[] 1. Cover 2. Table of contents அலை ஓசை - 3 மற்றும் 4 அலை ஓசை - 3 மற்றும் 4   கல்கி கிருஷ்ணமூர்த்தி     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/alai_oosai_3_4 மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation This Book was produced using LaTeX + Pandoc Acknowledgements: Our Sincere thanks go to tiru Bhaskaran Sankaran of Anna University - KBC Research Center, MIT - Chrompet Campus, Chennai, India. for his dedication in publishing Kalki’s Works and for the help to publish them in PM in TSCII format. Etext preparation, TAB level proof reading by Ms. Gracy & Ms Parimala HTML Version and TSCII version proof reading : tiru N D LogaSundaram, selvi L Selvanayagi Chennai PDF version: Dr. K. Kalyanasundaram Lausanne, Switzerland. This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding. To view the Tamil text correctly you need to set up the following: i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha, Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,…) installed on your computer and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP). ii)Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view. . In case of difficulties send an email request to kalyan@geocities.com or kumar@vt.edu Project Madurai 1999 - 2004 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact. பாகம் 3- ‘எரிமலை’ முதல் அத்தியாயம் - ஊதுவத்தி வியாபாரி தேவபட்டணத்துத் தேரோடும் வீதியில் ஒரு குதிரை வண்டி கடகடவென்று சத்தத்துடன் ஓடிக்கொண்டிருந்தது. வண்டிக் குள்ளே ஒரு இளம் பிரயாணி உட்கார்ந்திருந்தான். அவன் தலையிலே பல வர்ணக் கோடுகள் போட்ட உருமாலையைத் தலைப் பாகையாகக் கட்டிக் குஞ்சம் தொங்கவிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தால், மத்திய இந்தியாவிலிருந்து வரும் வியாபாரியைப் போல் காணப்பட்டது. அவனுக்குப் பக்கத்தில் இருந்த தகரப் பெட்டியும் துணி மூட்டையும் மேற்கூறிய ஊகத்தை உறுதிப்படுத்தின. அட்வகேட் ஆத்மநாதய்யரின் வீட்டு வாசலில் வந்து வண்டி நின்றது. இளைஞன் வண்டிக்குள்ளிருந்தபடியே வண்டிக்காரனுக்கு வாடகைப் பணம் கொடுத்துவிட்டு ஒரு கையில் பெட்டியையும் ஒரு கையில் துணி மூட்டையையும் எடுத்துக்கொண்டு வண்டியி லிருந்து இறங்கினான். “நிற்கட்டுமா, சேட்; ஜல்தி வருவீர்களா?” என்று வண்டிக்காரன் கேட்டதற்கு, “நை! தும் ஜாவ்!” என்றான் அந்த வாலிபன். ஜட்கா வண்டி புறப்பட்டுச் சென்றது. “ஆத்மநாதய்யர் வீட்டு வாசலில் இரும்புக் கம்பிக் கதவண்டை அந்த வாலிபன் நின்று உள்ளே எட்டிப் பார்த்தான். ஒரு இளம் பெண்மணியின் முகம் தெரிந்தது.”ஊதுவத்தி வேண்டுமா, அம்மா! அத்தர் புனுகு ஜவ்வாது வேண்டுமா? பெனாரிஸ் ஸில்க் வேண்டுமா?" என்று அவ்வாலிபன் கேட்டதற்கு, உள்ளேயிருந்து, “ஒன்றும் வேண்டாம், போ” என்று ஒரு பெண் குரலில் பதில் வந்தது. “என்னம்மா, இப்படி ஒரேயடியாய் ஒன்றும் வேண்டாம் என்று சொல்றே? இந்த வீட்டில்தானே நாளைக்குக் குழந்தைக்குச் சஷ்டிஅப்த பூர்த்திக் கலியாணம் என்று சொன்னாங்க?” என்று சொல்லிக் கொண்டே அந்த மார்வாரி இளைஞன், பூட்டப்படாமல் வெறுமே சாத்தியிருந்த இரும்புக் கம்பிக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். வீட்டுத் தாழ்வாரத்துக்கும் வெளி கேட்டுக்கும் மத்தியில் இருந்த சுமார் பத்து அடி அகலமுள்ள இடத்தில் ஒரு பன்னீர் மரம், ஒரு மனோரஞ்சிதச் செடி, சில அழகிய பல வர்ணக் குரோடன்ஸ் செடிகள் ஆகியவை இருந்தன. வீட்டின் வாசல் திண்ணைக்கு அருகில் ஒரு இளம் பெண்ணும் ஒரு வயதான ஸ்திரீயும் நின்றார்கள். “பார்த்தாயோ இல்லையோ, இவன் சொல்லுகிறதை! குழந்தைக்கு ஒரு வயது ஆகப்போகிறது; சஷ்டிஅப்தபூர்த்திக் கல்யாணமாம்!” என்று சொல்லிவிட்டு கடகடவென்று சிரித்தாள் அந்த இளம் பெண். “திடுதிடுவென்று உள்ளே நுழைந்து வருகிறானே? கேள்வி முறையில்லையா? கதவைப் பூட்டி வைக்கவேண்டும்!” என்றாள் வயதான ஸ்திரீ. உள்ளே நுழைந்த இளைஞன் அவர் களுடைய பேச்சைக் கவனியாதவன் போல், “அரே பாப்ரே! இங்கே இருக்கிற புஷ்பங் களில் வாசனை நம்முடைய ஊதுவத்தி, அத்தர், சவ்வாது வாசனையைத் தோற்கடித்துவிடும் போலிருக்கிறதே!” என்றான். பிறகு பெட்டியையும் மூட்டையையும் கொண்டு போய்த் திண்ணையில் வைத்து, “ஏன்! அம்மா! நிஜமாக ஊதுவத்தி, அத்தர், புனுகு, சவ்வாது ஒன்றும் வேண்டாமா?” என்று சொல்லிக்கொண்டே பெட்டியைத் திறந்ததும், உள்ளேயிருந்து ஊதுவத்தியின் மணம் கம் மென்று வீசிற்று. “ஏன், லலிதா! நல்ல ஊதுவத்தியாயிருக்கிறதே! கொஞ்சம் வேணுமானால் வாங்கிவைக்கலாமே?” என்று லலிதாவின் தாயார் சரஸ்வதிஅம்மாள் சொன்னாள். “ஒன்றும் வேண்டாம்! நீ கொண்டு போ, அப்பா!” என்றாள் லலிதா. “அப்படி முகத்திலடித்தது போல் சொல்லாதே, சின்னம்மா! பெரியம்மா சொல்கிறதைக் கேள்!” என்று ஊதுவத்தி வியாபாரி சொல்லிவிட்டு, சரஸ்வதிஅம்மாளைப் பார்த்து, “ஊரிலேயிருந்து கிட்டாவய்யர் வந்திருக்கிறார்களா? அவர்களுடைய மூத்தபிள்ளை கங்காதரஐயர் வந்திருக்கிறார்களா?” என்றான். “ஏது, ஏது! உனக்கு எல்லாரையும் தெரியும் போலிருக்கிறதே! நீ யாரப்பா?” என்று கேட்டாள் சரஸ்வதி அம்மாள். “காலம் அப்படி ஆகிவிட்டது! என்ன செய்யலாம்? பெற்ற தாய்க்குப் பிள்ளையை அடையாளம் தெரியாமல் போய்விட்டது!” என்று ஊதுவத்தி வியாபாரி சொல்லிவிட்டுத் தலையில் சுற்றியிருந்த வர்ணக் கோட்டு முண்டாசைக் கையில் எடுத்தான். “அம்மா! நம்ம சூரியாண்ணா?” என்று கூவினாள் லலிதா. “அட என் கண்ணே!” என்று சொல்லிக்கொண்டு சரஸ்வதி அம்மாள் தன்னுடைய குமாரனைக் கட்டிக்கொண்டாள். “ஏன் சூரியா! இது என்ன வேஷம்! சகிக்கவில்லையே?” என்றாள் லலிதா. “சும்மா உங்களை யெல்லாம் ஒரு தமாஷ் செய்யலாம் என்று நினைத்தேன்!” என்றான் சூரியா. உடனே சரஸ்வதி அம்மாள், “தமாஷாவது, மண்ணாங் கட்டியாவது? அழகாயிருக்கிறது! லலிதாவின் மாமனார் இப்போது கோர்ட்டிலேயிருந்து வந்துவிடுவார். உன்னை இந்தக் கோலத்திலே பார்த்தால் ஏதாவது நினைத்துக் கொள்வார். உன் அப்பா, அண்ணா எல்லாரும் இராத்திரி ரயிலிலே வருகிறார்கள். இந்த வேஷத்தை கலைத்துவிட்டு மறு காரியம் பார்!” என்றாள் சரஸ்வதி அம்மாள். “ஆகட்டும்! ஆனால் வேஷத்தைக் கலைப்பதற்கு என்னை அரை மணி நேரம் தனியா இருக்க விடவேண்டும். லலிதா! மேலே உன் அகத்துக்காரர் அறை காலியா கத்தானே இருக்கிறது?” என்று சூரியா கேட்டான். லலிதா பதில் சொல்வதற்குள் சரஸ்வதி அம்மாள், “காலியாகத்தான் இருக்கிறது, ஆனால் இந்தப் பெண் அந்த அறையில் யாரும் போவதற்கு விடுவதில்லை. மாப்பிள்ளையின் படத்தை அங்கே மாட்டியிருக்கிறாள். அந்தப் படத்துக்குத் தினம் பூத்தொடுத்து மாலை போடுகிறது இவளுக்கு ஒரு வேலை! சத்தியவானுக்காகச் சாவித்திரி கூட இப்படித் தபசு இருந்திருக்க மாட்டாள்! ஏண்டாப்பா சூரியா? உனக்குச் சமாசாரம் தெரியுமோ, இல்லையோ?” என்றாள். “மாப்பிள்ளை ஜெயிலுக்கு போயிருக்கிறதைத்தானே சொல்கிறாய்? அது எனக்குத் தெரியாமல் இருக்குமா, அம்மா! ஆனால் பத்திரிகையிலே படித்ததும் ஒரே ஆச்சரியமாகத்தான் இருந்தது, நம்ம பட்டாபி இப்படித் துணிந்து இறங்குவான் என்று நான் நினைக்கவே யில்லை” என்றான் சூரியா. “ஆனால் ஒன்று,சூரியா! இவர் மற்றவர்களையெல்லாம் போலக் கோர்ட்டைக் கொளுத்தினார், தண்டவாளத்தைப் பெயர்த்தார், பாலத்தை உடைத்தார் என்றெல்லாம் பெயர் வாங்கிக்கொண்டு ஜெயிலுக்குப் போகவில்லை. போன அக்டோ பர் இரண்டாம் தேதி காந்தி மகான் ஜயந்தியில் காந்திஜியைச் சிறையில் வைத்திருப்பதைக் கண்டித்துப் பொதுக் கூட்டத்தில் பேசினார். அதற்காக இவரைப் பிடித்துப் போட்டுவிட் டார்கள்!” என்றாள் லலிதா. “இந்தக் கஷ்டமெல்லாம் என்னத்திற்காக, எப்போது முடியப் போகிறது என்று தெரியவில்லை. எல்லாம் என்னுடைய துரதிருஷ்டந்தான்! நீயானால் இப்படி அம்மா அப்பாவுக்குப் பிள்ளை யாக இராமல் போய்விட்டாய்! ஊர் ஊராய் அலைந்து கொண்டிருக்கிறார். லலிதாவை எவ்வளவோ நல்ல இடம் என்று பார்த்துக் கொடுத்தேன். அவளுடைய தலையெழுத்து இப்படி இருக்கிறது!” என்று சரஸ்வதி அம்மாள் வருத்தப்பட்டுக் கொண்டு சொன்னாள். “நம்ம ராமாயணத்தை அப்புறம் வைத்துக்கொள்ளலாமே, அம்மா! முதலிலே சூரியா அவன் காரியத்தைப் பார்க்கட்டும், எல்லாரும் வருவதற்குள்ளே!” என்றாள் லலிதா. “உன் அகத்துக்காரரின் அறையை இரண்டுநாள் நான் வைத்துக் கொள்ளலாம் அல்லவா லலிதா?” “பேஷாக வைத்துக் கொள்ளலாம்; நீயும் அவரும் எவ்வளவு சிநேகம் என்று எனக்குத் தெரியாதா? அடிக்கடி உன்னைப்பற்றி அவர் பேசிக் கொண்டிருப்பார். அவருடைய அறையிலே உனக்கு இல்லாத பாத்தியதை வேறுயாருக்கு?” என்றாள் லலிதா. ரேழி அறையிலிருந்த மச்சுப்படி வழியாகச் சூரியா பெட்டி மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு மேலே போய்ப் பட்டாபி ராமனுடைய அறையில் ஆக்கிரமித்துக் கொண்டான். அந்த அறை வெகு சுத்தமாக வைக்கப்பட்டிருந்தது. மேஜை, அதன் மேலிருந்த மைக்கூடு, பேனா, புத்தக அலமாரி, கோட் ஸ்டாண்டு எல்லாம் ஒரு தூசி துப்பு இல்லாமலிருந்தன. சுவர் மூலைகளில் ஒரு ஒட்டடை கிடையாது. ஒரு பக்கச் சுவரில், சரஸ்வதி அம்மாள் சொன்னது போல் பட்டாபிராமன் படம் காணப்பட்டது. இன்னொரு பக்கச் சுவரில் மகாத்மா காந்தி படம் இருந்தது. இரண்டு படங்களும் அப்போதுதான் தொடுத்துப் போட்ட பூ மாலைகளுடன் விளங்கின. மல்லிகைப் பூவின் மணம் அறையில் கம்மென்று நிறைந்திருந்தது. பின்னோடு தன்னை அறையிலே கொண்டுவிட வந்த லலிதாவைப் பார்த்து, “என்ன லலிதா! மகாத்மா காந்தியையும் உன் அகத்துக்காரரையும் ஒன்றாக வைத்து விட்டாய் போலிருக்கிறதே! இனிமேல் உன் புருஷனையும் ‘மகாத்மா பட்டாபிராமன்’ என்று அழைக்க வேண்டியது தான் போலிருக்கிறது!” என்றான் சூர்யா. “மகாத்மா காந்தி உலகத்திலேயே பெரியவர்; ஆகையால் அவரைப் பூஜிக்கிறேன். உன்னுடைய சிநேகிதர் எனக்குத் தெய்வம்; ஆகையால் அவரையும் பூஜை செய்கிறேன்!” என்றாள் லலிதா. “உன்னுடைய பக்தியை ரொம்பப் பாராட்டுகிறேன், லலிதா! உன்னுடைய மாமியார் கூடக் காலமாகி விட்டாளாமே?” "அவர் கண்ணை மூடி இப்போது இரண்டு வருஷம் ஆகிறது. போன வருஷத்தில் உயிரோடிருந்து பிள்ளை ஜெயிலுக்குப் போனதைப் பார்த்திருந்தால் நெஞ்சு உடைந்து போயிருப்பார். என்னுடைய நெஞ்சு கல் நெஞ்சு, அதனால் உயிரோடிருக்கிறேன். அண்ணா! என் மாமியாரைப்பற்றி நான் புகார் கூறியதையெல்லாம் நினைத்தால் எனக்கு இப்போது வெட்கமாயிருக்கிறது. அவரைப் போல் உத்தமி இந்த உலகத்திலேயே கிடைக்க மாட்டார். என் பேரில் அவருக்கிருந்த பிரியம் அப்புறந்தான் எனக்குத் தெரிய வந்தது. என்னைக் குற்றம் கூறியதெல்லாம் என்னுடைய நன்மைக்காகவே என்று தெரிந்து கொண்டேன். கேள், சூரியா! என் மாமியார் சாகும் போது என் கையை அவருடைய கையால் பிடித்துக் கொண்டே செத்துப் போனார். அவருடைய பிள்ளையைப் பற்றிக் கூட அவ்வளவு கவலை காட்டவில்லை." “உலகமே அப்படித்தான் இருக்கிறது, லலிதா! நாம் ரொம்ப நல்லவர்கள் என்று எண்ணிக்கொண்டிருப்பவர் பொல்லா தவர்களாகி விடுகிறார்கள். பொல்லாதவர்கள் நல்லவர்களாகி விடுகிறார்கள். உலகத்தின் இயல்பே மாறுதல்தானே? சீதாவின் புருஷன் சௌந்தர ராகவன் இப்படிப்பட்ட மூர்க்கனாவான் என்று யார் எதிர்பார்த்தார்கள்? உன்னுடைய அதிர்ஷ்டக்கட்டையைப் பற்றி அம்மா சொன்னாளே? பட்டாபிக்குக் கொடுக்காமல் சௌந்தர ராகவனுக்கு உன்னைக் கலியாணம் செய்து கொடுத்திருந்தால் அப்போது தெரிந்திருக்கும். ஐயோ! சீதா படுகிற கஷ்டத்தை நினைத்தால் எனக்கு இதயம் வெடித்து விடும் போலிருக்கிறது.”ஆம் அண்ணா! அதைப்பற்றி நீ எனக்கு விவரமாகச் சொல்ல வேண்டும். டில்லிக்குப் போன புதிதில் எவ்வளவோ உற்சாகமாகக் கடிதம் எழுதியிருந்தாள். வர வரக் கடிதம் வருவதே குறைந்து போய்விட்டது. கடைசியாக அவள் எழுதிய கடிதங்கள் ஒரே துக்கமயமாயிருக்கின்றன. குழந்தையைக் கூட மாமியாருடன் மதராஸுக்கு அனுப்பி விட்டாளாமே? எதற்காக?" "விவரமாகப் பிற்பாடு சொல்லுகிறேன். மொத்தத்தில் சீதாவின் வாழ்க்கை நரக வாழ்க்கையாகிவிட்டது. உன்னுடைய நிலைமை எவ்வளவோ தேவலை உன் மாமனார் எப்படி இருக்கிறார்?" “என் மாமனார் என் பேரில் காற்றும் படக்கூடாது என்கிறார். வீட்டுக்கு நான்தான் எஜமானி, இரும்புப் பெட்டிச் சாவி என்னிடந்தான் இருக்கிறது. குழந்தைக்கு நாளைக்கு ஆண்டு நிறைவுக் கலியாணம் வேண்டாம் என்று சொன்னேன். ‘இவர் ஜெயிலில் இருக்கும்போது கலியாணம் எதற்கு?’ என்றேன். என் மாமனார், ‘அதெல்லாம் கூடாது; வீட்டுக்கு முதல் பிள்ளைக் குழந்தை; கட்டாயம் அப்த பூர்த்திக் கலியாணம் செய்ய வேண்டும்’ என்று சொல்லிவிட்டார். அதற்குத் தகுந்தாற்போல் இவரும் சிறைச்சாலையிலிருந்து எழுதியிருந்தார்.” “எதிர் வீட்டுக்கும் உங்களுக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் எப்படியிருக்கிறது; போக்கு வரவு நின்றது நின்றதுதானா?” “இது வரையில் அப்படித்தான்! ஆனால் இரண்டு நாளைக்கு முன்பு இவருடைய சிநேகிதர் அமரநாதனும் அவர் மனைவி சித்ராவும் கல்கத்தாவிலிருந்து வந்திருக்கிறார்கள். நாளைக் காலையில் மாமனாரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு அவர்களைப் போய் அழைத்துவிட்டு வரலாமென்றிருக்கிறேன். எதிர் வீட்டுக்காரர்கள் வராமல் என்ன கலியாணம் வண்டிக்கிடக்கிறது?” "அப்படியே செய், லலிதா! கட்டாயம் போய் அவர்களை அழைத்துவிட்டு வா! நான் இன்று ராத்திரியே எதிர் வீட்டுக்குப் போய் வரலாம் என்றிருக்கின்றேன். நானும் உன் புருஷனும் அமரநாதனும் எதிர்வீட்டு மொட்டை மாடியில் உட்கார்ந்து எத்தனை நாள் குஷியாகப் பேசிக் கொண்டிருந்திருக்கிறோம் தெரியுமா? அப்படிச் சிநேகமாயிருந்தவர்கள் திடீரென்று விரோதம் செய்து கொள்ள எப்படித்தான் முடிந்ததோ, தெரியவில்லை!" “இவருக்கு அந்த விஷயம் ஒன்றும் பிடிக்கவேயில்லை. சூரியா! எல்லாம் கிழவர்கள் செய்த வேலை. தகப்பனாரிடம் உள்ள பக்தியினாலே தான் இவர் சும்மா இருந்தார்!” இந்தச் சமயத்தில் சுண்டுப் பயல் இப்போது நன்றாய் வளர்ந்து வாலிபப்பருவத்தை அடைந் திருந்தவன் தடதடவென்று மாடிப்படி ஏறி வந்தான். “சூரியா வந்திருக்கிறானாமே எங்கே?” என்று கேட்டுக் கொண்டே இறைக்க இறைக்க ஓடி வந்தவன், சூரியாவைப்பார்த் துத்திகைத்து நின்று, “ஐயையோ! இவனா சூரியா? முகத்திலே மீசை வைத்துக் கொண்டிருக்கிறானே?” என்றான். “சுண்டு! என் மீசை உனக்குப் பிடிக்கவில்லையா? அப்படியானால் அதை எடுத்தெறிந்துவிட்டு மறுகாரியம் பார்க்கிறேன்!” என்று சொல்லிவிட்டுச் சூரியா முகஷவரம் செய்து கொள்ள ஆரம்பித்தான். வடநாட்டு உடையை களைந்தெறிந்து விட்டு, வேஷ்டி ஜிப்பா அணிந்ததும் பழைய சூரியாவாகக் காட்சி அளித்தான். இரண்டாம் அத்தியாயம் - “ஜப்பான் வரட்டும்!” அன்றிரவு சுமார் எட்டு மணிக்குச் சூரியா எதிர்வீட்டுக்குப் போகலாமென்று புறப்பட்டுச் சென்றபோது அவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவன் போல் அமரநாத் நின்று கொண்டிருந்தான். “வருக! வருக! சுதந்திர வீரர் சூரியாவின் வரவு நல்வரவாகுக!” என்று தமாஷ் செய்து கொண்டே சூரியாவின் கைகளைப் பிடித்து வீட்டுக்குள் அழைத்துப் போனான் அமரநாத். கூடத்தில் போட்டிருந்த ஸோபாக்கள் ஒன்றில் உட்கார்ந்து வர்ண நூலினால் பூவேலை செய்து கொண்டிருந்தாள் ஒரு பெண். இவர்கள் உள்ளே வந்ததும் அவள் எழுந்தாள். அமரநாத் அவளைப் பார்த்து, “சித்ரா! என் அருமை நண்பன் சூரியாவை உனக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். சூரியா! இவள்தான் என்னை மணம் புரிந்த பாக்கியசாலி சித்ரா. பெயர் சித்ராவாக இருப்பதற்கேற்பச் சித்திரக் கலையில் மிகத் தேர்ந்தவள். அணில் போட்டால் கிட்டத்தட்ட ஆடு மாதிரி இருக்கும்!” என்று சொன்னான். சூரியா சிரித்துக்கொண்டே, “ஆடு போட்டால் எப்படி இருக்கும்?” என்று கேட்டான். சித்ரா பளிச் சென்று, “ஆடு போட்டால் அமரநாத் மாதிரி இருக்கும்” என்று கூறினாள்.“பார்த்தாயா, சூரியா! இதிலிருந்து என்ன ஏற்படுகிறது? இந்த மாதரசியின் இதய கமலத்தில் எப்போதும் எழுந்தருளி யிருப்பது இந்த அமரநாத் என்று தெரிகிறதல்லவா! ஆகா! என்னைப் போன்ற பாக்கியசாலி யார்?” என்றான் அமரநாத். “குடியிருக்க வீடு கிடைப்பதுதான் இந்தக் காலத்தில் கஷ்டமாயிருக்கிறதே! ஒருவருடைய இதய கமலத்தில் இன்னொ ருவர் குடியிருக்கிறது என்று வைத்துக் கொண்டால் எவ்வளவோ சௌகரியமாயிருக்கும்!” என்றாள் சித்ரா. இந்தத் தம்பதிகளின் அன்யோன்ய உல்லாசப் பேச்சைக் கேட்ட சூரியா, ‘புருஷன் மனைவி என்று இருந்தால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்?’ என்று எண்ணிக் கொண்டான். வெளிப்படையாக, “அமரநாத்! உங்கள் மனைவியைப் பற்றி லலிதா வர்ணித்திருந்ததெல்லாம் சரிதான்!” என்று சொன்னான். “லலிதா என்பது யார்?” என்று சித்ரா ஒரு கேள்வி போட்டாள். “இதென்ன இப்படிக் கேட்கிறீர்கள்? உங்களுக்கு எதிர் வீட்டில் இருக்கும் என்னுடைய சகோதரி லலிதாவைத் தான் சொல்கிறேன்.”“ஓகோ! எங்கள் சத்துரு வீட்டு நாட்டுப் பெண்ணையா? நான் அவளைப்பார்த்து எத்தனையோ வருஷம் ஆயிற்றே! என்னைப்பற்றி அவள் என்ன வர்ணித்திருக்க முடியும்?” என்று கேட்டாள் சித்ரா. “முன்னே எழுதியிருந்ததைத்தான் சொல்கிறேன் அவளும் தாங்களும் ரொம்ப சிநேகிதம் என்று எழுதியிருந்தாள்.” “சிநேகமும் இல்லை, ஒன்றுமில்லை; நாங்கள் ஜன்ம விரோதிகள் அல்லவா?” இதற்குள் அமரநாத், “சூரியா! முனிசிபல் எலெக்ஷன் விஷயமாக இந்த இரண்டு வீட்டுக்கும் கொஞ்சம் மனஸ்தாபம் ஏற்பட்டதல்லவா? அது விஷயத்தில் இவளுக்கு ரொம்பக் கோபம், அந்தக் கோபத்தை இப்படிக் காட்டுகிறாள்!” “எனக்குக் கோபம் ஒன்றுமில்லை, மனிதர்கள் இப்படி மூடர்களாயிருக்கிறார்களே என்று பரிதாபந்தான். மொத்தத்தில் நமது தமிழ் நாட்டு ஜனங்கள் வாழத் தெரியாதவர்கள்.வாழும் வகை தெரிய வேண்டுமானால் கல்கத்தாவுக்குப் போய் வங்காளிகளுக்கு மத்தியில் இரண்டு வருஷமாவது இருந்துவிட்டு வரவேண்டும்!” என்றாள் சித்ரா. “நான் அதை ஒப்புக் கொள்ள மாட்டேன். தமிழ்நாட்டார் மற்றவர்களிடம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன இருக்க முடியும்?” என்றான் சூரியா. “இதைக் கேள், சூரியா! எலெக்ஷன் சண்டைக்குப் பிறகு இவளை இங்கே வைத்துக் கொண்டு காலட்சேபம் செய்ய முடியாது என்று தான் முக்கியமாக நான் கல்கத்தாவுக்குப் போனேன். போன பிறகு, ஏண்டாப்பா போனோம் என்று இருக்கிறது. இவளுக்கு வங்காளி நாகரிகத்தில் அத்தனை மோகம் பிறந்துவிட்டது. அதுவும் நேதாஜி சுபாஷ் மலாய் நாட்டில் சுதந்திர இந்திய சர்க்காரை ஸ்தாபித்திருக்கிறார் என்று தெரிந்த பிறகு இவளுக்கு ஒன்றுமே தலைகால் புரியவில்லை. ஆகாச விமானம் ஒன்று கிடைத்தால் என்னை இவள் பரிதவிக்கவிட்டு நேதாஜி போஸிடம் பறந்து போய்விடுவாள்!” என்றான் அமரநாத். இந்தச் சமயத்தில் வாசலில் ஆள்வரும் சத்தம் கேட்கவே, சித்ரா, “மாமனார் வருகிறார் போலி ருக்கிறது!” என்று சொல்லிக் கொண்டே எழுந்து, மச்சுப்படி ஏறத் தொடங்கினாள். “நாளை ஆண்டு நிறைவுக்கு உங்களை வந்து லலிதா அழைப்பாள்! அவசியம் வரவேண்டும்” என்றான் சூரியா. தாமோதரம்பிள்ளை உள்ளே வந்ததும், இளைஞர்கள் இருவரும் எழுந்து நின்றார்கள். “அப்பா! யார் பார்த்தீர்களா? அடையாளம் தெரிகிறதா?” என்று அமரநாத் கேட்டான். “ஓகோ! நம்ம சூரியா போலிருக்கிறதே! ஒருவேளை தவறாகச் சொல்கிறேனோ? கண் அவ்வளவு துல்லியமாக இல்லை; வயதாகி விட்டதல்லவா?” என்றார் தாமோதரம்பிள்ளை. “சூரியாதான், அப்பா! சூரியாவே தான்!” என்றான் அமரநாத். “நமஸ்காரம்” என்றான் சூரியா. தாமோதரம்பிள்ளை அவருடைய ஆபீஸ் அறைக்குப் போய் விடுவார் என்று அமரநாத் நினைத்ததற்கு மாறாக அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தார். வாலிபர்கள் இருவரும் உட்கார்ந்த பிறகு சூரியாவை அவர் மறுபடியும் உற்றுப் பார்த்தார். “ஆமாம், சூரியாதான்! என்ன ஓய்! சூரியநாராயண ஐயரே! நீர் எங்கேயோ ஆப்கானிஸ்தானத்தில் இருக்கிறதாகச் சொன்னார்கள்; மாஸ்கோவில் பார்த்ததாகச் சொன்னார்கள்; அப்புறம் ஸைகானுக்கு வந்து விட்டதாகச் சொன்னார்கள்; கடைசியில் நம்ம ஊரிலே இருக்கிறீரே? இந்தியாவின் சுதந்திரம் எந்த மட்டில் இருக்கிறது? எங்கே கொண்டு வந்து நிறுத்தி வைத்திருக்கிறீர்?” என்றார். “மாமா! என்னைப்பற்றி இவ்வளவு தூரம் ஞாபகம் வைத்துக் கொண்டு, எந்த நாட்டுக்குப் போயிருக்கிறேன் என்றெல்லாம் விசாரித்து வைத்திருக்கிறீர்களே? அதற்காகச் சந்தோஷம், ஆனால் நான் எந்த அயல் நாட்டுக்கும் போகவில்லை. இந்தியாவின் சுதந்திரம் இந்தியாவிலே தான் இருக்கிறது. இந்தியாவின் சுதந்திரத்துக்காக ஆப்கானிஸ்தானத்துக்கு ஏன் போக வேண்டும்?” என்றான் சூரியா. “அப்படிச் சொல்லாதேயும், ஓய் சூரியநாராயண ஐயரே. நேதாஜி போஸ் மலாய் நாட்டில்தானே சுதந்திர இந்திய சர்க்காரை ஸ்தாபித்திருக்கிறாராம்? அப்புறம், ஜயப்பிரகாச நாராயணன் நேபாளத்திலோ திபெத்திலோ இந்தியாவின் சுதந்திரத்தை ஸ்தாபித் திருப்பதாகச் சொல்கிறார்கள்! அதெல்லாம் பொய்யா?” “உண்மையில் இந்தியாவின் சுதந்திரம் ஆமத்நகர் சிறைச்சாலையில் காந்தி மகாத்மா, நேருஜி முதலிய தலைவர்களால் ஸ்தாபிக்கப்பட்டு வருகிறது!” என்றான் அமரநாத். “சூரியநாராயண ஐயரே! அமரநாத் சொல்வதை நீர் ஒத்துக் கொள்கிறீரா?” என்றார் தாமோதரம்பிள்ளை. “மாமா! என்னைச் சூரியா என்று அழைத்தால்தான் இனிமேல் பதில் சொல்வேன்.”சரி அப்பா, சூரியா! இப்போது சொல்லு! இந்தியாவுக்குச் சுதந்திரம் எந்த வழி மூலமாக வரப் போகிறதென்று நினைக்கிறாய்?" என்று தாமோதரம்பிள்ளை கேட்டார். “சொல்ல முடியாது மாமா! எந்த வழியினாலும் வரும்; எல்லா வழியி னாலும் வரும். ஆனால் வரும்போது அதைக் கைப்பற்ற ஜனங்கள் தயாராயிருக்க வேண்டும். இதற்கு நம்முடைய ஜனங்களைத் தயார் செய்வது தான் இப்போது நாம் செய்ய வேண்டிய முக்கியமான வேலை…” “சுதந்திரத்துக்கு நம்முடைய ஜனங்களைத் தயார் செய்கிறதா? சூரியா! அது ஒருநாளும் முடியாத காரியம். நம்முடைய ஜனங்களைச் சுதந்திரத்துக்குத் தயார் செய்ய வேண்டுமானால் அதற்கு வழி என்ன தெரியுமா? ஜப்பான்காரன் படையெடுத்து வந்து இந்தியாவைப் பிடித்து ஒரு பத்து வருஷமாவது ஆட்சி நடத்த வேண்டும். நம்ம ஜனங்களுக்கு ஜப்பான்காரன் தான் சரி. அவன் உச்சிக்குடுமிகளையெல்லாம் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கிச் சாதி வித்தியாசம், மத வித்தியாசம் எல்லாவற்றையும் அடியோடு ஒழிக்க வேண்டும். அரிசியும் பருப்பும் சாப்பிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டிருப்பவர்களையெல்லாம் சவுக்கினால் நாலு அடி அடித்து மாமிசமும் மீனும் சாப்பிடச் செய்ய வேண்டும். பத்து வருஷம் இப்படி ஜப்பானிய ஆட்சியிலே இருந்தால் இந்தியா சுதந்திரத்துக்கு லாயக்காகும்! என்ன சொல்கிறாய், சூரியா!” “நான் அதை ஒப்பவில்லை; ஜப்பான் ஆட்சியில் பத்து வருஷம் இருந்தால் அதற்குப் பிறகு இன்னும் 140 வருஷம் ஜப்பான் ஆட்சியிலே இருக்க நேரிடும். ஆனால் ஜப்பானியர்கள் அவ்வளவு மூடர்கள் என நான் நினைக்கவில்லை. இந்தியாவைத் தாங்கள் ஜயிப்பதற்குப் பதிலாக, நேதாஜி சுபாஷ்போஸுக்கு உதவி செய்து அவரைக் கொண்டு இந்தியாவின் சுதந்திரத்தை நிலைநாட்டவே பார்ப்பார்கள். இந்தியாவை ஜயித்து ஆள்வதைக் காட்டிலும் இந்தியாவைச் சிநேகமாக வைத்துக் கொள்வதுதான் ஜப்பானுக்கு அனுகூலம்.” "ஜப்பானுக்கு எது அனுகூலம் என்று உமக்குத் தெரிந்திருக்கிறது, ஓய்! அது ஜப்பானுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே? நாய் குரைத்ததைப் பார்த்து ஒருவன் பயப்பட்டானாம். ‘குரைக்கிற நாய் கடிக்காது’ என்கிற பழமொழி தெரியாதா? என்று இன்னொருவன் சொன்னானாம். ‘பழமொழி எனக்குத் தெரியும்; ஆனால், அந்த நாய்க்குத் தெரிந்திருக்க வேண்டுமே!’ என்றானாம் பயந்த பேர்வழி. அந்த மாதிரி, நேதாஜிக்கு உதவி செய்வதின் அனுகூலத்தை ஜப்பான் உணர்ந்திருக்க வேண்டுமே?" “நேதாஜி படையில் இதுவரை ஐம்பதினாயிரம் வீரர்கள் சேர்ந்திருக்கிறார்களாம். ஜப்பான்தான் ஆயுதம் கொடுத்து உதவியிருக்கிறதாம்!” என்றார் அமரநாத். ஐம்பதினாயிரம் வீரர்கள் என்றால் அவ்வளவு அதிகமா? அவர்களைக் கொண்டு இந்தியா தேசத்தையே பிடித்துவிட முடியுமா?" என்றார் தாமோதரம்பிள்ளை. “நேதாஜி ஐம்பதினாயிரம் பேரோடு வந்தால் இந்தியாவில் அவருடன் சேர்வதற்கு ஐம்பது லட்சம் பேர் காத்திருக்கிறார்கள்!” என்றான் சூரியா. “வங்காளத்தில் மட்டுமே ஐம்பது லட்சம் பேர் சேர்வார்கள். கல்கத்தாவெல்லாம் ஓயாமல் இதைப்பற்றியே பேச்சாக இருக்கிறது” என்றான் அமரநாத். "ஐம்பது லட்சம் பேர் சேரட்டும்; ஐந்து கோடிப் பேர் வேணுமானாலும் சேரட்டும். நேதாஜி புது டில்லிக்கு வந்து சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொள்ளட்டும், நான் குறுக்கே நிற்கவில்லை. ஆனால் அரசனை நம்பிப் புருஷனைக் கைவிடுகிற காரியம் மட்டும் உதவாது. நேதாஜி எப்போதோ வரப்போகிறார் என்பதற்காக இப்போது இங்கே சில தறிதலைகள் ‘ஸாபொடாஜ்’ வேலையில் இறங்குகிறார்களே, அது சுத்த முட்டாள்தனம். ஜப்பான் வருகிறவரையில் காத்திருப்பது தானே! அதற்குள்ளே ரயிலைக் கவிழ்க்கிறேன், பாலத்தை உடைக்கிறேன் என்று ஆரம்பிக் கிறார்களே! ‘ஸாபொடாஜ்’ வேலைகள் அரசாங்கத் துரோகம் மட்டுமல்ல, பொது ஜனத் துரோகம். நான் ஜட்ஜாயிருந்தால் அப்படிப்பட்ட காரியம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிப்பேன். "இவ்விதம் தாமோதரம்பிள்ளை சொல்லி வந்த போது சூரியாவின் முகத்தில் ஒரு மாறுதல் காணப் பட்டது. மலர்ந்திருந்த அவன் முகம் சட்டென்று சுருங்கிற்று. இந்த மாறுதலை அமரநாத் கவனித்தான். அமரநாத் கவனித்தான் என்பதைச் சூரியாவும் தெரிந்து கொண்டான். தெரிந்து கொண்டதும் அமரநாத்தின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். சூரியாவின் கண்கள் ஏதோஒரு உறுதியை அமரநாத்தினிடம் எதிர்பார்த்ததாகத் தோன்றியது. அமரநாத்தின் கண்கள் அந்த உறுதியைச் சூரியாவுக்கு அளித்தன. மூன்றாம் அத்தியாயம் - ஆண்டு நிறைவில் அடிதடி சிரஞ்சீவி பாலசுப்பிரமணியன் ஆண்டு நிறைவுக் கலியாணம் மேளதாளத்துடன் சிறப்பாக ஆரம்பமாயிற்று. கலியாண வீட்டில் எல்லாரும் வெகு உற்சாகமாக இருந்தார்கள். இதற்கு முக்கிய காரணம் சூரியாவின் எதிர்பாராத வருகைதான். நெடுநாளாகப் பாராத பிள்ளையைப் பார்த்துக் கிட்டாவய்யரும், அவருடைய மனைவியும் ஆனந்தக் கடலில் மூழ்கினார்கள். லலிதாவின் குதூகலத்தைப் பற்றிச் சொல்ல வேண்டிய தில்லை. தன்கணவன் சிறைச்சாலையில் இருப்பதைக் கூட அவள் அன்றைக்கு மறந்து கலியாண ஏற்பாடுகளில் உல்லாசமாக ஈடுபட்டு ஓடியாடிக் கொண்டிருந்தாள். லலிதாவின் மாமனார் ஆத்மநாதய்யருக்கு, சூரியாவின் வருகை காரணமாக எதிர் வீட்டுத் தாமோதரம்பிள்ளையுடன் மறுபடியும் பேச்சுவார்த்தை தொடங்கியது பற்றி மிகவும் சந்தோஷம் உண்டாயிற்று. சூரியாவுக்கும் அன்றைக்கு என்றுமில்லாத உற்சாகம் ஏற்பட்டிருந்தது. அப்பா அம்மா முதலியவர்கள் தன்னை எப்படி வரவேற்பார்களோ என்று அவன் மனத்தில் ஏற்பட்டிருந்த சந்தேகம் நீங்கிற்று. அமரநாதன் தன்னுடைய சிநேகத்தை மறந்து விடவில்லை என்பதும் அவனுடைய தகப்பனார் தாமோதரம்பிள்ளை கூடத் தன்னுடன் சல்லாபமாகப் பேசியதும் அவனுடைய உற்சாகம் வளரக் காரணமாயிருந்தன. இது மட்டுமா, அவனுடன் பெருஞ்சண்டை போட்ட தமையன் கங்காதரன் இன்று அன்பாகப் பேசினான். "சூரியா! அப்பாவுக்கு வயதாகிவிட்டது அவரால் பண்ணைக் காரியங்களைக் கவனிக்க முடியவில்லை. நானும் என் வேலையைவிட்டு கிராமத்துக்குப் போய்இருப்பது முடியாத காரியம். நீதான் ராஜம்பேட்டைக்குப்போய் அப்பாவுக்கு ஒத்தாசையாயிருக்க வேண்டும். குடியானவர்கள் விஷயத்தில் உன் இஷ்டம் போல் எப்படி வேணுமானாலும் செய்துகொள்; நான் ஆட்சேபிக்கவில்லை. ஐந்து வருஷம் அலைந்தது போதும், பேசாமல் ஊருக்கு வந்துவிடு!" என்று கங்காதரன் கூறியது சூரியாவுக்கு மிக்க ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்தது. எல்லோரும் தன்னிடம் இவ்வளவு அன்பாக இருப்பது ஏன் என்று அடிக்கடி கேட்டுக் கொண்டான். எல்லாரும், “சூரியா! சூரியா!” என்று அவனைப் பிரமாதப்படுத்துவதைப் பார்த்துவிட்டு லலிதாவின் சீமந்த புத்திரி பட்டுவும் அவனுடன் அதி விரைவில் சிநேகமாகி விட்டாள். சூரியாவின் மடியில் ஏறி உட்கார்ந்துகொண்டு வேறு யார் அழைத்தாலும் வரமாட்டேன் என்று அந்தக் குழந்தை பிடிவாதம் பிடித்தது. இதனாலெல்லாம் சூரியா வெகு நாளாக அறியாத உற்சாகத்துடன் இருந்த சமயத்தில் காலை சுமார் எட்டு மணிக்கு, வாசலில் தபால்காரன் வந்தான். தபால்கார னுடைய குரல் சூரியாவுக்கு ஏற்கனவே கேட்ட குரலாகத் தொனித்தது. உடனே லலிதா, “தெரியுமா, அண்ணா உனக்கு? தபால்கார பாலகிருஷ்ணன் இப்போது இந்த ஊருக்கு மாற்றலாகி வந்துவிட்டான். இந்த வீதிக்கு அவன் தான் இப்போது தபால் கொண்டு வந்து கொடுக்கிறான்!” என்றாள். அவள் சொல்லி வாய் மூடுவதற்குள்ளே, “இந்த வீட்டிலே கே.எஸ். நாராயணன் என்று யாராவது வந்திருக்கிறார்களா?” என்று பாலகிருஷ்ணன் கேட்டது சூரியாவின் காதில் விழுந்தது. உடனே சூரியா வீட்டுக்கு வெளியே சென்று “என்ன, பாலகிருஷ்ணா! சௌக்கியமா? என்னை நினைவு இருக்கிறதா?” என்று கேட்டான். “ஓகோ! நீங்கள்தானா ஸார்? அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன். என்ன சேதி! என்ன சமாசாரம்? எப்போது வந்தீர்கள்? இந்தக் கடிதம் உங்களுக்குத்தானா பார்த்துச் சொல்லுங்கள்!” என்று ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினான். விலாசம் தாரிணியின் கையெழுத்தில் இருப்பதைக் கண்டு சூரியா ஆவலுடன் அதை வாங்கி, “ஆமாம், எனக்குத் தான்!” என்றான். “ஓகோ! கே.சூரிய நாராயணய்யர் என்ற பெயரை கே.எஸ். நாராயணன் என்று சுருக்கிக் கொண்டீர்களாக்கும்! நினைத்தேன்; நினைத்தேன். லலிதா அம்மாளுக்குக் கூட ஒரு கடிதம் இருக்கிறது, அதையும் நீங்களே…” என்று சொல்வதற்குள், லலிதா அங்கு வந்து சேர்ந்தாள். “இந்தாங்க அம்மா உங்களுக்கு ஒரு கடிதம். குழந்தைக்கு இன்றைக்கு ஆண்டு நிறைவுக் கலியாணம் போலிருக்கிறது. ராஜம் பேட்டையிலே நடந்த கலியாணம் நேற்று நடந்ததுபோல் இருக்கிறது!” என்று சொல்லிக்கொண்டே பாலகிருஷ்ணன் லலிதாவிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தான். பிறகு சூரியாவைப் பார்த்து, “ஸார்! மதகடியில் நாம் சண்டை போட்டோ மே ஞாபகம் இருக்கிறதா? கடிதத்தை நான் பிரித்துப் பார்த்துவிட்டேன் என்று கோபித்துக் கொண்டீர்களே?” என்றான். “அதைப்பற்றி இப்போது என்ன? எந்தக் காலமோ நடந்தது!” என்று சொன்னான் சூரியா. “அதற்காகச் சொல்லவில்லை; இப்போது உங்களிடம் கொடுத்தேனே, அந்தக் கடிதத்தை நான் பிரித்துப் பார்க்கவில்லை என்பதற்காகத் தான் சொன்னேன் தெரிகிறதா?” சூரியா உடனே சந்தேகத்துடன் தன் கையிலிருந்த கடிதத்தை முன்னும் பின்னும் திருப்பி உற்றுப் பார்த்தான். பால கிருஷ்ணன் புன்னகையுடன், “என்ன, ஸார்! பிரித்துப் பார்த்திருக்கிறதா!” என்று கேட்டான். “இல்லை” என்றான் சூரியா. “அதற்காகத் தான் சொன்னேன்; ஒருவேளை பிரித்துப் பார்த்திருந்தாலும் பிரித்தது நான் இல்லை. பழைய ஞாபகத்தை வைத்துக்கொண்டு என் பேரில் சந்தேகப்படாதீர்கள்; தெரிகிறதா? லலிதா அம்மா! உங்கள் கடிதத்தையும் நான் பிரித்துப் பார்க்கவில்லை. மிஸ்டர் சூரியா பெரிய சந்தேகப்பிராணி ஆயிற்றே! அவர் என் பேரில் சந்தேகப்படக் கூடாது! நான் போய் வரட்டுமா?” “போஸ்டுமேன்! மத்தியானம் இங்கே வந்து சாப்பிட்டுவிட்டுப் போகலாமே?” என்றாள் லலிதா. “அந்தக் காலம் மலையேறிப் போச்சு; இப்போ எனக்கும் குடும்ப பாரம் சுமந்திருக்கிறது. மத்தியானம் வீட்டுக்குச் சாப்பிடப் போகாவிட்டால் நல்ல டோ ஸ் கிடைக்கும். சாப்பாடு கிடக்கிறது அம்மா! மனது நல்ல மனதாயிருக்க வேண்டும் அவ்வளவுதான். மிஸ்டர் சூரியா! உங்கள் கடிதத்தை நான் பிரித்துப் பார்த்ததாக எண்ணிக் கொள்ள வேண்டாம், தெரிகிறதா? என்ன லலிதா அம்மா, நான் சொல்கிறது என்ன?” என்று சொல்லிக் கொண்டே பாலகிருஷ்ணன் நடையைக் கட்டினான். அவன் கொஞ்ச தூரம் போனதும் சூரியா லலிதாவைப் பார்த்து, “பாலகிருஷ்ணனுடைய கிறுக்கு முன்னைவிட அதிகம் போலிருக்கிறதே? இப்படி உளறுகிறானே?” என்றான். “அவன் ஒன்றும் உளறவில்லை, அண்ணா! அவனுக்குக் கிறுக்கும் இல்லை. பாலகிருஷ்ணன் சொன்னதில் அர்த்தம் உனக்குப் புரியவில்லையா?” “அவன் சொன்னதில் அர்த்தம் வேறே இருக்கிறதா?” என்று கேட்டான் சூரியா. “ஏன் இல்லை? உனக்கு இது தெரியாதது ஆச்சரியமாயிருக்கிறது. வடக்கேயெல்லாம் ஒருவேளை இந்த வழக்கம் கிடையாதோ என்னமோ? இவர் ஜெயிலுக்குப் போனதிலிருந்து எனக்கு வரும் கடிதங்களையெல்லாம் பிரித்துப் பார்த்துவிட்டுத் தான் அனுப்புகிறார்கள்; இதற்கு ‘சென்ஸாரிங்’ என்று பெயராம்…” சூரியாவுக்கு ‘சுருக்’ என்றது, மறுபடியும் கடிதத்தை முன் பின் திருப்பிப் பார்த்துவிட்டுத் தைரியமாக, “எனக்கு வந்திருக்கும் கடிதத்தை யாரும் பிரித்துப் பார்க்கவில்லை” என்றான். “உனக்கு எப்படித் தெரியும், பிரித்துப் பார்க்கவில்லை என்று? சில கடிதங்களைப் பகிரங்கமாகப் பிரித்துப் பார்த்து மேலே ‘சென்ஸார் செய்யப்பட்டது’ என்று சீட்டை ஒட்டி விடுவார்களாம். இன்னும் சில கடிதங்களைப் பிரித்து தெரியாதபடி திருப்பி ஒட்டிவிடுவார்களாம். எனக்கு இரண்டு விதமாகவும் வருவதுண்டு.” “உன் அகத்துக்காரர் சிறையிலிருந்து உனக்கு எழுதும் கடிதங்களை அப்படியெல்லாம் பிரித்துப் பார்த்து அனுப்பலாம். ஆனால், நான் இன்றைக்கு வந்தவன்தானே? என் கடிதத்தை எதற்காகப் பிரிக்கிறார்கள்?” “அப்படியில்லை, அண்ணா, இந்த வீட்டு மேல் விலாசம் இருப்பதால் ஒருவேளை பிரித்துப் பார்த்திருப்பார்கள். நீயும் அப்படி இலேசுபட்டவன் அல்லவே? என்னென்னமோ செய்து கொண்டிருக்கிறாய் அல்லவா? நமக்குப் பார்த்தால் உறை பிரிக்கப்பட்டதாகவே தெரியாது. ஆனால் பாலகிருஷ்ணனுக்குப் பார்த்தவுடனே தெரிந்து போய்விடும். அவன் சொன்னதிலிருந்து நம் இரண்டு பேருக்கும் வந்த கடிதங்களைப் பிரித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். எல்லாவற்றுக்கும் கடிதத்தைப் படித்துப் பார்க்கலாம்!” இவ்விதம் சொல்லிக் கொண்டே லலிதா உறையைப் பிரித்தாள். உள்ளேயிருந்த கடிதத்தைப் பார்த்ததும் அவளுடைய முகம் மலர்ந்தது. “இவர் தான் ஜெயிலிலிருந்து எழுதியிருக்கிறார்! குழந்தையின் ஆண்டு நிறைவு அன்றைக்குச் சரியாக வந்து சேரும்படியாக எழுதியிருக்கிறார்.அவர் மட்டும் இங்கே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்? நீ வந்ததற்காக எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்?” என்றாள் லலிதா. இதற்குள் உள்ளேயிருந்து அம்மா கூப்பிடும் குரல் கேட்கவே லலிதா வீட்டுக்குள் சென்றாள். சூரியாவும் தனக்கு வந்த கடிதத்தைப் பிரித்துப் பார்த்தான். பிரிக்கும்போதே அவன் மனதிலிருந்த கலக்கம் அகன்றுவிட்டது கடிதம் எழுதியிருப்பது தாரிணி. ஸி.ஐ.டி. போலீஸுக்கு உபயோகப்படக்கூடிய எந்த விஷயமும் அவள் எழுதியிருக்கமாட்டாள். புரட்சிக் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் கடிதம் எழுதும்போது மனிதர்களின் உண்மைப் பெயர்களைக் கூடக் குறிப்பிடுவதில்லை, எல்லோருக்கும் மாறு பெயர்கள் இருந்தன. தாரிணிக்குச் ‘சரித்திரம்’ என்று பெயர் சூரியாவுக்கு ‘தூதன்’ என்று பெயர். இப்படி யெல்லாம் முன் ஏற்பாடு செய்து கொண்டிருக்கும்போது ஸி.ஐ.டி. பிரித்துப் பார்த்து என்ன தெரிந்து கொள்ள முடியும்? சூரியா எண்ணியது போலவே தாரிணியின் கடிதத்தில் போலீஸுக்கு உபயோகப்படக்கூடிய விஷயம் ஒன்றுமில்லை. ஆனால் வேறுவிதக் கவலை சூரியாவுக்குத் தரக்கூடிய விஷயம் இருந்தது. தாரிணி வெகு சுருக்கமாகச் சில வரிகள் தான் எழுதியிருந்தாள். “அத்தங்காளின் நிலைமை முன்னைவிட மோசமா யிருக்கிறது. உடம்பு, மனது ஒன்றும் சரியாயில்லை; உங்களைச் சந்திக்க விரும்புகிறாள். கூடிய சீக்கிரம் வந்து சேரவும், நீங்கள் உடனே வந்து சேராவிட்டால் ஏதாவது விபரீதமாக முடியலாம். - சரித்திரம்.” இந்தக் கடிதம் சூரியாவை ரொம்பவும் கலக்கிவிட்டது. தென்னாட்டுக்கு எந்த வேலையை முன்னிட்டு வந்தானோ அது பூர்த்தியாகி விட்டதாகச் சொல்வதற்கில்லை. ஆயினும் பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம் என்று திரும்பிப் போக வேண்டியது தான். ஆகா! இது என்ன தொல்லை! நல்ல அத்தங்காள் வந்து சேர்ந்தாள், தன்னுடைய வேலையையெல்லாம் கெடுப்பதற்கு! அந்த மூர்க்கன், அவளுடைய கணவன், இப்படியும் ஒரு மனிதன் உண்டா? சீதாவின் வாழ்க்கை எப்படி முடியப் போகிறதோ, தெரியவில்லையே? ஆண்டு நிறைவுக் கலியாணத்துக்காக வைதிகப் பிராமணர்களும் பந்துமித்திரர்களும் வரத் தொடங் கினார்கள். சூரியாவும் வீட்டுக்குள்ளே சென்றான், வைதிககாரியங்கள் ஆரம்பமாயின. வைதிகர்கள் வேத மந்திரங்களை ஓதினார்கள். ஸ்திரீகள் ‘கௌரீ கலியாணம்’ பாடினார்கள். நாதஸ்வர கோஷ்டியர் ஜாம்ஜாம் என்று முழங்கினார்கள். சூரியாவும் சற்று நேரத்தில் மேற்படி வைபவங்களில் முழுதும் மனதை ஈடுபடுத்தினான். தான் வந்த காரியத்தையும் புது டில்லி அத்தங்காளின் கஷ்டத்தையும் மறந்து விட்டான் என்றே சொல்லலாம். காலை மணி 10-30 ஆயிற்று; தாமோதரம்பிள்ளை தம்முடைய ஆபீஸ் அறையில் உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். டெலிபோன் மணி அடித்தது; ரிஸீவரை எடுத்துக் காதில் வைத்துக்கொண்டு பேசினார். “ஹலோ! தாமோதரம்பிள்ளை பேசுகிறது, போலீஸ் ஸ்டேஷனா? என்ன விசேஷம் - எதிர் வீட்டிலா? - ஓகோ? - நான் எதிர்வீட்டுப் பக்கம் எட்டிப் பார்க்கிறது கூடக் கிடையாதே… உங்களுக்குத் தான் நன்றாய்த் தெரியுமே?..இல்லை, நான் பார்க்கவில்லை. தெரியாது, ஒன்றுமே தெரியாது!… வாருங்கோ! வாருங்கோ! பேஷாய் வாருங்கோ! எல்லாத் தமாஷையும் என் வீட்டிலிருந்தே பார்க்கிறேன்!” டெலிபோன் ரிஸீவரை வைத்த பிறகு தாமோதரம்பிள்ளை மேலே நோக்கியவண்ணம் இரண்டு நிமிஷம் யோசித்துக் கொண்டிருந்தார்; பிறகு, “அமரநாத்!” என்று அழைத்தார். அமரநாத் அறைக்குள்ளே வந்தான். “எங்கேயோ புறப்படுகிறாப்போல் இருக்கே?” என்றார். “ஆம், அப்பா! நானும் சித்ராவும் எதிர்வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம் போகலாமல்லவா!” “அவசியம் போகலாம், அமர்நாத்! நீ எதிர் வீட்டுக் கலியாணத்துக்குப் போவதில் எனக்கு ஆட்சேபம் ஒன்றுமில்லை ஆனால் ஒரு விஷயத்தைப் பற்றி யோசிக்க வேண்டும்.” “என்னத்தை யோசிக்கறது! நானும் சித்ராவும் கட்டாயம் போகத் தான் போகிறோம். நியாயமாய்ப் பார்த்தால் நீங்கள் கூட வரலாம். எத்தனை நாளைக்கு மனதிலே துவேஷத்தை வளர விட்டுக் கொண்டிருக்கிறது!” “கூடாது, கூடாது! துவேஷத்தை வளரவிடவே கூடாது. உண்மையில் நான் கூடக் கலியாணத்திற்கு வருவதாகத் தான் இருந்தேன் அதற்குள் ஒரு தடை குறுக்கிட்டிருக்கிறது..?” “அது என்ன தடை, அப்பா?” “உன் சிநேகிதன் சூரியாவைப் பற்றி இந்த ஊர்ப் போலீஸுக்கு ஏதோ தகவல் வந்திருப்பது போலத் தோன்றுகிறது…?” “என்ன? என்ன?” என்று திடுக்கிட்டுக் கேட்டான் அமர்நாத். “ஆமாம்; சூரியாவைப்பற்றி ஏதோ சி.ஐ.டி. தகவல் வந்திருக்கும் போலிருக்கிறது. இப்போது டெலிபோனில் டி.எஸ்.பி. என்னைக் கேட்டார். ‘சூரியா என்கிற பையன் எதிர் வீட்டுக்கு வந்திருக்கிறது தெரியுமா’ என்று கேட்டார்..?” “நீங்கள் என்ன சொன்னீர்கள்?” “எனக்கும் எதிர் வீட்டுக்கும் தான் ஜன்ம விரோதமாயிற்றே?” என்றேன். ’வீட்டு வாசலில் ஒரு புதிய இளைஞனைப் பார்க்கவில்லையா?" என்று கேட்டார். அங்க அடையாளம் கூடச் சொன்னார். ’தெருவிலே நின்று வருகிறவர் போவோரையெல்லாம் பார்ப்பது தான் எனக்கு வேலையா?" என்று நான் பதிலுக்குக் கேட்டேன்." “அப்புறம்” “அப்புறம் என்ன? சீக்கிரத்தில் போலீஸார் இங்கே வரப் போகிறார்கள்? எதிர் வீட்டில் அமளி துமளிப்படும். இந்த நிலைமையில் நான் எப்படி எதிர் வீட்டுக்குப் போவது? என்னை அங்கே பார்த்தால் டி.எஸ்.பி.யிடம் சொன்னது பொய் என்று ஏற்பட்டுவிடும் அல்லவா!” “அப்பா! இப்போது என்ன செய்யலாம்? சூரியாவுக்கு ஓர் எச்சரிக்கை கொடுக்க வேண்டாமா?” “அது உன் இஷ்டம் நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன்; அப்புறம் உன் உசிதம் போலச் செய். ஒரு விஷயம், எச்சரிக்கை செய்வதாயிருந்தால் உடனே செய்ய வேண்டும். இன்னும் பதினைந்து நிமிஷத்தில் போலீஸ் படை இங்கே வந்து விடும். சூரியாவை அரஸ்டு செய்து கொண்டு போனால், அவன் அறியாத உண்மைகளையெல்லாம் சொல்லும்படி செய்வார்கள்… நம்ஊர்ப் போலீஸ்காரர்கள் இவ்வளவு மிருகத்தனமாக நடந்து கொள்வார்கள் என்று நீ கனவிலே கூட எண்ணியிருக்க முடியாது; தெரிகிறதா?” “அப்பா! நீங்கள் சொல்லும்போதே எனக்கு மயிர்க்கூச்சல் உண்டாகிறது. ஆனால் சூரியாவுக்கு இப்போது வெறுமனே எச்சரிக்கை செய்து என்ன பிரயோசனம்? இன்னும் பதினைந்து நிமிஷத்திலே போலீசார் வந்துவிடுவார்கள் என்று சொல்கிறீர்கள். அதற்குள் அவன் எப்படித் தப்பிக்க முடியும்? எங்கே போய் ஒளிந்து கொள்வான்!” “இதையெல்லாம் என்னைக் கேட்டு என்ன பயன்? நீயும் உன்னுடைய சிநேகிதனும் எப்படியாவது போங்கள். திடீரென்று அவன் எங்கே போய் ஒளிந்து கொள்வான்? அக்கம் பக்கத்தில் யாராவது உதவி செய்தால் தான் தப்பித்துக் கொள்ளலாம்.” “அப்பா! மன்னித்துக் கொள்ளுங்கள்; சூரியாவுக்கு இந்த வீட்டில் அடைக்கலம் கொடுக்கலாமா?” “மறுபடி என்னைக் கேட்கிறாயே? இந்த வீட்டில் எனக்கு எவ்வளவு பாத்தியதை உண்டோ , அவ்வளவு உனக்கும் உண்டு; உன்னிஷ்டம் போல் செய். மேலே மாடியில் பின்கட்டு அறையில் போட்டுப் பூட்டிச் சாவியை வேணுமானாலும் காணாமல் அடித்துவிடு! ஆனால் உன் இஷ்டம் என்னை இந்த விஷயமாக ஒன்றுமே கேட்க வேண்டாம்! தெரிந்ததா!” மறு நிமிடம் அமரநாத் வெளியேறி எதிர் வீட்டுக்குச் சென்றான். ஐந்து நிமிஷத்துக்கெல்லாம் சூரியாவைக் கூட்டிக் கொண்டு திரும்பினான். மேல் மச்சுக்கு அழைத்துப் போய்த் தகப்பனார் சொற்படி பின்கட்டு அறையில் அடைத்துக் கதவைப் பூட்டினான். சில நிமிஷத்துக்கெல்லாம் வீதியில் தட தட தட தட என்று மோட்டார் சைக்கிள் வரும் சத்தம் கேட்டது. மோட்டார் சைக்கிளுடன் ஜீப் ஒன்றும் வந்தது. வீதியின் இரு புறத்திலிருந்தும் போலீஸார் மார்ச் செய்து கொண்டு வந்தார்கள். கைதிகளைப் போட்டு அடைத்துக் கொண்டு போகும் இரும்புக் கூண்டு போட்ட போலீஸ் வண்டி ஒன்றும் வந்தது. ஆத்மநாதய்யரின் வீட்டு வாசலிலும் கொல்லையிலும் போலீஸ் ஜவான்கள் நின்று கொண்டார்கள். அப்புறம் சிறிது நேரம் கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. வைதிகப் பிராமணர்கள் மந்திரம் சொல்வதை நிறுத்திவிட்டு வெளியில் ஓடிவந்தார்கள். அவர்களையெல்லாம் குண்டாந்தடியால் அடித்துப் போலீஸார் வீட்டுக்குள்ளே விரட்டினார்கள். “யாரையும் வெளியில் விட வேண்டாம்” என்று ஒரு பெரும் அதிகாரக் குரல் உத்தரவிட்டது. ரேழியில் உட்கார்ந்திருந்த நாதஸ்வரக்காரர்கள் வெளியேறப் பார்த்தார்கள். அதன் பயனாகத் தவுல் வாத்தியம் இரண்டு பக்கமும் படார் என்று கிழிந்தது. நாதஸ்வரக் குழாயும் ஒத்து வாத்தியமும் நொறுங்கின. ஜாலராத் தாளங்கள் சுக்குநூறாயின. போலீஸ் உத்தியோகஸ்தர்கள் வீட்டுக்குள்ளே பிரவேசிக்கப் பார்த்தபோது கிட்டாவய்யர் வந்து வாசற்படியில் நின்றார். தன்னுடைய பிள்ளையைப் பிடிக்கத் தான் வந்திருக்கிறார்கள் என்று ஒருவாறு தெரிந்து கொண்டார் போலும். பையன் வெளியேறி விட்டான் என்பது அவருக்குத் தெரியாது. ஆகையால் கையைக் கட்டிக்கொண்டு கம்பீரமாக நின்று, “உள்ளே வைதிக காரியம் நடக்கிறது; ஒருவரும் நுழையக்கூடாது. அப்படி நுழைந்தால் என் செத்த உடம்பை மிதித்துக் கொண்டு தான் போகவேண்டும்” என்றார். அவர் சொல்லி வாய் மூடுவதற்குள் மண்டையில் ஒரு அடி, கழுத்தில் ஒரு கல்தா. ஆத்மநாதய்யர் முன் வந்து, “ஏன், ஸார், இவ்வளவு தடபுடல் செய்கிறீர்கள்? சாவதானமாகப் பரிசோதனை செய்து யார் வேண்டுமோ அவரைக் கொண்டு போங்கள் யாரும் தடுக்கவில்லை. வீணாகப் பெண் பிள்ளைகளைப் பயப்படுத்த வேண்டாம்” என்றார். ஆத்மநாதய்யருடைய சாந்தமான பேச்சின் பயனாக அவருக்கு மண்டையில் இரண்டு அடி கிடைத்தது. அவ்வளவு தான்; போலீஸார் தடதட என்று வீட்டுக்குள்ளே பிரவேசித்தார்கள். முன்கட்டிலும் பின்கட்டிலும் மேல் மாடியிலும் ஒவ்வொரு அறையாகப் புகுந்து தேடினார்கள். காலில் தட்டுப்பட்டதை எல்லாம் உதைத்துத் தள்ளினார்கள். கையில் அகப்பட்டதை எல்லாம் உடைத்து நொறுக்கினார்கள். எதிரில் தட்டுப்பட்டவர்களைப் பிடித்துத் தள்ளினார்கள்; அல்லது தடியால் அடித்தார்கள். படுக்கையறைக்குள்ளே புகுந்து மெத்தை தலையணைகளைப் பிய்த்து எறிந்தார்கள். சாமான் அறைக்குள்ளே புகுந்து சட்டி பானைகளை உடைத்தார்கள். சமையல் கட்டுக்குள்ளே பிரவேசித்து அடுப்பிலே கொதித்துக் கொண்டிருந்த சாம்பார் பாத்திரத்தில் குண்டாந்தடியை விட்டுத் துளாவிப் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் தேடி வந்த ஆசாமி எங்கேயும் அகப்படவில்லை. வீட்டு ஸ்திரீகள் இன்னது செய்வது என்று தெரியாது அழுது கொண்டே அங்குமிங்கும் ஓடினார்கள்; குழந்தைகள் ‘கோ’ என்று கதறினார்கள். இதற்குள் ஒருவாறு சமாளித்துக்கொண்டு எழுந்து வந்து கிட்டாவய்யர், “எதற்காக எல்லாரும் இப்படிக் கூச்சல் போடுகிறீர்கள்? எல்லோரும் பேசாமலிருங்கள்; நடக்கிறது நடக்கட்டும்; பகவான் ஒருவர் இருக்கிறார்” என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். முதலில் போலீஸார் தாங்கள் தேடி வந்த ஆசாமி கங்காதரனோ என்று அவனைப் பிடித்து நாலு அடி கொடுத்தார்கள். ஆனால் அவனுடைய தலையில் வைத்திருந்த கட்டுக்குடுமி, புரட்சிக்காரன் அவன் இல்லை என்பதை நிரூபித்தது பிறகு அவனை விட்டுவிட்டார்கள். அநாவசியமாக அடிபட்ட கங்காதரன், “எனக்கு அப்போதே தெரியும், நான் சொன்னால் யார் கேட்கிறார்கள். அந்தக் காலிப் பயலை வீட்டுக்குள்ளேயே விடக்கூடாது என்று சொன்னேன், கேட்டீர்களா? அருமைப் பிள்ளை என்று செல்லம் கொஞ்ச ஆரம்பித்து விட்டீர்கள். அவன் தான் சனீசுவரனுடைய அவதாரம் ஆயிற்றே? வரும்போதே சங்கடத்தையும் கூட அழைத்துக் கொண்டு வருவானே?” என்று இரைச்சல் போட்டுக் கொண்டிருந்தான். போலீஸார் வீடு முழுவதும் சல்லடை போட்டுச் சலித்துப் பார்த்தும் பயனில்லை; தேடிய ஆசாமி அகப்படவில்லை. மேலே, கீழே, அறைக்குள்ளே,அலமாரிக் குள்ளே, அரிசி மூட்டைக்குள்ளே, சாம்பார் பாத்திரத்துக்குள்ளே, மெத்தை தலையணைக்குள்ளே, எங்கேயும் அவனைக் காணவில்லை. தரையிலே சுரங்க அறை ஏதேனும் இருக்குமோ என்று சில போலீஸ் ஜவான்கள் குண்டாந்தடியால் தட்டிக் கூடப் பார்த்தார்கள்; அதிலும் பயனில்லை. அரை மணி நேர அமர்க்களத்துக்குப் பிறகு போலீஸ்காரர்களுக்குத் திரும்பி போக உத்தரவு பிறந்தது. தாமோதரம்பிள்ளை தம்முடைய வீட்டு வாசலில் வந்து நின்று எதிர்வீட்டில் நடந்த அமர்க்களத்தை யெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார். பார்க்கப் பார்க்க, அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. வந்த காரியம் பயன்படாமல் போலீஸ்காரர்கள் வெளியில் வந்ததையும் அவர் பார்த்தார். அவர் தம்முடைய சிநேகிதர் டி.எஸ்.பி.யின் அருகில் சென்று, “இன்று நீங்கள் செய்த காரியம் எனக்கு வெட்கத்தை உண்டாக்குகிறது. இந்தப் பஞ்சாங்கப் பிராமணர்களை இப்படித் தடியால் அடித்ததில் உங்களுக்கு என்ன திருப்தி? இந்தச் சூரத்தனத்தை எல்லாம் ஜப்பானியரிடம் அல்லவா காட்ட வேண்டும்!” என்றார். “மிஸ்டர் பிள்ளை, நீங்கள் விஷயம் தெரியாமல் பேசுகிறீர்கள். ‘ஸாபோடாஜ்’ கோஷ்டியைச் சேர்ந்த ஒரு பையன் இந்த வீட்டுக்கு வந்திருந்ததாகத் தகவல் கிடைத்தது. காவேரிப் பாலத்தை வெடி வைத்து இடிக்கச் சதியாலோசனை நடந்திருக்கிறது..” “ஆமாம்; காவேரிப் பாலத்தை இடித்து விட்டார்கள், போங்கள், ஸார்! அவர்களுடைய மூளையைச் சொல்கிறதா? உங்களுடைய அக்கிரமத்தைச் சொல்கிறதா? இப்படியெல்லாம் செய்துதானா இராஜாங்கத்தினிடம் விசுவாசத்தை வளர்த்து விட முடியும்?…சரி…தேடிய பையன் அகப்பட்டானா?” “பையன் இந்த வீட்டில் இல்லை ஆனால் இந்த டவுனிலே தான் இருக்கிறான் எப்படியும் பிடித்து விடுவோம்?” என்றார் டி.எஸ்.பி. மோட்டார் சைக்கிளும், ஜீப்பும், குண்டாந்தடிப் போலீஸும் ஏக ஆர்ப்பாட்டத்துடன் அவ்விடத்தி லிருந்து புறப்பட்டுச் சென்றன. ஆத்மநாதய்யரின் வீட்டுக்குள்ளே லலிதாவின் விம்மல் சத்தம் கேட்டது. அத்துடன் அவளுடைய இரண்டு குழந்தைகளின் அழுகைச் சத்தமும் கலந்தது. இவ்வாறு சிரஞ்சீவி பாலசுப்பிரமணியனின் ஆண்டு நிறைவுக் கலியாணம் சிறப்பாக முடிவடைந்தது. நான்காம் அத்தியாயம் - பால சந்நியாசி இரவு மணி பத்து அடித்தது வானத்தைக் கருமேகங்கள் மூடிக்கொண்டிருந்தன. பொச பொசவென்று மழைத் தூற்றல் போட்டுக் கொண்டிருந்தது. சிலுசிலுவென்று குளிர்ந்த காற்று அடித்துக் கொண்டிருந்தது. ஆத்மநாதய்யர் வீட்டுக்குள் சந்தடி இன்னும் அடங்கவில்லை. ஆனால் தாமோதரம்பிள்ளையின் வீட்டில் எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டு விட்டன. வீட்டில் இருளோடு நிசப்தம் குடிகொண்டிருந்தது. வீட்டுக்குப் பக்கத்துச் சந்திலிருந்து ஒரு மோட்டார் வண்டி வந்து தாமோதரம்பிள்ளை வீட்டு வாசலில் நின்றது. அடுத்த நிமிஷம் வீட்டுக் கதவு திறந்தது. இருளடைந்திருந்த வீட்டின் உட்புறத்திலிருந்து ஓர் உருவம் வெளிப்பட்டு வந்தது. அந்த உருவத்தின் மீது மங்கலான வீதி விளக்கின் ஒளி விழுந்த போது, இடுப்பில் காஷாயம் தரித்துக் கையில் கமண்டலம் ஏந்திய பால சந்நியாசியின் உருவம் என்று தெரிய வந்தது. அந்தப் பால சந்நியாசி திண்ணை ஓரத்தில் நின்று வீதியின் இருபுறமும் எதிர்ப் பக்கமும் கவனித்துப் பார்த்தார். ஒருவரும் இல்லை என்று அறிந்ததும் மோட்டார் வண்டிக்குள் திறந்திருந்த கதவின் வழியாகப் பாய்ந்து ஏறினார். மறுகணம் வண்டி சத்தம் செய்யாமல் புறப்பட்டது. சிறிது நேரம் வரையில் வண்டிக்குள்ளேயும் நிசப்தம் நிலவியது. தேவபட்டணத்துத் தெருக்களைத் தாண்டி அப்பாலிருந்த சாலையில் வண்டி பிரவேசித்ததும், வண்டி ஓட்டிய அமரநாத், “அப்பா! பிழைத்தோம், இனிப் பயமில்லை!” என்றான். “எனக்கு என்னமோ இன்னும் கொஞ்சம் பயமாகத்தானிருக் கிறது. இந்த மோட்டாரில் இருக்கிற வரையில் எனக்குப் பயந்தான் இறங்கிவிட்டால் கவலையில்லை. எனக்காக நீ இவ்வளவு பெரிய அபாயத்துக்கு உட்பட எண்ணியதை நினைத்தால்…?” “இந்த தேசத்திலேயே நீ ஒருவன் தான் எதற்கும் துணிந்த வீராதி வீரன் என்று எண்ணம் போலிருக்கிறது!” “அப்படியில்லை, அமரநாத், எந்த நிமிஷத்திலும் கைதியாவதற்குத் தயாராகவே நான் இருந்து வருகிறேன். என்றைக்காவது ஒரு நாள் கைதியாகியே தீரவேண்டும். உன் விஷயம் அப்படியல்ல எனக்காக நீ கஷ்டப்பட வேண்டி நேர்ந்தால்…” “உனக்காக நான் ஒன்றும் கஷ்டப்பட வில்லை. உனக்காக கஷ்டப்பட்டவர்கள் உன் தகப்பனார், தமையன், உன் தங்கையின் மாமனார் முதலியவர்கள். எல்லாரும் இன்றைக்குச் செம்மையாக அடி வாங்கினார்கள். உன் தங்கையும் அம்மாவும் பட்ட வேதனை கொஞ்சமல்ல. அவர்களுக்கு ஆறுதல் சொல்லுவதற்குள்ளே எனக்குப் பிராணன் போய்விட்டது.” “அதை நினைத்தால் எனக்கு அவமானமாயிருக்கிறது. என்றைக்காவது ஒரு நாள் அவர்களுடைய முகத்தில் விழிக்க வேண்டி நேர்ந்தால், என்ன சமாதானம் சொல்வேன்? அவர்களை அடிபடும்படி விட்டுவிட்டு நான் தப்பித்துக் கொண்டதைப் பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள்…?” “ஒன்றும் நினைக்க மாட்டார்கள் எப்படியாவது நீ தப்பித்துக் கொண்டாயே என்று சந்தோஷப்படுவார்கள். இப்போதும் கூட உன் கதி என்ன ஆயிற்றோ என்று தான் அவர்களுக்குக் கவலை. நீ நிச்சயமாய்த் தப்பித்துக் கொண்டாய் என்று தெரிந்தால் அவர்களுடைய கவலை நீங்கிவிடும்.” “என்ன தான் இருந்தாலும் நான் இன்று செய்தது ரொம்ப அவமானமான காரியந்தான். உன்னுடைய வற்புறுத்தலைக் கூட நான் பொருட்படுத்தி யிருக்க மாட்டேன். அவர்களை அடிபட விட்டு நான் ஒளிந்து கொண்டிருக்க என் மனம் இடம் கொடுத்திராது. டில்லியில் இருந்து என் அத்தங்கா சீதாவைப் பற்றிக் கடிதம் வரவில்லையென்றால் நானே போலீஸ் அதிகாரிகளிடம் சென்று என்னை ஒப்புக் கொடுத்திருப் பேன்.”“அதனால் யாருக்கும் எந்தவிதச் சந்தோஷமும் ஏற்பட்டிராது. உன்னைச் சேர்ந்தவர்கள் எல்லாம் மன வேதனைப் பட்டிருப்பார்கள், என் தகப்பனார் உள்படத்தான்!” “தாமோதரம்பிள்ளை என் விஷயத்தில் காட்டிய அனுதாபத்தை நினைத்தால் தான் எனக்குப் பரம ஆச்சரியமா யிருக்கிறது.” “அதற்குக் காரணம் என்னவென்று உனக்குத் தோன்றுகிறது? ஊகித்துச் சொல், பார்க்கலாம்!” “காரணம் வேறு என்ன இருக்க முடியும்? நான் உன்னுடைய சிநேகிதன் என்ற காரணந்தான்.” “அதெல்லாம் இல்லை; இங்கிலீஷ்காரன் சிங்கப்பூரில் அடிபட்டதி லிருந்து நம்மவர்கள் எல்லாருடைய மனமும் மாறிப் போயிருக்கிறது. இந்த இங்கிலீஷ் ராஜாங்கம் எப்படியும் இந்தியாவை விட்டுப் போய்விடப் போகிறது என்று சிறு பிள்ளைகள் முதல் வயது முதிர்ந்த கிழவர்கள் வரையில் எல்லாரும் நம்புகிறார்கள்…” “அதற்கும் உன்னுடைய தகப்பனார் எனக்குச் செய்த உதவிக்கும் என்ன சம்பந்தம்?” “சம்பந்தம் இருக்கிறது; நாளைக்கு இங்கிலீஷ்காரன் இந்தியாவை விட்டுப் போய்விட்டால், அடுத்தாற்போல் அதிகாரத்துக்கு யார் வருவார்கள்? உன்னைப் போன்ற காங்கிரஸ் புரட்சிக் காரர்கள் ஒருவேளை வந்தாலும் வருவீர்கள். எல்லாவற்றுக்கும் ‘கப்பலில் பாதிப் பாக்குப் போட்டு வைக்க லாம்’ என்று கருதி தான் அப்பா உன்னைத் தப்புவிக்க முன் வந்தார்.” “அது உண்மையானால், உன் தகப்பனாரின் பாதிப் பாக்கு நஷ்டந்தான். என்னைப் போன்ற ஓட்டைக் கப்பலில் பாக்குப் போட்டு என்ன பிரயோஜனம்? ஆனால், நீ சொல்லும் காரணத்தை நான் ஒரு நாளும் ஒப்புக் கொள்ள மாட்டேன். உன்னுடைய சிநேகிதன் என்ற காரணத்துக்காகவும் என் பேரில் உள்ள பிரியத்தினாலுந்தான் இந்தக் காரியம் செய்திருக்க வேண்டும்.” “போனால் போகட்டும், நீ சொல்கிறபடி வைத்துக் கொள்ளலாம். உன் அத்தங்காளின் விஷயம் என்னவோ சொன்னாயே?” “என் தங்கை லலிதாவைப் பார்க்க வந்த மாப்பிள்ளை தனக்குச் சீதாவைத் தான் பிடித்திருக்கிறது என்று சொல்லி அவளைக் கலியாணம் செய்து கொண்டானல்லவா? அந்தக் காதல் கலியாணம் பற்றி அப்போது நாமெல்லோரும் பிரமாதமாய்ப் பேசிக் கொண்டிருந்தது நினைவிருக்கிறதா? உண்மையில் அந்தக் கலியாணம் பெரிய துரதிர்ஷ்டமாய் முடிந்திருக்கிறது. அவர்களுடைய இல்வாழ்க்கையில் சந்தோஷமே கிடையாது அமரநாத்! ஓயாமல் சண்டை தான்.” “நீ வீணாக மிகைப்படுத்திக் கூறுகிறாய், சூரியா! நம்முடைய தேசத்தில் நூற்றுக்குத் தொண்ணூற் றொன்பது தம்பதிகள் ஓயாமல் சண்டை போட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சந்தோஷமாக இல்லை என்று அர்த்தமா? நானும் சித்ராவும் தினம் டஜன் தடவை சண்டை போட்டுக் கொள்கிறோம்…” “உங்களுடைய விஷயம் வேறு, அமரநாத்! உங்களைப் போன்ற தம்பதிகள் உலகத்தில் வெகு அபூர்வம். உங்களுடைய சண்டையெல்லாம் காதலர்களின் சண்டை; வேடிக்கைச் சண்டை. சீதா - சௌந்தரராகவனுடைய விஷயம் அப்படியல்ல பூனையும் எலியும் போல அவர்களுடைய வாழ்க்கை நடந்து வருகிறது.” “சௌந்தரராகவன் சீமைக்குப் போய் வந்தவன்; பெரிய சர்க்கார் உத்தியோகத்தில் இருப்பவன். ஆகையால் தன் மனைவி ஆங்கில தோரணையில் நவநாகரிகமாக வாழ வேண்டும் என்று நினைக்கலாம். உன் அத்தங்காள் அதற்குச் சம்மதியாமல் இருக்கலாம். எனக்குத் தெரியும்; எத்தனையோ ஐ.சி.எஸ். காரர்கள் இந்தக் காரணத்துக்காகவே மனைவியைத் தள்ளி வைத்திருக்கிறார்கள்.” “சீதா விஷயத்தில் அந்தக் காரணம் சொல்ல முடியாது அமரநாத்! முதலிலே ஒருவேளை கொஞ்சம் தயங்கியிருக்கலாம். பிற்பாடு சௌந்தரராகவன் நாகரிக ஏணியில் ஒரு படி ஏறினால் சீதா இரண்டு படி ஏறினாள். எனக்கு கூட, ‘ஐயோ! அத்தங்கா இப்படி மாறிப்போய்விட்டாளே?’ என்று வருத்தமாயிருந்தது. அதனால் பயன் ஒன்றும் ஏற்படவில்லை சௌந்தரராகவனுடைய மூர்க்கத்தனம் மேலும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.” “இப்போது தெரிகிறது, எனக்குக் காரணம். நம்மில் இங்கிலீஷ் படித்த இளைஞர்கள் கலியாணமான புதிதில் தங்களுடைய மனைவிமார் நவநாகரிகமடைந்து எல்லாருடனும் கூச்சமின்றிப் பழக வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்புறம் அவர்களுக்கு இது பிடிக்காமல் போய்விடுகிறது. ஹிந்து தர்மத்தின்படி பெண்கள் அடக்கமாக இருந்தால் தான் நல்லது என்று நினைக்கிறார்கள். அப்படி ஆண் பிள்ளைகள் நினைக்கும் போது பெண் பிள்ளைகளுக்குப் பழைய வாழ்க்கைக்குத் திரும்பிப்போகப் பிடிப்பதில்லை… நான் சொல்கிறதைக் கேள், சூரியா! அந்தத் தம்பதிகள் விஷயத்தில் நீ ஒன்றும் தலையிடாமல் இருந்துவிடு. கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகப் போய்விடும்!” “அப்படி என்னால் இருக்க முடியவில்லை, அமரநாத்! வாழ்நாள் முழுதும் கஷ்டப்பட்ட என் அத்தை இறப்பதற்கு முன்னால் தன்னுடைய அனாதைப் பெண்ணைக் கவனித்துக் கொள்ளவேண்டும் என்று என்னிடம் கேட்டுக் கொண்டாள் அதை என்னால் மறக்க முடியவில்லை!” என்றான் சூரியா. சாலையின் இருபுறத்திலும் கழனிகளில் தண்ணீர் ததும்பி அலை மோதிக் கொண்டிருந்தது. சற்று தூரத்தில் காவேரி நதியின் பிரவாகம். மேட்டார் வண்டி சாலை வளைவில் திரும்பும் போது நெடுந்தூரத்துக்கு மோட்டார் விளக்கின் வெளிச்சம் அடித்து நாலாபுறமும் பரவியிருந்த நீர்வளத்தைக் காட்டியது. கழனியிலும் காவேரியிலும் இலேசான மழைத் தூற்றல் விழுந்தபோது உண்டான சலசலசல சத்தம் மந்திர ஸ்தாயி சங்கீதத்தைப் போல் மனதுக்கு அமைதியை உண்டாக்கியது. நல்ல சங்கீதக்கச்சேரியின் நடுவில் அரசியல் சம்பாஷணை தொடங்கும் ரசிகர்களைப் போல் திடீர் திடீரென்று தவளைகள் உற்சாகமடைந்து வரட்டுக் கூச்சல் போட்டன. மோட்டார் வண்டியின் முன் கண்ணாடியில் விழும் மழைத் துளிகளைத் துடைக்கும் கருவிகள் டக் டக் என்ற சத்தத்தோடு தங்கள் வேலையைச் செய்து கொண்டிருந்தன. “அடாடா! நீர்வளம் என்றால் இது அல்லவா நீர்வளம்? வடநாட்டில் பல பகுதிகளை நான் பார்த்திருக்கிறேன். எல்லாம் வறண்ட பிரதேசங்கள், இந்த மாதிரி நீர்வளம் எங்கேயும் கிடையாது” என்றான் சூரியா. “நீ வங்காளத் துக்கு வந்ததில்லை, சூரியா! தமிழ்நாட்டைக் காட்டிலும் நீர்வளம் நிறைந்தது வங்காளம். அதிலும் கீழ் வங்காளம் அதிக வளம் பொருந்தியது. மழைக் காலத்தில் எங்கே பார்த்தாலும் தண்ணீர் மயந்தான்!” என்று அமரநாத் கூறினான். “அப்படிப்பட்ட நீர்வளம் நிறைந்த தேசத்தில் இப்போது பஞ்சம் என்று சொல்கிறாயே?” என்றான் சூரியா. “அதுதானே வேடிக்கை! நான் சொல்லுவதை மட்டும் என்ன? பத்திரிகைகளில் நீ பார்க்கவில்லையா; வெளி ஜில்லாக்களிலிருந்து வரும் ஜனங்கள் சாலை ஓரங்களில் விழுந்து சாகிறார்கள்.” “கல்கத்தா நிலைமை அப்படியிருக்கும்போது நீ மறுபடியும் அங்கே போகப் போவதாகச் சொல்கிறாயே.” “போகாமல் என்ன செய்வது? உத்தியோகம் இருக்கிறதல்லவா? வங்காளத்தில் பஞ்சம் என்றால், கல்கத்தாவிலுள்ள நாற்பது லட்சம் பேரும் சாப்பாடு இல்லாமல் செத்துப் போய் விடுவார்கள் என்பதில்லை.” “தெரியும், தெரியும் உண்மையில் அரிசிப் பஞ்சமே இல்லை; பணப் பஞ்சம் தான். பணம் இருந்தால் அரிசிக்குப் பஞ்சமில்லை . இருக்கிற அரிசியைச் சில சண்டாளர்கள் வாங்கிச் சேர்த்து வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய கொள்ளை லாபத்துக்காக ஏழை எளியவர்கள் உயிர் பலி கொடுக்கப்படுகிறது அப்படித்தானே, அமரநாத்!” “ஆம்; அப்படித்தான் இத்தகைய பேராசை பிடித்த கிராதகர்கள் நம்முடைய நாட்டில் இருக்கிறார்கள். இந்த நாட்டுக்குத் தான் நீ பூரண சுதந்திரம் வேண்டும் என்கிறாய்.” “இங்கிலீஷ்காரன் எப்போது இந்த நாட்டைவிட்டு வெளியேறுகிறானோ, அப்போது இப்படிப்பட்ட தீமைகள் ஒழிந்து போய்விடும். பிரிட்டிஷ் ஆட்சியினால் வந்த கேடுகள் தானே இவையெல்லாம்?” “ஆனால், இங்கிலீஷ்காரன் இந்தியாவைவிட்டுப் போய் விடுவான் என்று நீ நம்புகிறாயா? உண்மையாகச் சொல்!” என்றான் அமரநாத். “கட்டாயம் ஒருநாள் இங்கிலீஷ்காரன் இந்த நாட்டை விட்டுப் போகத்தான் போகிறான். காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரி வரையில் நான் பிரயாணம் செய்திருக்கிறேன். அமரநாத்! வங்காளத்துக்கு மட்டும் தான் வரவில்லை. நான் போன இடத்திலே யெல்லாம் ஜனங்களுடைய மனது கொதித்துக் கொண்டிருக்கிறது என்பதைக் கண்டேன். இந்தியா தேசம் ஒரு பெரிய எரிமலையாகி யிருக்கிறது. எந்தச் சமயத்தில் எரிமலை வெடித்து நெருப்பைக் கக்குமோ தெரியாது. ஏதாவது ஒரு சந்தர்ப்பம் ஏற்பட வேண்டியது தான்; நாற்பது கோடி ஜனங்களும் சீறி எழுந்து புரட்சி செய்யப் போகிறார்கள். அந்தப் புரட்சி நெருப்பிலே பிரிட்டிஷ் ஆட்சி எரிந்து பஸ்பமாகப் போகிறது. அது மட்டுமா? நாட்டைப் பிடித்த எல்லாப் பீடைகளும் எரிந்து பொசுங்கிச் சாம்பலாகப் போகின்றன.” “போதும், சூரியா! போதும்! நம்மைச் சுற்றிலும் ஒரே குளிர்ச்சியாயிருக்கிறது. இருந்தாலும் உன்னுடைய பேச்சு இந்த மோட்டாருக்குள் டெம்பரேச்சரையே அதிகமாக்கிவிட்டது. எரிமலை வெடிக்கிறபோது வெடிக்கட்டும், பார்த்துக் கொள்ளலாம்… அதோ மயிலம்பட்டி ஸ்டேஷன் வந்துவிட்டது; இப்போது நாம் பிரியவேண்டும்!” என்றான் அமரநாத். சற்று தூரத்தில் விளக்குகள் மினுக்கின. ஒரு சின்னக் கட்டிடம், கைகாட்டி முதலிய ரயில்வே ஸ்டேஷன் சின்னங்கள் மங்கலாகத் தெரிந்தன. தேவபட்டணம் ஸ்டேஷனில் ரயில் ஏறுவது அபாயம் என்று அமரநாத் இந்தப் பட்டிக்காட்டு ஸ்டேஷனுக்குச் சூரியாவைக் கொண்டு விட்டான். வண்டி ஒரு மரத்தடியில் நின்றது, நல்லவேளையாகத் தூறல் குறைந்திருந்தது. சூரியா கதவைத் திறந்துகொண்டு வண்டியிலிருந்து கீழே இறங்கினான். “சூரியா! உன்னை இப்போது பார்த்தால் சாக்ஷாத் விவேகானந்த சுவாமியைப் போலிருக்கிறது. பார்க்கிறவர்கள் ‘யாரோ மகான்; பால சந்நியாசி’ என்று நினைத்துக் கொள்வார்கள்!” என்றான் அமரநாத். “உண்மையில் நான் ‘பால சந்நியாசி’ அல்ல; போலி சந்நியாசி. இந்தப் புனிதமான வேஷத்தைப் பொய்யாகப் போட வேண்டியிருப்பது பற்றி எனக்கு மிக்க வருத்தமாயிருக்கிறது…” “ஆனால் இந்த வேஷம் போதும் என்று நினைக்கிறாயா? சி.ஐ.டி. புலிகள் இதற்கு ஏமாந்து போய்விடுவார்களா?” என்று அமரநாத் கேட்டுக்கொண்டே வண்டியிலிருந்து இறங்கினான். “சொல்லுவதற்கில்லை, தென்னிந்தியர்கள் எல்லாக் காரியங்களிலும் கெட்டிக்காரர் களா யிருப்பதுபோலவே சி.ஐ.டி. வேலையிலும் கெட்டிக்காரர்களாய் இருக்கிறார்கள். வட இந்தியாவில் சி.ஐ.டி. சுத்த மோசம். சம்பந்தமில்லாதவர்களைத் தான் பிடிப்பார்கள். இத்தனை தூரம் நான் பிரயாணம் செய்திருக்கிறேன்; தேவபட்டணத்தில் எப்படியோ கண்டு கொண்டு விட்டார்கள். பார்! எல்லாம் கடவுள் சித்தம்போல் நடக்கும். டில்லிக்கு ஒரு தடவை போய்விட்டேனா னால், அப்புறம் என்ன ஆனாலும் பாதகமில்லை! நான் போய் வரவா?” என்றான் சூரியா. அமரநாத் சூரியாவின் கையைப் பிடித்துக் குலுக்கிய வண்ணம் “உன்னை இப்படி விட்டுப் போவது எனக்கு எவ்வளவோ கஷ்டமா யிருக்கிறது; ஆனாலும் வேறு வழியில்லை. சூரியா! இந்தியா தேசமெங்கும் பிரயாணம் செய்த நீ வங்காளத்துக்கு மட்டும் ஏன் வராதிருக்க வேண்டும்? டில்லியில் உன் காரியம் முடிந்ததும் கல்கத்தாவுக்கு வந்துவிடு. கல்கத்தா புரட்சிக்காரர் கூட உன்னைப் பிடிக்க மாட்டார்கள். வேறு யாரையாவது தேடிக்கொண்டு போவார்கள். கல்கத்தாவுக்கு வந்து என் வீட்டில் சில காலம் தங்கி இரு. என் கல்கத்தா விலாசம் ஞாபகம் இருக்கிறதல்லவா?” என்றான். “டில்லிக்குப் போய் என் காரியம் முடிகிறவரையில் நான் பிடிபடாதிருந்தால், கட்டாயம் கல்கத்தா வருகிறேன், அமரநாத்! விலாசம் ஞாபகம் இருக்கிறது!” என்று சூரியா கூறினான். அப்போது அடித்த மின்னல் ஒளியில் அவனுடைய கண்களில் துளித்திருந்த கண்ணீர்த் துளிகள் முத்துப் போலப் பிரகாசித்தன. அமரநாத் மேலே ஒன்றும் சொல்லாமல் மௌனமாக வண்டியைத் திருப்பிக்கொண்டு போனான். இருட்டிலே தன்னந்தனியே நடந்து சென்று சூரியா ரயில்வே ஸ்டேஷனை அடைந்தான். அங்கேயிருந்த இரவு ஸ்டேஷன் மாஸ்டரும் குமாஸ்தாவும் இரண்டு போர்ட்டர்களும் அந்தப் பால சந்நியாசியின் முக தேஜஸைப் பார்த்துப் பிரமித்தார்கள். “சுவாமி எங்கேயிருந்து வருகிறது? எங்கே போகிறது?” என்று அவர்கள் விசாரித்துத் தெரிந்து கொள்ளப் பார்த்தார்கள். ஆனால் அவர்களுடைய எல்லாக் கேள்விகளுக்கும் சுவாமியிடமிருந்து “ஹர ஹர மகாதேவ” என்ற ஒரு பதில் தான் வந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் தெற்கே போகும் ரயில் வரவே சந்நியாசி பிளாட்பாரத்துக்குள்ளே சென்றார். கேட்டில் நின்ற போர்ட்டர் அவரை நிறுத்தலாமா என்று பார்த்தான். அதற்குள் இரவு ஸ்டேஷன் மாஸ்டர், “வேண்டாம், அப்பா! சாமியாரை நிறுத்தாதே!” என்று சொன்னார். பிளாட்பாரத்தில் வந்து நின்ற ரயில் ஓரமாகப் பால சந்நியாசி விடுவிடு என்று நடந்து சென்றார். தேவபட்டிணம் ஸ்டேஷனில் அமரநாத் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்த இரண்டாம் வகுப்பு டிக்கட் சந்நியாசியிடம் இருந்தது. ஆனால் அவர் மூன்றாம் வகுப்பு வண்டிகளைப் பார்த்துக்கொண்டே போனார். மழையை முன்னிட்டு அநேக வண்டிகளில் ஜன்னல் கதவுகள் சாத்தப்பட்டிருந்தன. ஒரு வண்டியில் சில ஜன்னல்கள் திறந்திருந்தன. சாமியார் அந்த வண்டியில் ஏறினார். ஒவ்வொரு அரை பெஞ்சியிலும் இரண்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். அல்லது ஒருவர் காலை மடக்கிக் கொண்டு படுத்திருந்தார். ஒரே ஒரு அரை பெஞ்சியில் மட்டும் ஒரு மனிதன் சப்பணம் போட்டு உட்கார்ந்திருந்தான். அவனுக்குப் பக்கத்தில் ஒரு டைரியும் பென்சிலும் இருந்தன. பால சந்நியாசி நேரே அந்தப் பெஞ்சியண்டை போய் நின்று, “ஹரஹர மகாதேவா” என்றார். அந்த மனிதன் நிமிர்ந்து பார்த்துவிட்டு, “உட்காருங்கோ, சாமி!” என்றான். சாமியார் உட்கார்ந்து மடியில் செருகியிருந்த சிறு பட்டுப் பையை எடுத்து, அதிலிருந்து கொஞ்சம் விபூதி எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு, “திருச்செந்தூர் முருகா!” என்றார். “சாமி எவ்விடத்துப் பிரயாணமோ?” என்று அந்த மனிதன் கேட்டான். “இந்தக் கட்டை காசிக்குப் போய்த் திரும்பி வருகிறது. இராமேசுவரம் போக ஆசை! முருகன் அருள் எப்படியோ?” என்றார் பால சந்நியாசி. “சாமியிடம் டிக்கட் இருக்கிறதா?” என்று அந்த மனிதன் கேட்டான். “மதுரை வரையில் இருக்கிறது; ஒரு பக்தர் வாங்கிக் கொடுத்தார். அதற்கப்பால் முருகனுடைய சித்தம்!” என்று சொல்லிக் கொண்டே சந்நியாசி இடுப்பில் செருகியிருந்த டிக்கட்டை எடுத்துக் காட்டினார். “இது இரண்டாம் வகுப்பு டிக்கட் அல்லவா? சாமி தவறி மூன்றாம் வகுப்பு வண்டியில் ஏறிவிட்டதே!” “இல்லை; இல்லை தெரிந்து தான் ஏறினேன். பக்தன் வாங்கிக்கொடுத்தாலும் இந்தக் கட்டைக்கு இரண்டாம் வகுப்பில் போக விருப்பமில்லை. ஆகையால் ரயில் இங்கே நின்றதும் இரண்டாம் வகுப்பிலிருந்து இறங்கி மூன்றாம் வகுப்பில் ஏறலாயிற்று!” அந்த மனிதனுக்கு ஒரே ஆச்சரியமாக போய்விட்டது. “சாமியார் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும். இந்தக் காலத்தில் எங்கே பார்த்தாலும் போலிச் சாமியார்கள் தான் அதிகமாய்ப் போயிருக்கிறார்கள்!” என்றான். “முருகன் செயல்!” என்றார் பால சந்நியாசி. ரயில் போய்க்கொண்டிருந்தது; வெளியே மழைத் தூறல் போட்டுக்கொண்டிருந்தது; உள்ளே பிரயாணிகள் தூங்கி வழிந்தார்கள். சாமியாருக்கும் அவருடைய புதிய பரமானந்த சீடனுக்கும் மட்டும் தூக்கம் வரவில்லை. “அப்பனே! உன் மனதிலே கவலை குடிகொண்டிருக்கிறது!” என்றார் சந்நியாசி. “ஆமாம் சாமி! வீட்டிலே சம்சாரத்துக்கு உடம்பு சரியில்லை. ஒரு மாதமாய் ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போய் வருகிறேன். ஒன்றும் குணம் தெரியவில்லை அதற்குள் இந்த ‘டியூடி’ வந்துவிட்டது.” சாமியார் விபூதிப் பையை எடுத்து, “இந்தா! காசி விசுவநாதர் கோயில் விபூதி. இதைக் கொண்டுபோய் பக்தியுடன் உன் சம்சாரத்தின் நெற்றியில் இடு குணமாகிவிடும்!” என்றார். பயபக்தியுடன் அந்த மனிதன் விபூதியை வாங்கிக்கொண்டு டைரியிலிருந்து ஒரு ஏட்டைக் கிழித்து அதில் பொட்டணம் கட்டினான். “அந்த ஒரு கவலைதானா? இன்னும் ஏதாவது உண்டா?” “வேறு ஒன்றும் பெரிய கவலையில்லை. இன்றைக்கு போகிற காரியம் ஜயமானால் நல்லது. ‘பிரமோஷன்’ கிடைக்கும் இல்லாவிட்டால் ‘பிளாக் மார்க்’ கிடைக்கும்.” “யாரோ ஒரு ஆளைத் தேடிக்கொண்டு நீ போகிறாய் இல்லையா, அப்பனே?” “உண்மை! உண்மை! சாமியாருக்கு ஞான திருஷ்டி கூட உண்டு போல் இருக்கிறது.” “திருச்செந்தூர் முருகன் செயல்!” என்றார் சாமியார். “நான் தேடிப் போகிற ஆசாமி அகப்படுவான்களா, சாமி!” “இந்தக் கட்டைக்கு என்ன தெரியும், அப்பா? அந்த ஆசாமி இந்த ரயிலிலே தான் இருக்கிறதாக இவ்விடத்தில் உதயமாகிறது!” என்று சாமியார் தம் நெற்றியை விரல்களால் தட்டிக் கொண்டார். “இந்த ரயிலிலே ஐந்நூறு பேர் இருக்கிறார்கள். அங்க அடையாளம் ஒன்றும் இல்லாமல் ஆளைக் கண்டுபிடி என்று சொன்னால், என்னத்தைச் செய்வது, சாமி! சர்க்கார் வேலையைப் போல் அதிலும் இந்த சி.ஐ.டி. உத்தியோகத்தைப் போல், தொல்லை பிடித்த வேலை வேறொன்றுமில்லை?” என்றான் சீடன். “உண்மை அப்பனே, உண்மை! இந்தத் தரித்திரம் பிடித்த வேலையை நீ விட்டுவிடு! திருச்செந்தூர் முருகன் அருளால் உனக்கு வேறு நல்ல வேலை கிடைக்கும்!” என்றார் சாமியார். ரயில் திண்டுக்கல் ஜங்ஷனை அடைந்தது; சி.ஐ.டி. கேசவன் பால சந்நியாசியைப் பார்த்து, “சாமி! நான் இவ்விடத்தில் இறங்கி இன்னும் இரண்டு வண்டி தேடிப் பார்த்துவிட்டு வருகிறேன். தாங்கள் இங்கேயே இருந்து என் இடத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். மதுரையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு டிக்கட்டைப் பற்றிச் சாமி கவலைப்பட வேண்டாம். மதுரையில் நான் டிக்கட் வாங்கித் தருகிறேன்” என்றான். “இந்தக் கட்டைக்கு டிக்கட் இருந்தாலும் ஒன்றுதான்; இல்லாவிட்டாலும் ஒன்றுதான். முருகன் ரயிலில் ஏறச் சொன்னால் ஏறும்; இறங்கச் சொன்னால் இறங்கும்” என்றார் பால சந்நியாசி. பத்து நிமிஷத்துக் கெல்லாம் அந்த சி.ஐ.டி. கேசவன் ஒரு ரயில்வே போலீஸ் உத்தியோகஸ்தரை அழைத்துக் கொண்டு திரும்பி வந்தான். தான் உட்கார்ந்திருந்த பெஞ்சு காலியாயிருந்ததைப் பார்த்துத் திகைத்தான். ஒருவேளை வேறு வண்டியாயிருக்கும் என்று அங்குமிங்கும் ஓடிப்போய்ப் பார்த்தான்; பயனில்லை. பிறகு அதே வண்டிக்கு வந்து உள்ளே தூங்கி வழிந்த பிரயாணிகள் சிலரைப் பார்த்து, “இங்கேயிருந்த சாமியார் எங்கே?” என்று கேட்டான். யாரைக் கேட்டாலும், “தெரியாது; நாங்கள் பார்க்கவில்லை!” என்றார்கள். இதற்குள் வண்டி புறப்படும் நேரமாகி, விசில் ஊதிவிட்டது. போலீஸ் உத்தியோகஸ்தர் அவனை இரண்டு திட்டுத் திட்டிவிட்டுத் திரும்பிப் போனார். சி.ஐ.டி. கேசவன் ரயிலில் ஏறிப் பழைய இடத்திலேயே போய் உட்கார்ந்து கொண்டான். “எல்லாம் முருகன் செயல்!” என்று சொல்லிக் கொண்டே சட்டைப் பையிலிருந்து விபூதிப் பொட்டணத்தை எடுத்துப் பிரித்துக் காசி விசுவநாதர் விபூதியை நெற்றியில் இட்டுக் கொண்டான். ஐந்தாம் அத்தியாயம் - வெற்றி ரகசியம் சென்னை மாநகரின் சிரோரத்தினமாக விளங்கி வந்த பத்மாபுரத்தில் “தேவி ஸதனம்” என்னும் பங்களாவில் ராவ்பகதூர் பத்மலோசன சாஸ்திரிகள் துர்வாச முனிவராக உருக்கொண்டிருந்தார். தன்னுடைய இதய கமலத்திலிருந்து பொங்கி வந்த குரோதமோகமாற்சரியங்களைப் பேனா முனை வழியாகக் காகிதத்தில் தீட்டிக் கொண்டிருந்தார். “தார்மிக கேஸரி” என்னும் ஆங்கிலப் பத்திரிகைக்கு அவர் எழுதிக் கொண்டிருந்த கட்டுரை, எழுதிய காகிதம் தீப்பட்டு எரியுமாறு அவ்வளவு உத்வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. சில காலமாக மேற்படி பத்திரிகையின் பத்திகளில் ராவ்பகதூர் பத்மலோசன சாஸ்திரியாருக்கும் பேராசிரியர் பரிவிராஜகசர்மாவுக்கும் மாபெரும் விவாத யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அந்த யுத்தத்துக்கு மூல காரணம் சாஸ்திரியார் பத்மாபுரம் சர்வக்ஞ சங்கத்தில் நிகழ்த்திய ஒரு பிரசங்கந்தான். ஹிந்து சமுதாயத்தில் அநாதி காலமாக ஏற்பட்டுள்ள வருணாசிரமத்தின் சிறப்பைச் சாஸ்திரியார் மேற்படி பிரசங்கத்தில் சாங்கோபாங்கமாக விளக்கினார். வர்ணாசிரம தர்மத்தை மேற்கொள்ளாததினால் மேனாடுகள் எப்படிப் பயங்கரமான யுத்தத்தில் அகப்பட்டுக் கொண்டு தவிக்கின்றன என்று எடுத்துக் காட்டினார். நாலு வர்ணங்களைப் பற்றிச் சொல்லி விட்டு நாலு ஆசிரமங்களைப் பற்றிக் கூறும்போது, சந்நியாச ஆசிரமத்தின் மகிமையைப் பற்றி மிக விஸ்தாரமாக எடுத்துச் சொன்னார். காலாகாலத்தில் சந்நியாச ஆசிரமத்தை மேற் கொள்ள முடியாதவர்கள் அந்திக் காலம் நெருங்கிவிட்டதென்று தெரிந்த பிறகாவது ‘ஆபத் சந்நியாசம்’ வாங்கிக் கொள்வதின் அவசியத்தை இலேசாகக் குறிப்பிட்டார். சாஸ்திரியாரின் மேற்படி பிரசங்கத்தின் சாராம்சம் சற்று விரிவாகவே தினப் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது. மேற்கண்ட கருத்துக்கள் சாதாரணமாகப் பேராசிரியர் பரிவிராஜகசர்மா ஒப்புக்கொள்ளக் கூடியவைதான். ஆயினும் சாஸ்திரியார் பிரசங்கம் செய்து அது பத்திரிகையிலும் வந்து விட்ட காரணத்தினால் ஏதாவது ஒரு விதத்தில் அதைத் தாக்குவது சர்மாவின் இன்றியமையாத கடமையாயிற்று. எனவே, “தார்மிக கேஸரி”க்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினார். அதன் சாராம்சமாவது: “இந்தக் காலத்தில் சிலர் சந்நியாச ஆசிரமத்தைப் பற்றிப் பிரமாதமாகப் புகழ்ந்து பேச ஆரம்பித்திருக் கிறார்கள். உண்மையில் பழைய வேத காலத்து ஹிந்துக்கள் சந்நியாசத்துக்கு அவ்வளவு உயர்வைக் கொடுக்கவில்லை. சஹதர்மினி இல்லாதவன் யாகம் செய்வதற்கு உரியவனாகக் கருதப்படவில்லை. அத்திரி, பிருகு, ஆங்கிரஸர், அகஸ்தியர், வசிஷ்டர், வாமதேவர், பராசரர் முதலிய மகரிஷிகளுக்குப் பத்தினிகள் இருந்தார்கள். கௌதம புத்தருடைய காலத்துக்குப் பிறகு தான் இந்தியாவின் சந்நியாசத்துக்குச் சிறப்பு ஏற்பட்டது. ‘ஆபத் சந்நியாசம்’ வாங்கிக் கொள்ளும் வழக்கம் மிக்க அபத்தமானது. புதல்வர்கள் சரிவரச் சிரார்த்தம் செய்ய மாட்டார்களோ என்று பயந்தவர்கள் தான் கடைசி காலத்தில் அவசர அவசரமாகச் சந்நியாசம் பெறுவார்கள். சில அபூர்வமான புத்திர சிகாமணிகள் தகப்பனாருக்கு சிரார்த்தம் செய்யும் சங்கடம் இல்லாமற் போவதற்காக தகப்பனாரைக் கட்டாயப்படுத்தி மொட்டையடித்துக் காஷாயம் கட்டிவிடுவதும் உண்டு. ராவ்பகதூர் பத்மலோசன சாஸ்திரியாருக்கு இத்தகைய விபத்து எதுவும் நேராது என்று நம்புகிறேன். சாஸ்திரியார் இம்மாதிரியெல்லாம் உளறிக் கொட்டாமல் தமது திருவாயை மூடிக்கொண்டிருந்தாரானால் ஹிந்து தர்மத்துக்குப் பேருதவி செய்தவராவார்.” இத்தகைய அவதூறு நிறைந்த கடிதத்தைப் படித்துவிட்டு ராவ்பகதூர் பத்மலோசனை சாஸ்திரியார் அளவில்லாத கோபம் கொண்டது இயல்பேயல்லவா? அவர் எழுதிய மறுப்புக் கடிதத்தில் பேராசிரியர் சர்மாவை வெளு வெளு என்று வெளுத்திருந்தார். “ஹிந்து சமயத்தில் சந்நியாச ஆசிரமத்துக்கு உயர்வு கொடுக்கவில்லையென்று எந்த மூட சிகாமணி எந்த நிரட்சரகுட்சி சொல்லுவான்? இந்தியாவில் ஹிந்து தர்மத்தை நிலை நாட்டிய மகா புருஷரான ஆதி சங்கராச்சாரியார் சந்நியாசி அல்லவா? நம்முடைய காலத்தில் ஹிந்து தர்மத்தின் உயர்வை உலகமெல்லாம் உணரும்படி செய்தவர் சுவாமி விவேகானந்தர் அல்லவா? இன்று திருவண்ணாமலையில் எழுந்தருளியிருக்கும் ரமண மகரிஷியின் பெருமையை உணராத ஜடமாக யார் இருக்க முடியும்? இராமாயண காலத்தில் இந்தியாவிலே சந்நியாச ஆசிரமத்துக்கு எவ்வளவு பெருமை இருந்தது என்பதை வால்மீகி பகவான் சந்தேகத்திற்கு இடமின்றிச் சொல்லி இருக்கிறார். சீதாதேவி எவ்வளவு பயபக்தி மரியாதையுடன் அவனை உபசரிக்கிறாள்? சந்நியாசத்துக்கு அவ்வளவு மரியாதை அந்தக் காலத்தில் இருந்தபடியால் அல்லவா இராவணன் சந்நியாச கோலம் பூண்டு சீதையிடம் வந்தான்? நிற்க, ஆசிரமங்களை எப்படி வரிசைப்படுத்தியிருக்கிறது என்பதிலிருந்து எது உயர்ந்த ஆசிரமம் என்பதை அறியலாம். பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வானப் பிரஸ்தம், சந்நியாசம் என்னும் வரிசையில் கடைசியில் இருப்பதனாலேயே அது எல்லா ஆசிரமங்களுக்கும் சிகரமானது என்று வ ஢ளங்கவில்லையா? சாதாரணமாக எல்லோருக்கும் இது விளங்கக் கூடிய விஷயந்தான். மெத்தப் படித்த மேதாவியான பேராசிரியர் சர்மாவின் அபார மூளைக்கு மட்டும் இது விளங்கவில்லை போலும்!” இவ்வாறு சாஸ்திரியார் எழுதிய விவாதத்தைக் கடைசி வார்த்தையாக இருக்கும்படி விட்டுவிட்டுப் பேராசிரியர் சர்மா சும்மா இருந்து விடுவாரா? மீண்டும் அவர் எழுதத்தான் செய்தார். "ராவ்பகதூர் பத்மலோசன சாஸ்திரிகள் தாம் மெத்தப் படித்தவர் இல்லை என்று ஒப்புக்கொள்கிறார். அப்படியானால் கொஞ்சம் படித்தவர் என்று ஏற்படுகிறது. ஆனால் அந்தக் கொஞ்சமும் எதைப் படித்தாரோ தெரியவில்லை. இந்தியாவின் சரித்திரத்தைத் தொட்டுப் பார்த்ததேயில்லையென்று திட்டமாய்த் தெரிகிறது. புத்தருக்குப் பிறகு இந்தியாவிலே சந்நியாசத்துக்குப் பெருமை ஏற்பட்டது என்று தான் சொன்னேன். சாஸ்திரியார் ஸ்ரீ சங்கராச்சாரியாரையும், சுவாமி விவேகானந்தரையும், ஸ்ரீ ரமண ரிஷிகளையும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த மூவரும் புத்தருக்கு முன்னாலிருந்தவர்கள் என்பது சாஸ்திரியாரின் எண்ணம் என்று தெரிகிறது. ஆனால் சாஸ்திரியார் சொல்லிவிட்டதால் சரித்திரம் வந்த வழியே திரும்பிப் போய்விடாது. சாஸ்திரியார் ‘இராவண சந்நியாசி’யைக் குறிப்பிட்டது பற்றிச் சந்தோஷப்படுகிறேன். இராமாயண காலத்திலே சந்நியாச ஆசிரமம் போலிகளுக்கும் மோசக்காரர்களுக்கும் வேஷமாகி விட்டது என்பதை வால்மீகி பகவான் நன்றாக ஸ்தாபனம் சய்திருக்கிறார். ஆசிரம வரிசைக் கிரமத்தில் சந்நியாசம் கடைசியில் வருவதால் அதுவே உயர்ந்த ஆசிரமம் என்று சாஸ்திரியார் சாதிக்கிறார். இதே மாதிரி வர்ணங்களிலும் கடைசி வர்ணமே உயர்ந்தது என்று சாஸ்திரியார் ஒப்புக்கொள்கிறாரா? அப்படி ஒப்புக்கொண்டால் நானும் சந்நியாசத்தின் உயர்வை ஒப்புக்கொண்டு சாஸ்திரியாருக்கு இப்போதே ’ஆபத் சந்நியாசம்’ வாங்கிக் கொடுக்க ஏற்பாடு செய்கிறேன். சாஸ்திரிகளின்பாடு இப்போது மிகவும் சங்கடமாகத்தான் போய்விட்டது. தம்முடைய வாதங்களில் உள்ள பலக் குறைவைக் கோபத்தினாலும் சாபத்தினாலும் இட்டு நிரப்புமாறு காரசாரமுள்ள பதில் ஒன்றை எழுதப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார். அந்தப் பிரயத்தனம் காரணமாகச் சாஸ்திரியார் ரௌத்ராகாரம் கொண்டிருந்தபோது, அவருடைய பங்களாவின் வாசலில், “பவதி பிட்சாந் தேஹி” என்று குரல் ஒன்று கேட்டது. மேல்மாடித் தாழ்வாரத்திற்கு வந்து சாஸ்திரியார் எட்டிப் பார்த்தார். இளம் பிராயத்துத் துறவி ஒருவர் நிற்பதைக் கண்டார். அவருக்கு ஏற்பட்ட வியப்பைச் சொல்லி முடியாது. தம் வாழ்நாளிலேயே இதுவரையில் இல்லாத பரபரப்புடன் மச்சுப்படிகளை மூன்று மூன்று படியாகக் குதித்துத் தாண்டிக் கொண்டு கீழே இறங்கினார். பின்கட்டிலிருந்த தமது வாழ்க்கைத் துணைவியை அழைத்து “காமாட்சி! ஒரு அதிசயத்தைக் கேள்! வாசலில் யாரோ பால சந்நியாசி வந்து நிற்கிறார். முகத்திலே தேஜஸ் ஜொலிக்கிறது. ‘பிட்சாந்தேஹி!’ என்ற வார்த்தை கேட்டதும் எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது. வாசற்கதவுச் சாவியைச் சீக்கிரம் கொண்டுவா! ஒரு மகானை எத்தனை நேரம் வாசலிலே நிறுத்தி வைக்கிறது? சாக்ஷாத் ஆதிசங்கரரே திரும்ப அவதாரம் எடுத்து வந்திருப்பது போலிருக்கிறது. நம் பிதாமகர்கள் செய்த பாக்கியம் நம் வீட்டைத் தேடி வந்திருக்கிறார். என்ன பேசாமல் நிற்கிறாயே?” என்று இரைந்தார். இதற்குள் வாசற்புறம் எட்டிப் பார்த்து யாரோ ஒரு சந்நியாசி நிற்பதைத் தெரிந்து கொண்ட காமாட்சி அம்மாள் “எதற்காக இவ்வளவு படபடப்பாய் பேசுகிறீர்கள்? வாசற் கதவு திறந்துதானிருக்கிறது. அப்படி அதிசயமான மகான் எங்கேயிருந்து வந்து குதித்து விடப் போகிறார்? இராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சாமியாராயிருக்கும் ஏதாவது நன்கொடை வசூலிப்பதற்காக வந்திருக்கிறார் போலிருக்கிறது!” என்றாள். இதைக் கேட்டதும் சாஸ்திரியாரின் உற்சாகம் கொஞ்சம் தணிந்தது. காமாட்சி அம்மாள் சொன்னதைப் போலவே இராமகிருஷ்ண மடம் அல்லது கௌடியா மடத்திலிருந்து யாராவது நன்கொடை கேட்க வந்திருக்கலாம் என்று நினைத்தார். ஆனால் அப்படியிருந்தால், “பவதி பிக்ஷாந்தேஹி!” என்று கேட்டிருக்க மாட்டாரல்லவா? இந்த எண்ணம் கொஞ்சம் தைரியத்தை ஊட்டியது. எப்படியிருந்தாலும் பார்த்து விடலாம் என்று வாசற் பக்கம் சென்றார். காமாட்சி அம்மாளும் வஸந்தியும் பின்னோடு வந்தார்கள். இதற்குள் சாமியாரும் கதவைத் திறந்துகொண்டு வீட்டுக்குள் பிரவேசித்தார். சந்நியாசியை நெருங்கி நின்று பார்த்ததும் சாஸ்திரியாரும் காமாட்சி அம்மாளும், ‘தெரிந்த முகமாய்த் தோன்றுகிறதே; யாராக இருக்கும்?’ என்று திகைத்தார்கள். “மாமி என்னை அடையாளம் தெரிகிறதா?” என்று சுவாமியார் கேட்டதும் காமாட்சி அம்மாளுக்குப் பளிச்சென்று உண்மை தெரிந்துவிட்டது. “நம்ம சூரியாவைப் போலிருக்கிறதே? இது என்ன கோலம்?” என்றாள் காமாட்சி அம்மாள். “நம்ம சூரியா போலிருக்கிறதா? என்ன உளறுகிறாய்? நம்ம சூரியா என்றால் யார்?” என்றார் சாஸ்திரியார். “ராஜம்பேட்டை கிட்டாவய்யர் பிள்ளை சூரியா தான் வேறு எந்தச் சூரியாவைச் சொல்லப் போகிறேன்?” “நிஜமாகவா? அதனாலேதான் எனக்குக் கூடப் பார்த்த முகமாகத் தோன்றியது” என்றார் சாஸ்திரியார்.“ஆமாம்; பூர்வாசிரமத்தில் இந்தக் கட்டையின் பெயர் சூரியா தான்; இந்த ஆசிரமத்தில் சுதந்திராநந்தர்” என்று சொன்னார் சந்நியாசி.“அப்படியா? ரொம்ப சந்தோஷம் பழம் நழுவிப் பாலில் விழுவது போலாயிற்று!” என்று உபசரித்துக் கொண்டே சாஸ்திரிகள் ஸ்ரீ சுதந்திராநந்தரை அழைத்துச் சென்று ஹாலில் சோபாவில் உட்காரச் செய்தார்.காமாட்சி அம்மாள், “இத்தனை சின்ன வயதில் இது என்ன கோலம்? அப்பா அம்மா சம்மதித்தார்களா? காலாகாலத்தில் ஆகவேண்டியதெல்லாம் ஆகி வயதான பிறகு சந்நியாசம் வாங்கிக் கொண்டால் பாதகமில்லை!” என்றாள். சுவாமியார் பதில் சொல்வதற்குள் சாஸ்திரியார் குறுக்கிட்டு, “ரொம்ப லட்சணம்! உன்னைக் கேட்டுக் கொண்டு தான் சந்நியாசி ஆகவேணும் போலிருக்கிறது. உலகத்தைத் துறந்து ஆசிரமம் வாங்கிக்கொண்ட பிறகு, அப்பா யார்? அம்மா யார்? பிரிவிராஜகர் ஆன பிறகு, உலக பந்தமே கிடையாது; குடும்ப பந்தம் எப்படி வரும்? அவள் கிடக்கிறாள், சுவாமிகளே! தங்களைப் போல் பால வயதில் வைராக்கிய மடைந்து ஆயிரம் பேர் சந்நியாசம் வாங்கிக் கொண்டு ஸநாதன தர்மத்தைப் பிரசாரம் செய்வது என்று ஆரம்பித்தால் ஸநாதன தர்மம் உத்தாரணமே ஆகிவிடும். அது இருக்கட்டும்; தாங்கள் எங்கே, எப்போது இந்த ஆசிரமத்தை மேற்கொண்டது? எந்த மகானிடம் ஆசிரமம் வாங்கிக் கொண்ட பிறகு எங்கெங்கே போய் வந்தது? இந்த நகரத்தில் எத்தனை நாள் தங்குவதாக உத்தேசம்? எல்லாம் விவரமாகச் சொல்ல வேண்டும். காமாட்சி! நீ சமையலறைக்குப் போய்க் கொஞ்சம் கவனி. சாஸ்திரோத்தமாகச் சுவாமிகளுக்குப் பிக்ஷை பண்ணி வைக்க வேண்டும்; ஒரு குறையும் ஏற்படக் கூடாது தெரிகிறதா?” என்றார். “நன்றாய்த் தெரிகிறது எல்லாம் ஒரு குறைவுமில்லாமல் நடந்துவிடும், நீங்கள் கவலைப்பட வேண்டாம்!” என்று சொல்லி விட்டுக் காமாட்சி அம்மாள் பின்கட்டுக்குச் சென்றாள். அவளுடன் வஸந்தியும் போனதைப் பார்த்த பால சந்நியாசி, “வஸந்தி! என்னை ஞாபகம் இல்லையா? பேசமாட்டேன் என்கிறாயே?” என்றார். வஸந்தி அப்படியும் சுவாமியாருடன் பேசாமல் பாட்டியைக் குனியச் சொல்லி அவள் காதோடு, “ஏன், பாட்டி! சூர்யா மாமா எதற்காகத் தலையை மொட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்? திருப்பதிக்குப் போய்விட்டு வந்தாரா?” என்று கேட்டதும் எல்லோரும் சிரித்து விட்டார்கள். வஸந்தியையும் அழைத்துக் கொண்டு காமாட்சி அம்மாள் பின்கட்டுக்குச் சென்ற பிறகு சாஸ்திரியார், “ஆமாம்; தாங்கள் எப்படி இந்த ஆசிரமத்தை மேற்கொண்டது? ஏதோ காங்கிரஸில் சேர்ந்து ‘குவிட் இந்தியா’ இயக்கத்துக்குப் பாடுபட்டுக் கொண்டிருப்பதாகச் சொன்னார்களே?” என்றார்.“ஆம்? அதுவும் உண்மை தான்; ‘குவிட் இந்தியா’ இயக்கத்துக்காகத்தான் ஊர் சுற்றிக் கொண்டிருந்தேன்.ஹரித்துவார் போயிருந்த சமயத்தில் அங்கே ஒரு சுவாமியாரைத் தரிசித்தேன்.தரிசித்த வேளை, விட்டகுறை வந்து தொட்டுக் கொண்டது.அவரிடம் சிஷ்யனாகி ஒரு வருஷம் இருந்து தொண்டு செய்தேன்.பிறகு ஆசிரமம் பெற்றுக் கொண்டு க்ஷேத்திர யாத்திரை செய்து வருகிறேன்.இப்போது ராமேசுவரத்துக்குப் போய்த் திரும்பி வருகிறேன்!” என்றார் பால சந்நியாசி. “தங்களுடைய பூர்வீகர்களிலே யாராவது மகான்கள் இருந்து யாக யக்ஞங்கள் செய்திருக்க வேண்டும். அதனாலே தான் இந்தப் பிராயத்தில் இப்படிப்பட்ட பாக்கியம் தங்களுக்குக் கிடைத்தது. ஈரேழு பதினாலு தலைமுறையும் தங்களால் கடைத்தேறப் போகிறது. இந்த நகரிலே எத்தனை நாள் தங்குவதாக உத்தேசம்?” “இன்றைக்கும் நாளைக்கும் இருந்துவிட்டு நாளை மறுநாள் புறப்படலாம் என்று நினைக்கிறேன்.” “அதெல்லாம் கூடவே கூடாது; இங்கே ஒரு மாதமாவது தங்கியிருக்க வேண்டும். இருக்கிற வரையில் நம்முடைய கிரஹத்திலேயே பிக்ஷை, பூஜை எல்லாம் வைத்துக்கொள்ளலாம். சர்வக்ஞ சங்கத்தின் ஆதரவில் உபந்நியாசங்களுக்கு ஏற்பாடு செய்கிறேன். ஸநாதன தர்மத்தைப் பற்றியும் முக்கியமாக வர்ணாசிரம தர்மத்தைப் பற்றியும் உபந்நியாசம் செய்யவேண்டும். ஹிந்து சமூகத்தில் சந்நியாசத்துக்கு எவ்வளவு பெருமை என்பது எல்லாரும் மறந்து விட்டார்கள். பரிவிராஜக சர்மாவைப் போன்ற படித்த முட்டாள்கள் கூட இந்த விஷயத்தில் தப்பபிப்பிராயம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய உபந்நியாசங்கள் அவர்களையெல்லாம் வாயடைத்துப் போகும்படி செய்ய வேண்டும். இந்தச் சமயத்தில் வாசற்பக்கமிருந்து ஒரு இளம் பெண்மணி உள்ளே வந்தாள். அவள் தூய வெள்ளைக் கதருடை தரித்திருந்தாள். தலையில் மாத்திரம் மிக்க நவநாகரிக முறையில் ‘பாப்’ செய்யப்பட்டுப் பரட்டையாகத் தொங்கியது. ஆனால் நடையுடை பாவனையெல்லாம் அடக்கமாக இருந்தன.”நமஸ்காரம் மாமா! சௌக்கியமா? மாமி உள்ளே சமையலறையில் இருக்கிறாரா?" என்று கேட்டுக்கொண்டே அவள் பின்கட்டுக்குச் சென்றாள். “இந்த அம்மாள் யார்?” என்று சுவாமியார் கேட்கவும், “உனக்குத் தெரியாது? இவள்தான் என்னுடைய மூத்த நாட்டுப் பெண். இவளுடைய வாழ்க்கையில் திடீரென்று இந்த மாறுதல் ஏற்பட்டு விட்டது. இவளுடைய சிநேகிதிகள் சிலர் 1942 ஆகஸ்டு இயக்கத்தில் சிறைக்குப் போயிருக்கிறார்களாம். இவளுடைய இன்னொரு சிநேகிதி பர்மாவில் நேதாஜி சுபாஷ் பாபுவின் ஐ.என்.ஏ.யில் சேர்ந்திருக் கிறாளாம். இதெல்லாம் சேர்ந்து இவளையும் இப்படிக் கதர், காங்கிரஸ், பைத்தியமாக அடித்து விட்டது. ஆனால் மொத்தத்தில் நல்ல மாறுதல் தான். இவள் இந்த வீட்டுக்கு வந்து இருப்பதாகக் கூடச் சொல்கிறாள். ஆனால் நான் தான் கொஞ்ச நாள் போகட்டுமே என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். இவள் இங்கிருக்கும்போது போலீஸ்காரர்கள் வந்து இவளைப் பிடித்துக் கொண்டுபோனால், என்னுடைய பென்ஷனுக்கு அல்லவா ஆபத்து வந்து தொலையும்?” என்றார் சாஸ்திரியார். “ஆனால் தங்கள் பென்ஷனுக்கு இப்போது ஆபத்து வந்தாலும் சுயராஜ்யம் வந்தவுடன் பென்ஷனும் திரும்பி வந்துவிடும் அல்லவா?” என்றார் சந்நியாசி. “வரலாம் வரலாம், ஆனால் இந்த மாதிரி இளம் பெண்கள் வேலை செய்துதானா, இந்தியாவுக்குச் சுயராஜ்யம் வரப்போகிறது? மகாத்மா காந்தி, வல்லபாய்ப் படேல், ஜவாஹர்லால் நேரு முதலியவர்கள் சிறை புகுந்ததற்கே சுயராஜ்யம் வரவில்லையே?” “அப்படியானால் இந்தியாவுக்குச் சுயராஜ்யம் வரவே வராது என்று நினைக்கிறீர்கள்?” என்றார் சந்நியாசி. “யார் சொன்னது? இந்தியாவுக்குச் சுயராஜ்யம் கட்டாயம் வரத்தான் போகிறது. ஆனால் இவர்களாலெல்லாம் வரப்போவ தில்லை; கடவுளுடைய சித்தத்தினால் வேறு வழியில் வரப் போகிறது. கலிபுருஷர் ஜெர்மனியில் அவதாரம் எடுத்திருக்கிறார்; ஹிட்லரைத் தான் சொல்கிறேன். ஹிட்லர் ருஷியாவின் மேல் படையெடுத்தது முட்டாள்தனம் என்று சில பிரகஸ்பதிகள் இங்கே சொல்கிறார்கள். ஹிட்லரை விட இவர்கள் மேதாவிகள் என்கிற எண்ணம். ஹிட்லர் ருஷியாவின் மீது படையெடுத்ததே இந்தியாவை நோக்கமாக வைத்துக் கொண்டுதான்! ஸ்டாலின் கிராடைப் பிடித்தவுடன், ஒரே தாவில் இந்தியாவிலே ஆகாச விமானத்தில் வந்து இறங்கப் போகிறார். ஐம்பதினாயிரம் ஆகாச கப்பல்களில் துருப்புகளும் வந்து இறங்கப் போகின்றன. ஹிட்லர்தான் ஸ்பஷ்டமாகச் சொல்லிவிட்டாரே, உலகத்திலேயே ஆரிய ஜாதி தான் உயர்ந்த சாதி என்று? அப்படியானால் இந்தியாவிலேதானே உலக சாம்ராஜ்யத்தின் தலைநகரத்தை ஸ்தாபித்தாக வேண்டும்? ஹிட்லர் இந்தியாவில் வந்து இறங்கிய உடனே செய்யப் போகிற முதல் வேலை என்ன தெரியுமா? ‘சாதி வித்தியாசம் கூடாது’ என்று சில பிரகஸ்பதிகள் உளறிக்கொண்டிருக்கிறார்களே, அவர்கள் எல்லாரும் தலையிலே துணியைப் போட்டுக் கொள்ள வேண்டியதுதான்! உலகத்திலுள்ள ஜனங்களையெல்லாம் அடால்ப் ஹிட்லர் நான்கு வர்ணங்களாகப் பிரித்துவிடப் போகிறார். அப்போது அல்லவா தெரியப் போகிறது வர்ணாசிரம தர்மத்தின் பெருமை? பிழைத்துக் கிடந்தால் நானும் பார்க்கத்தான் போகிறேன்?” என்றார் சாஸ்திரியார். அங்கே தேவபட்டிணத்தில் தாமோதரம்பிள்ளை, “ஜப்பான்காரன் வந்து எல்லாச் சாதிகளையும் ஒன்றாக்கப் போகிறான்” என்று சொன்னதையும், இங்கே சாஸ்திரிகள், “ஹிட்லர் வந்து வர்ணாசிரம தர்மத்தை நிலைநாட்டப் போகிறார்” என்று சொல்வதையும் மனதிற்குள் சுவாமியார் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டார். அதனால் தன்னை மீறி வந்த சிரிப்பைப் அடக்கிக்கொண்டு, “ஆனால் சில பேர் ஹிட்லர் தோற்றுப் போய்விடுவார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களே!” என்றார். "அப்படிச் சில பேர் உளறிக் கொண்டிருக்கிறார்கள், நானும் கேட்டுத் தான் இருக்கிறேன். இவர்கள் இப்படி உளறினால் நடக்க வேண்டியது நடக்காமல் போய்விடுமா? ஹிட்லர் எப்பேர்ப்பட்ட வாழ்க்கை நடத்துகிறார் என்பது தெரியுமல்லவா? மாமிசம் சாப்பிடுவதில்லை; மதுபானம் செய்வதில்லை; ஸ்திரீகளின் முகத்தில் விழிப்பதில்லை. பிறந்ததிலிருந்து பிரம்மச்சரிய விரதம். சுவாமிகளே! ஹிட்லரைச் சாதாரண மனுஷன் என்று எண்ணிவிட வேண்டாம். அவர் ஹடயோகி; கலிபுருஷனுடைய அவதாரம். ஸமஸ்கிருத பாஷையைக் கரைத்துக் குடித்த மகாபண்டிதர்கள் இப்போது ஜெர்மனியில் தான் இருக்கிறார்கள் என்பது தெரியும் அல்லவா? ஒருநாள் ஜெர்மன் ஸயன்டிஸ்டுகளை எல்லாம் ஹிட்லர் கூப்பிட்டார். ‘உங்கள் அசட்டு ஆராய்ச்சிகளையெல்லாம் மூட்டை கட்டி வையுங்கள்; அதர்வண வேதத்தைக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்றார். ஜெர்மன் ஸயன்டிஸ்டுகள் அப்படியே செய்தார்கள். அதன் பலன் என்ன வி. ஒன்று, வி. இரண்டு வி. மூன்று என்பதாகப் புதுப் புது ஆயுதங்கள் புறப்பட்டுக் கொண்டே இருக்கின்றன! இங்கிலீஷ்காரர்கள், அமெரிக்கர்கள், ருஷ்யர்கள் எல்லோரும் முழி முழியென்று முழிக்கிறார்கள்! எல்லாம் அதர்வண வேதத்திலுள்ள இரகசியம் என்று இவர்களுக்கெல்லாம் தெரியாது. இன்னும் ஒரு விஷயம் தெரியுமோ இல்லையோ? ஹிண்டு ஜோதிஷ சாஸ்திரத்தின்படி நாள் நட்சத்திரம் பார்த்துக் கொண்டு தான் ஹிட்லர் ஒவ்வொரு காரியத்தையும் ஆரம்பித்தார். செக்கோஸ்லோவேகியா மீது படையெடுத்த போதும் அப்படி; பிரான்ஸைப் பிடிக்க கிளம்பிய போதும் அப்படி; இல்லாவிட்டால் நெப்போலியன் பிறந்த பிரான்ஸ் தேசத்தைப் பத்தே நாளில் பிரியைக் கட்டி இழுத்திருக்க முடியுமா? நான் சொல்கிறது என்ன?" என்று சாஸ்திரியார் நிறுத்தினார். “கவனமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்!” என்று பால சந்நியாசி பட்டுக் கொள்ளாமல் சொன்னார். “கவனமாக கேட்டு என்ன பிரயோஜனம்? மனதிலே வாங்கிக் கொள்ள வேண்டும். இன்னொரு சர்வ இரகசியமான விஷயம். நாள் நட்சத்திரம் பார்த்துச் சொல்வதற்கு ஹிட்லர் எப்பொழுதும் பக்கத்திலே வைத்துக் கொண்டிருக்கிற ஆசாமி யார் என்று சுவாமிகளுக்குத் தெரியுமா?” “அது யார்! தெரியாதே?” "நான் சொல்லுகிறேன்; மன்னார்குடி பஞ்சு சாஸ்திரிகள் பிரசித்தமாயிருந்தாரே, தெரியுமோ இல்லையோ? நாலு வேதம் ஆறு சாஸ்திரம் தெரிந்த மகான். அவருடைய சாக்ஷாத் பெண் வயிற்றுப் பேரன் பிச்சு சாஸ்திரிகளைத் தான் எப்போதும் ஹிட்லர் தன் பக்கத்திலேயே வைத்துக் கொண்டிருக்கிறாராம். எப்பேர்ப்பட்ட ஜெனரல் ஆகட்டும், பீல்டு மார்ஷல் ஆகட்டும், சீப் ஆப் ஸ்டாப் ஆகட்டும், யார் வந்து ‘இதுதான் சமயம்; படை கிளம்ப வேண்டும்!’ என்று சொன்னாலும் ஹிட்லர், ‘ஊஹூம்’ என்று சொல்லிவிடுவாராம். பிச்சு சாஸ்திரிகள் பஞ்சாங்கத்தைப் புரட்டிப் பார்த்துப் ‘படை கிளம்பலாம்’ என்று சொன்னால் தான், புறப்பட உத்தரவு கொடுப்பாராம்! அதன் பலன் என்ன? ஜயத்துக்கு மேல் ஜயம்! வெற்றிக்கு மேல் வெற்றி! உலகமே ஹிட்லரின் காலடியில் வந்து கொண்டிருக்கிறது. அங்கே ஹிட்லர் நம்முடைய சாஸ்திரங்களுக்கு அவ்வளவு மதிப்புக் கொடுக்கிறார். இங்கே சில பிரகஸ்பதிகள் ‘பழம் பஞ்சாங்கம்’ என்று பரிகாசம் செய்கிறார்கள்! என்னத்தைச் சொல்கிறது? எந்தக் குட்டிச் சுவரிலே போய் முட்டிக் கொள்கிறது என்று கேட்கிறேன்." இவ்விதம் சாஸ்திரியார் சரமாரியாகப் பொழிந்ததைச் சந்நியாசி வேறு வழியின்றிக் கேட்டுக் கொண்டிருந்தார். இவ்வளவு படித்த மனிதர், பி.ஏ., பட்டம் பெற்றவர், ஸப் ஜட்ஜு உத்தியோகம் பார்த்தவர், உலக அனுபவம் பெற்றவர், இத்தகைய குருட்டு நம்பிக்கையைப் பிடிவாதமாகப் பிடித்துக் கொண்டிருப்பது குறித்து அவருடைய மனதில் ஒரு பகுதி ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தது. பரம்பரையாக வந்து இரத்தத்தில் ஊறிப்போன நம்பிக்கைகளைக் கைவிடுவது அவ்வளவு எளிதான காரியமல்ல போலும் என்று எண்ணினார். அதே சமயத்தில் அவருடைய மனதில் இன்னொரு பகுதி ’இவருடைய சளசளப்பு எப்போது ஓயும்? காமாட்சியம்மாளிடம் தனியாகச் சீதாவைப் பற்றிப் பேச எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும்?" என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தது. கடைசியில் சாஸ்திரிகள் பேச்சை நிறுத்துவதற்குச் சாமியார் ஒரு வழி கண்டுபிடித்தார். “நீங்கள் சொல்லுவதெல்லாம் சரியாயிருக்கலாம். ஆனால் இப்படி இறைந்து பேசுகிறீர்களே? இப்போது தான் எங்கே பார்த்தாலும் சி.ஐ.டி.க்காரர்கள் வட்டமிட்டுக் கொண்டிருக் கிறார்களே? யார் காதிலாவது விழுந்து ரிப்போர்ட்டு செய்தால் வீண் வம்பு அல்லவா?” என்றார். சாஸ்திரியாரின் சரமாரியான பிரசங்கம் அந்தக் கணமே பளிச்சென்று ஓய்ந்தது. ஆறாம் அத்தியாயம் - கலியாணம் அவசியமா? சாஸ்திரியார் மாடி ஏறிச் சென்றதும், காமாட்சி அம்மாள் வார்த்தைகளைப் பொழிந்தாள்: “சூரியா! இது என்ன இப்படிப்பட்ட காரியம் செய்து விட்டாய்? இந்த வயதில் சந்நியாசமாவது? இவர் ஓயாமல் ‘சந்நியாசம் வாங்கிக் கொள்ளப் போகிறேன்’ ‘சந்நியாசம் வாங்கிக் கொள்ளப் போகிறேன்’ என்று பயமுறுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் வீட்டை விட்டு அசைகிற வழியாகக் காணோம். வயதாக ஆக, பாச பந்தம் அதிகமாகி வருகிறது. மூத்த நாட்டுப் பெண் வேறு வந்து செல்லம் கொஞ்ச ஆரம்பித்திருக்கிறாள். நீ இந்த வயதில் காஷாயம் வாங்கிக் கொண்டாயே? கொஞ்சங்கூட நன்றாயில்லை. உன்னை எப்படிக் கூப்பிடுவது என்றே எனக்குத் தெரியவில்லை. ‘சுவாமிகளே! வாங்கள்! போங்கள்!’ என்று மரியாதையாகச் சொல்ல வேண்டுமோ, என்னமோ?” என்றாள். “மாமி, அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். தாராளமாய்ச் ‘சூரியா’ என்றும் ‘வா’ ‘போ’ என்றும் சொல்லுங்கள். உங்களிடம் நிஜத்தைச் சொல்லி விடுகிறேன். ஒரு காரியார்த்தமாக இந்த வேஷம் போட்டுக் கொண்டேன். உண்மையில் நான் சந்நியாசம் வாங்கிக் கொண்டு சாமியார் ஆகிவிடவில்லை” என்றான் சூரியா. “இது என்ன கூத்து? போயும் போயும் எதற்காக இந்த வேஷம் போட்டுக்கொண்டாய்? இந்தக் காலத்துப் பிள்ளைகளின் காரியமே வேடிக்கையாகத் தான் இருக்கிறது. ஒருவேளை சினிமாவிலே, கினிமாவிலே சேர்ந்திருக்கிறாயா, என்ன?” “அதெல்லாம் இல்லை, மாமி! நான் சுயராஜ்ய இயக்கத்தில் சேர்ந்திருக்கிறேன் அல்லவா?” “சுயராஜ்யமும் ஆச்சு, மண்ணாங்கட்டியும் ஆச்சு! இந்தக் காஷாய வேஷத்தைக் கலைத்துவிட்டு மறு காரியம் பார்! உனக்குக் கலியாணத்துக்குப் பெண் பார்த்து வைத்திருக்கிறேன், உன்னை இந்தக் கோலத்தில் பார்த்ததும் எனக்குப் பகீர் என்றது.” “மாமி! கலியாணம் அவ்வளவு அவசியமான காரியமா? கலியாணம் செய்து கொண்டவர்கள் எல்லோரும் சந்தோஷமாயிருக்கிறார்களா?” என்று சூரியா கேட்டான். “எத்தனையோ பேர் கலியாணம் செய்து கொண்டு பிள்ளையும் குட்டியுமாய்ச் சந்தோஷமாய்த்தானிருக் கிறார்கள் . சில பேருடைய தலை எழுத்து சந்தோஷமாயிருக்க முடிகிறதில்லை. அப்படிப் பார்த்தால் உலகத்திலே யார்தான் எப்போதும் ந்தோஷமாயிருந்தார்கள்? இராமன் சீதையைக் கலியாணம் செய்து கொண்டு எவ்வளவோ கஷ்டப்பட்டார். அதனால் இராமர் கலியாணமே செய்து கொண்டிருக்கக் கூடாது என்று சொல்லமுடியுமா?” என்றாள் காமாட்சி அம்மாள். “இராமரும் சீதையும் ஒருவருக்கொருவர் எவ்வளவோ பிரியமாயிருந்தார்கள். அதனால் அவர்கள் சந்தோஷமாயிருந்தார்கள். தம்பதிகள் அன்யோன்யமாயிருந்து மற்றவர்களால் எவ்வளவு கஷ்டம் நேர்ந்தாலும் பொறுத்துக் கொள்ளலாம்; சந்தோஷமாகவும் இருக்கலாம். ஆனால் இந்தக் காலத்துத் தம்பதிகள் அப்படி இல்லையே?” என்றான் சூரியா. “நீ எதைக் குறிப்பிட்டுச் சொல்லுகிறாய் என்று எனக்குத் தெரிகிறது. சூரியா! என் பிள்ளையும் நாட்டுப் பெண்ணும் அன்யோன்யமா யில்லை என்றுதானே சொல்கிறாய்? அது வாஸ்தவந்தான். பெரியவர்கள் சொல்லுகிறதைக் கேட்காமல் தான்தோன்றித் தனமாகக் காரியம் செய்ததினால் வந்த வினை இது. கலியாணம் நிச்சயம் செய்வது என்றால், ஜாதகம் பார்த்துச் செய்ய வேண்டும் என்று எதற்காகப் பெரியவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்? இந்த மாதிரியெல்லாம் ஏடாகூடமாக ஆகக் கூடாது என்றுதான் நான் அப்போதே அடித்துக் கொண்டேன்; ‘எல்லாவற்றுக்கும் ஜாதகம் வாங்கிப் பார்த்து விடலாம்’ என்று நான் சொன்னதை யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. எப்போது பார்த்தாலும் சாஸ்திரம் சம்பிரதாயம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் இந்தப் பிராமணருக்குக் கூட அப்போது புத்தி எங்கேயோ போய்விட்டது! உன் அத்தங்காள் ஜாதகத்தில் என்ன தோஷம் இருந்ததோ, என்னமோ? உன் தங்கை லலிதாவைப் பார்ப்பதற்காகத்தானே நாங்கள் ஊருக்கு வந்திருந்தோம்? லலிதாவின் ஜாதகமும் ராகவனுடைய ஜாதகமும் பொருந்தியிருந்தது. அப்படி நடந்திருந்தால் இந்தக் கஷ்டமெல்லாம் வந்திராது!” என்றாள் காமாட்சி அம்மாள். “இப்போது என் அத்தங்கா படுகிற கஷ்டத்தையெல்லாம் என் தங்கை பட்டிருப்பாள்!” என்றான் சூரியா. காமாட்சி அம்மாளுக்குக் கோபம் வந்துவிட்டது. “நன்றாய் சொன்னாய் சூரியா! உன் அத்தங்காள் பரம சாது. ராகவன் தான் அவளைக் கஷ்டப்படுத்துகிறான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயாக்கும்! கலியாணம் ஆன புதிதில் நானும் உன் அத்தங்காளைச் சாது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்படிப்பட்ட நாட்டுப் பெண் எனக்குக் கிடைத்தாளே என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தேன். போகப் போகத் தான் தெரிந்தது; உன் அத்தங்காள் எப்படிப்பட்ட ராட்சஸி என்று. அவளுக்குச் சீதை என்று பெயர் வைத்தது ரொம்பத் தப்பு. சூர்ப்பநகை, தாடகை என்று வைத்திருக்க வேண்டும்?” என்றாள். “சாதுப் பெண்ணாயிருந்தவள் எப்படித் திடீரென்று ராட்சஸியாகி விட்டாள்? அதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும் அல்லவா?” காரணம் என்ன காரணம்? அவளைச் சாதுப் பெண் என்று நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தோமே, அதுதான் தப்பு! உலகத்தில் துஷ்டைகள் எத்தனையோ பேரை நானும் பார்த்திருக்கிறேன். உன் அத்தங்காளைப் போல் பார்த்ததே இல்லை! ஒவ்வொரு சமயம் எனக்குப் பயமா இருக்கிறது. சூரியா! ஏதாவது விஷத்தைக் கிஷத்தைக் கலந்து…" “ஐயையோ! அப்படிச் சொல்லாதீர்கள்; அம்மா! எப்பேர்ப்பட்ட ராட்சஸியாக இருந்தாலும் புருஷனுக்கு விஷம் வைத்துக் கொல்லும்படி அவ்வளவு பாதகியாயிருப்பாளா?” என்று அலறினான் சூரியா. “மெள்ளப் பேசுடா, அப்பா! மெள்ளப் பேசு! புருஷனுக்கு விஷம் வைத்துவிடுவாள் என்று நான் சொல்லவில்லையே! கிராமாந்தரத்துப் பெண்கள் சிலர் புருஷனை வசப்படுத்தி வைத்துக் கொள்வதற்கு என்று எண்ணிக் கொண்டு மருந்து வைத்து விடுவதுண்டு. அது பல புருஷனுக்கு யமனாக முடியும். உன் அத்தங்காள் அவ்வளவு அசடு அல்ல; அப்படிச் செய்யவும் மாட்டாள். தான் விஷத்தைக் குடித்துவிட்டு ராகவன் பேரில் பழியைப் போட்டு விடுவாளோ என்றுதான் பயப்படுகிறேன்.”புருஷன் படுத்தும் கொடுமை தாங்காமல் செத்துப் போகிறேன்!" என்று எழுதி வைத்துவிட்டுச் செத்தாலும் சாவாள்! அவளுடைய மூர்க்கத்தனத்தை நினைத்தால் சில சமயம் எனக்கு இப்படியெல்லாம் தோன்றுகிறது…" “மாமி! விஷங்குடித்துச் செத்துபோக வேண்டும் என்று நினைப்பதற்குச் சீதாவின் மனது எவ்வளவு வெறுத்துப் போயிருக்க வேண்டும்? அப்படி மனது வெறுப்பதற்குக் காரணமில்லாமலா இருக்கும்? உங்கள் பிள்ளை பேரில் தப்பே இல்லையென்றால், வேறு என்ன காரணம் இருக்க முடியும்?” என்றான் சூரியா. இதற்குக் காமாட்சி அம்மாளின் பதில் சொல் மாரியாக வந்தது: "என் பிள்ளை பேரில் தப்பு இல்லையென்று யார் சொன்னது? எவ்வளவோ தப்பு உண்டு. உன் தங்கையைப் பார்ப்பதற்காகப் போனவன், இந்த ரதியைத் தெருவிலே பார்த்துவிட்டு மயங்கிப் போய் ‘இவளைத்தான் கலியாணம் செய்து கொள்வேன்’ என்றானே? அது பெரிய தப்புத் தான். ஒரு செப்புக்காசு வரதட்சணை இல்லாமல் கலியாணம் செய்து கொண்டதும் தப்புத் தான். குப்பையில் கிடந்தவளைக் கொண்டு போய்க் கோபுரத்தில் வைத்தானே, அதுவும் தப்புத் தான். அந்த நாளில் எவ்வளவோ நான் அடித்துக் கொண்டேன். ‘இவ்வளவு இடங்கொடுக்காதே!’ என்று; இவன் கேட்கவில்லை. ஆக்ரா எங்கே, சிம்லா எங்கே, காஷ்மீர் எங்கே, என்று அழைத்துக் கொண்டு திரிந்தான். என்னைக் காசிக்கு அழைத்துக் கொண்டு போக அவனுக்குச் சாவகாசம் கிடைக்கவில்லை. சீதாவை லண்டனுக்கு அழைத்துக் கொண்டு போகக்கூடத் தயாராயிருந்தான். வைஸ்ராய் வீட்டுப் பார்ட்டிகளுக்கும் அழைத்துக் கொண்டு போனான். இங்கிலீஷ் படிக்க வைத்தான்; அன்னிய புருஷர்களோடு கை குலுக்கவும் ஒரே சோபாவில் உட்கார்ந்து பேசவும் மோட்டார் கார் ஓட்டவும் கற்றுக் கொடுத்தான். அப்படியெல்லாம் செய்த தப்புகளின் பலனை இப்போது அனுபவிக்கிறான். அவனுடைய ஜாதகத்தில் அப்படி எழுதியிருந்தது! இன்னொரு புருஷனாயிருந்தால் இப்படிப்பட்ட பெண்டாட்டியை விறகுக்கட்டையால் அடித்துத் துரத்திவிட்டு வேறு கலியாணம் செய்து கொண்டிருப்பான்!…" இந்த ரீதியில் காமாட்சி அம்மாளுடன் பேசுவதில் பயனில்லையென்று சூரியா அறிந்து கொண்டான். பேச்சை வேறு பாணியில் ஆரம்பித்தான். “மாமி! நான் ஏதோ என் அத்தங்காளுக்குப் பரிந்து பேசுவதாகவும் உங்கள் பிள்ளையைக் குற்றம் சொல்வதாகவும் நீங்கள் எண்ணிக் கொள்ளக்கூடாது. சீதா தாயில்லாப் பெண் என்பது உங்களுக்குத் தெரியும். தகப்பனார் உயிரோடிருக்கிறாரா, இல்லையா என்பது ஒருவருக்கும் தெரியாது. உங்களையும் உங்கள் பிள்ளையையும் தவிர அவளுக்குக் கதி கிடையாது. அடித்து விரட்டினால் குளத்திலே கிணற்றிலே விழுந்து சாக வேண்டியது தான். சீதாவை உங்கள் பிள்ளைக்குக் கலியாணம் செய்து கொடுப்பதற்கு நானும் ஒரு வகையில் பொறுப்பாயிருந்தவன். நான் வற்புறுத்திச் சொன்னபடியினாலே தான் என் அப்பா அம்மா இந்தக் கலியாணத்துக்குச் சம்மதித்தார்கள். சீதாவின் தாயாரையும் நான்தான் சம்மதிக்கப் பண்ணினேன். என் அத்தையை உங்களுக்கு ஞாபகமிருக்கிறதல்லவா? வாழ்நாளெல்லாம் கஷ்டப்பட்டவள், ‘நான்தான் கஷ்டப்பட்டே காலம் கழித்து விட்டேன்; சீதாவாவது நல்ல இடத்தில் வாழ்க்கைப்பட்டுச் சௌக்கியமாயிருக்கட்டும்’ என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள். இந்த கலியாணத்தை நடத்தி வைத்ததற்காக என்னை ஆயிரம் தடவை ‘மகராஜனாயிரு!’ என்று வாழ்த்தினாள். அதையெல்லாம் நினைத்து இப்போது உங்கள் பிள்ளையும் நாட்டுப் பெண் இருக்கிற நிலையையும் எண்ணும்போது எனக்கு எவ்வளவோ துக்கமாயிருக்கிறது. அதனால் நான் எடுத்துக் கொண்ட முக்கியமான வேலைகள் கூடத் தடைப்பட்டுப் போகின்றன. ஏதாவது முயற்சி பண்ணி உங்கள் பிள்ளையும் சீதாவும் சந்தோஷமாயிருக்கப் பண்ண வேண்டும் என்று எனக்கு ஆசை; அதனாலே தான் உங்களிடம் வந்தேன். சீதா என்ன தப்புச் செய்கிறாள் என்று தெரிந்தால் அவளுக்குப் புத்தி சொல்லித் திருப்ப முயற்சி செய்வேன்.” சூரியாவின் இந்த நயமான பேச்சினால் காமாட்சி அம்மாளின் கோபம் கொஞ்சம் தணிந்தது. "எனக்கும் அந்த ஆசை இல்லையா, சூரியா! ராகவனும் சீதாவும் முன்போல் சந்தோஷமாக இருந்தால் அதைக் காட்டிலும் எனக்குச் சந்தோஷம் வேறு கிடையாது. ஆனால் காரணம் என்பதாக ஒன்று இருந்தால்தானே சொல்வதற்கு! மனத்திற்குள் அவர்களுக்கு ஒருவர் பேரில் ஒருவர் பிரியம் இருக்கிறது என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும். ஆனால் தினம் பொழுது விடிந்தால் சண்டையும் ரகளையும் நடப்பதில் குறைவில்லை, எல்லாவற்றுக்கும் உன் அத்தங்காளின் வாயாடித்தனந்தான் காரணம். வருகிற போது பேசவே தெரியாத ஊமையைப் போல வந்தாளே, அவளுக்கு இத்தனை வாய் எப்படி வந்ததோ, எனக்கே ஆச்சரியமாய்த் தானிருக்கிறது. அவன் ஒன்று சொன்னால் இவள் நாலு சொல்லுவது என்று ஏற்பட்டுவிட்டது. அவன் எது சொன்னாலும் இவள் மறுத்துச் சொல்லாமல் விடுவதில்லை. எங்கேயாவது இவளை அழைத்துப் போகாவிட்டால் ‘ஏன் அழைத்துப் போகவில்லை!’ என்று சண்டை பிடிக்கிறது. அழைத்துக் கொண்டு போனால் திரும்பி வரும்போது‘ஏன் அவளோடு பேசினீர்கள்?’ ‘ஏன் இவளோடு பேசினீர்கள்?’ என்று ஓயாமல் பிடுங்கி எடுக்கிறது. வெளியிலே வாசலிலே போய் உத்தியோகம் பார்த்துவிட்டு வருகிறவனை இப்படிப் போட்டு வதைத்தால் அவன்தான் என்ன செய்வான்? சில சமயம் அவனுக்கும் ரௌத்ராகாரம் வந்துவிடுகிறது. கோபம் வந்திருக்கும் வேளையிலாவது எதிர்த்துப் பேசாமலிருக்கத் தெரிகிறதா? அதுவும் இல்லை. உனக்குத் தான் அந்தத் தாரிணி என்கிற பெண்ணை நன்றாகத் தெரியுமே! அவளைக் கேட்டுப் பார்! நான் காசிக்குப் போயிருந்தபோது சீதாவுக்குச் சுரம் வந்து பிழைப்பது துர்லபம் என்று ஆகிவிட்டது. அந்தச் சமயத்தில் தாரிணி வந்து இரவு பகலாக இவளுக்குச் சிசுருஷை செய்து காப்பாற்றினாள். உடம்பு சௌகரியமானதும் சீதா அவளைத் திட்டிய திட்டுக்கு அளவே இல்லை. நாக்கில் நரம்பில்லாமல் அவளையும் ராகவனையும் பற்றிப் பேசினாள். தாரிணி அவ்வளவையும் பொறுத்துக் கொண்டு சமாதானமாக நல்ல வார்த்தை சொல்லிவிட்டுப் போய்ச் சேர்ந்தாள். ஒரு சமயம் அந்தப் பெண்ணின் வயிற்றெரிச்சலை நான் கொட்டிக் கொண்டேன். இந்த வீட்டில் பூஜை அறையில் அவள் என் காலில் விழுந்து நமஸ்காரம் செய்து ராகவனைக் கலியாணம் செய்து கொள்ளச் சம்மதம் கொடுக்கும்படி கேட்டாள். அவள் என்ன சாதியோ என்னமோ என்ற காரணத்தினால் கண்டிப்பாக முடியாது என்று சொல்லி விட்டேன். இப்போது நினைத்துப் பார்த்தால் அது பெரிய தப்பு என்று தோன்றுகிறது. தாரிணியைக் கலியாணம் செய்து கொண்டிருந்தால் என் பிள்ளை எவ்வளவோ சந்தோஷமாக இருந்திருப்பான், அதற்கு நான் தடையாக நின்றேன். அந்தப் பெண்ணின் வயிற்றெரிச்சல் தான் இப்படி என்னையும் என் பிள்ளையையும் படுத்தி வைக்கிறது என்று தோன்றுகிறது." இதைக் கேட்ட சூரியா சிறிது சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். தாரிணியின் பேரில் அவனுக்குக் கோபம் வந்தது. பழைய கதை இப்படி எல்லாம் இருக்கும்போது ராகவன் சீதாவின் வாழ்க்கையில் தாரிணி தலையிட்டிருக்கவே கூடாது என்று எண்ணினான். அவளுடைய மனதிலும் ராகவனுடைய மனதிலும் பழைய சிநேகத்தின் பாசம் இல்லை என்பது என்ன நிச்சயம்? ஆகையால் அவர்கள் விஷயத்தில் சீதா அசூயைப் படுவதிலே தான் என்ன தவறு? இவ்விதம் எண்ணிக்கொண்டே போன சூரியா சட்டென்று அந்த எண்ணப் போக்குக்கு முட்டுக்கட்டை போட்டு நிறுத்தினான். “மாமி! நடந்துபோன காரியத்தைப் பற்றி, அது வேறு விதமாய் நடந்திருக்க கூடாதா என்று யோசிப்பதில் என்ன பிரயோஜனம்? பிரம்மா தலையில் எழுதின எழுத்தை யார் மாற்றி எழுத முடியும்? உங்கள் பிள்ளை சந்தோஷமாயிருப்பதற்கு என்ன வழி என்றுதான் இனி மேல் நாம் பார்க்க வேண்டும். சீதாவின் வாயாடித்தனத்தைப் பற்றி நீங்கள் சொன்னதை நான் மனதில் வைத்துக் கொண்டிருக்கிறேன். அவளுக்கு என்னால் முடிந்த வரையில் புத்திமதி சொல்லிப் பார்க்கிறேன். நீங்களும் நல்ல முறையில் கொஞ்சம் சொல்லிப் பாருங்கள். டில்லிக்கு எப்போது வரப்போகிறீர்கள்?” என்று கேட்டான். “ராகவனிடமிருந்து எப்போது கடிதம் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் டில்லிக்குப் போவதென்றால் ஒரு விதத்தில் பயமாகவும் இருக்கிறது. புருஷன் மனைவி சண்டையில் இந்தக் குழந்தைக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடப் போகிறதே என்று பயப்படுகிறேன். உன்னிடம் சொன்னால் என்ன? உனக்குத் தெரிந்திருக்க வேண்டியது தான். ஒரு தடவை சீதா இந்தப் பச்சைக் குழந்தையிடம் ஏதோ அப்பாவிடம், ‘அம்மாவை வையாதே, அடிக்காதே!’ என்று சொல்லியிருக்கிறாள். அவனும் முரட்டுத்தனமாகத் தன் கோபத்தை இந்தக் குழந்தையிடம் காட்டி இரண்டு அடி அடித்துவிட்டான் குழந்தைக்குச் சுரம் வந்துவிட்டது…” “ஐயோ!” என்றான் சூரியா. “நீ ‘ஐயோ’ என்று பரிதாபப்படுகிறாயல்லவா? ஆனால் சீதா என்ன செய்தாள் தெரியுமா? குழந்தைக்குச் சுரம் என்பதை மூன்று நாள் வரையில் ஒருவரிடமும் சொல்லவில்லை. அப்புறம் ராகவனுக்கு எப்படியோ தெரிந்து டாக்டரை அழைத்துக் கொண்டு வந்தான். குழந்தை பிழைப்பது புனர் ஜன்மம் ஆகிவிட்டது. உன் அத்தங்காளின் ராட்சசத்தனத்தைப் பார்த்தாயல்லவா?” என்றாள். சூரியாவின் மனதிற்குள் அது சீதாவின் ராட்சசத்தனமா, அல்லது தன் புருஷனைக் காட்டிக் கொடுக்கக்கூடாது என்ற நல்ல எண்ணத்தினால் அப்படிச் செய்தாளா என்ற சந்தேகம் தோன்றியது. அதைப்பற்றிக் காமாட்சி அம்மாளிடம் வாதிப்பதில் பயனில்லை என்று தீர்மானித்து, “போனதெல்லாம் போகட்டும், நான் நாளைக்காலை டில்லி புறப்படுகிறேன். டில்லி போய்ச் சேர்ந்ததும் சீதாவைப் பார்த்துப் பேசிவிட்டு உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறேன். எப்படியாவது தகராறைத் தீர்த்து வைத்து உங்கள் பிள்ளையும் நாட்டுப் பெண்ணும் நன்றாயிருக்கும்படி செய்வோம்!” என்றான். “நானும் அதற்காகவே தான் எல்லாத் தெய்வங்களையும் வேண்டிக் கொண்டி ருக்கிறேன். சூரியா! உலகத்திலேயே அவர்கள் இரண்டு பேரிடத்திலும் இந்தக் குழந்தை இடத்திலும் தான் எனக்குப் பாசம். நீ சீதாவிடம் பேசுகிறபடி பேசு. அதோடு சீதாவின் ஜாதகம் எங்கேயாவது கிடைக்குமா என்று பார்த்து வாங்கி அனுப்பு. அவளுடைய ஜாதகத்தில் ஒருவேளை ஏதாவது தோஷம் இருந்தால் அதற்கு வேண்டிய சாந்தியைப் பண்ணச் சொல்லலாம்!” என்றாள் காமாட்சி அம்மாள். ஏழாம் அத்தியாயம் - வெள்ளி வீதியிலே சரித்திரத்தில் புகழ் பெற்ற டில்லி மாநகருக்கு மறுபடியும் நேயர்களை அழைத்துச் செல்ல வேண்டியதாகிறது. 1943-ம் வருஷத்தின் பிற்பகுதியில் டில்லி நகரம் அதிவிரைவாகப் பணப் பெருக்கமும் ஜனப் பெருக்கமும் அடைந்து கொண்டு வந்தது. யுத்தம் இந்தியாவின் எல்லையை நெருங்கி வந்து கொண்டிருந்ததை முன்னிட்டுத் தலைநகரில் யுத்த முஸ்தீப்புகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. பிரிட்டிஷ் சோல்ஜர்களும் அமெரிக்க சோல்ஜர்களும் கூர்க்க சிப்பாய்களும் சீக்கியத் துருப்புகளும் தென் இந்திய வீரர்களும் எங்கே பார்த்தாலும் காணப்பட்டார்கள். டாக்ஸி கார்களுக்கும், டோ ங்கா வண்டிகளுக்கும், ரிக்ஷாக்களுக்கும் கூட என்றுமில்லாத கிராக்கி ஏற்பட்டிருந்தது. இத்தகைய நிலைமையில் டில்லி ரயில்வே ஸ்டேஷனில் வந்திறங்கிய சூரியாவுக்கு வண்டி எங்கே கிடைக்கப் போகிறது. ஸ்டேஷன் வாசலில் வந்து நின்ற சூரியா ஐந்து நிமிஷம் தயங்கி நின்று யோசனையில் ஆழ்ந்திருந்தான். புதுடில்லிப் பக்கம் நடையைக் கட்டுவதா அல்லது முதலில் பழைய டில்லிக்குப் போவதா என்னும் பிரச்சனை தான் அவனை அத்தகைய சிந்தனைக்கு உள்ளாக்கியிருந்தது. கடைசியில் பழைய டில்லிக்கே சீட்டு விழுந்தது. விடுவிடு என்று பழைய டில்லியை நோக்கி நடந்தான். பழைய டில்லியில் ‘சாந்தினி சவுக்’ என்னும் வீதிக்கு வந்ததும் சூரியாவின் நடை மெதுவாயிற்று. அவனுடைய உள்ளமோ சில நூறு வருஷம் பின்னால் சென்று அந்தப் பிரசித்தி பெற்ற ’வெள்ளி வீதி’யில் அவ்வப்போது நடந்த சரித்திர நிகழ்ச்சிகளைப் பற்றிச் சிந்திக்கலாயிற்று. அந்தச் ’சாந்தினி சவுக் ஒரு காலத்தில் உலகத்திலேயே மிகப் பணக்கார வீதி என்று பெயர் பெற்றிருந்தது. தங்க நகைக் கடைகளும் நவரத்தின ஆபரணக் கடைகளும் உலகமெங்குமிருந்து வந்த பலவித அபூர்வமான பொருள்களின் கடைகளும் அவ்வீதியில் இருந்தன. மன்னாதி மன்னர்களெல்லாம் அணிய விரும்பக்கூடிய பட்டுப் பட்டாடைகளும் ரத்தினக் கம்பளங்களும் பல கடைகளில் விற்கப்பட்டன. அந்த வீதியில் வசித்தவர்கள், கடை வைத்திருந்தவர்கள் அனைவரும் செல்வத்தில் சிறந்த சீமான்கள். இப்படியாகச் செல்வம் குவிந்திருந்த இடத்துக்கு ஆபத்துக்கள் வருவது இயற்கை யேயல்லவா? ஆபத்து ஒரு தடவை அல்ல, எத்தனையோ தடவைகள் அந்த வெள்ளி வீதிக்கு வந்தது. ஐந்நூற்றைம்பது வருஷங்கள் முன்னால் மங்கோலியா தேசத்திலிருந்து தைமூர் என்னும் அசுரன் ஒரு பெரிய ராட்சதப் படையுடன் வந்தான். அச்சமயம் டில்லியில் முகம்மது துக்ளக் என்னும் பாதுஷா அரசாண்டான். தைமூரும் முகம்மது துக்ளக்கும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் தான். இது காரணமாகத் தைமூர் கருணை காட்டினானா? இல்லை. முகம்மது துக்ளக்கின் சைன்யத்தை டில்லிக் கோட்டை வாசலிலே தோற்கடித்து நகருக்குள் புகுந்தான். ஆயிரமாயிரம் பிரஜைகளைக் கொன்று குவித்தான்; வெள்ளி வீதியின் செல்வத்தைக் கொள்ளையடித்தான்; இரத்தின கம்பளங்களின் மீது இராஜ குமாரர்களும் இராஜகுமாரிகளும் நடமாடிய இடமெல்லாம் இரத்த ஆறு ஓடும்படி செய்தான். தைமூர் டில்லியில் இரண்டு வாரம் தங்கியிருந்து ஹதாஹதம் செய்துவிட்டுப் புறப்பட்டுச் சென்றான். அவன் போன பிறகு டில்லி நகரம் ஒரு பயங்கர சொப்பனத்திலிருந்து விழித்து எழுந்தது போல எழுந்தது. கண்டது கனவல்லவென்றும் உண்மையான பயங்கரம் என்றும் உணர்ந்தது. ஆயினும், அந்த அதிசயமான ஜீவசக்தியுள்ள நகரம் மறுபடியும் அதிசீக்கிரத்தில் சீரும் செல்வமும் பெற்றுக் குபேர புரியாயிற்று. இரத்த ஆறு ஓடிய ‘வெள்ளி வீதி’யில் மறுபடியும் தங்க மொகராக்கள் குலுங்கும் சத்தமும் இராஜ குமாரிகளின் பாதச் சிலம்பின் சத்தமும் கேட்கத் தொடங்கின. டில்லியின் சரித்திரத்தில் முந்நூற்று நாற்பது வருஷங்கள் சென்றன. பாபர் முதல் ஔரங்கசீப் வரையில் மொகலாய சக்ரவர்த்திகள் வீற்றிருந்து அரசு செலுத்திய இடத்தில் இப்போது முகம்மதுஷா என்பவன் அரசு புரிந்தான். அப்போது பாரஸீகத்திலிருந்து நாதிர்ஷா என்னும் கொடிய அரக்கன் பெரும் சைன்யத்துடன் படையெடுத்து வந்தான். மறுபடியும் ’சாந்தினி சவுக்’குக்கு ஆபத்து வந்தது. ’சாந்தினி சவுக்’குக்கு அருகில் இருந்த மசூதியின் கோபுரத்தில், உட்கார்ந்து கொண்டு நாதிர்ஷா தன் மூர்க்கப் படைகள் டில்லி வாசிகளைப் படுகொலை செய்யும் காட்சியைப் பார்த்துக் களித்தான். கொலைக்குப் பிறகு கொள்ளையும் அடித்தான். மீண்டும் அந்த வீதியில் இரத்த ஆறு ஓடியது; இரத்த ஏரி தேங்கி நின்றது. இந்த பயங்கர சம்பவத்தின் ஞாபகார்த்தமாக அந்த வீதியின் ஒரு முனையிலுள்ள வாசலுக்குக் ’கூனிதர்வாஜா’ (இரத்த வாசல்) என்னும் பெயர் இன்று வரையில் வழங்கி வருகிறது. நாதிர்ஷா வந்து போன இருபது வருஷத்துக்கெல்லாம் அவனுடைய ஸ்தானத்துக்கு வந்திருந்த ஆமத்ஷா அப்தாலி என்பவன் டில்லி மீது படை எடுத்து வந்தான். நாதிர்ஷா பாக்கி வைத்து விட்டுப் போன செல்வத்தை எல்லாம் ஆமத்ஷா கொள்ளையடித்தான்; படுகொலையும் நடத்தினான். இந்தத் தடவையும் அந்த டில்லி நகரில் பெரும் கொடுமைக்கு உள்ளான பகுதி ‘வெள்ளி வீதி’ தான். ஆமத்ஷாவுக்குப் பிறகு ஸிந்தியாக்களும், ஹோல்கார்களும் ரோஹில்லர்களும் படையெடுத்து வந்து தங்கள் பங்குக்குக் கொள்ளை யடிக்கும் கைங்கரியத்தைச் செய்தனர். கடைசி கடைசியாகப் பிரிட்டிஷாருடைய பெரும் கருணைக்கு டில்லி மாநகரம் பாத்திரமாயிற்று. 1857-ம் ஆண்டில் ‘சிப்பாய்க் கலகம்’ என்று அழைக்கப்பட்ட புரட்சி தோல்வியுற்றதும் பிரிட்டிஷ் துருப்புகள் டில்லியைப் பழி வாங்கின. ஒரு வாரம் நகரமெல்லாம் கொள்ளையும் கொலையுமாக இருந்தது. ஒரு வாரத்துக்குப் பிறகு பிரிட்டிஷ் அதிகாரிகள் தங்கள் சைன்யத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தார்கள். வரைமுறை இல்லாமல் கொலை செய்ததை நிறுத்தி, முறைப்படி விசாரித்துக் கலகக்காரர்களைத் தண்டிக்கத் தொடங்கினார்கள்! நாதிர்ஷாவும் ஆமத்ஷாவும் படுகொலை நடத்திய அதே வெள்ளி வீதியில் பிரிட்டிஷ் இராணுவ கோர்ட்டின் தூக்குமரம் நாட்டப்பட்டது. சுமார் ஆயிரம் பேர் தூக்கிலிடப்பட்டார்கள். அத்தகைய பயங்கரச் சம்பவங்களுக்கு இடமான சரித்திரப் பிரசித்தி பெற்ற ‘சாந்தினி சவுக்’கென்னும் வெள்ளி வீதியில் சூரியா நடந்து சென்று கொண்டிருந்தான். நடந்து கொண்டிருக்கையில் அவனுடைய மனக்கண்ணின் முன்னால் மேற்கூறிய சரித்திர நிகழ்ச்சிகள் எல்லாம் வரிசைக்கிரமமாக வந்து கொண்டிருந்தன. அந்த நிகழ்ச்சிகளைக் கற்பனை செய்து பார்த்தபோது அவனுடைய உடம்பு சிலிர்த்தது. ஒவ்வொரு சமயம் தலை சுற்றுவது போலிருந்தது. இன்னொரு பக்கத்தில் அளவில்லாத அதிசயம் அவனைப் பற்றிக்கொண்டிருந்தது. இவ்வளவு கொடூரங்களுக்கும் பயங்கரங்களுக்கும் உள்ளான இந்த வெள்ளி வீதி இன்றைய தினம் எவ்வளவு கலகலப்பாயிருக்கிறது! எத்தனை கடைகள்? அவற்றில் எவ்வளவு விலை உயர்ந்த பொருள்கள்! வீதியில் நடப்பதற்கு இடமின்றி நெருங்கியிருக்கும் ஜனக்கூட்டத்தை என்னவென்று சொல்வது? எத்தனை விதமான ஜனங்கள்? எத்தனை நிலத்தினர்? எத்தனை மதத்தினர்? ஹிந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், வங்காளிகள், பஞ்சாபியர், தென்னிந்தியர், இங்கிலீஷ் டாம்மிகள், அமெரிக்க நிபுணர்கள் அம்மம்மா! இது என்ன கூட்டம்? இது என்ன பணப் பெருக்கம்? அமெரிக்கர்கள் எப்படிப் பணத்தை வாரி இறைக்கிறார்கள்? ’சரித்திரம் திரும்பி வரும்’ என்று சொல்கிறார்களே? ஒருவேளை ’மறுபடியும் இந்த வெள்ளி வீதிக்குத் துர்த்திசை ஏற்படுமா? கொள்ளையும் கொலையும் இங்கே நடக்குமா? இரத்த ஆறு ஓடுமா? ஜெர்மானியரோ, ஜப்பானியரோ, ருஷியரோ, இங்கே படையெடுத்து வருவார்களா? மறுபடியும் இந்த வெள்ளி வீதி ரணகளம் ஆகுமா…? இப்படியெல்லாம் சூரியா சிந்தித்துக்கொண்டே நடந்தான். மனம் சிந்தனை செய்து கொண்டிருக்கையில் கண்கள் தங்கள் வேலையைச் செய்து கொண்டிருந்தன. யாரையோ, எதையோ, அவனுடைய கண்கள் சுற்றிச் சுழன்று தேடிக் கொண்டிருந்தன. ஆயினும் பலன் கிட்டவில்லையென்று அவனுடைய முகத்தில் காணப்பட்ட ஏமாற்றமான தோற்றம் தெரிவித்தது. சூரியா வெள்ளி வீதியைக் கடந்து இன்னும் அப்பால் சென்று கடைசியாக ஜும்மா மசூதியை அடைந்தான். ஷாஜஹான் சக்கரவர்த்தி கட்டியதும் இந்தியாவிலேயே பெரியதுமான அந்த கம்பீர மசூதியைக் கீழிருந்து அண்ணாந்து பார்த்தான். பிறகு அதன் படிகளில் ஏறினான், முக்கால்வாசிப் பார்த்தான். பிறகு சற்றுத் தூரத்திலிருந்த கோட்டையைப் பார்த்தான். கோட்டைக்கும் மசூதிக்கும் நடுவிலிருந்த பகுதி ஒரு காலத்தில் ஜன நெருக்கம் வாய்ந்த பகுதியாயிருந்ததென்றும், அங்கிருந்த ஆயிரக்கணக்கான வீடுகளையும் மசூதிகளையும் பிரிட்டிஷ் துருப்புகள் பீரங்கி வைத்து இடித்து நாசமாக்கித் திறந்தவெளியாகச் செய்துவிட்டார்கள் என்றும் நினைவு கூர்ந்தான். அவன் நின்று கொண்டிருந்த புகழ்பெற்ற ஜும்மா மசூதி கூட பிரிட்டிஷ் துருப்புகளின் ஆதிக்கத்தில் கொஞ்ச காலம் இருந்தது. தைமூரும் நாதிர்ஷாவும் ஆமத்ஷாவும் காட்டுமிராண்டிகள் என்று சொல்லத்தக்க பழைய காலத்து ராட்சதர்கள். ஆனால் படித்தவர்கள் என்றும் நாகரிகமடைந்தவர்கள் என்றும் சொல்லிக் கொள்ளும் பிரிட்டிஷார் இந்த டில்லி மாநகரில் செய்த அக்கிரமங்களைப்பற்றி என்னவென்று சொல்வது? அவற்றை எண்ணிப் பார்த்தபோது சூரியாவின் இரத்தம் கொதித்தது. ஹிந்துக்களும் முஸ்லிம்களும் தங்களுடைய அற்பமாற்சரியங்களை ஒழித்துப் பிரிட்டிஷாரை இந்தியாவை விட்டு ஓட்டும் காலம் வருமா? பழைய டில்லியிலும் புது டில்லியிலும் யூனியன் ஜாக் கொடி இறங்கி இந்திய சுதந்திரக் கொடி பறக்கும் நாள் வருமா? அந்த நாளைப் பார்க்கத் தனக்குக் கொடுத்து வைத்திருக்குமா…? இவ்விதம் சூரியா எண்ணமிட்டுக் கொண்டிருந்தபோது யாரோ தன் இடது கையை இரும்புப் பிடியாகப் பிடித்ததை உணர்ந்து சூரியா திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். எட்டாம் அத்தியாயம் - மரத்தடியில் இரும்பையொத்த கையினால் தன் கையை அவ்விதம் பிடித்தவன் ஆஜானுபாகுவான ஒரு போலீஸ்காரன் என்பதைக் கண்டான். ஒரு கணநேரத்துக்குள் சூரியாவின் உள்ளத்தில் ஆயிரம் எண்ணங்கள் பாய்ந்து சென்றன. இத்தனை நாட்கள், இத்தனை தூரம் பிரயாணம் செய்தபோதெல்லாம் பிடிபடாமல் வந்து கடைசியாக இந்த டில்லி நகரின் முழுச் சோம்பேறிப் போலீஸ்கார னிடந்தானா சிக்கிக்கொள்ள வேண்டும்? அதுவும் தான் செய்ய வேண்டிய முக்கியமான காரியங்கள் சில பாக்கியிருக்கும் போது? இன்னும் இரண்டு நாள் அவகாசம் தனக்குக் கிடைத்திருக்க கூடாதா? இவ்விதம் ஏற்பட்ட மனக் கலக்கத்தைச் சூரியா வெளியில் காட்டிக்கொள்ளாமல், “யார் நீ? எதற்காக என் கையைப் பிடிக்கிறாய்?” என்று அதட்டலாகக் கேட்டான். போலீஸ்காரன், “இன்ஸ்பெக்டர் சாகிப் உன்னைக் கூட்டிக் கொண்டு வரச் சொன்னார்!” என்று சொன்னதும் சூரியாவின் கலக்கம் அதிகமாயிற்று. “உன் இன்ஸ்பெக்டர் சாகிப்பை எனக்குத் தெரியாது, அவரிடம் எனக்கு என்ன வேலை? நான் வர முடியாது!” என்று சொன்னான். அதற்கு அந்தப் போலீஸ்காரன், “இன்ஸ்பெக்டர் சாகிப்பை பார்த்தால் இப்படிச் சொல்ல மாட்டாய் சீக்கிரம் வா” என்று கூறினான். இதை அவன் கூறிய குரல் சூரியாவின் மனதில் ஏதோ ஒரு சந்தேகத்தை உண்டாக்கியது. குரலைக் காட்டிலும் அதிகமாக அந்தப் போலீஸ்காரனுடைய முகத்தில் தோன்றிய புன்னகையும் கண்சிமிட்டலும் சூரியாவின் மனதில் குழப்பத்தை உண்டாக்கின. இதற்குள் ஜும்மா மசூதியின் படிகளில் அவர்கள் நின்ற இடத்துக்கு அருகில் கூட்டம் அதிகமாகச் சேர ஆரம்பித்தது. சிலர் போலீஸ்காரனுக்கும் சூரியாவுக்கும் நடந்த விவாதத்தைக் கவனிக்கவும் தொடங்கியிருந்தார்கள். இதையெல்லாம் ஒரு வினாடி நேரத்துக்குள் எண்ணிப் பார்த்து, எப்படியிருந்தாலும் அந்தப் போலீஸ்காரனுடன் போவதே நல்லது என்று சூரியா தீர்மானித்தான். “சரி; வருகிறேன் இன்ஸ்பெக்டர் சாகிப் எங்கே இருக்கிறார்?” என்று கேட்டான் சூரியா. “பேசாமல் என்னுடன் வா! ஆனால் ரொம்ப நெருங்கி வராதே! கொஞ்ச தூரத்திலேயே என் பின்னால் வந்து கொண்டிரு! இன்ஸ்பெக்டர் சாகிப்பிடம் நான் உன்னை அழைத்துக் கொண்டு போகிறேன்!” என்று சொல்லிவிட்டுப் போலீஸ்காரன் நடந்தான். சூரியாவுக்கு இப்போது தைரியம் அதிகமாயிற்று. தான் தப்பித்துக் கொள்வதற்குச் சௌகரியமாகப் போலீஸ்காரன் முன்னால் சென்றதினாலும், அவன் திரும்பிக் கூடத் தன்னைப் பார்க்காததினாலும் சூரியாவின் மனதில் ஏற்கனவே தோன்றிய எண்ணம் உறுதிப்பட்டது. போலீஸ்காரன் போன வழியே அவனைத் தன் கண் பார்வையிலிருந்து தவற விடாமல், பின்னால் நடந்து சென்றான். போலீஸ்காரன் ஜும்மா மசூதியைச் சுற்றி ஜேஜே என்று நெருங்கி நின்ற ஜனக்கூட்டத்தின் வழியாகப் புகுந்து நடந்து வெள்ளி வீதிக்குச் சென்று மணிக்கூண்டை அடைந்தான். பிறகு டவுன் ஹால் காம்பவுண்டுக்குள் புகுந்து போய் அதன் பின்புறத்தில் கொஞ்ச தூரத்தில் இருந்த விசாலமான மைதானத்தை அடைந்தான். இன்று ‘காந்தி மைதானம்’ என்ற பெயர் பெற்று விளங்கும் அந்த மைதானத்தில் ஆங்காங்கே சில மரங்களும் செடிகளும் இருந்தன. மைதானத்தின் விளிம்பை அடைந்ததும் போலீஸ்காரன் நின்று திரும்பிப் பார்த்தான். சூரியா சமீபத்தில் வந்த உடனே அவன் சற்றுத் தூரத்தில் இருந்த ஒரு மரத்தைச் சுட்டிக்காட்டி, “அந்த மரத்துக்குப் பின்னால் இன்ஸ்பெக்டர் சாகிப் இருக்கிறார், போய்ப் பார்த்துக் கொள்! இன்ஸ்பெக்டர் சாகிப்பும் நீயும் பேசும்போது நான் அருகில் இருப்பது நன்றாயிராது. உங்களுக்குள் எத்தனையோ இரகசியங்கள் இருக்கும்!” என்று சொல்லி மறுபடியும் புன்னகை புரிந்தான். சூரியா பொங்கி வந்த வியப்புடனே போலீஸ்காரன் சுட்டிக்காட்டிய மரத்தை நோக்கிச் சென்றான். மரத்தின் அருகில் போகும்போது அதன் பின்னால் ஒரு பெண் உட்கார்ந்து கையில் வைத்துக் கொண்டிருந்த புத்தகத்தை ஆழ்ந்த கவனத்துடன் படித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. “அவள் யார்?” என்ற எண்ணம் சூரியாவின் உள்ளத்தில் உதயமாவதற்குள், அவனுடைய காலடிச் சத்தத்தைக் கேட்டு அந்தப் பெண் தலை நிமிர்ந்து பார்த்தாள். அவள் தாரிணி என்று கண்டதும் சூரியாவுக்கு மகிழ்ச்சி பொங்கிற்று. “வருக! வருக! வீரர் சூரியாவின் வரவு நல்வரவாகுக!” என்றாள் தாரிணி. “ஓகோ! இன்ஸ்பெக்டர் சாகிப் நீங்கள்தானா? அந்தப் போலீஸ்காரர் என் கையைப் பிடித்ததும் ஒரு நிமிஷம் திணறிப் போய்விட்டேன்!” என்று சொல்லிக்கொண்டே சூரியா தாரிணிக்கு எதிரில் உட்கார்ந்தான். மேலும் தொடர்ந்து, “உங்களுடைய சாமர்த்தியம் எனக்குத் தெரிந்த விஷயந்தான். ஆயினும் ஒரு போலீஸ்காரனையே உங்கள் வலையில் சிக்க வைப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை,” என்று சொன்னான். “போலீஸ்காரனைப் பார்த்து எதற்காக அவ்வளவு பயம்? புரட்சி வீரர் சூரியாவே போலீஸ்காரனுக்குப் பயப்பட்டால் மற்றவர்களின் கதி என்ன?” என்று தாரிணி கேட்டாள். “பயம் என்று நான் சொன்னேனா? எத்தனையோ இடங்களில் எவ்வளவோ வேஷம் போட்டு எத்தனையோ தந்திரம் செய்து போலீஸாரிடம் தப்பி வந்தேன். புனிதமான சந்நியாசி வேஷங்கூடப் போட்டுக்கொண்டேன். அப்படியெல்லாம் செய்து இத்தனை தூரம் டில்லிக்கு வந்துவிட்டுத் தங்களைச் சந்திக்காமல், விஷயம் இன்னதென்று தெரிந்து கொள்ளாமல், போலீஸ் ’லாக் - அப்’புக்குப் போகிறதென்றால் திகைப்பாயிராதா?” “போன காரியமெல்லாம் பூர்த்தியாயிற்றா?” என்று தாரிணி கேட்டாள். “எப்படி பூர்த்தியாகும்? அதற்குள்ளே தான் தலை போகிற காரியம் என்று தங்களிடமிருந்து கடிதம் வந்து விட்டதே? அந்தக் கடிதத்தினால் தேவப்பட்டணத்தில் நேர்ந்த விபரீதங்களைக் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். எதற்காக அப்படிக் கடிதம் எழுதினீர்கள்? சீதாவுக்கு அவ்விதம் என்ன நேர்ந்துவிட்டது? உண்மையில் சீதாவை நினைத்தால் எனக்குக் கோபம் வருகிறது. ஒரு தனிப்பட்ட மனுஷிக்காக எவ்வளவோ முக்கியமான தேசீய காரியங்கள் தடைப்பட்டுப் போகிறதென்றால்?