[] 1. Cover 2. Table of contents இந்திய மாநிலப் பறவைகள் இந்திய மாநிலப் பறவைகள்   ஏற்காடு இளங்கோ   yercaudelango@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA-NC கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/indian_state_birds மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation This Book was produced using LaTeX + Pandoc என்னுரை உலகளவில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன. இதுவரை கண்டுபிடிக்கப்படாத பறவை இனங்களும் இருக்கின்றன. பறவைகள் சார்ந்த ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. பறவைகளைக் கண்டு அதன் அழகை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆகவேதான் ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டிற்கு என ஒரு தேசியப் பறவையை அறிவித்துள்ளது. இந்தியாவில் சுமார் 1364 பறவை இனங்கள் உள்ளன. இந்தியாவிற்கு என தேசிய பறவை உள்ளது. அது தவிர இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என தனித் தனிப் பறவை இனங்களை அறிவித்துள்ளனர். இவை இந்திய மாநிலப் பறவைகள் என அழைக்கப்படுகின்றன. இந்தப் புத்தகத்தில் 35 மாநிலங்களுக்கு உண்டான பறவைகள் பற்றி சுருக்கமாக எழுதியுள்ளேன். இந்த புத்தகத்தை எழுதுவதற்கு என உதவிபுரிந்த எனது மனைவி திருமிகு. இ. தில்லைக்கரசி அவர்களுக்கு நன்றி. இந்தப் புத்தகத்தை தட்டச்சு செய்து கொடுத்த திருமிகு. ம. இலட்சுமிதிருவேங்கடம் அவர்களுக்கும், பிழை திருத்தம் செய்துக் கொடுத்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் திருமிகு. நா. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. எனது 104ஆவது புத்தகத்தை வெளியிட்ட Free Tamil Ebooks.Com அவர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துகளுடன் ஏற்காடு இளங்கோ ஒரு சமயத்தில் சில பறவைகள் பறந்து செல்வதைக் காணலாம். சில மணி நேரம் கவனித்தால் நூற்றுக்கணக்கான பறவைகள் உணவு தேடுவதைக் காணலாம். அப்போது விதவிதமான பறவை இனங்களை நாம் கண்டு மகிழலாம். பல பறவைகளைக் காண்பது நமக்கு மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கும். உலகம் முழுவதும் சுமார் 10000 இனப் பறவைகள் இருப்பதாக பெரும்பாலான ஆய்வுகள் கூறுகின்றன. நமது பூமியில் வாழக் கூடிய உயிரி அதிகமானதாக பறவைகள் கருதப்படுகின்றன. பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தின் (Princeton University) நிபுணர்களின் ஆய்வின்படி 9700 பறவை இனங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளன. Bird Life Org இன் கூற்றுப்படி உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 11000 இனங்கள் உள்ளன. பறவையியல் அறிஞர்கள் 9672 பறவை இனங்களை விவரித்து எழுதியுள்ளனர். இதுவரை கண்டுபிடிக்கப்படாத பறவை இனங்களும் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பல புதிய பறவை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்தியா இந்தியா உலகளவில் 7ஆவது பெரிய நாடாகும். இந்திய நாடு ஒரு கூட்டாட்சிக் குடியரசு ஆகும். இதில் 29 மாநிலங்கள் மற்றும் 7 ஒன்றியப் பகுதிகளைக் கொண்டதாக இருந்தது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், பிரிவு 370 இன் படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் சில சிறப்புச் சலுகைகளை வழங்கியது. ஆனால் இச்சட்டம் 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு 9 அன்று நீக்கப்பட்டது. பின்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்தனர். இது ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி மற்றும் லடாக் ஒன்றியப் பகுதி என மாறியது. இதனால் ஜம்மு காஷ்மீர் என்பது தனது மாநில தகுதியை இழந்தது. தற்போது இந்தியக் குடியரசில் 28 மாநிலங்கள் மற்றும் 8 ஒன்றியப் பகுதிகளும் உள்ளன. ஆங்கில எழுத்தின் அகர வரிசைப் படி பட்டியல் இடப்பட்டுள்ளது. மாநிலங்கள் 1. ஆந்திரப் பிரதேசம் 2. அருணாச்சலப் பிரதேசம் 3. அசாம் 4. பீகார் 5. சத்தீஸ்கர் 6. கோவா 7. குஜராத் 8. ஹரியானா 9. இமாசலப் பிரதேசம் 10. ஜார்க்கண்ட் 11. கர்நாடகம் 12. கேரளம் 13. மத்தியப் பிரதேசம் 14. மகாராஷ்டிரம் 15. மணிப்பூர் 16. மேகாலயா 17. மிசோரம் 18. நாகாலாந்து 19. ஒடிசா 20. பஞ்சாப் 21. ராஜஸ்தான் 22. சிக்கிம் 23. தமிழ்நாடு 24. தெலுங்கானா 25. திரிபுரா 26. உத்தரப் பிரதேசம் 27. உத்தரகண்ட் 28. மேற்கு வங்காளம் யூனியன் பிரதேசங்கள் என்றழைக்கப்படும் ஒன்றியப் பகுதிகள் A. அந்தமான் நிக்கோபார் தீவுகள் B. சண்டிகர் C. தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, தாமன் மற்றும் டையூ D. லட்சத்தீவுகள் E. தில்லி F. ஜம்மு காஷ்மீர் G. லடாக் H. பாண்டிச்சேரி பறவைகள் இந்தியக் குடியரசின் அரசியல் எல்லைக்குள் சுமார் 1364 பறவை இனங்கள் இருப்பதாக 2021ஆம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 81 பறவை இனங்கள் இந்தியாவில் மட்டுமே வாழக்கூடிய ஓரிட வாழ்வி (Endemic) ஆகும். இவை இந்திய நாட்டிற்கு மட்டுமே சொந்தமானவை. மேலும் பல அரிய வகைப் பறவை இனங்களும் உள்ளன. உலகில் இருக்கக் கூடிய ஒவ்வொரு நாட்டிற்கும் தேசியப் பறவை இருக்கிறது. அது போலவே இந்திய நாட்டிற்கும் மயில் தேசியப் பறவையாக உள்ளது. இது தவிர ஒவ்வொரு மாநிலம் மற்றும் ஒன்றியம் ஆகியவற்றிற்கும் வெவ்வேறு பறவைகள் உள்ளன. இவற்றை இந்தியாவின் மாநிலப் பறவைகள் என அழைக்கின்றனர். இந்தியாவில் நடைபெறும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தேசியப் பறவை மற்றும் மாநிலப் பறவைகள் பற்றிய கேள்விகள் கேட்கப்படுவது வழக்கம். இவற்றின் பெயர்கள் தெரிந்தால் சில மதிப்பெண்களைக் கூடுதலாகப் பெறலாம். இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் மாநிலப் பறவைகள் உள்ளன. ஆனால் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, தாமன் மற்றும் டையூ ஆகிய ஒன்றியத்திற்கு மட்டும் மாநிலப் பறவை கிடையாது. பனங்காடை (Indian Roller) என்பது கர்நாடகா, ஒடிசா மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று மாநிலங்களின் மாநிலப் பறவையாகும். மயில் […] இந்தியாவின் தேசியப் பறவை இந்திய மயில் (Indian Peafowl) ஆகும். இது அழகின் சின்னமாக விளங்கியதால் 1963 ஆம் ஆண்டு இந்தியாவின் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டது. இது பொதுவாக மயில் மற்றும் நீல மயில் என அழைக்கப்படுகிறது. இதன் பறவையியல் பெயர் பாவோ கிரிஸ்டேடஸ் (Pavo cristatus) என்பதாகும். உடலமைப்பு மயில் மிகப் பெரிய பறவையாகும். பெண் மயிலை விட ஆண் மயில் பெரியது. மயில்கள் அதிகமாகப் பறப்பதில்லை. இருப்பினும் பறக்கும் திறன் கொண்டவை. பல முறை படபடவென இறக்கையடித்தப்படியே காற்றில் கிளம்பும். ஆண் மயில் 4 முதல் 6 கிலோ எடை வரை இருக்கும். இதன் கழுத்து, மார்பு, வயிறு ஆகிய பகுதிகள் பளபளக்கும் கருநீல நிறத்தால் ஆனவை. ஆண் மயிலுக்கு மிக நீளமான தோகை உண்டு. நன்கு வளர்ந்த தோகை சுமார் 200 செ.மீ. நீளம் வரை இருக்கும். தோகையில் சுமார் 200க்கும் மேற்பட்ட சிறகுகள் இருக்கும். தோகை என்பது வால் இறகுகள் அல்ல. அவை கீழ் முதுகிலிருந்து நீண்டு வளரும் இறகுகள் ஆகும். உண்மையான வால் இறகுகள் 20 மட்டுமே உள்ளன. பெண் மயில்களை ஈர்ப்பதற்காக தன் அழகியத் தோகையை ஆண் மயில்கள் பயன்படுத்துகின்றன. தோகை இறகுகள் அனைத்தும் ஒரு விரிவான கண் போன்ற புள்ளிகளுடன் முடிவடையும். வெளிப்புற இறகுகளில் சில புள்ளிகள் இல்லாமல் பிறை வடிவ கருப்பு முனையில் முடிவடையும். ஆண் மயில்கள் தோகையை விசிறி போல் விரித்து ஆடும். இக்காட்சி மிக பிரபலமானது மற்றும் அழகானது. […] பெண் மயிலுக்கு நீளமான தோகை கிடையாது. இதன் வயிற்றுப் பகுதி வெள்ளையாக இருக்கும். இது சுமார் 95 செ.மீ. நீளமும், 2.75 முதல் 4 கிலோ எடையும் உடையது. பெண் மற்றும் ஆண் ஆகிய இரண்டிற்குமே தலையில் கொண்டை இருக்கும். மயிலின் ஆயுட்காலம் 10 முதல் 25 ஆண்டுகள் ஆகும். வாழிடம் மயில் இந்திய துணைக் கண்டம் முழுவதும் வாழ்கிறது. இது சுமார் 6000 அடி உயரம் வரை உள்ள இடங்களிலும் காணப்படுகிறது. இது ஈரமான மற்றும் வறண்ட இலையுதிர் காடுகளில் அதிகம் வாழ்கிறது. அதே சமயத்தில் மனித வாழிடங்களைச் சுற்றியும் வாழப்பழகிக் கொண்டுள்ளது. இதன் அழகிற்காக உலகின் பல்வேறு நாடுகளிலும் மயில் வளர்க்கப்படுகிறது. உணவு இது நாள் முழுவதும் தரையில் இரை தேடும். தானியங்கள், விதைகள், பழங்கள், பூச்சிகள், பல்லிகள் மற்றும் சிறிய பாம்புகளை உணவாக உண்கின்றன. இது விளை நிலங்களில் உள்ள நிலக் கடலை, தக்காளி, நெல், மிளகாய் மற்றும் வாழைப்பழம் போன்ற பல்வகைப் பயிர்களை உண்கிறது. மேலும் மனித வாழிடப் பகுதியில் பல வகையான உணவுக் கழிவுகள் மற்றும் மனித மலத்தையும் கூட உண்கின்றன. நடத்தை மயிலுக்கு மிகக் கூரிய பார்வை உண்டு. எதிரிகளின் வரவைத் தூரத்தில் இருந்தே கண்டு ஓடி ஒளியும். மயில்கள் குறிப்பாக இனப்பெருக்க காலத்தில் உரத்த குரல்களை எழுப்பும். இரவு நேரத்தில் உயரமான மரக்கிளையில் தூங்கும். மயில்கள் பலதார மணம் கொண்டவை. இவை பொதுவாக 2 முதல் 3 வயதில் பாலியல் முதிர்ச்சி அடையும். பெண் மயில் 4 முதல் 8 முட்டைகளை இடும். குஞ்சு பொரிக்க 28 நாட்கள் ஆகும். பாதுகாப்பு சிங்கம், புலி, சிறுத்தை, ஓநாய் ஆகிய விலங்குகள் மயிலை வேட்டையாடுகின்றன. பருந்து, கழுகு மற்றும் ஆந்தை போன்ற பறவைகள் மயில் குஞ்சுகளை வேட்டையாடி உண்கின்றன. இறகுகளுக்காகவும், இறைச்சிக்காகவும் மனிதர்களால் வேட்டையாடப்படுகின்றன. விவசாய நிலங்களில் புகுந்து விளை பொருட்களை உண்பதால் இதனை கொல்லவும் செய்கின்றனர். மயில் எண்ணெய் நாட்டுப்புற வைத்தியங்களில் பயன்படுத்தப்படுகிறது. மயில் இறைச்சியில் மருத்துவக் குணம் உள்ளது என்கிற மூட நம்பிக்கையும் உள்ளது. உதிர்ந்த இறகுகளை மட்டுமே சேகரிக்க இந்தியச் சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் இறகுகள் உதிர்க்கப்பட்டதா அல்லது பறிக்கப்பட்டதா என்பதை அடையாளம் காணும் முறைகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன. மயில்களைப் பாதுகாக்க 1972ஆம் ஆண்டில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மயிலை வேட்டையாடுவது தண்டனைக்கு உரிய குற்றமாகும். இந்தியாவின் தேசியப் பறவையான மயிலை பாதுகாப்பது நமது கடமைகளில் ஒன்றாகும். ஆந்திரப் பிரதேசம் ஆந்திரப் பிரதேச (Andhra Pradesh) மாநிலத்தின் பறவை ரோஜா வளையக் கிளி (Rose-ringed parakeet) ஆகும். இது செந்தாரப் பைங்கிளி, பச்சைக்கிளி, சிவப்பு ஆரக்கிளி, மோதிர கழுத்து கிளி மற்றும் ரோஜா வளையம் கொண்ட கிளி என்றும் அழைக்கப்படுகிறது. ஆந்திராவில் இக்கிளியை சிலுகா (Chiluka) மற்றும் ராம சிலுகா (Rama Chiluka) என அழைக்கின்றனர். ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரிக்கப்பட்டது. பிரிக்கப்படாத ஆந்திர மாநிலப் பறவையாக பனங்காடை இருந்தது. மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு ஆந்திரப் பிரதேசத்திற்கு தனி பறவை அவசியம் தேவை என அரசு கருதியது. மாநில சுற்றுச்சூழல், வனம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் சார்பாக உத்தரவு வெளியிடப்பட்டது. உத்தரவு எண் 59 இன் படி 2018 ஆம் ஆண்டு ஜூன் 1 அன்று ரோஜா வளையம் கொண்ட கிளி மாநிலப் பறவையாக அறிவிக்கப்பட்டது. தெலுங்கு கலாச்சாரத்தில் கிளிக்கு முக்கியமான இடம் உண்டு. கிளி சோதிடம் இங்கு மிகவும் பிரபலமானது. கவிஞர்கள் மற்றும் பாடலாசிரியர்கள் மக்கள் என அனைவரும் கிளியை நேசித்து வருகின்றனர். சிறந்த தம்பதிகள் ஒரு ஜோடி கிளிகளுடன் ஒப்பிடுகிறார்கள். அழகு மற்றும் மகிழ்ச்சி என்ற அடிப்படையில் இது மாநிலப் பறவையாக தேர்வு ஆனது. ரோஜா வளையக் கிளி […] இதன் அறிவியல் பெயர் சிட்டாகுலா கிரேமேரி (Psittacula Krameri) என்பதாகும். இக்கிளிகள் பச்சை நிறத்தைக் கொண்டுள்ளன. பெண் கிளிகள் பார்ப்பதற்கு ஆண் கிளியைப் போலவே இருக்கும். ஆனால் ஆண் கிளியின் கழுத்தில் மட்டும் இளம்சிவப்பு மற்றும் கருப்பு கலந்த வளையம் காணப்படும். அதே சமயத்தில் இளம் ஆண் கிளியின் கழுத்தில் வளையம் இருப்பதில்லை. இக்கிளி சராசரியாக 41 செ.மீ. நீளம் கொண்டது. வால் இறகு நீண்டு கூர்மையாக முடிகிறது. கிளியின் மொத்த நீளத்தில் வால் பெரும் பகுதியைக் கொண்டுள்ளது. வயது வந்த கிளி சுமார் 128 கிராம் எடையுடையது. இக்கிளிகள் மிக வேகமாக பறக்கும். மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கிறது. பெண் கிளி 3 முதல் 4 முட்டைகளை இடுகின்றன. அவை 20 முதல் 24 நாட்கள் வரை அடைகாக்கும். அதன்பிறகு குஞ்சு பொரிக்கின்றன. கிளியின் ஆயுட்காலம் 25 முதல் 30 ஆண்டுகள் ஆகும். வாழிடம் இதன் தாயகம் ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியா ஆகும். இது கடல் மட்டத்தில் இருந்து 6000 அடி உயரம் வரை வாழ்கிறது. இவை பல்வேறு காலநிலையில் வாழும் திறனை கொண்டுள்ளன. வடக்கு ஐரோப்பாவில் மிக குறைந்த குளிர்கால வெப்பநிலையிலும் கூட வாழ்கிறது. இக்கிளிகள் புல்வெளிகள், சவன்னா, புதர் நிலங்கள், மழைக்காடுகள், சதுப்பு நிலங்கள் மற்றும் ஈர நிலங்களில் காணப்படுகின்றன. கிராமப்புறத் தோட்டங்கள் மற்றும் விவசாய நிலப்பகுதிகளிலும் இவற்றை காணலாம். இக்கிளிகள் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உணவு பொதுவாக பழங்கள், மொட்டுகள், காய்கறிகள், கொட்டைகள், விதைகள் ஆகியவற்றை உண்கின்றன. குளிர் காலத்தில் புறா பட்டாணியை சாப்பிடுகின்றன. பல தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்குப் பறந்து சென்று சேதத்தை ஏற்படுத்துகின்றன. சூரியகாந்தி மற்றும் சோள வயல்களில் இறங்கி அவற்றை உண்ணும். வீட்டில் வளர்க்கப்படும் கிளிகள் புரதத்திற்காக சமைத்த இறைச்சியைக் கூட உண்ணும். […] பழத்தோட்டம் மற்றும் பயிர்களுக்கு இது அழிவை ஏற்படுத்துகிறது. உண்மையில் சாப்பிடுவதை விட அதிகமாகக் கடித்து வீணாக்குகிறது. பிரிட்டன் அரசு 2009ஆம் ஆண்டில் கிளி பயிர்களை நாசம் செய்யும் பூச்சி என அறிவித்தது. செல்லப்பிராணி இக்கிளிகளை செல்லப் பிராணியாக உலகின் பல பகுதிகளில் வளர்க்கின்றனர். செல்லப் பிராணிகளாக வளர்க்கும் போது மரபணுப் பிறழ்வு ஏற்பட்டு இது பச்சை நிறத்திற்குப் பதிலாக வெளிர் நீல நிறமாக மாறிவிடுவதும் உண்டு. அவற்றின் கழுத்தில் வளையம் இல்லாமலும் இருக்கும். ஆண் கிளி மற்றும் பெண் கிளி என இருபாலரும் மனித பேச்சைப் பிரதிபலிக்கும் திறன் கொண்டவை. இது அடிக்கடி கேட்கும் ஒலிகளைப் பிரதிபலிக்கும். சொற்களைத் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் உரிமையாளரிடம் இருந்து வார்த்தைகளைக் கற்றுக் கொண்டு பேசும். இக்கிளி 250 வார்த்தைகள் வரை கற்கும் திறன் கொண்டது. ஆகவே ஆசியாவில் உள்ள அரச குடும்பங்கள் இவற்றை செல்லப் பிராணியாக வளர்க்கின்றனர். அருணாச்சலப் பிரதேசம் […] அருணாச்சலப் பிரதேச (Arunachal Pradesh) மாநிலம் 1987ஆம் ஆண்டில் உருவானது. இதன் மாநிலப் பறவை மலை இருவாட்சி ஆகும். இது ஆங்கிலத்தில் கிரேட் ஹார்ன்பில் (Great Hornbill) என அழைக்கப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் புசெரோஸ் பைகார்னிஸ் (Buceros bicornis) என்பதாகும். இப்பறவை அருணாச்சலப் பிரதேசம் மற்றும் கேரள மாநிலத்தின் மாநிலப் பறவையாகவும் உள்ளது. வாழிடம் இமயமலை ஒட்டிய காடுகளில் இவை காணப்படுகின்றன. பூட்டான், கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், நேபாளம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் வசிக்கின்றன. பொதுவாக மழைக்காடுகள், ஈரமான, பசுமையான காடுகளில் மரங்களில் வாழ்கின்றன. அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பக்கே புலிகள் காப்பகம் இந்தப் பறவைகளை பார்க்க சிறந்த இடமாகும். மலை இருவாட்சி இது இருவாட்சி குடும்பத்தைச் சேர்ந்த பறவை. இருவாட்சி குடும்பத்தில் இதுவே மிகப் பெரிய பறவையாகும். இது 90 செ.மீ. முதல் 130 செ.மீ. நீளம் வரை அதாவது 4 அடி நீளம் உடையது. இது இறக்கை விரிந்த நிலையில் 152 செ.மீ. (5 அடி) அகலம் கொண்டது. இது 2.5 கிலோ 4 கிலோ வரை எடை கொண்டிருக்கும். பெண் பறவைகள் ஆண் பறவைகளை விட சிறியது. […] இருவாட்சி பறவைகளுக்கு மிகப்பெரிய அலகு உள்ளது. இது இருவாட்சிகளின் ஒரு தனித்துவமான அடையாளமாகும். அலகு மஞ்சள் நிறமாகவும், வளைந்தும் இருக்கும். அலகின் மீது மஞ்சள் மற்றும் கருப்புப் பெட்டி காணப்படும். இது ஹெல்மட் (Helmat) போன்றது. இது திடமான தந்தம் (Ivory) ஆகும். இது இருவாட்சி தந்தம் என அழைக்கப்படுகிறது. இதன் உடல் கருப்பு இறகுகளால் மூடப்பட்டிருக்கும். இறக்கையின் நுனி வெள்ளையாக காணப்படும். ஆண்களுக்கு கருப்பு மற்றும் வெள்ளை நிற இறகுகள் உள்ளன. சில வெள்ளை பாகங்களில் மஞ்சள் நிறமும் கலந்திருக்கும். வால் சில சமயம் 3 அடி நீளம் வரை வளரும். வெள்ளை நிறத்தில் கருப்பு இறகுகள் குறுக்கே அமைந்திருக்கும். ஆண் இருவாட்சியின் கண்கள் சிவப்பாகவும், பெண் பறவையின் கண்கள் நீல மஞ்சள் நிறமாகவும் உள்ளன. இப்பறவைகளுக்கு பொதுவாக குட்டையான கால்கள் இருக்கின்றன. ஆனால் பரந்த பாதங்களைக் கொண்டுள்ளன. அச்சுறுத்தல் பல்வேறு பழங்குடி மக்களின் கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அருணாச்சலப் பிரதேசத்தின் நைஷி (Nyishi) பழங்குடியினர் இருவாட்சியின் இறகுகளை தங்கள் தலைக்கவசத்தில் அணிந்தனர். மேலும் இதன் வளைந்த அலகை தலையில் அணிவது கூடுதல் வலிமையைக் கொடுக்கும் என நம்பினர். இருவாட்சியின் இறைச்சியை உண்பது ஒரு காலத்தில் கொடிய நோய்க்கு மருந்தாகக் கருதினர். சீனா மற்றும் ஜப்பானில் இதன் தந்தத்தைக் கொண்டு சிறிய சிற்பங்களைச் செய்தனர். இவை மதிப்புமிக்கதாகக் கருதப்பட்டன. இருவாட்சி சட்ட விரோதமாக வேட்டையாடப்படுகின்றன. மரங்கள் வெட்டப்படுவதால், இப்பறவையின் கூடுகள் உள்ள மரங்களும் அழிகின்றன. இதனால் இப்பறவைகள் அச்சுறுத்தல்களுக்கும் அழிவிற்கும் உள்ளாகின்றன. பாதுகாப்பு இப்பறவைகள் ஏராளமான பழ மரங்களின் விதைகளைச் சிதறச் செய்கின்றன. அதனால் இவை வாழும் காட்டுப் பகுதியில் மரங்கள் அதிகம் காணப்படுகின்றன. ஆகவே இவற்றை வனப்பொறியாளர்கள், வன விவசாயிகள் அல்லது காட்டு விவசாயிகள் என குறிப்பிடுகின்றனர். இவை கூடு கட்டும் காடுகளின் செழுமையை சமநிலைப்படுத்துகின்றன. வட கிழக்கு மாநிலங்களில் இருவாட்சி திருவிழாக்கள் நடைபெறுகின்றன. பழங்குடியினரின் நாட்டுப்புறக் கதைகளில் இருவாட்சி இடம் பெற்றுள்ளது. பழங்குடி மக்களும் இருவாட்சிகளை பாதுகாக்க உழைத்து வருகின்றனர். அசாம் […] அசாம் மாநிலப் பறவை வெள்ளை இறக்கைகள் கொண்ட வாத்து (White Winged Duck) ஆகும். இதை வெள்ளை இறக்கைகள் கொண்ட மர வாத்து (White Winged Wood Duck) என்றும் அழைக்கப்படுகிறது. அசாமிய மொழியில் டியோ ஹான்ஸ் (Deo Hans) அல்லது ஆவி வாத்து (Spirit Duck) என்று அழைக்கப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் அசர்கார்னிஸ் ஸ்குடுலாட்டா (Asarcornis scutulata) என்பதாகும். வாழிடம் வட கிழக்கு இந்தியா, பங்களாதேஷ், தென் கிழக்கு ஆசியா, ஜாவா மற்றும் சுமத்ரா ஆகிய பகுதிகளில் இந்த வாத்துக்கள் வாழ்கின்றன. தற்போது ஜாவாவில் இந்த வாத்து இனம் அழிந்து விட்டது. குறிப்பாக இந்தியாவில் வட கிழக்கு மாநிலமான அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. இந்தியாவில் இந்த வாத்துக்கான முக்கிய பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக திப்ரு-சைகோவா தேசியப் பூங்கா, திஹிங்-பட்கை வனவிலங்கு சரணாலயம், நமேரி தேசியப் பூங்கா மற்றும் நம்தாபா தேசியப் பூங்கா ஆகியன உள்ளன. அடர்த்தியான வெப்ப மண்டல பசுமையான காடுகள், சதுப்பு நிலம், ஆறுகள், நன்னீர், ஈர நிலங்கள் ஆகிய நிலங்களுக்கு அருகில் இவை வாழ்கின்றன. மெதுவாக ஓடும் நீரோடைகளிலும் இவற்றைக் காணலாம். உடலமைப்பு […] இந்த வாத்து கருப்பு நிறத்தில் இருக்கும். இதன் மீது பச்சை நிற பிரதிபலிப்பும் காணப்படும். மேல் மார்பகத்தைத் தவிர அதன் கீழ் பகுதி பழுப்பு நிறத்தைக் கொண்டுள்ளது தலை வெள்ளை மற்றும் அடர்த்தியான கருப்பு புள்ளிகளுடன் காணப்படுகிறது. ஆண் வாத்துகளை விட பெண் வாத்துகளுக்கு புள்ளிகள் மிகவும் அடர்த்தியாக இருக்கும். கண்கள் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறமானவை. இதன் அலகு ஆரஞ்சு நிறத்தில் உள்ளது. வால் அடர் பழுப்பு நிறமாகவும், மேல் வால் உறைகள் கருப்பு நிறமாகவும், பச்சை நிற பிரதிபலிப்புகளுடன் காணப்படும். வாத்தத்தின் பின்புறத்தில் உள்ள இறகுகளில் நீர் புகாது. ஆண் வாத்துகளின் இறகுகளில் அதிக பளபளப்பு உள்ளது. மேலும் இது பெரியதாகவும், கனமாகவும் இருக்கும். இதன் கால்கள் ஆரஞ்சு நிறமானவை. கால்களில் இரத்த நாளங்கள் அல்லது நரம்புகள் இல்லை. இதனால் அவற்றின் பாதங்கள் குளிரால் பாதிக்கப்படுவதில்லை. ஆகவே இவை பனிக்கட்டி நீரில் நீந்தலாம் மற்றும் பனியில் நடக்கலாம். இந்த வாத்துக்கள் 65 முதல் 81 செ.மீ. நீளம் கொண்டவை. வயது வந்த ஆண் வாத்தின் எடை 2.8 முதல் 4.2 கிலோ வரை இருக்கும். பெண் வாத்தின் எடை 1.8 முதல் 3.5 கிலோ வரை இருக்கும். இவற்றின் இறக்கைகள் விரிந்த நிலையில் 115 செ.மீ. முதல் 160 செ.மீ. வரை இருக்கும். இனப் பெருக்கம் ஆண் வாத்து மரத் துளைகளில் கூடு கட்டும். கூட்டில் 5 முதல் 16 முட்டைகளை பெண் வாத்து இடும். முட்டையானது பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். அடைகாக்கும் காலம் என்பது 33 முதல் 36 நாட்கள் ஆகும். 