[] []   இயற்கை, சமூகம், வாழ்க்கை   தாம்பரம் மக்கள் குழு https://www.facebook.com/தாம்பரம்-மக்கள்-குழு-1497643993880834/    மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com  உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.         பொருளடக்கம் முன்னுரை 4  தண்ணீர் - சட்ட அரசியல் பார்வை 5  மாடுகளைத்தேடி 8  எளிய மக்களுக்கான எதிர்காலம் கிராம சபைகளே 10  மறைநீர் காப்போம் 15  தொலைத்தவை தேடி 18  விதை பந்து 21  பறத்தல் 24  சுழல் 27  வானகம் - இயற்கை வாழ்வியல் பயிற்சி 30  பனைமரம் 36      முன்னுரை இந்தப் புத்தகத்தை தொகுப்பதற்கு பெரிதும் உதவிய முனைவர் பொ.சக்திவேல், துணைப் பேராசிரியர், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் கட்டுரை எழுதித் தந்த தாம்பரம் மக்கள் குழு தோழர்கள், “பாவேந்தர் பசுமை அறக்கட்டளை”  அண்ணன் சுபாசு ஆகியோருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புத்தகத்தில் சமூக சிந்தனை, நீர் மேலாண்மை, இயற்கை வேளாண்மை பற்றி எழுதப்பட்டிருக்கிறது.  இந்தப் புத்தகம் இயற்கை வளங்கள் குறித்து ஒரு அடிப்படை புரிதலை தரும் என்று நம்புகிறோம். எங்களின் திருமணத்திற்கு வருகைத் தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிகள். அன்புடன் சு.சீனிவாசன் - ப.கார்த்திகா     தண்ணீர் - சட்ட அரசியல் பார்வை - முனைவர். பொ. சக்திவேல் தண்ணீர் பிரச்சினைகளும் அது சார்ந்த அரசியலும் நம்மை குழப்புவதாக உள்ள சூழலில், தண்ணீர் தேவை மற்றும் உபயோகம் குறித்து இக்கட்டுரை ஒரு சிறு அறிமுகம் செய்கிறது. உதாரணத்திற்கு, சீமை கருவேலம் குறித்த நீதிமன்ற தீர்ப்புகளோடு உங்களுக்கு கிடைத்த வாட்ச்அப், பேஸ்புக் தகவல்களை ஒப்பிடுங்கள். முற்றிலும் தவறான பல தகவல்கள் நம்மை வந்து சேர்வதற்கு என்ன காரணம் என்பது யோசிக்கப்படவேண்டும். இங்கே நாம் குறிப்பிட்டுப் பார்க்க வேண்டியது என்னவென்றால், சமூக அங்கீகாரம் அல்லது புரிதல் என்பது ஒரு சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பே  மக்களால் முன்வைக்கப்பட வேண்டும், ஜல்லிக்கட்டைப் போல! தண்ணீர் குறித்த சட்டங்கள் ஏன் தேவை? மற்ற இயற்கை வளங்களோடு நீரை ஒப்பீடு செய்வது மிகவும் கடினமானது. ஏனென்றால் நீரின் தேவையும், இருப்பும் ஒரே வருடத்தில், ஒரே இடத்தில் பல மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. நீரின் பயன்பாடும் மற்ற வளங்களோடு ஒப்பிடுகையில் மிக அதிகம். எனவே தண்ணீர் பயன்பாடு குறித்த போட்டிகள் சட்டத்தின் தேவையை அதிகப்படுத்துகின்றன. தமிழக சூழலில் தண்ணீர் நீரின் இருப்பு, அதாவது நீரை சேமித்து வைப்பதும் இருப்பம அடிப்படையில் புவியியல் மாற்றங்களுக்கு உட்பட்டது. ஒரே மழைப்பொழிவை கொண்டுள்ள ஐரோப்பிய நகரத்திற்கும் மதுரை போன்ற தமிழக நகரத்திற்குமான தண்ணீர் இருப்பு மாறுபாடுகள் தட்பவெப்ப நிலையை அடிப்படையாக கொண்டது. குறிப்பாக, தமிழக சூழலில் ஆவியாதல் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் நீரை உறிஞ்சுதல் ஆகியவை நீரை வெகுவேகமாக வற்றச் செய்துவிடுகிறது. அடுத்ததாக, தமிழக பருவமழையும், வானிலையும் முழுமையாக கணிக்க இயலாது.  “மக்கட்பேறும் மழை பேறும் மகேசனுக்கே தெரியாது” என்ற பழமொழியில் ஒரு பகுதி இன்றைக்கும் நிதர்சனமாகவே இருக்கிறது. மழை உள்மாவட்டங்களில் குறைவாகவும், கடற்கரையோர மாவட்டங்களில் சற்று அதிகமாகவும் பொழிவது நீர் சேமிப்பை கடினமாக்குகிறது. இந்த புரிதலில்தான் தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்கள் கடந்த 2000 வருடங்களாக மிகுந்த கவனத்துடன் அனைத்து பகுதிகளின் மழைப்பொழிவு, நீர்தேக்க வசதிகள் மற்றும் தேவைகளை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டு வந்திருக்கின்றன. இப்போது என்ன சிக்கல்? நகரமயமாதல் மற்றும் தொழிற்சாலைகள் தண்ணீர் தேவைப்படும் இடங்களையும் நோக்கங்களையும் பெரும் மாற்றத்திற்கு உட்படுத்தி விட்டன. ஆழ்துளைக் கிணறுகள் தண்ணீர் குறித்த எந்த புரிதலும் இல்லாமல், போட்டி - அவசரகதியில் தோண்டப்படுகின்றன. நகரத்திற்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய தண்ணீர் எங்கிருந்து வேண்டுமானாலும் கொண்டு வரலாம் என்று அரசு நினைக்கிறது. இதன்மூலம் தண்ணீரின் வரலாற்று உபயோகத்திலிருந்து விலகி புதிய சிக்கல்களையும், போட்டிகளையும் உருவாக்கி விட்டோம். அறிவியல் தீர்வுகள் தண்ணீர் சிக்கல்களுக்கான அறிவியல் தீர்வுகளை சமூக இயற்கை சூழல்களுக்குத் தகுந்தாற்போல் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைக்கு வெள்ளத் தாரைகளை மறித்து கட்டப்படும் தடுப்பனைகள் உண்மையாகவே பயனுள்ளவைகள் தானா என்பதை கடைமடை பகுதி மக்களையும் கேட்க வேண்டும். நீர் ஆவியாவதை தடுக்க தமிழகத்திற்கு தெர்மாக்கோல் உதவாது. கடல்நீரை சுத்தப்படுத்தி இந்த மக்கட்தொகைக்கு வழங்க இயலாது. இதையெல்லாம் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளும்முன் நாம் புரிந்துகொள்ள வேண்டும். சட்டங்கள் என்ன சொல்கின்றன? இந்திய அரசியலமைப்பு, தண்ணீரின் மேல் சட்டமியற்ற மாநில அரசுக்குமேல் அதிக அதிகாரத்தை வழங்கியுள்ளது. கடந்த 150 வருடங்களாக, நிலம் கையகப்படுத்துதல், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, விவசாயம், குடிநீர் வழங்கல் மற்றும் நிலத்தடிநீர் உரிமைகள் என பல்வேறு தலைப்புகளில் நீர் சார்ந்த சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. மத்திய அரசு, சுற்றுச்சூழல் மற்றும் கழிவு மேலாண்மை குறித்த சட்டங்களை இயற்றியுள்ளது. இதில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களும் உள்ளன. இந்த சட்டங்கள் ஏன் சிக்கல்களை தீர்க்கவில்லை? நீர் மேலாண்மை என்பது இந்தச் சட்டங்களுக்கான அடிப்படையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்த சட்டங்கள் குறுகிய பார்வையுடன், பிரச்சினைகளை மேலோட்டமாக கையாளுகின்றன. தண்ணீர் சிக்கல்களின் மையத்தை இந்த சட்டங்கள் கொடுப்பதில்லை. விடியல் தண்ணீர் சிக்கல்களை நம்மளவில் புரிந்து கொள்வதே முதல்படி. நாம் புரிந்து கொண்டதை நண்பர்களுக்கும் ஊருக்கும் எடுத்துச் சொல்வது அடுத்த நிலை. மணல் கொள்ளையிலிருந்து தடுப்பணை அமைப்பதுவரை அனைத்து நிலைகளிலும் விவாதம் வேண்டும். அதன்பின், ஒவ்வொரு சிக்கலுக்கும் தீர்வுகள் நம் கண்முன் வந்தடையும். இதையே, சட்டங்கள் பின்தொடரும். பின்தொடர வேண்டும். எனவே, தண்ணீர் சிக்கல்களுக்கு சட்ட அரசியல் தீர்வுகளை தேடும் அதே வேளையில் தண்ணீரின் அடிப்படையையும் சமூகப் பயன்பாட்டையும் புரிந்து கொள்வதே முதற்படி.       மாடுகளைத்தேடி - சாந்தகுமார், சாம் கடந்த நவம்பர் (2016) மாதம் முதல் ஆலம்பாடி மாடு இனத்தை தேடிக் கொண்டிருந்தோம். கார்த்திகேயன் சேனாதிபதியை ஒருமுறை சந்தித்தபொழுது, ஆலம்பாடி மாட்டினம் என்று ஒன்று இருந்தது. இது தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், சேலம் பகுதியில் காணப்பட்ட ஒரு இனம் என்றும் கூறினார். அப்பொழுது மனம் வருந்தியது. நம்ம பகுதியில் உள்ள மாடுகளை காக்க முடிய வில்லையே என்ற வருத்தம் ஏற்பட்டது. பொங்கலுக்குப் பிறகு “உழவனுக்கு மாடு வழங்கும் விழா” என்ற விழாவை கொண்டாடி, அலிக்கர் இன நாட்டுமாடு குட்டிகளை வழங்கினோம். அங்கு ஒரு பத்திரிக்கையாளர் எங்களை என்ன ரகம், இது உண்மையிலேயே கிருஷ்ணகிரியில் உள்ள ரகமா? என்ற கேள்வியை எழுப்பினார். எங்களுக்கு அப்போது சரியாக பதில் சொல்ல முடியவில்லை. அதன்பின், நாட்டுமாடு என்றால் என்ன அதன் அழித்த இனங்கள்பற்றி தெரிந்துக் கொண்டோம். பறவை பாலா என்ற நண்பர் மூலம் ஆலம்பாடி மாட்டினம் ஒகேனக்கல் அருகே உள்ளதாக அறிந்தோம். அங்கு சென்ற பின்புதான் ஆலம்பாடி என்பது அங்கு இருக்கும் கிராமத்தின் பெயர் என்று தெரிந்துக் கொண்டோம். அங்கு நிலைமை வேறு மாதிரி உள்ளது. அங்கு தினம் வறட்சியினால் மாடுகள் இறந்துக் கொண்டு இருக்கின்றன. சென்ற இடத்தில் மாடுகளை காக்க வேண்டி ஆலம்பாடி மாடு, பர்கூர் மலை மாடு, அலிக்கர் மாடு வகைகள் மற்றும் எருமைகளை வாங்கி வந்தோம். இப்பொழுது அதனை வைத்து இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்துள்ளோம். மேலும் எங்களுடன் மற்ற மக்களும் இணைந்து இயற்கை விவசாயத்தை ஆரம்பித்துள்ளார்கள். எங்களிடம் தொடர்பு கொண்டவர்களில் நாட்டு மாடுகளை வாங்க முடியாதவர்கள் வறட்சி பகுதியில் புல் வாங்கித் தந்து மாடுகளை இறப்பிலிருந்து காப்பாற்று கின்றனர். பலர் நாட்டு மாடுகளை காப்பதற்கு ஜல்லிக்கட்டுப் போராட்டம் பெரிதும் தூண்டியது. எருமைகளைப் பற்றி குறிப்பிட வேண்டும். எருமைகள் சத்தமில்லாமல் அழிந்து கொண்டிருக் கின்றன. எருமைகள் செழுமையின் அடையாளம் என்பர். எந்தப் பகுதி செழுமையாக இருக்கிறதோ அந்தப் பகுதியில் எருமைகள் இருக்கும். முன்பெல்லாம் மதுரையில் நுழைந்தாலே எருமைகளாகத் தெரியும். ஆனால் இப்பொழுது தெரிவதில்லை. ஏனெனில் அவ்வளவு வறட்சியாக மதுரை