[] [இசை ஜீனியஸ் ராஜா] இசை ஜீனியஸ் ராஜா இசை ஜீனியஸ் ராஜா ரவி நடராஜன் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை இசை ஜீனியஸ் ராஜா Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.. This book was produced using PressBooks.com. Contents - இசை ஜீனியஸ் ராஜா - சமர்ப்பணம் - முன்னுரை - 1. பகுதி -1 தெரிந்தும் தெரியாமலே ஏதோ… - 2. பகுதி -2 இளங்காத்து வீசுதே… - 3. பகுதி -3 சற்று முன்பு பார்த்த மேகம்… - 4. பகுதி -4 முகிலோ மேகமோ… - 5. பகுதி -5 பூ பூத்தது… - 6. பகுதி -6 காற்றில் வரும் கீதமே… - 7. பகுதி - 7 மெல்ல ஊர்ந்து ஊர்ந்து… - 8. பகுதி -8 நன்றி சொல்ல வேண்டும்… - 9. பகுதி -9 ஒரு காற்றிலாடும்… - 10. பகுதி -11 எங்கே நீ சென்றாலும் - 11. பகுதி -12 பாட்டுச் சொல்லி… - 12. பகுதி -13 தென்றலும் மாறுது… - 13. பகுதி -14 தாவித் தாவிப் போகும்… - முடிவுரை - Free Tamil Ebooks – எங்களைப் பற்றி - உங்கள் படைப்புகளை வெளியிடலாமே 1 இசை ஜீனியஸ் ராஜா [Cover Image]   இசை ஜீனியஸ் ராஜா உருவாக்கம்: ரவி நடராஜன் மின்னஞ்சல்:  ravinat@gmail.com மேலட்டை உருவாக்கம்: ஜெகதீஸ்வரன் நடராஜன் மின்னஞ்சல்: sagotharan.jagadeeswaran@gmail.com மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள் மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். 2 சமர்ப்பணம் ராஜா, தன்னுடைய மேதைமையால், பல மெய்சிலிர்க்கும் இசையை உருவாக்கியுள்ளார்.ஆனால், அவர், எதையும், யாருக்கும் சொல்லித் தர மாட்டார்.அதற்கு, அவருக்கு நேரமில்லை.அவர் குறியெல்லாம், அடுத்த கட்டப் பயணத்தின் மீதுதான். ராஜாவின் இசைக்கு, அடுத்தபடியாக எனக்குப் பிடித்தது, இசை அறிந்த அவரின் ரசிகர்கள். அதிலும், சற்றும் தன்னலமற்ற ரசிகர்கள். நீங்கள் ஒரு ரசிகர் என்று இவர்களுக்கு ஊர்ஜிதமாகி விட்டால் போதும், இசை சம்மந்தப்பட்ட எதையும் இவர்கள் இலவசமாக சொல்லித் தரத் தயங்க மாட்டார்கள். உலகின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும், அது ஒரு பிரச்னையில்லை. இவ்வாறு, எனக்கு பல இசை சம்மந்தப் பட்ட விஷயங்களை சொல்லிக் கொடுத்தவர்கள் ஏராளம். பல ஆண்டுகள், தொடர்ந்து ராஜாவின் மேதைமை பற்றி எழுதி வர முக்கிய காரணமான இவர்களுக்கு, இந்த மின்னூல் சமர்ப்பணம். 3 முன்னுரை ராஜா, ரவி, ரேடியோ ராஜா, தான் எதையும் உருவாக்குவதில்லை என்கிறார். அவர் நம்முடைய இசை பிரபஞ்சத்தில் இருப்பதையே நமக்கு வழங்குவதாகச் சொல்கிறார். இசைக்கான தேவை வரும் பொழுது, அவரால், இத்தகைய ‘இசை அதிர்வுகளுடன்’ தொடர்பு கொள்ள முடிகிறதாம். அவற்றின் வெளிப்பாடே, அவரிடமிருந்து, நமக்கு கிடைக்கும் இசை என்கிறார்! அதாவது ஒரு ரேடியோவைப் போல… பாடல்கள், மின்காந்த கதிர்வீச்சாக நம்மைச்சுற்றி எப்பொழுதும் இருக்கிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், ரேடியோவை உயிர் பெறச் செய்து, தகுந்த அதிர்வெண்ணை தேர்ந்தெடுத்தால், ஆண்டென்னா மூலம் பெற்று, ஒலிபரப்பப்படும் பாடலை நம் காதுகளுக்கு சேர்த்துவிடுகிறது. ரேடியோ அணைக்கப்பட்டிருந்தால், அந்தப் பாடல் இல்லையென்று ஆகிவிடுமா? இருக்கத்தான் செய்கிறது. அணைக்கப்பட்டிருக்கும் ரேடியோவுக்கு என்ன பொருள்?அத்தகைய இசைத் தேவை நம்மிடம் இல்லாத நிலையைக் குறிக்கிறது.ஆனால், ரேடியோ நம்மிடம் இருக்கிறது, பல பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டேதான் இருக்கிறது. ராஜா போன்ற ஒரு இசை ஜீனியஸ் இத்தகைய ரேடியோ போன்று வாழ்பவர்கள். நாம் அந்த ரேடியோவை சில சமயமே பயன்படுத்துகிறோம். பயன்படுத்தும் பொழுது அவரால், நம்மை சூழ்ந்திருக்கும் இசை பிரபஞ்சத்துடன் தொடர்பு கொண்டு, இசையை வழங்க முடிகிறது. என் பார்வையில், ரவி நடராஜனும் அப்படிப்பட்டவர் என்று சொல்லலாம். அவர், ராஜாவின் இசையை, ஒரு ஆண்டென்னாவைப் போல, தொடர்பு கொண்ட வண்ணம் இருக்கிறார். நல்ல வேளை, ராஜா ரேடியோவை சில நேரங்களாவது நாம் உயிர்பெறச் செய்கிறோம்.அதே போல, தன்னுடைய ராஜா இசைத் தொடர்பை தன்னுடனேயே வைத்துக் கொள்ளாமல், ரவியும், தன்னுடைய எழுத்துக்கள் மூலம் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.   இந்த மின்னூல், அத்தகைய ஒரு அருமையான முயற்சி. ரவி, தன்னுடைய சமர்ப்பணத்தில், எண்ணற்ற ராஜா ரசிகர்கள் அவருக்கு பல இசை விஷயங்களை கற்றுத் தந்திருக்கிறார்கள் என்கிறார். இதை வேறு கோணத்திலும் பார்க்கலாம். ஒரு நல்ல தருணத்தில், சில ராஜா ரசிகர்களை, தன்னுடைய குருவாக அவர் நினைத்தது பற்றிப் பெருமைப்படலாம். [Description: Ella Magal's photo.]”நீங்கள் என்ன பெரிய ஜீனியஸா?” பெரும் மேதைகளை இப்படி நாம் கேள்வி கேட்டால், அவர்கள் என்ன சொல்வார்கள்? அவர்கள் என்ன சொல்லுவார்கள் என்பதை விடுங்கள். நாம் அவர்களை பல்வேறு குணாதிசயங்கள் கொண்டவர்களாக சித்தரிக்க ஆரம்பித்துவிடுவோம் : தலைகணம் கொண்டவர், கிறுக்குத்தனமானவர், அடக்கமானவர், நேர்மையானவர், சாதுர்யமானவர், சாமர்த்தியமானவர் என்று நமக்கு தோன்றியவற்றை சொல்கிறோம், எழுதுகிறோம். சுருக்கமாகச் சொல்லப் போனால், எந்த ஒரு ஜீனியஸுக்கும், தன்னுடைய மேதைமையை நிரூபிக்க அவசியமில்லை. அந்த பொறுப்பு, மற்றவர்களிடமே உள்ளது. ஏன் இவ்வாறு மற்றவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்? ஏனென்றால், அத்தகைய விளக்கங்கள் அவர்களது படைப்புகளை முழுவதும் புரிந்து கொள்ள, மற்றும் ஆழமாக அனுபவிக்க உதவுகிறது. மேலும், இத்தகைய விளக்கங்களைப் புரிந்து கொள்ள நம்மை நாமே உயர்த்திக் கொள்ளவும் உதவுகிறது. ரவி, இந்த மின்னூலில், ஜீனியஸ் என்றால் என்ன, என்பதை விஞ்ஞான மேற்கோள்களுடன், அதே சமயம், இசையுடன் சம்மந்தப்படுத்தி அழகாக விளக்கியுள்ளார். மேலும், மிக பொறுமையாக, பல ராஜா படைப்புகளை உதாரணமாக முன் வைத்து, அவருடைய வாதங்களை நிரூபிக்கவும் செய்கிறார். இங்குதான் ராஜாவின் விளக்கத்தை மீண்டும் சொல்ல வேண்டும். அவரது இசை, மின்காந்த கதிர்வீச்சு போல எங்கும் இருக்கிறது. ஆனால், அவற்றுடன் தொடர்பு கொள்ள ரவி போன்றவர்கள் தேவை. அதுவும் சரியான அதிர்வெண்ணில், சரியான புரிதலுடன் அவரால் ராஜாவின் இசையோடு இணைய முடிகிறது. அவரது இணையதளத்தை படிப்பவர்கள், அவருடைய அயராத முயற்சிகளை நன்கு அறிவார்கள். ராஜாவின் உருவமற்ற படைப்புகளை, அழகாக வகைப்படுத்தி, தேவைகேற்ப காட்சி சார்ந்த உதாரணங்களுடன், பல இசை துணுக்குகளுடன், எல்லா தரப்பட்ட இசை பிரியர்களுக்கும் வழங்கி வருகிறார். ராஜாவுக்கு, இத்தகைய விளக்கங்கள் தேவையில்லைதான்.ஆனால், நமக்கு தேவை. ராஜா, அவரது ‘கீதாஞ்சலி’ என்ற இசை வெளியீட்டில், இவவாறு சொல்லியிருப்பார்: கடலுக்கு நான் செய்யும் திருமஞ்சனம் செங்கதிருக்கு நான் கட்டும் நீராஞ்சனம் அம்மா நான் பாடும் கீதாஞ்சலி உன் அருள் என்னும் சாகரத்தில் தோன்றும் துளி ரவி போன்றவர்கள், இதுபோன்ற திருமஞ்சனமும், நீராஞ்சனமும் செய்து கொண்டே இருக்க வேண்டும். வாழ்த்துக்கள்.   சி.எஸ். ராமசாமி ஹைத்ராபாத் ஜூலை 8, 2014. [pressbooks.com] 1 பகுதி -1 தெரிந்தும் தெரியாமலே ஏதோ… இன்று தமிழர்களிடையே, பல ஆங்கிலச் சொற்கள், சரளமாக வலம் வருகின்றன. அவற்றில், பலவற்றிற்கு சரியான அர்த்தம் புரியாமலே உபயோகிப்பது நம்முடைய வழக்கமாகிவிட்டது. வழக்கமாக, சினிமா வட்டாரங்களில் சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார் என்ற ஆங்கில சொற்கள் ஒரு முகஸ்துதிக்காக சினிமாக்காரர்களால் பயன்படுத்தப்படுகிறது, ரஜினிகாந்த் என்னவோ தன்னை ஒரு நடிகராகத்தான் சொல்லிக் கொள்கிறார். அது, அவரது தொழில். ஆனால், அவரைச் சுற்றி இருப்பவர்கள், மற்றும் ஊடகத்தார், அவரை ஒரு நடிகராகப் பேசி/எழுதி, பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இசைத்துறையையும் இது விட்டு வைக்கவில்லை. அதுவும் சினிமா இசைத்துறையில் இது ஒரு வணிக சந்தர்ப்பவாதமாகவே மாறிவிட்டது. பலவித இசைகலைஞர்களை Composer என்று அழைக்க ஆரம்பித்தனர். பலருக்கும் ஒரு கம்போஸர், என்ன செய்யக்கூடியவர் என்றே சரியாகத் தெரியாமல், இந்த ஆங்கிலச் சொல்லை உபயோகிக்கிறார்கள். மேற்குலகில், இசைத்துறையில் இருப்பவர்களை, சகட்டு மேனிக்கு, கம்போஸர் என்று அவர்கள் அழைப்பதில்லை. ஒரு கம்போஸரின் வேலை என்ன? புதிய மெட்டுக்களை உருவாக்குபவர்கள் எல்லோரும், கம்போஸர் ஆவதில்லை. உதாரணத்திற்கு, இந்தி சினிமாத் துறையில், பாட்டின் மெட்டை ஒருவர் உருவாக்குகிறார். பாடல் சம்மந்தப்பட்ட, பிற வேலைகளை,  மற்றவர்கள் செய்து, பாடல் மற்றும் பின்னணி இசை, வெளிவருகிறது. ஒரு சிறந்த கம்போஸர் என்பவருக்கு பல விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும். முக்கியமாக, 1) மெட்டமைத்தல் 2) வாத்திய இசைக்கு குறிப்பெழுதுவது (நமது இசையில் ஸ்வரங்கள், மேற்கத்திய இசையில் குறிப்புகள் – அதாவது Staff notation) 3) வாத்திய இசையை ஒழுங்குபடுத்துவது, அதாவது arrangement 4) பாடல், மற்றும் வாத்திய இசையை நடத்துவது, அதாவது conducting 5) சினிமாவில் காட்சிக்கு ஏற்ப பின்னணி இசையை உருவாக்குவது. இது சினிமா கம்போஸர் –களுக்கு, மிக முக்கியமான தகுதி கம்போஸர்களுக்கு, வாத்தியம் வாசிக்க தெரிந்திருக்க வேண்டியதில்லை. ஆனால்,. இசைக்கருவிகள் பற்றி ஏராளமாகத் தெரிந்திருக்க வேண்டும். பொதுவாக, கம்போஸர்கள், மேற்குலகில், பியானோ நன்றாக வாசிக்கத் தெரிந்தவர்கள். இக்கருவி, புதிய மெட்டுக்களை உருவாக்க மிகவும் தோதானது. ஆனால், உலகின் மிகச் சிறந்த கம்போஸர்கள் எந்த கருவியின் துணையுமின்றி தன் மனதில் தோன்றியதை, இசைக் குறிப்பாக எழுதக்கூடியவர்கள். இந்தியாவில், எனக்குத் தெரிந்தவரை,  இப்படி இயங்குபவர் இளையராஜா (இவர் யாருக்கும் இளையவர் இல்லை என்பது என் கருத்து, அதனால், ராஜா என்றே இவரை அழைக்க விருப்பம்!). ஒருவரே.. [Text Box: பாஹ்] [Description: Johann Sebastian Bach]மேற்குலகில் கம்போஸர்கள் பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளில் மேற்பார்வையிடுகிறார்கள். ஜான் வில்லியம்ஸ் (John Williams) போன்றவர்கள், இசையை, நடத்தவும் செய்வார்கள். இசையை நடத்தத் தெரிவது அவசியம். ஆனால், மேற்குலகில் பெரும்பாலான கம்போஸர்கள், அப்படி இசை நடத்துவதில்லை. இன்னொரு முக்கிய விஷயம். நம்முடைய பழக்கத்தில், ஒரு பாடலை உருவாக்குபவர் இசையமைப்பாளர். ஆனால், ஒரு கம்போஸர், அப்படி பாடல்களை உருவாக்க வேண்டியதில்லை. பாஹும் (JS Bach) மொசார்டும் (Mozart) இப்படி எந்த பாடலை உருவாக்கினார்கள்? இவர்களது வேலை இசை கோர்வைகளை (musical compositions) உருவாக்குவது. பாடல் என்பது இசைக் கேர்வைகளை உபயோகிக்கும் ஒரு பயன்பாடு. நம்முடைய இசையில், ராகங்கள் உள்ளன. அவற்றுக்கு பல சட்டங்கள் உள்ளன. எந்த ஸ்வரங்களை, எப்படி உபயோகிக்க வேண்டும் என்று பல சட்டங்கள் உள்ளன. ஒரு ராகத்தில் அமைந்த, பல பாடல்கள் உள்ளன.ஆனால், ஒரு கம்போஸரின் வேலை, ராகங்களை உருவாக்குவது என்று கொள்ளலாம். ராஜா, தனது பாடல்களை உருவாக்கும் பொழுது, இசைக்கோர்வைகளை உருவாக்குகிறார். இவ்வாறு உருவாக்கிய இசைக் கோர்வைகளை, (பெரும்பாலும் இடையிசை மற்றும் பின்னணி இசை) சாம்ர்த்தியமாக, திரைப்படத்திற்காக, உருவாக்கிய பாடலுடன், வெகு எளிதாக, இணைக்கிறார். [Text Box: எம்.எஸ்.வி.] [Description: http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSthXd6z7OCX3Mw3Et1s_J32PonjS3gajPX1TLOvGwi-wnjxEjc8g] ஆரம்பத்தில் நாம் சினிமா இசைக்கலைஞர்களின் தலைவர்களை இசையமைப்பாளர்கள் என்றே சொல்லி வந்தோம். நாளடைவில் இதுவே உருமாறி கம்போஸர் ஆகிவிட்டது. இதுபோன்ற சொற்களால், எம்.எஸ்.வி. மற்றும் கே.