13 முதல் 15 வாரங்களுக்குப் பிறகு பெற்றோரை விட்டு குஞ்சுகள் தனியாகப் பிரிந்து செல்கின்றன. இளம் குஞ்சுகள் ஆரம்பத்தில் தூசு படிந்த மஞ்சள் தலைகளைக் கொண்டிருக்கும். பிறகு பழுப்பு நிறமாக மாறும். இந்த வாத்துகளின் சராசரி ஆயுட்காலம் 10 முதல் 15 ஆண்டுகளாகும். உணவு நீர் வாழ் தாவரங்கள், விதைகள், தானியங்கள், அரிசி, நீர்வாழ் பூச்சிகள், நத்தைகள், ஓட்டு மீன்கள், மெல்லுடலிகள், தவளைகள், பாம்புகள் மற்றும் மீன்கள் ஆகியவற்றை உண்கின்றன. நடத்தை இது ஒரு சமூகப் பறவை. பொதுவாக ஜோடியாகவோ அல்லது சிறு கூட்டமாகவோ இருக்கும். காடுகளில் இதை எளிதில் பார்க்க முடியாது. அவை மரங்களில் மறைந்து இருக்கும். இவை மாலை நேரம் மற்றும் விடியற் காலையில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். இரவில் இவைகளின் உரத்தக் குரல் காடுகள் முழுவதும் எதிரொலிக்கும். இதன் குரல் பேயின் குரல் போல் ஒலிப்பதால் இதை பேய் வாத்து என்றும் அழைக்கின்றனர். ஆபத்து இது அழியும் அபாயத்தில் உள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ளது. சுமார் 1000 வாத்துகளுக்கு மேல் இல்லை. இறைச்சி, முட்டை மற்றும் செல்லப்பிராணி ஆகியவற்றிற்காக வேட்டையாடப்படுகின்றன. காடுகள் அழிக்கப்படுவதாலும் இந்த இனம் அழிந்து வருகிறது. பீகார் பீகார் மாநிலப் பறவை என்பது வீட்டுக் குருவி (House Sparrow) ஆகும். இது ஊர்க் குருவி மற்றும் சிட்டுக் குருவி என்றும் அழைக்கப்படுகிறது. இது மனித சமூகத்துடன் மிக நெருக்கமாக வாழும் பறவையாகும். செல்லப் பிராணியாகவும் வளர்க்கப்படுகிறது. உலகளவில் அதிகமாகப் பரவிய காட்டுப் பறவை சிட்டுக்குருவியாகும். இதன் அறிவியல் பெயர் பேஸ்ஸர் டொமஸ்டிகஸ் (Passer domesticus) என்பதாகும். இது தில்லி மாநிலப் பறவையாகவும் இருந்து வருகிறது. வாழிடம் […] இதன் பூர்வீகம் ஐரோப்பா, மத்திய தரைக்கடல் பகுதி மற்றும் ஆசியப் பகுதிகளும் ஆகும். இது மனிதனால் ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கக் கண்டங்களுக்கும் அறிமுகம் செய்யப்பட்டது. இது தற்போது உலகம் முழுவதும் பரவிக் காணப்படுகிறது. இது கடல் மட்டத்தில் இருந்து 7000 அடி உயரம் வரை வாழ்கிறது. இது கிராமப் புறங்கள் மற்றும் நகர்ப் புறங்களில் வாழ்கிறது. பொதுவாக பெரிய காடுகள், புல்வெளிகள் மற்றும் பாலை வனங்கள் ஆகியவற்றைத் தவிர்க்கிறது. இது மனித குடியேற்றப் பகுதிகளில் அதிகம் வாழ்கிறது. இது அந்தமான் – நிக்கோபர் தீவுகளைத் தவிர இந்தியா முழுவதும் காணப்படுகிறது. உடலமைப்பு இது ஒரு சிறிய பறவையாகும். இது சராசரியாக 16 செ.மீ. நீளமுடையது. பொதுவாக 14 முதல் 18 செ.மீ. நீளம் வரை வளர்கிறது. சிட்டுக் குருவியின் எடை 24 முதல் 40 கிராம் வரை இருக்கும். இது பெரிய வட்டமான தலையை உடைய பறவையாகும். இதன் அலகு தடித்து மற்றும் கூம்பு வடிவத்தில் காணப்படும். இது 1 செ.மீ. முதல் 1.5 செ.மீ. நீளம் உடையது. விதைகளை உண்பதற்கு ஏற்ப இதன் அலகு கடினமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. சிட்டுக் குருவிகளில் ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பாலினமும் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தில் முதுகு இருக்கும். வால் பகுதி கருப்பு கோடுகளுடன் காணப்படும். இறக்கைகள் பழுப்பு நிறத்தில், வெள்ளை பட்டைகளுடன் இருக்கும். அடிப்பகுதி வெளிர் சாம்பல் அல்லது வெள்ளை நிறமானது. ஆண்களுக்கு கருப்பு வண்ண தொண்டை மற்றும் மார்பு இணைப்பும் உள்ளது. இந்த இணைப்பு பிப் அல்லது சின்னம் என அழைக்கப்படுகிறது. சின்னத்தின் அகலம் என்பது ஆண் பறவைக்கு ஏற்ப மாறுபடுகிறது. பெண் குருவிகளுக்கு கருப்பு அடையாளங்கள் கிடையாது. தலை பழுப்பு வண்ணமாக இருக்கும். இதன் அலகு வெளிர் சாம்பல் பழுப்பு வண்ணத்தில் இருக்கும். ஆண் பறவையின் அலகு அடர் சாம்பல் நிறத்திலும் இருக்கும். இளம் சிட்டுக் குருவிகள் வயது வந்த பெண் குருவிகளைப் போலவே இருக்கும். ஆனால் கீழ்பகுதி அடர் பழுப்பு நிறமாகவும், மேலே வெளிர் நிறமாகவும் இருக்கும். இனப்பெருக்கம் […] பெண் சிட்டுக் குருவிகளை கவர்வது ஆணின் பொறுப்பு. ஆண் குருவிகளே கூடுகளையும் அமைத்துத் தரும். கூடுகள் காட்டுவது இதற்கு எளிது. வீட்டின் முற்றத்தில் உள்ள துவாரங்களில் சருகுகளை கொண்டு சேர்த்து கூடு அமைக்கும். பொதுவாக கூரை வெற்றிடங்கள், சுவர்களின் பிளவுகள், கட்டிடத்தின் உள்ளே, மாடம், பரண் மற்றும் ஓடுகளின் இடையில் கூடு கட்டி வாழும். தொழிற்சாலைகள், கிடங்குகள், மிருகக்காட்சி சாலைகள் ஆகிய இடங்களிலும் கூடு கட்டுகிறது. கூடுகள் ஒன்றோடு ஒன்று இணைந்தது போல் புதர்களிலும் கட்டுகிறது. மின் கம்பத்தின் விளக்கின் பின்புறத்தில் உள்ள இடைவெளியிலும் கூடு கட்டி வாழ்வதைக் காணலாம். சிட்டுக் குருவிகள் 3 முதல் 5 முட்டைகளை இடுகின்றன. எனினும் 10 முட்டைகள் வரை இடுவதைப் பதிவு செய்துள்ளனர். வெண்மை அல்லது வெளிர் பச்சை கலந்த வெள்ளை நிறம் மற்றும் பழுப்பு அல்லது சாம்பல் புள்ளிகளுடன் முட்டைகள் இருக்கும். பெண் பறவையே முட்டைகளை அடைகாக்கும். இதற்கு ஆண் உதவுகிறது. இரவு நேரத்தில் பெண் பறவை அடைகாக்கும். அப்போது ஆண் பறவை அருகிலேயே நிற்கும். அடைகாக்கும் காலம் 11 முதல் 14 நாட்கள் ஆகும். குஞ்சு பொரித்தப் பிறகு பெண் குருவியும், ஆண் குருவியும் குஞ்சுகளுக்கு உணவு ஊட்டும். ஒரே ஆண்டில் பலமுறை சிட்டுக் குருவிகள் முட்டை இடுகின்றன. சிட்டுக் குருவியின் சராசரி ஆயுட்காலம் 10 முதல் 14 ஆண்டுகள் ஆகும். சிட்டுக் குருவி தினம் உலகின் பெரும் பகுதியில் சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. சிட்டுக் குருவியின் வீழ்ச்சி முதலில் வட அமெரிக்காவில் கண்டறியப்பட்டது. இதே போல் மேற்கு ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் இவற்றின் வீழ்ச்சி அதிகரித்தது. 1970ஆம் ஆண்டிற்குப் பிறகு இதன் எண்ணிக்கை 60 சதவீதமாக குறைந்தது. சில பகுதிகளில் 90 சதவீத பறவைகள் அழிந்து விட்டன. லண்டனின் மத்திய நகரப் பகுதியில் சிட்டுக் குருவிகள் கிட்டத்தட்ட மறைந்துவிட்டன. இந்தியாவிலும் சிட்டுக் குருவியின் வீழ்ச்சி மிகத் தெளிவாகத் தெரிகிறது. சிட்டுக் குருவிகளைப் பாதுகாக்கவும், அது அழிவில் இருந்து மீட்டு எடுக்கவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உலக சிட்டுக்குருவி தினம் அறிவிக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டு மார்ச் 20 அன்று இத்தினம் கொண்டாடப்பட்டது. அப்போதிலிருந்து மார்ச் 20ஐ உலக சிட்டுக் குருவிகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சத்தீஸ்கர் சத்தீஸ்கர் (Chhattisgarh) மாநிலம் 2000ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று உருவாக்கப்பட்டது. இதன் மாநிலப் பறவை பஸ்தர் மலை மைனா (Bastar Hill Myna) ஆகும். இதன் அறிவியல் பெயர் கிராகுலா ரிலிஜியோசா பெனின்சுலாரிஸ் (Gracula religiosa peninsularis) என்பதாகும். சத்தீஸ்கர் அரசாங்கம் 2002ஆம் ஆண்டில் இதை மாநிலப் பறவையாக அறிவித்தது. இது மைனா குடும்பத்தைச் சேர்ந்தது. மலை மைனாவின் (Hill Myna) அறிவியல் பெயர் கிராகுலா ரிலிஜியோசா என்பதாகும். இது சாதாரண மைனாவிலிருந்து, தோற்றத்தில் வேறுபடுகிறது. மலை மைனாவில் 12 துணை இனங்கள் உள்ளன. இவற்றில் 4 துணை இனங்கள் மட்டும் இந்தியாவில் உள்ளன. துணை இனங்கள் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்பு உடையவை. அவற்றின் வாழிடத்தை அடிப்படையாகக் கொண்டு அவற்றிற்கு துணை இனத்திற்கான பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு துணை இனம் தான் பஸ்தர் மலை மைனா ஆகும். வாழிடம் […] இந்த மைனா இந்தியாவின் மத்திய பகுதியில் மட்டுமே வாழ்கிறது. குறிப்பாக இது சத்தீஸ்கரின் பஸ்தார் என்னும் மாவட்டத்தில் மட்டுமே அதிகம் காணப்படுகிறது. ஆகவே இது பஸ்தர் மலை மைனா என அழைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தில் கரங்கேர் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா உள்ளது. குகைகள், ஆறுகள், நீர் வீழ்ச்சிகள் மற்றும் அடர்ந்த காடுகளும் நிறைந்தப் பகுதியாக இது விளங்குகின்றது. பஸ்தர் மலை மைனாவானது இந்த காங்கேர் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவிற்கு சொந்தமானது. உடலமைப்பு இது ஒரு வண்ணமயமான பறவை. பளபளப்பான பச்சை கருப்பு நிறம் கொண்டது. தலைக்குக் கீழே கழுத்து சற்று சதைப் பற்றுடன் காணப்படும். கழுத்து மற்றும் மார்பகம் ஊதா நிறத்தில் பளபளப்பாக இருக்கும். கால்கள் பிரகாசமான ஆரஞ்சு மஞ்சள் நிறத்தில் இருக்கும். பறவையின் அலகு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தால் ஆனது. பறவையின் இறக்கையில் வெள்ளைத் திட்டுகள் உள்ளன. பறவை பறக்கும் போது தெளிவாகத் தெரியும். ஆனால் பறவை அமர்ந்திருக்கும் போது பெரும்பாலும் மூடப்பட்டிருக்கும். மேலும் ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறத் திட்டுகள் முதுகு மற்றும் கண்ணின் கீழ் பகுதியில் இருக்கும். இது 28 முதல் 30 செ.மீ. நீளம் வரை வளரும். இது சுமார் 200 முதல் 250 கிராம் எடை கொண்டது. ஆண், பெண் இரண்டுமே ஒரே மாதிரியாகக் காணப்படும். ஆனால் குரலால் இரண்டும் வேறுபடுகிறது. இனப்பெருக்கம் இது ஒருதார மணம் கொண்டது. கிளி மற்றும் மரங்கொத்திகளுடன் சேர்ந்து கூடு கட்டுகிறது. மரங்களில் மரங்கொத்திகளால் செய்யப்பட்ட துளைகளை இந்த மைனாவால் விரும்பப்படுகிறது. இப்பறவை ஒவ்வொரு துளையையும் ஆய்வு செய்து, பல முறை பார்வையிட்டப் பிறகே ஒரு துவாரம் கொண்ட கூட்டைத் தேர்வு செய்கிறது. […] மரத் துளையில் புல், இலைகள் மற்றும் இறகுகள் கொண்டு கூடு அமைக்கிறது. பெண் பறவை 2 முதல் 3 முட்டைகளை இடுகின்றன. முட்டைகள் அடர் நீலம், அரிதாக சிவப்பு பழுப்பு புள்ளிகளுடன் காணப்படும். அடைகாக்கும் காலம் என்பது 14 முதல் 18 நாட்கள் வரை நீடிக்கும். ஆண், பெண் என இருபாலரும் அடைகாக்கும். ஆனால் ஆணை விட பெண் அதிக நேரம் அடைகாக்கும். இருப்பினும் பெற்றோர் இருவரும் குஞ்சுகளை சமமாக வளர்க்கின்றனர். நடத்தை பொதுவாக ஜோடியாகவோ அல்லது சிறு குழுவாகவோ காணப்படும். பறவைகள் பறக்கும் போது அவற்றின் இறக்கைகளில் இருந்து சுழல் ஒலி உண்டாகின்றன. இவற்றின் குரல் ஒலி விசில், அலறல் மற்றும் கூக்குரல் என பலவிதமான அழைப்புகளைக் கொண்டுள்ளன. இது ஒரு திறமையான மிமிக்ரி செய்யும் பறவை. மனிதக் குரல்களை பின்பற்றி பேசும் திறன் கொண்ட பேசும் பறவை. ஆகவே இதைப் பிடித்து கூண்டுப் பறவையாக வளர்க்கின்றனர். இன்று கூண்டில் அடைப்பது குற்றமாகும். பாதுகாப்பு காடழிப்பு, வேட்டையாடுதல், வர்த்தகம் செய்தல் ஆகியவற்றால் இந்த இனம் விரைவாக அழிந்து வருகிறது. 2017ஆம் ஆண்டின் கணக்குப்படி 400 பறவைகள் மட்டுமே உள்ளன. இவற்றை பாதுகாக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கோவா […] கோவா மாநிலப் பறவை சுடர் தொண்டை புல்புல் (Flame throated bul bul) என்பதாகும். இது ரூபி தொண்டை மஞ்சள் புல்புல் (Ruby throated yellow bulbul) மற்றும் கருப்பு தலை புல்புல் (Black headed bulbul) என்றும் அழைக்கப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் ரூபிகுலா குலாரிஸ் (Rubigula gularis) ஆகும். இந்தியாவின் 36ஆவது தேசிய விளையாட்டுப் போட்டி கோவாவில் 2020ஆம் ஆண்டில் நடைபெற்றது. தேசிய விளையாட்டுப் போட்டிக்கான சின்னமாக சுடர் தொண்டை புல்புல் தேர்வு செய்யப்பட்டிருந்தது. வாழிடம் இப்பறவைகள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அதிகம் காணப்படுகின்றன. குறிப்பாக கோவா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வாழ்கின்றன. இது இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைக்குச் சொந்தமானது. இருப்பினும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளிலும் உள்ளன. இந்தப் பறவைகள் முக்கியமாக பசுமையான மலை அடிவாரக் காடுகள், இரண்டாம் நிலைக் காடுகள், புதர் காடுகள், மூங்கில் காடுகள், முட்புதர்கள், உண்ணிச் செடிகள் நிறைந்த காடுகள் போன்றவற்றில் வாழ்கின்றன. இவை கடல் மட்டத்தில் இருந்து 900 மீட்டர் முதல் 1200 மீட்டர் உயரம் கொண்ட பகுதிகளிலும் காணப்படுகின்றன. காடுகளுக்கு வெளியே இந்தப் பறவைகளை அரிதாகவே காண முடியும். காபித் தோட்டங்களுக்குள் அரிதாகவே காணப்படும். உடலமைப்பு இது ஒரு அழகான பறவையாகும். இது 18 முதல் 20 செ.மீ. நீளமுடையது. உடல் எடை 25 முதல் 35 கிராம் எடை கொண்டது. ஆண் புல் புல் மற்றும் பெண் புல் புல் இரண்டும் ஒரே எடையைக் கொண்டுள்ளன. இது கருப்பு தலையை கொண்டுள்ளது. உடலின் மற்ற பகுதிகள் மஞ்சள் நிற இறகுகளால் மூடப்பட்டிருக்கும். அதன் இறக்கைகளின் அடிப்பகுதியிலும் கருப்பு இறகுகள் காணப்படும். […] மஞ்சள் இறகுகள் பெரும்பாலும் பச்சை நிற சாயலைக் கொண்டிருக்கும். இது காடுகளுடன் இரண்டறக் கலக்க உதவுகிறது. எதிரிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள இது உதவுகிறது. இப்பறவைக்கு சிவப்பு ஆரஞ்சு தொண்டை காணப்படுகிறது. இது இப்பறவையை எளிதில் அடையாளம் காண இது ஒரு குறியீடாகும். இந்த அடையாளம் தான் இந்தப் பறவைக்கு சுடர் தொண்டை புல் புல் என்கிற பெயரை வழங்குகிறது. ஆரஞ்சு அல்லது சிவப்பு தொண்டை ஆண் அல்லது பெண் ஆகிய இருபாலருக்கும் உள்ளது. கண்ணின் வெள்ளை அல்லது மஞ்சள் கருப்பு இறகுகள் மட்டுமே ஆண் மற்றும் பெண் பறவைகளுக்கிடையே வேற்றுமையைக் காட்டுகின்றன. இதன் கால்கள் குட்டையாக, சாம்பல் கலந்த கருப்பு நிறமுடையது. வால் நீளமாகவும், இறக்கைகள் குட்டையாகவும், வட்டமாகவும் இருக்கும். வாய் மஞ்சள் கலந்த இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும். அலகு அடர் பழுப்பு முதல் கருப்பு வரை இருக்கும். உணவுப் பழக்கம் அத்திப் பழங்கள், உண்ணிச் செடியின் பழங்கள் மற்றும் பல்வேறு புதர் தாவரங்களின் பழங்களை உண்ணுகின்றன. தேன் மற்றும் பூச்சிகளையும் உண்ணும். இப்பறவைகள் உணவு தேடும் போது மந்தைகளாக இருக்கும். மேலும் பிற இனப் பறவைகளுடன் சேர்ந்தும் உணவு தேடும். இனப்பெருக்கம் சில பறவைகள் ஜனவரி மாதத்தில் கூடு கட்டத் தொடங்கும். இருப்பினும் இனப்பெருக்க காலம் பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடைப்பட்ட காலமாகும். இவை சிறிய கோப்பை வடிவிலான கூடுகளைக் கட்டுகின்றன. தரையில் இருந்து 3 முதல் 9 அடி உயரத்தில் கூடுகளை அமைக்கின்றன. கூடு புல் மற்றும் மஞ்சள் இலைகளால் ஆனது. இது சிலந்தி வலைகளால் பிணைக்கப்பட்டுள்ளது. கூடு கட்டும் காலம் 6 முதல் 10 நாட்கள் வரை நீடிக்கும். ஒன்று முதல் இரண்டு முட்டைகளை இடும். முட்டைகள் மங்கலான இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும். பொதுவாக முட்டைகளை அடைகாக்கும் காலம் 18 முதல் 20 நாட்கள் ஆகும். ஆண் பறவை கூட்டுக்கு வெளியே இருக்கும். ஆண் பறவை பெண் பறவைக்கு உணவு அளிப்பதும் உண்டு. இப்பறவையின் ஆயுட்காலம் 10 முதல் 14 ஆண்டுகளாகும். நடத்தை காடுகளில் காணப்படும் நட்புப் பறவைகளில் இதுவும் ஒன்றாகும். தனித் தனியாகவோ அல்லது ஜோடியாகவோ காணப்படுகின்றன. இது இனிமையாகப்பாடும். ஆரம்ப பாடலில் பெரும்பாலும் ப்ரிரிட் குறிப்புகள் உள்ளன. அழைப்புகளில் கூர்மையான பிக்-பிக் குறிப்புகள் போன்ற விசில்களும் வெளிப்படும். மேலும் இது வெவ்வேறு அழைப்புகளுடன் குரல் கொடுக்கிறது. சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) சிவப்புப் பட்டியலின்படி இந்தப் பறவை இனம் தற்போது குறைந்த அக்கறை கொண்ட பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 1972ஆம் ஆண்டின் இந்திய வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் படி அட்டவணை – IV இன் கீழ் இப்பறவை பட்டியலிடப்பட்டுள்ளது. ஆகவே இப்பறவையை செல்லப் பிராணியாக வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும். குஜராத் குஜராத் மாநிலப் பறவையின் பெயர் கிரேட்டர் ஃபிளமிங்கோ (Greater Flamingo) என்பதாகும். தமிழ் நாட்டில் பெரும் பூநாரை என அழைக்கப்படுகிறது. இது நாரைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெரிய பறவையாகும். இதன் அறிவியல் பெயர் பீனிகாப்டெரஸ் ரோசஸ் (Phoenicopterus roseus) ஆகும். ஃபிளமிங்கோ பொதுவாக மாமிசப் பறவை என்றும் அழைக்கின்றனர். வாழிடம் பூநாரை ஆப்பிரிக்கா, தெற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு, தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியா முழுவதும் காணப்படுகிறது. பொதுவாக ஆப்பிரிக்காவில் பல பகுதிகளில் இதனைக் காணலாம். தெற்கு ஆசியாவில் வங்காள தேசம், பாகிஸ்தான், இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் வாழ்கின்றன. தெற்கு ஐரோப்பாவில் ஸ்பெயின், அல்பேனியா, துருக்கி, கிரீஸ், சைப்ரஸ், போர்ச்சுக்கல், இத்தாலி மற்றும் பிரான்சின் கேமர்கு பகுதிகள் உள்பட இவை பரவியுள்ளன. […] இது ஆப்பிரிக்காவின் கடற்கரை, மத்திய தரைக்கடல், ஆசியா மற்றும் இந்தியாவின் சில பகுதிகள், தெற்கு அமெரிக்கா, கரீபியன், யுகடன் தீபகற்பம் ஆகியவற்றின் சூடான கடலோர பகுதிகளில் வாழ்விடங்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் குஜராத்தின் கச்சு (Rann of kutch) வளைகுடாப் பகுதியில் இவை அதிகளவில் காணப்படுகின்றன. அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை ஏராளமான பூநாரைகள் இங்கு கூடுகின்றன. அப்போது நீரின் தன்மை இவை வாழ்வதற்கு ஏற்றவாறு உள்ளது. இக்காலத்தில் சுமார் ஒன்றரை இலட்சம் பறவைகள் இங்கு கூடுகின்றன. குஜராத்தில் நல் சரோவர் பறவைகள் சரணாலயம், கிஜாடியா பறவைகள் சரணாலயம், ஃபிளமிங்கோ நகரம் மற்றும் தோல் பறவைகள் சரணாலயம் ஆகியவற்றில் ஃபிளமிங்கோ பறவைகளைக் காணலாம். குளிர்காலம் முழுவதும் அவை அங்கேயே இருக்கும். பூநாரை இது 110 செ.மீ. முதல் 150 செ.மீ. உயரமும், 2 முதல் 4 கிலோ எடையும் கொண்டது. ஆண் பறவை, பெண் பறவையை விட பெரியது. ஆண் பறவை 187 செ.மீ. உயரமும், 4.5 கிலோ எடை வரை வளர்ச்சி அடையும். இரு பாலினமும் ஒரே மாதிரியாக இருக்கும். இப்பறவைக்கு நீண்ட கால்களும், அதில் முடியில்லாமலும் இருக்கும். இதற்கு நீண்டு வளைந்த கழுத்தும், குறுகிய வளைந்த அலகும் காணப்படும். அலகு பழுப்பு நிறமாகவும், முனைப்பகுதி கருப்பாகவும் இருக்கும். கால்கள் பெரியதாகவும், வலுவாகவும், பிரகாசமான இளஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும். இது இளஞ்சிவப்பு வலைப் பாதங்களுடன் முடிவடையும். கால் விரல்கள் வாத்துக்கு இருப்பது போலவே சவ்வினால் இணைந்திருக்கும். கண்கள் மஞ்சள் நிறமாகவும், கழுத்து நீளமாகவும், ஒல்லியாகவும், வளைந்ததாகவும் இருக்கும். கழுத்து தசைகளில் சோர்வு ஏற்படுவதைத் தவிர்க்க பெரும்பாலும் தங்கள் தலையை உடலில் வைத்துக் கொள்ளும். இளம் பறவைகள் வெள்ளை, சாம்பல் நிறத்தில் உள்ளன. பல வருடங்களுக்குப் பிறகு இளம் சிவப்பு நிறத்தை அடையும். இப்பறவைகள் செந்நிறம் கலந்த வெள்ளையுடன் உடலும், கரு நிறமான இறக்கை ஓரமும் கொண்டவை. கருப்பு இறகுகள் ஓய்வு நேரத்தில் மறைக்கப்பட்டிருக்கும். பறக்கும் போது மட்டுமே கருப்பு இறகுகள் தெரியும். இதன் வால்பகுதியும் இளம் சிவப்பு நிறத்தால் ஆனது. இனப்பெருக்கம் ஆண்களும், பெண்களும் ஒருதார மணம் கொண்டவர்கள். பல ஆண்டுகள் ஒன்றாகவே இருப்பார்கள். ஒருவரின் மரணத்திற்குப் பிறகு மட்டுமே புதிய துணையைத் தேர்ந்தெடுப்பார்கள். கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. கூடு சேற்று மண்ணைக் குவித்து அமைக்கிறது. இது ஒரு அடி உயரம் கொண்ட மேடு, வட்ட வடிவமானது மற்றும் முட்டை இடுவதற்கு ஒரு தாழ்த்தப்பட்ட மையப் பகுதி என அமைந்துள்ளது. […] ஒரு முட்டை மட்டுமே இடுகிறது. இது பால் வெள்ளை நிறமானது. ஆண், பெண் இரண்டுமே ஒன்று மாற்றி ஒன்று அடைகாக்கும். அடைகாக்கும் காலம் 27 முதல் 32 நாட்கள் ஆகும். இதன் ஆயுட்காலம் 30 முதல் 50 ஆண்டுகள் ஆகும். உணவு இவை நூற்புழுக்கள், புழுக்கள், நண்டுகள், மெல்லுடலிகள், ஓட்டு மீன்கள், பூச்சிகள், சிறு மீன்கள் போன்றவை உண்ணுகின்றன. மேலும் புல், விதைகள், தளிர்கள், அழுகும் இலைகள், பாசிகள் மற்றும் காய்கறிப் பொருட்களையும் உட்கொள்கின்றன. பாதுகாப்பு பூநாரைகள் கூட்டம் கூட்டமாக பறந்து செல்வது கண்கொள்ளாக் காட்சியாகும். கடலோரப் பகுதிகள், பெரிய நீர் நிலைகள், ஏரிகள் மற்றும் உள்நாட்டு தடாகங்கள் ஆகியப் பகுதிகளிலேயே வாழ்கின்றன. நீர் மாசுபாடு, ஆலைக்கழிவுகள் நீரில் கலத்தல் போன்ற காரணங்களால் இவை அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. இது சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) சிவப்பு பட்டியலில் குறைந்த அக்கறை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஹரியானா ஹரியானா (Haryana) மாநிலப் பறவையின் பெயர் கருப்பு ஃபிராங்கோலின் (Black Francolin) ஆகும். இது அழகான, மிகவும் பிரபலமான விளையாட்டுப் பறவையாகும். இது முன்பு பிளாக் பார்ட்ரிட்ஜ் (Black partridge) என்று அழைக்கப்பட்டது. உள்ளூரில் இது காலா தீட்டர் (Kaala Teetar) என்று அழைக்கப்பட்டு வருகிறது. […] இதன் அறிவியல் பெயர் பிராங்கோலினஸ் பிராங்கோலினஸ் (Francolinus francolinus) என்பதாகும். இது கவுதாரி அல்லது கௌதாரி பறவையுடன் நெருங்கிய தொடர்புடையது. கோழியைப் போன்ற ஒரு வகைப் பறவையாகும். வாழிடம் இது இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், இலங்கை, இந்தோனேசியா, ஜாவா, ஆப்கானிஸ்தான், சுமத்ரா மற்றும் மாலத்தீவு ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. இந்தியாவில் குஜராத், ஹரியானா, மத்தியப் பிரதேசம், ஒடிசா மற்றும் அசாம் வரை வாழ்கின்றன. இது கடல் மட்டத்தில் இருந்து 2700 மீட்டர் உயரத்திற்கு மேல் மிக அரிதாகவே காணப்படுகிறது. இது காகசஸ், குவாம் மற்றும் ஹவாய் தீவுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வயல்வெளிகள், புதர் மண்டிய இடங்கள், புல்வெளிகள், கால்வாய்கள், நீர்ப்பாசனத் தோட்டங்கள், மூங்கில் புதர்கள், திறந்த பண்ணைகள் மற்றும் மரம் அடர்ந்தப் பகுதிகள் இவற்றின் முக்கிய வாழ்விடங்கள் ஆகும். இவை தங்குமிடத்தில் இருந்து எளிதாகத் தப்பிக்கும் பாதைகளையும் உருவாக்கி வைத்திருக்கும். பொதுவாக தண்ணீர் இருக்கும் பகுதிகளையும், அடர்த்தியான தாவரங்கள் நிறைந்த பகுதிகளையும் இவை அதிகம் விரும்புகின்றன. ஃபிராங்கோலின் இது 33 செ.மீ. 36 செ.மீ. வரை நீளமுடையது. எடை 400 கிராம் முதல் 490 கிராம் வரை இருக்கும். இதன் இறக்கைகள் விரிந்த நிலையில் 50 செ.மீ. முதல் 56 செ.