[] 1. Cover 2. Table of contents இந்திய மாநில விலங்குகள் இந்திய மாநில விலங்குகள்   ஏற்காடு இளங்கோ   yercaudelango@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA-NC கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/indian_state_animals மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation This Book was produced using LaTeX + Pandoc என்னுரை இந்திய நாட்டிற்கென தேசிய விலங்கு இருப்பது போல்,ஒவ்வொரு மாநிலத்திற்கும் என மாநில விலங்குகள் உள்ளன.விலங்குகளைப் பார்ப்பது என்பது மக்களுக்கு ஆசையாக இருக்கும். இந்த விலங்குகள் நமக்கு பிரமிப்பை ஊட்டும். அதே சமத்தில் விலங்குகளைக் கண்டால் பயமும் அச்சமும் ஏற்படும். இதற்குக் காரணம் பல விலங்குகள் வேட்டையாடும் குணம் கொண்டவை. ஆகவே அவற்றைக் கண்டு நாம் பயப்படுகிறோம்.    அதே சமயத்தில் வேட்டையாடும் குணமில்லாத சாதுவான விலங்கினங்களும் உள்ளன. இவை  தாவரங்களை மட்டுமே உண்ணக்கூடிய விலங்குகளாகும். நாம் இவற்றைக் கண்டும் அச்சமடைகிறோம். இதற்குக் காரணம் அவை உருவத்தில் மிகமிகப் பெரியவை. அது மட்டும் அல்லாமல் மற்றவர்களை தாக்கக் கூடிய வகையில் சில விலங்குகள் கொம்புகளையும் கொண்டுள்ளன.    இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு உதவி புரிந்த எனது மனைவி திருமிகு.இ. தில்லைக்கரசி அவர்களுக்கு நன்றி. இந்தப் புத்தகத்தை பிழைத் திருத்தம் செய்து கொடுத்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் திருமிகு. நா. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இஃது எனது 107 ஆவது புத்தகமாகும். இந்தப் புத்தகத்தை வெளியிட்ட Free Tamil Ebooks.Com அவர்களுக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன். வாழ்த்துகளுடன் -ஏற்காடு இளங்கோ விலங்குகள் உலகில் தாவர இனங்களை விட விலங்கினங்களே அதிகம் உள்ளன. உலக அளவில் சுமார் 15 லட்சத்து 25,728 உயிரினங்கள் உள்ளன என விவரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் ஒரு லட்சம் பூச்சி இனங்கள் ஆகும். மேலும் விலங்கினங்களை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். இவை முதுகெலும்பு இல்லாதவை மற்றும் முதுகெலும்பு உடையவை என்பனவாகும். உலகில் முதுகெலும்பு இல்லாதவை 13,05,075 இனங்களும், முதுகெலும்பு உடையவை 65,178 இனங்களும் உள்ளன. இன்னும் லட்சக்கணக்கான உயிரினங்கள் கண்டுபிடிக்கப் படாமலும் உள்ளன. மேலும் பொதுவாக விலங்குகளின் நீளம் 8.5 மைக்ரோ மீட்டர்கள் முதல் 33.6 மீட்டர்கள் வரை இருக்கும். சில மைக்ஸோசோவா உயிரினத்தில் உள்ள ஒட்டுண்ணிகள் 20 மைக்ரோ மீட்டருக்கு மேல் வளராது. மேலும் சிறிய இனங்களில் ஒன்று மைக்ஸோபாலஸ் ஷெக்கல் என்பது முழுமையாக வளரும் போது இது 8.5 மைக்ரோ மீட்டருக்கு மேல் வளர்வது இல்லை. […] முதுகெலும்பு உள்ள விலங்குகளில் மிகச் சிறியது ஒரு தவளை இனமாகும். இது பாடோபைரினி அமானுயென்சிஸ் (Paedophryne amauensis) என்பதாகும். இது 7.7 மில்லி மீட்டர் நீளம் மட்டுமே வளரும். பூமியில் வாழக்கூடிய மிகப்பெரிய விலங்கினம் நீலத் திமிங்கலம் (Balaenoptera musculus) ஆகும். இது 110 அடி நீளம் வரை வளர்ச்சி அடையும். நிலப்பரப்பில் வாழக்கூடிய மிகப்பெரிய விலங்கு ஆப்பிரிக்க புஷ் யானை ஆகும். இது 12.25 டன்கள் வரை எடையும்,10.67 மீட்டர் அதாவது 35 அடி நீள உடலும் கொண்டது. இதுவரை பூமியில் வாழ்ந்த மிகப்பெரிய உயிரினம் டைனோசர் சாரோபோர்ட் என்பதாகும். இது 73 டன்கள் எடை உள்ளதாக இருந்தது. இந்த டைனோசர் வாழ்ந்து, அழிந்து போனதற்கு ஆதாரமாக அதன் தொல்லுயிர் படிமம் கிடைத்துள்ளது. இந்தியா இந்தியாவில் 1,02,718 விலங்கினங்கள் இருக்கின்றன. அவை 390 இனங்களாக உள்ளன. இவற்றில் 38 இனங்கள் இந்தியாவிற்கு மட்டுமே சொந்தமானவை. உலகின் 8 ஆவது பல்லுயிர் பகுதியாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவில் 1,02,718 வகையான விலங்கி இனங்கள் உள்ளன. அதிகாரப்பூர்வமாக உலகில் உள்ள 36 பல்லுயிர் மையங்களில் நான்கு இந்தியாவில் உள்ளன. ஆசிய யானை, வங்கப் புலி ,ஆசிய சிங்கம், இந்திய சிறுத்தை மற்றும் இந்திய காண்டாமிருகம் உள்பட பல நன்கு அறியப்பட்ட பெரிய பாலூட்டுகளின் தாயகமாக இந்தியா விளங்குகிறது. இந்த விலங்குகளில் சில கலாச்சாரத்தில் இடம் பெற்றுள்ளன.சில தெய்வங்களுடன் தொடர்புடையன. இந்த பெரிய பாலூட்டிகள் இந்தியாவில் வனவிலங்கு சுற்றுலாவிற்கு முக்கியமானவை. மேலும் பல தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களின் தேவைகளை இவை பூர்த்தி செய்கின்றன.இந்த கவர்ச்சியான விலங்குகள் இந்தியாவில் வன விலங்கு பாதுகாப்பு முயற்சிக்கு பெரிதும் உதவுகின்றன. இந்தியக் குடியரசில் 28 மாநிலங்கள் மற்றும் 8 ஒன்றியப் பகுதிகளும் உள்ளன. இந்தியாவின் தேசிய விலங்கை தவிர, அதன் ஒவ்வொரு மாநிலங்களுக்கும்,யூனியன் பிரதேசங்களுக்கும் தனித்தனி மாநில விலங்குகள் இருக்கின்றன. தேசிய விலங்கு இந்தியாவின் தேசிய விலங்கு வங்காளப் புலி (Bengal Tiger) ஆகும். இது ஆங்கிலத்தில் டைகர் என அழைக்கப்படுகிறது. இது பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த மிகப்பெரிய காட்டுப் பூனைகளில் ஒன்றாகும். இதன் விலங்கியல் பெயர் பந்தேரா டைகரிஸ் (Panthera tigris) என்பதாகும். இது உலகின் ஒரு கவர்ச்சியான விலங்காகவும் கருதப்படுகிறது. புலி இது ராயல் பெங்கால் புலி (Royal Bengal Tiger) எனவும் அழைக்கப்படுகிறது. இரையை வேட்டையாடி பிடித்து உண்ணும். விலங்குகளில் இது வேட்டையாடும் சிங்கத்தைக் காட்டிலும் பெரியது. இது இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் மற்றும் தென்மேற்கு சீனா ஆகிய நாடுகளில் வாழ்கிறது. 2019 ஆம் ஆண்டின் கணக்குப்படி இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 2967 என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. […] இப்புலியின் உடல் பட்டை பட்டையான கோடுகளால் ஆனது. இது மஞ்சள் முதல் வெளிர் ஆரஞ்சு வரை, அடர் பழுப்பு முதல் கருப்பு வரையிலான கோடுகளுடன் இருக்கும். வயிறு மற்றும் கை, கால்களின் உட்புற பாகங்கள் வெண்மையானது. வால் ஆரஞ்சு நிறத்தில் கருப்பு வளையங்களுடன் இருக்கும். புலித் தோல் 21 முதல் 29 கோடுகளைக் கொண்டுள்ளன. பெரிய ஆண் புலியின் உடல் நீளம் 9 முதல் 10 அடி வரை இருக்கும். அதாவது மூக்கின் நுனியில் இருந்து வாலின் நுனி வரை கொண்டது. இதன் நீளமாகும். பெண் புலி, ஆண் புலியை விடச் சிறியது. ஆண் புலியின் எடை என்பது 200 முதல் 260 கிலோ வரையிலும்,பெண் புலியின் எடை என்பது 110 முதல் 180 கிலோ வரை இருக்கும். இதன் கோரைப் பற்கள் 7.5 சென்டிமீட்டர் முதல் 10 சென்டிமீட்டர் நீளம் கொண்டவை. புலி எல்லா விதமான பிராணிகளையும் வேட்டையாடும். யானை, யானையின் கன்று, காட்டுமாடு, காட்டு எருமை, மான், நீலப் பசு, காட்டுப் பன்றி, கரடி, முள்ளம் பன்றி ஆகியவற்றையும் பிடிக்கும். சிறுத்தையையும் வேறு புலியையும் பிடித்துத் தின்னும். பசி மிகுதியான போது கோழி, மீன், ஊர்வன போன்றவற்றையும் தின்னும். வேறு விலங்குகள் எதுவும் கிடைக்கா விட்டால் சில சமயம் கிராமப்புறங்களில் இருக்கும் மாடு, கன்றுகளை தாக்கி எடுத்துக் கொண்டு போய்விடும். சில சமயம் மனிதனைக் கொன்று தின்பதும் உண்டு. புலி கனமான பெரிய உடலைக் கொண்டு இருந்தாலும், இது நீரில் நன்றாக நீந்தும். இது சாதாரணமாக மரம் ஏறுவது இல்லை. எனினும் ஆபத்து நிறைந்த காலத்தில் மரமும் ஏறும். பெண் புலி ஒரு தடவைக்கு 2-3 குட்டிகள் போடும். சில சமயம் 6 குட்டிகள் இருப்பதும் உண்டு. பாதுகாப்பு காடழிப்பு, வாழ்விட இழப்பு மற்றும் மிகப்பெரிய அளவில் வேட்டையாடுதல் போன்ற மனித செயல்களால் இந்த புலி இனம் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது. இது அழிந்து வரும் ஒரு விலங்கினம் ஆகும். இது 2008 ஆம் ஆண்டு பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் சிவப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதனைப் பாதுகாக்க, புலிகள் பாதுகாப்புத் திட்டம் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. மாநிலங்கள் இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களின் பெயர்களை, ஆங்கில எழுத்து அகர வரிசைப்படி பட்டியல் இடப்பட்டுள்ளன. 1. ஆந்திரப் பிரதேசம் 2. அருணாச்சலப் பிரதேசம் 3. அசாம் 4. பீகார் 5. சத்தீஸ்கர் 6. கோவா 7. குஜராத் 8. ஹரியானா 9. ஹிமாச்சலப் பிரதேசம் 10. ஜார்க்கண்ட் 11. கர்நாடகம் 12. கேரளம் 13. மத்தியப் பிரதேசம் 14. மகாராஷ்டிரம் 15. மணிப்பூர் 16. மேகாலயா 17. மிசோரம் 18. நாகாலாந்து 19. ஒடிசா 20. பஞ்சாப் 21. ராஜஸ்தான் 22. சிக்கிம் 23. தமிழ்நாடு 24. தெலுங்கானா 25. திரிபுரா 26. உத்தரப் பிரதேசம் 27. உத்தரகண்ட் 28. மேற்கு வங்காளம் யூனியன் பிரதேசங்கள்(ஒன்றியப் பகுதிகள்) ஒவ்வொரு மாநிலங்களுக்கும் மாநில விலங்குகள் இருப்பது போலவே,யூனியன் பிரதேசங்களுக்கும் அதற்கான விலங்குகள் உள்ளன. ஆனால் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, தாமன் மற்றும் டையூ ஆகிய இந்த ஒன்றிய பிரதேசத்திற்கு மட்டும் மாநில விலங்கு அறிவிக்கப்படவில்லை.  1. அந்தமான்‌ நிக்கோபார் தீவுகள் 2. சண்டிகர் 3. தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, தாமன் மற்றும் டையூ 4. லட்சத் தீவுகள் 5. தில்லி 6. ஜம்மு காஷ்மீர் 7. லடாக் 8. பாண்டிச்சேரி. ஆந்திரப்பிரதேசம்  தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு ஆந்திரப் பிரதேச அரசு தெலுங்கானா வைத்திருந்த சின்னங்களுக்கு பதிலாக புதிய மாநில சின்னங்களை அறிவித்தது. புதியதாக உருவாக்கப்பட்ட மாநிலத்தில் இருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ளும் முயற்சியில் ஆந்திர அரசு இவ்வாறு செய்தது.   ஆந்திர மாநிலத்தின் மாநில விலங்காக பிளாக் பக் (Black Buck) அறிவிக்கப்பட்டது. இதற்குக் காரணம் அதன் விரைவான வளரும் தன்மையும் மற்றும் நிச்சயமற்ற சூழ்நிலையையும் பொறுத்துக் கொண்டு வாழும் திறனையும் பெற்றுள்ளது. ஆகவே இது ஆந்திரப் பிரதேச மக்களின் மாநில விலங்காக 2018 ஆம் ஆண்டு, ஜூன் 1 அன்று அறிவிக்கப்பட்டது. பெயர்    பிளாக் பக் என்ற மானை புல்வாய் மான் என்கின்றனர். இது தவிர புல்வாய் மானுக்கு திருகு மான், முருகு மான்,வெளிமான் என்று பல்வேறு தமிழ்ப் பெயர்கள் உள்ளன. இதற்கு இந்திய மான், கடியல், கலா ஹிரன் என்ற மாற்றுப் பெயர்களும் உண்டு. கன்னடத்தில் கிருஷ்ணா மான், இந்தியில் கிருஷ்ணாசார்,  மராத்தியில் கல்விட் ,தெலுங்கில் கிருஷ்ணா ஜிங்கா எனவும் அழைக்கப்படுகிறது.   வெளிமானின் விலங்கியல் பெயர் ஆன்டிலோப் செர்விகாப்ரா (Antilope cervicapra) என்பதாகும். இந்த மானை முதன்முதலில் கார்ல் லின்னேயஸ் என்பவர்  1758 ஆம் ஆண்டில்  அறிவியல் பூர்வமாக விவரித்தார். அன்டலோபஸ் என்ற லத்தீன் வார்த்தையில் இருந்து ஆன்டிலோப் வந்தது.அன்டலோபஸ் என்பதற்கு கொம்புள்ள விலங்கு என்பது பொருளாகும். இதேபோல் செர்விகாப்ரா என்ற லத்தீன் பெயருக்கு,செர்வஸ்  என்றால் மான், காப்ரா என்றால் பெண் ஆடு என்றும் பொருள்படும்.       […] உடல் அமைப்பு  பிளாக் பக் ஒரு நடுத்தர அளவிலான விலங்காகும். இது நிற்கும் போது தோள் பட்டை வரை 74 முதல் 84 செ.மீ உயரம் கொண்டது. தலையிலிருந்து உடல் நீளம் கிட்டத்தட்ட 120 செ.மீ முதல் 147 செ.மீ ஆகும். இதன் வால் குட்டையானது இது 10 முதல் 17 செ.மீ நீளம் உடையது. . இளமையில் ஆண் மானின் நிறம் பெண்ணின் நிறத்தைப் போல மஞ்சள் நிறம் கலந்த பழுப்பு நிறம் உடையது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆண் மான் கருமை நிறமாக மாறும். இந்த கருமை நிறம் வெவ்வேறு செறிவில் இருக்கும். தென்னிந்தியாவில் இது கருப்பாக இருப்பதில்லை,கரும்பழுக்காகவே இருக்கும். வெயில் காலத்தில் நிறம் சற்று நன்றாக உயர்ந்து தோன்றும். மழை பெய்த பிறகு மயிர் வெல் வெட்டுப் போல மிருதுவாக  காணப்படும். ஆண்களின் கழுத்தின் மேல் பகுதி முதுகுப் பகுதி, பக்கவாட்டுப் பகுதி, கால்களின் வெளிப்பரப்புகள் ஆகியவை கருப்பு அல்லது கருஞ்சாம்பல் நிறமாக இருக்கும். இதன் காரணமாகவே இதை ஆங்கிலத்தில் பிளாக் பக் என்று அழைக்கின்றனர். இந்த மானின் கழுத்து மற்றும் உடலின் கீழ்ப் பகுதி வெள்ளையாக இருக்கும். கண்களைச் சுற்றி மட்டும்  வட்ட வடிவமான வெள்ளை அடையாளம் காணப்படும். ஆண் மானிற்கு நீளமான கொம்பு உண்டு. பெண் மானுக்கு கொம்பு கிடையாது. சில சமயம் பெண் மானுக்கு சிறிய கொம்பு இருக்கலாம். இந்த மானின் ஆயுட்காலம் என்பது 12 முதல் 18 ஆண்டுகள் ஆகும். அருணாச்சலப் பிரதேசம்   அருணாச்சலப் பிரதேசத்தின் மாநில விலங்கு மிதுன்(Mithun) ஆகும். இது  வடகிழக்கு மாநிலங்களில் மேய்வதை எளிதில் காணலாம்.இந்த விலங்கு உள்ளூர் பழங்குடி மக்களின் சமூக,கலாச்சார, மற்றும் பொருளாதார வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வைக்கிறது. இந்த மிதுனை  வைத்திருப்பவர் சமூகத்தில் மிக உயர்ந்தவராக மதிக்கப்படுகிறார். மிதுனின் உரிமையானது சமூகத்தில் ஒரு தனி நபரின் செழிப்பு மற்றும் மேன்மையின் அடையாளமாகக் கருதப்படுகிறது.    விவசாயிகள் முக்கியமாக மிதுனை இறைச்சிக்காக வளர்க்கின்றனர். திருமணத்தின் போது மணமகள் வீட்டார் குறைந்தது ஒரு மிதுனை மணமகனின் வீட்டாருக்கு சீர்வரிசையாக அளிக்க வேண்டும்.மிதுன் கொடுக்கும் வரை திருமணம் நிச்சயம் ஆவதில்லை.இது தவிர உள்ளூர் தண்டனையில் விதிக்கப்பட்ட தீர்ப்பின் படி இழப்பீடாக மிதுன் வழங்கப்படுகிறது. […]    அருணாச்சலப் பிரதேசத்தின் பழங்குடி மக்கள் மிதுனை புனிதமாகக் கருதுகின்றனர்.  திருமண நிகழ்ச்சியின் போது மிதுன் இறைச்சி பரிமாறப்படுகிறது. மேலும் விழாக்கள் மற்றும் பல்வேறு முக்கியமான பொது நிகழ்ச்சிகளின் போது சமூக  விருந்தாக மிதுன் இறைச்சி அளிக்கப்படுகிறது. வாழிடம் இது இந்தியா, நேபாளம், இந்தோனேசியா மற்றும் மலாய் தீபகற்பத்தில் காணப்படுகிறது. இந்தியாவில் திரிபுரா, அசாம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நாகாலாந்து மலைகளில் காணப்படுகிறது. இவை 5900 அடி உயரத்தில் காடுகள் நிறைந்த மலைகள் மற்றும் அருகில் உள்ள புல்வெளிகளில் வாழ்கின்றன.  மிதுன் பெரும்பாலும் மழைக்காடுகளில் வாழ்கின்றன.இவற்றை திரிபுரா, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம்,அசாம்,நாகலாந்து ஆகிய பகுதிகளில்  வீட்டு விலங்காக வளர்க்கின்றனர்.மேலும் இவை பங்களாதேஷின் சிட்டகாங் மலைப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. வடக்கு பர்மாவில் கச்சின் மாநிலத்திலும், சீனாவில் யுனான் மாநிலத்தில் டருங் மற்றும் சால்வீன் நதிப்படுகையில் மட்டுமே காணப்படுகின்றன. உடல் அமைப்பு இதன் விலங்கியல் பெயர் பாஸ் பிரண்டாலிஸ் (Bos frontalis) என்பதாகும். இது ஒரு பெரிய உடல்வாகு கொண்ட விலங்கு. இதன் கால்கள் மிகவும் உறுதியானது. இதற்கு பெரிய தலை, குறுகிய கழுத்து, அகலமான நெற்றி மற்றும் அது குழிவாகவும் இருக்கும்.  இது 165  முதல் 225 சென்டிமீட்டர் உயரம் வரை இருக்கும். இதன் உடல் நீளம் 240 முதல் 330 சென்டிமீட்டர் வரை இருக்கும். மற்றும் இதன் வாலின் நீளம் 70 முதல் 105 சென்டிமீட்டர் வரை இருக்கும். இதற்கு குட்டையான கூந்தல் கடை சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் உள்ளது. உடல் எடை 600 கிலோ முதல் 1000 கிலோ வரை காணப்படும்.  ஆண் மிதுன் பெண் மிதுனை விட பெரியது. தலை மற்றும் உடலின் தோல் நிறம் இரு பாலினத்திற்கும் கருப்பு-பழுப்பு நிறமாக இருக்கும். கொம்புகள் தலையின் பக்கங்களில் இருந்து மேல் நோக்கி வளைந்து இருக்கும். இது 1.5 முதல் 4 அடி நீளம் வரை உள்ளது. கொம்பின் அடிப்பகுதி மஞ்சள் நிறமாகும்.அது படிப்படியாக கருமையாகி நுனியில் கருப்பு நிறமாக மாறும். இந்த இனம் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய சிவப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளது.  அசாம் அசாமின் மாநில விலங்கு ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் (One-horned rhinoceros)ஆகும். இது இந்திய காண்டாமிருகம், இந்திய மூக்குக் கொம்பன் அல்லது ஒற்றைக் கொம்பன் எனவும் அழைக்கப்படுகிறது. நிலத்தின் மேல் பகுதியில் வாழும் மிகப்பெரிய விலங்குகளில் இது மூன்றாவது பெரிய விலங்கு ஆகும்.  