[] 1. Cover 2. Table of contents இந்திய இலக்கியச் சிற்பிகள் - தமிழ்த் தாத்தா இந்திய இலக்கியச் சிற்பிகள் - தமிழ்த் தாத்தா   கி.வா. ஜகந்நாதன்     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/indhiya_ilakiya_sirpigal மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/indhiya_ilakiya_sirpigal This Book was produced using LaTeX + Pandoc Acknowledgements: Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work. This etext has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. © Project Madurai, 1998-2020. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website https://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact. Source: தமிழ்த் தாத்தா (டாக்டர் உ. வே. சாமிநாத ஐயரவர்கள் வாழ்வும் இலக்கியப் பணியும்) கி. வா. ஜகந்நாதன் இந்திய இலக்கியச் சிற்பிகள் - சாகித்திய அக்காதெமி சாகித்திய அக்காதெமி முதல் வெளியீடு : 1983 சாகித்திய அக்காதெமி ரவீந்திரபவன், புது தில்லி 110001 கிளை அலுவலகம் : 29. எல்டாம்ஸ் சாலை, சென்னை 600018 விலை : ரூ.4. அச்சிட்டோர் : டையோசிசன் அச்சகம், சென்னை 600007 Tamizh Tatta: (Dr. U. V. Swaminatha Iyer), Monograph in Tamil by K. V. Jagannathan, Sahitya Akademi, New Delhi (1983) Rs. 4. மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமி நாத ஐயர் (1855-1942) தமிழுக்காகவே வாழ்ந்தவர். அறுபதாண்டு காலத்துக்கு மேல் தமிழ்க் கல்வி ஆசிரியராகப் பணி ஆற்றிய படியே, பழந்தமிழ் நூல்களை ஆராய்ந்து வெளியிட்டு, தமிழ்க் கல்வியின் எல்லையை விரிவாக்கி, பழந்தமிழ் இலக்கியங்களையும் உயர் காப்பியங்களையும் காலத்தின் அழிவினின்றும் மீட்டுத் தந்தவர். பழந்தமிழர் வாழ்க்கை உயர்வை இலக்கியச் செய்திகள் வாயிலாக உணர்த்தியவர். இலக்கியப் பதிப்புத்துறையில் பாடுபட்டு ஏடு தேடிய இவரது உழைப்பின் பயனாக புது ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடை பெறுகின்றன. வரலாற்றுச் செய்திகளைச் சுவையான நவீன சிறுகதை போலச் சொல்ல வல்லவர். வாழ்க்கை வரலாற்றுத் துறையில் தமிழிலே ஒரு வழிகாட்டி இவர். இன்றைய தமிழர் சிந்தனைக் கருத்துக்களையும் தமிழ் எழுத்தாளர் நடையையும் ஐயரவர்கள் வெளியீடுகள் பெரிதும் பாதித்துள்ளன எனலாம். இளமையில் நீண்ட காலம் ஐயரவர்களுடன் முக்கிய மாணவராக இருந்து பழகிய நூலாசிரியர் கி. வா. ஜகந்நாதன் பண்டைத் தமிழ்க் கல்வியிலும் சிறந்தவர்; இன்றைய முன்னணி எழுத்தாளர் வரிசையிலும் மதிக்கப் பெறும் ஆசிரியர். ஐயரவர்களின் சிறந்த வாழ்வையும் உயர்ந்த தமிழ்ப் பணியையும் இந்த நூலில் தெளிவாக உணர்த்துகின்றார். அட்டை அமைப்பு: சத்தியஜித் ராய் உருவப் படம் : மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் நூலகம் வழங்கிய புகைப் படத்தின் கோட்டுருவம். முன்னுரை சென்ற நூற்றாண்டின் இறுதியில் தோன்றி இந்த நூற்றாண்டில் மறைந்த இரண்டு பெரும் புலவர்கள் தமிழுக்கு ஆக்கத்தை அளித்துப் புகழ் படைத்தனர். ஒருவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்; மற்றொருவர் மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாத ஐயரவர்கள். பாரதியார் அற்புதமான புதிய கவிதைகளைப் பாடித் தமிழ் மகளை அலங்கரித்தார். ஐயரவர்களோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய சங்க நூல் களையும் வேறு பழைய காவியங்களையும் கண்டெடுத்து ஆராய்ந்து அருமையான முறையில் பதிப்பித்து உதவினார்கள். அந்த நூல்களால் உலகம் முழுவதும் தமிழின் தொன்மையையும் பெருமையையும் பண்டைத் தமிழ் நாகரிகத்தையும் தெரிந்து கொண்டது. வெவ்வேறு நாடுகளில் உள்ள பேரறிஞர்கள் தமிழில் ஈடுபட்டு ஆராய்ச்சி செய்யலானார்கள். அதன் பயனாக உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்றன, இனியும் நடைபெறும். கம்பராமாயணம், வில்லி பாரதம் போன்ற நூல்களோடு நின்றிருந்த தமிழ் இலக்கியத்தின் விரிவு புலப்பட்டது. இவ்வளவு பழைய காலத்திலே தமிழ் நாட்டின் நாகரிகம் இத்தகைய சிறப்புடன் இருந்தது பெரு வியப்புக்குரியது என்று பலரும் பாராட்டினார்கள். தொன்மையான நூல்களாக இருந்தாலும் சங்க நூல்கள் இன்றும் கற்பவர்களுக்கு இனியனவாய் உள்ளன. இத்தகைய சங்க நூல்களைக் கண்டெடுத்து உதவிய டாக்டர் ஐயர் உரைநடையிலும் பல நூல்களை எழுதினார். அவர் பதிப்பித்த மணிமேகலைக்கு அங்கமாக மணிமேகலைக் கதைச் சுருக்கத்தையும், புத்தர், சங்கம், தர்மம் என்னும் மும்மணி-களைப்பற்றியும் எழுதினார். பெருங்கதைக்கு அங்கமாக உதயணன் சரித் திரத்தை எழுதினார். இவற்றையெல்லாமல் தம் ஆசிரியராகிய மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் வரலாற்றையும் வேறு பலருடைய வரலாறுகளையும் எழுதி உதவினார். ஏடு தேடியபோது தாம் பெற்ற அனுபவங்களை எடுத்துரைத்தார். சங்க நூல்களில் கண்ட பல செய்திகளைக் கட்டுரை வடிவில் எழுதினார். அவர் பதிப்பித்த நூல்களில் உள்ள முகவுரையே அவருடைய உரைநடை வளத்துக் சான்று பகரும். அவற்றோடு மேலே கண்ட வகைகளில் அவர் எழுதிக் குவித்தவை தமிழுக்குக் கிடைத்த களஞ்சியம் ஆகும். பண்டை நூற்பதிப்பு, வாழ்க்கை வரலாறு, ஆராய்ச்சி, அனுபவக் கட்டுரைகள் என்று பல துறைகளில் தம்முடைய இலக் கியப் பணியைச் செய்த அப்பெருமான் எண்பத்தெட்டு ஆண்டுகள் வாழ்ந்து 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மறைந்தார். நினைவு தெரிந்தது முதல் தமிழைப் பயின்றும், பயிற்றுவித்தும், பிறகு பண்டை நூல்களைப் பதிப்பித்தும் தமிழுக்கு வளம் ஊட்டி வாழ்ந்த அப்பெரியாருடைய வரலாறு பல பல அரிய உண்மைகளை வெளியிடுகிறது. அப்பெருமானுடைய வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கமே இந்த வெளியீடு. அவருடைய வாழ்க்கையில் மாணவப்பருவம், ஆசிரியத் தொண்டு , பதிப்புத்துறை, எழுத்துப்பணி என்ற பகுதிகள் அமைந்தன. அவற்றையெல்லாம் ஒருவாறு சுருக்கமாக இந்த நூலில் எழுதியிருக்கிறேன். இறுதியில் அவருடைய உரை நடையைப் பற்றிய பகுதியையும் எழுதிச் சேர்த்திருக்கிறேன். கவியரசர் பாரதியார் ‘பொதிய மலைப் பிறந்த தமிழ் வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயில், துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய், இறப்பின்றித் துலங்குவாயே!’ என்று ஐயரவர்களைப்பற்றிப் பாடினார் . ஆம், அப்பெருமான் என்றும் வாழ்வார். தமிழுள்ள காலமெல்லாம் அவர் புகழ் நின்று நிலைக்கும். 4-11-1982 கி. வா. ஜகந்நாதன் தமிழ்த் தாத்தா சென்ற நூற்றாண்டின் இறுதியிலும், இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலும் தமிழ்த் தாய்க்கு அணி செய்தவர்கள் இரண்டு பெரியவர்கள். ஒருவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சங்க நூல்கள் என்னும் பழைய அணிகலன்களைத் தேடி எடுத்து ஆராய்ந்து பதிப்பித்து அன்னையின் திருமேனியில் அணி வித்தார். மற்றொருவர் தாமே புதிய கவிகளை இயற்றி அணி செய்தார். முன்னவர் என்னுடைய ஆசிரியப் பிரான் மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள், பின்னவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். டாக்டர் ஐயர் முயற்சியால் முதலில் சீவகசிந்தாமணி வெளிவந்தது. பிறகு பத்துப்பாட்டு, அடுத்துப் பெளத்த காவியமாகிய மணிமேகலை வெளியாயின. எட்டுத் தொகையில் ஐந்து இலக்கியங்களை அவர் ஆராய்ந்து வெளியிட்டார். அவரோடு தொடர்புடையவர்கள் மற்ற நூல்களை வெளியிட்டார்கள். டாக்டர் ஐயர் தமிழ் இலக்கியத்தில் பழைய அணிகளை வெளியிட்ட பிறகு தமிழ் நாட்டில் ஒரு புத்துணர்ச்சி உண்டாயிற்று. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழர்கள் வாழ்ந்த வாழ்க்கை நிலையையும், அவர்களது பண்பாட்டு நிலையையும், பழக்க வழக்கங்களையும் தெரிந்து கொள்வதற்கு அந்த நூல்கள் கருவிகளாக விளங்குகின்றன. உலகம் முழுவதும் உள்ளவர்கள் சங்க நூல்களைக் கண்டு விம்மிதம் அடைந்தார்கள். அவர்கள் அந்த நூல்களைப் படித்து ஆராயத் தொடங்கினார்கள். மிகப் பழங் காலத்தில் தோன்றிய அந்த நூல்கள், இன்றைய மாணவர்களும் படித்து, ஆராய்ந்து இன்புறுவதற்கு ஏற்றவாறு இருந்தது. வியப்பில் ஆழ்த்தியது. நாளடைவில் பழைய நூல்கள் எல்லாம் பயனற்றுப் போக , இன்றைய நூல்களுக்கு மதிப்பு உண்டாவது உலக இயற்கை. பழைய நூல்களைக் கண்காட்சியில் தான் காணலாம். ஆராய்ச்சியாளர் மாத்திரம் ஆராய்ந்து வருவார்கள். ஆனால் சங்க நூல்கள் அத்தகையன அல்ல. இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பு தோன்றினாலும் அவற்றைப் படிக்கவும், ஆராயவும், அனுபவிக்கவும் முடிகிறது. அதனால் கம்பராமாயணம் முதலிய காப்பிய நூல்களோடு சங்க நூல் ஆராய்ச்சியும் எங்கும் நடை பெறலாயிற்று. அதன் பயனாகத் தமிழ் மாநாடுகளும், உலக விழாக்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன. சங்க நூல்களின் பெருமையை மற்ற நாட்டிலுள்ளவர்களும் தெரிந்துகொள்ளும்படி அவற்றின் மொழிபெயர்ப்பைச் சிறந்த அறிஞர்கள் செய்து வெளி யிட்டார்கள். இவ்வாறு, தமிழகத்தில் ஒரு புதிய யுகத்தை உண்டாக்கிய பேராளர் டாக்டர் ஐயர். அவர் இறைவன் திருவருளால் 87 ஆண்டுகள் வாழ்ந்தார்; தமிழுக்கு வளம் சேர்த்தார். தம் முடைய இளமைக் காலத்தில் அவர் காணாத காட்சியை அவர் தம் முதுமையில் கண்டார். பாரி என்றும், அதிகமான் என்றும் வெறும் பெயர்களைக் கேட்டுக் கொண்டிருந்த நிலையை மாற்றி, அவர்களால் தமிழ் உலகத்திற்கு என்ன நன்மை உண்டாயிற்று என்பதைப் பள்ளிக்கூட மாணவர்களும் தெரிந்து கொள்ளும் நிலை உண்டாயிற்று. காப்பிய இன்பத்தை நுகர்ந்த தமிழ்ப் புலவர்கள் சங்க இலக்கியங்களைப் பாராட்டினார்கள். தமிழ் மிகப் பழமை யானது, மிகச் சிறந்த பண்பாட்டை உள்ளுறையாகக் கொண்டது என்பதைப் புலவர்கள் எல்லாம் ஆராய்ந்தறிந்து சொன்னார்கள். இளமைக் கல்வி இவ்வாறு தமிழுக்கு ஒரு புது மலர்ச்சியை உண்டாக்கிய டாக்டர் ஐயரைத் தந்த பெருமை உத்தமதானபுரத்தைச் சார்ந்தது. ஓர் அரசர் அந்த ஊரை 48 அந்தணர்களுக்கு உத்தம-தானமாகக் கொடுத்தார். இந்தப் பெரும் புலவரைத் தமிழ் உலகத்திற்கு அளித்துள்ள தன்மையினால் அப்பெயர் பின்னும் பொருளுடையதாக ஆயிற்று. ஐயர் அந்தணர் வகுப்பில் அஷ்டசகஸ்ரம் என்ற பிரிவைச் சார்ந்தவர். அவருடைய பாட்டனார் வேங்கடாசலையார் என்பவர். வேங்கட நாராயணையர் என்பவருடைய மூத்த குமாரர். வேங்கடாசலையருக்கு வேங்கட சுப்பையர், சீனிவாசையர் என இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். வேங்கட சுப்பையரின் குமாரர் தாம் டாக்டர் ஐயர். 19-2-1855-ஆம் நாளன்று இந்தப் புலவர் பெருமான் திரு அவதாரம் செய்தார். அந்த ஆண்டுக்கு ஆனந்த வருஷம் என்று பெயர். அந்த ஆண்டு, தமிழுக்கு ஆனந்தம் தரும் இந்தப் பெரிய வரை உதவித் தன் பெயருக்குரிய புதுப் பொருளை உடையதாயிற்று. இளம் பருவத்தில் பாட்டனாரிடத்தில் இவர் அரிச்சுவடி படித்தார். அதன் பிறகு துதி நூல்களை எல்லாம் கற்றுக்கொண்டார். வேங்கடசுப்பையருடைய தாயாரின் அம்மான், கனம் கிருஷ்ணையர் என்ற இசைப் பெரும் புலவர். அவர் சங்கீத மார்க்கங்களாகிய கனம், நயம், தேசிகம் என்னும் வகைகளுள் கனமார்க்கத்தைப் பயின்று அதில் மிக்க தேர்ச்சி பெற்றார். வேங்கட சுப்பையர் அவரிடம் இசை பயின்றார். தம்முடைய குமாரரும் இசை பயின்று பெரிய சங்கீத வித்துவானாக வேண்டுமென்று கனவு கண்டுவந்தார். ஆனால் இந்தப் பெரியவருக்கு இசையில் ஓரளவு விருப்பம் இருந்தாலும் இவருடைய எண்ணமெல்லாம் தமிழை நன்றாகக் கற்றுக் கொள்ள வேண்டுமென்றே இருந்தது. அரியலூரில் வாழ்ந்து வந்த வேங்கட சுப்பையர் அதன் பக்கங்களிலுள்ள பல ஊர்களுக்குச் சென்று இராமாயணப் பிரசங்கம் செய்வார்; இராமாயண நாடகக் கீர்த்தனங்களைப் பாடிப் பிரசங்கம் செய்வார். அதனால் ஆங்காங்கு அவருக்குப் பொருள் உதவி கிடைத்தது. அந்த வகையில் தம்முடைய பிள்ளையும் இசையோடு கூடிய பிரசங்கம் செய்து வாழ்க்கையைச் செவ்வையாக நடத்துவார் என்று நம்பியிருந்தார். டாக்டர் ஐயர் நாராயண ஐயர், சாமிநாதையர் என்பவர்களிடம் தம் இளமைக் கல்வியைப் பெற்றார். அரிச்சுவடி , எண்சுவடி முதலியவைகளையே அவர்களிடம் கற்றுக்கொண்டார். மணலில் எழுதுவதும், ஏட்டில் எழுதுவதும் அக்காலத்து வழக்கமாக இருந்தன. சாமிநாதையர் என்னும் ஆசிரியர் இசையிலும் வட மொழியிலும் தேர்ந்தவர். அவர் சில சிறிய வடமொழி நூல்களை இவருக்குக் கற்பித்தார். இவருடைய சிறிய தகப்பனார் தம் வீட்டிலேயே இவருக்குப் பாடம் சொல்லித் தந்தார்; சங்கீதப் பயிற்சியும் செய்து வைத்தார். அந்தச் சின்னப் பிராயத்தில் இந்தப் பெரியாருக்குச் சித்திரம் எழுதுவதில் விருப்பம் இருந்தது. காகிதங்களில் பூக்களைப் போலக் கத்தரித்து அமைக்கும் பழக்கம் உண்டாயிற்று. கற்பனை சிறந்த கவிஞர்கள் இயற்கையின் எழிலைக் கண்டு அனுபவித்து அப்படியே அதைக் கவிதையில் வடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதுபோல, இந்தப் பெரியாரும் இயற்கையைக் கண்டு கண்டு இன்புற்றார். இப்பெருமானுடைய தாயாரின் தந்தையாகிய கிருஷ்ண சாஸ்திரிகள் சிறந்த பக்திமான்; எப்போதும் சிவநாமத்தையே சொல்லிக்கொண்டிருப்பார். தம் பேரரிடம், எதை மறந்தாலும் சிவநாமத்தை மறக்காதே என்று உபதேசம் செய்தார். அக்காலம் முதல் இப்புலவர்பிரான் இறுதிக் காலம் வரையில் சிவ நாமத்தை மறக்கவில்லை. வேலை ஒழிந்த நேரங்களில் எல்லாம் பல ஆயிரம் தடவை சிவநாமத்தை உருப்போடுவது வழக்கம். அந்தக் காலத்தில் ஆங்கிலம் தெரிந்தவர்கள் மிகவும் குறைவு. இந்தப் பெரியவருக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்க வேண்டுமென்று தந்தை எண்ணினார். ஆனால் அதில் இவருக்கு உள்ளம் செல்ல வில்லை. இசையில் பயிற்சி உடையவர்கள் அக் காலத்தில் தெலுங்கு கற்றுக்கொள்ளும் வழக்கம் இருந்தது. அவ்வாறே இவருக்குத் தெலுங்கு கற்றுக்கொடுக்க ஏற்பாடாயிற்று. ஆனால் அதிலும் இவருக்கு மனம் செல்லவில்லை. அக்காலத்தில் அந்தப் பக்கங்களில் கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றிய நந்தனார் சரித்திரக் கீர்த்தனை எங்கும் பரவியிருந்தது. இந்த இளைய மாணாக்கருக்கு அதில் ஈடுபாடு. அதிலுள்ள கீர்த்தனைகளிற் பெரும்பாலும் பாடம் ஆயின. இவரே பாடிப் பாடி இன்புறுவார். அரியலூரில் இவருடைய தந்தையார் இருந்தார். அப்போது சடகோபையங்கார் என்பவருடன் பழக்கம் உண்டாயிற்று. அவர் ஸ்ரீவைஷ்ணவர்; கவிஞரும் கூட; தமிழை ஓரளவு நன்றாகப் பயின்றவர். அவரிடத்தில் ஆசிரியப் பெருமான் சில காலம் தமிழ் கற்றுக் கொண்டார் . பாடம் சொல்வதில் சடகோபையங்கார் மிகவும் ஊக்கம் உள்ளவர் ; நயமாகப் பொருளைச் சொல்பவர். பாகவதம், கம்பராமாயணம் முதலிய நூல்களை நன்றாகச் சொல்லித் தருவார். ஆசிரியப் பெருமான் தம் இளமைப் பருவத்தில் அந்தப் பெரியவரிடம் பாடம் கேட்டதனால் தமிழில் மிக்க சுவை உண்டாயிற்று. இளம் பருவத்தில் அந்தணருடைய வழக்கப்படி இவருக்கு உபநயனம் நடைபெற்றது. அப்போது இவருக்கு வேங்கடராம சர்மன் என்று நாமகரணம் செய்தார்கள். அந்தப் பெயராலேயே இவரை அழைத்து வந்தார்கள். எனினும் அந்தப் பெயர் இவருடைய முன்னோரின் பெயராய் இருந்ததனால் உறவினர்கள் அதைச் சொல்லி அழைக்காமல் ‘சாமா’ என்று சொல்லி அழைத்தார்கள். திருவேரகத்திலுள்ள சுவாமிநாதன் என்பதையே சுருக்கி அப்படி அழைப்பது வழக்கம். குன்னம் என்ற ஊரிலுள்ள சிதம்பரம் பிள்ளையிடம் சில காலம் பாடம் கேட்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. அங்கே சில சிறிய நூல்களையும், திருவிளையாடல் புராணத்தையும் பாடம் கேட்டார். பல தனிப் பாடல்களைப் பாடம் பண்ணிக்கொண்டு அவற்றின் சுவையில் ஆழ்ந்தார். கார்குடியிலிருந்து வந்திருந்த கஸ்தூரி ஐயங்கார் என்பவர் இப் பெருமானுக்குத் தமிழில் இருந்த தேர்ச்சியையும், ஆர்வத்தையும் அறிந்து, தம் ஊருக்கு வந்து தங்கினால் தமக்குத் தெரிந்தவற்றையும் சொல்லித் தருவதாகச் சொன்னார். அப்படியே அந்த ஊருக்குத் தந்தையாருடன் இவர் சென்றார். கஸ்தூரி ஐயங்கார் இவருக்குச் சில நூல்களைப் பாடம் சொன்னார். அந்த இளம் பருவத்திலேயே செய்யுள் இயற்றும் பயிற்சி இவருக்கு ஏற்பட்டது. இளம் பருவத்திலேயே திருமணம் செய்து வைப்பது அந்தக் கால வழக்கமாதலின், இவருக்குத் தக்க இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்ற கவலை இவருடைய தந்தையாருக்கு உண்டாயிற்று. 16-6-1868-ஆம் நாளன்று இவருக்கும் மதுராம்பாள் என்ற பெண்மணிக்கும் திருமணம் நடந்தது. செங்கணம் சின்னப்பண்ணை விருத்தாசல ரெட்டியார் என்பவர் யாப்பருங்கலக்-காரிகையை நன்றாகப் படித்தவர். அவரிடம் இவர் பாடம் கேட்டார். ரெட்டியார் பாடம் சொல்லும் போது பல புலவர்களைப் பற்றிய செய்திகளைச் சொல்வார். அக் காலத்தில் திருவாவடுதுறை ஆதீன வித்துவானாக இருந்து, அக் காலக் கம்பர் என்று எல்லோராலும் போற்றப்பெற்ற மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் புகழ் எங்கும் பரவியிருந்தது. விருத்தாசல ரெட்டியார், அவர் பெருமையைப் பற்றி அடிக்கடி பேசுவார். அதனைக் கேட்கக் கேட்க இவருக்கு, அந்தப் பெருமானிடம் போய்ப் பாடம் கேட்கும் வாய்ப்பு வருமா? இறைவன் திருவருள் அதைக் கூட்டி வைக்குமோ?" என்று எண்ணினார். பல பல இடங்களில் சில சில நூல்களைக் கேட்டும் இவருக்குத் தமிழ்ப் பசி தீரவில்லை. அது மேலும் மேலும் வளர்ந்து வந்தது. இவருடைய பெரும் பசியைப் போக்குவதற்குரியவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களே என்று சிலர் எடுத்துச் சொன்னார்கள். எப்படியாவது அவரிடம் போய்ப் பயின்றால், இவர் நன்றாகக் கற்று முன்னுக்கு வரலாம் என்று பலரும் சொன்னதைக் கேட்டு, இவருடைய தந்தையாருக்கும் இவரைப் பிள்ளையவர்க ளிடத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பது அவசியம் என்ற எண்ணம் உண்டாயிற்று. பிள்ளையவர்கள் அப்போது மாயூரத்தில் இருந்ததனால், “இவர் மாயூரத்தில் போய்ப் படிக்க வேண்டுமே! அதற்கு வேண்டிய வசதிகளுக்கு என்ன செய்வது?” என்று எண்ணிக் கவலை கொண்டார். ஆனால் இறைவன் திருவருள் செய்வான் என்ற தைரியம் இருந்தது. “எப்படியாவது பிள்ளையவர்களிடம் இவனைச் சேர்த்துவிட்டால் மேலும் மேலும் முன்னுக்கு வருவான். தமிழ்க் கல்வியில் சிறந்த புலவனாகலாம்” என்ற நம்பிக்கை மாத்திரம் இருந்தது. ஆகவே, எப்படியாவது மாயூரத்திற்குப் போகலாம் என்று முடிவு செய்தார். அப்போது கோபாலகிருஷ்ண பாரதியார் மாயூரத்தில் வாழ்ந்து வந்தார். தமிழ் இலக்கியத்தைப் படிப்ப தோடு பாரதியாரிடம் இசையையும் பயிலச் சொல்லலாம் என்ற விருப்பம் தந்தையாருக்கு இருந்தது. ஆகவே, எப்படியாவது மாயூரத்திற்குப் போய்ச் சேருவது என்ற தீர்மானம் செய்தார். மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்றல் மீனாட்சிசுந்தரம் பிள்ளை மாயூரத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குரிய கட்டளை மடத்தை அடுத்து மேல்பாலிலுள்ள வீட்டில் இருந்தார். அவர் சைவத் திருக்கோலத்துடன் விளங்கினார். அப்புலவர் பெருமானை முதல் முதலாகக் கண்ட போது இவருக்கு உண்டான உணர்ச்சியைச் சொல்லினால் சொல்ல முடியாது. இவரே சொல்வதைக் கேட்கலாம் “அப்புலவர் பெருமான் வரும்போதே அவருடைய தோற்றம் என் கண்ணைக் கவர்ந்தது. ஒரு யானை மெல்ல அசைந்து நடந்து வருவதைப்போல் அவர் வந்தார். நல்ல வளர்ச்சி அடைந்த தோற்றமும், இளந் தொந்தியும், முழங்கால் வரையில் நீண்ட கைகளும், பரந்த நெற்றியும், பின்புறத்துள்ள சிறிய குடுமியும், இடையில் உடுத்திருந்த தூய வெள்ளை ஆடையும் அவரை ஒரு பரம்பரைச் செல்வரென்று தோன்றச் செய்தன. ஆயினும் அவர் முகத்திலே செல்வர்களுக்குள்ள பூரிப்பு இல்லை; ஆழ்ந்து பரந்த சமுத்திரம் அலையடங்கி நிற்பது போன்ற அமைதியே தோன்றியது. கண்களில் எதையும் ஊடுருவிப் பார்க்கும் பார்வை இல்லை. அலட்சியமான பார்வையும் இல்லை. தம் முன்னே உள்ள பொருள்களில் மெல்ல மெல்லக் குளிர்ச்சியோடு செல்லும் பார்வை தான் இருந்தது. அவருடைய நடையில் ஓர் அமைதியும், வாழ்க்கையில் புண்பட்டுப் பண்பட்ட தளர்ச்சியும் இருந்தன. அவருடைய தோற்றத்தில் உற்சாகம் இல்லை; சோம்பலும் இல்லை; படபடப்பில்லை; சோர்வும் இல்லை. அவர் மார்பிலே ருத்திராட்ச கண்டி விளங்கியது. பல காலமாகத் தவம் புரிந்து ஒரு தெய்வ தரிசனத்திற்குக் காத்திருக்கும் உபாசகனைப் போல நான் இருந்தேன். அவனுக்குக் காட்சியளிக்கும் அத் தெய்வம் போல அவர் வந்தார். என் கண்கள் அவரிடத்தே சென்றன. என் மனத்தில் உற்சாகம் பொங்கி அலை எறிந்தது. அதன் விளைவாக ஆனந்தக் கண்ணீர் துளித்தது.” தந்தையார் தம் குமாரரை அறிமுகம் செய்துவைத்தார். “இந்த ஊரிலுள்ள கோபால-கிருஷ்ண பாரதியாரைத் தெரியும்” என்றும் தந்தையார் சொன்னார். பிறகு மீனாட்சி சுந்தரம் பிள்ளை இவரிடம் ஒரு பாடலைச் சொல்லச் சொல்லி இவருடைய கல்விப் பயிற்சியை ஒருவாறு தெரிந்து கொண்டார். சில கேள்விகளைக் கேட்டு இவரது அறிவின் நுட்பத்தை உணர்ந்தார். இவருடைய தந்தையார், “பையனை உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன். எப்போது இவன் பாடம் கேட்க வரலாம்?” என்று கேட்டார். புலவர் பெருமான் சிறிது யோசித்தார். “இங்கே படிப்பதற்கு அடிக்கடி யாரேனும் வந்த வண்ணமாக இருக்கிறார்கள். சில காலம் இருந்து படிப்பதாகப் பாவனை செய்துவிட்டுப் பிரிந்து சென்று என்னிடம் படித்த தாகச் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். இப்படி அரைகுறையாகப் படிப்பதால் அவர்களுக்கு ஒரு பயனும் உண்டாவதில்லை. நமக்கும் திருப்தி ஏற்படுவதில்லை” என்று சொல்ல ஆரம்பித்தார். உடனே இவர் தந்தையார் , “இவன் அவ்வாறு இருக்கமாட்டான். தங்களிடம் எவ்வளவு