…” “நான் அவ்விதம் நினைக்கவில்லை; கோபுரத்தைப் பொம்மை தாங்குகிறது என்று நினைத்துக்கொள்வது போல நம்மாலேதான் தேசத்தின் காரியங்கள் நடக்க வேண்டுமென்று நினைத்துக் கொள்கிறோம். தெய்வ சித்தம் ஒன்று இருக்கிறது; அதன் சட்டப்படி எல்லாம் நடக்கின்றன. தேசத்தை நாம் காப்பாற்ற முயல்வதைவிட நமக்குத் தெரிந்திருக்கும் ஒருவரின் கஷ்டத்தைப் போக்கினால் கைமேல் பலன் உண்டு” என்றாள் தாரிணி. “கடைசியாக நாம் சந்தித்த பிறகு தத்துவ ஆராய்ச்சி பலமாகச் செய்திருக்கிறீர்கள். முன் தடவை நாம் பேசிய போது தனி மனிதர்களுடைய சுக சௌகரியங்களைக் காட்டிலும் தேச நன்மையே பெரிது என்று முடிவு செய்தோம். இந்த மாறுதலுக்கு காரணம் என்னவோ தெரியவில்லை.” “உங்கள் அத்தங்காதான் காரணம் தேசம் எந்தக் கேடாவது கெட்டுப் போகிறது சீதாவின் கஷ்டம் நீங்கினால் போதும் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது.” “சீதாவின் பேரில் உங்களுக்கு அளவில்லாத கருணை உண்டாகியிருக்கிறது. அதற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை.” “ஒருவரிடம் ஒருவர் பிரியம் கொள்ளுவதற்குக் காரணம் வேண்டுமா என்ன?” “வேண்டியதில்லைதான், பிரியம் கொள்ளுவதற்குக் காரணம் வேண்டியதில்லை என்பதினாலேதான் ஸ்திரீகள் முதல் நம்பர் அயோக்கியர்கள் பேரில் காதல் கொள்ளுகிறார்கள்?” “நீங்கள் சொல்வது எனக்கு நன்றாய்ப் புரியவில்லை. ஸ்திரீகள் அயோக்கியர்கள் மீது மட்டுமே காதல் கொள்ளுகிறார்கள் என்றா சொல்லுகிறீர்கள்? அப்படியானால் அதை நான் ஒப்புக்கொள்ள முடியாது. ஸ்திரீகள் காதல் கொள்ளக்கூடிய யோக்கியர்கள் சிலரும் இருக்கிறார்கள். எனக்கு அப்படிப்பட்ட யோக்கியர் ஒருவரைத் தெரியும்” என்று தாரிணி கூறிவிட்டு எங்கேயோ பார்த்தாள். சூரியா எரிச்சலுடன், “அப்பேர்ப்பட்ட தனிப் பெரும் யோக்யன் யார் என்று எனக்கும் தெரியும். அவன் பெயர் சௌந்தரராகவன், இல்லையா?” என்றான். “நான் சௌந்தரராகவனை நினைத்துக் கொண்டு பேசவில்லை. என்றாலும் அவரையும் நான் அயோக்கியர் என்று சொல்ல மாட்டேன். ஏதோ சில தவறுகள் அவர் செய்யக் கூடும். ஆனால் சீதாவிடம் அவருக்கு எவ்வளவோ அன்பு உண்டு என்பது எனக்கு நிச்சயமாய்த் தெரியும். சீதா தன்னுடைய வீண் சந்தேகங்களினால் அவருடைய அன்பையெல்லாம் விஷமாகச் செய்து விடுகிறாள்” என்றாள் தாரிணி. “போகட்டும்; ராகவனுடைய அந்தரங்கத்தைச் சீதாவை விட நீங்கள் நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள் அல்லவா?” “சில சமயம் ஒரு பொருளுக்கு மிகவும் சமீபத்திலிருப்பவர்களைக் காட்டிலும் கொஞ்சம் தூரத்திலிருப்பவர்களுக்கு அதன் சொரூபம் நன்றாய்த் தெரிகிறது. அதனால் சீதாவைக் காட்டிலும் ராகவனுடைய உள்ளத்தை என்னால் நன்றாய் அறிந்து கொள்ள முடிந்தது.” “யார் கண்டார்கள்? சீதாவைக் காட்டிலும் ராகவனுடைய உள்ளத்துக்கு நீங்கள் அதிக சமீபத்தில் இருக்கலாமல்லவா?” “சூரியா! நீங்கள் ஏதோ விகல்பமாகப் பேசுகிறீர்கள், இத்தனை நேரமும் அறியாமற் போனேன். இப்படிப் பேசுவதானால் நான் உங்களுடன் பேசுவதற்கே இஷ்டப்படவில்லை, நீங்கள் எழுந்து போகலாம்!” “இந்த மைதானம் உங்களுக்குச் சொந்தமா என்ன?” “சரி; அப்படியானால் நான் எழுந்து போகிறேன்” என்று சொல்லிக் கொண்டு தாரிணி எழுந்தாள். “சூரியா பரபரப்புடன்,”தாரிணி! நான் சொன்னதையெல்லாம் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். நான் கூறியது பிசகு தான்; தயவு செய்து உட்காருங்கள்! சீதா விஷயமாக நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போங்கள்" என்றான். தாரிணி மறுபடி உட்கார்ந்து “திடீரென்று உங்களிடம் இந்த மாறுதல் காணப்படுவதன் காரணம் தெரியவில்லை. யாரோ ஏதோ சொல்லி உங்கள் மனதைக் கெடுத்திருக்கிறார்கள். சீதாவைப் பார்த்துவிட்டு இங்கு வந்தீர்களா?” என்றாள். “இல்லை; ஸ்டேஷனில் இறங்கியதும் நேரே இங்கு வந்தேன். என்னுடைய அறைக்குக் கூடப் போகவில்லை சீதா எப்படி இருக்கிறாள்? அவள் விஷயத்தில் நான் என்ன செய்ய வேண்டும்.” “அவள் மனதில் ஏதோ ஒரு விஷம் புகுந்திருக்கிறது. ஏதோ ஒரு சந்தேகம் குடிகொண்டிருக்கிறது. அதனாலேயே அவளுடைய குடும்ப வாழ்க்கை பாழாகிக் கொண்டிருக்கிறது. அவளுடைய ஆயுளுக்கே அபாயம் வந்துவிடும் போலிருக்கிறது. நீங்கள் உடனே போய் விசாரித்து அவளுடைய மனதிலுள்ளதைத் தெரிந்து கொள்ள முயல வேண்டும். சில நாளைக்கு அவளை எங்கேயாவது அனுப்பி வைத்தாலும் நல்லது.” “அவள் எந்த ஊருக்குப் போவாள்? போவதற்கு எந்த ஊர் இருக்கிறது? நான் சொல்கிறேன், தாரிணி! சீதா இனிமேல் சுகமடைவதற்கு ஒரே வழிதான் இருக்கிறது; அவள் விவாகரத்து செய்து கொள்ள வேண்டும் ஆனால் ஹிந்து சாஸ்திரமும் பிரிட்டிஷ் சட்டமும் அதற்கு இடம் கொடுக்கவில்லை. ஆகையால் துன்பப்பட்டுச் சாகவேண்டியது தான்.” “நான் கூடச் சில சமயம் நினைத்ததுண்டு. சீதா விவாகரத்து செய்துவிட்டு உங்களைக் கலியாணம் செய்து கொண்டால் எவ்வளவு சந்தோஷமாயிருப்பாள் என்று.” “ஒரு நாளும் இல்லை; நீங்கள் நினைப்பது பெருந்தவறு. சீதாவிடம் என்னுடைய அபிமானம் அந்த விதமானது அன்று. அத்தையிடம் நான் கொண்ட அபிமானம் அவளுடைய பெண்ணின் க்ஷேமத்தில் அக்கறை கொள்ளச் செய்திருக்கிறது. மற்றபடி அவளுடைய இலட்சியங்களுக்கும் என்னுடைய இலட்சியங்களுக்கும் பொருந்தவே பொருந்தாது. சீதா பட்டுப்பூச்சி இனத்தைச் சேர்ந்தவள். பட்டிலும் பகட்டிலும் பளபளப்பிலும் படாடோ பத்திலும் பிரியம் கொண்டவள். பார்ட்டிகளுக்குப் போவதே ஜன்ம சாபல்யம் என்று எண்ணியிருக்கிறவள்…” “சீதா பிறக்கும்போதே இந்த மாதிரி குணங்களுடனே பிறந்தாளா? எல்லாம் பின்னால் ஏற்பட்ட பழக்க வழக்கங்கள் தானே?” “அது எப்படி இருந்தால் என்ன? உங்களுக்கு ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். தேவப்பட்டணம் போலீஸாரிடமிருந்து தப்புவதற்காக நான் சந்நியாசி வேஷம் பூண்டேன். அந்த வேஷத்திலேயே நான் சில நாள் இருக்க நேர்ந்தது. அப்போது உண்மையாகவே நான் சந்நியாசி ஆகிவிட வேண்டுமென்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. மதராஸில் காமாட்சி அம்மாளைப் பார்த்துப் பேசிய பிறகு அந்த எண்ணம் பலம் பெற்றுத் தீர்மானம் ஆயிற்று.” “தங்களுடைய தீர்மானத்தை நான் மிகவும் மெச்சுகிறேன்.” “எல்லா விஷயத்திலும் நம்முடைய கருத்துக்கள் ஒத்திருப்பது பற்றிச் சந்தோஷம்” என்றான் சூரியா. “எனக்கும் சந்தோஷந்தான்; ஆனால் காமாட்சி அம்மாள் தங்களுடைய குருநாதரானது எப்படி?” “சீதாவைப் பற்றி விசாரிப்பதற்காக அந்த அம்மாளிடம் போயிருந்தேன். சீதாவுக்கு டைபாய்ட் சுரம் வந்தது பற்றியும் நீங்கள் அவளுக்குச் சிசுரூஷை செய்து பிழைக்க வைத்தது பற்றியும் தெரிவித்தாள்.” “அவ்வளவுதானா! அதிலிருந்து எப்படிச் சந்நியாசம் வாங்கிக் கொள்ளும் உறுதி ஏற்பட்டது?” “காமாட்சி அம்மாள் இன்னும் சில விஷயங்களும் சொன்னாள். ராகவனுடைய இளம்பிராயத்தில் அவன் வேறொரு பெண்ணைக் கலியாணம் செய்துகொள்ள இஷ்டப்பட்டதைப் பற்றியும் அவளும் அதற்கு ஆவலாயிருந்தது பற்றியும் சாதி வித்தியாசம் காரணமாகத் தான் அதற்குச் சம்மதம் கொடுக்க மறுத்துவிட்டது பற்றியும் சொன்னாள். தாயாருடைய வாக்கை இவ்வளவு பக்தியாக நிறைவேற்றி வைத்த சௌந்தரராகவனை நான் மனதார மெச்சினேன்.” “நீங்கள் இன்றைக்கு ஒரு மாதிரி பேசி வந்ததின் காரணம் இப்போது தெரிகிறது. ஒரு விஷயம் கேட்க விரும்புகிறேன். அந்தப் பெண்ணின் இப்போதைய அபிப்பிராயத்தைப் பற்றிக் காமாட்சி அம்மாள் சொன்னாளா?” “இல்லை; அவளுக்கு எப்படி அது தெரியுமா? ஆனால், ‘ராகவன் அந்தப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டிருந்தால் ஒருவேளை சந்தோஷமாயிருந்திருப்பான்’ என்று சொன்னாள்.” தாரிணி சிறிது நேரம் யோசனை செய்துவிட்டு, “இதற்கும் தங்களுடைய சந்நியாசத்துக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டாள். “நான் எப்போதாவது கலியாணம் செய்து கொள்ளுவதாயிருந்தால், அவள் இன்னொரு ஆசாமியிடம் காதல்கொண்டிருப் பதாகத் தெரிந்தால் நான் சந்நியாசம் வாங்கிக்கொள்வதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது?” “நீங்கள் நினைப்பது முற்றும் தவறு; அந்தப் பெண்ணின் இதயத்தில் ராகவனுக்கு இப்போது கொஞ்சம் கூட இடமில்லை. நீங்கள் சந்நியாசி ஆனதாகத் தெரிந்தால் அவளும் கிறிஸ்துவ மதத்தைத் தழுவி கன்னிகா மடத்தைச் சேர்ந்து விடுவாள்.” சூரியா ஆர்வத்துடன் தாரிணியின் கரங்களைப் பிடித்துக் கொண்டு, “இது உண்மைதானா?” என்று கேட்டான். “தங்களுடைய இருதயத்தையே கேட்டுப் பார்க்கிறதுதானே?” என்று சொன்னாள் தாரிணி. “என் இருதயம் சொல்லியதை நம்புவதற்கு இதுவரை எனக்குப் பயமாயிருந்தது. அவ்வளவு பெரிய பாக்கியம் இந்த துரதிர்ஷ்டசாலிக்கு எப்படிக் கிடைக்கும் என்றும், இருதயம் நம்மை ஏமாற்றுகிறது என்றும் எண்ணிக்கொண்டிருந்தேன்.” “இருதயம் ஏமாற்றவில்லை; சலன சுபாவமுள்ள அறிவு தான் ஏமாற்றிற்று. சீதாவையும் அதே அறிவு தான் ஏமாற்றுகிறது. நீங்கள் உடனே சென்று அவளுடைய நிலையைத் தெரிந்து கொண்டு வாருங்கள். சீதாவை நான் பார்த்து இருபது நாள் ஆகிவிட்டது எப்படியிருக்கிறாளோ என்று கவலையா இருக்கிறது?” “அப்படியே ஆகட்டும், நாளைக்கு நாம் இந்த இடத்திலேயே சந்திக்கலாமா?” “கூடவே கூடாது; சுற்றுமுற்றும் பாருங்கள் நம்மை எத்தனை பேர் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியும். நாளைக்கு ஜாகையில் சந்திக்க வேண்டியது தான். நம்முடைய நண்பர்கள் உங்களுடைய அனுபவங்களைக் கேட்க ஆவலுள்ளவர் களாயிருக்கிறார்கள். நாளைக்கு இதே நேரத்துக்கு மணிக்கூண்டுக்கு அருகில் வாருங்கள். போலீஸ்காரன் இந்துலால் உங்களைச் சந்தித்து ஜாகைக்கு அழைத்துக் கொண்டு வருவான். இப்போது என்னுடன் தொடர்ந்து வரவேண்டாம். நான் அந்தப் போலீஸ்காரன் அருகில் போய்ச் சேரும் வரையில் தாங்கள் அந்த மரத்தடியிலே உட்கார்ந்திருப்பது நல்லது.” இவ்விதம் கூறிவிட்டுத் தாரிணி எழுந்து நடந்தாள். சூரியா அங்கேயே உட்கார்ந்து தாரிணியும் போலீஸ்காரனும் மறையும் வரையில் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். ஒன்பதாம் அத்தியாயம் - இதயம் நின்றது தாரிணி கண்ணுக்கு மறைந்ததும் சூரியா அங்கிருந்து எழுந்து செல்லலாம் என்று நினைத்தான். அச்சமயம் இத்தனை நேரமும் சற்றுத் தூரத்தில் உட்கார்ந்திருந்த மூன்று மனிதர்கள் தன்னை நோக்கி வருவதைச் சூரியா பார்த்தான். அவர்கள் அருகில் வரட்டும் என்று காத்திருந்தான். மூன்று மனிதர்களும் வந்து சூரியாவைச் சுற்றி உட்கார்ந்து கொண்டார்கள். “தம்பி! உனக்கு எந்த ஊர்?” என்று அவர்களில் ஒருவன் கேட்டான். “எனக்கு மதராஸ்!” என்றான் சூரியா. “ஆ! மதராஸ்!” என்று மூன்று பேரும் சேர்ந்து சொன்னார்கள். சற்றுப் பொறுத்து, “இங்கு ஒரு பெண் உட்கார்ந்திருந்தாளே, அவள் உனக்கு என்னமாக வேணும்?” என்று ஒருவன் கேட்டான். “அவள் என் சிநேகிதி!” என்றான் சூரியா. “ஆகா! அவள் உன் சிநேகிதி!” என்றார்கள் மூன்று பேரும் சேர்ந்தாற்போல். அதற்குப் பிறகு சற்று நேரம் சம்பாஷணை நகரவில்லை. சூரியா பொறுத்துப் பார்த்துவிட்டு, “உங்களுக்கு என்ன வேண்டும்? எதற்காகக் கேட்கிறீர்கள்?” என்றான். “பஹுத் அச்சா! அப்படிக் கேள் சொல்கிறோம்” என்றான் ஒருவன். “பஹுத் அச்சா! அப்படிக் கேள் சொல்கிறோம்” என்றார்கள் மற்ற இருவரும். அவர்கள் ஏதோ ஒரு சுதேச சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்களாயிருக்கலாம் என்று ஏற்கனவே சந்தேகித்தான். இப்போது அவர்கள் பல்லவி, அனுபல்லவி முறையில் பேசுவதிலிருந்து அந்தச் சந்தேகம் உறுதிப்பட்டது. “சொல்லுங்கள்; கேட்பதற்குத் தான் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் சூரியா. “அந்தப் பெண்ணின் சிநேகம் உனக்கு வேண்டாம்!” என்று ஒருவன் சொன்னான். மற்ற இருவரும் அதையே திருப்பிச் சொன்னார்கள். “ஏன் அந்தப் பெண்ணிடம் என்ன கெடுதல்? அவளிடம் சிநேகம் செய்தால் என்ன?” என்று சூரியா கேட்டான். “பெரிய இடத்துச் சமாசாரம்!” என்றான் ஒருவன். “ஆமாம் ரொம்பப் பெரிய இடத்துச் சமாசாரம்” என்றார்கள் மற்ற இருவரும். “அப்படியானால் அந்த ரொம்பப் பெரிய இடத்திலே போய்ச் சொல்லுங்கள் என்னிடம் ஏன் சொல்லவேண்டும்?” என்றான் சூரியா. மூன்று பேரில் ஒருவருடைய முகத்தை ஒருவர் பார்த்தார்கள். “எனக்கு நேரமாகிறது; நான் போய் வருகிறேன்” என்றான் சூரியா. மூன்று பேரில் ஒருவன் மற்றவர்களைப் பார்த்து, “சொல்லி விடலாமா?” என்று கேட்டான். “சொல்லிவிடலாமா?” என்று அவர்களும் கேட்டார்கள். முதல் மனிதன் சூரியாவைப் பார்த்து, “தம்பி! உனக்குப் பணம் வேணுமா?” என்றான். “எவ்வளவு?” என்று சூரியா கேட்டான். முதல் மனிதன் மற்றவர்களைப் பார்த்து, “எவ்வளவு என்று கேட்கிறான்; சொல்லட்டுமா?” என்றான். “சொல்லு!” என்றார்கள். “தம்பி! உனக்கு லட்சம் ரூபாய் பணம் வேண்டுமா? ஒரு லட்சம் ரூபாய்!” என்றான் முதல் மனிதன். சூரியா கொஞ்சம் திகைத்துப் போனான். மெதுவாகச் சமாளித்துக் கொண்டு, “கள்ள நோட்டா? நிஜப் பணமா?” என்றான். “ஆகா! கள்ளநோட்டு!” என்று சொல்லிவிட்டு மூவரும் சிரித்தார்கள். பிறகு முதல் மனிதன், தம்பி! நிஜப் பணம்! ஒரு லட்சம் ரூபாய் நோட்டு வேண்டாமென்றால் தங்கமாகத் தருகிறோம்!" என்றான். “ஆமாம் தங்கமாகத் தருகிறோம்!” என்றார்கள் மற்றவர்கள். “கொடுங்கள்” என்று சூரியா கையை நீட்டினான். “கெட்டிக்காரப் பையன்; பணத்துக்குக் கையை நீட்டுகிறான்!” என்று சொல்லிவிட்டு மூவரும் சிரித்தார்கள். கடைசியில் ஒருவன் மென்று விழுங்கிக்கொண்டு, “ஒரு லட்சம் ரூபாய் சும்மாக் கிடைக்குமா? எங்களுக்கு ஒரு உதவி செய்தால் கிடைக்கும்!” என்றான். “என்ன உதவி?” என்றான் சூரியா. “சற்று முன்னால் நீ ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தாயே? அவளைக் கொண்டு வரும்படி எங்களுக்குப் பெரிய இடத்து உத்தரவு கிடைத்திருக்கிறது. அதற்கு நீ உதவி செய்தால் லட்சம் ரூபாய் ரொக்கமாகப் பெற்றுக் கொள்ளலாம்!” சூரியா இம்மாதிரி ஏதோ வரப்போகிறது என்று எதிர் பார்த்தான். ஆயினும் அதைக் காதால் கேட்டதும் சொல்ல முடியாத கோபம் வந்தது. கோபத்தை ஒருவாறு அடக்கிக் கொண்டான். இப்போது கோபித்துக்கொண்டு என்ன பயன்? அவர்கள் மூன்று பேர்; முரட்டுத் தடியர்கள். அவர்களுடன் சண்டை பிடிப்பதால் பல காரியங்கள் கெட்டுப் போகும். மேலும் அவர்களுடைய உண்மையான நோக்கம் என்ன என்று அவனுக்கு இன்னும் சந்தேகமாயிருந்தது. கொஞ்ச நேரம் யோசிப்பதுபோலப் பாசாங்கு செய்துவிட்டு, “இரண்டு நாள் அவகாசம் கொடுங்கள்; யோசித்துப் பதில் சொல் கிறேன்” என்றான். “எப்போது எங்கே சந்திக்கலாம்!” என்று முதல் மனிதன் கேட்டான். “இதே இடத்தில் இதே நேரத்தில் நாளை மறுநாள் சந்திக்கலாம்!” என்றான் சூரியா. “உன்னுடைய ஜாகை எங்கே?” என்று ஒருவன் கேட்டான். “ஜாகை எங்கே?” என்று மற்ற இருவரும் கேட்டார்கள். “தற்போது எனக்கு ஜாகை எதுவும் இல்லை; இனிமேல் தான் தேட வேண்டும்!” என்று சொல்லிக்கொண்டு சூரியா எழுந்தான் அவர்களும் எழுந்தார்கள். சூரியா எங்கே போனாலும் அவர்களும் சற்றுத் தூரத்தில் பின் தொடர்ந்து வந்தார்கள். காரியம் இல்லாத இடங்களுக்கெல்லாம் சூரியா சென்று அந்த மூன்று பேருடைய பார்வையிலிருந்து தப்புவதற்கு இரவு வெகுநேரமாக ஢விட்டது. ஆயினும் சீதாவை அன்று இரவு எப்படியும் பார்த்துவிடுவது என்ற தீர்மானத்துடன் நடந்தான். சீதா தன்னுடைய வீட்டில் அறையில் தன்னந்தனியாக உட்கார்ந்திருந்தாள். சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் ‘டிக் டிக், டிக், டிக்’ என்று அடித்துக் கொண்டி ருந்தது. சீதாவின் இதயம் கடிகாரத்தின் ‘டிக்’ சத்தத்தோடு ஒத்து அடித்துக் கொண்டிருந்தது. கடிகாரத்தின் ஒவ்வொரு ’டிக்’கும் தன்னுடைய வாழ்நாளின் இறுதியை அருகில் கொண்டுவந்து கொண்டிருக்கிறது என்பது சீதாவுக்குத் தெரிந்துதானிருந்தது. கடிகார முள் நள்ளிரவின் பன்னிரண்டு மணியை நெருங்க நெருங்க, சீதாவின் இதயத்தில் குத்தியிருந்த துன்ப முள்ளின் வேதனை அதிகமாகிக் கொண்டிருந்தது. மணி பதினொன்றரை ஆகிவிட்டது, அவளுடைய ஆயுளில் இன்னும் அரை மணி நேரந்தான் பாக்கியிருக்கிறது. அதற்குள் எத்தனையோ காரியங்கள் செய்தாக வேண்டும். குழந்தைக்குக் கடிதம் எழுத வேண்டும்; இவருக்கும் நாலு வரி எழுதத்தான் வேண்டும். ஆனால் எத்தனை முயன்றாலும் ஒன்றும் எழுத வரவில்லையே, என்ன செய்கிறது. சரியாக மணி பன்னிரண்டுக்குக் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு செத்துப் போவது என்று சீதா முடிவு செய்திருந்தாள். அதற்குத் தயாராவதற்காக ஒன்பது மணிக்கே ஆடை ஆபரணங்களை அணிந்து கொண்டாள். சாகிறபோது அவலட்சணமாக எதற்குச் சாகவேண்டும்? நாலு பேர் வந்து பார்க்கிறவர்கள், “அடடா! இப்பேர்ப்பட்ட அழகியை மனைவியாகப் படைத்தும் இந்த ராகவனுக்கு அவளை வைத்துக்கொண்டு வாழக் கொடுத்து வைக்கவில்லையே?” என்று சொல்ல வேண்டாமா? அதற்காகவே ஆடை ஆபரணங்களைப் பூண்டு அழகு செய்துகொண்டு வந்து எழுதுவதற்கு உட்கார்ந்தாள். வஸந்திக்கு முதலில் கடிதம் எழுதி வைக்க எண்ணினாள். ஆனால் குழந்தையை நினைத்துக் கொண்டதும் அழுகை அழுகையாக வந்தது. அவளைப் பார்க்காமல் செத்துப் போகிறோமே என்ற எண்ணத்தினால் நெஞ்சு பிளந்து விடும் போலிருந்தது. குழந்தைக்கு என்ன எழுதுவது? “உன் அப்பா என்னைக் கொன்று விட்டார்! அவரை நீ எனக்காகப் பழி வாங்கு” என்று எழுதலாமா? சீச்சீ! இது என்னை பைத்தியக்கார எண்ணம்? முதலில் லலிதாவுக்குக் கடிதம் எழுதலாம் என்று ஆரம்பித்தாள். “என் ஆருயிர்த் தோழி லலிதாவுக்கு…” என்பதற்கு மேல் ஒன்றும் எழுதத் தோன்றவில்லை. லலிதாவை நினைத்ததும் பழைய ஞாபகங்கள் எல்லாம் பொங்கிக்கொண்டு வந்தன. ஆகா! ராஜம்பேட்டையில் கலியாணத்துக்கு முன்னால் லலிதாவும் தானும் கூடிக் குலாவி அந்தரங்கம் பேசிய நாட்கள் எவ்வளவு ஆனந்தமாக இருந்தன? அப்புறம் இவர் பெண் பார்க்க வந்த போதும், லலிதாவுக்குப் பதிலாகத் தன்னை மணப்பேன் என்று சொன்னபோதும் தான் அடைந்த களிப்பு என்ன? இப்போது அனுபவிக்கும் நரக வேதனை என்ன? தான் அப்போது லலிதாவுக்குச் செய்த துரோகந்தான் இப்போது தன்னை வந்து இப்படிப் பீடித்திருக்கிறதோ? லலிதாவுக்கு என்ன எழுதுவது? “என்னை மன்னித்துவிடு!” என்று எழுதுவதா? அப்படி எழுதினால் அவளுக்கு அர்த்தமே ஆகாதே! எதற்காக மன்னிப்பு என்று கேட்பாளே? தன்னுடைய துயரத்தைச் சொன்னால் கூட அவளுக்கு விளங்காது. அவள் ஆனந்தமான இல்வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறாள். சந்தோஷமாய் இருக்கிறவர்களுக்குத் துக்கப்படுபவர்களின் துக்கத்தை அறிந்து கொள்ளக் கூட முடியாது. “என் புருஷன் என்னைக் கஷ்டப்படுத்துகிறான்!” என்றால், “வெறுமனே ஒரு புருஷன் கஷ்டப்படுத்துவானா? உன்னுடைய நடத்தையில் ஏதாவது கெடுதல் இருக்கும்!” என்று சொல்வார்கள். அதிலும் இல்வாழ்க்கையில் சந்தோஷமாயிருப்பவர்கள் அப்படித்தான் நினைப்பார்கள். லலிதாவுக்கு இப்போது என்ன எழுதி என்ன பிரயோஜனம்? சந்தோஷமாயிருக்கிறவளிடம் போய்த் தன்னுடைய துக்கத்தைச் சொல்லிக் கொள்வானேன்? அப்படிச் சொல்லிக்கொண்டு அவள் பரிதாபப்படுவதாக வைத்துக் கொள்ளலாம். அதனால் சாகப் போகிற தனக்கு என்ன உபயோகம் ஏற்படப் போகிறது? இவருக்குக் கடிதம் எழுதலாம் என்றால், அதைப் பற்றி நினைக்கும்போதே அவளுடைய இதயம் வெடித்து விடும் போலிருந்தது; என்னத்தை எழுதுவது? “இந்த உலகத்தில் தங்களைத் தவிர எனக்கு வேறு கதியில்லை. தாங்களே என்னை வெறுத்து விட்டீர்கள் இனி இந்தப் பூமியில் இருந்து தான் என்ன பயன்!” என்று எழுதலாமா? “ஓயாமல் ‘தொலைந்து போ!’ ‘தொலைந்து போ!’ என்று சொல்லிக் கொண்டிருந்தீர்களே? அதன்படி இதோ தொலைந்து போகிறேன்” என்று எழுதி வைக்கலாமா? இவ்விதம் எண்ணியதும் சீதாவின் கண்களிலிருந்து பொல பொலவென்று கண்ணீர் உதிர்ந்தது. ராகவன் தன்னை எத்தனையோ விதத்தில் கொடுமைப்படுத்தியதெல்லாம் சீதாவின் மனதை அவ்வளவாகப் பாதிக்கவில்லை. ஆனால் ‘தொலைந்து போ!’ ‘தொலைந்து போ!’ என்று சில காலமாக அவன் அடிக்கடி சொல்லி வந்தது அவளை எல்லையில்லாத துன்பத்துக்கு ஆளாக்கியது. எங்கே தொலைந்து போகிறது? தன்னை அழைத்துக் கொள்ள யார் காத்துக் கொண்டிருக்கிறார்கள்? தாயில்லை; தகப்பனாரைப் பற்றித் தகவல் இல்லை; வேறு எங்கே தொலைந்து போகிறது? ஒரு வழியாகச் செத்து தொலைந்து போக வேண்டியது தான்! ஆகா! சீதையைப் பூமாதேவி அழைத்துக் கொண்டது போல் தன்னையும் அழைத்துக் கொள்ளக்கூடாதா? சகுந்தலையை அவள் தாயார் அழைத்துக்கொண்டு போனது போல் தன்னைத் தன்னுடைய தாயார் அழைத்துக் கொண்டு போகக்கூடாதா? அப்படியெல்லாம் கதைகளிலே தான் நடக்கும், உண்மை வாழ்க்கையில் நடைபெறாது. தானே சுட்டுக்கொண்டு செத்துப் போனால் தான் போனது! நல்ல வேளையாக இவர் கைத் துப்பாக்கி வாங்கி வைத்திருக்கிறார்! அதற்காகத் தன் கணவருக்கும் நன்றி செலுத்த வேண்டியது தான். கடிதத்தில் அவ்விதம் நன்றி செலுத்துவதாக எழுதி வைக்கலாமா? ஐயோ! இந்தக் கடிகாரத்துக்கு என்ன இத்தனை அவசரம்? ஏன் இவ்வளவு வேகமாக இது ஓடுகிறது? ஏன் இவ்வளவு துரிதமாக இருதயம் அடித்துக் கொள்கிறது. இதோ மணி பன்னிரண்டுக்கு நெருங்கி வந்துவிட்டதே இன்னும் சில நிமிஷந்தானே பாக்கி இருக்கிறது? பன்னிரண்டு மணி அடித்ததும் தன்னைத்தானே சுட்டுக் கொள்வதாகச் சீதா தீர்மானம் செய்திருந்தாள். பன்னிரெண்டரை மணிக்கு அவர் வருவார். வருவதற்குள்ளே காரியம் முடிந்து போய்விட வேண்டும். அவர் வீட்டிலிருக்கும்போது இந்தக் காரியம் தான் செய்தால், வீணாக அவர் பேரில் பழி விழுந்தாலும் விழும். “இருந்தும் கெடுத்தாள்; இறந்தும் கெடுத்தாள்!” என்ற அபகீர்த்தி தனக்கு ஏன் ஏற்பட வேண்டும். குழந்தை வஸந்தி தாயில்லாப் பெண்ணானால், தகப்பனாராவது அவளுக்கு இருக்க வேண்டாமா? அந்த இரண்டு நிமிஷமும் ஆகிவிட்டது கடிகாரம் டிங், டிங், டிங் என்று பன்னிரண்டு மணி அடித்தது. மணியை மனதில் எண்ணிக்கொண்டே வந்த சீதா, பன்னிரண்டு மணி அடித்து முடிந்ததும் கைத் துப்பாக்கியைக் கையில் எடுக்க எண்ணினாள். அந்தச் சமயத்தில் அறையில் அருகில் யாரோ வரும் காலடிச் சத்தம் கேட்டது. சீதாவின் இதயத்தின் துடிப்புச் சட்டென்று நின்றது; அவளுடைய கை செயலற்றுப் போயிற்று. வருகிறவர் யார்? அவர்தானா? சீக்கிரம் வந்துவிட்டாரா? மனத்துக்கு மனது விஷயம் தெரிந்து போய்த் தன்னைக் காப்பாற்றுவதற்காக வருகிறாரா? கைத் துப்பாக்கியைப் பார்த்ததும் தான் செய்ய எண்ணிய காரியத்தை ஊகித்து அறிந்து கொள்வாரா? தன்னுடைய மனவேதனையைத் தெரிந்து கொள்வாரா? தன்னிடம் பணிந்து மன்னிப்புக் கேட்டுக் கொள்வாரா? பத்தாம் அத்தியாயம் - ஒரே வழிதான்! காலடிச் சத்தம் வெகு சமீபத்தில் வந்த பிறகும் சீதா திரும்பிப் பார்க்கவில்லை. எதற்காகத் திரும்பிப் பார்க்க வேண்டும்? தான் என்ன செய்ய எண்ணியிருந்தாள் என்பதை அவர் தெரிந்து கொள்ளட்டும்; அருகில் வந்து கைத் துப்பாக்கியைப் பார்த்துத் திடுக்கிடட்டும்; தன்னை ஏதாவது கேட்கட்டும், பிறகு பதில் சொல்லிக் கொள்ளலாம். வந்த ஆசாமி சீதாவுக்குப் பின்புறம் வந்து சமீபமாக நின்றான். சட்டென்று கையை நீட்டிக் கைத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டான்; பிறகு “சீதா!” என்றான். குரல் ராகவனுடைய குரல் அல்ல என்பதை அறிந்ததும் சீதா வியப்புடன் திரும்பிப் பார்த்தாள். வந்திருப்பவன் சூரியா என்பதைத் தெரிந்து கொண்டாள். இதனால் அவள் மனதில் அளவற்ற ஏமாற்றம் உண்டாயிற்று. அதே காலத்தில் ஓர் விந்தையான மாறுதல் அவள் மனப்போக்கில் ஏற்பட்டது. தான் உயிரை விட்டு விடுவது என்கிற தீர்மானத்தைச் சீதா அந்தக் கணத்தில் மாற்றிக் கொண்டாள். உயிரோடு எவ்வளவு நாள் இருக்கலாமோ இருந்து ராகவனுக்கு எவ்வளவு மனக்கிலேசம் அளிக்கலாமோ அவ்வளவும் அளிக்க வேண்டுமென்று எண்ணினாள். இந்தத் திடீர் நோக்கம் நிறைவேறுவதற்கு சூரியாவின் உதவி தனக்குத் தேவை. அதற்குத் தகுந்தபடி அவனிடம் நடந்து கொள்ளவேண்டும். “அம்மாஞ்சி! நீயா? நல்ல சமயத்தில் தான் வந்தாய்; வா!” என்று வரவேற்றாள். “அப்படி ஒன்றும் நல்ல சமயமாக எனக்குத் தோன்றவில்லையே? நீ செய்ய உத்தேசித்திருந்த காரியத்துக்குத் தடங்கலாக அல்லவா நான் வந்துவிட்டதாகத் தோன்றுகிறது?” “நான் என்ன செய்ய உத்தேசித்ததாக எண்ணினாய்!” “நள்ளிரவில் கைத்துப்பாக்கியைத் தயாராக வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பது எதற்காக இருக்கும்?” “ஏன்? திருடன் வந்தால் அவனைச் சுடுவதற்குத் தயாராக வைத்திருக்கலாம்.” “புது டில்லியில் திருடன் வந்தால் அவ்வளவு சுலபமாய் வந்து விடுவானா? வாசற் காவற்காரன் இருக்கிறானே?” “காவற்காரன் இருந்தால் உன்னை எப்படி உள்ளே விட்டான்?” “அவன் நன்றாய்த் தூங்கிக் கொண்டிருக்கிறான் நான் சத்தம் செய்யாமல் உள்ளே வந்துவிட்டேன்.” “ஆம்; இந்த ஊர் வேலைக்காரர்களே இப்படித்தான். ஓயாமல் தூங்கி விழுவார்கள்… பின்னே, கைத் துப்பாக்கி எதற்காக வைத்திருக்கிறேன் என்று நினைத்தாய்? என்னைச் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதற்காக என்று நினைத்தாயா?” “அப்படியில்லையென்றால் மிக்க சந்தோஷமடைவேன். உன் முகத்தையும் கண்ணீர் ததும்பும் கண்களையும் பார்த்தால் அப்படித் தோன்றுகிறது. எனக்கு இவ்விடமிருந்து வந்த கடிதமும் அவ்விதம் எண்ணும்படி செய்தது.” “கடிதம் யார் எழுதியது.” “அதைப்பற்றி உனக்கு என்ன கவலை, சீதா! யாரோ எழுதினதாக வைத்துக் கொள்ளலாம்.” “கடிதத்தில் என்ன எழுதியிருந்தது? அதையாவது எனக்குச் சொல்லலாமா?” “நீ மிகவும் மனக் கஷ்டத்துக்கு உள்ளாகியிருப்பதாக எழுதியிருந்தது. என்ன மனக் கஷ்டம் என்பதை நேரில் தெரிந்து கொள்ளலாம் என்றுதான் வந்தேன். உண்மையில் உனக்குக் கஷ்டம் ஒன்றுமில்லையா, அத்தங்கா! அப்படியானால், என் கவலை தீர்ந்தது. நான் உடனே திரும்பிப் போய் என்னுடைய வேலையைப் பார்ப்பேன்.” “சூரியா! உன்னிடம் உண்மையை மறைப்பதில் என்ன பயன்? உன்னுடைய உதவி எனக்குத் தேவையாயிருக்கிறது. அதனால்தான் ‘நல்ல சமயத்தில் வந்தாய்’ என்றேன். நான் சுட்டுக்கொண்டு சாகத் தயாராயிருந்தேன். சூரியா! ஆனால் சாவதற்கு முன்னால் என் ஆசைக் கண்மணிக்கு ஒரு கடிதம் எழுதி வைக்கவேண்டும் என்று நினைத்தேன். ஒன்றும் எழுதவே தோன்றவில்லை. உன்னிடம் சொன்னால் நீ நேரிலே போய்த் தெரிவித்து விடுவாயல்லவா? மதராஸுக்கு எப்போதாவது போகாமலா இருக்கப் போகிறாய்?” என்று சீதா பரிதாபம் நிறைந்த குரலில் கூறினாள். “அத்தங்கா! கொஞ்ச நாளைக்கு முன்பு நான் மதராஸுக்கும் தேவப்பட்டணத் துக்கும் போயிருந்தேன்.” “அப்படியா? மதராஸில் வஸந்தியைப் பார்த்தாயா!” என்று சீதா பரபரப்புடன் கேட்டாள். “பார்த்தேன், உன் மாமனார் மாமியாரையும் பார்த்தேன்!” “வஸந்தி எப்படியிருக்கிறாள்? உன்னிடம் பேசினாளா?” “உடம்பு நன்றாக இருக்கிறாள்; ஆனால் குழந்தையின் மனம் குன்றிப்போயிருக்கிறது; அப்பா அம்மாவைப் பார்ப்பதற்கு ஏங்கிப் போயிருக்கிறாள். அப்படிப்பட்ட குழந்தையை விட்டு விட்டுச் சுட்டுக் கொண்டு சாவதற்கு உனக்கு எப்படி மனம் வந்தது என்று நினைத்தால் எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது.” “இதிலிருந்தே என்னுடைய நிலைமையை நீ தெரிந்து கொள்ளலாமே, சூரியா! பெற்ற பெண்ணைத் தூரதேசத்துக்கு அனுப்பிவிட்டு அவளைப் பார்க்காமல் சாவதற்கு இலேசில் மனம் துணியுமா? அப்படிப்பட்ட நரக வேதனையை வாழ்க்கையில் நான் அனுபவித்துக் கொண்டிருகிறேன்.” “அத்தங்கா! நரக வேதனையும் சொர்க்க சுகமும் நாமே செய்து கொள்வதுதான். ‘கடவுளுடைய ராஜ்யம் உனக்குள்ளே’ என்பதை நீ கேட்டதில்லையா?” “அந்த வேதாந்தமெல்லாம் என் விஷயத்தில் இனிமேல் உபயோகமில்லை, அம்மாஞ்சி! என்னுடைய நரகத்தை நானே சிருஷ்டி செய்து கொள்ளவும் இல்லை. நீங்கள் எல்லோரும் சேர்ந்துதான் என்னை இந்த நரகத்திலே தள்ளினீர்கள். இவரை நான் கலியாணம் செய்து கொண்டது பெரும் பிசகு, சூரியா! எங்கள் இருவருக்கும் கொஞ்சங்கூடப் பொருத்தமில்லை. இவர் யாராவது ஒரு வெள்ளைக்காரிச்சியையோ பார்ஸிக் காரியையோ கலியாணம் செய்துகொண்டிருக்க வேண்டும். உன்னுடைய சினேகிதி தாரிணி இருக்கிறாளே அவளைப்போல ஒருத்தியையாவது…” “பிறரைப்பற்றி நாம் எதற்காகப் பேசவேண்டும் சீதா!” “பேசாமல் என்ன செய்வது? என்னுடைய வழிக்கு அவர்கள் வராமலிருந்தால் நானும் பேசவேண்டியதில்லை. அந்தத் தாரிணியும் என் மாமியாரும் சேர்ந்து எனக்கு விஷம் கொடுத்துக் கொல்லப் பார்த்தார்கள், சூரியா? அதுவும் நான் படுத்த படுக்கையாய்க் கிடந்தபோது என் மாமியாரைப்பற்றி எவ்வளவோ மேலாக நான் எண்ணியிருந்தேன். அவள் எப்பேர்ப்பட்ட ராட்சஸி என்று கொஞ்ச நாளைக்கு முன்புதான் தெரிந்தது.” “உனக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா, சீதா! நீ சாகக் கிடந்தபோது அவர்கள் இருவரும் உனக்கு இரவு பகல் பணிவிடை செய்து உன்னைக் காப்பாற்றினார்கள். அவர்களைப் பற்றி இவ்வளவு கொடுமையாகப் பேசுகிறாயே!” “அவர்கள் பணிவிடை செய்து என்னைக் காப்பாற்றியது உனக்கு எப்படித் தெரியும்? அவர்கள் சொல்லித்தானே தெரியும்? நான் அவ்வளவு அறிவற்றவள் அல்ல. ஒரு நாள் இரவு தாரிணியும் மாமியாரும் கூடிக்கூடி இரகசியம் பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு, டாக்டர் வழக்கமாகக் கொடுத்த மருந்தில் இன்னொரு வெள்ளைப் பவுடரை தாரிணி கலந்து கொடுத்தாள். நான் பார்க்கவில்லை என்று நினைத்துக்கொண்டு செய்தாள். எனக்கும் அப்போது உண்மை தெரியாது; மருந்தைச் சாப்பிட்டு விட்டேன். சற்று நேரத்துக்கெல்லாம் கண்ணைச் சுற்றிக்கொண்டு மயக்கமாய் வந்தது. கொடுத்த விஷம் போதவில்லை போலிருக்கிறது. காலையில் எப்படியோ பிழைத்து எழுந்தேன். அது முதல் ஜாக்கிரதையாகி விட்டேன். தாரிணி மருந்து கலந்து கொடுத்தால் அதைச் சாப்பிடுவதாக ஜாடை செய்து எச்சில் பாத்திரத்தில் கொட்டி விடுவேன். அப்போது இன்னும் என் மனதில் கொஞ்சம் சபலமிருந்தது. இப்போது அதுவும் போய்விட்டது. துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு நான் சாவது உனக்குப் பிடிக்காவிட்டால் தாரிணியைக் கேட்டு கொஞ்சம் விஷம் வாங்கிக்கொண்டு வந்து கொடு!” “அத்தங்கா! உண்மையிலேயே உனக்குப் பைத்தியந்தான் பிடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இவ்வளவு படுபாதகமான வார்த்தையைச் சொல்லியிருக்கமாட்டாய். உனக்குச் சுரமாக இருக்கும் போது தூக்கமில்லாமல் கஷ்டப்படுகிறாயே என்பதற்காக அவர்கள் யோசித்துத் தூக்க மருந்தைக் கொடுத்திருப்பார்கள்..” “ஆமாம்; ஒரேயடியாய்த் தூங்குவதற்குத் தான் மருந்து கொடுத்தார்கள். ஆனால் அதற்கு வேண்டிய அளவு கொடுக்கவில்லை ஆகையால் விழித்துக்கொண்டு விட்டேன்!” “அப்படி உனக்கு சந்தேகமாயிருந்தால் உடனே உன் புருஷனிடம் சொல்லியிருக்கலாமே?” “சொல்லியிருக்கலாம்; ஆனால் அவர் நம்பியிருக்க மாட்டார், உன் அருமை அத்தங்காளின் பேச்சை நீயே நம்பவில்லையே? திரும்பித் திரும்பிப் பேசிப் பயன் இல்லை. நான் அனாதை; திக்கற்றவள்! என் பேச்சை யாரும் நம்பப்போவதில்லை. நீ எதற்காக வந்தாய்? உன் காரியத்தைப் பார்த்துக் கொண்டு நீ போ!” என்று சீதா சொல்லிக் கலகலவென்று கண்ணீர் உதிர்த்தாள். “என் காரியத்தைப் பார்த்துக்கொண்டு போகிறதாயிருந்தால் நான் எவ்வளவோ முக்கியமான காரியங்களை விட்டுவிட்டு ஆயிரம் மைல் பிரயாணம் செய்து வந்திருக்க மாட்டேன்; என்னுடைய காரியத்தை மட்டுமல்ல; தேசத்தின் காரியத்தைக் கூட விட்டுவிட்டு வந்திருக்கிறேன். நீ எப்படியாவது சந்தோஷமாயிருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதற்கு என்ன வழி என்று சொல். உன் புருஷனிடம் உனக்கு என்ன குறை என்று சொன்னால், அவனையே கேட்டு விடுகிறேன். என் தலையை அவன் இறக்கிவிடமாட்டான் அவனிடம் எனக்குப் பயம் ஒன்றும் கிடையாது…” "உனக்கு பயமில்லை; ஆனால் எனக்குப் பயமாயிருக்கிறது. அவரிடம் நீ பேசுவதினால் எனக்கு நல்லது ஒன்றும் விளையாது. உன் பேரில் வரும் கோபத்தை என் பேரில் வைத்துத் தாக்குவார். எனக்கு அவர் பேரில் என்ன குறை என்று கேட்கிறாய். என்னுடைய மனக்குறையைச் சொன்னால் உனக்குப் புரியவே புரியாது. பெண்ணாய்ப் பிறந்தவர்களுக்கே புரியவில்லை! உனக்கு எப்படிப் புரியும்? ‘பார்ட்டிக்கு வா!’ என்று சொல்லி அழைத்துப் போகிறார். அங்கே முப்பது ஸ்திரீகளுக்கு முன்னால் என்னை அவமானப்படுத்துகிறார். நான் எவ்விதமாக நடந்து கொண்டாலும் அது தப்பாகப் போய்விடுகிறது. நான் கலகலப்பாக நாலு பேரிடம் பேசிக்கொண்டிருந்தால் ‘சுத்த அதிகப்பிரசங்கி! உன் அசட்டுத்தனத்தை எதற்காக இப்படிக் காட்டிக்கொள்கிறாய்? வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்கக் கூடாதா? என் மானம் போகிறதே!’ என்கிறார். இப்படி இவர் சொல்கிறாரே என்பதற்காகப் பேசாமலிருந்தால், ‘ஏன் இப்படி ஏதோ பறிக்கொடுத்தவளைப் போல இருந்தாய்? நாலு பேரிடம் கலகலப்பாகப் பேசத் தெரியாத ஜன்மத்தைக் கலியாணம் செய்து கொண்டேனே?’ என்கிறார். சிரிக்காவிட்டால் ‘நகைச்சுவையை அறியாத நிர்மூடம்!’ என்கிறார். துக்கம் தாங்காமல் மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தால், ‘இங்கேயிருந்து ஏன் என் பிராணனை வாங்குகிறாய்? எங்கேயாவது தொலைந்து போ!’ என்கிறார். ‘தொலைந்து போ!’ என்ற வார்த்தையைக் கேட்டுக் கேட்டு என் மனது புண்ணாகிவிட்டது! நான் எங்கே தொலைந்து போவேன்? எனக்குப் போக்கிடம் எங்கே இருக்கிறது? ஒரேயடியாக இந்த உலகத்திலிருந்து தொலைந்து போவதைத் தவிர வழி ஒன்றுமில்லை. அம்மாஞ்சி, அந்தத் துப்பாக்கியை கொடுத்து விட்டுப்போ!" “அத்தங்கா! உயிரை விடுகிற பேச்சை மறந்து விடு! அப்படி நீ அனாதையாகப் போய்விடவில்லை. நான் ஒருவன் இருக்கும் வரையில் உன்னை ’அனாதை’யாக விட்டுவிடமாட்டேன். எப்பேர்ப்பட்ட கஷ்டமாயிருந்தாலும் அதற்குப் பரிகாரம் ஏதாவது இல்லாமற் போகாது. கொஞ்ச நாள் நீ பொறுத்துக் கொண்டிரு! நான் யோசித்து ஏதாவது ஒரு பரிகாரம் கண்டுபிடிக்கிறேன்.” “ஒரு நாள் கூட என்னால் இனிமேல் பொறுக்க முடியாது. நான் உயிரோடு இருக்க வேண்டுமானால் அதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது ஆனால் அந்த வழி உனக்குச் சம்மதமாயிராது.” “அது என்ன வழி என்று சொல்! என்னால் முடியுமா என்று பார்க்கிறேன்.” “என்னை இங்கிருந்து அழைத்துக் கொண்டு போ! இந்த டில்லி நகரம் எனக்கு நரகமாகிவிட்டது; இந்த நரகத்திலிருந்து என்னை அழைத்துக் கொண்டு போ! இந்த வீடு எனக்கு சிறைச்சாலையாகி விட்டது; இந்தச் சிறையிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டு போ! நீ பார்த்து என்னை எங்கே அழைத்துப் போனாலும் நான் வருகிறேன், பம்பாய்க்கு, கல்கத்தாவுக்கு, லாகூருக்கு, இலங்கைக்கு, லண்டனுக்கு, அமெரிக்காவுக்கு எங்கே வேணுமானாலும் உன்னோடு புறப்பட்டு வரத் தயாராயிருக் கிறேன்…!” “அத்தங்கா! அப்படி ஒரு காலம் வந்தால், அதற்கு அவசியம் ஏற்பட்டால், அங்கேயெல்லாம் உன்னை அழைத்துப் போகிறேன். ஆனால் அதற்கு இப்போது சமயம் அல்ல. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் நான் ஈடுபட்டிருக்கிறேன். இந்தியா சுதந்திரம் அடையும் வரையில் வேறு காரியத்தில் பிரவேசிப்பதில்லை’ என்று பல நண்பர்களின் மத்தியில் சபதம் செய்திருக்கிறேன். இந்தியா சுதந்திரம் அடையட்டும்! அதற்குப் பிறகு…” “சூரியா! இந்தியாவின் சுதந்திரப் போரில் ஸ்திரீகளுக்குப் பங்கு எதுவும் இல்லையா? தாரிணி செய்து புரட்டுகிறதை நான் செய்து புரட்டமாட்டேனா? நான் ஒன்றுக்கும் லாயக்கற்றவள் என்று இவரைப்போல் நீயும் நினைக்கிறாயா? நீ மட்டும் என்னை அழைத்துக் கொண்டு போ! நான் எப்பேர்ப்பட்ட காரியம் எல்லாம் செய்கிறேன் என்று பார்! ‘சுதந்திரம்’, ‘சுதந்திரம்’ என்று சொல்லிக் கொண்டு நீங்கள் என்ன செய்கிறீர்கள்? சந்திலும் பொந்திலும் ஒளிந்து கொண்டிருக்கிறீர்கள். வேஷம் போட்டுக் கொண்டு ஊரையும் பேரையும் மாற்றி வைத்துக் கொண்டு இராத்திரி வேளை பார்த்து அங்குமிங்கும் அலைகிறீர்கள். என்னை மட்டும் நீ அழைத்துக் கொண்டு போ! ஜான்ஸி ராணியைப்போல் கையில் வாள் பிடித்துக் குதிரை மீதேறி யுத்தகளத்துக்குச் சென்று யுத்தம் செய்கிறேன். தேசமெல்லாம் திரிந்து சுதந்திரப் போருக்கு ஆயிரம் பதினாயிரம் வீரர்களைத் திரட்டுகிறேன்; கோழைகளை வீரர்களாக்குகிறேன். பிரான்ஸ் தேசத்து ஜோன்ஆப்ஆர்க் என்னும் வீரப் பெண்மணியைப் போல் இந்தியாவின் சுதந்திரத்தை நான் நிலைநாட்டுகிறேனா இல்லையா, பார்!” “சீதா! ஜான்ஸிராணியைப் போலும் ஜோன்ஆப்ஆர்க்கைப் போலும் சுதந்திரப் போர் செய்யும் காலம் இது அல்ல. ஆகாசவிமானத்திலிருந்து குண்டு போட்டு ஆயிரம் பதினாயிரம் ஜனங்களைக் கொல்லும் காலம் இது. இங்கிலீஷ் சர்க்காரோடு பகிரங்கமாகச் சண்டை போட்டுச் சுதந்திரத்தை நிலைநாட்ட முடியாது. இந்தத் தேசத்தில் இப்போது பகிரங்கமாக ஒரு பொதுக் கூட்டம் கூட்ட முடியாது. ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்று கோஷிக்க முடியாது. எப்படிப் படை திரட்டுவது? யுத்தகளத்துக்கு போவது? காலத்துக்குத் தகுந்த முறையை அனுசரிக்க வேண்டும்.” “அப்படியானால் ஒன்று செய்! என்னை அழைத்துக் கொண்டு போய்க் காந்தி மகாத்மாவின் ஆசிரமத்தில் விட்டு விடு! அங்கே என்னைப்போல் கஷ்டப்பட்டவர்களும் அனாதைகளும் பலர் இருப்பதாக அறிகிறேன். சீமையிலிருந்து வந்த வெள்ளைக்காரி கூட ஒருத்தி இருக்கிறாளாம்! முஸ்லீம் பெண் ஒருத்தி இருக்கிறாளாம்! அவர்களைப்போல் நானும் மகாத்மா இட்ட கட்டளையை நிறைவேற்றிக் கொண்டி ருக்கிறேன். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு என்னை வந்து அழைத்துக் கொண்டு போ!” “அத்தங்கா! மகாத்மா சிறையில் இருக்கிறார். அவருடைய ஆசிரமத்தில் இப்போது யார் இருக்கிறார்களோ தெரியாது. புதியதாக யாரையும் ஆசிரமத்தில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.” “அப்படியானால் ஒன்று செய், சூரியா! என்னை எங்கேயாவது ஒரு நல்ல சினிமாக் கம்பெனியில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடு! சினிமாவில் நான் எப்படி நடித்துப் பெயர் வாங்குகிறேன், பார்! எத்தனையோ தமிழ் சினிமாவும், ஹிந்தி சினிமாவும் பார்த்திருக்கிறேன். ஒன்றிலாவது சோகமான கட்டங்களில் நடிக்க யாருக்கும் தெரியவில்லை. சினிமாவில் நடிக்க எனக்கு ஒரு சான்ஸ் கிடைத்தால் சோக நடிப்பில் இணையற்ற நட்சத்திரம் என்று பெயர் வாங்கி விடுவேன்! என்ன சொல்கிறாய், சூரியா!” சூரியா எதுவும் சொல்ல முடியாமல் திகைத்துப் போயிருந்தான். ஜான்ஸிராணி எங்கே, மகாத்மாவின் ஆசிரமம் எங்கே, சினிமா நட்சத்திரம் எங்கே! சேர்ந்தாற்போல் இந்த மூன்று காரியங்களிலும் ஆசை செலுத்தும் தன் அத்தங்காளின் மனோநிலை அவனுக்கு அளவில்லா வியப்பை அளித்தது. சீதாவுக்கு உண்மையிலேயே கொஞ்சம் சித்தப்பிரமை ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்தான். ஆகையால் இன்றைக்கு ஏதாவது சமாதானமாகச் சொல்லிவிட்டு போகலாமென்றும், நாளைக்கு தாரிணியைக் கேட்டுக் கொண்டு தீர்மானிக்கலாம் என்று முடிவு செய்தான். “அத்தங்கா, எனக்குச் சினிமா விஷயம் ஒன்றும் தெரியாது; சினிமாக்காரர்களையும் தெரியாது. ஆகையால் நீ கடைசியாகச் சொன்னதும் முடியாத காரியம். ஆனால் சில நாளைக்கு நீ வேறு எங்கேயாவது போயிருக்க வேண்டும் என்றால், அதற்கு இடமில்லாமற் போகவில்லை. ராஜம்பேட் டயில் நீ போய் இருக்கலாம் என்று சொல்வேன். என் அம்மா சமாசாரம் எனக்குத் தெரியும். உன்னை அவளுக்குப் பிடிக்காது; ஆகையால் ராஜம்பேட்டையை நான் சொல்லவில்லை. தேவபட்டிணத்தில் லலிதா இருக்கிறாள், அல்லவா? உன்னை நினைத்து நினைத்து அவள் உருகிப் போகிறாள். இந்த உலகத்தில் லலிதாவைப்போல் உன்னிடம் அன்பு கொண்டவர்கள் யாருமே இருக்க முடியாது. நீ சந்தோஷமாயில்லை என்று தெரிந்து அவள் படுகிற வருத்தத்தைச் சொல்லி முடியாது.லலிதாவின் புருஷன் இப்போது சிறையில் இருக்கிறான்.அவனும் என் அத்தியந்த சிநேகிதன் என்பது உனக்குத் தெரியுமே.லலிதாவின் மாமனார் ரொம்ப நல்ல மனுஷர்.நீ தாராளமாகத் தேவபட்டிணத்துக்குப் போய்ச் சில மாதம் இருக்கலாம்.உன் குழந்தையையும் அங்கே வரவழைத்துக் கொள்ளலாம்” என்று கூறினான். “லலிதா என்னிடம் எவ்வளவு அன்பு கொண்டவள் என்பது எனக்குத் தெரியாதா, சூரியா! அவள் சந்தோஷமா யிருக்கிறாள் என்பதை நினைத்தால் எனக்கும் சந்தோஷமாயிருக்கிறது. லலிதாவுக்குத் துரோகம் செய்து இவரை நான் கலியாணம் செய்து கொண்டதாக ஒரு காலத்தில் வருத்தப்பட்டேன். ஆனால் இப்போது அவளுக்குப் பெரிய நன்மை செய்ததாக அறிந்து சந்தோஷப்படுகிறேன். இவரை அவள் கலியாணம் செய்து கொண்டிருந்தால் இப்போது நான் படுகிற கஷ்டத்தையெல்லாம் அவள் பட்டிருக்க வேண்டும் அல்லவா? ஆனால் லலிதா வீட்டில் போய் நான் இருக்க மாட்டேன். என்னுடைய எண்ணம் என்னவென்பதை இன்னமும் நீ அறிந்து கொள்ளவில்லை. நான் எங்கே போனேன் என்ன ஆனேன் என்பது இவருக்குத் தெரியக் கூடாது. தேவபட்டணத்துக்குப் போனால் இரண்டு நாளில் இவருக்குத் தெரிந்து போய்விடுகிறது. அதில் என்ன பிரயோஜனம்? இவர் என்னைத் தேடி அலையும்படியாகவும், கவலைப்படும்படியாகவும் எங்கேயாவது தூரதேசத்துக்கு, சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாத இடத்திற்கு நான் போக விரும்புகிறேன். அப்படிப்பட்ட இடத்துக்கு என்னை நீ அழைத்துக் கொண்டு பேவதாக இருந்தால் சொல்லு! இல்லாவிட்டால் உன் காரியத்தைப் பார்த்துக் கொண்டு போ!” "அந்த மாதிரி நாம் இருவரும் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டுப் போனால் உன் புருஷனும் சரி, மற்றவர்களும் சரி, என்ன நினைத்துக் கொள்வார்கள்? ஏதாவது தப்பாக எண்ணிக் கொள்ள மாட்டார்களா? வீண் சந்தேகத்திற்கு இடமாயிராதா? இதைப்பற்றி நீ யோசித்துப் பார்த்தாயா?" என்றான் சூரியா. “தப்பாக எண்ணிக் கொண்டால் எண்ணிக் கொள்ளட்டும்; சந்தேகப்பட்டால் படட்டும். எனக்கு அதைப்பற்றி அக்கறையில்லை. மூன்று மாதத்திற்கு முன்னால் இவர் என்ன செய்தார் தெரியுமா? யாரோ ஒரு பெண்ணுடன் காரில் ஏறிக் கொண்டார். பானிபெட்டுக்குச் சமீபத்தில் இவருடைய காரும் ஒரு மிலிடெரி லாரியும் மோதிக்கொண்டன. இவருக்குக் காயம் ஒன்றுமில்லை; ஆனால் அந்தப் பெண்ணுக்குக் காயம். இந்த விஷயம் புது டில்லியெல்லாம் சிரிப்பாய் சிரித்தது. அதற்காக அவரை யார் என்ன செய்துவிட்டார்கள்? புருஷர்கள் மட்டும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று எந்தச் சட்டத்தில் சொல்லியிருக்கிறது?” "அத்தங்கா! அந்த மாதிரிச் சட்டம் ஒன்றும் கிடையாது. தப்பான காரியத்தைப் புருஷன் செய்தாலும் பிசகு தான்; பெண் செய்தாலும் பிசகு தான். ஆகையினால் தான் நீ சொல்வதை நான் ஒப்புக்கொள்ள ஢ல்லை. எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது; அதைச் சொல்லுகிறேன், கேள். தேவபட்டணத்தில் எனக்கு இரண்டு சிநேகிதர்கள் உண்டு என்று உனக்குத் தெரியும் அல்லவா? ஒருவன் தான் லலிதாவின் கணவன் பட்டாபிராமன். இன்னொருவன் பட்டாபிராமன் வீட்டுக்கு எதிர்வீட்டு அமரநாதன். அவனும் அவனுடைய மனைவி சித்ராவும் கல்கத்தாவில் இருக்கிறார்கள். நான் தேவபட்டணம் போயிருந்தபோது அவர்களும் தற்செயலாக வந்திருந்தார்கள். அமரநாதனும் அவன் மனைவியும் ரொம்ப நல்லவர்கள். சித்ராவுக்கு உன்னைப்பற்றி லலிதா எல்லாம் சொல்லியிருக்கிறாள். என்னுடைய யோசனை என்ன தெரியுமா? உன்னைப் பக்கத்து ஸ்டேஷன் எதற்காவது அழைத்துப் போய் ரயில் ஏற்றி விட்டு விடுகிறேன். நீ கல்கத்தாவுக்கு போய், அமரநாத் - சித்ரா வீட்டில் சில காலம் நிம்மதியாக இரு. இதற்குள் உன் புருஷன் இங்கே என்ன செய்கிறான் என்பதை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன். அவசியம் ஏற்பட்டால் நீ போயிருக்கிற இடத்தைச் சொல்லுகிறேன்." “அதுதான் கூடாது; அவருக்குத் தெரியவே கூடாது! எனக்கு இஷ்டமானபோது தெரிவித்துக் கொள்வேன் சூரியா. நான் கல்கத்தாவுக்குப் போகத் தயார். ஆனால் இன்றைக்கோ நாளைக்கோ என்னை நீயே அழைத்துப் போகவேண்டும். இங்கே நாளைக்குப் பிறகு என்னால் இருக்க முடியாது. தனியாகப் போகவும் முடியாது. ஒருவேளை நீ என்னை அழைத்துப் போவது உன்னுடைய சிநேகிதி தாரிணிக்குப் பிடிக்காமலிருக்கலாம். அவளிடம் உனக்குப் பயமாயிருந்தால் அதையும் இப்போதே சொல்லிவிடு!” “சீதா! என்னென்னமோ விசித்திரமான எண்ணங்கள் உன் மனதில் குடிகொண்டிருக்கின்றன. எனக்கு யாரிடத்திலும் பயம் கிடையாது. நாம் செய்கிற காரியம் நமக்கே சரியாயிருக்க வேண்டுமல்லவா? ஆகையால் கொஞ்சம் யோசிப்பதற்கு அவகாசம் கொடு!” என்றான் சூரியா. “பேஷாக யோசித்துச் சொல்! செய்கிற யோசனையை இங்கேயே செய்துவிடு! இத்தனை நாள் கழித்து அம்மாஞ்சி வந்திருக்கிறாய்; தாகத்திற்குத் தண்ணீர் வேண்டுமா என்று கூட நான் கேட்கவில்லை. இதோ உள்ளே போய்க் கொஞ்சம் ஓவல்டின் கலந்து கொண்டு வருகிறேன். அது வரையில் யோசனை செய்து கொண்டிரு!” என்று சொல்லிவிட்டுச் சீதா சமையலறைக்குள் போனாள். சூரியாவின் உள்ளம் பெரும் கலக்கத்தில் ஆழ்ந்தது. ‘இது என்ன! இவ்வளவு பயங்கரமான பொறுப்பை நாம் ஏற்றுக் கொண்டு விட்டோ மே! இது சரியாக முடியுமா? அல்லது கேடாக முடியுமா?’ என்று அவன் மனம் தத்தளித்தது. இந்த நெருக்கடியிலிருந்து எப்படியாவது தப்பித்துக்கொள்ள முடியுமா என்று யோசித்தான். இந்தச் சமயத்தில் டெலிபோன் மணி அடித்தது. வேறு சிந்தனையில் ஆழ்ந்திருந்த சூரியாவின் மனதில் இரவு பன்னிரண்டு மணிக்கு மேலே யார் டெலிபோனில் பேசுவார் என்ற யோசனை கூடத் தோன்றவில்லை. ரிஸீவரை கையில் எடுத்துக்கொண்டு, “ஹலோ! யார் அது!” என்று கேட்டான். டெலிபோன் மணிச் சத்தத்தைக் கேட்டுவிட்டுச் சீதா சமையல் அறை உள்ளேயிருந்து பரபரப்புடன் வந்தாள். சூரியா ரிஸீவரைக் கையில் எடுத்துப் பேசுவதைப் பார்த்ததும் அவள் முகத்தில் பீதியின் அறிகுறி தோன்றியது. பதினொன்றாம் அத்தியாயம் - ராகவன் மனக் கவலை ரஜினிபூர் மாஜி திவான் ஆதிவராகாச்சாரியார் புதுடில்லியில் நிரந்தரமாகத் தங்கிவிட்டார். சுதேச சமஸ்தான மன்னர்களுக்குச் சட்ட சம்பந்தமான யோசனை சொல்லும் உத்தியோகம் அவருக்குக் கிடைத்திருந்தது. இந்த உத்தியோகத்தில் வேலை கொஞ்சம்; வருமானமும் செல்வாக்கும் அதிகம். எனினும் அவருடைய புதல்விகள் தாமாவுக்கும் பாமாவுக்கும் மட்டும் இன்னும் கலியாணம் ஆனபாடில்லை. புதுடில்லி சமூக வாழ்க்கையில் அவர்கள் மிக்க பிரபலம் அடைந்திருந்தார்கள். வைஸ்ராய் மாளிகையிலும் மற்றும் சுதேச மன்னர்களும் பெரிய உத்தியோகஸ்தர்களும் கொடுக்கும் பார்ட்டிகளிலும் தாமா பாமா சகோதரிகளைத் தவறாமல் காணலாம். இன்றைக்கும் அவர்கள் தந்தையுடன் ஒரு பார்ட்டிக்குப் போய்விட்டு இரவு பதினோரு மணிக்கு வீட்டுக்குத் திரும்பி வந்தார்கள். அதே பார்ட்டிக்குச் சென்றிருந்த சௌந்தரராகவனும் அவர்களுடன் வந்தான். அவர்கள் நாலு பேரும் சீட்டு விளையாடத் தொடங்கினார்கள். ஆட்டம் சிறிது நகர்ந்ததும் பாமா, “மிஸ்டர் ராகவன்! உங்கள் மனைவியை ஏன் பார்ட்டிக்கு அழைத்து வரவில்லை? இன்னும் உடம்பு சரியாகவில்லையா?” என்று கேட்டாள். “உடம்பு ஒரு மாதிரி சரியாகிவிட்டது ஆனால் சுரம் அடித்துக் கிடந்ததிலிருந்து அவளுடைய மனது பேதலித்துப் போயிருக்கிறது. வீட்டுக்குப் போனால் ஓயாத புகாரும் ஒழியாத அழுகையுந்தான்!” என்றான் ராகவன். “அவ்வளவு கடுமையாகச் சுரம் அடித்துக் கிடந்தவளுக்கு நீங்கள் கொஞ்ச நாள் இடமாறுதல் கொடுக்க வேண்டும் இங்கேயே வைத்துக் கொண்டிருப்பது தவறு!” என்றாள் தாமா. “அது எனக்கு தெரியாமலா இருக்கிறது? ஆனமட்டும் நான் சொல்லிப் பார்த்தாகி விட்டது. மதராஸுக்குப் போய் என் அம்மாவுடன் சில நாள் இருந்துவிட்டு அவளுடைய பந்துக்களையும் பார்த்துவிட்டு வரும்படி எத்தனையோ தடவை சொல்லியாகி விட்டது. அவள் சம்மதம் கொடுத்தால்தானே? என் பாடு ரொம்பவும் சங்கடமாயிருக்கிறது. ஆபீஸுக்குப் போனால் அங்கே ஒருவிதக் கஷ்டம்; வீட்டுக்குப் போனால் இன்னொருவிதக் கஷ்டம். என்ன செய்கிறதென்று தெரியவில்லை. ஒரு சமயம் தற்கொலை செய்து கொண்டு செத்துப் போகலாமா என்று தோன்றுகிறது. இங்கே எப்போதாவது வந்து உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேனே இம்மாதிரி சந்தர்ப்பங்களிலேதான் கொஞ்சம் மன நிம்மதி ஏற்படுகிறது.” “வீட்டிலே உள்ள கஷ்டம் சரி; ஆபீஸில் உங்களுக்கு என்ன கஷ்டம்?” என்று தாமா கேட்டாள். “உங்கள் தகப்பனாரைக் கேட்டுப் பாருங்கள், சொல்லுவார். திவான் சாகிப்! நான் முஸ்லிம் ஆகிவிடலாம் என்று யோசிக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்றான் ராகவன். ஆதிவராகாச்சாரியார் அதற்குப் பதில் ஒன்றும் சொல்லாமல் சீட்டைக் கவனித்துக் கொண்டிருந்தார். “இது என்ன கூத்து? நீர் எதற்காக முஸ்லிம் ஆக வேண்டும்?” என்று பாமா ஆச்சரியம் ததும்பக் கேட்டாள். “இப்போதெல்லாம் முஸ்லிமாயிருந்தால்தான் கவர்ன்மெண்ட் உத்தியோகத்தில் பிரமோஷன் கிடைக்கிறது. எனக்கு நாலு வருஷத்துக்குப் பிறகு உத்தியோகத்தில் சேர்ந்தவனை எனக்கு மேலே தூக்கிப் போட்டிருக்கிறார்கள். போன வருஷம் எனக்குக் கீழே வேலை பார்த்தவனுக் கெல்லாம் ‘எஸ் ஸார்!’ சொல்ல வேண்டியிருக்கிறது. அப்படியாவது அவன் மகா மேதாவியா? மூளை உள்ளவனா? ஒன்றும் இல்லை. ‘மகா மூடன்’ என்ற பட்டத்துக்கு மிகவும் தகுதியுள்ளவன். அவன் கீழே நான் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இந்த அவமானத்தை என்னால் பொறுக்க முடியவில்லை. திவான் சாகிப்! எனக்கு ஒரு யோசனை சொல்லுங்கள். நான் இஸ்லாம் மதத்தில் சேர்ந்து விடட்டுமா? அல்லது இந்த உத்தியோகத்தை ராஜினாமா செய்து விடட்டுமா?” என்று ராகவன் கேட்டான். “இரண்டும் வேண்டாம்; கொஞ்ச நாள் பொறுத்துக் கொண்டிரும்!” என்று ஆதிவராகாச்சாரியார் முதல் முறையாகத் திருவாய் மலர்ந்தார். “பொறுத்துக் கொண்டிருந்தால் என்ன ஆகிவிடும்? இந்த நிலைமையில் மாறுதல் ஏதாவது ஏற்படும் என்று நினைக்கிறீர்களா?” “ஏற்படலாம் என்றுதான் நினைக்கிறேன் இந்த காங்கிரஸ் தலைவர்களுக்குக் கொஞ்சம் புத்தி வந்தால் நிலைமை கட்டாயம் மாறிவிடும். இதற்கெல்லாம் காரணம் காங்கிரஸ்காரர்களின் தவறு தான். யுத்தத்தில் ஒத்துழைப்பதாகச் சொல்லிக் கொண்டு ஜில்லா உத்தியோகங்களையும் கைப்பற்ற வேண்டிய சமயத்தில் சிறைக்குள் போய் உட்கார்ந்திருக்கிறார்கள். இந்த யுத்த சமயத்தில் காங்கிரஸ்காரர்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டால் வைஸ்ராய் நிர்வாக சபையின் பாதிக்கு மேற்பட்ட ஸ்தானங்கள் கிடைத்திருக்கும். காங்கிரஸ்காரர்கள் செய்யும் தவறு முஸ்லிம் லீகர்களுக்குச் சௌகரியமாய்ப் போயிருக்கிறது. முக்கியமான உத்தியோகங்களில் எல்லாம் முஸ்லிம்கள் வந்து நன்றாக உட்கார்ந்து கொள்கிறார்கள்…” “காங்கிரஸ்காரர்கள் வந்துவிட்டால்தான் என்ன நடந்து விடும் என்று நினைக்கிறீர்கள், திவான் சாகிப்! அவர்களும் முஸ்லிம்களுக்குத் தான் சலுகை கொடுப்பார்கள். ‘சிறுபான்மையோருக்கும் நியாயம்’ வழங்குவதாகச் சொல்லிக் கொண்டு பெரும்பான்மையோர் தலையில் மண்ணை வாரிப்போடுவார்கள்! எனக்கு என்னமோ ஹிந்து மகாசபையின் கொள்கைகள் தான் பிடித்திருக்கிறது. இங்கிலீஷ்காரர்களோடு சண்டை போடுவது கூட அவ்வளவு முக்கியமில்லை. முதலில் முஸ்லீம்களை ஒழித்துக் கட்டவேண்டும். எட்டுக் கோடி முஸ்லீம்களை இந்தியாவில் வைத்துக் கொண்டு சுயராஜ்யம் வந்துதான் என்ன பிரயோஜனம்?” “என்ன மிஸ்டர் ராகவன்! சற்று முன்னால் முஸ்லிம் ஆகிவிடப் போவதாகச் சொன்னீர்; இப்போது முஸ்லிம்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்கிறீரே?” என்று பாமா கேட்டாள். “பின்னே என்ன செய்கிறது? ஒன்று முஸ்லிம்களைத் தொலைத்துத் தலை முழுக வேண்டும்; அது முடியாவிட்டால் எல்லோரும் முஸ்லிம் ஆகிவிடுவதே நல்லது. அப்போது உத்தியோகங்களில் இந்தப் பாரபட்சம் காட்ட முடியாதல்லவா? எங்கேயாவது சுதேச சமஸ்தானத்தில் ஒரு உத்தியோகம் வாங்கிக் கொடுங்கள் என்று உங்கள் தகப்பனாரைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் அவர் கவனிக்கிற வழியாயில்லை. திவான் சாகிப் சொன்னால் உடனே இந்த தரித்திரம் பிடித்த உத்தியோகத்தை ராஜினாமாச் செய்யத் தயாராயிருக்கிறேன்.” “அப்பா! ராகவனுடைய கோரிக்கையை நீங்கள் கொஞ்சம் கவனிக்கிறதுதானே?” என்றாள் பாமா. “எல்லாம் கவனித்துக் கொண்டுதானிருக்கிறேன். ஆனால் ராகவன் ராஜினாமா செய்து விடக் கூடாது. ஒரு வேலையில் இருக்கும் போதே இன்னொரு வேலை கிடைத்தால் தான் கிடைத்தது; விட்டுவிட்டால் கிடைக்காது!” என்றார் மாஜி திவான். “இப்படித் தான் வெகு காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள், ஆனாலும் இன்னும் கொஞ்ச நாள் பார்க்கிறேன்” என்றான் ராகவன். “அது கிடக்கட்டும், ராகவன்! நீர் முஸ்லிம் அல்ல - ஹிந்து என்பது ஒன்றைத் தவிர உத்தியோகத்தில் ’பிரமோஷன் கிடைக்காததற்கு வேறு காரணம் எதுவும் இல்லையா?” என்று தாமா கேட்டாள். “மதராஸி என்ற காரணமும் இருக்கத் தான் இருக்கிறது. என்னுடைய துரை வரவு செலவு மந்திரியாயிருந்த காலத்தில் முக்கியமான வேலைகளுக்கெல்லாம் மதராஸியைத் தேடிப் பொறுக்கிப் போடுவார். இப்போது மதராஸி என்றால் புது டில்லியில் வேப்பங்காயாக இருக்கிறது. இவர்களுக்கு முதலாவதாக யாராவது மகம்மதியர் வேண்டும். மகம்மதியர் இல்லாவிட்டால் மதியில்லாத மகாமூடனாயிருக்க வேண்டும். ஆனால் மதராஸி மட்டும் உதவாது. இந்தியாவைத் தற்சமயம் ஆளும் முகமது துக்ளக்குகள், அறிவுக்கு அமித லாப வரி போட்டாலும் போடுவார்கள்!” இப்போது ஆதிவராகாச்சாரியார் சம்பாஷணையில் மீண்டும் கலந்துகொண்டு, “பாமா அதைச் சொல்லவில்லை ராகவன்! உம் பேரில் இன்னொரு புகார் இருப்பதாக ஊரெல்லாம் பிரஸ்தாபமாயிருக்கிறதே? உமக்குத் தெரியாதா?” என்று கேட்டார். “தெரியாதே! அது என்ன புகார்?” என்றான் சௌந்தரராகவன். “புரட்சி இயக்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஒரு மாதம் நீர் உம்முடைய வீட்டில் ஒளித்து வைத்திருந்தீராமே? அது உண்மையா?” “தாரிணியைப் பற்றிச் சொல்கிறீர்களாக்கும். அவள் புரட்சி இயக்கத்தைச் சேர்ந்தவள் என்பது கட்டுக்கதை. அவளை நான் என் வீட்டில் ஒளித்து வைத்திருக்கவும் இல்லை. சீதாவுக்கு உடம்பு ரொம்ப மோசமாயிருந்தபோது, கிட்ட இருந்து பணிவிடை செய்து அவள் உயிரைக் காப்பாற்றினாள். தாரிணி எவ்வளவு சாது! எவ்வளவு புத்திசாலி! என்பதுதான் உங்கள் புதல்விகளுக்குத் தெரியுமே?” என்றான் ராகவன். “சாதுவாயும் புத்திசாலியாயும் இருக்கலாம் அதனால் புரட்சிக்காரியாயிருக்கக் கூடாது என்று ஏற்படாது?” என்றாள் பாமா. “அப்படியே வைத்துக்கொண்டாலும் அதற்கு நான் எப்படி பொறுப்பாளி? அவள் புரட்சிக்காரி என்பது எனக்கு எப்படித் தெரியும்? அது போகட்டும் இந்தப் புதுடில்லியில் அசல் புரட்சி இயக்கத் தலைவர்கள் எவ்வளவு பெரிய உத்தியோகஸ்தர்களின் வீடுகளில் மறைந்திருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? கருணாவதிதேவி எங்கே ஒளிந்திருந்தாள்? சந்த்ரகாந்த் ஸின்னா யார் வீட்டில் மூன்று மாதம் ஒளிந்திருந்தான்? அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களை என்ன செய்து விட்டார்கள்? என் பேரில் மட்டும் புகார் சொல்லுவானேன்?” “அவர்கள் எல்லோரும் ரொம்பப் பெரிய பதவிகளில் உள்ளவர்கள். ஆகையால் யாரும் புகார் செய்யத் துணியமாட்டார்கள். உம்முடைய விஷயம் அப்படியில்லையே, ராகவன்! நீ உத்தியோகத்தில் பிரமோஷனை எதிர்பார்க்கிறவராயிற்றே!” “அதுமட்டுமல்ல, அப்பா! இவர் ஒரு புரட்சிக் காரியை ஒளித்து வைத்திருந்தார் என்று புகார். இவருடைய மனைவி சீதா ஒரு புரட்சிக்காரனுக்கு உதவி செய்வதாகப் புகார். இந்த ஊரிலிருந்து சென்னை மாகாணத்திற்குப் போன ஒரு கடிதத்தில் இவர் மனைவி சீதாவைப் பற்றிக் குறிப்பிட்டிருந்ததாம். அந்தக் கடிதம் சூரியா என்பவருக்கு எழுதப்பட்டதாம். நேற்று ஒரு பார்ட்டியில் ஒரு சி.ஐ.டி. உத்தியோகஸ்தர் என்னிடம் சீதாவையும் சூரியாவையும் பற்றி விசாரித்தார். அவர்களுக்குள் ஏதாவது உறவு உண்டா?” என்று பாமாதேவி கேட்டாள். “உறவு உண்டு, அவர்கள் அத்தங்காவும் அம்மாஞ்சியும் ஆகவேண்டும்” என்றான் ராகவன். “அப்படியானால் சரிதான்! அந்தப் போலீஸ் உத்தியோகஸ்தர் கொஞ்சம் விரஸமாகக் கூடப் பேசினார்….” “அது என்ன?” என்று ராகவன் பரபரப்புடன் கேட்டான். “அவர்கள் இரண்டு பேரும் ‘லவர்ஸ்’ (காதலர்கள்) என்பதாக ஏதேனும் வதந்தி உண்டா என்று கேட்டார். எனக்குச் சீதாவை நன்றாகத் தெரியுமாதலால் ‘அதெல்லாம் சுத்தப் பொய்; அவதூறு’ என்று சொல்லி, அந்த சி.ஐ.டி.காரர் தமது வார்த்தையை வாபஸ் வாங்கிக் கொள்ளும்படி செய்தேன்.” “நீங்கள் செய்தது ரொம்ப சரி ஆனாலும் அந்தச் சூரியா ஒரு காலிப் பயல் என்பது உண்மை. கொஞ்ச நாளைக்கு முன்பு சந்நியாசி வேஷம் போட்டுக்கொண்டு மதராஸில் என் தாயார் வீடு சென்று பார்த்தானாம். என்னென்னமோ அனாவசியமான கேள்வியெல்லாம் கேட்டானாம். அவன் மறுபடியும் என் கண்ணில் தென்பட்டால் போலீசாரிடம் ஒப்படைத்து விட்டு மறுகாரியம் பார்ப்பேன். அவன் பேரில் ஏதாவது அரெஸ்ட் வாரண்ட் இருக்கிறதா, உங்களுக்குத் தெரியுமா?” “தெரியாமல் என்ன? மதராஸ், பம்பாய், மத்திய மாகாணம் ஆக மூன்று மாகாணங்களில் அவன் பேரில் வாரண்ட் இருக்கிறதாம்!” “நல்ல காரியம்! சூரியாவைப் போன்றவர்களைச் சிறையிலே தள்ளினால் தேசத்துக்கே க்ஷேமம். சுதந்திர இயக்கம் தூய்மை அடையும்!” என்று ராகவன் சொல்லிக்கொண்டே டெலிபோன் அருகில் சென்றான். “இந்த நேரத்தில் யாருடன் டெலிபோன் பேசப் போகிறீர்கள்?” என்று பாமா கேட்டாள். “வீட்டில் என் மனைவி தூங்கிவிட்டாளா என்று தெரிந்து கொண்டு தான் நான் செல்வது வழக்கம். அவள் விழித்துக் கொண்டிருக்கும்போது சென்றால் தேள் கொட்டுவதுபோல் கொட்டி விடுவாள். இராத்திரியெல்லாம் இரண்டு பேருக்கும் சிவராத்திரிதான்!” என்றான் ராகவன். “ஐயோ! பாவம்! உங்களுடைய நிலைமை பரிதபிக்கத்தக்கது தான்” என்று சொன்னாள் பாமா. சௌந்தர ராகவன் டெலிபோனில் தன்னுடைய வீட்டு நம்பரைக் கூப்பிட்டான். அதற்குப் பதில் உடனே வந்தது. டெலிபோனில் பேசிய குரலைக் கேட்டதும் ராகவனுடைய முகத்தில் ஆச்சரியமும் ஆத்திரமும் பொங்கி கோரத்தாண்டவம் புரிந்தன. பன்னிரண்டாம் அத்தியாயம் - “சூரியா! போய்விடு!” டெலிபோனில் ராகவனுடைய குரலைக் கேட்ட அதே சமயத்தில் சீதாவின் முகத்தையும் சூரியா பார்த்தான். ஏதாவது தவறு நேர்ந்து விட்டதோ என்ற எண்ணத்தில் அவன் உள்ளம் குழம்பிற்று. ராகவன், “யார்? சூரியாவா?” எப்போது வந்தாய்!" என்று கேட்டதற்கு, “இன்றைக்குத் தான்!” என்று பதில் அளித்தான். “ஓகோ! நான் வருகிற வரையில் இருப்பாயல்லவா?” என்று ராகவன் கேட்டான். “ஆகா! இருக்கிறேன்!” என்றான் சூரியா. பிறகு, “அத்தங்கா! மாப்பிள்ளை பேசுகிறார்!” என்று சொல்லி டெலிபோன் ரிசீவரைச் சீதாவின் கையில் கொடுத்தான். ரிஸீவரைக் காதில் வைத்துக் கொண்டபோது சீதாவின் முகம் மேலும் பீதியைக் காட்டியது. ராகவன் என்ன கேட்டான் என்பது சூரியாவின் காதில் விழவில்லை. சீதா, “இல்லையே! இன்றைக்குத்தானே வந்திருக்கிறான்!” என்று சொன்ன போது அவள் கண்கள் கலங்கிக் கண்ணீர் துளித்ததைச் சூரியா பார்த்தான். பிறகு, “சரி, சரி இருக்கச் சொல்கிறேன்!” என்று சொல்லிவிட்டு டெலிபோன் ரிஸீவரை வைத்து விட்டாள். “அத்தங்கா! மாப்பிள்ளை என்ன சொன்னார்? எதற்காக உன் கண் இப்படி கலங்கியிருக்கிறது?” என்று சூரியா கவலையுடன் கேட்டான். சீதா சிறிது நேரம் எங்கேயோ பார்த்துக்கொண்டு சும்மா இருந்தாள். பிறகு திடீரென்று விம்மிக்கொண்டே, “சூரியா! நீ போய்விடு! உடனே போய்விடு!” என்றாள். “அத்தங்கா! இது என்ன? எதற்காக என்னைப் போகச் சொல்கிறாய்? மாப்பிள்ளை இருக்கச் சொல்லியிருக்கிறாரே?” என்றான் சூரியா. “அதனாலே தான் உன்னைப் போகச் சொல்கிறேன். என்னிடமும் உன்னை இருக்கப் பண்ணும்படிதான் சொன்னார். ஆனால் எனக்கு என்னமோ பயமாயிருக்கிறது. சூரியா! நீ இன்றைக்கு இங்கே இருந்தால் ஏதாவது அபாயம் நேரிடும் என்று தோன்றுகிறது போய்விடு!” “நான் அவசரப்பட்டுக்கொண்டு போனால்தான் அபாயம் வரும். அவர் இரு என்று சொல்லியிருக்கும்போது நான் போகலாமா? வீண் சந்தேகத்துக்கு இடமாகாதா?” “சந்தேகம் இனிமேல்தானா வரப்போகிறது? உனக்கு ஒன்றுமே தெரியவில்லை, சூரியா! பச்சைக் குழந்தையாய் இருக்கிறாய்! நம் இருவர் பேரிலும் தகாத சந்தேகம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. என்னை அவர் படுத்துவதெல்லாம் அதற்காகத் தான்.” “சுத்த மூடத்தனம்; என் பேரில் மாப்பிள்ளைக்குச் சந்தேகமாவது! அவர் இப்போது வரட்டும்; நேரிலே கேட்டு விடுகிறேன். அவருக்கு உன்னைக் கலியாணம் செய்து வைத்ததே நான் தானே?” என்றான் சூரியா. “நீதான்! நீ செய்த பெரிய தவறு அது தான்! நேரில் பார்த்துப் பேசுவதினால் அவருடைய சந்தேகத்தை நீ போக்கி விட முடியாது. ஏதாவது நீ பதில் சொன்னால் அவருடைய கோபம் அதிகமாகும். நீ இன்றைக்கு இங்கே இருந்தால் நிச்சயமாகக் கொலை விழும்! அந்தப் பாவத்துக்கு என்னை ஆளாக்காதே! தயவு செய்து போய்விடு! உன் காலில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன்!” சீதாவின் வெறி நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகமாகி வருவதைச் சூரியா கவனித்தான். ஆனாலும் அவனுக்குப் போக மனம் வரவில்லை. “சீதா! பதட்டம் வேண்டாம்! கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்! நான் இப்போது போய்விட்டால் அவருடைய சந்தேகத்தை உறுதிப் படுத்துவதுபோல் ஆகாதா?” என்றான். “உறுதிப்பட்டால் படட்டும் அவரையே தெய்வம் என்று நானெண்ணிக்கொண்டிருந்தும் எப்போது சந்தேகப்படுகிறாரோ, அப்போது அவருடைய சந்தேகத்தை உண்மையாக்கி விட்டால்தான் என்ன? அதனாலேயே என்னை எங்கேயாவது அழைத்துக் கொண்டு போகும்படி உன்னைக் கேட்டேன்; ஆனால் நீ பயங்கொள்ளி, கோழை, ஸ்திரீகளின் சுதந்திரத்தைப் பற்றி வாய் கிழியப் பேசுவாயே தவிர, அதற்காக ஒரு துரும்பு எடுத்துப் போடமாட்டாய். உன்னை நான் நம்பியிருக்கவும் இல்லை. ஒரு நாளைக்கு இவரை விட்டு விட்டு ஓடவே போகிறேன். உனக்குப் புண்ணியமாய்ப் போகட்டும்; என்னை வீண் கஷ்டத்துக்கு ஆளாக்காமல் உடனே போய்விடு. உன்னால் எனக்கு உபகாரம் இல்லாவிட்டாலும் அபகாரமாவது இல்லாமல் இருக்கட்டும்.” இனிமேல் தான் அங்கு இருந்தால் சீதாவின் இரத்த நரம்புகள் வெடித்து அவள் மூர்ச்சையாகி விடுவாள் என்று சூரியா பயந்தான். போய்விட வேண்டியதுதான்; ஆனால் அப்புறம் என்ன? சீதாவின் நிலையைப் பற்றி எப்படித் தெரிந்து கொள்வது? ஆம்; டெலிபோன் ஒன்று இருக்கிறதே! டெலிபோன் மூலம் நாளைக்கு விசாரித்துக் கொள்ளலாம். இன்றைக்கு ஒரு இராத்திரி நடக்கிறது நடக்கட்டும். நாளை தாரிணியுடன் யோசித்துக் கொண்டு சீதா விஷயமாக என்ன செய்கிறது என்று தீர்மானிக்கலாம். “சரி அத்தங்கா! நீ இவ்வளவு வற்புறுத்துகிறபடியால் நான் போகிறேன். அப்புறம் நாம் எப்போது சந்திப்பது? நாளைக்கு டெலிபோன் பண்ணட்டுமா?” “ஆமாம்; நாளைக்குப் பதினொரு மணிக்கு மேல் டெலிபோனில் பேசு எல்லாம் சொல்கிறேன்.” “அத்தங்கா! ஒரே ஒரு விஷயம் ஞாபகம் வைத்துக்கொள். உனக்கு உண்மையில் உதவி தேவையாயிருந்தால் நான் அதற்கு பின்வாங்க மாட்டேன். உன்னுடைய மனதைத் திடப்படுத்திக்கொண்டு சொல்லு. என்ன சொல்கிறாயோ, அந்தப்படி செய்யத் தயாராயிருக்கிறேன். உன்னுடைய க்ஷேமந்தான் எனக்குப் பெரிது; தேச விடுதலை கூட அப்புறந்தான்!” என்றான் சூரியா. இப்படிச் சூரியா சொன்னபோது அவனுடைய மனதில் உண்மையாக எண்ணியதையே சொன்னதாகக் கூற முடியாது. அவசரப்பட்டுச் சீதா ஏதாவது செய்துவிடக் கூடாதே என்ற எண்ணத்தினால் அவளைத் தைரியப்படுத்துவதற்காகவே சொன்னான்.ஆனால் சீதா, சூரியா சொன்னதை நூற்றுக்கு நூறு பங்கு உண்மையாகவே எடுத்துக்கொண்டு, “ரொம்ப வந்தனம், அம்மாஞ்சி! அபாய காலத்தில் உன்னுடைய உதவியைக் கோரும்படி அம்மா எனக்குச் சொல்லியிருந்தாள்; அவளுடைய வாக்கு வீண் போகவில்லை.நாளைக்கு மத்தியானத்துக்கு மேலே டெலிபோனில் பேசு. நானும் அதற்குள் நன்றாக யோசித்து வைக்கிறேன். அவசரப்பட்டு ஒரு காரியத்தைச் செய்தோம் என்ற பெயர் வேண்டாம். இல்லாவிட்டால் இப்போதே என்னை அழைத்துக்கொண்டு போகும்படி சொல்லியிருப்பேன்!” என்றாள் சீதா. சூரியா புறப்பட எழுந்தான் சீதாவிடமிருந்து எடுத்துக் கொண்ட கைத்துப்பாக்கியை முன்னமேயே கால்சட்டையின் பைக்குள் போட்டுக் கொண்டிருந்தான். ‘இந்தப் பித்துக்குளிகளின் வீட்டில் துப்பாக்கி இருப்பது ஆபத்து. நம்மிடம் இருந்தால் ஒரு சமயம் பயன்படும்’ என்று முடிவு செய்திருந்தான். அதன்படி கைத்துப்பாக்கியுடன் கிளம்பிச் செல்ல ஆயத்தமானான். அப்போது வாசலில் ‘பாம்’ ‘பாம்’ என்ற சத்தம் கேட்டது. மோட்டார் கார் ‘விர்’ என்று வேகமாக வந்து வீட்டு வாசலில் நின்றது சீதாவும் சூரியாவும் திகைத்து நின்றார்கள். ராகவன் வண்டியை வீட்டு முகப்பில் நிறுத்திவிட்டு இறங்கி ‘விடுவிடு’ என்று உள்ளே வந்தான். சூரியாவையும் சீதாவையும் மாற்றி மாற்றி வெறித்துப் பார்த்தான். அவன் உள்ளத்தில் குடிகொண்டிருந்த குரோதம் அவனுடைய பார்வையில் ஒருவாறு தெரிந்தது. ஆனால் வாய் வார்த்தையில் குரோதத்தைக் காட்டிக் கொள்ளாமல், “என்ன சூரியா? புறப்படத் தயாராக நிற்கிறாய் போலிருக்கிறதே?” என்றான். “ஆமாம், மாப்பிள்ளை! போக வேண்டும் மணி பன்னிரண்டரை ஆகிவிட்டதல்லவா? நீங்கள் வந்ததும் புறப்படலாம் என்று காத்துக் கொண்டிருந்தேன்” என்றான் சூரியா. “அதென்ன இத்தனை நேரம் கழித்து எங்கே போவாய்? பெரிய ‘நைட் பர்ட்’ (இராத்திரி சஞ்சாரப் பறவை) ஆகிவிட்டாய் போலிருக்கிறதே!” “நீங்களும் என் தோழனாகத் தான் இருக்கிறீர்கள். இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் வீட்டுக்கு வந்திருக்கிறீர்களே?” என்று சூர்யா கொஞ்சம் துடுக்காகப் பதில் சொல்லி ராகவனுடைய கோபத்தைக் கிளறிவிட்டான். “நான் ஓரிடத்தில் மிக முக்கியமான வேலையாகப் போக வேண்டியிருந்தது.” “நானும் முக்கிய வேலையாகத் தான் போகவேண்டியிருக்கிறது. இன்று இராத்திரி சில சிநேகிதர்களைச் சந்திப்ப தாகச் சொல்லியிருக்கிறேன்.” “அழகுதான்! இத்தனை நேரம் கழித்துச் சிநேகிதர்களைச் சந்திக்கவாவது! சந்தித்து? என்ன செய்வீர்கள் எங்கேயாவது கொள்ளையடிக்கப் போகிறீர்களா, என்ன?” “கொள்ளையடிக்கப் போகிறவர்களும் இராத்திரியில் போவார்கள்; அவர்களைப் பிடிக்கப் போகிறவர்களும் இராத்திரியிலே தான் போய் ஆக வேண்டும்? இந்தியா தேசத்தைக் கவர்ந்த கொள்ளைக்காரர்களைத் துரத்தியடிக்கும் கைங்கரியத்தில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம் உங்களுக்குத் தெரியாதா, மாப்பிள்ளை?”எனக்கு எப்படித் தெரியும்? உன் அத்தங்காளுக்கு ஒருவேளை தெரிந்திருக்கலாம். அவளை நீ அடிக்கடி வந்து பார்த்து விட்டுப் போகிறாய் அல்லவா…!" “அடிக்கடி நான் வந்து பார்ப்பதில்லையே? மூன்று மாதத்துக்கு முன்னால் ஒரு தடவை வந்திருந்தேன். அப்போது நீங்கள் வெளியூருக்கு போயிருந்தீர்கள், உங்கள் தாயார் இருந்தார் அவரைத் தரிசித்து விட்டுப் போனேன்.” “அது கிடக்கட்டும், அப்பா! இப்போது நீ எங்கெங்கேயோ போய்விட்டு வந்தாயாம். மதராஸுக்குக் கூடப் போயிருந் தாயாம். அவ்விடத்து விஷயங்கள் எல்லாம் உன்னிடம் தெரிந்து கொள்ளலாம் என்றல்லவா இவ்வளவு அவசரமாக ஓடி வந்தேன்? நீ போக வேண்டும் என்கிறாயே? இராத்திரி இங்கே தங்கியிருந்துவிட்டுக் காலையில் போகக்கூடாதா?” “இல்லை ஸார்! நான் அவசியம் இப்போதே போக வேண்டும். மதராஸில் உங்கள் தாயாரையும் குழந்தையையும் பார்த்தேன். குழந்தை இங்கே வரவேண்டும் என்று ஆசைப்பட்டாள். ஆனால் வழியில் எனக்குப் பல ஜோலிகள் இருந்தபடியால் அவளை நான் அழைத்து வரவில்லை. மற்ற விவரங்கள் எல்லாம் இன்னொரு நாள் சாவகாசமாகச் சொல்லுகிறேன்.”இன்னொரு நாள் என்றால் என்றைக்கு?" என்று ராகவன் கேட்டான். “சௌகரியப்பட்டால் நாளைக்கே வருகிறேன்; இல்லாவிட்டால் மறுநாள் வருகிறேன். என்னுடைய பிரயாண விவரங்கள், அனுபவங்கள் எல்லாம் சொல்கிறேன்.” “சரி; அப்படியானால் போய் வா! நாளைக்கு வருகிறதாயிருந்தாலும் இரவிலே தான் வருவாயாக்கும்!” “ஆமாம்; போலீஸ்காரர் கண்ணுக்குப் படாமல் வருவதாயிருந்தால் இராத்திரியில் தான் வரவேண்டியிருக்கிறது. என்னுடைய காரியங்கள் சம்பந்தமாக உங்களுக்குத் தொந்தரவு எதுவும் விளைவதை நான் விரும்பவில்லை. சர்க்கார் உத்தியோகத்தில் இருக்கிறீர்கள் அல்லவா? அதுவும் சாமானிய உத்தியோகமா?” “ஓஹோ! அவ்வளவு தயவு என் பேரில் வைத்திருக்கிறாயா? போகட்டும்! ராஜம்பேட்டை கிட்டாவய்யர் குமாரன் தலையில் இப்படியா எழுதியிருக்க வேண்டும்?” “என் தலையில் எப்படி எழுதியிருக்கிறது; எதைப் பற்றிச் சொல்கிறீர்கள்!” “இப்படிப் போலீஸ்காரர்களுக்குப் பயந்து திருடனைப் போல் இராத்திரியில் ஒளிந்து திரிய வேண்டியிருப்பதைப் பற்றித் தான். இருக்கட்டும், சூரியா! உன்னுடைய சிநேகிதி தாரிணி எங்கே இருக்கிறாள்? அவளை நீ பார்ப்பதுண்டா?” சூரியா சீதாவின் முகத்தைப் பார்த்தான் அவளுடைய முகம் கொடூரமாவதைக் கவனித்தான். “தாரிணி இந்த ஊரிலேதான் இருக்கிறாள் என்று நினைக்கிறேன். ஒருவேளை பார்த்தாலும் பார்ப்பேன் ஆனால் நிச்சயம் சொல்வதற்கில்லை.” “பார்த்தால் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது என்றும் அவளை நான் சந்திக்க விரும்புவதாயும் சொல்லு; அவளுடைய இருப்பிடம் உனக்குத் தெரியுமா?” “பழைய இருப்பிடம் தெரியும் ஆனால் இப்போது தாரிணி அங்கே இல்லை. வேறு ஜாகைக்கு மாற்றிக்கொண்டு போயிருக்கிறாளாம்.” "பழைய ஜாகை எனக்குத் தெரியும்; புது இடம் தெரியாது. ஒரு நாள் பழைய டில்லியில் ஜும்மா மசூதிக்குப் பக்கம் நான் போய்க்கொண்டி ருந்தபோது தாரிணி மாதிரி ஒருத்தி போவது தெரிந்தது. அவளே தான் என்று நினைத்துப் பார்த்துப் பேசுவதற்காகப் போனேன். திடீரென்று அவள் குறுகலான சந்து ஒன்றில் புகுந்து அவசரமாகச் சென்று அங்கே ஒரு வீட்டுக்குள் புகுந்தாள். எப்படியும் அவளைப் பார்த்துவிடுவது என்று வீட்டுக் கதவை இடித்தேன். அந்த வீதி துருக்க வீதி போலிருக்கிறது. நூறு முஸ்லீம்கள் வந்து என்னைச் சூழ்ந்து கொண்டு சண்டைக்கு வந்துவிட்டார்கள். அவர்களிடமிருந்து தப்பி வருவது பெரும் பாடாகி விட்டது சூரியா! முதலில் நீங்கள் இந்த நாட்டிலிருந்து துருக்கர்களை ஒழித்துக்கட்ட வேண்டும். இல்லா விட்டால் நம் இந்திய தேசம் உருப்படப் போவதில்லை.“நாங்கள் அப்படி நினைக்கவில்லை; முஸ்லிம்கள் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள்; நம் சகோதரர்கள் அவர்களை எப்படி ஒழித்துக் கட்ட முடியும்? வெள்ளைக்காரர்களை அடித்து விரட்டி விட்டால், அப்புறம்…” “அப்புறம் நீங்கள் வைத்ததுதான் சட்டமாயிருக்கும் அரசாங்கமே உங்கள் கையில் வந்துவிடும்.” “அது எனக்குத் தெரியாது, மாப்பிள்ளை! சுதந்திரப் போரில் நாங்கள் எல்லாம் உயிர் துறக்க நேரிட்டாலும் நேரிடலாம். ஆனால் ஒன்று நிச்சயம் இந்த நாட்டு ஜனங்களின் பிரதிநிதிகள் இந்தியாவைக் கூடிய சீக்கிரம் ஆளப் போகிறார்கள். நேரமாகிவிட்டது; நான் போய் வருகிறேன்” என்று சொல்லி விட்டுச் சூரியா புறப்பட்டுச் சென்றான். அவன் போவதைப் பொருட்படுத்தாமல் ராகவன் சோபாவில் உட்கார்ந்தபடி இருந்தான். ஆனால் சீதா சூரியாவின் பின்னோடு வாசல் வரையில் போனாள். வாசற்படிக்கு அருகில் வந்ததும், “சூரியா! என் தலை மேல் ஆணை! நாளைக்குக் கட்டாயம் எனக்கு டெலிபோன் பண்ணு!” என்று மெதுவான குரலில் கூறினாள். “சரி, அத்தங்கா!” என்றான் சூரியா. பதின்மூன்றாம் அத்தியாயம் - “பதிவிரதையானால்…?” வாசல் வரையில் சூரியாவைக் கொண்டு போய் விட்டு விட்டுச் சீதா திரும்பி உள்ளே வந்தாள். உட்கார்ந்திருந்த ராகவன் ஆக்ரோஷத்தோடு எழுந்து நிற்பதைக் கண்டாள். “அவனிடம் என்னடி இரகசியம் பேசினாய்?” என்று ராகவன் கண்களில் தீப்பொறி பறக்கக் கேட்டான். இன்னது சொல்கிறோம் என்பதை நன்கு உணராமலேயே “நான் என்ன பேசினால் உங்களுக்கு என்ன?” என்றாள் சீதா. “என்ன சொன்னாய்?… எனக்கு என்னவா?” என்று சொல்லி ராகவன் சீதாவின் கன்னத்தில் பளீரென்று அறைந்தான். சீதா பல்லைக் கடித்து வலியைப் பொறுத்துக் கொண்டு, “இவ்வளவுதானா? இன்னொரு கன்னம் பாக்கி இருக்கிறது!” என்றாள். “ஓகோ அப்படியா? காந்தி மகாத்மாவின் சிஷ்யை ஆகிவிட்டாயாக்கும்! இந்தா! வாங்கிக்கொள்!?” என்று இன்னொரு கன்னத்திலும் அறைந்தான். சீதா அவனை வெறிக்கப் பார்த்துவிட்டுச் சமையலறையை நோக்கிப் போனாள். “எங்கே அவசரமாய்ப் போகிறாய்? இங்கே வா! கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டுப் போ!” என்று ராகவன் கத்தினான். சமையல் உள்ளேயிருந்த டம்ளரில் ஓவல்டின் எடுத்துக் கொண்டு வந்து மேஜை மீது வைத்தாள். “வெறும் ஓவல்டினா? அல்லது விஷத்தைக் கலந்து கொண்டு வந்தாயா?” என்று ராகவன் கேட்டான். “ஆமாம்!” என்றாள் சீதா. “அப்படியானால் நீயே சாப்பிடு…! வேண்டாம்; உனக்கும் இந்த உலகத்தில் வேலை கொஞ்சம் பாக்கியிருக்கிறது. இவ்வளவு சீக்கிரத்தில் உலகத்தை விட்டுப் போய்விடாதே!” என்று சொல்லிக்கொண்டே ராகவன் டம்ளரைக் கையிலெடுத்து அதிலிருந்த ஓவல்டின் பானத்தை ஜன்னல் வழியாக வீசிக் கொட்டினான். “இப்பேர்ப்பட்ட கொலை பாதகியை வீட்டில் வைத்துக் கொண்டு நீங்கள் கஷ்டப்பட வேண்டாம். நாளைக்கு நான் புறப்பட்டுப் போய்விடுகிறேன்” என்றாள் சீதா. “எங்கே போவதாக உத்தேசம்?” என்றான் ராகவன். “போகிறவள் எங்கே போனால் உங்களுக்கு என்ன? நீங்கள் ஏன் கேட்க வேண்டும்?” என்றாள் சீதா. “உனக்கு நான் தாலி கட்டிய புருஷனா யிருக்கிறபடியால் தான் கேட்டேன். முன்னே நான் போகச் சொன்னபோதெல்லாம் ‘போகமாட்டேன்’ என்று பிடிவாதம் பிடித்தாய். இப்போது நாளைக்கே போகிறேன் என்கிறாயே? எங்கே போவதாக உத்தேசம்? யாருடன் போவதாக உத்தேசம்? சூரியாவுடனா?” “சூரியா அழைத்துக்கொண்டு போனால் அவனுடன் போகிறேன்; இல்லாவிட்டால் தனியாகப் போகிறேன்” என்றாள் சீதா. “சூரியா உன்னை எங்கே அழைத்துப் போகப் போகிறான்! அவன்தான் நித்திய கண்டம் பூரணாயுசாகப் போலீஸுக்குப் பயந்து ஒளிந்து திரிகிறானே! நீ தனியாகத் தான் போகும்படி இருக்கும், எந்த ஊருக்குப் போகப் போகிறாய்?” “எங்கேயாவது தொலைந்து போகிறேன்; நீங்கள்தான் வாய் ஓயாமல் தொலைந்து போ என்கிறீர்களே?” “இப்போதும் அதைத்தான் சொல்கிறேன், திவ்யமாய்த் தொலைந்து போ! போவதற்கு முன்னால் நான் கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிவிட்டுப் போ!” “தொலைந்து போகப் போகிறவளிடம் கேள்வி என்ன கேட்பது? பதில் என்ன சொல்வது?” “பதில் சொல்லத்தான் வேண்டும் உன்னையும் சூரியாவையும் பற்றி எனக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.” “என்ன சந்தேகம்?” “என்ன சந்தேகமா? உங்களுடைய நடத்தையைப் பற்றிய சந்தேகந்தான்.” “ரொம்ப சந்தோஷம்.” “சந்தோஷமா?” என்று சொல்லி ராகவன் சீதாவின் ஒரே கன்னத்தில் இன்னும் இரண்டு பலமான அறை கொடுத்தான். சீதா அவ்விடமிருந்து நகரவும் இல்லை; கண்ணீர் விடவும் இல்லை; முகத்தைச் சுருக்கக்கூட இல்லை. “ரொம்ப சந்தோஷம் என்னை ஒரே அடியாக அடித்துக் கொன்று விடுங்கள்!” என்றாள். “எதற்காக உன்னைக் கொல்ல வேண்டும் என்கிறாய்?” என்றான் ராகவன். “கொன்று விட்டால் நாளைக்கு நான் ஓடிப் போக வேண்டிய அவசியமிராது” என்றாள் சீதா. “உன் மனதில் ஏதோ களங்கம் இருக்கிறது. குற்றமுள்ள நெஞ்சு அடித்துக் கொள்கிறது ஆகையால் தான் ‘ஓடிப் போகிறேன்’ என்று சொல்கிறாய்.” “என் மனதில் களங்கமும் இல்லை; நெஞ்சில் குற்றமும் இல்லை.” “பின் எதற்காக ‘ஓடிப் போகிறேன்’ என்கிறாய்? கட்டிய புருஷனை விட்டு விட்டு ஏன் ஓடவேண்டும்?” “உங்களுடைய மனது வேற்றுமைப்பட்டுவிட்டது. இனிமேல் நமக்குள் ஒட்டாது மனது ஒட்டாதவர்கள் எப்படிச் சேர்ந்து வாழ முடியும்?” “என் மனது வேற்றுமைப்பட்டுவிட்டது என்றால், அதற்குக் காரணம் உன்னுடைய நடத்தை தான். நான் இல்லாத சமயம் பார்த்து சூரியா எதற்காக உன்னைப் பார்க்க வருகிறான்? இதோ பார்! நீ உண்மையில் பதிவிரதையாக இருந்தால்…?” “பதிவிரதையாக இருந்தால்..? கடவுளே! இது என்ன விசித்திர உலகம்?” என்றாள் சீதா. “மாயா உலகத்தைப் பற்றிய வேதாந்தப் பேச்செல்லாம் அப்புறம் இருக்கட்டும். நீ பதிவிரதையாயிருந்தால் நான் இப்போது சொல்லப் போகிறதைச் செய்ய வேண்டும் செய்வாயா?” என்றான் ராகவன். சீதா மௌனமாக இருந்தாள். “நான் சொல்வதைச் செய்வாயா, மாட்டாயா? சொல்லு பதில்!” என்று ராகவன் அதட்டினான். “இன்ன காரியம் என்று தெரியப்படுத் தினால், என்னால் முடியும் முடியாது என்று சொல்லுகிறேன்!” “காரியத்தை முதலில் சொல்ல முடியாது நான் எது சொன்னாலும் நீ செய்யத் தயாராயிருக்க வேண்டும். இல்லாவிட்டால், இந்த வீட்டை விட்டு நடந்து விட வேண்டும்.” “நான்தான் போகத் தயார் என்று சொல்லிவிட்டேனே? இந்த நிமிஷமே வேண்டுமானாலும் கிளம்பி விடுகிறேன்.” “ஆனால் நான் சொன்னதை மட்டும் செய்ய மாட்டாயாக்கும்?” “இன்ன காரியம் என்று சொல்லாமல் எப்படிச் செய்வதாக ஒப்புக்கொள்ள முடியும்?” “ஏன் முடியாது? புருஷன் சொல்வது எதுவானாலும் செய்ய வேண்டியது மனைவியின் கடமையல்லவா?” “அன்யோன்ய தம்பதிகளாயிருந்தால் சரிதான் ஆனால் உங்கள் மனம் பேதலித்துவிட்டது. என் பேரில் உங்களுக்குச் சந்தேகம்; உங்கள் பேரில் எனக்குச் சந்தேகம். அப்படியிருக்கும் போது காரியம் இன்னதென்று தெரியாமல் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?” “என் பேரில் உனக்குச் சந்தேகமா? அழகாய்த்தானிருக்கிறது. அப்படியே இருக்கட்டும்; நீ செய்ய வேண்டியதைச் சொல்கிறது. இப்போதே - இந்த நிமிஷமே போலீஸ் ஸ்டேஷனை நீ டெலிபோனில் கூப்பிட்டு, சூரியா இங்கு வந்து விட்டுப் போனதை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.” “ஒரு நாளும் மாட்டேன்.” “ஏன் மாட்டாய்? சூரியா பேரில் உனக்கு என்ன அத்தனை கரிசனம்?” “சூரியா என்னுடைய மாமாவின் பிள்ளை. நம் இருவருக்கும் கலியாணம் பண்ணி வைத்ததே அவன்தான். இப்போது சூரியா தேச விடுதலைக்காகப் பாடுபட்டு வருகிறான். என்னிடமும் உங்களிடமும் நம்பிக்கை வைத்து, நாம் காட்டிக் கொடுக்க மாட்டோ ம் என்று உறுதியாக நம்பி, அவன் என்னைப் பார்க்க வந்தான். அவனைப் போலீஸுக்குக் காட்டிக் கொடுப்பது துரோகம்; மகா பாவம்.” “உன்னுடைய அம்மாஞ்சி சூரியாவினால் எனக்குப் பெரிய ஆபத்து வந்திருக்கிறது. புரட்சி வேலைகளில் அவன் ஈடுபட்டவன். அப்படியிருந்தும் சர்க்கார் உத்தியோகஸ்தனாகிய என் வீட்டுக்கு அவன் வந்தது பெரும் பிசகு. அதனால் எனக்கு உத்தியோகத்தில் பிரமோஷன் தடைப்பட்டு விட்டது. எனக்குக் கீழே இருந்தவர்கள் எல்லாரும் எனக்கு மேலே போய் விட்டார்கள். இன்றைக்குத் தகவலாவது கொடுக்காவிட்டால், என்னுடைய உத்தியோகம் போய்விடும்.” “போனால் போகட்டும், உத்தியோகத்துக்காகச் சிநேகிதத் துரோகமான இந்தக் காரியம் செய்ய வேண்டாம். நான் வீடு வீடாகப் பிச்சை எடுத்தாவது ஏதோ கொண்டு வருகிறேன்.” “சீ! நாயே! உன்னுடைய பிச்சைக் காசை எதிர்பார்த்து நான் ஜீவிக்க வேண்டுமாக்கும்! அதெல்லாம் முடியாது. உன்னுடைய மூடத்தனத்துக்காக இரண்டாயிரம் ரூபாய் சம்பளமுள்ள உத்தியோகத்தை விட்டுவிடச் சொல்கிறாயா? ஒரு நாளும் மாட்டேன். இந்தச் சங்கடம் குறுக்கிடாவிடில் சீக்கிரத்தில் இன்னும் பெரிய உத்தியோகம் எனக்குக் கிடைக்கும். மாதம் மூவாயிரம் நாலாயிரம் சம்பளம் வரும். அதையெல்லாம் விட்டு விடச் சொல்கிறாயா? உன்னுடைய புத்தி உலக்கைக் கொழுந்துதான்.” “அப்படியே இருக்கட்டும் ஆனால் நான் போலீஸுக்கு ஒரு நாளும் தகவல் சொல்லமாட்டேன்; அதைக் காட்டிலும் உயிரையே விட்டு விடுவேன்.” “எனக்குத் தான் தெரியுமே? உன்னுடைய யோக்கியதை வெளியாகட்டும் என்று உன்னை ‘டெலிபோன்’ பண்ணச் சொன்னேன் வெளியாகிவிட்டது. இங்கே நிற்காதே! போ! தொலை!” என்று சீதாவின் கழுத்தைப் பிடித்துப் படுக்கை அறைப் பக்கமாக அவளை ராகவன் தள்ளினான்! சீதா படுக்கையறைக்குள் சென்று படுத்துக் கொண்டாள். கண்களில் ஒரு சொட்டு ஜலம் கூட வரவில்லை. கன்னத்தில் கணவன் அடித்த இடத்தில் விண் விண் என்று தெறித்துக் கொண்டிருந்தது. இன்று நடந்ததெல்லாம் உண்மையா அல்லது தூங்கும்போது கனவு கண்டோ மா என்று வியந்தாள். ராகவன் இருந்த அறையில் டெலிபோன் கருவியை ‘டயல்’ செய்யும் சத்தம் கேட்டது. உடனே சீதாவின் காதுகள் கூர்மையாயின; அவளது உள்ளம் ஒருமுகப்பட்டது. “ஹலோ! போலீஸ் ஸ்டேஷனா?” என்று ராகவனுடைய குரல் காதில் கேட்டதும் சீதா பளிச்சென்று எழுந்து ஓடி வந்தாள். டெலிபோன் ரிஸீவரை வைத்திருந்த ராகவன் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, “யாருக்கு டெலிபோன் செய்கிறீர்கள்?” என்று கேட்டாள். கோபத்தினால் முகம் கறுத்துக் கண்கள் சிவந்து கொடூரமாய் விழித்த ராகவன், “உனக்கு என்ன அதைப்பற்றி?” என்றான். “எனக்கு ஏன் சம்பந்தம் இல்லை? நீங்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன் பண்ணப் போகிறீர்கள் சூரியாவைப் பற்றி. அதற்கு நான் ஒருநாளும் விடமாட்டேன். என்னைக் கொன்றுவிட்டு டெலிபோன் செய்யுங்கள்” என்றாள் சீதா. “நாளைக்கு நான் ஆபீஸிலிருந்து டெலிபோன் பண்ணினால் என்ன செய்வாய்?” என்றான் ராகவன். “அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை என் காதில் விழாதிருந்தால் சரி” என்றாள் சீதா. “சூரியாவிடம் உனக்கு என்ன அவ்வளவு அக்கறை? உனக்கும் அவனுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை, என்று சொன்னாயே!” “அப்படி நான் சொல்லவில்லை இந்த உலகத்திலேயே சூரியா ஒருவன் தான் என் பேரில் அபிமானம் உள்ளவன். எனக்காக எது வேணுமானாலும் செய்யத் தயாராயிருப்பவன். அவனை நீங்கள் காட்டிக் கொடுப்பதை நான் எப்படிப் பார்த்துக் கொண் டிருக்க முடியும்?” என்று சீதா கேட்டாள். “அடி பாதகி! சூரியாவின் மோகம் உன்னை எவ்வளவு தூரம் பைத்தியமாக்கி யிருக்கிறது என்று இப்போதல்லவா தெரிகிறது?” “ரொம்ப சந்தோஷம்.” “என்னடி சந்தோஷம்? என்ன சந்தோஷம்?” என்று சொல்லிக்கொண்டு கையை ஓங்கினான் ராகவன். “இவ்வளவு படுபாதகமான விஷயத்தைச் சொல்லியும் உங்கள் நாக்கு அறுந்து விழாதது பற்றிச் சந்தோஷம்.” “என் நாக்கு அறுந்து விழவேண்டுமா? சாபம் வேறு கொடுக்கிறாயா?” என்று சொல்லிக்கொண்டே மிதமிஞ்சிய கோபாக்கிரந்தனாகியிருந்த ராகவன், டெலிபோன் ரிஸீவரை வைத்திருந்த கையினாலேயே ஓங்கி ஒரு அடி அடித்தான். அந்த அடி சீதாவின் காதின் மேல் விழுந்தது. அவ்வளவுதான்; சீதாவின் முகத்தில் திடீரென்று ஒரு மாறுதல் ஏற்பட்டது; கண்களில் நீர் ததும்பிற்று. அடித்த காதைக் கையினால் பொத்திக் கொண்டாள். “அம்மா! அம்மா! அலை ஓசை கேட்கிறதே! அம்மா! என்னை அழைத்துக் கொண்டு போ அம்மா!” என்று விம்மலும் அழுகையுமாகக் கதறினாள். முகத்திலும் கண்களிலும் வெறி தாண்டவமாடியது! சீதாவுக்கு ‘ஹிஸ்டீரியா’ வந்துவிட்டது என்று ராகவன் உணர்ந்தான். உடனே அவளை மெதுவாகப் பிடித்து சோபாவில் உட்கார வைத்தான். தானும் பக்கத்தில் உட்கார்ந்தான், “வேண்டாம் சீதா! வேண்டாம்? நான் உன்னைச் சோதனையல்லவா செய்தேன்? உண்மையென்று நினைத்துக்கொண்டாயா?” என்று சாந்தமான குரலில் பேசிக் கொண்டே முதுகிலே இலேசாகத் தடவிக்கொடுத்துக் கொண்டிருந்தான். சற்று நேரத்துக்கெல்லாம் சீதா சோபாவில் குப்புறப் படுத்துக் கொண்டாள். விம்மலும் அழுகையும் நின்றன சீதா நித்திரையில் ஆழ்ந்து விட்டாள். வீட்டுக்கு வெளியிலே சென்ற சூரியா, காம்பவுண்டு கேட்டின் கதவைத் திறந்து மூடிவிட்டு, மறுபடியும் தோட்டத் துக்குள் நுழைந்து வீட்டின் ஒரு ஓரமாகச் செடிகள் மரங்களின் மறைவில் சத்தமின்றி நடந்து வந்தான். ராகவனும் சீதாவும் இருந்த அறையின் ஜன்னலுக்கு அருகில் மறைவாக நின்று நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்தான். பேசிய விஷயங்கள் எல்லாம் நன்றாகக் காதில் விழவில்லை. ஆனால் கண்கள் எல்லாவற்றையும் நன்கு பார்த்தன. ராகவன் டெலிபோன் கட்டையால் சீதாவை அடித்ததையும் அவள், “அம்மா! அம்மா!” என்று அலறியதையும் பார்த்த பிறகு சூரியாவால் பொறுக்க முடியவில்லை. கைத்துப்பாக்கியை எடுத்துச் சுட்டு விடலாமா என்று ஒரு கணம் நினைத்தான். ஆனால் அது தவறு என்றும் பல முக்கியமான காரியங்கள் பாக்கி இருப்பதால் இன்னும் ஒரு நாள் பொறுத்திருக்க வேண்டும் என்றும் தீர்மானித்தான். அடுத்த காட்சியையும் பார்த்துவிட்டுச் சூரியா அங்கிருந்து நடையைக் கட்டினான். நள்ளிரவுக்குப் பிற்பட்ட பின்னிரவில் பழைய டில்லி நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த சூரியாவின் உள்ளம் அன்று வரை இல்லாத மாதிரிக் கொந்தளித்தது. “தேசம் எப்படி போனால் என்ன? சுதந்திரம் எக்கேடு கெட்டால் என்ன? தேசத்தையும் சுதந்திரத்தையும் கவனிக்க எத்தனையோ பேர், ஆனால் சீதா அனாதை, திக்கற்றவள். அவளைச் சந்தோஷமாக வைப்பதுதான் என்னுடைய முதல் கடமை. அந்தக் கடமையை எப்படி நிறைவேற்றுவது? நாளைக்குத் தாரிணியைக் கேட்டுக்கொண்டு தீர்மானிக்க வேண்டும். அதுவரையில், பாவம் அந்த ராட்சதனிடம் அகப்பட்டுக் கொண்ட என் அத்தங்காள் உயிரோடு இருக்க வேண்டுமே!” இத்தகைய சிந்தனையில் ஆழ்ந்த வண்ணம் சூரியா நடந்தான். போக வேண்டிய இடம் போய்ச் சேர்ந்து படுத்துக்கொண்ட பிறகும் தூக்கம் வந்தபாடில்லை அன்று அவனுக்குச் சிவராத்திரியாயிற்று. பதினான்காம் அத்தியாயம் - இருண்ட மண்டபம் மறுநாள் மாலை நேரத்தில் சூரியா மீண்டும் வெள்ளி வீதியின் வழியாகப் போய்க்கொண்டிருந்தான். அவன் உள்ளம் பெரிதும் கலக்கமடைந்திருந்தது. முதல் நாள் இரவு உறக்கம் இல்லாமையும் மனதில் அமைதி இல்லாமையும் முகத்தில் நன்றாகத் தெரிந்தன. அன்று காலை பதினோரு மணிக்குச் சூரியா சீதாவுக்கு டெலிபோன் செய்தான். இரண்டு தடவை டெலிபோனில் வேறு யாரோ பேசிக் கொண்டிருந்தபடியால் கிடைக்கவில்லை. மூன்றாவது தடவை சீதாவின் குரல் கேட்டது. “சூரியா! சற்று முன்னால் நீ என்னைக் கூப்பிட்டுப் பேசினாயா?” என்றாள் சீதா. “இரண்டு தடவை கூப்பிட்டேன்; ஆனால் நீ கிடைக்கவில்லை?” என்றான் சூரியா. “அரைமணிக்கு முன்னால் டெலிபோன் மணி அடித்தது. நீயாகத் தான் இருக்கும் என்று எடுத்தேன். ஆனாலும் முன் ஜாக்கிரதையாக ‘யார்?’ என்று கேட்டேன். ‘நான்தான் சூரியா! எப்போது சந்திக்கலாம்’? என்று குரல் கேட்டது. அது உன் குரல் இல்லையென்று சந்தேகித்து டெலிபோனை வைத்து விட்டேன். இதைப்பற்றி என்ன நினைக்கிறாய்?” என்றாள் சீதா. “ஆச்சரியமாக இருக்கிறதே! அப்படி யார் கேட்டிருப்பார்கள்? எதற்காக? எனக்கு ஒன்றுமே தெரியவில்லையே? ஒருவேளை உன் அகத்துக்காரர் தானோ என்னமோ?” என்றான் சூரியா. “இல்லை; என் அகத்துக்காரர் குரல் இல்லை; இருந்தால் எனக்கு உடனே தெரிந்திருக்கும். அது போனாற் போகட்டும்; நான் இன்றைக்கு உன்னை அவசியம் சந்திக்க வேண்டும். எங்கே எப்போது சந்திக்கலாம்?” என்று சீதா பரபரப்புடன் கேட்டாள். “எங்கே சந்திக்கிறது? சந்தித்தால் உன் வீட்டில் தான் சந்திக்க வேண்டும். இரண்டு நாள் கழித்து வருகிறேன்!” என்றான் சூரியா. “முடியாது! முடியாது! இன்றைக்கு என்னைப் பார்க்காவிட்டால் அப்புறம் என்னை உயிருடன் பார்க்க மாட்டாய். இங்கே நீ வரவேண்டியதும் இல்லை வந்தால் பெரிய ஆபத்தாக முடியும். நான் பழைய டில்லிக்கு வந்து உன்னைப் பார்க்கிறேன்?” “இது என்ன யோசனை, சீதா! நீ தனியாகப் புறப்பட்டு வருவாயா? அவருக்குத் தெரியாமல் இருக்குமா? அப்படித் தெரிந்தால் ஏற்கெனவே வீண் சந்தேகப்படுகிறவர்…” “யார் என்ன சந்தேகப்பட்டாலும் சரிதான், இன்று சாயங்காலம் உன்னை நான் பார்த்தேயாக வேண்டும். இவருக்கு இன்றைக்குப் பார்ட்டி இருக்கிறது. நேரங்கழித்துத்தான் வருவார்? அதற்குள் உன்னைப் பார்த்துவிட்டுத் திரும்பி விடுவேன்.” “அப்படியானால் நானே அவ்விடம் வந்துவிடுகிறேன்?” “கூடவே கூடாது இந்த வீட்டுப் பக்கமே இனிமேல் நீ வரக்கூடாது. சாயங்காலம் ஆறு மணிக்கு நான் பழைய டில்லி வந்து சேருகிறேன். எனக்குப் பயம் ஒன்றுமில்லை உன்னை எங்கே பார்க்கிறது?” சூரியாவுக்கு, டவுன் ஹாலுக்குப் பின்னால் உள்ள மைதானந்தான் உடனே நினைவுக்கு வந்தது; அங்கே வரும்படியாகச் சொன்னான். சீதாவும் சரியென்று சொல்லி டெலி போனைக் கீழே வைத்துவிட்டாள். அது முதல் சூரியாவின் உள்ளம், ‘சீதாவிடம் ஏன் அப்படி சொன்னோம்.பிடிவாதமாக வரக்கூடாது என்று சொல்லாமற் போனோமே இதனால் சீதாவுக்கு மேலும் என்ன கஷ்டம் நேருமோ என்னமோ?’ என்று கவலைப்பட்டுத் தத்தளித்துக் கொண்டிருந்தது. இதற்கிடையில் நேற்று ஏற்பாடு செய்திருந்தபடி தாரிணியையும் மற்ற நண்பர்களையும் பார்த்தாக வேண்டும்! அதற்காகத் தான் இப்போது சூரியா வெள்ளி வீதியில் போய்க்கொண்டிருந்தான். தாரிணியைப் பற்றி எண்ணியதும் முதல் நாள் மூன்று பேர் தாரிணியைப் பிடித்துக் கொடுத்தால் லட்சம் ரூபாய் தருவதாகக் கூறியது நினைவு வந்தது. இந்த ஞாபகம் சூரியாவின் மனக்குழப்பத்தை மேலும் அதிகமாக்கியது. ‘இரத்த வாசல்’ என்று பெயர் பெற்ற பயங்கர சரித்திர சம்பவங்கள் நடந்த இடத்தைத் தாண்டிச் சென்றதும், ஆஜானு பாகுவான முஸ்லீம் லீக் தொண்டர் ஒருவர் பச்சைச் சட்டைக்காரர் சூரியாவின் பேரில் மோதிக் கொண்டு, “மாப்கீஜீயே! குவாதே ஆஜம் ஜிந்தாபாத்!” என்றார். அந்த ஆசாமி வேண்டு மென்றே தன் பேரில் மோதிக்கொண்டு விஷமத்துக்காக மன்னிப்புக் கோருகிறார் என்று எண்ணிய சூரியா கோபத்துடன் நிமிர்ந்து பார்த்தான். ஆசாமியின் கண் சிமிட்டலைக் கண்டதும் நேற்று போலீஸ் உடையில் காட்சி தந்தவரே தான் என்று அறிந்து, “இதென்ன இன்றைக்கு இந்த வேஷம்?” என்றான் சூரியா. “தினம் ஒரே வேஷம் போட்டா பிழைப்பது எப்படி? உன்னைக் கூட ஜாக்கிரதை செய்யும்படி தலைவர் சொன்னார். நீ நேற்று மாதிரியே இன்றும் இருக்கிறாயே?” என்றார் முஸ்லீம் லீக் தொண்டர். “அதனால் என்ன? இங்கே என்னை யாருக்கும் அடையாளம் தெரியாது” என்றான் சூரியா. “அப்படிச் சொல்லுவதற்கில்லை; உன்னைப்பற்றி சி.ஐ.டி. விசாரணை பலமாயிருக்கிறதாகத் தகவல் வந்திருக்கிறது.” “தலைவர் ஜாகையில் இருக்கிறாரா?” “இருக்கிறார், நீ எனக்கு ஐம்பது அடிக்குப் பின்னால் தொடர்ந்து வா! ரொம்ப நெருங்கியும் வராதே; ரொம்பத் தூரமாகவும் போய்விடாதே!” என்று சொல்லிவிட்டு அந்த ஆசாமி விடுவிடு என்று மேலே நடந்தார். அவர் கூறியபடியே சூரியா பின் தொடர்ந்தான். ஜும்மா மசூதியின் வலது பக்கத்து வீதியிலிருந்து குறுக்கே பிரிந்து சென்ற ஒரு குறுகிய வீதியில் முஸ்லீம் தொண்டர் பிரவேசித்தார். அந்த வீதியிலிருந்து மறுபடியும் பிரிந்து சென்ற சந்துகளின் வழியாக மடக்கி மடக்கித் திரும்பி நடந்தார். கடைசியில், சூரிய வெளிச்சம் என்பதையே அநேகமாகக் கண்டிராத ஒரு குறுகிய தெருவில், முஸ்லீம் லீக் கொடி பறந்த ஒரு வீட்டின் வாசலில் நின்றார். சூரியா வந்து சேர்ந்ததும் இருவரும் வீட்டுக்குள் பிரவேசித்தார்கள். முன் முகப்பு அறையில் முஸ்லிம் மௌல்வி போல் காணப்பட்ட ஒருவர் குரான் ஷெரிப்பைப் போல் தோன்றிய அரபு எழுத்துப் புத்தகம் ஒன்றைத் தடவித் தடவிப் படித்துக் கொண்டிருந்தார். வந்தவர்களை ஒரு தடவை நிமிர்ந்து பார்த்துவிட்டு மௌல்வி சாகிப் மறுபடியும் புத்தகம் படிப்பதில் ஆழ்ந்தார். ‘இந்த மௌல்வி யார்? எங்கேயோ பார்த்திருக்கிறோமே?’ என்று சூரியா எண்ணமிடுவதற்குள்ளே முஸ்லிம் தொண்டர் அவனுடைய கையைப் பிடித்து, ஒரு பக்கத்துச் சுவர் ஓரமாக வைத்திருந்த பழைய புத்தக அலமாரிக்குப் பின்புறம் அழைத்துச் சென்றார். அலமாரிக்கும் சுவருக்கும் மத்தியில் ஒருவர் சிரமப்பட்டு நுழைய இடைவெளி இருந்தது. அங்கே சுவரில் ஒரு கதவும் இருந்தது. தொண்டர் அந்தக் கதவைத் திறந்து சூரியாவை உள்ளே பிடித்துத் தள்ளிவிட்டு கதவைச் சாத்திக்கொண்டார். சூரியா ஒரு நிமிஷம் இருட்டில் தடுமாறினான். அடுத்த நிமிஷம் ஒரு மிருதுவான பெண்ணின் கரம் அவனுடைய கையைப் பற்றியது. தாரிணியின் குரல், “என்னுடன் வாருங்கள்” என்று அவனை அழைத்தது. தாரிணியின் கையைப் பிடித்துக் கொண்டு இருளில் நடந்து சென்ற போது சூரியாவுக்குப் பழைய காலத்து இராஜமாளிகைக்குள்ளே இரகசிய குகை வழியாகப் பிரவேசிப்பது போல் உணர்ச்சி ஏற்பட்டது. சிறிது நேரத்திற்குள் அவன் மனம் அதிசயமான ஆகாசக் கோட்டைகளை எல்லாம் நிர்மாணித்தது. மிக மங்கலான வெளிச்சமுள்ள ஒரு பழைய காலத்து மண்டபத்துக்குள்ளே சூரியா வந்து சேர்ந்தான். அந்த மண்டபத்தின் கல் தூண்கள் பழமையைக் குறிப்பிட்டன. மேல் தளம் மிகவும் தாழ்வாக, ஆள் நின்றால் மேலே ஒரு அடிதான் பாக்கியிருக்கும்படி அமைந்திருந்தது. ஆனால் மண்டபம் விஸ்தாரமாக இருந்தது. நாதிர்ஷா, ஆமத்ஷா முதலிய கொடிய கொள்ளைக்காரர்களுக்கு டில்லி அடிக்கடி இரையாகி வந்த காலங்களில் வெள்ளி வீதியின் செல்வம் மிகுந்த வியாபாரிகள் சிலர் இந்த மண்டபத்தில் தங்களுடைய விலை உயர்ந்த பொக்கிஷங்களைப் பத்திரப்படுத்தி வந்தார்கள். அந்த இருண்ட மண்டபம் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து, அதற்கு வழி தெரிந்து கொண்டு உள்ளே பிரவேசிப்பது மிகவும் பிரயாசையான காரியமாதலால், அதில் ஒளித்து வைக்கப்பட்ட பொக்கிஷங்கள் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டன. அந்தப் பழைய இரகசிய மண்டபம் இப்போது புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டவர்களின் முக்கிய தலைமை ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கியது. மண்டபத்தில் அச்சமயம் சுமார் இருபது பேர் இருந்தார்கள். சிலர் தனியே படுத்துப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் கும்பல் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். சிலர் சுருட்டுப் பிடித்தார்கள்; சிலர் படுத்துத் தூங்கினார்கள். அவர்களுடைய உடைகள் விதவிதமாக இருந்தன. சுவரில் ஒரு ஆணியில் போலீஸ் தலைப்பாகையும் உடைகளும் தொங்குவதைச் சூரியா கவனித்தான். நேற்றுத் தன்னைத் தாரிணி இருக்குமிடம் அழைத்துச் சென்ற ஆசாமி அணிந்திருந்த உடை தான் அது என்பதையும் தெரிந்து கொண்டான். தனியே உட்கார்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்த ஒருவரைத் தாரிணி சுட்டிக்காட்டி, “அதோ தலைவர்!” என்றாள். சூரியா அவரிடம் சென்று, “இன்குலாப் ஜிந்தாபாத்!” (புரட்சி வாழ்க) என்று கோஷித்தான். புது ஆசாமி வந்திருப்பதைக் கண்டதும் எல்லாரும் வந்து கும்பலாகத் தலைவரைச் சுற்றி உட்கார்ந்தார்கள். “எங்கெங்கே போயிருந்தீர்? போன இடங்களில் எல்லாம் நாட்டின் நிலைமை எப்படியிருக்கிறது?” என்று சூரியாவைத் தலைவர் கேட்டார். “மத்திய மாகாணத்துக்கும், ஆந்திர தேசத்துக்கும் மதராசுக்கும் போயிருந்தேன். கிட்டத்தட்ட மதுரை வரையில் போனேன். நான் சென்ற இடங்களில் எல்லாம் ஜனங்களின் உள்ளம் எரிமலை போலக் குமுறிக் கொண்டிருந்தது. எந்த நிமிஷமும் எரிமலை வெடித்து நெருப்பைக் கக்கத் தொடங்கலாம். அந்த அக்கினிப் பிரவாகத்தில் பிரிட்டிஷ் ஆட்சி எரிந்து பொசுங்கி சாம்பலாகப் போகப் போகிறது.” “உம்முடைய நம்பிக்கைக்கு ஆதாரமென்ன? எதைக் கொண்டு சொல்லுகிறீர்?” “சென்னையில் பென்ஷன் வாங்கும் மாஜி சப் ஜட்ஜ் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் ஹிட்லர் ஜயித்து இந்தியாவுக்குள் பிரவேசிக்கப் போகும் தினத்தை நிர்ணயிக்க ஜோசிய சாஸ்திரத்தை ஆராய்ந்து கொண்டிருக்கிறார். தேவபட்டணத்தில் திவான் பகதூர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் நெடுங்காலம் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்திருந்தவர். ‘ஜப்பான் காரன் வந்தால்தான் இந்தியாவுக்குக் கதிமோட்சம்’ என்றார். எங்கெங்கே போனாலும் சாதாரண ஜனங்கள் ‘இங்கிலீஷ்காரன் யுத்தத்தில் கட்டாயம் தோற்பான்; இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சி ஒழிந்து போகும்’ என்ற ஆசையுடன் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.” “ஆசையும் நம்பிக்கையும் இருந்து என்ன பிரயோஜனம்? பிரிட்டிஷ் ஆட்சியை ஒழிப்பதற்கும் சுயராஜ்யம் அமைப்பதற்கும் ஜனங்கள் எந்த விதத்தில் உதவி செய்யத் தயாராயிருக்கிறார்கள்? சென்ற வருஷத்தைப் போல இந்த ஆகஸ்டு 9-ந் தேதி தேசமெங்கும் புரட்சி இயக்கம் சுடர் விட்டு ஓங்கும் என்று எதிர்பார்த்தபடி ஒன்றும் நடக்கவில்லையே!” “அந்த விஷயம் தான் ஏமாற்றமாயிருக்கிறது ஜெர்மெனியோ, ஜப்பானோ படை யெடுத்து வந்து இந்தியாவுக்கு விடுதலை கிட்டும் என்று பெரும்பாலோர் ஆசைப்பட்டுக் கொண்டி ருக்கிறார்கள். இன்னும் பலர் சுபாஷ் பாபு மலாய் நாட்டிலிருந்து சைன்யம் திரட்டிக் கொண்டு பர்மா வழியாக வரப் போகிறார் என்று எதிர் பார்க்கிறார்கள். சுதந்திரத்துக்காக நாம் ஏதேனும் செய்ய வேண்டும் என்னும் எண்ணம் பெரும்பாலோர் மனதில் படவில்லை. பெயரும் செல்வாக்கும் இல்லாத தொண்டர்கள் சிலர் அங்கங்கே புரட்சிக் கொடியை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மேல் போலீஸார் பிரயோகிக்கும் பயங்கர முறைகள் பொது ஜனங்களைப் பீதியில் ஆழ்த்துகின்றன. போலீஸ் பயங்கரத்துக்கு ஓர் உதாரணத்தை நானே பார்த்தேன்..” தேவபட்டணத்தில் வக்கீல் ஆத்மநாதய்யர் வீட்டில் ஆண்டு நிறைவுக் கலியாணத்தின் போது நடந்த போலீஸ் அட்டூழியத்தைப்பற்றிச் சூரியா விவரித்துக் கூறினான். எல்லாவற்றையும் கேட்டுவிட்டுப் புரட்சித் தலைவர் சொன்னார்: “மற்ற நாடுகளில் சுதந்திரப் போர் நடத்தியவர்கள் இதைக்காட்டிலும் எத்தனையோ மடங்கு பயங்கரங்களை அனுபவித்திருக்கிறார்கள். நீண்ட அன்னிய ஆட்சியின் பயனாக நம் ஜனங்கள் அடியோடு தீரத்தை இழந்து கோழைகளாகி விட்டார்கள். ஆனாலும் அங்கங்கே ஒரு சிலராவது பிடிவாதமாயிருக்கும் வரையில் நம்பிக்கை உண்டு. மக்களின் மனதிலுள்ள மனக்கசப்பு திடீரென்று ஒரு சமயம் பொங்கி எழாமற் போகாது. குமுறிக் கொண்டிருக்கும் எரிமலை வெடிக்கும் வரையில் புரட்சித் தீ அணையாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். சூரியா! உன்னுடைய வருகையைப்பற்றி இந்த ஊர்ப் போலீஸுக்குத் தகவல் தெரிந்து விசாரித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. நீ இன்றைக்கே இந்த ஊரை விட்டுப் போய்விடுவது நல்லது. கல்கத்தாவுக்குப் போகிறாயா? அங்கே முக்கிய காரியம் இருக்கிறது?” என்றார் தலைவர். “ஓ! போகிறேன்!” என்றான் சூரியா. ஒருவேளை சீதா பிடிவாதம் பிடித்தால் அவளையும் கல்கத்தாவில் கொண்டுபோய் விடுவதற்குச் சௌகரியமாயிருக்கும் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான். கல்கத்தாவில் செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றித் தலைவர் அவனுக்கு விவரமாகக் கூறினார். பதினைந்தாம் அத்தியாயம் - “இன்னொருவர் இரகசியம்” மௌல்வி சாகிப் உட்கார்ந்து குரான் படித்துக் கொண்டிருந்த அறையின் ஒரு மூலையில் மரத்தினாலான குறுகிய மச்சுப் படிகள் அமைந்திருந்தன. சூரியாவும் தாரிணியும் இருண்ட மண்டபத்திலிருந்து அந்த அறைக்குள் வந்து மச்சுப்படி ஏறி மேலே சென்றார்கள். மாடி அறையில் கிடந்த இரண்டு பழைய பிரம்பு நாற்காலிகளில் உட்கார்ந்தார்கள். “கல்கத்தாவுக்கு எப்போது கிளம்புவதாக உத்தேசம்?” என்று தாரிணி கேட்டாள். “இன்றைக்கே புறப்பட்டாலும் புறப்படலாம். போவதற்கு முன்னால் சீதாவின் விஷயத்தைப் பற்றி முடிவு செய்ய வேண்டும். நீங்கள் டில்லியிலேயே இருக்கப் போகிறீர்களா?” என்று சூரியா வினவினான். “இல்லை; நான் பம்பாய் போகப் போகிறேன். பம்பாய் மாகாணத்தில் ஸதாரா ஜில்லாவில் ஆங்கில ஆட்சியின் அடிச்சுவடு கூட இல்லாமல் துடைத்து விட்டார்களாம். ஜனங்களின் குடியரசு சர்க்கார் நடைபெறுகிறதாம். இங்கிலீஷ் சர்க்காருக்கு ஒரு பைசாக் கூட வரி வசூல் ஆவதில்லையாம். அந்த அதிசயத்தை நேரில் போய்ப் பார்த்துவிட்டு வரும்படி எனக்கு உத்தரவு பிறந்திருக்கிறது. ஸதாரா ஜில்லாவில் நடப்பது போல் ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு ஜில்லாவிலே நடந்தால் போதும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு மங்களம் பாடி விடலாம்.” “ஸதாராவுக்கு நீங்கள் தனியாகவா போகப் போகிறீர்கள்?” “தனியாகப் போனால் என்ன? யார் என்னை என்ன செய்து விடுவார்கள்?” “அப்படியா நினைக்கிறீர்கள்? ஒரு சமாசாரத்தைக் கேளுங்கள். நேற்று மைதானத்தில் நாம் பேசி முடித்த பிறகு நீங்கள் முதலிலே போய்விட்டீர்கள் அல்லவா? நீங்கள் போய்ச் சிறிது நேரத்துக்கெல்லாம் மூன்று ஆசாமிகள் என்னிடம் வந்தார்கள். உங்களைப் பிடித்துக்கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் தருவதாகச் சொன்னார்கள்! முதலில் என் காதுகளை நான் நம்பவில்லை.அப்புறம் அவர்கள் உண்மையாகவே அப்படிச் சொல்வதாகத் தெரிந்து கொண்டேன்.” “இது என்ன விந்தை? எனக்காக ஒரு லட்சம் ரூபாய் தருவதாகவா சொன்னார்கள்? அப்படிப்பட்ட பைத்தியக்காரர்கள் யார்? போலீஸ்காரர்களாய் இருக்க முடியாது. புரட்சி இயக்கத்தின் மாபெரும் தலைவருக்கே ஐயாயிரம் ரூபாய்களுக்கு மேல் அவர்கள் பரிசு தரமாட்டார்களே? ஒருவேளை உங்களைக் ‘கோட்டா’ செய்வதற்காக அவ்விதம் சொல்லியிருப் பார்களோ!” “அதெல்லாம் இல்லை; அவர்கள் உண்மையாகவே அவ்விதம் சொன்னார்கள் என்பது நிச்சயம். பிற்பாடு கூட என்னைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு சுதேச சமஸ்தானத்து அரண்மனை ஆட்கள் என்று நினைக்கிறேன். யாரோ ஒரு ராஜாவோ நவாப்போ அவர்களுடைய எஜமானராயிருக்க வேண்டும்.” தாரிணி கலகலவென்று சிரித்துவிட்டு, “நல்ல வேடிக்கை சூரியா! ஒரு யோசனை! நம் இயக்கத்தை நடத்துவதற்குப் பணம் இல்லாமல் திண்டாடுகிறோம். இப்போது ஒரு வழி கிடைத்திருக்கிறதே? அடித்த அடியில் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்து விடலாமே. நீங்கள் இன்று கல்கத்தா போவதை ஒத்திப் போட்டு விட்டு எப்படியாவது அந்தப் பைத்தியக்காரர்களைத் தேடிக் கண்டுபிடியுங்கள். என்னை அவர்களிடம் ஒப்புவித்து விட்டு ஒரு லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு விடுங்கள்” என்றாள். “இந்த வழியில் பணம் சேகரித்துப் புரட்சி நடத்திச் சுதந்திரம் பெறுவதைக் காட்டிலும் இந்தியா அடிமை நாடாகவே இருந்துவிட்டுப் போகட்டும்!” என்றான் சூரியா. “எதனாலே அவ்வாறு சொல்கிறீர்கள்? கிடைக்கிற பணத்தை வேண்டாம் என்று சொல்லுவானேன்? அப்படியே அவர்கள் பணத்தைக் கொடுத்துவிட்டு என்னைப் பிடித்துக்கொண்டு போனால் என்ன செய்து விடுவார்கள்? நான் என்ன சிறு குழந்தையா? அல்லது என்னைக் கடித்துத் தின்று விடுவார்களா?” "அப்படிக் கூடச் செய்வார்கள்தான்! ஏன் செய்ய மாட்டார்கள்? தாரிணி! இந்த உலகத்தில் மனுஷர்கள் என்ற ரூபத்தில் எத்தனை ராட்சஸர்கள் உலாவுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. எனக்கும் நேற்று இராத்திரி தான் அது துல்லியமாகத் தெரிய வந்தது. சீதா அந்த ராட்சஸ ராகவனிடம் அகப்பட்டுக் கொண்டு பட்ட பாட்டைப் பார்த்த பிறகு தான் தெரிந்தது!" “அது என்ன விஷயம்? முன்னாலேயே நான் கேட்காமல் போனேனே? நேற்று இரவு சீதாவின் வீட்டுக்குப் போயிருந்தீர்களா? சீதா என்ன சொன்னாள்? ராகவனைப் பற்றி ரொம்பப் புகார் சொல்லியிருக்க வேண்டும் என்று தெரிகிறது” என்றாள் தாரிணி. “சீதா சொல்லி நான் தெரிந்து கொள்ளவில்லை. சீதா முதலில் சொன்னதையெல்லாம் நான் நம்பக்கூடவில்லை. மூளை பிசகிப் போய் உளறுகிறாள் என்றே நினைத்தேன். நேரில் என் கண்ணால் பார்த்த பிறகு தான் சீதா உண்மையில் பத்தில் ஒன்று கூடச் சொல்லவில்லை என்று அறிந்து கொண்டேன்.” பிறகு சூரியா, சீதாவின் வீட்டுக்குத் தான் போனதிலிருந்து நடந்ததையெல்லாம் விவரமாகச் சொன்னான். கதையைக் கேட்டுக் கொண்டு வந்த தாரிணியின் முகத்தில் கவலையும் துயரமும் குடிகொண்டன. “இதையெல்லாம் நீங்கள் நேரில் பார்த்ததாகச் சொல்லியிராவிட்டால் நான் நம்பவே மாட்டேன். ராகவன் இவ்வளவு மூர்க்கமான மனிதர் என்று நான் நினைக்கவே இல்லை.” “யார் தான் நினைத்தார்கள்? இப்படியெல்லாம் ஆகும் என்று தெரிந்திருந்தால், அவர்களுடைய கலியாணத்தை நான் நடத்தி வைத்திருப்பேனா? சீதாவின் தகப்பனாரிடமிருந்து வந்த தந்தியை மறைத்து வைத்துக் கலியாணம் தடைப்படாமல் செய்திருப்பேனா?” “பிறத்தியாருடைய காரியங்களில் தலையிடுவது எவ்வளவு பிசகு என்று இதிலிருந்து தெரிகிறது. பெண்ணின் தகப்பனார் நன்றாக யோசிக்காமல் அவ்விதம் தந்தி அடித்திருப்பாரா? அதில் நீங்கள் தலையிட்டிருக்கக் கூடாது.” “இப்போது அதைச் சொல்லி என்ன பயன்? இத்தனை நேரம் சீதா மைதானத்துக்கு வந்திருந்தாலும் வந்திருப்பாள். அவளிடம் நான் என்ன சொல்வது? என்னோடு கல்கத்தாவுக்கு அழைத்துக்கொண்டு போகட்டுமா?” என்று கேட்டான் சூரியா. “சீதாவின் வாழ்க்கையில் நீங்கள் தலையிட்டு ஒரு தடவை தவறு செய்தது போதாதா? மறுபடியும் அம்மாதிரி செய்ய வேண்டாம். நீங்கள் அவளைக் கல்கத்தாவுக்கு அழைத்துப் போனால் அத்துடன் அவளுடைய வாழ்க்கை முடிந்துவிடும். சீதாவுக்கு ஏதாவது தைரியம் சொல்லி அவளை வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு நீங்கள் போங்கள். நான் அவளைப் பார்த்துக் கொள்கிறேன். இன்று இரவே ராகவனைப் பார்த்துப் பேசுகிறேன்” என்றாள் தாரிணி. “இன்று ராத்திரியே ராகவனை எப்படிப் பார்ப்பீர்கள்?” என்ற சூரியாவின் கேள்வியில் ஆவலும் கவலையும் தொனித்தன. “அவர் போகிற பார்ட்டிக்கே நானும் போக எண்ணியிருக்கிறேன்” என்றாள் தாரிணி. “இது என்ன விபரீதம்! உங்கள் பெயரில் டில்லிப் போலீஸாரிடம் ஏற்கெனவே புகார் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். உத்தியோகஸ்தர்களின் பார்ட்டிக்கு எப்படிப் போவீர்கள்?” “என் பெயரில்தானே புகார் இருக்கிறது? ஆனால் அந்தப் பெயர் என்னுடையது என்று ஒருவருக்கும் தெரியாது. இன்றைக்குப் பார்ட்டி கொடுக்கிறவர் வைஸ்ராய் நிர்வாக சபை மெம்பர். அவருடைய மனைவி எனக்கு ரொம்ப சிநேகிதம். இன்றைக்குப் பார்ட்டிக்குப் போய்விட்டு அவர் வீட்டிலேயே இரண்டு நாள் தங்கியிருக்கப் போகிறேன். அவரிடம் கவர்ன்மெண்ட் பாஸ் வாங்கிக் கொண்டு தான் பம்பாய்க்குப் பிரயாணமாவேன்.” “உங்களுடைய சாமர்த்தியத்தை நினைத்தாலே எனக்கு மூர்ச்சை போட்டு விடும்போலிருக்கிறது. நானுந்தான் சிற்சில வேஷங்கள் போட்டுக்கொண்டு சி.ஐ.டி.காரர்களிடமிருந்து தப்பியிருக்கிறேன். ஆனால் நீங்கள் செய்யும் காரியங்கள் ஒரே பிரமிப்பாயிருக்கின்றன.” “நாம் ஒருவரையொருவர் பாராட்டிக் கொள்வதை அப்புறம் வைத்துக் கொள்ளலாம். இப்போது உடனே சென்று சீதாவைக் கவனியுங்கள். சீதாவின் தேக நிலைமையையும் மனோ நிலைமையையும் உத்தேசிக்கையில் அவள் தனியாக மைதானத்துக்கு வருவது பற்றி எனக்குப் பயமாயிருக்கிறது. இப்போது டில்லி நகரில் எங்கே பார்த்தாலும் அன்னிய சோல்ஜர்களும் சுதேசி சிப்பாய்களும் அலைந்தவண்ணம் இருக்கிறார்கள்.” “சோல்ஜர்களும் சிப்பாய்களும் மட்டுந்தானா? சுதேச சமஸ்தானக் கழுகுகளும் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. தாரிணி! நீங்களும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்.” “என்னை நான் பார்த்துக் கொள்வேன்; கவலை வேண்டாம். சீதாவைப் பற்றித்தான் கவலையாயிருக்கிறது. தயவு செய்து நீங்கள் உடனே போங்கள். சீதாவைச் சந்தித்து எப்படியாவது சமாதானப்படுத்தி இன்று ராத்திரி அவள் வீட்டில் கொண்டு சேருங்கள். ராகவனுடைய குணத்தில் இன்றைய தினமிருந்தே மாறுதல் இருக்கும், அதற்கு நான் ஜவாப்தாரி.” “அந்த மூர்க்கன் ராகவனை நீங்கள் பார்த்துப் பேசுவது என்பது எனக்குப் பிடிக்கவேயில்லை அவன் வெறும் தூர்த்தன்!” “எனக்கு மட்டும் ராகவனைப் பார்த்துப் பேசப் பிடிக்கிறதா? சீதாவின் நன்மைக்காக அவ்விதம் செய்யப் போகிறேன்.” “தாரிணி! ஒரே ஒரு கேள்விக்குப் பதில் சொல்வீர்களா? சீதாவின் விஷயத்தில் நீங்கள் இவ்வளவு சிரத்தை கொண்டிருப்பதின் காரணம் என்ன?” “அவள் புரட்சி வீரர் சூரியாவின் அத்தங்காள் என்னும் காரணம் போதாதா?” “என்னுடைய அத்தங்காள் என்பதற்காக அப்படிப் பணிவிடை செய்து அவளுடைய உயிரைக் காப்பாற்றத் தோன்றி யிராது. அவளுடைய வசை மொழிகளையெல்லாம் பொருட்படுத்தாமல் அவளுடைய க்ஷேமத்தைக் கருதவும் தோன்றாது. வேறு ஏதோ ஒரு காரணம் இருக்கவேண்டும்.” “உங்களுடைய ஊகம் உண்மை தான்! அதற்கு வேறொரு முக்கிய காரணம் இருக்கிறது. உங்களுக்குச் சீதாவிடம் இருக்கும் அக்கறையைக் காட்டிலும் எனக்கு அதிகம் இருக்கக் காரணம் உண்டு. ஆனால் தயவு செய்து அந்தக் காரணம் என்னவென்று கேட்க வேண்டாம். அது இன்னொருவருடைய ரகசியம்; அவருடைய சம்மதம் இல்லாமல் நான் அதைச் சொல்லக் கூடாது” என்றாள் தாரிணி. “போனால் போகட்டும் சீதாவிடம் உங்களுக்கு அவ்வளவு அக்கறை இருப்பதால் பம்பாய்க்குப் போகும் போது சீதாவின் தகப்பனாரைப்பற்றி ஏதாவது தகவல் உண்டா என்று விசாரியுங்கள். அவருடைய பழைய விலாசம் தருகிறேன். சீதாவின் நிலைமையை அவரிடம் தெரிவித்துவிட்டால் நம்முடைய பொறுப்புக் குறையும்.” “சூரியா! ஆச்சரியப்பட வேண்டாம்! சீதாவின் தகப்பனார் இருக்குமிடம் எனக்குத் தெரியும். ஆனால் அவரால் தற்சமயம் சீதாவுக்கு உதவி செய்ய முடியாது. அவருடைய தற்போதைய நிலைமையைச் சீதா அறிந்தால் சந்தோஷப் படவும் மாட்டாள்.” சீதாவின் தகப்பனார் ஏதோ பெரிய கிரிமினல் குற்றம் செய்து நீண்ட கால தண்டனையடைந்து சிறையில் இருக்க வேண்டும் என்று சூரியா நினைத்துக் கொண்டிருந்தான். தாரிணியின் வார்த்தை அதை உறுதிப்படுத்துவதாக நினைத் தான். ஆனால் சட்டென்று அவனுடைய மனக் கண்ணின் முன்னால் ஒரு முகம் வந்து நின்றது. தாடி வளர்த்துக் கொண்டிருந்த முஸ்லிம் மௌல்வியின் முகம் அது. “தாரிணி! கீழே ஒரு மௌல்வி சாகிப் உட்கார்ந்து குரான் வாசித்துக் கொண்டிருக்கிறாரே? அவர் யார்? சொல்ல முடியுமா?” என்று கேட்டான். “சொல்ல முடியும் சூரியா! அந்த மௌல்வி சாகிபுதான் என்னுடைய தகப்பனார்!… தாங்கள் மூர்ச்சையடைந்து விழுவதற்குத் திண்டு மெத்தை கொண்டு வரட்டுமா?” என்றாள் தாரிணி. பதினாறாம் அத்தியாயம் - சீதாபஹரணம் அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் ஒரே மாதிரி குறுகலாயும் அசுத்தம் நிறைந்துமிருந்த சந்துகள் வழியாகச் சூரியாவை முஸ்லீம் லீக் தொண்டர் அழைத்துச் சென்று சற்று தூரத்தில் ஜும்மா மசூதி தெரியும் இடம் வந்ததும், “அதோ! ஜும்மா மசூதி! இனிப் போய் விடுவீர் அல்லவா?” என்றார். “வந்தனம்! இவ்வளவு தூரம் கூட நீங்கள் வந்திருக்க வேண்டிய தில்லை” என்று சொல்லிவிட்டுச் சூரியா மைதானத்தை நோக்கி நடந்தான். நடக்கும்போதே அவனுடைய கால்கள் தடுமாறின. டில்லி நகரமே அவனைச் சுற்றிச் சுழல்வது போலிருந்தது. தாரிணி ஒரு முஸ்லீம் மௌல்வியைத் தன்னுடைய தகப்பனார் என்று சொன்னது அவ்வளவு தூரம் அவனுக்கு அதிர்ச்சி உண்டு பண்ணி விட்டது. அந்தச் செய்தியினால் அவனுடைய ஆகாசக் கோட்டைகள் பல தகர்ந்து இடிந்து அவன் தலை மீது விழுந்து கொண்டிருந்தன. ஆம்; அந்தச் செய்தி உண்மையானால் அவனுடைய வாழ்க்கையின் போக்கே மாற வேண்டியதுதான். ஒரு முஸ்லீம் பெண்ணை மணந்துகொள்ள வேண்டுமானால் தானும் ஒரு முஸ்லீம் ஆக வேண்டும். ஆயிரமாயிரம் வருஷங்களாக நிலைபெற்று உலகத்துக்கெல்லாம் வழி காட்டும் ஜோதியாக விளங்கும் சநாதன ஹிந்து தர்மத்தைத் துறந்துவிட அவன் தயாராயில்லை. “ஒருவேளை பொய்யாயிருக்குமோ? நமக்குப் போக்குக் காட்டுவதற்காக அப்படிச் சொல்லியிருப்பாளோ?” என்ற எண்ணம் தோன்றியவுடனே, இன்னொரு விதமான சிந்தனைப் போக்கில் அவன் உள்ளம் ஆழ்ந்தது. ஆகா! அந்தப் பெண்ணை எந்த விதத்திலும் நம்புவதற்கில்லை. ஒரு பக்கத்தில் புரட்சிக்காரர்களுக்கு மத்தியில் தீவிர புரட்சிக்காரியாக விளங்கு கிறாள். இன்னொரு பக்கத்தில் பெரிய பெரிய சர்க்கார் உத்தியோகஸ்தர்களுடன் சிநேகம் வைத்துக்கொண் டிருக்கிறாள். ஆங்கில நவீனங்களிலே யுத்த காலத்தில் அழகு வாய்ந்த பெண்கள் ஒற்று வேலை செய்வதைப் பற்றிப் படித்திருக்கிறோ மல்லவா? அவர்கள் எந்தக் கட்சிக்காக ஒற்று வேலை செய்கிறார்கள் என்பதைக் கடைசி வரையில் கண்டுபிடிக்க முடிகிற தேயில்லை. இந்தத் தாரிணியையும் அந்த ரகத்தில் சேர்க்க வேண்டியதுதான். “என்னைப் பிடித்துக் கொடுத்துவிட்டு ஒரு லட்சம் ரூபாய் பெற்றுக் கொள்ளுங்கள்!” என்று எவ்வளவு சர்வ சகஜமாகக் கூறினாள். வைஸ்ராய் நிர்வாக சபை அங்கத் தினர்களுடன் சாதாரணமாகப் பழகக்கூடியவள் தன்னைப் போன்ற ஏழை வாலிபனிடம் அன்பு கொண்டிருப்பதாகச் சொல்வதை எப்படி நம்புவது? சௌந்தரராகவனிடம் அவளுக்கிருக்கும் செல்வாக்கைப் பற்றி நினைத்தாலும் பலவித சந்தேகங்களுக்கு இடம் ஏற்படுகிறது. சீதா விஷயத்தில் இவளுடைய உண்மையான மனப்பாங்கு தான் என்ன? சீதாவின் க்ஷேமத்தில் அவள் அக்கறை கொண்டிருப்பதாகச் சொன்னதெல்லாம் ஏதோ ஒரு அந்தரங்க நோக்கத்துடன் இருக்குமோ? அப்படியானால் அந்த நோக்கம் என்ன? அந்தப் பேதைப் பெண் சீதாவை இவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து ஏறக்குறைய பைத்தியமாக அடித்து விட்டார்கள்? தாரிணியின் வார்த்தையை நம்பி அந்த அனாதையை கைவிட்டுத் தான் கல்கத்தாவுக்குப் போய்விடுவது சரியா? இவ்வித மெல்லாம் யோசனை செய்து கொண்டே ஜும்மா மசூதியைத் தாண்டி அப்பால் வெள்ளி வீதிக்குள் சூரியா பிரவேசித்தான். டவுன் ஹாலை அடைந்ததும் அங்கே வீதி ஓரத்தில் சீதா தன்னந்தனியாக நிற்பதைக் கண்டான். விரைந்து அவளிடம் சென்று, “சீதா! நீ இங்கே வந்து ரொம்ப நேரமாகி விட்டதா?” என்றான். “கால் மணி நேரந்தான் ஆயிற்று; ஆனாலும் சாலையில் போகிறவர்கள் என்னை உற்று உற்றுப் பார்த்துவிட்டுப் போவது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. இன்னும் ஐந்து நிமிஷத்துக்குள் நீ வராவிட்டால் வீட்டுக்குத் திரும்பிப் போய்விடுவது என்று எண்ணி கொண்டிருந்தேன். நல்ல வேளையாக நீ வந்து விட்டாய்!” என்று சொன்னாள் சீதா. சூரியாவின் மனதில் அப்போது, ஐந்து நிமிஷம் கழித்து ‘வராமற் போனோமே!’ என்று தோன்றியது. அப்படித் தாமதித்திருந்தால் சீதா திரும்பிப் போயிருப்பாள். தனக்குப் பொறுப்பு ஒன்றும் இல்லாமல் போயிருக்கும். மறுகணம் சூரியாவுக்குத் தன்னுடைய சுயநல எண்ணம் வெட்கத்தை அளித்தது. அனாதை சீதாவுக்கு யாருமே சிநேகம் இல்லை; அனுதாபத்துடன் அவளுக்கு உதவி செய்வாரும் கிடையாது. நாமும் இப்படி அவளைக் கைவிட எண்ணினால்?… இருவரும் டவுன் ஹாலுக்குப் பின்புறமுள்ள சாலையின் வழியாகக் காந்தி மைதானத்தை நோக்கி நடந்தார்கள். முதல் நாள் தாரிணியுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த அதே மரத்தடிக்குச் சூரியா சீதாவை அழைத்துச் சென்றான். வழியில் அவர்கள் ஒன்றுமே பேசவில்லை. ஏனெனில் நடக்கும் போது சூரியாவின் மனம் சீதாவின் விஷயத்தில் தன்னுடைய கடமை என்ன என்பதைப் பற்றி மிகத் தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தது. மரத்தடியில் சென்று உட்கார்ந்ததும் சீதா அக்கம் பக்கம் பார்த்து விட்டு, “அம்மாஞ்சி! நீ உடனே இந்த ஊரை விட்டுப் போய்விடு! உன்னைப் போலீஸார் பிடிப்பதற்குத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். டெலிபோனில் உன் மாதிரி பேசி என்னிடம் விஷயம் தெரிந்து கொள்ள முயன்றவர்கள் போலீஸார் தான். இதை எப்படியாவது உன்னிடம் சொல்லி விட்டுப் போகத்தான் நான் முக்கியமாக இங்கே வந்தேன். டெலிபோனில் சொல்வதற்கும் பயமாயிருந்தது. நடுவில் யாராவது டெலிபோனில் பேச்சை ஒட்டுக் கேட்டாலும் கேட்கக் கூடுமல்லவா? இன்றைக்கு ராத்திரியே புறப்பட்டுப் போய்விடு, சூரியா!” என்று படபடவென்று பேசினாள் . “அத்தங்கா! என்னைப் பற்றி உனக்கு ஏன் இவ்வளவு கவலை? போலீஸார் என்னைப் பிடித்துவிட்டால் தான் என்ன? எந்த நிமிஷமும் கைதியாகிச் சிறைக்குப் போவதற்கு நான் தயாராகத் தான் இருக்கிறேன். உன்னுடைய விஷயத்தைப் பற்றிப் பேசு சீதா! நேற்றிரவு நான் வாசலில் போவதாகப் போக்குக் காட்டி விட்டுத் தோட்டத்திற்குத் திரும்பி வந்து ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். உன்னை ராகவன் கை நீட்டி அடித்ததைப் பார்த்தபோது எனக்கு இரத்தம் கொதித்தது. கைத்துப்பாக்கியால் சுட்டுவிடலாம் என்று கூட எண்ணினேன். நீ உன் அகத்துக்காரர் மீது புகார் சொன்னபோது எனக்கு அவ்வளவு நம்பிக்கை உண்டாகவில்லை. ஸ்திரீகளுடைய சுபாவமே புகார் சொல்வதுதான் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். ஆனால் ராகவன் உன்னை நடத்திய விதத்தைப் பார்த்த பிறகு சந்தேகமில்லாமல் போய் விட்டது. இப்பேர்ப்பட்ட ராட்சதன் உனக்குப் புருஷனாக வாய்த்தானே, நான் அதற்குக் காரணமாயிருந்தேனே என்று எண்ணி எண்ணி நேற்று இரவெல்லாம் நான் தூங்கவில்லை. இப்படிப்பட்ட புருஷனை விட்டு விட்டு நீ ஓடிப் போக எண்ணினால் நான் உன் பேரில் குற்றம் சொல்லமாட்டேன். நானே உன்னை அழைத்துப் போகத் தயாராயிருக்கிறேன். என்னுடன் நீயும் வா! அமரநாத்தின் வீட்டில் உன்னை ஒப்புவித்து விட்டுப் பிறகு நான் என் காரியத்தைப் பார்க்கிறேன். அமரநாத்தும் அவன் மனைவி சித்ராவும் எனக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள் உன்னை வைத்துக் காப்பாற்றுவார்கள்….” இவ்வளவு நேரம் அரைமனதாகக் கேட்டுக் கொண்டிருந்த சீதா இப்போது குறுக்கிட்டு, “சூரியா! அந்த யோசனை யெல்லாம் இனி வேண்டாம். நான் என்ன செய்வது என்று ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்!” என்று சொன்னாள். “அத்தங்கா! அந்த மாதிரி முடிவு செய்ய வேண்டாம். நீ எதற்காக உயிரை விடவேண்டும்? ராகவனைப் போன்ற ஈவிரக்கமில்லாத கிராதக னுக்காகவா? என்னுடைய உடம்பில் மூச்சு உள்ள வரையில் உன்னை நான் சம்ரக்ஷிப்பேன். இந்த உலகமெல்லாம் உனக்கு விரோதமாயிருந் தாலும் நான் உன்னுடைய கட்சியில் இருப்பேன். ஏதாவது கெட்ட பெயர் வருகிறதாயிருந்தால் அந்தக் கெட்ட பெயரை நான் உன்னுடன் பகிர்ந்து கொள்கிறேன். உயிரை விடுகிற எண்ணத்தை மட்டும் நீ விட்டு விட வேண்டும்!” என்று சூரியா உணர்ச்சி பொங்கக் கூறினான். “சூரியா! உயிரை விடுவது பற்றி யார் பேசினார்கள்? உயிரை விடும் உத்தேசம், என் அகத்துக்காரரை விட்டுப் போகும் உத்தேசம் இரண்டையும் நான் கைவிட்டு விட்டேன். அவருடைய மனம் போல் நடந்து அவருடைய திருப்தியைச் சம்பாதித்துக் கொள்வது என்று முடிவு செய்து விட்டேன். உனக்கு ஒருவேளை வியப்பாயிருக்கும். நேற்று இராத்திரி சம்பவத்துக்குப் பிறகு இத்தகைய தீர்மானம் நான் எப்படிச் செய்தேன் என்று ஆச்சரியப்படுவாய். ஒருவேளை நம்பக்கூட மாட்டாய், ஆனாலும் நான் சொல்வது உண்மை. இன்றைக்கு மத்தியானம் ஒரு பத்திரிகையில் கஸ்தூரிபாய் காந்தியின் சரித்திரத்தை வாசித்தேன். அதுதான் என் மனதை மாற்றி விட்டது. கஸ்தூரிபாய் காந்தி எப்படி யெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறாள் தெரியுமா? எழுபதாவது வயதில் ஜெயிலுக்குப் போயிருக்கிறாள்! அவள் அல்லவா உத்தமி; நானும் என் கணவர் இஷ்டப்படி இனிமேல் நடந்து கொள்கிறது என்று தீர்மானித் திருக்கிறேன்.” சூரியாவின் தலையிலிருந்து ஒரு பெரிய பாரம் நீங்கியது போலத் தோன்றியது. சீதாவின் முடிவு அவனுடைய இருதயத்துக்கு உகந்ததாயிருந்தது. ஆனால் அவனுடைய அறிவு அந்த முடிவை ஆட்சேபித்தது. சீதாவைப் பார்த்து அவன் கூறியதாவது; “ஸ்திரீகளின் மனதைக் கண்டுபிடிக்கவே முடியாது என்கிறார்களே, அது வாஸ்தவமாகத்தானிருக்கிறது. பெண்களின் சஞ்சலப் புத்தியைப் பற்றிப் பெரியோர்கள் சொல்லியிருப்பதிலும் தவறில்லை. இரண்டுக்கும் நீயே உதாரண மாயிருக்கிறாய். நேற்று இரவு எப்படிப் பேசினாய்? இன்றைக்கு எப்படிப் பேசுகிறாய்? புருஷன் என்ன கொடுமை செய்தாலும் மனைவி பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்னும் கட்சியை நான் ஒப்புக்கொள்ள முடியாது. அதெல்லாம் பழைய காலம்; பெண்களை அடிமைப்படுத்தப் புருஷர்கள் எழுதி வைத்த சாஸ்திரங்கள் சொல்லும் கடமை. ‘ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானம்’ என்பது இந்தக் காலத்துத் தர்மம். கஸ்தூரிபாய் காந்தியைப் பற்றிக் கூறுகிறாயே? கஸ்தூரிபாயின் கணவர் உலகம் போற்றும் உத்தமர். மகாத்மா காந்தியோடு மற்றவர்களை இணை சொல்ல முடியுமா?” “சூரியா! காந்திஜியின் இஷ்டத்தைப்போல் கஸ்தூரிபாய் நடந்து கொள்ள ஆரம்பித்தபோது அவர் மகாத்மா ஆகியிருந்தாரா? இல்லையே? ரொம்ப சாதாரண மனிதராகத் தானே இருந்தார்? அப்போது முதல் கஸ்தூரிபாய் கணவரைத் தெய்வம் என்று நினைத்து நடந்தபடியால் தான் காந்திஜி மகாத்மா ஆனார். பெண்களின் சுதந்திரத்தைப் பற்றியும் நான் யோசித்துப் பார்த்தேன். சூரியா! எனக்கு இவர் எல்லாவிதமான சுதந்திரமும் கொடுத்துத் தான் இருந்தார்! நான் எங்கே போனாலும் ஏன் போனாய் என்று கேட்பதில்லை. யாரோடு பேசினாலும் ஏன் பேசினாய் என்று கேட்பதில்லை. நான் தான் அவரை அப்படியெல்லாம் கேட்டு அவருடைய வாழ்க்கையை நாசமாக்கினேன். எனக்கு அவர் பூரண சுதந்திரம் கொடுத் திருந்தார். நான் அவருக்கு எந்தவிதமான சுதந்திரமும் கொடுக்கவில்லை. யோசிக்க யோசிக்கத் தப்பெல்லாம் என் பேரில் தான் என்று உணர்கிறேன். என்னுடைய மூளை எப்படியோ கெட்டுப் போயிருந்தது. இப்போது நிச்சயமாக முடிவு செய்து விட்டேன். இனிமேல் நீ என் மனதை மாற்ற முயல்வதில் பயனில்லை” என்றாள் சீதா. சூரியா திகைத்துப் போய்விட்டான் “நான் உன் மனதை மாற்ற முயலவேயில்லை. எப்படியாவது நீ ராகவனுக்கு உகந்த மாதிரி நடந்து அவனைச் சீர்திருத்தினால் சரிதான். நீயும் ராகவனும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தினால் அதைக் காட்டிலும் எனக்குச் சந்தோஷம் வேறில்லை. புறப்படு, போகலாம்! இருட்டி விட்டது. உன்னை உன்னுடைய வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு என் காரியத்தைப் பார்க்கப் போகிறேன்” என்றான். “நீ என்னுடன் வரவேண்டாம்; ஒரு டாக்ஸி பிடித்து என்னை அதில் ஏற்றிவிட்டால் போதும். இல்லாவிடில் நானே பிடித்துக் கொள்கிறேன்” என்று சீதா சொன்னாள். “அது மாத்திரம் முடியாது, சீதா! என்னுடைய கடமையை நான் செய்தே தீருவேன். இப்போதெல்லாம் டில்லியில் எங்கே பார்த்தாலும் அபாயம் அதிகமாகி வருகிறது. ஸ்திரீகள் தனியாகப் போவது உசிதமல்ல அதிலும் இருட்டிய பிறகு போகவே கூடாது.” “எனக்கு என்ன அபாயம் வந்துவிடும், சூரியா! நீ எதற்காக என்னைப் பற்றி வீணில் பயப்படுகிறாய்?” “உனக்குத் தெரியாது, நேற்றுச் சாயங்காலம் தாரிணியும் நானும் இதே மரத்தடியில் உட்கார்ந்து பேசிக் கொண் டிருந்தோம்..” “தாரிணியோடு இந்த இடத்திலேயே பேசிக் கொண்டிருந்தாயா? என்னிடம் சொல்லவே இல்லையே?” என்று கேட்ட சீதாவின் குரலில் இத்தனை நேரம் இல்லாத ஈருஷை தொனித்தது.“உன்னிடம் சொல்லச் சந்தர்ப்பம் ஏற்படாதபடியால் சொல்லவில்லை; அதனால் என்ன?”“அதனால் என்ன? ஒன்றுமில்லை; நீயும் தாரிணியும் எதைப் பற்றிப் பேசிக் கொண்டி ருந்தீர்கள்? இந்த மரத்தின் அடிக்கு எதற்காக வந்தீர்கள்?” “தனியாகப் பேச வேண்டியிருந்தது; அதனால்தான் வந்தோம் இன்றைக்கு நாம் இருவரும் வரவில்லையா?” “தனியாக நீங்கள் என்ன பேசினீர்கள் என்று கேட்டேன்.” “பல விஷயங்களைப் பற்றியும் பேசினோம். முக்கியமாக, புரட்சி இயக்கத்தை மேலே நடத்துவது பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம், உன்னைப் பற்றியும் பேசினோம்.” “என்னைப் பற்றி என்ன பேசினீர்கள்? தாரிணியுடன் நீ என்னைப் பற்றிப் பேசுவதற்கு அவசியம் என்ன?” என்று சீதா கேட்டாள். “உன்னுடைய உடல்நிலையும் உள்ளத்தின் நிலையும் சரியாயில்லாதது பற்றிப் பேசினோம். உனக்கு எப்படி உதவி செய்வது என்று யோசித்தோம்.” “எனக்கு ஒரு உதவியும் தேவையில்லை. என்னமோ சொல்ல வந்தாயே அதைச் சொல்! நீயும் தாரிணியும் இங்கே பேசிக் கொண்டிருந்தீர்கள் அப்புறம்?” “தாரிணி போன பிறகு நான் உட்கார்ந்திருந்த இடத்துக்கு மூன்று ஆசாமிகள் வந்தார்கள். வந்து லோகா பிராமமாகக் கொஞ்ச நேரம் பேசினார்கள். பிறகு தங்கள் நோக்கத்தை வெளியிட்டார்கள். அதாவது தாரிணியை அவர்கள் கைப்பற்றிக் கொண்டு போவதற்கு நான் உதவி செய்தால் எனக்கு லட்சம் ரூபாய் தருவதாகச் சொன்னார்கள்! நன்றாயிருக்கிறதல்லவா?” “இது என்ன அநியாயம்? அப்படிப்பட்ட மனிதர்கள் யாராயிருக்கும்?” என்றாள் சீதா. “ஏதோ ஒரு சுதேச சமஸ்தானத்து ஆட்கள் என்று தோன்றியது. இந்த 1943-ஆம் வருஷத்தில் வைஸ்ராய் வேவலின் ஆட்சியின் கீழ் டில்லி நிலைமை இப்படி இருக்கிறது. இருட்டிலே உன்னைத் தனியாக அனுப்ப எப்படி எனக்கு மனம் வரும்?” “சூரியா! என் விஷயத்தில் அந்த மாதிரிக் கவலை உனக்கு வேண்டாம். தாரிணியைப் போன்ற அழகிக்கு லட்சம் ரூபாய் தருவதாகச் சொன்னால், எனக்கும் அப்படிச் சொல்வார்களா? என் மூஞ்சி இருக்கிற லட்சணத்துக்கு என்னை ஏலம் போட்டாலும் ஒரு லட்சம் பைசாக்கூட யாரும் கொடுக்க மாட்டார்கள். என் அகத்துக்காரர் தாரிணியை வேண்டாம் என்று சொல்லி விட்டு என்னை இஷ்டப்பட்டுக் கலியாணம் செய்து கொண்டாரே, அதை நினைத்தால் அவருக்கு எவ்வளவோ நான் நன்றியோடிருக்க வேண்டும்.” “அப்படி நீயிருப்பதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. இன்று உன்னை உன் வீட்டுக்குக் கொண்டு போய் விட்டுவிடுகிறேன். அது என்னுடைய கடமை இல்லாவிட்டால் என் மனது அடித்துக் கொண்டேயிருக்கும்.” “சூரியா! உன்னை வரவேண்டாம் என்று நான் சொல்லுவது உனக்காகத் தான். எங்கள் வீட்டுக்கருகில் போலீஸார் வட்டமிட்டுக் கொண்டிருக் கிறார்கள். நீ அவ்விடம் வந்தால் உடனே உன்னை அரெஸ்டு செய்து விடுவது என்று காத்திருக்கிறார்கள்…” “அரெஸ்டைப் பற்றி எனக்குக் கொஞ்சமும் கவலையில்லை என்றுதான் முன்னமே சொன்னேனே?” “உனக்குக் கவலையில்லை என்பது சரிதான். நீ எப்போது கைதியாவோம், ஜெயிலுக்குப் போய் நிம்மதியாயிருப்போம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாய். ஆனால் என் அகத்துக்காரர் சர்க்கார் உத்தியோகஸ்தர் என்பதை நீ கவனித்தாயா? எங்களுடைய வீட்டில் உன்னைக் கைது செய்யும்படி நேர்ந்தால் அவருடைய நிலைமை என்ன ஆகும்? அவருடைய உத்தியோகத்துக்கு ஆபத்து வராதா?” சூரியா ஒரு நிமிஷம் திகைத்து ஸ்தம்பித்துப்போய் விட்டான். பிறகு “மன்னிக்க வேண்டும், சீதா! அந்த விஷயத்தை நான் எண்ணிப் பார்க்கவேயில்லை. போகட்டும்; நான் உன் வீடு வரையில் வரவில்லை. வீட்டுக்குக் கொஞ்ச தூரம் வரையில் வருகிறேன். அப்புறம் நீ தனியே போய்விடு இவ்வளவாவது செய்தால் தான் என் மனம் நிம்மதியடையும்” என்றான் சூரியா. “நல்லது; அப்படியே செய் உன் மனது நிம்மதி அடையட்டும்” என்று சீதா சம்மதித்தாள். இருவரும் அந்த மரத்தடியிலிருந்து புறப்பட்டார்கள். மைதானத்திலிருந்து வெள்ளி வீதிக்குப் போகும் சாலை ஜன நடமாட்டம் இல்லாமலிருந்தது. அந்தச் சாலையில் ஓரிடத்தில் ஒரு பெரிய மோட்டார் நின்று கொண்டிருந்தது. அதனுடைய பின்புறத்திலிருந்த 1111 என்னும் நம்பர் சூர்யாவின் மனதில் பதிந்தது. வண்டிக்குள் இரண்டு பேர் இருந்தார்கள். வண்டிக்கு வெளியில் சாலை ஓரத்து வேலிக்கருகில் நின்று இருவர் சுருட்டுப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். வண்டியைத் தாண்டிச் சென்ற போது சூரியாவின் மனதில் ஒரு சந்தேகம் உதித்தது. ஆனால் அதைத் தீர்த்துக்கொள்ளும் சந்தர்ப்பம் அதுவல்ல என்பதை உணர்ந்தான். பின்னர் கொஞ்சம் வேகமாகவே நடந்தான். சூரியாவும் சீதாவும் வெள்ளி வீதியை அடைந்து மணிக்கூண்டுக்கு அருகில் ஒரு டாக்ஸியைப் பிடித்தார்கள். அதில் ஏறி உட்கார்ந்ததும், வண்டி புதுடில்லியை நோக்கிப் போயிற்று. அவர்கள் ஏறிய டாக்ஸியைப் பின்னால் ஒரு மோட்டார் வண்டி தொடர்ந்து வருகிறது என்று சூரியா சந்தேகித்தான். அதை நிச்சயம் செய்துகொள்ள முடியவில்லை! புது டில்லிச் சாலையில் மோட்டார் வண்டிகள் முன்னும் பின்னும் போகாமலா இருக்கும்? வண்டி வேகமாய்ச் சென்றது; ஜந்தர் மந்தர் என்னும் வான சாஸ்திர ஆராய்ச்சிக் கூடத்தைக் கடந்ததும் சீதா, “இங்கேயே வண்டியை நிறுத்திவிடலாம். எங்களுடைய வீடு இன்னும் கொஞ்ச தூரந்தான் இருக்கிறது” என்றாள். “சரி என்று சொல்லிச் சூரியா வண்டியை நிறுத்தச் செய்தான்.”நான் இவ்விடம் இறங்கிக் கொள்ளட்டுமா? நீ வீட்டுக்குப் போய் வண்டியை அனுப்பிவிடுகிறாயா?" “வேண்டாம்! டாக்ஸிக் காரில் போய் இறங்கினால் வேலைக்காரர்கள் ஏதாவது நினைத்துக் கொள்வார்கள். நடந்து போனால் வழக்கம்போல் உலாவப்போய் வருவதாக எண்ணிக் கொள்வார்கள். இங்கிருந்து நடந்தே போய்விடுகிறேன். இரண்டு பர்லாங்கு தூரம் கூட இராது” என்றாள் சீதா. “சரி” என்றான் சூரியா. சீதா வண்டியிலிருந்து இறங்கியதும், “இன்று ராத்திரியே கல்கத்தா போகப் போகிறாயல்லவா? கட்டாயம் போய்விடு, சூரியா!” என்றாள். “போகத்தான் போகிறேன், சீதா?” “நாம் மறுபடியும் எப்போது சந்திக்கிறோமோ என்னமோ? ஆனால் என்னிடம் உனக்குள்ள அபிமானத்தையும் நீ எனக்குச் செய்திருக்கும் உதவியையும் ஒருநாளும் நான் மறக்கமாட்டேன்” என்றாள் சீதா. “நானும் உன்னை ஒருநாளும் மறக்க முடியாது, அத்தங்கா!” சீதா சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்தாள். சூரியா வண்டியிலிருந்து இறங்கி அவள் போவதையே பார்த்துக் கொண்டு நின்றான். வெண்ணிலா துல்லியமாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. பக்கத்து வீடுகளின் தோட்டங்களிலிருந்து இரவு பூக்கும் மலர்களின் சுகந்தம் வந்துகொண் டிருந்தது. காற்று மிருதுவாக வீசிற்று; பக்கத்து வீடு ஒன்றிலிருந்து, “ஸோஜா ராஜ குமாரி! ஸோஜா!” என்னும் கிராமபோன் கீதம் கேட்டுக் கொண்டிருந்தது. இத்தகைய சூழ்நிலையில் சீதா மேலே மேலே அந்தச் சாலையில் தன்னந்தனியாகப் போய்க் கொண்டிருந்தது ஏதோ ஒரு சினிமாப் படத்தில் வரும் காட்சியைப் போல் தோன்றியது. சீதாவின் வருங்கால பாக்கியம் எப்படியோ? அவளுடைய மன மாறுதலைப்பற்றி அவள் சொன்னதெல்லாம் உண்மைதானா? அல்லது நம்மிடம் அவ்விதம் சொல்லிவிட்டுச் சென்று, விஷத்தை அருந்திச் சாகப் போகிறாளா? அப்படி நேர்ந்தால் அந்தச் சாவில் நமக்கு பொறுப்பு இல்லாமல் போகுமா?" என்று சூரியா எண்ணமிட்டுக் கொண்டிருந்தான். பின்னால் தொடர்ந்து வந்துகொண்டிருந்த கார் சூரியாவைத் தாண்டிப் போயிற்று. அதனுடைய நம்பர் 1111 என்பது மறுபடியும் அவனுடைய கண்ணில் பட்டுக் கவனத்தில் பதிந்தது. வேகமாகச் சென்ற அந்த மோட்டார் கார் பட்டென்று பிரேக் போடப்பட்டுச் சீதாவின் அருகில் நின்றது. வண்டியிலிருந்து இரண்டு பேர் குதித்தார்கள். சீதாவைப் பலவந்தமாகக் காருக்குள் தள்ளினார்கள். தாங்களும் ஏறிக்கொண்டார்கள், கதவு சாத்தப்பட்டது. வண்டி ‘கிர்’ என்ற சத்தத்துடன் திரும்பி சூரியா நின்ற வழியாகவே மறுபடியும் வரத் தொடங்கியது. இவ்வளவும் சுமார் அரை நிமிஷத்துக்குக் குறைவான நேரத்தில் நடந்துவிட்டது. சூரியாவின் மூளை சற்று நேரம் செயலிழந்து போயிருந்தது. ஆனால் அந்த வண்டி நின்ற இடத்தைத் தாண்டிச் சென்றபோது மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. வண்டிக் குள்ளிருந்து ‘அம்மாஞ்சி’ என்ற தீனக்குரல் வந்தது போலத் தோன்றியது. சூரியா தன் கால்சட்டைப் பையிலேயே வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து அந்த வண்டியின் டயர்களை நோக்கிச் சுட்டான். டயர் மீது குண்டு படவில்லை. சட்டென்று பக்கத்தில் நின்ற டாக்ஸிக்குள் ஏறிக்கொண்டு, “அதோ அந்த வண்டிக்குப் பின்னால் விடு! உனக்கு வேண்டியதைத் தருகிறேன்! இல்லாவிட்டால் உன்னைச் சுட்டுக் கொன்று விடுவேன்!” என்றான். “பெட்ரோல் குறைவாக இருக்கிறது, சாகிப்!” என்றான் வண்டியின் டிரைவர். “அதனால் பரவாயில்லை பெட்ரோல் இருக்கிறவரையில் வண்டியை ஓட்டு சீக்கிரம்!” என்றான் சூரியா. இந்தச் சமயம் பார்த்து ஒரு போலீஸ்காரன் அங்கு வந்து “சுட்டது நீதானா? அந்தத் துப்பாக்கியை இப்படிக் கொடு!” என்று கேட்டான். சூரியா அந்தப் போலீஸ்காரனைப் பிடித்து வேகமாக ஒரு தள்ளுத் தள்ளினான். போலீஸ்காரன் தூரப் போய் விழுந்தான். “ஜாவ்! ஜாவ்!” என்று சூரியா அதட்டினான். டாக்ஸி டிரைவரும் மூளை குழம்பிப் போய் வண்டியை அதி வேகமாக விட்டுச் சென்றான். விழுந்த போலீஸ்காரன் எழுந்து மூன்று தடவை விசில் ஊதினான். சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு ஜீப் வண்டி வந்தது. அதில் நாலு போலீஸ்காரர்கள் இருந்தார்கள். இந்தப் போலீஸ்காரனும் அதில் ஏறிக்கொண்டு ஏதோ சொன்னான். ஜீப் வண்டி இரண்டு வண்டிகளைத் தொடர்ந்து அதிவேகமாகச் சென்றது. பதினேழாம் அத்தியாயம் - யமுனை தடுத்தது சீதாவை ஏற்றிக்கொண்ட மோட்டார் புது டில்லியிலிருந்து ஷாஜஹான் புரத்தை நோக்கி அதிவிரைவாகச் சென்றது. வெள்ளி வீதி வழியாகப் போய், ஜும்மா மசூதியைத் தாண்டி, செங்கோட்டையை வலப் புறத்தில் விட்டு, ரயில்வே தண்டவாளத்தைக் கடந்து அப்பால் சென்று, யமுனைப் பாலத்தை நெருங்கிற்று. முதலில் சிறிது நேரம் சீதா திக்பிரமை கொண்டிருந்தாள். பின்னர் சூரியாவின் எச்சரிக்கை நினைவு வந்தது. தன்னைப் பின் தொடர்ந்து சூரியா வருகிறான் என்ற எண்ணத்தினால் சற்றுத் தைரியமாயிருந்தாள். எப்படியும் சூரியாவின் கார் இந்தக் காரைப் பிடித்துவிடும் என்று நம்பியிருந்தாள். ஆனால் யமுனைப் பாலத்தைக் கார் நெருங்கியதும் அவளுடைய மனதில் ‘திக்’ என்றது. அது மிகவும் குறுகலான பாலம், வண்டிகள் ஒரு வரிசை தான் அதில் போகலாம். இரண்டு பக்கத்திலிருந்தும் வரும் வண்டிகள் ஒரே சமயத்தில் அந்தப் பாலத்தில் போக முடியாது. பாலத்தின் இரு முனைகளிலும் போலீஸ்காரர்கள் நிற்பார்கள். ஒரு பக்கத்துக் கார்களை விடும்போது மற்றொரு முனையில் உள்ள போலீஸ்காரர்கள் அங்கு வரும் கார்களையெல்லாம் தடுத்து நிறுத்தி வைப்பார்கள். பிறகு இந்த முனையிலிருந்து கார்களை விடும்போது அந்த முனையிலிருந்து வரும் வண்டிகளை நிறுத்தி வைப்பார்கள். இது சீதாவுக்கு நினைவு வந்தது. தான் ஏறியுள்ள வண்டியைப் பாலத்தில் போக விட்டு விட்டு, பின்னால் வருகிற சூரியாவின் காரை நிறுத்திவிட்டால் என்ன செய்கிறது என்ற துணுக்கமடைந்தாள். சூரியாவின் வண்டியோ பின்னால் இரண்டு பர்லாங்கு தூரத்தில் வந்து கொண்டிருந்தது. சீதா பயந்தவண்ணமே ஆயிற்று; அவள் ஏறியிருந்த வண்டி பாலத்தில் சென்றதும், பின்னால் வருகிற வண்டிகள் நிற்க வேண்டும் என்று போலீஸ்காரன் கையைக் காட்டி விட்டான். சீதாவின் வண்டி பாலத்தைக் கடந்தவுடனே அந்த முனையில் காத்திருந்த வண்டிகள் பாலத்தில் விடப்படுவதைச் சீதா கவனித்தாள். உடனே ஒரு பெரும் பீதி சீதாவை பற்றிக் கொண்டது. அவளுடைய வயிற்றிலிருந்து குடல் மேலே கிளம்பி மார்பை அடைத்தது போலவும் மார்பிலிருந்து நெஞ்சு கிளம்பித் தொண்டையை அடைத்தது போலவும் இருந்தது. தலைக்குள்ளே வெடிகுண்டு வெடித்து நாலாபுறமும் சிதறிச் சென்றது போலத் தோன்றியது. தன்னையறியாத ஆக்ரோஷத்துடன் ‘வீல்’ என்று ஒரு தீர்க்கமான கூச்சல் போட்டுக் கொண்டு சீதா ஓடுகிற காரிலிருந்து குதிக்க முயன்றாள். பக்கத்திலிருந்த மனிதன் அவளுடைய முகத்தைப் பார்த்து ஓங்கி ஒரு அறை கொடுத்தான் உடனே சீதாவின் கூச்சல் நின்றது. காரிலிருந்து குதிக்கும் முயற்சியும் நின்றது. வண்டிக்குள் நிசப்தம் குடிகொண்டது. எதிர்ப்புறமாகப் போய்க்கொண்டிருந்த வண்டிகளிலிருந்து சிலர் இந்த வண்டியிலிருந்து ஏதோ கூச்சல் வந்ததைக் கவனித்துக் காரை உற்றுப் பார்த்தார்கள். ஆனால் அவர்களால் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. கண்டுபிடிக்க முடியாதபடி சீதாவை ஏற்றிக் கொண்டிருந்த மோட்டார் வண்டி அதிவேகமாகச் சென்றது. அந்த முரட்டு மனிதன் முகத்தில் கொடுத்த அறை சீதாவுக்கு தன் சுய புத்தியைத் திருப்பிக் கொடுத்தது. ஒரு நொடியில் அவள் மனம் அமைதி அடைந்தது. தன்னுடைய நிலைமையைப் பற்றிச் சீதா நிதானமாக யோசிக்கத் தொடங்கினாள். சாயங்காலம் சூரியா தனக்கு எச்சரிக்கை செய்தபோது தான் அலட்சியமாகப் பேசியதை ஞாபகப்படுத்திக் கொண்டாள். இப்போது தனக்கு உண்மையிலேயே ஆபத்து வந்து விட்டது. யார் தன்னைக் கொண்டு போகிறார்கள்? எதற்காகக் கொண்டு போகிறார்கள்? வட இந்தியாவில் அவ்வப்போது நடந்த நர கோரங்களைப் பற்றியும் பெண் விற்பனையைப் பற்றியும் அவள் கேள்விப்பட்டிருந்த வரலாறுகள் அலையலையாக நினைவுக்கு வந்தன. எங்கேயாவது கொண்டுபோய்த் தன்னை விற்று விடுவார்களோ என்று எண்ணிய போது அவளுடைய தேகம் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரையில் நடுங்கியது. அல்லது ஒருவேளை யாராவது ஒரு துர்த்தனான மகாராஜா அல்லது நவாபின் அந்தப்புரத்தில் கொண்டு போய்த் தன்னைச் சேர்த்து விடுவார்களோ? இந்த மாதிரிச் சம்பவங்களைப் பற்றியும் அவள் கேட்டிருந்தாள்; கதைகளிலும் பத்திரிக்கைகளிலும் படித்திருந்தாள். தன் விஷயத்தில் அப்படியெல்லாம் நடக்கக் கூடுமென்று எதிர்பார்க்கவில்லை ஆனால் இப்போது…? ஒரு விஷயம் நிச்சயம் வெறும் கூச்சல் போடுவதினாலோ பலாத்காரத்தினாலோ இந்த யமகிங்கரர்களிடமிருந்து தப்பித்துச் செல்ல முடியாது. தான் படித்திருந்த நாவல்களில் இம்மாதிரியான அபாயத்துக்குள்ளான பெண்கள் என்னென்ன விதமான தந்திரங்களைக் கையாண்டு தப்பினார்கள் என்று யோசித்துப் பார்த்தாள். ஞாபகத்துக்கு வந்தது ஒன்றும் தன் விஷயத்தில் காரியத்துக்கு உதவும் என்றும் தோன்றவில்லை. தெய்வாதீனமான உதவிகளும் சந்தர்ப்பங்களும் கிடைத்ததினாலேயே அவர்கள் தப்பியிருக் கிறார்கள். தனக்கோ, வந்த உதவியையும் தெய்வம் குறுக்கே நின்று தடுத்துவிட்டது! ஆகா! யமுனா நதியே! கண்ணன் விளையாடிய புண்ணிய யமுனா நதியே! உனக்கு நான் என்ன அபசாரம் செய்தேன்? ஏன் என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டாய்? நல்ல சமயத்தில் சூரியாவைத் தடுத்து நிறுத்தி விட்டாயே? எத்தகைய பயங்கரமான படுகுழியில் விழப் போகிறேனோ தெரியவில்லையே? ஆனால் அதற்குள்ளாக ஏன் நிராசை அடைய வேண்டும்? சூரியா எப்படியும் தொடர்ந்து வராமல் இருந்து விடுவானா? கால் மணி தாமத மாயிருக்கும் அவ்வளவுதானே? அதற்காகத் தன்னைப் பின் தொடர்வதை விட்டு விடுவானோ? ஒருநாளும் மாட்டான் வந்து கொண்டு தானிருப்பான். ஆகையால் இந்தக் காரை எங்கேயாவது தாமதப்படுத்தினால் நல்லது; அது ஒன்றுதான் வழி எப்படிக் காரைத் தாமதப்படுத்துவது? ஆம்; எங்கேயாவது ஊர் கண்ட இடத்தில் ‘தாகமாயிருக்கிறது’ என்று சொல்லலாம். அப்புறம் ‘பசிக்கிறது’ என்று சொல்லலாம். அதற்கு அந்த மனிதர்களோடு நல்லதனமாகப் பேசி முன்னாடியே சிநேகம் செய்து கொள்ள வேண்டும். இப்படிச் சீதா தீர்மானித்து எப்படிப் பேச்சுத் தொடங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, அந்த மனிதனே பேசினான். “மகளே நீ கூச்சல் போடாமலும் தொந்தரவு கொடுக்காமலும் இருந்தால் உமக்கு ஒரு கஷ்டமும் ஏற்படாது. நன்மைதான் ஏற்படும் உன்னை அடிக்க நேர்ந்ததற்காக ரொம்பவும் வருத்தப்படுகிறேன்!” என்றான். அந்த மனிதன் நடுப்பிராயத்தைக் கடந்த முதிய மனிதன் என்பதைச் சீதா கவனித்திருந்தாள். அவனுடைய குரலும் பேச்சின் பாணியும் உண்மையாகவே அவன் அன்புடனும் அனுதாபத்துடனும் பேசுகிறான் என்று தெரியப்படுத்தின. ஆகையால் சீதா மனதைத் திடப்படுத்திக் கொண்டு “நீங்கள் யார்? என்னை எங்கே அழைத்துக்கொண்டு போகிறீர்கள்?” என்று கேட்டாள். “அப்படிக் கேள், சொல்கிறேன்! உன்னை உன் மாதாஜியிடம் அழைத்துப் போகிறோம்” என்று அந்த மனிதன் சொன்னான். சீதாவுக்கு குபீர் என்று சிரிப்பு பீறிக்கொண்டு வந்தது. அவளுடைய மாதாஜி இறந்து எத்தனையோ வருஷம் ஆயிற்று. அகண்ட காவேரிக் கரையில் அன்னையின் உடம்பு எரிந்து சாம்பலாகி எவ்வளவோ காலம் ஆயிற்று. அதற்குப் பிறகு சென்ற காலம் ஒரு யுகம் போலத் தோன்றியது. இப்போது இந்த வடக்கத்தியான் “உன்னை உன் தாயாரிடம் அழைத்துப் போகிறேன்” என்கிறான் இது என்ன பைத்தியக் காரத்தனம்? ஒருவேளை கனவு காண்கிறோமா? அல்லது தனக்கு மரணமே சம்பவித்து விட்டதா! மரணத்துக்குப் பிறகு நடப்பதா இது? இவர்கள்தான் யம தூதர்களா? உண்மையிலேயே மறு உலகத்தில் உள்ள தன் தாயாரிடம் தன்னை அழைத்துச் செல்கிறார்களா….அப்படி இருக்க முடியாது மறு உலகப் பிரயாணம் மோட்டாரில் நடைபெறும் என்று கேட்டதே இல்லையே? இந்த மனிதர்களும் ஆவி வடிவத்தினராகத் தோன்றவில்லையே? சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளச் சீதா தன்னைத் தானே கிள்ளிப் பார்த்துக்கொண்டாள். கிள்ளிய இடத்தில் வலித்தது தான் உயிரோடும் உடலோடும் இருப்பது நிச்சயம். பின்னர், இந்த மனிதன் இப்படிச் சொல்லுவதின் அர்த்தம் என்ன? அவன் சொன்னதைத் தான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்ற சந்தேகம் சீதாவுக்கு உதித்தது. “என்னை எங்கே அழைத்துப் போகிறீர்கள்?” என்று அந்த மனிதனைப் பார்த்து மறுபடி கேட்டாள். “அதுதான் சொன்னேனே? உன் தாயாரிடம் அழைத்துப் போகிறோம். சகோதரரும் உன்னைப் பார்க்க ஆவலாயிருக் கிறார்!” என்று அம்மனிதன் சொன்னான். சீதாவின் திகைப்பு அதிகமாயிற்று சகோதரன்! தன்னுடைய சகோதரன்! சீதாவுக்கு முன்னால் பிறந்த ஆண் குழந்தையைப் பற்றி அவளுடைய தாயார் சில சமயம் கூறியதுண்டு. ஆனால் பிறந்து மூன்று மாதத்திற்குள் அந்தக் குழந்தை செத்துப் போயிற்று. அதைக் குறித்து அடிக்கடி அவள் தாயார் புலம்புவாள். "அவன் முகத்திலே பால் வடிந்தது, ராஜகளை சொட்டியது சிரித்தால் ரோஜா மொட்டு மலருவதைப் போல இருக்கும். அவன் உயிரோடிருந்தால் எனக்கு ஒரு கவலையும் இல்லை. உன் தகப்பனார் இந்த மாதிரி இருப்பதைப் பற்றிக் கவலைப் படவே மாட்டேன். எனக்கும் உனக்கும் கொடுத்து வைக்கவில்லை!" என்று ராஜம்மாள் அடிக்கடி புலம்பியது சீதாவுக்கு ஞாபகம் வந்தது. ஆனால் அந்தக் குழந்தை தான் பிறப்பதற்கு இரண்டு வருஷம் முன்பே செத்துப் போயிற்று. வேறு சகோதரன் தனக்குக் கிடையாது. ஆகா! உண்மையிலேயே ஒரு சகோதரன் மட்டும் தனக்கு இருந்திருந்தால்?…. இத்தகைய கஷ்டங்கள் எல்லாம் நேர்ந்திருக்குமா? இந்த மனிதன் தன்னைப்பார்க்க சகோதரன் காத்துக்கொண்டிருப்பதாக உளறுகிறான்! எதற்காக இம்மாதிரி இவன் பொய் சொல்ல வேண்டும்?….. சீதாவின் எண்ணப் போக்கில் திடீரென்று ஒரு தடை ஏற்பட்டது. ஏதோ ஒரு நிழல் போன்ற எண்ணம் ஆச்சரியமான சந்தேகம் சாத்தியமென்று நம்புவதற்கு முடியாத அபிலாஷை… தோன்றியது. ஆனால் ஏன் உண்மையாயிருக்க முடியாது? இந்த மனிதன் எதற்காக இப்படிப்பட்ட பொய்யைக் கற்பனை செய்து சொல்ல வேண்டும்? தன்னுடைய பிறப்பைக் குறித்து ஏதோ ஒரு மர்மம் இருக்க வேண்டும் என்று சில சமயம் தான் பகற்கனவு கண்டது உண்மையாயிருக்குமோ? “கல்யாணத்தை நிறுத்தி விடவும்” என்று தன் தகப்பனார் தந்தி அடித்ததின் காரணத்தை அவர் சொல்லவே இல்லை. அதைப் பற்றித் தனக்கு ஏற்பட்ட சந்தேகங்களில் ஏதேனும் உண்மை இருக்குமோ? சீச்சீ! என்ன அசட்டுத்தனம்! ஓயாமல் கற்பனைக் கதைகளும் மர்மம் நிறைந்த நாவல்களும் படித்ததின் பலனே இந்தப் பிரமையெல்லாம் என்று பல தடவை அவற்றை ஒதுக்கித் தள்ளியிருக்கிறோமே? மறுபடியும் அந்தப் பிரமைகளுக்கு ஏன் இடம் கொடுக்க வேண்டும்? ஆனால் இப்போது தன் வாழ்க்கையில் நடக்கும் சம்பவம் கற்பனைக் கதைகளையெல்லாம் மிஞ்சியதாயிருக்கிறதே! துப்பறியும் நாவல்களில் வரும் மர்மத்தைக் காட்டிலும் பெரிய மர்மமாயிருக்கிறதே! உண்மையில் இந்த மனிதர்கள், யார்? எதற்காகத் தன்னைக் கொண்டு போகிறார்கள்? போகுமிடத்தில் என்னுடைய கதி என்ன ஆகப் போகிறது!