆற்றில் தள்ளி விடப்பட்ட ஆளில்லாப் படகு போல விண்கலம் விண்வெளியில் 'மிதந்து' செல்ல முற்படுகிறது.   அப்படியே விட்டால் அது செவ்வாய்க்குப் போய்ச் சேராது.அது இயற்கையின் விதிகளின்படி பூமி மாதிரியில் சூரியனைச் சுற்ற ஆரம்பித்து விடும். ஆகவே அந்த விண்கலப் பயணத்தின் போது விண்கலத்தில் உள்ள சிறு பீச்சு கருவிகளைக் (Thrustors) குறைந்தது ஐந்து தடவை இயக்கி அதன் பாதையில் சிறு மாற்றங்களைச் செய்வர். வடிவில் மிகச் சிறிய இந்த பீச்சு கருவிகளை அவ்வப்போது சில வினாடி இயக்கினாலே விண்கலத்தின் பாதையில் மாற்றங்களைச் செய்ய இயலும். இப்படியாக விண்கலம் செவ்வாயை நோக்கிச் செல்லும்படி செய்யப்படும்.   கியூரியாசிடி விண்கலம் 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி செவ்வாய் கிரகத்துக்குப் போய்ச் சேரும். அன்றைய தினத்தில் பூமியானது E-2 என்ற இடத்தில் இருக்கும். செவ்வாய் கிரகம் தனது சுற்றுப்பாதையில் M-2 என்ற இடத்தில் இருக்கும். பூமி, செவ்வாய் இரண்டுமே ஓயாது சூரியனை சுற்றிக்கொண்டு இருக்கின்றன,  என்பதால் அடுத்த ஆண்டு ஆகஸ்டில் அவை இடம் மாறியிருக்கும்.    செவ்வாய்க்குச் செல்கின்ற விண்கலம் செவ்வாயின் சுற்றுப் பாதையை எட்டும் போது செவ்வாய் அந்த இடத்தில் இருக்கும் வகையில் ஒரு விண்கலத்தின் பாதை திட்டமிடப்படுகிறது. சொல்லப்போனால் அந்த விண்கலம் செவ்வாயை நெருங்கி விட்ட பின் விண்கலத்தின் வேகத்தைக் குறைத்தால் தான் அது செவ்வாயின் ஈர்ப்புப்பிடியில் சிக்கி செவ்வாயில் இறங்க முடியும். செவ்வாயின் ஈர்ப்புப்பிடியில் சிக்கிய பின் ஒரு விண்கலம் வேகமாக கீழ் நோக்கி இழுக்கப்படும். விண்கலம் ஒரு விமானம் போன்று தரை இறங்க முடியாது. ஒரு கட்டத்தில் இறங்குகலம் மட்டும் பிரிந்து பாரசூட் மூலம் கீழே இறங்க ஆரம்பிக்கும். அப்போதும் கூட இறங்குக்கலம் தரையில் வேகமாக மோத வாய்ப்பு இருக்கிறது.   செவ்வாய் பயணத்தில் இன்னொரு பிரச்சினையும் உண்டு. செவ்வாய் கிரகத்தில் ஒரு நண்பர் இருப்பதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். அவருடன் டெலிபோனில் பேச முடியும். நீங்கள் ஹலோ சொல்லி 21 நிமிஷத்துக்குப் பிறகுதான் அவருக்கு உங்கள் குரல் காதில் விழும். அவர் பதிலுக்கு ஹலோ சொன்னால் அது உங்கள் காதுக்கு வந்து சேர மேலும் 21 நிமிஷம் ஆகும்.   சிக்னல்கள் ஒளி வேகத்தில் சென்றாலும் செவ்வாய் வெகு தொலைவில் இருப்பதால் இப்படியான பிரச்சினையைத் தவிர்க்க முடியாது. செவ்வாய் பூமிக்கு அருகே இருக்கும் போது உங்கள் குரல் 4 நிமிஷத்தில் போய்ச் சேரும்.அவரது குரல் உங்களுக்குக் கேட்க இதே போல 4 நிமிஷம் ஆகும்.    இருபது நிமிஷமா, நான்கு நிமிஷமா என்பது அந்தந்த சமயத்தில் செவ்வாய் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதைப் பொருத்தது. ******   +-----------------------------------------------------------------------+ | கதை 13 : புரோக்சிமா அல்பா கிரகவாசி | +-----------------------------------------------------------------------+ முனைவர் ரஞ்சன் ஒரு ஓய்வு பெற்ற வான் பௌதீகவியலாளர் (Astrophysicists)  . அவர் தனது ஆராய்ச்சியின் போது தொலை நோக்கி மூலம் கண்டுப்பிடித்த விண்மீன்   புரோக்சிமா சென்டோரி (Proxima Centauri ), இந்த வின்மீன்  பூமிக்கு  4.22 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது.  ஒளி ஆண்டு என்பது ஒளியானது தனது  வேகத்தில் ஒரு வருடத்தில் செல்லும் தூரம். இதைக் கணித்தால் வரும் தூரம் 9.461× 10 12கி. மீ ஆகும் .   இது   ஒரு நீள வானியல் அலகு ஆகும்.  இது விண்வெளியில் உள்ள விண்மீன்கள் முதலான விண்பொருட்களுக்கு இடையேயான தொலைவுகளை அளக்க வானியலில் பயன்படுத்தும் அலகு இது . ஆகவே தனது தொலை நோக்கி மூலம் கண்டுபிடித்த விண்மீன் பூமிக்கு  4.22 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது . இதுவே பூமிக்கு அருகில் உள்ள வின்மீனாகும். இந்த விண்மீன் குடும்பத்தில் புரோக்சிமா அல்பா  என்ற பூமி போன்ற கிரகம் உண்டு என்பதை அங்கிருந்து கிடைத்த வானொலி சமிக்கைக்கள்  மூலம் கண்டறிந்தார். மேலும் அந்த பூமி போன்ற கிரகமானது  பூமியியை விட 1.3 பெரிதானது . அதனால் அதன்  ஈர்ப்புச் சக்தி அதிகம்  .அந்த கிரகத்தில் உயரினங்கள்  வாழும் சாத்தியக் கூறுகள் இருப்பதினால் பறக்கும் தட்டில் பூமியில் நடக்க இருக்கும்  செய்திகளைக் கொண்டு வருபவர்கள் புரோக்சிமா அல்பா கிரக வாசிகளாக இருக்கலாம் என்பது ராஜன் கருத்து.  ஐன்ஸ்டீனின்  நேரச் சார்புக் கொள்கையின் படி (Time Relativity)  ,   பூமிக்கும் புரோக்சிமா அல்பா கிரகத்துக்கும் இடையே உள்ள நேர வேறுபாட்டினால்  பூமியில் முன் கூட்டியே நடக்கப் போவதை அறியும் ஆற்றல் அந்த கிரகவாசிளுக்கு  உண்டு என்பது அவர் கருத்து , அதை  நாசா ஏற்றுக் கொள்ளவில்லை  புரோக்சிமா அல்பா கிரகம் பூமியை விடப் பல ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்பதும் அவர் கருத்து  . 2016ஆம் ஆண்டு  அவரின் ஆராய்ச்சியின் முடிவை நாசா உறுதிப் படுத்தி அது மலைகள் சார்ந்த கிரகம் என்றது. அதோடு அக்கிரகத்தின்  சராசரி  வெப்ப நிலை பூமியிலும் பார்க்கச் சற்று அதிகம் என்றும் அதனால் அக்கிரகத்தில் நீர் இருக்கலாம் என்றது.   அன்று ராஜன் பிற கிரக வாசிகள்  பற்றிய ஆவணப் படத்தை யூடியூப்பில்   பார்த்து விட்டுத் தூங்கி விட்டார், அவர் தன் கணினியின் மின்சார இணைப்பை  துண்டிக்க மறந்து விட்டார். இரவு பதினொரு மணி இருக்கும்  யாரோ பேசுவது போல் கேட்டது. கண் விழித்துப் பார்த்தபோது     அந்த பேசும் ஒலி அவரின்  கணினியில் இருந்து வந்ததைக் கண்டார் . “ ஹலோ பூமி வாசி, நான் யார் தெரியுமா”? கணினியில் இருந்து வந்த ஒலி  கேட்டது . ”பேசும்  நீர் யார்? உம் உருவம் எனக்கு   தெரியவில்லையே”? “என்  பெயர் ‘ 300ஜிகா’(300 Gega).  நீர் கண்டு பிடித்த புரோக்சிமா அல்பா  என்ற  பிற கிரக வாசி நான் . உமது கண்டுபிடிப்புக்கு என் பாராட்டுகள்” “பேசும் நீர் அந்தக் கிரகவாசியா ?. நாசா சொல்லிற்று அந்த கிரகத்தில் உயிரினங்கள்   வாழும் சாத்தியம் இல்லை என்று” “அவர்கள் தொழில் நுட்பத்தில் எங்களைப் போல் இன்னும் முன்னேறவில்லை அவர்களுக்குத் தெரியாது நாங்கள் எங்கள் கிரகத்தில் அலை வடிவத்தில் வாழ்கிறோம் என்று அதனால் எங்களுக்கு உங்களைப் போல் உருவம் கிடையாது. ஆனால் எமது சக்தி எமது அதிர்வெண்ணைப்  பொறுத்தது.  எமது சக்தி சுமார் 1 3 மாபெரும் ஏலேக்ட்ரோன் வோல்ட். எனது இயற்கை அதிர்வுகள் ஒரு செகண்டுக்கு முன்னூறு ஜிகா ஹெர்ட்ஸ் (300Ghz). அதாவது உங்களின் காமா கதிர் போன்றது   (Gama Rays).எங்கள் அலை நீளம் மிகச்சிறியது .ஆகவே ஊடுருவும் சக்தி அதிகம் . நாங்கள் உங்களுக்குத் தெரிந்த ஒளியின் வேகத்தை விட பல மடங்கு விரைவாகப் பயணம் செய்வோம். உங்கள் சூரியனிலிருந்து  எங்கள் கிரகத்துக்கு சில வினாடிகளில் ஓளி வருகிறது  .வெகு தூரம் வெகு விரைவில் பறக்கும் தட்டில் செல்லும் ஆற்றல் எமக்குண்டு  . என்னை நீர் பார்க்க முடியாததன்  காரணம் என் உருவம் அலைவடிவத்தில் இருப்பதால்  .என் அலையின் அதிர்வெண்  300 ஜிகா. அதுவே என் பெயரும் கூட .என்ன நான் சொல்வது உமக்குப் புரிகிறதா”? “எனக்குப்  புரிகிறது . நான் வான் பௌதீக துறையில் பட்டம் பெற்றவன். நீர் பேசும் வான் அறிவியல் சார்ந்த விடையங்கள் எனக்குப் புரியும்” அது இருக்கட்டும் நீர் எதற்கு என்னோடு தொடர்பு கொள்கிறீர் ”? “உங்கள் கிரகத்தில் உள்ள   சில நாடுகளில் ஏற்பட இருக்கும் பெரிய ஆபத்துகளை நான் உமக்கு எச்சரிக்கை  செய்ய வந்தேன் . நீர் அந்த நாடுகளோடு தொடர்பு கொண்டு அந்த செய்தியை அந்த நாட்டு அரசுக்குத் தெரிவித்து அந்த அந்நாட்டு  மக்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றும்   . “அது சரி நீர்  எந்த நாட்டில் பிறந்தவன்”? “இந்தியாவுக்குக் கீழ் முத்து வடிவில் உள்ள அழகிய இலங்கை தீவில்” “ அப்படியா? அந்த தீவு ஒரு காலத்தில் இந்தியாவோடு இணைந்து குமரி கண்டத்தில் இருந்தது. அந்த கண்டம் கடலில் மூழ்கிய போது இந்த தீவு தப்பி இந்தியாவில் இருந்து  பிரிந்து விட்டது . ஆனால் அத்தீவில் அதர்மம் தலை தூக்கித் தாண்டவமாடுகிறது . இங்கு மதத்தின் பெயரில்  இனக் கலவரங்களை உருவாக்கி  மக்களைக் கொலை செய்கிறார்கள். அதைச் செய்பவர்களின் மதம் அதை அதைப் போதிக்கவில்லை. அந்த நாடு செய்த கர்மாவால் அங்குச் சுனாமி, புயல்  பெரும் வெள்ளம்  கிளர்ச்சிகள் தோன்றின .அதை முன் கூட்டியே  அந்த நாட்டின்  வளிமண்டல திணைக்களத்துக்கு எடுத்துச் சொன்னேன்  . அவர்கள் கணக்கில் எடுக்கவில்லை. “இப்போது என்ன ஆபத்து  அந்த நாட்டுக்கு வர இருக்கு”? : “பயங்கரவாதிகளின்  தாக்குதல் பல இடங்களில் நடக்க இருக்கிறது. அதுக்கான நடவடிக்கையை அவர்களிடம் உடனே எடுக்கச் சொல்லும்” “ஏன் அந்த  அந்நாட்டு அரசுக்கு நேரடியாக நீர் அறிவிக்கலாமே”? “அவர்கள்  வன்முறையில் முன்னேறியது போல் தொழில் நுட்பத்தில் முன்னேறவில்லை”  கிரகவாசி சொல்லிற்று. “அவர்கள் நான் சொல்லிக் கேட்கப் போகிறார்களா ? என்று எனக்குத்  தெரியாது. அங்குள்ள மந்திரிகள் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற மனப்பான்மை உள்ளவர்கள் அதுவுமல்லாமல் அந்த நாட்டு ஜானாதிபதிக்கும் பிரதம மந்திரிக்கு இடையே பூசல் வேறு.  