காலம் இருக்கவேண்டு-மானாலும் இருப்பான். தமிழ்க் கல்வி கற்க எவ்வளவு காலம் ஆனாலும் தாங்கள் சொல்லிக் கொடுக்கலாம். வேறு எந்தவிதமான கவலையும் இவனுக்கு இல்லை” என்று சொன்னார். “இவரது உணவுக்கு என்ன செய்வது?” என்று அந்தப் புலவர் பெருமான் கேட்டார் . “அதற்குத் தாங்களே ஏற்பாடு செய்தால் நல்லது” என்று தந்தையார் சொன்னார். “திருவாவடுதுறையிலும், பட்டீச்சுரத்திலும் நான் தங்கும் காலங்களில் இவருடைய உணவு விஷயத்தில் ஒரு குறையும் நேராமல் பார்த்துக்கொள்ளலாம். இந்த ஊரில் இவர் ஆகார விஷயத்தில் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறேனே” என்றார். அப்போது தந்தையார், “இங்கே இருக்கும் போது இவன் உணவுச் செலவிற்கு வேண்டிய பணத்தை எப்படியாவது முயன்று நான் அனுப்பிவிடுகிறேன்” என்றார். “அப்படியானால் ஒரு நல்ல தினம் பார்த்துப் பாடம் கேட்க ஆரம்பிக்கலாம்” என்று புலவர் பெருமான் சொன்னார். அப்போது இவருக்கு உண்டான உணர்ச்சிக் கொந்தளிப்பை எவ்வாறு சொல்வது? அதன் பின்பு ஆசிரியர் பெருமான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் மாணாக்கராகத் தம்முடைய வாழ்க்கையைத் தொடங்கினார். அதுமுதல் இந்தப் பெருமானுடைய வாழ்க்கையில் இரண்டாவது பகுதி ஆரம்பமாயிற்று. சில காலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் நேரே பாடம் கேட்கச் சந்தர்ப்பம் இல்லை. அவரிடம் பாடம் கேட்டு வந்த சவேரிநாத பிள்ளை என்ற கிறிஸ்தவர், நல்ல அன்பு உடையவர்; அவரிடமே இவர் பாடம் கேட்கும்படியாகப் பிள்ளை பணித்தார். அவரிடம் பாடம் கேட்கும் போது தம் அறிவாற்றலுக்கேற்ற வகையில் அவரால் சொல்லிக் கொடுக்க முடியாது என்பதை இவர் உணர்ந்தார். எப்படியாவது பிள்ளையிடமே அன்பைப் பெற்றுக் கொண்டு அவரிடம் நேரே பாடம் கேட்கவேண்டுமென்ற எண்ணம் இவருக்கு இருந்தது. மீனாட்சிசுந்தரம் பிள்ளை தம்முடைய வீட்டின் பின் பக்கத்தில் பல மரங்களை அப்படியே வேருடன் பறித்து வந்து நட்டு வைத்தார். அவை நன்றாகத் தளதளவென்று தளிர்த்து வரவேண்டுமே என்ற கவலை அவருக்கு இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் அந்த மரங்களில் புதிய தளிர் விட்டிருக்கிறதா என்று பார்ப்பாராம். இதனை உணர்ந்து இவர் விடியற்காலையில் எழுந்திருந்து, அந்த மரங்களைப் பார்த்து, எங்கே புதிய தளிர் விட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்வார். பிள்ளை தளிரைப் பார்த்து வரும் போது, எங்கு எங்கே புதிய தளிர் விட்டிருக்கிறது என்று இவர் சுட்டிக் காட்டுவார். இதனைக் கண்டு இவரிடத்தில் பிள்ளைக்கு அன்பு மிகுந்தது. மெல்ல மெல்ல அவரோடு இவர் உரையாடத் தொடங்கினார். “இப்போது என்ன பாடம் நடக்கிறது?” என்று அவர் கேட்டார். “நைடதம் கேட்கிறேன். மேலே ஐயா அவர்களே எனக்குப் பாடம் சொன்னால் நன்றாக இருக்கும்” என்று விண்ணப்பித்துக்கொண்டார். அது முதல் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடமே பாடம் கேட்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. அவர் பாடிய திருக்குடந்தைத் திரிபந்தாதியை முதலில் பாடம் சொன்னார். இவ்விளைய மாணாக்கரிடத்தில் காணப்பெற்ற தமிழ்ப் பசியைப் பிள்ளை தெரிந்து கொண்டார். இவரது பசிக்கேற்ப ஒரு நாளில் பல பாடல்களைப் பாடம் சொல்லி வந்தார். பஞ்சத்தில் அடிபட்டவன் சிறிது சிறிதாகப் பல இடங்களில் உணவு பெற்று உண்டு, பிறகு ஓரிடத்தில் வயிறு நிறையச் சோறு உண்டது போல ஒருவகை உணர்ச்சியை இவர் பெற்றார். இவரே சொல்கிறார் : “எனக்கிருந்த தமிழ்ப் பசி மிக அதிகம். மற்ற இடங்களில் நான் பாடம் கேட்டபோது அவர்கள் கற்பித்த பாடம் யானைப் பசிக்குச் சோளப் பொரிபோல இருந்தது. பிள்ளையவர்களிடம் வந்தேன். என்ன ஆச்சரியம்! எனக்குப் பெரிய விருந்து, தமிழ் விருந்து கிடைத்தது. என் பசிக்கு ஏற்ற உணவு. சில சமயங்களில் அதற்கு மிஞ்சிக்கூடக் கிடைக்கும். ‘இனி நமக்குத் தமிழ்ப் பஞ்சம் இல்லை’ என்ற முடிவிற்கு வந்தேன்” என்று எழுதுகிறார். வரிசையாகப் பல பிரபந்தங்களை மகாவித்துவானிடம் இவர் பாடம் கேட்டார். பல அந்தாதிகளையும், பிள்ளைத் தமிழ் நூல்களையும், வேறு பிரபந்தங்களையும் இவர் கற்றார். பாடம் சொல்வதற்காகவே அவதரித்தவர் போல மகாவித்துவான் விளங்கினார். பாடம் கேட்பதற்காகவே வந்தவர் போல இவரும் இருந்தார். இரண்டு பேர்களுடைய உணர்ச்சியும் ஒன்றுபட்டுச் சங்கமமாயின. அதனால் இரண்டு பேர்களுக்கும் பயன் கிட்டியது. மகாவித்துவான் பாடம் சொன்னார். தம் பசி தீர இவர் பாடம் கேட்டார். நன்றாகப் பாடம் கேட்கும் மாணாக்கரிடம் ஆசிரியருக்குத் தனி அன்பு உண்டாவது இயற்கை. ஆகவே, இந்தப் பெருமானிடம் கவிச்சக்கரவர்த்திக்கு உள்ளம் நெகிழ்ந்த பேரன்பு உண்டானது ஆச்சரியமன்று. பெயர் மாற்றம் ஒரு நாள் பாடம் சொல்லிக்கொண்டு வந்தபோது, “உமக்கு வேங்கடராமன் என்று ஏன் பெயர் வைத்தார்கள்?” என்று கேட்டார் ஆசிரியர். “எங்கள் குல தெய்வம் வேங்கடாசலபதி. அதனால் அந்தப் பெயர் வைக்கப்பெற்றது” என்றார் இவர். “வேறு பெயர் உமக்கு உண்டா?” என்று பிள்ளை கேட்டபோது, “என்னைச் சாமா என்றும் அழைப்பார்கள்” என்று இவர் சொன்னார். “சாமிநாதன் என்ற பெயரின் சுருக்கம் அது” என்றும் எடுத்துச் சொன்னார். “இனிமேல், சாமிநாதன் என்ற அந்தப் பெயராலேயே உம்மை அழைக்கலாம் என்று நினைக்கிறேன்” என்று சொன்னார் பிள்ளை. அந்தப் பெயரே நிலைபெறுவ-தாயிற்று. தமிழ் உலகம் இன்றைக்கு இந்தப் பெரியவரை அந்தப் பெயராலேயே அடை யாளம் கண்டு கொள்கிறது. இடையிடையே காலை நேரங்களில் கோபாலகிருஷ்ண பாரதி யாரிடம் சென்று சங்கீதம் பயின்று வரலானார். இந்தச் செய்தியைப் பிள்ளையவர்களிடம் பாரதியாரே சொன்னார். ஒரு நாள் பாடம் சொல்லும் போது. ‘நீ பாரதியாரிடம் இசை கற்றுக்கொள்கிறாயாமே!’ என்று புலவர் பெருமான் கேட்டார். “பழக்கம் விட்டுப் போகாமல் இருப்பதற்கு அவரிடம் கற்றுக் கொள்ளும்படி தகப்பனார் சொன்னார்” என்று இவர் சொல்லவே. “இசையில் அதிகப் பழக்கம் வைத்துக்கொண்டால் இலக்கியத்தில் அறிவு செல்லாது” என்று சொல்லிப் பிள்ளை போய்விட்டார். இசைப் பயிற்சியில் பிள்ளைக்கு ஊக்கம் இல்லை என்பதையும், அவர் சொன்னது உண்மையாய் இருப்பதையும் உணர்ந்து ஆசிரியப் பெருமான் ஏதோ காரணம் சொல்லிக் கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் கற்றுக்கொண்டு வந்த இசைப் பயிற்சிக்கு முற்றுப் புள்ளி வைத்தார். அந்தக் காலத்தில் நன்றாகக் கவி இயற்றும் ஆற்றலையும் இவர் பெற்றார். திருவாவடுதுறைக் காட்சி முதல் முறையாக இவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையுடன் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சென்றார். அப்போது ஆதீன கர்த்தராக மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் இருந்தார். அவர் ஒழுக்கத்திலும், கல்வியிலும் சிறந்தவர். அங்கே பிள்ளைக்கு அளிக்கப்பெற்ற வரவேற்பையும், அவரவர்களுக்கு ஏற்றபடி அவர் இனிமையாகப் பேசிய தன்மையையும் இவர் கவனித்தார். இதுகாறும் காணாத காட்சியை ஆசிரியப் பெருமான் அங்கே கண்டார். மகா வித்துவானிடம் ஆதீன கர்த்தருக்கு இருந்த சிறந்த அன்பை அப்போது ஆசிரியரால் உணர முடிந்தது. திருவாவடுதுறையில் இருந்து எல்லோருக்கும் பாடம் சொல்ல வேண்டுமென்றும், தம்பிரான்கள் பலர் பாடம் கேட்கவேண்டுமென்ற ஆவலோடு இருப்பதாகவும் தேசிகர் தெரிவித்தார். அப்போது அருகில் இருந்த இவரைப் பார்த்து, "இவர் யார்?’ என்று கேட்க, தம்மிடம் இருந்து சில காலமாகப் பாடம் கேட்டு வருவதாகப் பிள்ளை சொன்னார். பிறகு தேசிகர் ஆசிரியப் பெருமானிடம் ஏதாவதொரு பாடலைச் சொல்லச் சொன்னார். இசையுடன் இவர் பாடினார்; பொருள் விளங்கும்படியாகச் சொற்களைப் பிரித்துப் பாடினார். தேசிகர் அதைக் கேட்டு மிகவும் உவகை அடைந்தார். சுப்பிரமணிய தேசிகர் திரிகூடராசப்பக் கவிராயர் பரம்பரையில் வந்தவர். திரிகூடராசப்பக் கவிராயர் இயற்றிய திருக்குற்றால யமக அந்தாதியில் உள்ள ஒரு பாட்டைத்தான் இவர் சொன்னார். தம் முன்னோர் பாடிய பாடலானதாலும், அதை இசையுடன் சொன்னதாலும் தேசிகருக்கு இன்பம் உண்டாயிற்று; இவரைப் பற்றிய செய்திகளை எல்லாம் பிள்ளையிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். திருவாவடுதுறைக் காட்சிகள் ஆசிரியருடைய உள்ளத்தில் பதிந்தன. அங்கேயிருந்த தம்பிரான்கள் நீண்ட சடைகளுடன் காவி உடுத்திருந்தார்கள். அவர்கள் ஆறுகட்டி, சுந்தரவேடத்துடன் இருப்பது கண்டு வியந்து நின்றார். அங்கங்கே உள்ளவர்களின் தவக் கோலத்தைப் பார்த்து அதைச் சிவராஜதானி என்று உணர்ந்தார். தேசிகர் பிள்ளையவர்களைப் பார்த்து ,“இனிமேல் நீங்கள் இங்கே தங்கியிருந்து எல்லோருக்கும் பாடம் சொல்லித் தரவேண்டும். அது தான் நமக்கும் திருப்தியாக இருக்கும்” என்று சொன்னார். அப்போது பட்டீச்சுரத்திலிருந்து வந்திருந்த ஆறுமுகத்தா பிள்ளை என்பவர் சந்நிதானத்திடம், "பிள்ளையவர்களைப் பட்டீச்சுரம் அனுப்பிவைக்க உத்தரவாக வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். தேசிகரும் அவ்வாறே போய்வர அனுமதித்தார். தமிழ்த் தாத்தா பட்டீச்சுரத்தில் திருவாவடுதுறையிலிருந்து பட்டீச்சுரம் போகும் வழியில் கும்பகோணத்தில் தமிழ் ஆசிரியராக இருந்த தியாகராச செட்டியாரை ஆசிரியர் சந்தித்தார். செட்டியாரைப்பற்றிய பெருமைகளை எல்லாம் ஆசிரியர் கேட்டிருந்தார். அவர் நல்ல சிவப்பு, பளபள வென்று இருக்கும் தேகமும், அவரது வீர நடையும், கம்பீரமான பார்வையும், தைரியமான பேச்சும் இவருடைய உள்ளத்தில் பதிந்தன. செட்டியார் இவரைப் பார்த்து, ‘நீ என்ன என்ன நூல்களைப் பாடம் கேட்டாய்?’ என்று கேட்டார் . தாம் பாடம் கேட்ட நூல்களைப் பற்றி இவர் சொன்னார் . “நீர் மற்றவர்களுக்குப் பாடம் சொல்லமுடிமா?” என்று கேட்டார் செட்டியார். “அப்படியே செய்வேன்” என்று இவர் சொன்னார். பிறகு பிள்ளையைப் பற்றிய பேச்சு அவர்களிடையே நிகழ்ந்தது. “ஐயாவிடம் பாடம் நன்றாகப் படியும், சோம்பேறியாக இருக்கக்கூடாது” என்று ஆசிரியரிடம் செட்டியார் சொன்னார். பிறகு ஆசிரியர் பிள்ளையுடன் பட்டீச்சுரம் சென்றார். பட்டீச்சுரத்தில் இருந்தபோது இவர் அதன் அருகில் இருந்த பல க்ஷேத்திரங்களைத் தரிசனம் செய்து கொண்டார். நாகைப் புராணம், மாயூரப் புராணம் முதலிய நூல்களைப் பாடம் கேட்டார். ஆறுமுகத்தா பிள்ளை வீட்டில் எங்கும் இல்லாத புதிய முறைகள் இருந்தன. இரவு ஒன்பது மணிக்குமேல் எல்லோரும் சாப்பிடாமலே படுத்துக் கொள்வார்கள். நள்ளிரவில் ஆறுமுகத்தா பிள்ளை எழுந்திருந்து எல்லோரையும் எழுப்பி உணவு அருந்தச் செய்வார். அந்த விசித்திரமான செயல் பலருக்குப் பிடிக்காவிட்டாலும் ஆறுமுகத்தா பிள்ளையின் வற்புறுத்தலினால் அந்த முறை தவறாமல் நடந்து வந்தது. ஆறுமுகத்தா பிள்ளை சற்றுக் கடினமான இயல்பு உடையவர். மீனாட்சிசுந்தரம் பிள்ளையைத் தவிர மற்றவர்களிடம் அவர் மரியாதை காட்டமாட்டார். இவரையும் சில சமயம் கடிந்து கொண்டார். சவேரிநாத பிள்ளை என்பவர் அடிக்கடி மாயூரத்திலிருந்து அங்கே வந்து செல்வார். இரவு 12 மணிக்குமேல் உணவு செய்து வந்த வழக்கத்தை அவர் தைரியமாகப் பேசி மாற்றினார். அவர், “பட்டீச்சுரத்தில் இரவில் நெடுநேரம் பசியோடு வருந்தும்படி செய்த பிரமதேவன் எங்களை மரமாகப் படைக்கவில்லையே!” என்று ஒரு பாட்டுப் பாடி அதைச் சொன்னார். ஆறுமுசுத்தா பிள்ளை அதைக் கேட்டார். சவேரிநாத பிள்ளை பக்குவமாக எடுத்துச் சொன்னதன் விளைவாக இரவு 10 மணிக்குள் யாவரும் உணவு அருந்தும்படி செய்தார். அவர் செய்த காரியத்தை யாவரும் மெச்சினார்கள். பிள்ளை ஆறு மாதங்கள் பட்டீச்சுரத்தில் தங்கியிருந்தார். அப்போது பல பெரிய மனிதர்களை எல்லாம் கண்டு பழகும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. சரஸ்வதி பூஜைக்குத் தம்முடைய ஊராகிய உத்தமதானபுரம் செல்ல வேண்டுமென்று சொல்லி அப்படியே இவர் சென்றார். விஜய தசமியன்று தம்முடைய ஆசிரியரை விட்டிருப்பது நியாயமன்று என்றும், அன்று ஏதாவது பாடம் கேட்க வேண்டுமென்றும் ஆசிரியர் நினைத்தார். அவ்வாறு விஜயதசமியன்று பட்டீச்சுரம் சென்று நைடதத்தைப் பாடம் கேட்டார். மாயூரத்தில் முதல் நாள் பெற்றுக்கொண்டது நைடத நூல். இப்போதும் அதைப் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்கும் வாய்ப்புக் கிடைத்ததற்குத் தம் உவகையை ஆசிரியர் வெளியிட்டார். அதன் பின்பு தம்முடைய தாய் தந்தையர் இருந்த கோட்டூர் என்ற ஊருக்கு ஆசிரியர் சென்றார். அப்போது வெப்பு நோய் இவருக்குக் கண்டது. சிலகாலம் கழித்து அந்த நோய் நீங்கினவுடன் மீண்டும் திருவாவடுதுறை சென்று தம் ஆசிரியரைக் காணவேண்டு மென்ற அவாமீ தூர்ந்தது. திருவாவடுதுறைக் குருபூஜை தை மாதத்தில் அசுவதி நட்சத்திரத்தில் திருவாவடுதுறை ஆதீன ஸ்தாபகராகிய ஸ்ரீ நமச்சிவாய மூர்த்தியின் குருபூஜை நடை பெறும். அன்று காலை ஆசிரியப் பெருமான் திருவாவடுதுறையை அடைந்தார். திருவாவடுதுறையில் குருபூஜை பெரிய விழாவாக நடக்கும். பலவகையான மக்கள் வந்து சேருவார்கள். எங்கும் சைவத் திருக்கோலம் விளங்கும். ஒரு பக்கம் இசைக் கச்சேரி நடை பெறும். மறுபக்கம் புலவர்கள் ஒன்று கூடித் தமக்குள் உரையாடிக் கொண்டிருப்பார்கள். வடமொழிப் புலவர்கள் எல்லாம் தம் ஆராய்ச்சியில் கண்ட நுட்பங்களைத் தமக்குள் உரையாடி இன்புறு வார்கள். மிகச் சிறப்பாக அன்னதானம் நடக்கும். ஆசிரியர் திருவாவடுதுறையில் பிள்ளையவர்களைச் சந்தித்தார். இவரைச் சந்தித்தவுடன் பிள்ளைக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. “குருபூஜை ஆனவுடன் நான் மாயூரத்திற்குப் போவேன். போனவுடன் தொடர்ந்து நீர் பாடம் கேட்கலாம் அல்லவா?” என்று கேட்டார். மாணாக்கருக்குப் பாடம் கேட்கவேண்டுமென்ற ஆவல் இருப்பது இயல்பு. பாடம் சொல்லவேண்டுமென்ற அவா தம் ஆசிரியரிடம் மிகுதியாக இருப்பது கண்டு இவர் வியந்தார். குருபூஜை அன்று பிள்ளையவர்களோடு ஆசிரியர் தங்கியிருந் தார். அப்போது ஒரு புலவர் வந்து சுப்பிரமணிய தேசிகரைப் பற்றிப் புகழ்ந்து தமக்கு ஒரு பாட்டு எழுதித் தரும்படி பிள்ளையிடம் கேட்டார். பிள்ளையவர்கள் எழுதித் தந்தார். பின்னர் அதுபோலப் பலர் ஒருவர் பின் ஒருவராக வர , ஒவ்வொருவருக்கும் ஒரு பாட்டு எழுதிக் கொடுத்தார் . அவர்கள் அந்தப் பாடல்களைத் தாமே எழுதியதாகத் தேசிகரிடம் போய்ச் சொல்லிப் பரிசு பெற்றார்கள். மறு நாள் தேசிகரை மீனாட்சிசுந்தரம் பிள்ளை சந்திக்கும் போது, ‘இரவு எல்லாம் பிள்ளையவர்களுக்கு மிகவும் வேலை வைத்துவிட்டார்கள் போலிருக்கிறது’ என்று தேசிகர் குறிப்பாகச் சொன்னார். பிள்ளையவர்கள் மாயூரம் போய்ச் சேர்ந்தபின் ஆசிரியரும் அங்கே சென்றார். அங்கிருந்து மறுபடியும் பிள்ளை திருவாவடுதுறைக்குப் பறப்பட்ட போது ஆசிரியரும் உடன் சென்றார். திருவாவடுதுறைக்கு வண்டியில் அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். போகும் போது பிள்ளை அம்பர்ப் புராணத்தை பாட ஆரம்பித்தார். வண்டியின் ஓட்டத்திலேயே கவிதையின் ஓட்டமும் தொடர்ந்து வந்தது. வண்டி போய்க்-கொண்டிருக்கையில் ஏட்டுச் சுவடியில் அந்தப் பாடல்களை என் ஆசிரியர் எழுதிக்-கொண்டே போனார். அம்பர்ப் புராணத்தில் “நந்தன் வழிபடு படலம்” என்பதில் முன்பு 53 பாடல்களே பாடப்பெற்றிருந்தன. நந்தன் பயணத்தைப் பற்றிய செய்திகளே , இவர்களது வண்டிப்பயணத்தில் பாடப்பெற்று ஆசிரியரால் எழுதப்பெற்றன. திருவாவடுதுறையில் இரண்டு வகையான பாடங்களை ஆரம்பிக்க ஏற்பாடாயிற்று. முதியவர்களுக்குச் சில நூல்களையும், இளையவர்களுக்குச் சில நூல்களையும் பாடம் சொல்வது எனத் திட்டம் செய்தார்கள். ஆசிரியரை எந்தக் கட்சியில் சேர்ப்பது என்ற எண்ணம் வந்தது. இவரைக் கேட்டபோது இரண்டு வகையான பாடமும் கேட்பதாக இவர் சொன்னார். அவ்வாறே இரண்டு வகுப்புக்கும் என்ன என்ன பாடங்கள் நடந்தனவோ அவற்றையெல்லாம் இவரும் கேட்டு வந்தார். பாடம் நடக்கும் போது பாடல்களை இசையுடன் படிக்கின்ற வேலையை இவர் செய்து வந்தார். பிள்ளையவர்களின் அன்பு ஒரு முறை ஏதோ சிறிய மன வேறுபாட்டால் பிள்ளை, ஆசிரியரிடம் பேசாமல் இருந்தார். ஒரு நாள் இரவு மடத்தில் பந்தி நடந்தது. யாவரும் உண்ணும் அந்தப் பந்தியில் பிள்ளையும் அமர்ந்து இருந்தார். இடையில் யாரும் எழும் பழக்கம் இல்லை. அன்று எல்லோரும் எழுவதற்கு முன் பிள்ளை எழுந்து வெளியில் வந்தார். விளக்கு இல்லாத ஒரு திண்ணையில் படுத்திருந்த ஆசிரியரைப் பார்த்து. “சாமிநாதையரா? ஆகாரம் ஆயிற்றா?” என்று கேட்டார். அதுவரைக்கும் பேசாமல் இருந்த ஆசிரியர் தம்மிடம் அன்புடன் விசாரித்ததைக் கேட்டவுடன் இவருக்கு உணர்ச்சி விஞ்சி நின்றது. மறுநாள் யாவரும் ஆசிரியரைப் பார்த்து, “பிள்ளைக்கு உம்மிடம் இருக்கிற அன்புதான் எத்தனை சிறப்பானது ! பந்தியின் நடுவில் எழுந்து வந்து விட்டாரே!” என்று சொல்லி வியந்தார்கள். மகாவைத்தியநாதையர் என்னும் இசைப் பெரும் புலவரைத் திருவாவடுதுறையில் தான் ஆசிரியர் முதல் முதலில் சந்தித்தார். அப்போது சந்நிதானத்தின் ஆணைப்படி மகாவைத்தியநாதையர் சில பாடல்களைப் பாடினார். அவர் பாட்டு, தேவகானமாக இருந்தது கண்டு இவர் மிகவும் வியப்பு அடைந்தார். மகா வைத்தியநாதையரின் தமையனார் இராமசாமி ஐயர் பெரிய புராணத்தைக் கீர்த்தனைகளாகப் பாடியிருக்கிறார். அவற்றிலிருந்தும் சில பாடல்களைப் பாடினார். மீனாட்சிசுந்தரம் பிள்ளை இயற்றிய சில பாடல்களையும் பாடிய போது இவர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். பிள்ளையினுடைய வாக்கு எத்தனை சிறப்பாக இருக்கிறது என்பதை உணர்ந்து இவர் விம்மிதம் அடைந்தார். ஒரு சமயம் ஆசிரியப் பெருமான் திருவாவடுதுறையில் இருந்த போது பிள்ளை மாயூரத்தில் இருந்தார். திருப்பெருந்துறைச் சுப்பிரமணியத் தம்பிரான் என்பவர் அத்தலத்திற்குப் புதிய முறையில் ஒரு புராணம் பாடப்பெற வேண்டுமென்று விரும்பினார். பிள்ளையைக் கொண்டு இயற்றுவிக்க வேண்டுமென்பது அவரது விருப்பம். அதைச் சுப்பிரமணிய தேசிகரிடம் விண்ணப்பித்துக் கொண்டார். உடனே தேசிகர் ஆசிரியப் பெருமானை மாயூரத்திற்கு அனுப்பி, இந்தச் செய்தியைப் பிள்ளையிடம் சொல்லி வரும்படி சொன்னார். அப்படியே ஆசிரியப் பெருமான் மாயூரத்திற்கு நடந்து சென்றார். சுப்பிரமணிய தேசிகருடைய விருப்பத்தைப் பிள்ளையிடம் தெரிவித்தவுடன், அவர் வாக்கிலிருந்து வந்தது திருப்பெருந்துறையிலுள்ள விநாயகர் பேரில், “நிலவுவந்த முடியினொடு வெயிலுவந்த மழகளிற்றை நினைந்து வாழ்வாம்” என்கிற ஓர் அடிதான். பின்பு பிள்ளையும், ஆசிரியப் பெருமானும் திருவாவடுதுறையை அடைந்தார்கள். 1872 நவம்பர் மாதம் பெரிய புராணம் பாடம் நடந்து வந்தது. அப்போது ஆசிரியப் பெருமானுக்குத் திடீரென்று கடுமையான வெப்பு நோய் வந்தது. பிறகு அம்மை பூட்டியது. அதனால் அங்கிருந்து இவருடைய பாட்டனார் இருந்த சூரிய மூலைக்குப் போய்ச் சேர்ந்தார். ஒரு பல்லக்கில் இவரை அந்த ஊருக்கு அனுப்பினார்கள். வேலையை மறுத்தல் 1873-ஆம் வருஷம் மகாமகம் நடைபெற்றது. அங்கே ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் தம் பரிவாரங்களோடு சென்றார். அந்த நேரம் தம்மால் அங்கே போக முடியாது போனது பற்றி இவர் மிகவும் வருந்தினார். உடம்பு ஒருவாறு குணம் அடைந்தவுடன் மீண்டும் திருவாவடுதுறையை அடைந்தார். இடையிடையே சில சமயங்களில் கும்பகோணத்திற்குச் சென்று தியாகராச செட்டியாருடன் பொழுது போக்குவது வழக்கம். அப்போது தியாகராச செட்டியார், “கும்பகோணத்தில் அப்பு சாஸ்திரிகள் என்பவர் ஒரு புதிய பள்ளிக் கூடத்தைத் தொடங்கப் போகிறார். அவர் எனக்கு நல்ல பழக்கம் உடையவர். அங்கே தமிழ்ப் புலவர் ஒருவர் வேண்டுமென்று சொல்கிறார். நான் உன்னை அனுப்பலாம் என்று நினைக்கிறேன்” என்று சொன்னார். ஆனால் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இவர் இங்கேயே இருக்கட்டும், பின்னால் வேண்டுமானால் உத்தியோகம் பார்த்துக் கொள்ளலாம்" என்று சொன்னார். அதை இறைவன் திருவருள் என்றெண்ணி ஆசிரியப் பெருமான் உவகை அடைந்தார். 1873-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் கவிஞர் பெருமான் திருப்பெருந்துறையை அடைந்தார். அவருடன் ஆசிரியப் பெருமானும் சவேரிநாத பிள்ளையும் சென்றார்கள். அந்தத் தலத்தின் பெருமையை உணர்ந்து, அங்கே மாணிக்கவாசகருக்கு எல்லா வகையான சிறப்புகளும் நடைபெறுவதைக் கண்டு மகிழ்ந்தார்கள். திருப்பெருந்துறைப் புராணம் முழுவதும் அரங்கேற்றத்திற்கு முன்பு இயற்றப்படவில்லை. சில பகுதிகளே இயற்றப் பெற்றிருந்தன. ஆனால் பிள்ளை அவ்வப்போது பாடல்களை எழுதிவைத்து மறுநாள் அரங்கேற்றுவது வழக்கமாக இருந்தது. அதைக் கண்டு ஆசிரியப் பெருமானுக்கு ஆச்சரியம் உண்டாயிற்று. மீண்டும் அங்கே இவருக்கு அவ்வப்போது நோய் வந்தது. அதனால் பிள்ளையைப் பிரிந்து ஊருக்குச் செல்ல நேர்ந்தது. புராணப் பிரசங்கம் 1874-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் முதல் ஒரு மாத காலம் தம் ஊரில் இருந்து வேண்டிய மருந்துகளை இவர் உண்டு வந்தார். அப்போது குடும்பத்தில் சிறிது கடன் இருந்தது. அதை அடைப்பதற்காக ஏதாவது செய்ய வேண்டுமென்று ஆசிரியப் பெருமானின் தந்தையார் எண்ணினார். சில ஊர்களுக்குச் சென்று புராணப் பிரசங்கம் செய்து பொருளை ஈட்டி அந்தக் கடனை அடைக்க வேண்டுமென்று அவர் நிச்சயித்தார். அதன்படி ஆசிரியர் செங்கணம் முதலிய இடங்களுக்குச் சென்று திருவிளையாடல் புராணப் பிரசங்கம் செய்து வந்தார். அப்போது பல தமிழன்பர்களோடு பழகும் வாய்ப்புக் கிடைத்தது. எனினும் மீண்டும் பிள்ளையிடம் போய்ச் சேர்ந்துவிட வேண்டுமென்ற ஆர்வம் மிகுதியாக இருந்தது. அப்போது அம்பர்ப் புராண அரங்கேற்றம் சம்பந்தமாக அம்பர் என்ற ஊருக்குப் பிள்ளை சென்றிருந்தார். அங்கே போய் இவர் தம் குருநாதரைச் சந்தித்தார். அங்கேயே இருந்து சில நூல்களைப் பாடம் கேட்டார். காரை என்ற இடத்தில் நடத்திவந்த திருவிளையாடல் புராணப் பிரசங்கத்தை இவர் இடையில் நிறுத்தி வைத்துவிட்டு, அம்பருக்கு வந்திருந்தார். எனவே அங்குச் சென்று அதை நிறை வேற்றினார். அந்தப் பக்கத்தில் இருந்தவர்கள் ஆசிரியப் பிரானைத் தொடர்ந்து அங்கே இருந்து பிரசங்கம் செய்து வரவேண்டுமென்ற விருப்பத்தைத் தெரிவித்தார்கள். ஆனால் ஆசிரியருக்குத் தம் குருநாதரை விட்டுப் பிரிந்து வாழ்வதில் விருப்பம் இருக்கவில்லை. ஆகவே, எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு திருவாவடு-துறையை அடைந்தார். அங்கே வேதநாயகம் பிள்ளை ஒரு நாள் வந்திருந்தார். அவர் மாயூரத்தில் முன்சீபாக இருந்தவர். அவரும் சுப்பிரமணிய தேசி கரும் உரையாடிப் பழகிய தன்மை இவரைப் பெரிதும் நெகிழச் செய்தது. பிள்ளையவர்கள் மறைவு 1876-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி ஆசிரியப் பெருமானுடைய ஆசிரியரும், பெரும்புலவர் பெருமானுமாகிய மீனாட்சி சுந்தரம் பிள்ளை இறைவன் திருவடியை அடைந்தார். கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் அந்தப் புலவர் பெருமானுக்குத் தமிழே நினைவாக இருந்தது. அந்தக் கடைசிக் காலத்தில் கூடத் திருவாசகத்தை வாசித்துக் கொண்டிருந்த இவருக்கு ஏற்பட்ட ஒரு சிறு ஐயத்தைத் தீர்த்து வைத்தார். பிள்ளையின் மறைவினால் ஆசிரியர் துன்பக் கடலில் ஆழ்ந்தார். சுப்பிரமணிய தேசிகரைப் பார்க்கும் போது விம்மி விம்மி அழுதார். "பிரிவதற்கரிய பொருளை இழந்து விட்டோம். இனி நாம் என்ன செய்வோம்? உம்மிடத்தில் பிள்ளையவர்களுக்கு எத்தனையோ அன்பு இருந்தது. இனியும் நீர் இந்த மடத்துப் பிள்ளையாகவே நம்மிடம் பாடம் கேட்டுக் கொண்டு இங்கு இருந்து வரலாம்’ என்று சுப்பிரமணிய தேசிகர் ஆறுதல் கூறினார். அவ்வாறே ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரிடம் சில நூல்களை ஆசிரியப் பெருமான் பாடம் கேட்டார். கம்பராமாயணம், நன்னூல் முதலிய பாடங்கள் நிகழ்ந்தன. சித்தாந்த நூல்களைப் பாடம் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. தாம் பாடம் கேட்டதோடல்லா மல் அங்கிருந்த தம்பிரான்களுக்குப் பாடம் சொல்லும்படியாகத் தேசிகர் இவரைப் பணித்தார். அந்தக் காலத்தில் காவடிச் சிந்தை இயற்றிய சின்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் திருவாவடு துறைக்கு வந்தார். தமிழ் படிக்க வேண்டுமென்ற அவா அவருக்கு இருந்தது. ஆசிரியப் பெருமானிடம் சில நூல்களைப் பாடம் கேட்டார். புதிய வீடு ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் திருவாவடுதுறையில் ஒரு புதிய வீடு கட்டி, அதில் ஆசிரியப் பெருமான் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார். அவரது விருப்பப்படியே ஆசிரியருடைய தாய் தந்தையர் அங்கே வந்து வாழத் தொடங்கினார்கள். 1877-ஆம் வருஷம் நவம்பர் மாதம் அந்தப் புதிய வீட்டில் ஆசிரியப் பெருமான் குடியேறினார். தம் மனைவியாரோடு வாழத் தொடங்கினார். மடத்தி லிருந்தே இவரது குடும்பத்திற்கு வேண்டிய பொருள்கள் எல்லாம் கிடைத்தன. ஆசிரியப் பெருமானிடம் தேசிகர் காட்டிய பேரன்பையும் அவரது சிறந்த ஒழுக்கத்தையும் கண்டு எல்லோரும் வியப் படைந்தார்கள். மதுரையில் அந்தக் காலத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. அதற்குச் சுப்பிரமணிய தேசிகர் புறப்பட்டுச் செல்ல ஏற்பாடாயிற்று. அங்கிருந்து வேறு தலங்களுக்கும் போகலாம் என்று தேசிகர் நினைந் தார். அப்போது தம்முடன் ஆசிரியப் பெருமானையும் வரும்படி அழைத்தார். அப்படியே இருவரும் புறப்பட்டனர். மதுரை சென்று கும்பாபிஷேகத்தைத் தரிசித்து இன்புற்றார்கள். அப்போதுதான் பிற்காலத்தில் ஆசிரியருக்கு வேண்டிய உதவிகளை எல்லாம் செய்த சுப்பிரமணிய ஐயரை (ஜஸ்டிஸ் மணி ஐயர்) அங்கே முதல் முறை யாகச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. முதலில் பதிப்பித்த நூல் திருநெல்வேலியில் மேலை ரதவீதியில் திருவாவடுதுறைக்குரிய மடம் ஒன்று உண்டு. அங்கே சில நாள் தங்கி, அப்பால் அதற்கு அருகிலுள்ள செவந்திபுரம் என்ற ஊருக்குச் சென்றார்கள். அங்கே வேணுவனலிங்கத் தம்பிரான் கட்டிய மடாலயத்திற்கு, “சுப்பிர மணிய தேசிக விலாசம்” என்று பெயர் வைத்தார்கள். அதன் கிருகப்பிரவேசத்திற்கு வந்திருந்த புலவர்கள் எல்லாம் அதைச் சிறப்பித்துப் பாடினார்கள். அந்தப் பாடல்களைத் தொகுத்து வெளியிட முயன்றபோது ஆசிரியப் பெருமானே அந்த வேலையில் ஈடுபட்டார். பிற்காலத்தில் எத்தனையோ அருமையான சங்க நூல்களை எல்லாம் பதிப்பித்த ஆசிரியப் பெருமான் முதல் முதலாகப் பதிப்பித்தது அந்த நூல் என்றே சொல்ல வேண்டும். “உ கணபதி துணை. திருக்கைலாய பரம்பரைத் திருவாவடுதுறை யாதீனத்தைச் சேர்ந்த செவந்திபுரத்தில் மேற்படி ஆதீனம் பெரிய காறுப்பாறு வேணுவனலிங்க சுவாமிகள் இயற்றுவித்த சுப்பிரமணிய தேசிக விலாசச் சிறப்பு. மேற்படி திருவாவடுதுறையில் மேற்படி சுவாமி களியற்றுவித்த கொலு மண்டபமென்னும் வேணுவனலிங்க விலாசச் சிறப்பு - இவை பல வித்வான்களால் பாடப்பட்டு மேற்படி ஆதீன அடியார் குழாங்களிலொருவராகிய ஆறுமுக சுவாமிகளாலும் மேற்படி திருவாவடு துறை வேங்கட சுப்ப ஐயரவர்கள் புத்திரராகிய சாமிநாத ஐயரவர்களாலும் பார்வையிடப்பட்டு, திருநெல்வேலி முத்தமிழாகர அச்சுக் கூடத்திற் பதிப்பிக்கப்பட்டன. வெகுதான்ய வருடம், ஆனி மாதம்” என்பது அதன் முகப்புப் பக்கம். அங்கிருந்து ஸ்ரீ சுப்பிரமணிய தேசி கருடன் திருக்குற்றாலம், சங்கரநயினார் கோவில், திருச்செந்தூர் முதலிய தலங்களைத் தரிசனம் செய்துகொண்டு மீண்டும் திருவா வடுதுறை ஆதீனத்திற்கு வந்து சேர்ந்தார். கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியர் ஆனது திருவாவடுதுறையில் இருந்தபோது, 1880 -ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி தியாகராச செட்டியார் அங்கே வந்தார். அவர் சுப்பிரமணிய தேசிகரிடம் ஒரு விண்ணப்பம் செய்து கொண்டார். நான் என்னுடைய வேலையிலிருந்து ஓய்வு பெறப் போகிறேன். எனக்குப் பிறகு நான் வகித்த பதவியில் இருந்து பாடம் சொல்வதற்குத் தக்க ஆசிரியர் ஒருவரை நியமிக்க வேண்டும். சாமிநாத ஐயரையே அந்த வேலையில் நியமிக்கலாம். அவரது பிற்கால வாழ்வுக்கு அது மிகவும் உபயோகமாக இருக்கும்" என்று சொன்னார். சுப்பிரமணிய தேசிகர் முதலில் அதற்கு இணங்க வில்லை. தியாகராச செட்டியார் அவரிடம் மிகவும் சாமர்த்தியமாகப் பேசி அவரது இசைவைப் பெற்றுக்கொண்டார். நல்ல வேளை பார்த்து ஆசிரியப் பெருமானைக் கும்பகோணத்திற்கு அனுப்பி வைத்தார்கள். புறப்படும் போது, “நீர் தியாக ராச செட்டியார் ஸ்தானத்தை வகித்து நல்ல புகழ் பெறுவதன்றிச் சென்னைக்கும் சென்று தாண்டவராய முதலியாரும், மகா வித்துவான் மகாலிங்கையரும், விசாகப் பெருமாளையரும் இருந்து விளங்கிய ஸ்தானத்தைப் பெற்று நல்ல கீர்த்தி அடைந்து விளங்க் வேண்டும்” என ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார். அந்த அன்பும், அருளும் நிறைந்த வார்த்தை பிற்காலத்தில் அப்படியே பலித்தன. ஆசிரியப் பெருமான் அடிக்கடி அதை நினைவு கூர்ந்து உருகுவார். கும்பகோணத்திற்கு வந்தவுடன் அந்த ஊர்க் கல்லூரியில் இருந்த ஆசிரியர்கள் ஆசிரியருடைய புலமையைச் சோதிக்க எண்ணினார்கள். அவர்கள் சொன்ன பாடல்களை எல்லாம் ஆசிரியர் எடுத்து விளக்கினார். அவர்கள் குறிப்பிட்ட நூல்கள் அனைத்தும் ஆசிரியர் பாடம் கேட்டவையே. “நீர் புதிய பாட்டு இயற்று வீரா?” என்று கேட்டதற்கு, ‘எனக்குத் தெரிந்தவரையில் இயற்று வேன்’ என்று ஆசிரியர் சொன்னார். உடனே தியாகராச செட்டியாரை வைத்து அவரிடம் சொல்வதுபோல ஒரு பாட்டைப் பாடச் சொன்னார்கள். சில நிமிடங்களிலேயே ஆசிரியப் பெருமான் பின்வரும் பாட்டைப் பாடி முடித்தார். வாய்ந்த புகழ் படைத்திலங்கு மீனாட்சி சுந்தரநா வலவன் பாலே ஏய்ந்த தமிழ் ஆய்ந்தமுறைக் கியைவுற நீ இதுகாறும் இனிதின் மேய ஆய்ந்தவள நகர்க்குடந்தைக் காலேஜில் நின்னிடமெற் களித்தல் நன்றே வேய்ந்த தமிழ் முதற்புலமைத் தியாகரா சப்பெயர் கொள் மேன்மை யோனே! அங்கே இருந்த பேராசிரியர்கள் இதைக் கேட்டு மிகவும் வியந் தார்கள். மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பாடம் கேட்டவருக்கு இத்தகைய திறமை இருப்பது ஆச்சரியமன்று என்று புகழ்ந்தார்கள். அப்போது கல்லூரி முதல்வராகக் கோபால்ராவ் இருந்தார். அவர் இந்தச் செய்திகள் அனைத்தையும் கேட்டுத் திருப்தி அடைந்து உடனே வேலையை மேற்-கொள்ளலாம் என்று சொல்லி விட்டார். அது முதல் ஆசிரியப் பெருமானுடைய மூன்றாவது வாழ்க்கைப் பகுதி தொடங்கியது. கல்லூரி ஆசிரியர் என்ற நிலையில் மாணவர்களுக்குப் பாடம் சொல்லும் பணியை மேற்கொண்டார். அந்த வேலையில் சேர்ந்த ஆரம்பத்தில் கோபால் ராவ் அடிக்கடி ஆசிரியர் நடத்தும் வகுப்புகளுக்கு வந்து இவர் பாடம் சொல் வதைக் கவனித்துச் செல்வார். மாணவர்-களுடைய கவனத்தை ஈர்க்கும்படியாக, அவர்களுக்குத் தெளிவாகப் புரியும்படியாக, ஆசிரியப் பெருமான் பாடம் சொல்வதைக் கேட்டுத் திருப்தி அடைவார். கும்பகோணத்திலிருந்து ஆசிரியப் பெருமான் அடிக்கடி திருவாவடுதுறை சென்று தம்முடைய அனுபவத்தை எல்லாம் தேசிகரிடம் சொல்வார். அதனால் சுப்பிரமணிய தேசிகருக்கும் திருப்தி உண்டாயிற்று. கல்லூரி வேலையில் சேர்ந்த சில மாதங்களுக்கு எல்லாம் ஆசிரியப் பெருமானுக்கு ஒரு புதல்வர் பிறந்தார். அவருக்குக் கலியாண சுந்தரம் என்ற திருநாமத்தை வைத்தார்கள். திரு நல்லூரில் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள ஸ்ரீ கலியாண சுந்தரேசுவரருக்குச் செய்து கொண்ட பிரார்த்தனையின் மேல் பிறந்தமையால் குழந்தைக்கு அந்தத் திருநாமத்தை வைத்தார்கள். சீவக சிந்தாமணிப் பதிப்பு சேலம் இராமசாமி முதலியார் என்பவர் கும்பகோணத் திற்கு முன்சீப்பாக உத்தியோகம் பெற்றுவந்தார். அவர் தமிழிலும், வட மொழியிலும், இசையிலும் பழக்கம் உள்ளவர். திருவாவடு துறை ஆதீன கர்த்தராக இருந்த சுப்பிரமணிய தேசிகர், அவரைப் போய்ப் பார்த்து வரும்படியாக ஆசிரியப் பெருமானுக்குச் சொல்லி அனுப்பினார். 21-10-1980 இல் (1880?) ஆசிரியர் அவரைப் போய்ப் பார்த்தார். மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டதையும், பின்பு தேசிகரிடம் பாடம் கேட்டதையும் இவர் எடுத்துச் சொன்னார். “என்ன என்ன படித்திருக்கிறீர்கள்?” என்று கேட்டபோது தாம் படித்த அந்தாதிகள், பிள்ளைத் தமிழ்கள், கோவைகள் முதலியவற்றை வரிசையாக ஒப்புவித்தார். அதைக் கேட்ட இராமசாமி முதலியார், “இவற்றை எல்லாம் படித்து என்ன பிரயோசனம்?” என்று சொன்னார். அவ்வளவு அலட்சியமாக அவர் பேசியதைக் கண்டு ஆசிரியப் பிரான் ஆச்சரியமுற்றார். மேலும் தாம் படித்த நூல்களை எல்லாம் சொன்னார். கம்ப ராமாயணத்தைப் படித்ததையும் சொன்னார். “இவை எல்லாம் பிற்காலத்து நூல்கள் தாமே? பழங்காலத்து நூல்களான சங்கப் பாடல்களைப் படித்திருக்கிறீர்களா? சீவக சிந்தாமணி, சிலப்பதி காரம், மணிமேகலை ஆகியவற்றைப் படித்தது உண்டா ?” என்று அவர் கேட்டார். “சுவடிகள் கிடைத்தால் நிச்சயமாகப் படித்துப் பார்ப்பேன்” என்று ஆசிரியப் பெருமான் தைரியமாகச் சொன்னார். சில நாட்கள் கழித்து, இராமசாமி முதலியாரிடம் ஆசிரியப் பெருமான் போன போது, அவர் சீவக சிந்தாமணிக் கடிதப் பிரதி ஒன்றை எடுத்துக் கொடுத்தார். ஆசிரியர் முதலில் அதைப் படித்தபோது சிறிது தடுமாறினார். நச்சினார்க்கினியர் உரையுடன் அந்தப் பிரதி இருந்ததால் ஒருவாறு அதைப் படித்துப் பொருள் செய்து கொண்டார். அதன் பிறகு இராமசாமி முதலியாருக்குப் பாடம் சொல்லத் தொடங்கினார். தமக்கு விளங்காத விஷயங்களை விளங்கவில்லை என்றே சொல்லி வந்தார். இந்த நிலையைக் கண்டு முதலியார் மிகவும் உவகை அடைந்தார். சிந்தாமணி ஜைன நூல் ஆதலால் அதிலுள்ள ஜைன சம்பிரதாயங்களைத் தெரிந்து கொள்ளக் கும்பகோணத்தில் இருந்த ஜைனர்களிடம் இவர் சென்று அவர்களிடம் ஐயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். ஜைன சமய சம்பந்தமான எல்லாச் செய்திகளையும் நன்றாகத் தெரிந்து கொண்ட பிறகு மீண்டும் படித்துப் பார்க்கவே, பல செய்திகள் நன்றாக விளங்கின. அப்பால் அதைப் பதிப்பிக்க வேண்டுமென்று விரும்பினார். பல ஏட்டுப் பிரதிகளைப் பார்த்துத் திருத்தமான பாடம் இதுதான் என்று திருத்திக்கொண்டார். சிந்தாமணியைச் சென்னையில் பதிப்பித்தால் நன்றாக இருக்கு மென்று இவர் சென்னை வந்து இரண்டு வாரங்களுக்கு மேல் தங்கி இருந்தார். அக்காலத்தில் சென்னையில் பல பெரும் புலவர்கள் இருந்தார்கள். அவர்களை எல்லாம் சந்தித்து அவர்களுடைய பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். தேரழுந்தூர் , சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரியார் என்பவரின் உதவியைப் பெற்றுச் சிந்தாமணிப் பதிப்பைத் தொடங்கினார். அவர் ‘ப்ரூப்’ பார்த்துத் தந்தார். ஆசிரியப் பெருமானும் மிகவும் சுறுசுறுப்பாக “ப்ரூப்” பார்த்தார். முதல் முதலாக ஒரு பழைய நூலைப் பதிப்பிக்கும் பேறு கிடைத்தது கண்டு மிகவும் ஊக்கத்துடன் அந்தப் பதிப்பை நிறைவேற்றினார். அப்போது 500 பிரதிகளையே வெளியிட்டார். சீவக சிந்தாமணி வெளியான பிறகு தமிழ் நாட்டில் ஒரு புது மலர்ச்சி உண்டாயிற்று. ஆசிரியர் சிந்தாமணி உரையில் காட்டப் பெற்ற மேற்கோள்களுக்குரிய இடங்களையும் பல பழைய நூல்களி லிருந்து ஒப்புமைப் பகுதிகளையும் கொடுத்திருந்தார். அவற்றை யெல்லாம் பார்த்து அந்த நூல் பதிப்பு , பழைய நூல்களுக்கெல் லாம் களஞ்சியம் போல இருப்பது கண்டு ஆராய்ச்சியாளர்களும் புலவர்களும் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள். சுப்பிரமணிய தேசிகர் மறைவு 1888-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ஆம் தேதி திருவாவடு துறை ஆதீன கர்த்தர் சுப்பிரமணிய தேசிகர் பரிபூரணம் அடைந்தார். அப்போது ஆசிரியப் பெருமான் சென்னையில் இருந்தார். இந்தச் செய்தியைக் கடித வாயிலாக அறிந்து துக்கக் கடலில் ஆழ்ந்தார். அப்போது உண்டான உணர்ச்சியைப் பற்றிப் பின் வருமாறு குறித்துள்ளார். ’நின்ற இடத்திலே நின்றேன். ஒன்றும் ஓடவில்லை. புத்தகத்தைத் தொடுவதற்குக் கை எழவில்லை. என்னுடைய உடம்பிலே இரத்த ஓட்டமே நின்றுவிட்டது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று. என்னுடைய ஒவ்வொரு முயற்சியையும் பாராட்டி எனக்கு வந்த பெருமையைக் காணும் போது தாய் குழந்தையின் புகழைக் கேட்டு மகிழ்வது போல மகிழ்ந்து என்னைப் பாதுகாத்த அந்தப் பரோபகாரியையும் அவர் எனக்குச் செய்த ஒவ்வொரு நன்மையையும் நினைந்து நினைந்து உருகினேன். என் துக்கத்தை ஆற்றிக்கொள்ள வழியில்லை. என் உள்ளத் துயரமே செய்யுளாக வந்தது. அவர் திருவுருவத்தை இனிப் பார்க்க இயலாதென்ற நினைவு வரவே நான் மனத்தில் பதித்து வைத்திருந்த அவ்வுருவம் எதிர் நின்றது. ’ இவ்வாறெல்லாம் நினைந்து துயரக் கடலில் மூழ்கிய ஆசிரியர் அன்று இரவே புறப்பட்டுத் திருவாவடுதுறை அடைந்தார். ஆதீனத் தலைவராக ஸ்ரீ அம்பலவாண தேசிகர் வந்தார். குரு பூஜை சிறப்பாக நடைபெற்றது. அதில் ஆசிரியப் பெருமானும் கலந்து கொண்டு தைரியமும், ஊக்கமும் பெற்றார். 1888-ஆம் ஆண்டு ஆரம்பத்தில் சுப்பிரமணிய தேசிகரை இழந்த வருத்தம் ஆசிரியப் பெருமானுக்கு ஆறுவதற்குள், அவரது நன்மையைப் பெரிதும் கருதி வந்த தியாகராச செட்டியார் இறைவன் திருவடியை அடைந்தார். இதனால் அந்த ஆண்டின் முன்னாலும், பின்பும் ஆசிரியருக்கு அதிகத் துன்பம் உண்டா யிற்று. பத்துப்பாட்டுப் பதிப்பு சீவக சிந்தாமணியைப் பதிப்பித்த கையோடு இவர் பத்துப் பாட்டை ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். சீவக சிந்தாமணி, காவியம் ; பத்துப்பாட்டு, கடைச் சங்க நூல், அதன் இயல்பை நன்கு தெரிந்துகொள்வதற்கு, பல இடங்களுக்கும் சென்று அதன் ஏட்டுச் சுவடிகள் பலவற்றைத் தேடிச் சேகரித்தார். பத்துப்பாட்டு ஆராய்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஆசிரியப் பெருமானிடம் பொறாமை கொண்டிருந்த சிலர் சீவக சிந்தாமணிபற்றிக் கண்டனக் கடிதங்களை எழுதினார்கள். சைவ மடத்தில் இருந்து வளர்ந்த ஒருவர் ஜைன நூலைப் பதிப்பிக்கலாமா என்று கேட்டிருந்தார்கள். ஆசிரியர் பதிப்பித்த சீவக சிந்தாமணியில் பிழை எனக் கண்டனக்காரர்கள் கூறியதற்கு ஆசிரியர் பதில் எழுதினார். அதை ஆசிரியரோடு கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியர் சாது சேஷையரிடம் இவர் காட்டினார். அதை வாங்கிப் படித்துப் பார்த்த அவர், அதனை வெளியிடச் சொல்லுவார் என ஆசிரியப் பெருமான் நினைத்தார். ஆனால் சாது சேஷையார் அந்தக் காகிதங்களைக் கிழித்துத் தூக்கி எறிந்துவிட்டு, “இப்படிப்பட்ட கண்டனங்களுக்குப் பதில் எழுதுவதற்கு முயலக் கூடாது. அப்படிச் செய்தால் கண்டனம் எழுதுபவர்கள் பெருமை அதிகமாகிவிடும். உங்கள் வேலைகளுக்குத் தடங்கல் உண்டாகும்” என்று சொன்னார் . ஒவ்வொரு நாளும் இரவு வெகுநேரம் வரைக்கும் ஆசிரியப் பெருமான் பத்துப்பாட்டைப் படித்தார். பல நண்பர்களுடைய பொருள் உதவியை மேற்கொண்டு அதைப் பதிப்பிக்கத் தொடங் கினார். சென்னைக்கு வந்து ஓர் அச்சுக் கூடத்தில் அதைக் கொடுத்து அச்சிடத் தொடங்கினார். அப்போது - பத்துப்பாட்டின் மூலம் கிடைக்கவில்லை. நச்சினார்க்கினியர் உரையை வைத்துக்கொண்டே ஒருவாறு மூலத்தைச் செப்பம் செய்து உருவாக்கி அச்சிடக் கொடுத்தார். 1889-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பத்துப்பாட்டு அச்சிட்டு நிறைவேறியது. ஆறு மாதங்கள் அந்த வேலை நடை பெற்றது. சிலப்பதிகார வெளியீடு அதன் பிறகு சிலப்பதிகாரத்தை ஆராய்ந்து வெளியிடவேண்டு மென்ற எண்ணம் ஆசிரியருக்கு உண்டாயிற்று. தம்முடைய கையிலிருந்த ஏடுகளை எல்லாம் ஒப்பு நோக்கி ஆராய்ச்சி பண்ணினார். அடியார்க்கு நல்லார் உரை அந்த நூலுக்கு உண்டு. அவர் உரை எல்லாக் காதைகளுக்கும் இல்லை. அரும்பத உரை என்பது ஒன்று கிடைத்தது. அதை வைத்துக்கொண்டும் அங்கங்கே பலவற்றுக்குப் பொருள் செய்துகொண்டார். மேலும் சில ஏடுகள் கிடைக்கலாமோ என்ற எண்ணத்தில் 1891-ஆம் வருடம் கோடை விடுமுறை யில் திருநெல்வேலி மாவட்டத்தை அடைந்து ஆங்காங்குள்ள பல சைவர்களுடைய வீடுகளில் தேடினார். இந்தப் பெரும் முயற்சியில் ஒன்றிரண்டு சிதிலமான ஏட்டுச் சுவடிகள் கிடைத்தன. கிடைத்தவற்றை யெல்லாம் வைத்துக்கொண்டு மேலும் சிலப்பதிகாரத்தை நன்றாக ஆராய்ந்து அச்சிடத் தொடங்கினார். புறநானூறு வெளியீடு சிலப்பதிகாரத்தை வெளியிட்டவுடன் மணிமேகலையையும் ஆராய்ந்து வெளியிட வேண்டுமென்ற ஆசை எழுந்தது. அடுத்தபடி யாகப் புறநானூறு என்ற சங்க நூலைப் பதிப்பிக்கவேண்டுமென்ற விருப்பமும் உண்டாயிற்று. புறநானூற்றுக்கு ஒரு பழைய உரை உண்டு. முதல் 260 பாடல்களுக்கே உரை இருந்தது. அதற்குமேல் இல்லை. ஆகவே அந்தப் பகுதியைப் பதிப்பிக்கும் போது இடையூறு ஏற்பட்டது. பல காலம் பயின்ற பழக்கத்தால் ஒருவாறு பொருள் செய்துகொண்டார். புறநானூற்றை 1893-ஆம் வருடம் ஜனவரி மாதம் சென்னையில் அச்சிடத் தொடங்கினார். அவ்வாண்டு செப்டெம்பர் மாதம் ஆசிரியப் பெருமானுடைய தந்தையார் இறைவன் திருவடியை அடைந்தார். அதனால் ஆசிரியப் பெருமானுக்கு மிகவும் துயரம் உண்டாயிற்று. 10-12-1893-இல் பூண்டி அரங்கநாத முதலியார் காலமானார். தம் தந்தையாரை இழந்த துக்கமும், அரங்கநாத முதலியார் காலமான வருத்தமும் ஆசிரியரின் மனவுறுதியைக் குலைத்தன என்றாலும் 1894-ஆம் வருடம் செப்டெம்பர் மாதம் புறநானூற்றுப் பதிப்பு நிறைவேறியது. பல அருமையான வரலாற்றுச் செய்திகள், பழங்கால மன்னர்கள். வள்ளல்கள், பல உபகாரிகள் ஆகியோரைப்பற்றிய செய்திகள் எல்லாம் அதனால் தெரியவந்தன. பிற்காலத்திலே அருமையான வரலாறுகளையும் ஆராய்ச்சிகளையும் பல புலவர்கள் எழுதி இருக்கிறார்கள். இவற்றுக்கெல்லாம் கருவியானது புறநானூறு என்னும் சங்க நூலே. ஏட்டுச் சுவடியிலிருந்து பதிப்பிப்பது பெரிய காரியம் அன்று என்று சிலர் நினைக்கலாம். ஒரு நூலைப் பாடிய புலவர் தம்மிடம் பாடம் கேட்கும் மாணவர்களுக்கு அதைச் சொல்லிக்கொண்டே வருவார். அவர்கள் அதை ஏட்டுச் சுவடியில் எழுதுவார்கள். இடையிடையே ஆசிரியர் கூறும் மற்ற விஷயங்களையும் அவர்கள் இரண்டு இரண்டு வரிகளுக்கிடையே எழுதி வைத்துக்கொள்வதும் உண்டு. மற்றவர்கள் அதைப் பார்த்துப் பிரதி செய்து கொள்ளும் போது அந்தக் குறிப்புகளையும் பழைய மூலத்தோடும் உரையோடும் சேர்த்து எழுதிவிடுவார்கள். இதுபோன்று எழுதுவதில் ஏற்பட்ட பிழைகள் அதிகம். சுவடிகளில் மேற்கோள் செய்யுட்களைக் கண்டு பிடிப்பதும் கடினம். உரை இல்லாத மூலங்கள் எழுத்தும் சொல்லும் மிகுந்தும் குறைந்தும், பிறழ்ந்தும் திரிந்தும் பலவாறு வேறுபட்டிருந்ததன்றி, சில பாடல்களின் பின் திணை எழுதப்படாமலும் இருக்கும். சிலவற்றில் துறை எழுதப்படாமல் இருக்கும். சிலவற்றில் இரண்டுமே இரா. பாடினோர் பெயர் இருக்காது. சிலவற்றில் சிதைந்து இருக்கும். சிலவற்றில் இரண்டு பெயர்களுமே இரா. ஒரே எண்ணில் இரண்டு பாடல்கள் வரும். ஒரே பாடல் இரண்டு இடங்களில் வரும். சில முதற்பாகம் குறைந்தும், சில இடைப்பாகம் குறைந்தும், சில கடைப்பாகம் குறைந்தும் இருக்கும். ‘ஏட்டுச் சுவடி என்றால் திருத்தமாக இருக்கும். அப்படியே அச்சுக்குக் கொடுத்துவிடலாம்’ என்று சிலர் நினைக்கிறார்கள். அதைப் பார்த்துத் தலைசுற்றி அவற்றைப் பதிப்பிக்க முடியாது என்று போனவர்கள் பலர் உண்டு. யாராலும் இந்தப் பழைய நூலை வெளியிட முடியவில்லை. பொருள் செய்வதற்கே தடுமாற்றம் இருந்தது. ஆண்டவன் திருவருளினால் ஆசிரியப் பெருமான் தம் நிறைந்த தமிழ் அறிவைக் கொண்டு மிகவும் பொறுமையுடன் தொண்டாற்றியதால் தமிழகத்திற்கு அந்தப் பழங்காலப் புதையல் கள் கிடைத்தன. அவற்றை வெளியிட இவர் பட்ட சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அவை யாவும் இப்போது மறந்து போயின. பத்துமாதம் குழந்தையைச் சுமந்து, பல்வேறு துன்பங்களுக் கிடையே பிரசவ வேதனையுற்றுக் குழந்தையை ஈன்ற தாய், தன் அருகில் குழந்தையைச் கொண்டுவந்து போட்டவுடன் தான் பட்ட சிரமங்களை எல்லாம் மறந்துபோய்ப் பேரானந்தம் கொள்வது போல, பதிப்பிக்கப்பெற்ற புறநானூற்றுப் புத்தகத்தைப் பார்த்தவுடன் ஆசிரியப் பெருமானுக்குப் பெருமகிழ்ச்சி உண்டாயிற்று. மணிமேகலையை வெளியிட்டது புறநானூற்றுக்குப் பிறகு மணிமேகலையை ஆராயத் தொடங்கினார். மணிமேகலை பெளத்த காவியம், ஜைன காவியமாகிய சீவக சிந்தாமணியில் ஏற்பட்ட சந்தேகங்களைப் போக்குவதற்கு ஜைனர்கள் பலர் இருந்தார்கள். ஆனால் பெளத்தர்கள் தமிழ் நாட்டில் யாரும் இல்லை. மணிமேகலை பெளத்த சமயக்கொள்கை நிரம்பின நூல். ஆகவே அதைப் படித்தபோது பல செய்திகள் தெரியவில்லை. வீரசோழியம் என்ற இலக்கண நூல் ஒரு பௌத்தரால் இயற்றப்பட்டது. அதில் பௌத்த சமயக் கருத்துக்கள் காணப் பட்டன. அவற்றைப் படித்தும் பல செய்திகளை அறிந்துகொண்டார். சென்னையில் மளூர் ரங்காசாரியார் என்ற பேராசிரியர் இருந்தார். அவர் பெளத்த நூல்களை நன்றாகக் கற்றவர். அவர் வாயிலாகப் பல செய்திகளை இவர் அறிந்து கொண்டார். பெளத்த சமய சம்பந்தமான நூல்கள் பல ஆங்கிலத்தில் இருந்தன. அவற்றை யெல்லாம் தருவித்து ரங்காசாரியாரிடம் கொடுத்தார். அவர் அவற்றைப் படித்து, பௌத்த மதக் கருத்துக்களை எல்லாம் சொன்னார். அவற்றையெல்லாம் மிக்க ஆர்வத்தோடு ஒரு மாணாக்கனைப் போலத் தொகுத்துக்கொண்டார். இடையே புறப் பொருள் வெண்பா மாலையை ஆசிரியர் பதிப்பித்தார். 