மீ. நீளமுடையது. ஆண் பறவையின் மேல் பகுதிகள் பழுப்பு, கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திட்டுகளுடன் இருக்கும். கண்கள் அடர் பழுப்பு நிறத்தில் காணப்படும். கன்னத்தில் ஒரு வெள்ளை திட்டும் உள்ளது. இதன் தலை வெள்ளைத் திட்டுகளுடன் கூடிய கருப்பு மற்றும் பழுப்பு நிற கிரீடம் போன்று ஒரு தனித்துவமான வடிவத்தைக் கொண்டுள்ளது. கழுத்து முழுமையான பழுப்பு காலரைக் காட்டுகிறது. இதன் கால்கள் கருப்பு நிறத்திலும், பாதங்கள் சிவப்பு பழுப்பு நிறத்திலும் உள்ளன. பெண் பறவை முக்கியமாக பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் பின்கழுத்தில் ஒரு அடையாளம் உள்ளது. இதன் ஓரங்களில் வெள்ளைப் புள்ளிகள் உள்ளன. இது பறவைகளுக்கு ஏற்ப கணிசமாக வேறுபடுகிறது. ஆண்களுக்கு உள்ளதைப் போலவே பெண்களுக்கு மேல் இறகுகள், இறக்கைகள் மற்றும் வால் ஆகியவை உள்ளன. ஆனால் கருப்பு நிறத்திற்குப் பதிலாக பழுப்பு நிறத்தில் இருக்கும். வால் மற்றும் கீழ் முதுகு பகுதியில் பழுப்பு நிறக் கோடுகள் அகலமாக காணப்படும். பெண் பறவையின் கன்னத்தில் திட்டு காணப்படுவதில்லை. தலை, கிரீடம் மற்றும் கழுத்தில் பழுப்பு நிறத்தில் மெல்லிய கோடுகளுடன் கருப்பு நிறத்தில் இருக்கும். இதற்கு அகன்ற புருவம் வெள்ளையாகக் காணப்படும். முகம் மற்றும் கன்னம் வெள்ளை நிறத்தால் ஆனது. இனப் பெருக்கம் இனப் பெருக்கக் காலம் மார்ச் முதல் செப்டம்பர் மாதம் வரை ஆகும். இனப் பெருக்கக் காலத்தில் ஆண்கள் உரத்த குரலில் ஒலி எழுப்புகின்றன. அவை தரையில் கூடு கட்டுகின்றன. கூடு என்பது தரையில் புல்லை வரிசையாக அடுக்கி வைக்கும். இது ஆழமற்றது. பொதுவாக தாவரங்கள் நன்கு அடர்ந்திருக்கும் இடத்திலேயே கூடுகளை அமைக்கும். பொதுவாக இவை காடுகளில் ஒரு தார மணம் கொண்டவை. பெண் 6 முதல் 12 முட்டைகளை இடும். முட்டை வெளிர் பழுப்பு நிறமும், அதன் மீது வெள்ளை புள்ளிகளும் காணப்படும். அடைகாக்கும் காலம் 18 முதல் 20 நாட்கள் ஆகும். பெற்றோர்கள் இருவராலும் அடைகாக்கப்படுகின்றன. ஆனால் பெரும்பாலும் பெண்களே அதிகம் அடைகாக்கின்றன. குஞ்சுகள் பொரித்தப் பிறகு அவற்றை ஆண், பெண் இருவருமே வளர்க்கின்றனர். இதன் ஆயுட்காலம் 13 முதல் 16 […] ஆண்டுகளாகும். உணவு இவை தானியங்கள், புல் விதைகள், கீழே விழுந்த பழங்கள், தளிர்கள், கிழங்குகள், கரையான்கள், எறும்புகள் மற்றும் பூச்சிகளை உண்கின்றன. பாதுகாப்பு இவை நன்றாகப் பறக்கும். ஆனால் உயரமாகப் பறக்காது. பறப்பதை விட ஓடுவதையே விரும்புகின்றன. மேலும் கண்ணுக்குத் தெரியாமல் ஊர்ந்து செல்ல விரும்புகின்றன. இது இறைச்சிக்காக வேட்டையாடப்படுகின்றது. 1972ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் படி கருப்பு பிராங்கோலின் அட்டவணை IV பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இமாச்சலப் பிரதேசம் இமாச்சலப் பிரதேசத்தின் மாநிலப் பறவை மேற்கத்திய டிராகோபன் (Western Tragopan) ஆகும். இது மிகவும் அரிதான, அழிந்து வரும் (Endangered) பறவை இனம். உலகளவில் ஆபத்தான, அச்சுறுத்தலுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் பறவை. காஷ்மீரில் இது டான்கீர் (Danngeer) என்றும், சம்பாவில் புல்கர் (Phulgar) என்றும் அழைக்கப்படுகிறது. இமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் உள்ளூர் மக்கள் இதை ஜூஜூரானா (Jujurana) என அழைக்கின்றனர். அதாவது இதற்குப் பறவைகளின் ராஜா என்று பொருள். இது 2007 ஆம் ஆண்டு இமாச்சலப் பிரதேசத்தின் மாநிலப் பறவையாக அறிவிக்கப்பட்டது. இதன் அறிவியல் பெயர் டிராகோபன் மெலனோசெபாலஸ் (Trangopan melanocephalus) என்பதாகும். இது மேற்கத்திய கொம்பு டிராகோபன் (Western horned tragopan) என்றும் அழைக்கப்படுகிறது. வாழிடம் […] இது மேற்கு இமயமலைக்குச் சொந்தமானது. பாகிஸ்தானின் கோஹிஸ்தான் மாவட்டம், ககன் பள்ளத்தாக்கு, பாகிஸ்தானின் கிஷ்த்வார் பகுதியிலும் காணப்படுகிறது. இந்தியாவில் கிழக்கு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராஞ்சல் மற்றும் மேற்கு இந்தியா வரை வாழ்கிறது. இவை கடல் மட்டத்தில் இருந்து 1750 முதல் 3600 மீட்டர் உயரம் வரை காணப்படுகிறது. இது மிதமான ஊசியிலைக் காடுகளிலும், இலையுதிர் காடுகளிலும் வாழ்கிறது. குளிர்காலத்தில் கடல் மட்டத்தில் இருந்து 2000 முதல் 2800 மீட்டர் உயரம் உள்ள பகுதிகளில் மட்டுமே வாழ்கிறது. குளிர் காலத்தில் பனி மூடியவுடன் புதர் அல்லது புல்வெளி பள்ளங்களுக்கு இடம் பெயர்கின்றன. உடலமைப்பு இது ஒரு நடுத்தர அளவுள்ள கோழி இனத்தைச் சேர்ந்த பறவையாகும். வயது வந்த ஆண் பறவை 65 முதல் 73 செ.மீ. நீளமும், பெண் 55 முதல் 65 செ.மீ. வரை நீளமும் கொண்டிருக்கும். ஆணின் எடை 1.75 கிலோ முதல் 2.25 கிலோ வரையிலும், பெண்ணின் எடை 1.25 கிலோ முதல் 1.50 கிலோ வரையிலும் இருக்கும். ஆண் பறவை வண்ணம் மிகுந்தது. இருண்ட சாம்பல் மற்றும் கருப்பு நிறம் கொண்டது. இதில் எண்ணற்ற வெள்ளை புள்ளிகள் உள்ளன. கழுத்து பக்கங்களிலும், பின்புறத்திலும் கருப்பு மற்றும் அடர்த்தியான கருஞ்சிவப்புத் திட்டுகளுடன் காணப்படும். முகம் செந்நிறத்திலும், தொண்டைப் பகுதி நீல நிறத்திலும் இருக்கும். அலகு குறுகிய, வலுவாக மற்றும் தடிமனாக உள்ளது. தலை கருப்பு மற்றும் கன்னம் சிவப்புத் திட்டுகளால் ஆனது. தொண்டையின் பக்கங்கள் முடி இல்லாமல் அல்லது மெல்லிய இறகுகளால் மூடப்பட்டு இருக்கும். இது மிகவும் பிரகாசமான நிறத்தில் காணப்படும். இவை வட்டமான இறக்கைகளை கொண்டுள்ளன. பத்தாவது இறகு குறுகியதாகவும், ஐந்து மற்றும் ஆறாவது இறகுகள் நீளமானதாகவும் இருக்கும். வால் 18 இறகுகளைக் கொண்டுள்ளது. பெண் பறவைகள் சாம்பல் நிறத்திலும், அதில் கருப்பு வெள்ளைப் புள்ளிகளையும் கொண்டிருக்கும். மேலும் பெரும்பாலான இறகுகளில் கருப்பு திட்டுகள் மற்றும் மத்தியில் வெள்ளை கோடுகள் உள்ளன. இளம் ஆண் பறவைகள் பெண்களைப் போலவே இருக்கும். ஆனால் நீளமான கால்களைக் கொண்டிருக்கும். மேலும் தலையில் கருப்பும் மற்றும் கழுத்தில் சிவப்பு நிறமும் பெரிய அளவில் இருக்கும். இனப் பெருக்கம் […] இதன் இனப்பெருக்கக் காலம் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலானது. ஆண் பறவை வே வா என குரல் எழுப்பும். கிளர்ந்தெழுந்தால் வா வா வா என்று குரல் ஒலிக்கும். இது நீண்ட காலத்திற்கு ஒவ்வொரு நொடியும் மீண்டும் மீண்டும் ஒலிக்கும். இவை தாழ்வான மரப்பள்ளங்களில் தங்கள் கூடுகளைக் கட்டுகின்றன. இவை மனிதனின் இடையூறுகளை நன்கு உணர்கின்றன. ஆகவே தொந்தரவு இல்லாத இடங்களைத் தேர்வு செய்து, அங்கு கூடு கட்டுகிறது. பாலியல் முதிர்ச்சியின் வயது 1.5 முதல் 2 ஆண்டுகள் ஆகும். இவை தரை அல்லது மரங்களில் கூட்டை கட்டுகின்றன. மேலும் மற்றொரு பறவை இனத்தின் கைவிடப்பட்ட கூட்டையும் இவை பயன்படுத்துகின்றன. இவை 2 முதல் 6 முட்டைகளை இடுகின்றன. பெண் பறவைகள் மட்டுமே அடைகாக்கின்றன. அடைகாக்கும் காலம் 26 முதல் 30 நாட்கள் ஆகும். இதன் சராசரி ஆயுட்காலம் 21 ஆண்டுகள் ஆகும். உணவு இது பெரும்பாலும் மரங்களில் வாழ்கிறது. ஆனால் தரையில் இறங்கி உணவு தேடும். இவை இலைகள், தளிர்கள், வேர்கள், பூக்கள், விதைகள், பழங்கள், புழுக்கள், பூச்சிகள் மற்றும் சில முதுகெலும்பில்லாத உயிரினங்களையும் உண்ணுகின்றன. பழக்கம் இது சிறிய குழுவாகவோ அல்லது ஜோடியாகவோ வாழ்கிறது. மேலும் இது ஒருதார மணம் கொண்டதாக நம்பப்படுகிறது. அவை கூடு கட்டும் போது தவிர மற்ற நேரங்களில் தனித்தனியாகவோ அல்லது ஜோடியாகவோ மரங்களில் தங்கி இருக்கும். பாதுகாப்பு ஒரு காலத்தில் இமயமலைப் பகுதி முழுவதும் காணப்பட்டது. தற்போது அழிந்துப் போய் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972 இன் படி இது அட்டவணை – I இல் பட்டியலிடப்பட்டுள்ளது. சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) சிவப்பு பட்டியலில் பாதிக்கப்படக் கூடிய இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஜார்கண்ட் ஜார்கண்ட் (Jharkhand) மாநிலம் 2000ஆம் ஆண்டு நவம்பர் 15 அன்று புதியதாக உருவாக்கப்பட்டது. இதன் மாநிலப் பறவை ஆசியக் குயில் (Asian Koel) ஆகும். இது உள்ளூர் மக்களால் குயில் என அழைக்கப்படுகிறது. இது இந்திய யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் மாநிலப் பறவையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் அறிவியல் பெயர் யூடினாமிஸ் ஸ்கோலோபேசியஸ் (Eudynamys scolopaceus) என்பதாகும். குயில் மிகவும் பிரபலமான பறவையாகும். வாழிடம் இது இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, தெற்கு சீனா ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. மேலும் ஈரான், தென் கிழக்கு ஆசியாவிலிருந்து நியூ கினியா மற்றும் சாலமன் தீவுகள் வரை பரவியுள்ளன. குளிர் காலங்களில் அவை வெப்பமான பகுதிகளுக்கு இடம் பெயர்கின்றன. வெப்ப மண்டல தெற்காசியாவிலும் இவை வாழ்கின்றன. இது 1980ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு வந்தது. தற்போது இது பொதுவான பறவையாக மாறிவிட்டது. நீண்ட தூரமான ஆஸ்திரேலியாவிற்கும் சென்று சேர்ந்தது. ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் இதைக் காணலாம். […] இது அடர்ந்த மரங்கள், மூங்கில் காடுகள், லேசான வனப்பகுதி, அடர்ந்த புதர்க் காடுகள் மற்றும் சாகுபடி நிலங்களை ஒட்டியப் பகுதிகளிலும் வாழ்கின்றன. விவசாயம் நிறைந்தப் பகுதிகளை இவை அதிகம் விரும்புகின்றன. உயரமான மரங்கள், காடுகள், கிராமங்கள், நகரங்கள், தோட்டங்கள் மற்றும் சதுப்பு நிலக்காடுகளைக் கொண்ட புதிர் நிறைந்த பகுதிகளிலும் இவை காணப்படுகின்றன. ஆசியக்குயில் இது ஒரு அழகானப் பறவை. இது 39 செ.மீ. முதல் 46 செ.மீ. நீளம் வரை இருக்கும். இதற்கு நீண்ட வால் உண்டு. இது 190 முதல் 327 கிராம் வரை எடையுடையது. ஆண் பறவை மற்றும் பெண் பறவை நிறத்தில் வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. ஆண் குயிலின் நிறம் பளபளப்பான நீலக் கருப்பு அல்லது பச்சை கலந்த கருப்பு ஆகும். இதன் இறக்கைகள் குறுகியவை. ஆனால் வால் மட்டும் மிகவும் நீளமாக இருக்கும். ஆண் பறவையின் இறகுகளில் பளபளப்பான நீலம் கலந்த கருப்பு அல்லது பச்சை கலந்த கருப்பு இறகுகள் இருக்கும். இதன் அலகு வெளிர் பச்சை சாம்பல் நிறமானது. கால்கள் மற்றும் பாதங்கள் சாம்பல் நிறத்தைக் கொண்டுள்ளன. கண்கள் பிரகாசமான சிவப்பு நிறத்தைக் கொண்டிருக்கின்றன. பெண் குயில் பழுப்பு நிறமாகவும், இதன் தலையில் ரூஃபஸ் கோடுகளும் உள்ளன. பெண்ணின் இறக்கைகள் குட்டையாக இருந்தாலும், வால் நீளமாக இருக்கும். பெண் குயிலின் பின்புறம் மற்றும் இறக்கைகள் அடர் பழுப்பு நிறத்தில் வெள்ளை புள்ளிகளுடன் காணப்படும். அலகு மற்றும் கால்கள் வெளிர் பச்சை கலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும். இதன் கண்கள் சிவந்திருக்கும். இளம் பெண் பறவை ஆண் பறவையைப் போலவே இருக்கும். ஆனால் இருண்ட கண்கள் கொண்டது. குஞ்சுகளின் மேல்இறகுகள் ஆண்களைப் போலவே இருக்கும். இவை கருப்பு அலகைக் கொண்டிருக்கும். இனப் பெருக்கம் […] இதன் இனப் பெருக்க காலம் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆகும். குயிலுக்கு கூடு கட்டத் தெரியாது. பொதுவாக இது மற்ற பறவை இனங்களின் கூடுகளில் முட்டைகளை இடுகிறது. பொதுவாக காகங்களின் கூடுகளைத் தேர்ந்தெடுத்து அதில் முட்டைகளை இடுகின்றன. இது ஒரு முட்டை அல்லது இரண்டு முட்டைகளை இடும். முட்டை மிகவும் சிறியதாக இருக்கும். ஆனால் தோற்றத்தில் காகத்தின் முட்டையை போலவே இருக்கும். இது வெளிர் சாம்பல்-பச்சை அல்லது கல் நிறத்தில் புள்ளிகள் மற்றும் சிவப்பு – பழுப்பு நிறத்துடன் காணப்படும். ஆண் குயில் காகத்தின் கவனத்தை திசை திருப்புகிறது. அச்சமயத்தைப் பயன்படுத்தி பெண் குயில் அதன் கூட்டில் முட்டையிடும். காலியாக இருக்கும் கூட்டில் முட்டையிடாது. முட்டையின் அடைகாக்கும் காலம் 12 முதல் 14 நாட்கள் ஆகும். குஞ்சு 20 முதல் 28 நாட்களில் வளர்ச்சியடைந்து கூட்டை விட்டு வெளியேறும், அது மரங்களின் வெளிப்புற கிளைகளில் தங்கி, தனது வளர்ப்பு பெற்றோரிடம் இருந்து உணவைப் பெறுகின்றன. இதன் ஆயுட்காலம் 12 முதல் 15 ஆண்டுகள் ஆகும். உணவு இது முக்கியமாகப் பழங்களை உண்கிறது. சில சமயங்களில் பூச்சிகள், முட்டைகள், கம்பளிப் பூச்சிகள் மற்றும் சிறிய முதுகெலும்பு உள்ள விலங்குகளையும் உணவாக உண்ணுகின்றன. 11. கர்நாடகா […] கர்நாடகா மாநிலப் பறவை பனங்காடை ஆகும். கன்னட மக்களால் இது நீலகண்டா என அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இந்தியன் ரோலர் (Indian Roller) என்கின்றனர். இது கண்கவரக் கூடிய நீல நிறத்தைக் கொண்டிருப்பதால் ப்ளூ ஜே (Blue Jay) என்று அழைக்கின்றனர். இது கர்நாடகா, ஒடிசா மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று மாநிலங்களின் மாநிலப் பறவையாக இருக்கிறது. இதன் அறிவியல் பெயர் கோராசியஸ் பெங்காலென்சிஸ் (Coracias benghalensis) என்பதாகும். பெயர் இது நீலகாந்த் (Neelkanth) எனவும் அழைக்கப்படுகிறது. இதற்கு நீல தொண்டை அல்லது நீல நிறமுடைய கழுத்தை உடையது என்று பொருள். இது சிவபெருமான் என்ற தெய்வத்துடன் தொடர்புடைய பெயராகும். தேவர்களும் அசுரர்களும் அமிழ்தம் வேண்டி மேருவை மத்தாகக் கொண்டுப் பாற்கடலைக் கடைந்த பொழுது அதிலிருந்து வந்த ஆலகால நஞ்சினை சிவபெருமான் உண்டார். அது கழுத்துப் பகுதியிலேயே நின்று போனதால் சிவனின் கழுத்து நீலமானது என புராணக் கதை சொல்கிறது. ஆலகால விஷத்தினை உண்ட சிவபெருமானின் திருவுருவம் நீலகண்டன் என்று அழைக்கப்படுகிறது. பனங்காடையின் உடலில் ஆங்காங்கே நீல நிறம் உள்ளது. ஆனால் கழுத்துப் பகுதி நீல நிறமாக இல்லை. பனங்காடையைப் பார்ப்பது ஒரு நல்ல சகுனம் என்ற நம்பிக்கை இம்மக்களிடம் உள்ளது. மகாராஜா காலத்தில் துர்கா மற்றம் தசரா பண்டிகையின் போது இப்பறவையை சிறைப்பிடித்து வைத்திருந்து, பிறகு திறந்து விடும் பழக்கமும் இருந்தது. தசரா பண்டிகையின் போது நமது விருப்பத்தை இந்த பனங்காடையிடம் சொன்னால் அது சிவனிடம் நேரில் சென்று சொல்லி விடுமாம். ஆகவே தசரா பண்டிகை நாட்களில் இப்பறவையை பிடித்து விற்பதும் உண்டு. இதற்கு தடை விதிக்கப்பட்ட போதிலும் சில இடங்களில் இன்றும் விற்பனை நடக்கிறது. ரோலர் […] இந்தப் பறவையை இந்திய ரோலர் என்கின்றனர். இது இனப்பெருக்கக் காலத்தில் தனது இணைப் பறவையைக் கவர்வதற்காக மேலே இருந்து சுழன்று பறந்து வரும். கீழே வந்தப் பிறகு மீண்டும் மேலே ஏறிப் பறக்கும். இப்படி சுற்றிச்சுற்றிச் சுழன்று வரும். இது ஒரு வித்தியாசமான பழக்கம். இப்படி சுழன்று வருகின்றக் காரணத்தால் தான் இது ஆங்கிலத்தில் இந்திய ரோலர் எனப் பெயரிடப்பட்டது. இந்த அரியக் காட்சியை பலர் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைப்பதும் உண்டு. வாழிடம் உலகளவில் இந்தியாவிலேயே அதிகளவில் இவை காணப்படுகின்றன. முக்கியமாக இமயமலையின் அடிவார மலைகள், தென்னிந்தியா மற்றும் மேற்கு இந்தியாவிலும் வாழ்கின்றன. மேலும் பாகிஸ்தான், பர்மா, தென் கிழக்கு ஆசியா, திபெத் மற்றும் சீனாவின் சில பகுதிகளிலும் இவை காணப்படுகின்றன. இது சிறு நகரங்களில் காணப்படும். பெங்களூரு நகரில் இதைப் பார்க்க முடியாது. இது நாகராஹோல், பந்திப்பூர் மற்றும் கானியைச் சுற்றியுள்ள திறந்த புல்வெளிகள் மற்றும் புதர்க் காடுகளில் எல்லா இடங்களிலும் இவற்றைக் காணலாம். பரத்பூர் சரணாலயத்தில் அதிகமான பனங்காடைகளைக் காணமுடியும். பறவை இது 25 முதல் 35 செ.மீ. நீளம் வரை இருக்கும். வயது வந்த பின் எடை 70 கிராம் முதல் 100 கிராம் எடை உடையது. ஆணும், பெண்ணும் எளிதில் பிரித்தரிய முடியாது. ஆண், பெண் பறவைகள் ஒரே மாதிரி தோற்றமளிக்கும். இப்பறவை நீலமும், பழுப்பும் கலந்த நிறத்தில் இருக்கும். கொண்டை, வால், இறக்கைப் பகுதிகள் நீல நிறத்தில் இருக்கும். இதன் கழுத்து மற்றும் உடலின் அடிப்பகுதி ஆகியவை பழுப்பு நிறத்தில் காணப்படும். இது பறக்கும் போது நீல வானத்தோடும், இது அமர்ந்திருக்கும் போது அது அமர்ந்துள்ள இடத்திற்கு ஏற்பவும் இதன் நிறங்கள் பொருந்தி இருக்கும். இது உருமறைப்பிற்கு (Camouflage) ஏற்ப இயற்கையாகவே தனது தகவமைப்பைப் பெற்றுள்ளது. கேரளா கேரள மாநிலம் (Kerala) 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று உருவானது. இதன் மாநிலப் பறவை பெரிய இந்திய இருவாட்சி (Great Indian Hornbill) ஆகும். இது கேரளாவில் வேழம்பாள் (Vezhambal) மற்றும் மலமுழுங்கி வேழம்பாள் எனவும் அழைக்கப்படுகிறது. இதற்கு மலை மொங்கான் என்ற பெயரும் உண்டு. […] இது குழிவான தலைக்கவசம் கொண்ட இருவாட்சி (Cancave Casqued Hornbill) மற்றும் மலை இருவாட்சி எனவும் அழைக்கப்படுகிறது. மலை இருவாட்சி கேரளக் காடுகளில் ஒரு அரிய காட்சியாகும். பறவையியல் அறிஞர் சலீம் அலி என்பவர் 1933ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் – கொச்சி பகுதியில் தனது முதல் பறவை ஆராய்ச்சியைத் தொடங்கினார். இவர் தேக்கடியில் மட்டும் 62 இருவாட்சி பறவைகளைக் கண்டார். இயற்கையானச் சூழலில், உயரமான மரங்களில் கூடுகள் அமைப்பதையும் கண்டார். வாழிடம் இந்தியாவில் 9 இருவாட்சி இனங்கள் உள்ளன. இவற்றில் நான்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படுகின்றன. இந்திய சாம்பல் ஹார்ன்பில் என்பது இந்தியாவில் மட்டுமே உள்ளது. மலபார் சாம்பல் நிற இருவாட்சி என்கிற பறவை மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மட்டுமே சொந்தமானது. மலபார் பைட் ஹார்ன்பில் என்பது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் மட்டுமே உள்ளது. பெரிய இந்திய இருவாட்சி என்பது உலகின் பல்வேறு நாடுகளில் பரவலாகக் காணப்படுகிறது. இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள வனப்பகுதி மற்றும் இமயமலையை ஒட்டிய காடுகளிலும் இவை வாழ்கின்றன. மேலும் இவற்றை தமிழ்நாட்டில் நீலகிரி மலைத்தொடரிலும் காணலாம். கேரளாவில் தட்டேகாட் பறவைகள் சரணாலயம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஆனைமலை புலிகள் சரணாலயம் ஆகிய இடங்களிலும் இந்தப் பறவையைக் கண்டு மகிழலாம். பெரிய இருவாட்சி […] இப்பறவைகளின் மிகப் பெரிய அலகுகளே இவைகளின் முக்கிய அம்சமாகும். இப்பறவையின் அலகு வளைந்து கூர்மையாகக் காணப்படும். அலகுக்கு மேலே ஒரு கொம்பு போன்ற அமைப்பு உள்ளது. பெரிய அலகின் மீது தலைகீழாக கவிழ்த்து ஒட்டியது போல் இருக்கிறது. இது ஹெல்மட் போன்று தெரியும். ஆனால் பார்ப்பதற்கு இரண்டு வாய்கள் போன்று காட்சித் தருவதால் இருவாய்க் குருவி என்ற விசித்திரப் பெயரும் இதற்கு உண்டு. இதன் அறிவியல் பெயர் புசெரோஸ் பைகார்னிஸ் (Buceros bicornis) ஆகும். இது கருப்பும், வைக்கோல் நிறமும் பட்டை பட்டையாக இருக்கும். இது அலகிலிருந்து வால் வரை 4 அடி நீளமிருக்கும். இதன் தோல் இளம் சிவப்பு நிறம் கொண்டது. இதன் பெரிய அலகின் மேல் பிரகாசமான மஞ்சள் மற்றும் கருப்பு நிற தலைக்கவசம் (Casque) உள்ளது. முன்பக்கத்தில் இருந்து பார்க்கும் போது தலைக்கவசம் U வடிவத்தில் தோற்றம் அளிக்கிறது. தலைக் கவசத்தின் பின்புறம் பெண் பறவைகளில் சிவப்பு நிறத்தில் இருக்கும். அதே சமயத்தில் தலைக் கவசத்தின் முன் மற்றும் பின்புறத்தின் அடிப்பகுதி ஆண்களில் கருப்பு நிறத்தில் இருக்கும். இருவாட்சியின் வெள்ளை இறகுகள் மஞ்சள் நிறத்தில் காணப்படுவதும் உண்டு. முழு வளர்ச்சி அடைந்த பறவையின் வால் பகுதிக்கு மேல் அடிப்பகுதியில் யூரோபிஜியல் சுரப்பிகள் உள்ளன. இதிலிருந்து ஒருவகை எண்ணெய் வெளியேறுகிறது. இது தனது தலையை சுரப்பியின் மீது தேய்த்து, இந்த எண்ணெயை இறகின் மீது தடவுகிறது. இதனால் இறகுகள் மஞ்சள் நிறமாக மாறுகின்றன. இது மர உச்சிகளை விட்டுக் கீழறங்கி, தரையில் நடமாடுவதில்லை. பறக்கும் போது ஒலி செய்து கொண்டே விரைந்து, படபடவெனச் சிறகடித்துச் சிறிது தூரம் செல்லும். பிறகு சிறிது தூரம் காற்றில் இறக்கையைப் பரப்பி மிதந்து செல்லும். அதன்பிறகு மறுபடியும் படபடவெனச் சிறகடித்துச் செல்லும். இது சில சமயம் காடுகளுக்கு மேல் உயரத்தில் பறக்கும். இதன் இறக்கைகள் கனமானவை. இது பறக்கும் ஒலி வெகு தூரம் வரை கேட்கும். இந்த ஒலியானது ஒரு நீராவி இன்ஜின் தொடங்கும் போது ஊதுவதைப் போல இருக்கும். உணவு இது அத்தி வகைப் பழங்களையும், மற்றப் பழங்களையும் தம் அழகினால் திருகிப் பிடுங்கித் தின்னும். சில சமயம் பெரிய பூச்சிகள், பல்லிகள், ஓணான்கள், அணில்கள் போன்றவற்றையும் கூட உண்ணும். இனப்பெருக்கம் இருவாட்சி பறவை ஒருதார மணம் கொண்டவை. பெரும்பாலும் அந்த இணை சாகும் வரை பிரியாது. பெண் பறவை முட்டையிடும் சமயத்தில், ஆண் பறவையுடன் சேர்ந்து உயரமான மரத்தில் பெரும் பொந்தை தேர்வு செய்யும். பெண் உள்ளே சென்று முட்டையிடும். 3 முதல் 5 முட்டைகளை இட்டு அடைகாக்கும். பொந்தின் வாயை இலை, தழைகளை கொண்டு மூடிவிடும். இந்த அடைப்பில் அழகை வெளியே நீட்டும் வகையில் மட்டுமே துளை இருக்கும். ஆண் பறவை இரை தேடிக் கொண்டு வந்து, பெண் பறவைக்கு ஊட்டும். குஞ்சு பொரிக்கும் வரை ஆண் கொண்டு வந்து கொடுக்கும் உணவை உண்ணும். குஞ்சுகள் பிறந்து அவை பறக்கும் வரை ஆண் பறவை அவைகளுக்கு உணவைக் கொடுத்து வரும். இதன் சராசரி ஆயுட்காலம் 30 முதல் 40 ஆண்டுகள் ஆகும். இது 50 ஆண்டுகள் வரை கூட உயிர்வாழும். இதன் இறைச்சிக்காகவும், கொழுப்பிற்காகவும் இது வேட்டையாடப்படுகிறது. மத்தியப் பிரதேசம் மத்தியப் பிரதேசத்தின் மாநிலப் பறவை இந்திய சொர்க்க ஈப்பிடிப்பான் (Indian Paradise Flycatcher) ஆகும். இது ஆசிய சொர்க்க ஈப்பிடிப்பான் (Asian Paradise Flycatcher) என்றும் அழைக்கப்படுகிறது. இது அரசவால் ஈப்பிடிப்பான், வேதிவால் குருவி மற்றும் அரிவால் குருவி போன்ற பெயர்களும் இதற்கு உண்டு. […] இதன் அறிவியல் பெயர் தெர்ப்சிபோன் பாரடிசி (Terpsiphone paradisi) என்பதாகும். இப்பறவையை மத்தியப் பிரதேச மக்கள் துத்ராஜ் (Dhudrai) மற்றும் ஷா புல்புல் (Shah bulbul) எனவும் அழைக்கின்றனர். வாழிடம் இந்தியா, இலங்கை, சீனா, நேபாளம், மியான்மர் மற்றும் மலாய் தீவுக்கூட்டம் ஆகிய பகுதிகளில் வாழ்கின்றன. இவை இடம் பெயர்ந்து வெப்ப மண்டல ஆசியாவில் குளிர்காலத்தைக் கழிக்கின்றன. கடல் மட்டத்தில் இருந்து 5000 அடி உயரம் வரை இதைக் காணலாம். இவை தனித்தோ, இணையாகவோ மரமடர்ந்த இடங்களில் வாழும். அடர்ந்த காடுகள், தோட்டங்கள், நிழல் நிறைந்த தோப்புகள், லேசான இலையுதிர் காடுகள் மற்றும் மூங்கில் பள்ளத்தாக்குகள் போன்ற இடங்களில் இவை காணப்படுகின்றன. இது ஆசியவை தாயகமாகக் கொண்ட பறவையாகும். இது புலம்பெயரும் பறவையாகும். அதே சமயத்தில் பல இடங்களில் எப்போதுமே வசிக்கும். பறவை இது பெரும்பாலும் புல்புல் என்னும் கொண்டைக் குருவி அளவில் உள்ள ஒரு சிறிய பறவை. இது ஒரு அழகான பறவை. ஆண் பறவை மற்றும் பெண் பறவைகளுக்கு இடையே வேறுபாடுகள் உள்ளன. ஆண் பறவை நீண்ட வாலைக் கொண்டு காணப்படும். இது 18 செ.