… கொஞ்ச தூரத்தில் தீப வரிசைகள் தெரிந்தன. ஏதோ ஒரு பட்டணத்தை நெருங்குகிறோம் என்பதற்கு அறிகுறியான சந்தடி கேட்டதுடன் மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டு வந்தது. ஒருவேளை சூரியா பின்தொடர்ந்து வருவதாயிருந்தால் அவனுக்கு இந்தக் காரைப் பிடிக்க அவகாசம் ஏற்படுவதற்கு யுக்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மறுபடியும் சீதாவின் மனதில் உதித்தது. “எனக்கு வயிற்றைப் பசிக்கிறது; தாகம் எடுக்கிறது சாப்பிடுவதற்காவது குடிப்பதற்காவது ஏதாவது கிடைக்குமா?” என்று சீதா கேட்டாள். காரைத் தாமதப்படுத்த வேண்டும் என்றுதான். “ஆகட்டும்; பார்க்கலாம்” என்றான் அந்த மனிதன். சீதாவுடன் இதுவரையில் ஹிந்தியில் பேசி வந்தவன் காரின் முன் பகுதியில் இருந்தவர்களிடம் வேறொரு பாஷையில் ஏதோ பேசினான். அந்த பாஷை பஞ்சாபியாகவோ அல்லது மார்வாரியாகவோ இருக்க வேண்டும் சீதாவுக்கு நன்றாகத் தெரியவில்லை. ஏதோ ஒரு பட்டணத்தின் குறுகலான வீதிகளின் வழியாகக் கார் சென்றது. கடைத் தெருவில் ஒரு ஹோட்டலுக்கு எதிரில் நின்றது. அந்த ஹோட்டல் வாசலில் பூரிகள், லட்டுகள் மற்றும் தித்திப்புப் பண்டங்கள் விற்பதற்கு வைத்திருந்தன.அந்தப் பண்டங்களின் மீது ஆயிரம் கோடி ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. அடுப்பில் சட்டுவத்தில் கொதித்துக் கொண்டிருந்த பழைய நெய்யின் மணம் சாக்கடை நாற்றத்தோடு கலந்து வந்து மூக்கைத் தாக்கியது. வாய் அகன்ற பெரியதொரு பித்தளைச் சட்டுவத்தில் கெட்டியான பால் காய்ந்து கொண்டிருந்தது. காரிலிருந்து ஒருவன் இறங்கி அந்தக் கடையண்டை போனான். சீதாவுக்கு ஒரு கணம் அங்கே கூச்சல் போட்டு ரகளை செய்யலாமா என்று தோன்றியது. உடனே அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டாள். தெருவிலே போய்க் கொண்டிருந்த மனிதர்களைப் பார்த்ததும், “இங்கே கூச்சல் போடுவது ஒரு ஆபத்திலிருந்து இன்னொரு ஆபத்தில் தாண்டிக் குதிப்பதாகும்” என்று அவளுக்குத் தோன்றியது. அது மட்டுந்தானா காரணம்? அவளுடைய உள்ளத்தின் அந்தரங்கத்தில், இந்தப் பிரயாணத்தின் முடிவுதான் என்ன? என்று தெரிந்து கொள்ளும் ஆவல் குடிகொண்டிருந்ததும் ஒரு காரணமாயிருக்கலாம். மனித உள்ளத்தின் விசித்திரங்களைப் பூரணமாகக் கண்டறிந்தவர்கள் யார்? இறங்கிய மனிதன் பூரியும் மிட்டாயும் பொட்டணம் கட்டி எடுத்துக் கொண்டு, ஒரு பெரிய மண் சட்டியில் கொதிக்கின்ற பாலும் வாங்கிக் கொண்டு காரில் வந்து ஏறினான். வண்டியைத் தாமதப்படுத்தலாம் என்கிற சீதாவின் நோக்கம் அவ்வளவாக நிறைவேறவில்லை. ஏனெனில் ஐந்து நிமிஷத்துக்கு மேல் அந்த இடத்தில் வண்டி நிற்கவில்லை. அந்தப் பட்டணத்தைக் கடந்து கொஞ்ச தூரம் போனதும் மறுபடியும் சாலையின் இருபுறமும் ஒரே பொட்டல் திடலாகக் காட்சியளித்தது. குட்டை குட்டையான கருவேல மரங்களையும் குத்துக் குத்தான புரசஞ் செடிகளையும் தவிர வேறு எதுவும் காணப்படவில்லை. கொஞ்ச தூரம் அந்தச் சாலையில் சென்ற பிறகு கார் மறுபடியும் நின்றது. சீதாவைப் பார்த்து அந்த மனிதன், “பூரியும் மிட்டாயும் சாப்பிடுகிறாயா?” என்று கேட்டான். பூரி மிட்டாயின் பேரில் மொய்த்திருந்த ஈக்களின் ஞாபகம் வரவே சீதா, “வேண்டாம்” என்றாள். “பசிக்கிறது என்று சொன்னாயே?” என்று அந்த மனிதன் கேட்டான். “பூரி மிட்டாய் பிடிக்காது, அரிசிச் சாதம்தான் எனக்குப் பிடிக்கும்” என்று சொன்னாள் சீதா. “ஆகா; இந்தப் பெண்ணின் பேச்சைப் பார்! அரிசிச் சாதம் வேண்டுமாம்!” என்று சொல்லி அந்த மனிதன் சிரித்தான். பிறகு, “கொஞ்சம் பாலாவது சாப்பிடு” என்றான். அதையும் வேண்டாம் என்று சொல்லுவது சந்தேகத்துக்கு இடமாகும் என்று சீதா எண்ணி, “சரி சாப்பிடுகிறேன்” என்றாள். மண் சட்டியிலிருந்து டம்ளரில் பாலை ஊற்றிச் சீதாவிடம் கொடுத்தார்கள். பால் கமகமவென்று ஏலக்காய், குங்குமப்பூ மணம் வீசிக்கொண்டி ருந்தது. சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாகவும் இருந்தது. சீதா பால் சாப்பிட்டவுடன் கார் மறுபடியும் கிளம்பிற்று. சிறிது நேரத்துக்கெல்லாம் சீதாவுக்கு கண்ணைச் சுழற்றிக் கொண்டு தூக்கம் வந்தது. இது தூக்கம்தானா? அல்லது மயக்கமா? ஒருவேளை பாலில் எதையாவது கலந்து கொடுத்திருப் பார்களா? சீதா உடம்பு சுரமாய்க் கிடந்தபோது ஒவ்வொரு நாள் மருந்து சாப்பிட்ட பிறகு இப்படித்தான் மயக்கமும் தூக்கமும் கலந்து வந்தது என்பது ஞாபகம் வந்தது. "ஐயோ! மயக்க மருந்து எதற்காகக் கொடுத்தார்கள். தன்னைக் கொன்று விடுவார் களோ? கொன்று அந்த வனாந்தரத்தில் எறிந்து விடுவார்களோ? ஐயோ! இந்தக் கதிக்கா ஆளாகப் போகிறேன். என் அருமைக் கண்மணியைப் பார்க்காமல் போகிறேன்? ஆகா! அவருக்கு நன்றாய் வேண்டும்! நான் கொலையுண்டு செத்துப் போனதை அறிந்து அவர் சந்தோஷப்படட்டும்! ஒரு கணம் கூச்சல் போடலாமா என்று சீதா நினைத்தாள். ஆனால் கூச்சல் போட முடியவில்லை. கண்ணைச் சுழற்றியது தலை சுற்றியது; உடம்பு சோர்ந்தது. சாலையில் மறுபடியும் வண்டி நின்றது போலத் தோன்றியது. எதிரில் வந்த ஒரு வண்டி பக்கத்தில் நின்றது ஏதோ தெரியாத பாஷையில் பேசிக் கொண்டார்கள். கிணற்றுக் குள்ளிருந்து பேசுவது போலக் கேட்டது. புதிதாக வந்த காரிலிருந்து ஒரு மூதாட்டி இறங்கி வந்து சீதா இருந்த வண்டியில் அவள் பக்கத்தில் ஏறிக் கொண்டது போலிருந்தது. அப்புறம் சீதா அடியோடு நினைவை இழந்து நித்திரையில் ஆழ்ந்தாள். பதினெட்டாம் அத்தியாயம் - மண்டை உடைந்தது வைஸ்ராயின் நிர்வாக சபை அங்கத்தினர் கொடுத்த ஜாஜ்வல்யமான இரவு விருந்து முடிவடைந்து, விருந்தாளிகள் அவரவர்களுடைய கார் கிடைத்துப் புறப்படுவதற்கு அரைமணி நேரம் ஆயிற்று. வழக்கம்போல் ராகவனுடைய காரில் மாஜி திவானும் அவருடைய புத்திரிகளும் ஏறிக் கொண்டார்கள்; வண்டி போய்க் கொண்டிருந்தபோது தாமாவும் பாமாவும், விருந்தில் பார்த்தவை களையும் கேட்டவைகளையும் பற்றிச் சளசளவென்று பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் வழக்கம் போல ராகவன் அந்த பேச்சுக்களில் கலந்து கொள்ளாமல் மௌனமாக இருந்தான். மாஜி திவானுடைய பங்களா வாசலில் வண்டி நின்றதும் அவரும் அவருடைய புதல்விகளும் காரிலிருந்து இறங்கினார்கள் ராகவன் இறங்கவில்லை. “மிஸ்டர் ராகவன்! நீங்கள் வரவில்லையா? ஒரு ஆட்டம் போடலாமே?” என்று தாமா கேட்டாள். “இல்லை; இன்றைக்கு வீட்டுக்குச் சீக்கிரமாகப் போக வேண்டும்” என்றான் ராகவன். அப்போது பாமா தாமாவிடம் ஏதோ இரகசியமாகச் சொல்ல இருவரும் கலகலவென்று சிரித்தார்கள். ராகவன் வண்டியிலிருந்து இறங்கி பங்களா முகப்பு வரையில் அவர்களுடன் சென்று, அங்கே நின்றான். “நீங்கள் எதற்காகச் சிரித்தீர்கள் என்று எனக்குத் தெரியும்” என்றான். “பின்னே தெரியாமல் இருக்குமா? விருந்தில் தாரிணியைப் பார்த்துப் பேசியதில் மதி மயங்கிப் போயிருக்கிறீர்கள் என்று சொன்னேன். அது உண்மைதானே?” என்று சொல்லித் தாமா மறுபடியும் சிரித்தாள். “அதில் ஒரு பாதிதான் உண்மை; தாரிணியைப் புரட்சிக்காரி என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தீர்களே? அது எவ்வளவு பெரிய தவறு என்று தெரிந்து கொண்டீர்களா?” என்று ராகவன் கேட்டான். “மிஸ்டர் ராகவன்! அது எப்படித் தவறு என்று சொல்கிறீர்கள்?” “புரட்சிக்காரியாயிருந்தால் இன்றைய விருந்துக்கு வந்திருக்க முடியுமா? விருந்து கொடுத்த நிர்வாக சபை அங்கத்தினரும் அவருடைய மனைவியும் தாரிணியிடம் எவ்வளவு சிநேகமாக நடந்து கொண்டார்கள் பார்க்கவில்லையா? இன்னும் என்ன அத்தாட்சி வேண்டும்?” “ஓ! ராகவன்! சில காரியங்களில் நீங்கள் இன்னும் பச்சைக் குழந்தையாக இருக்கிறீர்கள்! தாரிணி புரட்சிக்காரியாயிருந்தால் அவள் இன்றைய விருந்துக்கு வந்திருக்க முடியாதா? அது அவள் எவ்வளவு சாமர்த்தியசாலி என்பதைக் காட்டுகிறது!” “நம்முடைய சி.ஐ.டி. போலீஸார் எவ்வளவு சாமர்த்தியசாலிகள் என்பதையும் காட்டுகிறது?” என்றான் ராகவன். “அதுவும் உண்மை சி.ஐ.டி. போலீஸார் வேண்டுமென்று தான் அவளை விட்டு வைத்திருக்கிறார்கள். டில்லியில் புரட்சிக் கூட்டம் தங்கும் இரகசிய இடம் ஒன்று இருக்கிறது. அதைக் கண்டுபிடிப் பதற்காக அவளைப் பிடிக்காமல் சும்மா விட்டு வைத்திருக்கிறார்கள்!” என்றாள் தாமா. “அப்படியா? நம்ப முடியாத விஷயமாக இருக்கிறதே!” “நீங்கள் நம்ப முடியாத விஷயங்கள் இன்னும் எத்தனையோ இருக்கின்றன. அது போகட்டும் இன்றைக்கு வீட்டுக்குப் போவதற்கு அவசரம் என்ன?” “இரண்டு நாளாகச் சீதாவுக்கு உடம்பு அதிகமாயிருக்கிறது. அவளுடைய மனோநிலை மேலும் கெட்டிருக்கிறது. அதனால் தான் சீக்கிரம் வீடு போகிறேன். ஒரு மாதம் லீவு எடுத்து அவளை மதராஸில் கொண்டு போய் விட்டு வரலாம் என்று இருக்கிறேன்.” “ஓகோ! இப்போது தெரிகிறது; நீங்களும் சீதாவும் மட்டும் போகிறீர் களா? தாரிணியும் கூட வருகிறாளா?” “நீங்கள் சீதாவை மதராஸில் கொண்டு போய் விட்டு விட்டுப் பம்பாய்க்குப் போகப் போகிறீர்களாக்கும்!” “உங்களுக்கு எப்படித் தெரிந்தது? கிட்ட இருந்து கேட்டது போலச் சொல்லுகிறீர்களே?” என்றான் ராகவன் அதிசயத்துடன். “பாம்பின் கால் பாம்புக்குத் தெரியும் என்ற பழமொழி தெரியாதா?” என்றாள் பாமா. இந்தச் சமயத்தில் பங்களாவுக்குள்ளே டெலிபோன் மணி அடித்தது. ஏற்கெனவே பங்களாவுக்குள் சென்றிருந்த ஸ்ரீ ஆதிவரா காச்சாரியார் டெலிபோனை எடுத்து “யார்?” என்று கேட்டு விட்டு, “மிஸ்டர் ராகவனுக்கு டெலிபோன்” என்றார். ராகவன் உள்ளே போய் டெலிபோனை வாங்கிச் செய்தியைக் கேட்டான். அவனுடைய முகத்தில் கவலையும் பயமும் குடிகொண்டன. “என்ன? என்ன?” என்று தாமாவும் பாமாவும் கேட்டார்கள். “சீதா சாயங்காலம் வெளியில் உலாவச் சென்றவள் இன்னும் திரும்பி வரவில்லையாம் வேலைக்காரன் சொல்கிறான்!” “சீக்கிரம் போய்ப் பாருங்கள்; சாயங்காலம் எட்டு மணி சுமாருக்கு ஜந்தர் மந்தர் பக்கத்தில் ஏதோ கலாட்டா என்றும் துப்பாக்கிச் சத்தம் கேட்டது என்றும் விருந்தில் பேசிக் கொண்டார்கள்!” என்றாள் தாமா. “சீதாவுக்கும் துப்பாக்கிச் சத்தத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?” என்று ராகவன் கேட்டான். “இந்தக் காலத்தில் எப்போது என்ன நடக்கும் என்று சொல்வதற்கில்லை. எல்லாவற்றுக்கும் உடனே போய்ப் பாருங்கள். ஏதாவது உதவி தேவையாயிருந்தால் எங்களுக்கு டெலிபோன் பண்ணத் தயங்க வேண்டாம்!” என்றாள் பாமா. “ஆமாம் அப்பா! சீக்கிரம் போய்ப் பார்! அவசியமாயிருந்தால் டெலிபோன் பண்ணு!” என்றார் ஆதிவராகாச்சாரியார். சௌந்தரராகவன் வீடு போய்ச் சேர்ந்த பிறகு புதிய விவரம் எதுவும் தெரிந்து கொள்ள முடியவில்லை. சாயங்காலம் வழக்கம் போல் உலாவச் சென்ற அம்மாள் திரும்பி வீட்டுக்கு வரவில்லை என்று மட்டும் வேலைக்காரர்கள் சொன்னார்கள். “யாராவது சிநேகிதர்கள் வீட்டிலிருந்து டெலிபோன் ஏதாவது வந்ததா?” என்று ராகவன் கவலையுடன் கேட்டான். “சிநேகிதர்கள் வீட்டிலிருந்து டெலிபோன் வரவில்லை. ஆனால் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து நாலு தடவை கூப்பிட்டார்கள்” என்று சமையற்காரப் பையன் சொன்னான். ராகவன் சிறிது திடுக்கிட்டு, “போலீஸ் ஸ்டேஷனிலிருந்து என்ன செய்தி வந்தது?” என்று கேட்டான். “ஒன்றும் இல்லை எஜமான் வீட்டுக்கு வந்துவிட்டாரா? என்று கேட்டார்கள் அவ்வளவுதான்!” என்றான் சமையற்காரப் பையன். பிறகு ராகவன் போலீஸ் ஸ்டேஷனுக்கு டெலிபோன் செய்தான். அவனுக்குத் தெரிந்த சிநேகிதரான போலீஸ் உத்தியோகஸ்தர் பேசினார். “யார் மிஸ்டர் ராகவனா? உங்களை ஒன்பது மணியிலிருந்து கூப்பிட்டுக் கொண்டி ருக்கிறேன். விருந்துக்குப் போய் இப்போது தான் திரும்பினீர்கள் போலிருக்கிறது! இங்கே உடனே புறப்பட்டு வந்தால் நல்லது!” என்றார்.“என்ன விசேஷம்?” என்று ராகவன் கேட்டான் “விசேஷத்தை நேரில் தான் சொல்ல வேண்டும். உடனே புறப்பட்டு வாருங்கள்!” என்று சொன்னார் போலீஸ் அதிகாரி. “இங்கே எனக்கு ஒரு தொந்தரவு நேர்ந்திருக்கிறது. என்னுடைய மனைவி சீதா சாயங்காலம் உலாவச் சென்றவள் இன்னும் திரும்பி வரவில்லை தகவல் ஒன்றும் கிடைக்கவில்லை!” “ஓஹோ! அப்படியா சமாசாரம்? நீங்கள் உடனே புறப்பட்டு வரவேண்டியது இன்னும் முக்கியமாகிறது!” என்றார் அதிகாரி. சௌந்தரராகவன் போலீஸ் ஸ்டேஷனை அடைந்ததும் இன்ஸ்பெக்டர் முதலில் சீதாவைப் பற்றி அவனிடமிருந்து தகவல் கேட்டுக்கொண்டார். வேலைக்காரர்கள் சொல்வதை அவரிடம் கூறிவிட்டு “உங்களிடம் ஏதாவது தகவல் கிடைத் திருக்கிறதா?” என்று ராகவன் கேட்டான். “கிடைத்திருக்கிறது ஆனால் உபயோகமான தகவல் இல்லை!” என்றார் இன்ஸ்பெக்டர். பிறகு, ஒரு கைத்துப் பாக்கியை எடுத்து மேஜை மேல் வைத்து, “இது யாருடையது, தெரியுமா?” என்றார். ராகவன், அதைப் பார்த்துத் திடுக்கிட்டான் பிறகு தயக்கத்துடன் “எனக்குத் தெரியாதே!” என்றான். “ராகவன்! என்னிடமே மறைக்கப் பார்க்கிறீரா? அழகாயிருக்கிறது!” என்றார் இன்ஸ்பெக்டர். “இல்லை; ஆமாம்; மன்னிக்க வேண்டும் முதலில் பார்த்த போது தெரியவில்லை; என்னுடையது தான் எப்படிக் கிடைத்தது?” என்று உளறித் தடுமாறினான் ராகவன். “நீங்கள் தகவல் கொடுத்திருந்தீர்கள் அல்லவா? அந்தப் புரட்சிக்கார ஆளிடந்தான் இருந்தது அவனுக்கு எப்படிக் கிடைத்திருக்கும்? யார் கொடுத்திருப்பார்கள்?” “சத்தியமாக எனக்குத் தெரியாது!” என்றான் ராகவன். பிறகு அவனை இன்ஸ்பெக்டர் போலீஸ் ஸ்டேஷன் ‘லாக் - அப்’ அறைக்குள் அழைத்துச் சென்றார். அங்கே சூரியா தலையிலும் தோளிலும் கட்டுக்களுடன் உணர்வின்றிப் படுத்திருந்தான். “இவனைக் கைது செய்வது சுலபமான காரியமாயில்லை. நாலு போலீஸ் ஜவான்களைத் திமிறிக்கொண்டு தப்பிக்கப் பார்த்தான். அதன் பயனாக இவன் மண்டையிலும் தோளிலும் நல்ல அடி! மண்டை பிளந்தே விட்டது!” என்றார் இன்ஸ்பெக்டர். பத்தொன்பதாம் அத்தியாயம் - இது என்ன உலகம்? மறுநாள் பிற்பகலில் சௌந்தரராகவன் மாஜி திவான் ஆதிவரகாச்சாரியார் வீட்டுக்கு வந்தபோது அவனுடைய முகத்தில் சோகம் குடிகொண்டிருந்தது. பல நாள் கவலைப்பட்டு இராத்தூக்கமின்றிக் கண் விழித்ததினால் ஏற்படக்கூடிய சோர்வு அவனுடைய முகபாவத்திலும் குழி விழுந்த கண்களிலும் பிரதிபலித்தது. “என்ன சார்! உங்களைப் பார்த்தால் பெண்டாட்டியைப் பறி கொடுத்தவன் மாதிரி இருக்கிறதே!” என்று கூறிப் பாமா ராகவனை வரவேற்றாள். சுருக்கென்று கூரிய ஊசியினால் உடம்பிலே எங்கேனும் குத்தினால் முகம் எப்படிச் சுருங்குமோ, அப்படி ராகவனுடைய முகம் சுருங்கிப் பொறுக்க முடியாத வேதனையைக் காட்டியது. “நீங்கள் கூட இப்படி அனுதாபம் இல்லாமல் பேசுவீர்கள் என்று நான் நினைக்கவேயில்லை. நான் போய் வருகிறேன்!” என்று அழமாட்டாக் குறையாகச் சொல்லிவிட்டு ராகவன் திரும்பிப் போக யத்தனித்தான். அப்பொழுது தாமா எழுந்து வந்து ராகவனுக்கு முன்னால் நின்று மறித்துக்கொண்டு, “அவள் கிடக்கிறாள், ஸார்! பாமாவுக்கு நாக்கிலே விஷம்! எல்லாரையும் விரட்டியடிப்பது தான் அவளுடைய வேலை. அதனால் தான்..” என்று ஆரம்பித்தவள் தயங்கி வாக்கியத்தை நடுவில் நிறுத்திவிட்டு, “நீங்கள் வந்து உட்காருங்கள்! உங்களிடம் எங்களைப் போல் அனுதாபம் உள்ள சிநேகிதர்கள் இந்த டில்லியில் யாரும் இல்லை என்பது உங்களுக்குத் தெரிந்த விஷயந்தானே!” என்று சொன்னாள். ராகவன் திரும்பிப் போகும் உத்தேசத்தைக் கைவிட்டுச் சோபாவில் உட்கார்ந்தான். “டில்லியில் மட்டும் என்ன? எங்கேயும் எனக்குச் சிநேகிதர்கள் கிடையாது. உத்தியோக சிநேகம் ரயில் சிநேகத்தை விட மோசமானது. நல்ல நிலைமையில் இருக்கும் வரையில் எல்லாரும் பிராண சிநேகிதர்கள் போல நடிப்பார்கள். ஏதாவது கொஞ்சம் கஷ்டம் வந்து விட்டால் எல்லாரும் கையை விரித்து விடுவார்கள். முழுகுகிற கப்பலிலிருந்து எலிகள் ஓடுவது போல ஓடிப்போய் விடுவார்கள். நீங்களும் உங்கள் தகப்பனாரும் அதற்கு விதிவிலக்கு என்றும் நீங்கள் என்னுடைய உண்மையான சிநேகிதர்கள் என்றும் நம்பியிருக்கிறேன். நல்லதோ, கெட்டதோ, உங்கள் தகப்பனாரிடம் சொல்லி யோசனை கேட்டால் மனம் நிம்மதி அடைகிறது, இப்போது அப்பா எங்கே?” என்றான்.“அப்பாவின் சிநேகிதர் பாங்கர் கஜான்ஜியாவை உங்களுக்குத் தெரியுமல்லவா? அவரும் இன்னும் சிலரும் சேர்ந்து இன்றைக்கு ஒரு புதிய இன்ஷியூ ரன்ஸ் கம்பெனி ஆரம்பிக்கிறார்கள். அதற்காக அப்பா போயிருக்கிறார். புதிய கம்பெனியில் அப்பாவும் ஒரு டைரக்டர்” என்றாள் தாமா. “சில பேர்களுக்குத் திடீரென்று யோகம் பிறந்து விடுகிறது. இந்த கஜான்ஜியா ஐந்து வருஷத்துக்கு முன்னால் சாதாரண மனிதராயிருந்தார். இப்போது ஐந்தாறு கோடி ரூபாய் சம்பாதித்து விட்டதாகச் சொல்லுகிறார்கள். இத்தனைக்கும் ஆசாமிக்கு இங்கிலீஷில் கையெழுத்துப் போடக் கூடத் தெரியாது. என்னைப் போல் எத்தனையோ பேர் ‘எக்னாமிக்ஸ்’ படித்துப் பட்டம் பெற்றுவிட்டு வாழ்நாள் எல்லாம் மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டு காலம் கழிக்கிறார்கள். இவ்வளவு லட்சணமான உத்தியோகத் துக்கும், மேலே உள்ள மூடர்கள் எப்போது சீட்டுக் கிழிப்பார்களோ என்று பயந்து நடக்க வேண்டியிருக்கிறது. இன்றைக்கு அவ்விதம் எனக்கு நேர்ந்து விட்டது!” என்று சொன்னான் சௌந்தரராகவன். “என்ன? என்ன?” “சீட்டுக் கிழித்துவிட்டார்களா?” “உத்தியோகம் போய்விட்டதா?” “எதற்காக?” “அக்கிரமமாயிருக்கிறதே!” என்று தாமாவும் பாமாவும் மாற்றி மாற்றிப் பொழிந்தார்கள். “இன்னும் வேலை அடியோடு போய்விடவில்லை. விசாரணை முடியும் வரையில் ‘ஸஸ்பெண்டு’ செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் திரும்ப எடுத்துக்கொண்டாலும் எனக்கு வேலைக்குத் திரும்பிப் போகும் உத்தேசம் இல்லை. வெகு நாளாக வேறு உத்தியோ கத்துக்குச் சிபாரிசு செய்யும்படி அப்பாவைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்கு இதுதான் சமயம் அப்பா இந்தச் சமயம் எனக்கு உதவி செய்தேயாக வேண்டும் இல்லாவிட்டால் வேறு வழியில்லை.” “அப்பாவுக்கு அதில் கஷ்டம் ஒன்றுமிராது. கஜான்ஜியாவின் பாங்கிலோ இன்ஷியூரன்ஸ் கம்பெனியிலோ பேஷாக உங்களுக்கு வேலை போட்டுத் தரச் சொல்லுவார். உங்கள் விஷயத்தில் அப்பாவுக்கு ரொம்ப அபிமானமும் சிரத்தையும் உண்டு என்று தான் தெரியுமே? ஆகையால் உத்தியோகத்தைப் பற்றி நீங்கள் கொஞ்சமும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நடந்ததையெல்லாம் தயவுசெய்து விவரமாய்ச் சொல்லுங்கள். என்ன காரணத்துக்காக உங்களை ‘ஸஸ்பெண்டு’ செய்தார்களாம்? விசாரணை எதற்காக?” என்று தாமா கேட்டாள். அப்போது பாமா, “இதையெல்லாம் கேட்டு அவரை ஏன் தொந்தரவு செய்கிறாய்? பாவம்! அவர் சம்சாரத்தைப் பறி கொடுத்துவிட்டு அதைப் பற்றிப் பேசிப் புலம்புவதற்காக வந்திருக்கிறார்!” என்றாள். “சீ! நீ சும்மா இரு! அவள் கிடக்கிறாள் நீங்கள் சொல்லுங்கள், சார்!” என்றாள் தாமா. "இன்றைக்கு நான் ஆபீஸுக்குப் போனதும் இலாகாத் தலைவர் கூப்பிட்டு அனுப்பினார். ‘சரி, ஏதோ வரப் போகிறது’ என்று எண்ணிக்கொண்டு போனேன். அதற்குத் தகுந்தாற்போல் அவரும், ‘ராகவன்! உங்களை ஸஸ்பெண்ட் செய்து வைக்க வேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது. அதற்காக ரொம்பவும் வருத்தப்படுகிறேன். காரணம் உங்களுக்கே தெரிந்திருக்க கூடியதுதான்!" என்றார். ’எனக்குக் காரணம் ஒன்றும் தெரியவில்லை. தயவு செய்து தாங்களே சொல்லிவிட்டால் நல்லது’ என்றேன். ‘அப்படியானால் சொல்கிறேன் புரட்சிக்காரர்களுக்கு அடிக்கடி உம்முடைய வீட்டில் அடைக்கலம் கொடுத்ததாக உம் பேரில் புகார்’ என்றார். ‘அது எப்படி என் பேரில் புகார் ஏற்பட முடியும்? புரட்சிக்காரனைப் பற்றி நான்தானே போலீஸுக்குத் தகவல் கொடுத்தேன்?’ என்று கேட்டேன். ‘மிஸ்டர் ராகவன்! நீர் மிக்க அறிவாளி! என்றார் இலகாத் தலைவர். ’உங்கள் நற்சாட்சிப் பத்திரத்துக்காக மிக்க வந்தனம்!’ என்றேன். ‘எனக்கு வந்தனம் தேவையில்லை, நீர் மிக்க அறிவாளியாகையால் விசாரணையின்போது இதை ஒரு காரணமாகச் சொல்ல வேண்டாம். அந்தப் புரட்சிக்காரப் பையனைப்பற்றிப் போலீஸார் தகவல் அறிந்து கைது செய்வதற்குத் தயாராகவே இருந்தார்கள். அந்தச் சமயத்தில் நீர் தகவல் கொடுத்ததினால் என்ன பிரயோசனம்? தப்பித்துக் கொள்வதற்காகக் கடைசி நேரத்தில் தகவல் கொடுத்ததாகவே ஏற்படும்!’ என்றார். இதைக் கேட்டு நான் திகைத்துப் போனேன். முதலில் இன்னது சொல்வதென்று தெரியவில்லை. கார்டினல் உல்ஸி மரணதண்டனைக்கு ஆளானபோது சொன்னது நினைவு வந்தது. ‘என்னுடைய அரசருக்கு நான் செய்த சேவை என் ஆண்டவனுக்குச் செய்திருந்தால் இந்தக் கதியை அடைந்திருக்க மாட்டேன்!’ என்று உல்ஸி சொன்ன வாக்கியத்தை நானும் சொன்னேன். ‘உம்முடைய அரசருக்கு நீர் உண்மையாகச் சேவை செய்யவில்லை என்பதுதான் உம் பேரில் புகார், தெரிகிறதா? சர்க்கார் உத்தியோகஸ்தர்கள், அதிலும் புது டில்லி செகரடேரியட்டில் வேலை பார்ப்பவர்கள், ஸீஸருடைய மனைவியைப் போல் சந்தேகத்துக்கு இடங்கொடாதவர்களாக இருக்க வேண்டும். இது யுத்த காலம் என்பது உமக்கு நினைவில் இருக்கிறதல்லவா? யுத்தத்திலும் மிக நெருக்கடியான கட்டத்தில் இருக்கிறோம். இதை உத்தேசித்துத் தான் இத்தனை காலமும் இல்லாத வழக்கமாக ஒரு இராணுவ தளபதியை இந்தியாவின் வைஸ்ராய் ஆக்கியிருக்கிறார்கள். தளபதி வேவல் இந்தியாவின் வைஸ்ராயாக வந்ததைக் கொண்டு யுத்த நிலைமையின் நெருக்கடியை நீர் ஊகிக்கலாமே?’ என்றார். அதற்கு நான், ‘ஆம், பேஷாக ஊகிக்கலாம்! இந்த வேவல் எங்கேயாவது எந்த யுத்த களத்திலாவது இருந்தால் கட்டாயம் கோட்டை விட்டுவிடுவார் என்றுதானே அவரைப் பிடித்து வைஸ்ராயாகப் போட்டிருக்கிறார்கள்?’ என்றேன். ஆபீஸர் சிரித்துவிட்டு, ‘இந்த அபிப்பிராயத்தை நாளைக்கு விசாரணை நடக்கும்போது சொல்லலாம், இப்போது போய்வாரும்!’ என்றார். ‘என் பேரில் என்ன குற்றம்? என்ன சந்தேகம்? அதைச் சொல்லவில்லையே?’ என்று கேட்டேன். ‘விசாரணையில் எல்லாம் விவரமாகச் சொல்வார்கள். நான் ஒரு குறிப்பு வேண்டுமானால் கொடுக்கிறேன். கைது செய்யப்பட்டவனிடம் உம்முடைய கைத்துப்பாக்கி இருந்தது சந்தேகத்துக்கு ஒரு காரணம்’ என்றார். ‘கைத்துப்பாக்கியை அவன் திருடியிருக்கலாம் அல்லவா?’ என்று கேட்டேன். ‘திருடியிருக் கலாம் ஆனால் அதற்கு ருசு வேண்டும்.சந்தேகத்துக்கு இன்னொரு காரணம், உம்முடைய மனைவி திடீரென்று நேற்று ராத்திரி காணாமற் போனது’ என்று ஆபீஸர் சொன்னதும் எனக்குத் தூக்கி வாரிப் போட்டு விட்டது. ‘என் மனைவி காணாமற் போனதற்கும் நாம் பேசும் விஷயத்துக்கும் என்ன சம்பந்தம்?’ என்று கேட்டேன். அதற்கு ஆபீஸர் சொன்ன பதிலைக் கேட்டதும் என்னுடைய கவலைகள் கஷ்டங்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டேன்; குபீரென்று சிரித்து விட்டேன். அதை நினைத்தால் இப்போது கூட எனக்குச் சிரிப்பு வருகிறது!" என்று சொல்லிவிட்டு ராகவன் முகத்தில் அசடு வழிய, பலவீனமான சிரிப்பு ஒன்று சிரித்தான். “அப்படிச் சிரிக்கும்படியாக உங்களுடைய இலாகாத் தலைவர் என்னதான் சொன்னார்? சர்க்கார் உத்தியோகஸ்தர் களிலே அவ்வளவு நகைச்சுவை உடையவர்கள் கூட இருக்கிறார்களா?” என்று பாமா கேட்டாள். “அவர் அப்படி நகைச்சுவை உடையவர் அல்ல; ஹாஸ்ய உணர்ச்சியுடனும் பேசவில்லை. ஆனால் அவர் சொன்னது அவ்வளவு விசித்திர விஷயமாயிருந்த படியால் தான் சிரித்தேன். சீதாவும் ஒரு புரட்சிக்காரியாம்; அவளும் சூரியாவும் சதி செய்து சட்டவிரோதமான பல காரியம் செய்து வந்தார்களாம். இந்தியத் துருப்புகளின் போக்குவரவைப் பற்றி இரகசிய ரேடியோ மூலம் சத்துருத் தேசங்களுக்குத் தகவல் கொடுத்து வந்தார்களாம், நானும் அவர்களுக்கு உடந்தையாம். போலீஸுக்குத் தகவல் சொல்வது போலச் சொல்லி விட்டு, அவர்களுக்கும் எச்சரிக்கை செய்து தப்பித்துக் கொள்ளும்படி செய்து விட்டேனாம். சீதா மட்டும் எங்கேயோ போய்ப் பதுங்கிக் கொண்டிருகிறாளாம் எப்படி இருக்கிறது கதை?” “கதைக்கு என்ன? நன்றாய்த்தானிருக்கிறது ஒரு நாள் திடீரென்று போலீஸார் இந்த வீட்டுக்கு வந்து சோதனை போட்டாலும் போடுவார்கள். சீதா இங்கே ஒளிந்து கொண்டிருக்கிறாளோ என்று பார்ப்பதற்கு!” “என்ன மூடத்தனம்! புது டில்லிப் போலீஸார் எதை வேணுமானாலும் நம்பி விடுவார்கள் போலிருக்கிறது.” சொல்லுகிறவர்கள் பக்குவமாய்ச் சொன்னால், கேட்பவர்கள் நம்புவதற்கு என்ன? ஏற்கெனவே போலீஸார் வெறும் வாயை மெல்லுகிறவர்கள், அவர்களுக்கு ஒரு பிடி அவலும் கிடைத்து விட்டால்?" “பாமா! மறுபடி ஏதோ மர்மமாகப் பேசுகிறீர்களே? பக்குவமாக யார் என்னத்தைச் சொல்லியிருக்க முடியும்?” என்று ராகவன் கேட்டான். “ராகவன்! இது விஷயமாக உங்களுக்கு ஒன்றும் சந்தேகமே உதிக்கவில்லையா? உங்கள் மனைவியையும் அந்த வாலிபனையும் பற்றிப் போலீஸுக்கு யாராவது உளவு சொல்லியிருக்க வேணும் என்று தோன்றவில்லையா? நீங்களும் அவர்களுக்கு உடந்தை என்று கூடச் சொல்லியிருக்க வேணும். இல்லாத வரையில் உங்கள் பேரில் இவ்வளவு சந்தேகப்பட்டு நடவடிக்கை எடுத்திருக்க மாட்டார்கள்.”கடவுளே! இப்படியும் இருக்க முடியுமா? யார் அந்த மாதிரிப் பொய் உளவு கொடுத்திருப்பார்கள்!" “நேற்று மாலை நடந்த டின்னர் பார்ட்டியில் யாரோடு கூடிக் கூடிப் பேசிக் கொண்டிருந்தீர்கள்? அவளாயிருக்கலாம் அல்லவா? உங்களுடைய குடும்பத்தின் அந்தரங்க விவகாரங்கள் வேறு யாருக்குத் தெரியும்? வேறு யார் அப்படி நம்பிக்கை ஏற்படும்படி சொல்லியிருக்க முடியும்?” “தாரிணியையா சொல்லுகிறீர்கள்; அழகாயிருக்கிறது? முந்தாநாள் அவளைப் புரட்சிக்காரி என்றீர்கள். இன்றைக்கு அவள் எங்களைப் பற்றி உளவு சொல்லி இருப்பாள் என்கிறீர்கள் இது என்ன வேடிக்கை?” “வேடிக்கை ஒன்றுமில்லை; உங்கள் ஆபீஸர் சொன்னது போல் நீங்கள் அறிவாளிதான். ஆனால் சிற்சில விஷயங்களில் நீங்கள் பச்சைக் குழந்தை போல் உலகமே தெரியாதவராயிருக்கிறீர்கள். நான் முந்தாநாள் சொன்னதற்கும் இன்று சொல்வதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. புரட்சிக்காரர்களுக்கு மத்தியில் தாரிணி புரட்சிக்காரி தான். அப்படி நடித்தால்தானே புரட்சி இயக்கத்தைப் பற்றிய உளவுகளைச் சேகரித்து சர்க்காருக்குச் சொல்ல முடியும்?” “தாரிணியைச் சர்க்காருக்காக ஒற்று வேலை செய்கிறவள் என்றும் பொய்க் குற்றம் சாட்டுகிறவள் என்றுமா சொல்லுகிறீர்கள்? ஐயோ! இது என்ன உலகம்?” இப்படி ராகவனுடைய வாய் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவனுடைய மனம், ‘தாரிணியைப் பற்றிய உண்மை அப்படி இருந்தாலும் இருக்கலாமோ’ என்று எண்ணியது .’இல்லாவிட்டால் அவ்வளவு பெரிய சர்க்கார் பதவியில் உள்ளவர் களிடம் அவளுக்கு எப்படி அத்தனை செல்வாக்கு இருக்க முடியும்? அவர்களுடன் அவ்வளவு சர்வ சுலபமாக எப்படிக் கலந்து பழக முடியும்?’ என்னும் ஐயங்கள் உதித்தன. “இது என்ன உலகம்?” என்ற ராகவனுடைய கேள்விக்குப் பதிலாகப் பாமா, “இது மிக மோசமான உலகம். பொய்யும் சூதும் மோசமும் தந்திரமும் நிறைந்த உலகம். இந்த உலகத்தில் உங்களைப் போன்ற சாதுக்கள் சிலரும் இருக்கிறார்கள். போகட்டும்; தங்கள் மனைவியின் விஷயம் என்னதான் ஆயிற்று? அதைப் பற்றி ஏதாவது தகவல் தெரிந்ததா?” “ஒன்றும் தெரிய வில்லை இதில் ஒரு துயரகரமான தமாஷ் சேர்ந்திருக்கிறது. நேற்று ராத்திரி நான் உங்களிடம் கூடச் சொன்னேனே? இனிமேல் என் வாழ்க்கையையே புதிய முறையில் தொடங்குவது என்றும் சீதாவுடன் மனம்ஒத்த இல்லறம் நடத்துவது என்றும் தீர்மானித்திருந்தேன். அவ்விதம் தீர்மானித்துக்கொண்டு வீட்டுக்குப் போய்ப் பார்த்தால், அவளைக் காணவே காணோம்! இதற்கு என்ன சொல்வது?” என்றான் சௌந்தரராகவன். “அற்ப மானிடர்களாகிய நம்முடைய உத்தேசத்துக்கெல்லாம் மேலாக விதி என்று ஒன்று இருக்கிறதல்லவா? அந்த விதி ஜயித்து விட்டது!” என்றாள் தாமா. “நான் அப்படி விதியின் மேல் பழியைப் போடமாட்டேன். சாதுவாகிய சௌந்தர ராகவனின் நல்ல உத்தேசத்தை ஒரு பெண்ணின் துர்மதி ஜயித்து விட்டது என்று சொல்வேன்” என்றாள் பாமா. “நீ கொஞ்சம் வாயை மூடிக் கொண்டிரு! தெரிகிறதா?” என்று தாமா அதட்டிவிட்டு, “ஏன் சார்! சீதாவைப் பற்றி ஒன்றுமே தகவல் இல்லை யென்றா சொல்கிறீர்கள்? கைது செய்யப்பட்ட சூரியாவிடமிருந்து விவரம் ஒன்றும் கிடைக்கவில்லையா? போலீஸ் இன்ஸ் பெக்டர் உங்களுக்குத் தெரிந்த சிநேகிதர் ஆயிற்றே?” என்று கேட்டாள். "தெரிந்த சிநேகிதர் தான்! முன்னொரு சமயம் எனக்குப் பெரிய உதவி செய்திருக்கிறார். இப்பொழுதும் அவரையே நம்பிக்கொண்டிருக்கிறேன். இந்த ஊரிலே சூரியாவின் விசாரணை பகிரங்கமாக நடந்தால் என் மானம் போய்விடும், நாகபுரிக்கு அனுப்பிவிடுங்கள் என்று கேட்டதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார். என் பேரில் அந்தரங்க விசாரணை நடந்தால் என் பக்கம் பேசுவதாகவும் சொல்லியிருக்கிறார். ஆனால் சீதாவைப் பற்றி ஒன்றும் அவரால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. சூரியாவின் மண்டையில் பட்ட அடியினால் அவன் இன்னும் நல்ல அறிவு வராமல் கிடக்கிறான். மயக்கத்தில் பேசுகிறபோது, ‘சீதா! சீதா!’ ‘ஆபத்து வந்து விட்டது!’ ‘பிடித்து விட்டார்கள்!’ என்று உளறுகிறான். அவன் ஏறியிருந்த டாக்ஸி டிரைவரிடம் என்னை அழைத்துப் போய் என் முன்னிலையில் விசாரித்தார் அவன் கூறிய விவரம் விசித்திரமா யிருக்கிறது. ஷாஜஹானாபாத் வெள்ளி வீதியில் ஒரு வாலிபனும் ஒரு பெண்ணும் வண்டியில் ஏறிக் கொண்டார் களாம். ஜந்தர் மந்தர் சாலைக்கு வந்ததும் அந்தப் பெண் வண்டியிலிருந்து இறங்கி நடந்தாளாம். கொஞ்ச தூரம் போவதற்குள் இன்னொரு கார் வந்து அவள் பக்கத்தில் நின்றதாம். அந்தப் பெண்ணைப் பலவந்தமாக ஏற்றிக் கொண்டு கார் விரைவாகச் சென்றதாம். சூரியா சொன்னதின் பேரில் இந்த டாக்ஸி டிரைவரும் பின்தொடர்ந்து வண்டியை விட்டானாம். ஆனால் யமுனைப் பாலத்தில் அந்த வண்டி போனபிறகு இந்த டாக்ஸியை நிறுத்தி விட்டார்களாம். உடனே போலீஸ் வண்டி வந்து பிடித்துக் கொண்டது என்று சொல்கிறான். அவன் சொல்லும் சில அடையாளங்களிலிருந்து பலவந்தமாகப் பிடித்துக் கொண்டு போகப்பட்டவள் சீதாவாயிருக்கலாம் என்று எண்ண இடம் இருக்கிறது. ஆனால் இந்தப் புது டில்லியில் 1943-ம் வருஷத்தில் இப்படியெல்லாம் நடக்குமா என்று எண்ணும்போது நம்பிக்கைப்படவில்லை. மேலும் சீதாவை அப்படி யார் எதற்காகப் பிடித்துக்கொண்டு போக வேண்டும்? இதையெல்லாம் நினைக்க நினைக்கத் தலை சுற்றுகிறது!" என்றான் ராகவன். “ஆமாம்; முன்னால் போன வண்டியைப் பற்றித் தகவல் கண்டுபிடிக்கப் போலீஸார் முயற்சி எதுவும் செய்யவில்லையா?” என்று பாமா கேட்டாள். “செய்தார்கள் நாலாபுறமும் தந்தி கொடுத்து டெலிபோன் செய்து குறிப்பிட்ட வண்டி வந்தால் நிறுத்தும்படி சொல்லியிருந்தார்கள். டாக்ஸி டிரைவர் முன்னால் சென்ற காரின் நம்பர் கொடுத்திருந்தான். அந்தக் கார் இங்கிருந்து நூறாவது மைலில் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் அதில் பெண் ஒருவரும் இல்லை என்று தகவல் வந்திருக் கிறது. போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்று காலையில் என்னை டெலிபோனில் கூப்பிட்டுச் சொன்னார்!” “ஆகவே உங்கள் மனைவி சீதா போனவள் போனவள் தான்! மிஸ்டர் ராகவன்! உங்களுக்கு என் மனமார்ந்த அனுதாபம்!” என்றாள் பாமா. “எனக்கு இவரிடம் கொஞ்சம் கூட அனுதாபம் இல்லை. ஊரெல்லாம் பேசிக் கொண்டிருந்த விஷயத்தை இவர் அறிந்து கொள்ளாமல் கண்கள் திறந்திருந்தும் குருடராயிருந்தார் அல்லவா? இவருக்கு இது நன்றாய் வேணும்!” என்றாள் தாமா. “எது விஷயத்தில் நான் குருடனாய்ப் போனேன்? ஊரெல்லாம் என்ன பேசிக்கொண்டார்கள்?” என்று கேட்டான் ராகவன். “அதை வேறு விண்டு சொல்ல வேண்டுமா? நீங்கள் சீதாவை இத்தனை நாள் வீட்டில் வைத்துக் கொண்டிருந்ததே பிசகு என்று சொன்னார்கள். இப்போது அவளே ஒரேயடியாகத் தொலைந்து போய்விட்டாள்! அதற்காக வருத்தப்படுவானேன்? உண்மையில் சந்தோஷப்பட வேண்டும்!” தாமா எதைக் குறிப்பிடுகிறாள் என்பதை ராகவன் தெரிந்து கொண்டு, சற்று நேரம் தலை குனிந்து மௌனமாக இருந்தான். “எப்படியோ என் வாழ்க்கை பாழாகிவிட்டது. இத்தனை நாள் ஆபீஸ் வேலை இருந்தது; அதுவும் போய்விட்டது. இனி மேல் வாழ்க்கையில் என்ன இருக்கிறது?” “ஏன் இல்லை! மதராஸில் அழகான சமர்த்துக் குழந்தை இருக்கிறது. குழந்தையை அழைத்து வைத்துக் கொண்டு நீங்கள் நிம்மதியா இருப்பதை யார் தடுப்பார்கள்!” ராகவனுடைய கண்களில் நீர் ததும்பியது. “குழந்தையை அழைத்து வந்தால்; முதலில், ‘அம்மா எங்கே?’ என்று கேட்பாளே? அதற்கு என்ன சொல்வது? மேலும் குழந்தையை அழைத்து வந்தால் யார் பார்த்துக் கொள்வார்கள்!” என்றான். “அதில் என்ன கஷ்டம்? குழந்தையை அழைத்து வருவதற்குள்ளே வீட்டில் இன்னொரு தாயாரைத் தயார் செய்து விட வேண்டும்! வீட்டுக்கு எஜமானியாச்சு! குழந்தைக்குத் தாயார் ஆச்சு! வேலையைப் பற்றிக் கவலையும் வேண்டியதில்லை. இந்த வேலை போய்விட்டால் அப்பா கட்டாயம் இதைவிடப் பெரிய சம்பளம் உள்ள உத்தியோகம் வாங்கித் தருவார்!” ராகவன் வீட்டுக்குத் திரும்பிச் சென்றபோது, ’இன்னொரு தாயார் தயாரிப்பது பற்றித் தாமா சொன்னதின் கருத்து என்ன வாயிருக்கும் என்று யோசித்துக்கொண்டே போனான். ஒருவாறு புரிந்தது ஆனால் அவனுடைய மனம்அதைப்பற்றி நினைக்கவும் இடம் கொடுக்கவில்லை. வீட்டை அடைந்ததும் வேலைக்காரர்கள் முகங்களில் சோகக்களையுடன் நிற்பதைப் பார்க்கச் சகியாமல் உள்ளே போனான். ஒவ்வொரு அறையாக வளையவந்தான்; அங்குமிங்கும் நடனமாடினான். ஒவ்வொரு அறையும் ஒவ்வொரு மூலையும் ஒவ்வொரு சாமானும் படமும் சீதாவின் ஞாபகத்தைக் கொண்டு வந்தன. அந்த வீட்டுக்கு வந்த புதிதில் அன்பும் அருமையுமாக வாழ்ந்த நாட்களின் சம்பவங்கள் ஞாபகம் வந்து அவன் உள்ளத்தை உருக்கின. பிற்காலத்தில் அவர்க ளுக்குள் நடந்த சண்டைகளும் நினைவு வந்தன. சண்டைகளை நினைத்தபோதெல்லாம் குற்றம் தன் பேரில்தான் என்று அவனுக்குத் தோன்றியது. ஆனால் இனிப் பச்சாதாபப்பட்டு என்ன பிரயோசனம்? போனவள் இனித் திரும்பி வரப் போகிறாளா? அல்லது அவள் இருந்த இடத்தில் இன்னொரு ஸ்தீரியை கொண்டு வந்து வைக்கத்தான் தனக்கு மனம் வருமா? தன் வாழ்க்கை யைப் புதுவிதமாகத் தொடங்கிச் சண்டை சச்சரவு இல்லாமல் பழைய நாட்களைப் போல் இல்வாழ்க்கை நடத்த வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு வீடு வந்த தினத்தில் அல்லவா இப்படி நடந்து விட்டது? தன்னுடைய நல்ல உத்தேசம் இவ்வாறு வீணாகிவிட்டதே? யோசித்துப் பார்க்கப் பார்க்க, சீதா தன்னிடம் வெறுப்புக் கொண்டு தான் வீட்டை விட்டு ஓடிப்போயிருக்க வேண்டும் என்று ராகவனுக்கு நிச்சயமாய்த் தோன்றியது. தன்னுடைய கொடுமை பொறுக்க முடியாமலே தான் போய்விட்டாள். எங்கே போயிருப்பாள்? ஒருவேளை யமுனையில் விழுந்து உயிரை விட்டிருப்பாளோ? அல்லது குழந்தையைப் பார்ப்பதற்காகச் சென்னைக்கு ரயில் ஏறிப் போயிருப்பாளோ? அப்படியானால், சீக்கிரத்தில் தனக்குத் தகவல் தெரிந்து போய்விடும். சூரியா கைதியானதற்கும் சீதா காணாமற் போனதற்கும் உண்மையில் ஏதேனும் சம்மந்தம் இருக்குமா! ஒருநாளும் இருக்க முடியாது. காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதைத் தான். தாமாவும் பாமாவும் சூரியா - சீதா இவர்களின் பேரில் கெட்ட எண்ணம் உண்டாகும்படியாக ஜாடை ஜாடையாகப் பேசியதையெல்லாம் எண்ணிப் பார்த்து, அந்தப் பேச்சுக்களில் ஏதேனும் உண்மை இருக்க முடியுமா என்று சிந்தித்துப் பார்த்தான். ஒரு நாளும் இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தான். சில சமயம் தானும் சீதாவின் மனம் நோகும்படி சூரியாவைப் பற்றிப் பேசிய துண்டுதான். அதற்கெல்லாம் காரணம் சீதாவின் நடத்தையைப் பற்றித் தனக்கு ஏற்பட்ட சந்தேகம் அல்ல. அப்படிப்பட்ட கேவலமான சந்தேகம் லவலேசமும் தனக்கு எந்த நாளிலும் ஏற்பட்டதில்லை. சூரியாவின் பேரில் தனக்கு ஏற்பட்ட ஆத்திரத்துக்கெல்லாம் உண்மையான காரணம் என்ன? அவனைப் பற்றிப் போலீஸுக்குத் தகவல் கொடுக்கும்படியாக அவ்வளவு நீசத்தனமான காரியம் தான் செய்யப் புகுந்ததின் உண்மைக் காரணம் என்ன? தன்னுடைய இருதய அந்தரங்கத்தை நன்கு சோதனை செய்து பார்த்து ராகவன் அந்த உண்மையைக் கண்டு பிடித்தான். தாரிணிக்கும் சூரியாவுக்கும் ஏற்பட்டிருந்த சிநேகந்தான் தன்னுடைய ஆத்திரத்துக்கெல்லாம் காரணம். அதனால் ஏற்பட்ட குரோதத்தைச் சீதாவின் பேரில் காட்டி அவளுடைய வாழ்க்கையை நரகமாகச் செய்ததினாலேயே இந்த விபத்துக்குத் தான் ஆளாக நேர்ந்தது. முதல் நாள் மாலையில் நடந்த பார்ட்டியில் தாரிணி தன்னைக் கெஞ்சி வேண்டிக் கொண்டதெல்லாம் ஞாபகம் வந்தது. சீதாவை மதராஸில் கொண்டுபோய் விட்டுப் பம்பாய்க்கு வரும்படியும் வந்தால் தன் பிறப்பைக் குறித்த ஓர் அந்தரங்கத்தை வெளியிடுவதாகவும் தாரிணி சொன்னாள். அந்த ரகசியம் என்னவாயிருக்கும்? தாமாவும் பாமாவும் தாரிணியைச் சர்க்காரின் உளவுக்காரி என்று சொன்னது சுத்த அபத்தம். அது ஒருநாளும் உண்மையாயிராது. அந்தச் சகோதரிகள் வெகு பொல்லாதவர்கள். யார் பேரிலாவது குறை சொல்லுவது தான் அவர்களுடைய தொழில். அவர்களுடைய சகவாசம் உதவவே உதவாது. இந்தச் சமயத்தில் தனக்கு ஆறுதல் சொல்லக் கூடியவளும் உதவி செய்யக் கூடியவளும் தாரிணி தான். தாரிணியை எப்படியாவது சந்தித்து அவளிடம் ஆலோசனை கேட்க வேண்டும். சீதா போய்விட்டதைப் பற்றி அவளிடம் உடனே சொல்லி விட வேண்டும். இன்னும் இரண்டு நாள் நேற்றைக்குப் பார்ட்டி கொடுத்த உத்தியோகஸ்தர் வீட்டிலே இருப்பேன் என்று சொன்னால் அல்லவா? அங்கே அவளைக் கூப்பிட்டுப் பார்க்கலாம். டெலிபோனை எடுத்து ராகவன் விசாரித்தான். மேற்படி உத்தியோகஸ்தர் வீட்டில் தாரிணி இல்லையென்று பதில் வந்தது. அந்த நிமிஷத்தில் ராகவனுக்குத் தன்னுடைய வருங்கால வாழ்க்கையெல்லாம் சூனியமாகத் தோன்றியது. இருபதாம் அத்தியாயம் - சிங்காரப் பூங்காவில் சீதாவுக்கு உணர்வு வந்தபோது பட்சிகளின் கானம் கலகலவென்று அவள் செவியில் கேட்டுக் கொண்டிருந்தது. இடை யிடையே இலைகள் அசைந்தாடும் போது உண்டாகும் சலசலப்புச் சத்தமும் கேட்டது. இவற்றுடன் கண்ணனுடைய இடையில் அணிந்த மணிச் சதங்கைகள் குலுங்குவது போன்ற ‘கிண்கிணி’ச் சத்தம் சில சமயம் கலந்து கொண்டிருந்தது. வேறு நினைவே யில்லாமல் அந்த இனிய சப்தங்களை அனுபவித்துக் கொண்டிருந்தாள். மூடியிருந்த கண்ணிமைகளைத் திறப்பதற்கு மனம் வரவில்லை. கடிகாரத்தில் மணி அடிக்கும் சத்தம் அவளை அந்த இன்பமயமான நாத உலகத்திலிருந்து பூவுலகத்துக்குக் கொண்டு வந்தது. மணி ஆறு அடித்தது; உடனே அவளுடைய கண் இமைகள் திறந்தன. சுற்றும் முற்றும் மேலும் கீழும் அவள் கண்ட காட்சி அவளைத் திகைப்படையச் செய்தது. தந்தத்தைப் போல வெண்மையும் பளபளப்பும் கொண்ட சலவைக் கல் சுவர்கள் நாலுபுறமும் அவளைச் சூழ்ந்திருந்தன. கீழ்த் தரையும் சலவைக் கல் பதித்தது தான். ஆனால் அதில் பெரும் பகுதியை சித்திர விசித்திரமான இரத்தினக் கம்பளம் மூடியிருந்தது. மேலே இருந்து கண்ணாடிக் குஞ்சலங்களுடன் கூடிய விதவிதமான வேலைப்பாடு அமைந்த ’குளோப்’ விளக்குகள் தொங்கிக் கொண்டிருந்தன. பளிங்குச் சாளரங்களின் வழியாகச் சில சமயம் உள்ளே புகுந்த இனிய காலை நேரத்துக் காற்று அந்த விளக்குகளை ஆட்டிவிட்ட போது கண்ணாடிக் குஞ்சலங்கள் ஒன்றோடொன்று மோதிக் கிண்கிணிச் சத்தத்தை உண்டாக்கின. அத்தகைய அறையின் மத்தியில் சப்ரமஞ்சக் கட்டிலில் பட்டு மெத்தை மேல் வெல்வெட் தலையணைகளுக்கிடையில் தான் படுத்திருந்ததைச் சீதா அறிந்தாள். சிறிது நேரம் திகைப்பாயிருந்தது, முதல் நாள் இரவு நடந்த சம்பவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக நினைவு வந்து, நிகழ்ச்சிகள் எல்லாம் உண்மை தான் என்பதை நிரூபித்துக் கொண்டு அவளுடைய முகத்தில் அடிபட்ட இடத்தில் ‘விண் விண்’ என்று இலேசான வலி உணர்ச்சி இருந்து கொண்டிருந்தது. ஆகையால் அந்தச் சம்பவங்கள் எல்லாம் உண்மையே தான்! தன்னைச் சில வடக்கத்தி மனிதர்கள் பலவந்தமாகக் காரில் ஏற்றிக்கொண்டு வந்ததும், சூரியா இன்னொரு காரில் தன்னைத் தொடர்ந்து வந்ததும், சூரியாவின் வண்டி யமுனைப் பாலத்தின் முனையில் தடுத்து நிறுத்தப் பட்டதும் உண்மை தான். வழியில் ஒரு ஊரில் தான் பசிக்கிறது என்று சொன்னதும், தனக்காகப் பூரி, மிட்டாய், பால் வாங்கிக் கொண்டு வந்ததும் உண்மை தான். பாலைச் சாப்பிட்ட பிறகு அதில் மயக்க மருந்து கலந்திருக்குமோ என்ற சந்தேகம் உண்டானதும் வேறு வண்டிக்கு மாற்றப்பட்டதும் அதில் ஒரு ஸ்திரீ தனக்குத் துணையாக ஏறியதுங்கூட உண்மையாகத் தான் இருக்க வேண்டும். அந்தப் பிரயாணம் இந்த அரண்மனையில் வந்து முடிவடைந்திருக்கிறது. ஆம்; இது யாரோ ஒரு மகாராஜா வின் அரண்மனை என்பதில் சந்தேகம் இல்லை. பலகணியின் வழியாகப் பார்த்தபோது வெளியிலே அழகான பூங்காவனம் தோன்றியது. செடிகளும், கொடிகளும், மரங்களும் பூத்துக் குலுங்கிய அந்தப் பூம்பொழிலில் ஆங்காங்கு பளிங்குக் கல் தடாகங்களும் தடாகங்களின் மத்தியில் முத்துத் துளிகளை வீசி விசிறிய நீர்ப் பொழிவுகளும் தோன்றின. பூங்காவனத்துக்கு அப்பால் அடுக்கடுக்கான மாட கூடங்களுடனும் கலசங்கள் ஸ்தூபிகளுடனும் மாளிகைகள் தென்பட்டன. ஆம்; அது மாமன்னர் வாழும் அரண்மனைத் தான். ஆனால் எந்த மன்னருடைய அரண்மனை? எதற்காகத் தன்னை இந்த அரண்மனைக்குப் பலாத்காரமாகப் பிடித்து வந்திருக்கிறார்கள்! சுதேச சமஸ்தானங்களின் மகாராஜாக்கள் அந்தக் காலத்திலே கூடச் செய்யும் அக்கிரமமான காரியங்களைப் பற்றிச் சீதா எத்தனையோ கேள்விப்பட்டுத்தானிருந்தாள். பம்பாய் நகரில் மலபார் குன்றில் நடந்த பயங்கரமான கொலையைப் பற்றி அவளுக்குத் தெரியாதா என்ன? எல்லாம் தெரிந்த விஷயம் தான். அப்படி யாரேனும் ஒரு மகாராஜா தன் பேரில் மோகம் கொண்டு தன்னை இங்கே கொண்டுவரச் செய்திருப்பானோ? அவ்விதமானால் எந்த விதத்தில் தன்னுடைய கற்பைக் காப்பாற்றிக் கொள்ளுவது என்று சிந்தனை செய்தாள். பற்பல முறைகளைப் பற்றி யோசித்தாள். தப்பித்துக் கொள்ளப் பெரு முயற்சி செய்து பார்க்க வேண்டும்; முடியாமற் போனால் தற்கொலை செய்து கொள்ள வழி தேட வேண்டும். எந்த முறையைக் கைக்கொள்வதாயிருந்தாலும் ஆரம்பத்தில் நயமாகவும் நல்லதனமாகவும் நடந்து கொள்ள வேண்டும். இந்தச் சமயத்தில் சமீபத்தில் காலடிச் சத்தம் கேட்கவே சீதா பீதியடைந்து படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். அந்த அறையின் கதவு இலேசாகத் திறக்கப்பட்டபோது அவளுடைய நெஞ்சத்தின் கதவும் படபடவென்று அடித்துக் கொண்டது. ஆனால் உள்ளே வந்தவள் ஒரு சாதாரண தாதிப் பெண் என்று பார்த்தவுடனே தெரிந்தது. வந்தவள் ஹிந்தி பாஷையில் மரியாதையாகவும் இனிமையாகவும் பேசினாள். பக்கத்து அறையில் முகம் கழுவிக் கொள்ளலாம் என்றும் காலைச் சிற்றுண்டி தயாராயிருக்கிற தென்றும் அவள் சொன்னதாகச் சீதா தெரிந்து கொண்டாள். அவளைப் பல கேள்விகள் கேட்கச் சீதா விரும்பினாள்; ஆனால் பேசுவதற்கு நா எழவில்லை; துணிவும் ஏற்படவில்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி முகம் கழுவிக் கொள்ளச் சென்றாள். காலைச் சிற்றுண்டி அருந்திய பிற்பாடு தூக்க மருந்தினால் ஏற்பட்ட மயக்கம் முழுதும் தெளியவில்லை. மறுபடியும் படுக்கையில் படுத்தாள். அரைத் தூக்கமும் அரை விழிப்புமாய் இருந்த சமயத்தில் இரண்டு மூன்று குரல்கள் பேசிக்கொண்டே வருவது கேட்டது. குரல்களில் ஸ்திரீயின் குரல் ஒன்றும் இருந்தது. அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பித் தூங்குவது போலப்பாசாங்கு செய்து அசையாமலிருந்தாள். வந்தவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண் டார்கள். பேசியதெல்லாம் சீதாவுக்கு விளங்கவில்லை, ஆயினும் “மகாராஜா,” “மகாராணி” என்னும் சொற்கள் நன்கு விளங்கின. “தூக்க மருந்தின் சக்தி இன்னும் இருக்கிறது!” என்று ஒரு குரல் கூறியது. அந்தக் குரல் முதல் நாள் இரவு தன்னை மோட்டாரில் ஏற்றி அழைத்து வந்தவனின் குரல் என்று சீதா அறிந்து கொண்டாள். “இவள் என் சகோதரிதானா? நிச்சயமா?” சந்தேகமில்லை. ராஜ மாதாவின் கட்டளையை அப்படியே நிறைவேற்றி விட்டேன்!" என்றது இன்னொரு குரல். முதிர்ந்த மாதரசி ஒருத்தியின் குரல், “இந்தப் பெண் இந்த அரண்மனையில் உன்னைப்போலவே வளர்ந்திருக்க வேண்டியவள். விதியானது அவளை இத்தனை காலமும் பிரித்து வைத்திருந்தது” என்று கூறியது. இதைக் கேட்ட சீதாவின் உடம்பு சிலிர்த்தது; உள்ளம் பரவசம் அடைந்தது. ஆயினும் அப்போது கண் விழித்து எழுந்திருக்க அவளுக்கு மனம் வரவில்லை. ஒருவேளை இதெல்லாம் கனவோ, என்னமோ? கண்ணை விழித்தால் ஒருவேளை மறைந்து விடுமோ என்னமோ?.. இத்தகைய நெஞ்சக் கலக்கத்தில் மூடிய கண்ணைத் திறவாமல் இருந்தாள் சீதா. சில நிமிஷத்துக்கெல்லாம் அந்த மூதாட்டியின் குரல் “கொஞ்ச நேரத்துக்குப் பிறகு வரலாம்!” என்று சொல்லியது, இத்துடன், வந்திருந்தவர்கள் திரும்பச் சென்றார்கள். அவர்கள் கொஞ்ச தூரம் போவதற்கு அவகாசம் கொடுத்த பிறகு சீதா விழித்துப் பலகணி வழியாகப் பார்த்தாள். கும்பலாகச் சென்றவர்களில் ராஜ மாதா யார் என்றும் ராஜ குமாரர் யார் என்றும் ஊகித்துத் தெரிந்து கொள்வதில் கஷ்டம் ஒன்றும் ஏற்படவில்லை. தூக்கம் நன்றாகக் கலைந்துவிட்டது; படுத்திருக்க முடியவில்லை. எழுந்து வெளியே வந்தாள் தான் படுத்திருந்த இடம் அரண்மனைப் பூங்காவனத்தின் மத்தியில் இருந்த மாளிகை என்று தெரிந்தது. பூந்தோட்டத்தைச் சுற்றி நாலுபுறத்திலும் இதை விடப் பெரிய பெரிய மாட மாளிகைகள் காணப்பட்டன. மாளிகைகளுக்கு மத்தியில் தோன்றிய இடைவெளி வழியாகப் பார்த்தால் தூரத்தில் நீல நிறத்து ஏரி நீர் படர்ந்திருந்தது. இது எந்த ஊர் அரண்மனை? எந்த ராஜாவின் சிங்கார மாளிகை? யார் வளர்த்த பூந்தோட்டம்? இந்த மகிமையான ராஜரீகச் செல்வங்களில் எல்லாம் தனக்கும் உரிமை உண்டா? விதி வசத்தினால் இத்தனை காலமும் பிரிந்திருக்க நேரிட்டதா? ராஜ குலத்திலே பிறந்த ராஜகுமாரியான நான் விதியின் விளையாட் டினால் ஏழைக் குடும்பத்தில் வளர்ந்து எளிய வாழ்க்கை நடத்தி எல்லையில்லாத கஷ்டங்களையெல்லாம் அனுபவிக்கும்படி நேரிட்டதா?அந்தக் கஷ்டங்களுக்கெல்லாம் இப்போது உண்மை யிலேயே முடிவு வந்துவிட்டதா?அந்த மூதாட்டி யார்? தன்னைப் பத்து மாதம் சுமந்து பெற்ற அன்னைதானா.பெரிய தாயார் அல்லது சிறிய தாயார் உறவு பூண்டவளா! அந்த அழகிய ராஜகுமாரன் தன்னுடன் பிறந்த சகோதரனா?… ஆகா! இதெல்லாம் உண்மையாயிருக்க முடியுமா? சிறு வயதில் தான் கண்ட கற்பனைக் கனவுகள், கட்டிய ஆகாசக் கோட்டைகள், மனோராஜ் யங்கள் எல்லாவற்றையும் விட இப்போது நடந்திருப்பது அதிசயமா இருக்கிறதே? அதிசயந்தான்! உலகத்தில் இந்த நாளிலும் எத்தனையோ அதிசயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த அதிசயங்களில் ஒன்று தன் வாழ்க்கையிலும் நடந்து விட்டிருக்கிறது. தான் ராஜகுலத்தில் பிறந்த ராஜகுமாரி என்பது உண்மை தான். இல்லாவிட்டால் தன்னை இங்கே கொண்டு வருவதற்கு இவ்வளவு பிரயத்தனம் ஏன் செய்திருக்க வேண்டும்? அந்த மூதாட்டியும் ராஜகுமாரனும் பேசியதிலிருந்து அது நிச்சயம் என்று ஏற்படுகிறது. இந்த விஷயம் எல்லாம் அவருக்குத் தெரியும்போது அவருடைய மனதின் நிலை எப்படியிருக்கும்? ராஜ வம்சத்தில் பிறந்த ராஜகுமாரியைத் தான் மணந்துகொள்ளும் பாக்கியம் கிடைத்தது பற்றிப் பெருமை கொள்வாரா? தன்னை இத்தனை காலமும் இவ்வளவு கொடூரமாக நடத்தியது பற்றி வருத்தப்படுவாரா? இதற்குப் பிறகும் அவரையே கணவர் என்றும் கடவுள் என்றும் கருதித் தான் நடந்துகொள்ளப் போவது குறித்து மகிழ்ச்சியடைவாரா? இனிமேலாவது தன்னை அவமதித்து அலட்சியமாய் நடத்தாமல் அன்புடன் போற்றி அருமையாக வைத்துக் கொள்வாரா? நியாயமாகப் பார்த்தால் தன்னிடம் அவர் மன்னிப்புக் கேட்டுக்கொள்ள வேண்டும்! தனக்கு இழைத்த அநீதிகளுக்காகவும் கொடுமைகளுக்காகவும் வருந்திப் பச்சாதாபப்பட வேண்டும். இனிமேல் அப்படியெல்லாம் நடந்து கொள்ளுவதில்லையென்று உறுதிமொழியும் கொடுக்க வேண்டும். ஆனால் அப்படி மன்னிப்புக் கோர வேண்டும் என்று தான் வற்புறுத்தப் போவதில்லை. அந்த மாதிரியெல்லாம் அவரை அவமானப்படுத்தத் தனக்கு ஒரு நாளும் மனம் வராது. அவர் ஏதாவது சொல்ல ஆரம்பித்தால் உடனே நிறுத்த அவருடைய வாயைத் தன்னுடைய கையினால் பொத்தி, “வேண்டாம்! வேண்டாம்!” என்று சொல்ல வேண்டும். எப்படி இருந்தாலும் அவர் தன்னுடைய கணவர் அல்லவா? ஏழையும் அனாதையுமாயிருந்த தன்னை ஆசைப்பட்டு மணந்த மணவாளர் அல்லவா? செல்வத்திலே பிறந்து செல்வத்திலே வளர்ந்த லலிதாவை வேண்டாம் என்று சொல்லித் தன்னை விரும்பிக் கலியாணம் செய்துகொண்ட பிராணநாதர் அல்லவா? அவர். லலிதாவுக்கு இதெல்லாம் தெரியும்போது என்ன நினைப்பாள்? சந்தோஷப்படுவாளா? அசூயைப்படுவாளா? தன் அருமைத் தோழிக்கு இத்தகைய அதிர்ஷ்டம் கிடைத்தது பற்றிச்ந்தோஷப்படத்தான் செய்வாள். ஆயினும் மனதிற்குள்ளே கொஞ்சம் அசூயையும் இல்லாமற் போகாது. கல்யாணத்துக் கென்று காலணாச் செலவு செய்ய நாதியற்று இரவல் மணப்பந்தலில் மாலையிட்ட அனாதைச் சீதா ஒரு பெரிய சமஸ்தானத் தின் ராஜ குடும்பத்தில் பிறந்த ராஜகுமாரி என்று தெரிந்தால் கொஞ்சமாவது அசூயை உண்டாகாமல் இருக்குமா? மனுஷர்களுக்குச் சாதாரணமாக உள்ள பொறாமை லலிதாவுக்கு மட்டும் எப்படி இல்லாமற் போகும்? அதெல்லாம் இருக்கட்டும், இப்போது இவர்களிடம் தான் எப்படி நடந்து கொள்வது? தன் விஷயத்தில் இவர்களுடைய உத்தேசம் என்னவாக இருக்கும்? எதற்காக இவ்வளவு மர்மமாகவும் பலவந்தமாகவும் தன்னைப் பிடித்துக் கொண்டு வரச் செய்திருக் கிறார்கள்? இவர்களிடம் கொஞ்சம் கண்டிப்பாகவும் ஜாக்கிரதையாகவும் பேச வேண்டும். தன்னை இங்கே கொண்டு வருவதற்கு அவர்கள் கையாண்ட முறையைத் தான் விரும்பவில்லையென்று காட்டி விட வேண்டும். மேலே அவர்கள் என்ன சொன்னாலும் சுலபத்தில் இணங்கிவிடக் கூடாது. அவர்களுடைய நோக்கம் இன்னதென்று தெரிந்துகொண்டு அதற்குத் தக்கபடி யோசித்துப் பதில் சொல்ல வேண்டும். அடாடா! இந்தமாதிரி சமயத்தில் சூரியாவின் உதவியும் யோசனையும் தனக்குக் கிடைக்குமானால் எவ்வளவு நலமாயிருக்கும்? ஐயோ! பாவம்! சூரியா இப்போது எங்கே எந்த நிலையில் இருக்கிறானோ? ஒருவேளை இன்னமும் என்னைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறானோ? அல்லது போலீஸார் அவனைப் பிடித்துக் கொண்டு விட்டார்களோ என்னமோ! இந்த அரண்மனையில் தன்னுடைய நிலைமை இன்னதென்று தெரிந்ததும் முதற்காரியமாகச் சூரியாவைப் பற்றி விசாரிக்க வேண்டும். விசாரித்து அவனுக்கு வேண்டிய உதவி செய்ய வேண்டும். பார்க்கப் போனால் அவனைத் தவிர தன்னிடம் உண்மையான அபிமானம் உள்ளவர்கள் வேறு யார்? அவனைப் போல் தனக்காகக் கஷ்ட நஷ்டங்களையெல்லாம் அனுபவிக்கத் தயங்காத வர்கள் வேறு யார்? இவ்வாறெல்லாம் சிந்தனை செய்த வண்ணம் சீதா அந்த அழகிய அரண்மனை உத்தியான வனத்தில் உலாவித் திரிந்தாள். ஆங்காங்கு நின்று செடிகளில் பூத்துக் குலுங்கிய புஷ்பக் கொத்துக்களிலிருந்து ஒவ்வொன்றைப் பறித்து முகர்ந்தாள். மரக் கிளையின் மீது அமர்ந்து கீதமிசைத்த பட்சிகளை உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றாள். நடந்து அலுத்துக் கால்களும் வலி எடுத்த பிறகு அந்தப் பூங்காவனத்தில் போட்டிருந்த சலவைக் கல் மேடை ஒன்றின் மீது உட்கார்ந்தாள். அவளுடைய உள்ளத்தின் கற்பனா சக்தி விசுவரூபம் எடுத்துப் பூமியையும் வானத்தையும் அளாவிக் கொண்டு நின்றது. அவளுடைய சித்தம் மரங்களின் உச்சி மீது உலாவி வானத்துப் பறவைகளுடன் குலாவி மேக மண்டலங்களில் திரிந்து இன்ப ஒளிக் கடலில் நீந்தி விளையாடியது. காலக் கணக்கெல்லாம் குழப்பமடைந்து, ஒரு நிமிஷ நேரம் நூறு வருஷமாக நீடித்தது. ஆயிரம் வருஷம் அரை நிமிஷமாய்ப் பறந்தது. எத்தனை எத்தனையோ மனோராஜ்யங்கள் எழுந்து உடனே சிதைந்து விழுந்தன. மின்னல் நேரத்தில் ஆகாச வெளியில் அற்புதமான கோட்டைகள் தோன்றின. அதே வேகத்தில் அவை மறைந்தன. அன்பும் ஆசையும் இன்பமும் துன்பமும் குரோதமும் குதூகலமும் அலை அலையாகவும் மலை மலையாகவும் கொந்தளித்து மேலெழுந்து நொடிப் பொழுதில் அடங்கின. அவர்கள் மறுபடியும் வந்தார்கள் ராஜமாதா, ராஜகுமாரர், அவர்களுடன் அந்தரங்கப் பணியாள் மூவரும் வந்தார்கள். சீதா அவர்களை ஏறிட்டுப் பார்த்தாள் கண் கொட்டாத ஆவலுடன் மூவரையும் மாறி மாறிப் பார்த்தாள். ராஜமாதாவின் முகத்தில் புன்னகை மலர்ந்திருந்தது. “மகளே! உன்னைச் சிங்கார மாளிகையில் தேடிவிட்டு வருகிறோம். அதற்குள் தோட்டத்தைச் சுற்ற ஆரம்பித்து விட்டாயா? மிகவும் சந்தோஷம். இந்த அரண்மனைத் தோட்டத்திலே உலாவ உனக்குப் பூரண உரிமை உண்டு. இந்த அரண்மனையிலேயே வசிப்பதற்கும் உனக்குப் பாத்தியதை உண்டு. இதையெல்லாம் கேட்க உனக்கு வியப்பாயிருக்கிறதா?” என்று ராஜமாதா கேட்டாள். சீதா மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை. எத்தனையோ கேள்விகள் கேட்க அவளுடைய உள்ளம் துடித்துக் கொண்டி ருந்தது. ஆனால் பேச முடியாதபடி உணர்ச்சி அவளுடைய தொண்டையை அடைத்தது. மேலும் ராஜமாதாவிடம் ஹிந்தி பாஷையில் பேசுவதற்கு வேண்டிய சக்தி தன்னிடம் இருக்கிறதா என்பது பற்றிச் சந்தேகம் உதித்தது. டில்லியில் வசித்த காலத்தில் வேலைக்காரர் களுடன் பேசிப் பழகியதனால் ஏற்பட்ட ஹிந்தி பாஷை ஞானம் இந்த மகத்தான சந்தர்ப்பத்துக்குப் போதுமானது. “மகளே, ஏன் பேசாமலிருக்கிறாய்? நாங்கள் உனக்கு அன்னியர்கள் அல்ல. நான் உன்னுடைய சிறிய தாயார்; இவன் உன்னுடைய சகோதரன். காலம் செய்த கோலத்தினால் இத்தனை நாளும் நீ வேறு எங்கேயோ வசிக்க நேரிட்டது” என்றாள். சீதாவுக்கு ஒரே பிரமிப்பா யிருந்தது வியப்பும் மகிழ்ச்சியும் போட்டியிட்டுக் கூத்தாடின. தான் எண்ணிய எண்ண மெல்லாம் உண்மைதான்; கனவுமல்ல, கருணையுமல்ல. ஏழைச் சீதா உண்மையில் ராஜ குலத்தில் பிறந்த ராஜகுமாரி! அற்புதம் என்றால் இதுவல்லவா அற்புதம்? அதிர்ஷ்டம் என்றால் இதைப் போன்ற அதிர்ஷ்டம் வேறு என்ன உண்டு. “மகளே! இன்னும் நீ பேசவில்லை ஒருவேளை உன்னை இங்கே கொண்டு வந்த முறை உனக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது! அதனால் கோபமாய் இருக்கிறாயாக்கும்! ஆனால் உனக்கு நான் பல தடவை சொல்லி அனுப்பியும் எங்களிடம் வரச் சம்மதிக்கவில்லை. ஆகையினால் தான் உன்னைக் கட்டாயப்படுத்தி அழைத்து வருவது அவசியமாயிற்று. நீயே யோசித்துப் பார்! உன் சகோதரனுக்குச் சீக்கிரத்தில் மகுடாபிஷேகம் நடக்கப் போகிறது. அதற்கு முன்னால் இந்தக் குடும்பத்தில் உனக்குச் செய்யப்பட்ட அநீதிக்குப் பரிகாரம் செய்துவிட வேண்டுமென்று இவன் பிடிவாதம் பிடித்தான். அப்படியானால் உன்னைப் பலவந்தமாகக் கொண்டு வருவதைத் தவிர வேறு வழி என்ன?” என்றாள் ராஜமாதா. இந்தச் சமயத்தில் ராஜகுமாரரும் சம்பாஷணையிலே சேர்ந்து கொண்டார்: “சகோதரி! அம்மா சொல்வது சரிதான் தங்களைப் பலவந்தமாக இங்கே கொண்டு வரச் செய்ததற்குக் காரணம் என் ஆவலே. பிரயாணத்தின் போது ஏதாவது கஷ்டம் ஏற்பட்டி ருந்தால் அதற்காக மன்னிக்க வேண்டும். மேலும் தாங்கள் இந்தியாவின் சுதந்திரத்துக்காகப் பெரு முயற்சி செய்து வருகிறீர்கள் என்று அறிவேன். அதற்குக் குந்தகம் ஏற்படுவதை நான் விரும்பவில்லை. உண்மையில் எனக்கே இந்தச் சமஸ்தானத்து ராஜாவாக முடிசூட்டிக்கொள்வதில் விருப்பமில்லை. வெள்ளைக்காரர்களைத் துரத்தியடித்துவிட்டு இந்தியாவின் சுதந்திரத்தை நிலைநாட்ட வேண்டும் என்று ஆசையாயிருக்கிறது. அதற்கு இந்த யுத்த சமயத்தைக் காட்டிலும் நல்ல சமயம் கிடைப்பது அரிது. ஆனாலும் என் தாயாரின் வற்புறுத்தலுக்காகவே இந்த ராஜ்யப் பொறுப்பை ஒப்புக் கொள்ளப் போகிறேன். தாங்கள் என்னுடன் இருந்து ஒத்தாசை செய்ய வேண்டும் சகோதரியே! ஒத்தாசை செய்வீர்களா?” சீதாவுக்குக் கண்ணைக் கட்டிக் காட்டிலே விட்ட மாதிரி இருந்தது. இது என்ன கூத்து? இவர்கள் என்னென்னமோ சொல்கிறார்களே? ஒருவேளை இவர்கள் பேசுகிற ஹிந்தி பாஷை சரியாகப் புரியாததினால் இப்படியெல்லாம் நமக்குத் தோன்றுகிறதோ? இதற்கு மேல் சும்மா இருக்கக் கூடாதென்று தீர்மானித்து, “நான் ஒரு அபலை ஸ்திரீ; என்னால் உங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்? மேலும் என்னுடைய புருஷரிடம் கேட்க வேண்டாமா? என்னுடைய பதிக்குத் தெரியாமல் என்னை நீங்கள் கொண்டு வந்ததே பிசகு!” என்றாள். இந்த வார்த்தைகளைக் கேட்ட ராஜமாதாவும் ராஜகுமாரரும் மலை சரிந்து தலையில் விழுந்தவர் களைப்போல் பிரமித்துப் போய் நின்றார்கள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள்; பிறகு சற்று விலகி நின்ற மூன்றாவது ஆளின் முகத்தையும் பார்த்தார்கள். “நன்றாய்ப் படித்திருக்கிறாள் என்று நீர் சொன்னீரே? இந்த மாதிரிக் கொச்சையான ஹிந்தி பேசுகிறாளே?” என்று ராஜமாதா கேட்டாள். “கணவனைப்பற்றிப் பேசுகிறாளே? கல்யாணம் ஆகியிருக்கிறதா, என்ன?” என்று ராஜகுமாரர் கேட்டார். மூன்றாவது ஆசாமி திகைத்த முகத்துடன் சீதாவைப் பார்த்து, “உங்களுக்கு கலியாணம் ஆகியிருக் கிறதா?” என்று கேட்டான். “ஏன் ஆகவில்லை? ரொம்ப காலத்துக்கு முன்பே ஆகிவிட்டது! குழந்தை கூட இருக்கிறது!” என்றாள் சீதா. ராஜகுமாரர், “இதென்ன அதிசயம்? அம்மணி தாங்கள் யார்? எந்த ஊர்?” என்று கேட்டார். சீதாவுக்கு எதனாலோ கோபம் அதிகமாகிக் கொண்டிருந்தது. “நான் யார் என்று தெரியாமலா என்னைப் பிடித்துக் கொண்டுவரச் செய்தீர்கள்?” என்றாள். “அம்மணி! தயவு செய்து சொல்லுங்கள் தங்கள் பெயர் என்ன? தங்களுடைய பெற்றோர்களின் பெயர் என்ன?” என்று ராஜகுமாரர் கேட்டார். “தாராளமாகச் சொல்கிறேன் என் பெயர் சீதா! என் தந்தை பெயர் துரைசாமி ஐயர். என் தாயாரின் பெயர் ராஜாம்மாள், என் கணவன் பெயர் சௌந்தரராகவன். என் மாமியாரின் பெயர் காமாட்சி அம்மாள். என் அருமை மாமனாரின் பெயர் பத்மலோசன சாஸ்திரிகள். இன்னும் யார் யாருடைய பெயர் உங்களுக்குத் தெரியவேண்டும்?” “போதும், அம்மணி! போதும்! கியான்தாஸ்! இது என்ன மூடத்தனம்? இது என்ன அசம்பாவிதம்! இந்தத் தவறு எப்படி நேர்ந்தது?” என்று ராஜகுமாரர் பணியாள் மீது எரிந்து விழுந்தார். கியான்தாஸ் தன் சட்டைப் பையிலுள்ள புகைப்படத்தை எடுத்து சீதாவுடன் ஒப்பிட்டு இரண்டு மூன்று தடவை உற்றுப் பார்த்தான். “தவறு நேர்ந்துவிட்டது! ஐயோ! தவறு நேர்ந்து விட்டது. இந்தப் பெண்ணும் அவள் மாதிரியே இருக்கிறாள். ஆனால் அவள் அல்ல! அடடா! எவ்வளவு பெரிய தவறு நேர்ந்து விட்டது? இப்போது என்ன செய்வது?” என்று கியான்தாஸ் கூடச் சேர்ந்து அங்கலாய்த்தான். சீதாவைப் பார்த்து ராஜமாதா, “பெண்ணே! உண்மையாகச் சொல்லிவிடு! உன்னுடைய பெயர் தாரிணி இல்லையா?” என்று கேட்டாள். அந்த ஒரே கேள்வியின் மூலம் சீதாவுக்குச் சகல விவரங்களும் தெரிந்துவிட்டன.அவளுடைய ஆகாசக் கோட்டை களும் மனோராஜ்ய மாளிகைகளும் இடிந்து தகர்ந்து பொடிப் பொடியாகிக் காற்றிலே பறந்து மண்ணிலே விழுந்து மண்ணோடு மண்ணாகி மறைந்து தொலைந்து போயின! ஆகா! இந்த முழு மூடர்கள் தன்னைத் தாரிணி என்று தவறாக எண்ணி இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள். இத்தனை நேரம் அது தெரியாமல் நாமும் ஏமாந்து ஏதேதோ கோட்டை கட்டி கொண்டிருந் தோமே? ஆசாபங்கத்தினாலும் அசூயையினாலும் ஆங்காரத்தினாலும் சீதாவின் உள்ளம் எரிமலையாகியது. எரிமலை கக்கும் தீயின் கொழுந்தைப்போல் வார்த்தைகள் சீறிக்கொண்டு வந்தன. “நான் தாரிணி இல்லை; நான் உங்கள் தூர்த்த ராஜ குலத்தில் பிறந்தவளும் இல்லை. தளுக்கினாலும் குலுக்கினாலும் மூடப் புருஷர்களை மயங்க வைக்கும் மாயக்காரியும் அல்ல. நான் ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஏழைப் பெண். தாலி கட்டிய புருஷனோடு மானமாய் ஜீவனம் செய்து வந்தேன். உங்களுடைய முழு மூடத்தனத்தில் இந்த மாதிரி என்னை அலங்கோலப்படுத்தி விட்டீர்கள். இனி என்னுடைய கதி என்ன?” என்று சீதா அலறினாள். “பெண்ணே! வீணாகக் கத்தாதே! நடந்தது நடந்து விட்டது. நீ இருந்த இடத்தில் உன்னைத் திருப்பிக் கொண்டு போய் விட்டுவிடச் சொல்கிறேன்?” என்றாள் ராஜமாதா. "உங்களுக்கு என்ன? திருப்பிக் கொண்டு போய் விடுகிறேன் என்று சுலபமாய் சொல்லிவிடுகிறீர்கள். இப்படித் தெறிகெட்டு எங்கேயோ போய்விட்டுத் திரும்பி வந்தவளை அவர் திருப்பிச் சேர்த்துக் கொள்ள வேண்டாமா? நீங்கள் மகா பாவிகள்! இரக்கமற்ற சுயநலப் பிண்டங்கள்! உங்களுடைய வம்சம் அடியோடு நாசமாகிப் பூண்டற்றுப் போகும்…"அதற்கு மேல் அங்கே நிற்க விரும்பாமல் ராஜமாதாவும் ராஜகுமாரரும் விரைந்து சென்றார்கள். போகும்போதே அவர்கள் அந்த மூன்றாவது ஆளை ஏதோ பலமாகக் கண்டித்துக் கொண்டு போக அந்த ஆள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டும் சமாதானம் சொல்லிக்கொண்டும் போனான். அவர்கள் கண்ணுக்கு மறைந்ததும் சீதா விம்மி அழத் தொடங்கினாள். இதயத்தின் அடிவாரத்தில் வெகு காலமாக மறைந்து கிடந்த துக்கம் பொங்கிப் பீறிக்கொண்டு வந்தது. கொதிக்கின்ற கண்ணீர் தாரை தாரையாகப் பெருகி கன்னத்தைச் சுட்டது. பழைய காலத்துக் காவியங்களிலே வரும் கற்புக்கரசிகளைப் போலச் சீதாவுக்கு மட்டும் சக்தியிருந்தால் அந்த மூன்று பேரையும் அந்த க்ஷணமே சுட்டு எரித்துச் சாம்பலாக்கி இருப்பாள். தண்டனை அளிக்கும் அதிகாரம் உடைய அரசியாயிருந்தால் தாரிணியைச் சுண்ணாம்புக் காளவாயில் போடும்படி கட்டளையிட்டிருப் பாள்.ஆகா! எங்கே போனாலும் அந்தப் பாதகியல்லவா தன்னுடைய சத்துருவாக வந்து சேருகிறாள்? தன்னுடைய ஆசை களைப் பங்கமுறச் செய்து தன்னுடைய வாழ்க்கையைப் பாழாக்குவதற்கென்றே தாரிணி பிறந்தவள் போலும்! அடி! மோகன உருவம் கொண்ட பயங்கர ராட்சஸியே! கலிகால சூர்ப்பணகை என்றால் உனக்கல்லவா தகும்? உன்னை மானபங்கம் செய்து புத்தி புகட்ட எந்த வீர புருஷனாவது முன் வரமாட்டானா? சூரியாவிடம் சொன்னால் அவனாவது செய்யமாட்டானா? அப்படி யாரும் உன்னைப் பழிவாங்க முன் வராவிட்டால் அடுத்த முறை உன்னைப் பார்க்கும்போது நானே விஷம் கொடுத்துக் கொன்றுவிடுகிறேன், பார்! அவமானத்துக்கும் ஏமாற்றத்துக்கும் உள்ளான சீதாவின் மனதில் இது போன்ற பயங்கர எண்ணங்கள் குடிகொண்டன! இருபத்தொன்றாம் அத்தியாயம் - குற்றச்சாட்டு ஆக்ரா ரயில்வே ஸ்டேஷன் அமளி துமளி பட்டுக்கொண்டிருந்தது. வருகிற ரயில்களும் போகிற ரயில்களும் ஏகச் சத்தமிட்டன. பிரயாணிகளின் கூட்டம் சொல்லி முடியாது. ரயில்களிலும் சரி, ரயில்வே பிளாட்பாரத்திலும் சரி, காலி இடம் என்பதே கிடையாது. பிரயாணிகளில் பாதிப் பேர் ஆங்கில சோல்ஜர்களும் இந்தியச் சிப்பாய்களுமாவர். அப்போது உலக மகாயுத்தம் மிக நெருக்கடியை அடைந்திருந்த சமயம் அல்லவா? மாஜி சேனாதிபதி வேவல் இந்தியாவின் வைஸ்ராய் பதவியை வகித்து வந்தார். அது வரையில் அவர் சென்றிருந்த போர்க்களங்களிலெல்லாம் பிரிட்டிஷ் படைகள் பின்வாங்க வேண்டி நேர்ந்தது. அந்த அபகீர்த்தியைப் போக்கிக்கொள்ள விரும்பிய வேவல் துரை என்ன வந்தாலும் இந்தியாவிலிருந்து பின்வாங்கு வதில்லையென்று தீர்மானித்துப் பிரமாத ராணுவ முஸ்தீப்புகளைச் செய்து வந்தார். ஆகவே இந்தியாவின் ரயில்கள் எல்லாம் அந்த 1943-ம் வருஷம் பிற்பகுதியில் சிப்பாய்கள் மயமாயிருந்தன. ஸ்டேஷன் பிளாட்பாரங்களில் பெரிய பெரிய பீரங்கி குண்டுகளும் அவற்றின் கூடுகளும் கும்பலாக அடுக்கப்பட்டுக் கிடந்தன! பல ரயில் பாதைகள் சந்திக்கும் பெரிய ஜங்ஷன் ஆக்ரா; ஆதலால் அங்கே இடைவிடாமல் ரயில்கள் வந்தவண்ணமும் போனவண்ணமுமாக இருந்தன. இரண்டாவது வகுப்புப் பிரயாணிகளுக்குரிய வெயிட்டிங் ரூமில் ஒரு மூலையில் சீதா உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு அருகில் ஒரு சிறிய டிரங்குப் பெட்டி இருந்தது. அதன் மேல் கையை ஊன்றிச் சாய்ந்துகொண்டிருந்தாள். அவளுடைய மனம் எங்கெல்லாமோ சஞ்சரித்துக் கொண்டிருந்தது. ஐந்து வருஷத்துக்கு முன்னால் அதே ஆக்ராவுக்குச் சீதா தன் கணவருடனும் சூரியாவுடனும் வந்திருந்தாள். கோட்டையிலிருந்த அரண்மனைகளையும் தாஜ்மகாலையும் பார்த்துப் பரவசமடைந்தாள் பற்பல இன்பக் கனவுகள் கண்டாள். அந்தக் கனவுகளையெல்லாம் விட அதிசயமான நிகழ்ச்சி நேற்று நடந்தது. சில மணி நேரம் அவள் தன்னை அரண்மனையில் வாழ்வதற்குரிய அரசகுமாரி என்று எண்ணிப் பெருமித ஆனந்தம் அடைந்திருந்தாள். ஆனால் அந்தப் பெருமித ஆனந்தம் ஒரு நொடியில், ஒரு வார்த்தையில், தகர்ந்து போய்விட்டது. அவள் வெறும் சீதாதான் என்றும் சாதாரண மனுஷி தான் என்றும் ஏற்பட்டது. அவளை அவ்விதம் மதிமயங்கச் செய்வதற்குக் காரணமாயிருந்தவர்கள் ஆக்ரா ஸ்டேஷனில் அவளைக் கொண்டு வந்து விட்டுவிட்டு, டில்லிக்கு ஒரு இரண்டாம் வகுப்பு டிக்கெட்டும் வாங்கிக் கொடுத்துவிட்டு, மாயமாய் மறைந்து விட்டார்கள். ஆம், வெறும் டிக்கட் மட்டும் கொடுத்துவிட்டுப் போகவில்லை. அந்தச் சிறு டிரங்குப் பெட்டியையும் கொடுத்துவிட்டுப் போனார்கள். அவளுக்கு ஏற்பட்ட கஷ்டத்துக்குப் பரிகாரமாக அதில் ஏதோ பரிசுப் பொருள் இருக்கிறதாம். ராணி அம்மாளின் பரிசு இங்கே யாருக்கு வேணும்? வேண்டாம் என்று சொன்னாலும் கேட்காமல் வைத்துவிட்டுப் போய் விட்டார்கள். பெட்டியைத் திறந்து அதற்குள் என்ன இருக்கிறது என்று கூடச் சீதா பார்க்கவில்லை. சீதாவின் உள்ளம் அவளுடைய வருங்கால வாழ்வில் ஈடுபட்டிருந்தது. அவளிடம் டில்லிக்கு டிக்கட் இருப்பது உண்மை தான். டில்லிக்குப் போகும் வண்டியும் சீக்கிரத்தில் வந்துவிடும். ஆனால் டில்லிக்குப் போய் என்ன செய்வது? அவருடைய முகத்தில் எப்படி விழிப்பது? “இரண்டு நாளாய் எங்கே போயிருந்தாய்?” என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? ஏற்கெனவே காரணமில்லாமல் தன் மீது எரிந்து விழுந்து கொண்டிருந்தவர், இப்போது தன்னை அடியோடு நிராகரித்து விடலாம் அல்லவா? சூரியாவோடு சேர்ந்து ஏதோ சதி செய்ததாக எண்ணிக் கொண்டிருக்கலாம் அல்லவா? அப்படி எண்ணிக் கொண்டிருந்தால் தன்னை எப்படி அவர் திரும்ப ஏற்றுக் கொள்வார்! நடந்த சம்பவங்களை எல்லாம் சொன்னால் உண்மையென்று நம்புவாரா; கட்டுக்கதை என்று சொல்லமாட்டாரா? எல்லாவற்றையும் அனுபவித்த தனக்கே நடந்ததை நம்புவது கஷ்டமாயிருக்கிறதே! அவர் எப்படி நம்புவார்? அவரை விட்டுப் போய்விடுவது என்று முன்னால் உத்தே சித்திருந்தபடி செய்துவிட்டால் என்ன? அப்படியானால் எங்கே போவது? சென்னைப் பட்டணத்தில் வஸந்தி இருக்கிறாள். ஆனால் அங்கே போய் மாமனார் மாமியார் முகத்தில் எப்படி விழிக்கிறது? திடீரென்று தனியாக வந்ததற்கு என்னகாரணம் சொல்லுகிறது? அதைக்காட்டிலும் சூரியா சொன்னபடி கல்கத்தாவுக்குப் போவது நல்லது… கல்கத்தாவில் லலிதாவின் சிநேகிதி இருக்கிறாள் அல்லவா? அவள் வீட்டுக்குப் போய் அங்கிருந்தபடி யோசித்து முதலில் சென்னைக்குக் கடிதம் எழுத வேண்டும். அங்குள்ள நிலைமையைத் தெரிந்து கொண்டு போவதுதான் உசிதமாயிருக்கும். ஆனால் பிற்பாடு தான் மதராஸுக்கு எதற்காகப் போக வேண்டும்? கல்கத்தாவில் சுதந்திரமாய் வாழ்வதற்கு ஒரு வேலை தேடிக் கொள்வதுதான் சரி. எத்தனையோ ஸ்திரீகள் இந்தக் காலத்தில் உத்தியோகம் பார்த்துக் கொண்டு சுதந்திரமாய் இருக்கிறார்கள். அதுபோல் தானும் ஜீவனத்துக்கு ஒரு வேலை தேடிக் கொண்ட பிறகு வஸந்திக்குக் கடிதம் எழுதி வரவழைத்துக் கொண்டால் என்ன!…. அவ்விதம் சீதாவின் உள்ளம் டில்லிக்கும், சென்னைக்கும், கல்கத்தாவுக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கை யில், அந்த வெயிட்டிங் ரூம் வாசலில் நின்று கொண்டிருந்த ஒரு முகம் சட்டென்று அவள் கண்ணில் பட்டுக் கருத்தைக் கவர்ந்தது. அப்படிப் பார்த்தவர் ஒரு முகமதியர், சுமார் ஐம்பது வயதுள்ள மனிதர். அவரை எப்போதோ பார்த்திருந்த ஞாபகம் சீதாவுக்கு வந்தது. அதனால் ஒருவிதப் பயம் உண்டாயிற்று. தன்னை அவர் உற்றுப் பார்க்கிறார் என்று தெரிந்ததும் பீதி அதிகமாயிற்று. முன்னால் இவரை எங்கே பார்த்திருக்கிறோம் என்ற யோசனை முற்றியது. தலைவலி எடுக்கும் வரை யோசித்த பிறகு சட்டென்று ஞாபகம் வரவும் செய்தது. கையில் ரத்தம் தோய்ந்த கத்தியுடன் ரஸியாபேகம் என்னும் ஸ்திரீ ஒரு நாள் இரவு ஒருவருக்கும் தெரியாமல் வீட்டில் புகுந்து ஸ்நான அறையில் தண்ணீர்க் குழாயைத் திறந்து விட்டிருந்தாள் அல்லவா? அந்தப் பயங்கரமான இரவில், தான் படுத்துத் தூக்கமின்றிப் புரண்டு கொண்டிருந்தபோது, பலகணிக்கு வெளியே யிருந்து ஒரு முகம் தன்னையும் தாரிணியையும் உற்றுப் பார்த்ததல்லவா? அந்த மாதிரியல்லவா இருக்கிறது இந்த சாயபுவின் முகம்? ஒருவேளை அவனேதானா? அப்படியானால் எதற்காக இங்கே வந்திருக்கிறான்? தன்னை எதற்காக வெறித்துப் பார்க்கிறான்? ஆக்ரா மிகவும் பொல்லாத ஊர் என்று சீதா அடிக்கடி கேள்விப்பட்டிருந்தாள். பாதுகாப்பில்லாமல் அஜாக்கிரதையாயுள்ள ஸ்திரீகளைப் பிடித்துக் கொண்டுபோய் விற்றுவிடக் கூடிய பாதகர்கள் அந்த ஊரில் உண்டு என்றும் கேள்விப்பட்டிருந்தாள். இதற்கு முன்னால் தனக்கு நேர்ந்த கஷ்டமெல்லாம் போதாது என்று இன்னமும் கஷ்டம் ஏதேனும் காத்திருக்கிறதோ? ஆனால் இது இரயில்வே ஸ்டேஷன் இரவும் பகலும் ஆயிரக்கணக்கான ஜனங்கள் நடமாடிக் கொண்டிருக்கும் பொது ஸ்தலம். இங்கே தன்னை யார் என்ன செய்ய முடியும்? எதற்காகப் பயப்பட வேண்டும்? ஸ்திரீகள் தனியாகப் பிரயாணம் செய்வதற்குப் பயந்திருந்த காலம் போய்விட்டது. இப்போது எத்தனையோ பெண்கள் தன்னந்தனியாகப் பிரயாணம் செய்கிறார்கள். மதராஸிலிருந்து டில்லிக்கும் பம்பாயிலிருந்து கல்கத்தாவுக்கும் தனக்குத் தெரிந்த குடித்தன ஸ்திரீகள் எத்தனையோ பேர் போயிருக்கிறார்கள்? பின்னே எதற்காக பயப்படவேண்டும்? பயப்படக் காரணம் இல்லை தான் ஆனாலும் கல்கத்தாவுக்கோ மதராஸுக்கோ போவதைக் காட்டிலும் கிட்டத்திலுள்ள டில்லிக்குப் போவதே நல்லது. தனக்கு நேர்ந்த அனுபவங்களை இவர் நம்பினாலும் நம்பாவிட்டாலும் சொல்லி விட வேண்டும். சூரியாவின் கதி என்ன ஆயிற்று என்பதையாவது தெரிந்து கொள்ள வேண்டாமா?…. ஏதோ ஒரு ரயில் ராட்சத கர்ஜனை செய்துகொண்டு ஸ்டேஷன் பிளாட்பாரத்திற்குள் வந்தது. “டில்லி ரயில் வந்து விட்டது!” என்று சொல்லிக்கொண்டு வெயிட்டிங் ரூமில் இருந்தவர்களில் சிலர் எழுந்து போனார்கள். சீதாவும் அவசரமாக எழுந்து டிரங்குப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள். வாசற்படிக்கருகில் நின்ற சாயபுவைப் பார்க்கக் கூடாது என்ற உறுதியினால் வேறு பக்கம் பார்த்துக் கொண்டு சென்றாள். ஆனால் அந்த சாயபுவின் செக்கச் சிவந்த உற்றுப் பார்க்கும் கண்கள் தன் பேரில் பதிந்திருக்கின்றன என்று அவளுடைய உள்ளுணர்ச்சி அறிவித்தது. டில்லி ரயில் இது என்று தெரிந்து கொண்டதும், இரண்டாம் வகுப்பு வண்டிகளில் பெண்கள் வண்டியைத் தேடிப் பிடித்தாள். ஆனால் அந்த வண்டிகளில் பெண்களின் கூட்டம் ஏற்கெனவே அதிகமாயிருந்தது. புதிதாக ஏறப் பார்த்த சீதாவுக்கு அந்த ஸ்திரீகள் இடங்கொடுக்க மறுத்தார்கள். கதவை உட்புறம் தாளிட்டுக் கொண்டு திறக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். பிறகு சீதா அதிகக் கூட்டமில்லாத வேறொரு இரண்டாம் வகுப்பு வண்டியைத் தேடிப் போனாள். முக்கியமாக, சோல்ஜர்களும் சிப்பாய்களும் இல்லாத வண்டியைத் தேடினாள். அத்தகைய கடகடத்த ஓட்டை உடைசல் வண்டி ஒன்று தென்பட்டது. அதில் அதிக ஜனங்கள் இல்லை என்பதைப் பார்த்து விட்டு ஏறினாள். ஏறி உட்கார்ந்ததும் அதே வண்டியில் ஏற்கனவே அந்த முகம்மதியர் ஏறியிருப்பது தெரிந்து திடுக்கிட்டாள். ஐயோ! இது என்ன? போயும் போயும் இதில் ஏறினோமே? யாரைப் பார்க்க வேண்டாம் என்று நினைத்தோமோ, அந்த மனிதன் இங்கு உட்கார்ந்திருக்கிறானே? இறங்கி வேறு வண்டி பார்க்கலாமா? இறங்கி ஏறுவதற்கு நேரம் இருக்கிறதோ, என்னமோ, தெரியவில்லையே? இப்படிச் சீதா தத்தளித்துக் கொண்டிருக்கையில் இரண்டு மனிதர்கள் அந்த வண்டியண்டை வந்து நின்றார்கள். ஒருவன் இன்னொருவனுக்குச் சீதாவைச் சுட்டிக் காட்டினான். இரண்டாவது மனிதன் சீதாவை உற்றுப் பார்த்துவிட்டு “அம்மா! உன் பக்கத்தில் இருக்கிற பெட்டி உன்னுடையதா!” என்று கேட்டான். “என்னுடையது தான்; எதற்காகக் கேட்கிறாய்?” என்றாள் சீதா. அவளுக்கு ஒரு பக்கம் கோபம் வந்தது; இன்னொரு பக்கம் ஏதோ அபாயம் வரப்போகிறது என்ற உணர்ச்சியினால் மனம் பதைபதைத்தது. “உன்னுடையதா? நிச்சயந்தானா?” “நிச்சயந்தான்!” “அப்படியானால் ரயிலைவிட்டுக் கீழே இறங்கு!” என்றான் அந்த மனிதன். உடனே ஒரு விசிலை எடுத்து ஊதினான்; இரண்டு ரயில்வே போலீஸார்கள் வந்து நின்றார்கள். “உம்; இறங்கு!” என்று அதிகாரத் தொனியில் கட்டளையிட்டான். இச்சமயத்தில் ஒரு ரயில்வே உத்தியோகஸ்தர் அந்தப் பக்கம் வந்தார். சீதா, “ஸார்!” என்று அவரை அழைத்து, “இவர்கள் என்னைத் தொந்தரவு செய்கிறார்கள்; நீங்கள் உதவி செய்ய வேண்டும்!” என்றாள். அவர் போலீஸ்காரர்களைப் பார்த்து “என்ன சமாசாரம்!” என்று விசாரித்தார். சாதாரண உடுப்பில் இருந்த போலீஸ்காரன், “இந்த அம்மாள் இவருடைய பெட்டியைத் திருடியிருக்கிறாள், திருடியதோடு தன்னுடையது என்று சாதிக்கிறாள்!” என்றான். ரயில்வே உத்தியோகஸ்தர் சீதாவைப் பார்த்து, “இவர்கள் உன் பேரில் குற்றம் சாட்டுகிறார்கள். அம்மா! ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் அதோ பக்கத்தில் தான் இருக்கிறது! நீ அங்கே போய் இன்ஸ்பெக்டரிடம் உண்மையைச் சொல்லு! உனக்குக் கெடுதல் ஒன்றும் வராது! இவர்கள் சாட்டும் குற்றம் பொய் என்றால் இன்ஸ்பெக்டர் உன்னை விட்டு விடுவார். அடுத்த வண்டியில் நானே உன்னை ஏற்றி விடுகிறேன்!” என்றார். போகும் போது அவர், “இந்தக் காலத்தில் யாரையும் நம்புவதற்கில்லை. பார்வைக்குப் பரம சாதுவாய்த் தோன்றுகிறார்கள். ஆனால் காரியம் நேர் விரோதமாயிருக்கிறது!” என்று சொல்லிக் கொண்டே போனார். வேறு வழியில்லையென்று கண்டு சீதா வண்டியைவிட்டுக் கீழே இறங்கினாள். வெளிப் படையாகத் துணிச்சல் காட்டி, “வாருங்கள்! உங்கள் இன்ஸ்பெக்டரிடமே சொல்கிறேன்; இந்த அநியாயத்துக்குப் பரிகாரம் கேட்கிறேன்!” என்றாள். முன்னும் பின்னும் போலீஸ் புடைசூழச் சென்றபோது சீதாவின் உள்ளம் பதைபதைத்தது. பயத்தினால் அவளுடைய கால்கள் தள்ளாடித் தத்தளித்தன. ஆனாலும் அவள் மனதில் ஒரு சிறு ஆறுதலும் தோன்றியது. நல்லவேளை! அந்தக் கொள்ளிக்கண் சாயபு இருந்த வண்டியிலிருந்து இறங்கித் தப்பித்துக் கொண்டோ மல்லவா? போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் உண்மையைச் சொன்னால் இந்த அதிகப்பிரசங்கிகள் தன்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டியதாகும். அடுத்த வண்டியில் ஏறிக் கொண்டால் போகிறது. சாயபுவிடமிருந்து தப்பினோம் என்ற சந்தோஷமானது சீதாவைத் திரும்பிப் பார்த்து அதை உறுதி செய்து கொள்ளும்படி தூண்டியது; சீதா திரும்பிப் பார்த்தாள். ஆகா! இது என்ன! ஆபத்து இன்னமும் தன்னை விட்டபாடாக இல்லையே? அந்தச் சாயபுவும் ரயிலிலிருந்து இறங்கிச் சற்றுத் தூரத்தில் தொடர்ந்து வருகிறானே? ஐயோ! எதற்காக அவன் வருகிறான்? தன்னை என்ன செய்வதற்காக வருகிறான்? இருபத்திரண்டாம் அத்தியாயம் - விடுதலை மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் சீதா திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டுக் கைதிக் கூண்டில் நின்றாள். அவளுடைய சித்தம் தன் சுவாதீனத்தை இழந்து பிரமை கொள்ளும் நிலைக்கு வந்திருந்தது. அரண்மனைச் சிங்கார வனத்தில் நடந்த சம்பவங்களைக் காட்டிலும் நேற்றிலிருந்து நடந்த சம்பவங்கள் அவளுடைய சுயபுத்தியைக் கொண்டு நம்ப முடியாதன வாயிருந்தன. முந்தாநாள் அவள் புராதனமான ராஜகுலத்தில் பிறந்த அரசிளங்குமரி தான் என்று கொஞ்சநேரம் எண்ணிப் பெருமிதம் கொண்டிருந்தாள். இன்றைக்கு அவள் ரயில்வே ஸ்டேஷனில் பெட்டி திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் நிறுத்தப்பட்டிருந்தாள். விசாரணை நடந்து கொண்டிருந்தது பிராஸிகியூஷன் தரப்பில் மூன்று நபர்கள் சாட்சிக் கூண்டில் ஏறி சாட்சி சொல்லி விட்டார்கள். மூன்று சாட்சிகளில் ஒருவன் அப்பெட்டியின் சொந்தக்காரன் என்று தன்னைச் சொல்லிக் கொண்டான். ஆக்ரா ஜங்ஷன் பிளாட்பாரத்தில் இருந்த ஒரு பெஞ்சியில் தான் பெட்டியுடன் உட்கார்ந்திருந்ததாகவும், தாகம் எடுத்து ஒரு கப் ‘சாய்’ குடிப்பதற்குப் பாயிருந்ததாகவும், திரும்பி வந்து பார்க்கும்போது பெட்டியைக் காணோம் என்றும், அப்புறம் டெல்லி ரயிலில் அந்த அம்மாள் பெட்டியுடன் உட்கார்ந்திருந் ததைக் கண்டுபிடித் ததாகவும் அவன் சொன்னான். இந்தப் பெரும் பொய்யனுடைய பெயர் லாலா சத்தியப் பிரகாஷ் குப்தா என்று தெரிந்தபோது சீதா தன் பயங்கர நிலைமையிலும் புன்னகை செய்யாமலிருக்க முடியவில்லை. இன்னொரு சாட்சி மேற்படி லாலா சத்தியப் பிரகாஷினால் அழைத்து வரப்பட்ட போலீஸ் சேவகன். சத்தியப் பிரகாஷ் புகார் செய்ததின் பேரில் குற்றவாளி ஸ்திரீயை ரயிலிலிருந்து பெட்டி சகிதமாக இறக்கி ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துப் போனதாக அவன் சாட்சி கூறினான். அடுத்தபடியாக மேற்படி போலீஸ் ஸ்டேஷனில் அச்சமயம் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சாட்சியம் கூறினார். “இந்த அம்மாள் பெட்டி திருடியிருப்பாள் என்பதை முதலில் நான் நம்பவில்லை. ஆனால் சத்தியப் பிரகாஷ் வற்புறுத்திச் சொன்னதின் பேரில் இந்த ஸ்திரீயிடம் ‘பெட்டி உன்னுடையது தானே; அப்படியானால் அதில் என்ன சாமான்கள் இருக் கின்றன?’ என்று கேட்டேன். இந்த ஸ்திரீ பதில் ஒன்றும் சொல்லாமல் திகைத்து நின்றாள். ஆனால் சத்தியப் பிரகாஷ் குப்தா பெட்டியில் இருக்கும் சாமான்களுக்கு ஜாபிதா கொடுத்தான். சாவியும் அவனிடம் தான் இருந்தது. திறந்து பார்த்தால் அவன் சொன்ன சாமான்கள் எல்லாம் இருந்தன. இந்த அம்மாள் தன்னைப் பற்றி வேறு தகவல்களும் சரியாகக் கொடுக்கவில்லை. விலாசம் சொல்லக் கூட மறுத்து விட்டாள். ஆகையால் என்னுடைய முதல் எண்ணத்தை மாற்றிக் கொண்டு வழக்குப் பதிவு செய்தேன்” என்று இன்ஸ்பெக்டர் சாட்சி சொன்னார். இதையெல்லாம் சீதா கேட்டுக்கொண்டிருந்தாள். அந்த இன்ஸ்பெக்டர் கூறியதெல்லாம் உண்மை தான். பெட்டியில் என்ன இருந்தது என்பது தனக்கு உண்மையில் தெரியாது; ஆகையால் சொல்ல முடியாமல் திகைக்க நேர்ந்தது. தன்னுடைய சொந்த விலாசத்தைக் கொடுக்கவும் அவளுக்கு இஷ்டமில்லை. இந்த அவமானம் வேறே அவருக்கு வரவேண்டுமா என்றுதான் சொல்லவில்லை. தான் குற்றமற்றவள்; நிரபராதி இதை எப்படியும் நிரூபித்து விடலாம். நிரூபித்து விடுதலை பெறுவது நிச்சயம். பின் எதற்காகத் தன் கணவரை இந்த வெட்கக்கேட்டில் சம்பந்தப்படுத்த வேண்டும்? ஆனால் எப்படி நிரூபிப்பது? தான் குற்றமற்றவள் என்பதை எவ்விதம் நிரூபிப்பது? அதற்கு வழி எவ்வளவு யோசித்தும் புலப்படவில்லை தன்னுடைய கதையை யார் நம்புவார்கள்? அந்தக் கோர்ட்டிலிருந்த வயோதிகரான வக்கீல் ஒருவர் சீதாவின் பேரில் கருணை கொண்டு அவளுடைய கட்சியை எடுத்துப் பேசுவதற்கு ஒப்புக்கொண்டார். தம்மிடம் உண்மையைச் சொல்லும்படி சீதாவைக் கேட்டார். சீதா உண்மையில் நடந்ததையெல்லாம் சொன்னாள். ஆனால் அவர் ஒரேயடியாகத் தலையசைத்தார். “கதை ஜோடிக்கும் சாமர்த்தியம் உன்னிடம் அபாரமாயிருக்கிறது. எழுதும் சக்தியும் இருந்தால் பிரபல ஆசிரியை ஆகலாம். ஆனால் கோர்ட்டில் இந்தக் கதையை யாரும் நம்ப மாட்டார்கள். நீ உண்மையைச் சொல்ல மறுக்கிறாய்! நான் என்ன செய்யட்டும்? முடிந்த வரையில் முயன்று பார்க்கிறேன்” என்றார். அவ்வாறே அவரால் முடிந்த வரையில் முதல் மூன்று சாட்சிகளையும் குறுக்கு விசாரணை செய்து பார்த்தார். ஆனால் ஒன்றும் பயன் தரவில்லை. குற்றவாளிக்குச் சாதகமாக அந்தச் சாட்சிகளின் வாய் மொழியிலிருந்து எதுவும் வெளியாகவில்லை. முதல் மூன்று சாட்சிகளின் விசாரணை முடிந்து விட்டது. பிராஸிகியூஷன் தரப்பில் இன்னும் ஒரே ஒரு சாட்சி பாக்கி இருந்தது. ஆனால் மாஜிஸ்ட்ரேட் அவசரப்பட்டார் “இன்னும் எதற்காகச் சாட்சியம்? கேஸ் தெளிவாக இருகிறதே” என்று சொன்னார். பிராஸிகியூஷன் தரப்பில் கேஸ் நடத்திய போலீஸ் வக்கீல் “கொஞ்சம் பொறுத்துக் கொள்ள வேண்டும். நாலாவது சாட்சி திருட்டைக் கண்ணால் பார்த்த சாட்சி” என்றார். உடனே, அந்த கிராதக சாயபு சாட்சிக் கூண்டிற்கு வந்து நின்றான். சீதாவின் பயமெல்லாம் உண்மையாகி விட்டது. “இவன் எதற்காகத் தொடர்ந்து வருகிறான்?” என்று முதல் நாள் இரவு சீதா கேட்டுக் கொண்ட கேள்விக்குப் பதில் கிடைத்து விட்டது. தன் குடியைக் கெடுப்பதற்குத்தான்; பொய் சாட்சி சொல்லித் தன்னைத் திருடி என்று நிரூபிப்பதற்குத்தான்! அடப்பாவி! உனக்கு நான் என்ன தீங்கு செய்தேன்! நீ யார் என்பது கூட எனக்குத் தெரியாதே! எதிர்பாராத எத்தனையோ கஷ்டங்களுக்கு உள்ளான இந்த துர்ப்பாக்கியசாலியின் தலையில் இப்படிக் கடைசியாகப் பெரிய கல்லைத் தூக்கிப்போட்டுக் கொல்லப் பார்க்கிறாயே? அந்தக் கிராதக சாயபு, “சர்வ வல்லமையுள்ள ஆண்டவன் சாட்சியாக உண்மையே சொல்லுவேன்” என்று சத்தியப்பிரமாணம் செய்தார். பிறகு போலீஸ் தரப்பு வக்கீலின் கேள்விகளுக்குப் பதில் சொன்னார். இரண்டாவது மூன்றாவது கேள்விகளுக்கு அவர் கூறிய பதில்கள் கோர்ட்டில் பெரும் கிளர்ச்சியை உண்டாக்கி விட்டன. “இந்த ஸ்திரீ பெட்டியைத் திருடி எடுத்துச் சென்றதை நீர் கண்ணால் பார்த்தீர் அல்லவா?” “இல்லை நான் பார்க்கவில்லை.”“ஓகோ! இது என்ன? நீர் பார்க்கவில்லையென்றால், பின்னே இவள் திருடினாள் என்பது உனக்கு எப்படித் தெரியும்? அப்படி அனுமானிப்பதற்கு வேறு காரணம் உண்டா?” “இல்லை; அப்படி அனுமானிப்பதற்கு எவ்விதமான காரணமும் இல்லை! இந்த அம்மாள் பெட்டியைத் திருடவில்லை என்பது எனக்கு நிச்சயமாய்த் தெரியும்!” தன் காதில் விழுவது உண்மைதானா என்று சீதா அதிசயித்தாள். லாலா சத்தியப் பிரகாஷ் குப்தாவின் முகம் வெளுத்தது. போலீஸ்காரர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள். மாஜிஸ்ட்ரேட் கவனமாகக் காது கொடுத்துக் கேட்கத் தொடங்கினார். சீதாவின் கட்சி பேசிய வக்கீலின் முகம் பிரகாசம் அடைந்து மலர்ந்தது. போலீஸ் வக்கீல் போலீஸ் அதிகாரியுடன் ஏதோ பேசி விட்டு, “இந்தச் சாட்சி விரோதமாய்த் திரும்பிவிட்டபடியால் விசாரணையை நிறுத்திக் கொள்கிறேன்” என்றார். குற்றவாளி தரப்பு வக்கீல் குதித்து எழுந்து, “நான் சிலகேள்விகள் கேட்கக் கோர்ட்டார் அனுமதி கொடுக்கவேண்டும்” என்றார். மாஜிஸ்ட்ரேட்டுக்கும் உண்மையை அறியும்ஆர்வம் ஏற்பட்டிருந்தது கேள்வி கேட்க அனுமதித்தார். “ஜனாப்! இந்த ஸ்திரீ திருடவில்லை என்று நிச்சயமாய்த் தெரியும் என்று சொன்னீரே, நிச்சயமாய் எப்படித் தெரியும்?” “உண்மையில் பெட்டியைத் திருடியது யார் என்று எனக்கு நிச்சயமாய்த் தெரியும். அதனால் தான் இந்த அம்மாள் திருடவில்லை என்று நிச்சயமாய்ச் சொன்னேன்.” கோர்ட்டில் பரபரப்பு அதிகமாயிற்று கசுமுசுவென்று பேசும் சத்தம் எழுந்து உடனே அடங்கிவிட்டது. “உண்மையில் பெட்டியைத் திருடியது யார்?” என்று வக்கீல் கேட்டார். முகம்மதியர் பதில் சொல்லத்தயங்கினார். “சத்தியப் பிரகாஷ் குப்தாவா?” “இல்லை!” “பின்னே யார்?” “நான்தான்!” “என்ன? நன்றாய்ச் சொல்லும் கோர்ட்டாரின் பக்கம் பார்த்துச் சத்தியமாய்ச் சொல்லும்.” “பெட்டியைத் திருடியவன் நான் தான். பெட்டியை எடுத்துப் போய் நான் முதலில் ஒரு வண்டியில் ஏறிக்கொண்டேன். அதே வண்டியில் பிற்பாடு அந்தஅம்மாள் வந்து ஏறினாள். நான் திருடி வந்த பெட்டிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்…” இந்தச் சமயத்தில் போலீஸ் வக்கீல் மேற்படி சாட்சியத்தை ஆட்சேபிக்க எழுந்தார். மாஜிஸ்ட்ரேட் அவரை உட்காரும்படி உத்தரவிட்டார். “போலீஸாரிடம் நேற்று இரவு நீர் எழுதி வைத்த வாக்குமூலத்தில் இந்த அம்மாள் திருடியதைக் கண்ணால் பார்த்த தாக எழுதி வைத்தீர் அல்லவா? அது ஏன்?” “சத்தியப் பிரகாஷ் குப்தா அவ்விதம் சொல்லும்படி கேட்டுக் கொண்டான்.சொன்னால் ஐநூறு ரூபாய் தருவதாகவும் ஒப்புக் கொண்டான்.” “பின் எதனால் இப்போது மாறி உண்மையைச் சொன்னீர்?” “இந்த சாட்சிக் கூண்டில் ஏறி அல்லாவின் பெயரால் பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகு பொய் சொல்ல மனந்துணியவில்லை. அந்த அம்மாளுக்குச் செய்த அநீதிக்குப் பரிகாரமாக உண்மையைச் சொன்னேன்”. “ஆனால் இந்த ஸ்திரீ பெட்டி தன்னுடையது என்று போலீசாரிடம் சொன்னாளே, அது ஏன்?” “இந்த அம்மாள் போலீஸாரிடம் என்ன சொன்னாளோ, எனக்கு அது தெரியாது. இந்த அம்மாளைப் பார்த்தாலே ஒரு மாதிரி பிரமை பிடித்திருக்கிறது என்று தெரிகிறது பிரமையில் ஏதாவது சொல்லியிருக்கலாம்.” சீதாவின் வக்கீல் சுருக்கமாகத் தம்முடைய வாதத்தைச் சில வார்த்தைகளில் முடித்துக் கொண்டார். மாஜிஸ்ட்ரேட்டு வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டு, சீதாவின் கட்சி பேசிய வக்கீலைப் பார்த்து, “இந்த ஸ்திரீயின் பாதுகாப்புக்கு ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும். இவள் யார் எந்த ஊர் என்பதைக் கண்டுபிடித்து இவளுடைய சொந்தக்கார மனுஷர்களிடம் சேர்ப்பிக்க வேண்டும். அது வரையில் இந்த நகரிலுள்ள அனாதை ஆசிரமத்திலாவது வேறு தகுந்த ஸ்தாபனத்திலாவது இவளை விட்டுவைப்பது நல்லது” என்றார். “ஆகட்டும்” என்றார் வக்கீல். முதிய பிராயத்தவரும் உத்தமருமான அந்த வக்கில் சீதாவுக்குச் சித்தப்பிரமை இல்லையென்றும், பல காரணங்களினால் மனம் குழம்பியிருந்தாலும் தன்னுடைய நிலைமையைப் பற்றி யுக்தாயுக்தம் பார்த்துத் தீர்மானிக்கும் தெளிந்த அறிவு அவளிடம் இருக்கிறது என்றும் விரைவிலேயே அறிந்தார். அன்று பிற்பகலில் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துப் போய் உணவு அருந்துவித்தார். இரவில் ஆக்ரா ஸ்டேஷனுக்கு அழைத்துப் போனார். வழியில் அவர் “ஆமா! சாட்சி சொன்ன சாயபுவை உனக்கு முன்னமே தெரியுமா?” என்று கேட்டார். “தெரியாது; அவர் எங்கே இப்போது? நான் பார்த்து நன்றி கூறவேண்டும்!” என்றாள். “அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், மகளே! நான் ஒரு விஷயம் சொல்லுகிறேன், கேட்கிறாயா?” “அவசியம் கேட்கிறேன், ஐயா! அவ்வளவு நன்றியாவது தங்களிடம் எனக்கு இருக்க வேண்டாமா?” “நல்லது கேள்! கடவுளின் அருள் உன்னை இன்று காப்பாற்றியது. அந்த முகம்மதியனின் சாட்சியம் தான் உன்னுடைய விடுதலைக்குக் காரணமாயிருந்தது என்பது உண்மை தான். ஆனால் அவனை யோக்கியன் என்று நான் கருதவில்லை. ஏதோ ஒரு நோக்கம் வைத்துக் கொண்டுதான் அவன், தான் திருடியதாகச் சொல்லி உன்னை விடுதலை செய்திருக்கிறான். நீ சர்வ ஜாக்கிரதை யாயிருக்க வேண்டும். இதைக்காட்டிலும் பெரிய ஆபத்து உனக்கு வரக்கூடும்.” “இன்றைக்கு என்னைக் காப்பாற்றிய கருணாமூர்த்தியான கடவுள் இனியும் காப்பாற்ற மாட்டாரா?” "காப்பாற்றுவார்; காப்பாற்றட்டும் ஆனால் நாமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அந்தச் சாயபு பெட்டி திருடவில்லை என்பது நிச்சயம். உனக்கு யாரோ பெட்டியைக் கொடுத்ததாகச் சொன்னாயே, அதை நான் நம்புகிறேன். பின் எதற்காக அந்த முகம்மதியன் திருட்டுக் குற்றத்துக்குத் தன்னை ஆளாக்கிக் கொண்டு உன்னை விடுதலை செய்விக்கிறான்?" “ஐயா! அந்த முகம்மதியர் இப்போது எங்கே? ஒருவேளை அவரைக் கைது செய்து விடுவார்களோ?” “ஒருவேளை என்ன? திருட்டுக் குற்றத்தைக் கோர்ட்டில் ஒப்புக்கொண்ட ஆசாமியைச் சும்மா விட்டுவிடுவார்களா!” “ஐயா! அவரைத் தாங்கள் பார்த்து ஏதாவது உதவி செய்ய வேண்டும் உங்களுக்குப் புண்ணியம் உண்டு.” “என்னால் ஆனதைச் செய்கிறேன் சற்றுமுன்னால் அவனைப் போய்ப் பார்த்துவிட்டுத்தான் வந்தேன். அவன் தன்னைப் பற்றி ஒன்றும் பேசவில்லை; உன்னைப் பற்றியே பேசினான். உன்னை எப்படியாவது பத்திரமாய் டில்லிக்கு அனுப்பிவிட வேண்டுமாம். அங்கே உள்ளவர்கள் உன்னைக் கவனித்துக் கொள்வார் களாம். மகளே! என்னுடைய புத்திமதியைக் கேட்பாயா?” “சொல்லுங்கள், ஐயா!” “என் அபிப்பிராயத்தில், நீ இப்போது டில்லிக்கே போகக் கூடாது. அங்கே யாரோ உன்னை ஏதோ செய்யக் காத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். வேறு எங்கேயாவது போவது நல்லது; நீ மதராஸ்காரிதானே? மதராஸுக்கே போகலாமே?” “இல்லை ஐயா! மதராஸுக்கு இப்போது போக நான் இஷ்டப்படவில்லை.” “டில்லிக்குத்தான் போகவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தால்…” “இல்லை; டில்லிக்கு போகவும் எனக்குப் பயமாய்த்தானிருக்கிறது. கல்கத்தாவில் எனக்கு ரொம்ப வேண்டிய சிநேகிதர்கள் இருக்கிறார்கள். ஆகையால் கல்கத்தா போகலாம் என்று பார்க்கிறேன் டிக்கெட்டுக்குத்தான் பணம் வேண்டும்.” “அதைப்பற்றி நீ கவலைப் படாதே! நான் டிக்கட் வாங்கிக் கொடுக்கிறேன். யாராவது தெரிந்தவர்கள் கல்கத்தா போனாலும் போவார்கள் . அவர்களிடம் உன்னை ஒப்புவித்து அனுப்பி வைக்கிறேன் சரிதானே?” “அப்படியே ஆகட்டும்; எனக்கு நல்ல காலம் பிறக்கும் போது நீங்கள் கொடுக்கும் பணத்தைத் திருப்பி அனுப்பி விடுகிறேன்.” “பணத்தைப் பற்றி யார் கேட்டார்கள்? சௌக்கியமாகப் போய்ச் சேர்ந்தால் எனக்குப் பரம திருப்தி!” என்றார் வக்கீல். இருபத்து மூன்றாம் அத்தியாயம் - உல்லாச வேளை உலகத்து மாநகரங்களுள்ளே நவயௌவன சௌந்தரியம் பெற்றுவிளங்குவது கல்கத்தாநகரம். அந்த நகர சுந்தரியின் வனப்புமிக்க தோள்களின் மேலே மிதந்து அசைந்தாடிக் கொண்டிருந்த நீலப் பட்டு உத்தரீயத்தைப் போல் இனிய புனல் ததும்பிய ஏரி ஒய்யாரமாக நீண்டு நெளிந்து கிடந்தது. நீல உத்தரீயத்தின் ஓரங்களில் அமைந்த பச்சை வர்ணக் கரையைப் போல ஏரிக்கரை யோரமாகப் பசும்புல் படர்ந்திருந்தது. ஏரியின் நடுவே மரகதச் சோலைகள் செழித்து வளர்ந்திருந்த தீவு சித்திரக் கலைஞனுடைய கற்பனைச் சித்திரமோ என்று சொல்லும்படி விளங்கியது. ஏரி நீரில் ஆங்காங்கு சில வெண்ணிறப் பறவைகளும் உல்லாசப் படகுகளும் மிதந்து கொண்டிருந்தன. ஏரியின் மத்தியில் இருந்த சோலைத் தீவிலிருந்து புள்ளினங்கள் கோஷ்டி கானமாகப் பாடிய நாத கீதங்கள் இளங் காற்றில் மிதந்து வந்து நாலாபுறமும் இசை இன்பத்தைப் பரப்பின. உல்லாசத்துக்குரிய மாலை வேளையில் ஏரிக்கரை ஓரத்துப் பசும்புல் தரையில் ஆங்காங்கு ஆடவரும் பெண்டிரும் கும்பலாகக் காணப்பட்டனர். சிலர் ஏகாந்தமாகப் புல் தரையில் சாய்ந்து கொண்டு பகற் கனவு கண்டு கவிதை புனைந்து கொண்டிருந்தனர். சிலர் கூட்டமாக உட்கார்ந்து காரசாரமான வாதப் பிரதிவாதங்கள் செய்து கொண்டிருந்தார்கள். வயது முதிர்ந்த தம்பதிகள் அளாவிளாவிப் பேசி மகிழ்ந்தனர். இளமையின் இன்பத்தில் திளைத்த காதலர்களும் புதுமணம் புரிந்த தம்பதிகளும் வாய்ப் பேச்சுக்கு அவசியத்தைக் காணாது கண்களோடு கண்களும் இதயத்தோடு இதயமும் பேசும்படி விட்டுக் களிப்படைந்தனர். அதோ, அந்த இளம் தம்பதிகள் யார்? நமக்குத் தெரிந்தவர்களைப் போலத் தோன்றுகிறார்களே?… ஆம்; தெரிந்தவர் கள்தான் தேவபட்டணம் தாமோதரம்பிள்ளையின் குமாரன் அமரநாதனும் அவனுடைய மனைவி சித்திராவுந்தான். “இந்தக் கல்கத்தா ஏரிக்கரையின் அழகு திருச்செந்தூர்க் கடற்கரைக்குக் கூட வராது!” என்றாள் சித்ரா. “உனக்கு இன்னமும் இந்த வங்க நாட்டு மோகம் விடவில்லை போலிருக்கிறது. எனக்கு இந்த ஏரிக் காட்சி இப்போதெல்லாம் அவ்வளவாக இன்பம் அளிக்கவில்லை. இதைப் பார்க்கும்போது துக்கந்தான் உண்டாகிறது. வங்க மாதா தன் அருமை மக்களின் பரிதாப நிலையை எண்ணிச் சொரிந்த கண்ணீர் இந்த ஏரியில் நிறைந்து ததும்புவதாக எனக்குத் தோன்றுகிறது” என்றான் அமரநாத். “ஒரு சமயம் இந்த ஏரியைப் பற்றி நீங்கள் வேறு விதமாக வர்ணித்தது எனக்கு நினைவிருக்கிறது. ‘பங்கிம் சந்தருடைய நாவல் களையும் ரவீந்திரரின் கவிதைகளையும் படித்துவிட்டு வங்க மாதா பொழிந்த ஆனந்தக் கண்ணீர் இந்த ஏரியில் நிறைந்து ததும்பிக் கொண்டிருந்தது!’ என்று சொன்னீர்கள். அந்தப் பரவசமெல்லாம் இப்போது எங்கே போயிற்று?” "அதையெல்லாம் இந்த பயங்கரமான பஞ்சம் அடித்துக் கொண்டு போய்விட்டது. மூன்று மாதமாகத் தினம் தினம் சாலையின் இரு பக்கங் களிலும் பட்டினியால் செத்துக் கிடப்பவர்களின் பிரேதங்களைப் பார்த்துக் கொண்டிருந்த பிறகு, கதையாவது கவிதையாவது காவியமாவது என்று தோன்றுகிறது. சுத்தப் பைத்தியக்காரத்தனம்; அதனால் தான் காந்தி மகாத்மா சொன்னார்: ‘மக்கள் பசியால் வாடும் நாட்டில் கலை என்ன, கவிதை என்ன, பாடல் என்ன?’ என்றார். ‘இராட்டையின் ரீங்காரமே இனிமையிலும் இனிமையான சங்கீதம்!’ என்றார். மகாத்மா வுக்கும் டாகூருக்கும் இதைப்பற்றி ஒரு சமயம் பலத்த விவாதம் நடந்தது. நான் அப்போது டாகூரின் கட்சிதான் சரி என்று எண்ணினேன். இந்த மூன்று மாதத்துப் பயங்கரங்களைப் பார்த்த பிறகு, பதினாயிரக்கணக்கான ஜனங்கள் பசிக்குச் சோறின்றித் தெரு வீதிகளில் விழுந்து செத்து மடிவதைப் பார்த்த பிறகு, மகாத்மா சொல்வதுதான் சரியென்று எண்ணுகிறேன்." “இந்த வங்க நாட்டு ஜனங்கள் இவ்வளவு தேச பக்தியும் கடவுள் பக்தியும் உள்ளவர்களாயிற்றே! கடவுள் எதற்காக இவர் களை இப்படிச் சோதிக்கிறாரோ, தெரியவில்லையே!” என்று சித்ரா பரிதபித்துக் கூறினாள். “வங்காளிகள் நல்லவர்கள் தான்! ஆனால் இவர்களிடம் பெரிய துர்க்குணம் ஒன்றும் இருக்கிறது. குறுகிய மாகாணப் பற்று அதிகம் உள்ளவர்கள். இவர்களுக்கு ‘வங்காளிகள் தேவ ஜாதிகள்; மற்ற நாட்டார் எல்லாரும் நீச்ச ஜாதிகள்’ என்று எண்ணம். மதராஸியையோ பம்பாய்க் காரனையோ கண்டால் இவர்களுக்குப் பிடிப்பதில்லை. இவர்கள் மட்டும் லாகூர் வரைக்கும் சென்று உத்தியோகம் பார்ப்பார்கள். ஆனால் மற்ற மாகாணத்தார் இங்கே வந்து பிழைப்பது இவர்களுக்குப் பிடிப்பதில்லை. அந்தக் கெட்ட குணத்துக்காகத் தான் கடவுள் இவர்களை இப்படித் தண்டித்திருக்கிறார்!” என்றான் அமரநாத். "கடவுளை அவ்வளவு கொடுமையானவராக ஆக்கி விடுகிறீர்களே? கிருஷ்ண சைதன்யரும் ராமகிருஷ்ண பரமஹம்ஸரும் விவேகானந்தரும் அவதரித்த நாட்டின் மக்களைக் கடவுள் அவ்வளவு கருணையில்லாமல் தண்டிப்பாரா? சுரேந்திரநாதரும் தேசபந்துவும் சுபாஷ் போஸும் பிறந்த நாட்டின் மக்கள் கொஞ்சம் மாகாணப் பற்று உள்ளவர்களாயிருந்தால்தான் என்ன?" “பின்னே, நீ என்ன காரணம் சொல்லுகிறாய்? வங்காளிகள் எதற்காக இவ்வளவு பயங்கர மான கஷ்டத்துக்கு உள்ளாக வேண்டும்?” “எல்லாம் மனிதர்கள் செய்கிற காரியந்தான். பணத்தாசை பிடித்த பேய்கள், விளைந்த தானியத்தையெல்லாம் வாங்கி முடக்கி விட்டால் பஞ்சம் வராமல் என்ன பண்ணும்?” “அந்தக் கொடிய மனிதர்களையும் கடவுள்தானே சிருஷ்டித்தார்? ‘எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறார்’ என்று நம்முடைய வேத சாஸ்திர புராணங்கள் எல்லாம் சொல்லு கின்றனவே! ஆகையால் மனிதன் செய்தாலும் அதன் பொறுப்பு கடவுளின் தலையிலேதானே விழும்?” “உங்களோடு விவாதம் செய்ய முடியாது. நீங்கள் இந்தக் கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து இப்படி நாஸ்திகராகப் போய் விட்டீர்கள்! நான் உங்களோடு பேசத் தயாராயில்லை!” என்றாள் சித்ரா. “போகட்டும்; கம்யூனிஸ்டுகளால் இந்த ஒரு நன்மையாவது நிச்சயம் இருக்கிறது. அவர்களுடைய சகவாசத்தினால் ஒரு பெண்மணியின் வாயை மூடி மௌனமாகச் செய்ய என்னால் முடிந்ததல்லவா?” என்று கேலி செய்தான் அமரநாத். "வீண் ஆசை! அந்த மாதிரி எண்ணி நீங்கள் கர்வங்கொள்ள வேண்டாம். வங்க நாட்டுக்கு இந்தக் கொடும் பஞ்சத்தை அனுப்பியவர் கடவுளாக இருந்தால், அதனாலும் ஏதோ ஒரு நன்மை ஏற்படும் என்பது நிச்சயம். இந்த வங்காளத்தில் பஞ்சம் வருவது இது முதல் தடவையல்ல, முன்னேயும் வந்திருக்கிறது. ‘ஆனந்த மடம்’ கதையில் வங்க நாட்டில் அப்போது பரவியிருந்த பயங்கரமான பஞ்சத்தைப் பற்றிப் பங்கிம் சந்திரர் எப்படி வர்ணித்திருக்கிறார் என்று ஞாபகம் இருக்கிறதா? அந்தப் பஞ்சத்தின் காரணமாக ஒரு பெரும் புரட்சி தோன்றியது. மகேந்திரன், கல்யாணி, ஜீவானந்தன், சாந்தி, பவானந்தன், ஸத்தியானந்தர் முதலிய சுதந்திர வீரர்கள் உதயமானார்கள். ‘வந்தேமாதரம்’ என்னும் மகா மந்திரமும் ஏற்பட்டது. இப்போது இந்தப் பஞ்சத்தின் காரணமாகவும் ஒரு பெரும் புரட்சி ஏற்படப் போகிறது. குமுறிக் கொண்டிருக்கும் எரிமலை வெடிக்கப் போகிறது. அந்த எரிமலை பொழியும் நெருப்பில் பிரிட்டிஷ் ஆட்சி எரிந்து பொசுங்கி விடப் போகிறது. இந்திய தேசம் சுதந்திரம் அடையப் போகிறது." "இந்தியா சுதந்திரம் அடையட்டும்; நான் வேண்டாம் என்று சொல்ல வில்லை; குறுக்கே நின்று தடுக்கவும் இல்லை. ஆனால் எனக்கென்னமோ சந்தேகந்தான். பஞ்சத்தில் அடிப்பட்ட ஜனங்கள் புரட்சி செய்வார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. பசியினாலும் பஞ்சத்தினாலும் பிரஞ்சு புரட்சி ஏற்பட்டது என்று சொல்கிறார்கள். ஒருவேளை அரை வயிறு பட்டினியாயிருப்பவர்கள் புரட்சி செய்யலாம். முழுதும் பட்டினி கிடப்பவர்கள் அடியோடு சக்தியை இழந்து சோர்ந்து விடுகிறார்கள்; அல்லது செத்தே போய் விடுகிறார்கள். செத்துப் போனவர்கள் எப்படிப் புரட்சி செய்ய முடியும்? நீயே பார், சித்ரா! இந்த வங்காளப் பஞ்சத்தில் ஐம்பது லட்சம் பேர் செத்து போயிருக்கிறார்கள். இவர்களில் கால்வாசிப் பேர், ஒரு பத்து லட்சம் பேர், சுதந்திரத்துக்காக உயிரை விடத் துணிந்திருந்தால் இந்தியா சுதந்திரம் பெற்றி ருக்கும். அவ்வளவு கூட வேண்டாம்; ஒரு லட்சம் பேர் உயிரை விடத் துணிந்து கிளம்பியிருந்தாலே போதும். ஆனால் வீதி ஓரங்களில் விழுந்து செத்தாலும் சாவார்களேயன்றி நாட்டின் விடுதலைக்காக உயிரைக் கொடுக்க முன்வர மாட்டார்கள்…." “ஏன் வரமாட்டார்கள்? பேஷாக முன் வருவார்கள். ஜனங்களை நடத்திச் செல்லத் தகுந்த தலைவர்கள் இல்லாத தோஷந்தான். சுபாஷ் பாபு மட்டும் இச்சமயம் இங்கே யிருந்தால் கட்டாயம் புரட்சி ஏற்பட்டிருக்கும். சுபாஷ் பாபு இப்போது மலாய் நாட்டில் சேர்த்து வரும் சைனியத்தில் இந்திய வீரர்கள் ஏராளமாய்ச் சேருகிறார்களோ, இல்லையோ? உயிரைக் கொடுக்கத் துணிந்து தானே அவர்கள் சேருகிறார்கள்? ஆகா! தலைவர் என்றால் சுபாஷ் பாபுவைப் போல் இருக்க வேண்டும்.” “சுபாஷ் பாபுவின் பேரில் உன்னுடைய மோகம் இன்னும் போகவில்லை. சுபாஷ் பாபு வெற்றியடைந்தால் என்ன நடக்கும் தெரியுமா? இந்தியாவில் இங்கிலீஷ்காரர்களின் ஆட்சிக்குப் பதிலாக வங்காளிகள் ஆட்சி ஏற்படும்!” என்றான் அமரநாத். “ஏற்பட்டால் என்ன? அன்னியர்களாகிய இங்கிலீஷ்காரர்களின் கீழ் அடிமைகளாயிருப்பதைக் காட்டிலும் வங்காளிகளின் ஆட்சியில் நாம் இருந்தால் என்ன?” “இருந்தால் என்ன? ஒன்றுமில்லை விஷயம் என்னவென்று உனக்குச் சொன்னேன்! அவ்வளவுதான். பங்கிம் சந்திர சட்டர்ஜி தான் ஆனந்த மடம் எழுதியிருக்கிறாரே? அதில் யாரைத் தூக்கி வைத்து எழுதியிருக்கிறார்? வங்க மாதாவின் புதல்வர்களைத் தான்! ‘வந்தே மாதரம்’ கீதத்தில் ஏழு கோடி மக்கள் என்றுதான் சொல்லியிருக்கிறார். அதை முப்பது கோடி என்று பின்னால் மாற்றினார்கள். எப்படியும் வங்காளிகளிடம் இந்த துர்க்குணம் இருக்கத்தான் இருக்கிறது. அதன் பலனைப் பார், சித்ரா! வங்காளம் இப்போது முஸ்லீம் லீக் மந்திரிகளின் ஆட்சியில் இருக்கிறது. முஸ்லிம் லீகர்களும் வங்காளிகள் தான்! ஆனால் எப்பேர்ப்பட்ட வங்காளிகள்!” “டாக்டர் டாகூரும் வங்காளி தான் அவரைப் பாருங்களேன்! உலகமெல்லாம் ஒன்று. மனித ஜாதியெல்லாம் ஒரே ஜாதி என்று சொல்லவில்லையா? நீங்கள் வங்காளிகளைப் பற்றிக் குறை சொல்வது எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. அதுவும் இந்த நாட்டில் நாம் தொழில் நடத்திப் பணம் சம்பாதித்துக் கொண்டே இந்த நாட்டு மக்களைப் பற்றிக் குறை சொல்லலாமா? போதும், புறப்படலாம்! ஹாவ்ராவுக்குப் போக வேண்டும் என்கிறீர்களே!” இவ்வாறு சொல்லிக் கொண்டே சித்ரா எழுந்தாள். “நான் இங்கே அதிக நாள் இருப்பதாக உத்தேசமில்லை சித்ரா! சீக்கிரம் தமிழ்நாட்டுக்குப் போய்விட விரும்புகிறேன்” என்று சொல்லிக் கொண்டு அமரநாத்தும் எழுந்தான். "அதெல்லாம் முடியாது! நீங்கள் போவதாயிருந்தால் தனியாகப் போக வேண்டியதுதான். உங்கள் நாட்டில் குடிகொண்டிருக்கும் சிறுமைப் புத்தியும் சின்னச் செயல்களும் எனக்குக் கொஞ்சம் பிடிக்க வில்லை. ஒருவரை யொருவர் நிந்திப்பதே தமிழ்நாட்டாருக்கு வேலை. ஒரு ஸ்திரீயும் புருஷனும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் போதும், உடனே நூறு சந்தேகங்களைக் கற்பித்து அவதூறு பேச ஆரம்பித்து விடுவார்கள்!" “வங்காளிகளிடம் இந்தக் குணம் கிடையாது என்று நினைக்கிறாய், சித்ரா! உனக்குத் தெரிந்த இலட்சணம் அவ்வளவுதான்!” “எனக்குத் தெரிந்திருக்கிற அளவே போதும், பிறத்தியாரிடம் என்ன துர்க்குணம் இருக்கிறது என்று தோண்டிப் பார்த்துத் தெரிந்து கொள்ள எனக்குக் கொஞ்சமும் விருப்ப மில்லை!” இவ்வாறு முடிவில்லாத விவாதம் செய்துகொண்டே அந்த அன்யோன்ய தம்பதிகள் மோட்டார் வண்டி நிறுத்தியிருந்த இடத்துக்குச் சென்று வண்டியில் ஏறிக் கொண்டார்கள். அமரநாத்தும் சித்ராவும் கல்கத்தாவில் ஜாலீகஞ்ச் என்னும் பகுதியின் ஒரு அழகான பங்களாவில் வசித்தார்கள். முன்னேயெல்லாம் அவர்கள் அடிக்கடி ஏரிக்கரைக்குக் காற்று வாங்க வருவதுண்டு. பஞ்சத்தில் அடிப்பட்ட ஜனங்கள் கல்கத்தாவிற்கு வரத் தொடங்கிய நாளி லிருந்து அவர்கள் அதிகமாக வெளிக் கிளம்பவில்லை. தெருக்களில் பஞ்சத்தில் அடிப்பட்டுச் செத்துக் கிடந்தவர்களின் பிரேதங்களைப் பார்த்துக் கொண்டு போக அவர்களுக்குச் சகிக்கவில்லை. அதோடு பஞ்சநிவாரண வேலையில் ஈடுபட்டிருந்த ஸ்தாபனம் ஒன்றில் சேர்ந்து சித்ராவும் தொண்டு செய்து கொண்டிருந்தாள். பர்மாவிலிருந்து வந்த அகதி ஸ்திரீகளுக்கும் குழந்தைகளுக்கும் உதவி புரிவதற்கென்று அந்த ஸ்தாபனம் முதலில் ஏற்பட்டது. அவ்வேலை ஒருவாறு முடிந்ததும் பஞ்சம் வந்து விட்டது பஞ்சத்தில் அடிப்பட்டு மெலிந்தும் குற்றுயி ராகவும் வந்த அனாதை ஸ்திரீகளுக்கும் குழந்தைகளுக்கும் இந்த ஸ்தாபனம் தொண்டு செய்து வந்தது. இப்போது சில நாளாக அப்பஞ்ச நிவாரண வேலை குறைந்திருந்தபடியால் மூன்று மாதத்திற்குப் பிறகு அமரநாத்தும் சித்ராவும் கொஞ்சம் ஏரிக் காற்று வாங்கிவிட்டு ஹாவ்ரா நண்பர் களையும் பார்த்து வரலாம் என்று புறப்பட்டிருந்தார்கள். ஹாவ்ரா ஸ்டேஷனுக்குக் கொஞ்ச தூரத்துக்கருகில் பெரிய பெரிய வியாபாரக் கம்பெனிகள் தொழில் நடத்திய வீதிகள் இருந்தன. அந்த விசாலமான வீதிகளில் நெருங்கியிருந்த ஜனக்கூட்டத்தையும் மோட்டார் முதலிய வாகனங்களின் நெருக்கத்தையும் சொல்லி முடியாது. மாலை நேரங்களில் நிமிஷத்துக்கு ஒரு கஜ தூரம் வீதம் ஊர்ந்து கொண்டுதான் அந்தப் பகுதிகளில் மோட்டார் செல்லவேண்டும். “பஞ்சத்தில் அத்தனை லட்சம் பேர் செத்துப் போனார்கள். இத்தனை லட்சம் பேர் செத்துப் போனார்கள் என்று சொல்லு கிறார்களே! அவ்வளவு பேர் செத்துப் போன பிற்பாடும் இங்கே இத்தனை கூட்டமாக இருக்கிறதே?” என்றான் அமரநாத். “இருந்து விட்டுப் போகட்டும்; நீங்கள் யார் பேரிலாவது வண்டியை ஏற்றி ஜனத்தொகையைக் குறைக்கும் கைங்கரியத்தைச் செய்ய வேண்டாம்!” என்றாள் சித்ரா. “இந்த வீதியில் யார் பேரிலாவது வண்டியை ஏற்றினால் அவன் அநேகமாக அரிசியை முடக்கிய கறுப்பு மார்க்கெட் முதலாளியாக இருப்பான். அவனைக் கொன்றால் தேசத்துக்குப் பெரிய சேவை செய்தவனா வேன்!” என்று சொன்னான் அமரநாத். இருபத்து நான்காம் அத்தியாயம் - வெடித்த எரிமலை மாலைப் பொழுது இரவாக மாறிக் கொண்டிருந்தது. சாலை ஓரத்துக் கம்பங்களில் தீபங்கள் ஏற்றப்பட்டன. ஆனால் விளக்குகள் எல்லாவற்றுக்கும் ஏ.ஆர்.பி. கூண்டுகள் போட்டிருந்தபடியாக தீபங்கள் பிரகாசமாக எரியவில்லை. “இந்த ஜப்பான் யுத்தம் வந்தாலும் வந்தது; கல்கத்தாவின் சோபையே போய்விட்டது! முன்னேயெல்லாம் இந்த இடத்தில் எப்படிப் பிரகாசமான விளக்குப் போட்டு ஜகஜ்ஜோதியாக இருக்கும்!” என்றாள் சித்ரா. இப்படி அவள் சொல்லி வாயை மூடினாளோ இல்லையோ, எட்டுத் திக்கும் திடுக்கிடும்படியாகப் படார், படார் என்று சத்தம் கேட்டது. உடனே ஏ.ஆர்.பி. ஸைரன் உடம்பு சிலிர்க்கும்படி சோக சத்தத்துடன் ஊளையிடத் தொடங்கியது. ஜப்பான் விமானம் வந்து குண்டு போடுகிறதென்றும், ஏ.ஆர்.பி. ஸைரன் முன் எச்சரிக்கை செய்வதற்குப் பதிலாகப் பின் எச்சரிக்கை செய்கிறதென்றும் அமரநாத்தும் சித்ராவும் தெரிந்து கொண்டார்கள். இது அவர்களுக்குப் புதிய அனுபவ மாதலால் அவர்களுடைய உடம்பு நடுங்கிற்று. நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. சித்ரா அமரநாத்தின் தோள்களைப் பிடித்துக் கொண்டாள். அமரநாத் சாலையோரத்தில் வண்டியை நிறுத்தினான். வீதியில் எள் விழவும் இடமில்லாதபடி நெருங்கி நின்று கொண்டிருந்த ஜனங்கள் நாலாபுறமும் சிதறி ஓடி மறைந்தார்கள். வண்டிகள் மட்டும் அப்படி அப்படியே சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தன. குண்டுகளின் சத்தம் ஓய்ந்தது ஐந்து நிமிஷம் ஆயிற்று. ‘சரி; இவ்வளவுதான் போலிருக்கிறது; இனிமேல் போகலாம்’ என்ற எண்ணம் அவர்கள் மனதிலே தோன்றியது. அடுத்த கணத்தில், ஆகா! இது என்ன அதிசயமான வெளிச்சம்! ஆயிரம் கோடி சூரியன் பூமியை நோக்கி விரைந்து வருவது போன்ற வெளிச்சம்! உடனே அந்த அதிசயமான வெளிச்சம் மங்குகிறது! ஒரு பெரிய சத்தம் அண்டங்கள் வெடித்து விழுவது போன்ற பயங்கரமான சத்தம் கேட்கிறது. காது செவிடாகி விட்டதென்றே தோன்றுகிறது. மோட்டார் கிடுகிடுவென்று நடுங்குகிறது. மோட்டாரின் கண்ணாடிக் கதவுகள் சடசடவென்று விரிந்து உடைகின்றன. சுற்றுப்புறமெங்கும் மக்கள் ஓலமிடும் பயங்கரமான சத்தம் எழுகின்றது. பயங்கரம் இத்துடன் முடிந்துபாய்விடவில்லை. சற்றுத் தூரத்தில் ஒரு பெரும் புகைத் திரள் குப்குப் என்று கிளம்பிப் பரவி வானை மறைக்கிறது புகைத் திரளுக்கு மத்தியிலிருந்து ஒரு செந்தீப் பிழம்பு வானை நோக்கி ஜுவாலை விட்டுக்கொண்டு மேலே மேலே போய் வானத்தையே மூடிவிடும் போல் தோன்றுகிறது. இத்தனை நேரமும் அமரநாத்தைச் சித்ரா கெட்டியாகப் பிடித்துக் கொண்டபடியிருந்தாள். இப்போது வாயைத் திறந்து நடுநடுங்கிய மெல்லிய குரலில், “ஐயோ! இது என்ன இவ்வளவு பெரிய நெருப்பு எங்கிருந்து கிளம்புகிறது?” என்றாள். “எனக்கும் இப்போதுதான் தெரிகிறது; டி.என்.டி. வெடி மருந்துக் கிடங்கில் தீப் பிடித்திருக்க வேண்டும். அதுதான் இவ்வளவு பெரிய சத்தம் கேட்டது!” என்றான் அமரநாத். “உலகத்துக்கு கேடுகாலம் வந்து விட்டது; சந்தேகம் இல்லை” என்றாள் சித்ரா. “உலகத்துக்கு ஏதோ கேடுகாலம் முன்னமே வந்துவிட்டது; இப்போது தான் கல்கத்தாவுக்குக் கேடு வந்திருக்கிறது!” என்றான் அமரநாத். "நாம் சிவனே என்று மதராஸுக்கு போய் விடலாம். கல்கத்தாவில் இத்தனை நாள் இருந்தது போதும்!" என்றாள் சித்ரா. “முதலில் இன்று ராத்திரி வீடு போய்ச் சேரலாம் நாளைக்கு மதராஸுக்குப் போவது பற்றி யோசிக்கலாம்” என்றான் அமரநாத். “வண்டியைத் திருப்பி வீட்டுக்கு விடுங்கள்! ஹாவ்ராவுக்கு இன்றைக்கு வேண்டாம்!” என்றாள். “கொஞ்சம் என் கை நடுக்கம் நிற்கட்டும். அதற்காகத் தான் காத்துக் கொண்டிருக்கிறேன். ஹாவ்ராவுக்குப் போக நினைத்தாலும் இன்றைக்கு முடியாது!” என்றான் அமரநாத். அமரநாத் கூறியது உண்மை என்பதை எதிரிலே தோன்றிய காட்சிகளும் சுற்றுப்புறமெங்கும் கேட்ட சத்தங்களும் உறுதிப்படுத்தின. முதலில் கிளம்பிய பெரும் நெருப்பு மேலும் மேலும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அதற்குச் சமீபத்தில் அங்குமிங்கும் இன்னும் சிற்சில சிறிய தீப்பிழம்புகள் தோன்றலாயின. திரள் திரளாகக் கரிய புகை கிளம்பிச் சுழன்று பரவி வானவெளியை யெல்லாம் மூடியது. தீப்பிடித்த இடங்களை நோக்கி ஜனங்கள் பலர் பயங்கரமான ஊளைச் சத்தங்களை இட்டுக் கொண்டு விரைந்து ஓடினார்கள். நாலாபக்கங்களிலிருந்தும் டாண் டாண் டாண் என்று மிக்க வேகமான மணி அடித்துக் கொண்டு நெருப்பு அணைக்கும் என்ஜின்கள் பறந்து ஓடி வந்து கொண்டிருந்தன. சிறிது நேரம் ஆங்காங்கே ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்த மோட்டார் வண்டிகள் திடீரென்று ஏக காலத்தில் புறப்பட யத்தனித்தபோது அவற்றின் ஹாரன்கள் எழுப்பிய சத்தங்கள், மகா கோரமாகக் காது செவிடுபடக் கேட்டன. வானை மூடியிருந்த புகைத் திரள் காற்றின் வேகத்தினால் கொஞ்சம் விலகிக் கொடுத்துத் தீயின் வெளிச்சம் கட்டிடங்களில் மேலே விழும்படி செய்த போது, சாலையின் இருபுறமும் இருந்த நாலு மெத்தை ஐந்து மெத்தைக் கட்டிடங்களின் மேல்தளங்களில் ஜனங்கள் நிழல் உருவங்களாக நின்று பார்த்துக் கொண்டிருந்த காட்சி, பயங்கரமான யமலோகக் காட்சியை நினைவூட்டியது. சித்ரா அதையெல்லாம் பார்க்கச் சகியாமல் கண்களை மூடிக் கொண்டாள். பிறகு கேட்கச் சகியாமல் காதுகளைப் பொத்திக் கொண்டாள். “வண்டியைத் திருப்பி ஓட்டப் போகிறீர்களா, இல்லையா!” என்றாள். “ஓட்டுகிறேன்! நீயும் கொஞ்சம் ஜாக்கிரதையாக முன்னாலும் பக்கங்களிலும் பார்த்துக் கொண்டு வா” என்றான் அமரநாத். கார் திரும்பிப் புறப்பட்டு அந்த வீதியைத் தாண்டி அடுத்த வீதியில் நுழைந்தது. அங்கே கொஞ்ச தூரத்துக்கு அப்பால் ஒரு பெரிய ஜனக் கூட்டம் அருகில் நெருங்கிப் பார்த்தபோது ஒரு மார்வாரியின் கடைக்குள் ஜனங்கள் புகுந்து கிடைத்த சாமான்களைச் சுருட்டிக் கொண்டு ஓடுவதாகத் தெரியவந்தது. கூட்டத்தின் மத்தியில் சில போலீஸ்காரர்களும் காணப்பட்டார்கள். ஜனங்கள் கடையில் புகுந்து சூறையாடுவதை அந்தப் போலீஸ்காரர்கள் பார்த்துக் கொண்டு நின்றார்கள். ஜனக் கூட்டத்தின் ஓரம் வரையில் அமரநாத் காரைக் கொண்டு வந்து விட்டுப் பிறகு சிறிது தயங்கினான். மறுபடியும் காரைத் திருப்பி விடலாமா என்று நினைத்தான். திரும்பிப் போவதற்கு வேறு நல்ல வழி கிடையாது ரொம்பவும் சுற்றி அலைய வேண்டும். மேலும் இந்தக் காலிக் கூட்டத்துக்குப் பயந்து திரும்பிப் போவதா? வீதி ஓரமாகக் கூட்டத்திற்குள்ளே அமரநாத் காரை விட்டான். கூட்டத்தில் சிலர் காரின் மேல்தட்டைத் தட்டினார்கள்; சிலர் கதவைத் தட்டினார்கள். சிலர் பின்னால் நின்று வண்டியைப் பிடித்து இழுத்து நிறுத்தப் பார்த்தார்கள். சிலர் ‘ஆய் ஊய்’ என்று கத்தினார்கள். ’மாரோ! மாரோ!" என்று ஒரு குரல் கேட்டது. அமரநாத் கதிகலக்கத்துடன்தான் வண்டியை ஓட்டினான். நல்ல வேளையாக அபாயம் ஒன்றும் நேரவில்லை. கூட்டத்தைத் தாண்டியதும் வேகமாக வண்டியை விட்டான். “சித்ரா! பார்த்தாயல்லவா இலட்சணத்தை! எங்கேயோ குண்டு வெடித்தது! எங்கேயோ தீப்பிடித்தது! இங்கே கடையிலே புகுந்து காலிகள் கொள்ளையடிக்கிறார்கள்! இந்த இலட்சணத்தில் இந்தியாவுக்குச் சுயராஜ்யம் வேண்டுமாம், சுயராஜ்யம்! உருப்பட்டாற் போலத்தான்!” என்றான் அமரநாத். இப்படி அமரநாத் சொல்லிக் கொண்டிருக்கும் போது காரின் மேல் ஒரு கல் விழுந்தது. ஓடும் வண்டியில் விழுந்தபடியால் வெடி குண்டு வெடித்தது போலச் சத்தம் கேட்டது. “நான் சொன்னது சரியாகப் போய்விட்டதல்லவா? இந்தக் கல் என் பேரிலோ எதிர்க் கண்ணாடியின் பேரிலோ விழுந்திருந்தால் என்ன கதி ஆகியிருக்கும்?” என்றான் அமரநாத். “நான்தான் சொல்லிவிட்டேனே? இந்தக் கல்கத்தாவிலே இருந்ததும் போதும்; சம்பாதித்ததும் போதும். நாளைக்கே ஊருக்குப் புறப்படலாம்; உள்ளதைக் கொண்டு நிம்மதியாக இருக்கலாம்.” “ஊருக்குப் போனால் நிம்மதி வந்துவிடுமா? அங்கேயும் இந்த மாதிரியான ஜனங்கள் தானே இருப்பார்கள்? இங்கே செய்வதைப்போல் அங்கேயும் செய்ய மாட்டார்களா?” “நம்ம பக்கத்து ஜனங்கள் ஒரு நாளும் இந்த மாதிரி மிருகப் பிராயமாக நடந்துகொள்ள மாட்டார்கள்!” என்று தீர்மானமாகக் கூறினாள் சித்ரா. கொஞ்ச தூரம் போனதும் ஒரு மோட்டார் பஸ் சாலை ஓரத்தில் பக்கவாட்டில் விழுந்து தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதைக் கண்டார்கள். “பஸ்ஸில் எப்படித் தீப்பிடிக்கும்?” என்றாள் சித்ரா. “தானாகப் பிடித்திராது! யாரோ காலிகள் தீ வைத்திருக்கிறார்கள்!” என்றான் அமரநாத். “எதற்காக?” “எதற்காக என்று கேட்டால் என்ன சொல்லுவது? காலிகளுடைய காரியங்களுக்குக் காரணம் சொல்ல முடியுமா? கொள்ளை, கொலை, தீ வைத்தல் ஆகிய காரியங்களிலேயே அவர்களுக்கு ஆனந்தம்! நிஷ்காம்ய கர்மமாகவே செய்வார்கள்!” வண்டி இன்னும் கொஞ்ச தூரம் சென்றதும் சாலை ஓரத்தில் ஓர் உருவம் விழுந்து கிடப்பது தெரிந்தது. அது பெண் உருவமாகவும் காணப்பட்டது. அதன் பக்கத்தில் ஒரு பையன் குனிந்து நின்று கொண்டிருந்தான். “நிறுத்துங்கள்! வண்டியை நிறுத்துங்கள்!” என்று சித்ரா கூறினாள். வண்டி நின்றது அதைப் பார்த்ததும் பெண் உருவத்தின் பக்கத்தில் நின்ற பையன் விழுந்தடித்து ஓடினான். “அந்தப் பையன் என்ன செய்து கொண்டிருந்தான்?” என்று சித்ரா கேட்டாள். “கையிலிருந்த வளையலைக் கழற்றிக் கொண்டிருந்தான். நம்மைப் பார்த்ததும் ஓடினான்! சித்ரா! கொஞ்ச நாளாகக் கல்கத்தா சாலைகளில் பிரேதங்களைக் காண்பதில்லையென்று குறைப்பட்டாயல்லவா? இதோ உன் குறை தீர்ந்து விட்டது?” “ஏதாவது கன்னாபின்னாவென்று சொல்லா தீர்கள்! நான் பிரேதத்தைக் காணவில்லையென்று குறைப்பட்டேனாக்கும்! ஒருவேளை இன்னும் உயிர் இருக்கிறதோ, என்னமோ? இறங்கிப் பார்க்கலாம் வாருங்கள்” என்றாள் சித்ரா. இருவரும் இறங்கி அந்த உருவத்தின் அருகில் போனார்கள். “அடாடா! மதராஸ் பக்கத்துப் பெண் போல அல்லவா இருக்கிறது? வயதும் அதிகமிராது; சிறு பெண்!” என்றாள் சித்ரா. “மதராஸ் பெண் என்பதற்காக யமன் விட்டுவிடுவானா, என்ன? பார்த்தாகிவிட்டது! வா, போகலாம்” என்றான் அமரநாத். “செத்துப் போய் விட்டதாக அவ்வளவு நிச்சயமாய் ஏன் சொல்ல வேண்டும்? உயிர் இருக் கிறதா என்று பாருங்கள்!” “நீயே பார்! உனக்குத் தான் இந்த மாதிரிக் காரியங்களில் அனுபவம் அதிகம்!” என்றான் அமரநாத். கீழே கிடந்த பெண்ணின் மூக்கின் அருகே சித்ரா விரலை வைத்துப் பார்த்தாள். மூச்சு இலேசாக வந்து கொண்டி ருந்தது. மார்பில் கை வைத்துப் பார்த்தாள், மார்பு அடித்துக் கொண்டிருந்தது என்பதும் நன்கு தெரிந்தது. “நிச்சயமாக உயிர் இருக்கிறது! சீக்கிரம் பிடியுங்கள்!” என்று சொல்லிச் சித்ரா அந்தப் பிரக்ஞையற்ற பெண்ணின் தலையின் கீழ் கையைக் கொடுத்துத் தூக்கினாள். “ஏன் மரம் மாதிரி நிற்கிறீர்கள்! சீக்கிரம் காலின் பக்கம் பிடித்துத் தூக்குங்கள்” என்றாள். “யாரோ தெருவில் கிடக்கிறவளுக்காக நான் ‘மரம்’ என்று வசவு வாங்க வேண்டியிருக்கிறது! அவளுடைய காலையும் பிடித்துத் தொலைக்க வேண்டியிருகிறது!” என்று சொல்லிக் கொண்டே அமரநாத் அந்தப் பெண்ணின் காலைப் பிடித்துத் தூக்கினான் இருவருமாகக் கொண்டு வந்து காரின் பின் ஸீட்டில் போட்டார்கள். “விடுங்கள்! சீக்கிரம் காரை விடுங்கள்! ஒரு உயிரைக் காப்பாற்றுங்கள்!” என்றாள் சித்ரா. வண்டி கிளம்பிப் போகத் தொடங்கியதும், “எங்கே விடுகிறது! காரை எங்கே விடுகிறது?” என்று அமரநாத் கேட்டான். “வீட்டுக்குத் தான் விடவேண்டும்! வேறு எங்கே?” “அப்படியானால் நான் வண்டியை நிறுத்தி வெளியில் எடுத்து எறிந்து விடுவேன். வீட்டுக்குக் கொண்டு போகவே கூடாது. யாரோ? என்ன சங்கடமோ? நம் வீட்டில் செத்து வைத்தால் என்ன செய்கிறது?” என்றான் அமரநாத். “உங்களைப் போல் இரக்கமற்ற மனிதரை நான் பார்த்ததே கிடையாது. அப்படியானால், அனாதை விடுதிக்கு விடுங்கள்! சீக்கிரம் போனால் சரி!” என்றாள் சித்ரா. அமரநாத் அதிவேகமாகக் காரை விட்டுக்கொண்டு சென்றான். பிரக்ஞையற்றுக் கிடந்த பெண்ணின் முகத்தில் வேகமாகக் காற்றுப் பட்டதினாலேயே அவளுக்கு உயிரும் உணர்வும் வரத் தொடங்கின. அனாதை ஆசிரமத்திற்குக் கொண்டுபோய்ச் சிறிது நேரம் ஆரம்ப சிகிச்சை செய்ததும் நன்றாக உயிர் வந்துவிட்டது. இனி அபாயம் இல்லையென்று தெரிந்து கொண்டு அமரநாத்தும் சித்ராவும் வீடு போய்ச் சேர்ந்தார்கள். இருபத்து ஐந்தாம் அத்தியாயம் - லலிதாவின் கடிதம் காலை நேரத்தில் அரைமணி நேரம் சடசடவென்று பெய்த மழையினால் கல்கத்தாவின் வீதிகள் சுத்தமாக விளங்கின. ஓரங்களில் வளர்ந்திருந்த செழுமையான மரங்களிலிருந்து மழைத் துளிகள் முத்து முத்தாகச் சொட்டிக் கொண்டிருந்தன. பட்சிகள் சிறகுகளை அடித்து மழைத் துளிகளை உதறிக் கொண்டிருந்தன. மேல் மாடியின் பலகணி மாடத்தில் உட்கார்ந்து சித்ரா அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கணவன் அமரநாத் ஆபீஸுக்கு போவதற்காக உடுப்புத் தரித்துக் கொண்டிருந்தான். “இன்றைக்கு சீக்கிரம் ஆபீஸிலிருந்து வந்து விடுவீர்களா? மழை பெய்திருக்கிறபடியால் ஏரிக்கரை இன்று ரொம்ப சுகமாயிருக்கும் சீக்கிரம் வந்தால் போகலாம்!” என்றாள் சித்ரா. “சரிதான், சரிதான்! அன்றைக்கு ஒரு நாள் ஏரிக்கரைக்குப் போனது போதாதா? அன்றிலிருந்து ஏரி என்றாலே எனக்குப் பயமாயிருக்கிறது. திரும்பி வரும்போது பஞ்சத்தில் அடிப்பட்ட இன்னும் ஒரு பெண்மணி யாரையாவது காப்பாற்ற வேண்டி நேரிட்டால்? அதைக் காட்டிலும் ஏதாவது நல்ல சினிமாவுக்குப் போய்விட்டு வந்தாலும் வரலாம் ‘அன்னா கரினா’ வந்திருக்கிறதாம்!…” “புருஷர் களுடைய காரியமே விசித்திரமா யிருக்கிறது. நாடகத்திலும் சினிமாவிலும் யாராவது ஒரு அனாதைப் பெண் வீதியிலே கிடந்தால் அதைப் பார்த்து உருகிப் போய்விடுகிறார்கள். நிஜ வாழ்க்கையில் அந்த மாதிரி ஒரு பெண் கிடந்தால், அந்தப் பக்கமே பார்க்காமல் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள்…” “அது உண்மைதான்; யார் இல்லை என்கிறார்கள்? அதற்குக் காரணம் இருக்கிறது. சினிமாவில் ஒரு பெண் தெருவில் கிடந்தாள் என்றால், அவள் சாமான்யப் பெண்ணாயிருப்பாளா? ஒரு கிரேடா கார்போ, அல்லது நார்வா ஷியரர் அல்லது கண்ணன் பாலா அவ்விதம் விழுந்து கிடப்பாள். பார்க்கிறவர்களுடைய மனம் கட்டாயம் உருகத்தான் செய்யும்..” “கொஞ்சம் நில்லுங்கள், மிஸ்டர்! அன்றைக்குத் தாங்கள் பெரிய மனது செய்து காரிலே தூக்கிப் போட்டுக்கொண்டு போய்க் காப்பாற்றினீர்களே, அந்தப் பெண் உங்கள் கிரேடா கார்போ அல்லது உங்கள் கண்ணன் பாலாவுக்கு எந்த விதத் திலும் குறைந்தவள் அல்ல! நான் ஒன்று சொல்கிறேன், கேளுங்கள்! இன்று சாயங்காலம் சீக்கிரம் ஆபீஸிலிருந்து வந்து விடுங்கள்! இரண்டு பேருமாகப் போய் அந்தப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு ஏரிக்கரைக்குப் போவோம். கல்கத்தா நகரத்தைச் சுற்றிக்காட்டுவதாக அவளிடம் சொல்லியிருக்கிறேன். அவளும் வருவதாக ஒத்துக் கொண்டிருக்கிறாள்” என்றாள் சித்ரா. “முடியவே முடியாது! அந்த மாதிரி நீ சொல்வதாயிருந்தால் நான் ஆபீஸிலிருந்து இராத்திரி பத்து மணிக்குத்தான் திரும்பி வருவேன். நம்முடைய திருநெல்வேலிப் பக்கங்களில் ‘விருதுப்பட்டிக்குப் போகிற சனியனை விலைக்கு வாங்கினாற் போல்’ என்பார்கள். அம்மாதிரியல்லவா இருக்கிறது நீசொல்லுகிற காரியம்?” “ஊர்பேர் தெரியாத ஒரு அனாதைப் பெண்ணிடம் உங்களுக்கு என்னத்திற்காக இவ்வளவு கொடூரம்?” என்று கேட்டாள் சித்ரா. “ஊர் பேர் தெரியாததினால்தான் நாம் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். அவள் யோக்யமான ஸ்திரீயாயிருக்கும் பட்சத்தில் ஊர் பேர் சொல்வதற்கு ஏன் தயங்க வேண்டும்? இன்னும் சொல்லாமல்தானே இருக்கிறாள்” என்றான் அமரநாத். “அதனால் என்ன? எத்தனையோ காரணம் இருக்கலாம். ரொம்பவும் துக்கப்பட்டவளாகத் தெரிகிறது. அவளுடைய யோக்யதையைப் பற்றி எந்த கோர்ட்டில் வேண்டுமானாலும் நான் சத்தியம் செய்யத் தயாராயிருக்கிறேன். அனாதை விடுதியின் தலைவி சௌதாரிணி அம்மாள் இந்தப் பெண்ணைப் பற்றிச் சொல்லுகிற புகழ்ச்சிக்கு அளவேயில்லை. தினம் ஐம்பது அனாதைக் குழந்தைகளுக்குக் குளிப்பாட்டி விடுகிறாளாம்! அலுக்காமல் சலிக்காமல் வேலை செய்து கொண்டிருக்கிறாளாம். அவள் இங்கேயே இருந்துவிட்டால் எவ்வளவோ தனக்கு உதவியாயிருக்கும் என்று சௌதாரிணி அம்மாள் சொல்லுகிறாள்.” “அவ்வளவு நல்ல பெண்ணாயிருக்கும் பட்சத்தில் ஊர், பேர் சொல்ல எதற்காக மறுக்க வேண்டும்?” என்று அமரநாத் மீண்டும் வற்புறுத்திக் கேட்டான். “யார் கண்டது, அவளுடைய கணவன் உங்களைப் போன்ற கொடூர குணம் உள்ளவனா யிருக்கலாம்! இவளை அடித்துத் துரத்தியிருக்கலாம்! அதைச் சொல்லிக் கொள்ள அவள் வெட்கப்படலாம்!” “சரி, சரி! உன்னை நான் ஒரு நாளைக்கு வீட்டை விட்டு அடித்துத் துரத்துகிறேனா, இல்லையா, பார்!” என்றான் அமரநாத். “நீங்கள் அப்படிச் செய்தால் நான் இந்தச் சாதுப் பெண்ணைப் போல் வாயை மூடிக்கொண்டிருப்பேன் என்று நினைக்க வேண்டாம்! என்னை அடித்துத் துரத்திய அருமைக் கணவர் யார் என்பதை ஊரெல்லாம் பறையடித்து விடுவேன்!” என்றாள் சித்ரா. இந்தச் சமயத்தில் வேலைக்காரப் பையன் அன்றைய தபால்களைக் கொண்டு வந்து கொடுத்தான். அமரநாத் முதலில் தபால்களைப் புரட்டிப் பார்த்து, “ஸ்ரீ மதி சித்ரா தேவிக்கு ஒரு கடிதம் இருக்கிறது. லலிதா தேவி எழுதியதாகத் தோன்றுகிறது!” என்று சொல்லிக் கொண்டே ஒரு கடிதத்தை எடுத்துக் கொடுத்தான். பிறகு தன் தபால்களைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினான். சித்ரா தனக்கு வந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு தன்னுடைய அறைக்குப் படிப்பதற்குப் போனாள். ஐந்து நிமிஷத்துக் கெல்லாம், “கேட்டீர்களா கதையை?” என்று கூவிக் கொண்டே ஓடிவந்தாள். அமரநாத் நிமிர்ந்து சித்ராவைப் பார்த்துவிட்டு, "கதை பரபரப்புள்ள மர்மம் நிறைந்த திடுக்கிடும் கதையாக இருக்கும் போலிருக்கிறதே? அப்படிப்பட்ட கதையை யார் எழுதியிருக்கிறது? லலிதாவா?" என்றான். “ஆமாம்; லலிதாவேதான் ஆனால் இதில் அவள் எழுதியிருப்பது வெறும் கதையல்ல, கதையைக் காட்டிலும் திடுக்கிடச் செய்யும் உண்மைச் சம்பவம். இதைப் படித்து பாருங்கள்!” என்று கடிதத்தை நீட்டினாள். “அதெல்லாம் முடியாது! உனக்கு வந்த கடிதத்தை நான் படிக்க மாட்டேன். அப்புறம் எனக்கு வரும் கடிதங்களை நீ படிக்க வேண்டும் என்பாய். ஏதாவது விசேஷ சமாசாரம் இருந்தால் வாயினால் சொல்லி விடு!” என்றான் அமரநாத். “உங்கள் மாதிரி பிடிவாதம் உள்ள மனுஷரை நான் பார்த்ததே கிடையாது. போனால் போகட்டும்! நான் சொல்லுவதையாவது கேளுங்கள். லலிதாவின் அண்ணன் சூரியா, டில்லியில் போலீஸாரிடமிருந்து தப்பி ஓடப் பார்த்தானாம். போலீஸார் அவனைச் சூழ்ந்து கொள்ளவே துப்பாக்கியால் சுட்டானாம். ஆனால் போலீஸ்காரர்கள் அவனைப் பிடித்து விட்டார்களாம். அதனால் பலத்த காயம் பட்டு ஆபத்தான நிலைமையில் இருக்கிறானாம். இதைப்பற்றி லலிதா ரொம்பவும் வருத்தப்பட்டு எழுதியிருக்கிறாள். அவளுடைய அப்பாவும் அம்மாவும் ரொம்ப வருத்தப்படுகிறார்களாம். வருத்தம் இராதா, பின்னே? இது போதாதற்கு இன்னொரு பெரிய விபத்து அவர்களுக்கு! அதுவும் டில்லி சமாசாரந்தான். சீதாவைத் திடீரென்று ஒரு நாள் காணோமாம்! எவ்விதத் தகவலும் சொல்லாமல் மாயமாய் மறைந்து போய்விட்டாளாம். சூரியா பிடிபட்டதும் சீதா காணாமல் போனதும் ஒரே நாளில் நடந்ததாம். சீதாவின் கணவன் லலிதாவின் தகப்பனாருக்கு அதைப்பற்றி எழுதி இருக்கிறானாம். ஒருவேளை தேவப்பட்டணத்துக்கோ ராஜம்பேட்டைக்கோ வந்து சேர்ந்தால் தனக்கு உடனே தகவல் தெரிவிக்கும்படி எழுதியிருக்கிறானாம்! சூரியாவுக்கு நேர்ந்த விபத்தைக் காட்டிலும் சீதாவைப் பற்றிய செய்திதான் லலிதாவை அதிகமாகத் துன்பப்படுத்தியிருக்கிறது. அதைப்பற்றி ரொம்பவும் புலம்பியிருக்கிறாள்!” இதைக் கேட்டுக் கொண்டு வந்த அமரநாத் நடுவில் பெரும் யோசனையில் ஆழ்ந்து விட்டான். திடீரென்று குதித்து எழுந்து, “சித்ரா! நாலு நாளைக்கு முன்பு டில்லி சமாசாரம் ஒன்று பத்திரிகையில் வந்ததே; உனக்குப் படித்ததாக ஞாபகம் இருக்கிறதா?” என்று சொல்லிக் கொண்டே தினசரிப் பத்திரிகைகள் அடுக்கி வைத்திருந்த மூலைக்குப் போய் அங்கிருந்த பத்திரிகைகளைப் புரட்டத் தொடங்கினான். சில நிமிஷ நேரத்துக்குள் அவன் தேடிய பத்திரிகைச் செய்தி அகப்பட்டு விட்டது. “ஆகா! இதோ அந்தச் செய்தி இருக்கிறது! கேள், சித்ரா!” என்று செய்தியைப் படித்தான். “நாலு நாளைக்கு முன் சூரியநாராயணன் என்னும் புரட்சிக்காரன் போலீஸாரால் கைது செய்யப்பட்ட செய்தி இந்தப் பத்திரிகையில் பிரசுரிக்கப் பட்டிருந்தது. கைது செய்யப்பட்ட போது மேற்படி புரட்சிக்காரன் போலீஸாரை எதிர்த்ததன் காரணமாகப் பலமாக அடிக்கப்பட்டுக் காயம் அடைந்தான். இது காரணமாக அவனை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காகச் சேர்த்துப் போலீஸ் காவலும் போட்டிருந்தார்கள். நேற்றிரவு ஆஸ்பத்திரியிலிருந்து அவன் தப்பித்துக் கொண்டு போய்விட்டதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. போலீஸ் காவலை மீறி அவன் எப்படித் தப்பித்துக் கொண்டு போனான் என்பது பெரிய மர்மமாயிருக் கிறது. இரகசிய போலீஸார் தீவிரமாகப் புலன்விசாரித்துக் கொண்டிருப்பதாய் அறிகிறோம் நிற்க,”சூரிய நாராயணன் கைது செய்யப்பட்ட அன்று மறைந்துவிட்ட புரட்சிக்காரி இன்னும் அகப்பட வில்லையென்று தெரிகிறது. அவள் மிகவும் சாமர்த்திய சாலி என்றும், புது டில்லியில் இரண்டு பெயர்கள் வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்தியதாகவும், பெரிய பெரிய உத்தியோக வர்க்கக் குழாங்களில் பழகி வந்ததாகவும் தெரிய வருகின்றன. இந்தப் புரட்சிக்காரியைப் பற்றியும் இரகசிய போலீஸார் புலன்விசாரித்து வருகிறார்களாம்." மேற்கண்ட செய்தியை மிகப் பரபரப்புடன் படித்து முடித்த அமரநாத், “இதைப் பற்றி என்ன நினைக்கிறாய் சித்ரா! ‘சூரிய நாராயணன்’ என்ற பெயரைப் பத்திரிகையில் படித்தபோது சூரியாவின் ஞாபகமே எனக்கு வரவில்லை. ஆனால் இது நம்முடைய சூரியாவாகத்தான் இருக்கவேண்டும். அவனுடைய சாமர்த்தியத்தை என்னவென்று சொல்லுவது? இத்தனை நாள் போலீஸுக்கு டிமிக்குக் கொடுத்து வந்தது பெரிதல்ல; மறுபடியும் ஆஸ்பத்திரியிலிருந்து போலீஸ் காவலை மீறித் தப்பித்துக் கொள்வது என்றால் சாமான்யமா? அதிலும், உடம்பெல்லாம் காயம்பட்டுக் கிடக்கும் நிலையில் - என்ன பேசாமல் நிற்கிறாய், சித்ரா! சூரியாவின் காரியம் உனக்கு அதிசயமாயில்லையா?” என்றான். “உங்கள் சூரியாவின் பெருமை இருக்கட்டும். நான் வேறொரு விஷயத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன். மாயமாய் மறைந்த சீதாவைப் பற்றித்தான்! ஸார்! தயவு செய்து நான் சொல்வதைக் கேளுங்கள். இன்றைக்கு ஆபீஸுக்கு லீவு போட்டு விடுங்கள். டெலிபோனில் கூப்பிட்டுச் சொல்லி விடுங்கள். இரண்டு பேரும் பஞ்ச நிவாரண விடுதிக்குப் போய் விட்டு வரலாம்! இப்பொழுதே புறப்பட்டுப் போக வேண்டும்?” என்றாள் சித்ரா. “பஞ்ச நிவாரண விடுதிக்கு இப்போது என்னத்திற்கு? எதற்காக நான் லீவு எடுக்க வேண்டும்?” என்று அமரநாத் கேட்டான். “உங்களுக்கு இன்னும் தெரியவில்லையா? அன்றைக்கு நாம் வீதி ஓரத்தில் கிடந்தவளை எடுத்துக் கொண்டு வந்து அனாதை விடுதியில் சேர்த்தோமே? அவளைப் பற்றி ஒரு சந்தேகம் உண்டாகிறது.” "ஒருவேளை அவள் சீதாவாக இருக்கலாம் என்று சொல்லுகிறாயாக்கும். லட்சணமாகத்தான் இருகிறது? டில்லி எங்கே? கல்கத்தா எங்கே? அங்கேயிருந்து இங்கே எதற்காக அவள் வரவேண்டும்? அவளுடைய கணவன் எழுதியிருப்பது போலத் தேவப்பட்டணம் அல்லது ராஜம்பேட்டைக்குப் போயிருந்தாலும் அர்த்தம் உண்டு!" என்றான் அமரநாத். “ரொம்பப் புத்திசாலிதான்! சீதா புரட்சிக்காரி என்பதை மறந்துவிட்டுப் பேசுகிறீர்கள்! ராஜம்பேட்டை அல்லது தேவபட்டணத்துக்குப் போனால் போலீஸாருக்கு நோட்டீசு கொடுத்ததுபோல் ஆகாதா? கல்கத்தா தான் தலைமறைவாயிருக்கச் சரியான இடம் என்று வந்திருக்கிறாள். வந்த இடத்தில், பாவம் ஏதோ ஆபத்து நேர்ந்திருக் கிறது. அது இருக்கட்டும்; ஏன் ஸார்; நீங்கள் தான் முன்னே சீதாவைப் பார்த்திருக்கிறீர்களே? உங்களுக்கு அவளை அடையாளம் கண்டுபிடித்துச் சொல்ல முடியுமே?” “கல்யாணத்தின் போது ஒரே ஒரு தடவை பார்த்தது தானே! அதுவும் பத்து வருஷத்துக்கு முன்னால்! எப்படி ஞாபகம் இருக்கும்? மேலும் அன்று இராத்திரி காரில் தூக்கிப்போட்டுக் கொண்டு வந்தபோது அவள் முகத்தையே நான் பார்க்கவில்லை. இருட்டாகவும் இருந்தது, எப்படி அடையாளம் சொல்வது?” “இப்போது வந்து நன்றாய்ப் பாருங்கள்; பார்த்து அந்தப் பெண் சீதாதானா என்று கண்டுபிடித்துச் சொல்லுங்கள்!” “எனக்கு என்ன அதைப் பற்றிக் கவலை? சீதாவாயிருந்தால் என்ன? யாராயிருந்தால் என்ன? நீயே கேட்டுத் தெரிந்துகொள். உன்னை அனாதை விடுதியில் கொண்டு போய் விட்டுவிட்டு நான் ஆபீஸுக்குப் போய்ச் சேர்கிறேன்” என்றான் அமரநாத். இரண்டு பேரும் காரில் ஏறிக் கொண்டு அனாதை விடுதிக்குச் சென்றார்கள். அமரநாத் சொன்னபடியே சித்ராவை அங்கே இறக்கி விட்டுவிட்டு, தான் ஆபீஸுக்குப் போனான். இருபத்து ஆறாம் அத்தியாயம் - கவலை தீர்ந்தது! அன்று சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரமாகவே அமரநாதன் ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வந்தான். அனாதை விடுதியி லிருந்து சித்ரா திரும்பி வந்திருப்பாளா அல்லது நான் போய் அழைத்து வரவேண்டுமா என்று சிந்தித்துக் கொண்டே வீட்டு வாசலில் காரை நிறுத்தினான். ஒருவேளை திரும்பி வந்திருந்தால் அந்த ஸ்திரீயைப் பற்றிய விவரம் ஏதாவது தெரிந்து கொண்டு வந்திருப்பாளா என்றும் எண்ணமிட்டான். வீட்டு வாசலில் வந்து கார் நின்ற மறுநிமிடமே சித்ரா வாசற் பக்கம் வந்தாள். அவள் முகம் குதூகலத்தினால் மலர்ந்திருந்தது. “சித்ரா! சித்ரா! முழுகிப் போய் விடாதே! மெதுவாகக் கரையேறிவிடு! நான் வேணுமானால் கைகொடுத்துத் தூக்கி விடட்டுமா?” என்று அமரநாத் கேட்டான். “என்ன இப்படித் திருவாய் மலர்ந்து திரு உளறல் உளறுகிறீர்கள்?” என்று கேட்டாள் சித்ரா. “நான் ஒன்றும் உளறவில்லை உன்னைப் பார்த்தால் ஆனந்தக் கடலில் முழுகித் தத்தளிப்பவளைப் போலத் தோன்றியது. கைதூக்கி கரை சேர்க்கலாம் என்று பார்த்தேன்!” என்றான் அமரநாத். “ஆனந்தத்துக்குக் காரணம் இருக்கிறது!” என்றாள் சித்ரா. “பின்னே இல்லாமல் இருக்குமா? அந்தப் பெண் இன்னவள் என்று கண்டுபிடித்து விட்டாயாக்கும்!” “ஆமாம்! நான் சொன்னதுதான் உண்மை என்று ஆயிற்று. இருக்கவே இருக்காது என்று நீங்கள் சாதித்தீர்களே?” “உன்னுடைய வாக்குப் பொய்த்துப் போகுமா என்ன? தெய்வத்தைத் தொழாமல் கணவனைத் தொழுது அழுகிறவள் பெய்யெனப் பெய்யும் மழை என்று திருவள்ளுவரே சொல்லி இருக்கிறார்! அப்படியிருக்க உன் வாக்குப் பலித்ததற்குக் கேட்பானேன்?” இருவரும் வீட்டின் முன்புறத்து ஹாலுக்குள் நுழைந்தார்கள். அங்கே சோபாவில் ஒரு பெண் உட்கார்ந்து ஒரு கடிதத்தைப் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அமரநாத் திடுக்கிட்டான். அவர்கள் வருவதைப் பார்த்ததும் அந்தப் பெண் எழுந்து அவசரமாய் அருகிலிருந்த மச்சுப்படியில் ஏறி மேலே சென்றாள். அவள் மறைந்ததும், “சித்ரா! இவள்தான் சீதாவா! இன்னார் என்று கண்டுபிடித்ததோடல்லாமல் இங்கே அழைத்துக் கொண்டு வந்துவிட்டாயா?” என்றான் அமரநாத். “ஆமாம்; நான் ஒரு காரியத்தில் முனைந்தால் அதை முடிக்காமல் வந்துவிடுவேனா?” என்றாள் சித்ரா. “அதைப்பற்றிக் கேட்பானேன்? நீ ஒரு காரியத்திலும் முனையாமல் இருக்க வேண்டுமே என்றல்லவா நான் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன்! இப்போது பார்! இந்த சனியனை இங்கே அழைத்துக் கொண்டு வந்துவிட்டாய்!” “தயவு செய்து தங்கள் திருவாயை மூடிக்கொள்ளுங்கள்.” “தேவி மன்னிக்க வேண்டும்; இந்த தேவலோகத்துக்குப் பெண்ணரசியைத் தேடிப் பிடித்து அழைத்து கொண்டு வந்திருக்கிறீர்களே! என்ன நோக்கத்துடன்? அதைத் தயவு செய்து தெரிவித்து அருள வேண்டும்.” “நோக்கம் என்ன வந்தது? இது என்ன கேள்வி? நம்ம பக்கத்துப் பெண், உங்கள் அருமைச் சிநேகிதர் சூரியாவின் அத்தங்காள். அவளை அனாதை விடுதியிலேயே விட்டு வருகிறதா?” “விட்டு விட்டு வந்தால் என்ன? அன்றியும், இவள்தான் சீதா என்பது என்ன நிச்சயம்?” “நிச்சயந்தான்; என்னுடைய ஊகம் பிசகாய்ப் போகுமா? இவளே ஒப்புக்கொண்டு விட்டாள்.” “இத்தனை நாள், ஒரு வாரமாக, ஊர் பேர் சொல்லாதவள் இன்றைக்கு எதனால் திடீர் என்று ஒப்புக்கொண்டாள்?” “அதற்கு ஒரு யுக்தி செய்தேன்.” “அது என்ன அதிசய யுக்தி என்பதை அடியேன் அமரநாதன் தெரிந்து கொள்ளலாமா?” “ஆக! பேஷாய்த் தெரிந்து கொள்ளலாம்; அமரநாதன் தெரிந்து கொள்ள முடியாத இரகசியம் சித்ராவிடம் என்ன இருக்க முடியும்? தாங்கள் என்னை அனாதைப் பஞ்ச நிவாரண விடுதியில் விட்டுவிட்டுப் போனீர்கள் அல்லவா? உடனே போய்ச் சீதாவிடம் பேசிப் பார்த்தேன். வழக்கம் போலவே அவள் முகம் கொடுத்துப் பேசவில்லை. குழந்தைகளுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் நின்ற சௌதாரிணி அம்மாளிடம் நான் சென்று பேசினேன். பேச்சின் மத்தியில் சீதாவின் காது கேட்கும்படியாகச் சூரியாவைப் பற்றிய செய்தியைச்சொன்னேன். சூரியா என்ற வார்த்தை காதில் விழுந்ததும் சீதா திடுக்கிட்டதைப் பார்த்துக்கொண்டேன். சற்று நேரத்துக்கெல்லாம் சீதா என்னைத் தேடிக் கொண்டு வந்தாள். தலைவி அம்மாளிடம் என்ன சொன்னேன் என்று கேட்டாள். அவளிடமும் சூரியாவைப் பற்றிய செய்தியைத் திருப்பிச் சொன்னேன். அவளுடைய முகபாவத்தை கவனித்துக் கொண்டே சொன்னேன். கடைசியாக, ‘இதைப்பற்றி உனக்கென்ன இவ்வளவு ஆவல்? நீ யார்?’ என்று கேட்டேன். அப்போதும் சொல்லாமல் சும்மா இருந்தாள். ‘என்னிடம் ஏன் மறைக்கிறாய்? நீதானே சீதா?’ என்று நான் சட்டென்று கேட்டதும் அவளுக்கு ஆச்சரியமாய்ப் போய்விட்டது. பிறகு எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டு விட்டாள். அதன் பேரில்தான் வீட்டுக்கு வரும்படி கூப்பிட்டேன். முதலில் வருவதற்கு மறுத்தாள், அனாதை விடுதியில் குழந்தைகளுக்குப் பணிவிடை செய்வது தனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது என்று சொன்னாள். நாங்கள் எல்லாரும் வாரத்துக்கு இரண்டு நாள் முறை போட்டுக்கொண்டு சேவை செய்வது போல் அவளும் செய்யலாம் என்று சொல்லி வற்புறுத்தி நம் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தேன் எப்படி என்னுடைய யுக்தி?” “கேட்பானேன்? நியாயமாக இந்திய சர்க்காரின் சி.ஐ.டி. இலாகாவில் நீ உத்தியோகம் பார்க்க வேண்டும். உன்னைப் போன்ற சாமர்த்தியசாலிகள் தற்போது அந்த இலாகாவில் இல்லாதபடியால் யு.ஜி.க்களைப் பிடிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள்!” “யு.ஜி.க்கள் என்றால் என்ன?” “யு.ஜி. என்றால் தெரியாதா? ‘அண்டர் கிரௌண்ட்’ என்று அர்த்தம். அதாவது பூமிக்கு அடியில் இருப்பவர்கள். போலீஸாரிடம் அகப்படாமல் மறைந்திருந்து புரட்சி வேலை செய்பவர்களுக்கு அந்தப் பட்டம் இப்போது வழங்கி வருகிறது. இந்தச் சாலைக்கு அடுத்த சாலையின் முனையில் சில போலீஸாரும் சி.ஐ.டி.காரர்களும் நின்று கொண்டிருப்பதை நான் வரும்போது பார்த்தேன். அவர்கள் யாரோ ஒரு யு.ஜி.யைத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.” “அப்படியா? ஒருவேளை..” என்று ஆரம்பித்த சித்ரா சட்டென்று நிறுத்தினாள். “ஒருவேளை என்ன?” “ஒன்றுமில்லை; நீங்கள் வந்து அந்தப் பெண்ணைப் பார்த்துப் பேசுகிறீர்களா? அவள் இங்கே வருவதற்கே ரொம்பவும் தயங்கினாள். இந்த வீட்டு ஆண் பிள்ளை என்ன சொல்லுவாரோ என்னமோ என்று முணுமுணுத்தாள்.”அதெல்லாம் இந்த வீட்டில் ஆண்பிள்ளை ஒருவரும் இல்லை. ஒரு ஹஸ்பெண்டு தான் இருக்கிறார்!" என்று சமாதானம் சொல்லி அழைத்துக்கொண்டு வந்தேன். நீங்கள் அதைக் கொஞ்சம் உறுதிப்படுத்தினால் நல்லது மேலே போகலாம் சற்று வருகிறீர்களா?" “வேண்டாம், வேண்டாம்! அந்த அம்மாள் தான் என்னைக் கண்டதும் வாரிச் சுருட்டிக்கொண்டு மேலே போய்விட்டாளே! அவளை எதற்காக இப்போது தொந்தரவு செய்ய வேண்டும்?” என்றான் அமரநாத். “அதெல்லாம் ஒன்றுமில்லை; நான் வேண்டுமானால் மேலே போய்க் கேட்டுக்கொண்டு வருகிறேன்!” என்று சொல்லிக் கொண்டே சித்ரா மச்சுப் படிகளில் குதித்தேறிச் சென்றாள். அங்கே சீதாவிடம் போய்ச் சித்ரா தன் புருஷனை அழைத்து வரட்டுமா என்று கேட்டதும், “வேண்டாம், சித்ரா! இப்போது வேண்டாம்! நாளைக்கு ஆகட்டும்!” என்றாள் சீதா. சித்ரா ஏமாற்றத்துடன், “ஏன் இப்படிச் சொல்கிறாய்” என்று கேட்டாள். “இன்றைக்கு மனது சரியாக இல்லை. லலிதாவின் கடிதத்தைப் படிப்பதற்காகக் கொடுத்தாய் அல்லவா? அதைப் படித்தபோது பழைய ஞாபகங்கள் எல்லாம் வந்தன. அதனால் மனது நிம்மதியை இழந்திருக்கிறது. உன்னுடைய கணவரிடம் நாளைக்குப் பேசுகிறேன்!” என்றாள் சீதா. இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோதே கீழ்த் தட்டில் தடதடவென்று மனிதர்கள் பிரவேசிக்கும் சத்தம் கேட்டது. கால் பூட்ஸுகளின் சத்தம் அதிகமாயிருந்தது. இப்படித் தடபுடலாய் வருகிறவர்கள் யாராயிருக்கும் என்ற எண்ணத்துடன் சித்ரா மச்சுப் படிகளில் இறங்கி வந்தாள். பாதிப் படிகள் இறங்கியதும் கீழே போலீஸ்காரர்களும் சி.