வி.மகாதேவன் போன்றோரை தமிழுலகம் என்றும் கூறியதிலை. எம்.எஸ்.வி –யை ‘மெல்லிசை மன்னர்’ என்று சொல்லியே பழகிவிட்டோம். ஆனால், இன்றைய விக்கிபீடியாவில் இவர்கள் பெயர்களைத் தேடினால், சில இடங்களில் இசையமைப்பாளர் மற்றும் சில இடங்களில் கம்போஸர் என்றும் குழப்பி வருகிறார்கள்.  இது, அவர்களின் குறையல்ல. அவர்களைப் பற்றி எழுதுவோரின் குறை. 1960 மற்றும் 1970 –களில், முன்னணியில் இருந்த இசையமைப்பாளர்களை, ‘திறமைசாலிகள்’, மற்றும் ‘கைதேர்ந்தவர்கள்’ என்றே சொல்லி வந்தோம். ஆனால், இன்றோ, பல இசையமைப்பாளர்களையும் ஜீனியஸ், அதாவது ’மேதை’ என்று சொல்வது வழக்கமாகிவிட்டது. ஜீனியஸ் என்ற ஆங்கிலச் சொல்லின் அர்த்தம் அவ்வளவு எளிதாகப் புரியும் விஷயமல்ல. விஞ்ஞான உலகில் அதிகமாக புழங்கும் இச்சொல், நாளடைவில் மற்ற துறைகளில், மேதைகளை குறிக்கும் சொல்லாக வலம் வரத் தொடங்கியது. ஆனால், இச்சொல்லின் அர்த்தம், அந்தந்தத் துறையைப் பொறுத்து, மாறுபடும் ஒன்று. நமது இந்திய சினிமாத் துறையில் பல இசையமைப்பாளர்களை ஜீனியஸ் என்று அழைப்பது, அர்த்தமற்ற ஒரு வழக்கமாகி விட்டது. உண்மையிலே, ஒரு ஜீனியஸ் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்? ஒரு திறமைசாலிக்கும், ஜீனியஸுக்கும் என்ன வித்தியாசம்? வணிக வெற்றிக்கும் ஜீனியஸுக்கும் சம்மந்தம் உண்டா? இது போன்ற பல கேள்விகளை விஞ்ஞான துறை மேற்கோள்களோடு அறிவது மிக முக்கியம். நம்மில் வாழும்/வாழ்ந்த சினிமா இசைக் கலைஞர்களில் ராஜா ஒரு ஜீனியஸ் என்பது என் கருத்து. இந்த மின்னூலில், ஏன் அவர் அப்படிப்பட்ட மேதை என்பதை அறிவுபூர்வமாக ஆராய்வோம். ராஜாவின் வாழ்க்கை வரலாறு, பல இடங்களில் பதிவாகியுள்ளது. இந்த புத்தகத்தில் அதற்கு இடமில்லை. பல தமிழர்கள், ராஜாவின் சொற்பொழிவுகள், சினிமாக்காரர்கள் தொடர்பு, மற்றும் அவரது பேட்டிகள் என்று ஒரு கோணத்திலிருந்தே, அவரைப் பார்க்கிறார்கள். மேலும், அவரது வியாபார வெற்றி தோல்வியையும் வைத்து, அவரை எடை போடுகிறார்கள். கடைசியாக, பலரும் அவரது இசையை, உணர்வுபூர்வமாக, அணுகுகிறார்கள். தங்களது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், தோன்றிய உணர்வுகளோடு, ராஜாவின் இசையை சம்மந்தப் படுத்துகிறார்கள். இதில் தவறேதும் இல்லை. ஆனால், இத்தகைய அணுகுமுறைகளால், அவரது இசை மேதைமை அடிபட்டுப் போகிறது. உதாரணத்திற்கு, மேற்கத்திய பல்லிசை மேதையான பீத்தோவன் வாழ்க்கையில் நடந்த பல சர்ச்சைகள் இன்று சிலருக்கே வெளிச்சம். ஆனால், பலருக்கும், அவரது சிம்ஃபோனி இசை தெரியும். காலத்தை தாண்டி நிற்பது, அவரது இசை ஒன்று மட்டுமே. அது போல, ராஜா சம்மந்தப் பட்ட சர்ச்சைகளுக்கு இங்கு இடமில்லை. இசையில் அவர் எப்படி ஒரு ஜீனியஸ் என்பதை, படிப் படியாக உதாரணங்களுடன் விளக்குவதே இந்த மின்னூலின் நோக்கம். ஏனென்றால், ராஜா போன்ற இசை மேதைகள் பல நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் தோன்றுவார்கள். 2 பகுதி -2 இளங்காத்து வீசுதே… மேதை’ என்ற சொல், நம்முடைய சமூகத்தில், பொதுவாக, படிப்பை சார்ந்த ஒரு விஷயமாகக் கருதப்படுகிறது. 1960 –களில் ‘படிக்காத மேதை’ என்று திரைப்படமே வந்தது. ராமானுஜன் ஒரு கணித மேதை என்று எல்லோரும், பொதுவாக ஒப்புக் கொள்கிறோம். ஆனால், நம்முடைய கர்னாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரை, ஒரு மேதையாக ஏனோ சொல்வதில்லை. [Description: http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQFnfuMeGwpzxl9xC7VP___KBhH9oIcRrxoK6aUoENFYnu9J2en] [Text Box: அமரர் சுஜாதா]இன்று, கர்னாடக இசையில் மிகப் பெரிய ஆளுமை உள்ள பாலமுரளிகிருஷ்ணாவை நாம் எப்போதோ ஒரு இசை மேதையாகச் சொல்கிறோம். தமிழ் எழுத்துலகில் புரட்சியே செய்த அமரர் சுஜாதா ரங்கராஜனை நாம் மேதை என்று அழைப்பதில்லை. சமுதாயத்தின், ஒரு சிலருக்கே மேதையாகும் வாய்ப்பை நாம் அளிக்கிறோம். இது, எல்லா கலாச்சாரங்களிலும் நடக்கும் விஷயம். மேற்குலகிலும், ஜீனியஸ்  என்ற சொல் அதிகம் விஞ்ஞானிகளையே குறிப்பிடும் ஒரு பழக்கமாக இருந்துள்ளது. மேற்கத்திய பல்லியல் இசை விற்பன்னர்களான பாஹ் (J.S. Bach) , மொஸார்ட், (W.A.Mozart) மற்றும் பீதோவனை  (L.V. Beethoven) மேதை என்றே அழைக்கிறார்கள்.ஆனால், இதுகூட சமீபத்திய வழக்கம். [Text Box: க்ளென் கூல்டு][Description: http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQKKayxgrST1h4t7H-48w6odkjAR8sswNc99ov-VpvGz4siU4Nx]பாஹ், அவரது காலத்தில், தேவாலயத்தில், இசைகருவிகளை பழுது பார்க்கும் ஒருவராகத்தான் பார்க்கப்பட்டார். அவர் இறந்து, பல நூறு ஆண்டுகளுக்குப்பின், அவரது திறமைகள், அறிவார்ந்த முயற்சிகள், புரட்சிகரமான இசை தொகுப்புகள் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்தன. இன்று ஒரு மேதையாகக் கொண்டாடப்படும் பாஹின் பெருமையை, கனேடிய இசைக் கலைஞர் க்ளென் கூல்டு (Glenn Gould) உலகிற்கு 20 –ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டினார். பாஹ் வாழ்ந்ததோ 17 -ஆம் நூற்றாண்டில். உலகின் மிகத் துல்லியமான கம்போஸர், என்று ராஜா தன் மானசீக குருவான பாஹைப் பற்றிக் கூறியுள்ளார். [Text Box: பீதோவன்][Description: http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6f/Beethoven.jpg/250px-Beethoven.jpg]அதே போல மொசார்டையும் ஒரு அசாத்திய திறமை படைத்த இளைஞராக மட்டுமே, அவரது காலத்தில், புகழப்பட்டார். ஒரு மேதையாக அல்ல. மொசார்ட், தன்னுடைய 11 –வது வயதில் தனது முதல் இசையை வெளியிட்டார். காலப் போக்கில் அவரது மேதைமை உலகிற்கு விளங்கி, அவரை ஒரு மேதையாக ஏற்றுக் கொண்டது. பீதோவன் நிலமை மற்ற இருவரை விடத் தேவலாம். அவரது காலத்தில், (மொசார்டை விட 15 ஆண்டுகள் இளையவர்) ஒரு பெரிய கம்போஸராகக் கருதப்பட்டார்.காலப் போக்கில், (அவரது மரணத்திற்கு பிறகு), அவரது இசையைக் கண்டு வியந்த மேற்குலகம், அவரை ஒரு மேதையாக ஏற்றுக் கொண்டது. கலையுலகில், பொதுவாக ஒருவரை, உலகம் அவரது காலத்திற்குப் பிறகே ஒரு மேதையாக ஏற்றுக் கொண்டு வந்துள்ளது. இதற்குப், பல காரணங்களைச் சொல்லலாம். கலையுலகில், ஒருவர், ஒரு புரட்சிகரமான சிந்தனையை முன் வைத்தால், உடனே பல்வேறு கருத்து வேறுபாடுகள் முளைக்கும். இவை அடங்கி, எல்லோரும் அத்தகைய சிந்தனையை ஏற்றுக் கொள்ளப் பல்லாண்டுகள் ஆகிவிடுகிறது. பல சமயங்களில், புரட்சி செய்த கலைஞர், தக்க மரியாதை கிடைக்குமுன், இறந்து விடுகிறார். உதாரணத்திற்கு, ராஜா, ஆரம்ப காலத்தில், வட இந்திய மங்கல வாத்தியமான ஷெனாயை நாட்டுப்புறப் பாடல்களுக்கு உபயோகித்த பொழுது, பலரும் முகம் சுளித்தனர். அதே போல, குஷியான சூழ்நிலைகளுக்கு ஒற்றை வயலினை (Trumpet மற்றும் Sax –க்கு பதில்) பயன்படுத்திய பொழுதும் அதே கதிதான். ஆனால், இன்று, அவரது அத்தகைய வாத்தியப் புரட்சிகள் ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டன. அறிவார்ந்த செயல்கள், பொது அறிவுக்கு எட்ட பல்லாண்டுகள் ஆகின்றன. என் கருத்தில், ஒருவர், தனது வாழ்நாளில் ஒரு மேதையாக சமூகத்தால் முழுமையாக உணர்ந்து போற்றப்படுவது ஒரு மிகப் பெரிய வரப் பிரசாதம். மனிதர்களில், மிகச் சிலருக்கே, அந்த பாக்கியம் கிடைக்கிறது. கலைத்துறை சம்மந்தமான மதிப்பீடுகளில் ஒரு romanticism  உள்ளதை மறுக்க முடியாது. இத்தகைய கலைத்துறை மதிப்பீடுகளுக்கு காலக் கெடு உள்ளதென்னவோ உண்மை. உதாரணத்திற்கு, ஒரு காலத்தில், மதுபாலா மிகப் பெரிய அழகி என்று சினிமா உலகம் கொண்டாடியது. இன்றைய இளைஞர்கள் இதை ஒப்புக் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது அபத்தம். அதே போல, நடிகர்களின் நடிப்பு, பாடகர்களின் பாட்டு என்று எல்லாவற்றிற்கும் காலக் கெடு என்பது, மறுக்க முடியாத உண்மை. எம்.எஸ். சுப்புலட்சுமி, லதா மங்கேஷ்கார் போன்ற கலைஞர்கள் கலைத்துறையில் காலத்தைக் கடந்து இதுவரை நிலைத்து வந்துள்ளனர். அடிப்படை இசை ரசனை ஏராளமாக மாறாததே, இதற்கு காரணம். அவை மாறினால், காலச் சுழலில் இவர்களின் புகழும் மறைய வாய்ப்புள்ளது.  இவ்வாறு, கலை ரசனை, சமூகத்தின் போக்கில் மாறும் தன்மை கொண்டது. அறிவார்ந்த விஷயங்களில் இப்படிப்பட்ட மாற்றம் நிகழ்வதில்லை. பெளதிக விஞ்ஞானி நியூட்டன், அன்றும், இன்றும், என்றும் ஒரு மேதை. [Text Box: எடிசன்] [Description: Thomas Edison Accomplishments]ஆனால், விஞ்ஞான, தொழில்நுட்ப உலகமும் ‘மேதை’ என்று சொல்லும் பொழுது, பல்வேறு அர்த்தங்களுடனேயே சொல்லி வருகிறது. உதாரணத்திற்கு, அமெரிக்க சிந்தனையில், ஒருவர் ஜீனியஸ் என்று அழைக்கப்பட, அவர் ஏதாவது, சாதாரண மனிதர்கள் புரிந்து கொள்ளும் அளவில் விந்தை புரிய வேண்டும். அமெரிக்கர்களுக்கு எடிசன் (Thomas Alva Edison) ஒரு ஜீனியஸ். எடிசன் ஒரு அருமையான கண்டுபிடிப்பாளர். ஆனால், சாதாரண அமெரிக்கர்களை வியக்க வைத்தவர் – மெழுகுவத்தியை விட பன் மடங்கு அருமையான மின் விளக்கை கண்டுபிடித்தவர் அல்லவா அவர்? [Description: Apple CEO Steve Jobs introduces the new mini iPod in San Francisco in 2004] [Text Box: ஸ்டீவ் ஜாப்ஸ்] 2007 –ல், தன்னுடைய ஜீன்ஸ் பேண்டின் முன் பாக்கெட்டிலிருந்து  குட்டி ஐபாட் -டை உலகிற்கு அறிவித்த ஸ்டீவ் ஜாப்ஸும், (Steve Jobs) சில காலங்களுக்கு ஒரு அமெரிக்க, விற்பனை ஜீனியஸ். அதே போல, 70 –களில், மிக வேகமாக மின்னணுவியல் மின்சுற்றுக்களை (electronic circuits) உருவாக்கும் திறமையால், உலகின் முதல் நுண்கணினியை உருவாக்கிய ஸ்டீவ் ஒஸ் (Steve Wozniak) சற்று காலத்திற்கு ஒரு அமெரிக்க ஜீனியஸ்! இப்படி, அமெரிக்க சமூகம், வியப்பிலாழ்ந்தே எவரையும் ஜீனியஸ் என்று சொல்லி வந்துள்ளது.இந்தப் பழக்கம் நம் சமூகத்தையும் தொற்றிக் கொண்டு விட்டது, என்பது என் கருத்து. ஆனால், அதே காலகட்டத்தில் வாழ்ந்த ரிச்சர்ட் ஃபைன்மேனை (Richard Feynman) அதிக அமெரிக்கர்களுக்குத் தெரியாது. ஐன்ஸ்டீனுக்குப் பிறகு, பெளாதிகத் துறையில் மேதையாகக் கருதப்பட்ட ஃபைன்மேனை சாதாரண அமெரிக்கர் அதிகம் அறிய மட்டார்கள். ஏனென்னில், ஃபைன்மேன், சாதாரண மனிதர்கள் புரிந்து வியக்கும் செயல் எதுவும் புரிய வில்லையே! இப்படியாக, உலக சமூகங்கள் அனைத்தும் பல்வேறு தாற்காலிக மேதைகளை உருவாக்குவது உண்மை. இதற்கு, இந்தியர்களும் விதி விலக்கல்ல. அத்துடன், நம்மில் வாழ்ந்து வரும் ஒரு மேதையை புரிந்து கொண்டு, அவருக்கு தகுந்த மரியாதை கொடுப்பதில், ஏராளமான தயக்கம் இருப்பது வேதனைக் குரியது.இத்தனைக்கும், ராஜா போன்ற ஒரு மேதையின் புரட்சி சிந்தனை, புதுமை, மற்றும் யாராலும் நினைத்து பார்க்கக் கூட முடியாததை, செய்து கொண்டே வருகிறார்.சாதாரண மக்களுக்கு எளிதில் கிடைக்கும் சினிமா இசையில் அவர் செய்யும் மேதைமையைப் புரிந்து கொள்வது எளிது. இன்றைய வலைதளங்கள், யூடியூப், போன்ற சாதனங்கள் இதை எளிதாக்குகின்றன. விவரமாக, ராஜாவின் மேதைமையை விளக்கும் முன்பாக ஒரு முக்கிய விஷயத்தைச் சொல்லியாக வேண்டும். இக்கட்டுரைகளைப் படித்து, ராஜாவின் மேதைமையை அறிய, நல்ல இசை ரசனை ஒன்றே போதும். இக்கட்டுரைகளில் ஸ்வரங்கள், இசைக் குறிப்புகள் போன்ற எதுவும் இருக்காது! முன்னமே சொன்னது போல அவரது வாழ்க்கை வரலாறு சம்மந்தமான விஷயங்கள் இங்கு இடம்பெறாது. உணர்வு பூர்வமான இசை, மற்றும் பாடல் வரியில் வரும் கவிதை அலசல்களும், இங்கு இடம்பெறாது. அத்துடன், இசை ஒன்றே முக்கியத்துவம் என்று கருதுவதால், தமிழைத் தவிர ,பிற மொழிகளில் உள்ள ராஜா இசைப் பாடல்களையும், அவ்வப்பொழுது, மேற்கோள் காட்டத் திட்டமிட்டுள்ளேன். ராஜா ஒரு தமிழராக இருந்தாலும், அவரது இசை, தமிழ் மொழியில் மட்டுமே ஒலிப்பதில்லை. அத்துடன், அவரது மேதைமையும், தமிழ் பாடல்கள் மட்டுமே கேட்டு, முழுவதும் புரிகிற விஷயமும் அல்ல. மொழி என்பது அவரது இசையில் உள்ள வரிகளை அம்மொழி பேசும் மக்களிடம் சேர்க்கும் ஒரு கருவி, அவ்வளவுதான். அவரது இசை, மொழிகளுக்கு அப்பாற்பட்டது. 