மீ. முதல் 22 செ.மீ. வரை இருக்கும். இதற்கு இரண்டு மைய வால் இறகுகள் நீளமாகத் தொங்கும். இவை 60 செ.மீ. நீளம் வரை இருக்கும். ஆண் பறவை இரு வேறு நிறங்களில் காணப்படுகின்றன. முழுவதும் வெள்ளை அல்லது அழுக்கு வெள்ளை இறகுகளுடன் இருப்பது ஒன்று. இதன் வால் இறகுகளின் விளிம்புகள் சில நேரத்தில் கருப்பு நிறத்தில் இருக்கும். மற்றொன்று கருப்பு மற்றும் செந்நிற இறகுகளுடன் காணப்படும். இவற்றின் தலைப்பகுதி மினுமினுப்புள்ள கரிய நிறமுடையது. கால்கள் குறுகியவை. அமர்ந்திருக்கும் போது நிமிர்ந்து உட்காரும். கண்கள் கருப்பு மற்றும் கண் வளையங்கள் நீல கருப்பு நிறத்திலும் உள்ளன. பெண் பறவை குறுகிய வாலுடையது. கருப்புத் தலையும், செந்நிற இறக்கையும் கொண்டுள்ளது. இதற்கு தொண்டை மற்றும் அதன் கீழ் பகுதி சாம்பல் நிறத்தில் இருக்கும். கண்கள் கருப்பு நிறமாகவும், கண்களைச் சுற்றி பிரகாசமான நீல நிற வளையங்களும் உள்ளன. பெண் பறவை 20 செ.மீ. நீளம் வரை இருக்கும். […] இளம் ஆண் பறவை செம்பழுப்பு நிறத்தில் பெண் பறவையைப் போலவே இருக்கும். முதிர்ச்சி அடையும் போது தான் நீண்ட வால் சிறகுகள் வளர்ந்து இருக்கின்றன. மரக் கிளையில் உட்கார்ந்து இருக்கும்போது இதன் நீண்ட இறகுகள் காற்றில் அசைந்தாடும். சிலிர்த்து நிற்கும் கொண்டையும், அசைந்தாடும் வாலும் ஆண் பறவைக்கு தனி அழகைக் கொடுக்கிறது. பெண் பறவையை விட ஆண் பறவையே அழகானது. உணவு இது பூச்சிகளை உண்ணும் பறவையாகும். ஈ, கொசு, ஈசல், பட்டாம்பூச்சி முதலிய பூச்சிகளே இதன் முக்கியமான இரையாகும். மரத்தின் கிளை மீது நிமிர்ந்து உட்கார்ந்திருக்கும். பூச்சியைக் கண்டவுடன் சட்டெனப் பாய்ந்து பறந்துச் சென்று அதைப் பிடிக்கும். பூச்சி தப்பித்துக் கொள்ள முயன்று இங்குமங்கும் பாய்ச்சல் காட்டிச் சூழன்றால், அதற்கு ஏற்றவாறு இப்பறவையும் திரும்பும், சுழலும், கரணம் போடும். பூச்சியைப் பிடிக்கும் திறமை இதற்கு உண்டு. பூச்சியைப் பிடித்தவுடன் மீண்டும் மரக் கிளையில் போய் அமரும். இது தரையில் அமருவதைக் காண முடியாது. தண்ணீருக்கு மேலே பறக்கும் பூச்சிகளையும் பிடித்துக் கொண்டு பறக்கும். ஆண் பறவை பூச்சியை பிடிக்க பறந்து போகும்போதும், மரத்திலிருந்து கீழே தாழ்ந்து பறக்கும் போதும் இதன் வால் இறகுகள் கொடி போல் பின்னால் ஆடிக் கொண்டே வரும். இனப்பெருக்கம் இது மிகவும் சத்தம் எழுப்பும் பறவை. சே… சே… அல்லது சே… சேச்வே என ஒலி எழுப்பும். இது காதுக்கு இனிமையாக இருக்காது. ஆணும், பெண்ணும் இணை கூடும் காலங்களில் மட்டும் கலகல என இனிமையான ஒலி செய்யும். இது ஒருதார மணம் கொண்டவை. மார்ச் முதல் ஜூலை மாதம் வரை கூடு கட்டி, முட்டை இடுகின்றன. கூடு கட்ட ஒரு வாரம் காலம் எடுத்துக் கொள்கிறது. சிறு வேர்கள், நாரிழைகள், இலைகள் ஆகியவற்றைக் கொண்டு கோப்பை வடிவில் கூடு கட்டி, சிலந்தி வலைகளால், கிளையுடன் பிணைக்கிறது. இக் கூடுகள் பொதுவாக ஒரு தாழ்வான மரக்கிளையின் முடிவில் அமைக்கும். ஆண் மற்றும் பெண் பறவை என இரண்டும் சேர்ந்தே கூட்டை அமைக்கின்றன. பெண் 3 முதல் 5 முட்டைகளை இடும். முட்டை வெண்மை கலந்த ரோஜா நிறமானது. இதில் செம்பழுப்பு நிறப்புள்ளிகளும் உள்ளன. அடைகாக்கும் காலம் 14 முதல் 18 நாட்கள் ஆகும். குஞ்சு பொரித்து 12 நாட்களில் கூட்டை விட்டு குஞ்சு பறக்கக்கூடும். பாதுகாப்பு இது இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972இன் படி அட்டவணை IVஇல் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் சிவப்பு பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. மகாராஷ்டிரா மகாராஷ்டிரா (Maharastra) மாநிலப் பறவையின் பெயர் மஞ்சள் கால் பச்சைப் புறா (Yellow footed green pigeon) ஆகும். மராத்தி மொழியில் ஹரியால் (Hariyal) அல்லது ஹரியல் (Haril) என அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பொதுவாக பச்சை புறா என்கின்றனர். இதன் அறிவியல் பெயர் ட்ரெரான் பீனிகோப்டெரா (Treron phoenicoptera) என்பதாகும். வாழிடம் இந்தியா, இலங்கை, பர்மா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், சீனா, தாய்லாந்து, கம்போடியா மற்றும் இந்தோசீனா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. சிந்து, பலுசிஸ்தான் மற்றும் வடமேற்கு பாலைவனப் பகுதிகளைத் தவிர இந்தியா முழுவதும் காணப்படுகிறது. […] இவை பசுமையான காடுகள், இலையுதிர் காடுகள், மரங்கள், நிறைந்த வாழ்விடங்கள் மற்றும் கடல் மட்டத்தில் இருந்து 800 மீட்டர் உயரம் வரையிலான இரண்டாம் நிலைக் காடுகளை விரும்பி வாழ்கின்றன. வறண்ட மற்றும் ஈரமான இலையுதிர் காடுகள், புதர் காடுகள், திறந்த வெளியில் உள்ள மரத்தோப்புகள், விவசாய நிலங்கள், மரங்கள் நிறைந்த சாலைகள் ஆகிய இடங்களில் இவை காணப்படுகின்றன. பொதுவாக ஆலமரம், அத்தி, அரச மரங்களில் காணப்படும். நகர்புறங்களில் உள்ள தோட்டங்களுக்கும் இவை வந்து செல்கின்றன. தமிழகம் எங்கும் இலையுதிர் காடுகளைச் சார்ந்து வாழ்கிறது. பழ மரங்கள் பழுக்கும் பருவத்திற்கு ஏற்ப இடம் மாறித் திரிவது இதன் பழக்கம், வீட்டுத் தோட்டங்கள், சாலை ஓர மரங்களிலும் இவற்றைக் காணலாம். உடலமைப்பு இந்தப் புறா ஒரு அழகான பறவையாகும். இது சுமார் 29 முதல் 32 செ.மீ. நீளம் வரை வளரும். வால் 8 முதல் 10 செ.மீ. நீளம் இருக்கும். இவற்றின் இறக்கைகள் விரிந்த நிலையில் 17 முதல் 19 செ.மீ. இருக்கும். இப்புறாவின் எடை 225 முதல் 260 கிராம் வரை உள்ளது. இதன் உடல் மஞ்சள் கலந்த ஆலிவ் பச்சை நிறமுடையது. மார்பும், வயிறும் மஞ்சள் நிறத்தால் ஆனது. தலைப் பகுதி நீல சாம்பல் நிறத்துடன் மந்தமாக இருக்கும். தோள்களில் இளஞ்சிவப்புத் திட்டு மற்றும் கருப்பு நிற இறக்கைகளில் ஒரு தெளிவான மஞ்சள் பட்டையைக் கொண்டுள்ளன. கழுத்து சுடர் தங்க ஆலிவ் பச்சை நிறமுடையது. இதன் கால் இறகுகள் மற்றும் கால்கள் எப்போதும் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இது இந்தப் புறாவை எப்போதும் எளிதில் அடையாளம் காண உதவுகிறது. கருவிழியின் வெளிப்புற வளையம் இளம் சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தைக் கொண்டுள்ளது. வயது வந்த ஆணும், பெண்ணும் ஏறத்தாழ ஒன்று போலவே இருக்கும். ஆனால் ஆண் பறவையை விட பெண் சற்று மந்தமானதாக காணப்படும். நடத்தை இது பச்சை நிறமாக இருப்பதால் இலைகளுடன் மறைந்து விடுகிறது. ஆகவே எளிதில் காண முடியாது. இது 5 முதல் 10 வரை கூட்டமாக இருக்கும். சில நேரம் பெரிய குழுவாகவும் காணப்படும். இவை எப்போதும் மரத்திலேயே இருக்கின்றன. அரிதாகவே தரையில் இறங்கும். இது வேகமாகப் பறக்கும். இவற்றின் இறகுகள் சுற்றிலும் உள்ள இலைகளுடன் மிகவும் சரியாக மறைகின்றன. எனவே பறவை பெரிதாக இருந்தாலும் கண்ணிற்குத் தெரியாது. துப்பாக்கி சப்தம் கேட்டால் படபடவென ஒரு பெருங்கூட்டம் பறந்து செல்லும். அப்போது தான் இவ்வளவு பறவைகள் மரத்தில் இருந்துள்ளன எனத் தெரிந்து கொள்ள முடியும். இப்பறவை கூட்டம் வெகு தொலைவில் உள்ள மற்றொரு மரத்தில் குடியேறும். பிறகு பழ மரத்திற்கு மீண்டும் திரும்பி வரும். உணவு […] இவை அத்திப் பழங்கள், பழங்கள், மொட்டுகள், இளம் தளிர்கள் போன்றவற்றை உண்ணுகின்றன. இவை அதிகாலையில் அடர்ந்த வனப் பகுதிகளில் உள்ள மரங்களில் உச்சியில் காணப்படும். இது பக்கவாட்டில் தலைகீழாகத் தொங்கியபடி பழங்களைப் பறிக்கும். தொண்டை நிறையப்பழங்களை அடக்கிக் கொள்ளும் பழக்கம் உடையது. உயரமான மரக்கிளையில் அமர்ந்து காலையிலும், மாலையிலும் வெயில் காயும் பழக்கம் கொண்டது. இனப்பெருக்கம் இதன் இனப்பெருக்க காலம் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை ஆகும். ஆண் பறவை இனிமையான, மென்மையான மற்றும் மெல்லிய விசில் அடிக்கும். இச்சமயத்தில் பெண்ணும் மெதுவாக விசில் அடிக்கும். மரம் அல்லது புதரில் கூடு அமைக்கிறது. 1 முதல் 2 முட்டைகளை இடும். முட்டையானது வெள்ளையாகவும் பளபளப்பான நிறமுடையது. அடைகாக்கும் காலம் 13 முதல் 15 நாட்கள் ஆகும். மணிப்பூர் மணிப்பூர் மாநிலப் பறவையின் பெயர் மிஸஸ் ஹியூம்ஸ் பெசண்ட் (Mrs. Hume’s Pheasant) என்பதாகும். உள்ளூர் மக்களால் நோங்கின் (Nongin) என்று அழைக்கப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் சிர்மாடிகஸ் ஹூமியா (Syrmaticus humiae) ஆகும். இது 1989ஆம் ஆண்டில் மணிப்பூரின் மாநிலப் பறவையாக அறிவிக்கப்பட்டது. பெயர் […] இது ஒரு அற்புதமான பறவையாகும். ஆலன் ஆக்டேவியன் ஹியூம் (Allan Octavian Hume) என்பவர் இந்தியாவின் இயற்கை ஆர்வலர் ஆவார். இவர் 19 ஆம் நூற்றாண்டில் மிகவும் செல்வாக்கு பெற்ற, பிரபலமான பறவையியல் அறிஞர் ஆவார். இவர் சிவில் சர்வீஸ் அதிகாரியாக இந்தியா வந்தார். இவர் மணிப்பூரில் பணியில் சேர்ந்தார். பின்னர் மாவட்ட ஆட்சியாளராகப் பதவி உயர்வு பெற்றார். இவர் 1856ஆம் ஆண்டில் எட்டாவா என்னும் இடத்திற்கு மாற்றப்பட்டார். இவர் 1853ஆம் ஆண்டில் மேரி ஆன் கிரிண்டால் (Mary Ann Grindall) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். மணிப்பூரில் உள்ள அனைத்து வகைப் பறவைகளையும் பதிவு செய்ய முடிவு செய்தார். இவருக்கு நோங்கின் என்ற பறவை இனம் ஒன்று மணிப்பூரில் இருப்பது தெரியவந்தது. முதல் குறிப்பு ஒன்றில் மகாராஜா ஒரு தூதுவரிடம் கொடுக்கப்பட்ட சில இறகுகள் கிடைத்தது. இது ஒரு சடங்கிற்காகப் பயன்படுத்தியது ஆகும். இந்தப் பறவையைக் கண்டுபிடிக்க வேண்டும் எனத் தீவிரமாக பயணத்தில் ஈடுபட்டார். இவருடன் அதிகாரிகள், சிப்பாய்கள், தொழிலாளர்கள், படகோட்டிகள் மற்றும் கிராமவாசிகள் என 60 முதல் 100 பேர் கொண்ட ஒரு குழுவையே வைத்திருந்தார். இவர் 52 வயதிலேயே விருப்ப ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பிறகு இந்தியாவில் சீர்திருத்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். இவர் சைவ உணவு உண்பவராக மாறினார். 1881ஆம் ஆண்டில் மணிப்பூரில் பறவையியல் பயணத்திற்குப் பிறகு மது அருந்துவதையும் கைவிட்டார். […] காடுகளுக்குள் செல்லும் போது துப்பாக்கியை எடுத்துச் சென்றார். இவர் மனைவி மேரி ஆன் கிரிண்டால் இவருக்கு பெரும் உதவியாக இருந்தார். இவர் 1881ஆம் ஆண்டில் நோங்கின் பறவையைக் கண்டுபிடித்தார். ஒரு கூண்டில் இரண்டு பறவைகளைக் கொண்டு வந்தார். துரதிர்ஷ்டவசமாக அந்த இரண்டு பறவைகளும் ஆண்களாகும். உயிருள்ள பறவைகளை விரைவில் பழக்கினர். முகாமில் தங்கி இருந்த போது கூடாரம் தீப்பிடித்து அப்பறவைகள் இறந்தன. தனது வாழ்நாளில் சுமார் 10000 பறவைகளை சுட்டுக் கொன்றுள்ளார். இது உணவுக்காக அல்ல. இது அறிவியல் ஆய்வுக்காக மட்டுமே என்று அவர் கூறினார். இவர் மனைவி 1890ஆம் ஆண்டில் இறந்தார். இவர் 1894ஆம் ஆண்டு இங்கிலாந்து திரும்பினார். 1912ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தனது 83ஆவது வயதில் இலண்டனில் இறந்தார். நோங்கின் பறவைக்கு இவரது மனைவியின் பெயரால் திருமதி ஹியூமின் பெசன்ட் எனப் பெயர் சூட்டிக் கௌரவம் செய்துள்ளார். பறவை ஹூயும் 1881ஆம் ஆண்டில் மணிப்பூர் பயணத்தின் போது இப்பறவையை அறிவியல் பூர்வமாக பதிவு செய்தார். மணிப்பூர் நோங்கின் என்பதற்கு மழையின் பாதையைப் பின்பற்றுபவர் என்பது பொருள். நோங் என்றால் மழை மற்றும் இன் என்றால் பின்பற்றுவது என்பதைக் குறிக்கிறது. ஒரு காதல் ஜோடி பசியாலும், தாகத்தாலும் இறந்தனர். அவர்களின் ஆன்மாக்கள் ஒரு ஜோடி நோங்கின் பறவையாக மாறியது என ஒரு புராணக் கதை கூறுகிறது. மழை வருவதை இப்பறவைகள் அறிந்திருப்பதாக நம்பப்பட்டது. மணிப்பூரின் அரசர்கள் பறவையின் அழகிய இறகுகளை போர் அல்லது வேட்டையாடும் வீரர்களுக்கு விருதுகளாக வழங்கினர். இது ஒரு பெரிய வனப் பறவை, இது நமது கோழி அளவு இருக்கும். இவை பெரும்பாலும் தரையில் வாழ்கின்றன. இதனால் அதிக தூரம் பறக்க முடியாது. ஆண் பறவைகள் மிகவும் வண்ணமயமானவை. பெண் பறவைகள் மங்கலான நிறத்தில் உள்ளன. மேகாலயா மேகாலயாவின் மாநிலப் பறவை ஹில் மைனா (Hill Myna) ஆகும். முன்னர் இது மலை மைனா என அழைக்கப்பட்டது. ஆனால் பொதுவாக மைனா என்றே அழைக்கப்படுகிறது. பறவை வளர்ப்போர் பொதுவாக இந்த மைனா இனத்தையே வளர்க்கின்றனர். இதன் அறிவியல் பெயர் கிராகுலா ரிலிஜியோசா (Gracula religiosa) என்பதாகும். வாழிடம் […] பொதுவாக மலை மைனாக்கள் மலைகள், கடற்கரைகள் மற்றும் காடுகள் போன்ற இடங்களில் வாழ்கின்றன. தெற்காசியாவையும், தென் கிழக்காசியாவின் மலைப் பகுதிகளையும் பூர்வீகமாகக் கொண்டது. இந்தியா, இலங்கை தெற்கு சீனா, இந்தோ சீனா, தாய்லாந்து, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டுள்ளது. இந்தியாவில் கிழக்கு மற்றும் வட கிழக்கு இந்தியாவிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் காணப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 6560 அடி உயரத்திலும் காணப்படுகிறது. ஈரமான இலையுதிர் காடுகள், மழைக்காடுகள், தேயிலைத் தோட்டங்கள், காபித் தோட்டங்கள் போன்ற பகுதிகளிலும் இவை வாழ்கின்றன. உடலமைப்பு இது சிட்டுக் குருவியை விட மூன்று மடங்கு பெரியது. இதன் நீள வரம்பு 27 முதல் 30 செ.மீ. ஆகும். இதன் எடை 141 முதல் 270 கிராம் வரை உள்ளது. மலை மைனாக்கள் பளபளப்பான இறகுகள் மற்றும் தோலைக் கொண்டுள்ளன. பறக்கும் போது மட்டும் இவைத் தெளிவாகத் தெரியும். இதன் தலை கிரீடங்கள் பச்சை நிறத்தில் உள்ளன. அவற்றின் தலை, முதுகு மற்றும் மார்பகங்கள் ஊதா நிறத்தில் ஒளிரும். இவை மிகவும் அழகான பறவைகள். இந்தப் பறவை இனத்தின் பளபளப்பான கருப்பு இறகுகள் அவற்றை மிகவும் கவர்ச்சிகரமானதாக ஆக்குகின்றன. மலை மைனா இனத்தில் ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியாகத் தெரிகின்றன. ஆனால் குரலில் மட்டும் வேறுபாடு இருக்கும். இடுப்பு எலும்புகளுக்கு இடையே உள்ள தூரத்தை அளப்பதன் மூலம் இரு பாலினத்தையும் வேறுபடுத்தி அறியலாம். ஆண்களின் இடுப்பு எலும்புகளுக்கு இடையே உள்ள தூரம் பெண்களை விட அதிகம் ஆகும். இந்த மைனாக்கள் தங்கள் இனங்களுடன் தொடர்பு கொள்ள விசில் செய்கின்றன. இந்த விசில்கள் பலத்த குரல் கொண்டவை. இதில் பல்வேறு உயர் குறிப்புகளைக் கொண்டுள்ளன. பிரதேசம், வேட்டையாடுபவர்கள் மற்றும் இரையைப் பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொள்ள இந்த விசில்களைப் பயன்படுத்துகின்றன. உணவு இது அனைத்துண்ணி பழங்கள், பெர்ரி, விதைகள், பூக்கள், பூச்சிகள் மற்றும் பல்லிகள் ஆகியவற்றை உண்ணுகின்றன. இனப்பெருக்கம் இதன் இனப்பெருக்க காலம் மார்ச் முதல் அக்டோபர் மாதம் வரை ஆகும். வாழ்க்கைக்கு ஒரு தார துணையைக் கொண்டுள்ளன. ஒரு ஜோடியின் ஆணும், பெண்ணும் சேர்ந்து கூடு கட்டுகின்றன. மரங்களில் காணப்படும் குழியை தேர்வு செய்து அதில் புல் இலைகள், இறகுகள் ஆகியவற்றைக் கொண்டு குழியை நிரப்பி கூடு அமைக்கின்றன. கூட்டில் 2 முதல் 4 முட்டைகளை பெண் இடுகிறது. அடைகாக்கும் காலம் 14 முதல் 18 நாட்கள் வரை நீடிக்கும். அடைகாத்தலில் ஆண் மற்றும் பெண் இரண்டும் ஈடுபடுகின்றன. இதன் ஆயுட்காலம் 25 ஆண்டுகள் ஆகும். நடத்தை மலை மைனாக்கள் இனப்பெருக்கம் செய்யாத பருவத்தில் பெரிய குழுக்களாக தங்கள் இனத்தைச் சேர்ந்த பறவைகளுடன் வாழ்கின்றன. ஆனால் இனப்பெருக்க காலத்தில் தாங்கள் துணையுடன் ஜோடியாக வாழ்கின்றன. இது கூடுகட்டும் வரை யாரையும் தாக்காது. இதற்கு இடையூறு ஏற்பட்டால் கடுமையாகத்தாக்கும். கால்கள் மற்றும் அலகு மூலம் கடுமையான வெட்டுக் காயத்தை ஏற்படுத்தும். […] இது வாழும் இடம் மற்றும் கூடு கட்டும் தளங்களை மிகவும் கவனமாக பாதுகாக்கின்றன. இதற்காக வேறு பறவை இனங்களுடன் சண்டை இடுகின்றன. மிகவும் ஆக்ரோஷமாக மாறித் தாக்குகின்றன. சொந்த இனத்தைச் சேர்ந்த பறவைகளுடன் கூட எல்லை பிரச்சனைக்காக சண்டை இடுகின்றன. பாதுகாப்பு இது செல்லப் பிராணியாக வீடுகளில் வளர்க்கப்படுகிறது. மனிதர்களின் பேச்சை சித்தரிக்கும் திறமை இதற்கு உண்டு. இப்பறவை அரிதானதாக இருப்பதால் குஞ்சு பொரித்தவுடன் நேரடியாக வீடுகளில் கொள் முதல் செய்யப்பட்டு வர்த்தகம் நடக்கிறது. 1990ஆம் ஆண்டில் மட்டும் 20000 பறவைகள் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இதை செம்பட்டியலில் பாதுகாக்க வேண்டிய இனம் என்ற பட்டியலில் வைத்துள்ளது. மிசோரம் மிசோரம் மாநிலப் பறவை மிஸஸ் ஹியூம்ஸ் பெசண்ட் (Mrs. Hume’s pheasant) ஆகும். இந்தியாவில் பிரிட்டிஷ் இயற்கை ஆர்வலர் மற்றும் பறவையியல் அறிஞராக விளங்கிய ஆலன் ஆக்டேவியன் ஹியூமின் மனைவியான மேரி ஆன் கிரிண்டால் ஹியூமின் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டது. இது அரிதான பறவை. மேலும் அதிகம் அறியப்படாத பறவையாகும். உள்ளூர் மக்கள் வாவு (Vavu) என்ற பெயரில் இதை அழைக்கின்றனர். இது ஹியூமின் நெடுவால் பகட்டு வண்ணக் கோழி என்றும், பட்டி வால் வண்ணக்கோழி (Bar tailed pheasant) என்றும் அழைக்கப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் சிர்மாடிகஸ் ஹூமியா (Syrmaticus humiae) என்பதாகும். வாழிடம் […] இது இந்தியா, சீனா, தாய்லாந்து, மியான்மர், பர்மா ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. இந்தியாவில் மணிப்பூர், மிசோரம், நாகலாந்து மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் இவை வாழ்கின்றன. கடல் மட்டத்தில் இருந்து 1000 முதல் 2500 மீட்டர் உயரம் வரை உள்ள காடுகள் நிறைந்த மலைப்பகுதிகளை விரும்புகின்றன. செங்குத்தான பாறைகள் நிறைந்த மலைச் சரிவுகளிலும் காணப்படுகின்றன. புதர் மற்றும் புல்வெளிகள், வறண்ட பசுமையான இடங்கள், ஊசியிலைக் காடுகள், ஊசியிலை மரங்கள் கலந்த பரந்த இலைகள் கொண்ட காடுகளிலும் இவை வாழ்கின்றன. உடல் இது கோழி இனத்தைச் சேர்ந்தது. இது 90 செ.மீ. நீளம் வரை வளரக் கூடியது. ஆணிற்கு நீண்ட வால் உண்டு. பெண் 60 செ.மீ. நீளம் வரை வளரும். ஆணின் எடை 900 முதல் 1000 கிராம் வரையிலும், பெண்ணின் எடை 650 முதல் 850 கிராம் வரையிலும் இருக்கும். ஆண் சாம்பல் கலந்த பழுப்பு அல்லது ஊதா நிற தலை, சிவப்பு முகத் தோல், பழுப்பு நிற பளபளப்புடன் கூடிய இறகுகளுடன் உள்ளது. அலகு மஞ்சள் கலந்தது. பழுப்பு ஆரஞ்சு கருவிழியும், உலோக நீல கழுத்து இறகுகளுடன் அழகாகக் காட்சி தருகிறது. இறக்கைகள் வெண்கல ஊதா நிறத்தில் இருக்கும். மேல் இறக்கையில் மூன்று வெளிப்படையான வெள்ளை அல்லது அழுக்கு வெள்ளை பட்டைகள் உள்ளன. ஆணின் நீளமான வால் இறகுகள் வெள்ளி சாம்பல் அல்லது சாம்பல் கலந்த வெள்ளை மற்றும் பட்டைகளுடன் உள்ளது. பெண் பறவையை விட ஆண் பறவை மிகவும் அழகானது. பெண் பறவை பழுப்பு நிறமானது. தொண்டைப் பகுதி வெண்ணிறமுடையது. இதற்கும் சிகப்பு முகத் தோல் உள்ளது. வயிற்றுடன், வாலின் நுனிப் பகுதியானது வெண்ணிறமானது. உணவு பழங்கள், விதைகள், இலைகள், மொட்டுகள் மற்றும் வேர்களை உண்ணுகின்றன. அவை புழுக்கள், நத்தைகள் மற்றும் பூச்சிகளையும் உண்ணும். இனப்பெருக்கம் […] மரக்கிளைகளில் இலைகள் மற்றும் இறகுகளால் கூடு கட்டுகிறது. கூட்டில் மூன்று முதல் பன்னிரண்டு முட்டைகளை இடுகிறது. முட்டைகள் கிரீம் வெள்ளை நிறமானவை. பெண் பறவை மட்டுமே அடைகாக்கிறது. அடைகாக்கும் காலம் 26 முதல் 28 நாட்கள் வரை ஆகும். இப்பறவைகள் 10 முதல் 14 மாதங்களில் பாலியல் முதிர்ச்சி அடைகின்றன. பாதுகாப்பு இது இறைச்சிக்காக வேட்டையாடப்படுகிறது. காட்டுத் தீ மற்றும் பறவை பிடித்தல் இதற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. தொடர்ச்சியாக வாழிட இழப்பு, இனக் கூட்டத் தொடர்பு துண்டிப்பு போன்ற காரணங்களால் இதன் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்திய வன விலங்கு பாதுகாப்பு சட்டம் 1972 இன் படி ஹியூம்ஸ் நெடுவால் பகட்டு வண்ணக் கோழி அட்டவணை – 1 இல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இப்பறவையை செம்பட்டியலில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் பறவை எனப் பட்டியலில் இணைத்துள்ளது. இப்பறவையை பாதுகாக்க தேசியப் பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயங்களிலும் வளர்க்கப்படுகின்றன. நாகாலாந்து நாகாலாந்து (Nagaland) மாநிலம் 1963ஆம் ஆண்டு நவம்பர் 30 அன்று உதயமானது. நாகாலாந்து மாநிலப் பறவை பிளைத்தின் டிராகோபன் (Blyth’s Tragopan) ஆகும். இது சாம்பல் வயிற்று டிராகோபன் (Grey bellied Tragopan) எனவும் அழைக்கப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் டிரகோபன் பிளைதி (Tragopan blythii) என்பதாகும். பெயர் […] எட்வர்டு பிளைத் என்பவர் ஆங்கிலேய விலங்கியல் அறிஞர் ஆவார். இவர் கொல்கத்தாவில் இந்திய ஆசியச் சமூகத்தின் விலங்கியல் அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராகப் பணியாற்றினார். இங்கு பணிபுரிந்து கொண்டே பறவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். பறவைகள் சார்ந்து பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். இந்தியாவில் விலங்கியலை நிறுவியவர் என இவரைக் குறிப்பிடுகின்றனர். இவரது ஆய்வுகளில் பறவையியல் ஆய்வு மிக முக்கிய பங்களிப்பாகக் கருதப்படுகிறது. இவரை கௌரவிக்கும் விதமாக பாம்புகளுக்கும் மற்றும் பறவைகளுக்கும் இவரது பெயர் சூட்டப்பட்டது. அந்த வகையில் பிளைத்தின் டிராகோபன் என்னும் பெயர் இப்பறவைக்கு வைக்கப்பட்டது. மேலும் டிராகோபன் என்னும் பறவையின் இனப்பெயராக பிரைதி எனவும் சூட்டப்பட்டுள்ளது. வாழிடம் இவை இந்தியா, பூட்டான், வட மியான்மர், தென் கிழக்கு தீபெத் மற்றும் சீனாவில் காணப்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை வடகிழக்கு இந்தியாவில் மட்டுமே உள்ளது. குறிப்பாக அசாம், அருணாச்சலம் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் வாழ்கின்றன. இவை மரங்கள் நிறைந்தப் பகுதிகள், பசுமையான காடுகளின் அடிமரப்பகுதிகள் மற்றும் இருண்ட அமைதியான இடங்களை விரும்புகின்றன. மேலும் அடர்ந்த மரங்கள் நிறைந்தப் பள்ளத்தாக்குகள் மற்றும் மலைப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. உடலமைப்பு இது டிராகோபன் பறவை இனத்தில் பெரிய பறவையாகும். ஆண் 65 முதல் 70 செ.