ஐ.டி.காரர்களுமாய் வந்து நிற்பதைப் பார்த்தாள். சித்ராவின் தலை கிறுகிறுவென்று சுழன்றது. மச்சுப்படிகளின் விளிம்புச் சட்டத்தைப் பிடித்துக் கொண்டு சமாளித்தாள். வந்திருந்தவர் களில் தலைவர் என்று காணப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் அமரநாத்திடம் பின்வருமாறு சொல்லிக் கொண்டிருந்தார்; “இந்த யு.ஜி. பெண்பிள்ளை மிகக் கெட்டிக்காரி; ஒரே ஆசாமி. சீதா என்றும் தாரிணி என்றும் இரண்டு பெயர்கள் வைத்துக்கொண்டு புது டில்லிப் போலீஸை ஏமாற்றி வந்திருக்கிறாள். இப்போதுதான் பாருங்களேன் அனாதை விடுதிக்கு நாங்கள் வரப்போகிறோம், என்று தெரிந்து கொண்டு அரைமணிக்கு முன்னால் உங்கள் மனைவியை ஏமாற்றி இவ்விடத்துக்கு அழைத்து வரச் செய்திருக்கிறாள்! நீங்கள் வரவேண்டும் என்று தான் இத்தனை நேரமும் தெரு முனையில் காத்துக்கொண்டிருந்தோம்.” இதற்கு அமரநாதன், “இன்ஸ்பெக்டர்! நீங்கள் ஏதோ ஒரு பெரிய தவறு செய்கிறீர்கள். இந்த ஸ்திரீ யு.ஜி. அல்ல; புரட்சி இயக்கத்தைச் சேர்ந்தவளும் அல்ல!” என்றான். “உங்களுக்கு எப்படித் தெரியும் மிஸ்டர் அமரநாத்! எங்களிடம் வேண்டிய அத்தாட்சிகள் இருக்கின்றன. போட்டோ ப் படம் கூட இருக்கிறது!” என்றார் இன்ஸ்பெக்டர். பின்னர் காரியங்கள் வெகு துரிதமாக நடந்தன. அமரநாத் மேலே ஏறி வந்து மச்சுப் படியில் பாதி வழியில் நின்ற சித்ராவிடம் விஷயத்தைச் சொன்னான். அவள் ரொம்ப அங்கலாய்த்தாள் “இந்த அக்ரமத்தை நீங்கள் தடுக்க முடியாதா, உங்களுடைய செல்வாக்கு எங்கே போயிற்று? இந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் உங்களுக்கும் சினேகமாயிற்றே!” என்றாள். “போலீஸ்காரர்கள் விஷயம் உனக்குத் தெரியாது. அவர்களுக்கு ‘டியூடி’ என்று வந்து விட்டால் சிநேகிதர்களுமில்லை; பந்துக்களும் இல்லை ஈவிரக்கம் கிடையாது. ‘லாமிஸராப்ளே’ கதையில் வருகிற போலீஸ்காரனை நினைவிருக்கிறதல்லவா? அந்த மாதிரிதான் அநேகமாக எல்லாப் போலீஸ்காரர்களும்! நம்மைச் சேர்த்துப் பிடிக்காமல் விடுகிறார்களே, அதுவே பெரிது. இப்போது உன் சிநேகிதியை அனுப்பி வைக்க வேண்டியதுதான். பின்னால் கூடுமான முயற்சியெல்லாம் செய்து பார்ப்போம். ‘ஹேபியஸ் காப்பஸ்’ வழக்கு வேண்டுமானாலும் நடத்துவோம்”, என்றான் அமரநாத். சித்ரா கண்ணுங் கண்ணீருமாய் மேலே ஓடிப் போய்ச் சீதாவிடம் விஷயத்தைச் சொன்னாள். முதலில் விஷயம் அவ்வளவு தெளிவாக விளங்க வில்லை சீதாவுக்கு. நன்றாகப் புரியும்படி தெரிந்து கொண்டதும் சீதாவின் உள்ளத்திலிருந்து ஒரு பெரியபாரம் நீங்கியது போலிருந்தது. என்ன செய்வது, எங்கே போவது என்கிற சங்கடமான பிரச்னைகள் எல்லாம் இனிமேல் இல்லை! கடவுளே பார்த்துத் தான் தனக்கு இத்தகைய சகாயத்தை அனுப்பியிருக்கிறார்? சிறைச்சாலைக்குள் போய் நிம்மதியாயிருக்கலாம். படிப்பும் அந்தஸ்தும் வாய்ந்த எத்தனையோ பெண்மணிகள் இப்போது சிறைச்சாலைகளில் பாதுகாப்புக் கைதிகளாயிருக்கிறார்கள் நாம் இருப்பதற்கு என்ன வந்தது? குழந்தை வசந்தியை இப்போதைக்குப் பார்க்க முடியாது; அதுவும் ஒரு நல்லதற்குத்தான் . குழந்தையைப் பார்த்து என்னத்தைச் சொல்வது! அப்பாவைப் பற்றிக் கேட்டால் என்ன பதில் கூறுவது? பேத்தியைப் பாட்டி நன்றாய்ப் பார்த்துக் கொள்வாள். கண்ணும் கருத்துமாக வளர்ப்பாள் அதுவே போதும். எப்படியாவது குழந்தை சௌக்கியமாய் இருந்தால் சரி, நல்ல காலம் பிறந்து கடவுள் கூட்டி வைக்கும்போது பார்த்துக் கொள்ளலாம். கொஞ்சம் கூடத் தயக்கமில்லாமல் சீதா கீழே இறங்கி வந்து போலீஸாரிடம் தன்னை ஒப்புக் கொடுத்தாள். போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் அமரநாத், சீதா உயர் குடும்பப் பெண் என்றும், அவளை மரியாதையாக நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். போலீஸ் இன்ஸ்பெக்டர் அதற்கிணங்கி வாக்குக் கொடுத்தார். சீதா வீட்டைவிட்டுப் புறப்படும் தறுவாயில் சித்ரா கண்ணும் கண்ணீருமாக அவளைக் கட்டித் தழுவிக்கொண்டு, “சீதா! கவலைப்படாதே! நான் இவரைக் கொண்டு ‘ஹேபியஸ் கார்பஸ்’ வழக்குப் போடச் சொல்லி உன்னை விடுதலை செய்கிறேன் சீக்கிரம் திரும்பி வந்துவிடுவாய்!” என்றாள். “அப்படியெல்லாம் ஒன்றும் செய்ய வேண்டாம், சித்ரா! கடவுளே பார்த்து எனக்கு இந்தச் சகாயத்தைச் செய்திருக்கிறார். நீ என்னைப் பற்றிக் கவலைப்படாமலிரு!” என்றாள் சீதா. பாகம் 4- ‘பிரளயம்’ முதல் அத்தியாயம் - தாயின் மனக்குறை இராஜம்பேட்டை கிராமத்தை நாம் பார்த்து ஏறக்குறைய ஒரு வியாழ வட்டம் ஆகிறது. கணக்காகச் சொல்லப் போனால் பதினோரு வருஷமும் பத்து மாதமும் ஆகின்றன. பழைய தபால் சாவடிக் கட்டிடமும் ஏறக்குறைய முன்னால் பார்த்த மாதிரியே காணப்படுகிறது. ஆனால் அக்கட்டிடத்தின் வெளிச்சுவரிலும் தூண்களிலும் சில சினிமா விளம்பரங்கள் ஒட்டப்பட்டிருப்பதைக் காண்கிறோம். விளம்பரம் ஒட்டப்படாத இடங்களில் “ஜே ஹிந்த்” என்றும், “நேதாஜி வாழ்க!” என்றும் எழுதப்பட்டிருந்தன. தபால் சாவடிக்கெதிரே சாலையில் கப்புங் கிளையுமாகப் படர்ந்திருந்த பெரிய ஆலமரத்தைக் காணவில்லை. இதனால் அந்தச் சாலையின் அழகு குன்றி வெறிச்சென்றிருந்தது. மிட்டாய்க் கடை இருந்த இடத்தில் இப்போது ரேஷன் கடை இருந்தது. கடைக்காரர் மனது வைத்து எப்போது அரிசிப் படி போடுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டு நாலைந்து ஸ்திரீகள் கையில் கூடையுடன் நின்றார்கள். தபால் சாவடிக்குள்ளே ஜன நடமாட்டம் காணப்பட்டது. ஆனால் நமக்குத் தெரிந்தவர்கள் யாரும் அங்கில்லை. போஸ்ட் மாஸ்டர், போஸ்ட்மேன், ரன்னர் - எல்லோரும் நமக்குப் புதியவர்கள். வரப்போகும் தபால் ஸ்டிரைக்கைப் பற்றி அவர்கள் பேசிக்கொண்டிருந் தார்கள். இந்தத் தெரியாத மனிதர்களை விட்டு விட்டு நமக்குத் தெரிந்த மனிதர்கள் இன்னும் வசிக்கும் இராஜம்பேட்டை அக்கிரகாரத் துக்குப் போவோம். அக்கிரகாரத்தின் தோற்றத்தில் சில மாறுதல்கள் காணப்பட்டன. முன்னே நாம் பார்த்ததற்கு இப்போது இன்னும் சில வீடுகள் பாழடைந்து போயிருந்தன. கிட்டாவய்யரின் வீட்டு வாசலில் பந்தல் இல்லை. வீட்டின் முகப்பு களைகுன்றிப் போயிருந்தது. ஆனால் சீமாச்சுவய்யரின் வீடு இப்போது முன்னைவிட ஜோராக இருந்தது. சீமாச்சுவய்யர் சரியான சமயத்தில் தேவபட்டணத்துக்குப் போய் ஜவுளிக் கடை வைத்தார். திருமகளின் கடாட்சம் அவருக்கு அமோகமாகப் பெருகியது. பழைய வீட்டைத் திருத்தி நன்றாகக் கட்டியிருந்தார். கிட்டா வய்யருக்குச் சமீப காலத்தில் சில கஷ்டங்கள் ஏற்பட்டிருந்தன. குடிபடைகளுக்கும் மிராசுதாரர்களுக்கும் குடியிருக்கும் மனைக் கட்டு விஷயமாக நெடுங்காலமாய்ச் சச்சரவு நடந்து கொண்டிருந்தது. சென்ற வருஷத்தில் கோர்ட்டில் மிராசுதாரர்களுக்குச் சாதகமாகத் தீர்ந்தது. இந்த வழக்கில் முன்னால்நின்று நடத்தும் பொறுப்புக் கிட்டாவய்யரின் தலையில் சுமந்திருந்தது. இதனால் பணவிரயம் அதிகமானதோடு குடிபடைகளின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொண்டிருந்தார். யாரும் எதிர்பாராத விபத்து ஒன்று கிட்டாவய்யருக்குச் சென்ற வருஷம் நேரிட்டது. சுற்றுப் புறங்களில் திருட்டுகளும், கொள்ளைகளும் அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டிருந்தன; திருட்டுக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்ட ஒரு கூட்டத்தினர் பட்டாமணியம் கிட்டாவய்யரைச் சமபடுத்தி வாக்குமூலம் எழுதி வைத்தார்கள். உடனே கிட்டாவய்யர் பட்டாமணியம் உத்யோகத்திலிருந்து சஸ்பெண்டு செய்து வைக்கப்பட்டார். குற்றச்சாட்டுகளைப் பற்றிய போலீஸ் விசாரணையும் உத்தியோக விசாரணையும் நடந்தன. கடைசியாக விரோதத்தின் பேரில் பொய்யாக எழுதி வைக்கப்பட்ட குற்றச்சாட்டு என்று ஏற்பட்டது. ஆயினும் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது கிட்டாவய்யருடைய மனதில் ஏற்பட்ட வேதனைக்கு அளவே கிடையாது. வீட்டை விட்டு வெளியே புறப்படுவதற்கே அவருக்கு வெட்கமாயிருந்தது! ஆயினும் வெளியில் கிளம்புவது அவசியமாகவும் இருந்தது! பணம் நிறையச் செலவாயிற்று. முடிவாக ஒன்றுமில்லை என்று ஏற்பட்ட போதிலும், “பணத்தைச் செலவழித்து அமுக்கி விட்டார்!” என்ற பேச்சும் பராபரியாகக் காதில் விழாமற் போகவில்லை. பத்துநாளைக்கு முன்பு கிட்டாவய்யர் தேவபட்டணம் சென்று, அதற்குச் சில நாளைக்கு முன்னால்தான் சிறையிலிருந்து விடுதலையடைந்து வந்திருந்த தம் மாப்பிள்ளை பட்டாபிராமனைப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தார். இராஜம்பேட்டையிலிருந்து நாலு மைல் தூரத்தில் இராத்திரி பத்து மணிக்குக் கட்டை வண்டியில் வந்து கொண்டிருந்தபோது முகமூடி அணிந்திருந்த திருடர்கள் ஏழெட்டுப்பேர் வந்து சூழ்ந்து கொண்டு வண்டிக்காரனையும் கிட்டாவய்யரையும் நன்றாக அடித்து விட்டு அவரிடமிருந்த மணிபர்ஸை அபகரித்துக் கொண்டு போய் விட்டார்கள். கிட்டாவய்யர் உடம்பெல்லாம் காயங்களுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அன்றிரவே அவருக்குக் கடுமையான சுரமும் வந்துவிட்டது. இந்தச் செய்தியை அறிந்ததும் தேவபட்டிணத்திலிருந்து பட்டாபிராமனும் லலிதாவும் குழந்தைகளுடன் புறப்பட்டு வந்தார்கள். இரண்டு நாள் இருந்துவிட்டுப் பட்டாபிராமன் போய் விட்டான். கிட்டாவய்யரும் சரஸ்வதி அம்மாளும் கேட்டுக் கொண்டதின் பேரில் லலிதாவையும் குழந்தைகளையும் இன்னும் சில நாள் இருந்துவிட்டு வரும்படி சொல்லிப் போனான். ரேழிப் பக்கத்துக் காமரா அறையில் போட்டிருந்த கட்டிலில் கிட்டாவய்யர் படுத்திருந்தார் - அவருக்கு உடம்பு இப்போது சௌகரியமாகி விட்டது. ஆனாலும் முன்போல் எழுந்து நடமாடும் படியான தெம்பு இன்னும் ஏற்படவில்லை, இப்போது அவர் அரைத் தூக்கமாயிருந்தார். வீட்டுக்குள்ளே கூடத்தில் பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னால் முதன் முதலில் பார்த்த காட்சியை இன்றைக்கும் பார்க்கிறோம். லலிதாவுக்கு அவளுடைய தாயார் சரஸ்வதி அம்மாள் தலைவாரிப் பின்னிக் கொண்டிருந்தாள். ஆனால் லலிதா முன்னைப் போல் இப்போது சின்ன வயதுக் கன்னிப் பெண் அல்ல. அவள் - இரண்டு குழந்தைகளின் தாயார். அந்தக் குழந்தைகள் இருவரும் - பட்டுவும் பாலுவும் - சற்றுத் தூரத்தில் உட்கார்ந்து பொம்மைகள் நிறையப் போட்டிருந்த ஒரு தமிழ் சஞ்சிகையைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். லலிதாவின் முகமண்டலத்தில் அவ்வளவாகச் சந்தோஷம் குடிகொண்டிருக்கவில்லை. அவளுடைய கண்கள் கலங்கியிருந்தன. மழை பொழியத் தொடங்குவதற்குத் தயாராக இருக்கும் மாரிக்காலத்து இருண்ட மேகங்களை அவளுடைய கண்கள் அச்சமயம் ஒத்திருந்தன. ஏதாவது ஒரு சின்னக் காரணம் ஏற்பட வேண்டியதுதான்; அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் மழை சொரியத் தொடங்கிவிடும். அத்தகைய காரணத்தை ஏற்படுத்திக் கொடுக்க லலிதாவின் தாயார் சரஸ்வதி அம்மாள் இருக்கவே இருந்தாள். லலிதாவின் தலையை வாரிக்கொண்டே தன்னுடைய மனக்குறைகளையும் அந்த அம்மாள் வெளியிட்டுக் கொண்டிருந்தாள். “இறுக்கம் தாங்கவில்லை; ஆனால் பாழும் மழை மட்டும் பெய்ய மாட்டேன் என்கிறது! வயல்களில் பயிரெல்லாம் காய்கிறதாம்! தெய்வம் எப்போது கண் திறந்து பார்க்குமோ தெரியவில்லை. இந்தக் கலியுகத்தில் தெய்வத்துக்கே சக்தி இல்லாமல் போய் விட்டது போல் தோன்றுகிறது. இல்லாவிட்டால் இந்த மாதிரி அக்கிரமங்கள் எல்லாம் உலகத்தில் நடக்குமா? உங்கள் அப்பா பெயரைச் சொன்னால் நாடு நகரமெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்த உலகம் உண்டு. இப்போது அவருடைய வண்டியைத் திருடர்கள் வழி மறித்து அடித்துப் பணப் பையைப் பிடுங்கிக்கொள்ளும் காலம் ஏற்பட்டுவிட்டது. ஒரு அதிகாரம், ஒரு அத்து - இப்போதெல்லாம் கிடையாது. பயம் என்பதே இல்லாமல் போய்விட்டது.” லலிதா குறுக்கிட்டு, “அம்மா, ஊரெல்லாம் அப்பா பெயரைக் கேட்டுப் பயந்து கொண்டிருந்த காலத்திலும் நீ மட்டும் பயப்பட வில்லையே? எதிர்த்துப் பேசிக்கொண்டுதானே இருந்தாய்!” என்றாள். “நன்றாயிருக்கிறதடி நீ சொல்வது! என் மாதிரி புருஷனுக்குப் பயந்து எல்லாரும் நடந்தால் போதாதா? ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசுவதற்குக் கூடப் பயந்து பயந்து இருந்த படியால் தான் இந்தக் குடும்பம் இந்தக் கதிக்கு வந்தது! நான் மட்டும் எதிர்த்துப் பேசியிருந்தேனானால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா? உன்னுடைய கலியாணத்தையே எடுத்துக்கொள்! என் இஷ்டப்படி விட்டிருந்தால் இந்த இடத்தில் உன்னைக் கொடுத்திருப்பேனா? கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுக்கிறது என்று சொல்வார்கள். அந்த மாதிரி உன்னுடைய கதி ஆகிவிட்டது!….” “ஏதாவது உளறாதே, அம்மா குழந்தைகளின் காதில் விழப்போகிறது.” “விழுந்தால் என்ன? நன்றாய் விழட்டும். உன் பெண்ணும் பிள்ளையும் வேண்டுமானால் மாப்பிள்ளையிடம் போய்ச் சொல்லட்டும். எனக்கு ஒருவரிடத்திலும் பயம் கிடையாது. காங்கிரஸாம்! காந்தியாம்! இரண்டு வருஷம் ஜெயிலிலே இருந்து விட்டு வந்தாராம்! எதற்காக ஜெயிலுக்குப் போக வேணும்! திருடினாரா? கொள்ளையடித்தாரா? மாப்பிள்ளைக்குப் போட்டியாக இந்தப் பிராமணரும் ஜெயிலுக்குப் போய்விடுவாரோ என்று எனக்குப் பயமாயிருந்தது. ஏதோ நான் செய்த பூஜா பலத்தினால் அந்த ஒரு அவமானம் இல்லாமற் போயிற்று. உன் அகத்துக்காரர் இரண்டு வருஷம் ஜெயிலில் இருந்து விட்டுத்தான் வந்தாரே? என்ன பலனைக் கண்டார்? சில பேர் காங்கிரஸிலே சேர்ந்து ஜெயிலுக்குப் போய் வந்து விட்டு மெம்பர், கிம்பர் என்று ஆகிச் சம்பாதித்து வருகிறார்களே? அப்படியாவது ஏதாவது உண்டா? அதுவும் கிடையாது…”“அம்மா! இவர் மற்றவர்களைப்போல் சட்டசபை மெம்பர் ஆவதற்காகவோ, வேறு உத்தியோகப் பதவிக்காகவோ ஜெயிலுக்குப் போகவில்லை; சுயராஜ்யத்துக்காகப் போனார்!….” "சரி அப்படியாவது சுயராஜ்யம் வந்ததா? சொல்லேன், பார்ப்போம்! யுத்தத்திலே ஹிட்லர் ஜெயித்துவிடப் போகிறான் - இங்கிலீஷ்காரன் வாயிலே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டு போய்விடப் போகிறான் என்று எல்லோருமாகச் சேர்ந்து சொன்னீர்கள். உன் அண்ணா சூரியா இருக்கிறானே, அந்தச் சமர்த்துப் பிள்ளை, உன் அப்பாவைப் பட்டாமணியம் வேலையை விட்டுவிட வேண்டும் என்று சொன்னான் கடைசியில், என்ன ஆயிற்று? சுயராஜ்யத்தையும் காணோம், கியராஜ்யத்தையும் காணோம். அதுதான் போனாற் போகிறது என்றால், இப்போதாவது மாப்பிள்ளை கோர்ட்டுக்குப் போய் நாலு பணம் சம்பாதிக்கலாம் அல்லவா? வக்கீல் வேலைக்கு படித்துவிட்டு வீட்டிலே கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தால் என்ன பிரயோஜனம்? இல்லையென்றால், ஏதாவது உத்தியோகமாவது தேடிக்கொள்ள வேணும். சும்மாயிருந்தால் எப்படி ஜீவனம் நடக்கும். நீயோ சம்சாரியாகி விட்டாய்! இங்கேயாவது முன்னைப் போல் கொட்டிக்கிடக்கிறதா? பணத்தினால் காசினால் அதிகம் செய்ய முடிகிறதா? அப்படிச் செய்தால்தான் என்ன? உனக்கு வைத்துக் கொண்டு வாழத் தெரியவில்லை. அவர்தான் சொன்னார் என்று ஒரு தங்க ஒட்டியாணத்தை விற்றுவிட்டேன் என்று சொல்கிறாயே? உன்னுடைய சமர்த்தை என்னவென்று சொல்லுவது? கட்டிய பெண்டாட்டிக்கு ஒரு புருஷன் புதிதாக நகை பண்ணி போடாவிட்டாலும், ஏற்கெனவே பண்ணிய நகையை விற்பானோ! இது என்னடி வெட்கக்கேடு…?" “அம்மா! இப்படியெல்லாம் நீ அவரைப் பற்றிக் குறை சொல்வதாயிருந்தால், இரண்டு நாளைக்குப் பிறகு போகிறவன் இன்றைக்கே புறப்பட்டு விடுகிறேன்…” என்றாள் லலிதா. “போ!போ! இந்த நிமிஷமே புறப்பட்டுவிடு! என் தலையெழுத்து அப்படி. நான் யாருக்கு என்னமாய் உழைத்தாலும் என் பேரில் யாருக்கும் ஈவிரக்கம் கிடையாது. தான்பெற்ற பிள்ளையும் பெண்ணும் தனக்கே சத்துரு என்றால், அது லையெழுத்துத் தானே? பத்து மாதம் நான் உன்னை வயிற்றில் சுமந்து பெற்றெடுக்கவில்லையா? பெற்ற தாயாருக்கு ஒரு வார்த்தை சொல்லுவதற்குப் பாத்தியதை கிடையாதா?” “என்னை நீ எவ்வளவு வேணுமானாலும் சொல், அம்மா! பொறுத்துக் கொள்கிறேன். ஆனால் அவரைப் பற்றி ஒன்றும் சொல்லாதே! நீ தானே அவரைத் தேடி என்னை அவருக்குக் கலியாணம் செய்து கொடுத்தாய்? இப்போது குறை சொல்லுவதில் என்ன பிரயோஜனம்?” என்று கேட்டாள் லலிதா. "நான் ஒன்றும் இந்த மாப்பிள்ளையைத் தேடிப் பார்த்துப் பிடித்துக் கொண்டு வரவில்லை. உன் அண்ணா சூரியா சொன்னான் என்று உன் அப்பா ஏற்பாடு செய்துவிட்டார். ஆயிரம் ரூபாய் சம்பளக்காரனை நான் உனக்காக வரன் பார்த்திருந்தேன். கொடுத்து வைக்கவில்லை, பம்பாயிலிருந்து அந்த மகராஜி - உன் அத்தை, - சரியான சமயம் பார்த்து அந்தப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தாள். பெண்ணைப் பார்க்க மாப்பிள்ளை வருகிற சமயத்தில் வீட்டில் வேறு பெண் இருக்ககூடாது என்று முட்டிக் கொண்டேன். என் பேச்சை யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. நான் என்ன இங்கிலீஷ் படித்தவளா? நாகரிகம் தெரிந்தவளா? பட்டிக்காட்டு ஜடம் தானே; என் பேச்சை யார் கேட்பார்கள்? ஆனாலும் இந்தப் பட்டிக்காட்டு ஜடம் சந்தேகப்பட்டுச் சொன்னது போலவே நடந்துவிட்டது. உன்னைப் பார்ப்பதற்காக வந்தவனை உன் அத்தங்கா சீதா மயக்கிவிட்டாள். அவளிடம் என்ன மோகனாஸ்திரம் வைத்திருந்தாளோ, என்ன சொக்குப்பொடி வைத்திருந் தாளோ தெரியாது. வந்தவனும் பல்லை இளித்து விட்டான்! உன்னுடைய அதிர்ஷ்டம் கட்டையாகப் போய் விட்டது…." “இல்லவே இல்லை, என் அதிர்ஷ்டம் நன்றாயிருந்தது. அந்த ஆயிரம் ரூபாய் சம்பளக்காரனைச் சீதா கலியாணம் செய்து கொண் டாளே அவளுடைய கதி என்ன ஆயிற்று? அவள் பட்ட கஷ்டமெல்லாம் உனக்குத் தெரியாதா, அம்மா? போன மாதத்திலே கூடச் சித்ரா கடிதம் எழுதியிருந்தாள். சீதாவின் புருஷன் ரொம்பப் பொல்லாதவன், அயோக்கியன் என்று. அதையெல்லாம் சொல்லக்கூட எனக்குப் பிடிக்கவில்லை. அவனுக்கு என்னைக் கலியாணம் பண்ணிக் கொடுத்திருந்தால் நானும் சீதாவைப் போலத்தானே கஷ்டப்பட வேண்டும்?” என்றாள் லலிதா. “அப்படி ஒன்றும் கிடையாது, அந்தப் பெண் சீதாவுக்குத் துக்கிரி ஜாதகம். அதனாலே அவள் போன இடம் அப்படியாயிற்று. உன்னை அந்த வரனுக்குக் கொடுத்திருந்தால் இப்போது ராஜாத்தி மாதிரி இருப்பாய்!” “என்னுடைய ஜாதகம் அதிர்ஷ்ட ஜாதகமாயிருந்தால், நான் வாழ்க்கைப்பட்ட இடத்தில் சுபிட்சமாயிருக்க வேண்டுமே? அவ்விதம் ஏன் இல்லை?” என்று கேட்டாள் லலிதா. “உன் அரட்டைக் கல்லிக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. நீ போன இடத்தில் இப்போது என்ன குறைந்து போய்விட்டது? வீடு, வாசல், பணம், சொத்து, எல்லாந்தான் இருக்கிறது. நாமாகக் கஷ்டத்தை வரவழைத்துக் கொள்வதற்கு அதிர்ஷ்டம் என்ன செய்யும்? ஜாதகம் என்ன செய்யும்? உன் தங்க ஒட்டியாணத்தை விற்றுத்தான் சாப்பிடவேண்டும் என்று ஆகிவிடவில்லை. மாப்பிள்ளைக்கு ஏதோ கிறுக்குப் பிடித்திருக்கிறது. நீயும் சேர்ந்து கூத்தடிக்கிறாய்!” என்றாள் சரஸ்வதி அம்மாள். “சரி, அம்மா, சரி! தலை பின்னியாகி விட்டதோ இல்லையோ? போதும், விடு!” என்றாள் லலிதா. இவ்வளவு நேரமும் சரஸ்வதி அம்மாள் தன்பெண்ணின் கூந்தலைவாரி ஜடை போட்டுக் கொண்டி ருந்தாள். கூந்தலை விட்டுவிட்டால் அப்புறம் லலிதாவை உட்கார வைத்துத் தன் மனக் குறைகளைக் கேட்கச் செய்ய முடியாது என்று சரஸ்வதி அம்மாளுக்குத் தெரிந்திருந்தது. ஆகையினாலேயே சிறிதும் அவசரப்படாமல் சாவகாசமாகக் கூந்தலை வாரிப் பின்னி விட்டாள். அவள் தலை முடிந்த சமயத்தில் வாசலில் “தபால்!” என்ற சத்தம் கேட்டது. லலிதா உடனே அம்மாவின் பிடியிலிருந்து தலைப் பின்னலைப் பலவந்த மாகத் திமிறி விடுவித்துக்கொண்டு எழுந்தாள். “இவ்வளவு வயதாகியும் உன் சுபாவம் மட்டும் மாறவில்லை. அந்த நாளில் திமிறிக் கொண்டு ஓடியது போலவே இப்போதும் ஓடுகிறாய். நல்லவேளையாகத் தபால் ஆபீஸுக்கே ஓடிப் போகாமல் வீட்டு வாசலோடு நிற்கிறாயே, அதுவரையில் விசேஷந் தான்!” என்றாள் சரஸ்வதி அம்மாள். அவளுடைய வார்த்தைகளை அரைகுறையாகக் காதில் வாங்கிக் கொண்டு லலிதா வாசற்பக்கம் சென்றாள். இரண்டாம் அத்தியாயம் - “சீதா வருகிறாள்!” வாசலில் வந்து நின்று “தபால்!” என்று சத்தமிட்ட போஸ்டுமேன் வயதான மனிதர். அவர் லலிதாவை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்துவிட்டு “நீங்கள்தானா அம்மா, லலிதா பட்டாபிராமன் என்கிறது?” என்று கேட்டார். “ஆமாம்!” என்று சொல்லி லலிதா கையை நீட்டினாள். போஸ்டுமேன் கடிதத்தை அவள் கையில் கொடுத்துவிட்டுப் போனார். கடிதத்தின் மேல் விலாசம் கணவருடைய கையெழுத்திலே இருக்கிறது என்பதை லலிதா கவனித்துவிட்டு ஆவலுடன் உறையைப் பிரித்தாள். அதற்குள்ளே இரண்டு கடிதங்கள் இருந்தன. ஒன்று கணவர் எழுதியிருப்பதுதான் இன்னொன்று ஆகா!- சீதாவின் கையெழுத்துப் போல அல்லவா இருக்கிறது? இருக்கட்டும்; முதலில் இவருடைய கடிதத்தைப் படிக்கலாம்:- "சௌ. லலிதாவுக்கு ஆசீர்வாதம். “உனக்குக் கடிதம் எழுத ஆரம்பிக்கும் போது, ‘என் ஆருயிரே!’ ‘அன்பின் சிகரமே!’ ‘காதற் கனிரசமே வாழ்வின் துணைவியே’ என்றெல்லாம் எழுத ஆரம்பிக்க வேண்டுமென்று எண்ணுகிறேன். ஆனால் எழுதும்போது அதெல்லாம் வருவதில்லை, பழைய கர்நாடக பாணியில்தான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இங்கே நான் சௌக்கியமாகவும் சௌகரியமாகவும் வந்து சேர்ந்தேன். யாரும் என்னை வழிமறித்து மணிபர்ஸைப் பறிக்கவில்லை. அப்படி யாராவது பறித்திருந்தாலும் அதிகமாக அவர்களுக்கு ஒன்றும் கிடைத்திராது. ஒரு ஆளுக்குத் தேவபட்டணத்துக்கு ரயில் சார்ஜும் மேலே ஒன்றரை அணாவுந்தான் கிடைத்திருக்கும். ஏமாந்து போயிருப்பார்கள்! நல்ல சமயம் பார்த்துச் சமையற்கார அம்மா லீவு வாங்கிக் கொண்டு விட்டாள். நான்தான் இப்போது சமையல் செய்கிறேன். சமையல் ‘பஸ்ட் கிளாஸ்’ என்று உன் தம்பி சுண்டு சர்டிபிகேட் கொடுக்கிறான். நான் இரண்டு வருஷம் ஜெயிலில் இருந்ததில் என்ன பிரயோஜனம் வேண்டும்? ஜெயிலில் இருந்திராவிட்டால் சமையல் செய்யக் கற்றுக் கொண்டிருக்க முடியுமா? வீட்டில் நான் சமையற்கட்டிற்குள் வந்தாலே நீங்கள் எல்லாரும் குடி முழுகிப் போனதுபோல் கூச்சல் போடுவீர்களே? போகட்டும்.’அத்திம்பேருக்கு ஒத்தாசையாயிரு!” என்று நீ சுண்டுவிடம் சொல்லி அனுப்பினாயல்லவா? சுண்டு எனக்கு மிகவும் ஒத்தாசையாக இருந்து வருகிறான். நேற்றுக் குழம்பை அடுப்பிலே கவிழ்த்து விட்டான்! ‘போதும் அப்பா, உன் ஒத்தாசை! நீ சும்மா இருந்தால், அதுவே பெரிய உதவியாயிருக்கும்!’ என்று சொன்னேன். சுண்டு ஒத்தாசைக்கு வந்துவிடப் போகிறானே என்று எனக்கு இப்போது ஒரே பீதியாக இருக்கிறது. உன் தாயார் ஒட்டியாணத்தை மறந்து விட்டாளா, இல்லையா? அது தங்க ஒட்டியாணம் அல்ல - முலாம் பூசிய பித்தளை ஒட்டியாணம் என்பதையும், அதை நான் விற்றுவிடவில்லை - தானம் கொடுத்தேன் என்பதையும் உன் அம்மாவிடம் சொல்லிவிட்டாயா? சொன்னால் ஒருவேளை அவளுடைய கோபம் இன்னும் அதிகமாகி விடுமோ, என்னமோ? உன் தாயாரின் சமாசாரம் உனக்குத்தான் தெரியும். ஆகையால் உன்னுடைய உசிதப்படி செய்துகொள். மாமாவுக்கு இப்போது உடம்பு நன்றாய்ச் சௌகரியமாகியிருக்கும் என்று நம்புகிறேன். அவருக்கு இப்படிப்பட்ட கஷ்டம் வந்ததை நினைத்தால் எனக்குப் பரிதாபமாயிருக்கிறது. நம்முடைய சூரியா சொன்ன யோசனையைக் கேட்டு நடந்திருந்தால் எவ்வளவோ நன்றாயிருந்திருக்கும். இந்த மாதிரியெல்லாம் பொருள் நஷ்டமும் மனக் கஷ்டமும் ஏற்பட்டிருக்குமா? எல்லாம் கடவுளுடைய செயல்! நீ எப்போது புறப்பட்டு வருவதாக உத்தேசம்? கூடிய சீக்கிரம் வந்துவிடுவது நல்லது. நீ சீக்கிரம் வரவேண்டியதற்கு ஒரு முக்கிய காரணத்தை இத்துடன் இருக்கும் கடிதத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்வாய். உன் தோழி சீதா உன்னைப் பார்க்க வருவதாகச் சொல்லிப் பயமுறுத்தியிருக்கிறாள். அவள் வரும்போது நீ இங்கே இல்லாமல் இருந்தால் என்னால் என்ன செய்ய முடியும்? அதைப் பற்றி நினைத்தாலே எனக்குப் பயமாயிருக்கிறது. ஸ்ரீமதி சீதா புது டில்லி முதலான இடங்களில் இருந்து நாகரிக வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டவள். நானோ சுத்தக் கர்நாடக மனிதன். ஆகையால் ஸ்ரீ மதி சீதா தேவியை வரவேற்று உபசரிக்கும் விதம் எனக்கு எவ்விதம் தெரியும்? ஆகையினால் இந்தக் கடிதம் பார்த்தவுடன் அப்பா - அம்மாவிடம் நல்லபடியாகச் சொல்லி விடைபெற்றுக் கொண்டு வந்து சேரவும். சீமாச்சுவய்யர் உன்னைப் பத்திரமாக அழைத்துக் கொண்டு வந்து விடுவதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார். இங்ஙனம். பட்டாபிராமன்" மேற்படி கடிதத்தைப் படித்து வந்த போது அதில் பல விஷயங்கள் எழுதியிருந்த போதிலும், “சீதா வருகிறாள்!” என்னும் ஒரு விஷயமே லலிதாவின் மனதில் தங்கியது. கணவன் கடிதத்தைப் படித்து முடித்ததும் அடங்கா ஆர்வத்துடன் சீதாவின் கடிதத்தைப் படிக்கத் தொடங் கினாள். அப்போது காமரா அறையிலிருந்து, “லலிதா!” என்று அப்பா அருமையாக அழைக்கும் குரல் கேட்கவே, லலிதா கடிதத்தைப் படித்த வண்ணமே உள்ளே சென்றாள். அவளைப் பார்த்ததும் கிட்டாவய்யர், “லலிதா! எனக்கு ஏதாவது கடிதம் உண்டா? கையில் இரண்டு கடிதம் வைத்திருக்கிறாய்ப் போலிருக்கிறதே! இரண்டும் உனக்கு வந்தது தானா? யார் கடிதம் எழுதியிருக்கிறார்கள்?” என்று கேட்டார். “ஒரு கடிதம் தேவபட்டணத்திலிருந்து இவர் எழுதியிருக்கிறார். இன்னொன்று அத்தங்கா சீதா எழுதிய கடிதம் அப்பா! கல்கத்தாவில் சித்ராவின் வீட்டிலிருந்து எழுதியிருக்கிறாள். சீக்கிரத்தில் அவளுடைய பெண்ணைப் பார்க்க மதராஸுக்கு வருகிறாளாம். அப்படியே தேவபட் டணத்துக்கு வருவதாக எழுதியிருக்கிறாள்…” “ஓகோ! அப்படியா! சீதா கடிதம் எழுதியிருக்கிறாளா? பாவம்! கொஞ்ச நாளாய் அவளைப்பற்றி ஒரு தகவலும் தெரியாம லிருந்தது. அவளை ஒரு தடவை பார்க்க வேண்டும் என்ற சபலம் எனக்குக்கூட உண்டு. அவளைப் பார்த்துச் சில புத்திமதிகள் சொல்ல வேண்டும் என்று இருக்கிறேன். தேவபட்டணத்துக்குச் சீதா வந்தால் இங்கேயும் ஒரு தடவை வரச் சொல்கிறாயா, லலிதா! எனக்குத்தான் இன்னும் ஒரு மாதம் வெளியில் புறப்பட முடியாது போலிருக்கிறது!” என்றார் கிட்டாவய்யர். “ஆகட்டும், அப்பா! வரச் சொல்லுகிறேன். இப்போது நான் ஊருக்குப் புறப்படலாமா, அப்பா! சீதா வருகிறதாக எழுதியிருக்கிறபடியால் என்னைச் சீக்கிரம் புறப்பட்டுச் வரச் சொல்லி இவர் எழுதியிருக்கிறார். உங்களை இப்படி விட்டு விட்டுப் போக மனது கஷ்டமாய்த்தானிருக்கிறது. ஆன போதிலும்….” நீ போக வேண்டியதுதான், லலிதா! சீக்கிரம் புறப்பட வேண்டியதுதான். மாப்பிள்ளை இரண்டு வருஷம் ஜெயிலில் இருந்து விட்டு இப்போதுதான் வந்திருக்கிறார். அவரை எத்தனை நாள் நீ தனியாக விட்டுவிட்டு இருக்க முடியும்? சீதாவும் வருகிறதாகச் சொல்லியிருக்கிற படியால் அவசியம் போகத்தான் வேண்டும். எனக்குக்கூட ஒவ்வொரு சமயம் தேவபட்டணத்துக்கே வந்துவிடலாமா என்று தோன்றுகிறது. இந்த ஊரில் எனக்கு இனிமேல் நிம்மதியிராது! எங்கேயாவது போனால்தான் மனது சாந்தம் அடையும்." “அதற்கென்ன, அப்பா! பேஷாக வாருங்கள்! நீங்கள் தேவபட்டணத்துக்கு வருவதற்கு யாரைக் கேட்கவேணும்! - நான் நாளைக்குப் புறப்படுகிறேன். இன்றைக்கு அவருக்கு ஒரு பதில் எழுதி விட்டு வருகிறேன். தபால் ஆபீஸில் தபால் கட்டும் சமயம் ஆகிவிட்டது!” இவ்விதம் சொல்லிவிட்டு லலிதா உள்ளே போய்க் கடிதம் ஒன்று எழுதத் தொடங்கினாள். அப்போது அவளுடைய செல்வக்குமாரி பட்டுவும் அவளுடைய புத்திரன் பாலசுப்பிரமணியனும் அம்மாவின் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டார்கள். “அம்மா! அப்பாவிடமிருந்து கடிதம் வந்திருக்கிறதா?” என்று பட்டு மெதுவாகக் கேட்டாள். “ஆமாம்; இந்தா! படி!” என்று லலிதா கடிதத்தை எடுத்துப் பட்டுவிடம் கொடுத்தாள். பட்டு தட்டுத் தடுமாறி அதில் ஒரு வரி படித்துவிட்டு, “அப்பா கோணலும் மாணலுமாய்க் கிறுக்கித் தள்ளுகிறார் எனக்குப் புரியவில்லை. இந்த இன்னொரு கடிதம் யார் எழுதியது!” என்று கேட்டாள். “அதுவா? சீதா அத்தங்கா எழுதியது!” என்றாள் லலிதா. “சீதா அத்தங்கா என்றால் யார்?” என்று பட்டு கேட்டாள். “சீதா அத்தங்கா என்னுடைய அத்தையின் மகள். ரேழி அறையில் தாத்தா படுத்துக் கொண்டிருக்கிறார், பாரு! அவருக்கு ஒரு தங்கை இருந்தாள். அவள்தான் எனக்கு அத்தை, அவளுடைய பெண் சீதா! சீக்கிரத்தில் உங்கள் இரண்டு பேரையும் பார்ப்பதற்கு வருவதாகச் சொல்லியிருக்கிறாள். அதற்குள்ளே நீங்கள் இரண்டு பேரும் ரொம்ப சமர்த்தாக ஆகிவிட வேண்டும். நச்சுபிச்சு என்று வந்தவர்களை ஏதாவது கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கக்கூடாது.” “இல்லை; நான் கேள்வி கேட்கவில்லை, அம்மா! சீதா அத்தங்காவை நான் பார்த்ததே கிடையாதே! எப்படி அம்மா அவள் இருப்பாள்?” லலிதாவுக்குச் சட்டென்று ஒரு எண்ணம் உதித்தது. பாதி எழுதியிருந்த கடிதத்தை அப்படியே வைத்துவிட்டுக் கூடத்துக் காமிரா அறைக்குள் போனாள். அங்கே இருந்த ஒரு பழைய அலமாரியைத் திறந்து அதில் அடைத்து வைத்திருந்த குப்பை கூலங்களில் கையை விட்டுத் தேடினாள். கடைசியாக, ஒரு மங்கிப் போயிருந்த பழைய போட்டோ படத்தை எடுத்துக் கொண்டு வந்தாள். இரண்டு பக்கமும் இரண்டு குழந்தைகள் உட்கார்ந்திருக்க, அந்தப் புகைப்படத்தைக் காட்டி, “இதோ பார்த்தாயா பட்டு! இதுதான் சீதா அத்தங்கா! இதுதான் நான்! சிறு பிராயத்தில் நாங்கள் இரண்டு பேரும் ரொம்ப சிநேகிதமாயிருந்தோம். எங்களுக்குக் கலியாணம் ஆன சமயத்தில் இந்தப் படம் எடுத்தது. குளத்தங்கரை பங்களாவுக்குப் போய் அடிக்கடி பேசிக் கொண்டிருப்போம். அதையெல்லாம் நினைத்தால் இப்போது சொப்பனம் மாதிரி இருக்கிறது” என்றாள். இந்தச் சமயத்தில் சரஸ்வதி அம்மாள் கிட்டாவய்யருக்குச் சாப்பாடு கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வந்தாள். வரும்போதே, “ஏண்டி லலிதா ! அதென்னடி நான் கேள்விப்படுகிறது? இந்தப் பிராமணர் சொல்கிறது நிஜமா? தேவபட்டணத்துக்குச் சீதா வரப் போகிறாளாமே, வாஸ்தவந்தானா?” என்று இரைந்து கொண்டு வந்தாள். “ஆமாம், அம்மா! சீதா வருகிறாள்! அதற்காக நீ ஏன் இவ்வளவு இரைச்சல் போடுகிறாய்?” என்றாள் லலிதா. “நானா இரைச்சல் போடுகிறேன்? அழகாய்த்தானிருக்கிறது. நீ மாத்திரம் என்னிடம் சொல்லாமல் மறைக்கலாமாக்கும்; அந்தத் துக்கிரி இப்போது எதற்காக வருகிறாள்? யார் அவளை வரச் சொன்னார்கள்? அவள் வரவில்லையென்று யார் அழுதார்கள்? லலிதா! நான் சொல்லுகிறதைக் கேள், இங்கே இப்போது சௌகரியமில்லை. ஆகையால் வரவேண்டாம் என்று உடனே கடிதம் எழுதிப் போட்டுவிடு!” “அம்மா! சீதா இந்த ஊருக்கு வரவில்லை! என்னையும் என் குழந்தைகளையும் பார்க்கத் தேவபட்டணத்துக்குத்தான் அவள் வருகிறாள். நீ எதற்காக வீணாய்ச் சண்டை பிடிக்கிறாய்!” “அப்படியானால் நான் வேறு, நீ வேறா என்று கேட்கிறேன். நான் உன்னைப் பெற்ற தாயார் இல்லையா? உன்னுடைய குழந்தைகள் என்னுடைய பேரன் பேத்திகள் இல்லையா? ஏன்தான் இப்படி என்னைக் கண்டு கரிக்கிறீர்களோ, தெரியவில்லை…” “உனக்குச் சீதா அத்தங்காவை எப்போதும் பிடிக்கிறது கிடையாது; அதனாலேதான் சொன்னேன்.” “அதனாலேதான் நானும் கேட்கிறேன். எனக்குப் பிடிக்காதவள் உனக்கு மட்டும் எதற்காகப் பிடித்திருக்க வேணும்? நான் சொல்கிறதைக் கேள், லலிதா! அவள் ரொம்ப துக்கிரி; மனதில் நல்ல எண்ணம் கிடையாது. பாம்புக்குப் பாலை கொடுத்தாலும் அது விஷத்தைத்தான் கக்கும். இந்தச் சமயம் தேவபட்டணத்துக்குக்கூட வரவேண்டியதில்லை என்று உடனே எழுதிவிடு. இன்றையத் தபாலிலேயே கடிதத்தைச் சேர்த்துவிடு. தெரிகிறதா?….” இந்தச் சமயத்தில் வாசலில் மாட்டு வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது. “வண்டிச் சத்தம் கேட்கிறதே! யார் வந்திருப்பார்கள்! நேற்றைக்கு முற்றத்தில் காக்காய் கத்தியபோதே எனக்குத் தெரியும், யாராவது விருந்தாளிகள் வந்து நிறபார்கள் என்று. பட்டு! நீ போய்ப் பாரடி அம்மா!” பட்டுவோடு லலிதாவும் எழுந்து வாசற் பக்கம் போனாள். வண்டியிலிருந்து இறங்கியவர்களைப் பார்த்ததும் லலிதாவின் அதிசயமும் மகிழ்ச்சியும் அளவு கடந்து பொங்கின. மூன்றாம் அத்தியாயம் - டாக்டரின் உத்தரவு வண்டியிலிருந்து இறங்கியவர்கள் சீதாவும் சூரியாவும் சுண்டுவுந்தான். ஆனால் சூரியாவையும் சுண்டுவையும் லலிதா அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. அவர்களுடன் இரண்டொரு வார்த்தை பேசிவிட்டுச் சீதாவின் கைகளைப் பிடித்து உள்ளே இழுத்துக் கொண்டு சென்றாள். “உன்னைப் பற்றித்தான் நினைத்துக்கொண்டும் பேசிக் கொண்டும் இருந்தேன். நம்முடைய கல்யாணத்தின்போது நாம் இரண்டுபேரும் தனியாக உட்கார்ந்து போட்டோ எடுத்துக் கொண்டோ ம், பாரு! அதைப் பட்டுவுக்கும் பாலுவுக்கும் இப்பத்தான் காட்டிக் கொண்டிருந்தேன். பட்டு என் பெண்; பாலு என் பிள்ளை. அவர்களுக்கு உன்னைப் பற்றி சொல்லிக் கொண்டேயிருந்தேன். சொல்லிக் கொண்டிருக்கும்போதே வாசலில் வண்டி வந்து விட்டது. வண்டியில் யார் வந்திருப்பார்கள் என்று வெளியே வந்து பார்த்தால் நீ இறங்குகிறாய், என்ன அதிசயத்தைச் சொல்வது? சற்று முன்னாலேதான் போஸ்டுமேன் கடிதம் கொண்டு வந்து கொடுத்தான். உன்னுடைய கடிதத்தைப் பிரித்துப் பார்த்துவிட்டு அனுப்பியிருந்தார். நீ வருவதற்குள் நான் அங்கே வந்துவிட வேண்டுமென்று எழுதியிருந்தார். நீ புது டில்லியிலும் கல்கத்தாவிலும் இருந்து நாகரிக வாழ்க்கை வாழ்ந்தவளாம். உன்னை உபசரிப்பதற்கு இவருக்குத் தெரியாதாம்! வேடிக்கையாக இல்லையா இவர் எழுதியிருப்பது? நானும் உடனே திரும்பிவிடுவது என்றுதான் தீர்மானித்து அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்பா உன்னைப் பார்க்கவேண்டும் என்று சொன்னார். இங்கே ஒரு தடவை உன்னை அனுப்பி வைக்கும்படி சொன்னார். நான் அனுப்புவதற்குள் நீயே வந்துவிட்டாய்!” என்று லலிதா அளவில்லாத ஆர்வத்தோடு வார்த்தைகளைக் கொட்டினாள். இதற்குள் அவர்கள் வீட்டுக் கூடத்துக்கு வந்துசேர்ந்தார்கள். அங்கே குழந்தைகள் இருவரும் நின்று அதிசயத்துடனும் சங்கோசத்துடனும் சீதாவை ஏறிட்டுப் பார்த்தார்கள். “இவர்கள்தானே உன் குழந்தைகள்? பட்டுவும் பாலுவும்?” என்று சீதா கேட்டாள். “ஆமாம்; இவர்கள்தான்!” என்று லலிதா கூறிவிட்டுக் குழந்தைகளைப் பார்த்துச் சொன்னாள்: “பார்த்தீர்களா? சீதா அத்தங்காளைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேனே? சொல்லி வாய் மூடுவதற்குள்ளே வந்து விட்டாள். அத்தங்காள் ரொம்ப அழகாயிருப்பாள் என்று சொன்னேனோ, இல்லையோ? நான் சொன்னது நிஜமா இல்லையா என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். சீதா! நீ ஜெயிலில் இருந்து இன்னும் எத்தனையோ கஷ்டங்களைப் பட்ட பிறகும் இவ்வளவு அழகாயிருக்கிறாயேடி! உன் அகத்துக்காரர் உன்னை விட்டு எப்படித்தான் பிரிந்திருக்கிறாரோ, தெரியவில்லை! அவருக்கு நன்றாகச் சீமைப் பைத்தியம் பிடித்திருக்கிறது. சீமையில் இப்போது அப்படி என்ன அவசர வேலையாம்! அது போகட்டும், வஸந்தியை ஏன் நீ அழைத்துக் கொண்டு வரவில்லை?” ஏற்கெனவே வாட்டமுற்றிருந்த சீதாவின் முகம் குழந்தை வஸந்தியைப் பற்றிக் கேட்டதும் அதிகமாகச் சுணக்கமுற்றது. “வஸந்தி பள்ளிக்கூடம் போகிறாள். அவளுடைய படிப்பைக் கெடுப்பானேன் என்று அழைத்து வரவில்லை லலிதா! மாமா எங்கே? அவரைப் பார்க்க வேண்டாமா?” என்றாள். “பார்க்காமல் என்ன? பார்க்க வேண்டியதுதான். அப்பா சற்று முன்னால்தான் உன்னைப் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். நீ வந்தது அவருக்குச் சந்தோஷமாயிருக்கும். அப்பாவுக்கு நேர்ந்த ஆபத்தைப் பற்றித் தெரியுமல்லவா, சீதா?…” “தேவபட்டணத்துக்கு நேற்றைக்கு வந்ததும் தெரிந்தது. உன் அகத்துக்காரர் அம்மாஞ்சியிடம் சொன்னாராம். அதைக் கேட்டதும் மறுவண்டியில் புறப்பட்டோ ம். உன் அகத்துக்காரர் கூட ஒரு நாள் இருந்துவிட்டுப் போகலாமே என்று சொன்னாராம்…” “சொன்னாராம் என்கிறாயே? உன்னிடம் சொல்லவில்லையா? அவருக்குப் பொம்மனாட்டிகளைக் கண்டாலே ரொம்ப சங்கோசம். ஆனால் உன்னிடம் அவருக்கு ரொம்ப மரியாதை. நீ தேசத்துக்காக ஜெயிலுக்குப் போயிருக்கிறாய் என்று கேட்டதுமுதல் அடிக்கடி உன்னைப்பற்றி விசாரித்துக் கொண்டிருப்பார். இப்போது நீயே வந்து விட்டாய். சீதா! உன் அகத்துக்காரர் சீமையிலிருந்து திரும்பி வரும் வரையில் தேவபட்டணத்தில் எங்கள் வீட்டிலேயே நீ தங்கியிருக்க வேண்டும். வேறு எந்த இடத்துக்கும் போகக்கூடாது. தெரிகிறதா?” “அதைப் பற்றி இப்போது என்ன அவசரம், லலிதா! பிறகு சாவகாசமாகப் பேசிக் கொள்ளலாம். இப்போது மாமாவைப் போய்ப் பார்க்கலாம்!” என்றாள் சீதா. இந்தச் சந்தர்ப்பத்தில் சரஸ்வதி அம்மாள் அங்கு வரவே, “அம்மா! இதோ சீதா அத்தங்கா வந்திருக்கிறாள், பார்த்தாயா?” என்றாள் லலிதா. “நமஸ்காரம், மாமி! சௌக்கியமா?” என்று சீதா பவ்யமாகப் பேச்சை ஆரம்பித்தாள். சரஸ்வதி அம்மாளோ முகத்தைச் சுளுக்கிக்கொண்டு, "வந்தாயாடி, அம்மா! வா! என்னவெல்லாமோ கேள்விப்பட்டேன். மனதுக்கு அவ்வளவு சந்தோஷமாயில்லை. ஏதோ இந்த மட்டும் வந்து சேர்ந்தாயே? மாமாவுக்கு உடம்பு சரியில்லை என்று தெரியுமோ, இல்லையோ? யாராயிருந்தாலும் சரி; அவரிடம் அதிகமாக நச்சு பிச்சு என்று பேசக் கூடாது. டாக்டரின் உத்தரவு! புது மனுஷாளைக் கண்டால் அவருக்குத் தலைகால் தெரியாமல் போய்விடும் லலிதா! நான் சொல்லுகிறது தெரிகிறதோ, இல்லையோ? அப்பா அதிகமாகப் பேசுவதற்கு இடங்கொடுக்க வேண்டாம்" என்றாள். லலிதாவின் மனம் வேதனை அடைந்தது. அவள் கோபமாக அம்மாவைப் பார்த்தாள். அப்போது சீதா, “மாமி! நான் மாமாவிடம் அதிகமாகப் பேச்சுக் கொடுக்கவில்லை. உடம்பு சரியில்லாதவர்களோடு அதிகமாகப் பேசக் கூடாதென்று அவ்வளவு தூரம் தெரியாதா எனக்கு?” என்றாள். “உனக்குத் தெரியாமலிருக்குமா, அம்மா! நீ மெட்ராஸ், பம்பாய், டில்லி, கல்கத்தா எல்லாப் பட்டணங் களிலும் இருந்தவள். நான் இந்தப் பட்டிக்காட்டிலேயே விழுந்து கிடக்கிறவள். ஏதாவது கொஞ்சம் உடம்பு அதிகம் என்றால் என் தலையிலேதானே விடிகிறது! வயது வேறே ஆகிவிட்டது, முன்னேயெல்லாம்போல் சக்கரமாகச் சுற்றிக் காரியம் செய்ய முடிகிறதா? யாராவது இரண்டு பேர் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்துவிட்டால் எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று பயமாயிருக்கிறது. முன்னைப்போல் சமைக்கப் பரிசாரகனாவது இருக்கிறானா? அதுவும் இல்லை. உன் மாமாவுக்குக் கடன் உடன் அதிகமாகப் போய் விட்டது. பரிசாரகன் வைத்துக் கொள்ளக் கட்டவில்லை!….” “போதும், அம்மா! உன்னுடைய பஞ்சப் பாட்டை அப்புறம் பாடலாம். அத்தங்கா வந்ததும் வராததுமாக இதெல்லாம் எதற்காகச் சொல்லுகிறாய்? எனக்குக் கொஞ்சங் கூடப் பிடிக்கவில்லை! நீ வா, சீதா! மாமாவைப் போய்ப் பார்க்கலாம்!” என்று சொல்லிச் சீதாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனாள் லலிதா. கிட்டாவய்யர் படுத்திருந்த கட்டிலுக்குப் பக்கத்தில் சூரியாவும் சுண்டுவும் உட்கார்ந்து அவருடன் பேசிக் கொண்டிருந்தார்கள். லலிதாவும் சீதாவும் அறைக்குள் வந்ததும் அவர்கள் எழுந்தார்கள். “அத்தங்கா! அப்பாவுக்கு நான் வந்ததில்கூட அவ்வளவு சந்தோஷமில்லை. உன்னை அழைத்து வந்ததிலேதான் திருப்தி. உன் கதையையெல்லாம் அப்பாவுக்குக் கேட்க வேண்டுமாம்!” என்று சூரியா சொல்லிவிட்டுச் சுண்டுவையும் அழைத்துக் கொண்டு போனான். மாமாவுக்குச் சீதா நமஸ்காரம் செய்தாள். அவர் உட்காரச் சொன்னதும் உட்கார்ந்தாள். கிட்டாவய்யரும் கட்டிலில் எழுந்து உட்கார்ந்து, சீதாவின் தலையை அன்புடன் தொட்டு, “மகராஜியாக இரு!” என்றார். மாமாவை அந்தப் பலவீனமான நிலையில் உடம்பில் காயக்கட்டுகளுடன் பார்த்ததினாலும், “மகராஜியா இரு!” என்ற அவருடைய ஆசீர்வாதம் வேறு பல நினைவுகளை உண்டு பண்ணியதனாலும் சீதாவின் கண்களிலிருந்து கலகலவென்று கண்ணீர் பொழிந்தது. அந்தக் கண்ணீரின் காரணத்தைக் கிட்டாவய்யர் வேறு விதமாக அர்த்தம் செய்து கொண்டார். தம் மனையாள் சீதாவை வரவேற்றுச் சொல்லிக் கொண்டிருந்த வார்த்தைகள் அவருடைய காதிலும் விழுந்து அவருக்கு வருத்தத்தை உண்டு பண்ணியிருந்தன. எனவே அவர் உணர்ச்சி ததும்பிய குரலில், “நீ வருத்தப்படாதே, சீதா! உன் மாமியின் சுபாவந்தான் தெரியுமே! உலகத்தில் எத்தனை எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டு விட்டன. ஆனால் உன் மாமி மட்டும் கொஞ்சங்கூட மாறாமல் அப்படியேயிருக்கிறாள்!” சீதா கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, “அதற்காக நான் வருத்தப்படவில்லை, மாமா! உங்களை இப்படிப் பார்த்ததும் எனக்குத் துக்கமாயிருக்கிறது. மாமி சொன்னதில் ஒரு குற்றமும் கிடையாது. நான் பிறந்த வேளை அப்படி!” என்றாள். “நீ பிறந்த வேளைக்கு என்ன வந்தது? திவ்யமான நாள் நட்சத்திரத்தில் நீ பிறந்தவள். உனக்கு மலைபோல் வரும் கஷ்டங்கள் எல்லாம் பனிப்போல் நீங்கிவிடும். கொஞ்ச நாளில் எல்லாக் கஷ்டங்களும் நீங்கி நீ சௌக்கியமாக இருப்பாய்” என்றார் கிட்டாவய்யர். “தங்களுடைய ஆசீர்வாதத்தினால் அப்படியே ஆகட்டும். மாமா! முதலில் தங்களுடைய உடம்பு சௌக்கியமாக வேண்டும். உங்களை யாரோ அடித்துவிட்டார்கள் என்று கேட்டதும் நான் துடித்துப் போய்விட்டேன். ஒரு ஈ காக்காய்க்குக் கூடத் தீங்கு எண்ணாத தங்களை அடித்தவர்கள் எப்பேர்ப்பட்ட சண்டாளப் பாபிகளாய் இருக்கவேண்டும்?” என்றாள் சீதா. "தலைவிதி, அம்மா! தலைவிதி! அதற்கு அவர்களைத் திட்டி என்ன பிரயோஜனம்? சீதா! ஒரு விஷயத்தைக் கேள், திருடர்கள் நான் வந்த வண்டியை வழிமறித்து அடித்தபோது ஒரு அடி படார் என்று மண்டையில் விழுந்தது என் கதி கலங்கியது. அந்த நிமிஷமே உயிர் போய்விடும் போலத் தோன்றியது. அப்போது நான் என்ன நினைத்தேன் தெரியுமா? என் மனக்கண் முன்னால் யார் வந்தது தெரியுமா? உன் தாயார் ராஜம்மாள்தான் வந்தாள், அவள் எங்கேயோ வானவெளியில் நின்று தன் மெலிந்த கரங்களை நீட்டி, “அண்ணா! வாருங்கள்!’ என்று என்னை அழைப்பது போலத் தோன்றியது. அப்போது நான்,”அடாடா! குழந்தை சீதாவைப் பார்த்துச் சொல்லிக் கொள்ளாமல் வந்துவிட்டோ மே? சீதா சௌக்கியமா என்று இவள் கேட்டால் பதில் என்ன சொல்வது?" என்று நினைத்துக்கொண்டேன். இவ்வளவும் அடிபட்டுக் கலங்கிய ஒரு நிமிஷ நேரத்தில் என் மனத்தில் நடந்தது?" என்றார் கிட்டாவய்யர். “மாமா! இதிலிருந்து என் பேரிலும் அம்மா பேரிலும் உங்களுக்கு எவ்வளவு அன்பு என்று தெரிகிறது. ஆனால் நீங்கள் அதிகமாகப் பேசவேண்டாம். டாக்டரின் உத்தரவுப்படி நடக்க வேண்டும் அல்லவா?” என்றாள் சீதா. “ஆமாம்; ஒரே மூச்சில் அதிகமாகப் பேசக்கூடாதுதான். உன்னைப் பார்க்கவேண்டும் என்றும் உன்னிடம் சில விஷயங்கள் சொல்ல வேண்டும் என்றும் எவ்வளவோ ஆவலாயிருந்தேன். உன்னைப் பார்க்க முடியாமலே போய்விடுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். நல்லவேளையாக நீயே என்னைப் பார்ப்பதற்கு வந்துவிட்டாய். மற்றதெல்லாம் இராத்திரி சாவகாசமாகப் பேசிக் கொள்ளலாம். நீ இப்போது போய்க் குளித்துவிட்டுச் சாப்பிடு அம்மா!” என்று கிட்டாவய்யர் அருமையுடன் கூறினார். நான்காம் அத்தியாயம் - காதல் என்னும் மாயை சீதாவும் லலிதாவும் அன்று சாயங்காலம் குளத்தங்கரை பங்களாவுக்குச் சென்றார்கள். ’பங்களா’வென்று அந்தக் கட்டிடத்தை முன்னே மரியாதைக்குச் சொல்லக்கூடியதாயிருந்தது. இப்போது அப்படிக்கூடச் சொல்வதற்கில்லை. அந்தக் கட்டிடத்தின் கூரையில் பல துவாரங்கள் காணப்பட்டன. கீழ்த்தரை குண்டும் குழியுமாயிருந்தது. திண்ணைக்குப் பந்தோபஸ்தாகவும் அலங்காரமாகவும் அமைந்திருந்த மூங்கில் பிளாச்சு வேலி பல இடங்களில் முறிந்து விழுந்து கிடந்தது. பங்களாதான் இப்படி என்றால், பங்களாவுக்கு எதிரில் இருந்த குளமும் களை குன்றிக் காணப்பட்டது. குளத்தில் தண்ணீருக்குக் குறைவில்லை. ஆனால் முன்னொரு காலத்தில் கரையோரமாக வளர்ந்திருந்த அலரிச் செடிகளையும் செம்பருத்திச் செடிகளையும் இப்போது காணவில்லை. குளத்தின் படித்துறை பாசி பிடித்தும் இடிந்தும் காணப்பட்டது. சீதாவும் லலிதாவும் குளக்கரையில் இடிந்த படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டார்கள். சிறிது நேரம் சீதா சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டேயிருந்தாள். சுற்றுப்புறத் தோற்றத்தில் இன்னும் ஏதோ ஒரு வித்தியாசம் இருப்பதாக அவளுக்குத் தோன்றிக் கொண்டேயிருந்தது. பளிச்சென்று அது என்ன என்பது புலனாயிற்று. “லலிதா! குளத்தின் மேலக்கரையில் இருந்த சவுக்கு மரத்தோப்பு எங்கே?” என்று கேட்டாள். “அதை வெட்டி விறகுக்கு விற்றாகிவிட்டது?” என்றாள் லலிதா. “அதனால்தான் இந்தப் பக்கமெல்லாம் இப்படி பார்ப்பதற்கு வெறிச்சென்று இருக்கிறது. சவுக்குத் தோப்பை வெட்டி விட்டபடியால் இந்தக் குளக்கரையின் அழகே போய் விட்டது. இப்போது என்னுடைய வாழ்க்கை சூனியமாயிருப்பதுபோல் இந்தப் பிரதேசமும் சூனியமாயிருக்கிறது!” என்று சொல்லிச் சீதா பெருமூச்சு விட்டாள். “நீ இப்படிப் பேசுவது எனக்குப் புரியவேயில்லை! டில்லியிலிருந்து நீ கடைசியாக எழுதிய கடிதங்களும் எனக்குச் சரியாக அர்த்தமாகவில்லை! உனக்கென்ன வருத்தம், சீதா! ஏன் இப்படி வாழ்க்கையையே வெறுத்தவள்போல் பேசுகிறாய்? அவருக்கும் உனக்கும் ஒத்துக் கொள்ளவில்லையா? இந்த ஊரில் நீங்கள் ஒருவரையொருவர் பார்த்துப் பிரியப்பட்டுக் கலியாணம் செய்து கொண்டீர்களே? இந்தப் பக்கத்து ஊர்களிலெல்லாம் வெகு காலம் வரை உங்களுடைய காதல் கலியாணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்களே, அதெல்லாம் வெறும் பொய்யா? உங்களுக்குள் ஏன் ஒத்துக் கொள்ளவில்லை? உண்மையில் அவருக்கு உன் பேரில் அன்பு இல்லையா?” என்று லலிதா வருத்தமான குரலில் கேட்டாள். “எனக்குத் தெரியாது. அவருக்கு என் பேரில் அன்பு இருக்கிறதா இல்லையா என்பதே எனக்குத் தெரியாது. ஆரம்பத்தி லிருந்தே அவருக்கும் எனக்கும் மத்தியில் ஒரு மாயத்திரை தொங்கிக் கொண்டிருந்தது. அவருடைய மனதை நான் அறிய முடியாமல் அந்தத் திரை மறைத்துக் கொண்டிருந்தது. அந்தத் திரையைத் திறந்து அவருடைய மனதில் உள்ளது என்னவென்பதை அறிந்து கொள்ள நான் பிரயத்தனப் படவேயில்லை. அத்தனை தைரியம் எனக்கு இல்லை. திரையைத் திறந்து பார்த்தால் உள்ளே என்ன இருக்குமோ என்னமோ என்று பயந்தேன். பேய் பிசாசு இருக்குமோ, புலியும் கரடியும் இருக்குமோ, அல்லது விசுவாமித்திரரை மயக்கிய மேனகையைப் போல யாராவது ஒரு மாயமோகினி இருப்பாளோ என்று எனக்குப் பயமாயிருந்தது. ஆகையினால் திரையை நீக்கி அவருடைய மனதை அறிந்து கொள்ள நான் பிரயத்தனப்படவே யில்லை. அப்படிப் பிரயத்தனப்பட்டிருந்தால் ஒரு வேளை நான் கொலைகாரியாகியிருப்பேன். அல்லது கொலையுண்டு செத்துப் போயிருந்தாலும் போய் இருப்பேன்!” என்றாள் சீதா. “நீ பேசுவது மர்மமாகவும் பயங்கரமாகவும் இருக்கிறது சீதா! நமக்குக் கலியாணம் ஆன புதிதில் இதே இடத்தில் நாம் உட்கார்ந்து எத்தனை நாள் பேசிக் கொண்டிருந்திருக்கிறோம்? அவர் உன்னிடம் வைத்த காதலைக் குறித்து எவ்வளவு பூரிப்புடன் பேசிக் கொண்டிருந்தாய்? அதையெல்லாம் கேட்கக் கேட்க எனக்கும் எத்தனையோ சந்தோஷமாயிருந்தது. என்னுடைய கணவர் என்னிடம் அப்படியெல்லாம் இல்லையே என்றெண்ணி ஏமாற்றமும் அடைந்தேன். இப்போது நீ பேசுவதைப் பார்த்தால் எல்லாம் பொய் என்று பெரியவர்கள் சொல்லுவது உண்மைதான் போலிருக்கிறது” என்று லலிதா கூறினாள். “அதில் சந்தேகமில்லை, லலிதா! பெரியவர்கள் இந்த உலகத்தை ‘மாய உலகம்’ என்று சொல்லுவது சரிதான். இந்த மாய உலகத்தில் காதல் ஒன்றுதான் உண்மையானது என்று சிலர் சொல்லுவதுண்டு. நாவல்களிலும், நாடகங்களிலும், சினிமாக்களிலும் இப்படிச் சொல்வார்கள். அதைப் போல மூடத்தனம், பைத்தியக்காரத்தனம் - வேறொன்றும் கிடையாது. இந்த மாய உலகத்தில் எத்தனையோ மாயைகள் இருக்கின்றன. எல்லா மாயைகளிலும் பெரிய மாயை காதல் என்பதுதான். என்னுடைய பெண்ணுக்கும் உன்னுடைய பெண்ணுக்கும் கொஞ்சம் வயதாகும்போது, அதுவரை நான் உயிரோடிருந்தால், அவர்களிடம் சொல்லப் போகிறேன். கதைகளைப் படித்து விட்டும் நாடகங்களையும் சினிமாக்களையும் பார்த்துவிட்டும் காதல், கீதல் என்று பைத்தியக்கார எண்ணம் எண்ணிக் கொண்டிராதீர்கள். பெரியவர்கள் பார்த்துச் செய்து வைக்கும் கலியாணத்திலேதான் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாயிருக்கலாம் என்று சொல்லப் போகிறேன். காதல் என்பது வெறும் மாயை என்பதற்கு என்னையே உதாரணமாகக் காட்டப் போகிறேன்.” “சீதா! உன்னுடைய பேச்சில் எனக்கு இன்னமும் நம்பிக்கை உண்டாகவில்லை! ஏதோ ஒரு பெருந் துக்கத்தினால் அல்லது மனக்கசப்பினால் இப்படிப் பேசுகிறாயோ என்று நினைக்கிறேன். காதல் என்பது மாயை என்றும் பொய் என்றும் சொல்லுகிறாயே? ஆனால் அந்தச் சமயத்தில், நமக்குக் கலியாணம் ஆகும் சமயத்தில், நீ அநுபவித்த சந்தோஷமெல்லாம் பொய் என்று சொல்ல முடியுமா? இந்தக் குளக்கரையில் உட்கார்ந்து நீ சொன்னதெல்லாம் எனக்கு அப்படியே ஞாபகம் இருக்கிறது. அவருடைய பெயரைச் சொன்னால் உன் உடம்பு எப்படிப் பூரித்தது என்பதெல்லாம் எனக்கு நேற்று நடந்ததுபோல் ஞாபகத்துக்கு வருகிறது. அதெல்லாம் வெறும் பொய் என்பதாக நான் இன்னமும் நம்ப முடியவில்லை.” "நீ மட்டும் என்ன? என்னால்கூட நம்பமுடியவில்லைதான். லலிதா! அதையெல்லாம் நினைத்தால் இப்போது கூட என் உடம்பு சிலிர்க்கிறது. முதன் முதலில் அவரும் நானும் பார்த்துக் கொண்ட பிறகு, எங்களுடைய ஆசையை வெளியிட்டுக் கொண்ட பிறகு, இந்தப் பூவுலகம் எனக்குச் சொர்க்கலோகமாக மாறியிருந்தது. அவர் முதன் முதலில் என் கரத்தைத் தொட்டுக் கண்களால் ஒற்றிக்கொண்ட பிறகு, அவருடைய காதலைச் சொல்லிவிட்டு நான் சற்றும் எதிர்பாராத நிலையில் என் கன்னத்தில் கன்னி முத்தம் ஈந்த பிறகு, என்னுடைய மனித ஜன்மம் மாறித் தேவ கன்னிகை ஆகியிருந்தேன். அந்த நாட்களில் வானத்து நட்சத்திரங்கள் எல்லாம் என் தேகத்தை அலங்கரித்தன. பூலோகத்துப் புஷ்பங்கள் எல்லாம் என் உடம்பில் மலர்ந்து மணம் வீசின. சந்திர கிரணங்கள் என் தேகத்தை மூடும் சல்லாத்துணி ஆயின. தென்றல் காற்று என் மேனியைக் குளிர்விப்பதற்காகவே வீசிற்று. சந்தனம் எனக்காகவே கந்தம் அளித்தது. நான் அணிந்த பட்டுப் புடவைகள் என்னுடைய மேனியின் அழகினால் சோபை பெற்று விளங்கின; இதையெல்லாம் நானே உணர்ந்தேன். லலிதா! அவ்வளவும் அப்போது உண்மையாகத்தான் தோன்றியது. ‘மாயை’ என்றோ ‘பொய்’ என்றோ ஒரு கணமும் நான் நினைக்கவில்லை. அவர் என்னிடம் அந்த நாளில் வைத்திருந்த ஆசையைத்தான் என்னவென்று சொல்லுவேன் தமயந்தியிடம் நளன் வைத்த ஆசையும் ஜூலியட்டிடம் ரோமியோ வைத்த ஆசையும் லைலாவிடம் மஜ்னூன் வைத்த ஆசையும் அவர் என்னிடம் வைத்திருந்த ஆசைக்கு இணையாகாது என்றே தோன்றியது. வெள்ளி நிற அன்னப்பறவைகள் பூட்டிய புஷ்பக விமானத்தில் ஏறிக்கொண்டு நாங்கள் நீல வானத்தில் நட்சத்திர மண்டலங்களுக்கிடையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தோம். எங்களுடைய ஆனந்த யாத்திரைக்கு அந்தமே கிடையாது என்று எண்ணினேன். ஆனால் ஒரு நாள் அதற்கு முடிவு வந்தேவிட்டது. உன்னையும் என்னையும் போல் பெண்ணாய்ப் பிறந்தவள் ஒருத்தி வந்து எங்கள் ஆனந்த வாழ்க்கையில் குறுக்கிட்டாள். அந்த நிமிஷத்தில் சனியன் பிடித்தது. அவருடைய மனம் பேதலித்தது. என்னுடைய சொர்க்கம் ஒரு நொடிப்பொழுதில் நரகமாக மாறியது. லலிதா! நான் வங்கநாட்டுச் சிறையில் இருந்தபோது ஒரு பாடலைக் கேட்டேன். அது என் மனதை ரொம்பவும் கவர்ந்தது. என் மனதில் உற்சாகம் குன்றித் துயரம் ஏற்படும்போதெல்லாம் அதைப் பாடுவேன். உனக்கு அதை இப்போது பாடிக் காட்டட்டுமா?" என்றாள் சீதா. “பேஷாய்ப் பாடு! கேட்கவும் வேண்டுமோ? நீ பாடுவது எனக்கு எப்போதுமே பிடிக்குமே! அது வங்காளிப் பாஷைப் பாட்டா?” என்றாள் லலிதா. “நான் கேட்டது வங்காளிப் பாட்டுத்தான்; ஆனால் அதை நானே தமிழ்ப்படுத்தினேன்; கேள்!” என்று சொல்லிவிட்டு சீதா துயரம் ததும்பிய வர்ணமெட்டில் பின்வரும் பாட்டைப் பாடினாள்:- "பாற்கடல் மீதினில் பசும்பொன் படகினில் பரிந்தேற்றிச் சென்றவர் யார்? - என்னைப் பரிந்தேற்றிச் சென்றவர் யார்? காற்றங்கு அடித்திடக் கடல் பொங்கும் வேளையில் கைவிட்டுச் சென்றவர் யார்? - சகியே கைவிட்டுச் சென்றவர் யார்? வான வெளியினில் தேனிலவு தன்னில் தானாக நின்றவர் யார்? - சகியே தானாக நின்றவர் யார்? தானாக நின்றென்னைத் தாவி அணைத்துப் பின் தனியாக்கிச் சென்றவர் யார்? - என்னைத் தனியாக்கிச் சென்றவர் யார்?" இந்தப் பாட்டைப் பாடிவிட்டுச் சீதா விம்மி விம்மி அழத்தொடங்கினாள். லலிதா அவளை அன்புடன் அணைத்துக் கொண்டு பலவிதமாக ஆறுதல் கூறினாள். அவ்விதம் ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கும்போது லலிதா தன் மனத்திற்குள், “ஐயோ! பாவம்! என்னவெல்லாமோ கஷ்டங்களை அனுபவித்து இவளுடைய மூளையில் கொஞ்சம் கோளாறு உண்டாகி யிருக்கிறது!” என்று எண்ணிக் கொண்டாள். ஐந்தாம் அத்தியாயம் - மாயா மோகினி உலகமாகிற அரங்க மேடையை மறைப்பதற்கு மெல்லிய இருள் திரை விழுந்து கொண்டிருந்தது. வானத்தின் வடகிழக்கு மூலையில் கரிய மேகங்கள் திரண்டிருந்தன. மேகத் திரளை ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலை வரை கிழித்துக்கொண்டு மின்னல் கீற்றுக்கள் ஒரு கணம் ஜொலிப்பதும் மறுகணம் மறைவதுமாயிருந்தன. வாடைக்காற்று ஜில்லென்று வீசியது, தென்னந்தோப்புகளில் தென்னை மட்டைகள் ஆடி உராய்ந்து மர்ம சத்தத்தை உண்டாக்கின. வயல் வரப்பில் மேய்ந்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த பசு ஒன்று திடீரென்று கன்றை நினைத்துக் கொண்டு, “அம்மா!” என்று கத்திற்று. பட்டிக்காட்டுச் சங்கீத வித்துவான் ஒருவன். “நாளைக்கு நாளைக்கென் றேதினம் கழியுது! ஞானசபையை எண்ணில் ஆனந்தம் பொழியுது;” என்று பாடிக்கொண்டு சென்றான். கொஞ்ச தூரத்தில் இன்னொரு இசைப் புலவன் புல்லாங் குழலில் நாட்டக் குறிஞ்சி ராகத்தை வாசிக்க முயற்சி செய்ய, அது புன்னாகவராளியாக உருக்கொள்ளப் பார்த்தது. சற்றுத் தூரத்திலிருந்த இலுப்பை மரத்தோப்பில் ஒரு இராத்திரிப் பறவை ‘கிரீச்’ என்று சத்தமிட்டு விட்டுச் சடபடவென்று இறகுகளை அடித்துக்கொண்டு ஒரு மரத்தின் உச்சியிலிருந்து இன்னொரு மரத்தின் உச்சிக்குப் பறந்து சென்றது. வான விதானத்தில் விண்மீன்கள் ஒவ்வொன்றாக வெளியே வந்து எட்டிப் பார்க்கத் தொடங்கின. சீதாவின் விம்மல் சத்தம் வரவர லேசாக மறைந்தது. “அத்தங்கா! வீட்டுக்குப் போகலாமா?” என்று லலிதா கேட்டாள். “லலிதா! எனக்கு வீடு எங்கேயிருக்கிறது போவதற்கு?” என்று சொன்னாள் சீதா. “நான் உயிரோடிருக்கும் வரை என்னுடைய வீடு உன்னுடைய வீடுதான்!” என்றாள் லலிதா. உன்னுடைய நல்ல மனதை நான் அறிவேன், லலிதா! அதனாலேதான் உன்னைத் தேடி வந்தேன். ஆயினும் பெண்ணாகப் பிறந்தவளுக்கு அது போதுமா? எவ்வளவுதான் பிராண சினேகிதியாயிருந்தாலும் சொந்த வீட்டில் சுதந்திரமாயிருப்பது போல் இன்னொரு வீட்டில் இருக்க முடியுமா?…" “ஏன் இருக்க முடியாது? பேஷாய் இருக்கலாம். என்னுடைய தேவபட்டணத்து வீட்டில் எனக்கு எவ்வளவு சுதந்திரம் உண்டோ அவ்வளவு உனக்கு உண்டு; இன்னும் அதிகமாகக்கூட உண்டு!” என்றாள் லலிதா. “உன்னுடைய அன்பு காரணமாக இப்படிச் சொல்கிறாய். நீ சொன்னால் போதுமா? உனக்கு எஜமானர் இருக்கிறார் அல்லவா?” “இருந்தால் என்ன? அவர் எஜமானர் என்றால் நான் எஜமானி. அவருக்கு வீட்டில் எவ்வளவு பாத்தியதை உண்டோ அவ்வளவு எனக்கும் உண்டு! என்னுடைய எஜமானரின் நல்ல குணம் உனக்குத் தெரியாது, சீதா! என்னைக் காட்டிலும் அவர் உன்னிடம் அதிக பிரியமாக இருப்பார். அதிலும் நீ தாய்நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டாய் என்றும் சிறையிலே இருந்தாய் என்றும் அவருக்குத் தெரிந்தது முதல் உன்னைச் சிலாகித்து எத்தனையோ தடவை பேசியிருக்கிறார். நீ எங்கள் வீட்டில் எத்தனை நாள் இருந்தாலும் அவருக்குச் சந்தோஷமாகவேயிருக்கும்!” என்றாள் லலிதா. சீதா, தன் தாய் நாட்டின் விடுதலைக்காகச் சிறை போகவில்லை என்றும், தன்னை இன்னொருத்தி என்று நினைத்துத் தவறாகச் சிறைக்கு அனுப்பிவிட்டார்கள் என்றும் சொல்லிவிட எண்ணினாள். “லலிதா! நீங்கள் எல்லாரும் நினைப்பதுபோல் அப்படியொன்றும் நான் தாய்நாட்டுக்குச் சேவை செய்துவிடவில்லை….” என்று சீதா சொல்ல ஆரம்பித்தாள். “எல்லாம் எனக்குத் தெரியும்! சூரியா அப்போதே எல்லாவற்றையும் விவரமாக எழுதியிருந்தான். ஒன்றுமே செய்யாதவர்கள் எல்லாம் பிரமாதமாகத் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். நீ பிரமாதமான காரியத்தைச் செய்துவிட்டு ஒன்றுமில்லை என்று ஏன் சொல்லிக்கொள்ள வேண்டும்? அடக்கத்துக்கும் எல்லை வேண்டாமா?” என்றாள் லலிதா. ஓஹோ! இவர்கள் எல்லாம் இப்படி நினைப்பதற்குக் காரணம் சூரியாவா? தன்னைப் பெருமைப்படுத்துவதற்காக அவ்விதம் சூரியா எழுதியிருக்கிறான். அதை இப்போது இல்லையென்று சொல்லிச் சூரியாவைக் காட்டிக் கொடுப்பானேன்? தன்னைப்பற்றிச் சிலர் பெருமையாக நினைத்துக் கொண்டால் நினைத்துக்கொண்டு போகட்டுமே? அப்படி நினைப்பதால் யாருக்கு என்ன நஷ்டம்? தான் சொல்ல எண்ணியதைச் சீதா மாற்றிக்கொண்டு, “மற்றவர்கள் செய்யாத காரியம் அப்படி என்ன நான் பிரமாதமாகச் செய்துவிட்டேன்? உன் அகத்துக்காரர் கூடத்தான் சிறையில் இரண்டரை வருஷத்துக்குமேல் இருந்திருக்கிறார்!” என்றாள். “ஆமாம்; அவர் செய்ததை நினைத்தாலும் எனக்குப் பெருமையாகத்தான் இருக்கிறது!” என்றாள் லலிதா. சற்று நேரம் இருவரும் மௌனமாக இருந்தார்கள். திடீரென்று லலிதா, “இதுதான் எனக்கு அர்த்தமாகவேயில்லை. உன்னுடைய இல்வாழ்க்கையில் சந்தோஷமில்லை என்று சொல்கிறாயே? கலியாணமான புதிதில் நீ எழுதிய கடிதங்களையெல்லாம் பத்திரமாக வைத்திருக்கிறேன். அந்தக் கடிதங்களை நான் அடிக்கடி எடுத்துப் படிப்பதுண்டு. உன்னுடைய கடிதங்களைப் படிக்கும்போது சுவாரஸ்யமான நாவல்களைப் படிப்பது போல அவ்வளவு சந்தோஷமாயிருக்கும். நீ கோபித்துக் கொள்ளாமலிருந்தால் ஒரு விஷயம் சொல்கிறேன். உன்னுடைய கடிதங்களை இவருக்குக்கூட நான் படித்துப் பார்க்கும்படி கொடுப்பதுண்டு…” “ஐயையோ! என்ன வெட்கக்கேடு! இப்படி நீ செய்வாய் என்று தெரிந்திருந்தால் எழுதியிருக்கவே மாட்டேன்!” என்றாள் சீதா. “எதற்காக இவ்வளவு பதற்றப்படுகிறாய்? இப்போது என்ன முழுகிப் போய்விட்டது. உன்னுடைய கடிதங்களைப் படித்து இவர் எவ்வளவோ சந்தோஷப்பட்டிருக்கிறார். இன்னொன்று கூடச் சொல்கிறேன், கேள்! உன்னுடைய கடிதங்களை அவர் படித்ததினால்தான் என்னிடம் அவருடைய அலட்சியம் நீங்கி அன்பாக நடந்துக்கொள்ளத் தொடங்கினார் என்று எனக்குச் சில சமயம் தோன்றும்.” “அந்தவரையில் என் கடிதங்கள் உனக்கும் பிரயோஜனமாயிருந்தது பற்றிச் சந்தோஷந்தான்!” “ஆனால் உன்னுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்பதை நினைத்தால் மிகவும் வருத்தமாயிருக்கிறது, அத்தங்கா! அவருக்கு ஏன் அப்படிப் புத்தி மாறியது! பெண்ணாய்ப் பிறந்தவள் யாரோ ஒருத்தியைப் பற்றிச் சொன்னாயே? அந்தப் பாதகி யார்? அவள் பெயர் என்ன?” “அவள் பெயர் தாரிணி!” “தாரிணியா! சூரியா அவளைப் பற்றிக்கூட எழுதியிருந்தானே? அவள் ரொம்ப சாமர்த்தியக்காரி, உபகாரி, அப்படி இப்படி என்று. உன்னுடைய உயிரை ஒரு தடவை அவள் காப்பாற்றினாள் என்று எழுதியிருந்தானே!” “சூரியா உத்தமமான பிள்ளை, அவனுடைய மனது ரொம்ப நல்ல மனது. வெளுத்ததெல்லாம் பால் அவனுக்கு. அதனால் தாரிணியைப்பற்றி ‘ஆ! ஹூ!’ என்கிறான். அவளுடைய உண்மையான குணம் அவனுக்குத் தெரியாது.” “அப்படியானால் அவள் ரொம்பப் பொல்லாதவளா?” என்று லலிதா கேட்டபோது சீதா சிறிது நிதானித்துவிட்டுக் கூறினாள்:- “தாரிணியைப் பொல்லாதவள் என்று நான் எப்படிச் சொல்ல முடியும்? அவள் எவ்வளவோ நல்லவள்தான். என்னை ஏரியில் முழுகிப் போகாமல் அவள் காப்பாற்றியது உண்மைதான். அது மட்டுந்தானா? கொடிய சுரத்தில் வீழ்ந்து யமனோடு நான் போராடிக்கொண்டிருந்த சமயத்தில் அவள்தான் எனக்குச் சிசுருஷை செய்து காப்பாற்றினாள். அவளும் நானும் தனியாக இருக்கும்போது அவளை என் உடன் பிறந்த சகோதரி என்றே எண்ணத் தோன்றும். உன்னைக்காட்டிலும்கூட அதிகமான அன்பு அவளிடம் எனக்கு உண்டாகும். அவளை விட்டு ஒரு நிமிஷ நேரமும் பிரிந்திருக்க மனம் வராது. வாழும்போது சேர்ந்தாற்போல் வாழ்ந்து சாகிறபோது சேர்ந்து சாகவேண்டும் என்று எண்ணிக் கொள்வேன். அந்த மாதிரி அவளிடமே சொல்லியும் இருக்கிறேன். ஆனால் என்னுடைய கணவரின் பக்கத்தில் அவள் நிற்பதைப் பார்த்துவிட்டால் என்னுடைய மனதெல்லாம் மாறிவிடும். அவளிடம் எனக்குள்ள அன்பு விஷமாகிவிடும். அவர் அவளுடைய முகத்தைப் பார்த்தால் போதும்; எனக்கு உடம்பெல்லாம் பற்றி எரியும். அவரும் அவளும் பேசிக்கொள்வதைப் பார்த்தால் எனக்கு வெறி பிடித்துவிடும். ஒன்று அவளையாவது கொன்றுவிட வேண்டும், அல்லது நானாவது செத்துப் போய்விட வேண்டும் என்று தோன்றும்…” “ஐயோ! அத்தங்கா! எவ்வளவு கொடுமையான வார்த்தைகளைப் பேசுகிறாய்? எனக்கு அம்மாதிரியெல்லாம் மனம் வேறுபடுவதேயில்லை. இவர் யாராவது ஒரு ஸ்திரீயுடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் எனக்கு அதில் எவ்விதமான வருத்தமோ கோபமோ உண்டாவதில்லை. உனக்கு மட்டும் ஏன் அப்படிப் பிசகான எண்ணம் தோன்ற வேண்டும்? நீ சொல்வதையெல்லாம் கேட்டால் பிசகு உன் பேரிலேதான் என்று எனக்குத் தோன்றுகிறது.” “லலிதா! நீ பாக்கியசாலி! என்னைப்போல் நீயும் நரக வேதனை அனுபவிக்க வேண்டும் என்று கனவிலும் நான் எண்ணமாட்டேன். அத்தகைய துர்க்கதிக்கு நீ ஆளாகாதபடி கடவுள் உன்னைக் காப்பாற்றட்டும். ஆனால் பிசகெல்லாம் என் பேரில்தான் என்று எண்ணிக்கொண்டு விடாதே! இந்த உலகத்தில் சில அதிசயப் பிறவியான ஸ்திரீகள் இருக்கிறார்கள். அவர்களிடம் ஏதோ ஓர் அபூர்வமான சக்தி இருக்கிறது. அப்படிப்பட்ட வசீகர சக்தியுடைய ஸ்திரீகள் தாங்களே கடவுளுக்கும் தர்மத்துக்கும் பயந்து ஒழுங்காக நடந்து கொண்டால்தான் உண்டு. இல்லாவிட்டால் எத்தனையோ குடும்பங்களை அவர்கள் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிட முடியும். தாரிணியைப் பற்றிச் சூரியா எழுதியிருந்ததாகச் சொன்னாயல்லவா? நீ கோபித்துக் கொள்ளவில்லை என்று வாக்குறுதி கொடுத்தால் ஒரு விஷயம் சொல்லுகிறேன். சூரியா எவ்வளவோ நல்ல பிள்ளைதானே? ஆனால் அவன்கூட அந்த மாயாமோகினியின் வசீகரத்தில் மயங்கிப் போனவன்தான்!” என்றாள் சீதா. “ஒரு விதத்தில் நீ சொல்லுவது எனக்குச் சந்தோஷமாயிருக்கிறது. அண்ணா சூரியாவுக்கும் வயதாகி விட்டது அல்லவா? எத்தனை நாளைக்கு இப்படியே பிரம்மச்சாரியாகத் திரிந்து கொண்டிருப்பான்? சூரியா கலியாணம் செய்து கொள்ளாதபடியினால் சுண்டுவின் கலியாணமும் தடைப்படுகிறது என்று அம்மா ஓயாமல் புலம்பிக் கொண்டிருக்கிறாள். இனிமேல் சூரியா நம்ம பக்கத்துப் பெண்களைக் கலியாணம் செய்து கொள்ளுவான் என்று எனக்குத் தோன்றவில்லை. சூரியாவுக்கும் நீ சொல்லுகிற அந்தத் தாரிணிக்கும் காதல் என்பது உண்மையானால் அவர்கள் இருவரும் கலியாணம் செய்து கொள்ளட்டுமே?” என்று லலிதா கூறிய வார்த்தைகளில் ஆர்வம் ததும்பிக் கொண்டிருந்தது. “லலிதா! இராத்திர ஢யெல்லாம் இராமாயணம் கேட்டு விட்டுச் சீதைக்குராமர் என்னவேணும் என்பதுபோலப் பேசுகிறாயே? காதல் என்பதெல்லாம் வெறும் ஏமாற்றம்!…” இவ்விதம் சீதா சொல்லிக் கொண்டிருக்கும்போதே சற்றுத் தூரத்தில் காலடிச் சத்தம் கேட்டது. வந்தவன் சூரியாதான். “இரண்டு பெண்மணிகள் சேர்ந்துவிட்டால் காதலையும் கலியாணத்தையும் தவிர வேறு பேச்சுக் கிடையாது போலிருக்கிறது. அங்கே, அப்பா உங்களைக் காணோமே என்று தவியாகத் தவித்துக் கொண்டிருக்கிறார். இரண்டு பேரையும் கையோடு கூப்பிட்டுக் கொண்டு வரச் சொன்னார்!” என்றான் சூரியா. ஆறாம் அத்தியாயம் - நீர்மேற் குமிழி கிட்டாவய்யர் மெலிந்து மலினமான குரலில், “சீதா! உன்னை ரொம்ப நேரமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இருட்டி இத்தனை நேரம் வரையிலா குளத்தங்கரையில் உட்கார்ந்திருப்பது? முக்கியமான ஒரு விஷயம் பற்றி உன்னிடம் பேச வேண்டும் என்று சொல்லியிருந்தேனே?” என்றார். “தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள் மாமா! இன்னும் கொஞ்ச நாளைக்கு இங்கேதானே இருக்கப்போகிறேன்?” என்று சீதா சமாதானம் கூறத் தொடங்கினாள். “இன்னும் கொஞ்ச நாளைக்கு நீ இங்கேயே இருக்கப் போகிறாய் என்பது சரிதான். ஆனால் நான் இருக்க வேண்டுமே உயிரோடு?” என்றார் கிட்டாவய்யர். “ஐயோ! மாமா! இப்படிப் பேசுகிறீர்களே! இந்தப் பாவியின் அதிர்ஷ்டமா இது? நான் அநாதை; திக்கில்லாதவள். நீங்களும் இவ்விதம் என்னிடம் கோபித்துக் கொண்டு பேசுவதாயிருந்தால்….” என்று கூறிக்கொண்டே சீதா கலகலவென்று கண்ணீரைப் பொழிந்தாள். "சீதா! நீ வருத்தப்படாதே! அப்படி நான் சொல்லியிருக்கக் கூடாதுதான். ஏதோ அபஸவ்யமாக வாயில் வந்து விட்டது. போனால் போகட்டும். ஆனாலும் நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்து விடுமா என்ன? சாவைக் குறித்து எதற்காக நாம் பயப்பட வேண்டும்? என்றைக்காவது ஒரு நாள் இந்த உலகத்தை விட்டு எல்லோரும் போக வேண்டியதுதானே! ‘நீர்மேற் குமிழி’ என்று தெரியாமலா பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்? ‘இன்றைக்கு இருப்பாரை நாளைக்கிருப்பர் என்று எண்ணவோ திடமில்லையே!’ என்று தாயுமான சுவாமிகள் அருளிச் செய்திருக்கிறார். இன்றைக்குச் செத்தால் நாளைக்கு இரண்டாம் நாள் ஆகிவிடுகிறது. பட்டினத்தடிகள் என்ன சொல்லியிருக்கிறார்? ‘காலன் வருமுன்னே கண் பஞ்சடையுமுன்னே’…’ “மாமா! மாமா! என் பேரில் ஏதோ உங்களுக்குக் கோபம் போலிருக்கிறது. அதனாலேதான் இப்படிப் பேசுகிறீர்கள். கொஞ்சநாள் இங்கே இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு வந்தேன். உங்களைத் தவிர என்னிடம் அன்புள்ளவர்கள் இந்த உலகத்திலேயே யாரும் இல்லை என்று எண்ணிக் கொண்டு வந்தேன். நீங்களும் என்னை வெறுப்பதாகவே தெரிகிறது. நாளைக்கே நான் புறப்பட்டு விடுகிறேன்!” "சீதா! கொஞ்சம் பொறு! நான் சொல்வதைக் கேட்டுக்கொள்! உன் பேரில் எனக்கு யாதொரு கோபமும் இல்லை; என் பேரிலேதான் கோபம். கொஞ்சநாளாக நான் படுத்த படுக்கையாயிருக்கிறேன் அல்லவா? படுத்தபடியே யோசித்துக் கொண்டிருக்கிறேன். சில வருஷங்களாக நான் செய்த காரியங்கள் எல்லாம் தப்பு என்று தோன்றிக்கொண்டு வருகிறது. நம் நாட்டுப் பெரியவர்கள் வர்ணாசிரம தர்மம் என்று ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதில் வர்ணத்தை மாத்திரம் நாம் பிடித்துக் கொண்டிருக்கிறோம். சாதி ஆசாரத்தை அனுஷ்டிப்பதாகச் சொல்கிறோம். அதுவும் எப்படி? நமக்குச் சௌகரியமாயிருக்கும் வரையில்தான்! ஆனால் ஆசிரம தர்மத்தை எத்தனை பேர் அனுஷ்டிக்கிறார்கள்? மனிதர்களுக்கு வயது ஆகிவிட்டால் வானப் பிரஸ்த ஆசிர மத்தை மேற்கொள்ள வேண்டும். எனக்கு அந்த வயது முன்னமே ஆகிவிட்டது. பிள்ளைகள் தலையெடுத்து விட்டார்கள், பேரன் பேத்திகள் பிறந்து விட்டார்கள், இன்னமும் எதற்காக இந்தக் குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டும்! அதனுடைய பலன் என்ன? இந்த ஊர்க்காரர்கள் சிலருடைய துர்ப்புத்தியைக் கேட்டுக் குடி படைகளின் விரோதத்தையெல்லாம் சம்பாதித்துக் கொண்டேன். என்னுடைய பாட்டனார் காலத்தி லிருந்து தலைமுறை தலைமுறையாக இந்தக் குடும்பத்துக்கு வந்த குடிபடைகள் இப்போது என்னிடம் வெட்டுப்பழி, குத்துப்பழியாகத் துவேஷம் கொண்டிருக்கிறார்கள். குடியிருந்த மனைக்கட்டுகளிலிருந்து அவர்களைத் துரத்தியடித்தேன். கோர்ட்டிலே கேஸ் போட்டு ஜயித்தேன், என்ன உபயோகம்? தலைமுறை தலைமுறையாக நம் குடும்பத்தை வாழ்த்திக் கொண்டிருந்தவர்கள் இன்று சபித்துக் கொண்டிருக் கிறார்கள். கடைசியாக இந்த ஆபத்து ஒன்று வந்து சேர்ந்தது. நம்முடைய மூதாதைகள் செய்த பூஜாபலத்தினால் இன்றுவரை உயிர் பிழைத்திருக்கிறேன். அங்கேயே என்னைக் கொன்று போட்டுவிடாமல் இந்த மட்டும் உயிரோடு விட்டார்களே! அந்தத் திருடர்கள் நன்றாயிருக்கட்டும்!" “மாமா! உங்களை அடித்த மகா பாவிகள் நன்றாயிருக்கவா? அவர்கள் நாசமாய்ப்போக வேண்டும். அவர்கள் கை அழுகிப் போக வேண்டும். யாரை வேண்டுமானாலும் நான் மன்னிக்கத் தயார், மாமா! உங்களை அடித்த பாவிகளை மட்டும் மன்னிக்க முடியாது.” அவர்களை மன்னிப்பதற்கு நீ யார், அம்மா! அல்லது நான்தான் யார்? அவர்களைக் குற்றம் சொல்லுவதற்குத்தான் நாம் யார்? எய்தவனைவிட்டு அம்பை நோவதில் பயன் என்ன? எல்லா உயிர்களிலும் பகவான் குடிகொண்டிருக்கிறார் அடித்தவர்களிடத்திலும் அதே கடவுள்தான் இருக்கிறார். அடிப்பட்டவர்களிடத்திலும் அதே கடவுள்தான் இருக்கிறார். என்னை அடித்தவர்கள் மீது நான் கோபித்துக் கொண்டால், பகவானையே கோபித்துக் கொண்டதாகவல்லவா ஏற்படும்? உண்மையில் பகவான் என்னை அடித்தவர்களின் உருவத்தில் வந்து எனக்கு ஒரு பாடம் புகட்டியிருக்கிறார். ‘வயது அறுபது ஆகப் போகிறதே! உனக்கு இன்னும் இந்த ஊரில் என்ன வேலை? போகிற கதிக்கு வழி தேடிக்கொள்ள வேண்டாமா? இனி மேலும் இந்தச் சம்சார பந்தத்தில் கிடந்து உழலப் போகிறாயா? புத்தி கெட்டவனே!’ என்று பகவான் திருடனைப்போல வந்து எனக்கு உபதேசம் செய்திருக்கிறார். சீதா! எனக்கு இனிமேல் இந்த ஊரிலேயே இருக்கப் பிரியம் இல்லை. நல்ல வேளையாக நீ வந்த காரணத்தினால் சூரியாவும் வந்திருக்கிறான். அவனிடம் இந்தக் குடும்பப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு வெளிக் கிளம்பிவிடப் போகிறேன். காசிக்குச் சென்று கங்கையில் ஸ்நானம் செய்ய வேணும். அப்புறம் ஹரித்வாரம், ரிஷிகேசம், பத்ரிநாத் முதலிய ஸ்தலங்களுக்குப் போக வேண்டும். கைலாசகிரிக்கே போக வேண்டும் என்று ஆசை இருக்கிறது. கொஞ்ச நாளைக்கு முன்பு ஒரு பெரியவர் ’கைலாச யாத்திரை’யைப் பற்றி எழுதியிருந்த ஒரு புத்தகத்தைப் படித்தேன். அதைப் படித்து முதல் கைலையங்கிரியே எனக்குத் தியானமாயிருந்து வருகிறது“.”மாமா! நீங்கள் அப்படி யாத்திரை கிளம்புவதாக இருந்தால் என்னுடன் வாருங்கள். நான் அழைத்துக்கொண்டு போகிறேன்!" என்று சீதா மகிழ்ச்சி ததும்பக் கூறினாள். வாழ்நாளைக் கழிப்பதற்கு ஒரு ஆனந்தமான மார்க்கம் கிடைத்துவிட்டதே என்று அவளுடைய உள்ளம் குதூகலித்தது. “ஆகட்டும், சீதா! உன்னோடு அந்தப் புண்ணிய ஸ்தலங்களுக்கெல்லாம் யாத்திரை போகும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமானால், அதைக்காட்டிலும் எனக்குச் சந்தோஷமான காரியம் வேறொன்றும் இராது. அதற்காகத்தான் உன்னிடம் இதையெல்லாம் பற்றிச் சொன்னேன் ஆனால் நீயும் நானும் யாத்திரை கிளம்புவதற்கு முன்னால் உன்னுடைய வாழ்க்கையை நீ செப்பனிட்டுக் கொள்ள வேண்டும்!” என்றார் கிட்டாவய்யர். சீதா பதில் ஒன்றும் சொல்லாமல் மௌனமாகத் தலை குனிந்தாள். “நான் எதைப்பற்றிச் சொல்கிறேன் என்பதை நீ தெரிந்து கொண்டாய்; அதனாலேதான் மௌனமாயிருக்கிறாய். உனக்கும் உன் புருஷனுக்கும் ஒத்துக்கொள்ளவில்லை என்று தெரிந்ததிலிருந்து எனக்கு ஏற்பட்டிருக்கும் மன வேதனையைச் சொல்லி முடியாது. இந்த ஊரிலே உனக்குக் கலியாணம் நிச்சயமாகி நடந்தது. லலிதாவைப் பார்க்க வந்தவன் உன்னைக் கலியாணம் செய்து கொள்வேன் என்று சொன்னான். உன் அம்மாமிக்கு வயிறு எரிந்தது, எத்தனையோ பேர் சூயைப்பட்டார்கள். ஆனால் நான் பரிபூரணமாகச் சந்தோஷமடைந்து லலிதாவுடன் ஒரே பந்தலில் உனக்குக் கலியாணம் செய்து கொடுத்தேன். இப்படிப்பட்ட பாக்கியம் உனக்குக் கிடைத்ததே என்று எல்லாத் தெய்வங்களுக்கும் நன்றி செலுத்தினேன். அது இப்படி ஆக வேண்டுமா? உன் தாயார்தான் கடைசி வரையில் கஷ்டப்பட்டு வேதனைப்பட்டுச் செத்துப் போனாள். நீயும் அப்படி இருக்க வேணுமா? ஆசைப்பட்டுக் கலியாணம் செய்து கொண்ட புருஷனுடன் நீ சந்தோஷமாயிருக்கக்கூடாதா? சொல், சீதா!” “தலைவிதி வேறு விதமாயிருக்கும்போது நாம் என்ன செய்ய முடியும், மாமா? நீங்கள் எவ்வளவோ சந்தோஷத்துடன் கலியாணம் செய்து வைத்தீர்கள். நானும் பிரியப்பட்டுத்தான் கலியாணம் செய்து கொண்டேன். ஆனால் அவருடைய குணம் இப்படி யிருக்கும் என்று யார் கண்டது?” "அவனுடைய குணத்தைப்பற்றிச் சொல்கிறாய். உன்னுடைய குணம் எப்படி என்று யோசித்துப் பார்த்தாயா? பிறத்தியாரிடம் உள்ள குற்றத்தைக் கண்டுபிடித்துச் சொல்வது சுலபம்.நம்மிடமுள்ள குற்றத்தை உணர்வது கஷ்டம். ‘இரண்டு கையையும் கொட்டினால்தான் சத்தம்’ என்று கேட்டதில்லையா? புருஷன் எவ்வளவுதான் குணங்கெட்டவனா யிருந்தாலும் ஸ்திரீ குணமுடையவளாயிருந்தால் கடைசியில் புருஷனும் சீர்திருந்தி விடுவான், சீர்திருத்த முடியும். சீதா! நீ படித்தவள்; நாலும் அறிந்தவள்; நீ தேசத்துக்குச் செய்த சேவையைப் பற்றிச் சூரியா புகழ்ந்து சொன்னான். அதையெல்லாம் பற்றி எனக்குச் சந்தோஷந்தான். ஆனால் நான் சொல்லும் ஒரு விஷயத்தைக் கேட்டுக்கொள். இந்தியா தேசம் விடுதலை அடைய வேண்டும் என்று நீங்கள் எல்லோரும் பாடுபடுகிறீர்கள். இந்த நாட்டின் முக்கியமான பெருமை என்ன தெரியுமா? உலகத்தில் எத்தனையோ தேசங்கள் சில காலம் மிகவும் மேன்மையோடு இருக்கின்றன; பிறகு அடியோடு அழிந்து போகின்றன. ஆனால் நம்முடைய இந்தியா தேசம் பதினாயிரம் வருஷமாக அழிந்து போகாமலும் மேன்மை குன்றாமலும் இருந்து வருகிறது. மகாத்மா காந்தியைப் போன்ற உத்தம புருஷர்கள் இந்தப் பாரத தேசத்தில் இன்னும் அவதரிக்கிறார்கள். ஏன் தெரியுமா? இந்தத் தேசத்துப் பெண்மணிகளின் மகிமையினால்தான். ஆதிகாலத்திலிருந்து இந்தத் தேசத்தில் புருஷன் எவ்வளவு மூர்க்கனாயும் குணக்கேடனாயு மிருந்தாலும் அவனோடு ஒத்து வாழ்க்கை நடத்துகிறது என்று ஸ்திரீகள் இருந்து வந்தார்கள். அவர்களுடைய புண்ணியந்தான் இந்தப் பாரத தேசத்தைக் காப்பாற்றி வருகிறது. காந்தி மகாத்மா தம்முடைய தர்மபத்தினி கஸ்தூரிபாயைப் பற்றி எழுதியிருப்பதை நீ படித்திருப்பாய். மகாத்மா காரணமின்றிக் கஸ்தூரிபாயைக் கடிந்து கொண்டபோது அந்த மாதரசி எவ்வளவு பொறுமையாக நடந்து, கணவரே பின்னால் பச்சாதாபப் படும்படியாகச் செய்திருக்கிறாள்? அவ்வளவு தூரம் போக வேண்டாம். உன்னுடைய மாமியையே எடுத்துக்கொள். ஓயாமல் அவள் என்னிடம் சண்டை பிடிக்கிறாள் என்பது உண்மைதான். ஆனால் காரியாம்சத்தில் என் விருப்பத்தை மீறி அவள் ஏதாவது செய்வதுண்டா? எத்தனையோ தடவை நான் அவளை ரொம்பக் கோபித்துக் கொண்டிருக்கிறேன். அதற்காக அவள் இந்த வீட்டைவிட்டுப் போய்விடுகிறேன் என்று எப்போதாவது சொன்னதுண்டா?" “மாமா! கஸ்தூரிபாய் தெய்வாமிசம் பொருந்தியவர். மாமி மிகவும் பாக்கியசாலி; உங்களைப் பதியாகப் பெற்றார். ஆனால் நானோ எல்லாவிதத்திலும் துர்பாக்கியம் செய்தவள். கல்கத்தாவில் அலிப்பூர் ஜெயிலில் நான் இருந்த காலத்தில் ஒரு வருஷம் இவர் கல்கத்தாவில் இருந்திருக்கிறார். நான் சிறையில் இருப்பது அவருக்குத் தெரியும். ஆனால் ஒரு தடவையாவது அவர் என்னை வந்து பார்க்கவில்லை. அப்படியிருந்த போதிலும் சிறையிலிருந்து விடுதலை அடைந்ததும் அவரைப் போய்ப் பார்த்துக் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொள்வது என்று எண்ணியிருந்தேன், ஆனால் என்ன ஆயிற்று? நான் விடுதலையாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னாலேதான் அவர் சீமைக்குப் புறப்பட்டுப் போய்விட்டார். கல்கத்தாவில் அவர் நடத்திய வாழ்க்கையைப் பற்றி அறிந்த பிறகு எனக்கு அடியோடு புளித்துப் போய்விட்டது. இனிமேல் அவரோடு சேர்ந்து வாழ்வது இயலாத காரியம் என்று தீர்மானித்து விட்டேன்!” “அப்படிச் சொல்லாதே, சீதா! கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய், தீர விசாரித்ததே மெய் என்று ஒரு பழமொழி உண்டு. நீ இல்லாதபோது நீ கண்ணால் பார்க்காத விஷயங்களைப் பற்றி யாரோ சொன்னதை வைத்துக்கொண்டு ஒன்றையும் முடிவு கட்டக் கூடாது. உன் பேரில் ராகவனுக்குக் கோபம் ஏற்படவும் காரணம் இருக்கிறது. சூரியாவுக்கு நீ வீட்டில் இடம் கொடுத்ததினாலும் பிற்பாடு ஜெயிலுக்குப் போனதினாலும் ராகவனுக்கு உத்தியோகம் போய்விட்டது. உத்தியோகம் என்றால் சாதாரண உத்தியோகமா? மாதம் இரண்டாயிரம் ரூபாய் சம்பளம் உள்ள உத்தியோகம். உன்னுடைய காரியத்தினால் அவ்வளவு பெரிய சர்க்கார் உத்தியோகம் போச்சு என்றால் புருஷனுக்குக் கோபமாயிராதா?” என்றார் கிட்டாவய்யர். “அந்த வேலை போனதினால் ஒன்றும் மோசமில்லை, மாமா! அதைவிடப் பெரிய சம்பளத்துடன் அவருக்குப் பாங்கி வேலை கிடைத்திருக்கிறது” என்றாள் சீதா. “அது எப்படியிருந்தாலும் சரி, ராகவன் சீமையிலிருந்து வந்தவுடன் அவனை நான் பார்க்கப் போகிறேன், நீயும் என்னுடன் வரவேண்டும். உங்கள் இரண்டு பேருக்கும் மத்தியில் உள்ள தடங்கல்களையெல்லாம் போக்கி மறுபடியும் உங்களைக் குடியும் குடித்தனமுமாகப் பார்த்தால்தான் என் மனம் நிம்மதி அடையும். மறு உலகத்தில் உன் தாயாரின் ஆத்மாவும் சாந்தி அடையும். இருக்கட்டும், சீதா! உன் தகப்பனாரைப் பற்றி யாதொரு தகவலும் இல்லையா?” என்று கிட்டாவய்யர் கேட்டார். “மாமா! எனக்கு அப்பாவைப் பற்றி ஒரு சந்தேகம் இருக்கிறது. அது ஒரு ஊகமான சந்தேகந்தான். உங்களிடம் சொல்லக்கூட என் மனம் தயங்குகிறது. நாக்குக் கூசுகிறது.” “என்னிடம் உனக்கு என்ன கூச்சம். அம்மா! என்ன விஷயமிருந்தாலும் தயக்கமில்லாமல் சொல்லு!” “அப்பா இஸ்லாம் மதத்தில் சேர்ந்து விட்டதாக எனக்குச் சந்தேகம், மாமா!” “சிவசிவ சிவா! கேட்பதற்கே கர்ண கடூரமாயிருக்கிறதே!- எதனால் உனக்கு இப்பேர்ப்பட்ட சந்தேகம் உண்டாயிற்று சீதா?” “நானும் அம்மாவும் பம்பாயில் இருந்தபோது, ஒரு ஸ்திரீ வந்து எனக்காக ரத்தின ஹாரமும் பணமும் கொடுத்துவிட்டுப் போனது ஞாபகம் இருக்கிறதல்லவா? அம்மா உங்களிடம் அதைப் பற்றிச் சொல்லியிருக்கிறாளே?” “ஞாபகம் இருக்கிறது. அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?” "அந்த ஸ்திரீயை ஒரு சமயம் நான் டில்லியில் பார்த்தேன். அவளுடன் தாடி வளர்ந்த சாயபு ஒருவரையும் கண்டேன். என் மனதில் ஏதோ ஒரு சந்தேகம் உதித்தது. பிறகு நான் டில்லியிலிருந்து கல்கத்தாவுக்குப் போகும் மார்க்கத்தில் ஆக்ராவில் ஒரு பெரிய ஆபத்து எனக்கு வந்தது. ரயிலில் ஒரு பெட்டியை எடுத்ததாகத் திருட்டுக் குற்றம் சாட்டி என்னைக் கோர்ட்டில் கொண்டு போய் நிறுத்தினார்கள். திக்குத்திசை புரியாமல் நான் திகைத்து நின்ற சமயத்தில் ஒரு சாயபு கோர்ட்டுக்கு வந்து அந்தப் பெட்டியை அவர் திருடியதாக ஒப்புக் கொண்டார். அதற்காகத் தண்டனையும் அடைந்தார். எனக்காக அப்பேர்ப்பட்ட தியாகத்தைச் செய்தவர் யாராயிருக்கும் என்று கல்கத்தா சிறையில் வசித்தபோது யோசித்துப் பார்த்தேன். ஒருவேளை அப்பாவாக இருக்கலாமென்று தோன்றியது. அப்புறம் யோசிக்க யோசிக்க அவர்தான் என்று உறுதி பெற்றேன்." “பகவானே! இப்படியும் உண்டா? நீ சொல்வது ஏதோ கதை மாதிரி இருக்கிறதே தவிர, உண்மையாகவே தோன்ற வில்லை. துரைசாமிக்கு இப்படிப் புத்தி கெட்டுப்போகும் என்று யாரால் நம்ப முடியும்? ஏதோ ஸ்திரீ விஷயமான சபலம் இருந்தாலும், கொஞ்ச நாளைக் கெல்லாம் விட்டுத் தொலைத்துத் தலை முழுக வேண்டும். அதற்காக மதம்விட்டுமதம் மாறுவார்களா? அதிலும் எப்பேர்ப்பட்ட மதம்? கோயிலை இடிக்க வேண்டும்; விக்கிரகத்தை உடைக்க வேண்டும் என்று சொல்லும் மதம்! மத சம்பந்தமான விஷயங்களில் உன் புருஷன் எப்படி அம்மா!” "அவருக்கு ஹிந்து மதத்தில் ரொம்ப பற்று உண்டு. வேறு மதங்களைப் பிடிப்பதேயில்லை. அதிலும் முஸ்லிம் மதம் என்றால் அவருக்கு ரொம்பக் கோபம் வரும். சர்க்கார் உத்தியோகம் பார்த்தபோது அவருக்குக் கீழேயிருந்த துருக்க உத்தியோகஸ்தர்களை அவருக்கு மேலே தூக்கிப் போட்டு விட்டார்களாம். அதனால் அந்த மதத்தின் பேரிலேயே அவருக்கு அசாத்தியமான கோபம்" என்றாள் சீதா. “பிற மதத்தின் பேரில் கோபத்துக்குக் காரணம் அழகாய்த்தானிருக்கிறது. எப்படியிருந்தாலும் ஹிந்து மதத்தில் பற்று உள்ள வரையில் விசேஷந்தான். எப்படியாவது நான் திருத்தி விடுகிறேன் பார், சீதா! கூடிய சீக்கிரம் உன்னுடைய கஷ்டங்கள் எல்லாம் முடிந்துவிடும்” என்றார் கிட்டாவய்யர். “மாமா! என்னுடைய கஷ்டங்கள் தீர்ந்துவிடும் என்றா சொல்கிறீர்கள்? எனக்கு அப்படித் தோன்றவில்லையே? காரணமில்லாமல் அடிக்கடி மனதில் பீதி உண்டாகிறது. அப்போதெல்லாம் மார்புப் படபடவென்று அடித்துக் கொள்கிறது. அடிவயிற்றை ஏதோ இழுத்துப் பிடிக்கிறது. இராத்திரியில் நிம்மதியான தூக்கம் கிடையாது. மாமா! பயங்கரமான கனவுகள் காண்கிறேன்!” என்றாள் சீதா. அவளுடைய உடம்பு நடுங்கிற்று; கண்ணீர் பெருகிற்று. இதுவரை படுத்துக்கொண்டும் சாய்ந்து கொண்டும் பேசி வந்த கிட்டாவய்யர் எழுந்து உட்கார்ந்தார். சீதாவின் தலையைத் தொட்டுக்கொண்டு, “குழந்தாய்! அதெல்லாம் வீண் பிரமை. ஏதோ பழைய கஷ்டங்களை அநுபவித்த ஞாபகத்தினால் உன் மனம் கொஞ்சம் பேதலித்திருக்கிறது. அப்படிப் பீதி உண்டாகும் போதெல்லாம் ராமராம என்று தாரக நாமத்தைச் சொல்லு; பீதி மறைந்துவிடும். மேலும் நான்தான் உன்னுடன் வரப் போகிறேனே! உனக்கு ஒரு கஷ்டம் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்!” என்றார் கிட்டாவய்யர். இந்தச் சமயத்தில் லலிதா அந்த அறைக்குள்ளே வந்தாள். கிட்டாவய்யர் கடைசியில் கூறிய மொழிகளைக் கேட்டுவிட்டு “அப்பா! இது என்ன? தேவபட்டணத்துக்கு என்னுடன் வரப்போவதாகச் சொன்னீர்கள். அரைமணியில் மறந்துவிட்டு இப்போது சீதாவுடன் புறப்பட ஆயத்தம் செய்கிறீர்களே! இந்த பம்பாய் அத்தங்காளிடம் ஏதோ ஒரு வசீகர சக்தி கட்டாயம் இருக்கிறது” என்றாள். ஏழாம் அத்தியாயம் - நித்திய வாழ்வு இந்த உலகத்தில் எத்தனையோ தேசங்கள் சில சமயம் சிறப்புடன் வாழ்வதும் பிறகு அழிந்து போவதும் வழக்கமாயிருக்கையில், பாரத தேசம் மட்டும் பல்லாயிரம் வருஷமாக நித்திய வாழ்வு பெற்றிருப்பதின் காரணம் என்ன என்பது பற்றிக் கிட்டாவய்யர் சீதாவிடம் கூறினார் அல்லவா? அவருடைய புதல்வன் சூரியநாராயணன் சற்று நேரத்துக்கெல்லாம் அதற்கு வேறொரு காரணம் கூறினான். கிட்டாவய்யர் வீட்டுத் திண்ணையில் கூடிய பார்லிமெண்டு சபையில் நடந்த விவாதத்தின்போது சூரியா அந்தக் காரணத்தைச் சொன்னான். "கொஞ்சம் இதைக் கேளுங்கள்; ஒரு குண்டூசியில் வரிசையாகத் தபால்தலைகளைக் குத்திக் கோப்பதாக வைத்துக்கொள்ளலாம். அதில் மேலேயுள்ள ஒரே ஒரு தபால், மனிதன் தோன்றிய பிறகு சென்றிருக்கும் காலம். அதற்கு முன்னால், கீழேயுள்ள அவ்வளவு தபால்தலைகளின் அளவுள்ள காலம், இந்த உலகத்தில் மனிதனைத் தவிர மற்ற பல்வேறு ஜீவராசிகள் வாழ்ந்து வந்தன. ஜீவராசிகளிலே தென்னை மர உயரமும் மதுரைக் கோயில் கோபுரத்தின் நீளமும் உள்ள சில பிராணிகள் இருந்தன. சிருஷ்டியின் ஆரம்ப காலத்தில் அந்தப் பயங்கரமான பிராணிகள் இந்த உலகத்தில் அங்குமிங்கும் அகப்பட்டதையெல்லாம் விழுங்கிக்கொண்டு சஞ்சரித்தன. அந்தப் பிராணிகள் எல்லாம் இப்போது எங்கே? அவற்றின் இனமே அழிந்து இருந்த இடந் தெரியாமல் மறைந்து விட்டன. சரித்திர ஆராய்ச்சிக் காரர்கள் வெகு அபூர்வமாக அத்தகைய பிராணிகளின் எலும்புக் கூடுகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்றும், கரையாத பனித்திரளின் அடியில் அகப்பட்டுக் கொண்டபடியால் அந்த எலும்புக்கூடுகள் லட்சக்கணக்கான வருஷம் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்து இப்போது அகப்படுகின்றன. அவ்வளவு பிரமாண்டமான பிராணிகள் அவற்றின் வர்க்கத்து வாரிசே இல்லாமல் நசித்துப் போனதின் காரணம் என்ன? மாறிக்கொண்டு வந்த உலகத்தின் சீதோஷ்ண நிலைமைக்கேற்ப அவை மாறாமலிருந்ததுதான். மாறிக்கொண்டு வந்த பிராணிகளோ இன்று வரையில் வாழையடி வாழையாக வாழ்ந்து பல்கிப் பெருகி வருகின்றன. "மனித குலத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உலகத்தில் பல தேசங்களில் மக்கள் ஒவ்வொரு சமயம் மிக உன்னத நிலைமையில் இருந்திருக்கிறார்கள். பாபிலோனியா, அஸ்ஸீரியா, கிரீஸ், எகிப்து முதலிய அத்தகைய பழைய காலத்து நாகரிக மக்களின் சமூகங்கள் நசித்து அழிந்து போய்விட்டது. ஏன் தெரியுமா? காலத்துக்கேற்ப அந்தச் சமூகங்கள் மாறாமல் அப்படியே இருக்கப் பார்த்ததுதான் காரணம். ஆனால் நம்முடைய பாரத தேசமோ உலகில் வேறு எந்தத் தேசத்தையும் காட்டிலும் அநாதியான நாகரிகத்தை உடையது. ஆயினும் இன்றுவரை அழிந்து போகாமல் இருக்கிறது. காரணம் என்ன? இந்தத் தேசத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் கால மாறுதலுக்கு ஏற்பத் தங்களுடைய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டு வந்திருப்பதுதான். ஒரே ஒரு உதாரணத்தைக் கேளுங்கள். வேத காலத்தில் நம் முன்னோர்கள் பலவித யாகங்கள் செய்தார்கள். அந்த யாகங்களில் குதிரைகள், மாடுகள், ஆடுகள் முதலிய பல ஜீவப் பிராணிகளைப் பலி கொடுத்தார்கள். அந்த மிருகங்களின் மாமிசத்தை அவிப்பாகம் என்பதாகத் தேவர்களுக்கு அளித்து மிச்சத்தைத் தாங்களும் உண்டார்கள். கௌதம புத்தர் அவதரித்து யாகங்களைக் கண்டித்தார். யாகங்களில் பலி கொடுப்பதைக் கண்டித்தார். கௌதம புத்தருடைய கொள்கைகள் உலகமெங்கும் பரவின. அந்தக் கொள்கைகளில் முக்கியமானவற்றை அந்தக் காலத்துப் பாரத மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்; யாகங்கள் நின்று போயின. பிற்காலத்தில் ஹிந்து தர்மத்தை நிலைநாட்ட அவதரித்த ஸ்ரீ சங்கரர், ஸ்ரீ ராமானுஜர் முதலிய ஆச்சாரிய புருஷர்கள் யாகம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. துளசிதாஸர், துக்காராம், தியாகராஜர் முதலிய பக்த சிரோமணிகளும் யாகம் செய்யச் சொல்லவில்லை.,இந்த ஒரு உதாரணத்தைப்போல ஆயிரம் உதாரணம் ஹிந்து சமூகத்தின் சரித்திரத்திலிருந்து எடுத்துக்காட்டலாம். அவ்விதம் அடிக்கடி புதிய கருத்துக்களை ஏற்றுக்கொண்டு ஆச்சாரங்களையும் வழக்கங்களையும் மாற்றிக்கொண்டு வந்ததினால் ஹிந்து சமூகம் இன்றைக்கு ஜீவசக்தி பெற்றிருக்கிறது. “அத்தகைய அவசியம் - ஹிந்து சமூகம் பல ஆசாரங்களையும் பழக்கவழக்கங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் தற்சமயம் ஏற்பட்டிருக்கிறது. ஹிந்து தர்மத்துக்குக் கேடு நேராமல் என்னென்ன சமூக சீர்த்திருத்தங்கள் செய்ய வேண்டுமென்று போதனை செய்ய மகாத்மா காந்தி அவதரித்திருக்கிறார். அவருடைய போதனையின்படி தீண்டாமை, சாதி வித்தியாசம், குழந்தை மணம் முதலிய வழக்கங்களை ஒழித்தேயாக வேண்டும். நம்முடைய பாட்டனார்களின் காலத்தில் கடைப்பிடித்த பழக்கவழக்கங்களையே இன்னமும் கைக்கொள்ளலாம் என்று எண்ணினோ மானால் நம்மைப் போன்ற அறிவீனர்கள் இல்லை என்று ஏற்பட்டுவிடும்.” “பாரத தேசத்து மக்கள் காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டு வந்தால் இந்த உலகில் நிலைபெற்று வாழலாம்; மேன்மையாகவும் வாழலாம். வழக்கங்களை மாற்ற மாட்டோ ம் என்று பிடிவாதம் பிடித்தால் சரித்திரத்தில் எத்தனையோ ஜீவப்பிராணிகளும் எத்தனையோ தேசமக்களும் அழிந்து போனது போல நாமும் அழிந்துபோக வேண்டியதுதான்!….” சூரியாவின் இந்த நீண்ட பிரசங்கத்தைப் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒருவரான பிச்சுவய்யர் இப்போது குறுக்கிட்டு, “நீ சொல்லுகிறது சரிதான், அப்பா! யார் இல்லை என்கிறார்கள்? நம்முடைய காலத்திலேயே எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டுத்தான் இருக்கின்றன. நான் சிறு பையனாயிருந்த போது பிராமணன் சாப்பிடுவதை மற்றச் சாதியார் பார்க்கக் கூடாது. சமபந்தி போஜனம் செய்தால் சாதிப்பிரஷ்டம் செய்து விடுவார்கள். அந்த ஆசாரத்தையெல்லாம் இப்போது யார் பார்க்கிறார்கள்? அந்தக் காலத்தில் இந்த அக்கிரகாரத்தில் ஒருவர்கூடத் தலையில் கிராப் வைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்ததில்லை. இப்போது எந்த வீட்டிலாவது கிராப் வைத்துக் கொள்ளாத பையன் இருந்தால் காட்டுப் பார்க்கலாம்! கிடையவே கிடையாது!” என்று சொன்னார். “மாமா! இந்த மாதிரி முக்கியமில்லாத விஷயங்களில் மாறுதல் நடந்திருக்கிறது, ஆனால் இது போதுமா? போதாது. நம்முடைய பாட்டனார் காலத்தில் பண்ணையாட்களை நடத்தியது போல இந்தக் காலத்திலும் நடத்தலாம் என்று நினைத்தோமானால் பெரும் பிசகாக முடியும்….” “பார்த்தீராங்காணும், பஞ்சுவய்யரே! பையன் எங்கேயெல்லாமோ சுற்றி என்னவெல்லாமோ சக்கரவட்டமாகப் பேசுகிறானே என்று பார்த்தேன், கடைசியில் பண்ணை ஆள் விஷயத்துக்கு வந்து விட்டான். அப்பனே! அந்த விஷயம் ஹைகோர்ட்டு வரையில் போய்த் தீர்ந்து போய்விட்டது. அதைப் பற்றி நீ இப்போது பேச வேண்டாம். வேறு ஏதாவது இருந்தால் சொல்லு” என்றார் அப்பாத்துரை சாஸ்திரிகள். “சாஸ்திரிகள் சொல்லுவது சரிதானே, சூரியா! இந்தக் கிஸான் கிளர்ச்சி விஷயம் இருக்கவே இருக்கிறது. அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீ சுயராஜ்ய இயக்கத்தைப் பற்றிச் சொல்லு. மகாத்மா காந்தி முதலானவர்கள் இவ்வளவு பாடுபட்டார்களே! என்ன ஆயிற்று? சுயராஜ்யம் எப்போது வரப்போகிறது? நேதாஜி சுபாஷ் போஸ் இப்போது எங்கே இருக்கிறார்? ஜயப்பிரகாச நாராயணன் என்ன சொல்லுகிறார்? ‘வெள்ளைக்காரா? வெளியே போ!’ என்று தொண்டை கிழியக் கத்திக் கொண்டிருந்தீர்களே, அதன் பலன் என்ன? வெள்ளைக்காரன் எப்போது வெளியே போகப் போகிறான்?” என்று சீமாச்சுவய்யர் கேட்டார். “இவர்கள் தொண்டை கிழியும்படி ‘வெள்ளைக்காரா! வெளியே போ!’ என்று எங்கே கத்தி னார்கள்? நம்ப ஊர் சந்தைத் தோப்பில் நின்றுகொண்டு கத்தினார்கள். வெள்ளைக்காரனுடைய காதில் விழும்படி கத்தினால்தானே? அப்படிக் கத்தியிருந்தால் வெள்ளைக்காரன் வெளியே போயிராவிட்டாலும் அவனுடைய காதாவது செவிடாகப் போயிருக்கும்! அப்படியொன்றும் இவர்கள் செய்யவில்லையே! குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருந்தார்கள்; நம்ப ஊர்க் கழுதைப் பொட்டலில் வெள்ளைக்காரன் இருக்கிறானா, என்ன? இவர்களுடைய கூச்சலைக் கேட்டுவிட்டு வெளியே போவதற்கு?” என்று பஞ்சுவய்யர் வெளுத்து வாங்கினார். “மாமா! கொஞ்சம் பொறுங்கள். இப்போது உங்களுக்கு எகத்தாளமாய்த் தானிருக்கும். ஆனால் கொஞ்ச நாளில் நீங்களே பார்க்கப் போகிறீர்கள்! வெள்ளைக்காரன் மூட்டை கட்டிக் கொண்டு வெளியேறத்தான் போகிறான்!” என்றான் சூரியா. “சரிதான், அப்பா, சரிதான்! முப்பது வருஷமாய் இப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நானும் கேட்டுக் கொண்டு தானிருக்கிறேன். முன்னொரு சமயம் ‘ஒரு வருஷத்திலே சுயராஜ்யம் வரப் போகிறது’ என்று சொன்னார்கள். அது வராமல் டிமிக்கி கொடுத்துவிட்டது. அப்புறம் உப்புச் சத்தியாக்கிரஹத்தின்போது சுயராஜ்யம் ‘இதோ வரப் போகிறது!’ என்றார்கள். ‘சுயராஜ்யம் வாங்கி வருகிறதற்காக மகாத்மா லண்டனுக்குப் போயிருக்கிறார்!’ என்றார்கள். ‘வைஸ்ராய் இர்வின் சரணாகதி அடைந்து விட்டான்’ என்றார்கள். கடைசியில் ஒன்றுமில்லை என்று ஆகிவிட்டது. இப்போதும் 1942-ம் வருஷத்தில் ‘ஆச்சுப் போச்சு’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நேதாஜி படையெடுத்து வருகிறார் என்று சொன்னார்கள். எல்லாம் வெறும் சவுடால் பேச்சு என்று ஆயிற்று. அப்பேர்ப்பட்ட பயங்கரமான யுத்தம் நடந்தபோது, ஹிட்லர் ஒரு பக்கமும் டோ ஜா ஒரு பக்கமும் நெருக்கிக் கொண்டிருந்தபோதே, - இங்கிலீஷ்காரன் மசியவில்லையே! யுத்தத்தில் ஜெயித்தபிறகா இந்தியாவுக்குச் சுயராஜ்யம் கொடுத்து விடப் போகிறான்!” என்றார் வேலாயுத முதலியார். “முதலியார்வாள்! உங்களைப் போல்தான் நானும் நினைத்தேன். இன்னும் அநேகரும் யுத்த சமயத்திலேதான் இந்தியாவின் சுயராஜ்யத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று எண்ணினார்கள். ஆனால் அவதார புருஷரான மகாத்மா வேறு விதமாக நினைத்தார். யுத்த காலத்தில் இங்கிலீஷ்காரர்களுக்குக் கஷ்டம் கொடுக்கக்கூடாது என்று சொன்னார். நல்ல பாம்பு மந்திரத்துக்குக் கட்டுப்படுவது போல நாம் சத்தியத்துக்குக் கட்டுப்பட வேண்டும் என்று கூறினார். அவர் பேச்சை மீறி என்னைப் போல் எத்தனையோ பேர் இரகசியப் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டோ ம். ஆனால் ஒரு பயனும் கிடைக்கவில்லை. கடைசியாக இப்போது மகாத்மாவின் வழியினால் தான் இந்தியாவுக்குக் கதிமோட்சம் கிட்டப் போகிறது என்ற நிச்சயத்திற்கு வந்திருக்கிறோம்!” என்றான் சூரியா. “நீயும் உன்னைப் போன்றவர்களும் மெத்தப் படித்த புத்திசாலிகள். அதனால் உங்களுக்குக் காந்தி காட்டுகிற வழிதான் சரியான வழி என்று நிச்சயிக்க இவ்வளவு காலம் ஆயிற்று. ஆனால் நாங்கள் எல்லோரும் படிப்பு வாசனையில்லாத பட்டிக்காட்டு மனிதர்கள். ஆகையால் ஆரம்பத்திலேயே அந்த நிச்சயத்துக்கு வந்துவிட்டோ ம். இந்தியாவுக்குக் கதிமோட்சம் பிறந்தால் மகாத்மாவினால்தான் பிறக்க வேண்டும். வேறு யாராலும் இல்லை என்று முப்பது வருஷத்துக்கு முன்னாலேயே முடிவு செய்து விட்டோ ம். உன் அப்பாவும் நானும் அன்றைக்குக் கதர் கட்ட ஆரம்பித்தவர்கள் இன்றைக்கும் கதர் கட்டி வருகிறோம். தெரியுமோ, இல்லையோ? சீமாச்சு இப்போது விற்கிறது மில் துணியானாலும் அவன் கட்டிக் கொள்கிறது கதர் வேஷ்டிதான்!” என்று சொன்னார் பஞ்சுவய்யர். “மாமா! காந்தி மகானிடம் உங்களுக்கு அவ்வளவு பக்தியும் நம்பிக்கையும் எப்போது இருக்கிறதோ, அப்போது அவர் சொல்கிறதை முழுவதும் கேட்டு அப்படியே நடக்க வேண்டியதுதானே?” என்றான் சூரியா.“என்ன காரியத்தில் இதுவரை மகாத்மா சொல்கிறபடி நாங்கள் நடக்கவில்லை, நீ மட்டும் நடந்துவிட்டாய் என்பதைச் சொல்லேன் பார்க்கலாம்!” என்றார் அப்பாதுரை சாஸ்திரிகள். “சுயராஜ்யம் கூடிய சீக்கிரம் வரப் போகிறது. அதற்குள்ளே நம்மிடமுள்ள குறைகளை நீக்கிக்கொண்டு சுயராஜ்யத்துக்குத் தயாராக வேணும் என்று மகாத்மா சொல்கிறார்.” “என்ன குறை எங்களிடம் இருக்கிறது, அதை எப்படி நீக்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்லேன்!” “முக்கியமாக, கிராமங்களில் உள்ள மிராசுதாரங்களுக்கும் குடிபடைகளுக்கும் தகராறு இருக்கக்கூடாது. உழைக்கிறவனுக்கு உழைப்பின் பலன் என்கிற கொள்கையை எல்லாரும் ஒப்புக் கொள்ள வேண்டும்.” “சூரியாவையரே! நீ வேறு என்ன வேணுமானாலும் பேசும், இந்த ஆள்படை விஷயத்தைப் பற்றி மட்டும் பேசவேண்டாம். உம்முடைய தகப்பனார் ஏற்கெனவே இடங்கொடுத்துக் கொடுத்து அதன் பலனை இப்போது அநுபவிக்கிறார். அவருடைய உயிருக்கே உலை வைக்கப் பார்த்தார்கள். தெய்வாதீனமாகப் பிழைத்தார்!…” “அப்பாவை எங்களுடைய ஆட்கள் கொல்ல யத்தனித்தார்கள் என்பதை நான் நம்பவே மாட்டேன், அப்படி ஒரு நாளும் நடந்திராது. யாரோ வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் செய்த காரியத்துக்கு ஏழைக் குடிபடைகள்மேல் எதற்காகப் பழியைப் போடுகிறீர்கள்!” "சரி விடு! உன்னிடம் இதைப்பற்றி வாதம் இடுவானேன்! போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. சில நாளைக்கெல்லாம் உண்மை என்னவென்று தெரிந்து விடுகிறது. அப்புறம் இந்த மாதிரி பேச மட்டாய்!" இந்தச் சமயத்தில் லலிதா வீட்டு வாசலுக்கு வந்து, “அண்ணா! உன்னை அப்பா கூப்பிடுகிறார்!” என்றாள். “சரி அப்பாவைப் போய்ப் பார்! அவர் சொல்கிறதையாவது கேட்டு அதன்படி செய்!” என்று சொல்லிவிட்டுத் திண்ணைப் பார்லிமெண்ட் அங்கத்தினர்கள் சபையைக் கலைத்து விட்டுப் போய்ச் சேர்ந்தார்கள். சூரியா தன் தந்தை இருந்த அறைக்குள் சென்று அவர் படுத்திருந்த கட்டிலுக்கு அருகில் உட்கார்ந்தான். “மன்னியுங்கள், அப்பா! நாங்கள் சத்தம் போட்டுப் பேசியது உங்களுக்குத் தலைநோவாக இருந்திருக்கும். தெரியாமல் இரைந்து பேசிவிட்டேன்!” என்றான். “சூரியா! நீ பேசியதெல்லாம் என் காதில் விழுந்து கொண்டிருந்தது. அதனால் எனக்குத் தலைவலி உண்டாகவில்லை. ரொம்பவும் சந்தோஷம் உண்டாயிற்று. உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்று நானே எண்ணிக் கொண்டிருந்தேன். சில நாளாக நான் யோசனை செய்து பார்த்ததில் நீ சொல்வதுதான் சரி என்ற உன்னுடைய முடிவுக்கு வந்திருக்கிறேன். நீ இந்த ஊரில் தங்கி உன்னுடைய இஷ்டப்படி எல்லாம் நடத்து; குடிபடைகளுக்கு என்ன செய்யவேண்டுமோ செய். நான் உனக்குப் பூரண அதிகாரம் கொடுக்கிறேன். எனக்கு இந்த ஊரில் இருக்க இனிப்பிரியமில்லை. வானப் பிரஸ்த ஆசிரமத்தை என்னுடைய மனம் நாடுகிறது. எங்கேயாவது யாத்திரை போக வேண்டும் என்று தோன்றுகிறது. லலிதா தேவபட்டணத்தில் வந்திருக்கும்படி கூப்பிடுகிறாள். காசி ஹரித்வாரம், பத்திரிநாத் முதலிய ஷேத்திரங்களைத் தரிசனம் செய்வதற்குச் சீதா என்னை அழைத்துப் போவதாகச் சொல்கிறாள்…” “சீதா எதற்காக உங்களை அழைத்துப் போக வேணும், அப்பா! நான் அழைத்துப் போகிறேன். அந்த இடங்களெல்லாம் எனக்குத் தெரியும், காசியில் ஆறுமாதம் இருந்தேன்.” “சூரியா! நீ என்னைக் காசிக்கு அழைத்துக் கொண்டு போவதைக் காட்டிலும் இங்கே இருந்து குடிபடைகளைக் கவனித்துச் செய்ய வேண்டியதைச் செய்தால் அதுவே எனக்குப் பரம திருப்தியாயிருக்கும்…” இந்தச் சமயத்தில் சரஸ்வதியம்மாள் உள்ளேயிருந்து வந்து, “சூரியா! அப்பாவோடு அதிகமாகப் பேச்சுக் கொடுக்காதே! அர்த்த ராத்திரி ஆகப்போகிறதே! அவர் தூங்க வேண்டாமா?” என்றாள். “அம்மா சொல்வது சரிதான்; தூங்குங்கள் அப்பா! விவரமாக நாளைக்குப் பேசிக்கொள்ளலாம். எப்படியும் உங்கள் இஷ்டப்படி நடந்து கொள்வேன்!” என்றான் சூரியா. மறுநாள் தந்தையுடன் தொடர்ந்து பேச்சு நடத்துவதற்குச் சூரியாவுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. கிட்டாவய்யரைத் தீர்த்தயாத்திரை அழைத்துப் போவது யார் என்ற பிரச்சனையும் எழுவதற்கு இடமில்லாமல் போய் விட்டது. திருமூலர் என்னும் மகான் மனித வாழ்வின் அநித்தியத்தைக் குறிப்பிடுவதற்கு ஓர் அற்புதமான பாடலைப் பாடியிருக்கிறார். ’அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் மடக் கொடியாரோடு மந்தணம் புகுந்தார்! இடப்பக்கமே இறை நொந்ததே என்றார் கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே! இராத்திரி அறுசுவை உண்டி தயாரித்து வைத்ததை ஒரு கிரகஸ்தர் சாப்பிட்டார், பிறகு மனைவியோடு சயன அறைக்குச் சென்றார், ‘இடது மார்புக்கு அருகில் கொஞ்சம் வலிக்கிறது!’ என்று சொன்னார். தூங்கினால் வலி போய்விடும் என்று படுத்தார். படுத்தவர் படுத்தவர்தான்! பிறகு எழுந்திருக்க வேயில்லை. திருமூலர் வாக்கின் கடைசி வரி கிட்டாவய்யரின் விஷயத்தில் பலித்துவிட்டது. இராத்திரி சூரியாவிடம் தன் உள்ளத்தைத் திறந்து காட்டிவிட்டு நிம்மதியோடு படுத்துத் தூங்கியவர் மறுபடி எழுந்திருக்கவே இல்லை. அடுத்த நாள் காலையில் அந்த வீட்டில் பரிதாபமான ஓலக்குரல்களும் துயரம் ததும்பிய பிரலாபமும் ஒப்பாரியும் ஒருமித்து எழுந்தன. எல்லாரிலும் அதிகத் துயரத்துடன் புலம்பி அதிகமாகக் கண்ணீர் விட்டுக் கதறியவள் கிட்டாவய்யரின் மருமகளாகிய சீதாவேயாகும். எட்டாம் அத்தியாயம் - “மாமழை போற்றுதும்” போர்க்களத்தில் அம்பு மழையைப் பொருட்படுத்தாமல் குறிப்பிட்ட இலட்சியத்தை நோக்கிச் செல்லும் வீரனைப்போல் அந்த ரயில் வண்டி காற்றையும் மழையையும் பொருட்படுத்தாமல் போய்க்கொண்டிருந்தது. இரண்டாம் வகுப்பு வண்டி ஒன்றில் சீதாவும், லலிதாவும், லலிதாவின் புருஷன் பட்டாபிராமனும் குழந்தைகள் இருவரும் இருந்தார்கள். அவர்கள் எல்லோருடைய கவனமும் வண்டிக்கு வெளியே தோன்றிய காட்சிகள் சென்றிருந்தது. வானம் முழுதும் கருமேகங்கள் மூடி மழை பெய்து கொண்டிருந்தபடியால் பகல் நேரம் அந்திப் பொழுதைப் போல் மங்கி இருள் அடைந்து தோன்றியது. சடசடவென்று அடித்த மழை ஒரு பக்கத்து ஜன்னல் கண்ணாடிகளைத் தாக்கிச் சுக்கு நூறாக்கிவிட முயன்று கொண்டிருந்தது. ஆனால் இன்னொரு பக்கத்து ஜன்னல் கண்ணாடிகளின் வழியாக வெளியே தோன்றிய பலவிதக் காட்சிகள் தெளிவாகப் புலனாகிக் கொண்டிருந்தன. நீர்வளமும் நிலவளமும் நிறைந்து செழித்த பிரதேசத்தின் வழியாக ரயில் அச்சமயம் போயிற்று. பெருங் காற்றில் பேயாட்டம் ஆடிய தென்னை மரங்களின் மட்டைகள் வானத்து மேகங்களின்மீது கோபங்கொண்டு தாக்கி அடித்தன. அடர்ந்து செழித்து வளர்ந்திருந்த மூங்கில் மரங்கள் நாலா பக்கமும் சுற்றிச் சுற்றி மழைத் துளிகளைத் தாக்கிச் சிதறச் செய்து கொண்டிருந்தன. மாமரக்கிளைகள் அலங்கோலமாக ஆடியபோது, அவற்றில் மழைக்கு ஒதுங்கிப் பதுங்கிக் கொண்டிருந்த பட்சிகளின் பாடு மிகவும் கஷ்டமாகப் போய்விட்டது. திடீரென்று ஒரு மாமரத்தின் கிளை முறிந்து கீழே விழுந்தது. அதிலிருந்த ஒரு காக்கை மழையினால் நனைந்த சிறகுகளை விரிக்க முடியாமல் விரித்து, பறக்க முடியாமல் பறந்து கரகரவென்று கட்டிப் போயிருந்த தொண்டையினால், “அபயம்” “அபயம்” என்று கூவிக்கொண்டு இன்னொரு மரத்தில் போய் உட்கார்ந்தது. “ஐயோ! பாவம்!” என்று சீதா பரிதாபக் குரலில் கூறிவிட்டு லலிதாவைப் பார்த்தாள். லலிதா குழந்தை பாலுவிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தபடியால் பட்டாபிராமனுடைய முகத்தை நோக்கினாள். பட்டாபிராமன் அச்சமயம் சீதாவைக் கவனித்துக் கொண்டிருந்தான். மழையில் நனைந்த காக்கைக்கு அவள் இரக்கப்பட்டதைக் குறிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தான். “அந்தக் காக்கையின் பாடு கஷ்டந்தான்!” என்று சொன்னான். “நான் பிறந்த வேளையில் அந்தக் காக்கையும் பிறந்திருக்க வேண்டும்!” என்றாள் சீதா. லலிதா திரும்பிப் பார்த்து, “எந்தக் காக்கை? எதைப்பற்றிப் பேசுகிறீர்கள்!” என்று கேட்டாள். சீதாவும் பட்டாபிராமனும் பேசாமல் இருந்தார்கள். “ஒரே மௌனமாயிருக்கிறீர்களே? என்ன விஷயம் என்று எனக்குச் சொல்லக் கூடாதா?” என்று லலிதா மறுபடியும் கேட்டாள். “ஒரு மரக்கிளை ஒடிந்து விழுந்தது, அதிலிருந்து ஒரு காக்கை அலறி அடித்துக் கொண்டு இன்னொரு மரத்துக்குப் பறந்து சென்றது! நீ வனிக்கவில்லை!” என்றான் பட்டாபிராமன். “பாலு என்னமோ கேட்டான் அதற்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன், அதனால் கவனிக்கவில்லை” என்றாள் லலிதா. “அதைத்தான் நானும் சொன்னேன்!” என்றான் பட்டாபிராமன். “குழந்தையைக் காட்டிலும் எனக்கு காக்கை ஒசத்தியில்லை!” என்று சொன்னாள் லலிதா. “குழந்தையைக் காட்டிலும் காக்கை ஒசத்தி என்று யார் சொன்னது?” என்றான் பட்டாபிராமன். ரயில் போய்க் கொண்டேயிருந்தது. ஒரு ஊருக்குப் பக்கத்தில் வயல்கள் சூழ்ந்திருக்க பொட்டைத் திடலில் ஒரு சிதை எரிந்து கொண்டிருந்தது. சிதையின் தீ மழையில் நனைந்து அணைந்து போய் விடாதபடி சிலர் அதன்மேல் அவசர அவசரமாகக் கீற்றுப் பந்தல் போட்டுக் கொண்டிருந்தார்கள். “அதோ பார், அம்மா! நெருப்புக்கு மேலே பந்தல் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்! எதற்காக அம்மா?” என்று பட்டு கேட்டாள். எல்லாரும் அந்தப் பக்கம் பார்த்தார்கள். சிதை எரிவதைக் கண்டதும், “மாமாவையும் இந்த மாதிரி தானே சிதையில் வைத்துக் கொளுத்திவிட்டு வந்தோம்?” என்று சீதா சொல்லி விட்டு விம்மி அழத் தொடங்கினாள். லலிதாவின் கண்களிலும் கண்ணீர் துளித்தது ஆனால் அவள் அழவில்லை. “அப்பா செத்துப் போனது கூட எனக்கு அவ்வளவு பெரிதாக இல்லை. நீ துக்கப்படுகிறதைப் பார்த்தால்தான் அதிக வருத்தமாயிருக்கிறது!” என்று லலிதா கூறினாள். “மாமா செத்துப் போனதற்காக யாரும் வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்லை. அவர் மிக மேலான கதிக்குப் போயிருப்பார். மோட்சங்களுக்குள்ளே மிக உயர்ந்த மோட்சத்துக்கு அவர் நிச்சயம் போயிருப்பார்!” என்றான் பட்டாபிராமன். சீதா விம்மலை நிறுத்திக் கண்களையும் துடைத்துக் கொண்டு, “அது வாஸ்தவந்தான். சூரியாவைப் போன்ற ஒரு பிள்ளையைப் பெற்றதற்கே அவர் எவ்வளவோ மேன்மையான கதிக்குப் போயிருக்க வேண்டும்!” என்றாள். “சந்தேகமில்லை; பத்து நாளைக்குள் சூரியா குடியானவர்களை எவ்வளவு சரிக் கட்டிக் கொண்டு விட்டான்!” என்று பட்டாபிராமன் சொன்னான். “அப்பா செத்துப் போன அன்றைக்கே குடிபடைகள் எல்லாம் கூட்டமாய் வந்து கதறி அழுது விட்டார்களே!” என்றாள் லலிதா. ரயில் போய்க் கொண்டேயிருந்தது. எங்கே பார்த்தாலும் தண்ணீர் மயமாகக் காணப்பட்டது. “இது என்ன, ஒரே ஜலப்பிரளயமாகவல்லா இருக்கிறது? ராஜம்பேட்டையைக் காட்டிலும் இங்கே மழை அதிகம் போலிருக்கிறதே!” என்றான் பட்டாபிராமன். “நாம் ரயில் ஏறிக் கிளம்பிய பிறகு அங்கேயும் மழை கொட்டியிருக்கலாம்,” என்றாள் சீதா. “மழை இல்லை, மழை இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது அடைத்து வைத்துக் கொண்டு கொட்டுகிறது!” என்றாள் லலிதா. “மழை கொஞ்சநாள் இல்லாமற் போனால்தான் மழை எவ்வளவு அவசியமானதென்று ஜனங்களுக்குத் தெரிகிறது. வேத காலத்து ரிஷிகள் சூரியனை எப்படி தோத்திரம் செய்தார்களோ அப்படியே வருணனையும் பிரார்த்தனை செய்தார்கள். சிலப்பதிகாரம் என்ற தமிழ்க் காவியத்தில் சூரியனையும் சந்திரனையும் போற்றிவிட்டு,”மாமழை போற்றுதும்" மாமழை போற்றுதும்" என்று அழகாகப் பாடியிருக்கிறது!" என்று பட்டாபிராமன் தன்னுடைய புலமையைத் தெரியப்படுத்திக் கொண்டான். “இருந்தாலும் மழையை ரொம்பப் போற்றி விடாமலிருந்தால் நல்லது. இப்படி ஒரே கொட்டாகக் கொட்டினால் ஏழை ஜனங்கள் என்ன செய்வார்கள்? அதோ பாருங்கள்!” என்றாள் லலிதா. அவள் சுட்டிக்காட்டிய பக்கத்தில் ஒரு கிராமத்து வீதிகளுக்குள்ளே மழைத் தண்ணீர் ஆற்று வெள்ளம் போலப் பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தது. ஒரு குடிசை வீட்டின் கூரையைப் பெருங்காற்று அப்படியே பிய்த்துத் தூக்கி அப்பாலே எறிந்திருந்தது. குடிசையில் பாக்கி நின்ற குட்டிச் சுவர்கள் மழையில் நனைந்து கரைந்து கொண்டிருந்தன. குடிசைக்குள்ளேயிருந்த சட்டிப் பானை தட்டுமுட்டுச் சாமான்களை ஒரு ஸ்திரீயும் இரண்டு ஆண் பிள்ளைகளும் எடுத்து அப்புறப்படுத்த முயன்று கொண்டிருந்தார்கள். “இந்த மாதிரி எவ்வளவு குடிசை இன்றைக்கு இடிந்து விழுந்து போச்சோ? அந்தக் குடிசைகளில் வசித்த ஏழை ஜனங்கள் எல்லாரும் என்ன கஷ்டப்படுவார்களோ?” என்று லலிதா பரிதாபப்பட்டாள். “எனக்கு இங்கேயே ரயிலிலிருந்து குதித்து விடலாம் என்று தோன்றுகிறது. ஓடிப்போய் வீடுவாசல் இழந்த அந்த ஏழை ஜனங்களுக்கு ஒத்தாசை செய்ய வேண்டும் என்று ஆசையாயிருக்கிறது!” என்றாள் சீதா. மழை மேலும் கடுமையாகப் பெய்தது. காற்று இன்னும் தீவிர வேகமடைந்து மோதி அடித்தது. ரயில் அசைந்து ஆடிக்கொண்டும் திணறித் திண்டாடிக் கொண்டும் தண்டவாளங்களின் மீது ஊர்ந்தும் சென்று கொண்டேயிருந்தது. ஒன்பதாம் அத்தியாயம் - பட்டாபியின் புனர்ஜென்மம் ரயில் தேவபட்டணம் ஸ்டேஷனை நெருங்கியபோது இரவு எட்டு மணி இருக்கும். ரயில் பாதையின் இரு பக்கமும் தேங்கியிருந்த மழைத் தண்ணீரில் ரயில் வண்டியின் விளக்குகள் வரிசையாகப் பிரதிபலித்தன. அவ்வாறே தேவபட்டணத்தை அடுத்துள்ள சாலைகளில் போட்டிருந்த விளக்குகளும் பக்கத்தில் கடல் போலத் தேங்கியிருந்த தண்ணீரில் வரிசையாகப் பிரதிபலித்து மினுமினுத்தன. வானை மூடியிருந்த மேகங்களினாலும் பூமியில் சூழ்ந்திருந்த அந்தகாரத்தினாலும் கருமை உருக்கொண்டிருந்த அந்த இரவு நேரத்தில் வரிசை வரிசையான மின்சார தீபங்களும் தண்ணீரில் அவற்றின் பிரதிபிம்பங்களும் சேர்ந்து ஏதோ ஒரு மாயாபுரி வானத்திலிருந்து பூமியில் இறங்கியிருக்கிறது போன்ற பிரமையை உண்டாக்கின. ரயில் ஸ்டேஷனுக்குள் சென்று நின்றதும் பட்டாபிராமன் முதலியவர்கள் ரயில் கதவைத் திறந்து கொண்டு கீழே இறங்கினார்கள். கதவைத் திறந்தவுடனேயே ஊதல் காற்று சுளீர் என்று அடித்தது. கீழே அவர்கள் இறங்கி நின்ற இடத்தில் பிளாட்பாரத்தின் மேற்கூரை இருந்தபோதிலும் திறந்திருந்த இரு பக்கங்களிருந்தும் மழைச்சாரல் வந்து தாக்கியது. போர்ட்டர்கள் குளிரில் நடுங்கிக் கொண்டே வந்து சாமான்களைத் தூக்கிக் கொண்டார்கள். அந்தச் சமயத்தில் ஸ்டேஷனுக்கு ஒரு பக்கத்திலிருந்து ஏராளமான ஜனங்கள் சொட்டச் சொட்ட நனைந்த துணிகளுடன் கூச்சலிட்டுக் கொண்டு ஓடி வந்தார்கள். சிறிது நேரத்தில் நூற்றுக்கணக்கான ஸ்திரீகளும் புருஷர்களும் குழந்தைகளும் ரயில் பிளாட்பாரத்திலும் பிளாட்பாரத்துக்கு வெளியிலும் வந்து நிறைந்து விட்டார்கள். அவர்களுடைய துணியிலிருந்தும் உடம்பிலிருந்தும் சொட்டிய ஜலம் ரயில்வே ஸ்டேஷனை வெள்ளக்காடு ஆக்கியது. முதலில் இவ்வளவு பேரும் ரயில் ஏற வருகிறார்களா என்ன என்று எண்ணிப் பட்டாபிராமன் ஆச்சரியப்பட்டான். ஆனால் ஈரத்துணிகளுடன் வந்தவர்கள் யாரும் அந்த ரயிலுக்குள் ஏறவில்லை, ரயிலும் போய்விட்டது. அந்தக் கூட்டத்துக்குள் புகுந்து இடிபட்டுக் கொண்டு பட்டாபிராமனும் அவனுடைய குடும்பத்தாரும் வெளியேற வேண்டி நேர்ந்தது. “இது என்ன கூட்டம்? இவ்வளவு பேரும் எந்த ரயிலில் ஏறுவதற்காக வந்திருக்கிறார்கள்?” என்று பட்டாபிராமன் போர்ட்டரைக் கேட்டான். “இவர்கள் ரயில் ஏற வரவில்லை, ஸார்! இன்று சாயங்காலம் அடித்த புயலிலும் மழையிலும் இவர்களுடைய கூரைக் குச்சுகள் பிய்த்துக் கொண்டு போய்விட்டன. மழைக்குத் தங்க இடமில்லாமல் இங்கே வந்து குவிந்திருக்கிறார்கள். சனியன் பிடித்தவர்கள்!” என்றான் போர்ட்டர். “ஏன் அப்பா வீணாகத் திட்டுகிறாய்? ஏழை ஜனங்கள் வேறு எங்கே போவார்கள்?” என்றாள் சீதா. “எங்கேயாவது சத்திரம் சாவடி பார்த்துப் போய்த் தொலைகிறது தானே? தங்க இடமில்லாவிட்டால் ரயில்வே ஸ்டேஷன்தானா அகப்பட்டது? இன்றைக்குச் சாயங்காலத்திலிருந்து இவர்களைத் துரத்தித் துரத்தி எனக்குக் கையும் அலுத்துவிட்டது சத்தம் போட்டுப் போட்டு வாயும் வலிக்கிறது!” என்றான் போர்ட்டர். கஷ்டப்பட்டு வாடகை வண்டிகள் பிடித்து ஏறிக்கொண்டு பட்டாபிராமன் முதலியவர்கள் வீடு போய்ச் சேர்ந்தார்கள். வீடு சேர்ந்ததும் லலிதா சரசரவென்று வீட்டுக் காரியங்களைப் பார்க்கத் தொடங்கினாள். பட்டாபிராமன் ஆபீஸ் அறைக்குள் சென்று வந்திருந்த கடிதங்களைப் பார்த்துவிட்டுப் பத்திரிகை படிக்கத் தொடங்கினான். குழந்தைகள் வேறு உலர்ந்த துணி உடுத்திக் கொண்டு சீக்கிரமாகச் சாப்பிட்டுவிட்டுத் தூங்குவதற்குச் சென்றார்கள். சீதா மட்டும் சோகமே உருக் கொண்டவளாக ஈரமான துணியைக் கூட மாற்றிக் கொள்ளாமல் ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். இலை போட்டானதும் லலிதா சாப்பிடக் கூப்பிடுவதற்காகக் கூடத்தில் வந்து பார்த்தாள். “இது என்ன, சீதா! ஈரத் துணியைக் கூட மாற்றிக் கொள்ளாமல் உட்கார்ந்திருக்கிறாயே?” என்று கேட்டாள். அதே சமயத்தில் பட்டாபிராமன் தன்னுடைய ஆபீஸ் அறைக்குள்ளேயிருந்து வெளியே வந்தான். “எனக்கென்னமோ அந்த ஏழை ஜனங்களின் நினைவாகவே இருக்கிறது, அவர்கள் எல்லாரும் - சின்னக் குழந்தைகள் உள்பட - ராத்திரியெல்லாம் ஈரத் துணியோடுதானே கழிக்கப் போகிறார்கள்? அவர்களை நினைத்தால் வேறு உலர்ந்த துணி உடுத்திக் கொள்ளவே மனம் வரவில்லை! இந்த மச்சு வீட்டில் கொஞ்சம்கூட நனையாமல் சௌகரியமாக உட்கார்ந்திருப்பதே வேதனையாயிருக்கிறது!” என்றாள் சீதா. “அது பரிதாபமான விஷயந்தான்; அதற்காக நாம் என்ன செய்வது? பத்துப் பேரா, இருபது பேரா? ஆயிரம் பேருக்கு மேலே இருக்கும்பொழுது விடிந்த பிறகு அவர்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்கலாம்!” என்றான் பட்டாபிராமன். “சாப்பிட்டுக் கொண்டே பேசலாம்; வாருங்கள்!” என்றாள் லலிதா. “இன்று இராத்திரி அத்தனை ஜனங்களும் பட்டினி கிடக்கப் போகிறார்கள். பச்சைக் குழந்தைகள் பசி தாங்காமல் அழுவார்கள். அதை நினைத்துக் கொண்டால் நமக்கு எப்படிச் சாப்பிடுவதற்கு மனம் வரும்?” என்றாள் சீதா. “ஆகையால் அதை நினைத்துப் பார்க்கவே கூடாது. உலகத்திலுள்ள கஷ்டங்களையெல்லாம் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தால் நமக்கு மன நிம்மதி இராதுதான்!” என்றான் பட்டாபிராமன். “நம்முடைய கவலையை நாம் பட்டால் போதாதா? ஊர்க் கவலையையெல்லாம் எதற்காக விலைக்கு வாங்க வேண்டும்?” என்றாள் லலிதா. “சில பேரால் அப்படிச் சொந்தக் காரியத்தை கவனிப்பதோடு இருக்க முடிகிறது. என்னால் அப்படி இருக்க முடியவில்லையே” என்றாள் சீதா. “எனக்குப் பட்டும், பாலுவும் சாரலில் நனைந்ததைப் பற்றியே நினைவாயிருக்கிறது. ஜலதோஷம் பிடித்துக் கொள்ளாமலிருக்க வேண்டுமே என்று கவலையாயிருக்கிறது!” என்று லலிதா சொன்னாள். “ரயில்வே ஸ்டேஷனில் இந்தக் குழந்தைகள் மாதிரி எத்தனை குழந்தைகளைப் பார்த்தோம்! அவ்வளவு பேரும் இன்று ராத்திரியெல்லாம் மழையிலும் சாரலிலும் கிடக்கப் போகிறார்கள். அவர்களுக்கெல்லாம் உடம்புக்கு வந்தால் யார் கவனிப்பார்கள்?” என்றாள் சீதா. “நானும் அதைப்பற்றி யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். பொழுது விடியட்டும்; என்னுடைய சிநேகிதர்களுடன் கலந்து யோசித்து ஏதாவது ஏற்பாடு செய்யலாம். இப்போது உலர்ந்த துணி உடுத்திக்கொண்டு சாப்பிடலாம் வாருங்கள்! நம்முடைய உடம்பைப் பாதுகாத்துக் கொண்டால்தானே மற்றவர்களுக்கு நம்மால் உதவி செய்ய முடியும்?” என்றான் பட்டாபிராமன். இதைக் கேட்ட சீதா எழுந்து சாப்பிடச் சென்றாள். சாப்பிட்ட பிறகு மூன்று பேரும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் படுக்கச் சென்றார்கள். லலிதா படுத்துக்கொண்ட உடனே கம்பளியை இழுத்துப் போர்த்திக்கொண்டு நிம்மதியாகத் தூங்கத் தொடங்கினாள். சீதாவுக்கு ரயில்வே ஸ்டேஷனில் பார்த்த ஏழை ஜனங்களை நினைத்து நினைத்து இரவெல்லாம் தூக்கம் வரவில்லை. பட்டாபிராமனுக்கோ சீதாவின் தயாள குணத்தை எண்ணி எண்ணித் தூக்கம் வரவில்லை. மறுநாள் பொழுது விடிந்ததும் பட்டாபிராமன் சீதாவிடம் சொன்ன வார்த்தையை நிறைவேற்ற எண்ணி வெளியே சென்றான். எத்தனை ஏழைக் குடும்பங்களின் குடிசைகள் விழுந்துவிட்டன. எத்தனை பேர் தங்க இடமின்றியும் உண்ண உணவின்றியும் தவிக்கிறார்கள் என்பதை யெல்லாம் விசாரித்துத் தெரிந்து கொண்டான். சில சிநேகிதர்களோடு கலந்து பேசி வெள்ளக் கஷ்ட நிவாரண வேலை தொடங்குவதற்கு வேண்டிய ஏற்பாடு செய்தான். மத்தியானம் வீட்டுக்குத் திரும்பி வந்து சீதாவிடம் எல்லா விவரங்களையும் கூறினான். “கல்கத்தாவில் இந்த மாதிரி கஷ்ட நிவாரண வேலையில் எனக்குக் கொஞ்சம் அனுபவம் உண்டு. நானும் உங்களுடன் வந்து ஸ்திரீகளுக்கும் குழந்தைகளுக்கும் என்னால் இயன்ற உதவி செய்கிறேனே! வீட்டில் வெறுமனே உட்கார்ந்திருக்கப் பிடிக்கவே இல்லை!” என்றாள் சீதா. பட்டாபிராமன் மிக்க சந்தோஷத்துடன் அதை ஒப்புக் கொண்டான். “இந்த ஊரில் அம்மாதிரி சேவை செய்யக்கூடிய இன்னும் சில சகோதரிகளும் இருக்கிறார்கள்! அவர்களுடன் உன்னைச் சேர்த்து விடுகிறேன்” என்று சொன்னான். அன்று மத்தியானமே பட்டாபிராமன் ஒரு பக்கத்திலும் சீதா இன்னொரு பக்கத்திலும் வெள்ளக் கஷ்ட நிவாரண வேலையில் ஈடுபட்டார்கள். முதலில் சிலநாள் வரையில் குடிசைகளை இழந்த ஏழை ஜனங்களுக்குப் பள்ளிக்கூடங்களில் தங்க இடம் கொடுக்கப்பட்டது. அவ்வளவு பேருக்கும் சமையல் செய்து சாப்பாடு போடவேண்டியிருந்தது. நோய்ப் பட்டவர்களுக்கு மருந்து கொடுக்க சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. குழந்தைகளுக்கு நோய் நொடி வராமல் சர்வ ஜாக்கிரதையுடன் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தன. மழை நின்று தரை காய்ந்த பிறகு அவர்களுக்கெல்லாம் புதிதாகக் குடிசைகள் கட்டிக்கொள்ள வசதி செய்து கொடுக்க வேண்டி வந்தது.நிவாரண வேலை முடிவடைவதற்கு மூன்று மாதம் பிடித்தது. இந்த மூன்று மாத காலமும் பட்டாபிராமனுக்கும் சீதாவுக்கும் ஓயாத ஒழியாத வேலை இருந்தது. அவர்களுடன் அந்த ஊர்க்காரர்கள் இன்னும் பலர் ஒத்துழைத்தார்கள். சீதாவின் ஊக்கமும் உழைப்பும் இனிய சுபாவமும் மதுரமான மொழிகளும் அனைவருக்கும் உற்சாகத்தை ஊட்டி வந்தன. தேவபட்டணமெங்கும் சீதாவின் புகழ் பரவி வந்தது. பட்டாபிராமன் சிறையிலிருந்து வந்தது முதல் உற்சாகம் குன்றியிருந்தான். தேசத்திற்குச் சுதந்திரமோ வந்தபாடில்லை. நாட்டில் தேசீய ஊக்கம் என்பதே கிடையாது. பழையபடி கோர்ட்டுக்குப் போய் வக்கீல் தொழில் செய்யப் பிடிக்கவில்லை. மேலும், கட்சிகாரர்களுக்கு எங்கே போவது? செய்வதற்கு வேறு வேலையும் இல்லை. இதனாலெல்லாம் மனச்சோர்வு அடைந்திருந்தவன் இப்போது புனர்ஜென்மம் எடுத்தவன் போல் ஆனான். வெள்ளக் கஷ்ட நிவாரணத்தில் அவனுக்கு வேலை நிறைய இருந்தது. அந்த வேலை அவனுக்கு மிகவும் பிடித்தமாகவும் இருந்தது. மாலையில் வீடு திரும்பியதும் அன்றன்று நடந்த வேலைகளைப்பற்றிப் பட்டாபியும் சீதாவும் உற்சாகமாகப் பேசிக் கொள்வார்கள். வீட்டில் பொதுவாகக் கலகலப்பு அதிகமாயிற்று. இது லலிதாவுக்கு மிகவும் சந்தோஷமாயிருந்தது. “இந்த வீடு இம்மாதிரி முன்னெப்போதும் கலகலப்பாயிருந்ததில்லை, சீதா! இவரும் இவ்வளவு குதூகலமா யிருந்ததில்லை. உன்னை இவருக்கு ரொம்பவும் பிடித்துப்போயிருக்கிறது. யாருக்குத்தான் உன்னைப் பிடிக்காமலிருக்கும்; நீ இங்கேயே எப்போதும் இருந்து விடு, சீதா!” என்று லலிதா அடிக்கடி சொல்லுவாள். “கடவுளுடைய சித்தமும் அப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது. எனக்குப் போக்கிடம் எங்கே?” என்று சொல்வாள் சீதா. “உன் குழந்தை வஸந்தியை நீ மதராஸில் விட்டு வைத்திருப்பது மட்டும் எனக்குப் பிடிக்கவில்லை. நாலு பேர் நாலு சொல்வதற்கு ஏன் இடம் வைத்துக் கொள்ள வேண்டும்? குழந்தையையும் இவ்விடத்துக்கு அழைத்துக் கொண்டு வந்து விடு! இரண்டு குழந்தையோடு மூன்றாவது குழந்தையாக இருந்துவிட்டுப் போகிறாள்!” என்று லலிதா கூறுவாள். “இந்தக் கோடைக்குப் பள்ளிக்கூடம் சாத்தியதும் வஸந்தியை அழைத்து வந்துவிடலாம் என்றுதான் எண்ணிக்கொண்டிருக்கிறேன்” என்று சீதா பதில் கூறுவாள். நாள் செல்லச் செல்ல, அந்த வீட்டில் லலிதாவின் செல்வாக்கு குன்றி சீதாவின் செல்வாக்கு அதிகமாகிக் கொண்டு வந்தது. பட்டுவும் பாலுவும் அம்மாவின் வார்த்தையைக் காட்டிலும் அத்தையின் வார்த்தைக்கு அதிக மதிப்புக் கொடுக்கத் தொடங்கினார்கள். அரை நாழிகை நேரம் அம்மா சாப்பிடக் கூப்பிட்டாலும் அவர்கள் வரமாட்டார்கள்; ஆனால் அத்தை ஒரு தடவை கூப்பிட்டால் ஓடி வந்து விடுவார்கள். வேலைக்காரர்கள் வீட்டு அம்மாளைக் காட்டிலும் டில்லி அம்மாளுக்கு அதிக மரியாதை காட்டத் தொடங்கினார்கள். லலிதா ஏதாவது ஒரு காரியத்தை இந்த மாதிரி செய்ய வேண்டும் என்று சொன்னால், “டில்லி அம்மா அப்படிச் செய்யச் சொல்லியிருக்கிறார்களே!” என்று வேலைக்காரர்கள் கூசாமல் பதில் சொல்லுவார்கள். சுண்டு, லலிதா சொல்லுகிற காரியத்தை எந்த நாளும் செய்ததில்லை; இப்போதும் அவள் பேச்சை ஒரு பொருட்டாக மதிக்க மாட்டான். ஆனால் சீதா அவனிடம் ஏதாவது செய்யும்படி சொல்லிவிட வேண்டியதுதான்! அடுத்த நிமிஷமே விழுந்தடித்து ஓடிச் சென்று அந்தக் காரியத்தைச் செய்துவிட்டு வருவான். ‘எள்ளு’ என்று சொன்னால், ‘எண்ணெய்’ கொண்டு வந்து விடுவான். இதெல்லாம் லலிதாவுக்குத் திருப்தியாகவே இருந்து வந்தது. தன்னுடைய அத்தியந்த அன்புக்குரிய தோழிக்கு இப்படி எல்லாரும் மரியாதை செய்வது அவளுக்கு மகிழ்ச்சி தந்தது. “அத்தங்கா! உன்னிடம் என்னதான் சொக்குப் பொடி இருக்கிறதோ? இப்படி எல்லாரும் மயங்கிப் போய்விடுகிறார்களே?” என்று லலிதா சீதாவிடம் அடிக்கடி சொல்லி வந்தாள். பத்தாம் அத்தியாயம் - எலெக்ஷன் சனியன்! வெள்ளக் கஷ்டத்தில் அகப்பட்ட ஏழைகளுக்கு முடிவில் அதனால் நன்மை ஏற்பட்டது. வயோதிகர்கள், குழந்தைகள் ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் இரண்டு இரண்டு புதுத் துணிகள் உடுத்திக் கொள்ளக் கிடைத்தன. சுத்தமான இடத்தில் சுத்தமான முறையில் கட்டிய புதிய குடிசைகள் கிடைத்தன. ஊருக்கு நடுவே ஒரு சிறு பிள்ளையார் கோவிலும் கட்டிக் கொடுக்கப்பட்டது. பிள்ளையார் கோவிலுக்கு முன்னால் பிரதி சனிக்கிழமை தோறும் பஜனை நடந்தது. இவ்வாறு வெள்ளக் கஷ்டத்துக்கு ஆளானவர்களின் பாடு கொண்டாட்டமாயிற்று. ஆனால் கஷ்ட நிவாரண வேலை செய்தவர்களின் பாடு திண்டாட்டமாயிற்று. செய்வதற்கு வேலை ஒன்றும் இல்லாமற்போகவே பட்டாபிராமன் மறுபடியும் மனச் சோர்வு அடைந்தான். சீதா சீமைக்குச் சென்ற கணவனைப் பற்றியும் மதராஸில் உள்ள குழந்தையைப் பற்றியும் எண்ணி எண்ணி உருகினாள். வீட்டில் கலகலப்புக் குறைந்தது; எல்லாருடைய முகமும் களை இழந்தது. ஒரு நாள் மாலை சில நண்பர்கள் பட்டாபிராமனைத் தேடிக் கொண்டு வந்தார்கள். அந்த ஊரில் நகரசபைத் தேர்தல் வருகிறதென்றும் அதற்குப் பட்டாபிராமன் நிற்கவேண்டும் என்றும் அவர்கள் சொன்னார்கள். தேர்தலில் நின்று ஜெயித்தால் சேர்மன் பதவி கிடைப்பதற்கும் ‘சான்ஸ்’ இருக்கிறது என்று ஆசை காட்டினார்கள். பட்டாபி ராமனுக்கு இந்த யோசனை அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஏற்கெனவே ஒரு தடவை தன் தந்தை இன்னொருவருக்காகத் தேர்தலில தலையிட்ட தினால் நேர்ந்த விளைவுகள் அவனுக்கு எச்சரிக்கையாக இருந்தன. ஆனாலும் அடியோடு அவன் மறுத்துச் சொல்லவில்லை. சிறை சென்று வந்த தியாகியாகிய அவனை யாரும் எதிர்த்து நிற்க மாட்டார்கள் என்று நண்பர்கள் கூறினார்கள். அது மட்டுமல்லாமல், சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள விபத்தின்போது அவன் ஏழை ஜனங்களுக்குச் செய்த சேவையைத் தேவப்பட்டணமே பார்த்துப் பிரமித்துப் போயிருப்பதாகவும், யாராவது அவனை எதிர்த்து நிற்கத் துணிந்தால் அத்தகையை எதிரிக்குத் தேவபட்டணம் நல்ல பாடம் கற்பிக்கும் என்றும், பட்டாபிராமன் வெற்றி அடைவது சர்வ நிச்சயம் என்றும் அந்த நண்பர்கள் சொன்னார்கள். அவர்களுக்குப் பட்டாபிராமன், “யோசித்துச் சொல்கிறேன்” என்று பதில் அளித்தான். அன்றிரவு சாப்பிடும்போது லலிதா, “யாராரோ வந்து என்னென்னமோ சொல்லிக் கொண்டிருந்தார்களே? என்ன சொல்லிக் கொண்டிருந்தார்கள்?” என்று கேட்டாள். “முனிசிபல் எலெக்ஷனுக்கு நிற்கும்படி சொன்னார்கள்! உன் அபிப்பிராயம் என்ன?” என்று பட்டாபிராமன் லலிதாவைக் கேட்டு விட்டுச் சீதாவின் முகத்தைப் பார்த்தான். லலிதா, “எலெக்ஷனும் வேண்டாம்; ஒன்று வேண்டாம் ஊரில் இருப்பவர்களுக்கு வேறு வேலை இல்லையாக்கும். ஏமாந்தவர் என்று தேடி வந்தார்களாக்கும்?” என்றாள். “சட்டென்று அப்படி ஏன் சொல்கிறாய், லலிதா! வந்தவர்கள் எல்லாரும் உன் அகத்துக்காரரின் சிநேகிதர்கள் தானே? அவர்கள் வேண்டுமென்று கெடுதலான காரியத்தைச் சொல்லுவார்களா?” என்று சீதா கேட்டாள். “உனக்கு இந்த ஊர் சமாச்சாரம் தெரியாது அத்தங்கா! முன்னே ஒரு தடவை இவருடைய அப்பா யாரோ ஒருவருக்காக எலெக்ஷனில் வேலை செய்தார். ஆனால் எங்களுக்கும் எதிர் வீட்டுக்காரர்களுக்கும் பேச்சு வார்த்தையே இல்லாமற் போயிற்று. பல வருஷங் கழித்துச் சூரியா வந்து சண்டையைத் தீர்த்து வைத்தான்! உனக்குக்கூட நான் எழுதியிருந்தேனே?” என்றாள். “அப்போது நடந்ததற்கும் இப்போது நடப்பதற்கும் எவ்வளவோ வித்தியாசம்! இவருடைய அப்பா தேசத்துக்காக எதுவும் செய்யவில்லை. இவர் இரண்டரை வருஷம் சிறையில் இருந்து விட்டு வந்திருக்கிறார். இவர் எலெக்ஷனுக்கு நின்றால் யார் எதிர்த்து நிற்க முடியும்? எதிர்த்து நிற்கிறவர்கள் அதோ கதி அடைய வேண்டியதுதான்!” என்று சீதா கூறினாள். “நீங்கள் நினைப்பதுபோல் அவ்வளவு சுலபமான காரியமில்லை. கள்ள மார்க்கெட்டில் ஏராளமான பணம் பண்ணிய ஆசாமி ஒருவர் இந்த வார்டில் நிற்கப் போவதாகக் கேள்விப்படுகிறேன். போட்டி பலமாக இருக்கும்!” என்றான் பட்டாபிராமன். “எவ்வளவு பலமாக இருந்தாலும் சரிதான்! அதற்காகப் பயந்து விடுவதா என்ன? நீங்கள் மட்டும் தேர்தலுக்கு நின்றால், நான் வீடு வீடாகப் போய் வோட்டுக் கேட்கத் தயார்!” என்றாள் சீதா. “நீங்கள் அவ்வளவு ஊக்கமாக வேலை செய்வதா யிருந்தால் நானும் நிற்கத் தயார்!” என்று சொன்னான் பட்டாபிராமன். “அப்படி உற்சாகமாகச் சொல்லுங்கள்! நாளைக்கே வேலை ஆரம்பித்து விடலாம்!” என்றாள் சீதா. “எல்லாவற்றுக்கும் கொஞ்சம் யோசித்துச் செய்யலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. எதிர்த்த வீட்டுக்கார ரிடம் யோசனை கேளுங்களேன் நமக்கு வேண்டியவர்களில் வயதானவர், சரியான யோசனை சொல்லக்கூடியவர், தாமோதரம் பிள்ளைதானே?” என்று லலிதா சொன்னாள். “எதிர்த்த வீட்டுக்காரரைப் போய்க் கேட்பது என்ன? அவர்தான் ஜஸ்டிஸ் கட்சிக்காரர் என்பது தெரியுமே? எலெக்ஷனுக்கு நிற்க வேண்டாம் என்றுதான் அவர் சொல்லுவார்!” என்றாள் சீதா. “எலெக்ஷனுக்கு நின்றால் ரொம்பப் பணச் செலவு ஆகும். நமக்கு இப்போது வருமானமும் இல்லையே?” என்றாள் லலிதா. “பணம், பணம் என்று அடித்துக் கொள்வது எனக்குப் பிடிப்பதே இல்லை. பணத்தை தலையில் கட்டிக்கொண்டா போகப் போகிறோம்? அப்படி யொன்றும் பணச் செலவும் அதிகமாக ஆகிவிடாது. ஆகிற செலவுக்கு நான் என் கழுத்துச் சங்கிலியை விற்றுக் கொடுக்கிறேன்!” என்று சீதா ஆவேசமாகக் கூறினாள். “நீ ஒன்றும் கழுத்துச் சங்கிலியை விற்றுக் கொடுக்க வேண்டாம். அப்படி நாங்கள் கதியற்றுப் போய்விடவில்லை!” என்றாள் லலிதா. “போதும் போதும்; நிறுத்து. இந்த உதவாக்கரைப் பேச்சை!” என்று பட்டாபிராமன் கடுகடுப்புடன் லலிதாவைப் பார்த்துச் சொன்னான். “யார் என்ன சொன்னாலும், நீங்கள் எலெக்ஷனுக்கு நிற்கிறது எனக்குக் கொஞ்சங்கூடப் பிடித்தமில்லை!” என்றாள் லலிதா. “உனக்கு நான் செய்கிற காரியம் எதுதான் பிடித்தமாயிருந்தது? நான் 1942-ல் சட்ட மறுப்புச் செய்தபோதும் நீ ‘வேண்டாம்’ என்றுதான் சொன்னாய். உன்னுடைய யோசனையைக் கேட்டால் உருப்பட்டாற் போலத்தான்!” என்றான் பட்டாபிராமன். லலிதாவின் கண்களில் கண்ணீர் ததும்பிற்று. அதைக் காட்டிக் கொள்ள அவளுக்கு வெட்கமாயிருந்தது. வேறு பக்கம் திரும்பிக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். சமையற்காரியோ அல்லது வேறு வேலைக்காரர்களோ இருக்கும்போது தன் கணவருடன் எந்த விஷயத்தைப் பற்றியும் வாக்குவாதம் தொடங்கக் கூடாது என்று அவள் மனம் சங்கல்பம் செய்து கொண்டது. வேலைக்காரர்கள் முன்னால் மட்டும் என்ன? சீதா இருக்கும்போதுகூட எந்த விஷயத்தைப் பற்றியும் இனிமேல் விவாதம் செய்யக்கூடாதுதான்! என்ன அவமானம்! என்ன மானக்கேடு. மறுநாள் பட்டாபிராமன் எதிர் வீட்டுக்குப் போய்த் தாமோதரம்பிள்ளையிடம் தான் எலெக்ஷனுக்கு நிற்கத் தீர்மானித்திருப்பதாகவும் அவருடைய ஆசிர்வாதம் வேண்டும் என்றும் தெரியப்படுத்தினான். “என்னுடைய ஆசீர்வாதம் வேண்டிய மட்டும் தருகிறேன், தம்பி! ஆனால் இந்த அருமையான யோசனை உனக்கு யார் சொன்னது?” என்று தாமோதரம் பிள்ளை கேட்டார். “எல்லா சிநேகிதர்களும் ஒருமிக்க வந்து சொன்னார்கள்; எனக்கும் அது சரி என்று தோன்றித்தான் நிற்கிறேன்” என்றான் பட்டாபி. “அதிலுள்ள லாப நஷ்டங்களைப்பற்றி யோசித்தாயா? பணச் செலவு ரொம்ப ஆகுமே! அதோடு வீண் விரோதங்கள் ஏற்படும். இப்போது உனக்கு ஊரில் ரொம்ப நல்ல பெயர் இருக்கிறது. அதை ஏன் கெடுத்துக் கொள்கிறாய்!” என்றார் தாமோதரம் பிள்ளை. “நல்ல பெயர் எதற்காகக் கெடுகிறது? தேசத் தொண்டில் இறங்கிய பிறகு அதையெல்லாம் பார்த்தால் சரிப்படுமா? நான் சிறைக்குப் போவதற்கே பயப்படவில்லையே? மற்றதற்கெல்லாம் பயப்பட்டு விடுவேனா?” என்றான் பட்டாபிராமன். “சிறைக்குப் போவது வேறு விஷயம், தம்பி. அதனால் யாருக்கும் கஷ்டமோ நஷ்டமோ இல்லை. ஆனால் எலெக்ஷன் விஷயம் அப்படியல்ல. பலபேருடைய துவேஷத்துக்கு ஆளாகும் படி நேரிடும்.” “எது எப்படியானாலும் நான் தேர்தலுக்கு நிற்பது என்று தீர்மானித்துச் சிநேகிதர்களிடம் சொல்லியும் விட்டேன். இனிப் பின் வாங்குவதற்கில்லை!” என்றான் பட்டாபிராமன். “அப்படியானால் சரி; உனக்கு வெற்றி கிடைக்கக்கூடும். அதற்கு என்னாலான உதவியும் செய்கிறேன். உன் தகப்பனாரையும் சூரியாவையும் உத்தேசித்து உனக்கு நான் உதவி செய்யத்தான் வேண்டும். ஆனால் ஒரு விஷயம், தம்பி! அந்தப் புது டில்லிப் பெண் சீதா எப்போது ஊருக்குப் போகப் போகிறாள்? சீக்கிரத்தில் அவளை அனுப்பி விடுவது நல்லது!” என்றார் தாமோதரம் பிள்ளை. “இதென்ன திடீரென்று இப்படிச் சொல்கிறீர்கள்? சீதாவைப் பற்றி நீங்கள் அடிக்கடி புகழ்ந்து பாராட்டுவது வழக்கம் ஆயிற்றே?” “நல்ல காரியம் செய்து கொண்டிருந்த வரையில் புகழ்ந்து பாராட்டினேன். இந்தக் காரியத்தில் உன்னைத் தூண்டி விட்டிருப்பது நல்ல காரியம் என்று எனக்குத் தோன்றவில்லை!” “பிள்ளைவாள்! சீதாவுக்கும் என்னுடைய தீர்மானத்துக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை! அவள் என்னைத் தூண்டிவிடவும் இல்லை; எனக்குச் சுயபுத்தி இல்லையா, என்ன?” என்றான் பட்டாபிராமன். நகரசபைத் தேர்தலுக்கு நிற்பதாகப் பட்டாபிராமன் தெரிவித்த நாளிலிருந்து அந்த வீட்டில் வருவோர் போவோரின் கூட்டமும் கூச்சலும் அதிகமாயின. பகல் என்றும் இரவென்றும் இல்லாமல் தேர்தலுக்கு வேலை செய்யும் சிநேகிதர்களும் தொண்டர்களும் எந்த நேரத்திலும் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் பலர் பட்டாபியின் வீட்டிலேயே காப்பி, சிற்றுண்டி, சாப்பாடு முதலியவை வைத்துக்கொண்டார்கள். வெற்றிலை கவுளி கவுளியாகவும், புகையிலை கத்தை கத்தையாகவும் செலவாயின. பணம் நோட்டு நோட்டாகச் செலவாகி வந்தது. சீட்டுக்கட்டு தினம் ஒன்று வாங்கப்பட்டது. வீட்டில் ஒரு வருஷத்துக்குச் சேகரித்து வைத்திருந்த உணவுப் பண்டங்கள் எல்லாம் ஒரு மாதத்தில் தீர்ந்து போயின. லலிதாவுக்கு இது ஒன்றும் பிடிக்கவில்லை. அவளுடைய வருத்தத்தை அதிகப்படுத்துவதற்கு இன்னும் சில நிகழ்ச்சிகளும் சேர்ந்து கொண்டன சீதாவின் ஆடம்பரமும் அதிகார தோரணையும் நாளுக்கு நாள் அதிகமாக வளர்ந்தன. பெண்மைக்குரிய அடக்கம் வரவரக் குறைந்து வந்தது. தேர்தல் வேலைக்கு என்று வருகிற புருஷர்களோடு சரிசமமாக உட்கார்ந்துகொண்டு இரைந்து பேசுவதும் வாதாடுவதும், ‘ஹா ஹா ஹா’ என்று கைதட்டிச் சிரிப்பதும் வழக்கமாகிக் கொண்டு வந்தன. சீதாவின் நல்ல குணங்களைப் பற்றி ஏற்கெனவே ரொம்பவும் புகழ்ந்து பேசிய அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் இப்போது அவளைப் பற்றிக் குறைவாகப் பேசத் தொடங்கினார்கள். பட்டாபிராமனைப் பற்றியும் ஒரு மாதிரி எகத்தாளமாகப் பேச ஆரம்பித்தார்கள். இந்தப் பேச்சு லலிதாவின் காதுக்கு எட்டி அவளுக்கு மிக்க மன வேதனையை உண்டுபண்ணி வந்தது. ஒரு நாள் வாசல் பக்கத்துக் காமிரா உள்ளில் பட்டாபிராமனும் அவனுடைய எலெக்ஷன் தோழர்களும் சீதாவும் உட்கார்ந்து அட்ட காசமாகப் பேசிச் சத்தம் போட்டுச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த லலிதாவின் மனதில் ஆத்திரம் பொங்கிக்கொண்டிருந்தது. வந்திருந்தவர்கள் எப்போது போய்த் தொலைவார்கள் என்று காத்திருந்தாள். அவர்கள் போனதும் சீதாவும் உள்ளே வந்து மச்சுப்படி ஏறித் தனது அறைக்குச் சென்றாள். பிறகு பட்டாபிராமன் வந்தான்; லலிதாவைப் பார்த்து, “சமையல் ஆகிவிட்டதா? சீக்கிரம் கிளம்ப வேணும்” என்றான். “நன்றாகச் சீக்கிரம் கிளம்பினீர்கள்! சீக்கிரம் கிளம்பி என்ன கோட்டை கட்டப் போகிறீர்களோ, தெரியவில்லை. இந்த எலெக்ஷன் சனியன் உங்களை நன்றாகப் பிடித்துக்கொண்டு ஆட்டுகிறது!” என்றாள் லலிதா. “என்ன உளறுகிறாய்? வாயை மூடு! ஷட் அப்?” என்று பட்டாபிராமன் உரத்துக் கத்தினான். “நான் ஒன்றும் உளறவில்லை, உள்ளதைத்தான் சொல்லுகிறேன். எலெக்ஷன் சனியன் மட்டுமா? சீதா சனியனும் உங்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறது!” என்று லலிதா ஆத்திரமாகச் சொன்னாள். பட்டாபிராமன் ரௌத்ராகாரம் அடைந்தான், அவனுடைய முகம் விகாரப்பட்டது. “என்ன சொன்னாய்? ஜாக்கிரதை; வாயைத் திறந்தாயோ, கொன்று விடுவேன்!” என்று பதறிக்கொண்டே சொன்னான். “ஆமாம்; அப்படியே கொன்று விடுங்கள்! உங்கள் மகாத்மா காந்தி இதைத்தானே சொல்லிக் கொடுத்திருக்கிறார்?” பட்டாபியின் பதட்டம் கொஞ்சம் அடங்கியது. தக்க பதில் சொல்வதற்குச் சிறிது யோசித்தான். அதற்குள் லலிதா, "இந்த மிரட்டல் எல்லாம் வேண்டாம். நான் சொல்லுகிறதைக் கொஞ்சம் கேளுங்கள். இந்த எலெக்ஷன் சங்கடத்தை விட்டுத் தொலையுங்கள். அதை விட்டுத் தொலைக்க முடியாவிட்டால் சீதாவையாவது இந்த வேலைக்குக் கூப்பிட வேண்டாம். ஊர் சிரிக்கிறது; என் மானம் போகிறது!" என்றாள். “மானம் போகட்டும்; தாராளமாகப் போகட்டும். நானும் எலெக்ஷனை விடுவதாகவும் உத்தேசமில்லை. சீதாவுக்குத் தடை உத்தரவு போடப் போவதுமில்லை. இதிலெல்லாம் நீ தலையிட வேண்டாம்; உன் வேலையைப் பார்!” என்றான் பட்டாபிராமன். “நான் தலையிடாமல் வேறு யார் தலையிடுவது, நீங்கள் இவ்விதம் சொன்னால் சீதாவை நான் ஊருக்குப் போகச் சொல்லி விடுகிறேன்!” என்றாள் லலிதா. “சீதாவை ஊருக்குப் போகச் சொல்ல நீ யார்? உனக்கு என்ன அதிகாரம்?” என்று பட்டாபிராமன் கர்ஜித்தான். “பின்னே யாருக்கு அதிகாரம்? என்னுடைய அத்தங்கா சீதாவை நான் அழைத்துக்கொண்டு வந்தேன்; நான் போகச் சொல்கிறேன்.” “சீதா இந்த வீட்டிலிருந்து போகமாட்டாள். யாராவது போகிறதாயிருந்தால் நீதான் போகவேண்டும்!” “என்னுடைய வீட்டிலிருந்து நான் ஏன் போகிறேன்? எங்கிருந்தோ வந்த நாயை வீட்டிலே வைத்துவிட்டு….?” பட்டாபிராமனுக்கு மறுபடியும் ரௌத்ராகாரம் வந்து விட்டது. “என்னடி சொன்னாய்? யாரடி நாய்?” என்று கேட்டுக் கொண்டே அவன் லலிதா அருகில் வந்தான். “இதோ இந்த நிமிஷமே உன்னை இந்த வீட்டை விட்டுத் துரத்திவிட்டு மறு காரியம் பார்க்கிறேன்! திமிர் பிடித்த கழுதை!” என்று சொல்லிக் கொண்டே லலிதாவின் கழுத்தில் கையைப் போட்டு வெளி வாசற்படியை நோக்கித் தள்ளத் தொடங்கினான். லலிதா, “ஐயோ! ஐயோ!” என்று அலறினாள். அதைக் கேட்டுவிட்டு வந்தனைப்போல் சூரியா அச்சமயம் உள்ளே நுழைந்தான். சூரியா வந்ததைப் பார்த்துவிட்டுப் பட்டாபிராமனும் லலிதாவும் பிரமித்துப் போய் நின்றார்கள். மேல் மச்சுப்படியில் நின்று கொண்டு சீதா இந்த நாடகத்தையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய உள்ளத்தின் கொந்தளிப்பை முகத்தோற்றம் காட்டியது. பதினொன்றாம் அத்தியாயம் - பட்டாபியின் பதவி மோகம் சூரியாவைப் பார்த்து ஒரு நிமிஷம் திகைத்துப் போய்ப் பேசாமல் நின்ற லலிதா மறு நிமிஷம் ஒருவாறு சமாளித்துக் கொண்டு முகத்தில் மலர்ச்சியையும் வருவித்துக் கொண்டாள். “சூரியாவா! இது என்ன? சொல்லாமல் திடீரென்று வந்து விட்டாய்,” என்று கேட்டுவிட்டுப் பட்டாபிராமனைத் திரும்பிப் பார்த்து, “பார்த்தீர்களா? இந்த மாதிரியெல்லாம் விளையாட வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன் அல்லவா? சூரியாவாக இருந்ததினால் போயிற்று! வேறு யாராவது பார்த்திருந்தால் நிஜம் என்றல்லவா நினைத்துக் கொள்வார்கள்?” என்றாள். பட்டா பிராமன் ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்துவிட்டு, “வா, அப்பா! நல்ல சமயம் பார்த்துத்தான் வந்தாய்! தாம்பத்திய கலக நாடகம் நடந்து கொண்டிருக்கும் போது!” என்றான். சூரியாவுக்குத் தான் கண்ட காட்சியை உண்மை என்று நம்புவதா, நாடகம் என்று நினைப்பதா என ஒரு கண நேரம் திகைப்பு உண்டாயிற்று. எப்படியாவது இருக்கட்டும் என்று நினைத்துக் கொண்டு, “நாடகத்தைப் பார்க்க நான் தனியாக வரவில்லை! அம்மாவையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன்!” என்றான். இதைக் கேட்டவுடன் பட்டாபிராமன், லலிதா இருவருடைய முகங்களும் சுருங்கின. பட்டாபிராமன் மாடிக்குப் போகலாமா என்று அண்ணாந்து பார்த்தான். அங்கே சீதா எதையோ பறிகொடுத்தது போன்ற முகபாவத் துடன் நிற்பதைக் கண்டதும் மேலும் கோபமடைந்து தன்னுடைய ஆபீஸ் அறைக்குள் சென்று படாரென்று கதவைச் சாத்தினான். லலிதா சூரியாவை நெருங்கி வந்து, “அண்ணா! இவருக்கு என் மேல் நிஜமாகக் கோபம். நீ கொஞ்சம் அவருடன் நல்ல வார்த்தையாகப் பேசிச் சமாதானப்படுத்து!” என்றாள். அந்தச் சமயம் சரஸ்வதி அம்மாள் மூட்டை முடிச்சுகளுடனும் ஊறுகாய் ஜாடியுடனும் உள்ளே வரவே, “வா! அம்மா!” என்று சொல்லிக்கொண்டு அவளை வரவேற்கப் போனாள். சூரியா அண்ணாந்து பார்த்தான், அங்கே ஒரு நிமிஷத்துக்கு முன்னால் நின்று கொண்டிருந்த சீதா அறைக்குள் போய் விட்டதை அறிந்து கொண்டான். பட்டாபிராமனைப் பார்ப்பதற்கு அவனுடைய ஆபீஸ் அறைக்குச் சென்றான். “சூரியா! உன்னிடம் வேஷம் போட எனக்கு விருப்பம் இல்லை. உன் தங்கை அம்மாதிரி பொய் நடிப்பு நடிக்கவேண்டும் என்கிறாள். அது என்னால் முடியாத காரியம், உண்மையைச் சொல்லிவிடுகிறேன். நீ உள்ளே நுழைந்து வந்தபோது நான் லலிதாவைக் கழுத்தைப் பிடித்து நிஜமாகவே தள்ளிக் கொண்டிருந்தேன். அதற்குக் காரணம் உன் அத்தங்கா சீதாதான். அந்தப் புண்ணியவதியை நீ தயவு பண்ணி இங்கிருந்து அழைத்துக் கொண்டு போய்விடு. அவள் இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து உன் தங்கையின் குணமே மாறிப் போய்விட்டது. அவளுடைய நச்சையும் ஆத்திரத்தையும் ஆங்காரத்தையும் என்னால் பொறுக்கவே முடியவில்லை. தயவு பண்ணி உன் அத்தங்காளை அழைத்துக் கொண்டு போய்த் தொலை!” என்று படபடவெனப் பொழிந்தான் பட்டாபிராமன். “ஆகட்டும், ஸார்! உங்கள் இஷ்டப்படியே செய்கிறேன். நீங்களும் லலிதாவும் இந்த நிலைமைக்கு வருவீர்கள் என்று நான் சொப்பனத்தில்கூட நினைக்கவில்லை. இதற்கெல்லாம் காரணம் நான் என்பதை நினைத்தால் வருத்தமாயிருக்கிறது” என்றான் சூரியா. “நீ என்ன செய்வாய், சூரியா! உன் பேரில் என்ன தப்பு? ஸ்திரீகளுடைய சுபாவம் இவ்வளவு மோசமாயிருக்கும் என்று உனக்கு எப்படித் தெரியும்? இத்தனை நாளாகக் கிரகஸ்தாசிரமம் நடத்தும் எனக்கே தெரியவில்லையே? இந்த முட்டாள் தனத்தைக் கேள்! உன் அத்தங்கா சீதாவை இங்கே அழைத்துவர வேண்டாம் என்று நான் எவ்வளவோ முட்டிக் கொண்டேன். இவள் கேட்கவில்லை; பிடிவாதமாக அழைத்துக் கொண்டு வந்தாள். ‘அத்தங்கா’ ‘அத்தங்கா’ என்று பரிந்து பிராணனை விட்டு விடுகிறவளைப் போலப் பேசினாள். சீதா நாகரிகமாக நாலுபேருடன் பேசுவதையும் பழகுவதையும் கண்டால் இவளுக்கு அசூயையாயிருக்கிறது. அப்படியெல்லாம் இவளை இருக்க வேண்டாமென்று யார் தடுத்தார்கள்? நானோ இந்த ‘ரெச்சட்’ எலெக்ஷனில் அகப்பட்டுக்கொண்டு தவிக்கிறேன். வேலை விழி பிதுங்குகிறது, இன்னும் இரண்டு வாரந்தான் பாக்கி யிருக்கிறது வோட்டுப் போடும் தேதிக்கு. பலமாக வேலை செய்யாவிட்டால் இத்தனை நாள் பட்ட கஷ்டமும் செலவழிந்த பணமும் வீணாய்ப் போய்விடும். இந்த நெருக்கடியில் நான் எலெக்ஷன் வேலையைக் கவனிப்பதா, இந்தப் பெண் பிள்ளைகளின் சண்டையைத் தீர்த்துக் கொண் டிருப்பதா? நல்ல வேளையாக மகராஜன், நீ வந்துவிட்டாய்! சீதாவை அழைத்துக்கொண்டு போய்விடு! நான் நிம்மதியாக என் வேலையைப் பார்க்கிறேன்!” என்று பட்டாபிராமன் பேசி நிறுத்தியபோது பெரும் மழை பெய்து ஓய்ந்தது போலிருந்தது. “பட்டாபி ஸார்! இந்த எலெக்ஷன் தொல்லையில் நீங்கள் அகப்பட்டுக் கொள்ளாமலிருந் திருக்கலாம்,” என்று சூரியா பேசத் தொடங்குவதற்குள்ளே பட்டாபிராமன் மறுபடியும் குறுக்கிட்டான். “நீ இப்படித்தான் சொல்லுவாயென்று எனக்குத் தெரியும். நீ சர்வ சங்க பரித்யாகி; நித்தியப் பிரம்மச்சாரி. உன்னைப் போலவே எல்லாரும் உலகத்தை வெறுத்துவிட்டு இருக்க முடியுமா? எனக்கு இந்த உலகத்திலே இன்னும் சில காரியங்கள் இருக்கின்றன. எனக்குச் சில வாழ்க்கை இலட்சியங்கள் இருக்கின்றன. இந்தப் பட்டணத்தில் கொஞ்சம் பொது ஊழியம் செய்ய வேண்டும், நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று ஆசையிருக்கிறது. எனக்குப் பணம் காசில் பற்றுக் கிடையாது. ஆனால் புகழ் என்பது ஒன்று இருந்து தொலைக்கிறதல்லவா? புகழை விரும்பாமல் யார் இருக்க முடியும்? தன்னோடொத் தவர்கள் தன்னுடைய ஊர் மனிதர்கள், தன்னுடைய தேசத்தவர்கள் இவர்களிடம் புகழ் அடைய ஒருவன் விரும்பவில்லை யென்று சொன்னால் அதை நான் நம்ப முடியாது. அப்படிச் சொல்கிறவனை நான் சுத்த ‘ஹம்பக்’ என்றுதான் சொல்வேன். இந்தத் தேவபட்டணத்தில் என் தகப்பனார் எவ்வளவோ செல்வாக்குடன் இருந்தார், அவர் காலம் ஆகிவிட்டது. ‘யானைக்குப் பிறந்தது பூனையாயிற்று’ என்று பெயர் வாங்க எனக்கு இஷ்டமில்லை. நாலு பேருக்கு மத்தியில் நானும் ஒரு மனுஷன் என்று பெயர் வாங்காவிட்டால் இந்த வாழ்க்கையினால்தான் என்ன பிரயோஜனம்? மேலும், இந்த ஊர் ‘பார்ட்டி பாலிடிக்ஸ்’ விஷயமும் உனக்குத் தெரியாது. பழைய முனிசிபல் சேர்மன் கள்ள மார்க்கெட்டில் ஏராளமாகப் பணம் சேர்த்து இல்லாத அட்டூழியங்கள் எல்லாம் செய்து கொண்டிருக்கிறான். தேவபட்டணமே தன்னுடைய சொந்தக் கோட்டை என்று எண்ணிக் கொண்டிருக்கிறான். அவனை இந்தத் தடவை தோற்கடித்தாலொழிய, இந்த ஊரில், ‘காங்கிரஸ்’ என்ற பெயரையே யாரும் எடுக்க முடியாது. அந்தக் கிராதகனை எதிர்த்து நின்று தோற்கடிப்பதற்கு என்னைத் தவிர வேறு யாரும் கிடையாது. இங்கே எல்லாருடைய ஏகோபித்த அபிப்ராயமும் இதுதான். இதில் தலையிடுவதற்கு உனக்கு உரிமை இல்லை; தகுதியும் இல்லை! எலெக்ஷன் இன்னும் இரண்டு வாரம் இருக்கும் சமயத்தில் நான் பின்வாங்கினால் அதைக் காட்டிலும் அவமானம் வேறு வேண்டியதில்லை. அப்புறம் நான் வெளியில் தலைகாட்டவே முடியாது.” பட்டாபிராமன் மூச்சு விடுவதற்காகப் பேச்சை நிறுத்திய சமயம் பார்த்துச் சூரியா சொன்னான்: “பட்டாபி ஸார்! நான் ஒரு வார்த்தை சொல்லுவதற்குள் நீங்கள் நூறு வார்த்தை சொல்லி விட்டீர்கள். இந்தச் சமயத்தில் உங்களைப் பின்வாங்கும்படி நான் சொல்லவில்லை. அதற்கு உரிமையோ, தகுதியோ, ஒன்றும் எனக்கு கிடையாது என்பதையும் அறிந்திருக்கிறேன். ‘எலெக்ஷனில் இறங்காமல் இருந்திருக்கலாம்’ என்று மட்டுந்தான் சொன்னேன். அதுவும் என்னுடைய அபிப்ராயமே தவிர உங்களைக் கட்டாயப்படுத்த உத்தேசமே எனக்குக் கிடையாது. இப்போது நீங்கள் தேர்தலுக்கு நின்று இவ்வளவு தூரம் வேலை நடத்திய பிறகு உங்களைப் பின் வாங்கும்படி சொல்ல எனக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? நான் சொல்ல வந்தது வேறு விஷயம். எலெக்ஷன் வேலையில் சீதா ரொம்ப ஒத்தாசையாயிருக்கிறாள் என்று நான் கேள்விப்பட்டேன். ஆகையால் அவளை இந்தச் சமயம் ஊருக்கு அனுப்புவது உசிதமாயிராது. இத்தனை நாள் இருந்தவள் இன்னும் இரண்டு வாரம் இருக்கட்டும். அதற்குப் பிறகு வேண்டுமானால் பார்க்கலாம்…..” “உனக்கென்னடா, அப்பா, சூரியா! வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று சொல்லி விடுகிறாய். கஷ்டப்படுகிறவன் நான் அல்லவா? இந்த இரண்டு பொம்மனாட்டிகளுக்கு மத்தியில் அகப்பட்டுக் கொண்டு என்னால் இனிமேல் சங்கடப்பட முடியாது. வேலை அநியாயமாய்க் கெட்டுப் போகிறது. அப்படிச் சீதா இங்கு இருக்கிறதாயிருந்தால் லலிதாவையாவது நீ அழைத்துக்கொண்டு போகவேண்டும். போதும் போதாதற்கு உன் அம்மா வேறு வந்திருக்கிறாள். சிவ சிவா; வீட்டில் இனிமேல் இருபத்து நாலு மணி நேரமும் ரகளைதான். சூரியா! உனக்குப் புண்ணியமாய்ப் போகட்டும். நீ சீதாவையும் உன் தாயாரையும் இன்றைக்காவது நாளைக்காவது அழைத்துக் கொண்டு போய்விடு! தெரிகிறதா? நானும் லலிதாவும் எப்படியோ எங்கள் பாட்டைப் பார்த்துக் கொள்கிறோம். இந்த உலகத்தில் ஒருவரைப் பார்த்து ஒருவர் பிறந்திருக்கவில்லையல்லவா? சீதாவை நம்பிக் கொண்டுதானா இந்த எலெக்ஷனில் நின்றேன்?