காண்டாமிருகங்களில் 5 இனங்கள் உள்ளன. இந்த 5 இனங்களில் இரண்டாவது பெரிய காண்டாமிருக இனம் இதுவாகும். கார்ல் லின்னேயஸ் அவர்கள் 1758 ஆம் ஆண்டு இதற்கு ரைனோசரஸ் (Rhinoceros) எனப் பெயரிட்டார்.இதற்கு மூக்குக் கொம்பன் என்று பொருள்.இதன் விலங்கியல் பெயர் ரைனோசரஸ் யூனிகார்னிஸ்(Rhinoceros unicornis)என்பதாகும். வாழிடம் ஒற்றை கொம்பு காண்டாமிருகம் வடகிழக்கு இந்தியா, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. இது ஒரு பாலூட்டி விலங்கு ஆகும். இது இமயமலையின் அடிவாரத்தில் உள்ள புல்வெளிகள் மற்றும் அதைச் சுற்றி உள்ள காடுகளிலும் வாழ்கின்றது. ஒரு காலத்தில் இந்திய துணைக் கண்டத்தின் வடக்கு பகுதியிலும், கங்கை மற்றும் பிரமபுத்திரா நதிப் படுகைகளிலும் வாழ்ந்தது.மேலும் பாகிஸ்தான், இந்தியா பர்மா எல்லை, வங்காளதேசம், நேபாளம் மற்றும் பூட்டானின் தெற்கு பகுதி வரை இவைப் பரவி இருந்தன. காடழிப்பு மற்றும் வேட்டையாடுதல் காரணமாக இந்த இனம் வேகமாக குறைந்துவிட்டது. தற்போது 3000 விலங்குகள் மட்டுமே இயற்கைச் சூழலில் வாழ்கின்றன. அசாம் மாநிலத்தில் மட்டும் 1800 ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் உள்ளன. நேபாளத்தின் சிடவான் தேசிய பூங்காவில் 400க்கும் மேற்பட்ட காண்டாமிருகங்கள் வாழ்ந்து வருகின்றன. […] உடலமைப்பு  இது 165 முதல் 12 5 சென்டிமீட்டர் உயரம் வரை வளர்கிறது. இதன் உடல் நீளம் 365  முதல் 385 சென்டிமீட்டர் ஆகும். ஆண் காண்டாமிருகம் பெண்ணை விட உருவத்தில் பெரியது. வயது வந்த ஆணின் எடை 2000 முதல் 3000 கிலோ வரை இருக்கும். பெண்ணின் எடை 1500 முதல் 2500 கிலோ வரை இருக்கும்.வாலின் நீளம் 70 முதல் 105 சென்டிமீட்டர் வரை உள்ளது.    இதன் முகத்திலே மூக்கின் மையக் கோட்டில் ஒரு கொம்பு இருக்கும். இதனால் இந்த பிராணிக்கு மூக்குக் கொம்பன் என்ற பெயர் வந்தது. கொம்பு சற்று வளைந்திருக்கும். கொம்பு மிகக் கெட்டியாகக் கூராக முடியும். கொம்பு எலும்பால் ஆனது அல்ல.கொம்பு இதன் ஆயுள் காலம் வரை வளர்கிறது.உடைந்து விட்டால் மீண்டும் வளரும். இதன் கன்று பிறந்து 6 ஆண்டுகளுக்குப் பிறகே கொம்பு முளைக்கும். கொம்பு 25 முதல் 57 சென்டிமீட்டர் வரை வளரும். இதன் உடலின் வெளிப்புறம் கடினமான தோலினால் ஆனது. தோல் பல மடிப்புகளைக் கொண்டிருக்கும்.தோல் பழுப்பு நிறத்திலும், மடிப்புகளுக்கு இடையே வெளிறிய சிவப்பு நிறத்திலும் காணப்படும். வாலின் நுனிப்பகுதி தவிர உடலில் வேறு எங்கும் மயிர்கள் கிடையாது. நடத்தை  இவை நீரில் நன்றாக நீந்தக் கூடியவை. அவை சிறு தொலைவு தூரத்துக்கு மணிக்கு 40 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடிய திறன் படைத்தது. இவை புல், பழங்கள், இலைகள், கிளைகள், நீர்வாழ் தாவரங்கள் மற்றும் பயிரிடப்பட்ட பயிர்களை உன்கின்றன.இதன் சராசரி ஆயுட்காலம் 35 முதல் 45 ஆண்டுகள் ஆகும். பீகார் பீகாரின் மாநில விலங்கு கவுர் (Gaur) ஆகும். இது இந்தியக் காட்டெருமை (Indian Bison) என்றும் அழைக்கப்படுகிறது. இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 இன்படி கவுர் முதல் காப்பு அட்டவணையில்  சேர்த்துள்ளது.மேலும் இது 1986 ஆம் ஆண்டில் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN) சிவப்பு பட்டியலில் பாதிக்கப்பட கூடிய  நிலையில் உள்ள விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது. பெயர்  இது இந்தியக் காட்டெருது, காட்டுப் பசு, ஆமா, கடமா, காட்டா, மரை, கட்டேணி, காட்டுப் போத்து என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. அதே சமயம் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைகளில் வாழும் மக்கள் இதைக் காட்டு எருமை எனத் தவறாக அழைக்கின்றனர். உண்மையில் இது காட்டு மாடு ஆகும்.    […] சார்லஸ் ஹாமில்டன் ஸ்மித் என்பவர் 1827 ஆம் ஆண்டில் முதன் முதலாக இதற்கு பைசன் கவுரஸ் (Bison gaurus) எனப் பெயரிட்டார்.பின்னர் இந்தப் பேரினத்திற்கு பாஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதன் அறிவியல் பெயர் பாஸ் கவுரஸ் (Bos gaurus) என்பதாகும். வாழிடம்    இது இந்தியா,பங்களாதேஷ்,பூட்டான்,சீனா, நேபாளம்,கம்போடியா, லாவோஸ்,வியட்நாம், தாய்லாந்து,மலேசியா,மியான்மார் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. குறிப்பாக தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் இது பரவி உள்ளது. இந்த இனம் பகுதி பகுதியாக பல்வேறு பகுதியில் சிதறிக் கிடக்கிறது. இலங்கையில் இந்த இனம் அழிந்து வருகிறது.  ‌ இவை பெரும்பாலும் பசுமைக் காடுகள் அல்லது அரைபசுமை மற்றும் ஈரமான இலையுதிர் காடுகளில் மட்டுமே வாழ்கின்றன. பெரும்பாலும் இவை 1500 முதல் 1800 மீட்டர் உயரத்திற்கு கீழே மலைப்பாங்கான நிலைப்பரப்பில் காணப்படுகின்றன. இவை கடல் மட்டத்திலிருந்து குறைந்தது 2800 மீட்டர் உயரம் வரை வாழ்கின்றன.   இமயமலையில் இவை 6000 அடி உயரத்தில் அரிதாகவே காணப்படுகின்றன. புல்வெளிகள் நிறைந்த தேக்கு மரக்காடுகள்,மூங்கில் காடுகள்,மழைக் காடுகள் முதலிய வெப்ப மண்டலக் காடுகளிலும் வாழ்கின்றன.மேலும் தேயிலைத் தோட்டங்கள், காபித் தோட்டங்கள் ஆகியவற்றுக்கு அருகாமையிலும் கவுர் வாழ்கின்றன. கவுர் கவுர் ஒரு அழகான விலங்கு ஆகும். தென்னிந்தியாவில் வாழக்கூடிய மிகப்பெரிய காட்டுமாடுகளாகும். கவுர் எருதுகள் பசுக்களைக் காட்டிலும் உடலமைப்பில் பெரியவை. வயது வந்த எருது சுமார் 600 முதல் 1500 கிலோ எடை உடையது. பெண்ணின் எடை 400  முதல்1000 கிலோ வரையில் இருக்கும்.  இது 170 முதல் 230 சென்டிமீட்டர் உயரம் உடையது.இதன் உடல் நீளம் 240 முதல் 340 சென்டிமீட்டர் வரை அளவு கொண்டது .இதன் வாலின் நீளம் 70 முதல் 105 சென்டிமீட்டர் வரை இருக்கும். ஆண் மற்றும் பெண் இரு பாலருக்கும் கொம்புகள் உண்டு.கொம்புகளின் நீளம் 60 முதல் 110 சென்டிமீட்டர் வரை இருக்கும்.  முதிர்ந்த ஆண்களின் திறம் அடர் பழுப்பு கலந்த கருப்பு நிறமும், பெண்களின் நிறம் அடர் பழுப்பு நிறமாகவும் இருக்கும்.இது ஒரு சமூக விலங்கு.சிறிய குழுக்களாக வாழ்கின்றன. இதன் ஆயுள் காலம் 26 முதல் 36 ஆண்டுகள் ஆகும்.  சத்தீஸ்கர் சத்தீஸ்கரின் மாநில விலங்கு காட்டு நீர் எருமை(Wild water buffalo) ஆகும். இது காட்டு எருமை(The wild buffalo),ஆசிய எருமை,ஆசிய  நீர் எருமை,காட்டு ஆசிய எருமை மற்றும் காட்டுமேதி எனவும் அழைக்கப்படுகிறது. சத்தீஸ்கரில் வாழும் உள்ளூர் மக்கள் இதை அர்னா என்கின்றனர். இதன் விலங்கியல் பெயர் புபாலிஸ் ஆர்னி(Bubalis arnee) என்பதாகும். வாழிடம்   காட்டு நீர் எருமைகள் இந்தியா,நேபாளம், பூட்டான்,தாய்லாந்து மற்றும் கம்போடியாவில் காணப்படுகின்றன. அதே சமயத்தில் பாகிஸ்தான், பங்களாதேஷ், லாவோஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காட்டு நீர் எருமைகள் முற்றிலும் அழிந்து விட்டன என கூறப்படுகிறது. இவை புல்வெளிகள், வறண்ட சமவெளிகள் மற்றும் சதுப்பு நிலங்களில் காணப்படுகின்றன. இருப்பினும் அவை தங்குவதற்கு வனப்பகுதிகளைப் பயன்படுத்துகின்றன.சதுப்பு நிலங்களுக்கு அருகில் உள்ள உயரமான காடுகள் மற்றும் நாணல் நிறைந்த வாழ்விடத்தை விரும்புகின்றன. இவை ஆறுகள், சதுப்பு நிலங்கள் மற்றும் பருவகால ஏரிகள் போன்ற நீர் நிலைகளுக்கு அருகில் காணப்படுகின்றன. உடலமைப்பு இது பெரிய உடல் கொண்ட விலங்கு. ஆனால் கவுரை விட சற்று சிறியது. இது 150 முதல் 180 சென்டிமீட்டர் உயரமும், 240 முதல் 300 சென்டிமீட்டர் நீளமும் உடையது.இதன் வால் 60 முதல் 100 சென்டிமீட்டர் நீளம் கொண்டது. இதன் உடல் எடை 600 முதல் 1200 கிலோ வரை இருக்கும். […]   இதன் தோலின் நிறம் சாம்பல் முதல் கருப்பு அல்லது சாம்பல் கலந்த கருப்பு நிறமாக இருக்கும். பொதுவாக தலை கருமையாகவும், உடலில் கருமை இலகுவாகவும் இருக்கும். இதன் முகம் நீண்ட மற்றும் குறுகியது. மாறாக சிறிய காதுகள் உள்ளன. காதுகளில் முடிகள் உள்ளன.    கண்கள் கருப்பு நிறத்தில் உள்ளன.இவை புருவங்களால் பாதுகாக்கப்படுகின்றன. இதன் மார்பு பீப்பாய் வடிவமானது. ஆனால் இதற்கு குறுகிய மற்றும் குட்டையான கால்களாக உள்ளன. பெண் எருமைகளை விட ஆண்கள் உருவத்தில் பெரியவை.   கொம்புகள் மண்டை ஓட்டில் இருந்து பக்கவாட்டாக நீண்டு பின்னோக்கி வளைந்து இருக்கும் பொதுவாக 80 முதல் 120 சென்டிமீட்டர் நீளம் இருக்கும். ஆண்,பெண் இருபாலருக்கும் கொம்பு உண்டு. கொம்புகளின் நீளம் பொதுவாக வேறுபடுகிறது. ஆனால் இதுவரை அளக்கப்பட்ட கொம்புகளில் மிகப்பெரிய நீளம் என்பது 200 சென்டிமீட்டர் ஆகும். நடத்தை இவை சிறுசிறு குழுக்களாக வாழ்கின்றன அதே சமயம் வயதான ஆண்கள் தனிமையில் உள்ளன. பாலியல் முதிர்ச்சியின் வயது என்பது 18 முதல் 20 மாதங்கள் ஆகும். பெண்கள் பொதுவாக ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒரு கன்றை ஈனுவதுண்டு.  இதன் கர்ப்ப காலம் 10 முதல் 11 மாதங்கள் வரை ஆகும். இவை சிறந்த நீச்சல் வீரர்கள். இவை குறுகிய தூரத்திற்கு மணிக்கு 35 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும். இவை நீரில் படுத்துப் புரண்டு சேற்றைப் பூசிக்கொள்ளும். இந்த எருமைகள் 25 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. பாதுகாப்பு    இது 1986 ஆம் ஆண்டு முதல் அழியும் நிலையில் உள்ளது. தற்போது சுமார் 4000க்கும் குறைவான காட்டு எருமைகளே உள்ளன.இது பாதுகாக்கப்பட வேண்டிய காட்டு விலங்குகளில் ஒன்றாக மாறி உள்ளது.  கோவா   கோவா மாநில விலங்கு கவுர் ஆகும். கம்பீரமாக தோற்றமளிக்கும் கவுர் (Gaur) கோவாவின் பெருமை மற்றும் வலிமையின் சின்னமாகக் கருதப்படுகிறது. கவுர் என்பது இந்திய ராணுவத்தின் 54 ஆவது காலாட்படை பிரிவின் சின்னமாகும். இது பைசன் பிரிவு என்றும் அழைக்கப்படுகிறது.இதன் விலங்கியல் பெயர் பாஸ் கவுரஸ் (Bos gaurus) என்பதாகும். இது போவிடே என்னும் விலங்கு குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும்.   இது ஒரு பெரிய விலங்கு.இவை வாழும் பகுதிகளில் இயற்கையான சுற்றுச்சூழலை சமநிலையில் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இருப்பினும் தற்போது மனித   நடவடிக்கையின் காரணமாக இது அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது. இந்தியா   இது கிழக்குத் தொடர்ச்சி மலை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை உள்பட இந்தியாவின் பெரும்பாலான மலைப்பகுதிகளில் இவை வாழ்கின்றன. இவை நாகர்ஹோல் தேசியப் பூங்கா, பந்திப்பூர் தேசியப் பூங்கா மற்றும் முதுமலை தேசியப் பூங்காவிலும் காணப்படுகின்றன. உடலமைப்பு    கவுர் உண்மையிலேயே ஒரு கம்பீரமான விலங்கு. இதன் தலை மற்றும் உடல் பெரியது. மற்றும் உறுதியான கால்களை கொண்டுள்ளன. கவுர் வீரியம் மற்றும் வலிமையின் உருமாகும். கோவா மாநில கவுர் சுமார் 1500 கிலோ எடையை எட்டும். கவுரின் தோற்றம் மிகவும் தனித்துவமானது.       […]  பிறந்த இளம் கன்று ஒரு வெளிர் தங்க மஞ்சள் நிறமாக இருக்கும். இது விரைவில்  காபி அல்லது சிவப்பு பழுப்பு நிறமாக மாறும்.பிறகு ஆண் அடர் பழுப்பு கலந்த கருப்பு நிறத்தை அடையும். பெண் அடர் பழுப்பு நிறமாக இருக்கும்.  இதன் கொம்புகளுக்கு இடையில் நெற்றியில் உயர்ந்த, குவிந்த முகடு உள்ளது. கண்கள் பழுப்பு நிறமான மற்றும் காதுகள் மிகவும் பெரியவை. வயதான காளைகளின் முடி முதுகில் மிகவும் பெரியதாக இருக்கும். இரு பாலினத்திற்கும் பளபளப்பான முடிகள் உள்ளன. கால்களின் கீழ் பகுதி தூய வெள்ளை அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். பசுக்கள் மற்றும் இளம் காளைகள் வெளிர் நிறத்தில் உள்ளன.கவுரியின் குழம்புகள் குறுகியவை மற்றும் கூர்மையானவை. பசுக்களுக்கு நான்கு காம்புகள் இருக்கின்றன. நடத்தை  இது காலையிலும், மாலையிலும் குளிராகவும், நிழலாகவும் இருக்கும் இடங்களில் புல் மேயும். இது இயற்கையாக உப்புக் கிடைக்கும் இடங்களுக்குச் சென்று நக்கி தின்னும் பழக்கம் உடையது. இந்த உப்பானது கவர் வயிற்றின் உறுப்புகளைத்  தூய்மையாக்குவதோடு ஒட்டுண்ணிகள் சேராதபடி காக்கின்றன. இது அச்சமும், எச்சரிக்கையும் உள்ள ஒரு விலங்கு. மனிதர் இருக்கும் இடத்தை அணுகுவதில்லை. மோப்பச் சக்தி கூர்மையானது. வேட்டையாடுவர்களை எதிர்த்து நின்று நன்றாகப் போராடும். இவை சிறிய குழுக்களாக வாழ்கின்றன. சில நேரங்களில் 30 முதல் 40 நபர்கள் வரை ஒரு குழுவில் காணப்படுகின்றன. ஒரு மந்தையை மூத்த பெண் கவுர் தலைமை ஏற்று நடத்திச் செல்லும். பெண்ணின் கர்ப்ப காலம் 275 நாட்களாகும். இது ஒன்று அல்லது அரிதாக இரண்டு கன்றுகளை ஈன்றெடுக்கும். கவுர் 26 முதல் 36 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.தற்போது உலகளவில் சுமார் 21,000 முதிர்ந்த கவுர்கள் வாழ்கின்றன.  குஜராத்    குஜராத் மாநில விலங்கின் பெயர் ஆசிய சிங்கம் (Asiatic Lion)ஆகும். மேலும் இது இந்திய சிங்கம் அல்லது பாரசீக சிங்கம் என அழைக்கப்படுவது உண்டு. இதன் விலங்கியல் பெயர் பாந்தெரா லியோ பெர்சிகா(Panthera leo persica) என்பதாகும். குஜராத் மாநிலத்தில் இதற்கு ஷெர் (Sher)  என்று பெயர் உண்டு. இது பூனைக் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். இந்தியாவில் காணப்படும் பெரும் பூனை இனங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தியப் பூனை இனங்களில் மிகப்பெரியது. இந்த ஆசிய சிங்கம் ஆகும். சிங்கங்களில் இந்த ஒரு கிளை இனம் மட்டும் உள்ளது. ஆப்பிரிக்க சிங்கங்களின் துணைக் குடும்பமாக இது கருதப்படுகிறது. இந்த இனம் சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆசியப் பகுதிக்கு இடம் பெயர்ந்து இருக்கலாம் என்கின்றனர். வாழிடம்    உலக அளவில் மிகவும் ஆபத்தான பெரிய மாமிச உண்ணியாக இது கருதப்படுகிறது. இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் மட்டுமே காணப்படுகிறது. இது குஜராத்தில் உள்ள கிர் தேசியப் பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயம் ஆகியவற்றில் வாழ்கிறது. ஆசிய சிங்கத்தின் ஒரே வாழ்விடம் இதுவாகும்.   கிர் தேசியப் பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயம் ஆகியவை 30000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இந்தப் பகுதியில் மனித நடவடிக்கைகள் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் சுமார் 150 ஆசிய சிங்கங்கள் இந்தப்  பூங்காக்களில் வாழ்ந்தன.    […]  கிர் தேசிய பூங்காவில் சிங்கங்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வந்தது. 2020 ஆம் ஆண்டின் கணக்குப்படி சிங்கங்களின் எண்ணிக்கை 674 ஆக உயர்ந்துள்ளன. ஆசிய சிங்கம்  ஆசிய சிங்கம் என்பது மிகப் பழைய காலம் தொட்டு வலிமைக்கும், அஞ்சாமைக்கும், கம்பீரத்துக்கும் புகழ்பெற்றது. இது கதைகளிலும், பாட்டிலும் உலக இலக்கியங்களில் எல்லாம் இடம் பெற்றுள்ளது. இது மிருகேந்திரன் எனச் சொல்லப்படுகிறது.   சிங்கம் 2.5 அடி முதல் 3.5 அடி வரை உயரம் கொண்டது. வால் உள்பட ஆண் சிங்கத்தின் நீளம் 10 அடி வரையிலும், பெண் சிங்கத்தின் அளவு 8.5 அடி வரையிலும் இருக்கும். பொதுவாக வால் 3 அடி நீளம் கொண்டது. ஆணின் எடை 200 முதல் 250 கிலோவும், பெண் சிங்கத்தின் எடை 110 முதல் 150 கிலோ வரையிலும் இருக்கும்.    ஆப்பிரிக்க சிங்கத்துடன் ஒப்பிட்டால் இதற்கு பிடரி மயிர் சற்று குறைவாக இருக்கும்.பெண் சிங்கத்திற்கு பிடரி மயிர் இருக்காது. உடலில் கோடுகளோ அல்லது புள்ளிகளோ காணப்படாது. ஆனால் சிங்கக் குட்டிகளுக்கு உடலில் புள்ளிகள் மற்றும் கோடுகள் உள்ளன.   ஆண் சிங்கம் ஆரஞ்சு மஞ்சள் முதல் அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் பெண் சிங்கம் மணல் அல்லது பழுப்பு நிறத்தில் காணப்படும். இந்த சிங்கங்கள்  சக்தி வாய்ந்த உள்ளிழுக்கும் நகங்கள் மற்றும் நீண்ட கூர்மையான கோரைப் பற்களைக் கொண்டுள்ளன.அவை இரையை தரையில் இழுக்கப் பயன்படுகின்றன. நடத்தை சிங்கம் சிறு குழுவாக வாழும். பெண் சிங்கங்கள் 2 வருடங்களுக்கு ஒரு முறை குட்டிகளை ஈனுகின்றன. சிங்கங்கள் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வரை ஓய்வில் அல்லது தூங்குகின்றன. இதன் ஆயுட்காலம் என்பது 14 முதல் 18 ஆண்டுகள் ஆகும். ஹரியானா பிளாக் பக்( Black Buck) என்கிற மான் இனம் ஹரியானா மாநில விலங்கு ஆகும். இது முக்கியமாக இந்தியாவில் மட்டுமே காணப்படுகிறது. ஆனால் மிகக் குறைவான அளவில் பாகிஸ்தான் மற்றும் நேபாளத்திலும் காணலாம். ஆப்பிரிக்காவில் காணப்படும் கருமையான ஆன்டிலோப் மானும், பிளாக் பக் மானும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி தெரியும். வாழிடம்   ஆன்டிலோப்பு என்னும் விலங்குப் பேரினத்தில் இந்தியாவில் வாழும் ஒரே இனம் இந்த பிளாக் பக் மட்டுமே ஆகும். இது இந்தியாவின் வடக்கு,வடமேற்கு பகுதியில் இருந்து மத்திய பிரதேசம், தக்காணம் ஆகியவற்றின் வழியாக தெற்கு கிருஷ்ணா நதி வரையிலும் காணப்படுகிறது. இது கேரளக் கரை தவிர இந்தியா நெடுகிலும் திறந்த வெளிகளில் வாழும் ஒரு பிராணி. இது காடுகளில் வசிப்பதில்லை. மலைப் பாங்கான இடங்களிலும் இருப்பதில்லை. பெயர் இதன் பொதுவான ஆங்கில பெயர் பிளாக் பக் என்பதாகும்.