[] 1. Title Page 2. Cover 3. Table of Contents இங்கிலாந்தில் சில மாதங்கள் இங்கிலாந்தில் சில மாதங்கள்   பேரா. டாக்டர். ரா.சீனிவாசன்     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/some_months_in_england மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/some_months_in_england This Book was produced using LaTeX + Pandoc இந்த மின்னூலைப் பற்றி உங்களுக்கு இம்மின்னூல், இணைய நூலகமான, விக்கிமூலத்தில் இருந்து கிடைத்துள்ளது1 இந்த இணைய நூலகம் தன்னார்வலர்களால் வளருகிறது. விக்கிமூலம் பதிய தன்னார்வலர்களை வரவேற்கிறது. தாங்களும் விக்கிமூலத்தில் இணைந்து மேலும் பல மின்னூல்களை அனைவரும் படிக்குமாறு செய்யலாம். மிகுந்த அக்கறையுடன் மெய்ப்பு செய்தாலும், மின்னூலில் பிழை ஏதேனும் இருந்தால் தயக்கம் இல்லாமல், விக்கிமூலத்தில் இம்மின்னூலின் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கலாம் அல்லது பிழைகளை நீங்களே கூட சரி செய்யலாம். இப்படைப்பாக்கம், கட்டற்ற உரிமங்களோடு (பொதுகள /குனு -Commons /GNU FDL )2 [3] (http://www.gnu.org/copyleft/fdl.html) இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே, இந்த உரையை நீங்கள் மற்றவரோடு பகிரலாம்; மாற்றி மேம்படுத்தலாம்; வணிக நோக்கத்தோடும், வணிக நோக்கமின்றியும் பயன்படுத்தலாம் இம்மின்னூல் சாத்தியமாவதற்கு பங்களித்தவர்கள் பின்வருமாறு: - Balu1967 - Balajijagadesh - Arularasan. G - Info-farmer - HoboJones - Be..anyone - Fleshgrinder - Patricknoddy-commonswiki - Mecredis - Rocket000 - Xato உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம். பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை. இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம். Universal (CC0 1.0) Public Domain Dedication This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode No Copyright The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission. This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx. முன்னுரை பள்ளிப் பருவத்தில் மாணவர்கள் ‘எக்சர்ஷன்’ செல்கின்றனர். வளர்ந்தவர்கள் அதை ‘பிக்னிக்’ என்று எடுத்துச் சொல்கின்றனர். வசதி மிக்கவர்கள் ‘உல்லாசப் பயணம்’ என்று பெருமைப்படுத்துகின்றனர். வயதானவர்கள் ‘யாத்திரை’ போகின்றனர். இப்படி ஏதோ சில பெயர்களால் மற்றை நாடுகளுக்கும் இடங்களுக்கும் போய்வந்த பிறகு அவர்கள் விசாரணைக்கு உள்ளாகின்றனர். “எப்படி இருந்தது பயணம்?” –கேட்கப்படும் வினா. இது சம்பிரதாயத்தை ஒட்டியது; பதில் சொல்லும்வரை கேட்பவர் முன் இருப்பது இல்லை; சலிப்பைத் தாங்காமல் அவர்கள் செய்த தவறை உணர்ந்து மறுபடியும் யாரையும் இது போன்று விசாரிப்பது இல்லை என்ற முடிவுக்கு வந்து விடுவார்கள். இதே போன்ற கேள்விகள் எனக்கும் தரப்பட்டன, பதில் சொல்வது என்பது எளிது அல்ல; அவர்கள் கேட்பது சம்பிரதாயம்தான் என்பதையும் உணர்கிறேன். அந்த வினாக்கள் ஒன்று சேர்ந்து என்னை எழுதத் தூண்டின. கேட்பவர்கள் படிக்கப்போவது இல்லை; படிப்பது உறுதி இல்லை. மற்றவர்கள் படிக்கவே இது எழுதப்பட்டது. எழுதுகிறேன். ஏன் எழுதுகிறேன். எழுத்து எனக்குப் பழக்கமான கலை; அது இதனை ஒரு இலக்கிய வடிவம் ஆக்கித் தந்துள்ளது. நாள் ‘பயண நூல்’ என்று எழுதுவதாக இருந்தால் நான் முதற் பயணியாக இருக்க வேண்டும்; நான் மார்க்கோபோலோ போல ஒரு சரித்திரப் பேராசிரியன் அல்ல; அந்த தேசங்களைப் பற்றி அறிந்தவர் பலர்; வாழ்ந்தவர் பலர், சென்று கல்வி கற்றவர் பலர்; இதனை ஒரு பயண நூல் என்றால் பார்த்த இடங்கள் அவற்றின் படங்கள் அதிசயிக்கத்தக்க சாதனைகள் செய்திகள் அதில் இடம் பெற வேண்டும். செய்திகளைத் திரட்டி ஒரு பயண நூல் எழுதுவதாக இருத்தால் மற்றவர்களை நான் மதிக்காதவன் ஆகிவிடுவேன். திரைப்படங்கள் பல வெளி நாட்டுப் பின்புலத்தை வைத்துப் பின்னப்பட்டுள்ளன; பத்தாம்பசலி என்றும் பட்டம் சூட்டப்படுவேன்; எங்களுக்குத் தெரியாததை இவன் என்ன சொல்ல முடியும்? இது நியாயமான கேள்விதான். தெரிந்ததைத்தான் பள்ளி மாணவன் பத்துப் பக்கத்தில் கட்டுரை எழுதித் தருகிறான். அவன் என்ன எழுதுகிறான். நான் இதைப் பார்த்தேன். அதைப் பார்த்தேன் கட்டுச் சோறு கட்டிச் சென்றேன். என்பதோடு என் நண்பர்கள் வந்தார்கள் என்று எழுதி முடிப்பான்; அது கட்டுரை. அதையும் பின்பற்ற முடியாது. பார்த்தவற்றை அறிந்தவற்றைத் தேவையானவற்றை நம் நாட்டு வாழ்வியலோடு தொடர்பு படுத்திப் பயன்படத்தக்க வகையில் (அந்த நம்பிக்கையோடு எழுதப்பட்டது) எழுதி முடித்தது இந்நூல்; செய்தியின் தொகுப்பு அல்ல; பயண அனுபவங்களும் இல்லை; அறிந்தவற்றை இலக்கிய நயம் தோன்ற எடுத்துச் சொன்னது. எனவே இது பயண நூல் அல்ல. பயண இலக்கியம் என்பது என் அறிமுகம். ரா.சீனிவாசன் அறிமுகம் எங்கிருந்து தொடங்குவது; எதை எழுதுவது எதை விடுவது என்பதுதான் பிரச்சனை. பயணக் கட்டுரை என்றால் அதற்கு ஒரு ஆரம்பம் ஒரு முடிவு அமைய வேண்டும். நிறைய பொருள் வசதியும் உலகம் சுற்றும் இயல்பும் அறிந்தவற்றைத் தொகுத்து அதிசயிக்கத்தக்க வகையில் எழுத வேண்டும். ‘உலகம் சுற்றும் தமிழன்’ என்ற ஓர் ஆக்கப் படைப்பு முதல் முதலில் தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றது. திரு. ஏ. கே. செட்டியார் இந் நூலை எழுதினார். இந்த நூலை எழுதுவதற்காகவே அவர் உலகம் சுற்றிப் பார்த்தாரா உலகம் சுற்றிப் பார்த்த பிறகு இந்த நூல் எழுதினாரா சொல்ல முடியாது. அப்படி எழுதப்படும் நூல் அல்ல; பயணத்தைப் பற்றி எழுப்பப்பட்ட விசாரணைக்குத் தரப்படும் பதிலே இது. ஒரு தமிழாசிரியன் இந்த நாட்டுப் பண்பாட்டிலும் சிந்தனைகளிலும் வாழ்வியலிலும் வாழ்ந்து பழகிப்போன ஒருவன் புதிய மண்ணில் கால் வைத்து (கால் கீழே வைக்க முடியாது : குளிர் தேசம்) அங்குச் சில மாதங்கள் தங்கி எந்தத் தொழிலும் இல்லாமல் பொழுது போக்கிய ஒரு சோம்பேறித்தனமான வாழ்க்கையில் ஒட்டிக்கொண்ட சுவடுகள் சிலவற்றைத்தான் இங்குப் பதியவைக்க முடிகிறது. ‘வெள்ளையனே வெளியே போ’ என்ற குரல் கொடுத்த நாடு இது. அதாவது அவர்கள் நம்மை ஆண்டார்கள்; அடிமையாக்கினார்கள்; நம் செல்வம் கொள்ளை கொண்டு போகப்பட்டது. இங்கே விளையும் பருத்தி அங்கே சென்று ஆடைகளாக மாறி விற்பனை செய்யப்பட்டது; இங்கிருந்து அரசியல் ஆதிக்கத்தால் சுரண்டப்பட்டு வறுமை மிஞ்சி விடுதலை கெட்டு உண்ண உணவும், உடுக்க உடையும் இருக்க வீடும் இன்றி வறுமைக் கோட்டில் அவர்கள் நம்மை வாழவைத்ததாகக் குற்றச்சாட்டு. அந்த வறுமை வாழ்விற்கு அவர்கள்தான் காரணம் என்றால் நம்மை நாம் ஆளும் இந்தச் சுதந்திர ஆட்சியில் நிலைமைகள் மாறி இருக்க வேண்டும், சுதந்திரம், ஜனநாயகம், சோஷியலிசம் என்ற இந்த மூன்று தத்துவங் ளில் இந்திய அரசியல் பரிணமித்தது. இது உலக நாடுகளின் முற்போக்குக் கொள்கைகளில் அடிப்படையானது. நாம் அன்றைய நிலையில் இருந்து பெரிய மாற்றத்தை உண்டாக்கித்தான் இருக்கிறோம். எப்படி? விவசாய நாடாக இருந்த இந்தப் பாரத தேசம் தொழில் வளர்ச்சி பெறும் நாடாக மாறி வருகிறது. வசதிகளைப் பெருக்கி வாழ வகை செய்துகொண்டு வருகிறோம். இத்தனை வளர்ச்சிகளுக்குமிடையே அவர்களோடு போட்டியிட்டுச் சரிசமமான நிலையை அடைந்தோமா அடைய முடிந்ததா அடைய முடியுமா என்ற கேள்விதான் எழுகிறது. அணுகுண்டு வீச்சால் அழிவுற்ற நாடுகளும் இன்று தொழில் வளத்தால் மிக வேகமாக முன்னேறியுள்ளன. ஜப்பான் இன்று உலக நாடுகளில் தொழில் வளம் மிக்க நாடாக விளங்குகிறது. மொத்தமாகச் சொன்னால் அந்த தேசங்கள் வளர்ச்சிபெற்ற நாடுகள் (developed countries) என்றும், நம் நாடு வளர்ச்சி பெறும் நாடு (developing country) என்றும் பேசப்படுகின்றன. அவர்கள் திரை கடலோடியும் திரவியம் தேடினார்கள்; வணிகத்தில் தொழில் வளர்ச்சியில் இயந்திர சாதனத்தில் முன்னேறிவிட்டார்கள்; பெரிய நகரங்கள் படைத்துவிட் டார்கள்; வாழ்க்கை வாழ்வதற்கே என்ற சித்தாந்தத்தைக் கடைப்பிடித்து வாழ்வது எப்படி என்று அறிந்து வாழ்கிறார்கள். இங்கே வாழ்வதே சரியல்ல; அது ஒரு மாயம்; மயக்கம் என்ற சித்தாந்தங்களுக்கு ஊடே ஒளி காண வேண்டியுள்ளது. விதியையும். மூட நம்பிக்கைகள் பலவற்றையும் கொண்டு வாழ்வில் ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கும் பழக்கம் ஆகிவிட்டது. அங்கே கண்ட உயர்ந்த கட்டிடங்களையும் வியத்தகு சாதனைகளையும் எழுதிக் காட்டுவதை விட வாழ்க்கையின் அடிப்படைகளை மட்டும் எழுதுவதுதான் தக்கது என்ற அடிப்படையில் இந்த எழுத்து இயங்குகிறது. அந்தப் புற மாற்றங்களை அடைய நாம் இன்னும் எவ்வளவோ காலம் உழைக்கவேண்டியுள்ளது. நம்முடைய போராட்டங்கள் பெரும்பாலும் உள் மனப் போராட்டங்களாக அமைகின்றன. அவர்கள் போராட்டங்கள் புறநிலைப் போராட்டங்கள். உற்பத்தி சாதனைகளைப் பெருக்கி அவற்றை மக்களுக்குப் பயன்படுத்தி மனிதன் வாழ்வதற்கு வேண்டிய தேவைகளையும் வசதிகளையும் பெருக்கிக்கொள்வதில் இயங்குகிறது. இந்த அடிப்படையில் சில வேறுபாடுகளைச் சுட்டிக் காட்டுவதே இந்த எழுத்தின் நோக்கமும் பயனுமாக அமையவேண்டும் என்று நினைக்கிறேன். திட்டமிட்ட வாழ்க்கை ’குடும்ப நலத் திட்டங்கள் என்பது ஒரு தேசத்தின் அடிப்படையாகும். இங்கு சந்துக்கு ஒரு விளம்பரம், இரண்டுக்கு மேல் வேண்டாம் என்று வீதி முடுக்குகளில் விளம்பரப்படுத்தப்படுகின்றன. சின்னஞ் சிறுசுகள் அர்த்தமில்லாத இந்த வாசகங்களைப் பால பாடமாகப் பயிலும் விளம்பரங்கள் பெருகிவிட்டன. இப்படி ஒரு விளம்பரத்தை அங்குக் காண முடியாது. இந்த விளம்பரம் தேவைதானா? ஏன் இந்தப் பொறுப்பு உணர்ச்சி நமக்கு உண்டாகவில்லை. செடி வைத்தவன் தண்ணீர் ஊற்றாமலா போவான் என்று கடவுள் மீது பாரம் போட்டுக் கடமை செய்யும் நாடு இது, இங்கே பயம் அதிகம்; பிறக்கும் குழந்தைகளுக்கு உறுதியான பாதுகாப்பு இல்லை. அதனால் இளமை இருக்கும்போதே இரண்டு மூன்று பெற்றுப்போட்டு விட்டால் நல்லது என்ற நினைப்பு எழுந்துவிடுகிறது, பெண் என்றால் அவள் தாயாக வேண்டும். அதுவே அவள் வாழ்வின் பயன் என்ற நம்பிக்கையில் ஊறி வந்துவிட்டோம். அதையும் கடந்து அவள் வாழ முடியும் என்ற நிலைமை இங்கு உருவாகவில்லை. அங்கே அவர்கள் எப்பொழுது குழந்தை வேண்டும் எத்தனை வேண்டும் என்று திட்டமிட்டே தாம்பத்திய வாழ்க்கையை நடத்துகிறார்கள், குடும்பக்கட்டுப்பாடு முறை அவர்கள் வாழ்வின் நடைமுறைகளில் ஊறிவிட்டது. இங்குப் பெண் குழந்தை பிறந்துவிட்டால் ‘ஆசைக்கு ஒரு பெண் ஆஸ்திக்கு ஒரு மகன்’ என்ற சித்தாந்தம் தலையெடுக்கிறது. அடுத்தது ஆண் பிறக்கும் என்ற நம்பிக்கை இனவிருத்திக்குத் துணை செய்கிறது. அங்கு ஆண் பெண் இருவரும் சமம். பெண் பிறந்துவிட்டால் வருந்தும் நிலை இல்லை. மொழிப் பிரச்சனை இங்கிலாந்து முழுவதும் ஆங்கிலம் பேசப்படுகிறது, கவிஞர்கள் வளர்த்துத் தந்த மொழி இன்று கல்விக்கும் வாழ்வுக்கும் முழுவதும் பயன்படுகின்றது. அது இன்றைய உலக மொழியாக மாறிவிட்டது. குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு மொழி ஒரு சிக்கலாக அமையவில்லை. பேசுவதும் படிப்பதும் அறிவதும் அனைத்தும் ஆங்கிலமே. இது ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது. இப்படியே ஒவ்வொரு தேசமும் தனித்தனி மொழிகளை ஆள்கின்றன. ஜெர்மனி யில் அவர்கள் மொழியும் பிரான்சில் அவர்கள் மொழியும் இயங்குகின்றது. எனினும் ஆங்கிலம் ஐரோப்பா முழுவதும் அறியப்படும் மொழி. பாரத தேசத்தில் மொழி ஒரு பிரச்சனையாக அமைந்து விட்டது. நம்மை ஒன்றுபடுத்தி அறிவிற்கும் ஆக்கத்திற்கும் முன்னேறச் செய்த அரிய சாதனை ஆங்கில மொழியைச் சார்ந்தது. அதன் இடத்தை இந்தி மொழி பிடிக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டு ஆங்கிலத்தை இழுத்துப்பிடிக்க முயற்சி நடைபெறுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஆங்கிலத்தைக் கைவிட முடியாது; பாரத நாடும் ஆங்கிலத்தைக் கைவிட்டால் நம் வளர்ச்சி குன்றுவது உறுதி. இருநூறு ஆண்டுகளாக நம் பல்கலைக் கழகங்களும் கல்வி நிறுவனங்களும் வளர்த்த ஆங்கிலத்தை விட்டுவிட்டால் நாம் ஒதுக்கப்பட்டவர்கள் ஆவது உறுதி. பிரதேச மொழிகளில் அந்தக் கருத்துக்களைச் சொல்ல முயல்வது வளர்ச்சியின் அறிகுறிதான், அதே சமயத்தில் ஒரு சிறந்த சாதனையை இழப்பதும் ஒரு பெரிய இழப்பாகும். மேல் மட்டக் குடும்பங்கள் இன்று ஆங்கிலத்தில் கல்வியறிவும் பேச்சு அறிவும் வளர்த்துக்கொண்டு வருகின்றன, அதே போக்கில் ஏனைய குடும்பங்களும் போட்டியிட்டு இயங்கிவருவதால் இன்று ஆங்கில போதனா மொழிகள் உடைய தனியார் கல்வி நிறுவனங்கள் இங்குப் பெருகிவருகின்றன. இன்று இங்கு மொழிப் பிரச்சனை ஓர் அரசியல் பிரச்சனையாகிவிட்டது. பெரும்பான்மை பேச்சு மொழியாகிய இந்தி இன்று இந்தியப் பொதுமொழியாக்கும் திட்டம் செயல்பட்டு வருகின்றது. அதை நாம் தடுக்க முடியாது. வட நாடு முழுவதும் இதனை அங்கீகரித்துவிட்டார்கள். ஏனைய தென்னிந்திய மொழிகள் இந்தி மொழிக் கல்வி பெற்று வருகிறார்கள். நாமும் அந்த அளவில் மொழிக் கல்வி பெற்றுவிட்டால் நாம் ஒரு பெரிய சாதனையை அடைந்துவிட்டோம் என்று கூறமுடியாது. எந்த மொழியாவது வளரட்டும்; பரவட்டும். ஆங்கிலத்தை எடுத்து எறியச் செய்யப்படும் முயற்சி நம்மை நாம் பின் தள்ளிக் கொண்டு செல்வதாக முடியும். நாம் அறிவு வேகத்தோடு போட்டியிட வேண்டியுள்ளது; கருத்துப் புதுமைகளைக் காணவேண்டியுள்ளது; அதற்கு ஆங்கிலம் அடிப்படை; நாட்டு வட்டார மொழிகள் பொது மக்களோடு அரசியல் வணிகம் அரசாங்க நடவடிக்கைகள் நடைபெற முனையும் முயற்சி வெற்றி பெற்று வருகிறது, இது அண்மைக்காலத்தில் ஏற்பட்ட முற்போக்கு, வளர்ச்சி, வட்டார மொழியில் அனைத்தும் இயங்குவது போற்றத்தக்க வளர்ச்சிதான். மேல் நிலையில் நுட்ப அறிவுக் கலை விஞ்ஞான நுணுக்கங்களை வெளிப்படுத்தும் மொழி ஆங்கிலம். அது ஆங்கிலேயர் நமக்கு விட்டுச் சென்ற அரிய செல்வம் என்பதை உணர முடிகிறது. ஆங்கில அறிவே இல்லாவிட்டால் நாம் அங்கு எதையும் அறிய முடியாது; பேச்சுத் தொடாபே இருக்க வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. மேற்கும் கிழக்கும் இணைக்கும் பாலமாக இந்த ஆங்கில மொழி அமைந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. உலக அரங்கில் நாம் ஒவ்வொரு தேசமும் நமக்கு ஒரு படிப்பினையைத் தருகிறது. பிரெஞ்சுப் புரட்சி சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோஷத்தைத் தந்தது. மனிதன் சுரண்டப்படக் கூடாது; ஆட்சியாளர்கள் குடிமக்களின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் பறிக்கக்கூடாது. அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டும் என்ற லட்சிய தாகத்தை எழுப்பியது; ஆண்டான் அடிமை நிலை ஒழிய வேண்டும் என்பது அங்கு எழுந்த புரட்சியின் வேகம். மார்க்சியம் தெளிவான புதிய பார்வையை உலகுக்குத் தருகிறது. பாரத நாடு தனி மனித ஒழுக்கத்தை வற்புறுத்துகிறது; அதைச் சுற்றியே அவன் சிந்தனை வளர்ந்தது. இராமன் ஏகபத்தினி விரதன் என்பதால் அவனுக்குப் பெருமை கற்பிக்கப்பட்டது. பெண் பிறர் நெஞ்சு புகக் கூடாத கற்பு தேவைப்பட்டது. ‘அறம் பொருள் இன்பம் வீடு’ இந்த நான்கு அடிப்படைகளை வைத்து வாழ்க்கை லட்சியம் பின்னப்பட்டது. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அறம் எனப் பேசப்பட்டது . பொருள் ஈட்டுதல் அதனைத் தனக்கும் அறச் செயல்களுக்கும் பயன் படுத்துவது பொருள் எனப் பேசப்பட்டது . ஈட்டலும், காத்தலும், வகுத்தலும் பொருளாதாரத்தின் அடிப்படைகள் ஆயின; ஒருவன் ஒருத்தி என்ற அடிப்படையில் இல்லறம் காத்து இன்பம் எய்தல் வேண்டும் என்று சுட்டிக் காட்டப்பட்டது. அதற்குப் பிறகு ‘வீடு’ என்ற கோட்பாடும் புகுத்தப்பட்டது, அதனை ஒட்டி இம்மை மறுமை என்ற இருவேறு நிலைகள் பேதப்படுத்திக்காட்டப்பட்டன, உலக வசதிகளைத் துய்த்தல் சிற்றின்பம் என்றும், அவற்றை விட்டு மறு வாழ்வுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்வது பேரின்ப வாழ்வுக்கு வழி என்றும் கூறப்பட்டன. பேரின்பத்தை அடைய வழிகள் கூறப்பட்டனவே தவிரப் பேரின்பம் அடைந்தவர்களின் வரலாறுகள் கூறப்படவில்லை. இறக்கும்போது இறப்பை இனிய நிலையில் வரவேற்கும் மனோநிலையை ஜீவன் முக்தி என்று பேசினார்கள். சாகும் போதும் துன்பம் இல்லாமல் சாகவேண்டும் என்று விரும்பினான். இதை ஒட்டிப் பல சமய சாத்திரங்கள் விவாதங்கள் பெருகின. இவற்றை மாற்றி இன்று தனி மனிதனும் சமுதாயமும் எவ்வாறு பிணைப்புறுகிறது என்று எண்ணும் சூழ்நிலைக்கு நாம் வந்துள்ளோம். நாட்டின் வளர்ச்சியில் அதன் அரசியல் சமுதாய மாற்றத்தில் தனி மனிதனின் நல்வாழ்வு பிணைப்புண்டு கிடக்கிறது என்பதை அறிந்து செயல்பட்டு வருகிறோம். மார்க்சீயம் புதிய கோட்பாட்டை உலகுக்கு அறிவுறுத்துகிறது. தனி மனிதனின் ஒழுக்க மேம்பாடும் வாழ்வும் வளமும் பொருள் உற்பத்தியையும் அதன் பங்கீட்டு முறையையும் ஒட்டி அமைந்துள்ளது என்பதைத் தெளிவுபடுத்திக் காட்டியுள்ளது. சமயம் தத்துவம் இந்தச் சொற்களுக்குப் புதிய பொருள் தந்து ’நீ மனிதனை நேசி! என்ற கோட்பாட்டில் காட்டுகிறது. ’மனித வாழ்வை நேசி! என்பது மார்ச்சீயத்தின் முடிந்த முடிவு; இன்று மார்க்சீயம் நம் இளைஞர்களைப் புதிய சிந்தனைப் போக்கில் இட்டுச் செல்கிறது. பிராய்டிசம் என்பது மனித இயல்பையும் ஆசாபாசங்களையும் விளக்கும் கோட்பாடாகும். பாலியலை ஒட்டியே வாழ்வியல் அமைந்துள்ளது என்பது இதன் அடிப்படைச் சித்தாந்தம். இந்த அடிப்படையிலேயே இன்றைய மனோ நிலை சமுதாய அமைப்பு இயங்கி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை; தனி ஒருவன் நினைவுக்காகத் தாஜ் மகால் கட்டிடம் கட்டப்பட்டது என்றால் அது எதனைக் காட்டுகிறது? இது மனிதனின் ஆரம்ப மனோநிலையாக இருக்கலாம்; அதனை மாற்றி மனிதனை மனிதன் நேசிக்கும் சமுதாய நல் உணர்வு பெருகும் போது பாலியல் இரண்டாம் இடத்தையே பெறுகிறது. அந்தப் போராட்ட நிலை இன்று உருவாகி உள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. தனிமனித நல்வாழ்வுக்கே தரும் முதலிடத்தைப் போலவே சமுதாய நல்வாழ்வு அமைய வேண்டும் என்ற கோட்பாடு இன்று வளர்ந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் நாம் எப்படி இயங்கி வருகிறோம் என்று சிந்திப்பது தேவையாகிறது. இங்கிலாந்தோடு நெருங்கிய தொடர்பு பாரத அன்னையின் விடுதலைக்கு முன் நின்ற காந்தி அடிகள் சட்டப் படிப்புப் படித்த தேசம் அது; நேரு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உலகை அறிந்த இடம்; ‘உவக வரலாறு’ என்ற அரிய நூலை நேரு நமக்கு அளித்திருக்கிறார். அவரைத் தலைமையாகக் கொண்டதால்தான் பாரத நாடு வெளியுலகத் தாக்குதலுக்கு இடம் கொடுக்க முடிந்தது. அன்னை இந்திரா உலகக் குடிமகளாக ஆக்கிக் கொள்ள அறிவு பெற்ற இடம் இது; இன்று பாரதப் பிரதமர் நாற்பதாவது வயதிலேயே மக்கள் தலைவராக இயங்கி உலகம் மதிக்கத்தக்க முற்போக்குச் சிந்தனை கொள்ளக் காரணமாகப் பயிற்சி பெற்ற தேசம் அது. பாரத நாட்டுப் பண்புக்கும் மேலை நாட்டு வளர்ச்சிக்கும் மதிப்புத் தரும் தலைமையில் பழைய மதிப்புகளை இழக்காமல் புதுமையை ஏற்று வளரும் என்ற நம்பிக்கை இருக்கிறது, அந்தத் தெளிந்த ஞானம் அவருக்குக் கிடைத்தது. அவர் பிறந்த மண் இது; வளர்த்துக்கொண்ட தேசம் அது, இரண்டின் கலப்பே பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி. வள்ளுவர், இளங்கோ, கம்பர், பாரதி, பாரதிதாசன் இந்த நாட்டு மகாகவிகள்; அவர்கள் காட்டிய வாழ்வியல் சுதந்திரக் கோட்பாடுகளையே தமிழகம் பின்பற்றுகிறது. கலைவளமும் பண்பாடும் இந்த அடிப்படையில் அமைந்துள்ளன. அதேபோல அந்த நாட்டில் ஷேக்ஸ்பியர், மில்டன், ஷெல்லி போன்ற கவிஞர்கள் பெர்நாட்ஷா போன்ற நாடக ஆசிரியர்களும் டிக்கன்ஸ் போன்ற கதாசிரியர்களும் அந்த நாட்டின் சிந்தனைச் சிற்பிகளாக விளங்கினர். நம்முடைய கலாச்சாரமும் இந்த எழுத்தாளர்களின் சிந்தனைப் போக்கால் தெளிவும் மாற்றமும் அடைந்துள்ளன என்பது மறுக்கமுடியாத உண்மை. இன்று நம் கலாச்சாரம் தனித்தன்மை உடையது என்று முழுவதும் கூறமுடியாது. மேலை நாட்டுத் தாக்கம் தேவையான அளவிற்கு ஏற்பட்டுள்ளது. அப்படியே பின்பற்றாமல் நல்லது ஏற்று அல்லது தள்ளி நாம் வாழ்ந்து வருகிறோம். ஆப்பிரிக்கர் போன்ற நாடுகளில் பழைய பண்பாட்டு இலக்கியங்கள் இல்லாமையால் நேரே மேல் நாட்டுக் கலை, மொழி பழக்க வழக்கங்கள் மிகுதியாகப் பின்பற்றப்பட்டு விட்டன. இன்று நீக்ரோக்கள் ஆங்கிலேயரின் நடையுடை பாவனைகள் நடனம் இசை முதலியவற்றை அவர்களைவிட மேம்பட்ட நிலையில் கற்றுப் புகழ் மிக்கவர்களாக விளங்குகின்றனர். மைக்கேல் ஜாக்சன் இன்று உலகம் பாராட்டும் இசைக்கலைஞர் என்று பாராட்டப்படுகிறார். அரேபிய நாடுகளில் இஸ்லாம் பின்னணி வலுவாக இருந்தபோதும் எண்ணெய் ஊற்றுகளால் பொன் கொழிக்கும் நாடாக மாறுவதால் மேலை நாட்டு வசதிகளை வளர்த்துக்கொண்டு வருகின்றன. அமெரிக்கா தேசம் பல தேசங்களின் குடியிருப்பு நாடாக இருப்பதால் அதற்குப் பழைமை என்பதன் அடிச்சுவடே இல்லாமல் ஐரோப்பியப் பண்பாட்டில் வளர்ந்து வருகிறது. அமெரிக்கர்களும் ஆங்கிலமே பேசுவதால் ஐரோப்பிய கலாச்சாரத்தின் அடிப்படையில் அந்த நாட்டு மக்கள் வாழ்வியல் அமைந்துள்ளது அவர்கள் உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் அறிவும் ஆற்றலும் மிக்க இளைஞர்களை அங்குக் குடிபுக அனுமதிக்கின்றனர். கலை விளையாட்டு இவற்றில் முதன்மையானவர்களைக் குடியேறச் செய்ய இடம் தருகிறது, அதனால் அவர்கள் உலக நாடுகளில் எல்லாவகையிலும் முற்போக்கும் வளர்ச்சியும் கண்டுள்ளனர். அங்கே தனி மனிதன் முயற்சிக்கு அதிக வாய்ப்புத் தரப்படுகிறது. விஞ்ஞானமும் ஆராய்ச்சியும் தொழில் வளமும் மிக்கு உள்ளதால் இன்று அமெரிக்கா தனித்து விளங்குகிறது. சீனாவும் ஜப்பானும் தத்தம் கலாச்சாரங்களை விட்டுக் கொடுக்காமல் தேவையான அளவிற்குப் பாரதத்தைப் போல் நல்லவற்றை மட்டும் பின்பற்றுகின்றன. ஆங்கில மொழிக் கல்வி மொழியாக அமையுமானால் அதனோடு அவர்கள் கலாச்சாரமும் புகுந்துவிடுகிறது. ஜப்பான், சீனா, ரஷியா இவை ஆங்கில மொழியின் ஆதிக்கத்தைப் பெறாததால் அவை வேறுபட்டுத் தம் இயல்பில் வளர்ந்தும் மாறியும் வருகின்றன. பாரதம் பழம் பெருமை உடையது; ஆங்கிலம் கல்வி மொழியாக ஏற்றுக் கொண்டுள்ளதே யல்லாமல் கலாச்சார மொழியாக ஏற்கவில்லை. அதனால் மேலை நாட்டுக் கலப்புத் தேவையான அளவே ஏற்பட்டு வந்திருக்கிறது. மண்வாசனை மணம் மாறாமல் இருக்கப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நம்முடைய கதைகள் திரைப்படங்கள் பழைய பண்பாட்டைக் காக்கப் பெரிதும் பாடுபட்டு வருகின்றன என்பதை மறுக்க முடியாது. மேலை நாட்டுத் தாக்கம் அதிகம் ஏற்பட ஏற்படப் பழைமையை நிலைநாட்ட ஆட்டம் கொடுக்காமல் கருத்துப் பிரச்சாரங்கள் அதிகம் செய்யப்படுகின்றன. இந்த நுட்பமான போராட்டத்தை நம் சிந்தனைகளிலும் எழுத்திலும் திரைப்படங்களிலும் காணமுடிகிறது. மேலை நாட்டு நடனங்களும் சண்டைக் காட்சிகளும் திரைப்படங்களில் புகுந்தபோதிலும் கதையின் அடிப்படைகளை மாற்ற முனைவதில்லை; மாற்றினால் படம் ஓடாது; மக்கள் மனோநிலையை ஒட்டித்தான் கதைகள் இயங்கவேண்டும் என்ற வியாபாரக் கண்ணோட்டம் பிடித்து இழுக்கிறது. புறமாற்றங்கள் புகுகின்றன; வரவேற்கப்படுகின்றன. மன மாற்றங்களுக்கு இடம் தரப்படுவதில்லை. ஒப்புமைக் கூற்று ஜப்பான் நாட்டில் வாழும் இந்திய அறிஞர் ஒருவர் சமீபத்தில் நம் நாட்டுக்கு வந்திருந்தார். அவர் தொலைக்காட்சியில் இந்த இரண்டு தேசங்களை ஒப்புமைப்படுத்திக் கூறுகின்றார் : “இந்தியாவின் வளர்ச்சி குறித்து உங்கள் கருத்து என்ன?” “பாரத தேசம் முன்னைய விட பத்தில் ஒரு பங்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது. ஒப்புக்கொள்கிறேன். அதே நேரத்தில் ஜப்பானியர் நம்மை விடப் பத்து மடங்கு முன்னேறி வருகிறார்கள்” என்பது அவர் தந்த பதில். இவர் மேலும் இதை வேறு வகையாக விளக்கிக் காட்டுகிறார்: “அவர்களை நோக்க நாம் ஒன்பது மடங்கு பின் தங்கிவிட்டோம்” என்று காட்டுகிறார். அங்கே தொழிற்சாலைகள் மிகுதி; அதை ஒட்டியே கல்விச்சாலைகளும் பெருகியுள்ளன. தொழிலுக்கும் கல்விக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இங்கே சோம்பல் மிகுதி; அங்கே செயல்பாடு மிகுதி என்று கூறுகிறார். இன்னும் அந்தச் சொற்கள் நம் செவியில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. இன்றைய பாரத தேசம் “ருஷ்யப் புரட்சி மார்க்சியத்தை அறிவித்தது. ‘மனிதனை நேசி’ என்ற புதிய தத்துவத்தைப் பறைசாற்றிக் கொண்டு இருக்கிறது. பொருளாதார அடிப்படையில் அரசியல் சமுதாயம், தனிமனித உறவுகள் ஒழுக்கப் பிரச்சனைகள் அணுகி அலசிக் காட்டப்படுகின்றன. உழைப்புக்கும் பிழைப்புக்கும் உள்ள அவசியத்தை மார்க்சியம் வற்புறுத்துகிறது. உழைப்பின் சேமிப்பு முதல் எனப்படுகிறது. அந்த முதல் பாரம்பரிய உரிமையாகும் போது தனி மனிதன் மற்றவன் உழைப்பில் வாழத் தொடங்குகிறான், அதற்குத்தான் சொத்துரிமை என்று கூறப்படுகிறது. வசதி பெற்றவன் வீட்டில் பிறந்துவிட்டால் அவன் அந்தச் சொத்துக்கு வாரிசாகிவிடுகிறான்; இல்லாதவன் இல்லாமையிலிருந்து வாழ்க்கையைத் தொடங்குகிறான். நாட்டின் பாதுகாப்பை நம்பி நாம் வாழ முடியவதில்லை; வாழ்க்கை யில் உறுதிப்பாடுகள் இல்லை; தந்தை விட்டுச் செல்லும் சொத்துக்கள் மனைவி கொண்டுவரும் வரதட்சணை, ஓரு ரூபாய் லாட்டரி சீட்டுகள் இந்த அடிப்படையில் வாழ்வைத் தொடங்குகிறான்: அதே அமைப்பைத் தன் வாரிசுகளுக்கும் விட்டுச் செல்கிறான். இதைத்தான் வருணாசிரம் தர்மம் என்று சொல்லி வந்தார்கள்; தெளிவாகச் சொன்னால் தந்தையின் தொழிலை மகன் ஏற்கிறான்; சாதி அடிப்படைகள் இவற்றுக்குத் துணை செய்கின்றன. தேசம் தனி மனிதனின் நல்வாழ்வுக்கு உறுதி அளிக்காதவரை பெற்றோரின் பாதுகாப்பிலும் அவர்கள் ஈட்டி விட்டுச் செல்கிற பாரம்பரியச் சொத்துக்களையும் நம்பித்தான் அவர்களின் பிள்ளைகள் வாழவேண்டி இருக்கிறது. இது எதுவரை கொண்டு செல்கிறது? அவர்களுக்கு மணவாழ்வு அமைத்துக் கொடுப்பதும் பெற்றோர்களின் பொறுப்பாக இருந்து வருகிறது. இந்த முறை மேல் நாட்டில் இல்லை. ஒருவனும் ஒருத்தியும் பழகி அறிந்து பேசி முடித்துக்கொண்டு பெற்றோர்கள் விருந்தினர்களில் சிலராக அழைக்கப்படுகின்றனர். இங்கே பெரியவர்கள்தான் அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கிறது. எனவே ஒரு புதிய போராட்டம் மாற்றம் நாம் எதிர் நோக்குகிறோம். பிள்ளைகளைப் பாதுகாப்பது; அவர்களுக்கு உறுதியான வாழ்வு அளிப்பது நாட்டின் பொறுப்பு என்ற நிலைக்கு மாறவேண்டும். அப்பொழுதுதான் இந்த பாரத தேசத்தில் சாதிகள் ஒழியும்; பிள்ளைகள் நாட்டுப் பற்றோடு வாழ முனைவார்கள். உயிர்வாழ்வுக்குப் பாதுகாப்பு இங்கிலாந்து தேசம் மக்களின் உயிர் வாழ்வுக்குப் பொறுப்பு ஏற்கிறது; பிறந்த குழந்தைக்கு அரசாங்கம் மானியம் தருகிறது; அக் குழந்தைகளின் தாய்மார்களுக்கு இருபத்தைந்து பவுண்டு அளவு மாதாமாதம் தரப்படு கிறது; தாய்ப் பாலை மட்டும் அக்குழந்தை உண்டு வளரவில்லை; நேரிடையாக அரசாங்கம் தரும் மானியத் தொகையையும் பெறுகிறது, நாட்டின் மகன் என்ற அங்கீகாரம் தரப்படுகிறது. அதே போல வயது வந்தவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வேலை இல்லை என்றால் பட்டினி கிடக்கத் தேவை இல்லை. வாழ்க்கைப் பணம் அ சாங்கம் தருகிறது. வேலையே தேடாமல் ஒருவனும் ஒழித்தியும் இந்த வாழ்க்கைப் பணத்தைப் பெற்றுக் குடும்பம் நடத்த முடிகிறது; குழந்தைகளையும் பெற்றுக்கொள்கிறார்கள்; உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு இம் மூன்றும் உறுதி செய்யப்பட்டுள்ளன. மக்களின் உயிர் வாழ்வுக்கு நாட்டு அரசாங்கம் பொறுப்பேற்று இருக்கிறது. நம் நாட்டில் கல்வியும் மருத்துவமும் ஆட்சியின் பொறுப்பு என்ற நிலை கொள்கை அளவில் சொல்லப்படுகிறது; முழுப் பொறுப்பை இந்த வகையில் ஆட்சி ஏற்கவில்லை. கல்வி இன்று தனியாரின் கைக்குச் சென்றுகொண்டிருக்கிறது. அதை வைத்து ஒரு கொள்ளையே நடந்துகொண்டிருக்கிறது. அந்தக் கொள்ளைக்கு “நன்கொடை” {donation) என்ற பெயர் வழங்கப்படுகிறது. மருத்துவம் இஞ்சினியரிங் எல்லாம் பொருளில்லார்க்கு இல்லை என்ற நியதி சொல்லப்பட்டுவிட்டது. சாதாரண மருத்துவ உதவி ஆட்சியாளர் நடத்தும் மருத்துவமனையில் தரப்படுகிறது. வசதி படைத்தவர்கள் அவர்களை ஒட்டி மற்றவர்களும் தனியார் மருத்துவத்தை நாடும் நிலை இங்கு வளர்ந்துவருகிறது. இங்கிலாந்தில் ஒரு வியத்தகு அமைப்பு உள்ளது; இயங்கி வருகிறது. ‘தனியர் மருத்துவ மனைகள்’ அந்த நாட்டில் அறவே நீக்கப்பட்டுவிட்டன. அரசாங்கம் முழுப்பொறுப்பேற்று மக்களின் நல்வாழ்வுக்குக் காப்பு அளிக்கிறது. ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் மருத்துவமனைகள் இயங்குகின்றன. அவை தனியார் மருத்துவமனை போன்ற அமைப்பை உடையன. அதில் நான்கு அல்லது ஐந்துபேர் கூட்டாகச் சேர்ந்து நடத்துகின்றனர். அது அவர்கள் அரசாங்கப் பொருள் உதவி பெற்று இயக்கி வருகிறார்கள். அதற்கு ‘சிகிச்சை அகம்’ (Surgery) என்று பெயர். ஒவ்வொரு வைத்தியரின் கீழ் சுமார் இரண்டாயிரம் பேர் பதிவு செய்யப்படுகின்றனர். ஒரு சிகிச்சை அகத்தில் பத்தாயிரம் பேர் புதிவு பெறுகின்றனர், அவர்களின் உடல் நலப் பாதுகாப்பு இந்தச் சிகிச்சை அகத்தைச் சார்ந்தது. காலை ஒன்பது முதல் மாலை ஐந்து வரை அங்கு நேரில் சென்று நோயாளிகள் மருத்துவ உதவி பெறுகின்றனர். இதுமட்டுமல்ல. அவர்கள் வீட்டுக்கும் இவர்கள் அழைப்பின் பேரில் செல்லவேண்டும். தொலைபேசியில் தொடர்பு கொண்டு மருத்துவரை அழைப்பார்கள். அவர்கள் இல்லங்களுக்கு இரவு எந்த நேரமாயினும் பகல் இரவு என்று பாராமல், அவர்களைக் கவனித்து மருத்துவம் பார்க்க வேண்டும். இதற்குக் கட்டணமாக அவர்கள் எந்தத் தொகையும் செலுத்தத் தேவையில்லை. அரசாங்கம் இவர்களுக்காக இந்தச் சிகிச்சை அகங்களுக்குக் கட்டணத்தொகையைச் செலுத்திவிடுகிறது, இதைவிட நாம் நம்பமுடியாத பொறுப்பை அரசாங்கம் ஏற்று நடத்துகிறது. அவர்கள் மருந்துக்குக் காசு தர வேண்டியது இல்லை. மருத்துவர் தரும் மருந்துச் சீட்டை மருந்து கடையில் நீட்டினால் அந்த மருந்துக்குக் காசு வாங்காமல் அவர்கள் மருந்து கொடுக்கின்றனர். அது எந்த விலையாயினும் எவ்வளவு அரிய மருந்தாயிலும் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் மருத்துவச் சீட்டைக் காட்டினால் தரப்படுகிறது என்றால் அரசாங்கம் மக்களின் உயிர்வாழ்வுக்குப் பொறுப்பு ஏற்கும் உயர்வைக் காணமுடிகிறது. அந்தச் சிகிச்சை அகங்களில் தீர்க்க முடியாத நிலையில் அரசு மருத்துவ மனைக்கு அவர்கள் அனுப்பப்படுகின்றனர். அங்கே வசதிகள் அதிகம்; தங்கி இருந்து சிகிச்சை பெற இடமும் தரப்படுகிறது. நான்கைந்து சிகிச்சை அகங்களின பொது அமைப்பாக இது செயல்படுகிறது. அதுவும் அவர்களைக் கவனிக்க முடியாத நிலையில் ‘பெரு மனைக்கு’ (Govt Hospital) நம் நகரப் பொது மருத்துவமனை போன்ற இடம் அங்கு சிபாரிசு செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றனர். பிறப்பு முதல் இறப்பு வரை அரசாங்கம் பொறுப்பேற்கிறது என்றால் அதை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. அந்த நிலை நம் நாட்டில் ஏற்படவேண்டும் என்று நினைப்பதில் தவறு இல்லை. அரசாங்கம் துணிந்து பொறுப்பு ஏற்கிறது. தமிழக ஆட்சியின் துணிவு மக்கள் உயிர் வாழ்வுக்கு உறுதுணையாக நிற்பது ஆட்சியின் பொறுப்பு என்ற கோட்பாட்டில் தமிழகம் கால் வைத்துள்ளது. இதைச் செய்யமுடியாவிட்டாலும் படிக்கும் பிள்ளைகளுக்குப் பாடம் போதிப்பதை விட அவர்களுக்கு உணவு அளிப்பது ஆட்சியின் பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்பட்டு வருவது ஒரு திருப்பு நிலை என்றே கூறலாம். ‘சத்துணவுத் திட்டம்’ நாடு மக்கள் வாழ்வுக்குப் பொறுப்பேற்கிறது. என்ற கோட்பாட்டை ஏற்கிறது என்பது பொருளாகிறது. இங்கிலாந்து தேசத்தில் குழந்தைகளுக்குத் தரும் மானியத் தொகையும், வளர்ந்தவர்களுக்குத் தரும் வாழ்க்கைத் தொகையும் கண்ட பிறகு இந்தத் திட்டம் அவற்றைப் போன்ற ஒன்று என்பதை உணர முடிகிறது. இந்த வகையில் நாம் வளர்ச்சிப் பாதையில் இயங்கி வருகிறோம் என்பதை உணரமுடிகிறது. இரவலர்கள் இல்லை ‘வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்’ என்பது அயோத்தி நகரத்தைப் பற்றிக் கம்பன் கண்ட கற்பனை. வள்ளல்களும் இரவலர்களும் வாழ்ந்த நாடு இது; கவிஞர்கள் புவியாளும் மன்னர்களைப் புகழ்பாடி வாழவேண்டிய சூழ்நிலையும் இந்த நாட்டில் இருந்துள்ளது, அவர்கள் தரும் பரிசிலை நம்பிக் கவிஞர்களின் சிறப்பும் உயர்வும் கிடக்கவேண்டி இருந்தது. கம்பனுக்கே இந்தப் போக்குப் பிடிக்கவில்லை போலும். ஒரு புரட்சிக் கருத்தைத் தோற்றுவிக்கிறான். இருப்பவர்கள் தம்மை வள்ளல்கள் என்று கூறிக்கொள்வதற்கே காரணம் இல்லாதவர்கள் கையேந்தி நிற்பதால்தான். வறுமை என்ற ஒன்று இருந்தால்தானே வள்ளல் என்ற இனம் ஒன்று தோன்றமுடியும். வள்ளல்களே இருக்கக் கூடாது கொடையாளிகள் இருப்பது நாட்டுக்கு அவமானம் என்ற ஒரு புதிய சிந்தனையைத் தோற்றுவித்தான். வறுமையின் வாட்டமே வள்ளல்களின் ஏற்றத்திற்குக் காரணம் என்பதை அறிந்த கம்பன் அந்த நாட்டில் வள்ளல்கள் இல்லை என்ற கற்பனையைத் தோற்றுவித்தான். இது கலை மெரு கோடு கூடிய கூற்று. மனிதன் தன் மானத்தோடு வாழவேண்டும்; தனக்குச் சேர வேண்டியது அல்லாததைப் பெறுவது இழுக்கு; அது தவறு என்ற உணர்வு தன்மானத்தின் அடிப்படையில் எழுவதாகும். இங்கே பிச்சைக்காரர்கள் குறைந்துவிட்டார்கள்; அதை ஒரு தொழிலாக நடத்தும் கூட்டம் மறைந்து விட்டது என்று கூறலாம். கோயில்களின் முன் தருமசிந்தனை உள்ளவர்கள் செயல்பாட்டுக்குத் துணை செய்ய ஒரு சிலர் கை நீட்டி வாங்கிக் கோயிலை அறநிலையமாக மாற்ற உதவி வருகின்றனர். உழைக்காமல் கையேந்திப் பிழைப்பது பிச்சைத் தொழில்; இன்று அது சுகபோக வாழ்வுக்கு ஒரு வழிகாட்டியாக மாறிவிட்டது; எதையும் ‘அது’ தராமல் சாதிக்க முடியாது என்ற நியதி வளர்ந்துவிட்ட பிறகு இனி அதைப் பற்றி எழுதிப் பயன் என்ன? ஒழுங்கீனங்கள் நியதியாகி விட்ட பிறகு நேர்மை என்பதைப் பற்றிப் பேசுவது பழங்காலக் காவியத்தை ரசிப்பது போன்றது ஆகும். இது எந்த அளவு நம் சமுதாயத்தில் ஊடுருவி நிற்கிறது என்பதைப் ‘பணம் பத்தும் செய்யும்’ என்ற தமிழ்த் திரைப்படம் மிக அழகாகக் காட்டியுள்ளது. இலக்கியம் காலத்தின் கண்ணாடி; திரைப்படங்களும் இப்படிக் காலத்தின் கண்ணாடியாக இயங்க முடியும் என்பதற்கு ஊழல் மலிவைப் பற்றிக் காட்டும் இச்சித்திரம் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அங்கே கை நீட்டிப் பிச்சை கேட்கும் இரவலர்களைக் காணமுடியவில்லை; லஞ்சம் கொடுத்துக் காரியங்களைச் சாதிக்க முடியும் என்ற சித்தாந்தம் அங்கே குடிபுகவில்லை. இன்று பாரத தேசத்தில் கடும் நோயாகப் பரவி உள்ளது ஊழல் என்பதுதான். இதைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்; தவிர்க்க முடியாத அன்றாட வாழ்க்கை நடைமுறை என்று இது ஆகிவிட்டது. என்ன செய்வது? ‘திரித்தவரை கயிறு’ என்ற சித்தாந்தத்தின் விளைவுதான் இந்த நிலைமை. வாழ்க பாரதம்! சுமக்கிறவன் இல்லை ரயிலடியில் விமான நிலையத்தில் கடை அங்காடிகளில் மூட்டைகளைத் தூக்க அங்குக் கூலியாட்களைக் காண முடியாது; இதைப் பலர் பயண நூல்களில் குறிப்பிட்டும் உள்ளனர். காரணம்? அந்த அவசியம் அங்கு ஏற்படவில்லை; அங்கங்கே தள்ளுவண்டிகள் அந்த நிறுவனங்கள் வைத்து இருக்கின்றன. பெட்டிகளுக்கும் உருளைகள் வைத்து இழுத்துச் செல்லும் அமைப்புகள் ஏற்பட்ட பிறகு கூலி போர்ட்டர்கள் தேவை இல்லாமல் போய்விடுகிறது. இங்குச் சென்னை விமான நிலையத்திலும் அந்த நிலை ஏற்பட்டுவிட்டது. அவரவர் சுமைகளை அவரவரே தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளிச் செல்கின்றனர். அந்த அளவுக்குத் தரைகளும் ஒழுங்காகச் செப்பனிடப்பட்டுள்ளன என்பதும் அறியவேண்டிய ஒன்று. மேலே செல்ல ஊக்கிகள் (lifts}, படி ஏற்றங்கள் (Escalators) அமைந்திருக்கும்போது தொடர்ந்து செயல்படும்போது எதையும் தாங்கும் சுமை தாக்கிகளாக அவை அமைந்துவிடுகின்றன. வீட்டைச் சுற்றி அவர்கள் உலகம் வீட்டை அழகுபடுத்துவது வசதிகளைப் பெருக்குவது என்பது அங்கு வாழ்க்கைச் சித்தாந்தம். ஒவ்வொரு வீடும் முன்னும் பின்னும் புல்வெளியும் தோட்டமும் பெற்றுப் பசுமைக் காட்சியைத் தோற்றுவிக்கிறது. வீட்டு முன்னால் கண்ணைப் பறிக்கும் வண்ண மலர்கள் நிறம் ஊட்டுகின்றன. ரோஜாப்பூக்கள் பல நிறங்களில் பூத்துக் காட்சியளிக்கின்றன. அவற்றை யாரும் வழிப்போக்கர்கள் கிள்ளுவது இல்லை. அள்ளிச் செல்ல நினைப்பதும் இல்லை. வேலி இல்லாத வீடுகளைக் காணலாம்; தடுப்பதற்கு வேலிகள் தேவை இல்லை. மாற்றான் தோட்டத்து மல்லிகைப் பூ மணக்கிறது என்பதால் அதைப் பறித்து நாம் நுகர வேண்டும் என்ற கோட்பாடு அங்கு இல்லை. வீட்டு அறைகளில் ஓர் ஒழுங்கு இருக்கிறது. சமையல் அறை; முகப்பு அறை, படுக்கை அறைகள்; குளியல் அறைகள் எல்லாம் தனித் தனியே தக்க அமைப்புப்பெற்று விளங்குகின்றன. ஒரு வீட்டில் பல குடித்தனக்காரர்கள் என்ற அந்த அமைப்பு முறையை அங்குக் காணமுடியாது, நகரங்களில் இட நெருக்கடி காரணமாக இங்கு அந்த அமைப்புகள் இடம்பெற்று இருக்கின்றன. ஆளுக்கு ஒரு வீடு; அவர்களுக்கு ஒரு குடும்பம். அங்கு எல்லா வசதிகளும் இடம் பெறுகின்றன. தொலைக்காட்சிகள், தொலைபேசிகள், வீட்டு முன்னால் அவர்கள் பயன்படுத்தும் கார்கள் இவை சராசரி வாழ்க்கையுடையவர்களின் வசதிகள். வீட்டிலே தொலைக்காட்சிகள் ஒரே நிலையத்திலிருந்து வருவதில்லை, பல நிலையங்கள் ஒளிபரப்புகின்றன. காலை முதல் இரவு வரை தொடர்ந்து செயல்படுகின்றன. திரை அரங்குகள் மிகமிகக் குறைவு; அருகிவிட்டன. உண்பது, உடுத்துவது, உறங்குவது இந்த மூன்றையும் திருத்தமுறச் செய்வது அவர்கள் நாகரிகம்; பழக்கம்; வாழ்க்கைமுறை. உணவு அருந்துதல் ‘வட்டமேஜை’ மாநாடு கூட்டப்படுகிறது. நடுவில் மேஜை உணவுப் பொருள்கள் மேலே தனித்தனிக் கிண்ணங்களில் கொண்டு வந்து வைக்கப்படுகின்றன. எது வேண்டுமோ அதை நாமே பறிமாறிக்கொள்கிறோம். உண்ணும்போது மேஜைமேல் ஒரு பருக்கையும் சிதறக்கூடாது; கைகள் அவற்றின் சுவையைப் பருகக்கூடாது, கரண்டிகள், கத்திகள் தட்டுமுட்டுச் சாமான்கள் அத்தனையும் போர்க்களக் கருவிகள் ஆகின்றன. என்றால் அவர்கள் அடித்துப் பிடித்துக்கொள்கின்றனர் என்பதல்ல பொருள்; இறைச்சி, மீன், கோழி, புலவு இந்த அசைவ உணவுகளுக்கு அவை பெரிதும் தேவைப்படுகின்றன. இலையில் போட்டுக்கொண்டு தரையில் மணை இட்டு ஆர அமரக் கரங்களுக்கு வேலை தருவது நம் நாட்டுப் பழக்கம்; ‘மூட நெய் பெய்து முழங்கை வழி வார’ உண்ணல் சுவைப்பாடல்; ஆண்டாள் திருப்பாவையில் இடம் பெறுகிறது. மேல்நாட்டு முறை நடுத்தர மக்களின் இல்லங்களிலும் இப்பொழுது அரை குறையாக இடம் பெற்-றுள்ளது. ‘டைனிங்க் டேபிள்’ சுற்றியும் நாற்காலிகள் இந்த அமைப்பு நகர வீடுகளில் கிராமிய உயர் நிலை வீடுகளில் இடம் பெற்றுள்ளது. மேலை நாட்டு நாகரிகப் போக்கு என்பது சொல்லத் தேவை இல்லை. உடுப்பது அவர்களுக்கு அவசியமான ஒன்று; மானத்தைக் காக்க மட்டுமல்ல; குளிரினின்று தற்காப்புப் பெற: மற்றவர்கள் தம்மைப் பார்க்கும்போது மகிழ்வு ஊட்ட; ‘உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்’ இது தமிழரின் ஞானிகளின் சிந்தனைப் போக்கு; நம்முடைய சீதோஷ்ண நிலைக்கு இது ஏற்கலாம்; அங்கு உடம்பு முழுதும் பருத்தி ஆடை.யால் அல்ல; கம்பளி ஆடையால் சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்; பெண்கள் ஆண்களைப் போல் கை வெட்டு கால்வெட்டு இவற்றோடு கூடிய சட்டைகளைக் கால் அங்கிகளை மாட்டிக்கொள்கின்றனர். அது அவர்களுக்கு ஆண்களைப் போல நடக்கப் பழகச் சாதகமாக உதவுகிறது. பதினாறு முழம் புடவையில் உடல் முழுவதும் மூடிக்கொள்ளும் நிலையில் நம் புடவைகள் பயன்படுகின்றன. இந்த ஆடையில் நம் பெண்கள் அங்குச் செல்லும்போது அவர்கள் வியப்பாகப் பார்க்கின்றனர். நம் நாட்டுத் தையல்கள் தையல்காரரிடம் அதிகம் போகத் தேவையில்லை; ஜாக்கெட் பிளௌஸ் இதற்கே நடையாய் நடக்கவேண்டியிருக்கிறது. நம் நாட்டைப் போல் தையற்காரர்கள் அங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எல்லாம் தயார் (Readymade) செய்யப்பட்டவை; அவரவர் வயது, உயரம், அளவு இவற்றைக்கொண்டு அங்காடிக்குச் சென்றால் இந்த அளவுக்கு இந்த உடை என்று அட்டவணை காட்டப்படுகிறது; அந்த அளவு (Size) சொன்னால் நம் உடையை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம். அவை ‘ஹாங்காங்’ போன்ற இடங்களில் பெருமளவில் தைத்துக் கொணரப்படுகின்றன, ‘சிகை அலங்காரம்’ அவர்கள் பெரிதும் கவனம் செலுத்துகின்றனர். மயிர் முடி வெட்டும் அலங்காரக் கடைகளில் பெண்களே பெரிதும் பணி செய்கின்றனர். அவர்கள் அந்தத் தொழிலில் கற்றுத் தேர்ந்து நற்சான்று இதழ்கள் வாங்கியவர்கள். டாக்டர்கள் தகுதி பெற்றால்தான் அந்தத் தொழில் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கும் சான்றிதழ்கள் பெற்றவர்களே அனுமதிக்கப்படுகின்றனர். இருக்கவே இருக்கிறது ஒரு சலூன் வைத்துப் பிழைத்துக்கொள்ளலாம் என்று எளிதாகப் பேச முடி யாது; பயிற்சி பெற்றவர்கள் நடத்தும் ஒப்பனைத் தொழில் அது. பெண்கள் மயிர் முடி ஒப்பனைக்கு அதிகம் கவனம் செலுத்துகின்றனர். அடிக்கடி முடி ஒப்பனையை (Style மாற்றிக் கொண்டே இருப்பதில் இளம் தலைமுறையினர் ஆர்வம் செலுத்துகின்றனர். அவற்றிற்கு நிறமும் ஊட்டுகின்றனர். சலூன்களில் ஆண்களும் மயிர்முடி வெட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் அங்கே முக க்ஷவரம் செய்து கொள்ள முடியாது; அவர்கள் செய்யமாட்டார்கள். கத்திரி பிடிப்பார்களே தவிரக் கத்தி பிடிப்பது இல்லை; அவர்கள் தானே வீட்டில் சுய மழித்தல் செய்து கொள்ள வேண்டியதுதான். உறங்குவதற்கும் அவர்கள் தக்க வசதிகளைச் செய்து கொள்கிறார்கள், கட்டாந் தரையில் பாய் போட்டுப் படுத்துக்கொள்ள முடியாது; உடல் சில்லிட்டுப் போகும்; பஞ்சு மெத்தைகளும், கெட்டித் துப்பட்டிகளும், பஞ்சுப் போர்வைகளும் அவர்களுக்குச் சூடு தருகின்றன. குழந்தைகளைத் தம் அறையில் படுக்கவைப்பது இல்லை. அவர்களைத் தனி அறையில் படுக்கவைக்கிறார்கள். தம் பக்கத்தில் போட்டுக்கொண்டு தாய்மார்கள் அரவனைத்து உறங்க வைப்பது இல்லை. நம் இந்தியக் குடும்பங்களும் அங்கே இந்த மேல் நாட்டுப் பாணியைப் பின்பற்றுகின்றனர். அவர்களுக்கு எத்தனை படுக்கை அறைகள் தேவைப்படுகின்றன என்பதை ஒட்டி அவர்கள் வீடுகளைத் தேடிக் கொள்கிறார்கள். மணமான ஆரம்பத்தில் தனக்கும் தன் துணைவிக்கும் எனச் சிறு வீடு எடுத்துக் கொள்கிறார்கள். அல்லது விலைக்கு வாங்குகிறார்கள். வீடு வாங்கக் கடன் வசதிகள் நிறையக் கிடைக்கின்றன. குடும்பம் பெருகுகிறது. படுக்கை அறைகள் விரிவு அடைகின்றன. வீடுகளை மாற்றிக் கொள்கிறார்கள். தம் பிள்ளைகள் வயது வந்ததும் பறக்கும் பறவைகளாக, அந்தக் கூடுகளை விட்டுச் செல்கின்றனர். மறுபடியும் அவர்கள் இருவராகக் குறைகின்றனர். வீடும் சிறிதாகிவிடுகிறது. தேவைக்கேற்ப வீட்டின் பெருமையும் சிறுமையும் அமைகின்றன. வீடு இல்லாத குடும்பமே இல்லை; நடைவாசிகள் தெருவாசிகள் இந்த அவல நிலைகளை அந்தத் தேசங்கள் எங்கும் காணமுடியாது. அழகுக்கும் கற்பனைக்கும் முதலிடம் ‘கூழானாலும் குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு’ ’சுத்தம் சோறு போடும் இந்தப் பழமொழிகள் நாம் நம் வீட்டையும் நம்மையும் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையை உணர்த்துகின்றன. அங்கே குளிக்க வேண்டும் என்ற அவசியம் ஏற்படுவதில்லை; வியர்வையே காணமுடிவதில்லை; துணிகளும் அழுக்காவது இல்லை; ஏன் வியர்வை வந்தால் தானே துணி அழுக்குப்படிகிறது, மற்றும் சுற்றும் தூசுகள் எழுவதில்லை. அதனால் துணிகள் மாசுகள் படிவதில்லை; துணிகள் துவைக்க அதற்கு வேண்டிய மின்சார சாதனங்கள் பொருத்தப்படுகின்றன. அவை துவைத்து ஆரவைக்கின்றன. கசக்கிய உ.டைகளைப் படியவைத்துப் பெட்டி போட்டுத்தான் உடுத்திக்கொள்கிறார்கள். படிப்புக் கலையாத உடை உடுத்துவது மற்றவர்களை மகிழவைக்க என்பது அடிப்படை; வீட்டில் எப்படி இருந்தாலும் கவலை இல்லை. வெளியே சென்றால் செம்மையாக உடுத்துவது என்பது அவர்கள் அன்றாட வாழ்க்கை முறை. அங்கே மூன்று நிற மக்களைக் காணமுடிகிறது; சுதேசிகள் அவர்கள் வெள்ளையர்கள்; நீக்ரோக்கள் கருப்பர்கள்; இந்தியர்கள் அவர்கள் நிறம் இன்ன நிறம் என்று அறுதியிட்டுக் கூறமுடியாது; கருப்பும் அல்ல; வெளுப்பும் அல்ல; சிகப்பும் அல்ல; அதனால் அவர்களை எப்படி அழைப்பது? சிக்கலான நிலைமைதான், நாம் பொதுவாகப் பல்வகை நிறம் பெற்றிருப்பதால் நிற இனம் (Coloured people) என்று அழைக்கப்படுகிறோம். வெள்ளையர்களுக்குக் கருப்பு நிறம் என்பது வெறுக்கத் தக்க நிறம் அல்ல; நீக்ரோக்களை அவர்கள் விரும்பி அவர்களோடு பழகுகின்றனர். இணைந்தும் வாழ்க்கை நடத்துகின்றனர். அதற்கு மற்றுமோர் காரணம் இருக்கிறது. கலாச்சாரத்தில் மொழியில் இருவருக்கும் வேறுபாடற்ற நிலைமை என்றுதான் கூற முடியும். ஒரே பள்ளியில் கல்வி நிறுவனங்களில் கல்வி பயில்வதும் வேறுபாடு இல்லாமல் பழகுவதும் காரணமாக இருக்கலாம். இயற்கை அவர்களுக்கு வெள்ளை நிறத்தைத் தந்திருக்கிறது; ஊட்டமான உணவு; வாட்டமான உடல்கட்டு; சுருசுருப்பான போக்கு; செழுமையான மனோநிலை ஒருவரைப் பார்த்தால் மற்றவர்களைப் பார்க்க முடியாது; பொதுவாக நம் நாட்டில் அழகு பேதங்களுக்கு நிறம் அடிப்படையாகிறது; அங்கே அனைவரும் நல்ல கவர்ச்சியான நிறம் பெற்றிருப்பதால் அநேகமாக எல்லோரும் அழகாகவே இருக்கின்றனர். முக வெட்டு மூக்கு உயரம் எல்லாம் கவர்ச்சியாகவே இருக்கின்றனர். என்னோடு ஐரோப்பியப் பயணம் வந்த தமிழ் நாட்டு நண்பர் ஒருவர் சொன்னது குறிப்பிடாமல் இருக்க முடியாது. “இங்கிலாந்தில் பெண்கள் அழகாக இருக்கிறார்கள்; என்றாலும் பேதமில்லாமல் ஒரே வகையாக இருக்கிறார்கள். மிகச் சிறந்த பேரழகிகள் என்று கூறமுடியாது என்றார். அப்படியானால் அவர் மதிப்பீட்டின்படி வேறு ஓர் கருத்து தைத்திருக்கிறார் என்பது தெரிந்தது. அவர் ஜெர்மனியில் இந்த வார்த்தை சொன்னார். பாரிஸ் பெண்கள்தான் உலகத்திலேயே பேரழகிகள். ஒருவருக்கொருவர் வேறுபாடு இருக்கிறது என்று சுட்டிக் கூறினார்; அவர் மதிப்பீடு வியப்பைத் தந்தது. என்னைப் பொறுத்தவரை ஜெர்மனிய நாட்டுப் பெண்கள் நல்ல உடற்கட்டும் அழகும் பெற்றிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஜெர்மனி நல்ல வளம் மிக்க பூமி; உயரம்; கட்டான உடல்: இலை அவர்கள் கவர்ச்சிக்குக் காரணம் என நினைக்கிறேன். அங்கே அவர்கள் முழு வெள்ளை நிறத்தை விரும்புவதில்லை; அது பழுப்பு நிறம் பெறுவதைப் பெரிதும் விரும்புகிறார்கள். சற்று வெய்யில் காணப்பட்டால் கதிரவன் தன் ஒளிக்கதிர்களைச் சூடாக அள்ளிச் சொரிந்தால் அவர்களுக்குக் கொள்ளை மகிழ்ச்சி; பூங்காக்களில் வெட்ட வெளியில் கடற்கரை ஓர மணற்பாங்கில் குப்புறப் படுத்தும் அவர்கள் தம் ஆடைகளை அப்புறப்படுத்தித் தேவையான அளவு உடலை மறைத்துச் சூடுபடுத்திக்கொள்கின்றனர். அதற்காகவே அவர்கள் விடுமுறைகள் எடுத்து நாளெல்லாம் காய்ந்து நிறத்தைப் பதப்படுத்திப் பழுப்பு நிறமாக்கி அதைப் பெருமையாக மற்றவர்களுக்குச் சொல்லிக்கொள்கின்றனர். வயது அதிகம் ஆக அதைக் குறைத்துக் காட்ட எவரும் பாடுபடுவது இயற்கை; இதழ்கள் சிவப்பாக இருக்க நிறம் தீட்டப்படுகின்றன. வெளியில் வரும்பொழுது ஒப்பனை இன்றி அவர்கள் வெளிவர விரும்பமாட்டார்கள், வயது மிக்க முதியவர்களும் தம்மைப் பூசிக்கொள்வதில் பின் வாங்குவதில்லை. அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியவள் ஒருத்தி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன் தொடையில் உள்ள தோலை முகத்திற்கு மாற்றி இளமைக் கோலத்தைப் பெறச் செய்யும் முயற்சிகள் அங்கு; அங்கு மட்டுமல்ல அமெரிக்காவிலும் மேலை நாடுகளிலும் மேற்கொள்ளப் படுகின்றன என்று கேள்விப்பட்டேன். நரை திரை இவற்றை மாற்ற முடியும் என்பதற்கு அவர்கள் சவால் விடுகின்றனர். வீட்டு வேலைகள் தொழிலுக்கு அங்கு மதிப்புத் தரப்படுகிறது; வீட்டு வேலை செய்ய வெளியார் தேவை இல்லை; பெருக்க; சுத்தம் செய்யத் துணிகள் துவைத்து உலர்த்த; அவற்றை மடித்துப் பதிய வைக்க; குளியல் அறை சுத்தப்படுத்த வேலைக்காரி சில வீடுகளில் தேவைப்படுகின்றனர். பொதுவாக அவரவர் வேலைகளை அவர்களே செய்துகொள்கின்றனர். சாமான்கள் கழுவத் துலக்க இங்கே செய்வது போல அவ்வளவு வேலை இல்லை; அவற்றை அதற்குரிய சாதனத்தில் (இயந்திரப் பெட்டி) போட்டுவிட்டால் சுத்தமாகக் கழுவி ஒளிப்படுத்துகின்றன. அதேபோலத் துணிகளும் சாதனங்களே வெளுத்துத் தந்துவிடுகின்றன. அவற்றைப் படியவைத்து மடித்து வைக்கவே ஆள் தேவைப்படுகிறது. வீடுகளில் தரைகள் கார்ப்பெட்டுகள் விரிக்கப்பட்டு இருக்கின்றன. வெறுந்தரையில் அவர்கள் நடப்பது இல்லை; கார்ப்பெட் விரித்து அவற்றின் மேல் சோபாக்கள் இட்டு அமர்கின்றனர். வீடு எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ளப்படுகிறது; தூசுகள் அந்தக் கார்ப்பெட்டுகளில் படிகின்றன. அவற்றை நாம் துடைப்பத்தால் பெருக்கு வதுபோல அங்குப் பெருக்கிக் கூட்டுவது இல்லை; பெருக்கல் கூட்டல் கழித்தல் முறை அங்கு இல்லை. ’வாக்குவம் கிளீனர் பயன்படுத்தப்படுகிறது; அது மின்சாரத்தால் இயங்கும் கருவி; அதை வைத்தால் தூசுகள் உறிஞ்சப்படுகின்றன; துரசுகள் அகன்று துப்புரவு பெறுகின்றன. சமையல் வேலை வீட்டுக்குரியவர்களே செய்துவிடுகின்றனர். காஸ் அடுப்புகளும் மின்சாரப் பொறிகளும் சமையலை மிக விரைவில் முடித்துத் தருகின்றன. பொருள்கள் கெடாதபடி குளிர்ப் பெட்டிகளில் அவை வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன. வேண்டும்போது அவை சூடுபடுத்தவும் அதற்குரிய மின்சாரப் பெட்டிகள் செய்து தருகின்றன. மின்சார சாதனங்கள் எல்லா வேலைகளையும் எளிதில் செய்துகொள்ள உதவுகின்றன. வீடு எப்பொழுதும் சூட்டு நிலையில் வைக்கப்பட வேண்டும்; வெளியே கடுமையான குளிர்; வீட்டிற்குள் புகுந்தால்தான் குளிரின் தாக்குதலினின்று தப்ப முடியும். வீடு முழுவதும் வெந்நீர் குழாய்கள் பொருத்தப்பட்டு இருப்பதால் சூடாக அறைகளை வைத்துக்கொள்ள முடியும். அவை மட்டுமல்லாமல் மின்சாரச் சூடுபெருக்கிகள் அங்கங்கே பொருத்தப்படுகின்றன. கட்டைகளிலும் மின்சாரத்தால் கதகதப்பாக வைக்கப்படுகின்றன. வெளியே நடக்கும்போது நாம் அணிந்துகொள்ளும் கம்பளி அங்கிகள் நமக்குப் பாதுகாப்புத் தருகின்றன. ஒவ்வொரு வீடும் கடையும் நிறுவனங்களும் சூடு உற்பத்திச் சாதனங்களைப் பெற்று இருக்கின்றன. வீட்டு வேலை செய்வது கவுரவத்தை விட்டுக்கொடுத்து எடுபிடி வேலை செய்யும் தாழ்வான தொழிலாக மதிக்கப் படுவதில்லை. எந்தத் தொழிலும் அந்த நாடுகளில் இழிந்தவை என்று கருதப்படுவதில்லை. அவரவர் தம் திறமைக்கும் பழக்கத்துக்கும் சாதனைக்கும் ஏற்பத் தொழில் நடத்துகின்றனர். எவரையும் அவர் செய்யும் தொழிலால் அதிகம் மதிக்கத் தேவை இல்லை. தோட்டத் தொழிலாளி கூட அவர் ஒரு தொழில் நிபுணராகவே மதிக்கப்படுகிறார். வைத்தியர்; இன்ஞ்சினியர் போன்றே அவரும் மதிக்கப்படுகின்றார். அவரவர் குறித்த நேரத்தில் வந்து மணிக்கணக்கில் வேலை செய்து தமக்குச் சேரவேண்டியதைப் பெற்றுச் செல்கின்றனர். வீடுகளைச் சொந்தக்காரர்களே தம் உழைப்பைக் கொண்டு கட்டிக்கொள்ளவும் செய்கின்றனர். அந்த அந்தத் தொழில் எப்படிச் செய்வது என்பது குறித்துப் புத்தகங்கள் அவர்களுக்கு வழிகாட்டுகின்றன. அது ஒரு விருப்பப் பொழுதுபோக்குத் தொழிலாக மேற்கொண்டு அவரவர்கள் அவரவர் வீட்டையும் கட்டிக் கொள்கின்றனர். வீட்டுக்கு வெள்ளையடித்தல், நிறம் தீட்டுதல் இவற்றிற்கு மற்றவர்களை எதிர்பார்ப்பது இல்லை. கடிகாரம் தவறு செய்தாலும் வேலைக்காரிகள் நேரம் தவறுவது இல்லை; நேரம் தவறாமை என்பது அங்கு ஒரு நல்ல பழக்கமாக இருக்கிறது. எந்தத் தொழிலாளியும் ‘இந்த நேரத்திற்கு வருகிறேன்’ என்றால் அவன் கட்டாயம் வந்து தீருவான். எதிர்பாராமல் எந்த விருந்தாளியும் வீட்டுக்கு வருவதும் இல்லை; முன்கூட்டித் தொலைபேசியில் அறிவித்து விட்டு ஒப்புதல் பெற்றுக்கொண்ட பிறகே வீட்டுக்குள் நுழைவார்கள். ’சும்மா வந்தேன் ; இந்தப் பக்கம் வந்து உங்களையும் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன் என்று சுற்றி வளைத்துப் பேசும் பழக்கங்கள் இல்லை. விருந்தினர் வருவது என்றால் முன்கூட்டிச் சொன்னால்தானே அவர்களை வரவேற்க முடியும். சிற்றுண்டியோ உணவோ தர முடியும். விருந்தினர் தக்கபடி வரவேற்கப் பட்டு உணவு தந்து பின் அளவளாவுதல் அங்கு ஒரு நல்ல பழக்கமாகக் காணப்படுகிறது. காலையில் ஒன்பது மணி என்றால் சரியாக அந்த நேரத்துக்கு வந்து வேலைக்காரி கதவைத் தட்டுவாள். கடிகாரம் பிழை செய்யாது; குறிப்பிட்ட மணி நேரங்கள் குறிப்பிட்ட வேலைகளை ஒழுங்காகச் செய்து முடித்து வெளியேறுவாள்; வரும்பொழுது அவள் காரிலேயே வந்து இறங்குகிறாள், வசதியுடையவளாகவே காணப்படுகிறாள். விசாரித்துப் பார்த்ததில் அவள் கணவன் வேறு ஏதோ தொழில் செய்வான்; குழந்தைகள் ஒன்று இரண்டு இருக்கும்; கணவனை அனுப்பிவிட்டுக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்துவிட்டு இவள் வீட்டுக்கு வருகிறாள். அதாவது வீட்டில் இருந்து பொழுதை வீணாக்காமல் தானும் தொழில் செய்து பொருளீட்டும் நோக்கில் இதை ஒரு உப தொழிலாக ஏற்று நடத்துகிறாள் என்று தெரியவருகிறது. அந்தக் குறிப்பிட்ட நேரம் அவள் இந்த வீட்டில் தன் கடமைகளை ஒழுங்காகச் செய்து