மாறிவிட்டது. வைத்தியம் பார்க்க வந்த கால்நடை மருத்துவர், இந்தப் பகுதியில் மூவர்தான் எருமைகளை வைத்துள்ளனர். அதில் நீங்களும் ஒருவர் என்றார். அருகில் இருக்கும் பாகலூர் (கிருஷ்ணகிரி) சந்தைக்கு நாங்கள் சென்று பார்த்தபொழுது நூறுக்கும் மேற்பட்ட எருமைகள் வந்தன. ஆனால் ஒருவர் கூட அவற்றை வாங்கவில்லை. கடைசியில் எல்லாம் கசாப்புக்குத்தான் போனது. ஒருசிலர் மாடுகளை கொல்லக்கூடாது, அது தெய்வம் போன்றது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மாடுகளைக் காக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. மத்திய அரசு மாடு ஏற்றுமதிக்கு கையெழுத்து போட்டிருக்கிறார்கள். இந்தியாதான், மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணியாக உள்ளது என்று பெருமைப்பட்டு கொள்ளவாகத்தான் இருக்கும். இப்பொழுது நாம் அரசியல் பேச வேண்டாம். இங்கு வளர்ப்பவரின் எண்ணிக்கையைவிட அதை நுகர்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்றால் அதன் தேவையை அதிகரிக்க செய்ய வேண்டும். இதை உணர்த்த நம் முன்னோர்கள் வீட்டுக்கு ஒன்றாவது வைத்திருந்தார்கள். ஆனால், நாமோ உயிரற்ற டிராக்டர் மற்றும் இதர வாகனங்களைத் தான் உபயோகிக்கிறோம். அப்போதெல்லாம் மாடுகள் தான் செல்வம். மாடுகளை வைத்துத்தான் ஒருவன் பணக்காரனா, ஏழையா என்பதை அடையாளமாகக் கொண்டிருந்தார்கள். இன்று உயிரற்றவைகள் செல்வமாக உள்ளது. ஆடு, மாடு குட்டி போடும். அது மீண்டும் செல்வமாகும். ஆனால் டிராக்டரோ பணமோ குட்டி போடுமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். இந்த சமுதாயம் எப்படி மாறியிருக்கின்றன. ஆடம்பரம், வளர்ச்சி என்ற பெயரில் நாம் தவறான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை. மாடு வளர்ப்பவரை, விவசாயம் செய்பவரை கேவலமாக பார்க்கும் மனநிலை தொடர்வதாலேயே தொந்தரவுகள் உருவாகின்றன. சினிமாவில் நடிப்பவனை பெருமையாக கருதுவோர், சோறு போடுபவரைப்பற்றி பேசுவதில்லை. மாடு, பால் கொடுக்கவே மட்டும் அல்ல. பால், குடிப்பதற்காகவே மட்டும் அல்ல. மாடு விஷத்தை தின்றாலும் அதன் பால் விஷமாக இருக்காது என்று கூறுவது போலியான தகவல். அதுவும் ஒரு உயிரினம்தான். மருந்தடித்த புல், தானியங்கள் மாடு சாப்பிடும்போது அதற்கான தீமைகள் மாட்டிற்கும் வருகிறது. மாட்டின் பால் மூலமாக நமக்கும் வருகிறது. தாய்ப்பாலும் விஷமாகிறது. அதன் மூலம் குழந்தையும் பாதிக்கப்படுகிறது. விஷம் எப்படியிருந்தாலும் விஷம்தான். மாட்டைக் காப்பாற்றுவதற்கு என்னுடைய கருத்தாக ஒரே வழி இயற்கை வேளாண்மை மூலமாகத்தான். மாட்டை மட்டுமல்ல, நம்மை சுற்றியுள்ள ஒவ்வொரு உயிரினத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வேண்டும்.   எளிய மக்களுக்கான எதிர்காலம் கிராம சபைகளே - நந்தகுமார் (பூவுலகு பத்திரிகையில் பிரசுரிக்கபட்டது) கிராம அரசின் உதயம் 1993 ஆம் ஆண்டு. 73வது முறையாக நம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்   திருத்தப்பட்டது அந்த ஆண்டில்தான். அந்த சட்டத்திருத்தம் மிக முக்கியமான ஒன்று. அச்சட்டத் திருத்தம் வந்த போதுதான் உள்ளூர் மக்களுக்கான அதிகாரங்கள் உறுதி செய்யப்பட்டன. 1947-ல், சுதந்திரம் பெற்றிருந்தாலும் 1950-ல் நமக்கான சட்டத்தை இயற்றி, ‘நாம் இனி ஒரு குடியரசு நாடு’ என அறிவித்தாலும் 32.87 லட்ச சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பிரமாண்டமான நம் தேசத்தில், கடைக்கோடி மக்களுக்கு அருகில் ஒரு அரசு வந்ததென்று சொன்னால் அது 73வது சட்டத் திருத்தத்திற்குப் பிறகுதான். கிராம அளவில் பஞ்சாயத்துக்கள் அமைக்கப்பட்டு; அவை அம்மக்களின் அரசாக, சுயாட்சி அரசாகச் செயல்படவேண்டும் என்பதுதான் 73வது சட்டத் திருத்தத்தின் அடிப்படை நோக்கம். இப்புதிய சட்டத் திருத்தம் கிராம மக்களுக்கு ஒரு புதிய அரசை அமைத்துக் கொடுத்ததோடு , அதற்குப் பக்க பலமாகப் பல கூறுகளையும் ஏற்படுத்திக் கொடுத்தது. அவற்றில், உள்ளாட்சி தேர்தல்கள் தடையின்றி நடைபெற ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியாக மாநில தேர்தல் ஆணையங்கள் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க ஒன்று. அதேபோல, பஞ்சாயத்துக்களுக்கு நிதி வழங்க நிதி ஆணையங்களும் அமைக்கப்பட்டன. பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர் போன்ற பஞ்சாயத்து நிர்வாக பொறுப்புகளுக்கு பெண்கள் மற்றும் பட்டியல் பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டன. நாடாளுமன்றம் மற்றும் சட்ட சபைகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல்கள் நடத்தி, பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து, மத்திய மாநில அரசுகள் அமைக்கப் படுவதைப்போல, ஒவ்வொரு கிராம அளவிலும் பஞ்சாயத்து அரசுகள் அமைக்கப்பட்டு அதற்கான அடிப்படை நிதி ஆதாரங்களும் ஏற்படுத்திக்   கொடுக்கப் பட்டது இப்புதிய சட்டத்தால். கிராம சபை, அது மக்கள் சபை மாநில தேர்தல் ஆணையம், நிதி ஆணையம், பெண்கள் மற்றும் பட்டியல் பிரிவினருக்கு இடஒதுக்கீடு போன்ற இவை அனைத்தையும் விட மிக முக்கியமான ஒன்று இப்புதிய பஞ்சாயத்து சட்டத்தால் அமைக்கப்பட்டது. அது, கிராம சபை. ஒரு கிராமத்தில் இருக்கும் வாக்காளர்களை பிரதிநிதிகளாகக் கொண்ட மக்கள் சபைதான் கிராம சபை. சட்டசபைக்கு எப்படி சட்டமன்ற உறுப்பினர்களோ, அதேபோல்தான் கிராம சபைக்கு கிராம மக்கள். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து பிரதிநிதிகளின் கட்டுப்பாட்டில் மட்டும் நிர்வாகம் இயங்காமல், நிர்வாகத்தில் மக்களின் பங்களிப்பு இருக்கவேண்டும், கிராம வளர்ச்சியில் அக்கிராம மக்கள் பங்கேற்கவேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்டவை கிராம சபை. கிராம சபைகள் ஏதோ கிராம மக்கள் கூடி களையும் ஒரு கூட்டம் அல்ல. எப்படி சட்டசபை கூடுகிறதோ எப்படி நாடாளுமன்றம் விவாதிக்கிறதோ, அதேபோல் தான் கிராம மக்கள் கூடி விவாதித்து முடிவுகள் எடுக்கும் கிராம சபையும். எந்தச் சட்டம் நாடாளுமன்றத்திற்கும் சட்ட சபைக்கும் அதிகாரம் வழங்கி உள்ளதோ அதே சட்டம்தான் கிராம சபைக்கும் அதிகாரம் வழங்கி யுள்ளது. ஒரு மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் பிற தேவைகள் பற்றி சட்ட சபை விவாதித்து தீர்மானங்கள்   நிறைவேற்றுமோ அதேபோல்தான் ஒரு கிராமம் சம்மந்தப்பட்ட விசயங்களில் கிராம சபை விவாதிக்கும், தீர்மானம் நிறைவேற்றும். அதுமட்டுமல்ல, கிராம பஞ்சாயத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்துத் திட்டங்களும் கிராம சபையின் ஒப்புதலைக் கட்டாயம் பெறவேண்டும் என்பது விதி. மேலும், கிராம பஞ்சாயத்தின் வரவு-செலவு கணக்கு, வளர்ச்சி திட்டங்களின் மூலம் பயன்பெறுவோரை தேர்ந்தெடுப்பது, அவர்களுக்கு ஒப்புதல் வழங்குவது, கிராமத்திற்கான வளர்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குதல் எனக் கிராம நிர்வாகம் சம்மந்தப்பட்ட எந்த ஒரு செயல்பாட்டிற்கும் கிராம சபையின் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் சம்மந்தப்பட்ட கிராம மக்களின் ஒப்புதல் இருந்தால்தான் அந்தக் கிராமத்திற்குள் எந்த ஒரு திட்டத்தையும் நடைமுறைப் படுத்தமுடியும்.      இங்கு தான் கிராம சபையின் பங்கு மிக மிக முக்கியமாகிறது. உண்மையில் எந்த ஒரு திட்டமும், அது மத்திய அரசு கொண்டுவரும் திட்டமாக இருக்கலாம், மாநில அரசு நடைமுறைப்படுத்த முனையும் திட்டமாக இருக்கலாம் அல்லது ஏதோ ஒரு தனியார் நிறுவனம் அரசின் உதவியுடன் கிராமத்தில் சில திட்டங்களை நடத்த முன்வரலாம். ஆனால் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் சரி, பெரிய திட்டங்கள் முதல் சிறிய திட்டங்கள் வரை அத்திட்டங்கள் கிராம சபையின் ஒப்புதலைப் பெறவேண்டியது அவசியம். மக்கள் போராட்டங்களை வென்றெடுத்த கிராம சபைகள் கிராம சபையின் ஒப்புதலைப் பெற்று   ஒரு திட்டத்தை துவக்கியிருந்தாலும் நடைமுறைப்படுத்தி வந்தாலும் அத்திட்டத்தினால் கிராமத்தின் சுற்றுச் சூழலுக்கும் பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுமே யானால் அத்திட்டத்தின் பாதிப்புகளை தடுக்கக் கோரவும் தேவைப்பட்டால் திட்டத்தினை முற்றிலுமாக நிறுத்தக் கோரவும் கிராம சபைக்கு அதிகாரம் உண்டு. அப்படித்தான் நடந்தது பிளாச்சிமடா என்ற சிறிய கிராமத்தில். கேரளத்தின் பெருமாட்டி கிராம பஞ்சாயத்தில் இருக்கும் பிளாச்சிமடாவில், நாளொன்றுக்கு 20 லட்சம் லிட்டர் அளவிற்கு நிலத்தடி நீரை எடுத்துவந்தது கொக்ககோலா நிறுவனம். நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததோடு நீரும் மாசடைந்தது.   