மீ. நீளமும், பெண் 55 முதல் 60 செ.மீ. நீளம் வரையிலும் வளரும். ஆணின் எடை 1.75 முதல் 2.20 கிலோ வரையிலும், பெண்ணின் எடை 1 முதல் 1.50 கிலோ வரையிலும் இருக்கும். ஆண் பறவை மிகவும் அழகாக பிரகாசமான நிறத்தில் இருக்கும். துருப்பிடித்த சிவப்பு மற்றும் கருப்பு நிறத் தலையும் மார்பகம் புகை சாம்பல் நிறத்தையும் கொண்டிருக்கும். முகம் மஞ்சள் தோலால் ஆனது. இதன் முதுகுப் பகுதி ஓசெல்லி (Ocelli) எனப்படும் சிறிய வெள்ளைப் புள்ளிகளுடன் காணப்படும். ஒரு கருப்பு பட்டை அலகின் அடிப்பகுதியில் இருந்து கிரீடம் வரை நீண்டுள்ளது. மேலும் மற்றொரு கருப்பு பட்டை கண்களுக்குப் பின்னால் நீண்டுள்ளது. மேலும் ஆண் பறவைகளுக்கு இரண்டு வெளிர் நீல நிறக் கொம்புகள் உள்ளன. இவை பழுப்பு நிறக் கருவிழி மற்றும் இளஞ்சிவப்பு பழுப்பு நிறக் கால்களைக் கொண்டுள்ளன. அலகு குட்டையாகவும், வலிமையாகவும், கடிமனாகவும், சாம்பல் நிறத்திலும் இருக்கும். வால் மஞ்சள் கலந்த அடர் பழுப்பு நிறமும், அதில் கருப்பு அடையாளங்களும் இருக்கும். பெண் பறவை, ஆண் பறவையைப் போல பிரகாசமான நிறத்தில் இருப்பதில்லை. இது அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும். இதன் முதுகுபுறத்தின் பின்புறம் ஓசெல்லி புள்ளிகள் கருப்பு நிறத்தில் உள்ளன. முதுகு இறகுகளில் வெள்ளை நிறக் கோடுகள் கிடையாது. பெண் பறவைகளுக்கு ஆண்களை ஈர்க்கும் ஆடம்பரமான தோற்றம் தேவையில்லை. அவற்றின் மங்கலான தோற்றம் மற்ற விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க உதவுகிறது. இது ஒரு உருமறைப்பு ஆகும். இது தங்களது குஞ்சுளைப் பாதுகாக்க பெண் பறவைக்கு இயற்கை வழங்கிய ஒரு தற்காப்பு எனலாம். உணவு முறை […] இவை பழங்கள், பெர்ரி, விதைகள், மொட்டுகள், புதிய இலைகள், பெரணிகள் மற்றும் சதைப் பற்றுள்ள தாவர தளிர்களையும் உண்ணும். இவை எறும்புகள், பூச்சிகள், நத்தைகள், புழுக்கள், வண்டுகள், சிறிய தவளைகள் மற்றும் கூழாங் கற்களையும் உண்ணும் பழக்கத்தையும் கொண்டுள்ளன. இனப்பெருக்கம் இவை தனியாகவோ, ஜோடியாகவே மரத்தில் தங்கும். இவைகளுக்கு தொந்தரவு ஏற்பட்டால் வேகமாக தாவரங்களுக்கு இடையில் மறைந்து விடும். 2 முதல் 5 முட்டைகளை இடும். அடைகாக்கும் காலம் 28 முதல் 30 நாட்கள் ஆகும். அடைகாக்கும் பெண்ணிற்கு ஆண் பறவை உணவு கொண்டு வந்து கொடுக்கும். சில சமயங்களில் பெண் பறவை உணவு தேடி கூட்டை விட்டு வெளியேறும் போது, ஆண் பறவை அடைகாக்கும் பணியில் ஈடுபடுகின்றன. பாதுகாப்பு இவை வேகமாக அழிந்து வருகின்றன. அதிகளவில் வேட்டையாடப்படுகின்றன. மேலும் காடழிப்பு இவை அழிய ஒரு முக்கியக் காரணமாகும். வன விலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி இது அட்டவணை – I இல் இடம் பெற்றுள்ளது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் சிவப்புப் பட்டியலில் இடம் பெற்றும். இது அச்சுறுத்தலுக்கு உள்ளாகக் கூடிய பறவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா ஒடிசா (Odisha) மாநிலப் பறவை இந்தியன் ரோலர் ஆகும். இது திஹா என அழைக்கப்படுகிறது. இந்தி மொழியில் இது நீல்காந்த் (Nilkanth) என்று அழைக்கப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் கோராசியஸ் பெங்காலென்சிஸ் (Coracias benghalensis) என்பதாகும். வாழும் பகுதி இது இந்தியா முழுவதும் காணப்படுகிறது. இது காடுகள் புற நகர்ப் பகுதிகள், திறந்த நிலம், பயிரிடப்பட்ட வயல்வெளிகள், நெல் வயல்கள், உள்ளூர் பூங்காக்கள் ஆகிய இடங்களில் இதனை எளிதில் காணலாம். இது மின்சார கம்பிகள் மீது தனியாக அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். இது எளிதில் பார்க்கக் கூடிய பறவை. மலைப் பிரதேசங்களில் காண்பது அரிது. பறவை […] இதற்கு பெரிய தலை உண்டு. கழுத்து சிறுத்து, குறுகியதாக இருக்கும். கண் மற்றும் அலகு கருப்பு நிறமானது. கழுத்து மற்றும் தொண்டை பகுதி வெண்மையான கோடுகளுடன், ஊதா இளம் சிவப்பு போல் இருக்கும். அலகு வலுவானது. கண்ணைச் சுற்றியுள்ள வெற்றுப் பகுதி காவி நிறத்தில் இருக்கும். இதன் மார்பு பழுப்பு நிறமானது. பறவை பிரகாசமான ஊதா நீலத்தால் ஆனது. ஆனால் வால் வான நீலம் மற்றும் மைய இறகுகள் மந்தமான பச்சை நிறத்தில் இருக்கும். இந்த பறவை பறக்கும் போது தான் இதன் வர்ணத்தைக் கண்டு மகிழலாம். இனப்பெருக்கம் இந்தப் பறவை 11 முதல் 15 மாதங்களில் பாலியல் முதிர்ச்சி அடைந்துவிடும். கூடு கட்டுதல் மற்றும் இனப்பெருக்க காலம் பிப்ரவரி முதல் மே மாதம் வரை இருக்கும். இனப்பெருக்கக் காலத்தில் ஒரு பெண் பறவை மரத்தின் மேல் அமர்ந்திருக்கும். அப்போது பல ஆண் பறவைகள் அங்கு கூடும். பெண் பறவை பறக்கத் தொடங்கும். அது தரையிறங்கும் வரை அக்குழுவில் உள்ள ஆண் பறவைகள் பெண் பறவையைப் பின்தொடர்ந்து பறக்கும். ஆண் பறவை தனது தலையை மேலும் கீழும், ஆட்டி தனது ஆர்வத்தை வெளிப்படுத்தும். பிறகு பெண் ஒரு ஆண் பறவையை தனக்கு துணையாகத் தேர்வு செய்யும். பிறகு அக்குழுவில் உள்ள ஆண் பறவைகள் வெளியேறும். ஆண் பறவை, பெண் பறவைக்கு உணவு தேடிக் கொடுப்பதன் மூலம் தங்களது உறவைப் பலப்படுத்துகிறது. இந்த முறையில் பெண் தனது எதிர்கால குடும்பத்திற்கு உணவைப் பெறுவதற்கான ஆணின் திறனைச் சோதிக்கிறது. மரத்தில் உள்ள பொந்தில் கூடு கட்டும். ஆண் பறவை கூடு கட்ட மரக் குச்சிகள், புல் மற்றும் பல பொருட்களை கொண்டு வரும். இக்கூடு அமைத்தப் பிறகு பெண் பறவை இந்த கூட்டை கவனமாக பரிசோதனை செய்யும். பெண் பறவை 3 முதல் 6 முட்டைகளை இடும். நீலம், பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் பழுப்பு மற்றும் சாம்பல் நிற புள்ளிகளுடன் முட்டை காணப்படும். முட்டையின் அடைகாக்கும் காலம் என்பது 16 முதல் 21 நாட்களாகும். அடைகாக்கும் கடமையை பெண்ணுடன், ஆணும் பகிர்ந்து கொள்கிறது. […] இந்தக் காலத்தில் பெண் பறவைக்கு ஆண் உணவு கொண்டு வந்து கொடுக்கிறது. குஞ்சு பொரித்தவுடன் குஞ்சுகளுக்கும் உணவு கொண்டு வந்து கொடுக்கிறது. இரண்டு மாதங்கள் வரை குஞ்சுகள் பெற்றோருடன் தங்கி இருக்கும். பின்னர் கூட்டை விட்டு வெளியேறும். இதன் ஆயுட்காலம் 18 ஆண்டுகள் ஆகும். விவசாயிகளின் நண்பன் ஒடிசாவில் நுகாய், ராஜா மற்றும் மகர சங்கராந்தி போன்ற பண்டிகைகள் விவசாயத்துடன் தொடர்புடையவை. இந்தப் பண்டிகையின் போது பயிர்கள் நல்ல விளைச்சலுக்காக பல்வேறு தெய்வங்களுக்குப் பிரசாதம் வழங்கப்படுகிறது. தசரா பண்டிகையின் போது இப்பறவையை பார்க்கும் பாக்கியம் பெறுவது ஒரு பாரம்பரியமாகும். தசரா அன்று பனங்காடையைப் பார்ப்பது தீமையை வெல்லும் நாள். இது ஒருவரின் விதியை மாற்றி, செழிப்பைக் கொண்டு வரும் என்று விவசாயிகள் நம்புகின்றன. இது பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகள், வெட்டுக் கிளிகள், மண்புழுக்கள், மரவட்டைகள், நத்தைகள், சிலந்திகள் மற்றும் அந்துப் பூச்சிகள் போன்றவற்றை உணவாகக் கொண்டு பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது. இப்பறவை பூச்சிகள் மற்றும் அவற்றின் லார்வாக்களை உணவிற்காக நம்பியுள்ளது. இதனால் இந்தப் பறவை பூச்சிகளின் வளர்ச்சியைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இதனால் பயிர்கள் சேதமடைவதை தடுக்க உதவுகிறது. எனவே விவசாயிகள் இப்பறவையை நண்பர்களாக வரவேற்கின்றனர். பஞ்சாப் பஞ்சாப் மாநிலப் பறவையின் பெயர் வடக்கு கோஷாக் (Northern goshawk) என்பதாகும். கோஷாக் என்ற பெயர் பழைய ஆங்கில வார்த்தையான கூஸ் ஹாக் என்பதிலிருந்து வந்தது. இது ஒரு வேட்டையாடும் பறவையாகும். இது பறவைகள், பாலூட்டிகளை வேட்டையாடி கொன்று திண்ணும். இது வடக்கு வாத்துப்பாறு மற்றும் பெரிய வல்லூறு எனவும் அழைக்கப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் அசிபிட்டர் ஜென்டிலிஸ் (Accipiter gentilis) என்பதாகும். லின்னேயஸ் என்பவரால் 1758ஆம் ஆண்டில் பெயரிடப்பட்டது. […] வாழிடம் வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் வட ஆசியாவில் இவைக் காணப்படுகின்றன. குறிப்பாக மேற்கு கனடா, தெற்கே டென்னசி, அமெரிக்காவின் தெற்கு அரிசோனா, மேற்கு மெக்ஸிகோ, வடக்கு இந்தோசீனா, மத்திய ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் இமயமலையில் உள்ள ஜலிஸ்கோ ஆகிய இடங்களிலும் இவை காணப்படுகின்றன. இவைக் கடல் மட்டத்தில் இருந்து உயரமான பகுதிகளிலும் காணப்படுகின்றன. குளிர்காலத்தில் குறைந்த உயரமுடைய வெப்பமான காடுகளுக்குச் செல்கின்றன. இவை மரங்கள் நிறைந்த பகுதிகள், திறந்தவெளி காடுகள், இலையுதிர், ஊசியிலை மற்றும் கலப்புக் காடுகளை விரும்புகின்றன. இந்த பறவையை எளிதில் காண முடியாது. இவை ஒரு இரகசிய பறவை. பொதுவாக பெரிய காடுகளில் வாழ்கின்றன. அவற்றைக் கண்டுபிடிப்பது கடினம். அவை தங்கள் கூடுகளுக்கு அருகில் குரல் கொடுக்கும். பொதுவாக மக்கள் வசிக்கும் பகுதிகளில் காணமுடியாது. ஒரு அடர்ந்த காட்டில் அமைதியாக, பொறுமையாக நேரத்தைச் செலவிட்டால் இதைக் காணலாம். உடலமைப்பு ஆண் பறவையை விட பெண் பறவை பெரியவை. பெண்கள் 25 சதவீதம் ஆண்களை விட கனமானவர்கள், ஆண் பறவையின் அளவு 45 முதல் 60 செ.மீ. நீளமும், பெண் பறவை 55 முதல் 70 செ.மீ. நீளமும் வளரும். வயது வந்த ஆணின் எடை 550 கிராம் முதல் 1150 கிராம் வரையிலும், பெண்ணின் எடை 600 கிராம் முதல் 1400 கிராம் வரையிலும் இருக்கும். ஆண்களின் இறக்கைகள் 85 முதல் 105 செ.மீ. வரையிலும், பெண்களின் இறக்கைகள் 100 முதல் 125 செ.மீ. வரையிலும் இருக்கும். வால் நீளம் 18 செ.மீ. முதல் 28 செ.மீ. வரை இருக்கும். […] இது அகன்ற இறக்கைகள் மற்றும் நீண்ட சுக்கான் போன்ற வால் கொண்ட பருந்து வகையாகும். இது வானில் சுறுசுறுப்பாக பறக்க உதவுகிறது. வயது வந்த பறவையின் இறகுகள் சாம்பல் பழுப்பு நிறத்திலும், தலையில் கருப்பு அல்லது அடர் பழுப்பு நிற தொப்பி இருக்கும். இதன் முதுகு இறக்கைகளின் மேற்பகுதி மற்றும் தலைகள் பொதுவாக கரும்பழுப்பு நிறத்தில் இருந்து கருப்பு நிறமாக இருக்கும். இவை வலுவான இறக்கைகளை கொண்டுள்ளன. வால் வெளிர் சாம்பல் அல்லது பழுப்பு நிறத்தில் சில இருண்ட பட்டைகளுடன் இருக்கும். கண் சிவப்பு நிறம் முதல் சிவப்பு ஆரஞ்சு அல்லது மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்திலும் இருக்கும். குஞ்சுகளின் கண் நிறம் பிரகாசமான மஞ்சளாகும். கண்களுக்கு மேலே வெள்ளை அல்லது வெளிர் சாம்பல் நிற இறகுகளைக் கொண்டுள்ளன. கால்கள் குட்டையாகவும், வலுவாகவும் மஞ்சள் நிறத்திலும் உள்ளன. நகங்கள் நீளமாகவும், சற்று வளைந்தும், வலுவாகவும், கூர்மையாகவும் இருக்கும். அலகுக் குறுகியது. கூர்மையானது, தடிமனானது மற்றும் அடர் சாம்பல் அல்லது கருப்பு நிறத்தில் உள்ளது. வாய் அடர் சாம்பல் அல்லது வெளிர் பழுப்பு நிறத்தில் மஞ்சள் திட்டுகளுடன் இருக்கும். உணவு இது ஒரு மாமிச உண்ணி பறவை. மேலும் திறமையான வேட்டைக்காரன் என அறியப்படுகிறது. பறவைகள், சிறிய பாலூட்டிகள், முதுகெலும்பில்லாத விலங்குகள் மற்றும் ஊர் வனங்களையும் வேட்டையாடி உண்ணுகின்றன. பொதுவாக பதுங்கியிருந்து வேகமாக தாக்கும் குணம் கொண்டவை. காடுகளின் விளிம்புகள், வெட்ட வெளிகளில் பறந்து செல்கின்றன. இரையைக் கண்டவுடன் வேகமாக அதை தாக்குகிறது. மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இரையை நோக்கி செல்லும் திறன் கொண்டது. கால்களைக் கொண்டு இரையை நசுக்கும். இனப் பெருக்கம் மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் கூடு கட்டுதல் மற்றும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. கூடு கட்டும் போது குரல் கொடுக்கின்றன. இரண்டு பாலினங்களும் மாறுபட்ட ஒலியை உருவாக்குகின்றன. பொதுவாக பெண்களின் ஒலிகள் ஆழமாகவும், சத்தமாகவும் இருக்கும். அவை கி.கி.கி.கி., கக்-கக்-கக் போன்ற பல்வேறு ஒலிகளைக் கொண்டுள்ளன. பெண் கோஷாக்கள் வான நடனங்கள் செய்து கூப்பிடுவதன் மூலம் ஆண்களை ஈர்க்கும். கூடுகளை இறந்த கிளைகளில் கட்டும். பச்சை இலைகள் அல்லது ஊசி இலைகள் மற்றும் பட்டை துண்டுகளைக் கொண்டு அமைக்கும். ஊசி இலைகளில் உள்ள நறுமண இரசாயனங்கள் இயற்கையான பூச்சிக் கொல்லியாகவும், பூஞ்சைக் கொல்லியாகவும் செயல்படுகிறது. பெண்கள் 2 முதல் 4 முட்டைகளை இருகின்றன. அடைகாக்கும் காலம் 30 முதல் 38 நாட்கள். இவற்றின் சராசரி ஆயுட்காலம் 10 முதல் 12 ஆண்டுகள் ஆகும். ராஜஸ்தான் ராஜஸ்தானின் மாநிலப் பறவை கிரேட் இந்தியன் பஸ்டர்ட் (Great Indian Bustard) ஆகும். ராஜஸ்தானில் உள்ளூர் மக்களால் கோடவன் என அழைக்கப்படுகிறது. இது கானமயில் என்னும் பறவையாகும். நாம் கேள்விப்பட்ட பறவை தான். ஆனால் நேரில் தான் பார்த்தது கிடையாது. 12ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்தில் ஔவையார் கானமயில் பற்றி பாடியுள்ளார். இது தமிழ் நாட்டில் வசித்து வந்தப் பறவை. 1930ஆம் ஆண்டு வரை வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு இந்தப் பறவையை கண்டதாகப் பதிவுகள் இல்லை என்ற அளவிற்கு அழிந்து விட்டது. இதன் அறிவியல் பெயர் ஆர்டியோடிஸ் நிக்ரிசெப்ஸ் (Ardeotis nigriceps) என்பதாகும். வாழிடம் […] இது ஓரிட வாழ்வி ஆகும். இந்தியாவை மட்டுமே தாயகமாகக் கொண்ட பறவை. ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டுமே அதிகம் வாழ்கிறது. இந்தியாவில் சுமார் 80 சதவீதம் பறவைகள் ராஜஸ்தானில் உள்ளன. ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகம், மத்தியப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் இவை வாழ்கின்றன. தார் பாலைவனம் மற்றும் குஜராத்தின் கட்ச் பகுதிகளில் மட்டுமே இவை அதிகம் வாழும் பகுதியாகும். இவை பெரும்பாலும் வறண்ட மற்றும் அரை வறண்ட புல்வெளிகளில் காணப்படுகின்றன. உலர்ந்த புல்வெளி மற்றும் வறண்ட புதர்க்காடுகளை வாழிடமாகக் கொண்ட பறவையாகும். பொதுவாக தனித்தனியாகவோ அல்லது 2 அல்லது 3 அல்லது சில நேரங்களில் சேர்ந்தோ அதிகமாக காணப்படுகின்றன. உடலமைப்பு கானமயில் நீண்ட வெள்ளைக் கழுத்தைக் கொண்டது. இதன் உடல் பழுப்பு நிறத்தால் ஆனது. சாம்பல் நிறத் தலையுடன் நெற்றியில் ஒரு கருப்புக் கிரீடம் உள்ளது. உயரமான நீண்ட கால்களைக் கொண்ட பறவை. இது கனமான பறவையாகும். ஆண் 90 செ.மீ. முதல் 120 செ.மீ. வரை நீளமுடையது. பெண் பறவை 70 செ.மீ. முதல் 90 செ.மீ. வரை நீளமுடையது. உடல் எடை என்பது 6 கிலோ முதல் 18 கிலோ வரை இருக்கும். உலகின் எடை மிகுந்த பறக்கும் பறவைகளில் இதுவும் ஒன்றாகும். ஆபத்து சமயத்தில் அதிக வேகமாக ஓடி புதிர் மறைவின் கீழ் ஒளிந்து கொள்ளும். உணவு இவை விதைகள், தளிர்கள், இலைகள், மூலிகைகள், காட்டுப் பழங்கள், எண்ணெய் வித்துக்கள், பயிரிடப்பட்ட தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் காய்களை உண்ணுகின்றன. மேலும் பூச்சிகள், எலிகள், பல்லிகள், தவளைகள் போன்றவற்றையும் உண்கின்றன. நடத்தை […] பொதுவாக மிகவும் கூச்ச சுபாவமும், எச்சரிக்கையும் உடைய பறவை. இது பல கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து செல்லும். இவை நிழலில் அமர்ந்து ஓய்வெடுக்கின்றன. ஆண்கள் அடிக்கடி ஆழமான அதிர்வலைகளை எழுப்பும். இந்த ஒலி கிட்டதட்ட 500 மீட்டர் வரை கேட்கும். மற்றொரு அழைப்பு ஒலி எச்சரிக்கையாக இருக்கும் போது செய்யக் கூடியது ஆகும். இது புல்வெளி மற்றும் பயிர்களுக்குள் நுழைந்து மறைந்து விடும். இதன் நிறம் மற்றவர்களின் பார்வையில் இருந்து இதை முற்றிலும் மறைக்கிறது. இனப் பெருக்கம் இது ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்யும் பறவையாகும். ஆனால் மார்ச் முதல் செப்டம்பர் மாதம் வரை இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இது பொதுவாக ஒரு முட்டை மட்டுமே இடும். தரையில் மட்டுமே முட்டை இடும். முட்டையின் நிறம் வெளிர் ஆலிவ், பழுப்பு மற்றும் அடர் பழுப்பு நிறத்தில் மங்கலாக இருக்கும். பெண் மட்டுமே அடைகாத்து குஞ்சு பொரித்து உணவு அளிக்கிறது. இப்பறவை பலதார மணம் கொண்டவை. இதன் ஆயுட்காலம் 12-15 ஆண்டுகள் ஆகும். ஆபத்து இப்பறவை வாழிவிடச் சீரழிவால் அழிவின் விளிம்பில் மிக அதிக அபாயத்தில் (Critically Endangered) உள்ள பறவையாகும். இந்தியாவின் பெரும்பாலான பகுதியில் வாழ்ந்த இப்பறவை தற்போது தென்னிந்தியாவில் முற்றிலும் அழிந்து போய்விட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 1500 முதல் 2000 பறவைகள் இருந்தன. ஆனால் தற்போது 150 பறவைகள் மட்டுமே இருப்பதாகக் கூறுகின்றனர். வாழிட அழிப்பு, வேட்டையாடுதல், இதன் முட்டைகளை தெரு நாய்கள் உண்பதால் இந்த இனம் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பூச்சிக் கொல்லிதாக்கம், மின் கம்பியில் மோதுதல், மின்சாரம் தாக்குதல் மூலம் அழிகின்றன. ஆண்டிற்கு சுமார் 18 கானமயில்கள் மின்சாரக் கம்பியில் மோதி பலியாவதாக இந்தியக் காட்டுயிர் நிறுவனம் குறிப்பிடுகிறது. இந்த இனம் மிக வேகமாக அழிந்து வருகிறது. இது பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த போதிலும் இதன் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இது முறையாகப் பாதுகாக்கப்படவில்லை என்றால் இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு கானமயில் நம் கண் முன்னே முற்றிலும் அழிந்து போகும் நிலை உருவாகும். இது நமக்கு பெரிய தலைகுனிவு எனலாம். சிக்கிம் சிக்கிம் மாநிலப் பறவையின் பெயர் இரத்த பெசன்ட் (Blood Pheasant) ஆகும். உள்ளூரில் சில்மே (Chilme) மற்றும் செமோ (Semo) என அழைக்கின்றனர். இதன் அறிவியல் பெயர் இத்தாகினிஸ் க்ரூண்டஸ் (Ithaginis cruentus) என்பதாகும். இது ஒரு கோழி இனத்தைச் சேர்ந்தது. இந்த பறவையில் 12 கிளை இனங்கள் உள்ளன. வாழிடம் இந்தியா, நேபாளம், பூட்டான், திபெத், வடக்கு பர்மா மற்றும் இமயமலையில் காணப்படுகின்றன. மேலும் சீனாவின் தென் மத்திய பகுதி மியான்மரின் வடக்குப் பகுதிகளில் உள்ள காடுகளில் இந்த இரத்த பெசன்ட்கள் காணப்படுகின்றன. இந்தப் பறவைகள் கலப்புக்காடுகள் மற்றும் ஊசியிலைக் காடுகள் போன்ற வனப்பகுதிகள், பனிக் கட்டிகளுக்கு அருகில் உள்ள பகுதிகள் போன்ற புதர்காடுகளிலும் வாழ்கின்றன. இந்தப் பறவை கோடை காலத்தில் அதிக உயரமான பகுதியில் இருக்கும். குளிர் காலம் மற்றும் பனி அதிகரிக்கும் போது இந்தப் பறவைகள் உயரம் குறைந்தப் பகுதிக்கு இடம் பெயர்கின்றன. இந்தப் பறவைகள் குளிர்காலம் வரை குழுக்களாக அல்லது மந்தையாகக் காணப்படுகின்றன. இந்தப் பறவை இனங்களின் எண்ணிக்கை சரியாக கணக்கிடப்படவில்லை. அதாவது முறையாக பதிவு செய்யப்படவில்லை. உடலமைப்பு […] இது ஒரு சிறிய கோழியைப் போலவே இருக்கும். அவற்றின் வண்ணமயமான இறகுகளால் மிகவும் அழகாகக் காணப்படுகின்றன. ஆண் 40 முதல் 48 செ.மீ. நீளம் வரையிலும் வளரும். பெண் 38 செ.மீ. முதல் 42 செ.மீ. நீளம் வரையிலும் இருக்கும். வால் 13 செ.மீ. முதல் 19 செ.மீ. வரை இருக்கும். இவற்றின் எடை 400 கிராம் முதல் 700 கிராம் வரை இருக்கும். இதன் இறகுகள் சாம்பல் நிறத்தில் இருண்ட நிழலாகவும், வெண்மையான தண்டுகளைக் கொண்டதாகவும் உள்ளன. இறக்கையின் உறைகள் பச்சை நிறக் கோடுகள் மற்றும் கிட்டத்தட்ட ஒவ்வொரு இறகுகளிலும் பரந்த கொடுகள் அல்லது வெளிக்கோடுகளைக் கொண்டுள்ளன. அலகு குறுகிய, வலுவான குவிந்த வடிவமானது. இது அடர் சாம்பல் அல்லது கருப்பு நிறத்தில் உள்ளது. மேலும் அலகு மற்றும் கண்ணுக்கு இடையில் இறகுகள் கொண்டுள்ளன. கன்னம் இறகுகள் கருஞ்சிவப்பு நிறத்தில் உள்ளன. அதே சமயத்தில் தொப்பை, மார்பகம் மற்றும் பக்கவாட்டில் இறகுகள் சிவப்பு நிற விளிம்புகள் மற்றும் பச்சை நிற நுனிகளைக் கொண்டுள்ளன. இதன் மார்பகம் மற்றும் வயிற்று பகுதியயில் இரத்தக் கோடுகள் பரவி இருக்கின்றன. பறவையின் வால் 12 துணை இறகுகளைக் கொண்டிருக்கின்றன. அவை அளவுகளில் சமமாக இருக்கும். மேலும் இருண்ட அல்லது அடர்ந்த கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். கால்கள் குட்டையாகவும், வலுவானவையாகவும் இருக்கும். பாதங்கள் பிரகாசமான சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். ஆண்களின் தோற்றம் பெண்களை விட பெரியதாக இருக்கும். தொண்டை, கழுத்து, வால் சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தால் பெண்களிடம் இருந்து வேறுபடுத்தி அறியப்படுகிறது. பெண்கள் ஒரே சீரான நிறத்தில் உள்ளன. பெண்களின் உடல் நிறம் மந்தமான பழுப்பு நிறமாகவும், பெரும்பாலும் கழுத்தில் சாம்பல் நிறமாகவும் இருக்கும். உணவு இவை தரையில் அளவு குறைந்த புதர்கள் மற்றும் உயரம் குறைந்த மரக்கிளைகளில் இருந்து உணவு உண்ணுகின்றன. அவை தானியங்கள், புல் விதைகள், கீழே விழுந்த பெர்ரி, பழங்கள், தளிர்கள் மற்றும் கிழங்குகளை உண்ணுகின்றன. இவை பச்சை உணவுகளை பெரிதும் விரும்புகின்றன. காடுகளில் பெரும்பாலும் லைக்கன்களை சாப்பிடுகின்றன. எறும்புகள், கரையான்கள், பட்டாம்பூச்சிகள், வண்டுகள், நத்தைகள் மற்றும் பல்வேறு வகையான ஈக்களையும் உண்ணுகின்றன. நடத்தை […] இவை நன்றாக ஓடக்கூடியவை. தொந்தரவு ஏற்படும் போது பறப்பதை விட ஓடுவதையே விரும்புகின்றன. இவை நன்றாக பறக்கும் பறவைகள் அல்ல. இப்பறவைகள் வெட்கப்படக் கூடியவை. மனிதர்களை சந்தேகிக்கக் கூடியவை. இவை ஜிஜிஜி அல்லது க்ளீ-க்ளீ-கெவீ அல்லது சி-சி-சி எனக் குரல் எழும்புகின்றன. இனப்பெருக்கம் இனப்பெருக்க காலம் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலானது. பிர், வில்லோ மரங்கள், புதர்கள், பாறைகள், கீழே விழுந்த மரங்கள் அல்லது தரையில் உள்ள மரத் துளைகளில் கூடு அமைக்கின்றன. பச்சை இலைகள், ஊசியிலைகள், உலர்ந்த இலைகள், மெல்லிய மரவேர்கள் மற்றும் பாசிகள் ஆகியவற்றைக் கொண்டு கூடுகளைக் கட்டுகின்றன. பெண்கள் 5 முதல் 14 முட்டைகள் வரை இடுகின்றன. இளஞ்சிவப்பு அல்லது மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் அடர் பழுப்பு புள்ளிகளுடன் முட்டைகள் உள்ளன. அடைகாக்கும் காலம் 27 முதல் 30 நாட்கள் ஆகும். தமிழ்நாடு […] தமிழ்நாட்டின் மாநிலப் பறவை மரகதப்புறா (Emerald dove) ஆகும். இது பச்சைப் புறா எனவும், பச்சை இறகுப் புறா எனவும் அழைக்கப்படுகிறது. இது அரிய வகை புறா இனமாகும். தமிழ்நாட்டில் அழகிய மற்றும் அரிய வகைப் பறவை இனங்கள் அதிகம் இருந்த போதிலும் மரகதப் புறாவின் சிறப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்தப் புறாவை மாநிலப் பறவையாக அங்கீகரித்துள்ளது. இதன் அறிவியல் பெயர் சால்கோபாப்ஸ் இண்டிகா (Chalcophaps indica) என்பதாகும். வாழிடம் இந்தியாவில் வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டல பகுதியில் காணப்படுகின்றன. மியான்மர், தாய்லாந்து, மலேசியா, வியட்நாம், தெற்கு சீனா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றன. ஈரமான காடுகள், தோட்டங்கள், பூங்காக்கள், சதுப்பு நிலக்காடுகள் ஆகியவற்றில் விரும்பி வாழ்கின்றன. மேலும் மழைக்காடுகளிலும் வாழ்கின்றன. மழைக்காடுகளில் வாழக் கூடிய புறா இனமாக இது கருதப்படுகிறது. உடலமைப்பு மரகதப் புறா ஒரு அழகான பறவை. இது 23 செ.