இதற்கு கரு மான் எனப் பொருள். இது கருப்பு மிருகம் எனவும் கூறப்படுகிறது. இது இரலை, கிருஷ்ண மிருகம்  என்றும் சொல்லப்படுகிறது. இது இந்திய ஆன்டிலோப் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆண் மானை ஏனம் என்றும், பெண் மானை அரிணம் (ஹரிண) என்றும் அழைக்கின்றனர். இதன் விலங்கியல் பெயர் ஆன்டிலோப் செர்விகாப்ரா (Antilope cervicapra) என்பதாகும்.செர்விகாப்ரா என்றால் மான் ஆடு எனப் பொருள்படும். பிளாக் பக்   ஆண் மற்றும் பெண் பிளாக் பக் மான்கள் வித்தியாசமான தோற்றங்களைக் கொண்டுள்ளன. பெண்களை ஒப்பிடும் போது உருவத்தில் ஆண்கள் பெரியவை. ஆண் சராசரியாக 34 முதல் 45 கிலோ வரையிலும், பெண் 31 முதல் 39 கிலோ வரையிலும் எடையைக் கொண்டிருக்கும்.    […]  ஆண் மானின் கொம்பு 53 முதல் 75 சென்டிமீட்டர் நீளம் வரை வளரும். கொம்பின் வடிவம் 3 முதல் 4 சுழல் திருகலுடன் காணப்படும். ஓராண்டு ஆன மானின் கொம்பில் திருகல் இருக்காது. இரண்டாம் ஆண்டில் விரிவான பெரிய திருகல் ஒன்று உருவாகும். மூன்றாம் ஆண்டின் முடிவில் உடம்பின் நிறம் கருமையாக மாறும் போது கொம்பின் திருகலான முறுக்குக்கள் முற்றிலும் உண்டாகிவிடும். இந்தக் கொம்பின் அமைப்பு திரிமருப்பிரலை என வர்ணிக்கப்படுகிறது. கொம்புகள் பிரிந்து V போன்ற வடிவத்தை உருவாக்குகின்றன. இந்தக் கொம்புகள் பிளாக் பக் மானிற்கு பேரழகைத் தருகின்றன. நடத்தை  இந்த மான் பகலில் நன்றாக துருதுருவென இருக்கும். இது சிறு புற்களை சாப்பிட்டு வாழும். பூக்கள்,காய்கள், பழங்கள், புதர்கள் மற்றும் மூலிகை தாவரங்களையும் சாப்பிட விரும்புகின்றன. சில சமயம் சீமைக்‌ கருவேல மர இலைகளையும் உண்கின்றன.    இந்த மான்கள் சிறு மந்தையாக வாழும். மேலும் தினமும் நீர் அருந்தக் கூடியவை. ஆகவே ஆற்றுப் பகுதிகளில் அதிகமாக வாழ்கின்றன. பெண் மற்றும் ஆண் மான்கள் இரண்டு ஆண்டுகளில் பாலியல் முயற்சி அடைகின்றன.    இனச்சேர்க்கை என்பது ஆண்டு முழுவதும் நடைபெறுகிறது. கர்ப்ப காலம் பொதுவாக ஆறு மாதங்கள் நீடிக்கும். அதன் பிறகு ஒரு கன்று பிறக்கும். பிரசவம் முடிந்து ஒரு மாதத்திற்குப் பிறகு பெண் மான்கள் மீண்டும் இனச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன. ஹிமாச்சலப் பிரதேசம்   ஹிமாச்சலப் பிரதேசத்தின் மாநில விலங்கு பனிச்சிறுத்தை(Snow Leopard) ஆகும். உள்ளூர் மக்கள் ஹிம் டெண்டுவா(Him tendua) என என அழைக்கின்றனர். பர்ஃபானியா சீத்தா,ஸ்னோ சீத்தா என்று உருது மொழியில் அழைக்கப்படுகிறது. இதன் விலங்கியல் பெயர் பாந்தெரா உன்சியா(Panthera uncia) என்பதாகும்.  பாந்தர் என்ற சொல் பண்டைய இலத்தீன் சொல் பாந்தெராவில் இருந்து வந்தது. இது புள்ளிகள் உள்ள பூனைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது.உன்சியா என்ற பெயர் இலத்தீன் வார்த்தையாகும். பனிச்சிறுத்தை பூனைக் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். வாழிடம்   இவை இந்தியா,ஆப்கானிஸ்தான், பூட்டான்,சீனா, கதகஸ்தான், கிர்கிஸ்தான், மங்கோலியா,நேபாளம், பாகிஸ்தான் ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. மத்திய ஆசியாவின் உயரமான மலைத்தொடர் முழுவதும் பனிச் சிறுத்தைகள் பரவலாக வாழ்கின்றன.    இதில் முழு இமயமலை அமைப்பும்,பூட்டான்,நேபாளம், மற்றும் ரஷ்யாவின் சைபீரியன் பகுதியும் அடங்கும்.இவை பொதுவாக 3000 முதல் 5000 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகளில் வாழ்கின்றன. மேலும் இமயமலையிலும் வாழ்ந்து வருகின்றன.  கோடையில் இவை மலைப் புல்வெளிகளிலும், பாறை பகுதிகளிலும்  2700 முதல் 5800 மீட்டர் உயரம் வரை வாழ்கின்றன. குளிர்காலத்தில் இவை 1000 முதல் 2000 மீட்டர் உயரத்திற்குள் உள்ள காடுகளில் வாழ்கின்றன. உடல் அமைப்பு    பெரிய பூனை இனங்களை விட பனிச் சிறுத்தைகள் சிறியவை.ஆனால் இவை அந்த பெரிய பூனை இனங்களைப் போலவே இருக்கின்றன. இவை பல அளவுகளில் காணப்படுகின்றன.    […] ­ இது சுமார் 50 முதல் 60 சென்டிமீட்டர் உயரமும், 90 முதல் 130 சென்டிமீட்டர் நீளமும் உடையது. இதன் வாலின் நீளம் 70 முதல் 100 சென்டிமீட்டர் ஆகும். ஆண் பனிச் சிறுத்தையின் எடை 40 முதல் 60 கிலோ வரையிலும்,பெண் பனிச் சிறுத்தையின் எடை 30 முதல் 45 கிலோ வரையிலும் இருக்கும்.  பனிச் சிறுத்தைகள் நீண்ட தடித்த ரோமங்களைக் கொண்டிருக்கும். ரோமங்கள் வெள்ளை அல்லது மஞ்சள் நிறமானது.  உடலில் நிறம் பழுப்பு மஞ்சள் அல்லது வெள்ளை முதல் புகை சாம்பல் நிறமாக இருக்கும். இவற்றின் தலையில் கரும்பழுப்பு நிறத்திலான சிறிய புள்ளிகளும், அவற்றின்  கால்கள் மற்றும் வாலில் அதே நிறத்தில் பெரிய புள்ளிகளும் உள்ளன. உடலில் கரும்பழுப்பு,கருப்புநிற ரோசாப்பூ இதழ் அளவிற்கு புள்ளிகளும் காணப்படுகின்றன.    இதன் கண்கள் வெளிர் பச்சை அல்லது சாம்பல் நிறத்தில் இருக்கும். காதுகள் சிறியது. அவை வெப்ப இழப்பைக் குறைக்க உதவுகின்றன. வால் நீளமானது, நெகிழ்வானது மற்றும் உரோமத்தால் மிகவும் தடிமனாக மூடப்பட்டு இருக்கும்.அவை தூங்கும் போது முகத்தைப் பாதுகாக்க ஒரு போர்வையைப் போல வால் உதவுகின்றது. மேலும் செங்குத்தான பாறைகளில் வேட்டையாடும் நேரத்தில் உடலை சமநிலைப்படுத்த வால் பயன்படுகிறது. பாதங்கள் அகலமாக,பனியில் நடப்பதற்கு வசதியாக அமைந்துள்ளன. அவற்றின் அடிபரப்பிலும் ரோமங்கள் உள்ளன. முன் பாதங்கள் பின்னங்கால்களை விட சற்று பெரியதாகவ இருக்கும்.அவை சுறுசுறுப்பு மற்றும் குதிக்கும் திறனை அதிகரிக்கிறது.  ஜார்க்கண்ட் ஜார்க்கண்ட் மாநிலத்தின் மாநில விலங்கின் பெயர் இந்திய யானை(Indian elephant) ஆகும். இதன் உள்ளூர் பெயர் ஹாத்தி என்பதாகும்.இதன் விலங்கியல் பெயர் எலிபாஸ் மேக்சிமஸ் இண்டிகஸ் (Elephas maximus indicus) என்பதாகும். இது எலிஃபான்டிடே(Elephantidae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. வாழ்விடம் இந்திய யானையின் பூர்வீகம் ஆசியா ஆகும். அவை இந்தியா,நேபாளம், பங்களாதேஷ்,பூட்டான், மியான்மர், தாய்லாந்து,வியட்நாம்,சீனா,லாவோஸ் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன.இதுதவிர இந்தோனேசியா, இலங்கை மற்றும் சுமத்ரா பகுதியிலுள்ள யானைகள் அந்தந்த தீவுகளுக்குள் மட்டுமே வாழ்கின்றன. […]    இந்திய நாட்டில் உத்தரப் பிரதேசம், யமுனை நதி, உத்ராஞ்சலில் இமயமலை அடிவாரம், வடக்கு, மேற்கு வங்கம், நாகலாந்தின் அடிவாரம், கரோ மலைகள், காசி மலைகள், அருணாச்சலப் பிரதேசம், கீழ் பிரம்மபுத்திரா,பராக் பள்ளத்தாக்கு, மேற்கு அசாம், மிஷ்மி மலைகள், கர்பி பீடபூமி ஆகியவற்றில் இந்த யானைகளைக் கண்டறிந்துள்ளனர். மேலும் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், திரிபுரா பராக் பள்ளத்தாக்கு, மேற்கு தொடர்ச்சி மலைகள், கிழக்கு தொடர்ச்சி மலைகள், நிலம்பூர் அமைதி பள்ளத்தாக்கு மற்றும் நீலகிரி மலைகளிலும் இவை வாழ்கின்றன. யானை  பூமியில் வாழ்ந்து வரும் விலங்குகளில் மிகப் பெரியது கடலில் வாழும் நீலத் திமிங்கலம் ஆகும்.மேலும் தரையின் மீது வாழக்கூடிய விலங்குகளில் மிகப் பெரியது யானை ஆகும்.  யானைகளில் 2 வகைகள் உள்ளன. அவை ஆப்பிரிக்க யானை மற்றொன்று ஆசிய யானை. ஆசிய யானையை விட ஆப்பிரிக்க யானை உருவத்தில் மிகப் பெரியது. ஆப்பிரிக்க யானையில் 2 இனங்களும் ஆசிய யானையில் 3 துணை இனங்களும் உள்ளன. ஆசிய யானைகளை விட பெரிய நில விலங்குகள் ஆசியாவில் இல்லை. ஆசிய யானைகளில் இந்திய யானை, இலங்கை யானை மற்றும் சுமாத்ரா யானை என அங்கீகரிக்கப்பட்ட 3 துணை இனங்கள் இருக்கின்றன. பழைய புவியியல் காலத்தில் இந்தியாவில் 7 யானை இனங்கள் இருந்தன.ஆனால் தற்போது ஒரு இனம் மட்டுமே உள்ளது. உடலின் சிறப்பு    யானைக்கு மிக பருத்த உடலும், பெரிய காதுகளும், முகத்தில் இருந்து நீளமாக தொங்கக்கூடிய தும்பிக்கையும் உள்ளது. இது துதிக்கை எனவும் சொல்லப்படுகிறது. இது ஒரு அசாதாரமான உறுப்பு. பெரிய உடலும், துதிக்கையும் உடைய இந்த விலங்கை அனைவரும் எளிதில் யானை என அறிந்து கொள்ள முடியும்.  தும்பிக்கை என்பது மேல் உதடும்,மூக்கும் ஆகும். இது 1,50,000 தசைநார்களால் ஆனது. தும்பிக்கையில் இரண்டு துளைகள் உள்ளே செல்கின்றன.யானைகள் இதன் மூலமே காற்றைச் சுவாசிக்கின்றன.ஆகவே தும்பிக்கை என்பது ஒரு நீண்ட மூக்கு ஆகும்.  தும்பிக்கையால் ஒரே சமயத்தில் ஐந்தரை லிட்டர் தண்ணீரை உறிஞ்ச முடியும். உறிஞ்சிய தண்ணீரை வாய்க்குள் செலுத்தி குடிக்கும்.மேலும் தண்ணீரை வேகமாகப் பீச்சி அடிக்கும்.இதன் உதவியால் மரக் கிளைகளில் உள்ள இலைகள் மற்றும் தரையில் உள்ள புற்களையும் பறித்து உண்ணும்.  துதிக்கையால் மோப்பத்தை அறிந்து கொண்டே இருக்கும். இதன் உதவியால் சுமார் 350 கிலோ எடை வரை எளிதாக தூக்கும். இது வேறு எந்த விலங்குக்கும் இல்லாத ஒரு தனிச் சிறப்பாகும்.  கர்நாடகம்    இந்திய யானை கர்நாடக மாநில விலங்கு ஆகும். இது ஆசிய யானை(Asiatic elephant) என அழைக்கப்படுகிறது.ஆனால் நாம் யானை என்றே அழைக்கின்றோம். இதன் விலங்கியல் பெயர் எலிபாஸ் மேக்சிமஸ் இண்டிகஸ்(Elephas maximus indicus) என்பதாகும். கார்ல் லின்னேயஸ் என்பவர் 1758 ஆம் ஆண்டில் இதற்கு எலிபாஸ் மேக்சிமஸ்  என்கிற அறிவியல் பெயரைச் சூட்டினார்.   இந்தியாவில் 28,000 யானைகள் உள்ளன. இவற்றில் அதிகமான யானைகள் கர்நாடக மாநிலத்தில் வாழ்கின்றன. இங்கு 6072 யானைகள் உள்ளதாக 2017 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு கூறுகிறது. உடல் அமைப்பு  இந்திய யானையின் உயரம் 6 முதல் 8 அடி இருக்கும். இதன் நீளம் 15 முதல் 18 அடியாகும். வயது வந்த யானையின் எடை 2000 முதல் 5500 கிலோ வரை இருக்கும். ஆப்பிரிக்க யானையை விட ஆசிய யானையின் தலை மிகப் பெரியது. அதன் உச்சியிலே பக்கத்திற்கு ஒன்றாக மத்தகங்கள்  வளர்ந்து,புடைப்பான பிரிவுகளுடன் காணப்படும். இந்திய யானையின் கண்கள் சிறியவை. அவை குறைவானப் பார்வைத் கொண்டவை.இரண்டு கண்களுக்கு இடையேயும் ஒரு மேடு உண்டு. கழுத்தின் பின்புறம் பிடரியின் குறுக்கே செல்லும் ஒரு பள்ளம் உண்டு. இதன் முதுகு வீக்கமாகவும், யானையின் பின்புற வடிவம் குவிந்தும் உள்ளது. […] ஆப்பிரிக்க யானையின் காதை விட இந்திய யானையின் காது சிறியது. இதற்கு மனிதர்களை விட மிக உயர்ந்த செவித்திறன் உள்ளது. உடலின் மென்மையான பாகங்களில் ஒன்று காதுகளின் பின்புறத்தில் உள்ளது. இதன் மூளை சுமார் 5 கிலோ எடை கொண்டது.  இதன் உடலின் நிறம் அடர் சாம்பல் முதல் பழுப்பு அல்லது வெளிர் கருப்பு. காதுகள் மற்றும் கழுத்தில் உள்ள திட்டுகளில் நிறம் இல்லாமல் இருக்கும். இதன் விளைவாக அப்பகுதி வெளிர் அல்லது அடர் இளஞ்சிவப்பு நிறத்தில் தோன்றும். யானையின் கால்கள் தூண்கள் போல உடலின் பாரத்தைத் தாங்கி நிற்கின்றன. யானையின் முன் காலில் ககங்களும் பின் காலில் 4 நகங்களும் உள்ளன. இந்த யானையின் தும்பிக்கையின் நுனியில் விரல் போன்ற அமைப்பு ஒன்று மட்டுமே உள்ளது. […] யானையின் மேல் தாடையில் உள்ள இரண்டு முன் பற்கள் கொம்பாக வளர்கின்றன. இவையே தந்தங்கள் ஆகும்.ஆண் யானைகளுக்கு மட்டுமே தந்தங்கள் இருக்கும். பெண் யானைகளுக்கு தந்தங்கள் மிகச் சிறியவை.இவை மேல் உதட்டின் உள்ளேயே அடங்கி இருக்கும். அதிக எடை கொண்ட தந்தங்களின் எடை 39 கிலோவாகும். தந்தங்கள் கிழங்கை தோண்ட, மரப்பட்டையை உரிக்க, நடந்து செல்லும் போது இடையூறுகளை தகர்க்கப் பயன்படுகின்றன. ஆசியாவிலேயே மிக மிக நீளமான தந்தங்களைக் கொண்ட யானை கர்நாடக மாநிலத்தில் பந்திப்பூர்- நாகர்ஹோளே காப்புக் காட்டுப் பகுதியில் வாழ்ந்தது. இதன் பெயர் போகேஷ்வரா என்பதாகும். இதன் ஒரு தந்தம் 8 அடி நீளமும், மற்றொரு தந்தம் 7.5 அடி நீளமும் உடையது. இந்த யானை 2022 ஆம் ஆண்டு ஜூன் 11 அன்று இயற்கையாக மரணம் அடைந்துவிட்டது. ஆயுள் யானையின் கர்ப்ப காலம் 19.5 முதல் 21.5 மாதங்கள் ஆகும்.பெண் யானைகள் ஒவ்வொரு 2.5 முதல் 4 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு குட்டியைப் பெற்றெடுக்கும். யானைகள் நீண்ட காலம் உயிர் வாழும். இதன் சராசரி ஆயுட்காலம் 60 ஆண்டுகள் ஆகும். கேரளா கேரளா மாநிலத்தின் மாநில விலங்கு இந்திய யானை(Indian elephant) ஆகும். மேலும் கேரள மாநில அரசின் சின்னத்தில் யானை இடம் பெற்றுள்ளது. கேரள கலாச்சாரத்தில் யானை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கேரளாவில் யானைகளை சஹ்யாவின் மகன்கள் என்கின்றனர். இந்திய யானையின் அறிவியல் பெயர் எலிபாஸ் மேக்சிமஸ் இண்டிகஸ் என்பதாகும். யானை   உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் முதியோர் வரையிலும் எல்லோராலும் காண விரும்பும் விலங்கு யானையே. ஒரு காலத்தில் யானை இல்லாத சர்க்கஸே கிடையாது. பெரிய பெரிய கோயில்களில் யானைகளை வளர்த்து வருகின்றனர். திருவிழாக்களிலும், ஊர்வலங்களிலும் யானை முன்னே வருவது மிகச் சிறப்பு என மக்கள் கருதினர்.யானையைக் கண்டால் மக்கள் சலிக்காமல் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். தென்னாட்டில் சேர, சோழர், பாண்டியர் என்ற முப்பெரும் தமிழ் வேந்தர்கள் அரசு பட்டம் சூடவும். ஊர்வலம் செல்லவும் பட்டத்துயானை வளர்த்தனர். மேலும் நால்வகைப் படைகளில் யானைப்படை என்றோர் படை அமைப்பும் கொண்டிருந்தார். வாழிடம் யானைகள் கடல் மட்டத்திலிருந்து 5000 அடி உயரம் வரை உள்ள பகுதிகளில் வாழ்கின்றன.புதர்க்காடுகள்,மலைக் காடுகள், தானியம் பயிரிடப்பட்ட காடுகள் உள்ளிட்ட பரந்த அளவிலான புல்வெளிகள் மற்றும் வனப் பகுதி இவை வாழ்கின்றன. குறைந்த மரச் செடிகள் மற்றும் மரங்களுடன் புல்லை இணைக்கும் பகுதிகளை விரும்புகின்றன. இவை பொதுவாக அடர்ந்த காடுகளிலும், ஈரமான இலையுதிர், பசுமையான மற்றும் அரை பச்சை காடுகளிலும் காணப்படுகின்றன. நடத்தை  இந்திய யானை ஒரு சமூக விலங்கு வயதான பெண் யானையின் தலைமையில் கூட்டமாக வாழும். ஒரு கூட்டத்தில் 10 முதல் 100 யானைகள் வரை இருக்கும். யானையின் தோல் 2.5 செ.மீ தடிமன் கொண்டது.     […]  யானையின் கால் பாதம் அகலமானது. யானை எப்போதும் நின்று கொண்டே இருக்கும். இது நின்று கொண்டே உறங்கும். மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும். குறுகிய தூரத்தை 25 கிலோமீட்டர் வேகத்தில் கடக்கும்.இது நீரில் நன்றாக நீண்ட தூரம் நீந்தும்.யானைகள் மிகவும் புத்திசாலிகள் ஆகும். யானைகள் ஒரு நாளைக்கு 120 கிலோ வரை தாவரப் பொருட்களை உண்ணுகின்றன.ஒவ்வொரு நாளும் 160 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கின்றன. இந்திய யானைகள் ஆப்பிரிக்க யானைகளை விட சாதுவானவை.மேலும் இதனை எளிதில் பழக்கி விடலாம். கேரளா  கேரளாவில் 700க்கும் மேற்பட்ட சிறைபிடிக்கப்பட்ட யானைகள் உள்ளன. அவை கோவில்கள் மற்றும் தனி நபர்களுக்குச் சொந்தமானவை. குருவாயூர் கோவிலில் 60க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இங்கு யானைச் சடங்குகள் வழிபாட்டில் முக்கிய அங்கமாகும்.  குருவாயூர் கோவில் யானைகளுக்கு என்று ஒரு தனி அரண்மனை உள்ளது.இங்கு கேசவன் என்ற புகழ் பெற்ற யானை வாழ்கிறது. கேரளாவின் புகழ்பெற்ற கோவில் திருவிழாக்களில், அலங்கரிக்கப்பட்ட யானைகளின் ஊர்வலம் நடத்தப்படுகின்றன. பாதுகாப்பு    வனவிலங்கு துறை 2018 ஆம் ஆண்டில் கேரளாவில் யானைகள் கணக்கெடுப்பை நடத்தியது. இந்தக் கணக்கெடுப்பின் படி 5076 யானைகள் உள்ளன. இங்கு கோட்டூர் யானைகள் சரணாலயம் மற்றும் மறுவாழ்வு மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இது இந்தியாவில் துவக்கப்பட்ட முதல் மையமாகும். மேலும் உலகின் மிகப் பெரிய யானை மறுவாழ்வு மையம் இதுவாகும். இது யானைகளைப் பாதுகாத்து,மறுவாழ்வு செய்யும் நோக்கத்துடன் திறக்கப்பட்டது ஆகும்.  மத்தியப் பிரதேசம்  மத்தியப் பிரதேச மாநில விலங்கின் பெயர் பாரசிங்கா(Barasingha) ஆகும். உள்ளூர் மக்கள் பரசிங்கா என்கின்றார்.