[] 1. Cover 2. Table of contents இதர ஜப்பானியக் கதைகள் இதர ஜப்பானியக் கதைகள்   சு.சோமு   sundaram.somu@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/other_japanese_stories மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation முன்னுரை லாஃப்காடியோ ஹெர்ன் கிரேக்க தேசத்தில் 1850 ஆம் ஆண்டு பிறந்தார். இளவயதிலேயே தாய் தந்தையரால் கைவிடப்பட்டு அனாதை ஆனார். அவரை வளர்த்த அத்தையும் முதுமையின் காரணமாகக் கவனிக்க இயலாது போனதால் அவரது பத்தொன்பதாம் வயதில் அமெரிக்காவுக்குச் செல்லும் படகில் தெரிந்தவர்களின் முகவரியைக் கொடுத்து அனுப்பி வைத்தார். அங்கு வேலை பார்த்து வந்த அவர் வேலை நிமித்தமாக ஜப்பான் செல்ல நேர்ந்து அங்கேயே தனது இறுதி நாட்கள் வரை வாழ்ந்தார். அதனால் அவரது பெரும்பான்மையான எழுத்துக்கள் ஜப்பானைப் பற்றியே அமைந்தன. சிதைந்த சத்தியம் “சாவைப் பற்றி எனக்குக் கவலை இல்லை!” என்று சொன்னாள் இறந்து கொண்டிருக்கும் மனைவி. “எனக்கிருப்பது ஒரே ஒரு கவலைதான். இந்த வீட்டில் என் இடத்தை யார் வந்து நிரப்பப் போகிறார்கள் என்பதை மட்டும் நான் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.”எனதருமைப் பெண்ணே!" என்று கவலை படிந்த குரலில் அழைத்தான் அவளது கணவன். “என் வீட்டில் உன்னைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லை. நான் ஒருபோதும் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.” அவன் சொன்ன சொற்கள் நேரே அவன் இதயத்தில் இருந்து வந்தன. ஏனெனில் அவன் அவளை அவ்வளவு நேசித்தான். “எனக்கு நீங்கள் ஒரு சத்தியம் செய்து தர வேண்டும், ஒரு சாமுராயாக!” என்று வேண்டுகோள் விடுத்தாள் சிறு புன்முறுவலோடு. “நிச்சயம் நிறைவேற்றுகிறேன்.” என்று அவளது வெளுத்த நெற்றியைத் தடவியபடியே சொன்னான். “அப்படி என்றால், நீங்கள் என்னை நம் வீட்டின் தோட்டத்திலேயே புதைக்க வேண்டும், செய்வீர்களா? தோட்டத்தின் ஒரு முனையில் அந்த தென்னை மரங்கள் நாம் நட்டு வைத்தோமே அவைகளினருகில். நான் நீண்ட நாட்களாகவே கேட்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் மறுமணம் செய்து கொள்வீர்கள் என்று எண்ணியதால் உங்கள் வீட்டில் எனது கல்லறை இருப்பது உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் நீங்கள் உங்கள் வாழ்வில் வேறு ஒரு பெண் வர மாட்டாள் என்று உறுதி கொடுத்ததால் நான் எனது இறுதி ஆசையைக் கேட்க எதுவும் தயக்கமில்லை. தோட்டத்தில் புதைத்தால்தான் என் ஆன்மா நிம்மதி அடையும். ஏனெனில் உங்களது பேச்சுக்களையும் அப்பொழுதுதான் அடிக்கடி கேட்க முடியும். வசந்த காலங்களில் மலர்கள் மலர்வதையும் கண்டு களிக்க இயலும்.” “உன்னுடைய விருப்பம் போலவே நடக்கும், கண்ணே!” என்று பதில் அளித்தான் அவள் கணவன். “ஆனால் சாவு பற்றி இப்பொழுது பேச வேண்டாமே. உன் உடல் நிலை நாம் கவலை கொள்ளும் அளவு மோசமாகவில்லை.” “இல்லை!” என்று மறுமொழி சொன்னாள். “நான் இன்று காலையே இறந்து விடுவேன். நீங்கள் தோட்டத்தில்தான் புதைக்க வேண்டும்.” “சரி, நாம் நட்டு வைத்த அந்த தென்னைமர நிழலில். உனக்கு ஒரு அழகிய கல்லறை ஏற்பாடு செய்து விடுகிறேன், போதுமா?” “ஒரு சிறிய மணியும் என்னோடு புதைத்து விடுங்கள்” “மணியா?” “ஆம், புத்த மதத்தினர் பயன்படுத்தும் சிறிய மணியும் வேண்டும். வைப்பீர்கள்தானே!” “நிச்சயம் வைக்கிறேன், நீ ஆசைப்பட்ட அனைத்தும் வைக்க ஏற்பாடு செய்கிறேன்” “எனக்கு வேறெதுவும் வேண்டாம். நீங்கள் என் மீது எப்பொழுதும் அன்பாகவே இருந்திருக்கிறீர்கள். நான் இனி மகிழ்ச்சியாகச் சாவேன்.” அதன் பின் கண்களை மூடியவள் திறக்கவே இல்லை. தனது இறுதி உறக்கத்தினுள் அமிழ்ந்து போனாள், களைத்து உறங்கும் குழந்தை போல. இறந்து போன பின்னும் அவள் அழகாகவே தெரிந்தாள். அந்தப் புன்முறுவல் கூட அவளை விட்டுப் பிரிய மனமில்லாமல் அந்த அழகிய உதடுகளுடன் ஒட்டிக் கொண்டே இருந்தது. அவள் விரும்பியபடியே அவளுக்குப் பிடித்த மரத்தினடியில் புதைத்து விட்டார்கள். அவளுடனே ஒரு மணியும் புதைக்கப்பட்டது. கல்லறையின் மேல் ஒரு அழகிய நினைவுச் சின்னமும் எழுப்பப்பட்டது. அழகிய சிறகுகள் வைத்து அலங்கரிக்கப்பட்டது. “அன்பு நிறைந்த கடலின் மாளிகையில் உறங்கும் அன்பான அக்கா, அழகிய மலர்த்தோட்டத்தின் ஒளி மிகுந்த நிழலே” என்ற வாசகமும் பொறிக்கப்பட்டது. அது முடிந்த ஒரே ஆண்டில், அவனது உறவினர்களும் நண்பர்களும் அவனை மறுமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார்கள். “நீ இன்னும் இளைஞன்தான்!’ என்று ஆரம்பித்தார்கள்.”உன் தந்தைக்கு ஒரே வாரிசு நீதான். உனக்கும் குழந்தை இல்லை. மணம் செய்து கொள்வது ஒரு சாமுராயின் கடமையும் கூட. வாரிசில்லாமல் நீ இறந்து விட்டால், உனக்கு யார் வந்து சடங்கு செய்து உன் முன்னோர்களை நினைப்பார்கள்?" அப்படி இப்படிப் பேசி அவனைச் சம்மதிக்க வைத்து விட்டார்கள். புது மணப்பெண்ணும் 17 வயதே நிரம்பிய மங்கை. அவனுக்கும் அவளை மிகவும் பிடித்து விட்டது. தோட்டத்தில் இருக்கும் கல்லறை மட்டும்தான் ஒரு சின்ன தடங்கல். புது இளம் மனைவியின் மகிழ்ச்சியைக் குலைக்கும் வண்ணம் எதுவும் அங்கு நடந்தேறவில்லை. குறைந்தபட்சம் மணம் முடித்த ஏழாவது நாள் வரை. அன்று அரண்மனையில் அவளது கணவனை இரவு வேளை அழைத்து வர உத்தரவிட்டிருந்தார்கள். முதல் முறை அவளைத் தனியாக விட்டுச் செல்ல நேர்ந்த அந்த மாலை வேளை அவளுக்குள் என்னவென்று சொல்லத் தெரியாத இனம் புரியாத ஒரு அச்சம் படரத் தொடங்கியது. படுக்கைக்குச் சென்ற பின்னும் உறக்கம் கொள்ளவில்லை. காற்று மிகவும் கனமாக இருந்தது. புயல் அடிக்கச் சில நேரத்திற்கு முன் காற்றழுத்தம் கொள்வது போல் இருந்தது வீட்டில். நடுநிசியைத் தாண்டிக் கொஞ்ச நேரத்தில் புத்த பிக்குகள் புனிதப் பயணம் செய்யும் போது ஒலிக்கும் மணியோசை கேட்டது. இந்த நள்ளிரவில் எந்த பிக்கு இந்த சாமுராய் வீட்டினருகில் மணி ஒலித்துக் கொண்டு பயணம் செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். இப்பொழுது கொஞ்சம் இடைவெளி விட்டு, அந்த மணியோசை மிகவும் அருகில் ஒலித்தது. அந்த பிக்குகள் இந்த