மக்களின் தொடர் எதிர்ப்பையும் மீறிச் சளைக்காமல் இயங்கி வந்தன அக்கம்பனியின் போர்வெல் மோட்டார்கள். மக்களும் சளைக்கவில்லை. அவர்களின் போராட்டத்திற்கு வரமாக வந்து வாய்த்தது கிராம சபை தீர்மானம். மத்திய அரசின் ஒப்புதலோடும் மாநில அரசின் ஆதரவோடும் இயங்கும் கோலா நிறுவனத்தை நம் சிறிய கிராமத்தின் கிராம சபை தீர்மானத்தால் என்ன செய்துவிட முடியும் எனத் தயக்கமும் பிளாச்சிமடா கிராம மக்களுக்கு முதலில் இருக்கத்தான் செய்தது. ஆனாலும், கோலா நிறுவனத்தால் தங்கள் கிராமத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை பட்டியலிட்டு நிலத்தடிநீரின் அளவு பெருமளவு குறைந்ததைச் சுட்டிக்காட்டி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினார்கள் கிராம சபையில். கோலா நிறுவனத்திற்குப் பெருமாட்டி கிராம பஞ்சாயத்து வழங்கிய உரிமம் ரத்து செய்யப்பட்டது. அதைக் கிராம சபை ஒப்புதல் அளித்தது. அவர்களின் தொடர் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்தது. வேறு வழியில்லாமல் கோலா நிறுவனம் அக்கிராமத்தில் இருந்து வெளியேறியது. கிராம சபைக்கு கட்டுப்பட்டது பஞ்சாயத்து நிர்வாகம் கிராம மக்கள் ஒருமனதாகத் தீர்மானத்திற்கு, கிராம சபைக்கு பஞ்சாயத்து நிர்வாகம் கட்டுப்படும் என்பதற்கு பிளாச்சிமடா ஒரு சான்று. பிளாச்சிமடாவில் 2000 லேயே கோலா நிறுவனத்திற்குப் பெருமாட்டி கிராம பஞ்சாயத்து அனுமதி அளித்திருந்தாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் அடிப்படையில் கிராம மக்கள் எழுப்பிய கோரிக்கைக்கு கட்டுப்பட்டுக் கோலா நிறுவனத்திற்கு உரிமம் வழங்குவதை நிறுத்தியது அக்கிராம பஞ்சாயத்து. மத்திய அரசு ஒரு திட்டத்தினை அங்கீகரிக்கிறது என்றாலும் மாநில அரசின் ஒப்புதலோடுதான் அத்திட்டம் நடைபெறுகிறது என்றாலும் கிராமத்தின் அரசான கிராம பஞ்சாயத்தின் நிலைப்பாடு என்ன என்பது மிக முக்கியம். அதைவிட மிக மிக முக்கியம் கிராம சபையின் நிலைப்பாடு. உதவவரும் நீதிமன்றங்கள் கிராமத்தின் சுற்றுச்சுழலை கிராம மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு கிராம சபை முடிவெடுக்க உரிமை படைத்தது என்பதைப் பார்த்தோம். அவ்வாறு சுற்றுச்சூழலைப் பாதிக்கும் திட்டம் வரவேண்டாம் என்றோ அல்லது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்டம்   ரத்து செய்ய வேண்டும் என்றோ கிராம சபை கோரிக்கை வைத்தால் சம்மந்தப் பட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த அரசு நிர்வாகமும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கிராம மக்கள் கிராம சபை தீர்மானத்தோடு நீதிமன்றத்தை அணுக முடியும். இவ்வாறு கிராமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்களை எதிர்த்து கிராம மக்கள் எழுப்பும் ஒருமித்த கருத்துதான் கிராமசபை தீர்மானம். ஜனநாயக முறைப்படி மக்கள் மேற்கொள்ளும் முடிவு கிராம சபை தீர்மானங்கள். அதனாலேயே   நீதிமன்றங்கள் அவ்வளவு எளிதாகக் கிராம சபை தீர்மானங்களை நிராகரித்துவிடுவதில்லை. வனங்களைக் காக்கும் கிராம சபை இன்றைய உலகமயமாக்கப்பட்ட சூழலில் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதில், பிளாச்சிமடாவைபோல எத்தனையோ கிராமசபைகள் தங்கள் பகுதி சுற்றுச்சுழலை இன்றைக்கும் பாதுகாத்து வருகின்றன. கிராம பஞ்சாயத்துக்களின் கிராம சபைகளுக்கு அதிகாரம் உள்ளதென்றால்; வனப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு, அதன் கிராம சபைகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கியுள்ளது வன உரிமைச் சட்டம் 2006. பழங்குடியினரின் உரிமையை அங்கீகரிப்பதோடு சுற்றுச்சூழலையும் பாதுகாத்து வருகிறது இக்கிராம சபைகள். இந்தியர்களில் சுமார் 25 கோடி பேர் வனப்பகுதியில் வாழ்கிறார்கள். பல அறிய இயற்கை வளங்கள் கொட்டிக்கிடக்கின்றன வனத்தில். வன உரிமைச் சட்டம் 2006, இக்கிராம சபைகளுக்கு வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டுதான் பல பன்னாட்டு நிறுவனங்களால் ஏற்படவிருந்த இயற்கை அழிப்பு தடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, ஒடிசா மாநிலத்தில் பாக்ஸைட் கனிமம் எடுப்பதற்காக நியம்கிரி என்ற மலையைத் தோண்டியது வேதாந்தா என்ற பன்னாட்டு நிறுவனம். மத்திய அரசின் ஒப்புதலோடும், மாநில அரசின் உதவியோடும் நடந்த இந்த இயற்கை வள கொள்ளையை தடுத்து நிறுத்தியது கிராம சபைதான். மத்திய மாநில அரசுகளின் முடிவுகளையும் தகர்த்து கிராம சபை தீர்மானங்களை ஏற்று வேதாந்தவை விரட்டியது நீதிமன்றம். இது நடந்தது 2013-ல். இமயத்தைக் காத்த கிராம சபை நியம்கிரி மலை மட்டுமல்ல இமயமலையை காக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளன கிராம சபைகள். ஹிமாச்சல பிரதேச அரசு கிராமசபை தீர்மானத்தைப் பொருட்படுத்தாமல், கஷாங் பகுதியில் நீர்மின் திட்டத்தினை தொடர்வதற்கு பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வன உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி தான் கிராமசபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்திட்டம் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கிராம மக்கள் கருதுவதைத்தான் கிராம சபை தீர்மானம் பிரதிபலிக்கிறது எனப் பசுமை தீர்ப்பாயம் சுட்டிக்காட்டி கிராம சபை தீர்மானத்தை ஏற்கவேண்டும் என உத்தரவிட்டது. இதை ஏற்க மறுத்து; கிராம மக்கள் பாமரர்கள், திறனற்றவர்கள் என உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த ஹிமாச்சல பிரதேச அரசு, பின்பு அதை திரும்பப் பெற்றுக்கொண்டது. தற்போது இமயமலை கிராமங்களில் நடந்த மக்கள் போராட்டத்திற்கு கிராம சபைகள் மூலமே வெற்றிகிடைத்திருக்கிறது. இது நடந்தது 2016-ல்.        எளிய மக்களுக்கான எதிர்காலம் கிராம சபைகளே அண்மையில் தெலுங்கானா மாநில அரசுக்கு உத்தரவிட்ட ஹைதரா பாத் உயர் நீதிமன்றம், கிராம சபையின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே அம்மாநிலத்தின் அதிலாபாத் மாவட்டம் கல்யாணிகனி பகுதியில் அமையவுள்ள நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் கையகப் படுத்த வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வளர்ச்சி என்ற பெயரில் எளிய மக்கள் மீது தொடுக்கப்படும் போருக்கு எதிராக எளிய மக்களிடம் இருக்கும் வலுவான கருவி கிராம சபைகள். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பாதிக்கப்படும் மக்களின் கருத்துக்கள் கேட்கப்படுவது அதனை அங்கீகரிப்பது என்பது வரலாற்றில் இதற்கு முன்பு நடந்திருக்கிறதா என்பது சந்தேகமே. கிராம சபைகளுக்கு ஒத்துழைக்காத மாநில அரசுகள் அவற்றுக்கு சாதகமாகச் சுழன்று இயங்கும் மாவட்ட நிர்வாகம் என்ற நிலை இருக்கும் வரை கிராம சபையின் கோரிக்கையை நடைமுறைப்படுவது சிரமம் தான். ஆனாலும் ஜனநாயக ரீதியில் கிராம மக்களின் கோரிக்கையை சட்டத்திற்கு முன் நிறுத்தும் மிகப்பெரிய கருவி கிராம சபை தீர்மானங்கள். அன்றைக்கு பிளாச்சிமடா என்றால் இன்றைக்கு நெடுவாசல் மக்கள் கிராம சபையைக் கையில் எடுத்திருக்கிறார்கள். மக்கள் போராட்டக்களுக்கு என்றைக்கும் வலுசேர்க்கக்கூடியவை கிராம சபைகள். மத்திய மாநில அரசுகள்   கிராம சபைக்கு தலைவணங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.       மறைநீர் காப்போம் - கார். அகிலன் மறைநீர் கோட்பாடு டோனி ஆலன் என்பவரால் 2001-ம் ஆண்டு உருவாக்கப்பெற்றது. ஒரு பொருளை உற்பத்தி செய்ய தேவைப்படும் தண்ணீர் மறைநீர் ஆகும். காட்டாக, தோலால் ஆனா காலணி தயாரிக்க 8000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும், அதாவது ஒரு மாட்டை வளர்த்து, பராமரித்து, அதன் தோலை பதப்படுத்தி காலணி செய்துமுடிக்கும் வரை ஆகும் நீரே மறைநீர். 500 கிராம் அரிசி உற்பத்தி செய்ய 1700 லிட்டர் மறைநீர் தேவைப்படும். மறைநீர் வாணிகம் ஒரு டன் அரிசி இறக்குமதி செய்யும் நாடு ஏறத்தாழ 24 லட்சம் லிட்டர் தண்ணீரைச் சேமிக்கிறது. நீர் பற்றாக்குறையாக இருக்கும் நாடுகள் இதுபோன்ற இறக்குமதிகளை மேற்கொள்வதன்மூலம் தமது நாட்டில் சேமிக்கும் தண்ணீரை வேறு வழியில் பயன்படுத்தி வளங்களைப் பெருக்கிக்கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, ஆரஞ்சு ஏற்றுமதி செய்து கொண்டிருந்த இஸ்ரேல் தற்போது ஏற்றுமதியைக் குறைத்துகொண்டதன் மூலம் மறைநீரை பெருமளவில் சேமிக்கிறது. 2001-ம் ஆண்டுக்கு பிறகு, ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகள் மற்றும் சேவைகள் கணக்கிடப்பட்டன. அவற்றைக்கொண்டு ஒரு நாடு இழக்கும் மறைநீரும் ஒரு நாடு சேமிக்கும் மறைநீரும் அளவிடப்பட்டன. உலக வர்த்தகக் கொள்கை மற்றும் ஆராய்ச்சியில் இம்மறைநீர் மாபெரும் தாக்கங்களை ஏற்படுத்துகிறது குறிப்பாக தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் நாடுகளான இஸ்ரேல், எகிப்து, ஜப்பான்.  அதுமட்டுமின்றி தண்ணீர் கொள்கையிலும் மேலாண்மையிலும் புதிய வரையறையை வகுக்கவும் மறைநீர் கோட்பாடு தூண்டுகிறது. அமெரிக்கா, பிரேசில், அர்ஜென்டினா போன்ற நாடுகள் அதிகமாக ஏற்றுமதி செய்வதும் ஜப்பான், எகிப்து, இஸ்ரேல் போன்ற நாடுகள் அதிகமாக இறக்குமதி செய்வதும் இம்மறைநீர் கொள்கையின் அடிப்படையிலேயே என்பதை அறிக.     