இது பரசிங்க சதுப்பு நிலமான் அல்லது சதுப்பு நிலமான்(Swamp Deer) எனவும் அழைக்கப்படுகிறது. இதன் விலங்கியல் பெயர் ருசெர்வஸ் டுவாசெலி(Rucervus duvaucelii) என்பதாகும்.இது செர்விடே (Cervidae) என்னும் விலங்கு குடும்பத்தைச் சேர்ந்தது. வாழ்விடம்  இதன் வாழிடம் இந்தியா மற்றும் தெற்கு நேபாளம் ஆகும். இந்தியாவில் மத்திய மற்றும் வட இந்தியாவில் காணப்படுகிறது. மேலும் குறிப்பாக இமயமலை, அசாம், ஜூம்னா நதி, கங்கை நதி,பிரம்மபுத்திரா நதி, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. அவை கங்ஹா தேசியப் பூங்கா,துத்வா பேசியப் பூங்கா, மனாஸ்  தேசியப் பூங்கா மற்றும் காசிரங்கா தேசியப் பூங்கா ஆகிய இடங்களிலும் வாழ்கின்றன. பாரசிங்கா இந்த மான் 110 முதல் 124 செ.மீ உயரம் வரை வளர்கிறது. இதன் உடல் நீளம் 160 முதல் 185 செ.மீ ஆகும். இதன் வால் நீளம் 10 முதல் 20 செ.மீ. ஆண் மானின் எடை 150 முதல் 280 கிலோ வரையிலும், பெண் மானின் எடை 120 முதல் 170 கிலோ வரையிலும் இருக்கும்.  பாரசிங்காவின் உடல் நிறம் பொதுவாக  பிரகாசமான ஆரஞ்சு முதல் அடர்த்தியான பழுப்பு வரை இருக்கும். உடலின் இரு பக்கங்களிலும், வயிற்றிலும் லேசான பழுப்பு நிறமாக மாறும்.கால்கள் மற்றும் வால் ஆகியவற்றின் உட்புறத்தில் மங்கலான வெள்ளை அல்லது வெள்ளை நிறமாக இருக்கும். ஆண்களுக்கு பெண்களை விட சற்று கருமையாக நிறம் காணப்படும்.   இந்த மானின் தலை குட்டையாகவும், வலிமையாகவும் இருக்கும்.காதுகள் நீளமாகவும்,அகலமாகவும் இருக்கும். கால்கள் வலுவாகவும், உயரமாகவும் அமைந்திருக்கும். அவை நீண்ட மற்றும் அகலமான குழம்புகளைக் கொண்டுள்ளன.  இதன் கழுத்தில் முடிகள் உள்ளன.முடிகள் கம்பளி போன்று ஆரஞ்சு கலந்த பழுப்பு நிறத்தில் உள்ளன. முதுகுத்தண்டு பகுதியில்  வெள்ளைப் புள்ளிகள் காணப்படுகின்றன. புள்ளிகள் இனச்சேர்க்கைக் காலத்தில் கருமையாக மாறுகின்றன.   மானின் முதுகுப் பகுதியில் ஒரு இருண்ட பட்டை உள்ளது.அதன் ஒவ்வொரு பக்கத்திலும் ஒளி புள்ளிகள் வரிசையாக இருக்கலாம். கோடை காலத்தில் சில மான்களின் முதுகு மற்றும் பக்கங்களில்  மங்கலான புள்ளிகள் உருவாகின்றன.    […]   ஆண் மானிற்கு பெரிய கொம்புகள் உள்ளன.அவை 1 மீட்டர் நீளம் வரை வளரக் கூடும். மேலும் வளைவு கொம்புக் கற்றையின் முனைகளுக்கு அருகில் குவிந்த புள்ளிகளுடன், கிரீடம் போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும். அவை நுனிகளுக்கு அருகில் 6 முதல் 8 புள்ளிகள் செறிவைக் கொண்டுள்ளன. வயது வந்த ஆண்களுக்கு 10 முதல் 15 முட்கவர்கள்(Tines)இருக்கலாம். இனப்பெருக்கம் இந்த மான் பலதார மணம் கொண்டவர்கள்.இனப்பெருக்க உரிமைக்காக ஆண் மற்ற ஆண்களுடன் சண்டை இடுகின்றன.அப்போது உறும் என்ற சப்தமும்,ஹீ-ஹா என்று கர்ஜனையும் அடிக்கடிக் கேட்கும்.பெண் ஒரு கன்றை மட்டுமே ஈனும். குட்டிகளைப் பெண் மான்களே பாதுகாக்கின்றன.இந்த மானின் சராசரி ஆயுட்காலம் 20 ஆண்டுகள் ஆகும். மகாராஷ்டிரா மகாராஷ்டிர மாநில விலங்கின் பெயர் இந்திய ராட்சத அணில்(Indian giant squirrel) அல்லது இந்திய பெரிய அணில் ஆகும். மேலும் இந்திய மலை அணில் மற்றும் மலபார் ராட்சத அணில்(Malabar giant squirrel) என்றும் இது அழைக்கப்படுகிறது. இதன் விலங்கியல் பெயர் ராட்டுபா இண்டிகா(Ratufa indica)என்பதாகும். மராத்திய மொழியில் ஷேக்ரு(Shekaru) என்று இதற்குப் பெயர். வாழிடம்  இது இந்தியாவில் மட்டுமே உள்ளது.இது ஓரிட வாழ்வி ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலைகள்,கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகிய பகுதிகளில் பரவி உள்ளன. இவை மலைப் பகுதி, அவற்றைச் சார்ந்த காடுகள், இலையுதிர் மற்றும் மிகவும் பசுமையான காடுகளில் வாழ்கின்றன. […]   இவை மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவின் சாத்புரா மலைத் தொடர்களிலும் காணப்படுகின்றன. கடல் மட்டத்திலிருந்து 590 முதல் 7500 அடி உயரம் வரை உள்ளப் பகுதிகளில் வாழ்கின்றன. இவை மரங்களில் அதிக நேரத்தைச் செலவிடுகின்றன உடலமைப்பு […] இதன் உடல் நீளம் 25 முதல் 50 சென்டிமீட்டர் ஆகும்.வாலின் நீளம் 20 முதல் 50 செ.மீ வரை இருக்கும்.இதன் எடை 1.5 முதல் 2 கிலோ வரை உடையது. உலகின் மிக அழகான அணில்களில் இதுவும் ஒன்றாகும். இது பல வண்ணங்களைக் கொண்ட  அணில் என்பது குறிப்பிடத்தக்கது.  இது 2 அல்லது 3 வண்ணத் தீட்டுகளைக் கொண்டுள்ளது. கருப்பு,பழுப்பு மற்றும் அடர் சிவப்பு நிறங்களைக் கொண்டுள்ளது. உடலின் நிறம் அடர் சிவப்பு முதல் பழுப்பு வரை இருக்கும். மேலும் தொப்பை பகுதியில் வெள்ளை ரோமங்கள் இருக்கும்.அடிப்பகுதி மற்றும் முன் கால்கள் பொதுவாக மங்கலான  வெள்ளை அல்லது கிரீம் நிறத்தில் காணப்படும். கன்னங்கள், மார்பு, முன்னங்கால்கள் மற்றும் கீழ் பகுதிகள் வெள்ளை, கிரீம் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.கண்கள் பிரகாசமான இருண்ட அல்லது வெளிர் பழுப்பு நிறத்தில் காணப்படும்.மூக்கு மற்றும் உதடுகள் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளன. வாய்க்கு பின்னால் சில நீண்ட முடிகள் உள்ளன. வால் நீளமாகவும்,வலுவாகவும் இருக்கும். வால் வெளிர் பழுப்பு நிறத்தில் இருக்கும். இதன் காதுகள் குட்டையாகவும், வட்டமாகவும் இருக்கும். ஆண் மற்றும் பெண் அணில் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் பெண் அணிலுக்கு மட்டும் 6 பால் காம்புகள் உள்ளன. நடத்தை   இது சர்வ வல்லமை உடையது.பழங்கள், பூக்கள்,கொட்டைகள்,பட்டை, பறவையின் முட்டைகள் மற்றும் பூச்சிகளை உண்ணும். இது கிளைகளில் வேகமாக ஓடவும், குதிக்கவும்,உடலை சமநிலைப்படுத்த வால் உதவுகிறது. ஒரு மரத்திலிருந்து வேறோர் மரத்திற்கு 6 மீட்டர் வரை தாவும். மரத்தின் மிக உயரமான பகுதியில் கூடு அமைக்கிறது.ஒரு அணில் 2 முதல் 5 கூடுகள் வரை கட்டுகிறது. கூடு உருண்டை வடிவத்தில் இருக்கும். ஒரு கூட்டில் மட்டும் குட்டிப் போடும். மற்ற கூடுகள் தூங்கும் இடமாகப் பயன்படுத்துகிறது.இனப்பெருக்கம் ஆண்டு முழுவதும் நடைபெறுகிறது. ஒரு ஜோடி நீண்ட காலத்திற்கு இணைந்து வாழும்.  பெண் அணில் 1 அல்லது 2 குட்டிகளை ஈனும்.இதன் கர்ப்ப காலம் 29 முதல் 35 நாட்கள் வரை இருக்கும். இந்திய பெரிய அணிலின் சராசரி ஆயுட்காலம் 20 ஆண்டுகள் ஆகும். மணிப்பூர்    மணிப்பூர் மாநிலத்தின் மாநில விலங்கு சங்காய் மான்(Sangai Deer) ஆகும்.உள்ளூர் மக்கள் சங்கை எனகின்றனர்.இதற்கு புருவக் கொம்பு மான்(Brow antlered deer) மற்றும் நடனமாடும் மான் போன்றப் பெயர்களும் உண்டு.இதன் அறிவியல் பெயர் ருசெர்வஸ் எல்டி எல்டி(Rucervus eldi eldi) என்பதாகும்.இது செர்விடே(Cervidae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. வாழ்விடம் இந்தியாவில் மணிப்பூர் மாநிலத்தில் மட்டுமே இந்த மான் வாழ்கிறது. மணிப்பூரில் லோக்டக் லாக் மற்றும் கெய்புல் லாம் ஜாவோ தேசியப் பூங்காவின் தெற்குப் பகுதிகளில் இவை காணப்படுகின்றன.கெய்புல் லாம் ஜாவோ தேசியப் பூங்கா என்பது உலகின் ஒரே மிதக்கும் பூங்கா ஆகும்.    சதுப்பு நிலக்காடுகள, திறந்த புதர்க் காடுகள், ஆறுகள், மலைத்தொடர்கள் மற்றும்  நீரில் மிதக்கும் தாவரங்கள் உள்ள பகுதிகளில் இவை வாழ்கின்றன.இங்கு இவை கூட்டம் கூட்டமாக உள்ளன. சங்கை மான்  இது ஒரு அழகான மான். இதன் உடல் நீளம் 140 முதல் 160 சென்டிமீட்டர் வரை இருக்கும். வால் நீளம் சுமார் 10 முதல் 20 சென்டிமீட்டர் ஆகும். இதன் உயரம் 100 முதல் 120 சென்டிமீட்டர். மானின் எடை சுமார் 90 முதல் 120 கிலோ வரையிலும் இருக்கும்.பெண் மானை விட ஆண் மான் பெரியது. இந்த மானிற்கு தனித் தன்மை வாய்ந்த கொம்பு உள்ளது.கொம்பின் நீளம் சுமார் 80 முதல் 105 சென்டிமீட்டர் வரை இருக்கும். கொம்பில் ஒரு சிறிய கிளை உள்ளது. இதன் காதுகள் பெரியவை. […] கண்களுக்கு முன்னால் ஒரு வெளிர் வெள்ளை திட்டு உள்ளது.இவற்றிற்கு கூர்மையான பார்வைத் திறன் உண்டு. உடல் நிறம் சிவப்பு பழுப்பு முதல் சாம்பல் வரை இருக்கும்.ஆண் மான் இருண்ட நிறத்தில் காணப்படும்.இதன் கழுத்தில் நீண்ட முடிகள் அடர்த்தியாக உள்ளன. இனப்பெருக்கம் இதன் பாலியல் முதிர்ச்சி வயது என்பது 1.5 முதல் 2 ஆண்டுகள் வரை ஆகும். பெண்ணின் கர்ப்ப காலம் 7.2 முதல் 8.5 மாதங்கள் வரை இருக்கும். பொதுவாக ஒரே குட்டி பிறக்கும். குட்டிகளின் மீது புள்ளிகள் காணப்படும். இவை வளர்ந்த பிறகு புள்ளிகள் மங்கிவிடும். குட்டிகளுக்கு 7 முதல் 8 மாதம் வரை பாலூட்டும்.மானின் சராசரி ஆயுட்காலம் 10 முதல் 14 ஆண்டுகள் ஆகும். பழக்கம்   இவை புல், மூலிகைச் செடிகள், நீரில் வாழும் தாவரங்கள்,மர இலைகள், பழங்கள் மற்றும் இளம் தளிர்களை உண்கின்றன. இவை காலை 8 முதல் 10 மணி வரையில் மேய்ச்சலில் ஈடுபடுகின்றன.பிறகு மாலையில் மீண்டும் மேய்ச்சலில் ஈடுபடுகின்றன.இவை பகல் மற்றும் இரவு நேரங்களில் ஓய்வெடுக்கின்றன.   சாங்காய் மான்கள் கூச்ச சுபாவம் உடையவை. ஆண்களும் பெண்களும் பொதுவாக தனிமையில் இருப்பார்கள். பெண்கள் தங்கள் குட்டிகளுடன் காணப்படும். இனச்சேர்க்கை காலத்தில் மட்டும் ஆண்களும் பெண்களும் பெரிய குழுக்களாகக் காணப்படுகின்றன. பாதுகாப்பு    இது 1950 ஆம் ஆண்டு வாக்கில் கிட்டத்தட்ட அழியும் நிலையில் இருந்தது. இதன் எண்ணிக்கை தற்போது சிறிய அளவில் உயர்ந்துள்ளது.இது  பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் அழிந்து வரும்(Endangered) விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது. மேகாலயா மேகாலயா மாநில விலங்கின் பெயர் மேக சிறுத்தை(Clouded leopard) ஆகும்.இது பெரிய புள்ளிச் சிறுத்தை,மேக மூட்டப்பட்ட சிறுத்தை மற்றும் படைச் சிறுத்தை என்றும் அழைக்கப்படுகிறது. இதன் உடலில் காணப்படும் புள்ளிகள் பெரிய மேகம் போன்ற அமைப்பை பெற்றுள்ளதால் இது மேக சிறுத்தை என்ற பெயரைப் பெற்றது. இதன் விலங்கியல் பெயர் நியோபெலிஸ் நிபுலோசா(Neofelis nebulosa) என்பதாகும். 1821 ஆம் ஆண்டில் எட்வர்ட் கிரிபித் என்பவரால் நெபுலோசா எனும் பெயர் சூட்டப்பட்டது. இது பெலிடே(Felidae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. வாழிடம் இவை நேபாளம், இந்தியா, மியான்மர், பூட்டான், தெற்கு சீனா, தைவான், லாவோஸ், கம்போடியா, தாய்லாந்து, தீபகற்ப மலேசியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் வாழ்கின்றன. இந்தியாவில் அசாம்,மேற்கு வங்காளம், திரிபுரா, மிசோரம், நாகலாந்து, மேகாலயா, மணிப்பூர், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இவற்றை காணலாம்.மேலும் இமயமலையின் அடிவாரப் பகுதியில் இவை அதிகமாக காணப்படுகின்றன.  ‌ இவை பசுமையான வெப்பமண்டல காடுகளை விரும்புகின்றன.மேலும் இரண்டாம் நிலைக் காடுகள், மரப்பட்டைக் காடு, சதுப்பு நிலம், புல்வெளி,புதர் நிலம், வறண்ட வெப்ப மண்டல காடுகள் மற்றும் கடலோரக் கடினமான காடுகள் போன்ற பிற இடங்களிலும் வாழ்கின்றன. மேக சிறுத்தை  இது ஒரு அழகான விலங்கு மற்றும் வண்ணமயமான பூனை இனத்தைச் சேர்ந்தது ஆகும். இது பெரிய பூனை இனம் மற்றும் சிறிய பூனை இனம் ஆகியவற்றிற்கு  இடைப்பட்ட இனமாகக் கருதப்படுகிறது. இது சாதாரண சிறுத்தையை விட சிறியது. ஆனால் இதன் வால் சற்று நீளமானது. இது 50 முதல் 60 சென்டிமீட்டர் உயரம் உடையது. இதன் உடல் நீளம் 65 முதல் 110 சென்டிமீட்டர் வரை இருக்கும்.வாலின் நீளம் 60 முதல் 95 சென்டிமீட்டர் வரை காணப்படும். உடலின் நிறம் மஞ்சள்,சிவப்பு,பழுப்பு முதல் மஞ்சள் சாம்பல் நிறத்தில் இருக்கும். ரோமங்கள் வெளிர் மஞ்சள் முதல் அடர் பழுப்பு நிறத்தில் உள்ளது.இவை பெரிய ஒழுங்கற்ற, மேகங்கள் போல் காட்சி தருகின்றன. […] இதன் தலை நீளமாகவும்,குறுகியதாகவும் இருக்கும்.தலையில் கருப்பு புள்ளிகள் உள்ளன.மேக சிறுத்தைக்கு மிக நீளமான கோரைப் பற்கள் உள்ளன. கண்ணின் கருவிழி பொதுவாக பழுப்பு கலந்த மஞ்சள் அல்லது சாம்பல் பச்சை நிறத்தில் காணப்படுகின்றன. நடத்தை இவை மரங்களில் ஓய்வெடுக்கும். மரங்களில் தலைகீழாக கீழே இறங்கவும், ஏறவும் கூடியத் திறனைக் கொண்டுள்ளது. இவை மிகக் குறைந்த நேரத்தை மட்டுமே தரையில் செலவிடுகின்றன. இவை காட்டுப்பன்றி, பறவைகள், குரங்குகள், வீட்டு கால்நடைகள் மற்றும் சிறிய பாலூட்டிகளை வேட்டையாடுகின்றன.பெண் சிறுத்தை 1 முதல் 5 குட்டிகளை ஈனுகின்றன.இவற்றின் ஆயுட்காலம் 11 ஆண்டுகளாகும். பாதுகாப்பு இதன் மொத்த எண்ணிக்கை 10,000 என்பதிலிருந்து மிக விரைவாக குறைந்து வருகிறது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இது பாதிக்கப்படக் கூடிய விலங்கு என  அறிவித்துள்ளது. இவை சிட்வான் தேசியப் பூங்கா மற்றும் போகற் பள்ளத்தாக்கு பகுதிகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மிசோரம் மிசோரம் மாநில விலங்கின் பெயர் செரோவ் (Serow) என்பதாகும். இது செர்ரோ, இமயமலை செர்ரோவ்,ஹிமாலயன் செரோ, ஹிமாலயன் தார் மற்றும் மகர ராசி தார் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதன் விலங்கியல் பெயர் கேப்ரிகார்னிஸ் சுமேத்ரேன்சிஸ்(Capricornis sumatraensis) ஆகும். இதன் பொதுவான பெயர் சுமத்ரான் செரோ (Sumatran Serrow), செரோ என்பதாகும். உள்ளூர் மக்களால் சாசா (Saza) மற்றும் கியா (Gya) என அழைக்கப்படுகிறது. இது போவிடே என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. வாழிடம்  இந்தியா,பர்மா,சியாம்,மலாய் தீபகற்பம் மற்றும் சுமத்ரா மலைகள் ஆகிய பகுதிகளில் இவை காணப்படுகின்றன. இந்தியாவில் காஷ்மீர் முதல் அசாமில் உள்ள மிஷ்மி மலைகள் வரை வாழ்கின்றன. இவை கடல் மட்டத்திலிருந்து 300 முதல் 3000 மீட்டர் உயரம் வரையிலான காடுகளில் பரவலாக உள்ளன. பொதுவாக அகன்ற இலைகள், ஊசி இலைக் காடுகள், மூங்கில் காடுகள் மற்றும் முட்கள் கொண்ட பள்ளத்தாக்கு பகுதியை விரும்புகின்றன.அசாமில் இவை குளிர்காலத்தில் 100 மீட்டருக்கு கீழே வரக்கூடும். பெரும்பாலும்  பாறைகளுக்கு அருகில் இவை காணப்படுகின்றன. இவை சிறிய குகைகளில் தங்குகின்றன. […] செரோ மான்  செரோ ஒரு அழகான மான் ஆகும். இது 95 சென்டிமீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. இதன் உடல் நீளம் 90 முதல் 150 சென்டிமீட்டர் ஆகும்.வாலின் நீளம் 8 முதல் 16 சென்டிமீட்டர்.  ஆண் மானின் எடை 50 முதல் 140 கிலோ வரையிலும்,பெண் மானின் எடை 30 முதல் 70 கிலோ வரையிலும் இருக்கும். இந்த மான்களுக்கு கொம்புகள் உண்டு. கொம்புகள் 15 முதல் 25 சென்டிமீட்டர் நீளம் வரை இருக்கும். கொம்பு லேசான வளைவைக் கொண்டிருக்கும். இரு பாலினங்களும் தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருக்கும்.இந்த மான் அடர் சாமல் அல்லது கருப்பு அல்லது பழுப்பு நிறத்துடன் காணப்படும். தலை குறுகியது மற்றும் வலுவானது.  கழுத்தில் வெள்ளை,பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் நீண்ட முடிகள் உள்ளன. கண்களுக்குக் கீழே மிகப் பெரிய வாசனை சுரப்பிகள் இருக்கின்றன.   கால்கள் வலுவானவை. கால்களில் உள்ள கருப்பு முடிகள் சிவப்பு நிறமாக மாறும். முழங்காலுக்கு கீழே கிரீமி வெள்ளை நிற முடிகள் உள்ளன. நடத்தை    இது சுறுசுறுப்பாக எப்பொழுதும் காணப்படும் விலங்கு. இவர்களின் அழைப்பு விசில் சத்தம் போல இருக்கும்.புற்கள், மூலிகைகள், புதர்களின் இலைகள், தளிர்கள் மற்றும் கிளைகளை அதிகாலையிலும் மாலையிலும் உண்ணும்.  மலைச் சரிவுகளில் நன்றாக ஏறக்கூடியவை. பெரும்பாலும் தனித்தே வாழ்கின்றன.சில சமயம் சிறிய குழுக்களாகவோ அல்லது ஜோடியாகவோ காணப்படுகிறது. ஒரு ஜோடி பல ஆண்டுகளாக ஒன்றாக இருக்கும்.  இந்த மான் 2 முதல் 3 ஆண்டுகளில் பாலியல் முதிர்ச்சி அடைகிறது. இதன் கர்ப்ப காலம் 205 முதல் 230 நாட்கள் வரை ஆகும். பொதுவாக ஒரு குட்டியை மட்டும் ஈன்றெடுக்கும் .இதன் சராசரி ஆயுள் காலம் 10 முதல் 20 ஆண்டுகள் ஆகும்.   இது வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம் 1972 இன் படி அட்டவணை-1 இல் இடம் பெற்றுள்ளது. மேலும் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் பாதிக்கப்படக் கூடிய விலங்கு என கூறப்பட்டுள்ளது.  நாகலாந்து நாகலாந்து மாநிலத்தின் மாநில விலங்கு மிதுன் ஆகும்.இது கயால் மாடு(Gayal),டிராங் எருது(Drung Ox)எனவும் அழைக்கப்படுகிறது. மிசோரம் பழங்குடி மக்கள் இதனை சியான், சீ, சே மற்றும் சியா என்று அழைக்கின்றனர். இதன் அறிவியல் பெயர் பாஸ் பிராண்டாலிஸ்(Bos frontalis) என்பதாகும்.இது போவிடே(Bovidae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும்.  