1896-ஆம் வருடம் ஜூன் மாதம் மணிமேகலையைச் சென்னையில் கொண்டு வந்து அச்சிடக் கொடுத்தார். பெளத்த சமய சம்பந்தமாகத் தாம் தெரிந்து கொண்டவற்றை எல்லாம் புத்தர், பெளத்த தருமம், பெளத்த சங்கம் என்னும் தலைப்பில் எழுதி அவற்றை மணிமேகலைப் பதிப்பின் முன் அமைத்தார். அகராதி, அரும்பதவுரை ஆகியவை எல்லாம் இணைக்கப் பெற்றன. 1898-ஆம் வருடம் ஜூலை மாதத்தில் மணிமேகலை நிறைவேறியது. அதில் 59 தமிழ் நூல்களிலிருந்தும், 29 வடமொழி நூல்களிலிருந்தும் மேற்கோள் காட்டியிருந்தார். அரும்பதவுரையில் கண்ட சொற்களுக்கு விளக்கங்களையும் கொடுத் திருந்தார். மணிமேகலைக் கதைச் சுருக்கத்தையும் சேர்த்திருந்தார். மேலே ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, அகநானூறு, பெருங் கதை ஆகிய நூல்களில் ஆசிரியர் தம் கருத்தைச் செலுத்தலானார். ஐங்குறுநூறு என்பது எட்டுத் தொகையில் ஒன்று. ஒரு திணைக்கு நூறு பாட்டாக ஐந்து திணைகளுக்கு ஐந்நூறு பாடல்களை-யுடையது. பதிற்றுப்பத்து, சேரமன்னர்களுடைய பெருமையைச் சொல்வது. அகநானூறு அகப்பொருள் அமைதியுடையது. உதயணன் சரித்திரத்தைச் சொல்வதே பெருங்கதை. ஒன்றன் பின் ஒன்றாக அவற்றையெல்லாம் வெளியிடலாம் என்ற எண்ணத்தினால் அவற்றில் தம்முடைய உள்ளத்தைச் செலுத்தினார் ஆசிரியப் பெருமான். கிராமதானத்தை மறுத்தது ஆசிரியர் பதிப்பித்த மணிமேகலை, புறப்பொருள் வெண்பா மாலை ஆகியவற்றுக்கு உதவி செய்தவர் இராமநாதபுரம் பொ. பாண்டித்துரைத் தேவர் ஆவர். அவர் மதுரையில் தமிழ்ச் சங்கத்தை உண்டாக்கிப் பல நூல்களை வெளியிட்டார். அதோடு ‘செந்தமிழ்’ என்ற இலக்கியப் பத்திரிகையையும் வெளியிட்டு வந்தார். அவருடைய தாயார் 1898-ஆம் ஆண்டு இறைவன் திருவடியை அடைந்தார். அது காரணமாக இராமநாதபுரம் சென்று துக்கம் விசாரித்து வரவேண்டுமென்று ஆசிரியர் எண்ணினார். அப்போது இராமநாத-புரத்திற்குப் புகைவண்டி இல்லை; மதுரைபோய் அங்கிருந்து வண்டி வைத்துக்கொண்டு போகவேண்டும். ஆசிரியரும், அவருடைய குமாரரும் சென்னையிலிருந்து புறப்பட்டு மதுரையை அடைந்து அங்குள்ள திருவாவடுதுறை மடத்தில் தங்கினார்கள். அங்கிருந்து புறப்பட்டுப் பரமக்குடி போனார்கள். வைகையில் வெள்ளம் வந்த காரணத்தினால் 3 நாள் அங்கேயே தங்க வேண்டி வந்தது. பின்னர்த் தான் இராமநாதபுரம் போய்ச் சேர முடிந்தது. இராமநாதபுரத்தில் பாண்டித்துரைத் தேவர் தங்கியிருந்த அரண்மனைக்குச் சோமசுந்தர விலாசம் என்று பெயர். ஆசிரியர் அங்கே ஒரு மாத காலம் தங்கியிருந்தார். காலையிலும், மாலையி லும் ஆசிரியர் பாண்டித்துரைத் தேவரைச் சந்தித்து உரையாடினார். “என்னுடைய தாயார் இறந்து போன துக்கத்தைச் சம்பிரதாயமாக விசாரிக்க வந்தீர்கள். உங்களோடு சல்லாபம் செய்து கொண்டிருப்பதில் என் அன்னை இறந்துபோன துக்கமே மாறிவிட்டது. என்னுடைய தாயார் மிகச் சிறந்தவர். அவர் வாழ்ந்திருந்த காலத்திலும் எனக்கு எத்தனையோ நன்மைகளைச் செய்தார்கள். இறந்த பிறகும் உங்களை எல்லாம் வரும்படி செய்து எனக்குத் தமிழின்பம் உண்டாகச் செய்தார்கள்” என்று அவர் நயமாகப் பேசினார். ஒரு நாள் பாண்டித்துரைத் தேவர் அரசராகிய பாஸ்கர சேதுபதியைப் பார்க்கப் போனார். அவரிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வீட்டுக்குப் புறப்படும்போது சேதுபதி ஒரு முக்கியமான சமாசாரம் சொல்லவேண்டுமென்று அவரிடம் ஒரு கருத்தைத் தெரிவித்தார். “அது மிகவும் பொருத்தம்” என்று பாண்டித்துரைத் தேவர் சொல்லிவிட்டு, ஆசிரியர் தங்கியிருந்த விடுதிக்கு வந்து சேர்ந்தார். ஆசிரியர் அவரை வரவேற்று உட்காரச் செய்தார். “உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றைச் சொல்ல வந்திருக்கிறேன்” என்று பாண்டித்துரைத் தேவர் சொன்னவுடன், “ஏதாவது புதிய நூலைப் பதிப்பிக்க வேண்டு-மென்று சொல்லப் போகிறீர்களா?” என்று கேட்டார் இவர். “ஒரு நூல் அல்ல, பல நூல்களை நீங்கள் பதிப்பிக்கலாம். அந்த அளவுக்குச் செல்வம் அளிக்குமாறு ஒரு கிராமத்தையே உங்கள் பெயரில் எழுதிவைக்க மகாராஜா நினைக்கிறார்” என்றார் பாண்டித்துரைத் தேவர். “நான் இன்று அரண்மனை போயிருந்தேன். பாஸ்கர சேதுபதி அவர்கள் இந்தச் செய்தியைத் தெரிவித்தார்கள்” என்று சொன்னார். இந்நாள் வரை தங்களுக்கு எந்தவிதமான உதவியும் அவர் செய்யாமல் இருந்தது பெரிய தவறு என்று நினைக்கிறார்கள். ஆகவே தம் ஜமீனிலுள்ள ஒரு கிராமத்தையே தங்களுக்கு வழங்க எண்ணுகிறார். இந்தச் செய்தியைத் தங்களிடம் தெரிவிக்கும்படி என்னிடம் சொன்னார்’ என்றார். இதைக் கேட்டவுடன் பாண்டித்துரைத் தேவர் எதிர்பார்த்த படி ஆசிரியருக்கு மகிழ்ச்சி அதிகமாக உண்டாகவில்லை. அவரிடம், “மகாராஜா அவர்களுடைய எல்லையற்ற அன்பை நான் இதனால் உணர்ந்து கொள்கிறேன். என்னுடைய கருத்தை நான் அவர்களிடமே நேரில் சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டார். ஆசிரியர் பாஸ்கர சேதுபதியைப் பார்க்கச் சென்றபோது, தம்முடைய விருப்பத்தை ஏற்று, தமக்கு நன்றி சொல்ல வந்திருக்கிறார் என்றே மன்னர் எண்ணினார். ஆசிரியரும், தம் பேச்சில், எடுத்தவுடன் இதைச் சொல்லவில்லை. சிறிதுநேரம் வேறு விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்துவிட்டு, முடிவில் சொன்னார். “பாண்டித்துரைத் தேவர் அவர்கள் மகாராஜா சொல்லி அனுப்பிய செய்தியைத் தெரிவித்தார். அதன் மூலம் மகாராஜா அவர்களுக்கு என்பால் எவ்வளவு அன்பும், நம்பிக்கையும் இருக்கின்றன என்பதை உணர்ந்து கொண்டேன். எனக்கு இப்போது ஒன்றும் குறை இல்லை. ஆண்டவன் திருவருளால் கல்லூரியில் சம்பளம் வருகிறது. நான் செட்டாக வாழத் தெரிந்தவன். தாங்கள் வழங்குவதை ஏற்க மறுக்கிறேன் என்று எண்ணக்கூடாது. சமஸ்தானத்தின் நிலைமையும் எனக்கு நன்கு தெரியும். இந்த நிலையில் இப்போது அவ்வளவு பெரிய கொடையைத் தங்களிடமிருந்து ஏற்பதற்கு என் மனம் உடன்படவில்லை” என்று சொன்னார். அப்போது அந்தச் சமஸ்தானம் பலவிதக் கடன் தொல்லைகளுக்கு உள்ளாகியிருந்தது. எனவே, ஆசிரியர் கருத்தை உணர்ந்துகொண்டு ஒரு பதிலும் சொல்லாமல் சிறிது நேரம் மௌனமாக இருந்தார் மன்னர். பின்னர், “தங்கள் விருப்பம்” என்று சொல்லி விடை கொடுத்தனுப்பினார். தமக்குக் கிடைக்க இருந்த ஒரு கிராமத்தையே தாம் இழந்துவிட்டோமே என்ற எண்ணம் ஆசிரியருக்கு எந்தக் காலத்திலும் எழுந்தது இல்லை. கும்பகோணம் கல்லூரியில் அந்தக் காலத்தில் ராவ்பகதூர் வி. நாகோஜிராவ் என்பவர் முதல்வராக இருந்தார். அவர் இசையில் நல்ல ஞானம் உள்ளவர். இசை சம்பந்தமான புத்தகங்களை அவர் வெளியிட இருந்தார். அவற்றைத் திருத்தமாக வெளியிட வேண்டும் என்று விரும்பியதால் அவற்றைத் திருத்திக் கொள்ள ஆசிரியப் பெருமானை நாடினார். அப்படியே ஆசிரியரும் திருத்தித் தந்தார் . ஏதாவதொரு வகையில் ஆசிரியருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென்ற விருப்பம் நாகோஜிராவுக்கு உண்டாயிற்று. ஒருநாள் ஆசிரியரைப் பார்த்துச் சொன்னார்: “நீங்கள் தமிழிலுள்ள பழைய நூல்களைப் பதிப்பித்து வருகிறீர்கள். அதனால் உங்களுக்கு லாபம் எதுவும் இல்லை என்று எனக்குத் தெரியும். வேறு வகையில் உங்களுக்கு வருவாய் அதிகமானால் இந்தப் பதிப்பு வேலைகளுக்கும் உதவியாக இருக்கும் என்று தோன்றியது. பள்ளிக் கூடப் பாட நூல்கள் இப்போது தரமாக வருவதில்லை. நீங்கள் எழுதிக் கொடுத்தால் நன்றாக இருக்கும். மூன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் பாரம் வரைக்கான பாட நூல்களை நீங்களே எழுதிக் கொடுத்தால் அவற்றை லாங்மன்ஸ் அச்சகத்தார் வெளியிடுவார்கள். அவர்கள் உங்களுக்குத் தக்க சன்மானம் கொடுப்பார்கள். அதைக்கொண்டு தமிழ்த் தொண்டு செய்து வரலாம்” என்றார். ஆசிரியர் சிறிது யோசனை செய்தார். “நான் உங்கள் அன்பைப் பாராட்டுகிறேன். என் தொல்லை உங்களுக்குத் தெரிந்திருப்பது எனக்கு ஆறுதலாக உள்ளது. உங்களைப் போன்று வேறு சில அன்பர்களும் நான் பாடப் புத்தகங்களை எழுதவேண்டுமென்று சொன்னார்கள். எனக்குப் பணம் முக்கியமல்ல. என்னுடைய நேரம் முழுவதும் கல்லூரியில் பாடம் சொல்வதிலும் மற்றச் சமயங்களில் தமிழ் நூல்களை ஆராய்வதிலுமே கழிந்து கொண்டிருக்கிறது. பணம் வரத் தொடங்கினால் ஆசை வேறு வழிகளில் ஏற்பட்டுவிடும். பிறகு எனக்கு ஆராய்ச்சி செய்வதற்கு நேரம் இருக்காது. பழைய நூல்களைப் பதிப்பிக்கவும் தோன்றாது. நான் தங்கள் யோசனையை மறுப்பதாக எண்ணக் கூடாது. என் போக்கிலே என்னை விட்டு விடுங்கள்” என்று நயமாகச் சொன்னார். நாகோஜிராவ், ‘வலிய வருவாய் கிடைத்தாலும் கூட இவர் வேண்டாம் என்கிறாரே! இவருக்குப் பழைய தமிழ் நூல்களில் இருக்கிற ஆசைதான் எத்தனை!’ என்று எண்ணி வியந்தார். ஹாவ்லக் பிரபு விஜயம் 1898-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கல்லூரிக்கு ஆளுநர் ஹாவ்லக் பிரபு விஜயம் செய்தார். அக்காலத்தில் ஆங்கிலத்திற்கு மதிப்பு அதிகம். ஆங்கிலத்தில் வரவேற்றுப் பேசுவதே நாகரிகம் என்று பலரும் நினைத்த காலம். ஆனால் ஆசிரியப் பெருமானை நன்கு உணர்ந்த கல்லூரி முதல்வர் நாகோஜிராவ் தமிழிலும் ஒரு வரவேற்பு எழுதி வாசித்தளிக்க ஆசிரியருக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று நினைத்தார். கவர்னர் கல்லூரிக்கு விஜயம் செய்தபோது பல பெருமக்கள் வந்திருந்தார்கள். ஆசிரியப் பெருமான் தாம் இயற்றிய வரவேற்புத் தமிழ்ச் செய்யுளை அளித்தார். ஆளுநரின் பெருமைக்கேற்றபடி அது அமைந்திருந்ததாக எல்லோரும் பாராட்டினார்கள். ஆசிரியரைத் தம் வைத்துக்கொண்டு ஆளுநர் ஒரு படம் எடுத்துக் கொண்டார். ஆசிரியப் பெருமான் ஏட்டுச்சுவடிகளைத் தேடிச் சேகரித்துப் பதிப்பித்ததை அறிந்த பலர் தம்மிடம் இன்ன இன்ன சுவடிகள் இருக்கின்றன என்று எழுதுவார்கள்; பணம் அனுப்பினால் அவற்றை அனுப்பி வைப்பதாகவும் தெரிவிப்பார்கள். ஆசிரியரும் எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்ட பணத்தை அனுப்புவார். பல சமயங்களில் அனுப்பிய பணத்திற்கு ஒரு பயனும் கிடைத்ததில்லை. ஒரு சமயம் ‘சாப புராணம்’ தம்மிடம் இருப்பதாக ஒரு புலவர் எழுதியிருந்தார். ஆசிரியரும் சிறிது பணம் அனுப்பி, அந்த நூலை அனுப்பிவைத்தால் தாம் பார்த்துவிட்டுத் திருப்பி அனுப்பி வைப்பதாக அவருக்கு எழுதினார். அந்த நூல் வந்தது. அது எந்தச் சாபத்தையும் பற்றிய புராணம் அன்று; அது ‘சரப் புராணம்’; சிவபெருமான் சரப மூர்த்தியாக எழுந்தருளி அருள் பாவித்த வரலாறு. அது சாப புராணமாக இல்லாவிட்டாலும் ‘சரப புராணமாக’ இருந்ததனால் ஆசிரியர் ஒருவாறு திருப்தி அடைந்தார். மதுரையில் 1901-ஆம் ஆண்டு மே மாதம் தமிழ்ச் சங்கம் தொடங்கியது. அது முதல் ஒவ்வோர் ஆண்டும் அதன் ஆண்டு விழா நடக்கும். பாண்டித்துரைத் தேவரின் அழைப்புக் கிணங்க ஆசிரியப் பெருமானும் ஒவ்வோர் ஆண்டும் அங்குச் சென்று அதனைச் சிறப்பிப்பார். விழாவின் இரண்டாம் நாள் நடக்கும் புலவர் பேரவைக்குத் தலைமை தாங்கி ஆசிரியர் நடத்திக் கொடுப்பார். இவ்வாறு பல ஆண்டுகள் நடந்து வந்தது. 1900-ஆம் ஆண்டு சென்னையில் பல அன்பர்கள் கூடி, ‘திராவிட பாஷா சங்கம்’ என்ற ஒரு சங்கத்தை ஏற்படுத்தினார்கள். கல்வித் துறையில் பணியாற்றிய சேஷாத்திரி ஆச்சார் என்பவரும், ஜே. லாரஸ் என்ற பாதிரியாரும் அந்தச் சங்கத்தின் செயலாளர்களாக இருந்தார்கள். ஆசிரியப் பெருமான் அதன் கௌரவ அங்கத்தினராக இருந்தார். சென்னைக்குப் போவதை மறுத்தது ஒருநாள் சேஷாத்திரி ஆச்சார் கும்பகோணத்திற்கு வந்து ஆசிரியப் பெருமானைப் பார்த்தார். “நீங்கள் சென்னைக்கே வந்து விட்டால் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்” என்று தெரிவித்தார். “நான் எப்படி சென்னைக்கு வருவது? இங்கேதானே எனக்கு உத்தியோகம் இருக்கிறது?” என்றார் ஆசிரியர். “நீங்கள் சென்னைக்கு வருவதாக இருந்தால் அங்கே உள்ள மாநிலக் கல்லூரிக்கு உங்களை மாற்றும்படி நானே ஏற்பாடு செய்கிறேன். கல்வித்துறையில் எல்லோரையும் எனக்குத் தெரியும். நீங்கள் சென்னை வரச் சம்மதம் கொடுங்கள், போதும்” என்றார் ஆச்சார். அப்போது சென்னை மாநிலக் கல்லூரியில் முதிர்ந்த பிராய முள்ள ஒருவர் தமிழாசிரியராக இருந்தார். அவருக்குச் சென்னை சொந்த ஊராக இருந்தது. சென்னைக்கு வந்தால் பதிப்பு வேலைகளை எளிதில் கவனித்துக்கொள்ள வசதி ஏற்படும் என்ற எண்ணம் ஆசிரியருக்கு இருந்தாலும், அந்த முதியவருக்கு முதிர்ந்த காலத்தில் இடையூறு ஏற்படுத்துவதை விரும்பவில்லை. எனவே சென்னைக்கு வர இயலாது என்று தெரிவித்துவிட்டார். பாராட்டுத் தாள் 1902-ஆம் ஆண்டு கோடை விடுமுறையின் போது பாரிஸில் இருந்த பேராசிரியர் ஜூலியன் வின்சனின் மாணாக்கர் ஒருவர் சென்னைக்கு வந்தார். ஜூலியன் வின்சனுக்கும் ஆசிரியருக்கும் நெடுநாள் பழக்கம் உண்டு. அவர் அடிக்கடி ஆசிரியருக்குக் கடிதம் எழுதி வருவார். வின்சனின் மாணாக்கர் தமிழகம் வந்தபோது தஞ்சாவூரில் லைனல் பைபர்ட் என்பவர் சப் கலெக்டராக இருந்தார். அந்தப் பிரெஞ்சுக்காரர் அவருடைய விருந்தாளியாகத் தங்கி இருந்தார். அவர் கும்பகோணம் வந்து ஆசிரியரைச் சந்தித்தார். ஜூலியன் வின்சன், ஆசிரியரைப் பற்றி அடிக்கடி சொல்வது உண்டு என்றும், தமிழுக்கு இவர் செய்துள்ள தொண்டைப் பற்றிச் சில நூல்களில் எழுதியிருப்பதாகவும் சொன்னார். தாம் புதுச்சேரி, காரைக்கால் போன்ற சில இடங்களுக்குச் செல்ல இருப்பதாகவும், ஆசிரியர் ஏதாவது ஒரு நூலைக் கொடுத்தால் போகுமிடங்களில் அதைப் படித்துவிட்டு, திரும்ப அதை அனுப்பிவிடுவதாகவும் அவர் சொன்னார். ஆசிரியர் பழைய காஞ்சிப்புராணக் கடிதப் பிரதி ஒன்றை அவரிடம் வழங்கினார். ஏதோ புதையல் கிடைத்ததைப்போல அதைப் பெற்றுக்கொண்ட பிரெஞ்சுக்காரர் ஆசிரியரிடம் விடை பெற்றுச் சென்றார். தாம் சொன்னது போலவே இரண்டு வாரத்தில் அதை ரிஜிஸ்தர் தபாலில் திரும்ப அனுப்பி வைத்தார். அந்தப் பிரெஞ்சுக்காரர் தஞ்சையில் இருந்தபோது அங்கிருந்த சப் கலெக்டரிடம் ஆசிரியப் பெருமானின் உழைப்பையும், அவரது விரிந்த புலமையையும், அவர் பதிப்பித்த நூல்களால் தமிழுக்கு உண்டான ஏற்றத்தையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஏட்டுச் சுவடியில் உள்ளதை ஆராய்ந்து பதிப்பிப்பது என்பது மிகவும் அருமை யான காரியம் என்பதையும் அவர் நன்றாக விளக்கியிருக்கிறார். அதன் பயனாக ஆசிரியப் பெருமானுக்கு ஒரு நன்மை கிடைத்தது. 1903-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதி அன்று ஏழாவது எட்வர்டு மன்னர் பட்டாபிஷேகக் கொண்டாட்டம் நடந்தது. தஞ்சைமாநகரில் ஒரு மகாசபையைக் கூட்டி ஒரு விழா நடத்தினார்கள். அந்த விழாவுக்கு ஆசிரியரை வரவேண்டுமென்று அழைத்தார்கள். அவர்களது வேண்டுகோளின்படி ஆசிரியர் அங்குப் போய் வந்தார். அப்போது ஆசிரியப் பெருமானின் தமிழ்த் தொண்டைப் பாராட்டி சப்கலெக்டர் ஒரு பாராட்டுத் தாளை அளித்தார். ஐங்குறுநூறு வெளிவரல் சங்க நூல்களில் ஒன்றாகிய ஐங்குறுநூற்றை ஆராய்ந்து அதற்கு வேண்டிய குறிப்புகளை ஆசிரியர் தொகுத்துக்கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. ‘நூலை மிகவும் பெருக்காமல், சுருக்கமாக வெளியிட்டால் பல நூல்களைத் தாங்கள் சீக்கிரத்தில் வெளியிடலாம்’ என்று ஓர் அன்பர் எழுதியிருந்தார். அதை நினைவில் வைத்துக்கொண்டு ஐங்குறுநூற்றைச் சுருக்கமான முறையில் 1902-ஆம் வருஷம் செப்டெம்பர் மாதம் ஆசிரியர் வெளியிட்டார் . அது வெளிவந்த பிறகு அந்த யாழ்ப்பாணத்து அன்பர் , “இப்படி எல்லாவற்றையும் சுருக்கிக் கொள்வீர்கள் என்று நான் நினைக்க வில்லை. தங்களிடமிருந்து பெற்றிருக்க வேண்டிய பெரும் பயனைத் தமிழ்நாடு இழந்துவிட்டது. அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்” என்று ஒரு கடிதம் எழுதினார். 1903-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐங்குறுநூற்றின் முதல் பதிப்பு வெளியாயிற்று. அதைத் தமக்கு வேலை வாங்கித் தந்த தியாகராஜ செட்டியாருக்கு உரிமையாக்கினார் இவர். சென்னையை அடைதல் 1903-ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்த சீனிவாசாசாரியார் ஓய்வு பெற்றார். அப்போது ஆசிரியப் பெருமான் பதிற்றுப்பத்தை ஆராய்ச்சி செய்து வந்தார். ஒரு நாள் கல்லூரி முதல்வராக இருந்த ஜே. எம். ஹென்ஸ்மென் என்பவர் ஆசிரியரின் இல்லத் திற்கு வந்தார். கல்வித்துறைத் தலைவர் ஆசிரியரைச் சென்னை மாநிலக் கல்லூரிக்கு மாற்றி இருப்பதாகத் தெரிவித்து, ஆசிரியரின் இடத்தில் கும்பகோணத்தில் யாரை நியமிக்கலாம் என்று தம்மிடம் கேட்டுக் கடிதம் வந்திருப்பதாகச் சொன்னார். இறைவன் திருவருள் இவ்வாறு கூட்டுவிக்கிறது என்ற எண்ணத்தால் ஆசிரியருக்குச் சற்று உவகை உண்டாயிற்று. என்றாலும் 23 ஆண்டுகளாக தாம் வசித்த நகரத்தையும், நகரப் பெரு மக்களையும் விட்டுப் பிரிய மனம் வரவில்லை. அடிக்கடி திருவாவடுதுறை ஆதீன கர்த்தருடன் சல்லாபம் செய்துவரச் சென்னை சென்றால் சந்தர்ப்பம் இல்லாது போகுமே என்கிற நினைவு வருத்தியது. “சென்னைக்குச் சென்றால் பதிப்பு வேலைகளுக்குப் பல உதவிகள் கிடைக்கும். அடிக்கடி இந்த ஊரிலிருந்து சென்னை சென்று புத்தகங்கள் பதிப்பிப்பதைவிட அங்கிருந்தே நன்றாகப் பதிப்பு வேலைகளைக் கவனிக்கலாம்” எனக் கல்லூரி முதல்வர் ஹென்ஸ் மெனும் வற்புறுத்தினார். திருவாவடுதுறையில் அப்போது ஸ்ரீ அம்பலவாண தேசிகர் ஆதீனத் தலைவராக இருந்தார். அவரைப் போய்ப் பார்த்துவரச் சென்றபோது அவரும், ‘நீங்கள் சென்னைக்குப் போவதனால் பல நன்மைகள் உண்டாகும். நம்முடைய ஆதீனப் பெருமையும் அங்கே பரவுவதற்கு வாய்ப்பு அதிகம். எனவே நீங்கள் சென்னைக்குப் போவதே எல்லா வகையிலும் நல்லது’ என்று தம் மகிழ்ச்சியைத் தெரிவித்தார். ஆசிரியப் பெருமான் ஒரு நல்ல நாள் பார்த்துக்கொண்டு சென்னைக்கு வந்தார். சென்னையில் திருவேட்டீசுவரன் பேட்டையில் வசித்து வந்த இவருடைய சிறிய தகப்பனார் வீட்டில் தங்கிக் கொண்டு மாநிலக் கல்லூரிக்குச் சென்று வேலையை ஒப்புக் கொண்டார். கும்பகோணம் கல்லூரியில் தமிழ் வகுப்பில் உயர்ந்த மேடை , நல்ல மேசை, நாற்காலி ஆகியவை இருந்தன. ஆனால் சென்னை மாநிலக் கல்லூரியில் மற்ற ஆங்கில வகுப்புகளுக்கு இருந்தது போன்ற அமைப்பு இல்லை. ஏதோ ஒரு பழைய மேசை மட்டும் தரைமட்டத்தில் இருந்தது. இதை ஆசிரியர் மிகவும் நயமாக அப்போது மாநிலக் கல்லூரி முதல்வராக இருந்த பில்டர்பெக் துரையிடம் எடுத்துச் சொன்னார். அவர் உடனே மாநிலக் கல்லூரியிலும் தமிழ் வகுப்புக்கு உயர்ந்த மேடை, நல்ல மேசை, நாற்காலி, பீரோ ஆகியவற்றை அமைக்க ஏற்பாடு செய்தார். 1904-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருவேட்டீசுவரன் பேட்டை, பிள்ளையார் கோவில் தெருவில் மாதம் 20 ரூபாய் வாடகைக்கு ஒரு வீட்டிற்குக் குடி வந்தார். அந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பதிற்றுப்பத்து வெளியிடப்பெற்றது. 1905-ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஆசிரியப் பெருமானுடைய அன்னையார் சரஸ்வதி அம்மாள் காலமானார்கள். திரு சீனிவாச ஐயங்கார் ஆசிரியருடைய வீட்டிற்குத் துக்கம் கேட்க வந்தார். அச்சமயம் பேச்சோடு பேச்சாக, மணிமேகலைக் கதைச் சுருக்கத்தை எப்.