வீட்டை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. ஆனால் ஏன் பின் பக்கம் இருந்து அந்த ஒலி வர வேண்டும், அங்குதான் தெருவே இல்லையே. திடீரென்று நாய்கள் விநோதமாகக் குரைத்தன. முனகலாகவும் ஊளை போலவும் மாறி மாறி இருந்தது அந்தச் சத்தம். ஆனால் மிகவும் கொடூரமாக இருந்தது. கனவில் தோன்றும் அச்சம் போல் ஏற்பட்டது. அந்த மணியோசை நிச்சயம் தோட்டத்தில் இருந்துதான் வந்தது. அவள் எழுந்து பணியாள் ஒருவரை எழுப்பலாம் என்று நினைத்தாள். ஆனால் அவளால் எழவோ அசையவோ கூட இயலவில்லை. யாரையும் கூப்பிடலாம் என்றால் நா கூட அசையவில்லை. அந்த மணியோசை இன்னும் இன்னும் அருகருகே நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த நாய்களின் குரைப்புதான் சகிக்க இயலவில்லை. மெதுவாக வெளிச்சத்தைக் கவர்ந்து நிழல் படிந்த போது ஓர் பெண்ணுருவம் மிதந்து வந்து அறையினுள் நுழைந்தது, அறையின் ஒவ்வோர் கதவும் இழுத்துச் சாத்தப்பட்ட போதும், ஒரு எழினியும் சிறிதும் அசையாத போதும். அவள் கல்லறையில் இருந்து எழுந்து வந்தது போல் இருந்தாள் கையில் ஒரு சிறிய மணியோடு. அவளுக்குக் கண்கள் இல்லை இறந்து பல நாட்கள் ஆகி இருந்ததால். அவளது விரிந்த தலை முடி முகத்தில் பரவி இருந்தது. கண்கள் இல்லாமல் பார்த்து நா இல்லாமல் பேசினாள். “இந்த வீட்டில் நீ இருக்கக் கூடாது, இருக்கவே கூடாது. இந்த வீட்டுக்கு நான்தான் சொந்தக்காரி. நீ வெளியே போய் விடு. காரணத்தை யாருக்கும் சொல்லக் கூடாது. அவரிடம் சொன்னால் உன்னைக் கண்டந்துண்டமாக வெட்டி விடுவேன்.” அவ்வாறு சொல்லி விட்டு அவள் மறைந்து விட்டாள். அந்த இளம்பெண் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டிருந்தாள். விடியும் வரை அப்படியே அசையாது படுக்கையின் ஓரத்தில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தாள். ஆம், பேய்தானே அடித்து விட்டது. ஆனாலும் பொழுது புலர்ந்த பின், மாற்றான் மனைவி என்றும் பாராமல் செங்கதிரோனின் கரங்கள் மேனி முழுவதும் படர்ந்து பரப்பிய இளஞ்சூட்டில் புத்துணர்ச்சி கிட்டியதால் தான் கண்டது கனவா இல்லை நனவா என்று குழம்பித்தான் போனாள். அவளுக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கை இன்னும் அதே இடத்தில் கனமாக நிழலாடிக் கொண்டே இருந்ததால் அதைப் பற்றிக் கணவனிடமோ வேறு யாரிடமோ மூச்சு விடவும் அவளுக்கு அச்சமாக இருந்தது. ஒரு அசிங்கமான கனவுதான் கண்டு விட்டோம் என்று ஒருவழியாக தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு விட்டிருந்தாள். உள்ளுக்குள் புழுங்கி வெம்பி அவளும் நோய் வாய்ப்பட்டாள். மறு நாள் அவளுக்கிருந்த சந்தேகம் அனைத்தும் தீர்ந்து விட்டது. அதே நேரத்தில், நாய்களின் முனகல் மற்றும் ஊளைச் சத்தம் ஆரம்பித்தது. தோட்டத்திலிருந்து மணியோசை கூடிக்கொண்டே வந்தது. மீண்டும் அவள் பிரயாசைப்பட்டு எழ முயற்சி செய்து தோற்றாள். பேயானவளும் அதே போல் உள்ளே வந்து சீறினாள். “உடனே போ, காரணம் எதுவும் சொல்லாமல். அவரிடம் கிசுகிசுத்தால் கூட உன்னைக் கண்டந்துண்டமாக வெட்டி விடுவேன்” இம்முறை பேய் படுக்கைக்கு மிக அருகில் வந்தது. குனிந்து காதுக்கருகில் இரைந்தது. அன்று விடிந்தவுடன் அவள் கணவன் வந்து சேர்ந்ததும் அவன் கால்களில் விழுந்து விட்டாள். “கெஞ்சிக் கேட்கிறேன்” என்று தேம்பினாள். “என்னைத் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நான் உடனே என் வீட்டுக்குப் போக வேண்டும்.” என்றாள். “இங்கு உனக்கு மகிழ்ச்சியாக இல்லையா?” என்று அவன் உண்மையான அக்கறையுடன் கேட்டான். “யாராவது உன்னிடம் கடுமையாக நடந்து கொண்டார்களா நான் இல்லாத நேரத்தில்?” "“அப்படியெல்லாம் இல்லை.” என்று அழுது கொண்டே மறுமொழி கூறினாள். “எல்லோரும் என்னிடம் மிகவும் அன்பாகவே நடந்து கொள்கிறார்கள். இருப்பினும் என்னால் உங்களுக்கு மனைவியாக இருக்க இயலாது. நான் போயே ஆக வேண்டும்” “என் அன்பே” என்று அவளைக் கட்டி அணைத்துக் கொண்டே கேட்டான். "இங்கு உனக்கு மகிழ்ச்சி கிட்டவில்லை என்று நினைக்கும்போதே எனக்குள் வருத்தம் பொங்கி வழிகிறது. இதயம் வலிக்கிறது. ஆனால் நீ ஏன் வீட்டை விட்டு வெளியேற வேண்டும். அதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க இயலவில்லை. ஒருவேளை யாராவது உன்னிடம் கடுமையாக நடந்து கொண்டிருக்கும் பட்சத்தில்…விவாகரத்து செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லையே? அவள் நடுக்கத்துடனும் அழுகையுடனும் சொன்னாள். “எனக்கு விவாகரத்து கொடுக்கவில்லை என்றால் நான் இறந்து விடுவேன்!” சிறிது நேரம் அவன் அமைதியாக இருந்தான். விந்தையான அவளது கோரிக்கைக்கு என்ன காரணமாக இருக்கும் என்று கண்டுபிடிக்க முடியாமல் குழம்பிப் போயிருந்தான். அதன் பின் தெளிவான முடிவுடன் மறுமொழி கூற ஆரம்பித்தான். “உன் குடும்பத்தினரிடம் உன் மீது எந்தவிதத் தவறும் இல்லாமல் உன்னை ஒப்படைத்தால் அது மிகவும் அவமானமாகி விடும். உனது கோரிக்கைக்கு என்ன காரணம் என்பதைச் சொல்லி விட்டால், எதுவாக இருந்தாலும் சரி, கவுரவமாக எடுத்துச் சொல்லி நான் விவாகரத்து கொடுப்பதற்குச் சரியாக இருக்கும். ஆனால் காரணம், சரியான காரணம், எதுவும் சொல்லாமல் விவாகரத்து கொடுக்க முடியாது. கோப தாபங்களை விட இந்த வீட்டின் மானம் பெரிது.” அதனால் அவள் உண்மையைக் கூற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இரண்டு இரவுகள் நடந்தவை எல்லாவற்றையும் ஒன்று விடாமல் கூறி விட்டாள் பேரச்சத்துடன். “உங்களிடம் உண்மையைக் கூறி விட்டதால், என்னை அவள் கொன்று விடுவாள், கொன்று விடுவாள்…” அவன் எவ்வளவு பெரிய வீரன். பேய்களைப் பற்றிச் சிறிதும் அச்சம் கொள்ளாதவன். அவனுக்கே அவள் சொன்னதைக் கேட்டுக் கொஞ்சம் குழப்பம் வந்தது. ஆனாலும் உடனே அதைப் பற்றி எளிமையான இயற்கையான ஒரு விடையும் அவன் மனதில் தோன்றியது. “என் அன்பே!” என்று ஆரம்பித்தான். “நீ மிகவும் அச்சமடைந்து இருக்கிறாய். மேலும் சிலர் உன்னிடம் முட்டாள்தனமான கதைகளைக் கூறி உன் மனத்தைக் கெடுத்து இருக்கிறார்கள். இந்த வீட்டில் நீ கண்ட கெட்ட கனவுக்காக உனக்கு நான் விவாகரத்து கொடுக்க இயலாது. ஆனால் நான் இல்லாத நேரத்தில் நீ பட்ட வேதனைகளுக்காக நான் மிகவும் வருந்துகிறேன். இன்றிரவும் நான் அரண்மனைக்குச் செல்ல வேண்டி இருக்கிறது. ஆனால் உன்னைத் தனியாக விட்டுச் செல்ல மாட்டேன். இருவரை உனக்காகக் காவலுக்கு விட்டுச் செல்கிறேன். நீ நிம்மதியாக உறங்கலாம். அவர்கள் மிகவும் நல்லவர்கள். உன்னைச் சரியாகக் கவனித்துக் கொள்வார்கள்.” அதன் பின் அவளிடம் தேனொழுகப் பேசிய பேச்சில் அவள் மயங்கி விட்டாள். தேவையில்லாமல் அச்சமடைந்ததை எண்ணி வெட்கமடைந்தாள். அதனால் வீட்டை விட்டுச் செல்லும் எண்ணத்தையே கைவிட்டு விட்டாள். எதிரிகளின் அங்கங்களை எல்லாம் துண்டாக்கவும் தெரியும், எதிரில் இருக்கும் வஞ்சிக் கொடியின் துண்டான மனதை ஒன்றாக்கவும் தெரியும் என்று அவன் நிரூபித்தான், ஆம் அவன் ஒரு சாமுராய். காவலர் இருவரும் வீரமுடையவர்கள். பெரிய தோற்றம் ஆனால் எளிமையான உள்ளம் படைத்தவர்கள். பெண்களையும் குழந்தைகளையும் காக்கும் பொறுப்பில் தேர்ந்தவர்கள். அவளுக்கு அழகான இனிமையான கதைகள் கூறி மகிழ்ச்சியாக வைத்திருந்தார்கள். அவர்களுடன் அவள் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தாள். அவர்களுடைய நகைச்சுவையான பேச்சுக்களைக் கேட்டு வாய் விட்டுச் சிரித்தாள். கிட்டத்தட்ட அவளது அச்சங்கள் எல்லாம் தொலைந்து போயின. ஒருவழியாக அவள் படுக்கைக்குச் சென்றாள். காவலர் இருவரும் ஆயுதங்களுடன் ஒரு மூலையில் திரைச்சீலையிட்டு அதற்குப் பின்னால் விளையாட ஆரம்பித்து விட்டார்கள். மெல்லிய முணுமுணுப்பாக இருந்தது அவர்களது பேச்சு அவளை எழுப்பி விடக் கூடாது என்ற காரணத்தால். அவள் ஒரு குழந்தையைப் போல் உறங்கி விட்டாள். மீண்டும் சரியாக இரவு அதே நேரத்தில் அவள் ஒரு பேரச்சத்துடன் முனகினாள். அவளுக்கு அந்த மணியோசை கேட்டதால். அது ஏற்கெனவே அருகில் வந்து விட்டது. அவள் எழுந்தாள். கத்தினாள். ஆனால் அறையில் எந்தவிதச் சலனமும் இல்லை. மயான அமைதி தவழ்ந்தது, வளர்ந்தது. காவலரை நோக்கி வேகமாகச் சென்றாள். அவர்கள் இருவரும் பரமபத அட்டைக்கு முன் அமர்ந்திருந்தார்கள் அமைதியாக ஒருவரை ஒருவர் வெறித்துப் பார்த்தபடி நிலைகுத்திய கண்களோடு. அவள் இறைஞ்சினாள், அவர்களை அசைத்துப் பார்த்தாள். உறைந்து போயிருந்தார்கள். சுய நினைவு தோன்றியதும் மணியோசை கேட்டதாக அவர்கள் சொன்னார்கள். அவள் கத்தியதும் கேட்டது. தங்களை உலுக்கியதும் தெரிந்தது. இருப்பினும் தங்களால் எழவோ பேசவோ இயலவில்லை. எதோ ஒரு கருந்திரை வந்து மறைத்து ஆழ்ந்த உறக்கத்தினுள் ஆழ்த்தி விட்டது என்றார்கள். அதிகாலை தன் மனைவியின் அறையினுள் நுழைந்தவனுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. அணையப் போகும் விளக்கு இலேசாக மினுக்கிக் கொண்டிருந்தது. தன் அழகான இளம் மனைவியின் தலையில்லாத உடல் குருதிக் குட்டைக்கு நடுவில் கிடந்தது. முடிவுறாத தங்கள் விளையாட்டுக்கு முன்னால் அமர்ந்து அப்படியே காவலர் இருவரும் உறங்கி விட்டிருந்தனர். தங்கள் தலைவனின் அழுகை கேட்டதும் வாரிச் சுருட்டி எழுந்தனர். அந்தப் பெண்ணின் கோலத்தைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். தலை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. காயத்தைப் பார்த்தால் வெட்டியது போலவே தோன்றவில்லை, பிடுங்கியது போல் தெரிந்தது. செங்குருதிக் கோடுகள் அந்த அறையில் இருந்து வெளியேறியது. அதைத் தொடர்ந்து மூவரும் சென்றார்கள். தோட்டத்தினுள் செல்லும்போது புல் வெளி, மண், குளத்தின் கரை எல்லாம் படிந்திருந்தது. அங்கே தென்னை மரங்களின் நிழலில் சட்டென்று திரும்பிப் பார்த்தபோது நேருக்கு நேராக அந்த உருவம் முகத்தில் மோதியது மயானத்தில் பறக்கும் வவ்வால் போல. நீண்ட நாட்களாகக் கல்லறையில் வசித்த ஒரு பெண்ணின் உருவம். அவளது கல்லறையில் இருந்து எழும்பி நின்றிருந்தாள். ஒரு கையில் மணி மற்றொரு கையில் இந்த இளம்பெண்ணின் கோரத் தலை, குருதி சொட்டச் சொட்ட. ஒரு கணம் என்ன செய்வதென்றே தெரியாமல் செயலற்று நின்று விட்டார்கள் அந்த மூவரும். பின் மூவரில் ஒருவன் புத்த மந்திரம் ஒன்றைச் சொல்லிக் கொண்டே வாளை உருவி அந்த உருவத்தை வெட்டினான். அது சட்டென்று மண்ணாகிப் போனது. தூசியாய்க் கரைந்து ஒன்றுமில்லாமல் மாயமானது. அதில் இருந்து மணி மட்டும் சிறு ஒலியோடு கீழே உருண்டு விழுந்தது. ஆனாலும் தசையே இல்லாத வலது கை மட்டும் வலியால் துடித்தது. அதன் விரல்கள் தான் கொண்டு வந்த குருதி ஒழுகும் தலையின் பிடியை மட்டும் விடவே இல்லை. அதைக் கிழித்து நாசம் செய்தது. நண்டு தன் பிடியில் சிக்கிய பழத்தைத் துவம்சம் செய்வது போல. “இந்தக் கதை மிகவும் அநியாயமானது.” என்று நான் கதை கூறிய நண்பனிடம் சொன்னேன். “இறந்தவள் பழி வாங்க வேண்டும் என்றால் கூட அந்தக் கணவனைத்தானே கொன்றிருக்க வேண்டும்.” “ஆண்கள் அப்படிதான் நினைப்பார்கள்” என்று பதில் கூறினான் அவன். “ஆனால் பெண்கள் அப்படி எண்ண மாட்டார்கள்.” ஆம் அவன் சொன்னது சரிதான். அருஞ்சொற்கள் எழினி - திரைச்சீலை. உறுதியான சத்தியம் “இலையுதிர் காலம் ஆரம்பிக்கும் நேரத்தில் நான் இங்கிருப்பேன்” என்று வாக்குறுதி அளித்தான் அக்கானா. இந்தக் கதை நடந்த காலம் சில நூறு ஆண்டுகளுக்கு முன்னால், ஜப்பானின் ஹரிமா மாகாணத்தில் கட்டோ என்னும் ஒரு அழகிய சிறு கிராமத்தில். வசந்த காலம் ஆரம்பித்திருந்த நேரம். தத்தாக வந்த தன் தம்பி சாமோனிடம் இருந்து விடை பெரும் முன் அவன் அளித்த வாக்குறுதி அது. அக்கானா ஒரு இசுமோ சாமுராய். அவன் தான் பிறந்த இடத்தைப் பார்த்து விட்டு வரலாம் என்று எண்ணி இருந்தான். சாமோன் சொன்னான், “உங்களது இசுமோ - எண் மேகங்கள் வலம் வரும் தேசம் - மிகுந்த தூரத்தில் அல்லவா இருக்கிறது. அதனால் குறிப்பிட்ட நாளில் வருவேன் என்று எப்படி உங்களால் வாக்குறுதி தர இயலும். இருப்பினும் அந்த நாள் தெரிந்தால், மிகவும் மகிழ்ச்சியாகவே இருக்கும். அன்று உங்களை வரவேற்க விருந்துக்கு ஏற்பாடு செய்து வைப்பேன். வாசற்படியிலேயே எதிர்பார்த்துக் காத்திருப்பேன்.” “நான் எவ்வளவோ பயணம் செய்திருக்கிறேன். அதனால் ஓரிடத்தை அடைய எவ்வளவு காலம் ஆகும் என்று துல்லியமாக என்னால் கூற முடியும். அதனால் என்று திரும்ப