சம்பவம் நடந்து முடிந்து பல உயிர்கள் போன பின் கமிசன் வைத்து ஆய்வு நடத்துவார்கள்” ராஜன் சொன்னார். “அந்த நாட்டுக்கு  வேறு ஒரு மிகப் பெரிய பொருளாதார பாதிப்பு வர இருக்கிறது. மத்தியக்கிழக்கு  நாடுகள் உமது நாட்டுக்கு பெட்ரோல் கொடுக்கத்தடை கொண்டு வருவார்கள் , என்பதை நான் ஒற்றுக் கேட்டேன் மற்றும் தகுந்த நடவடிக்கை எடுத்து பயங்கரவாதிகளின் தாக்குதலை தடுத்து நிறுத்தாவிட்டால் பிற நாட்டவர்ககள் உங்கள் தீவுக்கு வரமாட்டார்கள்  ” கிரக வாசி சொன்னார் . “உங்கள் கிரக வாசிகளின்  வேலை பிற கிரகங்களில் நடப்பதை ஒற்றுக் கேட்பதா”? “எங்கள் கிரகசிகளுக்கு  இந்த வான்மண்டலத்தில் உள்ள உயிரினங்களின் பாதுகாப்பில் அக்கறை உண்டு. அதனால் எங்கள் தொழில் நுட்பத்தையும் நேர வித்யாசத்தையும்  பாவித்து நடக்கப் போவதை முன் கூட்டியே அறிகிறோம் .” “ஐயோ கடவுளே ! ஏன் இப்படி இந்த  தீவில் நடக்கிறது “? “இன்னொன்று  உமக்குச் சொல்ல விரும்புகிறேன் . நீங்கள் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் கலியுகம் என்பது உமக்குத் தெரியுமா? உங்கள் கிரகத்தில் ஊழல், போர்கள், பாரபட்சம்,வன்முறை ,இனவாதம் ,மதவாதம் , பயங்கரவாதம்  தங்கள் சக்திகளைத் தவறான வழிக்குப் பயன்படுத்துதல், வேறுபாடு மற்றும் எண்ணிலடங்காத நோய்கள் இவைகள் எல்லாம் உங்கள் கிரகத்தில் தலைவிரித்தாடுமே. நீங்கள் என்ன தான் மருத்துவத் துறையிலும் அறிவியல் துறையிலும் முன்னேறினாலும் உங்கள் கிரகத்தின்  சமுதாயம் பின்னடைவில் தான் சென்று கொண்டிருக்கிறது. எந்த ஒரு நாடும் ஏதோ ஒரு வழியில் பாதிப்படைந்து கொண்டே இருக்கிறது . உமது தீவு குமரி கண்டத்தைப் போல்  கடலுக்குள் மறையக் கூடிய சாத்தியம் உண்டு. நாங்கள் அமெரிக்காவில்2001 ஆம் ஆண்டு  உலகவர்த்தக மையத்தைப் பயங்கர வாதிகள் தாக்கப் போகிறார்கள்  என்பது  பற்றி பல மாதங்களுக்கு முன் அறிவிப்பினை நாசாவுக்கு  கொடுத்தோம் . அவர்கள் கவனத்தில் எடுக்கவில்லை அதன் விளைவு தெரிந்தது தானே” “தெரியும்  என்ன  உமது கிரக வாசிகள் தீர்க்கத்தரிசியாக இருக்கிறார்களே...! அது எப்படி உங்களால் முடிகிறது “? “எமக்குள் இருக்கும் சக்தி  அதிகம். அதுவும் அல்லாமல் நான் முதலில் சொன்ன கால சார்பு கொள்கை படி ,  உங்கள் கிரகத்துக்கும் எங்கள் கிரகத்துக்கும் பல ஆண்டுகள் கால வித்தியாசம் உண்டு .உதாரணத்துக்கு உங்கள் கிரகத்தில் 2019 ஆம் ஆண்டு என்றால் எங்கள் கிரகத்தில்   2039 ஆண்டு. அதனால் உங்கள் கிரகத்தில் நடக்கப் போவது எங்களுக்கு நடந்த வரலாறு ஆகிவிடுகிறது புரிகிறதா”?  “அப்போ எப்போது மூன்றாவது உலக யுத்தம் எங்கள் கிரகத்தில்  எந்த ஆண்டில் வரும்” ? . “அனேகமாகக்  கலியுக முடிவில் அந்த யுத்தத்தின் முடிவில் பல நாடுகள் இல்லாமல் போய்விடும். அதுக்கு முன் உங்கள் கிரகத்துக்கு ஒரு விண்கல்லினால் பெரும் ஆபத்து வரலாம். அது எப்போது நடக்கும் என்று உடனே சொல்ல முடியாது ” கிரக வாசி சொன்னது. ”அதுக்கு என்ன செய்யலாம் ? “அது நடக்கும்  முன் உங்கள் கிரகத்தை நோக்கி வரும்  விண்கல்லினை உங்கள் கிரகத்தைத் தாக்காமல் திசைத்  திருப்பலாம் அல்லது சிதர வைத்துச் சிறு தூள்கள் ஆக்கலாம். அது உங்கள் தொழில் நுட்பத் திறமையைப் பொறுத்தது. ஏதும் உதவி தேவையாகின் எங்கள் கிரகத்தோடு  தொடர்பு கொள்ளுங்கள் ” . “வேறு  என்ன எங்கள் கிரகத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறீர்? “உங்கள் கிரகத்தில்  செல்வம் உள்ள பாலைவன நாடு ஒன்று இருக்கிறதா”? “ஆம் . அந்த நாட்டில் பெட்ரோலியக்  கிணறுகள் ஏராளம்” “ அங்கு அதர்மம் தலை  தூக்குவதால் வெகு விரைவில் அந்த நாட்டில் உள்ள பெட்ரோல் கிணறுகள் வற்றிப் போய் விடும் அதன் பின் அந்த நாடு பழைய நிலைக்கு வந்து விடும்”. “ஓரு கேள்வி ரிஷிகள்,  சித்தர்கள் , புத்தர், காந்தி போன்ற மகான்கள் பிறந்த  இந்தியாவுக்கு ஏதும் ஆபத்து ஏற்ற்படலாமா”? இந்தியத் தேசம் பிளவு பட வாய்ப்புண்டு. தெற்கில்  திராவிடர்கள் வாழும் பகுதிகள் ஒன்று சேர்ந்து புது திராவிட தேசம் தோன்றலாம் .  இந்தியா தொழில் நுட்பத்தில் எல்லா நாடுகளையும்  விட தெற்கில் முன்னேறிய நாடாகும்”. கிரகவாசி சொன்னான் “அதைக் கேட்க எனக்குச் சந்தோஷமாக   இருக்கிறது. “அதற்கு முன் அந்த நாடு வறுமையையும் ஊழலையும் ஒழித்து மக்கள் தொகையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும்” “சீனாவுக்கு என்ன நடக்கும்"? “சீனாவில் இரு பெரும் பூகம்பங்கள் நடக்க இருக்கிறது  ஆயிரக் கணக்கில்  மக்கள் இறப்பார்கள்” “அடேயப்பா இவ்வளவு அறிந்து வைத்திருக்கும்  உங்கள் கிரகத்துக்கு எங்கள் கிரகத்தை வேவு பார்ப்பது தான் வேலையா”? உங்கள் கிரகத்தைப் போல் இன்னும் உயிர்கள் வாழும் இரு கிரகங்கள் எங்கள் விண்மீன் குடும்பத்தில் உண்டு . அவர்களையும்   கவனித்து அவர்களின் கிரகத்தில் நடக்கப் போவதை எச்சரிக்கிறோம்”. “எதற்கும் என்னோடு கொண்டு எச்சரித்ததுக்கு நன்றி . முடிந்தால் எனக்குத் தெரிந்த அரசியல்வாதி  ஒருவருக்கு அறிவிக்கிறேன். அவர் என்னோடு படித்தவர் . ” சரி வெகு நேரம் உம்மோடு பேசி விட்டேன்.  உமது பெயரைக் கேட்க மறந்து விட்டேன்”   “என் பெயர் முனைவர் ரஞ்சன்”. “சரி நான் வருகிறேன் .   ரஞ்சன்   திரும்பவும் உம்மை எப்போ சந்திப்பேன் என்று எனக்குத் தெரியாது” கிரகவாசி சொல்லிற்கு. கணினியின் மின்சார தொடர்பு இல்லாமல் போயிற்று ரஞ்சன் கண் விழித்துப் பார்த்த போது  மின்சார தொடர்பு  இருந்தது .அவரின்  படம் மட்டுமே  மானிட்டரில் தெரிந்தது .அவர் கண்டது கனவா? என்ற சந்தேகம் அவருக்கு வந்தது . கதை14  விண்மீனின் விடுகை பிரபஞ்சம் தோன்றி சுமார் 14.5 பில்லியன் வருடங்கள் ஆகிறது என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு. இந்த பிரபஞ்சத்தில் சிறிதும் பெரிதுமாக கோடான கோடி விண்மீன்கள் தங்களின் குடும்பத்தோடு வாழ்ந்து வருகின்றன. இதில் சூரிய குடும்பமும் ஓன்று. அவ்விண்மீன், பூமி உட்பட பல கிரகங்களோடு இயங்கி வருகிறது. இக் கிரகங்களில் பூமியில் மாத்திரமே ஜீவராசிகள் வாழ்கின்றன என்ற கருத்தை முற்றிலுமாக விஞ்ஞானிகள்ஏற்கவில்லை. பிற கிரக வாசிகளுடன் தொடர்பு ஏற்படுத்தி உண்மையை அறிவதில் விண்இயற்பியல் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபடுகிறார்கள். அப்போது இரு விஞ்ஞானிகளுக்கு விண்மீன் ஒன்றில் இருந்து ஒரு அவசர செய்தி வருகிறது. அது என்ன வாணொலி சமிஞ்சைகள் மூலம் 1.34 செகண்ட் இடைவெளியில், 0.04 செகண்ட் அகலத் துடிப்போடு (Pulsar) வரும் முக்கிய செய்தி? ***** பீட்டரும்,  தோமசும் மொண்ட்ரியல் (Montreal) மக் ஹில் (McHill) பல்கலைக்கழகத்தில் வான்வெளி இயற்பியலில் (Astro Phusics) வெளி கிரக வாசிகள் வாழ்கிறார்களா?  இல்லையா ?  என்பதில் ஆராய்ச்சி செய்பவர்கள். தொலைநோக்கியின் ஊடாக விண்வெளியை அவதானித்து அங்கிருத்து வரும் சமிஞ்சைகளை மொழி பெயர்த்து. அதை அனுப்பவரோடு தொடர்புக்கொண்டு, உரையாடி. அவர்கள் பூவுலகில் வாழும் ஜீவராசிகள் போன்றவர்களா ? என்று அறிவதே அவர்கள் ஆராய்ச்சியின் முழு நோக்கம்.  மோர்ஸ் கோட் (Morse Code)சமிஞ்சைகள் போன்ற 1.34 செகண்ட்டுக்கு ஒரு தடவை வரும் சிக்னல்களைப் பகுப்பாய்வு செய்தால், அந்த செய்தியில் தகவலைப் படிக்க முடியும். எந்த வின்வெளி வாசிகள் பூமியோடு தொடர்புகொள்ள முயற்சிக்கிறார்கள் என்பதை அறியமுடியும்.   "இது பூமி. எங்களுடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் நீங்கள் யார்? எங்கே இருந்து அழைக்கிறீர்கள் ?. உங்களை அடையாளம் காட்ட முடியுமா”? பீட்டர் கேட்டார். "விண்வெளியில் உங்கள் சூரியனுக்கு அருகில் உள்ள நட்சத்திரத்தில் இருந்து நாங்கள் பேசுகிறோம் ". " ROSS 128 –ல் இருந்தா பேசுகிறீர்கள்?. பேசும் உமது பெயர் என்ன “? “நான் மெட்டி2000 (Meti2000 - Man Extra Terrestrial Intelegent2000) பேசுகிறேன். இங்கு வாழும் ஒவ்வொருவருக்கும் ஒரு எண் தரப்பட்டுள்ளது. அதை வைத்து தான் எம்மை அடையளம் காட்ட வேண்டும். அது சரி உம்மை அடையாளம் காட்டும்”. “ நான் பூமியில் இருந்து பீட்டர் பேசுகிறேன்.அருகில் இருப்பவர் தாமஸ். நாம் இருவரும் உம்மைப் போல் வான்வெளி ஆராய்ச்சியாளர்கள்” பீட்டர் பதில் சொன்னார். “உங்கள் பூமி என்ற கிரகத்தைப் பற்றி அறிந்துள்ளேன் . சூரிய குடும்பத்தில் ஒருவர் உங்கள் கிரகம் அழகான கிரகம் என்றும் , ஜீவ ராசிகள் வாழ்வதாக கேள்விப்பட்டேன். உண்மை தானே” மெட்டி2000 யின் பதில். “யார் உமக்கு சொன்னது”? . “என் தலைவர் மெட்டி1000 (METI1000) சொன்னார். அவர் ஆராய்ச்சியின்’ போது கண்டு பிடித்தார்”? . “நல்லது. நீர் இருக்கும் நட்சத்திரம் பற்றி கொஞ்சம் விபரம் சொல்ல முடியுமா? அது நட்சத்திரமா அல்லது கிரகமா"? "இது உங்கள் சூரியனைப் போல் ஒரு நட்சத்திரம். எங்கள் நட்சத்திரத்துக்கு சூரியனை போல் குடும்பம் இல்லை. உங்கள் சூரியனின் 0. 97 ஆரையளவு எங்கள் நட்சத்திரத்தின் ஆரை. ஆனால் உங்கள் சூரியனின் திண்மத்தில் அரை அளவு எங்கள் நட்சத்திரத்தின் திண்மம் . உங்கள் சூரியனுக்கு அருக்கே உள்ள நட்சத்திரம் எங்கள் நட்சத்திரம்”, மெட்டி 2000 பதில் சொன்னது. " யாம் அறிந்தோம் ROSS 128 என்று நாம் பெயரிட்ட உமது நட்சத்திரம் பூமியில் இருந்து சுமார் 11 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது என்று", தாமஸ் சொன்னார். "நீங்கள் பாவிக்கும் அலகுகளைப் பற்றி எங்களுக்குத் தெரியாது. ஒளி ஆண்டு என்றால் என்ன? அந்த தூர அலகு பற்றி எங்களுக்குத் தெரியாது. அது எவ்ளவு தூரம் என்று எங்களுக்குத் தெரியவில்லை". “ பூமியில் ஒளியின் வேகம் ஒரு செகண்டுக்கு 186,000 மைல். ஒளி இந்த வேகத்தில் ஒரு வருடத்தில் பயணிக்கும் தூரம் ஒரு ஒளி ஆண்டு. நீர் புத்திசாலி தானே, நாங்கள் பூமியில் பாவிக்கும் வான்வெளி அலகு பற்றி உமது தலைவரிடம் கேளும். எங்கள் கணிப்புப்படி உமது நட்சத்திரம் வெகு வெகு தூரத்தில் உள்ளது”.தாமஸ் சொன்னார். "ஆமாம். உங்கள் கிரகத்தைப் பற்றி சொல்லுமென்" மெட்டி2000 கேட்டார். "எங்கள் கிரகம் பூமி என்று அழைக்கப்படுகிறது. இந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கின்றன .இது சூரியனைச் சுற்றிவரும் அழகிய கிரகம். இங்கு வாயு, நிலம், தீ, ஈதர் அடங்கும்" பீட்டர்பதில் சொன்னார். "எங்கள் நட்சத்திரத்தில் இருப்பவர்கள் அதிக அறிவாளிள். உங்களை விட அதிக தொழில்நுட்பம் தெரிந்தவர்கள். இங்கு உள்ளவர்களின் சராசரி வயது 1000 ஆண்டுகள் " மிட்டி2000 சொன்னார். " அடேயப்பா ...!அவ்வளவு நீண்ட ஆயுளா?  உங்களோடு ஒப்பிடும் போது எங்களது பூமியில் 80 ஆண்டுகள் சராசரி வாழ்க்கை வாழ்கின்றனர். பிரபஞ்சம் தோன்றிய காலம் முதல் கொண்டு நேரம் ஆரம்பமாயிற்று. காலத்தை வருடம். மாதம். நாட்கள். மணித்தியாலம், நிமிடம்,  செகண்ட் என்று வகுத்துள்ளோம். " "உங்கள் கிரகத்தின் வயது என்ன" மெட்டி2000 கேட்டது " சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகள் ஆகிறது". "ஹ ஹா. ஹா.. பெரும் வெடிப்பு காரணமாக எங்கள் நட்சத்திரம் உருவாகி 9.5 பில்லியன் ஆண்டுகளாகிறது. பூமியோடு ஒப்பிடும்போது எமது நட்சத்திரம் மிக மூத்த நட்சத்திரம் " இதை ‘ சிகப்பு குள்ளன்’  (Red Dwarf) என்பார்கள்.” "எங்கள் பூமியில் பல நிறங்கள் உண்டு. பூமியில் அதிக கூடிய வேகம் ஒளியின் வேகம்.. இந்த வேகத்தை விட வேகமான வேகம் உங்கள் நட்சத்திரத்தில் இருக்கிறதா? " தாமஸ் கேட்டார். "ஒளி அலை வடிவம் உள்ளது .