ஏ. வகுப்புக்குப் பாடமாக வைக்க ஏற்பாடு செய்துள்ளதாகச் சொன்னார். “இதனால் வருகிற பணம் மாதா கைங்கர்யத்திற்கு இருக்கட்டும்” என்று சொன்னார். ஆசிரியப் பெருமானின் வகுப்பிலிருந்த மாணவர்களைச் சில பொறாமைக்காரர்கள் தூண்டிவிட்டு, ஆசிரியர் பாடம் சொல்லும் போது சில இடையூறுகளை ஏற்படுத்தச் செய்தார்கள். ஒரு சமயம் ஒரு துண்டுப் பத்திரிகை வெளியிடப்பெற்றது. அதில், ‘நச்சினார்க்கினியர் தவறு செய்தார்; சங்கராச்சாரியார் தவறு செய்தார்; உ. வே. சாமிநாதையரும் பிழைகளைச் செய்திருக்கிறார்’ என அச்சிடப் பெற்றிருந்தது. ஒரு மாணவன் மிகவும் வருத்தத்தோடு ஆசிரியரிடம் அந்தத் துண்டுப் பத்திரிகையைக் கொண்டு வந்து காட்டினான். அதைப் பார்த்து ஆசிரியப் பெருமானுக்குக் கோபம் வரவில்லை; வருத்தம் ஏற்படவில்லை ; புன்னகை பூத்த முகத்துடன், “இந்த எளியேனை அவ்வளவு உயரத்திற்கா ஏற்றிவிட்டார்கள்? சங்கராசாரியாருடனும் நச்சினார்க்-கினியருடனும் சமமாக என்னை வைத்தல்லவா சொல்லியிருக்கிறார்கள்?” என்றவுடன் மிகவும் வருத்தத்துடன் அந்தத் துண்டுப் பத்திரிகையைக் கொண்டு வந்த மாணவனே வருத்தம் மாறிச் சிரித்துவிட்டான். போலீஸ் அதிகாரியின் மனமாற்றம் திருவேட்டீசுவரன் பேட்டையில் ஜயசிங் என்ற போலீஸ் அதிகாரி ஒருவர் இருந்தார். அவர் கொஞ்சம் முரட்டுச் சுபாவம் உடையவர். ஆசிரியப் பெருமான் வாழ்ந்து வந்த தெருவில் தான் அவர் இருந்தார். யாரோ ஒருவர் அவரிடம் காவடிச் சிந்தையும், திருப்புகழையும் பாடியிருக்கிறார். அவற்றிலுள்ள பெண்களின் வருணனைகளைக் கேட்டு அவருக்குக் கோபம் கோபமாக வந்தது. இவற்றை எல்லாம் பாடிக் குழந்தைகளின் மனத்தைக் கெடுத்து விடுகிறார்கள். இனிமேல் இத்தகைய புத்தகங்கள் வெளிவராமல் தடுத்துவிட வேண்டும்" என்று பேசிக் கொண்டிருந்தார். இந்தச் செய்தியைச் சில அன்பர்கள் ஆசிரியரிடம் வந்து சொன்னார்கள். ஒருநாள் அந்தப் போலீஸ் அதிகாரியைப் பார்க்க இவர் சென்றார். “எங்கே இவ்வளவு தூரம் வந்தீர்கள்?” என்று அந்த அதிகாரி வியப்புடன் கேட்டார். நீங்கள் மிகவும் நல்லவர்கள் என்று கேள்விப்பட்டேன். ஆபாசமான விஷயங்களை எல்லாம் நாம் அதிகமாகப் பரவவிடக்கூடாது என்ற எண்ணம் தங்களுக்கு இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். நம்முடைய நாகரிகம் தெரிந்தவர்களுக்குத்தான் இந்த விஷயம் தெரியும். ஆனால் இலக்கியங்களின் திறத்தில் நாம் பார்க்க வேண்டிய முறையே வேறு. சங்க காலத்திலிருந்து அவற்றைப் புலவர்கள் பாடி வருகிறார்கள். செய்யுளாக இருப்பதால் அவற்றைப் படிப்பவர் களுக்கு இலக்கிய இன்பம் தோன்றுமே தவிர, ஆபாசம் தோன்றாது" என்று ஆசிரியர் பேசத் தொடங்கினார். “சில பைத்தியக்காரப் புலவர்கள் கன்னா பின்னா என்று பாடிக் குழந்தைகளின் உள்ளத்தைக் கெடுத்துவிடுகிறார்கள். அத்தகைய ஆபாசப் பாடல்களைத் தடுத்துவிடத் தாங்கள் எனக்கு யோசனை சொன்னால் உபகாரமாக இருக்கும்” என்று அந்த அதிகாரி சொன்னார். “அதைப்பற்றித்தான் உங்களிடம் பேச வந்திருக்கிறேன். நிதானமாகப் பேசலாம் அல்லவா?” என்றார் ஆசிரியர். “பெரியவர்களாகிய நீங்களே வந்திருக்கிறீர்கள். உங்களோடு பேசுவதைவிட வேறு வேலை என்ன இருக்கிறது?” என்றார் ஜயசிங். “என்னிடம் சில புலவர்கள் வந்து தங்களைத் தமிழுக்கு விரோதி என்று சொன்னார்கள். நீங்கள் அப்படி இருக்கமாட்டீர்கள் என்று நான் அவர்களிடம் சொன்னேன். பழைய இலக்கியங்களைக் கொளுத்திவிட வேண்டுமென்று நீங்கள் சொன்னதாகச் சொன்னார்கள். உங்களைத் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டார்கள் என்று நான் எண்ணினேன். அதனால் தான் உங்களை நேரே பார்த்துப் பேசலாம் என்று வந்தேன்” என்று சொன்னார் இவர். “எல்லாப் புலவர்களுக்கும் என் மேல் கோபம் இருக்கலாம். பெண்களை ஆபாசமாக வருணிக்கிற காவடிச் சிந்து, திருப்புகழ் ஆகிய பாடல்கள் பரவக் கூடாது என்பது என் எண்ணம்” என்றார் அந்த அதிகாரி. “காவடிச் சிந்து, திருப்புகழ் ஆகியவற்றில் பெண்களின் வருணனைகள் இருப்பது உண்மைதான். அவற்றை மட்டும் படிப்பதோடு நிறுத்திவிடக் கூடாது. பாட்டு முழுவதையும் படித்தால், அவ்வாறு ஈடுபடுவது தவறு என்று சொல்லியிருப்பதைக் காணலாம். ஒன்பது சுவைகளில் சிருங்காரம் என்பது ஒன்று. வடமொழி நூல்களிலும் அந்தச் சுவை உண்டு. பெண்களின் வருணனை கூடாது என்றால் எத்தகைய இலக்கியங்களும் இருக்க முடியாது. நான் மிகப் பழைய இலக்கியங்களாகிய சங்க நூல்களை முதல் முதலாக வெளியிட்டிருக்கிறேன். அதனால் தான் தமிழ்நாடு என்னிடத்தில் கொஞ்சம் மதிப்பு வைத்திருக்கிறது. அவற்றில் கூடப் பெண்களின் வருணனை வருகிறது. அவற்றைப் படிக்கும் போது இலக்கியச் சுவையே தெரிகிறது. நீங்கள் அவற்றை எல்லாம் பொசுக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். வடமொழியில் உள்ள நூல்களும் அப்படித் தான். இவ்வாறு பார்த்தால் தமிழிலும், வடமொழியிலும் படிப்பதற்கு வேறு ஒன்றும் கிடைக்காது” என்றார். “நீங்கள் சொல்வதைப் பார்த்தால் எல்லாப் புத்தகங்களும் ஆபாசமானவை என்றல்லவா தோன்றுகிறது?” என்றார் அதிகாரி. “ஆபாசம் என்பது வேறு. ரச உணர்ச்சி வேறு. மனித வாழ்க்கையில் காதல் மிக முக்கியமான உணர்ச்சி. காவியங்களும், புராணங்களும் காதல் உணர்ச்சியைப் பற்றிச் சொல்கின்றன. ஆண்டவனைக் காதலனாக வைத்து, தங்களைக் காதலிகளாக வைத்து ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடியிருக்கிறார்கள். அங்கெல்லாம் சிருங்கார ரசம் இருக்கும்.” “அப்படியா? தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களிலும் சிருங்காரரசம் இருக்கிறதா?” என்று கேட்டார் ஜயசிங். “தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம் ஆகிய எல்லாவற்றிலும் இருக்கின்றன. ஆண்டவனிடத்தில் உள்ள பக்தியைக் காதலாக மாற்றி அவற்றைப் பாடியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் ஆபாசம் என்று தள்ள முடியாது” என்றார் இவர். “இதெல்லாம் எனக்குப் புதிதாக இருக்கிறது” என்று போலீஸ் அதிகாரி சொன்னார். “நீங்கள் இவற்றை எல்லாம் நன்றாக ஆராய்ந்திருக்க மாட்டீர்கள். கிராமங்களில் பலர் கச்சு அணிவதில்லை. காய்கறி விற்கிறவர்கள், பால் தயிர் விற்கிறவர்கள், இன்னமும் பலர் அப்படி வருகிறார்கள். அவர்கள் தோற்றத்திலே ஆபாசம் இல்லை. பார்க்கிறவர்களின் கண்களில்தான் ஆபாசம் இருக்கிறது.” ’நீங்கள் சொல்வது உண்மைதான்" என்று ஒருவாறு இறங்கிவந்தார் அந்த அதிகாரி . “மற்றொரு விஷயம். நீங்கள் கோவிலுக்குப் போகிறீர்கள் அல்லவா?” என்று கேட்டார் ஆசிரியர். போவது உண்டு என்றார் ஜயசிங். “அங்குள்ள மூர்த்திகளை, கோபுரங்களிலுள்ள சிற்பங்களைப் பார்த்தது உண்டா ? அந்தச் சிற்பங்களில் பெண்மையைக் காட்டுகின்ற அங்கங்கள் பெரியனவாக இருந்தா லும் யாரும் விகார உணர்ச்சி கொள்வதில்லை. படுத்திருக்கும் தாயின் மார்பில் குதித்து விளையாடுகிற குழந்தைக்குத் தவறான உணர்ச்சி உண்டாவதில்லை. இது இன்று நேற்று வந்தது அல்ல. நீங்கள் சொல்லுகிறபடி திருப்புகழையும், காவடிச் சிந்தையும் அதில் வரும் பெண்களின் வருணனைக்காக நீக்கத் தொடங்கினால் தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும், வடமொழி இலக்கியங்கள் அனைத்தையும் கடலில் கொண்டு போய்ப் போட வேண்டும். கோவில்களில் உள்ள விக்கிரகங்களை உடைத்தெறிய வேண்டும்.” "ஐயா, ஐயா! அப்படிச் சொல்லக் கூடாது. இந்த விஷயங்கள் எல்லாம் தெரியாமல் ஏமாந்து போனேன். நல்ல சமயத்தில் இந்த உண்மையைச் சொன்னீர்கள். உங்களுக்கு மிகவும் நன்றி என்றார் ஜயசிங். அதன் பின்பு அந்தப் போலீஸ் அதிகாரிக்கு இருந்த தவறான எண்ணம் போய்விட்டது. தியாகராச லீலை திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் தியாகராசப்பெருமானின் திருவிளையாடல் 360 என்று சொல்லுவார்கள். அவற்றைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டுமென்று மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை எண்ணினார். ஆனால் மூல நூலின் ஒரு பகுதியே கிடைத்தது. கிடைத்த 14 லீலைகளை மொழிபெயர்த்துத் தமிழ்ச் செய்யுளாக இயற்றினார். அந்த நூலை அச்சிட வேண்டு மென்று எண்ணி ஆராய்ந்து இவர் 1905 ஆம் ஆண்டு அதைப் பதிப்பித்தார். மகாமகோபாத்தியாயப் பட்டம் 1906-ஆம் ஆண்டு முதல் தேதி பிறந்தது. அரசினர் இந்த நாட்டில் சிறப்பான பணி புரிபவர்களுக்குப் பல பட்டங்களை வழங்கி ஊக்கம் அளித்துவந்தனர். கங்காதர சாஸ்திரிகள் என்பவர் அன்று காலையில் ஆசிரியரைப் பார்க்க வந்தார். “எங்களுக்கெல்லாம் அளவில்லாத மகிழ்ச்சி. நாங்கள் எல்லோரும் ஆனந்தத்தால் குதிக்கிறோம்” என்றார். ஆசிரியப் பெருமானுக்கு ஒன்றும் விளங்கவில்லை. “உங்களுக்கு மகா மகோபாத்தியாயப் பட்டம் கிடைத்திருக்கிறது. இந்தச் செய்தி இன்னமும் உங்களுக்குத் தெரியாதா?” என்றார். ஆசிரியருக்கு அந்தச் செய்தி அப்போதுதான் தெரிந்தது . அதுமுதல் தமிழ் நாட்டிலுள்ள பலர் ஆசிரியரைப் பாராட்டினர். கடிதங்கள் மூலம் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாக இருந்த மணி ஐயர், “மகாமகோபாத்தியாயப் பட்டம் தங்களுக்கு வழங்கப்பட்டதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுக்கு அது கிடைக்கும் என்பது எனக்குத் தெரியும்” என்று ஒரு கடிதம் அனுப்பினார். அதுவரை வடமொழிப் புலவர்களுக்கே அளிக்கப் பெற்று வந்த அந்தப் பட்டம், ஆசிரியப் பெருமானுக்கு முதல் முறையாக வழங்கப்பெற்றதனால் அரசினருக்குப் பெரும் புகழ் உண்டாயிற்று. தோடாப் பெறுதல் 1906-ஆம் ஆண்டு வேல்ஸ் இளவரசரும், அவருடைய தேவியாரும் சென்னைக்கு விஜயம் செய்தார்கள். அப்போது சென்னை நகரமே விழாக்கோலம் கொண்டிருந்தது. வெளியூர்-களிலிருந்து ஜமீன்தார்களும், பிரபுக்களும் வந்திருந்தார்கள். ஆளுநர் மாளிகையில் தர்பார் ஒன்று நடந்தது. அதற்கு முன்பு சென்னை நகரில் இந்தியர்கள் வசித்து வந்த பகுதியை ‘ப்ளாக் டவுன்’ என்று ஆங்கிலேயர்கள் வழங்கி வந்தார்கள். அது பலருடைய உள்ளத்தை உறுத்திக்கொண்டிருந்தது. ஜார்ஜ் இளவரசர் வந்ததையொட்டி அதன் பெயரை ‘ஜார்ஜ் டவுன்’ என்று மாற்றி வழங்கலாயினர். அப்போது அறிஞர் பெருமக்களுக்குப் பலவகையான பட்டங்களும், சன்மானமும் அளிக்கப்பெற்றன. ஆசிரியப் பெருமானுக்குத் தங்கத் தோடா அணிவித்து மதிப்புச் செய்தனர். பாரதியார் பாடல் 1906-ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் ஆசிரியப் பெருமான் மகாமகோபாத்தியாயப் பட்டம் பெற்றதைப் பாராட்டி ஒரு கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்திற்குப் பாரதியார் வந்திருந்தார். அக்காலத்தில் சுப்பிரமணிய பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்தார். இந்த விழாவுக்கு வந்திருந்த அவர் மூன்று பாடல்களை எழுதி வாசித்தார். அங்கேயே ஒரு தாளில் அந்த மூன்று பாடல்களையும் ஒரு பென்சிலினால் எழுதினார்; அந்தத் தாளை நான் பார்த்திருக்கிறேன், அந்தப் பாடல்கள் வருமாறு : 1. செம்பரிதி ஒளிபெற்றான்; பைந்நறவு சுவை பெற்றுத் திகழ்ந்தது; ஆங்கண் உம்பரெலாம் இறவாமை பெற்றனரென்று எவரேகொல் உவத்தல் செய்வார்? கும்பமுனி யெனத்தோன்றும் சாமிநா தப்புலவன் குறைவில் கீர்த்தி பம்பலுறப் பெற்றனனேல், இதற்கென்கொல் பேருவகை படைக்கின் றீரே? 2. அன்னியர்கள் தமிழ்ச் செவ்வி அறியாதார் இன்றெம்மை ஆள்வோ ரேனும் பன்னியசீர் மகாமகோ பாத்தியா யப்பதவி பரிவின் ஈந்து பொன்னிலவு குடந்தை நகர்ச் சாமிநர் தன்றனக்குப் புகழ்செய் வாரேல் முன்னிவனப் பாண்டியர் நாள் இருந்திருப்பின் இவன் பெருமை மொழிய லாமோ? 3. நிதியறியோம், இவ்வுலகத் தொரு கோடி இன்பவகை நித்தம் துய்க்கும் கதியறியோம் என்று மனம் வருந்தற்க, குடந்தை நகர்க் கலைஞர் கோவே, பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயில் துதியறிவாய், அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய், இறப்பின்றித் துலங்கு வாயே. வீட்டை விலைக்கு வாங்கியது ஆசிரியருடன் கல்லூரியில் பழகி வந்த பேராசிரியர் ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார். தாம் தமிழில் மாணவர்களுக்காக ஒரு புத்தகம் எழுதி இருப்பதாகவும் அதைப் பார்த்து ஆசிரியப் பெருமான் திருத்திக் கொடுத்தால் உதவியாக இருக்கும் என்றும் சொன்னார். தமக்கு நேரம் இல்லாமையினால் தம் குமாரரைப் பார்த்துத் திருத்திக் கொடுக்கும்படியாகச் சொன்னார் ஆசிரியர். அது சம்பந்தமாக ஆசிரியர் வீட்டிற்கு அவர் அடிக்கடி வந்தார். ஒரு முறை ஆசிரியப் பெருமானிடம் அந்த வீட்டிற்கு வாடகை என்ன என்று கேட்டுத் தெரிந்து கொண்டார். பின்னர் அந்த வீட்டின் சொந்தக் காரரைப் போய்ப் பார்த்து, அந்த வீட்டை ஏன் அவ்வளவு குறைந்த வாடகைக்கு விட்டிருக்கிறீர்கள்? வேறு யாருக்காவது மாற்றிவிட்டால் அதிக வாடகை கிடைக்குமே!" என்று சொல்லி யிருக்கிறார். அந்த வீட்டின் சொந்தக்காரருக்கு ஆசிரியரிடம் மிகவும் மதிப்பு உண்டு. இதைக் கேட்டவுடன் அவருக்குக் கோபம் வந்து விட்டது. ஐயா, நான் அவரிடம் 20 ரூபாய் வாங்குவதே தவறு. என் கையிலிருந்து மாதம் 20 ரூபாய் கொடுத்து அவரை அந்த வீட்டில் குடியிருக்கச் சொல்ல வேண்டும். அவர் அவ்வளவு பெரியவர். அவர் குடியிருப்பதனால் தான் இன்றைக்கு என் வீடு ஒரு கோவில் மாதிரி இருக்கிறது. எத்தனையோ பெரியவர்கள் அவரைப் பார்ப்பதற்காக அந்த வீட்டிற்கு வருகிறார்கள். அவரே இடம் போதவில்லை என்று வேறு வீடு பார்த்துக் கொண்டு போனாலன்றி, நான் அவரை என் வீட்டிலிருத்து போகச் சொல்ல மாட் டேன்" என்று சொல்லிவிட்டார். அந்தப் பேராசிரியர் இன்னும் சில நாள் கழித்து அந்த வீட்டின் சொந்தக்காரரிடம் சென்று, “ஐயா, அந்த வீட்டிற்கு நல்ல விலை கிடைக்கும். அந்த வீடு சிறியதாக இருப்பதால் அதை நல்ல விலைக்குக் கொடுத்துவிட்டு, நீங்கள் வேறு ஓர் இடத்தில் பெரிய வீடாகக் கட்டலாமே” என்று சொன்னார். நான் அந்த வீட்டை விற்பது பற்றி இதுவரை யோசித்தது இல்லை. விற்கிற எண்ணம் வருகிறபோது உங்களுக்குச் சொல்லி அனுப்புகிறேன். இப்போது நீங்கள் போய் வாருங்கள்’ என்று அதன் சொந்தக்காரர் சொல்லிவிட்டார். எனினும் அந்தப் பேராசிரியர் சொன்னது அவரது மனத்தை உறுத்த ஆரம்பித்தது. ‘அந்த வீடு நமக்குச் சொந்தம் என்பதனால் தானே, இப்படிப் பலரும் பல விதமான எண்ணங்களை நம்மிடம் வந்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்? ஆசிரியருக்கே அந்த வீட்டை உரியதாக்கிவிட்டால் என்ன?’ என்று நினைக்கலானார். ஒரு நாள் ஆசிரியரிடமே வந்து, ’ஐயா, உங்களுக்கு வீடு வாங்கும் எண்ணம் உண்டா? அப்படி இருந்தால் நான் இந்த வீட்டை உங்களுக்கே மூவாயிரம் ரூபாய்க்குத் தருகிறேன்" என்று சொன்னார். அப்போது ஆசிரியருக்குக் கும்பகோணத்தில் ஒரு வீடு சொந்தமாக இருந்தது. சென்னையில் வீடு வாங்குவதைப்பற்றி இவர் நினைக்கவில்லை. எனவே வீட்டுக்காரர் கேட்டவுடன் தமக்கு வீடு வேண்டாம் என்று சொல்லிவிட்டார் . அடுத்த ஆண்டு அந்தப் பேராசிரியர் வேறு ஒருவர் மூலமாக அந்த வீட்டிற்கு 4,500 ரூபாய் விலை பேசி முன்பணம் கொடுக்க ஏற்பாடு செய்தார். அந்தச் செய்தியை ஆசிரியர் அறிந்தவுடன் மிக்க கவலை அடைந்தார். அந்த வீட்டில் இவர் வைத்திருந்த ஏட்டுச் சுவடிகளையும், புத்தகங்களையும் வேறு இடத்திற்குக் கொண்டு போக வேண்டுமே, புதிய இடம் அதற்கு வசதியாக அமையுமோ, அமையாதோ என்கிற குழப்பம் ஏற்பட்டது. ஒரு நாள் ஆசிரியர் தம் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது, அந்த வீட்டுக்காரருக்குத் தெரிந்த கணக்கப் பிள்ளை அத்தெரு வழியே போனார். ஆசிரியர் அவரை அழைத்து. "உங்கள் நண்பர் இந்த வீட்டை வேறு ஒருவருக்கு விற்க முன்பணம் வாங்கிவிட்டாராமே; என்னிடம் சொல்லியிருந்தால் நான் வாங்கிக் கொள்ளமாட்டேனா?’ என்று கேட்டார். “போன வருஷந்தான் உங்களிடம் சொன்னாராம். நீங்கள் வேண்டாம் என்றதால் வேறு இடத்தில் மனை வாங்கிப் பெரிய வீடாகக் கட்டிக்கொள்ள நினைக்கிறார் போலும் என்று எண்ணியதாகச் சொன்னார்” என்றார் கணக்கப்பிள்ளை. “அப்போது நான் அதைப்பற்றி நினைக்கவில்லை. இப்போது இதையே வாங்கிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அவர் பேசியுள்ள தொகைக்கு மேல் நூறு ரூபாய் தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது உதவி செய்கிறேன். எப்படியாவது இந்த வீட்டை எனக்கு வாங்கித் தாருங்கள்” என்று சொல்லி அனுப்பினார் ஆசிரியர். அன்று மாலையே கணக்கப்பிள்ளை வந்தார் . “உங்களுக்கு நல்ல சமாசாரம் கொண்டு வந்திருக்கிறேன். வீட்டுக்காரர் தாம் வாங்கிய முன்பணத்தை அவரிடமே கொடுத்து விட்டார். இந்த வீட்டை உங்களுக்கே சாசனம் செய்து கொடுப்பதற்கும் சம்மதித்து விட்டார்” என்றார். ஆசிரியருக்கு மிகவும் மகிழ்ச்சி உண்டாயிற்று. காரியம் இவ்வளவு எளிதில் முடியும் என்று அவர் நினைக்கவில்லை. கணக்கப் பிள்ளை சொன்னார் : “முதலிலிருந்தே வீட்டுக்காரருக்கு இந்த வீட்டை உங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதுதான் எண்ணம். நீங்கள் வேண்டாம் என்றவுடன் அவருக்கு மன வருத்தம் ஏற்பட்டது. திரும்ப நீங்கள் வாங்கிக்கொள்ள விரும்புவதாகச் சொன்னவுடன் அவர்கள் விக்கிரய பத்திரத்தில் போட்ட சில நிபந்தனைகளைச் சாக்காக வைத்து, அவற்றுக்கு நான் சம்மதிக்க மாட்டேன் என்று, வாங்கிய முன்பணத்தைக் கொடுத்துவிட்டார்” என்றார். ஒரு மாதத்திற்குப் பிறகு உரிய விலை கொடுத்து ஆசிரியர் தாம் குடியிருந்த அந்த வீட்டையே வாங்கினார். கும்பகோணம் கல்லூரியில் தாம் பார்த்து வந்த வேலையைத் தமக்குப் பண்ணி வைத்த தியாகராச செட்டியாரின் நினைவாக அந்த வீட்டிற்கு ‘தியாகராச விலாசம்’ என்ற பெயரைச் சூட்டினார். அது இன்றைக்கும் சிறப்பாக விளங்குகிறது. பழைய திருவிளையாடல் 1906-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வேம்பத்தூரார் திருவிளை யாடற் புராணம் என்கிற நூலை அரும்பத உரையோடும், வேறு பல ஆராய்ச்சிக் குறிப்புகளோடும் ஆசிரியர் வெளியிட்டார். அதற்குப் பாண்டித்துரைத் தேவர் ஓரளவு பொருளுதவி செய்தார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் மூலமாக வெளிவந்து கொண்டிருந்த செந்தமிழ்ப் பத்திரிகையில் ஆசிரியர் தொடர்ந்து கட்டுரை எழுதி வரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். பண்டைத் தமிழ் நூல்களை ஆராய்வதற்கே நேரம் போதுமான தாக இல்லாமல் இருந்ததனால் வேறு பணி எதையும் தம்மால் செய்ய முடியாமல் இருப்பதாக ஆசிரியர் தெரிவித்தார். தங்கள் கட்டுரை இருந்தால் தான் பத்திரிகைக்கே மதிப்பு உண்டாகும். தங்கள் விருப்பம் எப்படியோ அந்த வகையில் செய்யுங்கள்" என்று பாண்டித்துரைத் தேவர் மீண்டும் வற்புறுத்தினார். பிற நூல்களின் வெளியீடு அதனால் தாம் ஆராய்ந்து கொண்டிருந்த பண்டைத் தமிழ் நூல் எதையேனும் செந்தமிழ்ப் பத்திரிகையில் தொடர்ந்து பதிப் பித்து வரலாம் என்ற எண்ணம் ஆசிரியருக்கு உண்டாயிற்று. அதன்படி, திருவாரூர் உலா ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பகுதி யாகச் செந்தமிழில் வெளிவரச் செய்தார். 1905-ஆம் ஆண்டு அந்த நூல் நிறைவேறியது. பிள்ளையவர்கள் பாடியிருந்த தனியூர்ப் புராணத்தை வெளி யிட்டார். பின்னர் மண்ணிப்படிக்கரைப் புராணம் வெளியாயிற்று. அதுவும் மீனாட்சி சுந்தரம்பிள்ளை இயற்றியதுதான். சீவக சிந்தா மணியின் இரண்டாம் பதிப்பு 1907-ஆம் வருடம் நடைபெற்று வந்தது. முதல் பதிப்பைவிடப் பல புதிய செய்திகளை - அதில் சேர்த்தார். அந்த ஆண்டு டிசம்பர் மாதம் அது நிறைவேறியது. வ. உ. சிதம்பரம் பிள்ளையின் கடிதம் 1908-ஆம் ஆண்டு ஆசிரியருக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தின் மேலே சிறை அதிகாரிகள் தணிக்கை செய்திருந்த குறிப்பு இருந்தது. சிறையிலிருந்து யார் எழுதியிருப்பார்கள் என்று எண்ணி ஆசிரியர் அதைப் பிரித்துப் பார்த்தார். கப்பலோட்டிய தமிழராகிய வ. உ. சிதம்பரம் பிள்ளை கோயம் புத்தூர்ச் சிறையில் அப்போது இருந்தார். அவரே அந்தக் கடிதத்தை 14-9-1908-ஆம் தேதி எழுதியிருந்தார். அவர் திருக் குறளைச் சிறையில் ஆராய்ச்சி செய்துவந்தார். தாம் திருக்குறள் ஆராய்ச்சி செய்து வருவது பற்றியும், அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வருவது பற்றியும் குறித்திருந்தார். அதில் தமக்கு ஏற் பட்டுள்ள ஐயங்கள் சிலவற்றை எழுதி அவற்றை விளக்க வேண்டு மென்று கேட்டிருந்தார். ஆசிரியப் பெருமானும் தக்க விடைகளை எழுதி அனுப்பினார். அச்சகம் வாங்க விரும்பாமை ஆசிரியர் புத்தகங்களை அச்சிடுவதற்குப் பல அச்சகங்களை நம்பித் தொல்லைப்பட்டு வருவதை அறிந்து திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர் அந்த வகையில் ஆசிரியருக்கு ஏதாவது உதவி புரிய வேண்டுமென்று நினைத்தார். ஆசிரியப் பெருமானே சொந்தத்தில் ஓர் அச்சகத்தை வைத்துக் கொண்டால் நலமாக இருக்கும் என்று எண்ணினார். ஒருமுறை திருவாவடுதுறைக்கு ஆசிரியர் சென்றிருந்தார். “பிற அச்சகங்களை நம்பிப் புத்தகங்களைக் கொடுத்துத் தொல்லைப் படுகிறீர்கள். நீங்களே ஓர் அச்சகத்தை வைத்துக்கொண்டால் புத்தகங்களை வெளியிடுவதற்கு உதவியாக இருக்கும். ஐயாயிரம் ரூபாயை நாம் உங்களுக்குத் தருகிறோம். அதை வைத்துக்கொண்டு அச்சகத்தை ஆரம்பித்தால் விரைவில் பல நூல்களை நீங்கள் வெளி யிடலாம்” என்றார். ஆசிரியர் உடனே பதில் சொல்லவில்லை. “நாளைக்குப் பதில் சொல்கிறேன்” என்று வந்துவிட்டார். மறுநாள் சென்றபோது, “சந்நிதானத்திற்கு என்னிடம் இருக்கும் பேரன்பை நான் உணர்கிறேன். வெளி அச்சகத்தை நம்பி நூல்களை வெளியிடுவதில் பல தொல்லைகளுக்கு நான் ஆளாகிறேன் என்பது உண்மைதான். ஆனால் இப்போது புத்தகத்திற்கு வேண்டிய காகிதம், பைண்டுச் சாதனங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு மட்டும் கவலைப்பட வேண்டியிருக்கிறது. அச்சகத்தை வைத்து நடத்த ஆரம்பித்தால் ஆட்களை வைத்து, சம்பளம் கொடுத்து நிர்வாகம் செய்தாக வேண்டிய பெருந் தொல்லைகளும் சேர்ந்து கொள்ளும். நூல் ஆராய்ச்சிக்கு நேரம் கிடைக்குமா என்பது சந்தேகம். ஆகையால் சந்நிதானத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதற்கு மன்னிக்கவேண்டும்” என்று சொன்னார். அதன்மேல் ஆதீன கர்த்தர் அந்தக் கருத்தை வற்புறுத்தவில்லை. ஆசிரியப் பெருமானுக்கு எட்டுத் தொகையில் ஒன்றாகிய அக நானூற்றைப் பதிப்பிக்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. அதை ஆராய்ந்து கொண்டிருந்தார். அப்போது வேறு சிலர் அதைப் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெரிந்தது. பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் அதைப் பதிப்பிக்க முயன்றார். ஆனால் கடைசியில் ரா. இராகவையங்காருடைய உதவியினால் வேறு ஒருவர் அதைப் பதிப்பித்துவிட்டார். மற்றவர் பதிப்பித்த நூலைப் பதிப்பிப்பது ஆசிரியர் வழக்கமன்று. ஆதலால் அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டார். கார்மைகேல் சந்திப்பு ஒரு சமயம் சிலா சாசன அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் ஆளுநர் தம்பதிகளைத் தம்முடைய அலுவலகத்திற்கு அழைத்தார் கள். அப்போது கவர்னராக இருந்தவர் கார்மைகேல் பிரபு . அந்தக் காரியாலயத்தில் பழைய விக்கிரகங்கள் பல இருந்தன. அந்த விக்கிரகங்களைப்-பற்றிக் கவர்னர் ஏதாவது கேட்டால் தக்கபடி பதில் சொல்ல வேண்டுமே என்ற எண்ணம் அலுவலகத் தலைவருக்கு எழுந்தது. எனவே, அந்த நேரம் ஆசிரியப் பெருமான் அங்கு இருந் தால் அவர் எல்லா விவரங்களையும் தெரிவிப்பார் என்று எண்ணி ஆசிரியரிடம் வந்து தம் கருத்தைத் தெரிவித்தார். ஆசிரியப் பெருமான் வருவதாக ஒப்புக்கொண்டார். அதேபோல் ஆளுநர் தம்பதிகள் சிலா சாசன அலுவலத்திற்கு விஜயம் செய்த நாள் அன்று ஆசிரியப் பெருமானும் அவர்களுடனே இருந்து அங்குள்ள விக்கிரகங்களைப்பற்றிய செய்திகளை எடுத்துச் சொன்னார். ஒருவர் அவர்களுக்கு அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்னார். இந்த விவரங்களை எல்லாம் கேட்டு ஆளுநர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அப்போது ஆளுநர் தம்பதிகளைப் படம் எடுக்க வேண்டுமென்று எண்ணினார்கள். பங்களாவின் முன்புறத்தில் படம் எடுக்க முயற்சி நடந்தது. ஆளுநர் தம்பதிகள் அமர்வதற்கு இரண்டு நாற்காலிகள், மற்றும் இரண்டு நாற்காலிகள் இருந்தன. அப்போது ஆளுநர் சுற்றுமுற்றும் பார்த்தார் . “எனக்கு விவரங்களைச் சொன்ன பண்டிதர் எங்கே? அவரையும் அழைத்துவந்து இங்கே உட்கார வையுங்கள். நான் அவருடன் சேர்ந்து படம் எடுத்துக் கொள்ளவேண்டும்” என்று சொன்னார். வேறு ஒரு நாற்காலி கொண்டுவந்து போடப்பெற்று. ஆசிரியர் வந்து உட் கார்ந்தவுடன் போட்டோ எடுத்தார்கள். திருக்காளத்திப் புராணம் 1912-ஆம் வருடம் மெ. அரு. நா. இராமநாதன் செட்டியார் சகோதரர்கள் காளஹஸ்தியில் கும்பாபிஷேகத்தை மிகவும் சிறப்பாக நடத்தினார்கள். சிவப்பிரகாசர் எழுதிய சீகாளத்திப்புராணம் மாத்திரம் முன்பு இருந்தது. ஆசிரியர் திருக்காளத்திப் புராணம் என்ற நூலை ஆராய்ந்து வைத்திருந்தார். கும்பாபிஷேகம் செய்த செட்டியார் அந்தத் தல சம்பந்தமான ஏதாவது புதியதொரு நூலை வெளியிடலாம் என்று நினைத்தார். ஆசிரியப் பெருமானும் திருக்காளத்திப் புராணம் தம்மிடம் இருப்பதாகவும் அதை வெளி யிட்டால் நலம் என்றும் சொன்னார். அவ்வாறு செய்யலாம் என்று செட்டியார் இசைந்தார். ஆசிரியர் கண்ணப்ப நாயனாரைப்பற்றித் தமிழ் நூல்களில் என்ன என்ன கருத்துக்கள் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் தொகுத்தார். எல்லாவற்றையும் சேர்த்துத் திருக்காளத்திப் புராணப் பதிப்பில் சேர்த்தார். 