முடியும் என்றும் உறுதியாகச் சொல்லி விட முடியும். சாமந்திப் பண்டிகை நாளன்று வைத்துக் கொள்வோம்.” “அது ஒன்பதாவது மாதத்தின் ஒன்பதாவது நாள்.” என்றான் சாமோன். “அப்பொழுதுதான் சாமந்திப் பூக்கள் ஊரெல்லாம் மலர்ந்திருக்கும். நாம் சேர்ந்தே அதனைப் பார்க்கச் செல்வோம். நினைக்கவே பூரிப்பாய் இருக்கிறது. ஆக, நீ ஒன்பதாவது மாதத்தின் ஒன்பதாவது நாள் இங்கிருப்பாய் என்று உறுதியாகச் சொல்கிறாய் அல்லவா?” “ஒன்பதாவது மாதத்தின் ஒன்பதாவது நாள்.” என்று அக்கானாவும் ஒரு புன்முறுவலோடு திரும்பச் சொன்னான். அதன் பின் அவன் அந்த கிராமத்தை விட்டுச் செல்ல ஆயத்தமானான். அவனது தம்பியும் அம்மாவும் கண்கள் பனிக்க அவனுக்கு விடை அளித்தனர். பழைய ஜப்பானியப் பழமொழி ஒன்று “செங்கதிரும் வெண்ணிலவும் யாருடைய பயணத்தையும் தடை செய்வதில்லை” என்று சொல்கிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் மாதங்கள் பல உருண்டோடி விட்டன. இதோ இலையுதிர் காலமும் வந்து விட்டது. சாமந்திப் பூக்களின் காலம். தனது அருமை அண்ணனின் வரவை நோக்கி ஒன்பதாவது மாதத்தின் ஒன்பதாவது நாளான அன்று அதிகாலையிலேயே எழுந்து தயாராக ஆரம்பித்து விட்டான் சாமோன். உண்மையிலேயே மிகச் சிறப்பான ஒரு விருந்தை ஏற்பாடு செய்து விட்டான். அவனுக்குப் பிடிக்கும் என்று கள்ளும் தயார் செய்து விட்டான். அவனது தங்கும் அறையைச் சிறப்பாக அலங்கரித்து விட்டான். வரவேற்பறையில் இரண்டு நிறங்களில் பூத்திருந்த சாமந்திப் பூக்களைக் குடுவையில் நேர்த்தியாக நிறுத்தி வைத்தான். இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அவன் தாய் சொன்னாள், “இசுமோ மாகாணம் இங்கிருந்து கிட்டத்தட்ட 250 மைல்களாவது இருக்கும். காடு மலைகளைக் கடந்து செல்வது மிகவும் கடினமான உடலை வருத்தும் பயணம். அதனால் இன்று நிச்சயம் வந்து விடுவான் என்று சொல்ல முடியாது. அவன் வரும் வரைக்கும் கொஞ்சம் பொறுத்திருந்து இந்த ஏற்பாடுகளைச் செய்யலாமே.” “இல்லை அம்மா!” என்று பதிலிறுக்க ஆரம்பித்தான் சாமோன். “அக்கானா இன்று வருவதாக எனக்கு வாக்குறுதி அளித்திருக்கிறான். அவனால் அந்த சத்தியத்தை மீற முடியாது. ஒருவேளை நாம் அவன் வரும் வரை காத்திருந்து பின் விருந்துக்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்தோம் என்றால், அவனது சொல்லை நாம் நம்பவில்லை என்று அவனுக்குப் புரிந்து விடும். அது நமக்கு அவமானமாகப் போய் விடும்.” அன்றைய நாள் மிகவும் அழகாக விடிந்திருந்தது. காற்றும் மிகவும் பரிசுத்தமாக இருந்தது. உலகமே ஒரு ஆயிரம் மைல்கள் நீண்டு விட்டது போல் பிரமை ஏற்படுத்தியது. காலையிலேயே நிறைய வழிப்போக்கர்கள் அந்த கிராமத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். அதில் சில போர் வீரர்களும் இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் உற்றுக் கவனித்துக் கொண்டே இருந்தான். அருகில் வரும் வரை ஒவ்வொருவரையும் அவன் அவர்களை அக்கானா என்றே எண்ணி இருந்தான். திடீரென்று கோவில் மணியோசை ஒலித்தது. பகல் பனிரெண்டு ஆகி விட்டது என்பதை நினைவூட்டியது. அதுவரை அக்கானாவும் வரவில்லை. மதியம் கடந்த பின்னும் அவனுக்காகக் காத்திருந்து ஏமாந்து போனான் சாமோன். கதிரவனின் முகமும் மறைந்து போனது. தனது அண்ணனின் முகம் மட்டும் தோன்றவில்லை. இருப்பினும் வாயிற்கதவைப் பற்றிக் கொண்டே தெருவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அதன் பின் அவன் தாய் வந்து சொன்னாள் - “ஒரு மனிதனின் மனம் என்பது இலையுதிர் காலத்து வானம் போல் சட்டென்று மாறி விடும் என்பது மூத்தோர் மொழி. ஆனால் நீ வாங்கி வைத்த சாமந்திப் பூக்கள் நாளை கூட வாடாமல் இருக்கும். இப்பொழுது நீ உறங்கச் செல்வதே உத்தமம். காலை எழுந்த பின் மீண்டும் நீ விரும்பினால் வரவேற்கக் காத்திருக்கலாம்.” “நீங்கள் உறங்கச் செல்லுங்கள், அம்மா” என்று பதில் உரைத்தான் சாமோன். “நிச்சம் அவன் வந்து விடுவான் என்று என் உள் மனம் சொல்கிறது.” அதன் பின் அவன் தாயும் உறங்கச் சென்று விட்டாள். இருந்தாலும் கதவைப் பற்றியே இருந்தன அவன் கரங்கள். இரவும் பகல் போலவே பரிசுத்தமாக இருந்தது. வானம் முழுவதும் மீன்கள் சிரித்துக் கொண்டிருந்தன. பால் வெளி வழக்கத்துக்கு மாறாக மிகவும் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அருகில் இருந்த ஓடையின் சலசலப்பும் சற்று தூரத்தில் இருந்த உழவர்களின் வீட்டு நாய்கள் குரைப்பும் மட்டுமே அந்த இரவின் அமைதியைக் குலைத்துக் கொண்டிருந்தன. சாமோன் காத்திருந்தான். வெள்ளி நிலவும் தூரத்து மலையின் பின்னால் மறைந்து காணாமல் போகும் வரையும் காத்திருந்தான். இறுதியில் அவனும் நம்பிக்கை இழந்து போனான். அதனால் அச்சமும் சேர்ந்தே வந்தது. குழப்பத்துடன் கதவைச் சாத்தப் போகும் வேளையில் தூரத்தில் ஒரு உயரமான மனிதன் வருவதைக் கண்டான். மங்கலாக, ஆனால் வேகமாக அவனை நோக்கி வந்தது அந்த உருவம். அது அக்கானாதான் என்பதைக் கண்டுபிடிக்க அவனுக்கு வெகு நேரம் பிடிக்கவில்லை. ஆனந்தக் கண்ணீருடன் இரு கைகளையும் விரித்துக் கொண்டு அவனை நோக்கி ஓடினான். “நான் காலையில் இருந்து உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். ஒரு வழியாக நீ சொன்னபடி வந்து விட்டாய். நீ இன்னும் களைப்பாய் இருப்பாய். பாவம். உள்ளே வா. எல்லாம் தயாராய் இருக்கிறது.” அவன் அண்ணனைக் கூடத்திற்குள் அழைத்துக் கொண்டு சென்றான். அணையும் தருவாயில் மினுக்கிக் கொண்டிருந்த விளக்கின் திரியை ஏற்றி விட்டான். “அம்மா!” என்று அழைத்துக் கொண்டே அவளை எழுப்பச் சென்றான். “பொழுசாயமே மிகவும் களைப்பாக இருந்ததால் சீக்கிரமே உறங்கச் சென்று விட்டாள். இருந்தாலும் எழுப்பிப் பார்க்கிறேன்.” ஆனால் அக்கானா எழுப்ப வேண்டாம் என்று மறுத்து விட்டான். “நீ சொன்னால் சரி, அண்ணா.” என்று சொல்லி விட்டு அவனுக்கு முன்னால் சூடாக்கிய உணவையும் மதுவையும் வைத்தான். அக்கானா எதையும் தொடாமல் சிறிது நேரம் அமைதியாக அசையாமல் இருந்தான். அதன் பின் அன்னையை எழுப்பி விடக் கூடாது என்று அவனிடம் முணுமுணுக்க ஆரம்பித்தான். “நான் ஏன் இவ்வளவு தாமதமாக வந்தேன் என்ற காரணத்தை