மீ. முதல் 28 செ.மீ. நீளம் வரை வளரும். இது 90 கிராம் முதல் 172 கிராம் எடை வரை இருக்கும். இது தடித்த உருவமுடையது. இது கண்களை வசப்படுத்தக்கூடிய நிறத்தில் காணப்படும். இதன் இறக்கைகள் பளிச்சென மரகதப் பச்சை நிறத்தில் இருக்கும். செந்நிற கழுத்துப் பட்டையுடன், அடர் சாம்பல் நிறத்தில் உடலையும் பெற்றிருக்கும். ஆண் புறாவின் தோள்களின் விளிம்பில் ஒரு வெள்ளைத் திட்டு மற்றும் சாம்பல் கிரீடம் உள்ளது. பறக்கும் போது இறகுகளும், வாலும் கருப்பு நிறத்தில் உள்ளன. மேலும் அகன்ற கருப்பு மற்றும் வெள்ளை பட்டைக்கள் பறக்கும் போது மட்டும் கீழ் முதுகில் தெரியும். கழுத்தின் முன் பகுதியும், மார்புக்கும் மேல் முதுகுக்கு இடைப்பட்ட பகுதி ஊதா பழுப்பு நிறத்தில் இருக்கும். கண்கள் அடர்பழுப்பு நிறம் கொண்டவை. பாதங்கள் பிரகாசமான சிவப்பு நிறமாகவும் இருககும். பெண்களின் தோளில் சாம்பல் நிற அடையாளத்துடன் பழுப்பு நிறத்துடன் இருக்கும். இளம் பறவைகள் பெண்களைப் போலவே இருக்கும். ஆனால் அவற்றின் உடலிலும், இறக்கைகளிலும் பழுப்பு நிறம் இருக்கும். பழக்கம் மரகதப் புறா இனத்தில் பல வகைகள் உள்ளன. இவற்றில் மூன்று இனங்கள் ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன. மரகதப் புறாக்கள் தனித்தோ, இரட்டையாகவோ அல்லது சிறு சிறுக் குழுக்களாகவோ காணப்படுகின்றன. இந்தப் புறாக்கள் மற்ற புறாக்களைக் காட்டிலும் பறக்கும் திறன் குறைவு. பறக்கும் போது வேகமாவும், நேராகவும் பறக்கும். இப்பறவை தான் விரும்புகின்ற காட்டுப் பகுதிகளில் மிக தாழ்வாகப் பறக்கிறது. எனினும் தொந்தரவு ஏற்படும் சமயத்தில் பறப்பதை விட நடப்பதையே விரும்புகின்றன. இனச் சேர்க்கை தவிர மற்ற நேரங்களில் இவை பெரும்பாலும் தரையிலேயே காணப்படுகின்றன. இவை கூச்ச சுபாவம் உடையவை. […] உணவு இவை பல்வேறு வகையான பழங்கள், தாவரங்கள் மற்றும் விதைகளை உண்ணுகின்றன. இவை கரையான்களையும் உண்ணுகின்றன. கரையான்கள் மற்றும் பழங்களைத் தேடி பெரும்பான்மையான நேரத்தைச் செலவிடும். குறைந்த நேரங்கள் மட்டும் மரக்கிளையில் காணப்படும். இவை பொதுவாக மரத்தின் கீழ் தரையில் உணவு தேடுகின்றன. இனப்பெருக்கம் இவற்றின் கூவல் மென்மையிலிருந்து சப்தம் அதிகரிக்கும். ஆறு அல்லது ஏழு கூவல்கள் கொண்டது. இவை மெதுவான முனகும் கூவலாகக் காணப்படுகின்றன. கூ… கூ…. கூ… கூ… அல்லது கூ… ஹூ ஹூன் எனக் கூவுகின்றன. இனப்பெருக்க காலம் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை ஆகும். ஆண் பறவைகள் இனச் சேர்க்கையின் போது மெல்ல குலுக்கல் நடனம் ஆடுகின்றன. இப்பறவைகள் 10 அடி முதல் 15 அடி உயரம் கொண்ட மரங்களில் கூடு கட்டுகின்றன. சிறிய குச்சிகளைக் கொண்டே கூடு கட்டுகின்றன. பெண் 1 முதல் 2 முட்டைகள் வரை இடுகின்றன. முட்டைகள் வெள்ளை அல்லது கிரீம் நிறத்தில் இருக்கும். பெண்களால் மட்டுமே அடைகாக்கப்படுகின்றது. அடைகாக்கும் காலம் 13 முதல் 15 நாட்கள் ஆகும். இதன் ஆயுட் காலம் 5 முதல் 10 ஆண்டுகள் ஆகும். பாதுகாப்பு மரகதப் புறா மிக வேகமாக அழிந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 30 சதவீதம் அழிந்து விட்டதாகப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. காடு அழிப்பு, மரம் வெட்டுதல், வேட்டையாடுதல் போன்றவற்றால் இவை அழிகின்றன. ஆந்தை, கழுகு, வல்லூறு, காட்டுப்பூனை போன்ற வேட்டை விலங்குகளால் இவை பாதிக்கப்படுகின்றன. இவை எளிதில் பழகக் கூடியவை. ஆகவே வெளிநாடுகளில் கூடுகளில் அடைத்து இவை வளர்க்கப்படுகின்றன. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இந்த மரகதப் புறாக்களை அழிந்து வரும் இனமாகப் பட்டியலிட்டுள்ளது. தெலுங்கானா தெலுங்கானா (Telangana) இந்தியாவின் புதிய 29 ஆவது புதிய மாநிலமாக 2014 ஆம் ஆண்டில் உதயமானது. தெலுங்கானா மாநிலத்திற்கு என வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம், மரபுகள் மற்றும் பழக்க வழக்கங்கள் உள்ளன. தெலுங்கானா புதிய மாநிலமாக உருவானதால் அதற்கான சின்னங்கள் இதன் கலாச்சாரத்துடன் ஒத்துச் செல்ல வேண்டும் என முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் குறிப்பிட்டார். இவர் மாநில சின்னங்களின் தேர்வுக்குழு தலைவராக இருந்தார். அழகான பனங்காடை பறவையை ஒவ்வொரு தசராவிலும் மக்கள் வழிபடுகின்றனர். ஏனென்றால் இது ஒரு நல்ல சகுனமாகக் கருதப்படுகிறது. மேலும் அதிர்ஷ்டத்தைத் தருகிறது என மக்கள் நம்பினர். இலங்கைக்கு எதிராகப் போரை நடத்துவதற்கு முன்பாக இராமர் பனங்காடையை வணங்கினார். அதனால் அவர் போரில் வென்றார் என்று புராணங்கள் கூறுகின்றன. இப்பறவை தெலுங்கானா […] மாநிலத்திற்கு வெற்றியைத் தரும் எனக் கூறி பனங்காடையை மாநிலப் பறவையாக அறிவித்தார். பெயர் இது மிகவும் அழகான பறவை. தெலுங்கு மொழியில் இது பாலபிட்டா (Palapitta) என்று அழைக்கப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் கோராசியஸ் பெங்காலென்சிஸ் என்பதாகும். இப்பறவைக்கு காடை, காட்டுக்காடை, பாலக் குருவி, கோட்டைக்கிளி, நீலகந்தா, பால் குருவி, துலுக்கமைனா, செம்பட்டைக் காகம், கொட்டுக்காகம் என்கிற பெயர்களும் உண்டு. சாதாரணமாக இப்பறவையை எல்லோரும் பார்த்திருப்பர். இது வெளிப்படையாக ஒரு மொட்டைப் பனை மரத்தின் மேலோ, கம்பத்தின் மீதோ, தந்திக் கம்பத்தின் மீதோ சோம்பலுடன் தலை குனிந்தவாறு அமர்ந்திருக்கும். பனைமரத்தின் மீது அமர்ந்து கொண்டு பறந்து பறந்து பூச்சிகளைப் பிடிக்கும். அதிகமாக பனைமரங்களைச் சார்ந்தே வாழ்வதால் இதற்குப் பனங்காடை என்ற பெயர் வந்தது. பனை மரங்கள் வெட்டப்படுவதால் இதற்கு வாழ்விடம் இல்லாமல் பாதிக்கப்படுகிறது. பறவை இது மிகவும் அழகான பறவை. பனைமரங்கள் இல்லாத இடங்கள் மின் கம்பங்களிலும், மின்சாரக் கம்பிகள் மீதும் அமர்ந்திருப்பதைக் காணலாம். இது அமர்ந்திருக்கும் போது இதன் தோற்றம் மங்கலாகவும், உற்சாக மற்றதாகவும் இருக்கும். அதன் நிறம் பளிச்சென்று இருக்காது. அவ்வழியாக வரும் பூச்சிகளை பறந்து, பறந்து பிடிக்கும். அப்போது இறகு விரிந்த நிலையில் கண்ணைப் பறிக்கும் நீலங்கள் கொண்டதாக காணப்படும். அப்போதுதான் அதன் இறக்கைகளிலும், வாலிலும் உள்ள நீலக்கல் நீலமும். வைடூரிய நீலமும் புலப்படும். […] இது எப்போதும் இரையைப் பறந்து பறந்து பிடிக்கும். இரையைப் பிடித்தவுடன் மீண்டும் அதே இடத்தில் போய் அமர்ந்து கொள்ளும். இது இறகை விரிக்கும் போதும், பறக்கும் போதும் இதன் மாயாஜால நிறங்கள் மனதை மயக்கும். இது சிறு பூச்சிகள், தவளை, சிறிய பாம்புகள், தேள்கள், சிறிய பாலூட்டிகள் ஆகியவற்றைப் பிடித்து உண்ணும். இது பூச்சிகளைப் பிடித்து உடனே சாப்பிடுவது கிடையாது. தான் பிடித்த இரையை தூக்கிப் போட்டுப் பிடிக்கும். மேலே தூக்கிப் போட்டு டக்கெனப் பிடித்து உண்ணும். இது விளக்கு வெளிச்சத்திற்கு வரும் பூச்சிகளையும் பிடித்து உண்ணும் பழக்கம் உடையது. இது வலசை போகும் பறவை கிடையாது. இது காகம் போன்று கடுமையான ஒலியை எழுப்பும். இது இனப் பெருக்க காலத்தில் சத்தமாகவும் இருக்கும். பாதுகாப்பு இப்பறவைகள் ஒரு பகுதிக்குள் வாழ்கின்றன. பருவ மழைக்குப் பிந்தைய காலம் இதற்கு சாதகமான காலமாகும். கோடை காலத்தில் வெப்பத்தால் பாதிக்கப்படுகின்றன. மழைக் காலங்களில் நெல் வயல்களில் உணவு தேடிச் செல்கின்றன. அறுவடை முடிந்தவுடன் வேறு இடங்களுக்குச் செல்கின்றன. இந்தப் பறவை துணிச்சல் மிக்கது. தனது கூட்டின் அருகில் எவ்வளவு பெரிய பறவை வந்தாலும் அதை துரத்தியடிக்கும். இதன் இறகு அழகானது என்பதால் மேனாட்டினர் உடை அலங்காரத்திற்காக இதைப் பயன்படுத்தினர். ஆகவே இந்தியாவில் இந்தப் பறவைகள் கொல்லப்பட்டு இறகுகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. காலமாறுதலால் பறவைச் சிறகுகளைக் கொண்டு அலங்கரித்துக் கொள்வது அநாகரீகம் என்று மேனாடுகளில் கருதியதால் இப்போது பனங்காடையை யாரும் வேட்டையாடுவது கிடையாது. பூச்சிக் கொல்லி மருந்து இதற்கு ஆபத்தாக உள்ளது. இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 இன் படி இதன் பாதுகாப்பு நிலை அட்டவணை – IV இல் இது வைக்கப்பட்டுள்ளது. திரிபுரா திரிபுராவின் மாநிலப் பறவை பச்சை இம்பீரியல் புறா (Green Imperial Pigeon) ஆகும். இது தமிழில் பெரிய பச்சைப் புறா என அழைக்கப்படுகிறது. இது காடுகளில் வாழும் ஒரு பெரியப் புறா இனமாகும். இதன் அறிவியல் பெயர் டுகுலா ஏனியா (Ducula aenea) என்பதாகும். உள்ளூர் மக்களால் படா ஹரியல் (Bada harial) என அழைக்கின்றனர். […] பிரெஞ்சு விலங்கியல் நிபுணர் மாதுரின் ஜாக் பிரிசன் என்பவர் 1760 ஆம் ஆண்டில் இந்தப் புறாவைப் பற்றி விவரித்து எழுதினார். 1766ஆம் ஆண்டில் கார்ல் லின்னேயஸ் என்ற இயற்கை ஆர்வலர் இதற்கு கொலம்பா ஏனியா என அறிவியல் பெயர் சூட்டினார். பிறகு 1836ஆம் ஆண்டில் இது டுகுலா ஏனியா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஏனியா என்பது லத்தீன் மொழியில் இருந்து வந்தது. இதற்கு வெண்கல நிறம் அல்லது செம்பு என்று பொருள். டுகுலா ஏனியாவில் 12 துணை இனங்கள் உள்ளன. வாழிடம் தெற்கு ஆசியா, இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. இந்தியாவில் உத்தரப் பிரதேசம், பீகார், ஒரிசா, மகாராஷ்டிரா, திரிபுரா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இவை வாழ்கின்றன. மேலும் கிழக்குத் தொடர்ச்சி மலை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் இவை காணப்படுகின்றன. இது தவிர அந்தமான் நிக்கோபர் தீவுகளிலும் இவை உள்ளன. இவை பசுமையான காடுகள், மரங்கள், நிறைந்த வாழ்விடங்களில் இதைக் காணலாம். கடல் மட்டத்தில் இருந்து 1000 மீட்டர் உயரம் வரை இவை வாழ்கின்றன. முதன்மை மற்றும் இரண்டாம் நிலைக் காடுகளை விரும்புகின்றன. இவை சதுப்பு நிலப் பகுதிகளிலும், பரந்த விரிந்த மரங்களைக் கொண்ட திறந்த வெளிகளிலும் கூட வாழ்கின்றன. உடலமைப்பு இது மற்ற புறாக்களை விட உருவில் பெரியது. இது அழகானது. இது 40 முதல் 47 செ.மீ. வரை நீளம் இருக்கும். இதன் எடை 350 கிராம் முதல் 650 கிராம் வரை இருக்கும். இதன் வால் வெண்கல நிறம் தோய்ந்த பச்சை நிறமானது. முதல் மற்றும் இரண்டாம் நிலை இறகுகள் லேசான பச்சை நிற பளபளப்பும், வெளிர் சாம்பல் நிறத்திலும் இருக்கும். தலைப் பகுதி வெளிர் சிவப்புத் தோய்ந்த சாம்பல் நிறமாகவும் இருக்கும். கண்கள் அடர் சிவப்பு நிறமானது. கண்ணைச் சுற்றி சில வெண்மையான இறகுகள் உள்ளன. அலகு கத்தி போலவும், வலுவாகவும், வெளிர் சாம்பல் அல்லது நீல சாம்பல் நிறத்திலும் உள்ளது. இப்புறாவின் அடிப்பகுதி வெள்ளை அல்லது வெளிர் சாம்பல் அல்லது அழுக்கு வெள்ளை நிறத்தில் காணப்படும். வால் மறைப்புகள் செம்பருப்பு நிறத்தில் உள்ளன. கழுத்தின் மேல் பகுதி மெரூன் அல்லது செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். குறுகிய மற்றும் வலுவான கால்கள் உள்ளன. கால்கள் சிவப்பாக இருக்கும். ஆண் புறாக்களும், பெண் புறாக்களும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. பெண்கள், ஆண்களை விட சற்று மங்கலான நிறமுடையவை. இளம் புறாக்கள் வயது வந்தவர்களை விட மங்கலான நிறத்தைக் கொண்டுள்ளன. நடத்தை தனியாகவோ, ஜோடியாகவோ அல்லது சிறு குழுக்களாகவோ, சில சமயம் பெரிய குழுக்களாகக் காணப்படும். மற்ற புறாக்களைப் போல் கூட்டமாக இருப்பதில்லை. இது ஒரு மரப்புறா. இவை அடர்ந்த வனப் பகுதிகளில் வளரும் மரங்களின் உச்சியில் காணப்படுகின்றன. ஓய்வெடுக்கும் நேரத்தில், அவை பெரும்பாலும் உயரமான மரத்தின், மிக உயர்ந்த கிளைகளில் ஜோடியாகவோ அல்லது சிறிய குழுக்களாகவோ அமர்ந்திருக்கும். இந்தப் புறாக்கள் வேகமாகப் பறக்கின்றன. இறக்கைகளில் அவ்வப்போது படபடப்பு கேட்கும். இனப்பெருக்க காலத்தில் ஒரு அழகான வான்வழி காட்சியை நிகழ்த்துகின்றன. வலுவான இறக்கை துடிப்புகளுடன் உயர்ந்து, இறக்கைகளை வளைத்து சிறிது நேரம் நிறுத்தி விட்டு, மீண்டும் கீழே இறங்கி சாதாரணமாக பறக்கின்றன. உணவு […] இது பழங்கள், பெர்ரிகள், தானியங்கள் மற்றும் தாவரப் பொருட்களை உண்கின்றன. பெரும்பாலும் மரத்திலேயே உணவு தேடுகின்றன. இவை தண்ணீர் குடிப்பதற்கும், உப்பு மண்ணை உண்பதற்கும் தரை இறங்குகின்றன. இது ஜாதிக்காயைத் தேடி விரும்பு உண்ணும். இனப்பெருக்கம் இனப் பெருக்க காலம் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை ஆகும். ஆண் மற்றும் பெண் ஆகிய இரண்டும் சேர்ந்து கூடுகட்டும். மரம் அல்லது புதரில் சிறிய கிளைகளில் சிறிய கூட்டை அமைக்கும். கூ கூ கூ அல்லது கர்-ஹூ அல்லது வக்-வக்-வூர் அல்லது வக்-வூர்-வூர்-வூர்-வூர்- அல்லது வக்-வூர்-வூர்-வூர் என குரல் எழுப்புகின்றன. பறவை அழைப்பு மிகவும் உரத்தது, மற்றும் எதிரொலிக்கிறது. இது மரத்தின் மீது பறவை இருப்பதற்கான அறிகுறியாகும். ஆண் பறவை பெண்ணிடம் காதல் ஆட்டம் போடும். பெண்கள் ஒற்றை மூட்டை அல்லது சில நேரங்களில் 2 முட்டைகளை இடும். முட்டை வெள்ளை நிறமுடையது. அடைகாக்கும் காலம் 15 முதல் 19 நாட்கள் ஆகும். பெண் மற்றும் ஆண் ஆகிய இரண்டும் அடைகாக்கின்றன. உத்தரப் பிரதேசம் உத்தரப் பிரதேச மாநிலப் பறவையின் பெயர் சாரஸ் கிரேன் (Sarus crane) ஆகும். இது சாரஸ் கொக்கு, சாரசு கொக்கு, சரச பெருங்கொக்கு, போதா மற்றும் நடனமாடும் பெருங்கொக்கு என்றும் அழைக்கப்படுகிறது. இது உலகின் மிக உயரமான பறக்கும் பறவை என்கிற சிறப்பிற்கு உரியது. இதே போல் இதன் நடனமும் சிறப்பு வாய்ந்தது. இதன் அறிவியல் பெயர் கிரஸ் ஆன்டிகோன் (Grus antigone) என்பதாகும். வாழிடம் […] இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் இவை காணப்படுகின்றன. இந்தியாவில் மேற்கு வங்காளம், அசாம், குஜராத், பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் காணப்படுகின்றன. தற்போது பீகார் மற்றும் ராஜஸ்தானிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை கங்கையாற்றுப் படுகையிலும் காணலாம். சாரஸ் கொக்குகள் ஈர நிலங்களையே விரும்புகின்றன. பயிரிடப்பட்ட பகுதிகள், கால்வாய்கள், குளங்கள் மற்றும் சதுப்பு நிலங்களில் இவற்றைக் காணலாம். வறண்ட காலங்களில் இவை ஆழமற்ற ஈரநிலங்கள், பயிரிடப்பட்ட வயல்வெளிகள் மற்றும் ஈரமான புல்வெளிகள் ஆகிய இடங்களில் இருக்கின்றன. இவை ஆழமற்ற நீரில் குடியேறுகின்றன. தரையில் வேட்டையாடும் விலங்குகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க நீர் நிலைகள் இவைகளுக்கு பாதுகாப்பாக இருக்கின்றன. உடலமைப்பு இது ஒரு வகை பெரிய கொக்கு. இது 5 அடி உயரம் வரை இருக்கும். இது பறக்கக் கூடிய பறவைகளில் உயரமானது. ஆண் பறவைகள் அதிகப்பட்சமாக 6.6 அடி உயரம் வரை வளரக் கூடும். இவற்றின் இறக்கைகள் விரிந்த நிலையில் 7 அடி முதல் 9 அடி நீளம் கொண்டுள்ளன. இப்பறவையின் எடை 6 கிலோ முதல் 8 கிலோ எடை வரை இருக்கும். இதன் உடல் சாம்பல் நிறம் அல்லது அழுக்கு வெள்ளை நிறமுடையது. கழுத்து மற்றும் தலை பிரகாசமான சிவப்பு நிறத்தில் இருக்கும். வயது வந்தவரின் தலை மற்றும் கழுத்தின் வெற்று சிவப்பு தோல் இனப்பெருக்க காலத்தில் பிரகாசமாக இருக்கும். மேல் தொண்டை மற்றும் கழுத்தை மறைக்கும் முடிகள் முட்கள் போலவும், கருப்பு நிறத்திலும் இருக்கும். சிவப்பு தலையும், வெளுத்த உச்சந்தலையையும் கொண்டு இருக்கும். இதன் அலகு கூரானது, நீளமானது மற்றும் வலுவானது, அலகுகள் கருத்தவை. தலையின் ஒவ்வொரு பக்கத்திலும் தனித்துவமான வெளிர் வெள்ளை அல்லது அழுக்கு வெள்ளை காது இணைப்பு உள்ளது. கண்கள் அடர் பழுப்பு. இறக்கையின் நுனிப்பகுதி கருப்பாக இருக்கும். ஆண் பறவைகளும், பெண் பறவைகளும் தோற்றத்தில் வேறுபாடு கிடையாது. ஆனால் ஆண் பறவை, பெண் பறவையை விடப்பெரியது. நீண்ட கழுத்தும், நீண்ட கால்களும் உள்ளன. இவை நீரில் நீந்துபவை அல்ல. ஆழமில்லாத நீரில் நடந்து திரிவன. நிலத்தில் ஊன்றும் விரல்கள் உள்ளன. முழங்கால் வரையிலும் இறகுகள் இருப்பதில்லை. இது நீரில் எளிதாக நடப்பதற்கேற்ற தகவமைப்பாகும். நடத்தை மற்ற கொக்குகளைப் போல் இவை நெடுந்தொலைவு வலசை போவது கிடையாது. சாரஸ் கொக்குகள் பொதுவாக சமூகப் பறவைகள். ஜோடியாகவோ அல்லது சிறிய குடும்பக் குழுக்களாகவோ, சில சமயம் பெரிய குழுக்களாகவோ வாழ்கின்றன. இனப்பெருக்கம் செய்யாத பறவைகள் கூட்டாளிகளைக் கண்டுபிடித்து இனப் பெருக்க மண்டலத்தை அமைக்கும் வரை கூட்டமாக இருக்கும். இந்தக் கொக்குகள் நன்றாக பறக்கக் கூடியவை. பறக்கும் போது தலை கழுத்துடன் நேராக இருக்கும். கால்கள் உடலுக்குப் பின்னால் செல்கின்றன. இது மணிக்கு 83 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கின்றன. இந்தப் பறவைகளில் ஆண் மற்றும் பெண் பறவைகள் ஒரு முறை ஜோடி சேர்ந்து விட்டால் வாழ்நாள் முழுவதும் ஒரே இணையோடுதான் வாழும். இவை ஒரு தாரமனம் கொண்டவை. ஹிஸ்ஸிங், க்ரில் கொர்ர்ஸ் என சத்தமாக ஒலி எழுப்புகின்றன. ஜோடியாக உள்ள பெரிய பறவைகள் செய்யும் ஒருமித்த அழைப்பு மிகவும் நன்கு அறியப்பட்ட அழைப்பு மற்றும் சத்தமாக நீண்ட எக்காளம் இடும். இது […] மற்ற சாரஸ் கொக்குகளிடம் இருந்த தங்கள் எல்லையை பராமரிக்கின்றன. உணவு இவை ஆழமற்ற நீரில் உணவைத் தேடுகின்றன. மெல்ல நடந்து கொண்டு அங்கு அகப்படும் மீன், தவளை, நத்தை முதலியவற்றைக் கொத்தித் தின்னும். மேலும் வெட்டுக் கிளி, பூச்சிகள், பட்டாம்பூச்சிகள், பறவைகளின் முட்டைகள், பழங்கள், விதைகள், கிழங்குகள், வேர்கள் ஆகியவற்றை உண்கின்றன. இனப்பெருக்கம் இவை ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை இனப்பெருக்கம் செய்கின்றன. இனச்சேர்க்கையின் போது ஆண் மற்றும் பெண் இருவரும் ஒருவரை ஒருவர் சுற்றி நடனமாடுகிறார்கள். இவை குளம், குட்டை மற்றும் நீர் நிலைகளுக்கு அருகில் தரையிலேயே கூடு கட்டுகின்றன. 2 முதல் 3 முட்டைகள் இடும். முட்டைகள் சுண்ணாம்பு வெள்ளை நிறமுடையது. ஆண், பெண் இரு பறவைகளுமே முட்டையை அடைகாக்கும். அடைகாக்கும் காலம் 27 முதல் 35 நாட்கள் ஆகும். இக்கொக்கின் சராசரி ஆயுட்காலம் 20 ஆண்டுகள் ஆகும். உத்தரகாண்ட் உத்தரகாண்ட் (Uttarakhand) மாநிலப் பறவையின் பெயர் ஹிமாலயன் மோனல் (Himalayan Monal) ஆகும். இது இம்பெயன் மோனல் (Impeyan Monal) மற்றும் இம்பெயன் பெசண்ட் என்றும் அழைக்கப்படுகிறது. உள்ளூர் மக்கள் மோனல் என அழைக்கின்றனர். இது தமிழில் இமயமலை மோனல் என அழைக்கப்படுகிறது. 2018ஆம் ஆண்டு உத்தரகாண்டில் நடைபெற்ற 38ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிக்கான சின்னமாக ஹிமாலயன் மோனல் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதன் அறிவியல் பெயர் லோபோபோரஸ் இம்பெஜனஸ் (Lophophorus impejanus) என்பதாகும். இது நேபாளத்தின் தேசியப் பறவை என்பது ஒரு சிறப்பு. இது டான்பே அல்லது டான்ஃபே என்று அழைக்கப்படுகிறது. வாழிடம் […] ஹிமாலயன் மோனல் என்பது இமயமலை காடுகளுக்குச் சொந்தமான ஒரு பெரிய வண்ணமயமான பெசண்ட் ஆகும். இவை இந்தியா, சீனா, பூட்டான், மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் வாழ்கின்றன. இந்தப் பறவைகள் கைபர் பக்துண்க்வா மாகாணத்தில் மிகவும் பொதுவானவை. ககன், பலாஸ் பள்ளத்தாக்கு மற்றும் ஆசாத் காஷ்மீர் பகுதிகளிலும் வாழ்வதைக் கண்டுபிடித்துள்ளனர். இவை திறந்த புல்வெளிச் சரிவுகள், பாறைகள் மற்றும் ஆல்பைன் புல்வெளிகளுடன் கூடிய காடு மற்றும் ஓக், ஊசியிலைக் காடுகளிலும் வாழ்கின்றன. இவை ஊசியிலை, ரோடோடென்ட்ரான் மற்றும் மூங்கில் நிறைந்த கலப்பு காடுகளை விரும்புகின்றன. கடல் மட்டத்தில் இருந்து 2000 முதல் 4500 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகளில் வாழ்கின்றன. குளிர் காலத்தில் அவை குறைந்த உயரத்தில் காணப்படுகின்றன. கோடை காலத்தில் அவை புல் சரிவுகளில் உயரமான பகுதிக்குச் செல்கின்றன. மோனல் இமயமலை மோனல் மிகவும் அழகான பறவையாகும். இது 60 செ.மீ. முதல் 72 செ.