மறைநீர் ஏற்றுமதி - இந்தியா ஒரு இந்தியன் ஒரு நாளைக்கு பயன்படுத்தும் தண்ணீரின் அளவு ஒரு அமெரிக்கன் பயன்படுத்துவதைக் காட்டிலும் குறைவே. நாட்டிற்கு தேவையான தண்ணீரின் அளவை விட ஏற்றுமதிக்கு இந்தியா அதிகம் நீர் செலவு செய்கிறது என்கின்றன ஆய்வுகள். ஒரு நாட்டின் உணவு ஏற்றுமதியைக் கொண்டு அந்நாட்டின் மறைநீர் செலவை கணக்கிட முடியும், இந்தியாவில் 90 விழுக்காடு மறைநீர் ஏற்றுமதி வேளாண் பொருட்களின் உற்பத்தியாலேயே நிகழ்கிறது. “வேளாண்மையில் பயன்படுத்தப்படும் நீரை நாம் மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் ஆனால் ஏற்றுமதி செய்த பொருட்களில் செலவான மறைநீரை ஒருபோதும் நாம் திரும்பப் பெறப் போவதில்லை. வருங்காலத்தில் உணவு ஏற்றுமதி மேலும் பெருகுமாயின், நாட்டின் நீர் இருப்பு குறைந்து பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகும்.” என்கிறார் பெங்களூருவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் திரு. பிரஷாந்த் கோஸ்வாமி. நாம் கவனிக்க வேண்டியவை !! 350 மில்லி குளிர்பானம் தயாரிக்க தேவைப்படும் மறைநீரின் அளவு ஏறத்தாழ 200 லிட்டர். ஒரு நாளைக்கு சராசரியாக 3500 லிட்டர் குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனம் எவ்வளவு மறைநீரை பயன்படுத்தும் என்பது அதிர்ச்சியுறச் செய்கிறதா? இங்கு மறைநீர் பயன்படுத்திக்கொள்ள கட்டுப்பாடுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை, வருகின்ற நிறுவனங்களை எல்லாம் ஆலை அமைத்துக்கொள்ள அனுமதிக்கிறது அரசு.  வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்கள் இந்தியாவைத் தேடித் தேடி வந்து தனது ஆலைகளை நிறுவுவதற்கான காரணம் இப்பொழுது புரியும். இவ்வாலைகளில் தயாரிக்கப்படும் குளிர்பானங்கள் முழுவதும் இந்தியாவிலேயே விற்பனைக்கு வரப் போவதில்லை. ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு வெளிநாட்டு நிறுவனம், நம் நாட்டின் நீர்வளத்தை பயன்படுத்தி, நீர் ஆதாரங்களை அழித்து, சொற்ப அளவில் வரி செலுத்தி முழு பயன்பெறுகிறது. நாமும் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். ஆயத்த ஆடைகள் துறை இந்தியாவின் பல நகரங்களின் வாழ்வாதாரமாக திகழ்கிறது, எனினும் ஒரு ஆடை தயாரிக்க ஏறத்தாழ 2400 லிட்டர் மறைநீர் தேவைபடுகிறது, அத்தேவை மட்டுமின்றி அத்தொழிற் சாலையிலிருந்து வெளிவரும் கழிவுகள் ஆற்று நீரில் கலந்து மற்றொரு வாழ்வாதாரமான விவசாயத்தை அழிப்பதும் இங்கே தான். எடுத்துக்காட்டாக, திருப்பூர் சாயப்பட்டறைகளில் இருந்து வெளிவரும் கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதால் அந்நீரைப் பயன்படுத்தும் விவசாய நிலங்கள் மலட்டு தன்மை அடைவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். குளிர்பான ஆலைகள், ஆயத்த ஆடைகள் தொழிற்சாலை, சாயப்பட்டறைகள் மட்டுமல்ல தோல் தொழிற்சாலைகள், மகிழுந்து தொழிற்சாலைகள், கரும்பு ஆலைகள் என எண்ணிலடங்காத வழிகளில் நாம் நம் நீர்வளத்தை இழக்கிறோம். தண்ணீர் பற்றாக்குறை அதிகம் இருக்கும் நாட்டிலிருந்து தண்ணீர் அதிகம் உட்கொள்ளும் பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வது சரியா? மூன்றாம் உலகப்போருக்கு தண்ணீரே முதன்மையாக விளங்கும் என்று தெரிந்தும் நாம் எதை நோக்கிப் பயணிக்கிறோம்? வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம், வளர்ச்சி, வர்த்தகம் எல்லாம் சரி. தண்ணீர்? வளர்ந்து வரும் நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை அமைப்பதின் காரணம் மலிவாகக் கிடைக்கும் தொழிலாளிகள் மட்டும்தானா? அல்லது மறைநீருமா? வருங்கால தண்ணீர் தேவைகளை உணர்ந்து கவனம் செலுத்த வேண்டாமா? மானியங்களை அள்ளி வழங்கி நம் நாட்டு வளங்களை வெளிநாட்டவர் சுரண்டுவதை தடுக்க வேண்டாமா? மறைநீரைக் கணக்கில் எடுத்தால் தொழில் வளர்ச்சி பெறமுடியுமா என்ற கேள்வி எழலாம். தொழில் வளர்ச்சியடைய கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும். நீர் இருப்பை பெருக்காமல் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும்  சாதித்து என்ன செய்யப் போகிறோம்? நமக்குப் பின் இந்நாட்டில் வாழப்போகும் சந்ததியினர் உற்பத்தியை பெருக்கி பணம் பெற முடியும், நீர் பெற முடியுமா? இன்றைய ஏற்றுமதி கொள்கைகள் வருங்காலத்தவருக்கு எதைச் சேர்த்துவைக்கப் போகின்றன? பணமா? குடிநீரா? சிந்திப்போம், காப்போம்.     தொலைத்தவை தேடி - உமேஷ் சென்னை என்ற இந்த மாபெரும் நகரம் தான் இந்தியாவின் முதல் மாநகராட்சி என்ற பெருமையை பெற்ற நகரம். ரிப்பன் பிரபுவால் இந்த பெருமை இந்நகரத்திற்கு கிடைத்த வருடம் 1688. இந்திய விடுதலைக்கு பின் மிக முக்கியமான ஒரு நகரமாய் உருவாக தொடங்கிய சென்னை தொழில் வளர்ச்சியால் மேற்கே ஆந்திரா எல்லை வரை விரிவடைந்தது. நார்த் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட அந்தப் பகுதியில் தொழிற்சாலைகள் மிக அதிகம், அந்த நாடாளுமன்ற தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி போட்டி இடும் அளவிற்கு அங்கு தொழிற்சாலைகள். மக்கள் தொகை அதிகரிப்பு, தொழிற்சாலைகளின் புகை, மாசு என்றிருந்த சென்னையின் இப்பகுதியை விட்டு மக்கள் மாற்று இடங்களுக்கு மாறத் துவங்கியது 1980 காலகட்டங்களில், அவர்கள் நகரத் துவங்கியது தென் சென்னை என்று இன்று அழைக்கப்படும் பகுதிக்கு. தாம்பரம், நங்கநல்லூர், மடிப்பாக்கம், வேளச்சேரி, தரமணி, பள்ளிகரணை என்று அது நீண்டு சென்றது. அரசாங்கமும் இதை ஆதரித்தது. இங்கு தான் தொடங்கியது சென்னையின் மிக பெரிய இழப்பு. ஓவ்வொரு முறை ரமணன் வானிலை அறிக்கை படித்து கனமழை என்று கூறிய வினாடிகளில் ஏரிகளாய் காட்சி அளிக்க ஆரம்பித்துவிடும் இப்பகுதிகள். எதனால் இந்த நிலை? இவை தாழ்வான பகுதிகள் என்றாலும் ஏன் இவ்வளவு அதிகமான தண்ணீர் தேக்கம் இங்கு மட்டும், அதுவும் பள்ளிகரணை துவங்கி, துரைபாக்கம் வரை இந்த நிலை மிக மோசம். ராணுவம் ரப்பர் படகுகளில் மக்களை வெளியேற்றும் அளவுக்கு மோசம். இந்த நிலைக்கு முழுக்க முழுக்க காரணம் நாம் தான், நமது அரசாங்கம் தான். சென்னையின் பூகோள அமைப்பு அதன் ஆறுகள் நீர்பிடிப்பு பகுதிகள் என்று எதையும் ஆராயாமல் அரசாங்கத்தால் நடத்த பட்ட ரியல் எஸ்டேட் குளறுபடிகளே காரணம். சென்னையின் அமைப்பு மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சரிந்த நிலப் பரப்பை உடையது ஆதலால் சென்னையில் மழை என்றால் அனைத்து மழை நீரும் உருண்டோடி சேரும் இடமாய் இருந்தது, இந்த மடிப்பாக்கம் - தரமணி - வேளச்சேரி - பள்ளிகரணை பகுதிகள். உருண்டோடிய தண்ணீர் தேங்கி நின்ற இடம் தான் பள்ளிகரணை சதுப்பு நில பகுதி அதனை சுற்றி இருந்தவையே வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லூர் ஏரி. இந்த நீர் பகுதியில் வறண்ட காலங்களில் வீடுகள் முளைத்தன. மழை நீர் தேங்கும் பொழுதெல்லாம் மண் கொட்டப்பட்டு தரை மட்டம் உயர்த்தப்பட்டது இருந்தும் நீருக்கு அதன் பாதை என்றும் மாறியதே இல்லை, அதென்ன யானையா அதன் வழி தடத்தில் வீடுகள் வந்தால் வழி தவற, அழகாய் ஒவ்வொரு வருடமும் தன் வழியில் வந்து அனைத்தையும் வெள்ள காடாக்கியது. சரி இங்கு இந்த சதுப்பு பகுதியில் தேங்கும் நீர் என்ன ஆகின்றது? இங்கு மிக அழகான ஒரு இயற்கையின் செயல் நிகழ்கிறது. இந்த சதுப்பு நில  தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாய் வடிந்து ஒரு கால்வாயாக ஓடுகிறது. அதன் பெயர் ஒக்கியம் கால்வாய். ஒக்கியம் கால்வாய் என்ற இந்த நீர்நிலை காரப்பாக்கம் வழியே ஓடி கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள பக்கிங்காம் கால்வாயில் கலக்கிறது. மரக்காணத்தில் இருந்து விஜயவாடா வரை நீள்கிறது இந்த பக்கிங்காம் கால்வாய். அதுவும் சென்னை நகரினுள் 33 கி.மீ. அளவிற்கு இந்த கால்வாய் நீள்கிறது. உலகில் இருந்த மிக நீண்ட நன்னீர் கால்வாய்களில் இதுவும் ஒன்று. சென்னைத் துறைமுகத்திற்கு அருகில் கூவம் ஆற்றுடன் கலக்கிறது இக்கால்வாய். ஆழிப்பேரலை காலத்தில் சென்னை கடற்பகுதிகள் ஓரளவுக்கு தப்பிப் பிழைக்கக் காரணம், கடற்கரையில் இருந்து 1 கி.மீ. தொலைவில் ஓடும் இந்த கால்வாயே என்றால் அது மிகையாகாது. சென்னை மாநகராட்சிக்குள் ஒரு கால்வாய் அதுவும் நன்னீர் அதில் படகு போக்குவரத்து என்ற கனவு  அனைத்தும் இந்த கால்வாய் தூர்ந்து போனபொழுது அதனுடனே சேர்ந்து தூர்ந்து போனது. இவை அனைத்தையும் தாண்டி இந்த பக்கிங்காம் கால்வாய், ஒக்கியம் கால்வாய், பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதி ஆகியவை அனைத்தும் ஒரு பல்லுயிர் பெருக்கப்பகுதி. இவை அனைத்தும் நம்  அரசாங்கத்தின் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் இழக்க நேர்ந்தது. வேடந்தாங்கலை விட 4 மடங்கு பறவைகள் வந்து செல்லும் இடம் இந்த பள்ளிக்கரணை. இயற்கையாய் அமைந்த மிக அரிதான ஒரு நன்னீர் சதுப்பு நிலம், பாதிக்கு மேல் அழிக்கப்பட்டு 80 சதுர கி.