3 பகுதி -3 சற்று முன்பு பார்த்த மேகம்… மேதை’ என்ற சொல், மனித திறமையின் உச்சியைக் குறிக்கும், ஒரு சொல். இதன் கீழ் பல தட்டுகள் உள்ளன. தாற்காலிகமாகவோ, அல்லது தவறாகவோ ஒருவரை நாம் மேதை என்று புகழுவதற்கு காரணம், எந்த தட்டில் ஒருவரது அறிவாற்றல் உள்ளது என்பதை, நாம் சரியாகப் புரிந்து கொள்ளாததே, இந்த விஷயத்தில், குறிப்பாக நாம் 4 தட்டுகளை ஆராய்வோம். 1. மேதை - genius 2. திறமைசாலி - talented 3. தேர்ச்சியுற்றவர் - skilled 4. ரசிகர் – listener or connoisseur சுருக்கமாகச் சொல்லப் போனால், தேர்ச்சியுற்றவர், ரசிகரை தாற்காலிகமாக அசர வைப்பவர். திறமைசாலி, தேர்ச்சியுற்றவர் செய்ய முடியாததைச் செய்ய வல்லவர் மேதை, திறமைசாலியால் நினைத்து பார்க்கக் கூட முடியாததை, சாதாரணமாய் செய்பவர். சரி, அடித்தட்டிலிருந்து ஆரம்பிப்போம். இசையை ரசிக்கத் தெரிந்தவர்கள் ரசிகர்கள். இவர்களில் சிலர், முறையாக இசை பயின்றிருக்கலாம். ஆனால், பெரும்பாலும், இசை இவர்களது தொழிலல்ல. சிலர், பொழுதுபோக்கிற்காக இசைக்கருவிகளை வாசிக்கும் திறமை, அல்லது பாடும் திறமை படைத்தவர்களாக இருக்கலாம். ஆனால், ரசிகராய் இருக்க பயிற்சி ஒன்றும் தேவையில்லை. மொத்தத்தில், இவர்கள் இசை நுகர்வோர் (music consumers) என்று சொல்லலாம். முறையாக இசை பயின்றவர்களில் சிலர், பயிற்சியினால், தேர்ச்சியுற்றவர் ஆகிறார்கள்.  இன்றைய சூழ்நிலையில், இசைக்கலைஞர்கள், பெரும்பாலும், நம்முடைய மற்றும் மேற்கத்திய இசையில் ஓரளவு தேர்ச்சி பெறுகிறார்கள். இந்த அளவு பயிற்சி எந்த ஒரு இசைக்கருவி கலைஞருக்கும் தேவைப்படுகிறது.உதாரணத்திற்கு, ஒருவர் கட்டிடப் பொறியியல் (civil engineering) பட்டப் படிப்பு படிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இன்னொருவர் கட்டிடப் பொறியியல் டிப்ளமா படிக்கிறார் என்றும் வைத்துக் கொள்வோம். படிப்பு முடிந்ததும், இருவராலும் ஒரு கட்டிட வரைபடத்தை உருவாக்கவும் முடியும், இருக்கும் வரைபடத்தை புரிந்து கொள்ளவும் முடியும். இவர்களூக்குள் என்ன வித்தியாசம்? பட்டப் படிப்பு படித்தவர், மிக சிக்கலான கட்டிடங்களை வடிவமைப்பு செய்யும் பயிற்சி பெற்றவர். ஆனால் டிப்ளமா படித்தவரோ, அப்படி வடிவமைத்த கட்டிடத்தை உருவாக்கும் பணியில் ஈடுபடுகிறார். பயிற்சியில் டிப்ளமா படித்தவருக்கு நிகர், ஒரு தேர்ந்த இசைக்கருவி கலைஞர். பட்டப் படிப்பு படித்தவருக்கு நிகர், ஒரு தேர்ச்சியுற்ற இசைக்கலைஞர். இன்றைய சூழ்நிலையில், பெரும்பாலும் இவ்வாறு தேர்ச்சியுற்றவர்கள், கீபோர்டு (keyboard) கலைஞர்களாக உள்ளனர். கீபோர்டு கலைஞர்களாக இருப்பதால், சில செளகரியங்கள் உள்ளன. இன்றைய கீபோர்டுகளில், பல இசைக்கருவிகள் அடக்கம். இதனால், பல வித இசைக்கருவிகள் பற்றிய (தந்தி, காற்று, தாள) அறிவு, இந்தக் கருவியை நன்றாக வாசிக்கத் தெரிவதால், நிச்சயம் இவர்களுக்கு உண்டு. அத்துடன், புதிய மெட்டுக்களை அமைக்க, இன்றைய கீபோர்டுகள் மிகவும் தோதானவை. வாசித்த மெட்டை இசைகுறிப்பாக மாற்றும் கருவிகளும் இன்றைக்கு கீபோர்டு கலைஞர்களுக்கு எளிதாகக் கிடைக்கிறது – இவை AWS என்று அழைக்கப்படுகின்றன. இவற்றைப் பற்றிய ஒரு விரிவான கட்டுரையை ’சொல்வனம்’ பத்திரிக்கையில் எழுதியிருந்தேன். இவ்வகை  தேர்ச்சியுற்றவர்களின் வேலையில், சிலவற்றை எதிர்பார்க்கலாம். இவர்களது பயிற்சியின் தாக்கம், அவர்களது இசையில் வெளிப்படும். மேலும், புதிய இசை வகைகளை (music genre) நம்முடைய இசை முறைகளுடன் ஒருங்கிணைப்பது என்பது இவர்களால் முடியாதது. இன்றைய, சினிமா இசை வெளியீட்டு விழாக்களில் பங்கெடுக்கும் இளைய இசையமைப்பாளர்கள் பல இசை வகைகளைப் பற்றி பேசுகையில், ஏதோ புத்தகத்திலிருந்து ஒப்பிப்பதைப் போலவே இருக்கிறது. இவர்கள் ஓரளவு புதிய இசை வகைகளை கண்டெடுக்கும் (discovery of new genre) திறமை உள்ளவர்கள். அதாவது, உலகின் மற்ற பகுதிகளில் உள்ள இசையை கண்டெடுத்து, அப்படியே அதை பயன்படுத்தும் திறமை கொண்டவர்கள். இணைய வளர்ச்சி அத்தகைய கண்டெடுக்கும் முயற்சியை மிகவும் எளிதாக்கிவிட்டது.  சவுண்ட் கிளவுட் (SoundCloud), மற்றும் யூடியூப் போன்ற தளங்கள் இத்தகைய புதிய இசை வகைகளை அறிந்து கொள்ள மிகவும் உதவியாக உள்ளன. வேறு வகையில் இதை சொல்லப் போனால், இவ்வகை தேர்ச்சியுற்றவர்கள் தங்களுடைய இசை பயிர்ச்சியை முழுவதும் உள்வாங்கியவர்கள் அல்ல. பலர், வந்த வேகத்திலேயே மறைந்து விடுகிறார்கள். முதல் படத்தின் பாடல் வெற்றி பெற்றால், சில படங்களுடன் காணாமல் போய் விடுகிறார்கள். மேதைகள் அனைவரும் தேர்ச்சியுற்றவர்கள் தான். ஆனால், தேர்ச்சியுற்றவர்கள்,  மேதைகள் ஆவதில்லை. சாதாரண ரசிகர்கள், வாத்திய கலைஞர்களை விட இவர்கள் தேர்ந்தவர்கள் – அவ்வளவுதான். பல்லாண்டுகள் நிலைத்து நிற்கும் இசையை உருவாக்குவதற்கு தேர்ச்சி மட்டும் போதாது. 4 பகுதி -4 முகிலோ மேகமோ… தேர்ச்சியுற்றவர்கள் என்ற ஒரு வகைப்படுத்தலை முன் பகுதியில் பார்த்தோம். அந்த வகை மிகவும் எளிதானது. அடுத்த வகையான திறமைசாலிகள்(talented), மிகவும் குழப்பம் நிறைந்த ஒரு வகை என்றுதான் சொல்ல வேண்டும். என் பார்வையில், இந்த வகையைச் சேர்ந்த பல இசையமைப்பாளர்களை நாம் மேதைகள் என்று குழப்பிக் கொள்கிறோம். பல ஊடகங்களும் இதே தவறைச் செய்கின்றன. சரி, திறமைசாலிகள் எப்படிப் பட்டவர்கள்? இவர்கள், அவசியம் தேர்ச்சியுற்றவர்கள் தான். ஆனால், கற்ற இசை பயிற்சிகளின் தாக்கம்  இவர்கள் இயற்கையாக உள்வாங்கியுள்ளதால், அதன் பாதிப்பு எளிதில் அவர்களது வேலையில் தெரியாது. மேலும், இவ்வகை இசையமைப்பாளர்கள், அவ்வப்பொழுது, இசை சோதனையில் ஈடுபடுவார்கள். ஆனால், என் பார்வையில், இவர்கள் எந்த சர்ச்சையிலும் மாட்டிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்கிறார்கள். சமூகப் பார்வை இவர்களுக்குப் பெரிதாகப் படுகிறது. சொல்லப் போனால், சினிமா இசை திறமைக்கும், சர்ச்சைக்கும் எந்த சம்மந்தமும் இல்லைதான். ஆனால், இத்தகைய திறமையாளர்களுக்கு, சர்ச்சையின் மேல் ஒரு பயம் உண்டு, அதனால், அதனைத் தவிர்ப்பார்கள். சில சமயங்களில், இவர்களது இசை கேட்பவரை நிமிர்ந்து உடகார்ந்து, அசை போடச் செய்யும். அட, என்ன பிரமாதமான மெட்டு, மற்றும் வாத்திய அமைப்பு என்று பிரமிக்க வைக்கும். ஆனால், இவர்கள், கால காலமாக இருந்து வரும் இசை மரபுகளை உடைத்தெரியத் தயங்குபவர்கள். பெரிய வணிக வெற்றி பெற்ற பல இசையமைப்பாளர்கள் இதில் அடங்கும். [Text Box: வித்தியாசாகர்][Description: http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQMnoJ-L69wyTJCRnOGg-5K0SIzL3yfyDOIaAMucSPSWeRxMjvk] உதாரணத்திற்கு, வித்தியாசாகர், ஒரு திறமையான இசைக்கலைஞர். ஜனரஞ்சக சினிமா இசையாகட்டும் (தூள், நிலாவே வா, மொழி, அன்பே சிவம், போன்ற படங்கள் உதாரணங்கள்), பாரம்பரிய இசையாகட்டும் (தெலுங்கில் 2004 –ல் வெளிவந்த ஸ்வராபிஷேகம் என்று அருமையான பாரம்பரிய இசை வழங்கியதற்காக, தேசிய விருது பெற்றவர்), மேற்கத்திய இசையாகட்டும் (இளைஞன் திரைப்படத்தில் வியன்னா சிம்பொனி இசைக்குழுவுடன் அருமையான பணியாற்றியுள்ளார்), இவருக்கு எல்லாம் அத்துபடி.சினிமா இசைக்கு வேண்டிய எல்லா தகுதிகளும் உடையவர். தமிழ் மற்றும் மலையாள மொழிகளில், பல திரைப்படங்களுக்கு அருமையான இசை வழங்கியுள்ளவர். இவரது மலையாள இசையில், தமிழை விட, இனிமை அதிகம், என்பது என் கருத்து. பல உதாரணங்கள் இதற்கு இருந்தாலும், ‘கிருஷ்ணகுடியில் ஒரு பிரணயகாலத்து’ என்ற 1997 திரைபடத்தில் உள்ள பாடல்களை அதிகம் தமிழர்கள் கேட்க வாய்பிருக்காது. யூடியூப் இருக்க பயமேல்? மிக இனிமையான பாடல்கள் மற்றும் வாத்தியாமைப்பு, இந்தப் படத்திற்காக வித்யாசாகர் வழங்கியுள்ளார்.: https://www.youtube.com/results?search_query=Krishnagudiyil+Oru+Pranayakalathu+songs இவருடைய பல சோதனை முயற்சிகளும் பாராட்டத் தக்கவை. உதாரணத்திற்கு, ’சினேகிதியே’ என்ற 2001 தமிழ் படத்தில் இடம் பெற்ற, ‘ராதை மனதில்’ என்ற பாடலில், அழகாக மேற்கத்திய குழுவிசை மற்றும் கோரஸை உபயோகப் படுத்தியிருப்பார். பாடல் என்னவோ இந்திய இசைதான். https://www.youtube.com/watch?v=yMaeidGXd1Y இவருடைய அருமையான குழுயிசை (orchestration) அமைந்த ஒரு மlலையாள பாடல், 1996 –ல் வெளிவந்த, ’அழகிய ராவணன்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஓ தில்ருபா’ என்ற பாடல்: https://www.youtube.com/watch?v=JsjwxqSlezM வித்யாசாகர், தமிழில், ‘இளைஞன்’ என்ற திரைப்படத்தில், வியன்னா ஸிம்ஃபோனி இசைக்குழுவுடன் இவர் உருவாக்கிய ஓபரா வடிவில் உள்ள ‘இமைதூதனே’ என்ற பாடல், மிக இனைமையானது: https://www.youtube.com/watch?v=-5VKkaQ8v4c ’ஸ்வாராபிஷேகம்’ என்ற 2004 தெலுங்கு படத்தில், வித்யாசாகரின் கர்னாடக இசை திறமையும் அருமையாக வெளிப்பட்டது. யேசுதாசும் எஸ்பிபி –யும் இணைந்து பாடிய, ஹம்ஸத்வனி ராகத்தில் அமைந்த ‘அணுஜுடை லஷ்மணுடு’ என்ற பாடல், வித்யாசாகரின் இசைத்திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு: https://www.youtube.com/watch?v=B2H7OP0MMFY இதுபோல, வித்யாசாகர், ஏன் ரஹ்மான் போன்றவர்கள் தங்களுடைய திறமையை பல பாடல்களில் காட்டி வந்துள்ளார்கள். பெரிய சங்கீத சர்ச்சைகள் எதிலும் சிக்காமல், தங்களுடைய வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். திரை இசைக்கு தேவையான, இசைக்கருவி ஞானம், பின்னணி இசை அமைக்கும் திறன், மற்றும் இந்த ஜனரஞ்சக ஊடகத்திற்கு வேண்டிய அனைத்து திறமையும் கொண்டவர்கள் இவர்கள். ஆனால், கேள்வி என்னவோ, இவர்கள் மேதைகளா? நம்முடைய சினிமா இசையை இவர்கள் எப்படி மாற்றியுள்ளார்கள்? புதுமைகள் பலவற்றையும் இவர்கள் செய்திருந்தாலும், சினிமா இசையின் போக்கையே இவர்கள் மாற்றியுள்ளார்களா? இவர்களது இசையில், எவ்வகை புரட்சிகளை, இவர்களுக்கு முன்னே எவரும் செய்யாததை, செய்துள்ளார்கள்? இவை, மிக முக்கியமான கேள்விகள். இக்கேள்விகளின் பதிலிலேயே, இவர்கள் மேதைகளா இல்லையா என்று தீர்மானிக்க முடியும். புதிய ஒலிகள், தொழில்நுட்ப முன்னேற்றத்தால், வந்து கொண்டே இருக்கத்தான் செய்யும். புதிய ஒலிகள் மற்றும் ஒலிப்பதிவு முறைகள் இசைக்கு சம்மந்தம் இல்லாதது என்பது என் கருத்து. உதாரணத்திற்கு, வித்யாசாகரின் இசைக்கருவி தேர்வு மற்றும் ஒலிப்பதிவு அருமையான ஒன்று. ஆனால், அவர் ஒருபோதும் அதைப் பற்றி அலட்டிக் கொண்டதில்லை. சினிமா இசையில் தொடர் வெற்றிக்கு திறமை தேவையானது. ஆனால், அது ஒன்றே ஒருவரை மேதையாக்கிவிடாது. மேற்கத்திய செவ்வியல் மேதை, மொஸார்ட், மாணவர்கள் இல்லாமல், இசை பாடம் சொல்லிக் கொடுத்து, பிழைப்பு நடத்தவே போராடியவர். அவர் வாழ்நாளில் பெரிய வணிக வெற்றியை அவர் காணவில்லை. புகழும், வணிக வெற்றியும், நிச்சயம் ஒருவரை மேதையாக்கியதாக சரித்திரம் இல்லை.  அடுத்தபடியாக, மேதையின் சிந்தனை எப்படிப்பட்டது என்று அடுத்த பகுதியில் பார்ப்போம். 5 பகுதி -5 பூ பூத்தது… ஜீனியஸ் அல்லது, மேதைகள் எப்படிப் பட்டவர்கள் என்பதை, இந்தப் பகுதியில், விரிவாகப் பார்ப்போம். முதலில், நாம் அலசவிருப்பது, ‘சாதாரண மேதைகள்’ (ordinary geniuses). அதென்ன சாதாரணம்? சாதாரண மனிதர்களைவிட, பன்மடங்கு ஆற்றலுள்ளவர்கள் இவர்கள். சாதாரண மனிதர்களுக்கு தோன்றாத, தொடர்புகள் இவர்களுக்கு எளிதாகப் புலப்படும். [Text Box: சி.