கயால் மலைகளின் கப்பல்(Ship of the highland)என்றும்,மலைகளின் கால்நடை என்றும் குறிப்பிடப்படுகிறது.இது இந்திய காட்டு மாட்டின் வழித்தோன்றல் என கருதப்படுகிறது.கயாலின் மரபணு பகுப்பாய்வு 2017 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 2020 ஆம் ஆண்டில் மரபணு வரிசைகள் மூலம் ஆராய்ந்த போது கயாலின் தாய்வழி மூதாதையர் காட்டு மாடு அல்லது கவுர் என சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. வாழிடம் இது மிதமான மற்றும் குளிர்ந்த கால நிலையை விரும்புகிறது.புல், புதர்கள் மற்றும் வன இலைகளை உண்ணக்கூடிய ஒரு தாவர உண்ணி விலங்கு இதுவாகும்.வடகிழக்கு இந்தியாவில் விவசாயிகள் கடல் மட்டத்திலிருந்து 1000 முதல் 3000 மீட்டர் உயரத்தில் மலைப்பாங்கான,புதர் நிறைந்த காடுகளில் கயால்களை வளர்க்கிறார்கள். கயால் கயால் தோல் நிறம் கருப்பு-பழுப்பு நிறமாகும். கால் மூட்டுகளின் கீழ் பகுதி வெள்ளை அல்லது மஞ்சள் நிறமாக இருக்கும். சில வளர்ப்பு கயால்களின் நிறம் வெண்மை கலந்து காணப்படும். நிறமி குறைப்பாட்டின் காரணமாக அல்பினோ போன்ற கயால் ஒன்று திருச்சூர் உயிரியல் பூங்காவில் உள்ளது.   கயால்கள் பின்புறத்தில் ஒரு சிறிய முகடு வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் காளைகளின் தொண்டையில் ஒரு பெரிய கட்டி இருக்கும்.ஆனால் பெண் கயாலின் தொண்டையில் அரிதாகவே கட்டி உள்ளது. இளம் கன்றுகளின் கொம்புகள் மிருதுவாகவும், மெருகூட்டப்பட்டதாகவும் இருக்கும்.ஆனால் பெரியவர்களின் கொம்புகள் முரட்டுத்தனமாக காணப்படும்.    […]   பாலியல் முதிர்ச்சி என்பது ஆணுக்கு 18 முதல் 20 மாதங்கள் வரையிலும், பெண்ணிற்கு 19 முதல்  21 மாதங்கள் வரையிலும் இருக்கும். இனப்பெருக்கம் என்பது ஆண்டு முழுவதும் நடைபெறும். பெண்ணின் கர்ப்ப காலம் 9 முதல் 10 மாதங்கள் ஆகும். ஒரு கன்று மட்டும்  பிறக்கிறது. கயாலின் ஆயுட்காலம் என்பது 18 முதல் 26 ஆண்டுகள் ஆகும். நடத்தை   இவை சிறு குழுக்களாக காணப்படுகின்றன. பொதுவாக ஒரு வயது வந்த ஆண் மற்றும் பல பெண்கள்,இளம் வயது கன்றுகள் எனக் குழுவில் இடம் பெற்றிருக்கும். குரல் எழுப்புதலில் அலாரம்  போல் இருக்கும். பயன் இதன் பாலில் இருந்து தயிர், நெய் மற்றும் பாலாடை கட்டி தயாரிக்கப்படுகிறது.கயால் இறைச்சியில் புரதம் அதிகமாகவும்,கொழுப்பு குறைவாகவும் இருக்கும். இதன் தோல் உயர்ந்த பளபளப்புடன் உயர் தரத்தில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.தோல் பைகள், காலணிகள் மற்றும் தோல் ஆடைகள் தயாரிக்க இதன் தோல் பயன்படுத்தப்படுகிறது. பாதுகாப்பு இந்திய கால்நடை கணக்கெடுப்பு 2019 ஆம் ஆண்டின் படி சுமார் 3.9 லட்சம் கயால்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதைப் பாதுகாக்க விவசாயிகளுக்கு கயால் வளர்ப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஒடிசா ஒடிசா மாநில விலங்கின் பெயர் சாம்பார் மான் (Sambar deer) ஆகும். உள்ளூர் மக்கள் இந்த மானை சாம்பார் என்று அழைக்கின்றனர். இதன் தனித்துவமான அம்சங்களின் காரணமாகவே ஒடிசா மாநில விலங்காகத் தேர்வு செய்யப்பட்டது. இந்த மானின் விலங்கியல் பெயர் ரூசா யூனிகலர் (Rusa unicolor) என்பதாகும். எல்லா திராவிட மொழிகளிலும் கடமான் என்ற சொல் இம்மானுக்கு உள்ளது. சங்க இலக்கியம் தொடங்கி இம்மான்களை கடமான், கடமா,கடம்பை,கடமை என்று குறிப்பிடப்பட்டு வருகின்றன. ஆங்கிலத்தில் கடமான் வகைகளை எல்க்(Elk)என அழைப்பர். இந்த மான்களுக்கு கடம்பை மான் என்ற பெயரும் உண்டு.ஆங்கிலத்தில் இதன் ஹிந்திப் பெயரான சாம்பர் என்பதையே பின்பற்றி அழைக்கிறார்கள். தாயகம்  இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், தாய்லாந்து, கம்போடியா, தெற்கு சீனா, தைவான், ஆசியா,சுமத்ரா மற்றும் போர்னியோ தீவுகள் முழுவதும் இவை காணப்படுகின்றன. தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் சாம்பார் மான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.   […] இந்தியாவில் குறிப்பாக கன்ஹி, கார்பெட், ரந்தம்போர், பாந்தவகர், கிர், துத்வா, மனாஸ், காசிரங்கா மற்றும் சரிஸ்கா போன்ற சில பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இவற்றை  எளிதில் காணலாம்.ஒடிசாவில் சில மான் பூங்காக்களில் இது வளர்க்கப்படுகிறது. புவனேஸ்வர் மற்றும் தேன்கனலில் அமைந்துள்ள பிராந்திய அறிவியல் மையங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில்  சாம்பார் மான்கள் உள்ளன. அங்கு வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. ஒடிசாவின் மாநில விலங்கு என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றனர். சாம்பார் மான்    தெற்கு ஆசியாவில் காணப்படும் மிகப் பெரிய மான் இதுவாகும். இது 3 முதல் 5 அடி உயரம் வரை வளரக்கூடியது. உடலின் நீளம் 5  முதல் 9 அடி வரை இருக்கும். வால் சுமார் 15  முதல் 30 சென்டிமீட்டர் உள்ளது. இந்த மானின் எடை 100 முதல் 320 கிலோ வரை இருக்கும். உடலின் நிறம் மஞ்சள் அல்லது சாம்பல் நிறத்துடன் இருக்கும். கீழ் பாகங்கள் வெளிர் நிறத்தில் காணப்படும். வயதான சாம்பார் மான் மிகவும் அடர் பழுப்பு நிறமாவும், கிட்டத்தட்ட கருப்பு நிறமாகவும் மாறும். ஆண் மான்களுக்கு முரட்டுத்தனமான கொம்புகள் உள்ளன.கொம்புகள் சுமார் 110 செ.மீ நீளம் வரை வளரும்.  இதற்கு கால்கள் நீளமாகவும் ,வலுவாகவும் இருக்கும்.கால்களின் மேல் நிறம் அடர் பழுப்பு நிறமாகவும், கால்களின் உள்பகுதிகள் வெளிர் அல்லது மங்கிய வெள்ளை நிறமாகவும் இருக்கும்.காதுகள் நீளமாகவும், பழுப்பு நிற சாம்பல் நிறமாகவும் இருக்கும். பழக்கம் இந்த மான் மிகவும் கூச்ச சுபாவம் உடையது.இது அந்தி மாலை அல்லது இரவில் சுறுசுறுப்பாக இருக்கும்.இந்த மான் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும். ஆபத்து ஏற்பட்டால் பூக்கிங் அல்லது பெல்லிங் என்று ஒலி எழுப்பும்.   இந்த மானின் பாலியல் முதிர்ச்சி வயது என்பது 22 முதல் 24 மாதங்கள் ஆகும். பெண் மானின் கர்ப்ப காலம் 8 முதல் 9 மாதங்கள். பிறகு ஒரு குட்டி மட்டும் ஈனும். இந்த மான்களின் சராசரி ஆயுட்காலம் 16 முதல் 20 ஆண்டுகள் வரை ஆகும். பஞ்சாப்   பஞ்சாப் மாநில விலங்கின் பெயர் பிளாக் பக்(Black Buck) ஆகும். இதன் விலங்கியல் பெயர் ஆன்டிலோப் செர்விகாப்ரா (Antilope cervicapra) என்பதாகும்.இது போவிடே (Bovidae) என்னும் விலங்குக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் உள்ளூர் பெயர் கலா ஹிரான் (Kala Hiran) ஆகும். வாழிடம்  பிளாக் பக் மான் இந்திய துணைக் கண்டத்தைத் தாயகமாக கொண்டது ஆகும். பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் மிகக் குறைந்த அளவில்  உள்ளது.ஆனால் அவை  அழிந்து  கொண்டே இருக்கிறது. இதேபோல் நேபாளத்தில் கடைசியாக எஞ்சி இருக்கும் இந்த மான் இனம் பார்த்தியா தேசிய பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.   பாகிஸ்தானில் வாழக்கூடிய பிளாக் பக் எப்போதாவது இந்தியாவின் எல்லையை ஒட்டிய பகுதிகளில் காணப்படுகிறது. இந்தியாவிலிருந்து இந்த மான் அமெரிக்கா வின் டெக்சாஸ் மற்றும் அர்ஜென்டினாவிலும் அறிமுகம் செய்யப்பட்டது. 2021ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி உலக அளவில் சுமார் 50,000 பிளாக் பக்  மான்கள் உள்ளன.    […]  இந்தியாவில் இந்த மான்கள் மகாராஷ்டிரா, ஒரிசா,பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் மட்டுமே அதிகமாக உள்ளன. மத்திய இந்தியாவில் இவை சிறிய அளவிலேயே உள்ளன. பிளாக் பக் திறந்த வனப்பகுதிகள் மற்றும் பகுதிப் பாலைவனப் பகுதிகளில் வாழ்கிறது. ஆனால் முள் அல்லது உலர்ந்த இலையுதிர் காடுகளைக் கொண்டப் பகுதிகளிலும்  காணப்படுகிறது. இவை புல்வெளி மற்றும் திறந்த வனப் பகுதிகளுக்கு அருகில் தங்க விரும்புகின்றன. இவைகளுக்கு தினமும் தண்ணீர் தேவைப்படுகிறது.இவை கோடையில் தண்ணீர் மற்றும் தீவனம் தேடி நீண்ட தூரம் பயணிக்கின்றன. உடல் அமைப்பு ஆண் மான்கள் பிறக்கும்போது வெளிர் நிறத்தில் இருக்கும். ஆனால் முதிர்ச்சி அடையும் போது கருமையாக மாறும்.இது கருப்பு மற்றும் வெள்ளை ரோமங்களை கொண்டுள்ளது.  பெண்ணின் நிறம் தலை மற்றும் பின்புறம் மஞ்சள் பழுப்பு நிறமாக இருக்கும். இரு பாலினமும் கால்களின் அடிப்பகுதி மற்றும் உள்புறம் மென்மையாக இருக்கும்.   இனப்பெருக்கம் செய்யாத காலத்தில் ஆண் மான்கள் கணிசமாக ஒளிரும். முகம் மற்றும் கால்களில் மட்டுமே கருமையான நிறத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். ஆண்களை விட பெண்கள் பாலியல் முதிர்ச்சியை மிக வேகமாக அடைகிறார்கள். ஆண்களுக்கு 31-33,பெண்களுக்கு 30-32 குரோமோசோம்கள் உள்ளன. நடத்தை ஒவ்வொரு கூட்டத்திற்கும் வயதில் முதிர்ந்த பெண் மானே தலைமை தாங்குகிறது. இவை காலையிலிருந்து நண்பகல் வரை மேயும். வெயில் கடுமையாக இருக்கும் நேரத்தில் படுத்து இளைப்பாறும். இவை ஓய்வெடுப்பதற்கு பெரும்பாலும் சமவெளிகளையே தேர்வு செய்கின்றன. இவை தொலைவிலிருந்து எதிரிகளின் வரவை கவனித்து விடும். மந்தையைக் காவல் காக்கும் மான் எதிரியின் வரவை மற்ற மான்களுக்கு எச்சரிக்கை செய்யும்.உடனே மந்தையில் உள்ள அனைத்து மான்களும் எழுந்து துள்ளி குதித்து ஓடும். ஏறக்குறைய 10 அடி உயரம் வரை துள்ளி எழும். இந்த மான்கள் மணிக்கு சுமார் 64 முதல் 96 கிலோ மீட்டர் வேகத்தில் பாயந்து செல்லும். ராஜஸ்தான் மாநில விலங்கு என்று வரும்போது ராஜஸ்தானில் ஒன்று மட்டும் அல்ல, இரண்டு மாநில விலங்குகள் உள்ளன. ஒட்டகம் ராஜஸ்தானின் பாரம்பரிய மற்றும் கால்நடை விலங்கு ஆகும். மற்றொன்று சிங்காரா என்ற மான்.இது ராஜஸ்தான் மாநிலத்தின் மாநில வனவிலங்கு பிரிவில் வருகிறது. 1.ஒட்டகம்    ஒட்டகம் ராஜஸ்தான் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ விலங்காகும்.இது 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று மாநில விலங்காக அறிவிக்கப்பட்டது. கால்நடைப் பிரிவில் ஒட்டகம் மாநில விலங்காகத் தேர்வு செய்துள்ளனர். இது பாலைவனத்தின் அடையாளச் சின்னமாக விளங்குகிறது. பாலைவனங்களில் வாழக்கூடிய மக்களின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த விலங்காக ஒட்டகம் உள்ளது. பெயர்  இதன் விலங்கியல் பெயர் கேமலஸ் டிரோமெடரியஸ் ( Camelus dromedarius) ஆகும்.இது ஒட்டகம், ஒரு கூம்பு ஒட்டகம் ( One humped camel),ஒற்றைத் திமில் ஒட்டகம்,டிரோமெடரி ஒட்டகம் (Dromedary camel)மற்றும் அரேபிய ஒட்டகம் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.   டிரோமெடரி என்ற பொதுவான பெயர் பழைய பிரெஞ்சு டிரோமெடயர் அல்லது முன்னால் லத்தீ டிரோமெடேரியஸ் என்பதில் இருந்து வந்தது. ஒட்டகத்தை பாலைவனக் கப்பல் (Ship of the desert) என்று பெருமையாக அழைக்கின்றனர். வாழிடம்    இவை ஆசியா, வடக்கு ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் உள்ள பாலைவனங்ளை தாயகமாகக் கொண்டவை. ஒட்டகங்கள் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டன.     […] ஒட்டகம்   ஒட்டகப் பேரினத்தில் ஆறு இனங்கள் உள்ளன.இவற்றில் டிரோமெடரி ஒட்டகம்தான் உயரத்தில் மிகப் பெரியது. ஆண் ஒட்டகம் 5 அடி முதல் 7 அடி உயரமும்,பெண் ஒட்டகம் 5 முதல் 6 உயரமும் கொண்டிருக்கும். ஆண்களின் எடை பொதுவாக 400 முதல் 690 கிலோ ஆகும்.பெண்கள் 300 பேர் 540 கிலோ வரை எடை உள்ளதாக இருக்கும்.  இதற்கு நீண்ட,வளைந்த கழுத்து, குறுகிய மார்பு மற்றும் ஒற்றை கூம்பு உள்ளது. இதற்கு கூர்மையான பார்வையும், வாசனையை உணரும் திறனும் உண்டு. காதுகள் சிறியவை, வட்டமாக இருக்கும். ஒட்டகத்திற்கு 34 பற்கள் உள்ளன. இதன் உடல் கருப்பு நிறமாகவும், தோல் தடிமனாகவும் காணப்படும். முதுகில் உள்ள கூம்பு பகுதி நார்ச்சத்து திசுக்களால் ஒன்றாக பிணைக்கப்பட்ட கொழுப்பால் ஆனது. முகத்தில் சுரப்பிகள் இல்லை. நடத்தை ஒட்டகம் சுமார் 20 நபர்களைக் கொண்ட குழுவை உருவாக்குகிறது.ஆண் ஒட்டகம் குழுவை வழி நடத்துகிறது. இலைகள், உலர்ந்த புற்கள் மற்றும் பாலைவன தாவரங்களை உண்ணுகிறது.  ஒட்டகம் நீர் இல்லாமல் பல நாள் உயிர் வாழக் கூடியது. பொதுவாக 4-5 நாள் நீர் அருந்தாமல் வாழக்கூடிய தன்மை இதற்கு உண்டு. புல் போன்ற உணவு கிடைத்தால் 10 மாதங்கள் வரையிலும் கூட நீர் அருந்தாமல் இருக்கக்கூடியது. நீர் அருந்தும் போது ஏறத்தாழ 100 லிட்டர் நீர் அருந்தக்கூடியது.  இது மணிக்கு 40- 65 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும். இனச்சேர்க்கை ஆண்டு முழுவதும் நடைபெறுகிறது. அதன் கர்ப்ப காலம் 15 மாதங்கள் ஆகும். பிறகு பெண் ஒட்டகம் ஒரு கன்றை ஈனும் .ஒட்டகத்தின் சராசரி ஆயுட்காலம் 40 முதல் 50 ஆண்டுகள் ஆகும். பயன்கள்  இது பொதுவாக சவாரி செய்வதற்கும்,பாரம் சுமப்பதற்கும்,வண்டி இழுப்பதற்கும்  பயன்படுத்தப்படுகிறது. இதன் இறைச்சி மற்றும் பால் ஆகியவை உணவாக பயன்படுகிறது. ஒட்டகப் பால் பாலைவன நாடோடி பழங்குடியினரின் பிரதான உணவுகளில் ஒன்றாகும். ஒரு நாடோடி கிட்டத்தட்ட ஒரு மாதம்,ஒட்டகப் பால் மட்டுமே குடித்து உயிர் வாழ முடியும்.  2.சின்காரா  ராஜஸ்தான் மாநிலத்திற்கு எந்த அறிமுகம் தேவையில்லை.ராஜஸ்தான் அதன் ஏகாதிபத்திய பாரம்பரியம், துடிப்பான கலாச்சாரம் மற்றும் வசீகரிக்கும் கட்டிடங்களுக்குப் பெயர் பெற்றது. ராஜஸ்தான் மாநிலத்தின் அதிகாரப் பூர்வமான மாநில விலங்கு சின்காரா (Chinkara) ஆகும்.    இது ராஜஸ்தான் மாநிலத்தின் மாநில வனவிலங்கு என 1981 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.இதன் விலங்கியல் பெயர் கெசெல்லா பென்னெட்டி ( Gazella bennettii) என்பதாகும்.உள்ளூர் மக்கள் இதை சிங்கார மான் என்கின்றனர்.இதற்கு இந்தியச் சிறு மான் என்ற பெயரும் உண்டு. வாழிடம் சிங்காரா தெற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு மான் இனமாகும். இந்தியா, வங்கதேசம்,பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளில் வாழ்கின்றன. இவை வறண்ட சமவெளிகள், மலைகள், பாலைவனங்கள், வறண்ட புதர்கள் மற்றும் சூரிய ஒளி அதிகம் படக்கூடிய காடுகளில் காணப்படுகின்றன. […] இந்தியாவில் 80 க்கும் மேற்பட்ட பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இந்த மான்கள் வசிக்கின்றன. ஜெய்ப்பூரில் உள்ள நஹர்கரில் அதிகம் காணப்படுகின்றன. மேலும் நந்தம்போர் மற்றும் பாந்தவகர் தேசியப் பூங்கா ஆகியவை இதன் தாயகமாக மாறியுள்ளன. சிங்காரா இது ஒரு சிறிய மான் ஆகும். இது 65 சென்டிமீட்டர் உயரமும்,30-40 செ.மீ நீளமும் உடையது.இதன் உடல் எடை 23 முதல் 25 கிலோ ஆகும்.இதன் கொம்புகள் 39 செ.மீ வரை வளரும்.இதன் தோல் சிவந்த நிறத்தில் காணப்படும். உரோமங்கள் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும். இதன் மேல்நிறம் வேட்டையாடுபவர்களிடம் இருந்து புல்வெளியில் சிறப்பாக மறைக்க உதவுகிறது.மானின் முகத்தின் பக்கங்களில், கண்ணின் மூலையில் இருந்து முகவாய் வரை கருமையானக் கோடுகள் உள்ளன. அவை வெள்ளைக் கோடுகளால் எல்லைகளாக உள்ளன. இனப்பெருக்கம்  சிங்காரா ஆண்டிற்கு இரண்டு முறை இனப்பெருக்கம் செய்கிறது. இதன் கர்ப்ப காலம் 5 முதல் 5.5 மாதங்கள் வரை நீடிக்கும். கர்ப்ப காலத்திற்கு பிறகு ஒரு குட்டியை ஈனும். குட்டி பிறந்து 2 மாதங்கள் வரை பராமரிக்கப்படுகின்றன. மற்றொரு குட்டி பிறக்கும் போது அவை 12 மாதங்கள் வரை தாயுடன் தங்குகிறது. பெண் ஒரு வயதில் இனப்பெருக்க முதிர்ச்சி அடைகிறது. அதே நேரத்தில் ஆண் 2 வயதாகும் போது இனப்பெருக்க முதிர்ச்சி அடைகிறது. இந்த மான்களின் ஆயுள் காலம் 12 முதல் 15 ஆண்டுகள் ஆகும். வாழ்க்கை முறை இது கூச்ச சுபாவம் உள்ள விலங்கு. சில நேரங்களில் 4 மான்கள் வரை சிறிய குழுக்களாகக் கூடலாம். இது மிகவும் சுறுசுறுப்பான மான்.இது மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது. மேலும் 6 முதல் 7 மீட்டர் உயரம் வரை இதனால் குதிக்க முடியும். இந்த மானிற்கு தேவையான நீர்ச் சத்தை செடிகளில் இருந்தும், பனியில் இருந்தும் பெற்றுக் கொள்கிறது. இதனால் ஒரு சொட்டு நீர் கூட இல்லாமல் நீண்ட நாட்கள் வரை வாழக்கூடியது. இது சூரியன் மறைவதற்கு சற்று முன் மற்றும் இரவில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். இவை இரவு நேரங்களில் உணவைத் தேடுகின்றன. தற்போது உலக அளவில் சுமார் 70 ஆயிரம் சிங்காரா மான்கள் வாழ்கின்றன.  