மீ. அளவிற்கே இப்பொழுது நம்மிடையே உள்ளது. சுற்றிலும் தொழில்நுட்ப பூங்காக்கள், அவற்றின் ஒட்டு மொத்த குப்பையும் இங்கு தான் கொட்டபடுகிறது, ஒரு இயற்கை பொக்கிஷத்தை குப்பை மேடாக்கிய பெருமை நம்மையே சேரும். இப்படி நம்மை சுனாமியில் இருந்து காத்த ஒரு நீர்நிலை, சென்னையின் வடிகாலாய் அமைந்த ஒரு பகுதி, பல்லுயிர் பெருக்கம் நடக்கும் ஒரு பகுதி என்று சென்னையின் பெருமையை, இயற்கை அழகை அழித்துவிட்டு அதை பற்றி சற்றும் சலனமில்லாமல் போகிற போக்கில் நம்  வீட்டு குப்பையை அந்த சதுப்பு நிலத்தில் மீண்டும் எரிந்தபடி அந்த இடத்தைக் கடக்கிறோம். இப்பொழுது மக்களுக்கு விழிப்புணர்வு வந்தாயிற்று ஆனால் அரசாங்கம் என்று திருந்தும்? என்றோ ஓர் நாள் எழுதிய கவிதை தான் நினைவுக்கு வருகிறது   “மக்கள் எல்லாம் குப்பையை தொட்டியில் தான் கொட்டுகிறார்கள். ஆனால் அரசாங்கம் தான் அதை ஏரியில் கொட்டுகிறது”   விதை பந்து - ஜனகன் அனைத்து உயிரினங்களும் ஒரே சுவாசத்தைதான் பங்கிட்டு கொள்கின்றன. மனித இனத்தை தவிர வேறு எந்த உயிரினமும் தங்கள் வாழும் இருப்பிடத்தை அழிக்கும் வேலையை செய்யத் துணியவில்லை. தெரிந்தோ தெரியாமலோ நம்மைச் சுற்றி உள்ள இயற்கை வளங்களை நம் சுயநலம் மற்றும் சொகுசு வாழ்க்கைக்காக அழித்து வருகிறோம். சமீப  காலமாக இந்த அழிவானது மிகவும் வேகமாக நடந்து வருகிறது. காற்றை காசுகொடுத்து வாங்கும் அவல நிலையும் உலகின் சில இடங்களில் ஆரம்பம் ஆகிவிட்டது. பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு தண்ணீரை காசு கொடுத்து வாங்குவோம் என்று யாரும் நினைத்து இருக்கமாட்டோம். ஆனால் இப்பொழுது பலரது வீடுகளில் சுத்திகரிக்கப்பட்ட நீரும், நீர் சுத்திகரிப்பானும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ஒரு பாட்டில் காற்றின் இந்திய மதிப்பு ரூ.1000 முதல் 1700 க்கு விற்கப்படுகிறது. அதுவும் சிலமணி நேரத்துக்கே பயன்படுத்த முடியும். அப்படியானால் இதற்கு மாற்று மரங்களை நடுவதே. ஏதோ ஒரு சில இடங்களில் மரங்களை நட்டுவிட்டு மற்ற பகுதிகளை ஒட்டுமொத்தமாக அழித்து சென்னை போன்று கான்கிரீட் காடுகள் வளர்ப்பது முடிந்தவரை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை நம் விட்டை சுற்றி இடம் இருப்பதை பொறுத்து மரம், செடி, கொடி, மூலிகை, பூக்கள் என ஏதோ ஒன்றைப் பராமரிப்பது நல்லது. இதை இந்த பூமிக்காக செய்யாவிட்டாலும் உங்களுக்காகும் உங்கள் குழந்தைகளுக்குகாகவும் செய்தே ஆக வேண்டும். வாரிசுகளுக்காக சொத்து சேற்கும் பெற்றோர்களே, நாம் வாழும் இந்த பூமியில் சமநிலை இல்லாமல், சுத்தமான காற்றோ நீரோ இல்லாமல் நீங்கள் சேர்த்த செல்வம் அவர்களுக்கு ஓருபோதும் பயன்படாது. ஏனெனில் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ஆகும். முன்பெல்லாம் பழங்களை உண்ணும் பறவைகளும் விலங்குகளும் விதைபரவலுக்கு உதவி புரிந்தன. நாம் செய்யும் நாச வேலை போதாதென்று விதைகள் இல்லா பழங்களையும், முளைப்புத் திறனற்ற விதைகளையும் பயன்படுத்த தொடங்கிவிட்டோம். இயற்கையின் ஒவ்வொரு கன்னியாக அறுக்கும் நாமும் ஒருகாலத்தில் அறுபடுவோம் என்பதை மறந்துவிடாதீர்கள். முடிந்தவரை வீட்டைச் சுற்றியுள்ள இடங்கள், பயன்படுத்தாமல் இருக்கும் வீட்டு மனைகள், தரிசுநிலங்களை உயிர்சூழல் உள்ளவாறு பராமரியுங்கள். உயிர்சூழல் உள்ளதாக மாற்ற முதல் படி அங்கே மரம், செடி, கொடிகளை வளர்ப்பதே ஆகும். அப்படி வளர்க்கும் மரங்கள் இம்மண்னின் மரங்களாக இருக்க வேண்டியது மிக அவசியம். மரம் செடி கொடிகளை சுலபமாக விதை பந்துகள் வீசுவதன் மூலமாக வளர்க்கலாம். விதை பந்துகளை எந்த ஒரு பொருள் செலவும் இல்லாமல் நமது வீட்டின் அருகில் இருக்கும் விதைகள், மண் மற்றும் எருவை கொண்டு எளிமையாக  செய்ய முடியும். குழந்தைகளின் பிறந்தநாள், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு மிட்டாய் கொடுப்பதை தவிர்த்துவிட்டு விதை பந்துகளை செய்து கொடுக்கலாம். மாற்றத்திற்கான விதையாக இருக்க விரும்பும் அனைவரும் விதை பந்துகளை செய்து வீட்டைச் சுற்றி உள்ள இடத்தில் பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். விதை பந்து செய்வது எப்படி? தோட்டத்து மேல் மண் (செம்மண் / களிமண் ) , விலங்கு கழிவு (மக்கிய ஆடு அல்லது மாட்டு எரு / பசுஞ்சாணம் / மண்புழு உரம் ) , விதைகள் இவைகளை கொண்டு விதை பந்துதை மிகவும் எளிமையாக செய்ய முடியும். மண் : எரு : விதை = 5  : 3 : 1 என்ற அளவில் பயன்படுத்தும்போது விதைகளை சரியாக மூட  தேவையான கலவை நமக்கு கிடைக்கும். மண்ணில் தேவையான அளவு எரு கலந்து நீரூற்றி பிசைந்து உருண்டையாக உருட்டிக் கொள்ள வேண்டும். அதன் நடுவே நீங்கள் சேகரித்த விதைகளை வைத்து உருண்டையாக்கி விடுங்கள். பிறகு பந்துகளை நிழலில் காயவைத்து பின்னர் வெயிலில் காய வைக்கவும் .நிழலில் காயவைத்து பின்னர் வெயிலில் காய வைப்பதன் முலம் பந்துகளில் வெடிப்புகள் ஏற்படாது. மர விதைகள் கொண்ட இப்பந்தை விளை நிலங்கள் இருக்குமிடத்தில் பயன்படுத்த வேண்டாம். ஆட்கள் இல்லாத இடங்களில் கையால் இதை வீசி எறியவும். நிலத்தில் விழுந்த பந்தானது பூச்சி, எறும்பு, பறவைகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்கும். இதில் உள்ள விதை ஒரு வருடம் வரை முளைக்க ஏதுவாக பத்திரமாக இருக்கும். நிலத்தில் விழுந்த இந்த உருண்டைகளிலுள்ள மண் மழை காலத்தில் உருகி நிலத்தோடு ஒட்டும் மற்றும் அதிலுள்ள உரமானது விதை வளர துணை புரியும் . பறவைகளும் விலங்குகளும் கூட தங்களுக்கு உணவளிக்கும் தாவரங்களின் விதைகளை நிலத்தில் எச்சமாக வீசிச் செல்கிறது. மனிதர்களாகிய நாமும் உதவுவோம். மண் மன்றும் எருவை சேகரித்து வையுங்கள். பழங்களை சாப்பிட்ட பின் நல்ல விதைகளை எடுத்து சேகரித்து வையுங்கள். ஓய்வு நேரத்தில் விதைப்பந்தை உருவாக்கி வைத்து வெளியே செல்லும் போது நல்ல இடம் பார்த்து வீசி விடுங்கள். “இனி விதைகளே பேராயுதம்”  - நம்மாழ்வார்    பறத்தல் - பா. க. பயணங்கள் நம் வாழ்கையின் திசையையே புரட்டிப்போடுமளவுக்கு வலிமைமிக்கது. நாம் எப்போதெல்லாம் பயணங்கள் போயிருக்கிறோம், எங்கிருந்து எப்படி தொடங்கியிருக்கும் என்று எண்ணிப் பார்ப்பது உண்டு. சிறு வயதில் வார கடைசியிலோ விடுமுறை காலங்களிலோ வீட்டில் உள்ள பெரியவர்கள் அழைத்துக் கொண்டு போகும் போது மனதுக்குள் அப்படியொரு  கொண்டாட்டம். சில சமயம் இதனால் அந்த குழந்தை செய்யக் கூடிய சேட்டையைக் கட்டுப்படுத்த முடியாமல் வீட்டில் உள்ள  பெரியவர்கள் எரிச்சலாகி அந்த குழந்தைத் தனத்தை ரசிக்க முடியாமல் அடித்து கட்டுப்படுத்த, அந்த கொண்டாட்ட மனநிலையே களையிழந்துப் போகும். இப்படி தொடங்கும் பலரின் பயணங்கள் ஒவ்வொரு பருவகாலத்திலும் அதற்கேற்றார்போல்  வேறுபடுகிறது. அது  பள்ளி கல்லூரி சுற்றுலாவாகவோ, வேலை நிமித்தமாகவோ, நண்பர்களுடனும், குடும்பத்துடன் ஊர் திருவிழாவுக்கு செல்வதும், கல்யாணமான புது தம்பதியினர் தேனிலவாகவும், வயதானவர்கள் புனிதத்தலங்களுக்கு போவதுமாக அமைகிறது. சில பயணங்கள் திட்டமிட்டும் சில பயணங்கள் திட்டமிடாமலும் பயணிப்பதும் நமக்கு பலவித ருசிகரமான அனுபவங்களை கொடுப்பதுண்டு. பயணங்களில் நாம் கடந்து வரும் மனிதர்கள், இடம், அனுபவம் நமக்கு புதிய பார்வையை, புரிதலை வாழ்க்கையைப் பற்றிய முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் அணுகும் முதிர்ச்சியை நமக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் என்றால் அது மிகையல்ல. முக்கியமாக வாழ்கை பாடத்தை நமக்கு புகட்டும். வாழ்க்கைக்கான கற்றல் பயணங்களில் மட்டுமே முழுமையடையும் என்பது என் ஆழமான நம்பிக்கை. பயணம் செய்வதையே வாழ்க்கையாக வாழ்பவர்களை பார்க்கும்போதும், கேள்விபடும்போதும் ஏக்கமாகவும் பொறாமையாகவும் இருக்கும். பயணப்படுவதற்காக மட்டுமே பயணிப்பவர்கள் உண்டு. கடந்து வரும் அனைத்தையும் கவனித்து சலனமே இல்லாமல் அமைதியாக நகர்வது, ஆராயக் கூடாது அனுபவிக்கனும் என்று வாதிடுபவர்கள், தாங்கள் கடந்து வருவதை கவனித்து தங்களுக்குள் அசைப்போடுவர். சிலர் நோக்கங்களுடன் தேடலுடனும் பயணப்படுவார்கள். இப்படி பயணங்கள் நமக்குள் நம்மை அறியாமல் ஏராளமான அசைவுகளைப் புதைத்து வைத்திருக்கும். அப்படி நாம் தேக்கி வைத்துக் கொள்ளும் ஒன்று எப்போது வெடிக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது. வாழ்க்கையில் அது எப்படிப்பட்ட திருப்புமுனையாக அமையும் என்பதையும் நம்மால் யூகிக்க முடியாது. அது வாழ்க்கை முழுவதும் பெரும் தாக்கத்தை செலுத்திக் கொண்டே இருக்கும். புதியதும், எதிர்பார்க்காதவைகளும் தான்  நம்மை சுவாரசியபடுத்துவதற்கான காரணிகள். இது, பயணத்தில் எந்த நொடியிலும் கிடைக்கும். வாழ்க்கையையே பயணமாக உணரும் போதோ, பயணம் செய்வதையே வாழ்க்கையாக தேர்ந்தெடுக்கும் போதோ இது எல்லையற்றதாக அமையும். பலர் வாழ்க்கை முழுவதும் கடினமாக வேலை செய்துவிட்டு ஒரு பெருந்தொகையை சேர்த்து வைத்துக் கொண்டு பயணப்பட வேண்டும் என்ற விருப்பத்தை தங்களுக்குள் பெருங்கனவாக வளர்த்தும், ஒளித்தும் வைத்திருப்பர். சிறகு முளைத்த