….” “பட்டாபி ஸார்! கொஞ்சம் என் வார்த்தையைக் கேளுங்கள். என்னுடைய அபிப்ராயத்தில் உங்களுக்கு எப்போதும் கௌரவம் இருந்து வந்தது. நான் அப்படி ரொம்பத் தவறுதலாக எந்தக் காரியத்தையும் சொல்லமாட்டேன் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்து வந்தது. அதைக் கொஞ்சம் ஞாபகப்படுத்திக் கொண்டு ஒரே ஒரு நாள் எனக்குச் சாவகாசம் கொடுங்கள். அதற்குள் சீதாவிடமும் லலிதாவிடமும் பேசிப் பார்த்துவிட்டு முடிவாக என் அபிப்பிராயத்தைச் சொல்கிறேன். ஒன்றிலும் சரிக்கட்டி வராது என்று தோன்றினால் உங்கள் இஷ்டப்படியே சீதாவை அழைத்துக்கொண்டு போய் விடுகிறேன்!” என்றான் சூரியா. “சரி! உன்னுடைய சாமர்த்தியத்தைப் பார்த்து விடலாம்!” என்றான் பட்டாபிராமன். சீதாவைப் பார்த்துச் சூரியா , “அத்தங்கா! நான் உள்ளே வந்தபோது நடந்த நாடகத்தை நீயும் மாடியிலிருந்து பார்த்தாய் போலிருக்கிறதே!” என்றான். “ஆமாம், சூரியா! அது என் தலைவிதி! காசிக்குப் போனாலும் தன் பாவம் தன்னோட என்பார்கள் அல்லவா? அதுபோல நான் எந்த இடத்துக்குப் போனாலும் என்னோடு துரதிர்ஷ்டத்தையும் கொண்டு போகிறதாகக் காண்கிறது. நான் நல்லது செய்யப் பார்த்தாலும் அது எப்படியோ கெடுதலாய் முடிந்து விடுகிறது. இன்றைக்கே நான் இந்த வீட்டிலிருந்து கிளம்பி விடுவதாகத் தீர்மானித்து விட்டேன்!” “இன்றைக்கே கிளம்பி எங்கே போவதாக உத்தேசம்?” என்று சூரியா கேட்டான். “எங்கே போகிறது? போகிறதற்கு இடமில்லையா என்ன? கிணறு, குளம், ஏரி, சமுத்திரம் எல்லாந்தான் இருக்கிறது! இல்லாவிட்டால் ரயில் தண்டவாளம் இருக்கிறது! மதராஸுக்குப் போய் ஒரு தடவை வஸந்தியைப் பார்த்துவிட வேணும். அப்புறம், ஏதாவது ஒரு வழி தேடிக் கொள்கிறேன். உனக்கு அதைப்பற்றிய கவலை வேண்டாம்!” என்று சொல்லிவிட்டுச் சீதா கலகலவென்று கண்ணீர் வடித்தாள். “அத்தங்கா! எல்லாக் கஷ்டங்களுக்கும் ஒரு முடிவு உண்டு. வாழ்க்கையில் நீ ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறாய் என்பது உண்மைதான். ஆனால் உன்னைவிடக் கஷ்டம் அனுபவித்தவர்களும் உலகத்தில் உண்டு. அவர்களுக்கெல்லாம் விடிவுகாலம் வந்திருக்கிறது.” “என்னுடைய கஷ்ட காலம் என்னோடு மட்டும் போனால் தேவலையே, சூரியா! நான் எங்கே போகிறேனோ, அங்கெல்லாம் தொடர்ந்து வந்து விடுகிறதே! ராஜம்பேட்டைக்கு வந்தேன்; அருமை மாமாவை யமலோகத்துக்கு அனுப்பினேன்! இவ்விடம் வந்தேன்; என் அருமைத் தோழிக்கும் அவளுடைய புருஷனுக்கும் சண்டையை மூட்டினேன், டில்லியிலே அவருக்கு என்னாலே உத்தியோகமே போய்விட்டது. சூரியா! வஸந்தியை மதராஸிலிருந்து நான் ஏன் அழைத்துக்கொண்டு வரவில்லை தெரியுமா? பள்ளிக்கூடம் வீணாய்ப் போய் விடுமே என்று குழந்தை சொன்னது வாஸ்தவந்தான். அது அவளாய்ச் சொல்லவில்லை, பாட்டி சொல்லிக் கொடுத்ததையே சொன்னாள். ‘பள்ளிக்கூடம் போனால் போகிறது; என்னுடன் வா!’ என்று நான் சொல்லி யிருந்தால் கட்டாயம் வந்திருப்பாள். ஆனால் நான் வற்புறுத்திக் கூப்பிடவில்லை. எனக் கென்னமோ மனதில் சதா காலமும் ஒரு பயம் தோன்றிக் கொண்டிருந்தது - என்னுடன் இருப்பவர்களுக்கெல்லாம் ஏதாவது ஆபத்து வரும் என்று, அதனால்தான் குழந்தையை அழைத்து வரவில்லை. பாட்டியிடமே பத்திரமாயிருக்கட்டும் என்று விட்டு வந்தேன்.” "அத்தங்கா! ஒருவரால் ஒருவருக்குக் கஷ்டம் வரும் என்பதெல்லாம் முட்டாள்தனம். உலகத்தில் உனக்கு மட்டும்தானா கஷ்டம் வந்திருக்கிறது. தேசம் தேசமாகக் கஷ்டம் வந்திருக்கிறது. லட்சக்கணக்கான ஜனங்களுக்கு, கோடிக்கணக்கான ஜனங்களுக்கு ஒரேயடியாகக் கஷ்டம் வந்திருக்கிறது. வங்காளத்தில் அறுபது லட்சம் ஜனங்கள் பஞ்சத்தினால் செத்துப் போனார்கள்! ஹிரோஷீமா என்னும் பட்டணத்தில் வசித்த இரண்டரை லட்சம் ஜனங்களும் ஒரே நிமிஷத்தில் அமெரிக்கர் போட்ட அணுகுண்டினால் செத்துப் போனார்கள்! நேற்று உலகத்தையே ஜயித்து விட்டதாகக் கனவு கண்ட ஜெர்மானியர் எட்டுக் கோடிப் பேர் இன்று நாலு தேசங்களின் காலடியில் கிடந்து மிதிபடுகிறார்கள். கஷ்டம் ஏன் வருகிறது? எப்படி வருகிறது என்பதெல்லாம் நம்முடைய பகுத்தறிவினால் கண்டறிய முடியாத தெய்வ இரகசியம். ஒருவருக்கு இன்னொருவர் கஷ்டத்தை உண்டுபண்ண முடியாது. ஒருவருடைய துரதிர்ஷ்டம் இன்னொருவரைத் தொடர முடியாது." “சரி சூரியா! உன்னோடு வாதம் செய்ய என்னால் முடியுமா? பின்னே என்னதான் செய்ய வேண்டும் என்கிறாய் சொல்!” “கடவுள் எந்தெந்த நிலைமையில் நம்மை வைத்திருக்கிறாரோ அந்தந்த நிலைமையில் நம்முடைய கடமையைச் செய்ய வேண்டியது” என்றான் சூரியா. “இப்போது என்னுடைய கடமை என்ன!” என்று சீதா கேட்டாள். “அத்தங்கா! இப்போது உன்னுடைய கடமை இந்த எலெக்ஷனில் பட்டாபி ஜயிக்கும்படி செய்வதுதான். மாப்பிள்ளை பட்டாபியின் மனதை என்னைப் போல் அறிந்தவர்கள் இல்லை, பட்டம் பதவியின் பேரில் அவருக்கு மோகமே கிடையாது. ஆறு மாதத்துக்கு முன்னால் அவரிடம் ‘தேர்தலுக்கு நில்லுங்கள்’ என்று யாராவது சொல்லியிருந்தால் குலுங்கச் சிரித்திருப்பார். அப்படிப்பட்டவருடைய மனதில் தேர்தல் வெறியை நீ மூட்டிவிட்டாய்! இதுவரை தேர்தல் வேலையில் ஒத்தாசையும் செய்து வந்திருக்கிறாய். இந்தச் சமயத்தில் நீ கைவிட்டு போனால் அடியோடு எல்லாம் மாறிப் போனாலும் போகும். ஆகையால் தேர்தல் தேதி வரையில் இருந்து, ஆரம்பித்த காரியத்தை முடித்துக் கொடுக்க வேண்டியது உன்னுடைய கடமை” என்றான் சூரியா. “நீ சொல்வதெல்லாம் சரி என்று நான் ஒப்புக்கொள்ளவில்லை. அப்படியே ஒப்புக்கொண்டாலும் இந்த வீட்டில் இனிமேல் நான் எப்படி இருக்க முடியும்? நீ வருவதற்குச் சற்று முன்னால் இங்கே என்ன பேச்சு நடந்தது என்று உனக்குத் தெரியாது. என்னை இந்த வீட்டை விட்டு விரட்டி விட்டு மறுகாரியம் பார்க்கும்படி லலிதா பட்டாபிராமனிடம் சொன்னாள். ‘சீதா இந்த வீட்டை விட்டுப் போகமாட்டாள், போகிறதாயிருந்தால் நீதான் போகவேண்டும்!’ என்று பட்டாபிராமன் சொன்னார். இந்த வார்த்தைகளை என் காதாலேயே கேட்டேன். நிலைமை இவ்வளவு விகாரமாகப் போன பிறகு நான் இந்த வீட்டில் இருக்கலாமா?” “அத்தங்கா! அவர்கள் இரண்டு பேரும் புத்தி நிதானமாயிருக்கும்போது அவ்விதம் சொல்லியிருக்க மாட்டார்கள். லலிதா ஏதோ கோபத்தில் உளறியிருக்கிறாள். பட்டாபியும் ஆத்திரத்தினால் யோசியாமல் ஏதோ சொல்லி யிருக்கிறார். நீ தேர்தல் முடியும் வரையில் இங்கே இருக்க வேண்டும் என்று லலிதாவைக் கொண்டே நான் கேட்டுக் கொள்ளச் செய்கிறேன்.” “அவள் கேட்டுக் கொண்டு என்ன பிரயோசனம்? மாமி வேறு வந்திருக்கிறாள். மாமிக்கு ஏற்கெனவே என் பேரில் அசாத்தியமான கோபம். இதெல்லாம் மாமிக்குத் தெரிந்தால் என்னை இந்த வீட்டில் ஒரு நிமிஷமாவது இருக்க விடுவாளா?” “மாப்பிள்ளைக்குச் சேர்மன் வேலை ஆகவேண்டும் என்ற ஆசை அம்மாவின் மனதில் குடிகொண்டு விட்டது. அதற்காக உன் காலில் விழுந்து வேண்டிக் கொள்ள வண்டுமானாலும் வேண்டிக் கொள்வாள். உண்மையில் உன்னை இங்கே இருக்கும்படி செய்வதற்காகவே அம்மா இப்போது வந்திருக்கிறாள், தெரியுமா?” இதைக் கேட்டதும் சீதாவுக்கு ஒரே ஆச்சரியமாகப் போய் விட்டது. இத்தனை நேரம் வாடிச் சுருங்கியிருந்த அவளுடைய முகத்தில் சிறிது மலர்ச்சி உண்டாயிற்று “சூரியா! நீ சொல்வது உண்மைதானா? அல்லது பரிகாசம் செய்கிறாயா!” என்று கேட்டாள். “பரிகாசம் இல்லை; உண்மைதான்! இன்னும் சிறிது நேரத்துக்கெல்லாம் அம்மாவே உன்னிடம் வந்து சொல்லுவாள். ராஜம்பேட்டை சீமாச்சுவய்யர் பட்டாபிக்கு எதிராக இந்த தேர்தலில் வேலை செய்கிறாராமே?” “ஆமாம்! அதைப்பற்றி என்ன?” “சீமாச்சுவய்யர் இங்கிருந்து கிராமத்துக்கு வந்து அம்மாவிடம் உன்னைப் பற்றிப் புகார் சொன்னார். நீ தான் பட்டாபியின் புத்தியைக் கெடுத்துவிட்டாய் என்றும், எலெக்ஷனுக்கு நிற்பதில் பணம் எல்லாம் போய்விடும் என்றும், லலிதாவுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லையென்றும் சொன்னார். ஆனால் பலன் சீமாச்சுவய்யர் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக ஆயிற்று. மாப்பிள்ளை பெரிய உத்தியோகத்துக்குப் போகவில்லையென்று அம்மாவுக்கு ரொம்பக் குறை. இப்போது சேர்மன் வேலையாவது ஆகட்டும் என்று நூறு தெய்வங்களை வேண்டிக் கொண்டிருக்கிறாள். பெண்ணுக்குப் புத்தி சொல்வதற்காகவும் உன்னை உற்சாகப்படுத்து வதற்காகவும் வந்திருக்கிறாள். மாப்பிள்ளை எலெக்ஷனுக்கு நின்றது தப்பு என்று நான் சொன்ன தற்காக என்பேரில் அம்மாவுக்கு அசாத்தியான கோபம்.” இந்த அதிசயத்தைக் குறித்துச் சீதா சிறிது நேரம் யோசனை செய்து கொண்டிருந்தாள். பிறகு சூரியாவைப் பார்த்து, “நான் எப்படியும் மதராசுக்கு ஒரு நடை போக வேண்டும், சூரியா! குழந்தை வஸந்தியிடமிருந்து நேற்று கடிதம் வந்திருக் கிறது” என்றாள். “வஸந்தி கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறாள்?” என்று சூரியா கேட்டான். “இன்னும் நாலு நாளில் பள்ளிக்கூடம் சாத்தி விடுவார்களாம். என்னைப் பார்க்க ஆசையாயிருக்கிறதாம். உடனே மதராசுக்கு வந்து அழைத்துப் போகும்படி எழுதியிருக்கிறாள்.” “அத்தங்கா! நீ எலெக்ஷன் வேலையைப் பார்! நான் போய் வஸந்தியை அழைத்துக் கொண்டு வருகிறேன்!” என்றான் சூரியா. சரஸ்வதி அம்மாள் தன் குமாரி லலிதாவைப் பார்த்து, “உன்னைப் போல் அசட்டுப் பெண்ணைப் பார்த்ததே இல்லை. உன் அகத்துக்காரர் எலெக்ஷனில் ஜயிப்பதற்கு அந்தப் பெண் சீதா எவ்வளவோ பாடுபட்டு வேலை செய்கிறாளாம்; நீ ஏதாவது குற்றம் குறை சொல்லிக் கொண்டிருக்கிறாயாமே?” என்றாள். “அம்மா! உனக்குக்கூட எலெக்ஷன் பைத்தியம் பிடித்து விட்டு! எலெக்ஷன் என்றாள் ஏதோ சாதாரண விஷயம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய். அதனால் எவ்வளவோ விரோதங்கள் வந்து சேரும். என் மாமனார் எலெக்ஷனில் தலையிட்டதனால் எவ்வளவு சங்கடப்பட்டார், தெரியுமா?” “எல்லாம் தெரியுமடி, தெரியும். எனக்குத் தெரியாததற்கு நீ சொல்ல வந்துவிட்டாய்? எனக்கு முன்னாலேயே நீ பிறந்து விட்டாயோ? அந்தப் பிராமணர் வேறே யாருக்காகவோ எலெக்ஷன் வேலை செய்து சங்கடத்தை விலைக்கு வாங்கிக் கொண்டார். இது அப்படியில்லையே! மாப்பிள்ளையே தானே நிற்கிறார்?” “மாப்பிள்ளையே நின்றால் விரோதம் வராமல் போய்விடுமா?” “எந்தக் காரியத்திலேதான் விரோதம் ஏற்படாமல் இருக்கிறது? வெற்றிலைப் பாக்குக் கடை வைத்து நாலு காசு லாபம் சம்பாதித்தால் அதற்குக்கூட நாலு பேர் விரோதம். யாராவது ஒரு பொம்மனாட்டி நல்ல புடவை கட்டிக் கொண்டால் அதைப் பார்த்து நாலு பேருக்கு அசூயை. மாட்டு வண்டியிலே போனால் அதில் நாலு பேருக்கு விரோதம். மோட்டாரிலே போனால் அதில் நாலு பேருக்கு விரோதம். அப்படியெல்லாம் விரோதம் வரும் என்று பயந்து கொண்டிருந்தால் இந்த உலகத்தில் வாழ முடியுமோ? ஆண்டிப் பரதேசியாய்ப் போக வேண்டியதுதான். மாப்பிள்ளை இந்த எலெக்ஷனிலே ஜயித்தால் நாளைக்குச் சேர்மன் வேலைக்கு வரலாம் என்று சொல்கிறார்களே? அது நிஜந்தானே?” “வந்தால் என்ன பிரயோசனம் அம்மா! சேர்மன் என்று நெற்றியில் எழுதிக் கட்டிக் கொள்கிறதா?” "சீ! அசடே! ஏதாவது ஏடாகூடமாய்ச் சொல்லாதே! சேர்மன் வேலை என்றால் சாதாரணம் என்று நினைக்கிறாயோ? என்னுடைய அம்மாவைப் பெற்ற தாத்தா இதே தேவப்பட்டணத்தில் சேர்மனாயிருந்தார். அவருடைய வீட்டுக்குச் சேர்மன் வீடு என்று பெயர். அந்தக் காலத்திலே மோட்டார் வண்டி இல்லை. இரட்டைக் குதிரை சாரட்டில் ஆபீஸுக்கு கிளம்புவார். அதைப் பார்க்க வீதியில் உள்ளவர்கள் எல்லோரும் வீட்டு வாசலில் வந்து நின்று வேடிக்கை பார்ப்பார்கள். தாத்தாவுடன் இரட்டைக் குதிரை சாரட்டில் நான்கூட ஒரு தடவை ஏறிப் போயிருக்கிறேன். நன்றாக ஞாபகமாயிருக்கிறது." லலிதாவுக்குச் சிரிப்பு வந்தது, மனதிலும் மகிழ்ச்சி உண்டாயிற்று. சீதாவைப் பற்றிக் கேள்விப்பட்டு அதைப்பற்றித் தன்னிடம் சண்டை பிடிக்கவும் அவளை உடனே வீட்டைவிட்டு அனுப்பச் சொல்லவுமே அம்மா புறப்பட்டு வந்திருப்பதாக நினைத்தாள். விஷயம் அதற்கு மாறாயிருக்கவே லலிதாவின் மனத்திலிருந்து ஒரு பாரம் நீங்கியது போலிருந்தது. “அம்மா! முன்னெல்லாம் சேர்மன் வேலைக்கு இருந்த கௌரவம் இப்போது கிடையாது. அப்படியேயிருந்தாலும், அதற்காகச் செலவழிக்கிற பணம் எல்லாம் என்ன ஆகிறது? நம்மிடத்தில் பணம் கொட்டியா கிடக்கிறது? சேர்மன் உத்தியோகத்துக்குச் சம்பளம் கிடையாது என்று உனக்குத் தெரியுமோ, இல்லையோ?” என்றாள். “சம்பளம் இல்லாமற் போனால், என்ன? பட்டிக்காட்டில் இருந்தால் எனக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைத்துக் கொண்டு பேசுகிறாயோ. முன்னேயெல்லாம் சேர்மன் வேலை என்றால் வெறும் கௌரவந்தான். இப்போது கௌரவத்துடன் வருமானமும் உண்டு. இத்தனை நாளும் இந்த ஊரிலே சேர்மன் வேலை பார்த்தவர் இரண்டு லட்சம் ரூபாய் சம்பாதித் திருக்கிறாராம். வியாபாரிகளுக்குச் சர்க்கரை பெர்மிட் வாங்கிக் கொடுத்து ஐம்பதினாயிரம் ரூபாய் சம்பாதித்திருக்கிறாராம். அவர் குழந்தைக்குப் போன வருஷம் ஆண்டு நிறைவு கலியாணம் நடந்ததாம். அரை லட்சத்துக்குப் ‘பிரஸெண்டு’ மட்டும் வந்ததாம். உன் குழந்தைகளுக்குத்தான், ஆண்டு நிறைவு நடந்தது. என்ன கிடைத்தது? வந்திருந்தவர்களுக்குப் போலீஸ் காரர்களின் குண்டாந்தடி அடிதான் கிடைத்தது.” லலிதா களுக்கென்று சிரித்தாள். “என்னடி சிரிக்கிறாய். பெண்ணே? நான் சொல்கிறது சிரிப்பாயிருக்கிறதா!” என்று சரஸ்வதி அம்மாள் கேட்டாள். "அதற்காகச் சிரிக்கவில்லை அம்மா! நீ சொல்கிறது ஒரு விதத்தில் உண்மைதான். சில பேர் சேர்மன் வேலையிலே கூடப் பணம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் உன் மாப்பிள்ளை அப்படிப்பட்டவர் இல்லையே என்பதை நினைத்துக்கொண்டு சிரித்தேன். அவர் கை நீட்டிப் பணம் வாங்கவும் மாட்டார்; பிரஸெண்டு வாங்கவும் மாட்டார். ஒருவரை ஒன்று கேட்கவும் மாட்டார்." “இவர் என்னத்துக்காக வாங்கவேணும்? இவர் கை நீட்டி ஒன்றும் வாங்க வேண்டியதில்லை. ஒருவரை ஒன்று கேட்க வேண்டியதுமில்லை. சேர்மன் வேலை ஆகிவிட்டால் எல்லாம் தானே தேடிக் கொண்டு வராதா?” இதைக் கேட்டுக்கொண்டே சீதா சமையலறைக்குள் வந்தாள். லலிதா அவளைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள். தனக்கும் தன் புருஷனுக்கும் நடந்த பேச்சைச் சீதா மேல் மாடியிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தது லலிதாவுக்குத் தெரியாது. ஆகையால் கொஞ்சம் குதூகலமாகவே சீதாவைப் பார்த்து “அத்தங்கா! கேட்டாயா அதிசயத்தை! அம்மா ஒரேயடியாக உன் கட்சி பேசுகிறாள். இந்த எலெக்ஷன் விஷயத்திலே நம் வீட்டில் உன் கட்சிக்குத்தான் மெஜாரிடி இருக்கிறது; நான் மைனாரிடியாகி விட்டேன். அம்மாவுக்கு இருக்கிற உற்சாகத்தைப் பார்த்தால் மாப்பிள்ளை எலெக்ஷனுக்கு இவளே வீடு வீடாகப் போய் வோட்டுக் கேட்பாள் போலிருக்கிறது!” என்றாள் லலிதா. பன்னிரண்டாம் அத்தியாயம் - சீதாவின் பெருமிதம் “சீதா! வாடி, அம்மா! நான் சகல விஷயமும் கேள்விப்பட்டேன்! மாப்பிள்ளை இந்த எலெக்ஷனிலே ஜயிக்கிறதற்காக நீ ரொம்பப் பாடுபடுகிறாயாம், எனக்கு ரொம்ப சந்தோஷம். சொந்த மனுஷாள் என்றால் இப்படியல்லவா இருக்கவேண்டும்? இந்த மாதிரி சமய சந்தர்ப்பத்துக்கு ஒத்தாசை செய்வதற்காகத்தானே பந்துக்கள் வேண்டும் என்கிறது?” என்றாள் சரஸ்வதி அம்மாள். சூரியா சொன்னதிலிருந்து மாமியின் மனோபாவத்தைச் சீதா கொஞ்சம் தெரிந்து கொண்டிருந்த போதிலும் சரஸ்வதி அம்மாள் இவ்வளவு அன்பும் ஆதரவுமாகப் பேசியது சீதாவுக்கு ஒரே ஆச்சரியமாயிருந்தது. ஆயினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “மாமி! நீங்கள் வந்துவிட்டீர்கள் அல்லவா! என்னுடைய தலைப்பொறுப்பு நீங்கிற்று. இனிமேல் எல்லாம் உங்கள் பாடு! இன்னும் இரண்டு நாளில் நான் ஊருக்குப் புறப்பட வேண்டும்!” என்று சொன்னாள். “ஊருக்குக் கிளம்புகிறாயா? அழகாய்த் தானிருக்கிறது! நான் வந்துவிட்டேனே என்று சொல்கிறாயா? நான் நாளைக்கே ஊருக்குப் போய்விடுகிறேன், சீதா!….” “மாமி! மாமி! சத்தியமாய் நான் அதற்காகச் சொல்லவில்லை. உங்கள் பேரில் எனக்கு என்ன விரோதமா? எப்போதாவது உங்க ளுடைய வார்த்தையை எதிர்த்து நான் ஏதாவது சொல்லியிருக்கிறேனா? உண்மையாகவே நான் ஊருக்குப் போக வேண்டும் என்றிருக்கிறேன்…” “எல்லாம் மாப்பிள்ளைக்கு எலெக்ஷன் ஆன பிற்பாடு போகலாம். நீ சொல்லித்தான் மாப்பிள்ளை எலெக்ஷனுக்கு நிற்கிறாராம். நீ மீட்டிங்கில் பேசுகிறாயாம்; பாடுகிறாயாம். உன்னால்தான் மாப்பிள்ளைக்குச் சேர்மன் வேலை ஆகப் போகிறதென்று இந்த ஜில்லாவெங்கும் பேச்சாயிருக்கிறது. அப்படியிருக்க, நீ திடீரென்று ஊருக்குப் போகிறேன் என்றால், மாப்பிள்ளைக்கு யார் ஒத்தாசை செய்வார்கள்?” “உங்களுடைய மாப்பிள்ளைக்கு யாருடைய ஒத்தாசையும் வேண்டியதில்லை. அவருடைய சாமர்த்தியத்துக்கு இன்னொருத்தரின் ஒத்தாசை எதற்கு? அதிலும் என்னால் என்ன பிரமாதமாகச் செய்துவிட முடியும்? உங்களுடைய பெண் லலிதா அடிக்கடி ‘அஸ்து’ சொல்லாமலிருந்தால் அதுவே மாப்பிள்ளைக்கு பிரமாத ஒத்தாசையாயிருக்கும். இந்த அதிசயத்தைக் கேளுங்கள், மாமி! உங்கள் மாப்பிள்ளை எலெக்ஷனுக்கு நிற்கிறது பற்றி இந்த தேவபட்டணத்தில் உள்ள அத்தனை ஜனங்களும் சந்தோஷப்படுகிறார்கள். யாரிடம் இவர் போனாலும் ‘உங்களுக்குத்தான் எங்களுடைய ஓட்டு!" என்று சொல்லுகிறார்கள். ஆனால் லலிதாவுக்கு மட்டுந்தான் இது ஒன்றும் பிடிக்கவில்லை. ஓயாமல் முணு முணுத்துக் கொண்டிருக்கிறாள். மாப்பிள்ளை எலெக்ஷனுக்கு நின்றதனால் ஏதோ குடி முழுகிப் போய்விட்டது போல் சண்டை பிடிக்கிறாள். அவருக்கும் ’சீ!’ என்று போய் விடுகிறது! அவர் மனம் வெறுத்து ‘எனக்கு இந்த எலெக்ஷனும் வேண்டாம்! ஒன்றும் வேண்டாம்! எங்கேயாவது காசி ராமேஸ்வரத்திற்குப் போய் விடுகிறேன். இல்லாவிட்டால் திருவண்ணாமலைக்குப் போய் ரமண ரிஷிகளின் ஆசிரமத்தில் சேர்ந்துவிடுகிறேன்’ என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார். இன்று காலை முதல் பாருங்கள், இரண்டு பேருக்கும் ஒரே சண்டை!….” சரஸ்வதி அம்மாள் கோபத்தோடு தன் குமாரி லலிதாவைப் பார்த்து, “ஏண்டி லலிதா! இப்படித்தான் செய்கிறதா? அழகாயிருக்கிறதடி! உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா, என்ன? யாராவது கேட்பார் பேச்சைக் கேட்டுக் கொண்டு கூத்தடிக்கிறாயா? இனிமேல் அந்த மாதிரியெல்லாம் வாயைத் திறந்து சொல்லக் கூடாது! இல்லா விட்டால், இந்த எலெக்ஷன் முடிகிற வரையில் ராஜம்பேட்டைக்குப் புறப்பட்டுப் போய் விடு!” “சரி, அம்மா! நான் போய்விடுகிறேன்!” என்று லலிதா விளையாட்டுப் புன்சிரிப்புடன் கூறினாள். “பார்த்தீர்களா, மாமி இவள் சொல்வதை? ஊருக்குப் போய் விடுகிறாளாம்! நன்றாயிருக்கிறதல்லவா கதை? நாளைக்கு மாப்பிள்ளை எலெக்ஷனில் ஜயித்ததும், இவளைச் ‘சேர்மனுடைய ஒயிப்’ என்றும், ‘மிஸ்ஸஸ் சேர்மேன்’ என்றும் கொண்டாடப் போகிறார்களா? வேறு யாரையாவது கொண்டாடப் போகிறார்களா? டீ பார்ட்டி களுக்கும் டின்னர்களுக்கும் இவளை அழைத்து மாலை போடப் போகிறார்களா? வேறு யாரையாவது அழைத்து மாலைப் போடப் பாகிறார்களா? ‘எங்கள் வீட்டுக் கலியாணத்துக்கு வரவேண்டும்’, ‘எங்கள் வீட்டுக் கிரஹப்பிரவேசத்துக்கு வரவேண்டும்’ என்று இவளை வருந்தி வருந்தி அழைக்கப் போகிறார்களா? வேறு யாரையாவது அழைக்கப் போகிறார்களா? குரூப் போட்டோ வில் இவள் அகத்துக்காரர் பக்கத்தில் ஜம்மென்று உட்காரப் போகிறாளா? வேறு யாராவது உட்காரப் போகிறார்களா? அதெல்லாம் தெரியாமல் இவள் ஓயாமல் ஏதாவது நிஷ்டூரம் சொல்லிக் கொண்டிருக்கிறாள். கொஞ்சம் இவளுக்கு நீங்கள் புத்தி சொல்ல வேண்டும்!” "கொஞ்சம் சொல்கிறது என்ன? நிறையச் சொல்லுகிறேன். இவள் மாத்திரம்தான் இப்படி என்று நினைக்காதே. இவளுடைய அண்ணா இருக்கிறானே, உன்னுடைய அம்மாஞ்சி சூரியா, அவனும் இப்படித்தான் ஏதாவது உளறிக் கொண்டிருக்கிறான். எலெக்ஷனுக்கு நின்று விட்டதால் ஏதோ குடி முழுகிவிட்டது போல உளறுகிறான். ‘வாயை மூடிக் கொண்டிரு! மாப்பிள்ளையிடம் ஏதாவது உளறி வைக்காதே!’ என்று கண்டித்து அவனை அழைத்துக்கொண்டு வந்தேன். அண்ணாவும் தங்கையும் ஒரே அச்சு. இரண்டு பேரும் அப்பாவைக் கொண்டு பிறந்துவிட்டார்கள்! பிதிரார்ஜித நிலங்களையெல்லாம் பிரித்து ஆட்படைகளுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று சொன்னார் பாரு! அப்பாவைப் போலத்தான் பெண்ணும் பிள்ளையும் இருப்பார்கள். எலெக்ஷனுக்கு நிற்கக்கூடாதாம்; பணங்காசு சம்பாதிக்க கூடாதாம். ஆனால் ஜெயிலுக்கு மட்டும் போக வேண்டுமாம்! அடியே, சீதா! உனக்கு இருக்கிற புத்தியிலே எட்டிலே ஒன்று இவர்களுக்கு இருக்கக் கூடாதா?" சீதாவின் உடல் பூரித்தது; உள்ளத்தில் கர்வம் ஓங்கி வளர்ந்தது. தன்னைக் கண்டால் வேப்பங்காயைப் போல் கசந்து கொண்டிருந்த மாமி இப்படித் தன்னைச் சிலாகிக்கும் காலம் ஒன்று வரும் என்று சீதா கனவிலும் எண்ணியதில்லை. அப்படிப்பட்ட காலம் வந்தே விட்டது! இதை நினைத்துச் சீதாவின் நெஞ்சம் பெருமிதத்தினால் வெடித்து விடும் போல் விம்மியதில் வியப்பில்லையல்லவா! லலிதாவுக்கோ அம்மாவின் பேச்செல்லாம் ஒரு விதத்தில் கசப்பாயும் இன்னொரு விதத்தில் சந்தோஷ மாயும் இருந்தது. அம்மாவின் அப்பட்டமான சுயநலப் பேச்சுக் கசப்பாயிருந்தது. தன் அருமைத் தோழியின் விஷயத்தில் அம்மாவின் மனோ பாவம் மாறியது அவளுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி அளித்தது. இந்த ஒரு நல்ல பயனுக்காகவே தன் புருஷன் தேர்தலுக்கு நின்றது சரிதான் என்று அவளுக்குத் தோன்றியது. “அம்மா! இத்தனை நாளைக்குப் பிறகு இப்போதாவது நீ அத்தங்காள் நல்லவள் என்றும் புத்திசாலி என்றும் ஒப்புக் கொண்டாயே? அதற்காக ரொம்ப சந்தோஷம்?” என்றாள். “அதென்ன அப்படிச் சொல்கிறாய், லலிதா! நான் எப்போதாவது உன் அத்தங்காளைப் பொல்லாதவள் என்றோ அசடு என்றோ சொல்லியிருக்கிறேனா? சீதா! நீயே சொல்லடி, அம்மா! உன்னுடைய அப்பாவும் அம்மாவும் ஒழுங்காகக் குடித்தனம் செய்து வாழவில்லையே என்று வருத்தப்பட்டுப் பேசியிருக்கிறேன். அது ஒரு தப்பா? அதுவும் ஏதோ அபிமானத்தினால்தான் சொன்னேனே தவிர, வேறு அவர்கள் பேரில் எனக்கு என்ன வருத்தம்? எனக்கு என்ன அவர்கள் கெடுதல் செய்துவிட்டார்கள்? ஊருக்குப் போகிற பேச்சை மட்டும் எடுக்க வேண்டாம், சீதா! இந்த வீட்டில் இனிமேல் உன் இஷ்டப்படி ஏதாவது நடக்காவிட்டால் என்னைக் கேள்!” என்றாள் சரஸ்வதி அம்மாள். “மாமி! அதற்காக மட்டும் நான் சொல்லவில்லை. என் குழந்தை வஸந்தியிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது, பள்ளிக்கூடம் சாத்தப் போகிறார்கள் என்று. குழந்தையைப் பார்ப்பதற்கு நான் போக வேண்டாமா?” “சூரியாவைப் போய் வஸந்தியை அழைத்துக் கொண்டு வரச் சொன்னால் போகிறது. நீ மட்டும் இந்த எலெக்ஷன் முடிகிற வரையில் இந்தண்டை அந்தண்டை போகக் கூடாது.” “நீங்கள் இவ்வளவு தூரம் சொல்லும்போது நான் போக வில்லை, மாமி! சூரியாவையே போக சொல்லுங்கள். ஆனால் உங்கள் பெண்ணிடம் மட்டும் நீங்கள் கொஞ்சம் சொல்லி வையுங்கள். அவள் அபசகுணம் போல எதற்கெடுத்தாலும் ‘அஸ்து’ என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது…” “லலிதாவைப் பற்றி இனிமேல் நீ கொஞ்சம்கூடக் கவலைப்பட வேண்டாம். லலிதா வாயைத் திறந்தால் நீ என்னைக் கேள். நாலு அறை கொடுத்து ஒரு அறையில் தள்ளிக் கதவைப் பூட்டி விடுகிறேன். நாலு வருஷமாய் மாப்பிள்ளை வருமானமே இல்லாமலிருக்கிறார். இந்த சேர்மன் வேலையாவது கிடைக்க வேண்டுமே என்று நம்முடைய குல தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொண்டிருக்கிறேன். சீமாச்சு மாமா மெனக்கெட்டு வந்து உன்னைப்பற்றி ஏதேதோ புகார் சொன்னார். அதை யெல்லாம் நான் கேட்பேனா? ‘போங்காணும்! யார் மேலாவது கோள் சொல்வதே உமக்கு வேலை! உம்முடைய வேலையைப் பாரும்!’ என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டேன். சீமாச்சு மாமாவுக்கு இப்போதுள்ள சேர்மன் ஜவுளி லைசென்ஸ் வாங்கிக் கொடுத்தாராம். அதிலே ரொம்பப் பணம் இவருக்கு லாபமாம். இரண்டு மச்சு வீடு கட்டியாகிவிட்டது! அதற்காகப் பழைய சேர்மனுக்கு சீமாச்சு மாமா விழுந்து விழுந்து வேலை செய்கிறாராம். சிநேகம், பந்துத்வம் எல்லாம் எங்கேயோ பறந்துவிட்டது. இந்தக் காலத்திலே காசு பணந்தான் பெரிது. சீதா! உன்னைப் போலச் சொந்த மனுஷ்யாளிடம் அபிமானத்துடன் இருப்பவர் களை நான் பார்த்ததேயில்லை. இந்தப் பெண் தத்துப் பித்து என்று என்னவெல்லாமோ பேசியிருந்தும் நீ பொறுமையா யிருந்திருக்கிறாயே? அதைச் சொல்லு! உனக்கு இவள் என்ன வேணுமானாலும் செய்யலாம். தோலைச் செருப்பாய்த் தைத்துப் போட்டாலும் தகும்!” என்று சொன்னாள் சரஸ்வதி அம்மாள். சீதா சற்று முன் தான் அடைந்த மனவேதனையை அடியோடு மறந்து, குதூகலத்தினால் மெய்மறந்தாள். பதின்மூன்றாம் அத்தியாயம் - ராகவன் பகற் கனவு நீலத்திரைக் கடலைக் கிழித்துக் கொண்டு நீராவிக் கப்பல் சென்று கொண்டிருந்தது. அது இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குச் சென்று கொண்டிருந்த எஸ்.எஸ். எலிஸெபத் என்னும் பிரயாணக் கப்பல். அதில் நமது கதாநாயகன் சௌந்தரராகவன் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். பெரும் பிரயத்தனம் செய்து அந்தக் கப்பலில் சௌந்தரராகவன் இடம் பெற வேண்டியிருந்தது. மகாயுத்தம் முடிந்து ஒரு வருஷம்கூட ஆகவில்லை யாதலால் கப்பல்களில் பிரயாணிகளுக்கு இடம் கிடைப்பது கஷ்டமாக இருந்தது. யுத்தம் முடிந்து சில மாதத்துக்கெல்லாம் ராகவன் இங்கிலாந்துக்குச் சென்றான். போதிய காரணமில்லாமல் தன்னைச் சர்க்கார் உத்தியோகத்திலிருந்து நீக்கிவிட்ட அநீதிக்குப் பரிகாரம் தேடுவது இங்கிலாந்து சென்றதன் நோக்கம். என்னதான் கம்பெனி வேலை என்றாலும், அதில் சம்பளம் எவ்வளவுதான் கிடைத்தாலும், சர்க்கார் உத்தியோகத்துக்கு ஈடாகாதென்பது ராகவனுக்குச் சீக்கிரத்திலேயே தெரிந்து போய்விட்டது. மேலும் எதற்காகத் தன் பேரில் ஒரு வீண் அபாண்டம் சர்க்கார் தஸ்தாவேஜுகளில் இருக்க வேண்டும்? யுத்தத்தில் பிரிட்டன் தோற்றுப் போய் இந்தியாவில் அரசாங்கம் மாறியிருந்தாலும் ஒருவாறு மனநிம்மதி அடைந்திருக்கலாம். ஆனால் யுத்தத்தில் பிரிட்டன் ஜயித்து இந்தியாவிலும் பிரிட்டிஷ் ஆட்சி நிலைத்திருக்கிறது! அவ்விதமிருக்கும்போது சர்க்கார் உத்தியோகத்தை எப்படி அவன் அலட்சியம் செய்ய முடியும். ஆரம்ப காலத்தில் ராகவனுடைய பொருளாதார ஞானத்தை மெச்சி உத்தியோகம் கொடுத்த துரை இங்கிலாந் திலேதான் அச்சமயம் இருந்தார். அவரிடம் தன்னுடைய கட்சியைச் சொல்லி முறையிட்டுச் சிபாரிசு பெறலாம் என்ற ஆசை அவனுக்கு இருந்தது. அந்த ஆசை எவ்வளவு வீண் ஆசை என்பது இங்கிலாந்துக்குப் போன பிறகு தான் தெரிந்தது. யுத்தத்தின் போது ஜெர்மன் விமானங்கள் இங்கிலாந்தின் பெரும் பகுதியைப் பாழாக்கியிருந்தன. கோடானு கோடி பணம் யுத்தத்தில் செலவான காரணத்தினால் இங்கிலாந்து ‘இன்ஸால்வெண்ட்’ ஆகிவிடுமோ என்று பயப்படும்படியான நிலைமையில் இருந்தது. ஆங்கில மக்கள் போதிய உணவில்லாமலும், உடையில்லாமலும் மற்ற வாழ்க்கை வசதிகள் இல்லாமலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட நிலைமையில் ராகவனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றி யார் உருகிக் கண்ணீர் வடிப்பார்கள்? அவனுடைய குறையைக் காதிலேதான் யார் வாங்கிக் கொள்வார்கள்? ராகவனுக்கு உத்தியோகம் கொடுத்து அவனைச் செல்லப் பிள்ளையைப் போல் நடத்திய துரைகூட இப்போது அவனுடைய புகாரைப் பொருட்படுத்தவில்லை. "மிஸ்டர் ராகவன்! இங்கே நாங்கள் அன்றாடம் ஜீவனம் செய்கிற பாடே பெரும்பாடாக இருக்கிறது. பெரிய பெரிய சீமான்கள் எல்லாருமே தினந்தோறும் க்யூவில் நின்று அரை ராத்தல் ரொட்டி வாங்கிக் கொண்டு வந்து காலட்சேபம் செய்யவேண்டியிருக்கிறது; நீ உனக்கு உத்தியோகம் போனதைப் பற்றிப் பிரமாதப்படுத்துகிறாய். உன்னுடைய புகாரை எடுத்துக்கொண்டு நான் இங்கே யாரிடமாவது சிபாரிசு செய்யப் போனால் என்னைப் பார்த்துச் சிரிப்பார்கள்! நீ வேலை பார்க்கும் கம்பெனியில் ஒரு வேலை கிடைத்தால் நான் கூட வந்துவிடுவேன்! இங்கே நீ வீணாக அலைந்து காலங் கழிக்காதே! இந்தியாவுக்குத் திரும்பிப் போய்க் கிடைத்திருக்கும் உத்தியோகத்தைச் சரியாகக் காப்பாற்றிக் கொள்!" என்று மாஜி வரவு செலவு இலாகாத் தலைவர் கூறிய புத்திமதி ராகவனைத் தூக்கி வாரிப் போட்டு விட்டது. அது மட்டுமல்லாமல் துரை இன்னொரு விஷயமும் சொன்னார்:- “ராகவன்! இனிமேல் இந்தியாவில் சர்க்கார் உத்தியோகத்துக்கு முன்னைப் போல் அவ்வளவு மதிப்பு இராது. இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுத்து விடுவது என்று இங்கே தொழிற் கட்சி மந்திரிகள் தீர்மானம் செய்து விட்டார்கள். அது சரியான தீர்மானம்! ஏனெனில் எங்களால் இனிமேல் நாற்பது கோடி ஜனங்கள் உள்ள ஒரு தேசத்தைக் கட்டி ஆள முடியாது. அதற்கு வேண்டிய ஆள் பலமும் வசதிகளும் இங்கே இல்லை. இந்தியா சுதந்திரம் பெற்றால் முதலில் காங்கிரஸ்காரர்கள்தான் அதிகாரத்திற்கு வருவார்கள். காங்கிரஸ் அதிகாரத்தின் கீழ் நீ சர்க்கார் உத்தியோகம் பார்க்க விரும்ப மாட்டாய் அல்லவா?” ராகவனுடைய உள்ளம் மேலும் குழப்பத்தை அடைந்தது. துரையின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆயினும் சர்க்கார் உத்தியோகம் திரும்பக் கிடைக்கும் என்ற ஆசை போய்விட்டது! நல்லவேளை, கம்பெனி உத்தியோகத்தை அவன் விட்டுவிடவில்லை. நாலு மாதம் லீவு வாங்கிக் கொண்டுதான் வந்திருந்தான். திரும்பிப் போய்க் கம்பெனி உத்தியோகத்தை ஒப்புக்கொள்ள வேண்டியதுதான் என்று முடிவு செய்தான். இந்தியாவுக்குப் போகும் கப்பலில் இடம் கிடைப்பது மிகவும் பிரயாசையாயிருந்தது. கப்பலுக்காக காத்திருந்த சமயத்தில் அங்குமிங்கும் அவன் சுற்றியலைந்தான். அப்படி அலைந்த போது அவன் கண்ட காட்சிகளும் கேட்ட விஷயங்களும் அவனுடைய மனதில் ஆச்சரியமான ஒரு மாறுதலை உண்டாக்கின. ஆகா! இந்த இங்கிலீஷ்காரர்கள் எப்பேர்ப்பட்டவர்கள்? எத்தகைய தீரர்கள்? நாட்டின் சுதந்திரத்துக்காக என்னவெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்? நாட்டின் சுபிட்சத்துக்காக எப்படியெல்லாம் பாடுபடுகிறார்கள்? ஆனால் இந்தியாவில் நாம் இத்தனை காலமும் என்ன செய்து வந்தோம். அன்னியர்களின் கீழ் அடிமை உத்தியோகம் பார்த்து வந்தோம். அதைத் திரும்பப் பெறுவதற்காகக் கெஞ்சி மணியம் செய்ய இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். சீ! இது என்ன மானங்கெட்ட பிழைப்பு? இங்கிலீஷ் படிப்பு என்ன மாதிரி நம்முடைய புத்தியைக் கெடுத்து விட்டது? போனதற்கெல்லாம் பரிகாரமாக, இனிமேல் நடந்து கொள்ளவேண்டும். இந்தியாவின் சுதந்திரத்துக்காக ஏதேனும் ஒரு பிரமிக்கும்படியான காரியம் செய்ய வேண்டும்… எஸ்.எஸ். எலிஸபெத் கப்பலின் மேல் தளத்தில் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு சௌந்தரராகவன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தபோது மேற்கண்டவாறு பற்பல எண்ணங்கள் வந்துபோய்க் கொண்டிருந்தன. மனதை அதன் போக்கிலேயே விட்டபோது பதினைந்து வருஷங்களுக்கு முன் கராச்சியிலிருந்து பம்பாய்க்குக் கப்பலில் பிரயாணம் செய்ததில் வந்து மனம் நின்றது. ஆகா! அந்தப் பிரயாணம் எவ்வளவு ஆனந்தமாக இருந்தது! அது பெரும்பாலும் சாமான்கள் அடுக்கிய சாதாரண நாலாந்தரமான கப்பல்தான்; இந்தக் கப்பலின் விஸ்தீரணத்திலோ கம்பீரத்திலோ அழகிலோ வசதியிலோ எட்டில் ஒரு பங்குகூட அந்தக் கப்பலில் இல்லை! ஆயினும் அந்தக் கப்பலில் அவன் அப்போது செய்த பிரயாணம் ஆகாய வெளியில் புஷ்ப ரதத்தில் தேவ தேவியர்களுக்கு மத்தியில் கந்தர்வர்களின் கானத்தைக் கேட்டுக் கொண்டு செய்த பிரயாணத்தைப் போல் ஆனந்தமயமாயிருந்தது. காரணம், அதே கப்பலில் தாரிணியும் பிரயாணம் செய்ததுதான். அடடா! என்ன தவறு செய்து விட்டோ ம்? கொஞ்சம் பிடிவாதம் பிடித்துத் தாரிணியைக் கலியாணம் செய்து கொண்டிருந்தால் வாழ்க்கை எவ்வளவு ஆனந்தமயமாயிருந்திருக்கும்? தாரிணியிடமிருந்து மனம் சீதாவிடம் பாய்ந்தது. தாரிணியைப் புறக்கணித்தது ஒரு பிசகு என்றால், சீதாவை மணந்து கொண்டது அதைவிடப் பெரிய பிசகு. கிட்டாவய்யர் மகள் லலிதாவைக் கலியாணம் செய்து கொண்டிருந்தால் இல்வாழ்க்கை நிம்மதியாகவாவது இருந்திருக்கும். லலிதாவைப் பார்க்க போன இடத்தில் இவள் குறுக்கே வந்து சேர்ந்தாள்! கண்களை அகல விரித்துப் பார்த்து நம்முடைய மதியை மயக்கிவிட்டாள்! ஒரு விஷயம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். கண்ணழகிலே மட்டும் சீதாவுக்கு இணையில்லைதான். தாரிணியின் கண்களைக் காட்டிலுங்கூடச் சீதாவின் கண்கள் கொஞ்சம் அதிகம் அழகானவை என்பதில் சந்தேகம் இல்லை! ஆனால் கண்ணழகு மட்டும் ஒரு பெண்ணிடம் இருந்தால் போதுமா? போதாது என்பதற்குத் தன்னுடைய வாழ்க்கையே அத்தாட்சி! அந்தக் கண்களின் வழியாக அவளுடைய உள்ளத்தின் இயல்பைப் பார்க்கும் சக்தி தனக்கும் இல்லாமல் போய்விட்டதே? சீச்சீ! என்ன சஞ்சலபுத்தி? என்ன சண்டை பிடிக்கும் சுபாவம்? என்ன அசூயை? என்ன ஆத்திரம்? பெண்களின் கெட்ட குணங்கள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்துப் பிரம்மதேவன் சீதாவைப் படைத்திருக்க வேண்டும்! ‘சீதா’ என்னும் பெயரைக் காட்டிலும் சூர்ப்பனகை என்னும் பெயர் அவளுக்கு அதிகப் பொருத்தமாயிருக்கும். சீச்சீ! இது என்ன எண்ணம்? தவறு முழுவதும் சீதாவினுடையதுதானா? தன் பேரிலும் தவறு இருக்கத்தான் இருக்கிறது! அவளை நடத்தவேண்டியபடி முதலிலிருந்தே நடத்தியிருந்தால் சொன்னதைக் கேட்டுக்கொண்டு அடங்கி நடந்திருப்பாள். புது டில்லி நாகரிக வாழ்க்கைக்கு அவளைத் தயார்ப் பண்ண யத்தனித்தது அல்லவா இப்படி வினையாக வந்து முடிந்தது? அவள் சுபாவம் கெட்டுப் போனதற்கு அந்த மடையன் சூரியாவும் ஒரு காரணம். தன்னுடைய அபிப்பிராயங்க ளைக்காட்டிலும் சூரியாவினுடைய அபிப்பிராயங்கள் அல்லவா அவளுக்கு மேலாகப் போயிருந்தன? கடைசியாக எப்படிப் பட்ட படுகுழியில் கொண்டு போய் அந்தப் படுபாவி அவளைத் தள்ளி விட்டான்? இந்த ஸ்திரீகளின் சுபாவமே அதிசயமானது தான்! சூரியாவிடம் அப்படி என்ன அழகை, அற்புதத்தை, இவர்கள் கண்டு விட்டார்களோ, தெரியவில்லை. சீதாவாவது ‘அம்மாஞ்சி’ என்று சொல்லி உருகிக் கொண்டிருந்தாள். தாரிணிக்கும் சூரியாவுக்கும் என்ன சம்பந்தம்? அவர்களுக்குள் எப்படிச் சிநேகம் ஏற்பட முடியும்? ஆகா! சூரியாவைப் போலீஸ் பாதுகாப்பிலிருந்து தப்புவிப்பதற்காகத் தாரிணி எப்பேர்ப்பட்ட சாகஸமான காரியம் செய்தாள்: என்ன துணிச்சல்! என்ன தைரியம்? இரண்டு பேரும் அன்றைக்கு மறைந்தவர்கள் அப்புறம் வெளிப்படவே இல்லை! மத்திய சர்க்காரின் துப்பறியும் இலாகா எவ்வளவோ முயன்றும் பயனில்லை! எப்படி அவர்கள் மாயமாய் மறைந்திருப்பார்கள்? இதில் ரொம்பவும் விசித்திரமான வேடிக்கை என்னவென்றால், கல்கத்தாவில் சீதாவைத் தாரிணி என்ற பெயரால் கைது செய்து பாதுகாப்பு சிறையிலே வைத்திருந்ததுதான்! இந்த விஷயம் கல்கத்தாவுக்கு வந்து, கொஞ்ச நாளைக்குப் பிறகுதான் ராகவனுக்குத் தெரியவந்தது. ஆனாலும் அதைப்பற்றி அவன் நடவடிக்கை ஒன்றும் எடுக்க முடியாமல் இருந்தது. அவள் தாரிணி இல்லை, சீதா என்று தான் சொன்னால், அவள் கைதியானபோது ஏன் அதைச் சொல்லவில்லை என்று கேட்பார்கள் அல்லவா? டில்லியிலிருந்து அவள் கல்கத்தா வந்த காரணம் என்னவென்று கேட்பார்கள் அல்லவா? அந்தக் கேள்விகளுக்கு என்ன பதிலைச் சொல்வது? கிடக்கட்டும், கிடக்கட்டும்! சிறையிலேயே அடைந்து கிடக்கட்டும்; நன்றாக புத்தி வரட்டும்; எல்லாருக்கும் விடுதலை கிடைக்கும்போது அவளுக்கும் விடுதலை கிடைத்து வெளி வரட்டும். அப்போது பார்த்துக் கொள்ளலாம். எப்படியிருந்தாலும் சீதாவுக்கு இன்னொரு ‘சான்ஸ்’ கொடுத்துப் பார்க்க வேண்டியதுதான்! அவளுடன் இல்லறம் நடத்த இன்னொரு பிரயத்தனம் செய்ய வேண்டியதுதான்! இவ்விதம் சௌந்தரராகவன் மனமுவந்து தயவு செய்து எண்ணிய தற்குச் சில முக்கியமான காரணங்கள் இருந்தன. ஒன்று, சீதாவுடன் தான் இல்வாழ்க்கை நடத்தாவிட்டால் பாமா என்கிற பிசாசின் வாயில் விழ வேண்டியிருக்கும்! அது இரும்புச் சட்டியிலிருந்து அடுப்பு நெருப்பில் விழுவது போலாகும் இரண்டாவது காரணம், குழந்தை வஸந்தி, சீமைக்குப் புறப்படுமுன் ராகவன் சென்னைக்குத் தன் மகளைப் பார்க்கப் போயிருந்தான். அப்போது குழந்தை தன் கபடமற்ற கண்களினால் தந்தையை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, “அப்பா! அம்மாவை அழைத்து வரவில்லையா?” என்று கேட்டாள். அந்தக் கேள்வியில் தொனித்த ஆதங்கத்தை ராகவனால் மறக்கவே முடியவில்லை. குழந்தையை முன்னிட்டாவது மறுபடியும் ஒரு தடவை குடித்தனம் நடத்திப் பார்க்கவேண்டும் என்று முடிவு செய்திருந்தான். மூன்றாவதாக இன்னொரு காரணமும் இருந்தது; அது கொஞ்சம் விசித்திரமான காரணந்தான். ராகவன் புதுடில்லியை விட்டுக் கிளம்புவதற்கு முன்னால் ஒரு நாள் இரவு பத்து மணிக்கு வீட்டுக்குள் திடீரென்று ஒரு ஸ்திரீ வந்தாள். அவளுடைய தோற்றம் அச்சத்தை அளித்தது. அதைவிட அவள் பேச்சுப் பயங்கரமாயிருந்தது. “நான் யார் தெரியுமா?” என்று கேட்டாள். “தெரியாது!” என்றான் ராகவன். “உன் மனைவி சீதாவின் தாயார் நான்!” என்றாள் அந்த ஸ்திரீ. ராகவன் சிரித்துக் கொண்டே, “சீதாவுக்கு எத்தனை தாயார்?” என்று கேட்டான். “சிரிக்காதே! உன் சாமர்த்தியம் உன்னோடு இருக்கட்டும். சீதா என்னுடைய மகள், வயிற்றில் பெற்ற மகள் அல்ல; ஆனாலும் அதைவிட அதிகம். உன் மனைவி ஒரு ரத்தினஹாரம் போட்டுக் கொண்டிருந்தாளே? அது இருக்கிறதா? அல்லது விற்றுச் சாப்பிட்டு விட்டாயா? என்று கேட்டாள். ராகவன் சிறிது வியப்பும் அச்சமும் அடைந்தான். ஆயினும் வெளிக்கு அதைரியத்தைக் காட்டிக்கொள்ளாமல்,”நீ எதற்காகக் கேட்கிறாய்? நீ யார்? உன் பெயர் என்ன?" என்று அதட்டிக் கேட்டான். "சொல்கிறேன், கேள். நான் உன் மாமியார்; என் பெயர் ரஸியா பேகம்; அந்த ரத்தின ஹாரத்தை நான் சீதாவுக்குக் கொடுத்தேன், அதனாலேதான் கேட்கிறேன். அது போனால் போகட்டும். சீதாவை நீ கஷ்டப்படுத்துகிறாய் என்று எனக்குத் தெரியும். உங்களிடமிருந்து தொல்லைப்படுவதைக் காட்டிலும் சிறையிலிருப்பது மேல் என்று எண்ணி அவள் சிறைக்குப் போயிருக்கிறாள். ஒரு நாள் வெளியில் வருவாள். அப்போது அவளை நீ சரியாக நடத்திப் பத்திரமாய்ப் பாதுகாக்க வேண்டும். இல்லாவிட்டால் உன்னை இந்தக் கத்தியால் ஒரே குத்தாகக் குத்திக் கொன்றுவிடுவேன்!" என்று சொல்லி ஒரு கத்தியை எடுத்துக் காட்டினாள். ராகவன் இப்போது உண்மையாகவே பயந்து நடுங்கிப் போனான். அவனால் வாயைத் திறக்கவே முடியவில்லை. சட்டென்று ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. “ரஜனீபூர் பைத்தியம்” என்று ஒரு ஸ்திரீ ரஜனிபூர் ராஜாவைக் கொல்லப் பார்த்தாள் என்றும் அவள் டில்லியில் திரிந்து கொண்டிருந்தாள் என்றும் அவன் கேள்விப்பட்டிருந்தான். “நீ ரஜனிபூர்….” என்று தயக்கத்துடன் அவன் கேட்க ஆரம்பித்தவுடனே, “ஆமாம்; நான் ரஜனிபூர் மகாராணிதான்! என் அருமை மகளை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்! இல்லாவிட்டால் உன்னை நிச்சயமாய்க் குத்திக் கொன்று விடுவேன்!” என்று சொல்லிவிட்டு அந்த ஸ்திரீ போய்விட்டாள். இந்தச் சம்பவம் கொஞ்ச நாள் வரையில் ராகவனுடைய மனதில் இடைவிடாமல் குடி கொண்டிருந்தது. ரஜனிபூர் பைத்தியம் என்பது யார் என்றும் அவளுக்கும் தன் மனைவி சீதாவுக்கும் என்ன சம்பந்தம் என்றும் அறிந்து கொள்ளப் பெரிதும் ஆவலாயிருந்தது. வேறு வழியில் இதைப்பற்றித் தெரிந்து கொள்ள முடிய வில்லை. சீதாவைக் கேட்டுத் தெரிந்து கொண்டால்தான் உண்டு. நாளடைவில் ரஸியா பேகத்தின் வார்த்தைகளின் வேகம் மறைந்துவிட்டாலும் இன்னமும் உண்மையை அறிந்து கொள்ளும் ஆவல் ராகவனுடைய மனதில் இருக்கத்தான் இருந்தது. அதற்காகவாவது சீதாவை மறுபடியும் கூட்டி வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தவேண்டும்…. கடற்காற்று சுகமாக அடித்துக் கொண்டிருந்தது. கடல் அலைகளின் ஓசை பின்னணி சங்கீதத்தைப் போலக் கேட்டுக் கொண்டிருந்தது. ராகவனுக்குக் கண்களைச் சுழற்றிக் கொண்டு வந்தது. தன்னை அறியாமல் சாய்மான நாற்காலியில் படுத்த வண்ணம் அவன் தூங்கிப் போனான். அந்தப் பகற் தூக்கத்தில் ராகவன் ஒரு கனவு கண்டான். ஒரு பெரிய அரண்மனை, அதில் தர்பார் மண்டபம், பளிங்கு மேடையில் முத்து விதானத்தின் கீழ் அமைந்த நவரத்தின சிம்மாசனத்தில் ராணி ஒருத்தி உட்கார்ந்திருந்தாள். “ரஜினிபூர் மகா ராணிக்கு ஜே!” என்ற கோஷம் எங்கிருந்தோ கேட்டுக் கொண்டிருந்தது. முதலில் தூரத்தில் நின்று பார்த்த ராகவன் அந்தச் சிம்மாசனத்தை நெருங்கிப் போனான். பத்து அடி தூரத்தில் சென்றதும் மகாராணி ராகவனைப் பார்த்துப் புன்னகை புரிந்து, “நான் யார் தெரிகிறதா?” என்று கேட்டாள். “ரஜினிபூர் ராணி!” என்றான் ராகவன். “நன்றாகப் பார்!” என்றாள் ராணி! உற்றுப் பார்த்த போது ராகவனுடைய உள்ளத்தைக் கவர்ந்த வேறொரு முகமாகத் தெரிந்தது. “ஆ! தாரிணி! நீயா?” என்று கேட்டான் ராகவன். “இன்னும் நன்றாய்ப் பார்! பார்த்துச் சொல்லு!” என்றாள் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த மாது, ராகவன் பார்த்தான். இப்போது சீதாவின் முகமாகத் தெரிந்தது. “ஆ! சீதா! நீ தானா. தாரிணி மாதிரி எப்போது மாறினாய்!” என்று கேட்டான். “நான் மாறவில்லை, உங்கள் கண்களும் மனமும் மாறிவிட்டன” என்றாள் சீதா. “நான் உன்னைக் கஷ்டப்படுத்தியதை யெல்லாம் மன்னித்துவிடு!” என்றான் ராகவன். “நான் உங்களைக் கஷ்டப்படுத்தியதற்கும் நீங்கள் என்னைக் கஷ்டப்படுத்தியதற்கும் சரியாய்ப் போயிற்று. ஆகையால் மன்னிப்பதற்கு ஒன்றும் இல்லை. குழந்தை வஸந்தி எங்கே?” என்று சிம்மாசனத்தில் கிரீடமணிந்து வீற்றிருந்த சீதா கேட்டாள். “ஆகா! வஸந்தியை மறந்து விட்டேனே! இதோ போய் அழைத்து வருகிறேன்!” என்று ஓடத் தொடங்கினான். வஸந்தியை எங்கேயோ விட்டு விட்டு வந்ததாக அவனுக்கு ஞாபகம் இருந்தது. ஆனால் எங்கே என்பது நினைவில் இல்லை. ஞாபகப்படுத்திக்கொள்ள முயன்று கொண்டே ஓடினான். கால் புதைந்த ஆற்று மணலைக் கடந்து ஓடினான். ஓடையில் இறங்கித் தண்ணீரில் நனைந்து கொண்டு ஓடினான். காட்டிலும் மலையிலும் ஓடினான். பெரியதொரு அரண்மனையின் மேல்மாடி முகப்பில் ஓடினான். முதலில் “வஸந்தி!” “வஸந்தி!” என்று கூச்சலிட்டுக் கொண்டே ஓடினான். பிறகு கூச்சல் போடவும் முடியாமல் தொண்டை நன்றாக அடைத்துக் கொண்டது. கால்கள் தடுமாறின; தலைச் சுற்றியது. ஒரு பெரும் பிரயத்தனம் செய்து, “ஐயோ! வஸந்தி!” என்று கூச்சலிட்டான். யாரோ தோளைப் பிடித்துக் குலுக்கினார்கள்; உடனே விழிப்பு வந்து விட்டது. கனவு மயக்கத்தில் வஸந்திதான் என்று நினைத்துக் கொண்டு, “ஆ! என் கண்மணி! வந்து விட்டாயா!” என்று சொல்லிக் கொண்டே திரும்பிப் பார்த்தான். அவனுடைய தோளைப் பிடித்துக் குலுக்கியவள் வஸந்தி அல்லவென்றும் பாமா என்றும் தெரிந்து கொண்டான். தன் மனதிற்குள்ளே, “அட பிசாசே! சற்று நேரம் என்னைச் சும்மா விடமாட்டாய்?” என்று சொல்லிக் கொண்டே எழுந்தான். அந்தக் கனவு கண்டது முதல் ராகவனுக்கு வஸந்தியைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் அளவின்றிப் பெருகிற்று. குழந்தையை இனிமேல் என்றைக்கும் விட்டுப் பிரிவதில்லை என்று அடிக்கடி தீர்மானித்துக் கொண்டான். கனவை நினைத்துக் கொண்டு அவளுக்கு விபத்து ஒன்றும் நேராமல் இருக்கவேண்டுமே என்று ஓயாமல் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தான். பம்பாய்த் துறைமுகத்தில் கப்பலிலிருந்து கீழே இறங்கியவுடனே ஆகாய விமானத்தில் ஏறிச் சென்னைப்பட்டணத் துக்குச் சென்றான். பத்மாபுரத்தில் தன் தந்தை பத்மலோசன சாஸ்திரிகளின் வீட்டை அடைந்தான். வீட்டு வாசலில் வண்டி ஒன்று காத்துக் கொண்டிருந்தது. ‘யாராவது ஊருக்குப் போகிறார்களா?’ என்று மனத்தில் நினைத்துக் கொண்டான். டாக்ஸி வண்டியின் சத்தத்தைக் கேட்டு அவனுடைய தாயார் வெளியில் வந்து பார்த்தாள். மகனை ஆவலுடன் வரவேற்றாள். “ஏன்டாப்பா! வருகிறதாகக் கடிதம் கூட எழுதவில்லையே!” என்று ஆவலாகச் சொன்னாள். ராகவன் அதைப்n பொருட் படுத்தாமல், “அம்மா! யாராவது ஊருக்குக் கிளம்புகிறார்களா?” என்று கேட்டான். “ஆமாண்டா, அப்பா! நீ வருகிறது தெரியாதோ இல்லையோ? சூரியா வந்திருக்கிறான். குழந்தை வஸந்தியை அழைத்துக் கொண்டு புறப்படுவதற்கிருந்தான். அதற்குள் நல்லவேளையாக நீ வந்து விட்டாய்!” என்றாள். “குழந்தையை எங்கே அழைத்துப் போவதாகச் சொன்னான்?” “தேவபட்டணத்துக்குத்தான். அங்கே அவள் அம்மா இருக்கிறாள் அல்லவா?” “ஓகோ! அப்படியா!” என்று கர்ஜித்தான் ராகவன். காமாட்சி அம்மாள், “நீ வந்துவிட்டபடியால் இன்றைக்குக் குழந்தை போவதற்கில்லை!” என்றாள். “இன்றைக்கும் இல்லை; என்றைக்கும் இல்லை!” என்று சொல்லிக் கொண்டே உள்ளே போனான். சூரியாவுடன் ஊருக்குப் புறப்படுவதற்குத் தயாராக நின்ற வஸந்தி அப்பாவைப் பார்த்ததும் ஒரே ஓட்டமாக ஓடிவந்து அவனைக் கட்டிக் கொண்டாள். ராகவன் கால்சட்டைப் பையிலிருந்து கைத்துப்பாக்கியை எடுத்துக் கொண்டு சூரியாவை நோக்கிக் குறி பார்த்து, “அடே காலிப்பயலே! உன்னைப் போன்ற அயோக்கிய சிகாமணியைக் கொன்றால் துளிக்கூடத் தோஷமில்லை!” என்று கர்ஜித்தான். சூரியா ஒரு நிமிஷம் திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தான். பதிநான்காம் அத்தியாயம் - ரஜினிபூர் ராஜகுமாரி சூரியா தன் திகைப்பை நீக்கிக் கொண்டு, “மாப்பிள்ளை! இது என்ன கோபம்? இங்கிலாந்தில் இருந்தபோது இங்கிலீஷ் சினிமாக்கள் அதிகமாகப் பார்த்தீர்களா, என்ன? ஒரு காரணமுமில்லாமல் துப்பாக்கியால் சுடுவேன் என்கிறீர்களே? தோட்டாக்களை வீணாக்க வேண்டாம். பின்னால் ஏதாவது அவசியமான காரியத்துக்கு உபயோகமாயிருக்கும்” என்றான். “எப்போதும் நீ அரட்டைக் கல்லித்தனமாகப் பேசுகிறதில் கெட்டிக்காரன் என்று எனக்குத் தெரியும். உன் அதிகப் பிரசங்கத்தை என்னிடம் காட்ட வேண்டாம், சீதாவை அழைத்துக்கொண்டு ஓடினவன் அல்லவா நீ? இப்போது வஸந்தியையும் ‘கிட்நாப்’ செய்ய வந்துவிட்டாய்! உன்னைப் போலீஸில் பிடித்துக் கொடுத்துவிட்டு மறு காரியம் பார்க்கிறேன். தப்பி ஓடப் பார்க்காதே! ஓடினால் கட்டாயம் சுட்டுவிடுவேன்!” என்றான் ராகவன். ராகவனுக்குப் பின் புறத்தில் நின்று கொண்டிருந்த காமாட்சி அம்மாள், “அப்பா! ராகவா! இது என்ன ரகளை வந்ததும் வராததுமாய்? அப்படியொன்றும் சூரியா செய்யத் தகாத காரியத்தைச் செய்யக் கூடியவன் அல்ல. நான்தான் வஸந்தியை அவள் அம்மாவிடம் அழைத்துப் போகும்படி சூரியாவிடம் சொன்னேன். வெகு நாளாக அந்தக் குழந்தை அப்பா, அம்மா இரண்டு பேரையும் பார்க்காமல் ஏங்கிக் கிடந்தது!” என்றாள். வஸந்தி, “சூரியா மாமா! நான் அப்பாவைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறேன். நீங்கள் சட்டென்று இங்கிருந்து ஓடிப்போய் விடுங்கள்!” என்றாள். குழந்தையின் மழலையைக் கேட்ட ராகவனுடைய மனம் சாந்தமும் சிறிது வெட்கமும் அடைந்தது. “மிஸ்டர் சூரியா! பொம்மனாட்டிகள் எல்லோருமே உன்னுடைய கட்சியில்தான் இருப்பார்கள் என்று எனக்குத் தெரியும். சரி! இந்தத் தடவை போனால் போகிறதென்று விட்டு விடுகிறேன். விடு சவாரி! நிற்காதே! கெட் அவுட்!” என்றான் ராகவன். “ஸார்! நான் போகத்தான் போகிறேன். ஆனால் போவதற்கு முன்னால் உங்கள் மனதில் உள்ள ஒரு தப்பெண்ணத்தை நிவர்த்திக்க விரும்புகிறேன். உங்கள் மனைவி சீதாவை நான் அழைத்துக்கொண்டு ஓடிப் போனதாகச் சற்று முன்பு சொன்னீர்கள். நிஜமாகவே நீங்கள் அவ்விதம் நம்புகிறீர்களா என்று தெரியவில்லை. நம்பினால் அதைக் காட்டிலும் தவறு வேறொன்றுமில்லை. ரஜனிபூர் ராஜாவின் ஆட்கள் சீதாவைக் கைப்பற்றிக்கொண்டு போனார்கள். அதைத் தடுத்து நிறுத்தி சீதாவைக் காப்பாற்றிக் கொண்டு வருவதற்காகவே நான் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றேன். அப்போதுதான் போலீஸார் என்னைப் பிடித்துக் கொண்டார்கள். சத்தியமாகச் சொல்கிறேன்!” என்று சொன்னான் சூரியா. “ஆமாண்டா அப்பா. ராகவா! இதையெல்லாம் சூரியா என்னிடமும் சொன்னான். அவன் சொன்னதெல்லாம் எனக்கு நம்பிக்கையாயிருந்தது, சீதாவும் அதே மாதிரிதான் சொன்னாள்!” என்றாள் காமாட்சி அம்மாள். “அம்மா பட்ட கஷ்டத்தை யெல்லாம் கேட்டால் அதிசயமாகவும் பயங்கரமாகவும் இருக்கு,”அப்பா! அரபிக்கதைகளிலே வருகிறது போல் இருக்கு!" என்றாள் வஸந்தி. ராகவன் தன் கைத் துப்பாக்கியைச் சட்டைப் பையில் போட்டுக்கொண்டு, “அப்படியானால் அதையெல்லாம் எனக்கும் விவரமாகச் சொல்லிவிட்டுப் போ! சூரியா! ஊருக்குப் போக அவசரம் ஒன்றும் இல்லை!” என்றான். “அப்படியே ஆகட்டும், மாப்பிள்ளை ஸார்! எனக்கு அவசரம் ஒன்றும் இல்லை!” என்றான் சூரியா. சூரியா ரஜனிபூர் ராஜாவின் ஆட்களைப் பற்றிக் குறிப்பிட்டவுடனேயே ராகவனுடைய மனதில் அதைப்பற்றிச் சூரியாவிடம் பூரா விவரமும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் உண்டாகி விட்டது. ஆகையால், ஸ்நானம், சாப்பாடு எல்லாம் முடிந்ததும் சூரியாவை அழைத்துக் கொண்டு தன்னுடைய பழைய மாடி அறைக்குப் போய்ச் சேர்ந்தான். “சூரியா கப்பலில் வரும்போது நான் ஒரு பயங்கரமான சொப்பனம் கண்டேன், குழந்தை வஸந்தி காணாமற் போய் விட்டது போலவும் அவளைத் தேடிக் கொண்டு நான் பூமியிலும் வானத்திலும் நீரிலும் நெருப்பிலும் புகையிலும் பனியிலும் ஓடி ஓடி அலைந்ததாகவும் கண்டேன். குழந்தையின் குரல் மட்டும் ‘அப்பா! அப்பா!’ என்று பரிதாபமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அவள் இருக்கும் இடத்தை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. கனவு கலைந்து எழுந்ததும் ‘இனி ஒரு நாளும் வஸந்தியை விட்டுப் பிரிவதில்லை!’ என்று சபதம் செய்து கொண்டேன். ஆகையினால்தான் நீ வஸந்தியை அழைத்துப் போக வந்திருக்கிறாய் என்று கேள்விப்பட்டதும் எனக்கு அவ்வளவு கோபம் வந்தது! அதை நீ பொருட்படுத்த வேண்டாம்!” என்றான் ராகவன். “மாப்பிள்ளை, ஸார்! கனவு காண்கிற விஷயத்தில் தாங்களும் தங்களுடைய மனைவியும் போட்டி போடுவீர்கள் போலிருக்கிறது. நாம் ஆக்ராவுக்குப் போயிருந்தபோது அத்தங்காள் கனவு கண்டது பற்றிச் சொன்னது ஞாபகம் இருக்கிறதா? ஆனால் அத்தங்காளின் வாழ்க்கையில் அந்த பயங்கரக் கனவைக் காட்டிலும் பயங்கரமான பல சம்பவங்கள் உண்மையாகவே நிகழ்ந்து விட்டன!” என்று சொன்னான் சூரியா. “அந்தச் சம்பவங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்குத் தான் உன்னை இருக்கும்படி சொன்னேன், சூரியா! நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாகத் தோன்றவில்லையா? சீதாவைப் பற்றி அவளுடைய கணவனாகிய எனக்குத் தெரிந்திருப்பதைக் காட்டிலும் உனக்கு அதிகமாகத் தெரிந்திருப்பது ஆச்சரியம் அல்லவா?” என்று ராகவன் குத்தலாகக் கேட்டான். “ஆச்சரியமான விஷயந்தான்; இல்லை என்று சொல்லவில்லை. சந்தர்ப்பங்கள் அப்படி ஏற்பட்டு விட்டன. மேலும், நீங்கள் அநாவசியமாக என்னவெல்லாமோ சந்தேகப்பட்டுக் கொண்டு அத்தங்காளைப் பற்றிக் கவனியாமல் இருந்து விட்டீர்கள்…..” “என்னுடைய சந்தேகங்கள் அவசியமா அநாவசியமா என்பதைப்பற்றி இப்போது சர்ச்சை வேண்டியதில்லை. ரஜனிபூர் ராஜாவின் ஆட்கள் உன் அத்தங்காளைப் பிடித்துக் கொண்டு போனார்கள் என்று ஒரு கதை சொன்னாயல்லவா?….” “அது கதையல்ல, மிஸ்டர் ராகவன்! சத்தியமாக நடந்தது?” “அப்படியே இருக்கட்டும், ரஜினிபூர் ஆட்கள் சீதாவைப் பிடித்துக் கொண்டு போனது எதற்காக? பிடித்துக்கொண்டு போய் என்ன செய்தார்கள். நீ சொல்லுவதை மட்டும் உண்மை என்று நிரூபித்துவிடும் பட்சத்தில் அந்த ரஜினிபூர் சமஸ்தானத்தையே ஒழித்துக் கட்டிவிட்டு மறு காரியம் பார்ப்பேன்!” என்றான் ராகவன். “என்னால் ஒன்றையும் நிரூபிக்க முடியாது, மாப்பிள்ளை! எப்பொழுதோ யாரோ செய்த காரியத்தை நான் எப்படிச் சாட்சி விட்டு நிரூபிக்க முடியும்? நான் சொல்வதை நீங்கள் நம்பினால்தான் உண்டு.” “அப்படியானால் நம்பிக்கை உண்டாகும்படியாக உன்னுடைய கதையைச் சொல், பார்க்கலாம்.” “மறுபடியும் ‘கதை’ என்றே கூறுகிறீர்கள். நான் என்ன சொல்லி என்ன பிரயோஜனம்?” “நமக்குள் வீண் விவகாரம் வேண்டாம்! முதலில், ரஜினிபூர் ராஜாவின் ஆட்கள் எதற்காகச் சீதாவைப் பிடித்துக் கொண்டு போனார்கள் என்று சொல். ஒருவேளை காணாமற்போன ரஜினிபூர் ராஜகுமாரி என்பதாகச் சீதாவை நினைத்துக் கொண்டார்களோ?” என்று ராகவன் கேலியாகக் கேட்டான். “ஆமாம்; உங்களுக்குத்தான் தெரிந்திருக்கிறதே?” என்றான் சூரியா. “சூரியாவினுடைய பதில் ராகவனுடைய ஆவலை அதிகமாக்கிற்று.”நான் ஏதோ குருட்டாம் போக்காய்ச் சொன்னேன். நீ அதுதான் உண்மை என்கிறாய். நான் ஆச்சரியக் கடலில் மூழ்கிப் போக வேண்டியதுதான். ஆயினும் பாக்கி விவரங்களையும் தெரிந்து கொள்வதற்காக அடியோடு ஆச்சரியக் கடலில் முழுகிப் போய்விடாமல் மேலே தலையை மட்டும் நீட்டி வைத்துக்கொண்டிருக்கிறேன்!" என்று சொன்னான் ராகவன். “இன்னும் உங்களுடைய கேலிப் பேச்சுப் போகவில்லை, மாப்பிள்ளை, ஸார்! நீங்கள் எப்போதாவது ஒரு விஷயத்தைக் கவனித்ததுண்டா? தாரிணி தேவியும் சீதா அத்தங்காளும் அசப்பிலே பார்க்கும்போது உருவ ஒற்றுமை கொண்டவர்களாக உங்களுக்கு எப்போதாவது தோன்றியதுண்டா?” என்று சூரியா கேட்டான். ராகவனுக்கு தூக்கிவாரிப் போட்டது. மனதில் பற்பல ஐயங்களும் ஊகங்களும் அலைமோதிக் கொண்டு எழுந்தன. ஆயினும் வெளிப்படையான அமைதியுடன், “இல்லை சூரியா! பெண்மணிகளின் உருவங்களையோ அவர்களுடைய உருவ ஒற்றுமை வேற்றுமைகளையோ நான் அவ்வளவாக கவனிப்பதில்லை. நீ சொல்வதுபோல் தாரிணியும் சீதாவும் ஓரளவு உருவ ஒற்றுமை உள்ளவர்கள் என்றே வைத்துக் கொள்ளலாம் அதனால் என்ன?” என்று கேட்டான். “வேறொன்றுமில்லை, ரஜினிபூர் ஆட்கள் தாரிணிதேவி என்று நினைத்துக்கொண்டு சீதாவைக் கைப்பற்றிக் கொண்டு போனார்கள்!….” “ஆகா! அப்படியானால் தாரிணி….?” என்று ராகவன் ஆரம்பித்து, ஒரு பெரிய கேள்விக் குறியுடன் வாக்கியத்தை நடுவில் நிறுத்தினான். “ஆமாம்; ரஜினிபூர் ராஜகுமாரி உண்மையில் தாரிணி தேவிதான்!” என்றான் சூரியா. ராகவன் சற்றுநேரம் வியப்பினால் திகைத்திருந்தான். பிறகு, “உனக்கு எப்படித் தெரிந்தது, சூரியா? தாரிணியுடன் எத்தனையோ காலம் நான் பழகியவன். அவளும் என்னிடம் சொல்லவில்லை; நானும் சந்தேகிக்கவில்லையே?” என்றான். “தாரிணி என்னிடம் சொல்லவில்லை! நானும் சந்தேகிக்கவில்லை. சீதா அத்தங்காள் மூலமாகத்தான் எனக்கு முதலில் தெரிந்தது.” “தாரிணி என்று எண்ணிக் கொண்டு சீதாவை பிடித்துப் போனார்கள் என்று எப்படி அனுமானித்தாய்?” “சீதாவை அவர்கள் கைப்பற்றிய முதல் நாள் நானும் தாரிணி தேவியும் வெள்ளி வீதிக்குப் பின்னால் உள்ள காந்தி மைதானத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்…..” அசூயை நிறைந்த குரலில் ராகவன், “என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்டான். “புரட்சி இயக்கத்தை எப்படித் தொடர்ந்து நடத்துவது, இந்தியாவின் சுதந்திரத்தை எப்படிக் கைப்பற்றுவது, வெள்ளைக்காரர்களை நாட்டைவிட்டு எப்படி வெளியேற்றுவது - என்பது போன்ற விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். தாரிணி அவ்விடமிருந்து போன பிறகு மூன்று ஆசாமிகள் என்னிடம் வந்தார்கள். அவர்களுடைய தோற்றத்தைப் பார்த்தவுடனேயே சுதேச சமஸ்தானத்து ஆட்கள் என்று தெரிந்து போய்விட்டது. தாரிணியைக் கைப்பற்றுவதற்கு நான் உதவி செய்தால் லட்சம் ரூபாய் கொடுப்பதாக அவர்கள் என்னிடம் சொன்னார்கள். அவர்களுடைய நோக்கம் என்னவென்பதை அப்போது நான் அறியவில்லை. சமஸ்தான ராஜாக்களின் வழக்கத்தையொட்டி துர்நோக்கங்கொண்டு தாரிணியைக் கொண்டுபோக எண்ணுகிறார்கள் என்று எண்ணினேன். அவர்களை நன்றாகத் திட்டி அனுப்பினேன். மறுநாள் அதே காந்தி மைதானத்தில் ஏறக்குறைய அதே நேரத்தில் அதே இடத்தில் நானும் சீதா அத்தங்காளும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்….” “ஆகா! அப்படிச் சொல்லு! உத்தமியாகிய அத்தங்கா சீதா, யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டுக் கிளம்பிக் காந்தி மைதானத்திற்கு வந்தாள் அல்லவா? எதற்காக?” “மாப்பிள்ளை! நீங்கள் கோபித்துக் கொள்வதில்லையென்றால் உண்மையைச் சொல்லி விடுகிறேன்.” “நான் கோபித்துக் கொள்வதானால் பொய் சொல்வாயாக்கும்.” “சரி!” எப்படியானாலும் நிஜத்தைச் சொல்லிவிடுகிறேன். ராகவன்! சற்று முன்னால் நீங்கள் என்னைப் போலீஸாரிடம் பிடித்துக் கொடுத்து விடுவதாகச் சொன்னீர்கள். அப்படிச் செய்திருப்பின் ஒன்றும் மோசம் போயிருக்காது. ஆனால் முன்னொரு தடவை என்னைப் போலீஸில் பிடித்துக் கொடுப்பதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தீர்கள். தங்கள் வீட்டைச் சுற்றி இரகசியப் போலீஸ் சூழ்ந்திருக்க ஏற்பாடு செய்திருந்தீர்கள். அந்தச் சமயம் நான் கைதியாகியிருந்தால் புரட்சி இயக்கத்துக்குப் பெருந்தீங்கு நேர்ந்திருக்கும். அவ்விதம் நேராமல் தங்கள் மனைவி சீதாதான் காப்பாற்றினாள். உங்கள் வீட்டுக்கு நான் வரவேண்டாம் என்று எனக்கு எச்சரிக்கை செய்வதற்காகக் காந்தி மைதானத்துக்கு வந்தாள்….." சீதா தன்னைத் தேடி வந்தது பற்றி முழு உண்மையையும் சூரியா சொல்லவில்லை; பாதிதான் சொன்னான். அதுவே ராகவனுடைய மனதில் கொதிப்பை உண்டாக்கப் போதுமானதாயிருந்தது. ‘ஆகா! அந்தச் சண்டாளி அப்படியா செய்தாள்? இந்தக் காலிப் பயலைக் காப்பாற்றிக் கொடுப்பதில் அவளுக்கு ஏன் அத்தகைய சிரத்தை ஏற்பட்டது?’ என்று மனதிற்குள் எண்ணிப் பொருமினான். வெளிப்படையாக, “சூரியா! ஒரு பெண் பிள்ளையின் பேச்சை நீ இவ்வளவு தூரம் நம்பக்கூடியவன் என்று நான் எண்ணவில்லை. நான் ஏதோ தமாஷாகப் பேசியதை உண்மை என்று நினைத்துக் கொண்டு வந்து உன்னிடம் ஏதோ உளறியிருக்கிறாள்!” என்றான். “இருக்கலாம் மிஸ்டர் ராகவன்! தமாஷாகக்கூடக் கெடுதலான காரியங்களைப் பற்றிப் பேசக்கூடாதென்று இதிலிருந்து ஏற்படுகிறது. உங்களுடைய தமாஷ் பேச்சிலிருந்து எவ்வளவு விபரீதங்கள் நேர்ந்துவிட்டன, பாருங்கள்!” என்றான் சூரியா. “அந்த விபரீதங்களைப் பற்றிய விவரத்தை இன்னும் நீ எனக்குச் சொல்லுகிற வழியாக இல்லை. அதைத் தெரிந்து கொள்வதற்கோ எனக்கு ஒரே பரபரப்பாயிருக்கிறது!” என்றான் ராகவன். “நீங்கள் சொல்லும்படி விட்டால்தானே? குறுக்கே ஏதாவது கேட்டுக் கொண்டேயிருந்தால் எப்படிச் சொல்லுவது? சற்று மௌனமாகக் கேட்டால் எல்லாவற்றையும் சொல்லி விடுகிறேன்!” “சரி! இதோ மௌனம்!” என்று சொல்லி ராகவன் கேலியாகத் தன் வாயைப் பொத்திக் கொண்டான். பிறகு சூரியா, சீதாவைத் தாரிணி என்று நினைத்துக் கொண்டு ரஜினிபூர் சமஸ்தானத்து ஆட்கள் கைப்பற்றிக் கொண்டு போனது முதல் சீதா கல்கத்தாவுக்கு வந்து சேர்ந்து கைதியானது வரையில் எல்லாவற்றையும் சுருக்கமாகக் கூறினான். “ரஜினிபூர் ஆட்கள் செய்த தவறையே கல்கத்தா போலீஸ்காரர்களும் செய்தார்கள். சீதா அத்தங்காளைத் தாரிணிதேவி என்று கருதிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்க் கைது செய்து சிறைக்கு அனுப்பினார்கள்!” என்று சூரியா சொல்லி முடித்தான். பதினைந்தாம் அத்தியாயம் - கங்காபாயின் கதை சூரியா சொல்லிய கடைசி விஷயம் ராகவனுடைய எண்ணத்தை வேறு வழியில் செலுத்தியது. பலவித சந்தேகங்கள் அவன் மனதில் உதித்தின. “ரஜினிபூர்ப் பைத்தியம்” என்று சொல்லப்பட்ட ஸ்திரீ தன்னிடம் சீதாவைப் பற்றி எச்சரித்தது நினைவுக்கு வந்தது. இந்த விஷயத்தில் இன்னும் ஏதோ மர்மம் இருக்கிறதென்றும் அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் எண்ணினான். ஒரு வேளை சீதாதான் உண்மையில் ரஜினிபூர் இளவரசியோ, என்னமோ; இந்தப் போக்கிரி சூரியாவும் அவனுடைய காதலி தாரிணியும் சேர்ந்து ஏதோ சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்களோ என்னமோ? இல்லாவிட்டால் சீதா தவறாகச் சிறைக்கு அனுப்பப்பட்டிருந்தும் இவர்கள் ஏன் அவள் தாரிணி இல்லை என்று சொல்லி அவளை விடுவிக்க முயற்சி எதுவும் செய்யவில்லை? “சூரியா! தாரிணிதேவிதான் காணாமற்போன ரஜினிபூர் இளவரசி என்று ஏதனால் அவ்வளவு நிச்சயமாகச் சொல்கிறாய்? ஏன் அந்த ராஜகுமாரி சீதாவாக இருக்கக்கூடாது?” என்றான் ராகவன். சூரியாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. “சீதா, ரஜினிபூர் ராஜகுமாரி என்று ஏற்பட்டால், எவ்வளவோ நலமாயிருக்கும், மிஸ்டர் ராகவன்! ஏனெனில், தாரிணிக்கு அந்த ‘ராஜகுமாரி’ என்கிற பட்டமே வேப்பங்காயாக இருக்கிறது. எனக்கும் அப்படித்தான்; ஆனால் சீதா அத்தங்கா ரொம்பவும் ‘ரொமாண்டிக்’ இயல்பு உள்ளவள். தான் ராஜகுமாரி என்று ஏற்பட்டால் அத்தங்காளுக்கு எவ்வளவோ சந்தோஷமாயிருக்கும். தங்களுக்கும் அது திருப்தியளிக்கும் என்று தெரிகிறது. அத்தங்கா பேரில் தங்களுக்குள்ள கோபத்தையெல்லாம் மறந்து சந்தோஷம் அடைவீர்கள். ஆனால் அப்படியில்லையே, என்ன செய்வது? யாருக்கு ஒரு பொருள் பிரியமாயிருக்கிறதோ அவருக்கு அப்பொருளைக் கடவுள் அளிப்பதில்லை. வேண்டாதவர்களுக்குப் பார்த்துக் கொடுக்கிறார்!” என்று சூரியா சொன்னான். “உன்னுடைய வேதாந்தம் அப்புறம் இருக்கட்டும். சீதா டில்லியை விட்டுப் போன சில நாளைக்கெல்லாம் எனக்கு ஓர் அனுபவம் ஏற்பட்டது. அதைச் சொல்லுகிறேன், கேட்கிறாயா?” “பேஷாகக் கேட்கிறேன்; சொல்லுங்கள்!” என்றான் சூரியா. அதன் பேரில் ராகவன், திடீரென்று ஒரு நாள் கையில் கத்தியுடன் தோன்றிச் சீதாவைச் சரியாக நடத்தவேண்டும் என்று தனக்கு எச்சரிக்கை செய்து விட்டுப்போன வெறி கொண்ட ஸ்திரீயைப்பற்றிச் சூரியாவிடம் விவரமாகச் சொன்னான். “அந்த ஸ்திரீ யார்? சீதாவைப் பற்றி அந்த வடநாட்டு ஸ்திரீக்கு ஏன் அவ்வளவு சிரத்தை உண்டாக வேண்டும்? உன்னால் சொல்ல முடியுமா?” என்று ராகவன் கேட்டான். “சொல்ல முடியும்” என்று சூரியா சொன்ன பதில் ராகவனைத் தூக்கி வாரிப் போட்டது. “அந்த ஸ்திரீயின் முதல் பெயர் ரமாமணிபாய். இப்போது அவள் பெயர் ரஸியாபேகம், சீதா அத்தங்காள் மீது அவளுக்கு வாஞ்சை ஏற்படக் காரணம் உண்டு. அது பெரிய கதை, மாப்பிள்ளை ஸார்! கிட்டத்தட்ட முப்பது வருஷங்களுக்கு முன்னால் ஆரம்பிக்கும் கதை. எனக்கும் வெகு காலம் வரை தெரியாமல்தானிருந்தது. சில மாதத்துக்கு முன்புதான் தெரிந்து கொண்டேன். அதுவும் ரஸியா பேகம் சொல்லித்தான் தெரிந்தது. அந்தத் துர்ப்பாக்யவதி பெரும்பாலும் வெறி கொண்டு திரிகிறவள். அபூர்வமாகச் சில சமயம் அவளுடைய மனம் தெளிகிறது. அப்படிப்பட்ட சமயத்தில் தற்செயலாய் அவளைப் பார்த்த போது கேட்டுத் தெரிந்து கொண்டேன். சீதா அத்தங்காளிடங்கூட அதைப்பற்றிச் சொல்லவில்லை. தங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாதலால் சொல்கிறேன்!”- இந்தப் பூர்வ பீடிகையுடன் ஆரம்பித்து ரஸியா பேகத்தைப் பற்றிய அபூர்வ வரலாற்றைச் சூரியா கூறினான். முப்பது வருஷத்துக்கு முன்னால் ரஜினிபூர் சமஸ்தானத்தில் சிம்மாசனத்தில் வீற்றிருந்த மகாராஜா மற்றும் பல சமஸ்தான மன்னர்களைப் போலவே சிற்றின்பப் பிரியனாயிருந்தான். இராஜ்ய காரியங்களைத் திவானும் பிரிட்டிஷ் ரிஸிடெண்டும் பார்க்கும்படி விட்டுவிட்டுத் தான் லீலா விநோதங்களில் காலங்கழித்து வந்தான். அந்த லீலா விநோதங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்குப் பல துர்மந்திரிகள் இருந்தார்கள். அவர்களில் முக்கியமானவன் மதோங்கர். ஒரு சமயம் ரஜினிபூர் மகாராஜாவின் சபைக்கு மகாராஷ்டிர தேசத்திலிருந்து பாடகி ஒருத்தி வந்து பாடினாள்; அவள் பெயர் கங்காபாய். மகாராஜாவுக்கு அவளுடைய பாட்டும் பிடித்திருந்தது; அவளையும் பிடித்திருந்தது. பாடகியுடன் அவளுக்குத் துணையாக அவள் தமக்கையும் வந்திருந்தாள். தமக்கையின் பெயர் ரமாமணி; அவள் நல்ல தைரியசாலி. உலக விவகாரங்களில் தனக்கு மிஞ்சியவள் கிடையாது என்று அவளுக்கு எண்ணம். மகாராஜாவின் முன்னிலையில் மூன்று நாள் இன்னிசைக் கச்சேரி நடந்த பிறகு மதோங்கர் என்பவன் அந்தப் பெண்கள் தங்கியிருந்த ஜாகைக்கு வந்தான்; பாடகியை மகாராஜாவுக்கு ரொம்பவும் பிடித்திருப்பதாகத் தெரியப்படுத்தினான். அதற்கு ரமாமணி, “அப்படியானால் மகாராஜா என் தங்கையைக் கலியாணம் செய்து கொள்ளட்டுமே?” என்றாள். “மகாராஜாவின் உத்தேசமும் அதுதான்!” என்றான் மதோங்கர். ரமாமணி ‘கலியாணம்’ என்ற வார்த்தையினால் ஏமாந்து போய்விட்டாள். தன் தங்கைக்கு இதோபதேசம் செய்து சம்மதிக்கப் பண்ணினாள். “மகாராஜா எவ்வளவு பெரிய ரஸிகர் என்பதை நீயே பார்த்துத் தெரிந்து கொண்டாய். அவருடைய ராஜ்யமோ ரொம்பக் கீர்த்தி வாய்ந்தது, ஐசுவரியத்துக்கு அளவேயில்லை. இப்படிப்பட்ட அரண்மனையில் மகாராணியாயிருக்கப் பூர்வ ஜன்மத்தில் நீ தவம் செய்திருக்க வேண்டும்” என்றாள். ‘கலியாணம்’ என்னும் கேலிக்கூத்து நடந்தது. அது கேலிக்கூத்து என்பது அந்தப் பெண்களுக்கு அப்போது தெரியாது. கொஞ்ச நாளைக்குப் பிற்பாடுதான் மகாராஜாவுக்கு ஏற்கெனவே மூன்று கலியாணங்கள் ஆகி அரண்மனையில் மூன்று ராணிகள் இருக்கிறார்கள் என்று தெரிந்தது. இதையறிந்து ரமாமணி திடுக்கிட்டாலும் ஆசையையும் நம்பிக்கையையும் இழக்கவில்லை. அந்த மூன்று ராணிகளுக்கும் குழந்தை இல்லை என்பதை அவள் அறிந்து கொண்டாள். ஒருநாள் மகாராஜா கங்காபாயைப் பார்க்க வந்திருந்தபோது அவரைத் தனியாக ரமாமணி சந்தித்தாள். கத்தியைக் காட்டிப் பயமுறுத்தினாள். தன் தங்கைக்குப் பிள்ளைக் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தையை ரஜினிபூர் இளவரசனாக்க வேண்டும் என்று வாக்குறுதி பெற்றார். அவ்விதமே மகாராஜாவிடம் ஒரு காகிதத்தில் எழுதி கையெழுத்து வாங்கிக் கொண்டாள். இதெல்லாம் மதோங்கருக்குத் தெரிந்தது. ரஜினிபூர் ராஜ்யம் யாருக்குப் போக வேண்டும் என்பது பற்றி அவனுக்கு வேறு யோசனை இருந்தது. ஆகையால் ரமாமணியின் சூழ்ச்சிக்கு அவன் பதில் சூழ்ச்சி செய்தான். ராணி கங்காபாய்க்குப் பிள்ளைக் குழந்தை பிறந்தால் அதைப் பிறந்த உடனே கொன்று விடவேண்டும் என்று மருத்துவச்சியிடம் ஏற்பாடு செய்தான். மதோங்கர்! மருத்துவச்சியிடம் பேசியதை மூன்றாவது மகாராணி கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் தர்ம சிந்தையும் உதாரகுணமும் படைத்த உத்தமி. ரமாமணியை அழைத்து வரச் செய்து மதோங்கரின் சிசுஹத்தி ஏற்பாட்டைப் பற்றிக் கூறினாள். பிரசவ காலம் நெருங்குவதற்கு முன்பு நாலாவது மகாராணியை பம்பாய்க்கு அழைத்துக்கொண்டு போய்விடும்படியும் அதற்கு வேண்டிய ஒத்தாசை தான் செய்வதாகவும் கூறினாள். மூன்றாவது மகாராணி கூறியது உண்மை என்பதற்கு வேண்டிய ஹேஷ்யங்கள் ரமாமணிக்குக் கிடைத்தன. மகாராஜாவோ அந்தச் சமயம் ஐரோப்பாவுக்குச் சென்றிருந்தார். ஆகவே ரமாமணி மூன்றாவது மகாராணியின் யோசனைப்படியே காரியம் செய்தாள். தங்கை கங்காபாயை அழைத்துக்கொண்டு மதோங்கருடைய காவலாளிகளுக்குத் தெரியாமல் பம்பாய்க்குப் பிரயாணமானாள். ராஜபுத்திர நாட்டு வழக்கத்தைக் கங்காபாய் மேற்கொண்டு ‘பர்தா’ ஸ்திரீகளுக்குரிய முகமுடி அணிந்திருந்தாள். ஆகையால் அவளை அழைத்துக்கொண்டு பிரயாணம் செய்வதில் அதிக கஷ்டம் ஏற்படவில்லை. ஆனால் வேறுவிதமான கஷ்டங்கள் ஏற்பட்டன. கையில் கொண்டு வந்திருந்த பணமும் ரயில் டிக்கட்டுகளும் வழியில் காணாமற் போய்விட்டன. ஆகையால் பம்பாய் நகரையடுத்திருந்த சின்ன ரயில்வே ஸ்டேஷன் ஒன்றில் டிக்கட் பரிசோதனை செய்த ரயில்வே உத்தியோகஸ்தன் அந்த ஸ்திரீகளிடம் டிக்கட் இல்லையென்று கண்டு அவர்களை இறக்கிவிட்டுவிட்டான். இரண்டு பேரும் பெண்கள், ஒருத்தி ஒன்பது மாதம் கர்ப்பம். கையில் பணம் இல்லை, ஆனால் கங்காபாய் அணிந்து கொண்டிருந்த ஆபரணங்கள் இருந்தன. அவற்றில் ஒன்றை விற்றால் பணம் கிடைக்கும் எங்கே, எப்படி விற்பது? ரமாமணி நகையை விற்பதற்குப் போனால் ஒன்பது மாதத்துக் கர்ப்பிணி ஸ்திரீயை எங்கே விட்டு விட்டுப் போவது? அல்லது யாரிடம் சென்று உதவி கேட்பது? அதுவோ சின்னஞ்சிறிய ஸ்டேஷன்; வேளையோ இரவு வேளை. பம்பாயை அடுத்துள்ள சிறு ஸ்டேஷன்களில் ரயில் வரும்போது கூட்டம் கசகசவென்று இருக்கும். ரயில் போனதும் ஸ்டேஷன் நிர்மானுஷ்யமாகிவிடும். ரமாமணி தங்கையை அழைத்துக் கொண்டு பிரயாணிகள் தங்கும் வெயிட்டிங் அறைக்குச் சென்றாள். கங்காபாய்க்கு நிலைமை இன்னதென்று ஒருவாறு தெரிந்து விட்டது. முகத்தை மூடியிருந்த பர்தா துணிக்குள்ளேயிருந்து விம்மல் சத்தம் கேட்கத் தொடங்கியது. ரமாமணி அவளுக்கு ஆறுதல் கூற முயன்றாள். அந்தச் சமயத்தில், “அது என்ன விம்மல் சத்தம்?” என்று தெரிந்து கொள்வதற்காக இராத்திரி ஸ்டேஷன் மாஸ்டர் வந்து எட்டிப் பார்த்தார். ஒரு பர்தா ஸ்திரீயையும் பர்தா இல்லாத இன்னொரு ஸ்திரீயையும் கண்டார். அவர்கள் மகாராஷ்டிர தேசத்தவர் என்பதை அறிந்துகொண்டு மராத்தி பாஷையில், “என்ன விஷயம்?” என்று விசாரித்தார். அப்படி விசாரித்த ஸ்டேஷன் மாஸ்டர்தான் சீதாவின் தந்தை துரைசாமி ஐயர். ரமாமணிபாய் அறைக்கு வெளியே வந்து அந்த ஸ்டேஷன் மாஸ்டரிடம் தங்கள் நிலைமையை ஒருவாறு எடுத்துக் கூறினாள். இராத்திரி தங்க இடம் வேண்டும் என்றும் மறுநாள் காலையில் தன் தங்கையை பம்பாயில் ஒரு பிரசவ ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாள். “உதவி செய்தால் எனக்கு என்ன தருவீர்கள்?” என்று ஸ்டேஷன் மாஸ்டர் கேட்டார். துரைசாமிக்கு அப்போது சம்பளம் சொற்பம். அவருடைய மனைவி ராஜம்மாள் அதே சமயத்தில் பிரசவ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு முதல் குழந்தை பேற்றை எதிர் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆகையால் செலவுக்குச் சம்பளம் போதாமல் மேல் வரும்படி ஏதாவது கிடைத்தால் தேவலை என்ற நிலை ஏற்பட்டிருந்தது. ஆகையினால்தான் “எனக்கு என்ன தருவீர்கள்!” என்று கேட்டார். அந்தப் பெண்களின் தோற்றத்தைப் பார்த்ததில் அவர்களிடம் பணம் நிறைய இருக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. ரமாமணி, “நீங்கள் இந்த சமயத்தில் உதவி செய்தால் எங்களிடம் உள்ள எந்தப் பொருளைக் கேட்டாலும் கொடுத்துவிடத் தயார். என்னையே வேண்டுமானாலும் கொடுத்து விடுகிறேன்!” என்று சொன்னாள். துரைசாமிக்கு வெட்கமும் வியப்பும் உண்டாயின. இந்த மாதிரி பதிலை அவர் எதிர்ப்பார்க்கவில்லை. மனதிற்குள், “சிவ சிவா! ஒரு மனைவியைக் காப்பாற்றுவதே என்னால் முடியாத காரியமாயிருக்கிறது. உன்னையும் கட்டிக்கொண்டு என்னத்தைச் செய்வது?” என்று எண்ணிக் கொண்டார். ஆயினும் அந்தப் பெண்களின் பரிதாப நிலை அவருடைய இதயத்தை இளகச் செய்திருந்தது. “அப்படியெல்லாம் சொல்லவேண்டாம், அம்மா! எனக்குப் பிரதி பிரயோஜனம் ஒன்றும் வேண்டியதில்லை. என்னால் முடிந்த உதவியை உங்களுக்குச் செய்கிறேன்!” என்றார். மறுநாள் காலையில் தன்னுடைய மனைவியை எந்தப் பிரசவ ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தாரோ, அதே ஆஸ்பத்திரியில் கங்காபாயையும் கொண்டுப்போய்ச் சேர்த்தார். ஆனால் இது விஷயத்தை அவருடைய மனைவியிடம் சொல்லவில்லை. சொன்னால் வீண் சந்தேகத்துக்கும் வீண் பேச்சுக்கும் இடமாகும் என்று சொல்லவில்லை. தினந்தோறும் பிரசவ ஆஸ்பத்திரிக்குத் தம் மனைவியைப் பார்க்கப் போனபோது ரமாமணியையும் துரைசாமி பார்த்து வந்தார். ரமாமணி துரைசாமியிடம் அளவில்லாத நன்றி பாராட்டினாள். அந்த நன்றி வெகு சீக்கிரத்தில் அத்தியந்த விசுவாசமாகவும் ஆருயிர்க் காதலாகவும் பரிணமித்து வந்தது. ராஜம்மாளும் கங்காபாயும் ஒரே நாள் இராத்திரியில் ஆஸ்பத்திரியில் குழந்தைப் பேறு அடைந்தார்கள். இதற்குள்ளே மதோங்கர் எப்படியோ மோப்பம் பிடித்துக் கொண்டு அந்தப் பிரசவ ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தான். ரமாமணிக்கு இது தெரிந்தது, மதோங்கரின் கையில் அகப்படாமல் கங்காபாயுடன் வேறு இரகசிய இடத்துக்குப் போய்விட விரும்பினாள். அதற்கும் துரைசாமியின் உதவியைக் கோரினாள். ரமாமணியின் மோக வலையில் முழுவதும் சிக்கிக் கொண்ட துரைசாமி அவளுடைய கோரிக்கைக்கு இணங்கினார். விஸ்தாரமான பம்பாய் நகரில் சுலபமாய்க் கண்டு பிடிக்க முடியாத இடத்தில் ஜாகை பிடித்து அவர்களைக் கொண்டு போய் வைத்தார். ரமாமணியும் அவள் தங்கை கங்காபாயும் குழந்தை தாரிணியும் அங்கே வசிக்கத் தொடங்கினார்கள். துரைசாமி தன்னுடைய மனைவி ராஜம்மாளுக்குத் தெரியாமல் ரமாமணியின் வீட்டுக்கு அடிக்கடி போய் வந்து கொண்டிருந்தார். தாரிணி பிறந்த வேளையில் பிறந்த ராஜம்மாளின் ஆண் குழந்தை சீக்கிரத்தில் இறந்து போயிற்று. அந்தத் துக்கத்தை மறப்பதற்காகத் துரைசாமி அடிக்கடி ரமாமணியின் வீட்டுக்குப் போய்த் தாரிணியை எடுத்துக் கொண்டு சீராட்டினார். இப்படியாக நாட்கள் போய்க்கொண்டிருந்தன. ரஜினிபூர் மகாராஜா ஐரோப்பாவிலிருந்து திரும்பினார். ரமாமணி பம்பாயில் அவர் தங்கியிருந்த ஜாகைக்குச் சென்று பேட்டி காண விரும்பினாள். பேட்டி கிடைப்பதே கஷ்டமாயிருந்தது. சண்டை பிடித்துப் பேட்டி கண்டு மகாராஜாவிடம் நிலைமையை பற்றிச் சொன்னபோது ரஜனிபூர் மகாராஜா தமக்கு அவர்களைத் தெரியவே தெரியாது என்று சாதித்துவிட்டார். ரமாமணிபாய் அவர் கைப்பட எழுதிக் கொடுத்திருந்த கடிதத்தை எடுத்துக் காட்டினாள். மகாராஜாவின் உத்தரவுப்படி அவருடைய ஆட்கள் பலவந்தமாக அந்தக் கடிதத்தை ரமாமணியிடமிருந்து பிடுங்கிக் கொண்டு அவளை வெளியே துரத்திவிட்டார்கள். ரமாமணி அளவில்லாத துயரத்துடனும் ஏமாற்றத்துடனும் ஜாகைக்குத் திரும்பிச் சென்றாள். கங்காபாயிடம் எல்லா விவரங்களையும் சொன்னாள். கங்காபாய் மூர்ச்சித்து விழுந்தாள். அப்புறம் அவளுடைய உடல்நிலை நாளுக்கு நாள் சீர்க்கேடு அடைந்து வந்தது. சில மாதத்துக்கெல்லாம் கங்காபாய் இந்த மண்ணுலகை நீத்தாள். பதினாறாம் அத்தியாயம் - ரமாமணியின் தோல்வி தாரிணி உண்மையில் ஒரு ராஜகுமாரி என்று எண்ணியதும் ராகவனுடைய உள்ளம் புயற்காற்றில் அலைகடலைப் போல கொந்தளித்தது. அதுவரை அவனுக்கு விளங்காமலிருந்த பல விஷயங்கள் விளங்கின. தாரிணி சாதாரணப் பெண் அல்ல என்று பலமுறை தான் எண்ணியது எவ்வளவு சரியாய்ப் போயிற்று என்று நினைத்துக் கர்வம் கொண்டான். ஒரு ராஜகுமாரியின் காதலுக்குத் தான் ஒரு சமயம் உரியவனாயிருந்தது குறித்துப் பெருமிதம் அடைந்தான். அந்த அபூர்வமான காதலைத் தான் பயன்படுத்திக் கொள்ளாமல் போனதை எண்ணி ஆதங்கம் அடைந்தான். ரஜினிபூர் ராஜ்யமே தனக்கு வந்திருக்க வேண்டியது என்றும், அது அநியாயமாக நஷ்டமாகிவிட்டது என்றும் அவனுடைய அந்தரங்கத்தில் ஒரு சபல நினைவு தோன்றி மறைந்தது! தான் எவ்வளவோ முயன்றும் அறிய முடியாத தாரிணியின் பிறப்பு மர்மத்தை இந்தச் சூரியா அறிந்துகொள்ள முடிந்தது பற்றி ஒரு பக்கம் வியப்பு உண்டாயிற்று. ராஜகுமாரி தாரிணி இந்தச் சூரியாவிடம் அந்தரங்கத்தை வெளியிட்டிருப்பதை எண்ணி மனம் எரிந்தான். தாரிணி, சூரியா, சீதா - ஆகிய மூவர் மீதும் அவனுக்கு அளவில்லாத கோபம் பொங்கி வந்தது. அந்த மூன்று பேரும் சேர்ந்து தன்னுடைய வாழ்க்கையைப் பாழாக்குவதற்குச் சதி செய்ததாக அவனுக்குத் தோன்றியது. ஆயினும், இன்னும் சில விவரங்களைச் சூரியாவிடம் தெரிந்து கொள்ள வேண்டியதாயிருந்தது. ஆகையால் தன்னுடைய கோபத்தைக் காட்டி இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடக் கூடாது என்று தீர்மானித்தான். ஆத்திரத்தையும் எரிச்சலையும் அசூயையும் குரோதத்தையும் கஷ்டப்பட்டு மனத்திற்குள் அடக்கிக் கொண்டு, “சூரியா! நீ சொன்ன கங்காபாயின் கதை ஸ்காட் நாவல்களையும் டூமாஸ் நாவல்களையும் தோற்கடிக்கும் அதிசயமான கற்பனைக் கதையைப் போல இருக்கிறது. கேட்பதற்கு வெகு சுவாரஸ்யமாயிருக்கிறது!” என்றான். “கற்பனைக் கதையெல்லாம் மிஞ்சி விடும் உண்மைச் சம்பவங்கள் நம்முடைய சுதேச சமஸ்தானங்களில் எத்தனையோ நடந்திருக்கின்றன. ஆனால் எனக்கு அந்தக் கதைகள் சுவாரஸ்யமா யிருப்பதில்லை. உள்ளத்தைப் பிளக்கும் துக்கத்தையும் ஆத்திரத்தையும் உண்டாக்குகின்றன. கங்காபாயையும் ரமாமணியையும் போல் எத்தனை ஆயிரம் பெண்கள் துர்க்கதி அடைந்தார்களோ, யாருக்குத் தெரியும்? அவ்வளவு பெண் தெய்வங்களின் சோகக் கண்ணீரும் சாபமும் நம்முடைய சுதேச சமஸ்தானங்களை இன்னும் பொசுக்கி அழித்து விடவில்லையே!” என்று சூரியா கூறினான். “அதில் ஒன்றும் எனக்கு ஆச்சரியமில்லை. இது கலியுகம் அல்லவா? கற்பரசிகள் சாபங் கொடுத்துப் பொசுக்கும் சக்தியெல்லாம் திரேதாயுகத்துடன் போயிற்று. இப்பொழுதெல்லாம் அக்கிரமக்காரர்களுக்குத்தான் காலம். மேலே சொல்! கங்காபாய் காலமான பிறகு ரமாமணி என்ன செய்தாள். அந்த அதிர்ஷ்டக்கார ஸ்டேஷன் மாஸ்டர் என்னுடைய அருமை மாமனார், - என்ன செய்தார்? வைசம்பாயனரைப் பார்த்து ஜனமேஜய மகாராஜன் கேட்பது போலக் கேட்கிறேன்!” என்றான் ராகவன். “மேலே சொல்லுவதற்கு அதிகம் இல்லை. ஒருவேளை என்னைவிட உங்களுக்கு அதிகமாகத் தெரிந்திருக்கலாம். ஆயினும் எனக்குத் தெரியாத மீதி விவரங்களையும் சொல்லி விடுகிறேன்” என்றான் சூரியா. கங்காபாயின் சோக முடிவு ரமாமணியைக் குலுக்கிப் போட்டுவிட்டது. அவளுடைய அறிவே கலங்கிவிட்டது. அந்த நிலைமையில் ரமாமணி இருந்தபோது குழந்தை தாரிணியைப் பாதுகாத்து வளர்க்கும் பொறுப்புத் துரைசாமி ஐயருக்கு ஏற்பட்டது. இதனால் அவருக்கு அக்குழந்தையிடம் ஏற்கெனவே இருந்த பாசம் மேலும் வளர்ந்து உறுதிப்பட்டது. ரமாமணிபாய்க்கு அறிவு கொஞ்சம் தெளிந்தபோது தன் தங்கையின் அகால முடிவுக்குக் காரணமாயிருந்த ரஜினிபூர் ராஜாவையும் அவருடைய துர்மந்திரி மதோங்கரையும் பழிக்குப் பழி வாங்குவது என்று சங்கல்பம் செய்து கொண்டாள். இந்த உத்வேகமே அவளுடைய உடலுக்கும் உயிருக்கும் வலிமையைத் தந்து எத்தனையோ கஷ்டங்களைச் சகிக்கும் சக்தியை அவளுக்கு அளித்து வந்தது. பழிவாங்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கும் குழந்தை தாரிணியை மதோங்கர் வசத்தில் பாதுகாப்பதற்கும் ரமாமணிக்குப் புருஷத் துணை அத்தியாவசமாயிருந்தது. ஆதலின் பெண்மைக்குரிய சகல சாமர்த்தியங் களையும் பிரயோகித்து ஸ்டேஷன் மாஸ்டர் துரைசாமியின் சிநேகத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டாள். துரைசாமி ஐயரின் பாடு, ரொம்பவும் சங்கடமாகத்தான் இருந்தது. அவர் தம்முடைய சொற்ப சம்பளத்தைக் கொண்டு, பம்பாய் நகரில் இரண்டு தனிக் குடும்பங்களை நடத்தவேண்டி வந்தது. பணக்கஷ்டம் அதிகமாயிற்று, அதோடு தன் மனைவி ராஜம்மாளிடம் உண்மை நிலையைச் சொல்லுவதற்கு வழியில்லாததால், பணச் செலவுக்குப் பொய்க் காரணம் சொல்ல வேண்டியதாயிருந்தது. குதிரைப் பந்தய தினங்களில் பந்தயத்துக்குத் தான் போய் வந்ததாகவும் பணம் நஷ்டப்பட்டதாகவும் சொல்லி வந்தார். முதலில் பிறந்த ஆண் குழந்தை இறந்து போனதில் ராஜம்மாள் பெருந் துயரத்துக்கு ஆளானாள். அதோடு உத்தமமான ஒழுக்கம் படைத்தவர் என்று தான் எண்ணியிருந்த கணவன் குதிரைப் பந்தயத்துக்குப் போக ஆரம்பித்திருப்பது பற்றிப் பெரிதும் வருந்தினாள். அதைத் தவிர வேறு கெட்ட நடவடிக்கைகளுக்குத் தன் கணவர் ஆளாகியிருப்பாரோ என்ற சந்தேகங்கள் அவள் மனதில் தோன்றின. அவற்றை வெளியிட்டுக் கணவரிடம் கேட்கும் தைரியம் ஏற்படவில்லை. மனதிற்குள்ளேயே துயரத்தை வைத்து வளர்த்து வந்தாள். இதற்கிடையில், தாரிணி பிறந்த இரண்டு வருஷத்துக்குப் பிறகு ராஜம்மாளுக்குச் சீதா பிறந்தாள். இதற்குப் பிறகாவது தன் கணவனுடைய நடவடிக்கைகள் திருந்தும் என்று ராஜம்மாள் எதிர்பார்த்தாள். அவ்வித நல்ல மாறுதல் ஏற்படாதது கண்டு மேலும் மனம் குன்றினாள். நாட்கள் வருஷங்களைப் போலவும், வருஷங்கள் யுகங்களைப் போலவும் ராஜம்மாளுக்குப் சென்று வந்தன. ரமாமணிக்கும் அப்படித்தான்; ஆனால் குழந்தைகளான சீதாவுக்கும் தாரிணிக்கும் வருஷங்கள் இறகு கட்டிக் கொண்டு பறந்து சென்றன. துரைசாமி ஐயருக்கோ கழிந்த நாட்களையும் வருஷங்களையும் கணக்குப் பண்ணுவதற்கே நேரம் கிடைக்கவில்லை. தாரிணிக்கு வயது வந்தபோது தன்னுடைய தாயும் தகப்பனாரும் உலகத்தில் உள்ள மற்ற தாய் தந்தையரைப் போல் மணம் செய்துகொண்டு வாழ்கிறவர்கள் அல்ல என்னும் விஷயம் தெரிய வந்தது. தன்னுடைய தாயின் மர்மமான காரியங்கள் அவளுக்குப் பலவித ஐயங்களை உண்டாக்கின. ஒவ்வொரு சமயம் விலை உயர்ந்த ஆபரணங்களை அவளுடைய தகப்பனாரிடம் தாயார் கொடுத்து விற்றுக்கொண்டு வரச் சொல்லுவதைக் கவனித்திருந்தாள். ஒரு நாள் தாயாரிடம் சந்தேகங்களை வெளியிட்டாள். அதன் பேரில் ரமாமணி ரஜனிபூர் ராஜாவினால் தன்னுடைய தங்கை கங்காபாய்க்கு நேர்ந்த கதியைப் பற்றியும் அதற்குப் பழிக்குப்பழி வாங்கத் தான் தீர்மானித்திருப்பது பற்றியும் தாரிணியிடம் கூறினாள். கங்காபாயின் கதையைக் கேட்டதிலிருந்து தாரிணியின் மனம் தான் பிறந்த தேசத்தின் நிலைமையைப் பற்றிச் சிந்திக்க தொடங்கியது. சுதந்திரப் போராட்டத்திலும் சமூகத் தொண்டிலும் ஈடுபடும் ஆர்வம் உண்டாயிற்று. அச்சமயம் இந்திய மக்களின் உள்ளத்தைக் கவர்ந்திருந்த உப்புச் சத்தியாகிரஹ இயக்கத்தில் கலந்து கொண்டாள். பிற்பாடு, பீஹார் பூகம்பத்தைப் பற்றிய செய்தி வந்தபோது பூகம்பத்தினால் துன்புற்றவர்களுக்குச் சேவை செய்வதற்காகச் சென்றாள். ஏறக்குறைய இதே சமயத்தில் ராஜம்மாள் நீடித்த நோய்வாய்ப் பட்டிருந்தாள் என்றும் பிழைப்பது துர்லபம் என்றும் ரமாமணிக்குத் தெரியலாயிற்று. தன்னால் கஷ்டத்திற்கு ஆளான ராஜம்மாளையும் அவளுடைய குமாரி சீதாவையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை ரமாமணியின் மனதில் வெகு காலமாக இருந்து வந்தது. அந்த ஆசை நிறைவேறுவதற்கு இதுதான் தருணம் என்று எண்ணினாள். ரஜனிபூர் ஆபரணங்களில் தன்னிடம் மிச்சமிருந்த ஒரே ஒரு ரத்தின ஹாரத்தையும் இரண்டாயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொண்டு துரைசாமி இல்லாத சமயத்தில் ராஜம்மாளைப் பார்க்கச் சென்றாள். சீதாவின் கலியாணத்துக்கு என்று ரத்தின ஹாரத்தையும் பணத்தையும் கொடுத்துவிட்டுத் திரும்பினாள். இந்த முக்கியமான கடமை தீர்ந்த பிறகு ரமாமணி தன் வாழ்க்கையின் நோக்கத்தை நிறைவேற்ற முயன்றாள். பம்பாய்க்கு வந்திருந்த ரஜனிபூர் ராஜாவைக் கத்தியினால் குத்திக் கொல்லப் பிரயத்தனம் செய்தாள். அந்தப் பிரயத்தனம் பலிக்கவில்லை. கொலை செய்ய முயற்சித்ததாகச் சிறையில் அடைக்கப்பட்டாள். சிறையில் இருந்தபோது ரமாமணியின் பைத்தியம் முற்றியது. சிறையி லிருந்து பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குச் சென்று சில காலத்துக்குப் பிறகு அங்கிருந்து விடுதலை அடைந்தாள். ரஜனிபூர் ராஜாவும் அதற்குப் பிறகு அதிக காலம் உயிரோடிருக்கவில்லை. ஆகவே விடுதலையாகி வந்த ரமாமணி அடுத்தாற்போல் தான் பழி தீர்க்க வேண்டிய மதோங்கரின் பேரில் கவனம் செலுத்தினாள். புது டில்லியின் சாலைகளில் அலைந்து திரிந்து மதோங்கரைத் தனியாகச் சந்திக்கும் சந்தர்ப்பத்தை எதிர் நோக்கிக் கொண்டிருந்தாள். ஆனால் அந்த முயற்சியிலும் ரமாமணி தோல்வியே அடைந்தாள். ஏனெனில், அவள் மதோங்கரை வெகு காலம் தேடிக் கொண்டிருந்தது கடைசியில் ஒரு நாள் பிடித்து விட்டோ ம் என்று எண்ணிய சமயத்தில், ரமாமணிக்கு முன்பாகவே மதோங்கரின் பேரில் பழி தீர்க்க விரும்பியவன் ஒருவன் தன்னுடைய நோக்கத்தில் வெற்றி பெற்றுவிட்டான்! பதினேழாம் அத்தியாயம் - படிகள் பிழைத்தன! கங்காபாய் - ரமாமணி இவர்கள் சோகக் கதையைக் கூறிவிட்டுச் சூரியா சௌந்தரராகவனைப் பார்த்து, “மாப்பிள்ளை ஸார்! யாரோ ஒரு வடக்கத்தி ஸ்திரீ வந்து சீதா அத்தங்காளைப் பற்றி எச்சரித்தாள் என்றீர்களே? அவள் ரமாமணி என்கிற ரஸியா பேகமாகத்தானிருக்க வேண்டும். சீதாவினிடம் அவள் சிரத்தை கொள்ளக் காரணம் உண்டு என்பது தெரிகிறதல்லவா?” என்றான். “தெரிகிறது, சூரியா! ஆனால் நீ என்ன, இந்தக் காலத்துக் கதை ஆசிரியர்களைப் போல், சடக்கென்று கதையை மொட்டையாக முடித்துவிட்டாயே? கதாநாயகர்களும் கதாநாயகிகளும் பிற்பாடு என்ன ஆனார்கள் என்று சொல்ல வில்லையே?” என்று ராகவன் கேட்டான். “எனக்குத் தெரிந்தவரையில் சொல்லிவிட்டேன். நீங்கள் இன்னும் யாரைப் பற்றி என்ன கேட்கிறீர்கள்?” என்றான் சூரியா. “ஏன்? என்னுடைய அருமந்த மாமனாரைப் பற்றிக் கேட்கிறேன். என்னுடைய கலியாணத்துக்குப் பிறகு அவரை நான் ஒரு தடவை கூடப் பார்த்ததேயில்லை. அவர் இப்போது எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார்?” என்று ராகவன் கேட்டான். “அதுதான் எனக்கும் தெரியவில்லை. ரஸியா பேகம் இருக்கும் இடமும் தெரியவில்லை. அவர்களை நானும் தாரிணியும் எவ்வளவோ தேடித் தேடிப் பார்த்தோம்; பயனில்லை!” என்றான் சூரியா. “எதற்காகத் தேடினீர்கள்?” என்று ராகவன் கேட்டான். “தாரிணிக்குத் தன்னுடைய வரலாற்றில் இன்னும் ஒரே ஒரு சந்தேகம் இருக்கிறது. அந்தச் சந்தேகத்தைத் தீர்க்க கூடியவர்கள் துரைச்சாமி ஐயரையும் ரமாமணியையும் தவிர வேறுயாரும் இல்லை!” என்று சூரியா சொல்லிவிட்டு, முகத்தில் புன்னகையுடன், “மிஸ்டர் ராகவன்! அதுவல்லாமல் இன்னொரு காரியத்துக்கு அவர்களுடைய அநுமதியும் ஆசீர்வாதமும் பெற வேண்டியதாயிருக்கிறது! அதற்காகவும் தேடினோம். இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறோம்” என்றான். சூரியாவின் குரலும் முகப்பொலியும் ராகவனுடைய மனதில் ஓர் ஐயத்தை உண்டாக்கின. “என்ன காரியத்துக்கு அவர்களுடைய அநுமதியும் ஆசீர்வாதமும் வேண்டும்?” என்று கேட்டான். “நீங்களே ஊகித்துக்கொள்ளலாம். எனினும், நீங்கள் கேட்கிறபடியால் சொல்லி விடுகிறேன். எப்படியும் ஒருநாளைக்குத் தெரிய வேண்டியதுதானே? நானும் தாரிணியும் கலியாணம் செய்து கொள்ளுவதென்று தீர்மானித்திருக்கிறோம்!…” ராகவன் கலகலவென்று சிரித்துவிட்டு, “அட சூரியா! உன்னைப் புத்திசாலியென்று இத்தனை நாளும் நினைத்திருந்தேன்!” என்றான். “அந்த அபிப்பிராயம் இப்போது தவறு என்று தோன்றுகிறதா?” என்று சூரியா கேட்டான். “ஆமாம்; இல்லாவிட்டால் தாரிணியைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று சொல்லுவாயா? - இத்தனை நாள் அவளுடன் பழகிவிட்டு? இதைக் கேள், சூரியா! தாரிணியை ஒரு சமயம் நானே கலியாணம் செய்து கொள்ள எண்ணியிருந்தேன். அவளும் என்னைக் காதலிப்பதாக வேஷம் போட்டு நடித்தாள். இதெல்லாம் உனக்குத் தெரிந்திருக்கும் என்று நினைத்தேன்.” “ராகவன்! தாரிணியைப் பற்றி அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். தாரிணி வேஷம் போட்டு நடித்தாள் என்று சொன்னால் அவளை நீங்கள் அறிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்!” “என்னைவிட அவளை நீ நன்றாக அறிந்து கொண்டிருப்பதாக எண்ணமாக்கும்!” என்றான் ராகவன். “அதில் சந்தேகமில்லை, தாரிணியை உங்களுக்குத் தெரிந்திருந்தால் அவளை வேஷம் போட்டாள் என்றோ, நடித்தாள் என்றோ சொல்லமாட்டீர்கள்!” “ஒரு சமயம் என்னைக் காதலித்ததாகக் கூறியவள் இப்போது உன்னைக் கலியாணம் செய்து கொள்ளப் போவது பற்றி என்ன சொல்கிறாய்? இரண்டிலே ஒன்று பொய்யாகத்தானே இருக்கவேண்டும்?” “ஒரு நாளும் இல்லை யாருக்கும் அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ளும் உரிமை உண்டு அல்லவா? ஏதாவது ஒரு விஷயத்தில் தவறு செய்துவிட்டதாகத் தெரிந்தால் அதைத்திருத்திக் கொள்ள வேண்டாமா? தங்களிடம் ஒரு காலத்தில் தாரிணி அன்பு கொண்டிருந்தது உண்மை. அது வேஷமும் அல்ல; நடிப்பும் அல்ல. ஆனால் பிற்பாடு தன்னுடைய வாழ்க்கை இலட்சியங்களுக்குப் பொருத்தமில்லை என்று தெரிந்த பிறகு தங்கள் விஷயத்தில் அவளுடைய மனதை மாற்றிக்கொண்டாள், அது எப்படித் தவறாகும்?” “சூரியா! நீ வக்கீல் வேலைக்குப் போயிருக்க வேண்டும். போயிருந்தால் நல்ல பெயர் வாங்கியிருப்பாய். கெட்டிக்கார வக்கீலைப் போல் தாரிணியின் கட்சி பேசுகிறாய் ஆனால் அது வீண். தாரிணியைப் பற்றி உன்னைவிட எனக்கு நன்றாய்த் தெரியும். என்னைக் காதலிப்பதாக அவள் வேஷம் போட்டது எதற்காக என்றும் தெரியும். வேறொன்று மில்லை, கேவலம் இரண்டாயிரம் ரூபாய் பணத்துக்காகத்தான்! சுதேசராஜாக்களின் சபைகளைத் தேடிக்கொண்டு போன பாடகியின் மகள் தானே? அவளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?” சூரியா கொதித்து எழுந்து, “ராகவன்! ஜாக்கிரத்தை! தாரிணியின் ஒழுக்கத்தைப்பற்றி ஏதாவது சொன்னால்….?” என்றான். மேலே பேசவரவில்லை. அவனுடைய உதடுகள் துடித்தன. “ஏதாவது சொன்னால், என்னடா அப்பா செய்வாய்? ஒரே குத்தாய்க் குத்திக் கொன்று விடுவாயோ? ரஸியா பேகத்தைப் போல!” என்று ராகவன் ஏளனம் செய்தான். “சரி, மாப்பிள்ளை! உங்களுடன் பேசுவதில் பிரயோஜனம் இல்லை, நான் போய் வருகிறேன்!” என்று சூரியா புறப்பட்டான். “அடடே! அப்படியெல்லாம் கோபித்துக் கொண்டு கிளம்பாதே, அப்பா! உன் அருமை அத்தங்காள்; - ஒழுக்கத்தில் சிறந்த துரைசாமி ஐயரின் செல்வப்புதல்வி, - சீதா இப்போது எங்கே இருக்கிறாள், என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று சொல்லிவிட்டாவது போ. அவளைப்பற்றி நான் ஏதாவது சொன்னால் கூடச் சண்டைக்கு வருவாயோ என்னமோ? என்னைக் காட்டிலும் சீதாவை உனக்கு நன்றாகத் தெரியும் என்று சொன்னாலும் சொல்லுவாய்! நான் தாலி கட்டிய புருஷன்தானே? நீ அருமை அம்மாஞ்சி அல்லவா!” சூரியா தரையை நோக்கிக் குனிந்து நின்றான். அவனுடைய கண்களில் கண்ணீர் ததும்பி இரண்டு சொட்டுக் கண்ணீர் கீழேயும் விழுந்தது. “இது என்னடா, சூரியா! பெண்பிள்ளை மாதிரி கண்ணீர் விடுகிறாய்? உன் அத்தங்கா சீதாவின் பெயரைச் சொன்னதுமே இப்படி உடலும் உள்ளமும் உருகிவிடுகிறாயே? அவளுக்கும் உனக்கும் அப்படி என்ன அந்தரங்க சிநேகிதம்…” என்றான் ராகவன். சூரியா கண்களைத் துடைத்துக்கொண்டு பளிச்சென்று ராகவனை நிமிர்ந்து பார்த்து, “என்னை எது வேணுமானாலும் சொல்லுங்கள். தாரிணியைப் பற்றி வேணுமானாலும் சொல்லுங்கள். ஆனால் சீதாவின் பேரில் அவதூறு சொல்கிறவர்களின் நாக்கு அழுகிப் போகும். அத்தகைய பாதகர்கள் கொடிய நரகத்துக்குப் போவார்கள். பூமி பிளந்து அவர்களை விழுங்கி விடும்!” என்றான். சூரியா கூறிய கடுமொழிகளைக் கேட்டு, ராகவன் கூடச் சிறிது பயந்து போனான். சூரியா மேலும் கூறினான்:- "சீதாவைப் பற்றி எனக்கு என்ன இவ்வளவு கரிசனம் என்று கேட்டீர்கள் அல்லவா? இதோ சொல்லுகிறேன், சீதாவின் தாயார்:- என்னுடைய அத்தை - கடைசி மூச்சுப் போகும் சமயத்தில் - ‘சீதாவைக் கவனித்துக் கொள்!’ என்று என்னிடம் சொல்லிவிட்டுப் போனாள். அது மட்டுமல்ல, உங்களுக்கும் சீதாவுக்கும் கலியாணம் நடந்ததற்கு முக்கிய காரணமாயிருந்தவன் நான். இன்று வரையில் ஒருவரிடமும் நான் சொல்லாத விஷயத்தைச் சொல்லுகிறேன் கேளுங்கள் உங்களுடைய கலியாணத்தன்று அத்திம்பேர் துரைசாமி ஐயர் மாங்கல்யதாரணம் நடந்த பிறகு வந்தார் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதல்லவா? ஆகையினால்தான் என்னுடைய மூத்த அத்திம்பேர் சீதாவை கன்னிகாதானம் செய்து கொடுக்க நேரிட்டது. கலியாணத்தன்று முதல் நாள் என் தகப்பனாருக்கு ஒரு தந்தி வந்தது. ‘சீதாவின் கலியாணத்தை நிறுத்திவிடவும்’ என்று தந்தியில் கண்டிருந்தது. துரைசாமி ஐயர் என்று கையெழுத்தும் இருந்தது. அந்தத் தந்தி என்னிடம் கிடைத்தது. அதை நான் என் தகப்பனாரிடம் கொடுக்கவில்லை. வேறு யாரிடமும் அதைப் பற்றிப் பிரஸ்தாபிக்கவும் இல்லை. மாப்பிள்ளை! நீங்கள் முதன் முதலில் என் தங்கை லலிதாவைப் பார்க்க ராஜம்பேட்டைக்கு வந்தீர்கள். அப்போது தற்செயலாகச் சீதாவும் நீங்களும் பார்த்துக் கொண்டீர்கள். அன்று வரையில் கற்பனை உலகத்திலே மட்டுந்தான் காதல் உண்டு என்று நினைத்திருந்தேன். வாழ்க்கையின் புருஷன் மனைவி சண்டைகளை மட்டுந் தான் பார்த்திருந்தேன். ‘கண்டதும் காதல்’ என்பது உங்கள் விஷயத்தில் உண்மையானதை என் கண்முன்னே கண்டு பரவசமடைந்தேன். அப்படி மனமொத்துக் காதலித்துக் கலியாணம் செய்து கொள்ளும் உங்களுக்கு நடுவில் தடையாக வருவதற்குச் சீதாவின்தகப்பனாருக்குக் கூடப் பாத்தியதை கிடையாது என்று எண்ணினேன். கலியாணம் நடந்தது, அரைமணி நேரத்துக்கெல்லாம் துரைசாமி ஐயர் வந்தார். ‘தந்தி வந்ததா!’ என்று கேட்டார். நான் செய்ததைச் சொல்லி, திருமாங்கல்ய தாரணமும் ஆகிவிட்டது என்று சொன்னேன். ’சரி! கடவுளுடைய சித்தம் அப்படியிருக்கும் போது நான் என்ன செய்யலாம்?" என்று துரைசாமி ஐயர் கூறினார். இவ்வளவும் நேற்று நடந்தது போல் எனக்கு ஞாபகம் வருகிறது" என்று சொல்லி நிறுத்தினான் சூரியா. இதைக் கேட்ட ராகவனுடைய உள்ளத்தில் கோபம் மேலும் கொந்தளித்துப் பொங்கிற்று. ஆகா! இந்த அதிகப் பிரசங்கி எவ்வளவு தூரம் நம்முடைய வாழ்க்கையையே பாழாக அடித்துவிட்டான்? இவன் ஏன் குறுக்கிட்டுத் துரைசாமி ஐயரின் தந்தியை அமுக்கியிருக்க வேண்டும். இவன் குறுக்கிடாதிருந்தால் தன் வாழ்க்கையின் போக்கே வேறுவிதம் ஆகியிருக்கலாமல்லவா? எனினும், கோபத்தைவிட விஷயத்தை அறியும் ஆவல் அச்சமயம் ராகவனுக்கு அதிகமாயிருந்தது. “ரொம்ப சரி! உன்னுடைய செய்கையின் நியாயாநியாயத்தைப் பற்றிப் பிறகு கவனிக்கலாம். ஆனால் துரைசாமி ஐயர் எதற்காக அப்படிக் ‘கலியாணத்தை நிறுத்தவும்’ என்று தந்தி கொடுத்தார்?” என்று ராகவன் கேட்டான். “ரமாமணி என்கிற ரஸியா பேகம் ரஜினிபூர் ராஜாவைக் கொல்ல முயற்சித்துச் சிறை தண்டனை பெற்ற சமயத்தில் தாரிணி பீஹாரில் இருந்தாள். அவளைப் பார்த்து ஆறுதல் சொல்வதற்காகத் துரைசாமி ஐயர் பீஹாருக்குப் போனார். தாரிணி தன் தாயாரின் கதியைப் பற்றி அறிந்து அளவில்லாத துயரமும் அவமானமும் அடைந்தாள். தாரிணியின் வருங்காலத்தைப் பற்றிச் சர்ச்சை நடந்தது. தாரிணி இல்வாழ்க்கையை ஏற்று நிம்மதியாக வாழ வேண்டும் என்று துரைசாமி ஐயர் விரும்பினார். ரமாமணியிடமிருந்து உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தபடியால் தாரிணியின் மனதை அறிய முயற்சித்தார். அதற்கு முன்னாலேயே உங்களுக்கும் தனக்கும் பொருந்தாது என்ற சந்தேகம் தாரிணிக்கும் இருந்தது. தாய் சிறை புகுந்த செய்திக்குப் பிறகு உங்களை மணந்து கொள்ளும் எண்ணத்தை விட்டுவிட்டாள். துரைசாமி ஐயரோ எல்லாவற்றையும் கேட்டுவிட்டு மாறுபட்ட அபிப்பிராயம் கொண்டார். தாரிணி வாழ்க்கையில் ஆதரவின்றித் திரியாமல் உங்களை மணந்து சுகமாயிருக்க வேண்டும் என்று விரும்பினார். இந்தச் சமயத்தில் ராஜம்பேட்டையில் தங்களுக்கும் சீதாவுக்கும் கலியாணம் நிச்சயமா யிருந்தது. ஆகையினால்தான் அப்படித் தந்தி கொடுத்தார்….” “சூரியா! அந்தத் தந்தியை நீ அதிகப் பிரசங்கித்தனமாக அமுக்கிவிட்டது எவ்வளவு பெரிய தவறு என்பதை இப்போதாவது உணருகிறாயா!” என்றான் ராகவன். “மாப்பிள்ளை! நான் தவறு செய்ததாக ஒப்புக் கொள்ளமாட்டேன். கடவுளுடைய சித்தம் அவ்விதம் இருந்தது. இன்னமும் நான் சொல்லுகிறேன், உங்களுக்கும் சீதாவுக்கும் தான் பொருத்தம். தாரிணிக்கும் உங்களுக்கும் இலட்சிய ஒற்றுமை ஏற்பட்டிராது. உங்களுடைய இல்வாழ்க்கையும் வெற்றியடைந்திராது!” “நானும் உன் அத்தங்காளும் வெகு ஆனந்தமான இல்வாழ்க்கை வெற்றிகரமாக நடத்தினோம் என்பது உன் எண்ணமாக்கும்!” “ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தது, மாப்பிள்ளை! எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது. இப்போதும் ஒன்றும் மோசம் போய்விடவில்லை. சீதா தங்களிடம் வருவதற்குக் காத்திருக்கிறாள். ஏற்கெனவே ஏதாவது நேர்ந்திருந்தாலும் அதையெல்லாம் மறந்துவிட்டு உங்களையே தெய்வமாகப் பாவிக்கக்கூடிய நிலையில் இருக்கிறாள். அத்தங்காளுக்கு ஒரு வரி கடிதம் எழுதிப் போடுங்கள். உடனே விரைந்து ஓடி வராவிட்டால் என்னைக் கேளுங்கள்.” “சூரியா! நீ சொல்வது இந்த ஜன்மத்தில் நடக்கிற காரியம் அல்ல. சீதாவை வரும்படி கடிதம் எழுதுவதைக் காட்டிலும் என்னுடைய கையையே வெட்டிக் கொண்டுவிடுவேன். அவள் பட்டாபிராமனுக்கு வோட்டு வாங்கிக் கொடுத்துக் கொண்டு சுகமாயிருக்கட்டும். பட்டாபிராமனையே மறுமணம் வேணுமானாலும் செய்து கொள்ளட்டும்! விவாகரத்துக் கொடுக்க நான் தயார்!” என்றான் ராகவன். "ஐயோ! அப்படிச் சொல்லாதீர்கள். சொன்னீர்கள் என்று தெரிந்தாலே சீதா பிராணனை விட்டு விடுவாள். நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்; போனதெல்லாம் போகட்டும். அதையெல்லாம் மறந்துவிட்டு மறுபடியும் சீதாவுடன் இல்வாழ்க்கை ஆரம்பித்துப் பாருங்கள். நிச்சயமாகச் சந்தோஷமாக வாழ்வீர்கள். ராகவன்! நீங்களும் சீதாவும் அன்யோன்யமாக இல்லறம் நடத்தினால் அதைக்காட்டிலும் எனக்கும் தாரிணிக்கும் சந்தோஷம் அளிக்கக்கூடிய காரியம் வேறு ஒன்றும் இல்லை." ஏற்கனவே ராகவனின் உள்ளம் எரிந்து கொண்டிருந்ததல்லவா? சூரியா தாரிணியின் பெயரைக் குறிப்பிட்டது எரிகிற தீயில் குங்கிலியத்தைப் போட்டது போலாயிற்று. “சூரியா! உனக்கும் தாரிணிக்கும் சந்தோஷம் அளிப்பது தான் என் வாழ்க்கையின் இலட்சியம் என்று உனக்கு எண்ணமா? நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் அதற்காகத் தானா?” என்று சொல்லிக் கொண்டே ராகவன் எழுந்து சூரியாவின் அருகில் வந்து நின்று கொண்டான். “அடே! முட்டாள்! ஜாக்கிரதை! எனக்கு வீணில் கோபம் மூட்டாதே!” என்று இரைந்து கத்திவிட்டுச் சூரியாவின் கண்ணத்தில் பளீர் என்று ஓர் அறை அறைந்தான். சூரியா கையை ஓங்கிவிட்டு உடனே கீழே போட்டான். “ஏன் கையை ஓங்கிவிட்டுக் கீழே போட்டாய்? மகாவீரனாயிற்றே நீ!” என்றான் ராகவன். “மாப்பிள்ளை! முன்னேயாயிருந்தால் உங்களுடைய ஓர் அறைக்கு ஒன்பது அறை கொடுத்திருப்பேன். ஆனால் நானும் தாரிணியும் சமீபத்தில் எங்கள் கொள்கையை மாற்றிக் கொண்டோ ம். பலாத்காரத்தினால் பயன் சிறிதும் இல்லை என்று கண்டு மகாத்மாவின் அஹிம்சா தர்மத்தை அனுசரிக்கத் தீர்மானித்திருக்கிறோம். அந்தத் தீர்மானத்துக்கு முதல் சோதனை தங்களால் ஏற்பட்டிருக்கிறது…..” “ஓஹோ அப்படியா? மகாத்மாவின் கட்சியைச் சேர்ந்து விட்டாயா? ‘ஒரு கன்னத்தில் அடித்தவர்களுக்கு இன்னொரு கன்னத்தையும் காட்டு’ என்கிற ஏசுநாதரின் போதனைதானே மகாத்மாவின் போதனையும்! அப்படியானால் இதையும் வாங்கிக் கொள்!” என்று இன்னொரு கன்னத்தில் இன்னொரு அறை அறைந்தான். சுளீரென்று கன்னம் வலித்தது; தலை முதல் கால் வரையில் அதிர்ந்தது. சூரியா பல்லைக் கடித்துக் கொண்டு, “உங்களுக்கு இப்போதாவது திருப்தி ஆயிற்று அல்லவா? மனம் குளிர்ந்து விட்டது அல்லவா? போய் வருகிறேன்!” என்றான். “எனக்கு இன்னும் திருப்தி இல்லை, அப்பனே! சுலபத்தில் என்னுடைய மனம் குளிர்ந்து விடாது!” என்று சொல்லி ராகவன் சூரியாவின் கழுத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டான். “இதோ பார்! சூரியா! இனிமேல் தாரிணியையாவது சீதாவையாவது நீ பார்த்துப் பேசுவதில்லை என்று சத்தியம் செய்து கொடு. இல்லாவிட்டால் உன்னை இந்த நிமிஷமே கொன்று விடுவேன்!” என்றான். "மாப்பிள்ளை! நீங்கள் கேட்பது கொஞ்சம்கூட நியாயம் இல்லை. சீதாவை நான் பார்ப்பதில்லை என்று ஏன் சத்தியம் செய்ய வேண்டும்? என் மனதில் கல்மிஷம் ஒன்றும் கிடையாது. தாரிணி விஷயத்தில் எந்தவிதமான வாக்குறுதியும் நான் கொடுக்க முடியாது. நீங்கள் வேணுமானால் என்னைச் சுட்டுக் கொன்றுவிடுங்கள். சீதா அத்தங்காளும் தாரிணியும் உங்கள் தாயாரும் குழந்தை வஸந்தியும் உங்கள் காரியத்தைப் பற்றிச் சந்தோஷப்படுவார்கள். வாசலில் காத்திருக்கும் சி.ஐ.டி.க் காரனும் சந்தோஷப்படுவான்!" என்றான் சூரியா. “அடே! முட்டாள்! என்னை இப்படியெல்லாம் பயமுறுத்தலாம் என்றா பார்க்கிறாய்?” என்று ராகவன் சொல்லி விட்டுப் பூரண பலத்துடன் சூரியாவைப் பிடித்துத் தள்ளினான். சூரியா மச்சுப் படியில் உருண்டு கொண்டே போய் நடுவில் இருந்த திருப்பத்தில் சமாளித்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்தான். இதற்குள் சூரியா விழுந்த சத்தத்தைக் கேட்டுவிட்டு வஸந்தியும் பாட்டியும் ஓடிவந்தார்கள். “இதென்ன சூரியா மாமா? மச்சிலிருந்து விழுந்து விட்டாயா என்ன? ஐயையோ?” என்றாள் வஸந்தி. “ஆமாம் கால் தடுக்கி விழுந்து விட்டேன்!” என்றான் சூரியா. “வஸந்தி! சூரியா தடுக்கி விழுந்து விட்டான். நல்லவேளையாக அதனால் மச்சுப்படிகளுக்குச் சேதம் ஒன்றும் ஏற்படவில்லை; படிகள் பிழைத்தன!” என்று ராகவன் கூறி விட்டு, தன்னுடைய நகைச்சுவையை எண்ணித் தானே ‘ஹே!’ என்று சிரித்தான். பதினெட்டாம் அத்தியாயம் - பட்டாபியின் வெற்றி தேவபட்டணம் அல்லோலகல்லோலப்பட்டது. “பட்டாபிராமன் வாழ்க! கறுப்பு மார்க்கெட் வீழ்க!” என்ற கோஷம் மூலை முடுக்குகளிலெல்லாம் எழுந்தது. சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் தலை நரைத்த வயோதிகர்கள் வரையில் அன்று நடந்த அதிசயத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். கறுப்பு மார்க்கெட் வியாபாரத்தில் கொள்ளைப்பணம் சம்பாதித்த பழைய சேர்மன் இந்தத் தேர்தலிலும் வெற்றி பெறும் நோக்கத்துடன் முப்பதினாயிரம் ரூபாய் வாரி இறைத்திருந்ததாக ஊரெல்லாம் பிரஸ்தாபமாயிருந்தது. வோட்டு ஒன்று நூறு ரூபாய் வரையில் விலை கொடுத்து வாங்கப் பழைய சேர்மன் பிரம்ம பிரயத்தனம் செய்ததாகச் சொல்லிக் கொண்டார்கள். ஆனாலும் அவருக்கு எதிராக நின்ற பட்டாபிராமன் பெரும்பான்மை வோட்டுக்கள் பெற்று வெற்றி அடைந்தான் பொது ஜன அபேட்சகராகிய பட்டாபிராமன் வெற்றியடைந்தது பற்றித் தேவபட்டணத்துப் பொது மக்கள் எல்லோரும் அளவிலாத ஆனந்தமடைந்தார்கள். பலவிதங்களிலும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். பட்டாபிராமன் வெற்றி பெற்றதாக வோட்டு முடிவு வெளியானவுடனே ஜயகோஷங்கள் வானளாவ எழுந்தன. “பட்டாபிராமன் எங்கே?” என்று கேட்கும்படியாகப் பூமாலைகள் அவனுடைய தலைக்குமேலே எழுந்து அவன் முகத்தையே மறைத்து விட்டன. முன் ஏற்பாடு எதுவும் இல்லாமலே ஊர்வலம் ஒன்று ஆரம்பமாயிற்று. திறந்த மோட்டார் வண்டி ஒன்றில் பட்டாபிராமனைப் பலவந்தமாகப் பொதுஜனங்கள் ஏற்றி வைத்தார்கள். எங்கிருந்தோ நாதஸ்வர வாத்தியமும் பாண்டு கோஷ்டியும் வந்து சேர்ந்தன. ஊர்வலமும் தேவபட்டணத்து வீதிகளில் எல்லாம் சாவகாசமாகச் சுற்றி வந்து கடைசியில் பட்டாபிராமனுடைய வீட்டில் அவனைக் கொண்டு வந்துவிட்ட பிற்பாடு கலைந்தது. பொது ஜனங்கள் எல்லாரும் போன பிற்பாடு சில ஆப்த நண்பர்களும் பிரமுகர்களும் பட்டாபிராமனைப் பின் தொடர்ந்து வீட்டுக்குள்ளே வந்தார்கள். பட்டாபிராமனுடைய வீட்டிலிருந்த நாற்காலிகளில் எல்லாம் அவர்கள் உட்கார்ந்தும் இடம் போதாமல் பலர் ஜன்னல் விளிம்புகளிலும் உட்கார வேண்டியிருந்தது. ஒவ்வொருவரும் தனித்தனியே பட்டாபிராமனைப் பாராட்டினார்கள். “பட்டாபிராமன் சேர்மன் ஆவது நிச்சயம்” என்று சபதம் கூறினார்கள். சில பெரியவர்கள் வயதின் உரிமை எடுத்துக் கொண்டு, “மிஸ்ஸஸ் பட்டாபிராமன் எங்கே?” என்று கேட்டார்கள். சந்தோஷம் ஒரு பக்கமும் சங்கோசம் ஒரு பக்கமும் பிடுங்கித்தின்ன, ஸ்ரீ மதி லலிதா அங்கே வந்து சேர்ந்தாள். “இந்த வெற்றியெல்லாம் உங்களுடைய அதிர்ஷ்டபலத் திலேதான்!” என்று லலிதாவைப் பார்த்துத் தனித்தனியாகப் பலர் உபசாரம் சொன்னார்கள்.லலிதா அங்கிருந்துபோன பிறகு ஒருவர், “அந்த அம்மாளுக்கு உடம்பு எப்படி இருக்கிறது?” என்று கேட்டார். பட்டாபிராமனுடைய முகம் சுருங்கிற்று. “பரவாயில்லை!” என்று சொன்னான். “சீதா அம்மாளைப் பற்றித்தானே கேட்கிறீர்கள்? அவருடைய உடம்புக்கு என்ன வந்தது? மனதுதான் ரொம்பவும் நொந்து போயிருக்கும்!” என்றார் இன்னொரு நண்பர். “பொது வாழ்க்கை என்றால் இந்த மாதிரி எத்தனையோ தான் இருக்கும். வம்புக்காரர்களுடைய பொய்களுக்கெல்லாம் பயந்து விடவும் கூடாது; மனதைச் சோர்வடைய விட்டு விடவும் கூடாது!” என்றார் எதிர் வீட்டுத் தாமோதர முதலியார். “மிஸ்டர் பட்டாபிராமன்! நீங்கள்தான் சீதா அம்மாளுக்கு தைரியம் சொல்லித் தேற்ற வேண்டும்” என்றார் அட்வகேட் அப்பாராவ். “என்ன இருந்தாலும் இந்த மாதிரி அயோக்கியத்தனமாகவா அவதூறு சொல்கிறது? எனக்கு என்னமோ நினைத்தாலே இரத்தம் கொதிக்கிறது!” என்றான் பட்டாபிராமன். “அப்பா, பட்டாபி! அப்படியெல்லாம் இரத்தத்தைக் கொதிக்கும்படி விட்டு விடாதே! நீ எலெக்ஷனுக்கு நிற்க உத்தேசித்தபோது நான் உனக்கு எச்சரிக்கை செய்யவில்லையா? எலெக்ஷன் என்றால் இப்படித்தான் குப்பை கூளம் எல்லாம் வெளியில் வரும். அதற்காக, ‘ஆஹா ஊஹூ’ என்று அலறுவதில் பிரயோசனமில்லை!” என்று சொன்னார் தாமோதர முதலியார். “அதெல்லாம் இல்லை, ஸார் இந்த மாதிரி காலிப்பயல்களைச் சும்மா விட்டுவிடக் கூடாது. துண்டுப் பிரசுரம் போட்டவனைக் கோர்ட்டுக்கு இழுத்துச் சந்தி சிரிக்க அடிக்க வேண்டும்!” என்றார் ஒரு ஆக்ரோஷக்காரர். “கோர்ட்டுக்குப் போவது பிசகு, அவதூறு கேஸுகளில் புரூப் செய்வது எவ்வளவு கஷ்டம் என்பது நமக்குத் தெரியாதா என்ன? பேசாமல் ‘பினீத் கண்டெம்ட்’ என்று விட்டுவிடுவது தான் சரி!” என்றார் அட்வகேட் அப்பாராவ். “அதுதான் ஸார், சரி! சந்திரனைப் பார்த்து நாய் குரைத்தால் சந்திரனுக்கு என்ன குறைவு வந்துவிடும்?” என்றார் ஒரு சாந்தமூர்த்தி. “நமக்கு அப்படித் தோன்றுகிறது ஆனால் சந்திரனுக்கு என்ன தோன்றுகிறதோ, என்னமோ!” என்றார் ஒரு ஹாஸ்யப் பிரியர். கடைசியாக, பட்டாபிராமன் அவனுடைய மகத்தான வெற்றியைக் குடும்பத்தோடு சேர்ந்து அனுபவிக்கட்டும் என்று விட்டு விட்டு எல்லாரும் போய்ச் சேர்ந்தார்கள். மேற்கூறிய சம்பாஷணையில் சீதாவைப்பற்றிக் கூறப்பட்ட அனுதாப வார்த்தைகள் வாசகர்களுக்கு அவ்வளவாக விளங்காமலிருக்கலாம். விஷயம் என்னவென்று கேட்டால்:- வோட்டுப் போடும் தினத்துக்கு முதல் நாளைக்கு முன்னாள் பட்டாபிராமனை ஆதரித்துக் கடைசிப் பெரும் பொதுக் கூட்டம் நடந்தது. கேவலம் முனிஸிபல் தேர்தல் கூட்டங்களில் சாதாரணமாகக் கண்டிராத பெரும் கூட்டம் கூடியிருந்தது, சுமார் ஐயாயிரம்பேர் இருக்கும். மேடையில் அபேட்சகர் பட்டாபிராமனோடு இன்னும் பல பிரமுகர்களும் பெண்மணிகளும் அமர்ந்திருந்தார்கள். பெண்மணிகளிலே சீதாவும் இருந்தாள். சென்ற ஒன்றரை மாதமாகத் தேர்தல் வேலை செய்ததில் சீதா பிரமாதமான பிரசங்கி ஆகிவிட்டாள். அவளுடைய பேச்சிலே தேசபக்தி ததும்பிற்று; ஆவேசம் பொங்கிற்று; வீரசுதந்திரம் தாண்டவ நர்த்தனம் செய்தது; கறுப்பு மார்க்கெட் சின்னாபின்னமடைந்தது; அக்கிரமமும் அநீதியும் அதோகதி அடைந்தன. பட்டாபிராமனை ஆதரித்த சீதாவின் வார்த்தைகள் அன்பும் ஆதரவும் உருக் கொண்டவையாக வெளிவந்தன. எதிரி அபேட்சகரைத் தாக்கி அவளுடைய சொற்களோ இராமபாணங்களைப்போல் விர்ரென்று பாய்ந்து சென்று அக்கிரமத்தின் உயிர் நிலையில் தைத்தன. ஆகையால் சபையோர் எல்லோரும் வீராங்கனையான ஸ்ரீ மதி சீதாதேவி எப்போது பேசப் போகிறாள் என்று எதிர் பார்த்துக் கொண்டி ருப்பது வழக்கமாகி விட்டது. மற்றவர்களுடைய பேச்சுக்களையெல்லாம் ஏதோ சகித்துக் கொண்டிருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் கடைசியாக நடந்த பெரும் பொதுக் கூட்டத்தின் போது சபையோர் பெரும் ஏமாற்றம் அடையும்படி நேர்ந்தது. ஏனெனில் ஸ்ரீ மதி சீதாவின் பேச்சு அன்று நடைபெறவில்லை. வழக்கம்போல் சீதா எழுந்தது என்னமோ உண்மைதான். ஆனால் மூன்று நாலு வாக்கியங்களுக்குமேல் பேசவில்லை; பேச முடியவில்லை. அந்த மூன்று நாலு வாக்கியங்களையும் சீதா விம்மலுடன் பேசினாள் பிறகு குபீரென்று பெரிய அழுகையாக வந்துவிட்டது. எனவே பேச்சை நிறுத்திக்கொண்டு உட்கார்ந்து விட்டாள். நல்ல வேளையாகக் கூட்டத்தில் குழப்பம் எதுவும் ஏற்படாமல் மேடையில் இருந்த பிரமுகர்களும் ஸ்திரீகளும் அங்கிருந்து கலைந்து போக முடிந்ததைப் பற்றியே அனைவரும் சந்தோஷப்பட வேண்டியதாயிற்று. சீதாவின் விபரீத நடவடிக்கைக்குக் காரணமாயிருந்தது இதுதான்:- அன்று பொதுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது ஜனக் கூட்டத்தின் ஓரப் பக்கங்களில் யாரோ ஒருவன் ஒரு துண்டுப் பிரசுரத்தை விநியோகித்தான். அதைக் கையில் வாங்கிப் படித்தவர்கள் எல்லாரும் மேடைமீதிருந்த சீதாவை உற்றுப் பார்க்கலானார்கள். மேற்படி துண்டுப் பிரசுரங்கள் கைமாறி மாறிக் கூட்டத்தில் பரவிக் கொண்டேயிருந்தன. அநேகருடைய கவனம் மேடையில் நின்று பேசுகிறவர்கள் மீதோ அவர்களுடைய பேச்சிலோ செல்லவேயில்லை. திரும்பத் திரும்ப சீதாவையே அவர்கள் நோக்கிக் கொண்டிருந்தார்கள். சிலருடைய நோக்கில் பரிதாபம் இருந்தது; சிலருடைய பார்வையில் ஆத்திரம் அதிகம் இருந்தது; வேறு சிலருடைய பார்வையில் ஏளனமும் கலந்திருந்தது. இப்படிக் கூட்டத்தில் பலர் ஏதோ ஒரு பிரசுரத்தைப் பார்ப்பதும் பிறகு தன்னைப் பார்ப்பதுமாயிருந்ததைச் சீதாவும் சிறிது நேரத்தில் கவனிக்கும்படி நேர்ந்தது. இன்னது என்று விளக்கமில்லாத கவலையும் பீதியும் அவள் மனதில் உதித்தன. அந்தப் பிரசுரத்தை வாங்கிப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வமும் உண்டாயிற்று. அந்தச் சமயத்தில் பிரசுரத்தை விநியோகித்தவன் பிரசங்க மேடைக்கு அருகில் வந்து அதை விநியோகிக்கத் தொடங்கினான். அப்படி விநியோகிக்கக் கூடாதென்று சிலர் ஆட்சேபித்தார்கள். அந்தப் பையன் நாலுத் துண்டுப் பிரசுரத்தை மேடையில் எறிந்துவிட்டு ஓட்டம் பிடித்தான். கை மாறி மாறி ஒரு பிரசுரம் சீதாவுக்குப் பக்கத்தில் வந்து சேர்ந்தது. சீதா அதை கைநீட்டி வாங்கிக் கொண்டாள்; வாங்கிப் படிக்கவும் தொடங்கினாள். முதல் நாலைந்து வரிகளைப் படித்ததுமே அவளுடைய நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சுவது போலிருந்தது. மேலே படித்ததும் இதயம் வெடித்துவிடும் போல் தோன்றியது. படித்து முடித்ததும் உடம்பெல்லாம் ஆயிரம் தேள்கள் கொட்டினாற் போன்ற துன்பம் உண்டாயிற்று. துன்பத்தோடு கலந்து சொல்ல முடியாத கோபமும் ஆத்திரமும் எழுந்தன. அந்தத் துண்டு பிரசுரத்தில் சீதாவைப் பற்றி அவ்வளவு நிந்தனையாக எழுதியிருந்தது. அவளுடைய ஒழுக்கத்தைக் குறை கூறியிருந்தது. அவள் தன் புருஷனை விட்டு விட்டு அம்மாஞ்சி சூரியாவோடு ஓடி வந்தவள் என்று எழுதியிருந்தது. அவள் தேசத் தொண்டில் சிறைபுகவில்லையென்றும் ரயிலில் திருடியதற்காகத் தண்டிக்கப்பட்டவள் என்றும் கண்டிருந்தது. அப்படிப்பட்ட ஜாலக்காரியின் மாயப் பேச்சில் மயங்கும் முட்டாள்களுக்கு நன்றாக டோ ஸ் கொடுத்து விட்டு அந்தத் துண்டுப் பிரசுரம் முடிவுற்றது. ஒரு பெண்ணின் மனதைப் பாதித்து வேதனைக்குள்ளாக்குவதற்கு வேறு என்ன வேண்டும்? வேதனையிலிருந்து பொங்கி எழுந்த ஆத்திரம் காரணமாகச் சீதா பேச எழுந்தாள். அந்தத் துண்டு பிரசுரத்தைக் குறிப்பிட்டு அதைச் சின்னாபின்னமாக்கி அதை எழுதியவனுடைய மதியீனத்தை அம்பலப்படுத்த வேண்டும் என்ற ஆவேசத்துடன் பேச ஆரம்பித்தாள். அவளுடைய நோக்கம் நிறைவேறவில்லை. நாலைந்து வாக்கியங்கள் பேசுவதற்குள்ளேயே அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தபடியால் பேச்சை நிறுத்திவிட்டு உட்காரும்படி நேர்ந்தது. அடுத்த இரண்டு நாளும் சீதா வெளிக்கிளம்பவேயில்லை. கேட்டவர்களுக் கெல்லாம் பட்டாபிராமன் சீதாவுக்கு உடம்பு சரியில்லை என்று பதில் சொல்லிக்கொண்டு வந்தான். மேற்படி சம்பவத்தினால் பட்டாபிராமனுடைய மனமும் வேதனை அடைந்திருந்தது. கோபமோ சொல்ல முடியாமல் வந்தது. எனினும் எலெக்ஷன் முயற்சியில் அவன் சோர்ந்து விடவில்லை. மேற்படி சம்பவம் தேர்தலில் வெற்றி பெறுவதில் அவனுடைய ஆத்திரத்தை அதிகமாக்கி விட்டது. அம்மாதிரி பட்டாபிராமனுக்கு வேலை செய்தவர்களும் அதிக ஊக்கம் கொண்டார்கள். இந்தத் தேர்தலில் ஜெயிக்காவிட்டால் தங்கள் மானமே போய்விடும் என்றும் பிறகு தேவபட்டணத்துப் பொது வாழ்க்கையில், தாங்கள் தலைகாட்ட முடியாதென்றும் அவர்கள் எண்ணி முன்னைவிட ஆவேசமாக வேலை செய்தார்கள். பொது ஜனங்கள் - வோட்டர்கள் மனதில் மேற்படி துண்டுப் பிரசுரம் எந்தவித மாறுதலையும் உண்டாக்கவில்லை. பொது ஜனங்களை முட்டாள்கள் என்று சொல்லி யாராவது அவர்களுடைய ஆதரவைப் பெற முடியுமா? வேறு என்ன விதமாகத் தங்களைத் திட்டினாலும் பொது ஜனங்கள் பொறுத்துக் கொள்வார்கள். “நீங்கள் முட்டாள்கள்” என்று சொல்லி யாரும் அவர்களுடைய ஆதரவைப் பெறலாம் என்று எதிர்பார்க்க முடியாது! “நாங்களா முட்டாள்கள்? துண்டுப் பிரசுரம் எழுதிய நீதான் முட்டாள் என்பதை நிரூபித்து விடுகிறோம்!” என்று தேவபட்டணம் பொது ஜனங்கள் தீர்மானித்தார்கள். மேலும், கறுப்பு மார்க்கெட்டில் பணம் சேர்த்த பழைய பெருச்சாளி இப்படியெல்லாம் ஒரு பெண்ணைப் பற்றி அவதூறைக் கிளப்பிவிட்டுத் தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொள்ளப் பார்க்கிறான் என்ற அபிப்பிராயமும் பொது மக்களிடையே பரவியது. அந்தப் பொதுஜன அபிப்பிராயத்தையே வோட்டுகளும் பிரதிபலித்தன. முடிவில், பட்டாபிராமன் பெரும் வெற்றி அடைந்தான். அந்த மகத்தான வெற்றியானது பட்டாபிராமனுக்கு நியாயமாக அளித்திருக்கவேண்டிய ஆனந்தத்தை அளிக்கவில்லை. ’தெள்ளிய பாலில் சிறிது நஞ்சையும் சேர்த்துவிட்டது போல், அவனுடைய வெற்றி குதூகலத்தைச் சீதாவைப் பற்றிய அவதூறு பிரசாரம் பாதித்துவிட்டது! யாருடைய தூண்டுதல் அந்த எலெக்ஷனில் அவன் நிற்கும்படியான ஊக்கத்தை அளித்ததோ, யாருடைய மகத்தான முயற்சி அவனுடைய வெற்றிக்குக் காரணமாயிருந்ததோ, யார் அவனுக்குச் சோர்வு ஏற்பட்ட போதெல்லாம் ஆறுதல்கூறி, உற்சாகமூட்டி வந்தாளோ, அத்தகைய சீதா வெற்றிக் கொண்டாட்டக் குதூகலத்தை அவனுடன் பகிர்ந்து அனுபவிக்க முடியவில்லை. இரண்டு நாளாக மச்சு மேலிருந்து கீழே இறங்காமலேயே இருந்து வருகிறாள். சீதாவும் சேர்ந்து கொண்டாட முடியாத இந்த வெற்றியினால் என்ன பிரயோஜனம்? இவ்விதம் பட்டாபிராமன் மனச் சோர்வுக்கு ஆளாகியிருந்த போது லலிதா தன்னுடைய தாயாருடன் பட்டாபிராமனின் ஆபீஸ் அறைக்கு வந்தாள். பட்டாபிராமன் வெற்றியடைந்ததில் அவனுடைய மாமியாரைப் போல் சந்தோஷமடைந்தவர் வேறு யாரும் இருக்க முடியாது! முதல் தடவையாக மாப்பிள்ளையிடம் சங்கோசத்தை விட்டுச் சரஸ்வதி அம்மாள் கலகலப்பாகப் பேசினாள். சந்தோஷத்தை பலவிதத்திலும் தெரிவித்த பிறகு, “இந்த வைபவத்தையெல்லாம் பார்க்க அவர் இல்லாமற் போய்விட்டாரே என்று நினைத்தால் மட்டும் மனது வேதனைப்படுகிறது!” என்று சொல்லிக் கொண்டு இரண்டு சொட்டுக் கண்ணீர் விட்டாள். உடனே, இந்தச் சமாசாரத்தைப் பிரஸ்தாபித்து விட்டதற்காக வெட்கப்பட்டவளாய் விரைந்து சமையற்கட்டுக்குப் போய்விட்டாள். “நீங்கள் என்ன வேணுமோ சொல்லுங்கள். அம்மாவுக்கு உங்கள் பேரில் உள்ள பாசம் வேறு யாரிடமும் கிடையாது!” என்றாள் லலிதா. “யார் இல்லை என்றார்கள்? உன் அம்மாவுக்கு என்பேரில் ரொம்பப் பாசந்தான். ஆனால் அந்தப் பாசம் எனக்குப் பிராண சங்கடமாயிருக்கிறது!” என்றான் பட்டாபிராமன். “அது போனால் போகட்டும், சீதா இப்படி இரண்டு நாளாகப் படுத்த படுக்கையாக இருக்கிறாள், நீங்களும் எலெக்ஷன் மும்முரத்தில் இருந்து விட்டீர்கள். இப்போது மாடிக்குப் போய் அவளுக்குச் சமாதானம் சொல்லிவிட்டு வரலாம், வாருங்களேன்!” என்றாள் லலிதா. “என்ன சமாதானத்தைச் சொல்வது? வீண் பிடிவாதத்துக்கு நாம் என்ன செய்யமுடியும்? யாரோ வழியிலே போகிறவன் என்னமோ பிதற்றினான் என்பதற்காகப் குப்புறப்படுத்து ஓயாமல் அழுது கொண்டிருக்கிறதா? என்ன இருந்தாலும் பெண்பிள்ளை என்பது சரியாயிருக்கிறது. இப்படிப்பட்ட கோழை மனதுள்ளவர்கள் பொது வேலைக்கு வரவே கூடாது!” என்றான் பட்டாபிராமன். “சூரியாவும் அன்றைக்கு அப்படித்தான் சொன்னான். எலெக்ஷன் தொல்லைக்குப் பெண்பிள்ளைகள் போகக்கூடாது என்றான்….” “சூரியா என்ன உளறினால் இப்போது என்ன? அவன் என்னை எலெக்ஷனுக்கே நிற்கக்கூடாது என்று சொன்னான். நின்றதனால் என்ன குடி முழுகிப் போய்விட்டது? இன்றைக்கு ஊரெல்லாம் ‘ஜே’ கோஷம் செய்கிறதோ இல்லேயோ” என்று பட்டாபி கர்வம் ததும்பப் பேசினான். “அதற்கு என்ன ஆட்சேபணை? வெறுமனேயா ஜயகோஷம் செய்கிறார்கள்? ‘பட்டாபிராமனுக்கு ஜே!’ என்றுதான் கோஷிக்கிறார்கள்! நம்முடைய கலியாணத்தன்று எல்லாரும் என்னைப் பிடிவாதம் செய்ததின் பேரில் ‘மாமவ பட்டாபிராமா’ என்று நான் பாடினேன். அது இன்றைக்குத்தான் நிஜமாயிற்று. இன்று தானே உங்களுக்கு பட்டாபிஷேகம்!” என்று லலிதா அன்பு ததும்ப பதில் கூறினாள். “சரி சரி! நீ உன்னுடைய பழைய பெருமையைப் பீத்திக் கொள்ள ஆரம்பித்துவிட்டாயாக்கும். இன்னும் எனக்குப் பட்டாபிஷேகம் ஆகவில்லை இன்றைக்குத் துவஜாரோகணந்தான் நடந்திருக்கிறது. சேர்மன் வேலையும் கிடைத்த பிறகுதான் பட்டாபிஷேகம் நடந்தது என்று சொல்லலாம்.” “அதற்கு என்ன பிரமாதம்? இது ஆனதுபோல் அதுவும் ஆகிவிடுகிறது! என் வாக்குப் பொய்யாகாது; நீங்கள் வேணுமானால் பாருங்கள்!” “ரொம்ப லட்சணந்தான். உன்னுடைய திருவாக்கின் மகிமையினாலேதான் எனக்குத் தேர்தலில் வெற்றி கிடைத்தது என்று உன் எண்ணமாக்கும்! எலெக்ஷனுக்கே நான் நிற்கக் கூடாது என்று நீ முரண்டு பிடித்ததை மறந்து விட்டாயாக்கும்! அந்தச் சமயம் சீதா மட்டும் என்னுடைய கட்சியில் நின்று பேசியிராவிட்டால்…..” “அதைப்பற்றி யார் என்ன சொன்னார்கள்? சீதா அத்தங்கா இந்தத் தேர்தலில் நமக்குச் செய்த ஒத்தாசையை மறக்க முடியுமா?” “அப்படியொன்றும் உன் அத்தங்கா பிரமாத ஒத்தாசை எனக்குச் செய்துவிடவில்லை. அவள் இல்லாவிட்டால் நான் ஜெயித்திருக்க மாட்டேன் என்கிறாயா?” “அழகாய்த்தானிருக்கிறது! நான் அப்படி சொல்வேனா என்ன? உங்களுடைய தியாகத்தினாலும் செல்வாக்கினாலும் நீங்கள் ஜயித்தீர்கள்; அதைப் பற்றிச் சந்தேகமில்லை. ஆனால் சீதா அத்தங்காவும் எவ்வளவோ பாடுபட்டு ஒத்தாசை செய்திருந்தாள் அதை நாம் மறக்கக்கூடாது. கொஞ்சம் மேலேபோய் அத்தங்காவைப் பார்த்துவிட்டு வரலாம். வாருங்கள், நீங்கள் இரண்டு வார்த்தை ‘உன்னால்தான் ஜெயித்தேன்’ என்று சொல்வதினால் ஒன்றும் முழுகிப் போய்விடாது, அவளுக்குத் திருப்தியாயிருக்கும்.” “அவளுடைய திருப்திக்காவா நான் ஜன்மம் எடுத்திருக்கிறேன்? அதெல்லாம் முடியாத காரியம். ஊரெல்லாம் திரண்டு வந்து ஊர்வலம் நடத்தி எனக்கு வாழ்த்து சொல்லி விட்டுப் போயிருக்கிறார்கள். வீட்டுக்குள்ளேயே யிருந்துகொண்டு இவளுக்கு மச்சுப்படி இறங்கி வரக்கூட முடியவில்லை! அவள் இறங்கிவந்தால் வரட்டும்; வராவிட்டால் போகட்டும். நான் போய் அவளுடைய முகவாய்க் கட்டையைப் பிடித்துக்கொண்டு கெஞ்ச முடியாது! தெரிகிறதா?” இப்படி பட்டாபிராமன் ஆத்திரமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது யாரோ மச்சுப்படி இறங்கிவரும் சத்தம் கேட்டது. உடனே அந்தத் தம்பதிகள் பேச்சை நிறுத்தினார்கள். இரண்டு நிமிஷத்துக்கெல்லாம் சீதா அறைக்குள்ளே பிரவேசித்தாள். “அத்தங்கா! உனக்கு நூறு வயது!” என்றாள் லலிதா. “வாருங்கள்! வாருங்கள்! இப்போதுதான் மாடிக்கு வந்து உங்களைப் பார்க்கலாம் என்று பேசிக்கொண்டிருந்தோம். அதற்குள் நீங்களே இறங்கி வந்துவிட்டீர்கள். தலைவலி இப்போது எப்படியிருக்கிறது?” என்றான் பட்டாபிராமன். “உங்களுடைய வெற்றிச் செய்தி கேட்டதும் தலைவலி பறந்து போய்விட்டது! ரொம்ப சந்தோஷம்!” என்றாள் சீதா. “எல்லாம் நீங்கள் கொடுத்த ஊக்கத்தினாலும் செய்த ஒத்தாசையினாலுந்தான். உங்களுக்கு ரொம்பவும் கடமைப்பட்டிருக்கிறேன்!” என்றான் பட்டாபிராமன். “நான் என்ன அப்படிப் பிரமாத ஒத்தாசை செய்து புரட்டிவிட்டேன்? லலிதாவின் அதிர்ஷ்டத்துக்கு எல்லாம்தானே நடக்கும்!” என்று சீதா சொல்லிவிட்டு லலிதாவின் கன்னங்களைத் தடவிக் கொடுத்துத் திருஷ்டி கழிக்கும் பாவனையாக நெற்றியில் கையை வைத்து நெரித்துக் கொண்டாள். லலிதாவுக்கு ஆனந்தமாயிருந்தது. சீதா மலர்ந்த முகத்துடன் எழுந்து வந்ததை நினைத்துக் களிப்படைந்தாள். தன் கணவரோ சற்றுமுன் கடுமையாகப் பேசியதை மறந்து அவளிடம் மரியாதையாகப் பேசுகிறார். பட்டாபிராமனுடைய வெற்றியினால் லலிதாவுக்கு ஏற்பட்ட குதூகலம் இப்போது பூர்த்தியாகிவிட்டது. “அத்தங்கா! இந்த மனுஷருடைய பேராசையைக் கேள். இவருக்கு இந்த எலெக்ஷனில் வெற்றி கிடைத்தது போதாதாம். சேர்மன் பதவியும் கிடைத்தால்தான் சந்தோஷப்படலாமாம்?” என்றாள் ஸ்ரீ மதி லலிதா. “உன் அதிர்ஷ்டத்துக்கு அதுவும் தானே நடக்கிறது!” என்று சீதா கூறினாள். அப்போது பட்டாபி குறுக்கிட்டு, “இவள் சொல்கிறதை நீங்கள் நம்பாதீர்கள், இவளுக்கு ‘சேர்மன் ஒயிஃப்’ என்று தன்னை எல்லாரும் கொண்டாட வேண்டும் என்று ஆசையாயிருக்கிறது! அந்தப் பழியை என் தலையின் பேரில் போட்டுவிடப் பார்க்கிறாள்!” என்று சொன்னான். “லலிதா அப்படி ஆசைப்படுவதில் என்ன தவறு? எனக்குக் கூடத்தான் நீங்கள் சேர்மன் ஆகிப் பார்க்கவேண்டும் என்று ஆசையாயிருக்கிறது!” என்று பரிவுடன் கூறினாள் சீதா. “அந்த ஆசை நிறைவேற வேண்டுமானால் நீங்கள் முன்போல் எனக்கு உதவி செய்யவேண்டும். மாடியிலே போய்ப்படுத்துக் கொள்ளக்கூடாது.” “இனிமேல் என்னால் உங்களுக்கு உபகாரம் கிடையாது. ஒருவேளை அபகாரம் நேர்ந்தாலும் நேரும். இரண்டு நாளாக நான் தீவிரமாக யோசனை செய்து பார்த்தேன். ஸ்திரீகள் எலெக்ஷன் முதலிய பொதுக் காரியங்களில் தலையிடவே கூடாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். பொது ஜனங்கள் ரொம்பப் பொல்லாதவர்கள்!” என்றாள் சீதா. “நீங்கள் சொல்வது சுத்தத் தப்பு. இன்றைக்கு என்னை வாழ்த்துக்கூற வந்தவர்கள் எல்லோரும் தங்களைப்பற்றி அன்புடன் விசாரித்தார்கள், ஒருவராவது தவறாக ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.” “இன்றைக்கு ஒன்றும் சொல்லியிருக்க மாட்டார்கள்; ஆனால் நாளைக்குச் சொல்வார்கள்.” “பொது ஜனங்கள் பேரில் ஏன் உங்களுக்கு இவ்வளவு அவநம்பிக்கையோ தெரியவில்லை எவனோ ஒரு காலிப்பயல் என்னமோ பிதற்றினால் அதற்காக எல்லாரையும் சேர்த்துக் குறை சொல்லலாமா?” “அந்த நோட்டீசை நீங்கள் பார்த்தீர்களோ என்னமோ தெரியவில்லை. பார்த்திருந்தால் உங்களுக்கும் என்னைப்போல் இரத்தம் கொதித்திருக்கும். அம்மாதிரியெல்லாம் எழுதியவனை வெட்டிப் போட்டு விடலாம் என்று தோன்றியிருக்கும்!” இந்தச் சமயத்தில் லலிதா குறுக்கிட்டு, “போதும் இந்தப் பேச்சு! சந்தோஷமான சமயத்தில் அந்த அக்கிரமத்தைப் பற்றி எதற்காகப் பேசவேண்டும்! சாப்பிடப் போகலாம், வாருங்கள்!” என்று சொன்னாள். மூன்று பேரும் சாப்பிடுவதற்குப் போனார்கள். சாப்பிடு கிறபோது சிரிப்பும் விளையாட்டுமாயிருந்தது. உணவு அருந்தியதும் சீதா மச்சு அறைக்கும் பட்டாபிராமன் வாசல் திண்ணைக்கும் போனார்கள். பிறகு சரஸ்வதி அம்மாள் லலிதாவிடம், “இந்தப் பெண் இனிமேல் இங்கே அதிக காலம் இருப்பது நன்றாயிராது. சீக்கிரம் ஊருக்குக் கிளம்பிப் போனால் நன்றாயிருக்கும்!” என்றாள். “நன்றாயிருக்கிறதடி, அம்மா நீ சொல்லுகிறது; காரியம் ஆகிறவரை காலைப்பிடி என்று சொல்வதுபோல அல்லவா இருக்கிறது? அத்தங்கா மட்டும் வந்திராவிட்டால் உன் மாப்பிள்ளை எலெக்ஷனுக்கு நின்றிருக்கமாட்டார், ஜயித்துமிருக்கமாட்டார். நீயே எத்தனையோ தடவை அவ்விதம் சொல்லியிருக்கிறாய். இப்போது ‘சீதா சீக்கிரம் ஊருக்குப் போனால் தேவலை’ என்கிறாயே?” “அவள் செய்ததை நான் இல்லை என்றா சொல்கிறேன்? ஏதோ ஒத்தாசை செய்தாள்; வாஸ்தவந்தான். ஆனால் கடைசியில் பெரிய கல்லாகத் தூக்கிப் போட்டுவிட்டாள்!” “வீணாகப் பழி சொல்லாதே! அவள் என்ன செய்தாள், பாவம்!” “அவள் என்ன செய்தாளோ என்னமோ எனக்கு எப்படித் தெரியும்? புகை உள்ள இடத்தில் நெருப்பு இல்லாமற் போகாது. ஏதோ அவளுடைய நடத்தையில் கல்மிஷம் இல்லாமற் போனால் அப்படித் துணிந்து அச்சுப் பிரசுரம் போடு வார்களா?” என்றாள் சரஸ்வதி அம்மாள். “அம்மா! அம்மா! அத்தங்காளைப்பற்றி அவதூறு சொல்லாதே! சொன்னால் உனக் குத்தான் பாவம்!” “நான் சொல்லவில்லையடி, அம்மா, நான் சொல்லவில்லை! என் வாயை வேணுமானால் நீ மூடலாம்; ஊர் வாயை மூட முடியுமா? அடுத்தபடி இன்னொரு பெரிய வேலை இருக்கிறதே, சேர்மன் வேலை. இது மாப்பிள்ளைக்கு ஆக வேண்டுமே என்று எனக்குக் கவலையாயிருக்கிறது. சீதா நல்ல எண்ணம் உள்ளவளாயிருந்தால் இரண்டு நாளில் கிளம்பிப் போய்விடுவதுதான் நியாயம். அவளுக்கும் ஒரு புருஷன் இருக்கிறான். ஒரு குழந்தையும் இருக்கிறாள் அல்லவா? இன்னொருவர் வீட்டிலேயே இவள் வந்து உட்கார்ந்து கொண்டிருந்தால், இவளுடைய குடும்பம் என்ன ஆகிறது? நீ இப்படிப் போய் இன்னொருவர் வீட்டில் இருப்பாயா? யோசித்துப்பார்!” என்றாள் சரஸ்வதி அம்மாள். அம்மா சொல்வதிலும் கொஞ்சம் உண்மை இருக்கிறது என்று லலிதாவுக்கு தோன்றியது. பத்தொன்பதாம் அத்தியாயம் - பாம்புக்கு வார்த்த பால் பட்டாபிராமனுடைய மாமியாரின் மனோரதம் வீண் போகவில்லை. தேவபட்டணத்து முனிசிபல் சேர்மன் பதவிக்கு நடந்த தேர்தலிலும் பட்டாபிராமனுக்கே வெற்றி கிடைத்தது. அந்த வெற்றி தனியாக வரவில்லை. இடி, மின்னல், பெருமழை, பிரளயம், இவற்றுடன் சேர்ந்து வந்தது. சீதாவுக்கு ஏற்பட்ட மனச் சோர்வு இரண்டு மூன்று தினங்களிலேயே மறைந்து போய்விட்டது. சரஸ்வதி அம்மாள் அடிக்கடி முணுமுணுத்ததைப் பொருட்படுத்தாமல் பட்டாபிராமனும் லலிதாவும் சீதாவை உற்சாகப்படுத்துவதில் முனைந்தார்கள். முதல் தேர்தலில் ஏற்பட்ட வெற்றிக்காக நடந்த உபசார விருந்துகளுக்கும் வாழ்த்துக் கூட்டங்களுக்கும் சீதாவையும் தவறாமல் உடன் அழைத்துப் போனார்கள். சென்ற இடங்களில் எல்லாம் சீதா தன்னுடைய கலகலப்பான சுபாவத்தினாலும் சாதுர்யமான பேச்சுகளினாலும் அனைவரையும் குதூகலத்தில் ஆழ்த்தி வந்தாள். எதிரி மனப்பான்மை கொண்டவர்கள் சிலரும் பொறாமைக்காரர்களும் தங்களுக்குள் ஏதோ அப்படி, இப்படி என்று பேசிக் கொண்டது உண்மைதான். ஆனால் அது ஒன்றும் பட்டாபிராமன் காது வரையில் வந்து எட்டவில்லை. நாளாக ஆக, பட்டாபிராமனுக்குச் சேர்மன் பதவி நிச்சயம் என்று ஏற்பட்டது. சேர்மன் தேர்தல் தினம் நெருங்க நெருங்க, பட்டாபிராமன், லலிதா, சீதா - ஆகிய இவர்களின் உற்சாகமும் உச்சத்தை அடைந்து வந்தது. ஆனால் குறிப்பிட்ட தேதிக்குச் சரியாக இரண்டு நாள் இருக்கும்போது லலிதாவின் தலையில் இடி விழுந்தது போன்ற ஒரு திடுக்கிடும் சம்பவம் ஏற்பட்டது. அன்று காலையில் பட்டாபிராமன் வெளியிலே போயிருந்தான். சீதா தன்னுடைய மாடி அறையில் உட்கார்ந்து, ஏதோ கடிதம் எழுதிக் கொண்டிருந்தாள். அச்சமயம் தபால்கள் வந்தன. லலிதா தபால்களை வாங்கிக்கொண்டு வந்து பட்டாபி ராமனுடைய மேஜையின் மேல் வைத்தாள்.பிறகு தனக்கு ஏதாவது கடிதம் உண்டா என்று பார்ப்பதற்கு அசிரத்தையாகத் தபால்களைப் புரட்டினாள். அவளுடைய பெயருக்கு ஒரு கடிதம் இருந்தது. சாதாரணமாய் விலாசத்தைப் பார்த்ததும் யாரிடமிருந்து கடிதம் வந்திருக்கிறதென்று அவளுக்குத் தெரிந்துவிடுவதுண்டு. ஏனெனில் அவள் பெயருக்குக் கடிதம் எழுதக் கூடியவர்கள் வெகு சிலர்தான், சூரியா ஒருவன். சீதா டில்லியிலிருந்தபோது அடிக்கடி எழுதுவான். கல்கத்தாவிலிருந்து சித்ரா எழுதுவாள், இன்னும் இரண்டொருவர்தான். ஆனால் இந்தக் கடிதத்தின் மேல் விலாசத்திலிருந்து அதை எழுதியது யார் என்று தெரியவில்லை. ஆகையால் வழக்கத்தைக் காட்டிலும் சிறிது ஆர்வத்துடனேயே உறையை உடைத்தாள். ஏனோ தெரிய வில்லை; அவளுடைய நெஞ்சம் கொஞ்சம் பலமாகவே அடித்துக் கொண்டது. உறைக்குள்ளே கடிதம் ஒன்றுமில்லை. அதற்குப் பதிலாக அச்சடித்த பத்திரிகைத் துண்டு ஒன்று இருந்தது. லலிதா திரும்பவும் உறைக்குள் பார்த்தாள். மடித்திருந்த பத்திரிகைத் துண்டைப் பிரித்து அதற்குள் ஏதாவது கடிதம் இருக்கிறதோ என்று பார்த்தாள். தவறிக் கீழே விழுந்திருக் கிறதோ என்று பார்த்தாள் இல்லையென்று நிச்சயமாயிற்று. ஏதோ தவறுதலாகக் கடிதத்தை வைப்பதற்குப் பதில் இந்தப் பத்திரிகையை வைத்து விட்டாற் போலிருக்கிறது. அப்படி வைத்தது யாராக இருக்கும்!’ என்று எண்ணிக்கொண்டே அச்சுத்தாளைப் பார்த்தாள். அதில் கொட்டை எழுத்தில் போட்டிருந்த ஒரு தலைப்பு அவளுடைய கண்ணையும் கவனத்தையும் கவர்ந்தது. “பட்டாபிராமன் லீலைகள்” என்ற அந்தத் தலைப்பைப் பார்த்ததும் அவளுடைய மனது பதறியது; உடம்பு நடுங்கியது. இரண்டு வரி படித்ததும் பதறலும் நடுக்கமும் அதிகமாயின. அதற்குமேல் அங்கேயிருந்து படிக்கக்கூடாது என்று தோன்றியது. ஒருவேளை பட்டாபிராமன் அங்கு வந்துவிட்டால்? அல்லது சீதாதான் வந்துவிட்டால்? அவர்களுடைய கண்ணிலே இது படக்கூடாது! நிச்சயமாய்க் கூடாது! ஆகையால் அந்தப் பத்திரிகைத் துண்டை எடுத்துக் கொண்டு தன் அறைக்குள் ஓடிச் சென்று கதவையும் தாள் போட்டுக் கொண்டாள். ஜன்னல் ஓரமாக நின்று படித்தாள். பாதிக்கு மேல் படிக்க முடியவில்லை கண்களில் கொதிக்கும் வெந்நீரைப் போன்ற, உஷ்ணத்துடன் கரகரவென்று ஜலம் கொட்டத் தொடங்கிக் கண்களை அடியோடு மறைத்துவிட்டது. அடிவயிற்றி லிருந்து வெப்பமான புகை போல ஏதோ கிளம்பி மார்பை அடைத்துக் கொண்டு மேலேறி மூச்சுத் திணறும்படி செய்து தலைக்குள்ளே பிரவேசித்தது. தலை கிறுகிறுவென்று சுழலத் தொடங்கியது. மயக்கம் வந்து கீழே தள்ளி விடுமோ என்று தோன்றியது. அந்த நிலைமையில் லலிதா ஆச்சரியமான மனோதிடத்துடன் அந்தப் பத்திரிகைத் துண்டைத் தன் பெட்டிக் குள்ளே வைத்துப் பூட்டினாள். பிறகு கட்டிலின் மேலே மெத்தையின் மீது தொப்பென்று விழுந்தாள். சிறிது நேரம் கண்ணீர் ஆறாகப் பெருகிக் கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து நின்றது. மனமும் தெளிவடைந்தது,“சீச்சீ! யாரோ அயோக்யன், பொறாமைக்காரன், எதையோ கன்னா பின்னாவென்று எழுதி அச்சுப் போட்டு விட்டதற்காக நம்முடைய மனதை மீற விட்டுவிடலாமா?” என்று எண்ணி மனதைத் திடப்படுத்திக் கொண்டாள். பிறகு எழுந்து கண்களையும் முகத்தையும் நன்றாகத் துடைத்துக் கொண்டு நிலைக்கண்ணாடியில் பார்த்து நெற்றிப் பொட்டையும் சரிப்படுத்திக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள். “அம்மா! சமையல் ஆகிவிட்டதா? அவர் வரும் நேரமாகி விட்டதே” என்று கேட்டுக் கொண்டே சமையல் அறைக்குச் சென்ற லலிதாவின் முகத்திலோ குரலிலோ சற்று முன் அவள் அநுபவித்த கொடிய வேதனைக்கு அடையாளம் கொஞ்சம் கூட இருக்கவில்லை. இப்படி லலிதாவுக்கு நரக வேதனை அளித்த விஷயம் என்னவென்று கேட்டால்:- கொஞ்ச காலமாகத் தேவபட்டணத்தில் ‘மஞ்சள் பத்திரிகை’ ஒன்று நடமாடிக் கொண்டிருந்தது. அதில் அந்த ஊர்ப் பிரமுகர்களுடைய சொந்த வாழ்க்கையில் உள்ள ஊழல்களையெல்லாம் வெளிப்படுத்து கிறது என்னும் வியாஜத்தில் சொல்லவும் எழுதவும் தகாத ஆபாச விஷயங்களையெல்லாம் எழுதித் தள்ளிக் கொண்டி ருந்தார்கள். அந்த ஆபாசப் பத்திரிகை பெரும்பாலும் இரகசியமாகப் பரவிக் கொண்டிருந்தது. நல்ல மனிதர்கள், நாகரிகமான மனிதர்கள் அதை வாங்குவதற்கும் படிப்பதற்கும் லஜ்ஜைப்பட்டார்கள். ஆயினும் பலருடைய மனதில் தங்களைப் பற்றி ஏதாவது அவதூறு வந்திருக்கிறதோ என்ற பீதி குடிகொண்டிருந்தது. சிலர் அந்த ஆபாசப் பத்திரிகையை இரகசியமாக வாங்கிப் படிப்பதும், மற்றவர்களைப் பற்றிக் கேவலமாக எழுதியிருப்பதைப் படித்து விட்டுச் சந்தோஷப்படுவதும், தங்களைப் பற்றி எழுதியிருப்பதைப் படித்து விட்டு அவஸ்தைப்படுவதும் அதை வேறு யாரும் படிக்காமலிருக்க வேண்டுமே என்று கவலைப்படுவதுமாயிருந்தார்கள். இந்த முட்டாள்தனப் படுகுழியில் விழாதிருந்தவர்களில் பட்டாபிராமன் ஒருவன். அந்தப் பத்திரிகையை அவன் பார்த்ததுமில்லை; படித்ததுமில்லை. யாராவது அதைப் பற்றிப் பிரஸ்தாபித்தாலும் உடனே அவன் தன்னுடைய அருவருப்பை வெளியிட்டு அந்தப் பேச்சை அடக்கிவிடுவான். ஆகவே பட்டாபிராமனுடைய வீட்டுக்குள்ளே அந்த மஞ்சள் பத்திரிகை அதுவரையில் பிரவேசியாமலிருந்ததில் ஆச்சரியம் இல்லையல்லவா? அந்த மாதிரி ஒரு ஆபாசப் பயங்கரப் பத்திரிகை நடந்து வருகிறதென்று லலிதா பராபரியாகக் கேள்விப்பட் டிருந்தாள். அவளுக்குத் தெரிந்த இரண்டொரு மனிதர்களைப் பற்றி அதில் கேவலமாக எழுதியிருந்ததென்பதும் அவள் காதில் விழுந்திருந்தது. அதையெல்லாம் கேட்ட போது, ‘இதுவும் ஒரு பத்திரிகையா? இப்படியும் எழுதுவதுண்டா?’ என்று அவள் ஆச்சரியப்பட்டதுண்டு. ஆனால் இப்போது அந்தப் பத்திரிகையிலிருந்து வெட்டி எடுத்தத் துண்டைத் தானே படித்துப் பார்க்க நேர்ந்தபோது அவள் ஆச்சரியப்பட முடியவில்லை. ஆச்சரியத்துக்குப் பதிலாக ஆத்திரமும் துயரமும் அளவிலாத குரோதமும் பொங்கி எழுந்து அவளைத் திக்குமுக்காடும்படி செய்தன. கர்மசிரத்தையாக யாரோ வெட்டி எடுத்து அவளுக்கு அனுப்பி யிருந்த பத்திரிகைப் பகுதியில் பட்டாபிராமனும் சீதாவும் காதலர்கள் என்றும், சீதாவை வீட்டில் வைத்துக் கொண்டிருக்கும் லலிதா ஒரு முழுமூடம் என்றும், இப்பேர்ப்பட்ட ஒழுக்கத்திற் சிறந்த பட்டாபிராமனைத்தான் தேவபட்டணத்து மகாஜனங்கள் நகர சபைத் தலைவராகப் பெறும் பாக்கியத்தை அடையப் போகிறார்கள் என்றும் எழுதியிருந்தது. கட்டுரையில் பாதிவரையில் இந்த அருமையான விஷயங்கள் இருந்தன. அதற்கு மேலே படிக்க முடியாமல் லலிதா நிறுத்தி விட்டாள். ஆனால் அந்த ஆபாசக் குப்பையை உடனே தீயில் போட்டுக் கொளுத்தாமல் பெட்டிக்குள் பூட்டி வைத்த காரணம் என்ன? அவளுடைய அந்தரங்கத்துக்கும் அவளைப் படைத்த கடவுளுக்குந்தான் தெரியும்! பத்திரிகையைப் படித்த உடனே ஏற்பட்ட முதல் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் பிறகு லலிதாவின் பேச்சும் நடவடிக்கையும் முன்னைக் காட்டிலும் அதிக உற்சாகமா யிருந்தன. அத்தகைய ஒரு பயங்கரமான விஷயத்தைப் படித்த பிறகும் அதைப் பற்றிப் பிரஸ்தாபிக்காமல் முன் மாதிரியே நடந்து கொள்கிறோம் என்னும் எண்ணம் அவளுக்கு எக்களிப்பை ஊட்டியது; அவளுடைய நடத்தையில் காணப்பட்ட அதிகப்படி குதூகலத்தைத் தேர்தல் தினம் நெருங்கியதால் ஏற்பட்டது என்று மற்றவர்கள் எண்ணினார்கள். ஆனால் யாரேனும் கூர்ந்து கவனித்திருக்கும் பட்சத்தில் லலிதா வெளிக்கு எவ்வளவு குதூகலத்தைக் காட்டினாலும் அவளுடைய மனதில் ஏதோ ஒரு வேதனை அரித்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்திருப்பார்கள். அதோடு சீதாவின் விஷயத்தில் அவள் நடந்து கொண்டதிலும் ஒரு மாறுதல் இருப்பதைக் கண்டிருப்பார்கள். இந்த நிலைமையில் சேர்மன் தேர்தல் நாளும் வந்தது, தேர்தலும் நடந்தது. பட்டாபிராமன் மகத்தான வெற்றியை அடைந்தான். அது காரணமாக மறுதடவை தேவபட்டணம் அல்லோலகல்லோலப்பட்டது. பொதுஜன வெற்றிக் கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்த பிறகு முக்கியமான நண்பர்கள் பட்டாபியின் வீட்டுக்கு வந்து வெகு நேரம் இருந்து பசிக்கொண்டிருந்து விட்டுப் போனார்கள். இன்றைக்கும் ஸ்ரீ மதி சீதாதேவி வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதைப்பற்றி ஒரு நண்பர் பிரஸ்தாபித்தபோது இன்னொருவர் அவர் தோளைத் தொட்டுத் தன்னுடைய மூக்கின் பேரில் விரலை வைத்து எச்சரித்தார். “நீச மனிதர்களின் அவதூறுகளையெல்லாம் நாம் பொருட்படுத்தக் கூடாது. பொருட்படுத்தினால் அந்த நீசர்களுக்குத் தான் கௌரவம் கொடுத்த தாக முடியும். இந்த விஷயத்தை வீட்டுப் பெண்களுக்கும் சொல்லி வைக்க வேண்டும்!” என்று மற்றொரு நண்பர் கூறினார். இதெல்லாம் பட்டாபிராமனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. எதைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்று பட்டாபிராமன் கேட்டதற்கு, “அந்த ‘அல்கா’ விஷயங்கள் இந்தச் சந்தோஷ சமயத்தில் என்னத்திற்கு?” என்று இன்னொருவர் சொல்லி முடித்து விட்டார். சிறிது நேரத்திற்கெல்லாம் பட்டாபிராமனைத் தனியே விட்டு விட்டுச் சிநேகிதர்கள் போய்ச் சேர்ந்தார்கள். நண்பர்கள் இருக்கும்போதே பட்டாபிராமனின் எண்ணம் அடிக்கடி லலிதா - சீதாவின் பேரில் சென்றுகொண்டிருந்தது. இரண்டு பேருக்கும் இன்றைக்கு என்ன வந்துவிட்டது என்று ஆச்சரியப்பட்டான். நண்பர்கள் போன பிறகு, “லலிதா! லலிதா!” என்று கூப்பிட்டான். அதற்குப் பிறகு லலிதா “சாப்பிடப் போகலாமா!” என்று கேட்டுக் கொண்டே அறைக்குள் வந்தாள். அவசரமாகக் கண்ணைத் துடைத்துக்கொண்டு வந்தவளின் முகம்போல அவள் முகம் காணப்பட்டது. “இது என்ன? முகம் ஏன் அழுது வடிகிறது? நான் ஜயித்து விட்டேனே என்று ஒரு குரல், அழுதாயா, என்ன!” என்று பட்டாபிராமன் காரமாகக் கேட்டான். “நான் ஒன்றும் அழவில்லை; என் முகத்தைப் பார்த்தால் உங்களுக்கும் ஒருவேளை அழுது வடிகிறாப் போலத்தான் இருக்கும்!” என்று லலிதாவும் குரோதமாகப் பதில் சொன்னாள். “உங்கள் எல்லோருக்கும் இன்றைக்கு என்ன வந்து விட்டது?” என்று பட்டாபிராமன் கேட்டான். “உங்கள் எல்லோருக்கும் என்று யாரைச் சொல்கிறீர்கள்? என் ஒருத்தி விஷயந்தான் எனக்குத் தெரியும்!” என்றாள் லலிதா. “யாரைப் பற்றிக் கேட்கிறேன் என்று உனக்குத் தெரியவில்லையா? உன் அருமைத் தோழி இல்லை. ஒரு வேளை உங்கள்….” “யாருடைய தோழியாயிருந்தாலும் இருக்கட்டும். அவளுக்கு என்ன வந்துவிட்டது? அன்றைக்கு நான் ஜயத்துடன் வந்தபோதும் மச்சிற்குப் போய்க் குப்புறப் படுத்துக்கொண்டிருந்தாள். இன்றைக்கும் அப்படியே செய்கிறாளே?” என்றான் பட்டாபிராமன். “அவள் சமாசாரம் எனக்குத் தெரியாது. நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டியதுதான்.” “உனக்கும் இன்றைக்கும் உடம்பு சரியில்லை போலிருக்கிறது. ஒருவேளை உன் அம்மாவுக்கு ஏதாவது தெரியுமா என்று கேள். இன்றைக்கு ஏதாவது பலமாக மண்டகப்படி செய்தாளோ, என்னமோ?” “என் அம்மாவின் தலையை எதற்காக உருட்டுகிறீர்கள்? அவள் ஒருவரையும் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. நாளைக்கே அவளை ஊருக்குப் போய்விடச் சொல்கிறேன். நானும் வேணுமானாலும் போய் விடுகிறேன். எந்த நாய் இந்த வீட்டில் இருக்க வேண்டுமோ இருக்கட்டும்.” பட்டாபிராமன் லலிதாவை எரித்து விடுகிறவனைப்போல் பார்த்தான். அடுத்த நிமிஷம், ‘இந்த அசட்டுச் சண்டையை வளர்த்துவதில் பிரயோஜனமில்லை’ என்று தீர்மானித்தவனாய்ச் சமையலறையை நோக்கி நடந்தான். சில நாளாக அவனுடைய மனதில் ஒரு சந்தேகம் தோன்றிக் கொண்டிருந்தது. தன் மாமியார் சீதாவைப்பற்றி அடிக்கடி நிந்தனை பேசி நிஷ்டூரம் சொல்கிறாள் என்றும் அதற்கு லலிதாவும் இடங்கொடுத்து வருகிறாள் என்றும் ஐயங்கொள்ள ஏதுக்கள் இருந்தன. அந்தச் சந்தேகம் இப்போது உறுதிப்பட்டது நேற்று வரையில் நல்ல உற்சாகத்துட னிருந்தவள் இன்றைக்கு மச்சிலிருந்து கீழே இறங்காமல் இருக்கும் காரணம் என்ன? சீதாவின் காது கேட்கத் தன் மாமியார் ஏதோ நிந்தைமொழி சொல்லியிருக்க வேண்டும். அதைக் குறித்துச் சீதா லலிதாவைக் கேட்டிருக்கலாம். லலிதா தன் தாயாருக்குப் பரிந்து பேசியிருக்கலாம். சீதா மனம் நொந்து போயிருக்கிறாள். வேறு காரணம் ஒன்றும் இருப்பதற்கில்லை. உண்மை அப்படியிருப்பதினாலேதான் லலிதாகூட இன்றைக்குச் சீதாவைப் பற்றிக் கடுமொழி பேசுகிறாள். ஐயோ! பாவம்! அநாதை சீதா இவர்களுடைய வாயில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறாள்.மாமியார் ஒரு ராட்சஸி என்பதில் சந்தேகம் இல்லை. தன்னிடம் அவள் பயபக்தியுடன் இருப்பதாக நடிப்பதெல்லாம் வெறும் பாசாங்கு.ராட்சஸியின் பெண்ணிடம் ராட்சஸ குணம் இல்லாமற் போகுமோ? தாடகையும் சூர்ப்பனகையும் போன்ற இரண்டு ராட்சஸிகளிடம் அகப்பட்டுக் கொண்டு பேதை சீதா தவிக்கிறாள்! அடாடா! அவளுடைய தலை விதியை என்னவென்று சொல்வது? அங்கே தாலி கட்டிய புருஷன்தான் பரம முட்டாளாயிருக்கிறான். பெண்டாட்டியைத் திண்டாட விட்டுவிட்டுக் கெட்டலைகிறான் என்றால், தஞ்சம் புக வந்த இடத்திலும் சீதாவுக்கு இந்தக் கதியா நேர வேண்டும்? அதிலும் அவளால் தனக்கு ஏற்பட்டிருக்கும் நன்மைகளையெல்லாம் உத்தேசிக்கும் போது, தன்னுடைய சொந்த வீட்டில் அவளுக்கு அவமதிப்பும் மனத்துயரமும் ஏற்படலாமா? கடவுளுக்கு அடுக்குமா? இப்படியெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டே பட்டாபிராமன் சாப்பிட்டு முடித்தான். லலிதாவுடன் ஒரு வார்த்தையும் பேசவில்லை. சாப்பிட்டானதும் படுக்கை அறைக்குள் சென்று கட்டிலின் மீது விரித்திருந்த படுக்கையில் படுத்துக்கொண்டான். சிறிது நேரத்துக்கெல்லாம் லலிதா வந்து சேர்ந்தாள். அவள் வந்ததையே கவனியாதிருந்தவன் போலிருந்தான் பட்டாபிராமன். ஐந்து நிமிஷம் சும்மா இருந்து பார்த்துவிட்டு, “ஏன்னா? என் பேரில் ஏதாவது கோபமா?” என்று லலிதா கேட்டாள். “கோபம் என்ன வந்தது, கோபம்!” என்றான் பட்டாபிராமன். “கோபம் இல்லாததற்கு அடையாளமா இப்படிவெடுக்கென்று பேசுகிறீர்கள்?” “முட்டாள்கள் நிறைந்த இந்த வீட்டில் வேறு எப்படிப் பேசுவது?” என்றான் பட்டாபிராமன். லலிதா சற்று நேரம் சும்மா இருந்துவிட்டு, “ஏன்னா? இன்று நடந்த சேர்மன் எலெக்ஷனில் உங்களுக்கு எவ்வளவு வோட்டு? எதிரிக்கு எவ்வளவு வோட்டு?” என்று கேட்டாள். “எவ்வளவு வோட்டாயிருந்தால் உனக்கு என்ன?” “எனக்கு ஒன்றும் இல்லையா?” பட்டாபிராமன் மௌனம் சாதித்தான். “உங்களுடைய ஜயத்தில் எனக்கு ஒன்றும் பாத்தியதை கிடையாதா? நிஜமாக என்னைப் பார்த்துச் சொல்லுங்கள்!” “பாத்தியதை உள்ளவளைப் போல் நீ நடந்து கொண்டாயா?” “என்ன விதத்தில் நடந்து கொள்ளவில்லை? சொல்லுங்களேன்!” “எனக்கு இன்றைக்குச் சேர்மன் பதவி கிடைத்தது. இனி மூன்று வருஷத்துக்கு இந்த ஊருக்கே நான் ராஜா மாதிரி. அவ்வளவு பெரிய வெற்றியுடன் நான் இன்று வீட்டுக்குத் திரும்பி வந்தேன். நீ எப்படி என்ன வரவேற்றாய்? அழுதுவடிய முகத்தைக் காட்டிக் கொண்டு நின்றாய்!” “என் முகத்தில் எப்போதும் இருக்கிற இலட்சணந்தானே இருக்கும்? புதிதாக எப்படி வந்துவிடும்?” “இலட்சணத்தைப் பற்றி இப்போது யார் என்ன சொன்னார்கள்? நீ சந்தோஷமாக என்னை வரவேற்றாயா என்று கேட்டேன்.” “நான் சந்தோஷமாகத்தானிருந்தேன். உங்களுக்கு அழுது வடிகிறது போலத் தோன்றியது. சீதா சந்தோஷமா வந்து வரவேற்கவில்லையே என்று உங்களுக்குக் கோபம். அந்தக் கோபத்தை என் பேரில் காட்டினீர்கள்.” “அப்படித்தான் வைத்துக்கொள்.” “அந்த நீலி மாடி அறையில் குப்புறப் படுத்துக்கொண்டு அடம்பிடித்தாள், அதற்கு நான் என்ன செய்வேன்?” “அவளை சாக்ஷாத் லக்ஷ்மி என்றும் சரஸ்வதி என்றும் நீதான் சொல்லிக் கொண்டிருந்தாய் இப்போது நீலியாகி விட்டாளா?” “நான் கபடமில்லாதவள்; அவளையும் என்னைப்போல் நல்லவள் என்று நம்பி ஏமாந்து போய் விட்டேன்.” “அவள் நல்லவள் இல்லை - கெட்டவள் என்று எப்போது தெரிந்தது?” லலிதா மௌனம் சாதித்தாள். “நேற்று வரையிலேகூட உற்சாகமாக இருந்தாளே? இன்றைக்குத் திடீரென்று அவளுக்கு என்ன வருத்தம் வந்து விட்டது?” என்று பட்டாபிராமன் மறுபடியும் கேட்டான். “எனக்கு என்னமாய்த் தெரியும்? என்னிடம் அவள் சொல்லவில்லை!” என்றாள் லலிதா. “நீயே யோசித்து உத்தேசமாகச் சொல்லேன் பார்க்கலாம்.” “அவளுக்கு புருஷன், குழந்தை, குடும்பம் உண்டு அல்லவா? அவர்களோடு போய்ச் சேர வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கும்.” “அவள் போவதை யார் வேண்டாம் என்றார்கள்?” “வேண்டாம் என்று சொல்லாதிருந்தால் போதுமா? புறப்பட்டுப் போவதற்கு ஏதாவது செய்து கொடுத்தால்தானே போவாள்? அதைத்தான் அம்மாவும் சொல்கிறாள்!” பட்டாபிராமன் மௌன சிந்தனையில் ஆழ்ந்தான். ஆஹா! நாம் சந்தேகித்தது சரிதான், மாமியாரின் வேலைதான் இது! பெண்ணின் மனத்தையும் கெடுத்து இருக்கிறாள். இரண்டு பேரும் சீதாவை ஏதோ சொல்லியிருக்கிறார்கள்! இந்தப் பரிதாபத்துக்கு என்ன பரிகாரம்? கணவனால் கைவிடப்பட்ட அந்த அநாதைக்கு என்ன கதி? “ஏன்னா? ‘யமதூதன்’ என்கிற பத்திரிகையை நீங்கள் பார்த்தீர்களா?” என்று லலிதா கேட்டதும் பட்டாபிராமன் திடுக்கிட்டான். தன்னை வீட்டுக்கு கொண்டுவிட வந்திருந்த நண்பர்கள் ஏதோ ஜாடைமாடையாகச் சொன்னது ஞாபகம் வந்தது, ஓகோ! அப்படியா சமாசாரம்? அந்தக் குப்பைப் பத்திரிகையில் ஏதோ எழுதியிருக்கிறதாக்கும்! அதை மெனக்கட்டு யாரோ வந்து லலிதாவிடம் சொல்லி அவளுடைய மனதைக் கெடுத்திருக்கிறார்கள்! “நான் கேட்டதற்கு நீங்கள் பதில் ஒன்றும் சொல்லவில்லையே?” என்று லலிதா தூண்டினாள். “அந்தக் கந்தலை நான் படிக்கவில்லை; படிக்கப் போவதுமில்லை.” “நீங்கள் படிக்காவிட்டால் ஊரெல்லாம் படிக்கிறார்கள். பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் அஸ்தமித்துப் போய்விடுமா?” “ஏது, பேச்சு ரொம்ப பலமாயிருக்கிறதே! நீ இருக்கிற வரையில் உலகம் அஸ்தமிக்காது!” “உங்களுக்கு என்னைக் கேலி செய்யத்தான் தெரியும்.”“ஊரெல்லாம் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறதது” “ஊரெல்லாம் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறதா? எதற்காக?” “‘யமதூதன்’ பத்திரிகையில் எழுதியிருப்பதைப் பற்றித்தான். அண்டை வீட்டு அம்மாமி, எதிர்வீட்டு அம்மாமி எல்லாரும் என்னிடம் வந்து சொல்லிவிட்டுப் போனார்கள். ஊரெல்லாம் தெரிந்துதானிருக்கிறது. உங்களுக்கு மட்டுந்தான் தெரியாது.” “அப்படியா சமாசாரம்? ‘யமதூதன்’ பத்திரிகையில் அப்படி என்னதான் எழுதியிருக்கிறதாம்? உனக்குத் தெரியுமா விஷயம்?” “எல்லாம் தெரியும்.” “அப்படியானால் சொல்லேன்.” “வாயினால் சொல்லவே முடியாது, அவ்வளவு அசிங்கமான விஷயம். அவரவர்களே படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.” பட்டாபியின் மனதில் ஒரு சந்தேகம் உதித்தது. “அந்தப் பத்திரிகை உன்னிடம் இருக்கிறதா?” என்று கேட்டான். “இருக்கிறது” என்றாள் லலிதா. பட்டாபிராமனுக்கு அளவில்லா கோபம் வந்தது. காரியார்த்தமாகக் கோபத்தை அடக்கிக் கொண்டு, “எங்கே? அதைப் போய் எடுத்து வா, பார்க்கலாம்?” என்றான். “இங்கேதான் இருக்கிறது!” என்று சொல்லி விட்டு லலிதா மின்சார விளக்கை ஏற்றிப் பெட்டியைத் திறந்து அந்தப் பத்திரிகைத் துண்டை எடுத்துக் கொடுத்தாள். பட்டாபிராமன் எழுந்து நின்ற வண்ணம் அதைப் படித்தான். படிக்கும்போது அவனுடைய ரத்தம் கொதித்தது என்றால் அது மிகையாகாது. அந்தக் கந்தல் பத்திரிகையில் அச்சாகியிருந்த ஆபாசக் கட்டுரையில் முதற் பகுதியில் பட்டாபிராமனும் சீதாவும் கள்ளக் காதல் செய்வதாகவும் லலிதா சுத்த முழு மூடம் என்றும் கண்டிருந்தது. பிற்பகுதியில் சூர்யாவுக்கும் சீதாவுக்கும் ஏற்கெனவே இருந்த நேசத்தைப் பற்றியும், சூரியா சீதாவுக்காக அவளுடைய கணவனிடம் தூது சென்றது பற்றியும் சௌந்தரராகவன் தூதனைச் செம்மையாக உதைத்து அனுப்பி விட்டது பற்றியும் எழுதியிருந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு எல்லாவற்றையும் படித்து முடித்த பிறகு, “நெருப்புப் பெட்டி இருக்கிறதா?” என்று பட்டாபிராமன் கேட்டான். “எதற்கு?” என்றாள் லலிதா. “கொடு, சொல்கிறேன்!” லலிதா எடுத்துக் கொடுத்தாள். நெருப்புக் குச்சியைக் கிழித்து அந்தப் பத்திரிகைத் துண்டைப் பட்டாபிராமன் கொளுத்தப் போனான். “ஐயையோ! அதைக் கொளுத்தாதீர்கள்!” “ஏன்?” “அதில் பாதிதான் படித்திருக்கிறேன். பாக்கிப் பாதி படிக்க வேண்டும்” என்றாள் லலிதா. “அது வேறேயா?” என்று சொல்லிக்கொண்டே பட்டாபி அதைக் கொளுத்திச் சாம்பலாக்கினான். “அது என்ன அவ்வளவு அவசரம்? நான் சொன்னது உங்களுக்கு இலட்சியமில்லையா! குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது சரியாயிருக்கிறதே!” பட்டாபிராமன் லலிதாவிடம் நெருங்கி வந்து பளீர் என்று அவளுடைய கன்னத்தில் ஒரு அறை கொடுத்தான். “இந்தக் குப்பையையெல்லாம் வாங்கவும் கூடாது; படிக்கவும் கூடாது என்று நான் சொல்லவில்லையா? என்னமாய்த் துணிந்து வாங்கினாய்?” என்றான். லலிதா திக்பிரமையிலிருந்து விடுபட்டுத் தேம்பிக் கொண்டே, “நான் ஒன்றும் வாங்கவில்லை; தபாலில் வந்தது” என்றாள். “தபாலில் அனுப்பியது யார்?” “யாரோ தெரியாது.” “இந்த மாதிரி ஒன்று தபாலில் வந்ததும் ஏன் என்னிடம் சொல்லவில்லை? பெட்டிக்குள்ளே வைத்து எதற்காகப் பூட்டினாய்? இது பொக்கிஷமா வைத்துப் பாதுகாப்பதற்கு?” “அப்புறம் சாவகாசமாகச் சொல்லலாம் என்று இருந்தேன்.” “அப்புறமாவது, சொல்லவாவது? தரித்திரம் பிடித்த மூதேவி நீ! உன் மனது அசிங்கத்துக்கு ஆசைப்படுகிறது. ஆகையினாலேதான் இதைப் பெட்டியில் வைத்துப் பூட்டினாய்”, லலிதா மௌனமாயிருந்தாள். விளக்கை அணைத்துவிட்டு வந்து பட்டாபிராமன் மறுபடியும் படுத்துக் கொண்டான். லலிதா, “நான் செய்தது பிசகுதான்; தயவு செய்து மன்னித்து விடுங்கள்!” என்று சொன்னாள். “ரொம்ப சரி, இனிமேல் இப்படி எனக்குத் தெரியாமல் ஒரு காரியமும் செய்யாதே. இப்போது பேசாமல் படுத்துக் கொண்டு தூங்கு” என்றான் பட்டாபி. அவ்வாறே லலிதா படுத்துக்கொண்டாள், ஆனால் தூக்கம் வரவில்லை. தேம்பலும் அழுகையும் வந்தது, கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள். கொஞ்ச நேரம் கழித்து, “ஏன்னா! சேர்மன் வேலை என்றால் தினம் ஆபீஸுக்குப் போக வேண்டியிருக்குமோ?” என்று கேட்டாள். “ஆமாம், ஆமாம். ‘எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்’ என்று நீ எதிர்வீட்டு அம்மாமி, பக்கத்து வீட்டு அம்மாமி எல்லாரிடமும் பெருமையடித்துக் கொள்ளலாம்.” “அதற்காக ஒன்றும் நான் கேட்கவில்லை. தினந்தினம் அப்படி என்ன வேலை இருக்கும் என்று தெரிந்து கொள்ளக் கேட்டேன்.” “தூக்கம் வருகிறது; என்னைத் தொந்தரவு செய்யாதே! எல்லாம் நாளைக்குச் சொல்கிறேன்.” தூங்குவதற்கு லலிதா மனப்பூர்வமான முயற்சி செய்தாள் எனினும் தூக்கம் வரவில்லை. ஆகவே பட்டாபியின் தூக்கத்தைக் கெடுக்காதிருக்கும் பொருட்டுத் தூங்குவது போலப் பாசாங்கு செய்தாள். மணி பதினொன்று அடித்தது. கடிகாரத்தின் நிமிஷ முள் முழு வட்டத்தையும் ஒரு சுற்று சுற்றி வந்தது. மணி பன்னிரெண்டு அடித்தது, எங்கிருந்தோ ஒரு விம்மல் சத்தம் கேட்டது. நெஞ்சைப் பிளக்கும்படியான சோகமும் வேதனையும் நிறைந்த விம்மல் சத்தம் அது. தூக்கமின்றிச் சிந்தனையில் ஆழ்ந்திருந்த பட்டாபிராமன் காதில் அது விழுந்து திடுக்கிடச் செய்தது. மறுபடியும் அந்த விம்மல் சத்தம். மேல் மாடியிலிருந்துதான் அந்த விம்மல் வருகிறது; சீதாதான் விம்முகிறாள்; சந்தேகம் இல்லை. தன்னுடைய உள்ளத்தை இந்த உலகத்தில் உண்மையாக உணர்ந்தவள் சீதாதேவி ஒருத்திதான். தன்னுடைய ஆசாபாசங்களில் பூரண அநுதாபம் உள்ளவள் அவள். தனக்கு வாழ்க்கையில் புதிய உற்சாகம் ஊட்டியவள் அவள்.தன் வாழ்க்கைக்கே ஓர் ஆதர்சத்தை அளித்தவள் அவள். அத்தகைய சீதா தன்னந்தனியாகப் படுத்துக் கொண்டு விம்மி அழுகிறாள். நெஞ்சு உடையும்படியான வேதனையினால் துடிக்கிறாள். நள்ளிரவு ஆகியும் தூங்காமல் தவிக்கிறாள். அவளுக்கு என்ன துயரமோ, என்னமோ? தன் மாமியாரும் மனைவியும் கூறிய நிந்தை மொழிகள்தான் அவளை இப்படி வதைக்கின்றனவோ? அல்லது வேறு ஏதேனும் துயரச் செய்தி கிடைத்திருக்கிறதோ? ஆகா! இந்தச் சந்தர்ப்பத்தில் அவளுக்கு ஆறுதல் கூறாவிட்டால் தான் உயிரோடிருந்து என்ன பயன்? அவள் தனக்குச் செய்திருக்கும் உதவிகளுக்கெல்லாம் வேறு எந்த விதத்தில் நன்றி செலுத்தப் போகிறோம்? லலிதாவை எழுப்பி அழைத்துக் கொண்டு போகலாமா? கூடவே கூடாது! அவள் சீதாவை விரோதிக்கத் தொடங்கி பயனில்லை. அவளை அழைத்துக் கொண்டு போவதில் பயனில்லை. ஒருவேளை அவளாலேயேதான் இந்தத் துக்கம் சீதாவுக்கு நேர்ந்திருக்கிறதோ, என்னமோ? பட்டாபிராமன் சத்தம் போடாமல் எழுந்து கட்டிலிலிருந்து இறங்கினான். அறையின் கதவைச் சத்தமில்லாமல் திறந்து வெளியேறினான். சத்தமின்றி அடிமேல் அடி வைத்து மாடிப்படி மீது ஏறத் தொடங்கினான். தூங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்த லலிதா படுக்கையிலிருந்து எழுந்தாள். திறந்திருந்த கதவு வழியாக வெளி வந்து வாசற்படிக்கருகே நின்றாள். பட்டாபிராமன் மேலே ஏறுவதைப் பார்த்துக்கொண்டு திக்பிரமை பிடித்து நின்றாள். இரண்டு நிமிஷத்துக்கெல்லாம் லலிதாவின் தாயார் திடீரென்று லலிதாவின் பின்னால் வந்து நின்றாள். லலிதா திரும்பிப் பார்த்து இன்னார் என்று தெரிந்து கொண்டாள். சரஸ்வதியம்மாள் இரகசியம் பேசுகிற குரலில், “பார்த்தாயாடி, பெண்ணே! பாம்புக்குப் பாலை வார்த்தாலும் அது விஷத்தைத்தான் கக்கும் என்று நான் முட்டிக் கொள்ளவில்லையா? அந்தச் சண்டாளி என்ன செய்து விட்டாள் பார்த்தாயா? உன் குடியைக் கெடுத்து விட்டாளே!” என்று தூபம் போட்டாள். “லலிதா, ‘உஷ்!’ என்று வாயில் விரலை வைத்துச் சரஸ்வதி அம்மாளை அடக்கினாள். பட்டாபி மச்சுப்படி ஏறும் சத்தம் நின்றது. அறையின் கதவைத் திறக்கும் ‘கிறீச்’ சத்தம் கேட்டது. மின்சார விளக்குப் போடும் ‘கிளிக்’ சத்தம் கேட்டது. பின்னர் கதவைச் சாத்தும் சத்தமும் கேட்டது.”போடி, பெண்ணே, போ!" என்று சரஸ்வதி அம்மாள் தூண்டினாள். ஆனால் லலிதாவுக்கு அச்சமயம் தூண்டுதல் அவசியமாயிருக்கவில்லை. ஆவேசம் வந்தவளைப் போல் மச்சுப்படிகளில் வேகமாக ஏறிப் போனாள். மேல்மாடித் தாழ்வாரத்தின் வழியாகச் சென்று சீதாவின் அறைக் கதவை இலேசாகத் திறந்தாள். உள்ளே பார்த்த காட்சி அவள் ஒருவாறு எதிர்பார்த்ததே. ஆனாலும் அவளை ஒரு நிமிஷம் ஸ்தம்பித்து நிற்கும்படி செய்து விட்டது. பட்டாபிராமன் சீதாவின் முகவாய்க் கட்டையைத் தன் கையினால் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தான். சீதாவின் கண்களில் ததும்பிய கண்ணீர்த் துளிகள் மின்சார விளக்கின் மங்கலான ஒளியில் நல்முத்துக்களைப் போல் பிரகாசிக்கின்றன. லலிதா தன் வாழ்நாளில் என்றும் அநுபவித்திரா ரௌத்ராகாரத்தை அடைந்தாள். இருபதாம் அத்தியாயம் - அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சி பொதுக் கூட்டத்தில் சீதாவைப் பற்றி அவதூறாக எழுதிய துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டதல்லவா? அதனால் மனம் நொந்து போன சீதாவுக்கு மற்றொரு அதிர்ச்சி அடுத்து ஏற்பட்டது. அது சூரியாவிடமிருந்து வந்த கடிதந்தான். அந்தக் கடிதத்தில், “சென்னைக்கு நான் போய்ச் சேர்ந்த அன்றைக்கே எதிர்பாராத விதமாகச் சௌந்தரராகவனும் சீமையிலிருந்து திரும்பி வந்துவிட்டார்!” என்று சூரியா எழுதியிருந்ததைப் படித்ததும் சீதாவுக்கு ஓர் அதிர்ச்சி ஏற்பட்டது. அது வியப்புடன் மகிழ்ச்சியும் கலந்த அதிர்ச்சி. அந்த வாக்கியத்தைப் படித்தவுடன் சீதாவுக்குத் தன்னுடைய துன்பங்களெல்லாம் தீர்ந்து விட்டதாகத் தோன்றியது. உடனே பறந்துபோய்ச் சௌந்தரராகவனை அடைந்துவிட வேண்டும் என்னும் அளவிலா ஆவல் உண்டாயிற்று. ஆனால் மேலே சூரியா எழுதியிருந்ததைப் படித்ததும் ஏமாற்றமும் துயரமும் கலந்த அதிர்ச்சி ஏற்பட்டது. சூரியா தனக்கு நேர்ந்த அனுபவங்களைச் சுருக்கமாகச் சொல்லி விட்டுக் கடிதத்தைப் பின்வருமாறு முடித்திருந்தான்:- “அத்தங்கா! உன் கணவர் திரும்பி வந்ததும் உன்னை அவரிடம் சேர்த்து வைக்க வேண்டும் என்று எவ்வளவோ ஆசை கொண்டிருந்தேன். உங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் தப்பபிப்பிராயங்களையெல்லாம் என்னுடைய சாமர்த்தியமான பேச்சினால் போக்கிவிடலாம் என்று எண்ணியிருந்தேன். இனிமேல் உங்களுக்கு என்றைக்கும் சச்சரவு ஏற்படாதபடி சிநேகம் செய்து வைக்க வேண்டும் என்று ஆவலாயிருந்தேன். அதெல்லாம் வெறும் பகற்கனவாக முடிந்தது.”பல காரணங்களினால் எனக்குத் தற்சமயம் ஊருக்குத் திரும்பி வர கஷ்டம் இல்லை. இங்கிருந்து டில்லிக்குப் பிரயாணமாகிறேன். அங்கிருந்து மறுபடியும் கடிதம் எழுதுகிறேன். “ஒருவேளை கல்கத்தா போன பிறகு உன்னுடைய கணவரின் மனம் மாறி உனக்கு ஏதாவது கடிதம் எழுதினால் உடனே எனக்குத் தெரியப்படுத்தக் கோருகிறேன். என்னுடைய டில்லி விலாசந்தான் உனக்குத் தெரியுமே?”கடைசியாக ஒரு விஷயம், நான் சொல்லப்போவது உனக்குப் பிடிக்காவிட்டால் மன்னித்துவிடு. பட்டாபிராமன் தேர்தல் சேற்றில் இறங்கியதும் எனக்குப் பிடிக்கவில்லை. அவனுக்காக நீ தேர்தல் வேலை செய்வதையும் நான் விரும்பவில்லை. கூடியவரையில் நீ வெளியில் கிளம்புவதை நிறுத்திக் கொள்வது நலம். உலகம் பொறாமை நிறைந்த பொல்லாத உலகம். தேவபட்டணமோ ரொம்பவும் சிற்றறிவு படைத்த மக்கள் நிறைந்தது. இதற்குமேல் நான் சொல்ல வேண்டியதில்லை." இதைப் படித்து முடித்ததும் சீதாவுக்கு வந்த துயரத்தையும் ஆத்திரத்தையும் சொல்ல முடியாது. உலகத்தின் பேரிலும் கடவுள் பேரிலும் கோபம் வந்தது. அதைக் காட்டிலும் தான் பெற்ற பெண்ணாகிய வஸந்தி கண்மணியின் பேரிலும் கோபம் வந்தது. அம்மா வேண்டியதில்லையென்று எண்ணித்தானே வஸந்தி அப்பாவுடன் கல்கத்தா போய்விட்டாள்? அவள் இனிமேல் எனக்குப் பெண் இல்லை என்று கூறும் வரைக்கும் சீதாவின் கோபம் வரம்பு மீறிப் பொங்கியது. இந்தச் சூரியா எனக்கும் அவருக்கும் நடுவில் மத்தியஸ்தம் செய்து வைக்கப் பார்த்தானாம்! இவன் யார் மத்தியஸ்தம் செய்வதற்கு? அவருக்கு மனைவி வேண்டும் என்ற எண்ணம் இல்லாவிட்டால் எனக்குப் புருஷன் வேண்டியதில்லை! அவ்வளவு அகங்காரமும் வைஷம்யமும் உள்ள புருஷனிடம் போய்ச் சேர்ந்து தான் என்ன பிரயோஜனம்? எவ்வளவு நாளைக்கு ஒத்து வாழ முடியும்? இத்தனை நாள் பிரிந்திருந்ததினால் அவருடைய உள்ளத்தில் எந்தவித மாறுதலும் ஏற்படவில்லை என்றே தோன்றுகிறது. நான் மட்டும் எதற்காகப் போய் அவர் காலில் விழுந்து சரணாகதி அடையவேண்டும்? வேண்டவே வேண்டாம். இந்தச் சூரியாவின் புத்தியைப் பார்! நான் தேர்தல் வேலையில் தலையிடுவது இவனுக்குப் பிடிக்கவில்லையாம்! எதற்காக இவனுக்குப் பிடிக்கவேண்டும்? அந்தத் தாரிணி என்ன செய்தாலும் சூரியாவுக்குப் பிடிக்கும்! அவள் ஆண் பிள்ளைகளைப் போல் வேஷ்டி கட்டிக் கொண்டு ஊரைச் சுற்றி வந்தாலும், ‘அடாடா! என்ன தைரியம்!’ என்பான். நான் எது செய்தாலும் அவனுக்குப் பிடிக்காது. எதற்காகப் பிடிக்க வேண்டும்? இவனுக்குப் பிடிக்கிற காரியத்தைச் செய்யத்தானா நான் பெண்ணாகப் பிறந்திருக்கிறேன்? நான் மேடையில் ஏறி நாலு வார்த்தை பேசினாலும் அதற்காகச் சந்தோஷப்பட்டு மெச்சுகிறவர்கள் இல்லாமற் போகவில்லை! அவர்களுடைய அன்பும் அபிமானமும் எனக்குப் போதும்!….இத்தகைய மனோபாவத்துடனேயே சீதா தனக்கு நேர்ந்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் சகித்துக் கொண்டு மறுபடியும் வெளிப்படையாகக் குதூகலமாயிருக்கத் தொடங்கினாள். பட்டாபிராமனுடன் பார்ட்டிகளுக்கும் கூட்டங்களுக்கும் போகலானாள். சூரியாவினிடமிருந்து வந்த கடிதத்தை அவள் யாரிடமும் காட்டவில்லை. ஆயினும் சூரியா தன் குழந்தையை அழைத்து வராததின் காரணத்தை மட்டும் சொல்வது அவசியமாயிற்று. சௌந்தரராகவன் சீமையிலிருந்து திரும்பி வந்து வஸந்தியை அழைத்துக் கொண்டு கல்கத்தா போய்விட்டதாகவும் அதனாலே தான் சூரியா குழந்தையை அழைத்துக்கொண்டு வரவில்லையென்று லலிதாவிடம் கூறினாள். லலிதா மற்றதையெல்லாம் ஒருவாறு ஊகித்துக் கொண்டு முன்னைக் காட்டிலும் சீதாவை அதிக அபிமானத்துடன் நடத்தி வந்தாள். ஆனால் லலிதாவின் தாயாருக்கு விஷயம் தெரிந்த போது அவளுடைய வாய் சும்மா இருக்கவில்லை. பட்டாபிராமனும் லலிதாவும் போட்ட வாய்ப்பூட்டு உத்தரவு சரஸ்வதி அம்மாளிடம் செல்லவில்லை. எது எப்படியிருந்தாலும் பெண்ணாய்ப் பிறந்தவர்கள் புருஷனோடு போய் இருக்க வேண்டிய அவசியத்தைப்பற்றி ஜாடைமாடையாகப் பேசிக் கொண்டிருந்தாள். அது சீதாவுக்குப் தெரிந்தபோது அவளுக்கு லலிதாவின் பேரில் கோபம் வந்தது. தன்னை அவமானப்படுத்துவதற்காகவே லலிதா தன் தாயாரை அழைத்துக் கொண்டு வந்து வீட்டில் வைத்திருப்பதாக நினைத்தாள். மாமி என்ன வேண்டுமானாலும் உளறட்டும்; லலிதா என்ன வேணுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும். பட்டாபிராமன் தன்னை இந்த வீட்டின் ராணியாக மதித்து மரியாதை செய்து கொண்டிருக்கிறான். அப்படியிருக்கும்போது தான் யாருக்கு பயப்பட வேண்டும்? இப்படிச் சீதாவின் உள்ளத்தில் சண்டமாருதம் சுழன்று சுழன்று அடித்து அவளை அப்படியும் இப்படியும் ஆட்டி வைத்துக் கொண்டிருக்க, நாட்கள் சென்று கொண்டிருந்தன. சேர்மன் தேர்தல் தினம் நெருங்கி வந்தபோது ஒன்றன் பின் ஒன்றாகச் சீதாவுக்குப் பல அதிர்ச்சிகள் ஏற்பட்டு அவளைக் கதிகலங்கச் செய்தன. டில்லியிலிருந்து கடிதம் வந்தது, சூரியா எழுதியிருந்தான். "தாரிணியிடம் கலந்து ஆலோசித்தேன், உனக்கும் உன் புருஷனுக்கும் மத்தியில் மற்றவர்கள் தலையிடுவதால் தீமைதான் விளையும் என்று தாரிணி அபிப்பிராயப்படுகிறாள். நீயே கல்கத்தாவுக்குச் சென்று அவரிடம் மனம் விட்டுப் பேசி விடுவது தான் நல்லது என்று கருதுகிறாள். அத்தங்கா! முன்னொரு சமயம் நீ இப்படிச் செய்வதென்று தீர்மானித்திருந்தாய். உன் கணவரிடம் போய், ‘போனதெல்லாம் போகட்டும்; இனிப் புதிய வாழ்க்கை தொடங்குவோம்’ என்று சொல்லிக் கொள்ள எண்ணியிருந்தாய். யாரும் எதிர்பாராத காரணத்தினால் அது தடைபட்டு விட்டது. அந்தத் தீர்மானத்தை இப்போது ஏன் நிறைவேற்றக் கூடாது? நீ உடனே கல்கத்தாவுக்குப் புறப்பட்டுப் போவதுதான் நல்லது என்று எனக்கும் தோன்றுகின்றது. இங்கே புது டில்லியில் மாஜி திவானுடைய குமாரிகள் இருவர்கள் இருந்தார்களே, ஞாபகம் இருக்கிறதா? அவர்கள் கல்கத்தாவுக்குப் போயிருப்பதாக அறிகிறேன். இதனால் என்னுடைய கவலை அதிகமாயிருக்கிறது. இந்த நிலைமையில் நீ கல்கத்தாவுக்கு உடனே புறப்படுவது நல்லதல்லவா?" இதைப் படித்ததும் எரிகிற தீயில் எண்ணெய் விட்டது போலாயிற்று சீதாவுக்கு. “அப்படியா சமாசாரம்? அவர் ‘வா’ என்றுகூட அழைக்காமல் நானாகப் போய் அவர் காலில் விழ வேண்டுமா? முடியவே முடியாது! அவர் எந்தப் பேய் பிசாசை வேண்டுமானாலும் கட்டிக் கொண்டு அழட்டும்! எனக்கு என்ன வந்தது? நான் மேடை மீதேறினால் கண் கொட்டாமல் என்னைப் பார்த்து நான் சொல்லும் வார்தையைப் பயபக்தியுடன் கேட்பதற்கு ஆயிரம் பதினாயிரம் பேர் காத்திருக்கிறார்கள். புது டில்லியில் ஒன்றும் அறியாத பெண்ணாயிருந்த பழைய சீதா அல்ல நான்! ஒருவர் காலிலும் போய் விழுந்து கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை எனக்கு!”….. சேர்மன் தேர்தல் நடந்த தினத்தன்று சீதாவுக்கு இரு கடிதங்கள் வந்தன. அவற்றில் ஒன்று கல்கத்தாவிலிருந்து வந்திருந்தது. பின்வருமாறு சித்ரா எழுதியிருந்தாள்:- "என் அருமை சிநேகிதியே! உன்னை எவ்வளவோ புத்திசாலி என்று நான் நினைத்திருந்தேனே! இது என்ன பைத்தியக்காரத்தனம்! உன் கணவர் இங்கே எங்களுக்கு எதிர் வீட்டு மச்சிலேதான் இருக்கிறார். காலையிலும் மாலையிலும் அவர் ஜன்னல் ஓரமாக வந்து உட்கார்ந்து பிரமை பிடித்தவர் போல் இருப்பதைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாயிருக்கிறது. என் கணவர் அவரைச் சிரமப்பட்டுச் சிநேகம் செய்து கொண்டிருக்கிறார். இரண்டொரு நாள் நானும் இவருடன் போய் உன் குழந்தையைப் பார்த்துவிட்டு வந்தேன். என்ன அதிசயமான குழந்தையடி அது? அப்படிப்பட்ட அருமைக் குழந்தையை நீ என்னமாக விட்டுப் பிரிந்திருக்கிறாய்? “ஒரு நாள் வஸந்தி எங்கள் வீட்டுக்கு வந்திருந்தாள். என் வாய் சும்மா இருக்கக்கூடாதா! ‘உன் அம்மா எப்போ வரப் போகிறாள்?’ என்று கேட்டு விட்டேன். ‘எங்க அம்மா வரவே மாட்டாள்’ என்றாள் குழந்தை. ‘ஏன்?’ என்றேன். ‘எங்க அம்மாவுக்கு அப்பாவைக் கண்டால் பிடிக்காது’ என்றாள். ‘உனக்கு யாரைப் பிடிக்கும்?’ என்று கேட்டேன். ‘எனக்கு அப்பாவையும் பிடிக்கும்; அம்மாவையும் பிடிக்கும்’ என்றாள். ‘அப்படியானால் நீ அப்பாவோடேயே இருக்கிறாயே? அம்மாவைப் பார்க்க ஆசையாக இல்லையா?’ என்றேன். ‘ஆசையாகத்தான் இருக்கிறது; அதற்கு என்ன செய்கிறது? எங்க அப்பா தனியாக இருக்கிறாரே? அவரை விட்டு விட்டு எப்படிப் போகிறது?’ என்றாள் சீதா! இந்தக் குழந்தையைப் பெற்ற தாய் நீதானே? குழந்தைக்கு இருக்கும் ஈவிரக்கத்தில் பத்தில் ஒன்றாவது உனக்கு இராமற் போய்விடுமா?”இரண்டு நாளைக்கு முன்னால் உன் கணவர் உன்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை இவர் தெரிந்து கொண்டார். சில நாளாக இரண்டு அதி நாகரிகப் பெண்மணிகள் எதிர் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். வெகு நேரம் உன் கணவரிடம் பேசிவிட்டுப் போகிறார்கள். என் கணவருக்கு இது கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை. ஒரு நாள் ‘அந்தப் பெண்கள் யார்?’ என்று கேட்டாராம். ‘டில்லியில் எனக்குத் தெரிந்தவர்கள்!’ என்றாராம். ‘ரொம்ப நெருங்கிய சிநேகிதம் போலிருக்கிறது!’ என்று இவர் கேட்டாராம். ‘இன்னும் ரொம்ப நெருங்கிய சிநேகமாக வேணும் என்று பார்க்கிறார்கள். என்னைக் கலியாண வலையில் சிக்கவைக்கப் பிரயத்தனப்படுகிறார்கள்!’ என்றாராம். அவருடைய மனதை இன்னும் நன்றாய் அறிவதற்காக இவர், ‘நீங்களும் எத்தனை காலம் தனியாக வாழ்க்கை நடத்த முடியும்? இரண்டு பேரில் ஒருவரைக் கலியாணம் செய்து கொள்வது தானே?’ என்று கேட்டதற்கு உன் கணவர் என்ன பதில் சொன்னார், தெரியுமா? ‘தெய்வம் இருந்த கோயிலில் பிசாசைக் குடியேற்றச் சொல்கிறீர்களா?’ என்றாராம். “என் அருமை சிநேகிதியே! உன்னை உன் கணவர் ‘தெய்வம்’ என்று வாய் திறந்து சொல்லியிருக்கிறார். நீ எங்கேயோ போய் உட்கார்ந்திருக்கிறாய். இந்த வெட்கக்கேட்டை நான் என்னவென்று சொல்வது?”அதெல்லாம் போகட்டும் நேற்று முதல் வஸந்திக்குச் சுரம் அடிக்கிறதாம். குழந்தை தூக்கத்தில் ‘அம்மா வரமாட்டாள்’ என்று பிதற்றுகிறாளாம். உன் மனதில் கொஞ்சமாவது ஈரம் என்பது இருந்தால் உடனே புறப்பட்டு வந்து சேரு!" இந்தக் கடிதம் சீதாவைக் கலங்க வைத்து விட்டதில் ஆச்சரியம் இல்லையல்லவா? சித்ரா எழுதியிருப்பதெல்லாம் உண்மையாயிருக்குமா? அல்லது என்னை வரவழைப்பதற்காகக் கற்பனை செய்து எழுதியிருக்கிறாளா? அவர் தன்னைத் ‘தெய்வம்’ என்று குறிப்பிட்டது நிஜமா? அப்படியானால் ‘உடனே புறப்பட்டு வா!’ என்று ஒரு வரி ஏன் எழுதிப் போடக் கூடாது? குழந்தைக்குச் சுரம் என்பதும் பொய்தானோ, என்னமோ? ஒருவேளை உண்மையாக இருந்துவிட்டால்?…. கடவுளே! என் குழந்தையைக் காப்பாற்று! நான் செய்திருக்கும் பாவங்களுக் காக எனக்கு என்ன தண்டனை விதித்தாலும் ஏற்றுக் கொள்கிறேன். என் குழந்தைக்கு ஒன்றும் நேராமல் இருக்கட்டும். சித்ரா எழுதியிருப்பது உண்மையானாலும் கற்பனையானாலும் உடனே புறப்பட்டுப் போக வேண்டியது தான். இனிமேல் தாமதிக்கக் கூடாது, இன்றிரவே லலிதாவிடமும் பட்டாபிராமனிடமும் சொல்லிக் கொண்டு புறப்பட வேண்டியதுதான். இவ்விதம் எண்ணிக்கொண்டே சீதா தன் பெயருக்கு வந்திருந்த இன்னொரு உறையைப் பிரித்தாள். அதற்குள்ளே அச்சடித்த பத்திரிகைத் துண்டு ஒன்று இருந்தது. இரண்டு நாளைக்கு முன்பு லலிதாவுக்கு வந்த அதே பத்திரிகைத் துணுக்குத் தான். லலிதா மட்டும் அதைப் பார்த்து சீதா பாராமல் இருந்துவிடப் போகிறாளே என்ற கவலையினால் யாரோ ஒரு புண்ணியவான் கர்ம சிரத்தையாக அதைச் சீதாவுக்கும் அனுப்பி வைத்திருந்தான்! அந்தப் பத்திரிகைத் துணுக்கைப் படித்த போது சீதாவுக்கு கண்கள் இரண்டும் பற்றி எரிவது போலத் தோன்றியது. அவமானம் பொறுக்க முடியவில்லை. பூமி பிளந்து அதற்குள்ளே தான் போய்விடக் கூடாதா? அந்த மாதிரி பாக்கியம் ஜனக மகாராஜனுடைய புத்திரியாகிய சீதா தேவிக்குக் கிடைத்தது. மகாபாவியாகிய தனக்கு அந்தப் பாக்கியம் எங்கே கிடைக்கப் போகிறது? சொல்ல முடியாத, சகிக்க முடியாத அவமானத்தினால் சிறிது நேரம் பிரமை பிடித்திருந்த பிறகு கொஞ்சங் கொஞ்சமாகச் சீதாவுக்குச் சுய உணர்வு வந்து சிந்தனா சக்தி ஏற்பட்டது. இரண்டு நாளாக லலிதாவின் நடத்தையில் ஏற்பட்டிருந்த மாறுதலுக்கு இதுதான் காரணமோ? இந்த மாதிரி ஒரு விஷயம் வந்திருப்பதைப் படித்த பிறகும் லலிதா தன்னை இந்த வீட்டுக்குள் வைத்துக் கொண்டிருந்தாளா? அப்படியானால் அவள்தான் சீதை, சாவித்திரி, தமயந்தி எல்லாரும்! அவளுடைய முகத்தில் தான் இனி விழிக்க முடியாது. பட்டாபிராமனையும் ஏறெடுத்துப் பார்க்க முடியாது. அவர்களிடம் சொல்லிக் கொள்ளாமலே கிளம்பிட வேண்டியதுதான்; இரவில் எல்லாரும் படுத்துத் தூங்கியான பிறகு! தான் செய்ய வேண்டியதைப் பற்றிச் சீதாவுக்குச் ஏதாவது கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும், அன்றிரவு பத்து மணிக்கு மேல் கீழ்க்கட்டில் நடந்த ரகளையினால் அது தீர்ந்து போய்விட்டது. அது சின்ன வீடு, லலிதாவுக்கும் பட்டாபிராமனுக்கும் படுக்கையறையில் நடந்த சம்பாஷணையோ உரத்த சத்தத்தில் நடைபெற்றது. அதில் பாதிக்குமேல் சீதாவின் காதில் விழுந்து அவளை இந்த உலகத்திலேயே நரக வேதனைக்கு உள்ளாக்கியது. புருஷனும் மனைவியும் எப்போது தூங்கப் போகிறார்கள் என்று சீதா காத்திருந்தாள். பேச்சுக் குரல் அடங்கி ஒரு மணி நேரத்துக்குப் புறப்பட எண்ணினாள். அதுவரையில் படுக்கையிலே குப்புறப் படுத்துக்கொண்டு தான் பெண்ணாய் பிறந்தது முதல் நாளது வரையில் அநுபவித்த துன்பங்களையெல்லாம் ஒவ்வொன்றாய் நினைத்துப் பார்த்துக் கொண்டாள். உலகத்தில் எத்தனையோ பெண்கள் பிறந்து வாழ்கிறார்களே? அவர்களில் யாராவது தன்னைப் போலக் கஷ்டப்பட்டதுண்டா? தன்னை மட்டும் கடவுள் ஏன் இப்படிச் சோதனை செய்கிறார்? ஏதோ ஒரு தமிழ் சினிமாவில் கதாநாயகி ‘பேதையாய்ப் பிறந்த நாளாய்’ என்று பாடியிருப்பது சீதாவுக்கு நினைவு வந்தது. அந்தச் சோகக் கட்டத்துப் பாட்டு அவள் துயரத்தை அதிகமாக்கிற்று. அவளை அறியாமல் விம்மல் வந்தது. கீழே இருப்பவர்களுக்குக் கேட்காமலிருக்க வேண்டுமே என்ற நினைவினால் விம்மலை அடக்கப் பார்த்தாள். எவ்வளவு முயன்றாலும் அடக்க முடியவில்லை. குப்புறப் படுத்துக் கொண்டிருந்தால் இப்படித்தான் விம்மல் வந்து கொண்டிருக்கும் என்று எழுந்து பெட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட யத்தனித்தாள். இந்தச் சமயத்தில் மச்சுப்படியில் யாரோ ஏறிவரும் காலடிச் சத்தம் கேட்டது. ஏதோ ஒரு விபரீதம் மாடி ஏறி வருகிறது என்று அவள் உள் உணர்வுக்குத் தோன்றி நெஞ்சு பதைபதைத்தது. அறையின் கதவு திறந்தது, வந்தவன் பட்டாபிராமன்தான் என்று மனதுக்குத் தெரிந்துவிட்டது. ஐயோ! இவன் எதற்காக இங்கே, இந்த வேளையில் தனியாக வருகிறான்! தன்னைக் கொலை செய்வதற்கு வருகிறானா? இல்லையென்றால் தன்னுடைய ஆத்மாவைக் கொலை செய்வதற்கு வருகிறானா? இவனை எப்படித் திரும்பிப் போகச் செய்வது? குப்புறப் படுத்தவண்ணம் தூங்குவதுபோல் அசையாம லிருக்கலாம். தூங்குவதாக எண்ணிக்கொண்டு ஒருவேளை திரும்பிப் போய்விடமாட்டானா? சீதாவின் ஆசை நிராசையாயிற்று. அவள் தூங்குகிறாள் என்று நினைத்துக் கொண்டு பட்டாபிராமன் திரும்பிப் போகவில்லை; உள்ளே வந்தான். அவள் அருகிலும் வந்தான், வந்து அவள் தோள்களைத் தொட்டு மெதுவான குரலில், “சீதா” என்றான். சீதா தள்ளி எழுந்து அவன் கைகளை உதறித் தள்ளிவிட்டு உட்கார்ந்தாள். “பயப்படாதே, சீதா! நான்தான்!” என்றான் பட்டாபிராமன். பிறகு அவன் ஏதேதோ சொன்னான். சீதா கேட்டுக் கொண்டேயிருந்தாள். முதலில் அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது. ஆகா! அந்தப் பத்திரிகையிலே யாரோ எழுதியிருந்தது சரியாய்ப் போய் விட்டது! இவன் தன்னிடம் காதலை வெளியிடுகிறான். தனக்காக, என்ன தியாகம் வேண்டுமானாலும் செய்கிறேன் என்கிறான். தனக்காக வீடு வாசலையும் சேர்மன் வேலையையும் விட்டுவிட்டு இலங்கைக்கோ ஆப்பிரிக்காவுக்கோ அந்தமான் தீவுக்கோ வரத் தயாராயிருக்கிறானாம்! தன்னுடைய விம்மல் சத்தம் இவனுடைய இதயத்தைப் பிளந்து விட்டதாம். இவனுடைய மனைவியும் மாமியாரும் செய்த அநீதிகளுக்கெல்லாம் பரிகாரம் செய்து விடுவானாம்! வாயைத் திறந்து ‘சரி’ என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதுமாம்! கடவுளே! இவனுடைய மூளை இப்படியா பிசகிப் போக வேண்டும்; புருஷர்கள் எல்லோருமே இப்படித்தான் இருப்பார்களோ? இவனை எப்படி இங்கிருந்து அனுப்புவது? என்ன வார்த்தை சொன்னால் போவான்? இவனுடைய பேச்சுக் குரலை கேட்டு லலிதா எழுந்து வராமலிருக்க வேண்டுமே? வந்தால் எவ்வளவு அவமானமாயும் விபரீதமாயும் முடியும்? ஐயோ! இவன் எதற்காகத் தன் முகவாய்க் கட்டையைத் தொடுகிறான்? தொட்டுக் கொண்டு என்னமோ உளறுகிறானே?… அறைக் கதவு மறுபடி திறந்தது. லலிதா வந்து வாசற்படியில் ரௌத்ராகாரமாக நின்றாள். சீதாவுக்குச் சப்த நாடியும் விட்டது. கொஞ்ச நஞ்சமிருந்த சிந்தனா சக்தியும் போய்விட்டது. மனது ஒன்றையும் நினைக்க முடியவில்லை. உடம்பையும் அவளால் அசைக்க முடியவில்லை. ஆனால் காது தீக்ஷண்யமாயிருந்தது. நெருப்பைக் கக்கிக்கொண்டு வரும் அக்கினி அஸ்திரங்களைப் போல் லலிதா கூறிய கொடிய மொழிகள் காதில் விழுந்தன. “அடிபாவி! சண்டாளி! இப்படியா எனக்குத் துரோகம் செய்வாய்? ‘பாம்பை வீட்டிலே வைத்துப் பால் வார்க்கிறாயே?’ என்று அம்மா சொன்னாளே? அவள் வாக்கு உண்மையாகி விட்டதே! உன்னை இதற்காகவா இங்கே அழைத்து வந்தேன்? என் குடியைக் கெடுத்து விட்டாயே? அடி, குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! அன்றைக்கு என்னைப் பெண் பார்க்க வந்தவனைக் குறுக்கே நின்று மறித்துக் கலியாணம் செய்து கொண்டாய், அதற்காக நான் சந்தோஷப்பட்டேன். அவனோடு வாழத் தெரியாமல் ஓடிவந்தாய், அப்படியும் எனக்குப் புத்தி வரவில்லை. உன்னை மறுபடியும் என் வீட்டுக்கு அழைத்து வந்து சீராட்டித் தாலாட்டினேன். என் கழுத்துக்கே கத்தி வைத்துவிட்டாய்! நீ நன்றாயிருப்பாயா? ஆனால் உன்னைச் சொல்லி என்ன பிரயோஜனம்? இந்தப் பாவி இப்படிப்பட்ட கள்ளத்தனம் செய்யும் கிராதகனாக இருக்கும் போது நீ என்ன செய்வாய்? உன்னைச் சொல்லி உபயோகமில்லை. இந்தச் சண்டாளனைத் தேடிப் பிடித்து என்னைக் கொண்டு வந்து தள்ளினார்களே, அவர்களைச் சொல்ல வேண்டும்….!” இத்தனை நேரமும் பேச முடியாமல் திகைத்திருந்த பட்டாபிராமன் இப்போது துள்ளிப் பாய்ந்து, “லலிதா! வாயை மூடு ஜாக்கிரதை!” என்றான். "என்னங்காணும் அதட்டுகிறீர்! செய்கிறதையும் செய்து விட்டு இது வேறேயா? எத்தனை நாளாக உம்முடைய லீலைகளை நடத்தி வருகிறீர்! அந்தப் பத்திரிகையில் எழுதியிருந்ததற்கு மட்டும் பொத்துக்கொண்டு வந்துவிட்டதே! நான் அந்தப் பத்திரிகையைத் தொட்டதற்காக ஆத்திரம் பொங்கி வந்ததே! அதில் எழுதியிருந்ததெல்லாம் உண்மைதானே! என் கைப்பட நானே அந்தப் பத்திரிகைக்குக் கடிதம் எழுதுகிறேன். இதோ தெரு வாசலுக்குச் சென்று கூச்சலிட்டு ஊரைக் கூட்டுகிறேன்.பட்டாபிராமனுக்கு ஒரு நொடியில் என்னவெல்லாமோ பயங்கரமான எண்ணங்கள் உதித்து மறைந்தன. “லலிதா! வாயை மூடுகிறாயா, இல்லையா? மூடாவிட்டால் இதோ உன்னைக் கொன்றுவிடுவேன்!” என்று சொல்லிக் கொண்டே அருகில் இரண்டடி எடுத்து வைத்தான். “கொன்று விடுங்கள்! பேஷாகக் கொன்று விடுங்கள்! உம்! ஏன் கொல்லாமல் சும்மா நிற்கிறேள்?” என்று லலிதா கூச்சலிட, பட்டாபிராமன் விகாரமான முகத் தோற்றத்துடன் கையைப் பயங்கரமாக ஆட்டிக் கொண்டு வந்து லலிதாவை நெருங்கி அவளுடைய கழுத்தில் கையை வைத்தான். கழுத்தில் அவன் கை பட்டதோ இல்லையோ, லலிதா, “ஐயோ! அம்மா! என்னைக் கொல்லுகிறார்களே! உன் மாப்பிள்ளையும் சீதாவும் சேர்ந்து மென்னியைப் பிடித்துக் கொல்லுகிறார்களே!” என்று பயங்கரமாய்க் கூவிக் கொண்டே கீழே தடால் என்று விழுந்தாள். அவளுடைய உதடுகளும் கை கால்களும் பயங்கரமாகவும் கோணல் மாணலாகவும் இழுத்தன. கண்கள் செருகிக் கறுப்பு விழி மறைந்து வெள்ளை விழி மட்டும் தெரிந்தது, வாயிலிருந்து நுரை வந்தது. தொண்டையிலிருந்து களகளவென்று ஒரு சத்தம் உண்டாகிப் பயங்கரத்தை அதிகப்படுத்தியது. பட்டாபிராமன் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து தன் இரண்டு கைகளாலும் லலிதாவைத் தூக்கி எடுத்துக் கொண்டான். அச்சமயம் அவனுடைய மாமியார் குறுக்கே வந்து, “என் பெண்ணை ஒருவரும் தொட வேண்டாம் அவளைக் கீழே விடும்!” என்றாள். “ஏ மூதேவி! விலகிப் போ!” என்று சொல்லிக் கொண்டே மாமியாரை ஒரு இடி இடித்து அப்பாற்படுத்திவிட்டுப் பட்டாபிராமன் கீழே சென்றான். கட்டிலில் கொண்டு போய் லலிதாவைக் கிடத்தி அவள் முகத்தில் தண்ணீரை விசிறித் தெளித்துச் சிகிச்சை செய்யத் தொடங்கினான். இருபத்தொன்றாம் அத்தியாயம் - கண்கண்ட தெய்வம் சீதாவின் கண்களில் ததும்பி நின்ற கண்ணீர்த் துளிகள் உலர்ந்து போயின. அவளுடைய மனதில் குடிகொண்டிருந்த பெரும் பாரம் இறங்கி விட்டது. கலக்கம் தீர்ந்து மனதில் தெளிவு ஏற்பட்டிருந்தது. தான் இனி கடைப்பிடிக்க வேண்டிய பாதைதான் என்ன என்பதைப்பற்றி அவள் ஒரு தீர்மான முடிவுக்கு வந்திருந்தாள். லலிதா தன்னுடைய கூரிய சொல்லம்புகளை எய்து கொண்டிருந்த அதே சமயத்தில் சீதாவின் மனதில் அந்த உறுதியான தீர்மானம் ஏற்பட்டு விட்டது. ஆகவே சமீப காலத்தில் அவள் அறிந்திராத மனச் சாந்தியும் ஏற்பட்டிருந்தது. கைப்பெட்டியில் மாற்றி உடுத்திக் கொள்வதற்கு வேண்டிய இரண்டொரு சேலைகளை எடுத்து வைத்துக் கொண்டாள். கைவசம் இருந்த பணத்தையெல்லாம் திரட்டி எடுத்து வைத்துக் கொண்டாள். மேஜை டிராயரைத் திறந்து அதிலிருந்த கடிதங்களையெல்லாம் சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டாள். அன்று தபாலில் வந்த பத்திரிகைத் துண்டை அணு அணுவாகப் போகும் வரையில் கிழித்து எறிந்தாள். பிறகு புறப்படுவதற்கு ஆயத்தமாகிக் கீழ் வீட்டில் சந்தடி அடங்கட்டும் என்று காத்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் வரையில் கீழே ஏக ரகளையாகத்தானிருந்தது பட்டாபிராமனுடைய அதட்டல், சரஸ்வதி அம்மாளின் கோபக் குரல் - இவற்றுடன் குழந்தைகள் பட்டு, பாலுவின் அழுகைச் சத்தமும் கலந்து கேட்டது. பாவம்! அந்த அர்த்த ராத்திரிச் சந்தடியில் குழந்தைகள் விழித்தெழுந்து அம்மா மூர்ச்சையாகிக் கிடந்ததைப் பார்த்துவிட்டு அழத்தொடங்கின. சிறிது நேரத்துக்கெல்லாம் லலிதாவின் தீனக்குரல் கேட்டது. கொஞ்சம் கொஞ்சமாகச் சந்தடி அடங்கியது, விளக்குகள் அணைக்கப்பட்டன. பின்னர் அந்த வீட்டில் நிசப்தம் குடிகொண்டது. மேலும் சிறிது நேரம் சீதா காத்திருந்தாள். வீட்டிலுள்ளவர்களிடம் சொல்லிக்கொள்ளாமல் போகலாமா என்ற எண்ணம் எழுந்து தொந்தரவு செய்தது. ஆனால் நேரம் ஆக ஆக அவளுடைய பொறுமை குறைந்து வந்தது. அந்த அறையின் நாலு பக்கத்துச் சுவர்களும் அவளை நோக்கி நெருங்கி நெருங்கி வருவதாகத் தோன்றியது. இன்னும் சற்றுநேரம் அறையில் இருந்தால் அந்தச் சுவர்கள் அவளை நெருங்கி வந்து நாலாபுறமும் அமுக்கி மூச்சுத் திணற அடித்துக் கொன்றுவிடும் என்ற பீதி உண்டாயிற்று. அந்தப் பீதியிலிருந்து விடுவித்துக் கொள்ளச் சீதா விரைந்து எழுந்தாள். மேஜையிலிருந்து ஒரு காகிதம் எடுத்து அதில் லலிதாவுக்கு ஒரு கடிதம் எழுதத் தொடங்கினாள். ஒரு வரி, இரண்டு வரி எழுதிக் கிழித்துப் போட்டாள். கடிதம் எழுதுவது சாத்தியமில்லை என்று தீர்மானித் தாள். கைப்பெட்டியையும் மணிபர்சையும் எடுத்துக்கொண்டு விளக்கை அணைத்துவிட்டுப் புறப்பட்டாள். அடிமேல் அடிவைத்துச் சத்தமின்றி மெதுவாக நடந்து மச்சுப் படிகளில் இறங்கினாள். கீழ்க்கட்டுத் தாழ்வாரத்தில் நீலவர்ண மின்சார தீபம் எரிந்து கொண்டிருந்தது. அந்த மங்கிய வெளிச்சத்தில் அவளுக்கு எதிரே இருந்த சுவரில் ஒரு படம் தென்பட்டது. அந்தப் படத்தில் காந்தி மகாத்மாவின் திருஉருவம் இருந்தது. சாந்தி நிறைந்து புன்னகை தவழ்ந்த மகாத்மாவின் திருமுகமும் கருணை ததும்பிய கண்களும் காந்திஜி உண்மையிலே அங்கு வீற்றிருந்து அவளை ஆசீர்வதிப்பது போன்ற தெய்வீக உணர்ச்சியைச் சீதாவுக்கு உண்டாக்கிற்று. அது ஒரு நல்ல சகுனம் என்றும் அவளுக்குத் தோன்றியது. “கலியுகத்திலே கண்கண்ட தெய்வம் காந்திமகான்தான்” என்று சீதாவின் தாயார் அவளுடைய இளம்பிராயத்தில் அடிக்கடி சொல்லியிருந்தது அவளுடைய மனதில் நன்கு பதிந்து நிலை பெற்றிருந்தது. பெட்டியைத் தரையில் வைத்துவிட்டுச் சீதா மகாத்மாவின் திருவுருவத்தின் முன்னால் நமஸ்கரித்தாள். எழுந்ததும் ஒரு நிமிஷம் கைகூப்பி நின்று, “எந்தையே! என்னை ஆசீர்வதியுங்கள். வாழ்க்கையில் நான் புதியதாக மேற்கொள்ளப் போகும் பாதையில் என்றும் உறுதி தவறாமல் நடப்பதற்கு வேண்டிய மனோபாவத்தை எனக்கு அளியுங்கள்!” என்று வேண்டிக் கொண்டாள். அப்படி வேண்டிக்கொண்டதோடு மட்டும் அவளுடைய மனம் திருப்தி அடைந்துவிடவில்லை. இன்னும் ஏதோ மனக் குறை இருந்தது, சிறிது நேரம் சிந்தனை செய்தாள். உடனே தன் மனக்குறையைத் தீர்க்கும் மருந்து இன்னதென்று புலப்பட்டது. “காந்தி என்னும் கருணைத் தெய்வமே! ‘தங்களுடைய ஆசியை நம்பியே இன்று நான் இந்த வீட்டைவிட்டுத் தன்னந்தனியாக வெளிக் கிளம்புகிறேன். இனி நான் நடக்கப் போகும் பாதையில் எனக்கு எத்தகைய இன்னல்கள் நேர்ந்தாலும் எவ்வளவு கஷ்டங்கள் ஏற்பட்டாலும் தங்களுடைய மனதுக்கு உகந்திருக்க முடியாத காரியம் எதையும் செய்யமாட்டேன். எப்படிப்பட்ட நிலைமையிலும் எந்தக் காரியத்தையும் ’இதை காந்தி மகாத்மா ஒப்புக்கொள்வாரா?’ என்று எனக்கு நானே கேட்டு நிச்சயப்படுத்திக் கொண்டுதான் செய்வேன். இவ்விதம் தங்கள் சந்நிதியில் இதோ சத்தியம் செய்கிறேன். இந்தப் பிரதிக்ஞையை நிறைவேற்றும் சக்தியையும் தாங்கள்தான் எனக்கு அருளவேண்டும்!” இவ்விதம் சீதா மனதிற்குள் தெளிவாகச் சிந்தித்து பிரதிக்ஞை எடுத்துக்கொண்டு மகாத்மாவின் படத்துக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டுத் தரையிலிருந்து பெட்டியை எடுத்துக் கொண்டு மறுபடி புறப்பட்டாள். வாசற்கதவைச் சத்தமின்றித் திறந்துகொண்டு வெளியேறினாள். வெளியேறும்போது அவளுடைய மனம், “இந்த வீட்டில் நான் புகுவதற்கு முன்னால் அன்பும் சாந்தமும் நிலவின. என்னால் விளைந்த குழப்பம் என்னோடு போகட்டும். இனி முன்போலவே அமைதி நிலவட்டும். இந்த வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் என்பேரில் எவ்வளவோ பிரியமாயிருந்தார்கள்: அதற்கெல்லாம் பதிலாக நான் பெரும் அபசாரம் செய்துவிட்டேன். கடவுள் என்னை மன்னிப்பாராக!” என்று எண்ணமிட்டது. பட்டாபிராமனுடைய வீட்டிலிருந்து ரயில்வே ஸ்டேஷன் அரை மைல் தூரத்தில் இருந்தது. சீதா அந்தத் தேவபட்டணத்துக்கு வந்த புதிதில் வெள்ள நிவாரண வேலை செய்ததிலும் பிறகு தேர்தல் வேலை செய்ததிலும் அந்நகரின் தெருக்கள், சந்துபொந்துகள், மூலைமுடுக்குகள் எல்லாம் அவளுக்கு நன்றாகத் தெரிந்து போயிருந்தன. ரயில்வே ஸ்டேஷனை நோக்கி நேராகச் சென்ற குறுக்குப் பாதையில் அவள் இப்போது நடந்தாள். வீதிகளிலும் சந்துகளிலும் ஜன நடமாட்டமே இல்லை. காலை மூன்று மணிதான் உலகமே நன்றாய்த் தூங்கும் நேரம் என்று தோன்றியது. திருடர்கள் தங்களுடைய திருவிளையாடல்களை நடத்துவதற்கு அதுவே சரியான நேரம். யாராவது தன்னை அடித்துப் பிடுங்குவதற்கு வந்து சேர்ந்தால்?… சேச்சே! அப்படியெல்லாம் எதற்காகத் தனக்கு நேரப்போகிறது? அப்படியெல்லாம் நேராதா? ஏன் நேராது? தான் துரதிருஷ்டத்துக்கும் துன்பத்துக்குமே பெண்ணாய் பிறந்தவள் ஆயிற்றே? யாரோ தன்னைப் பின் தொடர்ந்து வருகிறார்கள் போலிருக்கிறதே? நெருங்குவதற்குத் தயங்கிக் கொஞ்ச தூரத்திலேயே வருகிறது போல் காணப்படுகிறதே? வருகிறவர் ஒருவரா அதிகம் பேரா? எதற்காகத் தன்னை அவர்கள் தொடர்ந்து வரவேண்டும்? ஒருவேளை அவர்களும் தன்னைப் போல் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகலாம் அல்லவா? தான் அநாவசியமாக ஏன் பீதிக்கொள்ள வேண்டும்? பீதி அநாவசியந்தான்! யார் தன்னை என்ன செய்துவிட முடியும்? ஒன்றும் முடியாதுதான்! ஆயினும் நெஞ்சம் படக் படக், என்று அடித்துக் கொள்வதில் குறைவில்லை. காலடிச் சத்தத்துக்கு மேல் இதயம் அடித்துக் கொள்ளும் சத்தம் அதிகமாகக் கேட்கிறதே! கடவுளே! காந்தி மகாத்மா! இந்தப் பேதையைக் காப்பாற்றுங்கள்! இது என்ன பைத்தியம்? யாரிடமிருந்து எதற்காகக் கடவுளும் காந்திஜியும் தன்னை இப்போது காப்பாற்ற வேண்டும்? தனக்கு என்ன பயம்? தனக்குக் கெடுதல் செய்வதில் யாருக்கு என்ன அக்கறை இருக்க முடியும்? அப்படியும் நினைப்பதற்கில்லை, இந்த ஊரில் தனக்கு யாரோ விரோதிகள் இருக்கிறார்கள். இருக்கிறதினாலேதான் தன்னைப் பற்றி அப்படித் துண்டுப் பிரசுரம் போட்டார்கள். பிற்பாடு பத்திரிகையில் தன்னையும் பட்டாபிராமனையும் பற்றி அவ்வளவு கேவலமாக எழுதினார்கள். அப்படிப்பட்ட பரம விரோதிகள் என்னதான் செய்யமாட்டார்கள்? ஒற்றர்களை வைத்திருந்து தான் தனியாக வெளிக் கிளம்புவதைக் கவனித்துப் பின்தொடர்ந்து வருகிறார்களா என்ன? பின்தொடர்ந்து வந்து ஒருவேளை தன்னை வெட்டிப் போட்டு விடுவார்களோ? அப்படிச் செய்துவிட்டால் ரொம்ப நல்லதாகப் போய்விடும்! இந்த வாழ்க்கையாகிற பாரத்தை மேலும் சுமக்க வேண்டியிராது? ஆனால் அந்தக் கிராதகர்கள் அப்படிச் செய்வார்களா? அல்லது தான் தனியாகக் கிளம்பிச் சென்றதைக் கவனித்து வைத்துக் கொண்டிருந்து இல்லாததையும் பொல்லாததையும் சேர்த்து மறுபடியும் பத்திரிகையில் ஏதாவது பயங்கரமாக எழுதுவார்களா? அப்படியெல்லாம் எழுதித் தன்னை அவமானப்படுத்துவதைக் காட்டிலும் ஒரு வழியாகக் கொன்று போட்டு விட்டால் நிம்மதியாகப் போய்விடும். ரயில்வே ஸ்டேஷனுக்கு இன்னும் பாதி தூரம் இருக்கும் போது பின்னால் யாரோ தன்னைத் தொடர்ந்து வருவதாகச் சீதா சந்தேகித்தாள். ரயில்வே ஸ்டேஷனைக் கிட்டத்தட்ட நெருங்கியபோது அவளுடைய பீதி ஒருவாறு குறைந்து தைரியம் மிகுந்தது. வருகிறது யார் என்று தெரிந்துகொள்ளும் எண்ணத்தோடு முனிசிபல் விளக்கு மரம் ஒன்றின் அடியில் நின்றாள். நின்று பரபரப்புடன் தான் வந்த வழியே பார்த்துக் கொண்டிருந்தாள். சந்தின் திருப்பத்தில் திரும்பி ஒரு ஆசாமி வந்தான். அவன் வேறு யாரும் இல்லை; சூரியாவின் தம்பி சுண்டுதான்! சீதாவின் மனத்திலிருந்த பயம் என்கிற பாரம் விலகியது. பயம் இருந்த இடத்தில் கோபம் குடிபுகுந்தது. இவன் எப்படி திடீரென்று இங்கே வந்து முளைத்தான்? தன்னை எதற்குப் பின்தொடர்ந்து வந்தான்? வந்ததுதான் வந்தானே, சட்டென்று வந்து தனக்குத் துணையாகச் சேர்ந்து கொள்ளக் கூடாதா? பின்னாலேயே வந்து தன்னை இப்படிப் பயமுறுத்துவானேன்? அசட்டுப் பிள்ளை! கிட்டா மாமாவின் பிள்ளைகளில் சூரியா ஒருவன்தான் கொஞ்சம் சமர்த்து; மற்றவர்கள் எல்லாரும் மோசந்தான். அசட்டுச் சிரிப்புடன் அருகில் நெருங்கி வந்த சுண்டுவைப் பார்த்துச் சீதா, “எதற்காக அப்பா, என்னைப் பின்தொடர்ந்து வருகிறாய்? உனக்கு வேலை இல்லையா அல்லது உன் அம்மா நான் திரும்பி வந்து விடாதபடி ரயிலில் ஏற்றி விட்டு வருவதற்கு உன்னை அனுப்பி வைத்தாளா? யாரோ திருடன் தொடர்ந்து வருகிறானாக்கும் என்று எண்ணியல்லவா பயந்து போய் விட்டேன்?” என்றாள். “இப்படித்தான் உலகத்தில் பல தவறுகள் ஏற்படுகின்றன. ஏதோ சூரியா எழுதியிருக்கிறானே என்பதற்காக நான் உன்னுடைய துணைக்கு வந்தேன். நீ என்னைத் திருடன் என்று எண்ணிப் பயந்து கொண்டாய்! அநாவசியமாக என் அம்மாவையும் வைகிறாய்!” என்றான் சுண்டு. “அது போனால் போகட்டும், சுண்டு! சூரியா கடிதம் எழுதியிருக்கிறானா?” என்று சீதா ஆவலுடன் கேட்டாள். சூரியா ஒருவனாவது தன்னுடைய நன்மையில் உண்மையான கவலை கொண்டவனாயிருக்கிறானே என்று எண்ணிச் சீதா அத்தனை துயரத்துக்கிடையிலும் சிறிது ஆறுதல் பெற்றாள். “சூரியா டில்லியிலேயிருந்து எழுதியிருந்தான். ஒருவேளை நீ கல்கத்தாவுக்குப் புறப்படலாம் என்றும், அப்படியானால் நான் சென்னை வரையிலாவது போய்க் கல்கத்தா ரயிலில் உன்னை ஏற்றி விடும்படியும் எழுதியிருந்தான். நீ விரும்பினால் கல்கத்தா வரையிலே கூடப்போகும்படி எழுதியிருந்தான். ஆனால் நீ இப்படி அர்த்தராத்திரியில் ஒருவருக்கும் தெரியாமல் வீட்டுக் கதவைத் திறந்து போட்டு விட்டுப் புறப்படுவாய் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை…..” இத்தனை நாளும் நீ எங்கே இருந்தாய் சுண்டு! உன்னை நான் பார்க்கவே இல்லையே? திடீரென்று இன்றைக்கு எப்படி வந்து முளைத்தாய்?" “உனக்கு எங்கே எலெக்ஷன் தடபுடலில் என்னைப்பற்றிக் கவனிக்க நேரம் கிடைக்கப் போகிறது? இத்தனை நாளும் நான் ராஜம்பேட்டையில் இருந்தேன். இந்த மார்ச்சு பரீட்சையில் தவறிவிட்டேன். அம்மா, சூரியா இரண்டு பேரும் ஊரிலிருந்து வந்து விட்டார்கள் அல்லவா? அதற்காக என்னைப் போய் அங்கே இருக்கச் சொன்னார்கள். சூரியாவின் கடிதம் வந்ததும் புறப்பட்டு வந்தேன். அதோடு சேர்மன் தேர்தலின்போது இங்கே இருந்து அத்திம்பேர் வெற்றி பெற்றால் வாழ்த்துக் கூற விரும்பினேன். ஆனால் வாழ்த்துக் கூற அவசியமில்லாமலே போய் விட்டது. சேர்மன் வேலை ஆனதற்காக அத்திம்பேருக்கு அனுதாபம் தான் சொல்லவேண்டும்.” “வா ஸ்டேஷன் பக்கம் நடந்து கொண்டே பேசலாம்” என்று சொல்லிச் சீதா நடக்கத் தொடங்கினாள். ரயில்வே ஸ்டேஷன் கிட்ட இருந்தது, ரயிலோ நாலரை மணிக்குத்தான். ஆகையால் மெள்ள மெள்ளப் பேசிக் கொண்டே அவர்கள் நடந்தார்கள். “ராத்திரி நடந்ததெல்லாம் உனக்குத் தெரியுமா, என்ன? எங்கேயிருந்தாய் நீ?” என்று சீதா கேட்டாள். வெட்கத்தோடு முழுவதும் அவனுக்குத் தெரிந்திருக்க முடியாது என்று எண்ணினாள். “எதிர் வீட்டுத் தாமோதரம் பிள்ளை வீட்டில் படுத்திருந்தேன். பிள்ளையும் நானும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். ரகளையில் பெரும் பாகம் எங்களுக்குக் கேட்டது. மிச்சத்தை இட்டு நிரப்பிக் கொண்டோ ம். சந்தடி ஓய்ந்து சிறிது நேரத்திற்குப் பிறகு நான் தூங்கிவிட்டேன். ஆனால், பாவம் தாமோதரம் பிள்ளை தூங்கவேயில்லை அவருக்கு ரொம்ப வருத்தம். நீ வெளிக் கிளம்புவதை அவர்தான் பார்த்துக் கொண்டிருந்து என்னை எழுப்பி விட்டார்…..” “பாவம்! தாமோதரம் பிள்ளை ரொம்ப நல்ல மனிதர். அவர் அப்போது சொன்னதைக் கேட்காமற் போனோம்; அவர் சொன்னதைக் கேட்டு இந்த எலெக்ஷன் தொல்லையில் இறங்காமலிருந்தால் இப்படியெல்லாம் ஏற்பட்டிராது. என்ன தவறு செய்து விட்டேன்!” “அத்தங்கா! இதெல்லாம் ஒரு தவறு ஆகாது. நீ செய்த அடிப்படையான தவறு பன்னிரண்டு வருஷத்துக்கு முன் ராஜம்பேட்டையில் நடந்தது. ஏதோ அந்தச் சௌந்தரராகவன் திடீரென்று சொன்னதற்காக நீ அவனைக் கலியாணம் செய்து கொண்டிருக்கக் கூடாது. நியாயமாக நீ சூரியாவைக் கலியாணம் செய்து கொண்டிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தாயானால் இரண்டு பேரும் வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்திருப்பீர்கள். இப்போது நீங்கள் இரண்டு பேருமே சந்தோஷமின்றிக் கஷ்டப்படுகிறீர்கள்.” “நீ சொல்வது தப்பு, சுண்டு! நானும் சூரியாவும் கலியாணம் செய்து கொண்டிருந்தால் ஒரு நாளும் எங்கள் வாழ்க்கை சந்தோஷமாயிருந்திராது.” “ஏன் அப்படிச் சொல்கிறாய் அத்தங்கா! சூரியாவுக்கு உன்பேரில் உள்ள அபிமானம் உனக்குத் தெரியாதா, என்ன? நீ நடந்த பூமியை அவன் பூஜை செய்கிறவன் ஆயிற்றே! உன்னுடைய கஷ்டங்களை நினைத்து இரவு பகல் இப்போதுகூட உருகிக் கொண்டிருக்கிறானே? இல்லாவிட்டால் பரீட்சைக்குப் படிக்கும் எனக்கு உன்னைப் பற்றிக் கடிதம் எழுதுவானா?” "சூரியாவுக்கு என் பேரில் அபிமானம் அதிகம் என்பது எனக்குத் தெரியும், சுண்டு! ஆனால் அபிமானம் வேறு விஷயம், கலியாணம் வேறு விஷயம். வாழ்க்கையில் அவனுடைய இலட்சியங்களுக்கும் என்னுடைய இலட்சியங்களுக்கும் ரொம்ப வித்தியாசம் உண்டு. அவனுக்கு யாருக்காவது உபகாரம் செய்து கொண்டிருந்தால் போதும்; தேசத்துக்கு ஏதேனும் தொண்டு செய்து கொண்டிருந்தால் போதும். புகழிலும் பெயரிலும் அவனுக்கு ஆசையே கிடையாது.எனக்கோ, யாராவது நாலுபேர் என்னை எதற்காவது மெச்சிக்கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் எனக்குச் சந்தோஷமாயிருக்கிறது நான் இருக்கும்போது வேறு யாரையாவது பாராட்டினால் எனக்குப் பிடிப்பதில்லை. நான் பிரசங்க மேடையில் ஏறிப் பேசும்போது நாலுபேர் என்னைப் பார்த்து மலர்ந்த முகத்துடன் நின்றால், என்னுடைய பேச்சை மெச்சிக் கை தட்டினால் எனக்கு என்னமோ பட்டாபிஷேகம் பண்ணியது போலிருக்கும். சூரியாவுக்கோ இதிலெல்லாம் ஆசையே கிடையாது. எங்களுடைய வாழ்க்கை எப்படிச் சந்தோஷமாயிருக்க முடியும்?" “நீ சொல்வதில் ஓரளவு உண்மை இருக்கிறது, அத்தங்கா! ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அப்படி உலகத்தில் ஒத்த மனத்தோடு தம்பதிகள் எங்கே அமைகிறார்கள்!” “புது டில்லியில் ஒருத்தி இருக்கிறாள், சுண்டு! அவள் பெயர் தாரிணி. சூரியாவுக்கும் அவளுக்கும் ரொம்பப் பொருத்தம் எனப் பல சமயம் நான் எண்ணியதுண்டு.” “சூரியாகூட என்னிடம் சொல்லியிருக்கிறான், அந்தத் தாரிணியைப் பற்றி! ஆனால் அவளுக்கு இந்த ஜன்மத்தில் கலியாணம் நடக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்தவுடனே அவர்கள் கலியாணம் செய்து கொள்ளப் போகிறார்களாம்! எப்படி இருக்கிறது கதை! இந்தியாவாவது சுதந்திரம் அடையவாவது? இந்த ஜன்மத்தில் இல்லை! உன்னிடம் சொன்னால் என்ன, அத்தங்கா! இந்தச் சூரியாவுக்குக் கலியாணம் ஆகாத காரணத்தினால், என்னுடைய கலியாணமும் தடைப்பட்டுக் கொண்டே வருகிறது….!” சீதாவுக்கு அவளை அறியாமல் சிரிப்பு வந்தது. “நாங்கள் எல்லாரும் கலியாணம் செய்து கொண்டு கஷ்டப்படுவது போதாதா சுண்டு! எல்லாக் கூத்தையும் நீ பார்த்துக் கொண்டுதானேயிருக்கிறாய்?” என்று கேட்டாள். “நீங்கள் செய்த தவறையே நானும் செய்வேனா, என்ன? முன்னால் போகிறவன் குழியில் விழுந்தால் பின்னால் வருகிறவனுக்குத் தீவர்த்தி பிடித்த மாதிரி அல்லவா? எனக்குக் கலியாணம் செய்து கொள்ளும் உத்தேசமே கிடையாது. விளையாட்டுக்காகச் சொன்னேன்?” என்றான் சுண்டு. இருபத்திரண்டாம் அத்தியாயம் - டைரக்டர் சியாம சுந்தர் எப்போதும் கலகலவென்று பற்பல குரல்களும் விதவித சத்தங்களும் கேட்டுக் கொண்டிருக்கும் ரயில்வே ஸ்டேஷன் கூட அந்த இரவு மூன்றரை மணிக்கு நிசப்தமாயிருந்தது. ஜனங்கள் அங்குமிங்கும் அலங்கோலமாகப் படுத்துத் தூங்கினார்கள். சுண்டுவும் சீதாவும் பிளாட்பாரத்துக்குள் சென்று அங்கே கிடந்த ஒரு மர பெஞ்சியில் உட்கார்ந்தார்கள். “வெகு நாளாக உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்று எனக்கு எண்ணம். அதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை; இப்போது சொல்லட்டுமா?” என்று சுண்டு கேட்டான். “பேஷாகச் சொல், கேட்கிறேன் பொழுதும் போக வேண்டும் அல்லவா?” என்றாள் சீதா. “அத்தங்கா! ஒவ்வொருத்தருக்கும் இந்த உலகத்தில் பெயரும் புகழும் அடைவதற்கு என்று கடவுள் ஒரு வழியை வகுத்திருக்கிறார். அதை விட்டு விட்டு வெளியே போனால்தான் இல்லாத கஷ்டங்கள் எல்லாம் வந்து சேருகின்றன. இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. ‘சதுரத்தில் வட்டத்தைத் திணிக்க முயல்வதைப் போல’ என்பார்கள். அது முடியாத காரியம். அதைச் செய்ய முயற்சிப்பதால் வீண் உபத்திரங்கள் ஏற்படுகின்றன. ஒவ்வொருவரும் கடவுள் தங்களுக்கு வகுத்திருக்கும் வழி இன்னதென்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதிலே தான் ஒருவனுடைய சாமர்த்தியம் இருக்கிறது. அத்தங்கா! நீ எதற்காக இந்தப் பூவுலகில் பிறந்தாயோ அதை நீ இன்னும் தெரிந்து கொள்ளவில்லையென்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்….” “ரொம்ப உண்மை, சுண்டு! நான் இந்த உலகில் ஏன் பிறந்தேன் என்பது எனக்கு இன்னும் தெரியவில்லைதான்!” “நீ உன் கஷ்டங்களினால் மனங்கசந்து இவ்விதம் சொல்கிறாய். நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. வாழ்க்கையில் உன்னுடைய துறை இன்னது என்பதை நீ இன்னமும் அறிந்து கொள்ளவில்லையென்றுதான் சொல்கிறேன். நான் கூறப் போவதில் உனக்கு ஒருவேளை நம்பிக்கை இல்லாமலிருக்கலாம். அல்லது நான் சொல்லுவதை ஒருவேளை நீ விளையாட்டாக எடுத்துக் கொண்டு கேலிப் பேச்சுப் பேசலாம். அதனாலெல்லாம் என்னுடைய முடிவில் மாறுதல் ஏற்படப் போவதில்லை. உனக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்பதாகத் தீர்மானித்துக் கொள்வேன்….” “நான் கேலி ஒன்றும் செய்யவில்லை, சுண்டு! நான் கெட்ட கேட்டுக்குக் கேலி வேறேயா? உன் கருத்தைச் சொல்லு!” “அத்தங்கா! நீ நடிப்புக் கலைக்காகப் பிறந்தவள் என்பது என் தீர்ந்த அபிப்பிராயம். நாடக மேடையில் ஏறி நீ நடித்தாயானால் உனக்கு இணை இந்தியாவிலே யாரும் இல்லையென்று புகழ்பெறுவாய். சினிமாத் துறையில் பிரவேசித்தாயானால் கிரேடா கார்போவையும், ரீடா ஹேவொர்த்தையும், நர்மாஷியரையும் போல உலகப் பிரசித்தியே அடைந்துவிடுவாய். உன்னுடைய முகத்தைக் கடவுள் சினிமாத் திரைக்கு என்றே அமைத்திருக்கிறார்.” சீதாவின் உள்ளத்தில் பழையபடி சபலம் முளைவிட்டு எழுந்தது. சுண்டுவின் சமத்காரமான பேச்சு அவளுடைய தற்பெருமை உணர்ச்சியைத் தூண்டி விட்டது. “இது வரையில் என்னை அழகானவள் என்று யாருமே சொல்லவில்லை. எனக்கும் வயது இருபத்தெட்டு ஆகப் போகிறது. நீதான் முதன் முதலாகச் சொல்கிறாய்!” என்றாள். “நானும் உன்னை அழகி என்று சொல்லவில்லை. அழகு யாருக்கு வேண்டும், அத்தங்கா! பெரும்பாலும் அசடுகள்தான் அழகாயிருப்பார்கள். அழகு வேறு; முகத்தில் ஜொலிக்கும் அறிவின் களை வேறு. நாடக மேடைக்கும் சினிமாத் திரைக்கும் வேண்டியது அழகு அல்ல; முகவெட்டுத்தான் வேண்டும் அது உன்னிடம் இருக்கிறது.” “என் முகத்தில் ஒரு வெட்டுக் காயம் கூட இல்லையே, சுண்டு!” “பார்த்தாயா? கேலி செய்கிறாயல்லவா? அதனால்தான் உன்னிடம் சொல்லத் தயங்கினேன்.” “கோபித்துக் கொள்ளாதே சுண்டு! நான் கேலி செய்தது தப்புத்தான். மேலே நீ சொல்ல உத்தேசித்திருந்ததைச் சொல்லு.” "வெள்ளித் திரைக்கு மிகவும் பொருத்தமான முகவெட்டு உனக்கிருக்கிறது. இந்த முகவெட்டைக் கொண்டு நீ உலகத்தையே வென்று விடலாம். முகவெட்டு மாத்திரம் அல்ல; உள்ளத்தின் உணர்ச்சிகளையெல்லாம் தெள்ளத் தெளிய முகத்தில் வெளியிடும் சக்தியும் உனக்கு இயற்கையாகவே அமைந்திருக்கிறது. நீ சம்பாஷணை செய்யும் போதும், மேடையில் பிரசங்கம் செய்யும் போதும் நான் கவனித்துப் பார்த்திருக்கிறேன். ஆத்திரமோ, கோபமோ, சோகமோ, மகிழ்ச்சியோ - எந்த உணர்ச்சியானாலும் உன் முகத்திலே பளிச்சென்று தெரிகிறது. நீ வாய் திறந்து பேசவேண்டிய அவசியமில்லை. உன்னுடைய கண்கள் பேசுகின்றன; உன் புருவங்கள் பேசுகின்றன; உன் நெற்றியின் சுளிப்புப் பேசுகிறது; உன் உதடுகளின் துடிப்புப் பேசுகிறது. இது மாத்திரந்தானா? உன்னுடைய நடையின் அழகைப் பற்றி யாராவது உனக்குச் சொல்லியிருக்கிறார்களோ, என்னவோ தெரியவில்லை. உன் நடையின் அழகோடு எந்த ஹாலிவுட் சினிமா நட்சத்திரத்தின் நடை அழகையும் ஒப்பிட முடியாது. அன்னப்பட்சி தண்ணீரில் ‘கிளைட்’ பண்ணுவது போல நீ நடக்கிறாய். நம்முடைய நாட்டுப் பழங்காலக் கவிகள் ‘அன்ன நடை’ யைப் பெண்களின் நடையோடு ஒப்பிட்டிருப்பதின் பொருத்தம் உன்னுடைய நடையைப் பார்த்த பிறகுதான் எனக்குத் தெரிந்தது. இன்றைக்குக்கூட நான் உனக்குக் கொஞ்சம் பின்னாலேயே வந்து கொண்டிருந்ததின் காரணம் அதுதான். உன் நடையின் அழகைப் பின்னாலிருந்து பார்த்துக் கொண்டே வந்தேன். இந்த மாதிரி நடையுள்ளவள் ஒருத்தியை ஹாலிவுட் டைரக்டர்கள் கண்டால் விடவே மாட்டார்கள். தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடுவார்கள்!" “சுண்டு! நீ மட்டும் என்னைவிட நாலு வயது பெரியவனாயிருந்து என்னைக் கலியாணம் செய்து கொண்டிருந்தால் எனக்கு இந்த மாதிரி கஷ்டம் எல்லாம் ஒன்றும் வந்திராது.” "அத்தங்கா! முதலிலேயே நான் சொல்லிவிட்டேனே! காதல், கலியாணம் இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை என்று. உண்மையில் எனக்குக் கலியாணம் ஆகிவிட்டது. கலைத்தேவியை நான் மணந்து கொண்டு விட்டேன். வேறு மானிடப் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ளும் உத்தேசமே எனக்குக் கிடையாது. நீ எதற்காகப் பிறந்தாய் என்பதை நான் தெரிந்து கொண்டிருப்பது போலவே நான் பிறந்த காரணத்தையும் தெரிந்து கொண்டிருக்கிறேன். இந்தியாவில் சினிமாக் கதையை உதாரணம் செய்வதற்காக நான் பிறந்தவன். தென்னிந்தியாவில் அறிவாளிகள் எத்தனையோ பேர் உண்டு. ஆனால் அவர்களில் யாரும் இதுவரையில் சினிமாக் கலையில் கவனம் செலுத்தவில்லை. அசடர்களும் துர்த்தர்களும் பிழைப்புக்கு வழியில்லாதவர்களுந்தான் சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். ஏதோ பி.ஏ. பரீட்சையை முடித்துத் தொலைக்க வேண்டுமென்பதற்காகப் படிக்கிறேன். பி.ஏ. பாஸ் செய்ததும் சினிமாத் துறையில் இறங்குவேன். நீயும் என்னோடு ஒத்துழைத்தால் தென் இந்தியாவை மட்டுமல்ல. இந்தியாவை மட்டுமல்ல, உலகத்தையே நாம் வெற்றி கொள்ளலாம். நான் இன்றைக்குச் சொல்லுகிறேன், கேள்! டைரக்டர் சியாம சுந்தர் எடுக்கப் போகும் முதல் படம் உலகப் பிரசித்தி அடையப் போகிறது. ஹாலிவுட் அகாடமி பரிசு அதற்கு நிச்சயம் கிடைத்தே ஆகவேண்டும்…." “சுண்டு! டைரக்டர் சியாம சுந்தர் என்பது யார்?” “யாரா! நான்தான்! என்னுடைய முதல் படத்தில் நீ கதாநாயகியாக நடிக்க ஒப்புக் கொண்டால் நான் சொல்ல முடியாத சந்தோஷம் அடைவேன், என்னால் நீ எவ்வளவு பெயரும் புகழும் அடையப் போகிறாய் என்பதை நீயே பார்க்கப் போகிறாய்!” சீதாவின் உள்ளத்தில் முதலிலேயே சபலம் ஏற்பட்டிருந்தது. இப்போது அது கொழுந்துவிட்டு எரிந்தது. எதற்காக நம்மை மதிக்காத அன்பில்லாத புருஷனிடம் போய்க் கஷ்டப்பட வேண்டும்? வாழ்க்கையை ஏன் நரகமாக்கிக் கொள்ள வேண்டும்? இப்படி நம்மிடம் தேவதா விசுவாசம் வைத்திருப்பவனுடைய முயற்சியில் ஏன் சேர்ந்து உதவி செய்யக் கூடாது? இப்படி எண்ணமிட்ட போது பட்டாபிராமனுடைய வீட்டுச் சுவரில் கண்ட காந்தி மகாத்மாவின் முகம் சீதாவின் மனதின் முன்னிலையில் வந்தது. காந்திஜியின் கருணை ததும்பும் கண்கள் அவளை உற்று நோக்கின. “பேதைப் பெண்ணே! பிரதிக்ஞை எடுத்துக் கொண்டு அரைமணி நேரங்கூட ஆகவில்லையே? அதற்குள் இந்தச் சஞ்சலமா? என் முன்னிலையில் கடவுள் சாட்சியாக எடுத்துக் கொண்ட பிரதிக்ஞையைக் காற்றில் விடப் போகிறாயா?” என்று கேட்பதுபோல இருந்தது. சீதா ஆகாசத்தை நோக்கினாள்; வானமெங்கும் ஒரு அங்குல இடம் காலியின்றிச் சிதறிக்கிடந்த நட்சத்திரச் சுடர் மணிகள் அவ்வளவும் கண்ணைச் சிமிட்டிச் சீதாவை எச்சரித்தன. அடுத்த ஸ்டேஷனில் ரயில் வண்டி கிளம்பி விட்டது என்பதற்கு, அறிகுறியாக டிங் டிங் என்று ஸ்டேஷன் மணி அடித்தது. சீதா கூறினாள்: “சியாம சுந்தர், உன்னுடைய அபிமானத்தையும் நீ என்னிடம் வைத்திருக்கும் நம்பிக்கையையும் பெரிதும் பாராட்டுகிறேன். ஆனால் ஒரு மணி நேரத்துக்கு முன்னால் நான் ஒரு பிரதிக்ஞை எடுத்துக் கொண்டேன். என்னுடைய கணவருக்கும் எனக்கும் ஒத்துக் கொள்ளவில்லையென்றும், அதனாலேதான் எனக்கு இந்தக் கஷ்டம் எல்லாம் வந்தன என்றும் உனக்குத் தெரியுமல்லவா? இன்னும் ஒரு தடவை அவருடன் குடும்ப வாழ்க்கை நடத்திப் பார்ப்பது என்றும், கூடிய வரையில் ஒத்துப்போகப் பார்ப்பது என்றும், பிரதிக்ஞை செய்தேன். மகாத்மா காந்தியின் உருவப் படத்தில் முன்னால் அவ்வாறு சபதம் செய்தேன். அதை இவ்வளவு சீக்கிரத்தில் கைவிட மனம் வரவில்லை. கல்கத்தாவுக்குப் போய் அவரைப் பார்த்து இன்னொரு தடவை அவருடன் வாழ்க்கை நடத்த முயற்சிப்பேன். ஆனால் இதுதான் கடைசித் தடவை. இதிலும் ஒன்றும் சரிக்கட்டி வராவிட்டால் உன்னிடம் வந்து சேருகிறேன்” என்றாள் சீதா. “அத்தங்கா! நான் சொல்கிறேன், கேள்! உன் கணவன் சௌந்தரராகவன் மட்டும் அறிவுடையவனாயிருந்தால் உன்னைக் குடும்ப வேலை செய்வதற்கு வைத்துக்கொள்ளமாட்டான். சினிமாக் கலைக்கு உன்னை அர்ப்பணம் செய்வான். குடும்ப வேலை பார்க்க லட்சம் கோடி ஸ்திரீகள் இருக்கிறார்கள். ஆனால் வெள்ளித் திரையில் நடித்துப் பெயர் வாங்கக் கோடியில் ஒருவராலேதான் முடியும். அது போனால் போகட்டும்; உன் தலைவிதியின்படி நடக்கிறது. இப்போது என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? உன்னோடு கல்கத்தாவுக்கு வரட்டுமா? மதராஸ் வரையிலாவது வரட்டுமா?” “வேண்டாம் சியாம சுந்தர்! உன்னோடு பேசிக்கொண்டே போனால் என்னுடைய சஞ்சல மனது மாறிப் போய்விடும். இங்கேயே டிக்கட் வாங்கிக் கொடுத்துப் பெண் பிள்ளைகள் வண்டியில் என்னை ஏற்றி விட்டுவிடு; அதுவே போதும்!” என்றாள் சீதா. “சூரியா என் பேரில் நிச்சயம் கோபித்துக் கொள்ளப் போகிறான்” என்றான் சுண்டு. “எதற்காகக் கோபித்துக்கொள்ள வேண்டும்? சூரியா ராஜம்பேட்டைக்குத் திரும்பி வந்ததும் அவன் என் விஷயத்தில் எடுத்துக் கொண்ட சிரத்தைக்காக என்னுடைய வந்தனத்தை அவனுக்குத் தெரியப்படுத்து.” “ராஜம்பேட்டைக்கு அவன் திரும்பி வருவானா என்பதே சந்தேகமாயிருக்கிறது.” “ஏன் அப்படிச் சொல்கிறாய்? ராஜம்பேட்டைக் கிராமத்தைச் சொர்க்கமாக்கிவிடப் போகிறேன் என்று சூரியா சொன்னானே?” “அந்த முயற்சியில் சூரியாவுக்குத் தோல்விதான் உனக்குத் தெரியுமா அத்தங்கா! தபால்கார பாலகிருஷ்ணன் வேலையை விட்டுவிட்டு இப்போது கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து விட்டான். நம்ம பக்கத்தில் வேலை செய்து வருகிறான். சூரியாவின் முயற்சியை உருப்படாமல் அடிப்பதே அவனுடைய முக்கிய நோக்கமாக இருக்கிறது. சூரியா எங்கள் ஆட்களுக்கெல்லாம் முன்னைப்போல் ஒட்டிக்கு இரட்டி கொடுத்தும் பயனில்லை; அவர்களுக்குத் திருப்தி இல்லை. ‘நிலம் உழுகிறவனுக்குச் சொந்தம்’ என்று சொல்லத் தொடங்கி விட்டார்கள். ஊரில் எல்லோருடைய நிலமும் சாகுபடியாகி விட்டது. நம்முடைய நிலம் மட்டும் பாதிக்குமேல் தரிசாகக் கிடக்கிறது. சூரியாவின் மனது ரொம்பவும் ஓடிந்து போய் விட்டது.” “அந்தப் பாலகிருஷ்ணன் பேரில் எனக்கு எப்போதும் சந்தேகந்தான். அவன் ரொம்பப் பொல்லாதவன் எங்களைப் பற்றி ஒரு குப்பைப் பத்திரிகையில் கன்னா பின்னாவென்று எழுதியிருந்ததல்லவா? அதெல்லாம்கூடப் பாலகிருஷ்ணனுடைய வேலையோ என்னமோ?” “இல்லவே இல்லை, அத்தங்கா! வீண் பழி சுமத்தாதே! பாலகிருஷ்ணனிடம் வேறு என்ன குற்றம் இருந்தாலும் உன்னைப் பற்றிய அவதூறு அவன் எழுதவில்லை. உன்னிடம் அவனுக்குள்ள மதிப்பையும் அபிமானத்தையும் பலமுறை என்னிடம் தெரிவித்திருக்கிறான். உன்னைக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று அவனுக்கு ரொம்ப ஆசை.” “அந்த மட்டில் சந்தோஷந்தான்.” “உன்னைப்பற்றித் துண்டு பிரசுரம் போட்டதும் மஞ்சள் பத்திரிகையில் எழுதியதும் யார் என்று எனக்குத் தெரியும். எல்லாம் நம்ம ஊர் சீமாச்சுவய்யர் செய்யும் வேலை!” “ஐயையோ! நம்ம சீமா மாமாவா அப்படியெல்லாம் எழுதுகிறார்? நம்ப முடியவில்லையே.” “நம்பத்தான் வேண்டும். வேறு என்ன செய்வது? எனக்கு நிச்சயம் தெரியும். பிளாக்மார்க்கெட்டில் இவ்வளவு நாள் சம்பாதித்தது சீமா மாமாவுக்குப் போதவில்லை. அவருக்கு வேண்டிய ஆசாமி சேர்மனாக வர வேண்டும் என்று ரொம்பவும் பாடுபட்டார். அப்படி வருவதற்கு நீ தடையாயிருந்தாய். அதனாலேதான் அவ்விதமெல்லாம் எழுதப் பண்ணினார். ஒரு நாளைக்கு என்னிடம் சீமா மாமா சிக்கிக்கொள்ளப் போகிறார். அப்போது செம்மையாக அவருக்குப் புத்தி கற்பிக்கப் போகிறேன்!” “அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், சுண்டு! ஏதாவது எழுதி விட்டுப் போகட்டும்! அவர் மேல் எனக்கு இல்லாத கோபம் உனக்கு என்னத்திற்கு?” “உனக்குக் கோபம் இல்லையென்றால் நான் விட்டு விடுவேனா? ஒரு கை பார்க்கத்தான் போகிறேன். அத்தங்கா! நீ மட்டும் இங்கு இருந்திராவிட்டால் அத்திம்பேருக்கு ஒரு நாளும் சேர்மன் வேலை ஆகியிராது. அதை என் அம்மாவும் அக்காவும் எண்ணிப் பாராததை நினைத்தால் எனக்கு வருத்தமாயிருக்கிறது. அம்மா எப்போதும் ஒரு மாதிரி என்பது தெரிந்த விஷயம். லலிதா எதனால் இவ்வளவு கொடுமையுள்ளவளாகி விட்டாள் என்பதுதான் தெரியவில்லை. உன்னை அர்த்த ராத்திரியில் வீட்டை விட்டுக் கிளம்பும்படி செய்து விட்டாளே!” “லலிதாவைப் பற்றி ஒன்றும் சொல்லாதே, சுண்டு! அவளைப் போல் உத்தமி உலகத்திலேயே கிடைக்கமாட்டாள். என்னுடைய காலத்தின் கோளாறு, நான் இப்படிக் கிளம்ப வேண்டி ஏற்பட்டது.” தூரத்தில் ரயில் வரும் சத்தம் கேட்டது. சில நிமிஷத்துக்கெல்லாம் ‘புஃப் புஃப்’ என்று புகை விட்டுக் கொண்டும், ‘கிறீச்’ என்று கத்திக் கொண்டும் ரயில் வந்தது. பெண்பிள்ளை வண்டியில் சீதா ஏறி உட்கார்ந்து சுண்டுவிடம் விடை பெற்றுக் கொண்டாள். இருபத்து மூன்றாம் அத்தியாயம் - சீதாவின் பிரார்த்தனை கல்கத்தா மெயிலில் இரண்டு தினங்கள் சீதா பிரயாணம் செய்தாள். அந்த இரண்டு நாளும் இரண்டு யுகங்களாகத் தோன்றின. சீதா ஏறியிருந்த அதே மாதர் வண்டியில் கல்கத்தாவுக்குச் செல்லும் இன்னும் சில மதராஸி ஸ்திரீகளும் ஏறியிருந்தார்கள். அந்த ஸ்திரீகளில் ஒருத்தி ஹாவ்ராவில் ஜாகை உடையவள்; சீதாவுக்கு அவள் சிநேகமானாள். பொழுது போவதற்கு அவளுடைய பேச்சுத் துணை கொஞ்சம் உதவியாயிருந்தது. வண்டி ஹாவ்ரா ஸ்டேஷனை அடைவதற்கு வழக்கத்தைக் காட்டிலும் தாமதமாயிற்று. அன்று காலையிலிருந்து ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ஜனங்கள் கூடிக்கூடி ஏதோ கசமுசாவென்று பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த வண்டியிலிருந்த பிரயாணிகளிடையிலும் ஏதோ கிளர்ச்சி ஏற்பட்டி ருப்பதாகத் தெரிந்தது. ஆனால் ஸ்திரீகளின் வண்டிக்குத் தகவல் ஒன்றும் எட்டவில்லை. ஹாவ்ராவுக்கு முதல் ஸ்டேஷனில் வேறு வண்டியிலிருந்த தென்னிந்தியர் ஒருவர் இறங்கி வந்து மாதர் வண்டியிலிருந்தவர்களைப் பார்த்து, “உங்களுக்கெல்லாம் புருஷத்துணை இருக்கிறதா? அல்லது ஹாவ்ரா ஸ்டேஷனுக்காவது புருஷர்கள் வருவார்களா? தனியாகப் போகிறவர்கள் ஜாக்கிரதையாகப் போகவேண்டும். கல்கத்தாவிலே ஏதோ கலாட்டாவாம்!” என்று சொன்னார். இது சீதாவின் மனதில் எந்த விதமான கலக்கத்தையும் உண்டு பண்ணவில்லை. வாழ்க்கையில் எத்தனையோ கலாட்டாக்களை அவள் பார்த்தாகிவிட்டது. கல்கத்தாவுக்குப் புதிதாகப் போய் இறங்கிய அன்றைக்கே பெரும் அபாயத்துக்கு அவள் உட்பட நேர்ந்தது. அதையெல்லாம் விட இப்போது என்ன அதிகம் இருந்துவிடப் போகிறது? ஆனால் ஹாவ்ரா ஸ்டேஷனில் போய் இறங்கியவுடனே தான் நினைத்தது எவ்வளவு தவறு என்று சீதாவுக்குத் தெரிந்துவிட்டது. அன்று 1946- ம் வருஷம் ஆகஸ்டு மாதம் 16-ம் தேதி நரகத்தில் வாழும் பேய்கள் அன்றைக்குக் கல்கத்தாவுக்கு விஜயம் செய்து தங்களுடைய நாச வேலைகளை நடத்திக் கொண்டிருந்தன. குழந்தைகள் என்றும், வயோதிகர்கள் என்றும், ஸ்திரீகள் என்றும் பாராமல் அந்தப் பேய்கள் கொன்று தின்றுவிட்டுப் பயங்கரமாக ஊளையிட்டுக் கொண்டு அங்குமிங்கும் அலைந்தன. அந்த ஊளைச் சத்தங்களுக்கிடையே ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்னும் கோஷம் சில சமயம் கேட்டது. கிரேதாயுகத்திலே வாழ்ந்த இரணியன், இரணியாட்சன் ஆகிய அரக்கர்களும், திரேதா யுகத்தில் இருந்த இராவணன், கும்பகர்ணன், மகோதரன், விருபாட்சன் முதலிய ராட்சதர்களும், துவாபர யுகத்திலே பிறந்த கம்ஸன், சிசுபாலன், தந்தவக்கிரன், பகாசுரன், ஜராசந்தன் ஆகிய மனிதப் பேய்களும் ஒரே சமயத்தில் கல்கத்தாவில் வந்து பிறந்து ஆயிரம் பதினாயிரம், லட்சம் எனப் பெருகித் தங்களுடைய கோர கிருத்தியங்களை நடத்தியதாகத் தோன்றியது. ஸ்திரீகளின் வயிற்றில் கத்தியை செலுத்திக் குடலை வெளியில் எடுத்தல், குழந்தைகளைக் காலைப் பிடித்து வீசி எறிந்து கொல்லுதல். உயிரோடு மனிதர்களைப் பிடித்து எரியும் நெருப்பிலே போடுதல், முதலிய அசுரச் செயல்கள் அன்று கல்கத்தாவில் சர்வசாதாரணமாயிருந்தன. ஹாவ்ரா ஸ்டேஷனில் சீதா இறங்கியபோது கல்கத்தா நகரத்துக்குள்ளேயிருந்து ஆயிரம் நகரங்களிலிருந்து வருவது போன்ற கோர சத்தம் வருவது கேட்டது. லட்சக்கணக்கான மனிதர்களும் ஸ்திரீகளும் குழந்தைகளும் ஓலமிடும் குரலும், ஆயிரக்கணக்கான பேய் பிசாசுகள் ஊளையிடும் குரலும், வீடுகள் தீயிட்டு எரியும் சத்தமும், எரிந்து விழும்போது எழும் சத்தமும், மக்கள் இங்குமங்கும் ஓடும் சத்தமும், துப்பாக்கி வேட்டுச் சத்தமும், துருப்புக்களின் ஆர்ப்பாட்டச் சத்தமும் சேர்ந்து வந்து ரயிலிலிருந்து இறங்கியவர்களின் உடம்பையும் உடம்புக்குள் எலும்பையும் நடுநடுங்கச் செய்தன. சீதாவுக்கு ரயிலில் சிநேகமான ஸ்திரீயை அழைத்துப் போவதற்காக மனுஷர்கள் வந்திருந்தார்கள். கல்கத்தாவில் பயங்கரமான கலகம் நடப்பதாகவும் ஆகையால் யாரும் ஹாவ்ரா பாலத்தைத் தாண்டி அப்பாலே போக முடியாது என்றும் சொன்னார்கள். அந்த ஸ்திரீ தனியாக வந்திருந்த சீதாவைப் பற்றி அவர்களிடம் சொன்னாள். சீதாவும் ஹாவ்ராவுக்கு வந்து இருக்கலாம் என்றும், கலகம் அடங்கிய பிறகு அவளுடைய மனுஷர்கள் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொண்டு போகலாம் என்றும் சொன்னார்கள். இதைக் கேட்ட சீதாவுக்கு உள்ளம் கலங்கி உலகம் சுற்றியது. சிறிது நிதானித்துக் கொண்டு, “இல்லை; நான் எப்படியும் இன்றைக்குப் போக வேண்டும், எனக்கு ஒன்றும் வராது” என்றாள். “அப்படியானால் போய்ப் பாருங்கள்!” என்றனர் ஹாவ்ராக்காரர்கள். சீதா தட்டுத் தடுமாறி ஹாவ்ரா ஸ்டேஷனிலிருந்து கொஞ்ச தூரத்திலிருந்து பாலம் வரையில் சென்றாள். அங்கிருந்து ஸ்டேஷன் பக்கத்தில் ஓடிவந்த ஒரு பெரும் கூட்டம் அவளைத் தள்ளிக் கொண்டு வந்து ஸ்டேஷன் வாசலில் சேர்த்தது. அதுவரை காத்திருந்த ஹாவ்ராக்காரர்கள் அவளையும் சேர்த்துத் தங்களுடன் அழைத்துக் கொண்டு போனார்கள். ஹாவ்ராவில் தங்கியிருந்த நாலு தினங்களும் சீதா அநுபவித்த மன வேதனையைச் சொல்லி முடியாது. இன்னும் ஒரு நாள் முன்னால் வராமற் போனோமே, வந்திருந்தால் இத்தகைய பயங்கரமான அபாய காலத்தில் கணவனோடும் குழந்தையோடும் சேர்ந்திருக்கலாமே என்று எண்ணி ஏங்கினாள். ஒவ்வொரு நிமிஷமும் கணவனுக்கு என்ன நேர்ந்ததோ குழந்தைக்கு என்ன நேர்ந்ததோ என்று நினைத்து விம்மினாள். இவ்வளவு தூரம் வந்த பிறகு கடைசியில் அவர்களைப் பார்க்க முடியாமலே போய்விடுமோ என்று எண்ணியபோது அவளுடைய நெஞ்சை வாளால் அறுப்பது போலிருந்தது. கல்கத்தாவில் நடக்கும் சம்பவங்களைப்பற்றிக் கொஞ்ச நேரத்துக்கு ஒரு தடவை வந்துகொண்டிருந்த செய்திகள் அவளுடைய மனப் புண்ணில் அடிக்கடி கொள்ளிக் கட்டையால் சுடுவது போன்ற துன்பத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தன. முக்கியமாகப் பச்சிளங் குழந்தைகளைத் தூக்கி எறிந்து கொல்லுகிறார்கள் என்றும், தீயிலே போட்டு வதைக்கிறார்கள் என்றும் வந்த செய்திகள் அவளுக்கு எல்லையில்லாத துன்பத்தை உண்டுபண்ணின. அந்த மாதிரி கதி தன் அருமைக் குழந்தைக்கு ஒருவேளை நேர்ந்திருக்குமோ, நேர்ந்து விடுமோ என்று எண்ணி எண்ணி அவளுடைய மண்டை வெடித்து விடும் போலிருந்தது. இந்தக் கண்டத்துக்குத் தப்பிப் பிழைத்தால் இனி என்றைக்கும் எந்தக் காரணத்தைக் கொண்டும் குழந்தையை விட்டுப் பிரிவதில்லையென்று மனதிற்குள் ஆயிரந்தடவை சபதம் செய்து கொண்டாள். இந்தத் தடவை தன் கணவன் உயிர் பிழைத்திருந்து தனக்கும் அவருக்கும் சமாதானமாகி விட்டால் அப்புறம் எந்தக் காரணத்தைக் கொண்டும் அவருடன் சண்டையிடுவதில்லையென்றும் பிரதிக்ஞை செய்துகொண்டாள். ஆனால் அவர் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டுமே? தன்னைக் கண்டதும் “எங்கே வந்தாய்? ஏன் வந்தாய்?” என்று கேட்காமலிருக்க வேண்டுமே? அப்படி அவர் கேட்டாலும் கேட்கட்டும். அதற்காக இவள் இனிமேல் பின்வாங்கப் போவதில்லை. ஏதாவது எப்படியாவது சொல்லிச் சமாதானம் செய்துகொள்ள வேண்டியதுதான். ஆனால் அவர் பிழைத்திருக்க வேண்டுமே? அவருக்கும் குழந்தைக்கும் அபாயம் ஒன்றும் நேராமல் இருக்கவேண்டுமே? இந்தப் பாவியின் அதிர்ஷ்டம் எப்படியிருக்குமோ தெரியவில்லையே? மூன்று நாள் பகலும் இரவும் சீதா தூங்கவேயில்லை. தப்பித்தவறிச் சிறிது கண்ணயர்ந்தாலும் பயங்கரச் சொப்பனங்கள் கண்டு திடுக்கிட்டு எழுந்தாள். அவள் படும் துன்பத்தைப் பார்த்து அந்த வீட்டுக்காரர்கள் அவளிடம் மிகவும் அநுதாபம் காட்டி ஆறுதல் கூறினார்கள். ஹாவ்ராவில் வசித்த தென்னிந்தியர்களுக்குக் கவலையில்லாமற் போகவில்லை. கல்கத்தாவில் நடக்கும் பயங்கரக் கலகம் பாலத்தைத் தாண்டி ஹாவ்ராவுக்குள்ளும் வராது என்பது என்ன நிச்சயம்? இது மட்டுமல்ல, அவர்களிலே பலர் உத்தியோகம் பார்த்த ஆபீஸுகள் கல்கத்தாவிலேதான் இருந்தன. அந்த ஆபீஸுகளின் கதி என்ன ஆகிறதோ? கலகம் அடங்கிய பிறகாவது ஆபீஸைத் திறப்பார்களோ என்னமோ? அப்படித் திறந்தால்தான் என்ன? ஷுஹரவர்த்தி ஆட்சி புரியும் நகரத்தில் இனி நிம்மதியாக வாழ முடியுமா? இவ்வாறெல்லாம் முதல் இரண்டு நாளும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் கலகம் ஆரம்பித்த மூன்றாம் நாளிலிருந்து கொஞ்சம் உற்சாகம் காட்ட ஆரம்பித்தார்கள். ஏனெனில் கலகத்தின் போக்கு மூன்றாம் நாளிலிருந்து கொஞ்சம் மாறத் தொடங்கியது. முதல் இரண்டு நாளும் ஹிந்துக்களின் படுகொலையாகவே நடந்தது. மூன்றாம் நாள் பீஹாரிலிருந்து கல்கத்தாவுக்கு வந்து குடியேறியிருந்த பால்கார முண்டர்களும் சீக்கியர்களும் தங்கள் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்தார்கள். பழிக்குப்பழி வாங்கும் கோஷம் எங்கெங்கும் கிளம்பியது. முதல் இரண்டு நாளும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஷுஹரவர்த்தியும், அவருடைய சகாக்களும் இப்போது கலவரத்தை அடக்கவும் கல்கத்தாவின் நல்ல பெயரை நிலைநாட்டவும் பெருமுயற்சி செய்தார்கள். ஐந்தாம் நாள் அவர்களுடைய முயற்சி பலன் தந்தது; கலவரம் அடங்கியது. சீதா ஹாவ்ரா ஸ்டேஷனில் வந்திறங்கி ஒரு வாரம் சொல்ல முடியாத மன வேதனைகளை அநுபவித்த பிறகு எட்டாம் நாள் அமரநாத்தின் வீட்டை அடைந்தாள். அமரநாத்தின் வீட்டுக்கு எதிர் வீட்டில்தான் அவளுடைய கணவனும் குழந்தையும் வசித்தார்கள் என்று சித்ராவின் கடிதத்திலிருந்து அவளுக்குத் தெரிந்திருந்ததல்லவா? ஆனால் இப்போது ராகவனும் வஸந்தியும் எதிர் வீட்டில் இல்லை. அமரநாத்தின் வீட்டிலேயே மேல் மச்சில் இருந்தார்கள் என்று தெரிந்தது. அவர்கள் மட்டுமா? புருஷர்களும் ஸ்திரீகளும் குழந்தைகளுமாகத் தென்னிந்தியர்கள் சுமார் நூறு பேர் அந்த வீட்டில் இருந்தார்கள். கலகம் நடந்த பிரதேசங்களிலிருந்து தப்பிப் பிழைத்து வந்தவர்கள்தான் அத்தனை பேரும். அவர்களில் பெரும்பாலோரை அபாயங்களிலிருந்து தப்புவித்து அழைத்துக் கொண்டுவந்து சேர்த்தது தன் கணவன் சௌந்தரராகவன்தான் என்பதை அறிந்தபோது சீதாவின் உள்ளம் பூரித்தது. அப்போது தான் பக்கத்திலிருந்து அவருக்கு உதவி செய்யக் கொடுத்து வைக்கவில்லையே என்ற ஏக்கமும் கூட ஏற்பட்டது. சௌந்தரராகவன் செய்த சேவையைப் பற்றியும் அமரநாத்தின் வீடு தென்னிந்தியர்களின் அடைக்கலம் ஆனது பற்றியும் ஹாவ்ராவிலேயே சீதா தெரிந்து கொண்டிருந்தாள். ஆகையால் நேரே அமரநாத் வீட்டுக்குச் சென்று சித்ராவை தேடிப் பிடித்தாள். சித்ரா சீதாவைப் பார்த்ததும், “வந்தாயா, மகராஜி! ஏதோ இந்த மட்டும் இப்போதாவது வந்து சேர்ந்தாயே? உன் புருஷனாச்சு, நீயாச்சு! மேல் மாடியில் படுத்துக் கிடக்கிறார்! போய்க் கவனித்துக் கொள்!” என்றாள். சீதா நெஞ்சு படபடவென்று அடித்துக் கொள்ள, “அவருக்கு என்ன? ஏன் படுத்திருக்கிறார்?” என்று கேட்டாள். “அவருக்கு என்னவா? 105 டிகிரி காய்ச்சல், ஜன்னி, பிதற்றல் எல்லாந்தான்! இந்த ஏழு நாளும் அவர் செய்திருக்கிற வேலைக்கு சுரம் வந்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. சுரம் தெளியாமல் அவர் செத்துப் போனாற்கூடப் பரவாயில்லை. நூறு பேரைக் காப்பாற்றிய மனுஷன் அப்புறம் இருந்தால் என்ன? போனால் என்ன?” என்றாள் சித்ரா. கல்கத்தா படுகொலையின்போது அந்த நகரில் வசித்தவர்கள் சாவைப்பற்றி இப்படி அலட்சியமாய்ப் பேசுவது இயற்கையேயல்லவா? ஆனால் சீதா அப்படி நினைக்கவில்லை, “சித்ரா! உனக்குப் புண்ணியம் உண்டு, இப்படியெல்லாம் பேசாதே. நிஜமாக அவருக்கு அபாயம் ஒன்றும் இல்லையல்லவா? பிழைத்துக் கொள்ளுவார் அல்லவா?” என்றும் கேட்டாள். "அது உன்னுடைய சமர்த்து; உன் பெண்ணின் சமர்த்து. நீங்கள் இரண்டு பேரும் செய்கிற சிசுருஷையில் இருக்கிறது அவர் பிழைக்கிறது. டாக்டர் அப்படித்தான் சொல்கிறார். உன் பெண் வஸந்தி இருக்கிறாளே? மகா சமர்த்து. இந்த ஏழு நாளும் எப்படி எனக்கு ஒத்தாசையாயிருந்தாள் என்று நினைக்கிறாய்? கொஞ்சமாவது பயப்படவேண்டுமே? கிடையாது! எல்லாரும் குலைநடுங்கிக் கொண்டிருந்தபோது அவள் மட்டும் கொஞ்சம் கூடப் பயமில்லாமல் உற்சாகமாகப் பேசிக் கொண்டும் குஷிப்படுத்திக் கொண்டும் இருந்தாள். இப்பேர்ப்பட்ட புருஷனையும் பெண்ணையும் விட்டுவிட்டுத் தேவபட்ட ணத்தில் உனக்கு என்னடி வைத்திருந்தது? போனால் போகட்டும், உடனே இப்போதாவது போய்க் கவனி. வஸந்திக்குக் கை வலித்துப் போயிருக்கும் ஐஸ் வைத்து வைத்து! ஆனாலும் குழந்தை அலுக்காமல் சலிக்காமல் முணுமுணுக்காமல் அப்பாவுக்குச் சிசுருஷை செய்துகொண்டிருக்கிறாள். இந்த வீட்டுக்கு வந்திருக்கும் நூறு பேரைப் பார்த்துக் கொள்வதும் சரி, உன் புருஷன் ஒருவருக்குச் சிசுருஷை செய்வதும் சரி. வேலை செய்தாலும் அப்படி வேலை செய்கிறார்; சுரமாய்ப் படுத்தாலும் அப்படிப் படுத்துகிறார். போ மச்சுக்கு!…" என்று இன்னும் ஏதோ சொல்லிக்கொண்டே சித்ரா விரைந்து போய்விட்டாள். சீதா கவலையும் ஆவலும் முன்னால் தள்ளவும் கூச்சமும் தயக்கமும் பின்னால் இழுக்கவும் தட்டுத் தடுமாறி மச்சுக்குப் போய்ச் சேர்ந்தாள். அங்கேயும் ஒரே ஜனக் கூட்டமும் சந்தடியுமாக இருந்தது. ஆனால் ஒருவரும் சீதாவைக் கவனிக்கவில்லை. அவரவர்கள் தங்கள் தங்களுடைய சொந்த விசாரத்தில் மூழ்கிக் கிடந்தார்கள். மேல் மாடியில் சந்தடியில்லாத அறை ஒன்றே ஒன்று இருந்தது. அதில்தான் ராகவன் இருக்க வேண்டும் என்று எண்ணிச் சீதா வெறுமனே சாத்தியிருந்த கதவை மெதுவாகத் திறந்தாள். அவள் நினைத்தபடிதான் இருந்தது. அந்த அறையில் போட்டிருந்த கட்டிலில் ராகவன் படுத்திருந்தான். அவனுடைய கண்கள் மூடியிருந்தன; உணர்ச்சி இல்லாத நிலையில் ஏதோ முனகிக் கொண்டிருந்தான். தலைமாட்டில் வஸந்தி உட்கார்ந்து அப்பாவின் தலையிலும் நெற்றியிலும் ஐஸ் வைத்துக் கொண்டி ருந்தாள். கதவைத் திறந்துகொண்டு சீதா உள்ளே நுழைந்ததும் வஸந்தி குனிந்திருந்த முகத்தைத் தூக்கி அவளை நிமிர்ந்து பார்த்தாள். சொல்லமுடியாத ஆவலும் வியப்பும் அன்பும் ஆத்திரமும் இரக்கமும் கோபமும் அவளுடைய கண்ணின் பார்வையில் கலந்திருந்தன. அவள் வாயிலிருந்து ஒரு வார்த்தைகூட வரவில்லை. சீதாவுக்குப் பேச நா எழவில்லை; தயங்கித் தயங்கிக் கட்டிலண்டை போனாள். ராகவனுடைய உள்ளங்காலை இலேசாகத் தொட்டாள்; ஜில்லென்று இருந்தது, பிறகு இன்னும் சிறிது நகர்ந்து உள்ளங் கைகளைத் தொட்டுப் பார்த்தாள்; கைகளும் ஜில்லென்று இருந்தன. மேலும் சிறிது நெருங்கிக் கழுத்தின் கீழே மார்பில் கையை வைத்துத் தொட்டுப் பார்த்தாள். அடுப்பில் போட்ட இரும்புச் சட்டியைப் போல் கொதிக்கிறது. ஜுரம் ரொம்ப அதிகமாக இருக்கிறது என்று ஐயமின்றித் தெரிந்தது. இதற்கிடையில் வஸந்தி அம்மா முகத்தையும் அப்பா முகத்தையும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள். சீதா வஸந்தியைச் சந்தித்ததும் என்னவெல்லாமோ சொல்லவேணும் என்று நினைத்திருந்தாள். “என்னைப் பார்க்க வராமல் உன் அப்பாவுடன் போய்விட்டாய் அல்லவா? நீ எனக்குப் பெண் இல்லை!” என்று சொல்வதாகக்கூட உத்தேசித்திருந்தாள். அதற்கெல்லாம் இப்போது சந்தர்ப்பமில்லாமல் போயிற்று. “வஸந்தி! ஐஸ் பையைச் சற்று என்னிடம் கொடு! உனக்குக் கையை வலிக்குமே?” என்றாள் சீதா. “வேண்டாம், அம்மா! எனக்குக் கை வலிக்கவில்லை. உனக்கு ஐஸ் பை சரியாக வைக்கத் தெரியாது. நெற்றி முழுதும் படும்படி வைக்க வேண்டும்” என்றாள் வஸந்தி. “எனக்குத் தெரியுமடி கண்ணே! தெரியாமற் போனால் நீதான் பக்கத்தில் இருக்கிறாயே, சொல்லிக் கொடு!” என்றாள் சீதா. அவ்வாறே வஸந்தி தன் பக்கத்தில் இருக்க, சீதா ஐஸ் பையை ராகவனுடைய நெற்றியில் வைத்துக் கொண்டிருந்தாள். தாயாரும் பெண்ணும் கொஞ்ச நேரம் ஒருவரையொருவர் பார்ப்பதோடு இருந்தார்கள். வஸந்தியின் முகத்தில் சிறிது நேரத்துக்குப் பிறகு புன்னகை மலர்ந்தது. “அம்மா! நீ இனிமேல் என்னையும் அப்பாவையும் விட்டு விட்டுப் போகவே மாட்டாயே?” என்றாள். சீதாவின் முகமும் சிறிது மலர்ச்சி அடைந்தது. “போகமாட்டேனடி, கண்ணே! முன்னேகூட நான் வேண்டுமென்றா போனேன்? வேறு வழியில்லாமல் போனேன். அப்பாவும் நீயும் என்னை அழைத்துக் கொள்ளாமல் இங்கே வந்துவிட்டீர்கள்!” “அது போனால் போகட்டும், அம்மா! இனிமேல் நீ எங்களை விட்டுவிட்டுப் போகமாட்டாயே!” “போகமாட் டேன்.” “ஐந்தாறு நாளாக இந்த ஊரிலே கலகம் பலமாக நடந்தது. கல்கத்தா பட்டணத்திலே உள்ளவர்கள் அவ்வளவு பேரும் கூண்டோ டு கைலாசமாய்ச் செத்துப்போக வேண்டியதுதான் என்று சொல்லிக் கொண்டார்கள், அப்போது எனக்கு என்ன தோன்றிற்று தெரியுமா? சொல், பார்க்கலாம்!” “தெரியவில்லை, கண்ணே! நீதான் சொல்ல வேண்டும்.” “சாகிறதுக்கு முன்னால் உன்னை ஒரு தடவை பார்க்காமல் செத்துப்போக வேண்டியிருக்கிறதே என்று தோன்றியது. அப்படிச் செத்துப் போய்விட்டால்கூட ஆவி ரூபத்தில் நீ இருக்கு மிடம் வந்து உன்னை ஒரு தடவை பார்த்துவிட்டுப் போக வேண்டும் என்று தோன்றியது” என்றாள் குழந்தை. “அப்படியெல்லாம் சொல்லாதே வஸந்தி! நல்ல பேச்சாகப் பேசு!” என்றாள் சீதா. “சாவு என்றால் உனக்கு என்னமோ போல் இருக்கிறதாக்கும். இங்கே ஏழு எட்டு நாளாய் ஓயாமல் சாவைப் பற்றித்தான் பேச்சு. அது எங்களுக்குச் சகஜமாய்ப் போச்சு, அம்மா!” “அது இருக்கட்டும், குழந்தை! அப்பாவின் உடம்பைப் பற்றி டாக்டர்கள் என்ன சொன்னார்கள்? என்ன சுரம் என்றார்கள்?” “ஷாக்‘கினால் வந்த ஜுரம் என்றுதான் சொன்னார்கள். ரொம்பக் கடுமையாய்த்தான் வந்திருக்கிறது; ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்றார்கள். ஆனால் எனக்கென்னமோ ஒரு அசட்டுத் தைரியம். அப்பா கட்டாயம் பிழைத்துவிடுவார் என்று. ஏழு நாளாக எத்தனை கண்டத்துக்கு அவர் தப்பிப் பிழைத்திருக்கிறார் தெரியுமா?” “அப்பா செய்ததைப் பற்றி எல்லாரும் சொல்கிறார்களே! அப்படி என்ன செய்தார், வஸந்தி!” “அப்பா செய்ததை யெல்லாம் சொல்வதாயிருந்தால் ஒரு ராமாயணமும் பாரதமும் எழுத வேண்டும் அம்மா! அவ்வளவு செய்திருக்கிறார். ஒன்று சொல்கிறேன் கேள்; ஒரு வீட்டைக் கலகக்காரர்கள் சூழ்ந்து கொண்டு கதவைத் திறக்காவிட்டால் வீட்டுக்கு நெருப்பு வைத்து விடுவதாகப் பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள். இது தெரிந்ததும் அப்பா என்ன செய்தார் தெரியுமா? கவர்ன்மெண்ட் ஆபீஸரை டெலிபோனில் கூப்பிட்டு ஒரு முஸ்லீமின் வீட்டை ஹிந்துக்கள் தாக்குவதாகச் சொன்னார் - அப்படிச் சொன்னால்தான் கவர்ன்மெண்டார் போலீஸை அனுப்புவார்கள் என்று; போலீஸும் வந்தது. அவர்களை அழைத்துக் கொண்டு அப்பாவே நேரில் போய் அந்த வீட்டிலிருந்தவர்களை மீட்டுக்கொண்டு வந்தார். இது தெரிந்தவுடனேயே கலகக்காரர்கள் அப்பாவை அடையாளம் வைத்துக் கொண்டு அவரைக் கொன்றுவிடப் பார்த்தார்கள். ஆனால் அவர்களுடைய ஜம்பம் சாயவில்லை…..” இந்தச் சமயத்தில் சௌந்தரராகவன் வெறி வந்தவன் போல் பிதற்றத் தொடங்கினான். “ஓகோ! என்னை யார் என்று நினைத்தீர்கள்! கிட்ட வந்தால் சுட்டுப் பொசுக்கி விடுவேன். கத்திக்குக் கத்தி, துப்பாக்கிக்குத் துப்பாக்கி, கொலைக்குக் கொலை, பழிக்குப் பழி - தெரியுமா? என்னையும் மகாத்மா காந்தி என்று எண்ணிவிடாதீர்கள்!” என்று கூச்சல் போட்டுக் கொண்டே எழுந்து உட்கார முயன்றான். சீதாவும் வஸந்தியும் அவனை மெதுவாகப் பிடித்து மறுபடியும் படுக்கவைத்தார்கள். அப்போது ராகவன் சீதாவை விழித்துப் பார்த்தான். ஆனால் அவள் யார் என்று கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.படுக்கையில் படுத்துக் கண்ணை மூடிக்கொண்டு விட்டான். அப்போது சீதா தன் மனதிற்குள் வேண்டிக் கொண்டாள்:- “சுவாமி பகவானே! இவர் ஒருவேளை இந்தச் சுரத்தில் இறந்து போவதாயிருந்தாலும் ஒரே ஒரு தடவையாவது என்னைப் பார்த்து இன்னார் என்று தெரிந்து கொள்ளட்டும். நான் வந்துவிட்டேன், இவருக்கு சிசுருஷை செய்கிறேன் என்பதை அறிந்து கொள்ளட்டும். கடவுளே! இந்த ஒரு வரமாவது எனக்குத் தரவேண்டும்!” இவ்விதம் மனப்பூர்வமாக மன்றாடிப் பிரார்த்தித்தாள் சீதா. ஆனால் அவள் பயந்தது போல் ஒன்றும் நடந்துவிடவில்லை. ராகவனுக்கு நாளுக்கு நாள் உடம்பு குணமாகி வந்தது. நாளுக்கு நாள் அறிவும் தெளிவடைந்து வந்தது. இருபத்து நான்காம் அத்தியாயம் - என் சொர்க்கம் சீதாவின் வரவினால் ராகவனுடைய சுரம் குணம் அடைந்து வந்ததாகத் தோன்றியது. சுரத்தின் வேகத்தில் அவன் எவ்வளவு முரட்டுத்தனமாக நடந்து கொண்டாலும் எப்படியெல்லாம் சத்தம் போட்டுப் பிதற்றினாலும் சீதாவின் கை பட்டவுடனேயே அவன் உடம்பும் மனமும் சிறிது அமைதி அடைந்தது. இதைக் கவனித்த சித்ரா, “அடியே! இதற்கு முன்னால் நீ என்னவெல்லாம் தவறாக நடந்திருந்தாலும் இப்போது நல்ல சமயத்தில் வந்து உன் புருஷனுடைய உயிரைக் காப்பாற்றினாய். நீ செய்த பாவத்துக்கெல்லாம் பிராயசித்தம் செய்து கொண்டுவிட்டாய்!” என்று சொன்னாள். இதைக் கேட்ட சீதாவின் கண்களில் நீ ததும்பிற்று. சீதா வந்த புதிதில் ராகவனுடைய கண்கள் அவளைப் பார்த்தாலும் அவள் யார் என்று அவன் தெரிந்து கொண்டதற்கு அடையாளம் காணப்படவில்லை. ஆனால் இரண்டு மூன்று நாளைக்குப் பிறகு ஒரு தடவை சீதாவைப் பார்த்தபோது ராகவனுடைய கண்களில் வியப்பும் முகத்தில் மலர்ச்சியும் தோன்றின. பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சீதாவுடன் அவன் பேச ஆரம்பித்தான். அவள் கல்கத்தாவுக்கு என்றைக்கு வந்தாள், எங்கே தங்கியிருந்தாள் என்பதைப் பற்றியெல்லாம் விசாரித்துத் தெரிந்து கொண்டான். ஹாவ்ராவில் அவளுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரித்தவர்களைப் பற்றி ரொம்பவும் சிலாகித்தும் பேசினான். குழந்தை வஸந்தி கேட்ட கேள்வியையே ஒரு நாள் சௌந்தரராகவனும் சீதாவிடம் கேட்டான். “உன் பிரயாண மெல்லாம் முடிந்து விட்டதல்லவா? இனிமேல் எங்கேயும் போக வேண்டாம் அல்லவா?” என்றான். “முன்னேயும் எனக்குப் போக வேண்டியிருக்கவில்லை. இனிமேலும் எனக்கு எங்கும் போல வேண்டியிராது!” என்றாள் சீதா. “அப்படிப் போவதாயிருந்தாலும் வஸந்தியை விட்டு விட்டுப் போகாதே! எங்கே போனாலும் அவளையும் கூட அழைத்துக் கொண்டு போய் விடு!” என்றான் ராகவன். “வஸந்தியையும் விட்டுப் போகவில்லை; உங்களையும் விட்டுப் போக உத்தேசமில்லை” என்றாள் சீதா. “என்னைப் பற்றிக் கவலை என்னத்திற்கு!” என்றான் ராகவன். சீதா பதில் சொல்லாமல் ராகவனுடைய முகத்தைத் துயரம் ததும்பிய கண்களினால் ஏறிட்டுப் பார்த்தாள். மற்றொரு நாள் ராகவன், “சீதா! உனக்கு இந்தக் கல்கத்தா நகரம் ரொம்பப் பிடித்திருக்கிறது என்று சித்ரா சொன்னாள், அது வாஸ்தவந்தானே?” என்று கேட்டான். சீதா சிறிது முக மலர்ச்சியுடன், “ஆமாம்; கல்கத்தா எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. இங்கேயே நான் இருந்து விடுவதில் எனக்குப் பூரண சம்மதந்தான்!” என்றாள். “ரொம்ப சந்தோஷம்; நீயும் வஸந்தியும் இங்கேயே இருந்து விடலாம். உங்களுக்கு நல்ல துணையும் இருக்கிறது. சித்ராவையும் அவளுடைய கணவனையும் போல் நல்லவர்கள் எங்கும் கிடைக்கமாட்டார்கள்!” என்று சொன்னான் ராகவன். சீதா சந்தேகக் குரலில், “நானும் வஸந்தியும் மட்டும் இங்கே இருக்கிறதோ? நீங்கள்?” என்றாள். “எனக்கு இந்த ஊர் பிடிக்கவில்லை, அதிலும் இங்கே நடந்த கோர கிருத்யங்களையெல்லாம் பார்த்த பிறகு அடியோடு பிடிக்காமற் போய் விட்டது. இங்கே இருந்தேனானால் என்னுடைய மூளை சரியாகவே ஆகாது. உடம்பு கொஞ்சம் சரியானதும் இங்கிருந்து கிளம்பிப் போய் விடவேண்டும் என்று உத்தேசித்திருக்கிறேன்.” “தயவு செய்து இப்படிப் பிரித்துப் பேச வேண்டாம். உங்களுக்கு இந்த ஊர் பிடிக்கவில்லை என்றால், எனக்கும் பிடிக்கவில்லை. உங்களுக்கு எந்த ஊர் பிடிக்கிறதோ, அந்த ஊர்தான் எனக்கும் பிடிக்கும். நீங்கள் எங்கே போகிறதாக உத்தேசம்?” “நான் பஞ்சாப் மாகாணத்துக்குப் போகிறதாக இருக்கிறேன்.” “நீங்கள் பஞ்சாபுக்குப் போகிறதாயிருந்தால், நானும் அந்த பஞ்சாபுக்கே வருகிறேன்.” “ஒரு வேளை பஞ்சாப் தேசம் உனக்குப் பிடிக்காது!” “பிடிக்காமல் என்ன? டில்லியில் நாம் இருக்கும்போதே பஞ்சாபுக்குப் போய்ப் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஆசையாயிருந்தது. அமிர்தசரஸில் சீக்கியர்களின் அற்புதமான பொற்கோயில் இருக்கிறதாம். இந்தியாவிலேயே பெரிய மசூதி அங்கே இருக்கிறதாம், அதையெல்லாம் பார்க்கலாம் அல்லவா?” ராகவனுடைய முகம் சுருங்கியது. “சீதா! உன்னை ஒன்று கேட்டுக் கொள்கிறேன். வேறு எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசு, ஆனால் மசூதி என்கிற பேச்சை மட்டும் நான் இருக்கும் போது எடுக்காதே! என் உடம்பு பதறுகிறது!” என்றான். சீதாவுக்குப் பழைய நினைவுகள் எல்லாம் குமுறிக்கொண்டு வந்தன. தாஜ்மகாலைப் பார்க்கவேண்டும், அக்பர் சமாதியைப் பார்க்க வேண்டும் என்பது போன்ற ஆசைகளினால் தனக்கு நேர்ந்த இன்னல்களையெல்லாம் நினைத்துக் கொண்டாள். “ஏதோ யோசியாமல் சொல்லிவிட்டேன். எனக்கு இனிமேல் ஒரு இடத்தையும் பார்க்கவேண்டாம், உங்களையும் வஸந்தியையும் பார்த்துக்கொண்டேயிருந்தால் அதுவே போதும்!” என்றாள். சீதாவின் இந்த வார்த்தைகள் சௌந்தர ராகவனுக்குச் சொல்ல முடியாத இன்பத்தை, வெகுகாலமாக அவன் அநுபவித்திராத அபூர்வ மகிழ்ச்சியை அளித்தன. இன்னொரு நாள் ராகவன், “சீதா! எதற்காக நான் இங்கிருந்து பஞ்சாபுக்குப் போகத் தீர்மானித்தேன் தெரியுமா?” என்று கேட்டான். “தெரியாது; எனக்குக் காரணம் தெரிய வேண்டியதுமில்லை! பஞ்சாபுக்கு நீங்கள் போக விரும்புவது ஒன்றே போதும்.” "இல்லை; உனக்குக் காரணம் தெரிந்திருக்கவேண்டும். நான் சீமையிலிருந்து திரும்பி வந்தவுடனேயே நான் வேலை செய்யும் கம்பெனிக்காரர்கள் ‘பஞ்சாபுக்குப் போகிறாயா? அங்கே லாகூரில் ஷாலியார் தோட்டம் இருக்கிறதாம். மானேஜர் உத்தியோகம் தருகிறோம்’ என்று கேட்டார்கள். நான் அதற்கு உடனே பதில் சொல்லவில்லை. பஞ்சாப் டில்லிக்குப் பக்கத்தில் இருப்பதால் அங்கே போக எனக்கு அச்சமயம் விருப்பமாக இல்லை. ஆனால் இங்கே ஆகஸ்டு 16ம் தேதி ஆரம்பித்து நடந்த சம்பவங்களைப் பார்த்த பிறகு ‘வசித்தால் பஞ்சாபிலேதான் வசிக்க வேண்டும்’ என்று முடிவு செய்துவிட்டேன். உலகத்தில் எத்தனையோ மகான்கள் எவ்வளவோ மதங்களை ஸ்தாபிக்கிறார்கள். அவர்களுக்குள்ளே சீக்கிய மதத்தை ஸ்தாபித்த குருநானக் என்பவரையே நான் மிகப்பெரிய மகான் என்று கருதுகிறேன். அவர்தான் ஒரு மதத்தை ஸ்தாபித்ததோடு ஒரு வீர சமூகத்தையும் படைத்தார். உலகத்திலே வீரர்கள் என்று சொன்னால் சீக்கியர்களைத்தான் சொல்லவேண்டும். கேள், சீதா! இந்த ஊரில் கலகம் ஆரம்பித்த முதல் இரண்டு நாள் நான் என்ன நினைத்தேன், தெரியுமா? கல்கத்தாவிலும் வங்காளத்திலும் ஹிந்து என்று சொல்லிக்கொள்ள ஒரு ஆணோ, பெண்ணோ, குழந்தையோ இல்லாமற் போய்விடும் என்று நினைத்தேன். மூன்றாம் நாள் என்ன ஆயிற்று தெரியுமா? கிளம்பினார்கள், சீக்கியர்கள்! இத்தனைக்கும் அவர்களில் பெரும்பாலோர் டாக்ஸி கார் ஓட்டிய டிரைவர்கள். அவர்கள் கையில் கிர்பானை எடுத்துக்கொண்டு புறப்பட்ட பிறகுதான் கல்கத்தாவிலும் வீர புருஷர்கள் இருக்கிறார்கள் என்று ஏற்பட்டது! கல்கத்தாவில் உள்ள முப்பது லட்சம் ஹிந்துக்களும் உயிர் பிழைத்தார்கள்! இப்படிப்பட்ட வீரர்களின் தாய்நாடு பஞ்சாப் தேசம். அத்தகைய நாட்டில் போய் இருப்பதே புண்ணியம் என்று எனக்குத் தோன்றுகிறது. ஒருவேளை என்னுடைய மனோ நிலையை உன்னால் புரிந்துகொள்ள முடியாமலிருக்கலாம்!" என்று தயங்கிச் சொன்னான் ராகவன். உண்மையில் ராகவனுடைய மனோநிலையை சீதாவினால் புரிந்துகொள்ள முடியவில்லைதான். பஞ்சாபியர்களைப்பற்றி அவளுடைய நினைவுகள் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. டில்லியில் அவள் பஞ்சாபியருடன் பழகியிருக்கிறாள். சுத்த முரடர்கள்; நாகரிகமில்லாதவர்கள். வங்காளிகளின் நாகரிகம் என்ன, படிப்பு என்ன, மரியாதை என்ன? கல்கத்தாவில் வங்காளிகளுடன் அவளுக்கு ஏற்பட்டிருந்த சொற்பப் பழக்கம் அவர்களைப் பற்றி மிக நல்ல அபிப்பிராயத்தை அளித்திருந்தது. அமர்நாத் ஆகியவர்களின் அபிப்பிராயமும் அதற்கு ஒத்தேயிருந்தது. பழைய காலமாயிருந்தால் ராகவனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் மறுத்து ஒன்பது வார்த்தை சீதா சொல்லி யிருப்பாள். ஆனால் இப்போது இந்த இயல்பு அவளிடம் மாறிப் போயிருந்தது. ராகவனுடைய உடல்நிலையும் அவனுடன் மாறுபட்டுப் பேசக் கூடாது என்று வற்புறுத்தியது. ஆகையால் ராகவன் சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சீதா கூறினாள்: “என்னத்திற்காக இவ்வளவு தூரம் வளைத்து வளைத்துப் பேசுகிறீர்கள்? நான்தான் முன்னமேயே சொல்லி விட்டேனே? எனக்குக் காரணம் ஒன்றுமே தெரியவேண்டியதில்லை. உங்களுக்குப் பிடித்த இடம் எதுவோ அதுதான் எனக்குப் பிடித்த இடம் அந்த நாளிலும் அப்படித்தான் நினைத்திருந்தேன். இப்போதும் அவ்விதமே எண்ணியிருக்கிறேன். நடுவில் தலைவிதியின் காரணமாக அங்குமிங்கும் சுற்றியலைய நேர்ந்தது. அதெல்லாம் பழைய கதை, இனிமேல் உங்களை நான் பிரியப் போவதில்லை. நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ, அதுதான் என்னுடைய சொர்க்கம்….” இந்தக் கடைசி வார்த்தை களைக் கேட்டுக் கொண்டு சித்ராவும் அமரநாத்தும் உள்ளே வந்தார்கள். “இப்போதுதான் எனக்கு உண்மையில் சந்தோஷமாக இருக்கிறது. இந்த ஊரில் கலகம் வந்தாலும் வந்தது உங்கள் இரண்டு பேரையும் ஒன்று சேர்த்து வைத்தது. எப்படிப்பட்ட கெட்டதிலும் ஒரு நல்லது இருக்கும் என்று இதனாலேதான் நம் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்!” என்றாள் சித்ரா. “எங்களை ஒன்று சேர்த்து வைப்பதற்காக இவ்வளவு பயங்கரமான கலகம் நடக்க வேண்டுமா? அதற்காகப் பத்தாயிரம் பேர் செத்துப் போகவேண்டுமா” என்றாள் சீதா. “இன்னும் கொஞ்ச நாள் போனால் இந்தக் கலகத்தை ஆரம்பித்ததே நான்தான் என்று சொன்னாலும் சொல்லுவீர்கள் போலிருக்கிறது!” என்று சௌந்தரராகவன் தமாஷ் செய்தான். “கலகத்தை நீங்கள் ஆரம்பித்து வைக்கவில்லை; உங்கள் மனைவி ஸ்ரீமதி சீதாதேவிதான் ஆரம்பித்து வைத்தார்! அவர் ஹாவ்ரா ரயில்வே ஸ்டேஷனில் வந்து இறங்கிய அன்றைக்குத் தானே கலகம் ஆரம்பித்தது?” என்றான் அமரநாத். இருபத்து ஐந்தாம் அத்தியாயம் - அடுத்த ஆண்டு நமது கதையின் முடிவு நெருங்கி வரும் சமயத்தில் நாமும் கொஞ்சம் அவசரமாகப் போகவேண்டியிருக்கிறது. காலண்டரில் ஏறக்குறைய ஒரு வருஷத்தை அப்படியே புரட்டித் தள்ளிவிட்டு, அடுத்த 1947-ம் வருஷம் ஆகஸ்டு மாதம் 15-ம் தேதிக்கு வருவோம். அன்றைய தினம் சுதந்திர பாரத தேசத்தின் ஜகஜ் ஜோதியான தலைநகரமாய் விளங்கிய டில்லி மாநகரத்துக்குச் செல்வோம். 1942 -ம் வருஷத்திலிருந்து இந்தியா தேசத்துக்கு ஆகஸ்டு மாதம் முக்கியமான மாதமாயிற்று. அந்த வருஷம் ஆகஸ்டு மாதத்திலேதான் இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் அதன் உச்ச நிலையை அடைந்தது. பிற்பாடு, 1946-ம் வருஷம் ஆகஸ்டில் முஸ்லிம் லீக் கொண்டாட விரும்பிய நேர் நடவடிக்கை (டைரக்ட் ஆக்ஷன்) தினம் இந்தியத் தாயின் திருமேனியைப் புண்படுத்தி, அதன் மூலம் ஆகஸ்டு மாதத்துக்கு முக்கியம் அளித்தது. 1947-ம் வருஷம் ஆகஸ்டு மாதமோ இந்திய சரித்திரத்திலேயே இணையற்ற முக்கியம் பெற்றது. ஆயிரம் வருஷத்துக்கு மேல் அடிமையாக வாழ்ந்திருந்த பாரத தேசம் அந்த வருஷம் ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி சுதந்திர தேசம் ஆயிற்று. நாற்பது கோடி இந்திய மக்கள் விடுதலைப் பேறு அடைந்தார்கள். அதே சமயத்தில் அவர்களில் முப்பத்திநாலு கோடிப் பேர் இந்திய யூனியன் என்னும் தனிச் சுதந்திர நாட்டினராகவும், பாக்கி ஆறு கோடிப் பேர் சுதந்திர பாகிஸ்தான் பிரஜைகளாகவும் பிரிந்தார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த வைபவத்தைத் தேசமெங்கும் மகத்தான உற்சாகத்துடனே கொண்டாடினார்கள். இந்திய சுதந்திர அரசாங்கத்தின் தலைநகரமான டில்லியிலே கொண்டாடினார்கள் என்று சொல்லவும் வேண்டுமா? அன்று காலையிலிருந்து டில்லியும் புதுடில்லியும் ஒரே கோலாகலமாயிருந்தன. சுதந்திரத் திருநாளன்று மாலை டில்லி மாநகரம் அளித்த அலங்காரக் காட்சியைப் போல் அதற்கு முன்னால் அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான் காலத்திலே கூடப் பார்த்திருக்க முடியாது. அந்த நாளில் மின்சார விளக்கு ஏது? அல்லது இவ்வளவு பொதுஜன உற்சாகத்துக்குத்தான் இடம் ஏது? முக்கியமாக, சரித்திரப் பிரசித்தமான ‘சாந்தனி சவுக்’ என்னும் வெள்ளி வீதியும், அந்த வீதியிலுள்ள மணிக்கூண்டும், டவுன் ஹாலும், இன்னும் சுற்றுப்புறங்களும், அற்புதமான தீபாலங்காரங்களும் ஜகஜ்ஜோதியாகப் பிரகாசித்துக் கண்கொள்ளாக் காட்சியளித்தன! சூரியாவும் தாரிணியும் அன்று சாயங்காலம் டில்லியின் குதூகலக் கொண்டாட்டங்களையும் தீபாலங்காரங்களையும் பார்த்துக் கொண்டு வெள்ளி வீதியில் நடந்து கொண்டிருந்தார்கள். டில்லி நகரம் தீபங்களினால் ஜொலித்ததுபோல் அவ்விருவருடைய முகங்களும் பிரகாசமாயிருந்தன. இதே வெள்ளி வீதியில் சூரியாவும் தாரிணியும் போலீஸாரின் கையில் அகப்படாமல் இருப்பதற்காக வேஷந்தரித்துக் கொண்டும், வெளிச்சம் மேலே படாமல் ஒளிந்து மறைந்து கொண்டும் எத்தனையோ தடவை நடந்ததுண்டு. ஆனால் இப்போது அம்மாதிரியான பயமுமில்லை; தயக்கமு மில்லை, ஒளிவு மறைவுக்கு அவசியமும் இல்லை. சூரியா கதர்க்குல்லா அணிந்து கொண்டும், தாரிணி ஆரஞ்சு வர்ணப்புடவை அணிந்து கொண்டும், பகிரங்கமாகக் கைகோத்துக் கொண்டும் பேசிக் கொண்டும் நடந்தார்கள். பதினாயிரக்கணக்கான ஜனக் கூட்டத்துக்கு மத்தியில் நடந்தபோதிலும் அவர்களுக்குத் தங்களைத் தவிர வேறு யாரும் அக்கம்பக்கத்தில் இருப்பதாகவே ஞாபகமில்லை. அவ்வளவு மெய்மறந்த உற்சாகத்துடன் அவர்கள் உல்லாசமாகப் பேசிக் கொண்டு சென்றார்கள். “இந்தியாவுக்குச் சுதந்திரம் வந்து கொண்டாட்டமும் நடத்துவதை நம்முடைய ஜீவிய காலத்தில் பார்ப்பதற்குக் கொடுத்து வைத்திருந்ததே! இதைக் காட்டிலும் நமக்குக் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டம் வேறு என்ன இருக்கிறது?” என்றாள் தாரிணி. “நம்மைப் பொறுத்த வரைக்கும் இதைவிட மேலான அதிர்ஷ்டம் ஒன்று இருக்கத்தான் இருக்கிறது. அது நம்முடைய கலியாண வைபவந்தான்!” என்று சொன்னான் சூரியா. “இன்று டில்லி நகரின் அலங்கார தீபங்கள் வானத்து நட்சத்திரங்களுடன் போட்டி போடுகின்றன என்று சொன்னால் பொருத்தமாகவே இருக்கும். வானத்து நட்சத்திரங்களை எண்ணினாலும் எண்ணலாம். இந்தத் தீபங்களை எண்ண முடியாது போலிருக்கிறதே?” என்றாள் தாரிணி. “நான் ஒன்று சொன்னால் நீங்கள் வேறொன்று சொல்கிறீர்களே? நம்முடைய வரப்போகும் கலியாணத்தைப் பற்றி நான் குறிப்பிட்டேன். இந்தியா சுதந்திரம் அடைந்ததும் நாம் திருமணம் செய்து கொள்கிறது என்று பேசி முடிவு செய்திருந்தோமல்லவா? அதைப்பற்றி இப்போது உங்கள் அபிப்பிராயம் என்ன? தயவுசெய்து சொல்லவேணும்?” என்றான் சூரியா. “இதே வெள்ளி வீதியில் முன்னே நாம் எத்தனை தடவை போலீஸுக்குப் பயந்து தயங்கிப் பதுங்கி நடந்திருக்கிறோம். அதையெல்லாம் நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. அப்போது நாம் பேசிக் கொண்டதை நினைத்தால் சிரிப்பாக வருகிறது. காந்திஜியினாலும் மற்ற மிதவாத காங்கிரஸ் தலைவர்களினாலும் இந்தியாவுக்குச் சுதந்திரம் வரப்போவதில்லை - அவர்களையெல்லாம் தலைமைப் பதவியிலிருந்து துரத்தி விட்டுப் பொதுஜனப் புரட்சி இயக்கத்தை நடத்த வேண்டும் - சோசலிஸ்ட் கட்சியினால்தான் அந்த மகா இயக்கத்தை நடத்தமுடியும் என்றெல்லாம் பேசிக் கொண்டோ மல்லவா? கடைசியாகப் பார்த்தால் அந்த மகாத்மா கிழவரும் மிதவாதக் காங்கிரஸ் தலைவர்களுமே இந்தியாவின் சுதந்திரத்தை நிலைநாட்டி விட்டார்களே?” என்றாள் தாரிணி. “அதைப்பற்றி இப்போது என்ன விவாதம்? எந்தச் சட்டியில் சுட்டாலும் பணியாரம் வேகவேண்டியதுதானே முக்கியம்? பணியாரம் வெந்து விட்டது! சுதந்திரம் வந்து விட்டது! நாம் கலியாணம் செய்து கொள்வதற்கிருந்த இதர தடையும் நீங்கிவிட்டது!” என்றான் சூரியா. “இந்தியா உண்மையில் சுதந்திரம் அடைந்து விட்டதென்றா சொல்கிறீர்கள்? எனக்குச் சந்தேகமா யிருக்கிறது!” என்றாள் தாரிணி. “அதிலேகூடச் சந்தேகம் வந்துவிட்டதா? ‘காந்திஜியின் ஆத்ம சக்தி வென்று விட்டது!’ ‘இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டது!’ ‘பண்டிட் மவுண்ட் பேட்டனுக்கு ஜே!’ என்று தேசமெல்லாம் ஒரே கோஷமாயிருக்கிறதே! அதில் சந்தேகம் என்ன இருக்க முடியும்? ஆகையால் நம் முன்னால் உள்ள அடுத்த முக்கியமான புரோகிராம் நம்முடைய திருமணந்தான்!” என்றான் சூரியா. “சூரியா! ஒரே பல்லவியைத் திருப்பித் திருப்பிப் பாடுகிறீர்களே?” “வேறு என்ன பல்லவியை இன்று பாடுவது? ‘ஜனகணமன’ ‘வந்தே மாதர’ கீதங்களைத்தான் ரேடியோவில் விடாமல் கொலை செய்து கொண்டிருக்கிறார்களே! ஆகையால் நம்முடைய கலியாணத் தேதியை இந்த நல்ல நாளில் நிச்சயம் செய்யலாம்.” “இந்தியா தேசம் சுதந்திரம் அடைந்தது உண்மையானால் எதற்காகத் தேசம் இரண்டாகப் பிளக்கப்பட வேண்டும்? சுதந்திர இந்தியா சுதந்திரமாகச் செய்த காரியமா இது?” “இந்தியா இரண்டாகப் பிரிந்ததினால் இப்போது என்ன மோசம் போய்விட்டது? இரண்டு பிரிவுகளும் தனித்தனியாகச் சுதந்திரம் அனுபவித்துப் போகட்டுமே! மேலும், இந்தியா பிரிந்தது என்றால் கோடரியைப் போட்டுப் பிளந்துவிட்டார்களா? அல்லது பீகார் பூகம்பத்தைப் போல் பூகம்பம் வந்து பிளந்துவிட்டதா? அப்படி ஒன்றும் இல்லையே? பாரதபூமி இன்னும் ஒரே பூமியாகத்தானே இருக்கிறது?” என்றான் சூரியா. “அதைப் பற்றித்தான் சந்தேகப்படுகிறேன். தாயின் இரண்டு கைகளையும் வெட்டித் துண்டித்துத் தனியாகப் போட்டுவிட்டது மாதிரி எனக்குத் தோன்றுகிறது!” “அதெல்லாம் ஒன்றுமில்லை, ஆதிகாலத்திலிருந்து நம் இந்தியா தேசம் பல ராஜ்யங்களாகப் பிளவுபட்டே இருந்திருக்கிறது.” “அந்தப் பிளவுகள் அரசியல் காரணம் பற்றியவை. இது மதத்தின் பெயரால் ஏற்பட்ட பிரிவினை அல்லவா?” “அதை நான் ஒப்புக் கொள்ளவில்லை, மதத்திற்காக ஏற்பட்ட பிரிவினை என்று எப்படிச் சொல்லலாம்? இந்தியாவில் முஸ்லிம்களும் பாகிஸ்தானில் ஹிந்துக்களும் வாழ்ந்திருக்கத்தானே போகிறார்கள்?” “அதுதான் சந்தேகம், சூரியா! ‘டான்’ பத்திரிகையை இன்று பார்க்க வில்லையா? அமிருதசரஸ் கடைவீதி தீப்பிடித்து எரிகிறதாமே!” “‘டான்’ பத்திரிகையில் வந்தது வெறும் புளுகாயிருக்கும்.அப்படியே இருந்தாலும் இருக்கட்டும். தேசத்துக்காக நாம் கவலைப்பட்டதெல்லாம் போதும்! எது எப்படியாவது போகட்டும். இப்போது நம் கலியாணத்தைப் பற்றிச் சொல்லுங்கள்!” “நமக்குள் கலியாணம் எப்படிச் சாத்தியம்? மத வித்தியாசம் ஒன்று இருக்கிறதே! நீங்கள் ஹிந்து; நான் முஸ்லிம்.” "இது என்ன புதிய தடை புறப்படுகிறது! நான் ஹிந்துவுமல்ல; நீங்கள் முஸ்லிமும் அல்ல. நமக்கு மதம் என்பதே கிடையாது. மனித தர்மந்தான் நம்முடைய மதம். இதைப்பற்றிப் பல தடவை பேசி முடிவு கட்டியிருக்கிறோம்! மேலும் நீங்கள் முஸ்லிம் மதத்தினர் என்பதாக நான் என்றைக்கும் நம்பவேயில்லை. சில சமயம் முஸ்லிம் ஸ்திரீயைப்போல் உடை தரித்திருக்கிறீர்கள். அதனால் நீங்கள் முஸ்லிம் ஆகிவிட முடியாது." “ஒருவருடைய தாயும் தகப்பனும் முஸ்லிமா யிருந்தால்….?” “ஒருவருடைய தாயும் தகப்பனும் முஸ்லிமாயிருந்தால் அதைப் பற்றி ரஜினிபூர் ராஜகுமாரிக்கு என்ன கவலை?” என்றான் சூரியா. தாரிணி கலகலவென்று சிரித்தாள். “முஸ்லிம் ஸ்திரீயைப் போன்ற வேஷம் சில காரியங்களுக்கு ரொம்பவும் சௌகரியமாயிருக்கிறது. இல்லாவிட்டால் ரஜினிபூர் அரண்மனையை விட்டு நான் வெளிக் கிளம்பியிருக்கவே முடியாது. ரஜினிபூர் ராஜாவும் அவருடைய தாயாரும் என்னை எப்படியாவது அங்கே இருக்கப் பண்ண வேண்டும் என்று பார்த்தார்கள். பாதி ராஜ்யம் கேட்டால்கூடக் கொடுத்திருப்பார்கள். ஆனால் நான் முஸ்லிம் ஸ்திரீ என்பதை அவர்களால் சகிக்க முடியவில்லை! அதனாலேயே நான் அங்கிருந்து புறப்படச் சம்மதித்தார்கள். இப்போது கூட நான் உண்மையில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்துவிடவில்லையென்று சொன்னால் போதும்; ரஜினிபூர் அரண்மனைக்கு நான்தான் ராணி!” “கூடவே கூடாது; என் இதய ராஜ்யத்துக்குத் தாங்கள் ராணியாயிருந்தால் போதும்; நமக்குக் கலியாணம் ஆனவுடனே….” “சூரியா! உங்களுக்குக் கூச்சம் என்பதே கிடையாதா? ஆயிரம் பதினாயிரம் ஜனங்களுக்கு மத்தியிலேதானா காதலையும் கலியாணத்தையும் பற்றிப் பேசுவது? கொஞ்சம் தனி இடமாகப் பார்த்து உட்கார்ந்து கொண்டு பேசக் கூடாதா?” என்றாள் தாரிணி. இருபத்து ஆறாம் அத்தியாயம் - தந்தியின் மர்மம் தாரிணியும் சூரியாவும் டில்லி டவுன்ஹாலுக்குப் பின்னால் உள்ள பூந்தோட்டத்துக்குச் சென்று அங்கே போட்டிருந்த சலவைக்கல் பெஞ்சி ஒன்றில் உட்கார்ந்து கொண்டார்கள். டவுன் ஹாலின் தீபாலங்கார ஒளி நிலா வெளிச்சத்தைப் போல் நாலாபுறமும் கவிந்து பரந்திருந்தது. நகரத்தின் பல பகுதிகளிலும் நடந்த சுதந்திரக் கொண்டாட்டங்களின் கோலாகல சத்தம் சில சமயம் குறைவாகவும் சில சமயம் அதிகமாகவும் கேட்டது. அவர்கள் இருவரும் உட்கார்ந்திருந்த இடத்தை ஒட்டிச் சென்ற நடைபாதைகளில் குறுக்கும் நெடுக்கும் ஜனங்கள் கும்பல் கும்பலாகப் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் குதூகலமாகப் பேசிக்கொண்டும் வாய்விட்டுச் சிரித்துக் கொண்டும் சென்றார்கள். அவர்களுடைய கவனமெல்லாம் அன்று நடந்த சுதந்திர விழா வைபவங்களிலே ஈடுபட்டிருந்தபடியால் சூரியாவும் தாரிணியும் அங்கே தனித்து உட்கார்ந்திருப்பதை அவர்களில் யாரும் திரும்பிப் பார்க்கக்கூட இல்லை. சூரியா ஆர்வத்துடன் கூறினான்:- “தாரிணி! இங்கே அக்கம்பக்கத்தில் நம்முடைய பேச்சை ஒட்டுக் கேட்கக் கூடியவர்கள் யாரையும் காணோம். நாம் தாராளமாக மனம் விட்டுப் பேசலாம் அல்லவா? உண்மையில் நம்முடைய கலியாண விஷயத்தை ஆயிரம் பேருக்கு மத்தியில் சாட்சி வைத்துக்கொண்டு பேசி முடிவு செய்வதே விசேஷமாயிருக்கும் என்று நினைத்தேன். ஏனெனில் முன்னொரு சமயம் நாம் இப்படித்தான் தனிமையாக உட்கார்ந்து பேசினோம். இந்தியா சுதந்திரம் அடைந்ததும் நம்முடைய கலியாணத்தை முடித்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்தோம்….” தாரிணி குறுக்கிட்டு, “கொஞ்சம் தவறாகச் சொல்கிறீர்கள். இந்தியா சுதந்திரம் அடைந்ததும் நம்முடைய கலியாணத்தைப் பற்றி யோசிக்கலாம் என்று முடிவு செய்தோம்!” என்றாள். “அப்படியே இருக்கட்டும், இப்போது அதைப் பற்றி நாம் யோசிப்பதற்கு வேறு தடை ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்டான் சூரியா. அந்தச் சமயத்தில் வெள்ளி வீதியிலிருந்து, “மகாத்மா காந்திக்கும் ஜே!” “பண்டிட் மவுண்ட்பேட்டனுக்கு ஜே!” என்று ஜனங்கள் பலத்த குரலில் கோஷமிடும் சத்தம் கேட்டது. “கோஷத்தைக் கேட்டீர்களா? இத்தனை ஜனங்கள் இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது என்று நம்பிக் குதூகலப்படுகிறார்கள். ஆனால் உங்களுக்கு மட்டும் இந்தியா சுதந்திரம் பெற்றதில் நம்பிக்கை உண்டாகவில்லை!” என்று சூரியா சுட்டிக் காட்டினான். “எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கத்தான் இருக்கிறது. ஆனால் என் மனது மட்டும் எதனாலோ நிம்மதி அடையவில்லை என்று தோன்றுகிறது.” “அப்படியானால் அது என்னுடைய தவறில்லை; காந்தி மகாத்மாவின் தவறு. அந்தத் தவறைத் திருத்துவதற்கு நான் ஒன்றும் செய்வதற்கில்லை. தாரிணி! நம்முடைய கலியாணத்துக்குத் தடையாக இருப்பது வேறு ஏதாவது உண்டா?” என்று சூரியா கேட்டான். “இன்னும் ஒரு தடை இருக்கிறது. என்னுடைய தாயார் தகப்பனாரைப் பற்றிய உண்மையைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் நான் கலியாணம் செய்து கொள்ள விரும்பவில்லை! என் தாயார் தகப்பனார் யார் என்று தெரியாவிட்டால் எந்தச் சம்பிரதாயப்படி நாம் கலியாணம் செய்து கொள்வது?” “இது என்ன, சீர்திருத்த ஆவேசமுள்ள புரட்சித் தலைவியான தாரிணி திடீரென்று வைதிகச் சம்பிரதாயத்தில் பற்று கொண்ட அதிசயம்! குருட்டு நம்பிக்கைகளையும் அர்த்தமற்ற பழைய ஆசாரங்களையும் தகர்த்தெறிந்து காதல் தெய்வத்தின் சந்நிதியில் கலியாணம் செய்து கொள்வது என்று நாம் எத்தனையோ தடவை பேசி முடிவு செய்யவில்லையா?” “பேசும்போது அதெல்லாம் சரியாகத் தோன்றியது. காரியத்தில் வரும்போது தயக்கமாயிருக்கிறது. சூரியா! என் பெற்றோர்கள் யார் என்று தெரியாத வரையில் என் மனம் நிம்மதி அடையாது. இதுவரையில் இந்தியா தேசத்தின் சுதந்திர இயக்கத்தில் கவனம் சென்று கொண்டிருந்தது, இனிமேல் அதுவும் இல்லை. என் தாய் தகப்பனார் யார் என்ற விசாரம் என் மனதை ஓயாமல் வாட்டிக் கொண்டிருக்கும். இந்த விசாரம் தீரும்வரை இல்வாழ்க்கையில் என்னால் உங்களுக்குச் சுகமும் நிம்மதியும் ஏற்படாது.” “அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. நீ படுகிற விசாரத்தை நானும் பகிர்ந்துகொண்டு அநுபவிப்பேன். உன் காரணமாக எனக்கு ஏற்படுகிற கஷ்டம் எல்லாம் உண்மையில் சுகமென்றே தோன்றும். ஆனாலும் உன்னுடைய மன நிம்மதி மிகவும் முக்கியமானது என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதற்காக வேண்டிய பிரயத்தனம் செய்யத் தயாராயிருக்கிறேன். தாரிணி! உன்னுடைய பெற்றோர்கள் யார் என்பதைப்பற்றி உன் மனதில் எந்தவிதமான சந்தேகமோ, ஊகமோ தோன்றியதில்லையா?” “தோன்றாமல் என்ன? பல தடவை தோன்றித்தானிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு தடவையும் என் ஊகம் பொய்யாய்ப் போயிருக்கிறது. முதலில் ரஸியா பேகத்தை என் தாயார் என்றும் சீதாவின் தகப்பனார்தான் எனக்கும் தகப்பனார் என்றும் எண்ணியிருந்தேன் அது பிசகு என்று ஏற்பட்டது. ரஸியா பேகம் உண்மைத் தாயார் அல்லவென்றும் வளர்ப்புத் தாயார் என்றும் வெளியாயிற்று. பிறகு என் உண்மைத் தாயார் யார் என்று கண்டுபிடிக்க முயன்றேன். ரஸியா பேகத்தின் சகோதரி கங்காபாய் என் தாயார் என்றும், அவள் அபாக்கியவதியாக அற்பாயுளில் இறந்தாள் என்றும் தெரிந்தது. அதற்குப் பிறகு என் தகப்பனார் யார் என்று கண்டுபிடிக்க முயன்று வருகிறேன் இன்றுவரை அது தெரிந்தபாடில்லை.” “தாரிணி! நிச்சயமாக நீ ரஜினிபூர் ராஜாவின் புதல்வி அல்லவா?” “நான் எப்படிச் சொல்ல முடியும்? ரஜினிபூர் பெரிய ராணி நான் ராஜகுமாரிதான் என்று சொல்லுகிறாள். முதலில் அதை மறுதளித்த ரஸியா பேகமும் இப்போது அதுதான் உண்மையென்று சொல்லுகிறாள். காலஞ்சென்ற ராஜாவின் சொந்த சொத்தில் நான் பங்கு கேட்கவேண்டும் என்றுகூட ரஸியாபேகம் விரும்புகிறாள். ஆனால் என் மனத்திற்குள் மட்டும் ஏதோ ஒன்று நிச்சயமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறது; நான் ஒரு சுதேச ராஜாவின் குமாரியாக இருக்க முடியாது என்று.” “தாரிணி! என் மனத்திலிருந்து ஒரு பெரிய பாரம் இறங்கியது போலிருக்கிறது. உன் உள் உணர்ச்சி எப்போதும் சரியாயிருப்பது வழக்கம். இது விஷயத்திலும் அது சரியாகத்தானிருக்க வேண்டும்.” “ஆனாலும் என்ன உண்மை என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். சூரியா! சில சமயம் ஒரு விசித்திரமான எண்ணம் என் மனதில் உண்டாகிறது. சீதாவை நான் என்று எண்ணிக் கொண்டு ரஜினிபூர் ஆட்கள் பிடித்துக்கொண்டு போனார்கள் அல்லவா? இது ஏன் என்று சில சமயம் தான் சிந்தனை செய்வதுண்டு. நீங்கள் போலீஸ் பாதுகாப்பிலிருந்து தப்பித்துக் கொண்டு போன பிறகு நான் சீதாவின் கதியை அறிந்து கொள்வதற்காக ரஜினிபூருக்குப் போனேன். ராஜமாதாவும் ராஜகுமாரரும் வற்புறுத்தியதின் பேரில் சில நாள் அங்கேயே தங்கியிருந்தேன். அப்போது அவர்கள் பல தடவை சீதாவின் முகஜாடை என் முக ஜாடையைப் போல் இருந்ததாகவும் அதனால்தான் அந்தப் பிசகு நேர்ந்ததாகவும் சொன்னார்கள். இது உண்மையா? அப்படியானால் இதன் காரணம் என்னவாயிருக்கக்கூடும்? உங்களால் ஊகித்துச் சொல்ல முடியுமா?” என்று தாரிணி கேட்டாள். சூரியா சிந்தனையில் ஆழ்ந்தாள். ரஜினிபூர் ஆட்கள் அத்தகைய தவறு ஏன் செய்தார்கள்? ஒருவேளை அவர்கள் செய்த தவறில் தாரிணியின் பிறப்பைக் குறித்த இரகசியம் இருக்குமோ? அது என்னவாயிருக்ககூடும்? - சூரியாவுக்கு விளங்கவில்லை. “எனக்கு அத்தகைய காரணம் ஒன்றும் தோன்றவில்லை. இந்தப் புதிரை அவிழ்க்கக் கூடியவர்கள் வேறு யாரும் இல்லையா, தாரிணி!” “இல்லாமல் என்ன? ரஸியா பேகத்துக்கும் மௌல்வி சாகிபுக்கும் அது நிச்சயம் தெரியும். ஒரு நாளைக்கு அவர்கள் இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. மௌல்வி சாகிபு என்னிடம் உண்மையைச் சொல்லிவிடவேண்டும் என்று வற்புறுத்தினார். ரஸியா பேகம் கூடாது என்று சொன்னாள். இருவருக்கும் இது விஷயமாகப் பெரிய சண்டையே நடந்தது. அது ஒன்றும் என் காதில் விழாதது போல் நான் நடந்துகொண்டேன். ஏனெனில் வற்புறுத்திக் கேட்டால் உண்மை வெளி வராது. சந்தர்ப்பம் பார்த்துக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.” “மௌல்வி சாகிபு என்று யாரைச் சொல்லுகிறாய்? ஜும்மா மசூதிக்கு எதிரில் நீ சில காலம் வசித்த சந்து வீட்டில் குரான் வாசித்துக் கொண்டிருந்தாரே, அவரையா?” “ஆமாம், சூரியா! அவரைத்தான் சொல்கிறேன்.” “அவர் யார், தாரிணி? அந்த மௌல்வி சாகிபு யார்?” “இது என்ன கேள்வி? மௌல்வி சாகிபு ரஸியா பேகத்தின் கணவர்!” என்றாள் தாரிணி. “அது தெரியும், மௌல்வி சாகிபு ரஸியா பேகத்தின் கணவராவதற்கு முன்னால் அவருடைய பெயர் என்ன என்று கேட்டேன்.” தாரிணி சிறிது நேரம் யோசனை செய்துவிட்டுக் கூறினாள்: “உங்களுக்கு அது தெரிந்திருக்க வேண்டியதுதான். நீங்களே ஊகித்துத் தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைத்தேன். அதை மறைத்து வைப்பதில் இனி உபயோகமும் இல்லை சூரியா! அந்த மௌல்வி சாகிபு, சீதாவின் தகப்பனார் துரைசாமி ஐயர்தான்.” சூரியா மௌனமாக இருந்தான்; தாரிணி கூறியதை அவன் மனம் ஜீரணம் செய்து கொண்டிருந்தது. “என்ன? ஒரே ஆச்சரியக் கடலில் மூழ்கிவிட்டீர்கள் போலக் காணப்படுகிறது!” என்றாள் தாரிணி. “அப்படி ஒன்றும் இல்லை, சில விஷயங்களை ஞாபகப்படுத்திக் கொண்டேன். சீதா தன்னை ஆக்ரா கோர்ட்டில் ஒரு முஸ்லிம் வந்து சாட்சி கூறிக் காப்பாற்றியதாகச் சொன்னாள். எனக்கு உடனே உங்கள் வீட்டில் பார்த்த மௌல்வியின் ஞாபகம் வந்தது. இரண்டையும் இரண்டையும் கூட்டி நாலு என்று ஊகம் செய்து கொண்டேன். தாரிணி! அந்தச் சாகிபுவை நான் உடனே பார்க்க விரும்புகிறேன்.” “எதற்காக? அவரிடம் சண்டை பிடிப்பதற்காகவா?” “ஆமாம்.” “ரஸியா பேகத்தைக் கலியாணம் செய்து கொண்டதற்காகவா? அல்லது அவர் ஹிந்து மதத்துக்குத் துரோகம் செய்ததற்காகவா?” “அதற்கெல்லாம் இல்லை, அவர் எங்களையெல்லாம் மறந்துவிட்டிருப்பதற்காக ஒரு முக்கிய விஷயம் அவரைக் கேட்டு நான் தெரிந்து கொள்ள வண்டும். சீதாவின் கலியாணத்தன்று அவர் ‘கலியாணத்தை நிறுத்தவும்’ என்று தந்தி கொடுத்திருந்தார். அதன் காரணத்தை இன்னொரு சமயம் சொல்கிறேன் என்றார். பிறகு அவரைக் கேட்பதற்குச் சந்தர்ப்பம் ஏற்படவேயில்லை. தாரிணி! இப்போது உடனே போய் நான் அவரைப் பார்த்தாக வேண்டும்.” “அது முடியாத காரியம், மௌல்வி சாகிபும் ரஸியா பேகமும் கொஞ்ச நாளாக இந்த ஊரில் இல்லை. போகிற இடமும் என்னிடம் சொல்லவில்லை. ஆனால் அந்தத் தந்தியின் காரணத்தை நானே சொல்லிவிடக்கூடும், சூரியா! கஷ்டமான விஷயந்தான்; ஆனால் சொல்லி விடுகிறேன். அந்தச் சமயம் வரையில் உங்கள் மாமாவை நான் என் தகப்பனார் என்றும், ரஸியா பேகத்தைத் தாயார் என்றும் எண்ணிக் கொண்டிருந்தேன். சௌந்தரராகவனுக்கும் எனக்கும் இருந்த நட்பைக் குறித்து ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன் அல்லவா? அந்த நட்பில் ஏமாற்றமும் வெறுப்பும் அடைந்து பீகார் பூகம்ப விபத்தில் சேவை செய்வதற்காக நான் புறப்பட்டுப் போனேன். அந்தச் சமயத்தில் ரஸியா பேகம் ரஜினிபூர் ராஜாவைக் குத்த முயன்று சிறை சென்றாள். இந்தச் செய்தியை எனக்குக் கூறி ஆறுதல் சொல்லுவதற்காகத் துரைசாமி ஐயர் என்னைத் தேடிக்கொண்டு வந்தார். செய்தியைச் சொல்லிவிட்டு எனக்கு ஆறுதலாக ரஸியா பேகம் உண்மையில் என் தாய் அல்ல என்றும் சொன்னார். கலியாணம் செய்துகொண்டு சுகமாய் வாழும்படி எனக்கு போதித்தார். அப்போதுதான் நான் வரித்திருந்த புருஷனுக்கே சீதாவை மணம் செய்யப் பேசியிருக்கிறார்கள் என்று அவருக்குத் தெரிந்தது. பாவம்! என்னிடம் அவருக்கு ரொம்பவும் அபிமானம் உண்டு. ஆகையினாலேதான் ‘கலியாணத்தை நிறுத்திவிடவும்’ என்று அவர் தந்தி கொடுத்தார். அவர் தந்தி கொடுத்தது அப்போது எனக்குத் தெரியாது. வெகுகாலத்துக்குப் பிற்பாடுதான் தெரிந்தது.” “தாரிணி! அந்தத் தந்தியின் மர்மம் இன்னதென்பது வெகுகாலமாக என் உள்ளத்தை வருத்தி வந்தது; அதை இன்று வெளியிட்டதற்காக வந்தனம். அந்தத் தந்தி விஷயமாக நான் மிக்க மூடத்தனமாக நடந்து கொண்டேன். அதை யாரிடமும் காட்டாமல் மறைத்து வைத்தேன்; தந்தியில் கண்டிருந்தபடி கலியாணத்தை மட்டும் நிறுத்தி விட்டிருந்தால்?…. அடாடா! சீதாவின் வாழ்க்கை இவ்வளவு துன்பமயமாகியிராதல்லவா? நாம் நல்லது என்று நினைத்துக் கொண்டு செய்கிற காரியம் சில சமயம் எவ்வளவு கெடுதலாய் முடிந்துவிடுகிறது!” “நல்ல எண்ணத்துடன் செய்கிற காரியம் ஒரு நாளும் கெடுதலாய் முடியாது. இப்போது சீதாவும் சௌந்தரராகவனும் எவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்த்தால் பரவசமடை வீர்கள்.” “அவர்கள் சந்தோஷமாயிருப்பது உனக்கு எப்படித் தெரியும், தாரிணி? நேரில் பார்த்ததைப் போலச் சொல்லு கிறாயே?” “ஆமாம்; பஞ்சாபுக்குப் போய் நேரில் அவர்களைப் பார்த்தபடியினால்தான் சொல்லுகிறேன்.” “ஆகா! அது எப்போது? பஞ்சாபுக்கு எப்போது போயிருந்தாய்? சீதா நிஜமாகவே சந்தோஷமாகவே இருக்கிறாளா?” என்று சூரியா அடங்காத ஆர்வத்துடன் கேட்டான். “அத்தங்காளைப்பற்றிச் சொன்னதும் வருகிற ஆத்திரத்தைப் பார்!” என்றாள் தாரிணி. “என்னைவிடச் சீதாவின் விஷயத்தில் உனக்கு அக்கறை அதிகமாயிருப்பது நன்றாய்த் தெரிகிறதே? நான் போய் அவர்களைப் பார்க்கவில்லையே? நீதானே பார்த்திருக்கிறாய்? இத்தனைக்கும் நாம் அவர்களுடைய வாழ்க்கையில் தலையிடுவதினால் அவர்களுக்குத் தொல்லைதான் ஏற்படுகிறது என்று நாம் இருவரும் சேர்ந்து தீர்மானம் செய்திருந்தோமே!