வி.ராமன்][Description: Sir CV Raman.JPG] உதாரணத்திற்கு, சி.வி.ராமன் – பெளதிகத் துறையில் சாதித்தவர். பல நூற்றாண்டுகளாய், நீலவானம் பற்றி கவிதை எழுத, நமக்குத் தோன்றியது. அதே போல, ஒளிச் சிதறல் (optical diffraction) பற்றிய பெளதிக அறிவு உயர்நிலைப்பள்ளியில் எல்லோருக்கும் சொல்லிக் கொடுக்கப்பட்டது. ஆனால், ராமனால், ஏன் வானம் நீலமாக இருக்கிறது என்று ஆராய்ந்து, அது ஒளிச் சிதறலினால் என்று உலகிற்கு எடுத்துச் சொல்ல முடிந்தது. நமக்கு எளிதில் புலப்படாத இந்தத் தொடர்பு, அவருக்குப் புலப்பட்டது. அதே போல, நமக்கெல்லாம் வருடந்தோறும் 4 பருவகாலங்கள் (seasons) உண்டு, என்று தெரியும். மனிதர்களில் பெரும்பாலானோர், கடலலைகளைப் பார்த்திருப்பார்கள், கவிதை எழுதியிருப்பார்கள். வாக்னர் (Wagner) என்ற விஞ்ஞானிக்கு இவை இரண்டிற்கும் உள்ள தொடர்பு தெளிவாகத் தெரிந்தது. அதாவது, பூமியின் பருவநிலை ஸ்திரத்தன்மைக்கு (climatic stability) கடலில் உள்ள அலையோட்டம் (oceanic currents) காரணம் என்று கண்டறிந்து உலகிற்கு அறிவிக்க முடிந்தது. ‘சாதாரண மேதைகள்’, நாம் இயற்கையில் பார்க்கும் அன்றாட நிகழ்வுகளுக்கு இடையில் உள்ள தொடர்பைப் பார்க்க முடிகிறது. சாதாரண மனிதர்களுக்கு நிகழ்வுகள் தெரிந்தும், தொடர்புகள் தெரியாமல் போகிறது. பல திறமை மிக்க இசைக்கலைஞர்கள், திறமைக்கும், ‘சாதாரண மேதைகள்’ என்ற எல்லைக்கும் உள்ள மங்கலான பகுதியில் உலாவுவதால், நம்மால், சரியாக அடையாளம் காட்ட முடிவதில்லை. [Text Box: ஆர்.டி.பர்மன்][Description: M_Id_398884_R.D._] உதாரணத்திற்கு, ஆர்.டி.பர்மன், இந்தி திரைப்பட இசையில், பல புதுமைகளைக் கொண்டு வந்தவர். அவருடைய ‘யாதோங்கி பாராத்’ திரைப்படத்தில், மின் கிடாரை (electric guitar)அறிமுகப் படுத்தி, மிகப் பெரிய வெற்றி அடைந்தது மட்டுமல்ல, எல்லா இசையமைப்பாளர்களையும், அவ்வாறு பயன்படுத்தும் மாற்றத்தைக் கொண்டு வந்தார். ஏன், எம்.எஸ்.வி. –யையும், 70 –களில், (நாளை நமதே, நினைத்தாலே இனிக்கும்) இது பாதித்தது.அதே போல, ஏ.ஆர். ரஹ்மானின், மின்னணு தாளங்கள் (electronic rhythms) பல இசையமைப்பாளர்களை, அவ்வாறு மாற வைத்தது. ராஜா, ஷெனாய் என்னும் வடக்கத்திய வாத்தியத்தை நாட்டுப்புறப் பாடல்களுக்கு உபயோகிக்க, பல தென்னிந்திய இசைக்கலைஞர்கள், அவ்வறே செய்யும்படி ஆகியது. இவை யாவும் ‘சாதாரண மேதைகள்’ செய்யும் விஷயம் – அதாவது, இந்திய ஜனரஞ்சக இசைக்கும் இவ்வகை இசைக்கருவிகளுக்கும் உள்ள தொடர்பு இவர்களுக்கு தெரிந்தது. ஆர்.டி. பர்மனுக்கு முன், மின் கிடார் பல ஆண்டுகளாக இருந்த ஒரு கருவி. ரஹ்மானுக்கு சில ஆண்டுகள் முன்பு மின்னணு தாளங்கள் அறிமுகமாயின. ஏன், பல நூறு ஆண்டுகளாக ஷெனாய், வட இந்திய பாரம்பரியக் கச்சேரிகளில் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது.இக்காரணங்களால், இந்த மூன்று இசைக் கலைஞர்களை மேதைகள் என்று சொல்ல முடியாது என்பது என் கருத்து. சினிமா இசை, காலத்திற்கு ஏற்றவாறு மாறும், ஒரு ஜனரஞ்சக இசையில், இது போன்ற மாற்றங்கள் வந்த வண்ணம் இருக்கும். இவ்வகை மாற்றங்களைத் துவக்கி வைப்பவர்கள் எல்லாம் ‘மேதைகள்’ என்று சொல்லப் போனால், நம்மில் பல நூறு மேதைகள் இருப்பார்கள். அதே போல, ராஜா ஒரு படத்திற்கு 30 நிமிடத்தில் 5 பாடல் மெட்டுக்களை உருவாக்குகிறார் என்று நாம் அடிக்கடி படிக்கிறோம். அத்துடன், அவரே, எந்த ஒரு திரைப்படத்திற்கும் 3 நாட்களுக்கு மேல், பின்னணி இசைக்காக எடுத்துக் கொண்டதில்லை என்று வேறு கூறுகிறார். செய்யும் தொழிலில் வேகம் என்பது ஒருவரின் தேர்ச்சி மற்றும் திறமையைக் காட்டும், மேதைமையை அல்ல. ராஜாவின் மேதைமைக்கு, இவை காரணமல்ல. நாம் இங்கு விவரிக்க வேண்டியது, ‘அசாதாரணமான மேதைகள்’ (extraordinary genius) என்ற வகை. இவர்களிடம், பொதுவாக, சில குணாதிசயங்கள் இருக்கும். பெரும்பாலும் விஞ்ஞான துறை சம்மந்தப் பட்ட இவ்விஷயங்கள், இசைக்கும் ஓரளவு பொருந்தும்: 1. விஞ்ஞானத்திலோ, இசையிலோ ’இப்படி’, இது, இருக்க வேண்டும் என்று, நமக்கெல்லாம் சற்றும் சிந்திக்கக் கூடத் தோன்றாத வடிவங்கள், விஷயங்கள், இவர்களுக்குத் தோன்றும். உதாரணத்திற்கு, அணுக்களின் அமைப்பைப் பற்றி நூறு ஆண்டுகளாக மனிதர்கள் அறிந்திருந்தாலும், அங்கு ஏராளமான பொறியியலுக்கு வாய்ப்பு உள்ளது என்பதை ஃபைன்மேன் (Richard Feynman) 1959 –ல், ஒரு பொற்பொழிவில் அறிவித்தார். இன்று, அவர் சொன்னது போல, மூலக்கூறுகளை (molecules) கையாளும் தொழில்நுட்பமான, நானோ தொழில்நுட்பம் (nano technology) வளர்ந்து வருகிறது. பல நூறு ஆண்டுகளாக இன்னிசை (melody) என்பதை உலகம் அறிந்திருந்தாலும், ஒரே நேரத்தில் இரு இன்னிசைகள் ஒலிப்பது என்ற விஷயம் பாஹுக்குத்தான் தோன்றியது. இரு நூற்றாண்டுகளுக்குப் பின், இவரது இசை தீர்க்கதரிசனம், மேற்கத்திய பாரம்பரிய இசையின், ஒரு வடிவமாகியது 2. ஒரு துறையில், சின்னச் சின்ன மாற்றங்கள், இவர்களால் செய்யப்பட்டாலும், அதில், இவர்கள் திருப்தி அடைவதில்லை. இவர்களது மேதைமையின் அடிப்படை, அவர்களது துறையில், அவர்களால் உருவாக்கப்படும், மிகப் பெரிய மாற்றங்கள் 3. பெரிய மாற்றங்களின் பொறி, சம்மந்தமே இல்லாத ஒன்றாக கூட இருக்கக் கூடும். நியூட்டன் தலையில் ஆப்பிள் விழுந்ததால் அவர் புவி ஈர்ப்பு சக்தி, என்ற ஒரு புதிய கொள்கை ஒன்றை உருவாக்கினார் என்பதெல்லாம் பூசுற்றல். இங்குதான், creativity என்று கலைஞர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளும் விஷயம், அடிபட்டுப் போகிறது.  Creativity என்பது பெரிய மாற்றங்களை உருவாக்கும் திறனற்றது. Creativity -யினால், படிப்படியாக சில விஷயங்களை மட்டுமே முன்னேற்ற முடியும். ஆனால், மேதைகள், ஒரு கொள்கை மற்றும் முறையை முன் வைக்கும் போது, அதன் முழு வடிவம், மற்றும் தாக்கம் இவர்களுக்கு அப்பொழுதே தெரிந்து விடும். உதாரணத்திற்கு, நியூட்டன், வெறும் புவி ஈர்ப்பு சக்தி கொள்கை ஒன்றை மட்டும் அளிக்கவில்லை. அவரால், பாரம்பரிய இயக்க விதிகள் (classical mechanics) அனைத்தையும் தரமுடிந்தது. புவி ஈர்ப்பும் அதில் அடங்கும். என் பார்வையில், ராஜா ஒரு மெட்டை உருவாக்குவதுடன் நிறுத்துவதில்லை. அவருக்கு, அதனுடன் சேரும் இசைக் கோர்வைகள், வாத்தியங்கள், தாளம் மற்றும் நேரம் எல்லாமே தோன்றுகிறது. இதனாலேயே, அவரால், பெருக்கெடுத்த நதி போல அத்தனையையும், இசைக் குறிப்புகளாய் எழுதித் தள்ள முடிகிறது. உதாரணத்திற்கு, ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ என்ற 1991, தளபதி பாடலை உருவாக்குகையில் வெறும், கல்யாணி/கோசலம் ராகங்களின் ஸ்வரங்கள் மட்டும் அவருக்குத் தோன்றவில்லை. அத்துடன் சேர்ந்த வயலின்கள், டிரம்பெட்டுகள், புல்லாங்குழல் என்று பலதரப்பட்ட கருவிகளின் ஒலிப் பிரவாகம் (https://www.youtube.com/watch?v=7YdGw1Y0AL0) சேர்ந்தே, அவருக்குத் தோன்றுகிறது. 4. வெறும் நாமறிந்த விஷயங்களின் தொடர்பை, இவ்வகை  மேதைகள் வெளிக் கொண்டு வருவதில்லை. அதில் பெரிய விஷயம் ஒன்றும் இல்லை என்பது இவர்களது எண்ணம். உதாரணத்திற்கு, ’எண்ணுள்ளே எண்ணுள்ளே’ என்ற பாடல், விரக தாபத்தில் ஒரு பெண் பாடும் பாடல் (http://www.youtube.com/watch?v=x6CvQf2xLNs) . ஆனால், ராஜாவின் இசையில், இது ஒரு தியானம் போன்ற உணர்வைத் தோற்றுவிக்கும். இந்த பாடலின், காட்சியமைப்பு சில வருடங்களில், மறக்கப்படலாம். ஆனால், இத்தகைய ஒரு தியான உணர்வு பாடல் பல்லாண்டுகள் நிலைத்து நிற்கும். விரக உணர்வுக்கான, பல புதுமைகளை, இசைக்கலைஞர்கள் சினிமாவில் ஏற்கனவே உருவாக்கியுள்ளார்கள். ஆனால், இங்கு, ராஜா, பெண் குரல்களை மேற்கத்திய இணக்க (western harmony) முறையில், வயலின்களோடு எந்தத் தாளக் கருவியும் இல்லாமல், ஒரு தியான உணர்வு உருவாகும் வகையில் உருவாக்கியுள்ளார். இது போன்ற சிந்தனை ராஜாவுக்கு முன்னரும், பின்னரும் எவருக்கும், இந்நாள் வரைத் தோன்றவில்லை 5. இவர்களது சிந்தனை வேறு ஒரு அளவில் இருப்பதால், சாதாரண மனிதர்களுக்குப் புரியும் வகையில், இவர்களது பேச்சு இருக்காது. பெளதிகத் துறையில், ஃபைன்மேன் (Richard Feynman) என்ற மேதையைத் தவிர, மற்ற பெரும் விஞ்ஞானிகள் இவ்வகையே – ஐன்ஸ்டீன் (Einstein) , டிராக் (Dirac), போர் (Bohr) எல்லோரும் இவ்வகையே 6. மேதைகள், பொதுவாக தன் வேலையில் ஏராளமான கவனத்துடன் இருப்பவர்கள். பெரிதாக, சமூகத் தொடர்பற்றவர்கள். உழைப்பிற்கு இவர்கள் தயங்குவதில்லை என்றாலும், இவர்களது மேதைமை உழைப்பினால் வருவதில்லை. இவர்களுக்கு, ஒரு வகை வரப் பிரசாதம், மேதைமைப் பொறிகளை வழங்குகிறது. உதாரணத்திற்கு, ஐன்ஸ்டீன் தன்னுடைய பொது ஒப்புமை கொள்கையை (General theory of relativity) அறிவிக்கையில், எப்படி, ஒளியின் வேகத்தில் பயணிக்கும் கடிகாரங்கள் மெதுவாகும் என்று சொன்னார்.2011 –ல், இன்றைய தொழில்நுட்ப வசதிகளோடு, அவருடைய கணிப்பு எவ்வளவு சரியானது என்று உறுதிப்படுத்தப்பட்டது. இதற்காக அவர் ஒன்றும் இரவு பகலாய், பல வருடங்கள் உழைக்கவில்லை. அவருக்கு, அவ்வளவு எளிதாக, இந்த விஷயம் தோன்றியது, மற்ற விஞ்ஞானிகளுக்கு, சரியான சோதனை அமைப்பை உருவாக்கி, ஔன்ஸ்டீனின் கணிப்பை நிரூபிக்க, கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் ஆகியது. அவர் என்னவோ, வெறும் காகிதம், பேனா போன்ற விஷயங்களுடன், தன் அறிவாற்றலால் சொல்லிவிட்டு போய்விட்டார்! 7. இவ்வகை மேதைகளுக்கு, தனக்கு முன்னே வந்தவர்களின் பங்கு, அவர்களது சிந்தனை அத்துப்படி. ஆனால், சம கால நிகழ்வுகளில் அத்தனை ஆர்வம் இருப்பதில்லை. உதாரணத்திற்கு, ஐன்ஸ்டீனுக்கு பல சம கால பெளதிக நிகழ்வுகளில் அதிகம் ஆர்வம் இல்லை. ஆனால், அவருக்கு முன்னே வாழ்ந்த மேக்ஸ்வெல், நியூட்டன் போன்றவர்களின் கோட்பாடுகள் அத்துபடி. ராஜாவும் சம கால இசைக் கலைஞர்களைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. ஆனால், அவருக்கு முன்னே வந்த கலைஞர்கள் பற்றி பெருமை கொள்கிறார். 8. இவ்வகை மேதைகள், பிரச்னை ஒவ்வொன்றையும் தன்னுடைய அறிவு திறமையால், ஆரம்பத்திலிருந்து சிந்தித்து, விடை தேடுகிறார்கள். மற்றவர்களின் பங்கு, இவர்களது ஆரம்ப நிலை. அவ்வளவுதான். ராஜா, பல இசை முறைகளை (musical genre) அறிந்தாலும், அதன் பயன்பாடு, அவருடைய சிந்தனையால் உருவான ஒன்று. தேர்ச்சியுற்றவர்கள், புதிய இசை முறைகளைப் பற்றி அலட்டிக் கொள்வதைப் போல, ராஜாவை என்றும் பார்க்க முடியாது. அவரிடமிருந்து வெளிவரும் எந்த இசையிலும், அவரது பாணி இருந்தே தீரும். உதாரணத்திற்கு, போல்கா (Polka) என்பது ஒரு கிழக்கு யூரோப்பிய இசை முறை. ராஜா, இதைக் கையாளுகையில், அதை, அப்படியே உபயோகிப்பது இல்லை. இசை முறைகள், ராஜாவின் இசைக்கான உட்பாடு (input). அவரது இசையின் வெளிப்பாடில், அவருடைய இசை முறையே (Raja’s own musical genre) வெளிப்படும். ’கோபுர வாசலிலே’ (1990) என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘கேளடி என் பாவையே’ (https://www.youtube.com/watch?v=aE9OMfBhSE4) என்ற பாடல், இந்த இசை முறையில் ராஜ வலம் வருகிறது. இதன் வழக்கமான முறை என்னவோ சற்று மாறுபட்டதுதான் (https://www.youtube.com/watch?v=0gsskSuFQjI) 9. சர்ச்சையை தவிர்ப்பவர்கள் அல்ல மேதைகள். அதில் தழைப்பவர்கள். எனக்குத் தெரிந்து, எந்த மேதையும், சர்ச்சையிலிருந்து தப்பவில்லை. இங்கு நாம் சொல்வது அவர்களது துறையைச் சேர்ந்த சர்ச்சையைப் பற்றி மட்டுமே.  