முடித்து விடை பெறுகிறாள். அவள் மிகக் கவுரமாக நடத்தப்படுகிறாள்; பணிவாகவே அவர்களிடம் வீட்டுத் தலைவி உரையாடுகிறாள். எண்ணிப் பார்க்கிறேன் நம் நாட்டு நிலைமையை; ‘வேலைக்காரி’ என்றால் பொதுவாக ஏழ்மையில் உந்தப்பட்டவள் என்பது இங்கு நடை முறை. வீட்டுத் தலைவி தொழிலுக்குச் சென்றால் வீட்டில் இருந்து குழந்தைகளைக் கவனிக்கவும் ஒரு சிலர் உதவுகின்றனர். அவர்களுக்கு ‘குழந்தைக்கு அமர்வோர்’ (baby sitter) என்று பெயர், அவர்களும் மணிக்கணக்கிட்டு ஊதியம் பெறுகின்றனர். புறந்தூய்மை வள்ளுவர் இரண்டு தூய்மைகளைப் பற்றிக் கூறுகின்றார்; அகந்தூய்மை; புறந்தூய்மை என்பர்; அகந்தூய்மை என்பதைப் பற்றி நாம் அதிகம் கவலைப்படுகிறோம்; புறந்தூய்மை என்பதைப் பற்றி அவர்கள் நடவடிக்கை எடுக்கின்றனர். வீட்டுக் குப்பை தெருவில் கொட்டிவைக்க முடியாது; அவற்றை ஒரு பையில் (நம் ஊர்த் தபால் நிலையத்துக் கோணிப் பைப் போல்) போட்டு வைக்க வேண்டும், வாரத்துக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாள் வெளியே கொண்டுவந்து வைக்க வேண்டும். லாரிகளில் வந்து அவற்றை எடுத்துக் கொட்டிக்கொண்டு அந்தப் பைகளை அங்கு வைத்துவிடுகின்றனர். அல்லது வேறு பைகளை வைத்துச் செல்கின்றனர். வீட்டிலேயும் கண்ட இடத்தில் குப்பை போடுவது இல்லை. உடனுக்குடன் குப்பைக் கூடைகளில் சேர்த்து விடுகின்றனர். அங்கே பொருள்கள் அழுகுவது இல்லை . இறால் மீன் இறைச்சி எலும்புகள் கூட நாற்றம் எடுப்பது இல்லை. ஏன்? அந்தக் குளிர் நிலை அழுகலைத் தடுக்கிறது. தெருக்களில் ஒரு சிகிரெட்டுத் துண்டுகூட போடமுடியாது; ஓரங்களில் எங்கோ சில இடங்களில் தபால் பெட்டிகள் போலக் குப்பைப் பெட்டிகள் வைக்கப்படுகின்றன, அங்குச் சென்று கிழிச்சல் கடிதங்கள்; குடித்துப் போட்ட டப்பாக்கள் சீசாக்கள் எந்தப் பொருளும் போட்டுவிட வேண்டும். காரில் மைல் கணக்கில் பயணம் செய்யும்போதும் குப்பைகளை வீசி எறிந்துவிட வாய்ப்பு உண்டு; யார் கவனிக்கப் போகிறார்கள் என்ற எண்ணம் தோன்றலாம். அவர்கள் அந்த நிலையிலும் வெளியே தூக்கி எறிவது இல்லை. தவறு கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான தண்டனைக் கட்டணங்கள் செலுத்த வேண்டும். அவர்களுக்கு வழிப் பாதைகளைக் கெடுக்கக் கூடாது என்ற உணர்வு தோன்றிவிடுகிறது. கார்களில் நீண்ட பயணங்கள் செய்யும்போதும் அவசரமாக ‘வெளியே’ போகமுடியாது; அடக்கம் மிக மிக அவசியம். அங்கங்கே சில மணித்துளிகள் தங்கிக் கழித்தலும் கூட்டலும் செய்துகொள்ள அமைப்புகள் உள்ளன. பஸ்களும் அங்கு நிற்கின்றன. ஹோட்டல்கள், கடைகள், கழிப்பிடங்கள் கூடிய அந்த வளாகம் ஓய்வு அகங்களாக விளங்குகின்றன. கட்டணக் கழிப்பு அறைகள் இங்குப் புகுத்தப்பட்டு வருகின்றன; அங்கே ஆங்காங்கே நடைமுறையில் உள்ளன. காசு கொடுத்தே கடன் கழிக்க முடியும். இலவச இடங்களும் உள்ளன. ‘கட்டணக் கழிப்பு முறை’ பொறுப்பு மிக்க இடமாக மாறுகிறது. அதைக் கண்காணிக்க எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்ள ஆட்கள் பணி செய்கின்றனர். உணவு அகங்கள் வழிப் பயணிகளுக்கு எவ்வளவு தேவையோ அதைப்போலக் கழிப்பிடங்களும் ஒழுங்காக அமைக்கப்படுதலும் அவசியம் ஆகிறது. அந்த வளாகத்தில் காசு போட்டு விளையாடும் விளையாட்டுக் கருவிகளும் உள்ளன. அதில் சிறிது நேரம் காசு வைத்துச் சூதாடி அவரவர் அதிருஷ்டத்தையும் கண்டு மகிழ முடிகிறது. இந்தப் புறத்தூய்மை பற்றி வெளிநாட்டுப் பயணிகள் ஒவ்வொருவரும் குறிப்பிடுகின்றனர், கடுமையான நடவடிக்கைகள் குறித்தும் பாராட்டிப் பேசுகின்றனர். நம் நாட்டில் இந்தச் சூழ்நிலையை உண்டாக்க முடியுமா? இதற்கெல்லாம் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முடியுமா? முடியாது. எந்தச் சட்டம் போட்டாலும் அதிகாரிகள் மக்கள் மீது பாய்கிறார்கள். நம் நாட்டில் தொழிலாளர்க்கு நன்மை செய்ய அங்காடி விதி முறைகள் (Shop Act) போட்டு இருக்கிறார்கள். நன்மைக்கு மாறாகத் தொல்லைகள்தாம் மிகுதி. கோர்ட்டில் நிறைய வழக்குகள் தொடுக்கப் படுகின்றன. நிறுவனங்கள் அலைக்கழிக்கப் படுகின்றன. தொழிலாளரும் இந்தத் தொழில் அரசாங்க அதிகாரிகளும் இந்தச் சட்டங்களின் விதிகளைக் காட்டி நிறுவன உரிமையாளர்களுக்குத் தரும் தொல்லைகளைத் தாங்க முடியாமல் தொழில் நடத்துவதையும் நிறுத்திவிடுகின்றனர். அதே போல இந்தக் குப்பை ஒதுக்கீடு சட்டம் போட்டால் என்ன ஆகும்? நம் கோர்ட்டுகளில் இட நெருக்கடி அதிகமாகிவிடும். நாமே நாம் மெல்ல மெல்லப் புறத்தூய்மை வேண்டும் என்ற கோட்பாட்டுக்கு உதவுவதல் நலம் பயக்கும். நடவடிக்கைகள் எடுக்க மற்றவை எல்லாம் சீர்பட்ட பிறகே இதையும் சீர்படுத்த முடியும். முதலில் சாலைகளே இங்கு இன்னும் ஒழுங்காக அமைக்கப்படாமல் இருக்கும்போது அவற்றின் புறத்தூய்மை பற்றி எப்படிப் பேசமுடியும்; நாம் வளர்ந்து கொண்டிருக்கிறோம்; முழுமையும் ஓரளவு நிறைவு பெற்றே இப்புறத்தூய்மையை நாமும் காணமுடியும். புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள முடியும். வைத்துக்கொள்ள வேண்டும் என்ற படிப்பினையை அந்த நாடுகள் நமக்குக் கற்றுத் தருகின்றன. பசுமை தூய்மை இந்த இரண்டும் அந்த நாட்டில் காணப்படும் பெருமை. எங்கும் பசுமையாக வளரும் செடிகள், புல் தரைகள், பெரிய மரங்கள், பூங்காக்கள் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன. லண்டன் மாநகரில் ஆங்காங்கே பூங்காக்கள் நிறைய இருக்கின்றன. அவற்றைச் சுற்றி மாடவீதிகள் {Square) என்ற பெயரில் வழங்குகின்றன. நம் நாட்டில் கோயில்களைச் சுற்றி மாட வீதிகள் அமைவது போலப் பூங்காக்களைச் சுற்றி வீதிகள் அமைகின்றன. ஹைட் பார்க் லண்டனில் ‘ஹைட் பார்க்’ என்றும், அதை அடுத்து கிரீன் பார்க் என்றும் இரண்டு பூங்காக்கள் இருக்கின்றன, நெருக்கடி மிக்க நகரத்தைக் கவின் மிகு நகரமாக அமைத்திருப்பது பாராட்டத்தக்கதாகும். பழைய டெல்லி, பழைய வண்ணாரப்பேட்டை இவற்றைப் பார்க்கும்போது நகரங்கள் மக்கள் மட்டும் வாழும் இடங்கள்; தெருக்களுக்கு இடம் கிடையாது என்று பிரகடனம் செய்வது போல சந்து பொந்துகளும் பழங் கட்டிடங்களும் அடைத்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அந்த மாதிரி நிலைகள் இங்கு இல்லை, மரஞ்செடிகளும் பூங்காக்களும் மாந்தரிடையே தலைநிமிர்ந்து வாழும் இடங்களாக அந்த மாநகரங்கள் விளங்குகின்றன. இந்த நிலை பாரிஸ் ஜெர்மனி எந்தத் தேசத்து நகரிலும் காணலாம். லண்டன் மா நரில் உள்ள ஹைட் பார்க் இரண்டு அல்லது மூன்று மைல் நீள அகலம் இருக்கும் என்று நினைக்கிறேன். பூங்காவில் புல் தரைகள் , விளையாடுமிடங்கள் மிகுதி; அங்கங்கே ஓய்வு கொள்ளச் சாய்வு நாற்காலிகள் போடப்பட்டிருக்கின்றன. ‘பிக்னிக்’ வருபவர் குடும்பம் குடும்பமாக வந்து ஆர அமர இருந்து உண்டு திரிந்து சிரித்து விளையாடி இன்பமாகப் பொழுது போக்குகின்றனர். இது அதிசயமல்ல; அந்தப் பார்க்கின் கீழே தரை மட்டத்தில் கீழ் கார்கள் நிற்கச் சுரங்க வழிகள் அமைத்திருப்பதுதான் வியப்பாக உள்ளது. இது எவ்வளவு பெரிய சாதனை; மைல் கணக்கில் கீழே சிமெண்டு கட்டிடங்கள், வெளிச்ச அமைப்புகள் கார்கள் நிற்க இடம் செய்யப்பட்டு இருக்கிறது. நகரத்தின் சுற்றுப்புற அங்காடிகள், ஆபீசுகள் அவர்கள் கட்டணம் செலுத்திக் கார்களை அங்கு நிறுத்தி வைக்கின்றனர். விண்ணைப் பிளந்து விமானங்கள் செல்வது வியப்பல்ல. மண்ணைக் குடைந்து ரயில்கள் செல்வதும், கார்கள் நிற்கச் சுரங்க வழிகள் அமைத்திருப்பதும் வியப்பாக உள்ளது. இருநூறு ஆண்டுகளாக அவை மாபெரும் வளர்ச்சி பெற்றுள்ளன. மேலே இருக்கிற மரம் செடிகள் கட்டிடங்கள் அப்படியே இருக்கக் கீழே சுரங்கங்கள் அமைத்து உள்ளே குடைந்து கார் பார்க் செய்யத் தூண்கள் மீது கூரைகள் வேயப்பட்ட பரப்பு இடங்களை அமைத்து இருக்கிறார்களே அதே போன்ற நிலை இங்கு உண்டாக்க முடியுமா? சென்னை மவுண்ட்ரோடு அரசு இல்லம் இராசாசி மண்டபம் பல்கலைக் கழகக் கட்டிடங்கள் அப்படியே மேலே இருக்க அவற்றின் கீழ்ப் பூமியில் (under ground) பாதளச் சுரங்க வழிகள் அமைத்துக் கார்கள் நிற்க வழி செய்ய முடியுமா? சென்னைக் கடற்கரையில் ரயில்பாதைக்குக் கீழே ஒரு பாலம் அமைத்திருக்கிறார்கள். அதில் அவ்வப்பொழுது நீர் ஊற்று எடுத்துப் பாதையை நிரப்பிவிடுகிறது. சதா பழுது பார்ப்பது என்பது நடைமுறை அன்றாட வேலையாக இங்கு அமைந்து விடுகிறது. அங்கு எப்படி இதைச் சாதித்து இருக்கிறார்கள். பாதாளத்தில் ரயில் விடுதல் மற்றொரு பெரிய சாதனை; லண்டன் மா நகர் முழுவதும் கீழே ரயில் பாதைகள் மிகப் பாதாளத்தில் அமைக்கப்பட்டுக் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டே இருக்கின்றன. நகரங்களின் பல முக்கியமான இடங்களில் உள்ளிருந்து மக்கள் வெளிக்கிளம்பி தலை காட்டுகின்றனர், போக்குவரத்து இடையூறுகள் இன்றி விரைவில் பயணம் செய்ய இப் பாதாள ரயில்கள் பயன்படுகின்றன; பாரிஸ் மா நகரிலும் இந்தப் பாதாள ரயில் பாதை அமைப்பு இடம் பெற்றுள்ளது. இவை மிகப் பெரிய சாதனைகள் என்றுதான் கூறமுடியும். எத்தனை ஆண்டுகள் எவ்வளவு இன்ஜியர்கள் எவ்வளவு தொழிலாளர்கள் எந்திரக் கருவிகள் இவற்றைச் செப்ப னிடப் பயன்பட்டன? மிகப் பழைய நகரம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். மறக்கமுடியாத அனுபவம் நான் தங்கியிருந்த இடத்திற்கும் லண்டன் நகரத்திற்கும் அறுபது மைல் தூரம் இருக்கும் அங்கே ரயில் பேருந்துகளில் போவதை விட சொந்தக் கார்களில் செல்வதையே அங்குப் பெரும்பாலும் மேற்கொள்ளுகின்றனர். நான் தனிமையைப் போக்கிக்கொள்ள லண்டன் நரத்திற்குச் சென்று வருவது உண்டு. போகவரத் திருப்பு டிக்கட் வாங்கிக்கொண்டால் சலுகை கிடைக்கிறது. காலை ஒன்பது மணிக்கு மேல் பயணம் செய்தால் பாதிக் கட்டணம்தான் வாங்குகிறார்கள். ஒன்பது மணிக்குள்ளாகச் செல்கின்றவர்கள் தத்தம் அலுவலகங்களுக்குச் செல்பவர்கள்; அதற்கு மேல் பயணம் செல்பவர் பெரும்பாலும் வேலை வெட்டி இல்லாதவர்கள்; அவ்வளவு அவசரம் இல்லை. முதியவர்கள் பெரும்பாலும் ஒன்பது மணிக்கு மேல்தான் பயணம் செய்கின்றனர். லண்டன் முன் பின் தெரியாத ஊர்; எப்படிச் செல்வது எங்குச் செல்வது சும்மா ஊர் சுற்றிக்கொண் டிருப்பது என்ற அடிப்படையில்தான் அங்குப் போனேன். தனியாக இடம் அறிந்து செல்வது என்பது அரிய சாதனையே யாகும். அங்கே ஒர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்ல வேண்டுமானல் பேருந்துகளில் தெரிந்தவர்களே போக முடியும்; மற்றவர்கள் போக அனுபவம் தேவை. எனக்குப் பிடித்த பகுதிகள் கிரீன் பார்க்கு, ஹைட் பார்க்கு, டிரபால்கர் ஸ்கொயர், பிக்காடலி இவை குறிப்பிட்ட இடங்களாக அமைந்தன், பாதாள ரயிலில் விக்டோரியா ஸ்டேஷனில் ஏறுவது வழக்கம். விக்டோரியா நம் சென்னை சென்ட்ரல் போன்றது. அங்கே ‘அடிநிலை’ வண்டிகளுக்குப் பக்கத்தில் ரயில் நிலையம் இருக்கிறது. அடிநிலை ரயிலில் செல்ல வரைபடம் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். யாரையும் வாய் திறந்து கேட்க முடியாது; பதில் சொல்ல மாட்டார்கள்; வரைபடமே நமக்கு வழிகாட்டி. இதில் இரண்டு மூன்று நிறங்களில் கோடுகள் இட்டு ரயில் வழிகளைப் பிரித்து இருக்கிறார்கள். நாற்பது பென்ஸ் டிக்கெட் வாங்கலாம். அதிக தூரம் போக வேண்டுமானால் ஐம்பது பென்ஸ் டிக்கட்டு எங்கு வேண்டுமானாலும் போகலாம். ஒரு முறை வெளியே வந்துவிட்டால் அந்தச் சீட்டுப் பயன்படாது, நீலம் சிகப்பு மஞ்சள் இக்கோடுகள் பாதைகளை வேறு படுத்திக் காட்டும். நாம் மைலாப்பூர் போகவேண்டுமானால் சென்ட்ரலில் இறங்கி மற்றோர் பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். அடி நிலையில் மூன்று நிலைகளில் அடுக்குகளில் வண்டிகள் ஓடுகின்றன. ஒரே சம நிலையில் இவை ஓடவில்லை. எனவே இடம் மாறும்போது படி ஏற்றங்கள் (escalators) ஏறி இறங்கவேண்டும். வழியில் நினைக்கிறேன் ஒருவன் இசைமீட்டிப் பாடிக்கொண்டிருந்தான். காசும் வருகிறவர் போகிறவர் போட்டுக்கொண்டிருந்தார்கள். இது ஒரு புதுமையாகவே இருந்தது; இரவலர்களே இல்லாத அந்த நாட்டில் பாட்டுப் பாடிக் காசு பெறும் காட்சி என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவனுக்கு இசைக்கலை இருக்கிறது; அதைக் காட்டி மற்றவர்களை மகிழவைத்துக் காசு அவர்கள் போட்டுச் செல்ல அது பெறுவதும் ஒரு கண்ணியமான தொழிலாகவே அவர் கருதியிருக்க வேண்டும். அங்கு நான் வழி தெரியாமல் திண்டாடினேன்; எப்படி எந்த பிளாட்பாரத்தில் ரயில் மாறுவது என்பது தெரிய வில்லை. அங்கே சுவர்களில் வரைவுகள் எழுதி வழிகாட்டி இருக்கின்றனர். ஏறும் வண்டிகளிலும் அந்த வண்டி செல்லும் பாதை குறித்துப் படம் இருக்கும். நாமே படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். அங்கே ரயில் டிக்கட்டுப் பரிசோதகர் நின்றுகொண்டிருந்தார், அவரைக் கேட்டேன். அவர் “கீழே போகவும்” என்று கூறி வழி காட்டினார். கீழே சென்று மறுபடியும் எனக்கு விளங்காமல் திண்டாடினேன். மறுபடியும் அவரிடம் சென்றேன்; கேட்டேன். ‘மறுபடியும் முயற்சி செய்’ (Try again) என்றார். அவர் நினைத்திருந்தால் எனக்கு என்னுடன் வந்து என் அறியாமைக்கு இரக்கம் காட்டி வழி காட்டி இருக்கலாம். அங்கே தீட்டியிருந்த வரைபடங்கள் வழி காட்டத்தானே இருக்கின்றன. இவர் எனக்கு வந்து வழி காட்டி இருந்தால் அந்த வரைபடம் குறைபாடு உடையது என்று ஆகியிருக்கும்; அல்லது நான் புரிந்து கொள்ள முடியாத அப்பாவியாக மதிக்கப்படவேண்டும். இரண்டையும் தவிர்க்க அவர் “மறுபடியும் முயல்க” என்று கூறினார் என்று நினைக்கிறேன். என் முயற்சியில் வெற்றி பெற்றேன். நமக்கு அவர்கள் பேசும் ஆங்கிலம் புரிவதில்லை; நாம் பேசும் ஆங்கிலம் அவர்களுக்குப் புரிவதில்லை. எழுத்து இருவருக்கும் பொதுவானது. ‘கண்களே நமக்கு வழி காட்டி; காதுகள் பயன் படா’ இந்த அனுபவம் மறக்கமுடியாத ஒன்று என்று நினைக்கிறேன். பேசிவிட்டால் ஆறிவிடுகிறது இங்கிலாந்து ஒரு ஜனநாயக நாடு; பேசும் உரிமை இருக்கிறது; நமக்கும்தான் பேசும் உரிமை இருக்கிறது; நாம் பேசுவதற்கு ஓர் இடம் வேண்டும்; கேட்பதற்குச் சிலராவது வேண்டும். இங்கே மூர்மார்க்கெட்டில் முன்பெல்லாம் மருந்து விற்கிறவன் மொழிபெயர்ப்பாளன் துணை கொண்டு பேசுவது கேட்கச் சுவையாக இருக்கும், வேடிக்கை காட்டுகிறவர்கள்; விகடம் செய்கிறவர்கள்; சும்மா கூட்டம் கூட்டிக் காலட்சேபம் செய்கிறவர்கள்; இவர்களிடையே பிக்பாக்கெட்டுகள்; பழைய புத்தகங்கள் நாமே சென்று விற்கும் சூழ்நிலைகள் இவை எல்லாம் இருந்தன. நான் ஐந்து ஆறு வகுப்புப் படித்த காலத்தில் மூர்மார்க்கெட்டில் அந்தப் பூங்குளத்துக்குக் கிழக்கே பள்ளிக்கூடத்து மாணவர்கள் கடை போட்டுப் பழைய புத்தகங் களை விற்பார்கள்; தமக்கு வேண்டிய புத்தகங்களை அரை விலையில் மற்றவர்களிடம் வாங்குவார்கள். கிழிச்சல் அதிகம் இருந்தால் கால் விலைக்கும் வாங்க முடியும். இப்பொழுது குழந்தைகள் சிறுவர்கள் புதுப்புத்தகங்களையே முழுவதும் வாங்குகின்றனர். அரசாங்கம் குறைந்த விலையில் புத்தகம் விற்பனை செய்கின்றது. மேற்படிப்புக்குப் புத்தக நிலையங்கள் பெரிதும் உதவுகின்றன. ஹைட் பார்க்கில் ஞாயிறு மாலைப் பொழுதுகளில் ஓர் மூலையில் மேடைப் பேச்சுக்கு என்று இடம் ஒதுக்கியுள்ளார்கள்; யார் வேண்டுமானாலும் எதைப்பற்றி வேண்டுமானாலும் விமரிசிக்கலாம்; தடை இல்லை; நாட்டு அரசியாரைப்பற்றி மட்டும் விமரிசிக்கக்கூடாது என்பது விதி; வரையறை; சட்டம். நமக்கு இப்பொழுது ஹைட் பார்க்கு தேவையில்லை மைக் போட்டு வீதி மூலை முடுக்குகள் எல்லாம் யார் வேண்டுமானாலும் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசலாம். தேர்தல் களங்களாக நம் தெரு முனைகள் சந்திகள் மாறிவிடுகின்றன. அங்கு இதைப்போன்ற கூட்டங்கள் போடுவது இல்லை; எல்லாம் பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி இவை தேர்தல் பிரச்சார சாதனங்கள், ஐரோப்பிய நாடுகளில் சுற்றுலாப் பயணம் சுற்றுலாப் போதல் (Tourism) என்பது நம் நாட்டில் இப்பொழுதுதான் ஒழுங்கான முறையில் வளர்ச்சி பெற்று வருகிறது, இமயம் முதல் குமரி வரை பரந்துபட்டுள்ள இப் பாரததேசம் பல மொழிகளைப் பல்வேறுபட்ட மக்களைக் கொண்டுள்ளது. வரலாற்று அடிப்படையிலும் கலாச்சார அடிப்படையிலும் பாரத தேசம் ஒன்றாக இயங்கிவருகிறது. அரசியல் சட்டம் ஒன்றுபடுத்தியுள்ளது. என்றாலும் மொழிகள் ஒரு தடையாக இருக்கின்றன. டூரிஸ்டு பஸ்கள் தக்க கட்டணங்களைப் பெற்றுக் கொண்டு தங்கும் இடங்களும் செல்லும் வசதிகளும் செய்து ஒருவாறு நம்மைப் புறப்பட்ட இடத்திற்குக் கொண்டுவந்து சேர்க்கிறார்கள். பழங்காலத்தில் பக்தியின் அடிப்படையில் காசி இராமேஸ்வரம் இரண்டு எல்லைகளாக இயங்கி மக்களை யாத்திரைகளை மேற்கொள்ளச் செய்தன. இப்பொழுது உண்மையில் தேசங்களையும் முக்கியமான இடங்களையும் அந்த அந்தப் பகுதி மக்களையும் காணவேண்டும் என்ற ஆர்வமும், பழகிப்போன வாழ்க்கை முறைகள் புளித்துவிடுவதால் மாற்றம் காணச் சுற்றுலாப் போதல் மேற்கொள்ளப்படுகிறது. இது அண்மைக் காலத்துப் புதிய மாற்றம். அங்கே ‘டியூரிசம்’ என்பது மிகச் சிறந்த முறையில் செம்மையாக நடைபெறுகிறது. குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்திவிட்டால் ஒரு தேசத்தில் இருந்து ஐரோப்பா முழுவதும் சுற்றிப் பார்க்க வசதி செய்யப்படுகிறது. இங்கிலாந்தில் இருந்து பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஹாலந்து, பெல்ஜியம் பல தேசங்களுக்குச் சுற்றலாச் செல்கின்றனர். அமெரிக்காவில் இருந்து ஐரோப்பா சுற்றிப் பார்க்க வருபவர் மிகுதி. அதேபோல ஐரோப்பியர்கள் அமெரிக்கா சென்று ஊர்கள் சுற்றிப் பார்க்கின்றனர். இதற்கெல்லாம் அடிப்படை என்ன? அங்கே ஐரோப்பாவிலும் சரி அமெரிக்காவிலும் சரி ஒரு நிறுவனத்திலோ அரசாங்கத்திலோ தொடர்ந்து தொழில் செய்பவர் வருடத்திற்கு ஆறுவார அளவு விடுமுறை சேர்ந்து எடுத்துக் கொள்ள அனுமதிக்கப் படுகின்றனர். பொதுவாகக் கோடையிலேயே இந்தச் சுற்றுலாக்கள் மிகுதியாக மேற்கொள்ளப்படுகின்றன. மற்றும் வீட்டைப் பூட்டிவிட்டு தைரியமாக அங்கு வெளிக் கிளம்ப முடியும், வீட்டை உடைத்துத் திருடர்கள் புகுந்துவிடுவார்களே என்ற அச்சம் அந்த நாடுகளில் இல்லை; கதவுகள் கண்ணாடிக் கதவுகள்தான். சட்டம் இரும்புச் சங்கிலிகள்; காவல்துறை மிகச் செம்மையாகச் செயல்படுகிறது. மக்கள் இப்படித் திருடிப் பிழைக்க வேண்டும் என்ற கீழ்மைக்குப் போவது இல்லை; வாய்ப்புக் கிடைத்தால் கொள்ளை அடிப்பது என்ற மனப்பான்மை அங்கு வளரவில்லை. மற்றவர் பொருளை மதிக்கிறார்கள்; அவர்களுக்குப் பாதுகாப்பு இருக்கவேண்டும் என்ற உணர்வு இருக்கிறது. மற்றொன்று காப்பு உறுதி (insurance) அவர்கள் இழப்பை ஈடு செய்கிறது. திருடு போனால் போலீசார் ஓரிரு வாரங்களில் தம்மாலான முயற்சிகள் செய்கின்றனர். அவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை என்றால் உடனே காப்பு உறுதி நிறுவனங்கள் இழப்புத் தொகையை முழுவதும் ஈடு செய்கிறது. ஒவ்வொன்றிற்கும் காப்பு உறுதி செய்யப்படுகிறது. உடைமைக்கும் உயிர்க்கும் பாதுகாப்புத் தரப்படுகிறது. குடும்பத் தலைவன் அகால மரணம் அடைந்தால் அந்தக் குடும்பம் தவித்து நிற்கத் தேவை இல்லை; பொதுவாக அவர் காப்பு உறுதி செய்து வைத்திருப்பார். இங்கேயும் காப்புறுதிகள் செயல்படுகின்றன; நிறுவனங்கள் உடனுக்குடன் செட்டில் மெண்டு செய்யும் மனப்போக்குக் கிடையாது, கார் மோதி மற்றோர் காருக்குச் சேதம் உண்டானாக இடித்த வரோ சேதமடைந்தவரோ இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிக்கு அறிவித்த சில நாள்களிலேயே இழப்பு ஈடு செய்யப்படுகிறது. இத்தகைய பாதுகாப்புகள் இருப்பதால் வீட்டை மறந்து அவர்கள் சுற்றுலாப் பயணம் செய்ய முடிகிறது. ஓர் ஒழுங்கான அமைப்பு முறையில் சுற்றுலா நடைபெறுவதால் தைரியமாக எந்தக் கவலையும் இல்லாமல் அந்த நாடுகளைச் சுற்றிப் பார்க்க முடிகிறது. தங்கும் ஹோட்டல்களுக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை, அவர்களிடம் நாம் நம்மை ஒப்படைத்துக் கொள்கிறோம். அவர்கள் திட்டமிட்டபடி நாம் விரும்பும் தேசங்களுக்கு அழைத்துச் சென்று முக்கியமான இடங்களைக் காட்டித் தக்க வழிகாட்டிகளைக் கொண்டு விளக்கமும் சொல்லி நமக்கு அந்த நாட்டின் சிறப்புகளை அறிவுறுத்துகின்றனர். பகலெல்லாம் பேருந்து ஓடிக்கொண்டே இருக்கிறது; மாலை வேளைகளில் குறிப்பிட்ட நகரங்களை அடைகின்றன. அங்கே உணவுக்கும் தங்குவதற்கும் அவர்கள் ஏற்பாடு செய்கின்றனர். மறுபடியும் மறுநாள் காலை ஏழு எட்டு மணிக்கெல்லாம் வண்டி ஏறவேண்டியதுதான். ஒரு வாரச் சுற்றுப்பயணத்தில் பெல்ஜியம், ஹாலந்து, நார்வே, ஜெர்மனி, பிரான்சு இந்த ஐந்து தேசங்களைக் காணமுடிந்தது, பஸ் நல்ல வேகம்; புத்தம் புதிது; குறைபாடற்றது. விமானத்தில் செல்வது போன்ற சுகம் தருகிறது. அது தரையில் இயங்குகிறதா விமானத்தில் பறக்கிறதா அதிகம் வேறுபாடு இல்லை. காரணம் சாலைகள் அவ்வளவு ஒழுங்காகச் சுத்தமாக செம்மையாக அழகாக அகலமாக எந்தவித அதிர்ச்சியும் தராமல் எதிரே வண்டி. வரும் என்ற அச்சமில்லாமல் இருப்பதால்தான். இங்கிலாந்தில் ‘டோவர்’ துறைமுகத்தில் கப்பலில் ஏற்றப்பட்டோம், பெல்ஜியத்தையும் இங்கிலாந்தையும் கடல் பிரிக்கிறது. கடற் பயணத்தில் அடுத்த கரையை அடைந்தோம். குவிந்த வானம், பரந்த கடல், அதில் மிதந்து செல்லும் கப்பல் பக்கத்தில் நம்மோடு பயணம் செய்யும் பல தேசத்து மக்கள். சைனாக்காரர்கள் எப்பொழுதும் ‘காமிரா’ கையிலே வைத்திருப்பார்கள். அவ்வப்பொழுது காண்பவற்றை எல்லாம் பதிவு செய்து கொள்கிறார்கள். அமெரிக்கர்களும் முக்கியமான காட்சிகளை நிழழ்படம் எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அங்கு மது வகைகள் உணவு வகைகள் அவர்களுக்கு வாய்ச் சுவையைத் தருகின்றன. ஹோட்டல்களில் தண்ணீர் குடிப்பவரை ஐரோப்பா முழுவதும் காணமுடியாது; நம்மைப் போன்றவர்கள் இங்கு ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாகத் தண்ணீர் குடிப்பதற்கு அங்கு வெட்கப்பட வேண்டியுள்ளது. எங்காவது வெளியே சென்றால் பாட்டில்களில் தண்ணீர் கொண்டு செல்வது எங்களுக்குப் பழக்கம். அதை அவர்கள் பார்க்கும்போது அது ஒரு வியப்பான காட்சியாகத்தான் இருக்கும். போயும் போயும் தண்ணீரையா குடிப்பார்கள். இவர்கள் மிகவும் ஏழைகளாகத்தான் இருக்க வேண்டும். ‘பீர்’ குடிக்கும் நாவுக்குத் தண்ணீர் ஏற்காது. தேவைப்பட்டால் கொக்கோ கோலா, டின்களில் அடைக்கப்பட்டிருக்கும் பழச் சாறுகள் விற்கப்படுகின்றன. மதுபானம் பழகாதவர்கள் இந்த ரசங்களைப் பருகுவார்களே தவிர வெறும் தண்ணீரைக் குடிப்பது இல்லை. எங்களுக்கும் அந்தப் பழக்கம் நாளடைவில் ஏற்பட்டுவிட்டது . குடிப்பழக்கம் அல்ல; ஏனைய ரசங்களைக் குடித்து நீர் வேட்கையைத் தணித்துக் கொள்ளும் பழக்கம். எங்களோடு தமிழ் நாட்டு ஐ. ஏ. எஸ். குடும்பத்தினர் ஒருவர் வந்திருந்தார். அவர்கள் எங்களுக்குப் பேச்சுத் துணைக்கு உதவினர். அவர்கள் பலமுறை அந்தப் பக்கம் பார்த்து வந்தவர்கள். பழகியவர்கள்; விடுமுறை என்றால் இங்கு வந்து தெரிந்த நண்பர்கள் உறவினர்கள் இவர்களின் விருந்தினர்களாகத் தங்கிப் பொழுதுபோக்கும் வசதி மிக்க வாழ்க்கையைப் பெற்றிருந்தார்கள். அவர்கள் காய்கறி உணவுகளையே உண்பர்; மாமிசம் மீன் தவிர்த்தவர்கள். அவர்கள் தனியே உட்கார்ந்து சாப்பிடுவார்கள் அதிகம் உருளைக்கிழங்கு வறுவல் நீட்டு நீட்டமாக இருக்கும். அது தான் சாப்பிடத் தகுந்த சுவை உடையது. ஜெர்மனியில் ஒரு ஓட்டலில் இன்னும் மறக்க முடியவில்லை. முழுக் கோழி இறைச்சி சுவையாக இருந்தது. பெரிது அல்ல; பசியார உண்ட நினைப்பு. எங்களோடு வந்த அமெரிக்க மாது மீன், இறைச்சி தவிர்த்து வந்தார்கள். அவர்கள் அதிகம் ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தார்கள். ’கேட்டதற்கு’த் தான் சைவ உணவுதான் உண்பது என்று தெரிவித்தார்கள். பல பேர் அமெரிக்காவில் சைவ உணவு மட்டும் உண்கிறவர்கள் இருப்பதாகத் தெரிவித்தார்கள். அவர்களோடு மற்றும் இருவர் அமெரிக்கப் பெண்கள் வந்திருந்தனர், எங்களுக்கு ஒரு ஆச்சரியம் எப்படி இவர்கள் துணிந்து இவ்வளவு தூரம் தனியாகப் பிரயாணம் செய்கின்றனர் என்பது வியப்பாக இருந்தது. மூவரும் மூன்று இடங்களிலிருந்து வந்தவர்கள். அங்கே அவர்கள் அவ்வப்போது கலந்து உரையாடுகிறார்கள். இவர்களுக்குப் புருஷன்மார் என்ற ஒரு துணை இருக்காதா? அவர்களை விட்டுத் தனியே ஏன் வரவேண்டும் இரண்டு பேரும் போனால்தானே ஒருவர்க்கொருவர் துணை சந்தோஷமாய் இருக்கலாம்” என்ற ஐயம் ஏற்பட்டது. துணிந்து அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு கிடைத்த பதில் : “நாங்கள் வருஷம் பூராவும் இணைந்து வாழ்கிறோம் எங்களுக்கும் விடுதலை வேண்டாமா? என்று சிரித்துக் கொண்டே சொன்னார்கள். அவர்கள் நகைச்சுவைக்குச் சொன்னார்களா? உண்மை சொன்னார்களா? அது இன்னும் பிடிபடவில்லை. அவர்கள் சொன்னது மற்றொன்று மிகவும் தெளிவானதாக இருந்தது. இந்த ஆறுவார விடுமுறையில் நான் பெறும் புதிய அனுபவங்கள்; காணும் ஊர்கள், காட்சிகள் (அதோடு நிற்கவில்லை) இங்கே ஏற்பட்டுள்ள மாற்றங்கள் வளர்ச்சிகள் இவற்றை எல்லாம் குறித்துக்கொண்டு அவரிடம் பேசுவேன்; அவரும் தன் அனுபவங்களை என்னிடம் சொல்லுவார். நாங்கள் மறுபடியும் சந்தித்து வாழும் போது எனக்குப் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கும். அவருக்கும் நிறைய இருக்கும். இரண்டுபேரும் ஒரே ஊரைப் பார்த்தால் வேறுபட்ட அனுபவங்கள் எப்படிக் கிடைக்கும்? என்று விளக்கினார்கள். அந்த மனோநிலையைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. அவர்கள் கேளிக்கையாக ஊர் சுற்றவில்லை. பொழுது போக்குக்காக அவர்கள் அங்குச் செல்லவில்லை. அவரவர் பயிலும் வாழ்க்கைத் துறைகள் இருக்கின்றன; புதிய துறைகளையும் அறிய விரும்புகிறார்கள். அவற்றைக் குறித்துக்கொள்கிறார்கள். முன்னைவிட கூடுதலான் அறிவோடு சொந்த ஊர் திரும்புகின்றனர். அண்மையில் “இதயக் கோயில்” என்ற திரைப்படம் பார்த்தேன். அம்பிகா காதலியாக நடிக்கிறார்; ராதா ரசிகையாக நடிக்கிறார். மோகன் கதாநாயகன்; அவன் ஒரு பாடகன். அவன் தன் காதலியை மணக்க முடியாமல் அவள் சாவு இடையே வருகிறது. அவளுடைய மணத்தை அவள் முடிவு செய்ய முடியவில்லை. அப்பா கட்டிவைக்கும் புதுப் புருஷனையே அவள் மணக்கவேண்டும் என்பது அவர் கட்டளை. அப்பா பெண்ணுக்கு உதவி செய்யலாம்; அவளாகக் கணவனைத் தேர்ந்தெடுக்க முடியாத நிலையில் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளலாம். அது அவருக்குக் கடமையும் ஆகிறது. அவளுக்கு விருப்பத்துக்கு மாறாக இன்னாரைத்தான் அவள் கட்டிக்கொள்ள வேண்டும் என்று பாரம்பரியமாக நம் நாட்டில் சொல்லி வருவதை இதில் சித்திரித்துக் காட்டுகிறார்கள். இவர் ஏன் அந்த உரிமை எடுத்துக்கொள்ள வேண்டும். இதைச் செய்தால் நல்லது