மீ. நீளம் வரை வளரக்கூடியது. இது 1.70 கிலோ முதல் 2.40 கிலோ எடை வரை இருக்கும். பெண்களை விட ஆண்கள் சற்று பெரியதாக, கனமாக இருக்கும். ஆண் பறவை மிகவும் அழகானது. பல வண்ண இறகுகளை கொண்டுள்ளன. இது பெண் பறவையில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. ஆண் பறவைக்கு ஒளிரும் பச்சை இறகுகளும், நீண்ட பச்சைக் கொண்டையும், நீல வண்ணக் கழுத்தும் இருப்பதால் பார்ப்பதற்கு மிக அழகாகத் தோன்றும். மேலும் பிரகாசமான நீலம், பச்சை, ஊதா, வெளிர் மஞ்சள், பழுப்பு, கருப்பு மற்றும் சிவப்பு என பல வண்ணங்களில் இறகுகளைக் கொண்டுள்ளது. இதன் வால் இறகுகள் ஒரே மாதிரியாக, முரட்டுத்தனமானவை. நுனிகளை நோக்கி கடுமையாக மாறுகிறது. வாலின் அடிப்பகுதியில் வெள்ளை இறகுகள் உள்ளன. ஆணின் கழுத்து முனையில் ஒரு பிரகாசமான மஞ்சள் திட்டு உள்ளது. தலை பிரகாசமான பச்சை நிறத்தில் உள்ளது. தலையில் பெரிய கொண்டையும் உள்ளது. ஆண்களை விட பெண்கள் மந்தமான நிறமுடையது. மேல் பகுதி சாம்பல் கலந்த பழுப்பு நிற கோடுகள் மற்றும் கருப்பு புள்ளிகளுடன் இருக்கும். பெண்ணின் தொண்டை வெண்மையானது. பெண்ணின் தலையில் சிறிய கொண்டை உள்ளது. நடத்தை […] இது ஒரு சமூகப் பறவையாகும். பெரும்பாலும் ஜோடியாக அல்லது சிறிய குழுக்களாகக் காணப்படுகின்றன. குளிர்காலத்தில் அவை பொதுவாக பெரிய குகைகளில் கூடி வாழ்கின்றன. இந்தப் பறவைகள் பகல் நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்கும். பெரும்பாலான நேரத்தை உணவிற்காகச் செலவிடுகின்றன. துணையை ஈர்க்க முயற்சிக்கும் போது பல விதமான அழைப்புகளைப் பயன்படுத்துகின்றன. உணவு இது பழங்கள், விதைகள், வேர்கள், கிழங்குகள் ஆகியவற்றை உண்ணும். மேலும் இது ஒரு மாமிச உண்ணி. இதன் அலகு வளைந்து இருக்கும். அலகைக் கொண்டு நிலத்தைத் தோண்டும். 25 செ.மீ. ஆழம் வரை தோண்டும் திறமை கொண்டது. தாவர வேர்கள், கிழங்குகள் மற்றும் முதுகெலும்பில்லாத உயிரினங்களைப் பெறுவதற்காக நிலத்தை தோண்டியெடுத்து உண்ணும். இனப்பெருக்கம் மோனல்கள் ஒருதார மனம் கொண்டவை. வலுவான ஜோடி பிணைப்புகளை உருவாக்குகின்றன. ஆண்கள், பெண்களை ஈர்க்க வாலை விரித்து நடனமாடுகின்றன. பெண் தரையைத் தோண்டி ஒரு கூட்டை உருவாக்கி அதில் 3 முதல் 5 முட்டைகளை இடுகிறது. அடைகாக்கும் காலம் 26 முதல் 29 நாட்கள். முட்டைகள் பெண்களால் அடைகாக்கப்படுகின்றன. ஆண் பறவை அடைகாக்கும் காலம் முழுவதும் பெண் பறவை மற்றும் குஞ்சுகளுக்கு பாதுகாப்பாக இருக்கிறது. 6 மாதத்திற்கு பிறகு குஞ்சுகள் சுதந்திரமாக செயல்படுகின்றன. இவற்றின் ஆயுட்காலம் 10 முதல் 12 ஆண்டுகள் ஆகும். பாதுகாப்பு இவை இறைச்சிக்காக வேட்டையாடப்படுகின்றன. இதன் கொண்டை வேட்டையாடுபவர்களிடம் மிகவும் மதிப்புமிக்கது. இதை அணிவது உயர் அந்தஸ்தாகக் கருதுகின்றனர். மேலும் அதிகாரத்தின் சின்னமாகவும் இது கருதப்படுகிறது. மேற்கு வங்காளம் மேற்கு வங்க மாநிலப் பறவையின் பெயர் வெண் மார்பு மீன் கொத்தி (White breasted Kingfisher) ஆகும். வெள்ளைத் தொண்டை மீன் கொத்தி, வெள்ளை நெஞ்சு மீன் கொத்தி, வெண் தொண்டை மீன் கொத்தி, வெள்ளை மார்பக மீன் கொத்தி, மர மீன் கொத்தி, பெரு மீன் கொத்தி, மூக்கன், கிச்சிலிக் பொன் வாய்க் குருவி, விச்சுளி என தமிழில் அழைக்கப்படுகிறது. வெள்ளை நிறத் தொண்டையும், மார்பும் இருக்கின்றக் காரணத்தால் இது வெண் தொண்டை மீன் கொத்தி என்ற பெயரைப் பெற்றது. இது ஸ்மிர்னா கிங் ஃபிஷர் என்ற மற்றொரு பெயரும் உண்டு. மேற்கு வங்கத்தில் உள்ளூர் மக்கள் இதை கில்கிலா மற்றும் கொரில்லா எனவும் அழைக்கின்றனர். இதன் அறிவியல் பெயர் ஹல்சியன் ஸ்மிர்னென்சிஸ் (Halcyon smyrnensis) என்பதாகும். வாழிடம் இந்தியா, பல்கேரியா, துருக்கி, தெற்காசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இது காணப்படுகிறது. இப்பறவை பல்வேறு சூழ்நிலைகளில் வாழ்கிறது. இது பொதுவாக நீரில் மூழ்கிய நெல் வயல்கள், குளங்கள், குட்டைகள், கிணறுகள், மணற்பாங்கான கடற்கரை, மனித வாழிடங்களுக்கு அருகாமையிலும் இது காணப்படுகிறது. மரங்கள், கம்பிகள், மின் கம்பம், கம்பி வேலி ஆகியவற்றில் அமர்ந்திருக்கும். ஏரிகள், பூங்கா நிலங்கள் மற்றும் சதுப்பு நிலங்களில் வெண் தொண்டை மீன் கொத்திகள் மிகவும் பொதுவானவை. உடலமைப்பு […] நம் நாட்டில் காணப்படும் மீன் உற்பத்தி வகைகளில் வெண் மார்பு மீன் கொத்தி மிகவும் பரிச்சமானது. இது மீன் கொத்திப் பறவை இனங்களில் பெரியது. இது 26 செ.மீ. முதல் 28 செ.மீ. நீளம் வரை வளரக் கூடியது. இதன் எடை 65 கிராம் முதல் 85 கிராம் வரை இருக்கும். இப்பறவையின் முதுகு, இறகுகள் மற்றும் வால் ஆகியவை பிரகாசமாக, பளிச்சென்று நீல நிறத்தில் இருக்கும். இதன் தலை, வயிறு மற்றும் தோள் பட்டை ஆகியவை அடர் பழுப்பு நிறமானவை. இதன் தொண்டை மற்றும் மார்பு பகுதி வெண்மையானவை. தொண்டையிலும், சில சமயங்களில் மார்பகத்திலும் மிக பிரகாசமான வெள்ளைத் திட்டு காணப்படும். இறக்கைகள் மற்றும் வால் பிரகாசமான நீல நிறம் மற்றும் கருப்பு முனைகளில் வெள்ளை திட்டுகளுடன் இருக்கும். இதன் அலகும், கால்களும் இரத்தச் சிவப்பாக இருக்கும். இது வேகமாக பறக்கும். பறக்கும் போது நீலம் மற்றும் கருப்பு இறக்கைகளில் பெரிய வெள்ளைத் திட்டுகள் தெரியும். ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பாலினமும் ஒரே மாதிரியானவை. ஆனால் இளம் வயதில் மங்கலான நிறத்தில் காணப்படும். உணவு இதன் அலகு வேல்முனை போல் தடித்து, நீண்டு, முனை கூராகவும் உள்ளது. அதாவது குத்தும் அலகுண்டு. இதன் முக்கிய உணவு மீன்கள் தான். ஒரு மர கொப்பில் காத்திருந்தோ, நீரை உற்று நோக்கி பறந்தவாரே இரை தேடும். பல வகை சிறு மீன்களும், தவளைக் குட்டிகளும், நீரில் வாழும் சிறிய உயிர்களும் இதன் உணவாகும். மீன் பிடித்து, உண்ணுவதுடன், தவளைகளையும், பல்லிகளையும், பூச்சிகளையும், புழுக்களையும் கூட வேட்டையாடும். நண்டுகள், எலிகள், வெட்டுக் கிளிகள், பாம்புகள், பெரிய ஓட்டு மீன்கள், பறவைகள் போன்ற பலவகையான இரையை உண்ணும். எலிகள் மற்றும் வெட்டுக் கிளிகளை பிடித்து உண்பதால் இந்தப் பறவைகள் விவசாயிகளின் நண்பனாக உள்ளன. அதே சமயத்தில் மீனவர்கள் தங்களுடைய மீன்களை உலரச் செய்யும் போது அவற்றை இந்த பறவைகள் எடுத்துச் சென்று உண்கின்றன. அதனால் மீனவர்களுக்கு இது பகையாகிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் இதற்கு தேவையான உணவு கிடைத்தால், அதே இடத்திற்கு மீண்டும், மீண்டும் வரும். இனப்பெருக்கம் […] இந்த மீன் கொத்தியின் அழைப்பு ஒரு சிரிப்பு போன்றது. சேக்-ஏகே-ஏகே-ஏகே-அகே என்பது போன்றது. இதன் குரல் கணைப்பாக இருக்கும். இனப்பெருக்க காலத்தில் குறிப்பாக சப்தமாக இருக்கும். இவை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இனப் பெருக்கம் செய்கின்றன. இனப் பெருக்கம் என்பது பிப்ரவரி முதல் ஆகஸ்டு மாதம் வரை நிகழ்கிறது. இனப் பெருக்க காலத்தில் நகர்ப்புறங்களில் உள்ள கட்டிடங்களின் உச்சி அல்லது மின் கம்பிகள் உட்பட முக்கிய இடங்களில் அமர்ந்து சப்தமாக ஒலி எழுப்புகின்றன. இவை காலை பொழுதில் குரல் எழுப்புகின்றன. அப்போது வால் அசைக்கப்படலாம். இறக்கையை விறைப்பாக திறந்து வெள்ளை இறக்கையைக் காட்டும். தங்கள் அலகை உயர்த்தி, வெள்ளை தொண்டை மற்றும் முன்பக்கத்தைக் காட்டும். பெண் பறவை இனப்பெருக்க காலத்தில் தனது இறக்கைகளை சைகை செய்ய பயன்படுத்துகிறது. தனது சம்மதத்தை தெரிவிக்க ஆண் பறவையை நெருங்கி தன் இறக்கைகளை ஓரளவு திறந்து, மீண்டும், மீண்டும் கிளிக் செய்து கிட்.. கிட்.. கிட்.. என அழைப்பை வெளிப்படுத்தும். இது மரத்தில் கூடு கட்டாது. ஜோடிப் பறவைகள் மண் பாங்கான இடத்தில் 50 செ.மீ. முதல் 1 மீட்டர் வரை ஆழமான குழியை தோண்டி எடுக்கின்றன. இது ஒரு சுரங்கப்பாதை போலவும், கமல் நோக்கி சாய்ந்தும் சென்று அறையில் முடிகிறது. இதற்குள் முட்டை இடுக்கிறது. பெண் பறவை 3 முதல் 7 முட்டைகளை இடுகின்றது. ஆண், பெண் இரண்டும் முட்டையை அடைகாக்கின்றனர். அடைகாக்கும் காலம் 20 முதல் 22 நாட்கள் ஆகும். பெற்றோர்கள் இருவருமே குஞ்சுகளுக்கு உணவளித்தல் மற்றும் வளர்ப்பு ஆகியவற்றில் பங்கேற்கின்றன. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். அந்தமான்-நிக்கோபார் அந்தமான் – நிக்கோபர் மாநிலப் பறவையின் பெயர் அந்தமான் மரப்புறா ஆகும். இது ஆங்கிலத்தில் அந்தமான் வுட் பீஜியன் (Andaman Wood Pigeon) என அழைக்கப்படுகிறது. மேலும் அந்தமான் புறா எனவும் அழைக்கின்றனர். பலேமா டி அந்தமான் என ஸ்பானிஷ் மொழியிலும், அந்தமானென்ட்யூப் என ஜெர்மன் மொழியிலும், டெஸ் அந்தமான் என பிரஞ்சு மொழியிலும் அழைக்கப்படுகின்றது. இதன் அறிவியல் பெயர் கொலம்பா பலம்பாய்ட்ஸ் (Columba palumboides) என்பதாகும். வாழிடம் இது புறாக்களின் குடும்பத்தைச் சேர்ந்தது. இது உலோகப் புறா மற்றும் சாம்பல் மரப்புறா ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையது. இது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் மட்டுமே வாழக் கூடிய ஓரிட வாழ்வி. இது ஓர் அரிய வகைப் புறா. நிக்கோபார் தீவுகளில் கிரேட் நிக்கோபார், கார் நிக்கோபார், லிட்டில் நிக்கோபார், கமோர்டா, கட்சஸ், தில்லாங்சோங், நான்கோவ்ரி மற்றும் டிரிங்காட் ஆகிய இடங்களில் இந்த புறாக்கள் காணப்படுகின்றன. அந்தமான் தீவுகளில் மவுண்ட் டயவலோ, குத்பர்ட் பே, மவுண்ட் ஹாரியட் தேசியப் பூங்கா, ஜலசக்தி, பரங்டாங் – ராஃப்டர்ஸ் க்ரீக், செயின்பூர் மற்றும் ஹன்ஸ்புரி, ராணி ஜான்சி மரைன் தேசியப் பூங்கா, வடக்கு மற்றும் தெற்கு சென்டினல் ஆகிய இடங்களிலும் காணப்படுகின்றன. மேலும் ஜராவா ரிசர்வ், கடகசாங், சாடில் பீக் தேசியப் பூங்கா, லிட்டில் அந்தமான் மற்றும் மகாத்மா காந்தி கடல் தேசியப் பூங்கா ஆகிய இடங்களிலும் இவை வாழ்கின்றன. […] இந்தப் புறாக்கள் பசுமையான காடுகளை சார்ந்து வாழ்கின்றன. கடல் மட்டத்தில் இருந்து 100 மீட்டர் உயரத்தில் காணப்படுகின்றன. இவை அடர்த்தியான, அகன்ற பசுமையான காடுகளிலும், வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டல ஈரமான தாழ்நிலக் காடுகளிலும் வாழ்கின்றன. உடலமைப்பு அந்தமான் மரப் புறாவின் தலை மற்றும் கழுத்து வெள்ளி நிற சாம்பல் நிறமுடையது. கழுத்து, மார்பு, வயிறு மற்றும் கீழ் இறக்கைகள் ஆகியவை வெளிர் சாம்பல் நிறத்துடன் காணப்படும். முதுகு, இறக்கைகள் மற்றும் வால் ஆகிய பகுதிகள் அடர் சாம்பல் அல்லது அடர் கருப்பு நிறத்துடன் காணப்படுகிறது. இதன் அலகு சிவப்பு நிறத்தில் இருந்து, இளம் சிவப்பு நிறமாகவும், அதன் முனை மஞ்சள் நிறத்துடன் இருக்கும். இதன் கருவிழியின் நிறம் மஞ்சள் ஆகும். கண்ணைச் சுற்றியுள்ள பகுதி சிவப்பு மற்றும் இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த புறாக்கள் 35 முதல் 40 செ.மீ. நீளமுடையவை. இவை உடல் 510 முதல் 520 கிராம் எடை கொண்ட பெரிய புறாவாகும். உணவு இது தாவர வகைகளை மட்டுமே உண்கிறது. பழங்கள், பெர்ரி மற்றும் அத்திப் பழங்கள் ஆகியவற்றை மட்டுமே உண்ணும். இவை பழுத்த பழங்களைத் தேடி ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவுக்குக் கூட பயணம் செய்கின்றன. இனப்பெருக்கம் இதன் இனப்பெருக்கக் காலம் சரியாகத் தெரியவில்லை. குச்சிகளால் ஆன எளிய கூடுகளைக் கட்டுகின்றன. இரண்டு முட்டைகளை இடுகின்றன. முட்டைகள் வெள்ளை நிறமுடையது. இவை சுமார் 5 முதல் 6 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. நடத்தை […] இந்தப் புறாக்கள் மிகவும் அழகானவை. உடலின் நிறம் இவற்றை மிகவும் அழகாக்குகிறது. மரத்தின் நிறத்தில் இருப்பதால் கொஞ்சம் கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கும். நம் மேல் சிறிது அச்சம் நீங்கி விட்டால் நம்மை கண்டுகொள்ளாது. உடனே பறந்து விடும். இந்தப் புறாக்கள் மிகவும் புத்திசாலிகள். இது கூப்பிடுவது போல் வித்தியாசமாக ஹூட் சப்தம் இடும். இவை புலம் பெயர்பவை அல்ல. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை விட்டு எங்கும் செல்வது கிடையாது. இந்தப் புறாக்கள் மந்தையாக காணப்படும். இது செல்லப் பிராணியாக வளர்க்கப்படுவதில்லை. பாதுகாப்பு கழுகுகள், குருவிகள், ஆந்தைகள், நரிகள், கீரிகள் போன்றவற்றால் வேட்டையாடப்படுகின்றன. மனிதர்களாலும் வேட்டையாடப்படுகின்றன. இதன் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அடர்ந்த பசுமையான காடுகள் அழிக்கப்படுவதால் இது அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது. சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பானது இந்தப் புறாக்கள் அச்சுறுத்தலுக்கு அருகில் உள்ளது எனப் பட்டியல் இட்டுள்ளது. சண்டிகர் சண்டிகர் மாநிலப் பறவையின் பெயர் இந்திய சாம்பல் இருவாச்சி ஆகும். ஆங்கிலத்தில் இந்தியன் கிரே ஹார்ன்பில் (Indian Grey Hornbill) என அழைக்கப்படுகிறது. 2010ஆம் ஆண்டில் சண்டிகர் மாநிலப் பறவையாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டில் மாநிலச் சின்னங்கள் பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் ஏற்படுத்தப்பட்டது. அதன் பிறகு சண்டிகர் மாநிலப் பறவை இந்திய சாம்பல் இருவாச்சி என சண்டிகர் மக்களுக்குத் தெரிய வந்தது. […] பொதுவாக இது ஒரு இருவாச்சி பறவையாகும். இது மலபார் சாம்பல் இருவாச்சி மற்றும் இலங்கை சாம்பல் இருவாச்சி ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையது. இது பொதுவான சாம்பல் இருவாச்சி எனவும் அழைக்கப்படுகிறது. கலாவ் டி ஜிங்கி என பிரஞ்சு மொழியில் அழைக்கின்றனர். இதன் அறிவியல் பெயர் ஓசிசெரோஸ் பைரோஸ்ட்ரிஸ் (Ocyceros birostris) என்பதாகும். வாழிடம் இந்தப் பறவை இந்தியாவில் பரவலாகக் காணப்படுகிறது. குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்ரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், மத்திய பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த இனங்கள் காணப்படுகின்றன. மேலும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் உள்ளன. இந்தியாவை ஒட்டிய சில அண்டை நாடுகளிலும் இவை பரவியுள்ளன. பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளிலும் இவை வாழ்கின்றன. இது மற்ற இருவாச்சி பறவைகளைப் போலல்லாமல் வறண்ட சமவெளிகள், மலையடி வாரங்கள் மற்றும் திறந்தவெளி வாழிடங்களை விரும்புகின்றன. இலையுதிர்க் காடுகள், பழத்தோட்டங்கள், முட்கள் நிறைந்த புதர்க்காடுகள், தோட்டங்கள் மற்றும் அத்தி மரங்கள் இருக்கும் இடத்திலும் இதனைக் காணலாம். பழைய மரங்களைக் கொண்ட பெரிய நகரத்தின் நடுவிலும் இதைக் காணலாம். விளை நிலங்கள், கிராமப்புறத் தோட்டங்கள், வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டலக் காடுகள் மற்றும் உலர் சவன்னா புல்வெளிகளிலும் வாழ்கின்றன. உடலமைப்பு இது 50 செ.மீ. முதல் 60 செ.மீ. நீளமுடையது. இதன் உடல் 370 முதல் 400 கிராம் எடை கொண்டது. இந்தியாவில் உள்ள அனைத்து இருவாச்சி பறவைகளில் இது இரண்டாவது சிறிய பறவை இனமாகும். இது பிரகாசமான நிறத்தில் இருப்பதில்லை. இதன் உடல் முழுவதும் சிறகுகள் சாம்பல் நிறத்தில் இருக்கும். வயிற்றுப் பகுதி சற்று வெளிர் சாம்பல் நிறத்திலோ அல்லது வெண்ணிறத்திலோ இருக்கும். இதன் கண் சிவப்பு நிறத்திலும், கண்ணைச் சுற்றியுள்ள தோல் சாம்பல் நிறத்திலும் இருக்கும். அதே சமயத்தில் இளம் வயதினருக்கு பழுப்பு ஆரஞ்சு நிற கண்கள் மற்றும் சிவப்பு ஆரஞ்சு தோலுடன் இருக்கும். இதன் கருவிழிகள் அடர் சிவப்பு நிறத்தில் உள்ளது. பாதங்கள் சாம்பல் நிறத்தில் இருக்கும். இதன் வால் நீளமானது. […] இதற்குப் பெரிய அலகு உள்ளது. ஆண் பறவைகளுக்கு அலகின் மேல் அலகைப் போலவே கெட்டியான, நீண்ட தலைக் கவசம் (Casque) காணப்படும். பெண் பறவைகளுக்கு நீளம் குறைவாகவும், சற்று கூர்மையான தலைக் கவசம் இருக்கும். இளம் பறவைகளின் அலகிற்கு மேல் தலைக் கவசம் கிடையாது. உணவு இது முற்றிலும் ஒரு மர வாழ் பறவையாகும். எப்போதாவது கனிகளைக் கொத்தவும், கூடு அடைக்கும். காலத்தில் களிமண் உருண்டைகளைச் சேகரிக்கவுமே நிலத்தில் இறங்கும். பல விதமான பழங்கள், சிறு பூச்சிகள், ஓணான்கள், தேள்கள், நத்தைகள், பறவைகளின் குஞ்சுகள் ஆகியவற்றை உண்ணும். கிளிக் குஞ்சுகளையும் இரையாக்கிக் கொள்ளும். அரளிக் கனிகள் இவை விரும்பி உண்ணக் கூடிய தீனியாக இருக்கிறது. இனப்பெருக்கம் இதன் இனப்பெருக்கக் காலம் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலும் இருக்கும். உயரமான மரங்களில் உள்ள பொந்துகளில் கூடுகளை அமைக்கும். 1 முதல் 5 முட்டைகள் வரை இடும். பெண் பறவை பொந்தின் உள்ளே சென்று தனது எச்சில் கழிவினாலும், ஆண் பறவை கொண்டு வரும் களிமண் உருண்டைகளைக் கொண்டும் மூடி விடும். நீள வாக்கில் ஒரு சிறிய துவாரத்தை மட்டும் விட்டு வைக்கும். ஆண் பறவை குஞ்சுகளுக்கும், பெண் பறவைக்கும் உணவு வழங்கும். குஞ்சுகள் வளர்ச்சியடைந்தவுடன் கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வரும். இதன் சராசரி ஆயுட்காலம் 10 ஆண்டுகளாகும். பாதுகாப்பு இந்தப் பறவைகள் இயற்கையான பசுமைப் பொறியாளர்கள். பல்வேறு மரங்களின் விதைகளை பெரிய இடைவெளிகளில் பரவச் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நகர்ப்புறங்களில் மரங்களின் இயற்கை சுழற்சியை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை பல்வேறு அச்சுறுத்தல்களைச் சந்திக்கின்றன. கூடு கட்டுவதற்கும், உணவு தேடுவதற்குமான மரங்களை இழப்பது முதன்மையான அச்சுறுத்தலாகும். இது சப்பாத்தி மற்றும் வறுத்த திண்பண்டங்களையும் உண்கிறது. இதனால் இது பாதிக்கப்படுகிறது. தில்லி தில்லி மாநிலப் பறவை சிட்டுக்குருவி ஆகும். இது 2012ஆம் ஆண்டு தில்லி மாநிலப் பறவையாக அறிவிக்கப்பட்டது. இது ஊர்க் குருவி என்றும், அடைக்கலாங்குருவி என்றும் அழைக்கப்படுகிறது. மனிதன் வாழும் இடங்களில் ஆங்காங்கு கூடுகட்டி வாழ்வதால் மனைக் குருவி (House Sparrow) என்றும் வழங்கப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் பேஸ்ஸர் டொமஸ்டிகஸ் (Passer domestricus) என்பதாகும். காக்கைக்கு அடுத்தாற்போல் நமக்கு அதிகம் அறிந்த பறவை சிட்டுக் குருவியாகும். இது 10000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே மனிதர்களுடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. தொல்காப்பியத்திலும் சிட்டுக் குருவியின் பெருமைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. புறநானூற்றுப் பாடல்களில் இது குரீஇ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சொல்லே மருவி பின்னர் குருவியானது. சங்க இலக்கியத்தில் மனையுறைக் குரீஇ என்று சிட்டுக் குருவியைக் குறிப்பிடப்பட்டுள்ளன. மனிதர்கள் வாழும் வீடுகளில் இவை பயமின்றி வாழ்ந்ததால் இவை அவ்வாறு குறிப்பிடப்பட்டன. ஜப்பானில் இவை நம்பிக்கையின் […] அடையாளமாகப் பார்க்கப்படுகின்றன. வாழிடம் மனித சமூகத்துடன் நெருங்கி வாழ்ந்த போதிலும் சில ஊர்களில் சிட்டுக்குருவிகள் இல்லாத ஊர்களுமுண்டு. உலகம் முழுவதும் பலருக்குத் தெரிந்த மிகவும் பிரபலமான காட்டுப் பறவை இதுவாகும். இது மனித வாழிடம் மற்றும் சாகுபடியுடன் தொடர்புடைய, பண்ணைகள், குடியிருப்புகள், நகர்ப்புறங்களில், மனிதர்களால் மாற்றியமைக்கப்பட்ட பகுதிகள் ஆகிய பகுதிகளில் வாழ்கின்றன. பல்வேறு தட்பவெப்ப நிலைகளிலும் இவை காணப்படுகின்றன. சிட்டுக்குருவி சிட்டுக் குருவி ஒரு சிறிய பறவை. இது சாம்பல் நிற இறகுகள் கொண்டது. சாம்பல் நிற தலை வெள்ளை கன்னங்கள், தொண்டை கருப்பு என பல அடையாளங்களுடன் ஆண் சிட்டுக் குருவிகள் காணப்படும். ஆணின் உச்சியில் இருந்து பின்புறம் வரை அடர் சாம்பல் நிற கிரீடம் உள்ளது. பெண் குருவிகள் ஆணைவிட சற்று வெளிர் மற்றும் சாம்பல் நிற கீரிடம் கொண்டுள்ளது. இதன் முகம் கருப்பு நிறத்தைக் கொண்டிருக்கவில்லை. சிட்டுக் குருவி வேகமாகப் பறக்கும். இது மணிக்கு 35 கி.மீ. வேகத்தில் பறக்கும். தேவை இருப்பின் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. மெதுவாக நடப்பதை விட அதிகமாக தாவுகிறது. இது நீரில் நீந்தும். நீரில் குதித்து குறுகிய தூரம் வரை நீந்திச் செல்லும். சிட்டுக் குருவிகள் கீச் கீச் எனக் குரல் எழுப்பும். இதன் குரல் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். கிராமங்களின் பின்னணி இசையே சிட்டுக் குருவிகள் தான். இனப் பெருக்கக் காலத்தில் ஆண் பறவை பலவித ஒலிகளை உண்டாக்கும். இனிமையாக பாடுவதும் உண்டு. பல பறவைகள் ஒன்றாகக் கூடிப் பாடுகின்றன. இது புழுதி அல்லது தண்ணீர் குளியல் போன்ற சமூக நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறது. இது மரங்களிலும், புதர்களிலும் ஒன்றாகக் கூடுகிறது. இவை ஸ்கேடிலர் இறகுகளுக்குக் கீழே அலகை வைத்துக் கொண்டு தூங்குகின்றன. இவை தங்கள் வாழ்நாளில் பெரும்பாலும் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் செல்வது கிடையாது. குறைந்த தூரமே இடம் பெயரும். […] பல விதமான தானியங்களை உண்ணும். பூ மொட்டு பூச்சிகளையும் தின்னும். குஞ்சுகளுக்கு இரை தேடித் தரும் போது பூச்சிகளைப் பிடித்து, இறக்கை, கால்கள் முதலிய கடினமான பகுதிகளைப் பிய்த்தெறிந்து விட்டு, பின் அவைகளைக் குஞ்சுகளுக்கு ஊட்டுவது வழக்கம். குளிர் காலத்தில் சிட்டுக் குருவிகள் நூற்றுக்கணக்காக ஒரு புதரில் அடைந்து ஒன்று சேர்ந்து இரவைக் கழிக்கும். பாதுகாப்பு சிட்டுக் குருவிகள் மிக வேகமாக அழிந்து வருகின்றன. நகரமயமாக்கல், புதர்கள் குறைவது, பூச்சிக் கொல்லி மருந்து ஆகியவையே சிட்டுக் குருவிகள் அழிவுக்கு முக்கிய காரணமாகும். சிட்டுக் குருவிகள் குறைந்ததால் பூச்சிகள், வெட்டுக் கிளிகள் அதிகரித்தன. இதனால் பயிர்களில் மகசூலும் குறைந்தன. நகர்ப் புறங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகள், குளிரூட்டப்பட்ட வீடுகள் போன்றவற்றில் சிட்டுக் குருவிகள் கூடு கட்டி வாழமுடியாமல் போனது. பல சரக்குக் கடைகளுக்குப் பதிலாக பல்பொருள் அங்காடிகள் அதிகரித்து விட்டன. பாலிதீன் பைகளில் உணவுத் தானியங்கள் விற்கப்படுகின்றன. இதன் காரணமாக வீதிகளில் உணவு தானியங்கள் சிதற வாய்ப்பில்லை. அதனால் உணவு கிடைக்காமல் இறக்க நேரிடுகிறது. சிட்டுக் குருவிகளின் அழிவிற்கு செல்போன் டவர்களில் இருந்து வெளியேறும் கதிர் வீச்சு தான் காரணம் என்பதை எந்த ஆய்வும் உறுதிப்படுத்தவில்லை. சிட்டுக் குருவிகளுக்கு உணவளிப்பது மற்றும் வாழ்வதற்கான இட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் இவற்றை அழிவிலிருந்து பாதுகாக்கலாம். ஜம்மு – காஷ்மீர் […] ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பறவையின் பெயர் கலீஜ் பெசண்ட் (Kalij Pheasant) ஆகும். காஷ்மீர் மொழியில் இது வான் கோகூர், வான் கோகுட் மற்றும் பான் கோகூர் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இது காட்டுச் சேவல் எனலாம். 