1912-ஆம் வருடம் ஏப்ரல் மாதம் அந்த நூல் அச்சாயிற்று. கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. ஆசிரியர் அந்த நூலை அந்தத் தலத்தில் அரங்கேற்றினார். 1915-ஆம் வருடம் பிப்ரவரி மாதம் ஆசிரியப் பெருமானுக்கு 60-ஆவது ஆண்டு நிறைவேறியது. சஷ்டியப்த பூர்த்தியை நல்ல முறையில் நடத்த வேண்டுமென்று பல அன்பர்கள் விரும்பினார்கள். ஆனால் ஆசிரியருக்கு அதில் விருப்பம் இல்லை. திருக்காளத்தி சென்று இரண்டு மூன்று நாட்கள் அங்கே தங்கி இறைவனைத் தரிசித்துக் கொண்டு வந்தார். 1917-ஆம் ஆண்டு மே மாதம் ஆசிரியருடைய மனைவியார் இறைவன் திருவடியை அடைந்தார். காசியிலுள்ள ‘பாரத தர்ம மகா மண்டலம்’ என்ற சபையினர் ஆசிரியர் செய்து வரும் தமிழ்த் தொண்டை அறிந்து அவருக்கு ஏதாவதொரு விருது கொடுக்க வேண்டுமென்று எண்ணினார்கள். ‘திராவிட வித்யா பூஷணம்’ என்ற பட்டத்தை வழங்கினார்கள். பரிபாடல் வெளியீடு சங்க நூல்களில் பரிபாடல் என்ற தொகை நூல் ஒன்று உண்டு. உரையாசிரியர் கொடுத்துள்ள விவரங்களிலிருந்து அதில் 70 பாடல்கள் இருந்தனவாகத் தெரிய வருகிறது. அந்த 70 பாடல்களும் கிடைக்கவில்லை. அதற்குப் பரிமேலழகர் உரை இருந்தது. பல இடங்களில் தேடியும் எல்லாப் பரிபாடல்களும் அடங்கிய சுவடியே கிடைக்கவில்லை. கிடைத்த ஒன்றை வைத்துக்கொண்டு ஆராய்ந்து, ஒருவகையாகச் செப்பம் செய்து 1918-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அந்த நூலை வெளியிட்டார். வேலையிலிருந்து ஓய்வு பெறுதல் 1919-ஆம் ஆண்டு ஆசிரியர் சென்னை மாநிலக் கல்லூரியிலிருந்து ஓய்வு பெற்றார். இவர் தொடர்ந்து இன்னும் சில ஆண்டுகள் இருக்க வேண்டுமென்று பலரும் விரும்பினாலும் ஆசிரியர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டார். கல்லூரி முதல்வரிடம் விடைபெற்றுக்கொள்ளும் போது, “இதுவரை இந்தக் கல்லூரியில் சிறந்த தமிழாசிரியர்கள் இருந்து வந்ததுபோலப் பின்னும் திறமை வாய்ந்த நல்லவர் ஒருவர் நியமிக்கப் பெறுதல் வேண்டும்” என்று தெரிவித்துக் கொண்டார். உடனே முதல்வர், “தாங்களே அப்படி ஒருவரைத் தேர்ந்தெடுத்துத் தரவேண்டும்” என்று சொல்ல , ஆசிரியர் இ. வை. அனந்தராமையர் பெயரைத் தெரிவித்தார். ஆசிரியர் விருப்பப்படி அவரையே சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ் ஆசிரிய ராக ஆக்கினார்கள். தாகூர் தரிசனம் 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி மகாகவி ரவீந்திரநாத் தாகூர் சென்னைக்கு வந்திருந்தார். அவர் டி. எஸ். இராமசாமி ஐயருடைய இல்லத்தில் தங்கியிருந்தார். அவரைப் பார்க்க ஆசிரியர் அங்கே சென்றிருந்தார். ஆசிரியரைப்பற்றித் தாகூருக்கு எடுத்துக் கூறினார்கள். ஆசிரியர் பதிப்பித்த நூல்களை எல்லாம் பார்த்து வியந்து “இவற்றை எல்லாம் நீங்கள் எப்படிப் பதிப்பித்தீர்கள்?” என்று தாகூர் கேட்டார். “தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளுக்-கெல்லாம் சென்று தேடி ஓலைச் சுவடிகளை எடுத்து வந்து, அவற்றை ஆராய்ந்து செப்பம் செய்து கடிதப் பிரதி எடுத்துப் பதிப்பித்து வருகிறேன்” என்று இவர் தெரிவித்தார். ஆசிரியர் சொல்வதை எல்லாம் கேட்டு மிகவும் வியப்படைந்த மகாகவி, “நான் உங்கள் வீட்டிற்கு வந்து பார்க்கிறேன்” என்று தெரிவித்தார். அவ்வாறு அன்று மாலையே தியாகராஜ விலாசத்திற்கு வந்து, அங்கிருந்த ஏட்டுச் சுவடிகளையும், கடிதப் பிரதிகளையும் பார்த்து வியந்தார். ஏட்டுச் சுவடியில் எப்படி எழுதுவது என்பதையும் ஆசிரியர் அவருக்கு எழுதிக் காட்டினார். ரவீந்திரர் ஆசிரியப் பெருமான் வீட்டிற்கு வந்ததைப் பார்த்துப் பலரும் வியந்தார்கள், ஆசிரியப் பெரு மானைத் தெரியாதவர் கூட இவர் மிகவும் பெரியவர் என்று தெரிந்து வணங்கினார்கள். திருவாவடுதுறை வாசம் 15-4-1920 அன்று திருவாவடுதுறை அம்பலவாண தேசிகர் பரிபூரணம் அடைந்தார். காறுபாறாக இருந்த வைத்தியநாதத் தம்பிரான், சுப்பிரமணிய தேசிகர் என்ற திருநாமத்துடன் ஆதீனத் தலைவர் ஆனார். அவருக்கு எதிராகச் சிலபேர் வழக்குகள் தொடுத்தார்கள். அப்போது ஆசிரியப் பெருமான் தம்முடன் இருக்க வேண்டுமென்று ஆதீனத் தலைவர் விரும்பினார். அவர் விருப்பப்படியே 1920-ஆம் ஆண்டு முதல் ஆசிரியப் பெருமான் திருவாவடு துறை சென்று சில காலம் தங்கினார். அப்போது மடத்திலிருந்த சுவடிகளையும், அச்சிட்ட புத்தகங்களையும் ஒழுங்குபடுத்தி அடுக்கி வைக்கச் செய்தார். அங்கே ஒரு பாடசாலையைத் தொடங்கிப் பல மாணவர்களுக்குப் பாடம் சொல்லி வந்தார். மடத்திற்கு வருகிறவர்கள் எல்லாம் அந்தப் பாடசாலைக்கும் வந்து ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுக்கும் முறையைக் கேட்டு மகிழ்ந்தார்கள். 1922-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ஆம் தேதி வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு விஜயம் செய்தார். அப்போது தமிழிலும், வட மொழியிலும் சிறந்து விளங்கும் புலவர்களைக் கௌரவிக்க வேண்டுமென்று அரசினர் நினைத்தார்கள். ஆசிரியப் பெருமானுக்கும் ஒரு கிலத் கிடைத்தது. அந்தக் கிலத்தை வாங்கிக்கொள் வதற்காகச் சென்னைக்கு வந்த ஆசிரியப் பெருமான் இங்கே சில நாட்கள் தங்கி, பின்பு மீண்டும் திருவாவடுதுறை அடைந்தார். அங்கே ஆதீனத் தலைவராக இருந்த சுப்பிரமணிய தேசிகருக்கு உடல் நிலை மிக்க கவலைக்கிடமாயிற்று. 1922-ஆம் ஆண்டில் பரிபூரணம் அடைந்தார். அதன் பிறகு வைத்தியலிங்க தேசிகர் ஆதீனத் தலைவராக அமர்ந்தார். திருவாவடுதுறையில் தம் ஆராய்ச்சி வேலை வேகமாக நடைபெறாததை அறிந்து, ஆசிரியர் ஆதீனத் தலைவரிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லிச் சென்னைக்கே வந்து சேர்ந்தார். பெருங்கதைப் பதிப்பு ஆசிரியப் பெருமான் தேடித் தொகுத்திருந்த சுவடிகளில் பெருங்கதை என்ற ஒன்று இருந்தது. கொங்குவேள் மாக்கதை என்றும் அது வழங்கும். அது முதலும் , முடிவும் இல்லாமல் இருந் தது. பல இடங்களுக்குச் சென்று தேடியும் முழு நூலும் கிடைக்க வில்லை. கிடைத்ததை ஒருவாறு செப்பம் செய்து பதிப்பிக்க வேண்டுமென்று ஆசிரியர் எண்ணினார். அதைப் பதிப்பிக்க ஆசிரியர் எண்ணியிருப்பதை அறிந்து பலர் அதைப் பற்றி விசாரித்தார்கள். ஒருவர் பெருங்கதை முழுவதும் தம்மிடம் இருப்பதாகச் சொல்லி, அதை அனுப்பிவைப்பதாகப் பணம் வாங்கிப் போனார். பல நாட்கள் சென்றன. அவர் அனுப்பவில்லை. வடமொழியில் பிரகத்சம்கிதா என்றிருந்த நூலை வடமொழி வல்லுநர்களைக் கொண்டு ஆராயச் சொல்லி, கருத்துக்களை அறிந்து கொண்டு, அவற்றிலிருந்த செய்திகளைத் தொடர்புபடுத்திக்கொண்டு, முழுவதுமாக இல்லாமல் இருந்த அந்த நூலை அச்சுக்குக் கொடுத் தார். அந்தப் பெருங் கதைப் பதிப்பு 1924-ஆம் ஆண்டு வெளியா யிற்று. அதன் பதிப்பு வேலை ஐந்து ஆண்டுகள் நடந்தது. இவ்வளவு நீண்ட காலம் எந்தப் புத்தகத்திற்கும் ஆசிரியர் செல வழித்தது இல்லை. மீனாட்சி தமிழ்க் கல்லூரியில் முதல்வராதல் 1924-ஆம் ஆண்டு சிதம்பரத்தில் ராஜா அண்ணாமலை செட்டியார் ஒரு தமிழ்க் கல்லூரியையும், ஒரு வடமொழிக் கல்லூரியையும் தொடங்க எண்ணினார். தமிழ்க் கல்லூரிக்குத் தக்க ஒருவரை முதல்வராக நியமிக்க வேண்டுமென்று எண்ணியபோது ஆசிரியப் பெருமான் நினைவு வந்தது. சில பேரை ஆசிரியப் பெருமானிடம் அனுப்பி எப்படியாவது இந்தப் பதவியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். ராஜா அண்ணாமலை செட்டியாரே நேரில் வந்தும் தம் விருப்பத்தைத் தெரிவித்தார். சிதம்பரம் சென்றால் நாள்தோறும் நடராஜப் பெருமானைத் தரிசிக்கலாம் என்று நினைந்து அப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள ஆசிரியர் இசைந்தார். சிதம்பரம் தீட்சிதர்கள் எல்லோரும் ஆசிரியப் பெருமான் அங்கு வருவதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார்கள். 1924-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆசிரியர் சிதம்பரம் சென்றார். இவர் அங்கே தங்குவதற்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தனர். முதலில் இவர் தங்கியிருந்த இல்லத்திலேயே மீனாட்சி தமிழ்க் கல்லூரி ஆரம்பமாகியது. அப்போது மீனாட்சி கலைக் கல்லூரி முதல்வராக நீலகண்ட சாஸ்திரியார் இருந்தார். அவரும் ஆசிரியப் பெருமானுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்தார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 24-வது ஆண்டு விழா 1925-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8-ஆம் தேதி நடந்தது. அவ்விழாவுக்கு சி. பி. இராமசாமி ஐயர் தலைமை தாங்கினார். தமிழ்ச் சங்கத்தின் அழைப்புக்கிணங்க முன்கூட்டியே ஆசிரியப் பெருமான் மதுரை அடைந்தார். தாக்ஷிணாத்ய கலாநிதிப் பட்டம் இவர் செய்து வரும் தமிழ்த் தொண்டுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டுமென்று மதுரையில் வக்கீலாக இருந்த டி.ஸி. சீனிவாசையங்கார் நினைத்தார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக அவர் அப்போது இருந்தார். அந்த விழாவில் ஆசிரியருக்கு ஒரு பொற்கிழி வழங்கினார்கள். அதே சமயத்தில் காஞ்சி காமகோடி சங்கராசாரிய சுவாமிகள் ஆசிரியருக்கு இரட்டைச் சால்வையும், தோடாவும் அனுப்பிக் கௌரவித்தார்கள்; ‘தாக்ஷிணாத்ய கலாநிதி’ என்னும் பட்டத்தையும் அளிக்க ஏற்பாடு செய்தார்கள். ஆசிரியர் தாம் பதிப்பித்த தன்னூல் - சங்கர நமச்சிவாயர் உரை நூலின் முகவுரையில் பொற்கிழி அளிக்க உதவிய அத்தனை பேர்களுடைய பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். சிதம்பரத்தில் தமிழ்க் கல்லூரி முதல்வராக ஆசிரியர் இருந்த காலத்தில், கல்லூரியில் பாடம் சொன்ன நேரம் போக மற்ற நேரங்களில் நூலாராய்ச்சியிலேயே ஈடுபட்டார். தக்கயாகப் பரணியைப் பதிப்பிக்கவேண்டுமென்பது இவர் எண்ணம். நூலை விட அதன் உரையின் மதிப்பு அதிகமாக இருந்தது. அந்த உரை யின் பதிப்பு வெளிவருவது மிகவும் பயனுடையதாக இருக்கும் என்று ஆசிரியர் அதனை ஆராய்ந்து வந்தார். சென்னை வருகை சில காலமாக ஆசிரியருக்கு உடல் நலம் சரியில்லாமையினால் சிதம்பரம் கல்லூரிப் பணியை விட்டுவிட்டுப் போகவேண்டுமென்ற எண்ணம் இருந்து வந்தது. வயிற்றில் அடிக்கடி வலி உண்டா யிற்று. உணவு ஜீரணம் ஆகவில்லை. எனவே, கல்லூரியிலிருந்து விலக விரும்புவதாக அண்ணாமலை செட்டியாருக்குத் தெரிவித்தார். அவர், “அந்தப் பதவிக்கு யாரை நியமிக்கலாம் என்று தோன்று கிறதோ அவரை நியமித்துவிட்டு, உங்கள் விருப்பப்படி செய்யலாம்” என்று தெரிவித்தார் . தமக்கு அடுத்தபடி மீனாட்சி கல்லூரியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பொன்னோதுவார் என்பவரை முதல்வராக நியமிக்க ஏற்பாடு செய்துவிட்டு ஆசிரியர் அங்கிருந்து விலகிக்கொண்டார். நான் ஆசிரியரை அடைந்தது சேந்தமங்கலம் என்ற ஊரில் நான் சிலருக்குத் தமிழ்ப் பாடம் சொல்லிக்கொண்டு தங்கியிருந்தேன். அப்போது நிஜானந்த சரஸ்வதி என்னும் துறவி, நான் தமிழில் செய்யுள் எழுதுவதைப் பார்த்து, “நீங்கள் ஐயரவர்களிடம் சென்றால் நன்றாகத் தமிழ் படிக்கலாம்” என்று சொன்னார். சேந்தமங்கலம் மிட்டாதாராக இருந்த ஐராவத உடையாருக்கும், அவ்வாறு செய்வது நலம் என்று தோன்றியது. 1927-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வடலூருக்குச் சென்று அப்படியே சிதம்பரம் போய் ஆசிரியர் அவர்களைப் பார்த்துவர எண்ணினோம். அவ்வாறே நாங்கள் யாவரும் வடலூர் சென்று தைப் பூசத்தைத் தரிசித்துக்கொண்டு சிதம்பரம் சென்றோம். ஆசிரியரைப் பார்த்தோம். அப்போது நான் சட்டை அணிவதில்லை. கழுத்தில் ருத்திராட்சத்துடன் நெற்றியில் விபூதி பூசிக்கொண்டிருந்தேன். என்னைப் பார்த்தவுடன் ஒரு வகையான அன்பு ஆசிரியருக்கு உண்டாயிற்று. “இவர் நன்றாகக் கவிதை பாடுவார். தமிழில் நன்றாகப் பேசுவார். உங்களிடம் இருந்து பாடம் கேட்க விரும்புகிறார்” என என்னுடன் வந்தவர்கள் சொன்னார்கள். அப்போது ஆசிரியர் பிள்ளையவர்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார் . பாடம் கேட்கப் பலரும் அவரிடம் வந்ததையும், இடையிலே சென்றுவிட்டதையும் சொன்னார். "நான் இப்போது கல்லூரியிலிருந்து விலகிச் சென்னைக்கே போக இருக்கிறேன். கல்லூரியில் சேர்ந்து படிக்க விருப்பமா? அல்லது என்னிடம் இருந்து படிக்க விருப்பமா? ’ என்று கேட்டார். அவரிடம் இருந்தே படிக்க விரும்புவதாக நான் சொன்னேன். உடனே ஏதாவது ஒரு பாடலைச் சொல்லும்படி சொன்னார். நான் ஒரு கம்ப ராமாயணப் பாடலைச் சொன்னேன். அதில் உள்ள நயம் என்ன என்று கேட்டார். அதையும் எடுத்துச் சொன்னேன். அதைக் கேட்ட ஆசிரியர் உள்ளத்திலே பேருவகை ஏற்பட்டிருக்க வேண்டும். “உணவுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டு சென்னைக்கு வந்தால் என்னிடம் பாடம் கேட்கலாம்” என்று சொன்னார். 1927-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10-ஆம் தேதி ஆசிரியப் பெருமான் சிதம்பரத்திலிருந்து சென்னைக்குத் திரும்பினார். இவர் பிரிவை எண்ணிப் பலர் வருந்தினார்கள், வழியனுப்பு விழா நடத்தினர். பல்கலைக் கழகத்தில் பேச்சு சென்னைக்கு வந்தவுடன் பல்கலைக் கழகத்திலிருந்து பத்து நாட்கள் பழைய நூல்களைப் பற்றிப் பேசவேண்டுமென்று ஆசிரியருக்கு அழைப்பு வந்தது. 1827-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ஆம் தேதி முதல் ஐந்து நாட்களும், டிசம்பர் மாதம் 6-ஆம் தேதியிலிருந்து ஐந்து நாட்களும் அந்தச் சொற்பொழிவுகள் பல்கலைக் கழகச் செனட் மண்டபத்தில் நடைபெற்றன. அந்தச் சொற்பொழிவுக்காகப் பல்கலைக் கழகத்தார் 500 ரூபாய் வழங்கினர். அதுவரைக்கும் மண்ணெண்ணெய் விளக்கில் பணி செய்து கொண்டிருந்த ஆசிரியர் அந்தப் பணத்தைக் கொண்டு தியாகராச விலாசத்திற்கு மின்சார விளக்குப் போடச் செய்தார். கார்த்திகைத் தினத்தன்று மின்சாரத் தொடர்பு கிடைத்தது நல்ல சகுனமாக ஆசிரியப் பெருமானுக்குத் தோன்றியது. நான் மாணவனாகச் சேர்ந்தது 1927 - ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் அகில இந்தியக் காங்கிரஸ் மாநாடு டாக்டர் அன்சாரி தலைமையில் சென்னையில் நடந்தது. அப்போது சேந்தமங்கலம் ஐராவத உடையார் என்னையும் அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்தார். தியாகராச விலாசம் சென்று ஆசிரியரைப் பார்த்தேன். அவரிடமே தங்கிப் பாடம் கேட்கும் விருப்பத்தைச் சொன்னேன். ஆசிரியப் பெருமான் என்னை ஏற்றுக்கொண்டார். உடல் நலம் இல்லாமை யினால் அப்போது ஆசிரியர் எந்தப் பதிப்பு வேலையையும் செய்யவில்லை. நான் நாள்தோறும் 300, 400 பாடல்கள் பாடம் கேட்டேன். முதலில் திருவிளையாடல் புராணத்தைப் பாடம் கேட்டேன். பாடம் சொல்லும் போது பல நுட்பமான நயங்களை எடுத்துக் காட்டுவார். அரிய செய்திகளை எடுத்துச் சொல்வார். பிள்ளையவர்களைப் பற்றி மனம் நெகிழ எடுத்துரைப்பார். பிள்ளையவர்கள் விரைவில் கவிதை பாடியதைப்பற்றிச் சொல்லும் போது எனக்கு வியப்பு உண்டாயிற்று. சங்க நூல்களை எல்லாம் பதிப்பித்து, தமிழில் ஒரு புதிய மறுமலர்ச்சியை உண்டாக்கிய ஆசிரியப் பெருமான் அவர்கள், அந்த நூல்களைப்பற்றி எதுவுமே தெரிந்திராத தம் ஆசிரியரைப் பற்றி, தம்முடைய முதுமைப் பிராயத்திலும் மிகவும் பக்தியோடு எண்ணிப் பேசுவதை அறிந்து நான் மிகவும் மன நெகிழ்ச்சி அடைந்தேன் . ஞானாசிரியரிடம் கூட ஒரு மாணாக்கருக்கு இவ்வளவு பக்தி இருப்பதில்லை . ஆசிரியப் பெருமானுக்குப் பிள்ளையவர்களிட மிருந்த பக்திக்கு வேறு உவமை எதுவும் சொல்ல முடியாது. அந்தாதிகள், கோவைகள், உலாக்கள் முதலிய பிரபந்தங்களை எல்லாம் நான் இவரிடம் வரிசையாகப் பாடம் கேட்டேன். வேறு நூற்பதிப்புகள் அந்தக் காலத்தில் மாயூரநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அந்தக் கும்பாபிஷேகப் பத்திரிகையை நல்ல முறையில் அச்சிட வேண்டும் என்று திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் விரும் பினார். நான் அப்போது ஆசிரியருடன் அங்கே போயிருந்தேன். அதன் பிறகு மாயூரம் சம்பந்தமாக மயிலைத் திரிபந்தாதி என்னும் நூலை ஆசிரியர் வெளியிட்டார் சிறிய நூலாக இருந்தாலும் அதில் முகவுரை முதலியன சிறப்பாக அமைந்தன. திருப்பனந்தாளில் அப்போது காசிவாசி சொக்கலிங்கத் தம்பிரான் காசி மடத்தின் தலைவராக இருந்தார். அவருடைய இளவரசாகச் சாமிநாதத் தம்பிரான் இருந்தார் . அவர் நன்றாகப் படித்தவர். கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர் பரம்பரையில் வந்தவர். அவர் ஒருமுறை சென்னைக்கு வந்து சேத்துப்பட்டில் தங்கியிருந்தார். ஆசிரியப் பெருமான் அவரைப் போய்ப் பார்த்த போது சிவக்கொழுந்து தேசிகர் பாடல்களைப் பற்றிய பேச்சு எழுவது உண்டு. அவருடைய நூல்களை ஆசிரியப் பெருமான் பதிப் பித்தால் தமிழ் உலகத்திற்கு மிகவும் பயன்படும் என்று அவர் சொன்னார். அப்படியே செய்வதாக ஆசிரியப் பெருமான் ஒப்புக் கொண்டார். தமிழ்விடு தூதும் பிற நூல்களும் தமிழ்விடு தூது என்னும் நூலை ஆசிரியர் ஆராய்ந்து வந்தார். தமிழின் பெருமையை மிகச் சிறப்பாகச் சொல்கிற நூல் அது. அதை வெளியிட வேண்டுமென்ற எண்ணம் ஆசிரியருக்கு இருந்தது. அதில் பல திருவிளக்குகளைப் பற்றிய செய்திகள் வருகின்றன. அவற்றைப் பற்றியெல்லாம் மாயூரநாதர் கும்பாபிஷேகத்திற்குச் சென்றிருந்தபோது அங்கு வந்திருந்த சிவசாரியார்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார். அந்தத் தமிழ்விடு தூதில் இருந்த ஒரு கண்ணி ஆசிரியப் பெருமான் உள்ளத்தை மிகவும் கவர்ந்தது. ‘இருந்தமிழே உன்னால் இருந்தேன்; இமையோர் விருந்தமிழ்த மென்றாலும் வேண்டேன்’ என்ற கண்ணிதான் அது. திருத்தணிகைப் புராணம், கந்தபுராணம் ஆகியவற்றை இயற்றிய கச்சியப்ப முனிவர் மிகப் பெரும் புலவர். சிவஞான முனிவருடைய மாணாக்கர். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு அந்த முனிவரிடம் மிகவும் பக்தி. ‘இறைவன் என் முன்னால் தோன்றி என்ன வேண்டுமென்று கேட்டால், கச்சியப்ப முனிவரை ஒரே ஒருமுறை தரிசனம் பண்ண-வேண்டுமென்று கேட்பேன்’ என்று அந்தப் புலவர் பெருமான் சொல்வாராம். அந்த முனிவர் இயற்றிய கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டு விடு தூது என்னும் நூலை விரிவான வகையில் வெளியிட வேண்டுமென்று ஆசிரியர் ஆராய்ச்சி செய்து வந்தார். தக்கயாகப் பரணி 1930-ஆம் ஆண்டு தக்கயாகப் பரணி அச்சிட்டு வெளி வந்தது. அதில் பலவகையான ஆராய்ச்சிகளை அமைத்திருந்தார். ஒரு சிறிய நூலுக்கு இவ்வளவு பெரிய ஆராய்ச்சியா என்று பலரும் வியந் தார்கள். பிள்ளையவர்கள் சரித்திரம் 1930-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒருநாள் மாடியில் படுத்திருந்த ஆசிரியர் எழுந்திருந்து கீழே இறங்கி வந்தார். வரும் போது கீழே இருந்த கதவு தடுக்கி விழுந்துவிட்டார். காலில் நன்றாக அடிப்பட்டு வீங்கிவிட்டது. அவரது வீட்டிற்கு அருகில் இருந்த டாக்டர் வந்து பார்த்தார். குணமாகவில்லை. பிறகு மிகச் சிறந்த டாக்டராகிய ரங்காசாரியாரை அழைத்து வந்தார்கள். அவர் ஆசிரியருக்கு வீட்டிலேயே ரண சிகிச்சை செய்தார். ஆசிரியர் சில நாட்கள் படுக்கையில் இருக்கும்படியாக நேர்ந்தது. அப்போது அவர் எதையும் படிக்கக்கூடாது என்று டாக்டர் சொல்லியிருந்தார். ஆனால் ஆசிரியப் பெருமானுக்கு தமிழ்ப் பாட்டுக் காதில் விழாவிட்டால் மூச்சே நின்றுவிடும். நான் அவர் அருகிலேயே அப்போது இருந்து வந்தேன். ஆசிரியப் பெருமானுடைய புத்திரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலையாக இருந்தார். அவர் ஹைகோர்ட்டிற்குப் போன பிறகு ஏதாவது புத்தகத்தை எடுத்து என்னைப் படிக்கச் சொல்வார் ஆசிரியர் . இவ ருடைய சிந்தனை பிள்ளையவர்களுடைய வரலாற்றை முடித்துவிட வேண்டும் என்பதில் இருந்தது. பல விதமான குறிப்புகளைப் பல காலமாகச் சேர்த்திருந்தார். முன் பகுதிகளை எழுதிவிட்டார். கடைசிப் பகுதி எஞ்சியிருந்தது. படுத்த படுக்கையாய் இருந்த போது இவருக்குப் பிள்ளையவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை முடிப்பதற்குள் தம் வாழ்க்கை முடிந்து விடுமோ என்கிற அச்சம் இருந்தது . ஒருநாள், அ“ந்தக் கட்டை எடுத்துக்கொண்டு வா” என்று என்னிடம் சொன்னார். “டாக்டர் எதுவும் செய்யக்கூடாது என்று சொல்லியிருக்கிறாரே” என்றேன் நான். “டாக்டருக்கு என்ன தெரியும்? என் கடமையை நான் செய்தால் ஆண்டவன் என்னைக் காப்பாற்றுவான்” என்றார். அந்தக் கட்டை எடுத்து வந்தேன். மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் இறுதிக் காலத்தைப்பற்றிச் சொல்லத் தொடங்கிவிட்டார். கண்ணீர் விட்டுக்கொண்டே அந்தப் பகுதியை இவர் சொல்லச் சொல்ல நானும் கண்ணீர்விட்டுக் கொண்டே அந்தப் பகுதியை எழுதி வந்தேன். பிள்ளையின் வரலாறு ஒருவாறு பூர்த்தியாயிற்று. பிறகு அது இரண்டு பாகங்களாக வெளிவந்தது. டாக்டர் பட்டம் சென்னைப் பல்கலைக் கழகத்தில் சில பெருமக்களுக்கு டி.லிட். பட்டம் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். இன்னார் இன்னாருக்குப் பட்டம் அளிக்கலாம் என்று தீர்மானம் செய்தார்கள். ஆசிரியருக்கும் டி.லிட். பட்டம் வழங்கத் தீர்மானித்தார்கள். 1932-ஆம் வருஷம் ஆகஸ்டு மாதம் அந்தப் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அந்தப் பட்டத்தைப் பெறும்போது அதற்கென்று அமைந்த ஒருவகை உடையை அணிந்துகொள்ள வேண்டும். அந்தப் பட்டத்தை அப்போது ஆசிரியருடன் பெற இருந்த சிவசாமி ஐயர் ஆசிரியர் அவர்களுக்கும் வேண்டிய உடைகளைத் தைக்க ஏற்பாடு செய்தார். அந்த விழாவில் ஆசிரியர் மிகவும் சுருக்கமாகத்தான் பேசினார். அவர் பேசியதாவது: ‘மகா மேன்மை தங்கிய சென்னைச் சர்வகலாசாலை அத்திய க்ஷரவர்கள் சமூகத்திற்கு விஞ்ஞாபனம். சகல கலைகளுக்கும் இருப்பிடமாகிய இந்த இடத்தில் பல்வேறு துறைகளில் சிறப் புற்று விளங்கும் மகாமேதாவிகள் முன்னிலையில் இந்தக் கௌரவப் பட்டத்துக்குரிய சன்னத்தைத் தங்களுடைய திருக்கரத்திலிருந்து பெற்றதை ஒரு பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். என்னைப் பாராட்டிப் பேசிய தங்களுக்கும், இதற்குக் காரணமாயிருந்த கனவான்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைச் செலுத்துகின்றேன். இந்தப் பட்டத்தைப் பெறுவதற்குரிய தகுதி என்னிடமில்லாவிட்டாலும் இதுவரையில் ஏற்படாத இந்தக் கௌரவம் தமிழ்ப் பாஷைக்கே கிடைத்திருக்கிறது என்பது என்னுடைய அந்தரங்கமான அபிப்பிராயம்’ என்று பேசினார். செந்தமிழ்ப் பத்திரிகையில் பலவகையான சிறிய பிரபந்தங்களை ஆசிரியர் வெளியிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு, ‘சிவநேசன்’ பத்திரிகையாசிரியர் தம் பத்திரிகையிலும் ஆசிரியரைக் கொண்டு சில பிரபந்தங்களை வெளியிடச் செய்ய வேண்டுமென்று நினைத்தார். ஆசிரியரிடம் அவர் தம் கருத்தைத் தெரிவித்தபோது ஆசிரியரும் அதற்கு இணங்கினார். பழமலைக் கோவை, திருமயிலை யமகவந்தாதி ஆகிய நூல்கள் அந்தப் பத்திரிகையில் வெளியாயின. கலைமகளை அணி செய்தல் சென்னை மயிலாப்பூரிலுள்ள லாஜர்னல் அதிபர் நாராயண சுவாமி ஐயர் ‘கலைமகள்’ என்ற தமிழ் மாதப் பத்திரிகையை ஆரம்பித்தார். ஆரம்பிப்பதற்கு முன்னர் ஆசிரியப் பெருமானிடம் வந்து முதல் இதழுக்கு ஒரு கட்டுரை எழுதித் தரவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அப்படியே ஆசிரியரும் ஒரு கட்டுரை எழுதித்தந்தார். அதோடு என்னையும் அந்தப் பத்திரிகையில் பணியாற்ற அனுப்பி வைத்தார். அதுமுதல் கலைமகளின் தொடர்பு எனக்கு இருந்து வருகிறது. ஆசிரியர் சில நூல்களைக் கலைமகளில் அனுபந்தமாக வெளியிட்டார்கள். தம்முடைய அனுபவங்களையும், புலவர்களின் வரலாறுகளையும் கலைமகளில் கட்டுரையாக எழுதத் தொடங்கினார். அதனால் கலைமகளின் பெருமை உயர்ந்தது. ஆசிரியப் பெருமான் உரைநடையில் பல நூல்களை எழுதக் கலைமகள் இவருக்கு ஒருவகையில் தூண்டு கோலாக இருந்தது என்றும் சொல்லலாம். 1933-ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம் முதல் பாகம் வெளியாயிற்று. சதாபிஷேகம் ஆசிரியப் பெருமானின் எண்பதாவது ஆண்டு நிறைவு நெருங்கிக்கொண்டிருந்தது. சஷ்டியப்த பூர்த்தியைச் சரியாக நடத்தவில்லை, இந்த விழாவையாவது சிறப்பாக நடத்த வேண்டு மென்று அட்வகேட்டாக இருந்த கே. வி. கிருஷ்ணசாமி ஐயர் எண்ணினார். அதற்கென ஒரு குழுவை அமைத்துக் கொண்டார். இந்த விழா மிகச் சிறப்பாகப் பல்கலைக் கழக மண்டபத்தில் நடை பெற்றது. ஸர் முகமது உஸ்மான் தலைமை தாங்கினார். ஆசிரியப் பெருமானின் திருவுருவப் படம் ஒன்றைப் பல்கலைக் கழக மண்டபத் தில் திறந்து வைத்தார்கள். தலைநகரில் மட்டுமன்றித் தமிழ் நாட்டின் பல பாகங்களிலும், பர்மா, இலங்கை ஆகிய இடங்களிலும்கூட ஆசிரியப் பெருமானுடைய சதாபிஷேக விழா நடை பெற்றது. 1934-ஆம் வருஷம் ஜனவரி மாதம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம் இரண்டாவது பாகம் வெளியாயிற்று. இந்தப் பாகம் பிள்ளையவர்களிடம் ஆசிரியர் பாடம் கேட்கத் தொடங்கியது முதல் புலவர் பெருமானின் இறுதிக் காலம் வரையிலான நிகழ்ச்சிகளை விளக்குகின்றது. ராஜாஜியின் பாராட்டு கலைமகளில் ஒரு சமயம் ‘பிச்சைப் பாட்டு’ என்ற தலைப்பில் ஆசிரியர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ஸ்ரீ ராஜாஜி அவர்கள் அப்போது மாம்பலத்தில் இருந்தார். அந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு அவர் 22-5-37 அன்று ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார் . ‘நமஸ்காரம். கலைமகளின் சில இதழ்கள் நான் பார்க்காமலே தவறிவிடுவது உண்டு. என் தொல்லைகளின் மத்தியில் சில இதழ்களை அதிருஷ்டவசத்தால் பார்த்துப் படிக்கவும் நேரிடுகிறது. இவ்வாறு தங்கள் பிச்சைப் பாட்டுக் கட்டுரையைப் படித்து ஆனந்தம் தாங்காமல் இதை எழுதுகிறேன். அதற்குத் தலைப்பு ’ஊரைச் சுடுமோ’ என்று வைத்திருக்கலாம். இத்தகைய ஓர் இரத்தினத்தை நான் எழுதியிருந்தால் அவ்வாறுதான் பெயர் வைத்திருப்பேன். என்ன அழகான கதை! என்ன ரஸம் ! - இராஜகோபாலாச்சாரி காந்தியடிகளைக் கண்டது 1937-ஆம் ஆண்டு சென்னையில் பாரதீய சாகித்ய பரிஷத்தின் மகாநாடு நடந்தது. அதற்கு மகாத்மா காந்தி தலைமை வகித்தார். வரவேற்புக் குழுவின் தலைவராக யாரை நியமிப்பது என்கிற கவலை அந்த மகாநாட்டை நடத்துபவர்களுக்கு உண்டாயிற்று. பிறகு ஆசிரியப் பெருமானையே அழைத்து வரவேற்புக் குழுவின் தலைவராக இருந்து வரவேற்புரை அளிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். ஆசிரியர் அதற்கு இசைந்தார். மகாசபை கூடியது. தமிழின் பெருமையும், தமிழர்களின் பெருமையும் ஆசிரியர் சங்க நூல்களில் எவ்வாறு வருணிக்கப் பெற்றுள்ளன என்பதைத் தம் வரவேற்புரையில் எடுத்துக்காட்டி, மகாத்மா காந்தியை வரவேற்பதில் தாம் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறார் என்பதையும் எடுத்துச் சொல்லிச் சபையில் உள்ளவர்களையும், காந்தியையும் மகிழ்வித்தார். அந்த வரவேற்பைக் கேட்டு மகிழ்ந்த காந்தியடிகள், “தமிழின் வடிவமாகவே இருக்கும் இவர்கள் திருவடியில் இருந்து தமிழ் பயில வேண்டுமென்ற ஆசை எனக்கு உண்டாகிறது. அந்தச் சந்தர்ப்பம் எப்போது கிடைக்குமோ?” என்று சொன்னார். குறுந்தொகைப் பதிப்பு ஆசிரியப் பெருமான் குறுந்தொகையை ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருந்தார். முன்பு ஒருவர் அதைப் பதிப்பித்திருந்தார். சங்க நூல்களின் மரபு தெரியாத காரணத்தினால் பல பிழைகள் அப்பதிப்பில் இருந்தன. அது வெளியாகிப் பல ஆண்டுகள் ஆகி விட்டன. புத்தகம் கிடைக்காமல் இருந்தது. எனவே குறுந் தொகையை விரிவான முறையில் அச்சிட வேண்டுமென்ற எண்ணம் ஆசிரியருக்கு உண்டாயிற்று. அதற்கு வேண்டிய ஆராய்ச்சிகளும் குறிப்பு எழுதும் வேலையும் நடந்து கொண்டிருந்தன. குறுந்தொகைக்கு மிக விரிவான முறையில் உரையை எழுதினார். இவர் பதிப்பித்த நூல்களில் இதுவே மிக விரிவாக அமைந்தது. நூலாராய்ச்சி என்ற பகுதியை நூறு பக்கங்களில் எழுதியிருக்கிறார். பதவுரை, பொழிப்புரை , விசேட உரை. மேற் கோளாட்சி, ஒப்புமைப் பகுதி, பாடபேதங்கள் என்பனவும், விரிவான அகராதியும் இணைந்த பயனுள்ள பதிப்பு இது. இதை வெளியிட்டதில் இவர் ஒருவகை மனநிறைவு பெற்றார். இது 1937-ஆம் ஆண்டு ஆகஸ்டில் வெளியாயிற்று. குமரகுருபரர் பிரபந்தங்கள் திருப்பனந்தாளில் காசிமடத்தின் தலைவராக இருந்த சாமிநாதத் தம்பிரான் ஆசிரியரிடம் பெரும் மதிப்பு உடையவர். காசிமடத்தின் முதல்வராகிய குமரகுருபர சுவாமிகளின் பிரபந்தங்களை ஆசிரியர் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்ற அவா அவருக்கு இருந்தது. தம் விருப்பத்தை ஒரு முறை ஆசிரியரிடம் தெரிவித்தார். அதுமுதல் ஆசிரியர் அப்பிரபந்தத்திற்குரிய குறிப்புகளை எழுதலானார். விரிவான முறையில் முகவுரை, அடிக் குறிப்போடு அதனை அச்சிடத் தொடங்கினார். 1939-ஆம் ஆண்டு குமரகுருபர சுவாமிகளின் பிரபந்தங்கள் வெளிவந்தன. அந்தப் புத்தகம் வெளிவந்த பிறகு ஆசிரியர் ஒருமுறை திருப் பனந்தாள் சென்றிருந்தார். சாமிநாதத் தம்பிரான் ஆசிரியருக் காகத் தனி இருக்கை ஏற்பாடு செய்திருந்தார். ஆசிரியர் வந் திருப்பது தெரிந்து பல புலவர்கள் வந்து இவருடன் பேசிக் கொண்டிருந்தார்கள். இப்படி நாள் போவதே தெரியாமல் பொழுது போய்க்கொண்டிருந்தது. காசிமடத்தின் தலைவருடைய அன்பு ஒரு நாள் மாலை 7 மணி இருக்கும். ஆசிரியப் பெருமான் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். நானும் வேறு சில மாணவர்களும் பக்கத்தில் அமர்ந்திருந்தோம். கொல்லைப் புறக் கதவின் தாழ்ப்பாள் ஓசைப்பட்டது. யார் உள்ளே வருகிறார்கள் என்பது முதலில் தெரியவில்லை. திருப்பனந்தாள் மடத்தின் தலைவர் மெள்ள உள்ளே நுழைந்து வந்தார். “யார் வருகிறார்கள்?” என்று ஆசிரியப் பெருமான் கேட்டார். “சுவாமிகள் வருகிறார்கள்” என்று சொன்னோம். அப்படியா!" என்று இவர் எழுந்தார். சுவாமிகளிடம், “சொல்லி அனுப்பியிருந்தால் நானே தங்களிடம் வந்திருப்பேனே. எதற்காகத் தாங்கள் இப்படிப் பின்வழியாக வரவேண்டும்?” என்று கேட்டார். “தாங்கள் செய்திருக்கும் உபகாரத்திற்கு இது ஒரு பொருட்டா? தாங்கள் சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்களையும், குமர குருபரர் பிரபந்தத் திரட்டையும் பதிப்பித்ததன் மூலம் நான் பிறந்த குலத்தையும் உயர்த்திவிட்டீர்கள். நான் புகுந்த மடாலயத்தின் சிறப்பையும் உயர்த்திவிட்டீர்கள். இதற்கு நான் என்ன கைம்மாறு செய்தாலும் ஈடாகாது” என்று சொல்லி ஆயிரம் ரூபாயை ஒரு வெள்ளித் தாம்பாளத்தில் வைத்து வழங்கினார். ஆசிரியப் பெருமானுக்கு அளவிறந்த வியப்பு உண்டாயிற்று. உள்ளத்தை நெகிழச் செய்த இந்த நிகழ்ச்சியை இவர் பலரிடம் அடிக்கடி சொல்லி உருகியது உண்டு. என் சரித்திரம் ஆசிரியப் பெருமானின் சதாபிஷேகம் நடந்தபோது அவர் தம் வரலாற்றை எழுத வேண்டுமென்று பலரும் வற்புறுத்தினார்கள். அப்போது ஆனந்த விகடனில் ஆசிரியராக இருந்த கல்கி ஆனந்த விகடனில் வாரந்தோறும் எழுத வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அப்போது எழுத முடியவில்லை. திரும்பவும் 1940-ஆம் ஆண்டு முதல் எழுத வேண்டும் என்று வந்து கேட்டுக்கொண்டார். அதன்படி 1940-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆனந்த விகடனில் ‘என் சரித்திரம்’ என்ற தலைப்பில் தம் வரலாற்றை இவர் எழுதத் தொடங்கினார். அதற்காகப் பல பல இடங்களுக்கு எழுதி, அங்கங்கே உள்ள கட்டிடங்களையும், கோவில்களையும் படம் எடுத்து அனுப்பச் சொல்லிப் பெற்று வெளியிட்டார். ‘என் சரித்திரம்’ வெளியாகத் தொடங்கியவுடன் நாட்டில் ஒரு தனி எழுச்சி உண்டாயிற்று. ஆனால் 1942-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆசிரியப் பெருமான் காலமானதால் அந்த வரலாறு முற்றுப் பெற வில்லை. எலும்பு முறிவு 1942 ஜனவரி 12-ஆம் தேதி திங்கட்கிழமை வழக்கம்போல் ஆசிரியர் மேல் மாடியில் ஒரு பெஞ்சியில் படுத்திருந்தார். விடியற்காலம் நான்கு மணி இருக்கும். எழுந்து கீழே வரும்போது தவறி விழுந்துவிட்டார். முழங்காலில் அடிபட்டு இரத்தம் ஒழுகிற்று. மயக்கமடைந்துவிட்டார். இவரைத் தூக்கி வந்து ஒரு நாற்காலியில் அமர வைத்தார்கள். பின்புதான் நினைவு வந்தது. காலில் வலி அதிகமாக இருந்தது. சில மருத்துவர்கள் வந்து பார்த்தார்கள். எக்ஸ்ரே எடுக்கப்பெற்றது. அதில் எலும்பு முறிவு இருப்பது தெரிந்தது. நோயினால் படுத்த படுக்கையில் இருந்த நிலையிலும் ஆசிரியப் பெருமான் பாடம் சொல்வதை விடவில்லை. எந்த வகையான இளைப்பு இருந்தாலும் பாடம் சொல்லும் போது அந்த இளைப்பு இவருக்கு மறந்துபோகும். அப்போது இரண்டாவது உலக மகாயுத்தம் நடந்து கொண் டிருந்தது. சென்னையில் உள்ளவர்கள் எல்லாம் குடும்பத்தைக் கலைத்துக்கொண்டு வெளியூர்களுக்குப் போனார்கள். அந்தச் சமயத்தில் சென்னையிலிருந்து திருக்கழுக்குன்றத்தில் உள்ள திருவாவடுதுறை மடத்திற்குச் சொந்தமான ஒரு வீட்டில் ஆசிரியப் பெருமான் போய்த் தங்கி இருக்கலாம் என்று தீர்மானம் செய்தார்கள். அவ்வாறே ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி ஆசிரியர் காரில் ஏறிப் புறப்பட்டார். புறப்பட்டபோது அவர்களுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை . ‘கணக்கிலாத் திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக் குன்றிலே’ என்ற திருவாசகத்தைச் சொல்லிப் புறப்பட்டார். திரும்பவும் நான் இந்த வீட்டுக்கு வருவேனா? ’ என்று கேட்டுக் கொண்டே புறப்பட்டார். மாலை நான்கு மணிக்குக் கார் திருக்கழுக்குன்றம் போய்ச் சேர்ந்தது. தம்முடைய புத்தகங்களை யும் , ஏட்டுச் சுவடிகளையும் விட்டுவிட்டு வந்துவிட்டதை ஆசிரியப் பெருமான் விரும்பவில்லை. குழந்தையைப் பிரிந்த தாய்போல வருந்தினார். அந்த வேதனையை உணர்ந்த இவருடைய புதல்வர் அவற்றையெல்லாம் திருக்கழுக்குன்றத்திற்கே கொண்டு போய்ச் சேர்த்தார். பத்து மாட்டு வண்டிகளில் அந்தப் புத்தகங்கள் எல்லாம் வந்து சேர்ந்தன. திருக்கழுக்குன்றம் வந்த பிறகு உடல் நலத்தில் கொஞ்சம் முன்னேற்றம் உண்டாயிற்று. எழுந்து உட்காரத் தொடங்கினார். என்னுடைய குடும்பம் அப்போது மோசூரில் இருந்தது. என் தந்தையாருக்கு உடம்பு சரியில்லை என்று கடிதம் வந்ததால் நான் மோசூருக்குப் போவதற்கு முன் திருக்கழுக்-குன்றம் சென்றேன். ஆசிரியருடன் நெடுநேரம் இருந்தேன். தமிழ் நூல்களைப்பற்றி இவர் பேசிக்கொண்டிருந்தார். கம்பராமாயணம், தேவாரம் ஆகியவற்றை நல்ல முறையில் அச்சிட வேண்டுமென்ற ஆசை இவருக்கு இருந்தது. “அந்த இரண்டையும் நல்ல முறையில் அச்சிட உடன் இருந்து உதவி செய்வாயா? கையைக் கொடு” என்றார். அந்தத் திருக்கரத்தை ஏந்தும்போது அதுதான் கடைசியாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. இவருடைய கரங்களை எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டேன். பின்னர் இவரிடம் விடை பெற்றுக்கொண்டு என் தந்தையாரைக் காண மோசூர் சென்றேன். அங்கே என் தந்தையார் காலமானார். அதனால் நான் குடும்பத்தினருடன் எங்கள் ஊராகிய மோகனூர் போனேன். வாழ்க்கை நிறைவு திருக்கழுக்குன்றத்தில் அப்போது ஆசிரியருக்கு ஜுரம் உண்டாயிருந்தது. இவருடைய குமாரர் அருகில் இல்லை. சென்னைக்குச் சென்றிருந்தார். அவருக்குத் தந்தி அடித்தார்கள். ஆனால் அவர் வருவதற்குள் ஆசிரியப் பெருமான் இறைவன் திருவடியை அடைந்து விட்டார். இவரது இறுதிக் காலத்தில் அவருடன் நாம் இருக்கவில்லையே என்ற வருத்தம் எனக்கும் இவருடைய குமாரருக்கும் இருந்தது. தமிழ் தமிழ் என்பதே மூச்சாக வாழ்ந்த ஆசிரியப் பெருமான் தம் கடைசிக் காலத்தில் திருக்கழுக்குன்றத்தில் தம் வாழ்வின் நிறைவை எய்தினார். தமிழ்நாடு முழுவதும் இவர் பிரிவுக்கு இரங்கியது. என்னைப் பெற்ற தந்தையையும், அறிவு ஊட்டி வளர்த்த தந்தையையும் ஒரு சேர இழந்த எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை. என்னுடைய ஆசிரியப் பெருமானின் உழைப்பெல்லாம் தமிழ் வளர்ச்சிக்கு எத்தனை பயன்பட்டுள்ளது என்பதைத் தமிழ் உலகம் இன்று நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறது. இவர் பெயரால் திருமதி ருக்மிணி அருண்டேல் அவர்களால் அமைக்கப்பெற்ற நூல் நிலையம் ஒன்று இன்று திருவான்மியூரில் இருக்கிறது. ஆசிரியப் பெருமான் சேகரித்த சுவடிகளும், புத்தகங்களும் அங்கே காப்பாற்றப்பெற்று வருகின்றன. தமிழ்நாடு பாக்கியம் செய்தமையால் ஆசிரியப் பெருமான் திரு அவதாரம் செய்தார். இறைவன் இவருக்கு 87 ஆண்டு நீண்ட ஆயுளைக் கொடுத்தான். இவர் வாழ்ந்த ஒவ்வொரு நாளும் தமிழுக்காகவே பாடுபட்டார். தமிழ் அன்னையை மீண்டும் பழைய நிலையில் இருக்கச் செய்தார். பழைய அணிகளைச் செப்பம் செய்து அணிந்ததோடு புதிய உரைநடையினாலும் அவளை எழில் கொழிக்கச் செய்தார். தமிழ் உலகம் தம் ஆசிரியரை நன்கு அறிந்து கொள்ளும்படி அவரது வரலாற்றை வெளியிட்டார். பல புலவர் பெருமக்களின் வரலாற்றை வெளியிட்டார். பழைய சங்க இலக்கியங்கள் எல்லாம் இன்றைக்கு மாணவர்களுக்கு எளிதில் கிடைக்கின்றன என்றால் இதற்கெல்லாம் மூலகாரணம் இந்தத் தமிழ்ப் பெருமகனார் செய்த தொண்டுதான். இன்று உலகம் முழுவதும் தமிழ் மொழியைப்பற்றிப் பேசி, தமிழ்மொழியை ஆராய்ந்து வருகிறது என்றால், தமிழ் மாநாடுகள் நடைபெறுகின்றன என்றால், அதற்கு முக்கியமான காரணம் இந்தப் பெருமகனார் செய்துள்ள தமிழ்ப் பணியே என்பதை யாரும் மறக்கமாட்டார்கள். பாரதியார், பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயில் துதியறிவாய், அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய் இறப்பின்றித் துலங்கு வாயே! என்று பாடியபடி தமிழர்களின் நெஞ்சில் என்றைக்கும் இந்தப் பெருமகனார் வாழ்வார் என்பது திண்ணம்! உரைநடை இவர் பதிப்பித்த நூல் ஒவ்வொன்றிலும் விரிவான முகவுரை இருக்கும். அதில் நூலைப் பற்றிய குறிப்புக்களும் அதன் சிறப்பான இயல்பும் அதன் மூலப் பிரதிகள் கிடைத்த இடங்களும் பதிப்புக்கு உதவி செய்தவர்களின் பெயர்களும் இருக்கும். நூற்பிரதி கிடைக்க உதவி செய்தவர்களின் பெயர்களையும் நன்றியறிவோடு குறிப்பிட்டிருப்பார் . ஐயரிடம் கண்ட பண்புகளில் மிகவும் முக்கியமானது நன்றியறிவு. தம்மிடம் பாடம் கேட்ட மாணாக்கர்கள் செய்த உதவியைக்கூட மறவாமல் குறிப்பிடுவார். ‘நம்மிடம் பயின்றவர் தாமே?’ என்று புறக்கணிக்கமாட்டார். மூல நூல் பிரதிகள் எங்கே எங்கே கிடைத்தன என்ற விவரத்தையும் அந்த முகவுரையால் அறிந்துகொள்ளலாம். அதிலிருந்து, எவ்வளவு இடங்களுக்குச் சென்று சுவடிகளைத் தேடி அலைந்திருப்பார் என்று தெரிந்து கொள்ளலாம். சுவடிகளைத் தேடி ஏமாந்த இடங்களும் பல உண்டு. கொங்கு நாட்டில் ஒரு புலவர் வீட்டில் வளையாபதி இருக்கிறது என்று ஒரு பொறுப்புள்ள கனவான் சொன்னார். அந்தச் செய்தியைக் கேட்டவுடன் அளவில்லாத மகிழ்ச்சி ஏற்பட்டது ஐயருக்கு. உடனே அவ்வூரை நோக்கிப் புறப்பட்டார். நானும் அப்போது உடன் சென்றேன். அந்தப் புலவர் காலமாகிவிட்டார். அவருடைய குமாரன் இருந்தான். ஐயர் தக்க பெரிய மனிதர்களையும் அழைத்துக் கொண்டு அந்த வீட்டுக்குச் சென்றார். பெரிய மனிதர்கள் தன் வீட்டுக்கு வந்தது பற்றி அந்தப் பையனுக்கு அளவற்ற மகிழ்ச்சி. “உன்னுடைய தகப்பனார் ஏட்டுச் சுவடிகள் வைத்திருந்தாராமே! அவற்றை எல்லாம் நீ வைத்திருக்கிறாயா?” என்று கேட்டார் ஒருவர் . “இருக்கின்றன, இதோ கொண்டு வந்து காட்டுகிறேன்” என்று சொல்லி உள்ளே சென்று சுவடிகளையெல்லாம் கொண்டு வந்து போட்டான். அவற்றில் சிலவற்றைக் கறுப்புக் கயிற்றினாலும் வேறு சிலவற்றை மஞ்சள் கயிற்றினாலும் கட்டியிருந்தார்கள். இவ்வாறு வெவ்வேறு வகைக் கயிற்றினால் ஏன் கட்டியிருக்கிறார்கள்?" என்று கேட்டபோது, “மஞ்சள் கயிறு கட்டியவை யெல்லாம் இசைக் கவிகள். கறுப்புக் கயிறு கட்டியவை வசைக் கவிகள்” என்றான்! “அந்தச் சுவடிகளில் வளையாபதி இருக்கிறதா?” என்று ஐயர் கேட்டார். "இதோ இருக்கிறதே’ என்று ஒரு சுவடியை எடுத்து நீட்டினான். ஐயர் ஆவலோடு அதைப் பிரித்துப் பார்த்தார். அது வளையாபதி அன்று, வைசிய புராணம் என்ற நூலில் உள்ள ‘வளையாபதிச் சருக்கம்’ என்ற பகுதி அது. அதற்கும் வளையா பதிக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. இதை ஒரு வழக்குக்குச் சாட்சியாகக் காட்ட என் தந்தையார் எங்கிருந்தோ கொண்டு வந்தார்’ என்று அந்த இளைஞன் சொன்னான். அது அந்தப் பையனின் அறியாமைக்குச் சாட்சியாகத்தான் இருந்தது. ஐயர் எழுதிய உரைநடை நூல்களை இருவகையாகப் பிரிக்கலாம். ஒருவகை , வாழ்க்கை வரலாறுகள், மற்றொரு வகை. அவர் ஏடு தேடிய வரலாறுகள். தம்மோடு பழகிய பெரியவர்களை அவர் ஒருபோதும் மறந்ததில்லை. அவர்களைப் பற்றிய வரலாறுகளைத் தெரிந்தவரையில் சிறியதாகவும், பெரியதாகவும் எழுதியிருக்கிறார். அவற்றில் மிகவும் முக்கியமானது அவருடைய ஆசிரியராகிய மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம். அதை இரண்டு பாகங்களாக எழுதினார். தாம் அவரிடம் தமிழ் பயிலப் போவதற்கு முந்திய நிகழ்ச்சிகளை முதற்பாகமாகவும் அவரிடம் சேர்ந்து தமிழ் பயின்ற காலத்தைப் பற்றி அப்புலவர் பெருமானுடைய இறுதிக் காலம் வரையிலும் இரண்டாம் பாகமாகவும் எழுதியிருக்கிறார். அவற்றைப் படிக்கும் போது ஐயருக்கு இருந்த குரு பக்தியை வியக்காமல் இருக்க முடியாது. மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களை, இக்கவிஞர் பெருமான், இப்புலவர் பிரான், இத் தமிழ்க் கவிஞர் என்று குறிப்பிடுவாரே-யொழியப் பெயரைச் சொல்லிக் குறிப்பிடுவதில்லை. ஆனால் அவருடைய இளமைப் பருவத்தைக் குறிப்பிடும் ஓரிடத்தில் மட்டும் ‘மீனாட்சி சுந்தரம் பிள்ளை’ என்று எழுதியுள்ளார். அதுமட்டும் அன்று. உடனே அடிக்குறிப்பில், ‘இப்படி எழுத என் கை கூசுகிறது’ என்று எழுதியிருக்கிறார் . முதுமை காரணமாகக் கை நடுங்கியிருக்கலாம்’ என்று இக்காலப் பிள்ளைகள் நினைத்தல் கூடும்! உண்மையை உணர்பவர்களுக்கு இவருடைய குரு பக்தியின் ஆழம் நன்கு புலப்படும். பிள்ளையவர்கள் சரித்திரம் முதற்பாகம் எழுதி முடித்தவுடன் இரண்டாவது பாகத்தை எழுதி வந்தார். அப்போது கீழே விழுந்து பாதத்தில் வீக்கம் கண்டு எழுந்திருக்க முடியாமல் படுத்து விட்டார். டாக்டர் ரங்காச்சாரியார் அறுவைச் சிகிச்சை செய்தார். பிள்ளையவர்கள் சரித்திரம் எழுதி முடிக்கவில்லையே என்ற தாபம் இவர் மனத்தில் இருந்தது. டாக்டர்களும் மற்றவர்களும் எழுதக்கூடாது, படிக்கக்கூடாது என்று தடுத்துவிட்டார்கள். ஆனாலும் இவருக்கு, ‘இதை முடிக்காமல் என் உயிர் போய் விட்டால் என்ன ஆவது?’ என்ற ஏக்கம் இருந்தது. ஒரு நாள் இவருடைய குமாரர் தம் அலுவலகம் சென்று விட்டார். பிற்பகல் நேரம், இவர் மெல்ல எழுந்து ஓர் அறையில் சென்று அமர்ந்தார். என்னிடம், “பிள்ளையவர்கள் சரித்திரத்தை எடுத்து வா” என்று கட்டளையிட்டார். நான் சற்றுத் தயக்கத் தோடே எடுத்துச் சென்றேன். உடனே இவர் பிள்ளையவர்களின் இறுதி நிலையைச் சொல்லத் தொடங்கினார். அந்தக் காட்சியை அவர் தம் மனக்கண்ணால் கண்டிருக்க வேண்டும். கண்ணீர் விட்டுக்கொண்டே அந்தப் பகுதியைச் சொன்னார். பிள்ளையவர்களின் பிரிவை அறிந்து புலவர்களும் பிறரும் வருந்தியதைச் சொல்லோவியமாக எடுத் துரைத்தார். அந்தப் பகுதியை இப்போது யார் படித்தாலும் கண்ணில் நீர் வரும். உண்மை உணர்ச்சியோடு எழுதியிருப்பதனால் தான் அவ்வாறு அமைந்திருக்கிறது. மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரத்தில் அவருடைய வரலாறு மட்டும் இருக்கிறது என்று சொல்ல முடியாது. அக்காலத்தில் இருந்த புலவர்களின் நிலை, தமிழ் ஆர்வம், பெரிய மனிதர் களின் இயல்பு முதலிய பல செய்திகளைக் காணலாம். எல்லா வகையான சுவைகளும் இருக்கும். தியாகராச செட்டியார் வரலாறு ஐயருக்கு வேலை வாங்கித் தந்தவர் வித்துவான் தியாகராச செட்டியார், அவர் கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்தார். அவர் ஓய்வு பெறும்போது, “நீங்கள் தக்கவர் ஒருவரை உங்கள் இடத்தில் நியமிக்க ஏற்பாடு செய்யுங்கள்” என்று கல்லூரி முதல்வர் கேட்டுக் கொண்டார். இவரை நியமிக்கலாம்’ என்று அவர் ஐயரைப் பற்றிச் சொல்லியிருக்கலாம். ஆனால் ஐயருடைய திறமையை யாவரும் அறிய வேண்டும் என்று எண்ணினார். கல்லூரி ஆசிரியர்களை வைத்துக்கொண்டு அவர் முன்னிலையில் ஐயரை அமரச் செய்து, அந்த ஆசிரியர்களைத் தமிழ் நூல்களின் சம்பந்தமாகத் தமக்கு விருப்பமான கேள்விகளைக் கேட்கச் சொன்னார். ஐயர் தக்கபடி விடை கூறி எல்லோரையும் மகிழ்வித்தார். அவருக்குத் தமிழாசிரியர் பணியை வாங்கிக் கொடுத்த தியாகராச செட்டியார் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணாக்கர். செட்டியார் தமக்குச் செய்த நன்றியை மறவாமல் அவருடைய வரலாற்றை இவர் எழுதியிருக்கிறார். அதைப் படிக்கும் போது நமக்குத் தியாகராச செட்டியார் அதிகத் துணிவுள்ளவர் என்று தோன்றும். அந்தப் பகுதிகளை-யெல்லாம் ஐயர் செட்டியாரிடம் குற்றம் காணாதவாறு நயமாக எழுதியுள்ளார். தம் இல்லத்திற்குத் தியாகராச விலாசம்’ என்ற பெயர் வைத்தார். ஐயரின் முன்னோர்களில் இசைப் புலவராகிய கனம் கிருஷ்ணையரிடம் ஐயருடைய தந்தையார் பயின்றவர். தம்முடைய குமாரரையும் இசைப் பெரும் புலவராக்க வேண்டும் என்பதே அவருடைய விருப்பமாக இருந்தது. ஆனால் தமிழ் நாட்டின் நல்லூழ் இவரைத் தமிழிலக்கியத்துக்கு இழுத்து வந்துவிட்டது. இல்லாவிட்டால் இன்று நாம் எளிதிலே பெற்றுப் படித்து இன்புறும் சங்க நூல்களும் பிற பழங்காப்பியங்களும் நமக்குக் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம். இப்படி நான் சொல்லுவதற்குத் தக்க காரணம் உண்டு. அந்தக் காலத்தில் தமிழ்ப் பெரும் புலவர்கள் பலர் இருந்தார்கள். ஏட்டுச் சுவடிகளும் நிரம்ப இருந்தன. ஐயர் ஏடு தேடிய காலத்தில் சில சுவடிகள் கிடைக்காமல் போய்விட்டன. திருவாவடுதுறை ஆதீனத்தில் இளமையில் தாம் கண்ட வளையாபதி பிற்காலத்தில் தாம் பதிப்புத்துறையில் ஈடுபட்டபோது கிடையாமல் போயிற்று என்று ஆசிரியரே வருத்தத்துடன் எழுதியிருக்கிறார். அக்காலத்தில் பெரிய சங்கீத வித்துவானாக விளங்கியவர் மகா வைத்தியநாதையர். அவருடைய தமையனாராகிய இராமசாமி பாரதியார் பெரிய புராணக் கீர்த்தனையை இயற்றியிருக்கிறார். மகா வைத்தியநாதையர் அடிக்கடி திருவாவடுதுறை ஆதீனத்துக்கு வந்து சங்கீதக் கச்சேரி செய்வது வழக்கம். ஐயர் அவர் இசையை நன்றாக அனுபவித்துக் கேட்டவர். இசையில் ஞானம் இருந்தமையால் மகா வைத்தியநாதையருடைய இசை நுட்பத்தை நன்றாக அறிய முடிந்தது. அவரோடு பழகி அவருடைய அரும் பண்புகளை உணர்ந்தார். அதன் விளைவாக அவருடைய வரலாற்றை ஐயர் எழுதினார். பிள்ளையவர்களிடம் மாணாக்கர் ஆதல் மாயூரத்தில் இருந்த மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தம் புதல்வரை ஒப்புவித்துத் தமிழ் பயிலச் செய்ய வேண்டுமென்று ஐயரின் தந்தையார் விரும்பினார். அவ்வப்போது சந்தித்த சில புலவர்களிடம் சில பாடல்களையும் சில சிறிய நூல்களையும் ஐயர் பாடம் கேட்டிருந்தார். ஆனால் அவருடைய தமிழ்ப் பெரும் பசிக்கு அது போதவில்லை. அப்போதுதான் மாயூரத்தில் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இருக்கிறா-ரென்றும், அவர் எல்லாத் தமிழ் நூல்களையும் கற்றவரென்றும், பாடம் சொல்வதில் வல்லவரென்றும் தெரியவந்தது. அவரிடம் சென்று பாடம் கேட்டால் தான் தம் குமாரருடைய ஆவல் நிறைவேறும் என்று ஐயரின் தந்தையார் நினைத்தார். அவர் சந்தித்த புலவர்கள் யாவரும் அந்தக் கருத்தையே வற்புறுத்தினார்கள். அக்காலத்தில் நந்தனார் சரித்திரத்தை இயற்றிய கோபால கிருஷ்ண பாரதியார் மாயூரத்தில் வாழ்ந்து வந்தார். மாயூரத்திற்குச் சென்று மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் படிப்பதோடு, ஒழிந்த வேளைகளில் கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் இசையையும் பயின்று வரலாம் என்ற எண்ணம் ஐயரின் தந்தையாராகிய வேங்கடசுப்பையருக்கு உண்டாயிற்று. அப்படியே மாயூரத்துக்கு ஐயரை அழைத்துச் சென்றார். மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ் பயில ஏற்பாடு செய்தார். அதோடு காலை வேளைகளில் கோபால கிருஷ்ண பாரதியாரிடம் இசை பயிலவும் ஏற்பாடு செய்தார். சில நாட்களில் ஐயர் பாரதியாரிடம் இசை பயில்வதை அறிந்த மீனாட்சிசுந்தரம் பிள்ளை இவரிடம், ’இசையில் மனம் சென்றால் வேறு எதிலும் மனம் செல்லாது" என்று குறிப்பிக்கவே, ஐயர் கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் இசை பயில்வதை நிறுத்திக் கொண்டார். ஆனாலும் அவர் பழக்கத்தை மட்டும் விடவில்லை. அதனால் கோபாலகிருஷ்ண பாரதியார் சரித்திரத்தையும் பிற்காலத்தில் எழுதினார். நந்தனார் சரித்திரத்தைப் பாடிப் பழகியவர் ஐயர். அதை எழுதியவர் அழகுடையவராக இருப்பார் என்று எண்ணியிருந்தார். ஆனால் நேரில் பார்த்தபோது பாரதியாருடைய உருவம் வேறு விதமாக இருந்தது. இறுகிய கழுத்தும் சப்பைக் காலுமாகக் காட்சி அளித்தார். அவரைக் கண்டு முதலில் வியப் படைந்தாலும் பிறகு , ‘கோணலான யாழிலிருந்து தானே நல்லிசை பிறக்கிறது? அதுபோல இந்தப் பெருமானிடமிருந்து இன்னிசை தோன்றுகிறது’ என்று எண்ணிக்கொண்டாராம். பலர் வரலாறுகள் தனித்தனியே சிலருடைய வரலாறுகளை நூல் வடிவில் எழுதியதையன்றிக் கட்டுரை வடிவிலும் பலருடைய வரலாறுகளை எழுதியுள்ளார். புதுக்கோட்டையில் திவானாக இருந்த சேஷையா சாஸ்திரியார், பேராசிரியர் பூண்டி அரங்கநாத முதலியார், இசைப் புலவர் ஆனை ஐயா, சுப்பிரமணிய பாரதியார் முதலிய பலரைப் பற்றியும் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். சுப்பிரமணிய பாரதியாருக்கும் ஐயருக்கும். நல்ல பழக்கம் உண்டு. பாரதியார் தாம் நடத்திய ‘இந்தியா’ என்னும் பத்திரிகையில் ஐயரைப்பற்றிச் சிறப்பித்து எழுதியிருக்கிறார். ஐயருக்கு மகாமகோபாத்தியாயப்பட்டம் கிடைத்தபோது சென்னை மாநிலக் கல்லூரியில் ஐயரைப் பாராட்டி ஒரு விழா நடைபெற்றது. அதற்குப் பாரதியாரும் சென்றிருந்தார். அப்பொழுதே அவர், ‘செம்பரிதி ஒளிபெற்றான்’ என்று தொடங்கும் பாடலுடன் மூன்று பாடல்களைப் பாடினார். பாரதியார் பாடல் தொகுதியில் ‘மகாமகோபாத்தியாய வாழ்த்து’ என்ற தலைப்பில் அந்தப் பாடல் கள் உள்ளன. அவற்றை முதலில் பென்சிலில் எழுதிய தாளை நான் பார்த்திருக்கிறேன். சுப்பிரமணிய பாரதியாருடைய விழா ஒரு முறை சென்னைக் காங்கிரஸ் மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது பாரதி யாரைப்பற்றிப் பேசவேண்டுமென்று அமரர் ராஜாஜி ஐயரைக் கேட்டுக்கொண்டார். அவ்வாறே சென்று ஐயர் பேசினார். அதைக் கேட்ட பிறகு ராஜாஜி, வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்று விசுவாமித்திரர் சிறப்புப் பெற்றது போல ஐயரவர்கள் வாயால் பாரதியின் பெருமை அதிகமாயிற்று" என்று சொன்னார். அக்காலத்தில் சில புலவர்கள் பாரதியாரைப் பெருங் கவிஞராக மதிப்ப தில்லை. அந்த எண்ணம் ராஜாஜியின் மனத்தில் இருந்திருக்க வேண்டும். ஐயர் பாரதியாரைப் புகழ்ந்து பேசியபோது ராஜாஜிக்குப் பேருவகை உண்டானது இயல்புதானே? அவருக்குப் பாரதியாரின் பெருமையும் தெரியும் ; ஐயரின் பெருமையும் தெரியும். பாரதியார் தமிழ் மக்களுக்குப் புதிய அணிகலன்களைச் செய்து அணிந்தவர். ஐயரோ பழைய அணிகலன்களைக் கண்டெடுத்துத் துலக்கிப் புனைந்தவர். இந்த இருவருடைய தொண்டுகளையும் நன்கு உணர்ந்த ராஜாஜி, ஐயரின் வார்த்தைகளைக் கேட்டதும் பேரானந்தம் கொண்டார். ஐயர் சுப்பிரமணிய பாரதியாரைப் பற்றி எழுதிய கட்டுரை அவருடைய நூல் தொகுதி ஒன்றில் இருக்கிறது. பூண்டி அரங்கநாத முதலியார் மாநிலக் கல்லூரியில் கணிதப் பேராசிரியராக இருந்தவர், தமிழிலும் வல்லவர், தமிழ்க் கவிஞர். அவர் கச்சிக் கலம்பகம் என்ற நூலை இயற்றினார். அக் காலத்தில் ஐயர் கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்தார். பூண்டி அரங்கநாத முதலியார் தம் நூலைப் பல புலவரைக்கொண்டு அரங்கேற்றினார். அரங்கேற்றம் சில நாட்கள் நடந்தன. ஐயர் தம் பதிப்பு வேலையை முன்னிட்டுச் சென்னைக்கு வரும்போதெல்லாம் பூண்டி அரங்கநாத முதலியாரைச் சந்திப்பது வழக்கம். அந்தச் சமயங்களில் இவரும் கச்சிக் கலம்பக அரங்கேற்றத்தில் கலந்து கொண்டு பல பாடல்களுக்கு விளக்கம் கூறினார். பூண்டி அரங்கநாத முதலியாருக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவருடைய வரலாற்றை ஐயர் எழுதியிருக்கிறார். அதில் இந்தச் செய்திகளெல் லாம் வருகின்றன. ஐயரவர்களின் முன்னோர்களில் ஒருவர் முன் குறிப்பிட்ட கனம் கிருஷ்ணையர் என்ற இசைப் பெரும் புலவர். ஐயர் அவரைப் பார்த்திராவிட்டாலும் அவரைப்பற்றிய செய்திகளையெல்லாம் தம் தந்தையார் வாயிலாகக் கேட்டிருந்தார். அதனால் அவருடைய வரலாற்றையும் எழுதினார். மிகச் சிறிய விஷயத்தையும் சுவைபட எழுதும் ஆற்றல் மிக்கவர் ஐயர். கனம் கிருஷ்ணையர் நாள்தோறும் சிவபூஜை செய்பவர். ஒரு முறை பூஜை செய்ய அவருக்கு வில்வம் கிடைக்கவில்லை. அவர் அப்போது கிடைத்த கீரையைக் கொண்டே அர்ச்சனை செய்தாராம். வில்வம் இல்லை என்பதற்காகப் பூஜையை நிறுத்தக்கூடாது என்று எண்ணினார் அப் பெரியார். காளிதாஸன் வெற்றிலைக் காம்புகளைக் கொண்டே அம்பிகையைப் பூசித்த செய்தி இங்கே நினைவுக்கு வருகிறது. நடை ஐயர் எழுதிய கட்டுரைகளின் நடை தெள்ளத் தெளிந்த நீரோட்டம் போன்ற நடை. எந்தச் சொல்லுக்கும் அகராதியைத் தேட வேண்டிய அவசியம் இராது. ஆழமான நீர் நிலையில் தானே தெளிவு இருக்கும்? சிறிய சிறிய வாக்கியங்களாக அமைத்திருப்பார். மனிதனுடைய இதய ஆழத்தில் தோன்றும் உணர்ச்சியலைகளை விவரித்திருப்பார். புறத் தோற்றத்தையும் சிறப்பாக வருணித் திருப்பார். தம்முடைய ஆசிரியரைப்பற்றி இவர் கூறுவதைக் கேட்கலாம். “காட்சிக்கு எளிமையும் பணிவும் சாந்தமும் இவர்பால் உள்ளன என்பதை இவரைக் கண்டவுடன் அறியலாம். ஆழ்ந்த அறிவும் இணையற்ற கவித்துவமும் வாய்க்கப் பெற்றிருந்தும், அலைகளெல்லாம் அடங்கி ஒலியற்றிருக்கும் ஆழ்ந்த கடலைப்போல் அறிவின் விசித்திர சக்தியெல்லாம், கண்டவுடன் அறிய முடியாவண்ணம் அடங்கியிருக்கும் தோற்றம் உடையவராக இவர் இருந்தார்.” அவருடைய சிவபக்தியை மிக விரிவாக எழுதியிருக்கிறார். ஐயரும் பெரிய சிவபக்தர். ஆதலால் தம் ஆசிரியரின் சிவபக்தியைப் பற்றி அவர் எழுதுவது இயல்புதானே? அவர் கவிதை இயற்றும் முறையைச் சொல்லுகிறார்: “இவர் பெரும்பாலும் யோசித்துக் கொண்டே யிருக்கும் இயல் புடையவர். பாடவேண்டிய விஷயங்களை ஒரு வகையாக மனத்தில் ஒழுங்குபடுத்திக்கொண்டு பின்பு பாட ஆரம்பித்தால் ஒரே மூச்சில் நூற்றுக்-கணக்காகப் பாடுவார். செய்யுட்களைச் சொல்லிக் கொண்டே வருகையில் மனப்பாடமான நூல்களில் உள்ள செய்யுட்கும் ஆழ்ந்து பெற்றிருந்து ஆழ்ந்த உரைநடைகளைக் கூறுகின்றாரென்று தோன்றுமே ஒழியப் புதிய செய்யுட்களை யோசித்துச் சொல்லி வருகிறார் என்று தோன்றாது. மிகவும் அரிய கற்பனைகளை மனத்திலே ஒழுங்குபண்ணிச் சில நிமிஷ நேரங்களில் சொல்லிவிடுவார். நூல்களுக்கு இடையிடையே அமைந்த எதுகைக் கட்டுள்ள பாடல்களை இளைப்பாற்றுப் பாடல்கள் என்பார்.” மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களின் சரித்திரத்தைப் படிக்கும் போது, நாமும் அவருடனே இருந்து எல்லாவற்றையும் கவனிப்பதான பிரமை தோற்றும். ஐயர் எழுதிய கட்டுரைகளுக்குத் தலைப்பிடுவதே அழகாக இருக்கும். ஒருமுறை திருநெல்வேலிப் பக்கம் ஏடு தேடச் சென்றிருந்தார். இரவு நேரம். நிலவு காய்ந்து கொண்டிருந்தது. ஒருவர் ஓர் ஏட்டுச் சுவடியைக் கொண்டுவந்து ஐயரிடம் தந்தார். அந்த நிலவொளியில் அதைப் பிரித்துப் பார்த்தார். அது பத்துப் பாட்டு என்னும் சங்க நூல் தொகுதி எழுதியிருந்த சுவடி. அந்தப் பத்துப் பாடல்களில் முல்லைப்பாட்டு என்பது ஒன்று. நிலவில் சுவடியைப் பிரித்துப் பார்த்தபோது முல்லைப் பாட்டுக் கண்ணில் பட்டது. அதைப்பற்றி எழுதும்போது ‘நிலவில் மலர்ந்த முல்லை’ என்று தலைப்பிட்டுக் கட்டுரை எழுதினார். எவ்வளவு பொருத்தமான தலைப்பு! பத்துப்பாட்டில் ஒன்றான குறிஞ்சிப்பாட்டில் இரண்டு மகளிர் பல மலர்களைப் பறித்துப் பாறைமேல் குவித்தனர் என்ற செய்தி வருகிறது. அந்த மலர்களின் பெயர்களைக் குறிஞ்சிப்பாட்டுச் சொல்கிறது. மொத்தம் 99 மலர்கள் வருகின்றன. ஐயர் தம்மிடம் கிடைத்த ஒரு சுவடியைப் பார்த்தபோது அந்த மலர் வரிசையில் சில குறைந்திருப்பதைக் கண்டார். பிறகு தருமபுர ஆதீனத்தில் கிடைத்த ஒரு பிரதியில் அந்த மலர்களின் பெயர்கள் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். அதைப்பற்றி எழுதிய கட்டுரைக்கு , ‘உதிர்ந்த மலர்கள்’ என்று பெயரிட்டார். இப்படிப் பல எடுத்துக்காட்டுக்களைக் கூறலாம். தெளிவான நடையில் எல்லோருக்கும் விளங்கும் சொற்களைப் பெய்து, உயிரோவியத்தைப் போலத் தாம் கூறுவதை எழுதும் ஆற்றல் ஐயருக்கு இருந்தது. சிறிய வகுப்பில் படிக்கும் பிள்ளை முதல் பெரும் புலவர் வரையில் அவருடைய கட்டுரைகளைப் படித்து மகிழலாம். அவரவர்கள் தகுதிக்கு ஏற்றபடி அவற்றின் சுவையை உணரலாம். இவர் தம்முடைய சரித்திரத்தை ஆனந்த விகடனில் எழுதி வந்தார். துரதிர்ஷ்டவசமாக அதை முற்றும் எழுதி முடிப்பதற்குள் இவர் மறைந்தார். அது முற்றுப் பெறாமல் இருந்தாலும் அது பெரிய செய்திக் களஞ்சியமாக விளங்குகிறது. பல வகையான புலவர்களை அதில் பார்க்கிறோம். நல்லவர்களும் பொல்லாதவர்களுமாகிய செல்வர்கள் வருகிறார்கள். சிறந்த உபகாரிகளைச் சந்திக்கிறோம். ஒருவகையில் ஒரு சிறிய உலகத்தையே சந்திப்பது போன்ற தோற்றத்தை அந்த நூல் உண்டாக்குகிறது. 122 அத்தியாயங்களைக் கொண்டது அது. ஹிந்துவில் அதைப்பற்றி மதிப்புரை எழுதிய ஒரு பேரறிஞர் , ‘அது ஓர் அற்புதமான காவியம்’ என்று எழுதியிருக்கிறார். நூல் முழுவதும் எழுதுவதற்குள் இறைவன் இவரை அழைத்துக் கொண்டு விட்டானே என்ற துயரம் அதைப் படிப்பவர்களுக்கு உண்டாகாமல் போகாது. இந்தக் காலத்தவர் சிலர் கொள்கைப்படி சற்று அதிகமான வடசொற்களை இவர் ஆண்டிருக்கிறார். ஆனால் அவை இவருடைய தமிழோடு இணைந்து கலந்து இன்புறுத்துகின்றன. தமிழுலகம் ஓர் அழகிய வாழ்க்கை வரலாற்றைப் பெறச் செய்த ஐயரவர்கள் புகழ் என்றும் மங்காமல் இருக்கும். சங்க நூல்களைக் கண்டுபிடித்துத் தமிழ்நாட்டுக்கு அளித்த பேருதவிக்கு அடுத்தபடி இவருடைய உரைநடை நூல்களாக உள்ளவை; உரை ஓவியங்களாக, செய்திக் களஞ்சியங்களாக விளங்குகின்றன. ஐயரவர்கள் புத்தக விவரம் ** ஐயரவர்கள் பதிப்பித்த நூல்கள்** 1. சீவக சிந்தாமணி 2. மணிமேகலை 3. பெருங்கதை 4. பத்துப்பாட்டு 5. குறுந்தொகை 6. ஐங்குறுநூறு 7. பதிற்றுப்பத்து 8. பரிபாடல் 9. புறநானூறு 10. நம்பி திருவிளையாடல் 11. குமரகுருபரர் பிரபந்தங்கள் 12. மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிரபந்தங்கள் 13. சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள் 14. சீகாழிக்கோவை 15. கலைசைக் கோவை ** ஐயரவர்கள் இயற்றிய வசன நூல்கள்** ** வாழ்க்கை வரலாறுகள்** 1. திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் சரித்திரம் (இரண்டு பகுதிகள்) 2. வித்துவான் தியாகராச செட்டியார் 3. மகாவைத்தியநாதையர் 4.கனம் கிருஷ்ணையர் 5. கோபால கிருஷ்ண பாரதியார் 6. என் சரித்திரம் ** பிற நூல்கள்** 7. கண்டதும் கேட்டதும் 8. புதியதும் பழையதும் 9. நல்லுரைக் கோவை (நான்கு பகுதிகள் ) 10. நினைவு மஞ்சரி (இரண்டு பகுதிகள்) சாகித்திய அக்காதெமி 1954 ஆம் ஆண்டு இந்திய அரசால் அமைக்கப்பெற்ற தேசிய இலக்கியக் கழகம். தன்னுரிமை கொண்ட இந்த ஸ்தாபனத்தின் கொள்கைகளை வகுக்கும் பொதுச் சபை, பல இந்திய மொழிகள், இராஜ்யங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களின் பிரதிநிதிகள் கொண்ட து. இதன் முதல் தலைவர் ஜவாஹர்லால் நேரு. இந்திய மொழிகளில் இலக்கியப் பணிகளை ஆதர வுடன் ஒருங்கிணைப்பது; எந்த ஓர் இந்திய மொழியில் இயற்றப்பட்ட இலக்கியமும் மொழி பெயர்ப்பு வாயிலாக நாட்டின் எல்லா மொழி வாசகருக்கும் எட்டச் செய்வது - இவையே அக்காதெமியின் செயல் திட்டங்கள். அக்காதெமியின் வெளியீடுகள் பெரும்பாலும் இந்திய மொழிகளில் உள்ளவையே. அதன் ஆங்கில மொழி வெளியீட்டுத் திட்டம் பொதுவாக இந்திய ஆசிரியர் மற்றும் இலக்கியம் பற்றித் தகவல் தரும் நூல்களை வெளியிடுவதே யாகும். இந்திய இலக்கியச் சிற்பிகள் ** இந்த வரிசையில் இதுவரை தமிழில் வெளிவந்துள்ள நூல்கள்** 1. லட்சுமிநாத பெஸ்பருவா - ஹேம்பரூவா தமிழ் : க. த. திருநாவுக்கரசு 2. கபீர் - பிரபாகர் மாச்வே தமிழ் : தி. வேங்கடகிருஷ்ணய்யங்கார் 3. கேசவஸ்த ர் - பிரபாகர் மாசவே தமிழ் : ராம கோபிநாதன் 4. ஈசுவர் சந்திர வித்யாசாகர் - ஹிரண்மய் பானர்ஜி தமிழ் : ராம கோபிநாதன் 5. ராஜாராம் மோகன் ராய் - சௌமியேந்திரநாத் தாகூர் தமிழ் : க. த. திருநாவுக்கரசு 6. பிரேம்சந்த் - பிரகாஷ் சந்திர குப்தா தமிழ் : சரஸ்வதி ராமநாத் 7. குமாரன் ஆசான் - கே. எம். ஜார்ஜ் தமிழ் : கே. சி. சங்கர நாராயணன் 8. தாருதத் - பத்மினி ஸென்குப்தா தமிழ் : அ. சீனிவாசராகவன் 9. வீரேசலிங்கம் - வி. ஆர். நார்லா தமிழ் : நா. பார்த்தசாரதி 10. ஸ்ரீஅரவிந்தர் - மனோஜ் தாஸ் தமிழ் : பி. கோதண்டராமன் 11. மீராபாய் - உஷா நில்சன் தமிழ் : எஸ். கந்தசாமி துறைவன் 12. B. M. ஸ்ரீகண்டய்யா - A. N. மூர்த்திராவ் தமிழ் : இரா. மதிவாணன் 13. சந்துமேனன் - டி. சி. சங்கரமேனன் தமிழ் : கு. இராஜவேலு 14. காஸி நஸ்ருல் இஸ்லாம் - கோபால் ஹால்டார் தமிழ் : கே. பி. எஸ். ஹமீத் 15. வள்ளத்தோள் - ஹிருதயகுமாரி தமிழ் : மா. இளையபெருமாள் 16. பசவேஸ்வரர் - H. திப்பேருத்ர சுவாமி தமிழ் : T. K. நாகாம்பாள் 17. பாணபட்டர் - கே. கிருஷ்ணமூர்த்தி தமிழ் : பெ. திருஞான சம்பந்தன் 18. பக்கிம் சந்திர சாட்டர்ஜி –சு . ச. ஸென்குப்தா தமிழ் : அசோகமித்திரன் 19. மகரிஷி தேவேந்திரநாத தாகூர் - நா. சௌதுரி தமிழ் : கா . மீனாட்சி சுந்தரம் 20. தாராசங்கர் பந்தோபாத்யாயர் - மஹாஸ்வேதாதேவி தமிழ் : கு. இராஜவேலு 21. நானாலால் - U. M. மணியார் தமிழ் : நா. பார்த்த சாரதி 22. ஜீவனானந்ததாஸ் - சி. தாஸ் குப்தா தமிழ் : க. த. திருநாவுக்கரசு 23. பாரதியார் - பிரேமா நந்தகுமார் FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.