என்று வேண்டுமானால் எடுத்துச் சொல்லலாம். இன்னாரைத்தான் கட்டிக்கொள்ள வேண்டும் என்று எப்படி அவர் வற்புறுத்தலாம், இந்த மாதிரி சம்பவம் மேல் நாட்டில் நடக்குமா? நடப்பதாகக் கதை எழுதிச் சித்திரித்தால் அவர்கள் அந்த அப்பாவைப் பற்றி என்ன நினைப்பார்கள். இப்படிக்கூட அப்பாக்கள் இருப்பார்களா என்று பரிதாபப்படுவார்கள். இதை விவரமாக எழுதியது தேவை இல்லாதது தான். மற்றொரு நிகழ்ச்சி இந்த நாட்டுச் சூழ்நிலையைச் சித்திரிப்பது. அவள் தன் காதலனைத் தேடித் தனியே சென்னைக்கு வருகிறாள்; வருகிறவள் விலாசம் கூடவா தெரிந்துகொள்ளாமல் வரவேண்டும். வழி எல்லாம் அவனைப்பற்றிக் கேட்கிறாள். அவன் ஒரு பிரபல பாடகன்; சினிமாப் பாடகன் அப்படி இருந்தும் அவனைப்பற்றி மற்றவர்களுக்குத் தெரியவில்லை. ஒரு வேளை அவன் அப்பொழுதுதான் திரைப்படத்தில் சேர்ந்தவனாக இருப்பான். முன்பின் தெரியாத அவள் தனியே சென்னையில் நடக்க முடியவில்லை. முரடர்கள் பின் தொடர்கிறார்கள். கோயிலுக்குள் சென்று உள்ளே அடைக்கலம் அடைகிறாள்; இறைவனும் அவளைக் காப்பாற்றவில்லை என்பது கதை. இயக்குநரின் கருத்தாக இருக்கவேண்டும், அந்த முரடர்கள் அவளைக் கெடுத்தார்களா கெடுப்பதற்கு முன் அவள் தன்னை அழித்துக் கொண்டாளா தெரியவில்லை. அவளுக்குப் பாதுகாப்பு இல்லை; தூக்குப் போட்டுக்கொண்டு உயிர் துறக்கிறாள். அவள் பிணம் கீழே அறுந்து தொங்குகிறது. இது தான் அவன் சோகத்துக்குக் காரணம். அவளை நினைத்து நினைத்து ஏங்குகிறான்; குடிக்கிறான்; அதுவே அவன் வாழ்க்கையின் சோக கீதமாக மாறுகிறது. அந்த மடையன் (கதா நாயகன் ) அவள் அப்பா செய்த தவறே செய்கிறான். கல்லூரி மாணவி ரசிகை அவனைக் காதலிக்கிறாள். அவனையே மணப்பதாக உறுதி கொள்கிறாள். அவனும் அவளிடம் அன்பும் ஆதரவும் காட்டுகிறான். அவளைத் தெரிந்த மற்றொருவன் உறவுக்காரனாம். அவளைக் காதலிக்கிறானாம். இதை அறிந்த கதா நாயகன் (மோகன் ) அவனை அவள் மணக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறான். அந்தக் கற்புக்கரசி செயலற்றுத் தன் நெஞ்சைக் கதா நாயகனிடம் பறிகொடுத்த காரணத்தால் அவன் கால்களில் விழுந்து உயிர்விடுகிறாள். இந்த மனோ நிலைகளில் எவ்வளவு கோளாறுகள்! அப்பாவுக்கு அவளை (அம்பிகாவை) வற்புறுத்த உரிமை இல்லை, கதாநாயகனுக்கு அவளை (ராதாவை) வற்புறுத்த உரிமை இல்லை. இப்படிப் பிறர் வாழ்வைக் கெடுக்கும் அறிவாளிகள் ஒருபுறம்; அவள் எதைப் புனிதமாக நினைத்துக் காப்பாற்ற நினைக்கிறாளோ அதை அற்பத்தனமாக்கத் துடிக்கும் கீழ்மக்கள் ஒருபுறம். அவள் வாழ்வைப் பாழ்படுத்துவதாக நம் தமிழ்ச் சித்திரம். இவை நாம் அங்கீகரிக்கும் வாழ்க்கை நிலைகள். இந்தப் படத்தை வைத்து அந்த நாட்டு வாழ்வியலை ஒப்பிட்டுப் பார்க்கிறேன். அந்தப் பெண்கள் எங்கோ அமெரிக்காவில் பிறந்தவர்கள். இந்தப் புதிய நாடுகளில் பல இடங்களுக்குத் தனியே செல்கிறார்கள். (நாங்கள் தனியே செல்லப் பயப்பட்டோம்) அவர்கள் தம் புனிதத்தை இழந்துவிட மாட்டார்கள். முரடர்கள் அவர்களைக் கெடுக்க முயற்சி செய்ய மாட்டார்கள். பிரமாதமாகப் பேசப்படுகின்ற அந்தப் புனிதம் பறி போய் விட்டால் அந்த உத்தமிகள் உயிர் விடமாட்டார்கள். அந்தப் புனிதம் பறிபோவதும் இல்லை. எதைப் பத்திரமாகக் காக்கவேண்டும் ஊறு செய்யக் கூடாது என்ற மனித உணர்வு அதிகம் இருக்கிறதோ அந்த நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. அங்கே நிர்ப்பயமாகப் பெண்கள் எங்கும் செல்கிறார்கள். முதலில் கணவன்மார் அவர்களை நம்புகிறார்கள். மனைவி கணவனை நம்புகிறாள். இதைப்பற்றி அதிகம் பேசாமல் அவர்கள் கண்ணியமாக வாழ்கிறார்கள். அவர்கள் கற்பு பறிபோவதில்லை. இங்கு மட்டும் ஏன் இந்த அற்பத்தனம்! நாம் எவ்வளவோ முன்னேற வேண்டிய நிலையில் இருக்கிறோம். ‘என்னமோ போய்விட்டது; போய் விட்டால் வாழ முடியாது தற்கொலைதான் வழி’ என்ற மன நிலை மாறவேண்டும். இதற்கு மேலை நாட்டுப் பெண்கள் நிச்சயம் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறார்கள் என்றுதான் கூறமுடியும். இதற்கு மேல் விவாதங்களை வளர்ப்பதில் பயன் இல்லை, மேலே தொடர்கிறேன். கப்பலில் சந்தித்த நினைவு; மிகவும் வயது குறைந்தவள்; யுவதி; அவள் எங்கே பயணிக்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினேன். துணிந்து பேசினேன்; பேசுவது சுலபம் இல்லை. அவர்கள் பேசும் ஆங்கிலம் எனக்கு விளங்குவது இல்லை. வியப்பாக இருந்தது. இத்தாலியில் ஏதோ ஒரு மலைப்பிரதேசம், அங்கே ஒரு நதி: ஊர்; அங்கே பதினைந்து நாள் தங்கப்போவதாகச் சொன்னாள்; எப்பொழுதுமே கும்பலில் பழகிவிட்டுத் தனிமை விரும்பும் ஒரு மனப்போக்கு. எங்கோ முன்பின் தெரியாத இடத்தில் ஒரு தனிமையை அனுபவிப்பது என்ற அமைப்பெல்லாம் நாம் சிந்தித்தும் பார்த்ததும் இல்லை. எல்லோரைப் போலவே வாழ்வது என்று பழகிவிட்ட நாம் இந்தத் தனிப்போக்குகளை நினைத்தும் பார்க்க முடியாது. உங்களுக்குத் தெரியும் பிரான்சு நாட்டிலிருந்து வந்த அழகி ஒருத்தி இராமேஸ்வரம் அருகில் ஒரு ஒதுக்குப்புற கிராமத்தில் தொழுநோய் உடைய எளிய குடும்பத்து கிருஷ்ணனை மனமார விரும்பி அவனைக் கணவனாக ஏற்று இந்திய முறைப்படி வாழ்க்கை நடத்துவதில் ஒரு தனித்துவத்தைக் காட்டுகிறாள். அந்த நோயைப் பற்றி அவள் பொருட்படுத்தியதே இல்லை. பிரான்சு நாட்டில் பிறந்தவள்; அழகு போதையில் மயங்குபவள்; சுக லயத்தை பிரேமிப்பவள்; இப்படி ஒரு பட்டிக்காட்டுப் பெண்ணாக இந்தியக் குடும்பத்தில் ஐக்கியப்பட்டு வாழ்க்கைப்படுகிறாள்! அவள் இந்தியப் பெண் ஆனாள். பாரிஸ் நகரம் உண்மையில் அழகின் இருப்பிடம்தான்; பெண்களை வைத்து மட்டும் நான் முடிவு செய்யவில்லை; அழகும் கவர்ச்சியும் மிக்கவர்கள் அங்கு மிகுதியாக இருக்கிறார்கள். அவர்கள் அனுபவிக்கப் பிறந்தவர்கள் ரசனை மிக்கவர்கள்; நடனக் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள். அந்த நகரம் மிக அழகான நகரம்; அழகாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு, புல்லும், மரமும், பளிங்கும், நீர் உவற்றும் கட்டிடங்களைக் கட்டிக் காக்கத் தாஜ் மகால் கட்டிட நினைவுகளைத் தோற்றுவிக்கும் வனப்பினை அந்த வீடுகள் தந்துகொண்டிருக்கின்றன. தெருக்களில் வளைவுகள் இல்லை; நேர்மை இருந்தது. ஒரு நகரம் நெருக்கடியும் சுருசுருப்பும் வேகமும் உடையது என்றால் அதற்கு மெருகு ஊட்டுவது பிக்பாக்கட்டுகள்தாம். பெரிய நகரங்களுக்கே பெருமை இப்படி புத்திசாலித்தனமான திருட்டுத் தொழில் நடத்துபவர்களைப் பெற்றிருப்பதால்தான். முன்பெல்லாம் இந்தப் புகழ் சென்னை மூர் மார்க்கட்டுக்கு உண்டு; பம்பாய் நகரும் பயங்கரமான நகர் என்று பேசுகிறார்கள், சிகப்பு விளக்குப் பகுதி மற்றும் பம்பாயில் பத்திரிகைகளில் எழுதுவதைப் படித்து இருக்கிறோம். பாரிசில் நெருக்கடி, மிக்க பகுதிகளில் கவனமாகச் செல்ல வேண்டும் என்று எங்கள் பேருந்து வழிகாட்டி சொல்லி அனுப்பினாள்; ஒவ்வொரு ஊரைப் பற்றியும் அவர்கள் தக்க அறிவிப்புகள் தருகிறார்கள். அதன்படியே நடந்தது. எங்களில் ஒரு பயணி பணத்தைப் பறி கொடுத்ததாக வந்து சொல்கிறார். மற்றொருவரும் அதே அனுபவத்தை உறுதி செய்தார். அதே போல ஆம்ஸ்டர்டாம் என்ற நகரில் விழிப்பாக இருக்கவேண்டும். வழிபறி செய்துவிடுவார்கள். காரணம் கஞ்சா அபின் அதிகமாக அவர்கள் பழகி வருவதால் காசுக்கு எதையும் செய்யத் துணிவார்கள் என்று அச்சுறுத்தினார்கள். அவர்கள் சொன்னது உண்மை; அங்கங்கே சுயநினைவு கெட்டு மயங்கிக் கிடக்கும் போதைவாசிகளைச் சந்திக்க முடிந்தது. ஜெர்மனியில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த இடத்தில் நன்றாகக் குடித்துவிட்ட ஒருவன் சுய நினைவு இல்லாமல் தடால் என்று கீழே விழுகிறான். அதிகக் குடியால் இப்படி வாழ்க்கையை அலங்கோலமாக்கிக் கொள்பவர்கள் ஒரு சிலரைப் பார்க்கவும் முடிந்தது. நம் நாட்டுச் சாராயக் கடைகளிலும் ரசிகர்கள் ஆடி அசைந்து அவர்கள் பாடுவதைக் கேட்டு இருக்கிறேன். அவர்கள் பாட்டுப் பொதுவாகப் பகைமையைப் புலப்படுத்தும் வசை புராணங்களாக அமைவதைக் கவனித்து இருக்கிறேன். நல்ல நிலையில் அடக்கமாக இருக்கிறவர்கள் பூவாணமாக வெடிப்பதைப் பார்த்திருக்கிறேன். (தீமை அதிகம் விளைவதில்லை அதனால் பூவாணம் என்றேன்) இதையெல்லாம் பார்க்கும்போது நம்மவர்கள் மட்டும் குடித்துவிட்டதும் ஏன் நம் நிலை மறக்கிறார்கள் என்று எண்ணுவது உண்டு. இவர்கள் கவிஞர்கள்; கவிதைகள் பிறக்கின்றன; அவ்வளவுதான், அங்கேயும் இப்படிப் பிதற்றாவிட்டாலும் சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்து அதிர்ச்சியை உண்டாக்கிய ஒருவரை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. கேட்டால் “அவர் அப்படித்தான்; சாதாரண சுயநினைவில் அவரைப் பார்க்கவே முடியாது” என்று தெரிவித்தார்கள். எங்களோடு பேருந்தில் வந்த பயணிகளில் ஒருவர் அமெரிக்க நாட்டுக் கவிஞர் என்று நினைக்கிறேன் அல்லது கவிதை ரசிகராக இருக்கவேண்டும். நம் நாட்டில் புதுக் கவிதை வந்த பிறகு விதவிதமான புதுமையான சுவை மிக்க கவிதைகளைப் பாடிக் கவிதைக்கு ரசனையை ஏற்படுத்திவருகிறார்கள். இடைக்காலத்தில் ‘காளமேகம்’ ஒருவர் தான் இரண்டு பொருள்படக் கவிதை எழுதி நகைச்சுவை தோற்றுவித்தவர். “எட்டேகால் லட்சணமே எமனேறும் வாகனமே” என்ற வரிகள் “அவலட்சணமே எருமைக்கடாவே” என்ற மற்றொரு பொருளையும் தருகிறது. இப்பொழுது புதுக்கவிதைகள் சுவை தருவனவாக அமைகின்றன. “வீட்டுக்கு விளக்கேற்ற மருமகள் தேவை” என்கிறாள் மாமியார். ‘அதை அணைக்கவும் அவள் தேவைப்படுகிறாள் என்கிறான் மகன்’ என்ற கருத்துப் படப் புதுக் கவிதை தெரிவிக்கிறது. ’ஆடை வாங்க அவள் நிர்வாணத்தை விலைக்கு விற்கிறாள்” என்கிறது புதுக் கவிதை. “எம்ப்ளாய்மெண்டு எக்சேஞ்சிக்கு மகன் போகிறான் தன் அட்டையைப் புதுப்பித்துக்கொள்ள. அப்பனும் சொல்கிறான் மறக்காமல் தன் அட்டையைப் புதுப்பிக்கும் படி. இப்படிச் சுவையும் கருத்தும் மிக்க புதுக் கவிதைகளை நம் நாட்டில் செய்து வருகிறார்கள். அவற்றை நம்மால் மறக்க முடியவில்லை. அந்தக் கவிஞர் பல கவிதைகளை அவர் சொல்லிக் கொண்டு அவரே சிரித்துக்கொண்டு வந்தார். மற்றவர்கள் அவருக்கு மரியாதை தருவதற்கு அவற்றைக் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்; ஆனால் அவர்கள் சிரிக்கவில்லை, பேருந்து செல்லும் வேகத்தில் அதன் வரிகள் சில சிதைந்து போயிருக்கும்; அவர்களுக்குப் புரிந்து இருக்காது என நினைக்கிறேன்; அல்லது அவரைத் திருப்திப் படுத்துவதற்காக அவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்திருக்க வேண்டும். அதைப்போன்ற சூழ்நிலைகள் நமக்கும் ஏற்படுகின்றன. பிடிக்கிறதோ இல்லையோ மற்றவர்கள் சொல்வதைக் கேட்டுத்தான் தீரவேண்டும். அந்த மனிதரை இன்னும் என்னால் மறக்கமுடியவில்லை. காரணம் : அந்தப் பேருந்து வழிகாட்டி ஒரு பரிசை வைத்திருந்தாள். பயணம் முடிந்ததும் “இந்த பஸ் எத்தனை மைல் சென்றிருக்கும்” என்று ஒவ்வொருவரையும் குறித்துத் தரும்படி கேட்டு இருந்தாள். நான் இரண்டாயிரம் மைல் என்று எழுதித் தந்தேன்; மற்றவர்கள் அவரவர்கள் கணிப்புப்படி எழுதியிருந்தார்கள். அந்தக் கவிஞர் சரியாக ஆயிரத்து இருநூறு. என்று எழுதியிருந்தார். அவர் பரிசைத் தட்டிக் கொண்டார். அவருக்கு உயர் ரக மது பாட்டில் தரப்பட்டது. ஒவ்வொரு தேசமும் ஒரு சில மறக்கமுடியாத சம்பவங்களை சாதனைகளை நினைவுச் சின்னமாகப் போற்றிக் காக்கின்றன; விளம்பரப்படுத்துகின்றன. பாரிசில் “ஈஃபில் டவர்” என்ற கோபுரம் அந்த நகரத்தின் நினைவுச்சின்னமாகப் போற்றப்படுகிறது. வெறும் இரும்புத் தகடுகள் (Steal frame) இவற்றை இணைத்து ‘ரிவிட்’ அடித்துப் பெரிய கோபுரம் அகலமாகத் தொடங்கிச் செங்குத்தாக எழுப்பி இருக்கிறார்கள். இடையில் உல்லாசமாகப் பொழுதைக் கழிக்க ஹோட்டல்களும் கடைகளும் இருக்கின்றன. உயரமான அந்த இடங்களுக்குச் செல்ல ‘தூக்கிகள்’ அமைத்து இருக்கிறார்கள். அந்த ஊர்ப் பள்ளிச் சிறுவர்கள் ‘எக்சர்ஷனாக’ அந்த இடத்திற்கு வருகிறார்கள், கும்பல் கும்பலாக அவர்கள் ஆசிரியர்களோடு வந்து இன்பப்பொழுதாக ஆக்குகிறார்கள். பாடிப் பறக்கும் பறவை ஒலிகளை அந்தச் சிறுவர்களின் கலகலப்பு ஒலியில் கேட்க முடிகிறது. அந்த ‘டவரில்’ இரண்டு நிலைகள் உள்ளன; இடைநிலை ஒன்று மேல் நிலை ஒன்று. இடை நிலையிலேயே இந்த இன்பப் பொழுது போக்கு உணவு அகம் கடைகள் இருக்கின்றன. மேல்நிலையில் விரும்பினால் போய்வரலாம். நான் இடைநிலையோடு நிறுத்திக்கொண்டேன். அந்த டவர் பாரிசின் நடுவில் இருப்பதால் அங்கிருந்து அந்த நகரை முழுமையாகப் பார்க்க முடிகிறது. நம் ஊர் உயர் நீதி மன்றக் கட்டிடத்தில் பழைய ஒளிவிளக்குக் கட்டிடம் (light house) போன்றது. இது குறுகலானது. அது பரப்பு மிகுதி உடையது. அண்ணா நகரிலும் ஒரு ‘டவர்’ கட்டி இருக்கிறார்கள். அதுவும் இதைப் போன்ற கற்பனையை உடையதுதான். மேலே ஏறி அண்ணா நகரைப் பார்க்க முடியும். இன்னும் சற்றுத் தொலைக்காட்சிகளும் புலப்படுகின்றன. மனிதன் சில சமயம் உயரப் பறந்தால்தான் அவன் தன் வாழ்ந்த வாழும் சூழ்நிலைகளைச் சற்றுச் சிந்தித்துப் பார்க்க முடியும். அதற்கு அடையாளமாக இந்த டவர்கள்’ அமைகின்றன. ‘ஈஃபில் டவர்’ ஏறிப் பார்த்த நான் இன்னும் அண்ணா நகர் டவரை ஏறிப் பார்க்கவில்லை. ஒருநாள் ஏறித்தான் பார்க்க வேண்டும். இங்கே ‘உயர் தூக்கி’ இல்லை; அது ஒரு குறைதான். இருக்கலாம்; அது செயல்படுவது இல்லை என்று தெரிகிறது. அந்த ஈஃபில் டவர் அந்த நாட்டின் சின்னம்; அது உ.ணர்த்தும் செய்தியும் உள்ளது. இரும்புத் தொழில்; இயந்திரக் கருவிகள்; தொழிற்சாலைகள் இவற்றை வளர்த்தால்தான் நாடு உயரமுடியும் என்ற கருத்தை அறிவிக்கும் ஒரு அறிகுறியாய் அது விளங்குகிறது. பெல்ஜியம் நாட்டில் ஒரு அடையாளச் சின்னம் போற்றப்படுகிறது. அரசனின் குழந்தை ஒருவன் காணாமல் போய்விட்டான்; அவன் கண்டுபிடிக்கப்பட்டான்; அவன் (சிறு குழந்தை) இறைவன் படைப்பை மறைக்காமல் நின்றுகொண்டு ஒன்றுக்குப் போகிறான்; (அதிக சொற்களைப் பயன்படுத்த விரும்பவில்லை. தெளிவாகச் சொல்லிவிட்டேன்), அதை ஒரு சிறு சிலையாகத் தெருச் சந்தியில் வைத்திருக்கிறார்கள். அது அந்த நாட்டின் அடையாளச் சின்னமாக விளங்குகிறது. அந்தப் பொம்மை பல வடி.வங்களில் விற்பனை ஆகிறது. தென்னகத்திற்கும் தனிப் பெருமை உண்டு; தமிழ் நாட்டின் ஆட்சிச் சின்னம் திருக்கோயில் சின்னம்; அது நம் பழமைச் சிற்பக் கலை, தெய்வீகம், பண்பாடு இவைகளை விளக்கிக்கொண்டு இருக்கிறது. அதன் பெருமை வெளிநாடுகளில் இருந்து நினைத்துப் பார்க்கும் பொழுது. தான் தெரிகிறது. கோயில்கள் சிற்பங்களோடு கூடிய இந்த அழகு உலகில் எங்கும் இல்லை என்று கூறிவிடலாம். விஞ்ஞானம் வளரவும், உயர் கட்டிடங்கள் எழுப்பலாம்; கலைச் சிற்பங்களை இவர்களால் படைக்க முடியாது. அதனால்தான் நம் நாட்டுச் சிலைகள் சில கள்ளக்கடத்தலும் செய்யப்படுகின்றன. அவை சிலைச் சிறப்புக் காரணமா பஞ்ச லோகங்களின் விலை மதிப்பின் உயர்வு காரணமா சரியாக விளங்கவில்லை. நமக்கு என்று ஓர் வரலாறு உண்டு; சாதனையும் உண்டு; அது இந்தத் திருக்கோயில் கட்டிடங்கள், சிற்பங்கள்; அவை சரிந்துகொண்டே போகின்றன. சில சமயம் அவை புறவளர்ச்சி முயற்சிகளுக்குத் தடையாக இருப்பதால் புறக்கணிக்கவும் படுகின்றன. பல கோயில்கள் வழிபடுவோர் குறைந்து வருவதால் பாழ் பட்டும் வருகின்றன. பல பெரிய கோயில்கள் புதுப்பிக்கப் பட்டும் வருகின்றன. வேங்கடவன் திருக்கோயில், திருவரங்கத்து மதிற் கோயில், மதுரை மீனாட்சிக் கோயில், முருகன் மலை முதிர்ச் சோலைகள் எல்லாம் வெளிநாட்டு இந்தியர்கள் தம் நாட்டுக் கலைத் தெய்வங்களாகப் போற்றி வருகின்றனர். அமெரிக்காவில் வேங்கடவன் கோயில் எழுப்பி உள்ளனர். இங்கிலாந்திலும் தங்கள் கலாச்சாரத்தை மறக்காமல் இருக்க வேங்கடவன் திருக்கோயில் எழுப்பப்பட்டு இருக்கிறது. எங்கு இருந்தாலும் நம்மவர்கள் நம் நாட்டுக் கலாச்சாரத்தை மறக்காமல் காப்பாற்றி வருகிறார்கள். புற மாற்றங்கள் பாதிக்கின்றன. மனோபாவங்கள் வாழ்வு முறைகள் நடைமுறைகள் மன இயல்புகள் மாறாமல் அங்கு வாழும் இந்தியர்கள் இந்தியர்களாகவே இருக்கின்றனர். சாதிகளை மீறுகிறார்கள்; கலப்பு மணத்தைத் துணிந்து ஏற்கிறார்கள்; என்றாலும் ‘இந்தியர்கள்’ என்ற வரையரையை மீற விரும்புவதில்லை; மண வாழ்வில் சாதி மீறல்கள் துணிந்து ஏற்கப்படுகின்றன. இவை வெளி நாட்டின் வாழ்வியல் தாக்கம்; அதே சாதியில் அங்கே எப்படிப் பெண்களைத் தேடமுடியும்? அதனால் இந்த விரிவு மனப்பான்மை அவசியத்தால் ஏற்பட்ட ஒன்று என்றுதான் கூறமுடியும். சாதிக்குள்ளேயே மணக்கலப்பு முயல்கிறார்கள்; முடிவதில்லை, அதனால் இந்த அளவுக்கு மனப்பாங்கு பெற்று ‘இந்துக்கள்’ என்ற வரையறைக்குள் கலப்பு மணத்தைச் செய்துகொள்கிறார்கள். சீக்கியர்கள் இங்கிலாந்தில் லண்டனில் ‘செளத்ஹால்’ என்ற பகுதியில் மிகுதியாகத் தங்கிக் கடைகளில் வியாபாரம் செய்து வரு கின்றனர். அவர்கள் தனி இனமாக ஒற்றுமையோடு இனப் பற்றோடு இயங்கி வருகிறார்கள். தனிப் பண்பாடு ‘பூவே நீ பூச்சூடவா’ இதுவும் நம் தமிழ் நாட்டுக் கலாச்சாரம். பூவையரைப் பூங்கொடிகள் என அழைப்பதில் நாம் பெருமை கொள்கிறோம். கொடிகள் போன்று தவழும் இடையும் மென்மையும் நம் மகளிரிடம் எதிர் பார்க்கப்படுகின்றன; கரிய கூந்தலில் பூக்களைத் தாங்கி முடிப்பது அவர்களின் தனியழகு; கோயில்களுக்குச் செல்லும் நம் பாவையர் பட்டு உடுத்தி நெற்றியில் சிவப்பு இட்டுத் தலையில் பூச்சூடிச் செல்வதும் மறக்க முடியாத காட்சிகள். நம்மலர் தலையில் பூச்சூடிச் செல்லும்போது அவர்கள் அதை வியப்பாகப் பார்க்கின்றனர். பார்க்கட்டுமே; நமக்கு என்று சில அழகுகள் போற்றப்படுகின்றன, அவர்கள் இதழுக்குச் சிவப்பு ஊட்டுகின்றனர். நம்மவர்கள் நெற்றிக்குச் சிவப்பு தீட்டுகின்றனர். நிறங்கள் வேண்டும்; அந்த நிறத்தை நம்மவர் தலையில் பூக்களில் காட்டுகின்றனர். மணமும் ஊட்டுகின்றனர். செண்டுகள் அவர்களுக்குத் தரும் மணத்தை நம் மல்லிகைப்பூக்கள் கூந்தலுக்குத் தருகின்றன. இதைப் பற்றிய ஒரு பிரச்சனையே சங்கப் பாடல் ஒன்று எழுப்பியிருக்கிறது. அதை ஒட்டித் திருவிளையாடற் புராணத்திலும் ஒரு வாதம் நடக்கிறது. இறைவனே நக்கீரரைப் பார்த்துக் கேட்கின்றார்: ‘பார்வதிக்குக் கூந்தலில் மணம் இயற்கையா செயற்கையா?’ அவருக்கே ஒரு மயக்கம். “பழம்பாட்டின் கருத்து இது : தலைவியின் கூந்தலின் மணத்தை வண்டே நீ கண்டு இருக்கிறாய். நீ பல பூக்களை நாடி அதன் மனத்தை நுகர்ந்து இருக்கிருய். அந்த மணத்தோடு இதனை ஒப்பிட்டுச் சொல்; இந்த நறுமணத்தைவிட அது சிறந்ததா?” என்று தலைவன் ஒருவன் கேட்கிறான். அது அவன் கவிதையில் தோன்றும் நயம். அதை ஒட்டியே இந்த வாதம் எழும்பி உள்ளது. இப்படி எந்தத் தலைவனும் ஆங்கிலப் பெண்ணின் வெட்டிய கூந்தலை வைத்துக் கவிதை புனைய முடியாது. அவள் கூந்தலும் சித்திரிக்கப்பட்ட கூந்தல்தான்; அதில் பலவகை நிறங்கள் தீட்டப்படுகின்றன. வாரி முடிக்கத் தேவை இல்லை; வாரிவிட அவை அமைந்துள்ளன. சுருள்கள் அக்கூந்தலுக்குத் தனியழகு தருகின்றன. ஏதோ இந்த நினைவு எழுந்தது; எழுதிவிட்டேன். தொடர்பு இல்லையே என்று எண்ணவேண்டாம்; நான் திட்டமிட்டுக் குறிப்பு வைத்துக்கொண்டு இதை எழுதவில்லை என்பதற்கு இது ஒரு அடையாளம். பாரிசில் ஒரு நடனம் பாரிஸ் நகரத்தில் பார்த்த ஒன்று; அதையும் சொல்லி விடுகிறேன்; டூரிஸ்டுப் பேருந்தினர் விருப்பம் உள்ளவர் ‘காபரே நடனம்’ சென்று பார்க்கலாம் என்று அறிவித்தனர். அதைப் பார்க்கப் பன்னிரண்டு பவுண்டு கட்டணம் என்று நினைக்கிறேன். அதாவது இருநூறு ரூபாய் அளவு என்று கணக்கிடுகிறேன். இவ்வளவு தூரம் போய் அதைப் பார்க்காமல் வருவது எப்படி, பணம் பிறகு சம்பாதித்துக் கொள்ளலாம்; அதை எப்படி மறுபடியும் பார்க்க முடியும். இப்படிச் சொல்லி நம்மை நாம் சில சமயங்களில் சமாதானம் செய்துகொள்கிருேம். ‘காபரே நடனம்’ பாரிஸ் நகரத்துப் பாரம்பரியக் கலை. அதில் பாரிஸ் நகரத்து அழகிகள் மட்டும் அல்ல; உலகத்தின் பல பாகங்களில் இருந்து நடனப் பெண்கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். அதில் பையன்களும் சேர்ந்து ஆடுகின்றனர். அவர்களும் அழகில் அவர்களை வென்றவர்களாகவே காணப்படுகின்றனர். வான மகளிர் இந்த மானுடத்தை எப்படி மகிழ்விக்க முடியும். இவர்கள் அதை விரும்புகிறார்கள் மூடி மறைப்பதில் பயனில்லை. சிலைகள் உயிர் பெற்று இங்கே நம் முன் ‘நாங்கள் மனிதர்களின் பிரதிநிதி உருவங்கள் தான்’ என்று சொல்வது போலத் துணிந்து நிற்பதுபோல அவர்கள் காட்சி தருகிறார்கள். மேலை நாட்டுப் பெண்கள் அணியும் உடையால் வேறுபடுகின்றனர்; அவர்கள் சேலை உடுத்துவது இல்லை; பலவகை சட்டைகளையும் கால் சட்டைகளையும் அணிந்து தமக்கென ஒரு பாணி அமைத்து உடுக்கின்றனர். நம் நாட்டு மகளிர் சேலை கட்டிய மாதர்; அந்தப் பெயர் வாங்கியவர்கள். இரண்டும் இல்லாமல் பெண் பெண்ணாகக் காட்சி அளிக்க முடியும் என்பதை அந்த நடனத்தில் காட்டி மகிழ்வித்தனர். நான் கண்களை மூடிக்கொள்ளவில்லை. அவர்கள் சில இடங்களை மட்டும் நமக்காக மூடியே வைத்தனர். எந்தவித விரசமுமின்றி மேலாடை நீங்கிய வனப்பினைக் கண்டு அதை ஒரு கலைப்பொருளாக ரசிக்க முடிந்தது. வண்ண முகைகள் இதழ்கள் விரிந்த பூக்களாக மலர்கின்றன; அன்னப் பெடைகள் தாமரை மலரை விட்டுத் தண்ணீரில் தாவி நடக்கின்றன. காட்டு மயில்கள் மேகம் கண்டு மனம் குளிர்ந்து தோகை விரித்து ஆடுகின்றன. சிறகைப் பெற்ற தெய்வ மகளிர், மின்னும் நட்சத்திரங்கள். குழந்தையின் மலர்ந்த சிரிப்பு இவற்றையெல்லாம் அந்த நடனக் காட்சிகளில் காண முடிகிறது. அந்த இளம் வாலிபர்கள் அவர்களோடு சேர்ந்து இணைந்து ஆடினர். அது ஒரு கலை; அதை ரசிக்கும்போது நாம் ஞானிகள் அல்ல என்ற உணர்வோடு இருந்தால்தான் அது நமக்கு விருந்தாக அமைகிறது. கையில் கோப்பையில் ‘சாம்பயின்’ என்ற மதுவகை ஒரு அளவு ஊற்றித் தந்தார்கள். அதைப் பருகிக்கொண்டே அந்தக் கலை விருந்தைக் கண்டு ஈடுபடுகிறார்கள். ‘மதுவும் மங்கையும்’ இரட்டைப் பிள்ளைகள் என்ற கோட்பாட்டை அந்த நிலை நினைவூட்டுகிறது. அதைவிட மற்றொரு சிறிய காட்சி மறக்கமுடியாமல் நிற்கிறது. நாங்கள் அந்த நடன அரங்கை விட்டுப் பேருந்து நோக்கி நடக்கிறோம். நள்ளிரவு நேரம்; விளக்குகள் அதைப் பகலாக்குகின்றன. கூட்டம் கூட்டமாகவே நகர்ந்து செல்கிறோம். பாரி முனை ‘செல்லாராம்’ கடைப்பக்கம் போகிறோமா என்ற நினைவு எழுகிறது; உள்ளே சேலை விற்கிறார்கள்; அதற்காக வெளியே செல்லுலாய்ட் பொம்மை; அந்த பொம்மை ஒரு விளம்பரப் பொருள். அதற்கு விதவிதமாக உடை உடுத்துகிறார்கள்; கவர்ச்சிப் பொருளாகவே இருக்கிறது. இங்கே உடையே உடுத்தாமல் இப்படி ஒரு பொம்மையை உட்காரவைத்தால் அது கவர்ச்சியாகத்தானே இருக்கும். ‘கன்னிப் பெண்’ - இது பருவத்தைக் குறிக்க வந்த சொல்லி அவள் மணமானவளா இல்லையா என்பது அல்ல கேள்வி; கவர்ச்சி மிக்க இளநங்கை; அதைச் சொல்லைத்தான் கன்னிப்பெண் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன். அவள் ஆடையில்லாமல் ஷோகேஸ் பொம்மையைப் போல் அந்தக் கட்டிடத்துப் படிக்கட்டு ஓரத்தில் உட்கார வைக்கப்பட்டு இருக்கிறாள். நடந்துகொண்டே இருக்கிறோம். அந்த உருவம் மின்னல்போல் காட்சி அளிக்கிறது: அது மறையவில்லை. அங்கேதான் உட்கார்ந்து இருக்கிறது. நாங்கள் மறைகிறோம். அந்த உருவம் ஒரு விளம்பரப் பொருள் உள்ளே அது சிவப்பு விளக்கு வீடு என்பதற்கு அடையாளம். கடைப் பொருள் வெளியே விளம்பரத்துக்கு வைக்கப்பட்டு இருந்தது. இதை மேலும் விமரிசிக்க விரும்பவில்லை. அது பாரிஸ் நகரத்து இரவு; அவ்வளவுதான் விளக்கம். அவள் ஒரு அடையாளம்; வகைகள் உள்ளே விலைப்பொருளாக உள்ளன. மறந்துவிட்டேன்; அந்த நடனத்தில் இடையிடையே நகைச்சுவை நிகழ்ச்சிகள் புகுத்தப்பட்டன. நகைச்சுவை என்று கூறும்போது நம் தமிழ் நடிகை மனோரமாவின் நடிப்பு நினைவுக்கு வருகிறது. சோவின் நடிப்பிலும் மாற்றத்தைக் காணமுடிகிறது. தொலைக்காட்சியில் அவர்கள் நடித்த நாடகங்கள் தனித்தனியே பட்டு மாமியாக குழந்தைக்காக ஏங்கும் தாயாக மனோரமா நடிக்கிறார். கொஞ்சங்கூட நகைச்சுவை இல்லாமல் தத்ரூபமாக மனத்தைத் தொடக்கூடிய வகையில் சோகக் குமுறல்கள் ததும்ப நடித்துக்காட்டுகிறார். அதேபோல சோ ‘பெருமாள் பக்தராக’ நடிக்கிறார்; சாதிக் கட்டுப்பாடு தேவையற்றது என்ற கருத்தைப் புகுத்தும் நாடகம் அது; அவர் நகைச்சுவைக்கு இடமே தராமல் நடிப்பு எல்லையைத் தொட்டுக் காட்டுகிறார். நகைச்சுவை நடிகர்கள் சீரியஸ் ரோல் எடுத்து நடித்துக் காட்ட முடியும் என்பதை அவர்கள் தொலைக் காட்சி நாடகங்களில் காட்டிவிட்டார்கள். அந்த நடனத்தில் சிறிது மாற்றம் விளைவிக்கக் கோமாளிக் கிண்டல் நாடகம் ஒன்று நடிக்கப்பட்டது. அந்த அரங்கு அதில் முன்னால் உட்கார்ந்திருக்கும் பார்வையாளர்கள் பல தேசத்துப் பயணிகள். அந்தத் தமாஷ் பல தேசத்து ரசிகர்களைக் கவரத்தக்கதாக இருந்தது. ஒருவன் வழி தவறிப் பத்து பவுண்டு நோட்டுக் கீழே போட்டுவிடுகிறான். அதை யாரும் கவனிக்கவில்லை; ஆங்கிலேயன் ஒருவன் அதை எடுக்கிறான்; எடுப்பதற்கு முன்னால் பல முறை யோசித்துப் பின் எடுக்கிறான். என்று நினைக்கிறேன். மறந்துவிட்டது. ருஷிய நாட்டவன் ஒருவன் எடுக்கிறான்; எடுப்பதற்கு முன் தன் தலைமைப் பீடம் என்ன சொல்லுமோ என்று அஞ்சி அஞ்சிப் பின் மேலிடத்துக் கட்டளை வந்த பிறகு எடுக்கிறான்; சீனாக்காரன் முதலில் அதை காமிராவில் போட்டோ எடுக்கிறான்; அதாவது சீனப் பயணிகள் எதற்கெடுத்தாலும் எதைக் கண்டாலும் உடனே போட்டோ எடுக்கிறார்கள் என்பது அந்தச் சித்திரத்தின் கேலித் தன்மை. அமெரிக்கன் ஒருவன் வருகிறான். அந்தப் பத்துப் பவுண்டை எடுப்பதற்கு முன் அதே இடத்தில் தன்னுடைய பத்து பவுண்டைக் கீழே போட்டுப் பின் இரண்டையும் சேர எடுத்துச் செல்கிறான். அமெரிக்கர்கள் பணம் போட்டுப் பணம் எடுக்கும் மனப்பான்மை உடையவர்கள்; தைரியமாக முதலீடு செய்து பின் தக்க வருவாய் ஈட்டுவார்கள் என்பது அதன் கருத்து. அது உண்மைதான். மிகப் பெரிய நகரங்களில் அடுக்குக் கட்டிடங்கள், வசதி மிக்க உணவு அகங்களைக் கட்டியிருக்கிறார்கள், மற்ற இடங்களை நோக்கக் கட்டணம் குறைவு; வசதி மிகுதி; எப்பொழுதும் பயணிகள் நிறைவு; நல்ல வருவாய்! பிரெஞ்சுக்காரன் வருகிறான் யோசனையே செய்யவில்லை; பணத்தை எடுத்துக் கொள்கிறான்; அதைக் கொண்டு ஒரு புட்டியையும் துணைக்கு ஒரு குட்டியையும் கைப்பிடித்துக் கொண்டு போகிறான். பணம் கிடைத்தால் அனுபவிக்கத் தெரிந்தவன் என்பது அந்தக் கேலிச் சித்திரத்தின் கருத்து. ‘இந்தியா’ என்ற குரல் கீழே எங்களிடமிருந்து எழுப் பப்பட்டது. அதைப் பற்றி அவர்கள் அந்த நாடகத்தில் சிந்திக்கவில்லை. நாமே அதைப்பற்றிச் சிந்தித்துக்கொள்ள வேண்டியது. என்னைக் கேட்டால் அவன் அதைப் பத்திரப்படுத்திச் சேர்த்து வைப்பான். காரணம் அவனுக்கு எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் மிகுதி என்றுதான் சொல்லத் தெரிகிறது; நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? “அவன் மனச்சான்று உடையவன். உடையவனிடம் தேடிக் கொடுப்பான்” என்பீர்கள். நன்றி. மற்றைய நகரங்களைவிட பிரான்சு தேசத்து நகரங்கள் பார்க்கத்தக்கவை; அரசர்கள் வாழ்ந்த வரலாறு. வீழ்ந்த நிகழ்ச்சிகள், அவற்றைக் காட்டும் ஓவியங்கள் அந்நகரங்களில் சித்திரித்துக் காட்டப்படுகின்றன. பிரெஞ்சுப் புரட்சியின் வரலாறு தீட்டப்பட்டுள்ளது. வழிகாட்டிகள் அந்தக் கதைகளை விளக்கிக்கொண்டே செல்கிறார்கள், அந்தப் பிரெஞ்சு கைடுகளையே ஆங்கிலம் தெரிந்தவர்களை விளக்கிச் சொல்ல அமர்த்தி இருக்கிறார்கள். மன்னர்கள் ஆண்ட தேசம் அது. அவர்கள் LI)ணிமுடி.