உனக்குச் சொல்லியே ஆக வேண்டும். இசுமோ சென்று சேர்ந்ததுமே நமது காலஞ்சென்ற மன்னர் இனியாவின் கருணையை எல்லோருமே மறந்து விட்டனர் என்பது கண்கூடாகத் தெரிந்தது. தொண்டா அரண்மனையைக் கைப்பற்றிய சுனேஹிஸாவின் அடிமையாக மாறி விட்டார்கள். எனது உறவுக்காரன் ஒருவனையும் நான் பார்க்க வேண்டி இருந்தது. அவனும் அரண்மனையில் புது அரசனின் கீழ் படைப் பிரிவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். சுனேஹிஸாவின் கீழ் வேலை பார்க்க என்னையும் அழைத்தான். நானும் புது அரசன் எப்படித்தான் இருக்கிறான் என்று பார்ப்பதற்காகவே சேரலாம் என்று ஆசைப்பட்டேன். அவனும் மிகவும் திறமைசாலிதான். மிகுந்த வீரமுடையவனும் கூட. ஆனால் அவன் தந்திரம் மிகுந்தவன், கொடூரமானவன். அதனால் அவனிடம் தொடர்ந்து வேலை பார்க்க முடியாது என்று கூறி விட்டு வந்து விட்டேன். ஆனால் அவன் எனது உறவுக்காரனிடம் என்னை அவனது வீட்டிலேயே சிறை வைக்க உத்தரவிட்டு விட்டான். நான் ஹரிமாவுக்கு ஒன்பதாம் மாதத்தின் ஒன்பதாம் நாள் திரும்புவதாக வாக்குறுதி அளித்திருப்பதாகக் கூறினேன். இருந்தாலும் எனக்கு அவர்கள் அனுமதி அளிக்கவில்லை. அரண்மனையில் இருந்து எப்படியாவது தப்பித்து விடலாம் என்று முயற்சி செய்தேன். ஆனால் இன்றுவரை நான் தொடர்ச்சியாகக் கண்காணிப்பட்டபடியே இருந்தேன் என் வாக்குறுதியை நிறைவேற்ற இயலாமல்.” “இன்று வரைக்குமா!” என்று ஆச்சரியத்துடன் கத்தினான் சாமோன். “அரண்மனை இங்கிருந்து 250 மைல்கள் இருக்குமே.” “ஆம்!” என்று பதில் உரைத்தான் அக்கானா. “எந்த உயிருள்ள மனிதனும் நடந்தே அந்த 250 மைல்களையும் கடந்து விட முடியாது. அதே நேரத்தில் நான் கொடுத்த வாக்குறுதியை மீறினால் நீ என்னை மதிக்கவும் மாட்டாய். அந்நேரத்தில் எனக்கு ஒரு பழமொழிதான் ஞாபகத்துக்கு வந்தது. ஒரு மனிதனின் ஆன்மா ஆயிரம் மைல்களைக் கூடக் கடந்து விடும் என்று. நல்ல வேளையாய் நான் வாள் வைத்திருக்க அனுமதிக்கப்பட்டிருந்தேன். அதனால்தான் வந்து சேர முடிந்தது. நம் அம்மாவை நீ நல்ல படியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.” அப்படிச் சொல்லிக் கொண்டே எழுந்து நின்றான். மறு கணம் மறைந்து விட்டான். சாமோனுக்கு உடன் உண்மை புரிந்தது. இங்கு வர வேண்டித் தன் உயிரையே மாய்த்திருக்கிறான் அண்ணன் என்று. மறு நாள் பொழுது விடிந்தவுடன் இசுமோ மாகாணத்தில் உள்ள தொண்டா அரண்மனைக்குக் கிளம்ப ஆயத்தமானான் சாமோன். மாட்சுய் நகருக்குச் சென்றவுடன் அவன் சகோதரன் ஒன்பதாம் மாதத்தின் ஒன்பதாம் நாள் அரண்மனையில் உள்ள தன் உறவினன் வீட்டில் ஹராகிரி செய்து கொண்டான் என்பதை அறிந்து கொண்டான். சாமோன் நேராக அவனது வீட்டிற்குச் சென்று அவனது குடும்பத்திற்கு முன்னாலேயே அவனை வெட்டிக் கொன்றான் அவன் செய்த சதிச் செயலுக்காக. சுனேஹிஸாவுக்குச் செய்தி தெரிந்ததும் சாமோனைத் தேடிச் செல்ல வேண்டாம் என்று உத்தரவிட்டான். நேர்மையற்றவனாகவும் கொடுங்கோலனாகவும் இருப்பினும் மற்றவர்களிடம் இருந்த உண்மைத்தன்மையை மதிக்கவும் தெரிந்து வைத்திருந்தான். அவன் சாமோனின் வீரத்தையும் நேசத்தையும் மதித்தான். அருஞ்சொற்கள் ஹராகிரி - சாமுராய் வீரர்கள் பிறரிடம் அவமானப்படக் கூடாது என்பதற்காகச் செய்யும் தற்கொலை. க்வாஷீன் கோஜி தேன்ச்சோ மன்னன் ஜப்பானை அரசாட்சி செய்து கொண்டிருந்த காலத்தில் கியோட்டோவின் வடக்கு மாகாணத்தில் க்வாஷீன் கோஜி என்றொரு பெரியவர் இருந்தார். அவருக்கு நீண்ட வெண்ணிற தாடி இருந்தது. எப்பொழுதும் ஷிண்டோ குருமார்கள் போலவே ஆடை அணிவார். ஆனாலும் அவர் புத்தமதக் கோட்பாடுகளை உபதேசித்தும் அம்மதம் சம்பந்தப்பட்ட சித்திரங்களைக் காட்டியுமே வருமானம் ஈட்டி வந்தார். ஜ்ஜன் கோவிலுக்கு நாள்தோறும் சென்று அங்குள்ள ஒரு பெரிய மரத்தில் ஒரு சித்திரத்தைக் கட்டித் தொங்க விடுவார். அதில் பாவம் செய்தவர்களுக்கு நரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் பற்றிய படங்கள் வரையப்பட்டிருக்கும். அந்தச் சித்திரம் அவ்வளவு உயிரோட்டமானதாக இருந்தது. அதில் இருக்கும் படங்கள் அனைத்தும் நேரில் பார்ப்பது போன்றே இருந்தன. அதை வைத்து மனிதர்கள் செய்யும் செயலுக்கு என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று வகுப்பு எடுப்பார். கையில் புத்த மதத்தினர் வைத்திருக்கும் ஒரு கம்பு வைத்திருப்பார். அதை வைத்தே பல்வேறு தண்டனைகளின் நெளிவு சுளிவுகளை விலாவாரியாகச் சுட்டிக் காட்டுவார். அதனால் புத்தனின் போதனைகளை எல்லோரும் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வற்புறுத்துவார். மக்கள் திரளாக வந்து அவரது போதனைகளை ஆத்மார்த்தமாகக் கேட்டுச் செல்வர். சில நேரங்களில் அவருக்கு முன்னால் விரித்த பாயில் மக்களின் காணிக்கைகள் மலை போன்று குவிந்து விடும். ஓடா நோபுனாகா எனும் குறுநில மன்னன் கியோட்டோ மற்றும் சுற்று வட்டார மாகாணங்களை ஆண்டு வந்தான். அவனது அரண்மனையில் வேலை பார்த்து வந்த சாமுராய் அரக்காவா என்பவன் ஒருநாள் அந்தக் கோவிலுக்கு வந்தான். பெரியவரின் சித்திரங்களை எல்லாம் பார்த்தான். அதன் பின் அதைப் பற்றி அரண்மனையில் பெருமையாகப் பேசினான். நோபுனாகா அவன் சொன்னதைக் கேட்டு மிகவும் ஈர்க்கப்பட்டான். அதனால் க்வாஷீன் கோஜியை சித்திரங்களுடன் உடனடியாக அரண்மனை வர வேண்டும் என்று உத்தரவிட்டான். நோபுனாகா உயிரோட்டமுடைய அந்த சித்திரத்தைக் கண்டவுடன் அவனால் ஆச்சர்யம் தாங்க இயலவில்லை. அதில் உள்ள அரக்கர்களும் பாவம் செய்த மக்களின் உயிர்களும் தன் கண்களுக்கு முன்பாகவே உயிருடன் உலவக் கண்டான். சித்திரத்தில் இருந்து அவர்களது பேச்சொலிகளும் கேட்டன. அங்கு சிந்தி இருந்த குருதியும் உண்மையிலேயே வழிந்து ஓடியது. அதனால் அவனுக்குள் இருந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்ய உண்மையில் அது ஈரமாக இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்தான். ஆனால் காகிதம் காய்ந்துதான் இருந்தது. அவன் கரம் கறை படியவில்லை. அவனுக்கு ஆச்சர்யம் மேலும் மேலும் பொங்கி வழிந்து கொண்டிருந்ததால் அதை அடக்க இயலாமல் அந்தச் சித்திரத்தை வரைந்தது யாரென்று கேட்டான். உலகமே பார்த்து