சிக்கிம் சிக்கிம் மாநில விலங்கின் பெயர் சிவப்பு பாண்டா(Red Panda) ஆகும். இது கரடிப் பூனை அல்லது பயர் பாக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் லெசர் பாண்டா என்ற பெயரும் இதற்கு உணடு. பாண்டா என்ற பெயர் நேபாள வார்த்தையான போன்யா என்பதிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.  இதன் விலங்கியல் பெயர் ஐலூரஸ் பல்ஜென்ஸ் (Ailurus fulgens)என்பதாகும். இது ஐலூரிடே(Ailuridae) என்னும் விலங்கு குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் லத்தீன் பெயருக்கு நெருப்பு வண்ணப் பூனை என்று பொருள் ஆகும். வாழிடம் இவை இமயமலை மற்றும் தென் சீனாவைத் தாயகமாகக் கொண்டவை. இந்தியா, நேபாளம், சீனா, தீபெத், பூட்டான் மற்றும் பர்மா ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன.  இந்தியாவில் இவை சிக்கிம், அசாம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் இமயமலையின் பிரதானக் காடுகளில் வாழ்கின்றன. இவை இலையுதிர் காடுகள் மற்றும் ஊசி இலைக் காடுகளை மிகவும் விரும்புகின்றன. இவை பொதுவாக மரங்களின் மீதே காணப்படுகின்றன. […] சிவப்பு பாண்டா சிவப்பு பாண்டாக்கள்,கரடி போன்ற உடல் அமைப்பும் மற்றும் அடர்த்தியான முடியையும் கொண்டுள்ளது.இது வீட்டு பூனையை விட சற்று பெரியது.இது அழகான மற்றும் வண்ணமயமான விலங்கு. இதன் உடல் நீளம் 50 முதல் 64 சென்டிமீட்டர் வரை இருக்கும். வாலின் நீளம் 30 முதல் 50  செ.மீ. ஆகும்.இதன் உடல் எடை 3 முதல் 6.2 கிலோ வரை காணப்படும்.  உடல் பிரகாசமான சிவப்பு பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது.இவை மென்மையான மற்றும்  அடர்த்தியான ரோமங்களைக் கொண்டுள்ளன. குளிர்காலத்தில் இதன் உடல் சூடாக இருக்க ரோமங்கள் உதவுகின்றது. இதன் தலை வட்டமானது. இதுக்குச் செங்குத்தான காதுகள் உள்ளன. காதுகளைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளை நிறத்தில் இருக்கும்.இதன் மூக்கு கறுப்பாக உள்ளது.இதன் கண்களுக்கு மேலே,சிவப்பு கலந்த பழுப்பு நிற முகமூடி போன்ற அடையாளங்கள் உள்ளன. கண்களின் நிறம் அடர் பழுப்பு ஆகும்.    கால்கள் அடர் பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும்.இவற்றின் கால்களில் தடித்த கம்பளி ரோமங்கள் உள்ளன.இது பாண்டாவின் கால்களைச் சூடாக வைத்திருக்க உதவுகிறது. பாதங்கள் குட்டையானவை.பாதங்களின் அடிப்பகுதி அடர்த்தியான வெள்ளை ரோமங்களால் மூடப்பட்டிருக்கும். இது ஈரமான கிளைகளில் ஏறும்போது நழுவி விடாமல் இருக்க பயன்படுகிறது. பாதங்களில் பகுதி உள்ளிழுக்கும் நகங்கள் உள்ளன. இவை திறமையாக மரம் ஏறுவதற்கு அனுமதிக்கின்றன.   வால் நீளமானது.இதில் அடர்ந்த முடிகள் புதர் போல் உள்ளன.இதன் வாலில் சிவப்பு மற்றும் மஞ்சள் என மாறி மாறி மோதிர வளையங்கள் காணப்படுகின்றன. பழக்கம்  இவை சிறிய பாலூட்டிகள்,பறவைகள், முட்டைகள், பூச்சிகள் இலைகள், பட்டைகள்,பழங்கள், பூக்கள் ஆகியவற்றை உண்கின்றன.இவை இனச்சேர்க்கை காலத்தைத் தவிர தனித்து வாழ்கின்றன. இவை 18 முதல் 24 மாதங்களில் பாலியல் முதிர்ச்சி அடைகின்றன.இதன் கர்ப்ப காலத்தில் மரம் அல்லது பாறைகளில் கூடு கட்டுகிறது.மேலும் ஒரு பிரசவத்தில் 2 முதல் 4 குட்டிகளை ஈனும். குட்டிகள் 16 முதல் 20 நாட்களுக்குப் பிறகு கண்களைத் திறக்கின்றன.இதன் சராசரி ஆயுட்காலம் 8 முதல் 14 ஆண்டுகள் ஆகும். தமிழ்நாடு  தமிழ்நாட்டின் மாநில விலங்கு வரையாடு (Varaiyaadu) ஆகும். இது நீலகிரி தஹர்(Nilgiri Tahr) மற்றும் நீலகிரி ஐபெக்ஸ்(Nilgiri Ibex) எனவும் அழைக்கப்படுகிறது. வரையாடு என்ற சொல் தமிழ் வார்த்தையான வரை மற்றும் ஆடு என்பதிலிருந்து உருவானது. வரை என்பது மலை,மலையுச்சி, குன்று,சரிவு ஆகியப் பொருள்களை உணர்த்துகின்றன.   இதன் விலங்கியல் பெயர் நீலகிரிட்ராகஸ் ஹைலோகிரியஸ்(Nilgiritragus hylocrius) என்பதாகும். நீலகிரிட்ராகஸ் என்ற பேரினத்தின் பெயர் நீல மலைகள் என்று பொருள்படும் நீலகிரி என்ற தமிழ் வார்த்தையில் இருந்து பெறப்பட்டது.டிராகோஸ் என்ற வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டது.இதற்கு ஆடு என்று பொருள்.  பண்டைய தமிழ் இலக்கியத்தில் வரையாடு பற்றியக் குறிப்புகள் உள்ளன. சீவக சிந்தாமணி,நற்றிணை, ஐங்குறுநூறு, பட்டினப்பாலை, பதிற்றுப் பத்து, பரிபாடல்  ஆகிய இலக்கியங்களில் வரையாடு பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. வாழ்விடம் இது தென் இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரித்தான ஓர் இனமாகும். இது நீலகிரி மலையில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு மற்றும் கேரளப் பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது.  இவை மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்குப் பகுதியில் உள்ள மலைக்காடுகள், திறந்த புல்வெளிகளில் காணப்படுகின்றன. இவை கடல் மட்டத்திலிருந்து 3900 அடி முதல் 8500 அடி உயரம் வரை உள்ள காடுகளில் வாழ்கின்றன.   […] வரை ஆடு  இது செம்மறி ஆட்டுடன் நெருங்கியத் தொடர்புடையது. காட்டாடு இனத்திலேயே வரையாடு மிகவும் பெரிய உடல் அமைப்பைக் கொண்டது.இது 3 அடி உயரம் வளரக்கூடியது.உடல் எடை 80 முதல் 100 கிலோ வரை இருக்கும்.பெண் ஆட்டை ஆண் வரையாடு எடையில் 2 மடங்கு அதிகமானது. ஆண் மற்றும் பெண் வரையாடுகளின் உடலமைப்பில் வேறுபாடு உண்டு. ரோமங்கள் குட்டையாக, கரடு முரடாக இருக்கும்.இதன் உடல் பகுதி மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாகவும், அடிப்பகுதி மங்கலான நிறத்தையும் உடையது.வயதில் முதிர்ந்த ஆண் ஆடு கருமையாக மாறிக் கொண்டே செல்லும்.முதுகுப் பகுதி வெளிர் சாம்பல் நிறமாக மாறி ஒளிரும்.  இந்த ஆடுகளுக்கு வளைந்த கொம்புகள் உண்டு. ஆணிற்கு 44.5 செ.மீ நீளமும், பெண்ணிற்கு 35.6 செ.மீ நீளமும் கொம்புகள் உள்ளன. பெண்ணிற்கு இரண்டு பால் காம்புகள் உள்ளன. இரு பாலருக்கும் தாடி கிடையாது. பெண் ஒரு குட்டியை மட்டுமே ஈனும். மிக அரிதாக இரண்டு குட்டிகள் பிறக்கின்றன. இதன் சராசரி ஆயுட்காலம் 9 ஆண்டுகள் ஆகும். பாதுகாப்பு  இது புலிகள், சிறுத்தைகள், குள்ளநரிகள் மற்றும் காட்டு நாய்கள் மற்றும் மனிதர்களாலும் வேட்டையாடப்படுகிறது. காடுகள் அழிப்பு, மரம் வெட்டுதல்,மின் நிலையக் கட்டுமானம்,வாழிட அழிப்பு போன்ற காரணங்களால் இந்த இனம் அழிந்து வருகிறது. இது அழிந்து வரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதன் மொத்த எண்ணிக்கை சுமார் 1000 மட்டுமே. இரவிக்குளம் தேசிய பூங்காவில் வரையாடு பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் தேனி-மேகமலை,மூக்கூர்த்தி மலை, நீலகிரி மலை, அகத்திய மலை, மூணாறு, வால்பாறை, ஆழியார் மலை ஆகிய பகுதிகளில் இவை பாதுகாக்கப்படுகின்றன. தெலுங்கானா   தெலுங்கானா மாநில விலங்கின் பெயர் புள்ளி மான்(Spotted Deer) ஆகும். இது ஜாங்க்(Jhank),சிடல்(Chital),ஜிங்கா(Jinka), கிரண்(Hiran) என உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகிறது. சித்திரம்,சித்திர சாரங்கம், சிட்டால் மற்றும் ஆக்சிஸ் மான் (Axis deer) போன்ற பெயர்களும் இதற்கு உண்டு. இதன் விலங்கியல் பெயர் ஆக்சிஸ் ஆக்சிஸ்(Axis axis)என்பதாகும். வாழிடம்  இவை இந்தியா, இலங்கை, நேபாளம், வங்கதேசம்,பூட்டான் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. இவை இந்தியக் காடுகளில் அதிகமாக காணப்படும் மான் இனம் ஆகும். பாகிஸ்தானில்  சிறிய அளவில் காணப்படுகிறது. புள்ளி மான்கள் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா,பிரேசில், தென் ஆப்பிரிக்கா,அமெரிக்கா மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.   […] இவை இந்தியா முழுவதும் காணப்படுகிறது. எங்கெங்கே புல்வெளிகள், மிகுதியான நன்னீர் துறைகளும் உண்டோ அங்கெல்லாம் இவை வாழ்கின்றன.இவை இமயமலை அடிவாரம், மத்தியப் பிரதேசம் மற்றும் நீலகிரி மலை ஆகிய பகுதிகளிலும் அதிகமாக உள்ளன. புள்ளிமான்  மான் இனங்கள் எல்லாவற்றையும் விட மிக அழகான மான் இனம் என்பது புள்ளிமான் ஆகும். இந்த மான் 70 முதல் 90 செ.மீ உயரம் வரை வளரும். உடல் நீளம் 90 முதல் 14 செ.மீ வரை இருக்கும். உடல் எடை 35 முதல் 85 கிலோ வரை இருக்கும்.வாலின் நீளம் 10 முதல் 25 செ.மீ ஆகும்.வாலானது மற்ற மான்களுக்கு இருப்பதைக் காட்டிலும் நீளமாக இருக்கும்;கூராக முடியும்.    இதன் தோல் பிரகாசமான செம்பழுப்பு நிறத்திலும்,அதிலே வெண்மையான புள்ளிகளும் உள்ளன. இதன் காரணமாகவே இவை புள்ளிமான் என்று அழைக்கப்படுகிறது. தோலில் மயிர் மழமழப்பாக இருக்கும். தலை பழுப்பு நிறமானது.அதில் புள்ளிகள் இருப்பதில்லை. உடல் பக்கங்களின் கீழே புள்ளிகள் வரிசை வரிசையாக நீளத்தில் அமைந்துள்ளன.   ஆண் மான்களுக்கு மட்டுமே கொம்புகள் உண்டு. கொம்புகளின் நீளம் 50 முதல் 80  செ.மீ  வரை இருக்கும். கலைக் கொம்புகள் சாதாரணமாக 3 கிளைகளாகப் பிரிந்திருக்கும். இந்தக் கொம்புகளை ஆண்டுக்கு ஒரு முறை உதிர்க்கும். இதுவரை கிடைத்த பெரிய கொம்பு 100 சென்டிமீட்டர் நீளம் உள்ளது. நடத்தை புள்ளி மான்கள் ஒரு சமூக விலங்கு.இவை  பொதுவாக 6 முதல் 30 வரை உள்ள மந்தைகளில் வாழ்கின்றன. இதை  பல்வேறு வகையான புற்கள, மூலிகைகள், புதர்கள், இலைகள்,பழங்கள் மற்றும் மரங்களின் கிளைகளை உண்ணும். எப்போதும் எச்சரிக்கை உணர்வுடன் இருக்கும். இதன் கால்கள் குறுகியது மற்றும் வலிமையானது.வேட்டையாடும் விலங்குகளின் நடமாட்டம் தெரிந்தால், இது தன் கூட்டத்தைக் காப்பாற்ற எச்சரிக்கை குரலை எழுப்பி விட்டு வேகமாக ஓடும். இவை மணிக்கு 60 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் ஆற்றல் உடையது.    பாலின முதிர்ச்சி வயது பெண்களுக்கு 12 முதல் 18 மாதங்களும், ஆண்களுக்கு 18 முதல் 30 மாதங்களும் ஆகும். இவை ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்கின்றன. இதன்  கர்ப்ப காலம் 7-8 மாதங்கள். பொதுவாக பெண்கள் ஒரு குட்டியை ஈனும். சில சமயம் 2 குட்டிகள் பிறக்கின்றன.இந்த மானின் ஆயுட்காலம்  என்பது 8 முதல் 20 ஆண்டுகள் ஆகும்.   திரிபுரா  திரிபுரா மாநில விலங்கின் பெயர் பைரேஸ் லாங்கூர்(Phayre’s Langur) ஆகும். இதற்கு இலைக் குரங்கு மற்றும் பைரின் இலைக் குரங்கு போன்ற பெயர்களும் உண்டு. இதன் விலங்கியல் பெயர் டிராக்கிபிதேகஸ் பைரேய்(Trachypithecus phayrei) என்பதாகும்.இது செர்கோபிதெசிடே (Cercopithecidae) என்னும் விலங்கு குடும்பத்தைச் சேர்ந்தது. வாழிடம் இவை இந்தியா, சீனா, தாய்லாந்து, பங்களாதேஷ், மியான்மர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. இந்தியாவில் இவை அசாம்,மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் வாழ்கின்றன. இவை கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டர் உயரம் வரை காணப்படுகின்றன.   இவை தெற்காசியப் பகுதியில் வாழக்கூடிய பழைய உலக குரங்கு ஆகும். இவை ஈரமான இலையுதிர் காடுகள், பசுமையான மற்றும் அரை பசுமையான காடுகளை விரும்புகின்றன.இவை மூங்கில் காடுகளிலும்,தேயிலைத் தோட்டங்களுக்கு அருகிலும் காணப்படுகின்றன. இலைக் குரங்கு  இந்த குரங்கின் உடல் நீளம் 40 முதல் 65 சென்டிமீட்டர் வரை இருக்கும். இதன் வாலின் நீளம் 60 முதல் 85 செ.மீ வரை உள்ளது. இந்த குரங்கின் எடை ஆண் குரங்கு 6.5 முதல் 7.5 கிலோ வரையிலும், பெண் குரங்கு 5.5 முதல் 6.5 கிலோ வரையிலும் இருக்கும்.  குரங்கின் மேல் பகுதி சாம்பல் கலந்த கருப்பு,நீலம் அல்லது பழுப்பு நிறத்துடன் இருக்கும்.அடிப்பகுதி வெளிர் வெள்ளை நிறத்தில் இருக்கும். இவற்றில் உடல் முழுவதும் அடர்த்தியான முடிகள் உள்ளன.  மேலும் தலையில் நீளமான முடியைக் கொண்டுள்ளன. கைகள்,கால்கள் மற்றும் வால் போன்ற பகுதிகள் வெள்ளி சாம்பல் அல்லது வெளிர் கருப்பு நிறமானவை.   […]  இந்த குரங்கிற்கு கண்ணைச் சுற்றி வளையம் உள்ளது. இது மிக அழகான தோற்றத்தைத் தருகிறது. ஆண்களுக்கு கண்களைச் சுற்றி உள்ள வெண்மையான  வளையம் மூக்கின் பக்கத்திற்கு இணையாக இருக்கும். இதன் விளைவாக ஒரு கருப்பு பட்டைத் தென்படும்.பெண் குரங்கின் கண்களைச் சுற்றி உள்ள வளையம் மூக்கை நோக்கி உள் வளைந்து கருப்பு முக்கோண வடிவத்தை ஏற்படுத்துகிறது. இதன் கண்கள் நிறம் அடர் பழுப்பு அல்லது கருப்பு நிறமானவை. மூக்கு தட்டையாகவும்,கருமை நிறமாகவும் இருக்கும்.கால்கள் நீளமாகவும், அதன்  பாதங்கள் வலுவானதாகவும் இருக்கின்றன.  மேலும் விரல்கள் நீளமாகவும், வலுவாகவும் உள்ளன. பழக்கம் * * இவை மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவை.பொதுவாக அச்சுறுத்தப்பட்டால் ஓடி விடும். பொதுவாக 7 முதல் 22 பேர் கொண்ட  குழுவாகக் காணப்படும். பெரும்பாலும் மரங்களில் வாழும். இவை பழங்கள், காய்கள், விதைகள், இலைகள், பசை மற்றும் பூக்களை உண்கின்றன.    இந்த குரங்குகள் மிகவும் நன்றாக மரம் ஏறும்.மேலும் ஓட்டப்பந்தய வீரர்கள் போல் வேகமாக ஓடும். இவை “கா கா கா” ஹூ மற்றும் “செங்-காங்” போன்று பல ஒலிகளை எழுப்புகின்றன. இதன் பாலியல் முதிர்ச்சி வயது 3 முதல் 4 ஆண்டுகள் வரை இருக்கும். இவை ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்யும். பெண்ணின் கர்ப்ப காலம் 200 முதல் 208 நாட்கள் ஆகும். பெண்கள் ஒரு குட்டியைப் பெற்றெடுக்கும்.இந்தக் குரங்கின் சராசரி ஆயுட்காலம் 20 ஆண்டுகள் ஆகும். உத்தரப் பிரதேசம்    உத்தரப் பிரதேச மாநில விலங்கு சதுப்பு நிலமான்(Swamp Deer) ஆகும். இது இந்திய பாரசிங்கா (Indian Barasingha)அல்லது பாரசிங்க மான் எனக் கூறப்படுகிறது.பாரசிங்கா என்ற பெயர் வயது வந்த ஆண் மானின் பெரிய கொம்பின் அடையாளத்தில் இருந்து வந்தது. இந்த மானின் விலங்கியல் பெயர் ருசெர்வஸ் டுவாசெலி (Rucervus duvaucelii) என்பதாகும். வாழிடம்   இது இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளில்  வாழ்கிறது. மிகக் குறைந்த எண்ணிக்கையில்  சிறிய பகுதியில்,சிறு கூட்டமாக வாழ்கிறது. இது பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் முற்றிலும் அழிந்துவிட்டது. பூட்டான் நாட்டில் இது அழிந்து விட்டதாகக் கருதப்படுகிறது.    […] சதுப்பு நில மான்    இது ஒரு பெரிய மான்.நிமிர்ந்து நின்றால் 4 அடி உயரம் வரை இருக்கும். இந்த மானிற்கு அழகான உரோமம் இருப்பதால் உடல் மினுமினுப்பாகக் காணப்படும். இது சூரிய ஒளியில் தங்க நிறமாக மின்னும்.கோடையில் இதன் நிறம் மங்கிவிடும்.   சதுப்புநில மான் மற்ற அனைத்து இந்திய மான் இனங்களில் இருந்தும் வேறுபட்டது. ஏனெனில் கொம்புகள் மூன்றுக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளன. இந்த தனித்துவமான தன்மையின் காரணமாக இது இந்தி மொழியில் 12 கொம்புகள் என்று பொருள்படும். நடத்தை இது தாவர வகைகளை உண்ணக்கூடிய விலங்கு. இவை பல்வேறு வகையான பொருட்கள் நீர் வாழ்த்த தாவரங்கள் மற்றும் இலைகளைத் தின்னும். இவை காலை மற்றும் பிற்பகல் முதல் மாலை வரை மேச்சலில் ஈடுபடுகின்றன.கோடை காலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது தண்ணீர் குடிக்கின்றன.  இது ஒரு சமூக விலங்கு பொதுவாக சிறிய மந்தையாக வாழும். ஒரே பாலினத்தைச் சேர்ந்த மான்கள் குழுக்களில் காணப்படுகின்றன.ஒரு குழுவில் 5 முதல் 20 மான்கள் உள்ளன.சில நேரங்களில் பெரிய குழுக்களில் 60 மான்கள் வரை இருக்கின்றன. இவை எச்சரிக்கையாக இருக்கும் போது அலாரம் போன்ற ஒலிகளை எழுப்புகின்றன.   இனப்பெருக்கக் காலத்தில் மட்டும் ஆண் மான்கள் பெண் மான்களுடன் சேர்ந்து காணப்படும். இனச்சேர்க்கை முடிந்த பிறகு ஆண் மான்கள் பெண் மான்களை விட்டு பிரிந்து விடும்.அதன் பின்னர் ஆண் மான்கள் மட்டும் மந்தை அமைத்துக் கொள்கின்றன.  இந்த மான்கள் பாலியல் முயற்சி அடைய 2 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகின்றன. இதன் இனப்பெருக்க காலம் என்பது செப்டம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும். பாதுகாப்பு    இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் சிவப்பு தரவு புத்தகத்தில் அழிந்து வரும் விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது.2021ஆம் ஆண்டின் கணக்குப்படி உலக அளவில் பாரசிங்க மான்கள் சுமார் 5000 க்கும் குறைவாகவே உள்ளன.  இது இந்தியாவில் அழிந்து வரும் மான் இனமாக உள்ளது.இந்தியாவில் கனஹா,காசிரங்கா,துத்வா,பிலிபிட் மற்றும் மனாஸ் ஆகிய 5 பாதுகாக்கப்பட்ட சரணாலயங்களில் இதனைக் காணலாம்.துத்வா தேசியப் பூங்கா சதுப்புநில  மான்களின் தாயகமாக விளங்குகிறது.  வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் உள்ள பல்வேறு உயிரியல் பூங்காக்களிலும் இந்த மான்‌ வளர்க்கப்படுகிறது.மேலும் இது டெக்சாஸில் அறிமுகம் செய்யப்பட்டது. அங்கு சிறிய எண்ணிக்கையில் மட்டுமே உள்ளது.  உத்தரகாண்ட்  உத்தரகாண்ட் மாநிலத்தின் மாநில விலங்கின் பெயர் கஸ்தூரி மான் (Musk Deer) ஆகும். இது ஆல்பைன் கஸ்தூரி மான் எனவும் நானமா எனவும் அழைக்கப்படுகிறது. மேலும் வெள்ளைத் தொப்பை கஸ்தூரிமான் (White bellied musk deer) எனவும், இமயமலை கஸ்தூரிமான் எனவும் கூறப்படுகிறது.   இந்த மானை உள்ளூர் மக்கள் கஸ்தூரி மிரிக்(Kasturi mrig) என்கின்றனர்.இதன் விலங்கியல் பெயர் மோஸ்கஸ் கிரைசோகேஸ்டர்(Moschus chrysogaster) என்பதாகும். இது மோசிடே(Moschidae) என்னும் விலங்கியல் குடும்பத்தைச் சேர்ந்தது. வாழிடம்    இவை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, திபெத், பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் வாழ்கின்றன.இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட்,அருணாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் இவை காணப்படுகின்றன. இவை கடல் மட்டத்திலிருந்து 8000 முதல் 12000 அடி உயரம் வரையிலும் உலவுகின்றன. உயரமான பீடபூமிகள்,புல்வெளிகள், புதர் காடுகள் மற்றும் தேவதாரு காடுகளை இவை விரும்புகின்றன.இவை உயரமான பகுதிகளுக்கு மிகவும் பொருத்தமானவை. இவை பனிச் சிகரங்கள், செங்குத்தான சரிவுகளில் வாழும் தன்மையைப் பெற்றுள்ளன. […] கஸ்தூரி மான்  இது ஒரு சிறிய மான் மற்றும் அரிய மான் ஆகும். இது 35 முதல் 50 சென்டிமீட்டர் உயரமும்,உடலின் நீளம் 80 முதல் 100 சென்டிமீட்டர் வரை இருக்கும். இதன் வால் மிகவும் குட்டை ஆனது. இந்த மானின் எடை 11 முதல் 18 கிலோ வரை இருக்கும். இந்த மானிற்கு கொம்புகள் கிடையாது.  இதன் கால் காதுகள் பெரிதானவை.பின் கால்கள் முன் கால்களை விட நீண்டு இருக்கும். ரோமங்கள் முரடாக  சாம்பல் கலந்த கரும்பழுப்பு நிறமாக இருக்கும். மேலும் ஆங்காங்கே சற்று வெளுப்பான புள்ளிகளும் விழுந்திருக்கும். ஆனால் மான் முதிர்ச்சி அடைந்தவுடன் புள்ளிகள் மறைந்து விடும். இருப்பினும் பெரியமான் கழுத்தில் இரண்டு வெள்ளைப் புள்ளிகள் உண்டு.  கஸ்தூரி மானின் வாயிலிருந்து இரண்டு ஜோடி தந்தங்கள் உள்ளன. இந்த தந்தங்கள் 10 சென்டிமீட்டர் நீளம் உடையது.மிக எளிதில் உடையக் கூடியது. ஆனால் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும். இது தற்காப்புக்காகவும், மூலிகைகள் மற்றும் தாவரங்களைத் தோண்டவும் பயன்படுகிறது. சுரப்பிகள்    ஆண் மானிற்கு கஸ்தூரி மற்றும் காடால் சுரப்பிகள் உள்ளன. கஸ்தூரி சுரப்பி பெண்களை ஈர்க்கிறது. மேலும் காடால் சுரப்பி எல்லையை வரையறுக்கப் பயன்படுகிறது. ஒரு வருடம் முடிந்த பிறகு கஸ்தூரி உருவாகிறது.பொதுவாக ஒரு மானில் 30 முதல் 45 கிராம் கஸ்தூரி இருக்கும். இது ஆணின் வயிற்றுக்கு கீழே உள்ள சுரப்பியில் இருந்து பிரித்து எடுக்கப்படுகிறது. கஸ்தூரி ஒரு நல்ல வாசனையைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு பெண்மான் பொதுவாக ஒரு குட்டியைப் பெற்றெடுக்கும்.சில சமயங்களில் 2 குட்டிகள் பிறக்கின்றன. இதன் கர்ப்ப காலம் 170 முதல் 198 நாட்கள் வரை ஆகும்.இதன் ஆயுள் காலம் 10 முதல் 14 ஆண்டுகள் ஆகும். இந்த மான்கள் வேகமாக அழிந்து வருகின்றன. இதைப் பாதுகாக்க கஸ்தூரி மான் சரணாலயங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேற்கு வங்காளம் மீன் பிடிக்கும் பூனை (Fishing Cat) என்பது மேற்குவங்க மாநிலத்தின் விலங்கு ஆகும்.இதற்கு மீன்பிடிப் பூனை மற்றும் கொடுப் புலி போன்ற பெயர்களும் உண்டு. உள்ளூர் மக்களால் மக்-பாக்ரோல் (Mach**aghrol),பாக்-தாஷா (Bagh-dasha), பன்பிரால் (Bun brial), குப்யா பாக் (Khupya buga) ஆகிய பெயரிட்டு அழைக்கின்றனர். இதன் விலங்கியல் பெயர் பிரியோனினூரஸ் விவீரைனஸ் (Prionailurus viverrinus) என்பதாகும். இது பெலிடே (Felidae) என்னும் விலங்கு பூனைக் குடும்பத்தைச் சேர்ந்தது. வாழிடம்  இவை இந்தியா,சீனா, நேபாளம், பங்களாதேஷ்,இலங்கை, மலேசியா,பர்மா, பாகிஸ்தான்,இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. இமயமலையில் 1500-2100 மீட்டர் உயரத்தில் மீன் பிடிக்கும் பூனைகள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.   இவை ஆறுகளை ஒட்டிய இடங்களிலும், நீரோடைகள்,சதுப்பு நிலப் பகுதிகள் போன்ற இடங்களில் வாழ்கின்றன. இவை அடர்ந்த காடுகள் மற்றும் ஈர நிலப் பகுதிகளை விரும்புகின்றன.இவை புதர்க்காடுகள், நாணல் படுகைகள், தண்ணீருக்கு அருகில் உள்ள தாவரங்களிலும் காணப்படுகின்றன. இந்தியாவில் அசாம், மேற்கு வங்காளம், சுந்தரவனக்காடு,ஒடிசாவில் உள்ள சில்கா ஏரி மற்றும் கேரளத்தில் உப்பங்கழிக்காயல் ஆகிய இடங்களில் இவற்றைக் காணலாம். மீன்பிடிப் பூனை  இவை நமது வீடுகளில் வளர்க்கப்படும் வீட்டுப் பூனைகள் விட இரண்டு மடங்கு பெரியது. இவை 30 முதல் 35 சென்டிமீட்டர் உயரமும், 65 முதல் 86 செ.மீ வரை நீளமும் கொண்டிருக்கும்.இதன் வாலின் நீளம் 24 முதல் 35 செ.மீ வரை உள்ளது. இந்த பூனையின் எடை 5 முதல் 16 கிலோ வரை இருக்கும்.   உடல் பழுப்பு நிற சாம்பல் நிறத்தால் ஆனது.கருப்பு அல்லது பழுப்பு நிற புள்ளிகள் மற்றும் கிடைமட்ட கோடுகள் உடல் முழுவதும் அமைந்திருக்கும்.புள்ளிகள், கோடுகள் ஆகிய  இரண்டும் கலந்த கலவைதான் இதன் உடல் நிறமாகும். நெற்றிப் பகுதியில் 6 முதல் 8 கருங்கோடுகள் உள்ளன.இது இந்தப் பூனையின் தனித்த அடையாளம் ஆகும்.    […]   கண்களின் நிறம் மஞ்சள் கலந்த பழுப்பு, பச்சை நிற கருவிழியுடன் இருக்கும்.இதற்கு சிறிய பற்கள் உள்ளன.காதுகள் குட்டையாகவும், வட்டமாகும் காணப்படும். கால்கள் சிறியது மற்றும் வலுவானது.இதன் வாலின் மீது கருப்பு வளையங்கள் உள்ளன. ஆண் பூனை பெண் பூனையை விட பெரியது. பழக்கம்    இந்தப் பூனைகள் நீரில் நன்றாக  நீண்ட தூரம் நீந்தும். மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும்.மீன்களை வேட்டையாட அடிக்கடி தண்ணீருக்குள் மூழ்கும். இது இரவில் மட்டும் தண்ணீருக்குள் சென்று உணவைத் தேடும்.இந்தப் பூனை சிரிப்பது போன்ற சத்தத்தை எழுப்புகிறது. இது மீன்கள், பறவைகள், பூச்சிகள், நத்தைகள் போன்றவற்றை  உண்ணுகின்றன.   இவை பாலியல் முதிர்ச்சி அடைய 9-18 மாதங்கள் ஆகிறது. பெண்ணின் கர்ப்ப காலம் 63 முதல் 70 நாட்கள்.இந்தப் பூனை 2 -3 குட்டியைப் பெற்றெடுக்கும். இவை 10 முதல் 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. அழிவு இது அழிந்து வரும் இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது வாழும் காடுகள்  அழிக்கப்படுவதால் இந்தப் பூனை இனம் மிக வேகமாக அழிந்து வருகிறது.  அந்தமான் நிக்கோபார்   அந்தமான்  நிக்கோபாரின் மாநில விலங்கு டுகோங்(Dugong) என்பதாகும். இதனை டுகான்(Dugon),ஆவுளியா,கடல் பசு(Sea Cow), கடல் பன்றி,கடல் ஒட்டகம், கடல் கன்னி என பல பெயர்களில் அழைக்கிறார்கள். இதன் அறிவியல் பெயர் தூகாங் தூகான்(Dugong dugon) என்பதாகும். இது தூகாங்கிடே என்னும் விலங்கு குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஒரு கடல் பாலூட்டி விலங்கு ஆகும். வாழிடம்   இது இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் ஆழமற்ற, வெப்பமண்டல கடல் நீரில் வாழ்கிறது. இவை இந்தியாவில் கட்ச் வளைகுடா, மன்னார் வளைகுடா,பால்க் வளைகுடா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் காணப்படுகின்றன. அந்தமான் தீவுகளில் குறிப்பாக வடக்குப் பாறைகள், லிட்டில் அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுப் பகுதிகளிலும் குறைந்த அளவில் வாழ்கின்றன. சில சமயம் ஆற்றுமுகத் துவாரங்களிலும் வாழ்வதைக் காணலாம். கடல் பசு  கடல் பசு 7 முதல் 11 அடி நீளம் கொண்டது. இதன் எடை 230 முதல் 420 கிலோ வரை இருக்கும். திமிங்கலங்கள் மற்றும் டால்பின்களைப் போலவே ஒரு குறுகலான உடலைக் கொண்டுள்ளது. முகம்  தட்டையாக இருக்கும். மேல் உதட்டில் சில தனித்தனியான மீசை மயிர்கள் உள்ளன.   […] இதன் வால் துடுப்பு போன்றது. இது பிறை வடிவமாக உள் வளைந்து கிடைமட்டமாக இருக்கும். இதன் முன் கால்கள் துடுப்பாக மாறி நீரில் நீந்த நன்கு உதவுகின்றன. இதற்கு பின் கால்கள் இல்லை. கடல் பசுவிற்கு பற்கள்  ஆயுள் முழுவதும் வளர்ந்து கொண்டே இருக்கும். மேல் தாடையில் ஒரு ஜோடி வெட்டுப் பற்களும், இரு தாடைகளிலும் பக்கத்திற்கு 5 கடைவாய்ப் பற்களும் உண்டு.  பெண்ணுக்கு வெட்டுப் பற்கள் ஈறுக்கு வெளியே தெரிவதில்லை.  ஆண் கடல் பசுவிற்கு வெட்டுப் பற்கள் தந்தப் பற்கள் போல் நீண்டு கீழ் நோக்கி வளர்கின்றன. இவற்றுக்குப் பற்சிப்பி உண்டு.பால் பற்கள் விழுந்து நிலையான பற்கள் தோன்றும்.  கடல் பசுவின் முதுகுப் பகுதி சாம்பல் நிறமாக இருக்கும்.உடலின் அடிப்பகுதி வெள்ளை நிறமாகக் காணப்படும். இதற்கு கழுத்து எதுவும் தனியாக இல்லை. மூக்கு அகலமாகவும்,முட்கள் நிறைந்ததாகவும் இருக்கும். இந்த தடிமனாக முட்கள்(Vibrissae) உணர்ச்சி முடிகளாக வெளிப்படுகின்றன.மேலும் இது உணவைக் கண்டறிதல், பாகுபடுத்திக் காட்டுதல் மற்றும் கையாளுதல் ஆகியவற்றிற்கு உதவுகிறது.முன் கைகளில் நகங்கள் இல்லை. உணவு  இது தாவரங்களை உண்ணக்கூடிய விலங்கு ஆகும் முக்கியமாக கடல் புல், கடல் பாசி மற்றும் பிற நீர் வாழ் தாவரங்களை மேய்கிறது. ஆகவே தான் இது கடல் பசு என அழைக்கப்படுகிறது. இனப்பெருக்கம்  பெண் கடல் பசு சுமார் 12 வயது பாலியல் முதிர்ச்சியை அடைகிறது. 3 முதல் 7 ஆண்டுகள் வரை ஆண்டிற்கு ஒரு முறை இனச்சேர்க்கையில் ஈடுபடுகிறது. இதன் கர்ப்ப காலம் 12 மாதங்கள் ஆகும். ஒரு கன்று மட்டுமே பிறக்கிறது. இதன் சராசரி ஆயுள் காலம் 70 ஆண்டுகள் ஆகும். அழிவு  கடல் பசுவின் இறைச்சி,தோல்கள் மற்றும் எண்ணெய்க்காக மனிதர்களால் அதிகம் வேட்டையாடப்படுகின்றன. இது அழிந்து வரும் ஒரு இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடல் பசுக்களைப் பாதுகாக்க சட்டமும் இயற்றப்பட்டுள்ளது. சண்டிகர் நல்ல பாம்பு போன்ற விஷமுடைய பாம்புகளை எதிர்த்து போரிட்டு வெற்றி பெறும் விலங்கு கீரி ஆகும்.இதை கீரிப்பிள்ளை,மூங்காப் பிள்ளை என்கின்றனர். சண்டிகரின் மாநில விலங்கு இந்திய சாம்பல் மங்குஸ் (Indian Gray Mongoose) அல்லது இந்திய சாம்பல் கீரி ஆகும்.     இதன் விலங்கியல் பெயர் ஹெர்பெஸ்டெஸ் எட்வரட்ஸி(Herpestes edwardsi) என்பதாகும்.இது ஹெர்பெஸ்டிடே(Herpestidae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இது பஞ்சாபி மொழியில் நெவ்லா,இந்தியில் மங்குஸ் மற்றும் முகுஸ்,மராத்தியில் முங்குசா,கன்னடத்தில் முங்கி,முங்கிசி மற்றும் முங்குலி என அழைக்கப்படுகிறது. வாழ்விடம்   இதன் வாழ்விடம் தெற்காசியா,மேற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா நாடுகளாகும். குறிப்பாக இந்தியா,பாகிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், ஈரான், குவைத், நேபாளம், சவுதி அரேபியா, இலங்கை ஆகிய நாடுகளில் வாழ்கின்றன.2007 ஆம் ஆண்டில் துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இவை கண்டுபிடிக்கப்பட்டன.   பாலைவனங்கள், புதர் நிலங்கள், வெப்பமண்டல காடுகள்,பாறைத் திட்டுகள், புல்வெளிகள், முட்காடுகள், சாகுபடி செய்யப்பட்ட வயல்வெளிகள் ஆகிய பகுதிகளில் வாழ்கின்றன. மேலும் மனித குடியிருப்புக்கு அருகிலும் வாழ விரும்புகின்றன. இந்திய சாம்பல் கீரி   இதன் உடலின் நீளம் 35 முதல் 45 சென்டிமீட்டர், வாலின் நீளம் 48 சென்டிமீட்டர் ஆகும். உடலின் எடை 1 முதல் 1.7 கிலோ வரை இருக்கும்.ஆண் கீரி பெண்ணை விடப் பெரியதாகவும், கனமாகவும் இருக்கும். இது பழுப்பு நிற சாம்பல் அல்லது இரும்பு சாம்பல் நிற ரோமங்களைக் கொண்டுள்ளது.    […]   கால்கள் பழுப்பு நிறமாகவும்,உடலை விட கருமையாகவும் இருக்கும். கண்களைச் சுற்றி உள்ள முடிகள் பழுப்பு நிறத்தில் இருக்கும். வால் புதர் போலவும், அதன் நுனி வெளி மஞ்சள் நிறத்தில் இருக்கும். இது பூனை இனத்திற்கு நெருங்கிய உறவு கொண்டது.கீரியின் முகம் நீண்டிருக்கும். நகங்கள் நீண்டு,நேராக காணப்படும். இது தன் நகங்களை உள்ளிழுத்துக் கொள்ள முடியாது. வாழ்க்கை முறை இது மிகவும் தைரியமான விலங்கு எப்பொழுதும் எச்சரிக்கையாக இருக்கும்.இது ஒரு சிறந்த மரம் ஏறும் விலங்கு ஆகும். மணிக்கு 32 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும். இது தனியாகவோ அல்லது ஜோடியாகவோ வாழும். எலிகள், பல்லிகள், பாம்புகள், வண்டுகள், பறவைகள், அவற்றின் முட்டைகள், தேள்கள், தவளைகள், நண்டுகள், மீன்கள் போன்றவை இதன் பிரதான உணவாகும். மேலும் பழங்கள், வேர்களையும் உண்ணுகின்றன. முட்டைகளை பாதங்களுக்கு இடையில் பிடித்துக் கொண்டு மேல் பகுதியில் துளையிட்டு உண்ணும். நல்ல பாம்பை எதிர்த்துப் போராடும். பாம்பு சோர்வடைந்தப் பிறகு அதன் தலையைக் கடித்துக் கொல்லும். இதற்கு தடித்த தளர்வான தோல் மற்றும் சிறப்பு அம்சம் கொண்ட அசிடைல்கொலின் என்னும் ஏற்பிகள் உள்ளன. இவை பாம்பு விஷத்திற்கு எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன.  எலிகள், தேள்கள் மற்றும் பிற பூச்சிகள் வீடுகளில் இல்லாமல் வைத்திருக்க இது செல்லப்பிராணியாக வளர்க்கப்படுகிறது. இது மனிதருக்கு பாம்பு, தேள் போன்ற விஷமுடைய உயிரினத்திலிருந்து பாதுகாக்கப் பயன்படுவதால் கீரிப்பிள்ளை எனப் பெயர் பெறுகிறது, இது 2 முதல் 4 குட்டிகளைப் பெற்றெடுக்கும். இதன் ஆயுட்காலம் 7-12 ஆண்டுகள் ஆகும். டில்லி    டில்லியின் மாநில விலங்கின் பெயர் நில்காய்(Nilgai)ஆகும்.இதற்கு நீலக்காய்,நீல காளை (Blue bull), நீல மாடு, நில், நீலப் பசு, நிலகை மான், நீலான், நீல்கை என பலப் பெயர்கள் உண்டு. உள்ளூர் மக்கள் ரோஜ் (Rojh), ரோஸ்(Roz), ரோஜ்ரா (Rojra) என்கின்றனர். இதன் விலங்கினப் பெயர் போசிலேபஸ் டிராகோகாமெலஸ்(Boselaphus tragocamelus) என்பதாகும்.இது போவிடே(Bovidae) என்னும் மான் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். நீல்,நீல்கா என்பது ஆண் மானையும்,நீல்கை என்பது பெண் மானையும் குறிக்கிறது. வாழ்விடம்  இந்த மான் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மற்றும் நேபாளத்தில் காணப்படுகிறது. இது இமயமலை அடிவாரம் முதல் மைசூர் வரையிலும் வாழ்கிறது. வறண்ட பகுதிகள்,புல்வெளிகள், புதர்க்காடுகள்,வறண்ட இலையுதிர் காடுகள் மற்றும் விவசாயப் பகுதிகளையும் விரும்புகின்றன.இவர்கள் அடர்ந்த காடுகளையும், பாலை வனங்களையும் தவிர்க்கின்றன. உடல் அமைப்பு  மான் இனங்களில் மிகப் பெரியது நீலான் மான் ஆகும்.நன்கு வளர்ந்த ஆண் மான் குதிரையின் உருவத்தைப் போலவே காணப்படும். இதன் உடல் நீலம் கலந்த நிறத்தில் இருப்பதால் தான் இதற்கு நீலான், நீல மான் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதனை தோல் உயர்ந்தும் இடுப்பு தாழ்ந்தும் இருக்கும். இது 4 முதல் 5 அடி உயரமும்,6 முதல் 7 அடி நீளமும் கொண்டிருக்கும். வாலின் நீளம் ம் 30 முதல் 50 சென்டிமீட்டர் ஆகும். ஆண் மானின் எடை 150 முதல் 250 கிலோவும்,பெண் மானின் எடை 120 முதல் 220 கிலோ வரையிலும் இருக்கும்.    ஆண் மானிற்கு தடித்த கூம்பு போன்ற கொம்பு உண்டு. கொம்பு 15 முதல் 20 சென்டிமீட்டர் நீளம் உடையது. பெண் மானிற்கு கொம்புகள் இல்லை.முதிர்ந்த ஆணின் உடல் அடர் சாம்பல், நீல நிறமும் உடையது.பெண் மான் மஞ்சள் பழுப்பு, வெளிர் தோற்றத்துடன் இருக்கும். […] இதன் கால்களின் குளம்புக்கு மேலே வெள்ளை நிற வளையமும், கன்னத்திலே இரண்டு வெள்ளைப் புள்ளிகளும் இருக்கும். உதடு, மோவாய், காதின் உட்புறம், வாலின் அடிப் பரப்பு ஆகிய இடங்களில் வெண்மையான நிறம் உள்ளன. காளையின் கழுத்தில், தொண்டைக்கு அருகில் விறைப்பான கருப்பு நிற மயிர்கள் கற்றையாகத் தொங்கும். பழக்கம் இந்த மான் ஒரு சமூக விலங்கு.பொதுவாக 4 முதல் 20 வரை சிறிய குழுக்களாக காணப்படும்.சில நேரங்களில் 20 முதல் 100 மான்கள் கொண்ட பெரிய குழுக்களும் உள்ளன. வயது வந்த ஆண்கள் பெரும்பாலும் தனியாக அலைந்து திரிகின்றன.  இவை பல்வேறு வகையான புல், இலைகள், மூலிகைகள், புதர்கள், மொட்டுக்கள்,பூக்கள், விதைகள் மற்றும் பழங்களை உண்ணுகின்றன. அவை தினசரி அதிகாலை மற்றும் பிற்பகலில் மேய்ச்சலில் ஈடுபடுகின்றன.  