….” “சீதாவின் விஷயத்தில் எனக்கு ஏன் இத்தனை பாசம் என்பது எனக்கே விளங்கவில்லைதான்…..” “தாரிணி! நிஜமாகச் சீதாவின் மேல் உள்ள பாசத்தினாலே தான் நீ பஞ்சாபுக்குப் போனாயா?” “இல்லை! பஞ்சாபுக்குப் புறப்பட்டபோது அவர்களைப் பார்க்கும் உத்தேசம் எனக்கில்லை. இந்த வருஷ ஆரம்பத்தில் மறுபடியும் என்னுடைய சரித்திர ஆராய்ச்சி வேலையை நான் ஆரம்பித்தேன். ராவல்பிண்டிக்கு அருகிலுள்ள தட்சசீலத்துக்கு நானும் என் தோழி நிர்மலாவும் போனோம். அங்கே நாங்கள் பார்த்த அற்புதங்களைப் பற்றி ஒரு புத்தகமே எழுத வேண்டும். திரும்பி வரும்போது சீதா வசிக்கும் ஹௌஷங்காபாத் வழியாக வரவேண்டியிருந்தது. இறங்கி அவளைப் பார்க்காமல் வருவதற்கு என் மனம் கேட்கவில்லை. இறங்கியதும் நல்லதாய்ப் போயிற்று. சீதாவும் சௌந்தரராகவனும் குழந்தை வஸந்தியும் எவ்வளவு சந்தோஷமாயிருக்கிறார்கள் தெரியுமா? வஸந்தியின் கன்னங்கள் காஷ்மீர் ரோஜாப் புஷ்பங்களைப் போல இருக்கின்றன. அந்தக் குழந்தையின் முகம் என் மனதைவிட்டுப் போகவேயில்லை. சீதாவும் உடம்பு நன்றாய்த் தேறியிருக்கிறாள்….” “சௌந்தரராகவனும் நன்றாய்த்தானிருக்கிறார்! போன வருஷம் இந்த நாளில் யமலோகத்தை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார் என்று காட்டுவதற்கு யாதொரு அடையாளமும் இல்லை!” என்று சூரியா சொன்னதும் தாரிணி வியப்படைந்தாள். “நீங்கள் அவரைப் பார்த்தீர்களா, என்ன? எப்போது எங்கே?” என்று கேட்டாள். “சௌந்தரராகவன் பெயரைச் சொன்னதும் வருகிற ஆத்திரத்தைப் பார்” என்றான் சூரியா. “எங்கள் பழைய சரித்திரத்தை நானும் மறந்துவிட்டேன். அவரும் அடியோடு மறந்துவிட்டார்; சீதாவுங்கூட மறந்து விட்டாள். நீங்கள் மட்டும் மறக்கவில்லை போலிருக்கிறது!” என்றாள் தாரிணி. "மன்னிக்க வேண்டும், நானும் அந்தப் பழைய கதையையெல்லாம் மறந்துதான் இருந்தேன். ஆனால் இன்று காலையில் ராகவனைப் பார்த்தபடியால் பழைய கதை நினைவு வந்தது…." இத்தனை நேரமும் சாவதானமாக உட்கார்ந்திருந்த தாரிணி சட்டென்று எழுந்து நின்றாள். “இன்று காலையில் பார்த்தீர்கள் என்றால் இந்த டில்லியில் தான் பார்த்திருக்க வேண்டும். அவரை மட்டுமா? சீதாவும்கூட இருந்தாளா?” “அவரை மட்டும்தான் பார்த்தேன், சீதாவை அழைத்து வரவில்லையாம். உத்தியோக சபலம் அவரை மறுபடியும் பிடித்துக் கொண்டிருக்கிறது. இப்போதுதான் புதுடில்லியில் சுதந்திர அரசாங்கம் ஏற்படப் போகிறதே? தம்முடைய உத்தியோகத்தை திருப்பிக் கொடுக்கமாட்டார்களா என்று பார்ப்பதற்காக வந்தாராம். டில்லிக்கு வந்து ஒரு வாரம் ஆயிற்றாம்.” “ஐயோ! இது என்ன விபரீதம்? இரண்டு நாளாக அடிக்கடி எனக்குச் சீதாவின் ஞாபகம் வந்து கொண்டிருக்கிறது. அதன் காரணம் இப்போதுதான் தெரிகிறது. சூரியா! சௌந்தரராகவன் எங்கே தங்கியிருக்கிறார்? அவரை நான் உடனே பார்க்க வேண்டும்.” “அவரை உடனே பார்க்க முடியாது, இன்று காலையிலேயே அவர் கல்கத்தாவுக்கு ரயில் ஏறிவிட்டார். அவருடைய உத்தியோக சம்பந்தமான பழைய ரிகார்டுகள் கல்கத்தாவில் தங்கிவிட்டனவாம். அவற்றை எடுத்து வருவதற்காகப் போகிறாராம். தமக்கு மறுபடி உத்தியோகம் வந்துவிடும் என்றும் டில்லிக்கே திரும்பி வந்துவிடப் போவதாகவும் எக்களிப்புடன் சொன்னார். அதைக் குறித்து நீ ஏன் இவ்வளவு பதட்டமடைய வேண்டும், தாரிணி!” “ஏன் என்று எனக்கே தெரியவில்லை. சூரியா! என்னுடைய உள் உணர்ச்சியில் உங்களுக்கு நம்பிக்கை உண்டு என்று சொன்னீர்கள். சீதாவுக்கு ஏதோ ஆபத்து வரப் போகிறது என்று என் உள் உணர்ச்சி சொல்லுகிறது. அவளைக் காப்பாற்றுவதற்கு நாம் உடனே கிளம்பியாக வேண்டும்.” “இது என்ன பைத்தியம்?” "எனக்கு பைத்தியம் இல்லை; ராவல்பிண்டி கலவரத்தின் போது நான் பஞ்சாப்பில் இருந்தேன். அந்தப் பயங்கரங்களைப் பற்றி இப்போது நினைத்தாலும் குலை நடுங்குகிறது. ராவல்பிண்டியைப்போல் ஆயிரம் ராவல்பிண்டிகள் பஞ்சாப் முழுதும் நடக்கலாம் என்று அங்கிருந்து வந்தவர்கள் சொல்லுகிறார்கள். நம்முடைய கட்சியைச் சேர்ந்த சிநேகிதர்கள் பலர் பஞ்சாபில் இருக்க விரும்பாமல் இங்கே வந்துவிட்டார்கள்." “அப்படியிருந்தால் சௌந்தர ராகவனுக்குத் தெரிந்திராதா? அவர் ஏன் சீதாவை விட்டுவிட்டு வருகிறார்?” எனக்குப் பைத்தியம் என்று சொன்னீர்கள் அல்லவா? பைத்தியம் எனக்கில்லை; அவருக்குத்தான். பஞ்சாப் சீக்கியர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று அவர் ஒரே திட நம்பிக்கையில் இருக்கிறார். அதனாலேயே சீக்கியர் வசிக்கும் பகுதியில் அவர் வீடு எடுத்துக் கொண்டு வசிக்கிறார். ஆனால் அவருடைய நம்பிக்கை பைத்தியக்கார நம்பிக்கை. சூரியா! நீங்கள் என்னுடன் வரப்போகிறீர்களா? இல்லையா? வரா விட்டால் நான் தனியாகவே போகப் போகிறேன். ஒருவேளை நீங்கள் இங்கே இருப்பதே நலமாயிருக்கும்." “ஒரு நாளும் இல்லை தாரிணி! உன்னுடன் நரகத்துக்கு வேண்டுமானாலும் வரத் தயார் என்று பல தடவை நான் சொல்லி யதுண்டு. அவசியமானால் அதைக் கட்டாயம் நிறைவேற்றுவேன். ஆனால் இது அவசியமா, உசிதமா என்று மறுபடியும் யோசிக்க வேண்டும். நாம் சீதாவின் விஷயத்தில் தலையிட்ட போதெல்லாம் அவளுக்குக் கஷ்டந்தான் நேர்ந்திருக்கிறது…..” “அதெல்லாம் பிராயசித்தம் செய்யும்படியான சந்தர்ப்பம் இப்போது ஒருவேளை ஏற்படுமோ, என்னமோ? யார் கண்டது?” என்று சொல்லிக்கொண்டே தாரிணி விரைவாக நடக்கத் தொடங்கினாள். சூரியா அவளைத் தொடர்ந்து சென்றான். இருபத்து ஏழாம் அத்தியாயம் - இருளில் ஒரு குரல் நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருந்தது; கடிகாரத்தின் முட்கள் பன்னிரண்டு எண்ணிக்கையைச் சமீபித்துக் கொண்டிருந்தன. சீதா கையில் ‘டிரிப்யூன்’ பத்திரிகை வைத்திருந்தாள். கொஞ்சம் பத்திரிகை படிப்பதும் பிறகு ஏதோ யோசிப்பதும் கடிகாரத்தைப் பார்ப்பதும் மறுபடி படிப்பதுமாயிருந்தாள். தூக்கம் வராத இரவுகளில் சீதா ஏதாவது புத்தகமோ பத்திரிகையோ படிப்பது வழக்கம். சிறிது நேரத்துக்கெல்லாம் தூக்கம் வந்துவிடும். ஆனால் அன்றைக்கு வெகுநேரம் படித்தும் தூக்கம் வரவில்லை. பல காரணங்களால் அவளுடைய மனம் ஏற்கனவே கலக்கமுற்றிருந்தது. பத்திரிகையில் படித்த செய்திகள் அந்தக் கலக்கத்தை அதிகப்படுத்தின. ஹௌஷங்காபாத் நகரத்தின் கோடியில் அது ஒரு தனி வீடு. சுற்றிலும் சிறு தோட்டமும் காம்பவுண்டு சுவரும் இருந்தன. வீட்டின் மச்சு அறையில் சீதா தன்னந் தனியாக இருந்தாள். இல்லை, ‘தன்னந்தனியாக’ என்று சொல்வது தவறு. பக்கத்துக் கட்டிலில் குழந்தை வஸந்தி படுத்துத் தூங்கினாள். ஆனால் குழந்தை வஸந்தியைத் துணை என்று சொல்ல முடியாதல்லவா? சீக்கிய காவற்காரன் தினம் தினம் இராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டு விட்டு ஒன்பதரை மணிக்குள் திரும்பி வந்து விடுவது வழக்கம். அன்றைக்கு எதனாலோ அவன் திரும்பவில்லை. இந்தப் பத்திரிகையில் வந்திருக்கும் செய்திகளுக்கும் அவன் வராததற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ? பக்கத்துக் கட்டிலில் படுத்திருந்த வஸந்தியின் மீது சீதாவின் பார்வை சென்றது. குழந்தையின் கன்னங்கள் உப்பி இரண்டு அழகிய ஆப்பிள் பழங்களைப்போலக் காணப்பட்டன. மூடிய கண்களுடன் தூங்கிய குழந்தையின் முகத்தில் களை சொட்டிற்று. பஞ்சாபுக்கு வந்த பிறகு குழந்தைக்கு உடம்பு நன்றாய் ஆகியிருக்கிறது. ஒரு வருஷத்தில் எவ்வளவு நல்ல வளர்த்தி! நம்முடைய ஊர்ப் பக்கமாயிருந்தால், குழந்தைக்கு இப்போது மேலாக்குப் போட வேண்டும் அல்லது சித்தாடை உடுத்த வேண்டும் என்பார்கள். ஆனால் இந்தப் பக்கத்திலேதான் பெரிய பெரிய ஸ்திரீகள் எல்லாரும் கால் சட்டையும் மேல் சட்டையும் அணிந்து கொண்டு ஒரு அங்கவஸ்திரத்தையும் தரித்துக் கொண்டு வெளியில் புறப்பட்டு விடுகிறார்களே? இங்கே தேச ஆசாரம் அப்படி! குழந்தைக்கு மேலாக்கு, சித்தாடை வாங்குவது பற்றி என்ன கவலை? சுவரிலே மாட்டியிருந்த வஸந்தியின் போட்டோ படத்தைச் சீதா பார்த்தாள். பஞ்சாப் பெண்களைப் போல் கால் சட்டை, மேல் சட்டை, அங்கவஸ்திரத்துடன் விளங்கிய வஸந்தியின் படம் அது, அந்த உடை குழந்தைக்கு அழகாய்த் தானிருக்கிறது. ஆனால் சில வருஷம் போன பிறகு நன்றாயிருக்குமா? ஒருவேளை இந்தப் பக்கத்திலேயே நாம் நெடு நாள் இருந்துவிட்டால் வஸந்தி வயதான பின்னரும் இப்படித்தான் உடை தரிப்பாளோ, என்னமோ? இந்த ஊரிலேயே இருப்பதற்கு ஆட்சேபம் என்ன? ஒன்றுமேயில்லை, பஞ்சாபைப் போன்ற தேசமே கிடையாது. எந்த விதத்தில் பார்த்தாலும் சரிதான். கள்ளிச் சொட்டைப் போலக் கனமான பால், ரூபாய்க்கு இரண்டரைப் படி. ஆப்பிளும் ஆரஞ்சும் திராட்சையும் வாதாமியும் கொள்ளை கொள்ளையாய்க் கிடைக்கின்றன; மற்ற சாமான்களும் அப்படித்தான். ஏன் எல்லாருக்கும் உடம்பு நன்றாய் ஆகாது? இந்தத் தேசத்து ஜனங்கள் எல்லாரும் நல்ல ஆஜானுபாகுவாக வளர்ந்திருப்பதற்குக் கேட்பானேன்? ஆகா! இந்தப் பக்கத்தின் இயற்கை அழகைத்தான் என்னவென்று சொல்ல? ஏதோ நம்முடைய பக்கங்களிலும் ‘வஸந்த காலம்’ என்று சொல்கிறார்கள். அங்கேயெல்லாம் வசந்த காலத்தைக் கண்டது யார்? புத்தகங்களிலே படிப்பதுதான். இங்கேயோ சரியாகப் பிப்ரவரி மாதம் 15-ம் தேதி வஸந்த காலம் பிறப்பதைக் கண்ணாலே காணலாம். முதல் நாள் வரையில் மரங்கள் எல்லாம் மொட்டை மொட்டையாய் நிற்கும். பிப்ரவரி மாதம் 15-ந் தேதியன்று பார்த்தால் மரங்களில் எல்லாம் சின்னஞ்சிறு சிவந்த மொட்டுக்களைக் காணலாம். முதலில் மொட்டுக்கள் மலரும்; பிறகு இலைகள் தளிர்க்கும். பிப்ரவரி 14-ந் தேதி வரையில் வாசற் பக்கமெல்லாம் வெறுங் கட்டாந் தரையாகக் காணப்படும். சரியாக 15-ந் தேதியன்று எங்கே பார்த்தாலும் தரையில் சிறு சிறு மஞ்சள் பூக்கள் பூத்துக் குலுங்கும். பூமாதேவி திடீரென்று குதூகலித்துச் சிரிப்பது போன்ற அக்காட்சியை எப்படி வர்ணிப்பது? இவ்வளவு அழகான நாட்டை விட்டு ஏன் போகவேண்டும்? கோடைகாலத்தில் இங்கே வெயில் என்னமோ கடுமைதான்; சந்தேகம் இல்லை; ஆனால் பக்கத்தில் காஷ்மீர் இருக்கிறது; சிம்லா இருக்கிறது; இன்னும் பல மலை வாசங்களும் இருக்கின்றன. மே, ஜுன் மாதங்களில் மலைக்குப் போய்விட்டு வந்தால் மற்ற மாதங்களைப் பற்றிக் கவலையே இல்லை. பஞ்சாபுக்கு வந்தபிறகு, ஏறக்குறைய இந்தப் பத்து மாத காலமும் சீதாவின் வாழ்க்கை ஒரே ஆனந்தமயமாக இருந்தது, வம்பு இல்லை, தும்பு இல்லை, அசூயை இல்லை, ஆத்திரம் இல்லை, பொறாமை இல்லை, புழுங்குவதும் இல்லை, சிநேகிதர்கள் இல்லை, விரோதிகளுமில்லை. தான் உண்டு, தன் கணவனின் அன்பு உண்டு, தன் குழந்தையின் மழலை உண்டு, வேறு என்ன வேண்டும் இந்த உலகத்தில்? இத்தகைய ஆனந்தமயமான வாழ்வு இன்னும் எத்தனை காலம் நிலைத்து நிற்குமோ தெரியவில்லையே? மறுபடியும் அந்தப் பாழும் டில்லிக்குப் போக வேண்டிவருமோ, என்னமோ, தெரியவில்லையே? இவருக்கு என்னத்துக்காகத் திடீரென்று சர்க்கார் உத்தியோக மோகம் மறுபடியும் பிடித்துக் கொண்டது? என்ன இருந்தாலும் புருஷர்களுடைய போக்கே விசித்திரமானதுதான். வீட்டில் அமைதியும் இன்பமும் குடிகொண்டிருந்தால் அவர்களுக்குப் போதுவதில்லை. கூட்டமும் கூச்சலும் அதிகாரமும் ஆர்ப்பாட்டமும் தடபுடலும் இருந்தால்தான் புருஷர்களுக்கு வாழ்க்கை ரஸிக்கும் போலும். கிளப்புகள், பார்ட்டிகள், விருந்துகள் இல்லாமல் அவர்களால் அதிக காலம் உற்சாகமாக இருக்க முடியாது போலும்! இல்லாமற் போனால், பஞ்சாபுக்கும் வந்த புதிதில் இருந்த உற்சாகம் அவருக்கு இப்போது ஏன் இல்லாமற் போயிற்று? சிரிப்பும் குதூகலமும் களிப்பும் விளையாட்டும் ஏன் வர வர குறைந்து போய்விட்டன? பத்து நாளைக்கு முன்புதான் திடீரென்று அவர் இந்த வெடிகுண்டைத் தூக்கிப் போட்டார். “சீதா! ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி இந்தியாவுக்குச் சுதந்திரம் வரப் போகிறது. நம்முடைய சொந்த சர்க்கார் ஏற்படப் போகிறது. புரட்சி இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு நான் வீட்டில் இடம் கொடுத்தேன் என்பதற்காகத்தானே எனக்கு உத்தியோகம் போயிற்று? போன உத்தியோகம் ஆகஸ்டு 15-ந் தேதி எனக்குத் திரும்பி வந்துவிடும்!” என்றார். “அப்படியானால் இந்த ஊரைவிட்டு டில்லிக்குப் போக வேண்டியிருக்குமோ?” என்று சீதா கேட்டாள். அவளுடைய குரலில் தொனித்த கவலையைத் தெரிந்து கொண்டு ராகவன், “டில்லிக்குப் போய்த்தான் தீரவேண்டும் என்று அவசியம் இல்லை. இஷ்டமிருந்தால் டில்லிக்குப் போகலாம். இஷ்டம் இல்லாவிட்டால் பாகிஸ்தானுக்கு ‘ஆப்ட்’ செய்து கொண்டு பஞ்சாபிலேயே உத்தியோகம் பார்க்கலாம். சீதா! உன்னிடம் உண்மையைச் சொல்லி விடுகிறேனே! என்னதான் இருந்தாலும் சர்க்கார் உத்தியோகத்தைப் போல கம்பெனி உத்தியோகம் ஆகாது. ஆயிரம் ரூபாய் சம்பளம் குறைவாயிருந்தாலும் சரி, சர்க்கார் உத்தியோகத்தின் மவுஸே வேறுதான்” என்றான் சௌந்தரராகவன். இதற்குப் பிறகு சீதா ஆட்சேபம் சொல்ல விரும்பவில்லை. “அதற்கென்ன சந்தேகம்? சர்க்கார் உத்தியோகம் திரும்பி வந்தால் வேண்டாம் என்று யாராவது சொல்வார்களா?” என்றாள். “ஆனால் சர்க்கார் உத்தியோகம் நம்மைத் தேடிக் கொண்டு வராது. நாம் அதைத் தேடிக் கொண்டு போகவேண்டும். டில்லிக்குப் போய் அதற்காகக் கொஞ்சம் வேலை செய்தாக வேண்டும். உடனே புறப்பட்டுப் போனால்தான் கைகூடும். திரும்பி வரப் பத்துப் பதினைந்து நாள் பிடிக்கலாம். நீ இங்கேயே இருக்கிறாயா, சீதா? அல்லது என்கூட நீயும் வருகிறாயா?” என்று கேட்டான் ராகவன். “நான் உங்களுடன் வந்தால் உங்களுக்கு இடைஞ்சலாக இருக்குமா?” என்று சீதா கேட்டாள். “அப்படிப் பிரமாத இடைஞ் சலாயிராது. கொஞ்சம் இடைஞ்சலாயிருந்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டியது தான்!” இதன் பிறகு சீதா டில்லிக்கு ராகவனுடன் போகும் எண்ணத்தை விட்டு விட்டாள். அடிக்கடி ராகவன் வெளியூர் களுக்குக் கம்பெனி காரியமாகப் போவதுண்டு. அதுபோல இப்போது போய்விட்டு வருகிறார். தான் எதற்காகப் பரபரப்பு அடைய வேண்டும்? டில்லிக்குத் தானும் போனால் அதிக நாள் அங்கே தங்கும்படி நேர்ந்தாலும் நேர்ந்துவிடும். அவர் மட்டும் தனியாகப் போனால் சீக்கிரம் திரும்பி வந்துவிடுவார்! இவ்விதம் மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டு ராகவனுக்கு விடை கொடுத்து அனுப்பினாள். ராகவன் போய் இரண்டு நாளைக்குப் பிறகு சிறிதும் எதிர்பாராத விதமாகப் பாமா என்பவள் வந்து சேர்ந்தாள். முன்னொரு காலத்தில் அவள்பேரில் சீதாவுக்கு ரொம்பவும் கோபம் இருந்தது. ஆனால் இப்போது சீதாவின் மனதில் கோபத்துக்கோ ஆங்காரத்துக்கோ அசூயைக்கோ சிறிதும் இடம் இருக்கவில்லை. அப்படி எப்போதேனும் சிறிது ஆங்காரம் தோன்றினாலும் தேவபட்டணத்திலிருந்து தான் நள்ளிரவில் புறப்பட்ட அன்று காந்தி மகாத்மாவின் படத்தின் முன்னிலையில் செய்த பிரதிக்ஞையை நினைவுபடுத்திக் கொள்வாள். உடனே ஆங்காரம் அடங்கிச் சாந்தம் குடி கொள்ளும். எனவே, பாமாவைச் சீதா அன்புடன் வரவேற்றாள். அவளுடைய குணமும் இப்போது நல்ல விதத்தில் மாறியிருந்தது கண்டு மகிழ்ந்தாள். ராகவன் டில்லிக்குப் போக நேர்ந்தது பற்றி இன்னொரு காரணத்தை பாமாவிடமிருந்து சீதா அறிந்தாள். ராகவன் எந்தக் கம்பெனியில் உத்தியோகம் பார்த்தானோ அந்தக் கம்பெனியார் பஞ்சாபில் தங்களுடைய கடையைக் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்களாம். பஞ்சாப் பாகிஸ்தானில் சேரப் போவதுதான் அதற்குக் காரணமாம். ஆகையால், “இனி பஞ்சாப்பில் உனக்கு வேலை இல்லை! மதராஸுக்குப் போகிறாயா?” என்று ராகவனைக் கேட்டிருந்தார்களாம். இதனால் வெறுப்படைந்துதான் ராகவன் திரும்பவும் சர்க்கார் உத்தியோகத்தைத் தேடிப்போயிருக்க வேண்டும் என்று பாமா சொன்னாள். லாகூரில் கம்பெனியின் காரியங்களை முடிவு செய்வதற்காகப் பாமாவின் தகப்பனார் லாகூருக்கு வந்திருந்தாராம். அவருடன் வந்திருந்த பாமா, ராகவன் என்ன செய்யப் போகிறார் என்று தெரிந்து கொண்டு போவதற்காக ஹொஷங்காபாத்துக்கு வந்தாளாம். இதையெல்லாம் கேட்ட சீதாவுக்கு கொஞ்சம் மனக் கலக்கம் அதிகமாயிற்று. பஞ்சாப் பாகிஸ்தானில் சேர்வதற் காகக் கம்பெனியை எதற்காக மூடவேண்டும் என்பது அவளுக்குப் புரியவில்லை. ஆனால் ராகவன் மதராஸுக்குப் போக விரும்பாதது இயற்கைதான் என்பதை உணர்ந்திருந்தாள். ஆகையால் டில்லியிலே உத்தியோகம் பார்க்க வேண்டியிருந்தாலும் நான் தடை சொல்லுவதில்லையென்று எண்ணிக் கொண்டாள். பாமா மேலும் சில தினங்கள் சீதாவுடன் அங்கே இருந்தாள். பஞ்சாபின் நிலைமைகளைப் பற்றி ஏதேதோ பயங்கரமான விஷயங்களைக் கூறினாள். அந்த நிலைமையில் ராகவன் சீதாவைத் தனியாக விட்டுவிட்டுப் போனது பற்றிக் குறை கூறினாள். சீதா அதை மறுக்கவே, “அப்படியானால் நானும் ராகவன் வரும் வரையில் இங்கே இருக்கின்றேன்!” என்றாள். ஆனால் ஆகஸ்டு மாதம் 12-ம் தேதியன்று “அப்பா என்னைப் பற்றிக் கவலைப் படுவார்; நான் இனி இருக்க முடியாது” என்று சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டாள். பாமா போன பிறகு சீதா தன்னுடைய தனிமையை அதிகமாக உணர ஆரம்பித்தாள். மனதில் கலக்கம் மணிக்கு மணி அதிகமாகிக் கொண்டு வந்தது. ஆயினும் தைரியத்தை அடியோடு இழந்துவிடவில்லை. ‘உலகத்தில் பார்க்க வேண்டிய பயங்கரங்களையெல்லாம் பார்த்தாகிவிட்டது. அநுபவிக்க வேண்டிய கஷ்டங்களையெல்லாம் அநுபவித்தாகிவிட்டது. புதிதாக இனிமேல் எனக்கு என்ன கஷ்டம் வந்துவிடப் போகிறது?’ என்று அடிக்கடி தனக்குத் தானே சொல்லிக் கொண்டு மனதைத் திடப்படுத்திக் கொள்ள முயன்றாள். பாமா சென்று இன்றைக்கு நாலு தினம் ஆகிவிட்டது. ராகவனிடம் இருந்தோ கடிதம் ஒன்றும் வரவில்லை. ஏன் பிடிவாதம் பிடித்து ராகவனுடன் தானும் போகவில்லையென்று தோன்றியது. பாமாவை வற்புறுத்தித் தன்னுடன் இருக்கும்படி சொல்லாமற் போனதும் பிசகுதான். பத்திரிகையிலே போட்டிருக்கும் செய்திகளையெல்லாம் பார்த்தால் கொஞ்சம் பயமாகத்தானிருக்கிறது! எங்கே, எப்போது, என்ன நடக்கும் என்று குமுறிக் கொண்டிருக்கிறதாமே? இப்படியெல்லாம் பத்திரிகையில் எழுதியிருப்பதில் அர்த்தந்தான் என்ன? விளக்கை அணைத்துவிட்டுச் சீதா படுத்துக்கொண்டாள். கடிகாரத்தில் மணி பன்னிரண்டு அடித்தது பன்னிரண்டாவது தடவை மணி அடித்ததும், நிசப்தம் குடிகொண்டது, ஒரு நிமிஷ நேரத்துக்குத்தான். அப்புறம் எங்கேயோ வெகு தூரத்தில் ஏதோ ஒரு சத்தம் கேட்டது. வர வர அது பெருகி கொண்டும் அருகில் நெருங்கிக் கொண்டும் வந்தது. சமுத்திரத்தில் அடிக்கும் அலைகளின் ஓசை மாதிரி இருந்தது. சீச்சீ! இது என்ன பிரமை? அந்தப் பழைய உபத்திரவம் மறுபடியும் திரும்பி வருகிறது போலிருக்கிறதே! ஐந்தாறு மாதமாகவே இவ்விதம் அடிக்கடி காதில் ஓசை மாதிரி கேட்கிறது. ஆரம்பிக்கும்போது மெதுவாயிருக்கிறது; வர வர சத்தம் அதிகமாகிறது. காதிலே ஏதோ கோளாறு என்று ராகவன் சொன்னது சரியாகத்தான் இருக்க வேண்டும்! அடுத்த தடவை லாகூருக்குப் போகும்போது நல்ல காது வைத்தியரைக் கொண்டு பரிசோதித்துப் பார்க்க வேண்டும். இருக்கிற இடைஞ்சல் எல்லாம் போதாது என்று காது வேறே செவிடாகித் தொலைந்துவிட்டால் என்னத்தைச் செய்கிறது? காதிலே கேட்ட அலை ஓசை வர வர அதிகமாகி வரவே அந்தப் பிரமையைப் போக்கிக் கொள்வதற்காகப் படுக்கையிலிருந்து எழுந்தாள். அவள் படுத்திருந்த மச்சு ஹாலின் ஒரு பக்கத்துக்குப் போய் அங்கிருந்த ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். இராத்திரியில் எந்த நேரத்திலும் ஹௌஷங்காபாத் நகரத்தில் மின்சார விளக்குகள் எரிந்து கொண்டிருப்பது வழக்கம். ஆனால் இன்றைக்கு ஒரு விளக்கையும் காணோமே? இது என்ன அதிசயம்! ஒருவேளை ‘கரண்ட்’ தடைப்பட்டு விட்டதா என்ன? ஆனால் இந்த வீட்டில் விளக்கு 12 மணி வரையில் எரிந்ததே! அப்புறம் கரண்ட் நின்று போயிருக்குமோ? ஸ்விட்சைப் போட்டுப் பார்க்கலாமா? எங்கேயோ ஒரு விஸில் அடிக்கும் சத்தம் கேட்டது. அதற்குப் பதிலாக இன்னொரு விஸில் சத்தம் கேட்டது. நாய் ஒன்று ஊளையிட்டது. ‘தம்’ ‘தம்’ என்று எங்கேயோ ஒரு முரசு பயங்கரமாகத் தொனி செய்தது. சீதாவுக்கு உடம்பு சிலிர்த்தது, சீ! இது என்ன பைத்தியக்காரப் பயம்? போலீஸார் விஸில் ஊதினால் அது ஒரு ஆச்சரியமா? நாய் ஊளையிடாமல் வேறு என்ன செய்யும்? எங்கேயோ சீக்கியரின் குருத்வாரத்தில் முரசு முழங்குகிறது. இன்று ஏதாவது உற்சவமாயிருக்கலாம். இதற்காக நாம் ஏன் பயப்பட வேண்டும்? திடீரென்று அர்த்தமில்லாத ஒரு புது பயங்கரமான எண்ணம் சீதாவின் மனதில் தோன்றியது. இரண்டு கண்கள் தன்னை உற்று நோக்கிக் கொண்டிருந்தன. அவை எங்கிருந்து பார்க்கின்றன என்று தெரியவில்லை. அறைக்குள்ளிருந்தா, வெளியிலிருந்தா என்று தெரியவில்லை. மனிதருடைய கண்ணா, காட்டு மிருகத்தினுடைய கண்ணா, கோட்டானுடைய கண்ணா, கொள்ளிவாய்ப் பிசாசின் கண்ணா என்றும் தெரியவில்லை. ஒரு சமயம் அந்தக் கண்கள் பின்னாலிருந்து பார்ப்பது போலிருந்தது. இன்னொரு சமயம் அந்தக் கண்கள் பக்கவாட்டிலிருந்து பார்ப்பதாகத் தோன்றியது. ஜன்னலுக்கு எதிரே கொஞ்ச தூரத்தில் ஒரு மரம் இருந்தது. இருட்டில் அந்த மரம் நெடிதுயர்ந்த ஒரு கரிய பூதம் எனக் காணப்பட்டது. அதிலிருந்து இரண்டு கண்கள் சீதாவை உற்று நோக்கின. முதலில் சாதாரணக் கண்களாக அவை தோன்றின. பிறகு நெருப்புத் தணலைப்போல் அக்கண்கள் பிரகாசித்தன. சீதா தலையை ஒரு ஆட்டம் ஆட்டி அந்த மரத்திலிருந்து பார்வையைத் திருப்பி அடுத்த வீட்டின் பக்கம் நோக்கினாள். அடுத்த வீட்டுக் கூரை மேலிருந்து இரண்டு கண்கள் அவளை நோக்கின. வெளியிலிருந்து தன் பார்வையைத் திருப்பி அறைக்குள்ளே செலுத்தினாள். அறையின் சுவரிலிருந்து அவளை இரு கண்கள் நோக்கின, மறுபடியும் வெளியில் பார்த்தாள். வீட்டைச் சுற்றிலுமிருந்து நூற்றுக்கணக்கான கண்களின் ஜோடிகள் அக்னிமயமாக ஜொலித்துக் கொண்டு அவளை உற்று நோக்கின. “நம்முடைய மூளை குழம்பி வருகிறது! சீக்கிரத்தில் பைத்தியம் பிடித்துவிடுமோ, என்னமோ! அவர் எப்போது வருவாரோ, தெரிய வில்லையே! அவர் வரும் வரையிலாவது நாம் பைத்தியமாகாமல் இருக்க வேண்டும்” என்று எண்ணிக் கொண்டே ஜன்னல் பக்கமிருந்து திரும்பி வந்து படுக்கையில் படுத்துக்கொண்டாள். தலையணைக்கு அப்பால் கையினால் துளாவினாள். டார்ச் லைட்டும், ரிவால்வரும் கையில் தட்டுப்பட்டன. “இருங்கள் ஜாக்கிரதையாக!” என்று மனத்திற்குள் சொல்லிக்கொண்டாள். ராகவன் இந்த பத்து மாத காலமாகத் தினந்தோறும் டார்ச் விளக்கும் கைத்துப்பாக்கியும் பக்கத்தில் வைத்துக்கொண்டுதான் படுப்பது வழக்கம். அவன் வெளியில் போகும்போது சீதாவும் அந்தமாதிரியே செய்யவேண்டும் என்று சொல்லியிருந்தான். சீதா அந்தக் கட்டளையை நிறைவேற்றி வந்தாள். ஆனால் கைத்துப்பாக்கியினால் தனக்கு என்ன பிரயோஜனம்? தன்னுடைய சத்துரு வெளியிலே இல்லையே? கைத்துப்பாக்கியினால் தன்னுடைய மூளை குழம்பாமல் தடுத்துக் கொள்ள முடியுமா? தற்கொலை வேண்டுமானால் செய்து கொள்ளலாம். அப்படித் தற்கொலை செய்து கொண்டு தான் இறந்து போவதில் என்ன பயன்? குழந்தை வஸந்தியின் கதி என்ன ஆவது? முன்னொரு தடவை இதே மாதிரி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு சாகும் எண்ணம் தனக்கு உதித்திருந்ததும் அதைச் சூரியா வந்து தடுத்ததும் சீதாவுக்கு நினைவு வந்தன. சூரியா இப்போது எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறானோ? அவனுக்கும் தாரிணிக்கும் கலியாணம் எப்போது நடக்கும்? தனக்குக் கலியாண அழைப்பு வருமா?…. ஆஹா! இது என்ன சத்தம்? வீட்டுக்குப் பக்கத்திலுள்ள மரத்தில் கரகரவென்று சத்தம் கேட்கிறது. யாரோ மரத்தில் ஏறும் சத்தந்தான்; சந்தேகமில்லை, அது யாராயிருக்கும்? திருடனா கொலைகாரனா? அல்லது ஒருவேளை காவல்காரச் சீக்கியனா? காவல்காரன் வாசலில் வந்து படுத்துக்கொள்ளாமல் பக்கத்து மரத்தின்மேல் எதற்காக ஏறி வருகிறான்? மரத்தில் ஏறியவன் யாராயிருந்தாலும் அவன் மாடி வராந்தாவில் குதித்துவிட்டான்! குதித்த சத்தம் நன்றாய்க் கேட்டது. அடுத்தபடி என்ன செய்வான்? ஹாலுக்குள் எப்படி நுழைந்து வருவான்? வராந்தா ஜன்னலுக்குப் பக்கத்தில் ஒரு நிழல் தோன்றியது. ஒரு கரிய பயங்கர உருவம் நின்றது. அந்த உருவத்தின் அங்க அடையாளம் ஒன்றும் தெரியவில்லை. ஆகா! ஸ்திரீகள் புருஷர்களைப் பிரிந்து தனியாக இருக்கிறதென்பது எவ்வளவு அபாயகரமான விஷயம்? இந்தத் தடவை பிழைத்தால் இனி இத்தகைய பிசகை என்றைக்கும் செய்யக் கூடாது! ஆனால் இன்றைக்குத் தப்பிப் பிழைப்பது எப்படி? சீதாவின் நெஞ்சு அடித்துக்கொண்ட வேகத்தைச் சொல்ல முடியாது. காதில் அலை ஓசை கேட்பது நின்று தன்னுடைய இருதய அடிப்பின் ஓசை கேட்கலாயிற்று. கடிகாரத்தின் டிக், டிக்கோடு இருதயத்தின் அடிப்பும் துடிப்பும் சேர்ந்து கொண்டன. அவளுடைய உடம்பும் வியர்த்து, கால் முதல் தலை வரையில் நடுநடுங்கிற்று. நடுங்கிய கையினால் துளாவிச் சீதா கைத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டாள். துப்பாக்கியைத் தொட்டதும் கைநடுக்கமும் நின்றது. ஒரே வினாடி ரிவால்வரை ஜன்னல் பக்கம் குறிபார்த்துச் சுடவேண்டியதுதான்; வந்திருப்பவன் செத்து விழுவான்! ஆனால் அந்தச் சமயத்தில், சீதா ரிவால்வரைக் கையில் பற்றிக்கொண்ட அடுத்த நிமிஷத்தில், அவள் மனக் கண்ணின் முன்னால் காந்தி மகாத்மாவின் திரு உருவம் தோன்றியது. சுவரில் மாட்டிய படத்திலிருந்து அவர் திருமுகம் தனியாக வெளிக்கிளம்பிக் கருணை ததும்பும் கண்களால் சீதாவைப் பார்ப்பது போல இருந்தது. “சீதா இதை நான் ஒப்பவில்லை, இது ஜீவஹிம்சை! சுடாதே! உன்னால் உயிரை வாங்கமுடியும்; உயிரைக் கொடுக்க முடியுமா?” என்று மகாத்மாவின் கருணைக் கண்கள் கேட்டன. இவன் எதற்காக வந்திருக்கிறானோ என்னமோ? ஒருவேளை ஏழைப்பட்ட மனிதனாயிருக்கலாம். சாப்பாட்டுக்கு இல்லாமல் வயிற்றுப் பசியின் கொடுமை காரணமாகத் திருட வந்திருக்கலாம் பாவம்! அவனை ஏன் கொல்ல வேண்டும்? ஜீன்வால்ஜீன் கதையில் என்ன வருகிறது? திருடனைக் காட்டிக் கொடுக்காமல் காப்பாற்றுகிறாரே, அந்தப் பிஷப்? நாம் மட்டும் எதற்காக இந்தப் பாதகத்தைச் செய்ய வேண்டும்? எப்படியும் ஜன்னல் வழியாக அவன் உள்ளே நுழைந்து வர முடியாது. என்னதான் செய்யப் போகிறான், பார்க்கலாமே? இவ்வளவு எண்ணங்களும் ஒரே நிமிஷ நேரத்துக்குள் சீதாவின் மனதில் குமுறிப் பாய்ந்தன. அந்தக் குமுறலுக்கு மத்தியில் சீதாவின் காதில் ஒரு குரல் கேட்டது. “சீதா! சீதா! எழுந்திரு! சத்தம் போடாமல் எழுந்திரு!” என்று அந்தக் குரல் சொல்லிற்று. ஆகா! அது யாருடைய குரல்! அந்தக் குரலைக் கேட்டதும் உடம்பு ஏன் இப்படிச் சிலிர்க்கிறது? இருளில் வந்த அந்தக் குரல் யாருடையது? ரிவால்வரை வைத்துவிட்டு, டார்ச் லைட்டை எடுத்துச் சீதா ஸ்விட்சை அமுக்கினாள். ஜன்னலுக்கு வெளியே வராந்தாவில் நின்ற உருவத்தின் மீது அதன் வெளிச்சம் விழுந்தது! இருபத்து எட்டாம் அத்தியாயம் - நரக வாசல் திறந்தது! டார்ச் லைட்டின் வெளிச்சத்தில் தெரிந்த உருவம் சீதாவின் மனதில் பயத்தை உண்டாக்கவில்லை; ஆனால் வியப்பை உண்டாக்கியது. அந்த தாடிக்கார முஸ்லிமை அவள் ஏற்கெனவே இரண்டொரு தடவை பார்த்ததுண்டு. ஆக்ரா கோர்ட்டில் வந்து அவளைக் காப்பாற்றிய மனிதர் அவர்தான். முன்பின் தெரியாத அந்த மனிதர் எதற்காகத் தனக்கு அவ்வளவு பெரிய உதவியைச் செய்தார் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் அவள் மனதில் அமுங்கிக் கிடந்தது. இப்போது அது பொங்கி எழுந்தது. “சீதா! விளக்கை அணை! கதவைத் திற! நேரம் அதிகம் இல்லை! சீக்கிரம்!” என்று உருவம் சொல்லிற்று. சீதா டார்ச் லைட்டை அணைத்தாள். வெளிச்சமின்றி இருள் சூழ்ந்ததும் அவளுடைய நெஞ்சில் மீண்டும் பதை பதைப்பு உண்டாயிற்று. அதைப் பொருட்படுத்தாமல் ஜன்னல் பக்கம் சென்றாள். “கதவைத் திற, சீதா, கதவைத் திற!” என்றது இருளில் வந்த குரல். அவ்வளவு அவசரமாகக் கதவைத் திறக்கச் சீதா தயாராயில்லை. “நீங்கள் யார்? எதற்காகக் கதவைத் திறக்க வேண்டும்?” என்று கூறி, “இங்கே புருஷர் யாருமில்லை!” என்று சேர்த்துக் கொண்டாள். “எனக்குத் தெரியும், அதனாலேதான் வந்தேன். என்னைத் தெரியவில்லையா, உனக்கு?” “ஆக்ரா கோர்ட்டில்…” “ஆமாம்; அது நான்தான், வேறு நினைவு ஒன்றும் உனக்கு வரவில்லையா? என்னுடைய குரல்….” “அப்பா!….” “ஆமாம்! நான்தான், சீதா! உன் அப்பாதான்!” “இந்த வேஷம்…” "அதையெல்லாம் பற்றிக் கேட்க இதுதானா சமயம்? சீதா! இன்னும் அரைமணி நேரத்தில் இந்த ஊரில் நரகத்தின் வாசல் திறக்கப் போகிறது. இரத்த வெறி கொண்ட பேய்களும் பிசாசுகளும் வந்து பயங்கரத் தாண்டவம் புரியப் போகின்றன. “ஐயோ! அது யார்?” என்று அலறினாள் சீதா. பக்கத்துச் சுவர் மறைவிலிருந்து ஒரு பெண் உருவம் வெளிப்பட்டு வந்தது. “சத்தம் போடாதே! காரியம் கெட்டுவிடும். இவள் உன் சித்தி உன்னைக் காப்பாற்றத்தான் இவளும் வந்திருக்கிறாள்.” இதற்குள் அந்த ஸ்திரீ, “இல்லை! இவளைக் காப்பாற்ற நான் வரவில்லை. இவள் நன்றி கெட்ட நிர்மூடம். என் பேத்தியை! வஸந்தி கண்மணியைக் காப்பாற்ற நான் வந்தேன். உங்கள் புத்தியற்ற பெண்ணைக் கட்டிக் கொண்டு நீங்களே அழுங்கள்! அடி பெண்ணே, உடனே கதவைத் திறக்கிறாயா! இந்தக் கத்தியால் உன்னைக் குத்திக் கொன்று விடட்டுமா?’ என்றாள். அவள் யார் என்பது சீதாவுக்கு உடனே தெரிந்து போய்விட்டது. இனிமேல் கதவைத் திறக்கத் தாமதிப்பதில் அர்த்தம் இல்லை. ஏதோ பெரிய விபத்து வரப்போகிறது என்றும் அதிலிருந்து தன்னைக் காப்பாற்றவே இவர்கள் வந்திருக்கிறார்கள் என்றும் சீதாவின் உள் மனதுக்கு நன்றாய்த் தெரிந்துவிட்டது. நடுங்கிய கைகளினால் கதவின் தாளைத் திறந்தாள். மறுகணம் கதவைத் தள்ளிக் கொண்டு இருவரும் உள்ளே வந்தார்கள்.”அப்பா! உங்களை இந்த நிலைமையில் இந்த வேஷத்திலா நான் பார்க்க வேண்டும்?" என்றாள் சீதா. அப்போது ரஸியா பேகம் குறுக்கிட்டுக் கூறினாள்:- “பின் எப்போது பார்க்க வேண்டும்? உலகத்தில் எல்லாத் தகப்பன்மார்களும் பெண் நல்ல நிலைமையில் இருக்கும்போது வந்து பாராட்டுவார்கள், சீராட்டுவார்கள் அதில் ஒன்றும் அதிசயம் இல்லை. உன் அப்பா உன்னிடம் வைத்திருக்கும் அன்பை இன்றைக்குத்தான் பார்க்கப்போகிறாய்! அடி பெண்ணே! உன்னைப்பற்றிய கவலையினால் இந்தக் கிழவர் எத்தனை நாளாகத் தூங்கவில்லை தெரியுமா? டில்லியிலிருந்து என்னையும் கட்டி இழுத்துக்கொண்டு வந்து இந்தப் பாழாய்ப் போன ஊரில் ஒரு மாதமாக உட்கார்ந்திருக்கிறார்!” “இவள் சொல்வதை நீ நம்பாதே, சீதா! என்னைக் கட்டி இழுத்துக்கொண்டு வந்தவள் இவள்தான்!” என்றார் மௌல்வி. “நம்முடைய சண்டையை அப்புறம் தீர்த்துக்கொள்ளலாம். இவளிடம் சொல்ல வேண்டியதை உடனே சொல்லுங்கள்!” என்றாள் ரஸியா பேகம். சீதாவின் தந்தை கூறினார்: “ஆமாம்; வீண்பொழுதுதான் போக்கிக் கொண்டிருக்கிறோம். ஒரு மாதமாக வீண் பொழுது போக்கி விட்டோ ம். ஆனால் நிலைமை இவ்வளவு மோசமாகும் என்று நேற்று வரையில் நான்கூட எதிர்பார்க்கவில்லை. சீதா! நேற்றுமுதல் பஞ்சாப் முழுவதும் பயங்கரமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. மனுஷ்யர்கள் செய்வார்கள் என்று எண்ணக்கூடாத காரியங்களையெல்லாம் செய்கிறார்கள். இந்த ஊரில் இன்னும் அரைமணி நேரத்தில் நரகத்தைத் திறந்துவிடப் போகிறார்கள். ஆயிரம் பதினாயிரம் பிசாசுகள் வந்து கூத்தாடப் போகின்றன. அந்தப் பிசாசுகள் இன்னது செய்யும், இன்னது செய்யாது என்று சொல்ல முடியாது. இந்த ஊரிலுள்ள ஹிந்துக்கள் - சீக்கியர்களில் ஒரு குஞ்சு, குழந்தையாவது தப்பிப் பிழைக்குமா என்பது சந்தேகந்தான். நீயும் உன் குழந்தையும் தப்புவதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. எங்களை நம்பி உடனே புறப்பட வேண்டும். முதலில் உன் குழந்தையை இவளோடு அனுப்பிவிட வேண்டும்; பிறகு நீ என்னோடு….” “அப்பா! நான் வரமுடியாது; குழந்தையை வேண்டுமானால் உங்களுடன் அனுப்பிவிடுகிறேன். அவர் இங்கே என்னைத் தேடினால்?…” “பைத்தியக்காரப் பெண்ணே! ‘அவர்’ என்று உன் புருஷனைத்தானே சொல்லுகிறாய்? அவன் பரம முட்டாள்! இப்பேர்ப்பட்ட சமயத்தில் உன்னைத் தனியாக விட்டுப் போயிருக்கிறான் பார்!” “அம்மா! நீங்கள் எனக்கு உதவி செய்ய வந்ததற்காகச் சந்தோஷம். ஆனால் என் புருஷனைப் பற்றி யாரும் குறைவாகச் சொல்வதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது….” “சரி, சரி! நீ ஆச்சு, உன் புருஷன் ஆச்சு, உன் அப்பா ஆச்சு! எப்படியாவது போய்த் தொலையுங்கள், உன் குழந்தையை அனுப்புவதாகச் சொன்னாயே? அதையாவது செய்! சீக்கிரம் அவளை எழுப்பு!…அதோ…!” “ஆகா நரக வாசல் திறந்தாகி விட்டது!” என்றார் மௌல்வி. தூரத்தில் திடீரென்று பயங்கரமான கூச்சல்… ஊளைச் சத்தங்கள் கேட்டன. கரிய உருவங்கள் கையில் தீவர்த்திகளைப் பிடித்துக் கொண்டு அங்குமிங்கும் ஓடுவது தெரிந்தது. “சீதா! இனி ஒரு நிமிஷமும் தாமதிப்பதற்கில்லை; வஸந்தியை உடனே எழுப்பு!” என்றார் மௌல்வி. சீதா தயங்கித் தத்தளித்து நின்றாள். “குழந்தையை எப்படிக் கொடுப்பேன்? அவர் வந்து கேட்டால்….” என்றாள். “சீதா நான் உன்னைப் பெற்று வளர்த்த தகப்பன். என்னைக் காட்டிலும் உன்னிடம் அதிக அன்புள்ளவள் இந்த ரஸியா பேகம். இவளை நம்பி உன் குழந்தையைக் கொடு! ஒன்றும் கெடுதல் வராது!” “நீயும் இவரும் இந்த ஊரிலேயே இருந்து அழிந்துபோய் விட்டால்கூட நான் எப்படியாவது உன் புருஷனைத் தேடிப் பிடித்துக் குழந்தையைப் பத்திரமாய் அவனிடம் ஒப்புவித்து விடுகிறேன்” என்றாள் ரஸியா பேகம். சீதாவின் பார்வை சுவரில் மாட்டியிருந்த காந்தி மகான் படத்தின்மீது விழுந்தது. ஜன்னல் வழியாக வந்த மங்கலான வெளிச்சத்தில் காந்திஜியின் முகத் தோற்றம், “நம்பிக் கொடு உனக்கு அதனால் கெடுதல் வராது!” என்று சொல்லுவது போலிருந்தது. சீதா, கால், கைகள் பதற ஓடிச் சென்று, கட்டிலில் நிம்மதியாகப் படுத்துத் தூங்கிய குழந்தையைத் தட்டி எழுப்பினாள். வஸந்தி எழுந்து உட்கார்ந்துகொண்டு மிரண்ட கண்களால் தனக்கு முன்னால் நின்றவர்களை விழித்துப் பார்த்தாள். குழந்தையைத் தட்டி எழுப்பிய அதே நிமிஷத்தில் சீதா அவளிடம் என்ன சொல்லவேண்டும் என்பது பற்றித் தீர்மானித் திருந்தாள். “வஸந்தி! டில்லியில் அப்பாவுக்கு உடம்பு சரிப்படவில்லையாம். நாம் உடனே டில்லிக்குப் புறப்பட்டுப் போகவேண்டும்!” என்றாள். “சரி, அம்மா! இதோ நான் தயார்!” என்று சொல்லிக் கொண்டே கட்டிலிலிருந்து வஸந்தி குதித்து வந்தாள். ரஸியா பேகம், “என் கண்ணே!” என்று அவளைக் கட்டித் தழுவிக் கொண்டாள். “ஓகோ! இந்த மாமியை எனக்குத் தெரியும், அன்றைக்கு மார்க்கெட்டில் ஆப்பிள் பழம் வாங்கிக் கொடுத்துவிட்டு முத்தம் இட்டீர்களே?” என்றாள் வஸந்தி. “ஆமாண்டி கண்ணே! உனக்கு ஞாபகம் இருக்கிறதே!” “நீங்களும் டில்லிக்கு வரப் போகிறீர்களா?” என்று கேட்டாள் வஸந்தி. “ஆமாம்; நானும் டில்லிக்குத்தான் போகிறேன்!” என்று சொன்னாள் ரஸியா பேகம். “வஸந்தி! நீ அம்மா சொல்லுகிறபடி கேட்கிற சமர்த்துக் குழந்தைதானே? நீ இந்தப் பாட்டியுடன் இப்போதே புறப்பட்டு ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகவேண்டும். நான் வீட்டுக் கதவுகளையெல்லாம் பூட்டிக்கொண்டு இந்தத் தாத்தாவுடன் பின்னால் வந்து சேருகிறேன்!” என்றாள் சீதா. “நான் அம்மா சொல்லுகிறபடி கேட்கிற சமர்த்துக் குழந்தைதான். ஆனால் நீ மட்டும் இனிமேல் பொய் சொல்லாதே!” என்றாள் வஸந்தி. மூவரும் திகைத்து நின்றார்கள். “நான் முன்னாடியே விழித்துக்கொண்டு விட்டேன். நீங்கள் பேசிக் கொண்டி ருந்ததையெல்லாம் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். தூங்குவதுபோல் பாசாங்கு செய்தேன்” என்றாள் வஸந்தி. சீதாவுக்கு ஒரு பக்கம் கோபம் வந்தது; ஒரு பக்கம் சிரிப்பும் வந்தது. “சரி; இப்போது என்ன சொல்கிறாய்? இந்தப் பாட்டியுடன் போகிறாயா, மாட்டாயா?” “நான் போகிறேன், அம்மா! கட்டாயம் போகிறேன். நீயும் வந்துவிடு என்றுதான் சொல்லுகிறேன். அப்பா நம்மை இங்கே விட்டுவிட்டுப் போனது பெரிய பிசகு! நீ இங்கே இருக்கிறேன் என்று சொல்வது அதைவிடப் பெரிய பிசகு!” என்றாள் வஸந்தி. “அப்படிச் சொல்லடி, என் கண்ணே!” என்று ரஸியாபேகம் குழந்தையை முத்தமிட்டாள். “சீதா! நாங்கள் சொன்னதைத்தான் கேட்கவில்லை; குழந்தை சொல்வதையாவது கேட்கிறாயா?” என்றாள். “அம்மா வராவிட்டால் நானும் வரமாட்டேன்!” என்றாள் வஸந்தி. “சரி! வேறு வழியில்லை, கடவுள் விட்ட வழியாகட்டும்! நானும் வருகிறேன்” என்றாள் சீதா. தூரத்தில் கேட்டுக் கொண்டிருந்த பயங்கரமான குழப்பச் சத்தங்கள் நெருங்கி வந்து கொண்டிருந்தன. அப்போது மௌல்வி சாகிபு வஸந்தியைப் பார்த்து, “நீ ரொம்ப சமர்த்துக் குழந்தை, வஸந்தி! நாம் எல்லோரும் சேர்ந்து தப்பித்துச் செல்லப் பார்ப்பது அபாயம். நீயும் இந்தப் பாட்டியும் முதலில் போங்கள்; கால் மணி நேரத்துக்கெல்லாம் உன் அம்மாவை அழைத்துக்கொண்டு நான் வருகிறேன்” என்றார். “சரி” என்றாள் வஸந்தி. அடுத்த நிமிஷம் ரஸியா பேகமும் வஸந்தியும் மச்சுப் படியில் இறங்கித் துரிதமாகச் சென்றார்கள். “அப்பா!” “சீதா!” “சற்று முன்னால் ஒரு பெரிய பாதகத்தி லிருந்து தப்பிப் பிழைத்தேன். நீங்கள் வந்து மாடித் தாழ்வாரத்தில் ஜன்னல் ஓரத்தில் நின்றபோது கைத்துப்பாக்கியால் உங்களைச் சுட்டுவிட நினைத்தேன். அவர் எனக்குக் குறிபார்த்துச் சுடுவதற்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்…” “ஏன் சுடவில்லை, அம்மா!” “காந்தி மகானுடைய திருமுகம் என் மனக்கண் முன்னால் தோன்றிச் சுடாமல் தடுத்தது. சுட்டிருந்தால் எப்படிப்பட்ட பாதகத்தைச் செய்திருப்பேன்! பெற்ற தகப்பனாரை….” “பெற்ற தகப்பனாயிருந்தாலும் நான் செய்திருக்கும் பாவங்களுக்கு அது தகுந்த தண்டனையாயிருந்திருக்கும். ஆனால் அத்துடன் அது போயிராது. இந்த வீட்டின் பேரில் சிலர் கண் வைத்திருக்கிறார்கள். துப்பாக்கி சத்தம் கேட்டதும் அவர்கள் ஓடிவந்திருப்பார்கள், நீயும் குழந்தையும்….” “அப்பா! இப்போது நாம் என்ன செய்யலாம்? நாமும் புறப்பட வேண்டியதுதானே?” “இல்லை, சீதா! நாம் உடனே புறப்படுவதற்கில்லை. கொஞ்ச நேரம் இங்கே இருந்தாக வேண்டும். யாரும் தப்பித்துப் போகாதபடி இந்த ஊரைச் சுற்றிக் காவல் போட்டிருக்கிறார்கள். காவல் வேலை ஒப்புக்கொண்டிருப்பவர்களில் நான் ஒருவன். என்னுடைய இடத்துக்குப் போய் நான் காவல் இருக்கிறேன். துவேஷப்பிசாசுகள் இந்த வீட்டையும் தாக்குவதற்கு வருவார்கள். அவர்களுக்கெல்லாம் முதலில் நான் வருவேன். அந்தச் சமயத்தில் நான் எப்படி நடந்துகொண்டலும் நீ அதிசயப்படக் கூடாது; பயப்படவும் கூடாது. நான் கத்தியினால் உன்னைக் குத்துவதற்கு வந்தால்கூடப் பயப்பட வேண்டாம். முடியுமானால் கீழே விழுந்து மூர்ச்சை அடைந்துவிட்டதுபோல் பாசாங்கு செய்! இதெல்லாம் எதற்காக என்று என்னை இப்போது கேட்காதே! தப்பிப் பிழைத்த பிற்பாடு எல்லாம் விவரமாகச் சொல்லுகிறேன். இந்தச் சமயம் நம்முடைய யுக்தி புத்திகளினால்தான் பிழைக்கவேண்டும்….” குழப்பமும் கூச்சலும் மேலும் நெருங்கி வந்து விட்டன. ஆங்காங்கே வீடுகள் தீப்பற்றி எரியத் தொடங்கின. எரியும் வீடுகளிலிருந்து உண்டான கோரமான வெளிச்சத்தில் கையில் கத்தி, கோடாரி, அரிவாள் முதலிய ஆயுதங்களுடன் கரிய உருவங்கள் பயங்கரமாக ஊளையிட்டுக் கொண்டு ஓடிய காட்சி தென்பட்டது. “சீதா! நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும். கடவுள் உன்னை நிச்சயமாகக் காப்பாற்றுவார்!” என்று சொல்லி விட்டு மௌல்வி சாகிபு விரைந்து கீழே சென்றார். சீதா காத்துக் கொண்டிருந்தாள். காத்திருந்த ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு யுகமாக நீண்டு அவளை வேதனைப்படுத்தியது. குழப்பமும் கூச்சலும் தீயும் புகையும் அழுகையும் பிரலாபமும் நெருங்கி வந்து கொண்டிருந்தன. சீதாவுக்குத் தான் குழந்தைப் பிராயத்தில் பம்பாயில் ஆனந்தமாகக் கழித்த நாட்கள் ஞாபகத்துக்கு வந்தன. அம்மாவும் அப்பாவும் தன்னை மடியில் வைத்துக் கொஞ்சிய நாட்கள் நினைவு வந்தன. அந்தத் துரைசாமி ஐயர்தானா இப்போது இப்படி இருக்கிறார்? நம்ப முடியவில்லையே! ஆயினும் நம்பித்தான் ஆகவேண்டும். திடீரென்று ராஜம்பேட்டை ஞாபகம் வந்தது. சாலையில் வண்டி குடை கவிழ்ந்து தான் ஓடையில் விழுந்ததும் சூரியா தன்னைக் காப்பாற்றுவதற்காக ஓடி வந்து கரையில் நின்ற தோற்றமும் மனக் கண்முன் தோன்றின. அந்தச் சூரியா இப்போது எங்கே இருக்கிறான்? தாரிணியின் காதலில் மதிமயங்கிக் கிடக்கிறானா? ஆகா! காதல் என்ற ஒரு வார்த்தை! எந்த மூடனோ சிருஷ்டி செய்தது! அதை வைத்துக்கொண்டு கதை எழுதுகிறவர்கள் புத்தகம் புத்தகமாய் எழுதித் தள்ளுகிறார்கள். என்ன பொய்! என்ன ஏமாற்றம்! ஆனால் அடியோடு பொய் என்றும் ஏமாற்றம் என்றும் சொல்லிவிட முடியுமா? ராஜம்பேட்டையில் லலிதாவைப் பார்க்க வந்த சௌந்தரராகவனைத் தான் பார்த்ததும் காதல் கொண்டதும் பொய்யாகுமா?- இருந்தாலும் லலிதாவுக்கு அப்படி ஒரு துரோகம் தான் செய்திருக்கக் கூடாது. அந்தத் துரோகத்தின் பலன்தான் பிற்பாடு வாழ்க்கை முழுதும் தான் கஷ்டங்களுக்கு உள்ளாகும்படி ஆயிற்று! வாழ்க்கை முழுதும் எத்தனை கஷ்டப்பட்டால்தான் என்ன? சென்ற ஒரு வருஷ காலம் இந்த அழகான பாஞ்சால நாட்டில் தான் வாழ்ந்த இன்ப வாழ்வுக்கு உலகத்தில் வேறு என்ன இன்பம் இணையாக முடியும்? அத்தகைய இன்ப வாழ்வுக்கு இப்போது இறுதி வந்துவிட்டது போலிருக்கிறதே!… இதோ சமீபத்தில், வீட்டண்டை யில் நெருங்கி வந்துவிட்டார்கள் போலிருக்கிறதே!…அப்புறம் நடந்த சம்பவங்கள் வெகு துரிதமாக நடந்தன. அவையெல்லாம் சீதாவுக்குத் தன்னுடைய சொந்த அநுபவங்களாகவே தோன்றவில்லை. அதிதுரிதமான ’டெம்போ’வுடன் எடுக்கப்பட்ட சினிமாவில் பார்க்கும் காட்சிகளைப் போலவே தோன்றின. ஒரு நிமிஷம் அந்த வீட்டு வாசலில் பயங்கரமான கூச்சல் கேட்டது. மறு நிமிஷமே வாசற் கதவைக் கோடரிகளால் பிளக்கும் சத்தம் கேட்டது. திடு திடுவென்று பலர் உள்ளே நுழைந்தார்கள். மச்சுப்படிகளின் பேரில் தடதடவென்று ஏறி வந்தார்கள். அவர்களுக்கெல்லாம் முதலில் மௌல்வி சாகிபு வந்தார். அவர் கையில் ஒரு கூரிய கத்தி பளபளவென்று மின்னியது. ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து அவள் பக்கத்தில் வந்து கழுத்தைப் பிடித்துத் தள்ளினார். பிறகு அவளை ஒரு காலால் மிதித்துக் கொண்டு திரும்பி நின்றார். பின்னால் வந்தவர்களைப் பார்த்து “இவள் என்னுடையவள்” “இவள் என்னுடையவள்” என்று கூச்சலிட்டார். பின்னால் வந்த பயங்கர ராட்சஸர்கள் சிறிது தயங்கி நின்றார்கள். ஒருவன் சிரித்தான்; இன்னொருவன் “கிழவனுக்கு வந்த கேட்டைப் பார்!” என்றான். மற்றொருவன் அருகில் பாய்ந்து வந்து கிழவனைக் குத்திப் போடுவதாகச் சொல்லிக்கொண்டு கத்தியை ஓங்கினான். அவனைத் தடுப்பதற்காக வந்த இன்னொருவன் காலால் சீதாவை ஒரு மிதி மிதித்தான். ஆயினும் சீதாவின் தகப்பனார் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை. இதற்குள்ளே ஒருவன் “நெருப்பு! நெருப்பு!” என்றான். “ஓடுங்கள்! ஓடுங்கள்!” என்று மௌல்வி சாகிபு கத்தினார். வெளியிலிருந்து அதே சமயத்தில் புகை திரள் திரளாகக் கிளம்பி மேலே சுழன்று வரத் தொடங்கியது. அறைக்குள் வந்த மனிதர்கள் திரும்பி ஓடத் தொடங்கினார்கள். அவர்களில் ஒருவருடைய கண்ணில் சுவரில் மாட்டியிருந்த மகாத்மாவின் படம் தென்பட்டது. அதை அவன் எட்டி எடுத்துத் தரையில் ஓங்கி எறிந்தான். படத்தின் கண்ணாடி உடைந்த சத்தம் படார் என்று கேட்டது. ஒரு கண்ணாடித் துண்டு மௌல்வி சாகிபுவின் முழங்காலுக்குக் கீழே சதையில் பாய்ந்தது. அந்த இடத்திலிருந்து குபு குபுவென்று இரத்தம் பெருகியது. மனிதர்கள் தடதடவென்று மச்சுப்படியில் இறங்கி ஓடினார்கள். வெளியே புகைத்திரளுக்கு மத்தியில் தீயின் ஜீவாலை தென்பட்டது. இந்தச் சமயத்தில் சீதா தன் பிரக்ஞையை இழக்கத் தொடங்கினாள். ‘ஓ’ என்ற ஓசை மட்டும் சிறிது நேரம் கேட்டுக் கொண்டிருந்தது. இது கடலின் அலை ஓசையை நினைவூட்டியது. அந்தக் கடைசி நினைவோடு சீதா மூர்ச்சையடைந்தாள். நரகத்தில் எல்லாத் திசையும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. திரள் திரளாகப் புகை கிளம்பி நாலா பக்கமும் பரவிக் கொண்டிருந்தது. பேய்களும் பூதங்களும் யம கிங்கரர்களும் ஊளையிட்டுக் கொண்டு அங்குமிங்கும் ஓடித் திரிந்தார்கள். வயது சென்ற ஸ்திரீகளையும் பச்சைக் குழந்தைகளையும் அவர்கள் பிடித்துக் கொண்டு வந்து எரிகிற தீயில் தள்ளினார்கள். இந்த நரகத்தில் உள்ள போலீஸ்காரர்கள் வெகு விசித்திரமானவர்கள்! அவர்கள் கையில் துப்பாக்கி வைத்திருந்தார்கள். நெருப்பில் விழாமல் தப்பி ஓடுகிறவர்களைக் குறி பார்த்து அவர்கள் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினார்கள். இப்படிப்பட்ட நரகத்தில் நல்ல பூதம் ஒன்று சீதாவைத் தூக்கிக் கொண்டு இருண்ட சந்துகள் - பொந்துகள் வழியாகப் போய்க்கொண்டிருந்தது. அது ஆங்காங்கு நின்று அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டு ஜாக்கிரதையாகச் சென்றது. சில சமயம் மிக மெள்ள மெள்ள நடந்தது; சில சமயம் ஒரே தாண்டாகத் தாண்டி ஓடிற்று. சில சமயம் சுவரில் ஒட்டிக்கொண்டு சென்றது; சில சமயம் மரங்களின் பின்னால் ஒளிந்து மறைந்து பாய்ந்து சென்றது. இவ்விதம் அந்த பூதம் நீண்ட நேரம் பாய்க்கொண்டேயிருந்தது. நரக லோகத்தில் உள்ள இருண்ட சந்துகளுக்கு முடிவே கிடையாதோ என்று தோன்றும்படியாக அந்த நல்ல பூதம் சீதாவைத் தோளில் போட்டுக் கொண்டு நெடுநேரம் நடந்தது. ஆகா! கடைசியில் நரகத்தைத் தாண்டியாயிற்று போலும்! வெப்பமான புகையும் தீயின் அனலும் இப்போது முகத்தில் வீசி எரிச்சல் உண்டாக்கவில்லை. குளிர்ந்த காற்று முகத்தில் பட்டு இதம் தருகிறது. நரகத்தின் கோர சத்தங்களும் இப்போது வெகுதூரத்திலேதான் கேட்கின்றன! நரக வாசலைக் கடந்து சொர்க்கத்துக்குள் புகுந்தாயிற்று போலும்! சீதாவுக்கு நினைவு வரத் தொடங்கியது. மூடியிருந்த கண் இமைகளைக் கஷ்டப்பட்டுத் திறந்தாள். எண்ணிறந்த வெள்ளி நட்சத்திரங்கள் மெதுவாக நகர்ந்துகொண்டிருப்பது கண்ணில் பட்டது. ஆகா! வான வெளியில் சொர்க்க பூமியை நெருங்கி இப்போது போய்க்கொண்டிருக்கிறோம் போலும்! புஷ்பக விமானத்தில் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறோம் போலும் தன் நெற்றியை மிருதுவாகத் தடவிக் கொடுக்கும் கை, தன்னை நரகத்திலிருந்து காப்பாற்றிய தேவதூதனின் திருக்கரமாகவே இருக்க வேண்டும்! இதெல்லாம் வீண் பிரமை என்று சீக்கிரத்திலே சீதாவுக்குத் தெரிந்து போயிற்று. கடகடவென்று கட்டை வண்டியின் சத்தமும் வண்டி ஆட்டத்தினால் உடம்பு ஆடி உண்டான வலியும் பூமியிலேதான் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வைச் சீதாவுக்கு உண்டாக்கின. நெற்றியைத் தடவிக் கொண்டிருக்கும் கை மௌல்வி சாகிபுவின் கை; அதாவது தன் தந்தையின் கை. “அப்பா!” “சீதா! விழித்துக் கொண்டாயா?” “ரொம்ப நேரம் தூங்கி விட்டேனா?” “பொழுது விடியப் போகிறது” “குழந்தை வஸந்தி…?” “குழந்தை பத்திரமாக இருப்பாள்; கவலைப்படாதே; உன் சித்தி ரொம்பக் கெட்டிக்காரி. இதைப்போல எத்தனையோ சமாளித்தவள்.” சீதா சிறிது நேரம் மௌனமாயிருந்து விட்டு, “அப்பா இது என்ன வண்டி?” என்று கேட்டாள். “இது பாஞ்சால நாட்டின் புராதன வண்டி, சீதா! கோவேறு கழுதை பூட்டிய வண்டி!” “வண்டி ஓட்டுகிறவன் யார்?” “ஒரு மாதமாக என்னிடம் வேலை செய்த பையன்.” “அவனை நம்பலாமா?” “இந்தக் காலத்தில் யாரை நம்பலாம், யாரை நம்பக் கூடாது என்று எப்படிச் சொல்ல முடியும்!” “இந்த வண்டி ஏது?” “விலைக்கு வாங்கினேன், இந்த மாதிரி சந்தர்ப்பத்துக்கு உபயோகமாயிருக்கட்டும் என்றுதான்!” “இந்த மாதிரியெல்லாம் நடக்கும் என்று உங்களுக்கு முன்னாடியே தெரியுமா என்ன?” “ஒரு மாதிரி தெரியும், ஆனால் இவ்வளவு பயங்கரமாயிருக்குமென்று எதிர்பார்க்கவில்லை.” சற்றுப் பொறுத்துச் சீதா, “இந்த வண்டியில் இன்னும் ரொம்ப நேரம் போக வேண்டுமா?” என்று கேட்டாள். “ஏன் உடம்பு வலிக்கிறதா?” “ஆமாம்; உடம்பு வலிக்கிறது.” “வலிக்காமல் என்ன செய்யும்? அந்த ராட்சஸர்களும் நானும் உன்னை எப்படி மிதித்து விட்டோ ம்? கொஞ்சம் பொறுத்துக்கொள், சீதா! சீக்கிரத்தில் வண்டியை நிறுத்தச் சொல்கிறேன். அதோ தெரிகிறதே, அந்தப் பாறை மறைவில் வண்டியை நிறுத்தலாம்!” என்றார் மௌல்வி சாகிபு. சீதா எழுந்து உட்கார்ந்தாள், அது மேலே கூண்டு இல்லாத திறந்த வண்டி. ஆனால் நாலு பக்கமும் ஒரு முழ உயரம் அடைப்பு இருந்தது. அடைப்புக்கு மேலாகப் பார்த்தாள். சாலையின் இரு புறமும் குட்டையான ஈச்ச மரங்கள் நெருங்கி வளர்ந்திருந்தன. சற்று தூரத்தில் ஒரு மொட்டைப் பாறை பிரம்ம ராட்சதனைப் போல் நின்றது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுச் சீதா தன் தந்தையை ஏறிட்டுப் பார்த்தாள். அவள் மனத்திற்குள் அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த கேள்வி அப்போது வெளியில் வந்தது. “அப்பா! நீங்கள் எதற்காக முஸ்லிம் மதத்தில் சேர்ந்தீர்கள்?” என்று கேட்டாள், தந்தை மௌனமாயிருந்தார். “நான் கேட்டது தவறாயிருந்தால் மன்னியுங்கள். எதற்காகக் கேட்டேன் என்றால், உங்களுக்குக் கடவுளிடத்தில் நம்பிக்கை உண்டா என்று தெரிந்து கொள்வதற்காகத்தான். கடவுள் ஒருவர் இருந்தால் இந்த மாதிரி கஷ்டங்களையெல்லாம் ஜனங்களுக்கு எதற்காகக் கொடுக்கிறார்?” என்றாள் சீதா! “இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் கடவுள் உண்டா என்ற சந்தேகம் யாருக்கும் தோன்றக் கூடியதுதான். அந்த விஷயத்தைப் பற்றி நீ ஞானிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் முதலில் நீ கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லப் போகிறேன். எப்படி ஆரம்பிப்பது என்றுதான் யோசித்தேன். முதலிலிருந்து ஆரம்பித்து எல்லாவற்றையும் சொல்லிவிடப் போகிறேன். சீதா! என் கதையைத் தவிர முக்கியமான இரகசியம் ஒன்றையும் சொல்லப் போகிறேன். எப்போதாவது தாரிணியைச் சந்திக்கும்படி நேர்ந்தால்….” “அப்பா! தாரிணிக்கும் எனக்கும் ஏதாவது உறவு உண்டா?” என்று சீதா ஆவலுடன் கேட்டாள். “அதைத்தான் சொல்லப் போகிறேன்” என்றார் சீதாவின் தந்தை. இருபத்து ஒன்பதாம் அத்தியாயம் - சீமந்த புத்திரி சாலைக்கு இருபுறத்திலும் குட்டையான ஈச்ச மரங்கள் காடாக மண்டி வளர்ந்திருந்தன. ஒரு பக்கத்தில் செங்குத்தான பாறை ஒன்று இருந்தது. வண்டியை ஓட்டிய பையனிடம் மௌல்வி சாகிபு என்னமோ சொன்னார். பையன் வண்டியைச் சாலையை விட்டுக் காட்டுக்குள் ஓட்டினான். ஈச்ச மரங்களுக்கு மத்தியில் இடங்கிடைத்த வழியாக ஓட்டிச் சென்று பாறைக்குப் பின்புறத்தில் கொண்டு போய் வண்டியை நிறுத்தினான். தந்தையும் மகளும் வண்டியிலிருந்து இறங்கினார்கள். மௌல்வி சாகிபு வண்டியிலிருந்து ஒரு கம்பளத்தை எடுத்து விரித்தார். “அம்மா! இதில் உட்கார்! பகலெல்லாம் நாம் இங்கேதான் கழிக்க வேண்டியிருக்கும்!” என்றார். சீதா உட்கார்ந்து, “ஏன், அப்பா! பகலில் பிரயாணம் செய்யக்கூடாதா?” என்று கேட்டாள். “பகலில் பிரயாணம் செய்தால் இரண்டு வகையில் ஆபத்து வரலாம். சீக்கியர்களாவது ஹிந்துக்களாவது நம்மைப் பார்த்தால் ஒரு ஹிந்துப் பெண்ணை முஸ்லிம் கிழவன் அடித்துக்கொண்டு போகிறான் என்று எண்ணி என்னைக் கொல்லப் பார்ப்பார்கள். முஸ்லிம்கள் நம்மைப் பார்த்தால் உன்னை என்ன பண்ணுவார்களோ தெரியாது” என்றார். இப்படி சொல்லிவிட்டு மௌல்வி சாகிபு வண்டியிலிருந்து தண்ணீர்ப் பையையும் ஒரு சிறு பெட்டியையும் எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தார். “சீதா! இந்தப் பையில் தண்ணீர் இருக்கிறது. இந்தப் பெட்டியில் கொஞ்சம் பிஸ்கோத்து இருக்கிறது. இவற்றைக் கொண்டு எத்தனை நாள் நாம் காலம் தள்ள வேண்டுமோ தெரியாது. இந்தப் பஞ்சாப் நரகத்திலிருந்து என்றைக்கு வெளியில் போகப் போகிறோமோ, அதையும் சொல்வதற்கில்லை!” என்றார். “பஞ்சாபை நரகம் என்கிறீர்களே? ஒரு வருஷத்துக்கு முன்னால் நான் இங்கே வந்தபோது இது எவ்வளவு நல்ல தேசமாயிருந்தது? ஜனங்கள் ஒருவருக்கொருவர் எவ்வளவு பிரியமாயிருந்தார்கள்? கல்கத்தா பயங்கரத்தைப் பார்த்துவிட்டு நானும் உங்களுடைய மாப்பிள்ளையும் பஞ்சாபுக்கு வந்தபோது இது சொர்க்கலோகமாக எங்களுக்குத் தோன்றியது. இந்த ஒரு வருஷத்துக்குள் இங்கே என்ன நேர்ந்துவிட்டது?” “ஒரு வருஷத்துக்குள் ஒன்றும் நேர்ந்துவிடவில்லை. ஜனங்கள் பைத்தியமாகிவிட்டார்கள்; அவ்வளவுதான். கல்கத்தாவுக்கு நவகாளியில் பழி வாங்கினார்கள். நவகாளிக்குப் பீஹாரில் பழி வாங்கினார்கள். பீஹாருக்கு இப்போது மேற்கு பஞ்சாபில் பழி வாங்குகிறார்கள். இதன் பலன் என்ன ஆகுமோ கடவுளுக்குத் தான் தெரியும். இத்தனை பைத்தியங்களுக்கு மத்தியில் அந்த மகான் ஒருவர் இருந்து அன்பு மதத்தைப் போதித்து வருகிறார்; அவர் உண்மையில் மகாத்மாதான்!” “உங்களுக்கு காந்திஜியிடம் பக்தி உண்டா அப்பா?” “செய்யக்கூடிய பாபங்களையெல்லாம் செய்த பிறகு இப்போது காந்திஜியிடம் பக்தி உண்டாகியிருக்கிறது. இந்த பக்தியினால் என்ன பயன்? உன் தாயாருக்கு ஆதிமுதல் மகாத்மா காந்தியிடம் பக்தி உண்டு ‘மகாத்மாதான் தெய்வம்’ என்று சொல்லிக்கொண்டிருப்பாள். அப்போதே அவளுடைய பேச்சைக் கேட்டு நடந்திருந்தேனானால் என் வாழ்க்கை இப்படி ஆகியிராது.” “அப்பா! நான் கேட்கிறேனே என்று கோபித்துக்கொள்ளக் கூடாது. ரொம்ப நாளாக என் மனதில் இருந்து உறுத்திக் கொண்டிருக்கும் கேள்வியைத்தான் கேட்கிறேன். அம்மாவிடம் நீங்கள் எப்போதாவது பிரியமாக இருந்ததுண்டா?” என்றாள் சீதா. "நீ இந்தக் கேள்வியைக் கேட்டதற்காக எனக்கு உன் பேரில் கோபம் இல்லை சீதா! இந்த மட்டும் கேட்டாயே என்று சந்தோஷப்படுகிறேன். என் மனதில் கிட்டத்தட்ட முப்பது வருஷ காலமாக இருந்து வரும் பாரத்தை இன்று நீக்கிக் கொள்ளப் பாகிறேன். யாரிடமாவது சொன்னாலன்றி என் மனத்தின் சுமை தீராது. உன் அக்காவிடம் சொல்லும் தைரியம் எனக்கு ஏற்படவே இல்லை. இந்தப் பழிகாரி ரஸியா பேகமும் அதற்குக் குறுக்கே நின்றாள். நல்ல வேளையாக அவளும் இப்போது இங்கு இல்லை. எல்லாவற்றையும் உன்னிடம் சொல்லிவிடப் போகிறேன்! தான் செய்த குற்றங்களைத் தான் பெற்ற பெண்ணிடம் சொல்லுவதென்பது கஷ்டமான காரியம் தான். ஆனாலும் இந்தச் சந்தர்ப்பம் தவறினால் மறுபடியும் கிடைக்குமோ என்னமோ!"- இந்தப் பூர்வ பீடிகையுடன் மௌல்வி சாகிபு முப்பது வருஷத்துக்கு முந்தைய சம்பவங்களைச் சொல்ல ஆரம்பித்தார். அவை அதிசயமான சம்பவங்கள்தான். அதிசயமில்லாவிட்டால் அவற்றைக் குறித்துச் சொல்ல வேண்டிய அவசியமே இராதல்லவா? துரைசாமி ராஜம்மாளைக் கலியாணம் செய்து கொண்டு பம்பாயில் புதுக்குடித்தனம் தொடங்கிய சில காலம் அவர்களுடைய வாழ்க்கை இன்ப மயமாயிருந்தது. ஒவ்வொரு நாளும் ஒரு ஆனந்தத் திருநாளாயிருந்தது. ராஜம்மாள் முதல் தடவை கர்ப்பமானாள். தம்பதிகள் களிப்புக் கடலில் மூழ்கித் திளைத்தார்கள். வாழ்க்கைச் சக்கரம் ஒரு முறை சுழன்று வந்தது. இன்பக் கிரஹம் பெயர்ந்து துன்பக்கிரஹம் தோன்றியது. ‘மூன்று சீட்டு’ என்னும் சூதாட்டத்தில் துன்பத்தின் சிறிய வித்து துரைசாமி அறியாமலே விதைக்கப்பட்டு முளைத்து எழுந்தது. சொற்ப சம்பளக்காரரான துரைசாமி ரங்காட்டத்தில் தோற்ற பணத்தைத் திரும்ப எப்படியாவது எடுத்துவிட விரும்பினார். இதற்காகக் கடன் வாங்கிக்கொண்டு குதிரைப் பந்தயத்துக்குப் போனார். ஒரு தடவை போன பிறகு மனதைத் தடுக்க முடியவில்லை. லாபமும் நஷ்டமும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. தம்முடைய யுத்தி சாமர்த்தியத்தால் இழந்த பணத்தையெல்லாம் எடுத்து மேலும் லாபமும் சம்பாதித்துவிடலாம் என்றும் ஒரு நல்ல தொகை கிடைத்ததும் பந்தயத்தை விட்டொழித்து விடலாம் என்றும் எண்ணினார். ஏதோ பொய்க் காரணங்களைச் சொல்லி ராஜம்மாள் அணிந்திருந்த சில நகைகளையும் வாங்கிக் கொண்டுபோய் அடகு வைத்துப் பணம் கடன் வாங்கினார். மேலும் மேலும் சேற்றில் அமுங்கிக் கொண்டிருந்தார், கடைசியில் அடியோடு அமுங்கிப்போக வேண்டியதுதான் என்ற நிலைமை ஏற்பட்டிருந்த சமயத்தில் ராஜம்மாளின் பிரசவ காலமும் நெருங்கியிருந்தது. வீட்டில் வசதியில்லாமல் ஆஸ்பத்திரியில் கொண்டு விட்டார். வண்டி வைத்து ஆஸ்பத்திரியில் கொண்டு விடுவதற்குக்கூட கையில் பணம் இல்லாமலிருந்தது. இந்த நிலைமையை நினைத்து மனம் புழுங்கிக்கொண்டே ரயில்வே ஸ்டேஷனில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் ரமாமணிபாய் தன் சகோதரியுடன் வந்து சேர்ந்தாள். அவளுடைய கண்ணில் துளித்திருந்த கண்ணீரும் அவள் தன் தங்கையைப்பற்றிச் சொன்ன வரலாறும் துரைசாமியின் உள்ளத்தை இளக்கிவிட்டன. அதோடு அவர்களுக்கு உதவி செய்வதால் தன்னுடைய தரித்திரம் தீரலாம் என்ற ஆசையும் கூடச் சேர்ந்து கொண்டது. தன் மனைவியைப் பிரசவத்துக்காக விட்டிருந்த அதே பிரசவ ஆஸ்பத்திரியில் கங்காபாயையும் சேர்த்தார். துரைசாமி பிரசவ ஆஸ்பத்திரிக்குத் தமது மனைவியைப் பார்ப்பதற்காகப் போனபோதெல்லாம் ரமாமணிபாயையும் பார்க்கும்படி நேர்ந்தது. வறுமை வலையில் சிக்கியிருந்த அம்மனிதர் மீது ரமாமணிபாய் தன் மோகவலையையும் விரித்தாள். துரைசாமியின் மனம் தத்தளித்தது. நல்லபடியாகத் தன் மனைவிக்குப் பிரசவம் ஆகி வீடு திரும்பிய பிறகு வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊருக்கே திரும்பிப் போய்விடுவது என்று ஒரு சமயம் எண்ணுவார். அடுத்த நிமிஷம் அவருடைய மன உறுதி பறந்து போய்விடும். ரமாமணியுடன் காதல் வாழ்க்கை நடத்துவதுபற்றி அவருடைய உள்ளம் ஆகாசக் கோட்டைகள் கட்டத் தொடங்கிவிடும். ஒருவேளை ராஜம்மாள் பிரசவத்தின் போது இறந்து போய்விட்டால் ரமாமணியைத் தாம் கலியாணம் செய்துகொண்டு ஏன் சுகமாக இருக்கக்கூடாது, என்னும் படுபாதக எண்ணங்கூடத் துரைசாமியின் மனதில் ஒவ்வொரு சமயம் எழுந்து அவரையே திடுக்கிடச் செய்யும். ராஜம்மாளும் கங்காபாயும் ஒரே நாள் இரவில் குழந்தை பெற்றெடுத்தார்கள். அன்றிரவு துரைசாமிக்கு ஸ்டேஷனில் ‘டியூடி’ இருந்தது. ஆகையால் ஆஸ்பத்திரிக்குப் போகமுடியவில்லை. இராத்திரி ஒரு தடவை டெலிபோன் பண்ணி விசாரித்தார். ராஜம்மாளுக்குச் சுகப்பிரசவம் ஆனதாகவும் பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் பதில் வந்தது. காலையில் ‘டியூடி’ முடிந்ததும் துரைசாமி பரபரப்புடன் மருத்துவச் சாலைக்குப் போனார். நர்ஸின் அனுமதி பெற்று ராஜம்மாளைப் போய்ப் பார்த்தார். அளவில்லா வேதனையும் வலியும் அனுபவித்துச் சோர்ந்து போயிருந்த ராஜம்மாளின் முகத்தில் புன்னகை மலர்ந்து பெருமிதம் குடிகொண்டிருந்தது. “நான் சொன்னதுதான் பலித்தது!” என்றாள் ராஜம்மாள். “என் வாக்குப் பொய்யாகுமா? பாரத்வாஜ மகரிஷியின் வம்சத்தில் பிறந்தவனாயிற்றே நான்!” என்றார் துரைசாமி. “பொய்யாகிவிட்டதே!” என்றாள் ராஜம்மாள். “முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கலாம்! பெண்ணை ஆணாக்க முடியுமா!” என்றார் துரைசாமி. ராஜம்மாள் பரிகாசத்துக்காகவே அவ்விதம் பிடிவாதமாய்ச் சொல்கிறாள் என்று அவர் நம்பினார். “நீங்கள் வேணுமானால் பாருங்களேன்!” என்றாள் ராஜம்மாள். துரைசாமி கொசுவலை மூடியைத் தூக்கிவிட்டுக் குழந்தையைப் பார்த்தார். ஆண் குழந்தை என்பதைக் கண்டு சிறிது திடுக்கிட்டார். இராத்திரி டெலிபோனில் செய்தி சொன்னவர்கள் தவறாகச் சொல்லியிருக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டார். ஆயினும் அவருடைய மனம் பூரண நிம்மதியடையவில்லை. உருவமில்லாத சந்தேகங்கள் தோன்றித் தொல்லை கொடுத்தன. நர்ஸைத் தனியாகச் சந்தித்து, ’டெலிபோனில் பெண் குழந்தை என்று ஏன் சொன்னாய்?" என்று கேட்டார். நர்ஸ் அவரை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “நான் சொல்லவில்லை வேறு யாரும் சொல்லியிருக்கவும் மாட்டார்கள்; உங்களுக்கு ஏதோ பிரமை!” என்றாள். மறுபடியும் வற்புறுத்திக் கேட்டபோது, “ஒருவேளை கங்காபாயைப் பற்றி விசாரிக்கிறீர்கள் என்று எண்ணிக்கொண்டு யாராவது சொல்லியிருக்கலாம்” என்றாள். “கங்காபாய்க்கும் பிரசவம் ஆகிவிட்டதா?” என்று துரைசாமி கேட்டதற்கு, “ஆமாம் பெண் பிறந்திருக்கிறது!” என்றாள் நர்ஸ். உடனே துரைசாமி ரமாமணியைப் போய்ப் பார்த்து அந்தச் செய்தியை உறுதிப்படுத்திக் கொண்டார். இத்துடன் ஒருவாறு அவர் மனம் ஆறுதல் அடைந்தது. கங்காபாயையும் அவரே ஆஸ்பத்திரியில் சேர்த்தபடியால் அவளுடைய பெண் குழந்தையைப் பற்றித் தமக்குத் தெரியப்படுத்தியது இயற்கையே என்று தோன்றியது. ராஜம்மாளையும் குழந்தையையும் துரைசாமி வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனார். சில காலத்துக்கெல்லாம் அந்தக் குழந்தை இறந்து விட்டது. ராஜம்மாளுக்கும் துரைசாமிக்கும் இதனால் ஏற்பட்ட துன்பத்திற்கு அளவேயில்லை. தன்னுடைய குழந்தை இறந்த துயரத்தை மறப்பதற்காகத் துரைசாமி கங்காபாயின் குழந்தையை அடிக்கடி போய்ப் பார்த்து வந்தார். கங்காபாய் இறந்து போய்விட்டாள். அவளுடைய குழந்தையை ரமாமணிபாய் வளர்த்து வந்தாள். துரைசாமி ஏற்படுத்திக்கொடுத்த ஜாகையில்தான் அவள் வசித்தாள். ஒரு நாள் ரமாமணியின் ஜாகைக்குத் துரைசாமி போனபோது உள்ளே யாருடனோ அவள் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. அந்தப் பேச்சில் தன்னுடைய பெயர் அடிபடவே துரைசாமி கவனமாகக் கேட்டார். அதிலிருந்து ஒரு விபரீதமான மோசடி வேலையைப்பற்றி அறிந்து கொண்டார். பிரசவங்கள் நிகழ்ந்த அன்று இரவில் ராஜம்மாளின் குழந்தை கங்காபாயின் குழந்தையாகவும், கங்காபாயின் குழந்தை ராஜம்மாளின் குழந்தையாகவும் மாற்றப்பட்டன என்று தெரிந்து கொண்டார். உடனே கதவை இடித்துத் திறந்து கொண்டு போய் நர்ஸையும் ரமாமணியையும் சண்டை பிடிக்கவேண்டும் என்று முதலில் தோன்றியது. அப்புறம் அதனால் என்ன பலன்கள் நிகழுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. மனக் குழப்பம் மாறிய பிறகு நன்றாக யோசித்துத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானித்தார். நர்ஸ் வெளியில் போகும்போது அவளுடைய கண்ணில் படாமல் மறைந்திருந்து விட்டுப் பிறகு அறைக்குள் போனார். ரமாமணியைப் பார்த்ததும் அவருடைய பொறுமையெல்லாம் பறந்து விட்டது. அவளைத் திட்டிச் சண்டை பிடித்தார். ரமாமணி ஓவென்று அழுது விட்டாள். ஒரு கத்தியை எடுத்து நீட்டி “இதனால் என்னைக் குத்திக் கொன்றுவிட்டு இந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு போங்கள்!” என்றாள். "என் தங்கை மேல் என் அன்பையெல்லாம் வைத்திருந்தேன், அவளும் போய்விட்டாள். இந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்துக்கொண்டு உயிர் வாழலாம் என்று எண்ணியிருந்தேன். குழந்தையை நீங்கள் எடுத்துக் கொண்டு போனால் எனக்கு அப்புறம் இந்த உலகத்தில் வேலை ஒன்றுமில்லை" என்று கத்தினாள். முடிவில் தன் காரியத்தைச் சாதித்துக் கொண்டாள். அதாவது “குழந்தையை எடுத்துக் கொண்டு போவதில்லை” என்று துரைசாமியிடம் வாக்குறுதி பெற்றுக் கொண்டாள். குழந்தைகளை மாற்றும் காரியத்தை எதற்காகச் செய்தாள் என்று துரைசாமி விசாரித்துத் தெரிந்து கொண்டார். தன் தங்கைக்கு ஆண் குழந்தை பிறந்தால் ரஜினிபூர் ராஜ்யத்துக்கு அந்தக் குழந்தை வாரிசு ஆகும் என்று ரமாமணிபாய் நம்பினாள். அக்காரணத்தாலேயே ரஜினிபூர் ராஜாவின் துர்மந்திரிகள் குழந்தையைக் கண்டுபிடித்துக் கொன்றுவிடுவார்கள் என்று பயந்தாள். குழந்தை வேறிடத்தில் வளர்ந்தால் அந்த அபாயம் இல்லை என்றும், பின்னால் தக்க சமயத்தில் வெளிப்படுத்திக் கொள்ளலாம் என்றும் நினைத்தாள். ஆனால் கங்காபாய் இறந்து போவாள் அவளுடைய குழந்தையும் செத்துப் போய்விடும் என்று ரமாமணிபாய் எதிர்பார்க்கவில்லை. அதைக் காட்டிலும் முக்கியமாக, மாற்றி எடுத்து வந்து வளர்த்த ராஜம்மாளின் குழந்தை தன்னுடைய உள்ளத்தை இவ்வளவு தூரம் கவர்ந்து விடும் என்று அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. எல்லா விஷயங்களையும் யோசித்துப் பார்த்தபோது துரைசாமிக்கும் குழந்தையை ரமாமணியிடம் அப்போதைக்கு விட்டுவைப்பதே நலம் என்று தோன்றியது. இந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டுபோய் ராஜம்மாளிடம், “இதுதான் உன் குழந்தை!” என்று சொன்னால் ராஜம்மாள் நம்பவேண்டுமே? ஏற்கனவே அவள் கொஞ்சம் சந்தேகப் பிரகிருதி. இதைப்பற்றி ஏதாவது விபரீதமான சந்தேகம் அவள் மனதில் தோன்றிவிட்டால் துரைசாமிக்கு வேறொரு காதலியிடம் பிறந்த குழந்தை என்று அவள் எண்ணிவிட்டால் என்ன செய்வது? வாழ்க்கையே நாசமாகிவிடுமே? - இம்மாதிரி மனக்குழப்பத்துடன் துரைசாமி வீடு திரும்பினார். “பம்பாயில் எத்தனையோ லட்சம் ஜனங்கள் இருக்கிறார்களே? இந்த மாதிரி ஒரு ஆச்சரியமான, விபரீதமான அநுபவம் என் வாழ்க்கையிலேதானா ஏற்படவேண்டும்?” என்று எண்ணிக்கொண்டே சென்றார். அந்த ஒரு ஆச்சரியமான விபரீத சம்பவம் மேலும் பல ஆச்சரிய - விபரீதங்கள் ஏற்படுவதற்குக் காரணமாயிருந்தது. ரமாமணியிடம் வளர்ந்து வந்த தன் குழந்தையிடம் துரைசாமியின் பாசம் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. அதன் காரணமாகவே துரைசாமி ரமாமணிபாயிடம் நீடித்த தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆளாகவும் நேர்ந்தது. தன்னுடைய போக்கு வரவுகளைப் பற்றித் தன் மனைவி ராஜம்மாளிடம் பொய் சொல்லி மறைக்க வேண்டியதாயிற்று. அதனால் அந்தப் பேதைக்கு எல்லையற்ற மனத்துன்பத்தையும் அளிக்கவேண்டியதாயிற்று. "சீதா! ராஜம்மாளுக்குப் பிறந்து ரமாமணியிடம் வளர்ந்த அந்தப் பெண்மணியின் பெயர்தான் தாரிணி. அவள்தான் என்னுடைய சீமந்த புத்திரி, நீ அவளுடைய தங்கை. நீங்கள் இரண்டு பேரும் குழந்தை களாயிருந்தபோது நான் பட்ட சங்கடத்தை உன்னால் கற்பனை செய்துகூட அறிய முடியாது. உலகத்தில் யாரும் அத்தகைய சங்கடத்தை அநுபவித்திருக்க மாட்டார்கள். முற்காலங்களில் கொடுமையான அரசர்கள் ஒருவித தண்டனை அளிப்பார்களாம். ஒரு மனிதனை நடுவில் நிறுத்தி இரண்டு பக்கமும் இரண்டு யானையை நிறுத்தி வலது கையை ஒரு யானையும் இடது கையை ஒரு யானையும் பிடித்து இழுக்கும்படி செய்வார்களாம். அதே மாதிரியாக ஒரு பக்கத்தில் தாரிணியின் மேல் உள்ள பாசமும் இன்னொரு பக்கத்தில் உன்மேல் உள்ள பாசமும் என்னைப் பற்றி இழுத்துக்கொண்டிருந்தன. நடுவில் அகப்பட்டுக் கொண்டு நான் திண்டாடினேன்! ஆனால் இந்தத் திண்டாட்டத்திலெல்லாம் ஒரு சந்தோஷமும் இருந்தது!" என்றார் மௌல்வி சாகிபுவாக விளங்கிய துரைசாமி ஐயர். சீதாவுக்குத் தன்னுடைய வாழ்க்கையில் அதுவரையில் அர்த்தமாகாதிருந்த பல விஷயங்கள் அப்போது விளங்கின. மர்மமாயிருந்த பல சம்பவங்கள் தெளிவு பெற்றன. தாரிணியென்று தன்னை எண்ணிக்கொண்டு ரஜினிபூர் ஆட்கள் கொண்டு போனதற்குக் காரணம் தெரிந்தது. அதைக் காட்டிலும் முக்கியமாக ராஜம்பேட்டையில் சௌந்தரராகவன் தன்னை முதன் முதலில் பார்த்ததும் அன்பு கொண்டதின் காரணம் விளங்கிற்று. தாரிணியின் சாயலைத் தன்னிடம் கண்டதுதான் அதற்குக் காரணமாயிருக்க வேண்டும்; சந்தேகமில்லை. தாரிணி தன்னிடம் அவ்வளவு அன்பாயிருந்ததின் காரணமும் சீதாவுக்கு அப்போது நன்கு புலனாயிற்று. ஒரு தாயின் வயிற்றில் பிறந்த இரத்த பாசந்தான்; சந்தேகம் என்ன? தன்னுடைய மனதிலும் தாரிணியிடம் வாஞ்சை பொங்கிக்கொண்டுதான் இருந்தது. ஆனால் பாழும் அசூயை அடிக்கடி அந்த வாஞ்சையை அமுக்கி விட்டது. எவ்வளவு கீழான மனது தன்னுடைய மனது; தாரிணியின் தயாள குணம் என்ன? விசால இருதயம் என்ன? தன்னுடைய ஈருஷை நிறைந்த சின்ன மனது என்ன? கடவுள் புண்ணியத்தில் இந்த இக்கட்டிலிருந்து தப்பி மறுபடியும் அந்தப் புண்ணியவதியைப் பார்க்கும் பாக்கியம் தனக்குக் கொடுத்து வைத்திருந்தால்?… “அப்பா! தாரிணி அக்காவுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா?” என்று கேட்டாள். “இந்த விஷயமெல்லாம் என்று எதைப் பற்றிக் கேட்கிறாய்? நான் இப்போது சொன்னவற்றில் சில தெரியும்; சில தெரியாது.” “நான் அவள் கூடப் பிறந்த தங்கை என்று தெரியுமா?” “தெரியாது, என்னுடைய நெஞ்சு மிகவும் கோழை நெஞ்சு, சீதா! பல தடவை அவளிடம் சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கடைசியில் தைரியம் வராமல் விட்டுவிட்டேன். ரஸியா பேகம் அவளிடம் சொல்லக்கூடாது என்று பிடிவாதம் பிடித்தாள்.” “எதற்காக அப்பா?” “பைத்தியக்காரத்தனந்தான்! உண்மையைச் சொல்லி விட்டால் அவள் பேரில் தாரிணிக்குப் பாசம் இல்லாமல் போய்விடும் என்று பயம். அது மட்டுமல்ல; ரஜினிபூர் ராஜ்யத்தில் ஒரு பாதியாவது தாரிணிக்கு வாங்கிக் கொடுத்து விட வேண்டும் என்ற சபலம் உன் சித்தியின் மனதிலிருந்து இன்னும் போகவில்லை. உலகம் தலைகீழாகப் போகிறது என்பதையும் சுதேச ராஜ்யங்கள் எல்லாம் இன்னும் சில காலத்தில் இருந்த இடந்தெரியாமல் போய்விடும் என்பதையும் அவள் உணரவில்லை!” சீதா சிறிது நேரம் யோசித்துக் கொண்டிருந்த பிறகு, “அப்பா! எனக்குக் கலியாணம் ஆனபிறகு வெகுகாலம் வரையில் என்னை வந்து பார்க்காமலேயே இருந்து விட்டீர்களே, ஏன்?” என்றாள். மௌல்வி சாகிபு தயங்கினார், “உண்மையைச் சொல்ல வேண்டும் என்கிறாயா?” என்று கேட்டார். “உங்கள் இஷ்டம்! சொல்லலாம் என்றால் சொல்லுங்கள்!” "உண்மையைச் சொல்ல வேண்டியதுதான், சீதா! இப்போது சொல்லாவிட்டால் பிறகு சந்தர்ப்பம் வருமோ என்னமோ யார் கண்டது? சொல்லுகிறேன் கேள்! உனக்குக் கலியாணம் ஆன புதிதில் உன் பேரில் எனக்குக் கோபமாகவேயிருந்தது. உன் தமக்கை இஷ்டப்பட்டுக் கலியாணம் செய்து கொள்ள விரும்பிய புருஷனை நீ கலியாணம் செய்து கொண்டாய். தாரிணிக்கு நீ பெரிய துரோகம் செய்து விட்டதாக நினைத்தேன். ஆனால் உண்மையில் நீ அவளுக்குப் பெரிய உபகாரம் செய்திருக்கிறாய் என்று பின்னால் தெரிந்து கொண்டேன். அம்மா! சௌந்தர ராகவனைக் கலியாணம் செய்து கொண்டு நீ பட்ட கஷ்டங்களை நினைத்து நினைத்து நான் எத்தனையோ நாள் கண்ணீர் வடித்திருக்கிறேன். இவ்வளவு கஷ்டங்களையும் தாரிணி பட்டிருக்க வேண்டியவள்தானே? நீ அந்தத் தூர்த்தனைக் கலியாணம் செய்து கொண்டதனால் தாரிணிக்கு எவ்வளவு பெரிய உபகாரம் செய்திருக்கிறாய்?" என்றார் மௌல்வி சாகிபு. “அப்பா! அவரைப் பற்றி நீங்கள் ஒன்றும் அவதூறாகப் பேச வேண்டாம், என்னால் பொறுக்க முடியாது!” என்றாள் சீதா. “இல்லை, பேசவில்லை, மன்னித்துக்கொள்!” என்றார் மௌல்வி. “நீங்கள் சற்று முன் கூறியது உண்மையும் இல்லை. அக்கா இவரைக் கலியாணம் செய்து கொண்டிருந்தால் என்னைப் போல் கஷ்டப்பட்டிருக்க மாட்டாள். இரண்டு பேரும் எவ்வளவோ சந்தோஷமாக வாழ்க்கை நடத்தியிருப்பார்கள். இந்தத் துக்கிரி, - அதிர்ஷ்டமற்ற பாவி அவர்களுடைய வாழ்க்கையில் குறுக்கிட்டு நாசமாக்கினேன்!” “அப்படிச் சொல்லாதே, சீதா! இந்த உலகில் எல்லாம் அவரவர்களுடைய தலைவிதியின்படி நடக்கிறது. ஒருவர் வாழ்க்கையை இன்னொருவர் நாசமாக்க முடியாது.” “தலைவிதியில் எனக்கு நம்பிக்கையில்லை அப்பா! தலைவிதியும் இல்லை, கால் விதியும் இல்லை. எல்லாம் நம்முடைய கர்மத்தின் பயன்தான். அக்காவுக்கு நான் முதலில் துரோகம் செய்தேன்; பிறகு என் அருமைத் தோழி லலிதாவுக்குத் துரோகம் செய்தேன். அதற்கெல்லாம் பிராயசித்தம் நான் செய்து கொள்ளாவிட்டால் எனக்கு நல்ல கதி எப்படிக் கிடைக்கும்!” “நீ மனதறிந்து ஒரு குற்றமும் செய்யவில்லை, சீதா! எல்லாம் விதி வசமாக நேர்ந்ததுதான். வீணாக மனதை, அலட்டிக் கொள்ளாதே!” “அப்பா! எனக்கு நீங்கள் ஒரு வரம் கொடுக்க வேண்டும்.” “நான் என்ன கடவுளா, உனக்கு வரம் கொடுப்பதற்கு?” "கடவுளைப் போலத்தான் வந்திருக்கிறீர்கள். ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ அல்லவா? அன்னை போய் விட்டாள். நீங்கள்தான் பாக்கியிருக்கும் கடவுள். இந்தப் பிரயாணத்தில் எனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், ஏதாவது ஆபத்து ஏற்பட்டு நான் இறந்துவிட்டால், நீங்கள் கட்டாயம் தாரிணி அக்காவைப் பார்த்து நான் சொல்லும் செய்தியைச் சொல்ல வேண்டும். நான் அக்காவுக்குச் செய்த துரோகத்துக்காக மனப்பூர்வமாய் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகச் சொல்ல வேண்டும்!…" “இது என்ன பேச்சு?” “ஒருவேளை நான் வழியில் இறந்து போய் விட்டால் நீங்கள் எப்படியாவது தாரிணி அக்காவைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இவருடைய மனதிலிருந்து இன்னும் அக்காவின் ஞாபகம் போகவில்லை என்றும், இவரை அக்கா கட்டாயம் கலியாணம் செய்து கொண்டே தீர வேண்டும் என்றும் சொல்ல வேண்டும். நான் இறந்த பிறகு தாரிணி அக்காவும் இவரும் கலியாணம் செய்து கொண்டு சந்தோஷமாயிருந்தால்தான் என் ஆத்மா சாந்தமடையும்!” “இது என்ன பைத்தியம்? என்னுடைய தவறுதான்! உன்னிடம் நான் ஒன்றுமே சொல்லியிருக்கக் கூடாது.” “நான் இப்போது சொன்னதை நீங்கள் தாரிணி அக்காவிடம் சொல்வதாக வாக்களித்தால்தான் நான் இங்கிருந்து புறப்படுவேன்? இல்லாவிட்டால் புறப்பட்டு வரமாட்டேன்.” “உன் இஷ்டப்படியே வாக்களிக்கிறேன், அம்மா! ஆனால் அதற்கு அவசியம் ஏற்படப் போவதில்லை.” “எதற்கு?” “தாரிணியிடம் நான் செய்தி சொல்வதற்கு. வழியிலேயே நாம் உன் தமக்கையைப் பார்ப்போம். அப்போது நீயே சொல்லிவிடலாம்.” “வழியில் பார்ப்போம் என்று எதைக்கொண்டு சொல்லுகிறீர்கள்?” “எனக்கு ஜோஸியம் தெரியும், இப்போது உனக்கு ஒரு உதாரணம் சொல்லி நிரூபிக்கிறேன், பார்! நம்முடைய வண்டியை ஓட்டிக் கொண்டு வந்த பையன் இருக்கிறான் அல்லவா?” “ஆமாம், அவனுக்கு என்ன?” “அதோ பாடுகிறான், கேள்? என்ன பாடுகிறான் என்று தெரிகிறதா உனக்கு?” சற்றுத் தூரத்திலிருந்து ‘சல் சல் நவ் ஜவான்!’ என்ற டாக்கிப் பாட்டு லேசாகக் கேட்டுக் கொண்டிருந்தது. பையன் பாறை மறைவில் உட்கார்ந்து பாடிக் கொண்டிருந்தான். “பையன் ஏதோ பழைய பாட்டை முணுமுணுக்கிறது கேட்கிறது! அதனால் என்ன?” “அந்தப் பையன் நம்மை ஏமாற்றிவிட்டு ஓடிவிட உத்தேசித்திருக்கிறான். கவனித்துக்கொண்டிரு.” இரண்டு நிமிஷத்துக்குப் பிறகு கோவேறு கழுதையை வண்டியிலே பூட்டும் சத்தம் கேட்டது. “நீங்கள் சொல்வது உண்மைதான், வண்டியைப் பூட்டிக் கொண்டு பையன் ஓடிவிடப் பார்க்கிறான் போலிருக்கிறது. அப்புறம் நம்முடைய கதி என்ன ஆகிறது?” “கவலைப்படாதே, சீதா! அவனுடைய நோக்கம் நிறைவேறாது!” “அது எப்படிச் சொல்கிறீர்கள்?” “ஜோசியந்தான் சொல்கிறேன். பார்த்துக் கொண்டே இரு!” சில நிமிஷத்துக்கெல்லாம் வண்டிச் சக்கரம் உருளும் சத்தம் கேட்டது. வண்டியும் கோவேறு கழுதையும் அதை ஓட்டிய பையனும் கண்ணுக்குத் தென்பட்டார்கள். மௌல்வி சாகிபு சட்டென்று தன் மடியிலிருந்து கைத் துப்பாக்கியை எடுத்துச் சுட்டார். ‘டுமீர்’ என்ற சத்தத்துடன் குண்டு பாய்ந்து சென்றது. சீதாவின் காதில் இலேசாக அலை ஓசை கேட்டது. அது, “மரணமே! வா!” மரணமே! வா!" என்று சீதாவின் காதில் ஒலித்தது. முப்பதாம் அத்தியாயம் - “மரணமே! வா!” மௌல்வி சாகிபு சுட்ட துப்பாக்கி குண்டு குறி தவறி தப்பிப் போயிருக்க வேண்டும். ஏனெனில் வண்டி போவது அதனால் தடைப்படவில்லை. கோவேறு கழுதை மிரண்டு வேகமாக வண்டியை இழுத்துக் கொண்டு ஓடியது. ஓடிய வண்டியிலிருந்து பையன் ஏதோ உரத்த சத்தமிட்டுத் திட்டிக் கொண்டு போனது காதில் விழுந்தது. “சீதா! என்னுடைய ஜோசியம் தவறிவிட்டது. சகுனம் கெட்டுவிட்டது, இந்த இடத்தில் இனித் தங்குவதற்கு இல்லை; புறப்படு உடனே!” என்றார் மௌல்வி சாகிபு. அடுத்த ஏழெட்டு தினங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் எல்லாம் சீதாவுக்குத் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களாகவே தோன்றவில்லை. சில சமயம் பல பூர்வ ஜன்மங்களிலே நடந்த சம்பவங்களாகத் தோன்றின. சில சமயம் கனவிலே காணும் தெளிவில்லாச் சம்பவங்களைப் போலத் தோன்றின. பற்பல கதைகளிலும் இதிகாச புராணங்களிலும் படித்த நிகழ்ச்சிகளாகத் தோன்றின. எப்பொழுதோ யாரோ சொல்லிக் கேட்ட சம்பவங்களைப் போலிருந்தன. அந்தச் சம்பவங்களி லெல்லாம் அவளும் ஒரு பாத்திரமாக இருந்த போதிலும், அவளுடைய உடம்பிலிருந்து ஆவியானது தனியே பிரிந்து போய் நின்று அந்த பயங்கர நிகழ்ச்சிகளையெல்லாம் காண்பது போலிருந்தது. வெளியிலே நிகழ்ந்த காரியங்களையும் காட்சி களையும் தவிர சீதாவின் மனதிலும் பல காட்சிகள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. லலிதாவின் காலில் விழுந்து அவள் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள். சௌந்தரராகவனிடம் வாக்குறுதி பெற்றுக் கொண்டாள். வஸந்தியைக் கட்டித் தழுவி ஆசி கூறினாள். மாமனாரையும் மாமியாரையும் வணங்கினாள். தாரிணியைக் கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டாள். சூரியாவிடம் கோபித்துக் கொண்டு திட்டினாள். தந்தையின் கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கொஞ்சினாள். ரஸியா பேகத்தின் முகவாய்க் கட்டையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினாள். காந்திமகானைத் தன் இதய பீடத்தில் அமர்த்திக் கும்பிட்டாள். இடையிடையே அவளுடைய பேதை உள்ளம், “மரணமே! வா!” என்று கூவிக்கொண்டிருந்தது. அவளுடைய காதில் அடிக்கடி அலை ஓசை முழங்கிற்று. பகல் வேளைகளில் சீதாவும் அவளுடைய தந்தையும் மலை குகைகளிலும் காட்டுப் புதர்களிலும் பாழடைந்த மசூதிகளிலும் மறைந்து கொண்டிருந்தார்கள். இருட்டிய பிறகு பீதி நிறைந்த உள்ளத்துடன் முன்னும் பின்னும் பார்த்துக் கொண்டு பிரயாணம் செய்தார்கள். வழியிலே அவர்கள் தீப்பிடித்து எரிந்த கிராமங்களையும் பட்டணங்களையும் தாண்டிப் போகவேண்டியிருந்தது. எரிந்த வீடுகளிலிருந்து எழுந்த ஜுவாலைகள் சுற்றிலும் நெடுந்தூரத்துக்கு இரவைப் பகலாக்கின. அந்த ஜுவாலைகளின் வெளிச்சத்தில் கரிய பயங்கர உருவங்கள் யமகிங்கரர்களைப் போல் கையில்கொடிய ஆயுதங்களுடனே ஊளையிட்டுக் கொண்டு அலைந்தன. அம்மாதிரி இடங்களுக்கு அருகிலும் நெருங்காமல் தந்தையும் மகளும் நெடுந்தூரம் சுற்றி வளைத்துக் கொண்டு போனார்கள். இரவு நேரங்களில் சாலையோடு போய்க் கொண்டிருக்கும் போது முன்னால் காலடிச் சத்தம் கேட்டாலும் அவர்கள் நெஞ்சு திடுக்கிடும்; பின்னால் காலடிச் சத்தம் கேட்டால் உள்ளம் பதைக்கும். சில சமயம் திடுதிடுவென்று ஜனங்கள் பெரும் கூட்டமாக ஓடி வரும் சத்தம் கேட்கும். இருவரும் பக்கத்துக் காட்டுக்குள் சென்று ஒளிந்து கொள்வார்கள். பயந்து ஓடும் ஜனங்களைத் துரத்திக்கொண்டு பின்னால் ராட்சதக் கூட்டத்தினர் ஓடி வருவார்கள். அவர்கள் போடும் பயங்கரமான சத்தத்துடன் ஸ்திரீகள் குழந்தைகளின் பரிதாப ஓலக் குரலும் சேர்ந்து ஒலிக்கும். ஓலக் குரல் அடங்கி வெகு நேரமான பிறகும் சீதாவின் காதில் அலை ஓசை கேட்டுக் கொண்டிருக்கும். அவளுடைய நெஞ்சம் “மரணமே! வா!” என்று அழைக்கும். நடந்து நடந்து சீதாவின் கால்களில் வலி எடுத்து இரத்தம் கட்டியது பின்னர் வீக்கமும் கண்டது. “இனி நடக்க முடியாது” என்று அவளுடைய கால்கள் கெஞ்சின. “அப்பா! என்னைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு நீங்கள் போய்விடுங்கள்!” என்று சீதா தந்தையிடம் கெஞ்சினாள். “முடியாது, தாயே முடியாது!” என்று மௌல்வி சாகிபு தலையை அசைத்தார். “எப்படியும் நான் சாகப்போகிறேன்; உங்கள் கையினால் சாகிறேனே? எதற்காகச் சித்திரவதை?” என்றாள் சீதா. அதற்கும் மௌல்வி சாகிபு இணக்கம் காட்டவில்லை. தந்தையின் தோளைப் பிடித்துக்கொண்டு சீதா மெள்ள மெள்ளத் தடுமாறி நடந்தாள். அவளுடைய உள்ளம் “மரணமே! வா!” என்று அழைத்தது. அவளுடைய காதில் அலை ஓசை அதிகமாகிக் கொண்டிருந்தது. சாலையில் அவர்களுக்குப் பின்னால் ஒரு பெரிய புழுதிப் படலம் கிளம்பி ஆகாசத்தை மறைத்தது. ஒரு பெரும் இரைச்சல் கேட்டது. அது என்னவென்று தெரிந்து கொள்வதற்காகச் சீதாவும் அவள் தந்தையும் சாலையைவிட்டு ஒதுங்கி ஒரு பாழடைந்த ’குருத்வார’த்துக்குள் ஒளிந்து கொண்டார்கள். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ஒரு மாபெருங் கூட்டம் வந்தது. அந்தக் கூட்டத்தாரைக் காப்பதற்குத் துப்பாக்கிப் பிடித்த சீக்கிய சோல்ஜர்கள் உடன் சென்றார்கள். வயோதிகர்கள், குழந்தைகள், ஸ்திரீகள், புருஷர்கள், நோயாளிகள், கர்ப்ப ஸ்திரீகள், ஒட்டகை வண்டிகள், கழுதை வண்டிகள், மாட்டு வண்டிகள், இரண்டொரு லாரிகள், மூட்டை முடிச்சுக்கள், பெட்டி பேழைகள் இவை அடங்கிய நீண்ட ஊர்வலம் போய்க் கொண்டே இருந்தது. சுமார் ஒரு லட்சம் மனித உயிர்கள் ஒரு மைல் நீளமுள்ள ஊர்வலம். “இந்தக் கூட்டத்தோடு நாமும் போய்விடலாமா?” என்று மௌல்வி சாகிபு கேட்டார். “வேண்டாம் அப்பா! இந்தப் புழுதியையும் நாற்றத்தையும் கூச்சலையும் என்னால் தாங்க முடியாது! பைத்தியம் பிடித்துவிடும்?” என்றாள் சீதா. ஊர்வலம் சென்ற வழியில் பயங்கரமான துர்நாற்றம் கிளம்பி வான வெளியின் காற்றையெல்லாம் விஷமாக்கி விட்டது. சீதாவும் அவளுடைய தந்தையும் வேறொரு குறுக்குச் சாலையைப் பிடித்துக்கொண்டு சென்றார்கள். ஒரு சின்ன ரயில்வே ஸ்டேஷனை அவர்கள் அடைந்தார்கள். வெயிட்டிங் ரூமில் உட்கார்ந்து ரயிலுக்காகக் காத்திருந்தார்கள். யாராவது வந்து வெயிட்டிங் ரூமுக்குள் எட்டிப் பார்க்கும் போதெல்லாம் சீதாவுக்குப் ‘பகீர்’ என்னும். ரயிலுக்காகக் காத்திருந்த நேரம் முடிவில்லாமல் நீண்டு கொண்டேயிருந்தது. சீதா உட்கார்ந்தபடியே சிறிது கண்ணயர்ந்தாள். பெரும் அலை ஓசை கேட்டுத் திடுக்கிட்டுக் கண் விழித்தாள். கேட்டது ரயில் வரும் சத்தம் என்று தெரிந்து கொண்டாள். இருவரும் பிளாட்பாரத்துக்குள் போனார்கள். ரயிலில் கூட்டம் சொல்லமுடியாது. எல்லா வண்டிகளும் உட்புறம் பூட்டப்பட்டிருந்தன. சீதாவுக்கு அந்த ரயிலில் ஏறுவதற்கே பிடிக்கவில்லை. ஆனால் மௌல்வி சாகிபு வற்புறுத்தினார். வண்டி வண்டியாகச் சென்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டு கடைசியில் ஒரு வண்டிக் கதவைத் திறக்கச் செய்தார். இரண்டு பேரும் ஏறிக் கொண்டார்கள். வண்டியிலிருந்தவர்கள் தாங்கள் வந்த வழியில் பார்த்த பயங்கரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். ரயில் மெள்ள மெள்ளப் போய்க்கொண்டிருந்தது. ரயிலில் சக்கரங்கள் சுழன்ற சத்தம் சீதாவின் காதில் அலை ஓசையைப் போல் கேட்டுக் கொண்டிருந்தது. “மரணமே! வா!” என்று அவளுடைய உள்ளம் கூவிக் கொண்டிருந்தது. ஒரு ரயில்வே ஜங்ஷனில் ரயில் நின்றது, நின்ற ரயில் மறுபடி லேசில் கிளம்புகிற வழியாக இல்லை. நேரமாக ஆக ரயிலிலிருந்தவர்களின் கவலை அதிகமாயிற்று. ரயில்வே ஸ்டேஷனிலும் வெளியிலும் ஏகக் கூச்சலும் குழப்பமுமாயிருந்தன. மௌல்வி சாகிபு திடீரென்று “அதோ தாரிணி” என்றார். சீதா ஆவலுடன் அவர் காட்டிய திசையைப் பார்த்தாள். ஆம்; கொஞ்ச தூரத்தில் கூட்டத்துக்கு நடுவில் சூரியாவும் தாரிணியும் போய்க்கொண்டிருந்தார்கள். ஒருகணம் அவர்களுடைய முகங்கள் தெரிந்தன. மறுகணம் கூட்டத்தில் மறைந்து விட்டன. “சீதா, கொஞ்சம் பொறு! அவர்களைப் பார்த்துக் கொண்டு வருகிறேன்!” என்று அப்பா சொல்லிவிட்டு வண்டியிலிருந்து இறங்கி ஓடினார். அடுத்த நிமிஷம் அவரும் ஜனக் கூட்டத்தில் மறைந்து விட்டார். பிறகு ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகமாக இருந்தது. சீதாவுக்கு அந்தமாதிரி பல யுகங்களுக்குப் பிறகு ஒரு பயங்கரமான கூச்சல் கேட்டது. அதைக் காட்டிலும் கோரமான காட்சி கண் முன்னால் தென்பட்டது. நூற்றுக்கணக்கான முரட்டு மனிதர்கள் கையில் கத்திகளுடன் பாய்ந்து வந்தார்கள். பிளாட்பாரத்தில் நின்றவர்கள் பலரைக் கொன்றார்கள். எங்கே பார்த்தாலும் இரத்தக்களறி ஆயிற்று. அந்த மனிதர்கள் ரயிலுக்குள்ளும் பாய்ந்து ஏறினார்கள். சீதா இருந்த வண்டியை நோக்கி ஐந்தாறு பேர் ஓடி வந்தார்கள். சீதா பீதியினாலும் அருவருப்பினாலும் கண்களை மூடிக் கொண்டாள். அவளுடைய மனதில், “கடைசியாக நம்முடைய பிரார்த்தனை நிறைவேறிவிட்டது! மரணம் வந்து விட்டது!” என்ற நினைவு தோன்றியது. தடதடவென்று ரயிலுக்குள் நாலைந்து பேர் ஏறினார்கள். மூடிய கண்களுடனே அடுத்த கணத்தில் தன்னுடைய மார்பில் கத்தி பாயும் என்று சீதா எதிர் பார்த்தாள். ஆனால் கத்தி பாயவில்லை; கண்ணும் திறக்கவில்லை. மறுபடியும் வண்டிக்குள் தனக்கருகில் ஏதோ கலவரம் நடக்கிறதென்பதை உணர்ந்தாள். யாரோ அவளைப் பிடித்துத் தள்ளினார்கள். தொப்பென்று கீழே விழுந்தாள். அவள் மேல் ஏறி மிதித்துக் கொண்டு யாரோ ஓடினார்கள். “சீதா! சீதா!” என்ற இனிய குரலுடன் மெல்லிய மிருதுவான கரங்கள் அவளை எடுத்துத் தூக்கின. கண்ணை விழித்துப் பார்த்து அவை தாரிணியின் கரங்கள் என்பதை அறிந்தாள். தன்னைத் தூக்கிய கரங்களில் ஒன்றிலிருந்து இரத்தம் சொட்டிக் கொண்டிருப்பதையும் கண்டாள், “அக்கா” என்று அலறினாள். அந்த மூன்று தினங்கள் சீதாவின் வாழ்க்கையில் மிகவும் ஆனந்தமான நாட்கள். ஏதோ ஒரு ஊரில் யாரோ ஒருவருடைய வீட்டின் மேல் மச்சில் ஜன்னல் கதவுகளையெல்லாம் அடைத்துக்கொண்டு ஒளிந்திருந்த நாட்கள்தான். சாலையிலாவது வெளிச்சம் உண்டு; காற்று உண்டு இங்கே அது கூடக் கிடைக்காது. எனினும் தன்னுடன் பிறந்தவள் என்று தெரியாதபோதே தன் உள்ளத்தின் அன்பையெல்லாம் கவர்ந்து விட்ட தாரிணியுடன் வசித்தபடியால் அந்த நாட்கள் ஆனந்தமாயிருந்தன. ரயிலில் கொலை செய்யப்படாமல் சீதாவைக் காப்பாற்றிய தாரிணி அவளை இந்த இடத்தில் கொண்டுவந்து சேர்த்திருந்தாள். சீதா தனக்கும் தாரிணிக்கும் உள்ள உறவைப் பற்றிப் பிரஸ்தாபித்தாள். “இதெல்லாம் உனக்கு முன்னமே தெரியாதா அக்கா?” என்று கேட்டாள். “இந்தச் சந்தேகம் எனக்கு வெகுகாலமாகவே இருந்து வந்தது. ஆனால் நான் எவ்வளவு கேட்டும் அந்தக் கிழவரும் கிழவியும் உண்மையைச் சொல்ல மறுத்து விட்டார்கள்?” என்றாள் தாரிணி. “என்ன அநியாயம்? எதற்காக அப்படிச் செய்தார்கள்? அக்கா என்று தெரியாமலேயே உன்னிடம் என் பிராணனை வைத்திருந்தேனே! தெரிந்திருந்தால் இன்னும் எவ்வளவு பிரியமாயிருந்திருப்பேன்? நாம் எவ்வளவு சந்தோஷமாயிருந்திருக்கலாம்.” என்றாள் சீதா. தன்னிடம் பொறாமை கொண்டு சீதா படுத்திய பாடெல்லாம் தாரிணிக்கு நினைவு வந்தது. ஆனால் அதை இப்போது சீதாவுக்கு ஞாபகப்படுத்தவில்லை. “போனதைப் பற்றிக் கவலைப்பட்டுப் பயன் என்ன? அதற்கெல்லாம் சேர்த்து இப்போது வட்டி போட்டு நாம் சந்தோஷமாயிருக்கலாம்!” என்றாள் தாரிணி. “அதற்கென்ன சந்தேகம்? என் துன்பங்கள் எல்லாம் தீர்ந்து விட்டன. இனிமேல் எனக்கு சந்தோஷத்துக்கு என்ன குறைவு?” என்றாள் சீதா. எனினும் இருவருடைய இதய அந்தரங்கத்திலும் சந்தேகமும் பயமும் இல்லாமற் போகவில்லை. விழித்துக் கொண்டிருந்தபோதெல்லாம் தாரிணியின் கழுத்தைச் சீதா கட்டிக்கொண்டு அந்தரங்கம் பேசினாள். தூங்கும்போது தாரிணியின் மேலே கையைப் போட்டுக் கொண்டு தூங்கினாள். எங்கே தன்னை விட்டு விட்டுத் தாரிணி போய்விடப் போகிறாளோ என்ற பயம் அவளுடைய மனதின் ஆழத்தில் குடி கொண்டிருந்தது. சீதாவின் பயம் சீக்கிரத்திலேயே உண்மையாயிற்று. தாரிணியிடமிருந்து அவள் பிரிய வேண்டிய சமயம் வந்தது. இதைப்பற்றி அறிந்ததும் சீதா முரண்டு பிடித்தாள். “நான் உன்னைவிட்டுப் போக மாட்டேன். நீ என்னை விட்டுப் போனால் குத்திக் கொண்டு சாவேன்!” என்றாள். தாரிணி பலவிதமாக அவளுக்குச் சமாதானம் கூறினாள். “நான் டில்லியில் உன்னுடன் வந்து சேர்ந்து கொள்கிறேன் அதுவரையில் பொறுத்திரு, பெஷாவரில் என்னுடைய சிநேகிதி நிரூபமா இருக்கிறாள். அவளைப் பார்த்து அழைத்துக்கொண்டு வரவேண்டும்!” என்றாள். அந்தச் சகோதரிகளுக்குள் நெடுநேரம் விவாதம் நடந்தது. கடைசியாகச் சீதா, “அக்கா! நீ ஒரு வாக்குறுதி கொடுத்தால் நான் உன்னைப் பிரிந்து போகச் சம்மதிப்பேன்!” என்றாள். “கேள்! அம்மா!” என்றாள் தாரிணி. “டில்லிக்குப் போகும் வழியில் நான் இறந்துவிட்டால் நீ அவரைக் கலியாணம் செய்துகொள்ள வேண்டும். அப்படி நீ சத்தியம் செய்து கொடுத்தால் நான் உன்னைப் பிரிவேன்!” என்றாள் சீதா. “இது என்னப் பைத்தியக்காரத்தனம்!” என்று தாரிணி எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் சீதா கேட்கிறதாக இல்லை. தாரிணி மறுக்க மறுக்க சீதாவின் வெறி அதிகமாகி வந்தது! கடைசியில் தாரிணி, “அடியே! நீ செத்து நான் உயிரோடிருந்து உன் புருஷனும் என்னைக் கலியாணம் செய்து கொள்வதற்குச் சம்மதித்தால் நான் கலியாணம் பண்ணிக் கொள்கிறேன்” என்றாள். முஸ்லிம் ஸ்திரீகள் பர்தா அணிந்து கொள்வது போன்ற புர்க்கா ஒன்றைச் சீதாவுக்குத் தாரிணி அளித்தாள். அந்த உடையில் கண்களால் பார்ப்பதற்கு மட்டும் துவாரம் இருந்தது. மற்றபடி தலையிலிருந்து கால்வரையில் சீதாவை அந்த அங்கி மூடிவிட்டது. நள்ளிரவில் மௌல்வி சாகிபும் சீதாவும் அந்த வீட்டு மெத்தை அறையிலிருந்து கீழே இறங்கி வந்தார்கள். வாசலில் தயாராக ஜீப் வண்டி ஒன்று நின்று கொண்டிருந்தது. அதை ஓட்டுவதற்கு ஒரு போலீஸ் டிரைவர் காத்திருந்தான். சீதா தாரிணியைக் கட்டிக் கொண்டு, “அக்கா வாக்குறுதியை மறந்துவிடாதே!” என்றாள். அவளுடைய தந்தை தாரிணியின் தலை உச்சியை முகந்து பார்த்துவிட்டு, “அம்மா! என்னுடைய குற்றங்களை மன்னித்துக் கொள்!” என்று சொன்னார். மங்கலான நட்சத்திர வெளிச்சத்தில் தாரிணியின் கண்களில் கண்ணீர்த் துளிகள் பிரகாசித்தன. “அப்பா! தங்களுக்கு நான் கொடுத்த தொந்திரவுகளையெல்லாம் மன்னியுங்கள்!அதற்கெல்லாம் பிராயச்சித்தமாகத் தங்களுக்கு வாழ்நாளெல்லாம் பணிவிடை செய்ய வேண்டும். அதற்கு எனக்கு கொடுத்து வைத்திருக்குமோ, என்னமோ?” என்றாள். போலீஸ் கான்ஸ்டபிள் ஓட்டிய ஜீப் வண்டி அதிவேகமாகப் போய்க் கொண்டிருந்தது. வழியில் நேர்ந்த பல தடங்கல்களையும் தாண்டிக் கொண்டு சென்றது. சாலைகளில் சில இடங்களில் கூட்டமாக ஜனங்கள் போய்க்கொண்டி ருந்தார்கள். அந்த இடங்களில் ஜனக் கூட்டத்தைப் பிளந்து கொண்டு ஜீப் சென்றது. சில இடங்களில் சாலைகளில் மரங்களை வெட்டித் தள்ளியிருந்தார்கள். அந்த இடங்களில் சாலையிலிருந்து பக்கத்தில் இறங்கிக் கடந்து சென்றது. சில இடங்களில், ஐயோ! என்ன பயங்கரம்; சாலைகளில் கிடந்த மனித உடல்களின்மீது ஏறிச் சென்றது! அந்த உடல்களிலிருந்த உயிர்கள் எப்போதோ போய்விட்டன! இனி அவற்றின் பேரில் ஜீப் வண்டி ஏறினால் என்ன? ரோட் என்ஜின் ஏறினால்தான் என்ன? சாலையில் ஜீப் வண்டி வேகமாகப் போக ஆரம்பித்த புதிதில் சீதாவுக்குத் தான் அபாயங்களையெல்லாம் ஒருவாறு கடந்து விட்டதாகத் தோன்றியது. ஆனால் சீக்கிரத்திலேயே அது பொய் நம்பிக்கை என்று ஏற்பட்டது.ஏனெனில் அவர்களைத் தொடர்ந்து இன்னொரு ஜீப் வண்டி கொஞ்ச தூரத்தில் வந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. ஆனால் அது இந்த வண்டியைத் தொடர்ந்து வருகிறது என்று ஏன் நினைக்க வேண்டும்? தங்களைப் போலவே அபாயத்துக்குத் தப்பித்துச் செல்லும் மனிதர் களாயிருக்கலாமல்லவா? இருக்கலாம். என்றாலும் தங்களைப் பிடிப்பதற்காகவே அந்த வண்டி வருகிறது என்னும் எண்ணத்தைச் சீதாவினால் போக்கிக் கொள்ள முடியவில்லை. அந்த வண்டியில் யமன் தன்னைத் தொடர்ந்து ஓடி வருகிறான் என்றே எண்ணினாள். யார் கண்டது? முதலில் நினைத்தபடியே இந்தப் பிரயாணத்தில் தனக்கு மரணம் நேரிடலாமோ, என்னமோ? “மரணமே! வா, சீக்கிரம் வா!” என்று அவள் உள்ளம் ஜபித்து அவளுடைய காதில் அலை ஓசையின் இரைச்சல் அதிகமாயிற்று. ஒரு நதிக்கரையில் வந்து ஜீப் வண்டி நின்றது. நல்ல வேளை! கொஞ்ச நேரமாகப் பின் தொடர்ந்து வந்த வண்டியின் சத்தம் கேட்க வில்லை அது வெறும் பிரமைதான். என்ன அதிசயம்? இங்கே சூரியா வந்து நிற்கிறானே? நமக்கு முன்னால் எப்படி வந்தான்? அதோடு ஒரு படகையும் அமர்த்தி வைத்துக் கொண்டு தயாராயிருக்கிறானே? சூரியா சூரியாதான்! அம்மாஞ்சிக்கு இணை யாரும் இல்லை. தந்தையையும் மகளையும் சூரியாவிடம் ஒப்படைத்து விட்டுப் போலீஸ்காரன் ஜீப் வண்டியைத் திருப்பினான். அவனும் சூரியாவும் ஏதோ சமிக்ஞை பாஷையில் பேசிக் கொண்டார்கள். அதைப்பற்றியெல்லாம் விசாரிக்க அப்போது நேரம் இல்லை. பிற்பாடு கேட்டுக் கொண்டால் போகிறது. சூரியா அவர்களுடைய கையைப் பிடித்துப் படகிலே ஏற்றி விட்டான், தானும் ஏறிக்கொண்டான். படகுக்காரன் படகை நதியில் செலுத்தினான். படகு நகர்ந்ததும் சீதாவின் பயம் அடியோடு நீங்கிற்று. உள்ளத்தில் உற்சாகமே உண்டாகிவிட்டது. அது பாஞ்சால நாட்டின் பஞ்ச நதிகளின் ஒன்றான ‘சேனாப்’ என்று அறிந்தாள். பிரவாகம் அலை மோதிக் கொண்டு சென்றது; காற்று விர்ரென்று அடித்தது. சீதா தன்னுடைய பர்தா உடையைக் கழற்றிப் படகில் வைத்தாள். மௌல்வி சாகிபுவைப் பார்த்து, “அப்பா! நீங்களும் உங்களுடைய வேஷத்தைக் கலைத்துவிட்டுப் பழையபடி ஆகிவிட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்?” என்றாள். “சீதா! இந்த வேஷத்தைப் பற்றிக் குறை சொல்லாதே! இதன் மூலமாய்த்தானே உன்னைக் காப்பாற்ற முடிந்தது?” என்றார் மௌல்வி சாகிபு. “அதுதான் காப்பாற்றியாகிவிட்டதே? இனிமேல் அபாயம் ஒன்றுமில்லையே?” என்றாள் சீதா. “அவசரப்படாதே, அம்மா; டில்லி போய்ச் சேர்ந்ததும் வேஷத்தை மாற்றி விடுகிறேன்!” என்றார் மௌல்வி சாகிபு. ஆனால் உலகத்தில் மனிதர்கள் நினைக்கிறபடியோ, விரும்புகிறபடியோ, என்னதான் நடக்கிறது? அபாயத்துக்குப் பயப்பட்டுக் கொண்டிருக்கிற சமயத்தில் அது வராமல் போய் விடுகிறது. “இனி ஒரு பயமும் இல்லை” என்று எண்ணியிருக்கும் சமயத்தில் திடீரென்று எங்கிருந்தோ பேரிடி வந்து விழுகிறது. நதியில் மூன்றில் ஒரு பங்கு தூரம் படகு சென்றிருக்கும். அப்போது அவர்கள் வந்த சாலையில் சற்றுத் தூரத்தில் ஒரு புழுதிப்படலம் தெரிந்தது. புழுதியைக் கிளப்பிய மற்றொரு ஜீப் வண்டி அடுத்த நிமிஷம் நதிக்கரையில் வந்து நின்றது. ஜீப்பிலிருந்து மனிதன் கீழே குதித்ததைச் சீதா பார்த்தாள். அவன் கையில் ஒரு துப்பாக்கி இருந்தது. நதியில் சென்று கொண்டிருந்த படகை அவன் உற்றுப் பார்த்தான். அடுத்த நிமிஷம் கையிலிருந்த துப்பாக்கியைத் தூக்கிக் குறிபார்த்துச் சுட்டான். இதையெல்லாம் பார்த்தவண்ணம் பிரமித்துப் போயிருந்த சீதாவின் காதில், “ஐயோ! செத்தேன்!” என்ற கூச்சல் பக்கத்திலிருந்து கேட்டது. சீதா திரும்பிப் பார்த்தாள், தன் தந்தையின் கன்னத்தில் இரத்தம் சொட்டுவதையும் அவர் படகின் ஓரமாகச் சாய்வதையும் பார்த்தாள். ஆற்றில் விழாமல் அவரைப் பிடித்துக் கொள்வதற்காகப் பாய்ந்து ஓடினாள். படகு ஆடிச் சாய்ந்தது; சீதா நதியின் பெருவெள்ளத்தில் விழுந்தாள். முடிவில்லாத நேரம் சீதா தண்ணீருக்குள் கீழே கீழே கீழே போய்க்கொண்டிருந்தாள். பிறகு தன்னுடைய பிரயாசையின்றியே மேலே வருவதை உணர்ந்தாள். முகம் தண்ணீருக்கு மேலே வந்தது, கண்கள் ஒருகணம் திறந்தன. சற்றுத் தூரத்தில் தன் தந்தை கன்னத்தில் இரத்தக் காயத்துடன் தத்தளித்து நீந்திக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். இன்னும் கொஞ்ச தூரத்தில் சூரியா அதே மாதிரி நீந்திக் கொண்டிருந்தான். ஆனால் அவர்களில் யாரும் சீதா தலை தூக்கிய பக்கம் பார்க்கவில்லை. படகோ வெகு தூரத்தில் இருந்தது. அலை ஒன்று சீதாவை நோக்கி வந்தது. அது ஒரு அடி உயர அலைதான். ஆனால் படகையும் மற்ற இருவரையும் மறைத்தபடியால் அது மலை அளவு உயரமாகச் சீதாவுக்குத் தோன்றியது. பொங்கும் கடலைப்போல் ஓசை செய்து கொண்டு அந்த அலை விரைந்து வந்து சீதாவை மோதியது. சீதா பயத்தினால் கண்ணை மூடிக்கொண்டாள். மறுபடியும் தண்ணீரில் முழுகப் போகிறோம் என்ற எண்ணம் தோன்றியது. இந்தத் தடவை முழுகினால் முழுகியதுதான்; மறுபடி எழுந்திருக்கப் போவதில்லை. “மரணமே! வா!” என்று அவள் அடிக்கடி ஜபம் செய்து கொண்டிருந்தது பலித்துவிட்டது. இந்தத் தடவை நிச்ச யமான மரணந்தான். அலை வந்து தாக்கியது, நீரில் முழுகும் தறுவாயில் சீதாவின் மனக்கண்ணின் முன்னால் ஒரு காட்சி புலப்பட்டது. தாரிணியும் சௌந்தரராகவனும் கைபிடித்துக் கலியாணம் செய்து கொள்ளும் காட்சிதான் அது. சீதாவின் மனதில் அந்த கண நேரக் காட்சி ஆனந்தத்தையும் அமைதியையும் உண்டு பண்ணியது. “ஆகா! அவர்கள் சந்தோஷமாயிருப்பார்கள்!” என்று எண்ணிக் கொண்டே தண்ணீரில் முழுகினாள். குழந்தை வஸந்தியின் பால் வடியும் முகமும், சூரியாவின் ஆர்வம் ததும்பிய முகமும், மௌல்வி சாகிபுவின் முகமும் வரிசையாகப் பவனி வந்தன. சுவரிலிருந்த படத்திலிருந்து காந்தி மகாத்மா வின் முகம் தனியாகத் தோன்றிப் புன்னகை செய்து மறைந்தது. பின்னர் சிறிது நேரம் காதில் ‘ஹோ’ என்ற அலை ஓசை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. பிறகு எல்லா நினைவும் அழிந்தது. ஆழங்காணாத அமைதி; எல்லைகாணாத இருள்; நிசப்தம். முப்பத்து ஒன்றாம் அத்தியாயம் - பிழைத்த அகதி குளிர் என்றால் இன்னதென்பதை அறிய வேண்டுமானால் டில்லியில் குளிர்காலத்தில் வசிக்க வேண்டும். கனமான கம்பளிச் சட்டைகளுக்குள்ளும் பஞ்சடைத்த ரஜாய் மெத்தைகளுக்குள்ளும் அந்தக் குளிர் புகுந்து, தோல், சதை, இரத்தம் இவற்றை ஊடுருவிக் கொண்டு சென்று எலும்புக்கு உட்புறத்திலும் புகுந்து பனிக்கட்டியைப்போல் சில்லிடச் செய்யும் சக்தியுடையது. 1948-ம் வருஷம் ஜனவரி மாதத்தில் டில்லியில் வழக்கத்தைக் காட்டிலும் அதிகக் குளிராயிருந்தது. நாட்டை விட்டு, ஊரை விட்டு வீட்டை விட்டு, உற்றார் உறவினரை விட்டு ஓடிவந்த இரண்டு லட்சம் அகதிகள் டில்லி மாநகரின் வீதிகளிலும் சுற்றுப்புறங்களிலும் குளிரில் விறைத்துக் கொண்டு கிடந்தார்கள். அவர்கள் உடம்பு குளிரில் நடுங்கிக் கொண்டிருந்ததே தவிர உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு அகதியின் இருதயத்திலும் கோபத் தீ கொழுந்து விட்டெரிந்தது. அந்தத் தீ டில்லி நகரிலுள்ள பத்து லட்சம் ஜனங்களின் இருதயத்தையும் பற்றி எரித்துக் கொண்டிருந்தது. அந்தக் கோபத்தீயை அணைத்துச் சாந்தம் உண்டுபண்ண ஒரு மகான் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தார். மாலை ஏழு மணிக்கு ஜந்தர் மந்தர் சாலையில் ஒரு மோட்டார் வண்டி மூடுபனிப் படலத்தைக் கிழித்துக்கொண்டு விரைந்து சென்றது. சாலையின் வண்டிப் போக்கு வரவோ மனுஷர்களின் நடமாட்டமோ அதிகம் இல்லையாதலால் மோட்டார் ஓட்டுவதில் ஜாக்கிரதை தேவையாயிருக்கவில்லை. ஆனால் இது என்ன? திடீரென்று ஒருவன் குறுக்கே வந்து விழுகிறானே? கடவுளே! பலமாகப் ‘பிரேக்’கைப் போட்டதில் ’கார்’ ‘கர்புர்ர்’ என்ற சத்தத்துடன் மோட்டார் நின்று ஒரு குலுங்குக் குலுங்கிற்று. அந்த மனிதன் ஒரு மயிரிழையில் தப்பினான்! அடப்பாவி! சாலை ஓரத்திலுள்ள நடைபாதையில் நடந்து போகக்கூடாதோ! பஞ்சாபிலிருந்து வந்து குவிந்திருக்கும் அகதிகளில் ஒருவனாயிருக்கவேண்டும். வேணுமென்று உயிரைப் போக்கிக் கொள்வதற்காக வந்து விழுகிறான் போலிருக்கிறது. நின்ற மோட்டார் வண்டியிலிருந்து இருவர் இறங்கினார்கள்; ஒரு புருஷன்; ஒரு ஸ்திரீ. அவர்கள் சௌந்தரராகவனும் பாமாவுந்தான். விழுந்தவனுக்கு ஏதாவது காயம் பட்டிருக்கிறதா என்று பார்ப்பதற்காக அவர்கள் முன்னால் சென்றார்கள். அதே சமயத்தில் கீழே விழுந்த மனிதன் எழுந்து நின்றான். அவன் உடையினாலும் தோற்றத்தினாலும் ஒரு பஞ்சாப் அகதியைப் போலவே காணப்பட்டான். ஆயினும் அவன் முகத்தின் தோற்றம் அவன் யார் என்பதை வெளிப்படுத்திவிட்டது. “அடே! இது என்ன கூத்து? சூரியா! நீ எப்படி இங்கே வந்து முளைத்தாய்? யாரோ பஞ்சாப் அகதி தற்கொலை செய்துகொள்ளப் பார்த்தான் என்றல்லவா நினைத்தேன்?” என்றான் சௌந்தரராகவன். ராகவனையும் பாமாவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்த சூரியா பதில் சொல்லலாமா, வேண்டாமா என்று தயங்கினது போலக் காணப்பட்டது. பிறகு மனதில் அவன் ஒரு முடிவு செய்து கொண்டது அவனுடைய முகத்தில் பிரதிபலித்தது. “நீங்கள் நினைத்ததில் பாதி சரிதான், மிஸ்டர் ராகவன்! நானும் ஒரு அகதிதான். ஆனால் நான் உயிரை விடுவதற்கு முயற்சி செய்யவில்லை. என் உயிரை வைத்துக் கொண்டிருப்பது இன்னும் கொஞ்ச காலத்துக்கு மிகவும் அவசியமாயிருக்கிறது. இந்த மட்டும் என்பேரில் உங்கள் வண்டியை ஏற்றாமல்விட்டீர்களே? அதற்காக மிக்க வந்தனம்!” என்றான் சூரியா. “அதற்காக வந்தனம் தேவையில்லை. இந்த மோட்டாரின் துரிதமான ’பிரேக்’குக் குத்தான் வந்தனம் செலுத்த வேண்டும். பரிகாசப் பேச்சு இருக்கட்டும், சூரியா! இப்போது நீ எங்கே போய்க்கொண்டி ருக்கிறாய்? இல்லாவிட்டால் என்னோடு கொஞ்சம் வந்து விட்டுப் போகலாமே? உன்னிடம் பல விஷயங்கள் கேட்க வேண்டும்; பல விஷயங்கள் சொல்லவேண்டும்!” என்றான் ராகவன். “எனக்கு அவசர வேலை இருக்கத்தான் இருக்கிறது. ஆனாலும் அரை மணி நேரம் பின்னால் போவதால் பாதகமில்லை” என்றான் சூரியா. அவனுக்கும் சௌந்தரராகவனிடம் பல விஷயங்கள் கேட்கவேண்டியிருந்தது; சொல்ல வேண்டியிருந்தது. சௌந்தரராகவனுடைய பழைய வீட்டு வாசலில் வண்டி நின்றது. பாமா வண்டியிலிருந்து இறங்காமல் விடைபெற்றுக் கொண்டாள். மற்ற இருவரும் இறங்கினார்கள். வீட்டுக்குள்ளே நுழைந்தபோது சூரியாவின் உள்ளம் பதைபதைத்தது. முன்னே அந்த வீட்டுக்குள் பிரவேசித்தபோதெல்லாம் சீதா இருந்து தன்னை வரவேற்றாள். ஒருதடவை துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளத் தயாராயிருந்த சீதாவைச் சூரியா காப்பாற்றினான். அந்தப் பழைய ஞாபகங்கள் எல்லாம் அணை உடைந்த வெள்ளம் போல் அவன் மனதில் புகுந்து கொந்தளிப்பை உண்டாக்கின. “சூரியா! இந்த வீடு எவ்வளவு சூனியமாயிருக்கிறது, பார்!” என்று ராகவன் கூறியபோது சூரியாவுக்கு அழுகையே வந்து விட்டது, கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான். “உங்களுடைய உத்தியோகம் மறுபடியும் கிடைத்து விட்டதா?” என்று சூரியா கேட்டான். “ஆமாம்; கிடைத்துவிட்டது. இல்லாவிட்டால், இந்த வீடு கிடைத்திருக்குமா? உத்தியோகம் கிடைத்த பிறகுகூட இந்த வீட்டைச் சம்பாதிப்பதற்குப் பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது. இதிலே ஒரு பஞ்சாபி வந்து உட்கார்ந்து கொண்டிருந்தான். அவனைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினேன். ஆனாலும் இந்தப் பஞ்சாபிகளைப்போல் கோழைத் தடியர்களை நான் பார்த்ததேயில்லை. பஞ்சாபியர் எல்லோரும் வீரர்கள் என்று ஒரு காலத்தில் எண்ணிக் கொண்டிருந்தேன். சுத்தப் பிசகு! இவர்கள் சென்ற வருஷம் ஆகஸ்டு மாதத்தில் மேற்குப் பஞ்சாபிலிருந்து விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தார்களே, அந்தக் காட்சியை நீ பார்த்திருந்தாயானால்…..” “நீங்கள் அதைப் பார்த்தீர்களா?” என்று சூரியா கேட்டான். “ஆமாம், பார்த்தேன்.” “அதெப்படி? நீங்கள்தான் போன ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் தேதி கல்கத்தாவுக்குப் போயிருந்தீர்களே?” என்றான் சூரியா. “ஓகோ! நினைவு வருகிறது, நீ அப்போது இங்கேதான் இருந்தாயல்லவா? உன்னிடம்கூட நான் கல்கத்தா போகிறது பற்றிச் சொன்னேனே! சூரியா! அதுமுதல் நீ இங்கேதான் இருக்கிறாயா? என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று ராகவன் கேட்டான். “என்னத்தைச் செய்கிறது? அங்குமிங்கும் சுற்றி அலைந்து கொண்டிருக்கிறேன்” என்றான் சூரியா. “அங்குமிங்கும் என்றால்…..” “இந்த அகதி முகாம்களில்தான், ஏதாவது என்னாலான உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறேன்.” உடனே சௌந்தரராகவன் மிக்க ஆவலுடன், “சூரியா! எந்த அகதி முகாமிலாவது நமக்குத் தெரிந்தவர்கள் யாரையாவது பார்த்தாயா?” என்று கேட்டான். “நமக்குத் தெரிந்தவர்கள் என்று யாரைச் சொல்கிறீர்கள்?” “தாரிணியை அல்லது வஸந்தியைத்தான்.” “இல்லை, மிஸ்டர் ராகவன்! அவர்களைப்பற்றி நான் உங்களைக் கேட்கலாம் என்றல்லவா நினைத்துக் கொண்டு வந்தேன்.” “இவ்வளவுதானா?” என்று ராகவன் பெருமூச்சு விட்டான். “அவர்களைப்பற்றி உங்களுக்கு ஒன்றுமே தகவல் கிடைக்க வில்லையா?” என்று சூரியா கேட்டான். “அப்படியும் சொல்வதற்கில்லை, இரண்டு மாதத்துக்கு முன்னால் ஒரு அதிசயமான கடிதம் வந்தது. அது தாரிணியின் கையெழுத்தில் இருந்தது. தானும் குழந்தை வஸந்தியும் பத்திரமாக இருப்பதாகவும் கூடிய சீக்கிரம் வந்து சந்திப்பதாகவும் எழுதியிருந்தது. அதில் வேடிக்கை என்னவென்றால் கடிதம் சீதா பெயருக்கு எழுதப்பட்டி ருந்தது. அதிலிருந்து சீதாவின் கதி தாரிணிக்குத் தெரியாது என்று அறிந்து கொண்டேன்.” “சீதாவின் கதி என்ன?” என்று சூரியா கேட்டான். அவன் முகம் அப்போது ஒரு பெரிய ஆச்சரியக் குறியாக நீண்டது. “அது ஒரு பெரிய சோகக்கதை, சூரியா! உலக வாழ்க்கையில் என்னைப்போல் துரதிர்ஷ்டங்களுக்கு உள்ளானவர்கள் யாருமே இல்லை. வெண்ணெய் திரண்டு வரும் சமயத்தில் தாழி உடைந்ததுபோல் பல சம்பவங்கள் என்னுடைய வாழ்க்கையிலேயே நடந்துவிட்டன. அதிலும் கடைசியாகச் சீதாவை நான் இழந்ததைப் போன்ற துரதிர்ஷ்டம் வேறு ஒன்றுமே இல்லை. ஆகா! பஞ்சாபில் ஹௌஷங்காபாத்தில் ஒரு வருஷ காலம் நாங்கள் எவ்வளவு ஆனந்தமாக வாழ்க்கை நடத்திக்கொண் டிருந்தோம் தெரியுமா? அது கடவுளுக்கே பொறுக்க வில்லை!…” “கடவுளை ஏன் இழுக்கிறீர்கள், ராகவன்! கடவுள் என்ன செய்வார்? என் தகப்பனார் கிட்டாவய்யரை உங்களுக்குத் தெரியுமல்லவா? அவர் மூன்று பிள்ளைகளைப் பெற்று வளர்த்துப் பிறகு ‘உங்கள் இஷ்டம்போல வாழ்க்கை நடத்துங்கள்’ என்று தண்ணீரைத் தெளித்து விட்டுவிட்டார். அது மாதிரிதான் கடவுளும் செய்திருப்பார் என்பது என் நம்பிக்கை. இந்த உலகத்தையும் மனிதர்களையும் கடவுள் படைத்துவிட்டு ‘உலகத்தைச் சொர்க்கமாக்குவதோ நரகமாக்கு வதோ உங்கள் இஷ்டம்!’ என்று மனிதர்களுக்குப் பூரண சுதந்திரம் கொடுத்து விட்டிருக்க வேண்டும்! ஆகையால் உலகத்தில் நடக்கும் காரியங்களுக்குக் கடவுளைப் பொறுப்பாக்குவது நியாயமல்ல!… போகட்டும் சீதாவைப் பற்றிச் சொல்லுங்கள்!” என்றான் சூரியா. “ஆகஸ்டு 14இல் உன்னை நான் இந்தப் புது டில்லியிலே பார்த்துக் ‘கல்கத்தா போகிறேன்’ என்று சொன்னேன் அல்லவா? அதிலிருந்து ஆரம்பித்துச் சொல்கிறேன்” என்றான் ராகவன். முப்பத்து இரண்டாம் அத்தியாயம் - ராகவன் துயரம் கல்கத்தாவுக்குச் சௌந்தரராகவன் போன அன்றைக்கு அங்கே சுதந்திரத் திருநாள் குதூகலமாகக் கொண்டாடப் படுவதைக் கண்டான். ஹிந்துக்களும் முஸ்லிம்களும் கட்டித் தழுவிக் கொள்வதைப் பார்த்தான். ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஏகோபித்து ஒரே குரலில், “ஜே ஹிந்த்” என்றும், “வந்தே மாதரம்” என்றும், “ஹிந்து முஸ்லிம் ஏக் ஹோ!” என்றும் கோஷ மிடுவதைக் கேட்டான். சென்ற வருஷத்தில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவரையொருவர் கொன்று இரத்த வெள்ளம் பெருகிய அதே கல்கத்தாவில்தானா இதெல்லாம் நடைபெறுகிறது என்று அதிசயித்தான். இனி இந்தியாவுக்கு அதிர்ஷ்ட காலந்தான் என்று தீர்மானித்துக் கொண்டான். அமரநாதனின் வீட்டில் சென்ற வருஷம் விட்டுவிட்டுப்போன தன் உத்தியோக சம்பந்தமான தஸ்தாவேஜிகளை வாங்கிக்கொண்டு புறப்பட்டான். திரும்ப டில்லிக்கு வந்தபோது பஞ்சாப்பில் தீப்பிடித்து எரியும் விஷயம் தெரியவந்தது. ஸ்ரீ மதி பாமா அவனைத் தேடிக் கண்டுபிடித்துப் பஞ்சாப்பில் நடப்பதைப் பற்றியெல்லாம் சொன்னாள். அத்துடன் தான் ஹௌஷங்காபாத் சென்றிருந்ததையும், தன்னுடன் வந்து விடும்படி சீதாவை அழைத்ததையும், அவள் வர மறுத்ததையும் பற்றிக் கூறினாள். சௌந்தரராகவனுக்குச் சீதாவின் பேரில் சிறிது கோபமாகத்தான் இருந்தது. ’பாமாவுடன் அவள் புறப்பட்டு வந்திருந்தால் எவ்வளவு சௌகரியமாகப் போயிருக்கும்?" என்று எண்ணினான். ஆனாலும் அதைப்பற்றி நினைத்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. எப்படியாவது சீதாவையும் குழந்தை வஸந்தியையும் காப்பாற்றியாக வேண்டும். புலியின் குகைக்குள் நுழைவது போலவும், தீப்பிடித்து எரியும் பஞ்சாலைக்குள் பிரவேசிப்பது போலவும், பாம்புப் புற்றுக்குள் கையை விடுவது போலவும் பஞ்சாப்புக்குள் சென்றாக வேண்டும். பாமாவின் தைரியமும் சாமர்த்தியமும் பலருடன் சரளமாகப் பழகும் இயல்பும் இச்சமயம் ராகவனுக்கு மிக்க உதவியாயிருந்தன. பாமாவின் பேரில் அவனுக்கு ஏற்கனவே இருந்த அருவருப்பெல்லாம் இப்போது மாறிவிட்டது. பெண்கள் என்றால் இப்படித்தான் தைரியமாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. இரண்டு பேரும் ஆகாச விமானத்தில் இடம் பிடித்துக் கொண்டு லாகூர் போய்ச் சேர்ந்தார்கள். நல்ல வேளையாக லாகூரில் இன்னும் அவர்களுடைய கம்பெனியின் கிளை வேலை செய்து கொண்டிருந்தது. கம்பெனி உத்தியோகஸ்தன் என்ற முறையில் சௌந்தரராகவன் லாகூருக்குப் பிரயாண அநுமதிச்சீட்டுப் பெறுவது சாத்தியமாயிற்று. லாகூரில் ஒரு பகுதி பற்றி எரிந்து கொண்டிருந்தது. தெருக்கள் எல்லாம் குத்தும் கொலையும் பிணக்காடுமாயிருந்தன. பஞ்சாப்பின் உள் பிரதேசங்களில் நிலைமை இன்னும் பயங்கரம் என்று சொன்னார்கள். அதிர்ஷ்டவசமாகச் சௌந்தரராகவனையும் பாமாவையும் நடை உடை பாவனைகளைக் கொண்டு ஹிந்து மதத்தினர் என்று உடனே தெரிந்து கொள்ளுதல் கஷ்டமாயிருந்தது. ஆங்கிலோ இந்தியர்கள் என்றோ, பார்ஸிகள் என்றோ அவர்களைக் கருதும்படியிருந்தது. ஆகையால் உள் நாட்டில் அவர்கள் பிரயாணம் செய்வதில் அவ்வளவு அபாயம் இல்லை என்பதாகத் தெரிந்து கொண்டார்கள். ஆங்கிலேய உத்தியோகஸ்தர்களின் தயவினால் ஒரு ஜீப் வண்டி சம்பாதித்துக் கொண்டு பிரயாணமானார்கள்; வழியெல்லாம் அவர்கள் பார்த்த காட்சிகள் அவர்களுக்குச் சீதாவின் கதியைப் பற்றிய கவலையையும் பயத்தையும் உண்டாக்கின. ஆயினும் எப்படியோ கடைசியில் ஹௌஷங்காபாத் போய்ச் சேர்ந்தார்கள். அவர்கள் போய்ச் சேர்ந்த சமயம் அந்த ஊரில் படுகொலைக்குத் தப்பிப் பிழைத்தவர்கள் எல்லாரையும் ஓரிடத்தில் சேர்த்து வைக்கப் பட்டிருந்தது. பாதுகாப்புக்குச் சீக்கிய சோல்ஜர்கள் வந்ததும் தப்பிப் பிழைத்தவர்களின் பிரயாணம் தொடங்குவதாயிருந்தது. அதிகாரிகளின் அநுமதியுடன் சௌந்தரராகவனும் பாமாவும் அந்தக் கூட்டத்துக்குள் புகுந்து தேடித் தேடிப் பார்த்தார்கள். சீதாவையாவது குழந்தையையாவது காணவில்லை. பிறகு துணிச்சலாக ஊருக்குள்ளேயே புகுந்தார்கள். சௌந்தர ராகவன் குடியிருந்த வீட்டை நோக்கிச் சென்றார்கள். வீடு இருந்த இடத்தில் இடிந்து கரியுண்ட சில குட்டிச்சுவர்களும் கல்லும் கரியும் சாம்பலும் கலந்த கும்பல்களும் கிடந்தன! சில இடங்களிலிருந்து இன்னும் இலேசாகப் புகை வந்து கொண்டிருந்தது! ராகவன் அவனுடைய வாழ்நாளிலே என்றும் இல்லாத விதமாக அன்றைக்கு அங்கேயே உட்கார்ந்து விம்மி விம்மி அழுதான். பாமாவும் அவனுடன் சேர்ந்து ’ஓ’வென்று கதறினாள். இதற்குள்ளே அந்த வேடிக்கையைப் பார்ப்பதற்கு ஜனக்கூட்டம் சேரத் தொடங்கியது. பின்னோடு வந்திருந்து போலீஸ் அதிகாரி அவர்களை அங்கிருந்து புறப்படும்படி வற்புறுத்தினார். கிளம்புகிற சமயத்தில் ஒரு பையன் அவர்களை நெருங்கி வந்தான். அவனை முன்னர் பார்த்திருந்த ஞாபகம் ராகவனுக்கு இருந்தது. அந்த ஊர் ரயில்வே ஸ்டேஷன் வாசலில் கோவேறு கழுதை வண்டியுடன் அவன் ராகவனைப் பார்த்து, “சாகிப்! ஒரு சமாசாரம் சொல்லவேண்டும்!” என்றான். அவனை ஜீப் வண்டியில் ஏறிக்கொள்ள சொன்னான் ராகவன். வண்டி புறப்பட்ட பிறகு “என்ன விஷயம்?” என்று கேட்டான். அந்த வீட்டிலிருந்த அம்மாள் சாகவில்லையென்றும் அவளை ஒரு முஸ்லிம் கிழவர் அழைத்துக்கொண்டு போனதாகவும் தன்னுடைய வண்டியில் ஏறிக்கொண்டுதான் அவர்கள் போனதாகவும் பையன் கூறினான். குழந்தையைப் பற்றி யாதொரு தகவலும் தெரியாது என்று சொன்னான். இரவெல்லாம் அவர்கள் பிரயாணம் செய்து விடியும் சமயத்தில் ஒரு பாறைக்குப் பின்னால் தங்கினார்கள் என்பதையும் சொல்லி அந்த இடத்தைக் காட்ட முடியும் என்று கூறினான். அந்தப் பையனையும் ஜீப் வண்டியில் அழைத்துக்கொண்டு போனார்கள். பையன் காட்டிய இடத்தில் கட்டை வண்டியின் சக்கரச் சுவடுகள் தெரிந்தன. அது மட்டுமல்லாமல் சீதா வழக்கமாக அணியும் கண்ணாடி வளையல் ஒன்று அங்கே உடைந்து கிடந்தது. அதைப் பார்த்ததும் ராகவனுடைய துயரம் பன்மடங்கு ஆயிற்று. துயரம் விரைவில் கோபமாக மாறியது. யாரோ ஒரு முஸ்லிம் கிழவன் சீதாவைக் கொண்டுபோய் விட்டதாக எண்ணினான். அவளை எங்கே கொண்டு போய் விற்கப் போகிறானோ, அல்லது என்ன செய்யப் போகிறானோ? அதைக் காட்டிலும் சீதா செத்துப் போயிருந்தால், எரிந்து போன வீட்டிலேயே இருந்து மாண்டிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்குமே! சீதாவுக்கு நேரக்கூடிய கதியை நினைக்க நினைக்க ராகவனுக்குக் கோபம் பொங்கி வந்தது. இதற்கு யார் பேரிலாவது பழிக்குபழி வாங்கவேண்டும் என்று ஆத்திரம் பொங்கியது. பையனை இறக்கி விட்டுவிட்டு ராகவனும் பாமாவும் ஜீப் வண்டியை ஓட்டிக்கொண்டு விரைந்து சென்றார்கள். வழியில் எங்கேயாவது ஒரு முஸ்லிம் தனியே போவதைக் கண்டால் அவனை ராகவன் கைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டுப் போனான். இதைப் பாமா தடுக்கப் பார்த்தும் பயன்படவில்லை. வழியில் ஒரு ஊரில் அவர்கள் இராத்திரி தங்கும்படி நேர்ந்தது தங்கிய வீடு ஒரு பிரபல ஹிந்து வக்கீலின் வீடு. ஏற்கெனவே கம்பெனி உத்தியோகம் சம்பந்தமாக அவருடன் சௌந்தரராகவனுக்குப் பழக்கம் ஏற்பட்டிருந்தது. அந்த ஊரில் ஹிந்துக்கள் அதிகமாதலால் அதுவரை அபாயம் ஏற்படவில்லை. ஆனால் எந்த நிமிஷம் அபாயம் வருமோ என்று எதிர்பார்த்துத் தயாராயிருந்தார்கள். ராகவன் அவருடைய வீட்டில் தங்கிய இரவு ஒரு செய்தி வந்தது. ஒரு ஹிந்துப் பெண்ணுக்கு முஸ்லிம் ஸ்திரீகள் அணியும் பர்தா உடையைப் போட்டு ஒரு முஸ்லிம் கிழவன் ஜீப் வண்டியில் வைத்து அழைத்துப் போகிறான் என்பது அந்தச் செய்தி. சுற்றுப்புறங்களில் என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக அவர்கள் வைத்திருந்த துப்பறியும் ஒற்றர்கள் இந்தச் செய்தியைக் கொண்டு வந்தார்கள். இதைக் கேட்டதும் சௌந்தரராகவனுக்கு ஒருவேளை அந்தப் பெண் சீதாவாயிருக்கலாம் என்ற சந்தேகம் உதித்தது. இல்லாவிட்டால்தான் என்ன? ஒரு ஹிந்து ஸ்திரீக்கு அபாயம் நேர்ந்திருக்கிறது என்றால், அதைத் தடுக்காமல் தான் உயிர் வாழ்ந் திருப்பதில் என்ன பிரயோஜனம்? பழைய காலத்து ராஜபுத்திர வீரர்கள் தங்களுடைய குலப் பெண்களின் மானத்தைக் காப்பாற்றுவதற்காகச் செய்த வீர சாகஸச் செயல்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்ததெல்லாம் ராகவனுக்கு அப்போது நினைவு வந்தது. உடனே அந்த ஜீப் வண்டி எந்தச் சாலையில் போகிறது என்று தெரிந்து கொண்டு அதே சாலையில் சௌந்தரராகவன் தன் வண்டியையும் விட்டான். வழியில் பல தடங்கல்கள் நேர்ந்தன. ஆயினும் முன்னால் போன வண்டியை விட்டுவிடாமல் தொடர்ந்து போனான். ஒரு இடத்தில் முன் வண்டி தப்பிப் போய் விட்டதாகவே தோன்றியது. பிறகு அது பெரிய சாலையிலிருந்து, பிரிந்து குறுக்குச் சாலையில் திரும்பியிருக்க வேண்டும் என்று ஊகித்து அதே குறுக்குச் சாலையில் தானும் திரும்பினான். சிறிது நேரத்துக்கெல்லாம் ‘சேனாப்’ நதியின் கரையை அடைந்தான். அங்கே ஒரு படகு ஏறக்குறைய நடு ஆற்றில் போய்க் கொண்டிருந்தது. அதில் ஒரு முஸ்லிம் கிழவனும் ஒரு ஹிந்து ஸ்திரீயும் இருப்பதை ராகவன் பார்த்து விட்டான். அதற்கு மேல் பார்ப்பதற்கோ யோசிப்பதற்கோ என்ன இருக்கிறது? வேறு எந்த விதத்திலும் அந்தப் படகைப் பிடிக்கவோ தடுக்கவோ முடியாது. துப்பாக்கியை எடுத்துக் கிழவனைக் குறி பார்த்துச் சுட்டான். குறி தவறாமல் குண்டு பட்டது. கிழவன் படகிலிருந்து சாய்ந்து தண்ணீரில் விழுந்தான். அதற்குப் பிறகு நடந்ததை ராகவன் எதிர்பார்க்கவில்லை. படகிலிருந்த பெண்ணும் இன்னொரு மனிதனும் தண்ணீரில் குதித்தது போலத் தோன்றியது. படகில் படகோட்டி மட்டுமே பாக்கியிருந்தான். ராகவனுக்கு அப்போது வெறியே பிடித்திருந்தது. அந்தப் படகோட்டி மனிதனையும் நோக்கிச் சுட்டான். படகு குண்டுபட்டு ஓட்டையாகியிருக்க வேண்டும். சிறிது நேரத்துக்கெல்லாம் படகு கவிழ்ந்து விட்டது. இந்தச் சம்பவம் ராகவனுடைய வெறியைத் தணித்தது. தான் செய்தது நியாயமோ என்னமோ என்ற ஐயம் எழுந்தது. நியாயந்தான் என்று மனதை உறுதி செய்து கொண்டான். ஒருவேளை படகில் இருந்தது சீதாவாக இருக்கலாமோ என்ற சிறு சந்தேகம் எழுந்தது. அப்படியிருக்க முடியாது என்றும், சீதாவாக இருந்தால் அந்த முஸ்லிம் கிழவன் நீரில் விழுந்ததைக் கண்டு அவளும் விழுந்திருக்க நியாயமில்லையென்று எண்ணி ஆறுதல் பெற்றான். ஒருவேளை அப்படிச் சீதாவாயிருந்தால் என்ன? ஒரு முஸ்லீம் வீட்டுக்குப் போய்ப் பலவந்தத்துக்கு ஆளாகி உயிர் வாழ்வதைக் காட்டிலும் அவள் நதியில் முழுகி இறப்பதே மேலல்லவா? பிறகு ராகவனும் பாமாவும் பல அபாயங்களைத் தாண்டி டில்லிக்கு வந்து சேர்ந்தார்கள். வந்த பிற்பாடு ராகவனுடைய மனது கேட்கவில்லை. டில்லியில் உள்ள அகதி முகாம்களில் மட்டும் அல்லாமல் பானிபெத், கர்னால், குருக்ஷேத்திரம் முதலிய ஊர்களில் உள்ள அகதி முகாம்களில் எல்லாம் போய்த் தேடிப் பார்த்தான். எங்கும் சீதாவைப் பற்றியாவது வஸந்தியைப் பற்றியாவது தகவல் கிடைக்கவில்லை. அவர்கள் இருவரும் இறந்து போயிருக்க வேண்டும் என்ற முடிவுக்கே வரவேண்டிய தாயிருந்தது. ஆனால், இரண்டு மாதத்துக்கு முன்பு சீதாவின் பெயருக்குத் தாரிணியிடமிருந்து வந்த கடிதமானது சௌந்தர ராகவனுக்கு மறுபடியும் மனக் குழப்பத்தை உண்டாக்கியது. “சூரியா, இப்போது நீ எங்கே தங்கியிருக்கிறாய்?” என்று சௌந்தரராகவன் கேட்டான். “இன்னும் ஒரு இடம் என்று நிலையாக ஏற்படவில்லை. ஏற்பட்டதும் தங்களுக்குத் தெரிவிக்கிறேன். தங்களுக்கும் பாமாவுக்கும் திருமணம் நடக்கும்போது எனக்குக் கட்டாயம் அழைப்பு அனுப்பவேண்டும் மறந்து விடக்கூடாது” என்று சூரியா கூறினான். அவனுடைய முகத்தில் வெறுப்பும் வேடிக்கையும் கலந்த குரூரமான புன்னகை காணப்பட்டது. “ஆகா! அதைப் பற்றி உனக்கு எப்படித் தெரிந்தது, சூரியா? நாங்கள் இன்னும் யாரிடமும் சொல்ல வில்லையே?” என்றான் ராகவன். “சொல்லுவானேன்? ஊகித்துத் தெரிந்து கொள்ளக் கூடியதுதானே? பாவம்! நீங்கள் எத்தனை காலம் சூனியமாக இருக்கும் இந்தப் பெரிய வீட்டில் தனியாகக் குடியிருக்க முடியும்?” "ஆம், அப்பா! நீயாவது என்னுடைய நிலைமையைத் தெரிந்து அநுதாபப்படுகிறாயே? உலகத்தில் சுயநலம் அதிகமாகிப் போய்விட்டது? பிறர் கஷ்டத்தைக் கவனித்து அநுதாபப்படுவாரே இல்லை. அதுவும் தியாகிகள் என்று சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ்காரர்கள் எவ்வளவு சுயநலம் பிடித்தவர்களாகப் போயிருக்கிறார்கள், தெரியுமா? அவர்களை உத்தேசித்தால் நம்முடைய மாஜி திவான் ஆதிவராகாச்சாரியார் போன்றவர்கள் எவ்வளவோ தேவலை!" என்றான் ராகவன். “ஆமாம்; உலக இயல்பே அப்படித்தான். நல்லவர்கள் கெட்டவர்கள் ஆவார்கள், கெட்டவர்கள் நல்லவர்கள் ஆவார்கள். தியாகிகள் சுயநலத்தை மேற்கொள்வார்கள். சுயநலம் பிடித்தவர்கள் பரோபகாரிகள் ஆவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் காந்தி மகான் ஒருவர் மட்டும் மாறாமல் இருந்து கொண்டு திண்டாடுகிறார்!” ஆம், உன்னுடைய காந்தி மகானை நீதான் புகழ வேண்டும். காந்தி செய்கிற அநியாயத்தை எங்களால் பொறுக்க முடியவில்லை. அவர் எதற்காக இந்தப் புது டில்லியில் வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது; கோபமாய்க் கூட இருக்கிறது. இவ்வளவு அகதிகளையும் இவர்கள் படுகிற துயரங்களையும் பார்த்துவிட்டுப் பாகிஸ்தானுக்குப் பரிந்து பேச எப்படித்தான் மகாத்மாவுக்கு மனது வருகிறதோ தெரியவில்லை. பட்டினி கிடந்து சர்தார்படேலைக் கட்டாயப்படுத்தியல்லவா பாகிஸ்தானுக்கு அறுபது கோடி ரூபாய் வாங்கிக் கொடுத்தார்? அவரை ‘மகாத்மா’ என்று சொல்வதற்கே என் நாக்குக் கூசுகிறது." “கூசினால் சொல்ல வேண்டாமே! சொல்லாம லிருப்பதால் மகாத்மாவுக்கு நஷ்டமில்லை, உங்களுக்கும் கஷ்டம் இல்லை. நாங்கள் என்னமோ சில பைத்தியக்காரர்கள், மகாத்மா எது சொன்னாலும் எது செய்தாலும் அதுவே சரி என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். அதனாலும் யாருக்கும் லாபமோ நஷ்டமோ இல்லை. போகட்டும், உங்கள் கலியாணம் எப்போது?” என்றான் சூரியா. “அதைப் பற்றித்தான் தயக்கமாயிருக்கிறது, சூரியா! நான் இப்படியே என் வாழ்க்கையை நடத்த முடியாது என்பது நிச்சயம். ஆனால் சீதாவைப் பற்றியோ உறுதியாக ஒன்றும் தெரியவில்லை. போதாதற்கு, தாரிணியின் கடிதம் வேறு என் மனதை அடியோடு குழப்பி விட்டிருக்கிறது…” “தாரிணியின் கடிதம் இந்த விஷயத்தில் உங்கள் மனதைக் குழப்புவானேன்?” என்றான் சூரியா. “உன்னிடம் சொன்னால் என்ன, ஒருமாதிரி உனக்கு முன்னமேயே தெரிந்த விஷயந்தான். தாரிணி என்னுடைய முதற்காதலி, சூரியா! சீதாவை இழந்ததினால் எனக்கேற்பட்ட மனத்துயரத்தை மாற்றக்கூடியவள் தாரிணி ஒருத்திதான். ஒருவேளை உனக்கு இந்த விஷயத்தில் ஆட்சேபணை இருக்கக் கூடும். ஆனாலும் நீ இதில் தலையிடாம லிருந்தால் நல்லது” என்றான் ராகவன். “மன்னிக்க வேண்டும், ராகவன்! நான் அப்படியெல்லாம் பிறர் காரியத்தில் தலையிடுகிறவன் அல்ல. ஒரு தடவை பிறர் காரியத்தில் தலையிட்டு விட்டு அதன் பலன்களை இன்றுவரை அநுபவித்துக் கொண்டிருக்கிறேன், போதும் போதும் என்றாகிவிட்டது. சீதா செத்துப் போயிருந்து ஒருவேளை ஆவி வடிவத்தில் இந்த உலகத்துக்குத் திரும்பி வந்தால் நீங்களும் தாரிணியும் கலியாணம் செய்து கொள்வதைப் பார்த்து ஆனந்தமடைவாள். உங்கள் கலியாணத்துக்கு வந்திருந்து சீதா ஆசிகூடக் கூறுவாள்!” என்றான் சூரியா. முப்பத்து மூன்றாம் அத்தியாயம் - ராகவன் கோபம் ராகவனுக்கு திடீர் என்று கோபம் வந்துவிட்டது. சூரியா தன்னைப் பரிகாசம் செய்கிறானோ என்ற சந்தேகம் அவன் மனதில் உதித்தது. உடனே குதித்து எழுந்து, “அடே! உன்னுடைய அகம்பாவமும் கெட்ட சுபாவமும் இன்னும் மாறவில்லை போலிருக்கிறது. இந்த க்ஷணமே எழுந்து போய்விடு! கெட் அவுட்!” என்று கூவினான். “நீங்கள் இன்னும், ‘கெட் அவுட்’ சொல்லவில்லையே என்றுதான் காத்திருந்தேன்!” என்று கூறிக் கொண்டே சூரியா எழுந்தான். அதற்குள் ராகவனுடைய கோபம் கொஞ்சம் தணிந்தது. “இல்லை, சூரியா! சற்று உட்காரு! நீ உண்மையாகவே அப்படி எண்ணுகிறாயா? அதாவது நான் தாரிணியைக் கலியாணம் செய்து கொள்வது சீதாவுக்கு…” என்று தயங்கினான். சூரியா நின்றுகொண்டே, “அதைப் பற்றி ஏன் தயங்கவேண்டும்? சீதாவின் ஆத்மாவுக்கு அது நிச்சயம் திருப்தி அளிக்கும். அதற்கு ஒரு விசேஷ காரணம்!” என்றான். “அது என்ன அவ்வளவு பொருத்தமான காரணம்?” “சீதாவும் தாரிணியும் சொந்தச் சகோதரிகள் என்பதுதான். அவர்கள் ஒரே தந்தையின் புதல்விகள். ஒரே தாயின் வயிற்றில் பிறந்தவர்கள். இதைக் காட்டிலும் வேறு என்ன காரணம் வேண்டும்?” “என்ன உளறுகிறாய்! உன்னுடைய மூளை குழம்பி விட்டதா? புத்தி சுவாதீனத்துடன்தான் பேசுகிறாயா?” என்றான் ராகவன். “எப்படி வைத்துக் கொண்டாலும் சரிதான்! நான் போய் வருகிறேன்” என்று சூரியா புறப்பட்டான். “இல்லை, சூரியா போகாதே! திடீரென்று ஒரு பெரிய அணுகுண்டைத் தூக்கிப் போட்டுவிட்டுப் போகிறேன் என்கிறாயே? சற்றுமுன் நீ சொன்னது நிசந்தானா? தாரிணியும் சீதாவும் அக்கா தங்கைகளா? யார் சொன்னார்கள்? என்ன அத்தாட்சி?” என்று பரபரப்புடன் ராகவன் கேட்டான். “அவர்களைப் பெற்ற தகப்பனாரே சொன்னார்! அவருடைய வாய்மொழியாகவே தெரிந்து கொண்டேன்!” என்றான் சூரியா. பிறகு, துரைசாமி ஐயரின் இல்வாழ்க்கை ஆரம்பத்தில் நடந்த அதிசய சம்பவங்களைப் பற்றியும் சூரியா விவரமாகக் கூறினான். நம்புவதற்கு அரிய அபூர்வமான சம்பவங்கள்தான். ஆயினும் ராகவனுடைய மனதுக்குள் அவையெல்லாம் உண்மையாகத்தானிருக்கும் என்ற உணர்ச்சி ஏற்பட்டது. அவனுடைய சொந்த வாழ்க்கையில் ஏற்கெனவே நன்கு விளங்காமல் மர்மத் திரையினால் மறைக்கப்பட்டிருந்த பல சம்பவங்கள் இப்போது பிரகாசமாகத் துலங்கின. “சூரியா! அவர் எங்கே? அந்தப் பிராமணர் துரைசாமி ஐயர் எங்கே? சீதாவின் கலியாணத்துக்குப் பிறகு அவர் ஏன் திடீரென்று மறைந்து போனார்? அவரை எங்கே பார்த்தாய்?” என்று கேட்டான். “ராகவன்! அதையெல்லாம் ஏன் கேட்கிறீர்கள்? தெரிந்து கொண்டால் உங்கள் மனம் கஷ்டப்படும்!” “எதற்காக என் மனம் கஷ்டப்படவேண்டும்? நீ பேசுவதெல்லாம் மர்மமாகவே பேசுகிறாயே?” “நீங்கள் வைதிக சிரேஷ்டர், உங்கள் மாமனார் ஒரு மௌல்வி சாகிப் என்று தெரிந்தால் உங்களுக்குக் கஷ்டமாயிராதா? உங்கள் தகப்பனார் பத்மலோசன சாஸ்திரிகளின் இருதயமே நின்றுவிடுமே?” “என் தந்தையை எதற்காக இதில் சம்பந்தப்படுத்துகிறாய்? என் அழகான மாமனார் உனக்கும் தாய் மாமன்தானே? அவர் எதற்காக மௌல்வி சாகிபு ஆகவேண்டும்? ஹிந்து மதத்தைவிட முஸ்லிம் மதம் சீக்கிரத்தில் மோட்சம் அளித்துவிடும் என்கிற நம்பிக்கையினாலா?” “அவ்வளவு தூரம் எனக்கு அவருடைய மதக் கொள்கையைப் பற்றித் தெரியாது. என்னுடைய அபிப்பிராயம், அவர் ஊரை ஏமாற்றுவதற்கே அப்படி வேஷம் போட்டுக் கொண்டு திரிந்தார் என்பதுதான். ஆனால் அந்த வேஷம் அவர் எதிர்பாராத முறையில் அவருக்குத் திடீர் என்று மோட்சத்தை அளித்து விட்டது!” ராகவனுடைய இருதயத்தில் இனந்தெரியாத ஏதோ ஒருவித பயம் ஏற்பட்டது. பயங்கரமான பாவம் ஒன்று கரிய முகமூடி போட்டுக்கொண்டு தன் முன்னால் வந்து நிற்பதாகத் தோன்றியது. அந்த முகமூடியைக் கிழித்து அந்த உருவத்தைப் பார்க்கும் தைரியம் அவனுக்கு ஏற்படவில்லை. ஆகையால் உடனே அவன் பேச்சை மாற்றிவிட விரும்பினான். “கிரகசாரந்தான்! துரைசாமி ஐயர் மௌல்வி சாகிபு ஆவதாவது? அதைப்பற்றி நினைக்கவே எனக்கு அருவருப்பாயிருக்கிறது வேறு ஏதாவது விஷயமிருந்தால் பேசு!” “வேறு ஒன்றும் இல்லை” என்று கூறிவிட்டுச் சூரியா மறுபடியும் புறப்பட்டான். “ஒருவேளை நீ தப்பித் தவறிச் சீதாவை எங்கேயாவது பார்க்கும்படி நேர்ந்தால்….” “சீதாவின் ஆவியைப் பார்த்தால் என்று சொல்லுங்கள்.” “நீ பேசுவதைக் கேட்டால் சீதா இறந்துவிட்டாள் என்று உறுதியாக நம்புகிறாய் போலிருக்கிறது!” “கண்ணால் கண்டதை நம்பாமல் என்ன செய்கிறது?” “என்னத்தை நீ கண்ணால் பார்த்தாய்!” என்று ராகவன் குரல் நடுக்கத்துடன் வினவினான். “நதியின் பிரவாகத்தில் சீதா முழுகுகிறதைக் கண்ணால் பார்த்தேன்” என்றான் சூரியா. “ஐயோ!” என்றான் ராகவன். “அந்தப் படகிலே நானும் இருந்தேன். நாங்கள் மூன்று பேருந்தான் இருந்தோம். கரையிலிருந்து படகைப் பார்த்துச் சுட்டது யார் என்பது பற்றி எனக்குச் சந்தேகம் உதித்திருந்தது; அது உண்மை என்று இன்றைக்குத் தெரிந்தது!” “என்ன சொல்கிறாய், சூரியா? என் மூளை குழம்புகிறது! படகில் நீங்கள் மூன்று பேரும் இருந்தீர்கள் என்றால்? யார் யார் இருந்தீர்கள்?” “நானும் சீதாவும், சீதாவின் தகப்பனாருந்தான் இருந்தோம். பஞ்சாப் நகரத்திலிருந்து தப்பி ஓடிக்கொண்டிருந்தோம். சீதாவின் தகப்பனார் என்ன நினைத்தார் என்றால், தம்முடைய மௌல்வி சாகிபு வேஷம் சீதாவுக்கு ஒரு பாதுகாப்பு என்று நினைத்தார். அவர் ஒன்று நினைக்க, அவருடைய மாப்பிள்ளை வேறொன்று நினைத்து விட்டார்!” “ஐயையோ! அப்படியென்றால் அந்த படகில் நான் குறிபார்த்துச் சுட்ட முஸ்லிம்…” “ஆமாம்; உங்களுடைய மாமனாரை நோக்கித்தான் சுட்டீர்கள். குறியும் தப்பவில்லை, ராகவன்! இந்த துரதிர்ஷ்ட சம்பவத்தை அறிந்திருப்பவன் நான் ஒருவன்தான்; இப்போது உங்களுக்கும் தெரியும். நான் இதை வேறு யாரிடமும் சொல்லப் போவதில்லை. நீங்களும் சொல்ல மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.” ராகவன் திடீரென்று குதித்து எழுந்தான். கோபத்தினால் முகத்தில் நரம்புகள் புடைக்க, சூரியாவை நோக்கிக் கைகளை ஆட்டிக்கொண்டு, “அடமடையா! நீயும் ஒரு ஆண்பிள்ளையா? ஒரு பெண் ஆற்றுவெள்ளத்தில் விழுந்து முழுகி இறந்ததை நீ பார்த்துக் கொண்டிருந்தாயா? அவளைக் காப்பாற்ற முயலாமல் பெரிய வீரன் சூரன் தியாகி என்றெல்லாம் உன்னை நீயே புகழ்ந்து கொள்வாயே? மணலைக் கயிறாய்த் திரித்தேன், வானத்தை வில்லாய் வளைத்தேன் என்றெல்லாம் பீற்றிக் கொள்வாயே? வெள்ளத்தில் முழுகிப் போகாமல் ஒரு பெண்ணைக் கரை சேர்க்கக் கையினால் ஆகவில்லையா?” என்று நெருப்பை கக்கினான். சூரியா சாந்தமான குரலில், “ராகவன்! நான் அப்போது சீதாவைக் காப்பாற்றியிருப்பேன்? காப்பாற்றிக் கரை சேர்த்திருக்க முடியும் ஆனால் அவ்விதம் செய்யவில்லை. முழுகிச் சாகட்டும் என்று பார்த்துக் கொண்டிருந்து விட்டேன்! ஏன் தெரியுமா! பிழைத்து வந்தால் உம்மைப்போன்ற அயோக்கிய சிகாமணியோடு அவள் வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதி னால்தான்! முன்னொரு சமயம் நீர் என்னை மாடியிலிருந்து பிடித்துத் தள்ளியபோது பழிக்குபழி வாங்குவதாகச் சபதம் செய்தேன். பழி வாங்கியாகிவிட்டது! போய் வருகிறேன்,” என்று சொல்லி விட்டு நடந்தான். ராகவன் திகைத்து உட்கார்ந்து விட்டான். சூரியாவின் கடைசி வார்த்தைகள் அவனுடைய உள்ளத்தில் கூரிய அம்புகளைப் போலத் தைத்தன. சூரியா கூறிய செய்திகளின் பலா பலன்களைப் பற்றி யோசிக்கும் சக்தியே அவனுக்கு இல்லை. இந்த விஷயம் ஒன்றும் தாரிணிக்குத் தெரியக்கூடாதே என்ற கவலை மட்டும் அவனுடைய மனதில் தோன்றியது. சூரியா வீட்டு வாசலை அடைந்ததும் விடுவிடு என்று நடக்கத் தொடங்கினான். அவனுடைய நடையின் வேகம் அவனுடைய உள்ளப் பரபரப்புக்கும் அறிகுறியாக இருந்தது. “நான் சொன்னதில் அவ்வளவாகப் பொய் அதிகம் இல்லைதானே? சீதாவின் ஆவியைத்தான் இப்போது நான் பார்க்கப் போகிறேன். சௌந்தரராகவனைப் பொறுத்தவரையில் சீதா இறந்தவள் மாதிரிதானே?” என்று எண்ணமிட்டுக் கொண்டே நடந்தான். முப்பத்து நான்காம் அத்தியாயம் - சீதாவின் ஆவி தலைக்கு மேலே வெள்ளம் ஓடிக் கொண்டே, ஓடிக் கொண்டே, ஓடிக் கொண்டே இருந்தது. நெற்றியின் மேலே அலை மோதிக்கொண்டே, மோதிக்கொண்டே, மோதிக்கொண்டே இருந்தது. காதில் ‘ஹோ’ என்று இரைந்த அலை ஓசை பல்லாயிரம் மக்களின் சோகம் நிறைந்த ஓலத்தையொத்த அலை ஓசை, மற்ற எல்லா ஓசைகளையும் அமுக்கிக் கொண்டு மேலெழுந்த பேரலையின் பேரோசை கேட்டுக் கொண்டே, கேட்டுக் கொண்டே இருந்தது. தலைக்கு மேல் ஓடிய வெள்ளத்தின் பாரமும் நெற்றியில் மோதிய அலையின் வேகமும் காதில் தாக்கிய அலை ஓசை இரைச்சலும் முடிவில்லாமல், இடைவெளியில்லாமல் நீடித்துக்கொண்டே இருந்தன. இல்லை, இல்லை; முடிவில்லாமல் இல்லை! அப்பாடா! கடைசியாக இதோ வெள்ளம் வடிந்து வருகிறது. நெற்றியில் அலையின் மோதலும் குறைந்து வருகிறது. இதோ வெள்ளம் வடிந்துவிட்டது. கழுத்துக்குக் கீழே இறங்கிவிட்டது. மூச்சுவிட முடிகிறது; கண்ணால் பார்க்க முடிகிறது. ஆனால் காதிலே அலை ஓசை கேட்பது மட்டும் நின்றபாடில்லை. வேறு ஒரு சத்தமும் கேட்க முடியவில்லை. இது என்ன? எங்கே இருக்கிறேன்? என்னத்தைப் பார்க்கிறேன்? இங்கே எப்படி வந்தேன்? படகிலிருந்து நதியில் விழுந்து முழுகியவள் இங்கே எப்படி வந்தேன்? செத்துப் போன பிறகு இங்கே வந்து சேர்ந்தேனா? இதுதான் மறு உலகமா? மறு உலகமாயிருந்தால் இருட்டும் குப்பையும் நிறைந்து துர்நாற்றம் அடிக்கும். இந்த இடம் நரக வீடாகத்தான் இருக்க வேண்டும்! நான் செய்திருக்கும் பாவங்களுக்கு நரகத்தைத் தவிர வேறு என்ன இடம் கிடைக்கும்? பதியை விட்டுவிட்டு ஓடிப்போனவளுக்கு வேறு என்ன கதி கிடைக்கும்? அருமைச் சிநேகிதி லலிதாவுக்குத் துரோகம் செய்தவளுக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்! சொற்ப பாவம் செய்தவர்கள் கொஞ்சநாள் நரகத்திலிருந்துவிட்டு அப்புறம் சொர்க்கத்துக்குப் போவார்கள் என்று கேட்டதுண்டு? ஆனால் எனக்குச் சொர்க்கத்தின் ஆசையே வேண்டியதில்லை. என்றென்றைக்கும் இந்த நரகத்தில் கிடந்து உழல வேண்டியதுதான்? இதோ என் தலைமாட்டில் நிற்கிறது யார்? யமனா? யமதூதனா? இல்லை தெரிந்த முகமாயிருக்கிறதே? எப்போதோ பார்த்த மாதிரி இருக்கிறதே?… கையில் என்ன வைத்துக் கொண்டிருக்கிறார்? இல்லை; தண்டாயுதமில்லை. வேறு எந்த ஆயுதமும் இல்லை. அது ஒரு கிண்டி; மண்ணால் செய்த கிண்டி. அதன் நீண்ட குறுகிய மூக்கு வழியாகத் தண்ணீர் சொட்டுகிறது. எதற்காக நம்முடைய நெற்றியில் ஜில் என்று குளிர்ந்த தண்ணீரை விடுகிறார்? ஆகா எத்தனை இதமாயிருக்கிறது? இந்த மனிதர் யார்…… சீதா சட்டென்று படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். படுக்கை என்பதும் தரையில் விரித்திருந்த ஒரு பழைய கம்பளிதான். அது உடம்பின் மேல் பட்ட இடங்களில் சொர சொரவென்று குத்தியது. அதைப் பொருட்படுத்தாமல் தன் நெற்றியில் சொட்டுச் சொட்டாகத் தண்ணீரை விட்ட ஆசாமி யார் என்று நன்றாகத் திரும்பிப் பார்த்தாள். அந்த மனிதரின் மெலிந்த சுருங்கிய முகத்தில் அப்போது புன்னகை மலர்ந்தது. ஆகா இந்த மனிதர் என் அப்பா அல்லவா; பழைய அப்பா துரைசாமி ஐயர் அல்லவா? அந்தத் தாடியுள்ள மௌல்வி சாகிபு அல்ல. இளைத்து மெலிந்து கறுத்துப் போயிருக்கிறார். கன்னங்களின் எலும்பு வெளியே நீட்டிக்கொண்டு தெரிகிறது; கண்கள் குழி விழுந்திருக்கின்றன. ஆயினும் பழைய அப்பாதான்; சந்தேகமில்லை. அந்த மௌல்வி சாகிபு என் தந்தை என்று சொல்லி என்னை அழைத்துக்கொண்டு வந்தது ஏதோ வஞ்சகம் போலிருக்கிறது. அவரிடமிருந்து நிஜமான அப்பா என்னைக் காப்பாற்றி அழைத்துக்கொண்டு வந்திருக்கிறார். ஒருவேளை அதெல்லாம் அந்தப் பயங்கர நிகழ்ச்சிகள் எல்லாம் கனவுதானோ, என்னமோ? - எல்லாவற்றுக்கும் அப்பாவைக் கேட்டுப் பார்க்கலாம்! சீதா பேச முயன்றாள், தகப்பனாரிடம் தன் மனதிலெழுந்த சந்தேகத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ள முயன்றாள். “நீங்கள் என் அப்பா துரைசாமி ஐயர்தானே? எதற்காகக் கிண்டியிலிருந்து சொட்டுச் சொட்டாகத் தண்ணீரை என் நெற்றியில் விடுகிறீர்கள்? நாம் எங்கே இருக்கிறோம்? சூரியா எங்கே?” குழந்தை வஸந்தி எங்கே? இவர் - என் அகத்துக்காரர் எங்கே?" என்று இவ்வளவு கேள்விகளையும் கேட்க அவள் மனம் விரைந்தது; நாக்குத் துடித்தது; உதடுகள் திறந்தன; மூடின ஆனால் வார்த்தை ஒன்றும் வரவில்லை. முயன்று முயன்று பார்த்ததும் வார்த்தை ஒன்றும் வெளிவரவில்லை. அப்பா ஏதோ சொல்லுவது போலிருந்தது. வாயைத் திறந்து திறந்து மூடினார். பேச்சில்லாத சினிமாப் படங்களில் பாத்திரங்கள் வாயைத் திறந்து மூடுவது போலிருந்தது. பேசியது ஒன்றும் அவள் காதில் விழவில்லை; காதில் விழவேயில்லை. எப்படிக் காதில் விழும்? வேறு சத்தம் எதுவும் காதில் விழ முடியாதபடிதான் இந்தப் பயங்கரமான அலை ஓசை ஓயாமல் கேட்டுக் கொண்டிருக்கிறதே! இதுதான் என்னைப் பைத்தியமாக அடித்துக்கொண்டு வருகிறது. “எதற்காகத் தப்பிப் பிழைத்தோம்; நதியில் முழுகிச் செத்துத் தொலைந்து போயிருக்கக் கூடாதா?” என்ற எண்ணத்தை உண்டாக்கி வருகிறதே! ஒரு நிமிஷத்துக்குள்ளே சென்ற சில மாதத்து அநுபவங்கள் எல்லாம் சட், சட்டென்று ஞாபகம் வந்தன. குருக்ஷேத்திரம் முகாமில் கண்ணுக்கெட்டிய தூரம் போட்டிருந்த ஆயிரக்கணக்கான அகதி முகாம் கூடாரங்கள் கண் முன்னால் வந்தன. உடுக்க ஒரு துணிக்கு மேல் இல்லாத லட்சக்கணக்கான அகதி ஸ்திரீகளும் குழந்தைகளும் நினைவுக்கு வந்தார்கள். சில நாள் குடி தண்ணீருக்குப் பட்ட கஷ்டம் நினைவு வந்தது. இன்னும் சில நாள் பெருமழை பெய்து கூடாரத்துக்குள் முழங்கால் ஆழம் தண்ணீர் நின்ற காட்சி நினைவுக்கு வந்தது. தனக்குக் கடுமையான சுரம் வந்ததும் அப்பாவும் சூரியாவும் தனக்குச் செய்த சிசுருஷைகளும் நினைவுக்கு வந்தன. ஒரே ஒரு நாள் அகதி முகாமில் ஓரிடத்தில் பெருங்கூட்டத்தைக் கண்டு தான் அங்கே சென்று பார்த்ததும் காந்தி மகாத்மா கூட்டத்தின் நடுவில் நின்று ஏதோ பேசியதும் நினைவுக்கு வந்தன. துரதிர்ஷ்டம், அந்த அவதார புருஷர் பேசிய பொன் மொழியைத் தன் காதுகள் கேட்கக் கொடுத்து வைக்கவில்லை! காந்திமகான் ஏறியிருந்த காருக்குப் பின்னால் சென்ற பெரும் ஜனக் கூட்டத்தோடு அவளும் சென்றாள். அகதி முகாமிலிருந்து அவர் புறப்பட்டபோது தானும் அவருடன் போய்விடப் பிரயத்தனம் செய்தாள் அந்த முயற்சி பலிக்கவில்லை. பக்கத்திலிருந்தவர்கள் அவளைத் தடுத்து நிறுத்தி விட்டார்கள். அதற்குப் பிறகு கடுங்குளிர் காலம் வந்தது. அந்தக் குளிரிலும் பனியிலும் கூடாரத்தில் வசித்தால் தன் உயிருக்கு ஆபத்து வரலாம் என்று அப்பாவும் சூரியாவும் எண்ணினார்கள். ஆகையால் ஒரு மச்சுக் கட்டிடத்துக்கு அழைத்துப்போக வேண்டும் என்று தீர்மானித்தார்கள். ரொம்பவும் சிரமப்பட்டு அகதி முகாம் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுக்கொண்டு குருக்ஷேத்திரத்திலிருந்து பிரயாணமானார்கள். பானிபத் என்னும் பட்டணத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே அதிர்ஷ்டவசமாக ஒரு பழைய காலத்து முஸ்லிம் பக்கிரியின் சமாதி மண்டபம் காலியாயிருந்தது. அந்த இடத்தை இவர்கள் பிடித்துக் கொண்டார்கள், அதில் வசித்து வந்தார்கள். அடிக்கடி சீதாவுக்குத் திடீர் என்று பிரக்ஞை தவறிக் கொண்டிருந்தது. அப்படிப்பட்ட சமயங்களில் அவளைக் கட்டை மாதிரி போட்டுவிட்டது. குளிர்ந்த தண்ணீரைக் கிண்டி மூக்கு வழியாகக் கொஞ்சம் கொஞ்சமாய் நெற்றியில் விட்டுக் கொண்டிருந்தால் பிரக்ஞை திரும்ப வந்தது. அப்பா இன்றைக்கும் அம்மாதிரி செய்துதான் உணர்வு வரப் பண்ணியிருக்கிறார். சூரியா டில்லிக்குப் போயிருக்கிறான், ஆம்; டில்லியிலேயே ஜாகை கிடைக்குமா என்று பார்த்து வரப் போயிருக் கிறான். தாரிணியையும் வஸந்தியையும் இவரையும் பற்றிக்கூட ஏதாவது தகவல் கிடைக்குமா என்று விசாரித்து வருவதற்குப் போயிருக்கிறான். அது மட்டுமல்ல; காந்தி மகாத்மாவைப் பற்றி விசாரித்துக் கொண்டு வருவதற்கும் போயிருக்கிறான். சீதாவின் மனதிற்குள் அடிக்கடி தான் இனி வெகுகாலம் பிழைத்திருப்பது துர்லபம் என்று தோன்றிக் கொண்டிருந்தது. பிழைத்திருக்க அவள் விரும்பவும் இல்லை. பேசும் சக்தியை வாய் இழந்து விட்டது. பேச முயன்றால், தாடைகள் வலிப்பதைத் தவிர வேறு பயன் ஒன்றுமில்லை. காதோ கேட்கும் சக்தியை அடியோடு இழந்துவிட்டது. ஒரு பயங்கரமான அலை ஓசை காதில் சதா சர்வகாலமும் கேட்டுக் கொண்டிருந்தது. எப்படியும் சீக்கிரம் தன் உயிர் போவது நிச்சயம். அதற்குள் தன் அருமைக் குழந்தை வஸந்தியை ஒரு தடவை பார்த்துக் கட்டி முத்தமிடவேண்டும். அப்புறம் வாழ்விலும் தாழ்விலும் இன்பத்திலும் துன்பத்திலும் விழிப்பிலும் தூக்கத்திலும் நன்மையிலும் தீமையிலும் தன்னுடைய வழிபடு தெய்வமாகக் கொண்டு போற்றி வந்த காந்தி மகாத்மாவை இன்னொரு தடவை தரிசிக்க வேண்டும். அவருடைய புனிதமான திருமேனியைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டும். அவருடைய மனோரதம் இவ்வளவு தான். இதையெல்லாம் பற்றிச் சீதா மின்னல் மின்னும் வேகத்தில் சிந்தித்துக் கொண்டிருந்தபோது அப்பா துரைசாமி ஐயர் சூடான டீ போட்டுக்கொண்டு வந்தார். சீதா வாங்கிக் சாப்பிட்டாள்; பிறகு அப்பாவைத் தொட்டுக் கூப்பிட்டு, சமிக்ஞையினால், “சூரியா எங்கே? இன்னும் வரவில்லையா?” என்று விசாரித்தாள். அப்பாவும் சமிக்ஞையினால் “இன்னும் வரவில்லை!” என்று தெரிவித்தார்.