ஆகவே , அதிக வேகம் உள்ள அலைகள்        இருக்கலாம் "மெட்டி2000 பதிலளித்தார். "உங்கள் நட்சத்திரத்தில் வாழும் மக்களுக்கு உருவம் உண்டா"? " எங்களுக்கு எந்த வடிவமும் இல்லை. சக்தி வடிவத்தில் நாங்கள் அலைகளாய் செயலாற்றுகிறோம்." "இது வேடிக்கையாக இருக்கிறது. எனவே நீங்கள் , அழகான வடிவங்களை பார்த்து ரசிக்க முடியாது”. ”அழகினால் பிரச்சனைகள் தான் வரும். இங்கு உள்ளவர்களுக்கு ஆற்றலுக்கு எற்ற சக்தி உண்டு. ஆற்றலை தான் மதிக்கிறார்கள் ". ".இது சுவாரஸ்யமானதாக தெரிகிறது.” தாமஸ் சொன்னார். " சரி, நாம் ஒரு நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருக்கிறோம் . நான் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி சொல்ல வேண்டும் ". "என்ன செய்தி மெட்டி2000’?"ஒரு பெரிய, விண்கல் எங்கள் நட்சத்திரத்தை நோக்கி வந்தது. அது வந்து மோதி இருந்தால் எமது நட்சத்திரம் அழிந்து போய் இருக்கும். அதன் வேகத்தை நிறுத்த முடியவில்லை. நாங்கள், எங்கள் அதி தொழில்நுட்பத்தை பயன்படுத்தினோம்.  அது போகும் பாதையை மாற்றினோம் . அந்த விண்கல் இப்போ எமது கட்டுப்பாட்டில் இல்லை. அது உங்கள் கிரகத்தை நோக்கி அதிக வேகத்தில் வந்து கொண்டு இருக்கிறது. நீங்கள் அதன் பாதையை மாற்றுங்கள் அல்லது அது பூமியைத் தாக்காமல் இருக்க எதாவது உடனே செய்யுங்கள். எங்கள் உதவி தேவைப்படின் என்னோடு தொடர்பு கொள்ளுங்கள்” மெட்டி2000 சொல்லிற்று ” . "மெட்டி2000 உங்கள் அவசரச் செய்திக்கு நன்றி. உதவி’ தேவைப்பட்டால் உம்மோடு தொடர்பு கொள்கிறோம்” பீட்டர் சொன்னார். *****   பீட்டரும் தாமசும் தங்கள் பேராசிரியர் ஜேமீஸ் மூலம் நாசாவுக்கு (NASA) செய்தியை அறிவித்தனர். நாசாவும் உடனடியாக பூமி நோக்கி வரும் விண்கல் இரு ஒளி ஆண்டு தூரத்தில் வேகமாக வந்து கொண்டு இருப்பதாக கணித்தனர். அதன் பாதையை திசை திருப்பி, வியாழ கிரகத்தை நோக்கி அனுப்ப முடிவு எடுத்தனர். வியாழ கிரகம் பல விண்கற்களின் தாக்குதலுக்கு உட்பட்டு பழகிய பெரிய கிரகம். முடிந்தால் பூமி நோக்கி வரும் விண்கல்லை சிறு பகுதிகளாக சிதைக்கவும் முடிவு எடுத்தனர். காலம் தாமதிக்காமல் ஒரு ராக்கெட்டை வெடி மருந்துகள் உடன் விண்கல் நோக்கி அனுப்பினர். சில மாதப் பயணத்தின் பின் அந்த ராக்கெட் விண்கல்லோடு ,மோதி அதைச் சிதைத்தது. சிதைந்த விண்கல்லின் பகுதியான 400 மீ நீளமுள்ள கல், சஹாரா பாலைவனத்தை தாக்கியது. உயிருக்கு அழிவு இல்லை . விண்கல்லின் சிதைந்த மற்றைய கற்கள் உராய்வு விசையினால் எரிந்து சாம்பலாயின. இதன் பின் ROSS 128 நட்சத்திரத்தோடு நாசா தொடர்பு கொண்டு பூமியை அழிவில் இருந்து காத்ததற்க்கு நன்றி தெரிவித்தது. தொடர்பு தொடர்ந்தது...   ****   +-----------------------------------------------------------------------+ | கதை 15 : வானத்தின்  மீது  மயில் ஆடக் கண்டேன் | +-----------------------------------------------------------------------+ என்னோடு  கொழும்பில் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் பெளதீகத்  துறையில்  படித்தவன் ரமேஷ் . இறுதி பரீட்சையில் முதலாம் நிலையில் சித்தியடைந்தவன் .  நான் இரண்டாம் உயர் நிலையில் சித்தியடைந்தவன் .அவன் புலம் பரிசு பெற்று  லண்டன் பல்கலைக்கழகத்தில் வானியல் துறையில் ஆராய்ச்சி செய்து  முனைவர் பட்டம்  பெற்றவன் . அவன் காதலித்தது  கொழும்பு   பல்கலைக்கழகத்தில் ஒரு பிராமணப் பெண் மீராவை . கர்நாடக  இசை  படித்தவள் .படிப்பிலும் கெட்டிக்காரி . அவளை கொழும்பு பல்கலைக்கழகத்தில்  நடந்த இசை விழாவில் ரமேஷ்  மிருதங்கம் வாசிக்கும் போது  மீரா  பாடியபோது  அவர்களிடையே  ஏற்பட்ட  சந்திப்பு தொடர்ந்து காதலாகா மலர்ந்தது . இரு இசை கலைஞர்களுக்கும் இடையே  இசை, அவர்களின்  உறவை வலுப்படுத்தியது.  ரமேஷ் பிராமணன் அல்லாதவன். வல்வெட்டிதுறை மீனவர் இனத்தைச்  சேர்ந்தவன் .அதனால் மீராவின் பெற்றோர் அவர்களின் திருமணத்துக்குச் சம்மதிக்கவில்லை. அவர்களை மீறி மீராவை திருமணம் செய்து கொண்டு லண்டனுக்கு மேல் படிப்புக்கு  ரமேஷ்  சென்றான் . பல வருடங்களுக்கு பின்  ரமேஷ் தம்பதிகளை  பிரிட்டிஷ்  கொலம்பியாவில் நான் சந்திக்க நேரிட்டது.    நான் தொலை தொடர்பு துறையில் வேலை செய்ய ஆரம்பித்து அதன் பின் பல நாடுகளில் அத்துறையில் உயர் அதிகாரியாக வேலை செய்து, இறுதியில் கனடாவில்  மேற்கில்  உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில்  குடும்பதோடு குடிபுகுந்தேன் . கனடா ஒரு பரந்த தேசம். கனடவின்  பூர்வ குடியினருக்கு என்று ஒரு தனி கலாச்சாரம், மரபு வழிவந்த  பழக்க வழக்கங்கள் உண்டு. அவர்கள் இயற்கை விரும்பிகள் .                    செவ்விந்தியர்கள் வாழ்ந்த  இடங்களை ஐரோப்பியர்கள் ஆக்கிரமித்து அவர்களை முதல் தேசம் என்று பெயரிட்டு  குறுகிய பகுதிகளுக்குள் சில சலுகைகள் கொடுத்து குடி அமர்த்தினர்.    என்னுடன்  பிரிட்டிஷ் கொலம்பியாவில்  உள்ள ‘டெலஸ்’  என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வேலை செய்தவன் வாவாட் (Waawaate) என்ற ‘ மஞ்சள் கத்தி’  ( Yeloww Knife)  என்ற  வடக்கில் உள்ள ஊரை சேர்ந்த பூர்வ குடிமகன் . அவனின் பெயரின் அர்த்தம் ‘ வடக்கு ஒளி’ . அந்த   பொருத்தமான பெயரை  அவனின் பெற்றோர் வைத்திருந்தனர்  . வாவாட்  என் நண்பணாவான். அவனின்  வேண்டுகோளுக்கு  இணங்க இரு தடவை குளிர் பிரதேசமான அவனின் ஊருக்கு சென்றேன் .அங்கு நான் தினமும் இரவில் வாவாட்டுடன் பார்த்து மகிழ்ந்தது  வடக்கு ஒளி என்ற ‘ அரோரா போரியாலிஸ் ’(aurora borealis). பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள வடக்கு விளக்குகளைப் பார்க்க, வான்கூவரிலிருந்து வெகு தொலைவில் செல்ல வேண்டும். முஞ்சோ ஏரி , மாகாண பூங்கா போன்ற இடங்களில் அவற்றைக் காண சிறந்த இடம்.  ஆண்டு முழுவதும் ‘அரோரா போரியாலிஸ்’ என்ற  வானத்தில்  வர்ண  ஜல்னகளை காணலாம் . அதை  கண்டவுடன்  எனக்கு  என் நண்பனின் மனைவி மீரா தன் இனிய குரலில் அடிக்கடி பாடும் “ வானத்தின் மீது  மயிலாடக் கண்டேன்  மயில் குயிலாச்சுதடி” பாடல் தான் என் நினைவுக்கு வரும் . என் மனவிக்கு பாட வராது ஆனால் வாதிட  நல்லாய்  வரும். என் குடும்பமும் ரமேஷின் குடும்பமும்  வடக்கு ஒளியை  பார்க்க வாவாட்டின் மஞ்சள்  கத்தி என்ற ஊருக்கு சென்றோம்.‘ யெல்லோனைஃப் ’என்பது வடமேற்கு பிராந்தியங்களின் தலைநகரம் மற்றும் கனடாவின் வடக்கில் மிகவும் துடிப்பான மற்றும் மாறுபட்ட சமூகங்களில் ஒன்றாகும். சுமார் 20,000 மக்களைக் கொண்ட  ஊர் . வான்கூவரில்  இருந்து  வடக்கே  சுமார்  2250  கி .மீ  தூரத்தில்  உள்ள  குளிர்ந்த ஊர்.  விமானத்தில்  மூன்று மணித்தயாலப்  பயணம் .   யெல்லோனைஃப் மற்றும் அதைச் சுற்றியுள்ள நீர்நிலைகள் ஒரு காலத்தில் உள்ளூர்  செவ்விந்தியர்கள் அல்லது "யெல்லோனைஃப் இந்தியன்ஸ்" என்று அழைக்கப்பட்டன.  அவை இன்று ‘ யெல்லோனைவ்ஸ் முதலாம் நேஷன்’  என இணைக்கப்பட்டுள்ளன.  அவர் ஆர்க்டிக் கடற்கரைக்கு அருகிலுள்ள செப்பு வைப்புகளிலிருந்து தயாரிக்கப்பட்ட கருவிகளை வர்த்தகம் செய்தார்கள். என்குடும்பமும்  ரமேஷ் குடும்பமும்  வாவாட்யின் தந்தை  ஒக்காவா   சந்தித்த போது  அவர் எங்களை மகிழ்ச்சியுடன்  வரவேற்று உணவு தந்தார்  .அந்த இன மக்கள் பெரும்பாலான உணவுகளை விவசாயம் செய்து, வேட்டையாடி, சேகரித்தனர். பயிரிட்ட பூசணிக்காய்கள், , சூரியகாந்தி மீன்  மற்றும் புகையிலை ஆகியவை அவர்களின் உணவு. வாவாட்யின் தந்தை  ஒக்காவாயுடன் நாம் பேசும் போது “அந்த வானத்தில்  எம் இனத்து மறைந்த பெண்களின் ஆவிகள் பலவர்ண ஆடைகள்  அணிந்து குளிர் காலத்தில்  நடனம் ஆடி தமது உடலை  சூடாக வைத்திருக்கிறார்கள் ”   என்று அவர் சொன்னார் . “யார் அந்த தேவதைகள் ” என்று அவரிடம்  ரமேஷ் கேட்டான் . “அவர்கள் எங்கள் நிலத்தை ஆக்கிரமித்த வெள்ளை இனத்தவர்களை  எதிர்த்து போராடி  உயர் இழந்த  ‘ பவ் வாவ்’   என்ற  நடனத்தின் ஆட்டக்காரிகளின் ஆவிகள். “ பவ் வாவ்  (Pow Wow) என்பது என்ன நடனம் ஐயா” நான் கேட்டேன். “பவ் வாவ் என்பது  பல்வேறு பூர்வீக அமெரிக்க சமூகங்களால் நடத்தப்படும் ஒரு சமூகக் கூட்டமாகும். ஒரு நவீன பவ் வாவ் என்பது பூர்வீக அமெரிக்க மக்களுக்கு அவர்களின் கலாச்சாரங்களை சந்திக்கவும் நடனமாடவும், பாடவும், சமூகமயமாக்கவும், ஒரு குறிப்பிட்ட வகை நிகழ்வாகும். பவ் வாவ்ஸ் தனிப்பட்ட அல்லது பொதுவாக  இருக்கலாம். பல வகையான பாரம்பரிய நடனங்கள், இசை மற்றும் ரெஜாலியா ஆகியவற்றுடன், பெரும்பாலும் குறிப்பிடத்தக்க பரிசுத் தொகை வழங்கப்படும். பவ் வாவ்ஸ் ஒரு நாள் நிகழ்விலிருந்து நீளமாக மாறுபடும் முக்கிய பவ் வாவ்ஸ் வரை ஒரு வாரம் வரை இருக்கலாம். அது தான்  வானத்தில் இந்த நடன பெண்களின்  ஆவிகள் தினமும் ஆடி மகிழ்கின்றன”  என்றார்  ஒக்காவா. அவருக்கு வயது தொன்னூறுக்கு மேல் இருக்கும் . அவர் முகத்தில் சுருக்கு விழவில்லை அனால் செவ்விந்தியரகளை பிரதிபலிக்கும்  மரபு  வழி  வந்த கழுகு  இறகுகள் உள்ள தொப்பி அணிந்திருந்தார். அவர் சொன்னதை  கேட்டுக் கொண்டிருந்த  ரமேஷ்  தனது துறை  சம்பந்தம் உள்ள   வான்வெளி சம்பவம் என்பதால் அதற்கான  அறிவியல் விளக்கத்தை  அவருக்கு எடுத்துச் சொல்ல ஆரம்பித்தான் .   “பூமியின் வளிமண்டலத்தில் உள்ள  பல வளிமண்டல புத்திசாலித்தனமான ஒளியைக் குறிக்கும் அரோரா போரேலிஸ், வட லவுட்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது .இது பூமியின் வளிமண்டலத்தில் உள்ள வாயு துகள்களின் மோதல் காரணமாக சூரியன் வளிமண்டலத்தில் இருந்து எலக்ட்ரான்களை சார்ஜ் செய்யப்படுகிறது. அரோரா போரியலிஸ் பெரும்பாலும் காந்த வட துருவத்திற்கு அருகில் உள்ள உயர் அட்சரேகைகளில் காணப்படுகிறது. ஆனால் அதிகபட்ச நேரத்தின் போது அவை ஆர்க்டிக் வட்டம்  ( Artic Circle) மிக தொலைவில் காணப்படுகின்றன . அரோரா போரியலிஸ் அல்லது வடக்கு விளக்குகள் ,சில நேரங்களில் தெற்கு அரைக்கோளத்தில் தெற்கு ஒளி என்று அழைக்கப்படுகிறது. அரோரா ஆரேராலிஸ், அரோரா போரியாலிஸ் போலவே தோற்றமளிக்கிறது, மேலும் அது வானத்தில் நிற்கும் விளக்குகள், நடனம் போன்ற தோற்றம். அரோராவை பார்க்க சிறந்த நேரம் மார்ச் முதல் செப்டம்பர் வரை அன்டார்க்டிக் வட்டம். இந்த காலப்பகுதியில் மிகவும் இருள் அனுபவிக்கிறது. அரோரா அஸ்டிராலிஸ் பெரும்பாலும் அரோரா போரியாலிஸ் போலக் காணப்படுவதில்லை, ஏனெனில் அவை அன்டார்க்டிக்கா மற்றும் தென்கிழக்கு இந்திய பெருங்கடல் ஆகியவற்றில் அதிக தோன்றும் . “அரோரா போரியலிஸ் எவ்வாறு இயங்குகிறது” ?  வாவாட் கேட்டான் “பூமியின்  வளிமண்டலத்தில் சூரிய வளிமண்டலம் மற்றும் அதன் குவிந்த துகள்கள் ஆகியவை அதன் காந்தச் சக்தியால் பூமியின் துருவங்களை நோக்கி இழுக்கப்படுகின்றன. வளிமண்டலத்தின் ஊடாக நகரும்போது, சூரியன் சார்ஜ்துகள்கள் பூமியின் வளிமண்டலத்தில் காணப்படும்ஆக்ஸிஜன்மற்றும்நைட்ரஜன் அணுக்களுடன் மோதிக்கொண்டிருக்கின்றன. இந்த மோதல் எதிர்விளைவு அரோரா போரியாலிஸ் ஆகும். அணுக்கள் மற்றும் சார்ஜ் துகள்கள் இடையே மோதல்கள் பூமியின் மேற்பரப்பில் 20 முதல் 200 மைல் (32 முதல் 322 கிமீ) வரை நிலவுகின்றன மற்றும் அரோராவின் நிறத்தை தீர்மானிப்பது  அணுவின் உயரமும் வகைகளும் ஆகும். பின்வருவனது வித்தியாசமான ஆரோரா நிறங்களுக்கான காரணங்களைக் குறிப்பிடுவது மற்றும் அது எவ்வாறு செயல்  படுகிறது என்பதை பொறுத்தது : இதோ சில நிறங்கள் தோன்றும்  உயரம் சிவப்பு - ஆக்ஸிஜன், பூமியின் மேற்பரப்புக்கு மேலே 241 கி.மீ பச்சை - ஆக்சிஜன், பூமியின் மேற்பரப்புக்கு 241 கி.மீ வரை ஊதா - நைட்ரஜன், பூமியின் மேற்பரப்பில் 96 கி.மீ மேல் புளூ - நைட்ரஜன், பூமியின் மேற்பரப்பில் 96 கி.மீ வரை வடக்கு விளக்கு மையம் படி, பச்சை அரோரா போரேலிஸ் மிகவும் பொதுவான நிறம், சிவப்பு குறைந்த நிறம் . விளக்குகள் இந்த பல்வேறு வண்ணங்களில்  கூடுதலாக, தோன்றும், வானத்தில் பல்வேறு வடிவங்களில் நடனம் ஆடும் . ஏனென்றால் அணுக்கள் மற்றும் சார்ஜ் துகள்கள் இடையே மோதல் தொடர்ந்து பூமியின் வளிமண்டலத்தின் காந்த நீரோட்டங்கள் மற்றும் இந்த மோதல் எதிர்வினைகள் நீரோட்டங்கள் தொடர்ந்து மாற்றுவதால். இன்றைய நவீன தொழில்நுட்பம், சூரிய ஒளியின் வலிமையை கண்காணிக்க முடியும் என்பதால், அரோரா போரியலிஸின் பலத்தை விஞ்ஞானிகள் கணிப்பதை அனுமதிக்கிறது. சூரியன் வளிமண்டலத்தில் இருந்து அதிக சூடேற்றப்பட்ட துகள்கள் பூமியின் வளிமண்டலத்தில் சென்று நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் அணுக்களுடன் எதிர்வினை ஏற்படுவதால் சூரிய வலயம் வலுவான உட்செலுத்துதல் செயலாக இருக்கும். ‘உயர் உமிழ் நடவடிக்கை ’என்பது அரோரா போரலிலை பூமியின் மேற்பரப்பின் பெரிய பகுதிகள் மீது காணலாம். அரோரா போரியாலிஸிற்கான கணிப்புகள் வானிலை போலவே தினசரி முன்னறிவிப்புகளாக காட்டப்படுகின்றன. ஒரு சுவாரஸ்யமான கணிப்பு மையம் அலாஸ்கா பல்கலைக்கழகம், ‘ ஃபேர்பேங்க்ஸ்  ஜியோபிசிக்கல் இன்ஸ்டிடியூட்’   ( Geophysical  Institute) மூலமாக வழங்கப்படுகிறது. உன்னதமான நடவடிக்கைகளின் உச்சம் ஒரு பதினொரு வருட சூரிய  சுழற்சியைப் பொதுவாகப் பின்பற்றுகிறது. சூரியன்களின் காலங்களில் சூரியன் மிகுந்த காந்த செயற்பாடுகளைக் கொண்டிருக்கிறது மற்றும் சூரியக் காற்று மிகவும் வலுவாக உள்ளது. இதன் விளைவாக அரோரா போரியலிஸ் பொதுவாக இந்த நேரத்தில் மிகவும் வலுவாக உள்ளது. இந்த சுழற்சியைப் பொறுத்து 2013 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நடுநிலை நடவடிக்கைகளுக்கான சிகரங்கள் ஏற்படும். ” எந்த காலம்  அரோரா போரியாலிஸைப் பார்க்க சிறந்த  காலம் “? வாவாட்  கேட்டான் . “குளிர்காலம் பொதுவாக அரோரா போரியாலிஸைப் பார்க்க சிறந்த நேரமாகும், ஏனென்றால் ஆர்க்டிக் வட்டம் மற்றும் அநேக தெளிவான இரவுகளை விட அதிகமான இருண்ட காலம் இருப்பதால்.   அரோரா போரேலிஸைப் பார்ப்பதில் ஆர்வமுள்ளவர்களுக்காக அடிக்கடி குளிர்காலத்தில் நீண்ட காலத்திற்கு இருள், தெளிவான வானம் மற்றும் குறைந்த ஒளி மாசுபாடு ஆகியவற்றைக் காண்பிப்பதால் சில நேரங்களில் அவை அடிக்கடி பார்க்கும் இடங்களாகும். இந்த இடங்களில் அலாஸ்காவிலுள்ள தேசிய பூங்கா, கனடாவின் வடமேற்குப் பிரதேசங்களில் உள்ள யெல்ல்கினைஃப் மற்றும் டிராம்சோ, நோர்வே (லேடன்) போன்ற இடங்களும் அடங்கும்”. “பல எமது  பூர்வீக தொன்மங்கள் வானில் மர்மமான விளக்குகள் பற்றி பேசுகின்றன, சில மத்தியகால நாகரிகங்கள் அவர்கள் எதிர்கொள்ளும் ‘ போர் மற்றும்  அல்லது பஞ்சம் பற்றிய அடையாளங்கள்’  என்று அவர்கள் நம்புவதைப் போலவே சில மத்தியகால நாகரிகங்களும் பயந்தனர். பிற நாகரீகங்கள் அரோரா போரேலிஸ் அவர்களின் மக்கள் ஆவி, நம்பகமானவர்கள், சால்மன், மான், சீல்ஸ் மற்றும் திமிங்கலங்கள் (வடக்கு விளக்கு மையம்) போன்ற விலங்குகளாகும் என நம்பினார்”  என்றார், ஒக்காவா.   இன்று அரோரா பொரியலிஸ் ஒரு முக்கியமான இயற்கை நிகழ்முறையாகவும், ஒவ்வொரு குளிர்காலம் மக்கள் வடக்கிலும் உள்ள நிலப்பரப்புகளில் காணப்படுவதாகவும், சில விஞ்ஞானிகள் அதைப் படிப்பதற்காக அதிக நேரம் செலவிடுகின்றனர். அரோரா பொரியலிஸ் உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.” வடக்கு ஒளியை பற்றிய  பல   அறிவியல் சார்ந்த  விளக்கத்தை ரமேஷ்  தெளிவாக எடுத்து  சொன்னது  முதலாம் தேசத்து பூர்வ  குடிமக்கள்  ஒருவர்  முகத்தை  ஒருவர்  பார்த்தப்படியே  உறைந்து  போய் இருந்தனர் .   ****   +-----------------------------------------------------------------------+ | கதை 16 : காலக்காணொளி | +-----------------------------------------------------------------------+ முகுந்தன்  மென் பொருள் துறையில் முனைவர் பட்டம் பெற்று தமிழ் நாட்டு  கோயம்புத்தூரில் உள்ள எக்ஸ்ப்ளோரர்   (Explorer) என்ற அமெரிக்க நிறுவனம் ஒன்றில்  மக்களை  திருப்திப் படுத்தும்  புது செயல்களை புரியும் மின் கருவிகளைக் கண்டு பிடிக்கும் பகுதிக்கு அதிகாரியாக இருந்தார்  . அவரின் பூர்வீகம்  திருநெல்வேலியில் உள்ள எட்டையபுரம்.  தான் மகாகவி  சுப்பிரமணிய பாரதியார்  வழிவந்தவன் என்று தன்னுடன்  திருச்சி  செயின்ட்   ஜோசப்  கல்லூரியில் படித்த  நண்பர்களுக்கு சொல்லிக் கொள்வார் . பாரதி கண்ட கனவு போல் தானும் புதுமையாக எதையாவது  ஒன்றைக் கண்டு பிடிக்க  வேண்டும் என்பது வினோதனின்   கனவு.    முகுந்தன்  காணொளி  துறையிலும் முனனைவர் பட்டம் பெற்றவர் சென்னை எம். ஐ . டி யில் முதலாம் தரத்தில் சித்திபெற்று  கோயம்புத்தூரில்   உள்ள  காணொளி மின் பொருள் உற்பத்தி செய்யும்  எக்ஸ்ப்லோரர் (Explorer) என்ற அமெரிக்க நிறுவனத்தில் வேலை செய்த போது  அவருடன்  ஒன்றாக மென் பொருள்  துறையில் வேலை  செய்த வசந்தாதேவி    என்ற   கோவையில்  பிறந்த    பெண்ண க்  காதலித்து  திருமணம் செய்தார். ****    ஒரு நாள் வீட்டில்  இருந்து   ஒரு  ஆங்கிலப் பத்திரிகைஒன்றை  முகுந்தன் வாசிக்கும்  போது  இந்தியாவை   பிரிட்டிஷ் ஆட்சி செய்த   பத்தொன்பதாம்  நூற்றாண்டில்  எடுத்த மதராஸ்  நகரத்தின்  சில  கருப்பு வெள்ளை படங்களை பார்த்தார் . பொருட்களை ஏற்றி  செல்லும் இரட்டை  மாட்டு  வண்டிகள்,   வெள்ளை இனத்தவரை ரிக்ஷாக்களில் இழுத்துச்   செல்லும்  தமிழர்கள்.  மூட்டைகளோடு வண்டிகளைத் தள்ளி செல்லும்  கூலிகள் ,ஒரு சில பழைய மாடல்  மோட்டார்   வண்டிகள் , சைக்கிளிலும்  குதிரை  வண்டிகளிலும்   மக்கள் பயணிக்கும் காட்சிகள் எல்லாமே அவருக்கு அதிசயமாக இருந்தது சுமார் இரு நூறு ஆண்டுகளுக்கு முன் எடுத்தப்படங்கள்  அவை;  காணொளி அல்ல.   1639 ஆம் ஆண்டில்  பிரிட்டிஷ் கிழக்கு  இந்திய  நிறுவனத்தின் தொழிற்சாலைகள் மெட்ராஸ்  ஜார்ஜ் கோட்டை நிறுவப்பட்ட பின்னர், நெசவாளர்கள் மற்றும் வணிகர்கள் பல தென்னிந்திய மையங்களிலிருந்து ஈர்க்கப்பட்டனர். மேலும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வடக்கே கரையோரத்தில் குடியேறினர்.  இதை   வெள்ளையர்   வாசித்த  ஒயிட்  டவுனுக்கு   எதிராக பிளாக் டவுன்என்று அழைக்கப்பட்டது . மெட்ராஸில் உள்ள பிளாக் டவுனின் புகைப்படம் அவை , 1851 இல்  ‘ஃபிரடெரிக் ஃபீபிக்  ’என்பவர் எடுத்தது. ‘மெட்ராஸ்’ என்ற பெயர்   சென்னை   என்ற மெட்ராஸின் கரையோரப் பகுதியில் வாழ்ந்த ஒரு மீனவர் குழுவின்  தலைவரான மெட்ராசனிலிருந்து வந்தது   என்பது  ஒரு விளக்கம் .மெட்ராஸ் 1639 இல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் நிறுவப்பட்டது, இது இந்தியாவின் முதல் முக்கியமான ஆங்கிலக் குடியேற்றமாகும். பிளாக் டவுன் முதலில் பழைய பூர்வீக இடமாக  இருந்து, செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் சுவர்களுக்கு வெளியே வடக்கே கடற்பரப்பில் வளர்ந்தது. 18 ஆம் நூற்றாண்டில்,  ஐரோப்பியர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து வெளியேறி பிளாக் டவுனுக்கு நகர்ந்தனர். இது ஐரோப்பிய பிரிவில் காலனித்துவ கட்டிடங்களைக் கொண்ட ஒரு தெருவின் பார்வை. “மெட்ராஸ் வளர்ந்தவுடன், பிளாக் டவுன் என்ற பெயர் மறைந்து  விட்டது ”என்று அந்த பத்திரிகையில்  கருப்பு  வெள்ளை நிற  படங்களுடன் கட்டுரை  எழுதப்  பட்டு இருந்தது. முகுந்தன்  வாசிப்பதை  திடீர்  என்று   நிறுத்தி விட்டு  தன் மனைவி வசந்தாவுக்கு  சொன்னார்,   “வசந்தா எனக்கு இந்த  படங்களைப் பார்தவுடன்  திடீர் என்று ஒரு  யோசனை தோன்றுகிறது”.   ” என்ன யோசனை அத்தான் “? வசந்தா  கேட்டாள் . ” கடிகாரம்  டிக் டிக்  என்று காலம் போய் கொண்டு இருக்கிறது. முன்பு  நடந்ததை  சீக்கிரம் நாம்  மறந்து  விடுகிறோம் .ஒரு காலத்தில் கல்வெட்டுகளிலும் ஒலைகளிலும் , பாடல்களிலும்,  குகை  சித்திரங்கள் மூலமும்  அப்போது இருந்த காட்சிகளை தங்களால்  இயன்றளவு   முன்பு  வாழ்ந்தவர்கள் விவரித்து   காட்டி இருக்கிறார்கள் . இந்த பதிவுகள் சில இன்னும்  கண்டு  பிடிக்கப் படவில்லை .     பல  நூற்றாண்டுகளுக்கு  முன்னர்   ஆட்சி  செய்த சேர ,சோழ,பாண்டிய, பல்லவ   முஸ்லீம், பிற  தேசத்து  ஆட்சியாளர்களின்    உண்மையான   தோற்றம்  எப்படி  இருக்கும்  என்று இப்போது  வாழும் ஒருவருக்கும் தெரியாது.