[] 1. Cover 2. Table of contents இந்நாள் இதற்கு முன்னால்   அறிவுக்கடல்     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/innal_itharkku_munnal மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation This Book was produced using LaTeX + Pandoc இந்நாள் இதற்கு முன்னால் ஏப்ரல் 18 -ஏப்ரல் 18, 2019 […] 1925 - பன்னாட்டு அமெச்சூர் வானொலி சங்கம் தொடங்கப்பட்டது. அமெச்சூர் வானொலி பயன்படுத்துபவர்களின் தேவைகள், பிரச்சனைகள் ஆகியவற்றுக்காகப் பன்னாட்டு தொலைத்தொடர்பு சங்கத்திடம் முறையிடும் அமைப்பாக இது செயல்படுகிறது. ஹாம் ரேடியோ என்று பொதுவாக அழைக்கப்படும் அமெச்சூர் ரேடியோ என்பது, வணிக அடிப்படையில் அல்லாமல், ரேடியோ அலைகளைப் பயன்படுத்திச் செய்யப்படும் ஒலிபரப்பு, தகவல் பரிமாற்றம் ஆகியவற்றைக் குறிக்கிறது. முறையான பயிற்சிகள் இன்றி, தொழில்முறையில் அல்லாமல், தனிப்பட்ட நோக்கங்களுக்காக இயக்கப்படுவது என்பதைக் குறிக்க அமெச்சூர் ரேடியோ என்ற பெயர் ஏற்பட்டது. வணிக அடிப்படையிலான ஒலிபரப்புகள், பொதுப் பாதுகாப்புக்கான காவல்துறை முதலானவற்றின் ஒயர்லெஸ் தொடர்புகள், கப்பல், விமானம் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் இருவழி ரேடியோ ஆகியவற்றிலிருந்து வேறுபடுத்திக்காட்டவும் அமெச்சூர் என்ற சொல் சேர்க்கப்பட்டது. கம்பித் தந்தி காலத்தில், மோர்ஸ் குறியீடுகளை அனுப்புவதில் போதுமான திறமை இல்லாதவர்கள் (ஹாம்-ஃபிஸ்டட் என்ற சொல்லிலிருந்து) ஹாம் என்று அழைக்கப்படுவார்கள். வானொலி உருவான காலத்தில் கம்பியில்லாத் தந்தி என்றழைக்கப்பட்டதுடன், ஏற்கெனவே தந்திச் சேவையிலிருந்த பலரும் இதில் பயன்படுத்தப்பட்டனர். அவர்கள், இவ்வாறு தனிப்பட்ட முறையில் வானொலி நடத்தியவர்களை முறைப்படியான பயிற்சியற்றவர்கள் என்ற பொருளில் ஹாம் என்று அழைத்ததால் ஹாம் ரேடியோ என்ற பெயர் ஏற்பட்டது. பொழுதுபோக்காக மட்டுமின்றி, ஆய்வுகள், போட்டிகள், கல்வியளித்தல் உள்ளிட்ட பலவற்றுக்காகவும் அமெச்சூர் வானொலிகள் நடத்தப்படுகின்றன. தொலைபேசிகள், இணையம் உள்ளிட்ட அனைத்து தொலைத் தொடர்பு வசதிகளும்செயலிழக்கும் நிலநடுக்கம், வெள்ளம் முதலான இயற்கைப் பேரழிவுகளின்போதுகூட இயங்கும் இந்த அமெச்சூர் வானொலிகள், ஏராளமானோரைக் காக்க உதவியுள்ளன. இவை ஒரு நகரத்திற்குள் மட்டுமின்றி, நாடு, கண்டம் தாண்டி உலகம் முழுவதும், அதையும் தாண்டி, விண்ணிற்கும் தொடர்புகொள்ளும் திறன் பெற்றுள்ளன. உலகம் முழுவதும் சுமார் 20 லட்சம் அமெச்சூர் வானொலி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சங்கம் தொடங்கப்பட்ட ஏப்ரல் 18, அமெச்சூர் வானொலி நாளாக உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. அறிவுக்கடல் இந்நாள் இதற்கு முன்னால் ஏப்ரல் 19 -ஏப்ரல் 19, 2019 1971 - உலகின் முதல் விண்வெளி நிலையமான சல்யூட்-1, சோவியத் ஒன்றியத்தால் ஏவப்பட்டது. விண்வெளி நிலையம் என்பது விண்ணில் மனிதர்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டதாகும். பொதுவாக விண்கலங்களில் இருக்கக்கூடிய உந்து விசை (ராக்கெட்) அமைப்புகளோ, தரையிறங்கும் வசதிகளோ இவற்றில் இருக்காது. மாறாக, மனிதர்களை அழைத்துவரும் விண்கலங்கள் இணைவதற்கும், அதன்மூலம் மனிதர்கள் செல்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டி ருக்கும். பொதுவாக புவியின் தாழ்வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்படும் செயற்கைக்கோள்களாக இருக்கும் இவற்றில், மனிதர்கள் கணிசமான காலத்திற்குத் தங்கி ஆய்வுகள் மேற்கொள்ள வசதிகள் இருக்கும். 1869இல் அமெரிக்க எழுத்தா ளர் எட்வர் ஹாலே, விண்வெளியில் மனிதர்கள் தங்குதல் பற்றி, செங்கல் சந்திரன் என்ற புனைகதையில் எழுதியதே விண்வெளி நிலையம் பற்றிய முதல் கருத்தாக்கமாகும். சுழலும் சக்கரங்களின்மூலம் செயற்கை (புவி) ஈர்ப்பு விசை உருவாக்கப்பட்ட விண்வெளி நிலையம் என்பதை ஸ்லோவேனியா நாட்டின் ஜெர்மன் போட்டோக்னிக் உருவகப்படுத்தியிருந்தார். இத்தகைய விண்வெளி நிலையம் ஒன்றை சூரிய சக்தியில் இயங்கும் வண்ணம் உருவாக்கி, இரண்டாம் உலகப்போரில் சூரியத் துப்பாக்கி என்ற பெயரில் ஆயுதமாகப் பயன்படுத்த ஜெர்மனி முயற்சித்தாலும் அது வெற்றிபெறவில்லை. போட்டோக்னிக்கின் கருத்தின்படியான சுழல் சக்கர விண்வெளி நிலையத்திற்கான வடிவமைப்பை 1951இல் வெர்னர் பிரான் அமெரிக்காவில் வெளியிட்டாலும், இத்தகைய வடிவமைப்புகள் உருப்பெறவேயில்லை. சோவியத்தின் சல்யூட்-1தான் உலகின் முதல் விண்வெளி நிலையம் என்பதுடன், சல்யூட்-2தான் உலகின் முதல் ராணுவப் பயன்பாட்டிற்கான விண்வெளி நிலையமுமாகும். சோவியத்தின் சல்யூட், மிர் ஆகிய விண்வெளி நிலையங்கள், விண்வெளி நிலையம் என்ப தற்கான அடிப்படைகளைத் தொடங்கிவைத்ததுடன், இன்று செயல்பாட்டிலுள்ள ஒரே விண்வெளி நிலையமான பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளன. இவற்றின் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போதைய பன்னாட்டு விண்வெளி நிலையம், ரஷ்யா, அமெரிக்கா ஆகியவற்றின் ஆய்வுகளுக்காக இரண்டு பிரிவுகளாகச் செயல்படுகிறது. நிலவு, செவ்வாய் ஆகியவற்றின் நுழைவுப்பகுதியாகச் செயல்படும்வண்ணம் விண்வெளி நிலையங்கள் அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நாள் இதற்கு முன்னால் ஏப்ரல் 20 -ஏப்ரல் 20, 2019 […] 1961 - பிடல் காஸ்ட்ரோ ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக, கியூபாமீது அமெரிக்கா நடத்திய பன்றிகள் விரிகுடாத் தாக்குதல்முடிவுற்றது. 18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து ஸ்பெயினின் ஆதிக்கத்திலிருந்த கியூபாவில், 19ஆம் நூற்றாண்டில் 1860களிலிருந்து தேசியவாத இயக்கங்கள் போர்களாக வெடித்தன. இவற்றுக்கு ஆதரவாக 1898இல் ஸ்பெயின்மீது போர் அறிவித்த அமெரிக்கா, 1902இல் கியூபக் குடியரசு உருவாகும்போது, கியூபாவில் பிறந்த அமெரிக்கக் குடிமகனான எஸ்ட்ராடா-வை குடியரசுத் தலைவராக்கியது. தொடர்ந்து படைகளை கியூபாவில் நிறுத்தியதுடன், ஏராளமான அமெரிக்கர்கள் கியூபாவில் குடியேறினர். கியூபாவின் சொத்துகளின் 60 சதவீதம் அமெரிக்கர்களுக்குச் சொந்தமாகியது. 1952இல் அதிகாரத்தைக் கைப்பற்றிய பாடிஸ்டாவுக்கு எதிராக புரட்சி வெடித்த நிலையில், 1958இல் 30 கோடி டாலர்களுடன் (தற்போது ரூ.18 ஆயிரம் கோடி!) அமெரிக்காவுக்குத் தப்பியோடினார் பாடிஸ்டா. காஸ்ட்ரோவின் தலைமையிலான, ஜூலை 26 இயக்கம் என்னும் கியூபப் புரட்சி வெற்றிபெற்று, பொதுவுடைமை ஆட்சி ஏற்பட்டதால் அஞ்சிய அமெரிக்கா ஏராளமான இடையூறுகளைக் கொடுத்தது. ஆனாலும், சோவியத்திட மிருந்து கியூபா எண்ணெய்யைப் பெற்றபோது, கியாபாவிலிருந்த அமெரிக்க சுத்திகரிப்பு நிலையங்கள் சுத்திகரிக்க மறுக்க, அவற்றை நாட்டுடைமையாக்கினார் காஸ்ட்ரோ. கியூபாவிலிருந்து சர்க்கரை இறக்குமதியைத் தடைசெய்த அமெரிக்கா, கியூபாவுக்கான அனைத்து ஏற்றுமதிகளையும் தடைசெய்ததைத் தொடர்ந்து, கியூபாவிலிருந்த அமெரிக்க நிறுவனங்களனைத்தையும் நாட்டுடைமையாக்கி, அவற்றின் சொத்துகளையும் காஸ்ட்ரோ பறிமுதல் செய்த நிலையில், காஸ்ட்ரோ அரசைக் கவிழ்ப்பதற்காக சிஐஏவுக்கு 1.31 கோடி டாலர் (தற்போது ரூ.780 கோடி!) நிதி ஒதுக்கியது அமெரிக்க அரசு. காஸ்ட்ரோவையும் சேகுவேராவையும் கொலைசெய்ய கடத்தல்காரர்களின் உதவியைக்கூட நாடி, ஏராளமான முயற்சிகளை மேற்கொண்ட சிஐஏ, கியூபாவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களைத் திரட்டி, அவர்களுக்கு ராணுவப் பயிற்சியளித்து, ஒரு(2506ஆம்) படைப்பிரிவையும், எட்டு பி-26 குண்டுவீச்சு விமானங்களையும் அனுப்பியது. காஸ்ட்ரோவுக்கு எதிராகக் கியூபா மக்கள் திரளுவார்கள் என்று அமெரிக்கா எதிர்பார்த்த நிலையில், மக்கள்காஸ்ட்ரோ அரசுக்குத் துணைநிற்க, மூன்றே நாட்களில் தாக்குதல் முறியடிக்கப்பட்டு முடிவுக்கு வந்து, அனைவருமே கைது செய்யப்பட்டனர். இந்நாள் இதற்கு முன்னால் ஏப்ரல் 21 -ஏப்ரல் 21, 2019 […] 1820 - மின்சாரத்திற்கும், காந்தப்புலத்திற்குமான தொடர்பை, டென்மார்க் இயற்பியலாளரும், வேதியியலாளருமான ஹேன்ஸ் ஆர்ஸ்ட்டெட் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பே மின்காந்தவியல் என்ற துறையின் உருவாக்கத்திற்கும், மின்காந்தப் புலத்தின்மூலம் இயங்கும் மின்மோட்டார்கள், எந்திர சக்தியை மின்சக்தியாக மாற்றும் ஜெனரேட்டர்கள், மின்காந்தத் தூண்டலில் இயங்கும் பிற கருவிகள் ஆகியவற்றிற்கான அடிப்படையாகும். மின்கலத்திலிருந்து(பேட்டரி) மின்சாரம் செல்லும் ஒயருக்கு அருகிலிருந்த திசைகாட்டியின் முள், வடதிசையிலிருந்து விலகியிருந்ததையும், மின்சாரத்தைத் துண்டித்தவுடன் அது சரியானதையும் கவனித்த ஆர்ஸ்ட்டெட், மின்சாரம் பாயும் கம்பியைச் சுற்றிலும் காந்தப்புலம் உருவாகிறது என்று கண்டுபிடித்தார். கம்பியில் பாயும் மின்சாரத்தின் அளவு, திசை ஆகியவற்றுக்கும், உருவாகும் காந்தப்புலத்திற்குமான தொடர்பை வரையறுக்கும் ஆர்ஸ்ட்டெட் விதியையும் உருவாக்கினார். இந்தக் கண்டுபிடிப்பை அறிந்த ஆம்ப்பியர், இதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்று மின்னியக்க விசையியலின் கோட்பாட்டினை உருவாக்கினார். பின்னாளில் மேக்ஸ்வெல், ஃபாரடே ஆகியோரின் ஆய்வுகளிலும் இக்கண்டுபிடிப்பு முக்கியப்பங்கு வகித்தது. புவியில் அறியப்பட்டுள்ள நான்கு அடிப்படை விசைகளில், மின்காந்தப்புலமும் ஒன்றாகும். ஆர்ஸ்ட்டெட்டின் இந்தக் கண்டுபிடிப்பிற்காக அவரைக் கவுரவிக்க, சிஜிஎஸ்(செண்டிமீட்டர், கிராம், செகண்ட்) அளவை முறையில், மின்காந்தத் தூண்டலுக்கான அலகு அவரது பெயரால் அழைக்கப்பட்டது. வேதியியலிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்துள்ள ஆர்ஸ்ட்டெட்தான், முதன்முதலில் அலுமினியத்தைப் பிரித்தெடுத்தவரும் ஆவார். ஓர் ஆய்வின் படிநிலைகளைச் சிந்தனைமூலம் பரிசீலிக்கும் சிந்திக்கும் ஆய்வு(தாட் எக்ஸ்பெரிமெண்ட்) என்ற துறையிலும் பங்களிப்புச் செய்துள்ள ஆர்ஸ்ட்டெதான், அதன் ஜெர்மன் மொழிப் பெயரான கெடான்எக்ஸ்பெரிமெண்ட் என்ற சொல்லை முதன்முதலில் உருவாக்கிப் பயன்படுத்தினார். டென்மார்க்கின் பல கல்வி நிலையங்கள், ஆய்வகங்கள் உள்ளிட்டவற்றிற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளதுடன், டென்மார்க்கின் முதல் துணைக்கோளும் இவரது பெயராலேயே அழைக்கப்பட்டது. அமெரிக்க இயற்பியல் ஆசிரியர்களின் சங்கம், சிறந்த இயற்பியல் ஆசிரியர்களுக்கு ஆர்ஸ்ட்டெட் பதக்கம் வழங்குகிறது. டென்மார்க்கில் சிறந்த அறிவியலாளர்களுக்கு ஆர்ஸ்ட்டெட் பதக்கம் வழங்கப்படுகிறது. ஆர்ஸ்ட்டெட்டின் இளைய சகோதரரான ஆண்டர்ஸ் ஆர்ஸ்ட்டெட், டென்மார்க்கின் பிரதமர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அறிவுக்கடல் இந்நாள் இதற்கு முன்னால் ஏப்ரல் 22 -ஏப்ரல் 22, 2019 […] 1970 - புவிநாள் முதன்முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டது. 1969 ஜனவரி 28 அன்று, அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கும், சேனல் தீவுகளுக்கும் இடைப்பட்ட பசிபிக் கடலின், சாண்ட்டா பார்பாரா சேனல் என்ற பகுதியில், யூனியன் ஆயில் நிறுவனத்தின் எண்ணெய்க் கிணற்றில் ஏற்பட்ட விபத்தால் (அதுவரை நிகழ்ந்ததிலேயே) மிகப்பெரிய எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. கடலில் அமைக்கப்படும் எண்ணெய்க் கிணறுகளில் வெடிப்பு ஏற்படாமலிருக்க, 300 அடி ஆழம்வரை உறுதியான இரும்புக்குழாய்களும், 870 அடி ஆழம்வரை, இரண்டாம்நிலை பாதுகாப்புக் குழாய்களும் பொருத்தப்படவேண்டும் என்பது விதியாக இருந்த நிலையில், 239 அடிவரை மட்டுமே இரும்புக்குழாய்களைப் பொருத்திவிட்டு, ஏ-21 என்ற ஐந்தாவது கிணற்றை யூனியன் ஆயில் நிறுவனம் துளையிட்டுக்கொண்டிருந்தது. 3479 அடி ஆழத்தை எட்டியபோது, அழுத்தம் தாங்காமல் வெடிக்க, கிணற்றை மூடும் அமைப்பைக் கொண்டு மூடினாலும், கடலின் பலபகுதிகளில் எண்ணெய்யும், எரிவாயுவும் பொங்கியெழுந்தன. இன்றும் உலகில் நிகழ்ந்த எண்ணெய்க்கசிவுகளில் மூன்றாவது பெரிய கசிவாக இருக்கிற இதில், அடுத்த 10 நாட்களில் ஒரு லட்சம் பீப்பாய் (ஒன்றரைக் கோடி லிட்டருக்கும் அதிகம்!) எண்ணெய் கடலில் பரவி, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள், கடல் உயிரினங்கள் உயிரிழந்து, மிகப்பெரிய சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் தேசிய சுற்றுச்சூழல் கொள்கைச் சட்டம் உருவாக்கப்பட்டதுடன், இந்த எண்ணெய்க்கசிவின் முதலாண்டு நிறைவு, சுற்றுச்சூழல் உரிமைகள் நாளாகவும் கடைப்பிடிக்கப்பட்டது. 1969இல் சான்ப்ரான்சிஸ்கோவில் நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில், அமைதிச் செயல்பாட்டாளர் ஜான் மெக்கான்னல், புவிக்கும், அமைதிக் கொள்கைக்கும் மரியாதை செய்யும் விதமாக, வடகோளப்பகுதியில் இளவேனிற்காலம் தொடங்கும் மார்ச் 21இல் புவிநாள் கடைப்பிடிக்கலாம் என்று முன்மொழிந்தார். ஆனால், அமெரிக்க செனட்டர் கேலார்ட் நெல்சன் முயற்சியில், 1970 ஏப்ரல் 22இல் அங்கு கடைப்பிடிக்கப்பட்ட புவிநாளே, 1990இல் பன்னாட்டு புவிநாளாக மாறி, 141 நாடுகளால் கடைப்பிடிக்கப்பட்டது. தற்போது 193 நாடுகளால் கடைப்பிடிக்கப்படும் ## # இந்நாள், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் முக்கிய நாளாக மாறியுள்ளது. இந்நாள் இதற்கு முன்னால் ஏப்ரல் 23 -ஏப்ரல் 23, 2019 […] 1644 - சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. 1600களின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி, வணிகத்துக்கான உரிமம் பெற்று, சூரத்தில் தங்கள் தளத்தை அமைத்துக்கொண்டது. ஏற்கெனவே இந்தியாவில் காலூன்றியிருந்த டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியுடன் நறுமணப்பொருள்(ஸ்பைஸ்) வணிகத்தில் போட்டியிட, மலாக்கா நீரிணைக்கு அருகாமையில் ஒரு துறைமுகம் வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் கருதினர். 1522இலேயே வந்துவிட்ட போர்ச்சுகீசியர்கள், சாவ் டோம்(தற்போதைய சாந்தோம்) பகுதியில் தங்களுக்கு ஒரு துறைமுகத்தை அமைத்துக்கொண்டிருந்த நிலையில், டச்சுக்காரர்களும் 1612இல் பழவேற்காடு பகுதியில் தங்களுக்கான தளத்தை அமைத்திருந்தனர். 1639 ஆகஸ்ட் 20இல், காளஹஸ்தியின் நாயக்கரான தர்மலா சென்னப்ப நாயக்கர் உதவியுடன், விஜயநகரப் பேரரசர் பெட வெங்கட்ட ராயரை, சந்திரகிரி அரண்மனையில், கிழக்கிந்தியக் கம்பெனியின் பிரான்சிஸ் டே சந்தித்து, ஆறு மைல் நீளமும், ஒரு மைல் அகலமும் கொண்ட நிலப்பகுதியை (மதராசப்பட்டணம் என்னும் மீனவ கிராமம்), இரண்டாண்டு குத்தகைக்குப் பெற்றதுடன், அதில் கோட்டை அமைக்க அனுமதியும் பெற்றார். குத்தகைத் தொகை ஆண்டுக்கு 5 கோடி பகோடாக்கள் என்று கூறப்படுகிறது. அப்போது ஒரு பகோடா என்பது மூன்றரை ரூபாய். மூவாயிரம் பவுண்டுகள் செலவில், 1644இல் கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் நிறைவுற்ற ஏப்ரல் 23, இங்கிலாந்தில் புனித ஜார்ஜ் தினம் என்று கொண்டாடப்படும் நாளானதால், கோட்டைக்கும் அப்பெயரே சூட்டப்பட்டது. ஜார்ஜ் என்பவர், கிறித்துவத்தைக் கைவிட மறுத்ததால், 303 ஏப்ரல் 23இல் கொல்லப்பட்டதாக நம்பப்பட்டு, புனிதர் பட்டமளிக்கப்பட்ட கிரேக்க வீரர். புனித ஜார்ஜ் கோட்டை ஒயிட் டவுன் என்றும், அதைச் சுற்றிலும் உருவான தொழிலாளர் குடியிருப்புகள் ஜார்ஜ் டவுன் அல்லது பிளாக் டவுன் என்றும் அழைக்கப்பட்டன. சென்னை நகரம் உருவாவதற்கே அடிப்படையான இந்தக் கோட்டை உருவாவதில் முக்கியப்பங்காற்றிய ப்ரான்சிஸ் டே, ஆண்ட்ரூ கோகன் ஆகியோர், சென்னையை உருவாக்கியவர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். இந்நாள் இதற்கு முன்னால் ஏப்ரல் 24 -ஏப்ரல் 24, 2019 […] 1895 - உலகை முதன்முதலில் தனியாகச் சுற்றிவந்த ஜோஷுவா ஸ்லோகும், உலகைச் சுற்றிய பயணத்தைத் தனது ஸ்ப்ரே என்ற படகில், அமெரிக்காவின் பாஸ்டனிலிருந்து தொடங்கினார். பதினாறு வயதில் வீட்டைவிட்டு வெளியேறி, கப்பலில் பணிக்குச் சேர்ந்த ஸ்லோகும், கப்பல்களிலேயே வசித்தார். ஏராளமான கடற்பயணங்களை மேற்கொண்டதுடன், திருமணத்திற்குப்பின் மனைவி, குழந்தைகள் அனைவருடனும் கப்பல்களிலேயே வசித்துக்கொண்டு பயணித்தார். உலகைச் சுற்றித் தனியாகப் பயணிக்கத் திட்டமிட்ட ஸ்லோகும், அதற்காக, 11.2 மீட்டர் நீளமுள்ள ஒரு பாய்மரப்படகை வாங்கி, அதனைத் தனக்கேற்றவாறு மறுகட்டமைப்புச் செய்து ஸ்ப்ரே என்று பெயரிட்டார். காற்றின் வேகம், திசை ஆகியவற்றிற்கேற்ப தானாகவே பயணிக்கும்வண்ணம், படகின் நீளம், பாய்மரத்தின் அளவு ஆகியவை வடிவமைக்கப்பட்டிருந்ததால், பல நேரங்களில் (ஒருமுறை 3200 கி.மீ. தொலைவுக்குக்கூட) சுக்கானில் கைவைக்காமலேயே ஸ்லோகும் இயக்க முடிந்தது. இப்படியான ஒரு படகு இல்லாமலிருந்தால், உலகைத் தனியே சுற்றுவது இயலாமற்போயிருந்திருக்கும் என்று கருதப்படுகிறது. கடற்பயணத்தில் பயணித்துக்கொண்டிருக்குமிடத்தின் நேரத்தைக் கணக்கிடும் மரைன் க்ரோனோமீட்டர் கருவியையே பயன்படுத்தாமல், பழைமையான கணக்கிடும் முறையைத்தான் ஸ்லோகும் பயன்படுத்தினார். 74 ஆயிரம் கி.மீ. பயணத்தை முடித்து, அமெரிக்காவின் ரோட் தீவிலுள்ள நியூபோர்ட் என்ற இடத்தை, மூன்றாண்டுகளுக்குப்பின் 1898 ஜூன் 27இல் வந்தடைந்தார் ஸ்லோகும். அப்போது அமெரிக்காவுக்கும், ஸ்பெயினுக்கும் போர் நடந்துகொண்டிருந்ததால், ஸ்லோகும்மின் இந்தச் சாதனை பெரிதாக வெளியே தெரியவேயில்லை. போர் முடிந்தபின்னரே பத்திரிகைகள் இதைப்பற்றி எழுதின. 1899இல் சென்ச்சுரி மேகசின் இதழில், இப்பயணத்தைப் பற்றி ஸ்லோகும் எழுதிய தொடர், ‘செய்லிங் அலோன் அரவுண்ட் த வேர்ல்ட்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்து, ஏராளமாக விற்பனையானதுடன், இன்றும் முக்கியமான பயண இலக்கியமாக விளங்குகிறது. 1909 நவம்பர் 14இல் வழக்கம்போல குளிர்கால விடுமுறைக்கு மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஸ்ப்ரே-யில் சென்ற ஸ்லோகும் கடலிலேயே காணாமற்போய்விட்டார். கடலிலேயே வாழ்ந்திருந்தாலும், தேவையில்லை என்று அவர் நீச்சலே கற்றுக்கொள்ளவில்லை என்பது ஆச்சரியம்!அறிவுக்கடல் இந்நாள் இதற்கு முன்னால் ஏப்ரல் 25 -ஏப்ரல் 25, 2019 […] 1954 - உலகின் முதல் சிலிக்கன் சூரிய மின்கலத்தை (சோலார் செல்) கண்டு பிடித்திருப்பதாக பெல் தொலைபேசி ஆய்வகம் அறிவித்தது. கால்வின் ஃபுல்லர், டேரில் சாப்பின், ஜெரால்ட் பியர்சன் ஆகியோர் இதனை உருவாக்கினர். ஒயர்கள் பொருத்தப்பட்ட கால் ரூபாய் நாணயம் போன்ற ஒன்றை ஃபுல்லர் வீட்டுக்கு எடுத்து வந்ததாகவும், சிறிய காற்றாலை(பொம்மை) ஒன்றில் அதை இணைத்து, அதன்மீது ஒளியைப் பாய்ச்சியதும் காற்றாலை சுற்றியதாகவும், அவர் மகன் கூறியுள்ளார். சூரிய ஒளிக்கும் மின்சாரத்திற்குமான தொடர்பு, எட்மண்ட் பெக்குரல் என்ற பிரெஞ்சு இயற்பியலாளரால் 1839இல் முதன்முறையாகக் கண்டறியப்பட்டது. மின்முனைகளின்மீது ஒளிபடும்போது சிறிய அளவில் மின்சாரம் உருவாவதைக் கவனித்த இவர், தன் 19 வயதில், தந்தையின் ஆய்வகத்தில் உலகின் முதல் சூரிய மின்கலத்தை உருவாக்கினார். இதனால் இந்த ஒளிமின்னழுத்த (ஃபோட்டோ வோல்ட்டாயிக்) விளைவு, பெக்குரல் விளைவு என்றே அழைக்கப்படுகிறது. 1883இல் சார்லஸ் ஃப்ரிட்ஸ், செலனியத்தைப் பயன்படுத்தி முதல் திட நிலை சூரிய மின்கலத்தை உருவாக்கினாலும், அதன் திறன் வெறும் 1 சதவீதம் அளவுக்குத்தான் இருந்தது. 1887இல் ஹீன்ரிச் ஹெர்ட்ஸ், ஒளிமின் விளைவைக் கண்டுபிடித்தார். இதைப் பயன்படுத்திய முதல் சூரியஒளி மின்கலத்தை, 1888இல் அலெக்சாண்டர் ஸ்டோலெட்டோவ் உருவாக்கினார். 1905இல் புதிய குவாண்டம் கொள்கையை உருவாக்கிய ஐன்ஸ்டீன், அதனடிப்படையில் ஒளிமின் விளைவை விளக்கியிருந்தார். இந்தக் கொள்கைக்காக அவருக்கு 1921இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1941இல் வாடிம் லஷ்கர்யோவ், 1946இல் ரஸ்ஸல் ஆல் ஆகியோரின் கண்டுபிடிப்புகளும் சூரிய மின்கலத்துக்கு வழிகோலின. சிலிக்கன் சூரியஒளி மின்கலம், அமெரிக்காவின் வேன்கார்ட்-1 செயற்கைக்கோளுக்கு மின்சக்தியளிக்கப் பயன்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் சூரிய மின்சக்தி பரவலாக அறியப்பட்டது. ஒரு வாட் மின்சாரம் உற்பத்திசெய்ய 1970இல் (தற்போதைய மதிப்பில்) ரூ.6800 செலவானதிலிருந்து, தற்போது ரூ.48 என்ற அளவுக்கு சூரியமின்கலங்களின் விலை குறைந்ததால் பயன்பாடு மிகப்பெரிய அளவிற்கு வளர்ந்துள்ளது. அறிவுக்கடல் இந்நாள் இதற்கு முன்னால் ஏப்ரல் 26 -ஏப்ரல் 26, 2019 […] 1777 அமெரிக்கப் புரட்சிப் போரின்போது, சிபில் லூடிங்ட்டன் என்ற 16 வயதுப் பெண், இரவு முழுவதும் குதிரையில் பயணித்து, எதிரிகளின் (இங்கிலாந்துப்படைகள் தான்) வருகையை அறிவித்து, குடிப்படைகளை எச்சரிக்கை செய்தார். இதனால், அமெரிக்க விடுதலைப்போரின் நாயகியாக இவர் கொண்டாடப்படுகிறார். அமெரிக்காவிலிருந்த பிரெஞ்சுக் குடியேற்றங்களுடனான போரில் ஏற்கெனவே பங்கேற்று அனுபவம்பெற்றிருந்த சிபிலின் தந்தை, அமெரிக்க விடுதலைப்போரில் தானே இணைந்துகொண்டார். அவரது தலைமையின்கீழ் 400 குடிப்படையினர் இருந்தனர். குடிப்படை என்பது முறைப்படியான ராணுவம் அல்ல. தேவையின்போது போரில் ஈடுபடும் இவர்கள், அடிப்படையில் பிற பணிகளில் ஈடுபடுபவர்களாக இருப்பார்கள் என்பதால், குடிப்படை எல்லா நேரங்களிலும் போருக்குத் தயாராக இருக்காது. எதிரிகள் வரும் தகவல் கிடைத்ததும், தொலைவில் அமைந்திருந்த கிராமங்களிலிருந்த குடிப்படையினரை எச்சரிக்க, இரவு 9 மணிக்குக் கிளம்பி, மலைப்பாதையில் இருளில் அதிகாலைவரை பயணித்தார் சிபில். குதிரையை ஓட்டவும், குடிப்படையினரின் வீடுகளின் கதவைத் தட்டவும் ஒரு குச்சியைப் பயன்படுத்தினாராம். அதற்கு முன்பே ஒருமுறை, அவர் தந்தையைப் பிடிக்க இங்கிலாந்துப் படைகள் வந்தபோது, வீட்டில் மெழுகுவர்த்தியை ஏற்றி, குழந்தைகளை ராணுவம்போல நடக்கச் செய்து, நிறைய வீரர்கள் இருப்பதான நிழல் தோற்றத்தை ஏற்படுத்தி, தந்தையைக் காத்தாராம். அமெரிக்க விடுதலைப்போரின்போது, இதுபோல தகவல் சொல்லப் பயணித்த பால் ரிவியர், வில்லியம் டேவ்ஸ் உள்ளிட்ட பலரைப் பற்றிய தகவல்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தாலும், சிபில் பற்றி பதிவுசெய்யப்பட்ட தகவல்கள் 1880வரை இல்லை என்பதால், இதைச் சிலர் மறுக்கிறார்கள். ஆனாலும், 1900இலிருந்து அனைவராலும் கொண்டாடப்படுகிறார். சிபில் பயணித்த வழிகளில் பல நினைவுச்சின்னங்கள் 1935இல் அமைக்கப்பட்டன. 1961இல் கார்மெல்-லில் அவருக்குச் சிலையும் அமைக்கப்பட்டது. சிறிய சிலைகள் பல இடங்களிலும் அமைக்கப் பட்டுள்ளதுடன், 1975இல் அஞ்சல்தலையும் வெளியிடப்பட்டது. சிபிலை கவுரவிக்கும்விதமாக, கார்மெல்-லில் 1979இலிருந்து ஒவ்வோராண்டும் ஏப்ரலில், அவரது சிலையில் முடிவுறும்படி 50 கி.மீ. தொலைவுக்கு அல்ட்ரா-மாரத்தான் ஓட்டப்பந்தயம் மலைப்பாதையில் நடத்தப்படுகிறது.அறிவுக்கடல் இந்நாள் இதற்கு முன்னால் ஏப்ரல் 27 -ஏப்ரல் 27, 2019 […] 1981 - உலகின் முதல் மவுஸ் பொருத்தப்பட்ட பெர்சனல் கம்ப்யூட்டரான ஜெராக்ஸ் 8010 ஸ்டார் அறிமுகப்படுத்தப்பட்டது. (கணினி மவுஸ் 1968இல் கண்டுபிடிக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட செய்தி இத்தொடரில் 2018 டிசம்பர் 9இல் இடம்பெற்றுள்ளது.) மவுஸ் கண்டுபிடிக்கப்பட்டபின் நடைமுறையில் பயன்பாட்டுக்கு வர 12 ஆண்டுகள் ஆனது. இரண்டு பட்டன்கள்கொண்ட மவுசுடன், பின்னாளில் பர்சனல் கம்ப்யூட்டர்களின் முக்கியக் கூறுகளாக மாறிய பிட்மேப் டிஸ்ப்ளே, விண்டோ அடிப்படையிலான கிராஃபிக்கல் யூசர் இண்ட்டர்ஃபேஸ், ஐகன்கள், ஃபோல்டர்கள், ஈத்தர்நெட் நெட்வொர்க்கிங், ஃபைல் சர்வர், பிரிண்ட் சர்வர் உள்ளிட்டவை இந்தக் கணினியில்தான் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனை உருவாக்கிய ஜெராக்ஸ் பிஏஆர்சி நிறுவனம், ஜெராக்சின் ஆய்வும், மேம்பாடும் (ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட்) நிறுவனமாகும். மேற்குறிப்பிட்டவைதவிர, லேசர் பிரிண்ட்டர், திரையில் காண்பதையே அச்சில் தரும் விசிவிக்(வாட் யூ சீ ஈஸ் வாட் யூ கெட்) டெக்ஸ்ட் எடிட்டர் உள்ளிட்ட பல கண்டுபிடிப்புகளை உருவாக்கியும், மேலும் பல உருவாவதற்கு அடிப்படையாகவும் இருந்து, தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏராளமான முன்னேற்றங்களுக்கு இந்த நிறுவனமே தொடக்கமாக இருந்தது. 1979இல் இந்நிறுவனத்திற்கு வந்த ஸ்டீவ் ஜாப்சுக்கு, ஆப்ஜெக்ட் ஓரியண்ட்டட் ப்ரொக்ராம்மிங், நெட்வொர்க்கிங், விசிவிக் உள்ளிட்ட கண்டுபிடிப்புகள் காட்டப்பட்டபோது, மற்றவற்றின் முக்கியத்துவத்தை உணராத அவர், மவுசால் இயக்கப்படும் கிராஃபிக்கல் யூசர் இண்ட்டர்ஃபேஸ் அமைப்பைக்கண்டு வியந்துபோனதுடன், தங்கள் நிறுவனத்தின் லிசா இயங்குதளத்தில் அதைப் பயன்படுத்தவும் செய்தார். பிஏஆர்சி உருவாக்கியிருந்த இந்தத் தொழில்நுட்பங்களின் முக்கியத்துவமும், எதிர்காலமும் உண்மையில், ஜெராக்ஸ் நிறுவனத்திற்கே தொடக்க காலத்தில் தெரியவில்லை என்பதால்தான், மெயின்ஃப்ரேம் கணினிகள் கோலோச்சிய 1970கள் காலத்திலேயே சிறிய கணினிகளை உருவாக்க முயற்சித்த பிஏஆர்சிக்கு ஒத்துழைக்கவில்லை. 1980களில் ஆப்பிள் நிறுவனத்தின் மெஷிண்ட்டோஷ் கணினிகள் சந்தையில் புரட்சியை ஏற்படுத்திய பின்னர்தான் ஜெராக்ஸ் தன் தவறை உணர்ந்தது. ஆனால், ஏற்கெனவே காலூன்றியிருந்த நிறுவனங்களுடன் போட்டியிட முடியாமல், கணினிச் சந்தையைவிட்டே வெளியேறுவதைத்தவிர, ஜெராக்சுக்கு வேறு வழியின்றிப்போனது! இந்நாள் இதற்கு முன்னால் ஏப்ரல் 28 -ஏப்ரல் 28, 2019 […] 1945 - இத்தாலிய எதிர்ப்பியக்கத்தால், பெனிட்டோ முசோலினி உள்ளிட்ட 18 பாசிஸ்ட்டுகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதுடன், முசோலினி, அவர் காதலி கிளாரா உள்ளிட்ட 15 பேரின் உடல்கள், மிலன் நகரிலுள்ள பியாஸேல் லோரெட்டோ சதுக்கத்தில், பொதுமக்கள் பார்வைக்காகத் தலைகீழாகக் கட்டித்தொங்கவிடப்பட்டன. முசோலினியின் பாசிச அரசு உருவான 1920களில், அதற்கெதிராக எழுந்த பல இயக்கங்களின் கூட்டமைப்பே இத்தாலிய எதிர்ப்பியக்கம். 1943இல் ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் ஒரு கைப்பாவை அரசை முசோலினி அமைத்தபின்னரே, இது தீவிரமாகச் செயல்படத் தொடங்கியது. இரண்டாம் உலகப்போரில் இத்தாலிக்கு ஏற்பட்ட தொடர் தோல்விகள், இத்தாலியின் ஆப்ரிக்கக் குடியேற்றங்களை இழக்க நேரிட்டது, சிசிலித் தீவிலும், இத்தாலியத் தீபகற்பத்தின் தென்பகுதியிலும் நேசநாடுகளின் படைகள் நுழைந்தது ஆகியவற்றைத் தொடர்ந்து, அரசர் மூன்றாம் விக்டர் இம்மானுவேல், முசோலினியின் அரசைக் கலைத்து, அவரைக் கைதும் செய்தார். புதிய அரசு நேசநாடுகளுடன் ரகசிய ஒப்பந்தம் செய்ய முயற்சித்தது. போர்நிறுத்தமாகக் கூறிக்கொள்ளப்பட்டாலும், முழுமையான சரணாகதியாக இருந்த இம்முயற்சியைத் தொடக்கத்திலிருந்தே அறிந்திருந்த ஹிட்லர், ஜெர்மன் படைகளை அனுப்பி, இத்தாலியின் மத்திய, வடக்கு பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டார். ஏற்கெனவே ஜெர்மனியுடனான அணியில்தான் இத்தாலி இருந்தது என்பதால் எதிர்த்துப்போரிட வேண்டுமா இல்லையா என்றே புரியாத இத்தாலியப் படையினரின் ஆயுதங்களைப் பறிமுதல் செய்து, ஜெர்மன் படைகள் எடுத்துக்கொண்டன. ஆட்சிக் கலைப்புக்குப்பின் மாற்றி மாற்றி பல இடங்களில் சிறைவைக்கப்பட்டிருந்த முசோலினியை விடுவித்த ஹிட்லர், புதிய பாசிச அரசொன்றை இத்தாலியில் உருவாக்கச்சொன்னார். உடல்நலம் குன்றியிருந்த முசோலினி, ஓய்வுபெற விரும்பியதால் மறுத்தார். மிலன், ஜெனோவா, ட்யூரின் நகரங்களை அழித்துவிடுவதாக ஹிட்லர் மிரட்டியதால், எஞ்சியிருந்த மக்கள் செல்வாக்கு, போரின்போது அரசர் தப்பியோடியது ஆகியவற்றைப் பயன்படுத்தி, கைப்பாவை அரசை அமைத்தாலும், அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் எதிர்ப்பியக்கத்தால் கொல்லப்பட்டார். இதே சதுக்கத்தில் ஏராளமான பாசிச எதிர்ப்பாளர்களைக் கொன்று தொங்கவிட்டதற்குப் பழிவாங்கும்விதமாக, தொங்கவிடப்பட்டிருந்த உடல்கள்மீது பொதுமக்கள் கற்களை வீசித் தாக்கினர். இந்நாள் இதற்கு முன்னால் ஏப்ரல் 29 -ஏப்ரல் 29, 2019 1953 - அமெரிக்காவில் முதல் முப்பரிமாண தொலைக்காட்சி ஒளிபரப்பு பரிசோதிக்கப்பட்டது. முப்பதாம் நூற்றாண்டில் நடைபெறும் கதையான விண்வெளி ரோந்து(ஸ்பேஸ் பட்ரோல்) என்னும், 1950இலிருந்து ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த தொலைக்காயட்சித் தொடரின் 30 நிமிட அத்தியாயம் மட்டும் சோதனை முறையில் முப்பரிமாணத்தில் ஒளிபரப்பப்பட்டது. இரண்டு தனித்தனிப் படங்களை இணைத்து, முப்பரிமாணமாக மூளையை உணரச் செய்யும் ஸ்டீரியோஸ்கோப் கருவி, 1838இல் சார்லஸ் வீட்ஸ்டோன் என்ற ஆங்கிலேயரால் கண்டுபிடிக்கப்பட்டது. முப்பரிமாணத் திரைப்படத்தை உருவாக்கும் முறைக்கு, இங்கிலாந்து திரைப்படத்துறை முன்னோடியான வில்லியம் ஃப்ரீஸ்-கிரீன், 1890இல் காப்புரிமை பெற்றார். இரண்டு தனித்தனியாக ஓடும் படங்களை ஸ்டீரியோஸ்கோப் கருவிமூலம் பார்க்கும் இம்முறை நடைமுறையில் வெற்றிபெறவில்லை. ஒன்றேமுக்கால் அங்குல இடைவெளியில் இரண்டு லென்ஸ்கள் பொருத்தப்பட்ட, முப்பரிமாண கேமராவை, ஃப்ரடரிக் யூஜின் ஐவ்ஸ் என்ற அமெரிக்கர் 1900இல் கண்டுபிடித்தார். எட்வின் போர்ட்டர், வில்லியம் வேடல் ஆகியோர், அனாக்ளைஃப் என்னும் சிவப்பு-பச்சை முறையிலான திரைப்படத்தை 1915இல் நியூயார்க்கின் ஆஸ்டர் திரையரங்கில் திரையிட்டு சோதித்தனர். முதல் முப்பரிமாணத் திரைப்படம் 1922இல் உருவானது. 1928இல் முதல் முப்பரிமாணத் தொலைக்காட்சியை, பேயர்ட் தன் அலுவலகத்தில் செயல்படுத்திக்காட்டினார். 1935இல் முப்பரிமாணத் தொலைக்காட்சி உற்பத்திசெய்யப்பட்டது. முப்பரிமாணத் திரைப்படங்களின் உருவாக்கமும், 1950களில் தொலைக்காட்சி பரவலானதும், முப்பரிமாண ஒளிபரப்புக்கான தேவையை உருவாக்கின. ஆனாலும், உலகின் முதல் முப்பரிமாணத் தொலைக்காட்சிச் சேனலாக, கல்வி, விளையாட்டு உள்ளிட்ட அனைத்துத் துறை நிகழ்ச்சிகளையும் 24 மணிநேரமும், முப்பரிமாணத்தில் ஒளிபரப்பும் ஸ்கை 3டி, தென்கொரியாவில் 2010இல்தான் தொடங்கப்பட்டது. உலகம் முழுவதும் சுமார் 40 முப்பரிமாணச் சேனல்கள் தொடங்கப்பட்டாலும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இயங்கிக்கொண்டிருக்கின்றன. பொதுவான தொழில்நுட்பம் வரையறுக்கப்படாமை உள்ளிட்ட காரணங்களால், முப்பரிமாணத் தொலைக்காட்சி பெரிய வளர்ச்சியை எட்டவில்லை. அனாக்ளைஃப், போலரைஸ்ட், ஆக்டிவ் ஷட்டர் ஆகிய முறைகளுடன், கண்ணாடி போன்ற கூடுதல் கருவிகள் இன்றியே முப்பரிமாணத்தைக் காட்டும் ஆட்டோ ஸ்டீரியோஸ்கோபிக் முறையிலும் முப்பரிமாணத் தொலைக்காட்சிகள் உருவாக்கப்படுகின்றன. இந்நாள் இதற்கு முன்னால் ஏப்ரல் 30 -ஏப்ரல் 30, 2019 […] 1006 - இதுவரை அறியப்பட்டவற்றிலேயே மிகவும் ஒளிமிகுந்த சூப்பர்நோவா-வாகக் குறிப்பிடப்படும் எஸ்என்-1006, வெள்ளிக்கோளைப் போன்று 16 மடங்குக்கும் அதிகமான பிரகாசத்துடன் தெரிந்தது பதிவு செய்யப்பட்டது. லூப்பஸ் விண்மீன் கூட்டத்தில் காணப்பட்ட இதனை, விருந்தினர் விண்மீன் என்று சீனா, ஜப்பான், இராக், எகிப்து, ஐரோப்பிய நாடுகளின் வானியல் ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். சூப்பர்நோவா என்பது, சிலவகை விண்மீன்கள் அவற்றின் இறுதிக் காலத்தில், மிகப்பெரும் ஒளியுடன் வெடித்து, தற்காலிகமாக மிகப் பிரகாசமாகத் தெரிவதைக் குறிக்கும். உலகின் மிகப்பழைமையான சூப்பர்நோவா எச்பி9, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியர்களால் காணப்பட்டு, விண்மீன் வரைபடத்தில் (ஸ்டார் சார்ட்) பதிவு செய்யப்பட்டுள்ளது. விண்மீன் வரைபடம் என்பது, விண்மீன் கூட்டங்கள், மண்டலங்கள் உள்ளிட்ட வான் பொருட்களை அடையாளம் காணப்பயன்படும் இரவு நேர வானின் வரைபடமாகும். (வானியல் அட்டவணை என்பது இதிலிருந்து மாறுபட்டு, வான் பொருட்களின் விபரங்களைத் தெரிவிப்பதாகும்.) இந்தியர்களுக்கு அடுத்து, கி.பி.185இல் சீன வானியல் ஆய்வாளர்கள் எஸ்என்-185 சூப்பர்நோவாவைக் கண்டு பதிவு செய்துள்ளனர். மிக அதிகமாகக் காணப்பட்டது, இரண்டு ஆண்டுகளுக்குத் தெரிந்த எஸ்என்-1054 என்ற சூப்பர்நோவாவாகும். கடைசியாக வெறும் கண்ணிற்கே தெரிந்த சூப்பர்நோவாக்களான எஸ்என்-1572, எஸ்என்-1604 ஆகியவை, சூரியக் குடும்பத்திற்கு வெளியேயுள்ள அண்டம் நிலையானது என்ற அரிஸ்டாட்டிலின் கொள்கையையே மாற்றியமைத்தன. 1930களில் அமெரிக்க வானியல் ஆய்வாளர்கள் வால்ட்டர் பாடே, ஃப்ரிட்ஸ் ஸ்விக்கி ஆகியோர் மிகப் பிரகாசமானவற்றுக்கு சூப்பர்நோவா என்ற பெயரைச் சூட்டும்வரை, நோவா, சூப்பர்நோவா இரண்டும் ஒன்றாகவே அழைக்கப்பட்டுவந்தன. நோவா என்பது இரண்டு விண்மீன்கள் பிரகாசமான ஒளியுடன் இணைந்து புதியதை உருவாக்கும் நிகழ்வாகும். எஸ்என்-1572 சூப்பர்நோவாவைப்பற்றி, பதினாறாம் நூற்றாண்டில் டைகோ பிராஹி, ‘டி நோவா ஸ்டெல்லா’ என்ற தன் நூலில் குறிப்பிட்டிருந்ததைத் தொடர்ந்து விண்மீன் வெடிப்புக்கு நோவா என்பதே பெயரானது. ‘ஸ்டெல்லா நோவா’ என்ற லத்தீன் சொற்களுக்கு புதிய விண்மீன் என்று பொருள். இந்நாள் இதற்கு முன்னால் மே 03 -மே 3, 2019 […] 1978 - உலகின் முதல் ஸ்பாம் செய்தி பரப்பப்பட்டது. குறிப்பிட்ட முகவரிக்கு அல்லாமல், அனைவருக்கும் அனுப்பப்படும் தேவையற்ற மின்னஞ்சல்கள் ஸ்பாம் என்று அழைக்கப்படுகின்றன. டிஜிட்டல் எக்விப்மெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் புதிய கணினி கிடைப்பதைப்பற்றி, ஆர்ப்பாநெட் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டிருந்த 393 கணினிகளுக்கு இந்தச் செய்தி அனுப்பப்பட்டது. பொதுவாக ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகவே தகவல்கள் அனுப்பப்படும். அக்காலத்தில், இந்நிறுவனத்திலிருந்த கார்ல் கார்ட்லி என்ற உதவியாளர் (சோம்பேறித்தனத்தால்!) ஒரே செய்தியை அனைவருக்கும் அனுப்ப, அது கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது. இந்த நிகழ்வு நடந்தபோது ஸ்பாம் என்ற பெயரே உருவாகியிருக்கவில்லை. 1970களில் பிபிசி தொலைக்காட்சியில் நகைச்சுவைக் காட்சிகளை நடத்திய மாண்ட்டி பைத்தான் என்ற குழுவினர், ஒரு காட்சியில் ஸ்பாம் என்ற சொல்லைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தியதையடுத்து, பிறரது குரலை மறைக்க அவ்வாறு கூறுவது பரவியது. (ஸ்பாம் என்றால் தகரப்பேழையில்(டின்) அடைக்கப்பட்ட, சமைத்த இறைச்சி என்று பொருள்.) இதைத் தொடர்ந்து, புல்லட்டின் போர்ட் அமைப்புகளில் பிறரது தகவல்களைப் பின்தள்ள, மீண்டும் மீண்டும் ஸ்பாம் என்று உள்ளிடத் தொடங்கினர். 1990களில் தேவையற்ற மின்னஞ்சல்களுக்கு இது பெயரானது. (இந்த மாண்ட்டி பைத்தான் குழுவினர் நகைச்சுவைகளுக்கிடையே கற்றுத்தரும் தகவல்களையும் கூறுவார்கள் என்பதால், அவர்களை மரியாதை செய்யவே பைத்தான் மொழிக்கு அப்பெயர் சூட்டப்பட்டது!) இதற்கெல்லாம் நூறாண்டுகளுக்கு முன்பே, வெஸ்டர்ன் யூனியன் தந்திச்சேவையிலிருந்த, பலருக்கும் அனுப்பும் வசதியைப் பயன்படுத்தி, 1864இல் ஒரு பல் மருத்துவர், பலருக்கும் விளம்பரச் செய்தியை அனுப்பி, முதல் ஸ்பாம்மராகிவிட்டார்! கிரீன் கார்ட் பெற உதவுவதாக முதல் பெரிய விளம்பர ஸ்பாமை, ஒரு வழக்கறிஞர் தம்பதியும், முதல் நிதிதிரட்டும் ஸ்பாமை, சிட்டிஹோப் என்ற தொண்டு நிறுவனமும் 1994இல் அனுப்பினர். 1999இல் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக உருவாக்கப்பட்டதுபோலத் தோற்றமளிக்கும்படி ஸ்பாம்களை உருவாக்கும் மென்பொருளை கான் ஸ்மித் என்ற ஹேக்கர் உருவாக்கினார். ஸ்பாம்கள் பெரும்பாலும் ஆங்கிலத்திலிருந்த நிலையில், மொழிபெயர்ப்பு மென்பொருட்களைக்கொண்டு, உள்ளூர் மொழியிலேயே அனுப்புவது 2009இல் தொடங்கியது. இன்று ஒவ்வொரு நாளும் 1450 கோடி ஸ்பாம்கள் அனுப்பப்படுகின்றன. அதாவது, மொத்த மின்னஞ்சல்களில் 45 சதவீதம் ஸ்பாம்களே!அறிவுக்கடல் இந்நாள் இதற்கு முன்னால் மே 04 -மே 4, 2019 1926 - ஐக்கிய முடியரசில்(இங்கிலாந்து) நடைபெற்ற ஒரே பொதுவேலைநிறுத்தம் தொடங்கியது. 17 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்று, 9 நாட்கள் நீடித்த இந்த வேலைநிறுத்தம், ஊதியக் குறைப்பு, பணிநேர நீட்டிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 12 லட்சம் சுரங்கத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நடைபெற்றது. முதல் உலகப்போரின்போது, தங்களது தேவைகளுக்காக, நிலக்கரி ஏற்றுமதியை இங்கிலாந்து குறைத்ததால், அமெரிக்கா, ஜெர்மனி, போலந்து நாடுகளில் நிலக்கரித்துறை வளர்ச்சியடைந்தது. இந்தப்போட்டிகளால், நிலக்கரி ஏற்றுமதி பாதித்து லாபம் குறைந்தது. தங்கள் லாபத்தைக் குறைத்துக்கொள்ளத் தயாராக இல்லாத சுரங்க முதலாளிகள், ஏழாண்டுகளில் 35 சதவீதக் கூலியைக் குறைத்திருந்த நிலையில், 1925இல் அப்போது கருவூலத்துறையின் வேந்தராக இருந்த சர்ச்சில், இங்கிலாந்தின் நாணய மதிப்பு, வட்டி விகிதம் ஆகியவற்றை உயர்த்தியது இறக்குமதியை மேலும் சரியச்செய்தது. மேலும் கூலியை குறைக்கவும், பணிநேரத்தை நீட்டிக்கவும் சுரங்க முதலாளிகள் முயற்சித்ததை சுரங்கத் தொழிலாளர் கூட்டமைப்பு ஏற்கவில்லை. அவர்களுக்கு ஆதரவாக தொழிற்சங்க காங்கிரஸ் களமிறங்குவதாக அறிவித்தவுடன் தலையிட்ட இங்கிலாந்து அரசு, ஊதியத்தைக் குறைக்காமலிருக்க சுரங்கங்களுக்கு ஒன்பது மாதங்களுக்கு மானியம் அளிப்பதாக அறிவித்தது. இந்த ஒன்பது மாதங்களில், விநியோகங்களைப் பராமரிப்பதற்கான அமைப்பு என்பதை உருவாக்கி, அனைத்துத் துறைகளிலும் தன்னார்வத் தொண்டர்களைத் திரட்டிக்கொண்ட அரசு, மானியம் நிறுத்தப்படுவதாகவும், ஊதியம் 13.5 சதவீதம் குறைக்கப்படுமென்றும் அறிவித்தது. இதனால் மே 4க்கு ஒரு நிமிடம் முன்னதாக, மே 3 நள்ளிரவில் தொடங்கிய வேலைநிறுத்தத்தில், தொழிற்சங்கக் காங்கிரசே எதிர்பாராத அளவுக்கு போக்குவரத்து, ரயில்வே, அச்சகம் என்று அனைத்து துறைத் தொழிலாளர்களும் பங்கேற்றனர். கோரிக்கைகளை அரசு ஏற்காமல் ஏற்கெனவே திரட்டிவைத்திருந்த தன்னார்வத் தொண்டர்களைக்கொண்டு போக்குவரத்து முதலான அத்தியாவசியச் சேவைகளைப் படிப்படியாகச் செயல்படுத்தத் தொடங்கியது. வேறுவழியின்றி மே 12 அன்று வேலைநிறுத்தம் விலக்கிக்கொள்ளப்பட்டது. மறியல் செய்வதையும், பிறதுறைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக வேலைநிறுத்தம் செய்வதையும் தொழிற்சங்க உரிமைகளல்ல என்று 1927இல் இங்கிலாந்து அரசு தடைசெய்தது. ஆனாலும், 1929 பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி மிகப்பெரிய வெற்றிபெற இந்த வேலைநிறுத்தம் காரணமாகியது. இந்நாள் இதற்கு முன்னால் மே 05 -மே 5, 2019 1945 - இரண்டாம் உலகப்போரில், அமெரிக்க வீரர்களும் ஜெர்மனி வீரர்களும் ஓரணியில் நின்று போரிட்ட வினோதமான யுத்தமான இட்டர் கோட்டை யுத்தம் நடைபெற்றது. இட்டர் என்பது ஆஸ்திரியாவிலுள்ள ஒரு கிராமம். 1938இல் ஆஸ்திரியாவை ஜெர்மனி கைப்பற்றிய நிலையில், 1940இல் இக்கோட்டையை உரிமையாளரிடமிருந்து ஜெர்மன் அரசு குத்தகைக்குப் பெற்றதுடன், 1943இல் பறிமுதல் செய்து, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கைதிகளை அடைக்கும் சிறையாக மாற்றிக்கொண்டது. பிரான்சின் இரண்டு முன்னாள் பிரதமர்கள், முன்னாள் ராணுவத் தளபதிகள் உள்ளிட்ட பல மிக முக்கியமான கைதிகள் இங்கு அடைக்கப்பட்டிருந்தனர். ஏப்ரல் 30இல் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார். வேர்மாக்ட் என்பதுதான் ஜெர்மனியின் அதிகாரப்பூர்வ ராணுவம். சுட்ஸ்டாஃபல் (பாதுகாப்புப் படை - எஸ்எஸ்) என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருந்த நாஜிகளின் படையின், வாஃபன்-எஸ்எஸ் என்ற ஆயுதப்பிரிவு, துணை ராணுவப்படையாக, ராணுவத்துக்கு இணையாகச் செயல்பட்டதுடன், நாஜிகளின் இனப்படுகொலை உள்ளிட்ட மனிதநேயமற்ற நடவடிக்கைகளைச் செயல்படுத்தும் அமைப்பாகவும் இருந்தது. ஹிட்லரின் இறப்புக்குப்பின் மேலும் தாக்குதல்களைச் செய்ய ஜெர்மன் ராணுவத்தின் தளபதிகள் ஆங்காங்கே மறுத்தாலும், எதிரிப் பகுதிகளுக்குள் கண்ணில்படுபவர்களையெல்லாம் சுடுவது, ஆண்களை மொத்தமாகக் கொல்வது என்று மிகமோசமான தாக்குதல்களை எஸ்எஸ் படையினர் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தனர். இட்டர் கோட்டைச் சிறையிலிருந்து இரண்டு பேர் தப்பிச் சென்று, அமெரிக்க ராணுவத்திடமும், ஆஸ்திரிய (பாசிச) எதிர்ப்பியக்கத்திடமும் உதவி கோரினர். அமெரிக்க ராணுவமும் ஆஸ்திரிய எதிர்ப்பியக்கத்துக்கு ஆதரவாக, ஜெர்மன் ராணுவமான வேர்மாக்டின் ஒரு பிரிவும் வந்தனர். சிறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த எஸ்எஸ் படையினர் வெளியேறிவிட, சிறையிலிருந்த பெரும்புள்ளிகள் உட்பட அனைவரும் அங்கிருந்த ஆயுதங்களுடன் தயாராக இருந்தனர். இந்த மூன்று படைகளும், தாக்க வந்த எஸ்எஸ் படையினரை எதிர்த்துப் போரிட்டதே இட்டர் கோட்டை யுத்தம். 100 வீரர்கள் பிடிபட்டு, தோற்கடிக்கப்பட்ட எஸ்எஸ் படையில் இறந்தவர்கள் எண்ணிக்கை தெரியவில்லை. சிறைக் கைதிகளில் ஒருவர் மட்டும் உயிரிழந்தார். இரண்டு நாட்கள் கழித்து மே 8இல் ஜெர்மனி சரணடைந்தது. இந்நாள் இதற்கு முன்னால் மே 06 -மே 6, 2019 1937 - ஜெர்மனியின் பயணிகள் வான்கப்பல் ஒன்று, அமெரிக்காவின் நியூஜெர்சியில் வெடித்துச் சிதறியதில் 36 பேர் பலியாயினர். ஹிண்டன்பர்க் விபத்து என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு, பயணிகள் போக்குவரத்துக்காக வான்கப்பலைப் பயன்படுத்துவதை முடிவுக்குக் கொண்டுவந்ததில் முக்கியப் பங்குவகித்தது. வான்கப்பல் என்பது காற்று நிரப்பப்பட்ட, கட்டுப்படுத்தக்கூடிய பலூன்களாகும். இவையே முதலில் கட்டுப்படுத்தத்தக்க வான் பயணத்திற்குப் பயன்படுத்தப்பட்டன. வான் பறப்பியலின் தந்தை என்று குறிப்பிடப்படும் ஃப்ரான்செஸ்கோ டெர்சி, 1670இல் வானில் பறக்கும் காற்றுக் கப்பல் பற்றிக் குறிப்பிட்டிருந்ததே இதைப்பற்றிய முதல் கருதுகோள் ஆகும். 1783இல் பிரெஞ்ச் ராணுவத்தின் ஜீன் மியூஸ்னியர், நடைமுறையில் சாத்தியமான ஒரு பறக்கும் கப்பலின் வடிவமைப்பை வெளியிட்டார். வான் கப்பலில் கையால் இயக்கும் உந்து அமைப்பைக் கண்டுபிடித்த ஜீன்பியரி ப்ளாங்கார்ட், 1785இல் அதன்மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்துகாட்டினார். 19ஆம் நூற்றாண்டில் வான்கப்பலில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டன. 1852இல் ஹென்றி கிரிஃபார்ட், முதல் என்ஜின் பொருத்தப்பட்ட வான்கப்பலை உருவாக்கி, 27 கி.மீ. பறந்துகாட்டினார். 1872இல் பால் ஹேன்லீன், முதல் உள்ளெரி என்ஜின் பொருத்தப்பட்ட வான்கப்பலை உருவாக்கியதுடன், நிலக்கரியைப் பயன்படுத்திக் காற்றைச் சூடாக்கிப் பறந்தார். கேஸ்டன் டிஸ்ஸாண்டியர் 1883இல் முதல் மின்சார மோட்டார் பொருத்தப்பட்ட வான்கப்பலை உருவாக்கினார். முதல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட வான்கப்பல் 1884இல் பிரெஞ்ச் ராணுவத்தால் உருவாக்கப்பட்டது. வான்கப்பல்கள் பலூனில் சூடான காற்று அல்லது எடை குறைந்த வாயுக்களை நிரப்பிப் பறக்கச்செய்யப்படுகின்றன. உறுதியற்ற, பாதியளவு உறுதியான, உறுதியான என்ற மூன்று வகைகளில் இவை உள்ளன. உறுதியற்றது என்பது நிரப்பப்படும் காற்றால் மட்டுமே வடிவத்தைப்பெறுவதாகவும், உறுதியானது, நிலையான வடிவமைப்புடன் உட்புறம் காற்றுப் பைகள் கொண்டதாகவும் உள்ளது. 1930களில் ஏற்பட்ட பல விபத்துகளும் வான்கப்பல்கள்மீதான நம்பிக்கையைக் குறைத்திருந்த நிலையில், இந்த விபத்து அதனை முடிவுக்குக்கொண்டுவந்தது. தற்போது விளம்பரம், சுற்றுலா, ஆய்வு முதலான ஒரே இடத்தில் அதிகநேரம் மிதக்க வேண்டிய பணிகளுக்கு மட்டுமே வான்கப்பல் பயன்படுத்தப்படுகிறது. இந்நாள் இதற்கு முன்னால் மே 07 -மே 7, 2019 […] 1952 - தொழிற்புரட்சிக்கு இணையான தொழில்நுட்பப் புரட்சிக்கு முக்கியக் காரணியாகப் பின்னாளில் அமைந்து, உலகையே மாற்றியமைத்த, தொகுசுற்று (இண்டக்ரேட்டட் சர்க்யூட் - ஐசி) அல்லது நுண் சில்லு (மைக்ரோ-சிப்) என்பதன் தத்துவத்தை, ஆங்கிலேய மின்னணுவியல் பொறியாளர் ஜியோஃப்ரி டம்மர், வாஷிங்டனில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார். 1904இல் கண்டுபிடிக்கப்பட்ட வெற்றிடக்குழாய் (வால்வு) மின்னணுவியல் கருவிகள் உருவாக முக்கியக் காரணமாக அமைந்தது. 1944இல் உருவான ஒவ்வொரு போயிங் பி-29 விமானமும் இயங்க, 300-1000 வெற்றிடக் குழாய்களுடன், ஆயிரக்கணக்கான பிற பாகங்களும் தேவைப்பட்டன. 1946இல் உருவான இனியாக் கணினி இயங்க 17 ஆயிரத்துக்கும் அதிகமான வெற்றிடக் குழாய்கள் தேவைப்பட்டன. இவை மிகப்பெரிய இடத்தை ஆக்கிரமித்ததுடன், இவ்வளவு பாகங்களுக்கிடையே சிறிய பழுதுகளைக் கண்டுபிடிப்பதும் சிரமமாக இருந்தது. 1947இல் கண்டுபிடிக்கப்பட்ட டிரான்சிஸ்டர், இதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. 1949இல் ஜெர்மானியப் பொறியாளர் வெர்மென் ஜாக்கோபி, 5 டிரான்சிஸ்டர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பாகத்தை உருவாக்கிக் காப்புரிமை பெற்றாலும், இது வணிக அடிப்படையில் உற்பத்தி செய்யப்படவில்லை. பல அடுக்குகள் கொண்ட சிறிய தகடு ஒன்றில், ஒயர்கள் இன்றி மின்சுற்றுக்களை செதுக்கி (அச்சிட்டு!), டிரான்சிஸ்டர் உள்ளிட்ட பாகங்களைப் பொருத்தி, பல செயல்பாடுகளை ஒருங்கிணைக்க முடியும் என்று டம்மர் முன்மொழிந்தார். ஆனாலும், 1958 வரை இது உருப்பெறவில்லை. அதன்பின், ஜாக் கில்பி, ராபர்ட் நோய்ஸ், கர்ட் லெகோவேக், ஜீன் ஹோயெர்னி ஆகியோர் தனித்தனியாக ஐசியை உருவாக்கினர். ஐசியை உருவாக்கியதற்காக ஜாக் கில்பிக்கு 2000இல் நோபல் பரிசு வழங்கப்பட்டாலும், இதில் மற்றவர்களின் பங்களிப்பு மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, அசுர வளர்ச்சியை அடைந்து, இன்று மனித விரல் நகத்தின் அளவிலான நுண்சில்லு ஒன்றில் பல நூறு கோடி டிரான்சிஸ்டர்களைக் கொண்ட ஐசிக்கள் உருவாகிவிட்டன. நீரின்றமையாது உலகு என்ற குறளைப்போல, கணினிகள், மொபைல் போன்கள், தொலைக்காட்சிகள் என்று தொடங்கி, வீட்டுக் கருவிகள் உட்பட இன்றைய நவீன கருவிகள் எதுவுமே ஐசி இன்றி இல்லை! இந்நாள் மே 08 இதற்கு முன்னால் -மே 8, 2019 […] 1886 - கோக்க-கோலா முதன்முறையாக விற்பனை செய்யப்பட்டது. போதைப் பழக்கம், நரம்பு நோய்கள் உள்ளிட்ட பலவற்றை குணப்படுத்தும் மருந்து என்ற விளம்பரத்துடன் இதனை ஜான் பெம்பர்ட்டன் தன் மருந்துக்கடையில் விற்பனை செய்தார். அமெரிக்க உள்நாட்டுப் போரில், கூட்டணிப்படையின் ராணுவ அலுவலராக இருந்து, போரில் காயமுற்ற பெம்பர்ட்டன், வலிநிவாரணியாகப் பயன்படும் மார்ஃபீன் என்னும் போதைமருந்துக்கு அடிமையாகிவிட்டார். இதற்கு மாற்று தேடிய அவர், ப்ரான்சின் கோர்சிகா தீவில் கிடைக்கும் கோக்கா ஒயினைப் பயன்படுத்தத் தொடங்கினார். பின்னர் அதில் காஃபீன் நிறைந்த ஆப்பிரிக்கக் கோலா மரத்து விதைகளைச் சேர்த்து, ‘பெம்பர்ட்டனின் பிரெஞ்ச் ஒயின் கோக்கா’ என்ற பெயரில், நரம்புக்கான சத்து மருந்தாகத் தன் மருந்துக்கடையில் விற்பனை செய்தார். அட்லாண்டாவில், அவர் வசித்த பகுதியில் 1886இல் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டதால், ஒயின் கோக்காவின் மதுத்தன்மை நீக்கப்பட்ட கோக்க-கோலாவை உருவாக்கினார். சோடா உடலுக்கு நல்லது என்று நம்பப்பட்டதால், அக்கால மருந்துக்கடைகளில் பிரபலமாக இருந்த சோடா பவுண்ட்டன் எந்திரங்கள்மூலம், கோக்க-கோலா மருந்தாக விற்பனை செய்யப்பட்டது. கோக்க-கோலாவை உற்பத்தி செய்ய மேலும் இருவருக்கு அனுமதியளித்தாலும், கோக்க-கோலா என்ற பெயர் தன் மகன் சார்லிக்குத்தான் சொந்தம் என்று பெம்பர்ட்டன் கூறிவிட்டார். உற்பத்தி உரிமையை விலைக்கு வாங்கியவர்களில் ஒருவரான ஆசா கேண்ட்லர், ‘வாக்கர், கேண்ட்லர் அண்ட் கோ’ என்ற நிறுவனத்தைத்தொடங்கி, ‘யும்-யும்’, ‘கோக்’ என்ற பெயர்களில் விற்பனை செய்தாலும், அது வெற்றியடையவில்லை. பெம்பர்ட்டன் 1888இல் திடீரென்று இறந்துவிட, போதைக்கு அடிமையான சார்லியிடமிருந்து 300 டாலருக்கு கோக்க-கோலா பெயரை கேண்ட்லர் வாங்கி, 1892இல் (தற்போதைய - இரண்டாவது) கோக்கா-கோலா நிறுவனத்தைத் தொடங்கினார். பெம்பர்ட்டனின் இறுதி ஊர்வலத்திலேயே, அவர் மனைவியிடம் 300 டாலர் கொடுத்து, கோக்க-கோலா பெயரை கேண்டலர் வாங்கியதாகவும் ஒரு தகவல் உள்ளது. 1885இலிருந்தே ஸ்பெயினில் விற்பனையாகிவந்த கோலா-கோக்கா என்ற பானத்தின் உரிமையையும் 1953இல் கோக்க-கோலா நிறுவனம் வாங்கிக்கொண்டது. மே 09 ## # இந்நாள் இதற்கு முன்னால் -மே 9, 2019 1865 - நான்காண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற, அமெரிக்க உள்நாட்டுப்போர் முடிவுற்றதாக, குடியரசுத் தலைவர் ஆண்ட்ரூ ஜான்சன் அறிவித்தார். 1860 தேர்தலில், அடிமை முறையைத் தடைசெய்வதை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த, குடியரசுக் கட்சியின் வேட்பாளரான ஆப்ரகாம் லிங்கன் மிகப்பெரிய வெற்றிபெற்றார். விவசாய (குறிப்பாகப் பருத்தி) உற்பத்தி பெருமளவிலிருந்த தென்பகுதி மாநிலங்கள், ஆப்ரிக்க-அமெரிக்க அடிமைத் தொழிலாளர்களைச் சார்ந்திருந்தன. இவற்றில் சிலவற்றின் மக்கள்தொகையில் 49 சதவீதம்வரை அடிமைகள் இருந்தனர். பெருந்தொகை கொடுத்து வாங்கப்பட்ட அடிமைகளை விடுதலைசெய்வதுவிட்டு, ஊதியமளித்து விவசாயம் செய்வது இரட்டிப்பு இழப்பாக இருக்கும் என்று அஞ்சிய 7 மாநிலங்கள், லிங்கன் குடியரசுத்தலைவராகப் பதவியேற்பதற்கு முன்பே, அமெரிக்காவிலிருந்து பிரிந்துவிட்டதாக அறிவித்து, ராணுவத்தையும் கட்டமைத்தன. மாநில உரிமைகளில் தலையிடப்போவதில்லை என்று லிங்கன் அறிவித்தார். பழைய, புதிய குடியரசுத்தலைவர்கள் இருவருமே பிரிந்துசென்ற கூட்டணி மாநிலங்களின்மீது போர்தொடுக்கும் திட்டமில்லை என்று அறிவித்தாலும், தெற்கு-கரோலினாவிலுள்ள சம்ட்டர் கோட்டையை கூட்டணிப்படைகள் 1861 ஏப்ரல் 12இல் தாக்கியதைத் தொடர்ந்து உள்நாட்டுப்போர் தொடங்கியது. மேலும் 4 மாநிலங்கள் கூட்டணியுடன் இணைந்து, போர் தீவிரமடைந்ததால், அமெரிக்கப் படைகளால் கைப்பற்றப்படும் கூட்டணிப் பகுதியிலிருக்கும் அடிமைகள் அனைவரும் விடுவிக்கப்பட்டவர்களாவார்கள் என்ற உத்தரவை 1862இல் லிங்கன் பிறப்பித்தார். இப்பகுதியிலிருந்து ஏற்றுமதிசெய்யப்படும் பருத்தியைச் சார்ந்திருந்ததால் ஐரோப்பிய நாடுகள் துணைக்குவருமென்ற கூட்டணியினரின் நம்பிக்கை பொய்த்துப்போனது. போரிடும் அமைப்பு என்ற தகுதியை அளித்த பிரிட்டனும், பிரான்சும்கூட (அடிமை முறைக்கெதிரான போர் என்பதால்), கூட்டணியை தனிநாடாக அங்கீகரிக்கவில்லை. அப்போது மிகச்சிறியதாக இருந்த அமெரிக்கக் கடற்படை, கூட்டணிப்பகுதிகளின் துறைமுகங்களை முற்றுகையிடுவதற்காகவே மிகப்பெரிய அளவில் விரிவாக்கப்பட்டது. தோல்வியின் விளிம்புக்குச்சென்ற கூட்டணிப்படைகள் படிப்படையாகச் சரணடைந்தநிலையில், 1865 ஏப்ரல் 14இல் கூட்டணி ஆதரவாளர் ஒருவரால் லிங்கன் சுட்டுக்கொல்லப்பட்டார். 237 பெயரிடப்பட்ட யுத்தங்களாக நான்காண்டுகள் நடந்த போரில் சுமார் 17 லட்சம் பேர்வரை பலியாயினர். தொழிற்புரட்சியால் உருவான புதிய கருவிகளின் தொடக்ககாலப் போராக இது குறிப்பிடப்படுகிறது.அறிவுக்கடல் இந்நாள் மே 10 இதற்கு முன்னால் -மே 10, 2019 1933 - ஜெர்மன் மாணவர் சங்கம் என்ற, ஹிட்லரின் நாஸி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களை, பெர்லின் பெபெல்ப்ளாட்ஸ் சதுக்கத்தில் எரித்தனர். ஜெர்மனியின் பல நகரங்களிலும், ஜெர்மன் அல்லாத உணர்வுக்கு எதிராகத் தீப்பந்தங்களுடன் ஊர்வலம் நடத்தியதுடன், அன்றிரவு நாஸித் தலைவர்கள் உரையாற்றிய கூட்டங்களும் நடத்தப்பட்டன. இக்கூட்டங்கள் நடந்த இடங்களில் மாணவர்கள் இசை, நடனத்துடன், தடைசெய்யப்பட்ட புத்தகங்களைத் தீயில் வீசினர். இவ்வாறு எரிக்கப்பட்ட புத்தகங்களில் கார்ல் மார்க்ஸ், மார்க்சிய சிந்தனையாளரான கார்ல் கவுட்ஸ்கி ஆகியோரின் புத்தகங்கள் முக்கிய இடம்பெற்றன. பொதுவுடைமை நூல்கள், யூத நூல்கள், போருக்கு எதிரான கருத்துகள் கொண்டவை உள்ளிட்ட நூல்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. இதற்கு முன்பாக, ஏப்ரல் 8 அன்று, ஜெர்மன் மாணவர் சங்கம் ஜெர்மன் அல்லாத உணர்வுக்கு எதிரான இயக்கத்தை நாடுமுழுவதும் நடத்துமாறு அழைப்புவிடுத்திருந்தது. மிக ஆபத்தான எதிரிகள்யூதர்கள், அவர்கள் ஜெர்மன் மொழியைப் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட கருத்துகளுடன், ஜெர்மன் மொழியின் தூய்மையைக் காக்க, ஜெர்மன் மொழியிலுள்ள ஜெர்மன் அல்லாத உணர்வுடைய நூல்களை அழிக்கவேண்டும் என்று அழைப்புவிடுத்த 12 அம்ச அறிக்கையை இச்சங்கம் வெளியிட்டிருந்தது. மார்ட்டின் லூதர் 1520இல் திருத்தந்தை ஆணையோலையை எரித்ததையும், அதன் 300ஆம் ஆண்டின் நினைவாகச் சில நூல்கள் எரிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி, அதைப்போன்றதுதான் இந்த எதிர்ப்பு என்றுஅச்சங்கம் கூறிக்கொண்டாலும், அவையெல்லாம் அடையாளப்பூர்வமாக ஓரிரு பிரதிகளை எரித்த நிகழ்வுகள் மட்டுமே. ஆனால், நாஸிகள் தங்களுக்கு எதிரான நூல்களே இருக்கக்கூடாது என்று அனைத்தையும் எரித்தார்கள். நாஸிகளுக்கு எதிராகப் பேசமுடியாத மிகக் கடுமையான அரசுத் தணிக்கையை இந்நிகழ்வு தொடங்கிவைத்தது. முழுக்க முழுக்க அனைத்திலும் நாஸிசக் கருத்துகள் திணிக்கப்பட்டிருந்த நிலையை மாற்ற, நேச நாடுகள் ஜெர்மனியைக் கைப்பற்றியபின், 1946இல் பள்ளிப் பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட சுமார் முப்பதாயிரம் நூல்களின் ஏராளமான பிரதிகளை அழிக்க நேர்ந்தது. இந்நாள் மே 11 இதற்கு முன்னால் -மே 11, 2019 […] 2018 - ஜேம்ஸ் கிறிஸ்டொஃபர் ஹாரிசன் என்ற ஆஸ்திரேலியர் கடைசி முறையாக இரத்த தானம் செய்தார். அப்போது 81 வயதான அவருக்கு, அது 1173ஆவது இரத்த தானம்! ஆம்! உலகிலேயே மிக அதிக இரத்த தானம் செய்த ஹாரிசன், அப்போதும்கூட, 81 வயதுக்குமேல் இரத்த தானம் செய்ய ஆஸ்திரேலியச் சட்டங்களில் இடமில்லாததாலேயே, இரத்த தானம் அளிப்பதிலிருந்து ‘’ஓய்வு பெற்றார்’’! 1936இல் பிறந்த ஹாரிசனுக்கு, 14 வயதில் நுரையீரல் அறுவை செய்ய நேர்ந்தது. அந்தச் சிகிச்கைக்கு 13 யூனிட் இரத்தம் தேவைப்பட்டது. இரத்த தானம் தன் உயிரைக் காத்ததால், இரத்த தானம் செய்வதற்கான குறைந்த வயதான 18 வயதையடைந்ததும், இரத்த தானம் செய்து பிறரைக்காக்க உறுதியேற்றதுடன், 1954இல் 18ஆவது வயதில் இரத்த தானம் செய்யவும் தொடங்கினார் ஹாரிசன். சிலமுறை இரத்த தானம் செய்த பின்பே, அவரது இரத்த ப்ளாஸ்மாவில் தனிச்சிறப்பு வாய்ந்த எதிர்ப் பொருட்கள் (ஆண்ட்டிபாடி) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எதிர்ப் பொருட்களைக் கொண்டு, பிறந்த குழந்தைகளின் ஆர்எச்-டி வகை ஹீமோலிட்டிக் (இரத்தச் சிவப்பணு சிதைவு) நோய் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கமான இரத்த தானத்தைப் போலல்லாமல், இரத்தப் ப்ளாஸ்மாவை இரண்டு வாரங்களுக்கொருமுறை தானம் செய்யலாம் என்பதால், 57 ஆண்டுகளில் (2011இல்) ஆயிரம் தானங்களைக் கடந்தார் ஹாரிசன். 63 ஆண்டுகளில் தன் மகள் உட்பட, 24 லட்சம் தாய்களின் கருவிலிருந்த குழந்தைகளைக் காத்திருக்கிறார் ஹாரிசன். இவரது இரத்தத்தின் தனித்தன்மை கண்டறியப்பட்டதும், இவருக்கு ஒரு மில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.5 கோடி) காப்பீடு செய்யப்பட்டது. தான் சாதனையாளராக இருப்பதைவிட, தன்னைவிட அதிகமாக வேறு யாராவது தானம் செய்து, அதிக உயிர்களைக் காக்கவேண்டும் என்பதே தன் விருப்பம் என்கிறார் ஹாரிசன். அமெரிக்காவுடன் ஆஸ்திரேலியா செய்துகொண்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின்படி, 2007இல் இரத்த ப்ளாஸ்மா தானத்தில் அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிக்க ஆஸ்திரேலிய அரசு முயற்சித்தபோது, இரத்த தானம் வணிகமயமாகவிடும் என்று கடுமையாக எதிர்த்த ஹாரிசன், ஆஸ்திரேலியாவின் நாயகனாகக் கொண்டாடப்படுகிறார்! இந்நாள் மே 12 இதற்கு முன்னால் -மே 12, 2019 […] 1933 - விவசாயிகள் உற்பத்தியைக் குறைத்துக்கொள்வதற்கு மானியம் வழங்கிய, அக்ரிகல்ச்சர் அட்ஜஸ்ட்மெண்ட் ஆக்ட் அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தப்பட்டது. உலகப் பெருமந்தம் என்றழைக்கப்பட்ட பொருளாதார நெருக்கடி, 1929 செப்டம்பர் 4இல் அமெரிக்கப் பங்குச்சந்தைகளின் வீழ்ச்சியிலிருந்து தொடங்கியது. அமெரிக்கப் பொருளாதாரத்தை மிகமோசமாகப் பாதித்த இது, மக்களின் வாங்கும் சக்தியை வெகுவாகக் குறைத்தது. விவசாய விளைபொருட்கள், 1890களின் விலையைவிடக் குறைந்ததால், விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாயினர். பொருளாதாரத்தை மீட்க, புதிதாகப் பதவியேற்றிருந்த குடியரசுத் தலைவர் ரூஸ்வெல்ட், 100 நாட்கள் தொடர்ந்து பாராளுமன்றத்தைக் கூட்டி மேற்கொண்ட நடவடிக்கைகள் நியூ டீல் என்றழைக்கப்படுகின்றன. அவற்றின் ஒரு பகுதியாக, முதல் உலகப்போருக்கு முந்தைய விலையாவது விவசாயிகளுக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்காக, விவசாயம் செய்யும் நிலத்தின் அளவைக் குறைப்பதன்மூலம் உற்பத்தியைக் குறைக்கவும், அதற்கு ஈடாக விவசாயிகளுக்கு மானியம் வழங்கவும் இச்சட்டம் வழிசெய்தது. குத்தகை விவசாயிகளுக்கும் நிலவுடைமையாளர்கள்பெற்ற மானியத்தில் பங்கு வழங்கப்பட்டது. கோதுமை, பருத்தி, சோளம், நெல், பால் உள்ளிட்ட பொருட்கள் இச்சட்டத்தின்கீழ்க் கட்டுப்படுத்தப்பட்டன. விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதற்காக உற்பத்தியைக் குறைத்தாலும், மக்களின் அடிப்படைச் செலவுகள் உயர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்வதாக அரசு உறுதியளித்தது. விவசாய உற்பத்தியைக் குறைப்பதற்காக, விவசாயிகளிடமிருந்த கால்நடைகளையும் வாங்கி, கறிக்குப் பயன்படுத்தியது அரசு. இந்த மானியத்திற்காக, விவசாய உற்பத்திப் பொருட்களைச் சார்ந்த தொழில்களுக்குப் புதிய வரியும் விதிக்கப்பட்டது. 1935இல் இந்த வரியைச் சட்டவிரோதம் என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, அரசே நிதி வழங்கும் புதிய சட்டம் 1938இல் இயற்றப்பட்டது. பொருளாதார மந்தம் முடிவுக்கு வந்தாலும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதை கம்மாடிட்டி கிரெட் கார்ப்பரேஷன்மூலம் அமெரிக்க அரசு உறுதிப்படுத்துகிறது. விலையைப் பராமரிப்பதற்காக, கூடுதல் உற்பத்தியை இந்த அமைப்பு வாங்கி நட்புறவு நாடுகளுக்கு இலவசமாக வழங்கும். இதற்கான நிரந்தரச் சட்டம் 1949இல் இயற்றப்பட்டது. பயிர்க்காப்பீட்டுக் கழகத்தையும் 1933இலேயே தொடங்கிய அமெரிக்கா, விவசாயிகளுகக்கு மிகஅதிகப் பாதுகாப்பளிக்கும் நாடுகளுள் ஒன்றாக இன்றும் விளங்குகிறது. இந்நாள் மே 13 இதற்கு முன்னால் -மே 13, 2019 1952 - இந்தியப் பாராளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை முதன்முறையாகக் கூடியது. இந்தியாவிற்கு மேலவை என்பது 1919 மாண்ட்டேகு-செம்ஸ்ஃபோர்ட் அறிக்கையைத் தொடர்ந்து, இந்திய அரசுச் சட்டம்-1919இன்படி உருவாக்கப்பட்டுவிட்டாலும், கீழவையின் முடிவுகளை ஆங்கிலேயர்கள் கட்டுப்படுத்துவதற்கு உதவும் வகையிலேயே அமைக்கப்பட்டிருந்தது. கீழவை என்பது, ஜமீன்தார்கள் போன்றோரை நியமன உறுப்பினர்களாகக் கொண்டு 1861இலேயே அமைக்கப்பட்டுவிட்டாலும், 1920இல்தான் முதல் தேர்தல் நடத்தப்பட்டது. விடுதலைக்குப்பின், 1952 ஏப்ரல் 3இல் உருவாக்கப்பட்ட மேலவைக்கு, 1954 ஆகஸ்ட் 23இல்தான் இந்தியில் ராஜ்ய சபா என்ற பெயர் சூட்டப்பட்டது. மக்களவையைக் கலைப்பதுபோல மாநிலங்களவையைக் கலைக்கமுடியாது. இரண்டு ஆண்டுகளுக்கொருமுறை மூன்றிலொருபங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடியும். ஈரவைப் பாராளுமன்றம் கொண்ட நாடுகளில் கீழவையைவிடக் குறைந்த அதிகாரம் கொண்ட அமைப்பாக மேலவை உள்ளது. நிதிச்சட்ட முன்வடிவுகளை முன்மொழிய முடியாது, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர முடியாது போன்ற கட்டுப்பாடுகள் பொதுவாக எல்லா நாடுகளிலும் மேலவைக்கு உள்ளன. குடியரசுத்தலைவர் ஆட்சிமுறை உள்ள நாடுகளில் மேலவைக்குச் சற்றுக்கூடுதல் அதிகாரம் உள்ளது. குறிப்பாக, மாநிலங்களின் அதிகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் அமெரிக்காவின் மேலவையான செனட், பல சிறப்பதிகாரங்களைக் கொண்டுள்ளது. உலகின் பாதிக்கும் குறைவான நாடுகளில்தான் ஈரவைப் பாராளுமன்றம் நடைமுறையில் உள்ளது. மீதி நாடுகளில் ஓரவைப் பாராளுமன்றமே நடைமுறையிலுள்ளது. டென்மார்க், ஹங்கேரி, நார்வே, சிங்கப்பூர், சீனா, கியூபா உள்ளிட்ட நாடுகளில் ஓரவைதான். இவற்றில் பல நாடுகளில் மேலவை இருந்து கலைக்கப்பட்டது என்பதுடன், இந்தியா, பிரேசில், கனடா உள்ளிட்ட நாடுகளில் பல மாநிலங்கள் மேலவையை கலைத்துள்ளன. உலகின் அதிக மக்கள்தொகைகொண்ட சீனா, குறைந்த மக்கள்தொகைகொண்ட வாட்டிகன் ஆகிய இரண்டிலும் ஓரவைதான். மூன்றவைகொண்ட பாராளுமன்றங்களும் இருந்துள்ளன. பிரான்சிலிருந்த எஸ்டேட்ஸ் ஜெனரல், பின்னர் நெப்போலியன் காலத்திய கான்சலேட், 1947இல் சீனாவிலும், 1983இல் தென் ஆப்பிரிக்காவிலும் இருந்தவை உள்ளிட்டவை மூன்றவை பாராளுமன்றங்கள். நடுக்கால ஸ்வீடன், பின்லாந்து உள்ளிட்ட நாடுகளில் நான்கவை பாராளுமன்றங்களும் நடைமுறையில் இருந்துள்ளன. இந்நாள் மே 14 இதற்கு முன்னால் -மே 14, 2019 […] 1951 - உலகின் முதல் பாரம்பரிய ரயில்வேயாக, டேலில்லின் ரயில்வே, வேல்சில் செயல்படத் தொடங்கியது. தன்னார்வலர்களால் இயக்கப்படும் உலகின் முதல் ரயில்வேயும் இதுதான். பிரிட்டன் நாடாளுமன்றம் சட்டமியற்றி அனுமதித்த முதல் நேரோ-கேஜ் நீராவி என்ஜின் பயணிகள் ரயிலும் இதுதான். கற்பலகைகளை எடுத்துச் செல்வதற்காகத் திட்டமிடப்பட்டு, கற்பலகைகள், பயணிகளுடன் 11.67 கி.மீ. தொலைவுக்கு 1865இலிருந்து இது இயங்கத் தொடங்கியது. இப்பகுதியில் கற்பலகை வெட்டியெடுக்கும் தொழில் 1830களில் தொடங்கினாலும், செதுக்கப்பட்ட பலகைகள் குதிரைகளில் எடுத்துச் செல்லப்பட்டு, பின் படகுகள்மூலம் ஆற்றில் பயணித்து, கப்பல்களுக்கு எடுத்துச் செல்லப்படும். 1861இல் அமெரிக்க உள்நாட்டுப்போர் தொடங்கியதும், பருத்தி வரவு குறைந்தது. அதனால் ஆலை உரிமையாளர்களில் சிலர் கற்பலகை தயாரிக்கத் தொடங்கினர். அவ்வாறு தொடங்கிய வில்லியம் மெக்-கான்னல், ப்ரைன் இகில்வைசிலிருந்த குவாரியிலிருந்து, அருகாமை ரயில்பாதைகளிருந்த டைவின்வரை உருவாக்கியதே இந்த ரயில்பாதை. இப்பாதையில், தண்டவாளங்களுக்கிடையிலுள்ள வழக்கத்திற்கு மாறான இரண்டே-கால் அடி இடைவெளி, உலகிலேயே இன்னும் 3 ரயில்வேக்களில்தான் (இங்கிலாந்தில்தான்) உள்ளது. இப்பாதையை அமைக்கும்போது, இது செல்லவேண்டியிருந்த மேம்பாலங்கள் போதுமான அகலத்துடன் இல்லை. அவற்றுக்கடியில் வண்டி நிற்க நேர்ந்தால், பயணிகள் இறங்க இடம் வேண்டும் என்பதால், ஒருபுறம் அதிக இடம்விட்டு தண்டவாளம் அமைக்கப்பட்டது. அதனால், இதில் இயக்கப்பட்ட பயணிகள் வண்டிக்கு ஒருபுறம் மட்டுமே கதவு அமைக்கப்பட்டு, இன்னும் அவ்வாறே தொடர்கிறது. இப்பாதையையும் உள்ளடக்கிய கிராண்ட் டூர் என்னும் கோரிஸ் ரயில்வேயின் சுற்றுலா 1886இலிருந்து 1930வரை நடத்தப்பட்டது. 1946இல் குவாரி மூடப்பட்டதையடுத்து, 1950இல் இந்த ரயில்வேயும் மூடப்பட்டது. பாரம்பரியச் சின்னங்களில் ஆர்வமுள்ள எழுத்தாளர் டாம் ரோல்ட் இதுபற்றி பர்மிங்ஹாம் போஸ்ட் இதழில் எழுத, எதிர்பார்த்ததைவிட உதவிகள் குவிந்தன. நன்கொடைகள்மூலம் இதனை வாங்கி, அனைத்துப் பணிகளையும் தன்னார்வலர்களே செய்து, 60 ஆண்டுகளுக்கும்மேலாக இயக்கிக்கொண்டிருக்கின்றனர். உலகம் முழுவதும் பல்வேறு பாரம்பரிய ரயில்களுக்கு இதுவே தொடக்கமாக அமைந்தது என்றால் மிகையல்ல. இந்நாள் மே 15 இதற்கு முன்னால் -மே 15, 2019 […] 1718 - உலகின் முதல் எந்திரத் துப்பாக்கிக்கான காப்புரிமை, ஜேம்ஸ் பக்கிள் என்ற ஆங்கிலேயருக்கு லண்டனில் வழங்கப்பட்டது. கப்பல்களில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இது, (பிற்காலத்தில்வந்த ரிவால்வர்போல!) சுழலும் அமைப்பிலிருந்து 6இலிருந்து 11 குண்டுகள்வரை தொடர்ச்சியாகச் சுடவும், அதன்பின் குண்டுகள் நிரப்பப்பட்ட மற்றொரு சுழலை நிரப்பிக்கொள்ளவும்கூடியதாகவும் இருந்தது. 1722இல் புயல் மழைக்கு நடுவே நிமிடத்திற்கு 9 குண்டுகளை இத்துப்பாக்கி சுட்டுக்காட்டியது. அக்காலத்தில் மிகப்பெரிய முன்னேற்றமாக இருந்தது. எந்திரத் துப்பாக்கி என்று அழைத்துக்கொண்டாலும், தற்காலத்திய எந்திரத் துப்பாக்கிகளின் இலக்கணத்திற்குச் சற்றும் தொடர்பில்லாத இது, தானியங்கித் துப்பாக்கிக்கான முதல் காப்புரிமையைப் பெற்றது என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. ஒவ்வொரு முறை சுடுவதற்கு முன்னும் குண்டை நிரப்பும் தேவையில்லாத முதல் துப்பாக்கி 1580இல் ஜெர்மனியில் உருவாக்கப்பட்டது. 1600களில் உருவான, குண்டு, வெடிமருந்து இரண்டையும் நிரப்பிக்கொள்ளும் கேல்த்தாஃப், குக்சன் துப்பாக்கிகள், அக்காலத்தில் மிகவேகமானவையாக இருந்தாலும், ஒரே மாதிரியான தோட்டாக்கள் உருவாகும்வரை தொடர்ச்சியாகச் சுடுதல் சிரமத்திற்குரியதாகவே இருந்தது. 1700களின் தொடக்கத்தில், நவீன எந்திரத் துப்பாக்கிகளுக்கு முன்னோடியாக, தொடர்ச்சியாகச் சுடும் துப்பாக்கிகளைச் சீனர்கள் உருவாக்கிவிட்டனர். சுடப்பட்ட குண்டு வெளியேறும்போது ஏற்படும் எதிர்விசையை, அடுத்த குண்டை நிரப்புவதற்குப் பயன்படுத்தும் துப்பாக்கியை 1880களில் உருவாக்கிய ஹிராம் மேக்சிம் என்ற ஆங்கிலேயர்தான் எடுத்துச்செல்லத்தக்க, முழுமையான தானியங்கி நவீன எந்திரத் துப்பாக்கியின் தந்தை என்று குறிப்பிடப்படுகிறார். இவரது மேக்சிம் துப்பாக்கி, முதல் உலகப்போரில் மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டது. ரிச்சர்ட் கேட்லிங் என்ற அமெரிக்கர் கண்டுபிடித்த மின்சார மோட்டர்மூலம் குண்டு நிரப்பும் முறை, இன்றும் நவீன ஆயுதங்களில் பயன்படுத்தப்படுகிறது. இன்று, முழுமையாகத் தானியங்கியாகவும், மிகவேகமாகவும், தொடர்ச்சியாகவும் சுடக்கூடிய (எடுத்துச் செல்லத்தக்க அல்லது பொருத்தப்பட்ட) துப்பாக்கிகள் எந்திரத் துப்பாக்கிகள் என்று வரையறுக்கப்படுகின்றன. முழுமையாகத் தானியங்குபவையாக இருந்தாலும், எந்திரத் துப்பாக்கிகள் அல்லாதவையான தாக்குதல் ரைஃபிள்கள் முதலானவற்றால், தொடர்ச்சியாக அதிகநேரம் சுட முடியாது. இந்நாள் மே 16 இதற்கு முன்னால் -மே 16, 2019 1929 - தற்போது ஆஸ்கர் என்று அறியப்பட்டுள்ள அகாடமி விருதுகள் வழங்கும் முதல் விழா நடைபெற்றது. திரைப்படத்துறையில் தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சனைகளை, தொழிற்சங்கங்களின் இடையீடு இன்றி தீர்த்துக்கொள்வதற்கான ஓர் அமைப்பு தேவை என்று படத்தயாரிப்பு நிறுவனமான மெட்ரோ-கோல்ட்வின்-மேயர்(எம்ஜிஎம்)-இன் தலைவர் லூயிஸ் மேயர் கருதினார். 1927 ஜனவரி 27 அன்று இண்டர்நேஷனல் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சைன்சஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, பதிவு செய்யும்போது இண்டர்நேஷனல் என்ற சொல் கைவிடப்பட்டது. இதன் முதல் கவுரவ உறுப்பினராக தாமஸ் ஆல்வா எடிசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொழிலாளர் நிர்வாகம், அவற்றுக்கான பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றைத்தாண்டி, திறமைக்கு விருதுகள் தரவேண்டும் என்ற கருத்து பலராலும் கூறப்பட்டாலும், 1928 ஜூலையில்தான் அது உருப்பெற்று, 12 விருதுகளும், வாக்களிக்கும் முறையும் ஏற்படுத்தப்பட்டன. தனிச்சிறப்பு வாய்ந்த சாதனைக்கான விருது என்ற பெயர்கொண்ட இது, எப்படி ஆஸ்கர் ஆனது என்பதற்கு உறுதியான விளக்கமில்லை. 1929இல் முதல் விருது வழங்கப்பட்டுவிட்டாலும், 1939ல்தான் ஆஸ்கர் என்று அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடப்பட்டது. அகாடமியின் தலைவராக இருந்த பெட்டி டேவிஸ், தன் முதல் கணவரான ஹார்மன் ஆஸ்கர் நெல்சனின் பெயரைச் சூட்டியதாக சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார். அகாடமியின் செயலாளராக இருந்த மார்க்கரெட் ஹெர்ரிக், விருதுச்சிலை, ஆஸ்கர் மாமா என்ற பட்டப்பெயர்கொண்ட அவர் உறவினர் ஆஸ்கர் பியர்சைப்போன்று இருப்பதாகக் கூறியதால் இப்பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஹெர்ரிக் இவ்வாறு அழைத்ததை அறிந்திருந்த எழுத்தாளர் சிட்னி ஸ்கோல்ஸ்கி, 1934இல் ஆறாவது விருதுவிழாவைப்பற்றி எழுதும்போது ஆஸ்கர் விருது என்று குறிப்பிட்டதே முதன்முதலில் ஒரு செய்தித்தாளில் ஆஸ்கர் என்ற பெயர் வெளியான நிகழ்வாகும். ஆஸ்கர் விருதை விற்கக்கூடாது என்ற விதி 1950இல் சேர்க்கப்பட்டது. விற்க விரும்பினால் அகாடமியிடமே ஒரு டாலருக்கு விற்கலாம். இதை ஏற்காதவர்களுக்கு விருது வழங்கப்படுவதில்லை. இந்த விதிக்கு முந்தைய ஓரிரு விருதுகள் பின்னாளில் பல கோடிக்கு விற்கப்பட்டுள்ளன. இந்நாள் இதற்கு முன்னால் -மே 17, 2019 […] 1865 - பன்னாட்டுத் தந்தி ஒன்றியம், பாரிசில் நடைபெற்ற பன்னாட்டு தந்தி மாநாட்டில் உருவாக்கப்பட்டது. உலக நாடுகளின் அரசுகளுக்கிடையேயான அமைப்புகளில் மிகப்பழையவற்றில் இதுவும் ஒன்று. 1906இல் நடைபெற்ற பன்னாட்டு கம்பியில்லாத்தந்தி மாநாட்டில், பன்னாட்டு கம்பியில்லாத்தந்தி ஒன்றியம் என்பது அதிகாரப்பூர்வமில்லாமல் உருவாக்கப்பட்டது. 1932இல் இவையிரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டு, தற்போதைய பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியமாக (ஐடியு) மாற்றியமைக்கப்பட்டது. 1947இல் ஐநாவின் சிறப்பு முகமைகளில் ஒன்றாக இணைக்கப்பட்டு, தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களுக்குப் பொறுப்பாக உள்ளது. ஐநாவின் மிகப்பழைமையான 15 சிறப்பு முகமைகளில் இதுவும் ஒன்று. ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் தலைமையகத்தைக்கொண்ட இதற்கு, 12 பகுதி அலுவலகங்கள் உள்ளன. அரசுகளுக்கிடையேயான பொது, தனியார் கூட்டுச் செயல்பாட்டு அமைப்பான இதில் 193 நாடுகளுடன், 800 பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்டவை துறைசார்ந்த உறுப்பினர்களாக இருந்து, அந்தத் துறைகளின் பணிகளை மேற்கொள்கின்றன. அலைக்கற்றையினை உலகநாடுகள் பகிர்ந்துகொண்டு பயன்படுத்துதலை இது நெறிப்படுத்துவதுடன், செயற்கைக்கோள்களுக்கான சுற்றுப்பாதைகளை ஒதுக்கீடு செய்வதில் பன்னாட்டு ஒத்துழைப்பை உருவாக்கும் பணியையும் மேற்கொள்கிறது. வளரும் நாடுகளில் தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பை மேம்படுத்துவது, தொழில்நுட்பங்களின் சீர்தரங்களை(ஸ்டாண்டர்ட்) நிர்ணயிப்பதில் உலக நாடுகளிடையே ஒருங்கிணைப்பை உருவாக்குவது ஆகியவற்றையும் இது செய்கிறது. தரைவழித் தொலைபேசி, இணையம், தொலைக்காட்சி ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு, புதிய தலைமுறை கம்பியில்லாத் தொழில்நுட்பங்கள், செயற்கைக்கோள் மூலமான வானிலை கணிப்பு, அடுத்த தலைமுறை நெட்வொர்க்குகள் முதலானவற்றின் சீர்தரத்தை நிர்ணயிக்கும் பணியையும் இதுவே செய்கிறது. பன்னாட்டு தொலைத்தொடர்பு ஒன்றியம் மூன்று முக்கிய பிரிவுகளாகச் செயல்படுகிறது. பன்னாட்டு வானொலி ஆலோகனைக்குழு என்ற பெயரில் 1927இல் உருவாக்கப்பட்டு, 1992இல் ஐடியு-ஆர் ஆக மாற்றப்பட்ட, கம்பியில்லாத் தொலைத்தொடர்புக்கான பிரிவு, அலைக்கற்றை, செயற்கைக்கோள் சுற்றுப்பாதை முதலானவற்றைத் தீர்மானிக்கிறது. தொலைபேசி, தந்தி ஆலோசனைக்குழுவாக 1956இல் உருவாக்கப்பட்டு, 1993இல் மாற்றியமைக்கப்பட்ட ஐடியு-டீ, தொலைத்தொடர்புத்துறையின் சீர்தரங்களை நிர்ணயிக்கிறது. 