உதாரணத்திற்கு, ஐன்ஸ்டீன் விஷயத்தில், நோபல் பரிசு கமிட்டி, அவரது 1905 –ல் வெளியிட்ட ஒளிமின்னியல் (photoelectric effect) பற்றிய பங்கிற்காக 1921 –ல் பரிசு வழங்கியது. ஏனென்றால், அவரது பொது ஒப்புமை கொள்கைக்கு ஏராளமான எதிர்ப்பும் சர்ச்சைகளும் ஓயவில்லை. மொஸார்ட், இத்தாலிய விலைமாதர்களை மையமாக வைத்து உருவாக்கிய Figaro  போன்ற படைப்புகளை, பல்லியல் நிபுணர்கள் உடனே ஏற்கவில்லை. அவர் வாழ்நாள் முழுவதும் அந்த சர்ச்சை ஓயவில்லை. 6 பகுதி -6 காற்றில் வரும் கீதமே… அசாதாரண மேதைகளை இருவகையாக பிரிக்கலாம். 1. புத்திசாலித்தனமான மேதைகள் – Clever genius 2. மாயாஜால மேதைகள் – Magical genius எல்லா மேதைகளுமே மூலமான (original) சிந்தனையுள்ளவர்கள். புத்திசாலித்தனமான மேதைகள் எப்படிப்பட்டவர்கள்? இவர்கள் புதிய பாதை ஒன்றை மனிதர்களுக்கு காட்ட வல்லவர்கள். இவர்களது, சிந்தனையை, தெளிவாக விளக்கினால், மற்ற திறமையாளர்கள்  இவர்களது சிந்தனையைப் புரிந்து கொள்ள முடியும். அத்துடன், அத்துறையின் திறமையாளர்கள், ’அடடா, இது நமக்குத் தோன்றவில்லையே’, என்று புரிந்து கொண்டு, அந்தச் சிந்தனையை வைத்து, தன்னுடைய படைப்புகளை உருவாக்கலாம். அதாவது, புத்திசாலித்தனமான மேதைகளின் சிந்தனை பல வடிவங்களில் காப்பியடிக்கபடும். பல கண்டுபிடிப்பாளர்களை (inventors) நாம் மேதைகள் என்று குழம்புவதற்கு இதுவே காரணம். அமெரிக்க கண்டுபிடிப்பாளர் எடிசன், மின் விளக்கை முதலில் கண்டுபிடித்தார். ஆனால், அதன் இயக்க முறை விளக்கப்பட்டவுடன், பல்லாயிரம் நிறுவனங்களில் வேலை செய்யும் பொறியாளர்கள் அவரது கண்டுபிடிப்பைவிட உயர்தரம் கொண்ட மின் விளக்குகளை உருவாக்க முடிந்தது. இன்று, அது சைனாவின் குடிசை தொழிலாகவே வளர்ந்து விட்டது. மைக்கேல் ஃபாரடே (Michael Faraday) என்னும் பிரிடிஷ் விஞ்ஞானி, டைனமோ என்பதை முதலில் கண்டுபிடித்தார். அதாவது, மின்காந்த வயலில் (electromagnetic field) ஒரு சுழலும் மின்சுருளால் (rotating coil) மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும் என்று உலகிற்கு, தனது சோதனைமூலம் நிரூபித்தார். அதைப் புரிந்து கொண்ட திறமையான பொறியாளர்கள் இன்று மின்பொறியியல் துறையையே உருவாக்கியுள்ளார்கள். நாம் உபயோகிக்கும் மின்சாரத்தின் அடிப்படை இதுவே என்ற அளவிற்கு வணிக மின்தொழில் வளர்ந்துவிட்டது.[Description: M Faraday Th Phillips oil 1842.jpg] [Text Box: மைக்கேல் ஃபாரடே] இதைப் போல, பல கண்டுபிடிப்பாளர்கள் உள்ளனர். இசைத்துறையில், மேதைகள் பலரும் (ராஜா உட்பட) இவ்வகை குணாதிசயங்களை கொண்டவர்கள். பாஹின் counterpoint  என்ற ஒரே நேரத்தில் இசைக்கப்படும் இரு இன்னிசைகளை, பல இசைக்கலைஞர்களும் உபயோக்கிக்க தொடங்கிவிட்டனர் – ராஜா உட்பட. இசை மேதைகளை இந்த ஒருவகை மட்டும் என்று பிரிப்பது சற்று கடினம். விஞ்ஞானத்தில் எளிது. [Text Box: மொஸார்ட்][Description: http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1e/Wolfgang-amadeus-mozart_1.jpg/170px-Wolfgang-amadeus-mozart_1.jpg] மாயாஜால மேதைகள் எப்படிப்பட்டவர்கள்? இவர்களது சிந்தனை எவ்வளவு தெளிவாக ஒருவரால் விளக்கப்பட்டாலும், அத்துறையின்  திறமையாளர்களால், அவர்களது சிந்தனையை காப்பியடிக்க இயலாது. உதாரணத்திற்கு, மொஸார்டின் 40 –வது சிம்ஃபோனியை (Mozarts’s 40th symphony) பலரும் அலசித் தள்ளிவிட்டார்கள். ஆனால், அது போன்ற ஒன்றை யாராலும் இன்றுவரை உருவாக்க முடியவில்லை. அதே போல. விவால்டி (Antonio Vivaldi) என்ற மேற்கத்திய இசைக்கலைஞரின் நான்கு பருவங்கள் (Four Seasons) என்ற இசைத் தொகுப்பும், பலராலும் அக்கு வேறு, ஆணி வேறு என்று விவரிக்கப் பட்டுள்ளது. ஆனால், இது நாள் வரை அது போன்ற ஒரு இசைத் தொகுப்பை யாராலும் வழங்க இயலவில்லை. அட, இது நான்கு பருவங்களை விடச் சிறந்தது என்று அத்துடன் ஒப்பிட்டு வென்றவர் இல்லை. இந்த மாயாஜாலத்தின் பின் பல காரணங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, ‘முதல் கொள்கைகள்’, அதாவது, first principles என்ற சிந்தனை முறை. அதாவது, ஒவ்வொரும் முறையும், ஒரு வேலையை, எதுவுமே அறியாதவருடைய நிலையிலிருந்து, மிக அதிக வேகத்தில் ஒரு மாய அளவுக்கு முன்னேற்றும் அறிவுக்கூர்மை. இதற்கு ஏராளமான அறிவுத் திறன் தேவை. [Text Box: ரிச்சர்ட் ஃபைன்மேன்][Description: Richard Feynman] உதாரணத்திற்கு, பெளதிகத் துறையில், ஃபைன்மேன் அப்படிப்பட்டவர். அவருக்காக பல ஆராய்ச்சியாளர்கள், பல மாதங்கள் தங்களுடைய ஆராய்ச்சியை விளக்கத் தவம் கிடைப்பார்களாம். அப்படி கிடைத்த சந்தர்பத்தில், ஆராய்ச்சியாளர்கள் பலரும் மிகவும் ஏமாற்றமும், அதே சமயம் வியப்புமாய் முழிக்கச் செய்வாராம் ஃபைன்மேன். இத்தனைக்கும், முழுவதும் அவர்களது ஆராய்ச்சியை விளக்கக் கூட விட மாட்டாராம். பிரச்னை என்ன என்று புரிந்து கொள்ளும் வரையில் பொறுமையாகக் கேட்பாராம். அதன் பிறகு, மேடை, ஃபைன்மேனுடையது! ஆரம்ப நிலையிலிருந்து அந்தப் பிரச்னையை விளக்குவதுடன், அதற்கான பல்வேறு தீர்வுகளையும் அப்பொழுதே, அங்கேயே எழுதி, எந்தத் தீர்வு சரியானது, என்றும் சொல்லி விடுவாராம். சரி, தீர்வு அவருக்குத் தெரிந்திருந்தும், ஏன் அதை அவர் வெளியிடவில்லையாம்? பெரும்பாலும்: 1) பல ஆண்டுகளுக்கு முன், தான் தீர்த்த அந்தப் பிரச்னையை வெளியிட ஃபைன்மேனுக்கு சோம்பேறித்தனம், அல்லது 2) ஆராய்ச்சியாளர்கள் எதிர்பாராத தீர்வு ஃபைன்மேனுடையதாக இருக்கும்.எப்படி இருக்கும், மாதங்களாய் தவமிருந்த ஆராய்ச்சியாளருக்கு? இப்படி வேலை செய்வதுதான் ’முதல் கொள்கைகள்’ வழி. [Text Box: வான் நாய்மேன்] [Description: JohnvonNeumann-LosAlamos.gif]இது போல, அதி வேக கணக்கியல் நிபுணர் என்று பெயர் எடுத்தவர், வான் நாய்மேன் (John Von Neumann).இவரது அதி வேக கணக்கு, மாணவர்களைத் திக்குமுக்காடச் செய்யும். இவருக்கு ஒரு கெட்ட பழக்கம். எந்த ஒரு கணக்குப் பிரச்னையை தீர்த்தாலும், அதன் படிகளை (mathematical steps) எங்கும் எழுத மாட்டார். அவரது அறிவு,  அதை அதி வேகமாகக் கடந்து செல்லும். ஒரு முறை, அவரது மாணவர், அவரிடம், ஒரு கணக்கு பிரச்னையின் விடை புரியவில்லை என்று அவரைத் தேடி வந்தாராம். இத்தனைக்கும் வான் நாய்மேன், அடுத்த வகுப்புக்குத் தாமதமாகி விரைந்து கொண்டிருந்தாராம்.மாணவர் கேட்கிறார் என்று சில நிமிடங்கள் நின்றவர், மெளனமாக இருந்து விட்டு, அதே விடையைச் சொன்னாராம். இரண்டிற்கும் என்ன வித்தியாசம், என்று கேட்ட மாணவனிடம், ”முதலில் நான் சொன்ன விடை உனக்குப் பிடிக்கவில்லை. புதிய முறையில் சிந்தித்துப் பார்த்தேன். அதே விடைதான் கிடைத்தது”, என்று சொல்லிவிட்டு, தன் அடுத்த வகுப்பிற்கு சென்று விட்டாராம்! அப்பவும் அவர், தீர்வின் கணக்குப் படிகளை, (mathematical steps) மாணவனுக்கு விளக்கவில்லை! அது பெரிய விஷயமாக, அவருக்குப் படவில்லை. ஆனால், ‘முதல் கொள்கை’ முறை, அவருக்கு, அவ்வளவு எளிதாக முடிந்தது! ராஜாவின் செயல்பாடுகளில், இது போன்ற சில குணாதிசயங்களை நாம் பார்க்கிறோம். இசையை மட்டுமே சிந்திக்கும் அவர், பல தருணங்களில் பல்வேறு சிந்தனைகளில் இருக்கிறார். பேட்டி நடத்தும் பத்திரிகையாளர்களுக்கு, கிடைக்கும் பதில்கள் வான் நாய்மேனின் பதில்கள் போல இருக்கும்.ராஜா மிகவும் பிரபலமானவராக இருப்பதால், அவர் சொல்வதைப் புரியாமல் திரித்து, சர்ச்சைகளைக் கிளப்புவது எளிதாகிறது. ஃபைன்மேனை சுற்றியுள்ளவர்கள் பெளதிகம் தெரிந்த ஆராய்ச்சியாளர்கள். ஆனால், ராஜாவை பேட்டி எடுக்கும் பத்திரிகையாளர்கள், பெரும்பாலும் அதிக இசை அறிவற்றவர்கள். சர்ச்சை எழுப்ப மட்டுமே இவர்களால் முடிகிறது! மாயாஜால மேதைகள், ஒரு துறையில் மேதைகளாக இருந்தாலும், இன்னும் சில துறைகளிலும், திறமையுள்ளவர்களாக இருக்கிறார்கள். இதை ஆங்கிலத்தில் polymath என்கிறார்கள். உதாரணத்திற்கு, ஃபைன்மேன், மிக அருமையாக டிரம்ஸ் வாசிப்பவர். அதிலும் சாம்பா (Samba) என்ற இசை வடிவத்திற்காக பிரேசில் நாட்டில் சில காலம் பெளதிகம் சொல்லிக் கொடுத்தார்! அருமையாக படம் வரைபவர். திடீரென்று, வேதியல் வகுப்புகளுக்குச் சென்று அங்கும் தூள் கிளப்புவார். அதே போல, வான் நாய்மேன், பெளதிகம், கணக்கியல், அணுகுண்டு ஆராய்ச்சி, கணினி கட்டமைப்பு, என்று பல துறைகளிலும் ஜொலித்தவர். ராஜாவும் இசையில் மேதையாக இருந்தாலும், எழுத்து, புகைப்படக் கலை, பாடல் எழுதுவது, ஆன்மீகம், பலமொழி அறிவு என்று பலதுறை வல்லவராக இருக்கிறார். என் பார்வையில், ராஜாவின் அணுகுமுறை சில சமயங்களில் புத்திசாலி மேதை போலத் தோன்றும். மற்ற சமயங்களில் மாயாஜால மேதை போலத் தோன்றும். அடுத்து வரும் பகுதிகளில், எங்கு அவர் திறமையைக் காட்டுகிறார், எங்கு புத்திசாலி மேதையாகிறார், எங்கு மாயாஜால மேதையாகிறார் என்று பார்ப்போம். என்னுடைய உதாரணங்கள் கர்னாடக இசை அடிப்படையில் அதிகமிருக்காது. இதற்கு காரணம், எனக்கு அந்த அறிவு அதிகம் இல்லாததே. 7 பகுதி - 7 மெல்ல ஊர்ந்து ஊர்ந்து… சென்னை வரும் பொழுது ராஜாவுக்கு சமஸ்கிருத மொழி தெரியாது. அதில் ஆர்வம் இருந்ததால், அவர் அம்மொழியைக் கற்றுக் கொண்டார்.ஆரம்பத்தில், அம்மொழியின் இசை வடிவம் இவரை மிகவும் கவர்ந்ததாகத் தோன்றுகிறது. சமஸ்கிருத சுலோகங்கள், ராஜாவின் பாடல்களில் நிறைய இடம் பெற்றிருக்கின்றன. திறமையாளரான ராஜாவின் சில பாடல்களில், அப்படியே இடம்பெற்று வந்துள்ளது. உதாரணம், ‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற 1981 –ஆம் ஆண்டு வெளிவந்த படத்தில் இடம்பெற்ற, ’காதல் ஓவியம்’ என்ற பாடலின் ஆரம்பத்தில், ‘ஓம் சதமானம் பவது…’  என்ற வரிகள் எந்த மாற்றமும் இன்றி வழக்கமான முறைப்படி, பயன்படுத்தியிருப்பார்… https://www.youtube.com/watch?v=jEUwBSBRFWY அதே போல, ‘அழகி’ என்ற 2001 திரைப்படத்தில், இடம்பெற்ற, ‘பாட்டுச் சொல்லி’ என்ற பாடலின் ஆரம்பத்தில் இடம்பெரும், ‘’ஓம் சர்வமங்கல மாங்கல்யே, சிவே, சர்வாத சாதகே…’ என்ற வரிகள், எந்த மாற்றமும் இன்றி, வழக்கமான முறைப்படி பயன்படுத்தியிருப்பார்… https://www.youtube.com/watch?v=6NdExQZKNro இதுபோல பல திரைப்படப்பாடல்களில், திறமையாளரான ராஜா, சமஸ்கிருத சுலோகங்களை பயன்படுத்தியுள்ளார். அடுத்து, அவர் புத்திசாலித்தனமாக செய்தது, சமஸ்கிருத சுலோகங்களை தன்னுடைய மெட்டுக்குத் தகுந்தவாறு மாற்றியமைத்துக் கொள்வது. 1993 –ல் வெளிவந்த ‘உடன்பிறப்பு’ என்ற படத்தில் இடம்பெற்ற ’நன்றி சொல்லவே எனக்கு’ என்ற பாடலின் ஆரம்பத்தில் இடம்பெறும் ‘சதமானம் பவது சதாய’ என்ற சமஸ்கிருத சுலோகம் பாடலுக்கேற்ப சற்று மாறுபடும்… https://www.youtube.com/watch?v=vfFy9NB-XEg அதே போல, 1989 –ல் வெளி வந்த ‘என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘பூ முடித்து, பொட்டு வைத்த வட்டநிலா’ என்ற பாடலின், முதல் இடையிசையில், ‘ஓம் மாங்கல்யம் தந்துனா’ என்ற கல்யாண மந்திரம், ஹம்ஸதுவனிக்கு மாறிவிடும். https://www.youtube.com/watch?v=Q9quG2J5aLk இது போன்று, இன்னும் சில ராஜா பாடல்களில், சுலோகங்கள் அவரது புத்திசாலி மேதைமையால் மெட்டின் தேவைக்கேற்ப மாற்றிப் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதை கேட்கும் மற்ற இசைக்கலைஞர்கள், ’அட, நமக்கு தோன்றாமல் போய்விட்டதே’ என்று நினைத்து வேறு ராகங்களில் இவ்வாறு செய்ய வாய்ப்புள்ளது. [Description: https://scontent-b-ord.xx.fbcdn.net/hphotos-xap1/t1.0-9/10155714_771533429547318_3644055375351794711_n.jpg] அடுத்தபடியாக, 1998 –ல் ராஜாவின் இசையில் வெளிவந்த ‘நிலவே முகம் காட்டு’ என்றா திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘தென்றலைக் கண்டு கொள்ள’ என்ற பாடலின் இரண்டாவது இடையிசையை கவனியுங்கள். ராஜவின் குரலில், ‘நவே வசசாங்கலேகா’ என்ற சமஸ்கிருத சுலோகம் ஒலிக்கையில், நாடுப்புறப் பாணியில், ’ஈரமில்லா மனசுல’ என்ற வரிகளில் பெண் குரல்கள் ஒலிக்கும். https://www.youtube.com/watch?v=6cPhAqgKIeo சமஸ்கிருத சுலோகம் ஒலிக்கும் அதே நேரத்தில், நாட்டுப்புறப் பாடல் சற்றும் காதிற்கு நெருடாமல், சுகமாக ஒலிக்கிறது. என் பார்வையில் இது ஒரு மாயாஜால மேதைக்கு மட்டுமே தோன்றக் கூடிய ஒன்று. இது போல ஒன்றை இதுவரை யாரும் செய்யவில்லை. பாடல் என்னவோ மேற்கத்திய முறைபடி (melodic minor) உருவாக்கப்பட்ட ஒன்று. அத்துடன் ஒரு சுலோகம், மற்றும் நாட்டுப்புறப் பாடலைச் சேர்த்து யோசிக்கும் அசாத்திய மேதை, ராஜா. இப்பகுதியில் உள்ள இசைத்துணுக்குகளை மட்டும் கேட்க விருப்பமிருந்தால், இங்கே நீங்கள் கேட்கலாம். http://geniusraja.blogspot.ca/2011/12/sanskrit-chant-based-choir-white-and.html 8 பகுதி -8 நன்றி சொல்ல வேண்டும்… கூட்டிசை, அதாவது கோரஸ் என்பது, நமது இசை மரபு. கோவில்களில், பஜனைகள், பெரும்பாலும் கூட்டிசையாகவே ஒலித்து வந்துள்ளது.