வியக்கும் ஓவியர் ஓகுரி சோட்டான் வரைந்த அற்புதமான சித்திரங்கள் இவை என்று கோஜி பதில் அளித்தார். இதை வரைவதற்கு முன் அவர் ஒவ்வொரு நாளும் தவறாமல் நூறு நாட்கள் தொடர்ந்து தன் உடலையும் மனதையும் முழுமையாகத் தூய்மைப் படுத்திக் கொள்வார். பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டாலும் கடுமையான தவம் செய்வார். கியோமிட்ஸு கோவிலில் உள்ள க்வன்னோன் கடவுளிடம் கல்லும் உருகும் அளவு வேண்டிக் கொள்வார். நோபுனாகாவின் ஆர்வத்தைக் கவனித்த அரக்காவா அதை மன்னருக்குக் காணிக்கையாகக் கொடுக்க முடியுமா என்று வினவினான். ஆனால் அந்தக் கிழவர் மிகவும் துணிவுடன் பதில் அளித்தார் - “இது ஒன்றுதான் எனக்கிருக்கும் ஒரே சொத்து. அதை நான் மக்களிடம் காண்பித்துப் பணம் சம்பாதித்து வருகிறேன். இதை நான் மன்னனிடம் கொடுத்து விட்டால் எனக்கிருக்கும் ஒரே வருமானம் போய் விடும். அதே நேரத்தில் மன்னர் இதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அவர் ஒரு நூறு பொற்காசுகள் கொடுத்து எடுத்துக் கொள்ளட்டும். அதை வைத்து நான் வேறு எதாவது தொழில் செய்து பிழைத்துக் கொள்வேன். இல்லை என்றால் இதை நான் கொடுக்க இயலாது.” நோபுனாகாவுக்கு அவர் சொன்ன பதில் திருப்திகரமாக இல்லை. அதனால் அவன் அமைதியாக இருந்தான். அரக்காவா அவன் காதில் சென்று முணுமுணுத்த பின் அதற்கு அவன் தலையாட்டினான். அதனால் கோஜிக்கு ஒரு சிறு வெகுமதி ஒன்றைக் கொடுத்து அனுப்பி வைத்தார்கள். ஆனால் அந்தப் பெரியவர் வெளியேறியதும் அரக்காவா அவருக்குத் தெரியாமல் பின் தொடர்ந்தான், அவரிடம் இருந்து எப்படியாவது அதை அபகரித்து விடலாம் என்று. நகரை விட்டு வெளியேறியதும் ஒரு ஒத்தையடிப் பாதையில் அவர் நுழைந்த சமயம் அவனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பாதை தூரத்தில் இருக்கும் ஒரு மலையடிவாரத்தை நோக்கிச் சென்றது. அதற்கருகில் யாருமில்லாத ஓரிடத்திற்கு வந்து சேர்ந்ததும் அரக்காவா அவரை எட்டிச் சென்று பிடித்தான். “எதற்காக மன்னனிடம் இவ்வளவு பேராசை கொண்டு நூறு பொன் கேட்டாய்? அதற்குப் பதில் இதோ இந்த மூன்றடி இரும்பைப் பரிசாகத் தருகிறேன்” என்று சொல்லிக் கொண்டே தனது உடை வாளை உருவினான். அவரைக் கொன்று அந்தச் சித்திரத்தைக் கவர்ந்து சென்றான். மறுநாள் அரண்மனைக்குச் சென்ற அரக்காவா மன்னனுக்கு முன் தான் கவர்ந்து வந்த சித்திரத்தை அப்படியே மடிப்புக் குலையாமல் பத்திரமாகக் கொண்டு வந்து கொடுத்தான். மன்னனும் அகமகிழ்ந்து அதைத் தொங்க விடச் சொன்னான். அதைத் திறந்ததும் இருவருக்குமே ஒரு அதிசயம் காத்திருந்தது. அதில் எந்தவிதமான படங்களுமே இல்லை. அரக்காவாவுக்கோ அச்சம் சூழ்ந்து கொண்டது மன்னனுக்கு என்னவித பதிலைச் சொல்வது என்று. தெரிந்தோ தெரியாமலோ மன்னனை ஏமாற்றி விட்டதால் அதற்குத் தகுந்த தண்டனை கொடுக்கத் தீர்மாணிக்கப்பட்டது. அதனால் அவன் சில காலம் சிறையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டான் அரசன். அவன் சிறைச்சாலைக்குச் சென்றதும் க்வாஷீன் கோஜி மீண்டும் கிட்டானோ கோவிலில் அதே சித்திரங்களைக் காட்சிக்கு வைத்திருப்பது மன்னன் காதுகளுக்கு வந்து சேர்ந்தது. அரக்காவாவுக்கோ தான் கேட்பதை நம்பவே இயலவில்லை. இருப்பினும் இந்தச் சம்பவம் ஒரு அசட்டு நம்பிக்கை கொடுத்தது. எதாவது ஒரு வகையில் சித்திரத்தை மீண்டும் கைப்பற்றினால் தான் செய்த தவறைச் சரி செய்யும் வாய்ப்பாக இருக்குமே என்று நம்பினான். அதனால் தனக்கு நம்பிக்கையான சிலரை உடன் அழைத்துக் கொண்டு அந்தக் கோவிலுக்கு விரைந்தான். ஆனால் அவன் அங்கு செல்வதற்கு முன்பே அந்தப் பெரியவர் அந்த இடத்தை விட்டுக் காலி செய்திருந்தார். மீண்டும் பல நாட்கள் கழித்து கியோமிட்ஸு கோவிலில் அலை கடலெனத் திரண்ட கூட்டத்திற்கு முன் கோஜி அவர்கள் அந்தச் சித்திரத்தைக் காட்டிப் பிரசங்கம் செய்வதாக அரக்காவாவுக்குச் செய்தி வந்தது. அரக்காவா அரக்கப்பரக்க கியோமிட்ஸு கோவிலுக்கு ஓடிச் சென்றான். ஆனால் அவன் சென்று சேர்ந்த நேரத்தில் சரியாகக் கூட்டம் கலைந்து சென்று கொண்டிருந்தது. க்வாஷீன் கோஜி மீண்டும் மாயமாகிப் போனார். அரக்காவாவுக்கும் ஒரு நல்ல நாள் கிடைத்தது. அன்று க்வாஷீன் கோஜியை ஒரு சாராய விடுதியில் கண்டு கொண்டான். கண்டதும் வசமாகப் பிடித்துக் கொண்டான். ஆனால் அந்தப் பெரியவர் பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை. மாறாக ஒரு பலத்த சிரிப்பை மட்டுமே பதிலாகக் கொடுத்தார். அதன் பின் ஆரம்பித்தார் - “நான் உன்னுடன் வருகிறேன். ஆனால் நான் இந்த திராட்சை மது ரசத்தைக் குடிக்கும் வரை பொறு.” அரக்காவா அதற்கு மறுப்பு ஒன்றும் தெரிவிக்கவில்லை. சுற்றி எல்லோரும் ஆச்சர்யத்துடன் வாய் பிளந்து நின்று வேடிக்கை பார்க்க அவர் 12 புட்டி மதுவினை அலேக்காக உள்ளிறக்கினார். 12 ஆவது புட்டி முடிந்ததும் தனக்கு அது போதும் என்று திருப்தியானார். உடனே அரக்காவா அவரைக் கயிறால் கட்டி நோபுனாகாவின் அரண்மனைக்கு இழுத்துச் செல்ல உத்தரவிட்டான். அரண்மனையின் வளாகத்தில் உள்ளே நுழைந்ததும் முதன் மந்திரி க்வாஷீன் கோஜியைச் சோதனை செய்து விட்டு மிகவும் கடிந்து கொண்டார். இறுதியில் அவர் சொன்னார் - “நீங்கள் மக்களை மாய தந்திரங்கள் காட்டி ஏமாற்றி வந்திருக்கிறீர்கள். இதற்கே நீங்கள் மிகப் பெரும் தண்டனை அனுபவிக்க வேண்டி இருக்கும். ஆனால் நீங்கள் இந்தச் சித்திரங்களை மன்னர் நோபுனாகாவுக்கு அளிக்க ஒப்புக் கொண்டால் உங்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும். இல்லாவிட்டால் பெரும் கொடுமையான தண்டனையில் இருந்து தப்பிக்க இயலாது.” இந்தக் கொடுமை எல்லாம் கேட்டு விட்டு எல்லோரும் அதிசயிக்கத்தக்க வண்ணம் சிரித்துக்கொண்டே கேட்டார். “மக்களை ஏமாற்றிய குற்றத்தைச் செய்தது நான் அல்ல.” அரக்காவாவை நோக்கித் திரும்பிக் கத்தினார். “நீதான் ஏமாற்றுக்காரன்! நீதான் மன்னரிடம் அந்தச் சித்திரத்தைக் கொடுத்து அவரை மகிழ்விக்க விரும்பினாய். அதனால் என்னைக் கொலை செய்து அதைக் கவர்ந்து செல்ல முயற்சி செய்தாய். உண்மையில் குற்றம் என்றால், அதுதான் குற்றம்! நல்ல வேளையாக உன் கொலை முயற்சி வெற்றிபெறவில்லை. ஒருவேளை எண்ணியது போல் அதில் நீ வெற்றி பெற்றிருந்தால் என்ன சொல்லி நீ மன்னரிடம் மன்னிப்புக் கோரி இருக்க முடியும். எப்படி இருப்பினும் சித்திரங்களை நீ அபகரித்து விட்டாய். என்னிடம் இருக்கும் சித்திரம் ஒரு நகல்தான். அதை அபகரித்ததும் மன்னரிடம் ஒப்படைக்குமுன் உன் மனம் மாறி இருக்கிறது. அதனால் அதை நீயே வைத்துக் கொள்ளத் திட்டம் தீட்டினாய். அதனால் ஒரு வெற்றுக் காகிதத்தை அவரிடம் கொடுத்து உன் பொய்களை மறைத்துக் கொண்டாய். நான்தான் மாற்றிக் கொடுத்ததாகச் சொல்லி நாடகம் ஆடினாய். அதனால் உண்மையான சித்திரம் எங்கே என்று எனக்குத் தெரியாது. அது உனக்கு மட்டுமே தெரிந்த உண்மை.” அதைக் கேட்டதும் அரக்காவாவுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. நேரே அவரை வெட்டி வீழ்த்தி விட வாளை உருவிக் கொண்டு பாய்ந்தான். ஆனால் காவலர்கள் அவனைத் தடுத்து நிறுத்தி வைத்தனர். அதைக் கண்டவுடன் முதன் மந்திரிக்கும் புரிந்து விட்டது, அரக்காவாவும் வெகுளி அல்ல என்று. கோஜியையும் சிறைக்கு அனுப்பச் சொல்லி உத்தரவிட்டார். அதன் பின் அரக்காவாவிடம் இன்னும் நெருக்கமான விசாரணையை ஆரம்பித்தார். அதனால் இயற்கையாகவே அரக்காவாவின் குரல் மெதுவாக ஒலிக்க ஆரம்பித்து விட்டது. மிகவும் அச்சமடைந்ததன் காரணமாக அவனுக்கு நா எழவே இல்லை. தட்டுத்தடுமாறிப் பேசினாலும் தான் சொன்னதையே மறுத்துத் தவறிழைத்தான். குற்றமுடையவன் பேசுவது போலவே இருந்தன அவனது ஒவ்வொரு சொல்லும். அதனால் உண்மையைச் சொல்லும் வரை அவனைக் கழியால் அடிக்குமாறு உத்தரவிட்டார் முதன்மந்திரி. ஆனால் அவனால் உண்மையைச் சொல்ல முயற்சிக்கக் கூட முடியாது. அதனால் அவன் நினைவிழந்து போகும் வரை ஒரு மூங்கில் கழியால் தொடர்ந்து அடிக்கப்பட்டான். செத்துவிட்டவன் போல் இறுதியில் நிலத்தில் சாய்ந்து விட்டான். க்வாஷீன் கோஜிக்கு விபரம் சொல்லப்பட்டது. அதைக் கேட்டும் அவர் நகைத்தார். சிறிது நேரம் கழித்து சிறைக் காவலரிடம் சொன்னார் - "இங்கே பார். அரக்காவா ஒரு முரடன் போலவே என்னிடம் நடந்து கொண்டான். அதனால் வேண்டுமென்றே நான் அவனை மாட்டி விட்டேன், அவன் செய்த தவறுக்குத் தக்க தண்டனை அனுபவிக்க வேண்டுமே என்று நினைத்து. ஆனால் தயவு செய்து முதன்மந்திரியிடம் சொல்லி விடு அரக்காவாவுக்கு எதுவும் தெரியாது என்று. நான் முதலில் இருந்து நடந்ததை அனைத்தையும் திருப்திகரமாகச் சொல்லி விடுகிறேன். அதனால் க்வாஷீன் கோஜியை மீண்டும் முதன்மந்திரியின் முன் கொண்டு போய் நிறுத்தினார்கள். அங்கே அவர் தன் வாக்குமூலத்தைக் கொடுக்க ஆரம்பித்தார் - “எந்தவொரு உண்மையான மேம்பட்ட சித்திரத்திலும் ஒரு உயிர் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சித்திரம் தன் விருப்பத்தின் பேரில் அதற்கு உயிர் கொடுத்தவனை விட்டு அகல மறுக்கும். அதன் உரிமையாளனிடமும் அப்படியே நடந்து கொள்ளும். அப்படிப்பட்ட சிறந்த சித்திரங்களுக்கு உயிர் இருக்கின்றன என்பதற்கு எடுத்துக்காட்ட நிறைய கதைகள் இருக்கின்றன. ஹோகன் என்ஷீன் என்ற ஓவியர் வரைந்த சில குருவிகள் அப்படித்தான் சித்திரத்தை விட்டுப் பறந்து சென்றிருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அதே போல் அவர் வரைந்த குதிரைகளும் இரவில் புல் மேய்ந்து வர வெளியில் செல்லும் என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்தச் சிக்கலைப் பொறுத்தவரையில் மன்னர் நோபுனாகா அதன் முழு உரிமையாளராக ஆகவில்லை. அதனால் அவர் முன் படம் விரிக்கப்பட்டதும் வரையப்பட்ட அனைத்தும் மறைந்து விட்டன. நான் முதலில் கேட்ட தொகையைக் கொடுத்திருந்தால் - அதாவது நூறு பொற்காசுகள் - அவைகள் அனைத்தும் மீண்டும் இதே வெற்றுப் படத்தில் வந்தமரும் தாங்களாகவே விருப்பப்பட்டு. அதனால் நாம் முயற்சி செய்து பார்க்கலாம்! இதில் எந்தவிதச் சிக்கலும் இல்லை. படம் வரவில்லை என்றால் நான் உடனே பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்.” அதைக் கேட்டதும் நோபுனாகா நூறு பொற்காசுகள் கொடுக்க உத்தரவிட்டான். அவனே நேரடியாக அதைக் காணவும் வந்து விட்டான். அந்தச் சித்திரப்படாம் அவன் முன் விரிக்கப்பட்டது. எல்லோரும் ஆச்சர்யத்துடன் கவனித்துக்கொண்டிருக்க அந்தப்படம் மீண்டும் உயிருடன் துளிர்த்தது எல்லாவித விவரங்களுடன். ஆனால் இப்பொழுது வர்ணங்கள் கொஞ்சம் மங்கி இருந்தது. உயிர்களும் அரக்கர்களும் முன்னிருந்தது போல் உயிரோட்டமாக இருக்கவில்லை. அதைக் கண்டவுடன் அதற்கு என்ன காரணம் என்று அரசன் வினவினான். அதற்கு அவர் சொன்னார் - “முன்பு பார்த்த சித்திரத்தின் அன்றைய விலை அது. இன்று நீங்கள் காணும் சித்திரம் நீங்கள் இன்று கொடுத்த பணத்திற்கு நிகரானதே. நூறு பொற்காசுகள். வேறெப்படி இருக்க இயலும்?” அவரிடம் வாக்குவாதம் செய்வது வீண் என்று எல்லோருக்கும் புரிந்து விட்டது. அதனால் அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டான் மன்னன். அரக்காவாவும் விடுதலை செய்யப்பட்டான். அவனுக்கு ஏற்கெனவே தண்டனை கொடுக்கப்பட்டது என்பதால். அரக்காவாவுக்கு ஒரு தம்பி இருந்தான். அவன் பெயர் பூய்ச்சி. அவனும் நோபுனாகாவின் அரண்மனையில் சாமுராயாக இருந்தான். தன் சகோதரனுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை கேட்டு அவன் மிகவும் கொதித்துப் போயிருந்தான். அதனால் க்வாஷீன் கோஜியைக் கொல்ல வேண்டும் என்று அவன் முடிவெடுத்திருந்தான். அவன் நினைத்தது போலவே உடனே அவனுக்கு நல்ல நேரம் கிடைத்து விட்டது. ஆம் அந்தப் பெரியவர் ஒரு நாள் அதே மது விடுதிக்குச் சென்று மது அருந்திக் கொண்டிருந்தார். அவர் பின்னாடியே சென்ற அவனும் அவரது தலையை அங்கேயே வெட்டிக் கொன்றான். அவரிடம் இருந்த நூறு பொற்காசுகளையும் வெட்டிய தலையையும் ஒரே துணியில் சுற்றி எடுத்துக் கொண்டான். வேகமாக அதனை எடுத்துக் கொண்டு தனது சகோதரனிடம் காண்பிக்க எடுத்துச் சென்றான். அவன் முன் அதை விரித்தபோது தலைக்குப் பதில் காலியான மது புட்டியும் தங்கத்திற்கு பதில் சாணியும்தான் இருந்தன. மது விடுதியில் இருந்து வந்த செய்தியைக் கேட்டு இன்னும் ஆடிப் போய் விட்டனர். அங்கிருந்த தலை இல்லாத முண்டமும் திடீரென்று மாயமாய் மறைந்து விட்டதாம். என்ன ஆனது என்று யாருக்கும் தெரியவில்லை. அதன் பின் கிட்டத்தட்ட ஒரு மாதம் வரைக்கும் அவரைப்பற்றி எந்தவிதத் தகவலும் கிடைக்கவில்லை. ஒரு மாதம் கழித்து நோபுனாகாவின் அரண்மனை வாசலில் குடித்துவிட்டு ஒருவன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். அவன் விட்ட குறட்டைச் சத்தம் தூரத்தில் எதோ இடி இடிப்பது போன்றே கேட்டுக் கொண்டிருந்தது. ஒரு சாமுராய் அது க்வாஷீன் கோஜிதான் என்று உறுதியாகச் சொன்னான். அங்கு உறங்கிக் கொண்டிருந்த காரணத்திற்காகவே அவரைச் சிறையில் தள்ளி விட்டார்கள். இருந்தும் அவர் எழுந்திருக்கவில்லை. அங்கு அவர் தொடர்ந்து பத்து நாட்கள் உறங்கிக் கொண்டிருந்தார். அதே குறட்டைச் சத்தமும் தொடர்ந்து இடி போல் கேட்டுக் கொண்டே இருந்தது. இந்த நேரத்தில் மன்னன் நோபுனாகா அவனது படைத் தளபதி ஒருவனால் கொல்லப்பட்டான். அவன் கையில் அரசாட்சி வந்ததும் க்வாஷீன் கோஜி பற்றி அவனிடம் சொல்லப்பட்டது. அவனும் அந்தக் கைதியைக் காண வேண்டும் உத்தரவிட்டான். அந்தப் புதிய மன்னன் முன்பு கோஜி அழைத்து வரப்பட்டார். அவன் அவரை மிகவும் மரியாதையாக நடத்தினான். அவரை ஒரு விருந்தினர் போலவே கவுரவித்தான். அவருக்கு அருமையான உணவு வரவழைக்கப்பட்டது. அவர் சாப்பிட்டு முடித்தபின் அரசன் அவரிடம் கேட்டான். “உங்களுக்கு திராட்சை மது மிகவும் பிடிக்கும் என்று கேள்விப்பட்டேன். ஒரு நேரத்தில் எத்தணை புட்டி அருந்துவார்கள்?” என்று கேட்டான். கோஜி பதில் அளித்தார். “எனக்கே எவ்வளவு என்று தெரியாது. போதை வரும் என்று தெரிவதற்கு முன்பே நான் நிறுத்தி விடுவேன்.” அதன் பின் மன்னர் ஒரு பெரிய குடுவையை அவர் முன் வைத்தார். வேலைக்காரனிடம் அது காலியானவுடன் நிரப்ப வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். க்வாஷீன் கோஜியும் பத்து முறை அதைக் காலி செய்து விட்டு மீண்டும் நிரப்பச் சொல்லிக் கேட்டார். ஆனால் அந்த வேலைக்காரன் மதுவே தீர்ந்து விட்டது என்று சொல்லி விட்டான். எல்லோரும் அவரையே ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அரசன் அவரிடம் கேட்டான் - “உங்களுக்கு இன்னும் திருப்தியாக இல்லையா?” “ஆம்!” என்று பதில் அளித்தார் அவர். “ஓரளவுக்கு திருப்தி கிட்டியது. உங்களது அருமையான கவனிப்புக்கு நன்றி கூறும் விதமாக என்னுடைய ஒரு சித்திரத்தைக் காட்டுகிறேன். அதை நீங்கள் நன்றாகக் கண்டு களியுங்கள்.” எட்டு மடிப்பாக மடித்து வைத்திருந்த அந்தப் படத்தை விரித்தார். அதில் எட்டு விதமாக ஓமி என்னும் ஏரியின் படங்கள் வரையப்பட்டிருந்தன. எல்லோரும் அந்தப் படத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு படத்தில் தூரத்தில் இருக்கும் படகோட்டி படகில் துடுப்பு வலிப்பது போன்று ஒருவனை ஓவியர் வரைந்திருந்தார். அந்தப் படகும் சித்திரத்தில் ஒரு இன்ச் அளவே இருக்கும். கோஜி அந்தப் படகோட்டியைப் பார்த்துக் கையசைத்தார். எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்தப் படகு சட்டென்று இவரை நோக்கித் திரும்பியது. சித்திரத்தின் முகப்பை நோக்கி முன்னேறிக் கொண்டே இருந்தது. அது முன்னேறி வர வர அதன் உருவம் பெரிதாகிக் கொண்டே வந்தது. இப்பொழுது அந்த படகோட்டியின் அங்க அடையாளங்கள் எல்லாம் தெளிவாகத் தெரிந்தன. இன்னும் அருகே படகு வந்தது. இன்னும் இன்னும் பெரிதாகவே தெரிந்தது. மிக அருகில் வந்ததும் சட்டென்று அதனுள் இருந்து நீர் வழிந்தோடத் துவங்கியது. சித்திரத்தில் இருந்து அந்த அறைக்குள் வழிந்தது. சிறிது நேரத்தில் அந்த அறை வெள்ளக் காடாகியது. அங்கிருந்தவர்கள் அனைவரும் தங்கள் உடையைத் தூக்கிக் கட்டினார்கள் முழங்கால்களைத் தாண்டி நீர் உயரும் போது. அதே நேரத்தில் படகும் உள்ளிருந்து அறைக்குள் இறங்கத் தொடங்கியது. ஒரு உண்மையான மீன் பிடிப்படகு. துடுப்பு கிரீச்சிடும் ஓசையும் கேட்டது. இன்னும் வெள்ளம் அதிகரித்துக் கொண்டேதான் இருந்தது. இடுப்பளவு நீரில் அவர்கள் நின்று கொண்டு செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்தார்கள். அதன் பின் படகு க்வாஷீன் கோஜியின் அருகில் வந்து நின்றது. அவர் அதில் ஏறிக் கொண்டார். படகோட்டி அவரை ஏற்றியதும் சட்டென்று படகைச் செலுத்தத் துவங்கினான். படகு செல்ல ஆரம்பித்ததும் வெள்ளம் வேகமாக வடிய ஆரம்பித்தது. அனைத்தும் மீண்டும் சித்திரத்தின் உள்ளேயே செல்ல ஆரம்பித்தது. படகு சித்திரத்தின் முகப்பைக் கடந்ததும் சட்டென்று அறையினுள் வெள்ளம் வந்ததற்கான சுவடே இல்லாமல் மறைந்து விட்டது. அந்தப் படகும் சித்திரத்தினுள் வரையப்பட்டிருந்த நீரில் மிதந்து கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக தூரமாகச் சென்று கொண்டிருந்தது. அப்படிச் செல்லச் செல்ல அதன் உருவமும் சிறிதாக்கிக் கொண்டே இருந்தது. இறுதியில் ஒரு புள்ளியாகி மறைந்து விட்டது. அதோடு க்வாஷீன் கோஜியும் மறைந்து விட்டார். அதன் பின் அவர் ஜப்பானில் எங்கேயும் காணப்படவில்லை. கணியம் அறக்கட்டளை [] தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழலை உருவாக்குதல். பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். எமது பணிகள் - கணியம் மின்னிதழ் - kaniyam.com - கணிப்பொறி சார்ந்த கட்டுரைகள், காணொளிகள், மின்னூல்களை இங்கு வெளியிடுகிறோம். - கட்டற்ற தமிழ் நூல்கள் - FreeTamilEbooks.com - இங்கு யாவரும் எங்கும் பகிரும் வகையில், கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில், தமிழ் மின்னூல்களை இலவசமாக, அனைத்துக் கருவிகளிலும் படிக்கும் வகையில் epub, mobi, A4 PDF, 6 inch PDF வடிவங்களில் வெளியிடுகிறோம். - தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கம் - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல். மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். https://github.com/KaniyamFoundation/Organization/issues இந்த இணைப்பில் செயல்களையும், https://github.com/KaniyamFoundation/Organization/wiki இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account