1992ல் உருவாக்கப்பட்ட ஐடியு-டி, தொழில்நுட்பங்களின் பரவலாக்கத்தைக் கவனிக்கிறது. அறிவுக்கடல் இந்நாள் மே 18 இதற்கு முன்னால் -மே 18, 2019 […] 1756 - சில வரலாற்றாசிரியர்களால் முதல் உலகப்போர் என்று குறிப்பிடப்படும், ஏழாண்டுப்போர் தொடங்கியது. இங்கிலாந்து, பிரஷ்யா, போர்ச்சுகல் முதலானவை ஓரணியிலும், பிரான்ஸ், ஆஸ்திரியா தலைமையிலான புனித ரோமப் பேரரசு, ரஷ்யப் பேரரசு, ஸ்பெயின், ஸ்வீடன் உள்ளிட்டவை எதிரணியிலும் நிற்க, உலகளாவிய போராக நடைபெற்றது. 1750களின் தொடக்கத்தில் ஒகையோ ஆற்றுப் பள்ளத்தாக்கில் பிரான்ஸ் ஒரு கோட்டையைக் கட்டத்தொடங்கியபோது, வட அமெரிக்காவிலிருந்த குடியேற்றங்களின் எல்லைகள்பற்றிய இங்கிலாந்துக்கும், பிரான்சுக்குமான முரண்பாடுகள் தீவிரமடைந்தன. பிரெஞ்ச்சுப் படைகளை வெளியேற்ற, அப்போது 22 வயது லெஃப்டினெண்ட் கர்னலாக இருந்த ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையிலான குடிப்படை வர்ஜீனியாவிலிருந்து அனுப்பப்பட்டது. இப்படை பிரெஞ்ச்சுப் படையைத் தாக்கி, அதன் தளபதி உட்பட 10 பேரைக் கொன்றுவிட, பிரான்சின் பதில் தாக்குதலில் வாஷிங்டன் சரணடைய நேர்ந்தது. இத்தகவலறிந்ததும் இங்கிலாந்தும், பிரான்சும் ராணுவத்தை அமெரிக்காவிற்கு அனுப்பின.பிரான்சின் நூற்றுக்கணக்கான வணிகக் கப்பல்களைப் பறிமுதல் இங்கிலாந்து செய்தது, நெருக்கடியை முற்றச் செய்ய, 1956 மே 17இல் பிரான்சின்மீது அதிகாரப்பூர்வமாகப் போரை அறிவித்தது இங்கிலாந்து. இதற்கிடையில், ஐரோப்பாவில் பெரிய நாடுகள் அணிமாறின. ஆஸ்திரிய வாரிசுரிமைப்போரில் இங்கிலாந்து உதவியிருந்தாலும், இழப்புகளைச் சந்தித்ததால், பன்னெடுங்கால எதிரியான பிரான்சுடன் ஆஸ்திரியா சேர்ந்தது. இதைத் தொடர்ந்து எதிரியான இங்கிலாந்துடன் பிரஷ்யா அணிசேர்ந்ததுடன், உடனடியாக சேக்சனி பகுதியைக் கைப்பற்றிக்கொள்ள, ஐரோப்பாவிலும் போர் வெடித்தது. போலந்து-லிதுவேனியப் பகுதிகளை பிரஷ்யா கைப்பற்றிவிடும் என்றஞ்சி ஆஸ்திரியாவுடன் சேர்ந்த ரஷ்யா, 1762இல் அணிமாறியது தனிக்கதை. சூழ்நிலையைப் பயன்படுத்தி, முகலாயப் பேரரசு பிளவுற்றுக்கிடந்த இந்தியாவில், ஆங்கிலேயப் பகுதிகளைக் கைப்பற்ற பிரான்ஸ் செய்த முயற்சிகளே பிளாசிப்போர் உள்ளிட்ட மூன்றாம் கர்னாடகப்போர்கள். பொதுமக்கள் உட்பட 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியான இப்போரில் இங்கிலாந்து-பிரஷ்ய அணி வெற்றிபெற்றது. பிரான்ஸ் பல பகுதிகளை இழந்தது. ஐரோப்பாவில் பிரான்சின் மேலாதிக்கநிலை முடிவுக்கு வந்து, இங்கிலாந்து உலகின் முக்கிய சக்திகளுள் ஒன்றாக மாறியது. இந்நாள் மே 19 இதற்கு முன்னால் -மே 19, 2019 […] 1536 - அரசத் துரோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுடன், இங்கிலாந்தின் பட்டத்தரசி ஆன் பூலின், தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். ஆங்கிலேய சீர்திருத்தத்தின் நாயகியாகக் குறிப்பிடப்படும் இவர், எட்டாம் ஹென்றி அரசரின் இரண்டாவது மனைவி. ஹென்றியின் முதல் மனைவியான ராணி ஆரகானின் காத்தரீனுக்குத் தோழியாக இருந்த பூலினை மயக்கவும், ஆசைநாயகியாக்கவும் ஹென்றி எடுத்த முயற்சிகள் வெற்றிபெறாததால், காத்தரீனுடனான திருமணம் செல்லாது என்று அறிவிக்கச்செய்து, பூலினை மணக்கவிரும்பினார். திருமணத்தை ரத்துசெய்ய போப் ஏழாம் கிளமெண்ட் மறுத்துவிட்டதால், இங்கிலாந்து திருச்சபையின் தலைமையான காட்டன்பரியின் பேராயராக தாமஸ் கிரான்மரை நியமித்து, திருமணத்தை ரத்துசெய்வதையும், பூலினுடனான திருமணத்தை நடத்துவதையும் அவர்மூலம் நிறைவேற்றிக்கொண்டார் ஹென்றி. ஹென்றியையும், கிரான்மரையும் போப் சமயவிலக்குச்செய்துவிட, இங்கிலாந்தின் திருச்சபைமீதான கத்தோலிக்கத் திருச்சபையின் அதிகாரம் முடிவுக்குவந்து, அரசரின் கட்டுப்பாட்டிற்குள் சென்றதற்கான தொடக்கமாக இது அமைந்தது. பூலினுக்கு முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்ததுடன், அடுத்தடுத்து மூன்று கருச்சிதைவுகள் ஏற்பட, ஆண்குழந்தை வேண்டுமென்று விரும்பிய ஹென்றி, பூலினின் தோழியான ஜேன் சீமோர் என்பவரை மணப்பதற்காக, பூலினுடனான திருமணத்தை செல்லாததாக்கவேண்டியிருந்தது. அதற்காகவே, அரசத் துரோகம், தகாத உறவு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவருக்கு மரணதண்டனை அளித்தார். பூலினின் மகள்தான் பின்னாளில் முதலாம் எலிசபெத் அரசியானார். திருமணமே செய்துகொள்ளாத இவர்தான், பிராட்டஸ்டண்ட் திருச்சபையை உருவாக்கி அதன் தலைமை நிர்வாகியானார். இதுவே இங்கிலாந்தின் திருச்சபையாக உருப்பெற்றதுடன், ரோமின் அதிகாரத்திலிருந்தும் விடுவித்ததால், இந்நடவடிக்கை 1559இன் புரட்சி என்று கூறப்படுவதுண்டு. எலிசபெத் அரசியானதும் தாயின்மீதான குற்றச்சாட்டுக்களை ரத்து செய்தார். பூலினின் திருமணம், மரணதண்டனை உள்ளிட்டவை மிகப்பெரிய மாற்றங்களுக்குக் காரணமாக அமைந்ததால் (ஹென்றியின் ஆசைநாயகியாக இருக்க இவர் ஒப்புக்கொண்டிருந்தால் இந்த மாற்றங்கள் ஏற்பட்டிருக்கா!) ஆங்கிலேய சீர்திருத்தத்தின் நாயகியாக பூலின் குறிப்பிடப்படுகிறார். இங்கிலாந்தின் பட்டத்தரசிகளிலேயே மிகச் சக்திவாய்ந்தவரும், முக்கியமானவருமாக குறிப்பிடப்படும் பூலின், பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு கலை, பண்பாட்டுப் படைப்புகளிலும் பெருமைப்படுத்தப்படுகிறார். இந்நாள் மே 20 இதற்கு முன்னால் -மே 20, 2019 1873 - ரிவிட்-டுடன்கூடிய தற்கால ஜீன்ஸ் ஆடைக்கு லீவி ஸ்ட்ராஸ், ஜாக்கோப் டேவிஸ் ஆகியோர் அமெரிக்காவில் காப்புரிமை பெற்றனர். உண்மையில் ஜீன்சின் பிறப்பிடம் அமெரிக்கா அல்ல. இத்தாலியின் ஜெனோவா நகரில், கடுமையான உடலுழைப்புப் பணிகளில் ஈடுபடுகிற தொழிலாளர்களுக்கான, உறுதியான உடையாக இது உருவாக்கப்பட்டது. சுமாரான தரத்துடன், குறைவான விலைகொண்ட கார்ட்ராய் வகைத் துணியில் அங்கு உருவாக்கப்பட்ட ஜீன்ஸ், 17ஆம் நூற்றாண்டில் வடக்கு இத்தாலித் தொழிலாளர்களின் முக்கிய உடையாக இருந்தது. மலிவான டுங்கரீ என்ற துணியும் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. இது, இந்தியாவில் மும்பைக்கருகிலுள்ள டோங்ரி என்ற கிராமத்தில் உருவாகி ஏற்றுமதி செய்யப்பட்டது. டோங்ரிதான், டுங்கரீயாக மருவியதாகக் கருதப்படுகிறது. ஸ்விட்சர்லாந்திலிருந்து ஜெனோவாவுக்கு வந்த ஜீன்-காப்ரியேல் ஐனார்ட்-தான் 1795இல் முதன்முதலில் ஜீன்ஸ் என்ற பெயரைப் பயன்படுத்தினார். 1800இல் மாசெனா என்ற தளபதியின்கீழ் நெப்போலியனின் படைகள் ஜெனோவாவை முற்றுகையிட்டபோது, படைகளுக்குத் தேவையான பொருட்களை வழங்கும் பணி ஜீன்-காப்ரியேலுக்குக் கிடைத்தது. அவர், ஜெனோவாவின் பிரெஞ்சுப் பெயரான ஜீன்ஸ் என்பதைக் குறிக்கும்வண்ணம், ப்ளூ ஜீன்ஸ் என்ற பெயரில் சீருடைகளைத் தைத்துத்தந்ததையடுத்து, அப்பெயரே நிலைத்துவிட்டது. பிரான்சின் நைம்ஸ்(உச்சரிப்பு நிம்) நகரில் ஜெனோவாவில் பயன்படுத்தப்படும் துணியைப்போன்று உருவாக்க முயன்று, தற்போதைய டெனிம் துணியை உருவாக்கினார்கள். நைம்சிலிருந்து வந்தது என்ற பொருளில் டி-நைம்ஸ்(டெ-னிம்) என்று அழைத்ததால் டெனிம் என்ற பெயர் உருவானது. ஜெர்மானியரான லீவி ஸ்ட்ராஸ், 1851இல் அமெரிக்காவுக்கு வந்து வியாபாரம் தொடங்கினார். இவரிடம் ஜீன்சுக்கான துணியை வாங்கிக்கொண்டிருந்த (லாட்வியாவிலிருந்து அமெரிக்காவுக்கு வந்தவரான) ஜாக்கோப் டேவிஸ், கடுமையான உழைப்பாளிகள் பயன்படுத்தும் உறுதியான ஜீன்சில், தையல் விட்டுப்போகிற சில இடங்களில் ரிவிட் பொருத்தினால் உறுதியாக இருக்கும் என்று கூறியதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதற்கே இவர்கள் காப்புரிமை பெற்றனர். தொடக்கத்தில் நீலநிறத்திற்கு, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இண்டிகோ பயன்படுத்தப் பட்டாலும், பின்னர் ஜெர்மனியில் செயற்கை இண்டிகோ உருவாக்கப்பட்டது. பிற்காலத்தில் பிற வண்ணங்களிலும் ஜீன்ஸ் உருவாக்கப்பட்டது. இந்நாள் மே 21 இதற்கு முன்னால் -மே 21, 2019 […] 1922 - முதன்முதலாக ‘த்ரில் கொலை’யாக வகைப்படுத்தப்பட்ட கொலையை, அப்போதுதான் பட்டப்படிப்பை முடித்திருந்த, செல்வந்த மாணவர்கள் நேதன் லியோப்போல்ட்(19 வயது), ரிச்சர்ட் லோயப்(18) ஆகியோர் செய்தனர். நான்கு மாதத்தில் பேசத்தொடங்கி, 15 மொழிகளை அறிந்திருந்த லியோப்போல்ட், 210 ஐக்யூ(அறிவுத்திறன்) புள்ளிகள் பெற்றவர். அக்காலத்திய சோதனை முறைகள் நவீன முறைகளோடு ஒப்பிடுமளவுக்கு இல்லையென்றாலும், தற்போதைய சராசரி 85-115 புள்ளிகள்தான்! இவரைப்போன்றே அறிவுத்திறன்கொண்ட லோயப், பல வகுப்புகளில் இரட்டை உயர்வுபெற்று, 17வயதில் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் மிகக்குறைந்த வயது பட்டதாரியானவர். தங்கள் திறமையைப் பயன்படுத்தி ’கச்சிதமான குற்றம்’ (பர்ஃபெக்ட் க்ரைம்) ஒன்றை, த்ரில்லுக்காகச் செய்வது என்று முடிவெடுத்து, ஏழு மாதங்கள் திட்டமிட்டனர். (கண்டுபிடிக்கவே முடியாத குற்றங்கள் பர்ஃபெக்ட் க்ரைம் என்று வகைப்படுத்தப்பட்டாலும், கண்டுபிடிக்கப்படாதவை வெளியே தெரியாது என்பதால் அதற்கு உதாரணங்கள் இல்லை. ஆனாலும், கண்டுபிடிக்க மிகச்சிரமமாக இருந்த சில குற்றங்கள் அவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன.) யாரையாவது கடத்தி, பணயத்தொகைபெற்று, எதுவும் வெளியே தெரிந்துவிடாமல் கொல்வது என்று முடிவெடுத்து, கடத்துவதற்கு வசதியாக, அடுத்த தெருவிலிருந்த, லோயபின் தூரத்து உறவினரான 14 வயது பாபி பிராங்ஸ்-ஐக் கடத்தி, கொலை செய்து, உடை, முகம் உள்ளிட்ட அடையாளங்களை அமிலத்தால் அழித்துவிட்டு, பணயத்தொகையும் கேட்டனர். இடையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதால், பணயத்தொகை கிடைக்கவில்லை. எந்தப் பதற்றமுமின்றி விசாரணையிலும் உடனிருந்த இவர்கள், உடலுக்கருகில் கிடைத்த, லியோபோல்டின் தனிச்சிறப்பான மூக்குக்கண்ணாடியால் கண்டுபிடிக்கப்பட்டனர். நூற்றாண்டின் மிகப்பெரிய வழக்கு விசாரணை என்று கூறப்படுபவற்றில் ஒன்றான இவ்வழக்கின் இறுதியில், லோயபின் குடும்பம் (தற்போதைய மதிப்பில்) ஏழரைக்கோடி ரூபாய் கட்டணமளித்து ஏற்பாடு செய்திருந்த மிகப்பெரிய வழக்கறிஞர் கிளாரன்ஸ் டேரோ, வயதைக் கருதி மரணதண்டனை விதிக்கக்கூடாது என்று 12 மணிநேரம் தொடர்ச்சியாகப் பேசினார். ஆயுள்தண்டனையுடன் 99 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 1936இல் மற்றொரு கைதியால் லோயப் கொல்லப்பட, மேலும் 12 மொழிகள் கற்று, சிறைக்கு பல உதவிகள் புரிந்த லியோபோல்ட் 1958இல் பரோலில் விடுவிக்கப்பட்டு, 1971இல் இறந்தார். இந்நாள் மே 22 இதற்கு முன்னால் -மே 22, 2019 1455 - இங்கிலாந்தில் ரோஜாப் போர்கள் தொடங்கின. இங்கிலாந்தின் அரசுரிமைக்காக, பிளாண்டாஜெனட் அரச மரபின் பிரிவுகளிடையே 1455இலிருந்து, 1487வரை நடைபெற்ற போர்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. போரில் ஈடுபட்ட லங்காஸ்டர் அரச மரபினர் சிவப்பு ரோஜாச் சின்னத்தையும், யார்க் அரச மரபினர் வெள்ளை ரோஜாச் சின்னத்தையும் கொண்டிருந்ததால் இப்பெயர் ஏற்பட்டது. உண்மையில், வால்ட்டர் ஸ்காட் 1829இல் எழுதிய ஆன் ஆஃப் கெயர்ஸ்டீன் என்ற நாவலுக்குப் பின்னரே, ரோஜாப் போர்கள் என்ற பெயர் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. யார்க்கிஸ்ட்டுகள் தொடக்கத்திலிருந்து வெள்ளை ரோஜாச் சின்னத்தைப் பயன்படுத்திவந்தாலும், லங்காஸ்ட்டிரியர்கள் 1485இல்தான் சிவப்பு ரோஜாச் சின்னத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். அரச குடும்பத்தைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் அரசுரிமை கோரலாம் என்றிருந்த நிலை, ஆட்சியிலிருக்கும் அரசரின் மகன்கள், சகோதரர்களுக்கு மட்டுமே அரசுரிமை என்று, 9ஆம் நூற்றாண்டில், ஆல்பிரெட் அரசரால் மாற்றப்பட்டது. பெண்வழி வாரிசுகளுக்கு அரசுரிமை மறுக்கப்பட்டதால் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்பட்டாலும், 1377இல் மூன்றாம் எட்வர்ட் அரசர் இறந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசுரிமை மாற்றங்களே இப்போர்களுக்கு அடிப்படையாயின. 1453இல்தான் முடிவுக்குவந்த நூறாண்டுப் போரினால் ஏற்பட்டிருந்த சமூக, பொருளாதார சிக்கல்கள், நிலவுடைமை முறையினுள்ளேயே ஏற்பட்டிருந்த சிக்கல்கள், மூன்றாம் எட்வர்டைத் தொடர்ந்து அடுத்தடுத்த குழப்பமான வாரிசுகளின் ஆட்சிக்குப்பின் ஆண்டுகொண்டிருந்த ஆறாம் ஹென்றியின் பலவீனமான ஆட்சி ஆகியவற்றால், யார்க்கின் ரிச்சர்டு அரசுரிமைகோரியதைத் தொடர்ந்து போராகியது. ஸ்காட்லாந்து, பிரான்ஸ் ஆகியவை லங்காஸ்ட்டிரியர்களுக்கு உதவி, வெற்றிபெறச்செய்தாலும், இப்போர்களின் இறுதியில் இரு மரபிலும் ஆண்வழி வாரிசுகள் அழிந்திருந்தனர். போரில் உதவிய, வேல்சின் ட்யூடார் மரபிலிருந்த, லங்காஸ்டிரியர்களின் பெண்வழி வாரிசான ஏழாம் ஹென்றி அரசரானதைத் தொடர்ந்து, பிளாண்டாஜெனட் மரபின் ஆட்சி முடிவுக்குவந்து, ட்யூடார் மரபின் ஆட்சி தொடங்கியது. போரில் அரச குடும்பங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளால் பிரபுக்களின் நிலவுடைமை பலவீனமடைந்து, வணிக வர்க்கம் வலுப்பெற்றது. இப்போரின் முடிவு இங்கிலாந்தின் மறுமலர்ச்சிக்காலத்தின் தொடக்கமாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்நாள் மே 23 இதற்கு முன்னால் -மே 23, 2019 […] 1945 - 1.7 கோடிப் பேரைக் கொலைசெய்த, நாஜி இனப்படுகொலையின் சிற்பி ஹீன்ரிச் ஹிம்லர், இங்கிலாந்தின் விசாரணை முகாமில், சயனைடு அருந்தி தற்கொலை செய்துகொண்டார். 1925இல் எஸ்எஸ் என்று குறிப்பிடப்படும் சுட்ஸ்டாஃபல் படையில் சேர்ந்த இவர், 1929இல் அதன் தலைவராக(ரீச்ஃப்யூரர்-எஸ்எஸ்) ஹிட்லரால் நியமிக்கப்பட்டார். நாஜிக்கட்சியின் கூட்டங்களுக்குப் பாதுகாப்பளிக்கும் சிறிய தன்னார்வலர்களின் படையான அதை, வெறும் 290 உறுப்பினர்களிலிருந்து, எட்டு லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள்கொண்ட (அடியாள்)படையாக மாற்றினார் ஹிம்லர். நாஜிக்கட்சியின் இனவெறிக்கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் ஆல்ஜெமெய்ன்-எஸ்எஸ் என்ற பொதுப்படை, ராணுவத்திற்கிணையான (உண்மையில் அதைவிட அதிகமான) அதிகாரங்கள் கொண்ட துணை ராணுவப் படையாக வாஃபன்-எஸ்எஸ் என்ற ஆயுதம்தாங்கிய படை ஆகியவற்றுடன், மூன்றாவதாக இருந்த எஸ்எஸ்-டோட்டன்காப்வெர்பண்டே என்ற பிரிவுதான் நாஜி வதைமுகாம்கள், இனப்படுகொலைமுகாம்கள் ஆகியவற்றை செயல்படுத்தியது. ஹிட்லர், ஹிம்லர், எஸ்எஸ் படையின் சக்திவாய்ந்த தலைவர்களுள் ஒருவரான ரீன்ஹார்ட் ஹேட்ரிச் மூவரும்தான் 1942இல் ஹோலோகாஸ்ட் என்று பெயரிடப்பட்ட இனப்படுகொலைக்கான திட்டத்தை உருவாக்கினர். 1936இலிருந்து ஜெர்மன் காவல்துறைத் தலைவராக இருந்த ஹிம்லர், 1943இல் உள்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டதால், காவல்துறை, ராணுவம் உள்ளிட்ட அனைத்துப் படைகளையும், அவை செய்யத்தயங்கிய அட்டூழியங்களுக்கு எஸ்எஸ் படையையும் பயன்படுத்தி இனப்படுகொலைகளைச் செய்தார். ஹிட்லரின் பிறந்தநாளில்(1945 ஏப்ரல் 20) கடைசியாக அவரைச் சந்தித்து, தான் விசுவாசமாக இருப்பதாக உறுதிகூறிய ஹிம்லர், சோவியத் படைகள் வந்தாலும், பெர்லினைவிட்டு வெளியேறப்போவதில்லை என்று ராணுவத்துக்கு ஹிட்லர் உரையாற்றிய கூட்டம் முடிந்ததுமே பெர்லினைவிட்டு வெளியேறினார். நடுநிலைவகித்த ஸ்வீடனின் தூதரிடம், அடுத்த சில நாட்களில் ஹிட்லர் இறந்துவிடுவார் என்றும், தானே ஜெர்மனியின் தற்காலிகத் தலைவர் என்றும்கூறி, ஜெர்மனி சரணடைவதாக ஏப்ரல் 23இல் ஹிம்லர் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றிபெறவில்லை. அத்துடன், ஏப்ரல் 30இல் ஹிட்லரும் தற்கொலை செய்துகொள்ள, அடையாளம் காட்டிக்கொள்ளாமல் தப்பிக்க முயன்ற ஹிம்லர், முன்னாள் போர்க்கைதிகளான சோவியத் படையினர் அமைத்திருந்த சோதனைமையத்தில் கைது செய்யப்பட்டு, இங்கிலாந்தின் விசாரணை முகாமிற்குக்கொண்டுவரப்பட்ட நிலையில், தற்கொலை செய்துகொண்டார். இந்நாள் மே 24 இதற்கு முன்னால் -மே 24, 2019 […] 1683 - உலகின் முதல் பல்கலைக்கழக அருங்காட்சியகமான, ‘கலை, தொல்லியல் ஆகியவற்றுக்கான ஆஷ்மோலியன் அருங்காட்சியகம்’, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டது. பல்கலைக்கழக அருங்காட்சியகம் என்பது பொதுவாக, உயர்கல்விக்கு உதவும் வகையில், பல்கலைக்கழகத்தில் திரட்டப்பட்டுள்ள கலைப்பொருட்கள், தொல்பொருட்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் முதலானவற்றைக்கொண்டு, பல்கலைக்கழகத்திற்குள்ளேயே செயல்படுவதாகும். பொதுவாக ஆய்வுக்காகத் திரட்டப்பட்ட பொருட்களும், ஆதாரங்களும் இந்த அருங்காட்சியகங்களில் முக்கிய இடம்பெறும். ஆய்வுகளில் ஈடுபடுவோருக்கு, அவற்றுக்கான ஆதாரங்களை இந்த அருங்காட்சியகங்கள் அளிக்கின்றன. மாணவர்களுக்கு பொழுதுபோக்காகவும், கற்பதற்கு உதவியாகவும் அமையும் இந்த அருங்காட்சியகங்கள், பொதுமக்களுக்கும் அரிய பொருட்களை காண்பதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. ஆஷ்மோலியன் அருங்காட்சியகம் தொல்பொருட்கள், நுண்கலைப் பொருட்கள் முதலானவற்றைக் கொண்டிருக்கிறது. இது உட்பட பதினோரு அருங்காட்சியகங்களும், ஓர் ஓவியக் காட்சியகமும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ளன. நடுக்கால பல்கலைக்கழகங்கள் தாவரவியல், உடற்கூறியல் ஆகியவற்றைப் போதிக்க அரங்கங்கள் என்ற பெயரில் அவை தொடர்பான திரட்டல்களை வைத்திருந்ததே, பல்கலைக்கழக அருங்காட்சியகத்துக்கான தொடக்கமாகக் கூறப்படுகிறது. முதல் தாவரவியல் அரங்கம் 1540இல் இத்தாலியின் பைசா அல்லது படோவா நகரிலும், மருத்துவம் பயிற்றுவிக்க முதல் உடற்கூறியல் அரங்கம் படோவாவிலும் தொடங்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. இப்படி திரட்டல்களைப் பயன்படுத்திக் கற்பிக்கும் முறை விரைவில் ஓவியர்கள், சிற்பிகள், கட்டிடக் கலைஞர்கள் முதலானோருக்குக் கற்பிப்பதிலும் பின்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, வேதியியலுக்கும் பரவியது. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கிறிஸ்ட் சர்ச் ஓவியக் காட்சிக்கூடம் 1546இலேயே தொடங்கப்பட்டுவிட்டது. ஸ்விட்சர்லாந்தின் பேசல் பல்கலைக்கழகம், தங்களிடமிருந்த திரட்டல்களை 1671இல் பொதுமக்கள் பார்வையிட அனுமதித்துவிட்டாலும்கூட, ஆஷ்மோலியன் அருங்காட்சியகமே முதல் முழுமையான பல்கலைக்கழக அருங்காட்சியகமாக ஏற்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் பெரும்பாலான பல்கலைக்கழக அருங்காட்சியகங்கள் மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் மட்டும் பயன்படுபவையாக இருந்தநிலைமாறி, பொதுமக்களுக்கும் தங்கள் துறைபற்றிய கல்வியை அளிப்பதையும் நோக்கமாக ஏற்றுக்கொண்டுவிட்டன. இன்று உலகெங்கும் ஏராளமான பல்கலைக்கழக அருங்காட்சியகங்கள் உள்ளன. இந்தியாவில் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்திலும், கல்கத்தா பல்கலைக்கழகத்திலும் பல்கலைக்கழக அருங்காட்சியகங்கள் உள்ளன. இந்நாள் மே 25 இதற்கு முன்னால் -மே 25, 2019 […] 1981 - வளைகுடாவின் அரேபிய நாடுகளுக்கான கூட்டுறவு அவை என்ற அமைப்பு உருவானது. பாரசீக வளைகுடாவிலுள்ள, இராக் தவிர்த்த மற்ற அரேபிய நாடுகளின் அரசுளுக்கிடையே அரசியல், பொருளாதார ஒன்றிய மொன்றை(ஐரோப்பிய ஒன்றியம் போன்று), இப்பகுதியில் இரானின் ஆதிக்கத்துக்கு மாற்றுச்சக்தியாக உருவாக்க இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகங்கள்(யுஏஇ) ஆகிய நாடுகள் உறுப்பினராகவுள்ள இவ்வமைப்பில், எதிர்காலத்தில் ஜோர்டான், மொராக்கோ, ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்க்கவும் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. மதம், நிதி, வணிகம், ஏற்றுமதி-இறக்குமதி, சுற்றுலா, சட்டம், நிர்வாகம் உள்ளிட்டவற்றில் ஒரே மாதிரியான விதிமுறைகளை உருவாக்குதல், தொழிற்துறை, சுரங்கத்துறை, விவசாயம், நீராதாரங்கள் முதலானவற்றில் அறிவியல்-தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஏற்படுத்துதல், பொதுவான அறிவியல் ஆய்வுக்கூடங்களைக் கட்டமைத்தல், இந்நாடுகளுக்கிடையே கூட்டுமுயற்சி அமைப்புகளை உருவாக்குதல், தனியார் துறையிலும் ஒத்துழைப்பை ஏற்படுத்துதல் ஆகியவற்றுடன், இந்நாடுகளின் மக்களிடையேயும் இணைப்பை ஏற்படுத்துதல் ஆகியவை இவ்வமைப்பின் நோக்கங்களாகும். பெட்ரோலிய வளங்கள் தீர்வதற்குள், அவற்றால் ஈட்டிய வருவாயைக்கொண்டு, எதிர்காலத்துக்கான பொருளாதார அமைப்பைக் கட்டமைத்துக்கொள்வதற்காக, 2003க்குள் ஏற்றுமதி-இறக்குமதி ஒன்றியம், 2007க்குள் பொதுவான சந்தை, 2010க்குள் பொதுவான நாணயம் ஆகியவற்றை உருவாக்கிவிடவும் இது திட்டமிட்டிருந்தது. திட்டமிட்டபடி ஏற்றுமதி-இறக்குமதி ஒன்றியம் 2003இல் உருவாக்கப்பட்டு, 2015இல் முழுமையாகச் செயல்படத்தொடங்கிவிட்டது. இந்நாடுகளுக்கிடையே தடைகளின்றி வணிகம்புரிய உதவும் பொதுச்சந்தை அமைப்பு 2008இல் தொடங்கப்பட்டாலும், முழுமையான ஒற்றைச்சந்தையாக இன்னும் மாறவில்லை. நாணய ஒன்றியத்துக்கான தலைமையிடம் சவூதி அரேபியாவின் ரியாத் என்று முடிவெடுக்கப்பட்டதால், பொதுவான நாணயத்திட்டத்திலிருந்து யுஏஇ விலகிக்கொண்டது. ஓமனும் ஏற்கெனவே பின்வாங்கியிருந்தாலும், யூரோவுக்கு முன்னோடியாக, ஐரோப்பிய நாணய அலகு என்பதைப் பயன்படுத்தியதுபோன்ற ஒன்றைச் செயல்படுத்தும் முயற்சியில் மற்ற நான்கு நாடுகளும் 2014இலிருந்து ஈடுபட்டுள்ளன. இது உருவானால், உலகின் இரண்டாவது பெரிய நாணய ஒன்றியமாக இருக்கும். இந்நாடுகளுக்கிடையே 40 ஆயிரம் கி.மீ. ரயில்பாதைகள் உள்ளிட்ட பொதுவான உட்கட்டமைப்புப் பணிகளும் திட்டமிடப்பட்டுவருகின்றன. இந்நாள் மே 26 இதற்கு முன்னால் -மே 26, 2019 […] 1998 - ஆஸ்திரேலியாவில் ‘தேசிய வருத்தம் தெரிவிக்கும் நாள்(நேஷனல் சாரி டே)’ முதன்முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் பூர்வகுடிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக இது கடைப்பிடிக்கப்பட்டது. வெள்ளையர்களின் வருகைக்குப்பின், அவர்கள் ஏற்படுத்திய சூழ்நிலைகள், அவர்களோடு வந்த புதிய நோய்கள் முதலானவற்றைப் பூர்வகுடிகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதனால் பூர்வகுடிகளின் எண்ணிக்கை மிகவேகமாகக் குறைந்தது. முழுமையான பூர்வகுடி இரத்தம்கொண்டவர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் அழிவின் விளிம்பிலிருப்பதாகக்கூறிய, இவர்களைப் பாதுகாப்பதற்கு உருவாக்கப்பட்ட குழுவின் தலைவர் ஏ.ஓ.நெவில், ஆஸ்திரேலியப் பூர்வகுடிகளுக்கும், குடியேறிகளான வெள்ளையர்களுக்கும் பிறந்த கலப்பினக் குழந்தைகளை, வெள்ளையர்களிடையே பணிபுரியப் பழக்கினால், திருமண உறவுகளும் ஏற்பட்டு அவ்வினம் காக்கப்படும் என்று 1930இல் யோசனை கூறினார். ஆனால், 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே, தாய்மார்களிடமிருந்து பிரிக்கப்பட்ட இக்குழந்தைகள் கலப்பினம், அரை-சாதி, க்வாட்ரூன்(கால்பங்கு பூர்வகுடி-முக்கால்பங்கு ஐரோப்பியர்), ஆக்டோரூன் (எட்டில் ஒரு பங்கு பூர்வகுடி) என்றெல்லாம் அழைக்கப்பட்டு, தேவாலயங்களிலும், பிரித்துவைக்கப்பட்ட தங்குமிடங்களிலும் வைக்கப்பட்டனர். உண்மையில், முழு ஐரோப்பியர்களின் (வந்தேறிகள்) எண்ணிக்கையைவிட, இந்தக் கலப்பினத்தவர் அதிகமாகவிடுவார்கள் என்ற அச்சத்தில், வெள்ளையரின் பண்பாட்டை அங்கு நிலைநிறுத்துவதற்காகவே இவ்வாறு பிரிக்கப்பட்ட இவர்கள், ‘திருடப்பட்ட தலைமுறை’ என்று குறிப்பிடப்படுகின்றனர். ஏற்கெனவே, பூர்வகுடிகளிடமிருந்து பிடுங்கப்பட்ட நிலங்கள், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் ஆகியவற்றுக்காக, இங்கிலாந்துக் குடியேற்றம் ஏற்படுத்தப்பட்டதன் 150ஆவது ஆண்டுக்கொண்டாட்ட நாளான 1938 ஜனவரி 26ஐ, பூர்வகுடிளுக்கு ஆதரவான அமைப்புகள் துக்க நாளாகக் கடைப்பிடித்தன. குழந்தைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு விசாரணைகோரிய இயக்கங்கள், 1990களில் வலுப்பெற்றதைத் தொடர்ந்து, 1995இல் விசாரணை ஆணையம் நியமிக்கப்பட்டது. இணை ஆணையர்களாகப் பூர்வகுடிப் பெண்களே நியமிக்கப்பட்ட இந்த ஆணையத்தின், ‘அவர்களை வீட்டுக்கு அழைத்துவருதல்(பிரிங்கிங் தெம் ஹோம்)’ என்ற 680 பக்க அறிக்கை, 1997 மே 26இல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் நினைவாகவே, பூர்வகுடிகள் அல்லாதவர்களையும்கொண்ட பூர்வகுடிகள் பாதுகாப்பு அமைப்புகள் இந்நாளை 1998இல் கடைப்பிடித்தன. அப்போது இதை ஏற்காத அரசு, 1999ல் வருத்தம் தெரிவித்ததுடன், 2008இல் மன்னிப்பும் கேட்டது. இந்நாள் மே 27 இதற்கு முன்னால் -மே 27, 2019 […] 1873 - ட்ரோஜான் போர் நடந்த ட்ராய் நகரின் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள், ஜெர்மானிய வணிகரும், தொல்லியல் ஆர்வலருமான ஹீன்ரிச் ஷ்லீமேன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டன. ட்ராய் தொடர்பாகக் கண்டுபிடிக்கப்பட்ட முதல் பொருட்களான இவற்றை பிரயமின் பொக்கிஷம் என்று ஷ்லீமேன் அழைத்தார். பிரயம் என்பவர் ட்ரோஜான் போர்க்காலத்தில் ட்ராயை ஆண்ட புகழ்பெற்ற அரசர். ஹோமரின் இலியட், ஒடிசி ஆகிய காப்பியங்கள் ட்ரோஜான் போரையொட்டி எழுதப்பட்டிருப்பதுடன், வேறு இலக்கியங்களிலும் ட்ராய் நகர், அதன் மக்களான ட்ரோஜான்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், ட்ராய் நகர் இருந்த சரியான இடம் என்பது தெரியவில்லை. சொல்லப்போனால், ட்ராய் பற்றிய அனைத்தும் வெறும் கட்டுக்கதைகள் என்பதான கருத்தும்கூட நிலவியது. 16-17ஆம் நூற்றாண்டுக்காலப் பயணிகளான பிரான்சின் பியரி பெலோன், இத்தாலியின் பியட்ரோ டெல்லா வல்லே முதலானோர், ட்ராய், அக்காலத்திய கிரேக்க நகரமான அலெக்சாண்ட்ரியா ட்ரோவாஸ் ஆகியவை இருந்த இடமாக, தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடத்திற்கு 20 கி.மீ. தொலைவிலுள்ள இடத்தைக் குறிப்பிட்டனர். 18ஆம் நூற்றாண்டில் பிரெஞ்ச் தொல்லியல் ஆய்வாளரான ஜீன் பாப்டிஸ்டே லெ-செவாலியே, தற்போதைய இடத்திற்கு 5 கி.மீ. தொலைவிலுள்ள மற்றோரிடத்தைக் குறிப்பிட்டார். 1822இல் ஸ்காட்லாந்து இதழியலாளரான சார்லஸ் மக்லாரென்தான் முதல்முதலில் தற்போதைய இடத்தை அடையாளம்கண்டார். 1866இல் பிராங்க் கால்வெர்ட் என்ற ஆங்கிலேயர், இப்பகுதிகளில் மிகப்பெரிய ஆய்வை மேற்கொண்டு, புதிய இலியம் மலைப்பகுதியில்தான் ட்ராய், ஹிசார்லிக் ஆகிய நகரங்களிருந்ததாக உறுதிப்படுத்தினார். இலியம் என்பது ட்ராயின் மற்றொரு பெயர் என்பதும், இலியட் காப்பியம், இலியத்தின் பாடல் என்று கிரேக்கத்தில் அழைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் அகழாய்வு மேற்கொண்டு கண்டுபிடித்த பிரயமின் பொக்கிஷத்தில் சில பொருட்களை ஷ்லீமேன் ஒட்டோமான் பேரரசிடம் விற்றுவிட, மீதம், பின்னாளில் பெர்லின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டன. இரண்டாம் உலகப்போரின்போது காணாமல்போன அவற்றை மாஸ்கோவின் புஷ்கின் அருங்காட்சியகத்தில் 1993இலிருந்து வைத்திருக்கிற ரஷ்யா, ரஷ்யாவின் அருங்காட்சியகங்களில் நாஸிப்படைகள் அழித்தவற்றுக்கு மாற்று என்றுகூறித் திருப்பித்தர மறுத்துவிட்டது. இந்நாள் மே 28 இதற்கு முன்னால் -மே 28, 2019 […] 1932 - நெதர்லாந்தில், கடலுக்கு நடுவில், அஃப்ஸ்லூடிஜிக் என்ற தடுப்பணை கட்டிமுடிக்கப்பட்டது. சுமார் கால் பங்கு நிலப்பரப்பைக் கடல்மட்டத்திற்கும் கீழான உயரத்தில் கொண்டுள்ள நெதர்லாந்து, உலகின் மிகத்தாழ்வான நாடுகளில் ஒன்றாகும். இதனால் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்கள், கி.பி.முதல் நூற்றாண்டில் செயற்கை மலைகளை உருவாக்கி, அவற்றின்மீது கிராமங்களை அமைத்துக்கொண்டனர். பின்னர், இவற்றுக்கிடையே சென்றுவர நீண்ட சுவர்களைக் கட்டினர். இந்தச் சுவர்கள் விவசாய நிலங்களுக்குள் கடல்நீர்வரத்தைத் தடுத்ததுடன், அதுவரை பெரும்பாலும் நீரில் மூழ்கி, பயன்படாமலிருந்த நிலங்களையும் பயன்படுத்த முடிந்ததால், எல்லாப்புறங்களிலும் இச்சுவர்களைக் கட்டினர். இவற்றைக் கட்டுவதற்கு நீரை வெளியேற்ற வேண்டியிருந்தது. காற்றாலைகளால் இயக்கப்படும் அமைப்புகளைக்கொண்டு நீரை வெளியேற்றியதால், ஏராளமான காற்றாலைகள் உருவாகி, நெதர்லாந்தே காற்றாலைகளின் நாடு என்று பெயர்பெற்றது. இப்பகுதியையொட்டிய, தென்கடல் என்னும், வடகடலின் குடா, மீன்பிடிக்கவும், வணிகத்திற்கும் உதவியாக இருந்தாலும், அடிக்கடி ஏற்பட்ட கடல் சீற்றங்கள், பாதுகாப்புச் சுவர்களைத் தகர்த்து, உயிர், பொருள் இழப்புகளை ஏற்படுத்திக்கொண்டேயிருந்தன. 1421இல் ஏற்பட்ட வெள்ளத்தில் 72 கிராமங்கள் மூழ்கி, சுமார் பத்தாயிரம்பேர் பலியாயினர். இவற்றிலிருந்து பாதுகாப்பதற்கு முயற்சிக்கப்பட்டாலும் போதிய தொழில்நுட்பங்கள் இல்லை. அதிகரித்த மக்கள்தொகைக்கு நிலத்தின் தேவையும் இருந்தநிலையில், கார்னலிஸ் லெலி என்ற கட்டிடப்பொறியாளர் இந்தத் தடுப்பணை, நான்கு இடங்களில் செயற்கை நிலப்பரப்புகளை உருவாக்குவது ஆகியவற்றுக்கான திட்டத்தை உருவாக்கினார். 1913இல் அவரே போக்குவரத்து, பொதுப்பணித்துறையின் அமைச்சரானாலும் பொருட்செலவுக்கு அஞ்சி மற்றவர்கள் இத்திட்டத்தை ஏற்கவில்லை. 1916இல் ஏற்பட்ட வெள்ளம், பேரழிவுகளை ஏற்படுத்தியதையடுத்து, 1918இல் தனிச்சட்டம் இயற்றப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. சிறுபகுதிகளைக் கட்டி, அந்த அனுபவத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட இதன் கட்டுமானம் பொதுவாக 1927-32 என்று குறிப்பிடப்படுகிறது. 32 கி.மீ. நீளமுள்ள தடுப்பணை கடலுக்கு நடுவில் கட்டிமுடிக்கப்பட்டதும், ஸூய்டர்ஸீ என்றழைக்கப்படும் இந்தக்குடா, நன்னீர் ஏரியாக மாற்றப்பட்டு, 2,318 ச.கி.மீ. புதிய நிலப்பரப்பும் உருவாக்கப்பட்டது. இதன்மீது சாலைப் போக்குவரத்தும் உள்ளது. இந்நாள் மே 29 இதற்கு முன்னால் -மே 29, 2019 […] 1964 - பாலஸ்தீன தேசிய அவையின் முதல் கூட்டம் கிழக்கு ஜெருசலேமில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்தான் பாலஸ்தீன விடுதலை இயக்கம்(பிஎல்ஓ) உருவாக்கப்பட்டது. பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள கனான் என்ற பகுதியில் யூதர்களுக்கான நாட்டைத் தோற்றுவிக்கும் நோக்கத்துடன் 1896இல் தியோடார் ஹெர்ஸல், ஸியோனிச அமைப்பைத் தோற்றுவித்தார். கனான் என்பது லவாண்ட் என்ற பகுதி என்று கருதப்படுகிறது. 13-14ஆம் நூற்றாண்டுக்கால இத்தாலிய வணிகர்கள் கிரீஸ், அனடோலியா, சிரியா-பாலஸ்தீனம், எகிப்து உள்ளிட்ட கீழை மத்தியத்தரைக்கடல் பகுதிகளை லவாண்ட்டே என்று குறிப்பிட்டுள்ளனர். பின்னாளில் எகிப்து, சிரியா-பாலஸ்தீனம் ஆகிய இஸ்லாமிய நாடுகளே இப்பெயரால் அழைக்கப்பட்டன. ஒட்டோமான் பேரரசின் வணிகத்தைக் கைப்பற்ற, லவாண்ட் கம்பெனி என்பதை இங்கிலாந்து தொடங்கியது குறிப்பிடத்தக்கது. முதல் உலகப்போரில் ஒட்டோமான் பேரரசிடமிருந்து, பாலஸ்தீனத்தைக் கைப்பற்றிய இங்கிலாந்து, அப்பகுதியில் யூதர்களுக்கான தனிநாடு உருவாக்கித்தரப்படும் என்று 1917இல் பால்ஃபோர் பிரகடனத்தை வெளியிட்டது. அதாவது, இங்கிலாந்து தனக்குத் தொடர்பில்லாத அந்நிய நிலத்தில், மற்றொரு இனத்தவருக்குத் தனிநாடு உருவாக்கித்தருவதாக அறிவித்தது. 1947இல் பாலஸ்தீனத்துக்கான ஐநா பிரிவினைத் திட்டம்(இத்தொடரில் 2018 நவம்பர் 29இல் இடம்பெற்றுள்ளது) நிறைவேற்றப்பட்டு, 1948இல் இஸ்ரேல் என்றொரு புதிய நாடு உலக வரைபடத்திலும் இடம்பெற்றுவிட்டது. 1948இல் நடைபெற்ற அரபு-இஸ்ரேலியப் போர்தொடங்கி தொடர்ந்த போராட்டங்களின் அடுத்த கட்டமாகவே, தங்கள் தாய்மண்ணை மீட்டெடுக்க பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைத் தோற்றுவித்தனர். இதைத் தொடர்ந்து, பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரித்த அரபு லீக், பிஎல்ஓவை அதன் பிரதிநிதியாக ஏற்றது. 1969இல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட யாசர் அராஃபத், 1988இல் விடுதலைபெற்ற பாலஸ்தீன நாட்டைப் பிரகடனம் செய்தார். 1993 ஆஸ்லோ உடன்படிக்கையைத் தொடர்ந்து, பாலஸ்தீனப் பகுதிகளை நிர்வகிக்க, பாலஸ்தீன தேசிய ஆணையம் உருவாக்கப்பட்டது. 1967இல் நடைபெற்ற ஆறுநாள் போரில் இஸ்ரேல் ஆக்கிரமித்த பல பகுதிகளை இன்னும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற நிலையில், தொடரும் போராட்டங்களுக்கிடையே, சட்டப்பூர்வ நாடாகத் தொடரும் பாலஸ்தீனம், 137 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்நாள் மே 30 இதற்கு முன்னால் -மே 30, 2019 1868 - அமெரிக்காவில் ‘அலங்கார நாள்(டெக்கரேஷன் டே)’முதன்முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டது. இதுவே தற்போது நினைவுநாள்(மெமோரியல் டே)’ என்றழைக்கப்படுகிற, போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்யும் நாளாகும். ராணுவ வீரர்களின் கல்லறைகளை அலங்கரித்து மரியாதை செய்ததால் அப்போது இப்பெயர்ஏற்பட்டது. அமெரிக்காவின் அப்பலாச்சிய மலைத்தொடர் பகுதியில்வசித்த மக்கள், அருகாமை காலத்தில் இறந்தவர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் அலங்கார நாள் நடத்தும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். வெகுதொலைவிலுள்ள உறவினர்களும் வந்து பங்கேற்கும் இந்நிகழ்ச்சி,உறவுகளைப் புதுப்பித்துக்கொள்ளும் விருந்தாக நடைபெற்றிருக்கிறது. இது அமெரிக்காவின் நினைவுநாள் ஆனதற்கான தொடக்கம்குறித்த உறுதியான தகவல்கள் இல்லை. 1861-65இல் நடைபெற்ற அமெரிக்க உள்நாட்டுப்போரில் இறந்த வீரர்களுக்கான முதல் இடுகாடு வர்ஜீனியாவில் அமைக்கப்பட்டது. இதில், 1861 ஜூன் 3இல்அலங்கார மரியாதை செய்யப்பட்டதாகத் தகவல்கள் உள்ளன. கெட்டிஸ்பர்க் போரில் இறந்த வீரர்கள் உட்பட, 3512 பேரின் கல்லறைகள்கொண்ட, கெட்டிஸ்பர்க் தேசிய இடுகாட்டில் 1863இல் அலங்காரமரியாதை செய்யப்பட்டுள்ளது. 1865 ஏப்ரலில் ஆப்ரகாம் லிங்கன்படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நினைவுநாள் கடைப்பிடிப்பது பரவலானது. உள்நாட்டுப்போரில் பலியான ஆறு லட்சத்துக்கும்மேற்பட்ட வீரர்களின் கல்லறைகளைப் பராமரிப்பதற்காக, தேசிய இடுகாட்டுத்துறை அவ்வாண்டில் உருவாக்கப்பட்டது. அவ்வாண்டின்மே 1இல், அப்போதுதான் அடிமை முறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தசுமார் பத்தாயிரம் ஆப்ரிக்க-அமெரிக்கர்கள், பேரணியாகச் சென்று, உள்நாட்டுப்போரில் பலியான 257 வீரர்களின் கல்லறையில் மரியாதைசெலுத்தினர். 1868 மே 30இல் 27 மாநிலங்கள் இந்த மரியாதையைச் செய்ததைத்தொடர்ந்து, அமெரிக்கா முழுமையும் ஏற்கப்பட்டு,1970வரைஇந்நாளே கடைப்பிடிக்கப்பட்டுவந்தது. 1882இல் நினைவுநாள் என்றபெயர் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டாலும், இரண்டாம் உலகப்போர்வரை அலங்கார நாள் என்பதே தொடர்ந்தது. 1966இலிருந்து தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்ட இது, 1968இல் இயற்றப்பட்டசீரான திங்கட்கிழமை விடுமுறைச்சட்டத்தைத் தொடர்ந்து,1971இலிருந்துமே மாதத்தின் கடைசித் திங்கட்கிழமைக்கு மாற்றப்பட்டது. இதுதவிர, ஆயுதப்படைகள் நாள், முன்னாள் படைவீரர்கள் நாள் ஆகியவையும் அமெரிக்காவில் கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்நாள் இதற்கு முன்னால் -மே 31, 2019 […] 1669 - நாட்குறிப்புக்காகப் புகழ்பெற்ற சாமுவேல் பெப்பிஸ், தன் நாட்குறிப்பை இந்நாளுடன் முடித்துக்கொண்டார். ஆங்கிலேயக் கடற்படையின் நிர்வாகியாகவும், இங்கிலாந்தின் பாராளுமன்ற உறுப்பினராகவுமிருந்த பெப்பிஸ், 1660 ஜனவரி 1இலிருந்து, தொடர்ச்சியாக நாள்தோறும் நாட்குறிப்பு எழுதியிருந்தார். 1825இல் பதிப்பிக்கப்பட்ட இந்நாட்குறிப்பு, 1660-88 காலத்தில் நடைபெற்ற ஆங்கிலேய முடியாட்சியின் மறுசீரமைப்புகுறித்த தகவல்களுக்கான முக்கிய ஆதாரங்களுள் ஒன்றாக விளங்குகிறது. லண்டன் பெருந்தீ, லண்டன் பெரும் கொள்ளை நோய், இரண்டாம் டச்சுப்போர் முதலான நிகழ்வுகள்குறித்த நேரடித் தகவல்களை இவர் பதிவு செய்திருந்தார். ஜான் எவலின், 1640இல் மாணவப்பருத்திலிருந்து, 1706இல் இறக்கும் வரை எழுதிய நாட்குறிப்பு, 1818இலேயே பதிப்பிக்கப்பட்டாலும், பெப்பிஸ் அளவுக்கு விபரமான தகவல்கள் இல்லாததால் அதிகம் புகழ்பெறவில்லை. டயரி என்ற சொல் டயரியம் என்ற லத்தீன் சொல்லிலிருந்து உருவானது. 2ஆம் நூற்றாண்டில் ரோமப் பேரரசர் மார்க்கஸ் ஆரிலியஸ், மெடிட்டேஷன்ஸ்(எனக்கு எழுதியவை) என்ற பெயரில் எழுதியிருந்த குறிப்புகளே நாட்குறிப்புக்கான மிகமூத்த உதாரணமாகும். 9ஆம் நூற்றாண்டில் லீ ஆவ், தென்சீனப் பயணம்குறித்து எழுதிய குறிப்புகளும், ஜப்பானியப் பட்டத்தரசி டெய்ஷியின் தோழியான செய் ஷோனகான் 990-1002இல் எழுதிய ‘தலையணைப் புத்தகங்கள்’ என்பதும் நாட்குறிப்புக்கான முன்னோடிகளாகக் குறிப்பிடப்படுகின்றன. 11ஆம் நூற்றாண்டில் அகமத் இபின்-பன்னா எழுதிய பயணக்குறிப்புகளே, நாள் வரிசையில், நவீன நாட்குறிப்பைப் போன்றிருந்தன. ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தின்போது, நிகழ்வுகளையும், அவைகுறித்த தங்கள் உணர்வுகளையும் வெளியிடும் நோக்கமின்றி பலரும் எழுதி வைத்தனர். 1605இல் ஆங்கிலேய நாடகாசிரியர் பென் ஜான்சன், தனது நகைச்சுவை நாடகமான வால்ப்போன் என்பதில்தான், அன்றாட நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்ட நூலிற்கு டயரி என்ற பெயரைப் பயன்படுத்தினார். இப்போதிருக்கும், நாட்கள் அச்சிடப்பட்ட நாட்குறிப்பை, முதன்முதலில் லெட்ஸ் ஃபிலோஃபேக்ஸ் குழுமம் 1812இல் வெளியிட்டது. நாட்குறிப்புக்கான இணையதளம் 1994இல் உருவாகியது. ஆனி ஃப்ராங்க், சாமுவேல் பெப்பிஸ், சார்லஸ் டார்வின், மேரி கியூரி, மார்க் ட்வைன் உள்ளிட்டோரின் நாட்குறிப்புகள் மிகப்புகழ்பெற்றவை. இந்நாள் ஜுன் 01 இதற்கு முன்னால் -ஜூன் 1, 2019 1495 - ஸ்காட்ச் விஸ்கி பற்றிய முதல் எழுதப்பட்ட குறிப்பு, ஜான் கோர் என்ற துறவியின் பெயருடன் கிடைத்தது. ஸ்காட்லாந்து அரசு கருவூலத்தின் பதிவேடுகளில், ‘வாழ்க்கையின் நீர்’ தயாரிப்பதற்காக எட்டு ‘போல்’ மால்ட், அரசரின் உத்தரவுப்படி தரப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் அரசு கருவூலத்தில் பதிவேடுகள் 1314இலிருந்தே பராமரிக்கப்பட்டு, தணிக்கை செய்யப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. ‘போல்’ என்பது சுமார் 211 லிட்டருக்குச் சமமான, அக்காலத்திய ஸ்காட்லாந்து அளவை. மால்ட் என்பது மால்ட்டட்(முளைகட்டி, உரிய முறையில் உலரவைக்கப்பட்ட) பார்லியைக் குறிக்கிறது. கி.மு.2000களிலேயே மெசபடோமியாவில் வடித்தெடுக்கும் முறை இருந்ததாகக் கூறப்பட்டாலும், அதற்கு ஆதாரங்கள் இல்லை. கி.மு.முதல் நூற்றாண்டில் கிரேக்கர்கள் வடித்தெடுத்தலைச் செய்ததற்கு ஆதாரங்கள் இருந்தாலும், வடித்தெடுக்கப்பட்டவை நறுமணப்பொருட்களேதவிர மது அல்ல. 13ஆம் நூற்றாண்டில் இத்தாலியில் ஒயினிலிருந்து மது வடித்தெடுக்கப்பட்டுள்ளது. இதனை, கிறித்தவத் துறவிகள்தான் ஸ்காட்லாந்துக்கு அறிமுகப்படுத்தினார்கள் என்று கூறப்பட்டாலும், உறுதியான ஆதாரங்கள் இல்லை. அயர்லாந்து, ஸ்காட்லாந்தில் புழக்கத்திலிருந்து கேயலிக் மொழியில் உஸ்ஜி பீத்தா(வாழ்க்கையின் நீர்) என்று அழைக்கப்பட்ட இது உஸ்கிபாக் என்றழைக்கப்பட்டு, சுருக்கமாக உஸ்கி என்று குறிப்பிடப்பட்டதிலிருந்து விஸ்கியானது. 19ஆம் நூற்றாண்டில் ஸ்காட்லாந்துக்கு வெளியே பரவியதைத் தொடர்ந்து, பிற இடங்களில் தயாரிக்கப்பட்டவற்றிலிருந்து வேறுபடுத்திக்காட்ட ஸ்காட்ச் என்ற அடைமொழி சேர்க்கப்பட்டது. ஸ்காட்லாந்தின் பொருட்களைக் குறிப்பிட ஸ்காட்ச் என்ற உரிச்சொல் பயன்படுத்தப்பட்டாலும், மனிதர்களை ஸ்காட்ச் என்று குறிப்பிடுவது இழிவாகக் கருதப்படுகிறது. அதனால் மனிதர்களுக்கு ஸ்காட்டிஷ், ஸ்காட்ஸ் ஆகிய சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. மால்ட்டட் பார்லி மட்டுமின்றி பிற தானியங்களிலிருந்தும் தயாரிக்கப்பட்டாலும், ஐக்கிய முடியரசு(இங்கிலாந்து) இயற்றியுள்ள சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முறையின்படிதான் ஸ்காட்ச் விஸ்கி தயாரிக்கப்படவேண்டும். ஓக் மரப்பீப்பாய்களில் குறைந்தது மூன்றாண்டுகளுக்காவது புளிக்கவைக்கப்பட்டிருப்பது கட்டாயம் என்பதுடன், தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட மிக இளைய(புதிய) விஸ்கியின் வயது உள்ளிட்ட விபரங்களும் விபரச்சீட்டில்(லேபல்) குறிப்பிடப்படுவது சட்டப்படி கட்டாயமாகும். (பட்டர்ஸ்காட்ச் என்பதற்கும் ஸ்காட்லாந்துக்கும் தொடர்பில்லை. விபரமாக இன்னொரு நாள்!) இந்நாள் ஜுன் 02 இதற்கு முன்னால் -ஜூன் 2, 2019 […] 1774 - ‘சகித்துக்கொள்ள முடியாத சட்டங்கள்’ அமெரிக்க வரலாற்றில் குறிப்பிடப்படுகிற சட்டங்களுள் ஒன்றான ‘படை தங்கல்(க்வார்ட்டரிங்) சட்டம்’ இங்கிலாந்துப் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. ஏழாண்டுப்போரின் முடிவில் இங்கிலாந்தின் நிதிநிலை மிகமோசமாக இருந்தது. ஏழாண்டுப்போரின் ஒருபகுதியாகக் குறிப்பிடப்பட்டாலும், வடஅமெரிக்காவில் நடைபெற்ற பிரெஞ்சு, இந்தியப் போர் 1954இலேயே தொடங்கிவிட்டது. இங்கிலாந்துக் குடியேற்றங்களில் சுமார் 20 லட்சம்பேர் இருந்த நிலையில், வெறும் அறுபதாயிரமாக இருந்த பிரெஞ்சுக்காரர்கள், செவ்விந்தியர்களையும் கூட்டுச் சேர்த்துக்கொண்டதால் இப்பெயர் ஏற்பட்டது. நிதிநெருக்கடியிலிருந்த இங்கிலாந்து, குடியேற்றங்களின்மீது வரிவிதித்ததற்கு ஏற்பட்ட எதிர்ப்புகளில் ‘விடுதலையின் மைந்தர்கள்’ என்ற ரகசிய அமைப்பு குறிப்பிடத்தக்கது. ‘பாஸ்டன் தேனீர் விருந்து’ போராட்டம் நடைபெற இவ்வமைப்பு முக்கியக் காரணமாக இருந்ததால், பாஸ்டன் இருந்த மாசாசூசெட்ஸ் குடியேற்றத்திலிருந்தவர்களை ஒடுக்குவதன்மூலம், மற்ற குடியேற்றங்களையும் அச்சப்படுத்தி அடக்கிவைப்பதற்காக இயற்றப்பட்டவையே இச்சட்டங்கள். இவற்றில் ‘பாஸ்டன் துறைமுகச் சட்டம்’, பாஸ்டன் தேனீர் விருந்தில் அழிக்கப்பட்ட தேயிலைக்கான விலையைச் செலுத்தும்வரை, பாஸ்டன் துறைமுகத்தை மூடுவதாக அறிவித்தது. ‘மாசாசூசெட்ஸ் அரசுச் சட்டம்’, அக்குடியேற்றத்தின் அதிகாரங்களனைத்தையும்(நிர்வாக அவை கூடுவது உட்பட) பறித்தது. ‘நீதி நிர்வாகச் சட்டம்’, போராட்டக்காரர்களை, (உலகம் முழுவதும் பரவியிருந்த) இங்கிலாந்துப் பேரரசின் எந்த நாட்டிலும் விசாரிக்க வழிசெய்தது. இச்சட்டத்தை ஜார்ஜ் வாஷிங்டன் படுகொலைச் சட்டம் என்று வருணித்தார். இறுதியாக, அமெரிக்காவிலிருந்த இங்கிலாந்து வீரர்களுக்குப் போதுமான தங்குமிடங்கள் இல்லாவிட்டால், எங்கு வேண்டுமானாலும்(பொதுமக்களின் வீடுகளில்கூட!) தங்கிக்கொள்ள அதிகாரமளித்த ‘க்வார்ட்டரிங் சட்டம்’, அனைத்து மக்களையும் எதிர்க்கச்செய்தது. ஒருபுறம், போராடாதவர்களையும் இச்சட்டங்கள் பழிவாங்கியதாக மக்கள் வருத்தமுற்றனர். மறுபுறம், அனைத்துக் குடியேற்றங்களும் அச்சமுற்று கட்டுப்பாட்டிலிருக்கும் என்று இங்கிலாந்து எதிர்பார்த்ததற்கு மாறாக, எல்லாக் குடியேற்றங்களுக்கும் போராட்டம் பரவியது. போராட்டத்தை ஒருங்கிணைக்க 1774 செப்டம்பரில், (அமெரிக்க) கண்டத்தின் முதல் நாடாளுமன்றம் கூட்டப்பட்டது. 1775 ஏப்ரலில் அமெரிக்க புரட்சிப் போராக வெடித்ததுடன், 1776 ஜூலையில், அமெரிக்காவின் ஐக்கிய மாநிலங்கள் என்ற நாடாக விடுதலை பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நாள் ஜுன் 03 இதற்கு முன்னால் -ஜூன் 3, 2019 […] 1924 - உலகின் முதல் வனத்தன்மைப் பகுதியாக(வைல்டர்னஸ் ஏரியா), அமெரிக்காவின் நியூமெக்சிகோ மாநிலத்தில் உள்ள கிலா அறிவிக்கப்பட்டது. வனத்தன்மைப் பகுதி என்பது, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, வன உயிரியல் பூங்கா முதலானவற்றிலிருந்து மாறுபட்டு, அவற்றைவிட அதிகம் பாதுகாக்கப்பட்டதாக உள்ளது. இவ்வாறு அறிவிக்கப்பட்ட பகுதிகளில் அறிவியல் ஆய்வுகள்தவிர வேறு எந்தக் காரணத்திற்காகவும் மனித நடமாட்டம் அனுமதிக்கப்படுவதில்லை. அவ்வாறு ஆய்வுக்குச் செல்பவர்கள்கூட, இயந்திரம் பொருத்தப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்த அனுமதியில்லை. குதிரை வண்டிகள் போன்றவற்றைத்தான் பயன்படுத்தவேண்டும். இயற்கையான உயிரியல் சுழற்சி பாதிக்கப்படாத பகுதிகள்மட்டுமே இவ்வாறு அறிவிக்கத் தகுதியானவை என்று உலகம் முழுவதும் இவற்றைக் கண்காணிக்கும் வைல்ட் அமைப்பு கூறுகிறது. இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியம் (ஐயூசிஎன்) 1ஏ, 1பி என்று இரு பிரிவுகளில் இதை வரையறுக்கிறது. மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும், செயற்கையான மாற்றங்களால் பாதிக்கப்படாமல் அதன் இயல்புகள் நீடித்திருப்பதாகவும், அவற்றைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் ஏற்பாடுகள் உள்ளதாகவும் வனத்தன்மைப் பகுதிகள் இருக்க வேண்டும் என்று விதி 1பி வரையறுக்கிறது. உலகில் மனிதன் நுழையவே நுழையாத வனம் என்று எதுவுமே இல்லை என்றே இத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றன. இப்போது இல்லையெனினும், வரலாற்றின் ஏதோவொரு காலத்தில்பழங்குடியினராவது நடமாடியவையாகவே மிகப்பெரும்பாலான வனப்பகுதிகள் விளங்குகின்றன. மனித நடமாட்டத்தைத் தடுப்பதன்மூலம் காட்டின் உயிர்ச்சூழலையும், விலங்குகளின் இடம்பெயர்வையும் தடுத்து, வனத்தின் இயற்கையான தன்மை பாதுகாக்கப்படுகிறது. இவ்வாறு வகைப்படுத்தப்படும் பகுதிசட்டப்பூர்வமாகப் பாதுகாக்கப்படவேண்டும் என்று கூறும் வைல்ட் அமைப்பின் விதியின்படி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகள் வனத்தன்மைப் பகுதிகளைப் பராமரிக்கின்றன. கிலா ஆறு உற்பத்தியாகுமிடத்தை மாசுபடாமல் பாதுகாப்பதற்காக, கிலா தேசியப்பூங்காவிற்கு உட்பட்ட 5.58 லட்சம் ஏக்கர் வனம், வனத்தன்மைப் பகுதியாக 1924 ஜூன் 3இல் அறிவிக்கப்பட்டன. 64 கி.மீ. நீளமும், 43 கி.மீ. அகலமும்கொண்ட இப்பகுதிக்குள் சாலை அமைப்பது உட்பட எந்த நடவடிக்கைக்கும் அனுமதியில்லை. இந்நாள் ஜுன் 04 இதற்கு முன்னால் -ஜூன் 4, 2019 […] 1940 - இரண்டாம் உலகப்போரில் ஆப்பரேஷன் டைனமோ என்று பெயரிடப்பட்ட, டன்க்கிர்க் வெளியேற்ற நடவடிக்கை நிறைவுற்றது. பிரான்சின் வடபகுதியில் பெல்ஜியத்திற்கு அருகிலுள்ள துறைமுக நகரமான டன்க்கிர்க்கில், ஜெர்மன் படைகளால் சுற்றிவளைக்கப்பட்ட நேசநாடுகளின் படைகளைக் கப்பல்கள்மூலம் காப்பாற்றியதே டைனமோ நடவடிக்கை. முதல் உலகப்போரின்போது, பிரான்ஸ் மண்ணில் நடைபெற்ற போர்களால் ஏற்பட்ட பாதிப்புகள் மீண்டும் ஏற்பட்டுவிடாமலிருக்க, ஜெர்மன்-பிரெஞ்ச் எல்லையில், மேஜிநாட் கோடு என்ற பெயரில் ஏராளமான சிறிய கோட்டைகள் கொண்ட அரண்களை பிரான்ஸ் 1930களில் அமைத்தது. மேஜினாட் கோட்டின் வடபுறம் ஆர்டென் என்னும் அடர்வனம் இருந்ததால், இவற்றைத்தாண்டி அப்பகுதியில் பெரிய தாக்குதல் எதையும் நடத்த முடியாது என்று பிரான்ஸ் கருதியது. ஆனால், மே 10இல் நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகியவற்றுக்குள் நுழைந்த ஜெர்மன் ராணுவம், ஆர்டென் வனத்திற்குள் புகுந்து, மியூஸ் ஆற்றில் தற்காலிகப் பாலங்களை அமைத்து முன்னேறியதைத் தடுக்க முடியவில்லை. அவசரத்திற்குப் படைகள் எதையும் வைத்துக்கொள்ளாமல், அனைத்துப் படைகளையும் பல்வேறு பகுதிகளுக்கு பிரான்ஸ் அனுப்பிவிட்டதால், இப்பகுதியில் மாட்டிக்கொண்ட படையினருக்கு உடனடியாக உதவுவதற்குப் படைகள் எதுவுமில்லை. இங்கிலாந்துப் படையின் மிகமுக்கியப் பகுதி ஜெர்மனியிடம் பிடிபட்டுவிடுமளவுக்கு நிலவிய இச்சூழ்நிலையை, மிகப்பெரிய ராணுவப் பேரழிவு என்று சர்ச்சில் குறிப்பிட்டார். டன்கிர்க்கின் நிலப்பரப்பு கவச வண்டிகளுக்கு ஏற்றதாக இல்லாமற்போனதாலும், வீரர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்டவை வரவேண்டியிருந்ததாலும், மே 23 அன்று ஜெர்மன் படைகள் முன்னேறுவதை நிறுத்த உத்தரவிடப்பட்டது. இதைப் பயன்படுத்திக்கொண்டு, 46 போர்க்கப்பல்கள், ஏராளமான வணிகக் கப்பல்கள் உட்பட 861 கப்பல்களில், மே 27இலிருந்து 9 நாட்களில் 3,38,226 வீரர்கள் காப்பாற்றப்பட்டனர். கவச வண்டிகள், வாகனங்கள், பிற கருவிகள் ஆகிய அனைத்தையும் நேசநாட்டுப் படைகள் டன்கிர்க்கிலேயே கைவிட்டுவிட நேர்ந்தது. ராணுவத்தை முன்னேறாமல் நிறுத்திய ஹிட்லரின் உத்தரவு, ஹிட்லர் செய்த மிகப்பெரிய தவறு என்றும், இந்நிகழ்வு இரண்டாம் உலகப்போரின் மிகமுக்கியத் திருப்புமுனைகளில் ஒன்று என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்நாள் ஜுன் 05 இதற்கு முன்னால் -ஜூன் 5, 2019 […] 1967 - ஆறுநாள் போர் என்று குறிப்பிடப்படும் மூன்றாம் அரபு-இஸ்ரேலியப் போர் தொடங்கியது. 1947-49இல் நடைபெற்ற பாலஸ்தீனியப் போரின் ஒருபகுதியாக 1948இல் நடைபெற்றது முதல் அரபு-இஸ்ரேலியப் போர் என்றும், 1956இல் ஏற்பட்ட சூயஸ் நெருக்கடி என்னும் போர் இரண்டாம் அரபு-இஸ்ரேலியப் போர் என்றும் குறிப்பிடப்படுகின்றன. சூயஸ் நெருக்கடிக்குப்பின் 1957இல் டிரான் நீரிணையில் இஸ்ரேலியக் கப்பல்கள் பயணிக்க அனுமதிக்கப்பட்டன. ஜோர்டானின் ஒரே துறைமுகமான அக்காபா, இஸ்ரேலின் ஒரே துறைமுகமான எலியட் ஆகியவற்றுக்கு, டிரான் நீரிணை மிகமுக்கியமான நீர்வழியாகும். இந்த நீரிணையை மூடுவது போரைத் தூண்டுவதாகும் என்று 1957இலேயே இஸ்ரேல் கூறியிருந்தது. 1967 மே 22இல் இரானிலிருந்து இஸ்ரேலுக்கு வரும் எண்ணெய்க் கப்பல்களை அனுமதிக்க எகிப்து மறுத்ததைத்தொடர்ந்து, தங்களுக்கு இடையூறான தடையை முறியடிப்பதற்கான தாக்குதல் என்ற பெயரில் ஜூன் 5இல் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது. அரபு அணியின் மொத்தப்படைகள், இஸ்ரேலியப் படைகளைப்போல் இரண்டு மடங்கிற்கும் அதிகம் என்றாலும், தெளிவான திட்டமிடுதலால் அவற்றை மிக எளிதில் தோற்கடித்தது இஸ்ரேல். அன்றைய அரபுநாடுகளின் விமானப்படை விமானங்கள் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு தாக்குதல்களை மட்டுமே நடத்தும் திறன் பெற்றிருந்தன. போருக்கு முன்பாக, தாக்குதல் நடத்தித் திரும்பிவரும் விமானங்களை உடனடியாக மறு தாக்குதலுக்குத் தயார்ப்படுத்துவதற்கு மிகப்பெரிய பயிற்சியை அளித்ததன்மூலம் இஸ்ரேலிய விமானங்கள் ஒரு நாளில் 4 தாக்குதல்களை நடத்தின. அரபு நாடுகளிலேயே மிகச் சக்திவாய்ந்ததாக இருந்த எகிப்தின் விமானப்படை கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிந்தது. வெறும் ஆயிரம் வீரர்களை பலிகொடுத்து, எதிரணியின் சுமார் 20 ஆயிரம்பேரை அழித்தது இஸ்ரேல். 3 நாட்களில்(ஜூன்-8) எகிப்தும், ஜோர்டானும், நான்காம் நாளில்(ஜூன்-9) சிரியாவும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுவிட்டன. ஜூன்-11இல் போர்நிறுத்தம் கையெழுத்திடப்பட்டது. இப்போரின்மூலம் காஸா பகுதி, சினாய் தீபகற்பம் ஆகியவற்றை எகிப்திடமிருந்தும், கிழக்கு ஜெருசலேம் உட்பட மேற்குக்கரைப் பகுதியை ஜோர்டானிடமிருந்தும், கோலான் குன்றுகளை சிரியாவிடமிருந்தும் இஸ்ரேல் கைப்பற்றிக்கொண்டது. -அறிவுக்கடல் இந்நாள் ஜுன் 06 இதற்கு முன்னால் -ஜூன் 6, 2019 1523 - ஸ்வீடனின் அரசராக கஸ்டவ் வாசா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நாளே ஸ்வீடனின் தேசிய நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. பழைய கற்காலத்திலேயே, இப்பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. ஸ்வீடன் பற்றிய முதல் குறிப்பு, கி.பி.98இல் டாசிட்டஸ் எழுதிய ஜெர்மானியாவில் காணப்படுகிறது. ஸ்வியோன்ஸ் என்ற சக்திவாய்ந்த பழங்குடியினர் வசித்ததாக அவர் குறிப்பிடுகிறார். சக்திவாய்ந்த என்றால் ஆயுதங்களில் மட்டுமின்றி, நீண்ட பயணங்களை மேற்கொள்ள உதவும் சிறந்த கப்பல்களையும் கொண்டிருந்தனர். பின்னாளில் கடற்பயணங்களில் சிறந்து விளங்கிய வைக்கிங்குகள், ஸ்வீடனையும் உள்ளடக்கிய ஸ்காண்டிநேவியப் பகுதியைச் சேர்ந்தவர்கள்தான். இப்பகுதியில் பேசப்பட்ட தொடக்ககால நோர்ஸ் மொழியிலிருந்தே ஸ்வீடிய மொழி உருவானது. கி.பி.8இலிருந்து 11வரையான நூற்றாண்டுகள் ஸ்வீடனில் வைக்கிங் காலமாக விளங்கியது. வடக்கில் பால்டிக் பகுதியைநோக்கி விரிவாக்கம்செய்து வந்துகொண்டிருந்த ஜெர்மானியர்களைத் தடுக்கும் நோக்கில் டென்மார்க், நார்வே, ஸ்வீடன் இணைந்த கல்மார் ஒன்றியம் 1397இல் உருவானது. ஸ்வீடன், நார்வே ஆகியவற்றின் அரசராக இருந்த ஆறாம் ஹாக்கோன், டென்மார்க் அரசரின் மகளான மார்க்கரெட்டை 1363இல் மணந்தார். மார்க்கரெட் முயற்சியில்தான் கல்மார் ஒன்றியம் உருவானது. கல்மார் ஒன்றியத்தை வலுவான முடியரசாக உருவாக்க அதன் அரசர்கள் முயற்சித்தாலும் டென்மார்க், ஸ்வீடன் நாடுகளின் பிரபுக்கள் தங்கள் அதிகாரங்களை விடத் தயாராக இல்லை. 1520இல் இரண்டாம் கிறிஸ்டியன் அரசரானதும், ஒன்றியத்துக்கு எதிரான 100 பேருக்கு மரணதண்டனை வழங்கப்பட்ட ஸ்டாக்ஹோம் இரத்தக்களரி அரங்கேறியது. இதைத் தொடர்ந்து, 1521இலிருந்து நடைபெற்ற விடுதலைப்போரில் ஸ்டாக்ஹோம் கைப்பற்றப்பட்டதும், ஸ்வீடன் விடுதலை பெற்றதாக அறிவிக்கப்பட்டு, தளபதியான கஸ்டவ் வாசா அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூன் 6 ஸ்வீடனின் தேசிய நாளாக 1983இல் அறிவிக்கப்பட்டது. டச்சு மொழியிலிருந்து வந்ததாகக் கூறப்படும் ஸ்வீடனின் பெயர், ஆங்கிலத்தில், ஸ்வியோன்ஸ் என்பதிலிருந்து உருவான, ஸ்வீட்ஸின் மக்கள் என்ற பொருள்கொண்ட ஸ்வீயோபியோட் என்றும், பின்னர் ஸ்வீட்லேண்ட் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் என்ற பெயர் 17ஆம் நூற்றாண்டில்தான் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. -அறிவுக்கடல் இந்நாள் இதற்கு முன்னால் -ஜூன் 7, 2019 […] 1494 - புதிய உலகத்தை போர்ச்சுகீசியப் பேரரசும், ஸ்பெயினின் கேஸ்டைல் முடியரசும் பங்கிட்டுக்கொண்ட டோர்டசில்லாஸ் உடன்படிக்கை உருவானது. ஐரோப்பாவுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட நிலப்பகுதிகளைத்தான் (அமெரிக்கக் கண்டங்கள்) புதிய உலகம் என்று அழைத்து, இரு நாடுகளும் தங்களுக்குள் பங்குபிரித்தன. 1470இல் இத்தாலிய வானவியலாளர் டோஸ்கேனல்லி, மேற்கு நோக்கிப் பயணித்தால் இந்தியாவை அடைவது எளிதாக இருக்கும் என்று கூறினார். அதன்படி, ‘பெருங்கடல் கடல்’ என்றழைக்கப்பட்ட அட்லாண்ட்டிக் வழியே பயணித்து, ‘ஓரியண்ட்’ என்றழைக்கப்பட்ட கீழை நாடுகளை அடையும் கொலம்பசின் திட்டத்தை, போர்ச்சுகீசின் இரண்டாம் ஜான் அரசர் ஏற்கவில்லை. 1488இல் பார்த்தலேமு டயஸ் நன்னம்பிக்கை முனையை அடைந்தது இந்தியாவை அடையும் பயணத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக அமைந்தது. இதனால், கேஸ்டைல் அரசி இரண்டாம் எலிசபெத், ஆரகானின் அரசர் இரண்டாம் ஃபெர்டினாண்ட் ஆகியோருடன் 1492இல் சாண்ட்டாஃபி சரணாகதிகள் ஒப்பந்தத்தைச் செய்துகொண்டு பயணித்த கொலம்பஸ், முதல் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும்போது முதலில் போர்ச்சுகல்லுக்கு வந்து இரண்டாம் ஜான் அரசரிடம் தான் கண்டுபிடித்த புதிய நிலப்பரப்புகளைப்பற்றித் தெரிவித்தார். உடனே ஜான், 1479இல் ஏற்பட்ட ஆல்காகோவாஸ் ஒப்பந்தத்தின்படி கேனரி தீவுகளுக்குத் தெற்கே கண்டுபிடிக்கப்படும் அனைத்து நிலப்பரப்புகளும் போர்ச்சுகல்லுக்குத்தான் சொந்தம் என்று எச்சரித்து அனைத்து கத்தோலிக்க அரசர்களுக்கும் கடிதம் அனுப்பினார். அட்லாண்ட்டிக் கடலில் போர்ச்சுகல்லே பலம்வாய்ந்த நாடாக இருந்ததால், பிரச்சனையை சுமுகமாக முடிக்க மற்ற நாடுகள் போப்பை நாடின. அசோரஸ் தீவுகள் அல்லது வெர்டே முனைக்கு மேற்கில் 100 லீக் வரையுள்ள அனைத்தும் கேஸ்டைலுக்குச் சொந்தம் என்னும் இண்ட்டர் கேட்டரா உத்தரவை 1493இல் போப் பிறப்பித்தார். (லீக் என்பது பழங்கால அளவை. ஒரு மனிதன் ஒரு மணி நேரத்தில் நடக்கும் தொலைவு!) இதில் உடன்பாடில்லாத ஜான், மற்ற அரசர்களுடன் நேரடியாகப் பேசி, 270 லீக்வரை என்று மாற்றியமைத்ததே இந்த டோர்டசில்லாஸ் உடன்படிக்கை. தெளிவற்ற வரையறை என்று இருதரப்புக்குமே தெரிந்திருந்தபோதும், மற்றவர் ஏமாந்ததாக நம்பினர்! இந்தக் கோட்டிலிருந்து எதுவரை என்பதற்கான ‘எதிர்க்கோடு’, 1529இல் ஸரகோஸா ஒப்பந்தத்தில் வரையறுக்கப்பட்டது. இந்நாள் ஜுன் 09 இதற்கு முன்னால் -ஜூன் 9, 2019 […] கி.மு.411 - கிரேக்கத்தின் ஒரு நகர நாடான ஏதென்சில் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பில், மக்களாட்சி அகற்றப்பட்டு, ‘நானூறு(தி ஃபோர் ஹண்ட்ரட்)’ என்றழைக்கப்பட்ட, சிலவராட்சி(ஆலிகார்ச்சி) உருவானது. கிரேக்கத்தின் நகர ஆட்சிகள் போலிஸ் என்றழைக்கப்பட்டன. ஏதென்ஸ், அருகாமையிலிருந்த ஆட்டிகா பகுதி ஆகியவை இணைந்த போலிசில் கி.மு.ஆறாம் நூற்றாண்டிலேயே மக்களாட்சி ஏற்பட்டுவிட்டது. உலகின் முதல் மக்களாட்சி இதுதான். இதைத் தொடர்ந்து பின்னாளில் மற்ற போலிஸ்களிலும் மக்களாட்சி ஏற்பட்டாலும், ஏதென்சின் மக்களாட்சி அளவுக்கு அவைபற்றிய தெளிவான தகவல்கள் இல்லை. மக்களாட்சிக்கு முன்பு ஏதென்ஸ், ஆர்ச்சான்கள்(ஆட்சியாளர்) அல்லது மாஜிஸ்ட்ரேட்டுகளால் ஆளப்பட்டது. தொழிலாளர்களை அடிமையாக வைத்திருந்த உயர்குடியினரிடையே கடுமையான அதிகாரச் சண்டையும் தொடர்ந்தது. பிளேட்டோவின் முன்னோரான சோலோன் தலைமை ஆர்ச்சானாக இருந்தபோது, உயர்குடியினரிடையேயான சண்டைகளை முடிவுக்குக்கொண்டுவர அடிமையாக இருந்த தொழிலாளர்களை விடுவிக்கவேண்டுமென்ற தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்றார். ஒவ்வொரு சுதந்திர மனிதனுக்கும் அரசில் பங்கிருக்குமாறு குடிமகனுக்கான வரையறையை அவர் உருவாக்கியதுடன், குடிமக்கள் பங்கேற்கும் எக்லசியா அல்லது அசெம்ப்ளி என்னும் அவையையும் உருவாக்கினார். நான்கு பிரிவுகளாக(கவுன்சில்கள்) பிரிக்கப்பட்ட ஏதென்சின் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் 100 பிரதிநிதிகள்வீதம் அரசின் அன்றாடப் பணிகளில் ஈடுபடும் நடைமுறையையும் உருவாக்கி, ஏதென்சின் மக்களாட்சியைத் தொடங்கிவைத்தார் சோலோன். பின்னர் கி.மு.508இல் கிளைஸ்தினீஸ், கி.மு.462இல் எஃபியால்ட்டஸ் ஆகியோரும் ஏதென்சின் மக்களாட்சி அமைப்பினை மேம்படுத்துவதில் பங்களிப்புச் செய்தனர். கிரேக்க மொழியில் டெமோஸ் என்றால் மக்கள் என்றும், க்ரேட்டோஸ் என்றால் சக்தி என்றும் பொருள். மக்கள்சக்தி என்று பொருள்படும் டெமாக்ரசி என்ற சொல் கி.மு.440-430 காலத்தில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஹிரோடோட்டஸ்தான் தன் கவிதையில் முதன்முதலாக இச்சொல்லைப் பயன்படுத்தினார். மக்களாட்சிக்கு விசுவாசமானவர்கள் டெமாக்ரட் என்றழைக்கப்பட்டனர். கி.மு.431இலிருந்து ஸ்பார்ட்டாவுடன் ஏதென்ஸ் ஈடுபட்ட பெலப்பொனீஷியப் போரில், கி.மு.413இல் சிசிலியில் ஏற்பட்ட தோல்வி, போரினால் ஏற்பட்ட கடுமையான நிதிநெருக்கடி ஆகியவற்றால் இந்த ஆட்சிக்கவிழ்ப்பு நிகழ்ந்தாலும், கி.மு.404இல் மீண்டும் மக்களாட்சி ஏற்பட்டுவிட்டது. இந்நாள் ஜுன் 10 இதற்கு முன்னால் -ஜூன் 10, 2019 1916 - சிரியாவிலிருந்து, ஏமன் வரையிலான பகுதிகளைக் கொண்ட சுதந்திர அரபுநாடு ஒன்றை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட அரபுக் கிளர்ச்சி, ஒட்டோமான் பேரரசுக்கு எதிராக தொடங்கியது. இப்பகுதியைத் தனி அரபுநாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்துதான் தூண்டிவிட்டது. எகிப்துக்கான இங்கிலாந்துத் தூதராக இருந்த ஹென்றி மக்மகோன், (இந்திய சீன எல்லைப் பிரச்சனைக்குக் காரணமாக இருக்கிற மக்மகோன் கோட்டை உருவாக்கிய அதே மக்மகோன்தான்! ஆங்கிலேய இந்தியாவில் பஞ்சாபில்தான் இவர் பிறந்தார்!) மெக்காவின் ஷெரீஃபும் அமீருமாக இருந்த ஹுசேன்-பின்-அலிக்கு 1915-16களில் தொடர்ச்சியாக எழுதிய கடிதங்களில், அரபுக் கிளர்ச்சியை உருவாக்கினால், ஹுசேன் வரையறுக்கிற எல்லைகளுடன் சுதந்திர அரபுநாட்டை இங்கிலாந்து அங்கீகரிக்கும் என்று ஆசைகாட்டினார். 1914 ஜூலையில் முதல் உலகப்போர் தொடங்கி நடந்துகொண்டிருந்த நிலையில், நவம்பரில் ஜெர்மனிக்கு ஆதரவாக ஒட்டோமான் பேரரசு போரில் குதித்தது. மெக்காவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டிருந்த ஒட்டோமான் பேரரசின் ஆளுனரோடு ஹுசேனின் உறவுநிலை சரியில்லாமல் இருந்ததைப் பயன்படுத்திக்கொண்டு, ஒட்டோமான் பேரரசுக்குள் கலகம் விளைவிக்கவே இங்கிலாந்து இதைச் செய்தது. ஏற்கெனவே, பாரசீக, அரபு மொழிகள் கலந்த மொழியான ஒட்டோமான் துருக்கிய மொழியை ஆட்சி மொழியாகக் கொண்டிருந்த ஒட்டோமான் பேரரசின்மீது அரேபியர்களுக்கு வருத்தமிருந்தது. சரியாகச் சொன்னால், 1821இலிருந்தே கல்வியில் அரபு மொழிக்கு முக்கியத்துவமளிக்க வேண்டும், அரேபியப் பகுதிகளுக்குத் தன்னாட்சி வேண்டும் என்பதான கோரிக்கைகள் உருவாகியிருந்தன. இவற்றைப் பயன்படுத்திக்கொண்டு, கிளர்ச்சியைத் தூண்டிய இங்கிலாந்து, இக்கிளர்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே, பாலஸ்தீனப் பகுதியில் யூதர்களுக்கு தனிநாடு உருவாக்கித்தர உறுதியளிக்கும் பால்ஃபோர் பிரகடனத்தை 1917 நவம்பர் 2இல் வெளியிட்டது. ஒட்டோமான் பேரரசிடமிருந்து கைப்பற்றப்படும் பகுதிகளை இங்கிலாந்தும், பிரான்சும் பங்கிட்டுக்கொள்வது என்ற சைக்ஸ்-பிகோட் ஒப்பந்தம் 1916இலேயே மேற்கொள்ளப்பட்டிருந்ததும் பின்னாளில் வெளியானபோதுதான், தாங்கள் ஏமாற்றப்பட்டதாக அரேபியர்கள் உணர்ந்தனர். மத்தியக் கிழக்கில் இன்றளவும் நிலவும் சிக்கல்களுக்கு அடிப்படையாக மக்மகோனின் கடிதங்களும், அரபு-மேற்கத்திய உறவுகளின் திருப்புமுனையாக சைக்ஸ்-பிகோட் ஒப்பந்தமும் அமைந்தன. (ஒப்புக்கொண்டபடி அரபுப் பகுதியை தனிநாடாக இங்கிலாந்து அங்கீகரிக்காமல் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டது, பாலஸ்தீனப் பிரிவினை உள்ளிட்ட செய்திகள் இத்தொடரில் 2018 நவம்பர் 29இல் இடம்பெற்றுள்ளன.) இந்நாள் ஜுன் 11 இதற்கு முன்னால் -ஜூன் 11, 2019 […] 1955 - கார்ப்பந்தய வரலாற்றில் மிகமோசமான விபத்தாக இன்றுவரை குறிப்பிடப்படுகிற லே-மான்ஸ் விபத்து நிகழ்ந்தது. ஒரு போட்டியாளரும், 83 பார்வையாளர்களும் உயிரிழந்த இந்த விபத்தில், சுமார் 180 பேர் படுகாயமுற்றனர். லே-மான்சின் 24 மணிநேரம் என்பது உலகின் மிகமூத்த கார்ப்பந்தயங்களுள் ஒன்றாகும். இது 1923இலிருந்து இன்றுவரை நடைபெற்றுவருகிறது. மோட்டார் காரின் உருவாக்கத்துடனேயே கார்ப்பந்தயமும் உருவாகி, பிரெஞ்ச் மொழியில் பெரிய பரிசு என்று பொருள்படும் க்ராண்ட் பிரிக்ஸ் (பிரெஞ்ச் பிரிக்ஸ் - ஆங்கில பிரைஸ் - பரிசு) பந்தயமும் 1901இல் தொடங்கி, பந்தயக் கார்கள் என்ற தனிப்பிரிவும் உருவாகியது. இதைத் தொடர்ந்து, வழக்கமான மக்கள் பயன்படுத்தும் கார்களின் வேகம், நீடித்து உழைக்கும் திறன், எரிபொருள் சிக்கனம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்த, ஓட்டுநர், கார் ஆகியோரின் தாங்குதிறனுக்கான எண்ட்யூரன்ஸ் போட்டிகள் உருவாயின. இவை ஆயிரம் கி.மீ., ஆயிரம் மைல், 12 மணிநேரம், 24 மணிநேரம் என்ற அளவுகளில் நடத்தப்பட்டன. லே-மான்சின் 24 மணிநேரம் என்பது அப்படியான 24 மணிநேரப் பந்தயமாகும். முதல்நாள் மாலை 4 மணிக்குத் தொடங்கி, 3 ஓட்டுநர்கள் மாறிமாறி, எரிபொருள் நிரப்புதல், டயர் மாற்றுதல் உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட சில பராமரிப்புகளை மட்டும் காருக்குச் செய்துகொண்டு மறுநாள் மாலை 4 மணிவரை ஓட்டவேண்டும். இப்போதிருக்கிற பாதுகாப்பு ஏற்பாடுகள் அக்காலத்தில் இல்லையென்பதுடன், விபத்துக்குள்ளானால் காருடன் ஓட்டுநர் எரிந்துபோகாமல் தூக்கிவீசப்படவேண்டும் என்பதற்காகவே சீட்பெல்ட்டும் இருக்காது. இப்போட்டியில் ஒரு ஓட்டுநர் பராமரிப்புக்காக ஒதுங்க முயற்சித்தபோது, அவரோடு மோதாமலிருக்க மற்றொரு கார் அடுத்த பாதைக்குள் நுழைய, அப்பாதையில் வந்த மெர்சிடஸ் மோதி, பறந்துசென்று பார்வையாளர் பகுதிக்கருகில் வெடித்துச் சிதறியது. தூக்கிவீசப்பட்ட அதன் ஓட்டுநர் தலைநசுங்கி இறக்க, வெடித்துச்சிதறிய காரின் பாகங்கள், பறந்துசென்ற பானெட், தீ ஆகியவற்றால் மற்றவர்கள் இறந்தனர். பின்னர் நடந்த வேறு இரு போட்டிகளில் வென்றாலும், 1987வரை கார்ப்பந்தயங்களிலிருந்து மெர்சிடஸ் விலகிக்கொண்டது. உடனடியாகப் பல நாடுகளிலும் கார்ப்பந்தயங்கள் தடைசெய்யப்பட்டு, பாதுகாப்பு அமைப்புகள், விதிகள் உருவாக்கத்திற்குப்பின் பின்னாளில் அனுமதிக்கப்பட்டன. -அறிவுக்கடல் இந்நாள் ஜுன் 12 இதற்கு முன்னால் -ஜூன் 12, 2019 […] 1967 - அமெரிக்க மாநிலங்களிலிருந்த இனக்கலப்புத் திருமணத் தடைச்சட்டங்கள் அனைத்தும் செல்லாதென அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ரிச்சர்ட் லவிங் என்ற வெள்ளையரும், மில்ட்ரெட் என்ற கருப்பினப் பெண்ணும் திருமணம் செய்துகொண்டதற்காக, வர்ஜீனியா மாநிலத்தில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களது மேல்முறையீட்டில்தான் அமெரிக்க உச்சநீதிமன்றம் இத்தீர்ப்பையளித்தது. குடியேறிகளின் நாடு என்பதால் ஏராளமான இனங்கள்(ரேஸ்), இனக்குழுக்கள்(எத்னிசிட்டி) கொண்டது அமெரிக்கா. வெள்ளையினத்தவரின் தனித்தன்மையைப் பாதுகாப்பதே இத்தடைச் சட்டங்களின் நோக்கமென்பதால், வெள்ளையர்-நிறம் கொண்டவர்(வேறினத்தவர்) திருமணங்களே தடைசெய்யப்பட்டன. உண்மையில், அரசுக்கெதிராக மக்கள் ஒன்றிணைந்துவிடாமலிருக்கவே இந்த இனப்பிரிவினை பாதுகாக்கப்பட்டது. முதல் இனக்கலப்புத் திருமணத் தடைச்சட்டம் வர்ஜீனியா குடியேற்றத்தில்தான் 1691இல் இயற்றப்பட்டது. அக்குடியேற்றத்தின் நிர்வாகத்திற்கெதிராக, பேகன் என்ற வெள்ளையர், வெள்ளையர்கள், (அடிமை முறைக்கு முன்பு)பிணைத் தொழிலாளர்களாக இருந்த கருப்பினத்தவர்கள், அமெரிக்கப் பூர்வகுடிகள் உள்ளிட்ட அனைவரையும் திரட்டி பேகன் கலகம் என்பதை நிகழ்த்தியதைத் தொடர்ந்தே அது இயற்றப்பட்டது. அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் இருந்த இத்தடைச் சட்டங்கள், இரண்டாம் உலகப்போரில் இணைந்து பணியாற்றியபின் 1950களில் பரவலாக நீக்கப்பட்டன. நீக்கப்படாமலிருந்த மாநிலங்களின் தடைச்சட்டங்கள் இத்தீர்ப்பினால் செல்லாமற்போனாலும், சில மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படாத சட்டமாகத் தொடர்ந்தது. 2000இல் கடைசியாக நீக்கிய அலபாமாவுடன் இத்தடைச்சட்டங்கள் முழுமையாக முடிவுக்கு வந்தன. இத்தீர்ப்பு வெளியான ஜூன் 12, காதலிக்கும் நாளாக(லவிங் பெயரில்!) அமெரிக்க மக்களால் கொண்டாடப்படுகிறது. அரசு ஏற்காவிட்டாலும், அமெரிக்காவில் எல்லா இனத்தவரும் கலந்து கொண்டாடும் மிகப்பெரிய விழா இதுதான்! பொதுவாக வெள்ளையர்கள் ஆக்கிரமித்த நாடுகளில்தான் இனக்கலப்புத் திருமணங்கள் ஏற்கப்படவில்லையென்றாலும், இந்தியாவில் நிலவிய தீண்டாமை உட்பட உலகின் பலநாடுகளிலும், இவ்வாறான திருமணத் தடைகள் இருந்துள்ளன. இன்றும்கூட, இஸ்ரேலில் திருமணம் என்பதே மதத்தலைமைக்குக் கட்டுப்பட்டது என்பதால் வேற்றினத்தவரைத் திருமணம் செய்துகொள்ள முடியாது; சவூதிஅரேபிய ஆண்கள் வேற்றினப் பெண்களைத் திருமணம் செய்துகொள்ள அரசு அனுமதி பெறவேண்டும்; அந்நாட்டுப் பெண்கள் எந்தச்சூழ்நிலையிலும் வேற்றின ஆண்களைத் திருமணம் செய்துகொள்ள முடியாது; எகிப்தியர்கள் இஸ்ரேலியப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டால் குடியுரிமையை இழக்க நேரிடும் என்பன உள்ளிட்ட சட்டங்கள் சில நாடுகளில் நடைமுறையில் உள்ளன. -அறிவுக்கடல் இந்நாள் ஜுன் 13 இதற்கு முன்னால் -ஜூன் 13, 2019 1944 - ‘வி-1 பறக்கும் குண்டு’ என்ற ஆயுதத்தால் லண்டனை ஜெர்மனி தாக்கியது. ‘வெர்கல்ட்டங்ஸ்வாஃபே(வஞ்சம்தீர்க்கும் ஆயுதம்)-1’ என்று பெயரிடப்பட்ட இதுதான் உலகின் முதல் வெற்றிகரமானதும், பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டதும், பயன்படுத்தப்பட்டதுமான ஏவுகணையாகும். பல்ஸ்ஜெட் என்ஜின் பொருத்தப்பட்ட, சீர்வேக(க்ரூஸ்) ஏவுகணையான இது, 850 கிலோ வெடிபொருளை(வார்ஹெட்), 250 கி.மீ. தொலைவுக்கு 640 கி.மீ. வேகத்தில் எடுத்துச்சென்று வீசக்கூடியது. நேசநாடுகளின் படைகள் ஐரோப்பாவுக்குள் நுழைந்ததற்குப் பதிலடியாகவே இதனை லண்டன்மீது ஜெர்மனி பயன்படுத்தியது. பிரான்சை ஆக்கிரமித்திருந்த ஜெர்மனி, லண்டனுக்கு அருகிலுள்ள பிரான்சின் வடஎல்லையிலிருந்து இதனை வீசியது. பறந்துவந்து குண்டுவீசிவிட்டுத் திரும்பும் விமானங்களையே அதுவரை அறிந்திருந்த நிலையில், சிறிய விமானங்களே விழுந்து வெடிப்பதைப் புரிந்துகொள்ள முடியாததால் தொடக்கத்தில் தடுமாறினாலும், விரைவில் இங்கிலாந்து சுதாரித்துக்கொண்டு இவற்றை வழியிலேயே அழிக்கத்தொடங்கியது. துல்லியமாக இலக்கைத் தாக்கும் திறன் பெற்றிருக்காவிட்டாலும், இது இங்கிலாந்துக்குக் குறிப்பிடத்தக்க அழிவை ஏற்படுத்தியது. பின்னர், எறியும் உயரத்திற்கேற்ப அடையும் தொலைவு அமையும் பேலிஸ்டிக் விதிகளின் அடிப்படையில், ராக்கெட் என்ஜின் பொருத்தப்பட்ட நீண்டதொலைவுக்குத் தாக்கும் பேலிஸ்டிக் ஏவுகணையையும் (வி-2) ஜெர்மனி உருவாக்கி, 1944 செப்டம்பரில் லண்டன் உள்ளிட்ட நேசநாடுகளின் நகரங்களின்மீது வீசியது. ஜெர்மன் ஏவுகணைகளில் வெடிக்காமல் கைப்பற்றப்பட்டவற்றை ஆய்வுசெய்து அமெரிக்கா, பிரான்ஸ், சோவியத் ஒன்றியம் முதலானவை ஏவுகணைகளை பின்னர் உருவாக்கின. துல்லியமாக இலக்குகளைத் தாக்கச் செய்யும் தொழில்நுட்பங்களும், அகச்சிவப்புக் கதிர்கள், லேசர், ரேடியோ அலைகள் முதலியவற்றைப் பயன்படுத்தி, வழிநடத்தப்படும் ஏவுகணைகளும் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டன. இலக்கின் அகச்சிவப்புக்கதிர் உருவம் உள்ளிட்ட ஏதாவதோர் அடையாளத்தின்மூலம், விடாமல் துரத்திச்சென்று இலக்கைத்தாக்க ‘ஃபயர் அண்ட் ஃபர்கெட்’ ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன. தரையிலிருந்து-தரையில், விண்ணிலிருந்து-விண்ணில், தரையிலிருந்து-விண்ணில், விண்ணிலிருந்து-தரையில் உள்ள இலக்குகளைத் தாக்குதல், செயற்கைக்கோள்களைத் தாக்குதல் ஆகியவற்றுக்கு தனித்தனி ஏவுகணைகள் இன்று உள்ளன. இலக்கில் துல்லியம் குறைவென்றாலும் தடுக்க முடியாதவையான பேலிஸ்டிக் ஏவுகணைகளையும் வழிமறித்து அழிக்கக்கூடிய ஏவுகணைகள் இன்று உருவாகிவிட்டன. -அறிவுக்கடல் இந்நாள் ஜுன் 14 இதற்கு முன்னால் -ஜூன் 14, 2019 […] 1822 - கணினியின் தந்தை என்றழைக்கப்படும் சார்லஸ் பாபேஜ், தனது வித்தியாசப்பொறி(டிஃபரன்ஷியல் என்ஜின்) என்னும் எந்திரவியல் கணக்கிடும் கருவியை அரச வானியல் கழகத்தில் அறிமுகப்படுத்தினார். கணிதவியலாளர், மெய்யிலாளர், எந்திரவியல் பொறியாளர், கண்டுபிடிப்பாளர் என்று பல்துறை விற்பன்னராகத் திகழ்ந்த பாபேஜ் உருவாக்கிய இந்த வித்தியாசப்பொறி, பின்னர் முயற்சித்த பகுப்பாய்வுப்பொறி(அனாலிட்டிக்கல் என்ஜின்) ஆகியவையே முதல் எந்திரவியல் கணினிகள் என்பதுடன், நவீன கணினிகளுக்கான அடிப்படைகளாகவும் அமைந்தன. மடக்கை(லாக்), முக்கோணவியல் உள்ளிட்ட, பொறியாளர்கள், அறிவியலாளர்கள் பயன்படுத்தும் பெரும்பாலான கணிதச் சார்புகள், பல்லுறுப்புக் கோவைகளைப் பயன்படுத்திக் கணக்கிடப்பட்டு, கணித அட்டவணைகள் உருவாக்கப்பட்டன. சிக்கலான இந்தக் கணக்கீடுகளைச் செய்து, பிழையில்லாத அட்டவணைகளை உருவாக்குவதில் தொடர்ந்து இருந்துவந்த சிரமங்களைக் களையும் முயற்சியாகவே பாபேஜ் இதனை வடிவமைத்தார். தொடர்ந்து வகுத்துக்கொண்டே சென்று, கிடைக்கும் வித்தியாசத்தைப் பயன்படுத்திக் கணக்கிடும் முறையைப் பயன்படுத்தியதால் வித்தியாசப்பொறி என்றழைக்கப்பட்ட இதில் முதலாவதை(வித்தியாசப்பொறி-0) 1819இல் உருவாக்கத் தொடங்கி, 1822இல் முடித்தபின்னர்தான் அறிமுகப்படுத்தினார். அட்டவணைகளை உருவாக்குவதில் பேருதவியாக இருக்கும் என்பதால், இத்திட்டத்திற்கு 1700 பவுண்டுகளை(தற்போது சுமார் ஒன்றேமுக்கால் கோடி ரூபாய்) இங்கிலாந்து அரசு கொடுத்தது. 