சீதாவின் முகம் முன்னைக் காட்டிலும் அதிகமாக வாடியது. டில்லியில் இன்னும் கலகம் நின்றபாடில்லை என்று சொன்னார்களே, ஒருவேளை சூரியாவுக்கு ஏதாவது ஆபத்து வந்திருக்குமோ என்று எண்ணினாள். ஆமாம்; இந்த துரதிர்ஷ்டக்காரிக்கு உதவி செய்தவர்களோ, சிநேகமாயிருந்தவர்களோ, யார்தான் கஷ்ட நஷ்டங்களை அடையாமலிருந்தார்கள்? நான் இந்த உலகத்தை விட்டுத் தொலைந்து போனால் எத்தனையோ பேர் சுகமடைவார்கள். ஆனாலும் எனக்கு இன்னும் முடிவு காலம் வரவில்லையே? பஞ்சாப் பயங்கரத்தில் எத்தனையோ லட்சம் பேர் செத்துப் போனார்கள்; நான் மட்டும் சாகவில்லையே? எல்லா ஆபத்துக் களுக்கும் பிழைத்து உட்கார்ந்திருக்கிறேனே? சீதா தன் தலைமாட்டில் பத்திரமாய் வைத்திருந்த காந்தி மகாத்மாவின் படத்தை எடுத்துப் பார்த்தாள். “பாபுஜீ! என்னைத் தங்கள் சிஷ்ய கோஷ்டியில் சேர்த்துக் கொள்ளக்கூடாதா? என்னாலான பணிகள் செய்து கொண்டிருக்க மாட்டேனா?” என்று இரங்கி வேண்டினாள். முப்பத்தைந்தாம் அத்தியாயம் - பானிபத் முகாம் பானிபத் என்னும் சிறு நகரம் இந்திய சரித்திரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. டில்லிக்கு வடக்கே சுமார் முப்பது மைல் தூரத்தில் அந்தப் பட்டணம் இருக்கிறது. இந்தியாவின் சரித்திரப் போக்கை மாற்றி அமைத்த மூன்று பெரிய சண்டைகள் அங்கே நடந்திருக்கின்றன. பட்டாணிய வம்சத்தின் கடைசி அரசனான இப்ராஹிம் லோடி டில்லியில் ஆண்டு கொண்டிருந்த காலத்தில் நொண்டித் தைமூர் என்பவனின் சந்ததியில் வந்த பாபர் டில்லி மீது படையெடுத்து வந்தான். பாபருடைய பத்தாயிரம் வீரர்களும் இப்ராஹிம் லோடியின் ஒரு லட்சம் போர் வீரர்களும் பானிபத் நகருக்கு அருகில் விஸ்தாரமான மைதானத்தில் சந்தித்தார்கள். லோடியின் ஒரு லட்சம் வீரர்களும் சோற்றுப் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள். பாபரின் பத்தாயிரம் வீரர்கள் கட்டுப்பாடு பெற்ற வீரர்கள். அன்றியும் பாபரிடம் பீரங்கிகள் சில இருந்தன. எனவே, இப்ராஹிம் லோடியின் ஒரு லட்சம் வீரர்களும் சொற்ப நேரத்துக்குள்ளே பெருந் தோல்வியடைந்து நாலா பக்கமும் சிதறி ஓடினார்கள். பாபர், டில்லி பாதுஷா ஆனான். சரித்திரத்தில் பிரசித்தி பெற்ற மொகலாய மன்னர்களின் சாம்ராஜ்யம் டில்லியில் ஆரம்ப மாயிற்று. பின்னர், பதினான்கு வயதுப் பாலனாகிய அக்பர், அதே பானிபத் போர்க்களத்தில், ஹேமுவின் மாபெரும் சைன்யத் தைத் தோற்கடித்துத் தன் தந்தையான ஹுமாயூன் இழந்துவிட்ட டில்லி சாம்ராஜ்யத்தை மீண்டும் அடைந்தான். இதற்கு இருநூறு வருஷங்களுக்கும் பிறகு பாரஸீகத்திலிருந்து ஆமத் ஷா என்னும் பெரும் மன்னன் டில்லி மீது படையெடுத்து வந்தான். அப்போது மத்திய இந்தியாவில் அதிகாரத்தைக் கைப்பற்றி ஆண்டு வந்த மகாராஷ்டிரர்கள் ஒரு பெரும் சைன்யத் தைத் திரட்டிக் கொண்டு போனார்கள். மீண்டும் அதே பானிபத்தில் மிகப் பெரும் சண்டை நடந்தது. அதில் மகாராஷ்டிர சேனா வீரர்கள் படுதோல்வியடைந்தார்கள். அந்தச் சண்டையிலிருந்து மகாராஷ்டிர சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம் ஆரம்பமாயிற்று. இத்தகைய பிரசித்தி பெற்ற பானிபத் நகரத்தில், இந்திய சரித்திரத்தையே, மாற்றி அமைத்த சண்டைகள் பல நடந்த மைதானத்தில், இப்போது ஆயிரக்கணக்கான கூடாரங்கள் போட்டிருந்தன. அவற்றில் பஞ்சாப் அகதிகள் குடியிருந்தார்கள். ஆறு மாதத்திற்கு முன் லட்சாதிபதிகளாக இருந்தவர்கள் இப்போது கந்தைத் துணி உடுத்தி வயிற்றுப் பசியை ஆற்றக் காய்ந்த ரொட்டிகள் எப்போது கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருந்தார்கள். பெண்டு பிள்ளைகளை இழந்தவர்களும், பெற்றோர்களை இழந்தவர்களும், கணவனை இழந்தவர்களும், தம்மைத் தவிர குடும்பம் அனைத்தையும் இழந்தவர்களும் அந்தக் கூடாரங்களில் வசித்தார்கள். தங்களுடைய கண்ணெதிரே தங்கள் உற்றார் உறவினருக்குப் பயங்கரமான கொடுமைகள் இழைக்கப்படுவதைப் பார்த்துச் சித்தப் பிரமை கொண்ட பித்தர்கள் பலரும் அங்கே இருந்தார்கள். சூரியா கொஞ்ச காலமாக அந்த அகதிகள் முகாமில் தன்னாலியன்ற தொண்டு செய்து கொண்டிருந்தான். ஆகையால் அவன் அன்று விடுதிக்குள் நுழைந்த உடனே அவனைப் பலர் சூழ்ந்து கொண்டார்கள் "டில்லியில் என்ன நடக்கிறது? இன்னும் அங்கே ஹிந்து- முஸ்லிம் சண்டை நடப்பது உண்மைதானா? காந்தி மகாத்மா இப்படி அநியாயம் செய்யலாமா? முஸ்லிம்களுக்காக இவர் எதற்காகப் பரிந்து பட்டினி கிடக்க வேண்டும்? டில்லியில் முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றிய வீடுகளையெல்லாம் திருப்பிக் கொடுக்க வேண்டுமென்றும் வெளியேறியவர்களைக் கூப்பிட்டுக் குடிவைக்க வேண்டும் என்று சொல்கிறாராமே? இது என்ன அநீதி? பாகிஸ்தானத்திலே நாங்கள் விட்டுவந்த எங்கள் வீடுகளையெல்லாம் திருப்பிக் கொடுப்பார்களா? டில்லியில் அகதிகள் தங்கியிருக்கும் முஸ்லிம் மசூதிகளையெல்லாம் காலிசெய்து முஸ்லிம்களிடம் ஒப்புவிக்க வேண்டும் என்கிறாராமே? இது சரியா? முஸ்லிம்கள் ஹிந்துக்களின் கோயில்களையும் சீக்கியர்களின் குருத்துவாரங்களையும் நெருப்பு வைத்துக் கொளுத்தி மண்ணோடு மண்ணாக்கி விட்டார்களே! அப்படியிருக்க ஹிந்து அகதிகள் சில காலம் மசூதிகளில் தங்கியிருந்து விட்டால் மோசம் என்ன? அவர்களை ஏன் விரட்டி அடிக்க வேண்டும்“- இப்படி எல்லாம் அகதிகள் கேட்டார்கள். ஒரு ஸ்திரீ பரபரவென்று கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்து சூரியாவைப் பார்த்து,”டில்லியில் சுயராஜ்யம் ஸ்தாபனமாகிவிட்டது என்று சொல் கிறார்களே! அது நிஜந்தானா? நம்முடைய தலைவர்கள் ராஜ்யம் ஆளுகிறார்கள் என்று சொல்கிறார்களே? அதுவும் உண்மை தானா?" என்று கேட்டாள். “ஆமாம்; ஆமாம்” என்றான் சூரியா. “அப்படியானால் எனக்கு ஒரு புதுத் துணி (நயா கபடா) கிடைக்குமா?” என்று வினவினாள் அந்த ஸ்திரீ, அவள் உடுத்தியிருந்த சேலை ஆயிரம் கந்தலாயிருந்தது. சூரியா கண்ணில் துளிர்ந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, கிடைக்கும்" என்றான். கேள்வி கேட்டவர்கள் எல்லாருக்கும் கூடிய வரையில் பதில் சொல்லிவிட்டு நகர்ந்தான். அகதி முகாமின் தலைமை அதிகாரியைப் பார்த்துத் தான் திரும்பி வந்து விட்டதைத் தெரியப்படுத்தி விட்டு மேலே பானிபத் பட்டணத்துக்குள் போனான். பானிபத் பட்டணம் மற்றும் பல வட இந்தியாவின் பட்டணங்களைப் போலவே சந்தும் பொந்துமாயிருந்தது. தெரு வீதிகள் மேட்டில் ஏறிப் பள்ளத்தில் இறங்கின. வீதிகளிலும் சந்து வழிகளிலும் கருங்கல்களைப் பதித்திருந்தபடியால் வண்டிகள் கடக்முடக் என்று கஷ்டப்பட்டுக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. ஒருகாலத்தில், அதாவது ஆறு மாதத்திற்கு முன்பு, பானிபத் பட்டணத்தில் பாதிப் பேர் முஸ்லிம்களா யிருந்தார்கள். அவர்களும் அந்தப் பட்டணத்தில் வசித்த மற்ற ஹிந்துக்களும் அந்யோன்யமாக இருந்தார்கள். இஸ்லாமிய மதத்தின் மகான்கள் சில பானிபத்தில் சமாதி அடைந்திருக்கிறார்கள். அந்தச் சமாதிகளுக்கு வருஷந்தோறும் உற்சவம் நடப்பதுண்டு. அந்த உற்சவத்தில் ஹிந்துக்களும் முஸ்லிம்களோடு உற்சாகமாய்க் கலந்து கொள்வதுண்டு. ஹிந்து - முஸ்லிம்கள் அண்ணன் தம்பிகளைப்போல் பலநூறு ஆண்டுகளாகப் பானிபத்தில் வாழ்ந்து வந்தார்கள். இப்போதோ, பானிபத் தெருக்களில் ஒரு முஸ்லிம் புருஷனையோ, ஸ்திரீயையோ குழந்தையையோ பார்க்க முடியாது. அவ்வளவு பேரும் ஊரைவிட்டு வீட்டை விட்டு நாட்டை விட்டு போய்விட்டார்கள். மேற்குப் பஞ்சாபில் கொடுமைக்காளான ஹிந்து அகதிகள் ஆயிரக்கணக்கில் தங்கள் துயரக் கதைகளைச் சொல்லிக் கொண்டும் தாங்கள் அனுபவித்த கொடுமைகளை முகத் தோற்றத்தின் மூலம் காட்டிக் கொண்டும் மேலும் மேலும் வந்துகொண்டிருந்த போது கிழக்குப் பஞ்சாப் ஹிந்துக்களின் இரத்தம் கொதித்தது. அவர்களில் பலர் வெறிகொண்டு பழிக்குப்பழி வாங்க எழுந்தார்கள். ஆனால் அதற்குள்ளே முஸ்லிம்கள் மூட்டை கட்டிக்கொண்டு புறப்படத் தொடங்கிவிட்டார்கள். டில்லியிலிருந்து அமிருதசரஸ் வரையில் கிழக்குப் பஞ்சாப் முழுவதிலும் பெயருக்கு ஒரு முஸ்லிம்கூட இல்லாமற் போய்விட்டது. பானிபத்திலும் அப்படியேதான்! ஊருக்குள்ளே உற்சாகமோ கலகலப்போ இல்லை. வீதிகளில் நடமாட்டமும் குறைவுதான். தப்பித்தவறிப் பார்த்தவர்களின் முகங்கள் களையிழந்திருந்தன. சுமாரான அகலமுள்ள தெருக்களையும் குறுகலான சந்து பொந்துகளையும் கடந்து சூரியா சென்றான். ஒரு சந்திலிருந்து குறுக்குக் கால் நடைபாதை ஒன்று செங்குத்தான மேட்டின் மேலே ஓடியது அதன் வழியே சூரியா போனான். மேட்டின் உச்சியில் ஒரு மசூதி இருந்தது. அநாதையான ஸ்திரீ அகதிகளுக்கு அந்த மசூதிக்குள்ளே இடம் தரப்பட் டிருந்தது. அந்தப் பெண்களில் சிலர் ராட்டினத்தில் நூல் நூற்றார்கள். சிலர் தையல் இயந்திரங்களில் குழந்தைகளுக்குரிய சட்டை தைத்தார்கள். சிலர் சிங்காரப் பூக்கூடைப் பின்னினார்கள். ஆனால் அந்த ஸ்திரீகளின் முகத்தில் உயிர்க் களை கிடையாது. அவர்களுடைய குழிவிழுந்த கண்களில் ஒளி என்பதே இல்லை. எதிரில் உள்ளவற்றைக் குருடர்கள் பார்ப்பதைப் போல் அவர்கள் காதில் விழுந்ததாகவே தோன்றுவதில்லை. உயிரற்ற பிரேதங்களை ஏதோ ஒரு மந்திர சக்தியால் எழுப்பி உட்கார வைத்து வேலை செய்யப் பயிற்றுவதைப் போலவே இருந்தது. நரகத்தை ஒரு தடவை பார்த்துவிட்டுத் திரும்பி வந்தவர்களின் முகத்தோற்றம் இப்படித்தான் இருக்கும் போலும்! இவர்களையெல்லாம் பரிதாப நோக்குடன் பார்த்துக் கொண்டே சூரியா மசூதியைக் கடந்து அப்பால் சென்றான். ஒரு மிகக் குறுகிய சந்தில் இருந்த இருளடைந்த வீட்டில் பிரவேசித்தான். அதிலேதான் சீதாவும் அவள் தகப்பனாரும் வசித் தார்கள். சீதாவுக்குச் சுய உணர்வு வந்த பிறகு அவள் சமையல் அறையில் காரியம் செய்யப் புகுந்தாள். துரைசாமி ஐயர் முன்னறையில் பத்திரிகை படித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். “சூரியா, வா! என்ன இவ்வளவு தாமதம்? நேற்று ராத்திரியே ஏன் வரவில்லை?” என்று கேட்டார். சூரியா சும்மா இருந்தான். “ஏன் அப்பா, மௌனமாக இருக்கிறாய்? டில்லியில் ஏதாவது விசேஷம் உண்டா?” என்று கேட்டார் துரைசாமி ஐயர். “வழக்கமான விசேஷந்தான்; வேறொன்று மில்லை, எங்கே பார்த்தாலும் துவேஷம், குரோதம், பீதி?- யார் மனதிலும் நிம்மதி கிடையாது.” “காந்தி மகாத்மாவின் பிரார்த்தனைக்கு இந்தத் தடவை நீ போகவில்லையா? பிரார்த்தனைக்குப் போனால் மனம் நிம்மதியடைகிறது என்று சொல்லுவாயே!” “போனேன்; ஆனால் அங்கேயும் இந்தத் தடவை மனம் சாந்தியடையவில்லை. மகாத்மா தற்சமயம் டில்லியில் இருப்பதே தப்பு என்று தோன்றுகிறது. வேறு எங்கேயாவது அவர் போய்விட்டால் நன்றாயிருக்கும்.” “இது என்ன, இப்படி ஆரம்பித்து விட்டாய், தம்பி! மகாத்மா டில்லியில் இருந்தால் உனக்கு என்ன வந்தது?” “எங்கே பார்த்தாலும், காந்திஜியைப் பற்றிக் கோபமாகப் பேசுகிறார்கள். அவருடைய காரியங்கள் டில்லியில் யாருக்கும் பிடிக்கவில்லை. உத்தியோகஸ்தர்கள், காங்கிரஸ்காரர்கள், வியாபாரிகள், மற்ற பொது ஜனங்கள் எல்லாருமே அவரிடம் வெறுப்பாயிருக்கிறார்கள். அகதிகளுடைய கோபத்தைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை. காந்திஜி எந்த முஸ்லிம்களுக்காகப் பரிந்து பேசுகிறாரா, அவர்களாவது அவரிடம் நன்றி செலுத்து கிறார்களா என்று கேட்டால், அப்படியும் தெரியவில்லை.” “பெரியவர்கள் ‘யதார்த்தவாதி பஹுஜன விரோதி’ என்று தெரியாமலா சொல்லியிருக்கிறார்கள்? யார் எப்படிப் பேசினாலும் யார் என்ன மாதிரி நடந்து கொண்டாலும் மகாத்மாஜிக்கு ஒரு பரமானந்த சிஷ்யை இருக்கிறாள். உன் அத்தங்காளைத்தான் சொல்கிறேன். நீ ஒரு தடவை அவளை அழைத்துக்கொண்டு போய் மகாத்மாவின் தரிசனம் பண்ணி வைக்கவேண்டும். அந்தப் புண்ணிய புருஷரின் தரிசனத்தால் ஒரு வேளை சீதாவின் சித்தப்பிரமை மாறினாலும் மாறலாம். இன்றைக்கு ஒரு தடவை சீதாவுக்கு மயக்கம் போட்டுவிட்டது. மறுபடி ஸ்மரணை வரப் பண்ணுவதற்கு ரொம்பவும் கஷ்டமாய்ப் போய்விட்டது. உன்னையும் என்னையும் தவிர வேறு யாராலேயும் அதைச் சகிக்க முடியாது.” “சீதா மகாத்மாஜியைத் தரிசிக்க வேண்டும் என்றால் சீக்கிரமே அழைத்துப் போக வேண்டும். அதிக நாள் காந்திஜி டில்லியில் இருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. அங்கே சூழ்நிலை அப்படி இருக்கிறது. பிரார்த்தனைக் கூட்டத்தில் யாரோ குண்டு எறிந்த விஷயம் தெரியும் அல்லவா?” “தெரியாமல் என்ன? பத்திரிகைகளிலேதான் படித்தோமே, அதற்கெல்லாம் மகாத்மாகாந்தி பயந்துவிடுகிறவரா, என்ன?” “அவர் பயப்படவுமில்லை; இலட்சியம் செய்யவுமில்லை. பத்திரிகையில் படித்தபோது எனக்கும் ஏதோ வேடிக்கை மாதிரிதான் தோன்றியது. அங்கே போய்ப் பார்த்தபோது வேடிக்கையாக இல்லை, குண்டு வெடித்ததில் ஒரு பக்கத்துச் சுவரே இடிந்து போயிருக்கிறது.” “மகாத்மா பயப்படா விட்டாலும் நீ ரொம்பப் பயந்து போயிருக்கிறாய். அது போனால் போகட்டும், சூரியா! டில்லியில் வேறு யாரையாவது பார்த்தாயா? ஏதாவது செய்தி உண்டா?” என்று துரைசாமி ஐயர் கேட்டார். “பார்த்தேன்! உங்கள் அருமையான மாப்பிள்ளையைப் பார்த்தேன்!” என்று சூரியா சொன்னதும் துரைசாமி ஐயரின் முகத்தில் திடீரென்று ஆர்வத்தின் அறிகுறி தோன்றியது. “நீ அவனை எதற்காகப் பார்த்தாய்? நான்தான் பார்க்க வேண்டா மென்று சொல்லி யிருந்தேனே?” “நானாகத் தேடிக்கொண்டு போய்ப் பார்க்கவில்லை, சந்தர்ப்பம் அப்படி நேரிட்டது. உங்கள் மாப்பிள்ளை மூன்றாந் தடவையாக என்னைக் கொன்றுவிடப் பார்த்தார்! சாலையோடு போய்க் கொண்டிருந்தவன் பேரில் மோட்டாரை விட்டு ஓட்டிவிடலாம் என்று பார்த்தார். கடவுள் அருளால் தப்பிப் பிழைத்தேன்.” “நீ பிழைத்துக்கொண்டாய் என்றுதான் தெரிகிறதே!அப்புறம் என்ன? உன்னோடு அவன் பேசினானா? ஏதாவது உன்னைக் கேட்டானா?” “பேசாமல் என்ன? கேட்காமல் என்ன? என்னை மோட்டாரில் ஏற்றி வீட்டுக்கு அழைத்துப் போனார். சீதாவைப் பற்றி எனக்கு ஏதாவது தெரியுமோ என்று கேட்டார்.” “நீ என்ன பதில் சொன்னாய்?” “சீதா செத்துப்போய் விட்டாள் என்று சொல்லி வைத்தேன்!” “அட பாவி எதற்காக அப்படிச் சொன்னாய்?” “பின்னே என்ன சொல்லச் சொல்கிறீர்கள்! உங்கள் குமாரியோ தான் உயிரோடு இருப்பது அந்த மனுஷருக்குத் தெரியவே கூடாது என்கிறாள். அவரோ மறுபடியும் கலியாணம் செய்துகொள்ளத் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார்!” “அவனுக்கு இன்னொரு கலியாணம் வேறேயா? அந்தக் கிராதகனை எவள் கலியாணம் செய்து கொள்ளுவாள்?” “அத்திம்பேரே! அதென்ன அப்படிச் சொல்லுகிறீர்கள்? உங்கள் மூத்த பெண் ஒருத்தி இருக்கிறாளே?அவளைப் பற்றித் தான் அவரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்.” இத்தனை நேரமும் சாய்ந்து படுத்திருந்த துரைசாமி ஐயர் சடக்கென்று நிமிர்ந்து உட்கார்ந்தார். “சூரியா! தாரிணியைப் பற்றி ஏதாவது அவன் சொன்னானா?” என்று கேட்டார். தாரிணி சீதாவின் பெயருக்கு எழுதியிருந்த கடிதத்தைப் பற்றிச் சூரியா அவருக்குத் தெரிவித்துவிட்டு, “தாரிணியும் வஸந்தியும் பிழைத்திருக்கிறார்கள் அந்த வரையில் நல்ல செய்திதான்!” என்றான். “தாரிணியை எப்படியாவது கண்டுபிடித்தாக வேண்டும். சூரியா! நீ சொன்னது போல் ஏதாவது நடந்துவிட்டால் தடுக்க வேண்டும்” என்று பரபரப்புடன் கூறினார் துரைசாமி. “தாரிணியைக் கண்டுபிடிக்க வேண்டுமானால் நான் டில்லியில் இருந்தாக வேண்டும். எப்படியும் உங்கள் மாப்பிள்ளையின் வீட்டைத் தேடிக்கொண்டு அவள் வருவாள். நான் டில்லியில் இருந்தால் கண்டுபிடித்து விடுவேன்” என்றான் சூரியா. “அப்படியே செய்யலாம்! நாம் எல்லோருமே வேணுமானாலும் டில்லிக்குப் போய்விடலாம்.” “அத்திம்பேரே! நான் ஒரு யோசனை சொல்லுகிறேன் தயவு செய்து கேட்பீர்களா?” என்று சூரியா நயமாகக் கூறினான். “அது என்ன யோசனை? புதிதாக என்ன சொல்லப் போகிறாய்? சொல், கேட்கலாம்!” என்றார் துரைசாமி. “யோசனையைச் சொல்வதற்கு முன்னால் வேறு சில விஷயங்களை உங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டும். உங்கள் குமாரி சீதாவை முதன் முதலில் நான் ராஜம்பேட்டைச் சாலையில் சந்தித்தேன். வண்டி குடை சாய்ந்து அதன் பக்கத்திலிருந்த ஓடையில் விழுந்தாள். அவளைக் காப்பாற்றுவதற்காக ஓடினேன். ஆனால் ஓடையில் தண்ணீர் முழங்கால் ஆழந்தான் என்று தெரிந்ததும் ஏமாற்றமடைந்தேன். அதற்குப் பிறகு எத்தனையோ சம்பவங்கள் நடந்துவிட்டன. தங்களுடைய தந்தியை மறைத்து வைத்து, சீதாவுக்கும் சௌந்தரராகவனுக்கும் கலியாணம் ஆவதற்கு நானே காரணமானேன்.” “அதற்காக உன்னை நான் எத்தனையோ தடவை சபித்தாகிவிட்டது அப்புறம் சொல்!” என்றார் கிழவர். “அத்திம்பேரே! நல்ல எண்ணத்துடன் நான் அப்போது செய்த தவறுக்கு அப்புறம் பல தடவை பிராயச்சித்தம் செய்து விடவில்லையா? கைத் துப்பாக்கியினால் சுட்டுக் கொள்ளப் போனவளை நான் தடுத்துக் காப்பாற்றவில்லையா?” “காப்பாற்றினாய்; ஆனால் அதற்குப் பிறகு என்ன ஆயிற்று? உன்னால் அவள் எத்தனை கஷ்டங்களுக்கு உள்ளானாள்? நான் மட்டும் உங்களுடைய நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிராவிடில் அவளுடைய கதி என்ன ஆகியிருக்கும்?” “அதுவும் போனால் போகட்டும், சேனாப் நதியின் பயங்கரமான வெள்ளத்தில் அவள் முழுகிச் சாகாமல் நான் காப்பாற்றவில்லையா? அவளைக் கரையேற்றிக் கொண்டு போய்ச் சேர்த்து விட்டு உங்களையும் காப்பாற்றுவதற்கு வந்தேன். நீங்கள் என்னை அமுக்கிக் கொன்று விடப் பார்த்தீர்கள். கடவுள் அருளால், - இல்லை, அல்லாவின் அருளால், இருவரும் பிழைத்தோம். உங்களை முஸ்லிம் என்று எண்ணிக் கொண்டு அக்கரையிலிருந்து ஒரு முஸ்லிம் படகுக்காரன் வந்து காப்பாற்றினான். பிறகு அவனிடமிருந்து நாம் தப்பிப் பிழைத்தபாடு தெய்வம் அறிந்து போயிற்று.” “உனக்கென்ன பைத்தியமா, சூரியா! அந்தப் பயங்கர அநுபவங்களையெல்லாம் எதற்காக மறுபடியும் ஞாபகப்படுத்துகிறாய்?” “எதற்காகவென்றால், சீதாவின் பேரில் எனக்குள்ள உரிமையை ஸ்தாபித்துக் கொள்வதற்காகத்தான். நீங்கள் அவளைப் பெற்று வளர்த்தீர்கள். நான் அவளை இரண்டு தடவை யமதர்மனின் கையிலிருந்து விடுதலை செய்தேன். இப்போதுள்ள சீதாவின் உயிர் பழைய உயிர் அல்ல. நான் அவளுக்குக் கொடுத்த புதிய உயிர். ஆகையால் ராகவனுக்கு இப்போது சீதாவின் பேரில் எந்தவித பாத்தியதையும் இல்லை. நீங்கள் இதை ஒப்புக் கொண்டால் நாம் இருவரும் ராகவனிடம் நேரில் சென்று சீதாவுக்கு விவாக விடுதலை கொடுத்து விடும்படி வற்புறுத்துவோம்!…..” “அவன் விடுதலை கொடுத்துவிட்டால்?….” என்று துரைசாமி ஐயர் கேட்டார். அவருடைய முகம் கோபத்தினால் சிவந்திருந்தது. “தாங்களே ஊகித்துக் கொள்வீர்கள் என்று நினைத்தேன். சொல்ல வேண்டும் என்றால் சொல்கிறேன். விவாகப் பிரிவினை ஆனபிறகு நானே சீதாவை மணம் செய்து கொள்ளுகிறேன். கலியாணம் செய்துகொண்டு அவளை காஷ்மீருக்கு அழைத்துப் போகிறேன். இல்லாவிட்டால் நோபாளத்திற்கு அழைத்துப் போகிறேன். புதிய இடங்களைப் பார்த்துப் புதிய மனிதர்களுடன் பழகினால் சீதாவின் சித்தப்பிரமை நீங்கிவிடும். அத்திம்பேரே! உங்கள் குமாரியைக் கடைசி வரை காப்பாற்றுவதாகச் சத்தியம் செய்து கொடுக்கிறேன்.” துரைசாமி ஐயரின் பக்கத்தில் ஒரு கைத்துப்பாக்கி கிடந்தது. அதை அவர் எடுத்துக் கொண்டார்; சூரியாவை நோக்கிக் குறிபார்த்தார். “சூரியா! முன்னொரு தடவை இந்தத் துப்பாக்கி குறி தவறிவிட்டது. இரண்டாவது தடவை நிச்சயமாய்க் குறி தப்பாது. சீதாவைப்பற்றி இப்படி மறுபடியும் ஒரு தடவை பேசினாயோ உன்னைக் கட்டாயம் சுட்டுக் கொன்று விடுவேன்!” என்றார். சூரியா சற்று நேரம் தலைகுனிந்த வண்ணமிருந்தான்; பிறகு நிமிர்ந்து பார்த்தான். “அத்திம்பேரே! எனக்கு நிச்சயமாகப் பைத்தியம்தான் பிடித்துவிட்டது, இல்லாவிட்டால் இப்படி நான் உளறியிருக்க மாட்டேன்” என்றான். “பைத்தியம் பிடித்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டிருக்கிறாயல்லவா? அதனால் புத்தி தெளிவு இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கிறது என்று ஏற்படுகிறது; போகட்டும். நீ இப்போது உளறியதை நானும் மறந்து விடுகிறேன்; நீயும் மறந்து விடு! டில்லிக்குப் புறப்படுவதற்கு யத்தனம் செய்!” “டில்லிக்குப் போக வேண்டியதுதான், ஆனால் இங்கேயுள்ள அகதிகளை விட்டுப் போக வேண்டுமே என்று வருத்தமாயிருக்கிறது. அத்திம்பேரே! பத்து வருஷ காலமாகச் ‘சுதந்திரம்! சுதந்திரம்!’ என்று அலறிக் கொண்டிருந்தேன். சுதந்திரம் என்னமோ வந்து விட்டது. ஆனால் அந்தச் சுதந்திரம் இவ்வளவு கசப்பு மருந்தாக இருக்குமென்று கனவிலும் கருதவில்லை!” என்றான் சூரியா. “மருந்து என்றால் கசப்பாகத்தானிருக்கும். அதற்குப் பயப்பட்டு என்ன செய்கிறது?” என்றார் கிழவர். துரைசாமி ஐயர் இன்னும் துப்பாக்கியைக் கையிலே வைத்துக்கொண்டிருந்தார். அந்தச் சமயம் சீதா அங்கு வந்தாள். சூரியாவைப் பார்த்ததும் அவளுடைய முகம் சிறிது மலர்ந்தது. அதற்குள் அவளுடைய பார்வை தன் தந்தையின் கையில் வைத்திருந்த துப்பாக்கியின் பேரில் சென்றது. துரைசாமி ஐயரைச் சீதா துயர முகத்துடன் உற்றுப் பார்த்தாள். அவளுடைய கண்களிலிருந்து சலசலவென்று கண்ணீர் பொழிந்தது. துரைசாமி ஐயரின் கையிலிருந்து கைத்துப்பாக்கி நழுவி விழுந்தது. அதை எடுத்துச் சீதாவின் கையில் கொடுத்துச் சமிக்ஞையினால் அதைத் தூர எறிந்து விடும்படி சொன்னார். பிறகு சூரியாவைப் பார்த்து, “சூரியா! சூரியா!” உன் அத்தங் காளுக்கு மயக்கம் வந்துவிடப் போகிறது. காந்தி மகாத்மாவைப் பார்க்க அவளை டில்லிக்கு அழைத்துக்கொண்டு போவதாகச் சொல்!" என்றார். சூரியா மகாத்மா காந்தியின் படத்தைச் சுட்டிக் காட்டி, அவரைப் பார்ப்பதற்குச் சீதாவை அழைத்துக் கொண்டு போவதாக ஜாடையினால் தெரியப்படுத்தினான். சீதா தந்தையின் முகத்தைப் பார்த்தாள். அவரும் ‘சரிதான்’ என்று சமிக்ஞை செய்தார். உடனே சீதாவின் கண்ணீர் நின்றது. அவள் முகம் பிரகாசம் அடைந்தது. அவளுடைய கண்களில் ஒரு புதிய ஒளி பிறந்தது. பேதைப் பெண்ணே! வாழ்க்கையில் உன்னுடைய கடைசி மனோரதமாவது நிறைவேறப் போகிறதா? பிறந்ததிலிருந்து கஷ்டமும் நஷ்டமும் உன்னுடைய ஜாதக ரீதியாக இருக்கும் போது நீ விரும்பும் அந்த மகா பாக்கியம் மட்டும் உனக்கு எப்படிக் கிட்டும்? முப்பத்தாறாம் அத்தியாயம் - ஜனவரி 31ம் தேதி சீதாவின் துர்ப்பாக்கியமானது அவளுடைய கடைசி மனோரதம் நிறைவேறுவதற்கும் குறுக்கிடவே செய்தது. அவர்கள் இரண்டு மூன்று நாளைக்கெல்லாம் பிரயாண வசதி செய்து கொண்டு டில்லிக்குப் புறப்படுவது என்று தீர்மானித்திருந்தார்கள். ஆனால், அதற்குள்ளே, அதாவது ஜனவரி மாதம் 30ம் தேதி மாலையில், பேரிடி போன்ற செய்தி ரேடியோவின் மூலம் உலக மெல்லாம் பரவியதுபோலப் பானிபத் பட்டணத்துக்கும் வந்துவிட்டது. முதலில் யாருக்குமே அந்தச் செய்தியில் நம்பிக்கை பிறக்கவில்லை. ‘உண்மைதானா, உண்மைதானா?’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். “மகாத்மாவையாவது, மனிதனாகப் பிறந்த ஒருவன் சுடவாவது?” என்றார்கள். ரேடியோவில் நேரில் கேட்டவர்கள்கூட அதில் ஏதோ ஒரு பெரிய சூழ்ச்சி இருக்கலாம் என்று சந்தேகித்தார்கள். பாகிஸ்தான் ரேடியோ டில்லி ரேடியோவைப் போல் பாசாங்கு செய்து ஏமாற்றி அந்தப் பயங்கரமான செய்தியை விஷமத்துக்காகப் பரப்பியிருக்கிறது என்று எண்ணினார்கள். இன்னும் சிலர் டில்லி நகரில் உள்ள முஸ்லிம்கள் டில்லி ரேடியோவைக் கைப்பற்றி அவ்விதம் பொய்ச் செய்தியை வெளியிடுவதாகச் சந்தேகித்தார்கள். வேறு சிலர், “அப்படியே மகாத்மாவை ஒரு பாதகன் சுட்டிருந்தாலும் அவ்வளவு சீக்கிரத்தில் அந்த மகானுடைய உயிர் பிரிந்திருக்குமா? ஏதோ அவசரப்பட்டுச் செய்தி சொல்லிவிட்டார்கள். ‘பிழைத்து விட்டார்’ என்ற சந்தோஷச் செய்தி சீக்கிரத்தில் வந்து விடும்!” என்று நினைத்தார்கள். இரவு 8-30க்கு எல்லாச் சந்தேகமும் தீர்ந்துவிட்டது. பண்டித ஜவஹர்லால்ஜியும், சர்தார் படேலும் அவர்களுடைய சொந்தக் குரலில் தெள்ளத் தெளிய பேசிய பிறகு, தொண்டை அடைக்க விம்மிக் கொண்டே மகாத்மா கொல்லப்பட்ட செய்தியைச் சொன்ன பிறகு, வேறு சந்தேகம் என்ன இருக்க முடியும்? அகதி முகாமில் அந்தக் கொடூரமான செய்தியைக் கேட்ட சூரியா தன்னுடைய சொந்த ஜாகைக்கு ஓடினான். துரைசாமி ஐயர் அச்சமயம் சீதாவை மூர்ச்சை தெளிவிக்க முயன்று கொண்டிருந்தார். சுமார் ஐந்தரை மணிக்குச் சீதா ‘வீல்’ என்று கத்திவிட்டு உணர்வை இழந்து ஢ழுந்ததாகத் துரைசாமி ஐயர் சொன்னார். பிறகு சூரியா ரேடியோ மூலம் வந்த கொடிய செய்தியைத் தெரிவித்தான். அதனால் அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மன வேதனை ஒருபுறமிருக்க சீதாவுக்குத் தெரிவிப்பதா வேண்டாமா என்றும் யோசிக்க வேண்டியதாயிற்று. தெரிவித்தால் அதனால் அவளுடைய இருதயம் பாதிக்கப் படலாம். ஆனால் தெரிவிக்காமலே இருந்து விட முடியுமா? வருங்காலத்தில் என்றென்றைக்கும் அவளுடைய மனம் வேதனைப்படாதா? அதைக் காட்டிலும் அவளை டில்லிக்கு அழைத்துப் போய் மகாத்மா காந்தியின் புனிதத் திருமேனியை யாவது தரிசனம் செய்து வைப்பது நல்லதல்லவா? கொஞ்ச நேரத்துக்கெல்லாம் சீதாவுக்கு உணர்வு வந்தது. வழக்கத்தைக் காட்டிலும் அவளுடைய ஆயாசமும் பிரமிப்பும் அதிகமாயிருந்தன. தான் இனி அதிகம் காலம் பிழைத்திருக்க முடியாது என்றும், ஆகையால் காந்திஜியைத் தரிசிக்க உடனே டில்லிக்குப் போகவேண்டும் என்றும் அவள் சமிக்ஞையினால் வற்புறுத்திச் சொன்னாள். இதன் பேரில் மற்ற இருவரும் ஒரு முடிவுக்கு வந்தார்கள். காலையில் சூரியா அவளை டில்லிக்கு அழைத்துக் கொண்டு போக வேண்டியதுதான். சமயோசிதம் போல் காந்திஜியின் மரணத்தைப் பற்றி அவன் அவளுக்குத் தெரிவிக்க வேண்டியது. அல்லது அவளே பார்த்துத் தெரிந்து கொள்ளும்படி விட்டுவிட வேண்டியது. அந்தச் சந்தர்ப்பத்தில் டில்லிப் பிரயாணம் போய் வருவதற்கு வேண்டிய தெம்பு துரைசாமி ஐயருக்கு இல்லையாதலால் அவர் வரவில்லை என்று சொல்லிவிட்டார். சீதாவைப் பத்திரமாக அழைத்துக்கொண்டு போய் ஜாக்கிரதையாகத் திரும்பி வரும்படி ஆயிரந்தடவை சூரியாவுக்கு எச்சரிக்கை செய்து அனுப்பினார். சீதாவின் வாழ்க்கையில் மறுபடியும் ஒரு தடவை கனவில் நடப்பவை போன்ற சம்பவங்கள் நடந்தன. பானிபத்தி லிருந்து டில்லிக்குப் போகும் சாலையில் அன்று போன ஜனக் கூட்டத்தைப் பார்த்ததும் அவளுக்கு ஏதேதோ சந்தேகங்கள் உதித்தன. சூரியாவோ அவளுடைய கேள்வி ஒன்றுக்கும் பதில் சொல்லாமல் தலையை அசைத்துக் கொண்டு வந்தான். கடைசியாக, அவர்கள் டில்லியை அடைந்தார்கள். பழைய டில்லியிலிருந்து ஒரு பெரிய ஜன சமுத்திரம் புதுடில்லியை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதைக் கண்டார்கள். கனவில் நடப்பவளைப் போல் நடந்து சீதாவும் சென்றாள். கூட்டத்தில் தவறிப் போய் விடாமல் சூரியா கண்ணுங் கருத்துமாக அவளைத் தொடர்ந்து போய்க்கொண்டி ருந்தான். அவனுடைய நெஞ்சை ஒரு பெரிய பாரம் அமுக்கிக் கொண்டிருந்தது. சீதாவுக்குச் செய்தியைச் சொல்லும் தைரியம் இன்னமும் அவனுக்கு வரவில்லை. இனிமேல் சொல்லவேண்டிய அவசியமும் கிடையாது. சிறிது நேரத்துக்கெல்லாம் சீதாவே காந்தி மகாத்மாவின் திருமேனியைப் பார்த்துத் தெரிந்து கொள்வாள். ஆனால் அவ்விதம் பார்த்த உடனே அவளுக்கு ஏதாவது நேராமல் இருக்க வேண்டுமே? இத்தனை கூட்டத்துக்கு மத்தியில் அவள் உணர்விழந்து விழாமல் இருக்கவேண்டுமே?…… சூரியாவும் சீதாவும் போய்ச் சேர்ந்த சமயம், மகாத்மா திருமேனியின் இறுதி ஊர்வலம் ஆரம்பமாகும் சமயமாயிருந்தது. எப்படியோ படாதபாடுபட்டு அந்த ஜன சமுத்திரத்துக்குள் இடித்துப் புடைத்துக் கொண்டு அவர்கள் இருவரும் காந்தி மகாத்மாவின் திருமுகத்தைப் பார்க்கக்கூடிய சமீபத்துக்கு வந்து சேர்ந்தார்கள். ஏதோ ஒரு மகத்தான முக்கியமான சம்பவத்தை தெரிந்து கொள்ளப் போகிறோம் என்ற பரபரப்போடு சீதாவும் கூட்டத்துக்குள் புகுந்து விரைந்து சென்றாள். புஷ்பங்களைக் கொட்டி அலங்கரித் திருந்த மோட்டார் ரதத்தில் மகாத்மாவின் திருமேனி கிடந்த நிலையையும் அவருடைய திருமுகத்தின் தோற்றத்தையும் பக்கத்தில் மாபெரும் தலைவர்கள் உட்கார்ந்திருந்த காட்சியையும் சுற்றிலும் நின்ற மக்கள் கூட்டத்தின் சோக முகங் களையும் கண்ணீரையும் கம்பலையையும் பார்த்ததும் சீதாவுக்கு விஷயம் விளங்கிவிட்டது. லட்சக்கணக்கான ஜனங்கள் திரண்டிருந்த அந்தக் கூட்டத்தில் காது செவிடுபடும்படியான ஓலம் எழுந்துகொண் டிருந்தது. சீதாவின் காதில் இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருந்த அலை ஓசையானது ஜனசமுத்திரத்தின் இரைச்சலோடு ஒன்றாகக் கலந்தது. காந்திஜியின் நிலை இன்னதென்று அறிந்ததும் அவளுடைய நெஞ்சு விம்மி எழுந்து தொண்டையை அடைத்தது. பின் கழுத்துக்கு மேலே இரு செவிகளுக்கும் மத்தியில் ஏதோ ஒரு நரம்பு, வீணையின் மந்திரத் தந்தி அறுந்தாற்போல், படீரென்று வெடித்து அறுந்தது. அந்த ஓசை மேற்கூறிய இருவகைப்பட்ட அலை ஓசையையும் பிளந்து கொண்டு சென்று அவளுடைய மண்டைக்குள்ளேயே பாய்ந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் பிரமிப்பு நீங்கி மனம் தெளிவுற்றது, சிந்தனா சக்தி திரும்ப வந்தது. ஆகா! இந்த மகா புருஷரைத் தரிசிக்கும் சந்தர்ப்பம் தன்னுடைய வாழ்க்கையில் எத்தனையோ தடவை நெருங்கியிருந்தும் பல காரணங்களினால் அப்போதெல்லாம் தவறிப் போய்விட்டது. அவருடைய உயிர் பிரிந்த பிறகு நடக்கும் இறுதி ஊர்வலத்தின் போதுதானா காந்திஜியின் திருமேனியைப் பார்க்கும்படி நேரவேண்டும்? எத்தனை தடவை மகாத்மாவின் ஆசிரமத்துக்கே போய்விட வேண்டும் என்றும், அவருடைய தொண்டுக்கே தன் வாழ்க்கையை அர்ப்பணம் செய்துவிடவேண்டும் என்றும் எண்ணியிருப்பாள்? தன் உடம்பில் அணிந்துள்ள ஆபரணங்களையெல்லாம் அவரிடம் கழற்றிக் கொடுத்துவிடவேண்டும் என்று எவ்வளவு முறை ஆசைப்பட்டிருப்பாள்? அந்த ஆசையெல்லாம் இனிமேல் நிறைவேறப் போவதில்லை. சீதா! நீ இந்த உலகத்தில் எதற்காகப் பிறந்தாய்? உன்னுடைய உள்ளத்தின் ஆசை ஒவ்வொன்றும் இவ்விதம் அவலமாகப் போவதற்குத்தானா பிறந்தாய்? உற்றார் உறவினருக்குக் கஷ்டம் கொடுப்பதற்காகவேயா பிறந்தாய்? காந்தி மகாத்மாவிடம் பாவியாகிய நீ பக்தி வைத்திருந்தாயே? அது காரணமாகவே இவருடைய முடிவு இப்படி ஆயிற்றோ? நூற்றிருபத்தைந்து வயது வாழ்வேன் என்று சொல்லிக் கொண்டிருந்தாரே? அவரை உயிரோடு நீ தரிசிக்கக் கூடாது என்பதற்காகவே போய் விட்டாரோ?…. இப்படியெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டே சீதா ஊர்வலத்தோடு போய்க்கொண்டிருந்தாள். சில சமயம் ஜனக் கூட்டத்தின் நெருக்கமும் அவளை அந்தப் புஷ்ப ரதத்துக்கு வெகுதூரத்துக்கு அப்பால் கொண்டு வந்து தள்ளிவிடும். மறுபடியும் அவள் முண்டியடித்துக் கொண்டு புஷ்பரதம் போகும் இடத்தை நோக்கி நெருங்கிச் செல்வாள். காந்திஜியின் திருமேனியை, அவருடைய திருக்கரத்தை, அல்லது பாதகமலத்தைத் தொட்டுக் கண்ணில் ஒத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆசை அவள் மனதில் அடக்க முடியாமல் எழுந்தது. இது காரணமாகவே அவள் புஷ்ப ரதத்தை நெருங்குவதற்கு அவ்வளவு பெருமுயற்சி செய்தாள். இதற்கிடையில் சூரியா அவளைப் பிரிந்துவிடும்படி நேர்ந்தது. காந்திமகானைப் பார்த்த பிறகு சூரியாவைப் பற்றிச் சீதா ஒரு கணமும் நினைக்கவில்லை. சூரியாவோ அவளைப் பிரிந்ததினால் ஏற்பட்ட பீதியுடனும் எப்படியாவது அவளைத் திரும்பக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற ஆர்வத்துடனும் கூட்டத்தில் அங்குமிங்கும் இடித்துப் பிடித்துக் கொண்டு அலைந்து திரிந்து கொண்டிருந்தான். கடைசியாக, பிற்பகல் சுமார் நாலுமணிக்கு யமுனை நதிக்கரைக்கு வந்து ஊர்வலம் முடிவடைந்தது. சிதையும் அடுக்கப்பட்டது, இறுதிக் கிரியைகள் நடைபெற்றன. அப்போது அங்கே திரண்டிருந்த ஜன சமுத்திரத்தின் வெளி வரம்புக்குச் சீதா வந்து விட்டாள். அவளால் எவ்வளவோ முயன்றும் கூட்டத்தைப் பிளந்துகொண்டு உள்ளே போக முடியவில்லை. சிதையில் நெருப்பு வைத்தாகிவிட்டது! செந்தழலின் கொழுந்து அதோ கிளம்பி வானை எட்டப் பார்த்தது. ஏழு கடல்களும் கொந்தளித்தாற் போன்ற ஒரு பெரும் ஓலக்குரல் அப்பெருங் கூட்டத்தில் எழுந்தது. அதற்குமேல் சீதாவினால் அங்கே நிற்க முடியவில்லை. எல்லாம் முடிந்துவிட்டது, தன்னுடைய வாழ்க்கை முடிந்துவிட்டது; உலகமே முடிந்து விட்டது. தன்னுடைய ஆசைகள் மனோரதங்கள் எல்லாம் எரிந்து பொசுங்கிப் பஸ்மீகரமாகிப் பிடி சாம்பலாய் மாறிவிட்டன; இனி அங்கே நின்று கொண்டிருப்பதில் என்ன பயன்? சீதா திரும்பிச் சென்றாள்; எங்கே செல்வது என்று தெரியாமல் கால்போன வழியே அவளும் போய்க்கொண்டிருந்தாள். அப்போதும் சூரியாவின் ஞாபகம் அவளுக்கு வரவில்லை. வேறு எந்த ஞாபகமும் அவளுக்கு வரவில்லை. உலகத்துக்கு ஒளி தந்த ஜோதி மறைந்துவிட்டது. இனி என்றைக்கும் இந்த உலகத்தில் காரிருள் சூழ்ந்திருக்கும் என்ற ஒரே எண்ணம் அவள் மனதில் குடிகொண்டிருந்தது. வாழ்க்கையில் இத்தனை துன்பங்களை அனுபவித்த பிறகும் யாரிடம் அடைக்கலம் புகுந்து யாருக்குத் தொண்டு செய்வதன்மூலம் தன்னுடைய வாழ்க்கையைப் பயனுள்ளதாகச் செய்யலாம் என்று இதய அந்தரங்கத்தில் அவள் நம்பிக் கொண்டிருந்தாளோ, அந்த மகான் போய் விட்டார் என்ற நினைவு ஒன்றே மேலோங்கியிருந்தது. இனிமேல் அவள் எங்கே போனால் என்ன? என்ன செய்தால் என்ன? வருகிற யமன் வந்தே தீருவான்! வரட்டும்! அதைப் பற்றி என்ன கவலை? யாரைப் பற்றித்தான் கவலைப்படவேண்டும்? குழந்தை வஸந்தி! ஆம், அவளைப் பற்றி என்ன! அவள் உயிரோடிருக் கிறாளா? இருந்தால் அவளை யார் காப்பாற்றுவார்கள்? ஏன்? கடவுள் காப்பாற்றுகிறார். கடவுள்! கடவுள் என்று ஒருவர் இருந்தால் உலகத்தில் இத்தனை கொடுமைகளையும் துன்பங்களையும் ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறார். பார்த்துக் கொண்டிருப்பவர் கடவுள் ஆவாரா? அவரைக் கடவுள் என்று சொல்ல முடியுமா? ஆனால் காந்திஜி அத்தகைய கருணைக் கடலான கடவுளைப் பற்றி ஓயாது சொல்லிக்கொண்டிருந்தது ஏன்? அந்த மகானுடைய நம்பிக்கைக்கு ஆதாரம் இல்லாமலா இருக்கும்! இப்படி எண்ணிக்கொண்டே நடந்து, நடந்து, நடந்து, சீதா போய்க் கொண்டிருந்தாள். எங்கே போகிறோம் என்று தெரியாமல் நடந்து போய்க் கொண்டிருந்தாள். கடைசியாக ஓரிடத்துக்கு வந்ததும் கால் ரொம்ப வலிக்கிறதென்று தெரிந்தது. உடம்பு தள்ளாடிற்று; காலையிலிருந்து உணவு இல்லையல்லவா? ஒரு பங்களாவின் வெளி மதில் சுவரைப் பிடித்துக் கொண்டு நின்றாள். வீட்டுக்குள்ளேயிருந்து கீதம் ஒன்று கேட்டது. வானொலியின் மூலம் வந்த கீதம்? உள்ளத்தை உருக்கிக் கண்ணீர் வருவிக்கும் கீதம்! உடலையும் உயிரையும் நெகிழச் செய்யும் கீதம்! “ஹரி! தும் ஹரே ஜனஜீ பீரு!” (“ஹரீ! மக்களின் துன்பத்தைப் போக்குவாயாக!”) ஆகா! இது என்ன? நமக்குக் காது கேட்கிறதே! பாட்டுக் கேட்க முடிகிறதே! அமுத வெள்ளத்தைப்போல் காதில் பாய்கிறதே! இத்தனை நாள் கேட்ட அலை ஓசை எங்கே போயிற்று? அந்த இடைவிடாத பயங்கரச் சத்தம் எப்படி மறைந்தது? காந்தி அடிகளே! கருணாநிதியே! தங்களுடைய மரணத்திலே எனக்கு வாழ்வு அளித்தீர்களோ! காந்தி மகானுக்கு மிகவும் பிரியமான அந்த மீரா கீதத்தை, அவருடைய திருமேனி எரிந்து கொண்டிருந்த சமயத்தில், வானொலி நிலையத்தார் ஒலிபரப்பினார்கள். பாட்டு மேலும் சீதாவின் காதில் கேட்டது:- “ஹரி! மக்களின் துன்பத்தை நீ போக்குவாயாக!”நீ முன்னம் துரோபதையின் ஆடையை வளர்த்து அவள் மானத்தைக் காக்கவில்லையா? “பாலன் பிரஹ்லாதனுக்குக் கருணை புரிந்து காப்பாற்றவில்லையா?”கிழவனாகிய கஜ ராஜனுடைய மரண பயத்தைப் போக்கி அருள்புரியவில்லையா? “துன்பம் எங்கெங்கே இருக்கிறதோ அங்கெல்லாம் எழுந்தருளியிருப்பவன் அல்லவா நீ?”ஹரி! மக்களின் துன்பத்தைப் போக்குவாயாக!" பாட்டைக் கேட்டுக்கொண்டு சீதா மெய்மறந்து நின்றாள் பாட்டு நின்றது. நாலா பக்கமும் மோட்டார் ஹாரன்கள் அலறும் ஓசை கேட்டது; மற்றும் பல சத்தங்கள் கேட்டன. சுற்றுமுற்றும் பார்த்தாள் நன்றாக இருட்டிவிட்டது. பனி கொட்டிக் கொண்டிருந்தது. பனி மூடிய மரங்கள் சோகமே உருவாகக் காட்சி அளித்தன. ஜனங்கள் காந்திஜி காலமான சம்பவத்தைக் குறித்துப் பற்பல பாஷைகளில் பேசிக்கொண்டு சாலையோடு போய்க்கொண்டிருந்தார்கள். சுற்றுமுற்றும் சீதா பார்த்தபோது, தான் பிடித்துக் கொண்டு நின்ற மதில் சுவரையும் கவனிக்க நேர்ந்தது. ஆகா! இது என்ன? இது யாருடைய வீடு? நம்முடைய வீடு போலிருக்கிறதே! நாம் பல வருஷ காலம் நமக்குச் சொந்தம் என்று எண்ணி வாழ்ந்த வீடுதான் இது! இந்த வீட்டில் இப்போது யார் இருப்பார்கள்? ஏன் அவர்தான் இருக்க வேண்டும். அவர்தான் ரேடியோ கேட்கிறார் போலிருக்கிறது. கடவுளே நம்மை இந்த இடத்தில் கொண்டுவந்து விட்டிருக்கிறார். உள்ளே போய் ஏன் அவரைப் பார்க்கக்கூடாது? “போனதெல்லாம் போகட்டும்; இனிப் புதிய வாழ்வு தொடங்குவோம்!” என்று ஏன் சொல்லக்கூடாது? இதையெல்லாம் அவரிடம் என்னால் சொல்ல முடியுமா? காது கேட்கச் செய்த பகவான் பேசும் சக்தியையும் கொடுத்துத்தான் இருப்பார் அல்லவா?- சீதாவின் நாக்கு முன்னெல்லாம் போல் நன்றாகப் புரண்டது போலத் தோன்றியது. நன்றாகப் பேச முடியும் என்று தோன்றியது! மதில் சுவரின் வாசல் திறந்துதான் இருந்தது. சீதா உள்ளம் நடுங்க, கால் தள்ளாட, அந்தப் பங்களாத் தோட்டத்துக்குள்ளே பிரவேசித்தாள். முப்பத்தேழாம் அத்தியாயம் - ராகவனும் தாரிணியும் தோட்டத்துக்குள் பிரவேசித்த சீதா தயங்கித் தயங்கி நடந்து வீட்டு வாசற்படியோரமாக வந்து நின்றாள். உள்ளேயிருந்து கீதம் வருவது நின்று விட்டது. ரேடியோவில் யாரோ பேசுவது கேட்டது. வீட்டுக் கதவு சாத்தியிருந்தது. ஆயினும் உட்புறம் தாளிடவில்லையென்று தெரிந்தது. வீட்டுக்குள்ளே அவர்தான் இருக்கிறார்; சந்தேகமில்லை. வாசலில் வேலைக்காரன் யாரும் இல்லை. திடீரென்று கதவைத் திறந்துகொண்டு உள்ளே போய் நின்றால் அவர் என்ன நினைப்பார்? திடுக்கிட்டுப் போவாரோ, என்னமோ? அவர் பேச்சு தன் காதில் விழும். ஆனால் அவருடன் பேசுவதற்குத் தனக்குத் தைரியம் வருமா? பேசும் சக்தி நாக்குக்கு இருக்குமா? நாக்குப் புரண்டாலும், தொண்டை அடைத்துக்கொண்டு விடாதா? இவ்விதம் எண்ணிச் சீதா வீட்டு வாசற்படியில் தயங்கிக் கொண்டு நின்றபோது, இன்னும் யாரோ வெளி மதில் கேட்டின் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. தன்னுடைய செவிப்புலனின் சக்தி முன்னைக் காட்டிலும் எவ்வளவு அதிக கூரியதாயிருக்கிறது என்பதைச் சீதா நினைத்து வியந்தாள். ஆனால் வியப்பைத் தொடர்ந்து பயம் வந்தது. யார் வருகிறார்களோ, என்னமோ? தன்னைக் கண்டதும் என்ன சொல்வார்களோ, என்னமோ? - வாசற்படியிலிருந்து உடனே சென்று வீட்டுச் சுவருக்கு அப்பால் மறைந்துகொண்டு நின்றாள். வருகிறது யார் என்பதை உன்னிப்பாகக் கவனித்தாள். வந்தவள் - ஆம், வந்தவள் ஸ்திரீதான், - தலையோடு கால் வரையில் மூடிய முஸ்லிம் பர்தா உடை தரித்துக்கொண்டு வந்தாள். இரண்டு கண்களினாலும் பார்ப்பதற்கு மட்டும் அந்த உடையில் இரண்டு துவாரங்கள் இருந்தன. ஐயோ! இவள் யார்? எதற்காக இந்த நேரத்தில் இங்கே வருகிறாள்? கடவுளே! இந்த வீட்டில் இப்போது யாரோ முஸ்லிம் இருக்கிறார்கள் போலிருக்கிறது. தெரியாத்தனமாகவல்லவா இங்கே வந்துவிட்டோ ம்? நல்ல வேளை, வீட்டுக்குள்ளே நுழையாமல் தப்பினோம். இந்த ஸ்திரீ வீட்டுக்குள்ளே பிரவேசித்ததும் நாம் தப்பி ஓடிப்போய் விட வேண்டும்! தப்பி எங்கே ஓடுவது? எங்கே? எங்கே? யமுனைக்கரைக்கா? காந்தி மகாத்மாவினுடைய புனிதத் திருமேனி இன்னும் அங்கே எரிந்து கொண்டிருக்குமா? அல்லது எரிந்து அடங்கிச் சாம்பலாகியிருக்குமா? அத்தனை கூட்டமும் இதற்குள் கலைந்து போயிருக்குமா? நாம் தனியாக அவ்விடத்தில் பக்கத்திலே சென்று நின்று அவருடைய திருமேனியின் சாம்பலையாவது தொட்டு நெற்றியில் இட்டுக் கொள்ளலாமா?……. அந்த முஸ்லிம் பர்தா ஸ்திரீ மெள்ள மெள்ளச் சத்தம் கேட்காதபடி அடி எடுத்து வைத்து நடந்து, வீட்டு வாசற்படிக் கருகில் வந்தாள். சீதாவைப் போலவே அவளும் சிறிது நேரம் தயங்கினாள். எதற்காகத் தயங்குகிறாள்? இவள் இந்த வீட்டுக்கு உரியவளானால் ஏன் தயங்கி நிற்க வேண்டும்? அந்த ஸ்திரீ படிகளில் ஏறித் தாழ்வாரத்தில் நின்றாள். மறுபடியும் தயக்கத்துடன் நடந்து சென்று வீட்டின் வாசற் கதவை நெருங்கி விரல்களின் பின் கணுக்களினால் கதவைத் தட்டினாள். ‘டண், டண்’ என்று கதவில் விரல் கணுக்கள் தட்டிய சத்தம் சீதாவின் காதில் நன்றாகக் கேட்டது. அதிசயம் அதிசயம்! கேட்கும் சக்தி எவ்வளவு கூர்மையாகியிருக்கிறது! காந்தி மகாத்மாவினுடைய அருள்தான் இது! வீட்டுக்குள்ளே யிருந்து ஆங்கில பாஷையில் “கெடின்!” (உள்ளே வருக) என்ற குரல் வந்தது. அந்தக் குரலைக் கேட்டதும் சீதாவின் தேகம் சிலிர்த்தது. பன்னிரண்டு வருஷத்துக்கு மேலே அந்தக் குரல் அவளுக்கு எல்லையற்ற இன்பத்தையும் எல்லையற்ற துன்பத்தையும் அளித்திருக்கிறது. சொல்ல முடியாத ஆர்வத்தை அந்தக் குரல் அவள் மனதில் எழுப்பிவிட்ட காலம் உண்டு. அளவில்லாத வெறுப்பையும் கோபத்தையும் எழுப்பிய நாட்களும் உண்டு. அவர்தான்: தன்னைக் கைப்பிடித்து மணந்து கொண்ட மன்னர்தான்; தன் கழுத்தில் தாலி கட்டித் தாரமாக்கிக் கொண்ட மணவாளர்தான். வீட்டுக்குள்ளே இருப்பவர் அவர்தான். இந்தப் பர்தா அணிந்த ஸ்திரீக்கு அவரிடம் என்ன வேலை? இவள் யார்? இவளை முன்னாலே அவருக்குத் தெரியுமா? இன்றைக்கு இவள் வருவாள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாரா? அதிலும் காந்தி மகாத்மாவின் உடல் தீக்கிரையான இந்தப் புண்ணிய தினத்திலா? இவளால் அவருக்கு ஏதேனும் தீங்கு வருவதாயின் அதைத் தான் தடுக்க வேண்டாமா?…… இப்படி ஆயிரம் எண்ணங்கள் சீதாவின் மனதில் உதித்தன. அந்தப் பர்தா ஸ்திரீ கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனதைச் சீதா பார்த்தாள். தானும் உள்ளே போகவேண்டும், போய் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்ற அதிதீவிரமான ஆவல் சீதாவைப் பற்றிக் கொண்டது. அவளுடைய உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் அந்த ஆவல் தோன்றி அவளைச் சித்திரவதை செய்தது. சீதா பல்லைக் கடித்துக் கொண்டு யோசனை செய்தாள். வாசற்புறமாக அவளும் போவதில் பயனில்லை. உள்ளே நுழைந்ததும் இருக்கும் பெரிய அறையிலேதான் ரேடியோ இருக்கிறது. அங்கேதான் அவரும் உட்கார்ந்திருக்கிறார். தான் வாசற் பக்கமாகப் போனால் உடனே பார்த்து விடுவார். தெரிந்து கொள்ள விரும்பிய விஷயத்தைத் தெரிந்து கொள்ள முடியாமற் போகலாம். கொல்லைப் புறமாகப் போனால் என்ன? கதவு திறந்திருந்தால் மிக்க சௌகரியம். யாருக்கும் தெரியாமல் பக்கத்து அறைக்குப் போய் நின்று அவளுடைய பேச்சைக் கேட்கலாம். அந்த ஸ்திரீயை இன்னார் என்பதாகவும் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். கொல்லைக் கதவு தாளிட்டிருந்தால் படுக்கையறையின் ஜன்னல் ஓரத்தில் நின்று அவர்களுடைய சம்பாஷணையைக் கேட்கலாம். அதிலிருந்து ஒருவாறு நிலைமை இன்னதென்று தெரிந்துகொள்ளலாம்….. சீதாவின் கால்கள் அவளை வீட்டின் பின் பக்கத்துக்கு இழுத்துச் சென்றன. பின் பக்கத்துக் கதவு தாளிடவில்லை தொட்டதும் அக்கதவு திறந்து கொண்டது. ‘கிறீச்’ சத்தம்கூடப் போடவில்லை. அடிமேல் அடி வைத்து மெள்ள மெள்ள நடந்து சீதா உள்ளே சென்றாள். ரேடியோ வைத்திருந்த முக்கிய அறைக்குப் பக்கத்து அறைக்குள் பிரவேசித்தாள். அந்த அறையிலிருந்து ரேடியோ அறைக்குள் போவதற்காக ஏற்பட்ட வாசற்படியின் பாதிக் கதவுகள் இலேசாகத் திறந்திருந்தன. அவசியமானால் அந்தக் கதவு இடுக்கு வழியாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் அதற்கு இப்போது அவசியம் இல்லை. முதலில் பேச்சைக் கவனித்துத் தெரிந்து கொள்ளலாம். சீதாவின் கால்கள் தள்ளாடிக் கொண்டிருந்தன. சுவர் ஓரமாகக் கிடந்த சோபாவில் சத்தமின்றி உட்கார்ந்து கொண்டாள். “யார் நீ? இங்கே எதற்காக வந்தாய்? வேறு யார் வீடோ என்று நினைத்துக் கொண்டு வந்தாய் போலிருக்கிறது. போ! போ சீக்கிரம்! நான் இங்கே தனியாக இருக்கிறேன். வீட்டில் பெண் பிள்ளை யாரும் இல்லை! போ உடனே!” என்று ராகவனுடைய கடுமை மிக்க குரல் கூறியது. அவனுடைய குரலில் தொனித்த கடுமை சீதாவின் செவிகளுக்கு மிக இனிமையாயிருந்தது. “வீட்டில் பெண் பிள்ளை யாரும் இல்லை!” என்ற வார்த்தைகள் அவளுக்கு அளவில்லாத ஆனந்தத்தை அளித்தன. ஒரு நிமிஷம் மௌனம் குடிகொண்டிருந்தது. ரேடியோவை முன்னமேயே ராகவன் மூடியிருக்க வேண்டும். மறுபடியும் ராகவன் கடுங்குரலில் கூறினான்:- “ஏன் சும்மா நிற்கிறாய்? போகிறாயா? போலீஸைக் கூப்பிடட்டுமா? வேலைக் காரத் தடிப்பயல்கள் இரண்டு பேரும் போய்த் தொலைந்து விட்டார்கள். அவர்கள் வரட்டும் சொல்கிறேன் கதவைத் தாளிடாதது தப்பாய்ப் போயிற்று. பாகிஸ்தானிலிருந்து ஓடி வந்த அகதிச் சனியன்போல அல்லவா இருக்கிறது!…..” இந்தச் சமயத்தில் ராகவனுடைய பேச்சுத் தடைப்பட்டது. “ராகவன்! மன்னிக்க வேண்டும்! உங்களுக்கு அதிக நேரம் தொந்தரவு கொடுப்பதாக உத்தேசமில்லை, சீக்கிரம் போய் விடுகிறேன்!” என்று ஒரு பெண்ணின் குரல் கூறியது. அந்தக் குரலைக் கேட்டதும் சீதாவின் உடம்பு முழுதும் மறுபடியும் ஒரு தடவை சிலிர்த்தது. அது தாரிணியின் குரல் தான். எழுந்து ஓடிப்போய், “அக்கா!” என்று அலறி அவளைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. அந்த ஆசையை மிகவும் கஷ்டப்பட்டு அவள் அடக்கிக் கொண்டாள். ஆவலை அடக்கிக் கொள்வதற்கு மிக முக்கியமான காரணம் இருந்தது. தான் இருப்பது - தான் உயிரோடிருப்பது - தன் கணவருக்குத் தெரியவே கூடாது! அந்த மன உறுதியை நிறைவேற்றியே தீர வேண்டும். “தாரிணி! தாரிணி! நீயா இந்த வேஷத்தில் வந்திருக்கிறாய்? எதற்காக இந்த பயங்கரமான முகமூடி? உட்காரு, தாரிணி! உட்காரு! உன்னை நான் அப்படிப் போகச் சொல்லுவேனா? எத்தனை நாளாக உன்னைப் பார்க்க வேண்டும் என்று தவம் செய்து கொண்டிருக்கிறேன்! தயவு செய்து உட்காரு!” என்றான் ராகவன். “ஆகட்டும், ஐயா! எனக்கும் மிக்க களைப்பாயிருக்கிறது. நான் சொல்ல வந்ததை உட்கார்ந்தே சொல்லிவிடுகிறேன். அதிக நேரம் இவ்விடத்தில் இருக்க மாட்டேன். ஐந்து நிமிஷத்தில் சொல்லிவிட்டுப் போய் விடுகிறேன்!” என்றாள் தாரிணி. “ஐந்து நிமிஷமா? ஐந்து நிமிஷத்தில் நீ போனால் நான் விட்டு விடுவேனா உன்னை?” என்றான் ராகவன். “சற்று முன்னால் ’வீட்டில் பெண்பிள்ளை யாரும் இல்லை! போ உடனே!” என்று சொன்னீர்களே?" “அது உனக்காகச் சொன்னேனா! யாரோ அகதிச் சனியனாக்கும் என்று நினைத்துக்கொண்டு சொன்னேன்.” “நானும் ஒரு அகதிச் சனியன்தான் என்று வைத்துக் கொள்ளுங்கள். சீக்கிரத்தில் நான் போகவும் வேண்டும். இல்லாவிட்டால் குழந்தை வஸந்தி கவலைப்படத் தொடங்கி விடுவாள்….” “தாரிணி! வஸந்தி எங்கே? ஏன் இப்போதே அவளையும் அழைத்து வரவில்லை? குழந்தை சௌக்கியமா யிருக்கிறாளா?” “சௌக்கியமாயிருக்கிறாள் அவளைப் பற்றி உங்களுக்குச் சொல்வதற்காகவே இன்றைக்கு வந்தேன். எப்போது குழந்தையைக் கொண்டு வந்து விடும்படி சொல்கிறீர்களோ, அப்போது கொண்டு வந்து விட்டு விடுகிறேன்…..” “கொண்டு வந்து விடுகிறேன் என்றா சொல்கிறாய்? சரி, கொண்டு வந்துவிடு! அந்தத் தாயில்லாக் குழந்தையை இந்தச் சூனியமான வீட்டில் அழைத்து வைத்துக்கொண்டு நான் திண்டாட வேண்டியதாயிருக்கும். அதனால் என்ன?” “ஐயா! தாயில்லாக் குழந்தை என்று ஏன் சொல்கிறீர்கள்? சீதாவைப் பற்றி நிச்சயமாக உங்களுக்கு ஏதேனும் தெரியுமா?” “தெரியும், தாரிணி! என்னைப் போன்ற அபாக்கியசாலி இந்த உலகத்தில் வேறு யாருமே இருக்க மாட்டார்கள். சீதா சேனா நதியில் முழுகி இறந்துவிட்டாளாமே. சூரியா நேரில் பார்த்தானாம்!” இந்தச் சமயத்தில் விம்முகிற சத்தம் கேட்டது. விம்முகிறது யார் என்று சீதாவுக்குத் தெரியவில்லை. ராகவனாகவும் இருக்கலாம்! தாரிணியாகவும் இருக்கலாம். உள்ளே பாய்ந்து ஓடிச் சென்று தான் உயிரோடு இருப்பதைத் தெரிவித்து விட்டால் என்ன? இல்லை, கூடவே கூடாது! சீதா பிடிவாதமாகப் பல்லைக் கடித்துக் கொண்டு எழுந்திராமல் உட்கார்ந்திருந்தாள். “சூரியா நேரில் பார்த்ததாகச் சொல்லியிராவிட்டால் நான் நம்பியிருக்க மாட்டேன், இன்னமும் தேடிக்கொண்டு தானிருப்பேன். ஹௌஷங்காபாத்தில் அவளையும் குழந்தையையும் தனியாக விட்டு விட்டு நான் இந்தப் பாழும் உத்தியோகத்துக்காக ஓடி வந்ததை நினைத்தால் எனக்கு நெஞ்சு வெடித்துவிடும் போலிருக்கிறது. ஆனால் பாகிஸ்தானில் உள்ளவர்கள் அப்படித் திடீரென்று பேய் பிசாசுகளாவார்கள் என்று எனக்கு என்ன தெரியும்?….” “ராகவன்! போனதை நினைத்து நீங்கள் வருத்தப்பட வேண்டாம். சீதா உண்மையில் பாக்கியசாலி; நதி வெள்ளத்தில் மூழ்கி இறந்து போய்விட்டாள். உயிரோடிருக்கும் நாம்தாம் துர்பாக்கியசாலிகள். உலகத்துக்கே ஓர் உத்தமராயிருந்தவர் சுட்டுக் கொல்லப்பட்டதைப் பார்த்தோம் கேட்டோ மல்லவா? இந்த மனவேதனையை அநுபவிக்காமல் போய்விட்டவள் அதிர்ஷ்டசாலிதானே!” “நேற்று இராத்திரி இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதிலிருந்து எனக்கும் அவளுடைய நினை வாகவே இருந்தது. சீதா மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தால் எவ்வளவு துக்கப்பட்டிருப்பாள் என்று அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன். சீதாவுக்கு மகாத்மாவிடம் ஒரு தனி பக்தி. அதிலும் நாங்கள் ஹௌஷங்க பாத்தில் ஒரு வருஷம் இருந்த காலத்தில் அவள் மகாத்மா காந்தியைப் தெய்வமாகவே நினைத்துப் பூஜை செய்து கொண்டிருந்தாள்…..” சீதா புண்ணியம் செய்தவள், நான் போய் வருகிறேன் மிஸ்டர் ராகவன்! நாளைக் காலையில் தங்கள் குமாரியை அழைத்துக் கொண்டு வந்து தங்களிடம் விட்டு விடுகிறேன்." “இதென்ன சொல்லுகிறாய், தாரிணி! முன் பின் தெரியாதவர்கள் பேசுவது போலப் பேசுகிறாயே? எங்கே போக வேண்டும் என்கிறாய்? நீ எங்கே தங்கியிருக்கிறாய்? குழந்தையை எங்கே விட்டு விட்டு வந்திருக்கிறாய்? இரண்டு மாதத்துக்கு முன்னாலே சீதா பெயருக்கு நீ கடிதம் எழுதியிருந்தாயே? உன்னை நான் எதிர்பார்த்துக் கொண்டு தானிருந்தேன். இத்தனை காலமும் என்ன செய்தாய்? எங்கே இருந்தாய்?” என்று ராகவன் படபடவென்று பல கேள்விகளைக் கொட்டினான். அந்தக் கடிதம் எழுதிய அடியோடு இந்த ஊருக்கு வந்து விட்டேன். ஜும்மா மசூதிக்கும் அருகில் நானும் என் பெற்றோர்களும் முன்னொரு சமயம் வசித்த வீட்டுக்குப் போனேன். அன்றைக்கே அந்தப் பிரதேசத்தில் கலகம் தொடங்கி விட்டது. இரண்டு மாதமாக வீட்டை விட்டு வெளியே புறப்பட முடியவில்லை. குழந்தையை அழைத்து வரப் பயமாயிருக்கிறது. அதனாலே தான் இத்தனை நாள் தாமதம். இன்றைக்கு இந்த டில்லி நகர் முழுவதும் மகாத்மாவின் இறுதி ஊர்வலத்துக்குப் போய்விட்டது. நானும் தைரியமாகப் புறப்பட்டு வந்தேன்" என்றாள் தாரிணி. “இன்றைக்கு இந்த நகரத்தில் வெளியில் புறப்படாமல் வீட்டிலேயே இருந்தவன் நான் ஒருவன்தான் போலிருக்கிறது. இந்த வீட்டில் இருந்த வேலைக்காரர்கள்கூட மகாத்மா காந்தியின் கடைசி தரிசனத்துக்குப் போய்விட்டார்கள். நான் வீட்டிலேயே இருந்து ரேடியோ மூலம் எல்லா நிகழ்ச்சிகளையும் கேட்டுக் கொண்டிருந்தேன். அதுவும் ஒரு விதத்தில் நல்லதாய்ப் போயிற்று. இல்லாவிடில் நீ இங்கே வந்து என்னைக் காணாமல் திரும்பிப் போயிருக்கலாமல்லவா?” “ஆமாம்; நீங்கள் வீட்டில் இருந்தது நல்லதாகத்தான் போயிற்று. நான் போய் வருகிறேன். நாளைக்கு…….” “நாளைக்கு என்கிற பேச்சு வேண்டாம். இப்போதே நான் கார் எடுத்துக்கொண்டு வருகிறேன். போய் வஸந்தியை அழைத்து வருவோம். ஆனால் அந்தத் தாயில்லாக் குழந்தையை என் தலையிலே கட்டிவிட்டு நீ தப்பிப் போய்விடலாம் என்று நினைக்காதே! என்னால் அந்தப் பொறுப்பை வகிக்க முடியாது. நீ இந்த வீட்டில் சீதாவின் ஸ்தானத்தில் இருந்து வஸந்தியையும் வளர்ப்பதாக ஒப்புக் கொண்டால்தான் அந்தப் பொறுப்பை நான் ஒப்புக்கொள்ள முடியும்.” “ஐயா! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? சீதாவின் ஸ்தானத்தில் நான் இருக்க வேண்டும்’ என்று சொல்வதின் அர்த்தம் என்ன? இன்னும் உங்களுக்கு அந்தப் பழைய பைத்தியம் விடவில்லையா?” “பழைய பைத்தியம் விடவில்லைதான். இந்த உடம்பிலே உயிர் உள்ள வரையில் என்னை அப்பைத்தியம் விடாது தாரிணி!” “உங்களுக்கு ஓர் இரகசியம் தெரியாது. அதனாலேதான் இன்னமும் இப்படிச் சொல்கிறீர்கள். சீதா என் சொந்தத் தங்கை; என் உடன் பிறந்த சகோதரி.” “அது எனக்குத் தெரியாத இரகசியம் அல்ல. நீ சீதாவின் சொந்தத் தமக்கை என்பதைச் சூரியா சொன்னான். இன்னொரு விஷயமும் அவன் கூறினான். நீ என்னைக் கலியாணம் செய்து கொண்டால் அதைக் காட்டிலும் சீதாவின் ஆத்மாவுக்குச் சாந்தி அளிக்கக்கூடியது வேறொன்றுமிராது என்று சொன்னான். நீயே யோசித்துப் பார், தாரிணி! இந்த வீட்டிலிருந்து வஸந்தியை வளர்ப்பதற்கு உன்னைக் காட்டிலும் தகுதியுடையவள் உண்டா? நீ மட்டும் என்னைக் கலியாணம் செய்து கொள்வதாக ஒப்புக்கொண்டால்… வேண்டாம்; இன்றைக்கு இந்தப் பேச்சு உனக்குப் பிடிக்காது. பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம். இன்றைக்கு நம் எல்லோருடைய மனமும் கலங்கிப் போயிருக்கிறது. நாம் இப்போது போய்க் குழந்தையை அழைத்துக் கொண்டு வரலாம். ஆனால் நீ உன்னுடைய முகமூடியை மட்டும் உடனே எடுத்து விட வேண்டும். இன்னும் இந்தப் பயங்கரமான உடையை நீ தரித்திருப்பது எனக்குப் பிடிக்கவில்லை.” “ஆகட்டும், ஐயா! இந்தப் பர்தா உடையை எடுத்து விடுகிறேன்; எடுக்கத்தான் வேண்டும். ஆனால் கலியாணம் பேச்சைத் தள்ளிப் போடுவதில் எனக்கு விருப்பம் இல்லை. அதை இப்போதே பேசி முடித்துவிட்டால் என் மனது நிம்மதியடையும்…..” “எனக்கு ஒன்றும் ஆட்சேபமில்லை, தாரிணி! பேஷாக இப்போதே பேசி முடிவு செய்யலாம். ஆனால் பேசுவதற்குத் தான் என்ன இருக்கிறது? நீ உன்னுடைய விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டியதுதான். நானோ பதினாறு வருஷ காலமாகத் தவம் செய்கிறேன்.” "என்னுடைய விருப்பத்தைத் தெரிவிப்பதற்கு முன்னால் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். என் தங்கை சீதாவுக்கு நான் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன்….." “என்ன சத்தியம் செய்து கொடுத்தாய்? எதற்காக?” “உங்களுக்குச் சம்மதம் என்றால் நான் உங்களை மணந்து கொள்கிறேன் என்று சீதாவுக்குச் சத்தியம் செய்து கொடுத்தேன்.”அதை நிறை வேற்றுவதாக உத்தேசமா? காற்றிலே பறக்க விட்டு விடுவதாக உத்தேசமா?" “சீதா உயிருடன் இருந்தபோது என்னால் அவளுக்குப் பல கஷ்டங்கள் நேர்ந்தன. கடைசியில் அவளைப் பாதுகாக்க நான் செய்த ஏற்பாடும் பயனில்லாமற் போயிற்று. சீதாவின் ஆவியாவது நிம்மதி அடைய வேண்டாமா? ஆகையால் அவளுக்கு நான் கொடுத்த வாக்கை மீறப் போவதில்லை. நீங்கள் என்னைக் கலியாணம் செய்துகொள்ளச் சம்மதித்தால் எனக்கும் அதில் சம்மதம். ஆனால் நீங்கள் யோசித்துச் சொல்ல வேண்டும்…..” சீதா இதுவரை தான் உட்கார்ந்திருந்த சோபாவிலிருந்து எழுந்து நின்றாள். பேதைப் பெண்ணே! ஏன் இன்னும் இங்கே இருக்கிறாய்? போய்விடு! உடனே ஓடிப் போய்விடு! உன் மனம் நன்றாயிருக்கும்போதே இங்கிருந்து போய்விடுவது நல்லது. ஒருவேளை உன் புத்தி மாறிக் கெட்டுப் போய்விடலாம் அல்லவா? இவ்வாறு சீதாவின் உள்மனம் அவளுக்கு அறிவுறுத்தியது. சிறிதும் சத்தம் செய்யாமல் அடிமேல் அடி வைத்து நடந்தாள். கொல்லை வழியாகவே வெளியில் வந்து வீட்டைப் பிரதட்சணம் சுற்றிக் கொண்டு வாசற்பக்கம் வந்தாள். மதில் சுவரின் வாசற்படியைத் தாண்டி வீதியை அடைந்ததும் அதிவேகமாக நடந்தாள். நாலாபுறமும் இருண்டு கொண்டு வந்தது. சீதா! என்ன காரியம் செய்து விட்டாய்? இன்னும் ஐந்து நிமிஷம் நீ அந்தப் பக்கத்து அறையிலேயே இருந்திருக்கக் கூடாதா? முப்பத்தெட்டாம் அத்தியாயம் - மணி அடித்தது! இந்த அத்தியாயத்தை எழுதுவதற்கு மிகவும் தயக்கமாயிருக்கிறது. மனம் வேதனைப்படுகிறது; கையும் கூசுகிறது. எனினும் எழுதியேயாகவேண்டும் கதையை முடிக்க வேண்டிய கடமை ஒன்று இருக்கிறதல்லவா? இம்மாதிரியான வரலாற்றுத் தொடர்கதை எழுதுவதில் ஒரு பெரிய கஷ்டம் இருக்கிறது. ஆசிரியனோடு சேர்ந்து வாசகர்களும் கதையைக் கற்பனை செய்துகொண்டு வருகிறார்கள், மேலே இப்படித்தான் நடக்க வேண்டும் என்று முடிவு கட்டுகிறார்கள். கதாநாயகி இறந்து விடக் கூடாதென்று சிலரும் கதாநாயகி இறந்துதான் ஆகவேண்டும் என்று சிலரும் வற்புறுத்துகிறார்கள். கதாநாயக னுக்குத் தண்டனை கிடைக்க வேண்டுமென்று சிலரும் அவனுக்குப் பட்டாபிஷேகம் நடக்க வேண்டும் என்று சிலரும் எதிர்பார்க் கிறார்கள். கதை ஆசிரியன் பெரிய தர்ம சங்கடத்தில் அகப்பட்டுக் கொள்கிறான். கதாபாத்திரங்களுக்கு உண்மையாக நிகழ்ந்த முடிவை உண்மையுடன் கூறுவதா, அல்லது வாசகர்களின் விருப்பத்தையொட்டி மாறிச் சொல்லுவதா என்ற கடினமான பிரச்னை ஏற்படுகிறது. எவ்வளவு கசப்பான உண்மையாயிருந்தாலும், அது எழுதுவதற்கும் படிப்பதற்கும் எவ்வளவு மன வருத்தம் தருவதாயிருந்தாலும், நடந்தது நடந்தபடி சொல்லி விடுவதே கதை ஆசிரியனுடைய தர்மமும் கடமையும் ஆகுமல்லவா? இங்கே இவ்வளவு நீண்ட பீடிகை போடுவதற்குக் காரணம் என்னவென்பதை வாசகர்கள் ஊகித்தறிந் திருப்பார்கள். மேலே வருவதை எழுதுவதற்குத் தயக்கந்தான் காரணம்.ஆனால் எத்தனை நேரந்தான் தயங்கவும் தள்ளிப் போடவும் முடியும்? தாரிணி சௌந்தரராகவனைப் பார்த்து “நீங்கள்தான் நன்றாக யோசித்துச் சொல்ல வேண்டும்” என்று கூறியது, ராகவன் சிறிது எரிச்சலுடன், “மறுபடியும் ‘யோசிக்க வேண்டும், யோசிக்க வேண்டும்’ என்றே சொல்லிக் கொண்டிருக்கிறாயே? யோசிப்பதற்கு என்ன இருக்கிறது?” என்று கேட்டான். “நீங்கள் இப்படித்தான் சொல்வீர்கள். ஆயினும் நான் என்னுடைய கடமையைச் செய்தாக வேண்டும். உங்களுடைய தாயாரும் தகப்பனாரும் உற்றார் உறவினரும் என்ன சொல்லுவார்கள் என்று யோசியுங்கள்.” “சுத்தப் பைத்தியக்காரத்தனம்! அவர்களையெல்லாம் நான் மறந்து எத்தனையோ நாளாயிற்று. என்னுடைய பெற்றோர்கள் தற்சமயம் அவர்களுடைய மூத்த பிள்ளையுடனும் மூத்த மாட்டுப் பெண்ணுடனும் சௌக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறார்கள். என்னை அவர்கள் கவனிப்பதில்லை அவர்களை இப்போதெல்லாம் நானும் நினைப்ப தில்லை…..” “இப்போது நினைப்பதில்லையென்றால் எப்போதும் விட்டுப் போய்விடுமா? இரத்த பாசம் ஒரு நாளும் விடாது அதற்கு என்னுடைய தகப்பனாரைக் காட்டிலும் வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?” “நல்ல தகப்பனார் உன் தகப்பனார்! பெற்ற பெண்கள் இருவருக்கும் சத்துருவாயிருந்தார்…….” “உங்கள் பெற்றோர்களை நீங்கள் கவனிக்காவிட்டால் போகட்டும். இந்தப் புது டில்லியில் நீங்கள் உத்தியோகம் செய்து வாழ்க்கை நடத்த வேண்டுமல்லவா? என்னை நீங்கள் கலியாணம் செய்து கொண்டால் எல்லாரும் என்ன நினைப்பார்கள்?” “ஒன்றும் நினைக்கமாட்டார்கள், அப்படி ஏதாவது நினைத்தால் என்னைக் கொடுத்துவைத்த அதிர்ஷ்டசாலி என்று நினைப்பார்கள். தாரிணி! இந்தப் புது டில்லியில் உன்னைப் போன்ற அழகி ஒருத்தி உண்டா? நாகரிகத்திலும் நடை உடை பாவனையிலும் உன்னை மிஞ்சக் கூடியவள் எவளேனும் உண்டா? கிளப்புகளுக்கும் பார்ட்டிகளுக்கும் உன்னை என்னுடன் அழைத்துக்கொண்டு போவதைப் போல் பெருமை தரும் விஷயம் வேறு உண்டா….?” தாரிணியை மூடியிருந்த உடைக்குள்ளிருந்து அமுங்கி ஒலித்த சிரிப்பின் சத்தம் வந்தது. அதைக் கேட்டதும் ஏனோ சௌந்தர ராகவனுக்கு உடல் சிலிர்த்தது; விவரமில்லாத பீதி ஒன்று உண்டாயிற்று. “தாரிணி! இது என்ன சிரிப்பு! இந்த வேளையில்தான், இந்தச் சந்தர்ப்பத்தில்தான் சிரிப்பது என்பது கிடையாதா?” என்றான். தாரிணி எழுந்து நின்றாள். “சிரித்தது பிசகுதான்; மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்னதான் சொன்னாலும் இன்னும் ஒருநாள், - இருபத்தினாலு மணி நேரம் - உங்களுக்கு யோசிக்கச் சாவகாசம் கொடுக்கிறேன். நாளைக்கு இதே நேரத்துக்குக் குழந்தையை அழைத்துக்கொண்டு வருகிறேன்” என்று சொன்னாள். “உன்னுடைய பிடிவாத குணம் முன்னைப் போலவேதான் இன்னும் இருக்கிறது. தாரிணி! போனால் போகட்டும், உன் இஷ்டப்படியே நாளைச் சாயங்காலம் வஸந்தியை அழைத்துக் கொண்டுவா! ஆனால் போவதற்கு முன்னால் இந்தப் பயங்கரமான பர்தா உடையை எடுத்துவிட்டு உன் முகத்தையாவது காட்டி விட்டுப்போ! இல்லா விட்டால் உன்னைப் போக விடமாட்டேன். நானே பலாத்காரமாக உன் முகமூடியை அகற்றி விடுவேன்!” என்றான். இந்தக் கடைசி வார்த்தையைச் சொல்லும்போது ராகவனுக்கு சீதா அடிக்கடி பாடும் வழக்கமான ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. “தில்லித்துருக்கர் செய்த வழக்கமடி! - பெண்கள் திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்” என்ற பாரதியாரின் கண்ணன் பாட்டு சீதாவுக்கு தெரியும். டில்லியில் முகமூடி தரித்த பர்தா முஸ்லிம் ஸ்திரீகளைப் பார்க்கும்போதெல்லாம் சீதா அந்தப் பாட்டைப் பாடிக் காட்டுவாள். ராகவனும் அதை ரசித்துக் கற்பனை உலகத்தில் சஞ்சரிப்பான். அந்தப் பாட்டு இப்போது ராகவனுக்கு நினைவு வந்ததும் அவனுடைய உடம்பு மீண்டும் சிலிர்த்தது. ராகவனுடைய அந்த வார்த்தைகளைக் கேட்ட தாரிணி சிறிது நேரம் நின்ற இடத்திலேயே நின்றாள். அவளுடைய மனதுக்குள் ஏதோ போராட்டம் நடந்தது போலும். ஒரு நிமிஷம் தயங்கி நின்ற பிறகு, “தங்கள் விருப்பத்தை இப்போதே நிறைவேற்றுகிறேன். என் பேரில் குற்றம் சொல்ல வேண்டாம்!” என்று தாரிணி சொல்லிவிட்டு அவளை மூடியிருந்த பர்தா உடையைக் கழற்றிக் கீழே நழுவி விழச் செய்தாள். உல்லாசமாக இயற்கை வனப்புகளைப் பார்த்துக்கொண்டு மலைச்சாரல் வழியாகப் போய்க் கொண்டிருந்த ஒருவனுடைய தலையில் திடீரென்று பாராங்கல் விழுந்து, கண்ணிலே கொள்ளிக் கட்டை குத்தி, காலிலே ஆயிரம் தேள்கள் கொட்டி, எதிரே பயங்கரமான பிசாசு ஒன்று தோன்றி அவனுடைய கழுத்தைப் பிடித்து அமுக்கினால் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது ராகவனுக்கு. பர்தா உடையைக் கழற்றியதும் எதிரில் தோன்றிய உருவம், சௌந்தரராகவன் பலமுறை பார்த்து இதயத்தில் பதித்து வைத்துக் கொண்டிருந்த தாரிணியின் மோகன உருவம் அல்ல; அவன் பார்க்க வேண்டுமென்று ஆவல் கொண்டிருந்த சௌந்தரிய வடிவம் அல்ல! சீதாவுக்கு உடன் பிறந்த சகோதரியின் பூரண சந்திரனையொத்துப் பொலிந்த முகம் அல்ல. அவன் பார்த்தது ஒரு கோர ஸ்வரூபம். ஒரு கை துண்டிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உருவம். ஒரு கண் இருந்த இடத்தில் வெறுங்குழி இருந்த உருவம். வலது நெற்றிப் பொட்டிலிருந்து இடது கன்னத்தின் ஓரம் வரையில் ஒரு நீண்ட பெரிய பிளவு ஓடியிருந்த பயங்கர வடிவம். மகா சிற்பி ஒருவன் அமைந்திருந்த தெய்வீகச் சிலையை வெறிகொண்ட கஜினி முகம்மது தாக்கி உடைத்த பிறகு சிதைந்துபோன சிலை எப்படி இருக்குமோ அப்படித் தோற்றமளித்த பரிதாப உருவம். சௌந்தரராகவன் பீதியினாலும் பயங்கரத்தினாலும் பரிதாபத்தினாலும் அருவருப்பினாலும் கதிகலங்கியவனாய் திகைத்து நின்றான். சற்று நேரம் திறந்த கண்கள் திறந்தபடி, திறந்த வாய் திறந்தபடி, பார்த்துக்கொண்டே நின்றான். அப்புறம் நிற்க வலிவற்றவனாய்த் தொப்பென்று ஸோபாவில் விழுந்தான். அந்த உருவம் வாய் திறந்து பேசியது. முன் பல் இரண்டு இல்லாதபடியால் வாயைத் திறந்தபோது அந்த கோர ஸ்வரூபம் மேலும் பயங்கரமாகக் காட்சி தந்தது. “ஐயா! மன்னிக்க வேண்டும், தங்களுக்கு இந்தத் துன்பத்தை இன்று தரவேண்டாம் என்றுதான் நினைத் தேன். ஆனால் நீங்கள் கேட்கவில்லை உடையை எடுக்கும்படி பிடிவாதம் பிடித்தீர்கள்!” என்று தாரிணி கூறினாள். ஆம், அது தாரிணியின் குரல்தான்! சந்தேகமில்லை. எவ்வளவு சின்னாபின்னமடைந்திருந்த போதிலும் அந்த முகம் தாரிணியின் முகந்தான்! ஆனாலும் சௌந்தரராகவன் அதை நம்புவது எளிதாக இல்லை. இது வேறு யாராகவாவது இருக்கலாகாதா என்றும் தன்னை இந்தப் பயங்கர ஏமாற்றத்துக்கு உள்ளாக்க யாரோ செய்த சூழ்ச்சியாக இருக்கக்கூடாதா என்றும் எண்ணினான். “நான் போய் வருகிறேன், ஒரு நாள் முழுதும் யோசித்துப் பதில் சொல்லுங்கள். ஒரு நாள் என்ன? ஒரு வாரம் வேண்டுமானாலும் யோசித்துச் சொல்லுங்கள்!” என்றாள் தாரிணி. சௌந்தரராகவனுடைய தலைக்கு உட்புறம் நூறு குட்டிப் பிசாசுகள் புகுந்து கொண்டு ’ஹஹஹஹஹஹா!" என்று பரிகசித்துச் சிரித்தன. “போகாதே, தாரிணி! போகாதே! ஏதாவது சொல்லி விட்டுப் போ! இல்லாவிட்டால் எனக்கு இப்போதே பைத்தியம் பிடித்துவிடும்!” என்று ராகவன் அலறினான். தாரிணி உட்கார்ந்தாள், “தயவு செய்து பதறாதீர்கள்; வீணாக அலட்டிக் கொள்ளாதீர்கள். நான் என்ன சொல்ல வேண்டும்? கேளுங்கள், சொல்கிறேன்!” என்றாள். ராகவன் தாரிணியை ஒரு தடவை காலோடு தலை வரை உற்றுப் பார்த்துவிட்டு மேஜைமீது தன் முகத்தைச் சேர்த்து வைத்துக் கொண்டு விம்மினான். “ஐயா! தாங்கள் எத்தனையோ தத்துவங்கள் படித்தவர். படித்த தத்துவங்களையெல்லாம் இப்போது தயவு செய்து ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள். விதியை வெல்ல யாரால் முடியும்? நடந்து போனதை நினைத்துத் துக்கப்பட்டு ஆவதென்ன?” என்று சொன்னாள் தாரிணி. சௌந்தரராகவன் தலை நிமிர்ந்தான். “தாரிணி! அந்த விதி என்னை எதற்காக உயிரோடு வைத்திருக்கிறது? இந்தக் கோரக் காட்சியைக் காண்பதற்காகத்தானா? கல்கத்தாவில் சுரம் அடித்துக் கிடந்தபோதே நான் இறந்து போயிருக்கக் கூடாதா?” என்று கதறினான். “விதியை வெல்லும் சக்தியை நமக்குக் கடவுள் கொடுக்கவில்லை. ஆனால் எப்பேர்ப்பட்ட கஷ்டத்தையும் துக்கத்தையும், வெல்லும் சக்தியைக் கொடுத்திருக்கிறார். இன்றைக்குக் காந்தி மகான் இறந்ததை நினைத்து இந்தத் தேசமெல்லாம் வருத்தப்படுகிறது. இன்னும் ஒரு மாதம் போனால் எல்லோரும் மகாத்மாவை மறந்துவிடப் போகிறார்கள். அவரவர்களின் காரியத்தைப் பார்க்கப் போகிறார்கள் இந்த உலகத்தில் எந்தவிதமான சுகமும் இன்பமும் சாசுவதமல்ல; அதுபோலவே கஷ்டமும் துன்பமும் சாசுவதம் அல்ல. துன்பத்தை மறந்துவிடும் சக்தியைக் கடவுள் நமக்கு அளித்திருக்கிறார்” என்றாள் தாரிணி. “கடவுள் என்று சொல்லாதே! கடவுள் இல்லை என்று நான் சத்தியம் செய்வேன். உன்னை இந்தக் கோலத்தில் பார்த்த பிறகு கடவுளிடம் எப்படி நம்பிக்கை உண்டாகும்?” என்றான் ராகவன். “நான் இந்தக் கோலமான பிறகுதான் கடவுளிடம் எனக்குப் பரிபூரண நம்பிக்கை உண்டாகியிருக்கிறது. ஐயா! என்னை வளர்த்த தாயையும் உங்கள் குழந்தை வஸந்தியையும் காப்பாற்றினேன். நல்ல சமயத்தில் கடவுள் என்னை அவர்கள் இருந்த இடத்தில் கொண்டு போய் விட்டார்; அந்தப் பிரயத்தனத்திலேதான் என்னுடைய ஒரு கை போயிற்று; ஒரு கண் போயிற்று; முகத்தில் இந்தக் கத்திக் காயம் ஏற்பட்டது. ஆனால் என்னை வளர்த்த தாயை நான் காப்பாற்ற முடிந்தது; என் உயிருக்குயிரான சகோதரியின் குழந்தையை நான் காப்பாற்ற முடிந்தது. இது கடவுளின் கருணை அல்லவா?” பிறகு ரஜினிபூர் ராஜ்யத்தில் ஒரு முஸ்லிம் மசூதியில் பல ஸ்திரீகள் அடைக்கப்பட்டிருந்ததையும், அந்த மசூதியைக் கொளுத்திவிட்டு அதில் இருந்தவர்களையெல்லாம் கொன்று விடச் சில வெறியர்கள் முயன்றதையும், தான் தன்னந்தனியாக அவர்களை எதிர்த்து நின்றதையும், அதற்குள் ரஜினிபூர் மகாராணி படைகளுடன் வந்து தன்னையும் மசூதியில் இருந்த ஸ்திரீகள் எல்லாரையும் காப்பாற்றியதையும் பற்றித் தாரிணி கூறினாள். சௌந்தரராகவன் ஏற்கனவே அந்த விவரங்களையெல்லாம் பத்திரிகையில் படித்திருந்தான். அப்போது அந்த முஸ்லிம் மசூதியை இந்த ரஜினிபூர் மகராணி எதற்காக காப்பாற்றினாள் என்று ஆத்திரப்பட்டான். இப்போது தாரிணி கூறிய செய்தி அவனுடைய உள்ளத்தில் சொல்லமுடியாத குழப்பத்தை உண்டு பண்ணியது. கடவுளே! அந்த மசூதியில் இருந்தல்லவா தன்னுடைய குழந்தை காப்பாற்றப்பட்டிருக்கிறாள்? ரஜினிபூர் மகாராணி நல்ல சமயத்தில் வந்து காப்பாற்றி யிராவிட்டால்? அரைமணி நேரம் கழித்துச் சென்றிருந்தால்?- ஒருவேளை இது கடவுளின் கருணைதானா?…. அந்தச் சமயத்தில் ’கண கண கண’வென்று டெலிபோன் கருவியின் மணி அடித்தது. முப்பத்தொன்பதாம் அத்தியாயம் - கடவுளின் கருணை மனிதர்களைச் சிற்றறிவினர் என்றும் கடவுளைப் பேரறிவாளன் என்றும் பெரியோர்கள் வரையறுத்துக் கூறியிருக்கிறார்கள். கடவுளுடைய செயல்களையும் அச்செயல்களின் காரணங்களையும் நாம் அறிய முடிவதில்லை. அறிந்தால் நாம் மனிதத் தன்மையைக் கடந்து தெய்வத்தன்மைக்கே உரியவர்களாகி விடுவோம் அல்லவா? உலகத்தில் பிறப்பவர்கள் பலர் பிறந்ததிலிருந்து இறக்கும் வரையில் துன்பப்பட்டே மடிந்து போகிறார்கள். ஒரு சுகத்தையும் காணாமல் கண்ணை மூடிவிடுகிறார்கள். அக்கிரமக்காரர்களின் அநியாயக் கொடுமைகளுக்கு ஆளாகிச் சாகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது நமக்கு நெஞ்சு கொதிக்கிறது. கடவுள் ஒருவர் இருந்தால் அவர் இத்தகைய கொடுமைகளைப் பார்த்துக் கொண்டு ஏன் சும்மா இருக்கிறார் என்று எண்ணுகிறோம். கடவுள் ஒருவர் இருப்பதாக வைத்துக்கொண்டாலும் அவரைத் ‘தீனபந்து’ என்று சொல்வது பெரும் பொய் என்று முடிவு செய்கிறோம். இதே உலகத்தில் பிறக்கும் வேறு சிலர் என்றைக்கும் சுக போகிகளாய் இருந்துவிட்டுப் போவதைப் பார்க்கும்போது, “ஆஹா! கடவுள் ஒருவர் இருந்தால் அவர் எத்தகைய பாரபட்ச முடையவராயிருக்க வேண்டும்?” என்று வியப்புறுகிறோம். இவையெல்லாம் நம்முடைய சிற்றறிவைக்கொண்டு பேரறிவாள னாகிய இறைவனுடைய செயல்களைக் கணிக்கப் பார்ப்பதினால் ஏற்படும் விபரீதங்கள் என்று பெரியோர்கள் அறிவுறுத்தி யிருக்கிறார்கள். அன்னை ஒருத்திக்கு நாலு குழந்தைகள் இருக்கின்றன. மூன்று குழந்தைகள் சுகமாயிருக் கின்றன. ஒரு குழந்தை மட்டும் நோய்ப்பட்டு மெலிந்து போயிருக்கிறது. அதன் ஜீரண சக்தி குன்றியிருக்கிறது. எழுந்து நடப்பதற்கும் முடியாமல் அந்தக் குழந்தை படுத்த படுக்கையாயிருக்கிறது. தாயார் மற்ற மூன்று குழந்தைகளுக்கும் நல்ல வளமான உணவு கொடுக்கிறாள். சோறும் கறி வகைகளும் பட்சணங்களும் பழமும் அக்குழந்தைகளுக்கு ஊட்டுகிறாள். மெலிந்த நோயாளிக் குழந்தைக்கு அத்தகைய நல்ல உணவு கொடுக்காமல் வெறும் கஞ்சி கொடுக்கிறாள். நோயாளிக் குழந்தை என்ன நினைக்கிறது? “பார்! நம்முடைய தாயாருக்குத்தான் எத்தனை பட்சபாதம்? நான் மெலிந்தவன்; எனக்கு நல்ல போஷாக்கு வேண்டும்; ஆயினும் எனக்கு வெறும் கஞ்சியைக் கொடுக்கிறாள். என்னுடைய அண்ணன்மார் நல்ல தடியர்களா யிருக்கிறார்கள். அவர்களுக்கு என் அன்னை நல்ல புஷ்டியான உணவைக் கொடுக்கிறாள்! இது என்ன அநியாயம்? இது என்ன பட்சபாதம்!” என்று எண்ணமிடுகிறது. குழந்தை சிற்றறிவு படைத்தது, அதனால் அதற்குத் தன் தாயின் செயல் அர்த்தமாகவில்லை. தன்பேரில் உள்ள அன்பினாலேதான் அன்னை அவ்விதம் தனக்குப் பத்தியமாகக் கஞ்சி கொடுக்கிறாள் என்பதை அக்குழந்தை அறிந்துகொள்ள முடியவில்லை. உண்மையில் தன் தாயார் மற்ற மூன்று குழந்தைகளையும் விடத் தன்னைப் பற்றியே ஓயாக் கவலை கொண்டி ருக்கிறாள் என்பதை அக்குழந்தை அறியவில்லை. கடவுளைப் பற்றிப் புகார் கூறும் மாந்தர்கள் அந்தக் குழந்தையின் நிலையில் உள்ளவர்களே! கடவுளின் கருணையையோ, அக்கருணையை அடிப்படையாகக் கொண்ட அவருடைய செயல் களையோ அறிந்துகொள்ளும் சக்தி தம்முடைய சிற்றறிவுக்குக் கிடையாது. ஆகையினாலேயே குறைப்படுகிறோம்; குற்றம் கூறுகிறோம். அது காரணமாகவே நம் துன்பத்தையும் அதிகப்படுத்திக் கொள்கிறோம். நோய்ப்பட்ட குழந்தைக்குத் தன் அன்னையிடம் பூரண நம்பிக்கையிருந்தால், அது மேற்சொன்னபடியெல்லாம் எண்ணி மனம் வெம்ப வேண்டியதில்லை. குழந்தை யின் உடல் நோய்ப்பட்டிருந்தாலும் அதன் மனமாவது நிம்மதியாயிருக்கும். அதுபோலவே கடவுளுடைய செயல்களின் காரண காரியங்களை அறிந்து கொள்ளுவதற்கு வேண்டிய அறிவு நமக்கில்லாவிட்டால் பாதகம் இல்லை. கடவுளிடம் நம்பிக்கை யிருந்தால் போதும். அந்த நம்பிக்கையானது வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் எல்லாவிதமான துன்பங்களையும் சகித்துக் கொள்ளும் ஆற்றலைக் கொடுக்கிறது. எவ்வளவு கஷ்டங்கள் சூழ்ந்திருக்கும் போதும் மன நிம்மதியுடன் வாழ்வதற்கு வேண்டிய தைரியத்தை அளிக்கிறது. மன நிம்மதியைக் காட்டிலும் ஒரு மனிதன் இந்த உலகத்தில் வேண்டிப் பெறக்கூடிய பேறு வேறு என்ன இருக்கிறது?…. இந்த வேதாந்த விசாரணைகளையெல்லாம் இவ்விடத்தில் நாம் நுழைத்திருப்பதற்கு அவ்வளவு முக்கியமான காரணம் ஒன்றுமில்லைதான். இனிச் சொல்லவேண்டியிருப்பதைச் சொல்லுவதில் நமக்கு ஏற்படும் தயக்கந்தான் உண்மையான காரணமாகும். வாசகர்கள் தயவுசெய்து மன்னிக்கும்படி கோருகிறோம். தாரிணி சொன்னதையெல்லாம் கேட்டு அளவில்லாத மனக்குழப்பத்துக்கு உள்ளாகியிருந்த சௌந்தரராகவனுக்கு அந்த டெலிபோன் அடித்த மணி ஒரு வரப்ரசாதமாகத் தோன்றியது. பேச்சை மாற்ற அது ஒரு சாதனம் ஆகுமல்லவா! “இந்த வேளையில் யார் டெலிபோனில் கூப்பிடுகிறார்கள்!” என்று எரிச்சலாகச் சொல்லிக்கொண்டே சௌந்தரராகவன் டெலிபோனை எடுத்துக் காதில் வைத்துக் கொண்டு, “யார் அது?” என்று கேட்டான். டெலிபோனில் அவனுக்கு கிடைத்த செய்தி மிக அதிசயமான செய்தியாயிருக்க வேண்டும். அவனுடைய முகத் தோற்றத்தில் அவ்வளவு மாறுதல் காணப்பட்டது. டெலிபோனை வைத்துவிட்டுத் தாரிணியைத் திரும்பிப் பார்த்து, “கேட்டாயா, தாரிணி! சீதா ஆற்றில் முழுகி இறந்து விட்டாள் என்பது பெரும் பொய். சூரியா அந்த மாதிரி என்னிடம் எதற்காகப் புளுகினான் என்று தெரியவில்லை. உனக்குத் தெரியுமே, மாஜி திவானுடைய மகள் பாமாவை! அவளுடைய வீட்டில் இப்போது சீதா இருக்கிறாளாம். அங்கே சூரியாவும் இருக்கிறானாம். பாமா என்னை உடனே புறப்பட்டு வரச் சொல்லுகிறாள்! நீயும் வரு…..?” என்று சொன்னவன், சொல்ல வந்த வார்த்தையைப் பூர்த்தி செய்யாமல் சட்டென்று நடுவில் நிறுத்தினான். அவனுடைய குரலில் தொனித்த குதூகலத்தைத் தாரிணி நன்றாக அர்த்தம் செய்து கொண்டாள். சீதா உயிரோடிருக்கிறாள் என்பதனால் மட்டும் ஏற்பட்ட குதூகலம் அல்ல அது. ஒரு கையும் ஒரு கண்ணும் இழந்த இந்தக் கோரஸ்வரூபத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் இனி அவனுக்கு இல்லையல்லவா? தாரிணி கேட்ட கலியாண சம்பந்தமான கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இனிமேல் இல்லையல்லவா? “ஆமாம், நானும் வருகிறேன்!” என்றாள் தாரிணி. அவளைத் தன்னுடன் அழைத்துப் போக ராகவனுக்கு அவ்வளவு ஢ருப்பமில்லையென்பது தாரிணிக்குத் தெரிந்துதானிருந்தது. ஆயினும் சீதா உயிரோடிருக்கும் செய்தியை அறிந்த பிறகு அவளை உடனே போய்ப் பார்க்காமல் எப்படி இருக்க முடியும்? ராகவன் விரைந்து சென்று காரை எடுத்தான். தாரிணி பின் ஸீட்டில் ஏறி உட்கார்ந்துகொண்டாள். வண்டி போய்க் கொண்டிருந்தபோது ராகவன், டெலிபோன் பேச்சில் தான் அறிந்த சில விவரங்களைக் கூறினான்;- “சீதாவும் அவள் தகப்பனாரும் இத்தனை நாளும் பானிபத்தில் இருந்தார்களாம். இன்றைக்குக் காந்திஜியின் கடைசி ஊர்வலத்துக்காகச் சீதாவைச் சூரியா அழைத்து வந்தானாம். கூட்டத்தில் இருவரும் பிரிந்து போய் விட்டார்களாம். கூட்டம் கலையும் சமயத்தில் சூரியா பாமாவைத் தற்செயலாகச் சந்தித்துச் சீதாவைப் பிரிந்தது பற்றிச் சொன்னானாம். போலீஸுக்கு டெலிபோன் பண்ணித் தேடச் செய்யலாம் என்று இருவரும் பாமாவின் வீட்டுக்கு வந்தார்களாம். அங்கே அந்த வீட்டு வாசலிலேயே சீதா பிரக்ஞையற்றுக் கிடந்தாளாம். உள்ளே எடுத்துப் போய்ச் சிகிச்சை செய்து வருகிறார்களாம், டாக்டரும் ந்திருக்கிறாராம். இந்தச் சூரியா எதற்காக என்னிடம் அவ்வளவு பெரிய பொய்யைச் சொன்னான் என்று தெரியவில்லை. சீதா ஆற்றில் முழுகி இறந்து விட்டாள் என்று சொன்னானே? எவ்வளவு பெரிய அயோக்கியன் அவன்?….” தாரிணி அப்போது, “வீணாக ஏன் வைகிறீர்கள்? அவரைக் கேட்டால் அல்லவா உண்மை தெரியும்? ஒருவேளை உங்களைச் சந்தித்தபோது சீதா உயிரோடிருப்பது அவருக்குத் தெரியாமலிருந்திருக்கலாம்!” என்றாள். “இருந்தாலும் இருக்கலாம், ஆனாலும் என்ன அதிசயம் பார், தாரிணி! சீதா இன்றைக்கு அகப்பட்டது ஓர் அற்புதம் இல்லையா? கடவுளுடைய கருணை என்றுதான் இதைச் சொல்ல வேண்டும்!” என்றான் ராகவன். வண்டி பாமா வீட்டு வாசலில் போய் நின்றது. வண்டிச் சத்தம் கேட்டதும் பாமாவும் சூரியாவும் தயாராக வாசற்பக்கம் வந்தார்கள். வண்டியிலிருந்து இறங்கிய ராகவனைப் பாமா கையைப் பிடித்து, “சீக்கிரம் வாருங்கள்!” என்று அழைத்துக் கொண்டு உள்ளே போனாள். போகும்போதே ராகவன், “சூரியா! நன்றாக என்னை ஏமாற்றினாய், போனால் போகட்டும்! வண்டியில் தாரிணி இருக்கிறாள் அவளைக் கவனித்துக் கொள்!” என்று சொல்லிக் கொண்டே உள்ளே போனான். தாரிணியின் கோர ஸ்வரூபத்தைப் பார்த்ததும் சூரியாவின் மனப்போக்கு எப்படியிருக்கும் என்று சௌந்தரராகவனுடைய மனம் அச்சமயம் எண்ணமிட்டது. பரபரப்புடன் மோட்டார் வண்டியை அணுகி வந்த சூரியாவைப் பார்த்துத் தாரிணி, “என் அருகில் நெருங்க வேண்டாம், சூரியா! நான் அசுத்தமானவள்!” என்றாள். “அதை நான் ஒரு நாளும் நம்ப மாட்டேன். தாரிணி! எது எப்படி யிருந்தாலும் உன்னைப் போல் புனிதமான பொருள் இந்த உலகில் வேறொன்று இருக்க முடியும் என்று ஒப்புக்கொள்ள மாட்டேன்!” என்று சொன்னான் சூரியா. “அதைப்பற்றி அப்புறம் பேசலாம். சீதாவுக்கு உடம்பு எப்படியிருக்கிறது?” என்று தாரிணி கேட்டாள். “பிழைக்க மாட்டாள் என்று டாக்டர் சொல்கிறார். இப்போதுதான் கொஞ்சம் பிரக்ஞை வந்திருக்கிறது. பிரக்ஞை வந்ததும் உன் பெயரையும் வஸந்தியின் பெயரையும் சொன்னாள்” என்றான் சூரியா. “ஐயோ! அப்படியானால் உடனே போய்க் குழந்தையை அழைத்து வரவேண்டும். நம்முடைய பழைய வீட்டிலே இருக்கிறாள்! நீங்கள் என்னுடன் வருவீர்களா?” என்றாள் தாரிணி. “அவசியம் வருகிறேன், பாவம்! ராகவன் சீதாவின் அந்திய காலத்திலாவது அவளுடன் சிறிது நேரம் தனியாக இருந்து அவளுடைய மனம் குளிரச் செய்யட்டும்” என்றான் சூரியா. நாற்பதாம் அத்தியாயம் - “பாக்கியசாலி சீதா!” டாக்டர் இஞ்செக்ஷன் செய்வதற்காக மருந்து தயாரித்துக் கொண்டிருந்தார். பாமா அவருக்கு உதவி செய்து கொண்டிருந்தாள். ராகவன் சீதாவின் தலையைத் தன் மடியில் தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தான். அடிக்கடி அவன் விம்முகிற சத்தம் கேட்டது. சீதா தட்டுத் தடுமாறிச் சொன்னாள்:- “நீங்கள் ஏன் அழ வேண்டும்? எனக்கு இதைவிட வேறு பாக்கியம் கிடைக்குமா? கஸ்தூரிபாய் தெய்வத்தைப்போல நானும் தாலி கட்டிய புருஷன் மடியில் படுத்துச் சாக வேண்டும் என்று தவம் செய்து கொண்டிருந்தேன் அந்தத் தவம் பலித்துவிட்டது. என்னைப் போலப் பாக்கியசாலி யார்? நீங்கள் அழவேண்டாம்!” என்றாள். சௌந்தரராகவனைத் துக்கம் ஒரு பக்கமும் வெட்கம் இன்னொரு பக்கமும் பிடுங்கித் தின்றன. “சீதா! இந்த மாதிரியெல்லாம் பேசாதே! உனக்கு உடம்பு ஒன்றுமில்லை. சீக்கிரம் சுகமடைந்து பிழைத்து எழுந்திருப்பாய்!” என்றான். “அதெல்லாம் இல்லை, நான் இனி வெகு நேரம் உயிரோடிருக்க மாட்டேன். அதென்னமோ அப்படி எனக்குத் தோன்றுகிறது. அதைப் பற்றி நான் கவலைப்படவும் இல்லை. தாரிணி அக்காவும் நீங்களும் பேசிக்கொண்டிருந்ததை நான் ஒட்டுக் கேட்டேன். அதற்காகத் தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள். ‘உங்களை மணந்துகொள்ளச் சம்மதம்’ என்று தாரிணி அக்கா சொன்னதை என் காதால் கேட்டேன். உடனே புறப்பட்டு வந்துவிட்டேன், எனக்கு இனி ஒரு குறையும் இல்லை. அக்கா இப்போது எங்கே? அவளைக் கொஞ்சம் வரச் சொல்லுங்கள். அவளுக்கு என் நன்றியைத் தெரிவிக்க வேணும்.” “வஸந்தியை அழைத்துக்கொண்டு வரத் தாரிணி போயிருக்கிறாள். நீ நினைப்பது போலெல்லாம் ஒன்றும் நடவாது, சீதா! என்னைப் பரிதவிக்க விட்டு நீ போவது கடவுளுக்கே பொறுக்காது!” என்றான் ராகவன். அதே சமயத்தில் கடவுளை நினைத்து, “பகவானே! இந்த ஒரு தடவை மட்டும் சீதாவைக் காப்பாற்றி விடு. அப்புறம் நான் யோக்கியமாய் நடந்து கொள்ளுகிறேன் இனிமேல் ஒரு பிசகும் செய்யமாட்டேன். சுயநலத்துடன் ஒருபோதும் நடந்து கொள்ள மாட்டேன்!” என்று மனமாரப் பிரார்த்தனை செய்தான். ராமேசுவரம் முதல் காசி வரையில் உள்ள கோயில் தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொண்டான். அந்த நிமிஷத்துக்கு முன்னால் ராகவன் எந்த நாளிலும் அவ்வளவு தீவிர ஆஸ்திகனாக இருந்ததில்லை. இஞ்செக்ஷன் மருந்து ஏற்றிய ஊசியுடன் டாக்டர் வந்தார். ஊசி குத்திவிட்டு, “சரி, நான் போய் வருகிறேன். காலையில் நிலைமை எப்படியிருக்கிறது என்று டெலிபோன் செய்யுங்கள்!” என்றார். டாக்டருடன் வாசல் வரையில் சென்ற பாமா திரும்பி வந்ததும் ராகவனைப் பார்த்து, “உங்கள் மனைவிக்கு உங்களிடம் ஏதாவது சொல்லிக்கொள்ள வேணுமா, மனதில் ஏதாவது ஆசை இருக்கிறதா என்று கேட்டு விடுவது நல்லது” என்றாள். ராகவன் கோபமுற்று, “இது என்ன நான்ஸென்ஸ்? நீங்கள் வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்தால் நலமாயிருக்கும்!” என்றான். அப்போது சீதா, “அவர் மேல் எதற்காக வீணில் கோபித்துக் கொள்கிறீர்கள்? அவர் கேட்கச் சொல்வது நியாயந்தான், என் மனதில் ஒரு ஆசை இருக்கத்தான் இருக்கிறது. நான் கண்ணை மூடிய பிறகு நீங்கள் தாரிணி அக்காவைக் கட்டாயம் கலியாணம் செய்து கொள்ள வேண்டும். அக்கா எனக்கு வாக்குக் கொடுத்திருக்கிறாள், அதை மீறமாட்டாள்” என்றாள். சற்று நேரத்துக்கெல்லாம் தாரிணியும் சூரியாவும் வஸந்தியுடன் வந்து சேர்ந்தார்கள். எத்தனை எத்தனையோ கஷ்டங்களைப் பார்த்திருந்த வஸந்திக்குத் தன் தாயாரின் நிலைமை எந்தவித உணர்ச்சியையும் தரவில்லை. பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள். “இத்தனை நாள் எங்கே அம்மா ஒளிந்து கொண்டிருந்தாய்?” என்றாள். சீதா தன்னுடைய துவண்ட கைகளைத் தூக்கிக் குழந்தையைத் தன் முகத்தோடு சாத்திக்கொள்ள முயன்றாள். ஆனால் அவளுடைய கையில் அதற்கு வேண்டிய பலம் இல்லை. அதைப் பார்த்த தாரிணி குழந்தையின் முகத்தைத் தாயின் முகத்தோடு சேர்த்து வைத்தாள். சீதா அண்ணாந்து நோக்கினாள், முகமூடி தரித்த உருவத்தைப் பார்த்து, மிக மெல்லிய குரலில், “இது யார்?” என்று கேட்டாள். “என்னை உனக்குத் தெரியவில்லையா, சீதா!” என்றாள் தாரிணி. அவள் யார் என்பதைக் குரலிலிருந்து சீதா தெரிந்து கொண்டாள். “வந்து விட்டாயா, அக்கா! ரொம்ப சந்தோஷம் என் மனது குளிர்ந்து விட்டது. நீ இவரிடம் பேசிக்கொண்டிருந்ததை நான் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தேன். எனக்கு இனிமேல் ஒரு கவலையும் இல்லை. ஆனால் முகத்தை ஏன் மூடிக் கொண்டிருக்கிறாய்? திறந்து விடு! அக்கா! நான் சாவதற்கு முன்னால் உன்னுடைய முகத்தை ஒரு தடவை பார்க்கவேணும். பார்த்துவிட்டால், அந்த ஞாபகமாகவே மேல் உலகத்துக்குப் போவேன். போகும்போது வானத்தில் பூரண சந்திரனைப் பார்த்து அக்காவின் முகத்தைப் போல் அழகாயிருக்கிறதா என்று ஒத்துப் பார்த்துக் கொண்டு போவேன்!…..” இப்படி பேசிக் கொண்டேயிருக்கையில் சீதாவின் கண்கள் தாமாக மூடிக்கொள்ளத் தொடங்கின. தாரிணி சீதாவின் கையைப் பிடித்து நாடி பார்த்தாள். மிக மெலிவாயும் அதிவேகமாயும் அடித்தது. கூண்டிலிருந்து கிளி பறந்து செல்லும் காலம் நெருங்கிவிட்டது என்பதைத் தாரிணி உணர்ந்தாள். “சீதா! இதோ என் முகத்திரையை எடுக்கிறேன். கண்ணைத் திறந்து ஒரு தடவை என்னைப் பார்! பயந்து போய் விடாதே! உன்னுடைய குழந்தை வஸந்தியை நான் காப்பாற்றுவதற்கு முயற்சித்த போது இந்த மாதிரி ஆயிற்று. ஆனால் இதற்காக நீ சிறிதும் வருத்தப்பட வேண்டாம்…….” இந்த வார்த்தை ஒன்றும் சீதாவின் காதில் விழவில்லை. திரை விலகி தாரிணியைப் பார்த்தவுடன் சீதாவின் முகம் அணையுந் தறுவாயில் தீபம் சுடர் விடுவதுபோல் காந்தி வீசிப் பிரகாசித்தது. முன்னைக் காட்டிலும் மெதுவான குரலில், வியப்பும் ஆனந்தமும் ததும்பிய குரலில் கூறியதாவது; “அக்கா! உன் முகந்தான் என்ன அழகாயிருந்தது? முன்னே நான் பார்த்த போது இருந்ததைக் காட்டிலும் இப்போது உன் முகத்தில் களை சொட்டிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட அழகை இந்த உலகத்தில் நான் பார்த்ததேயில்லை. தேவலோகத்திற்குப் போனால் அங்கேயும் உன்னைப் போன்ற ரூபவதியைப் பார்ப்பேனா என்பது சந்தேகந்தான். உன்னைப் பார்த்துக் காதலித்த என் கணவர் என்னைக் காதலிக்கவில்லையென்றால் அதில் அதிசயம் என்ன இருக்கிறது? நான் பாக்கியசாலி, அக்கா! ஒரு குறையும் இல்லாமல் மன நிம்மதியுடன் நான் போகிறேன், ஒருவரும் எனக்காகத் துக்கப்பட வேண்டாம்! சூரியா எனக்காக ரொம்ப வருத்தப்பட்டு உருகுவதாய்ச் சொல்வான். அவனை வருத்தப்பட வேண்டாம் என்று சொல்லு.” சீதா தன்னுடைய பெயநச் சொன்னது காதில் விழுந்ததும் சூரியா அருகில் வந்து அவள் முகத்துக்கு அருகில் குனிந்து, “சீதா! நான் இதோ இருக்கிறேன்” என்றான். அச்சமயம் சௌந்தரராகவன் கூடச் சூரியாவைத் தடுக்க முயலவில்லை. சீதா மிக மெல்லிய குரலில், “லலிதாவுக்கு கடிதம் எழுது; என்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டதாக எழுது!” என்றாள். “இவ்வளவுதானா, சீதா! எனக்கு நீ சொல்ல வேண்டியது வேறொன்றுமில்லையா?” என்றான் சூரியா! “இல்லை, வேறொன்றும் இல்லை சூரியா! நான் பாக்கியசாலி! சீக்கிரம் கலியாணம் செய்துகொள்!” என்றாள் சீதா. சீதா பாக்கியசாலிதான்; இல்லை என்று யார் சொல்ல முடியும்? சூரியா விம்மினான், சௌந்தரராகவன் கதறினான். தாரிணியும் வஸந்தியும் பாமாவும்கூடத் துயரத்தின் மிகுதியால் அலறி அழுதார்கள். ஆனால் சீதாவின் காதில் அதெல்லாம் விழவில்லை. அவளுடைய உணர்விலும் தோன்றவில்லை. சீதாவின் உயிர் அநித்தியமான உடலை விட்டுப் பிரிந்தது. ஆகாய வெளியில் மிதந்து சென்றது. மேலே மேலே மேலே போய்க்கொண்டே இருந்தது. வானவில்லின் வண்ணங்களிலே தோய்ந்து சென்றது. வெள்ளிய மேக மண்டலங்களின் வழியாகப் புகுந்து சென்றது. மந்தமாருதம் ஏந்திக் கொண்டு வந்த சுகந்த பரிமளத்தை முகர்ந்துகொண்டு சென்றது. இனிமையின் எல்லை என்று சொல்லக்கூடிய இசை இன்பத்தை அநுபவித்துக் கொண்டு சென்றது. சிறிது நேரத்துக்கெல்லாம் தேவலோகத்துப் பாரிஜாத மந்தார விருட்சங்களின் மலர்கள் பொலபொலவென்று உதிர்ந்தன. அவை சீதாவின் உயிரைச் சுற்றிச் சுழன்று கொண்டே வந்தன. தங்க நிறமும் ரோஜா நிறமும் மாந்தளிரின் நிறமும் கொண்ட மேனிகளுடனே கந்தர்வ கின்னரர்கள் வான வெளியில் ஆங்காங்கே நின்று "வருக! வருக! என்று இன்னிசையுடன் வரவேற்றார்கள். சீதாவின் உயிர் மேலே மேலே போய்க்கொண்டிருந்தது. அற்புத சௌந்தர்யம் வாய்ந்த தேவகணங்களின் உருவங்கள் மெல்லிய மேகத் திரைக்குள்ளே மறைந்து காணப்பட்டது. ஆகா! அந்த உருவங்களின் சிலவற்றைச் சீதாவுக்குத் தெரியும்; நன்றாகத் தெரியும். அதோ லைலாவும் மஜ்னுவும் ஆடிப் பாடிக்கொண்டு போகிறார்கள். அதோ சத்தியவானும் சாவித்திரியும் கைகோத்துக்கொண்டு உலாவுகிறார்கள். இதோ உல்லாசமாய் அன்னப் படகில் மிதந்து செல்கிறவர்கள் ரோமியோவும் ஜுலியத்துமாகவே இருக்க வேண்டும். நளனுக்கும் தமயந்திக்கும் என்ன அவசரமோ தெரியவில்லை! இறகு கட்டிக்கொண்டு அவர்கள் பறக்கிறார்கள். பறந்தால் பறக்கட்டும்; இவர்களையெல்லாம் பார்த்து இப்போது என்ன ஆகவேண்டும்? நாம் பார்க்க விரும்பியது அன்னை கஸ்தூரிபாயை அல்லவா? அவர் எங்கே இருப்பார்? சொர்க்கலோகங்களிலெல்லாம் மேலான சொர்க்கலோகத்திலேதான் இருப்பார்? - இன்னும் மேலே மேலே போக வேண்டியதுதான். ஆகா! இது என்ன பிரகாசம்? இது என்ன ஜோதி? தேஜோமயமான உருவம் ஒன்று எங்கிருந்தோ வருகிறதா? அடடா! அதோ போகிறதே? இவர்கள், - நம்மைச் சுற்றி நிற்கும் தேவ கந்தர்வ கின்னரர்கள், என்ன பேசிக் கொள்கிறார்கள்? மின்னலைப் போல் தோன்றி, கோடி சூரியர்களைப்போல் பிரகாசித்து, ராமபாணத்தைப்போல் விரைந்து செல்லும் வடிவத்தைச் சுட்டிக்காட்டி என்ன சொல்லிக் கொள்கிறார்கள்?- “தெரிகிறது. தெரிகிறது!” “காந்தி மகாத்மாவின் ஜோதி” என்றல்லவா ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்கிறார்கள்?- வான வெளியிலே பொழிந்த நறுமலர்களும் வீசிய மந்த மாருதமும், மிதந்து வந்த தேவகானமும் தேவர் தேவியரின் உபசரிப்பு, - எல்லாம் காந்தி மகாத்மாவுக்காகத்தான் போலும்! நான் பாக்கியசாலிதான்; சந்தேகமில்லை, மகாத்மாவின் ஆவி வானுலகம் செல்லும் அதே நாளில் நாமும் இங்கே வரும்படியான பேறு கிடைத்ததல்லவா? ஆனால் அவரை விடக்கூடாது! விட்டுப் பிரியக்கூடாது அந்த ஜோதி போன வழியே போனால் அன்னை கஸ்தூரிபாயைக் காணலாம். காந்திஜியின் ஆத்மா கஸ்தூரிபாயின் ஆத்மா இருக்கும் இடத்தைத் தேடிக்கொண்டு போகாமல் வேறு எங்கே போகும்? ஜோதி போன வழியிலேயே சீதாவின் ஆவியும் சென்றது. மேலே மேலே போய்க்கொண்டே இருந்தது. ஆனால் விரைவில் அந்த ஜோதி போன வழி தெரியாமல் போய் மறைந்துவிட்டது. ஆயினும் சீதாவின் ஆசை நீங்கவில்லை; நம்பிக்கை குன்றவில்லை. வானவெளியிலேயே போய்க் கொண்டேயிருந்தால் எப்படியும் அந்த ஜோதியைக் கண்டுபிடிக்காமலா போவோம்? சீதாவின் ஆவி பற்பல உலகங்களையும் தாண்டிக்கொண்டு சென்றது. நட்சத்திர மண்டலங்களைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டு சென்றது. ஆகா! எத்தனை உலகங்கள்! எத்தனை சூரியர்கள்! எத்தனை சந்திரர்கள்! எத்தனை நட்சத்திரங்கள்! ‘அகிலாண்ட கோடி’ என்று சொல்வது எவ்வளவு உண்மை? இவ்வளவையும் தாண்டி அப்பாலே போக முடியுமா? ‘அப்பாலுக்கு அப்பாலே’ என்று சொல்லக்கூடிய இடம் ஒன்று உண்டா? உண்டு; அவசியம் உண்டு, அத்தனை அண்டங்களையும் புவனங்களையும் சூரிய சந்திரர்களையும் கணக்கில்லா நட்சத்திர மண்டலங்களையும் தாண்டி வந்தாகிவிட்டது. இனி ஒரே நீல நிறத்து வானவெளிதான்! முடிவில்லாத வானவெளி; எல்லையில்லாத நீல நிறம்; ஆதியும் அந்தமும் இல்லாத ஆனந்த வெள்ளம். சீதா பாக்கியசாலி என்பதைக் குறித்துச் சந்தேகம் என்ன? நாற்பத்தொன்றாம் அத்தியாயம் - சூரியாவின் இதயம் சூரியா அடிக்கடி ஆத்ம பரிசோதனை செய்து கொள்வதுண்டு. தன்னுடைய வெளி மனம் என்ன நினைக்கிறது. தன்னுடைய அறிவு என்ன முடிவு சொல்கிறது. தன்னுடைய இதய அந்தரங்கத்தில் எத்தகைய ஆசை குடிகொண்டிருக்கிறது என்பதையெல்லாம் அலசி ஆராய்ந்து பார்ப்பான். எந்த விஷயத்திலேனும் மனதில் குழப்பமிருந்தால், மனத்திற்கும் அறிவுக்கும் இதயத்துக்கும் வேற்றுமை இருப்பதாகத் தோன்றினால், அந்த விஷயத்தைப் பற்றி தீர்க்கமாகச் சிந்தனை செய்வான். தன்னுடைய உணர்ச்சிகளில் உள்ள குழப்பத்தைப் போக்கித் தெளிவுபடுத்திக் கொள்ளும் பொருட்டுச் சில சமயம் அவன் ‘டைரி’ எழுதுவதும் உண்டு. பிப்ரவரி மாதம் 10-ம் தேதியன்று சூரியா தன்னுடைய ’டைரி’யில் பின்வருமாறு எழுதத் தொடங்கி னான். இன்று சீதாவின் பத்தாவது நாள் கிரியைகள் முடிவடைந்தன. அவளுடைய கணவன் சௌந்தரராகவன் பக்திசிரத்தை யுடன் வைதிகக் கிரியைகளைச் செய்தான். இத்தனை நாளும் வைதிகத்தில் இல்லாத பற்றுத் திடீரென்று ராகவனுக்கு ஏற்பட்டிருப்பதை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. ராகவனுடைய சிரத்தையைக் காட்டிலும் வேடிக்கை என்னவென்றால், அந்தப் புண்ணியவதி பாமா காட்டிய வைதிக சிரத்தைதான். சீதாவின் சரமக் கிரியைகளையெல்லாம் அவள் தான் நடத்தி வைத்தாள் என்று சொல்ல வேண்டும். ராகவனுக்கு அது விஷயத்தில் கொஞ்சங்கூடக் கஷ்டமோ கவலையோ ஏற்படாமல் பாமா தன்னுடைய வீட்டிலேயே சகலவசதிகளும் செய்து கொடுத்தாள். சீ! இது என்ன வெட்கக்கேடு! இதுவும் ஒரு மானிட ஜன்மமா? பெண்டாட்டியைப் பறிகொடுத்தவன் கொஞ்ச நாளைக்காவது காத்திருக்கக் கூடாதா? அதற்குள்ளே இப்படி நாலு பேர் பார்த்துச் சிரிக்கும்படி நடந்து கொள்ள வேண்டுமா? சீதா! இப்பேர்ப்பட்ட இதயமற்ற கிராதகனிடமிருந்து விடுதலையடைந்து நீ போய்ச் சேர்ந்தாயே? யமன் கருணையில்லாதவன் என்று சொல்லுவது எவ்வளவு அறிவீனம்? உன்னை யமன் கொண்டு போனதைப் போல் கருணையுள்ள செயல் வேறு என்ன இருக்க முடியும்?…. சீதா விஷயத்தில் என்னுடைய கடமையைச் சரிவரச் செய்துவிட்டேனா? என் அத்தைக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேனா? இந்த எண்ணம் எனக்கு அடிக்கடி தோன்றிக் கொண்டுதானிருக்கும். வாழ்நாள் உள்ள வரையில் அந்தக் கேள்விகள் மனதில் உதயமாகிக் கொண்டுதானிருக்கும். ஆயினும் என்னாலியன்றவரை என் கடமையைச் செய்துதானிருக்கிறேன். என் உயிரைத் திரணமாக மதித்துச் சீதாவைக் காப்பாற்றி யிருக்கிறேன். ஆனால் என்ன பிரயோஜனம்! சீதாவுக்காக நான் செய்த ஒவ்வொரு உதவியும் அவளுக்கு அபகாரமாகவே முடிந்திருக்கிறது. உண்மையில் அவளுடைய துயர வாழ்க்கைக்குக் காரணமானவன் நானே. அத்திம்பேரின் தந்தியை மட்டும் அன்று நான் மறைத்திரா விட்டால்…. சீதாவின் தகப்பனார், - அத்திம்பேர் துரைசாமி ஐயரின் - வாழ்க்கையும் முடிந்து விட்டது. பரிதாபம்! பரிதாபம்!- சீதா பல தடவை சொன்னாளே? அந்தத் துப்பாக்கியை அவர் தூர எறிந்திருக்கக் கூடாதா? அந்தத் துப்பாக்கியினால் அவருக்கு சாவு என்று ஏற்பட்டிருக்கும்போது எப்படித் தூர எறிந்திருக்க முடியும்! ஒருவிதத்தில் பார்த்தால் அவருக்கு இது நல்ல முடிவுதான்! அவருடைய இரு புதல்விகளில் ஒருத்தி செத்துவிட்டாள். இன்னொரு பெண் சாவைக் காட்டிலும் பயங்கரமான கதியை அடைந்திருக்கிறாள். இத்தகைய கொடூரத்தை எந்தத் தகப்பனார்தான் சகிக்க முடியும்? இதற்கெல்லாம் காரணம் தன்னுடைய தீச்செயல்களே என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு செத்துப்போனார். பாவம்! நான் பானிபத் பட்டணத்துக்குப் போவதற்குள்ளே அனாதைப் பிரேத சம்ஸ் காரத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டார்கள். மனிதருக்கு இறந்த பிறகு நல்ல யோகம். காந்தி மகான் காலமான செய்தியைக் கேட்டுத் துக்கம் தாங்க முடியாமல் சுட்டுக்கொண்டு செத்தார் என்று பத்திரிகைகளில் செய்தி வந்திருந்தது. இதுவும் ஒரு விதமான யோகந்தானே!….. சீதா இறந்துவிட்டாள்; துரைசாமி ஐயரும் போய்விட்டார் ஆனால் தாரிணி உயிரோடிருக்கிறாள். செத்துப் போனவர்களை மறந்துவிட்டு உயிரோடிருப்பவர்களைப் பற்றி கவனிக்க வேண்டும். தாரிணி விஷயத்தில் நான் என்னுடைய கடமையைச் செய்யத் தயாராயிருக்கிறேனா? என்னுடைய இதயத்தின் உணர்ச்சியும் உள்ளத்தில் ஆசையும் என் அறிவு சொல்லும் முடிவும் ஒன்றாயிருக்கின்றனவா? தாரிணியிடம் இன்றைக்கு நான் சொன்ன வார்த்தைகள் எல்லாம் சத்தியமானவை தானா? என் இதயத்திலிருந்து உண்மையாகச் சொன்னவைதானா? அல்லது வீம்புக்காகவோ ஜம்பத்துக்காகவோ அவசரப் பட்டுச் சொல்லி விட்டேனா? இன்று தான் சொன்ன வார்த்தைகளுக்காகப் பிறகு எக்காலத்திலேனும் வருத்தப் படுவேனா?…. காந்தி மைதானத்தில் பழைய இடத்தில் இன்று மாலை நாங்கள் சந்தித்தோம். எங்கள் வருங்கால வாழ்வைப் பற்றிப் பேசினோம். அந்தச் சம்பாஷணையை ஒருவாறு இங்கே எழுதப் பார்க்கிறேன். எழுதிய பிறகு படித்துப் பார்த்தால் ஒருவேளை என்னுடைய பிசகை நானே தெரிந்து கொள்ள முடியும் அல்லவா? முதலில் கொஞ்ச நேரம் சீதா, துரைசாமி ஐயர் - இவர்களுடைய பரிதாப மரணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். தாரிணி விம்மினாள்! அழுதாள், அவளுடைய கண்ணிலிருந்து கன்னத்தில் வழியும் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்ற ஆர்வம் என் மனதில் எழுந்தது. ஆனால் அதற்குத் துணிவு வரவில்லை. ஏனெனில் அவள் முகத்தை முகமூடியால் மறைத்துக் கொண்டிருந்தாள். எதற்காக என்றுதான் எனக்குத் தெரியுமே? அன்றைக்கு - சீதாவின் உயிர் பிரிந்த அன்றைக்கு, - ஒரு நிமிஷம் பார்த்தேன். ஐயோ! அதை நினைக்கவே பயங்கரமாயிருக்கிறது. ஆயினும் அதனாலே தாரிணியின் விஷயத்தில் என்னுடைய மனம் சிறிதாவது சலித்ததா? ஒரு நாளும் இல்லை. அவளுடைய முகத்தை விகாரப்படுத்துவனவென்று மற்றவர்கள் நினைக்ககூடிய காரியங்கள் அவளுடைய சௌந்தர்யத்தை அதிகமாக்குகின்றன என்றே நான் எண்ணுகிறேன். சீதா உயிர் விடும் தருவாயில் அவளுடைய கண்களுக்கு அப்படித்தானே தோன்றியது? என்றாலும், தாரிணியின் முகமூடியை நீக்குவதற்கோ கண்களைத் துடைப்பதற்கோ எனக்குத் தைரியம் வரவில்லை. ஒருவாறு விம்மலும் அழுகையும் நின்ற பிறகு ‘எத்தனை நேரம் போனதைப் பற்றியே வருத்தப்பட்டுக் கொண்டிருப்பது? வருங்காலத்தைப் பற்றி யோசிக்க வேண்டாமா? என்ன செய்வதாக உத்தேசம்?’ என்று நான் கேட்டேன். பேச்சை அப்படித் திருப்பினால் அவளுடைய அழுகை நிற்கும் என்பதற்காகத்தான் அவ்விதம் கேட்டேன். ‘எனக்கு ஒரு உத்தேசமும் இல்லை. யோசனை செய்யும் சக்தியும் இல்லை, நீங்கள்தான் சொல்லவேண்டும். உங்களுடைய வருங்காலத் திட்டம் என்ன?’ என்று தாரிணி கேட்டாள். ‘என்னுடைய திட்டத்தை இப்போது எப்படிச் சொல்ல முடியும்? உன்னுடைய உத்தேசம் தெரிந்த பிறகுதான் என்னுடைய திட்டம் தயாராகும்’ என்றேன். ‘எந்த விஷயத்தில் என்னுடைய உத்தேசம் தெரியவேண்டும்? என் தந்தையைப்போல் உயிரை விட்டுவிட எனக்கு இன்னும் தைரியம் வரவில்லை!’ என்றாள் தாரிணி. ‘உயிரை விடுவதற்குத் தைரியம் வேண்டாம்; உயிரோடிருப்பதற்குத்தான் தைரியம் வேண்டும்’ என்று நான் சொன்னேன். ‘அந்தத் தைரியம் எனக்கு வேண்டிய அளவு இருக்கிறது. மேலும், வஸந்தி விஷயமான பொறுப்பு ஒன்றும் எனக்கு இருக்கிறதல்லவா?’ என்றாள் தாரிணி. ‘வஸந்தி விஷயமான பொறுப்பும் இருக்கிறது. சீதாவுக்குக் கொடுத்த வாக்குறுதியும் இருக்கிறது. தாரிணி! அந்த வாக்குறுதியின்படி ராகவனைக் கலியாணம் செய்துகொள்ள விரும்பினால் அதற்கு நான் குறுக்கே நிற்க மாட்டேன்!’ என்றேன். தாரிணி சிரித்தாள், அந்த நேரத்தில் அவள் அவ்விதம் சிரித்தது எனக்குப் பிடிக்கவில்லை. ‘என்னத்திற்குச் சிரிப்பு’ என்று கேட்டேன். ‘நான் விரும்பினால் மட்டும் என்ன பிரயோசனம்? அதற்குச் சௌந்தரராகவன் அல்லவா இஷ்டப்பட வேண்டும்’ என்றாள். ’இது என்ன பேச்சு? உன்னை விரும்பி மணந்து கொள்ள இஷ்டப்படாத மூடன் இந்த உலகத்தில் யார் இருக்க முடியும்? என்றேன். ‘சூரியா! நீங்கள்கூட இப்படிப் பொய் வார்த்தை சொல்லுவது எனக்கு அதிசயமாயிருக்கிறது. இந்த முகமூடியை நீக்கி என் முகத்தின் கோர ஸ்வரூபத்தைப் பார்த்த யார்தான் என்னை மணந்து கொள்ளத் துணிவார்கள்?’ என்றாள் தாரிணி. ‘மன்னிக்க வேண்டும், தாரிணி! ராகவனுடைய சுபாவம் தெரிந்ததும் நான் அவ்விதம் எதிர்பார்த்தது பிசகுதான்!’ என்றேன். ‘அவரை மட்டும் சொல்வானேன்! இந்த உலகத்தில் பிறந்த எந்தப் புருஷனும் இப்படிப்பட்ட கோர முகம் உடையவளைக் கலியாணம் செய்து கொள்ள மாட்டான்’ என்றாள். ‘அப்படிச் சொல்ல வேண்டாம், சௌந்தரராகவனோடு எல்லோரையும் சேர்த்துவிட வேண்டாம். ராகவனுக்கு முகத்தின் அழகு ஒன்றுதான் தெரியும்; அகத்தின் அழகைப்பற்றி அவன் அறிய மாட்டான். உண்மைக் காதல் என்பது இன்னதென்று அவனுக்குத் தெரியவே தெரியாது. ஆக்ரா கோட்டையில் அக்பர் சக்கரவர்த்தியின் அரண்மனையில் முதன் முதலில் பார்த்ததிலிருந்து நான் உன்னைக் காதலித்து வருகிறேன். உன் முகத்தை நான் காதலிக்கவில்லை; உன்னைக் காதலிக்கிறேன்!’ என்று ஆவேசமாகப் பேசினேன். தாரிணி சற்று மௌனமாயிருந்தாள். பிறகு, ‘சூரியா! உங்களுடைய காதலைப் பற்றி எனக்கு எப்போதும் சந்தேகம் இல்லை. ஆனால் காதல் வேறு; கலியாணம் வேறு. கலியாணம் என்றால் புருஷன் மனைவியின் கரம் பிடிக்க வேண்டும் அல்லவா? பிடிப்பதற்கு கை இல்லாவிட்டால்…..?’ என்றாள். நான் குறுக்கிட்டு, ‘ராகவனுக்கு அது ஒரு தடையாயிருக்கலாம். கை கோத்துக் கொண்டு ’பார்ட்டி’ களுக்குப் போக முடியாததை எண்ணி அவன் கலியாணம் வேண்டாம் என்று சொல்லலாம். ஆனால் என் விஷயத்தில் அது ஒரு தடையாகாது. கரம் பிடிப்பதுதான் கலியாணம் என்று நான் கருதவில்லை, மனம் பிடிப்பதுதான் கலியாணம். நம் இருவருடைய மனமும் ஒத்திருப்பதுபோல் வேறு எந்தத் தம்பதிகளின் மனமும் ஒத்திருக்கப் போவதில்லை. வேறு என்ன தடை? நீ முடிவு சொல்ல வேண்டியதுதான்; உடனே கலியாணத்துக்குத் தேதி குறிப்பிட்டு விடலாம்!’ என்றேன். உணர்ச்சி மிகுதியினால் தொண்டை அடைக்க, ஆனந்த மிகுதியினால் நாத் தழுதழுக்க, தாரிணி, ‘சூரியா! உங்களைப் போன்ற உத்தமர் ஒருவர் இந்த உலகத்தில் இருக்கிறார் என்பதை நினைக்கும்போது எனக்கும் இந்த உலகத்தில் உயிரோடிருக்கலாம் என்ற ஆசை உண்டாகிறது. உங்களுடைய உயர்ந்த நோக்கத்தை நான் அறிந்து கொண்டேன். ஆயினும் யோசனை செய்வதற்கு எனக்குச் சில நாள் அவகாசம் கொடுங்கள்!’ என்று சொன்னாள். மேலே நான் எழுதியிருப்பதையெல்லாம் இன்னொரு தடவை படித்துப் பார்த்தேன். தாரிணியிடம் நான் கூறிய வார்த்தையெல்லாம் உண்மைதானா என்று சிந்தித்தேன். என் இதயத்தின் ஆழத்தை எட்டிச் சோதனை செய்து பார்த்தேன், சந்தேகமே இல்லை. தாரிணியிடம் நான் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மைதான். அவளிடம் நான் கொண்ட காதலுக்கு ஆதி அந்தமில்லை; அழிவில்லை; முடிவில்லை. அது உடம்பைப் பற்றிய காதல் அல்ல? முகத்தையோ நிறத்தையோ பற்றிய காதல் அல்ல; மனதுக்கு மனம் கொள்ளும் காதல் அல்ல, இரண்டு ஆத்மாக்கள் இதயாகாசத்தில் ஒன்று சேரும்போது ஏற்படும் புனிதமான தெய்வீகக் காதல். எங்களுடைய காதலுக்கு ஒப்புமில்லை; உவமையும் கிடையாது. சீதாவின் பேரிலும் முதல் தடவை அவளை நான் பார்த்த நாளிலிருந்து எனக்குப் பாசம் ஏற்பட்டது உண்மைதான். அதற்கும் இதற்கும் எவ்வளவோ வித்தியாசம். சீதாவுக்காக நான் என் உயிரைக் கொடுக்கத் தயாராயிருந்தேன். ஆனால் என் இதயத்தை அவளுக்குக் கொடுக்கத் தயாராயில்லை. சௌந்தரராகவனிடம் வந்த கோபத்தினால் சில சமயம் சீதாவின் விடுதலைக்கு நான் விசித்திரமான சாதனங்களை எண்ணியதுண்டு. ‘விவாகப் பிரிவினை செய்வித்துச் சீதாவை நான் கலியாணம் செய்து கொண்டால் என்ன?’ என்று அசட்டு எண்ணம்கூட ஒரு தடவை உண்டாயிற்று. அதை மனம் விட்டு அத்திம்பேரிடங்கூட ஒரு தடவை சொல்லிவிட்டேன். ஆனால் என் மனதில் ஒரு லவலேசமும் சீதா விஷயத்தில் களங்கம் ஏற்பட்டதில்லை. இது சௌந்தரராகவனுக்கும் நன்றாய்த் தெரியும். ஆகையினால்தான் அவனுக்குச் சீதாவும் நானும் நெருங்கிப் பழகுவதில் கோபம் உண்டாவதேயில்லை. தாரிணிக்கும் எனக்கும் சிநேகம் என்பது பற்றித்தான் அவன் குரோதம் கொண்டான். அந்தக் கோபத்தினால் என்னைக் கொன்றுவிடவும், போலீஸாரிடம் என்னைப் பிடித்துக்கொடுத்து விடவும், ராகவன் யத்தனித்தான். அவனுக்கு இப்போது படுதோல்வி தெய்வாதீனமாக நேர்ந்துவிட்டது. உடலழகு ஒன்றையே கருதும் அந்தச் சுயநலம் பிடித்த தூர்த்தன், இனி என்னுடன் போட்டியிட முடியாது. அவனுடைய காதல் எல்லாம் வெறும் பொய் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. அவன் கொடுத்துவைத்தது அவ்வளவுதான். அந்தப் பாமாவையே அவன் கட்டிக்கொண்டு அழட்டும்! தாரிணி இனிமேல் என்னுடையவள்; எனக்கே அவள் முழுதும் உரியவள். என்னிடமிருந்து இனி யாரும் அவளை அபகரிக்க முடியாது. இதை நினைத்தால் எனக்குக் குதூகலமாய்த் தானிருக்கிறது. சீதா இறந்துவிட்டதையும் அவள் தகப்பனார் சுட்டுக் கொண்டு செத்ததையும் நினைக்கும்போது கஷ்டமா யிருந்தாலும், இனித் தாரிணி எனக்கே உரியவள் என்பதை நினைத்தால் உற்சாகமாயிருக்கிறது. கலியாணத்துக்குத் தேதி குறிப்பிட வேண்டும்; காஷ்மீருக்குப் போக ஏற்பாடு செய்ய வேண்டும். நாற்பத்திரண்டாம் அத்தியாயம் - லலிதாவின் மன்னி தேவபட்டணத்துத் தேரோடும் வீதியில் எதிர் எதிராக நின்ற இரு மச்சு வீடுகளின் வாசலிலும் இப்போது போர்டு பலகைகள் தொங்கவில்லை. அட்வகேட் ஆத்மநாதய்யரைப் பின் தொடர்ந்து அவருடைய நண்பர் தாமோதரம்பிள்ளையும் தேவலோக நீதிமன்றத்தில் வழக்காடுவதற்குச் சென்றுவிட்டார். “ஆத்மநாதய்யர், பி.ஏ. பி.எல்.” என்ற போர்டு தொங்கிய இடத்தில் சில காலம் “ஏ. பட்டாபிராமன், சேர்மன், முனிசிபல் கௌன்சில்” என்ற போர்டு தொங்கிக்கொண்டிருந்தது. ஆனால் அதைச் சீக்கிரத்திலேயே எடுத்துவிட வேண்டியதாயிற்று. ஏனெனில், பட்டாபிராமனுக்குப் போட்டியாக நின்ற கள்ள மார்க்கெட் முதலாளி பட்டாபிராமனுடைய தேர்தலில் ஊழல் நடந்ததாகவும் அந்தத் தேர்தல் செல்லுபடியாகாதென்றும் வழக்குத் தொடர்ந்தார். பணத்தின் பலத்தினால் கள்ள மார்க்கெட் ஆசாமியின் பக்கம் தீர்ப்பாயிற்று. பட்டாபிராமனுடைய சேர்மன் பதவி போயிற்று. அப்பீல் பண்ணும்படி சிலரும் மறுபடியும் தேர்தலுக்கு நிற்கும்படி சிலரும் பட்டாபிராமனுக்கு உபதேசித்தார்கள். லலிதா மட்டும், “போதும், போதும், ஒரு தடவை தேர்தலுக்கு நின்று பட்டதெல்லாம் போதும்!” என்று சொன்னாள். அவளுடைய யோசனையை ஏற்றுக்கொண்டு, பட்டாபிராமன் அப்பீல் செய்யவும் மறு தேர்தலுக்கு நிற்கவும் கண்டிப்பாக மறுதளித்து விட்டான். தாமோதரம்பிள்ளையின் மரணத்தறுவாயில் ஊருக்கு வந்து சேர்ந்த அமரநாதன் திரும்பக் கல்கத்தாவுக்குப் போக விரும்பவில்லை. நண்பர்கள் இருவரும் சுதந்திர இந்தியாவின் பொருள் வளத்தைப் பெருக்குவதற்கு ஏதேனும் தொழில் செய்யவேண்டும் என்று யோசனை செய்து கொண்டிருந்தபோது காந்தி மகாத்மா சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி வந்து அவர்களைக் கலக்கத்தில் ஆழ்த்தி விட்டது. நாள்கணக்காக அந்தச் சம்பவத்தைப் பற்றியே அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்களே தவிர, வேறு எதைப் பற்றியும் சிந்தனை செய்ய ஓடவில்லை. இந்த நிலைமையிலேதான் சீதாவின் மரணத்தைப்பற்றிய செய்தியும் வந்து அவர்களுடைய கலக்கத்தை அதிகமாக்கியது. கல்கத்தா சாலையில் மூர்ச்சையடைந்து கிடந்த சீதாவை எடுத்துச் சென்று உயிரளித்துக் காப்பாற்றியவனான அமரநாத், அவளுக்கு முடிவில் நேர்ந்த கதியை அறிந்து பெரிதும் பரிதாபப்பட்டான். பட்டாபிராமனோ சீதா தன் வீட்டில் தங்கியிருந்தபோது வாழ்க்கை எவ்வளவு குதூகலமாயிருந்தது என்பதையும், உணர்ச்சி வசப்பட்டுத் தான் செய்த சிறு தவறினால் அவளுக்கு நேர்ந்த கஷ்டங்களையும் நினைத்து நினைத்து வருந்தினான். சீதாவிடமிருந்த நல்ல குணங்களையும் துர்க்குணங்களையும் பற்றி அந்த நண்பர்கள் இருவரும் தத்தம் அபிப்பிராயங்களை வெளியிட்டு ஒத்துப் பார்த்துக் கொண்டார்கள். ஆனால் அவர்களுடைய தர்ம பத்தினிகளான லலிதாவும் சித்ராவும் சீதாவிடம் எந்தவிதமான துர்க்குணமும் இருந்ததாக ஒப்புக்கொள்ளவில்லை. லலிதா எல்லாத் தவறுகளையும் தன் பேரிலேயே போட்டுக்கொண்டு பச்சாதாபப்பட்டாள். சீதாவுக்கு நேர்ந்த கஷ்டங்களுக்கெல்லாம் தானே காரணம் என்று சொல்லிச் சொல்லிக் கண்ணீர் விட்டாள். சௌந்தரராகவன் தன்னைப் பார்க்க வந்த இடத்திலேதான் சீதாவைப் பார்த்துக் கலியாணம் செய்து கொண்டான்? தான் பட்டிருக்க வேண்டிய கஷ்டங்களையெல்லாம் அவனைக் கலியாணம் செய்து கொண்டு சீதா அல்லவா அனுபவித்தாள்? அப்படிப்பட்டவள் தன்னுடைய சொந்த மனக் கஷ்டங்களை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இங்கே இருந்த சமயம் எவ்வளவு சந்தோஷமாக இருந்தாள்? அவள் இருந்தபோது தன் வீடு எவ்வளவு கலகலப்பாக இருந்தது? வாழ்க்கையே ஒரு புது மெருகு பெற்று ஆனந்த கோலாகலமாக மாறியிருந்ததே! அப்படிப்பட்டவளை அநாவசியமாகச் சந்தேகித்து வீண் பழி சொல்லி நடுராத்திரியில் வீட்டை விட்டு ஓடும்படி செய்தேனே? அந்தப் பாவத்துக்காகக் கடவுள் என்னை என்னமாதிரி தண்டிப்பாரோ தெரியவில்லையே? - இப்படியெல்லாம் ஓயாது புலம்பிய லலிதாவுக்கு அவளுடைய தோழி சித்ரா பலவிதமாக ஆறுதல் சொன்னாள். “நீயும் நானும் என்னடி செய்யக் கிடக்கிறது? அவரவர்கள் தலைவிதிப்படியல்லவா எதுவும் நடக்கிறது?” என்றாள் சித்ரா. “அழகாயிருக்கிறது நீ சொல்லுகிறது! எல்லாம் தலைவிதி என்றால் பாவ புண்ணியமே கிடையாதா? காந்தி மகாத்மா இறந்ததும் அவருடைய தலைவிதிதானா? அவரைச் சுட்டுக் கொன்ற மகாபாவியின் பேரில் குற்றம் ஒன்றும் இல்லை என்றுகூடச் சொல்வாயோ?” என்றாள் லலிதா. “எதற்கும் எதற்கும் உவமானம் சொல்கிறாய், லலிதா! காந்தி மகாத்மா இறந்தது அவருடைய தலைவிதி என்றால், அவரைக் கொன்றவனைத் தண்டித்தால் அதுவும் அவன் தலைவிதிதானே? நாம் செய்யும் காரியங்களில் பாவ புண்ணியம் பார்த்துச் சரியான காரியத்தைச் செய்யவேண்டும். அப்புறம் நடக்கிறது அவரவர்களின் தலைவிதிபோல் நடக்கும்!” என்றாள் சித்ரா. “சில பேர் இந்த உலகத்தில் பாவ புண்ணியம் பார்த்து நல்ல காரியங்களையே செய்து வருகிறார்கள். ஆனாலும் அவர்கள் கஷ்டப்பட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். வாழ்க்கையெல்லாம் சந்தோஷமே யில்லாமல் கஷ்டப்பட்டு சாகிறார்கள். இது அவர்கள் தலைவிதியா? பகவானுடைய செயலா? உன்னுடைய தத்துவம் எனக்கு ஒன்றுமே புரியவில்லை!” என்றாள் லலிதா. “முதலாவது நீ சொல்கிறதே தப்பு. வாழ்க்கையெல்லாம் சந்தோஷமில்லாமல் கஷ்டப்பட்டுச் சாகிறார்கள் என்கிறாய், ஏன் அப்படிச் சாகிறார்கள்? வெளிப்பார்வைக்கு நமக்கு அப்படித் தோன்றலாம்; எல்லாருடைய வாழ்க்கையிலும் சந்தோஷமும் துக்கமும் மாறி மாறித்தான் வருகின்றன!” “இல்லவே இல்லை! சீதாவையே பாரேன்! வாழ்க்கையெல்லாம் அவள் கஷ்டப்பட்டுக் கடைசியில் செத்தும் போனாளே?” "சீதா சந்தோஷமென்பதையே அறியாமல் செத்துப் போனாள் என்றா சொல்லுகிறாய்? சுத்தத் தவறு, லலிதா! நானும் சீதாவுடன் கொஞ்சம் பழகியிருக்கிறேன். அவள் சந்தோஷப்பட்டதும் அதிகம்; துக்கப்பட்டதும் அதிகம். இந்த உலகத்தில் சிலருடைய வாழ்க்கை சந்தோஷமும் இல்லாமல் துக்கமும் இல்லாமல் எப்போதும் சப்புச் சவுக்கென்று இருந்து கழிந்து விடுகிறது. அவர்கள்தான் இந்த உலகத்தில் பாக்கியசாலிகள் என்று என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. வங்காளத்து மகாகவி ரவீந்திரநாத் தாகூர் என்ன சொல்கிறார் தெரியுமா? ‘ஆண்டவனே? எனக்கு வேறு ஒரு பாக்கியமும் இந்த உலகத்தில் வேண்டாம்; கண்ணீர் பெருக்கி அழும் பாக்கியத்தைக் கொடு!’ என்று கடவுளை வரம் கேட்கிறார். துக்கமும் சந்தோஷமும் கலந்த வாழ்க்கைதான் உண்மையான வாழ்க்கை. காவியங்கள், இதிகாசங்கள், கதைகள், - எல்லாவற்றையும் பார்! கதாநாயகர்கள்- கதாநாயகிகளில் கஷ்டப்படாதவர்கள் யார்?" “சீதாவின் வாழ்க்கையும் ஒரு கதையாகத்தான் முடிந்து விட்டது. சித்ரா! உனக்குத் தெரியுமோ என்னமோ? சீதாவுக்கு அந்த நாளிலிருந்தே கதை என்றால் ரொம்பப் பிரியம். ராஜம்பேட்டைக் குளத்தங்கரையில் முன்னிலவு எரிக்கும் இரவுகளில் அவளும் நானும் கதைபேசிக் கழித்த நாட்களை நினைத்தால் எனக்குப் பகீர் என்கிறது. எத்தனை எத்தனை கதைகள் சொல்வாள்? லைலா மஜ்னுன் கதை, ரோமியோ ஜுலியட் கதை, அனார்கலியின் கதை, - தமயந்தி நளன் கதை, சகுந்தலை துஷ்யந்தன் கதை இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டிருப்பாள். கதை சொல்லும் போதெல்லாம் தானே அந்தக் கதாநாயகி என்று நினைத்துக்கொண்டுவிடுவாள். பாவம்! அவளுக்கா இப்படிப்பட்ட கதி வரவேண்டும்? அவள் எத்தனை எத்தனையோ கனவு கண்டாள்! ஒரு கனவும் பலிக்காமல், ஒரு சுகத்தையும் அநுபவிக்காமல் போய் விட்டாளே?” என்று சொல்லிவிட்டு லலிதா ’ஓ’வென்று அழுதாள். சித்ரா அவளைச் சமாதானப்படுத்த முயன்றாள். நல்ல வார்த்தை சொல்லிப் பயன்படாமற் போகவே கோபமாகவும் பேசினாள். கடைசியாக, சீதாவுக்காக இவ்வளவு வருத்தப்பட்டுக் கண்ணீர் விடுகிறாயே? அவளுடைய தமக்கையைப் பற்றிக் கொஞ்சம் அநுதாபங் காட்டக் கூடாதா? செத்துப் போன சீதாவைக் காட்டிலும் ஒரு கண்ணையும் ஒரு கையையும் இழந்து உயிரோடு இருக்கிறாளே, அவளுடைய கதி இன்னும் பரிதாபம் இல்லையா?" என்றாள். லலிதாவின் அழுகையும் கண்ணீரும் நின்றன. “அதை நினைத்தால் ரொம்பப் பரிதாபமாய்த்தானிருக்கிறது. என் மூத்த அத்தங்காளை நான் பார்த்ததேயில்லை. முதன் முதலில் பார்க்கும்போது இப்படிப் பார்க்க வேண்டுமா என்று கஷ்டமாயிருக்கிறது!” என்று சொன்னாள் லலிதா. “இதிலேகூட உன்னுடைய மனக் கஷ்டத்தையே பார்க்க வேண்டுமா, லலிதா! அடுத்தாற்போல் உன் தமையன் சூரியாவைப் பார்! தீரன் என்றால் அவன் அல்லவா தீரன்? அப்படி அங்கஹீனமானவளைக் கலியாணம் செய்து கொள்கிறேன் என்று சொல்ல யாருக்குத் துணிச்சல் வரும்! உன் அகத்துக்காரரும் சரி, என் அகத்துக்காரரும் சரி, பத்துக் காத தூரம் ஓடிப் போவார்கள். சீதாவின் கணவன் இருக்கிறானே, அந்த மகராஜன் அவனைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை! கல்கத்தாவிலே அவன் சுரம் வந்து படுத்தபோது எனக்குக் கொஞ்சம் இரக்கமாயிருந்தது. இப்போது என்ன தோன்றுகிறது, தெரியுமா? அவன் எதற்காகப் பிழைத்தான், கல்கத்தாவிலே செத்துப் போன அத்தனை ஆயிரம் பேரோடு அவனும் தொலைந்து போயிருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது.” “அதெல்லாம் சரிதான், சித்ரா! அவர்கள் எல்லாரும் பொல்லாதவர்களாகவே இருக்கட்டும். சூரியா இந்த விஷயத்தில் செய்கிற காரியம் சரியா? எனக்கென்னமோ சரியாகத் தோன்றவில்லை. அப்படியாவது என்ன கலியாணம் வேண்டிக் கிடந்தது! ஒரு கையும் ஒரு கண்ணும் இல்லாதவளைக் கலியாணம் செய்து கொள்ளவாவது? ஊருக்கெல்லாம் பரிகாசமாய்ப் போய்விடும்?” என்றாள் லலிதா. “அது உனக்கும் ரொம்ப அவமானமாகத்தான் இருக்கும்! ஒரு கண்ணும் ஒரு கையும் இல்லாதவளை மன்னி என்று அழைக்க உனக்கு வெட்கமாயிராதா? ஆனால் லலிதா! உன்னை அப்படியெல்லாம் சூரியா அவமானப்படுத்த மாட்டான். இங்கே தாரிணியை அழைத்துக்கொண்டு வரவே மாட்டான். அப்படி வருவதாயிருந்தால் நீ ராஜம்பேட்டைக்குப் புறப்பட்டுப் போய் விடு! வந்தவர்களை நான் நன்றாய்த் திட்டித் திருப்பி அனுப்பி விடுகிறேன். அந்த வெட்கங்கெட்ட மூளிகள் இங்கே எதற்காக வரவேண்டும்?” என்று சித்ரா லலிதாவை ஏசுகிற பாவத்தில் பேசினாள். “அவ்வளவு கொடுமையானவள் அல்ல நான். இருந்தாலும் சூரியாவுக்கு இப்படியா ஒரு கலியாணம் என்று நினைத்தால் வருத்தமாய்த்தானிருக்கிறது. அம்மாவுக்கு இது தெரிந்தால் உயிரையே விட்டு விடுவாள்.” “உயிரை விட்டால் விடட்டுமே! உலகத்தில் எத்தனையோ பேர் செத்துப் போகிறார்கள்! நிமிஷத்துக்கு லட்சம் பேர் சாகிறார்கள்! காந்தி மகானே போய்விட்டார். உன் அம்மா இருந்து என்ன ஆகவேணும்? சூரியாவைப் போன்ற பிள்ளையைப் பெறுவதற்கு உன் அம்மா தபஸ் செய்திருக்க வேண்டும். அதை அவள் தெரிந்து கொள்ளாவிட்டால் யாருடைய தப்பு? நீயும் அவளோடு சேர்ந்து ஏன் அழ வேண்டும்? நானாயிருந்தால் இப்பேர்பட்ட தமையனைப் பெற்றதையெண்ணி இறுமாந்து போவேன். ‘என் அண்ணனுக்கு நிகர் இல்லை’ என்று ஊரெல்லாம் தம்பட்டம் அடிப்பேன். எங்கே லலிதா! சூரியாவின் கடிதத்தில் அந்தப் பகுதியை மட்டும் எனக்கு இன்னொரு தடவை வாசித்துக் காட்டடி!” கீழே கிடந்த கடிதத்தை லலிதா எடுத்து ஒரு தடவை மேலெழுந்தவாரியாகப் பார்த்தாள். அவளுடைய கண்களில் துளித்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, கடிதத்தில் பின் வரும் பகுதியைப் படிக்கத் தொடங்கினாள்: "அருமைத் தங்கையே! உனக்கும் சீதாவுக்கும் ஒரே பந்தலில் இரட்டைக் கலியாணம் நடந்ததே ஞாபகமிருக்கிறதா? இது என்ன கேள்வி? உன் கலியாணம் உனக்குக் கட்டாயம் ஞாபகம் இருக்கும். கலியாணத்துக்கு இரண்டு நாளைக்கு முன்னால் நமக்குள்ளே ஒரு விவாதம் நடந்தது. சீதாவும் நீயும் நானும் குளத்தங்கரைப் பங்களாவில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபோதுதான் ‘கலியாணத்தின் போது அம்மி மிதிப்பதற்கு முன்னால் அக்கினி வலம் வருகையில் மாப்பிள்ளை மணப் பெண்ணின் கையைப் பிடித்துக் கொள்ள வேண்டுமே, - எந்தக் கையினால் எந்தக் கையைப் பிடித்துக் கொள்வது?’ என்ற கேள்வி ஏற்பட்டது. மாப்பிள்ளையின் வலது கரத்தினால் மணப்பெண்ணின் இடது கரத்தைப் பிடிப்பதா? அல்லது வலது கரத்தைப் பிடிப்பதாயிருந்தால் இரண்டு பேரும் நடந்து எப்படிப் பிரதட்சணம் வரமுடியும் என்று வெகுநேரம் தர்க்கம் செய்தோம். தலைக்கு ஒரு அபிப்பிராயம் சொன்னோம். கலியாணம் நடந்தபோது அந்த விஷயத்தை நான் கவனிக்கவில்லை; அதைப் பற்றிப் பிறகு பேசவும் இல்லை. லலிதா! அத்தங்காள் தாரிணியை நான் கலியாணம் செய்து கொள்ளும்போது அந்தக் கஷ்டமான பிரச்னை ஏற்படவே ஏற்படாது. அவளுக்கு இருப்பது ஒரே ஒரு கைதான். அதைத்தான் நான் பிடித்துக்கொண்டாக வேண்டும். இன்னொரு கை இல்லை என்பது பற்றி எனக்கு வருத்தம் கிடையாது. அதை நினைக்கும்போதெல்லாம் நான் பூரித்து மகிழ்வேன். தாரிணி இழந்துவிட்ட அந்த ஒரு கை இருநூறு ஸ்திரீகளைக் காப்பாற்றியது என்பதையும், சீதாவின் குழந்தையைக் காப்பாற்றிய கை அதுதான் என்பதையும் நினைத்து நினைத்துக் கர்வம் அடைவேன். நான் மிகவும் அதிர்ஷ்டக்காரன், இத்தனை நாள் கலியாணம் செய்து கொள்ளாமல் நான் காத்துக்கொண்டிருந்தது வீண் போகவில்லை! இனி என் வாழ்நாளில் என்றென்றைக்கும் ஆனந்தந்தான்!…. லலிதா! தாரிணியின் அழகைப்பற்றி முன் இரண்டொரு தடவை உனக்குச் சொல்லியிருக்கிறேன். ஆனால் முன்னேயெல்லாம் அவளுடைய அழகு மனித உலகத்துக்குரிய அழகாயிருந்தது. இப்போதோ தெய்வீக சௌந்தர்யம் பெற்று விளங்குகிறாள், என் கண்களுக்கு, வேறு யார் என்ன நினைத்தால் அதைப்பற்றி எனக்கு என்ன? யார் என்ன வம்பு பேசினால்தான் எனக்கு என்ன?…." கடிதத்தைப் படிக்கும்போது லலிதாவுக்கு தொண்டையை அடைத்தது. சித்ராவுக்கோ கண்ணில் கண்ணீர் வந்து விட்டது. கொஞ்சம் உணர்ச்சி அடங்கிய பிறகு சித்ரா கூறியதாவது:- “லலிதா! நம்முடைய தேசத்து மகான்கள் ‘உலகத்தில் துன்பம் என்பதே இல்லை; துன்பம் என்பது வெறும் மாயைதான்’ என்று சொல்லியிருக்கிறார்கள். இன்னும் சில மகான்கள், ‘துன்பத்திலே தான் உண்மையான இன்பம் இருக்கிறது’ என்றும் சொல்லியிருக்கிறார்கள். அதன் பொருள் இத்தனை நாளும் எனக்கு விளங்காமலிருந்தது, இன்றைக்குத்தான் விளங்குகிறது. பிறருடைய துன்பத்தைத் துடைப்பதற்காக நாம் கஷ்டப்பட்டோ மானால் அதைப் போன்ற இன்பம் இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை; மறு உலகத்திலும் கிடையாது. உனக்கு மன்னியாக வரப் போகிறவள் அந்த ஆனந்தத்துக்கு உரியவளாயிருக்கிறாள். அதை அறிந்த அதிர்ஷ்டசாலி உன் தமையன் சூரியா! அவர்கள் இரண்டு பேரையும் மணம் புரிந்த தம்பதிகளாகப் பார்க்க வேண்டும் என்று எனக்கு மிக்க ஆவலாயிருக்கிறது!” என்றாள். நாற்பத்துமூன்றாம் அத்தியாயம் - பாமா விஜயம் ராஜம்பேட்டை கிராமச்சாலை முன்போலவே இருபுறமும் மரம் அடர்ந்து நிழல் படர்ந்து விளங்கியது. தபால் சாவடியும் பதினைந்து வருஷத்துக்கு முன்னால் அளித்த தோற்றத்துக்கு அதிக மாறுபாடில்லாமல் காட்சி அளித்தது. ரன்னர் தங்கவேலு முன்னைப்போல் அவ்வளவு அவசரப்படாமல் சாவதானமாக நடந்து தபால் கட்டை எடுத்துக்கொண்டு வந்தான். ‘ஜிங் ஜிங்’ என்ற சதங்கையின் ஒலி சவுக்க காலத்தில் கேட்டது. ராஜம்பேட்டை அக்கிரகாரம் அன்றிருந்த மேனிக்கு அழிவில்லாமல் இருந்தது. உலகமே தலைகீழாகப் புரண்டாலும் நம்முடைய கிராமங்களில் அவ்வளவாக மாறுதலைக் காண முடிவதில்லை. அப்படி மாறுதல் இருந்தால் முன்னே வீடாயிருந்த கட்டிடங்கள் இப்போது குட்டிச்சுவர்களாக மாறியிருக்கலாம். வேறு பிரமாத மாறுதலைப் பார்த்துவிட முடியாது. ராஜம்பேட்டை முன்னைப்போல அவ்வளவு கலகலப்பாயில்லை என்பது மட்டும் உண்மை. ஏனெனில், இப்போது அங்கே பட்டாமணியம் கிட்டாவய்யர் இல்லை. அவர் பார்த்த பரம்பரைக் கிராம முனிசீப் உத்தியோகத்தைச் ‘சுண்டு’ என்கிற சியாமசுந்தர் பார்த்து வந்தான். சினிமா டைரக்டர் ஆகும் ஆசையையெல்லாம் அவன் விட்டு விட்டான். ‘படம் எடுத்தால் சீதாவைக் கதாநாயகியாக வைத்து எடுக்க வேண்டும்; இல்லாவிடில் என்ன பிரயோஜனம்?’ என்பது அவன் கருத்து. கொஞ்ச நாள் முன்பு வரையில்கூட அந்த ஆசை அவனுக்குச் சிறிது இருந்தது. சீதா இறந்த செய்தி வந்தபின் அடியோடு போய்விட்டது. பின்னர் நிம்மதியாகக் கிராம முனிசீப் வேலையைப் பார்த்து வந்தான். ஊரில் கலகலப்புக் குறைந்திருந்ததற்கு இன்னொரு காரணம் “என்ன ஓய்?” சீமாச்சுவய்யர் ஊரில் இல்லாதது. அவர் இப்போது சிறைச்சாலையில் இரண்டு வருஷம் கடுங்காவல் அநுபவித்துக் கொண்டிருந்தார். கள்ள மார்க்கெட் கேஸில் அசல் முதலாளி தப்பித்துக் கொண்டு சீமாச்சுவய்யரை மாட்டி வைத்துவிட்டான். அதைப் பற்றி ஊரில் யாரும் அனுதாபப்படவில்லை. நடுவில் பணம் அதிகமாக வந்தபோது சீமாச்சுவய்யர் யாரையும் இலட்சியம் செய்யாமல் அகம்பாவத்துடன் நடந்து கொண்டார். ஆகவே அவர் சிறைப்பட்டபோது கிராமத்தார், “என்ன ஓய்? சீமாச்சு உயிரோடு திரும்பி வருவானா?” என்று கேட்டுக் கொள்வதுடன் திருப்தியடைந்தார்கள். கிட்டாவய்யர் வீட்டுக் கூடத்தில் லலிதா உட்கார்ந்து குழந்தை பட்டுவின் தலையை வாரிப் பின்னிக் கொண்டிருந்தாள். சரஸ்வதி அம்மாள் ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்திருந்தாள். குழந்தை பாலசுப்பிரமணியன் ஏதோ வாரப் பத்திரிகையில் வந்திருந்த காந்தி மகான் கதையை எழுத்துக் கூட்டி இரைந்து படித்துக் கொண்டிருந்தான். தபால் ரன்னர் வரும் ‘ஜிங் ஜிங்’ சத்தம் கேட்டதும் லலிதாவுக்குப் பழைய ஞாபகங்கள் உண்டாகிக் கண்கள் ஈரமாயின. “லலிதா! பட்டுவின் வயதில் நீ தபால் கட்டு வரும் சத்தம் கேட்டதும் எழுந்து தபாலாபீஸுக்கு ஓடுவாயே; ஞாபகமிருக்கிறதா?” என்று சரஸ்வதி அம்மாள் கேட்டாள். “ஞாபகம் இல்லாமல் என்ன? நன்றாய் இருக்கிறது. இப்போது கூடத் தபாலாபீஸுக்குப் போய் ஏதாவது கடிதம் வந்திருக்கிறதா என்று பார்த்துவிட்டு வரத் தோன்றுகிறது!” என்றாள் லலிதா. “நீ அப்படிப் போனாலும் போவாய்! உன் நெஞ்சுத் தைரியம் யாருக்கு வரும்?” என்றாள் தாயார். அரை மணி நேரத்திற்குப் பிறகு வாசலில் “தபால்!” என்ற சத்தம் கேட்டதும் லலிதா விழுந்தடித்து ஓடினாள். ஒரு கணம் ஒருவேளை தபால்கார பாலகிருஷ்ணனாயிருக்குமோ என்று எண்ணினாள். பார்த்தால், உண்மையிலேயே அந்தப் பழைய பாலகிருஷ்ணன்தான்! “நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்களா, அம்மா! ரொம்ப சந்தோஷம், எனக்கும் டவுன் வாழ்க்கை பிடிக்கவில்லை. ஒரு வழியாக இங்கேயே வந்துவிட்டேன்” என்றான் பாலகிருஷ்ணன். “கொஞ்ச நாளாக உன்னை தேவபட்டணத்தில் காணோமே என்று பார்த்தேன்! குழந்தைகள் சௌக்கியமா?” என்றாள் லலிதா. “கடவுள் புண்ணியத்திலே சௌக்கியந்தான். ஆனால் என்ன சௌக்கியம் வேண்டிக் கிடந்தது? அப்பேர்ப்பட்ட காந்தி மகாத்மாவையே சுட்டுக்கொன்று விட்டார்கள். இனிமேல் யார் சௌக்கியமாயிருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?” என்றான் பாலகிருஷ்ணன். பிறகு, “இந்தாருங்கள் தபால்!” என்று ஒரு கடிதத்தை லலிதாவிடம் கொடுத்துவிட்டுப் போனான். லலிதா கடிதத்தைப் பிரித்துப் பார்த்தாள். அவளுடைய கணவனிடமிருந்து வந்திருந்தது. அதில் அவர் குழந்தைகளின் ஷேம லாபங்களை விசாரித்த பிறகு எழுதியிருந்ததாவது:- “ஒரு அதிசயமான சமாசாரம் சொல்லப் போகிறேன். ஆச்சரியப்பட்டு மூர்ச்சையாகி விழுந்து விடாதே! உன் தமையன் சூரியா வந்திருக்கிறான். அவனுடைய மனைவியையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறான். அவனுடைய மனைவியைப் பார்த்ததும் உனக்கு ஒருவேளை ஏமாற்றம் உண்டாகலாம். விஷயம் என்னவென்று கடிதத்தில் எழுத விரும்பவில்லை. நேரிலேயே பார்த்துத் தெரிந்து கொள் மூன்று பேரும் நாளை ரயிலில் புறப்பட்டு அங்கே வருகிறோம்.” இதைப் படித்ததும் லலிதா மிக்க கலக்கம் அடைந்தாள். அவள் முக்கியமாக ராஜம்பேட்டைக்கு வந்தது தன் தாயாரிடம் சூரியாவின் கலியாணத்தைப் பற்றிச் சொல்வதற்காகத்தான். ஆனால் இன்றுவரை அவளுக்குத் தைரியம் வரவில்லை. இனிமேல், தள்ளிப்போட முடியாது. அவர்கள் நாளைக்கு வந்துவிடுவார்களே! சரஸ்வதி அம்மாளிடம் லலிதா மாப்பிள்ளையிடமிருந்து கடிதம் வந்தது பற்றி முதலில் சொன்னாள். சூரியாவையும் அவர் அழைத்து வருவது பற்றிப் பிறகு சொன்னாள். சூரியா கலியாணம் செய்து கொண்டு மனைவியையும் தன்னுடன் அழைத்து வருவதைப் பற்றிக் கடைசியாகக் கூறினாள். சரஸ்வதி அம்மாள் வியப்படைந்தாள்; மகிழ்ச்சியடைந்தாள்; பிறகு திடுக்கிட்டுப் போனாள். “கலியாணமா? அது என்ன? நம் ஒருவருக்கும் சொல்லாமலா? இப்படியும் உண்டா? பெண் யாரோ, என்னமோ, தெரியவில்லையே?” என்று புலம்பி அங்கலாய்த்தாள். “அதென்னமோ, போ, அம்மா! நானும் முன்னாலேயே கேள்விப்பட்டேன், உண்மையிராது என்று நினைத்தேன். இப்போது வந்திருக்கும் கடிதத்தைப் பார்த்தால் உண்மை என்றே தோன்றுகிறது” என்றாள். “என்னடி உண்மை? நீ என்ன கேள்விப்பட்டாய்?” என்றாள். “சூரியா கலியாணம் செய்து கொண்டிருக்கும் பெண்ணுக்கு ஏதோ அங்கஹீனம் என்று கேள்வி. சிலர் ‘ஒரு கண்ணில்லை’ என்கிறார்கள். சிலர் ‘ஒரு கையில்லை’ என்கிறார்கள். சூரியாவின் காரியமே இப்படித்தான். என்னமோ, போ, அம்மா! ரொம்ப விசாரமாயிருக்கிறது!” “இதென்னடி அநியாயம்? இப்படியும் ஒரு பிள்ளை செய்வானா? அது நிஜமாயிருக்குமாடி? நிஜமாயிருந்தால் நாலு பேர் முகத்தில் எப்படி விழிப்பேன்!” என்று சரஸ்வதி அம்மாள் புலம்பினாள். பட்டாபிராமனும், சூரியாவும், சூரியாவின் மனைவியும் ஜல்ஜல் என்று சதங்கை சப்தித்த மாட்டு வண்டியில் வந்து இறங்கினார்கள். லலிதா பரபரப்புடன் ரேழிக்குப் போனாள். தாரிணியைப் பார்ப்பதற்கு அவள் மனது துடிதுடித்தது. எவ்வளவுதான் மனதைத் திடப்படுத்திக் கொண்டிருந்தாலும் சமயத்தில் கேட்கவில்லை. நெஞ்சு படபட என்று அடித்துக் கொண்டது. தாரிணியைப் பார்த்ததும் அம்மா என்ன ரகளை செய்யப் போகிறாளோ என்ற பீதி வேறு இருந்தது. முதலில் பட்டாபியும் சூரியாவும் இறங்கினார்கள், பிறகு ஒரு ஸ்திரீ இறங்கினாள். இது என்ன விந்தை? எதிர்பார்த்தபடி இல்லையே! இரண்டு கையிலும் இரண்டு கைப் பெட்டியுடன் இறங்குகிறாளே? கண்களிலும் ஊனம் இல்லையே? கொஞ்சம் நவநாகரிகத்தில் அதிகம் மூழ்கினவளாகக் காணப்பட்டாள். மற்றபடி அங்கஹீனம் ஒன்றும் தெரியவில்லை. பின்னால் ஒருவேளை தாரிணி இறங்குகிறாளோ என்று பார்த்தாள். அப்புறம் யாரும் இறங்கவில்லை. வந்தவர்களை முகமன் கூறி க்ஷேமம் விசாரித்து உள்ளே அழைத்துப் போனாள். “சூரியா இந்த லேடி யார்? நீ எழுதியிருந்தாயே?….” “நான் எழுதியிருந்தது வேறு, இந்தப் பெண்ணரசிதான் என்னை மணக்க முன்வந்த என் மனைவி திவான் ஆதிவராகாச்சாரியார் மகள்; இவள் பெயர் பாமா. எங்களுக்குக் கலியாணம் ஆகி இரண்டு வாரம் ஆகிறது. ‘ஹனிமூன்’ வந்திருக்கிறோம்” என்றான் சூரியா. லலிதாவின் மனம் நிம்மதி அடைந்தது. லலிதாவின் தாயாரும் தன் மாட்டுப் பெண் பார்ப்பதற்கு ஒரு மாதிரி பரட்டைத் தலைப் பிசாசு மாதிரி இருந்தாலும் லலிதா சொன்னதுபோல் அங்கஹீனமாயில்லை என்பது குறித்து மனதிற்குள்ளே திருப்தி அடைந்தாள். பிறகு லலிதா சூரியாவை தனியாக சந்தித்துப் பேசியபோது அவன் கூறியதாவது:- “உனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாகத்தானிருக்கும். எனக்கோ அதைவிட ஏமாற்றமாயிருந்தது. ஆனால் ஏமாற்றியவள் அத்தங்கா தாரிணி அல்ல! சௌந்தரராகவன்தான். அவனுடைய சுபாவத்தை அறிந்திருந்த அனைவரையும் ஏமாற்றிவிட்டான். தாரிணியைத் தான் கலியாணம் செய்து கொண்டே தீருவேன் என்றும், அவளுடைய முகலாவண்யத்துக்காக அவளிடம் தான் பிரியம் வைக்கவில்லை என்றும் சத்தியம் செய்தான். மேலும் சீதாவுக்குத் தாரிணி கொடுத்த வாக்குறுதியை மீறக்கூடாதென்றும் தன்னிடமும் அதே விஷயத்தைச் சொல்லியிருக்கிறாள் என்றும் வற்புறுத்தினான். தாரிணி அநேக ஆட்சேபங்களைச் சொல்லியும் கேட்கவில்லை. ‘டில்லியில் உங்களுடைய உத்தியோக வாழ்க்கைக்கு இடைஞ்சலாயிருக்கும்’ என்று தாரிணி சொன்னபோது, உத்தியோகத்தை விட்டுவிட முன்னமே தீர்மானித்து விட்டதாகப் பதில் சொன்னான்! லலிதா! உண்மையில் தாரிணிக்கும் ராகவன் பேரில் இருதய பூர்வமான அன்பு என்று தெரிந்து கொண்டேன். ஆகவே நான் விட்டுக் கொடுத்து அவர்களுடைய திருமணத்தையும் கூட இருந்து நடத்தி வைத்தேன். சௌந்தரராகவன் உண்மையாகவே உத்தியோகத்தை விட்டுவிட்டான். இருவரும் வஸந்தியை அழைத்துக்கொண்டு ரஜினிபூருக்குப் போயிருக்கிறார்கள். ரஜினிபூர் ராஜ்யம் இந்தியாவுடன் சேர்ந்து ஐக்கியமாகிவிட்டாலும், ரஜினிபூர் ராணியம்மாளுக்கு ஏராளமான சொந்த சொத்து இருக்கிறது. தாரிணியின் பேரில் அவளுக்கு மிக்க பிரியம். இரண்டு பேரும் ரஜினிபூருக்கு வந்து பஞ்சாப் அகதிகளுக்கு உதவி செய்து குடியும் குடித்தனமுமாக்க முயலவேண்டும் என்றும், அதற்காகத் தன் சொத்துக்களையெல்லாம் எழுதி வைப்பதாகவும் ரஜினிபூர் ராணியம்மாள் சொன்னாள். அதனால் இருவரும் ரஜினிபூருக்குப் போயிருக்கிறார்கள். குழந்தை வஸந்தியையாவது நான் என்னுடன் ராஜம்பேட்டைக்கு அழைத்துப் போவதாகச் சொன்னேன். அந்தக் குழந்தையும் கண்டிப்பாக வர மறுத்துவிட்டாள்!” இந்தக் கடைசி வாக்கியங்களை மட்டும் கேட்டுக் கொண்டு வந்த சரஸ்வதி அம்மாள், “ரொம்ப நல்லதாய் போயிற்று. அவளுடைய தாயார் இங்கே படுத்திய பாடெல்லாம் போதாதா பெண் வேறே வந்து கலகம் பண்ண வேண்டுமா?” என்றாள். அம்மாவின் சுபாவம் தெரிந்தவர்களானதால் மற்றவர்கள் சும்மா இருந்துவிட்டார்கள். பிறகு லலிதா, “இந்தப் பெண்ணை எப்படிப் பிடித்துக் கலியாணமும் செய்து கொண்டாய்?” என்று கேட்டாள். “முதலில் இவள் பேரில் எனக்கு மிக்க வெறுப்பு இருந்தது. இவளுடைய குணாதிசயங்களைப் பற்றி மிகவும் தப்பான அபிப்பிராயம் கொண்டிருந்தேன். தாரிணிதான் இவளைப்பற்றி எனக்குச் சொன்னாள். முதன் முதலில் என்னைப் பார்த்ததிலிருந்து இவளுக்கு என் பேரில் பிரியம் என்றும் சொன்னாள். அது மட்டுமல்ல; 1942 - இயக்கத்தின் போது இவள் சர்க்கார் உத்தியோக கோஷ்டியுடன் வெளிப்படையாகப் பழகிக் கொண்டே உள்ளுக்குள் இயக்கத்துக்கு மிக்க உதவி செய்தாளாம். தாரிணியைப் போலீஸார் கைது செய்யாமல் இவள்தான் ரொம்ப நாள் பாதுகாத்து வந்தாளாம். என்னைப் போலீஸ் பாதுகாப்பிலிருந்து தப்புவிப்பதற்கும் இவள்தான் உதவி புரிந்தாளாம். இவ்வளவுக்கும் மேலே, இவள் பஞ்சாபுக்கு முன்னதாகவே போய்ச் சீதாவைக் காப்பாற்றிக் கொண்டு வர முயன்றாளாம். இதையெல்லாம் கேட்டதும் என் மனம் அடியோடு மாறிவிட்டது. பேசிப் பார்த்ததில் என்னுடைய இலட்சியமும் இவளுடைய இலட்சியமும் ஏறக்குறைய ஒன்று என்று தெரிந்தது. இவளுடைய வெளித் தோற்றத்தைப் பார்த்து ஒன்றும் முடிவு செய்யாதே, லலிதா! உன் மன்னியுடன் பழகிப் பார்த்து விட்டுப் பிறகு சொல்லு!” வெளியே சென்றிருந்த சியாமசுந்தர் திரும்பிவந்து அண்ணாவையும் மன்னியையும் பார்த்து மகிழ்ச்சியடைந்தான். சூரியாவின் கலியாணம் ஆகிவிட்டதால், தன்னுடைய கலியாணத்துக்குத் தடை நீங்கி விட்டதல்லவா? “அண்ணா! ரிடர்ன் டிக்கெட் வாங்கிக்கொண்டு வந்தாயா அல்லது கொஞ்சநாள் இங்கே இருப்பதாக உத்தேசமா?” என்று கேட்டான். "நீ எங்களை விரட்டியடித்தாலொழிய ரொம்ப நாள் இங்கே இருப்பதாக உத்தேசம். தேசம் சுதந்திரம் அடைந்துவிட்டது. காந்தி மகாத்மா இறுதியாக ஆத்மத் தியாகம் செய்து நாட்டில் அமைதியையும் ஢லைநாட்டிவிட்டார். இனிமேல் தேசத்தில் செய்யவேண்டியதெல்லாம் பொருள் உற்பத்தியும் உணவு உற்பத்தியும்தான். முதலில் நம்முடைய சொந்த கிராமத்திலிருந்து ஆரம்பிக்க உத்தேசித்திருக்கிறேன். உழுது பாடுபடுகிறவர்களுக்கு உற்சாகம் ஊட்ட வேண்டும்…" “இப்போது இங்கேயெல்லாம் அவ்வளவு கிஸான் தொந்தரவு இல்லை. கிளர்ச்சிக்கு தலைமை வகித்தவன் கிஸான் சங்கத்தின் பணம் ஐயாயிரத்தைச் சூறையிட்டுக் கொண்டுபோய் விட்டான். அதிலிருந்து இயக்கம் படுத்துவிட்டது. இனிமேல், நீ ஆரம்பித்தால்தான் உண்டு!” “கிஸான் இயக்கம் இல்லை என்று திருப்திப்படுவதில் பயனில்லை, சுண்டு! உழவர்கள் மனத்திருப்தியும் உற்சாகமும் அடைய வேண்டும், தாங்கள் உற்பத்தி செய்வதில் தங்களுக்கு நியாயமான பங்கு கிடைக்கிறது என்று அவர்கள் உணர வேண்டும். இல்லாவிட்டால் என்றைக்கிருந்தாலும் கலகமும் குழப்பமும்தான். உணவு உற்பத்தியும் தடைப்படும். ஆகையால் முதலில் உழைப்பாளிகளைச் சரிக்கட்டிக்கொள்ளப் போகிறேன். பிறகு விவசாயத்தில் நவீன முறைகளைக் கையாண்டு காட்டப் போகிறேன். என்னுடைய மனைவி பாமாவும் எனக்கு உதவி செய்வதாகச் சொல்லுகிறாள். நீ என்ன சொல்லுகிறாய், சுண்டு?” “சொல்லுவதென்ன அண்ணா? நம்முடைய நிலம் முழுவதையும் பிரித்து, உழவர்களுக்குக் கொடுத்துவிட்டாலும் எனக்குச் சம்மதந்தான். நீ ஊர் ஊராக அலையாமல் இந்த ஊரிலேயே இருந்தால் போதும்! நான் எங்கேயாவது போய் ஏதாவது தொழில் செய்து பிழைத்துக் கொள்வேன்!” என்றான் சுண்டு. “அப்படி நிலத்தைப் பிரித்துக் கொடுக்கவேண்டிய காலமும் வரும். அதற்கும் நாம் தயாராகத்தானிருக்கவேண்டும். வேறு வேறு தொழில்கள் செய்து பிழைக்க இப்போதிருந்தே நாம் எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும்!” என்றான் சூரியா. சுண்டு, ‘சினிமா டைரக்ஷன் வேலை இருக்கவே இருக்கிறது’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான். அவர்களுடைய தாயார் சரஸ்வதி அம்மாள் அங்கு வந்து, “நான் கண் மூடும் வரையில் பொறுத்திருங்கள்; அப்புறம் எது வேணுமானாலும் செய்யுங்கள்” என்றாள். “நாங்கள் காத்திருக்கலாம், அம்மா! ஆனால் பூகம்பமும் புயலும் எரிமலையும் பிரளயமும் காத்திருக்குமா?” என்றான் சூரியா. லலிதா, “பூகம்பம், பிரளயம் என்றெல்லாம் நீ சொல்லும் போது, அத்தையும் சீதாவும் அடிக்கடி ‘காதில் அலை ஓசை கேட்கிறது’ என்று சொல்லிக்கொண்டிருந்தது ஞாபகம் வருகிறது. அவர்களுக்கு என்ன சித்தப் பிரமையா அல்லது அவர்களுடைய காதில் ஏதாவது கோளாறா?” என்று கேட்டாள். “பிரமையா, காதில் ஏதேனும் கோளாறா என்று எனக்குத் தெரியாது; அல்லது ஏதேனும் ஒரு தெய்வீகச் சக்தியினால், வரப்போகும் பயங்கர விபத்துக்களின் அறிகுறி அவர்களுடைய மனசில் தோன்றியதா என்றும் தெரியாது. பஞ்சாபிலிருந்து தப்பி ஓடிவந்து நதியில் முழுகியபோது சீதாவின் காது அடியோடு செவிடாகி ஒன்றுமே கேட்காமல் போய்விட்டது. உரத்த பயங்கரமான அலை ஓசை போன்ற சத்தம் மட்டும் ஓயாமல் கேட்டுக்கொண்டிருந்ததாம். ஆனால் காந்திஜியின் புனித உடல் தகனமான அன்று சீதாவின் காது கேட்கத் தொடங்கியது. ‘ஹரி! மக்களின் துன்பத்தைப் போக்குவாயாக’ என்ற மகாத்மாவின் மனதுக்கு உகந்த கீதந்தான் முதலில் அவள் காதில் கேட்டதாம். இது ஒரு சுப சூசகம் என்று எனக்குத் தோன்றுகிறது. மகாத்மாவின் மகா தியாகத்துக்குப் பிறகு இந்தப் பெரிய தேசத்துக்குப் பெரும் விபத்து ஒன்றும் கிடையாது! இனிமேல் சுபிட்சமும் முன்னேற்றமுந்தான்!” என்றான் சூரியா. அந்தத் தேசபக்தத் தியாகியின் விருப்பம் நிறைவேறுமாக! FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.