இவை வெயில் காலத்தில் அடிக்கடி தண்ணீர் குடிக்கும் ஆனால் குளிர்காலத்தில் 2 முதல் 4 நாட்கள் வரை தண்ணீர் குடிக்காமல் இருக்கும். இந்த மான்கள் மணிக்கு 48 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது. இந்த மான்கள் ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்கின்றன.பொதுவாக 1அல்லது 2 குட்டிகளைப் பெற்றெடுக்கின்றன. இதன் ஆயுள் காலம் 12 முதல் 20 ஆண்டுகள் ஆகும். ஜம்மு காஷ்மீர்   ஜம்மு காஷ்மீர் மாநில விலங்கின் பெயர் காஷ்மீர் ஸ்டேக்(Kashmir Stag) அல்லது காஷ்மீர் மான் ஆகும்.இது ஹங்குல்(Hangul) மற்றும் சிவப்பு மான்(Red deer) எனவும் அழைக்கப்படுகிறது. இந்த மானின் அறிவியல் பெயர் செர்வஸ் எலாஃபஸ் ஹாங்லு(Cervus elephus hanglu) என்பதாகும்.இது செர்விடே(Cervidae)என்னும் மான் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். வாழ்விடம்   இந்தியாவில் காஷ்மீர் பள்ளத்தாக்கின் வடக்கு பகுதிக்கு அருகில் உள்ள சில பள்ளத்தாக்குகளில் வாழ்கின்றன. ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள தச்சிகாம் சரணாலயம் மற்றும் மாநிலத்தின் சில பகுதிகளிலும் உள்ளன. இமாச்சலப் பிரதேசத்தின் வடக்கு சம்பா மலைகளிலும், கமகல் சரணாலத்திலும் இந்த மான்கள் சிறிய அளவில் காணப்படுகின்றன.   இவை கடல் மட்டத்திலிருந்து 1700 முதல் 3600 மீட்டர் உயரமான பள்ளத்தாக்குப் பகுதிகளில் வாழ விரும்புகின்றன. குளிர்காலத்தில் உயரம் குறைவான நிலமட்டத்திலும், கோடை காலத்தில் உயரம் அதிகமான மலைப்பகுதியிலும் தனது வாழ் நாளை கழிக்கின்றன. […] மானின் அடையாளம்  காஷ்மீர் மான் உருவத்தில் சற்று பெரியதாகவும், பிளவுபட்ட கொம்புகளைக் கொண்டும் காணப்படும். இதுதான் இந்த மானின் முக்கிய அடையாளமாகும். இது 100 முதல் 135 செ.மீ உயரம் வரை வளரும்.இதன் உடல் நீளம் 150 முதல் 220 செ.மீ வரை இருக்கும்.ஆண் மானின் எடை 150 முதல் 250  கிலோ வரையிலும்,பெண் மானின் எடை 100 முதல் 160 கிலோ வரையிலும் இருக்கும்.  இதன் உடல் லேசான அல்லது அடர்பழுப்பு நிறமாக இருக்கும்.உதடுகள், கன்னம்  மற்றும் பிட்டம் ஆகியவற்றில் மங்கலான வெள்ளை நிறம் காணப்படும். தொடைகளின் உள் பக்கங்களில் ஒரு கோடும்,வாலின் மேல் பாகத்தில் கருப்பு நிறமும் இருக்கும்.  இவற்றின் ரோமங்கள் பிரகாசமாக இருக்கும்.ஆனால் கோடைக் காலத்தில் நிறம் மங்கி விடும்.ஆண்களின் கழுத்து முகட்டில் உள்ள முடிகள் நீளமாகவும், அடர்த்தியாகவும் இருக்கும்.கீழ் கழுத்தில் உள்ள முடிகள் நீளமானது.இவை பழுப்பு சாம்பல் அல்லது கருமையாகக் காணப்படும். .இந்த மானின் ஒவ்வொரு கொம்பிலும் 5 முதல் 6 வரை கிளைக் கொம்புகள் உள்ளன. மார்ச் முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் கொம்புகளை உதிர்க்கின்றன. நடத்தை   இவை 2 முதல் 18 நபர்களைக் கொண்ட குழுக்களாக வாழ்கின்றன. சில சமயங்களில் தனியாக வாழும். இவை பூக்கள், இலைகள் மற்றும் புதர்களின் மென்மையான தளிர்களை உண்ணுகின்றன. மேலும் லைக்கன்கள், பாசிகள், பெரணிகள் மற்றும் காளான்களையும் உண்ணுகின்றன.  இவை பாலியல் முதிர்ச்சியடைய 2 முதல் 3 ஆண்டுகள் ஆகின்றன.இதன் கர்ப்ப காலம் 7-8 மாதங்கள்.பெண் ஒரு குட்டி மட்டுமே ஈனும். இதன் ஆயுட்காலம் 15 முதல் 20 ஆண்டுகள் ஆகும். ஆபத்து  இவை அழிந்து வரும் இனமாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் 5000 ஆக இருந்த காஷ்மீர் மான்களின் எண்ணிக்கை 1970 ஆம் ஆண்டில் 150 ஆக குறைந்து விட்டது.2008 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி 160 மான்கள் மட்டுமே உள்ளன என தெரிய வருகிறது . லடாக்  லடாக் மாநிலத்தின் விலங்கு பனிச் சிறுத்தை (Snow Leopard) ஆகும். லடாக்கி மொழியில் ஷான் என அழைக்கப்படுகிறது. புதிதாக அறிவிக்கப்பட்ட லடாக் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மாநில விலங்காக பனிச் சிறுத்தையைத் தேர்வு செய்தனர். நிச்சயமாக வேறு எந்த விலங்கும் இந்த மாநிலத்திற்கு மிகவும் பொருத்தமானதாக இருந்திருக்க முடியாது. இதன் விலங்கியல் பெயர் பாந்தெரா உன்சியா(Panthera uncia) என்பதாகும்.   நாட்டின் மிகவும் விரும்பப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக லடாக் பகுதி பரவலாகக் கருதப்படுகிறது.லடாக்கில் பனிச் சிறுத்தையை ஹெமிஸ் தேசியப் பூங்காவில் காணலாம். இந்தப் பூங்காவில் 204 பனிச் சிறுத்தைகள் உள்ளன. இந்தியா   இந்தியாவில் பனிச் சிறுத்தைகள் அருணாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு- காஷ்மீர் மற்றும் சிக்கிம் ஆகிய இடங்களில் மட்டுமே காணப்படுகின்றன. இவை செங்குத்தான பாறை மற்றும் உயர்ந்த நிலப்பரப்பை விரும்புகின்றன. பகல் நேர ஓய்வுக்கு பாறைகள் மற்றும் பெரிய பிளவுகள் கொண்ட பகுதியை விரும்புகின்றன. இந்த விலங்குகள் பெரும்பாலும் தங்களை மறைத்துக் கொள்வதற்காக இந்த இடங்களை தேர்வு செய்கின்றன. இதன் உருவ மறைப்புக்கு ஏற்ற இடமாக இவை அமைகின்றன. பனிச் சிறுத்தை பனிச் சிறுத்தை இமயமலையில் அதிகம் காணப்படும் ஒரு விசித்திரமான உயிரினம்.இது  மிகவும் அழகான  விலங்கு. இவை பெரும்பாலும் தனிமையில் இருக்கின்றன. அதிகளவில் பதுங்கி இருக்கும் குணத்தைக் கொண்டிருப்பதால் இவை மிகவும் ஏமாற்றும் தன்மையைக் கொண்டு இருக்கின்றன. […]   பாலின முதிர்ச்சியின் வயது ஆணுக்கு 3 முதல் 4 ஆண்டுகள் மற்றும் பெண்ணுக்கு 2 முதல் 3 ஆண்டுகள் ஆகும். பனிச் சிறுத்தைகள் ஒரு நாளைக்கு 12 முதல் 34 முறை வரை புணர்ச்சியுடன் இணைகின்றன. கர்ப்ப காலம் 90 முதல் 100 நாட்கள் வரை ஆகும். பெண் 2 முதல் 4 குட்டிகளை ஈனுகின்றன.   குட்டிகள் பிறக்கும் போது பார்வையற்றவையாக இருக்கும். இவை 300 முதல் 570 கிராம் வரை எடை  இருக்கும். இவற்றின் கண்கள் ஒரு வாரத்தில் திறக்கும். குட்டிகள் 5 வாரங்களில் நடக்கின்றன. குட்டிகள் 6 மாதங்கள் கழித்தே குகையை விட்டு வெளியேறுகின்றன. ஆனால் 1.5 முதல் 2 வருடங்கள் வரை தாயுடனே இருக்கின்றன. இதன் ஆயுட்காலம் 15 முதல் 18 ஆண்டுகள் ஆகும். திட்டம் பனிச் சிறுத்தை அழிந்து வரும் விலங்காக வகைப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் 6590 வரையிலான பனிச் சிறுத்தைகளே வாழ்கின்றன. வாழ்விட அழிப்பு மற்றும் வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் இந்த இனம் வேகமாக அழிந்து வருகிறது.    இந்தியாவில் பனிச் சிறுத்தைத் திட்டம் 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.இத்திட்டத்தின் கீழ் அதன் வாழ்விடத்தையும், பனிச் சிறுத்தையையும் பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டது.மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு பனிச் சிறுத்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.    இந்தியாவில் 600க்கும் குறைவான பனிச்சிறுத்தைகளே உள்ளன. தற்போது பனிச்சிறுத்தைகள் 12 நாடுகளில் மட்டும் சுமார் 10 லட்சம் சதுர மைல்களில் வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.  லட்சத்தீவு  லட்சத்தீவு மாநில விலங்கின் பெயர் பட்டாம்பூச்சி மீன்(Butterfly Fish) ஆகும். இதன் விலங்கியல் பெயர் சேட்டோடன் டெகஸ்சேட்டஸ்(Chaetodon decussatus) என்பதாகும். இது சேட்டோடோன்டிடே (Chartodontidae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. உள்ளூர் மக்கள் இதை  பக்கிகாடியா(Fakkikadia) எனச் செல்லமாக அழைக்கின்றனர்.   இந்த மீன் குடும்பத்தில் 10 பேரினங்களும், ஏறத்தாழ 120 இனங்களும் உள்ளன. இவை ஓரளவு சிறிய மீன்களாகும். இந்த மீன் இனங்கள் பல்வேறு நிறங்களைக் கொண்டவையாக இருக்கின்றன.அவை கருப்பு, வெள்ளை, நீலம்,சிவப்பு, செம்மஞ்சள், மஞ்சள் என பல நிறங்களைக் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக இந்த மீன்களை ஆங்கிலத்தில் பட்டர்பிளை ஃபிஷ் (Butterfly Fish) என அழைக்கின்றனர். வாழிடம்  இது வெப்பமண்டல கடல்வாழ் மீன் இனமாகும். கென்யாவிலிருந்து வட தென் அமெரிக்கா வரையிலும், இந்திய பெருங்கடல் முழுவதும் வாழ்கின்றன.மேலும் கிழக்கு ஆப்பிரிக்கா கடற்கரை, மடக்கஸ்கர், சீஷெல்ஸ்,சாகோஸ் தீவுக் கூட்டம் போன்ற கடல் பகுதியிலும் காணப்படுகின்றன.இது தவிர மாலத்தீவுகள்,இலங்கை, அந்தமான் தீவுகள், தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய பகுதிகளிலும் இவற்றைக் காணலாம்.   […] இவை ஆழமற்ற நீரில் வாழ்கின்றன. சுமார் 15 மீட்டர் ஆழம் வரை வாழ்கின்றன. இவை பவளப்பாறைகள்,பாறை விளிம்புகள் மற்றும் அதன் சரிவுகள் ஆகிய இடங்களில் மட்டுமே வாழ விரும்புகின்றன.இவை தங்களின் பாதுகாப்பிற்காக பாறைப் பிளவுகள் மற்றும் குகைகள் ஆகியவற்றை  தேர்ந்தெடுத்து வாழ்கின்றன. மீன்  இது ஒரு அழகான மீன்.இது 6 முதல் 20 செ.மீ  நீளம் உடையது. இதன் உடல் வண்ணமயமானது. முட்டை போன்ற வடிவம் கொண்டது.ஆனால் உடல் தட்டையானது. பவளப்பாறைகளுக்கு இடையே உணவைத் தேடும் வகையில் இதன் மூக்கு நீளமாக அமைந்துள்ளது. மேலும் மூக்கு வலுவானது. இந்த மீன் மஞ்சள் நிற துடுப்பையும், வெள்ளை நிற உடலையும் கொண்டுள்ளது. இதன் பக்கங்களில் குறுகிய,செங்குத்தான அடர் சாம்பல் நிறக் கோடுகள் உள்ளன.முதுகுப் பக்கத்தில் கருப்பு நிறத்தில் இரண்டு திட்டுகள் மற்றும் ஒரு கருப்பு கண் பட்டையும் உள்ளது.கண்கள் அடர் நீல நிறத்தில் உள்ளன. முதுகுத் துடுப்பு, குதத் துடுப்பு மற்றும் காடால் தடுப்பு ஆகியவற்றின் மேல் பிரகாசமான மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம் காணப்படுகின்றன. உணவு பவளப்பாறைகள், காளான்கள், ஓட்டு மீன் சதைகள்,முதுகெலுப்பு இல்லாத உயிரினங்கள் ஆகியவற்றை இந்த மீன்கள் உண்ணுகின்றன. இனப்பெருக்கம்  ஆணும் பெண்ணும் இனச்சேர்க்கை செய்து முட்டை இடுகிறது. முட்டைகளை அடைகாக்க ஒரு ஆண் தேவைப்படுகிறது. இந்த மீன்கள் 1.5 ஆண்டுகளுக்குள் தங்களது எண்ணிக்கையை இரண்டு மடங்காக பெருக்குகிறது. குஞ்சுகள் பெரியவர்களைப் போலவே இருக்கும். பழக்கம்   இது ஒரு சமூக மீன்.இவை ஜோடிகளாக அல்லது சிறு குழுக்களாக காணப்படும். சில நேரங்களில் பெரிய குழுக்களையும் கொண்டுள்ளது. இவற்றை மீன் தொட்டிகளில் வளர்க்கலாம். இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் புத்தகத்தில் குறைந்த அக்கறை என பட்டியல் இடப்பட்டுள்ளது. பாண்டிச்சேரி  பாண்டிச்சேரி மாநிலத்தின் மாநில விலங்கு இந்திய பனை அணில்(Indian palm squirrel) ஆகும்.இது இந்திய அணில் என்றும்,மூன்று கோடுகள் கொண்ட பனை அணில் என்றும் அழைக்கப்படுகிறது.இதன் விலங்கியல் பெயர் பனாம்புலஸ் பால்மரம்(Funambulus palmarum) என்பதாகும். இது சியுரிடே என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. வாழ்விடம்  அணில்கள் சுமார் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் தோன்றியுள்ளன. இந்த அணில்கள் இந்தியா,இலங்கை ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. அவை வெப்பமண்டல, வறண்டகாடுகள், மழைக்காடுகள், சதுப்பு நிலக்காடுகள், புல்வெளிகள், புதர்கள், தோட்டங்கள், பூங்காக்கள் மற்றும் நகர்ப்புறங்களிலும் வாழ்கின்றன.   இது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மடகாஸ்கர்,கொமோரோ தீவுகள், மொரிஷியஸ் மற்றும் ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. அணில்கள் மரங்களிலும், வீடுகளிலும், மறைவான இடங்களிலும் பறவையைப் போல் கூடு கட்டி வசிக்கிறது. தேங்காய் நார், பஞ்சு முதலியவைகளை கொண்டு கூடு கட்டுகிறது. அணில்   அணில் ஒரு சிறிய விலங்கு.இதன் உடல் மீது மூன்று வரிக் கோடுகள் உள்ளன. இதை சிறு நரை அணில் என்கின்றனர். வட இந்தியாவில் இருக்கக்கூடிய அணிலுக்கு ஐந்து கோடுகள் உள்ளன. இவை மனிதனோடு பழகி வாழ்கின்றன. இதை செல்லப் பிராணியாவும் வளர்க்கின்றனர்.    […]  இதன் உடல் சிறியது, பொதுவாக மெலிந்திருக்கும். வால் உடலை விட நீளமானது.வால் மயிர்கள் அடர்த்தியாக, திணைக் கதிர் போல் காணப்படும். இது வாலை தரையில் படாமல்,பின்னுக்குத் தூக்கிக் கொண்டு போகும். அல்லது மேலே உயர்த்தி வைத்திருக்கும்.இது பின் காலைக் குந்துக் காலிட்டு உட்கார்ந்து கொண்டு,உடம்பை உயர்த்தி முன் காலில் பழத்தையோ, கொட்டையையோ,தானியத்தையோ பற்றிக் கொண்டு கொறிப்பது இவற்றின் வழக்கம் ஆகும். இனப்பெருக்கம்    இதன் உடல் சாம்பல் பழுப்பு நிறத்தால் ஆனது.மரம் ஏறுவதற்கு ஏற்ப இதன் கால்களில் கூர்மையான நகங்கள் உள்ளன. இவற்றின் முன் பற்கள் சற்று பெரியதாக கூர்மையாக இருக்கின்றன. காதுகள் சிறியதாகவும், முக்கோண வடிவமாகவும் இருக்கும்.  அணிலின் கர்ப்ப காலம் 34 நாட்கள் ஆகும். இது 2- 3 குட்டிகளைப் பெற்றெடுக்கும். வயது வந்த அணிலின் எடை 100 கிராம் அளவு இருக்கும். இது மணிக்கு 16 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும்.இதன் சராசரி ஆயுள் காலம் என்பது 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும். நடத்தை   இந்த அணில்கள் சர்வ உண்ணிகள் ஆகும். இவை முக்கியமாக கொட்டைகள்,பழங்களை உண்கின்றன.அதே சமயம் விதைகள்,பூச்சிகள்,சிறிய பாலூட்டிகள், ஊர்வன, முட்டைகள் மற்றும்  பறவைகளின் குஞ்சுகளையும் கூட உண்ணுகின்றன. இது எப்போதும் சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டே இருக்கும். ஆபத்து வரும் போது சிப் சிப் சிப் என பயங்கரமான குரல் எழுப்பும். ஆபத்து  சிலர் அணில்களை வேட்டையாடித் திண்கின்றனர். இதன் மெல்லிய தோலினால் பை, சிறிய செருப்பு போன்றவை செய்கின்றனர்.இதன் மயிர் ஓவியம் எழுதும் தூரிகைச் செய்யப் பயன்படுகிறது. இந்த இனம்  IUCN சிவப்பு பட்டியலில் கவனம் குறைந்தது என இடம் பெற்றுள்ளது.  Reference 1. இணைய தளம் 2. கலைக் களஞ்சியம் 3. அறிவியல் களஞ்சியம் 4. Britannica 5. Indian State Animal List 6. Abhinav Nature Conservation-Vijay Choudhary 7. Pinterest** ஆசிரியர் பற்றிய குறிப்பு தமிழ் மொழியில் நல்ல அறிவியல் நூல்கள் இல்லாத குறையைக் களைவதில் ஏற்காடு இளங்கோ முக்கியப் பங்காற்றுகிறார்.2000 ஆம் ஆண்டில் வெளிவந்த இவரது முதல் நூல் அதிசயத் தாவரங்கள். அன்றிலிருந்து 22 ஆண்டுகளாகத் தொடர்ந்து பல நூல்களை எளிய தமிழில் எழுதி வருகிறார். […]   தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேலம் மாவட்ட உதவிச் செயலாளாராக 12 ஆண்டுகளும், மாவட்டச் செயலாளராக 8 ஆண்டுகளும் பணிபுரிந்துள்ளார். பின்னர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேலம் மாவட்டத் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். இவர் மக்களிடம் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்த முக்கிய காரணகர்த்தாவாகவும் உள்ளார்.    இவருடைய பழங்கள் மற்றும் செவ்வாய்க் கிரகமும் ,செவ்வாய் தோஷமும் ஆகிய இரண்டு நூல்கள் “அனைவருக்கும் கல்வி இயக்கம்” என்ற அமைப்பின் சார்பாக 38,000 பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.   இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிடும் துளிர்  அறிவியல் மாத இதழின் ஆசிரியர் குழுவில் முக்கியமானவர்.   இவர்  எழுத்துச் சிற்பி, அறிவியல் மாமணி, வல்லமைமிகு எழுத்தாளர், உழைப்பாளர் பதக்கம் ஆகிய விருதுகளால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.  1992 ஆம் ஆண்டு ஏற்காட்டில் உள்ள பெரிய ஏரியில் மண்டிக் கிடந்த ஆகாயத் தாமரைகளை, மாணவர்கள், தொண்டு அமைப்புகள் மற்றும் பொது மக்கள் உதவியுடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக, நீக்கி ஏரியைத் துப்புரவு செய்தார்.   இணையதளம் பொதுவகத்தில் 23 துணைப் பகுப்புகளின் மூலம் 19,583 படங்களை இணைத்துள்ளார்.   ஏற்காடு மலையில் உள்ள தாவரங்களை, வகைப்படுத்தி, பெயரிட்டு, அனைத்து புகைப்படங்களையும் இணையதளம் பொதுவகத்தில் பதிவிட்டுள்ளார். இதுவரை 2662 தாவரங்களின் 10,095 படங்களை இணைத்துள்ளார்.   பிரிதிலிபி என்னும் இணையத்தில் 120 கட்டுரைகளை எழுதி உள்ளார். இதுவரை 22,256 பேர் கட்டுரைகளைப் படித்துள்ளனர். பிரிதிலிபி தளத்தில் 1,00,000 வார்த்தைகள் எழுதியமைக்காக பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.   ப்ரீ தமிழ் இ புக்ஸ் மூலம் 37 புத்தகங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஜூன் 2015 ஆகஸ்ட் 2022 வரை 5, 70, 858 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.  சிறிய அளவிலும், பெரிய அளவிலும் 107 புத்தகங்களை  இதுவரை எழுதியுள்ளார். தொடர்ந்து அறிவியல் நூல்களை எழுதி வருகிறார்.  இவர் சிறந்த அறிவியல் எழுத்தாளர் ஆவார். FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.