1832இல் சிறியதான வித்தியாசப்பொறி-1ஐ உருவாக்கினாலும், 1842இல் பதினேழாயிரம் பவுண்டுகள்(பதினாறேமுக்கால் கோடி ரூபாய்!) செலவாகியும் முழுமையான வித்தியாசப்பொறி நிறைவுறவில்லை. இதற்கிடையில் பகுப்பாய்வுப்பொறியைநோக்கி அவர் கவனம் திரும்பிவிட, அட்டவணைகள் உருவாக்குவதில் எவ்வளவு செலவு மிச்சமாகும் என்பதைமட்டுமே கணக்கிட்ட அரசு, இச்செலவு விரயம் என்று கைவிட்டது. பகுப்பாய்வுப்பொறிக்கான அடிப்படைகளையும் இணைத்து, 31 இலக்க எண்களையும் எளிதாகக் கணக்கிடும் வித்தியாசப்பொறி-2க்கான வடிவமைப்பை 1849இல் உருவாக்கினார். நிதிப்பற்றாக்குறையால் உருவாக்கப்படாமலே நின்றுபோன இதனை, 1791இல் பிறந்த பாபேஜின் 200ஆம் ஆண்டையொட்டி, லண்டன் அறிவியல் அருங்காட்சியகம் உருவாக்கியபோது, அது முழுமையாகச் செயல்பட்டு, பாபேஜின் வடிவமைப்பு சரியென்று நிரூபித்தது. 1940களுக்குப்பின்தான் கணினிகள் உருவானாலும், அவற்றுக்கான அடிப்படைகளைக்கொண்ட பகுப்பாய்வுப்பொறிக்கான வடிவமைப்பை நூறாண்டுகளுக்கு முன்பாக, 1837இலேயே பாபேஜ் உருவாக்கிவிட்டார்! இந்நாள் ஜுன் 15 இதற்கு முன்னால் -ஜூன் 15, 2019 […] 1752 - மின்னலில் உருவாவது மின்சாரம்தான் என்பதை பெஞ்சமின் பிராங்க்ளின், பென்சில்வேனியாவில் காற்றாடி(பட்டம்) ஆய்வின்மூலம் நிறுவினார். அமெரிக்காவை நிறுவிய தந்தைகளுள் ஒருவரான பிராங்க்ளின் ஒரு பல்துறை விற்பன்னர். இவர் ஓர் அரசியல்வாதி மட்டுமின்றி, எழுத்தாளர், அச்சிடுபவர், அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர், சமூக செயற்பாட்டாளர் என்பன உள்ளிட்ட ஏராளமான முகங்களைக் கொண்டவர். இயற்பியலிலும், அமெரிக்க விடுதலைப் போருக்கு வித்திட்ட அமெரிக்க விழிப்புணர்வுக் காலத்திலும் மிகமுக்கியமானவராகக் குறிப்பிடப்படுகிறார். அமெரிக்காவிலிருந்த குடியேற்றங்களிடையே ஒற்றுமையை உருவாக்க இவர் மேற்கொண்ட முயற்சிகளால் ‘முதல் அமெரிக்கர்’ என்றழைக்கப்பட்டார். குடியேற்றங்களின் ஒற்றுமையை வலியுறுத்தி இவர் வெளியிட்டதே, செய்தித்தாளில் வெளியான முதல் கருத்துப்படமாகும்(இத்தொடரில் 2018 மே 9இல் இடம்பெற்றுள்ளது). மின்சாரம்குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு, நேர் மின்னூட்டம், எதிர் மின்னூட்டம் என்று பெயரிட்டவர் இவர்தான். மின்னூட்டங்களின் அழிவின்மை விதியைக் கண்டுபிடித்தவரும் இவர்தான். காகிதக் காற்றாடி மழையில் கிழிந்துவிடும் என்பதால், பட்டுத்துணியால் செய்யப்பட்ட காற்றாடியைச் சோதனைக்குப் பயன்படுத்திய பிராங்க்ளின் ஈர நூலின் வழியாகப் பாய்கிற மின்சாரம் லேய்டின் கலன் என்னும் அக்காலத்திய மின்சார சேமிப்புக் கலனில் சேமிக்கப்படுவதை நிரூபித்தார். மின்சாரத்தின் ஆபத்துகளை உணர்ந்து பாதுகாப்பாக இவ்வாய்வில் ஈடுபட்டாலும், உண்மையில் காற்றாடியை மின்னல் நேரடியாகத் தாக்கவில்லை. அவ்வாறு தாக்கியிருந்தால் அவர் இறந்திருப்பார். மேகங்களிலிருந்த மின்னூட்டமே அவரது சோதனைக்குப் போதுமானதாக இருந்தது. மின்சாரம் குறித்த ஆய்வுகளுக்காக அரச கழகத்தின் கோப்லி பதக்கம் பிராங்க்ளினுக்கு 1753இல் வழங்கப்பட்டது. மின்சாரம்குறித்த ஆய்வுகளின் பயனாக இடிதாங்கியை உருவாக்கிய பிராங்க்ளின், இரட்டைக் குவிய(பைஃபோக்கல்) கண்ணாடி(இத்தொடரில் 2018 மே 23இல்), புகை குறைவான பிராங்க்ளின் அடுப்பு, நெகிழ்வான சிறுநீர் வடிகுழாய்(கத்தீட்டர்), கண்ணாடியாலான இசைக்கருவி உள்ளிட்டவற்றை உருவாக்கியிருந்தாலும், எதற்குமே காப்புரிமை பெறவில்லை. ‘மற்றவர்களின் கண்டுபிடிப்புகளை நாம் பயன்படுத்தும்போது, நம் கண்டுபிடிப்புகளை மற்றவர்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கவேண்டும்’, என்று தன் சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார் பிராங்க்ளின். மக்கள்தொகையியல் உள்ளிட்ட இன்னும் பல துறைகளிலும் பங்களிப்புச் செய்துள்ள பிராங்க்ளின் மிகச்சிறந்த சதுரங்க விளையாட்டு(செஸ்) வீரரும்கூட! இந்நாள் ஜுன் 16 இதற்கு முன்னால் -ஜூன் 16, 2019 […] 1963 - விண்வெளிப் பயணம் மேற்கொண்ட உலகின் முதல் பெண்ணான வாலண்டினா தெரஸ்கோவா-வை வோஸ்டாக்-6 விண்கலத்தில் விண்வெளிக்கு அனுப்பியது சோவியத் ஒன்றியம். இரண்டு நாட்கள், 22 மணிநேரம், 50 நிமிடங்கள் விண்வெளியிலிருந்த வாலண்டினா, 48 முறை புவியைச் சுற்றிவந்தார். அதுவரை அமெரிக்க விண்வெளி வீரர்கள் மேற்கொண்டிருந்த மொத்த விண்வெளிப் பயண நேரத்தைவிட இது அதிகம். இன்றுவரை தனியாக விண்வெளிப் பயணம் மேற்கொண்ட ஒரே பெண் வாலண்டினாதான். விண்வெளிப் பயணம் மேற்கொண்ட ராணுவம்சாராத(சிவிலியன்) முதல் மனிதருமான வாலண்டினா, விண்வெளி வீரராவதற்காக, விமானப்படையில் கவுரவ உறுப்பினராக இணைத்துக்கொள்ளப்பட்டார். நெசவுத் தொழிற்சாலை ஊழியராக இருந்து, விண்வெளிப் பயணத்திற்கு விண்ணப்பித்து, 400 பேரில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் வாலண்டினா. இப்பயணத்தின்போது வாலண்டினா எடுத்த படங்களே வளிமண்டலத்திலுள்ள தூசுப்படல அடுக்குகளை அடையாளம்காண பின்னாளில் உதவின. ஏற்கெனவே விண்வெளிப்பயணம் மேற்கொண்டவரான ஆண்ட்ரியான் நிக்கோலாயேவ் என்பவரை 1963இல் வாலண்டினா திருமணம் செய்துகொண்டார். 1964இல் இவர்களுக்குப் பிறந்த குழந்தையே, தாய்-தந்தை இருவரையும் விண்வெளிவீரர்களாகக்கொண்ட முதல் குழந்தையாகும். வாலண்டினா தற்போதைய ரஷ்யப் பாராளுமன்ற(டூமா) உறுப்பினராக உள்ளார். விண்வெளிக்கு முதல் பெண்ணை மட்டுமின்றி, முதல் மனிதரை அனுப்பியதும் சோவியத் ஒன்றியம்தான். 1957இல் உலகின் முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக்-1ஐ அனுப்பியதுடன், விண்ணிலிருந்து முதலில் சமிக்ஞைகளைப் பெற்ற நாடாகவும் சோவியத் மாறியது. ஸ்புட்னிக்-2இல் லைக்கா என்ற நாயை அனுப்பி, விண்வெளிக்கு உயிரினத்தை அனுப்பிய முதல் நாடாகியது. சோவியத்தின் லூனா-2தான் நிலவினை அடைந்த முதல் விண்கலம். லூனா-3தான் நிலவின் எதிர்ப்பகுதியை படமெடுத்த முதல் விண்கலம். 1960இல் ஸ்ட்ரெல்க்கா, பெல்க்கா என்ற இரு நாய்களை விண்வெளிக்கு இட்டுச்சென்று பாதுகாப்பாக புவிக்குக்கொண்டுவந்தது ஸ்புட்னிக்-5. ஸ்ட்ரெல்க்காவின் குட்டிகளில் ஒன்று ஜேக்குலின் கென்னடிக்குப் பரிசளிக்கப்பட்டது. 1961 ஏப்ரலில் முதல் மனிதராக யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்று திரும்பியது உட்பட, விண்வெளி ஆய்வில் சோவியத்தின் முன்னேறிய நிலையே நிலவுக்கு மனிதனை அனுப்புவுதாக அமெரிக்காவை அறிவிக்கச்செய்தது. -அறிவுக்கடல் இந்நாள் ஜுன் 17 இதற்கு முன்னால் -ஜூன் 17, 2019 1987 - கடைசி ‘கரிய கடற்பகுதிக் குருவி’ இறந்தது. இதைத்தொடர்ந்து, அந்த இனம் அழிந்துவிட்டதாக டிசம்பர் 1990இல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அழிந்துபோன உயிரினங்களில் மிகச்சிலவற்றுக்கே அழிவின் தேதி தெரியும். புவி உருவான காலத்திலிருந்து இன்றுவரை, இப்புவியில் தோன்றிய-வாழ்ந்த உயிரினங்களில் 99 சதவீதம் அழிந்துவிட்டன. பல்வேறு காலகட்டங்களிலும் புவியில் 500 கோடி வகையான உயிரினங்கள் வாழ்ந்திருக்கின்றன. ஒன்றிலிருந்து 1.4 கோடி வகையான உயிரினங்கள் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளன. அவற்றிலும் வெறும் 12 லட்சம் உயிரினங்களுக்குத்தான் ஆவணப்படுத்தப்பட்ட விபரங்கள் உள்ளன. அதாவது, 86 சதவீதத்துக்கும் அதிகமான உயிரினங்கள் பற்றிய விபரங்கள் மனிதர்களுக்கு முழுமையாகத் தெரியாது. அதனால் உண்மையில் தற்போது புவியிலுள்ள உயிரினங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகக்கூட இருக்கலாம். ஒரு மனித உடலில் ஒரு கோடி கோடி(1,00,00,000,00,00,000) பாக்டீரியங்கள் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்காலத்திய கணித முறைகளைப் பயன்படுத்தி, நுண்ணுயிரிகள் உள்ளிட்ட சுமார் ஒரு லட்சம் கோடி உயிரினங்கள் தற்போது புவியில் வாழக்கூடும் என்று 2016இல் அறிவியலாளர்கள் அறிவித்தனர். அதனால், அழிந்த உயிரினங்களின் எண்ணிக்கையும் பின்னாளில் இன்னும் அதிகமாகக் கண்டுபிடிக்கப்படலாம். இன்றைக்கு 45 கோடி ஆண்டுகளுக்குமுன் முதலாவதும், 6 கோடி ஆண்டுகளுக்குமுன் ஐந்தாவதுமாக இதுவரை ஐந்து பெரும் இனஅழிவுகள் நிகழ்ந்துள்ளன. 20 கோடி ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த நான்காவதில்தான் டைனோசர்கள் அழிந்தன. ஏதாவதொரு பகுதியில் மொத்தமாக இனங்கள் அழிவது சிறிய அளவில் அவ்வப்போது நிகழ்ந்தாலும், தற்போது மனிதர்களால் ஆறாவது பெரும் இனஅழிவு நடைபெற்றுக்கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் தாவர, விலங்கு உயிரினங்களில் பாதியளவு 2100ஆம் ஆண்டில் அழிந்திருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. உயிரினங்களின் அழிவை ஆவணப்படுத்துதல் அருகாமை காலத்தில்தான் தொடங்கியது. ஓர் உயிரினத்தின் கடைசி விலங்கு (அல்லது தாவரம்) உயிரிழப்பதே அதன் அழிவாகப்பதிவு செய்யப்படுகிறது. உண்மையில், அதற்கு முன்பாகவே(இணை இல்லாமற்போதல் முதலான நிகழ்வுகளின்போதே) அவ்வினம் புவியில் தொடர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பு முடிவுக்குவந்துவிடுகிறது. இந்நாள் ஜுன் 18 இதற்கு முன்னால் -ஜூன் 18, 2019 […] 1887 - ஜெர்மனி, ரஷ்யா இடையே ‘மறுகாப்பீட்டு ஒப்பந்தம்( ரீ இன்சூரன்ஸ் ட்ரீட்டி)’ என்னும் பரம ரகசிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்படி, ரஷ்யாவோ, ஜெர்மனியோ மற்றொரு பெரும்சக்தியுடன் போரிட நேர்ந்தால், ஒப்பந்தத்திலுள்ள மற்றொரு நாடு நடுநிலை வகிக்கவேண்டும். பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரியா, ரஷ்யா, ஜெர்மனி ஆகியவை ஐம்பெரும் சக்திகளாக அப்போது விளங்கின. ஜெர்மன் மொழி பேசும் பகுதிகளை, டென்மார்க், ஆஸ்திரியா, பிரான்ஸ் ஆகியவற்றுடனான தனித்தனிப் போர்களில் கைப்பற்றி, ஒருங்கிணைத்து, ஜெர்மனியை உருவாக்கிய பிஸ்மார்க், அதன் வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்கும் இடையூறாக இருந்த போர்களைத் தவிர்க்க மிகச்சிறந்த அயலுறவுக் கொள்கைகளைக் கடைப்பிடித்தார். பிஸ்மார்க்கின் சாதுரியமே 1870, 90களில் ஐரோப்பாவில் அமைதியைப் பேணியது. இருபெரும் அணிகளுக்கிடையேயான போரொன்று உருவாகிவிடாமலிருக்க முக்கியச் சக்தியான பிரான்சைத் தனிமைப்படுத்தினார் பிஸ்மார்க். ஆஸ்திரியா, ரஷ்யா, ஜெர்மனி அடங்கிய, முப்பேரரசர் அணியை 1873இல் உருவாக்கினார். பால்கன் பகுதியை அடையும் நோக்கத்தில் ஆஸ்திரியாவும், ரஷ்யாவும் எதிரிகளாக இருந்த நிலையில், அப்பிரச்சனைகளின் அடிப்படையில் ரஷ்யா விலக, அவர்களுக்கிடையில் தான் நேர்மையான தரகராக இருப்பதாக உறுதியளித்து, 1878இல் பெர்லின் பாராளுமன்றம் என்ற பேச்சுவார்த்தையை நடத்தினார். ரஷ்யா ஒத்துவராத நிலையில், 1879இல் ஆஸ்திரியாவுடன் அவர் உருவாக்கிய இருநாட்டுக்கூட்டு, ஜெர்மன் அயலுறவுக்கொள்கையின் அடிக்கல் என்று புகழப்படுவதுண்டு. பெருமுயற்சியெடுத்து, 1881இல் முப்பேரரசர் அணியை மறுவுருவாக்கம் செய்தாலும், 1885-87இல் ஏற்பட்ட பல்கேரியச் சிக்கல், ரஷ்ய-ஆஸ்திரிய விரோதத்தை தீவிரப்படுத்தியது. பிரான்ஸ் ஆதரவு நிலையை ரஷ்யா மேற்கொண்டுவிடக்கூடிய நிலையில் பிஸ்மார்க் உருவாக்கிய இந்த ரகசிய ஒப்பந்தம், அந்நிய உறவுகளைக் கையாள்வதில் அவருக்கிருந்த திறமையின் ‘தலைசிறந்த வெளிப்பாடு (மாஸ்டர்பீஸ்)’ என்று வருணிக்கப்படுகிறது. 1890இல் ஆட்சிக்குவந்த இரண்டாம் கெய்சர் வில்லெம் அரசர் தொடக்கத்திலேயே இந்த ஒப்பந்தத்தை மீறி, பிஸ்மார்க் பதவி விலகினார். இந்த ஒப்பந்தத்தின் முடிவே, அதுவரை ஐரோப்பியக் கண்டத்தில் பிஸ்மார்க் கட்டிக் காத்த அதிகாரச் சமநிலை முடிவுக்கு வருவதற்குக் காரணமாக மட்டுமின்றி, பின்னாளில் முதல் உலகப்போர் ஏற்படுமளவுக்கான பிரச்சனைகளுக்குமான தொடக்கப்புள்ளியாகவும் அமைந்தது. (மக்கள்நல அரசுக்குப் போர்கள் இடையூறு என்று கருதி, சிறப்பான அயலுறவுக் கொள்கையை உருவாக்கி மக்கள்நல நடவடிக்கைகளை பிஸ்மார்க் மேற்கொண்டார் என்பது, போர் தொடுப்பதுதான் வல்லரசு என்ற கூக்குரல் நிலவும் இக்காலத்தில் கவனிக்கத்தக்கது!) இந்நாள் ஜுன் 19 இதற்கு முன்னால் -ஜூன் 19, 2019 […] 1961 - அரசுப் பணிகளில் பணியாற்ற, மத நம்பிக்கை அவசியமில்லை என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேரிலேண்ட் மாநிலத்தில் நோட்டரி பப்ளிக்-ஆக நியமிக்கப்பட்ட, கடவுள் நம்பிக்கையற்ற ஒருவர், ‘கடவுள்மீது ஆணையாக’ உறுதிமொழி ஏற்க மறுத்ததால் அவருக்கு அப்பணி மறுக்கப்பட்டது. நாத்திகராக இருப்பதற்கு அமெரிக்க அரசியல் சட்டம் உரிமையளித்திருப்பதாக அவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மேல்முறையீட்டில், கடவுளை நம்பச்சொல்லி யாரும் அவரை வற்புறுத்தவில்லையென்றும், அதைப்போலவே, நோட்டரி பப்ளிக்காக இருக்குமாறும் அவரை யாரும் வற்புறுத்தவில்லையென்றும் மேரிலேண்ட் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ‘அமெரிக்கக் கூட்டரசோ, மாநில அரசுகளோ தேவாலயத்தை நிறுவ உரிமையில்லை. அவை ஒரு மதத்திற்கோ, அனைத்து மதங்களுக்குமோ உதவவோ, ஒன்றைவிட மற்றொரு மதத்திற்கு முன்னுரிமையளிக்கவோ கூடாது. ஒருவரை தேவாலயத்திற்குப் போகுமாறோ, போகக்கூடாதென்றோ, எந்த மதத்தையும் நம்புமாறோ, நம்பக்கூடாதென்றோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ வற்புறுத்தக்கூடாது’ என்று அமெரிக்க அரசியல் சட்டத்தின் முதல் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை, மத அமைப்புகளின் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கும் பயணக்கட்டணம் திரும்ப வழங்குவது சட்டவிரோதம் என்று 1947இல் தொடுக்கப்பட்ட வழக்கில் அமெரிக்க உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது. இவ்வழக்கில் அதைக் குறிப்பிட்டு, ‘கடவுள்மீது ஆணையாக’ உறுதிமொழி ஏற்கச்சொல்வது அமெரிக்க அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று தீர்ப்பளித்தது. ரோமப் பேரரசின் காலத்திலேயே உருவான யூத எதிர்ப்புணர்வே, ஐரோப்பாவில் அரசப் பதவிகளுக்கு வருபவர்கள் (கிறித்துவ)கடவுளின் பெயரால் உறுதிமொழியேற்கும் பழக்கத்தைத் தோற்றுவித்தது. அமெரிக்காவிலும் இங்கிலாந்துக் குடியேற்றங்களில் கடைப்பிடிக்கப்பட்ட இம்முறையை, கூடாது என்று அமெரிக்க அரசியல் சட்டத்தின் ஆறாவது பிரிவு கூறியதுடன், முதல் திருத்தமும், மத அமைப்புகளுக்கு மதிப்பளிக்கும் சட்டங்களை அமெரிக்கப் பாராளுமன்றம் நிறைவேற்றக்கூடாது என்று கூறியது. இவையிரண்டும் கூட்டரசுக்குத்தான் பொருந்தும் என்பதால், சில மாநில அரசுகள் தங்கள் சட்டங்களில் கொண்டிருந்த இந்த நடைமுறைகள், இத்தீர்ப்புக்குப்பின்தான் செல்லாதவையாயின. ஆனாலும், இன்றும் 8 மாநிலங்களின் சட்டங்களில், இந்த நடைமுறைகள் ஏட்டளவில் தொடர்கின்றன. இந்நாள் ஜுன் 20 இதற்கு முன்னால் -ஜூன் 20, 2019 […] 1944 - முதன்முறையாக, மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள் ஒன்று புவியைக் கடந்து விண்வெளியை எட்டியது. வஞ்சம்தீர்க்கும் ஆயுதம் என்ற வரிசையில் ஜெர்மனி உருவாக்கிய முதல் ஆயுதம்தான் உலகின் முதல் ஏவுகணை(இத்தொடரில் 2019 ஜூன் 19இல்). அதில் இரண்டாவதான வி-2தான் உலகின் முதல் நீண்டதொலைவு, வழிநடத்தப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை. வெர்னெர்-வோன்-ப்ரான் உருவாக்கிய ஏ-4 ராக்கெட்டே வி-2 ஏவுகணையாகப் பயன்படுத்தப்பட்டது. அதற்கு முன்பே, பீனமுண்டே ராணுவ ஆய்வு மையத்திலிருந்து இந்த ராக்கெட்டைப் பலமுறை செங்குத்தாக ஏவி சோதித்தது ஜெர்மனி. அவ்வாறான ஒரு முயற்சியில்தான் 176 கி.மீ. சென்றது எம்.டபிள்யூ.18014 என்று பெயரிடப்பட்ட இந்த ஏ-4 வகை ராக்கெட். இதன்மூலம் கார்மன் கோடு என்று வரையறுக்கப்படும் புவியின் வளிமண்டலத்திற்கும், விண்வெளிக்குமான எல்லையான 100 கிலோமீட்டரைக் கடந்தது. ஆனாலும், சுற்றுவட்டப் பாதையை எட்டாததால் விழுந்துவிட்டது. தியோடார்-வோன்-கார்மென் என்ற ஆய்வாளர்தான் புவியின் வளிமண்டலம் எவ்வளவு உயரம்வரை உள்ளது என்பதை முதன்முதலில் கணக்கிட்டார். அதனால் இந்த எல்லை அவர் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. 1933இல் நாஸிக்கட்சி ஆட்சிக்கு வந்தவுடனேயே ராக்கெட் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவமளிக்கப்பட்டது. அப்போது ப்ரான் பட்டம்பெற்று, முனைவராவதற்கு ஆய்வு மேற்கொள்ளும் மாணவராக இருந்தார். 1934இல் விண்வெளிப் பொறியியலில் ப்ரான் முனைவர் பட்டம் பெற்றபோது, அவரது ஆய்வுக்கட்டுரையின் பெரும்பகுதியை நாஸி அரசு ரகசியமானதாக அறிவித்து, அவரை ராணுவ ஆய்விற்குப் பயன்படுத்திக்கொண்டது. உண்மையில், 1926இலேயே ராபர்ட் கொடார்ட் என்ற அமெரிக்க ஆய்வாளர், திரவ எரிபொருளால் இயங்கும் ராக்கெட்டை வெற்றிகரமாக சோதித்துவிட்டார். ஆனால் அவருக்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. அவரது ஆய்வுகளை கவனித்து, அதில் நாஸி அரசு ஆர்வம்காட்டியது. இதழ்களில் வெளியான அவரது வடிவமைப்புகளை ப்ரான் பயன்படுத்திக்கொண்டதுடன், நாஸி ஆய்வாளர்கள் நேரடியாகவே கொடார்டைத் தொடர்புகொண்டு ஐயங்களைத் தீர்த்துக்கொண்டனர். விண்வெளி ஆய்வுகள் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியபின்னரே, ராக்கெட் தொழில்நுட்பத்தை உருவாக்கியவர்களுள் ஒருவராக கொடார்ட் அங்கீகரிக்கப்பட்டார். ராக்கெட் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை அப்போது அமெரிக்கா உணர்ந்திருந்தால், கொடார்டின் உதவி ஜெர்மனிக்குக் கிடைத்திருக்காது என்பதுடன், அமெரிக்காவும் முன்னேறிய நிலையிலிருந்திருக்கும் என்பதால், உலகப்போரின் போக்கேகூட மாறியிருக்கும்! இந்நாள் ஜுன் 21 இதற்கு முன்னால் -ஜூன் 21, 2019 […] 1834 - அறுவடை எந்திரத்திற்கு, அமெரிக்காவின் வர்ஜீனியாவில் சைரஸ் மெக்-கார்மிக் காப்புரிமை பெற்றார். அறுவடை எந்திரத்தின் கண்டுபிடிப்பாளராக இவரே பொதுவாகக் குறிப்பிடப்பட்டாலும், 1830களில் பலரும் மாறுபட்ட அறுவடை எந்திரங்களை உருவாக்கிக் காப்புரிமை பெற்றதுடன், காப்புரிமை தொடர்பாகப் பல்வேறு வழக்குகளும் தொடரப்பட்டன. இவரது தந்தையான இளைய ராபர்ட் மெக்-கார்மிக், விவசாயம், பண்ணை ஆகியவற்றுக்குத் தேவையான பல சிறு கருவிகளை உருவாக்கியவர். 1809இல் ஓர் அறுவடை எந்திரத்தை ஓரளவுக்கு உருவாக்கியிருந்த அவர், 1831இல் அதற்குக் காப்புரிமைக்கும் விண்ணப்பித்தார். ஆனால், மொத்தம் 28 ஆண்டுகள் அதற்காக உழைத்திருந்த அவரால், முழுமையான அறுவடை எந்திரத்தை உருவாக்க முடியவில்லை. 18 மாத முயற்சியில், அவர்களிடமிருந்த அடிமையான ஜோ ஆண்டர்சன் உதவியுடன், குதிரையால் இழுக்கப்படும் அதனை முழுமையாக்கிய அவர் மகன் சைரஸ் மெக்-கார்மிக், 25 வயதில் இக்காப்புரிமையைப் பெற்றார். ஏற்கெனவே, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பேட்ரிக் பெல் என்பவர் உருவாக்கி, காப்புரிமைபெறாத அறுவடை எந்திரங்கள் அமெரிக்காவில் ஆங்காங்கே பயன்பாட்டிலிருந்தன. 1833இல் ஒகையோவில் ஒபெட் ஹஸ்ஸி என்பவரும் ஓர் அறுவடை எந்திரத்திற்குக் காப்புரிமைபெற்றிருந்தார். இவையெல்லாவற்றையும்விட மேம்பட்டதாக இருந்தாலும், சைரசின் அறுவடை எந்திரம் அடுத்த 20 ஆண்டுகளுக்குப் பெரிய அளவில் விற்பனையாகவில்லை. புதிய எந்திரங்களைப் பயன்படுத்துவதில் விவசாயிகளுக்கிருந்த தயக்கத்துடன், ஹஸ்ஸியின் எந்திரத்திலிருந்த ரம்பம் போன்ற அறுக்கும் பகுதி சிறப்பாகச் செயல்பட்டதும் அவருக்கு மிகப்பெரிய போட்டியாக இருந்தது. பின்னாளில், அந்த அறுக்கும் பகுதியைப் பயன்படுத்திக்கொள்ளும் உரிமையை வாங்கி, மேம்படுத்தியதும் சைரசின் எந்திரம் மிகப்பெரிய அளவில் விற்பனையானது.அதனால், அறுவடை எந்திரத்தை உருவாக்கியவர் என்பதைவிட, பல்வேறு அறுவடை எந்திரங்களின் சிறப்புகளையும் ஒருங்கிணைத்து, செயல்திறன்மிக்க அறுவடை எந்திரத்தை உருவாக்கியவர் சைரஸ் மெக்-கார்மிக் என்று குறிப்பிடுவதே சரியானதாக இருக்கும். இடையிடையே பல வழக்குகளைச் சந்தித்தாலும், அவரால் தொடங்கப்பட்டு, பின்னாளில் ‘பன்னாட்டு அறுவடை நிறுவனம்’ என்று பெயர்மாற்றம்பெற்ற நிறுவனம், உழவுக்கருவிகள் உற்பத்தியில் மிகப்பெரிய நிறுவனமாகியது. இந்நாள் ஜுன் 22 இதற்கு முன்னால் -ஜூன் 22, 2019 […] 1675 - கிரீன்விச் அரச வானியல் ஆய்வகம் தொடங்கவும், அதன் பொறுப்பாளராக அரச வானியலாளர் என்ற பதவிக்கு ஜேம்ஸ் ஃப்ளாம்ஸ்டீட் என்பவரை நியமிக்கவும், இங்கிலாந்தின் இரண்டாம் சார்லஸ் அரசர் உத்தரவிட்டார். கடலில் பயணிக்கும்போது மாலுமிகள், தாங்கள் இருக்குமிடம், செல்லவேண்டிய தொலைவு உள்ளிட்டவற்றைக் கணக்கிட நிலவு முதலான வான்பொருட்களைப் பயன்படுத்தினர். ஒவ்வொரு காலகட்டத்திலும் அவற்றின் இடம்குறித்த தெளிவான தகவல்களைத் தருவதன்மூலம், அவர்களின் பயணத்திற்கு உதவுவதற்காகவே இந்த வானியல் ஆய்வகம் தொடங்கப்பட்டது. நிலம், கிடங்குகள், கோட்டைகள் ஆகியவற்றைப் பராமரிப்பது ஆயுதத்துறையின் பணியாக இருந்தது. ராணுவம், கடற்படை ஆகியவற்றுக்குத் தேவையான பொருட்களை வழங்கும் பணியையும் கொண்டிருந்த இத்துறையின் தலைமைப்பதவியான தலைமை அளவையாளராக இருந்த ஜொனாஸ் மூர் முயற்சியிலேயே அரசர் இதனை உருவாக்கினார். ஏற்கெனவே அரசரின் வேட்டைக்கால அரண்மனை கிரீன்விச்சில் இருந்த இடத்தில் ஆய்வகம் உருவாக்கப்பட்டது. அகற்றப்பட்ட ஹம்ஃப்ரி கோட்டையின் பழைய பொருட்களையே பொரும்பாலும் பயன்படுத்திக் கட்டப்பட்ட இதன் கட்டுமானத்திற்கு 500 பவுண்டுகள் ஒதுக்கப்பட்டு, 520 பவுண்டுகள் செலவானது. இந்த ஆய்வத்தை நடத்துவதற்கான செலவுகளை ஆயுதத்துறை வழங்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டதன்மூலம், அரசின் நிதியில் இயங்கும் முதல் அறிவியல் அமைப்பாக இது மாறியது. பயன்படுத்தமுடியாத பழைய வெடிமருந்தினை விற்றுக் கிடைக்கும் நிதியையே இதற்கு ஆயுதத்துறை வழங்கிவந்தது. அரச வானியலாளர், அவரது உதவியாளர், அவர்களின் குடும்பங்களுடன், அறிவியல் கருவிகள் ஆகியவை மட்டுமேகொண்டதாக, தொடக்கத்தில் இந்த ஆய்வகமிருந்து, பின்னாளில்தான் முழுமையான ஆய்வகமாக வளர்ச்சியடைந்தது. 1767இலிருந்து, வான்பொருட்களின் இடம் பற்றிய விபரங்களைக்கொண்ட கடற்பயண ஐந்தொகுதியை இந்த ஆய்வகம் வெளியிடத்தொடங்கியது. மாலுமிகள் மட்டுமின்றி, இங்கிலாந்தின் வானியலாளர்களும், கிரீன்விச் ஆய்வகத்தை மையமாகக்கொண்டே எல்லாவற்றையும் அளந்தனர். பெரும்பாலானவர்களால் ஏற்கப்பட்டிருந்ததாலேயே, 1884இல் வாஷிங்டனில் நடைபெற்ற பன்னாட்டு தீர்க்கரேகை மாநாட்டில், இது இருக்குமிடம் முதன்மை தீர்க்கரேகையாக பெரும்பாலான நாடுகளால் ஏற்கப்பட்டதுடன்(இத்தொடரில் 2017 அக்டோபர் 13இல் இடம்பெற்றுள்ளது), உலகின் நேரக்கணக்கீட்டிற்கான மையப்புள்ளியாகவும் மாறியது. இந்நாள் ஜுன் 23 இதற்கு முன்னால் -ஜூன் 23, 2019 […] 1942 - இரண்டாம் உலகப்போரில், ஜெர்மன் போர் விமானம் ஒன்று,பிரான்ஸ் என்று தவறாகக்கருதி, இங்கிலாந்தில் தரையிறங்கி மாட்டிக்கொண்ட விநோதம் நிகழ்ந்தது. 1941இன் பிற்பகுதியில் எஃப்.டபிள்யூ.-190 என்ற வகைப் போர்விமானத்தை ஜெர்மனி களத்தில் இறக்கியதிலிருந்தே, வான் போரில் ஜெர்மனியின் கை ஓங்கத் தொடங்கியது. அதுவரை, வானில் ஓங்கியிருந்த இங்கிலாந்து உள்ளிட்ட நேச நாட்டுப் படைகளுக்கு, இந்தப் புதிய விமானத்தை எதிர்கொள்வது மிகவும் சிரமமாக இருந்தது. இவ்வகை விமானத்தில் ஒன்றைக் கைப்பற்றி, ஆய்வு மேற்கொண்டு அதன் பலம்-பலவீனங்களை அறிந்தால் எதிர்க்கலாம் என்பதற்காக, ஏற்கெனவே ஏராளமாகக் கைப்பற்றப்பட்டிருந்த மெஸ்ஸர்ச்மிட் வகை ஜெர்மன் போர் விமானங்களில் ஒன்றில், இங்கிலாந்து விமானப்படை அலுவலர்களில் ஒருவரை, ஜெர்மன் விமானப்படை சீருடையில் அனுப்பி ஒரு விமானத்தைத் திருடலாம், அல்லது படகில் இருவரை பிரான்சிற்குள் அனுப்பி, அங்குள்ள ஜெர்மன் எதிர்ப்பாளர்கள் உதவியுடன் திருடலாம் என்றெல்லாம் இங்கிலாந்து விமானப்படை திட்டமிடுமளவுக்கு இந்த விமானம் சிம்மசொப்பனமாக விளங்கியது. 1942 ஜூன் 23இல் தாக்குதலில் ஈடுபட்ட ஜெர்மன் விமானப்படை விமானங்களை, இங்கிலாந்து விமானப்படையின் ஸ்பிட்ஃபயர் விமானங்கள் தாக்கின. இதில் தன் அணியைவிட்டுப் பிரிந்து, நாய்ச்சண்டையில்(குறைந்த தொலைவில் விமானங்கள் போரிட்டுக்கொள்வது டாக்ஃபைட் என்று அழைக்கப்படுகிறது!) மாட்டிக்கொண்ட, ஜெர்மனியின் ஆர்மின் ஃபேபர் என்ற விமானி, எதிரியை வீழ்த்தினாலும் வழிதவறிவிட்டார். எரிபொருளும் தீர்ந்துகொண்டிருந்தநிலையில், பிரிஸ்டால் கால்வாயை ஆங்கிலக் கால்வாய் என்று தவறாகக் கருதி, (ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்ட)பிரான்சுக்குப் பதிலாக, இங்கிலாந்தில் பெம்ப்ரே என்ற இடத்திலிருந்த, இங்கிலாந்து விமானப்படை விமானதளத்தில் தரையிறங்கிவிட்டார். நிலைமையைப் புரிந்துகொள்வதற்குள், இங்கிலாந்துப் படையினர் அவரைக் கைதுசெய்துவிட்டனர். எஃப்.டபிள்யூ.-190 விமானத்தை திருடியாவது ஆய்வுசெய்ய எண்ணியிருந்தவர்களுக்கு, பரிசளித்ததுபோல, சிறிதும் சேதமின்றி முழுமையாக அவ்விமானம் கிடைத்தது. அவ்விமானத்தின் பலவீனங்களையறிந்து எதிர்த்தாக்குதல் நடத்தியதுடன், அதன் சிறப்புத்திறன்களை பின்னர் உருவாக்கப்பட்ட இங்கிலாந்துப் போர்விமானங்களிலும் பயன்படுத்த உதவிய இந்த நிகழ்வு, வான்போரில் ஜெர்மனியின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தியதில் முக்கியக் காரணியாக அமைந்தது. இந்நாள் ஜுன் 24 இதற்கு முன்னால் -ஜூன் 24, 2019 1932 - சயாம் (தாய்லாந்து) வரலாற்றின் திருப்புமுனையான, ரத்தமில்லாத ‘1932 புரட்சி’, தாய்லாந்தின் 800 ஆண்டுகால ‘முழுமையான முடியாட்சியை’ முடிவுக்குக்கொண்டுவந்து, ‘அரசியல்சட்ட முடியாட்சியை’ உருவாக்கியது. 1782இல் சயாமில், முதலாம் ராமா அரசரால் சாக்ரி மரபின் ஆட்சி உருவானது. சயாமின் ஒருசில பகுதிகளில் இங்கிலாந்தும், பிரான்சும் ஆதிக்கம் செலுத்தினாலும்கூட, மற்ற தென்கிழக்காசிய நாடுகளைப்போல, சயாம் எந்த மேற்கத்திய நாட்டின் ஆதிக்கத்திற்கும் ஆட்படவில்லை. மேற்கத்திய நாடுகளால், கீழை நாடுகள் நாகரிகமடையாத, அறியாமையுடைய, தாழ்ந்த நாடுகளாகச் சித்தரிக்கப்பட்டதால், தங்கள் நாட்டை நவீனமயமாக்குவதற்காக, எளிய மக்களின் பிள்ளைகள் உட்பட ஏராளமானவர்களை மேற்கத்திய நாடுகளில் கல்விபயிலச் செய்தனர் நான்காம், ஐந்தாம் ராமா அரசர்கள். அவ்வாறு கல்விகற்றுத் திரும்பியவர்களுக்கு, தங்கள் நாட்டின் நிலை மிகவும் மோசமானதாகத் தெரிந்தது. இங்கிலாந்தில் பட்டம் பெற்றவரான ஆறாம் ராமா அரசர் வஜ்ரவூத், சயாமின் முதல் பல்கலைக்கழகத்தைத் தொடங்கியதுட்பட, பல புரட்சிகர நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதில் ஒன்று, எளிய மக்களை அதிகாரமிக்க அரச பதவிகளில் அமர்த்தியது. இது, அரச குடும்பத்தினரை எரிச்சலுக்குள்ளாக்கியது. அவர் மறைவுக்குப்பின் அவரின் சகோதரர் பிரஜாதிபோக், ஏழாம் ராமாவாக முடிசூடினார். இவர், ஐந்தாம் ராமாவின் கடைசி(33ஆவது) மகன்(77 குழந்தைகளில் 76ஆவது)! இவ்வளவு இளவரசர்களின் ஆடம்பர செலவுகளால் அரசின் கருவூலம் காலியாக இருந்தது. மக்கள் நலப்பணிகளுக்காக செல்வந்தர்களுக்கு அரசர் வரிவிதித்ததை அரச குடும்பத்தினரே விரும்பவில்லை. மக்களாட்சியை அமைக்க பிரஜாதிபோக் விரும்பினாலும், பெரும்பகுதி மக்களுக்குக் கல்வியறிவில்லாததால் பயனிருக்காது என்பதால், நிர்வாக அவையை உருவாக்கினார். ஆனால், அதனை ஆளும் வர்க்கத்தினரே ஆக்கிரமித்ததுடன், ஏற்கெனவே பதவியிலிருந்த எளியோரையும் வெளியேற்றினர். தங்கள் நாட்டைச் சீரமைக்க, மேற்கத்திய நாடுகளில் படித்துக்கொண்டிருந்தவர்கள் 1927இல் உருவாக்கிய அமைப்பு, கானா ராட்சடான் கட்சியாக(மக்கள் கட்சி) உருவாகி இப்புரட்சியை நடத்தியது. ஏற்கெனவே, மக்களாட்சி அமைக்க விரும்பியவரான பிரஜாதிபோக், அரசியல் சட்ட முடியாட்சியை ஏற்றுக்கொண்டதால், அன்று மாலையே சயாம் இயல்புநிலைக்குத் திரும்பியது! இந்நாள் ஜுன் 25 இதற்கு முன்னால் -ஜூன் 25, 2019 […] 1960 - அமெரிக்க தேசியப் பாதுகாப்பு முகமையில்(என்எஸ்ஏ) சங்கேதச் செய்திகளை மொழிபெயர்ப்பவர்களாகப் பணியாற்றிய வில்லியம் மார்ட்டின், பெர்னான் மிட்ச்செல் ஆகியோர் விடுமுறைக்காக அமெரிக்காவிலிருந்து மெக்சிகோ நோக்கிக் கிளம்பினர். மெக்சிகோவிலிருந்து ஹவானா(கியூபா) சென்று, அங்கிருந்து ரஷ்ய சரக்குக் கப்பலில் ரஷ்யா சென்ற இவர்கள், சோவியத் ஒன்றியத்திடம் தஞ்சம் புகுந்தனர். அமெரிக்காவின் என்எஸ்ஏவிலிருந்து எட்வர்ட் ஸ்நோடென் மாஸ்கோவில் தஞ்சம் புகுந்ததற்கு 53 ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்த இதுதான், என்எஸ்ஏ ஊழியர்கள் முதன்முதலில் மாஸ்கோவில் தஞ்சம் புகுந்த நிகழ்வாகும். விடுமுறைக்குச் சென்ற இவர்களிருவரும் திரும்பவில்லையென்றும், ‘இரும்புத் திரை(சோவியத்)’க்குப்பின்னே சென்றிருக்கலாம் என்றும் 1960 ஆகஸ்ட் 5இல் பெண்டகன்(அமெரிக்கப் பாதுகாப்புத் துறை) அறிவித்தது. செப்டம்பர் 6இல் செய்தியாளர்களைச் சந்தித்த இருவரும், பன்னாட்டு ஒப்பந்தங்களுக்கு முரணாக, அமெரிக்காவுடன் நல்லுறவு கொண்டிருக்கும் நாடுகள் உட்பட, சுமார் 40 நாடுகளின் தகவல் தொடர்புகளை வழிமறித்து அமெரிக்கா ஒட்டுக் கேட்பதாகக் குற்றம் சாட்டினர். 53 ஆண்டுகளுக்குப்பின் ஸ்நோடெனும் இவ்வாறான குற்றச்சாட்டுகளைக் கூறியது கவனிக்கத்தக்கது. பொதுவுடைமை நாடுகளின் அறிவியல், தொழில்நுட்ப, பண்பாட்டு முன்னேற்றங்களால் அமெரிக்கா அச்சமுற்றிருப்பதாகவும், அணு ஆயுதக்குறைப்பு குறித்துப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக்கொண்டே, ’முதல் தாக்குதல்’ நடத்தும் திறனுக்கான உற்பத்திகளைச் செய்வதாகவும் இருவரும் குற்றம் சாட்டினர். ‘முதல் தாக்குதல்’ என்பது, போர்ச்சூழலில், மற்றொரு அணு ஆயுத நாட்டின்மீது முதல் அணு ஆயுதத் தாக்குதலை நிகழ்த்தி, அந்நாடு திருப்பித்தாக்க முடியாமல் அதன் ஆயுதங்களை அழிப்பதைக் குறிக்கிறது. அணு ஆயுதப் போர் ஏற்படுவதைத் தவிர்க்க மாஸ்கோக்கு மட்டுமல்ல, நிலவுக்கே பயணிக்கத் தயாராயிருப்பதாகக்கூறிய அவர்களிருவரையும், தன்பாலினச் சேர்க்கையாளர்கள் என்றுகூறி அசிங்கப்படுத்தி பிரச்சனையைத் திசைதிருப்ப முயற்சித்தது அமெரிக்கா. பனிப்போர் காலத்தில் சுதந்திரத்தைத் தேடுவதாக சோவியத்திலிருந்து அமெரிக்காவிலும், போர்வெறிக்கெதிராக அமெரிக்காவிலிருந்து சோவியத்திலும் ஏராளமானவர்கள் இவ்வாறு தஞ்சமடைந்தாலும், சோவியத்திலிருந்து வந்தவர்கள்பற்றிய செய்திகளைமட்டும் அமெரிக்கா பெரிய அளவில் பரப்பி, சோவியத்தில் மக்கள் சிரமப்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தது என்பது தான் உண்மை! இந்நாள் ஜுன் 26 இதற்கு முன்னால் -ஜூன் 26, 2019 […] 1974 - பொதுவான சரக்குக் குறியீடு(யுனிவர்சல் ப்ராடக்ட் கோட்) என்ற பார்-கோட்மூலமான உலகின் முதல் விற்பனை அமெரிக்காவின் ஒகையோவில் உள்ள மார்ஷின் சூப்பர்மார்க்கெட் என்ற கடையில் செய்யப்பட்டது. அந்த முதல் விற்பனைப் பொருளான ரிக்ளீஸ் சூயிங்-கம் பாக்கெட்டும், அந்த ரசீதும் தற்போது ஸ்மித்சோனியன் நிறுவனத்தில்(அருங்காட்சியகம்) காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உண்மையில் பார்-கோட் 1952இலேயே கண்டுபிடிக்கப்பட்டு, காப்புரிமையும் வழங்கப்பட்டுவிட்டது. 1948இல் ஃபுட் ஃபேர் என்னும் உணவுப்பொருட்கள் சங்கிலித்தொடர் விற்பனை நிறுவனத்திற்கு, பொருட்களை அடையாளம்காணும் தானியங்கிமுறை தேவையென்று கேள்வியுற்ற, மாணவரான பெர்னார்ட் சில்வர், தன் நண்பர் நார்மன் உட்லேண்ட்-டுடன் சேர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். முதலில் புறஊதா மையை முயற்சித்தனர். மை எளிதில் அழிந்ததுடன், செலவும் அதிகமாக இருந்தது. இறுதியாக, மோர்ஸ் தந்திக்குறியீட்டில் பயன்படுத்தப்படும் குறியீடுகளை (புள்ளிகளை கோடாகவும், கோட்டைப் பட்டையாகவும்) நீட்டி உருவாக்கியதே பார்-கோட். எத்திசையிலிருந்தும் படிப்பதற்காக, வட்டமாகவும்(புல்ஸ்-ஐ) உருவாக்கிக் காப்புரிமை பெற்றாலும் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஜிடிஇ-சில்வானியா நிறுவனத்தில் பணியாற்றிய டேவிட் காலின்ஸ், 1961இல் சிவப்பு, நீல பிரதிபலிக்கும் பட்டைகளுடன் உருவாக்கிய, ரயில் பெட்டிகளை அடையாளம்காணும் முறை, பயன்பாட்டுக்கு வந்தாலும், அவற்றின்மீது படியும் அழுக்கு முதலானவற்றால் பின்னர் கைவிடப்பட்டது. ஆனாலும், நியூஜெர்சியில் சுங்கவரியுள்ள பாலம், அமெரிக்க அஞ்சல்துறை ஆகியவை இதைப் பயன்படுத்தத்தொடங்கின. இதன், கருப்பு-வெள்ளை வடிவத்தை உருவாக்க ஜிடிஇ-சில்வானியா ஒத்துழைக்காததால் அந்நிறுவனத்தைவிட்டு வெளியேறி காலின்ஸ் உருவாக்கிய, தொலைவிலிருந்தே அடையாளம்காணவும், பார்கோடு சேதமுற்றிருந்தாலும் அடையாளம்காணவும் உதவிய ஹீலியம்-நியான் ஸ்கேனர் 1969இல் ஜெனரல் மோட்டார்சில் பயன்பாட்டுக்குவந்தது. 1972இல் உணவுச் சங்கிலியின் தேசியச் சங்கத்திற்கு தானியங்கி அடையாளம்காணும்முறை தேவைப்பட்டபோது, உட்லேண்ட்டிடமிருந்து காப்புரிமையை வாங்கிய ஆர்சிஏ நிறுவனம், அதனைக் காட்டியது. இதைப் பார்த்த ஐபிஎம், அப்போது தங்களிடம் பணியாற்றிக் கொண்டிருந்த உட்லேண்டை பயன்படுத்தி வெற்றிகரமான பார்கோடை உருவாக்கியது. நோயாளிகளின் அடையாளம் உட்பட ஏராளமானவற்றுக்கு பார்கோட் பயன்படுகிறது. பட்டைகள் மட்டுமின்றி, புள்ளிகள், சதுரங்கள் முதலானவற்றைக்கொண்ட இருபரிமாணக் குறியீடுகளும் உருவாயின. இருபரிமாணக் குறியீடுகளில் ஒரு வகையே தற்போதைய க்யூஆர்-கோட். 1995இல் உருவான ஆர்எப்ஐடி-யின் வரவு பார்கோடைவிட மேம்பட்ட வசதிகளை அளித்தது. இந்நாள் ஜுன் 27 இதற்கு முன்னால் -ஜூன் 27, 2019 […] 1652 - உலகின் முதல் வேக வரம்பு(ஸ்பீட் லிமிட்), நியூ ஆம்ஸ்ட்ர்டாம்(தற்போதைய நியூயார்க்!) நகரில் நடைமுறைப்படுத்தப்பட்டது! ஆம்! மோட்டார் வாகனங்களுக்கு முன்பே வேக வரம்பு உருவாகிவிட்டது. நியூ ஆம்ஸ்டர்டாம் என்பது, வட அமெரிக்காவிலிருந்த டச்சுக் குடியேற்றமான, நியூ நெதர்லாந்தின் தலைநகரமாகும். 1664இல் டச்சுக் குடியேற்றத்தைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள், இங்கிலாந்திலுள்ள யார்க் பகுதியின் (ட்யூக்)சிற்றரசரை (இவர்தான் பின்னாளில் இங்கிலாந்தின் இரண்டாம் ஜேம்ஸ் அரசரானார்) கவுரவிக்கும்வகையில், நியூயார்க் என்று பெயரிட்டனர். வேக வரம்பு என்பது அப்போது எண்களால் நிர்ணயிக்கப்படவில்லை. மாறாக, நகரத்திற்குள் வாகனங்களை(குதிரைகளால் இழுக்கப்படுபவை என்பதால்) ‘நாலுகால் பாய்ச்சலில்’ ஓட்டக்கூடாது என்றும், மீறுபவர்களுக்கு இரண்டு ‘ஃப்ளெமிஷ் பவுண்டுகள்(அக்காலத்திய ஐரோப்பிய தங்க நாணயம்)’ (தற்போது சுமார் 50-150 டாலர்கள்!) அபராதம் என்றும் அறிவிக்கப்பட்டது. ‘மூர்க்கத்தனமாக’ வண்டியோட்டி பயணிகளுக்கோ, மற்றவர்களுக்கோ ஆபத்து விளைவிப்பதைத் தடுக்க 1832இல் இங்கிலாந்தில் சட்டமியற்றப்பட்டது. இயந்திரத்தால் இழுக்கப்படும் வண்டிகள் நகருக்குள் 10 மைல் வேகத்திற்குமேல் செல்லக்கூடாது என்று 1861இல் இங்கிலாந்தில் இயற்றப்பட்டதே, முதலில் எண்களில் வேக வரம்பை நிர்ணயித்த சட்டமாகும். 1865இல் இந்த வேக வரம்பு நகருக்குள் 2 மைலாகவும், கிராமப்பகுதிகளில் 4 மைலாகவும் குறைக்கப்பட்டது. இங்கிலாந்தின் கிழக்கு பெக்கம் நகரில், 8 மைல் வேகத்தில் சென்ற வால்ட்டர் அர்னால்ட் என்பவருக்கு 1896 ஜனவரி 28இல் ஒரு ஷில்லிங் அபராதம் விதிக்கப்பட்டதே, வேக வரம்பை மீறியதற்கான முதல் அபராதமாகும். 1896இல் இங்கிலாந்தில் இயற்றப்பட்ட ‘நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கான சட்டம்’, வேக வரம்பை 14 மைலாக உயர்த்தியது. வழக்கமான சாலைகளில் 60இலிருந்து 100 கி.மீ. வரையும், விரைவுச் சாலைகளில் 60இலிருந்து 120 கி.மீ. வரையும், மோட்டார்வே சாலைகளில் 80இலிருந்து 140 கி.மீ. வரையும் வேக வரம்புகளாகத் தற்போது பன்னாட்டு அமைப்புகளால் பரிந்துரைக்கப்படுகின்றன. முன்னேறிய நாடுகள் பலவற்றிலும் ஒவ்வொரு சாலைக்குமான குறைந்தபட்ச வேக வரம்பும் நிர்ணயிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்நாள் ஜுன் 28 இதற்கு முன்னால் -ஜூன் 28, 2019 1870 - அமெரிக்கக் கூட்டரசின் விடுமுறை நாட்களுக்கான விதி, (விடுதலையடைந்து 94 ஆண்டுகளுக்குப்பின்!) அமெரிக்கப் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. விடுமுறை நாட்களும் மாநில அரசுகளாலேயே முடிவுசெய்யப்படும் அமெரிக்காவில், அப்போதும்கூட, மாநில அரசுகள் அளிக்கிற விடுமுறைகளை, தலைநகரமான கொலம்பியா மாவட்டத்திலுள்ள (வாஷிங்டன்), கூட்டரசின் ஊழியர்களுக்கு வழங்குவதே அந்த உத்தரவின் நோக்கமாக இருந்தது. பின்னர் அது, மற்ற இடங்களிலுள்ள கூட்டரசின் அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டாலும், கூட்டரசின் விதி, கூட்டரசின் அலுவலகங்களுக்குத்தான் பொருந்தும் என்பதுடன், இன்றுவரை, கூட்டரசின் விடுமுறை நாட்களை, அதே தேதிகளில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் மாநில அரசுகளுக்கு இல்லை. அதனால், மாநில அரசுகள் மாறுபட்ட விடுமுறை நாட்களைக் கொண்டிருப்பதுடன், தங்கள் பகுதிக்குரிய விடுமுறை நாட்களையும் கொண்டிருக்கின்றன. கூட்டரசின் விடுமுறை நாட்களும் 1968இல் இயற்றப்பட்ட சீரான திங்கட்கிழமை விடுமுறைச்சட்டத்தின்மூலம், வாரவிடுமுறையுடன் இணைக்கப்பட்டது இத்தொடரில் 2018 ஜூன் 28இல் இடம்பெற்றுள்ளது. தற்போது, அமெரிக்கக் கூட்டரசின் விடுமுறை நாட்களாக 10 நாட்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றை எல்லா மாநிலங்களும் கடைப்பிடிக்கின்றன. ஆண்டுக்கு 36 நாட்கள் பொது விடுமுறைகொண்டுள்ள நேபாளமே உலகில் மிக அதிக விடுமுறைகொண்ட நாடாகவுள்ளது. விடுமுறை என்பதன் வரலாறு மதம் சார்ந்ததாகவே உள்ளது. மத நடவடிக்கைகளில் பங்கேற்பதற்காக, பணியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதே விடுமுறையின் தொடக்கமாக இருந்திருக்கிறது. ‘ஹோலி’, ‘டே’ ஆகியவை இணைந்த புனிதநாள் என்பதே பின்னாளில் விடுமுறை என்ற பொருளுடைய சொல்லாகியது. உழைப்பாளர் நாள், ஒவ்வொரு நாட்டின் விடுதலை நாள் உள்ளிட்ட மதம்சாராத விடுமுறை நாட்களும் ஹாலிடே என்றே அழைக்கப்பட்டாலும், இன்றும் மதம்சார்ந்த விடுமுறை நாட்களே உலகெங்கும் பெரும்பான்மையாகவுள்ளன. இங்கிலாந்திலும், அதன் ஆளுகையின்கீழிருந்த நாடுகளிலும், எல்லா விடுமுறை நாட்களுமே ஹாலிடே என்றே அழைக்கப்பட்டாலும், அமெரிக்கா போன்ற நாடுகளில் பொது விடுமுறைகள் மட்டுமே ஹாலிடே என்றும், மற்றவை வெக்கேஷன் என்று அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் விடுதலை நாள், குடியரசு நாள், காந்தி பிறந்த நாள் ஆகியவை கட்டாய விடுமுறை நாட்களாக உள்ளன. இந்நாள் ஜுன் 29 இதற்கு முன்னால் -ஜூன் 29, 2019 […] 1949 - இன ஒதுக்கல்(அபார்த்தெய்ட் அல்லது அபார்த்தீட்) முறையின் முதல் சட்டமான கலப்பின திருமணங்கள் தடைச்சட்டம் தென்ஆஃப்ரிக்கப் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது(ஜூலை 1இல் அரச ஒப்புதல்பெற்று, ஜூலை 8இல் நடைமுறைப்படுத்தப்பட்டது). அபார்த்தீட் என்ற ஆப்ரிக்கன்ஸ் மொழிச் சொல்லுக்கு பிரித்து வைத்தல் என்று பொருள். 25 லட்சம் ஆண்டுகளுக்குமுன்பே மனிதனின் மூதாதைகள் வாழ்ந்த பகுதியான ஆப்ரிக்கா, மனித இனம் பரிணாமம் பெற்ற இடங்களுள் ஒன்று. ஒன்றேகால் லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே (முழுமையடைந்த)மனிதன் வாழ்நத இப்பகுதிக்குள் 1488இல் போர்ச்சுகீசியரான பார்த்தலேமு டயஸ் கால்பதித்தார். 1652இல் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி நுழைந்து, ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியதிலிருந்தே அதிகாரப்பூர்வமற்ற இன ஒதுக்கல் தொடங்கிவிட்டது. கேப் நகர-கிராமப் பகுதிகளுக்கிடையே பயணிக்கும் கருப்பினத்தவர் அனுமதி அட்டை வைத்திருக்கவேண்டும் என்று 1760இல் இயற்றப்பட்ட சட்டத்தின்மூலம் டச்சுப் பேரரசின் சட்டமாக்கப்பட்ட இன ஒதுக்கல் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே தொடங்கிவிட்டது. 1795இல் கேப் குடியேற்றத்தை ஆங்கிலேயர் கைப்பற்றினர். 1802இல் ஏற்பட்ட ஒப்பந்தப்படி டச்சுக்காரர்கள் மீண்டும் பெற்றாலும், 1806இல் மீண்டும் ஆங்கிலேயர் கைப்பற்றினர். 1833இல் இங்கிலாந்துப் பேரரசு முழுவதிலும் அடிமை முறையை ஒழிக்கும் சட்டம் இயற்றப்பட்டாலும், ஆப்ரிக்காவில் வேறு பெயர்களில் அடிமை முறையைத் தொடரும் அவசரச்சட்டங்கள் இயற்றப்பட்டன. கருப்பினத்தவரின் வாக்குரிமையைக் குறைத்த சட்டம், இந்தியர் வாக்குரிமையைப் பறித்த சட்டம், ஆப்ரிக்கர்களின் நில உரிமையைக் குறைத்த சட்டம் உள்ளிட்டவை 1890களில் இயற்றப்பட்டன. 1910இல் தென்ஆப்ரிக்க ஒன்றியம் உருவாக்கப்பட்டபின், வெள்ளையருக்கு மட்டும் வாக்குரிமை, வெள்ளையர் தவிர்த்த மற்றவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் தவிர பிற இடங்களில் நிலம் வாங்குவதற்குத் தடை உள்ளிட்ட பல சட்டங்கள் இயற்றப்பட்டன. ‘தேசியக் கட்சி’ 1948இல் நடைபெற்ற தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றி இயற்றிய, மக்களை வெள்ளையர், கருப்பினத்தவர், (வெள்ளையல்லாத!) நிறத்தவர், இந்தியர், ஆசியர் என்று பல்வேறு பிரிவுகளாகப் பிரிப்பு, கருப்பினத்தவரின் குடியுரிமை பறிப்பு முதலான இன ஒதுக்கல் சட்டங்கள் 1991வரை நடைமுறையிலிருந்தன. இந்நாள் ஜுன் 30 இதற்கு முன்னால் -ஜூன் 30, 2019 […] 1934 - ‘நீள்கத்திகளின் இரவு’ என்று குறிப்பிடப்படும் படுகொலைகள் ஜெர்மனியில் ஹிட்லரால் நடத்தப்பட்டன. ஜூன் 30இலிருந்து ஜூலை 2வரை நடைபெற்ற இந்நிகழ்வில் கொல்லப்பட்டோர் 85 பேர் என்று அதிகாரப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்டிருந்தாலும், சுமார் 700இலிருந்து 1000 பேர்வரை கொல்லப்பட்டனர். ஸ்டுர்மாப்டெய்லங் (எஸ்ஏ) என்ற தனியார் படையை(அதுவும் நாஜிகளுடையதுதான்!) ஒடுக்குவதற்காக, அதன் தலைவர்களும், அவர்களுக்கு நெருக்கமானவர்களும் இலக்குவைத்துக் கொல்லப்பட்டனர். நாஜிக்கட்சியின் கூட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றுக்குப் பாதுகாப்பளிப்பது, எதிர்க்கட்சிகளின் கூட்டங்களில் இடையூறு ஏற்படுத்துவது முதலான பணிகளை முதன்மையாகக் கொண்டிருந்த இந்த அமைப்பு, ஹிட்லர் அதிகாரத்துக்கு வருவதில் முக்கியப் பங்காற்றியது. 1759இல் ஏழாண்டுப் போரின்போது உருவாக்கப்பட்ட ஃப்ரெய்கார்ப்ஸ்(அணிதிரட்டப்படாத வீரர்கள்) என்ற படையினர், முதல் உலகப்போரில் ஜெர்மனி வெல்லும் நிலையிலிருந்து ஏமாற்றப்பட்டதாக நம்பியதுடன், வெய்மார் குடியரசை உருவாக்கிய நவம்பர் புரட்சிக்குக் காரணமானவர்களை ‘நவம்பர் குற்றவாளிகள்’ என்றே அழைத்தனர். ரஷ்யாவைப் போன்று பொதுவுடைமைப் புரட்சி உருவாகிவிடாமல் தடுப்பதற்காக, ஃப்ரெய்கார்ப்ஸ் படையின் முன்னாள் வீரர்களைக்கொண்டு எஸ்ஏ உருவாக்கப்பட்டது. பொதுவுடைமையாளர்கள், சமூக ஜனநாயகவாதிகள் ஆகியோரின்மீது இவர்கள் நடத்திய கொடுந்தாக்குதல்களால் மூர்க்க வீரர்கள் என்றும், அவர்களது உடையால் பழுப்புச்சட்டைகள் என்றும் அழைக்கப்பட்டனர். ஜெர்மனி ஒரு லட்சம் படைவீரர்களை மட்டுமே வைத்துக்கொள்ளலாம் என்று வெர்செய்ல்ஸ் ஒப்பந்தம் கட்டுப்பாடு விதித்திருந்ததால் அதிகாரப்பூர்வ ராணுவமான ரீச்ஸ்வெர்-இல் ஒரு லட்சம் வீரர்கள் மட்டுமே இருந்த நிலையில், எஸ்ஏ 30 லட்சம் வீரர்களைக் கொண்டிருந்தது. இதனால் தங்களை அதிகா ரப்பூர்வ ராணுவமாக அறிவிக்கவேண்டும் என்று எஸ்ஏ தலைவர் ரோம் வலியுறுத்தினார். இவர் ஹிட்லர் நடத்திய முதல் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியான பீர் ஹால்புரட்சியிலி ருந்தே அவருக்குத் துணைநின்றவர் என்றாலும், நாஜிக்கட்சி பெயரில் மட்டும் கொண்டிருந்த தேசிய சோசலிசத்தை இன்னும் பேசிக்கொண்டிருந்தார். முப்படைகளும் இன்னும் குடியரசுத் தலைவர் ஹிண்டன்பர்க் கட்டுப்பாட்டிலேயே இருக்க, அவற்றின் நம்பிக்கையை ஹிட்லர் பெற்றால்தான் முழு அதிகாரம் கிடைக்கும் என்ற நிலையில், அதற்கு எஸ்ஏவின் நடவடிக்கை கள் இடையூறாக இருந்ததால் ரோம் உள்ளிட்ட முக்கிய தலை வர்கள், ஹிட்லரின் உத்தரவின்படி, மற்றொரு (அடியாள்)படை யான சுட்ஸ்டாஃபல் படையால் படுகொலை செய்யப்பட்டனர். (கூட்டங்களுக்கு, விவாதங்களுக்கு இடையூறு என்பதையெல்லாம் இப்போது நாம் இந்தியாவில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஃபாசிசப் பாதையில், ஏறும்வரைதான் ஏணி முக்கியம் என்பதை இன்றுள்ள அடியாள் படைகள் புரிந்து கொள்ளா விட்டால் எஸ்ஏவின் நிலைதான் ஏற்படும்!) இந்நாள் ஜுலை 01 இதற்கு முன்னால் -ஜூலை 1, 2019 1946 - பசிபிக் பெருங்கடலின் மார்ஷல் தீவுகளில் ஒன்றான பிகினி அட்டால் தீவில், அணுஆயுதச் சோதனையை அமெரிக்கா நிகழ்த்தியது. சோவியத் ஒன்றியத்தின்மீதான அச்சத்தால், அணுஆயுதங்களை உருவாக்குவதற்காக, 1946-58 காலத்தில் இத்தீவில் 23 அணுஆயுதச் சோதனைகளை அமெரிக்கா மேற்கொண்டது. 42.2 மெகாடன்(4.22 கோடி டன்!) வெடிமருந்தை வெடித்த விளைவை ஏற்படுத்தி இங்கு நடத்தப்பட்டவை, அனைத்து நாடுகளாலும், உலகம் முழுவதும் நடத்தப்பட்டுள்ள ஒட்டுமொத்த அணுஆயுதச் சோதனைகளில் சுமார் ஆறில் ஒரு பங்கு ஆகும்! கப்பல்க ளை மூழ்கடிப்பதில் அணுஆயுதங்களின் திறனைச் சோதிப்பதற்காக அமெரிக்கா இங்கு கொண்டுவந்த போர்க்கப்பல்களைத் தனியாகக் கடற்படையாக்கியிருந்தால் அது, உலகின் ஆறாவது பெரிய கடற்படையாக இருந்திருக்கும். வானில், கடலுக்கு அடியில் என்று பல்வேறு வடிவங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. முதலிரண்டு சோதனைகளிலேயே கடற் பரப்பின் வெப்பநிலை 55,000 பாகை செண்ட்டிகிரேட் அளவுக்கு உயர்ந்து, 100 அடி உயர அலைகள் எழுந்ததுடன், சேதமுறாமல் எஞ்சியிருந்த கப்பல்கள் சோதனைக்கே பயன்படுத்தமுடியாத அளவுக்கு கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டுவிட்டன. அதனால் 1954இல்தான் நடத்தப்பட்ட அடுத்தகட்ட சோதனைகளில், ஹிரோஷிமா, நாகசாகி போல ஆயிரம் மடங்கு சக்தி வெளிப்பட்டதுடன், கதிர்வீச்சுக் குப்பைகள் ஆஸ்திரேலியா, இந்தியா என்று உலகம் முழுவதும் கொட்டின. அவற்றால் பாதிக்கப்பட்ட ஜப்பானிய மீனவர் ஒருவர் சில மாதங்களில் இறக்குமளவுக்கு பாதிப்பு இருந்ததால் உலகம் முழுவதும் தெரிந்துபோனது. இச்சோதனையை நடத்திக்கொண்டிருந்தவர்களின்மீதும் கதிர்வீச்சுக் குப்பைகள் கொட்டி, அவர்கள் தப்பிச் செல்லவேண்டியிருந்ததுடன், மற்ற தீவிலிருந்தவர்களுக்கும் கடுமையான கதிர்வீச்சு பாதிப்புகள் ஏற்பட்டன. அப்போதுதான், அணுவெடிப்பின் உடல்நல பாதிப்புகள்குறித்து அமெரிக்கா சிந்திக்கவே தொடங்கியது. அடால் என்றால் பவளத்தீவு. பிகினி அட்டாலிலிருந்தவர்களை, உலகம் முழுதும் போரை ஒழிப்பதற்காக சோதனை என்று சொல்லி மனிதர்கள் வாழாத(வாழ முடியாத) ரோங்கரிக் தீவில் சிலநாட்களுக்கான உணவு, தண்ணீர் மட்டும் வழங்கி இறக்கிவிட்டிருந்தது அமெரிக்கா. அவர்கள் உணவின்றித் தவித்த செய்தி வெளிப்பட்டவுடன் தீவு தீவாக அலைக்கழித்து, பிகினியே பாதுகாப்பானது என்று பொய்சொல்லி அனுப்பியது. பலரும் இறந்தபின் மீண்டும் இடம் மாற்றி, உலகின் கண்டனங்களுக்குப்பின் பல மில்லியன் டாலர்களை இழப் பீடாக வழங்கினாலும், சொந்த மண்ணும், வாழ்வும் அவர்களிடமிருந்து பறிக் கப்பட்டுவிட்டன. (முதல் சோதனை முடிந்து நான்கு நாட்களாகியிருந்த நிலை யில் பிரான்சில் அறிமுகப்படுத்தப்பட்ட உடைக்கு, இதன் நினைவாகவே பிகினி என்று பெயரிடப்பட்டது. விளக்கமாக ஜூலை 5இல்!) இந்நாள் ஜுலை 02 இதற்கு முன்னால் -ஜூலை 2, 2019 […] 1962 - வருவாய் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய நிறுவனமாக விளங்கும் வால்மார்ட்-டின் முதல் கடை திறக்கப்பட்டது. ஜே.சி.பென்னி என்ற சங்கிலித்தொடர் சில்லரை விற்பனை நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவம்கொண்ட 27 வயது இளைஞர் சாம் வால்ட்டன், 1945இல் பென் பிராங்க்ளின் தொடர் கடைகளின் கிளை ஒன்றை வாங்கி நடத்தத் தொடங்கினார். மிகக்குறைந்த விலைக்கு மிக அதிகப் பொருட்களை விற்பனைசெய்யும் முயற்சியில், மற்ற நிறுவனங்களைவிடக் குறைந்த விலைக்குப் பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கான வழிகளையும் கண்டறிந்தார். வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த விலையில் விற்பனை செய்வதே நோக்கம் என்று அறிவித்து, முதலாண்டிலேயே 1.05 லட்சம் டாலர்கள்(தற்போது ரூ.952 கோடி!) வருவாய் ஈட்டியதுடன், ஐந்தாண்டுகள் முடிவில் ‘வால்ட்டனின் ஐந்தும் பத்தும்’ என்ற கடையைத் திறந்த அவர்தான் 1962இல் வால்மார்ட்டை உருவாக்கினார். ஐந்தாண்டுகள் முடிவில் 24 கிளைகளைக் கொண்டிருந்த வால்மார்ட், 25ஆம் ஆண்டு இறுதியில் 1198 கிளைகளைக் கொண்டிருந்தது. தற்போது, மொத்தமுள்ள 11,368 வால்மார்ட் கடைகளில், 6,006 கடைகள் 58 வெளிநாடுகளில் உள்ளன. இவற்றில் 90 சதவீதம் வேறு பெயர்களில் இயங்குகின்றன (மெக்சிகோவில் வால்மெக்ஸ், இங்கிலாந்தில் ஆஸ்டா, ஜப்பானில் செய்யூ, இந்தியாவில் பெஸ்ட் ப்ரைஸ்!). 1969இல் கார்ப்பரேட் நிறுவனமாக்கப்பட்ட வால்மார்ட், 2002இல் ஃபார்ச்சூன் 500இல் இடம்பிடித்தது. தற்போது (2018-19), 514.4 பில்லியன் டாலர்(ரூ.35.50 லட்சம் கோடி!) வருவாயுடன் உலகின் மிகப்பெரிய தனியார் நிறுவனமாகவும், 22 லட்சம் ஊழியர்களுடன் உலகின் மிகப்பெரிய தனியார் வேலையளிப்பவராகவுமுள்ள வால்மார்ட், உலகின் மிகப்பெரிய தனியார் செயற்கைக்கோள் நெட்வொர்க்கையும்கொண்டு, அதன்மூலம் அனைத்துக் கடைகளையும் இணைத்துள்ளது. வால்மார்ட் கடைகளின் மொத்தப் பரப்பளவு, மன்ஹாட்டன் நகரைப்போல ஒன்றரை மடங்கு! இந்நிறுவனத்தின் பாதிக்கும் மேற்பட்ட பங்குகளை இன்றும் கொண்டிருக்கும் வால்ட்டன் குடும்பத்தினரே, அமெரிக்காவின் முதல் 10 செல்வந்தர்கள் பட்டியலில் 4 இடங்களை ஆக்கிரமிக்கின்றனர்! கடுமையான தொழிற்சங்க எதிர்ப்புக்கொள்கைகளைக் கொண்டிருக்கிற வால்மார்ட் மீது குறைவான ஊதியம், மோசமான பணிநிலைகள் உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உலகம் முழுவதும் உள்ளன. இந்நாள் ஜுலை 03 இதற்கு முன்னால் -ஜூலை 3, 2019 […] 1886 - லினோடைப் எந்திரத்தின்மூலம் அச்சிடப்பட்ட முதல் செய்தித்தாளாக நியூயார்க் டிரிப்யூன் வெளியாகியது. 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிவரைகூட நாம் அச்சகங்களில் பார்த்திருக்கக்கூடிய, எழுத்துக்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கோக்கும் முறையில்தான் அதுவரை செய்தித்தாள்கள் வெளியாகிக்கொண்டிருந்தன. அக்காலத்தில், மேல் வரிசைப் பெட்டிகளில் கேப்பிடல் எழுத்துகளும், கீழ்வரிசைப் பெட்டிகளில் சிறிய எழுத்துகளும் இருக்கும். அதனாலேயே அப்பர்கேஸ்(மேல் பெட்டி!), லோயர்கேஸ்(கீழ்ப்பெட்டி!) என்று குறிப்பிடும் முறை உருவானது! 1566இல் வெனிசில் கையெழுத்துப் பிரதியாக முதல் செய்தித்தாள் வெளியாகியது. முதல் அச்சிடப்பட்ட செய்தித்தாள் 1605இல் ஜெர்மனியில் வெளியாகியது (இத்தொடரில் 2018 நவம்பர் 7இல்). அச்சிடும் தொழில்நுட்பங்களில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்ட 1800கள்தான் நவீன செய்தித்தாள்களின் தொடக்கமாகும். 1814இல் தி டைம்ஸ் இதழ், ஒரு மணிநேரத்திற்கு 1,100 பிரதிகள் அச்சிடும் எந்திரத்தை வாங்கியது மிகப்பெரிய முன்னேற்றமாகக் கருதப்பட்டது. அமெரிக்காவில் குடியேறிய ஜெர்மானியரான வோட்மார் மெர்ஜென்த்தாலெர் சூடான உலோகத் தகட்டில் எழுத்துகளை பதித்து அச்சிடும் லினோடைப் முறையை உருவாக்கினார். நீதிமன்ற நடவடிக்கைகளை ஆவணப்படுத்தும் பணியிலிருந்த ஜேம்ஸ் க்ளஃபேன், அதற்கு உதவியாக ஒரு தட்டச்சு எந்திரத்தையும் உருவாக்கியிருந்தார். இவர் 1876இல், மெர்ஜென்த்தாலரை அணுகியபோது, அத்தட்டச்சு எந்திரத்திலிருந்த குறைகளை மெர்ஜென்த்தாலர் கண்டுபிடித்து சரிசெய்தார். நீதிமன்ற ஆவணங்களை இன்னும் விரைவாக அச்சிட ஒரு கருவி தேவையென்று கருதிய க்ளஃபேனின் தூண்டுதலில்தான், லினோடைப் எந்திரத்தை மெர்ஜென்த்தாலெர் உருவாக்கியதால், லினோடைப் எந்திரத்தின் தந்தை என்று க்ளஃபேன் குறிப்பிடப்படுகிறார். விசைப்பலகையின்மூலம் உள்ளிடப்பட்டு, ஒரே நேரத்தில் வரி முழுவதையும் (லைன்-ஓ-டைப்) அச்சிடும் லினோடைப் எந்திரம் மிகப்பெரிய முன்னேற்றமாக இருந்ததுடன், அடுத்த நூறாண்டுகளுக்கு செய்தித்தாள் அச்சிடுவதற்கான முதன்மையான முறையாகவும் விளங்கியதால், இரண்டாம் கூட்டன்பர்க் என்று மெர்ஜென்த்தாலர் புகழப்படுகிறார். ஃபோட்டோ டைப்செட்டிங், ஆஃப்செட் லித்தோகிராஃபி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டாலும் செய்தித்தாள் துறையில் 1970,80கள்வரை லினோடைப்பே கோலோச்சியது. 20ம் நூற்றாண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கணினி அச்சுக்கோப்பு, மற்ற அனைத்துத் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டையுமே இன்று முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது. இந்நாள் ஜுலை 06 இதற்கு முன்னால் -ஜூலை 6, 2019 […] 1885 - லூயி பாஸ்ச்சர்(பாஸ்டியர்), வெறிநாய்க்கடிக்கான மருந்தை, ஜோசப் மெய்ஸ்ட்டர் என்ற 9 வயதுச் சிறுவனுக்குச் செலுத்தி வெற்றிகண்டார். அடிப்படையில் வேதியியல் பேராசிரியரான பாஸ்ச்சர், டார்ட்டாரிக் அமிலத்தை நுண்ணிய படிகங்களாகப் பிரித்து, கண்ணாடிப் பிம்பங்களாக இரு வடிவங்களில் அதன் மூலக்கூறுகள் இருப்பதையும், படிகங்களின் ஒளியில் பண்புகளுக்கு அதுவே காரணமென்றும் கண்டறிந்தவர். மூலக்கூறுகளின் சமச்சீரின்மையை முதன்முதலில் விளக்கிய பாஸ்ச்சரின் இக்கண்டுபிடிப்பு, மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. பாஸ்ச்சரின் மாணவர் ஒருவர், தன் தந்தை உற்பத்தி செய்யும் பீட்ரூட் மது கெட்டுப்போகும் பிரச்சினைக்குத் தீர்வு கேட்டதையடுத்து, அதை ஆய்ந்த பாஸ்ச்சர், சர்க்கரையிலிருந்து மதுவை உருவாக்கும் நொதித்தலுக்கு யீஸ்ட்-தான் காரணம் என்று கண்டுபிடித்தார். அத்துடன், காற்றுப்புகும்படி வைத்தால் நொதித்தல் குறைவாக இருக்கும் என்ற பாஸ்ச்சரின் கண்டுபிடிப்பு பாஸ்ச்சர் விளைவு என்றழைக்கப்படுகிறது. இந்த ஆய்வின் தொடர்ச்சியாக பியர், பால் முதலானவை கெட்டுப்போக நுண்ணியிரிகள்தான் காரணம் என்பதையும் கண்டுபிடித்தார். கிருமி நீக்கம் செய்வதற்கு இவை அதிக வெப்பநிலைக்கு உட்படுத்தப்படும். குறைவான வெப்பநிலையைப் பயன்படுத்தி, கெட்டுப்போகச் செய்யும் நுண்ணியிரிகளை மட்டும் அழிக்கும் முறையைப் பாஸ்ச்சர் கண்டுபிடித்தார். அது அவரது பெயராலேயே பாஸ்ச்சரைசேஷன் என்று அழைக்கப்படுகிறது. அதுதான் இன்று நாம் வாங்கும் பாஸ்ச்சரைஸ்ட்டு மில்க்-கை உருவாக்கும் முறை! நுண்ணியிரிகள்குறித்த ஆய்வில், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் நோய்கள் உண்டாக அவை காரணமென்ற பாஸ்ச்சரின் கண்டுபிடிப்பே, ஆண்ட்டிசெப்ட்டிக் முறைகளை ஜோசஃப் லிஸ்ட்டர் உருவாக்கக் காரணமாக இருந்தது. கிருமிக்கொள்கை என்பது ஏற்கெனவே இருந்தாலும், அதில் பாஸ்ச்சரின் கண்டுபிடிப்புகளால் ஏற்பட்ட முன்னேற்றங்களால் அவர் நுண்ணுயிரி இயலின் தந்தை என்று புகழப்படுகிறார். கோழிகளுக்கு ஏற்படும் காலரா பற்றிய ஆய்வில், எதிர்பாராமல் சரியாக வளராமற்போன பாக்டீரியங்களைச் செலுத்தியபோது, கோழிகளுக்கு மீண்டும் நோய் தாக்கவில்லை. அதனால், அம்மைக்கான தடுப்பூசியைப்போன்றல்லாமல், செயற்கையாகப் பலவீனப்படுத்தப்பட்ட பாக்டீரியங்களைக்கொண்டு கோழிகளின் காலரா, பசுக்களின் ஆந்த்ராக்ஸ் நோய்களைக் குணப்படுத்திய பாஸ்ச்சர் அதே முறையில், பலவீனப்படுத்தப் பட்ட வைரசைப் பயன்படுத்தி வெறிநாய்க்கடிக்கான மருந்தை யும் உருவாக்குவதிலும் வெற்றிகண்டார்! இந்நாள் ஜுலை 07 இதற்கு முன்னால் -ஜூலை 7, 2019 […] 1928 - துண்டுகளாக வெட்டப்பட்ட ரொட்டி(ஸ்லைஸ்ட் ப்ரெட்) முதன்முதலாக அமெரிக்காவின் மிசவுரியில் சிலிக்கோத் பேக்கிங் கம்பெனியால் விற்பனை செய்யப்பட்டது. முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறைகளில் காணப்பட்ட ஸ்டார்ச் எச்சங்கள், அக்காலத்திலேயே ரொட்டி செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதக் காரணமாயுள்ளன. தாவரங்களின் வேர்ப்பகுதியிலிருந்து ஸ்டார்ச் எடுக்கப்பட்டு, பாறைகளின்மீது பரப்பப்பட்டு ரொட்டியாகச் சுடப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 14,500 ஆண்டுகளுக்குமுன் ஜோர்டான் பகுதியில் ரொட்டி செய்யப்பட்டதாகக் கிடைத்துள்ளவையே ரொட்டியின் மிகப்பழைய ஆதாரங்களாகும். கி.மு.10 ஆயிரங்களில் விவசாயம் பரவிவிட்ட நிலையில், ரொட்டி செய்ய தானியங்கள் பயன்படுத்தப்பட்டன. தானியங்களின் மேற்புறத்தில் இயற்கையாகக் காணப்படக்கூடிய யீஸ்ட்மூலமாகவும், ஈர மாவை சமைப்பதற்குமுன் திறந்து காற்றாட வைத்து, காற்றிலுள்ள யீஸ்ட் மூலமாகவும் அக்காலத்தில் புளித்தலும், மென்மையாக்கலும் செய்யப்பட்டுள்ளன. பீரைப் பயன்படுத்திப் புளிக்கச்செய்து ரொட்டி செய்யப்பட்டதாகவும், ரோம எழுத்தாளர் மூத்த பிளினி குறிப்பிட்டுள்ளார். இந்தியன் ப்ரெட்கள் என்றழைக்கப்படும் சுக்கா ரொட்டி, நான் முதலியவை உட்பட பல்வேறு விதமான ரொட்டிகள் உலகம் முழுவதும் உண்ணப்படுகின்றன. மென்மையாக்குவதற்கு உதவும் க்ளூட்டன் மிகுந்திருப்பது உள்ளிட்ட காரணங்களால், கோதுமையே பெரும்பாலும் ரொட்டி தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் உலகில் மிக அதிக அளவில் உண்ணப்படும் தானியமாக கோதுமையே உள்ளது. வீட்டில் வெட்டும் வேலையைத் தவிர்த்ததுடன், சீரான துண்டுகளையும் உருவாக்கியதால், வோட்டோ ரோவெடர் கண்டுபிடித்த இந்த ரொட்டியை வெட்டும் எந்திரம் மிகப்பெரிய முன்னேற்றமாக அமைந்தது. இதனாலேயே, புதிய கண்டுபிடிப்புகளை, ரொட்டியைத் துண்டாக்குதலையடுத்த பெரிய கண்டுபிடிப்பு என்று கூறும் பழக்கம் ஆங்கிலத்தில் உள்ளது. மெல்லிய துண்டுகளாகக் கிடைத்ததால் ரொட்டி அதிக அளவிலும், அடிக்கடியும் உண்ணப்பட்டு, நுகர்வு அதிகரித்ததுடன், ரொட்டியில் தடவக்கூடிய ஜாம் முதலானவற்றின் விற்பனையும் அதிகரித்தது. இதனால், இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் நுகர்வைக் குறைப்பதற்காக, வெட்டப்பட்ட ரொட்டியை விற்க அமெரிக்காவில் தடைவிதிக்கப்பட்டது. கடும் எதிர்ப்பு எழுந்ததையொட்டி, வெட்டப்பட்ட ரொட்டியைச் சுற்றப் பயன்படுத்தப்படும் மெழுகுத்தாளின் பயன்பாட்டைக் குறைக்கவே தடை செய்ததாகவும், போதிய மெழுகுத்தாள் இருப்பு இருப்பதால் தடைநீக்கப்படுவதாகவும் அமெரிக்க அரசு அறிவித்தது. TAGS ## # இந்நாள் ஜுலை 07 ## # இந்நாள் ஜுலை 07 ## # இந்நாள் ஜுலை 07 இந்நாள் ஜுலை 08 இதற்கு முன்னால் -ஜூலை 8, 2019 […] 1948 - அமெரிக்காவில் பெண்களுக்கு வான்படையில் இடமளிப்பதற்காக ‘வான்படையில் பெண்கள்’ என்ற பிரிவு உருவாக்கப்பட்டது. 1942இல் உருவாக்கப்பட்ட பெண்கள் துணை ராணுவத்தின் ஊழியர்கள் ஏற்கெனவே வான்படையின் பல பணிகளில் இருந்தாலும், (1907இல் ராணுவத்தின் பிரிவாக உருவாக்கப்பட்டு,) 1947இல்தான் தனிப்டையாக மாற்றப்பட்ட வான்படையில் பெண்களை பணியமர்த்த இடமளிக்கப்படாததால் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது. பெண் விமானிகளின் முதல் அணி, அமெரிக்க ராணுவத்தின் விமானப் பிரிவின் பயிற்சியை 1943இலேயே வெற்றிகரமாக முடித்திருந்தாலும்கூட, பெண்கள் விமானிகளாக அல்லாமல் மற்ற பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டனர். ஏற்கெனவே உலகப்போர்க் காலத்தில் விமானிகளாகப் பணியாற்றியிருந்த பெண்களைக்கூட, தேவைக்குப் பயன்படுத்திக்கொள்ளும் துணைப்படையாகவே வான்படை வைத்துக்கொண்டது. 1976இல் ஆண்களுக்குச் சமமாகப் பெண்களையும் வான்படையில் சேர்த்துக்கொள்ளும் முறை தொடங்கியபோது இந்த அமைப்பு கலைக்கப்பட்டது. உலக வரலாற்றின் பெரும்பகுதியில் போர்க்களத்திற்கு வெளியேயிருந்து உதவுபவர்களாகவே பெண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். 18ஆம் நூற்றாண்டுவாக்கில் போர்க்களங்களில் சமையல், சலவை முதலான பணிகளுக்குப் பெண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். முதல் உலகப்போர்க் காலத்தில், களத்தில் மருத்துவ உதவிகள் செய்யவும், வெடிமருந்து உற்பத்தியிலும் பெண்கள் பயன்படுத்தப்பட்டனர். அப்போதே தாக்குதல் நடத்தும் பெண்கள் படைப்பிரிவை வைத்திருந்த நாடு ரஷ்யாதான். அலெக்சாண்ட்ரா குதாஷேவா தலைமையிலான ரஷ்யப் பெண்கள் அணி புகழ்பெற்றதாகும். ரஷ்யாவில், (புரட்சிக்குமுன்) 1917இல் உருவான தற்காலிக அரசு, ராணுவத்தில் ஏராளமான பெண்கள் அணிகளை உருவாக்கியது. சோவியத் ஒன்றியம், இங்கிலாந்து, ஜெர்மெனி ஆகிய நாடுகளின் விமான எதிர்ப்புப் படைகளிலேயே பெண்கள் பணிபுரிந்த இரண்டாம் உலகப்போர்தான், போரிலும், ராணுவத்திலும் பெண்கள் பங்கேற்பில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்தது. இருந்தாலும், இன்றுவரை படைகளில் ஆண்களுக்கு நிகரான நிலை பெண்களுக்கு ஏற்பட்டுவிடவில்லை. இன்னும் பெண்களையே ராணுவத்தில் அனுமதிக்காத நாடுகளும் உலகில் உள்ளன. மறுபுறம், பொலிவியா, இஸ்ரேல், வடகொரியா, மொராக்கோ, போர்ச்சுகல், ஸ்வீடன், துனீஷியா, வெனிசுவேலா ஆகிய நாடுகளில், ஆண்களைப்போன்று பெண்களும் ராணுவத்தில் பணியாற்றுவது கட்டாயமாகவும் உள்ளது. இந்நாடுகளிலும்கூட, பெண்கள் பொதுவாக ராணுவப் பணிக்கு வற்புறுத்தப்படுவதில்லை. இந்நாள் ஜுலை 09 இதற்கு முன்னால் -ஜூலை 9, 2019 […] 1877 - லண்டனிலுள்ள விம்பிள்டன் என்ற பகுதியில், முதல் விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது. விம்பிள்டன்தான் டென்னிசுக்காக நடத்தப்பட்ட முதல் சாம்பியன்ஷிப் போட்டி என்பதுடன், இன்றுவரை மிக அதிக கவுரவமாகவும் கருதப்படுகிறது. ரேக்கெட்டால்(கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் பயன்படுத்தப்படும் முழுமையாக கடினமான பொருளால்(மரம்) ஆனவை பேட் என்றும், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் பயன்படுத்தப்படும் ஒயர் பின்னப்பட்டவை ரேக்கெட் என்றும் அழைக்கப்படுகின்றன.) விளையாடப்படும் விளையாட்டான டென்னிஸ், உண்மையில் 12ஆம் நூற்றாண்டுக்கால பிரான்சில் கையால் பந்தை அடித்து விளையாடப்படும் விளையாட்டாகவே உருவானது. அதனால் உள்ளங்கையின் விளையாட்டு என்றே அழைக்கப்பட்டது. இதன் ஆர்வலராக இருந்த பிரான்சின் பத்தாம் லூயி மன்னரே பெயர் தெரிந்த முதல் டென்னிஸ் வீரர்! விளையாடுவதில் சிரமங்களிருந்ததால், அவர்தான் 13ஆம் நூற்றாண்டில் பாரிசில் உள்ளரங்கை அமைத்தார். அது மற்ற ஐரோப்பிய அரச குடும்பங்களுக்கும் பரவியது. 16ம் நூற்றாண்டில்தான் ரேக்கெட் அறிமுகமானது. பந்தைப் போடுபவர் பிடி அல்லது எடு என்ற பொருள்படும் டெனஸ் என்ற பிரெஞ்சுச் சொல்லைச் சொல்லும் வழக்கத்திலிருந்து டென்னிஸ் என்ற பெயர் உருவானது. புல்தரையில் விளையாடும் விளையாட்டென்பதால், 1830இல் உருவான புல் வெட்டும் எந்திரம்(லான் மூவர்) இந்த விளையாட்டு பரவலாக முக்கியக் காரணியானது. 1800களின் பிற்பகுதியில் உருவான நவீன டென்னிசை உருவாக்கியவராக இங்கிலாந்து ராணுவ அலுவலர் வால்டர் விங்க்ஃபீல்ட் கருதப்படுகிறார். பிரெஞ்ச், ஆஸ்திரேலிய, அமெரிக்க ஓப்பன் போட்டிகள், விம்பிள்டன் ஆகிய நான்கும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் என்று அழைக்கப்படுகின்றன. 17ஆம் நூற்றாண்டில், ஒரு வகை சீட்டுக்கட்டு விளையாட்டில் ஸ்லாம் என்பது வெற்றியைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்விளையாட்டில், அனைத்தையும் வெல்வது க்ராண்ட்ஸ்லாம் என்றும், ஒன்றைத் தவிர அனைத்தையும் வெல்வது ஸ்லாம் அல்லது லிட்டில் ஸ்லாம் என்றும் அழைக்கப்பட்டன. பாபி ஜோன்ஸ் 1930இல் நான்கு பெரிய கோல்ஃப் போட்டிகளில் வென்றபோது க்ராண்ட் ஸ்லாம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஒரே ஆண்டில் (மேற்குறிப்பிட்ட) நான்கு டென்னிஸ் போட்டிகளிலும் வெல்வதை க்ராண்ட் ஸ்லாம் என அழைக்கும் பழக்கம் உருவானது. இன்று, விம்பிள்டனைத்தவிர மற்ற மூன்றும் கடின தரையில்தான் விளையாடப்படுகின்றன. இந்நாள் ஜுலை 10 இதற்கு முன்னால் -ஜூலை 10, 2019 […] 1913 - அமெரிக்காவிலுள்ள மரணப் பள்ளத்தாக்கு என்ற இடத்தில் 134° ஃபாரன்ஹீட் வெப்பநிலை நிலவியது. புவியில் இதுவரை பதிவானதிலேயே மிக அதிக வெப்பநிலையான இது அமெரிக்கக் காலநிலை அமைப்பால் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன் அளவீட்டு முறைகளின் நம்பகத்தன்மை குறித்து சிலரால் எழுப்பப்பட்ட ஐயத்தை, உலக வானிலை அமைப்பு நிராகரித்துவிட்டது. தரையிலிருந்து ஒன்றரை மீட்டர்(சுமார் 5 அடி) உயரத்தில், நேரடியாக வெயில்படாமல், நிழலில்தான் புவியின் வெப்பநிலையை அளக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. நேரடியாகத் தரையின் வெப்பநிலையை அளந்தால் இன்னும் 54°இலிருந்து 90°வரை கூடுதலாக இருக்கும். வறண்ட, கருமையான நிலப்பகுதிகளில், தரை வெப்பநிலை 100° செல்சியசை எட்டலாம் என்று அறிவியல் கூறினாலும், இதே மரணப் பள்ளத்தாக்குப் பகுதியில், 1972 ஜூலை 15இல் பதிவான 201°(செல்சியசில் 93.9°, ஒப்பீட்டுக்கு - நீரின் கொதிநிலை 100°!) என்பதே உலகில் இதுவரை பதிவான மிக அதிக தரை வெப்பநிலையாகும். மரணப் பள்ளத்தாக்கில் இந்த இரு வெப்பநிலைகளும் பதிவான பகுதிக்குப் பெயரே உலை ஓடை(ஃபர்னஸ் க்ரீக்)! இப்பகுதியில் 2001இல் தொடர்ச்சியாக 154 நாட்களுக்கு 100°க்கும் அதிகமான வெப்பநிலையும், 1917இல் 52 நாட்களுக்கு(43 நாட்கள் தொடர்ச்சியாக!) 120°க்குக் குறையாத வெப்பநிலையும் நிலவியுள்ளது. பல நேரங்களில் இரவிலும் 100°க்கும் அதிகமான வெப்பநிலை நிலவும் இப்பகுதியில், 1918 ஜூலை 5 இரவில் பதிவான 110°யே உலகின் அதிகமான இரவுநேர வெப்பநிலையாக 2017வரை இருந்தது. 2017 ஜூன் 17 இரவில் ஓமனின் கசாப் என்ற இடத்தில் 111.6° பதிவானது! 2010 ஆகஸ்ட் 10இல் அண்டார்ட்டிக் பகுதியில் பதிவான மைனஸ் 135.8°தான் உலகில் இதுவரை பதிவானதிலேயே மிகக்குறைவான தரை வெப்பநிலையாகும். அப்போது இப்பகுதியில், காற்றின் வெப்பநிலை இன்னும் குறைவாக இருந்திருக்கும் என்று கருதப்பட்டாலும், பதிவு செய்யப்படவில்லை. செய்தித்தாள்கள் வெயில் அளவை ஃபாரன்ஹீட்டில் வெளியிடுவதால் ஒப்பிட வசதியாக வெப்பநிலைகள் இப்பதிவில் (செல்சியஸ் என்று குறிப்பிடப்பட்டவைதவிர) ஃபாரன்ஹீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தியாவில் பதிவானதிலேயே மிக அதிக வெப்பநிலை 2016 மே 19இல் ராஜஸ்தானின் ஃபலோடியில் பதிவான 123.8°தான்! இந்நாள் ஜுலை 11 இதற்கு முன்னால் -ஜூலை 11, 2019 […] 1979 - மிகப்பெரிய அளவில் உலகின் கவனத்தை ஈர்த்த நிகழ்வான ஸ்கைலேப் புவியில் விழுதல் நிகழ்ந்தது. 1973 மே 14இல் ஏவப்பட்ட ஸ்கைலேப்-தான் நாசாவால்(அமெரிக்காவால்) ஏவப்பட்ட முதலாவதும், அமெரிக்கா தனியாக அனுப்பிய ஒரே விண்வெளி நிலையமுமாகும். (சோவியத் ஒன்றியம் 1971இலேயே முதல் விண்வெளி நிலையமான சல்யூட்-1ஐ அனுப்பிவிட்டது!) 1974 பிப்ரவரி வரை 3 முறை மனிதர்கள் தங்கி ஆய்வுகள் நடத்தியபின் பயன்படுத்தப்படாமல்விடப்பட்ட ஸ்கைலேப்பை மேம்படுத்தி, மீண்டும் பயன்படுத்தும் திட்டங்கள் செலவைக்கருதி கைவிடப்பட்ட நிலையில், 77.5 டன் எடையுள்ள அது, சுற்றுவட்டப்பாதையைவிட்டு புவியைநோக்கி வரத்தொடங்கியது. வளிமண்டலத்திற்குள் நுழையும் ஸ்கைலேப் சிதறும்போது, 152இல் ஒரு சிதறல் மனிதனைத் தாக்குவதற்கும், 7இல் ஒரு சிதறல் ஒரு லட்சம்பேருக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களைத் தாக்குவதற்கும் வாய்ப்பு உண்டு என்றும் கணிக்கப்பட்ட செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில், உலகம் முழுவதும் மக்கள் தங்கள் தலையில் விழுந்துவிடுமோ என்று விண்ணைப் பார்த்துக்கொண்டே அலையும் அளவுக்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கப்படும் நாட்டுக்கு உடனே சென்று உதவ தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஸ்கைலேப் டி-ஷர்ட், தொப்பி என்று பலவும் விற்பனைக்கு வந்தன. ஸ்கைலேப் மேலே விழாமல் தவிர்க்கும் தொப்பி என்றும் மீறி விழுந்தால் பணம் திருப்பித்தரப்படும் என்றும் விளம்பரங்கள் வந்தன. ஸ்கைலேப்-பின் சிதறலை முதலில் கொண்டுவருபவருக்கு பத்தாயிரம் டாலர் தருவதாக சான்பிரான்சிஸ்கோ எக்சாமினர் இதழ் அறிவிக்க, ஸ்கைலேப் விழுந்து தானோ, சொத்தோ பாதிப்படைபவருக்கு 2 லட்சம் டாலர் தருவதாக சான்பிரான்சிஸ்கோ க்ரானிக்கிள் அறிவித்தது. எங்கு விழவேண்டும் என்பதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில், தென்ஆப்பிரிக்காவில் விழலாம் என்று நாசா அறிவித்தது. இக்கணக்கீட்டில் ஏற்பட்ட 4 சதவீத பிழையால், ஸ்கைலேப் ஆஸ்திரேலியாவில் விழுந்தது. சிதறல்கள் விழுந்த ஆஸ்திரேலியாவின் எஸ்பரன்ஸ் பகுதியின் உள்ளாட்சி அமைப்பு, தங்கள் பகுதியைக் குப்பையாக்கிவிட்டதாக நாசாவுக்கு 400 டாலர் அபராதம் விதித்தது. நாசா செலுத்தாத அபராதத்தை, அமெரிக்காவில் வானொலி நிகழ்ச்சி நடத்தும் ஸ்காட்பிராட்லி என்பவர் நிதிதிரட்டி 2009இல் செலுத்தினார். இந்நாள் ஜுலை 12 இதற்கு முன்னால் -ஜூலை 12, 2019 […] 1971 - தேசியப் பழங்குடியினர் நாளையொட்டி, தற்போது ஆஸ்திரேலியாவின் தேசியக் கொடிகளில் ஒன்றாகவுள்ள ஆஸ்திரேலியப் பழங்குடியினரின் கொடி முதன்முறையாகப் பறக்கவிடப்பட்டது. இத்துடன், அரசின் கொடி, டாரஸ் நீரிணைத் தீவினரின் கொடி என்று ஆஸ்திரேலியாவுக்கு 3 தேசியக்கொடிகள் உள்ளன. இவைதவிர ஆஸ்திரேலியாவின் மாநிலங்கள், உள்ளாட்சிகள்கூட தனிக் கொடிகளைக் கொண்டுள்ளன. ஒரு நாட்டின் கொடி என்பது போரின்போது அடையாளம்காண உதவும் ஒன்றாகவே தொடங்கியதால், தொடக்க காலத்தில் ராணுவம் சார்ந்ததாகவே கொடி இருந்துள்ளது. பிற நாடுகளுக்குச் செல்லவும், பிறநாட்டுக் கலங்களைச் சந்திக்கவும் கடற்பயணங்கள் வழியேற்படுத்தியதைத் தொடர்ந்து எந்த நாட்டுக் கப்பல் என்பதையும், வந்திருக்கும் நாடு எது என்பதையும் அடையாளப்படுத்தக் கொடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1603இல் உருவாக்கப்பட்டு, இன்றும் இங்கிலாந்தின் கொடியாக உள்ள, யூனியன் ஜாக் கொடியே தற்போதுள்ள மிகமூத்த கொடியாகும். அமெரிக்க விடுதலைப்போரைத் தொடர்ந்து, 18ஆம் நூற்றாண்டில் பொதுமக்களும் நாட்டுப்பற்றை வெளிக்காட்ட தேசியக் கொடியைப் பயன்படுத்தும் பழக்கம் உருவானது. 