பறவையாய் காத்திருப்பர். அடைந்து கிடந்த கூட்டினுள் இருந்து விடுபட்டு உயரமாய் பறக்கும் தருணமே நாம் விடுதலையை உணர்தல் ஆகும். காத்திருப்பே விடுதலையை உன்னதமாக்குகிறது. சுற்றுலா தளங்களாக போகும் ஊர்களோ, கடற்கரையோ, மலை பிரதேசங்களோ நம்மை பரவசமடைய செய்வதின் காரணத்தை ஆழமாக சிந்தித்தோமானால் ஒன்று புலப்படும். பழக்கமான சலித்த வாழ்க்கையிலிருந்து (தற்காலிகமானதாக இருந்தாலும்) விடுபடுகிறோம் என்ற அந்த உணர்வே நம் மகிழ்ச்சிக்கான மூல காரணமாக இருக்கும். பயணங்களே வாழ்க்கையின் சிறந்த முதலீடு நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் சூழ்நிலை கைதிகளாக தான் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருக்கிறோம். ஏதோ ஒரு விதத்தில் அடைபட்டுக்கிடக்கும் நமக்கு பயணங்கள் நம் விடுதலைக்கான திறவுகோலாக அமைகிறது. நாம் நாமாக இருக்க, உணர, சிந்திக்க, செயல்பட பயணங்கள் இன்றியமையாத ஒன்றாக அமைகிறது. உனக்காக நீ வாழ்கிறாயா, அல்லது மற்றவர்களுக்காக வாழ்கிறாயா என்பதற்கு முன்பாக உன் வாழ்கையை நீ தான் வாழ்கிறாயா என்பதே நாம் எழுப்ப வேண்டிய கேள்வி. பயணத்தின் நோக்கம் எப்போது அர்த்தம் உள்ளதாக அமையும் என்றால் விடுதலையின் பால் நாம் உணரும் போது, உணர்தலுக்கான தேடலாக பயணம் நம்மை நகர்த்தி செல்லும் போது, நாம் பறக்க கற்றுக் கொள்கிறோம். இதை மேலும் உணர்வது நம்மை மேலும் உயர பறக்க செய்யும். பொதுவாக ஊர் சுற்றப் புறப்பட்டவர்கள் குறைவான நாட்களில் அதிகமான இடங்களை கண்டுகளிப்பதையே இலக்காக நிர்ணயித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் நான் இந்த இந்த இடங்களுக்கு போனேன் என்று பெருமையாக சொல்லவும், அதை புகைப்படமாக காட்டுவதிலும் தான் அவர்களுக்கு ஆனந்தம் என்று நினைக்கின்றனர். நாமும் பல இடங்கள் பார்த்தாச்சு போயாச்சு என்ற போட்டியில் ஏற்படும் மகிழ்ச்சியாகவே  வெளிப்படுகிறதே தவிர உள்ளார்ந்து உணர்ந்தோமா என்பதை நாம் ஆழமாக பரிசீலனை செய்ய வேண்டும். மகிழ்ச்சி என்பது உண்மையுடன் நெருங்கிய தொடர்புடையது. அந்த உண்மையை கண்டறிந்து உணர்ந்து தரிசிப்பதே எந்த செயலையும் முழுமையடைய செய்கிறது. பயணங்களுக்கும் இது பொருந்தும். எளிமையாக இருக்கப் பழகுவதே நாம் இனிமையாக இருப்பதற்கான ரகசியம். பாரங்கள் குறையும் போது வேகம் கூடும், இன்பம் அதிகரிக்கும். இதுவே பறத்தலின் அடிப்படை விதி. ஆசைக்கும் பேராசைக்கும் மயிரிழை தான் வித்தியாசம் அதுபோல தான் தேவைக்கும் வசதிக்குமான வித்தியாசமும். இந்த உண்மையை நீண்ட பயணத்தின் ஊடே நாம் உணர தொடங்கும் பொழுது நம்மை கட்டியுள்ள சங்கிலிகள் விடுபட்டு இருக்கும். நீலக் கடலுடனும், உயர்ந்த  மலைகளுடனும், மேககூட்டங்களுடனும், தூரத்து  நட்சத்திரங்களுடனும் இணைந்து பயணிப்போம் ஒரு பறவையாய். பறத்தல் இன்றியமையாதது.     சுழல் - வினோத் நாம் அனைவரும் ஒரு சுழலில் தான் உள்ளோம். அதுதான் தற்போதைய சூழல். ஒரு கருந்துளை போல. சில நாட்களுக்கு முன் ஒரு கிராமத்தில் ஒரு சிறுவன் என்னிடம் பென்சில் வாங்கித் தருமாறு கேட்டான். ஏன் என்றதற்கு தன்னுடையது தொலைந்துவிட்டது என்றான். ஆசிரியரிடம் புகார் செய் என்றால் அடிப்பார்கள் என்றான். “அதெல்லாம் அடிக்க மாட்டார் அவரிடம் சொல் அவரே வாங்கி தருவார்” என்றதற்கு பின் வகுப்பிலுள்ள அனைவருமே கேட்க ஆரம்பித்து விடுவார்கள் என்றான். “உன் வகுப்பில் அனைவரது பென்சிலுமா திருடு போயுள்ளது?   பின் யார் தான் திருடன்?” என்றதற்குச் சிரித்தான். எனக்கு இந்தச் சூழலை தமிழ்நாட்டு மக்களுடன் தான் ஒப்பிடத் தோன்றியது. நாம் நம்மையே அறியாமல் நம் பேராசையை குழந்தைகளுக்குத் திணித்துக் கொண்டிருக்கிறோமோ என்று தோன்றுகிறது. தமிழ் என்றவுடனே மொழிப்பற்றும் இனப்பற்றும் சேர்ந்து ஒருவித பெருமித உணர்வை ஏற்படுத்தும் வேளையில் அவற்றின் அர்த்தம் என்ன என்பதை உணராமலேயே அந்தப் பெருமைக்குப் பழக்கப்பட்டிருக்கிறோமோ என்று தோன்றுகிறது. தேசியம் என்பதே ஒரு மாயை தான். உலகின் ஆதிமொழி தமிழ் என்றும் மூத்தகுடி தமிழ்க்குடி என்றும் சொல்லும் போது அதிலிருந்து பிறந்த மற்ற மொழிகளும் தமிழின் பிள்ளைகள் தானே! அவர்களும் தமிழர்கள் தானே! அப்படியென்றால் பெரியார் சொன்னது போல் தமிழ் காட்டுமிராண்டிகளின் மொழி தானே? மூத்த குடிகள் காட்டுமிராண்டிகளாகத் தானே இருந்தார்கள்? காட்டுமிராண்டிகளுக்கும் நாட்டுமிராண்டிகளுக்கும் வித்தியாசம் உண்டு. காட்டுமிராண்டி எனும் சொல் இழிவானதாக ஆக்கப்பட்டதே சுவாரஸ்யமான ஒன்று தான். பள்ளன், துலுக்கன், தீவிரவாதி போன்ற சொற்களைப் போல. அதன் அர்த்தத்தை உள்வாங்க முயன்றாலே அந்தச் சுழலில் தான் சிக்கிக்கொண்டுள்ளோம் என்பதை உணர்ந்து விடலாம். இதை எழுதும் வேளையில் ஒரு சாலையோர புளிய மரத்தடியில் நள்ளிரவு வேளையில் ஒருவர் காவி வேட்டியைப் போர்த்திக் கொண்டு தூங்கியதையும் அதற்கு அடுத்து இரு காவலாளிகளுடன் இரு காவல் வாகனமும் அதைத் தொடர்ந்து மற்றொரு புளிய மரத்தில் அதே போல் மற்றொருவரும் தூங்குவதைக் காண நேர்ந்தது. இலக்கியம், சினிமா, அரசியல் பற்றி என் இஸ்லாமிய நண்பனுடன் பேசிய உரையாடல் தான் நியாபகம் வந்தது. தற்போதைய ஆட்சியில் சிறுபான்மையினருக்கும் ஒடுக்கப்பட்ட வர்களுக்கும் ஒருவித பாதுகாப்பின்மை உணர்வு உள்ளதாகக் கூறினான் அவன். சிறு வயதில் எங்கள் தெருவில் இருக்கும் மசூதியில் ஓடியாடி விளையாடியதும், இப்போது அதற்குள் செல்ல முடியாமல் ஏதோவொன்று தடுப்பதும் தான் நினைவிற்கு வருகிறது. சிறுவனாகவே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! குழந்தையால் எந்த கேள்வியையும் எளிதாகக் கேட்டு விட முடிகிறது. எந்தச் சிக்கலான கேள்விக்கும் எளிதானதொரு பதிலையும் அளித்துவிட முடிகிறது. நண்பன் ஒருவரிடம் ஒரு குழந்தை கணவனை இழந்த தன் அம்மாவிற்கு மறுமணம் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளது. இன்னொரு நண்பன் கதை சொல்லும் பள்ளியில் ஒரு சிறுவன் என்னிடம்   “நாளைக்கு கண்டிப்பா பள்ளிக்கு வரனும். இல்லைனா நானும் பள்ளிக்கு போக மாட்டேன்” என்று திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டான். குழந்தையால் நொடியில் உயிர்த் தோழர்களாகிவிட முடிகிறது. அந்த தோழமையில் எதிர்பார்ப்புகள் இருப்பதில்லை. லாப இழப்புகள் இருப்பதில்லை. சங்கடங்கள் இருப்பதில்லை. அன்பையும் மகிழ்ச்சியையும் தவிர வேறெதுவும் இருப்பதில்லை. அதே பள்ளியில் சிறுமி ஒருத்தி இடுப்பை ஆட்டிக்கொண்டே தன்னுடன் சுயமி (செல்ஃபி) எடுக்குமாறு அடம்பிடித்தாள். எனக்கு என் தோழன் கைப்பேசியைத் துறந்து விடுமாறு என்னிடம் கடிந்து கொண்டது தான் நியாபகம் வந்தது. கைப்பேசியாலும் மின்னணு தொலைத்தொடர்பு சாதனங்களாலும் குழந்தைகள் கெடுகின்றன என்ற குற்றச்சாட்டிற்கு நானும் காரணமாகி விட்டேனா? அல்லது கைப்பேசி இல்லாவிட்டால் இந்தக் குழந்தையிடம் உரையாடிய இந்த அற்புதத்தருணம் வாய்க்காமலே போயிருக்குமா! என்று அதிக நேரம் சிந்தித்துக் கொண்டே இருந்தேன். இதுவும் ஒரு சுழல் தான் என்று புரிகிறது. மீளலாமா வேண்டாமா என்று தான் புரியவில்லை. சுழலில் அகப்பட்டு சுழன்று கொண்டே இருப்பது கூட ஒரு சுகம் தான் என்று நினைக்கத் தோன்றுகிறது. அந்தக் குழந்தை இன்னும் இடுப்பாட்டிக் கொண்டுதான் இருக்கிறது. இதேபோன்று குழந்தை மனம் கொண்டவர்களும் உள்ளனர். அப்படிப்பட்ட தோழியொருத்தி அற்பக் காரணங்களுக்காகச் சமூகத்தையே வெறுத்து மதம் மாறியதும், கோபித்து கொண்டு விலகியதும் நடந்தது. இன்னொருத்தி ஒரு சமயத்தில் குழந்தை போல் அனைத்தையும் விவரிப்பதும் மற்றொரு சமயத்தில் “நான் ஏன் உனக்கு சொல்லனும்?” என்று வினவுவதும் உண்டு. குழந்தைத்தனத்தையும் முதிர்ச்சியையும் தன் இயல்பை மீறி மாறி மாறிக் காட்டிக்கொள்ளும் குழந்தைகள் இவர்கள். இதுபோன்ற நேரங்களில் மனிதர்களைப் புரிந்து கொள்ள முயல்வதை விட அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்ளவதே சிறந்தது என நினைக்கத் தோன்றுகிறது. இதேபோன்ற இன்னொரு தோழியொருத்தி மேல் சொன்னவள் அன்புக்கும் அடிமை தனத்திற்கும் வேறுபாடு தெரியாமல் தன் தந்தையையே கடிந்து கொள்ளும் வேளையில் இவள் ஆண்களிடம் அடங்கி போவதிலும் ஒரு சுகம் உண்டென சமநிலையையும் உரிமையையும் விட்டுக்கொடுக்காமல் கூறுவாள். குழந்தைமை மாறாத குழந்தைக் குமரி. மிகப் பெரிய ஞானிகளை விட குழந்தைகளிடமிருந்தும் இதுபோன்றவர்களிடமிருந்தும் கற்றுக் கொள்வதற்கு இந்த ஆணாதிக்க சமூகத்தில் நிறையவே உள்ளன. ஒரு சமயம் நண்பன் ஒருவன் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றி கேட்ட போது நான் பாதிக்கப்பட்டவனா இல்லை குற்றவாளியா என்ற கேள்வி தான் எழுந்தது. நாம் அனைவரும் மிகப்பெரியச் சுழலில் சிக்கியுள்ளோம் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. இதுபோன்ற நேரங்களில் அனைத்தையும் துறந்துவிட்டுத் தொலையலாம் என்று கூட தோன்றியதுண்டு. அவ்வாறு “தொலைதல் இனிது” என தொலைந்த சமயத்தில் குருக்கள் ஒருவர் அவர் காதலைப் பற்றியும் தன் நண்பனுடன் தன் காதலியை