இன்னிசையை நன்றாக சுருதி சேரப் பாடுவது நமது மரபு. அதே போல, மேற்குலகில், தேவாலயங்களில், கூட்டிசை, ஒரு இசை மரபு. நம்மிசையை விட, மேற்கத்திய கூட்டிசை, விதிகளுடன், சற்று கூடுதலாக, வளார்ந்த ஒன்று. Choir என்பது, தேவாலயங்களில், நமது பக்தி பாடல்களைப் போன்ற ஒன்று. கிறிஸ்மஸ் காலங்களில், இத்தகைய Choir, மிகவும் ஊக்குவிக்கப்படும் இசை முறை. மேற்கத்திய கூட்டிசையை, எப்படி பாட வேண்டும் என்பதற்கான பயிற்சியும் உண்டு. இதைப் பற்றிய, ஒரு எளிய அறிமுகம் இங்கே… http://geniusraja.blogspot.ca/2012/09/introduction-to-harmony-singing.html ராஜாவுக்கு, நமது மற்றும் மேற்கத்திய கூட்டிசை அத்துப்படி. ஆரம்பம் முதல், நம்முடைய கூட்டிசையை திறமையாகக் கையாண்டுள்ளார், 1978 –ல் வெளிவந்த, ‘பகலில் ஒரு இரவு’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘இளமை எனும் பூங்காற்று’ என்ற பாடலில், நம்முடைய இந்திய பாணி கூட்டிசை அழகாக அமைந்திருக்கும். இன்றும், அந்த பாடலுக்கு அழகு சேர்ப்பது, வயலின்களுடன் கூட்டிசை… https://www.youtube.com/watch?v=_WVuWL0rkww [Description: https://fbexternal-a.akamaihd.net/safe_image.php?d=AQAUTyQDaqGtMqlD&w=470&h=246&url=http%3A%2F%2Ftamil.oneindia.in%2Fimg%2F2014%2F03%2F18-ilayaraja231-600.jpg&cfs=1&upscale]1989 –ல் வெளி வந்த, ’புது புது அர்த்தங்கள்’ படத்தில் இடம்பெற்ற, ‘கேளடி கண்மணி’ என்ற பாடலில், சரணம் முழுவதும் பின்னணியில் ஒலிப்பது, பெண்குரல் கூட்டிசைதான்… https://www.youtube.com/watch?v=r0jGMePNjKE இது போன்ற, பல நூறு மெல்லிசைப் பாடல்களை படைத்துவிட்டார் ராஜா. அடுத்து, நமது நாட்டுப்புறப் பாடல் முறையில் ராஜா, பல பெண் கூட்டிசை குரல்கள் தாங்கிய பாடல்களையும் உருவாக்கியுள்ளார். உதாரணத்திற்கு, 1980 –ல் வெளி வந்த ‘ஜானி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஆசைய காத்துல’ என்ற பாடலில் அழகாக, இவ்வகை கூட்டிசையை இடையிசையாய் பயன்படுத்தியுள்ளார்: https://www.youtube.com/watch?v=NV7fwCbKrPg 1989 –ல் வெளிவந்த, ‘இதயத்தை திருடாதே’ திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘காவியம் பாடவா’ என்ற இன்னிசை பாடலின் முதல் இடையிசையில், நாட்டுப்புற கூட்டிசையை, காதுகளுக்கு இதமாக சேர்த்திருப்பார். https://www.youtube.com/watch?v=Gd0JMc-BaT8 இதுபோன்ற இன்னும் சில நாட்டுபுற கூட்டிசை இசைத்துணுக்குகளைக்  கேட்க: http://geniusraja.blogspot.ca/2012/01/female-folk-choir-singing-orange-tulips.html http://geniusraja.blogspot.ca/2012/01/male-folk-choir-singing-purple-tulips.html கர்னாடக இசையுடன் சற்று புத்திசாலி மேதைமையோடு, ராஜா சில கூட்டிசை பாடல்களை அமைத்துள்ளார்: 1984-ல் வெளிவந்த, ‘தங்கமகன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ராத்திரியில் பூத்திருக்கும்’ என்ற ஹம்ஸாநந்தி ராகத்தில் அமைந்த பாடல், இதற்கு ஒரு எடுத்துக்காட்டு… https://www.youtube.com/watch?v=8U2HVjtb9n4 1988-ல் வெளிவந்த ‘நான் சொன்னதே சட்டம்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘ஒரு தேவதை வந்தது’ என்ற, சாரங்கா ராகத்தில் உருவாக்கப்பட்ட ராஜாவின் பாடலில் ராகம் தவறாமல், பெண் கூட்டிசை அமைத்திருப்பார்: https://www.youtube.com/watch?v=6RH7jnKnGzA இது போன்ற இன்னும் சில உதாரணங்கள் இங்கே: http://geniusraja.blogspot.ca/2011/10/female-choir-singing-set-to-carnatic.html http://geniusraja.blogspot.ca/2011/11/malefemale-choir-singing-set-to.html ராஜாவின் இப்படிப்பட்ட முயற்சிகள், மற்ற இசைக்கலைஞர்களால், இன்று புதிய ராகங்களில் கூட்டிசை பாடல்களை அவ்வப்பொழுது உருவாக்க முடிகிறது. அடுத்தபடியாக, 1981-ல் வெளிவந்த ‘கரையெல்லாம் ஷெண்பகப்பூ’ என்ற திரைப்படத்தில், ராஜா, ‘ஏரியிலே எலந்தமரம்’ என்ற ஒரு பாடலை அமைத்திருப்பார். என் பார்வையில், இதுபோன்ற ஒரு பாடல், தமிழில் என்றும் வராது. கர்னாடக ஸ்வரங்களுடன் ஆரம்பிக்கும் இப்பாடல், மேற்கத்திய ஒத்திசைவு (harmony) இசை விதிகளுக்கேற்ப, நாட்டுப்புற பாடல் முறைபடி பாடப்பட்டிருக்கும் ஒரு இமாலய சாதனை. எந்த இசைகலைஞராலும், இன்றுவரை சிந்தித்துக்கூடப் பார்க்க முடியவில்லை. இரண்டாவது இடையிசையில் வரும் கல்யாண மேளம், நாயனம் எல்லாம் கூட்டிசையால், மேற்கத்திய harmony –ல் விளையாடியிருப்பார் ராஜா. https://www.youtube.com/watch?v=goTE1xWs0uE இப்படி, வித விதமான இசைகளைக் கலப்பது, பெரிய விஷப் பரீட்சை. அதுவும், சரியாக அமையவில்லை என்றால், இசை விமர்சகர்கள் தாளித்து விடுவார்கள். ராஜா, சர்சைகளைப் பற்றி என்றும் கவலைப் பட்டதில்லை. அவருக்கு தன்னுடைய இசை ஆளுமை மேல் அவ்வளவு நம்பிக்கை! இந்த பாடலைப் பற்றிய விவரமான அலசல் இங்கே: http://geniusraja.blogspot.ca/2012/10/usage-of-folk-and-western-choir-in.html இந்தப் பாடலில் ராஜா தன்னுடைய மாயாஜால மேதைமையை, அழகாக வெளிப்படுத்தியுள்ளார். 9 பகுதி -9 ஒரு காற்றிலாடும்… 17 –ஆம் நூற்றாண்டு யூரோப்பில் வாழ்ந்தவர் பாஹ். அவருடைய மேற்கத்திய இசைப் புதுமைகள் ஏராளமானவை. மேற்கத்திய இசையில், ஒத்திசைவுக்குப் (harmony) பெரும் பங்குண்டு. பாஹின் காலத்தில், உருவான ஒத்திசைவு முன்னேற்றங்களில் ஒன்று ஃப்யூக் (fugue) என்னும் ஒரு இசை உத்தி. ஃப்யூக் என்றாலே, மேற்குலகினர், அச்சம் கொள்ளும் அளவிற்கு, கடினமான ஒரு உத்தி. பாரம்பரிய மேற்கத்திய பல்லியல் இசையில் ஈடுபட்டுள்ள சிலருக்கே, இது ஒரு கைவந்த உத்தி. அதுவும், மேற்கத்திய சினிமா பின்னணி இசையில், இத்தகைய உத்திகள், ஒரு விஷப் பரீட்சையாக கருதப்படுகிறது. சரி, ஃப்யூக் உத்தியை கையாள என்ன தேவை? 1. ஒரு ஸ்தாயியில், முதலில் ஒரு இன்னிசை (melody) இருக்க வேண்டும். 2. பிறகு, அதைத் தொடரும் இன்னிசையும் அதைப்போலவே (imitation) இருக்க வேண்டும் – ஆனால், வேறு ஸ்தாயியில். 3. இரண்டாவது ஸ்தாயியில் உள்ள இன்னிசை என்பது, பல்லிசையாகவும் இருக்க வேண்டும் (contrapunctal). இது இந்திய இசைக்கு, சொஞ்சமும் சம்மந்தம் இல்லாத, ஒரு உத்தி. இதை இந்திய சினிமாவில் ராஜாவைத் தவிர யாரும் பயன்படுத்தியதாக எனக்குத் தெரியாது. பல பாடல்களில், இந்த உத்தியை ராஜா இடையிசையில் மற்றும் பின்னணி இசையில் பயன்படுத்தியுள்ளார். சரி, அவரது, மாயாஜால மேதைமைக்கும், இந்தக் கடினமான உத்திக்கும், என்ன சம்மந்தம்? பாடகி உமா ரமணன், ஒரு தொலக்காட்சி நிகழ்ச்சியில் பேசுகையில், ராஜாவுடன் வெளியூருக்கு ஒரு கச்சேரிக்குச் சென்றுவிட்டு, காலை ரயிலில் சென்னை திரும்பி, 8 மணிக்கு ராஜாவின் ஸ்டுடியோவில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பாடியதாக சென்ன பாடல், 1980 –ல், வெளிவந்த ‘நண்டு’, திரைப்படத்தில் இடம்பெற்ற, ’மஞ்சள் வெய்யில் மாலையிட்ட கோலம்’ என்ற பாடல். https://www.youtube.com/watch?v=25p9EQA4Hsc [Description: https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSva5yGZz4k0TkvyqzKrdxiV1tsUFQI9kMwbOkwtiKbWKrmNj7e] அப்படி என்ன மாயாஜாலம் இப்படலில்? 1. கல்யாணி ராகத்தில் அமைந்த சினிமாப் பாடல் – இதில் மாயம் என்ன? பல காலங்களாக, சினிமா இசைக்கலைஞர்களுக்கு பிடித்த ராகம்தானே? 2. இதன் இடையிசையை கவனித்தால், பாஹே மூக்கில் விரலை வைக்கக்கூடிய இசையமைப்பு – ஒன்றல்ல, இரண்டல்ல, ஏழு ஃப்யூக் உத்திகளை, இந்த 4 நிமிடப் பாடலில் கையாண்டுள்ளார் ராஜா. 3. இதுவரை, இந்திய சினிமா பாடல்களில் எனக்குத் தெரிந்தவரை இத்தகைய கடினமான உத்தியை, நம்முடைய கர்னாடக ராகங்களுடன் உபயோகித்தவர் எவரும் இல்லை. என் பார்வையில், பல்லாண்டுகளுக்கு இந்த மாயாஜாலம் தொடரும். இடை இசைக்கான நேரம் என்னவோ, 2முதல் இரண்டரை நிமிடம் வரைதான். அதற்குள், இத்தகைய சாதனையை படைத்தவர் யாரும் உலகில் இல்லை என்பது என் கணிப்பு. இந்த இடையிசை பற்றிய விரிவான விளக்கம் இங்கே: http://geniusraja.blogspot.ca/2011/05/fine-fugue-fete.html மேற்கத்திய உத்திகளை, நம்முடைய பாரம்பரிய ராகங்களுடன், இணைத்து அழகாக வழங்குவது என்பது சாதாரண காரியம் அல்ல. சின்னச் சின்ன முன்னேற்றங்களில் பெருமையடையும் மனம் அல்ல, இத்தகைய மேதைகளின் மனம். இடையிசையை கூர்ந்து கேட்காத எவரும், இது ராஜாவின் இன்னொரு கல்யாணி என்று முடிவெடுக்க வாய்ப்புள்ளது. இதுவரை ராஜா, இதைப்பற்றி பெருமையாக எங்கும் பேசியதில்லை. அவருக்கு, ஆயிரம் உத்திகளில் இதுவும் ஒன்று. அவ்வளவுதான்! பகுதி -10 இந்த உலகில் நான் இருந்தாலும்…. மேற்கத்திய பாரம்பரிய இசையில் இன்னொரு முக்கியமான உத்தி counterpoint  என்ற உத்தி. இரு இன்னிசைகளை (melody), ஒரே நேரத்தில் ஒலிக்கும்படி, கம்போஸ் செய்ய வேண்டும். எழுதுவதைவிட, அழகாக ஒலிக்கச் செய்வது, மிகக் கடினம். இரு பாடல்கள் ஒரே நேரத்தில், ஒரு வீட்டில் இரு அறைகளில் அலறினால், உண்டாகும் குழப்பம் நாம் எல்லோருக்கும் தெரிந்த எரிச்சலூட்டும் விஷயம். மிக எளிதாக சொதப்பிவிடக் கூடிய ஒரு உத்தி இது. ராஜாவின் மானசீக குருவான பாஹ் உருவாக்கிய உத்தி இது. பல நூறு ஆண்டுகள் தூசி படிந்து, கடந்த 100 வருடங்களாக இம்முறை மேற்குலகில் பாரம்பரிய இசையில் ஒரு பங்காகியுள்ளது. சரியான தமிழ் வார்த்தை நான் இதுவரை அறியாதலால், counterpoint என்பதை, ஈரின்னிசை, அதாவது இரண்டு+இன்னிசை, என்று சொல்ல தீர்மானித்துள்ளேன். ராஜா இந்த உத்தியைக் கையாள்வதில் சூரர். தமிழர்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் – தெரியாமலே, நாம் அவர் இசை மூலம், இந்த உத்தியை கேட்டு வந்துள்ளோம். ஆனால், பாஹ் சொன்னபடியே செய்வது, இன்னொரு மேதைக்கு அழகாகாது. ராஜாவின் திறமையால்/புத்திசாலி மேதைமையால், பல பாடல்களில் இந்த உத்தியை பயன்படுத்தியுள்ளார். 