19,20ஆம் நூற்றாண்டுகளில்தான் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் (ஏற்கெனவேயிருந்த போர்க் கொடியையொட்டிய) கொடிகளை பயன்படுத்தத்தொடங்கின. தற்போது நிலத்தில் பொதுமக்கள் பயன்பாடு, அரசுப் பயன்பாடு, ராணுவப் பயன்பாடு என்றும், நீரிலும் இதே 3 வகைகளிலும் ஆக ஆறுவகையான கொடிகளை ஒவ்வொரு நாடும் வைத்துக்கொள்ளும் முறையிருந்தாலும், பெரும்பாலும் ஒரே கொடியே (அப்படியே அல்லது சிறு மாற்றங்களுடன்) பயன்படுத்தப்படுகிறது. சீனா, தைவான், ஜப்பான் முதலான சில நாடுகள் போருக்குத் தனிக்கொடி வைத்துள்ளன. நேபாளத்தைத்தவிர மற்ற அனைத்து நாடுகளின் கொடிகளும் செவ்வக வடிவத்திலேயே உள்ளன. எல்லா நாட்டின் கொடிகளும் நீளம் அதிகமாகவும், உயரம் குறைவாகவுமே உள்ளன. ஸ்விட்சர்லாந்து, வாட்டிகன் ஆகியவற்றின் கொடிகள் மட்டும் சதுரமாகவுள்ளன. எல்லா நாட்டுக் கொடிகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட நிறங்கள் உள்ளன. உலகிலுள்ள 155 நாடுகளின் கொடியில் சிவப்பு நிறம் இடம்பெற்றுள்ளது. மற்ற கொடிகளுடன் பறக்கவிடப்படும்போது, தேசியக்கொடி முதலில் ஏற்றப்பட்டு, கடைசியாக இறக்கப்படவேண்டும், பல நாடுகளின் கொடிகள் பறக்கவிடப்படும்போது ஒரே அளவில், ஒரே உயரத்தில் பறக்கவிடப்படவேண்டும், நிகழ்ச்சி நடத்தப்படும் நாட்டின் கொடி தனித்துக் காட்டப்படவேண்டும் என்பன உள்ளிட்ட மரபுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. தேசியக்கொடியை மேலிருந்து கீழாகத் தொங்கவிடுவதற்கும் விதிமுறைகள் உள்ளன! இந்நாள் ஜுலை 13 இதற்கு முன்னால் -ஜூலை 13, 2019 […] 1923 - திரைப்படத்துறையின் மிகப்புகழ்பெற்ற சின்னமான ‘ஹாலிவுட்’ சின்னம், லாஸ்ஏஞ்சல்சின் ஹாலிவுட் மலைகளிலுள்ள லீ குன்றில் திறக்கப்பட்டது. உண்மையில் அப்பகுதியில் வீட்டுமனைகளை உருவாக்கி விற்பனை செய்துகொண்டிருந்த உட்ரஃப், ஷோல்ட்ஸ் என்ற ரியல் எஸ்டேட் வணிகர்களே, விளம்பரத்திற்காக ஹாலிவுட்லேண்ட் என்ற பெயரை நிறுவினர். தான் உருவாக்கியிருந்த ஒய்ட்லி ஹைட்ஸ் என்ற இடத்தில் இவ்வாறு விளம்பரம் அமைத்து ரியல் எஸ்டேட் தொழிலில் வெற்றிபெற்றிருந்த எச்.ஜே.ஒய்ட்லி பரிந்துரைத்ததாலேயே அவர்கள் இந்த விளம்பரத்தை அமைத்தனர். உண்மையில் ஹாலிவுட்(லேண்ட்) என்ற பெயரைச் சூட்டியவரே இந்த ஒய்ட்லிதான் என்பதால், அவர் ஹாலிவுட்டின் தந்தை என்றழைக்கப்படுகிறார். 1886இல் இந்த மலைக்கு தேனிலவுக்காக ஒய்ட்லி வந்தபோது, அவ்வழியே வந்த சீனரை என்ன செய்கிறார் என்று விசாரித்திருக்கிறார். அவர் ‘ஐ ஹாலி(ஹாலிங்) வுட் (நான் (வண்டியில்) மரத்தை இழுத்துச்செல்கிறேன்)’ என்று பதிலளித்ததால், அந்த இடத்திற்கு ஹாலிவுட் என்றே ஒய்ட்லி பெயரிட்டதாகக் கூறப்படுகிறது. மூன்றுக்கு ஒன்பது அடி இரும்புத் தகடுகளைக்கொண்டு, ஒவ்வொன்றும் 30 அடி அகலமும், 50 அடி உயரமும் கொண்டதாக, 21,000 டாலர் (தற்போது சுமார் ரூ.2 கோடி!) செலவில் அமைக்கப்பட்ட இந்த விளம்பரம் நான்காயிரம் விளக்குகளால் ஒளியூட்டப்பட்டது. 1932இல் பெக் எண்ட்விசில் என்ற 24 வயது நடிகை, இதன் எச் எழுத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது. ஒன்றரை ஆண்டுகள்மட்டுமே இருப்பதற்காக அமைக்கப்பட்ட இது 55 ஆண்டுகளுக்கு நீடித்திருந்ததுடன். அப்பகுதியில் ஏற்பட்ட திரைப்படத்துறையின் வளர்ச்சியால் அதன் அடையாளமாகவும் மாறியது. இதன் பராமரிப்பாளரின் கார்மோதி, எச் என்ற எழுத்து சிதைந்ததைத்தொடர்ந்து, 1949இல் சீரமைக்கப்பட்டபோது ‘லேண்ட்’ நீக்கப்பட்டு, ஹாலிவுட் ஆனது. 1970களில் இரண்டு எழுத்துகள் சிதைந்ததையடுத்து, ப்ளேபாய் இதழின் நிறுவனர் ஹக் ஹெஃப்னர், இச்சின்னம் மீண்டும் அமைக்கப்படவேண்டுமென்று வலியுறுத்தினார். 1978இல் ஒவ்வொரு எழுத்துக்கும் 27,777.77 டாலர் வீதம் ஒன்பதுபேரிடம் நன்கொடை திரட்டி, இரண்டரை லட்சம் டாலர்(சுமார் ரூ.7 கோடி) செலவில், ஒவ்வொன்றும் 45 அடி உயரமும், 31லிருந்து 39 அடிவரை அகலமும் கொண்ட எழுத்துகளால் தற்போதைய ஹாலிவுட் சின்னம் அமைக்கப்பட்டது. இதற்கு, ஹெலிகாப்டர் ரோந்து உட்பட பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நாள் ஜுலை 14 இதற்கு முன்னால் -ஜூலை 14, 2019 […] 1933 - கட்டாயக் கருத்தடைச் சட்டமான ‘மரபணுக் குறைபாடுள்ள குழந்தைகளைத் தடுப்பதற்கான சட்டம்’, ஹிட்லரால் நிறைவேற்றப்பட்டது. நாஜிகளுக்கு எதிரானவர்களை ஒடுக்குவதற்கான ஃபயர் டிக்ரி என்ற சட்டத்தையும், சர்வாதிகாரியாவதற்கான அதிகாரமளிக்கும் சட்டத்தையும் இயற்றியதைத் தொடர்ந்து, ஹிட்லர் இயற்றிய அடுத்த சட்டம் இதுதான். மனவளர்ச்சிக்குறை தொடங்கி, வலிப்பு, மரபுசார்ந்த குருடு, செவிட்டுத்தன்மை கொண்டவர்களுடன், கடுமையான மதுப்பழக்கம் உள்ளவர்களுக்குக்கூட கட்டாய கருத்தடை செய்ய இச்சட்டம் வழிவகுத்தது. ஹிட்லரே நேரடியாகக் கையெழுத்திட்ட இச்சட்டத்தின்படி, 200 இனத்தூய்மை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. நாஜிகள் மேற்கொண்ட இனத்தூய்மை நடவடிக்கைகளின் ஒருபகுதியாக இயற்றப்பட்ட இச்சட்டம், ஜெர்மனியிலிருந்த அனைத்து மருத்துவர்களும் தங்கள் நோயாளிகளுக்கு இந்தக் குறைபாடுகள் இருந்தால் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், தவறினால் பெருந்தொகை அபராதமும் விதித்தது. இச்சட்டத்தின்படி, இரண்டாம் உலகப் போருக்கு முன் சுமார் ஆறு லட்சம் பேரும், போர்க்காலத்தில் சுமார் 4 லட்சம் பேரும் கட்டாயக் கருத்தடைக்குள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ‘வாழத் தகுதியற்ற வாழ்க்கை’ என்றுகூறி, சுமார் 70,000 பேர் கருணைக்கொலையும் செய்யப்பட்டனர். இரண்டாம் உலகப்போருக்குப்பின் நடைபெற்ற நூரம்பர்க் விசாரணையில், அமெரிக்காவைப் பின்பற்றித்தான் கட்டாயக் கருத்தடையை ஜெர்மனி மேற்கொண்டதாக நாஜிகள் பதிலளித்தனர். உண்மையும் அதுதான்! 1880களில் இனத்தூய்மைக்கொள்கை அமெரிக்காவில் பரவியதையடுத்து, 1907இல் இந்தியானா மாநிலம்தான் உலகின் முதல் கட்டாயக் கருத்தடைச் சட்டத்தை இயற்றியது. அதைத் தொடர்ந்து 30 மாநிலங்கள் இச்சட்டத்தை இயற்றின. 1921இல் இந்தியானா உச்ச நீதிமன்றம் இதைச் செல்லாததாக்கினாலும், 1924இல் மற்றொரு வழக்கில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் வர்ஜீனியா மாநிலத்தில் இயற்றப்பட்ட சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, இச்சட்டங்கள் செல்லத்தக்கவையாயின. கட்டாயக் கருத்தடை மனிதத்தன்மையற்றதாகத் தற்போது கருதப்பட்டாலும், அமெரிக்காவில் 1924 தீர்ப்பு இன்றுவரை மாற்றப்படவேயில்லை. எய்ட்ஸ் பரவாமல் தடுத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காகச் சில நாடுகளில் கட்டாயக் கருத்தடை இன்றும் சட்டமாக இருந்தாலும், 2011இல் இஸ்தான்புல்லில் நடைபெற்ற பெண்களுக்கெதிரான வன்முறைகள், குடும்ப வன்முறைகள் ஆகியவற்றுக்கெதிரான மாநாடு, இதனை மனிதகுலத்துக்கெதிரான குற்றமென்று அறிவித்தது. இந்நாள் ஜுலை 15 இதற்கு முன்னால் -ஜூலை 15, 2019 […] 1974 - தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் தற்கொலை உலகில் முதன்முறையாக நிகழ்ந்தது. அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் தொகுப்பாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த க்றிஸ்ட்டைன் சபக் என்ற 29 வயதுப் பெண், காலைச் செய்தி அறிக்கையை வாசிக்கும்போதே, தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். குடும்பத்தினரையும் பிரிந்து, திருமணமும் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்துவந்த சபக், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அன்று காலையிலேயே தொலைக்காட்சி நிலையத்திற்கு வந்த சபக், காலைச் செய்தியறிக்கையை தானே வாசிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு முன் அவர் அதைச் செய்ததில்லை என்பதால் ஊழியர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டாலும், அவர் பிடிவாதத்தால் ஏற்றனர். செய்தி அறிக்கையின்போது உரையாட வந்திருந்தவர் முன்னிலையிலேயே, ‘எங்கள் தொலைக்காட்சியின் பாரம்பரியத்திற்கேற்ப, ரத்தமும், துணிச்சலுமாக முதல் தற்கொலையைப் பார்க்கவிருக்கிறீர்கள்’ என்று அறிவித்துவிட்டு, கைப்பையிலிருந்து கைத்துப்பாக்கியை எடுத்து, நேரடியாகத் தலையில் வைத்துச் சுட்டுக்கொண்டார். அக்காலத்தில், எல்லா ஒளிபரப்புகளையும் பதிவு செய்யும் வழக்கமில்லை. ஆனால், பதிவு செய்யுமாறு முன்னரே சபக் வலியுறுத்தியதால் இது பதிவு செய்யப்பட்டாலும், தொலைக்காட்சி நிலையம் அதனை இன்றுவரை வெளியிடவேயில்லை. நேரடி ஒளிபரப்பை ஃபேஸ்புக் 2016இல் அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, தங்கள் தற்கொலையை நேரடியாக ஒளிபரப்புவது பரவலாக உலகம் முழுவதும் நடைபெறுகிறது. பாரிசைச் சேர்ந்த ஓஷன் எபெம் என்ற 18 வயதுப் பெண், 2016 மே 10இல், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதே, சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பான முதல் தற்கொலையாகும். சமூக மனநிலையைவிட்டு விலகக் காரணமாக இருப்பதால், பொதுவாகவே, தற்கொலைகள் அதிகரிப்பதாக சமூக ஊடகங்களின்மீது குற்றம் சாட்டப்படுகிறது. இணையத்தில் கொடுக்கப்பட்ட தொல்லைகளால் அமெரிக்காவில் ஃபோபி பிரின்ஸ் என்ற 15 வயதுப்பெண் தற்கொலை செய்துகொண்டதையடுத்து, தற்போது ‘இணைய வன்கொடுமை’ என்றொரு தனிப்பிரிவும், அவற்றுக்கெதிரான சட்டங்களும் உருவாகியுள்ளன. பதிவுகளில் காணப்படும் குறிப்பிட்ட சொற்களைக்கொண்டு, தற்கொலை எண்ணம்கொண்டோருக்கு உரிய ஆலோசகர்கள் மூலம் அறிவுரை வழங்கி, இதுவரை சுமார் 3,500 தற்கொலைகளைத் தடுத்திருப்பதாகவும் ஃபேஸ்புக் கூறுகிறது. இந்நாள் ஜுலை 16 இதற்கு முன்னால் -ஜூலை 16, 2019 […] 1935 - வாகனம் நிறுத்துவதற்குக் கட்டணம் வசூலிக்கும் உலகின் முதல் பார்க்கிங் மீட்டர் அமெரிக்காவின் ஓக்லஹாமா நகரில் நிறுவப்பட்டது. ஓக்லஹாமா அரசுப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களான ஹோல்கர் தியூசென், ஜெரால்ட் ஹேல் ஆகியோர், வழக்கறிஞரும், செய்தித்தாள் உரிமையாளருமான கார்ல் மேகீ கேட்டுக்கொண்டதால் இதை உருவாக்கினர். இதற்கு, 1938இல் மேகீ காப்புரிமை பெற்றார். இதற்கு முன்பே 1928இல் ரோஜர் பேப்சன் என்ற அமெரிக்கர் ஒரு பார்க்கிங் மீட்டருக்கு காப்புரிமை பெற்றிருந்தார். ஆனாலும், அக்கருவி இயங்குவதற்கு, வாகனத்தின் மின்கலனோடு(பேட்டரி) இணைக்க வேண்டியிருந்ததால் அது பயன்படுத்தப்படவேயில்லை. மேகீயின் மீட்டர், சாவி கொடுக்கும் கடிகாரம் போன்று இயங்கி, மீதமிருக்கும் நேரத்தைக் காட்டியதுடன், நாணயத்தால் இயங்கும்படியும் அமைக்கப்பட்டிருந்தது. 1936இல் ரோட்ஸ் நிறுவனம் உருவாக்கிய கருவியில், சாவி கொடுப்பதற்கான ஆள் தேவை நீக்கப்பட்டு ஓட்டுநர்களே பயன்படுத்திக்கொள்ள முடிந்தது. இக்கருவியே சிறுசிறு மேம்பாடுகளுடன் 1980கள்வரை பயன்பாட்டிலிருந்தது. 1967வரை பெண்கள் மட்டுமே நியமிக்கப்பட்டதால், பார்க்கிங் ஊழியர்கள் இன்றும் ‘மீட்டர் மெய்ட்’ என்று அழைக்கப்படுகிறார்கள். 1980களில் டிஜிட்டர் மீட்டர்கள் அறிமுகமாயின. ஒவ்வொரு வாகனம் நிறுத்துமிடத்திற்கும் ஒரு மீட்டர் என்ற நிலைமாறி, ஒன்றுக்கு மேற்பட்ட அல்லது ஓரிடத்திலுள்ள அனைத்து வாகன நிறுத்துமிடங்களுக்கும் சேர்த்து ஒரே மீட்டரும், நாணயங்கள் தேவையின்றி, கடன் அட்டை, மொபைல் போன் ஆகியவற்றால் பணம் செலுத்தும் மீட்டர்களும் தற்போது வந்துவிட்டன. நாணயங்களோடு மட்டுமின்றி, நாணயங்கள் இல்லாத மீட்டர்களும்கூட திருட்டுப்போவது உலகம் முழுவதுமே பிரச்சனையாக உள்ளது. நவீன மீட்டர்கள், பார்க்கிங் நுழைவாயிலிலேயே, எந்த இடம் காலியாக உள்ளது, அதற்கு எப்படிப் போகவேண்டும் என்று வாகனத்திலுள்ள வழிகாட்டும் கருவியிலோ அல்லது ஓட்டுநரின் மொபைல் போனிலோ வழிகாட்டுவதுடன், நேரம் முடிவதை சுட்டிக்காட்டுவது, மேலும் கட்டணம் செலுத்தி தொடர்ந்து நிறுத்தியிருப்பது ஆகிய வசதிகளையும் அளிக்கின்றன. தெருக்கள் பொதுமக்களுக்கானவை, அவற்றில் காரை நிறுத்த கட்டணம் வசூலிக்கக்கூடாது என்பதான வழக்குகளையும் அமெரிக்கா சந்தித்திருக்கிறது. உலகின் முதல் பலமாடி பார்க்கிங் 1901இலேயே லண்டனில் நிறுவப்பட்டுவிட்டது. காரை ஓட்டிச் செல்வதற்கான வழிக்கு இடத்தை வீணாக்காமல், எந்திரங்கள்மூலம் காரை உயர்த்தி பார்க் செய்யும் அமைப்பும், 1920களிலேயே அமெரிக்காவில் நிறுவப்பட்டுவிட்டது. (இரு சக்கர வாகனத்துக்குக்கூட பார்க்கிங் என்ற வசதியையே பார்க்க முடியாத நகரங்களைக்கொண்ட நாட்டில் வாழும் நமக்கு, இவையெல்லாம் ஏதோ வேறு உலகம்போல் தோன்றுவதில் வியப்பில்லை!) -அறிவுக்கடல் இந்நாள் ஜுலை 18 இதற்கு முன்னால் -ஜூலை 18, 2019 […] 2013 - அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரம், (சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கடனுடன்) திவாலானதாக அறிவித்தது. அமெரிக்க வரலாற்றின் மிகப்பெரிய உள்ளாட்சி திவால் இதுதான். ஒருவரோ, ஒரு நிறுவனமோ மற்றவர்களுக்குத் தரவேண்டிய நிலுவைகளைத் தர முடியாத நிலை நொடித்துப்போதல்(இன்சால்வென்சி) என்றும், அதிலிருந்து மீள முடியாத நிலையில், சட்டத்தின் உதவியை நாடுதல் திவால்(பேங்க்ரப்ட்சி) என்றும் அழைக்கப்படுகின்றன. நிதிப் பரிமாற்றங்களைச் செய்யப்பயன்படுத்திய பென்ச் என்பதன் இத்தாலியச் சொல்லான பேங்க்கோ என்பதிலிருந்து பேங்க் என்ற சொல் உருவானது. அத்தொழிலில் திவாலாகிறவர், அதை அடையாளப்படுத்த பென்ச்சை உடைத்துவிடும் பழக்கம் ஜெனோவாவில் இருந்ததிலிருந்து, உடைந்த பென்ச் என்பதைக் குறிக்கும் பேங்க்கோ ரோட்டா என்பதிலிருந்து பேங்க்ரப்ட்சி என்ற சொல் உருவானது. கடன் தவணைகளை மாற்றியமைத்துக்கொடுத்தோ, திவாலானவரின் சொத்துகளை விற்றோ நிலுவைகளைத் தீர்ப்பதற்கு அரசு உதவிசெய்வது நடைமுறையாக உள்ளது. திவால் நடைமுறைகள் இல்லாத பண்டைய கால கிரேக்கத்தில், நொடித்துப்போனவர் கடன் தீரும்வரை குடும்பத்துடன் உடலுழைப்புச் செய்யும் கடன் அடிமை முறை இருந்துள்ளது. இடைக்கால கிறித்தவத் திருச்சபைச் சட்டங்கள், நொடித்துப் போனவரின் அடிப்படைத் தேவையான பொருட்களை விட்டுவிட்டு, மற்றவற்றை எடுத்துக்கொண்டு அவரைப் புதிதாக வாழ அனுமதித்தன. இவற்றினடிப்படையிலேயே உலகின் முதல் திவால் சட்டம் 1542இல் இங்கிலாந்தில் இயற்றப்பட்டது. 1557இல் ஸ்பெயின் திவாலானதாக இரண்டாம் பிலிப் அரசர் அறிவித்தார். 1840களில் அமெரிக்க மாநிலங்கள் பலவும் திவாலாயின. தொழிற்புரட்சியைத் தொடர்ந்து, 1844இல் இயற்றப்பட்ட கூட்டுப் பங்கு நிறுவனச் சட்டம், நிறுவனங்களின் திவாலுக்குத் தனி நடைமுறைகளை உருவாக்கியது. அமெரிக்காவின் முதல் திவால் சட்டம் 1898இல் உருவானது. நொடித்துப்போகும் உள்ளாட்சிகள் வரிகளை உயர்த்திக்கொள்ளும் நடைமுறையை, பெரும் பொருளாதார வீழ்ச்சிக் காலத்தில் செயல்படுத்த முடியாததால், உள்ளாட்சிகளின் திவாலுக்கான தனிப்பிரிவை(9) அமெரிக்க அரசு உருவாக்கியது. அதன்படி, 1937இலிருந்து இதுவரை சுமார் 700 நகராட்சிகள் அமெரிக்காவில் திவாலாகியுள்ளன. டெட்ராய்ட் உட்பட, இவற்றில் பலவற்றிலும், அவை தரவேண்டிய ஓய்வூதியத்தைத் தர முடியாததே திவாலுக்கு முக்கியக் காரணமாக இருந்துள்ளது. ரூ.56.58 லட்சம் கோடி கடனுடன், 2008இல் அமெரிக்காவின் லேமேன் பிரதர்ஸ் நிதி நிறுவனம் திவாலானதே உலகின் மிகப்பெரிய திவால் ஆகும்! இந்நாள் ஜுலை 19 இதற்கு முன்னால் -ஜூலை 19, 2019 […] 1977 - உலகின் முதல் ஜிபிஎஸ் சமிக்ஞை, என்டிஎஸ்(நேவிகேஷன் டெக்னாலஜி சாட்டிலைட்)-2 என்ற துணைக்கோளிலிருந்து பெறப்பட்டது. இடங்களை அடையாளம் காணும் முயற்சி, இரண்டாம் உலகப்போரின்போது, விமானத்திலிருந்து தாக்கவேண்டிய இலக்குகளை அடையாளம் காண்பதற்காகவே தொடங்கியது. 200 மைல் தொலைவிலுள்ள இலக்கினை, 1000 அடிக்குள்ளான வித்தியாசத்துடன் துல்லியமாகத் தாக்குவதற்கு உதவ ப்ராஜெக்ட்-3 என்ற திட்டத்தை, அமெரிக்க ராணுவம் 1940இல் தொடங்கியது. ராடார் போன்ற கருவிகளில் ஏற்கெனவே பயன்பாட்டிலிருந்த ரேடியோ நேவிகேஷன் என்ற முறையைப் பயன்படுத்தி, 1942இல் லோரான்(லாங் ரேஞ்ச் நேவிகேஷன்) உருவாக்கப்பட்டது. விமானங்கள் தங்கள் இருப்பிடத்தைக் கணிக்க உதவும் டெக்கா நேவிகேஷன் சிஸ்டம் என்பது, இதே ரேடியோ நேவிகேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இங்கிலாந்தின் டெக்கா ரெக்கார்ட் கம்பெனியால் 1944இல் உருவாக்கப்பட்டது. சார்பியல் கொள்கைப்படி, புவியீர்ப்பு விசையால் நேரத்தில் ஏற்படும் மாறுபாடு, புவியைச் சுற்றும் பொருட்களின் இடத்தில் வேறுபாட்டை ஏற்படுத்தும் என்று ஃப்ரீட்வார்ட் விண்ட்டர்பர்க் 1955இல் அறிவித்தார். 1957இல் உலகின் முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக்-1 சோவியத் ஒன்றியத்தால் ஏவப்பட்டது. டாப்ளர் விளைவைக்கொண்டு, இச் செயற்கைக்கோளின் இருப்பிடத்தைக் கணிக்கமுடியும் என்று வில்லியம் கூயர், ஜார்ஜ் வெய்ஃபென்பேக் என்ற அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இங்கிருந்து செயற்கைக்கோளின் இடத்தைக் கணிக்க முடியும்போது, செயற்கைக்கோளின் இடத்தைக்கொண்டு, நம் இடத்தைக் கணிக்க முடியுமா என்று ஆராயுமாறு அவர்களை பாதுகாப்புத்துறை கேட்டுக்கொண்டது. 5 செயற்கைக்கோள்களின் இடத்தைப் பயன்படுத்தி புவியில் இடத்தைக் கணிக்கும் ட்ரான்சிட் 1960இல் உருவாக்கப்பட்டது. சார்பியல் கொள்கைப்படியான நேர வேறுபாட்டைக் கணக்கிட, கடிகாரத்துடன்கூடிய டைமேஷன் செயற்கைக்கோளை 1967 இல் அமெரிக்கக் கடற்படை உருவாக்கியது. 1970களின் தொடக்கத்தில் ஒமேகா நேவிகேஷன் சிஸ்டம் உருவானது. அணுக்கடிகாரங்கள் பொருத்தப்பட்ட செயற்கைக்கோள்கள்மூலம் துல்லியம் அதிகரிக்கப்பட்டாலும், பனிப்போர்க் காலத்தில் இதனை ராணுவ வசதியாக, மிக ரகசியமாக வைத்திருந்தது அமெரிக்கா. 1983இல் சோவியத்தின் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் தவறுதலாக நுழைந்த கொரிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு இச்சேவைகள் வழங்கப்பட்டாலும், 2000வரை முழுத்துல்லியத்துடன் வழங்கப்படவில்லை. தற்போது, 11.8 அங்குலத் துல்லியத்துடன் எந்த இடத்தையும் அடையாளப்படுத்துமளவுக்கு இத்தொழில்நுட்பம் முன்னேறியுள்ளது. இந்நாள் ஜுலை 20 இதற்கு முன்னால் -ஜூலை 20, 2019 […] 1969 - கால்பந்தாட்டப் போரை முடிவுக்குக்கொண்டுவந்த போர்நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டது. கால்பந்தாட்டப்போர் என்பது, 1969இல் ஹோண்டுராஸ், எல்சால்வடார் நாடுகளுக்கிடையே நடைபெற்ற போராகும். 1970 பிஃபா உலகக்கோப்பைப் போட்டிகளில் கலந்துகொள்வதற்கான இரு தகுதிச்சுற்றுப் போட்டிகள் இந்த இரு நாடுகளுக்கிடையே 1969 ஜூனில் நடைபெற்றன. ஹோண்டுராசில் நடைபெற்ற போட்டியில் ஹோண்டுராசும், எல்சால்வடாரில் நடைபெற்ற போட்டியில் எல்சால்வடாரும் வெற்றிபெற்றதால் ஏற்பட்ட சமநிலையை முடிவுக்குக்கொண்டுவர மெக்சிக்கோவில் மற்றொரு போட்டி நடத்தப்பட்டு, எல்சால்வடார் வென்றது. முதலிரண்டு போட்டிகளின்போதே ரசிகர்களிடையே பெரும் மோதல் ஏற்பட்டிருந்த நிலையில், மூன்றாவது போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே, ஹோண்டுராசுடனான உறவுகளை முறித்துக்கொண்ட எல்சால்வடார், பயணிகள் விமானங்களில் ஆயுதங்களைப்பொருத்தி, ஜூலை 16இல் ஹோண்டுராஸ்மீது வான்வழித்தாக்குதலைத் தொடங்கியதால் இது கால்பந்தாட்டப்போர் என்று அழைக்கப்பட்டாலும், பின்னணியில் வேறு காரணங்களிருந்தன. எல்சால்வடார் சிறிய நாடு. ஹோண்டுராசின் நிலப்பரப்பு, எல்சால்வடாரைப்போல 5 மடங்கு. ஆனால், அதன் மக்கள்தொகை ஹோண்டுராசைப்போல ஒன்றரை மடங்கு. இதனால் காலப்போக்கில் ஏராளமான சால்வடாரன்கள் ஹோண்டுராசில் குடியேறி, அதன் மக்கள்தொகையில் 20 சதவீதமாகியிருந்தனர். ஹோண்டுராசின் பெரும்பகுதி நிலம் பெருநிலக்கிழார்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகியவற்றிடமிருந்தது. இங்கு மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தி வாழைக்குடியரசு என்ற சொல்லாடல் உருவாகக் காரணமாகவிருந்த (இத்தொடரில் 2018 ஜனவரி 3) யுனைட்டட் ஃப்ருட் கம்பெனி மட்டும் ஹோண்டுராசின் 10 சதவீத நிலத்தைக் கொண்டிருந்தது. சால்வடாரன்களால் தங்கள் நிலம் ஆக்கிரமிக்கப்படுவதாக இவர்கள் அளித்த நெருக்குதலால், நிலச்சீர்திருத்தம் என்ற பெயரில், குடியுரிமை பெற்றிருந்தவர்கள் உட்பட சால்வடாரன்களை வெளியேற்றியது ஹோண்டுராஸ் அரசு. நீண்டகாலம் அங்கிருந்து, ஹோண்டுராசன்களை மணமுடித்திருந்தவர்கள் உட்பட வெளியேற்றப்பட்டது, சால்வடாரில் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்த நிலையில்தான் போர் ஏற்பட்டது. அமெரிக்க(கண்டங்களிலுள்ள) நாடுகளின் கூட்டமைப்பிடம் ஹோண்டுராஸ் முறையிட, அது ஜூலை 18இல் கூடி, போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியதன் அடிப்படையில் இந்தப் போர் நிறுத்தம் ஏற்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகள் எல்சால்வடாரில் மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலையை ஏற்படுத்தி, 1979இல் உள்நாட்டுப்போர் ஏற்படவும் காரணமாயின. இந்நாள் ஜுலை 21 இதற்கு முன்னால் -ஜூலை 21, 2019 […] கி.மு.356 - பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிற, ஆர்ட்டெமிஸ் கோயில், நாசவேலையால் அழிக்கப்பட்டது. தன் பெயரை உலகறியச் செய்வதற்காக, ஹிரோஸ்ட்ரேட்டஸ் என்பவர், இதற்குத் தீவைத்தார். இதனால், கெட்ட வழியிலாவது புகழடைய வேண்டும் என்று முயற்சிப்பதை ஹிரோஸ்ட்ரேட்டிக் புகழ் என்றழைக்கும் பழக்கம் உருவானது. இவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதுடன், ‘நினைவுகூரத் தடை’ உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அதாவது, பெயர் பெறுவதற்காக அழிவு வேலையில் ஈடுபட்ட அவரது பெயரை எங்குமே குறிப்பிடக்கூடாது. ஹிரோஸ்ட்ரேட்டசுக்காகத் தொடங்கப்பட்ட இத்தண்டனை தொடர்ந்து பயன்படுத்தப்பட்டதுடன், பண்டைய ரோம சமூகத்தில் மரணத்தைவிடப் பெரிய தண்டனையாகவும் கருதப்பட்டது. ஆர்ட்டெமிஸ் என்பவர், வேட்டை, வனம், விலங்குகள், நிலவு, கற்பு ஆகியவற்றுக்கான கிரேக்க பெண் கடவுள். இவர் அப்பல்லோவுடன் இரட்டையராகப் பிறந்த சகோதரி! இக்கோயில் அமைந்திருந்த பண்டைய ஈஃபிசஸ், தற்போது துருக்கியிலுள்ள செல்ஜூக் நகரமாகும். இந்த இடத்தில், கி.மு.8ஆம் நூற்றாண்டிலேயே முதல் கோயில் அமைக்கப்பட்டு, கி.மு.7ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட வெள்ளத்தால் அழிந்துவிட்டது. பின்னர் கி.மு.550இல், 377 அடி நீளம், 151 அடி அகலம், 40 அடி உயரத்துடன் சலவைக் கற்களால் உருவாக்கப்பட்ட இந்த இரண்டாவது கோயிலின் கூரை மட்டும் மரத்தாலானது. இதுதான், சலவைக் கற்களால் உருவாக்கப்பட்ட முதல் கிரேக்கக் கோயிலாகக் கருதப்படுகிறது. இது அழிக்கப்பட்ட நாளில்தான் மகா அலெக்சாண்டர் பிறந்தார். இதை மீண்டும் கட்டுவதற்கு நிதியுதவி செய்ய அலெக்சாண்டர் முன்வந்தாலும், ஈஃபிசஸ் மக்கள் ஏற்க மறுத்து, அலெக்சாண்டரின் மறைவுக்குப்பின் கி.மு.323இல் மீண்டும் கட்டத் தொடங்கினர். பல ஆண்டுகள் கட்டப்பட்ட இந்த மூன்றாவது கோயில் 451 அடி நீளமும், 225 அடி அகலமும், 60 அடி உயரமும் கொண்டு முந்தையதைவிடப் பெரிதாக அமைக்கப்பட்டது. கி.பி.268இல் கோத் என்னும் கிழக்கு ஜெர்மானியப் பழங்குடியினரின் படையெடுப்பில் சேதப்படுத்தப்பட்டாலும், பயன்பாட்டிருந்த இக்கோயில், கிறித்தவத்தின் எழுச்சியைத் தொடர்ந்து 407இல் அவர்களால் மூடப்பட்டது. இதன் வேலைப்பாடுகொண்ட தூண்கள் பலவும், இஸ்தான்புல்லில் (1453இல் மசூதியாக்கப்பட்டு, 1935இலிருந்து அருங்காட்சியமாகவுள்ள) ஹேகியா சோஃபியா தேவாலயத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. முழுமையாக அழிந்துவிட்ட இக்கோயிலின் எச்சங்கள், ஆறாண்டுகள் தேடலுக்குப்பின் 1869இல் கண்டுபிடிக்கப்பட்டன. இந்நாள் ஜுலை 22 இதற்கு முன்னால் -ஜூலை 22, 2019 […] 1706 - இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளை ஒன்றாக இணைத்த ‘ஒன்றிய ஒப்பந்தம்’ ஏற்பட்டது. இணைப்பிற்குப்பின் இது கிரேட் பிரிட்டன் என்று அழைக்கப்பட்டது. பிரிட்டிஷ் தீவுகளின் இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றில் 16 தனித்தனி நாடுகள் இருந்து, கொஞ்சம்கொஞ்சமாக ஒருங்கிணைந்து, எஞ்சியிருந்தவற்றில் வேல்ஸ் பகுதியை 1284இல் இங்கிலாந்து கைப்பற்றியது. அப்போது இயற்றப்பட்ட ‘ருத்லான் சட்டம்’, சொந்த சட்டங்களின்படியே தொடர்ந்து இயங்கும் வேள்பகுதியாக வேல்ஸ், இங்கிலாந்துடன் இணைக்கப்படுவதாக அறிவித்தது. வேள்பகுதி(பிரின்ஸ்பலிட்டி) என்பது, ஒரு பெரிய நாட்டின் இளவரசரால் ஆளப்படுகிற சிறிய பகுதியாகும். பின்னாளில் இம்முறை மாற்றப்பட்டாலும், இங்கிலாந்து முடியரசின் வாரிசுகள் வேல்ஸ் இளவரசர் என்று அழைக்கப்படுவது தொடர்கிறது. எஞ்சியிருந்தவையான இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகியவற்றுக்கிடையே தொடர்ந்து நடைபெற்ற போர்களின் முடிவாக, 1502இல் ஏற்பட்ட நிரந்தர அமைதிக்கான ஒப்பந்தத்தின்படி, இங்கிலாந்து இளவரசி மார்கரெட்டுக்கும், ஸ்காட்லாந்தின் நான்காம் ஜேம்சுக்கும் 1503இல் திருமணம் நடைபெற்றது. இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத் திருமணமே செய்துகொள்ளமல் இறந்ததையடுத்து, 1603இல் ஸ்காட்லாந்தின் அரசராக இருந்த ஆறாம் ஜேம்ஸ், இங்கிலாந்துக்கும்(அதன் கட்டுப்பாட்டிலிருந்த அயர்லாந்துக்கும்) அரசரானார். ஒரே அரசரால் ஆளப்பட்டாலும் தனித்தனி நாடுகளாகவே தொடர்ந்த இவற்றை, பாராளுமன்றத்தில் சட்டமியற்றி ஒரே நாடாக்கும் முயற்சிகள் 1606,1667,1689இல் மேற்கொள்ளப்பட்டாலும், ஸ்காட்லாந்தால் ஏற்கப்படவில்லை. அந்நிய வணிகத்தில் ஏகபோகமாக இருக்கவிரும்பிய கிழக்கிந்தியக் கம்பெனி, ஆஃப்ரிக்க வணிகத்துக்கான ஸ்காட்லாந்துக் கம்பெனியை இங்கிலாந்தில் நிதி திரட்டக்கூடாது என்று 1698இல் நெருக்கடி கொடுத்ததால், ஸ்காட்லாந்து வேறுவழியின்றி இந்த இணைப்பிற்கு ஒப்புக்கொண்டது. 1706 ஏப்ரல் 22இலிருந்து, ஜூலை 22வரை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது. 1541-1691 காலத்தில் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்த அயர்லாந்தையும் இணைக்கும் சட்டம் 1800இல் இயற்றப்பட்டு, கிரேட் பிரிட்டன், அயர்லாந்து ஆகியவற்றின் ஐக்கிய முடியரசு என்று பெயரிடப்பட்டது. மூன்றாண்டுகள் போரிட்டு, அயர்லாந்தின் சில பகுதிகள் சுதந்திர ஐரிய நாடு என்று 1922இல் விடுதலைப் பெற்றதைத்தொடர்ந்து, கிரேட் பிரிட்டன், வடஅயர்லாந்து ஆகியவற்றின் ஐக்கிய முடியரசு என்ற தற்போதைய பெயர் சூட்டப்பட்டது. இந்நாள் ஜுலை 23 இதற்கு முன்னால் -ஜூலை 23, 2019 […] 1927 - இந்தியாவில் பொதுமக்களுக்கான வானொலி ஒலிபரப்பு முதன்முதலாகத் தொடங்கப்பட்டது. அதற்கு முன்பு, 1923இலிருந்து, ‘பம்பாய் மாகாண வானொலி மன்றம்’ முதலான தனிப்பட்ட வானொலி மன்றங்கள், தங்கள் உறுப்பினர்களுக்கு ஒலிபரப்புச் செய்துகொண்டிருந்தன. ‘இந்தியன் ப்ராட்காஸ்ட்டிங் கம்பெனி லிமிட்டெட்’ என்ற தனியார் நிறுவனம் 1927 ஜூலை 23 முதல் பம்பாயிலிருந்தும், ஆகஸ்ட் 26 முதல் கல்கத்தாவிலிருந்தும் வானொலி ஒலிபரப்பைத் தொடங்கியது. இந்த நிறுவனம் 1930 மார்ச் 1இல் மூடப்பட்டபோது, அதன் ஒலிபரப்புக் கருவிகளை (ஆங்கிலேய) அரசு வாங்கி, சோதனை முறையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒலிபரப்பை செய்வதற்காக, ‘இந்திய அரசு ஒலிபரப்புச் சேவை’ என்பதை ஏப்ரல் 1இல் தொடங்கியது. 1932 மே-யில் இச்சேவையினை நிரந்தரமாகத் தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டு, ஜூன் 6இல் அகில இந்திய வானொலி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பாரசீக, அரேபிய நாடுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளில் ஹிட்லர் மேற்கொண்ட பிரச்சாரங்களை முறியடிக்க, 1939 அக்டோபர் 1இல் (பாஷ்தூன் இனத்தவரின்) பஷ்தூ மொழியில் வெளிநாட்டு ஒலிபரப்பும் தொடங்கப்பட்டது. 1947இல் இந்தியா விடுதலை பெற்றபோது இருந்த 9 வானொலி நிலையங்களில் தில்லி, பம்பாய், கல்கத்தா, சென்னை, லக்னோ, திருச்சிராப்பள்ளி ஆகிய ஆறும் இந்தியாவிலும், லாகூர், பெஷாவர், டாக்கா ஆகிய மூன்றும் பாகிஸ்தானிலும் அமைந்திருந்தன. அக்காலத்தில் இந்தியாவில் 2,75,000 வானொலிப்பெட்டிகள் பயன்பாட்டிலிருந்தன. இலங்கை வானொலியின் சேவைகள் மக்களை அதிகம் கவர்ந்ததால், அதனுடன் போட்டியிடுவதற்காக 1957இல் விவித் பாரதி தொடங்கப்பட்டது. அகில இந்திய வானொலியால் 1959இல் தொடங்கப்பட்ட தொலைக்காட்சி ஒளிபரப்பு, 1976 ஏப்ரல் 1இல் தூர்தர்ஷன் என்ற தனி நிறுவனமாக்கப்பட்டது. பண்பலை ஒலிபரப்பு 1977ஜூலை 23இல் முதன்முறையாகச் சென்னையில் தொடங்கப்பட்டு, 1990களில் பரவலானது. 1998 பிப்ரவரி 25இல் புதுதில்லியில் தொடங்கப்பட்ட நியூஸ்-ஆன்-ஃபோன் சேவை தற்போது சென்னை, மும்பை, ஹைதராபாத், இந்தூர், பாட்னா, பெங்களூர் ஆகிய நகரங்களில் வழங்கப்படுகிறது. டிடிஎச் மூலம் பெறக்கூடிய செயற்கைக்கோள் வானொலி ஒலிபரப்பையும் அகில இந்திய வானொலி வழங்குகிறது. இந்நாள் ஜுலை 24 இதற்கு முன்னால் -ஜூலை 24, 2019 […] 1911 - இன்கா மக்களின் தொலைந்த நகரம் என்று அறியப்பட்ட, பெரு நாட்டிலுள்ள மலைமீதமைந்த ‘மச்சு-பிச்சு’ கோட்டை, அமெரிக்கப் பயணியான ஹிராம் பிங்கம் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. கொலம்பசின் வருகைக்கு முன்னரே அமெரிக்காவில் இருந்த மிகவும் வளர்ச்சிபெற்ற நாகரிகமாக இன்கா பேரரசு குறிப்பிடப்படுகிறது. உலகின் அடிப்படையான ஐந்து நாகரிகங்களுள் ஒன்றான, பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மைவாய்ந்த ஆண்டிஸ் நாகரிகங்களின் கடைசிக் கட்டமாக இன்கா பேரரசு குறிப்பிடப்படுகிறது. 1438இல் இன்கா பேரரசாக நிறுவப்பட்டு, ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன், தற்போதைய பெரு நாட்டை மையமாகக் கொண்டு, பசிபிக் கடலோரப் பகுதிகள், ஆண்டிஸ் மலைப் பகுதிகளில் 20 லட்சம் ச.கி.மீ.களுக்குப் பரவியிருந்தது. சக்கரங்கள் பொருத்திய வண்டிகள், ஏறிப் பயணிக்கும் விலங்குகள், இரும்பு முதலானவற்றை இன்கா மக்கள் அறிந்திருக்கவில்லை. இவர்கள் பேசிய கெச்சுவா மொழிக்கு எழுத்து வடிவமும் இல்லையென்றாலும், தகவல்களை நூல், உரோமம் ஆகியவற்றில் முடிச்சுகளின்மூலம் பதிவு செய்துள்ளனர். (இவர்களின் தெளிவான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இத்தொடரில் 2019 மார்ச் 10இல் இடம்பெற்றுள்ளது.) நாடு முழுவதும் (சுமார் 3,600 கி.மீ.க்கு)சாலைகள், கற்களாலான மிகச்சிறந்த கட்டிடங்கள், சிறப்பாக நெய்யப்பட்ட துணி வகைகள் என்று மிகவும் முன்னேறியிருந்த இவர்களுக்கு நாணயம் இல்லை. நிதி என்பதே இல்லாவிட்டாலும், வரிகள்கூட விதிக்கப்பட்டு, அவை அரசுக்கு உழைப்பாகச் செலுத்தப்பட்டுள்ளன. 1450வாக்கில், இன்கா பேரரசர் பச்சாக்குட்டி-க்காக ‘மச்சு-பிச்சு’ கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. 1520களில் இன்கா பேரரசர் ஹ்வாய்னா காப்பக்-கின் மறைவிற்குப்பின், அவர் மகன்கள் இருவருக்கிடையேயான வாரிசுரிமைப்போர், உள்நாட்டுப் போராகியது. பேரரசு பலவீனப்பட்டிருந்த இக்காலத்தில் வந்த ஸ்பானியர்களின் இரும்பு ஆயுதங்களை, இன்காவின் மர, செம்பு ஆயுதங்களால் எதிர்க்கமுடியவில்லை. ஸ்பானியர்கள் வருகையால் வந்த புதிய நோய்களும் இவர்களை பலவீனப்படுத்த, இன்காவை ஸ்பானியர்கள் கைப்பற்றினர். ஸ்பானியர்கள் வந்தபோது இன்கா மக்களால் கைவிடப்பட்ட ’மச்சு-பிச்சு’வின் இருப்பிடம் உள்ளூர் மக்களைத்தவிர மற்றவர்களுக்குத் தெரியாததால், தொலைந்த நகரம் என்றழைக்கப்பட்டது. 1911இல் கண்டுபிடிக்கப்பட்ட இது, யுனெஸ்கோ பாரம்பரியக் களங்களுள் ஒன்றாகப் பராமரிக்கப்படுகிறது. இந்நாள் ஜுலை 25 இதற்கு முன்னால் -ஜூலை 24, 2019 […] 1853 - ஸாரோ பாத்திரத்திற்கு அடிப்படையாகக் கருதப்படுவதுடன், மேற்கின் ராபின் ஹூட், எல்-டொரோடாவின் ராபின் ஹூட் என்றும் குறிப்பிடப்படும் ஜோக்வின் முர்ரியட் காரிலோ, ஆயிரம் டாலர் பரிசுக்காகக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கலிஃபோர்னிய தங்க வேட்டைக் காலத்தில், (தற்போது மெக்சிகோவின் மாநிலமாகவுள்ள) சொனோரா-விலிருந்து தங்கம் தேடி வந்தவர் முர்ரியட். கலிஃபோர்னியத் தங்க வேட்டை என்பது, 1848இல் அங்கு தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளிலிருந்தும் அங்கு மக்கள் குவிந்த 1855வரையான காலத்தைக் குறிக்கிறது(விரிவாக ஜனவரி 24இல் பார்க்கலாம்). அவ்வாறு வந்தபோது, தங்கம் எடுப்பதில் நிலவிய போட்டியில், இவர்மீதான பொறாமையால், ஒரு கோவேறு கழுதையைத் திருடியதாகத் தவறாகக் குற்றம்சாட்டி, முர்ரியட்டின் சகோதரரைக் கொன்றதுடன், முர்ரியட்டுக்கு சவுக்கடியும் வழங்கினர் என்றும், முர்ரியட்டின் மனைவி பலராலும் வன்புணர்வு செய்யப்பட்டார் என்றும், அடிப்படையில் அமைதியான மனிதரான முர்ரியட், இவ்வறால் சினமுற்று, சகோதரரைக் கொன்றவர், மனைவியை வன்புணர்வு செய்தவர்கள் என்று அனைவரையும் குறுகிய காலத்தில் அழித்ததாகவும் பொதுவாக நம்பப்படுகிறது. இக்காலத்தில், குதிரைகளைக் கடத்தி விற்பது, கொள்ளையடிப்பது ஆகிய நடவடிக்கைகளில் இவரது கூட்டத்தினர் ஈடுபட்டதாகவும், கொள்ளையடிக்கும்போது பலரையும் கொன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால், இவர்களைப் பிடித்துத் தந்தால் பரிசு என்று கலிஃபோர்னியா மாநில அரசு அறிவித்தது. இவரைப் பிடிப்பதற்காக நியமிக்கப்பட்ட படையினர், 1853 ஜூலை 25இல் மூன்று மெக்சிக்கர்களைக் கொன்றதுடன், அவர்களில் ஒருவர் முர்ரியேட்டா என்றுகூறி, அவரது தலையை ஆல்கஹால் கொண்ட ஜாடியில் எடுத்துவந்து, பரிசுப்பணத்தைப் பெற்றனர். இத்தலை பல இடங்களிலும் பார்வைக்கு வைக்கப்பட்டபின் அது முர்ரியேட்டா இல்லை என்று கூறப்பட்டதால், 1854இல் மேலும் 5 ஆயிரம் டாலர் பரிசு அறிவிக்கப்பட்டது தனிக்கதை! அது முர்ரியேட்டா இல்லையென்று, 1879இல் அவரின் சகோதரி அறிவித்தாலும், முர்ரியேட்டாவைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஜான் ரோலின் ரிட்ஜ் 1854இல் எழுதிய ‘கொண்டாடப்படும் கலிஃபோர்னியக் கொள்ளையன்: ஜோக்வின் முர்ரியேட்டாவின் வாழ்வும் சாகசங்களும்’ என்ற நூலை அடிப்படையாகக்கொண்டே, ஸாரோ பாத்திரத்தை 1919இல் ஜான்ஸ்டன் மெக்-கல்லி உருவாக்கினார். இந்நாள் ஜுலை 26 இதற்கு முன்னால் -ஜூலை 26, 2019 [](https://theekkathir.in/Image/GetImage/EXTRALARGE/0,0,0,0/2019-07-26-13864-1c9b2842-8.png 1847 அமெரிக்காவிட மிருந்து விடுதலை பெற்று விட்டதாக லைபீரியா அறிவித்தது. அமெரிக்காவின் விடுதலைக்குப்பின், பருத்தித் தோட்டங்கள், ஆலைகளின் வளர்ச்சி முதலானவற்றால் அடிமை வணிகமும் அதிகரித்து, 19ஆம் நூற்றாண்டில் அடிமைகளின் எண்ணிக்கை சுமார் 40 லட்சம் அளவுக்கு வளர்ந்தது. அடிமைகளாக இருந்த கருப்பினத்தவர்களுக்குக் குழந்தைகளும் பிறந்து, அவர்களின் அடுத்த தலைமுறைகளும் உருவாகியிருந்தன. சில தென்பகுதி மாநிலங்களில் கருப்பினத்தவர் பெரும்பான்மையாகவே இருந்ததால், அடிமைக் கலகங்களும் தோன்றத் தொடங்கியிருந்தன. சில வடபகுதி மாநிலங்களில் அடிமைமுறை ஒழிக்கப்பட்டாலும், விடுவிக்கப்பட்ட கருப்பினத்தவர்களுக்கு அனைத்து உரிமைகளையும் சட்டம் வழங்காதது குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. காலங்காலமாக அடிமைப் பெண்களை வெள்ளையர்கள் தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட காரணங்களால், விடுவிக்கப்பட்ட கருப்பினத்தவர்களால், வெள்ளையர்களுக்கு ஆபத்து வரும் என்ற அச்சம் அவர்களுக்கிருந்தது. விடுவிக்கப்பட்டவர்கள் பொதுவான உழைப்புச் சந்தைக்கு வரும்போது, வெள்ளையர்களின் வேலைவாய்ப்புகள் குறைவதுடன், மலிவான உழைப்பின் வரவால் ஊதியமும் குறையும் என்ற அச்சமும் நிலவியது. இவற்றால், தங்களுக்கு ஆபத்து என்று கருதியதால், கருப்பினத்தவரை ஆப்ரிக்காவுக்கே அனுப்பிவிட்டு, அதனையே அவர்களுக்கு நன்மை என்றும் காட்டிக்கொள்ள, அமெரிக்கக் குடியேற்றக் கழகம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. ஏற்கெனவே, இங்கிலாந்தில் அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களை, ஆப்ரிக்காவிலிருந்த தங்கள் குடியிருப்பின் சியாரா லியோன் பகுதியில், லண்டனின் ஏழைக் கருப்பினத்தவருக்கான குடியிருப்பு என்பதை உருவாக்கி, இங்கிலாந்து அனுப்பியிருந்தது. அதே பகுதிக்கு, அமெரிக்காவும் 1821இல் முதலில் அனுப்பிய 22 கருப்பினத்தவர்களில் அனைவருமே மஞ்சள் காய்ச்சல் என்ற நோயால் 3 வாரங்களிலேயே இறந்தாலும், அதற்கெல்லாம் கவலைப்பட யாருமில்லை. அடுத்தடுத்து அனுப்பப்பட்டவர்கள், அமெரிக்காவுக்கு மிக அருகாமையிலமைந்த ஆப்ரிக்கப் பகுதி என்பதால் லைபீரியாவில் இறக்கிவிடப்பட்டனர். இந்தக் குடியேற்றத்தை நிர்வகிக்க வெள்ளையர்களை அமெரிக்கா நியமித்திருந்தது. 1842இல் முதல் வெள்ளையரல்லாத ஆளுநரான ஜோசப் ஜென்கின்ஸ் ராபர்ட்ஸ் என்பவரை முதல் குடியரசுத் தலைவராகக்கொண்டு, லைபீரிய நாடாளுமன்றம் 1847இல் விடுதலையை அறிவித்தது. அதைத் தனிநாடாக அங்கீகரிக்க அமெரிக்கா தொடக்கத்தில் மறுத்தாலும், 1862இல் அங்கீகரித்தது. இந்நாள் ஜுலை 27 இதற்கு முன்னால் -ஜூலை 27, 2019 1929 போர்க் கைதி களை நடத்தவேண்டிய முறைகள்குறித்த ஜெனீவா ஒப்பந்தம் ஏற்பட்டது. போர்க்கைதி களை நடத்தும் முறைகளுக்காக வென்றே ஏற்பட்ட முதல் ஜெனீவா ஒப்பந்தம் இதுதான். இந்த ஒப்பந்தம்தான் இரண்டாம் உலகப்போரின் போர்க்கைதிகளைக் கையாள்வதில் கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது இதில் உணரப்பட்ட குறைகள், மீறல்கள் ஆகியவற்றைச் சரிசெய்வதற்காக 1949இல் திருத்தியமைக்கப்பட்ட ஒப்பந்தமே தற்போது நடைமுறையில் உள்ளது. போர்க்கைதிகள் என்ற பதம் 1660இல்தான் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், மனிதகுலத்தின் தொடக்கத்திலிருந்தே, மற்றொரு குழுவுடன் போரிடும்போது, தோல்வியுறும் குழுவின் வீரர்களைப் பிடித்தலும் அவர்களைப் படுகொலை செய்வதும் அல்லது, அடிமைகளாக வைத்துக்கொள்வதும் பொதுவான நடைமுறைகளாகக் காணப்பட்டுள்ளன. பண்டைய ரோமில் பார்வையாளர்களின் கேளிக்கைக்காகப் போரிட்ட கிளாடியேட்டர்கள், பெரும்பாலும் போர்களில் பிடிபட்ட எதிரி வீரர்கள் என்று நம்பப்படுகிறது. பெண்கள், குழந்தைகளை ஒன்றும் செய்யாவிட்டாலும், தொடக்க காலங்களில், போரிட்ட எதிரி வீரர்கள், பொதுமக்கள் என்று பிரித்துப்பார்க்காமல் அனைவருமே கைதுசெய்யப்பட்டனர். போர் அல்லாத காலங்களில் பிற குழுக்களின் பெண்களைக் கவர்ந்து வருதல் ரேப்ஷியோ என்றழைக்கப்பட்டது. இதிலிருந்து பிறந்ததே ரேப் என்ற சொல். ரோமுலஸ் ரோமை உருவாக்கும்போது, தங்கள் சமூகத்தைப் பெருக்குவதற்கு பெண்கள் தேவையான நிலையிருந்தது. அருகிலிருந்த சேபைன் மக்கள், தங்கள் பெண்கள் ரோமானியர்களை மணக்க அனுமதிக்காதபோது, அக்குழுவின் பெண்களைக் கவர்ந்துவந்தது ‘ரேப் ஆஃப் த சேபைன் விமன்’ என்று குறிப்பிப்பட்டுள்ளது. இதில் வன்புணர்வு இடம்பெறவில்லை. கவர்ந்துவந்த பெண்களை வேண்டி, சம்மதத்துடன் மணம்புரிந்த நிகழ்வுதான் இது. அதாவது, கைப்பற்றுதல் என்ற பொருளுடைய சொல்லான ரேப், பின்னாளில்தான் வன்புணர்வு என்ற பொருளைப்பெற்றது. பிற்காலத்தில் மதம் சார்ந்த போர்கள் ஏற்பட்டபோது, போரின் நோக்கமே எதிரிகளை அழிப்பதாகவே இருந்துள்ளது. அமெரிக்க விடுதலைப்போர், நெப்போலியப்போர்கள் ஆகியவற்றின்போதுதான், போர் நடக்கும்போதே கைதிகளைப் பறிமாற்றம் செய்தல் தொடங்கியது. சால்ஃபெரினோ போரில் சிகிச்சைக்கு வழியின்றிக்கிடந்த பல்லாயிரக்கணக்கான வீரர்களைக்கண்டு, ஹென்றி டூனாண்ட் எடுத்த முயற்சியில் செஞ்சிலுவைச்சங்கமும், போர்விதிகளுடன், போர்க்கைதிகள்பற்றிக் குறிப்பிட்ட முதல் ஒப்பந்தமான 1864 ஜெனீவா ஒப்பந்தமும் ஏற்பட்டன. இவை, 1899,1907 ஹேக் ஒப்பந்தங்கள், 1929,1949 ஜெனீவா ஒப்பந்தங்களில் மேம்படுத்தப்பட்டன.(மேலும் விபரங்கள் இத்தொடரில் 2017 ஆகஸ்ட் 22இல் இடம்பெற்றுள்ளன) இந்நாள் ஜுலை 29 இதற்கு முன்னால் -ஜூலை 29, 2019 […] 1958 - அமெரிக்காவில், ‘தேசிய வானூர்தியியல், விண்வெளி சட்டம்’ நிறைவேற்றப்பட்டு, ‘தேசிய வானூர்தியில், விண்வெளி நிர்வாகம்(நாசா)’ தொடங்கப்பட்டது. பன்னாட்டு புவி-இயற்பியல் ஆண்டாக அறிவிக்கப்பட்டிருந்த 1957 ஜூலை 1 - 1958 டிசம்பர் 31 காலகட்டத்தில், புவியைச் சுற்றும் சிறிய செயற்கைக்கோள்களை ஏவத் திட்டமிட்டு வருவதாக 1955இல் அமெரிக்கா அறிவித்தது. 1957 அக்டோபர் 4இல் எவரும் எதிர்பாராதவண்ணம், உலகின் முதல் செயற்கைக்கோளாக ஸ்புட்னிக்-1ஐ சோவியத் ஒன்றியம் வெற்றிகரமாக ஏவி, புவியின் தாழ்வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது. ‘ஸ்புட்னிக் நெருக்கடி’ என்றே அழைக்கப்படுமளவுக்கு சோவியத்தின் தொழில்நுட்ப முன்னேற்றம்குறித்து மேற்கத்திய நாடுகளிடையே அச்சம் ஏற்பட்ட நிலையில், லைக்கா என்ற நாயைச் சுமந்து, விண்வெளிக்குச் சென்ற முதல் உயிரினம் என்ற பெருமையுடன், 1957 நவம்பர் 3இல் ஸ்புட்னிக்-2ஐயும் சோவியத் ஒன்றியம் ஏவிவிட்டது. விண்வெளி ஆய்வில் பின்தங்கியிருப்பதை ஏற்க முடியாத நிலையில், தொலைக்காட்சியில் நேரலை ஒளிபரப்புடன் 1957 டிசம்பர் 6இல் ஏவப்பட்ட வேன்கார்ட்-டிவி3 ராக்கெட், சில நொடிகளில் வெடித்துச் சிதறியது அமெரிக்காவுக்கு மேலும் அவமானமாகிப்போனது. 1958 பிப்ரவரி 1இல் எக்ஸ்ப்ளோரர்-1ஐ தங்களது முதல் செயற்கைக்கோளாக அமெரிக்கா ஏவியது. அதுவரை, ராணுவத்தைச் சேர்ந்த ‘வானூர்தியியலுக்கான தேசிய ஆலோசனைக்குழு(நாகா)’ என்பதுதான் விண்வெளிப் பயணம்குறித்த ஆய்வுகளுக்குப் பொறுப்பாக இருந்தது. சோவியத்திலும் விண்வெளி ஆய்வுகள் ராணுவத்திடம்தான் இருந்தாலும், சோவியத் அடைந்த முன்னேற்றம், ராணுவத்தின் பங்களிப்பு மட்டும் போதாது என்று அமெரிக்காவை எண்ணச் செய்ததாலேயே, நாசா தொடங்கப்பட்டது. அப்போது, இத்துறையில் நாசா ஊழியர்கள் மட்டுமின்றி தனியார் ஒப்பந்ததாரர்களின் கண்டுபிடிப்பும் அரசுக்கே சொந்தம் என்று காப்புரிமை சட்டம் திருத்தப்பட்டு, பின்னர், தனியாரை ஊக்குவிக்க 1984இல் இயற்றப் பட்ட சட்டத்தின்மூலம் மாற்றப்பட்டது. பின்னாளில், விண்வெளி ஆய்வுகள் மட்டுமின்றி, வணிகப் பொருட்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைக் கண்டுபிடிப்பதிலும், கண்டுபிடிப்பாளர்களுக்கு உதவுவதிலும் நாசா ஈடுபடத் தொடங்கியது. மெமரி ஃபோம், போர்ட்டபிள் கார்ட்லெஸ் வாக்குவம் க்ளீனர், லாசிக் கண் சிகிச்சை உள்ளிட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்பங்கள் இவ்வாறு நாசாவால் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நாள் ஜுலை 30 இதற்கு முன்னால் -ஜூலை 30, 2019 […] 762 - பாக்தாத் நகரின் கட்டுமானம் தொடங்கப்பட்டது. அப்பாசிய கலீஃபகம் 750இல் உருவானபின், இரண்டாம் கலீஃபாவான அல்-மன்சூர் தலைநகராக பாக்தாத்தை உருவாக்கினார். ஜோதிடர்கள் தேர்ந்தெடுத்ததால் இந்நாளில் கட்டுமானம் தொடங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. உலகம் முழுவதிலிருந்தும் கட்டிடப் பொறியாளர்கள், கட்டிடக் கலைஞர்கள், கட்டிட வரைபட ஓவியர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் என்று சுமார் ஒரு லட்சம் பேரை அழைத்துவந்து, முன்னதாகவே ஊதியம் வழங்கி நகரைக் கட்டச்செய்தார் அல்-மன்சூர். டைக்ரிஸ் நதிக்கரையில் அமைந்திருந்ததால், வறண்ட பகுதியிலும் தாராளமாகத் தண்ணீர் கிடைத்ததும், நதியின் வணிக வழித்தடங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய இடமாக இருந்ததும் பாக்தாத் செழிக்க உதவின. ‘அறிவகம்(ஹவுஸ் ஆஃப் விஸ்டம்)’ என்பதை உருவாக்கிய அல்-மன்சூர், கிரேக்கம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலிருந்தும், ஏராளமான நூல்களை அரபியில் மொழிபெயர்க்கச் செய்தார். அறிவியல், பொருளாதாரம், பண்பாடு ஆகியவற்றில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டிய, இஸ்லாமியப் பொற்காலத்தின் தொடக்கமாக இதுவே அமைந்தது. இவற்றால் வணிகத்தில் மட்டுமின்றி, கற்றலுக்குமான மையமாக பாக்தாத் மாறியது. அப்பாசிய கலீஃபாக்கள் கல்வியை ஊக்குவிப்பவர்களாக மட்டுமின்றி, நூல்களைத் திரட்டுபவர்களுமாக இருந்ததால், ஏராளமான (முதலில் தனிப்பட்டவையாக இருந்தாலும், பின்னர் பொது) நூலகங்கள் உருவாயின. எட்டாம் நூற்றாண்டில் சீனர்களிடமிருந்து காகிதம் தயாரிப்பை அப்பாசியர்கள் கற்றபின், காகிதம் தயாரிக்கும் இடமாக பாக்தாத் விளங்கியதும் நூல்களை உருவாக்குவதில் முக்கியப்பங்குவகித்தது. அரபியில் மட்டுமின்றி, இப்பகுதி மக்களின் பிற மொழிகளிலும் நூல்கள் திரட்டப்பட்டிருந்தன. 8,9ஆம் நூற்றாண்டுகளில், முதன்முதலில் பத்து லட்சம் மக்கள்தொகைகண்ட, உலகின் மிகப்பெரிய நகரமாக வளர்ந்த பாக்தாத், 1258இல் மங்கோலியர் படையெடுப்பின்போது அழிக்கப்பட்டது. மறுநிர்மாணம் செய்யப்பட்டு மீண்டும் செழித்த பாக்தாத் 1401இல் தைமூரால் கைப்பற்றப்பட்டது. 1508இல் பாரசீகத்தின் சஃபாவித்களால் கைப்பற்றப்பட்ட பாக்தாத், 1538இல் ஒட்டோமான்களின் ஆதிக்கத்திற்குட்பட்டது. ஒட்டோமான் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின், 1920இல் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்த பாக்தாத், 1932இல் இராக் முடியரசு உருவானபோது அதன் தலைநகரமாகியது. 2003இல் அமெரிக்கா நுழைந்தபின், பாக்தாத்தில் பட்டபாடு உலகறிந்தது! இந்நாள் ஜுலை 31 இதற்கு முன்னால் -ஜூலை 31, 2019 […] 1868 - நவீன உலகின் முதல் போதைமருந்துத் தடுப்புச் சட்டமாகக் குறிப்பிடப்படும், இங்கிலாந்தின் ‘மருந்தகச் சட்டம் 1868’ இயற்றப்பட்டது. இச்சட்டம் நஞ்சுகளையும், போதை தரும் மருந்துகளையும் விற்பதற்குக் கட்டுப்பாடுகளை விதித்தது. அக்காலத்தில் மருந்தகங்களின் விற்பனையில் பெரும்பகுதி லாடனம் என்னும் அபினிக் கரைசல்தான் என்பதால், இச்சட்டம் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது. பல்வேறு நோய்களுக்கும் ஒரே மருந்தாக மருந்தகங்கள் அவரவர் தயாரித்து விற்கும் காப்புரிமை மருந்துகள் என்பவை அக்காலத்தில் பிரபலமாக இருந்தன. அவை பெரும்பாலும் இந்த அபினிக் கரைசலை அடிப்படையாகக்கொண்டே தயாரிக்கப்பட்டதால் இந்த எதிர்ப்பு எழுந்தது. உண்மையில் அபினி விற்பனையைத் தடையெல்லாம் செய்யாமல், கட்டுப்பாடுகளை மட்டுமே விதித்தாலும், இச்சட்டம் வந்தபின் அபினியால் ஏற்படும் மரணங்கள் மிகப்பெரிய அளவில் குறைந்தன. உளவியலைப் பாதிக்கும் போதைப்பொருட்கள் ஆதிகாலத்திலிருந்தே பயிரிடப்பட்டு, விற்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வந்தன. மதுவுக்கெதிராக 7ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட இஸ்லாமியச் சட்டங்களே முதல் மதுவிலக்குச் சட்டங்களாகும். மது மட்டுமின்றி கஞ்சா புகைத்தல் உள்ளிட்ட அனைத்து போதைமருந்துகளையும் குரான் தடைசெய்தாலும், அதற்கு எதிர்ப்பும் இஸ்லாமின் வரலாறு முழுவதும் காணப்படுகிறது. 11-12ஆம் நூற்றாண்டுகளில் எகிப்தில் கஞ்சா வயல்கள் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன. ஒட்டோமான் சுல்தான் நான்காம் முராத் காலத்தில் காஃபி போதைமருந்தாகத் தடைசெய்யப்பட்டிருந்தது. அத்தடை பின்னர் நீக்கப்பட்டாலும், இஸ்லாமிய நாடுகளிலிருந்து வந்தது என்பதாலேயே ஐரோப்பிய நாடுகளிலும் தொடக்கத்தில் காஃபி தடைசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆசிய நாடுகள் பலவற்றிலும் போதைமருந்துகள்மீது இருந்த தடை, ஐரோப்பியர்கள் ஆக்கிரமித்தபோது வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டது. சீனப் பொருட்களுக்காக ஏராளமான வெள்ளியைத் தரவேண்டியிருந்ததால், அபினியைத் திணித்ததுடன், அதைச் சட்டப்பூர்மாக்க வலியுறுத்தி தொடுக்கப்பட்டதே அபினிப்போர்(இத்தொடரில் 2018 மே 27இல்!). பின்னாளில், நண்பர்கள் சமயச் சமூகம்(குவேக்கர்) அமைப்பு கடுமையாக எதிர்த்ததைத் தொடர்ந்து, அபினி தொடர்பான நிலையை இங்கிலாந்து மாற்றிக்கொள்ள வேண்டியதாயிற்று. 1909இல் பன்னாட்டு அபினி ஆணையம் அமைக்கப்பட்டு, 1912இல் நடைபெற்ற ஹேக் மாநாட்டில் அபினிக்கெதிரான முதல் பன்னாட்டு ஒப்பந்தம் உருவாயிற்று. இந்நாள் ஆகஸ்ட் 01 இதற்கு முன்னால் -ஆகஸ்ட் 1, 2019 1291 - பழைய ஸ்விஸ் கூட்டமைப்பு உருவானது. தற்போதைய ஸ்விட்சர்லாந்து நாடு உருவானதற்கு இதுவே முன்னோடியாக அமைந்தது. உண்மையில், உறுதியான கூட்டமைப்பெல்லாம் இன்றி, உதவிக்கொள்ளும் அமைப்பாக மட்டுமே இருந்த இது ‘உறுதிமொழி உறவு’ என்றே அழைக்கப்பட்டது. 12 ஆயிரம் அடிவரை உயரம்கொண்ட ஆல்ப்ஸ் மலைத்தொடரின் நடுப்பகுதிப் பள்ளத்தாக்குகளிலமைந்திருந்த ஊரி, ஸ்விஸ், உண்ட்டர்வால்டன் ஆகிய மூன்று சிற்றரசுகள் இணைந்து இந்த கூட்டமைப்புப் பட்டயத்தை உருவாக்கின. 11-13ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட, விவசாயத்தைக் கடந்த பிற பொருட்களின் உற்பத்தி, வணிகத்தையும், அதற்காக ஆல்ப்ஸ் மலையைக் கடக்கும் தேவையையும் உருவாக்கியது. ஜெர்மானியப் பேரரசரான முதலாம் ரூடால்ஃப், 1291 ஜூலை 15இல் மறைந்ததையடுத்து, ஹாப்ஸ்பர்க் மரபில் அடுத்து வருபவர்கள், முக்கிய வணிக வழியாக விளங்கிய இந்த சிற்றரசுகளைக் கைப்பற்ற முயற்சிக்கலாம் என்ற அச்சத்திலேயே இந்த கூட்டமைப்பு உருவானது. தடையற்ற வணிகம், அதற்கான பாதைகள் ஆகியவற்றின்மீதிருந்த அக்கறையின் காரணமாக, புனித ரோமப் பேரரசுக்குட்பட்ட மொத்தம் 13 சிற்றரசுகள் பின்னாளில் இந்தக் கூட்டமைப்பில் உறுப்பினராக இருந்தன. உபரி உற்பத்தி தொடங்கிய (கிறித்துவுக்கு முந்தைய) காலத்திலேயே வணிகமும் தொடங்கி, தடையற்ற வணிகத்திற்காகவும், வணிகப் பாதைகளின்மீதான கட்டுப்பாட்டிற்குமாகவுமே ஏராளமான கூட்டமைப்புகள், போர்கள் ஆகியவை ஏற்பட்டிருப்பதை வரலாறு முழுவதும் காணமுடியும். பிரெஞ்ச்சுப் புரட்சியின்போது ஸ்விட்சர்லாந்தைக் கைப்பற்றிய பிரான்ஸ் தான் அதற்கு ஒருங்கிணைந்த அரசியல் சட்டத்தை உருவாக்கியது. 1803இல் ஸ்விட்சர்லாந்தின் அரசுத் தலைவர்களனைவரையும் அழைத்துப் பேசிய நெப்போலியன், அப்போதிருந்த 19 சிற்றரசுகளின் கூட்டரசாக மாற்றியமைத்து, தன்னாட்சியும் வழங்கினார். அப்போதுதான், முந்தைய கூட்டமைப்பிற்கு, ‘பழைய’ என்ற முன்னொட்டு சேர்க்கப்பட்டது. அன்றிலிருந்து, மாநிலங்களின்(சிற்றரசுகளின்) தன்னாட்சி உரிமைக்கு மிகுந்த முக்கியத்துவமளிக்கும் கூட்டரசாகவே ஸ்விட்சர்லாந்து விளங்குகிறது. பழைய கூட்டமைப்பைத் தொடங்கியவைகளில் ஒன்றான ஸ்ச்விஸ் என்ற சிற்றரசின் பெயரிலிருந்துதான் ஸ்விட்சர்லாந்து என்ற பெயர் உருவானது. இந்த பழைய கூட்டமைப்பு உருவான ஆகஸ்ட் 1, ஸ்விட்சர்லாந்தின் தேசிய நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாள் ஆகஸ்ட் 02 இதற்கு முன்னால் -ஆகஸ்ட் 2, 2019 […] 1934 - குடியரசுத்தலைவர் பால் வோன் ஹிண்டன்பர்க் மறைந்ததையடுத்து, ஜெர்மன் அரசின் அனைத்து அதிகாரங்களையும் ஒருங்கேபெற்ற தலைவராக, ஃப்யூரர் பதவியேற்றார் ஹிட்லர். ஆங்கிலத்தில் பொதுவாக ஹிட்லரை மட்டுமே சுட்டக்கூடிய ஃப்யூரர் என்ற சொல், தலைவர் அல்லது வழிகாட்டி என்ற பொருளுடைய ஜெர்மன் சொல்லாகும். ஸ்காண்டிநேவிய மொழிகளின் சொல்லான இது, டச்சு, நார்வீஜிய மொழிகளில், அதே பொருளுடன் ஃபோரர் என்ற சொல்லாக உள்ளது. ஜெர்மனியில் பொதுவாகத் தலைவர்கள் ஃப்யூரர் என்றழைக்கப்படும் வழக்கமிருந்த நிலையில், 1921இல் நாஜிக் கட்சியின் ஃப்யூரராகத் தன்னை அறிவிக்கவேண்டும் என்று வற்புறுத்தினார் ஹிட்லர். ஜெர்மன் தொழிலாளர்களின் தேசிய சமூகவுடைமைக் கட்சி என்ற, நாஜிக் கட்சியைத் தோற்றுவித்த ஆண்ட்டன் ட்ரெக்ஸ்லர், மற்றொரு யூத எதிர்ப்பு, தீவிர வலதுசாரி தேசியவாதக் கட்சியான, ஜெர்மன் சமூகவுடைமைக் கட்சியுடன் நாஜிக் கட்சியை இணைக்க முடிவுசெய்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியைவிட்டு விலகினார் ஹிட்லர். கட்சியில் சேர்ந்து மிகக்குறைந்த காலத்திலேயே முக்கியப் பேச்சாளராக மாறியிருந்த ஹிட்லர் கட்சியைவிட்டு விலகியதைத் தொடர்ந்து, கட்சியின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்றஞ்சிய கட்சியின் நிர்வாகக்குழு, எல்லையற்ற அதிகாரங்களுடன், ஹிட்லரை கட்சியின் ஃப்யூரராக ஏற்றுக்கொண்டது. ஜெர்மன் பேரரசின் உருவாக்கத்திற்கு முன்னரே ஜெர்மன் தேசியம் பேசி, அதன் முன்னோடியாகக் கருதப்படுபவரும், யூத எதிர்ப்புக்கொள்கைகளைக் கொண்டவருமான தீவிர வலதுசாரித் தலைவர் ஜார்ஜ் வோன் ஷோனரர், அவருடைய ஆதரவாளர்களால் ஃப்யூரர் என்றழைக்கப்பட்டது, ஃப்யூரர் பட்டத்தின்மீதான ஹிட்லரின் ஈர்ப்புக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. அவரைப் பின்பற்றியே, கையை நேராக உயர்த்தி வணக்கம் தெரிவிக்கும் ‘ரோமன் சல்யூட்’ என்பதையும் ஹிட்லர் கைக்கொண்டார். பண்டைய ரோமானியர்களின் வணக்கம் தெரிவிக்கும் முறையாகக் குறிப்பிடப்படும் இந்த ரோமன் சல்யூட், ஹிட்லரும், முசோலினியும் பின்பற்றியபின் ஃபாசிசத்தின் அடையாளமாகிப்போனது. குடியரசுத்தலைவர் ஆட்சிமுறையைக்கொண்டிருந்த ஜெர்மனியில், 1933இலேயே அதிகாரமளிக்கும் சட்டத்தின்மூலம் வேந்தராகி, பெரும்பாலான அதிகாரங்களைக் கைப்பற்றியிருந்த ஹிட்லர், ஹிண்டன்பர்க்கின் மறைவுக்கு முன்தினமே குடியரசுத்தலைவர், வேந்தர் ஆகிய இரு பதவிகளும், ஃப்யூரர் என்ற ஒரே பதவியாக ஒன்றிணைக்கப்படுவதாகச் சட்டத்திருத்தம் செய்து, முழு சர்வாதிகாரியானார். -அறிவுக்கடல் இந்நாள் ஆகஸ்ட் 03 இதற்கு முன்னால் -ஆகஸ்ட் 3, 2019 […] 1946 - தற்காலத்திய உலகின் முதல் கேளிக்கைப் பூங்காவாக(தீம் பார்க்) குறிப்பிடப்படும் ‘சாண்டாகிளாஸ் லேண்ட்’, அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்திலுள்ள சாண்டாகிளாஸ் என்ற இடத்தில் திறக்கப்பட்டது. உண்மையில் ஓய்வுபெற்றோர் குடியிருப்பு அமைப்பதற்காகவே, ஓய்வுபெற்ற தொழிலதிபரான லூயிஸ் கோச், 1941இல் இங்கு பணிகளைத் தொடங்கினார். ஒன்பது குழந்தைகள் பெற்றவரான கோச், முதியோரைப் பார்க்க வரும் குழந்தைகள், இங்கு வந்தபின் ‘சாண்டா கிளாசை (கிறிஸ்துமஸ் தாத்தா) காணாமல் ஏமாற்றமடை வார்கள் என்று கருதினார். அதனால், குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டு அமைப்புகளை உருவாக்கினார். இரண்டாம் உலகப்போரால் கட்டுமானம் தடைப்பட்டதால், 1946இல்தான் இது திறக்கப்பட்டது. அப்போது இதற்குக் கட்டணமில்லை. பல புதிய அமைப்புகள் சேர்க்கப்பட்டபின் 1955இல்தான் நுழைவுக் கட்டணம் விதிக்கப்பட்டதுடன், 1984இல் ’ஹாலிடே வோர்ல்ட் (அண்ட் ஸ்ப்ளாஷ்-இன் சஃபாரி)’ என்று பெயர் மாற்றமும் செய்யப்பட்டது. 1133இல் லண்டனில் தொடங்கப்பட்டு, ஒவ்வோராண்டும் நடத்தப் பட்ட ‘பார்த்தலேமு ஃபேர்’ என்ற பொருட்காட்சி, இடைக்காலத்தில் நடத்தப்பட்ட பொருட்காட்சிகளின் தொடக்கமாகக் குறிப்பிடப்படுகிறது. 1583இல் லண்டனில் தொடங்கப்பட்ட ‘பேக்கன்’, பல்வேறு விளையாட்டு, பொழுது போக்கு வசதிகள்கொண்ட ‘மனமகிழ் தோட்டங்கள்’ என்பவற்றின் தொடக்கமாக அமைந்தது. 1851இல் உலகத் தொழிற்துறைப் பொருட்காட்சிகள் நடத்தும் வழக்கம் தொடங்கியபின், அவை நடத்தப்படும் இடங்களில் பொழுதுபோக்கு அமைப்புகள் நிரந்தரமாக அமைக்கப்படுதல் தொடங்கியது. இந்த மூன்றுவகை அமைப்புகள்தான் தற்காலத்திய கேளிக்கைப் பூங்காக்களுக்கான அடிப்படைகளாக அமைந்தன. 1800களின் பிற்பகுதியில் ஏற்பட்ட தொழிற்துறை முன்னேற்றங்கள், நீராவியால் இயங்கும் இயந்திர ராட்டினங்கள் முதலானவை உருவாகக் காரணமாயின. ‘கில்டட் ஏஜ்(பொன் முலாமிட்ட காலம்!)’ என்றழைக்கப்படும் 1860களுக்குப் பிந்தைய காலத்தில், அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு பணிநேரம் குறைந்ததுடன், அடிப்படைத் தேவைகளுக்குப்போக மீதமிருக்குமளவுக்கு ஊதியமும் கிடைத்ததால், பொழுதுபோக்கிற்கு அவர்கள் செலவிடத் தயாராக இருந்தனர். இதைப் பயன்படுத்திக்கொண்டு பொழுதுபோக்கு வளாகங்கள் உருவாயின. 1895இல் அமெரிக்காவின் கோனீ தீவில், ஒரே நிறுவனத்துக்குச் சொந்தமான நிரந்தர பொழுது போக்கு வளாகம் அமைக்கப்பட்டது. இக்காலத்தில்தான், நுழைவுக்கட்டணத்தோடு, உள்ளிருக்கும் பொழுதுபோக்கு அமைப்புகளுக்குத் தனித்தனியாகவும் கட்டணம் செலுத்தும்முறை தொடங்கியது. பொருளாதாரப் பெருமந்தம், இரண்டாம் உலகப்போர் ஆகியவற்றால் பின்னடைவு ஏற்பட்டாலும், அவற்றுக்குப்பின், பல்வேறு புதுமைகளுடன் கேளிக்கைப் பூங்காக்களாக உருவாகி, மிகப்பெரிய துறையாக வளர்ச்சியடைந்தது. இந்நாள் ஆகஸ்ட் 04 இதற்கு முன்னால் -ஆகஸ்ட் 4, 2019 […] 1693 - சாம்ப்பேன் பானத்தை, டாம் பெரிஞான் என்ற துறவி கண்டுபிடித்த நாளாக இது வழமை யாகக் குறிப்பிடப்படுகிறது. உண்மையில் அவருக்குமுன்பே சாம்ப்பேன் இருந்திருந்தாலும், அதன் தயாரிப்பு முறையில் அவர் உருவாக்கிய சில நடைமுறைகளே இன்றுவரை பின்பற்றப்படுகின்றன. சாம்ப்பேன் என்பது, பிரான்சிலுள்ள ஒரு பகுதியின் பெயர். ஃப்ரான்சின் வடகிழக்குப் பகுதி யிலுள்ள இது, பண்டைய காலத்தில் சாம்ப்பேன் மாநிலம் என்றழைக்கப்பட்டது. கம்ப்பேனியா என்ற லத்தீன் சொல்லிலி ருந்து சாம்ப்பேன் என்ற பெயர் உருவானது. இத்தாலியி லுள்ள கம்ப்பேனியா என்ற பகுதியைப்போலவே, ஏற்ற இறக்கமான மலைகளைக்கொண்ட பகுதி என்பதால் இப்பகு திக்கு இப்பெயர் ஏற்பட்டது. பொதுவாக மினுமினுப்பான வெள்ளை ஒயின் சாம்ப்பேன் என்ற ழைக்கப் பட்டாலும், சாம்ப்பேன் பகுதி யில் விளையும் (பெரும்பாலும் பினோட் நோயர் வகை) திராட்சைகளைக் கொண்டு, அதற்கென்று ஏற்படுத்தப்பட்ட முறைகளின்படி உரு வாக்கப்பட்டவை தவிர மற்றவற்றை சாம்ப்பேன் என்றழைப்பது பல நாடுகளில் குற்றமாகவே உள்ளது. குளிர்காலத்தில் சாம்ப்பேன் பகுதியில் நிலவும் மிக அதிகக் குளிரால், புளித்தல் பாதியிலேயே நின்றுவிடும். குளிர் குறையும்போது, யீஸ்ட்-கள் மீண்டும் விழிப்புற்று புளிக்கச்செய்யும்போது, கரியமில வாயு அதிகம் வெளிப்படுவதால், குமிழ்கள் ஏற்படுவதுடன் பாட்டில்களும் வெடித்துவிடும். பாட்டில் வெடிக்காவிட்டாலும் இந்தக் குமிழ்களை ஒயினின் குறையாகக் கருதி சாத்தானின் ஒயின் என்றழைத்த இப்பகுதியினர், அருகிலுள்ள பர்கண்டியில் உருவாகும் ஒயினைப்போல தங்கள் ஒயின் பெயர்பெறவில்லை என்று வருந்திய காலத்தில்தான், பெரிஞான், பாட்டில் உடையாமல் சிறப்பான ஒயினைத் தயாரிக்கும் வழிகளை உருவாக்கினார். 1715இல் பதினான்காம் லூயி மறைந்து, 5 வயது பதினைந்தாம் லூயி அரசரானபோது, காப்பாளராக ஆட்சியை நடத்திய ஆர்லியன்சின் டியூக் இரண்டாம் பிலிப், அரசு நிகழ்ச்சிகளில் சாம்ப்பேனுக்கு முக்கியத்துவம் அளித்ததையடுத்து, உயர்குடியினரின் பானமாக அது பரவத்தொடங்கியது. தற்போது, குறிப்பிட்ட அளவு புளித்தவுடன் மற்றொரு கொள்கலனுக்கு(பொதுவாக பாட்டிலுக்கு) மாற்றப்பட்டு, மீண்டும் யீஸ்ட்டும், சர்க்கரையும் சேர்க்கப்பட்டு, புளித்தபின் யீஸ்ட் படிவுகள் தனித்துவமான முறையில் வெளியேற்றப்பட்டபின் மீண்டும் பாட்டில் சீல் வைக்கப்பட்டு, (விரும்பியே ஏராளமான குமிழ்களுடன்!) சாம்ப்பேன் தயாரிக்கப்படுகிறது. சாம்ப்பேன் கூட்டமைப்பான சிஐவிசி அனுமதித்தால்தான், ஓர் ஒயினை சாம்ப்பேன் என்றழைக்க முடியும். 1950க்குப்பின் கொண்டாட்டங்கள், ஆடம்பரம் ஆகியவற்றின் அடையாளமாக சாம்ப்பேன் மிகப்பெரிய வளர்ச்சியடைந்தது. இந்நாள் ஆகஸ்ட் 05 இதற்கு முன்னால் -ஆகஸ்ட் 5, 2019 […] 1735 - இதழியல் சுதந்திரத்திற்கு எதிரான முதல் வழக்கு என்று குறிப்பிடத்தக்க வழக்கில், 8 மாதங்களுக்கும் மேலாகச் சிறையிலிருந்தபின், அமெரிக்க இதழியலாளர் ஜான் பீட்டர் ஸெங்கர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டார். இங்கிலாந்தின் குடியேற்ற நாடாக இருந்த காலத்தில், அமெரிக்காவின் நியூயார்க் குடியேற்றத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்ட வில்லியம் காஸ்பி, நிர்வாகக்குழுவைமீறி கூடுதல் ஊதியம் எடுத்துக்கொண்டது, அவருக்கு ஒத்துழைக்காத உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை மாற்றியது என்று பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதை, ‘தி நியூயார்க் வீக்லி ஜர்னல்’ இதழில் ஸெங்கர் தொடர்ந்து வெளிப்படுத்தினார். இதனால், தேசத்துரோக அவதூறு வழக்கில் 1734 நவம்பரில் கைதுசெய்யப்பட்டார். ஆளுனரால் நியமிக்கப்பட்டவரான தலைமை நீதிபதி, வாதங்களையே கேட்கத் தயாராக இல்லாதநிலையில், நேரடியாக நடுவர்களை(கிராண்ட் ஜூரி) நாடியபோது, ஆளுனரின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கக்கூடியவையென்றாலும், ஸெங்கர் எழுதியவை உண்மையென்பதால், அவதூறு என்று கருதமுடியாது என்று விடுவிக்கப்பட்டார். ஆனாலும், பின்னர் வந்த ஆளுனர்களும் இதழியல் சுதந்திரத்தை ஏற்காதவர்களாகவே தொடர்ந்தனர். அதனாலேயே, விடுதலைக்குப்பின் அமெரிக்க அரசமைப்புச் சட்டமும், முதல் திருத்தமும் தகவல், கருத்து ஆகியவற்றின் பரிமாற்றத்தில் அரசு தலையிடத் தடையை ஏற்படுத்தின. நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தல் என்ற அடிப்படையில் இதழியலாளர்களின்மீது வழக்குத் தொடர முடிந்தாலும்கூட, பெரும்பாலான நாடுகளைவிட அமெரிக்காவின் இதழியல் சுதந்திரம் கூடுதலானதாகவே குறிப்பிடப்படுகிறது. இதழ்கள் தொடங்கப்பட்டதுமே, அவற்றைக் கட்டுப்படுத்தும் சட்டங்களும் தோன்றிவிட்டன. எழுத்தாளர்கள் எழுதுவதற்கு உரிமம்(லைசென்ஸ்) பெறவேண்டுமென்ற விதியுடன், வெளியிடுவதற்குமுன் தணிக்கை செய்யவும் வழிவகுத்த, உரிமம் வழங்கும் உத்தரவு என்ற அவசரச் சட்டம், 1643இல் இங்கிலாந்தில் இயற்றப்பட்டது. இதழியல் சுதந்திரத்திற்கெதி ரான முதல் சட்டமான இதை எதிர்த்துத்தான், பேச்சு, கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தி, புரட்சிக்கவி மில்ட்டன், ஏரோபேஜிட்டிக்கா என்ற சிறு பிரசுரத்தை 1644இல் வெளியிட்டார். தற்போது, பின்லாந்து, நெதர்லாந்து, நார்வே, டென்மார்க், நியூசிலாந்து ஆகிய நாடுகள் மிக அதிக இதழியல் சுதந்திரம் கொண்ட நாடுகளாக விளங்குகின்றன. இன்றும், உலகின் மூன்றிலொரு பங்கு நாடுகளில், குறிப்பாக, மக்களாட்சி முறை இல்லாத நாடுகளில், இதழியல் சுதந்திரம் என்பது மிகமோசமாக ஒடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், உலகின் மிகப்பெரிய மக்களாட்சி(ஜனநாயகம்) என்று அழைத்துக்கொள்கிற இந்தியாவில், இதழியலாளர்கள் மிகக்கடுமையான நெருக்கடிகளைச் சந்திப்பதாக பன்னாட்டு இதழியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். - அறிவுக் கடல் இந்நாள் ஆகஸ்ட் 06 இதற்கு முன்னால் -ஆகஸ்ட் 6, 2019 1806 பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியனிடம், பேரரசர் இரண்டாம் பிரான்ஸ் தோல்வி யுற்றதையடுத்து ஏற்பட்ட ப்ரஸ்பர்க் அமைதி உடன்பாட்டின்படி புனித ரோமப் பேரரசு அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டு முடிவுக்கு வந்தது. தற்போதைய ரோம் நகரம் இருக்குமிடத்தில் பதினான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மனிதர்கள் வசித்ததாக தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கி.மு.753இல், இத்தாலியின் டைபர் நதிக்கரையில், ரோமுலஸ், ரீமஸ் என்னும் இரட்டைச் சகோதரர்களால் ரோம் நகர் உருவாக்கப்பட்டதாகப் புராணக் கதைகள் கூறுகின்றன. இவர்கள், கிரேக்க-ரோம புராணங்களின்படி, ஈனியாஸ் என்னும் ட்ரோஜான் இளவரசனின் வழிவந்தவர்கள். ரோம் என்ற பெயருக்கான தெளிவான வரலாறு தெரியவில்லை. கிரேக்க மொழியில் ரோம் என்றால் வலிமை என்று பொருள். இத்தாலியில் வசித்த இட்ரஸ்கன் நாகரிக மக்களின் மொழியில் நதி என்ற பொருளுடைய ரூமோன் என்ற சொல்லிலிருந்து வந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. கி.மு.509இல் ஏற்பட்ட ஓர் அரசியல் புரட்சிக்குப்பின் ரோம் குடியரசானது. நகர அரசு என்பதிலிருந்து மத்தியதரைக்கடல் பகுதி முழுவதற்கும் விரிவடைந்த இது, கி.மு.27இல் அகஸ்டஸ் சீசரைப் பேரரசராகக்கொண்டு, ரோமப் பேரரசாகியது. ட்ராஜான் என்ற பேரரசரின் (கி.பி.98-117)காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்த ரோமப்பேரரசு, 395இல் கிரேக்கம் பேசும் கிழக்கு ரோமப்பேரரசாகவும், லத்தீன் பேசும் மேற்கு ரோமப்பேரரசாகவும் பிளவுற்றது. கிழக்கு ரோமப்பேரரசு, ஒட்டோமான்கள் 1453இல் கைப்பற்றும்வரை பைசாந்தியப் பேரரசாகத் தொடர்ந்தா லும், மேற்கு ரோமப்பேரரசு 476இலேயே முடிவுக்குவந்து விட்டது. இதனை, அரசர் சார்லமேன் என்பவரைப் பேரரசராக்கி, திருத்தந்தை மூன்றாம் லியோ புதுப்பித்தார். 900களின் தொடக்கத்தில் இத்தாலிய அரசர்கள் இதைக் கைப்பற்றியதால், மீண்டும் முதலாம் ஓட்டோ பேரரசர் கைப்பற்றிய 962ஐ இதன் தொடக்கமாகச் சிலர் குறிப்பிடு கிறார்கள். தொடக்கத்தில் ரோமப் பேரரசு என்றே அழைக்கப்பட்ட இது 1157இலிருந்து புனிதப் பேரரசு என்றும், 1254இலிருந்து புனித ரோமப் பேரரசு என்றும் அழைக்கப்பட்டது. ‘இது எந்த வகையிலும் புனிதமானது மில்லை, ரோமானியர்களுடையதுமில்லை, பேரரசுமில்லை’ என்று வால்ட்டேர் கூறியது புகழ்பெற்றது. 1805இன் பிற்பகுதி யில் நெப்போலியனிடம் அடுத்தடுத்துத் தோல்வியுற்ற நிலையில், டிசம்பர் 6இல் ப்ரஸ்பர்க் (தற்போது ஸ்லோவேக்கியா-வின் தலைநகராகவுள்ள ப்ராட்டிஸ்லாவா) நகரில் ஏற்பட்ட அமைதி உடன்பாட்டின்படி, 1806 ஆகஸ்ட் 6இல் இப்பேரரசு முடிவுக்கு வந்தது. இந்நாள் ஆகஸ்ட் 07 இதற்கு முன்னால் -ஆகஸ்ட் 7, 2019 […] 1858 - ‘ஆஸ்திரேலிய விதிகள் கால்பந்து’ போட்டி முதன்முறை யாக விளையாடப்பட்டது. வழக்கமான கால்பந்து விளை யாட்டில், செவ்வக வடிவ மைதானத்தில், பந்தைக் காலால் உதைப்பது மட்டுமே அனுமதிக்கப்படுகிற நிலையில், இவ்விளையாட்டில், நீள்வட்ட மைதானத்தில், பந்தைக் காலால் உதைத்தோ, கைகளால் தட்டியோ விளையாடலாம். பந்தைக் கையால் வீசுவது தவறு என்றாலும், உதைக்கப்பட்ட பந்தை கையால் பிடிப்பதும் சில விதிகளுக்குட்பட்டு அனுமதிக்கப்படுகிறது. உலகிலேயே மிக அதிக மாறுபட்ட முறைகளில் விளையாடப்படும் விளை யாட்டு கால்பந்துதான். கி.மு.2-3ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சீன ராணுவ நூல்களில் காணப்படும் குஜு என்ற கால்பந்து விளை யாட்டு பற்றிய குறிப்பை, இவ்விளையாட்டு பற்றிய மிகப்பழைய அறிவியல்பூர்வ மான ஆதாரமாக ஃபிஃபா குறிப்பிடுகிறது. பண்டைய கிரேக்கம், ரோம், ஜப்பான் என்று உலகின் பல்வேறு பகுதிகளிலும், காலால் பந்தை உதைத்து விளையாடும் விளையாட்டு இருந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. உதைக்கப்பட்ட பந்து நாவிதரிடம் மழித்துக்கொண்டிருந்த ஒருவர்மீது விழுந்து அவர் இறந்ததாக, கிமு.முதல் நூற்றாண்டைச் சேர்ந்த ரோம அரசியல் தலைவர் சிசெரோ குறிப்பிட்டுள்ளார். இடைக்காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியடைந்த கால்பந்து விளையாட்டு, தற்போது, உலகம் முழுவதும் விளையாடக்கூடியதும், ஃபிஃபா அமைப்பால் கட்டுப் படுத்தப்படுவதுமான ‘அசோசியேஷன் கால்பந்து’ (சில நாடுகளில் இதன் பெயர் சாக்கர்!), அமெரிக்கக் கால்பந்து, கனடியக் கால்பந்து ஆகியவற்றை உள்ளடக்கிய ‘க்ரிடிரோன் கால்பந்து’, ஆஸ்திரேலிய விதிகள் கால்பந்து, இங்கிலாந்திலுள்ள ரக்பி பள்ளி என்பதில் தொடங்கப்பட்ட ரக்பி கால்பந்து, கெய்லிக் கால்பந்து ஆகிய முக்கிய பிரிவுகளின்கீழ், ஏராளமான மாறுபட்ட வகைகளில், மாறுபட்ட வீரர்கள் எண்ணிக்கை, மைதானம் உட்பட மாறுபட்ட விதிகளுடன் விளையாடப்படுகிறது. அசோசியேஷன் கால்பந்தில் கோள வடிவப் பந்தும், ரக்பியில் நீள்வட்டப் பந்தும், ஆஸ்திரேலிய கால்பந்தில் முனையுடன்கூடிய நீள்வட்டப்பந்தும் பயன்படுத்தப்படுகிறது. தொடக்க காலத்தில், விலங்குகளின், குறிப்பாகப் பன்றியின், சிறுநீர்ப்பைதான்(ப்ளாடர்) காற்றடைத்து, பந்தாகப் பயன்படுத்தப்பட்டது. இவை சேதமுறுவதைத் தடுக்க தோலாலான உறைகள் பின்னாளில் சேர்க்கப்பட்டன. தற்போதுள்ள ஐங்கோண (அல்லது அறுகோண) துண்டுகளாலான மேலுறை 1970 ஃபிஃபா உலகக்கோப்பைப் போட்டியில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நாள் ஆகஸ்ட் 08 இதற்கு முன்னால் -ஆகஸ்ட் 8, 2019 […] 1876 - ‘ஆட்டோக்ராஃபிக் பிரிண்ட்டிங்’ என்னும் மிமியோ க்ராஃப் கருவிக்கு, தாமஸ் ஆல்வா எடிசன் காப்புரிமை பெற்றார். “மிமியோக்ராஃப்” என்பது ஸ்டென்ஷில்(உள்வெட்டுத் தகடு) பயன்படுத்தி நகலெடுக்கும் கருவியின் பெயர். ஸ்டென்ஷிலின் வரலாறு காகிதத்திற்கும் முற்பட்டது. மனிதகுலத்தின் முதல் ஓவியங்களான பண்டைக்கால குகை ஓவியங்களில் ஸ்டென்ஷில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, கையை (ஸ்டென்ஷிலாக) சுவற்றில் வைத்து, அதன்மீது வண்ணத்தைத் தெளிப்பதன்மூலம், கையின் வடிவத்தை பதியச் செய்வது. உலகின் மிகப்பழைய குகை ஓவியமான, ஸ்பெயினின் மால்ட்ராவியசோ குகையில் காணப்படும் இத்தகைய கை ஸ்டென்ஷில் ஓவியங்கள், 64 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் நியாண்டர்தால் மனிதர்களால் வரையப்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. துணிகளில் உருவங்களை அச்சிட, ஸ்டென்ஷில் தொழில்நுட்பம் மிகநீண்ட காலமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. வார்னீஷ் பூசப்பட்ட காகிதத்தில், அரிக்கும் தன்மையுள்ள வேதிமத்தால் எழுதுவதன்மூலம் ஸ்டென்ஷில் உருவாக்கி நகலெடுக்கும் ‘பேப்பிரோக்ராஃப்’ என்ற முறையை, லண்டனில் படித்துக்கொண்டிருந்த யூஜெனியோ-டி-ஸுக்காட்டோ என்ற இத்தாலியர் 1874இல் உருவாக்கினார். அச்சிடும் எந்திரம் உருவாகிவிட்டாலும், வணிகர்கள், வழக்கறிஞர்கள், காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்டோருக்கு நகலெடுக்கும் தேவை ஏராளமாக இருப்பதை உணர்ந்த எடிசன், கைகளால் எழுதுவதை தகட்டில் ஸ்டென்ஷிலாக உருவாக்கும் ’மின்சாரப்பேனா’வை உருவாக்கினார். இந்த மின்சாரப்பேனா, அது உருவாக்கும் ஸ்டெஷிலைக் கொண்டு நகலெடுக்கும் சமதள அச்சிடும் கருவி ஆகியவற்றைக்கொண்டதுதான் எடிசன் காப்புரிமை பெற்ற கருவி. இந்தக் காப்புரிமையைப் பயன்படுத்தும் உரிமத்தை எடிசனிடம் பெற்று, உற்பத்தி செய்த ஆல்பர்ட் ப்ளேக் டிக் என்பவர்தான் ‘மிமியோக்ராஃப்’ என்ற பெயரை 1887இல் முதன்முதலில் பயன்படுத்தினார். ‘மிமியோமை’ என்ற கிரேக்கச் சொல்லுக்கு போலி என்று பொருள். சமதள அச்சிடும் அமைப்பிற்கு பதிலாக, சுழலும் உருளைகொண்ட, ‘ஆட்டோமேட்டிக் சைக்ளோஸ்டைல்’ என்ற எந்திரத்தை 1891இல் டேவிட் ஜெஸ்ட்டெட்னர் உருவாக்கினார். பேனாவிற்கான லத்தீன் சொல்லான ஸ்டைலஸ் என்பதுடன், சுழலும் என்பதற்கான சைக்ளோ என்ற சொல் சேர்க்கப்பட்டு இப்பெயர் உருவாக்கப்பட்டது. பொதுவாக மிமியோக்ராஃப், அதை உற்பத்திசெய்த நிறுவனங்களின் வணிகப்பெயராலேயே சைக்ளோஸ்டைல், ரோனியோ (க்ராஃப்) என்றே அழைக்கப்பட்டது. நகலெடுக்கும் (ஃபோட்டோ காப்பி) தொழில்நுட்பம் மிகப்பெரும் வளர்ச்சியை எட்டியிருந்தாலும், அதிக எண்ணிக்கையிலான நகல்களை எடுக்க, தானே ஸ்கேன் செய்து ஸ்டென்ஷிலைத் தயாரித்து, நகலெடுக்கும் ‘டிஜிட்டல் ட்யூப்ளிக்கேட்டர்’ என்ற கருவி வளர்ந்த நாடுகளில் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. இந்நாள் ஆகஸ்ட் 09 இதற்கு முன்னால் -ஆகஸ்ட் 9, 2019 […] 1896 - பறக்கும் மனிதன் என்றழைக்கப்பட்ட ஓட்டோ லிலியன்த்தால் என்ற ஜெர்மானியர், மிதவை வானூர்தி (க்ளைடர்) கட்டுப்பாட்டை இழந்ததில் சுமார் 50 அடி உயரத்திலிருந்து விழுந்து, கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு, மறுநாள் ஆகஸ்ட் 10இல் உயிரிழந்தார். விமானம் உருவாக்கப்படுவதற்குமுன், காற்றைவிட எடைமிகுந்த - அதாவது வெப்பக்காற்று பலூன் அல்லாத - பறக்கும் கருவியில், மிக அதிக முறை, வெற்றிகரமாகப் பறந்தவர் லிலியன்த்தால்தான். இரண்டாயிரத்தும் அதிகமான முறை ஏராளமான மாறுபட்ட க்ளைடர்களை உருவாக்கிப் பறந்துள்ள இவர், காற்றைவிட எடை மிகுந்த பறக்கும் கருவியை உருவாக்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியவர்களில் முக்கியமான ஒருவராகக் குறிப்பிடப்படுகிறார். பறத்தல் முயற்சிகளுக்காகவே, பெர்லினுக்கு அருகில், தானே உருவாக்கிய ஒரு சிறிய செயற்கை மலையிலிருந்துதான் லிலியன்த்தால் பறக்கும் ஆய்வுகளை மேற்கொண்டார். பறவைகளின் (குறிப்பாக ஸ்டோர்க் என்னும் பெரிய நாரை - இது சுமார் 8 கிலோ எடை கொண்டது) பறத்தல்குறித்து ஏராளமான ஆய்வுகளை மேற்கொண்ட லிலியன்த்தால், துருவ வளைவு என்னும் கணக்கீட்டுமுறையைப் பயன்படுத்தி, அவற்றின் இறக்கைகளின் காற்றியக்கவியல் குறித்த விளக்கங்களை உருவாக்கினார். விமானத்தை உருவாக்குவதற்கு தொடக்கத்தில் இந்தத் தகவல்களைப் பயன்படுத்திய ரைட் சகோதரர்கள், பின்னர் காற்றுப் பாதை (விண்ட் டன்னல்) முறைக்கு மாறினாலும், இன்றைய நவீன க்ளைடர்களின் உருவாக்கத்தில் லிலியன்த்தாலின் ஆய்வு முடிவுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. தொங்கு க்ளைடரை(ஹேங் க்ளைடர்) இயக்குபவர்கள் பிடித்துக்கொள்ள லிலியன்த்தால் 1894இல் உருவாக்கி, காப்புரிமைக்கு விண்ணப்பித்த அமைப்பே, தற்போதைய தொங்கு க்ளைடர்களில் பயன்படுத்தப்படுகிறது. இறக்கை அசைத்துப் பறப்பவை, இரட்டை அடுக்கு, ஒற்றை அடுக்கு நிலையான இறக்கை கொண்டவை என்று ஏராளமான க்ளைடர்களை வடிவமைத்துப் பறந்த லிலியன்த்தால்தான், தற்போதைய நவீன தொங்கு க்ளைடர்களில் பயன்படுத்தப்படும், பறப்பவரின் உடல் அசைவின்மூலம் புவியீர்ப்பு விசையைக் கட்டுப்படுத்திப் பறக்கும் முறையை உருவாக்கினார். பறத்தலின் தந்தை என்று புகழப்பட்ட லிலியன்த்தாலின் பறக்கும் படங்களை உலகம் முழுவதும் செய்தித்தாள்கள் வெளியிட்டன. 1909இல் ஜெர்மனியில் ரைட் சகோதரர்கள் தங்கள் விமானத்தைப் பறக்கச்செய்து காட்டியபோது, லிலியன்த்தாலின் மனைவியை அழைத்து கவுரவப்படுத்தினர். இந்நாள் ஆகஸ்ட் 10 இதற்கு முன்னால் -ஆகஸ்ட் 10, 2019 […] 1948 - இந்திய அணுசக்தி ஆணையம் தொடங்கப்பட்டது. இந்திய மண்ணில் குறிப்பிடத்தக்க அளவுக்கு கதிர்வீச்சுத் தாதுக்கள் இருப்பதாக இந்திய புவியியல் அளவை அமைப்பு 1901இலேயே கண்டுபிடித்தாலும், வேறு எந்த நடவடிக்கைகளும் அப்போது மேற்கொள்ளப்படவில்லை. ஹோமி பாபா, ஆர்.