சேர்த்து வைக்க நேர்ந்த தருணத்தைப் பற்றியும் தான் செய்தது சரிதானா என்று அவர் என்னிடம் வினவிய உரையாடல் எனக்குப் பலவற்றை புரிய வைத்தது. சுழலில் சிக்கிய நம்மை மீட்கக் கூடியது அன்பைத் தவிர வேறொன்றுமல்ல. அன்பென்பது மனிதர்களுக்குரியது மட்டுமல்ல. அனைத்திலும் அன்பு உள்ளது. இருத்தல் என்பது இருக்கும் வரை அன்பு எனும் அண்டத்தின் பொதுமொழி இருக்கும். அம்மொழியைக் கற்பதற்கான வாழ்க்கை முறையை அறிய வேண்டியது அவசியமாகிறது. இதை ஒரு நாயிடமிருந்தும் கூட கற்றுக் கொள்ள முடியும். ஒரு நாயைப் போல் ஏன் நம்மால் வாழ முடிவதில்லை? சரி ஒரு பூனையைப் போல, ஒரு காகத்தைப் போல, ஒரு விட்டில் பூச்சியைப் போல ஏன் நம்மால் வாழ முடிவதில்லை? “விடுதலை வேண்டுமா? நீ முட்டாளாய் இரு” என்ற சான் ரோல்டன் பாடல் வரிகள் தான் நியாபகம் வருகிறது. நாம் இரவில் வெளியில் படுத்து நட்சத்திரங்களைக் கவனித்தது கடைசியாக எப்பொழுது! என்பதை நினைவு கூறும் வேண்டிய தேவை உள்ளது. இவ்வுலகில் அதுவும் தமிழ்நாட்டு நிலப்பரப்பு அமைந்துள்ள இவ்வபூர்வ சூழலில் இருக்கும் நாம் அனைத்திடமிருந்தும் அன்பை கற்றுக் கொள்ளலாம். ஏனெனில் இது அன்பு நிறைந்த காட்டுமிராண்டிகளின் இடம். கற்றுக் கொள்வதோடல்லாமல் அதை சுயபரிசோதனை செய்து பார்க்காமல் சுழலிலிருந்து மீள முடியுமாவென்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது. நாம் அனைவரும் ஒரு சுழலில் தான் உள்ளோம். அது தான் தற்போதைய சூழல்.    வானகம் - இயற்கை வாழ்வியல் பயிற்சி - தமிழ்செல்வன் வானகம், கரூர் மாவட்டம் கடவூர் கிராமத்தில் அமைந்துள்ள இயற்கை வேளாண்பண்ணை.   வேளாண்மை செய்யலாகாத கடினமான வறட்சி நிலத்தை, வேளாண் நிலமாக மாற்றியதுடன், அதனை பயிற்சி களமாகவும் அய்யா நம்மாழ்வார்   மாற்றிவிட்டு சென்றுள்ளார். இன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இங்கு வந்து இயற்கை வாழ்வியல்   குறித்து பயிற்சி பெற்று சென்றுள்ளனர். அங்கு பயிற்சி எப்படி இருக்கும் ..என்ன மாதிரியான புரிதலை அளிக்கும் என்பது குறித்தான பதிவு இது. நாங்கள் அங்கு பயிற்சிக்கு சென்றபோது கிடைத்த அனுபவங்களை தொகுத்து உள்ளேன். அய்யாவின் சிறப்பே எவருக்கும் எளிதில் புரியும் வகையில் உண்மையை எடுத்துரைப்பது! அந்த வழிமுறையிலேயே வந்திருந்த அனைவருக்கும் புரியும் வகையில் பயிற்சி அமைந்தது. பண்ணையின்   அமைப்பு பாறைகள் மிகுந்த மானாவரி நிலத்தை இயற்கையின் புரிதலோடு முயற்சி செய்தால் அனைத்து உயிர்களும் வாழக்கூடிய பல்லுயிர் சோலையாக மாற்ற இயலும் என்பதை அய்யா நமக்கு கற்றுகொடுத்துவிட்டு சென்றுள்ளார். வானகத்தில் பண்ணை முழுவதும் மழைநீர் வீணாகாதபடி, அகழிகள் அமைத்து, பண்ணைக்குட்டைகள் அமைத்து நீரை சேகரித்து வருகின்றனர்.மேலும் சில இடங்களில் வட்டப்பாத்தி முறையில் உழாத வேளாண்மையை செய்து வருகின்றனர். பண்ணை முழுவதும் ஏராளமான மருத்துவ குணமிக்க செடிகள் மற்றும் மரங்களை வளர்த்து வருகின்றனர். மேலும் அசோலா வளர்ப்பு, மண்புழு வளர்ப்பு மற்றும் உயிர்வேலிகள் பற்றி நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. வெறும் பயிற்சியோடு நில்லாது, நிலத்தில் இறங்கி வேலை செய்ததால் நன்கு அறிந்து கொள்ள முடிந்தது. வேளாண்மையில் மூடாக்கு எந்த அளவு பயனுள்ளது என்பதை பற்றியும் முழுமையாக அறிந்தோம். வேளாண்மை கடந்த 40 ஆண்டுகளில் பசுமை புரட்சியினால் ஏகப்பட்ட விளைவுகளை சந்தித்து வருகிறோம். சோற்று பஞ்சத்தை போக்குவதற்காக கொண்டு வந்தோம் என கூறினார்கள். ஆனால் இன்று ஒட்டுமொத உயிர் சுழற்சியையே பசுமை புரட்சிக்கு பலிகொடுத்து கொண்டு இருக்கிறோம். வேளாண்மை என்பது ஒரு வாழ்க்கை முறை. வருமானத்தை மட்டுமே முதலீடாக வைத்து இயங்க இயலாது. தன்னிச்சையான, சுயசார்புள்ள இயற்கை வேளாண்மையை நோக்கி செல்வதன் மூலமே, உழவையும் உழவனையும் காப்பாற்ற முடியும் என்பதை பயிற்சி உணர வைத்தது. பஞ்சகாவ்யா, அமிர்தகரைசல், மீன் அமிலம், மற்றும் மூலிகை பூச்சிவிரட்டி பற்றி தெளிவாக எடுத்துரைத்ததோடு   அல்லாமல், செய்முறை விளக்கங்களும் செய்து காட்டினர். நவீன யுகத்தின் வளர்ச்சி மோகம், நம்மை இயற்கையைவிட்டு வெகுதூரத்திற்கு அழைத்துச் சென்று விட்டது என்ற உண்மையை உணர முடிந்தது. இன்று வேளாண்மை செய்வதற்கு மூலப் பொருட்களை வெளியில்   இருந்தே வாங்குகிறோம். முதலில் அதனைக் குறைக்க வேண்டும். மண் உயிருள்ள ஒரு ஜீவன். அதனை இன்று நாம் ரசாயன உரங்களையும், பூச்சிக் கொல்லிகளையும் தெளித்து மலடாக்கி வருகிறோம். அதிக மகசூல், பச்சை பசேல் என்ற சொல்லுக்கு நாம் அடிமையாகிவிட்டோம். அதன் விளைவு நம் மண்ணை உயிரற்ற ஜடமாக மாற்றிவிட்டோம். உலகநாடுகளில் தடைசெய்யப்பட்ட பெரும்பாலான பூச்சிகொல்லி மருந்துகள் இங்கு மட்டுமே சுதந்திரமாக உலாவுகிறது என்பதை நாம் அறிய தவறி விட்டோம். “எல்லோருக்கும் உணவு என்பது, உற்பத்தியால் வருவது அல்ல!   உணவு எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பதை பொறுத்தே!” என அய்யா கூறுவார். அந்த புரிதலை நாம் அடைந்தால் போதும். மருத்துவம் பயிற்சியின் போது காசி பிச்சை ஐயா மற்றும் மாறன் ஐயா இருவரும் நவீன மருத்துவத்தில் உள்ள குறைபாடுகளை, ஏமாற்று வித்தைகளை தெளிவாக எடுத்துரைத்தார்கள். நமது முன்னோர்கள் கையாண்ட மூலிகை செடிகளில் எல்லாவித நோய்களுக்கும்   மருந்து உள்ளது எனவும், சிறந்த உணவு முறையை கையாளுவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்விற்கு வித்திடும் வழிமுறைகளை கூறினார்கள். இன்று இந்தியா முழுவதும் பெரும்பாலான மக்களுக்கு ஏற்பட்டுள்ள நீரழிவு நோய் மற்றும் புற்றுநோய் வருவதற்கு காரணம், நமது பண்டைய இயற்கை உணவுமுறைகளை அறவே தவிர்த்துவிட்டு, ரசாயனம் கலந்து உணவை, குளிர்பானங்களை, மேல்நாட்டு குப்பைகளை உண்டதே என்றே உண்மையை அனைவருக்கும் எடுத்துரைத்தனர். புற்றீசல் போல் முளைத்து இருக்கும் மருத்துவமனைகள்   இன்று எந்த அளவிற்கு நம்மை அழிவு பாதைக்கு இட்டு செல்கிறது என்பதை நமது அன்றாட வாழ்கையில் நடைபெறும் சம்பவங்களை வைத்தே உண்மைகளை எடுத்துரைத்தனர். இங்கு பெரும்பாலான நோய்கள் தானாக உருவாவதில்லை . பன்னாட்டு முதலைகளின் சூழ்ச்சியினால் உருவாக்கப்படுகிறது என்பதை உணர முடிந்தது. பெரும்பாலான நோய்களுக்கு நமது வீட்டு மருத்துவமே ஆகச்   சிறந்தது என்பதை நமது மனம் உணர மறுக்கிறது. இந்த நவீன யுகம் மாத்திரையும், ஊசியுமே நமது மிகசிறந்த வலிநிவாரணி என்பதை நமது மனதில் ஆணித்தரமாக பதிய வைத்து விட்டனர். உணவுமுறை எந்த உணவை எடுத்துகொள்வது மட்டுமின்றி எப்படி உண்பது என்பதையும் இங்குதான் கற்று கொண்டோம். இன்று நாம் உண்ணும் உணவில் பெரும்பாலானவை நச்சுகலந்தவையே. காலையில் பல்துலக்குவது முதல் இரவு உறங்குவதற்கு முன் அருந்தும் பால் வரை நச்சு கலந்த உணவையே நாம் உண்டு வருகிறோம் என்பதனை தெளிவாக எடுத்துரைத்தனர். நமது பாரம்பரிய உணவுகள் எல்லாம் மறக்கடிக்கப்பட்டு, நமது உடலுக்கு ஒவ்வாத உணவையே உண்டு வருகிறோம்! நாம் வேகமாக இயங்கி கொண்டு இருக்கிறோம் என கூறிக்கொண்டே 10 நிமிடத்தில் உணவை உண்டு கழிக்கிறோம்.   “உணவை குடி! நீரை உண்!” என்பதே நமக்கான பாரம்பரிய உணவு பழக்கம் என்பதனை தெரிந்து கொள்ள முடிந்தது. உணவே சிறந்த மருந்து என்பதனை அங்குதான் முதன்முதலில்   உணர்ந்து கொண்டேன். பூச்சிகள் நம் நண்பன் அடுத்ததாக பூச்சி செல்வம் அய்யாவை பற்றி கூற வேண்டும். பூச்சிகள் மட்டும் இல்லையென்றால் இந்த உலகம் இயங்காது என்பதனை அவ்வளவு தெளிவாக எடுத்துரைத்தார். பூச்சிகள்   நமக்கான எதிரிகள் என்ற தவறான மாயையை உடைத்தெரிந்து, அவைகள் நண்பர்கள் மட்டுமின்றி மனித இனமே அதன் மூலம் தான் இயங்குகிறது என்ற அடித்தளத்தை எடுத்துரைத்தார். எதற்காக ரசாயனம் தெளிக்கிறோம் என்பதனை தெரியாமலேயே ஒரு விவசாயி, தனது நிலத்தை பாழாக்குகிறார். பூச்சியைக் கட்டுபடுதுவதற்கு வயல்களில் அடிக்கப்படுவது பூச்சிக்கொல்லி அல்ல. அவை நமக்கான உயிர்க்கொல்லி என்பதை தெளிவான விளக்கங்களுடன் எடுத்து உரைத்தார். உலகில் முதன்முதலில் கொசுவை கொள்வதற்கே பூச்சிகொல்லி கண்டுபிடிக்க பட்டது. அதற்கு நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டது. ஆனால் முன்பு இருந்ததை விட இன்று கொசுக்களின் எண்ணிக்கை அதிகம் என்பதனை நாம் மறுக்க இயலாது. கொசுவை பிடித்து தின்னும் தட்டான்களை, தவளைகளை நாம் முற்றிலும் அழித்துவிட்டோம். இயற்கையில் எல்லாவற்றிற்கும் தீர்வு படைக்கப் பட்டுள்ளது என்பதனை நாம் தெரியாமலேயே, இந்த பன்னாட்டு ரசாயன தொழிற்சாலைகளின் லாபவெறிக்கு பலியாகி கொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு தீமை செய்யும் பூச்சிகளுக்கும், இணையாக நன்மை செய்யும் பூச்சிகள் இயற்கையில் படைக்கப்பட்டு உள்ளன என்ற உண்மையை அறியாமல், ரசாயனங்களை தெளித்து மொத்த பூச்சி இனங்களையும் அழித்து வருகிறோம். தேனீக்கள் ஈக்கள் இனத்தை சேர்ந்த தேனீக்கள் வாழ்வில் அளப்பரிய ஆச்சரியங்கள் பொதிந்து