சிலர்  அதை  சிலைகளிலும்   சித்திரத்திலும் படைத்துவைத்திருக்கிறார்கள் . அதுமட்டுமல்ல ,சரித்திர  நாவல்களில் உள்ள படங்கள்  ஓவியரின் கற்பனையில்  வரையப்படது.  அவை அசையா காட்சிகள்.  “நான் ஒரு புது காலசக்கர காணொளி   கருவி  ஒன்றை கண்டு கண்டு பிடிக்கப்  போகிறேன்” .   “என்ன   சொல்கிறீர்கள்    வினோதன் அதன்  பயன் என்ன”  ?வசந்தி    கேட்டாள்.   “ திராவிட  நாடுகளில்   தமிழ்நாடு ,ஆந்திரா .கன்னட ,கேரள ஆகிய பகுதிகளில்  சேர ,சோழ . பாண்டிய,  பல்லவ,    நாயக்கர்,  முஸ்லீம்  மன்னர்கள் காலத்தில்  மக்கள்  எப்படி   வாழ்ந்தார்கள்   அவர்களின் தோற்றம் எப்படி  இருந்தது,  நடந்த பல   போர்கள்  எப்படி  சினிமாவில்  பார்த்தது    போல்  அல்லாமல் உண்மையில் நடந்தது போல்  இருந்தது,   அரசர்கள் மக்கள்   போருக்கும்  போக்குவரத்துக்கும்   பாவித்த வாகனங்கள் ,மக்கள் ,அரசர்கள்  பாவித்த ஆடைகள் ,அரசர்களின் போர் ஆயுதங்கள்,    அவர்களின் அரச மாளிகைகள்  , மக்களின் வீடுகளின்  அமைப்பு, பெண்களினதும்  ஆண்களினதும்   தோற்றம்  என்பதை  காலசக்கரத்தில் பின் நோக்கிச் சென்று காணொளியில் எப்படி  உண்மையில்  இருந்ததை   காட்டும் கருவி ஒன்றைக் கண்டுப் பிடிக்க போகிறேன்”.  “மாயாபஜார்  படத்தில் கிருஷ்ணர்   வத்சலாவுக்கு பரிசாக கொடுத்த டிவி   போன்றதா”?  வசந்தா  சிரித்தபடியே  வினோதனிடம் கேட்டாள் . “  உமக்கு  இன்னும்  தமிழ்  சினிமா   ஆசை   விட் டு போகவில்லை .அது மாதிரி என்று  ஊகித்து  கொள்ளும் ; நான்  கிருஷ்ணர் இல்லை , தற்கால விஞ்ஞானிமுகுந்தன்.”   ‘’ இப்பொ  கூகுல் ஊர்களின் படம் இருக்கிறதே அதே  போன்றதா”?;   “கூகில்பூமியின்   வான்வழி படங்கள்  செயற்கைக்கோள்கள் மற்றும் விமானங்களில் உள்ள கேமராக்களால் எடுக்கப்படுகின்றன. அவை ஒவ்வொரு படத்தையும் ஒரு குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் சேகரிக்கின்றன.  இந்த படங்கள் ஒரு தடையற்ற படமாக காட்டப்படும். மேலும் உங்கள் கணினி கேசரை வரைபடத்தில்  நகர்த்தும்போது தேதி மாறக்கூடும்.   நான் கண்டு பிடிக்கும்  கருவி அந்த  காணொளி படங்களை     எனது தமிழ் நாட்டில் உள்ள இடங்களை  மட்டுமே காட்டும். அதுவும் கி . மு   பத்தாம்   நூற்றாண்டு மட்டுமே பின் நோக்கிச் செல்லும்   .ஆனால்  இனி முன் நோக்கி   சென்று  நடக்கப்  போவதை  காட்டாது ”.    ” அப்போ  குமரி  கண்டம்  மறைந்த விதத்தை  காண  முடியாதா”? “ நான்சொன்ன    சுமார்  மூவாயிரம் காலத்துக்குள்  நடந்த  கடல்  கோள்களைப்  பார்க்கலாம்.     உதாரணத்துக்கு  2004 ஆண்டில்  நடந்த சுனாமி  கி .மு பூம்புகாரை   கடல்  கொண்டதையும்,  தனுஷ்கோடி  புயலில்   மறைந்ததை   காணலாம்.  நான்  சொன்ன  காலத்துக்குள்   இராமாயணம் நடந்திருக்காவிட்டால்  இராமர்   அணை    கட்டியதைப்  பார்க்க   முடியாது. தமிழ்நாட்டில், கற்காலம் கி.மு. 2500 இல் வந்தது. கற்கால மனிதர்கள் தங்கள் கற்கருவிகளை அரைத்து மெருகூட்டுவதன் மூலம் சிறந்த வடிவங்களில் உருவாக்கினர். பலர் ஆற்றின் அருகே வடக்கு தமிழ்நாட்டில் பண்டைய எழுத்துக்களைக் கொண்ட ஒரு கற்கால ‘கோடாரி தலை’  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கற்கால மனிதர்கள் பெரும்பாலும் சிறிய தட்டையான மலைகள் அல்லது அடிவாரத்தில் சிறிய, அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நிரந்தர குடியிருப்புகளில் வாழ்ந்தனர். ஆனால் மேய்ச்சல் நோக்கங்களுக்காக அவ்வப்போது இடம்பெயர்ந்தனர். அவர்கள் இறந்தவர்களுக்கு சரியான அடக்கங்களை அடுப்புகள் அல்லது குழிகளுக்குள் கொடுத்தார்கள். அவர்கள் சில கருவிகள் அல்லது ஆயுதங்களைத் தயாரிக்க தாமிரத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். இரும்பு யுகத்தின் போது மனிதர்கள் கருவிகளையும் ஆயுதங்களையும் தயாரிக்க இரும்பைப் பயன்படுத்தத் தொடங்கினர்.. பாண்டியர்கள் ஆரம்பத்தில் இந்திய தீபகற்பத்தின் தெற்கே முனையிலுள்ள ‘கோர்காய்’ என்ற துறைமுகத்திலிருந்து ஆட்சி செய்தனர். பிற்காலத்தில் மதுரைக்குச் சென்றனர்.இவை  எல்லாம்  நான்  கண்டுபிடிக்கும்  கருவியில்  காணலாம்” முகுந்தன்  வசந்தாவுக்கு  சொன்னார்.      “அப்போ  தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டிய விதம், ராஜ  ராஜா சோழன்  இறத்த  விதம் ,கண்ணகி மதுரையை   எரித்த நாள் , ராஜ ராஜ  சோழனின் இலங்கை, தென்  கிழக்கு ஆசிய நாடுகளின் படை  எடுப்பு, பாண்டியர் ஆட்சி, மாமல்லபுரம் பல்லவர் ஆட்சி ,   அந்த   காலத்தில் வாழ்ந்த  கவிகள் ,   எண்ணாயிரம்  சமனர்களின் கழுவேற்றம்  இவையெல்லாம் பார்க்க முடியுமா”?   “ முடியும் அது மட்டுமல்லமல்  ,சோழ  பாண்டிய  ஆட்சி  காலத்தில்  தமிழ்  நாட்டில்  நாகரீகம் எப்படி இருந்தது? அதுக்கும்  சிந்து  நதி  நாகரீகத்துக்கும்    என்ன  தொடர்பு என்பதை  பாக்கலாம். பூம்புகாரில்  ரோமர்கள்  , கிரேக்கர்கள் , எகிப்தியர் ,  கப்பலில் வந்து  வணிகம் செய்வதை  காணலாம். ஆனால்   இது தமிழ் நாட்டுக்கு மட்டுமே .இலங்கை இதுக்குள் வராது அந்த தேசத்துக்கு  கருவியின்  செயலை நீடிக்க இன்னும் சில வருடங்கள் ஆகும் .இந்த  கருவியை  தமிழ்  நாட்டுக்கு  மட்டும்   செயல்   படுத்த உன் உதவியோடு  சுமார்  மூன்று வருடங்கள் மட்டில்  தேவை  ”.   “என் ஒத்துழைப்பு   உங்களுக்கு   நிச்சயம்   உண்டு. நல்ல நாள் பார்த்து எங்கள்  நிறுவனத்தின்  உரிமையாளர்   முனைவர். ஜான்சனின்  அனுமதியோடு ஆரம்பியுங்கள் .  இதனால் அந்த நிறுவனத்துக்கு நல்ல  வருமானம் கிட்டும்.  தமிழ் நாடு அரசு இதை நிட்சயம் சுற்றுலா  பயணிகளை  வரவேற்க   பாவிக்கலாம்” “இதுக்கு தேவையன   மென்  பொருளை   எழுத பல   கணினி மொழி  தெரிந்த வசந்தா   நீ  எனக்கு உதவ வேண்டும் ”.  “நான்  இந்த  ஒரு   நல்ல  காரியத்துக்கு    உங்களுக்கு  நிச்சயம் உதவுவேன் “ வசந்தா  கணவனுக்கு சொன்னாள். *****  விநோதனின் காலக்  காணொளி  செயல் திட்டத்தை  பர்ர்த்து ஜோன்சன்   பிரமித்துப் போனார் . ”இது  செயல்படக் கூடியதா  முகுந்தன் “? ”நிட்சயம் முடியும் சார் . எனக்கு இந்த  நிறுவனத்தில்  வேலை  செய்யும்  மென்பொருளில் திறமை   வாய்ந்த  என்  மனைவி உதவுவாள் .அதோடு நான் தேர்ந்து  எடுத்த மூவர் இந்த  ப்ரொஜெக்டில்  வேலை  செய்ய தேவை  இந்த ப்ரொஜெக்டை  மிக  ரகசிமாக வைத்திருக்க  வேண்டும்”.   “அதை  நான் கவனித்துக்  கொள்கிறேன்.  அது சரி முகுந்தன்  எப்போது  இந்த  ப்ரொஜெக்டை ஆரம்பிக்க இருக்கிறீர்கள்”? “இன்னும் ஒரு மாதத்தில் சார் .”    “ப்ரொஜெக்ட் முடிந்து    டெஸ்டிங்  முடிந்து  எவ்வளவு  காலம் எடுக்கும்  இந்த  கருவி  வெளிவர “   “எனது கணிப்பின் படி மூன்று வருடங்கள் மட்டில் எடுக்கும் சேர் .”  “இந்த  ப்ரொஜெக்ட்டுக்கு     மூன்று  வருட  பட்ஜெட்  உண்டா ” ?  ”இந்த  பைலில்  எல்லா    விபரமும்  உண்டு  சேர் ”` “குட் லக் முகுந்தன்  , இந்த  திட்டத்தை எங்கள்   நிறுவனத்தின்  போர்டுக்கு   நீர்  விளங்கப்  படுத்தி  அவர்களின் அனுமதி  பெற  ஒழுங்குகள்  செய்கிறேன்”,  ஜோன்சன்  சொன்னார்.    “நன்றி சேர் இதோ  இந்த   பைலில்  இந்த காலக்  காணொளி பற்றிய  விபரம்  முழுவதும் இருக்கிறது எதாவது  கேள்விகள் இருந்தால்   என்னை  அழையுங்கள். நான்  எந்த  நேரமும் நிறுவனத்தின்  போர்டை  சந்திக்க தயார்”.    நிறுவனத்தின்     அனுமதி  பெற்ற  பின் தன்  மனைவி   மற்றும்  தான்  தேர்வு செய்த  மூவருடன்  காலக் காணொளி ப்ரொஜெக்ட்டை  சில  சிக்கல்களுடன்    வினோகன்  நடத்தி முடித்தார். பவிநோதன்    வேலை  செய்யும் நிறுவம்  தமிழ் நாட்டு  முதல்  அமைச்சர்  ,  சுற்றுலா  அமைச்சர் , இன்னும் மூன்று   சிரேஷ்ட  அமைச்சர்கள் , நான்கு அதிகாரிகள்ந்மூன்று  பிரபல ஊடகங்களுக்கு    காலக் காணொளி கருவியின்   செயலை  விளக்கும் காட்சியை    விநோதனின்      ப்ரொஜெக்ட் குழு  செய்து  முடித்தது  . “ கேள்விகள் இருப்பின்  கேட்கலாம் ” என்றார் முகுந்தன். முதல்  அமைச்சர்   நிறுவனத்தின்  புதுமையான முயற்சியையும்   ப்ராஜெக்ட்  குழுவின்  செயலையும்   பாராட்டிய பின் ,  எமது தமிழ் நாட்டின் வரலாற்று உண்மையை  எடுத்து சொல்லும்  கருவியாக  இது  இருக்கிறது .இதுவரை   ஆராய்ச்சி  நூல்களையும் ஓலைகளையும் கல்வெட்டுகளையும் தான்  நம்பி  வாழ்ந்தோம் .இந்த கருவி  வரலாற்றில் நடந்த  உண்மையை  காணொளி மூலம் எடுத்துக்  காட்டுகிறது என்றரர் .  வந்திருந்த அதிகாரி ஒருவர் கேட்டார் “ இந்த  கருவியை   இந்தியாவில்  பயன்  படுத்த மத்திய அரசின் அனுமதி பெற வேண்டி வரும். அவர்கள்  சில நேரம் கேட்பார்கள் ஏன் இந்த கருவி  மூலம் தமிழ் நாட்டை  மட்டும் பார்க்க   முடியும்   ? என்று . அதற்கு உங்கள் நிறுவனத்தின்  பதில் என்ன”?   “இது எங்கள் புரோஜெக்டின்  முதல் கட்டம். இதனை மக்கள் எப்படி வரவேற்கிறார்கள்  என்பதை  பொருத்தது  . இந்த  கருவியின்   செயலை   மற்றைய  மாநிலங்களுக்கு   எடுத்து  செல்ல முடியும் .இதுக்கு  மத்திய அரசும்  மாநிலங்களும் நிதி   வழங்கினால் அடுத்த  கட்டத்துக்கு  எடுத்து  செல்ல  உதவியாக இருக்கும்  .” என்றார் முகுந்தன் .     ****   +-----------------------------------------------------------------------+ | கதை 17 : சிவலிங்கபுரம் | +-----------------------------------------------------------------------+ புத்தளத்தில் இருந்து மன்னார் நோக்கிப் போகும் B379 பாதை ஒரு காலத்தில் அரிப்பு கரையோரத்தில் முத்துகுளிப்புக்காக ஓல்லாந்தரால் அமைக்கப் பட்ட பாதை. அப்பாதைக்கு கிழக்கே ‘வில்பத்து வன பூங்காவும் ’மேற்கே முத்து விளையும் மன்னார் வளை குடாவும் உள்ளது. கலா ஓயா உட்பட மூன்று ஆறுகள் இந்தப் பாதையை கடக்கின்றன . ஒரு காலத்தில் சேறும் கிரவலும் கொண்ட பாதையாக இருந்தது, இலவன்குளம், மரிச்சுக்கட்டி ‚வண்ணாத்திவில்லு‚பொன்பரப்பு  ஆகிய தமிழ் பெயர்கள் உள்ள கிராமங்களை பாதை தழுவிச் செல்கிறது. காலப் போக்கில் பாதை தரம் உயர்த்த பெற்று A32 ஆகியது .  கொழும்பில் இருந்து புத்தளம் மன்னார் பாதை ஊடாக யாழ்ப்பாணத்துக்கு பயணம் செய்தால் சுமார் 96 மைல்கள் தூரம் குறைவு. பொன்பரப்பு விளைச்சல் அதிகம் உள்ள வயல்களைக் கொண்ட கிராமம். அதனால் அப்பெயர் வந்திருக்கலாம் .அக்கிரமத்தில் இருந்து மேற்குக் கரையோரமாக உள்ள கிராமம் ‘தம்பண்னாவ ’என்ற குக் கிராமம்.   “கிமு 542 இல் விஜயன் என்ற ஒரிசா மாநிலத்தின் இளவரசன் நாடு கடத்தப்பட்டு தன் 700 தோழர்களோடு தோணிகளில் வந்து இறங்கிய இடம் தான் செம்மண்னும் சில பாறைகளும் உள்ள கிராமம் தம்பண்னாவ ”என்று மாஹவம்சம் குறிப்பிடுகிறது . இக் கிராமம் ஒரு காலத்தில் துறைமுகமாக இருந்த குதிரைமலைக்கு அருகே உள்ளது .  சிங்கள இனம் தோன்ற காரணமாக இருந்த இந்திய இளவரசன் விஜயன், ஒரு சிவபக்தன். . அப்பகுதியை ஆண்ட இயக்க இனப் பெண் குவேனி என்பவளை திருமணம் செய்து பின் அவளையும் பிள்களையும் துரத்தி விட்டு பாண்டிய தேசத்து இளவரசியை திருகேதீஸ்வரத்தில் திருமணம் செய்ததாக வரலாறு சொல்கிறது. அகவே தம்பண்னாவ கிராமம் வரலாறு உள்ள கிராமம். அக்கிராமத்தின் பெயரில் இருந்து தோன்றியதே தப்ரோபேன் Taprobane) என்ற இலங்கையின் மறு பெயர்; இக்கிராமத்துக்கும் தமிழ் நாட்டின் தாமிரபரணி ஆற்றுக்கும் ஒரு காலத்தில் தொடர்பு இருந்ததாக வரலாற்றாளர்கள் சொல்கிறார்கள் .  குதிரைமலையில் இருந்து சேர மன்னனின் மகள் அல்லி ராணி அரசாண்டாள் .அவள் முத்துக்களை விற்று அரேபியரிடம் குதிரைகள் வாங்கினாள் . அதனால் அத்துறைமுகத்திற்கு அப்பெயர் வந்தது . குதிரைமலைக்கு அருகே பல்லுதுறை, கொளங்கநாதன் என்ற இரு பண்டைய கிராமங்கள் உண்டு .மூன்று பண்டைய கிணறுகளை சிதைந்த நிலையில் இக் கிராமங்களில் இன்றும் காணலாம்  இக்கிராமங்களில் சுமார் இரு நூறு மீனவ குடும்பங்கள் மட்டுமே வாழ்கிறார்கள். அக்கிராமத்து தலைவன் சிவநாதன், அவ்வூர் வாசிகள் எல்லோரும் இந்துமத வாசிகள்.  அக்கிராமங்களுக்கு போவதற்கு பஸ் சேவை இல்லை. காட்டுப்பகுதி. குதிரைமலைக்கு ஜீப்பில் சென்று அங்கிருந்து இக் கிராமங்களுக்கு நடந்தோ அல்லது ஜீப்பிலோ, சைக்கிளிலோ செல்ல வேண்டும் சிறு கட்டிடங்கள் இருந்ததற்கு அடையாளமாக சில கற்ச்சுவர்களைக் இன்றும் காணலாம்.  *****  கொழும்பு பல்கலை கழகத்தில் சிவதாசன் வானியற் பௌதிகத் (Astro Physics) துறையிலும் விஜயதாசா தொல்பொருளாய்வு சார்ந்த (Archaeological) துறையிலும் முனைவர் பட்டம் பெற ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள். இருவரும் கொழும்பு ரோயல் கல்லூரியில் ஒன்றாகப் படித்த நண்பர்கள். சிவதாசன் ஒரு இந்து. விஜயதாசா ஒரு பௌத்தன்  இருவரும் குதிரைமலை பகுதியை ஆண்ட குவேனி ஆட்சி செய்த பகுதியைப்பற்றி ஆராச்சி செய்ய, வில்பத்து வனப் பூங்காவில் A32 கிழக்குப் பக்கத்தில் சில மைல்கள் தூரத்தில் இருக்கும் காளி வில்லுக்கு அருகே அவளின் பண்டைய மாளிகைக்கு சென்றனர். விஜயன் இலங்கைக்கு சுமார் 2600 ஆண்டளவில் (கி மு 6 ஆம் நூற்றாண்டு ) வந்தபோது இம் மாளிகை காளி வில்லுக்கு அருகில் இருந்ததாக சிங்கள நூலான மகாவம்சம் சொல்கிறது. காளி வில்லு என்ற பெயரில் இருந்து சக்தித் தெய்வமான காளியை குவேனி வணங்கினாள் எனக் கருதக் கூடியதாக இருக்கிறது. காளி வில்லுவில் இருந்து குதிரைமலைக்கு நடந்து சென்றால் ஒரு மணித்தியாலப் பயணம் சிவாவும் விஜய்யும் ஜீப்பில் சென்றதனால் அரை மணியில் காளி வில்லுவில் இருந்து போய் சேர முடிந்தது .குதிரைமலையில் இருந்து மேற்கே பார்த்தால் மன்னார் வளைகுடாவின் அழகிய தோற்றம் தெரியும் .கடலுக்கு அக்கரையில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நகரம் கீழக்கரை . சேது சமுத்திரத் திட்டம் செயல் படுத்தப்பட்டால் குதிரைமலை மறுபடியும் துறைமுகமாக மாறக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு. பல்லுதுறை, கொளங்கநாதன் ஆகிய இரு கிராமங்களும் இணைந்து “சிவலிங்கபுரம்” என்று பெயர் மாற்றம் ஊர் வாசிகளாளல் செய்யப் பட்டதை கிரவல்பாதை ஓரத்தில், “சிவலிங்கபுரம் 3 மைல்” என்ற பெயர் பலகை, காட்டியது.  முதலில் தங்கள் ஆராச்சியை நடத்தும்  முன் சிவலிங்கபுர மீனவர்களின் கிராமத் தலைவரான எழுபது வயது சிவராசனை என்பவரரை சிவாவும் விஜய்யும் சந்தித்து அவரின் அனுமதி தங்கள் ஆராச்சிக்கு பெற்றனர் தமிழோடு ஓரளவுக்கு சிங்களமும் அவர் பேசக் கூடியவரக இருந்தது இருவருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.  “ ஐயா உங்கள் கிராமம் வரலாறு உள்ள கிராமம். சிங்கள இனத்தினை உருவாக்கிய விஜயன் என்ற இளவரசன் தன் தோழர்களோடு 2600 ஆண்டுகளுக்கு முன் உங்கள் கிராமத்துக்கு அருகே வந்து இறங்கியதாக நாங்கள் அறிந்தோம். அவரின் முதல் மனைவி குவவெனியின் ஆட்சிக்குக் கீழ் இக் கிராமம் 2600 ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கலாம் என்பது நாம் அறிந்த வரலாற்றின் படி எங்கள் கணிப்பு. நீங்கள் என்ன ஐயா சொல்கிறீர்கள் ”? விஜய் கேட்டார்  “ ஆம் அது ஒரளவுக்கு உண்மேயே. இராவணனை போல் இயக்கர் வம்சத்தை சேர்ந்தவள் குவேனி .அவள் ஒரு சிவ பக்தை. குவேனியின் காலத்துக்கு முன்பு இருந்தே சிவபக்தன் இராவணனால் அமைக்கப்பட திருக்கேதீஸ்ரம் கோவில் மாந்தையில் இருந்து வருகிறது. மாந்தைபகுதி இராவணனின் மனைவி மண்டோதரியின் தந்தையின் ஆட்சிக்கு அக்காலத்தில் கீழ் இருந்தது திருக்கேதீஸ்ரத்தில் தான் விஜயனின் இரண்டாம் திருமணம் நடந்தது.  விஜயனும் ஓரு சிவபக்தன் . அதன் பின் சேர நாட்டின் இளவரசி அல்லி இந்தப் பகுதியை அரசாண்டாள். பாழடைந்த கட்டிங்களை நீங்கள் பார்த்திருப்பீர்களே “ சிவராசன் சொன்னார். “பார்த்தோம் .அது சரி. ஐயா, உங்கள் கிராமத்தின் தெய்வம் சிவலிங்கம். அதனால் உங்கள் ஊர் பெயர் சிவலிங்கபுரம் ஆயிற்று .ஒரு லிங்க வடிவில் உள்ள கருப்பு நிற கல்லுக்கு சிறு கோவில் அமைத்து எவ்வளவு காலமாக வழிபட்டு வருகிறீர்கள்”?  “ அது கல் இல்லை வானத்தில் இருந்து கடவுள் எங்களுக்கு தந்த லிங்கம். இந்தப்பகுதியில் உள்ள செப்பு கலந்த பறைகளும் மணலும் வானத்தில் இருந்து கடவுள் எங்களுக்கு தந்த பொக்கிஷம். இந்த லிங்க வடிவத்தில் உள்ள கல் மட்டுமே கருப்பு நிறமானது . இந்த லிங்கம் வடிவமான கல் எங்களை மிருகங்களின் தாக்குதலில் இருந்தும் நோய் நொடிகளில் இருந்தும் காக்கிறது. எமக்கு தேவயான மீன் வளத்தையும், முத்தையும் தருகிறது .  “ முத்து கிடைத்தால் யாருக்கு விற்பனை செய்வீர்கள்”?.  “ கடலுக்கு அக்கரையில் உள்ள கீழக்கரை முஸ்லீம் வியாபாரிகளுக்கு.”  “நாங்கள் சிவலிங்க கல்லை பரிசோதித்து பார்த்த போது அது‘ இரும்பு கலவை கொண்ட கல்’ என அறிந்தோம். அதில் இருந்து இது ஒரு விண்கல் என்பது எங்கள் முடிவு. எதிர்பாராத விதமாக அது லிங்க வடிவத்தில் உள்ளது.”  “ என்ன புதுமையான கல் என்று சொல்லுகிறீர்களா.? எனக்கு புரிகிற மாதிரி சொல்லுங்கோ” சிவராசன் சொன்னார்  :விஜய் சிவாவைப் பார்த்தார் பதிலை எதிர்பார்த்து.  “ ஐயா எனது அறிவியல் விளக்தை கொஞ்சம் பொறுமையாகக் கேளுங்கள். “ சிவா சொன்னார்  “ சரி சொல்லும் ,நாங்கள் கேட்கிறோம் ”என்றார் சிவராசன் . அவரைச் சுற்றி சில கிராம வாசிகளும் சிவா என்ன சொல்லப்போகிறார் என்று ஆவலுடன் கேட்டுக் கொண்டு இருந்தனர் ..  “வின்கல் மழை துகள்கள் பூமியில் எல்லா தேசத்திலும் அதிக வேகத்தில் பிரகாசமாக  விழும். 2016 ஆண்டு சுமார் 3400 கற்கள் பூமியின் பல தேசங்களில் விழுந்துள்ளது .மிக சிறிய விண் கற்கள் பூமியை அடையும்முன்  உராய்வினால் எரிந்து சாம்பலாகி விடும். பெரிய கற்கள் உராய்வையும் மீறி சாம்பலாகாமல் பூமியை வந்தடைகிறது அவற்றை ஆங்கிலத்தில் ‘மீட்டோராய்டுகள் ’என்பர் .சிறிய அளவிலான 1 மீட்டர் அகலம் கொண்ட வின் கற்களும் இதை விட சிறிய கற்களும் ‘மைக்ரோமீட்டோராய்டுகள்’ அல்லது‘ வான்வெளி தூசி’ என வகைப்படுத்தப்படுகின்றன” .விண்கல் என்பது வின்வெளியில் தோன்றும் ஒரு சிறிய பாறை அல்லது உலோகமக கல் ஆகும். பூமியின் வளிமண்டலத்தில் அதிகமாக வேகமான ஒரு வால்மீன், அல்லது சிறுகோள் நுழையும் போது, அவற்றில் இருந்து விண் கல் துகள்கள் வெளியேறுகின்றன. இந்த நிகழ்வு ஒரு விண்கல் அல்லது "எரி நட்சத்திரம்" என்று அழைக்கப்படுகிறது. பல விண்கற்களைத் தொடர்ந்தும், வானில் உள்ள அதே நிலையான புள்ளியில் இருந்து தோன்றும் தோற்றத்தை ஒரு விண்கல் மழை என்று அழைக்கப்படுகிறது..  பூமியின் வளிமண்டலத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15,000 டன் மீட்டோராய்டுகள், மற்றும் வேறுபட்ட விண்மீன் தூசி ஆகியவை உருவாகிறதாக மதிப்பிடப்பட்டுள்ளது .  அனைத்து மீட்டோராய்டுகளும் (meteoroids) நிக்கல் மற்றும் இரும்பு கொண்டிருக்கின்றன.  ஒரு விண்கல்லின் உலோகக் கலவை விண்கல்பூமியை அடையும் போது தோன்றும் ஒளியின் நிறத்தையும் வளிமண்டலத்தில் அதன் வேகம் ஆகியவற்றைப் பொறுத்தது.  உதாரணத்துக்கு அனேகமாக மஞ்சள் ஒளியாயின் விண்கல்லில் இரும்பு இருக்கிறது என்பது அர்த்தம். உங்கள் சிவலிங்கக் கல் கருப்பு நிறம் என்பதால் அதில் இரும்புஉலோகம் உண்டு. “  “:நீங்கள் சொல்வது எல்லாம் எங்களுக்குப் புதுமையாக இருக்கிறது. அப்போ எங்கள் கிராமத்தில் உள்ள செம் மணல் அடுக்குகளும் பவளப்பாறைகளின் தோற்றம் பற்றி என்ன சொல்கிறீர்கள்”? ஒரு கிராமவாசி கேட்டார் . “சில பாறை விண்கற்களின் தாக்குதலினால்தோன்றி இருக்கலாம் .இது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த வின்கல் தாக்குதலால் இருக்கலாம் . செம்மண் செப்பு கலவையைக் கொண்டது. இதை தாமிரம் என்பர். அதனால் தான் இந்த பகுதிக்கு தம்பபன்னி என்ற பெயர் வந்தது என்பது என் கருத்து. அதோ பாருங்கள் கொத்துக் கொத்தான மலர்கள் உடைய பசுமை மாறாச் செடி வகை. இதை ரோடோடென்ரான் செடி என்பர் .இது பல காலமாக இருக்கிறது போல் தெரியுது. . இந்தச் செடி செப்பு அதிகம் உள்ள மண்ணில் விரைவாக வளரும். இதுவும் ஒரு சான்று .முன்பு ஒரு காலத்தில் முத்தைப் போல் செப்பும் ஏற்றுமதியாகி இருக்கலாம். யார் கண்டது ? சிவா சொன்னார் . . “இலங்கையின் முதலாவது நகரமாகவும், தலைநகராகவும் தம்பபன்னி இருந்திருக்கலாம் என நான் நினைக்கிறேன் ”என்றார் விஜயதாசசா    “ நீங்கள் தொடர்ந்து உங்கள் கிராமத்து தெய்வத்தை வழிபடுங்கள். எதை நம்பி வாழ்கிறீர்களோ அதை தொடர்ந்து செய்யுங்கள் .நாங்கள் தந்த விளக்கம் உங்கள் அறிவுக்கு விருந்து”  என்றார் சிரித்தபடி .