எஸ்.கிருஷ்ணன், மேக்னாட் ஷா, தவ்லத் சிங் கோத்தாரி உள்ளிட்ட இந்திய அறிவியலாளர்கள், 1930களில் ஐரோப்பிய அறிவியலாளர்களுடன் இணைந்து, அணு இயற்பியல் ஆய்வுகளில் ஈடுபட்டனர். 1938இல் அணுக்கருப் பிளவு சாத்தியமானதையடுத்து, கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசியராக இருந்த மேக்னாட் ஷா, தங்கள் ஆய்வகத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். ஹோமி பாபாவின் முயற்சியில், அவரது உறவினரான ஜே.ஆர்.டி.டாட்டாவின் உதவியுடன், காஸ்மிக் கதிர்கள், அணு இயற்பியல் ஆகியவற்றின் ஆய்வுகளுக்கு முக்கியத்துவமளிக்கும், ‘அடிப்படை ஆய்வுகளுக்கான டாட்டா கல்வி நிலையம்’ 1945இல் உருவாக்கப்பட்டது. ஹிரோஷிமா அணுகுண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து, அவ்வளவு அதிக ஆற்றலை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தினால், மிகப்பெரிய தொழிற்துறை புரட்சியை உருவாக்கலாம் என்று ஆர்.எஸ்.கிருஷ்ணன் கூறினார். பாபாவின் தலைமையின்கீழ், அறிவியல், தொழிற்துறை ஆய்வு வாரியம் 1946இல் உருவாக்கப்பட்டது. தங்கள் பகுதியில் கிடைக்கும் மோனஸைட், இல்மனைட் முதலான தாதுக்களை, அணு சக்திக்குப் பயன்படுத்த திருவாங்கூர் பல்கலைக்கழகம் உருவாக்கிய குழு, அந்த ஆய்வை அகில இந்திய அளவில் செய்யப் பரிந்துரைத்தது. விடுதலைக்கு முந்தைய தற்காலிக அரசில் தொழில்துறை, நிதி, கல்வி அமைச்சராக இருந்த ராஜாஜி, அணுசக்தி ஆய்வுக்கான ஆலோசனைக்குழுவை 1947 ஜூனில் உருவாக்கினார். இக்குழுவிலிருந்த நாஸிர் அகமத், பிரிவினையின்போது பாகிஸ்தானுக்குச் சென்று, பின்னாளில் அந்நாட்டு அணுசக்தி ஆணையத்தின் தலைவரானார். 1948 மார்ச்சில் நேரு கொண்டுவந்த இந்திய அணுசக்திச் சட்டத்தின்மூலம், ஆகஸ்டில் இந்திய அணுசக்தி ஆணையம் அமைக்கப்பட்டது. இந்திய அரசின் ‘அணுசக்தித் துறை’ 1954இல் உருவாக்கப் பட்டது. ட்ராம்பே அணுசக்தி நிலையம் 1954இல் அமைக்கப்பட்டு, 1967இல் பாபாவின் மறைவிற்குப்பின் பாபா அணு ஆய்வு மையம் என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டது. ஆசியாவின் முதல் அணு உலை, இங்கிலாந்தின் உதவியுடன், 1957இல் இந்தியாவில் தொடங்கப்பட்டது. தொடக்ககால அணுசக்தி நிலையங்களுக்கு உதவிய கனடா, 1974இல் நடத்தப்பட்ட அணுகுண்டு வெடிப்பிற்குப்பின், உதவிகளை நிறுத்திவிட்டது. இந்நாள் ஆகஸ்ட் 11 இதற்கு முன்னால் -ஆகஸ்ட் 10, 2019 […] 1984 - ‘என் சக அமெரிக்கர்களே, (சோவி யத்) ரஷ்யாவை நிரந்தரமாகச் சட்டவிரோத மாக்கும் சட்டத்தில் நான் இன்று கையெழுத்திட்டுவிட்டேன் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன், இன்னும் 5 நிமிடங்களில் (சோவியத் ரஷ்யாமீது) குண்டு வீச்சு தொடங்கும்’ என்று அமெரிக்கக் குடியரசுத் தலை வர் ரொனால்ட் ரீகன், ஒரு வானொலி உரையில் குறிப் பிட்டார். வானொலி ஒலிபரப்புக் கான உரைக்கு முன்பாக, ஒலி யளவைச் சரிசெய்வதற்காக, உரையாற்ற வேண்டியவரை, பேசிக்காட்டுமாறு கேட்பது வழக்கம். அவ்வாறான, உரைக்கு முந்தைய சோத னையின்போதுதான் (மைக் டெஸ்ட்டிங்!) ரீகன் இவ்வாறு பேசினார். அவரைப் பேசிக்காட்டு மாறு சொன்னபோதே வானொலி நிலையங்களுக்கான ஒலிபரப்புகள் தொடங்கியிருந்தது அவருக்குத் தெரி யாமற்போய்விட்டது. அந்த உரையைப் பெற்று, ஒலி பரப்புச் செய்த பெரும்பாலான வானொலி நிலையங்கள், ஒலிபரப்பின்போது இந்தப் பகுதியைத் தவிர்த்துவிட்டாலும், அவர்களிடம் ஒலிப்பதிவாக இருந்த இது வெளியே கசிந்து விட்டது. உரைக்கு முந்தைய சோதனைகளில் இவ்வாறு நகைச்சுவையாக(?) பேசுவது என்பது ரீகன் எப்போதுமே செய்வதுதான் என்று சமாதானம் சொல்லப்பட்டது. 1982இல் இவ்வாறான ஒரு வானொலி உரைக்கு முந்தைய சோதனை யில், மற்றொரு பொதுவுடைமை நாடாக அப்போது இருந்த போலந்து மக்கள் குடியரசைப் பற்றியும், ரீகன் அசிங்க மாகக் குறிப்பிட்டதாக சுட்டிக்காட்டப்பட்டது. அமெரிக்க-சோவியத் பனிப்போர் உச்சத்திலிருந்த நேரத்தில், ரீகன் இவ்வாறு பேசியது, 3 நாட்களில்(ஆகஸ்ட் 14) உலகச் செய்தி யாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, அமெரிக்காமீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்காக, வடபசிஃபிக் பகுதியிலிருந்த சோவியத் போர்க்கப்பல்களை ஆயத்தமாக்குமாறு, சோவியத் படைகளின் சங்கேத செய்தி கூறியதாக, ஜப்பானிய, அமெரிக்க உளவுத்துறைகள் தெரி வித்தன. உண்மையில் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்பதுடன், இதுபற்றிய கேள்விக்குப் பதிலளித்த சோவி யத் வெளியுறவுத்துறை அமைச்சர், ‘சோவியத்-அமெரிக்க உறவுகளை மேம்படுத்த எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளில் அமெரிக்காவின் விருப்பமின்மையை இது காட்டுகிறது’ என்று முடித்துக்கொண்டார். ‘ரீகனின் தனிப்பட்ட கருத்து களுக்கு வெள்ளை மாளிகை பொறுப்பாகாது, அக்கருத்து அமெரிக்காவின் ராணுவ நோக்கங்களையும் குறிக்காது’ என்று வெள்ளை மாளிகை நிர்வாகம் அறிவித்தது. கேவல மான ரசனைகொண்ட, மிக மோசமான நகைச்சுவை என்று ஊடகவியலாளர்களால் ஒதுக்கப்பட்டாலும், சோவி யத்தின்மீதும், பொதுவுடைமையின்மீதும் அமெ ரிக்காவுக்கிருந்த அச்சம், நகைச்சுவை என்ற பெயரில் வெறுப்பாக வெளிப்பட்டது என்பதுதான் எதார்த்தம்! இந்நாள் ஆக. 12 இதற்கு முன்னால் -ஆகஸ்ட் 12, 2019 […] 1765 - இந்தியாவின் ஆட்சியில் கிழக்கிந்தியக் கம்பெனியின் நுழைவைத் தொடங்கிவைத்த, அலகாபாத் ஒப்பந்தம் ஏற்பட்டது. முகலாயப் பேரரசர் இரண்டாம் ஆலம் ஷா, வங்காள நவாப் மீர் காசிம், அவாத்-தின் நவாப் ஷுஜா-உத்-தவ்லா ஆகியோரின் கூட்டணிப் படையை, 1764 அக்டோபரில் நடைபெற்ற பக்சார் சண்டையில் கம்பெனிப் படை தோற்கடித்ததையடுத்து இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது. கூட்டணியின் படையில் சுமார் 40 ஆயிரம் வீரர்களும், 140 பீரங்கிகளும் இருந்தாலும், வெறும் 7 ஆயிரம் பேரையும், 30 பீரங்கிகளையும்கொண்ட கம்பெனிப் படை வெற்றிபெற்றது. கம்பெனிப் படையின் 7 ஆயிரம் வீரர்களிலும், சுமார் 6,200 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத படைகளின் கூட்டணியாக அமைந்த இந்தியப் படையில் ஒருங்கிணைப்பு இல்லாமற்போனது தோல்விக்குக் காரணமாக அமைந்தது. வங்காளம், பீகார், ஒரிசா ஆகியவை அடங்கிய கிழக்குப் பகுதியில், முகலாயப் பேரரசரின் உத்தரவின்றி வரி வசூலிக்கும் அதிகாரத்தை இந்த ஒப்பந்தம் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வழங்கியது. அதற்கு பதிலாக, முகலாயப் பேரரசின் அலகாபாத் அரண்மனை செலவுகளுக்காக, (அவ்வாறு வசூலித்துக்கொண்ட வரியிலிருந்து!) ஆண்டுக்கு ரூ.26 லட்சம் (அன்றைய மதிப்பிலேயே) ஆலம் ஷாவுக்கு கம்பெனி செலுத்தும். வாரணாசியை தன்னிடம் வைத்துக்கொண்டு, கம்பெனி கேட்கும் தொகையை (கப்பம்!) ஆலம் ஷா செலுத்தவேண்டும். அலகாபாத்தையும், கோராவையும் ஷுஜா-உத்-தவ்லாவிடமிருந்து பிடுங்கி முகலாயப் பேரரசிடம் வழங்கிவிட்டு, அவாத்-தை அவருக்குத் திருப்பித் தந்தது கம்பெனி. அவர், கம்பெனிக்குப் போர் இழப்பீடாக ரூ.53 லட்சம் தரவேண்டும். வங்கத்திலும் வரி வசூல் உரிமைகளை கம்பெனி எடுத்துக்கொண்டு, நீதி முதலான அதிகாரங்களை மட்டும் கொண்டவராக நவாபை ஆக்கி, இரட்டை அரசை ஏற்படுத்தியது. போரில் கம்பெனி வென்றிருந்த நிலையில், அவர்கள் விரும்பியவற்றைத் திணித்த இந்த ஒப்பந்தத்தில், கம்பெனியின் பிரதிநிதியாக ராபர்ட் கிளைவ் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தமே, அதுவரை இந்தியாவில் மிகப்பெரிய வணிக நிறுவனமாக மட்டுமே இருந்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு, 40 ஆயிரம் ச.கி.மீ.க்கும் அதிகமான விவசாய வளமிக்க பகுதியில் வரி வசூலிக்கும் உரிமையை அளித்து, அதனை இந்தியாவின் அரசு நிர்வாகத்தில் பங்கேற்கும் அமைப்பாக மாற்றியது. இந்நாள் ஆகஸ்ட் 13 இதற்கு முன்னால் -ஆகஸ்ட் 13, 2019 […] 1918 - பிஎம்டபிள்யூ நிறுவனம், பப்ளிக் லிமிட்டெட் கம்பெனியாகப் பதிவுசெய்து தொடங்கப்பட்டது. விமானங்களைத் தயாரிக்க 1910இல் கஸ்டவ் ஓட்டோ தொடங்கிய கஸ்டவ் ஓட்டோ பிளக்மெஷினென்பேப்ரிக், விமான என்ஜின்களைத் தயாரிக்க 1911இல் கார்ல் ராப் தொடங்கிய ராப் மோட்டரென்வெர்க்கே ஆகிய பவேரிய நிறுவனங்கள், 1916 மார்ச் 7இல் ஒன்றிணைக்கப்பட்டன. பவேரியாவின் கொடியிலுள்ள வெள்ளை-நீலக் கட்டங்களே, பிஎம்டபிள்யூவின் சின்னமாக இன்றுவரை தொடர்கின்றன. இந்நிறுவனத்தைவிட்டு, 1917இல் ராப் விலகியதைத் தொடர்ந்தே, இந்நிறுவனம் பேயரிஸ்ச் மோட்டாரென் வெர்க்கே(பி.எம்.டபிள்யூ.) என்று பெயர் மாற்றம் பெற்றது. ஆனாலும், இணைப்பு நடைபெற்ற 1916 மார்ச் 7ஐ நிறுவப் பட்ட நாளாக பிஎம்டபிள்யூ குறிப்பிட்டுக்கொள்கிறது. முதல் உலகப்போரின் முடிவில் ஏற்பட்ட வெர்செய்ல்ஸ் ஒப்பந்தம், ஜெர்மனி விமானப்படை வைத்துக்கொள்ளவும், விமானங்களை உற்பத்தி செய்யவும் தடைவிதித்ததால், விமானம் தொடர்பான உற்பத்திகளை நிறுத்திவிட்டு, 1918இல் பிஎம்டபிள்யூ ஏஜி (ஜெர்மனியில் ஏஜி என்பது பப்ளிக் லிமிட்டெட்) நிறுவனமாகப் பதிவு செய்துகொண்டு, உழவுக்கருவிகள், ரயில்வே பிரேக் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கத் தொடங்கியது. தொழிற்சாலைகளுக்கு பிஎம்டபிள்யூ தயாரித்துக்கொடுத்த என்ஜின்களை சில நிறுவனங்கள் மோட்டார்சைக்கிள்களில் பயன்படுத்தியதைத் தொடர்ந்து, 1923இல் தானே மோட்டார்சைக்கிளை உற்பத்திசெய்யத் தொடங்கியது. டிக்சி கார்களை உற்பத்தி செய்துகொண்டிருந்த பார்ஸ்யூக்பேப்ரிக் எய்சனேச் நிறுவனத்தை 1928இல் வாங்கியதைத் தொடர்ந்து கார்களை உற்பத்தி செய்யத்தொடங்கியது பிஎம்டபிள்யூ. 1930களில் ஹிட்லர் மீண்டும் ஜெர்மனியில் விமானப்படையைத் தொடங்கியதையடுத்து, விமான என்ஜின் தயாரிப்பை மீண்டும் தொடங்கிய பிஎம்டபிள்யூ, ஜெட் என்ஜின்கள் உட்பட, முப்பதாயிரத்திற்கும் அதிகமான விமான என்ஜின்களைத் தயாரித்தது. இரண்டாம் உலகப்போருக்குப்பின் ஜெர்மனி பிரிந்துவிட, கிழக்கு ஜெர்மனியிலிருந்த இதன் தொழிற்சாலைகளில் உற்பத்திசெய்யப்பட்ட கார்களை பிஎம்டபிள்யூ பெயரில் விற்பனை செய்ததால், அத்தொழிற்சாலைகள் தங்களுடையதல்ல என்று சட்டப்பூர்வமாகக் கைவிட்டது பிஎம்டபிள்யூ. மேற்கு ஜெர்மனியிலிருந்த அதன் தொழிற்சாலைகள் போரில் மிகமோசமாகச் சேதமடைந்திருந்தன. விமான என்ஜின்கள் மட்டுமின்றி என்ஜின்களையே தயாரிக்க நேச நாடுகள் பிஎம்டபிள்யூவுக்குத் தடைவிதித்திருந்ததால், சமையல் கருவிகளை உற்பத்தி செய்த பிஎம்டபிள்யூ, 1940களின் இறுதியில் மோட்டார்சைக்கிள்களையும், 1950களின் தொடக்கத்தில் கார்களையும் உற்பத்தி செய்யத் தொடங்கியது. உலகின் மிகச்சிறந்த கார் என்றழைக்கப்படுகிற ரோல்ஸ்-ராய்சின் வணிகச் சின்னத்தை 2003இல் வாங்கியதன்மூலம், ரோல்ஸ்-ராய்ஸ் கார்களையும் தற்போது பிஎம்டபிள்யூவே உற்பத்தி செய்கிறது. இந்நாள் ஆக. 15 இதற்கு முன்னால் -ஆகஸ்ட் 15, 2019 […] 1281 - ‘காமிக்காஸே’(தெய்வீகக் காற்று) என்று ஜப்பானிய வரலாற்றில் குறிப்பிடப்படும் சூறாவளியில், ஜப்பானைத் தாக்கவந்த மங்கோலிய அரசன் குப்ளாய் கானின் சீனப் படைகளைச் சேர்ந்த சுமார் நான்காயிரம் கப்பல்களும், ஒரு லட்சம் வீரர்களும் மூழ்கி அழிந்தனர். 1231இலிருந்து பலமுறை படையெடுத்து, கொரியாவை திரை செலுத்தும் நாடாக்கியபின், ஜப்பானைக் கைப்பற்ற விரும்பிய குப்ளாய்-கான், 1274லும், 1281லும் ஜப்பான்மீது படையெடுத்தாலும், வெற்றிபெற முடியவில்லை. கைகளால் வீசும் வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்ட இந்தப் போர்கள், முன் நவீனப் போர்முறையின் தொடக்கமாக வரலாற்று முக்கியத்துவம் பெறுவதுடன், ஜப்பானிய வரலாற்றில், மங்கோலிய விரிவாக்கத்தைத் தடுத்துநிறுத்தி, நாடுகளின் எல்லைகளை வரையறுப்பதில் முக்கியமானவையாகவும் குறிப்பிடப்படுகின்றன. 1274இல் மேற்கொள்ளப்பட்ட முதல் படையெடுப்பில் 200க்கும் மேற்பட்ட கப்பல்கள் சூறாவளியில் அழிந்ததைத் தொடர்ந்து, குப்ளாய்-கானின் படைகள் தோல்வியுற்றுப் பின்வாங்கின. 1281இல் இரண்டாவது படையெடுப்பு, சுமார் நான்காயிரம் கப்பல்களில், ஒன்றரை லட்சம் மங்கோலிய, சீன, கொரிய வீரர்கள் பங்கேற்ற, உலக வரலாற்றின் மிகப்பெரிய படையெடுப்பு என்றும், இரண்டாம் உலகப்போரில் பிரான்சை விடுவிக்க சுமார் மூன்றரை லட்சம் நேச நாட்டுப் படைவீரர்கள் நார்மண்டியில் நுழைந்ததுதான் இதைவிடப் பெரியதாகவும் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அக்காலத்தில் வீரர்களின் எண்ணிக்கை கூடுதலாகக் குறிப்பிடப்பட்டுவிட்டதாகவும் சில தற்கால வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். சூறாவளியில் கப்பல்கள் அழிந்ததைத் தொடர்ந்து, சுமார் எழுபதாயிரம் வீரர்களை ஜப்பான் கைது செய்ததுடன், ஜப்பானைக் காப்பதற்காகவே வீசிய தெய்வீகக் காற்று என்றும் கொண்டாடியது. அதன்பின் பெரிய முக்கியத்துவம்பெறாத இந்த நிகழ்வை, இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் பயன்படுத்திக்கொண்டது. நேச நாட்டுப் படைகளின் கை ஓங்கத் தொடங்கிய நிலையில், அவர்களின் கப்பல்கள்மீது, இதே ‘காமிக்காஸே’ என்ற பெயரில், ஜப்பானிய விமானிகளை விமானத்துடன் விழுந்து வெடிக்கச்செய்யும் தற்கொலைப் படையாக்கியது ஜப்பான். பேரரசரும் நாடும் வேறுவேறல்ல என்றும், தாய்நாட்டிற்காக உயிரிழப்பது தெய்வீகம் என்றும் நம்பச்செய்யப்பட்டிருந்த ஜப்பானிய வீரர்கள், திரும்பிவருவதற்கு எரிபொருளில்லாமல் விமானத்தில் அனுப்பப்பட்டு தற்கொலைப் படையாகப் பயன்படுத்தப்பட்டனர். அணுக்குண்டு தாக்குதலால் ஜப்பான் சரணடைவதற்குமுன் ,பசிபிக் பகுதியில் நேசநாட்டுப் படைகளுக்கு முட்டுக்கட்டைபோடும் முயற்சியில், 1,300க்கும் அதிகமான விமானங்களில், 3,800க்கும் அதிகமான ஜப்பானிய விமானிகள் இவ்வாறு தாக்குதல் நடத்தி உயிரிழந்தனர். இந்நாள் செப்டம்பர் 15 இதற்கு முன்னால் -செப்டம்பர் 15, 2019 […] 1440 - உலக வரலாற் றின் தொடக்ககால தொடர் கொலைகாரராகக் குற் றம் சாட்டப்பட்டு, பிரெஞ்சு ராணு வத் தளபதிகளுள் ஒருவரான கில்லஸ் டி ராய்ஸ் கைது செய் யப்பட்டார். பொதுவாக நம்பப் படுவதுபோல, தொடர்கொலை கள் என்பவை, சமூக மாற்றங் கள், தொழில்நுட்ப முன்னேற் றங்களால் மனித மனநிலையில் ஏற்பட்ட மாற்றங்களால் உரு வானவையாகவோ, அருகாமை காலங்களில் தொடங்கிய நிகழ்வுகளாகவோ இன்றி, வரலாறு முழுவதுமே காணப் பட்டுள்ளன. தொடர்கொலைகள், அவற்றைச் செய்தவர்கள் ஆகியவை பற்றிய தெளிவான பதிவுகள் இல்லாவிட்டா லும், அப்படியான நிகழ்வுகளே ஓநாய் மனிதன், ரத்தம் குடிக்கும் ட்ராகுலா முதலான கற்பனைகள் தோன்றக் கார ணமாயிருந்திருக்கும் என்று கருதப்படுகிறது. பண்டைய ரோமில், கி.மு.331இல் தொடர்ச்சியாக 90க்கும் மேற்பட்ட ரோமானியர்கள் இறந்த நிகழ்வு, தாதியர்கள் செய்த கொலை என்று கண்டுபிடிக்கப்பட்டதாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது. கி.மு.331இல் சீனப் பேரரசர் ஜிங்-கின் மரு மகன் லியூ பெங்லி, 100க்கும் மேற்பட்டோரை, பொழுது போக்காகக் கொன்றதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதே, தொடர்கொலைகாரர் பற்றிய முதல் வரலாற்றுப் பதிவு! கொலை செய்யப்பட்டவர்களின் உடைமைகளைக் கைப்பற்றிக் கொண்ட இவரது குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, மரண தண்டனை அளிக்க வலியுறுத்தப்பட்டாலும், சொந்த மருமகனுக்கு மரண தண்டனை அளிக்க விரும்பாத அர சர், பெங்லியை அரச குடும்பத்திலிருந்து விலக்குவதை மட்டுமே தண்டனையாக அளித்திருக்கிறார். பண்டைய யேமனின் ஹிம்யாரைட் முடியரசில், ஸு ஷெனாட்டிர் என்ப வர், 100க்கும் மேற்பட்ட சிறுவர்களைத் தன்பாலினப் புணர்ச்சிக்குப்பின் கொலை செய்திருக்கிறார். இந்த வரிசை யில் குறிப்பிடப்படும் கில்லஸ் டி ராய்ஸ், பிரெஞ்சு ராணு வத்தில் ஜோன் ஆஃப் ஆர்க்-குடன் இணைந்து பணி யாற்றியவர், மிகவும் புகழ்பெற்றவர். மிகச்சிறந்த சாதனை புரியும் பிரெஞ்சு ராணுவ தளபதிகளுக்கு வழங்கப்படும் ‘மார்ஷல் ஆஃப் ஃப்ரான்ஸ்’ என்ற பதவியைப் பெற்ற வர். தொடர்கொலை குற்றச்சாட்டின்மீதான விசாரணை யில், சுற்றுவட்டாரத்தின் ஏராளமான மக்கள், தங்கள் பிள்ளைகள் இவரது கோட்டைப் பகுதியில் காணாமற்போன தாகக் குற்றம் சாட்டினர். ராய்ஸ் குற்றத்தை ஒப்புக்கொண்ட தையடுத்து, தூக்கிலிடப்பட்டு மரண தண்டனை நிறை வேற்றப்பட்டது. 140இலிருந்து 600 குழந்தைகள் வரை கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்நிகழ்வு, ராய்ஸ் ஓய்வுபெற்றபோது உரிய மரியாதைகள் செய்யப்படாமை தொடங்கி, மரண தண்டனைக்குப்பின் அவரது சொத்துகள் பிரபுக்களால் பங்கிட்டுக்கொள்ளப்பட்டதுவரையான நிகழ்வுகளின் அடிப்படையில், அரசியல் அல்லது தேவா லயத்தின் பழிவாங்கல் நடவடிக்கையாக இருந்திருக்க லாம் என்று பிற்காலத்திய வரலாற்றாசிரியர்களால் சந்தேகிக்கப்படுகிறது. இந்நாள் செப். 16 இதற்கு முன்னால் -செப்டம்பர் 16, 2019 […] 1961 - ஹரிக்கேன் எஸ்தர் என்று பெயரிடப்பட்ட சூறாவளியின் மையப்பகுதியில்(கண்), 80 உருளைகள் அளவு சில்வர் அயோடைடை அமெரிக்க கடற்படை விமானம் கொட்டி, சூறாவளியின் வேகத்தைக்குறைக்க முயற்சித்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஆண்டுதோறும் ஏற்படும் சூறாவளிகள் ஏராளமான அழிவுகளை ஏற்படுத்தும். நாம், ஆடி மாதத்தைக் காற்றுக் காலம் என்று அழைப்பதைப்போல, அவர்கள் ஆண்டின் சில பகுதிகளை ஹரிக்கேன் காலம், டைஃபூன் காலம் என்றழைப்பதுடன், அந்த ஹரிக்கேன் காலத்தின் எத்தனையாவது ஹரிக்கேன் என்று குறிப்பிடுமளவுக்கு பல சூறாவளிகள் ஒவ்வொரு காலத்திலும்(சீசன்) ஏற்பட்டு, அழிவுகளை ஏற்படுத்துகின்றன. இந்தச் சூறாவளிகள் உள்ளிட்ட காலநிலை மாற்றங்களை அறிவிக்க, தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் என்ற அமைப்பினை 1807இலேயே அமெரிக்கா தொடங்கிவிட்டது. ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தில் பணியாற்றிய வின்செண்ட் ஷாஃபர், இர்விங் லாங்முர் ஆகியோர், 1946இல் மேகவிதைப்பின் சாத்தியத்தை நிரூபித்ததைத் தொடர்ந்து, அதனை ஹரிக்கேன்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்த முடியுமா என்ற ஆய்வுகள் தொடங்கின. சூறாவளியின் கண்ணில் சில்வர் அயோடைடை தூவுவதன்மூலம், மற்றொரு பெரிய சூறாவளி உருவாகி, முந்தையதை வலுவிழக்கச்செய்யும் என்று நம்பப்பட்டது. 1947இல் ப்ராஜெக்ட் சிர்ரஸ் என்ற பெயரில், 82 கிலோ தூளாக்கப்பட்ட உலர் பனிக்கட்டித் துகள்கள் ஒரு சூறாவளியில், விமானம் மூலம் தூவப்பட்டன. எதிர்பாராதவிதமாக அந்தச் சூறாவளி திசைதிரும்பி, ஜார்ஜியாவில் கரையைக்கடந்து இழப்புகளை ஏற்படுத்திவிட்டது. ப்ராஜெக்ட் சிர்ரசுக்கு எதிராக அம்மக்கள் வழக்குகள் தொடர, 1906இல் இதுபோன்று இயற்கையாக திசைதிரும்பிய சூறாவளியைச் சுட்டிக்காட்டி வழக்குகள் முடிக்கப்பட்டாலும், அந்த ஆய்வு நிறுத்தப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப்பின், 1961 செப்டம்பர் 16இல் முயற்சிக்கப்பட்ட விதைப்பில், சூறாவளியின் வேகம் 10 சதவீதம் அளவுக்குக் குறைந்தது இந்த ஆய்வின் வெற்றியாகப் பார்க்கப்பட்டு, 1962இல் ப்ராஜெக்ட் ஸ்டா(ர்)ம்ஃப்யூரி என்பது தொடங்கப்பட்டது. அது ஏராளமான ஆய்வுகளை மேற்கொண்டாலும், மேக விதைப்பின்மூலம் சூறாவளியின் வேகத்தைக் குறைக்கலாம் என்று நிரூபிக்க முடியவில்லை. சூறாவளியை பிற நாடுகளின்மீது தாக்குதல் நடத்தும் ஆயுதமாகப் பயன்படுத்தவே இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இவற்றைத் தொடர்ந்து சூறாவளிகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தோல்வியுடன், ப்ராஜெக்ட் ஸ்டா(ர்)ம்ஃப்யூரி 1983இல் கைவிடப்பட்டது. அறிவுக்கடல் இந்நாள் செப்டம்பர் 17 இதற்கு முன்னால் -செப்டம்பர் 17, 2019 […] 1978 - கேம்ப் டேவிட் ஒப்பந்தங்கள் என்று அழைக்கப்படும் இரண்டு ஒப்பந்தங்கள், இஸ்ரேலுக்கும், எகிப்துக்குமிடையே 13 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப்பின், வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன. கேம்ப் டேவிட் என்பது, அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில், காக்டன் மலைப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள, அமெரிக்க ஜனாதிபதியின் விடுமுறைக்கால ஓய்விடமாகும். பேச்சுவார்த்தை ரகசியமாக அங்கு நடத்தப்பட்டதால் ஒப்பந்தங்களுக்கு அப்பெயர் ஏற்பட்டது. 1967இல் நடைபெற்ற ஆறு நாள் போரில், எகிப்திடமிருந்து சினாய் தீபகற்பத்தையும், (அப்போது எகிப்தின் கட்டுப்பாட்டிலிருந்த) காஸா பகுதியையும், ஜோர்டானிடமிருந்து கிழக்கு ஜெருசலேம் உட்பட மேற்குக்கரைப் பகுதியையும், சிரியாவிடமிருந்து கோலன் குன்றுகளையும் இஸ்ரேல் கைப்பற்றிக்கொண்டது. இதைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கும், எகிப்து, ஜோர்டான், பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஆகியவற்றுக்குமிடையே 1970 ஆகஸ்ட்வரை நடந்த மோதல்கள் தேய்வுப் போர் என்றழைக்கப்படுகின்றன. 1970 செப்டம்பரில் எகிப்து குடியரசுத் தலைவர் கமால் அப்துல் நாசர் மறைந்து, அன்வர் சதாத் புதிய குடியரசுத் தலைவரானார். சினாய் தீபகற்பத்தை மீட்பதற்காக 1973இல் அவர் தொடுத்த யோம் கிப்பூர் போரில், சூயஸ் கால்வாயின் கரையில் சிறிது பகுதியை எகிப்து கைப்பற்றினாலும், எகிப்திடமிருந்து மேலும் சில பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றிக்கொண்டது. இப்போரின் விளைவாக இருதரப்புக்கும் மற்றவரின் படைபலம் பற்றிய மதிப்பீடு மாறியிருந்ததால், அமைதிவழித் தீர்வைநோக்கி நகரத் தொடங்கியிருந்தனர். 1977இல் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜிம்மி கார்ட்டர் இருதரப்புக்கும் அழைப்பு விடுத்ததையடுத்து, கேம்ப் டேவிட்டில் 1978 செப்டம்பர் 5 தொடங்கி நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் இறுதியில், சினாய் தீபகற்பத்தை எகிப்துக்குத் திருப்பியளிப்பதென்றும், சூயஸ் கால்வாயை இஸ்ரேலியக் கப்பல்களுக்குத் திறந்துவிடுவதென்றும் இருவரும் ஒப்புக்கொண்டனர். இஸ்ரேலுடன் ஓர் அரபு நாடு மேற்கொண்ட முதல் ஒப்பந்தம் இதுதான். இதற்காக, அமைதிக்கான அவ்வாண்டின் நோபல் பரிசு, அன்வர் சதாத்துக்கும், இஸ்ரேலியப் பிரதமர் மெனாச்செம் பெகினுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தங்கள், பாலஸ்தீனத்தின் பங்கேற்பின்றி, பாலஸ்தீனப் பகுதிகளைப் பற்றியும் முடிவு செய்ததால், ஐநாவின் கண்டனத்துக்கும் ஆளாகின. அரபு நாடுகள் அரபு லீகிலிருந்து எகிப்தை வெளியேற்றவும் காரணமான இந்த ஒப்பந்தங்கள் மத்திய கிழக்கின் அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. - அறிவுக்கடல் இந்நாள் செப்டம்பர் 19 இதற்கு முன்னால் -செப்டம்பர் 19, 2019 […] 1796 - குடி யரசுத் தலைவர் பதவியி லிருந்து விடைபெறும் நிலையில், ஜார்ஜ் வாஷிங்டனின் விடைச் செய்தி, அமெரிக்கன் டெய்லி அட்வர்ட்டைசர் இதழில், ‘அமெரிக்க குடியரசுத் தலைவர் பதவியை மறுக்கிற நிலையில், தளபதி வாஷிங்டன் அமெரிக்க மக்களுக்கு விடுக்கும் செய்தி’ என்ற தலைப்பில் வெளியானது. 1796இன் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஏறக்குறைய 10 வாரங்கள் இருக்கும் நிலையிலேயே வெளியான இந்தச் செய்தி, உண்மையில் 1792இலேயே எழுதப்பட்டுவிட்டது. இரண்டாவது முறை அதிபராகப் போட்டியிட விரும்பாததால், ஜேம்ஸ் மேடி சனைக்கொண்டு அப்போதே விடைச் செய்தியை எழுதிவிட்டார் வாஷிங்டன். ஆனால், செயலாளர்களாக (அமைச்சர்களாக) இருந்த தாமஸ் ஜெஃபர்சன், அலெக்சாண்டர் ஹாமில்ட்டன் உள்ளிட்டோருக்கிடையே கடுமையான மோதல்கள் நிலவிய அச்சூழலில், வாஷிங்டனும் இல்லையென்றால், அமெரிக்காவின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்று மேடிசன், ஜெஃபர்சன் உள்ளிட்டோர் வற்புறுத்தியதால், தொடர ஒப்புக்கொண்டார் வாஷிங்டன். 1788, 1792 ஆகிய இரு தேர்தல்களிலுமே போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட வாஷிங்டன், இரண்டாவது பதவிக்காலம் முடிவுக்கு வருவதற்குமுன்பே, ஏற்கெனவே எழுதிய விடைச்செய்தி யை திருத்தியமைத்து வெளியிட்டு, மூன்றாவதுமுறை குடியரசுத் தலைவராகப்போவதில்லை என்பதை அறிவித்துவிட்டார். வெறும் விடைச் செய்தியாக இல்லா மல், அமெரிக்காவின் எதிர்காலம் குறித்த எச்சரிக்கை யாகவும், அடுத்து வரும் தலைமுறைகள் எப்படிச் செயல்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய வழிகாட்டுதலாகவும் இருந்த இது, அமெரிக்க வரலாற்றின் மிக முக்கிய ஆவ ணங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது. மதம், ஒழுக்கம், கல்வி முதலானவை குறித்தும், அந்நிய உறவுகளில் அமெரிக்கா நடுநிலை வகிக்கவேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் இச்செய்தியில் வாஷிங்டன் குறிப்பிட்டிருந்தவையே, இருபதாம் நூற்றாண்டிலும் அமெரிக்க அரசியல் விவாதங்களில் வழிகாட்டியாக விளங்கின. வாஷிங்டனின் சொற்களை, அமெரிக்காவின் நாயகனின் வழிகாட்டுதலாக அமெரிக்கா ஏற்றுக் கொண்டது. அமெரிக்க உள்நாட்டுப்போர் நடந்து கொண்டிருந்தபோது, வாஷிங்டனின் 130ஆவது பிறந்தநாளையொட்டி, நாடாளுமன்றத்தில் இந்த விடைச் செய்தியை வாசிக்கவேண்டுமென்று ஃபிலடெல்ஃபியா மக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, பிரதிநிதிகள் அவையில் 1862இல் வாசிக்கப்பட்டது. இரு அவைகளிலும் இந்தச் செய்தியை வாசிப்பது 1899இலிருந்து வழக்கமாகியது. 1984இல் பிரதிநிதிகள் அவை இந்த வழக்கத்தை முடிவுக்குக்கொண்டுவந்தாலும், ஆண்டு தோறும் வாஷிங்டனின் பிறந்த நாளன்று, செனட் அவை யில் இன்றுவரை இந்த விடைச் செய்தி வாசிக்கப்படு கிறது. இதை வாசிப்பதற்கான உறுப்பினர்கள் இரு கட்சிகளிலிருந்தும் மாறி மாறித் தேர்ந்தெடுக்கப்படு கின்றனர். - அறிவுக்கடல் இந்நாள் செப்டம்பர் 20 இதற்கு முன்னால் -செப்டம்பர் 20, 2019 […] 1498 - ஜப்பானின் நாங்கைடோ கடற்கரைப் பகுதியில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி, உலகின் மிகப்பெரிய புத்தர் சிலைகளுள் ஒன்றான காமக்குரா நகரின் கொட்டோக்குயின் அமிதாப புத்தர் சிலை அமைந்திருந்த ஆலயத்தை அடித்துச்சென்றது. சுமார் 40 ஆயிரம் பேர் வரை உயிரிழந்ததாகக் கூறப்படும் இந்தச் சுனாமிக்குப்பின் மீண்டும் ஆலயம் அமைக்கப்படாமல், புத்தர் சிலை இன்றுவரை வெளியிலேயே உள்ளது. அமிதாப என்பதில் அமித என்றால் அளவில்லாத என்றும், ஆப என்றால் பொலிவு என்றும் பொருள். இவர் வஜ்ராயன பவுத்தம் என்ற பிரிவின் ஐந்து தியானி புத்தர்களுள் ஒருவர். வஜ்ராயன பவுத்தம் என்பது, மகாயான பவுத்தத்தின் நீட்சியாகக் கருதப்பட்டாலும், மூன்றாவது வகையாகக் குறிப்பிடப்படும் இது, திபெத், மங்கோலியப் பகுதிகளில் அதிகம் பின்பற்றப்படுகிறது. பவுத்தத்தின் முதலிரண்டு பிரிவுகளாகக் குறிப்பிடப்படும் தேரவாத பவுத்தம், மகாயான பவுத்தம் ஆகியவையே பெரும்பாலும் பின்பற்றப்படும் பவுத்தமாக உள்ளன. மிகவும் பழைமையான பிரிவான தேரவாத பவுத்தம் கம்போடியா, தாய்லாந்து, பர்மா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பின்பற்றப்படுகிறது. மகாயானம் சீனா, ஜப்பான், சிங்கப்பூர், கொரியா, வியட்னாம் உள்ளிட்ட நாடுகளில் பின்பற்றப்படுகிறது. கொட்டோக்குயின் ஆலயத்தில் முதலில் மரத்தாலான மிகப்பெரிய புத்தர் சிலை கி.மு.1243இல் நிறுவப்பட்டு, 1248இல் ஏற்பட்ட புயலில் சிலையும், ஆலயமும் சேதமுற்றன. இதைத் தொடர்ந்து அமர்ந்திருக்கும் நிலையில் 43.8 அடி உயர வெண்கலத்தாலான புத்தர் சிலையும், ஆலயமும் 1252இல் நிறுவப்பட்டன. 1334, 1369இல் ஏற்பட்ட புயல்களில் ஆலயம் சேதமுற்று, மீண்டும் கட்டப்பட்டது. 1498 சுனாமியில் ஆலயம் அடித்துச் செல்லப்பட்டபின் மீண்டும் கட்டப்படாமல் சிலை வெளியிலேயே விடப்பட்டது. 1923இல் ஒன்றரை லட்சம் பேரைப் பலிகொண்ட நிலநடுக்கம், சுனாமியின்போது சிலையின் பீடம் சேதமுற்று, 1925இல் சீரமைக்கப்பட்டது. 1961இல் புதுப்பிக்கும் பணியின்போது, நிலநடுக்கத்தால் சேதமடையாவண்ணம், சிலை வலுவூட்டப்பட்டது. சிலையின் பீடத்தில் அமைக்கப்பட்டிருந்த 32 வெண்கலத் தாமரை இதழ்களில் 4 மட்டுமே எஞ்சியிருந்ததால், அவை அகற்றப்பட்டு பாதுகாக்கப்பட்டுவருகின்றன. 93 டன் எடையுள்ள இச்சிலையின் காதுப்பகுதியில் தற்போதும் காணப்படும் தங்கப்பூச்சினால், இது முழுமையாக தங்க முலாம் பூசப்பட்டதாக இருந்திருக்கும் என்று கருதப்படுகிறது. உள்ளீடற்றதான இச்சிலையின் உட்பகுதிக்குள் சென்று பார்வையிட மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நாள் செப்டம்பர் 22 இதற்கு முன்னால் -செப்டம்பர் 22, 2019 1898 - சீனாவின் குவாங்சு பேரரசரால் தொடங்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கை களை, 104ஆவது நாளில், ஆட்சியைக் கவிழ்த்து, பேர ரசரை வீட்டுச் சிறையில டைத்து, பேரரசி டோவாகர் சிக்சி முடிவுக்குக் கொண்டு வந்தார். 1839-42, 1856-60இல் நடைபெற்ற அபினிப் போர் களில் அடைந்த தோல்வி யைத் தொடர்ந்து, புதிய சூழ் நிலைகளுக்கு மேம்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையைச் சீனா உணர்ந்தது. புதியவகை(நவீன) ஆயுதங்கள், கப்பல்கள் ஆகிய வற்றை வாங்கியதுடன், புதியவகை ஆயுதங்களுக் கான தொழிற்சாலைகளும் தொடங்கப்பட்டாலும், வீரர் களுக்கு மேற்கத்திய முறைப் பயிற்சிகளோ, நிர்வா கத்தில் சீர்திருத்தங்களோ மேற்கொள்ளப்படவில்லை. டோக்குகாவா ஷோகன்களின் ஆட்சியில் பிற நாடுகளு டனான வணிகம் உள்ளிட்ட உறவுகளைத் துண்டித்துக் கொண்டு 220 ஆண்டுகள் ஒதுங்கியிருந்த ஜப்பான், மெய்ஜி மீட்பு என்று குறிப்பிடப்படும், மெய்ஜி பேரர சரின் புதிய ஆட்சி உருவானதைத் தொடர்ந்து சீர்திருத் தங்களைத் தொடங்கியது. மேற்கத்திய பெரும் சக்தி களுக்கிணையாக வளரும் நோக்கில், ஜப்பானின் பிரதி நிதிகளும், மாணவர்களும் மேற்கத்திய கலை, அறிவி யலைக் கற்றுவருவதற்காக உலகம் முழுவதும் அனுப் பப்பட்டனர். விவசாயம் சார்ந்த நாடாக இருந்த ஜப் பானை, இந்த நடவடிக்கைகள் புதிய தொழில்வளர்ச்சி பெற்ற நாடாக மாற்றியிருந்தன. இச்சூழலில், கொரியா வின்மீதான ஆதிக்கம்குறித்து 1894-95இல் ஏற்பட்ட (முதல்)சீன-ஜப்பானியப் போரில் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்தது சீனா. சீனாவைவிடச் சிறி யதான ஜப்பானை, வெறும் திரை செலுத்தும் நாடாகவே பார்த்துவந்திருந்த சீனாவுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சி யை அளித்ததுடன், வரலாறு முழுவதும் சீனா பெற்றி ருந்த இப்பகுதியின் சக்திவாய்ந்த நாடு என்ற இடத்தை ஜப்பான் கைப்பற்றியதும், சிங் அரசமரபின் கவு ரவத்திற்கு இழுக்காகவும் அமைந்தது. இதைத் தொடர்ந்து, இளைஞராகவும், புதியவற்றை ஏற்பவராக வுமிருந்த குவாங்சு பேரரசர், காங் யோவே என்ற அறி ஞரின் ஆலோசனைகளை ஏற்று, ஏராளமான சீர்திருத் தங்களைத் தொடங்கினார். மேற்கத்திய அறிவியலை யும், கணிதத்தையும் பயிற்றுவிக்க பெக்கிங்(பீஜிங்) பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது, ராணுவத்திற்கு மேற்கத்தியமுறைப் பயிற்சிகள் அளிக்கப்பட்டது, முழு மையான முடியாட்சி அரசியல் சட்ட முடியாட்சியாக மாற்றப்பட்டது, அரச குடும்பத்தினர் மேற்கத்திய கல்வி கற்க வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டது முதலான ஏராளமான சீர்திருத்தங்கள், சீனாவை மிகவேகமாக ஒரு தொழில்துறை நாடாக முன்னேற்றத் தொடங்கியிருந்தன. (வழக்கம்போல) பழமைவாதிகள் பண்பாடு பாதிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி, பழமை வாதியான பேரரசியைக்கொண்டே ஆட்சியைக் கவிழ்த்து பேரரசரையும் எஞ்சியிருந்த வாழ்நாள் முழு வதும் கைதியாக்கினர். 104 நாட்களில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதால் இது 100 நாள் சீர்திருத்தம் என்று குறிப்பிடப்படுகிறது. - அறிவுக்கடல் இந்நாள் செப்டம்பர் 24 இதற்கு முன்னால் -செப்டம்பர் 24, 2019 […] 1869 - அமெரிக்கப் பொருளாதா ரத்தின் கருப்பு வெள்ளி அல்லது தங்க வளையம் என்ற நிகழ்வு ஏற்பட்டது. விடுதலையடைந்த போது காண்டினெண்டல் காங்கிரஸ் வெளியிட்டிருந்த நாணயத்தாள்களின் மதிப்பு மிக மோசமாகச் சரிந்திருந்த நிலை யில், 1792இல் நாணயச்சட்டம் இயற்றி டாலரை நாணயமாக அறிவித்த அமெரிக்கா, ஸ்பீஷி என்றழைக்கப்பட்ட தங்க, வெள்ளி நாணயங்களை மட்டுமே வெளியிட்டது. தனியார் வங்கிகள் நாணயத்தாள்களை அச்சிட்டாலும், அது சட்டப்படி ஏற்கத்தக்கவையல்ல என்பதுடன், அந்த வங்கி திவாலாகி, உரிய தங்கத்தைத் தரமுடியாமற்போனால், அந்தத் தாள்களும் செல்லாமற்போய்விடும். அமெரிக்க உள்நாட்டுப் போரின் காலமும்(1861-65), செலவுகளும் கணித்திருந்ததை விட அதிகமாகி, போர்ச் செலவுகளால் கடன்கள் அதிகரித்துக் கொண்டே சென்ற நிலையில், தங்க மதிப்பு இல்லாத, ஆனால், கேட்கும்போது தங்கமாக மாற்றிக் கொள்ளக்கூடிய டிமாண்ட் நோட் என்பதை அமெரிக்க அரசு வெளியிட்டது. அதுவும் போதாமல், (அரசுக்குச் செலுத்தவேண்டிய வரி, வட்டி ஆகியவற்றைத் தவிர மற்றவற்றிற்குப் பயன்படுத்தக்கூடிய) யுனைட்டட் ஸ்டேட்ஸ் நோட் என்பதை வெளியிட்டது. (தங்கம் அதிகம் கிடைத்துக்கொண்டிருந்த கலிஃபோர்னியா, ஆரகான் ஆகிய மாநிலங்கள் தங்கள் மாநிலத்தின் அரசமைப்புச் சட்டத்தின்படி இவை தங்கள் மாநிலத்தில் செல்லாது என்று அறிவித்தது தனிக்கதை!) முந்தைய வங்கித் தாள்களில் ஒருபுறம் மட்டுமே அச்சிடப்பட்டிருந்த நிலையில், இந்த இருவகைத் தாள்களிலும் பின்புறம் பச்சை நிறத்தில் அச்சிடப்பட்டிருந்ததால் இவை க்ரீன்பேக்ஸ் என்றழைக்கப்பட்டன. போர் முடிந்தபின், அனைத்துக் கடன்களையும் (க்ரீன்பேக்ஸ் தங்க மதிப்பில் இல்லாததால் அவையும் கடன்களே!), திருப்பிச் செலுத்தினால்தான், உலக அரங்கில் அமெரிக்காவுக்கு மரியாதையாக இருக்கும் என்று, கருவூலத்திலிருந்த தங்கத்தை அமெரிக்க அரசு விற்கத்தொடங்கியது. குடியரசுத் தலைவர் யுலிசிஸ் கிராண்டின் தங்கை கணவரைப் பயன்படுத்தி, ஜேம்ஸ் ஃபிஸ்க், ஜே கூல்ட் என்ற இரு வணிகர்கள், அரசின் விற்பனையால் தங்கம் விலை சரிவது விவசாயிகளுக்கு இழப்பு என்று நம்பச்செய்து, விற்பனையை நிறுத்தி, தங்கக் கணக்கு என்ற பெயரில் ஏராளமான நிதி திரட்டி தங்கத்தின் விலையையும் செயற்கையாக உயர்த்தினர். தாமதமாக விபரமறிந்த கிராண்ட் தங்க விற்பனையை மீண்டும் தொடங்கியதில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டதே இந்த கருப்பு வெள்ளி. வங்கிகளும் நிதி நிறுவனங்களும் திவால், விவசாய விளைபொருட்களின் விளைபொருட்களின் விலை வீழ்ச்சி என்று மிகமோசமான பின்விளைவுகளை இந்தத் தங்கச்சதி ஏற்படுத்தினாலும், அவர்களிடம் முதலீடு செய்திருந்தவர்கள் பணத்தை இழந்தாலும், பெரிய வழக்கறிஞர்களைக்கொண்டு ஃபிஸ்க்கும், கூல்டும் தண்டனைபெறாமல் தப்பி, செல்வந்தர்களாகவே வாழ்ந்தனர்! - அறிவுக்கடல் இந்நாள் செப்டம்பர் 26 இதற்கு முன்னால் -செப்டம்பர் 26, 2019 […] 1687 - மிகப்புகழ்பெற்ற பண்டைய கிரேக்கக் கட்டிடமான பார்த்தினன், மோரியப் போரில் சேதமுற்றது. வெனிஸ் குடியரசுக்கும், ஒட்டோமான் பேரரசுக்குமிடையிலான இப்போரில், மோரியாவை வெனிஸ் குடியரசு கைப்பற்றியதால் இது மோரியப்போர் என்று குறிப்பிடப்படுகிறது. மோரியா என்பது தற்போதைய கிரீசின் தென்பகுதியிலுள்ள பெலப்பனீஸ் தீபகற்பத்தின் அக்காலத்திய பெயர். புனித ரோமப் பேரரசின் ஹாப்ஸ்பர்க் அரசர்கள், போலந்து-லிதுவேனியா, வெனிஸ், ரஷ்யா ஆகியவை அடங்கிய புனிதக்கூட்டணிக்கும், ஒட்டோமான் பேரரசுக்குமிடையே 1683-99 காலத்தில் நடைபெற்ற பெரும் துருக்கியப்போரின் ஒருபகுதியாக இப்போர் நடைபெற்றது. பார்த்தினன் என்பது அறிவு, கைவினைத்திறன், போர் ஆகியவற்றின் கிரேக்கக் கடவுளான ஏதெனா-வின் ஆலயமாகும். பழைய கிரேக்கக் கட்டிடக்கலையின் எஞ்சியுள்ள அடையாளங்களில் மிகமுக்கியமானதாகக் குறிப்பிடப்படும் பார்த்தினன், கி.மு.447இல் தொடங்கப்பட்டு, 438இல் கட்டி முடிக்கப்பட்டாலும், அழகுபடுத்தும் பணிகள் 432வரை தொடர்ந்தன. பார்த்தினன் கட்டப்பட்ட இடத்தில் ஏற்கெனவே ஏதனாவுக்கு ஓர் ஆலயம் இருந்து, கி.மு.480இல் பாரசீகப் படையெடுப்பில் அழிக்கப்பட்டது. கிரேக்கக் கட்டிடக்கலையின் டோரிக் முறைப்படி கட்டப்பட்ட பார்த்தினன், கிரேக்கச் சிற்பக்கலையின் மிகச்சிறந்த சிற்பங்களைக்கொண்டிருந்தது. கிரேக்கத்தின் நடு, மேற்குப்பகுதிகளிலிருந்து டோரிக், கிழக்குப்பகுதி யிலிருந்து அயானிக், பின்னாளில் உருவானதும், மூன்றிலும் அதிக அழகாக அலங்கரிக்கப்பட்டதுமான கோரிந்தியன் ஆகிய முறைகள் கிரேக்க கட்டிடக்கலையில் காணப்படுகின்றன. பெரும்பாலான கிரேக்க ஆலயங்களைப் போலவே, நகரின் கருவூலமாகவே பயன்படுத்தப்பட்டுவந்த பார்த்தினன், கி.பி.6ஆம் நூற்றாண்டுகாலத்தில் கன்னி மேரிக்கான கிறித்தவ தேவாலயமாக மாற்றப்பட்டது. 1400களின் இடைப்பகுதி யில், ஏதென்சை ஒட்டோமான் துருக்கியர்கள் கைப்பற்றி யதையடுத்து, இது ஒரு மசூதியாக மாற்றப்பட்டது. பார்த்தினன் அமைந்திருந்த கோட்டை நகரான ஏதெனியன் அக்ரோபொலிஸ் என்பதன் வெடி மருந்துக் கிடங்காக இதனை துருக்கியர்கள் பயன்படுத்தி வந்த நிலையில், 1687 செப்டம்பர் 26 அன்று, ஃபிலோபாப்பஸ் மலையிலிருந்து வெனிஸ் படையினர் சுட்ட குண்டு விழுந்ததில், இதன் ஒரு பகுதி சேதமுற்றது. உயரமான என்ற பொருளுடைய அக்ரோன், நகரம் என்ற பொருளு டைய பொலிஸ் ஆகிய கிரேக்கச் சொற்களிலிருந்து உருவான அக்ரோபொலிஸ் என்பது, கிரேக்கத்தின் கோட்டை நகரங்களின் பொதுவான பெயர் என்றாலும், பார்த்தினன் அமைந்துள்ள ஏதென்சின் அக்ரோபொலிசைக் குறிக்கவே அச்சொல் தற்போது பயன்படுத்தப்படுகிறது. 1975இல் தொடங்கிய பார்த்தினன் உள்ளிட்ட கிரேக்கக் கட்டிடக்கலைச் சின்னங்களை மறுசீரமைக்கும் பணி 2020இல் முடிவுறும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நாள் செப்டம்பர் 28 இதற்கு முன்னால் -செப்டம்பர் 28, 2019 […] 1961 - சிரியாவில் ஏற்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு, ஐக்கிய அரபுக் குடியரசை முடிவுக்குக்கொண்டு வந்து, மீண்டும் சிரியக் குடியரசை ஏற்படுத்தியது. ஐக்கிய அரபுக் குடியரசு என்பது, எகிப்தும், சிரியாவும் இணைந்து 1958இல் உருவான நாடாகும். அனைத்து அரபு நாடுகளையும் ஒன்றிணைக்கவேண்டுமென்ற முயற்சியின் தொடக்கமாக இது உருவாக்கப்பட்டது. எகிப்து குடியரசுத் தலைவர் கமால் அப்தெல் நாசர், 1956இல் சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கியதைத் தொடர்ந்து, அதன்மீதான கட்டுப்பாட்டை மீட்டெடுக்கும் நோக்கில் இஸ்ரேல் தொடுத்த சூயஸ் போருக்குப்பின் (இரண்டாம் அரபு-இஸ்ரேலியப் போர்), அரபு நாடுகளிடையே நாசர்மீதான மதிப்பை மிகஅதிகமாக உயர்த்தியிருந்தது. ஒருங்கிணைந்த அரபு நாடு என்ற உணர்வு வழமையாகவே நிறைந்திருந்த சிரியாவில், நாசரின் தலைமைமீது பரவலான ஈர்ப்பு இருந்தது. சமூகவுடைமைச் சிந்தனைகொண்ட முற்போக்காளரான நாசர், பல்வேறு நவீனமய நடவடிக்கைகளை எகிப்தில் மேற்கொண்டிருந்தார். சிரியாவில் பலம்வாய்ந்த பொதுவுடைமைக் கட்சி இருந்ததுடன், புதிதாக நியமிக்கப்பட்ட ராணுவத் தளபதியும் பொதுவுடைமைச் சிந்தனைகொண்டவராக இருந்தார். அமெரிக்க சோவியத் பனிப்போர்க் கால மென்பதால், சிரியா பொதுவுடைமை நாடாகிவிடும் என்று அச்சமுற்ற அமெரிக்காவின் தூண்டுதலில், சிரிய எல்லையில் துருக்கி படைகளைக் குவித்த 1957இன் நெருக்கடிக்குப்பின், சிரியா எகிப்துடன் இணைந்துகொள்ள விரும்பியது. இரு நாடுகளையும் இணைத்து விடுவதைவிட, ஓர் ஒன்றியமாகச் செயல்படலாம் என்பதே நாசரின் கருத்தாக இருந்தது. ஆனால், பொதுவுடைமைக் கட்சியின் பலத்தால், சிரியா பொதுவுடைமை நாடாகிவிடுமென்ற அச்சம், சிரியாவின் பாத் கட்சிக்கும் இருந்ததால், அதன் வற்புறுத்தலாலேயே, ஒரே நாடாக இணைக்க நாசர் ஒப்புக்கொண்டார். 1958 பிப்ரவரி 22இல் ஐக்கிய அரபுக் குடியரசு உருவானது. எகிப்தின் தலைமையில், தாங்கள் ஆட்சி நடத்தலாம் என்ற பாத் கட்சியினர், பெருமுதலாளிகளின் எதிர்பார்ப்பிற்கு மாறாக, ஒற்றைப் பாராளுமன்றத்தை அமைத்த நாசர், பாத் உட்பட அனைத்துக் கட்சிகளையும் தடைசெய்துவிட்டார். பாராளுமன்றத்தில் மூன்றிலொரு பங்கு சிரியாவுக்குப் பிரதிநிதித்துவம் இருந்தாலும், பாத் கட்சி எதிர்பார்த்தபடி அதிகாரம் கிடைக்கவில்லை. மறுபுறம், ஏற்கெனவே எகிப்தில் செய்ததுபோல, முக்கியத்துறைகளை தேசவுடைமையாக்கினார் நாசர். பாத் கட்சியினர், பெருமுதலாளிகள் ஆகிய இருதரப்புமே நாசருக்கு எதிராக மாறியதைத் தொடர்ந்து, 1961 செப்டம்பர் 28இல் ஒரு ராணுவக் கலகத்தின்மூலம் சிரியாவின் ஆட்சியைக் கைப்பற்றி, சிரியா தனி நாடானதாக அறிவித்தனர். - அறிவுக்கடல் இந்நாள் செப்டம்பர் 29 இதற்கு முன்னால் -செப்டம்பர் 29, 2019 […] 1940 - நடுவானில் இரு விமானங்கள் மோதி, ஒன்றுடன் ஒன்று சிக்கிக்கொண்டு, பாது காப்பாகத் தரையிறங்கிய வினோத நிகழ்வு, ஆஸ்திரேலி யாவின் ப்ராக்கெல்ஸ்பி என்ற இடத்தில் நிகழ்ந்தது. இரண்டாம் உலகப்போரின்போது, பேரரசு வான் பயிற்சித் திட்டம் அல்லது பிரிட்டிஷ் காமன்வெல்த் வான் பயிற்சித் திட்டம் என்ற பெயரில் இங்கிலாந்து, கனடா, ஆஸ்தி ரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில், விமானிகளுக்குப் பயிற்சியளிக்கும் பள்ளிகள் அமைக்கப்பட்டிருந்தன. அவ்வாறு ஆஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்சிலுள்ள ஃபாரஸ்ட் ஹில் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பயிற்சிப் பள்ளியிலிருந்து, இரண்டு ஆவ்ரோ ஆன்சன் வகை விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. ஓரிடத்தில் சாய்வாகத் திரும்பியபோது, தனக்குக் கீழே மற்றொரு விமானம் இருப்பது, மேலே இருந்த விமானிக்குத் தெரியாத தால், இரண்டும் மோதிக்கொண்டன. இதில், மேலே இருந்த விமானத்தின் சுழல் விசிறிகள்(ப்ரெப்பெல்லர்) சேதமுற்று, அதன் இரு என்ஜின்களும் செயலிழந்துவிட்டன. சுழல் விசிறிகள் கீழ் விமானத்தின் உடற்பகுதிக்குள் சென்றதில், அதன் விமானிக்கு முதுகுப் பகுதியில் அடிபட்டுவிட்டது. கீழ் விமானத்தின் சில பாகங்கள் மேல் விமானத்தில் செருகிக் கொள்ள, உப்புமூட்டை ஏறியதுபோல இரண்டும் மாட்டிக் கொண்டன. ஆனால், மேல் விமானத்தின் திருப்புதல் உள் ளிட்ட கட்டுப்பாட்டு அமைப்புகள் செயல்பட்டன. இதைத் தொடர்ந்து, இரு விமானங்களிலுமிருந்த மற்ற மூவரையும் பாராசூட் மூலம் குதித்துத் தப்பிக்கச்செய்த மேல் விமா னத்து விமானி ஃபுல்லர், வட்டமடித்தவாறே தரையிறக்கு வதற்கான இடத்தைத்தேடி, 8 கி.மீ. தொலைவில் ஒரு குதிரை லாயத் திடலைக் கண்டுபிடித்து, தரையிறங்கும் சக்கரங்கள் இயங்காதபோது கடைப்பிடிக்கும் அவசர கால முறையைப் பயன்படுத்திப் பாதுகாப்பாகத் தரை யிறங்கினார். இரு விமானங்களும் சரிசெய்யப்பட்டு, மேல் விமானம் மீண்டும் பறக்கும் பணிக்கும், கீழ் விமானம் மாண வர்களுக்குக் காட்சி விமானமாகவும் மாற்றப்பட்டன. காய முற்றிருந்த கீழ் விமானத்தின் விமானி, குணமாகி மீண்டும் பணியில் சேர்ந்து, இரண்டாண்டுகளுக்குப்பின் மற்றொரு விமான விபத்தில் பலியானார். சிறப்பாகத் தரையிறங்கி யதற்காக, பாராட்டுகளையும், பதவி உயர்வையும் பெற்ற மேல் விமானத்தின் விமானி ஃபுல்லர், உரிய அனுமதி பெறா மல் ஊடகங்களிடம் இந்நிகழ்வு குறித்து விவரித்ததற்காக தண்டனையும் பெற்றார். அடுத்தடுத்து பதவி உயர்வுகள் பெற்று விமானப்படையில் உயர் பதவிக்கும் வந்த ஃபுல்லர், 1944இல் மிதிவண்டியில் செல்லும்போது, பேருந்து மோதி உயிரிழந்தார்! - அறிவுக்கடல் இந்நாள் செப். 30 இதற்கு முன்னால் -செப்டம்பர் 30, 2019 […] 1980 - கணினி வலையமைப்பில் (கம்ப்யூட்டர் நெட்வொர்க்) மிகப்பெரும் பங்காற்றும் அமைப்பான ஈதர்நெட் தொழில்நுட்பத்தின் முதல் சீர்தரங்கள்(ஸ்டாண்டர்ட்ஸ்) வெளியிடப்பட்டன. ஈதர்நெட் உண்மையில், ஜெராக்ஸ் நிறுவனத்தின் பிஏஆர்சி ஆய்வகத்தில் 1973-74 காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பத்துறையில் ஜெராக்ஸ் நிறுவனம் உருவாக்கிய ஏராளமான முன்னேற்றங்கள்பற்றிய குறிப்பு இத்தொடரில் 2019 ஏப்ரல் 19இல் இடம்பெற்றுள்ளது. 1960களின் இறுதியில் உருவான அலோஹாநெட் என்ற தொழில்நுட்பத்தை முன்னோடியாகக்கொண்டு உருவான ஈதர்நெட் தொழில்நுட்பத்தை, ராபர்ட் மெட்கால்ஃப் தனது முனைவர் பட்டத்துக்கான ஆய்வின் ஒரு பகுதியாக முன்மொழிந்திருந்தார். பிரபஞ்சமெங்கும் நிறைந்திருக்கும் ஊடகம் என்று முற்காலத்தில் நம்பப்பட்ட லுமினிஃபெரஸ் ஈதர் என்பதை அடிப்படையாகக்கொண்டே ஈதர்நெட் என்ற பெயரை அவர் சூட்டினார். வெற்றிடத்தில் ஒளி பயணிக்க முடியாது என்று கருதப்பட்ட காலத்தில், பிரபஞ்சமெங்கும் ஓர் ஊடகம் பரவியிருக்கவேண்டும் என்று நம்பப்பட்டது. அதனை ஈதர் என்று அழைத்தனர். இந்த நிலையான லுமினிஃபெரஸ் ஈதர்(அல்லது ஈதர் காற்று!) ஊடகத்திற்கும், புவிக்குமான சார்பு இயக்கத்தைக் கண்டறிவதற்காக, 1887இல் ஆல்பர்ட் மைக்கேல்சன், எட்வர்ட் மார்லி ஆகியோர், ஒஹையோவின் க்ளீவ்லாந்தில் தற்போதைய கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆய்வினை மேற்கொண்டனர். இதன் முடிவுகள் எதிர்மறையாக வந்ததே, ஈதர் என்றொரு ஊடகமே இல்லை என்பது வெளிப்படக் காரணமாக அமைந்தது. இந்த ஆய்வு ‘மிகப் புகழ்பெற்ற தோற்றுப்போன ஆய்வு’ என்று அழைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் சிறப்புச் சார்புக் கோட்பாடு உருவாகக் காரணமாக அமைந்தன. மைக்கேல்சன்-மார்லி ஆய்வு என்றழைக்கப்படும் இந்த ஆய்வு இல்லையென்றால், சிறப்புச் சார்புக்கோட்பாடே உருவாகியிருக்காது என்று ஐன்ஸ்டீன் குறிப்பிட்டிருக்கிறார். ஈதர்நெட் என்பது மாய ஊடகம் என்றாகிவிட்டாலும்கூட, அதைப் போன்று, எங்கும் பரவி இணைக்கக்கூடியது என்பதற்காகவே மெட்கால்ஃப் இப்பெயரைத் தேர்ந்தெடுத்தார். 1979இல் மெட்கால்ஃப் ஜெராக்ஸ் நிறுவனத்தைவிட்டு வெளியேறிவிட்டாலும், ஈதர்நெட் என்பது அந்நிறுவனத்தின் வணிகச் சின்னமாக(ட்ரேட் மார்க்) பதிவு செய்யப்பட்டிருந்தது. மெட்கால்ஃபின் வேண்டுகோளுக்கிணங்கி அந்த உரிமையை விட்டுக்கொடுத்த ஜெராக்ஸ் நிறுவனம், இண்ட்டெல், டிஇசி(டிஜிட்டல் எக்விப்மெண்ட் கார்ப்பரேஷன்) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, ஈதர்நெட்டை மேம்படுத்திப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தது. இன்றைய நெட்வொர்க்குகளில் முக்கியப் பங்காற்றும் ஈதர்நெட்டே, பெரும்பாலும் இணையத்தை இணைப்பதாக உள்ளதால், இணையத்திற்கான மிகமுக்கியத் தொழில்நுட்பங்களில் ஒன்றாக இன்றும் விளங்குகிறது. அறிவுக்கடல் இந்நாள் அக்டோபர் 01 இதற்கு முன்னால் -அக்டோபர் 1, 2019 […] கி.மு.331 - பாரசீக அக மானீயப் பேரரசின் வீழ்ச்சிக்கு வித்திட்ட, (தற்போதைய இராக்கிய குர்திஸ்தான் பகுதியின்) கவுகமேலா(ஆர்பேலா) யுத்தத்தில், அகாமனீயப் பேரரசர் மூன்றாம் டேரியசை, கிரேக்கத்தின் மகா அலெக்சாண்டர் தோற்கடித்தார். சுமார் 10 லட்சம் வீரர் களைக்கொண்டிருந்த (தற்காலத்திய வரலாற்றாசிரி யர்கள் குறைவாக மதிப்பிட்டாலும்) மாபெரும் படை யான மூன்றாம் டேரியஸின் படையை, சாதுரியமான வியூகங்கள், காலாட்படையின் சிறப்பான பயன்பாடு ஆகியவற்றின்மூலம் அலெக்சாண்டர் மிக எளிதாகத் தோற்கடித்தார். பாரசீகத்துக்கு எதிரான போர்களில் ராணுவங்களை ஒருங்கிணைத்துப் பயன்படுத்தும் நோக்கத் தோடு, இரண்டாம் பிலிப் அரசரால் கி.மு.338இல் தோற்றுவிக்கப்பட்டிருந்த ஹெல்லனிக் லீக் (‘கோரின்த்’-தின் லீக்) என்ற கிரேக்க நாடுகளின் கூட்டணிப்படையைத் தலைமையேற்றுப் போரிட்டு அலெக்சாண்டர் இந்த வெற்றியை ஈட்டினார். அலெக்சாண்டரின் ஆசியப் படை யெடுப்பின் இரண்டாவது பெரிய யுத்தமாகக் குறிப் பிடப்படும் (தற்போதைய துருக்கியிலுள்ள) இஸ்ஸோஸ் என்ற இடத்தில் நடைபெற்ற யுத்தத்தில், ஏற்கெனவே இதே அணியிடம் தோற்ற டேரியசின் தாயார், மனைவி, மகள்கள் அலெக்சாண்டரிடம் பிடிபட்டிருந்ததுடன், ஆசியா மைனரின் தென்பகுதியும் அவரது கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது. அத்தோல்விக்குப்பின் கைதிகளுக்குப் பதிலாகப் பணயத்தொகை தருவதான டேரியசின் வேண்டுகோள் அலெக்சாண்டரால் நிராகரிக்கப்பட்டது. இதன்பின் டைர் பகுதியை அலெக்சாண்டர் கைப்பற்றியதைத் தொடர்ந்து, டேரியசின் இரண்டாவது கடிதத்தில் அதிகாரத் தோரணை மறைந்துவிட்டதுடன், ஒரு மகளை அலெக்சாண்டருக்குத் திருமணம் செய்து தருவதுடன், ஹேலிஸ் ஆற்றின் மேற்கிலுள்ள பகுதிகளையும் தருவதாக டேரியஸ் கோரியதையும் அலெக்சாண்டர் நிராகரித்தார். மூன்றாவது கடிதத்தில், தாயாரை நன்றாகப் பார்த்துக்கொண்டதற்கு நன்றி தெரிவித்து, பெரும் பணயத்தொகை, யூப்ரடிஸ் நதிக்கு மேற்கிலுள்ள அனைத்துப்பகுதிகள் ஆகியவற்றை அளிப்பதுடன், அகாமனீயப் பேரரசின் ஆட்சியிலும் பங்கு அளிப்பதாக டேரியஸ் கூறியிருந்தாலும், டேரியஸ் சரணடையவேண்டும் என்று கூறிவிட்டார் அலெக்சாண்டர். டேரியசின் பிரமாண்டமான படையை, அலெக்சாண்டரே நேரடியாகத் தலைமையேற்று நடத்திய மாசிடோனியக் குதிரைப்படை உடைத்து, உட்புகுந்து தாக்கியதில் டேரியஸ் தப்பிச்செல்ல, அவரது படைகளும் சிதறின. சுமார் ஆயிரம் வீரர்களை அலெக்சா ண்டரின் படை இழக்க, டேரியசின் படையில் 40-90 ஆயிரம் வீரர்கள் பலியாகி, சுமார் 3 லட்சம் வீரர்கள் பிடிபட்டனர். மீண்டும் படைதிரட்டி அலெக்சாண்டரை எதிர்க்கும் நோக்கத்துடன் பயணித்த டேரியசை, அவரது மாநில ஆளுநர்களில் ஒருவரான பெசஸ் என்பவரே கொலை செய்தார். தன் மரியாதைக்குரிய எதிரியான டேரியசின் உடலை, முறைப்படி அடக்கம் செய்ததுடன், பெசசுக்கு மரணதண்டனையும் அளித்தார் அலெக்சாண்டர். இந்நாள் அக்டோபர் 02 இதற்கு முன்னால் -அக்டோபர் 2, 2019 1942 - இரண்டாம் உலகப் போரின் போது, 10 ஆயிரம் அமெரிக்க வீரர்களை ஏற்றிச்சென்ற இங்கிலாந்து பயணிகள் கப்பலான குயின் மேரி, அதன் பாதுகாப்புக்குச் சென்ற போர்க்கப்பலான குரகோவா என்பதை எதிர்பாராமல் மூழ்கடித்தது. முதல் உலகப்போர்க் காலத்தில் கட்டப்பட்ட போர்க்கப்பலான குரகோவா, பெரும்பகுதிப் பணிக்காலத்தில் கொடிக் கப்பலாகவே(ஃப்ளாக் ஷிப்) இருந்துள்ளது. கப்பல்களின் அணிக்கு உத்தரவிடும் தலைமைப் பொறுப்பிலுள்ளவர் ஒரு தனிச்சிறப்பான கொடியைப் பயன்படுத்துவார் என்பதால், ஃப்ளாக் ஆஃபிசர் என்றும், அவர் பயன்படுத்தும் கப்பல் ஃப்ளாக் ஷிப் என்றும் அழைக்கப்படும். ஃப்ளாக் ஷிப் என்பது, அந்த அணியிலேயே பெரியதாகவும், வேகமானதாகவும், அதிக ஆயுதபலம் கொண்டதாகவும் இருக்கும் என்பதால், பிற்காலத்தில் பிற துறைகளிலும் முக்கியமானவற்றை அப்பெயரால் அழைக்கும் பழக்கம் உருவாயிற்று. ஜெர்மனியின் யு-போட் நீர்மூழ்கிகளின் தாக்குதலிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக, குவின் மேரியும், அதன் பாதுகாப்புக் கப்பல்களும், எண்.8 ஜிக்ஜாக் முறைப்படி பயணித்தன. கப்பல் செல்லும் வழிகுறித்து எதிரியைக் குழப்புவதற்காக திசையை மாற்றிமாற்றிப் பயணிப்பது ஜிக்ஜாக் முறை என்றழைக்கப்படுகிறது. ஒவ்வொரு பயணத்திலும் தனிப்பட்ட ஜிக்ஜாக் முறை உருவாக்கப்பட்டு, அந்த அணியிலுள்ள அனைத்துக் கப்பல்களின் தளபதிகளிடமும் தரப்படும். அக்காலத்தில் தகவல்தொடர்பு வசதிகள் குறைவாக இருந்ததாலும், எதிரிகள் ஒட்டுக்கேட்க முடியும் என்பதாலும், ஒவ்வொரு முறை திரும்பும்போதும் தெரிவிக்காமல், ஒலியெழுப்பி எச்சரிக்க ஜிக்ஜாக் கடிகாரங்கள் என்பவையும் பயன்படுத்தப்பட்டன. குறுக்கும், நெடுக்குமாக மாறிமாறிப் பயணித்துக் கொண்டிருக்கையில், ஒரு கட்டத்தில் குரகோவா குறுக்கே வருவதுபோலத் தோன்றினாலும், போர்க்கப்பல் என்பதால் உரிய நேரத்தில் விலகிச்சென்றுவிடும் என்று குயின் மேரியின் தளபதி கருதிவிட்டார். ஆனால், முற்காலத்திய கப்பல்களின் முன்பகுதியின் அடியில், எதிரிக் கப்பல்களைத் தாக்குவதற்காக, 6-12 அடி நீளத்திற்குப் பொருத்தப்படும் (ரேம்) பகுதி மோதியதில், இரண்டு துண்டுகளாக உடைந்து, 6 நிமிடங்களில் மூழ்கிப்போனது குரகோவா. எதிரிகளால் தாக்கப்படலாம் என்பதால், நிறுத்தாமல் சென்ற குவின் மேரி, மற்றொரு பாதுகாப்புக்கப்பலுக்குத் தெரிவித்தது. சில மணிநேரம் கழித்து வந்த அக்கப்பலால் 101 பேரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. 337 கடற்படையினர் பலியான இந்நிகழ்வு ரகசியமாக வைக்கப்பட்டதுடன், தப்பியவர்கள் இதைப்பற்றி வெளியே சொல்லக்கூடாது என்று கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது. பின்னாளில் குவின் மேரி கப்பலின் உரிமையாளர் நிறுவனத்தின்மீது கடற்படை வழக்குத் தொடர, தவறு குரகோவாவினுடையது என்று தீர்ப்பளித்து பிரச்சனை முடிக்கப்பட்டுவிட்டது. - அறிவுக்கடல் இந்நாள் அக்டோபர் 03 இதற்கு முன்னால் -அக்டோபர் 3, 2019 […] 1929 - செர்பிய, குரோஷிய, ஸ்லோவீனிய முடியரசு, யூகோஸ்லாவியா முடியரசு என்று அந்நாட்டின் முதலாம் அலெக்சாண்டர் அரசரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஸ்லாவிக் மொழிகளில் ஜுக்(யுக்) என்றால் தெற்கு என்று பொருள். ஸ்லாவேனி என்பது ஸ்லாவிய மக்களைக் குறிக்கும் என்பதால், யூகோஸ்லாவியா என்பதன் பொருள் தென்பகுதி ஸ்லா வியர்களின் நாடு என்பதாகும். முதல் உலகப்போர் முடிந்தவுடன், செர்பியர்கள், குரோஷியர்கள், ஸ்லோவீனியர்கள் ஆகிய மக்களின் ஒன்றிய நாடாக மேற்குறிப்பிடப்பட்ட முடியரசு உருவாகி, 1929இல் பெயர் மாற்றம்பெற்றது. உண்மையில் முதல் உலகப்போரைத் தொடக்கிவைத்த நிகழ்வான, ஆஸ்திரிய-ஹங்கேரியின் முடிக்குரிய இளவரசர் பெர்டினாண்டைக் கொலை செய்த காவ்ரிலோ பிரின்சிப், யூகோஸ்லாவியாவை ஒருங்கிணைக்கும் நோக்குடன் செயல்பட்ட இளம் போஸ்னியா என்ற புரட்சிகர இயக்கத்தைச் சேர்ந்தவர். (இளவரசர் என்று குறிப்பிடப்பட்டாலும் அவரது வயது 50, கொலை செய்தவரின் வயது 19!) போஸ்னியா-ஹெர்ஷகோவினாவில் ஆஸ்திரிய-ஹங்கேரியன் ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தக் கொலை நடத்தப்பட்டது. 1877-78இல் நடைபெற்ற ரஷ்ய-துருக்கியப் போரைத் தொடர்ந்து, அன்றைய பெரும் சக்திகளான ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி, ஜெர்மெனி ஆகியவை கூடிப்பேசிய பெர்லின் காங்கிரசில் எடுக்கப்பட்ட முடிவின்படி, போஸ்னியா-ஹெர்ஷகோவினா ஆஸ்திரிய-ஹங்கேரியின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. இப்பகுதியை 1908இல் ஒட்டோமான் பேரரசு கைப்பற்ற முயன்ற போஸ்னிய நெருக்கடி (அல்லது முதல் பால்க்கன் நெருக்கடி) என்ற நிகழ்வுக்குப்பின், போஸ்னியா-ஹெர்ஷகோவினாவை தன்நாட்டின் ஒரு பகுதியாகவே ஆஸ்திரிய-ஹங்கேரி இணைத்துக்கொண்டது. தென்பகுதி ஸ்லாவிய நாடுகள் ஒருங்கிணையவேண்டும் என்ற கருத்து 17ஆம் நூற்றாண்டிலேயே உருவாகியிருந்த நிலையில், 1911இல் இந்த இளம் போஸ்னியா அமைப்பு அதே நோக்கத்துடன் உருவானது. 1917இல் ஆஸ்திரிய -ஹங்கேரி என்ற இரட்டை முடியாட்சி நாட்டை, மும்முடியாட்சி நாடாக மாற்றி, யூகோஸ்லாவியாவை ஒரு நாடாக அங்கீகரித்து, தனியே நிர்வகிக்க வேண்டும் என்று எழுப்பப்பட்ட கோரிக்கை ஏற்கப்படாத நிலையிலேயே பெர்டினாண்டின் கொலை நடைபெற்றது. முதல் உலகப்போரின் முடிவில் ஆஸ்திரிய-ஹங்கேரியின் வீழ்ச்சிக்குப்பின், அதன் ஒரு மாநிலமாக இருந்த ஸ்லோவீனிய, குரோஷிய, செர்பியப் பகுதிகளுடன், செர்பியா, மாண்டி நீக்ரோ ஆகிய முடியரசுகளும் ஒருங்கிணைந்து விடுதலை பெற்ற நாடாக உருவாகிய யூகோஸ்லாவியா, 1992இல் யூகோஸ்லாவியா, குரோஷியா, ஸ்லோவீனியா, மாசிடோனியா, போஸ்னியா-ஹெர்ஷகோவினா ஆகிய குடியரசுகளாகப் பிளவுற்று முடிவுக்கு வந்தது. இந்நாள் அக்டோபர் 04 இதற்கு முன்னால் -அக்டோபர் 4, 2019 23 - விவசாயிகள் கலகங்களின் தொகுப்பாகக் குறிப்பிடப்படும் லூலின் கலகத்தின் ஒரு பகுதியாக, ஸின் அரச மரபைத் தோற்றுவித்த பேரரசர் வாங் மாங்-கின் அரண்மனை கலகக்காரர்களால் தாக்கப்பட்டது. ஹான் மரபின் உயர் அலுவலரும், பட்டத்தரசியின் தந்தையுமான வாங் மாங், ஆட்சியைக் கைப்பற்றி ஸின் மரபைத் தோற்றுவித்தார். வஞ்சகமாக ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டவர் என்றும், தொலைநோக்குடைய சமூக சீர்திருத்தவாதி என்றும் இரு மாறுபட்ட கருத்துகள் இவரைப் பற்றி வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுகின்றன. இவர் ஆட்சிக்கு வந்தவுடனேயே நிலச்சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தியிருக்கிறார். அனைத்து நிலங்களும் அரசுக்குச் சொந்தமானவை என்று அறிவிக்கப்பட்டு, நிலப் பரிவர்த்தனைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டாலும், நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களை தாங்களே வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், எட்டு பேருக்குக் குறைவான உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்துக்கு 150 ஏக்கருக்குமேல் நிலமிருந்தால், கூடுதலாக இருப்பதை ஏழை களுக்குப் பிரித்துக்கொடுத்துவிடவேண்டும். எட்டு என்ற எண்ணிக்கை, சீனாவின் மிகச்சிறந்த ஆட்சிக்காலங்களுள் ஒன்றாகக் குறிப்பிடப்படும் ஸாங் மரபின் ஆட்சியிலிருந்த நல்-நில முறையைப் பின்பற்றியதாகும். சீனாவில் மிக நீண்ட காலம் (790 ஆண்டுகள்) ஆட்சியை நடத்திய மரபான ஸாங் காலத்தில், சீனா பலவிதங்களிலும் செழித்தோங்கி யிருந்ததால், அதைப்போன்று மாற்ற வாங் மாங் விரும்பினார். நல்ல என்பதற்கான சீன எழுத்து # வடிவத்திலிருக்கும். அதைப்போன்று நிலம் நிர்வகிக்கப்பட்டதால் நல்-நில முறை என்ற பெயர் ஏற்பட்டது. எல்லா நிலங்களும் 9 சம சதுரங்களாகப் பிரிக்கப்பட்டு, சுற்றியுள்ள 8 சதுரங்கள் குத்தகைதாரர்களுக்கு வழங்கப்பட்டுவிடும். அவற்றின் விளைச்சலை முழுமையாக அவர்களே எடுத்துக்கொள்ளலாம். நடுவிலுள்ள சதுரத்தில் 8 பேரும் இணைந்து உற்பத்தியில் ஈடுபடுவார்கள். அதன் விளைச்சல் நிலவுடைமையாளருக்கு வழங்கப்பட்டு, அதிலிருந்தே அரசுக்கு வரியும் செலுத்தப்படும். நிலச்சீர்திருத்தம் மட்டுமின்றி, ஆயுதம், மது ஆகியவற்றின் உற்பத்தியை அரசுடைமையாக்கியது, சீன வரலாற்றில் முதன்முறையாக வருமானவரி விதித்தது உள்ளிட்ட பொருளாதார சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, 28 வகை நாணயங்களையும் அறிமுகப்படுத்தினார். பலவகை நாணயங்களைப் பயன்படுத்த மக்களுக்குத் தெரியாததால் ஏற்பட்ட குழப்பங்கள், பேரரசர் முற்போக்காளராக இருந்தாலும், அலுவலர்களின் ஊழல்கள் ஆகியவை கருவூலத்தைக் காலியாக்கியதுடன், பஞ்சமும் ஏற்பட்டதால், நிலத்தை இழந்த பெருநிலவுடைமையாளர்களும், எளிய மக்களும் லூலின் கலகத்தில் இணைந்தனர். கலகக்காரர்கள் லூலின் மலைப்பகுதியில் தங்கியதால் இப்பெயர் ஏற்பட்டது. கலகத்தில் பேரரசர் வாங் மாங்-கும், மகளும்(முன்னாள் பேரரசி!) கொல்லப்பட, 14 ஆண்டுகளில் ஸின் மரபின் ஆட்சி முடிவுக்குவந்து, மீண்டும் ஹான் மரபு ஆட்சியைக் கைப்பற்றியது. இந்நாள் அக்டோபர் 05 இதற்கு முன்னால் -அக்டோபர் 5, 2019 1789 பிரெஞ் சுப் புரட்சியின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான வெர் செய்ல்ஸ் நோக்கிய பெண்கள் பேரணி தொடங்கியது. பாரிஸ் நகரின் சந்தைப் பகுதிகளில் ரொட்டி தட்டுப்பாடு, ரொட்டியின் மிகஅதிக விலை ஆகிய வற்றுக்கெதிராக, போராடத்தொடங்கிய பெண்கள், அரசர் பதினாறாம் லூயி-யின் இருப்பிடமான வெர்செய்ல்ஸ் அரண்மனைக்குப் பேரணியாகச்சென்றனர். பசியாலும், நம்பிக்கையின்மையாலும் துவண்டிருந்த மக்கள், ரொட்டியைத் தேடித்தான் முதலில் போராடத் தொடங்கினார்கள். ஹோட்டல்-டி-வில்லி திறந்துவிடப்பட்டு, போதுமான ரொட்டி அவர்களுக்குக் கிடைத்தாலும்கூட, அடுத்த வேளைக்கு போதுமான அளவு ரொட்டி கிடைக்குமா, அதுவும் நியாயமான விலையில் என்ற நம்பிக்கையின்மையே பெரும் போராட்டத்தை உருவாக்கியது. பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருந்த கீழ்த்தட்டு மக்களை, ‘உயர்குடியினரின் சதி’ என்ற வதந்தியும் அச்சத்திற்குள்ளாக்கியிருந்தது. விவ சாயம் உள்ளிட்ட உற்பத்திப் பொருட்களின் விலையை நிர்ணயித்து, சந்தைப்படுத்த, கில்ட் என்னும் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் 13ஆம் நூற்றாண்டிலிருந்தே பிரான்சில் இருந்தன. விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக என்று கூறிக்கொண்டு, 1773இல் இந்த கில்ட் முறை ரத்து செய்யப்பட்டு, திறந்த சந்தை முறை அறிமுகப்படுத்தப் பட்டது. இதனால், உணவு தானியங்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்ததை எதிர்த்து, 1775 ஏப்ரல்-மே-யில் நடைபெற்ற கலகங்கள் ‘மாவுப் போர்’ என்று அழைக்கப்படுகின்றன. அவற்றால், 1775இல் கில்ட் முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், புதிய கில்ட் முறையை காவல்துறையால் சரியாக நிர்வகிக்க முடிய வில்லை. அக்காலத்தில், பிரான்சின் காவல்துறை, பாது காப்புப் பணிகளை மட்டுமின்றி, தெருக் கூட்டுதலி லிருந்து, அரசுத் துறைகளின் நிர்வாகம்வரை கவனித்துக் கொண்டிருந்தது! இவற்றால் ஏற்பட்டிருந்த தட்டுப்பாடு, கீழ்த்தட்டு மக்களை ஒடுக்குவதற்காக, உயர்குடியினரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாக நம்பப்பட்டதே ‘உயர்குடியினரின் சதி’ என்று குறிப்பிடப்படுகிறது. சந்தைகளில் திரண்ட பெண்களுடன், ஆண்களும் சேர்ந்து கொள்ள, ஆயிரக்கணக்கானோர் நகரின் ஆயுதக்கிடங்கி லிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றி, பீரங்கிகளை இழுத்துக் கொண்டு, 6 மணி நேரம் நடந்து, சுமார் 20 கி.மீ. தொலைவி லிருந்த வெர்செய்ல்ஸ் அரண்மனையை அடைந்தனர். வெர்செய்ல்ஸ் அரண்மனை தான் அரசரின் அதிகாரப்பூர்வ இருப்பிடமாக இருந்தாலும், பாரீசில் இருந்தால்தான் மக்களின் பிரச்சனைகளை அறிந்து செயல்பட முடியும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அரண்மனை யின் பாதுகாவலர்களுடன் மோதலில் ஈடுபட்டு, மறுநாள் உள்ளே நுழைந்த மக்கள், அரசர், அரசி, அவையோரைச் சூழ்ந்து, பாரீசின் டூய்லரிஸ் அரண்மனைக்கு அழைத்து (இழுத்து?!) வந்துவிட்டனர்! இந்நிகழ்வே, அரசியல்சட்ட முடி யாட்சிக்கு எதிரான அரசரின் நிலையைக் கைவிடச்செய்தது. இந்நாள் அக். 07 இதற்கு முன்னால் -அக்டோபர் 7, 2019 […] 1958 - பாகிஸ்தானில் முதல் ஆட்சிக்கவிழ்ப்பு நிகழ்ந்தது. 1956இல்தான் முதல் அரசமைப்புச் சட்டத்தை நிறைவேற்றி, குடியரசாக ஆகியிருந்த பாகிஸ்தானில் இந்த ஆட்சிக்கவிழ்ப்பின்மூலம் ஏற்பட்ட ராணுவ ஆட்சி, 1971வரை நீடித்தது. இந்தியாவுடன் 1947இல் விடுதலையடைந்த பாகிஸ்தானில், 2008 வரையான 61 ஆண்டுகளில், 33 ஆண்டுகள் ராணுவ ஆட்சியே நடைபெற்றுள்ளது. 1956வரை இங்கிலாந்தின் மேலாட்சியின்கீழான டொமினியன் நாடாகவே(இங்கிலாந்தின் அரசியே பாகிஸ்தானுக்கும் அரசி - கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இன்றும் இருப்பதைப்போன்று!) பாகிஸ்தான் தொடர்ந்தது உள்ளிட்ட செய்திகள் இத்தொடரில் 2018 ஆகஸ்ட் 14இல் இடம்பெற்றுள்ளன. முழுமையான குடியரசாக மாற்றமடைவதற்குமுன்பே, அரசமைப்புச் சட்ட அவையையும், அப்போதைய தலைமை அமைச்சர் கவாஜா நஸீமுதீனையும், தலைமை ஆளுனர் குலாம் மொகம்மத் பதவி நீக்கம் செய்ததே பாகிஸ்தானின் முதல் ஆட்சிக் கவிழ்ப்பாகும். அதற்கும் ராணுவத் தளபதியே (அயூப்கான்) உதவினார். குடியரசாக ஆனபின் முதல் குடியரசுத்தலைவரான இஸ்கந்தர் மிர்ஸாவே ராணுவத் தளபதியாக இருந்தவர்தான். ஆட்சிக்கவிழ்ப்புக்குப்பின் அவரையும் அகற்றி, ராணுவத் தளபதி அயூப் கான் தானே அதிபராகி, 1962இல் புதிய அரசமைப்புச் சட்டத்தின்மூலம் அதனை சட்டப்பூர்வமாக்கினார். 1973இல் புதிய அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, ராணுவம் சாராத ஜுல்ஃபிகர் அலி புட்டோ பிரதமராக இருந்த நிலையில், ராணுவத் தளபதி ஜியா-வுல்-ஹக் ஆட்சியைக் கவிழ்க்க, 1988வரை ராணுவ ஆட்சி நடைபெற்றது. 1999இல் நவாஸ் ஷெரீஃபின் ஆட்சியை ராணுவத் தளபதி பர்வேஸ் முஷாரஃப் கவிழ்த்தபின் 2008வரை ராணுவ ஆட்சி நடைபெற்றது. இவைதவிர தோல்வியில் முடிந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகளுடன், அரசியல் முடிவுகளில் ராணுவத்தின் தலையீடும் பாகிஸ்தானில் அதிகம். விடுதலைக்குப்பின் முப்படைக்கும் ஒரே தளபதி வேண்டாம் என்று இந்தியா முடிவு செய்ததால், முப்படைக்கும் தலைவர் குடியரசுத்தலைவரே. ஆனால், பாகிஸ்தானில் படைகளின் கூட்டுக்குழு என்ற அமைப்பு முப்படைகளின் தலைமையாக இருக்கிறது. அமெரிக்காவில் முப்படையிலிருந்தும் சுழற்சி முறையில் இக்குழுவின் தலைவர் நியமிக்கப்படுகிறார். ஆனால், பாகிஸ்தானில் கடற்படை, விமானப்படைத் தளபதிகள் பதவியில் மூத்தவர்களாக இருந்தாலும்கூட, பெரும்பாலும் ராணுவத் தளபதியே இப்பொறுப்புக்கு நியமிக்கப்படுவதால், ராணுவம் அவர்களின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதுடன், மற்ற இரு பிரிவுகளின் துணையுடன் மிக எளிதாக ஆட்சியைக் கவிழத்துவிட முடிகிறது. இந்தியாவிலும் முப்படைக்கும் ஒரே தளபதி என்று பிரதமர் மோடி விடுதலைதின உரையில் குறிப்பிட்டிருப்பது மிகவும் கவலையோடு கவனிக்கத்தக்கது. - அறிவுக்கடல் இந்நாள் அக்டோபர் 09 இதற்கு முன்னால் -அக்டோபர் 9, 2019 […] 1635 - ‘மாறுபட்ட, புதிய, ஆபத்தான கருத்துகளை’ பரப்பியதாகக் குற்றம்சாட்டப்பட்டு, ரோஜர் வில்லியம்ஸ், மாசாசூசெட்ஸ் குடா குடியேற்றத்திலிருந்து வெளி யேற்றப்பட்டார். இவர் ஒரு ப்யூரிட்டன் மதகுரு. ப்யூரிட்டன் என்பது, 16,17ஆம் நூற்றாண்டுகாலத்தில் சீர்திருத்த (புராட்டஸ்ட்டண்ட்) திருச்சபையினரின் பெயர். இவர்கள் இங்கிலாந்தின் திருச்சபையினை, கத்தோலிக்க வழக்கங் களிலிருந்து ‘சுத்தம் செய்வதற்காக’ தோன்றியதால் அப்பெயர் ஏற்பட்டது. இங்கிலாந்தின் திருச்சபை சரிசெய்ய முடியாத அளவுக்கு ஊழல் மலிந்ததாக இருப்பதாகவும், அதனால் அதற்கு முற்றிலும் தொடர்பில்லாத திருச்சபையை உருவாக்க வேண்டுமென்றும், அரசும், திருச்சபையும் தனித்தனியாக இருக்க வேண்டும், அரசின் அதிகாரங்களில் திருச்சபையின் தலையீடு கூடாது என்றும் கருத்துடையவரான வில்லியம்ஸ், 1630இல் அமெரிக்காவுக்கு வந்து, அவரு டைய கருத்துகளுக்கு ஏற்புடையதாக இருந்த செலேம் திருச்சபையில் பணியாற்றினார். 1931இல் ப்ளைமவுத் திருச் சபைக்கு வந்தபோது, அதன்மீது இங்கிலாந்து திருச்சபைக்கு இருந்த ஆதிக்கத்தை அவர் விரும்பவில்லை. அமெரிக்கத் தொல்குடியினரிடம் நல்ல நட்புறவு கொண்டி ருந்த வில்லியம்ஸ், அவர்களுடைய நிலங்களை, அவர்களிட மிருந்து முறைப்படி வாங்காமல் கைப்பற்றுவதை ஏற்க வில்லை. அவ்வாறு தொல்குடியினரிடமிருந்து நிலத்தைக் கைப்பற்றுவதைக் கண்டித்தும், அவற்றுக்கான உத்தரவில் இந்த நிலப்பரப்பைக் கண்டுபிடித்த முதல் கிறித்தவ முடி யரசு என்று ஜேம்ஸ் அரசர் தெரிந்தே பொய் உரைத்திருப்ப தாகவும், 1632 டிசம்பரில் ஒரு நீண்ட சமய ஆய்வுக் கட்டுரையை அவர் எழுதினார். கிறித்தவ அரசர்கள் எவரும் ஆட்சி செய்யாத, கிறித்தவர்கள் வாழ்ந்து கொண்டிராத புதிய நிலப்பரப்புகளைக் கண்டுபிடித்தால், குடியேற்றத்தை உருவாக்கலாம் என்பதே அக்காலத்தில் ஐரோப்பிய அரசர்கள் அளிக்கும் உத்தரவாக இருந்தது என்பது, இத்தொடரில் 2018 அக்டோபர் 29இல் வால்ட்டர் ராலீ பற்றிய செய்தியில் இடம்பெற்றுள்ளது. அரசரைத் தாக்கி எழுதப்பட்ட, வில்லியம்சின் இந்தக் கட்டுரைக்காகவே மேற்குறிப்பிட்ட தீர்ப்பு வழங்கப்பட்டு, அவர் வெளியேற்றப்பட்டார். அங்கிருந்து வெளியேறிய வில்லியம்ஸ், ரோட் தீவுப் பகுதியில், தொல்குடியினரிடமிருந்து நிலம் வாங்கி, ப்ராவிடன்ஸ் தோட்டங்கள் என்ற குடியேற்றத்தை உருவாக்கினார். ரோட் தீவு என்று அழைக்கப்பட்டாலும் அது தீவு அல்ல. அப்பகுதிக்கு முதலில் வந்த போர்ச்சுகீசியர்கள், கிரேக்கத்திலுள்ள ரோட்ஸ் தீவினை நினைவூட்டியதாலோ, அல்லது அங்கு காணப்பட்ட செந்நிற(ரோடிச்-சிவப்பு) மண்ணாலோ இப்பெயரைச் சூட்டியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள டிவைன் ப்ராவிடன்ஸ் என்பதைக் குறிக்கும் வகையில் ப்ராவிடன்ஸ் ப்ளாண்ட்டேஷன்ஸ் என பெயரிட்ட வில்லியம்ஸ் (ஆங்கிலத்தில் ப்ளாண்ட்டேஷன்ஸ் என்பது குடியிருப்பைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.), திருச்சபையின் அதிகாரத் தலையீடு இல்லாத (மதச்சார்பற்ற!) முதல் அரசை அமெரிக்காவில் உருவாக்கினார். இந்நாள் இதற்கு முன்னால் அக். 10 -அக்டோபர் 10, 2019 […] 1868 - ஸ்பெயினிடமிருந்து கியூபா விடுதலையடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, கியூபாவின் முதல் விடுதலைப்போரான பத்தாண்டுப்போர் அல்லது பெரும் போர் தொடங்கியது. விடுதலையடைந்ததாக அறிவித்தவர், கரும்புத் தோட்டங்கள், சர்க்கரை ஆலை ஆகியவற்றின் உரிமையாளரான கார்லோஸ் செஸ்பீட்ஸ்! தவறாமல் குறிப்பிடவேண்டிய செய்தி என்னவெனில், பிரெஞ்சுப் புரட்சி, அமெரிக்க விடுதலை போன்றவற்றினால் உந்தப்பட்டு, அந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான கியூப விடுதலை முயற்சிகளை முதலாளிகள் ஆதரிக்கவில்லை. ஏனென்றால், அப்போது அவர்களுக்கு அடிமைகள் தேவைப்பட்டனர். அடிமைமுறையை ஆதரித்த ஸ்பெயினின் அரசும் தேவைப்பட்டது. புதிய தொழில்நுட்பங்களின் வரவால், தோட்டங்களில் தொழிலாளர்களின் தேவை குறைந்துவிட்டதால், அடிமைகளைப் பராமரிக்கும் செலவுகளால் முதலாளிகள் இழப்புக்கு ஆளாகிக்கொண்டிருந்தனர். அதனால் அடிமைமுறைக்குத் தடை, வரிக்குறைப்பு, நாடாளுமன்றத்தில் கியூபர்கள் பங்கேற்பு, ஸ்பானியர்களுக்குச் சமமாகக் கியூபர்களையும் நடத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளைக்கொண்ட போராட்டங்களை முதலாளிகளே முன்னெடுத்தனர். விடுதலை அறிவிப்பைத் தொடர்ந்து உருவான போர் 1868-78வரை நீடித்து, வெற்றி-தோல்வியின்றி, ஸேஞ்சோன் ஒப்பந்தத்துடன் முடித்துக்கொள்ளப்பட்டது. அதற்கடுத்து, 1879இல் தொடங்கி, 1880இல் ஒடுக்கப்பட்டது சிறு போர் என்று குறிப்பிடப்படுகிறது. இவற்றுக்கிடையில், கியூபாவின் ஏற்றுமதியில் 90 சதவீதம் (ஸ்பெயினுக்குச் சென்றதைப்போல 12 மடங்கு!) அமெரிக்காவுக்குச் செல்லுமளவுக்கு அமெரிக்க முதலாளிகள் இங்கு வளர்ந்திருந்தனர். இதனால், கரீபியப்பகுதியில் ஸ்பெயினின் ஆதிக்கத்தை முடிவுக்குக்கொண்டுவந்து, தான் கட்டுப்படுத்த விரும்பிய அமெரிக்கா, 1895இல் (மூன்றாவது) கியூப விடுதலைப்போர் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, 1898இல் ஹவானா துறைமுகத்திலிருந்த தங்கள் கப்பல் வெடித்ததற்கு ஸ்பெயின்தான் காரணம் என்றுகூறி, அதன்மீது போர்தொடுத்தது. வேறுவழியின்றி 1898 டிசம்பர் 10இல் பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, கியூபாவை அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிட்டு ஸ்பெயின் வெளியேறியது. 