கள் பறிக்கப்பட்ட தேசமும் அது. ஜெர்மனியில் சிறப்பாக ‘இட்லரின்’ கொடுங்கோன்மை; யூதர்களை ஒறுத்த நிகழ்ச்சிகள் இவற்றைச் சித்திரித்துக் காட்டுகிறார்கள். இரண்டாம் உலகப்போரின் விளைவு நமக்கு அதிகம் தெரியவில்லை. அங்கே அதுதான் எங்கும் பேசப்படுகிறது. ஹிட்லர் முறியடிக்கப்படாவிட்டால் உலகத்தின் சரித்திரமே மாறிவிட்டு இருக்கும்; இன்று உலகம் சுதந்திரம் ஜனநாயகம் சோஷியலிசம் என்ற இந்த மூன்று லட்சியங்களைப் பற்றி நினைத்தே பார்க்கமுடியாது. ஜெர்மானியர்கள் அவர்கள்தான் உலகாளப் பிறந்தவர்கள் என்ற கோட்பாடு வெற்றிபெற்றிருக்கும். ஜெர்மனி யுத்தத்தில் காலிழந்தவர்கள் ஒரு சிலர் நகரத்துக் கடை வீதிகளில் தள்ளுவண்டியில் அவர் உறவினர்கள் பல் தள்ளப்பட்டு வருவதைப் பார்க்க முடிந்தது. ஜெர்மனி போர் முயற்சியில் ஈடுபட்டதால் எந்திர உற்பத்திகள் வேகமாகச் செயல்பட்டன. தொழில் வளம் பெருகியது. அதன் தொடர்ச்சி இன்று ஜெர்மனி எந்திர வளர்ச்சி மிக்க நாடாக வளர்ந்து இருக்கிறது, மதிப்பு உயர்ந்த கார்கள் உற்பத்தி மிகுதியாக உள்ளது. நிலக்கரி யும் இரும்பும் இயற்கை வளமும் மிக்க நாடு அதனால் அது தொழில் வளம் மிக்க நாடாக விளங்குகிறது. போரில் தோற்றுவிட்ட தேசங்கள் ஜப்பானும் ஜெர்மனியும் தம்மைப் போர்த்தளவாடங்கள் கொண்டு வளப்படுத்திக்கொள்ள முடியாது. அவர்கள் கட்டுப்படுத்தப் பட்டு இருக்கிறார்கள். அதனால் அந்த தேசங்களுக்குப் பெரு நன்மை; அவர்கள் ஆக்கப் பொருள் படைப்புகளுக்குத் தம் ஆற்றலையும் சக்தியையும் கனிமப் பொருள்களையும் பயன் படுத்துகின்றனர். தரம் மிக்க எந்திர மின்சாரப் படைப்புகளைத் தந்து வருகின்றனர். எந்த ஒரு நகரத்திற்குச் சென்றாலும் பார்க்கத் தகுந்த காட்சிகளாக உயரமான சர்ச்சுகளும் கடைவீதிகளும்தான் இருக்கின்றன. கடைகளில் சென்று பொருள்களை வாங்க நாம் வெளியே போகிறோம். அங்கே அந்த நாட்டு மக்கள் கடைவீதிகளில் குழுமிச் செல்லும் காட்சியைக் காண முடிகிறது. கலகலப்பான வாழ்க்கை; பல தேசப்பயணிகளைக் காண முடிகிறது. அவர்கள் அனைவரையும் அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறமுடியாது; கடைக்காரர்களைத்தான் அந்த நாட்டுவாசிகள் ‘ என்று உறுதியாகக் கூறமுடியும், ஐரோப்பிய நாடுகள் பல இடத்திலிருந்து ‘டூரிஸ்டுகள்’ வந்து போய்க்கொண்டு இருக்கின்றனர். அதேபோல் இங்கிலாந்திலும் ஷேக்ஸ்பியர் வாழ்ந்த நகரம் மற்றும் பல்கலைக் கழகங்கள் உள்ள நகரங்கள் இந்த இடங்களில் பல தேசத்துப் பயணிகளைப் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு நாடும் பாரதத்தை விட மிகச் சிறியவையே. அவர்கள் மற்ற பகுதிகளுக்குச் செல்வதும், மாற்றம் கண்டு மகிழ்வதும், சுற்றுலாச் செல்வதும் வாழ்க்கை நடைமுறைகள் ஆகின்றன. ஜெர்மனியில் முக்கியமாக நாம் செல்லும் பகுதிகள் எல்லாம் ‘ரைன்’ நதி நம்மைத் தொடர்கிறது; வழியெல்யெல்லாம் திராட்சைக் கொடிகள்; எங்கும் பசுமை: இப்படியே ஏறக்குறைய பெல்ஜியம் ஹாலந்துப் பகுதிகள் காட்சி அளித்தன. நல்ல மழை. இயற்கை அவர்களுக்கு வளத்தை வாரித் தருகிறது, மண் இரும்பையும் கரியையும் தோண்டும் அளவிற்குத் தந்துகொண்டிருக்கிறது. தொழில் நீண்டகாலமாக வளர்க்கப்பட்டு இருக்கிறது. நாம் ஒரு பொருளை உற்பத்தி செய்வது என்றால் அதற்கு அடிப்படை அச்சுகள் நிறுவவேண்டும். கார் உற்பத்தி என்றால் அதற்கு வேண்டிய அச்சுகள் (plants} தேவைப்படுகின்றன. இவ்வாறே ஒவ்வொரு தொழிலுக்கும் அடிப்படை அச்சுகள் வேண்டும். அவர்கள் ஏற்கனவே இத்துறைகளில் முன்னோடிகளாக இருப்பதால் நிறைய எந்திரங்களைக் கார்களை உற்பத்தி செய்யும் வசதி வாய்ப்புகள் பெற்றிருக்கின்றனர். நாம் ஒரே ஒரு துறையில் மேல்நாட்டை ஒட்டி மிக வேகமாக முன்னேறி வருகிறோம். திரைப்படத் துறையில், அவர்கள் விமானங்கள் ஹெலிகாப்டர்களில் சண்டை போடுகிறார்கள். நாம் துப்பாக்கி வெடிகுண்டு வரை வந்துவிட்டோம். இந்தப் படங்கள் இப்பொழுது வன்முறை கொள்ளைகள் செய்யத் தூண்டுதலாக இருக்கின்றன என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை. ‘நூறாவது நாள்’ படம் பார்த்துவிட்டு எப்படிக் கொலை செய்வது என்று கற்றுக்கொண்டு அதே வகையான வெறித்தனத்தோடு குடும்பத்தையே அழித்தான் ஓர் இளைஞன். அது அவன் தந்த வாக்குமூலம். மேல் நாட்டுத் திரைப்படங்களை ஒட்டி இங்கும் சண்டைக் காட்சிகள் மிகுதிப்படுத்தப்படுகின்றன. விளைவு: இன்றைய இளைஞர்களின் மனோ நிலை; காந்தியுகம் மாறிச் சட்ட மீறல்கள் வளர்கின்றன. நாம் மற்ற துறைகளில் அவர்களை ஒட்டி வளரவேண்டும் என்பதற்காகத்தான் இதைக் குறிப்பிடவேண்டி யிருக்கிறது. நாம் அந்த நாடுகளைப் போலத் தொழில் வளத்தால் முன்னேற வேண்டும் என்ற ஆசை உண்டாகிறது; முன்னேறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. திராட்சைக் கொடிகளை வழி எங்கும் காணமுடிகிறது , அதனால் அங்கு ‘வைன்’ உற்பத்தி அதிகம் நடைபெறு கிறது. பிரான்சில் பாரிசுக்கு அருகே ‘சாம்பெயின்’ என்ற வைன் வகை பதப்படுத்தப்படுகிறது. பூமிக்கு அடியில் சுமார் இருபது மைல் தொலைவிற்குச் சுரங்கவழி கீழே தோண்டப்பட்டு சுமார் இருபது முப்பது அடி அகலப் பாதையில் இரண்டு பக்கம் புட்டிகள் அடுக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில் அவை தேக்கி வைக்கப்பட்டுப் பழமைப்படுத்தப்படுகின்றன. நாறு ஆண்டுகளாக அங்கு அந்தத் தொழில் வளர்க்கப்பட்டு வருகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு அது புளித்துப் பழமை பெறுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதற்கு விலை மிகுதி என்று தெரிவிக்கப் பட்டது. அங்கு ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்ற அறிவுரையைச் சொன்னால் நம்மைப் பார்த்துச் சிரிப்பார்கள். திராட்சைப் பழச் சாறுகளைப் பதப்படுத்தி மதுவகை செய்வது முக்கியமான தொழில்; அதனால் பல குடும்பங்கள் பிழைக்கின்றன. குடி குடும்பங்களை வாழவைக்கின்றன என்பதுதான் பொருந்தும். கிராமங்களைப் பார்க்க முடியவில்லை கல்லூரியில் படித்த நாட்களில் ஆங்கில வகுப்புகளில் பாடம் நடத்தும்போது கிராமியக் காட்சிகள் சித்திரிக்கப்பட்டுக் கவிதைகள் படிக்கப்பட்டன. கவிஞர் ‘கோல்டு ஸ்மித்து’ கிராமங்களிலிருந்து நகரங்களுக்குக் குடியேறி விடுவதால் கிராமங்கள் பழங்காட்சிகளை இழந்து பொவி விழந்துவிட்டன என்று எழுதுவார். ‘புறக்கணிக்கப்பட்ட கிராமம்’ (deserted village) என்ற பாடல் இன்னும் நினைவில் நிற்கிறது. கொல்லன் உலைக்களத்தை ஊதி இரும்பை வடித்துக் கொடுப்பதும், பள்ளி ஆசிரியர் தம் அறிவை வாரி வழங்கித் தன் பெருமிதத்தைப் புலப்படுத்துவதும், கிராமப் பாதிரி மக்களுக்கு நல்வாழ்வுக்கு வழிகாட்டுவதும் இப்படிப் பல காட்சிகள் சித்திரிக்கப்படுகின்றன. கிராமங்கள் புறக்கணிக்கப்படும் நிலையை அவர் சித்திரிக்கிறார். இப்பொழுது அங்கு கிராமங்களே இல்லை என்றுதான் சொல்ல முடிகிறது. அனைத்தும் நகர் வடிவம் பெற்று விட்டன. மின்சாரம், தொலைக் காட்சிகள், தொலைபேசிகள், நெடுஞ்சாலைகள், வசதிமிக்க கார்கள் கிராமங்களை நகரங்களாக மாற்றிவிட்டு இருக்கின்றன. அங்கே பார்க்க முடியாத ஒன்று கிராமம் தான். பயிர்கள் பண்ணைகள் பெரும் அளவில் மைல் கணக்கில் வளைக்கப்பட்டு இயங்குகின்றன. விவசாயம் தக்க தொழில் கருவிகள் மூலம் நடக்கின்றன. எந்திரங்கள் துணை செய்கின்றன. அவற்றை எல்லாம் அறியும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. சென்ற இடமெல்லாம் நகர்களையே காண முடிந்தது. விவசாய நாடு என்பது மாற்றப்பட்டு முற்றிலும் தொழில்வளம் மிக்க நாடாக இங்கிலாந்து மாறிவிட்டது. அவர்களுக்குக் காய்கறிகள் உணவுவகைகள் வெளிநாடுகளிலிருந்து வந்து குவிகின்றன. அங்கங்கே கோழிப் பண்ணைகள், மாடுகள், ஆடுகள், பன்றிகள் பண்ணை முறையில் வளர்க்கப்பட்டு வேண்டிய இறைச்சி சந்தைகளுக்கு வந்து சேர்கின்றன. பால் பண்ணைகள் மிகுதியாக உள்ளன. இவை எல்லாம் பெருத்த அளவில் மிக்க முதலீட்டு முறையில் தொழில்களாக நடத்தப்படுகின்றன என்பது தெரிகிறது. மொத்தமாகப் பார்க்கும்போது நகரங்களைப் பார்க்க முடிந்ததே தவிர கிராமங்களைப் பார்க்க முடியவில்லை என்றுதான் கூற முடிகிறது. பொழுது போக்கு குழந்தைகளுக்கு ஒவ்வொரு நகரிலும் ‘மகிழ்வு அரங்கு’ (amusement Park) பொதுவாக நடத்துகிறார்கள். பெரியவர்களும் அங்குச் செல்கிறார்கள். உள்ளே சிறுவர்கள் ரயில் தொடரில் ஏறி அமர்கிறார்கள். நம் ஊர் பொருட்காட்சிகளில் உள்ளவை போன்றவை அவை, அதில் ஏறிச் சுற்றி வர இங்குபோல்தான் கட்டணம் செலுத்த வேண்டும். ‘சிறு கார்கள்’ அதில் ஏறி அவர்களே அவற்றை ஓட்டுகிறார்கள். அவை மற்ற கார்களோடு மோதுகின்றன. மோதாமல் ஓட்டிச் செல்லவேண்டும். நிறைய காசு போட்டுச் சூதாடும் கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. விதவிதமான விளையாட்டுக்கள் அதில் காசு இட்டு இழப்பது ஒரு பொழுதுபோக்காக அமைகிறது. அங்கே பல சிறுவர்களைக் காணமுடிகிறது. பெரியோர்களும் அச் சிறுவர்களோடு வந்து அவர்கள் விளையாட்டில் பங்கு கொள்கின்றனர். வெய்யில் வந்தால் அவர்களுக்குக் கொள்ளை மகிழ்ச்சி; குதிரைகளில் பெண்கள் ஏறிப் பயிற்சி பெறச் செல்வது பார்க்க முடிகிறது. கடலில் ஓடங்களைச் செலுத்தி மசிழ்வு கொள்கின்றனர். மணற்பாங்கில் சூரிய ஒளி படும்படி சாய்ந்து ஓய்வு கொள்வதில் எல்லையில்லா மகிழ்வு காண்கின்றனர். கார்களில் குடும்பம் குடும்பமாக இந்தக் கடற்கரை ஓரங்களில் இன்பப் பொழுது போக்கை அடைய வந்து குழுமுகின்றனர். அவை விடுமுறை நாட்களாயின் கூட்டம் மிகுதியாகின்றது. வீட்டுக்கொரு கார் அவர்கள் வாழ்க்கை வசதியைக் காக்கிடச் சுருக்கமாகச் சொன்னால் ஒவ்வொரு வீட்டு முன்பும் ஒரு கார் நிற்கிறது. ஒன்று என்பது சாதாரணம். அதிகமும் நிற்கலாம். நாம் வீட்டுக்கு ஒரு சைக்கிள் வைத்துக்கொள்வது போல அவர்கள் கார் வைத்திருக்கிறார்கள். ஷெட்டில் பத்திரமாகப் பூட்டி வைக்கப்படவேண்டும் என்பது இல்லை. கார்களை யாரும் திருடமாட்டார்கள்; அவற்றிற்கு ஊறும் விளைவிக்க மாட்டார்கள்; வெளியிலேயே நிறுத்தி வைப்பார்கள், அவரவர் வசதிக்கும் நிலைமைக்கும் ஏற்படக் கார்களின் தராதரம் வேறுபட்டு இருக்கும். எப்படியும் கார் இருக்கும். டாக்சிகள் அது குளிர் நாடு, நம் நாட்டைப் போல் ஆட்டோ ரிக்ஷாக்கள், சைக்கிள் ரிக்ஷாக்கள், கைவண்டிகள் இவற்றைப் பார்க்க முடியாது. ‘போன்’ செய்தால் டாக்சி வீட்டுக்கு வந்து சேரும். பெண்களும் டாக்சியை ஒட்டு கிறார்கள், பெரிய லாரிகளிலும் பெண்கள் இருந்து ஓட்டுவதைப் பார்க்க முடிந்தது. குறிப்பிட்ட கட்டணத்துக்கு மேல் அவர்கள் கை நீட்டி வாங்கியது இல்லை; எந்த எதிர்பார்ப்பும் அவர்களிடம் காணப்படுவது இல்லை. சைக்கிள், ஸ்கூட்டர்கள் , மோட்டார் சைக்கிள்களும் ஒரு சிலர் வைத்திருக்கின்றனர். எல்லாம் வேகமாகச் செல்லும் இயல்பின. சாலைகளின் நடுவில் நாம் போவது கூடாது; சென்றால் உயிருக்கு ஆபத்து என்றுதான் கூறமுடியும். மெதுவாகக் கார்கள் போவதே கிடையாது. சாலைகளைக் கடக்கும் போது விதிமுறைகளை மீறுவது இல்லை. அதனால் விபத்துகள் தவிர்க்கப்படுகின்றன. அங்கே கார் ஓட்டிப் பழகியவர்கள் இங்கே வந்து ஓட்டுவது மிகவும் கடினம். ஏனெனில் தெருவில் யார் எப்படி நடப்பார்கள் குறுக்கிடுவார்கள் என்று சொல்ல முடியாது, பிளாட்பாரத்தில் நடப்பதே இல்லை; நடக்கும்படி அவை தூய்மையாக இருப்பதும் இல்லை. எந்த இடத்தில் வேண்டுமானாலும் சாலைகளைக் கடக்கிறோம். கார்கள் ஹார்ன் செய்வது இல்லை அந்த நிலைமை இங்குப் பார்க்கவே முடியாது. ஒலி பெருக்கினால் வழி கிடைக்கும் என்று லாரிகளில் எழுதியிருக்கிறார்கள். ‘இன்டி.கேட்டர்கள்’ கார் எப்படித் திரும்புகிறது என்பதைச் சுட்டிக் காட்டிவிடும். பொதுவாகப் பெரிய பாதைகளில் போக ஒரு வழி; வர ஒரு வழி; எதிர் எதிரே மோதிக்கொள்ள வாய்ப்பு இல்லை. அதாவது இடது பக்கம் முழுவதும் ஒரு பாதி போகும் வண்டிகள்; வலது பக்கம் முழுவதும் எதிர் வண்டிகள். அதனால் கார்கள் மோதிக்கொள்ள வாய்ப்பு இல்லை. இங்கிலாந்தில் இடது பக்கம் போகின்றன. பிரான்சில் வலது பக்கம் போகின்றன. இங்கிலாந்து முறையைத்தான் நாம் பின் பற்றுகிறோம். இங்கிலாந்தில் இன்னும் மைல் கல் தான் கணக்கில் இருக்கின்றது. பிரான்சில் கிலோ மீட்டர்கள் கணக்கு. நாம் பழைய முறையை மாற்றி கிலோ மீட்டர் கணக்குக்கு வந்திருக்கிறோம், ரூபாய்க்கு 16 அணா பழைய கணக்கு; இப்பொழுது நூறு பைசா; நாம் அளவைகளை இப்பொழுது மாற்றிக் கொண்டோம். இடது பக்கம் போகும் வழியில் மூன்று பாதைகளாக இயங்குகின்றனர். மிக ஓரமாகப் போகிற வண்டிகள் மெதுவாகப் போகும் இயல்பின; அதனைக் கடக்க அடுத்த பாதையில் செல்லலாம். இடையில் நடுத்தரமான வேகம்;. இரண்டையும் கடக்க வலது ஓரம். வேகமாகச் செல்லலாம். இந்த மூன்று பாதைகள் தெளிவாக இயங்குவதால் மோதல்கள் நிகழ்வது இல்லை. விளக்கு ஒளிகள் காட்டும் அறிகுறிகள் கொண்டு கார்கள் ஒன்றை ஒன்று புரிந்துகொண்டு வழி விட்டுச் செல்கின்றன. எந்தக் காரணத்தைக் கொண்டும் ‘ஹார்ன்’ செய்வது இல்லை. வண்டிகளில் ஹார்ன்கள் பொருத்தப்பட்டு இருக்கும். மிகவும் அவசரமான நிலையில் அபாயம் தவிர்க்க வேண்டிய சூழ்நிலையில் மட்டும் ஒலி பெருக்கலாம் என்று சொல்கிறார்கள். மற்றொன்று காரில் முன் சீட்டில் உட்கார்ந்திருப்பவர் விமானத்தில் செல்வது போல் இடுப்பைச் சுற்றி பில்டுகள் கட்டிக்கொள்ள வேண்டும். குழந்தைகளை எந்தக் காரணைத்தைக் கொண்டும் முன் சீட்டில் உட்காரவைக்கக் கூடாது. டாக்சி ஓட்டிகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. அவர்களுக்கு பில்டுகள் தேவை இல்லை. இரவில் நீண்ட வழிகளைக் கார்கள் கடந்து செல்கின்றன, வழியில் யாராவது மடக்குவார்களே என்ற அச்சமே இல்லை; அதைப்போன்ற நிகழ்ச்சிகள் நடப்பதே இல்லை. வழியில் வண்டி. பழுது ஆகிவிட்டால் என்ன செய்வது? வழிப்பாதையில் ஆங்காங்கே இடைவெளி விட்டுத் தொலைபேசிக் கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கும். அங்கிருந்து கார் பழுதுபார்க்கும் கம்பெனிக்கு போன் செய்தால் அவர்கள் வந்து பழுது பார்த்துச் சரி செய்து உதவுகிறார்கள். இவர்களை அவர்கள் கார்களில் ஏற்றி அனுப்பி விட்டு நிதானமாக வண்டியைப் பழுது பார்த்துப் பின் அவர்களிடம் சேர்ப்பிக்கிறார்கள். அதற்கு என்று ஒரு கட்டணம் செலுத்தி அந்த நிறுவனங்களில் உறுப்பினர் ஆதல் வேண்டும். அதனால் வழியில் கார் கெட்டுவிட்டால் என்ன செய்வது என்ற பயமே அவர்களுக்கு உண்டாவது இல்லை. வழி நெடுக ஒளி விளக்குகள் வழி காட்டுகின்றன. *எந்த நேரத்திலும் கூப்பிட்ட குரலுக்குப் போலீசு உதவி வந்து சேர்ந்துவிடும். பெட்ரோல் பங்குகளில் இங்கு அதன் ஊழியர்கள் வந்து பெட்ரோல் போட்டு உதவுகிறார்கள். அந்த நிலை அங்கு இல்லை. அவர்களே அந்தக் குழாயைக் காரில் பொருத்தித் தேவையான அளவிற்குப் போட்டுக்கொள்கிறார்கள். கடைக்காரர் உள்ளிருந்தே கணக்குத் தெரிந்து கொள்ளக் கருவிகள் இருக்கின்றன, இருந்த இடத்தில் இருந்தே ‘பில்’ தொகை பெற்றுக்கொள்கிறார்கள். கார்கள் கழுவப்பட வேண்டுமானால் அதற்கு உரிய இடத்தில் நின்றால் போதும். நாம் உள்ளேயே இருக்கலாம். அங்கு உள்ள குழாய்கள் நீரை வாரி இறைத்துச் சுத்தம் செய்து விடுகின்றன. இது ஒரு வசதி; பெட்ரோல் பங்குகள் சிலவற்றில் இருக்கின்றன. கார்களுக்கு டயர்களுக்கு அடிக்கடி காற்று அடிப்பதே. இல்லை, நல்ல வலுவான டயர்கள்; ஒழுங்கான சாலைகள்; டயர்கள் தேய்வதும் இல்லை; காற்று இறங்குவதும் இல்லை. டிக்கட்டு இல்லாமல் பயணம் ரயில்களில் டிக்கட்டு வாங்காவிட்டாலும் பயணம் செய்யலாம்; அதற்காக அவர்கள் இரட்டிப்புக் கட்டணம் கேட்பது இல்லை; இறங்கும் இடத்தில் டிக்கட் வாங்காதவர்கள் செல்வதற்குத் தனி வழி வைத்து இருக்கிறார்கள்; அங்கே அவர்களிடம் சொல்லிவிட்டு உரிய கட்டணத்தையும் செலுத்திவிடலாம். நாம் எங்கிருந்து பயணம் தொடங்கினோம் என்பதை நாம் சொல்ல அவர்கள் நம்புகிறார்கள். எப்படி இந்த வளர்ச்சி ? இப்படி, ஒரு கேள்வி எழத்தான் செய்கிறது. அவர்கள் நம்மை அடிமைப்படுத்தி நம் செல்வம் எல்லாம் கொள்ளை கொண்டு போனார்கள் என்பது வரலாற்று உண்மை, அதைப் பற்றி இப்பொழுது விமரிசித்துப் பயன் இல்லை, நம் நாட்டுக் ‘கோகினூர் வைரம்’, இன்னும் அவர்கள் விலை யுயர்ந்த மணிகளையும் பொன் முடிகளையும் இன்னும் அரிய பொருள்களையும் வைத்துக் காட்சிப் பொருளாக வைத்துள்ளனர். ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டுவந்த வைரக்கற்கள் மிகுதி. இன்று அவற்றை அரசியின் உடைமைகளாக ஆக்கிக்கொள்ளாமல் காட்சிப் பொருளாக நாட்டு உடைமையாகப் பாதுகாப்பது பாராட்டத் தக்கதாகும். உலக நாடுகள் பலவற்றைத் தம் ஆட்சியின் கீழ் வைத்து ஆண்டதும் அந்தக் காலத்திலேயே அவர்கள் வாணிபத் தொழிலில் வளர்ச்சி பெற்றிருந்தனர். அவர்கள் தொடர்பால்தான் நம் நாட்டில் ரயில் அமைப்புகள், விமானம் இன்னும் பல வசதிகள் ஏற்பட்டதை மறுக்க முடியாது; ஒரு நாடு அதன் இயற்கை வளத்தால் முன்னேறுகிறது என்று மட்டும் இன்று கூறமுடியாது. அவர்கள் அறிவு வளர்ச்சி, ஆற்றல், கல்வி, எடுத்து நடத்தும் திட்டங்கள் இவற்றையும் பொறுத்து உள்ளது. அண்டை அயல் நாடுகளால் போர்த் தாக்குதல்கள் நிகழும் என்ற அச்சம் இருப்பதால் நம் நாட்டுத் தொழில் வளர்ச்சி, செல்வம் போர்க் கருவிகளுக்கும் படை வன்மைக்கும் பயன் படுத்தப்படுகின்றன, வளரும் நாடுகள் வேகமாக வளர முடியாததற்கு இந்தப் போர் அச்சம் முக்கிய காரணமாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தப் போர் அச்சம் அந்த நாடுகளிலும் உள்ளன. நேர்த் தாக்குதல் வரும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஜெர்மனி யுத்தம் அவர்கள் மனத்தில் பசுமரத்தாணி போல் பதிந்து உள்ளது. மறுபடியும் ஒரு ‘ஹிரோஷிமா’ நிகழக்கூடாது என்ற உணர்வு ஐரோப்பா முழுவதும் உள்ளது. அணுகுண்டால் உண்டாகும் அழிவுகளை ஒரு திரைப்படம் சித்திரித்துக் காட்டுகிறது. அதை ஒரு வீடியோவில் பார்க்க முடிந்தது. நல்ல வளமான வாழ்க்கை எப்படித் தீய்ந்து போகிறது என்பதைக் காட்டுகிறது அந்தப் படம்; வாழும் மண்; அதில் உள்ள மக்கள் கொடுமையான நோய்களுக்கு இரையாகி உருத்திரிந்து அழிகிறார்கள். ஜீவன்கள் உற்பத்தி ஆகமுடியாத ஒரு பேரழிவு; குழந்தைகள் குறைபாடு உடையனவாகப் பிறக்கின்றன. இப்படி ஒரு படத்தைப் பார்க்கும்போது அவர்கள் அங்கு நிம்மதியாக இல்லை என்பதை உணர முடிகிறது. எல்லா வளனும் இருந்தும், வாழ்க்கையில் உறுதிப்பாடு இருந்தும், இயற்கை வளம் நிறைந்தும், தொழில் பெருக்கம் இருந்தும் நம்பிக்கையான ஆட்சியியல்கள் செயல்பட்டும் மொத்தமாக இந்த மனித இனத்தின் எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் அந்த நாடுகளில் இருக்கிறது. அவ்வப் பொழுது அணுகுண்டு எதிர்ப்பு இயக்கங்கள் ஐரோப்பாவில் தோன்றிக் குரல் கொடுக்கின்றனர். அமெரிக்காவிலும் இந்த இயக்கம் எழுந்து குரல் கொடுக்கப்படுகிறது. பாரத நாட்டில் நமக்குப் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதால் இதைப்பற்றி அதிகம் கவலைப்படாமல் இருக்கிறோம். என்றாலும் பாரதப் பிரதமர் அண்மையில் இதை எடுத்துச் சொல்ல அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவிற்கும் பயணம் செய்ததை நம்மால் மறக்க முடியாது. உலக அரசியல் கண்ணோட்டம் உடைய ஒவ்வொருவருக்கும் உலகம் அழியாமல் இருக்கவேண்டும்; அணு ஆயுதம் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்; அறிவு அற்றம் காக்கும் கருவி என்பதற்கு இலக்காக மானிடம் செயல்பட வேண்டும் என்ற விழிப்பு உலகு எங்கணும் நிலவுகிறது; நிபந்தனைகள், பேச்சுகள், திட்டங்கள், கருத்துப் பரிமாற்றங்கள், ஆக்கபூர்வ முயற்சிகள் உலகப் பேரரசுகள் மேற்கொண்டு வருகின்றன. நாம் அந்த தேசங்களின் போக்குகளையும் சிந்தனைகளையும் வளர்ச்சித் திட்டங்களையும் வாழ்வியல் முறைகளையும் நோக்கங்களையும் அறியும் போது குறைவு நிறைவுகள் தெரிந்துகொள்ள வாய்ப்புகள் இருக்கின்றன, கல்வி முறையில் நாம் கருதத்தக்க சில நல்ல அமைப்புகள் அங்கே உள்ளன; நம் பிள்ளைகளுக்குப் பயன் உள்ள கல்வி என்று படுமானால் அங்குப் பெரும் போட்டி ஏற்படுகிறது. போட்டிகள் அதிகமாகும் போது ஊழல்களும் உடன் விளைகின்றன. அதைப்பற்றி அதிகம் எழுதுவது தேவையற்ற ஒன்று; தெரியாததைச் சொல்லியது ஆகாது. நூலின் தரம் குறைந்துவிடுகிறது . நம் குறைகளை எடுத்துச் சொன்னால் தவறு இல்லை. அவற்றை எப்படி மாற்ற முடியும்? வழி கூற முடியவில்லை. அதனால் பேசிப் பயன் இல்லை . ஒரு சில படிப்புகள் பயன் உள்ளவை என்று மதிப்பிடப்படுகின்றன. அதனால் மற்ற துறைகளில் மாணவர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போகிறது. மற்றொரு கேடு இப்பொழுது கல்வியைச் சுற்றி வட்டமிடுகிறது. திரைப்படங்கள் நம் மாணவர்களை மிகவும் குறைவாக மதிப்பிட்டு அவர்கள் ஒழுங்கற்றவர்கள் என்பது போலக் காட்டுகின்றன, ‘ஒரு தலை ராகம்’ முதலில் இதற்கு வழி காட்டியது; பாலியல் பின்னணியில் மாணவர்களைச் சித்திரித்துக் காட்டுகிறது. நம் கல்வி நிறுவனங்களையே சாடுவதாகிறது. கதையில் கரு வேண்டும் என்பதற்காக மாணவர்களின் ஒருதலைப்பட்ட வாழ்க்கை முறைகளை மிகைப்படுத்திக் காட்டுகிறது, இந்தப் படங்களை எடுக்கக் கல்லூரி நிறுவனங்களே இடம் அளிக்கின்றன. இவை சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயங்கள். காதல் படு தோல்விகளுக்குக் கல்லூரிகள் நிலைக்களம் என்பது போன்ற திரைச் சித்திரங்கள் பெருகிவிட்டன. முன்பெல்லாம் ஆசிரியர்களை முக்கியமாகத் தமிழாசிரியர்களைக் கிண்டல் செய்து நாடகம் எழுதினார்கள். அவர்கள் நாடகத்திற்குக் கோமாளித்தனத்துக்குப் பயன் பட்டார்கள். இன்று மாணவர்கள் காதல் கீழ்மைகளுக்கு உரியவராகக் காட்டப்படுகின்றனர். இது தேவைதானா? கல்வியின் தரத்தில் இந்த நிறுவனங்களில் நம்பிக்கை இன்மையே இதற்குக் காரணமாகிறது. அவர்கள் படிக்கச் செல்லவில்லை; இந்தக் கேளிக்கைகளுக்குத்தான் போகிறார்கள் என்று அறிவிக்கப்படுகிறது. அது உண்மையாகவும் இருக்கலாம்; நாம் மறுக்க முடியாது . ஏதோ நாம் கல்வித் துறையைப் பொருத்தவரை செயலிழந்து நிற்பது போன்ற உணர்வு எழத்தான் செய்கிறது. படித்தால் அவனுக்கு அதை ஒட்டி எதிர்காலம் இல்லை என்பது தெளிவான உண்மை. லாட்டரி சீட்டு வாங்குவதும் பல்கலைக் கழகப் பட்டச் சீட்டு வாங்குவதும் சில சமயங்களில் சமமாகிவிடுமோ என்ற அச்சம் தோன்றுகிறது. வேலையில்லாமல் ‘லாட்டரி’ அடிக்கிறான் என்ற பழமொழி இதற்குச் சான்று தரும் என்று நினைக்கிறேன். டாக்டர் மு. வ. ‘கி.பி. இரண்டாயிரம்’ என்ற நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். உயர்ந்த சமூகக் கோட்பாடுகள்; உழைப்புக் குறைவு; சிக்கலற்ற தெளிவான வாழ்க்கை இப்படி அமையவேண்டும் என்ற காட்டினார்கள். கி.