சிவா  ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி பேசாமல் இருந்தார்கள்.  ஐம்பது வயதுடைய கிராமவாசி ஒருவர் இருவரிடம் வந்து ஒரு துணியில் சுற்றிய பரிசை இருவருக்கும் கொடுத்தார்.  “என்ன ஐயா இது;"? விஜய் கேட்டார்  “நீங்கள்இருவரும் இந்த கிராமத்துக்கு இவ்வளவு தூரம் வந்து எங்களை சந்தித்து உரையாடி தன் நினைவாக ஆளுக்கு ஒரு முத்து எங்கள் பரிசு.” என்றார் அவர்.  சிவாவும் விஜய்யும் வாயடைத்து போனார்கள்.    +-----------------------------------------------------------------------+ | கதை 18 : இரு அறிவியல் நண்பர்கள் | +-----------------------------------------------------------------------+ நான் வட மாகணத்தில் உள்ள வவுனியா மாவட்டதில் அமைந்த குருமண்காடு என்ற கிராமத்தில் பிறந்தவன். எனக்கு என் பெற்றோர் வன்னிராசன் என்று பெயர் சூட்டி ராசன் என்று செல்லமாக அழைத்தனர். இக் கிராமம் வவுனியாவில் இருந்து மன்னாருக்குப் போகும் A30  பெரும் பாதையில் 6 கி மீ தூரத்தில் உள்ளது . இக் கிராமத்தைச் சுற்றி உள்ள குளங்களில் பாவற்குளம் மிகப் பெரிய குளம் . அக்குளத்தைச் சுற்றிலும் அடர்ந்த காடு.    எனக்குப் பண வசதி இருந்ததால் வவுனியா மத்திய கல்லூரியில் படித்து கொழும்பு பல்கலைக்கழகத்தில் தாவரஇயலில் பட்டம் பெற்றவன். என்னோடு படித்த கண்டியைச் சேர்ந்த குணசேகர (குணா) என்ற சிங்கள மாணவன் விலங்கியலில் பட்டம்பெற்றவன் . இருவரும் பல்கலைகழக அறிவியல் மாணவர் சங்கத்தின் செயற்குழுவில் அங்கத்தினர்கள், அதனால் நண்பர்களானோம். எங்கள் சந்திப்புக்கு முக்கிய காரணம் நாங்கள் இருவரும் இயற்கை விரும்பிகள். தாவர இயலும், விலங்கியலும் இயற்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன ,  என்பதையும் இயற்கையில் புதைந்துள்ள இரகசியங்களையும் அதோடு மனித வாழ்வுடன் உள்ள தொடர்பினை கண்டு பிடிப்பதே எமது இருவரின் நோக்கம். ஆகவே இரகசியங்களின் சிறப்பைப் பற்றி நாங்கள் இருவரும் ஆராய்ச்சியில் ஈடுபட்டோம். . அதோடு மட்டுமல்ல எமக்கிடையே இன்னொரு ஒற்றுமையும் இருந்தது . எனது தாய் மல்லிகா பதவியாவை சேர்ந்த சிங்களப் பெண். என் தந்தை முருகையா ஒரு வன்னித் தமிழன். அவர் பிறந்தது வவுனியாவில். என் தந்தையும், தாயும் ஆசிரியர்கள். வவுனியாவில் ஓரே கல்லூரியில் படித்த போது, சந்தித்து, காதலித்து, திருமணம் செய்தவர்கள். என்னைப்போல் குணசேகராவின் தாய் சுமனாவதி கண்டியைச் சேர்ந்த சிங்களத்தி. தந்தை இராமசாமி, மாத்தளையை சேர்ந்த மலை நாட்டுத் தமிழர் . அவர் அப்போதிக்கரியாக கடுகஸ்தொட வைத்தியசாலையில் வேலை செய்த போது நர்ஸ் சுமனாவை சந்தித்து ,காதலித்து. திருமணம் செய்தவர் . ஆகவே எனக்கும் குணாவுக்கும் மூன்று மொழிகளும் சரளமாக பேச வரும். இருவரும் இருவரின் இனத்தையும் இந்து, புத்த மதங்களை மதித்தோம். எனது வேண்டுகோளை ஏற்று வன்னியின் இயற்கை காட்சிகளைப் பார்த்து, ரசித்து அவை மனித வாழ்வோடு இணைந்தது என்பதை ஆராய என்னோடு வவுனியாவுக்கு குணா வந்தான் . எனது தந்தை வன்னியில் துனுக்காய், மாங்குளம் , ஒட்டுசுட்டான் , முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய இடங்களில் அறிவியல் ஆசிரியராக வேலை செய்ததால் வன்னியில் உள்ள கிராமங்களில் உள்ள குளங்களுக்கு வெளி நாட்டில் இருந்து சில காலம் வருகை தரும் பறவைகள் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தார் . அவரும் ஒரு இயற்கை விரும்பி .  நானும் குணாவும் எமது வன்னிக் காட்டு பயணத்தை தற்பாதுகாப்புக்கு கையில் அனுமதி பெற்ற என் தந்தையின் துவக்குடன் நடந்து சென்ற போது இருவரும் முதலில் பாவற்குளத்தில் கண்ட காட்சி ஒரு அழகிய நிற நீண்ட கால்களைக் கொண்ட வெள்ளை நிற நாரை. அது தன் ஒரு காலை மடக்கி மறு காலில் நின்று தவம் புரிந்து கொண்டு நின்ற காட்சி என்னை கவர்ந்தது. உடனே எனது புகைப்பட கருவியால் படம் எடுத்தேன். என்ன நடக்கப் போகுது என்று சில நிமிடங்கள் நின்று பார்த்தோம் . யானையின் பிளிறல் சத்தத்தில் கொக்கு அசையவில்லை. “ அதோ பார் ‚ஓடு மீன் ஓட உறுமீன் வரும் அளவும் வாடி இருக்குமாம் கொக்கு.” என்று ஔவையார் சொன்னது என நினைவுக்கு வருகிறது” என்றேன் நான் . “அதன்  அர்த்தம் என்ன ராசன்”? “பொறுமை பெரிது என்பதாகும் . சரியான சந்தர்ப்பம் வரும் வரை அவசரப்படாமல் அமைதியாக காத்திரு என்பதை அந்தப் பறவை அந்த செயல் மூலம் எமக்கு சொல்லுகிறது . திருவள்ளுவரும் அதை வேறு விதமாக சொல்லுகிறார்” ““அவர் என்ன சொல்லுகிறார் ராசன் “ ? “கொக்கொக்கக் காத்திரு!  அதன் குத்து ஒக்கச் செயலை முடித்திடு:” என்கிறார் வள்ளுவர் “நீ சொல்வது ஏனக்கு புரியவில்லையே ராசன்" "துள்ளி ஓடிடும் சிறு மீன்கள், கரையில் உள்ள கொக்கு கண்ணற்றது, செயல் திறனற்றது என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறோம் ,கொக்கு, ஆடாமல் அசையாமல் ஒரு காலில் நின்று கொண்டு நிற்கிறதே !ஏன் தெரியுமா ?" ஹப்ப ராசன் கேட்டான் "நீ சொல்லு ராசன் : "தனக்குப் பிடித்த பெரிய மீனைக் கண்டவுடன், மடக்கியுல்ல தன்காலால் லபக்‚ என்று கண் சிமிட்டும் நேரத்தில் பிடித்து விடும் .  இத்தனை மீன்கள் துள்ளி ஓடியும் , கொக்கு ஏதும் செய்திடவில்லை, இனி நமக்கென்ன பயம் என்று எண்ணிக் கிளம்புகிறது, பெரிய மீன்! என்ன ஆகிறது? கொக்கு கொத்திக் கொள்கிறது! கொக்கு அங்கே வெகு நேரம் காத்திருந்து இருந்தது அதற்குத்தானே?  இரைதேடிக் காத்திருப்பதும், கிடைத்ததும் பற்றிக் கொள்வதும் கொக்குக்கு மட்டும்தானா இயல்பு?மற்றப் பலவற்றினுக்கும் உண்டுதானே ! ஏன் கொக்கினை மட்டும் குறிப்பாகக் காட்டுகிறார் ?வாக்குண்டாம் பாடிய ஔவையார் என்று கேட்கத் தோன்றுகிறதா? காரணத்தோடுதான், காட்டியிருக்கிறார்.  புலிகூட இரை தேடிக் காத்திருக்கிறது, பதுங்கிக் கொள்ளக் கூடச் செய்கிறது.  வல்லூறு கூடப் புறாவைத் தேடி வட்டமிடுகிறது.  ஆனால், பதுங்கி இருந்திடும் புலி, மானைக் கண்டதும் பாய்கிறது, மான் ஓடுகிறது, புலி துரத்துகிறது, பல மைல்கள் கூட அலுப்பு மேலிட ஓடி ஓடி வேட்டையாடிய பிறகே மானைக் கொல்ல முடிகிறது புலியினால்  ஒரு போராட்டம் நடைபெறுகிறது.    வல்லூறு பாய்ந்து வருவது கண்ட புறா தப்பித்துக் கொள்ளப்படும் பாடு, கொஞ்சமல்ல. கொக்கு மீனைக் கொத்துவது அவ்விதமல்ல! என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல் மீன் துள்ளி வருகிறது. கொக்கு அதைக் கொத்தப் போக, மீன் தப்பித்து ஓட, கொக்கு விடாமல் துரத்திச் சென்று கொத்திடும் முறை இல்லை. மீன் வருவதும் கொக்கு கொத்துவதும், மீன் சிக்கிக் கொள்வதும் உடனே இரையாகிவிடுவதும் எல்லாம் கண் மூடிக் கண் திறப்பதற்குள். மீன் வருவதற்கும், மீன் சிக்குவதற்கும் உள்ளே இரையாகிச் செல்லுவதற்கும், இடைவெளிகளே இல்லை; எல்லாம் ஒரே நேரத்தில் நடைபெற்று விடுகிறது. அதனால்தான் கொக்கொக்கக் கொத்திட வேண்டும் என்றார். பாம்பு கூட, ஓசைப்படாமல் தீண்டிவிடுகிறது. ஆளை வேட்டையாடிக் கடிப்பதில்லை. ஆனால், மனிதனைத் தீண்டித் தீர்த்துக் கட்டுமேயன்றித் தின்பதில்லை. கொக்கு தீண்டித் தீனியாக்கிக் கொள்கிறது மீனை. அவ்வளவு கூர்மையான பார்வை. அத்தனை நேர்த்தியான குறிபார்த்திடும் திறன், அவ்வளவு வேகமான கொத்தும் தன்மை, கொக்குக்கு! அத்தனை திறமையாக இரை தேடிக் கொண்ட கொக்கு, புலிபோல உறுமுவதில்லை, இரத்தம் குடித்த மகிழ்ச்சியில் புலி படுத்துப் புரள்கிறதே, அதுபோலவும் இல்லை, ஏதும் அறியாததுபோல, எப்போதும் போல இருக்கிறது கொக்கு, காரியத்தைக் கச்சிதமாக முடித்துக் கொண்டு! இவற்றினை எல்லாம் எண்ணிப் பார்த்துத்தான் வள்ளுவர், "கொக்கொக்க' என்று கூறினார்” என்றேன் நான் "ராசன் அந்த வானத்தை பார்! . குளத்தை நாடி முக்கோண வடிவில் பறந்து வரும் வாத்து இனத்தின் அழகைப் பார் !எத்தனை ஒழுங்கை கடை ப்பிடிக்கிறது . அவை கூட அறிவியல் பாடம் நமக்கு புகட்டுகிறது” குணா சொன்னான். “அதனால் தான் ‚  அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்” எனக் கவிஞர் கண்ணதாசன் இயற்றிய சினிமாப் பாடல் இன்றும் எமது காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. சுதந்திரமாய், தமது விருப்பத்திற்கேற்ப கூட்டமாகவும்,  ஒற்றுமையாகவும் வானில் பறந்து, குடிவரவு, மொழி, பாதுகாப்பு போன்ற கட்டுப்பாடுகளின்றி, தேசம் விட்டுத் தேசம் செல்லும் பறவைகளைப் போல மனிதன் வாழ நினைப்பதில் தவறில்லை. அந்த நிலை மனிதனுக்கு வருமா? என்பது சந்தேகம். பொருளாதார, அரசியல் காரணத்தால் நாடுகளுக்கிடையே பயணக் கட்டுப்பாடுகள் மனிதனால் உருவாக்கப்பட்டவையே. தன் சொந்த நாட்டுக்குள்ளும் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்குப் போவதற்கும் பாதுகாப்பு வலையம் என்ற பெயரில் தடைகளுண்டு. இத்தகைய தடைகளுக்கு அப்பாற்பட்டவை மற்றைய ஜீவராசிகள். அதிலும் பறவைகள் தாம் நினைத்த மாதிரி எங்கு வேண்டுமென்றாலும் பறந்து செல்லக் கூடியவை. அதன் மேல் பொறாமைப் பட்டோ என்னவோ துப்பாக்கி ஏந்தி தமது ஊருக்கு விருந்தாளிகளாக வரும் அப்பறவைகளை மனிதன் வேட்டையாடி மகிழ்கிறான். பறவைகள் போன்று மொனாக் (Monac) என்ற இனத்தைச சேர்ந்த வண்ணத்துப் பூச்சிகள், மற்றும் தத்துக்கிளிகள் கூட வட ஆப்பிரிக்காவில், வெகு தூரம் பாலைவனத்தினூடாக பயணம் செய்கின்றன. மொனாக் வண்ணத்துப் பூச்சிகள், பெரும் கூட்டமாக வட அமெரிக்கா, தென் கனடா பகுதியிலிருந்து சுமார் 3000 மைல்கள் வாரக்கணக்கில் பறந்து சென்று மெக்சிக்கோ, கலிபோர்னியா போன்ற இடங்களை அடைகின்றன. சில வேளைகளில் திசை மாறி அட்லான்டிக் சமுத்திரத்தையும் கடந்து ஐரோப்பாவை அடைகிறது என்றால் சிலர் நம்புவதற்கு தயங்குவார்கள். இவ்வாறே தண்ணீரும் உணவும் தேடி, ஆப்பிரிக்காவில் வன விலங்குகள் கூட்டமாக இடம் பெயர்கின்றன. அதனால் ஆறுகளைக் கடக்கும் போது சக்தி குறைந்த விலங்குகள் பல பலியாகின்றன. அதுவுமல்லாமல் சக்தியிழந்து மேலும் பயணத்தைக் கூட்டத்துடன் தொடரமுடியாமல் வேறு விலங்குகளுக்கு இரையாகின்றன. “ முக்கோண வடிவத்தில் பறந்து வருகிறது வாத்துகள் . நாம் சொல்வது போல் வாத்து மடையர்கள் அல்ல .