உள்ளதை உணர முடிந்தது. நாம் அருந்தும் ஒவ்வொரு சொட்டு தேனுக்கும் பின்னால், பல்லாயிர கணக்கான தேனீக்களின் அளப்பரியான உழைப்பு உள்ளதை உணர முடிந்தது. அவற்றிற்கு நன்றிக்கடனாக ரசாயனங்களை தெளித்து அதன் இனத்தை அழித்து வருகிறோம். ஒவ்வொரு மனிதனும் தேனீக்களின் வாழ்கை முறையை முழுவதுமாக படிக்க வேண்டும். கூடு கட்டுவது முதல், பூக்களில் மகரந்தத்தை சேகரிக்க அவைகள் கையாளும் முறைகள் வரை, அனைத்து தொழில்நுட்பங்களையும் மிஞ்சும் மதிநுட்பம் உடையது. தேனீக்கள் கொட்டினால் பயந்து ஓடும் நாம், பயிற்சிக்கு பிறகு, இனி தேனீக்களை தேடி கொட்டு வாங்கும் அளவிற்கு அருமையான கருத்தாக்கத்தை தெளிவாக எடுத்துரைத்தார். சிறு தானியங்கள் மருதையன் அண்ணன் எடுத்த சிறுதானிய வகுப்பு, சிறுதானியங்கள்   பற்றிய அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைத்தது. இக்கால தலைமுறைகளுக்கு அரிசியை தவிர எதுவும் தெரியாத அளவிற்கு நாம் சிறு தானியங்களை மறந்து மருத்துவத்திற்கு அடிமையாகி விட்டோம் என்ற உண்மையை எடுத்துரைத்தார். மானாவாரி நிலங்களுக்கு சிறு தானியமே சிறந்தது எனவும், அவையே சத்துக்கள் நிறைந்த உணவு எனவும் கூறினார். பண்டைய காலங்களில், விழா நேரங்களில் மட்டுமே அரிசி சோறு சாப்பிட்டதாகவும், மற்ற நேரங்களில் பெரும்பாலான பகுதிகளில் சிறு தானியமே முக்கிய உணவாக இருந்தது என கூறினார். பன்னிரண்டு வகையான சிறுதானியங்கள் பற்றியும், அதன் பலன்கள் பற்றியும், அதனை எவ்வாறு பயிர் செய்வது பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார். பண்ணை வடிவமைப்பு முறை அய்யாவுடன் நீண்ட நாட்கள் தங்கி இருந்த ஏகாம்பரம் அண்ணன் வேளாண்மை பற்றிய ஒரு முழுமையான புரிதலை எங்களுக்கு அளித்தார். அவருடைய பண்ணை வடிவமைப்பு முறை பற்றிய வகுப்பு அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது. தற்சார்பு வேளாண் முறையை அருமையாக எடுத்துரைத்தார். எந்த உழவனும் கடனாளியாக   தேவை இல்லை. ஒரு பண்ணைக்கு தேவையான அனைத்தும் அருகாமையில் இருந்தே பெற வேண்டும் எனவும், ஆண்டு முழுவதும் பயன்தர கூடிய பயிர்களை, மரங்களை பயிர் செய்வதற்கான வழிமுறைகளை கூறினார். ஒவ்வொரு பண்ணையிலும் பண்ணைக்குட்டை எந்த அளவிற்கு அவசியமானது என்பதனையும் எடுத்துரைத்தார். கல்விமுறை மேலும் மாற்று கல்வி பற்றிய சிந்தனையும் அங்கு விதைக்கப்பட்டது. இன்றைய கல்விமுறை நம்மை எந்த அளவிற்கு சீரழித்து உள்ளது என்பதனை அனைவராலும் உணரப்பட்டது. மாற்று கல்வியை (சுவரில்லா கல்வி) நோக்கி செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது எனவும், நமது குழந்தைகளிடம் இருந்து அதனை தொடங்க வேண்டும் எனவும் விவாதிக்கப்பட்டது. நவீன கல்வி முறை அவர்கள் அனைவரையும் சிறைகைதிகளாக வைத்து இருக்கிறது.குழந்தைகளை அதன் சுதந்திர காற்றில் பறக்க விடுங்கள்,அவர்களுக்கு எல்லாமே தெரியும் ! நாம்தான் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்! என   குழந்தைகளுடான அனுபவத்தை வெற்றிமாறன் அண்ணன் அருமையாக எடுத்துரைத்தார். வானகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நிறைய குழந்தைகள் இங்கு வந்து மகிழ்வோடு தன் பொழுதை கழிகின்றனர். வானகம் தொண்டர் செந்தில், அவர்களுக்கு அருமையான சிந்தனையை விதைத்து, அவர்களுக்கு இனிமையான தருணத்தை அமைத்து தருகிறார். வானகத்திற்கு வரும் குழந்தைகளுக்கு எந்தவித கட்டுபாடும் விதிக்கபடுவதில்லை. அவர்கள், அவர்களாகவே இருக்க செய்வதே அய்யாவின் ஆசை! இது போன்று ஏராளமான தகவல்களை நாங்கள் 5 நாள் பயிற்சியில் கற்றுகொண்டோம்.காலம் காலமாக நம்ப வைக்கப்பட்ட விசயங்கள் .பழக்கவழக்கங்களை உடைத்து உண்மையை உரைத்த போது, அவ்வளவு எளிதில் ஏற்றுகொள்ள முடியவில்லை. ஆனால் சொல்லப்பட்ட விதம், அதிலிருக்கும் உண்மையை எங்களால் உணர முடிந்தது. ஆடிக்காற்றில்   அம்மியும் நகரும் என்பார்கள்! அதை முதன்முதலாக வானகத்தில் தான் உணர்ந்தேன். இடைவெளியே விடாமல் அந்த அளவிற்கு காற்றின் வேகம் இருந்தது. காற்றை தேடி ஓடும் இந்த நரக (நகர) வாழ்கையில், இயற்கையான காற்றில் தவழ்ந்தோம். ஐந்து நாட்களும் இயற்கைவகை   உணவுகளே பரிமாறப்பட்டன. வாய்ப்புள்ள அனைவரும் வானகம் சென்று வாருங்கள். புதியதொரு மாற்றத்தை உங்களுக்குள் உணர்வீர்கள்! இவை விவசாயிகளுக்கு மட்டுமான பயிற்சி இல்லை. நம் அனைவருக்குமானது . இங்கு வெறும் வேளாண்மை மட்டும் கற்றுகொடுக்க படுவதில்லை. ஒரு முழுமையான இயற்கை வாழ்வியல் முறை பயிற்றுவிக்கபடுகிறது. வானகத்தில் இருந்து உண்மைகளை உள்வாங்கி கொண்டு, எட்டுத்திக்கும் மக்களிடம் கொண்டு செல்வதே பயிற்சியின் நிறைவான பலனாக அமையும். அய்யாவின் ஆசைபடி வாழும் கிராமங்களை உருவாக்க   அனைவரும் ஒன்றுபடுவோம்.பயிற்சிக்கு பிறகு நிச்சயம் இவை நமக்கான உலகம் என்ற மாயையை கிழித்து எறிவீர்கள்! சக உயிரினங்களை ரசிக்க கற்று கொள்வீர்கள்! நல்ல உணவை தேடி செல்வீர்கள்! உணவை ருசித்து சாப்பிட   கற்றுகொள்வோம்! வேளாண்மையின் இறுதி இலட்சியம் உற்பத்தி அல்ல, மனிதர்களை முழுமை பெற செய்வது என்ற புகாகோவின் வாக்கியத்தின் உண்மைகளை முழுதாக உணர தொடங்குவோம். இந்த அருமையான நிகழ்வை நடத்திய வானகம் தன்னார்வ தொண்டர்களுக்கும், பயிற்சிக்கு உதவிய நபார்டு வங்கிக்கும் மனம் நிறைந்த நன்றிகள். இவை வானகம் பற்றி எழுத்துகளால் பதியப்பட்டதே. இதன் உள்ளுணர்வை   உணரவேண்டுமானால், நீங்கள் வானகம்தான் செல்ல வேண்டும். வானகம், கடவூர் வட்டம், கரூர் மாவட்டம்.    பனைமரம் சுபாசு   பனைமரம், நம் மாநிலங்களில் அதன் பெருமையை யாரேனும் அறிவீர்களா? பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். பனை விதையை நீர்நிலையுள்ள பகுதியில் நடுவார்கள். இதற்குக் காரணம், பனை மரத்தின் வேர் நீர் வழி தேடிச் சென்று அந்த நீரை மற்றப் பகுதிகளுக்கும் கொண்டு வரும். இதன் மூலம் அந்தப் பகுதி செழிப்படையும். ஏரி, குளங்களின் கரையில் மண்ணரிப்பைத் தடுக்கும். பனையிலிருந்து கிடைக்கும் நுங்கு, பதநீர், பனம்பழம், பனங்கிழங்கு ஆகியவை சத்துமிக்க உணவுப் பொருட்கள். பனங்கம்பும், பனை ஓலையும் வீடு கட்டப் பயன்படுகின்றன. காய்ந்த பனை ஓலை மூலம், பாய், விசிறி, பெட்டி, அலங்காரப் பொருட்கள் மட்டுமின்றி அடுப்பு விறகாகவும் பயன்படுகிறது. ஆனால் தமிழர்களாகிய நாமோ இவற்றில் ஒரு பொருளைக்கூட பயன்படுத்துவதில்லை. கருப்பட்டி - ஆயுளை நீட்டிக்கும் அருமருந்து பாரம்பரியத்தில் வெள்ளை சர்க்கரை என்பது இடையே உட்புகுந்த ஒரு பொருளாகும். ஆரம்ப காலத்தில் பனங்கற்கண்டு, பனை வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரைதான் பயன்படுத்தி வந்தனர். அந்தக் காலத்தில் இப்போது போல் உடல் பருமனோ, நீரிழிவு நோயே இருந்ததாக யாரும் கேள்விப் பட்டதில்லை. இப்படி சர்க்கரை மற்றும் பல நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபட, நமக்குக் கிடைத்த அருமருத்துதான் கருப்பட்டியும் பனங்கற்கண்டும். 'உணவே மருந்து' எனும் நியதிப்படி, காலச்சூழலுக்கு ஏற்றார்போல உடலுக்குத் தேவையானதை தேவைப்படும் நேரத்தில் இது வழங்குகிறது. உடல் இயக்கத்தை சீரான சமநிலைக்குக் கொண்டு வருகிறது. இதில் இரும்பு மற்றும் கால்சியம் அதிகமாக உள்ளது. இதிலுள்ள விட்டமின் பி மற்றும் அமினோ அமிலங்கள் நீரிழிவு நோயைக் கட்டுப் படுத்துகிறது. பருவம் அடைந்த பெண்ணுக்கு கருப்பட்டியையும் உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களியும் செய்து கொடுத்தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். குப்பைமேனிக்கீரையுடன் கருப்பட்டியை சேர்த்து வதக்கி சாப்பிட்டால், வரட்டு இருமல், நாட்பட்ட சளித்தொல்லை நீங்கும். இதில் உள்ள கிளைசீமி இன்டெக்‌ஸ், உடலில் கலக்கும் சர்க்கரை அளவை வெள்ளைச் சர்க்கரையை விட பாதிக்கும் கீழாகக் குறைக்கிறது. இது இரத்தத்தை  சுத்திகரிக்கும். உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேனி பளபளப்பைப் பெறும். பற்களும் எலும்புகளும் உறுதியாகும். கருப்பட்டி + சுண்ணாம்பு = உடல் சுத்தம். கருப்பட்டி + வறுத்த சீரகம் = நன்கு பசியைத் தூண்டும். கருப்பட்டி  + ஓமம் = வாயுத் தொல்லை நீங்கும். கருப்பட்டி + கைக்குத்தல் அரிசி = நீரிழிவு நோய் கட்டுப்படும். கருப்பட்டி + சுக்கு + மிளகு = குழந்தை பெற்ற பெண்களுக்கு நன்றாக பால் சுரக்கும். பனங்கிழங்கை நன்றாக இடித்து மாவாக்கி, தேங்காய், உப்பு சேர்த்து சாப்பிட்டு வர உடலுக்கு பலமுண்டாகும். மேலும் உடல் பருமனாகும். பனம்பூவை சுட்டு சாம்பலாக்கி, அதில் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து பூச, புண்கள் குணமாகும். பனையை கேட்டதைக் கொடுக்கும் தேவலோக மரம் என்று தொன்மங்கள் கூறும். இதை கற்பகத் தருவுக்கு ஒப்பிடுவர். யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பர். பனையும் அதே போல்தான். பிஞ்சில் இருத்து மரமாகி, கீழே விழும் வரையிலும் எல்லா வகையிலும் பயன் தருகிறது.