பி. இரண்டாயிரத்தை நெருங்கிவிட்டோம் எந்தத் தெளிவும் ஏற்படவில்லை. அதனால் சமுதாயத்தில் வளர்ச்சியே இல்லை என்று கூறமுடியாது. வளர்ந்த நாடுகளில் சில நல்ல அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை கற்பனை இல்லை; மனித சாதனை. அவற்றை நாமும் அடைய முடியும்; முதலில் அவை என்ன என்பதைத் தெளிவாக அறிய வேண்டும். அறிய முயல்வது தேவைப்படுகிறது. நன்றி நவிலல் வெள்ளையர்கள் ஒரு சிறு நன்மை செய்தாலும் உதவினாலும் உடனே ‘நன்றி’ என்று சொல்லும் பழக்கத்தைப் பார்க்கிறோம். நாமும் அங்கு அவ்வாறு சொல்லிப் பழகிக் கொள்கிறோம். இதனால் உதவி செய்தவர் பணி செய்தவர் மனமகிழ்ச்சி அடைகின்றார். நாம் அவர்களுக்குக் கடமைப்பட்டு இருக்கிறோம் என்பதை உணர்த்துகிறோம், அந்தப் பழக்கம் நம் பேச்சுக் கூட்டத்திலும் மேற்கொண்டு வருகிறோம். கூட்டம் முடிந்ததும் ‘நன்றி நவிலல்’ என்னும் சம்பிரதாயம் இங்கு நடைமுறையில் உள்ளது. இது மேல் நாட்டுப் பழக்கம். புதிதாக ஒருவரைச் சந்திக்கும்போது அவரைப் பார்த்து ‘வணக்கம்’ சொல்லுதலும் அவர்களைப் பார்த்துக் கற்றுக்கொண்ட பழக்கம். ‘நல்ல நாள் ஆகுக’ (good morning) என்று சந்தித்து ஒருவரை ஒருவர் நல்லுரை பேசிச் சந்தித்துக்கொள்கிறோம். பேசுவதற்கு முன் ‘ஹல்லோ’ என்று சொல்லுவதும் மேல் நாட்டுப் பழக்கம். மாலை வேளைகளில் தனியே சலைகளில் உடல் நலத்துக்கும், அடங்கிக் கிடக்காமல் இருப்பதற்கும் வெளியே சுற்றி நடந்து வருவேன்; வயது மிக்க முதியவர்கள் அவர்கள் முன்பின் தெரியாது. நான் ஒரு இந்தியன்; அவர் ஒரு ஆங்கிலேயர்; நான் அங்கேதான் எங்கோ தங்கியிருக்கிறேன் என்பது மட்டும் தெரியும். எதிரே வரும்போதே ‘good morning’ என்று சொல்லிவிட்டுச் செல்வார்கள். நானும் உடனுக்குடன் ‘good morning’ என்று சொல்லிச் சிரித்துவிட்டு மேலே போவேன். புன்முறுவலால் ஒருவரை ஒருவர் மகிழ்விக்கும் அன்பு முறையைக் கண்டு மகிழ்ந்து இருக்கிறேன். அதற்கு மேல் எந்தப் பேச்சும் தொடராது . மற்றொன்று நாம் பேசும்போது இரைச்சல் போட்டுப் பேசிப் பழகிவிடுகிறோம். அதை அவர்கள் விரும்புவதில்லை. இங்கே கணவனும் மனைவியும் நேருக்கு நேர் அடித்துக்கொள்ளாத குறை; அதற்கு மாறாக உசந்த குரலில் மற்றவர் பேசமுடியாதபடி அடக்க முயல்கிறோம். ‘நீ பேசாதே’ என்பதுதான் இதன் அடையாளம்; அடக்குமுறையாகும்; யாரிடமும் தன்மையாக அடக்கமாகக் குறைந்த குரலில் பேசுவது அவர்கள் நற்பழக்கங்களில் ஒன்றாகும். ஒருவர் மற்றொருவரை மதிக்கும்போதே பணிவு ஏற்படுகிறது. இதைச் செய்யலாமா செய்து தரட்டுமா என்ற பாணியில் இப்பேச்சுகள் அமைகின்றன. பிறரிடத்தில் உள்ள நல்லதை எடுத்துச் சொல்லிப் பாராட்டுவது அவர்களிடம் காணப்படும் நல்லியல்பு எனக் கூறலாம். குழந்தைகள் இதனால் ஊக்கம் பெறுகின்றனர். ஆற்றலோடு வளர்கின்றனர். கடைகளில் பொருள் வாங்கும் போது நன்றி நவின்றே அதைப் பெறுகிறார்கள். மேலை நாட்டில் இது பழகிவிட்ட பண்பு ஆகும். மற்றவர்களைப் புண்படுத்தாமல் நடந்துகொள்வது எப்படி என்பதை அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாகும். நகைப் பித்து நம் நாட்டுத் திருச்சந்நதிகள் முக்கியமாக அம்மன் சந்நதிகளில் அத்தெய்வங்கள் அந்தக் கோயிலின் அந்தஸ்து ஒட்டி. ஆபரணங்கள் அணிந்துள்ளன. தெய்வங்களுக்குப் பொன்னும் மணியும் கிரீடங்களாகவும் அணி ஆபரணங்களாகவும் சூட்டி அழகு பார்க்கிறோம், இது நம் நாட்டுக் கலாச்சாரம். நம் பெண்கள் அழகாக இருக்கின்றனர். அவர்களுக்கு அந்தஸ்தைச் சேர்க்கப் பொன்னும் மணியும் அணியும் நகைகளாக அமைகின்றன. அவர்களை அழகாகப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறவர்கள் போட்டுக்கொள்கிறார்கள்; இல்லாதவர்கள் இருந்தால் நல்லது என்று எண் கிறார்கள். சில சமயம் இரவல் வாங்கியும் போட்டுக்கொள்கின்றனர். அழகுக்காகப் போட்டுக் கொள்ளும் நகைள் அந்தஸ்தின் அடையாளமாகவும் மாறுகிறது. இந்த நிலைமை அங்கு இல்லை. அவர்கள் அந்தஸ்துக்காக அணிவது இல்லை; அழகுக்காக ஒன்று இரண்டு போட்டுக்கொள்கிறார்கள். கழுத்தில் செயினாக இருக்கலாம்; கையில் மோதிரமாக ஒளி தரலாம்; அவ்வளவுதான். அது அவர்கள் கலாச்சாரம். அவர்கள் பெண்மையிலிருந்து விடுபட முயல்கிறார்கள்; ஆண்களோடு போட்டியிடுச் சரிசமமாக வாழ முயலும் முயற்சியில் பெண்மைக்கே. உரிய தனித்துவங்களை அவர்கள் வளர்த்துக்கொள்வது இல்லை. ‘ஆண்களோடு பெண்களும் சரிநிகர்ச் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே’ என்று பாரதி குரல் கொடுத்தான். பிற நாட்டில் வாழ்கிறார்கள் அதுபோல நாமும் இந்த நாட்டில் வாழ்வோம் என்று குரல் கொடுத்தான். அப்படிச் சொல்லிவிட்டுப் பெண்கள் நிறை. நகைகளைப் போட்டுக்கொள்வதில் அர்த்தமே இல்லை; பொன் விலங்குகளைத் தகர்த்து மேல் நாட்டுப் பாணியில் உடை உடுத்தும் போக்கு இப்பொழுது இங்கும் வளர்ந்து வருகிறது. தனிச் சலுகைகளைத் தவிர்ப்பது தக்கது என்று உணர்கின்றனர், என்றாலும் இந்தச் சூழ்நிலை அவர்களை மாற்றிக்கொள்ள இடம் தருவதில்லை; வாய்ப்பு இல்லாததால் அவற்றைக். குறைத்துக்கொண்டு வாழும் வகை இப்பொழுது வளர்ந்து. வருகிறது. பாலியல் பார்வை “என்னுடைய பெண் இவள்; இப்பொழுதுதான் வயசுக்கு வந்தாள்” என்று ஒரு ஆள் நம் ஊரில் என்னிடம் அறிமுகம் செய்கிறான். இது என்ன அவ்வளவு முக்கியமான செய்தியா? ‘பூப்பெய்தினாள்’ என்ற செய்தி மங்கல விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சில சமயம் விளம்பரமும் தரப்படுகிறது. இது எதைக் காட்டுகிறது? பெண்ணை நாம் பார்க்கும் பார்வையே இந்த அடிப்படையில்தான் என்பதை மறுக்க முடியாது. இந்தப் பாலியல் பார்வை தேவைதானா? அதைக் கடந்து போக முடியுமா? பெண் ஆண்களோடு சம உரிமைகள் பெற்று வாழ முடியுமா? அப்படி வாழும் நாடு அந்த தேசம். ஐரோப்பா. அமெரிக்கா, ஏன் ஆங்கிலம் பேசும் உலக நாடுகள், ருஷியா, சப்பான் எல்லாம் பெண்கள் ஆண்களைப் போலத் தொழில் செய்ய முன்வந்துவிட்டார்கள். குழந்தை பெறுவது ஒன்றுதான் பெண்கள் செய்யக் கூடிய தனித் தொழில்; அதேபோல் அதற்குக் காரணமாக விளங்குவது ஆணின் தனி நிலை. இவ்விரண்டைத் தவிர்த்து ஆண் பெண் என்ற பேதமில்லாமல் இருவரும் இன்று அங்கு எல்லாத் தொழில்களிலும் பங்கு பெற்றுள்ளனர். ஏதோ பாலியல் நோக்கு உள்ளபோது அவள் அந்தப் பார்வையில் பார்க்கப்படுகிறாள்; மற்றைய சூழ்நிலைகளில் அவளும் ஆண்களைப் போலவே மதிக்கப்படுகிறாள். கடமைகள் கடமைகளும் பொறுப்புகளும் நாட்டுக்கு நாடு வேறு படுகின்றன. அது அந்தந்த நாட்டு ஆட்சியின் பொறுப்புகளை ஒட்டியதும் ஆகும். பழங்காலத்துப் புறநானூற்றுப் பாடல் கடமைகளை விளக்கிக் கூறுகிறது. “ஈன்று புறந்தருதல் என் தலைக் கடன் நன்னடை நல்கல் தந்தைக்குக் கடன் சான்றோன் ஆக்குதல் வேந்தற்குக் கடன்” என்கிறாள் தமிழ்ப் பெண். மகனைப் பெறுவது தாயின் கடமை; பெறுவது மட்டுமல்ல; அவனை வளர்ப்பதும் அவள் பொறுப்பாகிறது. அதனால் அவள் ‘ஈன்று’ என்று மட்டும் கூறாமல் ‘புறந்தரு தல்’ என்றும் கூறுகிறாள்; அவனை மற்றவர்கள் மதிக்கத்தக்க நிலையில் வளர்ப்பது தாயின் கடமையும் பொறுப்பும் ஆகிறது; அவனுக்கு நல்ல ஒழுக்கங்களைக் கற்பிப்பது, பழக்குவது, தந்தையின் கடமை. அவனை வாழத் தகுதியுடைய சான்றோன் (எல்லாவகையிலும் நிறைவு உடையவன்) பொதுக் கல்வி, தொழிற் கல்விப் பயிற்சி இவற்றைத் தந்து குடிமகன் ஆக்குதல் ஆட்சியின் கடமை என்பதைப் புறநானூற்றுப் பாடல் தெளிவாக அறிவுறுத்துகிறது. இந்த மூன்றாவது பொறுப்பையும் பெற்றோர்கள் ஏற்க வேண்டிய சூழ்நிலை இங்கு உள்ளது. பையனைப் படிக்க வைத்துத் தொழில் தேடி. எல்லாவகையிலும் அவனை உருவாக்குதல் தந்தையின் பொறுப்பாகிறது; பெண்ணுக்கும் இதே போலப் படிக்கவைத்துக் காப்பாற்றித் தக்க பொருளும் தந்து அவள் வாழ்வுக்குத் தேவையானவற்றைத் தந்துகொண்டே இருப்பது பெற்றோரின் கடமையாகிறது. இந்த மூன்றாவது நிலையில் அவர்கள் தேசம் நம்மிலிருந்து மாறுபடுகிறது. பையனுக்குக் கல்வி தொழில் இவற்றை அவனே தேர்ந்து எடுத்துக் கொள்கிறான் ; அங்கேயும் நம் நாட்டைப் போல அரசு பொதுப் பள்ளிகள் இருக்கின்றன, வசதி உடையவர்கள் தனியார் பள்ளிக்கே அனுப்புகின்றனர். அங்கு வாழும் நம் நாட்டவர் தனியார் பள்ளிகளுக்கே தம் பிள்ளைகளை அனுப்புகின்றனர். கல்வியின் தரம் மட்டுமல்ல; வசதியுள்ள குடும்பங்கள் வந்து படிப்பதால் உயர் குடும்பப் பிள்ளைகளின் தொடர்பு ஏற்படுகிறது, அதனால் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை. அதே நிலைதான் நம் நாட்டிலும் ஏற்பட்டு வருகிறது. அரசு பள்ளிகள் பிள்ளைகளின் பொதுத் தேவைகளுக்குப் பணிபுரிகின்றன; தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தை மையமாக வைத்து மேல் நிலைக் குடும்பங்களின் தேவைகளுக்குப் பயன்படுகின்ற’. அங்கே மேலே படித்தால்தான் உயர்வு பெற முடியும் என்ற தேவை இல்லை. இங்கே வைத்தியப் படிப்புப் படித்தால்தான் வசதியாக வாழ முடியும் என்ற சூழ்நிலை; இன்ஜினியராக இருந்தால்தான் நிலையான பதவிகளில் உயர்வு பெறமுடியும் என்ற நம்பிக்கை; சூழ்நிலை; இப்பொழுது இங்குச் சட்டப் படிப்புக்கும் கடும் போட்டி ஏற்பட்டுவிட்டது. காரணம் சுதந்திரமாகத் தொழில் செய்து பிழைக்கலாம் என்ற நம்பிக்கை; மற்றொன்று நாட்டில் குற்றங்கள் இவர்கள் பிழைப்பைத் தேடி.க்கொள்ளத் தக்க வகையில் பெருகிக்கொண்டும் வருகின்றன. மற்றொன்று இதுவரை படி.த்துவந்த கலைக் கல்லூரிகளில் பட்டங்களுக்குத் தொழில் கிடைக்கும் என்ற நம்பிக்கை குறைந்து வருகிறது. படிப்பு வேறு; தொழில் வேறு என்ற பேதத்தை உணரமுடிகிறது. படிக்கும்போது ஏதோ ஒரு நோக்கத்தில் படிக்கிறான்; அவன் படிப்புக்கும் தொழிலுக்கும் பிற்காலத்தில் நெருங்கிய தொடர்புகள் ஏற்படுவதில்லை. அது ஒரு குறை என் றும் கூற முடியாது. நாலும் தெரிந்தவனாக இருந்தால்தான் ஏதாவது ஒன்றுக்குப் பயன்படுவான், கல்லூரிகளில் கல்விப் பயிற்சியும் சில துறைகளில் சிறப்பு அறிவும் பெற முடிகிறது. பிற்காலத்தில் வாய்ப்புக்கேற்றபடி அவன் தனித்து வளர முடிகிறது. அங்கே அனைவரும் மேற்படிப்புப் படிக்கவேண்டும் என்று திட்டமிடுவதில்லை. மேல்நிலைப் பள்ளி முடித்ததும் அவரவர் போக்குக்கும் திறமைக்கும் ஏற்படத் தொழில் ஏற்று மன நிறைவு பெறுகின்றனர். அந்த அந்தத் தொழிலில் அவர்கள் மனநிறைவு பெறுகின்றனர். இப்படி ஆகியிருக்கலாமே என்ற ஏக்கங்கள் அவர்களை வாட்டுவது. இல்லை . அமெரிக்க நிறுவனங்கள் நடத்தும் சிற்றுணவு அகங்களில் பள்ளிப் படிப்பு முடித்த நிலையில் இளம் பெண்கள் அங்குப் பரிமாறும் பணி, பண்டங்களை எடுத்துத் தரும் பணி ஏற்று நடத்துகின்றனர், இவர்கள் விடுமுறைகளில் ஒய்வு நேரங்களில் இதைப் போலச் சிறு தொழில்களை ஏற்றுப் பணம் சேர்த்துக் கொண்டு கல்லூரிப் படிப்புக்குத் தயார் செய்து கொள்கின்றனர் என்பதைக் கேட்டு அறிய முடிந்தது. பெற்றோர்களின் பொருளாதாரத்தில் தம் எதிர்காலங்களை அந்த நாட்டுப் பிள்ளைகள் நம்பி வாழ்வதில்லை. சுய முயற்சியும் தன் நம்பிக்கையும் கொண்டு வாழ்கின்றனர். ‘சான்றோன் ஆக்குதல் வேந்தற்குக் கடன்’ என்ற கோட்பாடு அங்கே நிலவுகிறது. நாடு அவர்களுக்குத் தக்க வாய்ப்புகள் தருகின்றன. தேறாத ‘கேசுகளும்’ அங்கும் உள்ளன. பொதுவாக அங்குத் தம்மைத் தாம் வளர்த்துக் கொள்ளும் சூழ்நிலைகள் உள்ளன என்று கூற முடியுமேயன்றிப் பிள்ளைகள் எல்லாம் தெளிவாக வாழ்கின்றனர்; தம்மைத் தாம் தகுதியாக்கிக் கொள்கின்றனர் என்றும் கூற முடியாது. வேலை வெட்டியற்றுத் தேறாத ‘கேசுகளும்’ உள்ளன. கடை வீதிகளில் சுறுசுறுப்பான இடங்களில் அங்காடிகள் கட்டிடங்களில் சோம்பித் திரிந்து வன்முறைகளில் ஈடுபடுபவர்களும் உண்டு. அவர்களைப் பிரித்து அறியத்தக்க வகையில் சில போக்குகளையும் காணமுடிகிறது. திருப்பதிக்குப் போகாமலேயே மொட்டையடித்துக் கொள்ளும் பக்தர்களாகக் காட்சி அளிக்கின்றனர். ஒரு சிலர் நம் நாட்டுக் கோயில் குடுமிகளைப் போல உச்சிக் குடுமி வைத்தும் இருக்தின்றனர். சிலர் மயிர்முடி சிவப்பேறிச் சேவற் கொண்டைகளைப் போல ஒரு பக்கம் சாய்த்துவிட்டு அவர்கள் தனித்தன்மையைக் காட்டி வெளிப்படுத்துகின்றனர். சமயம் வரும்போது ரகளைகளுக்கு இவர்கள் துணை நிற்கின்றனர். பெண்களும் இப்படி ஒழுங்குபடாமல் வன்முறையில் அல்ல மென்முறையில் இயங்குபவர்களும் உண்டு; அவர்களை ஒன்றும் அடையாளம் காண இயலவில்லை; சொல்லித் தெரிந்து கொண்டேன். எல்லாம் எங்கேயும் ஒழுங்காக இருக்கிறது என்று எப்படிக் கூறமுடியும், அளவில்தான் வேறுபாடு. இவர்களைத் ‘தேறாத கேசுகள்’ (drop outs) என்ற செல்லப் பெயரால் குறிப்பிடுகின்றனர். வழிமறிக் கொள்ளைகள் இந்த வன்முறையாளர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது நம் நாட்டில்தான் வழிபறிக் கொள்ளைகள் மிகுதி என்பதைக் குறிப்பிட வேண்டியுள்ளது; செயின் (பொன்) பறித்தல், வீடு புகுந்து கொள்ளையிடுதல் இப்பொழுது பெருகிவருகின்றன. காரணம் அண்மைக் காலத்துச் சூழ்நிலை; பிச்சை எடுப்பது குறைந்துவிட்டது. அதைவிடத் திருடுவது விரைவில் முன்னேறவழி என்பதைக் காண்கின்றனர், ஒழுங்காக வேலை செய்து பிழைப்புக் காண முடியாத சூழ்நிலைகள் உருவாகும்போது வெள்ளாடும் வேங்கைகளாக மாறிவிடுகின்றன. இப்பொழுது எது நல்லது எது கெட்டது என்ற அடிப்படை பார்வை மறைந்துவிட்டது. எது லாபகரமானது, எது உபயோகமானது, எது வளம் தருவது, எப்படி வாழ்ந்தால் உழைப்பு இல்லாமல் வாழமுடியும் என்ற மனப்போக்கு தலையெடுத்து ஓங்குகிறது. ‘கள்ளாமை’ என்ற அதிகாரத்துக்கு ஓய்வு கொடுக்கப் படுகிறது. தோல்விகள், செயலற்ற போக்கு, வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விருவிருப்பு, அறிவு வளர்ச்சி, அஞ்சாமை இன்று இக்குற்றங்களைத் தூண்டுகின்றன. இன்று கள்ளக் கடத்தல், வீடு புகுந்து திருடுதல், கொள்ளை அடித்தல் வழிபறிக் கொள்ளைகள் முன்பெல்லாம் இல்லாத அளவு பெருகி வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. அங்கே முன்னர் குறிப்பிட்டபடி இந்த அச்சம் அதிகம் இல்லை. அமைப்பு முறையிலும் வாழ்க்கை முறையிலும் அடிப்படை வேறுபாடு இருக்கத்தான் வேண்டும். இல்லாமையால் செய்வது திருடு; அது ஒரு குடிசைத் தொழிலாக இருந்தது; கொள்ளையடித்தல் இப்பொழுது ஏற்பட்டுள்ள வளர்ச்சி; அது இல்லாமையால் செய்யப்படுவது அன்று. மிகுதியாக வேண்டும் என்ற ஆவல். இப்படியும் பிழைப்பது ஒருவழி தொழில் என்ற மனப்போக்கே இதற்குக் காரணம் என்று தோன்றுகிறது. எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி காண்பதைப் போல இத்துறையிலும் வளர்ச்சி மட்டும் அல்ல வேகத்தையும் காண்கிறோம். காவல் துறை கடுமையாக நடவடிக்கை எடுக்கிறது. அவர்கள் நேர்மை சில சமயங்களில் பரிசோதனைக்கும் ஆளாகிறது. அமெரிக்காவில் சில இடங்களில் தனி வழியே போவது அஞ்சத்தக்கது என்று பேசப்படுகிறது. ‘பிக்பாக்கட்டுகள்’ வழிபறிக் கொள்ளை சிற்சில இடங்களில் சகஜமாக நடை பெறுகிறது என்று சொல்கிறார்கள். தனி மனிதர்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமை அங்கு உண்டு. இங்கே இங்கிலாந்தில் போலீசுகூட தேவை இல்லாமல் துப்பாக்கி ஏந்திச் செல்வது இல்லை. அவசரத் தேவை ஏற்படும்போது அனுமதி பெற்று அவர்கள் அதைக் கொண்டு செல்கின்றனர். இங்கே உயிர்க்குப் பாதுகாப்பு மிகுதி, இந்தியாவில் குறைந்து வருகிறது, பொருளுக்கும் பயணத் துக்கும் பாதுகாப்பு குறைந்து வருகிறது. அரசியல் தீர்வுகளையும் துப்பாக்கி முனையில் காணும் முயற்சிகள் அவ்வப்பொழுது தலையெடுத்து அடங்குகின்றன. பேச்சுரிமை ஆட்சி வழங்குகிறது; உயிர் அச்சம் அதைத் தடுத்து நிறுத்துகிறது. அரசியல் அமைப்புகள் அரசியல் ஆரம்பத்தில் தியாகிகளின் கையில் இருந்தது, இன்று அரசியல் மக்களைத் தியாகிகள் ஆக்கி வருகின்றன. பெரியார் அவர்கள் தெளிவாகச் சொன்னார், “அவனவன் பணத்தை வாரி இறைத்துவிட்டு இங்குப் பணம் பண்ணாமல் வேறு என்ன செய்யமுடியும். இந்தத் தேர்தல் முறையே இந்தத் தீமைகளுக்கு வித்தானது” என்று கூறினார். இல்லை; தேர்தல் முறை நியாயமானது தான்; அதை இந்த நாட்டுச் சூழ்நிலை ஏணியாகப் பயன்படுத்துகிறது; அங்கே தொழிற் கட்சி; மிதவாதிகள் கட்சி என்று இரு கட்சிகள் செயல்படுகின்றன. தனியார் துறைக்கு ஆதரவு; தேசிய மாக்குதலுக்கு ஆதரவு இந்த இரண்டு அடிப்படைகளில் கட்சிக் கொள்கைகள் வேறுபடுகின்றன; நாம் அரசியலைப் பற்றி விமரிசிப்பது வீண்; திரைப்படங்கள் எம்.எல்.ஏக்கள் போலிகள் எனத் தொடர்ந்து சித்திரித்து வருகின்றன. ‘ஈ நாடு’ என்ற மலையாளப் படம் எப்படி சாராயக்கடை முதலாளிகளிடம் அரசியல் தவிக்கிறது என்பதைக் காட்டியிருக்கிறது. ’கலங்கலைக் குடித்துக் குடிக்க வைத்துப் பணம் பண்ணும் அயோக்கியத்தனம் இந்தப் படத்தில் காட்டப்பட்டது. எத்தனை உயிர்கள் பறிபோயின. குடிப் பழக்கம் மேலை நாட்டில் குடிப்பதற்கும் நம் நாட்டில் குடிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இங்கே கவலைகளை மறப்பதற்கு, துன்பங்களை நினைக்காமல் இருப்பதற்குக் குடிக்கிறான்; அங்கே நல்ல மனோ நிலையில் தெம்பாக இருப்பதற்குக் குடிக்கிறார்கள். இந்த போதை மயக்கம் என்பது வேண்டியவையே. இல்லாவிட்டால் மனிதனுக்கு மறதி என்பதே இல்லாமல் கவலைகள் மிகுதியாகிவிடும். மனோநிலை கெட்டுப் பைத்தியம் பிடிக்கிறவர்களுக்கு வைத்தியர்கள் தூக்க மருந்து கொடுக்கிறார்கள். ஏன் அவன் மனோநிலையின் வேகத்தைக் குறைத்து ஓய்வு தருவதற்கே. அதனால் குடியும் மனித வாழ்வுக்குத் தேவையானதாகவே தெரிகிறது. நம்முடைய பொருளாதாரம் இந்தக் கூடுதல் செலவுகளைத் தாங்கும் ஆற்றலைத் தரவில்லை. அதனால் அதற்குப் பழக்கமாகித் தம் பொருளாதாரத்தைச் சீர்குலைத்துக் கொள்கின்றனர். ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்ற பிரச்சாரத்தோடு அந்தத் தொழிலை அனுமதிக்க வேண்டியுள்ளது. கடவுள் மயக்கம் இந்தக் குடிபோதை மட்டும் மக்கள் கவலையைப் போக்குவது இல்லை. மற்றொரு தீர்வு நம் மக்களுக்கு உறு துணையாக இருக்கிறது. நிறைய கவலைகளும் அச்சமும் அவநம்பிக்கைகளும் மிகும்போது மனத்திற்கு ஓய்வும் நம்பிக்கையும் தேவைப்படுகின்றன. பகுத்தறிவு வாதம் இவர் களைத் தடுப்பது இல்லை. ‘தெய்வ நம்பிக்கை’ மிகுதியாகிறது. இதைப் போன்ற அச்சந்தரும் வாழ்க்கை அதிர்ச்சிகளும் அவர்களுக்கு ஏற்பட வாய்ப்பில்லை. அதனால் தெய்வ நம்பிக்கை, கோயில் வழிபாடு இவற்றிற்கு (முக்கியத்துவம் கொடுப்பதாகத் தெரியவில்லை. கிறித்துவ வழிபாட்டு ஆலயங்கள் இருக்கின்றன. அங்குச் செல்வது ஒரு சடங்காக வாழ்க்கை ஒழுங்குமுறையாக உள்ளதே தவிர நம்மைப் போல் அதை மிகைப்படுத்துவது இல்லை. கடவுள் உண்டு இல்லை என்ற வாதங்களில் அவர்கள் தலையிடுவது இல்லை. கடவுள் மிகப் பெரியவர். (God is great) என்று சொல்லிவிட்டுத் தம் வாழ்க்கையைக் கவனித்துக் கொள்கின்றனர். நமக்கு இந்த நம்பிக்கை தேவைப்படுகின்றது, இல்லாவிட்டால் இந்தியாவில் சராசரி மனிதர்கள் வாழ முடியாது. அவை பல ஆயிரம் ஆண்டுகளாக நம்மை நாம் வளர்த்துக் கொண்ட வழிமுறைகள். இவற்றில் தீமைகள் இல்லை, நன்மைகள் மிகுதியாக இருக்கின்றன. அதனால் அவற்றைப் போற்றிக் காத்து வருகின்றோம். அது மட்டுமல்ல மனத்தை நல்லதன்கண் நிறுத்த அது மிகவும் தேவைப்படுகிறது. நாம் பழைய வேத சாத்திரங்களின் சாராம்சங்களைப் பல வழிகளில் கேட்டு வருகிறோம். அதனால் நாம் இந்தக் கலாசாரத்தில் கட்டுப்பட்டு வாழ்கிறோம். அவற்றைத் தூக்கி எறிய முடியாது என்ற உணர்ச்சிதான் ஏற்படுகிறது. நம் நாட்டு வேத உபதேசங்களைக் கேட்க வழிபட ஒரு சிலர்மேல் நாடுகளில் இருந்து குழுமுவது நமக்கு வியப்பைத் தருகின்றது. நிறுவனங்கள் பல; பெயர்களைச் சொல்ல விரும்பவில்லை. இங்கே பல தேசத்து வெள்ளைக்காரர்கள் தியானம் வழிபாடு இந்த நியதிகளை மேற்கொள்வது வியப்பாக இருக்கிறது. அநேகமாக அவர்களும் மன உளைச்சலும் நிம்மதியும் இழந்தவர்களே. அவர்களுக்கு இந்த மோன நிலைகள் அமைதியைத் தருகின்றன. வேண்டிய பொருள் இருக்கிறது; அதனால் இப்படி இவர்கள் ஒதுங்கி வாழமுடிகிறது. நாம் மேல் நாட்டுத் தாக்கத்தால் பல வழிகளில் பாதிப்பு அடையும் போது அவர்கள் மட்டும் விதிவிலக்காக இருக்கவேண்டுமா என்ன? நம் சிந்தனைப் போக்குகள் வழிபாடுகள் ஒரு சிலரைப் பாதித்து உள்ளன. ஆனால் அவர்கள் வாழ்க்கை முறைகளும் சிந்தனைப் போக்குகளும் நம் தேசத்தையே பாதித்துள்ளன; நம் சிந்தனைகளையே மாற்றி உள்ளன. மனிதன் உரிமையோடும் மதிப்போடும் தன்னம்பிக்கை யோடும் செயல்படவேண்டும் என்பதும் பெண்ணும் ஆணும் சரிநிகர் சமமானவர்கள் என்ற உண்மையையும் அவர்களே அறிவுறுத்தி வருகின்றனர். இதைப் பற்றியும் குறிப்பிடவேண்டியுள்ளது. நாம் அவர்களோடு எவ்வாறு, வேறுபடுகிறோம் என்பதைக் காட்டவே இதைப் பற்றிப் பேசவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. விலை நிர்ணயம் கடைகளில் பொருள் வாங்குவது என்பதைவிட விலை பேசுவது என்பது பெரிய விஷயம். நம்மில் சிலர் சொன்னதை அப்படியே கொடுத்துவிட்டு வாங்கி வந்து விடுகிறோம். பேரம் பேசத் தெரிவதில்லை. பேரம் பேசுவது இங்கு அவசியமாகிறது. கடைக்காரனே சொல்லிவிடுகிறான்; “நான் சொல்வது இது; நீங்கள் கேளுங்கள்” என்று சொல்லிவிடுகிறான். நாம் மிகக் கீழே இறக்க அவன் கட்டுப்படியாகாது என்று எடுத்துச் சொல்ல, பிறகு ஒருவிதமாக முடிவு செய்து “சரிதான் எடுத்துப் போங்க” என்று சொல்லப் பிறகு பேரம் படிகிறது. இதில் நேரம் வீணாகிறது. நேரம் போகட்டும் நம்மைப் போன்ற ஏமாளிகள் கூடுதல் விலையைத் தான் கொடுத்துவிட்டு வருகிறோம். காய்கறிக் கடை, மீன் கடை, சில்லரை வியாபாரிகள் இவர்களிடம் இப்படி மல்லுக் கொடுத்துப் பழகிவிட்டோம். இப்பொழுது தான் சில கடைகளில் பெரிய கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளை ஒப்புக்கொண்டு பொருள்களை வாங்கி வருகிறோம், அவர்களே கணக்குப் போட்டு இவ்வளவு லாபம் வந்தால் போதும் என்று முடிவு செய்வது நல்லது. என்ன செய்வது மற்றொரு கடை போட்டி போட்டு அந்த விலையைக் குறைக்கிறது. அதனால் எதையும் நிர்ணயம் செய்ய முடிவதில்லை. நெகிழ்ந்து கொடுக்க வேண்டியுள்ளது. அங்கே கடைகளில் பேரம் பேசத் தேவை இல்லை. விலைகள் எழுதி ஒட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும். ஒரு கடைக்கும் மற்றொரு கடைக்கும் அதிக வித்தியாசம் இருப்பது இல்லை. மற்றொன்று கடை வீதிகளில் நம் நாட்டைப் போலத் தனித் தனிக் கடைகள் இருப்பதோடு பெருநகரங்களில் கடை மையங்கள் (shopping centres) வைத்து நடத்துகிறார்கள். உள்ளே சென்று விட்டால் அது ஒரு பொருட்காட்சி சாலை போல இருக்கும். கார்கள் நிறுத்த ஓர் மாடி அடுக்கு அல்லது பூமியின் கீழ் மற்ற அடுக்குகளில் லிஃப்டுகள் படி ஏற்றங்கள் இந்த வசதிகளோடு பலதுறை அங்காடிகள் வைக்கப்பட்டு இருக்கும். நம்முடைய ‘குறளகம்’ சூப்பர் மார்க்கெட்டுகள் இவற்றைப் பின்பற்றியமைந்தவையே எனலாம். விரிந்த பரப்புகளைக் கொண்டவை அவை. அவர்கள் தம் வீட்டுக்குத் தேவையான பொருள்கள் அனைத்தையும் அங்கே சென்று பெற்றுக் கொள்ள முடிகிறது. காய்கறி, பழச்சாறுகள், ஐஸ்கிரீம், சாக்லெட்டு, பிஸ்கத்துகள், குடிவகைகள், பிளேடு முதல் சென்டு வரை எல்லாச் சாமான்களும் எடுத்துப் போட்டுக் கொண்டு வெளியே வரும்பொழுது அவற்றை வரிசையாக எடுத்துவைக்க பில் போட்டு விடுகிறார்கள். அதை இயந்திரக் கருவிகள் நம்முடைய தட்டச்சு மிஷின்போல ஒவ்வொரு கடையும் வைத்திருக்கிறது. கையில் எழுதி பில் போடுவதே இல்லை. தள்ளுவண்டிகளில் வைத்துத் தள்ளிக் கார்களுக்கு எடுத்துச் சென்று விடுகின்றனர். பெண்ணும், ஆணும் சிலசமயம் குழந்தைகளோடும் வந்து குடும்பத்துக்குத் தேவையான பொருள்களை வாரத்துக்கு ஒரு முறை மாதம் சில முறை வந்து நிரப்பிக்கொள்கின்றனர். கையில் பணமே கொண்டுவரத் தேவையில்லை; செக்குகள் தரலாம்; ‘கிரெடிட் கார்டு’ காட்டினால் அந்த எண்ணைக் குறித்துக் கொண்டு பில்லில் நம் கையெழுத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். பாங்கிக்கு அனுப்பி அவர்கள் காசு பெற்றுக் கொள்வார்கள். அங்கே போதிய பணம் நம் கணக்கில் இல்லாவிட்டாலும் கவலை இல்லை. அவர்கள் செலுத்தி விட்டு நம் கணக்கில் எழுதிவிடுவார்கள். ஒவ்வொரு பொருளும் தக்கபடி உறையிட்டு (pocket) எடுத்துச் செல்ல வசதியாகத் தந்துவிடுகிறார்கள். சரக்குகளை அவர்கள் தேக்கி வைத்துக் கொள்வது இல்லை. ஆண்டுக்கு ஒரு முறை குறிப்பிட்ட மாதங்களில் ‘sales’ என்று விளம்பரப்படுத்தி விலை தள்ளித் தந்துவிடுகிறார்கள். பொருள் வாங்குவோரிடம் போனால்தான் தொடர்ந்து பொருள் உற்பத்தி செய்யமுடியும், பொருள் பழுதுபட்டுக் கெட்டுப் போகாமலும் இருக்கும். குறைந்த விலையில் கிடைப்பதால் துணிந்து வாங்கவும் செய்கிறார்கள். ஒரு சிலர் அந்த sales வரும் வரை சில பொருள்களை நிதானமாக வாங்கிக் கொள்ளக் காத்துக் கிடப்பதும் உண்டு. நம் நாட்டு நிலை அந்த நாடுகளிலிருந்து இந்த நாட்டுக்கு வருகிறவர் புரிந்துகொள்ளமுடியாத காட்சிகள் சில இங்கே உள்ளன. காய்கறிக்கடை தள்ளுவண்டிகளில் நம் வீட்டுமுன் வந்து நிற்க அவன் கூப்பிட்ட குரலுக்கு வீட்டுத் தலைவிமார்கள் வெளியே தலை காட்டுவதும், அவன் குரல் கூவிக் கூவி ஒரு கரகரப்போடு விளங்குவதும், அவர்கள் கடை விலைகளைவிட அதிகம் விற்கிறார்கள் என்று பேசுவதும் அங்கே காண முடியாது. இப்பொழுது புதிதாக ஒன்று இணைந்து இருக்கிறது, ‘நடமாடும் இஸ்திரி வண்டி’ நகரங்களில் காலனிகளில் அவை அதிகம் நடமாடுகின்றன. தலையில் கூடையில் சுமந்து சுமக்கும் அளவுக்குக் கொண்டு வந்து விற்று வாழ்க்கைச் சுமையைக் குறைத்துக் கொள்ளும் பெண்கள், ‘பூ’ வேண்டுமா என்று சொல்லி வீடு தேடி வந்து. ‘சாதிமுல்லை, இருவாட்சி’ என்று பாடிக் கொண்டு வரும் காட்சிகள் அங்கே நினைக்கவும் முடியாது. கடைகள் நம் வீடு தேடி வருகின்றன. நாம் கடைகளைத் தேடி அங்குச் செல்கிறோம். இந்தக் காட்சிகள் எனக்கே இப்பொழுது புதுமையாகத் தெரிகிறது. ஒரு பூக்காரன் வருகிறான், அவன் ஒரு பாடகனாக வருகிறான்; அப்படிப் பாடினால்தான் கவர்ச்சி என்பது அவன் கருத்து, அவன் சில சமயம் பூவில்லாமலும் வருவான்; இன்றைக்குக் “காசு வேண்டும்” என்று கேட்பான். “எதற்கு ?” திரைப்படத்தின் பெயரைச் சொல்கிறான். எனக்கு விளங்கவில்லை. இரண்டு முறை சொன்னால் திரைப்படத்தின் பெயர்; ஒரு முறை சொன்னால் குடிநீர் என்பதை விளக்கினார்கள். ‘தண்ணீர்’ படும் பாட்டை அறிய முடிந்தது. இவர்களும் கொடுத்தார்கள். குழந்தைகளைக் கூவி அழைக்க மணியோசைகள் கேட்கின்றன. ‘பலூன்காரன் வருகிறான்!’ என்று தெரிந்து குழந்தை ஓடோடி வெளியே நிற்கிறான் . கைக் கடிகாரம் அவன் கையில் வாங்கிக் குழந்தை கட்டிக் கொள்கிறது. விளையாட்டுப் பொருள்களும் நம் வீடு தேடி வந்து விடுகின்றன. அங்கே குழந்தைகள் கடைகளில் வாங்குவது கார் மாடல்கள்தான் அதிகம். நிறைய கார்கள் பல தேசத்துக் கார்கள். பல கம்பெனி கார்கள் மாடல்கள் வெளியே இருப்பவை அங்கே குழந்தைகளின் பார்வையில் மாடல்களாக விற்கப்படுகின்றன. அந்தப் ‘போலி கார்களை’ பெயர் மாடல் இவற்றைப் பற்றிக் குழந்தைகள் அறிந்து வைத்து இருக்கின்றன. பள்ளிச் சிறுவர்கள் பேச்சில் கார்கள் வகைகள் அத்துப்படியாக இருக்கின்றன. அதனால் வெளியே செல்லும்போதும் உள் இருந்தபடியே வெளியே எதிரேயும் தொடர்ந்தும் முன்னோக்கியும் செல்லும் கார்களின் பெயர்களைக் குழந்தைகள் (சிறுவர் சிறுமியர்) தெளிவாகச் சொல்கின்றனர். சில வேறுபாடுகள் நகர வாழ்க்கைக்கும் கிராமம வாழ்க்கைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன என்று பேசிக் கொள்கிறோம். நாம் உண்டு நம் வேலை உண்டு! என்ற போக்கு நகரப் போக்கு. அடுத்த வீட்டுக்காரன் என்ன செய்கிறான் என்று அறிந்து, அதைப் பற்றிப் பேசி விமரிசிப்பது கிராமியப் பழக்கம். பக்கத்து வீட்டுக்காரர் யார் என்று கேட்டால் கேட்டுத்தான் தெரிந்துகொள்ளவேண்டும். அவரையேதான் கேட்டு அறியவேண்டும். இப்படிப் பல குறைபாடுகள் பேசப்படுகின்றன, நாமே சில சமயம் அண்டை வீட்டில் பேசித் தொடர்பு கொள்ளத் தொலைபேசியைப் பயன்படுத்துகிறோம். ஏன் அவர் வீட்டுக்குச் சென்று கூப்பிட்டுப் பேசுவதில் சிரமம் இருக்கிறது. அந்த சிரமம் தொலை பேசியில் இல்லை. நான் சில முறை அப்படிப் பேசி இருக்கிறேன். இந்த நிலையை அங்கு உணர்கிறேன், அங்கே அடுத்த வீட்டுக்காரர் யார்? அவர் என்ன தொழில் செய்கிறார், குழந்தைகள் எத்தனை? மணவாழ்க்கை எப்படி? காதல் கலியாணமா? எப்படி இவர்கள் அறிமுகமானார்கள்! பிள்ளைகள் என்ன பண்ணுகிறார்கள். ‘யூ கே ஜி’ ‘எல் கேஜி’ இப்படி எந்த ‘கேஜில்’ அவர்கள் பிடிபட்டு இருக்கிறார்கள் எனறு கேட்டு அறிவதில் ஒரு சுவாரசியம் இருக்கிறது. அந்த சுவாரசியம் அங்குக் காண முடியாது. அடுத்தவரைப் பற்றி என்னதான் தெரியும் என்று கேட்டேன். “தெரிந்து கொள்ளாமலே இங்கு வாழ முடியும்” என்ற பதில் வந்தது. ஒரு வீட்டுச் செய்தி மற்றொரு வீட்டுக்கு எட்டுவதில்லை. அதனால் ஒரு நன்மை, நாம் பெரும்பாலும் அக்கம் பக்கத்தவர்கள் என்ன சொல்வார்கள் என்று அஞ்சித்தான் வாழ்கிறோம். அங்கே யாரும் எதையும் சொல்லமாட்டார்கள் என்று தெரிந்த பிறகு அவரவர் அவர்களுக்காக வாழ முடிகிறது. இது ஒரு சவுகரியம்தான். அங்கே ஒரு செய்திப் பஞ்சம் ஏற்பட்டது. நம் நாட்டு அரசியல் பத்திரிகைச் செய்திகள் அல்ல; பொதுவாக இங்கே அன்றாடம் கேட்டு ரசிக்கும் அக்கம்பக்கத்தவரைப் பற்றிய தகவல்கள். குழாய்ச் சண்டைகளில் ரசிப்பது உண்டு: அடுத்தவள் எப்படி. வாழ்கிறாள் என்பதை அறிந்துகொள்வது வியப்பாக இருக்கும். இதற்காகவாவது தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படுவது நல்லது என்று தெரிகிறது. சுவாரசியமான விமர்சனங்களைக் கேட்க முடிகிறது. அடுத்தவர்களைப் பற்றி வெளிப்படையாக விமரிசிக்கும் துணிவும் தெளிவும் இங்கே தான் பார்க்க முடிகிறது. பிறர் சொந்த வாழ்க்கையை மற்றவர்கள் விமரிசிக்கும் பழக்கம் அங்கு இல்லை என்று தெரிகிறது. ஏதோ சாயங்காலம் கடைக்குப் போகிறோம் என்றால் வழியில் எவ்வளவோ பேரைச் சந்திக்கிறோம். முக்கியமாக பஸ் பயணம் புதிய புதிய அனுபவங்களை இங்குத் தருகிறது. பெண்களுக்கு என ஒதுக்கப்படும் இடம் ஒரு சீட், காலியாக இருந்தது. துணிந்து அந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டேன். அந்த அம்மையார் சட்டென்று எழுந்து கொண்டாள், எனக்கு அவர் தரும் மரியாதை அல்ல அது; அவள் பக்கத்தில் உட்கார்ந்தது அவளுக்குப் பிடிக்கவில்லை. நான் ஒன்றும் செய்யமாட்டேன் என்று தைரியம் சொன்னேன், “அது எனக்குப் புரிகிறது” என்றாள்; சிரித்துவிட்டேன். “என் கணவன் என்னை நம்பவேண்டுமே” என்றாள். எனக்குப் புரியத் தொடங்கியது. அவள் எப்படி என் பக்கத்தில் உட்கார்ந்து பயணம் செய்ய முடியும்? இப்படி எத்தனையோ அனுபவங்கள் நமக்கு சுவாரசியத்தைத் தருகிறது. இதைப் போன்ற விபரீதங்களை அங்கு நாம் அனுபவிக்க முடியாது. எல்லாம் ஒழுங்காக நடைபெறும்போது அது புறவளர்ச்சிக்கு நல்லது தான். மாற்றங்கள் இருந்தால்தானே சுவையே இருக்கும். அந்த ஒழுங்கு முறைகள் நமக்குப் பல சமயங்களில் சலிப்பையே தருகின்றன. நம் கார் டிரைவர்கள், பஸ் ஓட்டிகள் முன்னால் (செல்லும் குறுக்குவாசியைப் பார்த்துக் கேட்பான். “ஏன்’ பா சொல்லிவிட்டு வந்தியா?” என்பான். இது போன்ற பழக்கமான அறிவுரைகளை எல்லாம் அங்கே காணமுடியவில்லை. போலீசு ரொம்பவும் கண்டிப்பாக இருப்பது நமக்குப் பழக்கம் இல்லை; தவறு செய்தால், கார்களைத் தவறான இடத்தில் பார்க் செய்துவிட்டால் உடனே வந்து பெயர் எழுதிக்கொண்டு ‘கேசு’ பதிவு செய்துவிடுகிறார்கள், ஈவு இரக்கமற்ற நிலையில் நடந்து கொள்கிறார்கள். காசு கொடுத்து அவர்களை விலைக்கு வாங்க முடியாது. கண்டிப்பாக நடந்து கொள்கிறார்கள். எனினும் இங்கு உள்ள சூழ்நிலைவைத்து அவர்களை மதிப்பிடக்கூடாது. கடமையைச் செம்மையாகச் செய்கிறார்கள் என்று கொல்வதுதான் பொருந்தும். அப்படி அவர்கள் பழகிவிட்டார்கள்; இவர்கள் இப்படிப் பழகிவிட்டார்கள்; அவ்வளவுதான் வேறுபாடு. அங்கே கார் ஓட்ட லைசென்சு வாங்குவது எளிதல்ல; நிறைய பயிற்சி பெறவேண்டும்; விதி முறைகளைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். பயிற்சி பெறவே நிறைய செலவு செய்ய வேண்டும். மிகவும் கண்டிப்பான பேர்வழிகள், இங்கே நம்மீது நம்பிக்கை அதிகம் லைசென்சு கொடுத்துவிட்டால் பின் தானாகப் பயிற்சி கொள்வார்கள் என்ற நம்பிக்கை. எது சரி என்று எப்படி நாம் சொல்லமுடியும். இரண்டு பேரும்தான் பின்னால் கார்களைச் சரியாக ஓட்டுகிறார்கள். அங்கே ஒரு தொல்லை கார்கள் வேகமாக ஓட்டவேண்டும்; நாம் நகரங்களிலேயே முப்பது மைலுக்கு மேல் போகக்கூடாது என்பது விதி; வேகம் தவிர்ப்பது இங்குத் தேவைப்படுகிறது. ஏனென்றால் கார்கள் மட்டும் நடு ரோட்டில் போவது இல்லை; மனிதர்களும் நடக்கிறார்கள். மாடுகளும் தைரியமாக அசையாமல் நிற்கின்றன. மனிதர்களும் பயப்படுவது இல்லை. மாடுகள் பழகிவிட்டன. இந்தச் சிக்கல்கள் அங்கு இல்லை. புதுக்கவிதை ஒன்று “மண்ணெண்ணெய்க்கு இந்த நாட்டில் பஞ்சம் ஏற்படுகிறது. ஏன் தெரியுமா? மருமகள் ஸ்தானத்துக்கு வரும் பெண்கள் அதைப் பதுக்கி வைப்பதால் தான்” இப்படி எழுதினால் அது ஒரு புதுக்கவிதை. அதாவது மாமியின் கொடுமையால், கணவனின் காட்டுமிராண்டித்தனத்தால், அந்த வீட்டுக்கு அவள் புதியவளாகவே கருதப்படுவதால் அவள் அந்த வீட்டிற்கு வேண்டாதவள் ஆகிறாள். இறந்த பிறகு கொள்ளி வைப்பது நம் நாட்டுட்டு பழங்கால மரபு; அது தேவையற்ற சடங்காக மாற்றிக் கொள்ளத் தனக்குத்தானே கொள்ளி வைத்துக்கொள்ள இந்தப் புதுமைப் பெண். வேள்வி யாகத்தில் தன்னை மாய்த்துக் கொள்கிறாள். அதற்கு அவளுக்குச் சுலபமாகக் கிடைக்கும் எரிபொருள் இந்த மண்ணெண்ணெய்தான். அதில் கலப்படம் இல்லாததால் சுட்டு எரிக்கத் தாமதம் செய்வது இல்லை. கலப்படம் இல்லாத ஒரே ஒரு சுத்தமான வஸ்து இந்த மண்ணெண்ணெய்தான் என்பதை இந்த நிகழ்ச்சிகள் நிறுவுகின்றன. “மாமியார் மருமகள்” உறவு இங்கே சரியாக இருப்பதில்லை என்பது தெரிந்த கதை, அதனால் பெண்ணைக் கொடுக்கும்போது மாமியார் இல்லாமல், நாத்தனார் இல்லாமல் தனிக் குடித்தனம் நடத்தும் தகுதி வாய்ப்பு உடைய மாப்பிள்ளையாக இருந்தால் அவருக்குக் கொஞ்சம் கிராக்கி இருக்கிறது. இதை எல்லாம் பார்த்துத்தான் பெண் தருகிறார்கள். அங்கே மாமியார் என்ற ஸ்தானத்தை வகிப்பதற்கே வாய்ப்பில்லாமல் போகிறது. கூட்டுக் குடும்பங்கள், ஒட்டுக் குடித்தனம், ஓரகத்தி, நாத்தனார் இந்த மாதிரி உறவுப் பேச்சுகளே இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. பையன் பெண்ணைப் பார்த்து மட்டும் முடிவு செய்வது இல்லை; பழகிப் பின் தைரியப்படுத்திக் கொண்டு இது ஆயிரங்காலத்துப் பயிர் என்று சொல்லாமல் அந்த நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளாமல் வாழுங் காலத்துத் துணைவி என்று ஏற்றுக் கொள்கிறான். ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர்; அது கொஞ்சம் உறுதிப்பட்டால் ஒருவரை ஒருவர் நேசிக்கின்றனர். அதற்குப் பிறகு பயமில்லாமல் ஒரே கூரையில் தம்பதிகளாக மாறுகின்றனர். இது அந்த வாழ்க்கைமுறை. வலது காலை எடுத்து வைக்கச் சொல்லி அழைப்பதற்கு அங்கு யாரும் இல்லை , அவர்கள் ‘தனிக் குடித்தனம்’ அமைத்துப் புது கம்பெனி! தொடங்குகின்றனர். பழைய கம்பெனியில் அவர்களுக்கு இடம் இல்லை. அங்கே மாமிக்கு இடம் இல்லை; அவள் கணவனுக்கும் ஆதிக்கம் இல்லை. “என்ன கொண்டு வந்தாய்?” என்ற கேள்விக்கு அங்கே இடமே இல்லை. நம் நாட்டில் இப்பொழுது கடுமையான சட்டம் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று அறியப்படுகிறது. “அவனைப் பழிவாங்க வேண்டுமானால்” ஏதாவது எழுதி வைத்துவிட்டு எரிபொருளாகிவிடுகின்ற பேய்களும் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். அதாவது மருமகளைச் சரிவர நடத்துவதில்லை; எதிர்பார்த்தபடி சிலசமயம் அதற்கு மேலும் அவள் கொண்டுவர வேண்டிய அச்சடித்த நோட்டுகள்; சிறப்பு வரிசைகள்; நிலபுலன்கள்; ஸ்கூட்டர் வகையறாக்கள், நகை நட்டுகள் ஆடிட்டர் கணக்குப்படி, தவறிவிட்டதால் அவள் தன்னை முடித்துக் கொண்டதாக எழுதிவிடுவதும் உண்டு. “சொன்னேனே கேட்டியா நமக்கு அவள் தீம்பு கொண்டு வருவாள்னு என்று” என்று அம்மாக்காரி அங்கலாய்க்க; எதுவும் பேசாமல் அப்பாக்காரர் மவுனம் சாதிக்க, தன்னைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி வைத்த ஏகபத்தினியை அவன் எரித்துச் சாம்பலாக்க அந்தக் கடிதத்தைச் செத்தவள் தந்த குற்றத் தாக்கலாகப் பதிவு செய்து காவல் நிலையத்தார் அவர்களின் பிரதிநிதிகள் சில சமயம் காக்கி சட்டையோடு சில சமயம் மற்றைய மனிதர்களைப் போலவும் வந்து விசாரித்துச் சூழ்நிலையறிந்து அதற்கேற்ப நடந்துகொள்ளுவது நாட்டு நடைமுறையாகிறது. அவள் கொண்டுவரவேண்டியது என்பது சில அயிட்டங்கள் இருக்கின்றன. அவை குறைந்துவிட்டால் அவள் அந்த வீட்டுக்கு வர, வந்து இருக்க மறுப்புத் தெரிவிக்கப்படுகிறாள். இந்த மாதிரி அசிங்கங்கள் அங்கு இல்லை என்பது முக்கியமான வேறுபாடு; ‘தனிக் குடித்தனம்’ என்பது மேலை நாட்டுத் தாக்கம். இங்கேயும் இந்தப் புதுமை, விடுதலை வேட்கை புகுந்துள்ளது. முதல் முதலில் தனக்கு முதல் எதிரியாக மருமகள் மாமியாரைக் கருதுகிறாள். ‘கணவன் தனக்கே சொந்தம்’ என்று உரிமை கொண்டாடுகிறாள். தாயின் தனையன் பழக்க தோஷத்தால் அவன் அம்மா என்று கூப்பிடுவது அவளால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை; வழிபாடு மாறவேண்டும் என்று நினைக்கிறாள். வந்தவளுக்கு வாழ இடம் தந்துவிட்டு இருந்தவள் இருந்த இடம் தெரியாமல் மறைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். “மாமியார் மெச்சிய மருமகளும் இல்லை; மருமகள் மதித்த மாமியாரும் இல்லை” என்பது இந்த நாட்டுப் பழமொழிகள். அங்கு மணமானதும் மகனைப் பிரிகிறாள் தாய்; வழி அனுப்புகிறாள் தங்கை. பெண்ணை வீட்டில் பாசத்தோடும் நேசத்தோடும் வளர்த்த தாய் “யாழ் இசையில் பிறந்தாலும் அந்த இசை யாழுக்குப் பயன்படாது: மலையிலே மணிகள் கிடைத்தாலும் அவை மற்றைய இடத்துக்குச் சென்று அணிகள் செய்யப் பயன்படுகின்றன. சந்தனம் காட்டிலே பிறக்கிறது. அது கல்லிலே உரசப்படுகிறது; அது பூசிக்கொள்பவர்க்கே பயன்படுகிறது. பெண்ணும் அப்படித்தான்.” அவனை அவள் அடைகிறாள்; அங்கே அவளைப் பெற்ற தாயும் தந்தையும் வாழவிடுகிறார்கள்; சுதந்திரப் பறவையாகிறாள்; பிரிவு அவர்களை வேறுபடுத்துகிறது. அவர்கள் வாழ்வில் இணைகின்றனர். அங்கே அவர்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. அவனை அவளுக்குப் பிடிக்காவிட்டால் எந்த நேரமும் அவனுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு நடைகட்ட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவளும் அவனோடு முரண்பட்டால் காலத்துக்கும் கட்டிக்கொண்டு அழவேண்டும் என்ற கட்டாயம் அவனுக்கும் இல்லை. இதனால் ஒருவரை ஒருவர் அடிமைப்படுத்த நினைப்பதில்லை; அவன் தன் உடைமை என அவள் ஆதிக்கம் செலுத்தவும் முடிவதில்லை. அதனால் ஒருவரை ஒருவர் மதித்துக் கண்ணியமாக வாழ் நினைக்கின்றனர். அவளுடைய சொந்த விஷயங்களில் அவன் தலையிட முடியாது; அதேபோல அவளும் அவனை நச்சரிக்க முடியாது. ஒரு நாள் ‘கால அட்டவணையை’ மற்றொருவருக்குத் தெரிவித்துத்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; தேவையானதைத் தெரிவித்துக் கொள்வார்கள். அவரவர்க்கு ஒரு தனித்தன்மை உண்டு. அது பாதுகாக்கபடுகிறது. விவாக ரத்து விவாக ரத்து செய்துகொள்ள உரிமை, வாய்ப்பு, அங்கீகாரம் இருக்கிறது என்பதாலேயே அது சகஜம் என்று கூறமுடியாது . நம் பண்பாடு பாரம்பரியம் வாழ்க்கை முறை சில கட்டுப்பாடுகளுக்கு உட்படுதல் மன நிறைவுகள் இவை விவாக ரத்து என்பதை விரும்பி ஏற்பது இல்லை. சில சமயம் அவசரப்பட்டுச் செய்யும் முடிவுகள் காலத்துக்கும் வேதனைகள் தருகின்றன. இங்கே பொதுவாக அதற்குச் சமுதாயத்தில் அங்கீகாரம் இல்லாதபோது அதனைத் துணிந்து ஏற்பது என்பதற்கு ஏதோ காரணங்கள் இருக்க வேண்டும். மனைவி விபசாரம் செய்கிறாள் என்பது அறிந்து இனி அவளோடு வாழ முடியாது என்ற மனோ நிலையில் பொதுவாக விவாக ரத்து கோரப் படுகிறது. கருத்து வேறுபாடுகள்; ஒருவரை ஒருவர் பிடிக்காமை; அழகு குறைவு; கொடுமைப்படுத்துதல்; பிறர் உரிமை யைத் தடுத்தல்; மதிக்காத தன்மை இவற்றின் காரணமாகத்தான் இந்த விவாகரத்துகள் ஏற்படுகின்றன. அங்கே ‘அழகுக் குறைவு’ என்ற காரணம் ஏற்படுவதற்கு இல்லை; திடீர் என்று ஒரு பேரழகனைக் கண்டு மறு விவாகம் செய்ய நினைக்கிறாள் என்றும் கூறமுடியாது . இதற்கெல்லாம் காரணங்களை ஆராய்ந்துகொண்டிருக்க முடியாது, இரண்டு பேரும் சந்தோஷமாக வாழ முடியாது என்ற நிலைக்குப் போகும்போதே இந்த விவாக ரத்து கோரப்படுகிறது. நம் நாட்டில் சினிமா நடிகைகள் நீடித்த மணவாழ்வு சில சமயம் நடத்த முடியாமல் போகிறது. அவள் சாதாரணமாகப் பெண் என்பதை விட ‘நடிகை’ என்று ஆகும் போது அவளுடைய முழுமை மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபடுகிறது. கணவன் நடிகனாக இருந்தால் அவன் புதுமை நாடி சலிப்பின் காரணமாக அவளைக் கைகழுவிவிடுகிறான்; குடும்ப நிர்ப்பந்தத்தின் காரண மாகவும் அவன் சராசரி மனிதனாகிவிடுகிறான். நடிக்கும்போது அவள் மற்றவர்களிடம் சிரித்துத்தான் ஆக வேண்டும்; உடம்பு அவளுக்கு உரிமை உடைமை என்று கூறமுடியாது. அவள் பாத்திரமாக மாறும்போது அவள் எப்படி அவளாக இருக்க முடியும். கதையின் இயக்கம் அவளிடம் அதிகம் எதிர்பார்க்கிறது. வாய்ப்புகள் ஏற்படும்போது வசதிகள் இருக்கும்போது தடுப்புகள் இல்லை என்று ஆகும்போது ‘இப்படியும் வாழலாம்’ என்று நினைக்கவும் செயல்படவும் முடியும்போது தன்னை ஒருவனிடம் அர்ப்பணித்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. சம்பிரதாயம், கட்டுப்பாடு அவளை விட்டு விலகுவது எதிர்பார்க்கப்படுகின்ற ஒன்று; அவள் விவாகரத்து செய்து கொண்டால் கவலை இல்லை; மற்றொருவன் அவளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறான். அவள் மேலே பறந்து கொண்டிருக்கும்போது மண்ணில் கால் ஊன்றி நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பதும் இல்லை, தேவையும் இல்லை. அவர்களைப் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் விமரிசிக்கப்படுகின்றன. எனவே உரிமையும், வசதியும், அங்கீகாரமும், வாய்ப்பும் இருக்கும்போது விவாக ரத்து நடைமுறைப் படுத்துவது எங்கும் உள்ளது. இங்கே நடிகையர் பெறும் தனி உரிமையை, வாய்ப்பை, நடைமுறையை அங்கே ஒவ்வொருவரும் பெற்றுள்ளனர். நடிகையர் ஒரு சிலர் போக்கைக்கொண்டு எல்லா நடிகையரும் விவாக ரத்து செய்து கொள்கின்றனர் என்று கூற முடியுமா. அதேபோல்தான் அங்கு. இங்கே விதிவிலக்குகள் அங்கு நியதியாக்கப்பட்டுள்ளன. அவர்கள் மண்ணெண்ணெயைத் தவறாகப் பயன்படுத்துவதில்லை; மற்றவர் காரணமாக மனம் வெறுத்துத் தம்மை மாய்த்துக்கொள்வதில்லை. அதிர்ச்சிகளை அவர்கள் எதிர் பார்ப்பது இல்லை ‘சாளரங்களில் பூத்தன தாமரை’ என்றான் கம்பன்; அதாவது பெண்கள் சன்னல் வழியாக வெளியே செல்லும் மனிதர்கள், பார்க்க அந்த வீட்டை அலங்கரிக்கிறாள் என்பது அவர் கருத்து. கலியாணமாகாத பெண்கள் நம் கதைகளுக்கு மிகவும் தேவைப்படுகின்றனர். ‘முதிர் கன்னி’ என்ற காமராஜனின் கவிதைச் சொல் கவனத்துக்கு வருகிறது. இப்படி ஒரு இனம் இந்த நாட்டில் உருவாகி வருவதைக் கவிஞன் காட்டி இருக்கிறான். ‘கனவுப் பறவைகள்’ என்ற கவிதை கணியூர் மது நெஞ்சன் இயற்றியது. அதன் வரிகள் சில: “குனியும் வரை கொட்டும் சமுதாய இதயங்களின் மையத்தை நோக்கி ஓர் நாள் இந்த மாடுகள் தும்பை அறுத்துக்கொண்டு முட்டத்தான் போகின்றன” என்று கூறுகிறது. ‘மணச் சந்தையில் விலைபோகாத இந்தப் பாடல்கள் ஒவ்வொரு குடும்பங்களிலும் தேக்கப் பட்டியல்கள்’ என்று சித்திரிக்கப்படுகின்ற கன்னிப் பெண்கள் கலியாணம் ஏற்று முடிப்பது; இடை வேளை நடைபெறும் சம்பவங்கள் சுவாரசியமிக்கவை தான். எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப் பிடிப்பது அதிசய செய்தியாக இருந்தது. எப்படி ஒருவன் தன் பெண்னை யாருக்கு முடிக்கிறான் என்பது அதைவிட, அதிசயமான செய்திதான். “கலியாணச் சந்தையில் விலை போகாத இந்தப் பண்டங்கள்” என்ற ஓர் இனத்தைக் குறிக்கின்றார் கவிஞர். இவர்களுக்குத் தம் காதலனைத் தேடிக்கொள்ள வாய்ப்பு இல்லை. ஆண்களோடு பேசவும், அவனை அறிய முடியும் வாய்ப்பும் இல்லை; அவனும் நம்பிக்கைக்கு உகந்தவனாக இருப்பது இல்லை; காதல் செய்வான். அது அவனுக்கு ஒரு பரிசோதனை; கிளர்ச்சி; எதையும் செய்து முடிப்பான்; ஆனால் மூன்று முடிச்சு போடச் சொன்னால் அப்பாவின் விக்கிரகத்தை, குடும்பத்தின் தடையுத்தரவை, இயலாத சாதிக் கட்டுப்பாட்டினை, பழகிப்போன வாய் பாட்டுச் சந்தங்களை அதுகூட சரியாக உச்சரிக்காமல் முணுமுணுத்துக் கொண்டு அவளுக்கு அவள் ஒரு கேள்விக்குறியாக மாறச் செய்துவிடுவான். மணவாழ்வு என்பதில் மூன்று இயல்கள் அடங்கி இருக்கின்றன. பாலியல்; காதலியல்; மணவியல் இந்த மூன்றும் சேர்ந்து செயல்படுவதுதான் ஒருவனும் ஒருத்தியும் என்ற உயர்ந்த கொள்கை. அங்கே நீலப்படங்கள் பார்க்க அவர்களுக்குத் தடை இல்லை. ‘பாலியல்’ என்பது என்ன என்று அறிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது; நட்பியலில் ஆடவச் சிறுவர்களோடு தொடங்கிப் பாலியலில் வாலிபப் பருவத்தில் தொடர்பு கொள்ளும் வாய்ப்பும் வழியும் அவர்களுக்கு உண்டு; பாலியல் காதலாக மலர்ந்து மணக்கிறது. இது: அந்த நாட்டு வரைவியல். இங்கே ‘முதலிரவு’ என்ற ஓர் அற்புதமான அலங்கரிக்கப்பட்ட மலர்கள் விரித்த மஞ்சத்தில் அவன் அவளைச் சந்திக்கிறான்; அந்த இரவே அவன் மூன்றையும் அறிகிறான்; அவள் அவனுக்குத் தேவைப்படுவதால் அவள் அவனைக் காதலிக்கிறாள். இதற்கு அடிப்படை மணம்; மணம் முடிந்தபின் முதல் பாடம் படிக்கிறான்; காதலிக்க அறிகிறான். மூன்றும் இணைந்த அதனை மணவாழ்வு என்று ஏற்கிறான். இந்த மூன்றும் ஒட்டாதபோது ஒன்றை ஒன்று தழுவாத போது அதிர்ச்சிகள் தோன்றுகின்றன. கன்னிப் பெண் காதலால் கருத்தழிந்து பாலியலில் கால் வைத்தால் மற்றையவை தொடராவிட்டால் அதிர்ச்சி அவளை அணுகுகிறது . மணக்க முடியாதவளை முதற்படியிலேயே சந்தித்து விட்டுவிட்டாலும் தொல்லைதான். அவர்கள் இந்த மூன்றும் வெவ்வேறு என்று அறிந்து செயல்படும் வாய்ப்பும் தெளிவும் ஏற்பட்டிருப்பதால் அதிர்ச்சிகள் ஏற்படுவது இல்லை. இதயக்கோயில் கதாநாயகியைப் போல் கயிற்றைத் தாலிக்குப் பயன்படுத்துவதற்கு மாறாகக் கழுத்தைச் சுருக்கிக் கொள்ளப் பயன்படுத்துவதில்லை. தவறுகள் ஏற்படும்போது அது இங்கு மிகைப்படுத்தப்படுகிறது; அது அங்கு நியதிப்படுத்தப்படுகிறது. அதனால் பெண்களுக்கு வாழ்வில் அதாவது அந்த இடை வேளையில் எந்தவித அதிர்ச்சிகளும் ஏற்படுவது இல்லை. மீறல்கள் அவை அதிகப்படும்போது விதிவிலக்குகள் ஆகின்றன. அவற்றை அங்கீகாரம் ஏற்காதபோது அவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர், இப்படித் தொடக்கத்தில் அவர்களும் அத்துமீறல்களைச் சந்தித்து இருப்பார்கள். அத்துமீறல்கள் வாழ்க்கை நியதிகள் என்று உணரப்பட்டு அங்கீகாரம் தரப்படும்போது அவை நியதிகளாக மாறுகின்றன. அதனால் பாலியல் பாதிப்புகள் அவர்களை அதிகம் இப்பொழுது தாக்குவது இல்லை; பெற்றோர்கள் பாதிப்புகளில் இருந்து விடுபட்டு விடுவதால் அவர்கள் பொறுப்போடு செயல்பட்டுத் தம்மைத்தாம் காத்துக்கொள்கின்றனர். சமுதாயம் அவர்களை ஏற்றுக் கொள்ளாது என்ற அச்சம் இன்மையால் அவர்கள் வாழ்விய லுக்கு முதலிடம் தருகின்றனர். இவற்றை எல்லாம் அதிகம் பொருட்படுத்துவது இல்லை. கணவனோடு வாழாதவள் விலக்குப் பெற்றவள் என்ற பெயர் மட்டும் பெறுகிறாள் ; உரிமையோடு வாழத் தகுதியுடையவள் அங்கு; இங்கு ‘வாழா வெட்டி’ என்று பட்டம் சூட்டப்பட்டு அவள் ஒதுக்கப்படுகிறாள். பாலியல் பாதிப்புகளை அவர்கள் அதிகம் பொருட்படுத்தாததால் சிக்கல்கள் அதிகம் இல்லை; உரிமை, சுதந்திரம் என்ற மனவியலில் அவர்கள் கவலை இல்லாமல் வாழ்கின்றனர். உரிமை இருக்கிறது என்பதால் அவர்கள் தவறு செய்வது இல்லை; தவறு செய்வதால் வாழும் உரிமையை அவர்கள் இழப்பதில்லை. மேல் நாட்டுத் தாக்கத்தால் இங்குப் பெண்கள் தம் உரிமையை நாட்ட அடிமைத் தளையினின்று விடுபடு கின்றனர். தாமும் விலக்குக் கோரி விவாகரத்துப் பெறுகின்றனர். அது எளிய சாதனைதான். அடுத்த கட்டம் சமூகத்தில் இதற்குப் பொதுவான அங்கீகாரம் இல்லாததால் அவள் மறுமணம் செய்து கொள்வது எளிதாக இயல்வது இல்லை. ‘மணமகன் தேவை’ என்று விளம்பரப்படுத்தலாம். ‘விவாகரத்து பெற்றவர்’ என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டால் அவன் அதை அவளுக்கு அளிக்கும் வாழ்வுப் பிச்சையாக நினைக்கிறான்; அவன் தன்னை ஒரு அவதார புருஷன் என்று உயர்த்திக் கொள்கிறான். நம் பெண்களுக்கும் விவாகரத்துக்கு உரிமை இருக்கிறது; மறுக்கப்படவில்லை; மறுவாழ்வுக்கு வழிவகை அவ்வளவு பசுமையாக இருப்பதாகத் தெரியவில்லை. விதலைக்கு நெற்றியில் சிவப்பு நிறம் தீட்டத் துணியும் வாலிபன் இவள் முகத்தில் மலர்ச்சியைக் கூட்ட முன் வருவது இல்லை. ஏன் அவள் முந்தைய கணவன் உயிரோடு இருப்பதால். இந்த உரிமை என்பது கத்தி முனையில் நடப்பது போன்றது; கலியாணம் ஆவதற்கு முன்னால் கொஞ்சம் அடக்கம் காட்டவேண்டும். அது அவசியமாகிறது . ஏனென்றால் பெண்ணைத் தேடும் படலத்தில் அவளிடம் அடக்கம் முதலில் எதிர்பார்க்கப்படுகிறது. அனுபவத்தால் சொல்கிறேன். படித்தவள்; மேல் நாட்டுச் சாயல் படிந்தவள்; பட்டம் பல பெற்றவள்; அழகும், அவளின் பெற்றோர்கள் அவளுக்குத் தந்திருக்கிறார்கள். அவள் அப்பா அவளைப் பற்றி அறிமுகப்படுத்தப்படும்போது, “பெண் சுதந்திரப்பிரியள், அடக்கம் என்பது அவளிடம் அடங்கிய பண்பு; ரொம்பவும் நவீனப் போக்கு உடை யவள்” என்று சொல்லி அறிமுகப்படுத்துகிறார். அவர் உண்மையைச் சொல்கிறார், அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது அறிகிறேன். ஏன்? இதைக் கேட்கும் ஆண்மகன் கொஞ்சம் பின்வாங்குகிறான். எப்படியும் பின்னால் பெண் அடக்கியாளப் போகிறாள். தன் அவசரப்பட்டு அதை முன்கூட்டிச் சொல்ல வேண்டும். மேல் நாட்டுப் பெண்களின் போக்கில் வெளியே சம உரிமை என்று பேசப்பட்டாலும் அவன் அவளிடம் அடங்கி நடக்கும் பண்புதான் மிகுதியாகக் காணப்படுகிறது. காரணம் விவாகரத்து என்ற கத்தி அவள் கையில் இருக்கிறது, அதே நிலை தான் அவளுக்கும். நம் இளைஞர்கள் ஒரு சிலர் கிழக்கையும் மேற்கையும் இணைத்து ஒரு சங்கமமாக்கி அதில் நிறக் கலவையைக் காணவும் செய்கின்றனர். அவள் கிழக்கே வருவது இல்லை; இவனால் மேற்கே போக முடிவதில்லை. இவை எல்லாம் தவிர்க்க முடியாத புதிய பண்பாட்டுக் கலப்பு, பிறக்கும் குழந்தைகள் அந்த நாட்டு மண்ணின் வளத்தால் ஒளி பெறுகின்றார்கள். மாற்றும் பெறுகிறார்கள். நம்முடைய இளைஞர்கள் மாறவில்லை; அவர்கள் மாற்றத்தை விரும்பவில்லை, சில சொற்கள் அவர்களுக்குப் பழக்கமாகி வருகின்றன; அவையும் மேல் நாட்டுத் தாக்கமே. ‘தான் பார்த்துப் பெண்ணை முடிவு செய்வது’ என்பது ஓரளவு இரு தரப்பிலும் இப்பொழுது ஒரு தெளிவு ஏற்பட்டு வருகிறது. சாதகத்தில் தொடங்கி உறவு முறைகளில் உழன்று கொடுக்கல் வாங்கல் கணக்குகள் முடித்தாலும் பெண் பையனைப் பார்த்து மறுப்புச் சொல்லாமல் மவுனம் சாதிப்பாள். மவுனம் சம்மதத்துக்கு அறிகுறி என்று விளக்கம் சொல்லப்படும். பையன் ‘சரி’ என்று ஒப்புக் கொள்ளவேண்டும். இந்த ஒரு வாசகத்தைக் கேட்க முடிகிறது. பெண்கள் “அப்பா அம்மா இஷ்டம்” என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளும் பழக்கமும் இன்னும் நீங்கவில்லை. அவர்களால் முடிவு செய்ய முடியாத நிலை அவ்வளவுதான். “பையன் அவளை வைத்துக் காப்பாற்றுவானா”’ என்பதுதான் முதல் கேள்வி. அந்த அளவு இருந்தால் போதும் என்ற மனநிறைவும் மன்றல்களை முடித்துத் தருகிறது. ஒரு பெண்ணைப் பற்றி முடிவு செய்யும்போது மூன்று அளவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அழகு, கல்வி, செல்வம்; இவற்றில் ஒன்று இரண்டு குறைந்தாலும் சரி செய்துகொள்ளும் மனப்பக்குவமும் நம்மில் பலர்க்கு உண்டு. எப்படியும் கலியாணமானால் போதும் என்ற ஆர்வம் இந்த உன்னத முடிவுக்குத் துணை செய்கிறது. எப்படியோ நம் நாட்டில் பெண் வசதி படைத்தவளாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மற்றவர்களுக்கும் கலியாணம் ஆகிறது. மறுக்கவில்லை. “குணம் இருந்தால் போதும்” என்று ஆத்மதிருப்தி பெறுகிறவர்களும் உண்டு. முக்கியமாகக் குணத்தைத்தான் பார்க்க வேண்டும் என்ற அறிவுரைகள் தரப்படுகின்றன. ஏன் மற்றவை இருக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை என்ற காரணத்தால், மற்றொரு நியாயமான காரணமும் உள்ளது. அழகின் ரசனை அவன் சொந்த விஷயம்; செல்வம் பெற்றோர்கள் கவனித்துக் கொள்வார்கள்; பொதுவாக ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் குணத்தைப் பற்றித்தான் சொல்லமுடியும். பொதுவாக நம் நாட்டில் அவன் அவளைச் சரியாக வைத்து வாழவேண்டுமே என்ற அடிப்படை.தான் இருந்தது; இப்பொழுது அவள் அவனோடு ஒழுங்காகக் குடித் தனம் செய்ய வேண்டுமே என்ற கவலையும் தோன்றுகிறது; இந்தப் புதிய கவலைக்குக் காரணம் இந்த மேல் நாட்டுத் தாக்கமே, உரிமை என்ற பேரால் எதிர்ப்புகள் வளர்த்துக் கொண்டு தன்னை இழக்காமல் இருக்கும் மனோநிலைதான் இதற்குக் காரணம். பழமையும் புதுமையும் பொதுவாக நம் நாட்டுப் பாரம்பரிய மனோநிலை அவள் அவனுக்காகவே வாழ்வது என்பதும் அதில் அவள் ஒரு லட்சியத்தைக் கண்டும் வந்தாள். இராமாயணத்தில் சீதை சொல்கிறாள் அனுமனிடம்: “என்னுடைய கற்பின் திண்மையால் அவனை (இராவணனை) சுட்டு எரித்துவிடமுடியும். அது எனக்குப் பெரிது அல்ல; என் கணவனின் வீரம் மாசுபட்டுவிடுமே என்று அஞ்சுகிறேன். அவன் இராவணனை எதிர்த்து வீரம் காட்டி அவன் தலையை அறுத்துத் தீமையை ஒழித்து அறத்தை நிலை நாட்ட வேண்டும். அதற்காகச் செயற்படாமல் இருக்கின்றேன்” என்று கூறுகிறாள். இது காவியத்துப் பண்பாடு; புகழ் என்பது கணவனுக்கு உரியது: அவனுக்கு அதனை ஈட்டித் தருவது மனைவியின் கடமை என்று அவள் உணர்த்துகிறாள். இம்மை மறுமை என்ற இரண்டு நிலைகள் உண்டு என்பதில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் அந்தச் சொல்லாட்சி நம் நாட்டு நடைமுறையில் உள்ளது. இந்தப் பிறவியில் தான் நினைத்தவரை அடைய முடியாவிட்டாலும் அடுத்த பிறவியில் சந்திப்பதாக எழுதி வைத்து உயிர்விடும் லட்சியப் பெண்களும் நம் நாட்டில் உண்டு. வாழ்வில்தாம் வாழ முடியவில்லை; அதற்குத் தம் பெற்றோர்களைக் குற்றவாளிகளாக்கிவிட்டுத் தன் சாவுக்குக் காரணமான தடைகள் அடுத்த பிறவியில் இருவரும் சந்திக்கும்போது நீங்கிவிடும் என்ற நம்பிக்கையில் உயிர் விடுபவர்களும் உண்டு. அவர்கள் எழுதும் வாசகங்கள் விசித்திரங்களாக இருக்கும். வாழ்வில் இணையமுடியாத நாங்கள் சாவில் சங்கமம் ஆகிறோம் என்று கடற்கரை அலைகளுக்கு வேலை கொடுப்பவர்களும் உண்டு. காதற் காவியங்களில் மனம் பறிகொடுக்கும் மனப்பக்குவம் மிகுதியாக இருப்பதால் இதைப் போன்ற வேகமான நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடைபெறுவது உண்டு. முன்னும் பின்னும் மண்ணின் பெருமையை விளக்கும் சுதந்திரப் போரை விளக்கும் சந்தனத்தேவன் கதை; சந்தனத் தேவன் சுதந்திரத்துக்காகப் போராடித் தூக்குமேடை ஏறி நிற்கிறான்; சுதந்திரப் பிரகடனம் அவனை மூச்சுவிடச் செய்கிறது. இந்த மண்ணில் சுதந்திரத்திற்குப் பிறகு அவன் மகன் எப்படி மாறுகிறான்; கள்ளக் கடத்தல் செய்து சமூக விரோதியாக மாறுகிறான்; அப்பா மகனைப் பார்த்துச் சொல்கிற வாசகம் நெஞ்சைத் தொடுகிறது. “நாங்கள் சுதந்திரத்துக்காகப் போராடினோம், சுதந்திரம் வாங்கிக் கொடுத்தோம். அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை உங்களுக்குச் சொல்ல மறந்து விட்டோம்” என்று சொல்கிறான். இது ஓர் உருவகம்; நாம் எப்படி எப்படி மாறி வருகிறோம் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு; இன்றைய இளைஞர்களுக்குக் கடந்த காலத்தைப் போன்ற உயர்ந்த லட்சியங்கள் இல்லை என்பதைத் தெளிவாக்குகிறது; அன்று அந்த லட்சியம் தேவைப்பட்டு விடுதலை தவறிக் கேட்டு நிலை குலைந்த நிலையில் ஒரு உத்வேகம் ஏற்பட்டுச் செயற்பட்டனர். இன்று பலவிதமான சக்திகள் செயல்படத் தொடங்கிவிட்டன. இவற்றை எல்லாம் மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் பொருளாதார அடிப்படையில் சமநிலை காணும் வேகத்தில் கட்சிகள் தோன்றின. சமநிலை வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்க முடிந்ததேயன்றிச் செயல் முறையில் சாத்தியப்படவில்லை என்று தெளிவாகியதும் வேறு வகையில் சக்திகள் செயல்படத் தொடங்கின. அதன் விளைவுதான் இன்றைய அரசியல் சூழ்நிலை. சமுதாயச் சீர்கேடு. இவற்றைச் சீர் செய்து செப்பனிடப் புதிய உத்வேகம் நம்பிக்கைகள், செயற்பாடுகள் தேவைப்படுகின்றன. அந்த வகையில் நாட்டின் செயல்முறைகள் ஓரளவு ஏன் பெருமளவு செயல்பட்டும் வருகின்றன; அதே சமயத்தில் பிற்போக்கு சக்திகளும் வேகமாகச் செயல்படுகின்றன. இவற்றோடு