அவை அந்த வடிவமைப்பின் மூலம் காற்றின் எதிர்பை எதிர்த்து பயணம் செய்கிறது. இறைவன் அவைக்கு கற்றுக் கொடுத்த பாடம். அதில் இருந்து அறிவியல் கற்று விமானம் படைத்தான் மனிதன். இன்னும் எவ்வளவோ பறவைகளில் இருந்து மனிதன் கற்க வேண்டியிருக்கு . முக்கியமாக எடுத்த காரியத்தை ஓய்வின்றி செயல்பட்டு  செய்து முடிக்க வேணும் என்ற உறுதியை அந்த பறவைகள் எமக்கு எடுத்து சொல்கிறது குணா”. “அங்கே பார் அந்த மரத்தில் தொங்கும் தூக்கணாம் குருவிக் கூட்டை அதன் கட்டிடக் கலைத் திறன் பிரமாதம். . நாம் வீட்டுக்கு அஸ்திவாரம் போடுவது போல் அது கூட்டை கட்டும்போது ஆரம்பத்தில் தாவர நூல்கலால் அவிழாத முடிச்சு   போடுகிறது. இதை பார்த்து வீடு கட்ட நிலம் இல்லாவிட்டால் . மரத்தில் வீடு கட்டி வன பூங்காவில் இருப்பது போல் வாழலாம் அல்லவா”? ராசன் சொன்னான். “ஊஞ்சல் போல் குஞ்சுகளுக்கு கூட்டை உருவாக்கிக் கொடுத்து இருக்கிறது குருவிகள் . தன் குரலால் தாலாட்டும் பாடுகிறது. எந்த வேகமாக வீசும் காற்றிலும் தொங்கும் கூடு பாதிப்டைவதில்லை என்ன வினோதம் ராசன்” குணா சொன்னான் “என் கிராமத்தில் சில பெண்கள் மரத்தில் சேலையை ஏனையாக கட்டி அதில் குழந்தையை போட்டு தாலாட்டு பாடுவது எனக்கு நினைவுக்கு வருகிறது . அது தாய் பாசத்தின் எடுத்துக்காட்டு குணா.” “ எவ்வளவு காலமாக இந்த டாக்டர் வேலையை செய்கிறது இந்தப் பறவை”?   “ இவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியவை". ”அதோ பார் பக்கத்தில் உள்ள மரத்தில் வளரும் இன்னொரு குருவிச்சசை செடியை அந்தச் செடி. ஒரு மனிதனை போல் இன்னொரு உயிரை அண்டி வாழ்கிறது” . இதை ஒட்டுண்ணி செடி என்பர். குருவிகள் விட்ட எச்சத்தில் உள்ள விதைகளில் இருந்து வளருவது குருவிச்சசை செடி . இது மரத்தின் சத்தில் பங்கு எடுக்கிறது . அதனால் குருவிச்சை என்ற பெயர் பெற்றது. இதுவும் மனித உடலில் உள்ள வைரஸ் போன்றது . தூத்துமக் கொத்தான் என்ற ஒட்டுண்ணியை ஆங்கிலத்தில் கஸ்குட்டா (Dodder) என்பர். இது இதன் நுகரியிலிருந்து உணவையும் நீரையும், கனியுப்பையும் எடுத்துக்கொள்கின்றது.”. அடேயப்பா இயற்கையின் விசித்திரம் தான் என்ன .”? “ராசன் நாம்  இதுவரை கண்ட காட்சிகளில் இருந்து  எனக்கு ஜோன் லுப்போக் என்பவர் இயற்கையை பற்றி சொன்ன வார்த்தைகள் என் நினைவுக்கு வருகிறது” குணா சொன்னான் “என்ன குணா  அவர்சொன்னார் “? “பூமி மற்றும் வானம், காடுகள், நெற்ற காணிகள்,  ஏரிகள், ஆறுகள், மலைகள், பறவைகள், விலங்குகள் ‚ மலர்கள் மற்றும் கடல் ஆகியவை மிகச்சிறந்த பள்ளி ஆசிரியர்களாகும், மேலும் புத்தகங்களில் இருந்து நாம் கற்றுக் கொள்ளும் விடயங்களைக் காட்டிலும் இன்னும் சிலவற்றை இயற்கையில் இருந்து நாம் கற்க்கிறோம் என்றார் அவர்  " “ அவர் சொன்னது  உண்மை. இயற்கையில் புதைந்துள்ள அறிவியல் ரகசியங்கள் ஏராளம்  உனக்கு தெரியும் .சர் ஐசக் நியூட்டன் என்ற பெளதீக விஞ்ஞானி கண்டு பிடித்த புவி ஈர்ப்புபச் சக்தியின் தத்துவம் ஒரு ஆப்பில் மரத்தில் இருந்து கீழே விழுந்த  ஆப்பிலைக் அவர்  கண்டதில் இருந்து உருவானது”   “அதோ பார் ராசன் !குளத்தின் அருகே உள்ள மரத்தில் இருக்கும் கிங் ஃபிஷர் என்ற  மீன் கொத்திப்பறவையின் அலகு எவ்வளவு  கூர்மையானதுஎன்று.அதன் வடிவமைப்பில் இருந்து  ஜப்பானிய புல்லட் ரயில் உருவானது .அது தெரியுமா? உனக்கு . இது உலகின் மிக விரைவான, மிகவும் திறமையான பயணிகள் ரயில்களில் ஒன்றாகும். அதே உத்வேகம் பல விமானங்களில் பயன்படுத்தப்படுகிறது.  குளத்தில் உள்ள செந்தாமரையின் அழகை பார்த்த ரசித்து  ராசன்  அதை படம் பிடித்தான் “ஆமாம் பாவற் குளம் நிறம்ப செந்தாமரைப் பூக்களும் தாமரை இலைகளும்.  தாமரை இலையில் நீர் ஒட்டாமல் இருப்பதற்கு என்ன காரணம்”? ராசன் குணாவைக் கேட்டான் “தாமரை இலையின் மீது தண்ணீர் நீர்த்துளிகள் இலையின் மீது ஒட்டுவதில்லை. ஏனெனில் தாமரை இலை மீது, மிக நுண்ணிய அளவில், கூர்மையான ஊசி போன்ற அமைப்புகள் உள்ளன. எனவே நீர்த்துளி, தாமரை இலையின் மீது வந்து விழும் போது, அந்தத் துளி, மூன்று நான்கு நுனிகளின் முகட்டில் படிகிறது தாமரை இலையில் இருக்கும் ஊசி போன்ற அமைப்புகள், மெழுகு போன்ற ஒரு பொருளினால் ஆனது. மேலும் தாமரை இலையில் இருக்கும் அந்த ஊசி அமைப்புகள் நீரை விலக்கும் தன்மையை பெற்றுள்ளதால் தான் தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாமல் முத்து போன்று தரையின் மீது விழுகின்றது. அந்தத் தண்ணீர்  துளி, இலையின் மீது ஒட்டாமல், துளி வடிவிலேயே  உருண்டு ஓடுவதுடன், தூசு, தும்புகளையும் தன்னுடன் சேர்த்து அடித்துச்  செல்லும். எனவே, ‘தாமரை இலை சுத்தமாகவும் இருக்கிறது’, என்ற தகவல்,  ‘எலக்ட்ரான் நுண்ணோக்கி ’கொண்டு செய்யப்பட்ட சமீபத்திய ஆய்வில்  வெளிந்துள்ளது.  “சரியாக சொல்லவேண்டுமெனில், தாமரை இலைப்பரப்பின் மீது நீர் மட்டுமில்லை; காற்றும் உடனிருக்கும்.. அதனால், காற்று, நீர் பரப்பு மூன்றும் சந்திக்கும் இடத்தில், அதாவது பரப்பின் மேல் நீர்த் திவலையின் விளிம்பில், நீர்-காற்று, காற்று-பரப்பு, பரப்பு-நீர் என மூன்று தொடர்புடைய இழுவிசைகள் செயல்படும். ஒன்றுக்கொன்று அடித்துக்கொண்டு மிச்சமிருக்கும் விசையே முன்கூறிய கோணத்தை நிர்ணயிக்கும்.” குணா விளக்கம் சொன்னான்“எனக்குத் தாமரை இலையில் மாங்குளத்தில் உள்ள உணவகத்தில் உணவு உண்ட அனுபவம் என் நினைவு  இப்பொது வருகிறது. அதில் சாப்பிடும் பொது குணா, உணவு தனி ருசியைத் தருகிறது”:    “கவனம் ராசன் ,நடக்கும் போது  பார்த்து நட. .சில விதைகள் உன் ஆடையில் ஓட்டிக் கொள்ளும். அது தம் இனத்தைப் பெருக்கும் ஒரு சில வழிகளில் இதுவும் ஓன்று. மனித இனத்தில்  சேர்க்கையின் போது ஆணின் விந்தும்  பெண்ணின் முட்டையும் யும்  ஓன்று சேர்ந்து எப்படி ஒரு உயிரை உருவாக்குகிறதோ அதே போல் விதை  ஒரு தாவரம் உருவாக விதை உதவுகிறது.   விதை (Seed) என்பது சில தாவரங்கள்தம் இனத்தைப் பெருக்கிக் கொள்ள, தம்முள்ளே உருவாக்கும் ஓர் தாவர அங்கமாகும். இந்த வித்தானது விழுந்து அல்லது விதைக்கப்பட்டு முளைப்பதன் மூலம் அவ்வினத்தைச் சேர்ந்த புதிய உயிரினம் உருவாகும். விதைகள் பொதுவாகத் தம்முள்ளே உணவுச் சேமிப்பைக் கொண்டிருக்கும் முளையத் தாவரமாகும்.  முதிர்ச்சியுறும் சூலகமே விதையாக விருத்தியடைகின்றது. இவ்வகைத் தாவரங்கள், விதைகளின் துணையுடனேயே தமது வாழ்க்கை வட்டத்தைப் பூர்த்தி செய்து கொள்கின்றன. அத்துடன் விதைகள் பலவகை சூழ்நிலைகளைத் தாங்கி வாழக்கூடிய இயல்பினைக் கொண்டிருப்பதனால், பல சூழ்நிலைகளிலும் இத்தகைய தாவரங்கள் தம்மை நிலைநிறுத்திக் கொள்ள முடிகின்றது. “அது சரி குணா நிரந்தரமாக ஒரே இடத்தில இருக்கும் தாவரத்தின்  வாரிசுகள் எப்படி பல இடங்களில்  தோன்றுகிறது  “? “: இது தான் இயற்கையின் இரகசியம். பூச்சிகள், விலங்குகள், மனிதர்கள், காற்று, நீர் போன்றவவை தாவரங்களின் இன வளர்சிக்கு உதவுகிறது. மனிதன் இதில் இருந்து பிறருக்கு உதவும் பாடத்தை  கற்க  வேண்டும்.   விலங்குகளில் போலன்றி, தாவரங்களில் தமது வளர்ச்சிக்கும், வாழ்க்கை வட்டத்தை நிவர்த்தி செய்வதற்கும் தகுந்த சூழலைத் தேடிப் போவது இயலாத காரியமாக இருப்பதனால், அவை தமது சந்ததியைப் பெருக்கிக் கொள்வதற்காக வித்துக்களை பரப்புவதற்கு பல வழிகளைக் கையாளுகின்றன. ஒரு தாவரத்தின் பழங்கள் தனது விதையை வெளியேற்றத் திறந்து கொள்ளுமாயின் அவை வெடிகனிகள் (Dehiscent fruits) எனவும் திறக்காதவையாயின் வெடியாக்கனிகள் (Indehiscent fruits) எனவும் ( உதாரணம்  தேங்காய்) அழைக்கப்படும். சிலவற்றில் பழங்கள் வெடித்து வித்துக்கள் மட்டுமே பரவலுக்குள்ளாகும். வேறு சிலவற்றில் பழங்கள் பரவுதலுக்குள்ளாகி, பின்னரே திறந்து வித்தை வெளியேற்றும்.  “  அதோ பார் குணா   பாராசூட்   போல் பறந்து செல்லும் விதையை ....!”   “காற்றினால் இலகுவாக எடுத்துச் செல்லப்படக் கூடியதான அமைப்புக்களைக் கொண்டிருக்கும் விதைகள் அல்லது பழங்கள் இவ்வகை பரவலுக்குள்ளாகும். இவை பொதுவாக மிகச் சிறிய, எடை மிகக் குறைவானவையாக இருக்கும். இவற்றில் சிறகு போன்ற அமைப்புக்களோ அல்லது முடிகள் போன்ற அமைப்புக்களோ இருப்பதனால், இலகுவாகக் காற்றினால் எடுத்துச் செல்லப்படும். “ அப்போ காற்றுபோல்  நீரும் உதவுகிறதா  குணா “?   “சில விதைகள் நிறை குறைவானவையாகவும், மிதக்கும் தன்மையுடையனவாகவும் இருப்பதனால், ஆறுகள் போன்றவற்றினூடாகவோ அல்லது ஓடும் மழைநீரிலோ மிதந்து வேறு இடங்களுக்குச் செல்லும். மனிதர்களினால்  அல்லது விலங்குகளினால்  கூட விதைகள் பல இடங்களுக்கு பரவலாம். கொழுவிகள் போன்ற அமைப்புக்களைக் கொண்டிருப்பதனாலோ, அல்லது ஒட்டும் தன்மை கொண்ட பொருட்களைக் கொண்டிருப்பதனாலோ, சில விதைகள் விலங்குகளின் உடலில், அவற்றின் மென்மயிர்களில் அல்லது சிறகுகளில், அல்லது கால்களில் ஒட்டிக் கொண்டு வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்படும். வேறு சில தாவரத்தின் பழங்கள் விலங்குகளால் உணவாக உள்ளெடுக்கப்பட்டு, பின்னர் விதைகள் கழிவாக வேறு இடத்தில் எச்சமிடப்படும். வேறு சில விதைகள் உணவுக்காக விலங்குகளால் வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு சேமிக்கப்படும். அவ்விடத்தில் உணவாக உட்கொள்ளப்படாதவிடத்து மீண்டும் அவை முளைத்தல் மூலம் புதிய தாவரத்தை உருவாக்கும் சாத்தியத்தைப் பெறும். 1948 ஆம் ஆண்டில் ‘ஜார்ஜ் டி மெஸ்டல்’  என்ற சுவிஸ் எலக்ட்ரானிக் பொறியாளர், ஆல்ப்ஸில் வேட்டையாடுகையில் வெல்க்ரோ என்ற ஒரு தாவரத்தை பார்த்து  அவருக்கு ஒரு யோசனை வந்தது. எப்படி இது ஓட்டுகிறது என்று கேட்டது  அவர் சிந்தனை .   ஒரு நுண்ணோக்கியின்  கீழ் ஆய்வு  செய்த போது அவர் நூற்றுக்கணக்கான கொக்கிகள் இருப்பதை  கவனித்தரர் . பல ஆண்டு ஆராய்ச்சியின் பிறகு, இன்று நமக்குத் தெரிந்த வடிவமைப்புடன் அவர் நாம் பாவிக்கும் ‘ வெல்க்ரோ’  என்ற ஓட்டும் நாடாவை உருவாக்கினார்   “அடேயப்பா இயற்கையில் தான் எவ்வளவு அறிவியல் இரகசியங்கள் புதைந்துள்ளது. மின்னலில்  இருந்து மின்சாரம் கண்டான்...!. பறவையில் இருந்து விமானம் படைத்தான்...!. ஆப்பிலில் இருந்து ஈர்ப்பு விசையின் தத்துவம் கண்டான்...!. தேன் கூட்டில் இருந்து கட்டிட அமைப்பைக கண்டான்.  ஏராளமான அறிவியல் இரகசியங்கள் இயற்கையில் புதைந்துள்ளது  ராசன்” .