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு 5 அன்று ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. அதே நேரத்தில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலப் பறவையாக கருப்பு கழுத்து கொக்கு 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு 5க்கு முன்பு வரை இருந்தது. ஜம்மு காஷ்மீர் புதிய யூனியன் பிரதேசமாக மாறியப் பிறகு இதற்கு என மாநிலப் பறவை கண்டுபிடிக்க வேண்டி இருந்தது. நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு கலீஜ் பெசண்ட் பறவையைத் தேர்ந்தெடுத்தனர். இந்தப் பறவை ஜம்மு காஷ்மீர் பகுதியில் பரவலாகக் காணப்படுகிறது. குறிப்பாக மன்சார், சுரின்சார், ஜஸ்ரோட்டா மற்றும் பதேர்வா ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. இந்தப் பறவைகளை வேட்டையாடாமல் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா இதற்கு ஒப்புதல் தந்தார். வனம், சுற்றுச் சூழல் மற்றும் சூழலியல் துறை இதற்கான உத்தரவை பிறப்பித்தது. 2021ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று கலிஜ் பெசண்ட் மாநிலப் பறவையாக அறிவிக்கப்பட்டது. இதன் அறிவியல் பெயர் லோபுரா லுகோமெலனோஸ் (Lophura leucomelanos) என்பதாகும். வாழிடம் இது இமயமலைத் தொடரைச் சேர்ந்த பறவையாகும். இது இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், தாய்லாந்து போன்ற நாடுகளில் வாழ்கிறது. மேலும் தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் காணப்படுகிறது. இது தெற்காசியாவை பூர்வீகமாகக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இது வட இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த பறவையை எளிதாகச் காணலாம். இது ஒரு விளையாட்டுப் பறவையாகக் கருதப்படுகிறது. 1962ஆம் ஆண்டில் ஹவாய் தீவுக்கு விளையாட்டுப் பறவையாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஹவாய் தீவுகளில் இது குழுக்களாகக் காணப்படுகின்றன. பொதுவாக ஒரு பெண் மற்றும் ஒன்று முதல் ஆறு பறவைகள் கூட்டமாக காணப்படுகின்றன. ஒரு ஆண் இந்தக் கூட்டத்தை ஆதிக்கம் செலுத்துகிறது. மேலும் இது இடம் பெயராதப் பறவைகள் ஆகும். ஹவாய் தீவுகளில் மந்தையாக வாழ்கின்றன. ஆகவே ஹவாய் தீவுகள் இவை வாழ்வதற்கு ஏற்ற இடமாக உள்ளன. உடலமைப்பு ஆண் பறவைகள் மிக அழகானவை. இது அழகான இறகுகளுக்கு பிரபலமானது. தெற்காசியாவில் காணப்படும். பறவைகளில் இது மிகப் பெரிய பறவைகளில் ஒன்றாகும். ஆண் பறவை பெண் பறவையை விட பெரியது. ஆண் பறவை 63 செ.மீ. முதல் 70 செ.மீ. நீளம் வரை இருக்கும். அதே சமயம் பெண் பறவை 50 செ.மீ. வரை இருக்கும். ஆண் பறவை 1500 கிராம் முதல் 1700 கிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். ஆண் பறவைகளின் இறகுகள் பளபளப்பாகவும், கரு நீலம் அல்லது சாம்பல் கருப்பு நிறத்தில் இருக்கும். ஆண் பறவைகள் வண்ணமயமாகவும், பெண் பறவைகள் சாம்பல் அல்லது பழுப்பு நிறத்தில் மங்கலாக இருக்கும். ஆண் மற்றும் பெண் பறவைகள் இருவருக்கும் சிவப்பு நிறத் தலைகள் உள்ளன. இந்த இனங்கள் சாம்பல் நிறக் கால்களைக் கொண்டுள்ளன. மேலும் நீண்ட கருப்பு நிற வாலைக் கொண்டுள்ளன. இவை மணிக்கு 43 முதல் 61 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கின்றன. உணவு […] இவை பசுமையான மற்றும் இலையுதிர் காடுகளில் வாழ்கின்றன. இவை மூங்கில் விதைகள், கரையான்கள், இலைகள், சிறிய பாம்புகள், தானியங்கள், பழங்கள், ஊர்வன, பூச்சிகள், வேர்கள் மற்றும் காட்டுக் கிழங்குகளை உணவாக உண்கின்றன. ஆனால் இந்த பறவைகள் மனிதர்கள், பூனைகள், நரிகள் மற்றும் காட்டு நாய்களால் வேட்டையாடப்படுகின்றன. இனப்பெருக்கம் பொதுவாக ஏப்ரல் மாதத்தில் இனப் பெருக்கம் செய்கின்றன. ஆண் பறவைகள் பொதுவாக வெவ்வேறு ஒலிகள் மற்றும் அமைப்புகளை எழுப்புகின்றன. பெண் பறவைகள் கூடுகளை தரையில் அமைக்கின்றன. இனப்பெருக்கக் காலத்தில் ஆண் மற்றும் பெண் பறவைகள் ஒருவரையொருவர் நட்பு நடத்தை மூலம் ஈர்க்கப்படுகின்றன. ஒவ்வொரு பருவத்திலும் பெண் 6 முதல் 10 முட்டைகளை இடுகின்றன. அடைகாக்கும் காலம் 20 முதல் 23 நாட்கள் ஆகும். இதன் ஆயுட்காலம் 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும். இது சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பின் சிவப்பு பட்டியலில் குறைந்த அக்கறை கொண்ட பிரிவில் பட்டியல் இடப்பட்டுள்ளது. லடாக் இந்தியாவின் புதிய யூனியன் பிரதேசமாக லடாக் 2019ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று நிறுவப்பட்டது. அதற்கு முன் இது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. லடாக் நிர்வாகம் 2021ஆம் ஆண்டு ஆகஸ்டு 31 அன்று கருப்புக் கழுத்துக் கொக்கை (Black-necked Crane) மாநிலப் பறவையாக ஏற்றுக் கொண்டது. இது கிழக்கு லடாக்கின் சாங்தாங் பகுதியில் மட்டுமே காணப்படுகிறது. லடாக்கில் இது அரிதானப் பறவை. இது பௌத்த மரபுகளில் மிகவும் போற்றப்படுகிறது. இது கலாச்சார ரீதியாக பூட்டானில் பாதுகாக்கப்படுகிறது. இது அமைதியான இயல்புடைய பறவை. மனிதர்களுக்கு எந்த விதத்திலும் தீங்கு விளைவிக்காதது. இது கருங்கழுத்துக் கொக்கு மற்றும் திபெத்திய கொக்கு என அழைக்கப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் கிரஸ் நிக்ரிகோலிஸ் (Grus nigricollis) […] என்பதாகும். வாழிடம் இது ஆசியாவில் வாழக் கூடிய நடுத்தர உயரமுடைய கொக்கு, சீனா, பூட்டான், நேபாளம், திபெத் மற்றும் இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் உள்ளன. பெரும்பாலும் ஆற்றுக்கு அருகில் வாழ்கின்றன. சீனாவின் வெவ்வேறு நதிகளுக்கு அருகில் இவை காணப்படுகின்றன. அங்கு தரையில் உணவு தேடிச் சுற்றித் திரிவதைக் காணலாம். இவை கடல் மட்டத்தில் இருந்து உயரமான பகுதிகளிலும், உயரம் குறைந்த பகுதிகளிலும் வாழ்கின்றன. இவை இனப்பெருக்க காலத்தில் வடக்கு நோக்கி அல்பைன் புல்வெளிக்குச் செல்கின்றன. மேலும் இதன் அருகில் உள்ள சதுப்பு நிலங்கள் மற்றும் நதி பள்ளத்தாக்குப் பகுதிக்கும் நகர்கின்றன. மேலும் இவை திபெத் பீடபூமி, இந்தியா மற்றும் பூட்டானின் தொலை தூரப் பகுதிகளுக்கும் இனப் பெருக்கம் செய்ய செல்கின்றன. உடலமைப்பு இது 140 செ.மீ. நீளம் வரை வளரும். உடலின் எடை சுமார் 5.5 கிலோ ஆகும். இது இறக்கை விரிந்த நிலையில் 7.8 அடி நீளம் கொண்டது. பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கும். உடல் அழகான வண்ணக் கலவைகளால் ஆனது. ஆண் பறவை மற்றும் பெண் பறவை ஆகிய இருபாலரும் ஒரே மாதிரியானவர்கள். இதன் பெயருக்கு ஏற்ப கருப்பு தலையைக் கொண்டுள்ளது. மேல் கழுத்து, சிவப்பு கிரீடம் பகுதியால் ஆனது. கீழ் கழுத்து மற்றும் அவைகளின் கீழ் உடல் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருக்கும். முதுகு அல்லது உடல் மங்கிய சாம்பல் நிறமானது. வாலின் முன் பகுதியில் கருப்பு மற்றும் வெள்ளை திட்டுகளுடன் வெண்மை கலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும். வால் அடர்த்தியான முடிகளால் ஆனது. இது ஒரு குறுகிய நீண்ட கழுத்தும், சிறிய தலையும், உடல் பெரியதாகவும், அதனுடன் ஒன்று புதர் போன்று அடர்த்தியான வால் இணைக்கப்பட்டுள்ளது. சதுப்பு நிலங்களில் நடப்பதற்கு எளிதாக நீண்ட மெல்லிய கால்கள் உள்ளன. இவை பழுப்பு கலந்த கருமை நிறமுடையது. இரையை எளிதில் பிடிக்க நீண்ட அலகும் உள்ளது. உணவு […] இவை குழுக்களாக தரையில் உணவு தேடுகின்றன. தாவர வேர்கள், கிழங்குகள், உருளைக் கிழங்குகள், கேரட் மற்றும் டர்னிப்ஸ் ஆகியவற்றை உண்ணும். இவை பார்லி, ஓட்ஸ், பக்வீட் மற்றும் உதிர்ந்த தானியங்களையும் உண்ணும். இது தவிர மண் புழுக்கள், பூச்சிகள், தவளைகள், நத்தைகள் மற்றும் மீன்களையும் உண்ணும். இனப் பெருக்கம் இனப்பெருக்க காலத்தில் நடன அசைவுகள் செய்கின்றன. உரத்த குரலில் எக்காளமிடும். இனப்பெருக்கக் காலத்தில் நீண்ட கால ஜோடிப் பிணைப்புகளை கொண்டுள்ளன. கூடுகளை பொதுவாக ஒரு பெரிய ஆழமற்ற ஈர நிறத்திற்குள் அமைக்கும். இதில் புல், களைகள் ஆகியவற்றைப் போடுகின்றன. ஒன்று அல்லது இரண்டு முட்டைகளை இடும். அடைகாக்கும் காலம் 30 முதல் 35 நாட்கள் ஆகும். இதன் ஆயுட்காலம் 20 முதல் 30 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு இது உணவிற்காக நீண்ட தூரம் நடந்து செல்லும். மேலும் இதற்கு பெரிய இறக்கைகள் இருப்பதால் நீண்ட தூரம் பறந்து செல்கின்றன. உலகளவில் சுமார் 8800 முதல் 11000 பறவைகள் இருப்பதாக மதிப்பிட்டுள்ளனர். சிறுத்தைகளால் வேட்டையாடப்படுகின்றன. பூட்டானில் மின் கம்பிகளில் மோதி இறப்புக்கு உள்ளாகின்றன. இதன் முட்டைகள் காக்கைக்கு இரையாகின்றன. வாழ்விடம் இழப்பு மற்றும் அழிப்பு ஆகியவை கருப்புக் கழுத்துக் கொக்குகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலாகும். சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் சிவப்பு பட்டியலில் பாதிக்கப்படக் கூடியது என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும், சீனாவிலும் சட்டப் பூர்வமாக பாதுகாக்கப்படும் இனமாக இது உள்ளது. லட்சத்தீவு லட்சத்தீவு மாநிலப் பறவையின் பெயர் சூட்டி டெர்ன் (Sooty Tern) ஆகும். இது ஆங்கிலத்தில் தி டெர்ன் (The Tern) அல்லது காமன் டெர்ன் (Common Tern) என அழைக்கப்படுகிறது. உள்ளூர் மக்கள் கரிபெட்டு (Karifettu) என்கின்றனர். ஹவாய் தீவில் இவா இவா (ewa ewa) எனவும், பாலினேசியாவில் அதன் பெயர் மனுதாரா (பறவை மனிதன்) அல்லது டெர்ன் பறவை அழைக்கப்படுகிறது. பேச்சு வழக்கில் வைட்வேக் டெர்ன் அல்லது வைட்வேக் என அழைக்கப்படுகிறது. கார்ல் லின்னேயஸ் 1766ஆம் ஆண்டில் இதற்கு ஸ்டெர்னா புஸ்காட்டா என அறிவியல் பெயர் சூட்டினார். ஸ்டெர்னா பேரினம் பின்னர் பிரிக்கப்பட்டது. தற்போது இதன் அறிவியல் பெயர் ஓனிகோபிரியன் புஸ்காட்ஸ் (Onychoprion fuscatus) என்பதாகும். வாழிடம் இது ஒரு கடல் பறவை. இது வெப்ப மண்டலம் மற்றும் துணை வெப்ப மண்டலப் பகுதிகளில் வாழ்கிறது. அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய நாடுகளின் கடல் பகுதியில் காணப்படுகிறது. பூமத்திய ரேகை மண்டலம் முழுவதும் உள்ள தீவுகளில் இனப்பெருக்கம் செய்வதற்கு மட்டுமே நிலத்திற்கு வருகின்றன. இந்தப் பறவை இடம் பெயர்ந்து பரவக் கூடியது. இது ஒரு சமூகப் பறவை. பெரிய குழுக்களாக காணப்படும். உடலமைப்பு சூட்டி டெர்ன் ஒரு அழகான பறவையாகும். இதன் வால் உள்பட 33 செ.மீ. முதல் 45 செ.மீ. நீளம் வரை இருக்கும். இது இறகு விரிந்த நிலையில் இறக்கைகள் 80 செ.மீ. முதல் 95 செ.மீ. நீளம் இருக்கும். வயது வந்த பறவையின் எடை 150 முதல் 240 கிராம் வரை இருக்கும். இதன் இறகுகளில் எண்ணெய் இல்லாததால் இதனால் மிதக்க முடியாது. […] இப்பறவையின் தலைப் பகுதி கருப்பு நிற கிரீடம் கொண்டது. பின் கழுத்து மற்றும் மேல் பகுதியும் கருப்பு நிறத்தால் ஆனது. விமான இறகுகளின் மேல் பகுதி கருப்பாகவும், கீழ் பகுதி வெண்மையாகவும் உள்ளது. கண்கள் அடர் பழுப்பு நிறமானவை. அலகிலிருந்து கண்ணுக்கு ஒரு கருப்பு கோடு உள்ளது. இதன் தலை கருப்பாகவும், முகம் வெள்ளையாகவும் இருக்கும். வெள்ளை நிறமான நெற்றிப் பொட்டு கண்ணுக்கு சற்று மேலே முடிவடைகிறது. இதன் அலகு நீளமாகவும், மெல்லியதாகவும், வலிமையாகவும் உள்ளது. இது கருப்பு நிறமுடையது. கால்கள் வலுவாகவும், கருப்பு நிறமாகவும் இருக்கும். வால் நீளமானது. குறிப்பிடத்தக்க வகையில் பிளவுபட்டுள்ளது. பார்ப்பதற்கு முட்கரண்டி போன்ற தோற்றம் கொண்டது. வால் கருப்பாகவும், வெள்ளை நிற வெளிப்பட்டைகளையும் கொண்டிருக்கிறது. ஆண் மற்றும் பெண் என இரு பாலினங்களும் ஒரே மாதிரியானவை. இதன் தொண்டை மற்றும் மார்பகம் கருமையானது. வயிறு, வாலின் கீழ் பகுதி மற்றும் இறக்கை கீழ் பகுதி வெளிர் சாம்பல் நிறத்தில் இருக்கும். இது வேகமாகப் பறக்கும். உணவு இவை மீன், ஸ்க்விட், ஓட்டுமீன்கள், பூச்சிகள் மற்றும் துர்நாற்றம் வீசக் கூடியதையும் உண்கின்றன. இவை உணவை வேட்டையாட பல்வேறு நுட்பங்களைப் பின்பற்றுகின்றன. அரிதாக மூழ்கியும் டைவ் அடித்தும் மீன்களைப் பிடிக்கின்றன. இருட்டில் மேல் வரும் மீன்களையும் இரவு நேரத்திலும் பிடிக்கின்றன. இனப்பெருக்கம் […] இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் கடல் தீவுகள், மணல், பாறை, பவளப்பாறைகள் போன்ற இடமாகும். இனப்பெருக்கம் வருட முழுவதும் நடக்கலாம். தரையை சுரண்டியோ அல்லது பாறைத் துளைகளில் கூடு அமைக்கும். கூடுகள் ஒன்றுக்கு ஒன்று மிக நெருக்கமாக காணப்படும். இப்பறவை பாலியல் முதிர்ச்சி அடைய 5 முதல் 7 ஆண்டுகள் ஆகின்றன. பொதுவாக திறந்த வெளிகளிலும், சில சமயங்களில் புதர்களிலும் கூட கூடுகளைக் கட்டுகின்றன. 1 முதல் 2 முட்டைகளை இடுகின்றன. முட்டைகள் வெண்மை, பழுப்பு, லாவெண்டர், சாம்பல், சில சமயம் கருப்பு நிறமாகவும் இருக்கும். அடைகாக்கும் காலம் 28 முதல் 30 நாட்கள் ஆகும். பெற்றோர்கள் இருவரும் அடைகாப்பதை பகிர்ந்து கொள்கின்றன. இதன் ஆயுட்காலம் 26 முதல் 32 ஆண்டுகள் ஆகும். கடுமையான புயலால் இப்பறவை பாதிக்கப்படுகிறது. ஆனால் அழிந்து வரும் பறவை இனம் அல்ல. சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் குறைந்த அக்கறை கொண்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரி பாண்டிச்சேரி என் அழைக்கப்படும் புதுச்சேரி (Puducherry) மாநிலப் பறவை ஆசியக் குயில் (Asian Koel) ஆகும். இது காளகண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. 1747ஆம் ஆண்டில் ஜார்ஜ் எட்வர்ட்ஸ் என்பவர் இப்பறவையை வரைந்து தனது புத்தகத்தில் வெளியிட்டார். இவர் தி பிரவுன் அண்ட் ஸ்பாட்டடு இந்தியன் குக்கூ (The Brown and Spotted Indian Cuckow) என இதை ஆங்கிலத்தில் அழைத்தார். […] கார்ல் லின்னேயஸ் என்பவர் 1756ஆம் ஆண்டில் இதற்கு குக்குலஸ் ஸ்கோலோபேசியஸ் என்ற அறிவியல் பெயரைச் சூட்டினார். அதன் பிறகு 1827ஆம் ஆண்டில் நிக்கோலஸ் விக்கோர்ஸ் மற்றும் தாமஸ் ஹார்ஸ்ஃபீல்ட் ஆகிய இருவரும் இதற்கு யூடினாமிஸ் ஸ்கோலோபேசியஸ் (Endynamys scolopaceus) எனப் பெயர் மாற்றினர். ஆசியக் குயில் இந்தியத் துணைக் கண்டத்தில் மூன்று வகைக் குயில்கள் உள்ளன. அவற்றில் ஒன்று ஆசியக் குயிலாகும். ஆண் குயில் பளபளப்பான கருமை நிறமுடையது. ஆனால் பெண் குயில் பழுப்பு நிறமாகவும் அதில் வெண் புள்ளிகள் நிறைந்தும் இருக்கும். தனியாகவோ, ஜோடியாகவோ மரங்கள் நிறைந்த தோட்டம், தோப்புகளில் இவற்றைக் காணலாம். அடர்ந்த இடத்தில் ஒளிந்து கொண்டு தங்கள் நேரத்தைச் செலவிடுகின்றன. இது மரத்தில் வாழும் பறவை. தரையில் இதைக் காணமுடியாது. பழங்கள், சிறு கனிகளும் நிறைந்துள்ள தோட்டங்களை நாடி வரும். இது அழகாகப் பாடும் பறவை. ஆகவே பலர் குயில் பற்றிய பாடல்களை எழுதியுள்ளனர். இந்திய மற்றும் நேபாள நாட்டுக் கவிதைகளில் குயில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாட்டுப் புறக் கதைகள், புராணங்கள் ஆகியவற்றில் குயில் பல பற்றிய குறிப்புகள் உள்ளன. இது பாரம்பரியமாக இதன் பாடலுக்காக உயர்வாகக் கருதப்படுகிறது. குயில் புலவர்களால் பாராட்டப்பட்ட பறவையாகும். ஒரு காலத்தில் இந்தியாவில் கூண்டு பறவையாகவும் வளர்த்துள்ளனர். இது வேக வைத்த அரிசியைக் கூட உண்ணும். கூண்டில் 14 ஆண்டுகள் வரை உயிருடன் இருந்துள்ளன. ஆசியக் குயில் ஒரு கூச்ச சுபாவமுள்ள பறவை. இவை விரைவாகவும், நேராகவும் பறக்கின்றன. கூவுதல் குயிலின் குரல் மிக இனிமையானது. பொதுவாக குயில் கூவுகிறது என்பர். இனியான குரல் வளத்திற்கு குயிலைக் குறிப்பிட்டாலும், உண்மையாலும் கூவுவது ஆண் குயில் மட்டுமே. இது குவூ குவூ என சப்தத்தை எழுப்பும். ஆரம்பத்தில் தாழ்ந்த குரலில் குவூ என ஒலியுடன் இனிமையாக துவங்கும். பிறகு படிப்படியாக சத்தம் அதிகரிக்கும். ஏழாவது அல்லது எட்டாவது கூப்பாட்டுடன் திடுமென நிறுத்திவிடும். பிறகு மீண்டும் அதே கதியில் பாடல் ஆரம்பிக்கும். ஆண் குயிலின் பாடலுடன் பெண் குயிலின் குரலை ஒப்பிட்டால் அது கிக்-கிக்-கிக் என்ற கூப்பாடு மட்டுமே போடும். இது கதறல் ஒலி போன்றது. நடத்தை இது கூடு கட்டி குடும்பம் நடத்தத் தெரியாத பறவை. பொதுவாக காகத்தின் கூடுகளில் தனது முட்டையை இடும். பொதுவாக குறைந்த உயரமும், பழ மரங்களுக்கு அருகாமையிலும் அமைந்துள்ள பறவை கூடுகளைத் தேர்வு செய்கின்றன. ஒரு காகத்தின் கூட்டினை ஆண் குயில் ஒரு முட்டையினை திருடுச் செல்கிறது. அல்லது கீழே தள்ளி விடுகிறது. அப்போது காகம் குயிலைத் துரத்திச் செல்லும். இச்சமயத்தைப் பயன்படுத்தி பெண் குயில் அக்கூட்டில் ஒரு முட்டை இடுகிறது. ஆரம்ப காலத்தில் காட்டுக் காகத்தின் கூடுகளில் முட்டை இட்டது. 1880ஆம் ஆண்டிற்குப் பிறகு இலங்கையில் வீட்டுக் காகத்தின் கூட்டிலும் முட்டை இடத் தொடங்கியது. இந்தியாவிலும் வீட்டுக் காகம் மற்றும் மைனாவின் கூடுகளிலும் முட்டை இடுவதைக் கண்டனர். மேலும் இந்தியாவில் கருப்பு ட்ரோங்கோ பறவையின் கூட்டிலும் முட்டை இடுகிறது. இது தவிர ஐரோப்பாவில் மாக்பி மற்றும் கருப்பு தலை ஓரியோல் பறவைகளின் கூடுகளிலும் முட்டை இடுகின்றன. குயிலின் வாழ்வியலும் அவை சார்ந்திருக்கும் பறவைகளுடைய வாழ்வியலும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. முட்டையிட்டு, குஞ்சு பொரித்து, அதற்கு உணவூட்டி, அது பறக்கும் வரை பாதுகாக்கும் பொறுப்பை தன்னுடைய பணியாக குயில் எடுத்துக் கொள்வது கிடையாது. அப்பொறுப்பை வேறு பறவையின் கையில் ஒப்படைத்து விடுகிறது. குயிலின் முட்டையை சேர்த்து காகம் அல்லது வேறு பறவைகள் அடைகாக்கும். குஞ்சு பொரித்தவுடன் குயிலின் குஞ்சுக்கும் சேர்த்தே உணவு கொடுக்கும். நன்கு வளர்ந்த குயிலின் குஞ்சுகள் வளர்ப்புத் தாய் தந்தைகளிடம் இருந்தே உணவு உண்ணும். அப்போதெல்லாம் குயிலின் குஞ்சு காகத்தின் குஞ்சு போலவேத்தான் கட்டைக் குரலில் கத்தும். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அது […] குயிலின் குரலைப் பெற்றுவிடும். தனது குஞ்சுகளைப் பராமரித்து வளர்க்கும் வேலையை இன்னொரு பறவையிடம் விட்டு விடுவனற்றை பாராசிடிக் பறவைகள் (Parasitic bird) என்கின்றனர். இதை ஒட்டுண்ணித் தன்மை என்று கூறுகின்றனர். குஞ்சுகளை பராமரித்து வளர்க்கின்ற பறவையை புரவலர் பறவை (Host bird) அல்லது காப்பவர் பறவை என்று பெயர். இதில் குயில் ஒரு பாராசிடிக் பறவை ஆகும். காக்கை ஒரு புரவலர் பறவையாகும். பாதுகாப்பு குயில்களுக்கு பொதுவாக அச்சுறுத்தல்கள் ஏதும் கிடையாது. இது சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) சிவப்புப் பட்டியலின்படி குறைந்த அக்கறை கொண்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளது. Reference : 1. இணைய தளம் 2. கலைக் களஞ்சியம் 3. இனிது இணைய இதழ் 4. Birds of India 5. Andhra Pradesh declares new State Symbols – The Indian Express 6. Great Indian Hornbill – The Hindu 7. Abhinav Nature Conservation – Vijay Choudhary 8. Pinterest 9. Nongin the state bird of Manipur – Sanasam Yaiphaba 10. Navuttardkhand.com ஆசிரியர் பற்றிய குறிப்பு தமிழ் மொழியில் நல்ல அறிவியல் நூல்கள் இல்லாத குறையைக் களைவதில் ஏற்காடு இளங்கோ முக்கியப் பங்காற்றுகிறார். 2000ஆம் ஆண்டில் வெளிவந்த இவரது முதல் நூல் அதிசயத் தாவரங்கள். அன்றிலிருந்து 22 ஆண்டுகளாக தொடர்ந்து பல நூல்களை எளிய தமிழில் எழுதி வருகிறார். […] தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேலம் மாவட்ட உதவிச் செயலாளராக 12 ஆண்டுகளும், மாவட்டச் செயலாளராக 8 ஆண்டுகளும் பணிபுரிந்துள்ளார். பின்னர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேலம் மாவட்டத் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். இவர் மக்களிடம் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்த முக்கியக் காரணகர்த்தாவாகமாக உள்ளார். இவருடைய பழங்கள் மற்றும் செவ்வாய் கிரகமும், செவ்வாய் தோஷமும் ஆகிய இரண்டு நூல்கள் அனைவருக்கும் கல்வி இயக்கம் என்ற அமைப்பின் சார்பாக 38000 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிடும் துளிர் அறிவியல் மாத இதழின் ஆசிரியர் குழுவில் முக்கியமானவர். எழுத்துச் சிற்பி, அறிவியல் மாமணி, வல்லமைமிகு எழுத்தாளர், உழைப்பாளர் பதக்கம் ஆகிய விருதுகளால் கௌரவிக்கப்பட்டார். 1992ஆம் ஆண்டு ஏற்காட்டில் உள்ள பெரிய ஏரியில் மண்டிக் கிடந்த ஆகாயத் தாமரைகளை, மாணவர்கள், தொண்டு அமைப்புகள் மற்றும் பொது மக்கள் உதவியுடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக, நீக்கி ஏரியைத் துப்புரவு செய்தார். இணையதளம் பொதுவகத்தில் 23 துணைப்பகுப்புகளின் மூலம் 19,195 படங்களை இணைத்துள்ளார். ஏற்காடு மலையில் உள்ள தாவரங்களை வகைப்படுத்தி, பெயரிட்டு, அனைத்து புகைப்படங்களையும் இணையதளம் பொதுவகத்தில் பதிவிட்டுள்ளார். இதுவரை 2,653 தாவரங்களின் 10,081 படங்களை இணைத்துள்ளார். பிரிதிலிபி என்னும் இணையத்தில் 109 கட்டுரைகளை எழுதியுள்ளார். இதுவரை 21,685 பேர் அக்கட்டுரைகளைப் படித்துள்ளனர். பிரிதிலிபி தளத்தில் 1,00,000 வார்த்தைகள் எழுதியமைக்காக பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ப்ரீ தமிழ் இ-புக்ஸ் மூலம் 32 புத்தகங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவை ஜூன் 2015 முதல் டிசம்பர் 2021 வரை 5,47,205 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. சிறிய அளவிலும், பெரிய அளவிலும் 104 புத்தகங்களை இதுவரை எழுதியுள்ளார். தொடர்ந்து அறிவியல் நூல்களை எழுதி வருகிறார். FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.