போராடி மக்களுக்கு அடிப்படைத் தேவைகளும் இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் நம்பிக்கையும் ஊட்ட முடியுமா என்பது இன்றைய கேள்வி. இதற்கு பதில் காண்பது என்பது தனிப்பட்ட ஒருவரால் காண முடியாது; அதைப்பற்றி விமரிசிக்காமல் முடியாத விஷயத்தில் தலையிடாமல் கவுரவமாகத் தப்பித்துக் கொள்ளத்தான் முடியும். நீ என்ன சொல்கிறாய் என்று கேட்டால். ஒன்றா இரண்டா ஓராயிரம் கேள்விகளுக்குப் பதில் சொல்லியாக வேண்டும். அது அது அந்தந்தத் துறைகளில் உள்ளவர்களே பதில் சொல்ல முடியும். சந்தனத் தேவன் சொல்வது போல் சுதந்திரத்தை வாங்கிக் கொடுக்க முடிந்தது; அதைச் செய்து முடித்தார்கள். அந்தச் சுதந்திரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதைச்சொல்லாமல் விட்டுவிட்டார்கள். அதற்குள் அவர்கள் ஜீவிய காலம் முடிகிறது; முடித்து வைக்கப்படுகிறது . இப்பொழுது சுதந்திரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதை விட அதைக் காப்பது எப்படி என்ற பிரச்சனையும் உள்ளது. நமக்கு எதிரிகள் வெளியேயும் அமையலாம்; அது சொல்லமுடியாது; நம்மை நாம் அழித்துக் கொள்ளும் சக்திகள் செயல்பட்டுவருகின்றன. அவற்றை அறிந்து நீக்குவது நாம் செய்யத்தக்கது என்பதைச் சொல்ல நினைக்கிறேன். இதை யாரிடம் சொல்வது? எப்படிச் சொல்வது; ‘இங்கிலாந்தில் சில மாதங்கள்’ என்ற தலைப்பில் அந்த தேசங்களைப் பார்த்த பிறகு சில நல்லன அங்கே உள்ளன; அவர்கள் வளர்ச்சி பெற்றவர்கள்; வளர்ந்தவர்கள்; வளர்கிறவர்கள். நாமும் வளர முடியும் என்ற நம்பிக்கை ஊட்டவே இந்த நல்லவைகள் சுட்டிக் காட்டப்பட்டன. தீமைகள் சில எந்திர வளர்ச்சி அங்கு மிகுதி; மாந்தர்க்கு உழைக்க வேண்டிய சூழ்நிலைகள் குறைகின்றன. மனித சக்தி, மூளை இயந்திரங்களுக்குப் பொருத்தப்பட்டு வேலை செய்வது அதிசயமான சாதகை. இதனை கம்ப்யூட்டர் சைன்ஸ் (Computer Science) என்று சொல்லி வருகின்றனர். ஒரு பாங்கியில் ஞாயிற்றுக்கிழமை அது மூடப்பட்டு இருக்கிறது; உள்ளே ஒரு ஆள்கூட வேலை செய்ததாக இருப்பதாகவும் தெரியவில்லை. வெளியே ஜன்னல் போல ஒரு சிறிய கவுண்டர் இருக்கிறது! அங்கே தன் வங்கி அட்டையை உள்ளே வைத்து ரகசிய எண்ணையும் குறிப்பிட்டுத் தேவையான பணம் எடுக்க முடிகிறது; உள்ளே அந்தச் சீட்டுப் போன சில விநாடிகளில் சன்னலுக்கு வெளியே தாம் விரும்பி எடுக்க நினைக்கும் பணம் நோட்டுகள் வெளியே வந்து விழுகின்றன. கார்கள் போகின்றன; வழியில் பாலங்கள் கட்டப்பட்டு இருந்தால் அதற்குரிய செலவினங்களை ‘செக்போஸ்டில்’ காருக்கு அறுபது பென்சு என்று ஏதோ ஓர் தொகை வசூல் செய்கிறார்கள்; அதற்கு ஓர் ஆள்; எழுதுவதற்கு ஒரு ரசீது இப்படி எல்லாம் இல்லாமல் இருப்பது வியப்பைத் தருகிறது. அங்கே ஒரு பெட்டி (திருப்பதி உண்டி போல) இருக்கிறது. அதில் போட்டால் (அந்தக் குறிப்பிட்ட தொகை) அது எந்தக் காசுகளாவது இருக்கலாம். வழி தானாக விடுகிறது; நம் ஊர் தொலைபேசியில் குறிப்பிட்ட ஐம்பது காசு போட்டால் தான் உள்ளூருக்குள் பேச முடிகிறது ; அங்கே கார்கள் நிற்கும் இடத்தில் காசு போட்டால் அது மீட்டர் காட்டிக் காசுக்கு ஏற்ற நேரத்தைக் காட்டுகிறது, இப்படி அரிய சாதனைகள் மனித முயற்சிகளைக் குறைக்கிறது. எந்திர வளர்ச்சி மனித உழைப்பைக் குறைக்கிறது; அவரவர் தாமும் இயந்திரங்களைப் போல் ஒழுங்காகத் தம் கடமைகளைச் செய்து முடித்துவிட்டபின் தொலைக்காட்சியும், கிளப்களும் குடும்ப வாழ்க்கையும், குழந்தை வளர்ப்பும், மேஜைமேல் உணவோடு அருந்தப்படும் மதுவகைகளும் மகிழ்வைத் தருகின்றன. அங்கே மக்கள் தொகை கட்டுப்பாடு செய்யப்பட்டு உள்ளது; வாழ்க்கை உறுதி செய்யப்பட்டு உள்ளது; வேலை இல்லை என்று பட்டினி கிடக்கத் தேவை இல்லை; வாழ்க்கைப் பணம் அளிக்கப்படுகிறது. அங்கேயும் ஒருசிலர் ஒப்பியம் கஞ்சா முதலியன பழகிக்கொண்டு அழிகிறவர்களும் உண்டு; இங்கிலாந்து மட்டுமல்ல; பிரான்சு, பெல்ஜியம், ஜெர்மனி இப்படி ஐரோப்பா முழுவதும், அமெரிக்காவிலும் இந்தத் தீமை பரவித் தம்மைத் தாம் அழித்துக் கொள்கிறவர்கள் மிகுதியாகி வருகின்றனர். இது தவிர மற்றைய அவதிகள், கேடுகள், வருவாய் இன்மை , பற்றாக்குறை என்பவை அந்த நாடுகளில் இல்லை. அவர்களைப் போல நாமும் முன்னேற வேண்டுமென்று வேகமாக இயங்கி எந்திரங்களை உற்பத்தி செய்ய முயல்கிறோம்; வேகம் கிடைக்கும்; மனித மூளைக்கு வேலை குறைவாகும். விளைவு இங்கு ‘தொழில் இல்லை’ என்ற நிலை ஏற்பட்டு அதனால் வாழ்வு பாதிப்புக்கு உள்ளாவது உறுதி. நாமும் நம் தேவைகளை அவர்களைப்போல் பெருக்கிக் கொள்கிறோம். வசதிகளை மிகுதிப்படுத்திக் கொண்டு வாழத் தொடங்குகிறோம். அதனால் அவற்றோடு பற்றாக்குறை அதிகம் ஆகிவருகிறது. மேல் நாடுகளில் இருந்து தொலைக்காட்சிப் பெட்டிகள் வீடியோக்கள் நிறைய இறக்குமதி செய்யப்படுகின்றன: அதனால் அவர்களுக்கு வாணிபம் தொழில் வளர்கிறது; நம் பணம் அங்கு ஏற்றுமதி ஆகிறது. இந்த நிலைகள் மாறுமளவிற்கு நம் நாட்டில் தொழில் நுட்பம் பெருகவேண்டும். அந்த முயற்சிகள் நடைபெறுகின்றன. இன்று ‘கம்ப்யூட்டர் சைன்ஸ்’ என்று சொல்லி வெளிநாடுகளிலிருந்து எந்திரக் கருவிகள் வரவழைக்கப்படுகின்றன. துரிதமாக வேலைகள் நடைபெறுகின்றன. இவற்றை விலை கொடுத்து வாங்க நம் நாட்டுப் பணம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ஆகிறது, மேலும் பல தொழிலாளர்களுக்கு, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் குறைகிறது, அதனால் விளையும் தீமைகள் ஏராளம். இங்கே நம் சமூக நிலையில் இரண்டு பெரிய நிலைகள் உள்ளன; வசதி படைத்தவர்கள் ஒருசிலர்; அற்றவர் பலர். மேல் நாட்டிலும் அநேகமாக எல்லோரும் தொலைக்காட்சி, கார்கள், விடியோக்கள், இசைப் பதிவுத் தட்டுகள்; வானொலிச் சாதனங்கள் பெற்று வசதிகளைப் பெருக்கிக் கொண்டு வாழ்கின்றனர். வங்கிகள் முன்பணம் தந்து கடனுதவி செய்து பொருள்கள் வாங்க உதவி செய்கின்றன. பொருள்கள் மக்கள் வாங்கினால்தான் உற்பத்திப் பெருக்கம் செய்ய முடியும்; தொழில் வளம் பெருகும் அங்கே இருப்பவர்களுக்கு வாங்கும் சக்தி அதே சமயத்தில் பெருகுகிறது; உறுதியான வாழ்க்கை நிலை உள்ளது. அவர்களைப் போல் நாமும் கார்கள், வீடியோக்கள் டெலிவிஷன்கள் ஒரு புறம் பெருக்கும் தொழிலில் அண்மைக்காலத்தில் ஈடுபட்டு வருகிறோம். மக்களிடமும் வாங்கும் சக்தி ஓரளவு பெருகி வந்துள்ளது. உயர்மட்டத்து வாழ்நிலை உடையவர்கள் அந்த வசதிகளை அனுபவிக்கத் தொடங்கிவிட்டனர், அந்தத் தேவைகளுக்கு வெளிநாடுகளில் இருந்து ‘எலக்ட்ரானிக்’ பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அதனால் நம் நாட்டுப் பொருளாதாரத்தில் ஓரளவு சரிவு ஏற்படுகிறது. நம் பொருள் சக்தி வெளி நாட்டுக்குப் பயன்படுகிறது. இப்பொழுது அவை நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படவில்லை; கூட்டுவிக்கப்படுகின்றன. ஓரளவு இங்கே தொழில் பெருக்கமும் ஏற்பட்டு வருகிறது. அந்நிய நாட்டுச் செலாணியை மிச்சப்படுத்த, குறைக்க இங்கே பல துறைகளிலும் நாம் தொழில்வளத்தை பெருக்க வேண்டும். அதே சமயத்தில் எந்திரமயமாக்குவதில் பயங்கரமான தீமைகளும் உள்ளன. உற்பத்திப் பெருக்கம் ஏற்படலாம்; எந்திரங்களைக் கொண்டு துரிதமாக வேலைகளைச் செய்து முடிக்கலாம்; ஆள் குறைப்பும் வேலை இல்லாமையும் உடனுக்குடன் ஏற்படுகின்றன, முடிவு: ஒரு பக்கத்தில் வசதி மிக்கவர்கள் தம் தேவைகளைப் பெற்று வாழ்கிறார்கள்; அற்றவர்கள் வாழ வகையின்றித் தவிக்கின்றனர். இந்தப் பிரச்சனையைச் சந்திக்காதவரை ஒழுங்கீனங்களையும் சட்ட விரோதமான சமூக விரோத செயல்களையும் சந்தித்துத்தான் ஆக வேண்டும். சுதந்திரத்துக்கு முன் இருந்த மனோ நிலை; அதற்குப் பின் நம்பிக்கை இருந்தது. ஓரளவு தெளிவு இருந்தது. இன்றைய நிலையில் தெளிவான பொருளாதாரப் பிரச்சனைகள் சிலவற்றைச் சந்திக்க வேண்டியுள்ளன. 1. ஊழல் முறைகள்; எல்லா நிலையிலும் பணம் கொடுத்துத்தான் எதையும் சாதிக்கமுடிகிறது. இது அதிகமாகிக்கொண்டு வருகிறது. 2. தொழில் வளர்ச்சிக்கு வேண்டிய எந்திரக் கருவிகள் இருப்பதுபோல் கல்விப் பெருக்கும் இருக்கிறது. வேலை வாய்ப்புகள் குறைந்துகொண்டு வருகிறது. 3. பொருளுக்கும் உயிர்க்கும் பாதுகாப்புக் குறைந்து கொண்டு வருகிறது. எங்கே யார் எதைச் செய்வார்கள் என்று சொல்ல முடியாது. 4. வசதிகளை அனைவரும் அனுபவிக்க விரும்புகின்றனர்; அதன் பொருள்களின் விலைவாசிகள் உயர்கின்றன. பணத்தின் மதிப்புக் குறைகிறது. பணப் பெருக்கம் மிகுகிறது. சமுதாய நிலையில் ஒரு சில மனோநிலைகள் உரிமைப் போர்கள் மேல் நாட்டுத் தாக்கத்தால் ஏற்பட்டு உள்ளன. அவற்றுள் நாம் சந்திக்கும் பிரச்சனைகள். 1. பெண்கள் மேல் நாட்டினரைப் போல் கல்வியும் தொழிலும் கற்றுச் சரிசமமான வாய்ப்புகளைப் பெற்றுத் தொழில் ஏற்றல் வளருமா? 2. பெற்றோர்களின் பாதுகாப்பிலும் அவர்கள் பொறுப்பிலும் பிள்ளைகள் வளர்ச்சியும் திட்டங்களும் பெறுதல் நீங்குமா? அவர்கள் தலை நிமிர்ந்து ஆட்சியின் பாதுகாப்பில் திட்டங்களில் உறுதியாக வாழ முடியுமா? 3. சாதிகள் என்ற பேரால் தேர்தல்கள்; சமுதயாக் கட்டுப்பாடுகள் தகர்க்கப்படுமா? இல்லையா? (4) கலப்பு மணம், விவாகரத்து, மறுமணம், விதவை மணம் இவற்றைச் சமுதாயம் நியதிகளாக அங்கீகரிக்குமா? 4. சிறு தவறுகள், பாலியல் சந்திப்புகள், காதல் தோல்விகள் இவற்றால் ஏற்படும் தற்கொலைகள் குறையுமா? 5. பெண்கள் வரதட்சணைக் கொடுமையால் வாழ்க்கைச் சிக்கல்கள் நீங்குமா? இந்த அடிப்படைகள் ஒழியுமா? இதுபோன்ற சமூகப் பிரச்சனைகள் இப்பொழுது எழுந்துள்ளன. இவை நீங்கிய நிலையில் வாழும் மேல் நாட்டு உரிமை வாழ்வு நம்மவர்க்கு ஒரு வழிகாட்டியாக அமைகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. அனுபாவம் உடையவர்கள் முற்போக்குச் சிந்தனைகளுக்கு மேல் நாட்டு வாழ்வியலை எடுத்துக்காட்டாகக் காட்டுவது மரபாக உள்ளது. நாம் என்னதான் கலப்படமற்ற இந்திய கலாச்சாரம் உடையவர்கள் என்று சொல்லிக்கொள்ள முயன்றாலும் மேலை நாட்டு வாழ்வியல் முறைகள் நம்மைத் தாக்கிவருகின்றன. தேவையானவை, வளர்ச்சிக்குரியவை கொள்ளப்பட்டு மற்றலை எள்ளப்பட்டுப் புதிய மாற்றங்களுக்கு இடம் தருகிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆங்கிலம் மேல் நாட்டுப் போக்குகளை அந்த நாட்டுத் தற்கால இலக்கியம் வழியாக அறிவித்து வருகின்றன. இன்று பல பத்திரிகைச் செய்திகள் படிக்கிறோம், ஒன்று அவளாகத் தன்னை எரித்துக் கொள்கிறாள்; அல்லது திட்டமிட்டு அந்த வீட்டார் அவளைத் தொலைத்துக்கட்டுகிறார்கள். இது நியாயமா? இதற்கு வழி என்ன? எல்லை மீறும்போது விவாக ரத்து செய்து கொள்வது தான் வழி; அது செய்துகொண்டால் போதாது; இளை ஞர்கள் விரும்பி அவர்களை மணக்க முன்வரவேண்டும்). அவளுக்குத் தக்கபடி. மற்றொருவன் கிடைக்காமலா போவான். அதற்கு வழிவகைகள் உண்டாவதற்கு இந்த மேல் நாட்டு வாழ்வியல் நிச்சயம் வழிகாட்டுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. சமூகவியலும் சட்டவியலும் அந்த அந்தச் சமூகத்தின் போக்குகளும் தேவைகளையும் ஒட்டியே சட்டங்கள் இயற்றப்படுகின்றன. எடுத்துக் காட்டாக இன்றைய அரசியல் பிரச்சனையாக அதிகம் பேசுவது ‘மது விலக்கு’ என்பது. இதற்கு ஓர் வரலாறே நமக்குப் பின்னணியாக இருக்கிறது. அந்நியர் ஆண்டபோது அவர்களை எதிர்ப்பதற்கு இரண்டு போராட்டங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன; ஒன்று உப்புக் காய்ச்சுதல்; கடலில் கிடைக்கும் வளம் உப்பளம்; அதில் கிடைக்கும் உப்புக்கு வரி செலுத்துவதில்லை என்ற ஓர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஆங்கிலேய ஆட்சி எதிர்ப்புக்கு இது ஒரு அடையாளப் போராட்டமாக மேற்கொள்ளப்பட்டது. அதே போலக் கள்ளுக்கடை மறியல் மேற்கொள்ளப்பட்டது. இதில் இரண்டு அடிப்படைகள் இருந்தன. வெள்ளையருக்கு எதிர்ப்பு என்பது ஒன்று; மற்றொன்று மக்கள் வாழ்வு சீர்குலைவதைத் தடுப்பது; மற்றொன்று சுதேசிய இயக்கம்; கதர் கட்டுதல் என்பது அதன் விளைவு. இப்பொழுது ‘சுதேசி இயக்கம்’ என்பது முற்றிலும் மறுக்கப்பட்டுவிட்டது. இன்னும் வெளிநாட்டு உற்பத்திப் பொருள்கள் தரம் மிக்கவை என்ற மதிப்பும் நிலவிவருகிறது. இப்பொழுதுதான் வெளி நாட்டு டி.வி. வீடியோக்கள் வராதபடி அதிக வரிவிதிப்பு ஏற்படுத்தியுள்ளார்கள். காந்தியடிகளுக்குச் சமுதாய நல்வாழ்வும், முற்போக்கும் தனிமனித வாழ்வை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது என்ற நம்பிக்கை இருந்தது; அதை அவர் அதிகம் வற்புறுத்தினார்; சமுதாயச் சீர்திருத்தமாகத் தீண்டாமை ஒழிப்பு, தனி மனிதன் ஒழுக்கச் சீரமைப்பாக மதுவிலக்குக் கொண்டுவர வழி கோலினார். உண்மையிலேயே நம் நாட்டில் குடி மக்கள் வாழ்வைச் சீர்குலைக்கத்தான் செய்கிறது. அதற்குக் காரணம் அதற்குச் செலவு செய்யத் தேவையான பொருள் இன்மை; அதற்கு அரசாங்கம் விதிக்கும் வரிச்சுமை, ஏலம் விடுகிறார்கள். யார் அதிகம் தொகை தருகிறார்களோ அவர்களுக்கு விற்பனை விநியோக உரிமைகள் கிடைக்கின்றன. இன்னும் அவர்கள் யார் யாருக்கோ கொடுக்க வேண்டும் என்று பேசிக்கொள்கிறார்கள். இதில் ஏராளமான வருவாய் ஆட்சிக்கு வருகிறது என்று பேசப்படுகிறது; மதுவிலக்கால் கிடைக்கும் பணத்தைக் கொண்டு சத்துணவுத் திட்டங்கள் செயல்படுகின்றன; பள்ளிகளுக்கு நிதிப்பணம் கிடைக்கிறது. தீய வழியில் கிடைக்கும் நிதி நல்லனவற்றிற்குப் பயன்படுகிறது. குடிப்பழக்கத்தால் பிள்ளைகளுக்குச் சோறு போடமுடியவில்லை பெற்றோர்களால்; அவர்கள் தரும் வரிப்பணத்தைக் கொண்டு அரசாங்கம் அவர்களுக்குச் சோறு தருகிறது. வறுமைக்கு முக்கியமான காரணம் குடிப்பழக்கம் என்பது மறுக்க முடியாத சூழ்நிலை. அது மட்டும் அல்ல; இந்தத் துறையில் கலப்படம் அதிகம் ஆகிறது; குடிப்பழக்கத்தினர் உடம்பை அது மிகவும் பாதிக்கிறது. மதுவிலக்கை எடுத்தால் ஆட்சிக்கு வருவாய்; அதைப் புகுத்தினால் அதிகாரிகளுக்கு வருவாய்; கள்ளச் சாராயம் குடிசைத் தொழிலாக வளர்கிறது. ‘கலங்கல்’ என்ற ஒரு தனிப் படைப்பும் பலர் உயிரைப் பருகுகின்றது, இதைப் போன்ற பிரச்சனைகள் மேல்நாடுகளில் இல்லை; ‘குடிப்பது தீமை’ என்னும் திருக்குறளை அவர்கள் படிப்பது இல்லை; உயர்ந்த குடிவகைகள் நியாயமான விலைகளுக்குக் கிடைக்கின்றன. குடிப்பவன் குற்றம் செய்பவனாகக் கருதப்படுவதில்லை. அதே போல மற்றொன்றையும் விமரிசிக்க வேண்டியுள்ளது. திரைப்படங்களில் கஷ்டப்பட்டுக் காதல் காட்சிகளைப் புகுத்துகிறார்கள். மறைவு நிகழ்ச்சிகளை அம்பலப் படுத்துவது ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று. கலை என்பதே குறிப்பாக வெளிப்படுத்துவதில்தான் சிறப்பு இருக்கிறது. சில குறிப்புகள் தந்தால் போதும். நாடகங்களில் இவ்வாறு வெறும் குறிப்புகள் தந்தால் போதும்; திரைப்படங்களில் அவ்வாறு செய்ய முடியாது: கருத்தைவிட காட்சிகளுக்குத் திரைப்படம் முதன்மை தருகிறது. அதனால் இக்காட்சிகளை மிகைப்படுத்திக் காட்டுவது மரபாகிவிட்டது. நடனக் கலை காதல் காட்சிகளை ஆக்கிரமித்துக் கொள்கிறது. தமிழ்ப்படத்தைவிட தெலுங் குப் படத்தில் இவை மிகுதி, தமிழ்ப்படங்கள் இவற்றி னின்று மெல்ல மெல்ல விடுபட்டுக் கொண்டு வருகின்றன. ஆங்கிலப் படங்கள் இவ்வளவு சிரமம் எடுத்துக் கொள்வதில்லை. அவர்களுக்குப் பாடவும் ஆடவும் மிகுதியும் வாய்ப்புள்ளது. காதற் காட்சிகளில் அவற்றைத் திணிக்க வேண்டும் என்ற தேவை ஏற்படுவதில்லை. அக்காட்சிகள் நடைமுறை ஒட்டி இயல்பாக அமைகின்றன. தைரியமாக இருவர் ஒன்றாக ஆகின்றனர். நாட்டு அங்கீகாரத்தை ஒட்டி முத்தக் காட்சிகளும் இடம் பெறுகின்றன. பொது இடங்களில் காதல் செய்வோர் அதை வெளிப்படுத்த, செயல்முறைப்படுத்த அணைத்துக் கொள்ளுதலும் முத்தமிடுதலும் நடைமுறை நிகழ்ச்சிகளாக இருக்கின்றன. அதைவிட, அவற்றை யாரும் கவனிப்பதே இல்லை என்பது வியப்புக்கு உரிய செய்தி. இங்கே, காதலிப்பதே யாருக்கும் தெரியாமல் செய்ய வேண்டியுள்ளது. அடுத்த நிகழ்ச்சிகள் அதைப் பற்றி விமரிசிக்கத் தேவை இல்லை. அதை யாரும் அனுமதிப்பதும் இல்லை. இத்தகைய நிகழ்ச்சிகள் குற்றவியல்களாகக் கருதப்படுகின்றன. எனவே, திரை உலகமும் அதன்படி நடந்துகொள்ள வேண்டியுள்ளது. தனி மனிதர்கள் சில விஷயங்களில் ஆர்வம் காட்டுவது உண்டு. எப்பொழுதும் அதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று கூறமுடியாது. சில பத்திரிகைகள் நிர்வாணக் காட்சிகளை வெளியிடுகின்றன. அவற்றைச் சிலர் புரட்டிப் பார்த்து என்ன இருக்கிறது என்று ஆர்வம் காட்டுவது இயல்பு. ஆரம்பத்தில் பத்திரிகைகள், போட்டோக்கள் இந்த ஆர்வத்துக்கு விருந்து அளித்தன. வீடியோக்கள் அமலுக்கு வந்ததும் அந்த எல்லையையும் அவை தொட ஆரம்பித்துவிட்டன. ‘நீலப்படங்கள் ‘ ஒளி மறைவாக எடுக்கப்பட்டுத் தனியார் கரங்களுக்கு விற்பனை ஆகின்றன. அது அவர்கள் தனிப்பட்ட போக்குகள். இவற்றிற்கெல்லாம் அங்குத் தடை விதிப்பது இல்லை; இதைப் பற்றிய விமரிசனங்கள் அங்கு நடைபெறுவதும் இல்லை. சில் கவர்ச்சிப் படங்கள் பால்பொருள் அடிப்படையில் எடுக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட இடங்களில் திரையிடப்படவும் செய்கின்றன. அவை அரசாங்கம் அனுமதித்து உள்ளன. இவை தனிப்பட்டவர்களின் மனப் போக்குகள்: ஒரு சிலர் ஒரு சில நேரங்களில் இதைப் போன்ற படங்கள் பார்க்க விரும்புவதை அவர்கள் தடை செய்வது இல்லை; இந்தத் திரை அரங்குகளில் முதியவர்கள் ஓய்வு பெற்றவர்கள் கடந்த கால நினைவுகளை மறுபடியும் புதுப்பித்துக் கொள்ளச் செல்வதுபோல் பொழுது போக்குகின்றனர். ஐரோப்பாவில் எல்லா முக்கியமான நகர்களில் இந்தத் திரையரங்குகள் செயல்படுகின்றன. இவற்றைத் தவறு என்று யாரும் அங்குக் கருதுவது இல்லை. அவற்றைத் தடை செய்வதும் இல்லை, அங்கே இத்தகைய போக்கீடுகள் இருப்பதால் பால் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு ஆட்படாமல் இவற்றைப் புரிந்து கொண்டு சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். அதனால் அவர்களுக்கு அதிகமாக மன அதிர்ச்சிகள் ஏற்படுவது இல்லை, இங்கே நமக்கு இவை புதியவை. நம் கோயிற் கோபுரங்களில் ஒரு சில சிற்பங்கள் இத்தகைய மனோநிலைச் சித்திரங்களைத் தீட்டியுள்ளன என்பது மறுக்கமுடியாது . ஏதோ சில கோயில்களில் இந்த அபூர்வக் காட்சிகள் இடம் பெற்றுத்தான் உள்ளன. மனித உணர்வுகளில் பால் உணர்வு வலிமை மிக்கது; இயல்பானது; அதைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் அந்த உரிமை அங்கீகாரம் இங்கே நடைமுறை யில் இல்லாததால் இலை தடை செய்யப்படுகின்றன; ‘ஆபாசக் காட்சிகள்’ என்று முத்திரை இடப்பட்டுக் குற்றவியல்களாகக் கருதப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பகிரங்கமாக இவை அனுமதிக்கப்படவில்லை என்பதால் இப்படங்கள் நம் நாட்டில் எட்டிப் பார்ப்பது இல்லை என்று கூற முடியாது. இது தடைப்படுத்தப்பட்ட ஒன்று; சமூகவியல் இதற்கு அங்கீகாரம் தராதவரை தடைகள் இருப்பது எதிர்பார்க்கப்படும் ஒன்றுதான், சமூகவியலை ஒட்டித்தான் சட்டவியலும் செயல்படுகிறது. முதியோரின் அவல நிலை ‘பாலும் தேனும் பாயும் நாடு’ அது என்று பார்த்த அளவில் கூற முடிந்தது; மனிதர்கள் சுதந்திரப் பிரியர்கள்; யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. வயது வந்ததும் வாலிப முறுக்கு அது செய்யும் கிறுக்கின் பயனாக ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. அவர்கள் எதையும் தொடர்கதையாக்குவதில்லை. பேரன் வேண்டும் என்பதற்காக மகன் செய்யும் தவச் செயல் அல்ல அவன் பெறும் சின்னஞ் சிறுசுகள், பாட்டி கற்ற கதைகள், வாழ்ந்த வரலாறுகள், மடியில் அமரும் பேரன் பேர்த்திக்குச் சொல்லும் வாய்ப்புகள் அங்கு இல்லை. இங்கு அவ்வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை ஒரு தொடர் சங்கிலி. ‘எல்லாம் பொய்யாய்க் கனவாய் மெல்ல மெல்லப் போனதுவே’ என்பது போலக் கடந்த கால வாழ்வின் அடிச்சுவடி.களைத் திரும்பிப் பார்க்க முடியாது; வயது முதுமையில் முதியவர்தான் பெற்ற மகனாயிற்றே மகளாயிற்றே என்று அதிக உரிமை கொண்டாட முடியாது. இவர் செய்த தவறுகளை எல்லாம் மகன் செய்வான்; அவனும் அப்பாவின் ஸ்தானத்தை அடைகிறான்; தான் அப்பா ஆனபிறகு மற்றொருவரை அவள் அப்பா என்று கூறுவதில் பொருள் இல்லை. அந்த உறவு நாளடைவில் தேய்ந்து விடுகிறது. அவரை வைக்கவேண்டிய இடத்தில் வைத்து விடுகிறார்கள். விருந்தினர் வீட்டுக்குச் செல்வதுபோல இம் முதியவர் இல்லங்களுக்கு இளைய தலைமுறையினர் அவ்வப்பொழுது வந்து போவது உண்டு; பேரன் பேர்த்திகள் தம் பெயரைச் சொல்லித் தாம் படிக்கும் வகுப்புகளைப் பேசிப் புதிதாக வாங்கிய ஆடைகளைக் காட்டி மழலையுரை பேசி மகிழ்விப்பது, உண்டு; அதுவும் காலம் செல்லச் செல்ல அருகிய நிகழ்ச்சியாக ஆதலும் உண்டு. ஒரு கடை மையம் (shopping centre); அங்கே ஒரு முதியவளைப் பார்க்கிறேன். அந்த வாரத்திற்கு வேண்டிய வீட்டுப் பொருள்கள் வாங்கிக் கொள்கிறாள்; குடிப்பதற்கு வேண்டிய வைன், விஸ்கி, பீர் பாட்டில்கள் வாங்கி வைத்துக் கொள்கிறாள். இவள் தனியே இவ்வாறு செயல்படுகிறாள். “யார் இவள்? யாருமே இவளுக்கு உதவிக்கு இல்லையா?” “இருப்பார்கள்; இருக்கத் தேவை இல்லை; அவர்கள் தனியே இருப்பார்கள் . தமக்கு வேண்டியவற்றைத் தாமே வாங்கிக் கொள்வார்கள” “வீட்டில் தனியாகவா இருப்பார்கள்?” “வேறு என்ன செய்ய முடியும்” “கணவனும் மனைவியுமாக வாழ்கிறவர் கொடுத்து வைத்தவர்கள், விதவைகள் ஆன பிறகு தனிமைப்படுத்தப் படுகின்றனர்.” “மறு மணம்?” “துணைக்காகச் செய்து கொள்வதும் உண்டு” என்று பதில் தரப்பட்டது. “பரவாயில்லை” இது வேடிக்கைக்காகத் தரப்பட்ட பதில். தனிமையிலேயே அவர்கள் காலம் கழிக்க வேண்டியதுதான். “பேச்சுத் துண” “சமுதாய சேவகிகள் அவர்கள் வீடுகளுக்கு அவ்வப்பொழுது போய் வருவார்கள். அவர்கள் பேசுவதை அக் கரையோடு கேட்பார்கள்” அந்தத் தனிமையை நினைத்தால் பரிதாபமாகவும் இருக்கிறது; பயங்கரமாகவும் இருக்கிறது. ஒரு அரசு மருத்துவமனை. அதில் ஒரு பகுதி முதிய அவர்களின் இல்லமாகவே விளங்குகிறது, தொண் னூறுக்கு மேற்பட்ட பழுத்த பழங்கள் அங்கே நலிந்து பராமரிக்கப் படுகின்றனர். அவர்களுக்கு இந்தச் சுற்றுப்புற உலகப் பிரமையே இருப்பது இல்லை. அவ்வப்பொழுது முடிந்தவரை அவர்களைத் தொலைக்காட்சி முன் உட்கார வைக்க முடிகிறது. அவர்களை அங்கே பணி செய்யும் நர்சுகள் கவனித்துக் கொள்கிறார்கள், அவர்களைத் தூக்கிச் சென்று தொட்டிலில் இட்டுக் குளிப்பாட்டுகின்றனர். வயது ஆனவர்கள் கவனிக்கப்படுகிறார்கள்; ஆனால் அவர்கள் தனிமையால் ஒதுக்கப்படுவதால் வாடுகின்றனர். அரசு அவர்களைக் கவனித்துக்கொள்கிறது. எல்லா வசதிகளும் தரப்படுகின்றன. இங்கே பொருளாதாரப் பிரச்சனை தீர்ந்துவிடுகிறது, ‘உளவியல்’ பிரச்சனையை மட்டும் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அங்கே நல்ல மருத்துவமும், குளிர் சூழலும், உணவும், தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அரசாங்க உதவியும் அத்துணையும் உண்டு. ஆனால் தம் மக்களோடு பேரப் பிள்ளைகளோடு இருந்து இளமையை அனுபவிக்கும் வாய்ப்புகள் அங்கு இல்லை . முதியவர்கள் ஆயுள் நீட்டிப்போடு வாழ்கின்றனர். எண்பது, தொண்ணூறு என்பது அதிசயமல்ல; அறுபத்தைந்துக்கும் மேல் தான் ஓய்வு பெறுகின்றனர். அதற்குப் பிறகு இருபது ஆண்டுகள் சராசரி வாழ முடிகிறது; அதற்கு மேலேயும் எட்டிப் பிடிக்கிறார்கள்!. நம் நாட்டில் முதியவர்கள் மற்றவர்க்குச் சுமையாக இல்லாமல் தம் கதையைச் சீக்கிரம் முடித்துக் கொள்கின்றனர். ஏதாவது எதிர்பாராத நோய்கள் வந்து ஆயுள் நீட்டிப்பை அதிகப்படுத்திக் கொள்ளாமல் அவர்களை அடக்கி வைக்கிறது; இங்கே, இப்பொழுது தான் சராசரி வயது கொஞ்சம் உயர்ந்து கொண்டு வருகிறது. முதியவர்களுக்குத் தனி இல்லங்கள் அமைக்கப்படுவது இல்லை. ஏன் எனில் முதியவர்களின் இல்லத்தில்தான் அவர்கள் பிள்ளைகள் பேரன் பேர்த்தியர் தங்கித் தொடர்ந்து இருக்கிறார்கள்; அறுந்து கொண்டு அறுத்துக் கொண்டு போகும் உறவுகள் இங்கு இருப்பது இல்லை. கூட்டுக் குடும்ப அமைப்புகள் பெரியவர்களுக்குப் பாதுகாப்புத் தருகிறது. உத்தியோகம் காரணமாகப் பிள்ளைகளில் ஒரு சிலர் பிரிவை ஏற்படுத்திக் கொண்டு தனிக் குடித்தனம் செய்தாலும் ஒன்று இரண்டு வீட்டோடு ஒட்டிக் கொள்வதால் முதியவர்கள் பிரச்சனை இங்கு விசுவரூபம் எடுப்பதில்லை. பெற்றோர்களின் பாதுகாப்பிலிருந்து இளைஞர்கள் ஆரம்பத்திலேயே விடுபடுகின்றனர். அதேபோல் அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து அவர்கள் விடுபட்டு உள்ளனர். இங்கும் ஒரு சில குடும்பங்களில் முதுமையின் தவிப்பு தனிமைத் தாக்கம் இருக்கச் செய்கிறது. உறவுப் பிள்ளைகள் வர போக இருப்பதால் அத்துன்பம் அதிகம் தெரிவதில்லை, பணம் இருந்தால் அதை நாடி மற்றவர்கள் சூழ் வதால் அதிக துன்பம் இருப்பது இல்லை. அது இல்லை என்றால் அவர்கள் அவர்களுக்கே இங்கும் தனிமையாகிவிடுவதிலிருந்து தப்ப முடியாது. என்றாலும் அங்கு உள்ளது போல அந்தச் சூழ்நிலைகள் அண்மையில் உருவாவதற்கு வாய்ப்பு இல்லை; வராது; வந்தால் அதைத் தடுக்க முடியாது. முடிவுரை அங்கே நான் தங்கியது ஐந்து மாதங்கள். வசதியும் மனம் விரும்பும் சூழ்நிலையும் எல்லாம் இருக்கிறது . விருமபி இருந்தால் இன்னும் சில மாதங்கள் இருந்திருக்கலாம். அங்கே தமிழ்நாட்டுத் திரைப்படங்கள் வீடியோக்களில் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். சுமார் ஐம்பது தமிழ்ப் படங்களைப் பார்த்தேன் என்று நினைக்கிறேன், முந்தானை முடிச்சு பலமுறை பார்த்தேன். மண்வாசனை என்னைக் கவர்ந்த படமாக இருந்தது. ரேவதியின் நடிப்பைவிட தோற்றம் என்னைக் கவர்ந்தது; குழைந்து பேசும் இளமை இன்னும் மறக்க முடியலல்லை. ஒரு சிலர் முதற்படத்தில் நம் மனத்தில் பதிந்துவிடுகின்றனர் . தொடர்ந்து அவர்கள் நடிக்கும் படங்களைப் பார்க்கும் போது அந்த உருவம் மங்கிவிடுகிறது. முந்தானை முடிச்சில் ஊர்வசியின் பாத்திரம் மறக்க முடியாத பாத்திரம். அடுத்து வரும் நடிப்புகளில் உருவங்கள் நிற்கவில்லை. சிகப்பு ரோஜாவில் ஸ்ரீதேவி மறக்கமுடியாத பாத்திரம். அதைவிட பதினாறு வயது கவர்ச்சி மிக்க பாத்திரம். மெளலியின் ‘புல்லாங்குழல் ஊதுகிறது’ மிகவும் பிரமாதமாக படம் என்று மதிப்பிட முடிந்தது. மென்மையான நகைச்சுவை; அந்த ஆந்திரப் பெண், அவளின் அருமையான நடிப்பு, மெளலியின் அங்கதம் கலந்த நகைச்சுவை இவை எல்லாம் இன்னும் நான் மறக்க முடியவில்லை. நான் அங்கு இழந்தவை பல; தமிழ்ப் பத்திரிகைகள்; தமிழ்ப் பேச்சு, தமிழ்நாட்டு அரசியல், என்னால் அதற்கு மேல் அங்கு இருக்க முடியாது. ’தமிழ்நாடு நான் பிறந்த மண்; உலகத்தில் எந்தப்பகுதி எப்படி இருந்தாலும் நான் தமிழ்க் நாட்டில் வாழ்ந்துவிட்டேன். வாழ்கிறேன்; இங்கே வாழ்ந்து முடிப்பேன். FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.