1902 மே 20இல் கியூபாவிற்கு விடுதலை என்று அறிவித்தாலும், அதன் நிதி, வெளியுறவு விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் தனக்கிருப்பதாகக்கூறிய அமெரிக்கா, படைகளையும் அங்கு நிறுத்தியது. ஸ்பெயினுக்கு பதிலாக அமெரிக்க ஆதிக்கம் என்பதை ஏற்காத விடுதலைப்போரின் வீரர்கள் 1906இல் நடத்திய ஆயுதப்போரில் அரசுப் படைகள் தோற்றதைச் சாக்கிட்டு, கியூபாவுக்கு ஆளுநரை நியமித்து, தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது அமெரிக்கா. இக்காலமே கியூபாவில் ஊழல் உருவான காலம் என்று வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது. 1908இல் புதிய குடியரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் தன்னாட்சி அளிப்பதாகக்கூறி அமெரிக்கப்படைகள் 1909இல் வெளியேறினாலும்கூட, 1959இல் கியூபப் புரட்சி வெற்றியடையும்வரை அமெரிக்காவின் தலையீடு(ஆதிக்கம்!) தொடர்ந்தது! இந்நாள் அக்டோபர் 11 இதற்கு முன்னால் -அக்டோபர் 11, 2019 […] 1890 - ‘அமெரிக்கப் புரட்சியின் மகள்கள்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. விடு தலைப் போராட்டத்தின் வீரஞ்செறிந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்து, நாட்டுப் பற்றை வளர்ப்பதை நோக்கமாகக்கொண்ட இந்த அமைப்பில், அமெரிக்க விடுதலைப்போரில் பங்கேற்றவர் களின் இரத்த உறவிலுள்ள பெண்கள் மட்டுமே உறுப்பின ராக முடியும். உண்மையில், ‘அமெரிக்கப் புரட்சியின் மைந்தர்கள்’ என்ற அமைப்பு ஏற்கெனவே தொடங்கப் பட்டு செயல்பட்டுக்கொண்டிருந்தது. அமெரிக்க விடு தலைப்போரைத் தலைமையேற்று நடத்தி தளபதியும், முதல் குடியரசுத்தலைவருமான ஜார்ஜ் வாஷிங்டன் மறைவின் நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சிகள் 1889இல் தொடங்கிய போது, நாட்டுப்பற்றை வளர்க்கும் இயக்கங்கள், விடுதலைப் போரின் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கும் அமைப்புகள் என்று ஏராளமான அமைப்புகள் தோன்றின. அமெரிக்க விடுதலை அறிவிப்பின் நூற்றாண்டான 1876இலேயே ‘புரட்சி யின் மைந்தர்கள்’ என்ற அமைப்பு கலிஃபோர்னியாவில் தோன்றியிருந்தாலும்கூட, அது அமெரிக்கா முழுமைக்கும் பரவியிராத நிலையில், 1889இல்தான் ‘அமெரிக்கப் புரட்சி யின் மைந்தர்கள்’ என்ற அமெரிக்கா முழுமைக்குமான அமைப்பு உருவானது. ஆனால், அது பெண்களை உறுப்பினர்களாக அனுமதிக்க மறுத்ததைத் தொடந்து, ‘அப்படியானால் ஹன்னா ஆர்னெட்-டை எப்படி அங்கீகரிப்பது?’, என்று கேள்வியெழுப்பிய கட்டுரை வாஷிங்டன் போஸ்ட்-டில் வெளியானது. உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பளிப்பதான உத்தரவாதத்தை ஏற்று, இங்கிலாந்துக்கு விசுவாசமாக இருக்க முயன்ற தன் கணவர் உள்ளிட்ட சிலரை, அமெரிக்கப் புரட்சிப் போருக்கு எதிராகச் செயல்பட்டால் கணவரைப் பிரிந்துவிடுவதாக எச்சரித்து, புரட்சிக்கு ஆதரவாக மாற்றியவர் ஹன்னா ஆர்னெட். இந்த விவாதத்தைத் தொடர்ந்தே, பெண்களுக்கான அமைப்பாக இது தொடங்கப்பட்டது. ‘இறை, வீடு, நாடு’ என்பதை நோக்கமாகக் குறிப்பிட்டு விடுதலை தொடர்பான அருங்காட்சியகம், நூலகம், கல்வி உதவி போன்றவற்றுடன், அமெரிக்க ராணுவத்தில் செவிலியர்கள் இல்லாத அமெரிக்க-ஸ்பானியப் போர்க்காலத்தில் செவிலியர்களை அனுப்பியதுவரை சிறப்பான பணிகளில் ஈடுபட்டாலும், தங்கள் அரங்கத்தில் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தக்கூட கருப்பினத்தவர்களை அனுமதிக்காமல் இவ்வமைப்பு பாகுபாடு காட்டியது. 1952இல் அது மாறினாலும், ஒரு கருப்பினத்தவர்கூட உறுப்பினராக இல்லாமலே தொடர்ந்தது. 1976இல் பேட்ச்சிலர் என்ற பெண் 26 மாதங்கள் ஆய்வு செய்து, விடுதலைப் போரில் வீரராகப் போரிட்ட வில்லியம் ஹூட் என்பவரின் மரபில் வந்தவர் என்பதை நிரூபித்து, முதல் கருப்பின உறுப்பினராக ஆனார். அதன்பின், இன, மத பாகுபாடின்றி உறுப்பினர்களைக் சேர்ப்பது என்று விதிகளை மாற்றியதுடன், கருப்பினத்தவரின் குடும்பப் பின்னணிகளை ஆய்வுசெய்து, அவர்களை உறுப்பினராக்குவதை ஓர் இயக்கமாகவே மேற்கொண்ட இவ்வமைப்பு, இன்றும் அமெரிக்கர்களின் நாட்டுப்பற்றை மேம்படுத்தும் இயக்கமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. -அறிவுக்கடல் இந்நாள் அக்டோபர் 12 இதற்கு முன்னால் -அக்டோபர் 12, 2019 […] 1810 - பீர் திருவிழாகளின் முன்னோடியும், உலகின் மிகப்பெரிய பீர் திருவிழாவு மான அக்டோப ர்ஃபெஸ்ட், முதன்முறையாகக் கொண்டாடப்பட்டது. பின்னாளில் பவேரியாவின் அரசரான முதலாம் லுத்விக் இளவரசராக இருந்தநிலையில், அவருக்கும், சேக்ஸ்-ஹில்ட்பர்காவ்சென்-னின் இளவரசியான தெரேசா-வுக்கும் இந்நாளில் நடைபெற்ற திருமணத்தின் ஒரு பகுதியாக இவ்விழா நடத்தப்பட்டது. கோட்டையின் வாயிற்பகுதியில் தெரசீன்வீஸ்(தெரேசாவின் திடல்) என்ற பெயரில் மிகப்பெரிய புல்வெளி அமைக்கப்பட்டு, முனீச் நகர குடிமக்கள் அனைவரையும் அழைத்து, அக்காலத்தில் விழாக்களில் இடம்பெறும் குதிரைப் பந்தயம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்தத் திடல் இன்றும் அதே பெயரில், சுருக்கமாக வீசன் என்று அழைக்கப்படுகிறது. விருந்தினராக வந்திருந்த குடிமக்களுக்கு ஏராளமான பீரும், ஒயினும் வழங்கப்பட்டன. இவ்விழா ஏற்படுத்திய மகிழ்ச்சியைத் தொடர 1811இல் மீண்டும் நடத்தப்பட்டது. அப்போது, பவேரியாவின் விவசாயத்திற்கு முக்கியத்துவமளிக்கும் விழாவாக இது மாறியது. விவசாயத்திற்கு முக்கியத்துவம் என்பதாலேயே பீரும், ஒயினும் முக்கிய இடம்பெற்றன. 1812இல் பவேரியாவின் அரசர் முதலாம் மேக்மிலியன் ஜோசஃப், ஸ்ட்ராவ்பிங் நகரில் கவ்ஃபோடென்ஃபோக்ஸ்ஃபெஸ்ட் என்ற விவசாயத்திற்கான பீர் திருவிழாவை நடத்தினார். இவ்விழாக்களில் நடன நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறலாயின. 1850களில், பாரம்பரிய உடையுடன் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் பேரணியும் முக்கிய அங்கமாகியது. ஆண்டுதோறும் முனீச்சில் செப்டம்பர் இறுதியில் தொடங்கி, அக்டோபர் முதல் ஞாயிறுவரை நடைபெறும் இவ்விழா, ஐரோப்பா முழுவதும் பரவி, பீர் திருவிழாவாக மாறுபட்ட தேதிகளில் நடத்தப்படுகிறது. 2013இல் 16 நாட்கள் நடைபெற்ற முனீச் விழாவில் மட்டும் 77 லட்சம் லிட்டர் பீர் அருந்தப்பட்டுள்ளது. ஜப்பான், சீனா, சிங்கப்பூர், ஜார்ஜியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட வட அமெரிக்க நாடுகளிலும், அர்ஜெண்ட்டினா, பிரேசில், சிலி, ஈக்வெடார், கொலம்பியா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளிலும் பீர் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. நண்பர்களுடன் பீரின் சுவையைக் கொண்டாடுதல், பீரின் உற்பத்தியாளர்களான விவசாயிகள், காய்ச்சுபவர்கள் ஆகியோரை மரியாதை செய்தல், பீரின் பெயரால் உலகை ஒன்றுபடுத்துதல் ஆகிய நோக்கங்களுடன், 2007இல் அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட பன்னாட்டு பீர் தினம், தற்போது 80 நாடுகளால், ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்டு, கொண்டாடப்படுகிறது. -அறிவுக்கடல் இந்நாள் அக்டோபர் 13 இதற்கு முன்னால் -அக்டோபர் 13, 2019 […] 1792 - தற்போது வெள்ளை மாளிகை என்றழைக் கப்படும், அமெரிக்கக் குடியரசுத்தலைவரின் இருப்பிடமும், அலுவல கமுமான, ‘யுனைடட் ஸ்டேட்ஸ் எக்சிகி யூட்டிவ் மேன்ஷன்’ கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இது அயர்லாந்தில் பிறந்த கட்டிடக்கலைஞரான ஜேம்ஸ் ஹோபன் என்பவரால் அயர்லாந்து அரண்மனையான லெய்ன்ஸ்ட்டர் ஹவுஸ் கட்டிடத்தை மாதிரியாகக்கொண்டு, ரோமானியக் கட்டிடக்கலையின் சாயலுடன் கட்டப்பட்டது. 1800 நவம்பர் 1இல், இரண்டாவது குடியரசுத்தலைவரான ஜான் ஆடம்ஸ்-தான் இதில் முதலில் குடியேறினார். அடுத்த ஓராண்டிலேயே புதிய குடியரசுத்தலைவராகப் பதவியேற்ற தாமஸ் ஜெஃபர்சன், இரண்டு பேரரசர்கள், ஒரு திருத்தந்தை (போப்), ஒரு பெரிய(தலாய்) லாமா ஆகியோர் வசிக்கும ளவுக்குப் பெரியதாக இருப்பதாகக் கூறினாராம்! இங்கிலாந்து டனான போரில், ஆங்கிலேயர்களால் 1814இல் இது தீக்கிரை யாக்கப்பட்டது. 1817இல் மறுகட்டுமானம் முடியும்வரை, ஆக்டகன் ஹவுஸ், செவன் பில்டிங்ஸ் ஆகியவற்றில் குடி யரசுத்தலைவர்கள் தங்கியிருந்தனர். தீக்கிரையான அடை யாளங்களை மறைக்க வெள்ளை நிறம் பூசப்பட்டதால் இது வெள்ளை மாளிகை என்று அழைக்கப்படுவதாகவும் ஒரு செய்தி உண்டு என்றாலும், 1811இலேயே இது வெள்ளை மாளிகை என்று அழைக்கப்பட்டதற்குப் பதிவுகள் உள்ளன. ஆனாலும், 1901இல் தனது கடிதத்தாளில் ‘வெள்ளை மாளிகை, வாஷிங்டன்’ என்று தியோடார் ரூஸ்வெல்ட் குறிப்பிடத் தொடங்கும்வரை, ‘பிரெசிடெண்ட்’ஸ் பேலஸ்’, ‘பிரெசி டெண்ட் மேன்ஷன்’, ‘பிரெசிடெண்ட்’ஸ் ஹவுஸ்’ ஆகிய வையே அதிகாரப்பூர்வ பெயர்களாக இருந்தன. முதல் குடியரசுத்தலைவரான ஜார்ஜ் வாஷிங்டனின் மனைவி மார்த்தாவின் வீட்டின் பெயர் ஒயிட் ஹவுஸ் பிளாண்ட்டேஷன் என்பதால் இப்பெயர் சூட்டப்பட்டிருக்கலாம் என்றும் கருதப் படுகிறது. உள்நாட்டுப்போர்க் காலத்தில், பல துறைகளும் இங்கேயே செயல்பட்டதால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு விரிவாக்கங்கள் செய்யப்பட்டன. 1891இல் குடியரசுத்தலை வராக இருந்த பெஞ்சமின் ஹாரிசனின் மனைவி கரோலின் ஹாரிசன் பரிந்துரைத்த, கிழக்கு, மேற்குக் கட்டிடங்களைக் கட்டுதல் அப்போது ஏற்கப்படாவிட்டாலும், தியோடார் ரூஸ்வெல்ட் பதவிக்குவந்தபின், 1902இல் நிறைவேற்றப்பட்டு, அலுவல்தொடர்பான ஊழியர்கள் மேற்குக் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டனர். அவருக்கு அடுத்த குடியரசுத்தலைவரான வில்லியம் டாஃப்ட், 1909இல்தான் தற்போது அமெரிக்கக் குடி யரசுத்தலைவரின் அதிகாரப்பூர்வ அலுவலகமாகச் செயல்படும் ஓவல் அலுவலகத்தை மேற்குக் கட்டிடத்தில் உருவாக்கினார். பல்வேறு விரிவாக்கங்களைச் சந்தித்த இக்கட்டிடத்தின் மர உத்திரங்கள் தாங்காது என்பதால், 1948இல் கட்டிடத்தின் உட்பகுதி முழுவதும் பிரிக்கப்பட்டு, இரும்பு உத்திரங்களுடன் மறுகட்டுமானம் செய்யப்பட்டது. அமெரிக்காவின் தேசிய பாரம்பரியச் சின்னமாக வகைப்படுத்தப்பட்டுள்ள வெள்ளை மாளிகை, தேசிய பூங்காத்துறையால் பராமரிக்கப்படுகிறது. - அறிவுக்கடல் இந்நாள் அக். 14 இதற்கு முன்னால் -அக்டோபர் 14, 2019 […] 1979 - சமூகத்தில் சமமான உரிமைகள் கோரி, ஒரு லட்சம் பேருக்கும் அதிகமானோர் பங்கேற்ற ஓரினச்சேர்க்கை யாளர்கள், பாலின முரண்பாடு கொண்டவர்கள் உள்ளிட்டோரின் முதல் தேசியப் பேரணி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்றது. இயற்கைக்கு அல்லது பொதுவாக ஏற்கப்பட்டுள்ள பாலுறவுக்கு முரண்பட்டவை, தற்காலத்திய பண்பாட்டுச் சீரழிவாக (கலி முற்றிவிட்டது!) பொதுவாகப் பார்க்கப்பட்டாலும் உண்மை அதுவல்ல. கி.மு.9000களில் ஆண் தன்பாலினப் புணர்ச்சியைச் சித்தரிக்கும், கற்களில் செதுக்கப்பட்ட உருவங்கள் கிடைத்துள்ளன. கி.மு.7000களின் ஓவியங்கள், இருபால் பாலுறுப்புகளையும்கொண்ட மூன்றாம் பாலினத்தைச் சித்தரித்துள்ளன. கி.மு.2900களில் பெண் உடையுடன் புதைக்கப்பட்டுள்ள ஆண் பிணம், மாற்றுப்பாலின உணர்வுகள் அக்காலத்திலேயே இருந்ததை நிரூபிக்கிறது. முதல் ஒரே பாலின (ஆண்) இணையர் கி.மு.2400இல் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் ஒரே கல்லறையிலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். வரலாறு முழுவதும் காணக் கிடைக்கும் இத்தகைய பாலின முரண்பாடுகள் பற்றிய செய்திகள், இவை இயல்பான மனித உணர்வுகள் என்பதையே சுட்டிக்காட்டுகின்றன. மிருகங்களிடையேயும் காணப்படும் இத்தகைய தன்பாலின, இருபாலின உறவுகள், இவை தவறான ‘சிந்தனையால்’ ஏற்படுபவையல்ல என்பதை உணர்த்துகின்றன. மிருகத்தனம் என்று நாம் குறிப்பிடும் வன்புணர்வு என்பது விலங்குகளிடம் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. பொதுவாக ஏற்கப்பட்டுள்ளவற்றிற்கு மாறானவர்கள் என்பதாலேயே பல சமூகங்களும் இத்தகையோருக்கு மரணம் உள்ளிட்ட தண்டனைகளை வழங்கியுள்ளன. சமூக சீர்திருத்தவாதியான ஜெரோமி பெந்தம், மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத இவ்வுறவுகளை எப்படிக் குற்றமென்று கூறலாம் என்று 1785இல் எழுதியதே இவர்களுக்கான முதல் ஆதரவுக்குரல் என்றாலும், அவர் அதை வெளியிடவே இல்லை! பிரெஞ்சுப் புரட்சியைத் தொடர்ந்து, 1792இல் தன்பாலினச் சேர்க்கையை அங்கீகரித்து, சமவுரிமை வழங்கிய முதல் நாடாக பிரான்சு ஆனது. வளர்ந்த நாடுகள் பலவும் தற்போது அங்கீகரிக்கத் தொடங்கியிருந்தாலும், உலகின் பல பகுதிகளிலும், மனிதர்களாக ஏற்கக்கோரி போராடிக் கொண்டிருக்கிற இவர்களைக் குறிப்பிட எல்ஜிபிடி - லெஸ்பியன்(பெண் தன்பாலினச் சேர்க்கை), கே(ஆண் தன்பாலினச் சேர்க்கை), பைசெக்சுவல்(இருபாலரிடமும் உறவு), ட்ரான்ஸ்ஜெண்டர்(திருநங்கை, திருநம்பி) - என்ற பதம் தற்போது பயன்படுத்தப்படுகிறது. தன்பாலின உறவைப்போற்றி எழுதிய கிரேக்கப் பெண் கவிஞர் சாஃபோ பிறந்த லெஸ்போஸ் தீவின் பெயரிலிருந்தே லெஸ்பியன் என்ற சொல் உருவானது. பிற உறவுகளைக் குறிக்க வரலாறு முழுவதும் பல்வேறு சொற்கள் பயன்படுத்தப்பட்டுவந்த நிலையில், எல்ஜிபிடி என்ற பதம் 1980களில்தான் உருவானது. பெயர் என்னவானாலும், அவர்கள் மனிதர்கள் என்பதை ஏற்றால் மட்டுமே நாம் நாகரிகமடைந்த மனிதர்களாவோம்! - அறிவுக்கடல் இந்நாள் அக்டோபர் 15 இதற்கு முன்னால் -அக்டோபர் 15, 2019 […] 1956 - முதன்முதலில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட உயர்நிலை நிரலாக்க மொழியான ஃபோர்ட்ரான் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு கட்டளையையும் கணினி மொழியில்(மெஷின் லேங்வேஜ்), அதாவது இருமை(பைனரி) எண்களில் குறிப்பிடுபவை முதல்-தலைமுறை நிரலாக்க மொழிகள் என்றும், குறிப்பிட்ட வகை கணினி யின் கணினி மொழிக் கட்டளைகளோடு இணைக்கப்பட்டு, எழுத்து வடிவிலான கட்டளைகளால் இயக்கப்படும்வகை யில் உருவாக்கப்பட்டவை அசெம்ப்ளி லேங்வேஜஸ் அல்லது இரண்டாம்-தலைமுறை நிரலாக்க மொழிகள் என்றும், நிரல்-மொழி-மாற்றி(கம்ப்பைலர்) ஒன்றின்மூலம், எவ்வகைக் கணினியிலும் செயல்படும் வகையில் உருவாக்கப் பட்டவை மூன்றாம்-தலைமுறை அல்லது உயர்நிலை நிரலாக்க மொழிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. ஃபோர்ட்ரானுக்கு முன்பே சில உயர்நிலை மொழிகள் உருவாக்கப் பட்டிருந்தாலும்கூட, கணினியை இயக்குபவர்கள் ஒவ்வொரு முறையும் அதனை கணினிக்குப் புரியும் குறியீடுகளாக மாற்றவேண்டியிருந்ததால், அவை பெருமளவிலான பயன்பாட்டுக்கு வரவேயில்லை. ஒரு கம்ப்பைலரும் உடன் வழங்கப்பட்டு, அனைத்துவகை கணினிகளிலும் இயங்கும்வகையில் உருவான முதல் மொழி ஃபோர்ட்ரான்தான். ஆனால், நிரலாக்கத்தின் வரலாறு கணினிகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது! பிரெஞ்ச் நெசவாளரும் வணிகருமான ஜோசப் ஜேக்வார்ட், துளையிடப்பட்ட அட்டைகளைப் பயன்படுத்தி, அடவுகளுடன் (டிசைன்) துணி நெய்வதற்கு உருவாக்கியிருந்த, நீராவியால் இயங்கும் எந்திரமே, முதன்முதலில் ஒரு நிரலைப் பயன்படுத்திய எந்திரமாகும். சார்லஸ் பாபேஜின் வித்தியாசப்பொறியைப் பற்றி, இத்தாலிய கணிதவியலாளர் லூகி மெனாப்ரீ எழுதிய குறிப்புகளை 1842இல் மொழிபெயர்த்த ஆங்கில பெண் கணிதவியலாளர் அடா லவ்லேஸ், பெர்னவ்லி எண்களைக் கணக்கிட எழுதிய முறையே உலகின் முதல் கணினி நிரலாக ஏற்கப்பட்டுள்ளது. அதனால், உலகின் முதல் நிரலர்(ப்ரோக்ராமர்) ஒரு பெண்தான்! ஐபிஎம் 704 மெயின்ஃப்ரேம் கணினியில் பயன்படுத்துவதற்காக, ஜான் பேக்கஸ் என்பவர் தலைமையிலான குழுவினர் 1954இல் ஃபோட்ரானை உருவாக்கினர். கணிதச் சூத்திரங்களை (கணினிக்குப் புரியும் மொழியில்!) மொழிபெயர்ப்பதற்கான மொழி என்பதால் ஃபார்முலா ட்ரான்ஸ்லேஷன் என்பதிலிருந்து ஃபோர்ட்ரான் என்று பெயரிடப்பட்டது. ஃபோட்ரான் 77வரை, இம்மொழியில் பெரிய(கேப்பிட்டல்) எழுத்துகள் மட்டுமே பயன்படுத்த முடிந்ததால், ஃபோர்ட்ரான் என்பதும் பெரிய எழுத்துகளிலேயே குறிப்பிடப்பட்டது. மிகவேகமாக வளர்ந்த கணினித்துறையுடன், நிரலாக்க மொழிகளும் வளர்ந்து, அதிக மொழிகள் பேசப்படும் நாடுகளுடன் ஒப்பிட்டால், (பப்புவா நியூ கினியா 836, இந்தோனேஷியா 700க்கும் மேல், ஆகியவற்றுக்கு அடுத்து, 698 மொழிகளுடன்) மூன்றாமிடத்தில் கணினி மொழிகள் உள்ளன. ஆனாலும், அதிக செயல்திறன் கணினிப் பணி களுக்கும், உலகின் மிகவேகமான சூப்பர்கம்ப்யூட்டர்களின் தரத்தை மதிப்பிடுவதிலும் அறுபதாண்டுகள் கடந்த ஃபோர்ட்ரான் இன்றும் பயன்படுத்தப்படுகிறது. இந்நாள் அக்டோபர் 17 இதற்கு முன்னால் -அக்டோபர் 17, 2019 […] 1346 - ‘நெவில்லியின் சிலுவை’ யுத்தத்தில் ஸ்காட்லாந்து தோற்று, அதன் அரசர் இரண்டாம் டேவிட், அடுத்த 11 ஆண்டுகளுக்கு இங்கிலாந்தில் சிறை வைக்கப்பட்டிருந்தார். அங்கிருந்த கற்சிலுவையின் அருகில் யுத்தம் நடைபெற்று, யுத்தத்துக்குப்பின், புதிய சிலுவையை நெவில்லி பிரபு அமைத்துக்கொடுத்ததால், இப்பெயர் ஏற்பட்டது. உண்மையில் நூறாண்டுப் போரின் ஒருபகுதியாக, பிரான்சின்மீது இங்கிலாந்து படையெடுத்ததை எதிர்த்தே, ஸ்காட்லாந்து இங்கிலாந்தின்மீது படையெடுத்தது. 1295இல் செய்துகொள்ளப்பட்டிருந்த ஆல்ட் அலையன்ஸ் என்ற ஒப்பந்தத்தின்படி, ஸ்காட்லாந்து இவ்வாறு படையெடுக்க வேண்டியிருந்தது. ஆல்ட் என்ற ஸ்காட் மொழிச்சொல்லுக்கு பழைய (ஆங்கிலத்தில் ஓல்ட்!) என்று பொருள் என்பதால், இது பழைய கூட்டணி என்று பொருள்படும். ஸ்காட்லாந்தின் அரசியான மார்கரெட் 1295இல், ஏழு வயதில் இறந்துவிட, வாரிசு இல்லாத ஸ்காட்லாந்தின் அரசுரிமையைக் கைப்பற்ற இங்கிலாந்தின் அரசர் முதலாம் எட்வர்ட் முயற்சித்தார். அப்போது, துணைக்கு பிற நாடுகளை ஸ்காட்லாந்து தேடியபோது, பிரான்சின் கேஸ்கனியை இங்கிலாந்து ஆக்கிரமித்தது தொடர்பான விரோதத்தால், இரு நாடுகளும் போரிடும் தருவாயில் இருந்தன. அதனால், ஸ்காட்லாந்து, பிரான்ஸ் ஆகியவற்றில் யாரை இங்கிலாந்து தாக்கினாலும், மற்றவர் இங்கிலாந்தைத் தாக்கவேண்டும் என்று செய்துகொள்ளப்பட்டதே ஆல்ட் அலையன்ஸ். வறுமையுடன், ஐரோப்பாவின் கோடியில் அமைந்திருந்த நாடான ஸ்காட்லாந்துக்கு, பிரான்ஸ் துணை என்பது பெரியதாகத் தோன்றினாலும், இங்கிலாந்துக்கும், பிரான்சுக்கும் மோதல் ஏற்படும்போதெல்லாம் தானும் போரிடவேண்டியதாகி, அதிக இழப்பு ஏற்பட்டது ஸ்காட்லாந்துக்குத்தான். 1329இல் 5 வயதில் இரண்டாம் டேவிட் அரசராகி, காப்பாளர்மூலம் ஆட்சி நடந்துகொண்டிருந்த நிலையில், 1332இல் இங்கிலாந்து ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து, 1333இல் பிரான்சில் தஞ்சம் புகுந்த அவர், 1341இல் அவரது ஆதரவாளர்களின் கை ஓங்கும்வரை 8 ஆண்டுகள் அங்கேயே இருக்க வேண்டியதாயிற்று. 17 வயதில் நேரடியாக ஆட்சிசெய்யத்தொடங்கிய அவர், 5 ஆண்டுகளில் இங்கிலாந்தால் சிறைப்பிடிக்கப்பட்டார். அடுத்த 10 ஆண்டுகளுக்கு பத்தாயிரம் மார்க்குகள் வீதம் பணயத்தொகை தருவதாக 1357இல் ஸ்காட்லாந்து ஒப்புக்கொண்டு அவரை மீட்டாலும், 1363ஆம் ஆண்டுக்கான தவணையைத் தர முடியவில்லை. தனக்குப்பின் அரசுரிமையை இங்கிலாந்து எடுத்துக்கொள்ளலாம் என்று எழுதிக்கொடுத்து அவர் பிரச்சனையைத் தீர்த்ததை, ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் ஏற்கவில்லை. இங்கிலாந்துடன் ரகசிய உடன்படிக்கைகள்மூலம் பிரச்சனையைத் தீர்த்து, 1371இல் இறக்கும்வரை அரசராக இருந்தார் டேவிட். 1332இல் இங்கிலாந்து ஆக்கிரமித்ததிலிருந்து, 1357இல் டேவிட் மீட்கப்பட்டது வரையான யுத்தங்கள் ஸ்காட் லாந்தின் இரண்டாம் விடுதலைப்போர் என்று அழைக்கப்படுகின்றன. -அக்டோபர் 20, 2019 1720 - இங்கிலாந்துக் கடற்படையிடம், கரீபியக் கடற்கொள்ளைக்காரர் காலிக்கோ ஜேக், ஜமைக்காவிலுள்ள டிஸ்கவரி துறைமுக (அல்லது உலர் துறைமுக) குடாவில், சிறிய யுத்தத்திற்குப்பின் பிடிபட்டார். தன் கப்பலுக்கென்று தனிக்கொடி வைத்திருந்த இவர்தான், தற்போது கடற்கொள்ளையர்களை அடையாளப்படுத்த பொதுவாகப் பயன்படுத்தப்படும் மண்டையோட்டு கருப்புக்கொடியை முதலில் பயன்படுத்தியவர். இவருக்கு முந்தைய கடற்கொள்ளையர்களின் கொடிகளில் முழு எலும்புக்கூடே இடம்பெற்றிருந்த நிலையில், மண்டையோடும், எக்ஸ் வடிவத்தில் இரண்டு வாள்களும் கொண்ட கொடியை இவர் உருவாக்கிப் பயன்படுத்தினார். பின்னாளில், அந்த வாள்களுக்குப் பதிலாக, எலும்புகள் இடம்பெற்ற இந்தக் கொடியின் பெயர் ஜாலி ரோஜர்ஸ் என்று குறிப்பிடப்படுகிறது. இப்பெயரைக் கடற்கொள்ளையர்கள் பயன்படுத்தினர் என்பதைத் தவிர, வேறு பெயர்க்காரணம் தெரியவில்லை. ஜேக் என்ற செல்லப்பெயர் கொண்ட காலிக்கோ ஜேக்கின் இயற்பெயர் ஜான் ரக்கம். இவர் கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் காலிக்கோ துணியாலான உடைகளையே அணிந்ததால், காலிக்கோ ஜேக் என்பதே பெயராகிவிட்டது. காலிக்கோ என்பது, கேரளத்தில் உருவான துணி வகையாகும். காலிக்கட் என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட கோழிக்கோட்டிலிருந்து வந்ததால், 1505இல், ஆங்கிலேயர்கள் இத்துணிக்கு காலிக்கோ என்று பெயரிட்டனர். கடற்கொள்ளையர்களின் நாடு என்றழைக்கப்பட்ட, நியூ ப்ராவிடன்ஸ் தீவிலிருந்து(பகாமாஸ் தீவுகளைச் சேர்ந்தது) இயங்கிய சார்லஸ் வேன் என்ற கடற்கொள்ளைக்காரரின் கப்பலில் ஜேக் பணிபுரிந்தார். ஒருமுறை நியூயார்க் அருகில் இவர்கள் கொள்ளையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு பெரிய பிரெஞ்ச்சுப் போர்க்கப்பலிடம் பிடிபடும் நிலையேற்பட்டது. சரணடைவது என்று வேன் முடிவெடுத்தபோது, போரிடலாம் என்று முடிவெடுத்த ஜேக் வெற்றியும் பெற, கப்பலிலிருந்த பிற கொள்ளையர்கள் இவரைத் தளபதியாக்கியதுடன், வெல்லப்பட்ட பெரிய போர்க்கப்பலும் ஜேக்குக் கிடைத்தது. 1650களிலிருந்து 1730கள் வரையான காலம் கடற்கொள்ளையின் பொற்காலம் என்று குறிப்பிடப்படுகிறது. இக்காலத்தில் பெரும் வளர்ச்சியடைந்த கடல் வணிகம், போர்களுக்குப்பின் குறைந்த ஐரோப்பிய கடற்படைகள், கடற்படையில் அனுபவம்பெற்று, போர்களுக்குப்பின் வேலையிழந்த மாலுமிகள் உள்ளிட்டவை இக்காலத்தில் கடற்கொள்ளையின் வளர்ச்சிக்குக் காரணமாகக் குறிப்பிடப்படுகின்றன. இக்காலத்தில், குடியேற்றவாத நாடுகளின் கடற்படைகளுக்கும், கடற்கொள்ளையர்களுக்குமிடையே, குறிப்பிடத்தக்க பல போர்களும் நடைபெற்றுள்ளன. கடற்கொள்ளையின் பொற்காலத்தின் இறுதிப்பகுதியில் கோலோச்சியவர்களில் ஒருவரான ஜேக், பிடிபட்டபின் மரணதண்டனை விதிக்கப்பட்டு, 1720 நவம்பர் 18இல் 37 வயதில் கொல்லப்பட்டார். இந்நாள் அக்.21 இதற்கு முன்னால் -அக்டோபர் 21, 2019 […] 1895 - ஜப்பான் ஆக்கிர மித்ததைத் தொடர்ந்து, ஐந்து மாதங்கள்(152 நாட்கள்!) மட்டுமே இருந்த ஃபார்மோசா குடியரசு முடிவுக்கு வந்தது. ஃபார்மோசா என்பது தைவானுக்கு போர்ச்சுகீசியர்கள் சூட்டிய பெயர். 1542இல் தங்கள் வரைபடத்தில் இல்லாத இந்தத் தீவைக் கண்ட போர்ச்சுகீசிய மாலுமிகள், போர்ச்சுகீசிய மொழியில் அழகான தீவு என்ற பொருளுள்ள ஃபோர்மோசா என்ற பெயரைச் சூட்டினர். சுமார் ஒன்றேகால் லட்சம் ஆண்டுகளுக்குமுன், சீனாவுடன் இணைந்தே இருந்த இப்பகுதி, பத்தாயிரம் ஆண்டுகளுக்குமுன் கடல்மட்டம் உயர்ந்தபோதுதான் தீவாகியது. இத்தீவில் ஆறாயிரம் ஆண்டுகளுக்குமுன் குடியேறிய (பெரும்பாலும் சீன) விவசாயிகளே, தற்போது தைவானின் தொல்குடியினராக அறியப்படுவோரின் மூதாதையராவர். இந்தத் தொல்குடியினரின் மொழியில் அவர்களது பெயரான தாய்வோன் என்பதிலிருந்துதான் தற்போதைய பெயரான தைவான் உருவானது. சீனாவின் ஆளுகையின்கீழிருந்த இப்பகுதியில் 1624இல் டச்சுக்காரர்களும், 1626இல் ஸ்பானியர்களும் காலூன்றினாலும், மிங் மரபின் வீழ்ச்சிக்குப்பின் 1662இல் வெளியேற்றப்பட்டு, டுங்னிங் முடியரசு உருவாக்கப்பட்டது. 1683இல் இதை வென்ற சீனா, மீண்டும் தன்னுடன் இணைத்துக்கொண்டது. முதல் சீன-ஜப்பானியப்போரில்(1894-95) சீனா தோற்றதையடுத்து, (போரின் பெரும்பகுதி சீனாவின் வடபகுதியில் நடந்திருந்தாலும், தென்பகுதியிலிருந்த) தைவானை விட்டுத்தரவேண்டும் என்று வற்புறுத்தி ஜப்பான் பெற்றுக்கொண்டது. இம்மக்கள் ஜப்பானின் ஆளுகையை ஏற்க விரும்பாததால், 1895 மே 23இல் ஃபார்மோசா குடியரசு என்ற சுதந்திர நாடு உருவானதாக அறிவித்தனர். ஒரு வாரம் மட்டுமே பிரச்சினையின்றி செயல்பட்ட இந்த அரசு, அதற்குள் நாட்டின் கொடி, அஞ்சல்தலைகள், காகித நாணயம் உள்ளிட்டவற்றை வெளியிட்டுவிட்டது. அப்போது தாக்கத் தொடங்கிய ஜப்பான், அக்டோபர் 21இல் தலைநகரைக் கைப்பற்றியதுடன், இக்குடியரசு முடிவுக்கு வந்தது. 1912இல் சீனாவின் முடியாட்சி முடிவுக்கு வந்து சீனக் குடியரசு உருவானது. 1945இல் இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஜப்பான் சரணடைந்தபோது, தைவான் சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. 1949இல் மா-சேதுங் தலைமையிலான பொதுவுடைமை இயக்கம் சீனாவின் ஆட்சியைக் கைப்பற்ற, கொமிங்டாங் கட்சியின் ஆளுகையிலிருந்த சீனக்குடியரசு முடிவுக்கு வந்து, சீன மக்கள் குடியரசு(மக்கள் சீனம்) உருவானது. அங்கிருந்த தப்பி தைவானுக்கு வந்த ஓடிய சியாங் கை-ஷேக்கும், அவர் ஆதரவாளர்களும், (சீனாவையும் உள்ளடக்கிய!) அவர்களது சீனக் குடியரசின் தற்காலிகத் தலைநகரம் என்று அழைத்துக்கொண்டனர். மீண்டும் மக்கள்சீனத்தை அவர்களால் நெருங்கவே முடியாமற்போனலும், இன்றுவரை தைவான் தன்னை சீனக் குடியரசு என்றே அழைத்துக்கொள்கிறது! இந்நாள் அக்டோபர் 22 இதற்கு முன்னால் -அக்டோபர் 22, 2019 […] 1707 ‘நிலநிரைக் கோட்டு (தீர்க்கரேகை) சட்டத்தை’ இங்கிலாந்து இயற்றக் காரணமான, சிலி கடல் பேரழிவு என்றழைக்கப்படும் கப்பல் விபத்து நேரிட்டு, சுமார் 2000 கடற்படையினர் பலியாயினர். சிலி என்பது தென்மேற்கு இங்கிலாந்தை ஒட்டியுள்ள ஒரு தீவுக்கூட்டமாகும். (தென் அமெரிக்காவில் உள்ளது ‘ச்சிலி’!) ஸ்பெயின் வாரிசுரிமைப் போரின்போது, பிரான்சின் டவ்லான் துறைமுகத்தைத் தாக்கச்சென்ற, இங்கிலாந்து கடற்படையின் 21 கப்பல்கள் அணிவகுத்துத் திரும்பிக்கொண்டிருந்தன. மிகமோசமான வானிலை, மாறிமாறி வீசிக்கொண்டிருந்த கடுமையான காற்று ஆகியவற்றால், கப்பல் பயணித்துக்கொண்டிருக்கும் இடம், திசை ஆகியவற்றை மாலுமிகளால் சரியாகக் கணிக்க முடியவில்லை. ஆங்கிலக் கால்வாயில் நுழைவதாக அவர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில், சிலி தீவுகளை நெருங்கிய கப்பல்களில், கொடிக்கப்பல் (தலைமைத் தளபதியின் கப்பல்) உள்ளிட்ட 4 கப்பல்கள், பாறைகளில் மோதி மூழ்கின. இங்கிலாந்தின் கடற்பயண வரலாற்றில் மிகமோசமான விபத்தாகக் குறிப்பிடப்படும் இது, நிலநிரைக்கோடு(தீர்க்கரேகை) கணக்கீட்டுத் தவறுகளாலேயே ஏற்பட்டதாக நம்பப்பட்டது. ஏனென்றால், அக்காலத்தில், வானில் சூரியனின் இடத்தைக்கொண்டு, நிலநேர்க்கோட்டை(அட்சரேகை) எளிதாகக் கணக்கிட்டுக்கொண்டிருந்தனர். இத்தகைய பேரிழப்புகளை எதிர்காலத்தில் தடுக்கும் நோக்கத்துடன் இயற்றப்பட்ட ‘நிலநிரைக்கோட்டுச் சட்டம் 1714’, சரியாகக் கணக்கிடும் முறையைக் கண்டுபிடிப்பவர்களுக்கு 20,000 பவுண்டுகள்(தற்போதைய மதிப்பில் ரூ.28 கோடிக்கும் அதிகம்!) பரிசுத்தொகை அறிவித்து, அதை நிர்வகிக்க ‘நிலநிரைக்கோட்டுத் துறை’ என்பதையும் உருவாக்கியது. ஆனால், நிலநிரைக்கோட்டுப் பிரச்சனைக்கு முதலில் அறிவிக்கப்பட்ட பரிசு இதுவல்ல. 1567இலேயே ஸ்பெயின் அரசர் இரண்டாம் ஃபிலிப் அறிவித்ததுதான் இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முதன்முதலில் அறிவிக்கப்பட்ட பரிசு! 1598இல் ஸ்பெயினின் மூன்றாம் ஃபிலிப் 6,000 டுகாட்களும், ஓய்வூதியமும் அளிப்பதாகவும், அதைத் தொடர்ந்து நெதர்லாந்து அரசு 10,000 ஃபளோரின்கள் அளிப்பதாகவும் அறிவித்தன. பல்வேறு தீர்வுகளுக்குப் பரிசுகளும் அளிக்கப்பட்டாலும், தானே கற்றுக்கொண்டு கடிகாரம் செய்பவராக இருந்த இங்கிலாந்தின் ஜான் ஹாரிசன் 31 ஆண்டுகள் உழைத்து 1761இல் உருவாக்கிய கடற்கடிகாரம் மிகப்பெரிய தீர்வாக அமைந்ததுடன், மிகஅதிகப் பரிசுத் தொகையையும் (23,065 பவுண்டுகள்!)அவர் பெற்றார். இரண்டரை நூற்றாண்டுகளாகக் கண்டுபிடிக்கப்படாத, இக்கப்பல்களின் மூழ்கிய எச்சங்கள், 1969இல் கண்டுபிடிக்கப்பட்டு, தங்க, வெள்ளி நாணயங்கள் எடுக்கப்பட்டதால், புதையல் வேட்டைக்காரர்களிடமிருந்து அவற்றைக் காக்க, மூழ்கிய கப்பல்களின் எச்சங்களைக் காப்பதற்கு ஒரு சட்டத்தையும் 1973இல் இங்கிலாந்து இயற்றவேண்டியதாயிற்று! இந்நாள் அக்டோபர் 23 இதற்கு முன்னால் -அக்டோபர் 23, 2019 […] கி.மு.42 - சீசரைக் கொல்லும் சதியில் முக்கியப் பங்காற்றிய ப்ரூட்டஸ் தற்கொலை செய்துகொள்ளக் காரணமான ஃபிலிப்பி யுத்தத் தோல்வி ஏற்பட்டது. ஜூலியஸ் சீசரின் படுகொலை இத்தொடரில் 2019 மார்ச் 15இல் இடம்பெற்றுள்ளது. எளிய மக்களின் நலனுக்கான சீர்திருத்தங்களைச் சீசர் மேற்கொண்டிருந்ததால், அவர் கொல்லப்பட்டதும், மிகச் சிலரான உயர்குடிச் செல்வந்தர்கள், தங்கள் தலைவரைக் கொன்றுவிட்டதாக மக்கள் வெகுண்டெழுந்தது உள்நாட்டுப் போராக வெடித்தது. சீசர் கொலையின் முக்கியச் சதிகாரர்களான ப்ரூட்டசும், கேஷியசும் ரோமிலிருந்து வெளியேறி, கிரேக்கம், மாசிடோனியாவிலிருந்து சிரியா வரையான பகுதிகள் உள்ளிட்ட கிழக்குப் பகுதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். சீசருடன் இன்னொரு கான்சலாக இருந்தவரான மார்க்கஸ் ஆண்ட்டனியஸ்(மார்க் ஆண்ட்டனி), சீசரின் தத்துப்பிள்ளை கையஸ் ஆக்டேவியஸ்(பின்னாளில் அகஸ்ட்டஸ் சீசர்), சீசரின் முக்கியத் தளபதியான மார்க்கஸ் லெப்பிடஸ் மூவரும் மேற்குப் பகுதியின் ராணுவம் முழுவதையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, செனட்டின் எதிர்ப்புகளை முறியடித்து, இரண்டாவது முக்கூட்டணியை உருவாக்கினர். ஏற்கெனவே, கி.மு.50களில், ஜூலியஸ் சீசர், பொம்ப்பெயஸ் மேக்னஸ், லிசினியஸ் கிராசஸ் ஆகியோர் இணைந்து செயல்பட்டது முக்கூட்டணி என்று அழைக்கப்பட்டிருந்ததால், இது இரண்டாவது முக்கூட்டணி என்று குறிப்பிடப்படுகிறது. படைகளின் மிகச்சிறந்த பெரும்பகுதி, 28 லீஜியன்கள் அளவுக்கு முக்கூட்டணியிடம் இருந்த நிலையில், தங்களிடமிருந்த படைகளுடன், முன்னாள் படைவீரர்கள் உள்ளிட்டோரைக்கொண்டு 19 லீஜியன்கள் படையை ப்ரூட்டஸ் தரப்பினரும் திரட்டினர். அக்காலத்திய ரோமானிய லீஜியன் என்பது, சுமார் 5,000 வீரர்கள் அடங்கிய அணியைக் குறிக்கும். அக்காலத்திய மரபின்படி, சீசருக்கு தெய்வீக நிலையை(டிவஸ் லூலியஸ்) முக்கூட்டணி அறிவித்ததுடன், சீசரால் தத்தெடுக்கப்பட்டிருந்த வாரிசான ஆக்டேவியசையும், தெய்வ மகன்(டிவி ஃபிலியஸ்) என்று அழைக்கத் தொடங்கியிருந்தது. ப்ரூட்டசிடமிருந்த படையினரின் சீசரின்மீதான விசுவாசத்தை எவ்வளவு முயற்சித்தும் ப்ரூட்டசால் மாற்ற முடியாததால், சீசரின் வாரிசின் படையை எதிர்த்து அவர்களால் தீவிரமாகப் போரிட முடியவில்லை. நிலத்திலும், நீரிலும் நடைபெற்ற போர்களின் இறுதியாக அக்டோபர் 23இல் ஃபிலிப்பியில் நடைபெற்ற யுத்தத்தில், ஆக்டேவியசின் படைகள் தீர்மானகரமான வெற்றியைப்பெற்றன. சிறு படையுடன் தப்பிச்சென்ற ப்ரூட்டஸ், சரணடைவதைத்தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் தற்கொலை செய்துகொண்டார். வாரிசாக ஆக்டேவியசை சீசர் அறிவிப்பார் என்று எதிர்பார்த்திராத, சீசருக்குப்பின் ஆட்சியதிகாரத்தை எதிர்பார்த்திருந்த ஆண்ட்டனி, பின்னர் க்ளியோபாட்ரா உதவியுடன் ஆக்டேவியசுடன் போரிட்டதே, ரோம் முடியரசாகவும், அகஸ்ட்டஸ் சீசர் பேரரசராகவும் காரணமானதை இன்னொரு நாள் விபரமாகக் காணலாம்! இந்நாள் அக்டோபர் 24 இதற்கு முன்னால் -அக்டோபர் 24, 2019 […] 1260 - பாரீசுக்கு அருகில் சார்ட்ரஸ் நகரில், சார்ட்ரஸ் அன்னை பேராலயம்(கதீட்ரல்), ஒன்பதாம் லூயி அரசர் முன்னிலையில் மறு-அர்ப்பணிப்பு(திறப்பு விழா!) செய்யப்பட்டது. கதீட்ரல் என்பது கிறித்தவ ஆயரின்(பிஷப்) தலைமைப்பீடம் அடங்கிய தேவாலயம் ஆகும். இருக்கை என்ற பொருள்கொண்ட கதீட்ரா என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து கதீட்ரல் என்ற பெயர் உருவானது. ஒரு லட்சத்துப் பதினேழாயிரத்துக்கும் அதிகமான சதுர அடிகள் பரப்பில் பிரமாண்டமாக அமைந்துள்ள இந்தப் பேராலயம், கட்டிடக்கலை வரலாற்றின் சாதனைகளுள் ஒன்றாகக் கருதப்படுவது மட்டுமின்றி, மிகப் பெருமளவிற்கு அதன் உண்மையான அமைப்புகளுடன் பாதுகாக்கப்பட்டுள்ள பண்டைய கட்டிடமாகவும் உள்ளது. இந்தப் பேராலயம் உள்ள இடத்தில் 4ஆம் நூற்றாண்டிலேயே ஒரு பேராலயம் கட்டப்பட்டிருந்து, 743இல் அக்விட்டைன் பகுதியின் சிற்றரசரால்(ட்யூக்) எரிக்கப்பட்டது. மீண்டும் கட்டப்பட்ட பேராலயம், 858இல் டென்மார்க் கொள்ளையர்களால் எரிக்கப்பட்டது. அதன்பின் எழுப்பப்பட்ட பேராலயம், 962இல் ஏற்பட்ட தீவிபத்தில் அழிந்தது. ஜிஸ்லெபர்ட் என்ற ஆயரால்(பிஷப்) மீண்டும் கட்டப்பட்ட இது, 1020இல் ஒரு தீவிபத்தில் அழிந்துபோனது. அதன்பின் ஃபுல்பர்ட் என்ற ஆயர், ஐரோப்பிய அரச குடும்பங்களிடமிருந்து நிதியுதவிபெற்று, தொடங்கிய கட்டுமானப் பணிகள் 1155வரை தொடர்ந்தன. இப்பணிகளில் மக்கள் காட்டிய ஆர்வம் ‘கல்ட் ஆஃப் த கார்ட்ஸ்’ என்று வருணிக்கப்பட்டது. அதாவது, 12-13ஆம் நூற்றாண்டுகளில், தேவாலயப் பணிகளுக்காக, வண்டிகளில் மாடுகளுக்குப் பதிலாக எளிய மக்கள் தாங்களே நுகத்தடியில் நுழைந்து இழுத்ததாகக் குறிப்பிடப்படும் நிகழ்வுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இதற்கிடையில் 1134இலும் ஒரு தீவிபத்து ஏற்பட்டு சில பகுதிகள் அழிந்தன. இந்தப் புதிய பேராலயமும் 1194இல் ஒரு பெரும் தீவிபத்தில் அழிந்து, முகப்பு, கோபுரங்கள், நிலவறை ஆகியவை மட்டுமே மிஞ்சின. அப்போது, இந்த பேராலயத்தின் கன்னி மேரி மிகவும் புகழ்பெற்றுவிட்டிருந்த நிலையில், ஏராளமான நன்கொடைகள் குவிய, உடனடியாகத் தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் 1260இல் நிறைவுற்றன. 430 அடி நீளம், 151 அடி அகலம், 371 அடிவரை உயரம்கொண்ட கோபுரங்கள், வண்ண ஓவியக் கண்ணாடிகள்கொண்ட 176 சாளரங்கள், 200 சிலைகளுடன் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட இவ்வாலயம் அதன்பின், பெரிய மாற்றங்கள் செய்யப்படாமல் பாதுகாக்கப்பட்டுவருகிறது. பிரெஞ்சு கோத்திய கட்டிடக்கலையின் உச்சம் என்று இதனைப் புகழ்ந்துள்ள யுனெஸ்கோ, உலகப் பாரம்பரியக் களமாக இதனை அறிவித்துள்ளது. இந்நாள் அக்டோபர் 25 இதற்கு முன்னால் -அக்டோபர் 25, 2019 […] 1971 - ஐக்கிய நாடுகள் அவையில் உறுப் பினராகச் சீனா அனுமதிக்கப் பட்டது. 1949இலேயே மக்கள் சீனக் குடியரசு உருவாகி விட்டாலும், சீனாவிலிருந்து தப்பியோடிய சியாங் கே-ஷேக், தைவானிலிருந்து கொண்டு, அதனை சீனக் குடியரசு என்று அழைத்துக் கொண்டார். ஐநாவில் இணைவதற்கான மக்கள் சீனத்தின் முயற்சிகள், ஒற்றைச் சீனக் கொள்கையின்படி தோற்கடிக்கப்பட்டன. ஒற்றைச் சீனக் கொள்கை என்பது சீனா என்ற பெயரில் இறையாண்மைகொண்ட ஒரேயொரு நாடுதான் இருக்க முடியும் என்பதுதான் என்றாலும்கூட, பல்வேறு நாடுகளாலும் மாறுபட்ட விதங்களில் கடைப்பிடிக்கப்பட்டது. மக்கள் சீனக்குடியரசு, சீனக்குடியரசு (தைவான்) ஆகிய இரண்டுமே ஏற்றுக்கொண்டுள்ள ஒற்றைச் சீனக் கருத்தாக்கம் என்பது, தைவானும் உள்ளிட்ட ஒருங்கிணைந்த சீனா என்பதாகும். தைவானிலிருந்துகொண்டு, சியாங் கே-ஷேக் சீனக்குடியரசு என்று அழைத்துக்கொண்டதாலேயே, ‘சீனாவின் முதன்மை நிலப்பரப்பு (மெயின்லேண்ட் சைனா)’ என்ற சொற்றொடர் உருவாகி, 1990களுக்குப்பின், மக்கள்சீனத்தைக் குறிப்பதாக நிலைபெற்றுவிட்டது. ஒற்றைச் சீனாவாக அமெரிக்காவின் நட்பு நாடுகள் உள்ளிட்டவை தைவானையும், இடதுசாரி அரசுகளைக்கொண்ட நாடுகள் மக்கள்சீனத்தையும் ஒப்புக்கொண்டன. இதனால், உலகில் மக்கள்தொகையில் முதலிடமும், பரப்பளவில் மூன்றாமிடமும் வகித்த மிகப்பெரிய நாடான சீனா, ஐநாவின் அங்கமாக ஆகமுடியவில்லை. எதிர்த்த நாடுகளில் பல 1960களில் மக்கள்சீனத்தை ஆதரிக்கத் தொடங்கினாலும், ஒவ்வொரு முறையும் எதிர்ப்பினைத் திரட்டி முறியடித்தது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்காவின் நட்பு நாடுகளில் சில ஆகியவை ஆதரவாக மாறி (பாதிக்கும் அதிகமான)பெரும்பான்மை உருவான போதும், மூன்றில் இரண்டுபங்கு ஆதரவு தேவை என்று, சீனக்குடியரசுக்கு(தைவான்) பதிலாக மக்கள்சீனத்தை இணைக்கும் அல்பேனியாவின் தீர்மானம் தோற்கடிக்கப் பட்டது. 1971 பிப்ரவரியில், ஐநா பாதுகாப்பு அவையில் சீனக்குடியரசு(தைவான்) இருப்பது முறையற்றது என்று சோமாலியா கண்டித்தது. 1971 அக்டோபர் 25இல் அல்பேனியா கொண்டுவந்த தீர்மானத்திற்கு போதிய ஆதரவு கிடைத்ததுடன், ஐநாவில் சட்டவிரோதமாக அங்கம் வகிக்கும் சியாங் கே-ஷேக்கின் பிரதிநிதிகள் வெளியேற்றப்படவேண்டும் என்ற கோரிக்கையுடன் அமெரிக்காவும் ஆதரித்தது. ஐநாவின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான சீனாவின், வீட்டோ உரிமை யுடன் கூடிய பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினர் இடம் மக்கள்சீனத்திற்கு மாற்றப்பட, சீனக்குடியரசு என்று அழைத்துக்கொள்ளும் தைவான், இன்றுவரை ஐநாவில் உறுப்பினராகவே இல்லை. ஒலிம்பிக் உள்ளிட்ட பன்னாட்டு நிகழ்வுகளிலும், அமைப்புகளிலும் வேறுபடுத்திக்காட்ட, சைனீஸ் தாய்பேய் என்று தைவான் குறிப்பிடப்படுகிறது. இந்நாள் அக்டோபர் 26 இதற்கு முன்னால் -அக்டோபர் 26, 2019 […] 1947 - ஜம்மு-காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில், அரசர் ஹரிசிங் கையெழுத் திட்டார். இணைப்பு ஒப்பந்தம் என்பது 1935இல் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேய ஆட்சியின்போது, ஆங்கிலேய ஆட்சியின் அங்கமாகவோ, இங்கிலாந்தின் உடைமையாகவோ இன்றி 565 மன்னராட்சிப் பகுதிகள் இந்தியாவில் இருந்தன. இந்தியாவில் கூட்டரசை(ஃபெடரேஷன்) உருவாக்க இயற்றப்பட்ட 1935இன் இந்திய அரசுச் சட்டம், மன்னராட்சிப் பகுதிகள் அதில் இணைந்துகொள்ள அழைப்பு விடுத்து, இந்த இணைப்பு ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்தியது. இதை மன்னராட்சிப் பகுதிகள் கடுமையாக எதிர்த்தாலும்கூட, இரண்டாம் உலகப்போரின்போது ஏற்றுக்கொண்டு, போர் முடியும்போது பெரும்பகுதி மன்னராட்சிப் பகுதிகள் இங்கிலாந்து முடியின்கீழ் வந்திருந்தன. ஆனாலும் அவை இங்கிலாந்தின் உடைமைகள் அல்ல என்பதால், 1947இன் இந்திய விடுதலைச் சட்டத்தின்படி அவற்றை இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ இணைக்க முடியாது என்பதுடன், அவற்றின்மீதான இங்கிலாந்தின் அதிகாரமும் முடிவுக்கு வந்து, அவை சுதந்திர நாடுகளாயின. பாதுகாப்பு, உட்கட்டமைப்பு, நிதி போன்றவற்றிற்காக சார்ந்திருக்கும் நிலையிருந்ததால் அவற்றில் பெரும்பாலான பகுதிகள் இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ இணைவதென்று முடிவெடுத்தாலும், தனியாக இருக்க முடிவெடுத்த பகுதிகளுள் காஷ்மீர் குறிப்பிடத்தக்கது. 77 சதவீதம் இஸ்லாமியர்களையும், 20 சதவீதம் இந்துக்களையும்கொண்டு, இந்து அரசரால் ஆளப்பட்ட காஷ்மீர் தங்களுடன் இணையவேண்டும் என்று விரும்பிய பாகிஸ்தானால், காஷ்மீருக்குள் இஸ்லாமியர்களின் கலகங்களையும் தூண்ட முடிந்தது. இக்கலகங்களால், மேற்குப்பகுதி மாவட்டங்களின் கட்டுப்பாடு அரசரின் கைவிட்டுப்போனதுடன், எல்லை தாண்டிப்புகுந்த பாகிஸ்தானின் பஷ்த்தூன் பழங்குடியினரின் குடிப்படைகளும், நேரடி ராணுவமல்லாத பாகிஸ்தான் படைகளும், ஸ்ரீநகரை நோக்கி முன்னேறியதால், ஹிரிசிங் இந்தியாவின் உதவியை நாடினார். இணைந்தால் உதவுவதாக இந்தியா கூறியதையடுத்து இந்த இணைப்பு ஒப்பந்தம் ஏற்பட, இந்தியப் படைகள் சென்று ஊடுருவியவர் களை விரட்டின. அவர்களுக்கு உதவியாகப் பாகிஸ்தான் படைகளும் வந்ததால் ஏற்பட்ட இந்தோ-பாகிஸ்தான் போர் 1948 டிசம்பர்வரை நீடித்தது. போர்நிறுத்தம் ஏற்படும் போது காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு, லடாக் ஆகிய 2.22 லட்சம் ச.கி.மீ. பகுதி மீட்கப்பட்டிருந்தாலும், 0.86 லட்சம் ச.கி.மீ. பரப்புள்ள பகுதி பாகிஸ்தானின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று இந்தியாவால் அழைக்கப்படும் இப்பகுதியை, ஆசாத்(சுதந்திர) காஷ்மீர், ஜில்ஜித்-பால்ட்டிஸ்தான் என்ற தன்னாட்சி மாநிலங்களாக பாகிஸ்தான் கொண்டிருக்கிறது. இந்தியாவுடன் இணைக்கப்பட்ட அக்டோபர் 26, காஷ்மீரில் ‘இணைப்பு நாள்’ என்று விடுமுறையுடன் கடைப்பிடிக்கப்படுகிறது. - அறிவுக்கடல் இந்நாள் அக்டோபர் 27 இதற்கு முன்னால் -அக்டோபர் 27, 2019 […] 1971 - காங்கோ மக்க ளாட்சிக் குடியரசின் பெயரை ஸையர் குடியரசு என்று அதன் ஜனாதிபதி மொபுட்டு மாற்றினார். பதினோராண்டு களில் நான்காவது பெயர் மாற்றம் என்பதுடன், இது அந்நாட்டின் ஆறாவது பெயராகும்! ஸையர் என்பது, காங்கோ ஆற்றிற்குப் போர்ச்சுகீசியர்கள் சூட்டிய பெய ராகும். ஆப்ரிக்க மொழிகளில் ஒன்றாக கிக்கொங்கோ மொழியில் மற்ற ஆறுகளை விழுங்கும் ஆறு என்ற பொருள்கொண்ட, ன்ஸியர் என்ற சொல்லிலிருந்து ஸையர் என்ற சொல்லைப் போர்ச்சுகீசியர்கள் உருவாக்கினர். நொடிக்கு 41,200 கனமீட்டர் நீர் பாய்ந்து, நீர் அளவில் உலகில் இரண்டா வதாக காங்கோ ஆறு திகழ்கிறது(முதலிடத்திலுள்ள அமே சான் நொடிக்கு 2,09,000 கனமீட்டர்!). அந்நியர் (போர்ச்சு கீசியர்கள்) ஆட்சியின் அடையாளங்களனைத்தையும் நீக்க, மொபுட்டு அறிவித்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாட்டின் பெயர் மட்டுமின்றி, மொபுட்டுவின் பெயர், காங்கோ ஆறு, பல நகரங்கள், உள்ளிட்டவை பெயர் மாற்றப்பட்டதுடன், மேற்கத்திய பாணி உடைகளுக்கும் தடைவிதிக்கப்பட்டது. மாவோ-வின் கோட்டைப்போன்ற ஒன்றை ஆண்களுக்கும், அதற்கிணையான ஓர் உடையைப் பெண்களுக்கும் வடிவமைத்து, அதை மட்டுமே உடுத்தவேண்டுமென்று உத்தரவிட்டார் மொபுட்டு. தொண்ணூராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்த ஆதாரங்கள் கிடைத்துள்ள பகுதியான காங்கோவில், ஆப்ரிக்காவிலேயே கடைசி யாகத்தான் பிரான்ஸ், பெல்ஜியம், போர்ச்சுகல் ஆகிய வற்றின் மேற்கத்திய ஆக்கிரமிப்பு நிகழ்ந்தது. 1960இல் பெல்ஜியத்திலிருந்து விடுதலைபெற்ற காங்கோ ஃப்ரீ ஸ்டேட், தன்னை காங்கோ குடியரசு என்று அழைத்துக்கொள்ள, அடுத்து பிரான்சிடமிருந்து விடுதலைபெற்ற பகுதியும் தன்னை காங்கோ குடியரசு என்று அழைத்துக்கொண்டது. அதனால், பெல்ஜியம் அரசரின் பெயராலேயே காங்கோ-லியோல்ட்வில்லி என்றழைக்கப்பட்ட இதன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சியைப் பிடித்த ராணுவத் தளபதி மொபுட்டு, இத்தகைய மாற்றங்களைச் செய்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேட்ரிஸ் லுமும்பாவுக்கு சோவியத் ஆதரவளித்ததால், காங்கோ பொதுவுடைமைக்கு மாறிவிடும் என்று அஞ்சி, மொபுட்டுவின் ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவின. மொபுட்டுவின் மோசமான ஆட்சியின் காரணமாக ஏற்பட்ட உள்நாட்டுப் போர் இன்றும் தொடர்கிறது. ஸையர் என்ற பெயர் 1997இல் கைவிடப்பட்டு காங்கோ மக்கள் குடியரசு என்று மாற்றப்பட்ட இது, ஆப்ரிக்காவின் இரண்டாவது பெரிய நாடாக (முதலாவது அல்ஜீரியா) இருக்கிறது. பிரான்சிடமிருந்து விடுதலைபெற்றது காங்கோ குடியரசு என்று அழைக்கப்படுகிறது. போர்ச்சுகீசிய ஆக்கிரமிப்பிலிருந்தவை தற்போது அங்கோலாவுடன் உள்ளன. இந்நாள் அக்டோபர் 29 இதற்கு முன்னால் -அக்டோபர் 29, 2019 […] 1675 - நுண்கணிதத்தில் (கால்குலஸ்), தொகையீட்டிற்கான (இண்ட்டெக்ரல்) குறியீடாக, நீண்ட எஸ் எழுத்தை, முதன்முறையாக காட்ஃப்ரைட் லெய்ப்னிஸ் பயன்படுத்தினார். நியூட்டனுடன் சேர்த்து, நவீன நுண்கணிதத்தை உருவாக்கியவராகக் கொண்டாடப்படும் லெய்ப்னிஸ், ஜெர்மானிய பல்துறை விற்பன்னராவார். நியூட்டனுக்குத் தொடர்பின்றி, அவர் காலத்திலேயே, வகையீடு(டிஃபரன்ஷியேஷன்), தொகையீடு ஆகியவற்றின் தொடர்பினை விளக்கும், ‘நுண்கணிதத்தின் அடிப்படைத் தேற்றத்தை’ இவரும் உருவாக்கினார். தொகையீட்டின் பயன்பாடுகளுள் ஒன்றான, பரப்பையும், கனத்தையும் கணக்கிடுதல், கி.மு.1820 காலத்தின், எகிப்திய கணிதவியல் தொகுப்பான மாஸ்கோ பாப்பிரசில் காணப்படுகிறது. கி.மு.நான்காம் நூற்றாண்டில் கிரேக்கத்தின் யூடாக்சஸ், வெறுமைப்படுத்துதல் என்ற முறையை உருவாக்கியுள்ளார். இதை மேம்படுத்திய ஆர்க்கிமிடீஸ், தொகையீட்டு நுண்கணிதத்தையொத்த ஹ்யூரிஸ்ட்டிக்ஸ் என்ற முறையைக் கண்டுபிடித்தார். இதே காலகட்டத்தில் சீனாவிலும் இத்தகையொரு முறை உருவாக்கப்பட்டது. பத்தாம் நூற்றாண்டில் அரேபிய கணிதவியலாளர் இபின் அல்-ஹேதமும், 14ஆம் நூற்றாண்டில் இந்தியக் கணிதவியலாளர்களும் இத்தகைய சில கணக்கீட்டு முறைகளை உருவாக்கினர். நியூட்டனின் பல கருத்துகளை, அவர் வெளியிடுவதற்கு முன்பே லெய்ப்னிஸ் முறையாகத் தொகுத்திருந்ததால், நியூட்டனின் கண்டுபிடிப்புகளை திருடிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டாலும், பின்னாளில் லெய்ப்னிஸின் பங்களிப்பு உணரப்பட்டு, கண்டுபிடிப்பாளர்களாக இருவரும் ஏற்கப்பட்டனர். தொகையீட்டிற்கு லெய்ப்னிஸ் வழங்கிய நீண்ட எஸ் எழுத்து, வழக்கொழிந்த சிறிய எஸ் எழுத்தாகும். பண்டைய ரோமில் பயன்படுத்தப்பட்ட ரோமன் கர்சிவ்(அல்லது லத்தீன் கர்சிவ்) என்ற சேர்த்தெழுத்து முறையிலிருந்து இந்த நீண்ட எஸ் எழுத்து உருவானது. சொற்களின் நடுப்பகுதியில் இரண்டு எஸ் எழுத்துகள் வரும்போது முதல் எஸ் இவ்வாறு நீண்டதாக எழுதும் நடைமுறை இருந்துள்ளது. சொல்லின் இறுதி எழுத்தாக இந்த நீண்ட எஸ் பொதுவாகப் பயன்படுத்தப்படவில்லையென்றாலும், சில இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் காண முடிகிறது. எஃப் எழுத்தின் வடிவத்தை ஒத்திருந்ததால், குழப்பங்களையும் ஏற்படுத்திய இந்த நீண்ட எஸ் பயன்பாடு, அச்சிடும் எந்திரத்தின் வருகைக்குப்பின் குறைந்தாலும், லத்தீன் எழுத்து வடிவத்தைப் பயன்படுத்தும் மொழிகளில் பயன்படுத்தப்படும், இரண்டு எழுத்துகள் சேர்ந்த அச்சுகளில் காணப்பட்டது. ஜான் பெல் என்ற பதிப்பாளர், தற்போதைய சிறிய எழுத்து எஸ்-சை 1788இல் உருவாக்கியதால், நீண்ட எஸ்-சின் முடிவுக்குக் காரணமானவர் என்று குறிப்பிடப்படுகிறார். இரண்டுவகை எழுத்துகளை வைத்திருப்பது கூடுதல் செலவென்பதால், அச்சகங்களும் நீண்ட எஸ்-சைக் கைவிட்டாலும், கையெழுத்தில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுவந்த இது, 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் முழுமையாக மறைந்தது. - அறிவுக்கடல் இந்நாள் அக்டோபர் 30 இதற்கு முன்னால் -அக்டோபர் 30, 2019 […] 1938 - வானொலி வரலாற்றின் மிகப் புகழ்பெற்ற தும், மிக மோசமானதுமாகக் குறிப்பிடப்படும், ‘வார் ஆஃப் த வேர்ல்ட்ஸ் (உலகங்களின் போர்)’ நாடக ஒலிபரப்பு நிகழ்ந்தது. புவியில் செவ்வாய்க்காரர்கள் (மனிதர்கள் என்று எப்படிச் சொல்வது?!) இறங்கி தாக்குதல் நடத்துவதான இந்த அறிவியல் புதினத்தை, எச்.ஜி.வெல்ஸ் எழுதி, 1898இல் வெளியிட்டார். வானொலியின் வருகைக்குப்பின், அதில் நாடகங்களை ஒலிபரப்புதல் என்பது 1920களில் தொடங்கி பரவத்தொடங்கியது. (ஆனாலும், கி.மு.முதல் நூற்றாண்டின் ரோமானிய நாடக ஆசிரியரான செனகா-வின் நாடகங்கள் மேடையில் நடிக்கப்படாமல், குரலில் மட்டும் நடிக்கப்பட்டதால், வானொலி நாடகத்தின் முன்னோடியாக இவரே குறிப்பிடப்படுகிறார்.) அமெரிக்காவின் சிபிஎஸ் வானொலி யில் ஒலிபரப்புவதற்காக இதனை வானொலி நாடக மாக எழுதிய ஹோவர்ட் கோச், 1938இன் சூழல்களுடன், அமெரிக்காவில் நடப்பதுபோல உருவாக்கியிருந்தார். (அமெரிக்க வரைபடத்தில் அவர் கண்ணை மூடிக்கொண்டு தொட்டு, கதை நடைபெறும் இடமாக நியூஜெர்சியைத் தேர்ந்தெடுத்தார்!) நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பும், நிகழ்ச்சிக்கு இடையில் 40, 55ஆவது நிமிடங்களிலும், அது ஒரு கற்பனை நிகழ்ச்சி என்று அறிவிக்கப்பட்டாலும், அன்றைக்கு வானொலிமீது மக்களுக்கிருந்த நம்பிக்கை யால், உண்மையிலேயே புவி தாக்கப்படுவதாக மிகப்பெரிய பதற்றம் ஏற்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு விளம்பரதாரர் கிடைக்கவில்லை. இடையிடையே விளம்பரங்களும் வரவில்லை என்பதால், உண்மையிலேயே நடைபெறும் நிகழ்வுகள் நேரடியாக ஒலிபரப்பப்படுவதாக மக்கள் நம்ப, வானொலி நிலையத்துக்கு ஆயிரக்கணக்கான தொலை பேசி அழைப்புகள் வந்தன. முதல் இடைவேளையின் போதே, ஏராளமான காவல்துறையினர் வானொலி நிலையத்தில் குவிய, அவர்களுக்கு நாடகம் என்று விளக்கவேண்டியிருந்தது. இரண்டாம் உலகப்போர் தொடங்கியிருந்து ஏற்கெனவே போர்ச்செய்திகளாக ஒலிபரப்பிக்கொண்டிருந்ததும் பதற்றத்திற்குக் காரணமாக அமைந்தது. பயத்தினால் உடல்நிலை பாதிக்கப் பட்டதாக ஒருவர் 50,000 டாலர் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடர்ந்தார். அமெரிக்க மக்களில் வெறும் 2 சதவீதம் மட்டுமே இந்நிகழ்ச்சியைக் கேட்டதாகப் பின்னர் வெளி யான ஆய்வு, மக்களிடம் வானொலி ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது. மீண்டும் 1949இல் ஈக்வடாரில், (உள்ளூர்ப் பெயர்களுடன்) இந்நாட கம் ஒலிபரப்பப்பட்டபோது, ஊடுருவல் நிகழ்ந்ததாக நாடகம் குறிப்பிட்ட இடத்திற்கு அந்நாட்டு அரசு ராணுவத்தை அனுப்பிவிட்டது. உலகம் அழியப் போகிறது என்று மதகுருக்கள் பாவங்களுக்கு மன்னிப்பு வழங்கத் தொடங்கி விட்டார்கள். பின்னர் நாடகம் என்று தெரிந்தவுடன், வானொலி நிலையம் தாக்கப்பட்டது. 1968இல் இந்நாடகம் அமெரிக்காவின் எல்லைப்புற நகரமான பஃபலோ நகரில் ஒலிபரப்பப்பட்டபோது, எல்லைப் பகுதிக்குப்படைகளையே அனுப்பிவிட்டது கனடா! - அறிவுக்கடல் இந்நாள் அக்டோபர் 31 இதற்கு முன்னால் -அக்டோபர் 31, 2019 […] 1517 கிறித்தவ மறுசீரமைப் பின் தொடக்கமாகக் குறிப் பிடப்படும் ‘95 குறிப்புகள்’ என்பதை மார்ட்டின் லூதர் வெளியிட்டார். ப்ராட்ட ஸ்ட்டண்ட் கருத்தாக்கத்தின் தந்தையாகக் குறிப்பிடப் படும் லூதர் ஒரு ஜெர்மானிய பல்கலைக்கழகப் பேராசிரி யரும், இறையிலாளரும் ஆவார். இறப்புக்குப்பின் சொர்க்கத்தையோ, நரகத்தையோ அடைவதற்குமுன் ஒரு தூய்மைப் படுத்துமிடம் இருப்பதாகவும், இந்த இடத்தில் பாவங்களுக்கு வேதனைப்பட்டு தூய்மையடைந்து, பின்னர் விண்ணகம் செல்வார்கள் என்றும் கத்தோலிக்க கிறித்தவம் நம்புகிறது. இவர்களுக்காகப் புவியிலிருந்து பிரார்த்திக்க முடியும் என்றும் குறிப்பிடும் கத்தோலிக்கம், திருச்சபையின் பலன்கள் எனப்படும் பாவத்தண்டனைக் குறைப்பினைப் பெற்று இவர்கள் தூய்மையடைய உதவ முடியும் என்றும் குறிப்பிடுகிறது. இயேசு மற்றும் தூயவர்களின் நற்பேறுகளின் பலன்கள் ஒரு கருவூலமாக இருப்பதாகவும், இது தீர்ந்தே போகாமல், மனித குலம் மொத்தத்தையும் பாவங்களிலிருந்து விடுவிக்கக்கூடியது என்றும் கூறும் கத்தோலிக்கத்தில், கட்டணம் பெற்றுக் கொண்டு இந்தப் பலன்கள் சான்றிதழாக அளிக்கப் பட்டன. இவை பகுதிப் பலன்களாகவோ, நிறைவுப் பலன்களாகவோ அளிக்கப்பட்டன. 1515இல் புனித பீட்டர் பசிலிக்கா கட்டுமானப் பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக, அதுவரை மன்னிக்கப்படாத பாவங்களாக இருந்த கூடா ஒழுக்கம் உட்பட அனைத்துப் பாவங்களையும் தீர்க்க நிறைவுப் பலன்கள் அளிப்பதாக, திருத்தந்தை பத்தாம் லியோ (சிறப்பு விற்பனை!) அறிவித்தார். பசிலிக்கா என்பது, பண்டைய ரோமில், நிர்வாக அவைகள், நீதிமன்றங்கள் கூடும் கட்டிடத்தின் பெயர். எல்லா ரோமானிய நகரங்களிலு மிருந்த இந்தக் கட்டிடங்களின் வடிவத்திலேயே, ரோம் கிறித்தவத்தைத் தழுவியபின் தேவாலயங்கள் எழுப்பப்பட்ட தால், இந்த வடிவிலான தேவாலயங்கள் பசிலிக்கா என்றழைக்கப்படுகின்றன. இந்த சிறப்பு விற்பனையில்(!) பலன்களை வாங்கியவர்கள், தங்கள் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிடுமென்றும், அதனால் அவற்றுக்காக வருந்த வேண்டியதில்லை என்றும் கூறத்தொடங்கிய நிலையில்தான், அறிஞர்களின் விவாதத் திற்கு இந்த 95 குறிப்புகளை லூதர் வெளியிட்டார். லூதருக்கு முன்பே, ஐரோப்பா முழுவதும் பலரும் பலன்களை (பாவமன்னிப்பு) விலைகொடுத்து வாங்குவதுகுறித்து கவலைகளை எழுப்பியிருந்தனர். பாவமன்னிப்பு மட்டுமின்றி, திருத்தந்தை, கத்தோலிக்கத் திருச்சபை ஆகியவற்றைப்பற்றியும் லூதர் குறிப்பிட்டிருந்தவை, திருச்சபையின் அதிகாரத்தின்மீது அவர் நடத்திய தாக்குதல்களாகப் பார்க்கப்பட்டதுடன், 1521இல் அவர் மதவிலக்கும் செய்யப்பட்டார். ப்ராட்டஸ்ட்டண்ட் பிரிவு உருவாகக் காரணமான இந்த 95 குறிப்புகள் வெளியிடப்பட்ட அக்டோபர் 31 மறுசீரமைப்பு நாளாக ஜெர்மெனியில் கடைப்பிடிக்கப்படுவதுடன், 2017இல் அதன் 500ஆம் ஆண்டுவிழாவும் பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது. இந்நாள் நவம்பர் 01 இதற்கு முன்னால் -நவம்பர் 1, 2019 […] 1956 - இந்தியாவின் மாநில மறுசீர மைப்புச் சட்டம் நடை முறைக்கு வந்தது. வரலாறு முழுவதும் பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த, ஏராளமான அரசர்களாலும், சிற்றரசர்களாலும் ஆளப் படுவதாகவே இந்தியத் துணைக்கண்டம் இருந்து வந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் இவை பெரும்பாலும் மாற்றியமைக்கப்படவில்லை. ஒப்பந்தங்களின்மூலம் இணைந்திருந்த மன்னராட்சிப் பகுதிகள், பிற நாடுகளுடனான உறவைத் தவிர மற்றவற்றில் தன்னாட்சியுடன் இருந்தன. நேரடியாக ஆங்கிலேயரின் ஆளுகையின்கீழிருந்த பகுதிகள் மாநிலங்களாக (பிரெசிடென்சி) பிரிக்கப்பட்டிருந்தன. ஒரிசாவில் 1895இல் ஏற்பட்டதே முதல் மொழி அடிப்படையிலான மாநிலத்துக்கான கோரிக்கையாகும். 1912இல் வங்கத்திலிருந்து பிரிக்கப்பட்டு, பீகார்-ஒரிசா மாநிலம் உருவாக்கப்பட்டதுடன், 1936இல் தனி ஒரிசா மாநிலமே உருவாக்கப்பட்டது. 1947இல் விடுதலைக்குப்பின், இந்திய ஒன்றியத்துடன் இணையத் தொடங்கிய மன்னராட்சிப் பகுதிகள் பெரும்பாலும் மாநிலங்களுடன் இணைக்கப் பட்டாலும், சில பகுதிகள் தனியாக, ராஜ்பிரமுக் என்ற பதவியுடன் பழைய அரசர்களாலும், மத்திய அரசு நியமித்த தலைமை ஆணையர்களாலும் நிர்வகிக்கப்பட்டன. அந்தமான்-நிக்கோபார் தீவுகள் மட்டும் துணைநிலை ஆளுனரால் நிர்வகிக்கப்பட்டது. 1950இல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியல் சட்டம், நாடுகளின்(மாநிலங்களின்) ஒன்றியமே இந்திய அரசு என்று வரையறுத்தது. மெட்ராஸ் மாநிலத்திலிருந்த தெலுங்கு பேசும் பகுதிகளைப் பிரித்து, ஆந்திர மாநிலம் உருவாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையுடன் உண்ணாவிரதமிருந்து, பொட்டி ஸ்ரீராமுலு 1952 டிசம்பரில் உயிரிழக்க, அம்மாநிலத்தை 3 நாட்களில் அறிவித்தார் நேரு. மொழிவாரி மாநிலங்களுக்கான ஆணையம் 1948இலேயே அமைக்கப்பட்டிருந்த நிலையில், 1953இல் மாநில மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், மாநில மறு சீரமைப்புச் சட்டம் 1956 அக்டோபர் 31இல் நிறைவேற்றப் பட்டு, நவம்பர் 1இல் நடைமுறைக்கு வந்தது. மெட்ராஸ் மாநிலத்திலிருந்து மலபார் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகள் திருவாங்கூர்-கொச்சியுடன் இணைக்கப்பட்டு, கேரளா என்ற மாநிலம் உருவாக்கப்பட்டது. திருவாங்கூர்-கொச்சியிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் பிரிக்கப்பட்டு மெட்ராசுடன் இணைக்கப்பட்டது. குடகு உள்ளிட்ட கன்னடம் பேசும் பகுதிகள் மெட்ராசிலிருந்து பிரித்து மைசூருடன் இணைக்கப்பட்டு மைசூர் மாநிலமாகியது. ஹைதராபாத் இணைக்கப்பட்டு, ஆந்திரா, ஆந்திரப் பிரதேசமாகியது. மத்திய பாரதம் என்பதுடன் சில பகுதிகள் இணைக்கப்பட்டு மத்தியப்பிரதேசம் உருவாக்கப்பட்டதுடன், அசாம், பம்பாய் உள்ளிட்ட மாநிலங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. பலமுறை முயற்சித்து, தோல்வியுற்ற தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம், அண்ணாத்துரை முதலமைச்சரானபின் தமிழ்நாட்டின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, 1969 பொங்கலன்று நடைமுறைக்குவந்தது. இந்நாள் நவம்பர் 02 இதற்கு முன்னால் -நவம்பர் 2, 2019 […] 1947 ஒரு கால்பந்தாட்ட மைதானத்தின் அளவுக்கு நீளமான இறக்கையும், 5 மாடிக் கட்டிடத்தின் உயரமும் கொண்டதாக வருணிக்கப்பட்ட, இன்றுவரை உலகின் மிகப்பெரிய இறக்கை கொண்ட விமானமான ‘ஹ்யூஜஸ் எச்-4 ஹெர்க்குலிஸ்’, முதலும் கடைசியுமாகப் பறந்தது. இரண்டாம் உலகப்போரின்போது, ஜெர்மனியின் யு-போட் என்னும் நீர்மூழ்கிகளால், அட்லாண்ட்டிக் கடற்பகுதியில் பெரும் இழப்புகளைச் சந்தித்தது அமெரிக்கா. அருகாமை பகுதிகளுக்கு மட்டுமே தளவாடங்களை எடுத்துச்செல்லும் திறன்கொண்ட விமானங்கள்தான் அப்போது இருந்தன. தொலைதூரத்தி லுள்ள பிற போர்க்களங்களுக்கும், மிகப்பெரிய எடையைச் சுமந்து செல்லத்தக்க மூன்று விமானங்களை இரண்டு ஆண்டுகளுக்குள் தயாரித்துத்தருமாறு 1942இல் அமெரிக்கப் போர்த்துறை கேட்டுக்கொண்டது. கப்பல் கட்டுபவரான ஹென்றி கெய்சர், விமான வடிவமைப்பாள ரான ஹோவர்ட் ஹ்யூஜஸ் உதவியுடன், 68 டன் சரக்குகள் அல்லது, ஒவ்வொன்றும் 30 டன் எடையுள்ள இரண்டு கவசவண்டிகளைச் சுமந்துசெல்லக்கூடிய ‘பறக்கும் சரக்குக் கப்பல்’ ஒன்றை உருவாக்க முனைந்தனர். போரினால் அலுமினியம் கிடைப்பதிலிருந்த சிக்கல்கள் உள்ளிட்ட காரணங்களால், தயாரிப்புப் பணிகள் 16 மாதங்களுக்குத் தொடங்கவேயில்லை. இதனால், கெய்சர் விலகிக்கொண்டார். அக்காலத்தின் மிகச்சிறந்த முன்னேற்றமாகக் கருதப்பட்ட ட்யூராமோல்ட் முறையில் பாதுகாக்கப்பட்ட மரத்தைக்கொண்டு உருவாக்கப்பட்ட இவ்விமானம், போர் முடியும்வரை முழுமைபெறவில்லை. 1947இல் (ஒரு விமானம் மட்டும்) கட்டி முடிக்கப்பட்டபோது 2.3 கோடி டாலர்கள் (இன்று இந்திய ரூபாயில் 2,150 கோடி!) செலவாகியிருந்தது. 8 என்ஜின்களும், 321 அடிநீள இறக்கைகளும் கொண்ட இது 4 பகுதிகளாக கலிஃபோர்னியாவின் லாங் கடற்கரைக்குக் கொண்டுவரப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டது. அதைச்சுற்றி விமானக்கொட்டகையும், நீரில் இறக்குவதற்கு சரிவுப் பாதையும் அமைக்கப்பட்டன. நவம்பர் 2 அன்று, ஏராளமா னோர் முன்னிலையில் 36 பேருடன், 70 அடி உயரத்தில், 217 கி.மீ. வேகத்தில் 26 நொடிகள் மட்டும் பறந்து, பறக்கும் திறன் நிரூபிக்கப்பட்டதோடு, போர் முடிந்து விட்டதால் தேவையின்றிப்போன இதன் பயன்பாடு முடிந்து போனது. ஹ்யூஜஸ் உயிருடன் இருந்தவரை முறையாகப் பராமரிக்கப்பட்டுவந்த, இதன் உரிமையாளர் யார் என்பதில், அவர் இறந்தபின் சச்சரவுகள் ஏற்பட்டு 1970களில் தீர்க்கப்பட்டது. இது தற்போது ஓரிகானிலுள்ள எவர்க்ரீன் ஏவியேஷன் அண்ட் ஸ்பேஸ் மியூசியத்திலுள்ளது. 2019இல் வானில் பறந்துகொண்டே செயற்கைக்கோள்களை ஏவ உருவாக்கப்பட்ட ஸ்ட்ரேட்டோலாஞ்ச் என்ற விமானத்தின் 385 இறக்கை இதைவிடப்பெரிது என்றாலும், அது வழக்கமான விமானமில்லை என்பதுடன், பறக்கும் படகு(கப்பல்!) என்ற வகையிலும், ஹெர்க்குலிஸ் தனித்தன்மை கொண்டதாகவே விளங்குகிறது. இந்நாள் இதற்கு முன்னால் -நவம்பர் 3, 2019 1783 - காண்டினெண்டல் ஆர்மி என்றழைக் கப்படும், (உண்மையில் அமெரிக்காவின் முதல் ராணுவமான) அமெரிக்க விடுதலைப்படை கலைக்கப்பட்டது. அமெரிக்காவில் குடியேற்றங்களை இங்கிலாந்து ஏற்படுத்தியபோது அங்கு ராணுவமெல்லாம் இல்லை. மண்ணின் மைந்தர்களான செவ் விந்தியர்களுடனான மோதல்களைத் தொடர்ந்து, ஒவ்வொரு குடியேற்றமும் தங்களுக்கென்று குடிப்படைகளை உருவாக்கிக்கொண்டன. நிரந்தர வீரர்களற்ற இவற்றில், தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள்,போர்க்காலங்களில்மட்டும் வீரர்களாகப் பணியாற்றுவார்கள். பிற ஐரோப்பியக் குடியேற்றங்களுடன் மோதல்கள் ஏற்பட்டு, 1754-63இல் நடைபெற்ற பிரெஞ்சுக்காரர்களும், செவ்விந்தியர்களும் இணைந்து மோதியபோரைத் தொடர்ந்து, கொஞ்சம் இங்கிலாந்துப் படைகள் அமெரிக்காவில் நிறுத்தப்பட்டன. குடியேற்றங்களின் பாதுகாப்புக்காக அங்குள்ள படைக்கு, குடியேற்றங்களிடம் வசூலித்து ஊதியமளிப்பதற்காகவே 1765இன் முத்திரைச்சட்டம் இயற்றப்பட்டது. தங்களைப் பற்றிய முடிவுகளில் தலையிட தங்களுக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பங்களிக்காத நிலையில், வரி கேட்பது நியாயமில்லை என்ற முரண்பாடே அமெரிக்க விடுதலைவரை இட்டுச்சென்றது. முரண்பாட்டின்தொடக்கமே ராணுவத்திற்கு ஊதியம் அளிப்பதில்தான் என்பதால், இங்கிலாந்து ராணுவம் குடியேற்றங்களுக்கு எதிராகவே இருந்த நிலையில், அதனுடனேயே போரிடவேண்டியதாக அமைந்த விடுதலைப் போருக்கு, அனைத்துக் குடியேற்றங்களும் படைதிரட்டிஅனுப்பவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அவ்வாறு திரட்டப்பட்ட (முறையான ராணுவமல்லாத!) குடிப்படையே, அமெரிக்க விடுதலைப்படையாக, ஒரு கட்டத்தில் சுமார் 80 ஆயிரம் வீரர்களைக்கொண்டு போரிட்டு, வெற்றியும்பெற்றது. படையினருக்கு போரின்போது வழங்கப்பட்ட ஊதியத்தில் பாதியை, போருக்குப்பின் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியமாக வழங்குவதாக1780இல் கூட்டணி நாடாளுமன்றம் உறுதியளித்திருந் தது. 1783 செப்டம்பர் 3இல் ஏற்பட்ட பாரீஸ் ஒப்பந்தத்தின்படிதான் போர் முறைப்படி முடிவுக்குவந்தாலும், 1781அக்டோபரில் யார்க்டவுன் முற்றுகையில் தோல்வியடைந்ததுமே, இங்கிலாந்து பேச்சுவார்த்தைகளுக்குச் சம்மதித்துவிட்டதால், போரின் தீவிரம் குறைந்துவிட்டது. இதனாலும், கடுமையான நிதிநெருக்கடியினாலும் வீரர்களுக்குப் பல மாதங்கள் ஊதியமளிக்கப்படாததுடன், ஓய்வூதியமும் குறைக்கப்படலாம் என்ற நிலையில், கூட்டணி நாடாளுமன்றத்தைக் கவிழ்க்க படை யினர் முயற்சித்த நியூபர்க் சதி 1783 மார்ச்சில் வெளியானது. இவற்றால், அமெரிக்காவுக்கு ராணுவமே வேண்டாம் என்று கூட்டணி நாடாளுமன்றம் முடிவெடுக்க, போரில்லாத காலத்திலும் ராணுவம் தேவை என்று வாதிட்ட வாஷிங்டன், கடைசியாக வைத்த 900 வீரர்களாவது இருக்கட்டும் என்ற கோரிக்கைகூட ஏற்கப்படவில்லை. சில குறிப்பிட்ட இடங்களைப் பாதுகாக்க வெறும் 30 பேரை வைத்துக்கொண்டு, மீதமுள்ள படைகளுக்கு விடைகொடுக்கும் செய்தியை நவம்பர் 2இல் செய்தித்தாள்களுக்கு வாஷிங்டன் அளித்ததைத் தொடர்ந்து நவம்பர் 3இல் படைகள் கலைக்கப்பட்டன. இந்நாள் நவ. 04 இதற்கு முன்னால் -நவம்பர் 4, 2019 […] 1939 - அமெரிக்காவின் 147 ஆண்டு நடுநிலைக்கொள்கையை முடிவுக்குக் கொண்டுவந்த ‘1939இன் நடுநிலைச் சட்டம்’ நிறைவேற்றப்பட்டது. ஃப்ரான்சுடனான ராணுவக் கூட்டணியின்றி, அமெரிக்க விடுதலைப்போரில் இங்கிலாந்தை வென்றிருக்கவே முடியாது என்றாலும், அடுத்த பத்தாண்டுகளுக்குள்ளாகவே, 1792இல் இங்கிலாந்துக்கும் ஃப்ரான்சுக்கும் போர் ஏற்பட்டபோது, நடுநிலை வகிப்பதாக அறிவித்த ஜார்ஜ் வாஷிங்டன், குடியரசுத்தலைவர் பதவிக்காலம் முடிந்து வெளியிட்ட விடைச்செய்தியிலும், யாருடனும் கூட்டணியின்றி இருப்பதே அமெரிக்காவின் வளர்ச்சிக்கு உகந்தது என்றே குறிப்பிட்டிருந்தார். முதல் உலகப்போரின்போதுகூட, அமெரிக்க வணிகக்கப்பல்களை ஜெர்மெனி மூழ்கடித்ததைத் தொடர்ந்து, முதலில் ஜெர்மெனிமீதும், பின்னர் ஆஸ்திரிய-ஹங்கேரிமீதும் அமெரிக்கா போர் தொடுத்ததே தவிர, எந்த அணியிலும் இல்லை என்ற நிலையையே இறுதிவரை பின்பற்றியது. ஆனாலும், முதல் உலகப்போரில் அமெரிக்கா இறங்கியதற்குக் காரணம் ஆயுத வணிகர்களும், (தனியார்) வங்கிகளும்தான் என்ற அமெரிக்க மக்களின் எண்ணமே ‘மரண வியாபாரிகள்’ என்ற சொல்லாடல் உருவாகக் காரணமானதுடன், அதைப்பற்றி விசாரிக்க 1934இல் நை குழு என்பதும் அமைக்கப்பட்டது. இவற்றால், 1935இல் ஐரோப்பிய நாடுகளுக்கிடையே பிணக்குகள் ஏற்பட்டவுடனேயே, எந்த அணியிலும் இருக்கப்போவதில்லை, போரிட்டுக்கொள்ளும் நாடுகளுக்கு ஆயுதங்கள் விற்பதில்லை என்ற நடுநிலைச் சட்டத்தை அமெரிக்கா நிறைவேற்றியதுடன், 1936, 1937இலும் புதுப்பித்தது. போரினால் ஏற்றுமதி பாதிக்கப்பட, ஏற்கெனவே, முதல் உலகப்போரில், அமெரிக்காவின் வணிகக்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டதாலேயே போரில் இறங்கவேண்டியதானதால், பணத்தைக் கொடுத்து பொருளைத் தங்கள் பொறுப்பில் எடுத்துச் செல்லும் நாடுகளுடன் வணிகம் செய்யலாம் என்ற ‘கேஷ்-அண்ட்-கேரி’ கொள்கையை குடியரசுத்தலைவர் ரூஸ்வெல்ட் அறிவித்தார். நடுநிலை வகிக்கும் நாடுகள் ஆயுதங்களை வாங்கி, போரிடும் நாடுகளுக்கு விற்க முடியும் என்பதால், போரிடும் நாடுகளுக்கே விற்கலாம் என்று கேஷ்-அண்ட்-கேரி கொள்கையை விரிவாக்கி, நடுநிலைக்கொள்கையின் முடிவைத் தொடங்கியதுதான், 1939இன் நடுநிலைச் சட்டம். 1941 டிசம்பரில் முத்துத்துறைமுகம் தாக்கப்பட்டபின்னரே அமெரிக்காவும் போரில் குதித்தது என்பதால், அதுவரை ஆயுதங்கள் விற்று, உலகின் மிகக் கணிசமான தங்கத்தைத் தங்கள் கையிருப்பாக்கிக்கொண்டதே, டாலர் உலக நாணயமாகக் காரணமாகியது. முதல் உலகப்போரில் உலக நாட்டாமை பிம்பமும் (இத்தொடரில் 2018 ஏப்ரல் 1), இரண்டாம் உலகப்போரில் உலகத்தின் நாணயம் என்ற ஆதிக்கத்தையும் பெற்றதன்மூலம், உலகப்போர்களின் உண்மையான பலனை அமெரிக்காவே அடைந்தது. போரிடும் நாடுகளுக்கு சில இரவல்களைக்கொடுத்து, அந்நாடுகளில் ராணுவ தளங்களைக் குத்தகைக்குப் பெறக்காரணமான, 1941 மார்ச்சில் இயற்றப்பட்ட இரவல்-குத்தகைச் சட்டம், அமெரிக்காவின் நடுநிலைக்கொள்கையின் முடிவுரையாக அமைந்தது! அறிவுக்கடல் இந்நாள் நவம்பர் 05 இதற்கு முன்னால் -நவம்பர் 5, 2019 […] 1556 - இரண்டாம் பானிப் பட் போர், டெல்லிப் பேரரசர் ஹெமு என்னும் ஹேமச்சந்திர விக்ரமாதித்யா வுக்கும், அக்பரின் படைகளுக்கு மிடையே நடைபெற்றது. பாபரின் மறைவுக்குப்பின், ஷெர்-ஷா சூரி-யிடம் டெல்லி, ஆக்ரா உள்ளிட்ட பகுதிகளை 1539இல் ஹுமாயூன் இழந்துவிட்டார். 1540 மே 17இல் சூர் பேரரசை உருவாக்கிய ஷெர்-ஷா, எதிர்பாராதவிதமாக மே 22இல் உயிரிழக்க(பின்னர் விரிவாக!), அவருக்குப்பின் பட்டத்துக்கு வந்த இஸ்லாம்-ஷா சூரி, அவர் மகன் ஃபிரோஸ் கானுக்கு 12 வயதேயானபோது, 1553இல் இறந்துவிட்டார். ஃபிரோஸ் கானைக் கொலைசெய்துவிட்டு, ஆட்சியைக் கைப்பற்றிய தாய்மாமன் அடில்-ஷா சூரி, அரசு நிர்வாகத்தில் அக்கறையின்றி, சுகவாசியாக இருந்ததால், முதலமைச்சரும், படைத் தளபதியுமான ஹேமச்சந்திரனே அனைத்து அதிகாரங்களையும் கொண்டிருந்தார். 1556இல் ஹுமாயூன் இறந்தபோது வங்கத்திலிருந்து ஹேமச்சந்திரன், உடனடியாக முகலாயப் பேரரசின் பகுதிகளைத் தாக்கிக் கைப்பற்றத் தொடங்கினார். அவர் முன்னேறி வருவதையறிந்த ஆக்ராவின் முகலாய ஆளுனர் போரிடாமலே, கோட்டையைக் காலிசெய்து ஓடிவிட்டார். 1556 அக்டோபர் 7இல் துக்ளகாபாத் சண்டையில் வென்று டெல்லியைக் கைப்பற்றிய ஹேமச்சந்திரன், பண்டைய இந்து அரசர்களின் பட்டமான விக்ரமாதித்யா என்பதுடன் டெல்லியின் பேரரசராக முடிசூட்டிக்கொண்டார். அடில்-ஷாவின் தளபதியாகப் போரில் வென்ற ஹெமுவின் படையினரும் ஆஃப்கானியகளாகவே இருந்தநிலையில், டெல்லியின் பேரரசர் என்று அறிவித்துக்கொண்டாலும், அடில்-ஷாவின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டவராக இல்லாமல் சுதந்திரமான அரசராக இருந்தாரா என்பதில், வரலாற்றாசிரியர்களிடையே முரண்பாடுகள் காணப்படுகின்றன. ஹுமாயூன் இறந்தபோது அக்பருக்கு வெறும் 13 வயதென்பதால், காப்பாளராக பைரம் கான் ஆட்சி நடத்தினார். துக்ளகாபாத் தோல்வியையடுத்து, அவர் அனுப்பிய பத்தாயிரம் குதிரைப்படையினர், முப்பதாயிரம் குதிரைப்படையினர், 500 யானைகள் கொண்ட ஹெமுவின் படையுடன் பானிப்பட்டில் மோதின. ஹெமுவின் படை பெரியதாக மட்டுமின்றி, வலுவாகவுமிருந்தது. அது உறுதியான வெற்றியை நெருங்கிய நேரத்தில், (ஹெமுவை நோக்கி எய்யப்படாத) ஓர் அம்பு எதிர்பாராமல் ஹெமுவின் கண்ணுக்குள் புகுந்ததில் அவர் நினைவிழந்தார். ஹெமு சரிந்ததில் அவரது படையினர் கலக்கமுற்றதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட முகலாயப் படைகள் வென்றன. பிடிபட்டும் மயக்கத்திலிருந்த ஹெமுவின் தலையைக் கொய்யுமாறு அக்பரை பைரம்கான் கேட்டுக்கொண்டாலும், அக்பர் மறுத்துவிட்டார். பைரம்கானே அதைச் செய்ய, ஹெமுவின் டெல்லிப் பேரரசு 29 நாட்களில் முடிவுற்றது. இந்நாள் நவம்பர் 06 இதற்கு முன்னால் -நவம்பர் 6, 2019 […] 1947 தொலைக் காட்சி வரலாற்றில் மிக நீண்டகாலமாக(72 ஆண்டுகளாக) ஒளிபரப்பப் பட்டுக்கொண்டி ருக்கும் நிகழ்ச்சியான ‘மீட் த பிரஸ்’ முதன்முறையாக ஒளிபரப்பானது. தொலைக்காட்சி நிலையத்திற்கு முக்கிய மனிதர்களை அழைத்து நடத்தப்படும் ‘காஃபி வித்’ போன்ற நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி விவாதங்கள், செய்தியறிக்கையின்போது முக்கியச் செய்திக்குத் தொடர்புடையவர்களை அழைத்து கருத்துக் கேட்பது உள்ளிட்ட இன்றைய பல நிகழ்ச்சிகளுக்கு இதுவே முன்னோடி என்று கூறமுடியும். என்பிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இது உண்மையில் ஒரு வானொலி நிகழ்ச்சியாகும். (நேஷனல் பிராட்காஸ்ட்டிங் கம்பெனி என்னும் என்பிசி என்பது நமக்கு அறிமுகமான சிஎன்பிசி-யின் தாய் நிறுவனம்! சிஎன்பிசி என்பது கன்ஸ்யூமர் நியூஸ் அண்ட் பிசினஸ் சேனல் என்பதன் சுருக்கம்!) த அமெரிக்கன் மெர்க்குரி என்ற இதழை 1935இல் வாங்கிய லாரன்ஸ் ஸ்பைவேக் என்பவர், அதன் விற்பனையை மேம்படுத்துவதற்காக, ‘அமெரிக்கன் மெர்க்குரி பிரசண்ட்ஸ் மீட் த பிரஸ்’ என்ற நிகழ்ச்சியை, மிச்சுவல் பிராட்காஸ்ட்டிங் சிஸ்டம் என்ற வானொலியில் 1945இலிருந்து ஒலிபரப்பிவந்தார். அதனால் இந்நிகழ்ச்சியை உருவாக்கியவராக அவர் குறிப்பிடப்பட்டாலும், உண்மையில், அந்த வானொலி நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த மார்த்தா ரவுண்ட்ரீ என்ற பெண்மணியே இந்நிகழ்ச்சியை வடிவமைத்தார். வானொலியில் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தபோதே, 1947இல் இந்நிகழ்ச்சிக்கான தொலைக்காட்சி உரிமையை ஜெனரல் ஃபுட்ஸ் என்ற நிறுவனம் வாங்கி, ‘மீட் த பிரஸ்’ என்று பெயரைச் சுருக்கி, என்பிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பத்தொடங்கியது. அதைத்தொடர்ந்து, வானொலி நிலையம், தங்கள் நிகழ்ச்சிக்கு வேறு பெயர் சூட்டிக்கொண்டது. தொடக்கத்தில் 30 நிமிட பேட்டியாக இருந்த இந்நிகழ்ச்சிக்கு முதல் அழைப்பாளராக, முன்னாள் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலும், குடியரசுத் தலைவர் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்டின் பரப்புரை மேலாளருமான ஜெம்ஸ் ஃபேர்லி அழைக்கப்பட்டார். அடிப்படையில், ஒருவரை மட்டும் பேட்டிகாணும் நிகழ்ச்சியான இதில், பின்னாளில் இருவர் அல்லது, பலரின் நேரடி விவாதங்களும் இடம்பெற்றன. 1980களில், பிற தொலைக்காட்சிகளின் இத்தகைய நிகழ்ச்சிகளின் (குறிப்பாக ஏபிசி தொலைக்காட்சியின் திஸ் வீக் வித் டேவிட் பிரிங்க்லி) போட்டியால் பாதிக்கப்பட்ட இந்நிகழ்ச்சி, அதுவரை ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ஞாயிற்றுக்கிழமை நண்பகல் நேரத்திலிருந்து, காலை 9மணிக்கு மாற்றப் பட்டதுடன், 1992இல் 60 நிமிடங்களாவும் நீட்டிக்கப்பட்டது. அமெரிக்காவின் குடியரசுத்தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய மனிதர்கள் அனைவரும் ஒருமுறையாவது இந்நிகழ்ச்சியில் தோன்றிவிடுவார்கள் எனுமளவுக்கு முக்கியத்துவத்துடன், இன்றுவரை இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. - அறிவுக்கடல் இந்நாள் நவம்பர் 07 இதற்கு முன்னால் -நவம்பர் 7, 2019 […] 1492 - பிரான்சின் (அப்போது ஆஸ்திரியாவின்) என்சிஷெய்ம் என்ற இடத்தில் 127 கிலோ எடையுள்ள ஒரு விண்கல் விழுந்து, மூன்றடி விட்டமுடைய ஆழமான பள்ளமும் ஏற்பட்டது. இந்த நிகழ்வே தேதி பதிவு செய்யப்பட்ட முதல் விண்கல் வீழ்ச்சியாகும். விண்கல் என்பது புவிக்கு வெளியிலிருந்து புவியில் விழும் பொருட்களைக் குறிப்பதாகும். கற்கள் என்று குறிப்பிடப்பட்டாலும், உலோகங்கள் உள்ளிட்டவற்றின் கலவையாகவும் இவை உள்ளன. உயரத்தில் என்ற பொருள்கொண்ட மீட்டடியராஸ் என்ற கிரேக்கச்சொல்லிலிருந்து உருவான மீட்டியராலஜி என்பது வளிமண்டல நிகழ்வுகளை(காலநிலை) குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், மீட்டியோர் என்பது புவிக்கு வெளியிலுள்ள பொருட்களைக் குறிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதனடிப்படையில் விண்கல் மீட்டியோரைட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. சிறுகோள்கள், வால்நட்சத்திரம் போன்றவற்றின் சிதறல்கள் ஏராளமாக விண்ணில் உலவிக்கொண்டிருக்கின்றன. இவை புவியீர்ப்புவிசையால் ஈர்க்கப்படுமளவுக்கு புவிக்கு நெருக்கமாக வரும்போது புவியில் விழுகின்றன. வளிமண்டலத்திற்குள் நுழைந்தவுடன் உராய்வால் இவை தீப்பற்றி எரிந்துகொண்டே விழுவதால் எரிநட்சத்திரம் என்றும் அழைக்கப்படுகின்றன. விழுபவற்றில் பெரும்பாலானவை, முழுமையாக எரிந்து காற்றில் கலந்துவிட்டாலும், பெரிய கற்கள் புவியில் விழுந்து பள்ளங்கள் மட்டுமின்றி, பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன. 210 கோடி ஆண்டுகளுக்குமுன் விழுந்த ஒரு மிகப்பெரிய விண்கல் ஏற்படுத்திய 600 கி.மீ. விட்டமுள்ள பள்ளம் கனடாவின் கியூபெக் பகுதியில் உள்ளது. மெக்சிகோ வளைகுடாவில் காணப்படும் 2,000 கி.மீ. விட்டமுள்ள பள்ளம் 30 கோடி ஆண்டுகளுக்குமுன் ஒரு விண்கல்லால் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டாலும், ஆதாரங்கள் இல்லை. இத்தகைய மிகப்பெரிய விண்கற்களின் வீழ்ச்சியினால், டைனோசர் உள்ளிட்ட பல உயிரினங்கள் அழிந்த சில இன அழிவுகளும் நிகழ்ந்திருக்கின்றன. விண்கல் விழும்போது பார்க்கப்பட்ட நிகழ்வுகள் விண்கல் வீழ்ச்சி என்றும், எப்போது விழுந்தது என்று தெரியாமல் புவியில் விண்கற்கள் கண்டுபிடிக்கப்படுவது விண்கல் காணல் என்றும் அழைக்கப்படுகின்றன. இதுவரை ஏறத்தாழ 1,180 விண்கல் வீழ்ச்சிகளும், 59,200 விண்கள் காணல்களும் ஆதாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. விழுந்த இடத்தையொட்டி விண்கற்களுக்குப் பெயரிடுவது வழக்கமாக இருந்தாலும், ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள்(சிதறல்கள்) ஒரே இடத்தில் கிடைக்கும்போது, அவற்றின் பெயருடன் எண்களும் சேர்க்கப்படுகின்றன. அறிவியலாளர்கள், சேகரிப்பாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய மீட்டியோரிட்டிக்கல் சொசைட்டி என்ற அமைப்பு இந்தப் பெயரிடும் பணியைச் செய்கிறது. - அறிவுக்கடல் இந்நாள் நவம்பர் 08 இதற்கு முன்னால் -நவம்பர் 8, 2019 […] 1973 பணயத் தொகை கேட்கும் குறிப்புடன், ஜான் மூன்றாம் பால் கெட்டியின் வலது காது, ஒரு செய்தித்தாள் அலு வலகத்துக்கு அஞ்ச லில் வந்தது. அப்போது 17 வயதான இவரின், தாத்தா ஜீன் பால் கெட்டி, அமெரிக்காவில் பிறந்து இங்கிலாந்தில் மிகப்பெரிய எண்ணெய் வணிகராக இருந்தவர். கெட்டி ஆயில் கம்பெனியைத் தொடங்கிய இவரை, 1957இல் ஃபார்ச்சூன் இதழ், அமெரிக்கர்களில் மிகப்பெரிய செல்வந்தர் என்றும், 1966இல் கின்னஸ் சாதனைப் புத்தகம், உலகின் மிகப்பெரிய செல்வந்தர் என்றும் அறிவித்திருந்தன. அப்படியானவரின் பேரனுக்கு 16 வயதானபோது, இத்தாலியின் ரோம் நகரில் கடத்தப்பட்டார். கடத்தியவர்கள் கேட்ட 1.7 கோடி டாலர்கள் (தற்போதைய மதிப்பில் சுமார் ரூ.700 கோடி!) பணயத்தொகையை, கடத்தப்பட்டவரின் தந்தையான ஜான் பால் கெட்டி ஜூனியர், தன் தந்தையான (தாத்தா)கெட்டியிடம் கேட்க, தனக்கு 14 பேரக்குழந்தைகள் இருப்பதாகவும், பணயத்தொகைக்காகப் பிற குழந்தைகளையும் கடத்தத் தொடங்கிவிடுவார்கள் என்றும் அவர் மறுத்துவிட்டார். தன்னைக் கடத்தியதாக நாடகமாடி, குடும்பத்தினரிடமிருந்து பணம் பெறலாம் என்று ஒருமுறை (பேரன்)கெட்டி கூறியதை, அவரின் பெண் நண்பர் தெரிவித்திருந்ததால், அவரே நாடகமாடுகிறாரோ என்றும் சந்தேகித்தனர். இந்நிலையில்தான் காது வந்ததுடன், ஒவ்வொரு உறுப்பாக அனுப்பப்படும் என்ற எச்சரிக்கையும் வர, தாத்தா பேரம்பேசி, பணயத்தொகையை 29 லட்சம் டாலர்களாகக் குறைத்தார். அதிலும், வரிவிலக்குப் பெறத் தகுதியான 22 லட்சம் டாலரை வழங்கிவிட்டு, மீதமுள்ள 7 லட்சம் டாலரை, 4 சதவீத வட்டிக்குக் கடனாக மகனிடம் அளித்தார். இங்கு கவனிக்கவேண்டிய செய்தி வரிவிலக்குதான்! இப்படியான பணயத்தொகையை, திருட்டு, கொள்ளை போன்றவற்றில் ஏற்படும் இழப்பிற்கு இணையாகக் கருதி, அத்தொகைக்கு வரிவிலக்குப் பெறமுடியும் என்று பல நாடுகளிலும் சட்டமிருக்கிறது. இந்தியாவிலும்கூட, 2012இல் மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் அப்படியான தீர்ப்பளித்துள்ளது! பணயத்தொகை கொடுக்கப்பட்டதற்கு, காவல்துறை ஆவணங்கள் போன்ற சான்று சமர்ப்பிக்கவேண்டும்! 1973 டிசம்பரில் (159 நாட்களுக்குப்பின்) விடுவிக்கப்பட்டபோது, வெட்டப்பட்ட காது வலிக்காமலிருக்க போதை மருந்துகள் தரப்பட்டதில், அவற்றுக்கு அடிமையாகியிருந்தார் கெட்டி. 1974இல் (17 வயதிலேயே) திருமணமும் செய்துகொண்டாலும், போதை மருந்துகளால் 1981இல் பக்கவாதம் ஏற்பட்டு, உடலின் பல பாகங்கள் செயல்படாத நிலையிலேயே வாழ்ந்து, 2011இல் 54 வயதில் இறந்து போனார்! இந்நாள் நவம்பர் 09 இதற்கு முன்னால் -நவம்பர் 9, 2019 […] 1906 - வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட முதல் அமெரிக்க குடியரசுத்தலைவரானார் தியோடார் ரூஸ்வெல்ட். அமெரிக்கா விடுதலைப்பெற்றதிலிருந்து 120 ஆண்டுகளுக்கு அதன் குடியரசுத்தலைவர் பதவியிலிருப்பவர்கள் வெளிநாட்டுப் பயணமே மேற்கொள்ளவில்லை. 18ஆவது குடியரசுத்தலைவராக(1869-77) இருந்த யுலிசிஸ் க்ராண்ட், அமெரிக்கக் குடியரசுத்தலைவர்கள் வெளிநாட்டுக்குச் செல்லக்கூடாது என்று சட்டமிருப்பதாகவே எண்ணிக்கொண்டிருந்தார் என்றொரு செய்தி உண்டு. உண்மையில், அமெரிக்கவர்களைப் பொருத்தவரை, தங்களது குடியரசுத்தலைவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதை செய்யக்கூடாத செயலாகவே கருதினர். இங்கிலாந்தின் அதிகாரத்திலிருந்து விடுபடுவதற்காகவே அமெரிக்கா உருவானது என்பதால்தான், மாநிலங்களின் கூட்டமைப்பு என்பதிலும், நாணயம், வெளியுறவு, பாதுகாப்பு போன்றவற்றைத் தவிர, மற்றவற்றில் இறையாண்மைகொண்ட நாடுகளுக்கிணையான அளவுக்கு மாநிலங்களுக்கு அதிகாரங்கள் உண்டு என்பதிலும் இன்றுவரை அமெரிக்கர்கள் உறுதியாக உள்ளனர். வெளிநாட்டுப் பயணங்களில், பிற நாடுகளின் (குறிப்பாக இங்கிலாந்து) அரசர்-அரசிகளை சந்திக்க நேரும்போது, தங்களுக்கும் கூடுதல் அதிகாரம் வேண்டுமென்று அமெரிக்கக் குடியரசுத்தலைவர்களும் எண்ணிவிடக்கூடும் என்பதே தொடக்ககால அச்சமாக இருந்தது. பிற்காலத்தில், மற்றொரு நாட்டின் அரச குடும்பத்தினருக்குத் தங்கள் குடியரசுத்தலைவர் மரியாதை செலுத்துவது என்பது, அமெரிக்காவுக்கு மரியாதைக் குறைவு என்ற எண்ணமும் ஏற்பட்டது. உள்நாட்டில் பயணம் செய்யும்போது, அமெரிக்க மக்களைச் சந்திப்பது உள்ளிட்டவை குடியரசுத்தலைவரின் கடமைகள் என்றும், வெளிநாட்டுக்குச் செல்வது, கடமை தவறுவது என்றும்கூட எண்ணமிருந்தது. தியோடார் ரூஸ்வெல்ட்டின் இந்தப் பயணமும்கூட, அமெரிக்க அரசால் செய்யப்பட்டுக்கொண்டிருந்த பனாமா கால்வாய் தோண்டும் பணிகளை மேற்பார்வையிட என்ற வகையில் அவரது கடமையாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடக்ககால வெளிநாட்டுப் பயணங்கள் நீராவிக் கப்பல்களில் மேற்கொள்ளப்பட்டதால், பயணத்தில் அதிக காலம் செலவிடப்பட்டதும், கடமை தவறுவதான பார்வைக்குக் காரணமாக இருந்தது. இதனாலேயே, முதல் உலகப்போர் முடிவில் பேச்சுவார்த்தைக்காகச் சென்ற உட்ரோ வில்சனின் இரண்டு மாத ஐரோப்பியப் பயணம் விமர்சனத்துக்குள்ளா கியது. பயணத்திற்கு 9 நாட்களான இதே ஐரோப்பியப் பயணத்திற்கு, நாற்பதாண்டுகள் கழித்து ட்வைட் ஐசனோவருக்கு விமானத்தில் 9 மணிநேரமே ஆனதும், அமெரிக்கக் குடியரசுத்தலைவர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் அதிகரிக்கக் காரணமாக இருந்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய யால்ட்டா மாநாட்டில் ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் ஸ்டாலினுடன் பேரம்பேச முடியாமல் விட்டுக்கொடுத்துவிட்டார் என்ற கருத்தால், உறவுமுறைப் பயணமாக இருக்கவேண்டுமே தவிர, விவாதிக்கும் பயணமாக இருக்கக்கூடாது என்ற நிலையும் நீண்டகாலம் பின்பற்றப்பட்டது. ஆனால், உலகத்தை வழிநடத்தவேண்டியது தாங்கள்தான் என்ற எண்ணம் ஏற்பட்டபின், அமெரிக்கக் குடியரசுத்தலைவர்கள் ஏராளமான வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்கிறார்கள். அறிவுக்கடல் இந்நாள் நவ. 11 இதற்கு முன்னால் -நவம்பர் 11, 2019 1921 - அடையாளம் தெரியாத அமெரிக்க வீரனின் கல்லறை, வர்ஜீனியாவில் உள்ள ஆர்லிங்ட்டன் தேசிய மயானத்தில், குடியரசுத்தலைவர் வாரன் ஹார்டிங்-கால் திறக்கப்பட்டது. முதல் உலகப்போரில் உயிரிழந்து, அடையாளம் காணமுடியாமற்போன நான்கு அமெரிக்க வீரர்களின் உடல்கள், ஃப்ரான்சிலிருந்த நான்கு அமெரிக்க ராணுவ மயானங்களிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டு, அவற்றிலிருந்து ஒன்றை, உலகப்போரில் காயமுற்று, மிகவுயர்ந்த விருது பெற்ற எட்வர்ட் யங்கர் என்ற வீரரைத் தேர்ந்தெடுக்கச்செய்து, அது அமெரிக்காவுக்குக் கப்பல்மூலம் கொண்டுவரப்பட்டு, இந்த நினைவிடம் அமைக்கப்பட்டது. இதுமட்டுமின்றி, இரண்டாம் உலகப்போர், கொரியப்போர் உள்ளிட்டவற்றில் இறந்தவர்களுக்காகவும் இவ்வாவறான நினைவிடங்கள் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்காவில், இவற்றைப் பாதுகாக்க, கல்லறைக் காவலர்கள் என்ற பிரிவும் உள்ளது. பல்வேறு நாடுகளிலும் (இந்தியாவில் அமர் ஜவான் ஜோதி, புதுடெல்லி) அமைக்கப்பட்டுள்ள இத்தகைய அடையாளம் தெரியாத வீரரின் நினைவிடம் என்பதை அமைப்பதை, இங்கிலாந்தின் டேவிட் ரெய்ல்ட்டன் என்பவர்தான் முன்மொழிந்தார். முதல் உலகப்போரில் ஒன்றாகப் போரிட்ட இங்கிலாந்தும், ஃப்ரான்சும் உயிரிழந்த தங்கள் வீரர்களையும் பொதுவான மயானங்களிலேயே அடக்கம் செய்தன. இங்கிலாந்தில் அவற்றைப் பராமரிக்கும் பணியிலிருந்த போர்க் கல்லறைகள் ஆணையத்தைச் சேர்ந்த இவர், ஒரு கல்லறையில், ‘அடையாளம் தெரியாத ஓர் இங்கிலாந்து வீரர்’ என்று கையால் கீறப்பட்டிருந்ததைக் காண நேர்ந்தபோது, போரில் உயிரிழந்து, அடையாளம் காண முடியாமற்போன அனைத்து வீரர்களுக்குமாக இவ்வாறு ஒரு பொதுவான நினைவிடம் அமைக்கலாம் என்ற ஆலோசனையை முன்மொழிந்தார். இது அரசால் ஏற்கப்பட்ட அதே நேரத்தில், ஃப்ரான்சிலும் இதேபோன்ற கருத்து உருவாகியிருந்தது. 1920இல் இங்கிலாந்திலும், ஃப்ரான்சிலும் அமைக்கப்பட்ட அடையாளம் தெரியாத வீரரின் கல்லறை, அடுத்த ஆண்டே அமெரிக்காவில் அமைக்கப்பட்டதுடன், பிற நாடுகளுக்கும் பரவியது. இந்தக் கல்லறைகளில் அடையாளம் தெரியாத ஒரு வீரரின் உடல் வைக்கப்படுவதே மரபாகப் பின்பற்றப்படுகிறது. வியட்நாம் போர் முடிந்தபோது, எந்த உடலை எடுத்துவந்தாலும், டிஎன்ஏ பரிசோதனைகளின்மூலம், அது யார் என்று கண்டுபிடித்துவிட முடியும் என்ற தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. வியட்நாமில் போரிட்ட ஓர் அடையாளம் தெரியாத வீரரின் உடல் 1984இல் கொண்டுவரப்பட்டு நினைவிடம் அமைக்கப்பட்டுவிட்டாலும், ஆசியப் போர்களில் காணாமற்போன வீரர்களுக்கான அமைப்பு, அந்த உடல் வான்படையின் மைக்கேல் ப்ளேசி-யுடையதாக இருக்கும் என்று கண்டுபிடித்து அறிவித்தது. அடையாளத்தை உறுதிப்படுத்த எழுந்த கோரிக்கைகளால் 1998இல் அந்த உடல் தோண்டி எடுக்கப்பட்டு, டிஎன்ஏ சோதனையில் அவர்தான் என்று உறுதிப்படுத்தப்பட்டது! இந்நாள் நவம்பர் 12 இதற்கு முன்னால் -நவம்பர் 12, 2019 1912 - அண்டார்டிக் பகுதியில் முதன்முதலாகத் தொல்லுயிர் படிவங்களைக் கண்டுபிடித்த ராபர்ட் ஃபால்கன் ஸ்காட், அவரது குழுவினர் ஆகியோரின் உயிரற்ற உடல்கள் உறைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. அண்டார்டிக்கின் பகுதிகளை அறியவும், அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளவும் 1910இல் மேற்கொள்ளப்பட்ட டெர்ரா நோவா பயணம் என்னும் இங்கிலாந்தின் அண்டார்டிக் பயணத்தின் தலைவராக ஸ்காட் செயல்பட்டார். இவர் ஏற்கெனவே 1901இல் மேற்கொள்ளப்பட்ட டிஸ்கவரி பயணம் என்னும் இங்கிலாந்து தேசிய அண்டார்டிக் பயணத்திலும் பணியாற்றியிருந்தார். அப்பயணத்தின் வெற்றிக்குப்பின் கப்பல் தளபதி யாக உயர்த்தப்பட்டிருந்தார். இப்பயணத்தில் பயன்படுத்தப்பட்ட டெர்ரா நோவா கப்பலின் பெயராலேயே இப்பயணம் குறிப்பிடப்படுகிறது. டிஸ்கவரி பயணம் ராயல் ஜியாகரஃபிக்கல் சொசைட்டியால்(அரச புவியியல் கழகம்) அதன் மேற்பார்வை மற்றும் நிதியுடன் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், மீண்டும் அண்டார்டிக்குக்குப் பயணிக்க முழுமையான நிதியுதவி யைச் செய்ய புவியியல் கழகம் தயாராக இல்லாத நிலையில், நிதி திரட்டப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இதற்கு, கடற்படையும், புவியியல் கழகமும் உதவின. ஸ்காட்டைப் பொறுத்தவரை இந்தப் பயணத்தில் அறிவியல் ஆய்வுகளைவிடவும், தென் துருவத்தை அடைவதும், முதலில் தென் துருவத்தை அடைந்த பெருமையை இங்கிலாந்துக்குத் தருவதும் முக்கிய நோக்கமாக இருந்தன. 1912 ஜனவரி 17இல் ஸ்காட் மற்றும் அவர் அணியின் நான்கு உறுப்பினர்களும் தென் துருவத்தை அடைந்தபோது, அவர்களுக்கு 34 நாட்கள் முன்பாகவே நார்வேயின் ருவால்ட் அமுண்ட்சென்-னும் அவர் அணியினரும் தென் துருவத்தை அடைந்து, ஸ்காட்டை இரண்டாவதாக்கிவிட்டிருந்தனர். தென் துருவத்திலிருந்து திரும்பும் பயணத்தில், எஞ்சிய பயணக்குழுவினர் தங்கியிருந்த முகாமிலிருந்து இவர்களுக்கு உதவிக்கு வரவேண்டிய நாய்க்குழுக்களைச் சந்திக்க முடியாமற்போனது. இதனால், முகாமிலிருந்து 240 கி.மீ. தொலைவில் ஐவரும் உயிரிழந்தனர். உரிய நேரத்தில் இக்குழுவினர் திரும்பி வராததால் தேடும் பணிகள் தொடங்கப்பட்டு, நவம்பர் 12இல் அவர்கள் தங்கியிருந்த கூடாரமும், அதற்குள் உறைந்த நிலையில் ஐவரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அவர்களது உடல்களுடன், 25 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய தாவரங்களின் படிவங்கள் உள்ளிட்ட, அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்களும் கிடைத்தன. இவையே அண்டார்டிக் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் தொல்லுயிர்ப் படிவங்கள் என்பதுடன், அண்டார்டிக் பகுதியும் வனங்கள் நிறைந்ததாக இருந்தது என்பதை உணர்த்தும் ஆதாரங்களாகவும் அமைந்தன. - அறிவுக்கடல் இந்நாள் நவம்பர் 13 இதற்கு முன்னால் -நவம்பர் 13, 2019 […] 1841 - நவீன ஹிப்னாட்டி சத்தின் தந்தை என்று குறிப்பிடப்படும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ‘ஜெண்டில்மேன் சயிண்ட்டிஸ்ட்’ ஜேம்ஸ் ப்ரெய்ட், ‘அனிமல் மேக்னெட்டி சம்’ என்பதன் செயல்முறை விளக்கத்தை தன்முறையாகக் கண்டார். பல்கலைக்கழகங்கள், அரசுத் துறை அல்லது நிறுவனங்கள் அல்லது கார்ப்பரேட் நிதியுதவி போன்றவையின்றி, யாரையும் சாராமல் ஆய்வுகள் மேற்கொண்ட சுதந்திரமான ஆய்வாளர்கள், ஜெண்டில்மேன் சயிண்ட்டிஸ்ட் என்றழைக்கப்பட்டனர். எல்லா உயிரினங்களிலும் உணர முடியாத ஓர் நேர்மறை சக்தி இருப்பதாகவும், அதை சிகிச்சை உள்ளிட்டவற்றிற்குப் பயன்படுத்தலாம் என்றும் நம்பிய ஜெர்மானிய மருத்துவர் ஃப்ரேன்ஸ் மெஸ்மெர், அதற்கு ‘அனிமல் மேக்னெட்டிசம்’ என்று பெயரிட்டார். இவர், 1774இல் ஒரு பெண் ஹிஸ்டீரியா நோயாளியை இரும்பு கலந்த கலவையொன்றைக் குடிக்கச்செய்து, அவரது உடலில் பல காந்தங்களை வைத்து ஒரு செயற்கை அலையை உருவாக்கினார். உடலில் இனம்புரியாத ஏதோ பாய்ந்ததாகவும், பல மணி நேரத்துக்கு பின் அவரது நோயிலிருந்து விடுவித்ததாகவும் அந்த நோயாளி குறிப்பிட்டாலும், காந்தங்களால் அது நிகழ்ந்ததாக மெஸ்மெர் நம்பவில்லை. விரைவிலேயே இந்தச் சிகிச்சையில் காந்தங்களைப் பயன்படுத்துவதை அவர் நிறுத்திவிட்டாலும், அனிமல் மேக்னெட்டிசம் என்றே அவர் அழைத்த பண்புதான் அவர் பெயராலேயே மெஸ்மெரிசம்(மெஸ்மெர்+இசம்) என்றழைக்கப்படுகிறது. இதைக்கொண்டு சிகிச்சையளிப்பவர்கள் மேக்னெட்டைசர் என்றும், இதைப்பற்றிய ஆய்வு மேற்கொள்பவர்கள் மேக்னெட்டி ஸ்ட் என்றும் அழைக்கப்பட்டனர். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரெஞ்ச் மேக்னெட்டைசர் சார்லஸ் லாஃபோன்ட்டைனின் செயல்முறை விளக்கத்தைக்காண அழைக்கப்பட்ட போதுதான் ப்ரெய்ட் இதைக் கண்டார். லாஃபோன்ட்டை னின் மேலும் இரு செயல்முறை விளக்கங்களின்போது மேக்னெட்டைஸ் செய்யப்பட்டவர்களின் கண், கண்ணிமை ஆகியவற்றைச் சோதித்த ப்ரெய்ட், அவர்கள் வேறொரு நிலையிலிருப்பதை உணர்ந்தார். தன்னையே செல்ஃப் அல்லது ஆட்டோ-ஹிப்னாட்டைஸ் செய்து மேலும் ஆய்வுகளை மேற்கொண்ட ப்ரெய்ட், அந்த விளைவுகளுக்கும் காந்தத்திற்கும் தொடர்பில்லை என்றும், அது உளம் சார்ந்த உடலியல் என்பதையும் கண்டறிந்தார். ஹிப்னாட்டிசம், ஹிப்னோசிஸ் ஆகிய சொற்கள் பிரெஞ்ச் மேக்னெட்டைசரான கியூவில்லர்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்டிருந்தாலும், ப்ரெய்டாலேயே அவை புழக்கத்துக்கு வந்தன. தூக்கம் என்ற பொருளுடைய பண்டைய கிரேக்க மொழிச்சொல்லான ஹிப்னோஸ் என்பது, ஓசிஸ் சேர்க்கப்பட்டு ஹிப்னோசிஸ் என்றாகும்போது தூங்கச்செய்தல் என்ற பொருளைத் தருவதால் அதிலிருந்தே இச்சொற்கள் உருவாயின. சிகிச்சைக்காக ஹிப்னாட்டிசத்தைப் பயன்படுத்தும் ஹிப்னோதெரபி என்பதை முதன்முதலில் செய்தவரும் ப்ரெய்ட்தான்! - அறிவுக்கடல் இந்நாள் நவம்பர் 14 இதற்கு முன்னால் -நவம்பர் 14, 2019 […] 1886 - காகிதத்தில் துளையிடும் கருவியை உருவாக்கிய ஃப்ரீட்ரிச் சோனெக்கென் என்ற ஜெர்மானியர், அதற்கான காப்புரிமையைப் பதிவு செய்தார். பல்வேறு அலுவலகக் கருவிகளை உற்பத்தி செய்ய ஜெர்மனியின் வெஸ்ட்ஃபேலியாவில் 1875இல் இவர் தொடங்கிய எஃப்.சோனெக்கென் வெர்லாக் என்ற நிறுவனம் 1973இல் திவாலாகியதைத் தொடர்ந்து, ப்ரேனியான் இஜி என்ற நிறுவனம் இதனை வாங்கினாலும், இன்றும் சோனெக்கென் என்ற வணிகப் பெயரிலேயே அலுவலகக் கருவிகளை உற்பத்திசெய்கிறது. இரட்டைத் துளையிடும் கருவியையும், ரிங் பைண்டர் என்றழைக்கப்படும் கம்பியில் ஆவணங்களைக் கோக்கும் கோப்பையும்(ஃபைல்) சோனெக்கென்தான் அறிமுகப்படுத்தினார். உலகம் முழுவதும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் இம்முறையில் 6 மி.மீ. விட்டமுள்ள இரு துளைகள் 80 மி.மீ. இடைவெளியில் இடப்படுவது ஐஎஸ்ஓ 838 முறை என்றழைக்கப்படுகிறது. இத்துளைகளுக்கு இருபுறமும் 80 மி.மீ. இடைவெளியில் ஒவ்வொரு துளைகொண்ட 4 துளைக் கோப்பு முறையும் சில இடங்களில் பயன்பாட்டில் உள்ளது. பெரும்பாலும் இந்த 4 துளைக் கோப்பு முறையே நடைமுறையிலுள்ள அமெரிக்காவிலும், கனடா, மெக்சிக்கோ, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும், மையத்தில் ஒரு துளையும், அதன் இருபுறமும் 108 மி.மீ. தொலைவில் ஒவ்வொரு துளையும்கொண்ட முத்துளைக் கோப்பு முறையும் பயன்படுத்தப்படுகின்றன. இவை தவிர 70 மி.மீ. இடைவெளியில் இரு துளைகளைக்கொண்ட முறையும் அமெரிக்காவில் நடைமுறையிலுள்ளது. இவற்றிலிருந்து மாறுபட்ட, 70 மி.மீ. இடைவெளியில் இரு துளைகளும், அவற்றிலிருந்து 21 மி.மீ. இடைவெளியில் ஒவ்வொரு துளையும் கொண்ட 4 துளைக் கோப்பு முறை, ஸ்வீடனின் தேசியக் கோப்புமுறையாக உள்ளது. இவை தவிர 9, 7 துளைகள் கொண்ட கோப்பு முறைகளும் சில இடங்களில் பயன்பாட்டிலுள்ளன. மிக அதிகமான தாள்களில் துளையிட பேப்பர் ட்ரில் எந்திரமும், பயணச்சீட்டு முதலானவற்றில் துளையிட ஒற்றைத் துளையிடும் கருவியும், தோல் பொருட்களில் மாறுபட்ட விட்டங்களுள்ள துளைகளையிடும் கருவியும் பின்னாளில் உருவாயின. சோனெக்கென்னுக்கு முன்பே துளையிடும் கருவி உருவானதாகக் கூறப்பட்டாலும், அவற்றைப் பற்றிய பதிவுகள் இல்லை. 2017 நவம்பர் 14ஐ துளையிடும் கருவியின் பிறந்த நாளாக டூடுல் வெளியிட்டு கூகுள் கொண்டாடியது. காலிக்ராஃபியில் வட்ட எழுத்துகள், அதற்கான நிப் உள்ளிட்ட வேறு பலவற்றையும் சோனெக்கென் உருவாக்கியுள்ளார். - அறிவுக்கடல் இந்நாள் நவம்பர் 15 இதற்கு முன்னால் -நவம்பர் 15, 2019 […] 1915- முதல் உலகப் போரின் போது அமைச்சர் பதவியிலிருந்து விலகி ராணுவத்தில் பணியாற்றச் சென்றார் வின்ஸ்டன் சர்ச்சில்! ஃபர்ஸ்ட் லார்ட் ஆஃப் அட்மிரா லிட்டி(கடற்படைக்கான கேபினெட் அமைச்சர் என்று கொள்ளலாம்!) என்ற பதவியிலிருந்த சர்ச்சில், துருக்கியில் நடைபெற்றுக்கொண்டிருந்த கலிப்பொலி தாக்குதல்களில் தோல்விகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, லங்க்காஸ்ட்டரின் சான்சலர்(அதுவும் கேபினெட் அமைச்சர் பதவிதான்!) பதவிக்கு மாற்றப்பட்டார். அதன்பின் அக்டோபரில் அப்பதவியிலிருந்து சர்ச்சில் விலகினாலும், அது ஏற்கப்படாமல், இங்கிலாந்தின் ஆளுகையிலிருந்த கிழக்கு ஆஃப்ரிக்காவுக்குத் தலைமை ஆளுனராகப் பதவியேற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அதை சர்ச்சில் மறுத்துவிட, நவம்பர் 15இல் பதவி விலகல் ஏற்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்த சர்ச்சில், ராணுவத்தில் சேர்ந்து, அடுத்த ஆண்டிலேயே லெஃப்ட்டினெண்ட் கர்னலாக உயர்ந்து, பெல்ஜியத்தில் நடைபெற்ற யுத்தங்களில் பங்கேற்றார். உண்மையில், பட்டப்படிப்பை முடித்தவுடன் 21 வயதில் ராணுவத்தில் சேர்ந்துவிட்ட சர்ச்சில், தாயின் செல்வாக்கைப் பயன்படுத்தி போர் நடக்கும் பகுதியில் பணியளிக்கச் செய்து, கியூபாவில் நடைபெற்றுக்கொண்டிருந்த விடுதலைப்போரை ஒடுக்க ஸ்பெயினுடன் சேர்ந்து போரிட்டிருந்தார். அதன்பின் சில ஆண்டுகள் இந்தியாவிலிருந்த சர்ச்சில், தனக்குக் கல்வி போதாது என்று முடிவெடுத்து, நிறைய நூல்களைப் படிக்கத்தொடங்கினார். தென்-ஆஃப்ரிக்காவில் பூர்(போயர்) போர்க்காலத்தில் அவர்களிடம் பிடிபட்டுப் போர்க்கைதியாகவும் சிறிது காலமிருந்து, தப்பி வந்தார் சர்ச்சில்! 1900இல் அரசியலுக்குவந்து, அந்த ஆண்டிலேயே 25 வயதில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 30 வயதில் இணையமைச்சராகவும், 33 வயதில் கேபினெட் அமைச்சராகவும் ஆகிவிட்ட சர்ச்சில், 34 வயதில்தான் திருமணம்செய்துகொண்டார்! முதல் உலகப்போர் முடிந்தபின் நடைபெற்ற தேர்தலில் ரயில்வேயை அரசுடைமையாக்குவது, ஏகபோக நிறு வனங்களைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டுப் பிரச்சாரம் செய்த சர்ச்சில், போர், வான்படை ஆகியவற்றுக்கான கேபினெட் அமைச்சரானார். 1900இல் கன்சர்வேட்டிவ் கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராகி, 1904இல் லிபரல் கட்சியின் அமைச்சரான சர்ச்சில் 1922 தேர்தலில் தோல்வியுற்று, 1924இல் சுயேச்சையாக வென்றபின் மீண்டும் கன்சர்வேட்டிவ் கட்சியில் இணைந்து, நிதியமைச்சரானார். 1929 தோல்விக்குப்பின் இரண்டாண்டுகள் தீவிர அரசியலி லிருந்தே ஒதுங்கியிருந்த சர்ச்சில், இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் சிறப்பான பங்களிப்புக்குப்பின், 1940இல் இங்கிலாந்தின் பிரதமரானார். இருமுறை பிரதம ராக இருந்த சர்ச்சில், 1965இல் (90 வயதில்) இறப்பதற்கு ஓராண்டு முன்புவரை நாடாளுமன்ற உறுப்பினராகவே இருந்தவர் என்பதுடன் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கவை! இந்நாள் நவம்பர் 16 இதற்கு முன்னால் -நவம்பர் 16, 2019 […] 1933 - புரட்சி நடந்து 16 ஆண்டுகளுக்குப்பின் சோவியத் ஒன்றியத்துக்கும், அமெரிக்காவுக்கும் இடையே யான அரசுமுறை உறவுகள் தொடங்கப்பட்டன. புரட்சிக்குப் பிந்தைய அரசை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை. புரட்சியை ஒடுக்க விரும்பினாலும், அதற்கு ரஷ்ய மக்களிடையே இருந்த ஆதரவு காரணமாக, ஆக்கிரமிக்கும் நாடு என்ற பெயர் ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் ராணுவத்தை அனுப்ப அமெரிக்கா தயாராக இல்லை. புரட்சி வென்றபோது நடை பெற்றுக்கொண்டிருந்த முதல் உலகப்போரிலிருந்து ரஷ்யா விலகிக்கொள்வதாக லெனின் அறிவித்துவிட, ரஷ்யாவுடன் போரிட்டுக்கொண்டிருந்த ஜெர்மன் படைகள், பிற நேச நாடுகளுடன் போரிட வந்ததும் அமெரிக்காவின் கோபத்திற்குக் காரணமாக அமைந்தது. ஜார் அரசு வாங்கியிருந்த அந்நியக் கடன்களுக்குப் புதிய அரசு பொறுப்பேற்காது என்று அறிவித்த லெனின் (வரும் பிப்ரவரி 8இல் விபரமாக!), அந்நியர்களுக்குச் சொந்த மானவை உட்பட அனைத்துத் தொழில்களையும், சொத்துக்களையும் நாட்டுடைமையாக்கியதில், (நேச நாடுகள் அணியிலிருந்த பிரான்ஸ் உள்ளிட்ட) நாடுகள் கோடிக்கணக்கான பவுண்டுகளை இழந்தன. இவற்றால், புரட்சிக்கு எதிரானவர்களுக்கு உணவு முதலான உதவிகளை அமெரிக்கா செய்தாலும், அவற்றுக்குப் பலனின்றிப்போன நிலையில், ரஷ்யாவுடனான அரசு முறை உறவைத் துண்டித்துக்கொண்டது. தொழிலாளர் புரட்சிகளை நடத்தி உலகம் முழுவதும் பொதுவுடைமை அரசுகளை நிறுவுதலை, பொதுவுடைமை அகிலம் (கொமிண்ட்டெர்ன்) நோக்கமாகக் கொண்டிருந்ததால், சோவியத் ஒன்றியத்தை முதலாளித்துவத்துக்கான அச்சுறுத்தலாகக் கருதிய அமெரிக்கா, சோவியத்துடன் அரசுமுறை உறவுகளை உருவாக்கிக்கொள்ளவில்லை. சோவியத் ஒன்றியம் அதிக காலம் நீடித்திருக்காது என்ற அமெரிக்காவின் கணிப்பு பொய்த்ததுடன், பல நாடுகளும் சோவியத்துடன் அரசுமுறை உறவுகளை ஏற்படுத்திக்கொண்டதால், சோவியத்துடன் வணிக உறவுகள் தேவை என்ற கருத்து 1930களில் அமெரிக்காவில் உருவாகத் தொடங்கியது. ஏறக்குறைய அமெரிக்காவுக்கு இணையான மக்கள்தொகையையும், இரண்டரை மடங்கு நிலப்பரப்பையும் கொண்ட ‘ஒரு சந்தை’ தன்னைவிட்டு விலகியிருப்பதை முதலாளித்துவம் விரும்பவில்லை என்பதுதான் பின்னணி! ஹென்றி போர்டு உள்ளிட்ட பலரும் சோவியத்துட னான உறவுகளை வலியுறுத்திய நிலையில், அமெரிக்கத் தொழிலாளர்களும் சோவியத்துக்கு ஆதரவு-எதிர்ப்பென்று பிளவுற்றனர். (பொது வுடைமைக்கு ஆதரவானவர்கள் பின்னாளில் அழித்தொழிக்கப்பட்டனர்!) சோவியத்துடனான உறவை வெளியுறவுத்துறை ஏற்காது என்பதால், தனிப்பட்ட முறையில் முயற்சித்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் ஃப்ராங்க்ளின்-டி-ரூஸ்வெல்ட், 1,100 இதழாசிரியர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியதில், 27 சதவீதம் மட்டுமே சோவியத்துடனான உறவை எதிர்த்தனர்! அதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் பொதுவுடைமையைக் கொண்டுவர முயற்சிக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டுடன், சோவியத்துடனான அரசுமுறை உறவு ஏற்படுத்தப்பட்டது! இந்நாள் நவ. 18 இதற்கு முன்னால் -நவம்பர் 18, 2019 […] 1760 - மறுகட்டுமானம் செய்யப்பட்ட கேஸ்ட்டலேனியா ’கடன்காரர்கள் சிறை’க்கு, கைதிகள் வருகை தொடங்கியது. கேஸ்ட்டலேனியா என்பது, தற்போதைய மால்ட்டாவின் தலைநகரான வேலெட்டா நகரில் அரசவை, நீதிமன்றங்கள் செயல்பட்டுப் பின்னாளில் சிறையாக மாற்றப்பட்ட கேஸ்ட்டலேனியா அரண்மனை. சரி, கடன்காரர்கள் சிறை? ஆம்! கடனைத் திருப்பித் தராதவர்களை அடைப்பதற்கென்றே சிறை! திருப்பித்தராத (அல்லது தரமுடியாத!) கடனுக்காகச் சிறைகள் என்பவை உலகின் பல நாடுகளிலும் நடைமுறையிலிருந்திருக்கின்றன. இவை, கடன் தீரும்வரை உழைக்கவேண்டிய, அடைத்து வைக்கப்பட்ட உழைப்புக் கூடங்களாகவோ, கடனை ஏதோவொரு வகையில் திருப்பித்தரும்வரை அடைத்து வைக்குமிடங்களாகவோ இருந்திருக்கின்றன. இவற்றில் அடைக்கப்படும்போது, கடனை மட்டுமின்றி, இவற்றில் அடைக்கப்பட்டிருக்கும் காலத்திற்கு, இச்சிறைகளைப் பராமரிக்கும் கட்டணங்களும் வசூலிக்கப்படும். கடனுக்கென்று சிறைகள் இன்றி, கடன் தீரும்வரை கொத்தடிமைகளாக வைத்துக்கொள்வதும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்துள்ளது. இடைக்கால ஐரோப்பாவில், கடன்காரர்களான ஆண்கள், பெண்கள் அனைவரும் ஒரே இடத்தில் அடைக்கப்படும் நடைமுறை இருந்துள்ளது. இவ்வாறு அடைக்கப்படுபவர்கள் தொற்றுநோய்களால் இறப்பதும், பிற தொல்லைகளுக்கு ஆட்படுவதும் வழக்கமாக இருந்துள்ளது. இங்கிலாந்தில் ஜான் பைரோம் என்ற ஆங்கிலேயக் கவிஞரின் மகன் சாமுவேல் பைரோம், எழுத்தாளர் சார்லஸ் டிக்கென்சின் தந்தை ஆகியோர் இவ்வாறு கடன்காரர்கள் சிறையில் அடைபட்டிருந்திருக்கின்றனர். அதனால்தான் டிக்கென்ஸ் தன் லிட்டில் டோரிட் புதினத்தில் இதைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அமெரிக்க விடுதலை சாசனத்தில் கையெழுத்திட்டவர்களில் ஒருவரான ஜேம்ஸ் வில்சன், துணை நீதிபதியாகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோதே, கடன்காரர்கள் சிறையிலிருக்கும் நிலையும் ஏற்பட்டது. அதனாலேயே அமெரிக்காவில் 1792இல் கடன்காரர்கள் சிறை நிவாரணம் என்ற சட்டம் இயற்றப்பட்டது. ஆனாலும் தொடர்ந்த இம்முறை 1833இல் கூட்டரசுச் சட்டத்தால் தடைசெய்யப்பட்டாலும், முழுமையாக ஒழியவில்லையென்பதால், 1978இன் திவால் நிவாரணச் சட்டத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் 1950இல் உருவான மனித உரிமைகள் ஒப்பந்தத்தில் இம்முறையைத் தடைசெய்வதுபற்றிக் குறிப்பிடப்பட்டாலும், சில நாடுகள் இன்றுவரை அதை ஏற்கவில்லை. இந்தியாவில் இதை நெறிமுறைப்படுத்த 1881இல் ஆங்கிலேயர்களால் இயற்றப்பட்ட நெகோஷியபிள் இண்ஸ்ட்ருமெண்ட்ஸ் சட்டம் (இச்சட்டத்தின்படி ப்ராமிசரி நோட், காசோலை போன்றவை) இன்றும் பெரிய மாற்றங்களின்றித் தொடர்கிறது. கடன்காரர்கள் சிறைகள் என்பவை பெரும்பாலும் வழக்கொழிந்துபோனாலும், இவற்றைப்போன்ற சட்டங்களால், ஒப்பந்தத்தை மீறுதல் முதலான அடிப்படைகளில் கடனைத் திருப்பித்தராதவர்கள் உலகின் பலபகுதிகளிலும் இன்றளவும் சிறையிலடைக்கப்படுகிறார்கள். - அறிவுக்கடல் இந்நாள் நவம்பர் 19 இதற்கு முன்னால் -நவம்பர் 19, 2019 […] 1794 - அமெரிக்கா வுக்கும் இங்கி லாந்துக்குமிடையே ‘ஜே ஒப்பந்தம்’ கையெழுத்திடப் பட்டது. பிரெஞ்சுப் புரட்சியின் போது, பிரான்சுக்கும் பிற நாடு களுக்குமிடையே ஏற்பட்ட போர்களின் ஒரு பகுதியாக, 1793இல் இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் போர் ஏற்பட்டது. மேற்கிந்தியத் தீவுகளிலிருந்த பிரான்சின் குடியேற்றங் களிலிருந்து சரக்குகளை ஏற்றிச்சென்ற சுமார் 250 அமெரிக்க வணிகக் கப்பல்களை இங்கிலாந்து கைப்பற்றிக்கொண்டது டன், இக்கப்பல்களிலிருந்த மாலுமிகளை இங்கிலாந்தின் போர்க்கப்பல்களில் வலுக்கட்டாயமாகப் பணியாற்றச் செய்தது. ஏற்கெனவே, சரியாக வரையறுக்கப்படாத கனடா எல்லைப்பகுதியில் ஃபர்ஸ்ட் நேஷன் என்ற பழங்குடியினருக்கு, இங்கிலாந்து ஆயுதங்கள் வழங்கி அமெரிக்காவுக்கு இடையூறு செய்துகொண்டிருந்ததால், இங்கிலாந்தின்மீது போர் தொடுக்கவேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது. ஆனால், இங்கிலாந்துடனான வணிகம் முக்கியம் என்று கருதிய அமெரிக்கக் குடியரசுத்தலைவர் வாஷிங்டன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ஜே-யை இங்கிலாந்துக்குப் பேச்சுவார்த்தைக்கு அனுப்பினார். அவர் உருவாக்கிய நட்புறவு, வணிகம், கடற்பயணங்கள் ஆகியவற்றுக்கான ஒப்பந்தம், அவர் பெயரிலேயே குறிப்பிடப்படுகிறது. பல்வேறு சிக்கல்களில் அமெரிக்காவுக்குச் சாதகமான முடிவுகளை உருவாக்கிய இந்த ஒப்பந்தத்தின்மூலம், கைப்பற்றப்பட்ட 250 கப்பல்களுக்காக 1.16 கோடி டாலர்களை அமெரிக்கா பெற்றது. விடுதலைப்போருக்கு முந்தைய கடன்களுக்காக இங்கிலாந்து 6 லட்சம் பவுண்டுகளைப் பெற்றாலும், அமெரிக்காவின் பல பகுதிகளில் செய்திருந்த ஆக்கிரமிப்புகளிலிருந்து வெளியேறியதுடன், எல்லை களை வரையறுக்க இரண்டு கூட்டுக்குழுக்களும் உருவாக்கப்பட்டன. (இவை கூடவேயில்லை என்பது தனிக்கதை!) அமெரிக்காவும், இங்கிலாந்தும் ஒன்றை யொன்று முதன்மை வணிக உறவு நாடாக அங்கீகரித்து, பல்வேறு சலுகைகளுடன் வணிகத்தை மேம்படுத்த ஒப்புக் கொண்டன. கைமாறாக, பிரான்சின்மீதான இங்கிலாந்தின் கடற்கொள்கைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது. ஆனாலும், அமெரிக்க மாலுமிகளை வலுக்கட்டாயமாக இங்கிலாந்துக் கடற்படையில் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான உறுதிமொழிகளை ஜே-யால் பெறமுடிய வில்லை. இதுவே, 1812இல் இங்கிலாந்துடன் போர் ஏற்படக் காரணமாயிற்று என்பதுடன், அந்தப் போரே, எல்லைப் பிரச்சனைகளுக்கும் முடிவுகட்டியது. அமெரிக்க விடுதலைப்போரில் துணைநின்று, அதற்காக இங்கிலாந்து டன் போரிலும் ஈடுபட்ட பிரான்சுடன் 1778இல் கூட்டணி ஒப்பந்தமே செய்யப்பட்டிருந்தபோதும், வணிகம்தான் முக்கியம் என்ற நிலையை அமெரிக்கா எடுத்தது கவனிக்கத் தக்கது. விரிவிதிப்பால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் போராடி, விடுதலையடைந்த அமெரிக்கா, விடுதலைக்குப் பின், போர்களைத் தவிர்த்தது, போர்களில் ஈடுபட்டது ஆகிய இரண்டுமே வணிகத்தின் (பொருளாதார) வளர்ச்சியை மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொண்டுதான்! இந்நாள் நவம்பர் 20 இதற்கு முன்னால் -நவம்பர் 20, 2019 […] 1923 - ஜெர்மனியின் பழைய நாணய மான பேப்பியர் மார்க்குக்கு, ஒரு லட்சம் கோடிக்கு (ஆம்! 1,000,000,000,000!) ஒன்று என்ற விகிதத்தில் புதிய நாணயமான ரெண்ட்டன்மார்க் மாற்றித்தருதல் தொடங்கியது. முதல் உலக்போருக்கான செலவு களுக்காக பிரான்ஸ் முதலான நாடுகள் கூடுதல் வரி களை விதித்தன. ஆனால், போரில் வென்று விடலாம், கைப்பற்றும் புதிய பகுதிகளிலிருந்து கூடுதல் வரு வாய் வரும், தோற்கும் நாடுகளிடமிருந்தும் பெருந் தொகையை இழப்பீடாகப்பெறலாம் என்றெல்லாம் கருதிய ஜெர்மனி, முழுமையாகக் கடன் வாங்கியே அனைத்து செலவுகளையும் செய்தது (பொருளாதார நோக்கமின்றி போரில்லை!) போரில் தோற்றபின், இழப்பீடாக 13,200 கோடி தங்க மார்க்(தங்கத்தின் அடிப்ப டையிலான ஜெர்மன் நாணயம்!) ஜெர்மனி தரவேண்டு மென்று பாரிஸ் அமைதி மாநாடு முடிவெடுத்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகள், போருக்கு வாங்கிய கடன்கள் ஆகியவற்றால் நாணய மதிப்பு மிகமோசமாகச் சரிய, ஏராளமான பேப்பியர் மார்க்குகளை ஜெர்மனி அச்சிட்டது. அதனால் ஏற்பட்ட வரலாறு காணாத பணவீக் கத்தைத் தொடர்ந்தே இந்தப் புதிய நாணயம் வெளி யிடப்பட்டது. ஒரு நாணயத்தின் பொருட்கள் வாங்கும் திறன் (மதிப்பு) குறைதல் பணவீக்கம் என்றும், இவ்வாறு மிகப்பெரிய அளவில் நிகழ்வது அதிஉயர்(ஹைப்பர்) பணவீக்கம் என்றும் குறிப்பிடப்படுகின்றன. ரோமப் பேரரசில் மூன்றாம் நூற்றாண்டில் ஏற்பட்ட நெருக்கடி யின்போது உருவானதே உலகின் முதல் அதி உயர் பணவீக்கம்! அப்போது ஃபியட் கரன்சி என்னும் இயல் பான மதிப்பற்ற, உறுதிமொழி அடிப்படையிலான நாண யங்கள் உருவாகவில்லை என்பதால், தங்கத்திற்கு பதிலாகப் பிற உலோகங்களாலான நாணயங்கள் வெளி யிடப்பட்டு, சரிவுக்குக் காரணமாயின. காகித ஃபியட் கரன்சியை முதலில் அறிமுகப்படுத்திய நாடான சீனா, தொடக்கத்தில் காகித நாணய அச்சடிப்பிற்கு கடுமை யான கட்டுப்பாடுகளை கொண்டிருந்தது. போர்ச் செலவு களுக்காக, 13ஆம் நூற்றாண்டுக்குப்பின் ஏராளமான காகித நாணயங்கள் அச்சிடப்பட்டதால் சரிந்து கொண்டேவந்த நாணய மதிப்பு, அதிஉயர் பணவீக்க மாக மாற, 1948இல் 18 கோடி யுவான் நாணயம்கூட அச்சடிக்கப்பட்டது! அவ்வாண்டில், 30 லட்சம் யுவான் என்பது ஒரு தங்க யுவான் என்ற விகிதத்தில் புதிய நாண யம் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அதன் மதிப்பும் அடுத்த ஆண்டிலேயே சரிந்தது. புரட்சிக்குப் பிந்தைய அரசு ரென்மின்பியை அறிமுகப்படுத்தியபின்னரே, சீனா நாணய மதிப்பு நிலைபெற்றது. வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களிலும், உலகின் பல நாடுகளி லும் அதிஉயர் பணவீக்கம் நிகழ்ந்திருக்கிறது. தற்போது வெனிசுலாவில் நிலவும் அதிஉயர் பணவீக்கம், 2019இன் இறுதியில் ஒரு கோடி சதவீதமாக உயருமென்று ஐஎம்எஃப் கணித்துள்ளது. -அறிவுக்கடல் இந்நாள் நவ. 21 இதற்கு முன்னால் -நவம்பர் 21, 2019 […] 1969 - ஒக்கினாவா ப்ரிஃபெக்ச்சர் பகுதியை 1972இல் ஜப்பானிடம் ஒப்படைப்பதாக, ஜப்பானியப் பிரதமர் எய்சாக்கு சாட்டோ உடனான பேச்சுவார்த்தையில், அமெரிக்கக் குடியரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது. வியட்னாம் போரில் வீசுவதற்காக இங்கு சேமிக்கப்பட்டிருந்த வேதியியல் ஆயுதங்களில் கசிவு ஏற்பட்டதையடுத்து ஏற்பட்ட மிகப்பெரிய எதிர்ப்பியங்களால் அமெரிக்கா இந்த முடிவை எடுக்க வேண்டியதாயிற்று. ரியூக்யூ தீவுக்கூட்டத்தைச் சேர்ந்த ஒக்கினாவாவை, இரண்டாம் உலகப்போரின் முடிவில் அமெரிக்கப்படைகள் கைப்பற்றின. அந்நடவடிக்கையின்போது, ஒக்கினாவாவின் மூன்றிலொரு பங்கு மக்கள் பலியாயினர். (1995இல் எழுப்பப்பட்ட நினைவிடத்தில் 2,40,734 பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன!) உலகப்போரில் ஜப்பானின் தோல்வியைத் தொடர்ந்து, அமெரிக்காவின் காப்பாட்சியின்கீழ் வந்த இப்பகுதிக்காக, ரியூக்யூ தீவுகளுக்கான அமெரிக்க ராணுவ அரசு என்பது உருவாக்கப்பட்டது. கொரியப்போரின்போது, அமெரிக்க ராணுவத்தின் தளமாகச் செயல்பட்ட இப்பகுதியில், சோவியத்துடனான பனிப்போர்க் காலத்தில் ஏராளமான அமெரிக்க ராணுவம் குவிக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் ஒக்கினாவா மக்களின் நிலங்களை அமெரிக்க ராணுவம் தளங்கள் அமைப்பதற்காகப் பிடுங்கிக்கொண்டதுடன், சுமார் 2.5 லட்சம் பேர் வேறிடங்களுக்கு விரட்டப்பட்டனர். இக்காலகட்டத்தில், அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் ஜப்பான் கையெழுத்திட்டதையடுத்து, ஜப்பானுக்கான அமெரிக்கப் படைகள் என்ற பிரிவே அமெரிக்க ராணுவத்தில் ஏற்படுத்தப்பட்டு, ஏராளமான படைகள் இங்கு குவிக்கப்பட்டன. ஜப்பானின் ரகசிய ஒப்புதலுடன் ஏராளமான அணு ஆயுதங்களும் இப்பகுதியில் குவிக்கப்பட்டன. வியட்னாம் போரின்போது, அருகாமை பகுதி என்ற வகையில் தாக்குதலுக்கான முக்கிய மையமாக இது மாற்றப்பட்டது. பசிபிக் பகுதியின் முக்கியத் தளம் என்று இதனை அமெரிக்கப் பாதுகாப்புத்துறை குறிப்பிட்டுக்கொள்ளுமளவுக்கு மாறிப்போன நிலையில், அமெரிக்கா நுழைந்தபோதே உருவாகியிருந்த ரியூக்யூ விடுதலை இயக்கம் உச்சத்தை அடைந்தது. வேதியியல் ஆயுதங்களின் கசிவு பற்றிய செய்திகள் பரவலான எதிர்ப்புகளை உருவாக்கிய நிலையில்தான், ஒக்கினாவாவை ஜப்பானிடம் திருப்பியளிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டு, 1972இல் நிறைவேற்றியது. தங்கள் கட்டுப்பாட்டிலிருந்தபோது, தங்கள் சொத்தைப்போல அனைத்தையும் அமெரிக்கா மாற்றியிருந்தது. அமெரிக்கப் பாணி வலப்புறப் போக்குவரத்து, 1978இல் இடப்புறப்போக்குவரத்தாக மாற்றியமைக்கப்பட்ட செய்தி இத்தொடரில் 2018 ஜூலை 30இல் வெளியானது. அமெரிக்கா வெளியேறிவிட்டதாகக் கூறிக்கொண்டாலும், ஜப்பானின் நிலப்பரப்பில் வெறும் அரை சதவீதமேயுள்ள ஒக்கினாவாவில்தான், ஜப்பானிலுள்ள அமெரிக்கப் படைகளில் 75 சதவீதம் இன்றும் நிறுத்தப்பட்டுள்ளன. 1972இலிருந்து 2009வரை பாலியல் வன்புணர்வு, கொலை, திருட்டு உள்ளிட்ட 5,394 குற்றங்களை, ஒக்கினாவா மக்களுக்கெதிராக அமெரிக்கப் படைகள் செய்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. - அறிவுக்கடல் இந்நாள் நவ. 22 இதற்கு முன்னால் -நவம்பர் 22, 2019 […] 1986 - மிகக்குறைந்த வயதில் ஹெவிவெய்ட் குத்துச்சண்டைச் சாம்ப்பியன் பட்டம் வென்றவராக 20 ஆண்டுகள் 4 மாதங்கள் 22 நாட்கள் வயதாகியிருந்த மைக் டைசன் ஆனார். இன்றுவரை அசைக்க முடியாத இந்தச் சாதனையைச் செய்த டைசன், மொத்தம் 56 தொழில்முறை போட்டிகளில் விளையாடி, 50இல் வென்றுள்ளார். இந்த 50இல் 44 போட்டிகளை நாக் அவுட் மூலம் வென்றார்! இவர் விளையாடிய முதல் 19 தொழில்முறை போட்டிகளை நாக் அவுட் மூலமே வென்றார் என்பதும், அவற்றில் 12 முதல் சுற்றிலேயே பெற்ற வெற்றிகள் என்பதும் இன்றும் குத்துச்சண்டை உலகின் அதிசயங்கள்! உலகக் குத்துச்சண்டைச் சங்கம், உலகக் குத்துச்சண்டைக் கவுன்சில், பன்னாட்டு குத்துச்சண்டைக் கூட்டமைப்பு ஆகிய மூன்றின் வௌpவெய்ட் சாம்ப்பியன் பட்டங்களையும் ஒருசேர வென்ற முதல் வீரர் டைசன்தான் என்பதுடன், இவற்றைத் தொடர்ச்சியாக வென்ற ஒரே வீரரும் அவர்தான். சிறு வயதில் தந்தையின்றி வறுமையில் வாடிய டைசன், குற்றங்கள் மலிந்த பகுதியில் வளர்ந்தார். 13 வயதானபோது, 38 முறை சிறிய குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டிருந்தார். சிறார் குற்றவாளிகளுக்கு அறிவுரை வழங்கும் பணியிலிருந்த பாபி ஸ்டூவர்ட் என்பவர்தான் டைசனின் குத்துச்சண்டைத் திறமையைக் கண்டறிந்து, முதலில் பயிற்சியும் அளித்தார். 1981, 1982 ஜூனியர் ஒலிம்ப்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற டைசன், வெறும் 8 நொடிகளில் நாக் அவுட் வெற்றி பெற்றவர் என்ற சாதனையையும் புரிந்தார். 18 வயதில் தொழில்முறைப் போட்டிகளில் விளையாடத் தொடங்கிய டைசன், 5 ஆண்டுகள் கழித்து, 38ஆவது போட்டியில்தான் முதல் தோல்வியையே சந்தித்தார். 1992இல் பாலியல் வன்புணர்வுக் குற்றம் சாட்டப்பட்டு, 6 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற டைசன் 3 ஆண்டுகளில் விடுவிக்கப்பட்டதும், மீண்டும் சாம்ப்பியன் பட்டங்களை வென்றார். 37 வயதில், தோற்று விடுவார் என்று கணிக்கப்பட்ட போட்டியில் கடைசியாகப்பெற்ற தொழில் முறை வெற்றியைக்கூட, முதல் சுற்றிலேயே, அதுவும் வெறும் 49 நொடிகளில் நாக் அவுட் மூலம் பெற்ற டைசன், கோடிக்கணக்கான டாலர்களை ஈட்டினாலும், 2003இல் திவாலானார் என்பதும், குத்துச்சண்டையில் கவனம் செலுத்தி வாழ்க்கை இழந்துவிட்டதாகப் பின்னாளில் வருந்தினார் என்பதும் குறிப்பிடவேண்டியவை. (டைசனில் தொடங்கி குத்துச்சண்டை வரலாற்றை எழுதும் முயற்சியை டைசன் தோற்க டித்துவிட்டதால், குத்துச்சண்டை வரலாறு மார்ச் 5இல்!) இந்நாள் நவ. 23 இதற்கு முன்னால் -நவம்பர் 23, 2019 […] 1890 - உலகின் முதல் ஜூக்பாக்ஸ், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில், பேலைஸ் ராயேல் சலூன் என்ற கேளிக்கை விடுதியில் நிறுவப்பட்டது. சலூன் என்ற ஆங்கிலச் சொல், ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டிற்கான, (உதாரணமாக மது, கேளிக்கை, விளையாட்டுகள், சூதாட்டம் போன்றவை நடத்தப்படும்) பொது அரங்கினையும், ஓட்டுனர் பகுதியிலிருந்து பயணிகள் பகுதி பிரிக்கப்பட்ட கார்களையும் குறிக்கும். சலோன் என்ற ஆங்கிலச்சொல் அலங்காரம் (குறிப்பாக சிகை) செய்யுமிடத்தையும், பெரிய வீட்டின் வரவேற்பறையையும் குறிக்கும். ஜூக்பாக்ஸ் என்பது, இணையத்தின் வருகைக்குமுன் நமக்கு(இந்தியர்களுக்கு) அதிகம் பரிச்சயமில்லாத பெயர். ஆனால், மேற்கத்திய நாடுகளில், கேளிக்கை விடுதி போன்ற இடங்களில், விரும்பிய இசையைத் தேர்ந்தெடுத்துக் கேட்பதற்காக, பொதுவாக நாணயங்கள்மூலம் இயக்கப்பட்டு, மிகப்பெரிய அளவில் புழக்கத்திலிருந்த கருவி. இதற்கு முன்னரே பிளேயர் பியானோ என்ற தானியங்கி இசைக்கருவி புழக்கத்திலிருந்தாலும், 1877இல் எடிசன் கண்டுபிடித்த போனோக்ராஃப் கருவி இசையைப் பதிவுசெய்யும் வசதியை அளிக்க, 1889இல் நாணயத்தால் இயக்கும் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட, இவை நாணயம் போட்டு இசை கேட்கும் கருவிக்கு வழிவகுத்தன. விரும்பிய இசையை வீடுகளில் கேட்பதற்கான வசதிகள் பெரும் செல்வந்தர்கள் மட்டுமே பெற்றிருந்த அக்காலத்தில், தேர்ந்தெடுத்து இசை கேட்பதற்கான வசதி மிகப்பெரிய முன்னேற்றமாகப் பார்க்கப்பட்டது. இந்த முதல் ஜூக்பாக்சில், ஸ்பீக்கர்கள் இன்றி, ஸ்டெதாஸ்கோப் போன்று பொருத்தப்பட்டிருந்த நான்கு குழல்களை நான்குபேர் காதில் மாட்டிக்கொண்டு இசையைக் கேட்கலாம். 5 செண்ட் நிக்கல் நாணயம் 20 சேர்ந்ததுதான் ஒரு டாலர். ஒரு நிக்கல் நாணயத்தால் இயங்கிய இக்கருவியில், முதல் ஆறு மாதங்களில்மட்டும் ஆயிரம் டாலருக்குமேல் வசூலானது என்பதிலிருந்து, இதற்கான வரவேற்பு புரியும். பின்னர் ஒன்றுக்கு மேற்பட்ட இசைத்தட்டுகளை தனித்தனி போனோக்ராஃப் கருவிகளிலும், அதன்பின் இசைத்தட்டுகளை மாற்றும் வசதியுடைய ஒரே கருவியுடனும் உருவாக்கப்பட்ட இந்த ஜூக்பாக்சில், எந்த இசையை எவ்வளவு பேர் கேட்டார்கள் என்று கணக்கிடும் வசதியிருந்ததால், இசைத்தட்டு வெளியீட்டாளர்களின் முக்கிய சந்தையாக இருந்தது. வானொலி, ஒலிநாடா வரவால் மதிப்பிழக்கத் தொடங்கியது. - அறிவுக்கடல் இந்நாள் நவம்பர் 24 இதற்கு முன்னால் -நவம்பர் 24, 2019 1832 - அமெரிக்கக் கூட்டரசின் வரிவிதிப்புச் சட்டங்களான 1828, 1832இன் டாரிஃப்கள் தங்கள் நாட்டை (மாநிலத்தைத்தான்!) கட்டுப்படுத்தாது என்று அறிவிக்க, ‘செல்லாத தாக்கும் அவசரச்சட்டத்தை’ தெற்கு கரோலினா மாநிலம் இயற்றி யதையடுத்து, அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின் ‘செல்லாத தாக்கும் சிக்கல்’ தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே யிருந்த நெப்போலியப் போர்களின்போது, ஐரோப்பியக் கண்டத்திற்கு வணிகக் கப்பல்களைச் செல்லவிடாத முற்றுகைகள் நிலவின. இதனால், அங்கு ஏற்றுமதிகள் எதுவும் செல்ல இயலாத நிலையில், இங்கிலாந்து வியாபாரிகள் தங்கள் பொருட்களை மிகக் குறைந்த விலைக்கு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தனர். அவ்வாறான குறைந்த விலை என்பது, அமெரிக்காவில் உற்பத்தி செய்வதை விடக் குறைவானதாக இருந்ததால், ‘பாதுகாப்புவாத வரிவிதிப்பு’ முதன்முதலில் அமெரிக்கப் பாராளுமன்றத்தால் 1816இல் அறி விக்கப்பட்டது. (பாதுகாப்புவாதம் என்பது, இறக்குமதிகளால் உள்நாட்டுத் தொழில்கள் பாதிக்காமலிருக்க, இறக்குமதிப் பொருட்களுக்கு மிக அதிக வரிகள் விதிப்பதாகும். இது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்துவதாக, வரலாற்று அனுபவங்களிலிருந்து பொருளாதார அறிஞர்கள் குறிப்பிடு கின்றனர்.) 1816இல் விதிக்கப்பட்ட இவ்வரிகள் 1824, 1828, 1832 சட்டங்களில் கடுமையாக உயர்த்தப்பட்டன. இறக்குமதி செய்யப்பட்ட சில பொருட்களுக்கு 38 சதவீதம் வரையும், சில மூலப்பொருட்களுக்கு 45 சதவீதம்வரையும்கூட வரிகள் விதிக்கப்பட்டன. இது கூட்டரசின் வரி வருவாயை உயர்த்தவில்லை யென்பதுடன், பெரும்பாலும் விவசாய மாநிலங்களாக இருந்த தென் மாநிலங்கள், பிற பொருட்களுக்கு இறக்குமதியை நம்பி யிருந்த நிலையில், கடும் நெருக்கடியைச் சந்தித்தன. இந்த நெருக்கடி களால் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வெள்ளையர்கள், தங்கள் அடிமைகளுடன் தங்கள் மாநிலத்தைவிட்டு வெளியேறியதால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட தெற்கு கரோலினா, அமெரிக்காவின் வரி விதிப்புச் சட்டம் தங்கள் நாட்டின்(!) எல்லைக்குள் செல்லாது என்று சட்டமியற்றிது. கூட்டரசின் (அமெரிக்க!) ராணுவத்தை அனுப்பி, வரிவிதிப்பை நடைமுறைப்படுத்துவோம் என்று குடியரசுத்தலைவர் ஆண்ட்ரூ ஜாக்சன் எச்சரித்ததையடுத்து, வரிவிதிப்பை மறு பரிசீலனை செய்வதை ஏற்று, அவசரச்சட்டத்தை தெற்கு கரோலினா ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து 1833இல் இயற்றப்பட்ட வரி விதிப்புச் சட்டம், விட்டுக்கொடுத்தல் சட்டம் என்றே குறிப்பிடப்படு கிறது. மாநிலங்களாக இன்றி நாடுகளின் கூட்டமைப்பாக உரு வானதால், மாநிலங்கள் தனித்தனிச் சட்டங்களைக் கொண்டிருக்கிற அமெரிக்காவில், வேறு பல பிரச்சினைகளின்போதும் இவ்வாறு கூட்டரசின் சட்டத்தை மாநிலங்கள் ஏற்காத நிலை யேற்பட்டிருந்தாலும், அமெரிக்க உச்ச நீதிமன்றம் எல்லாச் சூழல்களி லும் அதைத் தவறு என்றே தீர்ப்பளித்துள்ளது. - அறிவுக்கடல் இந்நாள் நவ. 25 இதற்கு முன்னால் -நவம்பர் 25, 2019 […] 1839 - புயலைக் குறிக்க, சைக்ளோன் என்ற ஆங்கிலச் சொல் உருவாகக் காரணமான ஒரு பேரழிவுப் புயல், கொரிங்கா என்ற துறைமுக நகரைத் தாக்கியது. இந்தப் புயலின் பேரழிவுக்குப்பின் மீண்டெழ முடியாத அந்நகரம் இன்று ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஒரு சிறு கிராமமாக எஞ்சியுள்ளது. காற்றின் வேகம் போன்றவை கணிக்கப்பட்டாத இந்தப் புயலின்போது 40 அடி உயரத்திற்கு நீர்மட்டம் உயர்ந்து, கப்பல்களும், படகுகளுமாக சுமார் இருபதாயிரம் கலங்கள் நகருக்குள் அடித்துவரப்பட்டன. உலகம் முழுவதும் இதுவரை ஏற்பட்டுள்ள வெப்பமண்டலப் புயல்களில், மூன்றாவது மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திய இந்தப் புயலில் சுமார் 3 லட்சம் பேர் உயிரிழந்தனர். 1881இல் வியட்னாமில் 3 லட்சம் பேரை பலிவாங்கிய ஹைஃபோங் சூறாவளியும் இதற்கிணையாக மூன்றாவது இடத்தில் குறிப்பிடப்படுகிறது. உலகம் முழுவதும் இதுவரை ஏற்பட்டுள்ள, மிக அதிக உயிர்ப் பலிகொண்ட 10 புயல்கள், சூறாவளிகள் முதலானவற்றில், 7 வங்காள விரிகுடாவில்தான் ஏற்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பாக, 1789இல் கொரிங்காவைத் தாக்கிய ஒரு பெரும் புயலில் சுமார் 20 ஆயிரம் பேர் பலியானாலும், மீண்டெழுந்த அந்தத் துறைமுக நகரம், 1839 புயலுக்குப்பின் (தனுஷ்கோடியைப் போன்று!), மறுகட்டுமானம் செய்யப்படாமல் சிறிய கிராமமாக சுருங்கிப்போனது. இப்பகுதியில் ஏற்படும் புயல்களைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை ஜர்னல் ஆஃப் த ஆஷியாட்டிக் சொசைட்டிக்கு எழுதியபோதுதான், ஹென்றி பிடிங்டன், சைக்ளோன் என்ற சொல்லை உருவாக்கினார். ஆங்கிலேய வணிகக் கப்பல் தளபதியாக வங்கத்திற்கு வந்த இவர் அங்கேயே தங்கியதுடன், புயல்களில் சிக்கிய பல கப்பல்லகளை ஆய்வு செய்து, புயலின் மையப்பகுதி அமைதியாக இருப்பதாகவும், அதன் வெளிப்பகுதி புவியின் தெற்கு அரைக்கோளத்தில் கடிகாரச் சுற்றிலும், வடக்கு அரைக்கோளத்தில் எதிர்ப்புறமாகவும் சுழல்வதைக் கண்டறிந்தார். பாம்பு உடலைச் சுற்றுவதுபோல என்பதைக் குறிக்க சைக்ளோன் என்ற சொல்லை உருவாக்கிய இவர், புயல்களை மாலுமிகள் எதிர்கொள்ள வழிகாட்டும் நூலையும் எழுதினார். வங்கத்தின் நிலவியல் அருங்காட்சியக் காப்பாளராகவும் இருந்த பிடிங்டன், புயலால் தாக்கப்படும் வாய்ப்புகள் அதிகமென்பதால், கல்கத்தாவின் தென்கிழக்குப் பகுதியில் துறைமுகம் அமைக்க வேண்டாமென்று அறிவுறுத்தினாலும், 1858இல் அவர் மறைவுக்குப்பின் அமைக்கப்பட்ட அத்துறைமுகம் 1867இல் ஏற்பட்ட புயலில் அழிந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நாள் நவ. 26 இதற்கு முன்னால் -நவம்பர் 26, 2019 […] 1977 - புவியின் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஒன்றில் வேற்றுக் கிரகவாசிகள் குறுக்கிட்டு, எச்சரிக்கைச் செய்தியை ஒலிபரப்பியதாக நம்பப்பட்ட நிகழ்வு இங்கிலாந்தில் நடைபெற்றது. இங்கிலாந்தின் இண்டிபெண்டண்ட் பிராட்காஸ்ட்டிங் அத்தாரிட்டி(ஐபிஏ) என்ற ஒழுங்காற்று அமைப்பின் கட்டுப் பாட்டிலிருந்த ஹன்னிங்டன் ஒளிபரப்பு மையத்திலிருந்து ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்த செய்தியறிக்கையில் மாலை 5.10 மணிக்கு இடையூறு ஏற்பட்டது. முதலில் படம் சற்றுக் குலுங்கியபின், குழப்பமான ஒலிகள் கேட்டு, ஒளிபரப்பின் ஒலி மட்டும், சிதைவுற்ற ஒலிக்கு மாறி, சற்றேறக்குறைய 6 நிமிடங்களுக்கு ஒரு கரகரப்பான குரலில் ஒருவர் பேசியது ஒலிபரப்பாகியது. தன் பெயர் வ்ரில்லியன் என்றும், அஷ்தார் பால்வீதி மண்டல பாதுகாப்புத்துறையின் பிரதிநிதி என்றும் அறிமுகப் படுத்திக்கொண்டார். வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய கருதுகோள்களை உருவாக்கிய வர்களுள் ஒருவரான வான் டெசல், அஷ்தார் என்னும் வேற்றுக்கிரகவாசிகளைப் பற்றி, முதன்முதலாக 1952இல் குறிப்பிட்டார். கலிஃபோர்னியாவின் மொஜாவே பாலைவனத்தில், அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களை(யுஎஃப்ஓ-பறக்கும் தட்டு!) சந்திப்பதற்கான தளம் ஒன்றை 1947இல் உருவாக்கிய இவர், 1952இல் அஷ்தார்களுடன் தொலையுணர்வின்மூலம்(டெலிபதி!) பேசியதாக அறிவித்ததைத்தொடர்ந்து இப்பெயர் புகழ்பெற்றது. இந்தப் பெயரைத்தான் தொலைக்காட்சி ஒளிபரப்பின் இடையில் ஊடுருவியவர் பயன்படுத்தினார். புவிக்கோளில் வசிப்பவர்களின் தவறுகளால் ஊழிக்காலம் நெருங்கிவிட்டதாகவும், அது பல்வேறு திருத்த நடவடிக்கைகளை புவியில் செய்து மனித இனத்தின் விதியை நிர்ணயிக்கும் என்றும், மனிதர்களின் தவறுகள் புவியைத் தாண்டித் தங்கள் கோள்களையும் பாதிக்கிற அழிவுகளை உருவாக்கத் தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்த அந்த உரை, அந்த அழிவுகளைத் தடுக்க, தீமையான ஆயுதங்கள் அனைத்தும் ஒழிக்கப்படவேண்டும் என்றும் எச்சரித்தது. இதைத் தொடர்ந்து, அச்சமுற்ற மக்கள் ஏராளமான தொலைபேசி அழைப்புகளை ஒளிபரப்பு நிலையத்திற்குச் செய்ததால், மறுநாளின் செய்தித்தாள்களில், யாரோ ஒரு வதந்தி பரப்புபவர், ஒளிபரப்பியைக் கைப்பற்றி, வதந்தி பரப்பியதாகவும், இவ்வாறு நிகழ்வது அதுவே முதல்முறையென்றும்(!) ஐபிஏ விளக்கமளித்தது. உலகம் முழுவதும் பரவிய இந்தச் செய்தி அமெரிக்காவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. - அறிவுக்கடல் இந்நாள் நவ. 27 இதற்கு முன்னால் -நவம்பர் 27, 2019 […] 1095 - முதல் சிலுவைப் போராகத் தற்போது குறிப்பிடப்படும் போருக்கு, க்ளெர்மாண்ட் அவை என்ற ழைக்கப்படும் ஒரு கூட்டத்தில் திருத்தந்தை இரண்டாம் அர்பன் அழைப்பு விடுத்தார். புனித பூமியை(ஜெருசலேம்), இஸ்லாமி யர்களிடமிருந்து மீட்பதற்காக 1095 இலிருந்து 1291வரை நடைபெற்றவை சிலுவைப் போர்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. புனித பூமி என்று குறிப்பிடப்படும் இடம், தற்காலத்திய இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் பகுதிகள், ஜோர்டானின் மேற்கு, லெப னானின் தெற்கு, சிரியாவின் தென்மேற்குப் பகுதிகள் அடங்கியது. கிறித்து சிலுவையில் அறையப்பட்டதும், உயிர்த்தெழுந்ததும் இங்குதான் என்பதால் கிறித்தவர்களுக்கும், இஸ்ரா-மிராஜ் ஒரே இரவுப் பயணத்தில் முகம்மது நபி இங்கிருந்துதான் விண்ணுலகம் சென்று இறைவனைச் சந்தித்துப் பேசியதாக நம்பப்படுவதால் இஸ்லாமி யர்களுக்கும், (கிறித்துவுக்குச் சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு!) அரசர் சாலமன் முதல் கோயிலைக் கட்டிய இடம் என்பதால் யூதர்களுக்கும் இது புனித பூமியாக உள்ளது. தற்காலத்திய எபிரேய(ஹீப்ரூ), அரேபிய மொழிகளில் அமைதி என்ற பொருளுடைய சலம் அல்லது ஷலோம் என்ற சொல்லிலிருந்து, அமைதியான குடியிருப்பு என்ற பொருளில் ஜெருசலேம் என்ற பெயர் உருவானதாகக் குறிப்பிடப்படுகிறது. வழிநடக்குமிடம் என்ற பொருள்கொண்ட யிரே, அமைதி என்ற பொருள்கொண்ட ஷலேம் ஆகிய எபிரேயச் சொற்கள் கடவுளால் இணைக்கப்பட்டு ஜெருசலேம் என்ற பெயர் உருவானதாக எபிரேய விவிலியம் குறிப்பிடுகிறது. பைசாந்தியப் பேரரசை வீழ்த்தியபின் அனடோலியாவின் பெரும்பகுதியைக் கைப்பற்றிய செல்ஜூக் துருக்கி யர்கள் 1073இல் ஜெருசலேமைக் கைப்பற்றினர். 1099இல் ஜெருசலேமை மீட்ட பின்னர் பதிவு செய்யப்பட்ட தகவல்களில், புனித மண்ணை மீட்பதற்கான போர் என்று குறிப்பிடப்பட்டாலும், க்ளெர்மாண்ட் அவையில் திருத்தந்தை இரண்டாம் அர்பன் நிகழ்த்திய உரையில் இதைப்பற்றிய தகவல்கள் இல்லையென்றும் கூறப்படுகிறது. விவசாயிகளும், பொதுமக்களுமாகத் துருக்கியர்களுக்கெதிராகத் திரண்டு சென்ற கூட்டம், வழியில் ரைன்லாந்தில் யூதர்களையும் தாக்கிச்சென்றது. பொதுமக்கள் சிலு வைப்போர் என்றழைக்கப்படும் இந்தப் படை தோல்வியுற்றபின், (ஐரோப்பிய) இளவர சர்களின் சிலுவைப்போர் என்றழைக்கப்படும் முறையான படைகள் போரிட்டுத்தான் புனித பூமியை மீட்டன. மீண்டும் 1146இல் துருக்கியர்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து 1291வரை மொத்தம் 9 சிலுவைப்போர்களும் நடைபெற்றன. - அறிவுக்கடல் இந்நாள் நவ. 28 இதற்கு முன்னால் -நவம்பர் 28, 2019 […] 1782 - அமெரிக்கக் குடியேற்றங்கள் அனைத்துக்குமான முதல் நன்றி நவிலல் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான வாஷிங்டனுக்கு முன்பே கணக்கில் வராத ஜனாதிபதிகளாக (இத்தொடரில் 2018 நவம்பர் 5 பார்க்க!) இருந்தவர்களில் ஒருவரும், இரண்டு காண்டினெண்டல் காங்கிரஸ்களுக்கும் பிறகு அமைக்கப்பட்ட ‘கூட்டமைப்பின் நாடாளுமன்றத்தின்’ முதல் தலைவருமான ஜான் ஹேன்சன் இதற்கான அறிவிப்பை, நவம்பர் 3இல் பதவிக்காலம் முடிவடைவதற்குமுன் வெளியிட்டார். நன்றி நவிலல் நாள் என்பது அடிப்படையில் (பொங்கல் போன்ற) ஓர் அறுவடைத் திருநாளாகும்! புதிய உலகத்திற்கு(அமெரிக்காவிற்கு!) வந்த ஆங்கிலேயர்களில் 53 பேர் தங்கள் முதல் நன்றி நவிலலை 1621 அக்டோபரில், 90 அமெரிக்கத் தொல்குடியினருடன் கொண்டாடினர். அமெரிக்காவிலிருந்த குடியேற்றங்கள் தனித்தனியாகக் கொண்டாடிக்கொண்டிருந்த இந்த நன்றி நவிலல் விழாவை, ஒருங்கிணைத்து ஒரே நாளில் கொண்டாடச் செய்வதற்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, முதல் குடியரசுத்தலைவராக வாஷிங்டன் 1789இல் பதவியேற்றபின், தங்களுக்கு பல்வேறு நன்மைகளைச் செய்த கடவுளுக்கு, அவ்வாண்டின் நவம்பர் 26(கடைசி வியாழன்) நன்றி நவிலல் நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று நாடாளுமன்றம் முடிவெடுத்தது. தொடர்ச்சியாக இல்லா விட்டாலும், அரசால் அறிவிக்கப்படுகிற ஆண்டுகளில் கடைப்பிடிக்கப்பட்டுவந்த இந்த நன்றி நவிலல் நாள், இறை என்பது உலகின் நடைமுறைகளில் தலையிடுவதில்லை என்ற இயற்கைச் சமயக் கொள்கையுடையவரான தாமஸ் ஜெஃபர்சன் 1801இல் குடியரசுத்தலைவரானபின் அறிவிக்கப்படவில்லை. அவருக்குப்பின் குடியரசுத் தலைவரான ஜேம்ஸ் மேடிசன், 1814இல் இம்முறையை புதுப்பித்தார். மாநிலங்கள் வேறுபட்ட நாட்களில் இதைக் கடைப்பிடித்துவந்த நிலையில், அறிவிக்கப்படாத தேசிய விடுமுறை நாளாக இருந்துவந்த, அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்தின் கடைசிப் படைகள் வெளியேறிய நவம்பர் 25இல் 1847இன் நன்றி நவிலல் நாளை நியூயார்க் கடைப்பிடித்தது வரவேற்பைப் பெற்றது. 1863இல் ஆண்டுதோறும் நவம்பர் கடைசி வியாழன் நன்றி நவிலல் நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்த ஆப்ரஹாம் லிங்கன், அதனைத் தேசிய விடுமுறையாகவும் அறிவிக்க, அதனையொட்டியே வரும் வெளியேற்ற நாள் கொண்டாட்டம் மறைந்தது. - அறிவுக்கடல் இந்நாள் நவ. 29 இதற்கு முன்னால் -நவம்பர் 29, 2019 […] 1830 - ஆக்கிரமித்திருந்த ரஷ்யப் பேரரசுக்கெதிராகப் போலந்தில் நடைபெற்ற, நவம்பர் எழுச்சி தொடங்கியது. 1569இல் உருவான போலந்து-லிது வேனிய காமன்வெல்த் என்பது(விரிவாக வரும் ஜூலை 1இல்), அக்காலத்திய ஐரோப் ்பாவில் பரப்பிலும், மக்கள் தொகையி லும் மிகப்பெரிய நாடுகளுள் ஒன்றாக விளங்கியது.இப்பகுதியின் முக்கியசக்திகளுள் ஒன்றாக விளங்கிய இந்நாட்டில், 18ஆம்நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களைத் தொடர்ந்து, 1715இல் பிரபுக்களே அரசருக்கெதிராகப் போர் தொடுக்க, ஜார் மகா பீட்டர் தலைமையிலான ரஷ்யா நடுவராக நுழைந்தது. உருவாக்கப்பட்ட ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுவதை மேற்பார்வையிடவேண்டிய பொறுப்பு இருப்பதாகக்கூறி, ரஷ்யப் படைகள் போலந்தில் நிறுத்தப்பட்டன. ஐரோப்பிய அதிகாரச் சமநிலையில் இந்நாட்டின் நிலை முக்கியமானதாக இருந்ததால், இதை மாற்றமின்றிப் பாதுகாப்பது என்று 1730இல் ப்ரஷ்யா, ரஷ்யா, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் செய்துகொண்ட ரகசிய ஒப்பந்தம், மூன்று கருப்புப் பருந்துகளின் கூட்டணி என்று குறிப்பிடப்படுகிறது. 1768-74இல் நடைபெற்ற ஒட்டோமான்களுக்கெதிரான ரஷ்ய-துருக்கியப் போரின்போது, 1772இல் சில பகுதிகளைத் தன் கட்டுப்பாட்டுக்குள் ரஷ்யா கொண்டுவந்தது, முதல் போலந்துப் பிரி வினை என்றழைக்கப்படுகிறது. ரஷ்யாவும், பிரஷ்யாவும் 1793இல் சில பகுதிகளையும், இவற்றுடன் ஆஸ்திரியாவும் சேர்ந்து 1795இல் எஞ்சிய பகுதிகளையும் பிரித்துக்கொண்ட இரண்டாவது, மூன்றாவது போலந்துப் பிரிவினைகளுக்குப்பின், போலந்து என்ற நாடே இல்லாமற்போனது. ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலிருந்த நாடாளுமன்ற முடியரசு (காங்கிரஸ் கிங்டம்) என்றழைக்கப்பட்ட போலந்தின் பகுதிகள், அக்காலத்தில் இருந்த வற்றிலேயே மிகச்சிறந்த அரசமைப்புச்சட்டங்களுள் ஒன்றைக்கொண்டு, தன்னாட்சி யுடன் இருந்தன. ரஷ்யாவின் முதலாம் அலெக்சாண்டர், இந்த அரசமைப்புச் சட்டத்திற்கும், இப்பகுதியின் நாடாளுமன்றத்திற்கும் கட்டுப்படாமல் பல நடவடிக்கை களை மேற்கொண்டதைத் தொடர்ந்தே இந்த நவம்பர் எழுச்சி ஏற்பட்டது. ஏறத்தாழ ஓராண்டுக்கு நடைபெற்ற இந்த எழுச்சி ஒடுக்கப்பட்டது. போலிய(போலிஷ்) கேள்வி என்று வரலாற்றில் குறிப்பிடப்படும் போலந்தின் இருப்பே கேள்விக்குறியான இந்நிலை முதலாம் உலகப்போர்வரை தொடர்ந்தது. ஹிட்லர் போலந்தை ஆக்கிரமித்ததிலிருந்தே தொடங்கிய இரண்டாம் உலகப்போரின்போதும் உயிர்பெற்ற இக்கேள்வி, சோவியத்தால்தான் தீர்க்கப்பட்டது. - அறிவுக்கடல் இந்நாள் நவ. 30 இதற்கு முன்னால் -நவம்பர் 30, 2019 1782 - அமெரிக்க விடுதலைப்போரை முடிவுக்குக் கொண்டுவந்த, பாரிஸ் ஒப்பந்தத்தின் வரைவு உருவாக்கப்பட்டது. இதுவே, முதல் ஆங்கிலேயப் பேரரசின் முடிவைத் தொடக்கிவைத்து, (புதிய நிலப்பரப்புகளின்) கண்டுபிடிப்புக் காலம் என்றழைக்கப்படுகிற 15,16ஆம் நூற்றாண்டுகளில், போர்ச்சுகலும், ஸ்பெயினும் கடற்பயணங்கள்மூலம் உலகின் பல்வேறு பகுதிகளில் தங்கள் ஆட்சியை உருவாக்கின. கடல்கடந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளிலிருந்து இந்நாடுகளில் குவிந்த செல்வமே, இங்கிலாந்து, பிரான்சு, நெதர்லாந்து(டச்சுக்காரர்கள்) ஆகியவற்றையும் இதில் இறக்கியது. 16ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், புதிய நிலப்பரப்புகளைக் கண்டறிய மட்டுமின்றி, செல்வங்களுடன் திரும்பும் பிற நாடுகளின் கப்பல்களைக் கொள்ளையிடவும் இங்கிலாந்து அரசு அனுமதியளித்தது! தொடக்கத்தில், கடல் கடந்த பகுதிகளை உரிமை கோரினாலும், குடியேற்றங்களை உருவாக்கத் தவறிய இங்கிலாந்து, 1700களின் தொடக்கத்தில் வடஅமெரிக்காவின் முக்கியச் சக்தியாக மாறியது. 1757இன் ப்ளாசிப் போருக்குப்பின் முகலாயர்களை ஓரங்கட்டி, இந்தியத் துணைக் கண்டத்திலும் காலூன்றியது. 1583இலிருந்து, அமெரிக்க விடுதலை ஒப்பந்தம் கையெழுத்தான 1783 வரையானது முதல் ஆங்கிலேயப் பேரரசு என்று குறிப்பிடப்படுகிறது. அமெரிக்கா கைவிட்டுப்போனதும், ஆசியா, ஆஃப்ரிக்கா, பசிஃபிக் பகுதிகள் ஆகியவற்றின்மீது கவனம் செலுத்தத்தொடங்கிய இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில், 1783-1815 காலத்தில் இருந்தவை இரண்டாம் ஆங்கிலேயப் பேரரசு என்று குறிப்பிடப்படுகின்றன. 1815-1914 காலம், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் நூற்றாண்டு என்று குறிப்பிடப்படுகிறது. 1900களின் தொடக்கத்தில் புவியின் மொத்த நிலப்பரப்பில் 24 சதவீதத்துக்கு, உலகம் முழுவதும் பரவியிருந்த இங்கிலாந்துப் பேரரசின் ஏதாவதொரு பகுதி பகலாக இருந்ததால், சூரியன் மறையாத பேரரசு என்று பெருமிதப்பட்டுக்கொண்டது. உலக மக்கள்தொகையில் 23 சதவீதத்தை தங்களது ஆளுகையின்கீழ் கொண்டு, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகின் மிகப்பெரிய பேரரசாகவும், உலகின் முதற்பெரும் சக்தியாகவும் இது விளங்கியது. 1783இல் அமெரிக்காவுக்குப்பின், 1919இல் விடுதலைப்பெற்ற ஆஃப்கானிஸ்தான் தொடங்கி 63 நாடுகள் இங்கிலாந்திடமிருந்து விடுதலைப்பெற்றிருக்கின்றன. 1997இல் ஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைத்ததுடன் இங்கிலாந்துப் பேரரசு முழுமையாக முடிவுக்கு வந்தது. 1995இல் நடைபெற்ற வாக்கெடுப்பில் இங்கிலாந்திடமிருந்து விடுதலைப்பெறுவதை 73.6 சதவீத பெர்முடா மக்கள் ஏற்காததால், இங்கிலாந்தின் ஆளுகையின்கீழேயே பெர்முடா மட்டும் இன்றுமிருக்கிறது. கிரேட் பிரிட்டன் ஆகக் காரணமான வடஅயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகியவையும் அவ்வாறே மக்கள் விருப்பத்  தின்பேரில் இங்கிலாந்தின் பகுதிகளாகத் தொடர்கின்றன. - அறிவுக்கடல் இந்நாள் டிச. 01 இதற்கு முன்னால் -டிசம்பர் 1, 2019 […] 1913 - கார் உற்பத்தியில் மட்டுமின்றி, அனை த்து உற்பத்தித்துறைகளிலும் மிகப்பெரிய புரட்சியை ஏற் படுத்திய, கன்வேயர் பெல்ட் மீது நகரும் மேடைகளைக் கொண்ட, கோப்பு வரிசை (அசெம்ப்ளி லைன்) என்பதை, உலகிலேயே முதன்முறையாக ஹென்றி போர்டு தன் தொழிற்சாலையில் நடைமுறைப்படுத்தினார். (கோர்ப்பு, கோர்த்தல், கோர்வை ஆகியவை தவறானவை. கோப்பு, கோத்தல், கோவை என்பவையே சரியான தமிழ்ச்சொற்கள்.) ஏற்கெ னவே, அவ்வாண்டின் அக்டோபரில், சில பாகங்களின் தயாரிப்பில் கோப்பு வரிசையை போர்டு அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், இந்த முழுத் தயாரிப்புக்குமான கோப்பு வரிசை, ஒரு காரின் தயாரிப்பு நேரத்தை பன்னிரண்டரை மணி நேரத்திலிருந்து ஒன்றரை மணி நேரமாகக் குறைத்தது. தொழிற்புரட்சிக்கு மிக நீண்ட காலத்துக்கு முன்னரே, சீனாவில், விவசாயக் கருவிகள், ஆயுதங்கள் முதலான வற்றின் பெருவீத உற்பத்தியில், முழுக் கருவியையும் ஒருவரே உருவாக்காமல், தொழிலாளர்கள் குறிப்பிட்ட பாகத்தை மட்டும் உருவாக்கும் ‘வேலைப் பிரிவினை’ என்பது நடைமுறையிலி ருந்துள்ளது. 1100களில், வெனிஸ் குடியரசின் கப்பல் கட்டும் தளமான ’வெனிசின் ஆயுதத்தொழிற்சாலை’யில், 16 ஆயிரம் தொழிலாளர்கள், அடுத்தடுத்த இடங்களில் ஒவ்வொரு பாகமாகக் கோத்து, ஒரு நாளைக்கு ஒரு (கேலினி என்னும் துடுப்பும், பாய்மரமும் கொண்ட) கப்பலை உருவாக்கியிருக்கிறார்கள். தொழிற்புரட்சிக்கால உற்பத்தி உயர்வின்போது, வேலைப் பிரிவினை பரவியது. நெப்போலியப் போர்க்காலத்தில், இங்கிலாந்து கடற்படைக்குத் தேவையான கருவி களை உருவாக்க, மார்க் புரூனெல் என்பவரின் தொழிற்சாலையில் அமைக்கப்பட்டதே உலகின் முதல் வரிசையாகக் கோக்கும் தொழிற் சாலையாகும். அமெரிக்காவின் சின்சினாட்டியில் ஒரு கசாப்பு நிறுவனத் தில், மாமிசத்துக்காகக் கொல்லப்பட்ட விலங்கின் உடல் நகர்ந்து செல்ல, ஒவ்வொரு மேடையிலும் ஒரு தொழிலாளி குறிப்பிட்ட பாகத்தைப் பிரித்து பதப்படுத்தும் (பிரிப்பு வரிசை!) முறை இருந்தது. இதைப் பார்த்தே போர்டு தன் கோப்பு வரிசையை உருவாக்கினார். கார் உற்பத்தியில் அமெரிக்காவிலேயே ரேன்சம் ஒட்ஸ் என்பவர், தனது ஓல்ட்ஸ்மொபைல் நிறுவனத்தில், வரிசையாகக் கோக்கும் முறையை 1901இலேயே அறிமுகப்படுத்தியிருந்தாலும், தற்காலத்திய முறையை போர்டுதான் உருவாக்கினார். இந்தக் கோப்பு வரிசை, துறை சார்ந்த திறன்பெற்ற(ஸ்கில்ட்) தொழிலாளர்களின் தேவையை நீக்கிய தாலேயே, வாழ்க்கைச் செலவுகள் குறைவான வளரும் நாடுகளின் தொழி லாளர்களைக் குறைந்த கூலியில் பயன்படுத்திக்கொண்டு, அந்நாடுக ளுக்கு தொழிற்சாலைகள் இடம்பெயர முக்கியக் காரணியாகியது. அனைவருக்கும் கார் என்ற போர்டின் முழக்கத்தை நிறைவேற்றுமள வுக்கு கார் உற்பத்திச் செலவைக் குறைத்த கோப்பு வரிசை, இன்று அனைத்துத்துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. - அறிவுக்கடல் இந்நாள் டிச. 02 இதற்கு முன்னால் -டிசம்பர் 2, 2019 1851 - மீண்டும் குடியரசின் தலைவர் பதவிக்குப் போட்டியி டுதற்கான சட்டத்திருத்தத்திற்குப் போது மான ஆதரவு கிடைக்காததால், சுய ஆட்சிக் கவிழ்ப்பின்மூலம் பிரான்சின் இரண்டாவது குடியரசை முடிவுக்குக் கொண்டுவந்தார் மூன்றாம் நெப்போலியன். இவர் பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியனின் தம்பி மகன். நெப்போலியனின் மனைவியான பேரரசி ஜோசஃபினின், முதல் கணவருக்குப் பிறந்த மகள்தான் இவரின் தாய்! நெப்போலியன் மூலமாக ஜோசஃபினுக்குக் குழந்தையில்லாததால் ஜோசஃபினை விவாகரத்து செய்துவிட்டு, ஆஸ்திரியாயவின் மேரி லூயியைத் திருமணம் செய்தது, அவர்களுக்குப் பிறந்த மகனை இரண்டாம் நெப்போலியன் என்று அறிவித்தது, அவர் 21 வயதில் இறந்தது ஆகியவை இத்தொடரின் 2019 ஏப்ரல் 4இல் இடம்பெற்றுள்ளன. அதனால்தான் இந்த சார்லஸ் லூயி நெப்போலியன் போனபர்ட் மூன்றாம் நெப்போலியன் ஆனார். நெப்போ லியனை வீழ்த்திய கூட்டணி நாடுகள், போர்பன் மரபின் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்தி யிருந்தன. இதனை அகற்ற 1830இல் நடைபெற்ற ஜூலைப் புரட்சி, ஆர்லியன்ஸ் மரபின் அரசியல் சட்ட முடியாட்சியை ஏற்படுத்தியிருந்தது. நெப்போலியனின் வீழ்ச்சிக்குப்பின் ரோமிலும், பின்னர் தாயுடன் ஸ்விட்சர்லாந்திலும் வசித்த இவர், ஸ்விஸ் ராணுவத்தில் சேர்ந்து, நெப்போலியனைப்போல பீரங்கிப்படையில் அலு வலரானார். சிறையிலிருந்து தப்பிவந்த நெப்போலியனுக்கு மக்கள் திரண்டுவந்து ஆதர வளித்து நூறு நாள் ஆட்சி நடந்ததைப்போன்று தன்னையும் மக்கள் வரவேற்பார்கள் என்று கற்பனைசெய்துகொண்ட இவர், 1836இலும், 1840இலும் இருமுறை பிரெஞ்ச் ஆட்சியைக் கவிழ்க்க முயன்று, தோற்று, ஒருமுறை சிறையிலும் அடைக்கப்பட்டுத் தப்பிச்சென்று லண்டனில் வசிக்கவும் தொடங்கிவிட்டார். இரண்டாவது குடியரசை ஏற்படுத்திய 1848 புரட்சியின்போதுகூட லண்டனில் இருந்த இவர், அதன் முதல் பிரதிநிதிகள் தேர்தலிலும் பங்கேற்கவில்லை. ஆனால், தலைவர் தேர்தலில் போட்டியிட்டு, 74.2 சதவீத வாக்குகள் பெற்று வென்றதுடன், தன்னை இளவரசர்-குடியரசுத்தலைவர் என்று அழைத்துக்கொண்ட இவர், இரண்டாவதுமுறை தேர்தலில் பங்கேற்பதற்கான சட்டத்திருத்தம் தோல்வியுற்ற நிலையில், நெப்போலியன் பேரரசராக முடிசூட்டிக்கொண்ட டிசம்பர் 2ஐத் தேர்ந்தெடுத்து, அந்நாளில் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, அடுத்த ஆண்டின் அதே நாளில் நெப்போலியனைப்போன்றே தனக்குத்தானே பேரரசராக முடியும் சூட்டிக்கொண்டார். இந்நாள் டிச. 03 இதற்கு முன்னால் -டிசம்பர் 3, 2019 1967 - ஒரு மனிதரின் இதயத்தை மற்றொரு மனிதருக்குப் பொருத்திய உலகின் முதல் இதயமாற்று அறுவைசிகிச்சையை, தென்ஆப்ரிக்கா வின் கேப்டவுன் நகரிலுள்ள க்ரூட் ஷூர் மருத்துவமனை யில், கிறிஸ்ட்டியன் பர்னார்ட் என்ற மருத்துவர் செய்தார். மனித உடல் குறித்த முழுமையான அறிவியல் வளர்ச்சிக்கு முன்பே, உறுப்பு மாற்று சிகிச்சைகள் முயற்சிக்கப்பட்டிருக்கின்றன. வெளிப்பொருட்களை அனுமதிக்காத உடலின் நோயெதிர்ப்பு இயக்கம்பற்றி அறியாமல் செய்யப்பட்ட இச்சிகிச்சைகள் தோல்வியில் முடிந்தன. இதயம்தான் மனம், துணிவு ஆகியவற்றை நிர்ணயிக்கிறது என்று நம்பிய காலத்தில், கி.மு.4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பியன் சியாவோ என்ற சீன மருத்துவர் பலவீனமான உடலும், மனோதிடமும்கொண்ட ஒருவர், இதற்கு எதிர்மறையாகக்கொண்ட ஒருவர் ஆகியோரின் இதயங்களை மாற்றி அறுவைசெய்து, உடல், மன வலிமைகளைச் சமன்செய்ய முயற்சித்ததாக ஒரு குறிப்பு உள்ளது! ஒரே மனிதரின் திசுக்களை மாற்றும் சிகிச்சையை, கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் ஒருவரின் மூக்கை மாற்றியமைக்க இந்திய மருத்துவர் சுஷ்ருதா செய்ததாகவும் குறிப்பு உள்ளது. இத்தகைய சிகிச்சைகளின் வெற்றி குறித்து பதிவுகள் இல்லை. நவீன மருத்துவத்தின் தொடக்க காலங்களில் விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்குப் பொருத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு, தோல்வியில் முடிந்துள்ளன. ஒருவரின் சொந்தத் தோலை வேறிடத்தில் பொருத்தும் சிகிச்சை 1869இல் வெற்றிகரமாகியது. கருவிழிப்படலம் மாற்று சிகிச்சை 1905இல் வெற்றிபெற்றது. மற்றொருவரின் தோலைப் பொருத்தும் சிகிச்சை 1908இல் வெற்றியடைந்தது. உள்ளுறுப்புகளை மாற்றும் சிகிச்சைகளில் வெளிப்பொருள் ஏற்காமை என்பது 1900களின் தொடக்கத் தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. இறந்தவரின் சிறுநீரகத்தைப் பொருத்தும் முதல் சிகிச்சை 1930இல் செய்யப்பட்டாலும், தோல்வியுற்றது. 1954இல் ஜோசப் முர்ரே செய்த சிறுநீரக மாற்று அறுவை, இரட்டையர்களிடையே என்பதால், ஏற்காமை எழவில்லை. ஏற்காமை என்பது நோயெதிர்ப்பியக்கத்தின் விளைவு என்பது 1940இலும், நோயெதிர்ப்புக்குறைப்பு மருந்துகள்மூலம் இதனைத் தவிர்க்கலாம் என்பது 1951இலும் கண்டுபிடிக்கப்பட்டாலும், இதற்கான மருந்து 1970ல்தான் கண்டுபிடிக்கப்பட்டது. இச்செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ள முதல் இதயமாற்று சிகிச்சையிலும், 18 நாட்களில் நோயாளி இறந்துபோனார். நோயெதிர்ப்புக்குறைப்பு மருந்து பயன்பாட்டிற்கு வந்த 1980களுக்குப்பின், உறுப்பு மாற்று சிகிச்சைகள் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டின. இந்நாள் டிச. 04 இதற்கு முன்னால் -டிசம்பர் 4, 2019 […] 1791 - உலகின் முதல் ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாளான ‘தி அப்சர்வர்’ முதன்முறையாக வெளியானது. உலகின் மற்ற நாடுகளைப் போலன்றி, இங்கிலாந்தில் மட்டும் ஒரு வினோதமான நடைமுறை உள்ளது. அங்கு, பெரும்பாலான நாளிதழ்கள் ஞாயிறன்று வெளியாவதில்லை. அதனாலேயே ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாள்கள் என்பவை அங்கு வெளியாகின்றன. சில செய்தித்தாள் நிறுவனங்கள், தாங்களே ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாள்களை தற்போது வெளியிட்டாலும்கூட, அவை நாளிதழிலிருந்து மாறுபட்ட தனி செய்தித்தாளாகவே வெளியாகின்றன. உதாரணமாக, தி டைம்ஸ் நாளிதழை வெளியிடும் நிறுவனம், ஞாயிற்றுக்கிழமைகளில், தி சண்டே டைம்ஸ் என்ற இதழை வெளியிட்டாலும், அதில் வெளிவரும் செய்திகளை டைம்ஸ் நாளிதழின் செய்திகளாக அந்நிறுவனம் ஏற்பதில்லை. அதாவது, தனித்தனிப் பதிவு எண்கள், ஆசிரியர் குழுக்கள் என்று முழுமையாக தனித்தனி இதழ்களாகவே அவை நடத்தப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் செய்தித்தாள்கள் வராது என்பதால், தன் இதழுக்கு மிகப்பெரிய வரவேற்புக்கிடைக்கும், பெரும் பொருளீட்டலாம் என்ற எதிர்பார்ப்புடன் டபிள்யூ.எஸ்.போர்னி, 100 பவுண்டுகள் கடன் வாங்கி அப்சர்வர் இதழை தொடங்கினார். ஆனால், மூன்றாண்டுகளில் 1600 பவுண்டுகள் கடனாளியாகிப்போனார். கடன்களை அடைப்பதற்காக செய்தித்தாளை அரசுக்கு விற்பனை செய்ய விரும்பினாலும், அரசு வாங்கத் தயாராக இல்லை. மாறாக, மானியம் வழங்குவதாகவும், அரசுக்கு ஆதரவாக எழுதவேண்டுமென்றும் அரசு கூற, அரசுக்கு ஆதரவான செய்தித்தாளாக மாறிப்போனது. வேறு இதழ்களை நடத்திக்கொண்டிருந்த வில்லியம் க்ளமெண்ட் என்பவருக்கு 1814இல் விற்கப்பட்டாலும், அரசு மானியம் தொடர்ந்தது. 1819இல் 23 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு, 10 ஆயிரம் பிரதிகள் மாதிரிப் பிரதிகள் என்ற பெயரில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பெரிய மனிதர்களுக்கு வழங்கப்பட்டன. அவ்வாறு வழங்குவதற்காக அஞ்சல் ஊழியர்களுக்குக் கட்டணமும் வழங்கப்பட்டது! பலமுறை கைமாறிய இந்த செய்தித்தாளின் விற்பனை, முதல் உலகப்போர்க் காலத்தில் 2 லட்சம் பிரதிகளை எட்டியது. ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாளாக தனியாகவே 202 ஆண்டுகள் தொடர்ந்த இது, 1993இல் கார்டியன் ஊடகக் குழுமத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. 2005இல் தொடங்கப்பட்ட அப்சர்வர் ப்ளாக்-கில் நிர்வாக முடிவுகளை வெளியிட்டு, அவ்வாறு வெளியிட்ட முதல் செய்தித்தாளான அப்சர்வர், பாட்காஸ்ட் மூலம் ஒலிப்பதிவுகளை வெளியிட்ட முதல் செய்தித்தாளுமாகியது. 1791இலிருந்து வெளியான இதழ்களையும் இவ்விதழ் இணையத்தில் வெளியிட்டுள்ளது. இந்நாள் டிச. 05 இதற்கு முன்னால் -டிசம்பர் 5, 2019 […] 1848 - கலிபோர்னியாவில் ஏராளமான தங்கம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக, அமெரிக்கக் குடியரசுத்தலைவர் ஜேம்ஸ் போக், நாடாளுமன்றத்திற்குத் தெரிவித்தார். உண்மையில் 1848 ஜனவரியிலேயே கலிபோர்னியத் தங்க வேட்டை தொடங்கிவிட்டிருந்தது. பொதுவாக, (நதி உள்ளிட்ட) வண்டல்களில் படிந்து கட்டித் தங்கம் கிடைப்பதைத் தொடர்ந்து, அதை எடுப்பதற்காக ஏராளமான மக்கள் அப்பகுதியில் குவிவது தங்க வேட்டை என்றழைக்கப்படுகிறது. நிலம்-கனிமங்களின்மீதான உரிமைகள் வரையறுக்கப்படாத அக்காலங்களில், எடுப்பவர்களுக்கே அத்தங்கம் சொந்தம் என்பதால், அப்பகுதிகளுக்கு ஏராளமான மக்கள் குடிபெயர்வார்கள். தொடக்கத்தில், தட்டு போன்றவற்றில் சலித்தே எடுக்க முடிவதால் செலவின்றிக் கிடைக்கும் தங்கம், குறையக்குறைய செலவுகள் அதிகரித்து, தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எடுப்பதாக மாறும். ஜான் சுட்டர் என்பவரின் நிலத்தில் ஒரு மர அறுவை எந்திரத்தை நிறுவும் பணியிலிருந்த ஜேம்ஸ் மார்ஷல், ஒரு பளபளப்பான உலோகத் துண்டை 1848 ஜனவரி 24இல் கண்டெடுத்தார். இருவரும் ரகசியமாகச் சோதித்து தங்கம் என்று உணர்ந்தாலும், அப்பகுதியில் மிகப்பெரிய அளவில் விவசாயம் செய்ய விரும்பிய சுட்டர், அதற்கு இடையூறாகிவிடும் என்று கருதி, தங்கம் கிடைப்பதை ரகசியமாகவே வைத்துக்கொள்ள விரும்பினார். ஆனாலும், செய்தி வெளியே கசிந்து, அங்கு மக்கள் குவியத் தொடங்கினர். ஸ்பெயினிடமிருந்து மெக்சிகோ விடுதலையடைந்தபோது, அதன் பகுதியாக இருந்தது கலிபோர்னியா. அங்கிருந்த அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் போராடி அதனைத் தனிக்குடியர சாக்கியிருந்தனர். டெக்சாஸ் தொடர்பாக அமெரிக்காவுக்கும்-மெக்சிகோவுக்கும் நடைபெற்ற போரை 1848 பிப்ரவரி 2இல் முடிவுக்குக்கொண்டுவந்த ஒப்பந்தத்தின்படி கலிபோர்னியப் பகுதிகள் அமெரிக்காவுக்குச் சொந்தமாயின. இதற்கு ஒரு வாரம் முன்பே தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதால் ஏராளமான அமெரிக்கர்கள் ஏற்கெனவே அங்குக் குவியத்தொடங்கியிருந்தது, அதன்பின் மேலும் அதிகரித்து, பல்லா யிரக்கணக்கான அமெரிக்கத் தொல்குடியினர் கொல்லப்படவும், அமெரிக்காவின் ஒரு மாநிலமாக கலிபோர்னியா உயரவும் காரணமாக அமைந்தது. இக்காலகட்டத்தில், கலிபோர்னியாவுக்குச் சென்றால் (தங்கம் எடுத்து) பெரிய ஆளாகிவிடலாம் என்ற எண்ணம் ஏராளமானோருக்கு ஏற்பட்டிருந்ததால், திடீரென்று செல்வந்தராக வளர வேண்டும் என்று ஆசைப்படுவதை கலிபோர்னியக் கனவு என்று குறிப்பிடும் பழக்கம் ஆங்கிலத்தில் உருவாகி, இன்றும் நடைமுறையிலுள்ளது. - அறிவுக்கடல் இந்நாள் டிச. 06 இதற்கு முன்னால் -டிசம்பர் 6, 2019 1922 - இங்கிலாந்திலிருந்து பிரிந்து, ஐரிய விடுதலை நாடு(அயர்லாந்து) உருவானது. 1066இல் இங்கிலாந்துக்குள் நுழைந்து, பெரும்பகுதி யைக் கைப்பற்றிய நோர்மன்கள், 1169இல் அயர் லாந்தையும் கைப்பற்றினர். ஆங்கிலேயர்களுடன் கலந்து ஆங்கிலோ-நோர்மன்களாக அயர்லாந்துக் குள் நுழைந்து, அங்கிருந்த தொல்குடிகளான கேயலிக் மொழிகள் பேசிய கேயல்களுடன் கலந்து, ஹைபர்னோ-நோர்மன்கள் என்ற இனத்தை உருவாக்கியிருந்தனர். 1350களுக்குப்பின் கேயல்கள் மீண்டும் எழுச்சி பெற்றாலும், அயர்லாந்தைக் கவனிக்கும் நிலையில் இங்கிலாந்து முடியரசு இல்லை. கொலம்பஸ் அமெரிக்காவை அடைந்திருந்த நிலையில், அமெரிக்காவுக்குச் செல்லும் வழி என்ற வகையில் அயர்லாந்து முக்கியத்துவம்பெற, அதனைக் கைப்பற்றும் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே 1541இல் இங்கிலாந்தின் அரசர் எட்டாம் ஹென்றி, தன்னை அயர்லாந்தின் அரசராக அறிவித்துக்கொண்டார். 1601இல் கேயல்கள் வீழ்ந்ததையடுத்து, இங்கிலாந்தின் ஆளுகையின்கீழ்வந்த அயர்லாந்தில் ஏராளமான ஆங்கிலேயர்கள் குடியேறினர். அயர்லாந்திலிருந்தவர்கள் கத்தோலிக்கர்களாக இருந்த நிலையில் குடியேறிய ஆங்கிலே யர்கள் பிராட்டஸ்டண்ட்கள் என்பதால், நிலவுடைமையிலிருந்த ஏற்றத்தாழ்வுகள் மத மோதல்களாக வெடித்து, அதிகாரம் பிராட்டஸ்டண்ட்கள் கைக்கு வந்தது. 1801இல் கிரேட் பிரிட்டன், அயர்லாந்து ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முடியரசு என்ற பெயரில், இங்கிலாந்தின் பகுதியாகவே அயர்லாந்தை இணைத்துவிட்டு, எதிர்த்த கத்தோலிக்கர்க ளுக்கு சில சலுகைகளை வழங்கி முடித்தனர். 1840களில் அயர்லாந்தில் ஏற்பட்ட கடும் பஞ்சங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிர்ப்பை வலுப்படுத்தியதில், 1860களில் தன்னாட்சி இயக்கம் உருவானது. இங்கிலாந்துக்குக் கட்டுப்பட்ட தன்னாட்சி நான்கு முறை வழங்கப் பட்டாலும், 1919இல் ஐரிய விடுதலைப்போர் வெடித்ததைத் தொடர்ந்து, அயர்லாந்தைத் தனி நாடாக்க இங்கிலாந்து ஒப்புக்கொண்டது. இங்கிலாந்துக்கு ஆதரவானவர்களான, பழைய ஆங்கிலேயர்கள் என்றழைக்கப்பட்ட ஹைபர்னோ-நோர்மன்கள் அதிகமிருந்த ஆறு கவுண்ட்டிகள்(கவுண்ட் ஆளுவது கவுண்ட்டி, பிரான்சில் நடைமுறையிலிருந்த இச்சொல்லை நோர்மன்கள் இங்கிலாந்துக்குக் கொண்டு வந்தனர்!) இதை ஏற்காததால் மீதமுள்ள 26 கவுண்ட்டிகள் அயர்லாந்து என்ற தனி நாடாகிவிட, கிரேட் பிரிட்டன், வட அயர்லாந்து ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முடியரசு என்ற தற்போதைய வடிவத்தை இங்கிலாந்து பெற்றது. 1922இல் டொமினியனாகி, 1937இல் இங்கிலந்தின் மேலாதிக் கத்திலிருந்து விடுபட்ட அயர்லாந்து, 1949இல் முழுமையான குடியரசாகியது. - அறிவுக்கடல் இந்நாள் டிச. 07 இதற்கு முன்னால் -டிசம்பர் 7, 2019 […] 1930 - உலகின் முதல் தொலைக்காட்சி விளம்பரம், அமெரிக்காவின் பாஸ்டனி லிருந்த, சோதனை ஒளிபரப்பு நிலையத்திலிருந்து ஒளி பரப்பப்பட்டது. இதற்குப் பத்தாண்டுகள் கழித்தே, 1941 ஜூலை 1இல், அரசு அனுமதியுடன் தொலைக்காட்சி விளம்பரம் ஒளிபரப்பப்பட்டதால், அது முதல் விளம்பரமாகக் குறிப்பிடப்படுவதுண்டு. சுமார் நான்கா யிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் விற்பனை க்குப் பொருட்களிருப்பதை பேப்பிரஸ் தாளில் எழுதி வைத்தனர். கி.மு.11ஆம் நூற்றாண்டுக்கும் முன்னரே, சீனாவில் மிட்டாய் விற்க குழலூதியதே உலகின் முதல் ஒலி விளம்பரமாகும்! அரேபியா, கி.மு.ஏழாம் நூற்றாண்டுக் கால ரோமானிய நகரமான பொம்ப்பெய் ஆகிய பகுதிகளின் சிதிலங்களில் வணிக விளம்பரங்கள் மட்டுமின்றி, அரசியல் விளம்பரங்களும் கிடைத்துள்ளனவாம்! பொருட்களில் வணிகச் சின்னங்களை(ட்ரேட் மார்க்!) பொறிப்பதும் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. பெரும்பாலானவர்கள் கல்வியறிவு பெறாதவர்களாக இருந்த நிலையில், நகர்ப்புறங்களில் பொருட்கள் பற்றிய விளம்ப ரங்களை அறிவிப்பதற்கு டவுன் கிரையர்(நகர கூவுபவர்கள்?!) என்ற ஆட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர். இடைக்கால ஐரோப்பாவில் படிக்கத்தெரியாத மக்களைக் கருத்திற்கொண்டு, தையல்காரர், கொல்லர் போன்றோரின் படங்கள்கொண்ட விளம்பரப் பலகைகள் உருவாயின. அச்சு இயந்திரம், செய்தித்தாள்கள் ஆகியவற்றின் வரவைத்தொடர்ந்து 16ஆம் நூற்றாண்டிலிருந்து விளம்பரம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியது. விளம்பர வருவாயின்மூலம் குறைந்த விலைக்குச் செய்தித்தாளை வழங்குவதை முதன்முறையாக 1836இல் பிரான்சின் ‘லா ப்ரஸ்’ என்ற செய்தித்தாள் செய்ய, அது மற்ற இதழ்களுக்கும் பரவியது. 1865இல் பியர்ஸ் சோப் நிறுவனத்திற்கான விளம்பரத்தைத் தயாரித்த தாமஸ் பாரட், நவீன விளம்பரத்தின் தந்தை என்றழைக்கப்படுவதுடன், 2014இல் கின்னஸ் புத்தகத்தால் உலகின் முதல் பிராண்ட் மேனேஜர் என்றும் கவுரவிக்கப்பட்டார். பொது இடங்களில் திடீரென்று மக்களைச் சந்தித்து, விளம்பரங்களுடன் இலவசப் பொருட்களையும் வழங்குவது க்வரில்லா(கொரில்லா) மார்க்கெட்டிங் என்று அழைக்கப்படுகிறது. 1920களில் வானொலி, 1940களில் தொலைக்காட்சி என்று வளர்ந்த விளம்பரங்கள், இணை யத்தின் வரவுக்குப்பின் தனிமனிதர்களின் விருப்பங்களைக் குறிவைத்த விளம்பரங்க ளாக உருவெடுத்தாலும், 1925லிருந்து, ஜிடிபியில் விளம்பரங்களின் பங்கு பெரும்பாலும் மாறவில்லையாம்! இந்நாள் டிசம்பர் 08 இதற்கு முன்னால் -டிசம்பர் 8, 2019 […] 1963 - பான் அமெரிக்கன் வர்ல்ட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானமொன்று மின்னலால் தாக்கப்பட்டு வெடித்ததில் அதிலிருந்த 81 பேரும் பலியாயினர். மிகப்பெரிய அள விலான மின்சாரத்தை புவிக்குக் கடத்துவதே மின்னலால் தாக்கப்படும் பொருட்களுக்கு ஆபத்து ஏற்படக்காரணமாகிறது. அவ்வாறு கடத்த முடியாது என்பதால் பொதுவாக மின்னலால் தாக்கப்படும் விமா னங்கள் பாதிப்புக்குள்ளாவதில்லை. சராசரியாக ஒவ்வொரு விமான மும் ஆண்டுக்கு ஒருமுறையாவது மின்னலால் தாக்கப்படுவதாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அதனால் அதுவரை அமெரிக்க வரலாற்றில் நடத்தப்பட்டவற்றிலேயே மிகப்பெரியதாக இந்த விபத்துக் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன. சிவில் விமானத் துறையின் ஆய்வுச் செலவுகள் அரிதாக பத்தாயிரம் டாலர்களைத் தாண்டும் என்ற நிலையில், இந்த ஆய்வுகளுக்கு ஒன்றேகால் லட்சம் டாலர்களுக்கும் அதிகமாக செலவிடப்பட்டதாம். இத்துறை தவிர, கூட்டரசின் வான்பரப்பியல்துறை, விமானத்தை உருவாக்கிய போயிங், என்ஜினைஉருவாக்கிய ப்ராட் அண்ட் வைட்னி, பிற பாகங்களை உருவாக்கிய நிறுவனங்கள் என்று ஆய்வுக்குச் செலவிட்ட தொகை தனி! 16 லாரிகள் நிறைய விமானத்தின் சேதமடைந்த பாகங்கள் கொண்டுவரப்பட்டு, முடிந்தவரை இணைக்கப்பட்டு, சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சேதமடைந்திருந்த கருப்புப்பெட்டியின் கிடைத்தவரையான தகவல்கள் சோதிக்கப்பட்டன. விமானத்தில் பயன்படுத்தப்பட்ட இரண்டு எரிபொருட்களில் ஒன்றின் புகை வெளி யேறும் பகுதியில் மின்னல் தாக்கினால் தீப்பிடிக்கும் வாய்ப்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அந்த எரிபொருளைத் தயாரிக்கும் நிறுவனம் தங்கள் எரிபொருள் பாதுகாப்பானது என்று வாதிட்டது. 1965 மார்ச் வரை நீடித்த ஆய்வில், அந்த எரிபொருள் நிரப்பப்பட்டி ருந்த இறக்கைப்பகுதி வெடித்தபின்னரே விமானம் விழுந்தது என்பது உறுதிப்படுத்தப்பட்டதால், மின்னலால் விபத்து ஏற்பட்டது உறுதி யானது. அதுவரை சில விமானங்களில் மட்டுமிருந்த, உராய்வி னால் ஏற்படும் நிலைமின்சாரத்தை வெளியேற்றும் அமைப்பை அனைத்து விமானங்களிலும் பொருத்த உத்தரவிடப்பட்டது. இந்த விபத்து ஏற்பட்ட ஒரு மாதத்திலேயே கூட்டரசின் வான்பரப்பி யல்துறை, விமானங்களின் பாதுகாப்புக்குறித்து ஆய்வுசெய்ய ஒரு தொழில்நுட்பக்குழுவை உருவாக்கியிருந்தது. இக்குழு மேற்கொண்ட மிக விரிவான ஆய்வினையடுத்து, விமானங்கள் பறப்பதற்கான தகுதி கள் 1967இல் மாற்றியமைக்கப்பட்டதுடன், மின்னல் பாதுகாப்புக்கான அமைப்புகள் 1970இல் சட்டமாக்கப்பட்டன. இவை அமெரிக்க விமா னங்களுக்கு மட்டும்தான் என்பதால், 1971இல் பெரு நாட்டின் விமான மொன்று மின்னலால் தாக்கப்பட்டு, 91 பேர் உயிரிழந்து, ஒருவர் மட்டும் பிழைத்ததே, மின்னலால் மிகஅதிக உயிரிழப்பு ஏற்பட்ட விபத்தாகியது! - அறிவுக்கடல் இந்த நாள் டிச. 09 இதற்கு முன்னால் -டிசம்பர் 9, 2019 1948 - இனப்படுகொலைக் குற்றத்தைத் தடுத்தல், அதற்கான தண்டனைகள் ஆகியவற்றுக்கான உடன்படிக்கை ஐக்கிய நாடுகள் அவையால் நிறைவேற்றப்பட்டது. இதற்கான வரைவை உருவாக்கி, இதனை நிறைவேற்றப் பெருமுயற்சி மேற்கொண்ட ரஃபேல் லெம்கின் என்பவர்தான், இனப்படுகொலையைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான ஜினோசைட் என்பதை உருவாக்கினார். அதற்கு முன்பு, இன, மதக் குழுக்களை அழிக்கும் நோக்கில் செய்யப்பட்ட கொலைகள் படுகொலைகள், அழித்தொழிப்பு, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்ற பெயர்களாலேயே குறிப்பிடப்பட்டன. இரண்டாம் உலகப்போரின்போது 1941இல் சோவியத்தை ஜெர்மெனி ஆக்கிரமிக்க முயன்றபோது கைது செய்யப்பட்ட சுமார் 50 லட்சம் செஞ்சேனை வீரர்கள் திரும்பியே வராத (படுகொலை செய்யப்பட்ட) நிகழ்வை, பெயரிடப்பட்டாத ஒரு குற்றம் என்றே சர்ச்சில் குறிப்பிட்டார். ஐரோப்பா முழுவதும் நாஜிகள் நிகழ்த்திய படுகொலைகள் உள்ளிட்டவற்றை விவரித்து 1944இல் வெளியான, ‘ஆக்கிரமிக்கப்பட்ட ஐரோப்பாவில் அச்சு நாடுகளின் ஆட்சி’ என்ற நூலை எழுதிய லெம்கின்தான், அதில் ஜினோசைட் என்ற சொல்லை முதன்முறையாகப் பயன்படுத்தியிருந்தார். இனம், குடும்பம் ஆகிய பொருள்களைக்கொண்ட கிரேக்கச் சொல்லான ஜீனோ, கொலை செய்தல் என்ற பொருள்கொண்ட சேய்டியர் என்ற லத்தீன் சொல் ஆகியவற்றை இணைத்து, ஜினோசைட் என்ற சொல்லை அவர் உருவாக்கினார். போர்க்காலத்தில் நாஜிகள் செய்த குற்றங்களை விசாரித்த நூரம்பர்க் விசாரணைகளிலேயே இச்சொல் பயன்படுத்தப்பட்டதுடன், மற்றவர்களும் உடனடியாக இச்சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கினர். போலந்து-யூத பின்னணிகொண்ட லெம்கினின் குடும்பத்தில் மட்டும் 49 பேர் நாஜிகளால் கொல்லப்பட்டிருந்தனர். வார்சாவில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றிய லெம்கின், போரின்போது அமெரிக்காவுக்கு வந்து, நூரம்பர்க் விசாரணையில் தலைமை வழக்கறிஞராகச் செயல்பட்ட ராபர்ட் ஜேக்சனுக்கு ஆலோசகரானார். இனப்படுகொலைத் தடுப்பு உடன்படிக்கையின் வரைவைப் பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பி ஆதரவு கோரிய லெம்கின், அமெரிக்காவின் ஆதரவுடன் ஐநாவிலும் முன்மொழிந்து, அதற்கென நடத்தப்பட்ட மாநாட்டில் நிறைவேற்றச் செய்தார். ஓர் இனம் அல்லது குழுவினரைக் கொலை செய்தல், அவர்களுக்கு உடலாலோ, மனத்தாலோ தீங்கிழைத்தல், அவர்களின் வாழ்க்கையை அழிக்கும் சூழ்நிலைகளை உருவாக்குதல், இனப்படுகொலைக்கு உடந்தையாக இருத்தல் உள்ளிட்டவற்றைக் குற்றமாக வரையறுக்கும் இந்த ஒப்பந்தத்தில் இதுவரை 137 நாடுகள் கையெழுத்திட்டிருந்தாலும், தங்கள் ஒப்புதலின்றி இக்குற்றத்தை சாட்ட முடியாது என்ற கட்டுப்பாட்டுடன்தான் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்நாள் டிச. 10 இதற்கு முன்னால் -டிசம்பர் 10, 2019 […] 1768 - கலைக்களஞ்சியம் என்றதும் முதலில் நினைவுக்கு வரக்கூடியதும், உலகில் மிகநீண்ட காலமாக (244 ஆண்டுகளுக்கு) அச்சிலிருந்ததுமான ‘என்சைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா’வின் முதல் பதிப்பு விற்பனைக்கு வந்தது. பண்டைய ரோமின் கி.மு.முதல் நூற்றாண்டுக் காலத்தைச் சேர்ந்த மார்க்கஸ் டெரண்ஷியஸ் வேரோ என்பவர் எழுதிய 620 நூல்களே பின்னாளில் தோன்றிய கலைக்களஞ்சியங்களுக்கு முன்னுதாரணம். இவருக்குச் சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே, பல்வேறு செய்திகள்குறித்து அரிஸ்டாட்டில் எழுதியிருந்தாலும், வேரோவின் ’துறைகள் குறித்த 9 நூல்கள்’ என்பதே, துறைகளாகப் பிரிக்கப்பட்ட தலைப்புகளில் எழுதப்பட்டு, கலைக்களஞ்சியத்தின் வடிவத்தைத் தொடக்கிவைத்தது. இந்த வடிவத்தைப் பின்பற்றி, கி.பி.முதல் நூற்றாண்டில் மூத்த பிளினி, 2493 கட்டுரைகளுடன் எழுதிய நேச்சுரலிஸ் ஹிஸ்டரியா என்பது இடைக்காலம்வரை தாக்கம் செலுத்திய கலைக்களஞ்சியம் என்பதுடன், பிரதி கிடைக்கக்கூடிய மிகப்பழைய கலைக்களஞ்சியமுமாகும். இதற்குப்பின் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு தகவல் தொகுப்பு நூல்கள் வெளியாகியிருந்தாலும், 1728இல் லண்டனில் வெளியான சேம்பர்ஸ் சைக்ளோப்பீடியா, 1751இல் பிரான்சில் வெளியான என்சைக்ளோப்பீடி, 1768இல் வெளியான என்சைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா ஆகியவையே தற்போது நாம் அறிந்துள்ள கலைக்களஞ்சிய வடிவம் உருவாகக் காரணமாயின. 15ஆம் நூற்றாண்டுவரை வெளியான கலைக்களஞ்சியங்கள் பல்வேறு பெயர்களில் வெளியாயின. 1408இல் சீனாவில் உருவான 37 கோடிச் சீன எழுத்துகளுடன், 11,095 தொகுதிகள் கொண்ட(1400 சதுர அடிக்கு அடுக்கப்பட்டிருந்த!) யாங்கிள் டாடிஸ் என்ற கலைக்களஞ்சியமே உலகின் மிகப்பெரிய கலைக்களஞ்சியமாக விளங்கியது. ஆறு நூற்றாண்டுகளுக்குப்பின் 2007 செப்டம்பர் 9இல் விக்கிப்பீடியா இச்சாதனையை முறியடித்தது! வட்டம், பொது என்பதான பொருள்கொண்ட என்கைக்கிளோஸ், கல்வி என்ற பொருள்கொண்ட பீடியா ஆகிய கிரேக்கச் சொற்களை முழுமையான அல்லது பொது கல்வி என்ற பொருளில் கி.பி.முதல் நூற்றாண்டைச்சேர்ந்த ரோமானியக் கல்வியாளர் க்விண்டிலியன் பயன்படுத்தியிருந்தார். 1470இல் இவரது கையெழுத்துப் பிரதிகளைப் படியெடுத்தவர்கள், தவறுதலாக என்சைக்ளோப்பீடியா என்று சேர்த்து எழுதிவிட, ஒரே லத்தீன் சொல்லாக இது உருவாகி, 16ஆம் நூற்றாண்டில் பொதுவான பயன்பாட்டுக்கு வந்துவிட்டது! - அறிவுக்கடல் இந்நாள் டிச. 11 இதற்கு முன்னால் -டிசம்பர் 11, 2019 […] 1282 - ஆர்வின் பாலம் என்ற இடத்தில் நடைபெற்ற யுத்தத்தில், வேல்சின் கடைசி சொந்த நாட்டு இளவரசர் லைவலின் கொல்லப்பட்டமை, வேல்ஸ் நிரந்தரமாக இங்கிலாந்தின் கட்டுப்பாட்டின்கீழ்வரக் காரணமாகியது. (வேல்ஸ் என்பது இளவரசரால் ஆளப்படும் வேள்பகுதியாகவே பொதுவாக இருந்துள்ளது.) கி.பி.43இல் இங்கிலாந்தின்மீது படையெடுத்த ரோமானியர்கள், அதன் மேற்கிலுள்ள வேல்சுக்குள் 48இல் நுழைந்து, அடுத்த 30 ஆண்டுகளுக்குள் முழுமையாகக் கைப்பற்றினர். அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு ஆட்சிசெய்த ரோமானியர்கள், 383இல் வெளியேறியதற்குப் பிந்தைய சுமார் நான்கு நூற்றாண்டுகளுக்கு, வேல்ஸ் பல சிறு நாடுகளாகப் பிரிந்து கிடந்தது. இவற்றை ஆண்ட மரபுகளுக்கிடையே நடைபெற்ற திருமணங்கள்மூலம் ஒன்றிணைந்து, 1039இல் முழு வேல்சுக்கும் முதல் (கடைசியும்!) அரசராக க்ரஃபைட் ஆனார். 1066இல் முழுமையாக நோர்மன்களின் கட்டுப்பாட்டுக்குள் இங்கிலாந்து வந்ததையடுத்து, இங்கிலாந்திற்கு நோர்மண்டி மரபின் முதல் அரசராக முதலாம் வில்லியம் ஆனார். இவர், வேல்ஸ் பகுதியில் எல்லைகளைப் பாதுகாக்க ‘மார்ச்சர் லார்ட்’ என்றழைக்கப்பட்ட பிரபுக்களை நியமித்தார். அடுத்த சில ஆண்டுகளில் இவர்கள் வேல்சின் பகுதிகளை ஆக்கிரமிக்கத் தொடங்கினர். இவர்களது கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகள் இங்கிலாந்திற்கும், வேல்சுக்கும் இடையிலமைந்திருந்ததால், இரு நாடுகளின் சட்டங்களுக்கும் அப்பாற்பட்டவர்களாயினர். இவர்களுக்கும், வேல்சின் அரச மரபுகளுக்குமிடையே திருமணங்கள் நடைபெற்ற நிலையில், வேல்சைக் கைப்பற்ற இங்கிலாந்து பலமுறை முயற்சித்துத் தோற்றது. லைவலினுக்கும், இங்கிலாந்தின் முதலாம் எட்வர்ட் அரசருக்கும் பல ஆண்டுகளாகப் போர் நடைபெற்றுக்கொண்டிருக்க, லைவலின் மணக்கவிருந்த, எட்வர்டின் உறவிரான, எலீனார் ஃப்ரான்சிலிருந்து கப்பலில் வந்தபோது கடற்கொள்ளையர்களைக் கொண்டு அவரை எட்வர்ட் சிறைப்பிடித்ததார். இதனால், லைவலின் இறந்தபின் வேல்சின் தன்னாட்சி முடிவுக்குவரும் என்ற கட்டுப்பாட்டுடன், இங்கிலாந்தின் ஆளுகைக்குட்பட்ட தன்னாட்சி என்ற ஒப்பந்தந்தத்தை 1277இல் லைவலின் ஏற்கவேண்டியதாயிற்று. ஆனாலும், வேல்சின் பிற பகுதிகளின் சிறு இளவரசர்கள் லைவலினுக்கு எதிராக இருந்ததைப் பயன்படுத்திக்கொண்டு, எட்வர்ட் போர் தொடுத்தபோதுதான் லைவலின் கொல்லப்பட்டு வேல்ஸ் இங்கிலாந்தின் பிடிக்குள் சென்றது. - அறிவுக்கடல் இந்நாள் டிச. 12 இதற்கு முன்னால் -டிசம்பர் 12, 2019 […] 1817 - ஆஸ்திரேலியாவுக்கு, ஆஸ்திரேலியா என்று பெயர் சூட்டவேண்டும் என்று, நியூசவுத்வேல்ஸ் மாநில ஆளுநர் லாக்லன் மெக்வரி, ஆஸ்திரேலியாவின் குடியேற்ற அரசுக்குப் பரிந்துரைத்தார். 1824இல் அரசு இதனை ஏற்றதைத்தொடர்ந்து, அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலியா என்ற பெயர் சூட்டப்பட்டது. இந்த பெயர், தென்துருவத்தில் இருப்பதாகக் கற்பனை செய்யப்பட்டிருந்த நிலப்பரப்பிற்கு(கண்டம்) சூட்டப்பட்டிருந்த பெயரான டெர்ரா ஆஸ்ட்ரேலிஸ் என்பதிலிருந்து உருவானது. புவியின் வடகோளத்திலிருந்த நிலப்பரப்புகள் மட்டுமே அறியப்பட்டிருந்த பண்டைக் காலத்தில், வடகோளத்தின் நிலப்பரப்புகளை(எடையை?! - புவி சரிந்துவிடாமல்!!) சமன் செய்ய, தென்கோளத்திலும் பெரிய நிலப்பரப்பு ஒன்று இருக்கும் என்று நம்பினார்கள். நிலப்பரப்பு என்ற பொருளுடைய டெர்ரா(ஆங்கில டெர்ரெய்ன்!), தெற்கு என்ற பொருளுடைய ஆஸ்ட்ரேலிஸ் ஆகிய லத்தீன் சொற்களிலிருந்து உருவானது. கி.பி.2ஆம் நூற்றாண்டில், இந்தியப் பெருங்கடல் நிலப்பரப்பால் சூழப்பட்டிருப்பதாக நம்பிய தாலமியின் கருதுகோள்களின்படி உருவாக்கப்பட்ட வரைபடங்களையே பயன்படுத்திக்கொண்டிருந்ததால், ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலத்திலும், ஆப்ரிக்காவுக்குத் தெற்கேயும் (கடலின்றி) நிலப்பரப்பு இருப்பதாக நம்பப்பட்டதே, கடற்பயணக் காலமான 15ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் மாறியது. 1600களின் கடற்பயணங்கள், இவ்வாறான நிலப்பரப்பு இல்லையென்பதை உணர்த்திய நிலையில், தென்கோடி நிலமாக ஆஸ்திரேலியாதான் இருக்க முடியும் என்று கருதி, 1794இல் இரு தாவரவியலாளர்கள் ஆஸ்ட்ரலேசியா என்றும், 1814இல் மாத்யூ பிலிண்டர்ஸ் டெர்ரா ஆஸ்ட்ரேலிஸ் என்றும் ஆஸ்திரேலியாவைக் குறிப்பிட்டனர். 1544இல் டச்சுக்காரர்கள் சூட்டிய நியூஹாலந்து என்ற பெயரையே, பின்னாளில் ஆதிக்கம் செலுத்திய ஆங்கிலேயர்களும் பயன்படுத்திவந்த நிலையில்தான் ஆஸ்திரேலியா என்ற பெயர் ஏற்கப்பட்டது. உண்மையான தென்துருவ நிலப்பரப்பு 1820களில் உறுதிப்படுத்தப்பட்டாலும், 1890கள்வரை பெயரில்லாமலேயிருந்து, கிரேக்கத்தின் மரீனஸ் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில், ஆர்டிக்குக்கு எதிர்ப்புறம் என்ற பொருளில் உருவாக்கியிருந்த அண்டார்ட்டிக் என்ற பெயர் சூட்டப்பட்டது. 1900இல் வெளிவந்த அமெரிக்க சிறுவர் புதினத்தில் குறிப்பிடப்படும் ஆஸ்(ஓ-இசட்) என்ற கற்பனை நிலப்பரப்பு ஆஸ்திரேலியாவை ஒத்திருந்ததால், அமெரிக்கர்கள் ஆஸ்திரேலியாவை ஆஸ் என்றும் குறிப்பிடுகிறார்கள். இருக்குமிடத்தையொட்டி ‘கீழுள்ள நிலம்’(லேண்ட் டவுன் அண்டர்) என்றும் ஆஸ்திரேலியா பேச்சு வழக்கில் குறிப்பிடப்படுகிறது. இந்நாள் டிச. 13 இதற்கு முன்னால் -டிசம்பர் 13, 2019 […] 1948 - தலைநகரை டெல்-அவிவிலிருந்து ஜெருசலே மிற்கு மாற்றுவது என்று இஸ்ரேலிய சட்டமன்றமான (க்)நெஸ்ஸெட் தீர்மா னித்தது. 1947 நவம்பர் 29இல் நிறை வேற்றப்பட்ட பாலஸ்தீனத்துக்கான ஐநா பிரிவினைத் திட்டம், ஜெருசலேம், பெத்ல கேம் உள்ளிட்ட பகுதியை பன்னாட்டுக் கட்டுப்பாட்டிலுள்ள தனிப் பகுதியாக(கார்ப்பஸ் செப்பரேட்டம்) வைத்துக்கொண்டு, மக்கள்தொகையில் 32 சதவீதமாயிருந்த யூதர்களுக்கு 52 சதவீத நிலப்பரப்பை அளித்துவிட்டு, எஞ்சியதே பாலஸ்தீனமென்றும் அறிவித்தது. அரேபியர்கள் பிரிவினையையே ஏற்கத்தயாராக இல்லாத நிலையில், யூதர்களுக்கு மிகஅதிக நிலப்பகுதி ஒதுக்கப்பட்டதும் சினமேற்படுத்த, கொண்டாட்ட மனநிலையிலிருந்து யூதர்களுடன் ஏற்பட்ட மோதல்கள் வன்முறையாக வெடித்து, 1947 நவம்பர் 30இலிருந்து, 1949 ஜூலை 20வரை நடைபெற்ற பாலஸ்தீனப் போராக வும் மாறின. ஜெருசலேமிற்கு பன்னாட்டு நிர்வாக அமைப்பினை உருவாக்க முயற்சி யெதனையும் இங்கிலாந்து மேற்கொள்ளவில்லை என்பதுடன், இந்த வன்முறைகளை யும் தடுக்காமல், 1948 மே 14இல் பாலஸ்தீனத்தைவிட்டு வெளியேறிவிட்டது. இங்கிலாந்து வெளியேறியதும், பாலஸ்தீனப் போரின் ஒருபகுதியாக, இஸ்ரேலுக்கும், அரபு நாடுகளின் கூட்டமைப்பிற்குமிடையே 1948 மே 15இலிருந்து, 1949 மார்ச் 10வரை நடை பெற்ற முதல் அரபு-இஸ்ரேலியப்போரின் இறுதியில் ஜெருசலேமின் மேற்குப்பகுதியை இஸ்ரேலும், புனித இடங்களடங்கிய பழைய நகரம் உள்ளிட்ட கிழக்கு ஜெருசலேமை ஜோர்டானும் கைப்பற்றின. இப்படியான சூழ்நிலையில்தான் தங்கள் தலைநகரத்தை ஜெருசலேமுக்கு மாற்றுவதாக இஸ்ரேலிய சட்டமன்றம் முடிவெடுத்தது. 1950இல் ஜெருசலேமை ஜோர்டான் தன் பகுதியாக மாற்றிக்கொண்டதுடன், 1953இல் தனது இரண்டாவது தலைநகரமாகவும் அறிவித்தது. எகிப்துக்கு ஆதரவாக ஜோர்டான் இஸ்ரேலைத் தாக்கியதைத் தொடர்ந்து, எஞ்சிய ஜெருசலேமையும் இஸ்ரேல் கைப்பற்றிக்கொண்டது. போர் முடிந்து மூன்று வாரங்களில், கிறிஸ்தவ, முகம்மதிய புனித இடங்கள் அடங்கிய கிழக்கு ஜெருசலேமை, மேற்கு ஜெருசலேமுடன் இணைத்து விட்ட இஸ்ரேல், 1980இல் ஜெருசலேம் சட்டம் என்பதை இயற்றி இணைப்பைச் சட்டப் பூர்வமாக்கியது. இச்சட்டம் செல்லாதென்று ஐநா கூறினாலும், இஸ்ரேலால் ஆக்கிர மிக்கப்பட்ட பாலஸ்தீனியப் பகுதியென்று கிழக்கு ஜெருசலேமை உலகநாடுகள் கூறினா லும், பாதுகாப்புத்துறைதவிர, சட்டமன்றம், உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நிர்வாக அமைப்புகளையும் ஜெருசலேமிற்கு மாற்றிவிட்டது இஸ்ரேல்! - அறிவுக்கடல் இந்நாள் டிச. 14 இதற்கு முன்னால் -டிசம்பர் 14, 2019 […] 1960 - கல்வியில் பாகுபாட்டுக்கு எதிரான பன்னாட்டு ஒப்பந்தம், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பால் (யுனெஸ்கோ) நிறைவேற்றப்பட்டது. 1948இலேயே நிறைவேற்றப்பட்டிருந்த ஐநா மனித உரிமைகள் பிர கடனம், கல்வியை அடிப்படை உரிமைகளுள் ஒன்றாக அறிவித்திருந்த நிலையில், பண்பாடு, மதம், இனம் போன்றவற்றின் அடிப்படையில் கல்வி மறுக்கப்படுவதைத் தடுக்கவும், பாகுபாடின்றி ஒரே தரத்திலான கல்வி அனைத்து மனிதர்களுக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் அல்லது பிற நிலைப்பாடுகள், பிறப்பிடம், சமூக, பொருளாதார நிலைகள், பிறப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கல்வியை மறுப்பதை மட்டுமின்றி, ஒரே மாதிரியான கல்வி வழங்காமை, பிற கட்டுப்பாடுகள் ஆகியவற்றையும் இந்த ஒப்பந்தம் தடைசெய்கிறது. இந்த ஒப்பந்தத்தை எந்த நாடும் (பிற ஒப்பந்தங்களைப்போல) கட்டுப்பாடு விதித்து ஏற்க முடியாது என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பாலின அடிப்படையில் தனித்தனி கல்வி அமைப்புகள் வைத்துக்கொள்வதையும், மத, மொழி அடிப்படை களில் தனி கல்வி நிறுவனங்கள் நிறுவி, நடத்துவதையும் இந்த ஒப்பந்தம் தடைசெய்ய வில்லை. எந்தப் பிரிவினரையும் விலக்காமல், கல்வியை மேம்படுத்துவதை நோக்க மாகக்கொண்டு, தனியார் கல்வி நிலையங்கள் அமைப்பதையும் இந்த ஒப்பந்தம் அனு மதிக்கிறது. தனியார் பள்ளிகளைத் தேர்ந்தெடுப்பதில் பெற்றோரின் உரிமையை உறுதிப் படுத்துவதுடன், தேசிய சிறுபான்மையினர், தங்கள் மொழியில் தங்களுக்கான கல்வி நிலையங்களை நடத்திக்கொள்வதையும், மதக் கல்வியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதையும் இது அனுமதிக்கிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட, ஐரோப்பியக் குடியேற்றங்கள் நடைபெற்ற நாடுகளில், தொல்குடியினர், அடிமைகள் ஆகியோருக்குச் சமமான கல்வி மறுக்கப்பட்டது. பல்வேறு நாடுகளிலும் சிறுபான்மை இனக்குழுக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது. இனக்குழு, குடியேற்றம் ஆகிய காரணங்களின்றி (சாதியால்) கல்வி மறுக்கப்பட்டது இந்தியாவில் மட்டும்தான். முகம்மதிய நாடுகளில் பாலின அடிப்படையில் பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது. தனி மனிதர்களாக அன்றி, நிறுவனங்களே இத்தகைய பாகுபாடுகளைக் கடைப்பிடிக்கும் நாடு அமெரிக்காதான். இன்றும் கருப்பினத்தவர் பகுதிகளில் குறைவான பள்ளிகள் இருப்பதுடன், அவற்றில் பணிபுரிய வெள்ளையர்கள் மறுப்பது உள்ளிட்ட காரணங்களால், அவர்களுக்கு வெள்ளையர்களுக்கு வழங்கப்படும் தரத்திலான கல்வி வழங்கப்படுவதில்லை. - அறிவுக்கடல் இந்நாள் டிச. 16 இதற்கு முன்னால் -டிசம்பர் 16, 2019 […] 1903 - உலகப் புகழ்பெற்ற மும்பை தாஜ்மகால் பேலஸ் ஓட்டல் திறக்கப்பட்டது. அக்கால பம்பாயின் மிகப்பெரிய ஓட்டல்களில் ஒன்றான வாட்சன்’ஸ் ஓட்டல் வெள்ளையருக்கு மட்டும்தான் என்று கூறி, ஜெம்ஷெட்ஜி டாட்டாவிற்கு அனுமதி மறுத்ததால் அவர் இந்த ஓட்டலைக் கட்டினார் என்று பொதுவாக நம்பப்பட்டாலும், அதற்கு ஆதாரங்களை இல்லை. அத்துடன், இந்த ஓட்டலே வெள்ளையர்கள், அக்கால அரசர்கள் ஆகியோரைத்தான் வாடிக்கையாளர்களாகக் கொண்டிருந்தது என்பதால், அவ்வாறிருக்க வாய்ப்பில்லை. பம்பாயின் மதிப்பை உணர்த்தும் வகையில் ஒரு விடுதி வேண்டும் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆசிரியர் கூறிய ஆலோசனையின்படி டாட்டா இதைக் கட்டியதாகக் கூறப்படுவதே நம்பக்கூடியதாக உள்ளது. சீத்தாராம் கண்டேராவ் வைத்யா, டி.என்.மிர்சா என்ற இந்தியக் கட்டிடக்கலை வல்லுனர்களே இந்தக் கட்டிடத்தை வடிவமைத்தனர். வைத்யா இறந்துவிட்டதால் டபிள்யூ.ஏ.சேம்பர்ஸ் என்ற ஆங்கிலேயப் பொறியாளர் இதைக் கட்டும் பணியைச் செய்தாலும், கட்டிடத்தின் குவிமாடத்தைப் பெரிதாக்கியதைத் தவிர வேறெந்த மாற்றத்தையும் அவர் செய்யவில்லை. கட்டுமானப் பணியின் ஒப்பந்ததாரரான கான்காசாகேப் ருத்தோன்ஜி, இக்கட்டிடத்தின் நடுவிலமைந்துள்ள புகழ்பெற்ற மிதக்கும் படிக்கட்டை வடிவமைத்தார். (படியைத் தாங்கும் அமைப்புகள் அதிகம் வெளியில் தெரியாமல் அமைக்கப்படுபவை மிதக்கும் படிக்கட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன.) அறைகள் அரபிக்கடலைப் பார்த்தவாறு அமைந்திருக்கவேண்டும் என்ற டாட்டா விருப்பத்தின்படி கட்டப்பட்டதால், இக்கட்டிடம் நகருக்கு எதிர்ப்புறமாகத் தவறுதலாகக் கட்டப்பட்டுவிட்டதாகக் கூறப்படுவதுண்டு! 604 அறைகள் கொண்ட இவ்விடுதியைக் கட்ட இன்றைய மதிப்பில் சுமார் ரூ.285 கோடி செலவானது. மின்சாரம், அமெரிக்க மின்விசிறிகள், நீராவியால் இயங்கிய ஜெர்மானிய லிஃப்ட், துருக்கிய குளியல் தொட்டிகள், ஆங்கிலேய சமையல்காரர்கள், நாள் முழுவதும் இயங்கும் உணவகம், குளிரூட்டப்பட்ட நடன-கூட்ட அரங்கு, டிஸ்க்கொதே ஆகியவற்றை இந்தியாவில் முதலில் அறிமுகப்படுத்திய விடுதி இதுதான். பம்பாயில் உரிமம் பெற்ற மது பார் தொடங்கிய முதல் விடுதியும் இதுதான். இது கட்டப்பட்டு 21 ஆண்டுகள் கழித்துத்ததான், இதனருகில் இந்தியா கேட் கட்டப்பட்டது. இரண்டாம் உலகப்போரின்போது இது மருத்துவமனையாகச் செயல்பட்டது. இதன் விரிவாக்கமாக அருகிலுள்ள டவர் என்பதை 1973இல் கட்டிய டாட்டா குழுமம், அதன்பின்னரே விடுதித் தொழிலில் கவனம் செலுத்தத்தொடங்கி, இன்று இந்தியாவில் 84ம், பிற நாடுகளில் 16மாக 100 ஓட்டல்களைக்கொண்டுள்ளது! அறிவுக்கடல் இந்நாள் டிச. 17 இதற்கு முன்னால் -டிசம்பர் 17, 2019 கி.மு.497 - கிறிஸ்துமசுக்கு முன்னோடி என்று குறிப்பிடப்படும், பண்டைய ரோமானியப் பண்டிகையான சாட்ட(ர்)னேலியா முதன்முறையாகக் கொண்டாடப்பட்டது. விவசாயம், செல்வம் உள்ளிட்டவற்றுக்கான கிரேக்கக் கடவுளான சாட்ட(ர்)ன்-னுக்கான ஆலயம் திறக்கப்பட்ட கி.மு.497 டிசம்பர் 17இல் ஒரு நாள் விழாவாகத் தொடங்கப்பட்ட இது, பின்னாளில் ஜூலியன் நாட்காட்டியில் ஒவ்வோராண்டும் டிசம்பர் 17இல் தொடங்கி, 23வரை ஒரு வாரம் நடைபெறும் விழாவாகியது. ரோமக் குடியரசு, பின்னர் ரோமப் பேரரசு ஆகியவற்றின் கருவூலமாக சாட்ட(ர்)னின் ஆலயமே விளங்கியது. பொற்காலம், வெள்ளி, வெண்கலம், வீரம் ஆகியவற்றுக்குப்பின் இரும்புக்காலம் நடைபெறுவதாகக் கூறிய ரோமானிய புராணங்களின்படி, உழைப்பின்றியே மக்களுக்கு எல்லாம் கிடைத்து, மகிழ்ச்சி நிறைந்திருந்த பொற்காலத்தில் சாட்ட(ர்)னின் ஆட்சியே நடைபெற்றதால், அப்படியான காலம் வேண்டும் என்று இவ்விழா கொண்டாடப்பட்டது. அடிப்படையில், விதைப்பு முடிந்ததும், விவசாயக் கடவுளான சாட்ட(ர்)னிடம், சூரியன் முழுமையாக ஒளிவீசி, நல்ல விளைச்சல் கிடைக்க வேண்டிக்கொள்கிற விழாதான் இது! இவ்விழாக் காலத்தில், வழக்கமான ரோமானியச் சட்டங்கள் நடைமுறையிலிருக்காது. அங்கு மிகப்பெரிய குற்றமாக இருந்த சூதுகூட இக்காலத்தில் அனுமதிக்கப்படும். விழாவுக்காக, சாட்ட(ர்)னேலியாவின் அரசர் என்றொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரது உத்தரவுகள் நிறைவேற்றப்படும். விழாக் காலத்தில், அடிமைகளுக்கு, அவர்களின் உரிமையாளர்கள் சேவைகள் செய்வார்கள். மக்கள் பரிசுப் பொருட்களைப் பரிமாறிக்கொள்வார்கள். கிறித்துவின் உண்மையான பிறந்த நாள் தெரியாத நிலையில், கி.பி.4ஆம் நூற்றாண்டில், திருத்தந்தை முதலாம் ஜூலியஸ்தான், டிசம்பர் 25இல் கொண்டாடுவதை அறிமுகப்படுத்தினார். சாட்ட(ர்)னேலியா முக்கிய விழாவாக இருந்ததால், மக்களை ஈர்ப்பதற்காக அதையொட்டிய தேதியைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. 312இல் பேரரசர் கான்ஸ்ட்டாண்ட் டைன் கிறித்துவத்துக்கு மாறியதைத்தொடர்ந்து, சாட்ட(ர்)னேலியாவும், அதைத் தொடர்ந்து கிறிஸ்துமசும் கொண்டாடப்பட்டுள்ளன. சாட்ட(ர்)னேலியாவின் கொண்டாட்டங்களான ஏராளமாகக் குடித்தல், உண்ணுதல், சூதாடுதல் உள்ளிட்டவை, இடைக்கால ஐரோப்பாவில், கிறிஸ்துமசின்போது செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பிற்கால சமூக மாற்றங்களுக்கு ஒவ்வாதவை மறைந்து, பரிசளித்தல் முதலானவை இன்றும் கிறிஸ்துமசின் கூறுகளாகத் தொடர்கின்றன! அறிவுக்கடல் இந்நாள் டிச. 18 இதற்கு முன்னால் -டிசம்பர் 18, 2019 […] 1916 - வரலாற்றின் மிகநீண்ட யுத்தங்களில் ஒன்றும், மிகஅதிக மனித பாதிப்புகளை ஏற்படுத்தியவைகளில் ஒன்றுமான வெர்டன் சமர், ஜெர்மானியப் படைகளின் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது. உயிரிழந்தவர்கள், காணாமல் போனவர்கள், காயமடைந்தவர்கள் என்று ஏழிலிருந்து 10 லட்சம்பேர் வரை பாதிக்கப்பட்டதாகக் கணிக்கப்பட்டுள்ள இச்சண்டையில் சுமார் 4 லட்சம் பேர் உயிரிழந்தனர். முதல் உலகப்போரின்போது, சிறப்பான பாதுகாப்பு அரணாக விளங்கிய மியூஸ் குன்றுகளைக் கைப்பற்றி, அதன்மூலம் வெர்டன் கோட்டைகளின்மீது தாக்குதல் நடத்துவதற்காக இந்தப் படையெடுப்பை ஜெர்மனி மேற்கொண்டது. முந்தைய ஆண்டில் நடைபெற்ற சேம்பேனின் இரண்டாவது சண்டையில், ஏராளமான குண்டுகளை (28,42,400 களபீரங்கிக் குண்டுகள், 5,77,700 பெரிய குண்டுகள்!) அவசரப்பட்டு சுட்டுவிட்ட பிரெஞ்சுப் படைகளிடம் குண்டுகள் தீர்ந்தபின், ஜெர்மனி எளிதாக வென்றிருந்தது. அதைப்போலவே, பிரெஞ்சுப் படைகளைத் தாக்குவதுபோல போக்குக்காட்டி, அவர்களைப் பதில் தாக்குதலில் ஈடுபடச்செய்து, அவர்களின் குண்டுகள் கையிருப்பு தீர்ந்தவுடன் எளிதில் வென்றுவிடும் திட்டத்துடன் ஜெர்மனி தாக்குதலைத் தொடங்கினாலும், மோசமான காலநிலையால், திட்டமிட்டபடி முன்னேற முடியாமற்போயிற்று! ஆனாலும் முன்னேறிய ஜெர்மன் படைகள், ஃப்ளூரி-டெவண்ட்-டவுவாமாண்ட் என்ற கிராமத்தையும் (கம்யூன்), சோவில்லி கோட்டையையும் கைப்பற்றின. இக்கிராமத்தை பிரெஞ்சுப் படைகள் மீண்டும் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஜூன் 23இலிருந்து ஆகஸ்ட் 17வரை 16 முறை இருதரப்பும் மாறிமாறிக் கைப்பற்றின. இத்தாக்குதல்களால் இந்த கம்யூனின் மக்கள் முழுமையாக வெளியேறியதுடன், பிணங்கள், வெடிகுண்டுகள், நச்சு வாயுக்கள் என்று மாசுபட்டுப்போன இதன் மண்ணும் விவசாயம் செய்யமுடியாத அளவுக்குப் பாழ்பட்டுப்போய், மீண்டும் யாரும் இங்கு குடியேறவேயில்லை. இன்று அந்த இடத்தில் எங்கு வீடுகள், தெருக்கள் இருந்தன என்ற அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளன. ‘பிரான்சுக்காக உயிர்நீத்த கிராமம்’ என்று இதனை பிரான்ஸ் கவுரவித்துள்ளது! 1914-15இல் ரஷ்யப் படைகளுக்கு ஏற்படுத்தியதுபோன்ற அதிக உயரிழப்பை ஏற்படுத்தி, பிரான்சை நிலைகுலையச் செய்வது என்று திட்டமிட்டிருந்த ஜெர்மனி, தொடர்ச்சியான மழை, பிரெஞ்சுப் படைகளுக்கு அமைந்திருந்த பாதுகாப்பான நில அமைப்பு ஆகியவற்றால் தோல்வியுற்றது. - அறிவுக்கடல் இந்நாள் டிச. 19 இதற்கு முன்னால் -டிசம்பர் 19, 2019 1927 - கக்கோரி சதி என்று குறிப்பி டப்படும் கக்கோரி ரயில் கொள்ளை யில் ஈடுபட்டதற்காக, இந்துஸ்தான் ரிப்பப்ளிக் கன் அசோசியேஷன் (எச்ஆர்ஏ) அமைப்பின் ராம்பிரசாத் பிஸ்மில், அஷ்ஃபகுல்லா கான், ராஜேந்திரநாத் லகிரி, தாக்கூர் ரோஷன் சிங் ஆகிய நால்வரும் தூக்கிலிடப்பட்டனர். 1920 ஆகஸ்ட்டில் ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தார் காந்தி. 1922 பிப்ரவரி யில், அமைதியாகப் போராடிக்கொண்டிருந்த சிலரை சவுரி சவுரா காவல்துறையினர் கொன்றதில் சினமுற்ற மக்கள், காவல் நிலையத்தைத் தாக்கி, அங்கிருந்த 22 காவல்துறையினரை உயிருடன் எரித்துவிட்டனர். இந்த உண்மைகளை அறியா மலேயே, வன்முறைகளால் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்துவதாக காந்தி அறிவித்தது, போராடிக் கொண்டிருந்தவர்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே கடும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இது காங்கிரசையும் மிதவாதிகள், தீவிரவாதிகள் என்று பிளவடையச் செய்த நிலையில், சினமுற்றிருந்த இளைஞர்களைத் திரட்டிப் போராடுவதற்காக, பிஸ்மில் முன்முயற்சியில், இந்த எச்ஆர்ஏ அமைப்பு 1923இல் தொடங்கப்பட்டது. நிதித் தேவைகளுக்கு ஆங்கிலேய அரசிடமே கொள்ளையடிப்பது என்று முடிவு செய்து, 1923இல் கல்கத்தா அஞ்சல் நிலையம், சிட்டகாங் ரயில்நிலையம் ஆகியவற்றில் கொள்ளையடிக்கப்பட்டது. எச்ஆர்ஏவின் கொள்கைகள் புரட்சிக்காரன் என்ற தலைப்பில் அச்சிடப்பட்டு, 1924இல் விநியோகிக்கப்பட, 1924-25 காலத்தில் பகத்சிங், சந்திரசேகர் ஆசாத், சுக்தேவ் தாப்பர் உள்ளிட்ட ஏராளமான இளைஞர்கள் இந்த அமைப்பில் இணைந்தனர். ஆயுதப் போராட்டத்தை நோக்கமாகக்கொண்டிருந்த அமைப்பு என்பதால் நிதித்தேவைகள் தொடர, 1925 ஆகஸ்ட் 9இல், ஆங்கிலேய அரசின் பணப்பைகள் கொண்டுசெல்லப்பட்ட ரயிலில், லக்னோவுக்கு அருகிலுள்ள, கக்கோரி என்ற இடத்தில் கொள்ளையிட்டனர். இந்நிகழ்வின்போது, எதிர்பாராதவிதமாக பயணி ஒருவர் குண்டுபாய்ந்து இறந்ததால், கொலை வழக்காக மாற்றிய ஆங்கிலேயே அரசு, இந்தியா முழுவதும் மனித வேட்டையாடி, சுமார் 40 பேரைக் கைது செய்தது. விசாரணையில், இந்த நால்வருக்கும் மரணதண்டனையும், மற்றும் இருவரை அந்தமான் சிறைக்கு அனுப்பவும், இன்னும் 11 பேருக்கு 4இலிருந்து 14 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. நிறுவியவர்களில் சந்திரசேகர் ஆசாத் மட்டுமே கைதாகாமல் தப்பியிருந்த நிலையில், பகத்சிங் முயற்சியில், 1928 ஆகஸ்ட்டில் தில்லியில்கூடி, இந்த அமைப்பே இந்துஸ்தான் சோஷலிட் ரிப்பப்ளிக்கன் அசோசியேஷன்(எச்எஸ்ஆர்ஏ) ஆக புதுப்பிக்கப்பட்டு, போராட்டங்களில் ஈடுபட்டது! - அறிவுக்கடல் இந்நாள் டிச. 20 இதற்கு முன்னால் -டிசம்பர் 20, 2019 1971 - ‘எல்லைகளற்ற மருத்துவர்கள்’ என்ற அமைப்பு பிரெஞ்சு மருத்துவர்களால் உருவாக்கப்பட்டது. இயற்கையாகவும், மனிதனாலும் உருவாகும் பேரழிவுகளில் பாதிக்கப்படும் மக்களுக்கு, நாடுகளின் எல்லைகளைக் கடந்து, இனம், மதம் உள்ளிட்ட எந்தப் பாகுபாடுமின்றி உதவும் நோக்கத்துடன் இது தொடங்கப்பட்டது. 1967-70இல் நடைபெற்ற நைஜீரிய உள்நாட்டுப்போரில் நேரடியாகச் சுமார் ஒரு லட்சம் பேரும், பட்டினியால் இருபது லட்சம் பேர் வரையும் பலியாயினர். நைஜீரியாவிலிருந்து பயாஃப்ரா மக்கள் பிரிய முயற்சித்தபோது அவர்களை அடக்க நைஜீரிய அரசால் தொடுக்கப்பட்ட இப்போரின்போது, அப்பகுதிக்கு உணவு, மருந்துகள் செல்வதை அரசுப் படைகள் தடுத்ததாலேயே இவ்வளவு உயிரிழப்பு ஏற்பட்டது. இப்பகுதியில் மருத்துவ உதவியில் ஈடுபட்ட செஞ்சிலுவைச்சங்க உறுப்பினர்களும் நைஜீரிய ராணுவத்தின் தாக்குதல்களுக்குள்ளாயினர். இவற்றுக்கு செஞ்சிலுவைச்சங்கம் உறுதியான எதிர்ப்புத் தெரிவிக்காமல், நைஜீரிய அரசுடன் இணக்கமாக நடந்துகொண்டது. இதனால், பாகுபாடின்றி இயங்கும் ஓர் அமைப்பு தேவை என்று முடிவெடுத்த பிரெஞ்சு மருத்துவர்கள் ‘அவசரகால மருத்துவ, அறுவைசிகிச்சை தலையீட்டுக் குழு’ என்ற அமைப்பினை 1971இல் உருவாக்கினர். 1970இல் வங்கத்தில் ஒரே இரவில் 5 லட்சம் பேருக்குமேல் உயிரிழந்த (இத்தொடரில் 2018 நவம்பர் 13இல் இடம்பெற்ற) போலா புயலின் சேதங்களைத் தொடர்ந்து, இயற்கைப் பேரிடர்களில் உதவுதற்காக, ‘பிரெஞ்சு மருத்துவ உதவி’ என்ற மற்றொரு குழு, இவர்களுக்குத் தொடர்பின்றி, வேறு மருத்துவர்களால் உருவாக்கப்பட்டிருந்தது. இவையிரண்டும் இணைக்கப்பட்டே, ‘எல்லைகளற்ற மருத்துவர்கள்’ அமைப்பு உருவானது. தற்போது 150 நாடுகளைச் சேர்ந்த 67 ஆயிரம் உறுப்பினர்கள், பல்வேறு பாதிக்கப்பட்ட நாடுகளிலும் உதவிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 2018ஆம் ஆண்டில் ரூ.12 ஆயிரம் கோடிக்கும் அதிகமாகச் செலவிட்டுள்ள இவ்வமைப்பு, அதற்கான நிதியை நன்கொடைகள்மூலமே பெறுகிறது. சுதந்திரமான செயல்பாடுகளில் குறுக்கீடு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, பெரும்பாலும் தனி மனிதர்களின் சிறு நன்கொடைகளையே இவ்வமைப்பு ஏற்கிறது. மிகவிரைவாக உதவிக்கு வந்துவிடுவதாகப் பெயர் பெற்றிருக்கும் இவ்வமைப்புக்கு 1999இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தீவிரவாதத்துக்கெதிரான போர் என்று அமெரிக்கா ஆக்கிர மிப்பில் ஈடுபட்ட நாடுகளில், அவர்களால் தாக்கப்பட்டவர்களுக்குச் செய்யப்படும் மனிதநேய உதவிகள்கூட, எதிரிகளுக்கான உதவிகளாக கூட்டணி நாடுகளால் பார்க்கப்பட்டு, பாதுகாப்புகள் மறுக்கப்பட்டதால், அப்பகுதிகளில் இவ்வமைப்பின் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உயிரிழந்ததும் நிகழ்ந்துள்ளது. - அறிவுக்கடல் இந்நாள் டிச. 21 இதற்கு முன்னால் -டிசம்பர் 21, 2019 […] 1965 - ‘அனைத்து வடிவங்க ளிலான இனப் பாகுபாடு களையும் அகற்றுவதற்கான பன்னாட்டு உடன்படிக்கை’ ஐக்கிய நாடுகள் அவையில் நிறைவேற்றப் பட்டது. உலகின் பல பகுதிகளிலும் காணப்பட்ட யூத எதிர்ப்பு நடவடிக்கைகளால், இன, மத, தேசிய வெறுப்புணர்வுகளின் அனைத்து வெளிப்பாடுகளும், நடைமுறைகளும், 1945இல் ஐநா உருவாக்கப்பட்டபோது ஏற்கப்பட்ட அமைப்புப் பட்டயத்திற்கும், 1948இல் நிறைவேற்றப்பட்ட உலக மனித உரிமை கள் பிரகடனத்திற்கும் எதிரானவை என்றும், அத்தகைய செயல்களைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்றும், டிசம்பர் 1960இல் ஐநா தீர்மானம் நிறைவேற்றியது. இதைத் தொடர்ந்து, ஐநாவின் ‘பொருளாதார, சமூக அவை’ உருவாக்கிய, சகிப்பின்மைக்கெதிராக மக்களுக்கு விழிப்பு ணர்வூட்டவும், பாகுபாடு காட்டும் சட்டங்களைக் கைவிடவும் அரசுகளைக் கோரும் ‘இனப் பாகுபாடு, தேசிய-மத சகிப்பின்மை ஆகியவற்றின் வெளிப்பாடுகள்’ என்ற தீர்மானம், 1961இல் போதிய அவகாசமில்லாததால் அடுத்த ஆண்டில் நிறை வேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின்மீதான விவாதத்தின்போது, ஒரு பன்னாட்டு உடன்படிக்கை வடிவிலான உறுதியான நடவடிக்கை தேவையென்று ஆப்ரிக்க நாடுகள் வலியுறுத்தின. கட்டுப்படுத்தும் உடன்படிக்கையாக இல்லாமல், பிரகடனம் மட்டும் போதுமென்று சில நாடுகள் விரும்பின. இனப் பாகுபாட்டைக் குற்றமாக்கு வதிலும்கூட, வன்முறையாக உருப்பெற்ற அல்லது உருப்பெறும் வாய்ப்புள்ள நடவடிக்கைகளை மட்டும் குற்றமென்று அறிவிக்கவேண்டும் என்று அமெரிக்கா வாதிட்டது. இனவாத, பாசிச அமைப்புகள் மட்டுமின்றி, இனப் பாகுபாட்டை கடைப்பிடிக்கும், தூண்டும் அனைத்து இயக்கங்களையும் தடைசெய்ய வேண்டு மென்று சோவியத் ஒன்றியம் வாதிட்டது. வெறுப்புப் பேச்சைக் குற்றமாக்கும் போது, மனித உரிமைப் பிரகடனத்திற்குட்பட்டு முடிவெடுக்கப்படும் என்ற சமாதா னத்துடன் உருவாக்கப்பட்ட வரைவுப் பிரகடனம் 1963இல் ஏற்கப்பட்டது. முன்னுரி மையளிக்கப்பட்டு, 1964இல் இதற்கான உடன்படிக்கை உருவாக்கப்பட்டாலும், 1965இன் பொதுக்குழுவில்தான் நிறைவேற்றப்பட்டது. மதப் பாகுபாட்டுக்கெதிரான உடன் படிக்கை தனியாக நிறைவேற்றப்படாவிட்டாலும், ஐநா அமைப்புப் பட்டயமும், மனித உரிமைப் பிரகடனமும் எந்த மதத்தையும் பின்பற்றும் சுதந்திரத்தை அளிப்பதுடன், மத அடிப்படையிலான பாகுபாடுகளைத் தடைசெய்கின்றன. - அறிவுக்கடல் இந்நாள் டிச. 23 இதற்கு முன்னால் -டிசம்பர் 23, 2019 […] 1919 - இங்கிலாந்தில் நிலவிய, பெண்கள் வழக்கறிஞர்களாகப் பணியாற்ற முடியாத நிலையை முடிவுக்குக் கொண்டுவந்த ‘பாலின தகுதியின்மை (நீக்க) சட்டம் 1919’ அரச ஒப்புதல் பெற்று நடைமுறைக்கு வந்தது. இங்கிலாந்தில் சட்டத்தில் பட்டம் பெற்ற முதல் பெண் எலிஸா ஓர்ம். இவர், 1888இல் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் பட்டம் பெற்றாலும், சொலிசிட்டராகவோ, பாரிஸ்ட்டராகவோ பணியாற்ற அனுமதிக்கப்பட்டவில்லை. இங்கிலாந்தில் வழக்கறிஞர்கள் இரு வகையாக உள்ளனர். சொலிசிட்டர் என்பவர் பொதுவாக நீதிமன்றத்திற்கு வெளியே சட்ட ஆலோசனைகள் வழங்குதல், சட்ட ஆவணங்களுக்கான வரைவு உருவாக்குதல் முதலான பணிகளிலும், பாரிஸ்ட்டர் என்பவர் நீதிமன்றத்தில் வாதாடுபவராகவும் உள்ளனர். இருதரப்பும், மற்றவரின் பணிகளையும் செய்வதும் நிகழ்ந்தாலும்கூட, மேல் நீதிமன்றங்களில் வாதாட பாரிஸ்ட்டர்களுக்கு மட்டுமே அனுமதியுண்டு. சொத்து வாங்குதல், விற்பதில் சட்ட நடவடிக்கைகளைக் கவனித்துக்கொள்ளும் கன்வேயன்சர் என்ற தொழிலுக்கு வழக்கறிஞராக இருப்பது அவசியமில்லை என்பதால், வழக்கறிஞராக அனுமதிக்கப்படாத ஓர்ம் அத்தொழிலில் ஈடுபட்டார். நீதித்துறையில் பெண்களுக்கு அனுமதியில்லாத நிலைகுறித்து, 1914இல் தொடுக்கப்பட்ட வழக்கில்கூட, மேல்முறையீட்டு நீதிமன்றம், நபர்(பர்சன்) என்பதற்கான சட்ட வரையறையில் பெண்கள் இடம்பெறவில்லை என்றே தீர்ப்பளித்தது. அப்படியான சூழலில்தான் இச்சட்டம் இயற்றப்பட்டு, 1922இல் ஐவி வில்லியம்ஸ் முதல் பெண் வழக்கறிஞரானார். (அவர் வழக்கறிஞராகப் பணியாற்றவே இல்லை என்பது தனிச்செய்தி!) இங்கிலாந்தின் ஆளுகையின் கீழிருந்த கனடா, 1897இலேயே பெண்களை வழக்கறிஞர்களாக அனுமதித்துவிட்டது. க்ளாரா ப்ரெட் மார்ட்டின் முதல் பெண்ணாக 1891இல் சட்டத்தில் பட்டம் பெற்றபோது, இதே ‘பர்சன்’ வரையறையால் வழக்கறிஞராக அனுமதி மறுக்கப்பட்டார். ஒண்ட்டாரியோ சட்டமன்ற சபாநாயகராக இருந்த வில்லியம் டக்ளஸ் பால்ஃபோர்ட், இந்த வரையறையைத் திருத்த ஒரு சட்டத்தை முன்மொழிந்தார். 1892இல் அது நிறைவேற்றப்பட்டு, க்ளாரா முதல் பெண் வழக்கறிஞரானார். நெதர்லாந்து 1903இலும், நார்வே 1904இலும், டென்மார்க் 1909இலும் பெண்களை நீதித்துறையில் அனுமதித்துவிட்டன. இவற்றுக்கு முன்பே 1869இல் அமரிக்காவில் ஆரபெல்லா மான்ஸ்ஃபீல்ட் என்ற பெண் வழக்கறிஞராகியிருந்தாலும், ஃப்ரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் ஃப்ரான்சில் வழக்கறிஞராகப் பணியாற்றிய விக்டோரீ-டி-விலிரோவெட் என்பவரும், 1500இலேயே இத்தாலிய நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிய கியுஸ்ட்டினா ரோக்கா என்பவருமே தற்கால உலகின் முதல் பெண் வழக்கறிஞர்கள் என்ற பெருமைக்குரியவர்கள்! -அறிவுக்கடல் இந்நாள் டிச. 24 இதற்கு முன்னால் -டிசம்பர் 24, 2019 1936 - லுகேமியா என்னும் ரத்தப் புற்றுநோய் முற்றிய நிலையிலிருந்த ஒரு 28 வயதுப் பெண்ணுக்கு, பாஸ்பரஸ்-32 கதிரியக்க அணுக்கருவைச் செலுத்தி, கலிஃபோர்னிய மருத்துவர் ஜான் லாரன்ஸ் சிகிச்சையளித்தார். மனிதர்கள் மீதான இந்த முதல் அணுக்கரு சிகிச்சையை மேற்கொண்ட அவரே அணுக்கரு சிகிச்சையின் (நியூக் ளியார் மெடிசின்) தந்தை என்று போற்றப்படுகிறார். அணுக்கரு சிகிச்சை என்ற முயற்சி, 1920களின் இடைப்பகுதியில் ஜெர்மனியில், ஹங்கேரிய கதிரியக்க வேதியி லாளரான ஜார்ஜ்-டி-ஹெவசி என்பவரால்தான் முதன்முதலில் தொடங்கப்பட்டது. எலிகளுக்குள் கதிரியக்க அணுக்கருவினைச் செலுத்தி, அவற்றின் உடலியக்கத்தை இவர் கண்காணித்ததே, கதிரியக்கக் கண்காணிப்புக்கான தொடக்கமாக அமைந்தது. 1934இல் ஐரீன்-ஜோலியட்-கியூரி(மேரி கியூரியின் மகள்), அவர் கணவர் பிரடரிக் ஜோலியட் கியூரி ஆகியோர் செயற்கையாக கதிரியக்க அணுக்கருவை உருவாக்கியது, இத்துறையின் வளர்ச்சியில் மிகமுக்கிய முன்னேற்றமாக அமைந்தது. இந்தக் கண்டுபிடிப்புக்காக இவர்களுக்கு 1935இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஜார்ஜ்-டி-ஹெவசி-க்கும் கதிரியக்கக் கண்காணிப்பு முறையை உருவாக்கியதற்காக 1943இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1971இல் அமெரிக்க மருத்துவக் கழகம், அணுக் கரு சிகிச்சையை ஒரு சிறப்பு மருத்துவப் பிரிவாக அங்கீகரித்தது. எக்ஸ்-ரே கதிரி யக்கமே முதன்முறையாக, உயிருடன் உள்ள மனித உடலின் உள்ளுறுப்புகளை ஆய்வு செய்ய உதவியது. எக்ஸ்-ரே உள்ளிட்ட ஆய்வுகளிலும், புற்றுநோய் போன்றவற்றி ற்குச் செய்யப்படும் கதிரியக்கச் சிகிச்சைகளிலும், உடலின் வெளிப்புறமிருந்து கதிரியக்கம் செலுத்தப்படுகிறது. ஆனால், அணுக்கரு சிகிச்சையில், கதிரியக்க அணுக் ்கரு உடலுக்குள் செலுத்தப்பட்டு, உள்ளிருந்து வெளிப்படும் கதிரியக்கம் கண்கா ணிக்கப்படுவதன்மூலம், பிறவகையிலான அனைத்து மேம்பட்ட (சிடி, பிஇடி, எம்ஆர்ஐ) ஆய்வு முறைகளையும்விட தெளிவான தகவல்கள் பெறப்படுகின்றன. உடலுக்குள் பெரும்பாலும் ஊசி மூலம் செலுத்தப்படும் கதிரியக்க அணுக்கரு, குறிப்பட்ட பாதை வழி யாகச் செல்லும்படியோ, அல்லது குறிப்பிட்ட உறுப்பில் சேகரமாகும்படியோ செய்யப்படு கிறது. இதன்மூலம், உள்ளுறுப்புகளைப் பற்றிய தெளிவான தகவல்கள் மட்டுமின்றி, செல்களின் செயல்பாடுகள்வரை கண்காணிக்க முடிவதால், நோயின் தோற்றுவாய் குறித்தே அறிய முடிவதுடன், நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு அவரது உடல் எவ்வாறு வினையாற்றுகிறது என்பதையும்கூட அறிய முடிகிறது. பொதுவாக நோய்கள் உடலின் உட்பகுதியில் தோன்றக்கூடியவையாக இருப்பதால், தொடக்க நிலையிலேயே அறிய முடிவது, முன்கூட்டியே சிகிச்சையைத் தொடங்கவும், தெளிவான தகவல்கள் இருப்பது பொருத்தமான சிகிச்சையைத் தேர்ந்தெடுக்கவும் உதவுகிறது. - அறிவுக்கடல் இந்நாள் டிச. 25 இதற்கு முன்னால் -டிசம்பர் 25, 2019 […] 336 - கிறிஸ்துமஸ் முதன்முறை யாகக் கொண்டாடப்பட்டது. ரோமில் கொண்டாடப்பட்ட இதுவே முதன் முதலில் பதிவு செய்யப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் விழாவாகும். கிறித்துவின் சரியான பிறந்த நாளுக்கான பதிவுகள் இல்லாத நிலையில், குளிர்காலம் முடிந்து சூரியத்திருப்பம் நடைபெறுவதாக ரோமானியர்கள் கணித்திருந்த டிசம்பர் 25 தேர்ந்தெடுக்கப்பட்டது. சூரியக் கதிர்கள் புவியின்மீது விழும் திசை மாறும் நாள் சூரியத்திருப்பம்(சோல்ஸ்டைஸ்) என்றழைக்கப்படுகிறது. மாறிக்கொண்டே வந்த சூரியக்கதிர்களின் கோணம், திரும்பும் நாளில், மாறாமல் நிற்பதுபோலத் தோன்றுவதால், லத்தீனில் சோல் (சோலார்!) என்றால் சூரியன், சிஸ்டியர் என்றால் நகராமல் நிற்றல் என்பதிலிருந்து சோல்ஸ்டைஸ் என்ற பெயர் உருவானது. கிறித்துவுக்கு முன்பிருந்தே, டிசம்பர் 25இல் தோற்கடிக்க முடியாத சூரியன்(சோல் இன்விக்ட்டஸ்) என்றழைக்கப்பட்ட சூரியக்கடவுளின் பிறந்த நாளாக ‘நட்டாலிஸ் சோலிஸ் இன்விக்ட்டி’ என்ற பண்டிகையைக் கொண்டாடிவந்தனர். நேர்மையின் சூரியன் என்று கிறித்துவை சூரியனுடன் ஒப்பிடும் பல செய்யுள்கள் விவிலியத்தில் காணப்படுவதால், இத்தேதி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கன்னி மரியா தூய ஆவியினால் கருவுற்று, இயேசுவுக்குத் தாயாவார் என்று தேவதூதர் கேபிரியேல் அவருக்கு அறிவித்த ‘இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு’ மார்ச் 25இல் கொண்டாடப்படுவதிலிருந்து, ஒன்பது மாதங்கள் கழித்து டிசம்பர் 25 வருவதாலும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்நாள் சமஇரவு(ஈக்வினாக்ஸ்) நாளாக இருப்பதிலிருந்து சூரியனையொட்டிய பண்டைய விழாக்களே, வடிவம் மாறின என்பதையும் புரிந்து கொள்ள முடியும். சூரியன் நிலநடுக்கோட்டைக் கடந்து செல்வதால் இரவும் பகலும் சமமாக இருக்கும் சமஇரவு நாள் மார்ச்சிலும், செப்டம்பரிலும் வருகிறது. லத்தீனில் ஏக்வஸ் என்றால் சமம், நாக்ஸ்(நாட்டிக்ஸ்) என்றால் இரவு என்பதிலிருந்து ஈக்வினாக்ஸ் என்ற சொல் உருவானது. யூதர்களின் நம்பிக்கையின்படி, காப்பவரும், விடுதலையளிப்பவருமாகக் கருதப் படுபவர் மெசையா. இந்த எபிரேயச் சொல்லுக்கான கிரேக்க மொழிபெயர்ப்பு கிறிஸ்ட் டோஸ் என்பதிலிருந்து, கிறித்துவின் வழிபாடு(மாஸ்) என்ற பொருளில், கிறிஸ்ட்டஸ் -மெஸ்ஸே என்ற பெயர் முதன்முதலில் 1038இல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்ட்டோஸ் என்பதன் முதல் எழுத்தான கி என்பது கிரேக்க எழுத்தில்ஆங்கில எக்ஸ் வடிவிலிருப்பதால் எக்ஸ்-மஸ் என்று அழைக்கப்பட்டது. அறிவுக்கடல் இந்நாள் டிச. 26 இதற்கு முன்னால் -டிசம்பர் 26, 2019 […] 1941 - அமெரிக்காவின் நன்றி நவிலல் நாள், நவம்பர் மாதத்தின் நான்காம் வியாழக்கிழமையில் கடைப்பிடிக்கப்படும் என்ற நாடாளுமன்றத்தின் தீர்மானத்தில், குடியரசுத்தலைவர் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் கையெழுத்திட்டு, அதைச் சட்டமாக்கினார். 1863இல், ஒவ்வோராண்டும் நவம்பரின் கடைசி வியாழனில் நன்றி நவிலல் கடைப்பிடிக்கப்படும் என்று அப்போதைய குடியரசுத்தலைவர் ஆப்ரஹாம் லிங்கன் அறிவித்து, அரசு விடுமுறையாகவும் ஆக்கியதிலிருந்து, ஒருங்கிணைக்கப்பட்டு அமெரிக்கா முழுவதும் அதே நாளில் இவ்விழா கொண்டாடப்பட்டுவந்தது. 1939இல் நவம்பரில் 5 வியாழக்கிழமைகள் என்பதால், கடைசி வியாழன் நவம்பர் 30இல் வந்தது. அக்காலத்தில், நன்றி நவிலல் விழா முடிவதற்கு முன்பாக கிறிஸ்துமசுக்கான பொருட்களை விற்பனைக்கு வைப்பதும், கடைகளில் கிறிஸ்துமஸ் சிறப்பு விற்பனைக்கான அலங்காரங்கள் செய்வதும் தவறான நடவடிக்கையாகக் கருதப்பட்டது. நவம்பர் 30இல் நன்றி நவிலல் கடைப்பிடிக்கப்பட்டால், அதன்பின் கிறிஸ்துமசுக்கான விற்பனைகளுக்கு மிகக் குறைந்த கால அவகாசமே கிடைக்கும் என்பதால், விற்பனை பாதிக்கப்படும் என்று உலர் பொருட்கள் சில்லரை விற்பனையாளர்கள் சங்கத்தின் நிர்வாகி லியூ ஹான், வணிகத்துறைச் செயலாளர்(அமைச்சர்) ஹாரி ஹாப்கின்சிடம் தெரிவித்தார். பெரும் பொருளாதார மந்தத்தின் பாதிப்புகள் முழுமையாக முடிவுக்கு வந்திராத நிலையில், பொருளாதாரத்தை ஊக்குவிக்கவேண்டிய கிறிஸ்துமஸ் சிறப்பு விற்பனை பாதிக்கப்படுவது நல்லதல்ல என்று கருதிய ரூஸ்வெல்ட், அவ்வாண்டு நவம்பரின் கடைசிக்கு முந்தைய (நான்காம்) வியாழக்கிழமை கொண்டாடப்படும் என்று அறிவித்தார். இதைக் கடுமையாக எதிர்த்த எதிர்க்கட்சியினர், தேங்க்ஸ்-கிவிங் பிராங்ளின் டி ரூஸ்வெல்ட்டுக்காக பிராங்க்ஸ் -கிவிங் ஆக மாறிவிட்டதாக விமர்சித்தனர். அவ்வாண்டில், 23 மாநிலங்கள் புதிய தேதியை ஏற்க, 22 மாநிலங்கள் பழைய தேதியையே கடைப்பிடிக்க, 3 மாநிலங் கள் இரு நாட்களுக்கும் விடுமுறை அறிவித்தன! அடுத்த இரு ஆண்டுகளிலும் கடைசிக்கு முந்தைய(மூன்றாவது!) வியாழக்கிழமை இவ்விழா அறிவிக்கப்பட, 1941இல் மரபுப்படி இனி கடைசி வியாழன் என்று நாடாளுமன்றம் தீர்மானம் இயற்றியது. 1941இல் 5 வியாழன்கள் என்பதால் நவம்பர் 29இல் கடைப்பிடிக்கப் பட்ட நன்றி நவிலல், வியாபாரத்தில் ஏற்படுத்திய பாதிப்பால் வணிகர்கள் அழுத்தம் கொடுக்க, 1942இல் நான்காவது வியாழன் என்று நிறைவேற்றப்பட்டதிருத்தத் தீர்மானமே குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் நன்றி நவிலல் விழாவுக்கான முதல் சட்டமாகி, உடனடியாகப் பெரும்பாலான மாநிலங்களால் ஏற்கப்பட்டது! - அறிவுக்கடல் இந்நாள் டிச. 27 இதற்கு முன்னால் -டிசம்பர் 27, 2019 […] 537 - கட்டிடக்கலையின் வர லாற்றை மாற்றியமைத்த கட்டிட மாகக் குறிப்பிடப்படும் ஹேகியா சோஃபியா, கான்ஸ்ட்டாண்ட்டிநோப்பிளில் பேரரசர் ஜஸ்டீனியனால் திறக்கப்பட்டது. பைசாந்தி யக் கட்டிடக்கலையின் உச்சமென்று புகழப்படும் இந்தப் பேராலயம், 1520இல் செவில் பேராலயம் கட்டப்படும்வரை, 269 அடி நீளம், 240 அடி அகலம், 180 அடி உயரத்துடன், உலகின் மிகப்பெரிய கட்டிடமாகத் திகழ்ந்தது. 532இல் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் 10 மாதங்களில் கட்டப்பட்ட இது, அக்காலத்திய தேவாலயங்களைப் போல் பெரிய கற்களால் கட்டப்படாமல், செங்கல் கட்டிடமாக கட்டப்பட்டது. செங்கற்களுக்கிடையில், மணலும், நுண்ணிய பீங்கான் துகள்களும் கலந்த கலவை பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்காலத்திய கான்க்ரீட் அளவுக்கு உறுதியானதாக இக்கலவை அக்காலத்தில் கருதப்பட்டது. திறக்கப்பட்டுவிட்டாலும், மொசைக் ஓவியங்கள் அமைப்பது, சுமார் 30 ஆண்டுகள் கழித்து, பேரரசர் இரண்டாம் ஜஸ்டின் காலத்தில்தான் நிறை வுற்றது. திறக்கப்பட்டதிலிருந்து 1453வரை, சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு, கிழக்கத்திய பழைமைவாத திருச்சபையின் தலைமைப் பேராலயமாகவும், கிறித்தவ ஒன்றிப்பின் தலைமையிடமாகவும் இது விளங்கியது. இடையில், நான்காம் சிலுவைப் போரின்போது, 1204இல் கத்தோலிக்கர்களால் கைப்பற்றப்பட்டு 1261வரை கத்தோ லிக்கப் பேராலயமாக மாற்றப்பட்டிருந்தது. ஹேகியா சோஃபியா என்றால் கிரேக்க மொழியில் புனித அறிவு என்று பொருள். 1453இல் 21 வயதேயான ஒட்டோமான் பேரரசர் இரண்டாம் மெஹ்மூத் கான்ஸ்ட்டாண்ட்டிநோப்பிளைக் கைப்பற்றி, இஸ்தான்புல்-லாக்கியபோது, சேதப்படுத்தப்பட்ட நகரின் பல பகுதிகளும் அப்படியே கைவிடப்பட்டாலும், இந்த மாபெரும் கட்டிடத்தின்மீதான ஈர்ப்பு, இதனை மசூதியாக மாற்றி, பராமரிக்கச் செய்தது. கிறித்தவ மொசைக் ஓவியங்கள் சேதப்படுத்தப்பட்டு, அல்லது, மூடப்பட்டு, மசூதிக்கான சில அமைப்புகள் சேர்க்கப்பட்டதைத்தவிர, வேறு மாற்றங்கள் செய்யப்படாமல் இது பாதுகாக்கப்பட்டது. 1616இல் சுல்தான் அஹ்மெத் மசூதி திறக்கப்படும்வரை, இத்தான்புல்லின் முதன்மை மசூதியாக இது இருந்தது. துருக்கி விடுதலையடைந்தபின், 1931இல் மூடப்பட்ட இந்த மசூதி, 1935இல் மதச்சார்பற்ற ஓர் அருங்காட்சியகமாகத் திறக்கப்பட்டது. ஹேகியா சோஃபியாவிற்கு முன்பு அதே இடத்தில், 360இல் திறக்கப்பட்ட தேவாலயம் 404இலும், 415இல் கட்டப்பட்ட தேவாலயம் 532இலும் எரிக்கப்பட்டுள்ளன. முதல் தேவாலயத்தின் எச்சங்கள் எதுவுமில்லாத நிலையில், இரண்டாவது தேவாலயத்தின் பல பகுதிகளையும் உள்ளடக்கி, மத வழிபாடு தடைசெய்யப்பட்ட அருங்காட்சியமாகவுள்ள இதற்கு ஆண்டுக்கு 33 லட்சம் பார்வையாளர்கள் வருகின்றனர்! - அறிவுக்கடல் இந்நாள் டிச. 28 இதற்கு முன்னால் -டிசம்பர் 28, 2019 […] 1065 - இங்கிலாந்து அரசர் எட்வர்ட் கட்டிய வெஸ்ட்-மின்ஸ்ட்டர் ஆபி(மடம்) அர்ப்பணிக்கப்பட்டது. ஒரே வாரத்தில், ஜனவரி 5இல் இறந்த அவர் உடல் இங்கு அடக்கம் செய்யப்பட்டது. இந்த மடம் 960களில் பெனடிக்டிய துறவிகளால் தொடங்கப்பட்டது. தேம்சின் மீனவர்களில் ஒருவருக்கு புனித பீட்டர் காட்சியளித்ததால் இது தொடங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த புனித பீட்டர் மடத்தை, தனக்காக அரச மயானம் தேவையென்று, அரசர் எட்வர்ட், ஐரோப்பாவின் இடைக்கால கட்டிடக்கலை வடிவமான ரோமனெஸ்க் முறையில் 1040களில் மறுகட்டுமானம் செய்யத்தொடங்கினார். வெஸ்ட்-மின்ஸ்ட்டர் ஆபி என்று பொதுவாகக் குறிப்பிடப்பட்டாலும், இதன் பெயர் ‘காலேஜியேட் சர்ச் ஆஃப் செயிண்ட் பீட்டர்’ என்பதாகும். கொலிஜியம் என்ற லத்தீன் சொல்லிலிருந்து உருவான காலேஜ் என்ற சொல், கிறித்தவ மதச் சட்டத்தில் துறவிகள் குழுவையும், காலேஜியேட் சர்ச் என்பது அவ்வாறான குழுவால் நிர்வகிக்கப்படும் தேவாலயத்தையும் குறிக்கின்றன. கிறித்தவத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட குழுக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட மோனாஸ்டெரியம் என்ற லத்தீன் சொல்லிலிருந்து உருவான மின்ஸ்ட்டர் என்ற பெயர், குறிப்பிட்ட தேவாலயங்களைக் கவுரவிக்க அளிக்கப்பட்டு, பின்னாளில் காலேஜியேட், கதீட்ரல்(பேராலயம்) ஆகிய சர்ச்களைக் குறிக்கும் சொல்லாகியது. வெஸ்ட்-மின்ஸ்ட்டர்போல ஈஸ்ட்-மின்ஸ்ட்டர் உட்பட பல மின்ஸ்ட்டர்கள் இங்கிலாந்தில் உள்ளன. 1550களில் வெஸ்ட்-மின்ஸ்ட்டர் மறைமாவட்டம் கலைக்கப்பட்டு, லண்டன் மறைமாவட்டம் உருவானபோது, (புனித பீட்டர் தேவாலயமான)வெஸ்ட்-மின்ஸ்ட்டருக்குரிய நிதி, புனித பால் பேராலயத்துக்கு வழங்கப்பட்டதால், ‘ராபிங் பீட்டர் டு பே பால்’ என்ற (பழைய) சொற்றொடர் புகழடைந்தது. கிறித்தவ மதத்தலைமைக்குக் கட்டுப்பட்தாக அன்றி, அரசுக்கு கட்டுப்பட்டது என்பதற்கான ‘ராயல் பெக்யூலியர்’ என்ற தகுதியை, அரசி எலிசபெத் 1560இல் இதற்கு வழங்கினார். இரண்டாம் உலகப்போரின்போது, இதன் பொருட்கள் இடம் மாற்றப்பட்டதுடன், கட்டிடங்களைப் பாதுகாக்க அறுபதாயிரம் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. 39 முடிசூட்டு விழாக்களும், 16 அரச திருமணங்களும் இங்கு நடைபெற்றுள்ளன. பதினேழு அரசர், அரசிகள், நியூட்டன், டார்வின் உள்ளிட்ட முக்கியமானவர்கள் என்று சுமார் 3,300 பேர் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஏழ்மையிலிருந்ததால், இங்கு ஆறடி நிலத்திற்குரிய கட்டணம் செலுத்த முடியாமல், 18 சதுர அங்குலங்களுக்குக் கட்டணம் செலுத்தியவராகக் குறிப்பிடப்படும் ஆங்கிலக் கவிஞர் பென் ஜான்சன் நின்ற நிலையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்! - அறிவுக்கடல் இந்நாள் டிச. 30 இதற்கு முன்னால் -டிசம்பர் 30, 2019 1906 - டாக்காவில் நடைபெற்ற அகில இந்திய முகம்மதியக் கல்வி மாநாட்டில், அகில இந்திய முஸ்லிம் லீக் உருவானது. 1857இன் முதல் விடுதலைப் போருக்குப்பின், இந்தியாவின் ஆட்சி, கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து, இங்கிலாந்து அரசிடம் சென்றுவிட்டது. சிப்பாய்க் கலகத்திற்கு மத உணர்வுகள் பாதிக்கப்பட்டது காரணமாக அமைந்ததால், அவ்வாறு மீண்டும் நடைபெறாமலிருக்க, இந்தியர்களின் மத உணர்வுகளைப் புரிந்து நடந்துகொள்ள ஆங்கிலேய அரசு திட்டமிட்டு, ஆங்கிலம் பயின்ற இந்தியர்களை அரசுப் பணிகளில் நியமிக்கத் தொடங்கியது. இந்தியாவில் அமைதியைப் பேணுதல் ஆங்கிலேய அரசின் நோக்கமில்லை. ஆனால், இந்தியாவிலிருந்து கொண்டுசெல்லப்பட்ட பருத்தி உள்ளிட்ட அடிப்படைப் பொருட்கள் இங்கிலாந்தின் தொழில்களை வேகமாக வளரச் செய்திருந்தன. அதற்கு இக்குழப்பங்கள் இடையூறாகிவிடும் என்பதால், மீண்டும் மத அடிப்படையிலான சிக்கல்கள் வந்துவிடக்கூடாது என்பதில் இங்கிலாந்து எச்சரிக்கையாக இருந்தது. மேற்கத்திய கல்வி பெற்றிருந்த இந்துக்கள், ஆங்கிலேய அரசுப் பணிகளுக்குச் சென்று, சில உயர் பதவிகளையும் அடையத் தொடங்கியிருந்தனர். கல்வியே மேல் சாதியினருக்கு மட்டும்தான் எனும்போது, மேற்கத்திய கல்வியும் அவர்களுக்குத்தான் கிடைக்கும் என்பதையும், அதனால் இந்துக்கள் என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும், மேல்சாதி இந்துக்கள்தான் என்பதும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால், மேற்கத்திய கல்வியை தங்கள் சமயத்துக்கு விரோதமானதாக இஸ்லாமியர்கள் கருதியதால், படிக்கவில்லை. தங்கள் சமயத்தவர்கள் மேற்கத்திய கல்வியைப் புறக்கணிப்பதால் பின்தங்கியிருப்பதைச் சரிசெய்ய விரும்பிய சையத் அகமத் கான், 1875இல் முகம்மதன் ஆங்லோ-ஓரியண்ட்டல் கல்லூரியை அலிகாரில் தொடங்கினார். இதுவே பின்னாளில்(1920இல்) அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமாகியது. இஸ்லாமியர்களைப் படிக்கவைக்க இதிலிருந்து அவர் மேற்கொண்ட முயற்சிகள் அலிகார் இயக்கம் என்றே அழைக்கப்பட்டன. இதற்காகவே 1886இல் அகில இந்திய முகம்மதியக் கல்வி மாநாடு என்ற இயக்கத்தையும் தொடங்கி, ஆண்டுதோறும் வெவ்வேறு நகரங்களில் மாநாடு நடத்தி, இஸ்லாமியர்களை மேற்கத்திய கல்வி கற்க வலியுறுத்திய அவர், இந்த அமைப்பில் அரசியல் பேசுவதில்லை என்பதையும் அடிப்படைக்கொள்கையாக வைத்திருந்தார். 1905இன் வங்கப் பிரிவினையில் நன்மையடைந்த கிழக்கு வங்க மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இஸ்லாமியர்களாக இருந்த நிலையில், மேற்கு வங்கத்திலிருந்த இந்துக்கள் அப்பிரிவினைக்குக் காட்டிய கடுமையான எதிர்ப்பு, இஸ்லாமியர்களின் நல்வாழ்விற்கு இந்துக்கள் எதிர்ப்பாகவே இருப்பார்கள் என்ற உணர்வைத் தோற்றுவிக்க, அரசியல் பேசுவதில்லை என்று தொடங்கப்பட்ட இயக்கம், இஸ்லாமியர்களுக்கான அரசியல் இயக்கமாகியது! இந்நாள் டிச. 31 இதற்கு முன்னால் -டிசம்பர் 31, 2019 […] 1501 - முதல் கண்ணனூர் (தற்போதைய கண்ணூர்) யுத்தம், கோழிக்கோட்டின் சாமூத்திரிக்கும், ஜோவா-டா-நோவா தலைமை யிலான மூன்றாம் போர்ச்சுகீசிய கப்பல் அணிக்கும் (அர்மடா) இடையே நடைபெற்றது. இதில் போர்ச்சுகீசியக் கப்பல்கள் பயன்படுத்திய முறையை, ‘யுத்த வரிசை’ என்ற பெயரில் அதன்பின் கடற்படைகள் கடைப்பிடிக்கத் தொடங்கின. 1498இல் கோழிக்கோட்டை அடைந்த வாஸ்கோ-ட-காமா, ஏற்கனவே அங்கு வணிக உறவுகொண்டிருந்த அரேபியர்களின் எதிர்ப்பையும்மீறி, வணிக உரிமையை சாமூத்திரியிடம் பெற்றார். ஆனாலும், அவர், தங்கம், வெள்ளி போன்றவையின்றி, சர்க்கரை, எண்ணெய், தேன் முதலானவற்றைக் கொண்டுவந்திருந்ததால், அவற்றை ஏற்காமல், வரியைச் செலுத்த சாமூத்திரி உத்தரவிட்டது இத்தொடரில் 2018 ஜூலை 8இல் இடம்பெற்றிருந்தது. காமாவின் பிரதிநிதிகளை சாமூத்திரி பிணையாகப் பிடித்துவைக்க, உள்ளூர்க்காரர்களை சிலரை காமா அழைத்து(பிடித்து?)கொண்டு (தப்பி?!)விட்டார்! 1500இல் பெட்ரோ அல்வேரஸ் கேப்ரல் கோழிக்கோட்டுக்கு வந்தபோது, காமா ஏற்படுத்தியிருந்த ஆலை அழிக்கப்பட்டு, அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட போர்ச்சுகீசியர்களும் கொல்லப்பட்டிருப்பதைக் காணநேர்ந்தது. இதனால் சினமுற்ற கேப்ரல், நாள் முழுவதும் கோழிக்கோட்டின்மீது குண்டுகளை வீசியதுடன், அங்கிருந்த 10 அரேபியக் கப்பல்களைக் கொள்ளையிட்டுவிட்டு, தீயிட்டு, அதிலிருந்த சுமார் அறுநூறு பேரையும் கொன்றார். அதன்பின், கொச்சின், கண்ணனூர் ஆகியவற்றின் அரசர்களுடன் சாதகமான வணிக உறவுகளை ஏற்படுத்திக்கொண்டு கேப்ரல் நாடு திரும்பிவிட்டார். இந்தப் பின்னணியில்தான் நான்கு (வணிக)கப்பல்களைக்கொண்ட மூன்றாம் கப்பலணி, இந்தியாவிலிருந்து மணமூட்டிகளை ஏற்றிச்செல்லும் நோக்கத்துடன் வந்தது. சரக்குகளுடன் கண்ணனூரிலிருந்து கிளம்பும்போது, 40 பெரிய, 180 சிறிய போர்க்கப்பல்களுடன் கோழிக்கோட்டின் சாமூத்திரி படையெடுத்துவந்து தாக்கினார். கண்ணனூரின் அரசர் பாதுகாப்பளிப்பதாகக் கூறினாலும் ஏற்காமல் கிளம்பிய நோவா, தன் கப்பல்களை ஒரே வரிசையில் பயணிக்கச்செய்து, கப்பலின் அகண்ட பகுதியிலிருந்து சுடச்செய்தார்! இரண்டு நாட்கள் சண்டையில், சாமூத்திரியின் 5 பெரிய கப்பல்களையும், ஏராளமான துடுப்புப் படகுகளையும் மூழ்கடித்ததுடன், பிறவற்றுக்கும் பெரும்சேதங்களை ஏற்படுத்தினார். சிறிய பாதுகாப்புகளை மட்டும்கொண்ட வெறும் வணிகக் கப்பல்களைக்கொண்டு, போருக்கென்றே உருவாக்கப்பட்ட கப்பலணியை முறியடித்த இந்த வரிசை முறை கடற்படையின் மிக முக்கிய தாக்குதல் அணிவகுப்பு முறையாகப் பின்பற்றப்பட்டது! - அறிவுக்கடல் FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.