1983-ல், வெளிவந்த ‘உதயகீதம்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘சங்கீத மேகம்’ என்னும் பாடலின் முதல் இடையிசையில் (interlude) அழகாக, வயலின்கள் மூலம் ஈரின்னிசையை, மிக அழகாகப் பயன்படுத்தியிருப்பார்: https://www.youtube.com/watch?v=lIzn6NlaH6s 1984 –ல், வெளிவந்த ‘குங்கமப்பூ’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘நிலவு தூங்கும் நேரம்’ என்ற பாடலின் இரண்டாவது இடையிசையில், மிக அழகாக வயலின்கள் மற்றும் ஸிந்தசைசர்களின் ஈரின்னிசை ரம்மியமாய் ஒலிக்கும். https://www.youtube.com/watch?v=0k6lUIhIqPo இது போன்ற பலநூறு பாடல்களில் ராஜா ஈரின்னிசையை, போகிற போக்கில், எழுதி தள்ளியுள்ளார். மேற்கத்திய இசைக்கலைஞர்கள் மெனக்கிட்டு எழுதும் இத்தகைய இசைக்குறிப்புகளை நூற்றுக்கணக்கில், எந்த மெனக்கீடலும் இன்றி எழுதித்தள்ளிய மேதை ராஜா. இது போன்ற பல ஈரின்னிசை இசைதுணுக்குகளை இங்கே காணலாம்/கேட்கலாம்: http://geniusraja.blogspot.ca/2008/08/counterpoint-with-violins.html http://geniusraja.blogspot.ca/2008/08/counterpoint-with-flute.html http://geniusraja.blogspot.ca/2008/08/counterpoint-with-guitar.html மேலே காட்டிய உதாரணங்கள் எதிர்காலத்தில், துடியான இசைக்கலைஞர்களால், மாற்றி உபயோகிக்கப் படும். நாம் இதுவரை பார்த்த அத்தனை எடுத்துக்காட்டுகளும் மேற்கத்திய இசையை அடிப்படையாகக் கொண்டது. [Description: https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSFFrOMCho39Tx1i10NLfHZcxQVLqYV7ZjWtSNmT05rpHNMiveAbw] அதுத்தபடியாக, அவரது, மாயாஜால மேதைமையைப் பார்க்கலாம். யாராவது, இந்த மேற்கத்திய உத்தியை இந்திய இசைக்கு பயன்படுத்துவார்களா? இதுவே பெரிய, சர்ச்சையைக் கிளப்பும் விஷயமாக இருக்கும். இதற்கும் மேலாக, உத்தி என்னவோ மேற்குலகின் உத்தி, ஆனால், பாடல், கர்னாடக ராகப் பாடல் – அதுவும் குரலுக்கே முக்கியத்துவம் நிறைந்த பாடல். ராஜா அதற்கும் தயார். தமிழில் ஒரு பாடல், தெலுங்கில் ஒரு பாடல் என்று இந்த ஈரின்னிசை உத்தியை, எஸ்.பி.பி. –இன் குரலை வைத்தே, சாதித்து காட்டியுள்ளார். ’பாடும் பறவைகள்’ அன்ற 1985 –ஆம் ஆண்டு திரைப்படத்தில் இடம்பெற்ற, ’கீரவாணி, மனதிலே’, என்ற பாடலில், பாலுவின் குரலை ஈரின்னிசை முறையில், முற்றிலும் கர்னாடக கீரவாணி ராகத்தில் அழகாக பயன்படுத்தியிருப்பார்: https://www.youtube.com/watch?v=JBNGCH2845s இதற்கு முன், 1981 –ல் வெளிவந்த தெலுங்கு படமான ‘அன்வேஷனா’ என்ற திரைபடத்தில், இடம்பெற்ற, ‘ஆவேச மந்தா’ என்ற பாலுவின் குரலில் அமைந்த பாடலில், ராஜா ஈரின்னிசை உத்தியை முற்றிலும், இந்திய இசையில் அழகாக பயன்படுத்தியிருப்பார். இதை நீங்கள் இன்கே கேட்கலாம்: http://geniusraja.blogspot.ca/2008/11/isai-vignani-music-scientist.html நானறிந்தவரை, இதுவரை எந்த இசைக்கலைஞனுக்கும் இவ்வாறு இசையை தோற்றுவிக்கும் திறன் இல்லை. இதற்கு, இரு பெரும் கடல்களையும் – அதாவது மேற்கத்திய பல்லியல் இசை, மற்றும் கர்னாடக இசை -  முழுவதும் புரிந்து செயல்பட வேண்டும். அது மட்டும் போதாது. இரு மாறுபட்ட இசை முறைகளின் விதிகளை தனக்கு சாதமாக பயன்படுத்தும் சாதுரியமும் வேண்டும். மிகப் பெரிய  சவால் என்று பலருக்கு இன்றுவரை தோன்றினாலும், ராஜா இதைப் பற்றி அலட்டிக் கொண்டதில்லை. அவருக்கு இது இன்னொரு பாடல். அவர் தனது அடுத்த பாடலை அமைக்கும் பணிக்கு, என்றோ போய்விட்டார்! 10 பகுதி -11 எங்கே நீ சென்றாலும் இதுவரை, பல பகுதிகளில், ராஜாவுக்கு கர்னாடக மற்றும் மேற்கத்திய பல்லியல் இசை ஆளுமை ஏராளம் என்று சொல்லி வந்துள்ளோம். சற்று சிந்திப்போம். இன்றுள்ள தென்னிந்திய இசைகலைஞர்கள் பெரும்பாலானோருக்கு இவ்விரண்டு இசை வடிவங்களும் நன்றாக தெரியும். அப்படியானால், ராஜாவிடம் உள்ள மேதைமை என்ன? இந்த இரண்டு இசை வடிவங்களையும் இணைத்து, அல்லது கலந்து கொடுப்பதற்கு, Fusion அல்லது சங்கம இசை என்ற பெயர். எந்த இரண்டு இசை வடிவத்தை கலந்தாலும் அது ஃப்யூஷன் என்று சொல்லலாம். பல ஃப்யூஷன் கச்சேரிகளில், கலவை சரியில்லாமல் இடிக்கும். இதுவரை, இத்துறையில், ராஜாவை விட திறமைசாலிகள் யாருமே இல்லை என்று நினைத்திருந்தேன். ஆனால், அந்த எண்ணம் மாறக் கராணம் ராஜாவே! பால் லீமன் (Paul Lyman) என்ற மேற்கத்திய இசைக் கலைஞர், ராஜாவை சந்தித்து பேசும் பொழுது, “நீங்கள் நிறைய மேற்கத்திய இசையையும், இந்திய பாரம்பரிய இசையையும் கலந்து ஃப்யூஷன் செய்திருக்கிறீர்களாமே” என்று கேட்டிருக்கிறார். அதற்கு ராஜா, “நீங்கள் கேள்விப்பட்டது தவறு!” என்று சுறுக்கமாக பதிலளித்துள்ளார்! வியந்த பால், “நான் ஏதேனும் தவறாக சொல்லிவிட்டேனா?” ராஜா, அதற்கு, “இரண்டு இசை வடிவங்களை கலந்தால்தானே அது ஃப்யூஷன்?  நான் எதையும் கலப்பதில்லை. எனக்கு, உங்கள் இசையில் எங்கள் இசை தெரிகிறது” பால், “Interesting” ராஜா, “எனக்கு மேற்கத்திய ஸ்கேல்களுக்குள் ஹம்ஸத்வனியும், கெளரிமனோகரியும், கீரவாணியும் தெரிகிறது” அதுவே ராஜாவின் மாயாஜால மேதைமை! [Description: https://fbexternal-a.akamaihd.net/safe_image.php?d=AQDNFkVhgMaxDfVq&w=470&h=246&url=http%3A%2F%2Ftimesofindia.indiatimes.com%2Fphoto%2F32903469.cms&cfs=1&upscale&sx=0&sy=0&sw=450&sh=236] மிக எளிதான ஒரு உதாரணத்துடன் ஆரம்பிப்போம். 1980 –ல், வெளிவந்த ‘நிழல்கள்’ திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘பூங்கதவே தாழ்திறவாய்” என்ற மாயாமாளவகெளளை ராகத்தில் அமைந்த பாடலின் தொடக்க (prelude) இசையை கவனியுங்கள். எங்கு மேற்கு முடிந்து, எங்கு கிழக்கு ஆரம்பிக்கிறது? பின்ணணி மேற்கத்திய வயலின்கள் ஒத்திசைவில் (harmony) முன்னணி கர்னாடக வயலின்களோடு சேர்ந்தே கொஞ்சுகின்றன… https://www.youtube.com/watch?v=e0GVIOL7MAc 1984 –ல், வெளிவந்த, ’மகுடி’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘நீலக்குயிலே உன்னோடுதான்’ என்ற ரசிகரஞ்சனி ராகத்தில் இடம்பெற்ற பாடல், அருமையான ராஜ உதாரணம். இரண்டாவது இடையிசையில், பின்னணி மேற்கத்திய வயலின்களும், முன்னணி கர்னாடக வயலின்களும் சேர்ந்து ஒரு யாகமே நடத்தும்! https://www.youtube.com/watch?v=p151PJRzvkQ இத்தகைய, தன்னுடைய மேதைமையை முழுவதுமாக வெளிபடுத்த ராஜா ‘எப்படி பெயரிட’, அல்லது How to name it?  என்ற இசைத் தொகுப்பை 1986 –ல், வெளியிட்டார். அதில் உள்ள அத்தனை இசைத்தடங்களும் கேட்பவரை அப்படி வியப்பில் ஆழ்த்தவல்லது.  இத்தகைய மேதைமை ஒரு சிலருக்கே வாய்க்கும். https://www.youtube.com/watch?v=0Lex86hSIy4 பாஹ் மற்றும் தியாகராஜரின் படைப்புகளில் உள்ள ஒற்றுமையை ஆராயும் ராஜாவின் முயற்சி இந்த படைப்பு. கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கழிந்தும், இதன் தாக்கம் இன்றுவரை உள்ளதற்கு காரணம், அதன் பின்னுள்ள ராஜாவின் மேதைமை. இந்த இசைகோர்ப்பில், அவரால் ஹம்ஸத்வனியையும், பாஹின் Bourre in E-Minor -ஐயும் ஒன்றாகப் பார்க்க முடிகிறது. 1990 –ல் வெளிவந்த ‘கோபுர வாசலிலே’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘நாதம் எழுந்ததடி’ என்ற ஸ்ரீரஞ்சனி ராகத்தில் அமைந்த பாடலின் முதல் இடையிசையை கவனியுங்கள், மேற்கத்திய ஒத்திசைவு சில நொடிகள் வந்து போகும்: https://www.youtube.com/watch?v=yInVRv54ilA 1990 –ல் வெளிவந்த ‘ஆவாரம்பூ’ திரைப்படத்தில், இடம்பெற்ற, ’மந்திரம் இது’ என்ற பாடலின், முதல் மற்றும் இரண்டாம் இடையிசையைக் கேளுங்கள்.கர்னாடக இசை அடிப்படையில் அமைந்த இப்பாடலில், மேற்கத்திய ஒத்திசைவுக்கு என்ன வேலை? https://www.youtube.com/watch?v=VCIyVp5ilk4 11 பகுதி -12 பாட்டுச் சொல்லி… முதலிலேயே சொல்லி விடுகிறேன். இளையராஜாவின் நாட்டுப்புற மெட்டுக்கள், நாட்டுப்புறப் பாடல்களே அல்ல. முதலில், நாட்டுப்புறப்பாடலை யார் எழுதினார் என்றே யாருக்கும் தெரியாது. சினிமாவில், கவிஞர் ஒருவர் எழுதிய பாடலுக்கே இசை வழங்கப்படுகிறது. அத்துடன், ராஜாவின் கிடார், பலதரப்பட்ட வயலின்கள், ஷெனாய், செல்லோக்கள் என்று அமர்க்களப்படும். உண்மையான நாட்டுப்புறப் பாடல்களில், இத்தகையை அலங்காரங்களுக்கு இடமில்லை. சினிமாவில் folk என்று மிகவும் பந்தாவாக சொல்லப்படுவது, கிராமத்து வழக்க தமிழில் எழுதப்பட்டுள்ள  பாடல்களையே குறிக்கிறது. ராஜாவின் folkஇசையிலும் மேற்கத்திய செவ்வியல் மற்றும் கர்னாடக இசை தாக்கம் இருக்கும். உதாரணத்திற்கு, ’ராஜகுமாரன்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘காட்டுல, கம்மங் காட்டுல’ என்ற பாடலின் பின்னணி இசையை கவனியுங்கள் – வயலின்கள் மேற்கத்திய முறையில் இசைக்கப்படும். அதுவும், மிகச் செறிவான இசைக்குறிப்புகளுடன் கூடிய உத்தியான tremolo  என்ற வயலின் அதிர்வுகள் வேறு! அத்துடன், தாளம் என்னவோ டிரம்ஸ் தாளம். ரசிக்க வைத்துவிடுவார் ராஜா. https://www.youtube.com/watch?v=NkMz1NCu8KM 1984 –ல் வெளிவந்த, ‘வைதேகி காத்திருந்தாள்’, திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘ராசாத்தி உன்ன பாடாத’ என்ற பாடல், அடிப்படையில் ஒரு மேற்கத்திய இசை வடிவம். தபேலா, வார்த்தைகள் என்று ராஜா நம்மை குழப்புவார். தபேலாவை மறந்து, இப்பாடலின் இடையிசையை கவனியுங்கள், ராஜாவின் மேற்கத்திய குட்டு வெளிப்பட்டுவிடும். இன்றுவரை, அவர் தான் செய்த folk விந்தைகளைப் பற்றி, சற்றும் பெருமை அடித்துக் கொண்டதில்லை. இது போன்ற அழகான மெட்டுக்களை புதிய இசைக்கலைஞர்கள் உருவாக்கினாலும், இவ்வளவு அழகாக வார்த்தை மற்றும் இசையமைப்பு மூலம் வேற்றிசை என்று மறக்க வைக்க தடுமாறுகிறார்கள். https://www.youtube.com/watch?v=H8UA_u9soRo [Description: https://scontent-a-ord.xx.fbcdn.net/hphotos-prn1/t1.0-9/10341609_775048195868668_4595988696740452132_n.jpg]இப்படி இலைமறை காய்மறையாய் folk –ஐ கொடுத்த ராஜா, இன்னொறையும் செய்துள்ளார். முழுக்க முழுக்க மேற்கத்திய இசையமைப்பு வடிவமான waltz  என்ற முறையில், ஒரு அழகிய folk  பாடல் ஒன்றை, ‘அவதாரம்’ என்ற 1995, ஆம் ஆண்டு, திரைப்படத்தில் இடம் பெற்ற, ‘சந்திரரும் சூரியரும்’ என்ற பாடலில் கொடுத்துள்ளார். https://www.youtube.com/watch?v=9BIScB-grKs மேற்கத்திய நடன பாடல் முறையான waltz  முறை, ராஜாவின், எளிமையான நாட்டுப்புறப் பாடலுக்கு எப்படி கைவருகிறது பாருங்கள். பாடல் வரிகளை மறந்து, பின்னணி இசையை மட்டும் கேளுங்கள் – ராஜாவின் வால்ட்ஸ் வயலின்கள் உங்களை மேற்குலகிற்கு அழைத்துச் செல்லும். அவரால், வேண்டியபொழுது மறைக்க முடிகிறது, வெளிப்படையாகவும் படைக்க முடிகிறது. என் பார்வையில், அவர் நாட்டுப்புறப் பாடல்களையும் மேற்கத்திய செவ்வியல் அணுமுறையுடனேயே, அணுகுகிறார். அவருக்கு இந்த இரண்டு முறைகளுக்குள் உள்ள ஒற்றுமை, மற்ற இசைக்கலைஞர்களைவிட அவ்வளவு துல்லியமாக தெரிகிறது. அதுவே அவரது மாயாஜால மேதைமை. 12 பகுதி -13 தென்றலும் மாறுது… பஜனைப் பாடல்கள், நம் வழக்கத்தில், பல நூறு ஆண்டுகளாக உள்ள ஒன்று. இதற்கென்று வடகத்திய மற்றும் தெற்கத்திய தாள கதிகளும் உண்டு.கேட்டவுடன், இது ஒரு வட இந்திய பஜன் என்று நம்மால் சொல்லிவிட முடிகிறது.  ராஜா ஆன்மீக ஈடுபாடு அதிகம் கொண்டவர். இத்தகைய பாடல்கள் உருவாக்குவதில் அவருக்கு தனி ஈடுபாடு உண்டு. அத்துடன், அவரது தனிப்பட்ட பக்தி இசை வெளீயீடுகளில், சினிமா இசையில் செய்தது போல அழகான குழுவிசை உத்திகளையும் பயன்படுத்தியுள்ளார். எல்லா இசையும் ஒன்றுதான் என்று சொல்வது, மிக எளிது. ஆனால், செய்து காட்டுவது, என்பது மிகக் கடினம். இந்தப் பகுதியில், ராஜா எப்படி இவ்வளவு எளிதாக செய்கிறார் என்று பார்ப்போம். 2009 –ல் வெளி வந்த ‘நான் கடவுள்’ என்ற திரைப்படத்தில், தலைப்பு பாடலாய் அமைந்தது, ‘மா கங்கா’ என்ற இந்திப் பாடல். இதை குணால் குஞ்சாவாலா தன்னுடை பாணியில் பாடினார். இது ஒரு வட நாட்டு பஜன் சாயலில் அமைக்கப்பட்ட மெட்டு… https://www.youtube.com/watch?v=3VwUDaqsjfw இதில் என்ன மேதைமை என்று உங்களுக்குத் தோன்றலாம். இதே மெட்டை ராஜா, ‘பரம்பொருள்தானே அருணாசலம்’ என்ற ’ரமணா சரணம்’ என்ற இசைத் தொகுப்பில், கர்னாடக பாணியில் கல்யாணி ராகத்தில் அமைத்து, அசத்துகிறார்: https://www.youtube.com/watch?v=k3CMTDixzHU அதே போல, ’சந்திரலேகா’, என்ற திரைப்படத்தில், இடம் பெற்ற, ‘அரும்பும் தளிரே’ என்ற வழக்கமான காதல் பாட்டு. அதில் ஒன்றும் பெரிய விஷயமல்ல. இது போல ஆயிரம் பாடல்களைக் கொடுத்துவிட்டார் ராஜா. https://www.youtube.com/watch?v=8v9enj7uSvw ஆனால், இதே பாடலை, உன்னியின் குரலில், ராஜா ஒரு அழகிய பஜனையாய் மாற்றுகிறார் பாருங்கள். திரைப்படத்தில், அதை ஒரு இறுதியஞ்சலிக்காக பயன்படுத்தியிருப்பார்கள். https://www.youtube.com/watch?v=6thou0agbbE எல்லா இசைவடிவமும் ஒன்றாகவே அவருக்கு தோன்றுகிறது. ’நாடோடிப் பாட்டுக்காரன்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல், ‘வணமெல்ல்லாம் ஷெண்பகப்பூ” என்ற பாடல். ஆரம்பம், சங்கராபரணம் ராகத்தில் ஆரம்பித்துவிட்டு, இரண்டாவது சரணம், நாட்டுப்புறப் பாணியில் அழகாக அமைத்திருப்பார்: https://www.youtube.com/watch?v=OalaBi7MVuY [Description: https://scontent-a-ord.xx.fbcdn.net/hphotos-xfa1/t1.0-9/10402599_245864005603221_1348618940209291949_n.jpg] மிக எளிமையாக, யாரும் எதிர்பாரா விதத்தில், அவரால், ஒரு இசை முறையிலிருந்து, இன்னொரு இசை முறைக்கு மாற முடிகிறது. 1991 –ல், வெளிவந்த ‘ஆதித்யா 369’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல், ‘சுரமோதமு’. இப்பாடல், ஆரம்பத்தில், என்னவோ ஒரு அமைதியான நடனத்திற்கேற்ற கர்னாடக இசைப்பாடலாகத்தான் தோன்றும். கல்யாணியில், ராஜா நம்மை லயிக்க வைத்து விடுவார். இரண்டாம் பல்லவியில், மேற்கத்திய ராக் இசை எங்கிருந்தோ பாடலுக்குள் நுழையும். மிக சாதாரணமாக இந்த இரு இசை வகைகளும் அவருடைய கற்பனைக்கு ஏற்ப விளையாடும். https://www.youtube.com/watch?v=dDOCDj8xbUw இப்படி, பல இசை வடிவங்களும், அவருடைய மாயாஜால மேதைமைக்கு, ஒன்றாகவே தெரிகிறது. 13 பகுதி -14 தாவித் தாவிப் போகும்… [Description: https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xfp1/t1.0-9/10551063_1505493656347019_8111971129086186766_n.jpg] ராஜாவின் மேதைமையைப் புரிந்து கொள்ள, வேறு விதமாக யோசிப்போம். அப்படி என்ன சாதித்துவிட்டார் ராஜா? அவருக்கும் முன்பும், பின்னும் பல இசைக்கலைஞர்கள் பல வெற்றி பாடல்களை நமக்குத் தந்துள்ளார்கள். மற்றவர்களுக்கும் இவருக்கும் அப்படி என்ன பெரிய வித்தியாசம்? ஒரு சினிமா இசைக்கலைஞரை மேதை என்று சொல்வதெல்லாம் கொஞசம் மிகையாகப் படலாம். மொஸார்டையோ, விவால்டியையோ, ஷோபெனையோ ராஜாவுக்காக நாம் புறக்கணிப்போமா? நிச்சயமாக இல்லை. தியாகராஜரையோ, புரந்தரதாசரையோ ராஜாவுக்காக நாம் புறக்கணிப்போமா? நிச்சயமாக இல்லை. ஜாஸ் உலகில் சாதித்த லூயிஸ் ஆம்ஸ்டிராங்கையும் நாம் ராஜாவுக்காக ஒதுக்கி வைக்க மாட்டோம். இத்தகைய இசை குருக்களோடு ராஜாவை ஒப்பிடுவதை அவரே ஒப்புக் கொள்ள மாட்டார். இவர்கள் சாதிக்காததையா, ராஜா சாதித்துவிட்டார்? நாம் இங்கே சொன்ன ஒவ்வொருவரும், அவர்களுடைய இசையில், பெரும் சாதனையாளர்கள். விவால்டியிடம் ஓர் கீர்த்தனையோ, தியாகராஜரிடம் ஒரு harmony –யையோ நாம் எதிர்பார்ப்பதில்லை. ஆனால், ராஜாவின் இசையில், நாம் இன்று, இவற்றை எதிர்பார்க்க முடியும் என்ற சாத்தியத்தை உருவாக்கியுள்ளார். 1. அவருடைய இசையில் மேற்கத்திய செவ்வியல் இசையும், நம்முடைய ராகங்களும் சேர்ந்தே, நம்மை அறியாமல் ரசிக்க வைக்கும் ஒரு அசாத்திய மேதை அவர் 2. கொஞ்சம் இசை புரிந்தவுடன், எப்படி இவ்வாறு சம்மந்தமே இல்லாத இரு இசை வடிவங்களை ஒன்றோடு ஒன்று பிணைக்க ஒருவரால் முடியும் என்று நம்மை பிரமிக்க வைக்கும் கலைஞர் அவர் பல்வேறு பழங்களை (அதாவது இசை முறைகள்) ஒரு மிக்ஸிக்குள் அரைத்து, கலந்து மிகச் சுவையாக வழங்கும், விந்தை மனிதர் அவர். இன்றும், பலரும், பழச்சாறை ருசி பார்த்து, இன்ன இன்ன பழங்களை, அவர் கலந்து இன்ன இன்ன சதவீதத்தில், கலந்திருக்கக் கூடும் என்று நாமெல்லாம் யூகித்து வருகிறோம். அத்துடன், அவர் இறுதியாக வழங்கும் பழச்சாற்றில், அவரது தனி முத்திரை இல்லாமல் இருந்ததே இல்லை. சில சமயம் அன்னாசிப்பழத்தை, மாம்பழச்சுவை போல நம்ப வைக்கும், இசை மாயக்காரர் அவர். இவர் செய்யும் இந்த விந்தைக்கு இன்னொரு உதாரணம் கொண்டு அலசுவோம். ஒரு கண்ணாடி குவளையில், தங்க மோதிரத்தைப் போட்டால், மோதிரம் என்ன கரைந்தா போகிறது? கண்ணாடியும், தங்கமும் என்றும் சாதாரண நிலையில் ஒட்டிக் கொள்வதில்லை. ஆனால், இன்றைய மின்னணுச் சில்லுகள் (micro chips) எல்லாம் ஏறக்குறைய கண்ணாடி (silica) மற்று தங்கத்தை (gold connectors) ஒட்டும் விஷயம்தான். இசையிலும், கொஞ்சம் கூட ஒட்டாத இரு இசை முறைகளை சேர்க்கத் தெரிந்த வித்தகர் ராஜா. சமீபத்தில் ராஜா இசையில், தெலுங்கு பாடல் ஒன்றைக் கேட்க நேர்ந்தது – ’ஷிவ் ஷங்கர்’ என்ற திரைப்படத்தில், ‘கிருஷ்ணா நுவ்வு’ என்ற பாடல் அது.வழக்கமான காதல் டூயட் பாடல். இந்த பாடலின் சரணத்தில், பின்னணியில் ஒலிக்கும் கருவி சற்று பிரமிப்பாக இருந்தது. ராக் உலகில் மிகவும் பிரபலமான Distortion Guitar என்பதை குரல்களுக்கு பின்னால் ராஜா பயன்படுத்தியிருந்தார். http://geniusraja.blogspot.ca/2013/06/summarizing-again-why-is-he-genius.html மலையாளத்தில், 2003 –ல், வெளிவந்த ’மனசினக்கரே’, என்ற படத்தில் இடம் பெற்ற, ‘மரக்குடையாள்’ என்ற பாடலின் இரண்டாவது இடையிசையில், ராஜா ஒரு நாட்டுப்புற கூட்டிசையுடன் இதே Distortion Guitar –ஐ பிரமாதமாகப் பயன்படுத்தியிருந்தார். எப்படி, ஒரு இந்திய இன்னிசை பாடலுக்கும், நாட்டுப்புற பாடலுக்கும் ராக் உலக கருவியை பயன்படுத்துவது? எல்லா இசை முறைகளையும் சேர்ந்து பார்ப்பதோடு, எப்படி ஒன்றோடு ஒன்று பிணைக்க முடியும் என்று உலகிற்குப் பறைசாற்றிய முதல் இசைக்கலைஞர் ராஜா. https://www.youtube.com/watch?v=GLyT8oLDiOc 1998 -ல், வெளிவந்த ‘மனம் விரும்புதே உன்னை’ என்ற திரைப்படத்தில், ’கூட்டுக் குயிலை’ என்ற பாடல், வழக்கமான சினிமாப் பாடல். பாடலின் ஆரம்பத்தில், ராஜா ஒரு சமஸ்கிருத சுலோகத்தை, ஒத்திசைவு (harmony) முறையில் அமைத்திருப்பார்.  பாடலின் நவீன சரணத்துடன் பின்னணியில் கர்னாடக ஸ்வரங்களை பயன்படுத்தியிருப்பார். இது போன்ற உதாரணங்கள் கொட்டிக் கிடக்கின்றன.  எந்த ஒரு இசை முறையிலும் ராஜாவின் மேதைமையை, நாம் தேடுவது அபத்தம்; ஆனால், பலவகை இசை முறைகளை இரண்டறக் கலந்து அளிக்கும் உலகின் முதல் இசை மேதை அவர். இது போன்ற உலக இசை முறைகளை ஆழமாக அறிந்து, சாதாரண இசை ரசிகனுக்கு, ரசிக்கும்படி வழங்கிய ஒரு கலைஞர் 20/21 -ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்தாரா என்று உலகம் வியக்கும் காலம் வரும். நம்மருகில் உள்ளவர், எளிய சினிமா இசையை உருவாக்குபவர் என்பதற்காக, அவருடைய மேதைமையை புறக்கணிக்க முடியாது. இறுதியில், ராஜா பாஹயும், தியாகராஜரும் சந்தித்திருந்தால், எப்படி இசை அமைந்திருக்கும் என்று அவரது ‘எப்படி பெயரிட’ என்ற இசை தொகுப்பில், பல இசைக்கூறுகளை அமைத்திருந்தார். ருட்யார்டு கிப்லிங் (Rudyard Kipling) என்னும் மேற்கத்திய அறிஞர், ராஜாவை சந்திக்காததால், இப்படி எழுதினார்: East is East and West is West and never the twain shall meet. ஒரு ராஜா மேற்குலகில் தோன்றாதவரை, சாதாரண மேற்குலக இசை ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள் அல்ல என்றுதான் சொல்ல வேண்டும்.அதுவரை, நமக்கு ராஜா இசை விருந்து படைத்துக் கொண்டே இருப்பார். இன்னும் பல எதிர்பார்கவே முடியாத, இசைக் கலவைகளை நமக்கு அவர் அழகாக, எளிமையாக வழங்க வேண்டும். ஏனென்றால், அவரை விட்டால், இன்று உலகில், இந்த வேலையைச் செய்ய எவராலும் முடியாது. 1 முடிவுரை இப்புத்தகத்தின் குறிக்கோள், எளிய முறையில் ராஜாவின் மேதைமையை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே. எழுத்தாளரின் இசை அறிவு அதற்கு தடையாக இருந்தால், இம்முயற்சியில் வெற்றி இல்லை என்பது என் எண்ணம். ஆங்கிலம் ஆறிந்தவர்கள், விவரமாக இன்னும் பல உதாரணங்களை இங்கு, இணையதளத்தில் படித்து, கேட்டு மகிழலாம்: http://geniusraja.blogspot.com புத்தகத்தின் ஒவ்வொரு பகுதியும், ராஜாவின் 21 –ஆம், நூற்றாண்டு வெற்றிப் பாடலைத் தலைப்பாகக் கொண்டது. அவை கீழ்வருமாறு: ------- -------------------------------- -------- ------------------------- பகுதி தலைப்புப் பாடல் வருடம் திரைப்படம் 1 தெரிந்தும் தெரியாமலே ஏதோ… 2014 உன் சமலறையில் 2 இளங்காத்து வீசுதே… 2004 பிதாமகன் 3 சற்று முன்பு பார்த்த மேகம்… 2013 நீதானே என் பொன் வசந்தம் 4 முகிலோ மேகமோ… 2014 மேகா 5 பூ பூத்தது… 2005 மும்பாய் எக்ஸ்பிரஸ் 6 காற்றில் வரும் கீதமே… ஒரு நாள் ஒரு கனவு 7 மெல்ல ஊர்ந்து ஊர்ந்து… 2011 நந்தலாலா 8 நன்றி சொல்ல வேண்டும்… 2014 சித்திரையில் நிலாச்சோறு 9 ஒரு காற்றிலாடும்… 2009 நான் கடவுள் 10 இந்த உலகில் நான் இருந்தாலும்…. 2005 மது 11 எங்கே நீ சென்றாலும் 2009 கண்ணுக்குள்ளே 12 பாட்டுச் சொல்லி … 2002 அழகி 13 தென்றலும் மாறுது… 2009 வால்மீகி 14 தாவித் தாவிப் போகும்… 2011 தோனி ------- -------------------------------- -------- -------------------------   இந்த மின்னூலில் பல ஆங்கில சொற்களுக்கு, தமிழில் முடிந்தவரை, எழுதியுள்ளேன். மிக அதிகமாக பயன்படுத்திய சொற்கள் இங்கே: ------------------------- --------------------------- English தமிழ்ப் பரிந்துரை Chorus கூட்டிசை Clever genius புத்திசாலித்தனமான மேதை Counterpoint ஈரின்னிசை First principles முதல் கொள்கைகள் Fusion சங்கம இசை Genius மேதை Harmony ஒத்திசைவு Inventors கண்டுபிடிப்பாளர்கள் Listener or connoisseur ரசிகர் Magical genius மாயாஜால மேதை Mathematical Steps கணக்குப் படிகள் Musical Genre இசை முறை Optical diffraction ஒளிச் சிதறல் Rotating Coil சுழலும் மின்சுருள் Skilled தேர்ச்சியுற்றவர் Talented திறமைசாலி Western Classical Music மேற்கத்திய பல்லியல் இசை Western harmony மேற்கத்திய இணக்க முறையில் ------------------------- ---------------------------   நன்றி 1. இந்த மின்னூலைப் படித்து, அழகான முன்னுரை எழுதிய சி.எஸ். ராமசாமிக்கு என் மனமார்ந்த நன்றி. அவர் சொல்லும் அளவிற்கு, பெரிதாக நான் எதுவும் செய்துவிட்டதாக எண்ணம் இல்லை. ராஜாவின் இசையை அசை போட, ஏராளமாக இசை கற்க வேண்டும், என்று எனக்குப் புரிய வைத்தவர்களில் முதன்மையானவர் இவர். இக்காரணத்தால், அவர் எழுதியதை அப்படியே இங்கு வெளியிடும் கட்டாயம் எனக்கு. 2. இந்த மின்னூலின் முதல் வடிவத்தை படித்து கருத்து சொன்ன ராஜா ரசிகர்கள், இன்பவாணன் ராஜாமாணிக்கம், மற்றும், விஜயன் சங்கரனுக்கு நன்றி 3. இந்த மின்னூலில் வரும் ராகங்கள் எல்லாம் அறியும் அளவிற்கு எனக்கு கர்னாடக இசை அறிவு இல்லை. ஆனால், ராஜா ரசிகரான, வேல் ரமணன், என் போன்ற கத்துக் குட்டிகளுக்கு புரிவதற்காக, அழகாக ராஜா பாடல்களின் ராகங்களை பட்டியலிட்டிருக்கிறார்.  வேலுக்கு நன்றி. 2 Free Tamil Ebooks – எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1.ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2.தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3.சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. 3 உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை வெளியிடலாமே   உங்கள் படைப்புகளை மின்னூலாக வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி - http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  - தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !