[] []   []     1. 1. அறப் போர் (சங்க நூற் காட்சிகள்) கி. வா. ஜகந்நாதன் 2. aRappOr (literary essays on cangkam literature) ki. vA. jekannAtan In tamil script, unicode/utf-8 format       Acknowledgements: Our Sincere thanks go to the Digital Library of India for providing scanned images version of this work. This etext has been prepared via Distributed Proof-reading implementation of Project Madurai. We thank the following volunteers for their assistance in the preparation of this etext: Dr. HariGovind V. Ramasamy, Senthan Swaminathan, S. Karthikeyan, Nalini Karthieyan, R. Navaneethakrishnan, A. Ramalingam, Venkatesh Jambulingam. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. © Project Madurai, 1998-2010. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.   2. 1. 1. 2.                 2. 1. 1. அறப்போர்   கி.வா.ஜகந்நாதன்   அட்டைப்படம், மின்னூலாக்கம் : த.சீனிவாசன் வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை : Public Domain – CC0 உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.       பொருளடக்கம் அறப் போர் (சங்க நூற் காட்சிகள்) கி. வா. ஜகந்நாதன் 2  2  அறப் போர் (சங்க நூற் காட்சிகள்) கி. வா. ஜகந்நாதன் 5  முகவுரை 5  1. அருந்தவத்தோன் 13  2. அறப்போர் 18  3. பெற்ற பரிசில் 29  4. சேரமான் புகழ் 35  5. மறப்பது எப்படி? 44  6. கோட்டிடை வைத்த கவளம் 51  7. புலவரின் வள்ளன்மை 56  3. 1. 1. 2. அறப் போர் (சங்க நூற் காட்சிகள்) கி. வா. ஜகந்நாதன்   Source: அறப் போர் (சங்க நூற் காட்சிகள்) கி.வா.ஜகந்நாதன் *பரமசிவ நிலையம், 127, லாயிட்ஸ் ரோட், சென்னை-6 ஏ.பி.நாகராஜன் அமுத நிலையம் லிமிடெட் தேனாம்பேட்டை சென்னை-18 முதற் பதிப்பு, ஆகஸ்டு-1952 விலை ரூ. 3, பரிசுப் பதிப்பு ரூ. 5 நாஷனல் ஆர்ட் பிரஸ், சென்னை=18   அறப் போர் (சங்க நூற் காட்சிகள்) 1. 1. முகவுரை கடைச் சங்க நூல்களில் எட்டுத் தொகை என்ற வரிசையில் புறநானூறும், பதிற்றுப் பத்தும் புறத்துறைகள் அமைந்த பாடல்களால் ஆகியவை. அகத்தின்கண் தோன்றி, இன்னதென்று வெளியிட்டுச் சொல்ல முடியாததாகிய காதலைப் பற்றிய செய்திகளை அகம் என்று வகுத்தனர் தமிழர். அறம், பொருள், இன்பம், வீடு என்று உறுதிப் பொருள் நான்கில் இன்பம் என்பது அது. மற்ற மூன்றைப் பற்றிய செய்திகளும் புறப் பொருள் என்ற வகையில் அடங்கும். உணர்ச்சியைத் தலைமையாக உடையது அகம். செயலை எடுத்துரைப்பது புறம். புறத்தவர் களுக்கு வெளிப்படும்படியான நிகழ்ச்சிகள் நிகழ்வதனால் புறம் என்று வகுத்தார்கள். ** -- ** 'இதனை (இன்பத்தை) ஒழிந்தன ஒத்த அன்புடையார் தாமேயன்றி எல்லோர்க்கும் துய்த்து உணரப்படுதலானும், இவை இவ்வாறு இருந்ததெனப் பிறர்க்குக் கூறப்படுதலானும் அவை புறமெனவேபடும்.'- தொல்காப்பியம், அகத்திணை இயல், 1, நச்சினாக்கினியர் உரை. புறத்துறைகளில் பெரும்பாலும் வீரத்தைச் சார்ந்த செய்திகளும் சிறுபான்மை அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்பவர்களுடைய இயல்புகளூம் சிறப்புகளும் சொல்லப் பெறுகின்றன. அகப்பொருளைச் சார்ந்த பல வகைக் காமத்தைப் பற்றிக் கூறும் திணைகள் ஏழு. அவை குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல், கைக்கிளை, பெருந் திணை என்பவை. இவற்றில் ஒவ்வொன்றுக்கும் பல துறை கள் உண்டு. இப்படியே புறப் பொருளிலும் திணைகளும் துறைகளும் உண்டு. அகப்பொருள் சம்பந்தமான திணைக ளைப் பற்றிய இலக்கணத்தை எல்லா இலக்கண நூலாரும் ஒரே மாதிரி கூறினர். ஆனால் புறப் பொருட் பிரிவில் இரண்டு வகைக் கொள்கைகள் பழங்காலம் முதற்கொண்டு இருந்து வருகின்றன. அகத்தியம், தொல்காப்பியம் என்ற நூல்கள் புறப் பொருளுக்கு ஏழு திணைகள் கூறின. அவை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்பவை. வெட்சித்திணை பகைவருடைய ஆநிரையை அவர் அறியாமல் கொணர்ந்து பாதுகாத்தலைச் சொல்வது. நாடு பிடிக்கும் ஆசையால் ஒரு மன்னன் மற்றொரு மன்னன்மேற் போர்க்குச் செல்லுதல் வஞ்சித்திணை. அரணை முற்றுகை யிடுதலைச் சொல்வது உழிஞை. வீரச் சிறப்பு வெளிப்படும் பொருட்டு வேந்தர் பொருதல் தும்பை. அரசர் முதலியவர்களின் தொழிலைச் சிறப்பித்துச் சொல்லுதல் வாகை. நிலையாமையைப் புலப்படுத்துவது காஞ்சித் திணை. புகழ்தல் வகையாலும் வாழ்த்துதல் வகையாலும் பிறரைச் சிறப்பித் துப் பாடுவது பாடாண்திணையாகும். இவற்றுள் ஒவ்வொன் றும் பல துறைகளாக விரியும். தொல்காப்பியர் கூறியவற்றில் சில திணைகளை இரண்டாகப் பிரித்தும், அவர் அகத்தைச் சார்த்திவைத்த கைக்கிளை பெருந்திணைகளையும் கூட்டியும், வேறு சிலவற்றைச் சேர்த்தும் புறப்பொருளைப் பன்னிரண்டாக வகுத்தனர் சிலர். அப்படிப் பகுத்து இலக்கணம் சொன்ன நூல்களில் பழமையானது பன்னிரு படலம். அதில் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வோர் ஆசிரியர் இயற்றினர் என்று தெரியவருகிறது. அது இப்போது கிடைக்கவில்லை. அந்த நூலை அடியொற்றி எழுந்த மற்றோர் இலக்கண நூல் புறப்பொருள் வெண்பாமாலை. அதனை இயற்றியவர் ஐயன் ஆரிதனார் என்பவர். வீரசோழியம் என்னும் இலக்கணத்திலும் புறப்பொருளைப் பன்னிரண்டு பிரிவாகவே அதன் ஆசிரியர் பிரித்து இலக்கணம் கூறுகிறார். புறநானூற்றில் உள்ள பாடல்களுக்குத் திணையும் துறையும் பழங்காலத்தில் வகுத்திருக்கிறார்கள். அவை புறப்பொருள் வெண்பா மாலையிற் கண்ட முறையையே தழுவியவை. ஆயினும், அவ்வாறு துறை வகுப்பது கூடாது என்பது நச்சினார்க்கினியர் கருத்து. 'தத்தம் புது நூல் வழிகளால் புறநானூற்றிற்குத் துறை கூறினாரேனும் அகத்தியமும் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூலாகலின் அவர் சூத்திரப் பொருளாகத் துறை கூற வேண்டுமென்று அறிக' என்று அவர் எழுதுகிறார். தொல்காப்பியப் புறத்திணை இயல் உரையில் புறநானூற்றுப் பாடல்களை மேற்கோள் காட்டும் இடங்களிலெல்லாம் அவர், இதில் உள்ளபடி சொல்லாமல் வேறு திணை துறைகளை அமைத்துக் காட்டுகிறார். புறப்பொருள் வெண்பா மாலையின்படி அமைந்த புறத்திணைகள் வருமாறு: வெட்சி: பகைவர் ஆநிரையைக் கவர்தல். கரந்தை: பகைவர் கவர்ந்த ஆநிரையை மீட்டல். வஞ்சி: பகைவர் நாட்டைக் கைப்பற்ற எண்ணிப் போர் செய்யப் புறப்பட்டுச் செல்லுதல். காஞ்சி: போர் செய்வதற்கு வந்த மன்னருக்கு எதிரே பகையரசர் செல்லுதல். நொச்சி: பகைவர் தம் மதிலை முற்றுகை யிட்டபோது மதிலைக் காத்தல். உழிஞை: பகைவருடைய மதிலை முற்றுகையிடுதல். தும்பை: பகைவரோடு ஊக்கத்துடன் போர் செய்தல். வாகை: பகைவரை வெற்றி கொள்ளுதல். பாடாண்தினை: ஒருவனுடைய புகழ், வலிமை, ஈகைத் திறன் முதலியவற்றைச் சிறப்பித்தல். பொது இயல்: முன்னே சொன்னவற்றிற்குப் பொதுவானவையும் பிறவுமாகிய செய்திகள். கைக்கிளை: ஒருதலைக் காமம். பெருந்திணை: பொருந்தாக் காமம். ****** இந்த முறையைச் சார்ந்த துறைகளையே புறநானூற்றுச் செய்யுட்களின்பின் பழங்காலத்திலிருந்து குறிப்பித்து வருகிறார்கள். புறத்துறைச் செய்யுட்கள் நானூறு அமைந்தமையால் புறநானூறு என்ற பெயர் வந்தது. இந்தப் பாடல்களைப் பாடியவர் ஒரு புலவர் அல்லர்; பல்வேறு காலத்தில் பல தொழிலும் பல நிலையும் உடையவர்களாய்ப் பல ஊர்களிலே வாழ்ந்தவர்கள். அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய மரபில் வந்த புலவர்களின் பாடல்கள் இதில் உள்ளன. முடியுடை மன்னர்களாகிய சேர சோழ பாண்டியர்கள் இயற்றிய பாடல்களும் இதில் இருக்கின்றன. மற்றத் தொகை நூல்களுக்கு இல்லாத தனிச் சிறப்பைப் புறநானூறு பெற்றிருக்கிறது. இதில் உள்ள பாடல்களிற் பெரும்பாலானவை உண்மையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைச் சார்ந்தவை. மன்னர்களிடையே நிகழ்ந்த போர்களையும், அவர்களின் வெற்றி தோல்விகளையும், அவர்களுக்குத் துணையாக நின்றவர்களின் இயல்புகளையும், தோல்வியுற்ற மன்னர்களின் நாடு அழிந்ததையும், புரவலர்கள் புலவர்களைப் போற்றிவந்த இயல்பையும், போர் மூண்ட காலத்துப் புலவர்கள் இடைப்புக்குச் சமாதானம் உண்டாக்கியதையும், புலவர்களின் பெருமிதத்தையும், பாணர் விறலியர் கூத்தர் ஆகிய கலைவல்லுநர்கள் வள்ளன்மையுடையோரிடம் பரிசில் பெற்ற செய்தியையும், வள்ளல்களின் வண்மைச் செயல்களையும் தெரிவிக்கும் பாடல்கள் இத்தொகை நூலில் கோக்கப் பெற்றிருக்கின்றன. ஆதலின் தமிழ்நாட்டின் பழைய சரித்திரத்தை அறிவதற்கு இந்த நூல் மிகமிகச் சிறந்த துணையாக விளங்குகிறது. அகத்துறைப் பாடல்களில் சார்ந்து வகையினால் அங்கங்கே சில சில மன்னர்களையும் செல்வர்களையும் பற்றிய செய்திகள் வரும். புறநானூற்றுச் செய்யுட்களிலோ ஒவ்வொன்றும் ஒவ்வொரு சரித்திரத் தொடர்புள்ள செய்தியைத் தெரிவிக்கும். சேர சோழ பாண்டிய மரபு பற்றிய வரலாற்றுச் செய்திகளும், பாரி முதலிய வள்ளல்களின் சரிதையைப் புலப்படுத்தும் செய்தி களும் இந்த நூலினால்தான் விரிவாக அறியமுடிகின்றன. இவற்றையன்றிப் பழங்காலத்துத் தமிழ் நாட்டின் அரசியல், தமிழ் மக்களின் வாழ்வியல், கலைநிலை, அறம் பொருள் இன்பம் வீடு என்னும் பொருள்களோடு தொடர்புடைய செய்திகள், அக்காலத்து மக்கள் கொண்டிருந்த எண்ணங்கள் முதலிய பலவற்றையும் இந்நூற் பாடல்கள் தெரிவிக்கின்றன. அவற்றைக் கொண்டு பண்டைத் தமிழர் நாகரிகத்தின் பல துறைகளைத் தெளிந்து உருவாக்க முடிகிறது. * இந்தப் புத்தகத்தில் புறநானூற்றிலுள்ள ஏழு பாடல்களுக்குரிய விளக்கத்தைக் காணலாம். பாடல்கள் நிகழ்ச்சிகளை நிலைக்களமாக உடையவை. ஆதலால் இந்த விளக்கங்கள் யாவும் கதைப் போக்கிலே அமைந்திருக்கின்றன. உண்மையில் புறநானூற்றில் உள்ள நானூறு பாடல்களும் நானூறு சிறு கதைகளாக எழுதுவதற்குரிய கருவை உடையவை. அத்தகைய கதைகளை முன்பு என் ஆசிரியப் பிரானாகிய மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் திருவடிபற்றி நிற்கும் எளியேனும் அவ்வகையில் சில கதைகள் எழுதி யிருக்கிறேன். ** ** எல்லாம் தமிழ், புது மெருகு என்ற புத்தகங்களை காண்க. இப் புத்தகத்தில் உள்ள முதல் கட்டுரை புறநானூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடல் பற்றியது. சிவபெருமானைப் பற்றிய செய்திகளைப் பெருந்தேவனார் அதில் சொல்கிறார். அப் பெருமானுடைய கொன்றைக் கண்ணியையும் கொன்றைத் தாரையும், இடப ஊர்தியையும் இடபக்கொடியையும், நீல கண்டத்தையும், மாதிருக்கும் பாதியையும், கங்கைத் திரு முடியையும், திருமுடிப் பிறையையும், தாழ்ந்த சடையையும், தவக் கோலத்தையும் காட்டுகிறார். நீலகண்டத்தின் பெருமையை மறை நவில் அந்தணர் நுவல்கின்றனர் என்றும், திருமுடிப் பிறையைப் பதினெண்கணங்களும் ஏத்துகின்றன என்றும், சிவமும் சக்தியும் ஒன்றாகி நிற்பதும் உண்டு என்றும் சொல்கிறார். பல்யாசகசாலை முதுகுடுமிப் பெருவழுதியாகிய பாண்டியனைப் பற்றிய பாடல் ஒன்றும், பாலைபாடிய பெருங் கடுங்கோ, சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர அரசர்களைப் பற்றிய பாடல்கள் இரண்டும், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைப் பற்றியது ஒன்றும், அதியமான், குமணன் என்னும் குறுநில மன்னர்களைப் பற்றிய பாடல்கள் இரண்டும் இப் புத்தகத்தில் உள்ளன. ஒரு பாட்டில் கடல் வடிம்பலம்ப நின்ற பாண்டியனைப் பற்றிய செய்திகள் இடையே வருகின்றன. இவற்றைப் பாடிய புலவர்கள் நெட்டிமையார், பேய்மகள் இளஎயினி, குறுங்கோழியூர் கிழார், ஆவூர் மூலங்கிழார், ஔவையார், பெருஞ்சித்திரனார் என்போர். இவர்களில் இளஎயினியாரும் ஔவையாரும் பெண் மக்கள். அரசர்களின் வீரச் சிறப்பும் கொடைச் சிறப்பும் இந்தப் பாடல்களால் நன்கு விளங்குகின்றன. அரசர்கள் போர் செய்யப் புகுவதற்கு முன் பகைவர் நாட்டில் உள்ள ஆவினங்களுக்கும் அந்தணர், பெண்டிர், நோயாளிகள், புதல்வரைப் பெறாதோர் ஆகியவர்களுக்கும் துன்பம் இழைக்க விரும்பாமல், முரசறைந்து தாம் போர் செய்யப் போவதை அறிவித்து, அவர்களைத் தக்க பாதுகாப்புச் செய்து கொள்ளும்படி முன்கூட்டியே உணர்த்துதல் பழைய வழக்கம். போர் செய்யப் புகுந்தாலும் இத்தகைய அன்புச் செயல்களும் இருத்தலின் அக்காலப் போர் அறப்போராக இருந்தது. 'அறத்தாறு நவலும் பூட்கை மரம்' என்று புலவர் இதைப் பாராட்டுகிறார். பகைவர்களுடைய அரண்களை முற்றுகையிட்டு வெல்லுதலும், அவர்கள் புறங்காட்டினால் அது கண்டு மகிழுந்து போரை நிறுத்துதலும், எதிர்த்து நின்ற பகைவர் நாட்டில் தீ வைத்து எரித்தலும், நட்புடையோர் நாட்டை வளம் பெறச் செய்தலும், தம்முடைய பேராற்றலால் நினைத்த காரியத்தை நினைத்தவாறே செய்து முடித்தலும் மன்னர்களின் வலிமையையும் வீரத்தையும் புலப்படுத்தும் செயல்கள். அவர்களுடைய வீரச் சிறப்பைப் புலவர்களும் பாணரும் விறலியரும் பாடிப் பரிசில் பெற்றார்கள். அரசர்களின் நல்லியல்புகளும் வளவாழ்வும் பல வகையாகப் புலவர்களால் சொல்லப் பெறுகின்றன. கல்வி கேள்விகளால் நிரம்பிய அறிவும், யாரிடத்தும் அன்பும், குற்றம் செய்தாரையும் பொறுக்கும் கண்ணோட்டமும் மிகுதியாகப் பெற்ற அரசர்கள் தம் நாட்டில் என்றும் அமைதி நிலவும்படி பாதுகாத்தார்கள். அந்த ஏமக்காப்பில் குடிமக்கள் பகை, பசி, நோய் என்பவற்றை அறியாமல் வாழ்ந்தார்கள். பிறருடைய கொடுமையால் அவர்கள் துன்புறுவதில்லை. பிறரையும் அவர்கள் துன்புறுத்துவதில்லை. அரசனுடைய வீரமும் படையும் பகைவரே இல்லாமற் செய்துவிட்டமையால் போரின்றி வாழும் இன்ப அமைதி அந்த நாட்டில் இருந்தது. கொலை செய்யும் வில்லையும் வேறு படைகளையும் அந்த நாட்டு மக்கள் அறியாமல் வாழ்ந்தார்கள். அரசனுடைய செங்கோலாட்சியில் அறம் கவலையின்றி வாழ்ந்தது. தீய நிமித்தங்கள் தோன்றினாலும் அவற்றை நோக்கி அஞ்சாமல் மக்கள் வாழ்ந்தனர். இத்தகைய இன்ப வாழ்வைச் சொர்க்க போகத்தினும் சிறந்ததாக எண்ணிப் புலவர் பாராட்டினர். வேறு நாட்டில் இருப்பவர்களும் இந்த நாட்டு வாழ்க்கையை நினைத்து போற்றினர். பாடல் சான்ற வேந்தனாகிய அவனுடைய நல்லியல்புகளைக் கண்ட குடிமக்கள், 'இவனுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால் என் செய்வது!' என்று அஞ்சி யாதொரு தீங்கும் நேராமல் இருக்கவேண்டுமென்று வாழ்த்தி வந்தார்கள். அரசன் வளமுடைய நாடும், அம்பு முதலிய படைகளை உடைய அரணும், மலை போன்ற யானையையும், தேர்களை யும், பரந்த சேனையையும், வேற்படையையும் உடையவனாக இருந்தான். அவனைப் புலவர்கள் பாடினார்கள். அரசர்கள் களிற்றின்மேலே கோடியை ஏற்றி உலா வரச் செய்தார்கள். அரசிகளின் ஈகைத் திறனை உணர்ந்து புலவர்கள் பாராட்டினார்கள். கொடையிற் சிறந்த வேந்தர்களிடம் தமக்குப் பரிசில் வேண்டுமென்று குறிப்பாகப் புலப்படுத்தினார் கள். மன்னர் சிறந்த பொன்னைக் கூத்தர்களுக்கு ஈந்தனர். மறம் பாடிய விரலியருக்குப் பொன்னணிகளையும், பாணருக்குப் பொன்னாலான தாமரைப் பூவையும் வழங்கினர். புலவர்களைப் பாராட்டி, நிரம்பிய செல்வத்தை அளித்தனர். அதைப் பெற்ற புலவர்கள் அவற்றை நெடுங்காலம் சேமித்து வைக்கவேண்டும் என்று எண்ணாமல் எல்லோருக்கும் வழங்கி இன்புற்றார்கள். தம் மனைவிமாரிடமும், "எல்லோருக்கும் விருப்பப்படி கொடுங்கள்" என்று சொன்னார்கள். செல்வத்தைப் பெற்ற பயன் ஈதல் என்பதே அக்காலத் தமிழர் கொள்கை. ஆதலின் இயற்கையாகச் செல்வத்தைப் பெற்ற மன்னர் அதைப் பிறருக்கு ஈந்து களித்தனர். அவர்பால் செல்வம் பெற்ற புலவர்களும் தம்மைச் சார்ந்தோருக்கு அடைக கொடுத்து மகிழ்ந்தார்கள். செல்வம் உள்ளவர்கள் பிறருக்கு ஈதலும் இல்லாதவர் அதனைப் பெறுதலும் இல்லாவிட்டால் அந்த நாடு விரும்பத்தக்க தன்று என்று தமிழர் எண்ணினர். வானுலகத்து வாழ்வில் அவை இன்மையால் அது சிறந்தது அன்று என்று கொண் டார்கள். அறம் பொருள் இன்பங்களால் சிறந்த வளப்பமான வாழ்வு வாழ்ந்த மக்களை இப்பாடல்களிலே பார்க்கிறோம். சின்னஞ் சிறு பெண்கள் பொழிலிலும் ஆற்றிலும் விளை யாடினார்கள். தூய பொன்னால் அமைந்த கனமான அணிகளை அணிந்து கொண்டனர். பாவை அமைத்து அதற்குப் பூச்சூட்டி மகிழ்ந்தனர். ஆற்றங் கரையிலுள்ள பூம் பொழிலில் பூவைக் கொய்தனர். ஆற்றில் பாய்ந்து நீராடி இன்புற்றனர். பானனுடைய யாழிசையும், விறலியின் ஆடலும் பாடலும், வயிரியருடைய கூத்தும், புலவர்களின் கவிகளும் தமிழ்நாட்டைக் கலைவளம் சிறந்த கருவூலமாக்கின. பசி நீங்கச் சமைத்து உண்ணும் சோறு நிறைய இருந்தது; அந்த சோற்றுக்குரிய நெல்லை விளைக்கும் உழுபடையின் வளம் சிறந்திருந்தது; உழுபவர் செயலைச் சிறப்பித்துப் பயன் உண்டாக்க உதவும் மேகம் அழகிய வானவில்லைத் தோற்றி மழை பொழிந்தது. பெண்டிர் கற்பிலே சிறந்து நின்றனர். வறுமையிலும் செம்மையாக இல்லறத்தை நடத்தினர். ஏதேனும் பொருள் தம்பால் இல்லையானால் மற்றவர்களிடம் அளவு குறித்து அதை வாங்கிப் பிறகு அதைத் திருப்பிக் கொடுக்கும் வழக்கம் அப்போதும் இருந்தது. இதைக் குறியெதிர்ப்பை என்று கூறுவார்கள். இல்லத்தில் நிகழும் நிகழ்ச்சிகளுக் குரிய பொறுப்பை ஏற்று வந்தாள் மனைவி. அவளை 'மனை கிழவோய்' என்று ஒரு புலவர் விளிக்கிறார். கருவுற்ற மகளிர் மண்ணைக் கிள்ளி உண்டார்கள். தெய்வ பக்தியிலே சிறந்தவர்கள் தமிழர்கள். சிவ பெருமானைப் பற்றிய பல செய்திகளை அவர்கள் தெரிந்து கொண்டிருந்தனர். தேவர் முதலிய பதினெட்டுக் கணத்தினர் உண்டு என்று நம்பினர். பசுக்களைப் பாதுகாத்தனர். அந்தணரிடமும் பெண்டிர்களிடமும் பிணியுடையவர்களிடமும் இரக்கம் காட்டினர். பிதிரரை நோக்கிச் செய்வனவற்றைச் செய்வது புதல்வர்களின் கடமை என்று நம்பினர். கற்பகப் பூஞ்சோலையை உடையது தேவலோகம் என்றும், புண்ணி யம் செய்தவர்கள் அதன் பயனாக அவ்வுலகத்தை எய்தலாம் என்றும் எண்ணினார்கள். கடலும், நிலமும், திசைகளும் அளப்பதற்கு அரியன என்பது அவர்கள் நினைவு. புதுப் புள் வந்தாலும் பழம் புள் போனாலும் அவற்றைத் தீய நிமித்தமாகக் கொண்டனர். நீரின் பெருமையை 'எல்லா உயிர்க்கும் ஏமமாகிய நீர்' என்று புலப்படுத்துவார் ஒரு புலவர். பிறருடைய நாட்டை வென்று தன்னுடையதாகக் கொண்டு பயன்படுத்தும் மன்னனை, 'பிறர்மண் உண்ணும் செம்மல்' என விளிப்பர் ஒரு நல்லிசைச் சான்றோர். ஒரு வள்ளல் கொடுக்கும் கொடை நிச்சயமாகத் தமக்குக் கிடைக்கும் என்பதை, அது 'யானை கோட்டிடை வைத்த கவளம்' போன்றது என்று உவமை கூறி உணர்த்துவார். ஒருவரை வாழ்த்தும்போது ஆற்று மணலினும் பலகாலம் வாழ்வாயாக என்று வாழ்த்துவது புலவர் மரபு. * சுவையும் நயமும் அமையப் புலவர்கள் அழகிய பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். சங்கப் பாடல்களில் சில சொற்களால் பல செய்திகளைச் சொல்லும் முறையைக் காணலாம். கொன்றை மலர் கார் காலத்திலே மலர்வது என்பதை, 'கார் நறுங்கொன்றை' என்று சுருக்கமாகத் தெரிவிக்கிறார் ஒரு புலவர். புதல்வர் இம்மைக்கும் மறுமைக்கும் எய்ப்பில் வைப்பாகப் பயன்படுவர் என்பதை, 'பொன்போற் புதல்வர்' என்ற தொடரால் ஒருவர் விளங்க வைக்கிறார். ஒரு மன்ன னுடைய ஆட்சி மிகச் சிறப்பாக அறநெறி வழாமல் நடை பெற்றது என்பதை, 'அறந்துஞ்சும் செங்கோலையே' என்று சில சொற்களால் தெளிவுபடுத்துகிறார் குறுங்கோழியூர் கிழார். ஒரு மன்னனுடய நாட்டிலே பிறந்து அவனுடைய நல்லாட்சியிலே என்றும் இன்பவாழ்வைப்பெறும் சிறப்பை, 'நின்னிழற் பிறந்து நின் நிழல்வளர்ந்த எம்' என்பதில் அழகுபடப் புனைகிறார் சான்றோர். தமக்கு பரிசில் வேண்டும் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க விரும்பவில்லை பேய் மகள் இளஎயினி யார். அந்தக் கருத்தைக் குறிப்பாகத் தெரிவிக்கிறார். 'அரசன் பகைவருடைய புறத்தைப் பெற்றான். மறம் பாடிய பாடினி இழையைப் பெற்றாள். பான்மகனோ பொற்றாமரை பெற்றான்' என்று கூறி நிறுத்துகிறார். 'இத்தனையும் பாடிய நான் என்ன பெறப் போகிறேன்?' என்ற கேள்வி தானே இந்தப் பாட்டின் முடிவிலே தொனிக்கிறது. குறுங்கோழியூர் கிழார் சேரமானுடைய நாட்டில் உள்ள அமைதியைப் புலப்படுத்த வருகிறார். அதை நயமாகச் சொல்கிறார். 'நின் நாட்டில் ஒரு தெறல் இல்லை; ஆனால் வேறு தெறல் உண்டு, குடிமக்கள் ஒரு வில்லை அறியார்; ஒரு வில்லை அறிவார். படையை அறியார்; ஆனால் ஒரு படையை அறிவார். யாரும் நின் மண்ணை உண்ணார்; ஆனால் சிலர் உண்பர்' என்று சுவை உண்டாகும்படி சொல்கிறார். 'சோற்றை உண்டாக்கும் தீயின் தெறலையும், இந்திர வில்லையும், நாஞ்சிற் படையையும் அறிவார். வயவுறு மகளிர் மண்வேட்டு உண்பர்' என்று கூறுகிறார். 'தெறல், கொலைவில், படை இவற்றை அறியார்; பிறர் நின்மண்ணை உண்ணார்' என்று சொன்னவற்றாலே அந்த நாட்டில் பகை இல்லை, போர் இல்லை என்ற செய்தியைத் தெரிவித்தார். இன் னவை உண்டு என்னும் முறையில் சொல்லும் செய்திகளால் அந்த நாட்டில் சோறு நிறைய உண்டென்றும், மேகம் மழை பொழியும் என்றும், உழுதற்றொழில் சிறக்குமென்றும், மகளிர் இன்ப வாழ்விலே சிறந்து மனை வாழ்க்கைக்கு மங்கலமாகிய நன்மக்கட் பேற்றை உடையவர்களாவார் களென்றும் புலப்படுத்தி அந்த நாட்டில் உளதாகிய வளப்பத்தையும் விளக்குகிறார். ஒரு மன்னனைப் பகைத்தவர் அழிதலையும், சார்ந்தவர் வாழ்தலையும் "நீ உடன்று நோக்கும் வாய் எரிதவழ, நீ நயந்து நோக்கும் வாய் பொன்பூப்ப" என்று அழகு பெறக் கூறுகிறார் ஆவூர் மூலங்கிழார். அவர் சோழனுடைய பேராற்றாலை, "செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும், வெண்டிங்களுள் வெயில் வேண்டினும், வேண்டியது விளைக்கும் ஆற்றலை" என்று சொல்வர். இவ்வாறு தம் கருத்தை பல முறையில் இனிமையும் அழகும் பயப்பக் கூறும் புலவர்களின் கவித்திறமை, அறிந்தறிந்து சுவைத்துச் சுவைத்து மகிழ்வதற்குரியது. புறநானூற்றில் முதல் 266 பாடல்களுக்கு மட்டும் பழைய உரை ஒன்று உண்டு. அதை எழுதியவர் இன்னா ரென்று தெரியவில்லை. தமிழ் நாட்டின் பழம் பெருமையை யும் வரலாற்றையும் விளக்கும் இந்த அரிய நூலைத் தேடிக் கண்டுபிடித்து ஆராய்ந்து பதிப்பித்த அருஞ் செயலைச் செய்தவர்கள் என் ஆசிரியப்பிரானாகிய மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள். புறநானூறு வெளி வந்தது முதல் இதுவரையில் அந் நூலைத் துணையாகக் கொண்டு அறிஞர்கள் எழுதி வெளியிட்ட ஆராய்ச்சி நூல்கள் பல; சரித்திர நூல்கள் பல; கதைகள் பல. இன்னும் விரிவான ஆராய்ச்சிக்கு இடம் கொடுக்கும் அரிய செய்திகள் அந்த நூலில் இருக்கின்றன. தமிழ் நாட்டின் இலக்கிய வளமும், வரலாற்றுச் செல்வமும், கவிநுகர் திறமும், பழம்பெருமை யுணர்ந்துகொள்ளும் பெருமிதமும் அந்த நூலால் எத்தனையோ படிகள் மேலோங்கி விட்டன என்பது தமிழர்கள் நன்குணர்ந்த செய்தி. இதற்கு மூலமான அருந்தொண்டைப் புரிந்த தமிழ்க் கற்பகமாகிய என் ஆசிரியப்பிரானைத் தமிழ் நாடு என்றும் மறக்க இயலாது என்பது முக்காலும் உண்மை. "பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும் காலமெல்லாம் புலவோர் வாயில் துதியறிவாய் அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய் இறப்பின்றித் துலங்குவாயே" என்று பாரதியார் பாடிய பாட்டும் அதைத்தானே சொல்கிறது? * சங்கநூற் காட்சிகள் என்ற வரிசையில் இது ஐந்தாவது புத்தகம். இதற்குமுன் வந்த நான்கும் அகப்பொருளைப் பற்றியவை. இது புறப்பொருளைப் பற்றியது. ஆகவே அந்தப் புத்தகங்களில் உள்ள கட்டுரைகளின் போக்குக்கும் இதில் உள்ள விளக்கங்களின் போக்குக்குமிடையே சில வேறுபாடுகள் இருக்கக் காணலாம். செய்யுட்களின் உரைகளில் பழைய உரையாசிரியர் உரைக்கு வேறுபட்ட பகுதிகள் சில இருக்கும். சில இடங்களில் அவர் இரண்டாவதாக ஓர் உரை எழுதுகிறார். அந்த உரை சிறப்பாகத் தோன்றியதால் அதையே தழுவி விளக்கம் எழுதிய சில இடங்களும் உண்டு. இதிலே வரும் மன்னர்கள், புலவர் களைப்பற்றிய செய்திகள் அனைத்தையும் தொகுத்துத் தருவ தானால் மிக விரியுமாதலால், பாட்டின் விளக்கத்துக்குப் போதிய அளவில் அவற்றைக் கொடுத்திருக்கிறேன் இதற்குமுன் வெளிவந்த புத்தகங்களை ஆதரித்துப் பாராட்டிய அன்பர்கள் இதனையும் இனி வர இருக்கும் நூல்களையும் பெற்று ஊக்குவிப்பார்கள் என்றே நம்புகிறேன். எளியேனையும் இத்தொண்டில் ஈடுபெறச் செய்த முருகன் திருவருளையும் என் ஆசிரியப்பிரான் ஆசியையும் சிந்தித்து வந்திக்கின்றேன். மயிலை 1-8-52 கி.வா.ஜகந்நாதன் --------------------     4. 1. அருந்தவத்தோன் கடவுள் வாழ்த்துப் பாடுவதில் சிறந்தவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். பெருந் தேவனார் என்ற பெயர் மகாதேவனாகிய சிவபெருமானைக் குறிக்கும். சிவபெருமானைக் குறித்து அகநானூற்றில் ஒருபாடலும் புறநானூற்றில் ஒரு பாடலும் அவர் பாடியிருக்கிறார். அப்பெருமானுடைய தோற்றத்தை அவ் விரண்டு பாடல்களிலும் வருணித்திருக்கிறார். புறநானூற்றில் சிவபெருமானை அவர் பாடிய பாடல் முதற் செய்யுளாக அமைந்திருக்கிறது.* சிவபெருமான் இடபவாகனத்தில் எழுந் தருளி வருகிறார். நெடுந்தூரத்திலே வரும் போதே நாம் அன்புடன் பார்க்கிறோம். அப் போது விளக்கமாக எது தெரியும்? அவருடைய திருமுடிதான் தெரியும். நெடுந்தூரத்தில் வருபவனுடைய தலையும் முண்டாசும் தெரிவதுதான் இயற்கை. பெருந்தேவனார் நெடுந்தூரத்திலே உலாவரும் சிவபெருமானைத் தரிசித்து நமக்கும் காட்டுவாரைப் போலத் திருமுடி தொட்டு வரு ணிக்கத் தொடங்குகிறார். அதோ! அவர் திருமுடியின்மேல் அடையாள மாலை இருக்கிறது. ஒவ்வொரு தெய்வத்துக்கும் உரிய அடையாளமாக ஒவ்வொரு கண்ணி உண்டு. சிவபெருமானுடைய அடையாளப் பூ, கொன்றை. கொன்றை மலர்க் கண்ணியைச் சூடும் பிரான் அவர். அந்தக் கொன்றை மலர் கார் காலத்திலே மலர்ந்து மணம் வீசுவது. கார் காலத்தில் மலரும் நறுங்கொன்றையே எம்பெருமானுக்குரிய கண்ணி. அவருடைய திருமார்பு எவ்வளவு அழகாக இருக்கிறது! மாணிக்கம் பதித்தாற்போன்ற செவ்வண்ண மார்பம் அல்லவா? அந்த வண்ண மார்பிலே புரளும் மாலையைச் சற்றே பார்ப்போம். அந்தத் தாரும் கொன்றைதான். தலையிற் சூடும் அடையாள மாலையாகிய கண்ணியும் கொன்றை; அழகுக்கும் இன்பத்துக்குமாக மார்பிலே அணியும் மாலையாகிய தாரும் கொன்றை. பெருமான் ஊர்ந்து வரும் ஊர்தி இடபம்; அந்த ஏறு தூய்மையை உடையது; வெண்ணிற மானது. தர்மத்தையே ஊர்தியாக ஊர்பவன் இறைவன். தர்மம் மாசு மறுவற்றது. ஆதலின் விடையும் வெண்ணிறமாக இருக்கிறது. சிவபிரான் கொடியை ஏந்தியிருக்கிறார். அதுவும் ஒரு அடையாளம். இன்ன கொடியை உடையவர் என்று அரசரையும் பிறரையும் குறிப்பதுண்டு. எம்பெருமானுக்குச் சிறந்த கொடியாக உதவுவதும் அந்தத் தூய வெண்மை யான ஏறுதான். சிவபிரானுடைய மஞ்சள் நிறக் கொன்றைக் கண்ணியுந் தாரும், அவருடைய தூய வெள்ளை ஏறாகிய ஊர்தியும் கொடியும் நன்றாகத் தெரிகின்றன. இவை அவருடைய திருமேனிக்குப் புறம்பான அடையாளங்கள். அவருடைய திருமேனியைப் பார்க்கவேண்டாமா? சற்று அதைக் கவனிப்போம். அது என்ன, அவருடைய திருக்கழுத்தில் கன்னங்கறே லென்றிருக்கிறதே! அது கறுப்பாக இருந்தாலும் பெருமானுடைய திருக்கழுத்தில் அழகாக அமைந்திருக்கிறது. செவ்வண்ணத் திருமேனியில் இந்தக் கறுப்பு நிறம் விட்டு விளங்குகிறது. கழுத்திலே நீலமணி கட்டினால் எவ்வளவு அலங்காரமாக இருக்கும்? அப்படி அணி செய்கிறது இந்தக் கறை. அழகு செய்வது மாத்திரமா? அந்தக் கறைக்குத்தான் எத்தனை பெருமை! இறைவனை நீலகண்டன் என்று யாவரும் பாராட்டுகிறார்களே, அது அந்தக் கறையை நினைந்ததுதானே? தேவர்கள் அமுதம் வேண்டிப் பாற்கடலைக் கடைந்த போது ஆலகால விடம் எழுந்தது. அது கண்டு அஞ்சி ஓடினார் அமரர். தமக்கு அமுதம் வந்தாலும் வராவிட்டாலும் அந்த நஞ்சினின்றும் தம் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டுமே என்ற அச்சம் உண்டாயிற்று. சிவபிரானிடம் ஓடிவந்து ஓலம் இட்டனர். அவர்கள் உயிருக்கு உலைவைக்க வந்த அந்தக் கரிய நஞ்சை இறை வனார் உண்டு தம் திருக்கழுத்தில் தங்கும்படி அமைத்துக்கொண்டனர். தேவர்களின் ஆருயிரைக் காத்த பெருமை அவர் திருக்கழுத் துக்கு உரியது. அது கறுத்ததனால் தேவர்கள் உயிர் பெற்று ஒளிபெற்றனர். சிவபிரான் கழுத்தில் கறை நின்றமையால் அமரர் மனைவி மார் கழுத்தில் மாங்கல்யங்கள் நின்றன. ஆகவே அந்தக் கறை தேவரைக் காத்தது. தேவர்கள் தம் கடமையைச் செய்வதனால் உல கம் இயங்கி வருகிறது. ஆதலின் உலகத்தைக் காப்பதற்கும் அந்தக் கறை காரணமா யிற்று. இத்தனை பெருமை உள்ள நீலகண்டத்தை அன்பர்கள் புகழ்கிறார்கள். வேதத்தைப் பல காலும் ஓதும் அந்தணர்கள் அக்கறையின் சிறப்பைச் சொல்கிறார்கள். வேதத்தில் ருத்திரம் என்ற பகுதியில் சிவபிரானுடைய பெருமை சொல்லப்படுகிறது. அங்கே அவருடைய நீலகண்டத்தின் புகழையும் காணலாம். மறையை நவிலும் அந்தணர் அப்பகுதியை ஓதுவதன் வாயிலாகச் சிவபிரான் திருக்கழுத் துக் கறையைப் போற்றுகிறார்கள். சிவபெருமானுக்கு உயிர்களிடத்தில் உள்ள கருணையையும், எதனாலும் அவர் அழியாத பெருமையுடையார் என்ற சிறப்பையும் வெளியிடும் அடையாளமாக அக்கறையானது மிடற்றை அணி செய்து கொண்டிருக்கிறது. அந்தக் கறையை நினைக்கும்போது அதைக் கழுத்தளவில் நிற்கும்படி செய்த உமாதேவி நினைவுக்கு வருகிறாள். அப்பெருமான் நஞ்சை விழுங்கும்போது அது திருக்கழுத்தில் நிற்கும் படி இறைவி தன் கரத்தால் தடுத்து நிறுத் தினாள் என்று புராணம் கூறும். சிவபிரானுடைய அருளே வடிவமான அம்மை எம்பெருமானினின்றும் வேறாக இருப்பது ஒருநிலை. அப் பெருமானோடு ஒன்றுபட் டும் வேறாகியும் நிற்பது ஒரு நிலை. ஒன்று பட்டே நிற்பது ஒரு நிலை. இந்த மூன்று நிலையில் பின் இரண்டையும் நினைவு கூர்கிறார் பெருந்தேவனார். ஒருபாதி எம்பிராட்டியும் ஒரு பாதி பெருமானுமாக இருக்கும் கோலம் மிகத் தொன்மையானது. அம்மை அப்பன் எனத் தனியே காணும்படி வேறாகத் தோற்றினாலும், இருவேறு உருவங்களாகத் தனித்தனியே நில்லாமையால் இந்த மாதிருக்கும் பாதியனாகிய கோலம் ஒன்றுபட்டும் வேறாகியும் நிற்கும் நிலையைக் காட்டுவது; பெண்ணின் திருவுருவம் ஒரு பாதியாக, ஒருதிறனாக,உள்ள கோலம் அது. அந்த உருவமாகிய சக்தியைத் தமக்குள் அடக்கி ஒன்றாக நிற்கும் நிலையும் உண்டு. சிவமும் சக்தியும் ஒன்றுபட்டு நிற்கும் கோலம் அது. அக் கோலத்தில் சிவமே தோன்றுமன்றிச் சக்தி தோன்றுவதில்லை.சிவத்திலிருந்து சத்தி தோற்றுவாள். சத்தியிடத்திலிருந்து தத்துவங்களெல்லாம் தோற்றும். தோற்றும் முறை இது. ஒடுங்கும் முறை இதற்கு மாறானது. தத்துவங்கள் ஒன்றனுள் ஒன்று அடங்க, இறு தியில் யாவும் சக்தியுள் அடங்கும். அப்பால் அச்சக்தியும் சிவத்துள் அடங்கும். ஒடுங்கும் முறையில் சிவபிரான் தமக்குள் சக்தியை அடக்கிக் கொள்ளுதலைப் பெருந்தேவனார் சொல்கிறார். சிவபெருமான் தம்முடைய திருமுடியிலே பிறையைச் சூடியிருக்கிறார். அது அவர் திரு முடியில் இருந்தபடியே அவருடைய நெற்றியிலே தன் ஒளியை வீசுகிறது. அதனால் அந்த நுதலுக்கு வண்ணமாக, அழகாக அமைந்திருக்கிறது. சந்திரனுக்கு இறைவனார் திருமுடிமேல் இருக்கும் சிறப்புக் கிடைத்தது. அது தேவர்களில் யாருக்கும் கிடைக்கவில்லை. தேவர், அசுரர், முனிவர் முதலாக அறிவுடைய கூட்டத் தினரைப் பதினெட்டு வகையாகப் பிரிப்பர்; பதினெட்டுக் கணம் என்று சொல்வார்கள். அந்தப் பதினெட்டுக் கணத்தினரும், 'இந்தப் பிறைக்கு வந்த பாக்கியமே பாக்கியம்!' என்று அதைக் கொண்டாடுகிறார்கள். இவ்வாறு கொன்றைக் கண்ணியர், கொன்றை மாலையர், இடபவாகனர், இடபத் துவசர், நீலகண்டர், மாதிருக்கும் பதியர், மதி முடிக் கடவுள் ஆக விளங்கும் சிவபெருமான் சடாதாரியாக இருக்கிறார்.சடாதாரி என்ற மாத்திரத்திலே தவமுனிவர் திருக்கோலந்தான் நம் நினைவுக்கு வருகிறது. மற்றக் கடவுளரின் கோலங்களில் இத்தனை தவச் சிறப்புடைய அடையாளங்களைக் காண முடியாது. திருநீறும், தோலாடையும், சடா பாரமும் ஆகியவை தவக் கோலத்தைச் சார்ந்தவை. ஆகவே சிவபிரானை அருந்தவர் என்று சொல்வது வழக்கம். "அருந்தவ முதல்வன்" (கலி.100:7) என்று கலித்தொகை பேசுகிறது. தாழ்ந்த சடையினாற் சிறப்பாக விளங்கும் அருந்தவத்தினராகிய இப்பெருமான் திருமுடியில் என்றும் நீர் குறையாத கங்கை இருக்கிறது. எல்லா உயிர்க்கும் இம்மை மறுமை இன்பங்களைத் தருவது கங்கை. கங்கை சுருண்டு திரண்டு அப் பெருமான் திருமுடியில் அடங்கிக் கிடக்கிறது. நீரைச் சேமித்து வைத்த கமண்டலம் போல, கரகம் போல, அது தோன்றுகிறது. ஆதலின் அதை நீர் அறு தலை அறியாத கரகம் என்றே சொல்லி விடலாம். எல்லா உயிர்களுக்கும் ஏமமாக இருக்கும் நீர் சிறிதும் அறுதலை அறியாத கரகத்தை உடைய தாழ்ந்த சடையினால் பொலிவு பெற்ற அரிய தவக் கோலத்தினராகிய சிவபிரானுக்குக் கண்ணிக் கொன்றை; தாருங்கொன்றை; ஊர்தி ஏறு; கொடியும் ஏறு. அவர் கழுத்தை அணி செய்வது ஒரு கறை; அந்தக் கறையை வேதம் ஓதும் வேதியர் புகழ்கின்றனர்.அவருடைய ஒருபாதியில் பெண் உருவம் உள்ளது; அதனை அவர் தமக்குள் அடக்கிவைத்துக்கொள் வதும் உண்டு. அவர் சூடிய பிறை நுதலுக்கு வண்ணமாக உள்ளது; அதைப் பதினெட்டுக் கணத்தினரும் போற்றி வழிபடுகிறார்கள். இப்படி நமக்குச் சிவபெருமானைக் காட்டு கிறார் பெருந்தேவனார். கண்ணி கார்நறுங் கொன்றை; காமர் வண்ண மார்பில் தாரும் கொன்றை. ஊர்தி வால்வெள் ஏறே; சிறந்த சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப. கறை, மிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே. பெண்உரு ஒருதிறன் ஆகின்று; அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும். பிறை, நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை பதினெண் கணனும் ஏத்தவும் படுமே: எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய நீர்அறவு அறியாக் கரகத்துத் தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே. ● எல்லா உயிர்களுக்கும் இன்பந்தருவதாகிய நீர் என் றும் அறுதலை அறியாத கலசம் போன்ற கங்கையையுடைய தாழ்ந்த சடையினால் விளக்கம் பெற்ற அரிய தவத் திருக் கோலத்தையுடைய சிவபெருமானுக்குத் தலையில் அணியும் அடையாள மாலை, கார் காலத்தில் மலரும் கொன்றைப் பூ; அழகிய செந்நிறம் பெற்ற திருமார்பில் உள்ள மாலையும் கொன்றைப்பூ. அவன் ஏறும் வாகனம் தூய வெள்ளை யான விடை; சிறப்புப் பெற்ற புகழை உடைய கொடியும் அந்த விடையே என்று ஆன்றோர் கூறுவர். நஞ்சினால் உண் டான கறுப்பு அவன் திருக்கழுத்தை அழகு செய்தது; அந்தக் கறுப்பு வேதத்தை ஓதும் அந்தணர்களால் புகழவும் பெறும். பெண் உருவம் ஒருபாதி ஆயிற்று; அவ்வுருவத் தைத் தனக்குள் ஒரு காலத்தில் மறைத்தாலும் மறைப்பான். பிறை திருநெற்றிக்கு அழகாக அமைந்தது; அந்தப் பிறை பதினெட்டுக் கணத்தினரால் பாராட்டப் பெறவும் படும். கண்ணி-முடியில் அணியும் அடையாள மாலை. காமர்-அழகு. வண்ணம்-நிறம். தார்-மார்பில் அணியும் மாலை. ஊர்தி-வாகனம். வால்-தூய. ஏறு- இடபம். என்ப-என்று சொல்வார்கள். கறை - கறுப்பு. மிடறு-கழுத்து. அணிந்தன்று-அணியாக அமைந்தது. ஒரு திறன்-ஒரு கூறு. ஆகின்று-ஆயிற்று. கரக்கும்- மறைப்பான். நுதல்-நெற்றி. வண்ணம்-அழகு. ஏத்தல்- துதி செய்தல். ஏமம்-இன்பம்; பாதுகாப்புமாம். அறவு- அறுதல். கரகம்-கமண்டலம் போன்று அடங்கி நிற்கும் கங்கை; ஆகுபெயர். அருந்தவத்தோன்-சிவபெருமான். பெருந்தேவனார் இங்கே கார்நறுங் கொன்றை என்றது போலவே அகநானூற்றிலும், "கார் விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்" என்று பாடுகிறார். கன்னி என்பது வீரத் துக்கு அறிகுறி; போரில் அடையாளப் பூவாகக் கொள்வது. போர்ச் செயலைப் பெரும்பான்மை யும் எடுத்துக் கூறும் நூல் புறநானூறு. இதன் கடவுள் வாழ்த்தில் வீரத்திற் கேற்பக் கண் ணியை முதலில் நினைத்தார். தார் என்பது காதலுக்கு அறிகுறி; போகத்துக்குரியதென்று நச்சினார்க்கினியர் எழுதுவர். ஆதலின் வீரத் தைச் சொல்லும் புறப் பொருளும் காதலைச் சொல்லும் அகப்பொருளும் ஒருங்கே நினைத்த வாறாயிற்று. சிவபெருமானுடைய தர்ம ரிஷபம் வெண்மையானது என்றும், பதினொரு ருத்திரர்களின் ஊர்திகளாகிய இடபங்கள் கரிய நிறம் உடை யன வென்றும் தக்கயாகப் பரணி உரையாசிரி யர் கூறுவர். வெற்றித் திறத்தைக் காட்டுவதாதலின் 'சிறந்த சீர்கெழு கொடி' என்றார். இறைவன் திருக் கோலம் முதலியன அவனருளே கண் ணாகக் கண்ட பெரியோர்களால் உணர்ந்து சொல்லப் பெற்றன. அவர் கூறியதை வரன் முறையாகத் தெரிந்து பிறர் கூறுவர். தாமே நேரிற் கண்டறியாது ஆன்றோர் கூறுவன வற்றை உணர்ந்து கூறுதலின் 'என்ப' என்றார். இடை எல்லாவற்றிற்கும் பொதுவாகக் கொள்ளவேண்டும். அணியலும் அணிதன்று என்பது அணி தலைச் செய்தது என்ற பொருளுடையது. பதினெண் கணங்களைப் பலவாறு புலவர் கள் கூறுவர். தேவர், அசுரர், முனிவர், கின் னரர், கிம்புருடர், கருடர், இயக்கர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், வித்யாதரர், நாகர், பூதர், வேதாளம், தாராகணம், ஆகாச வாசிகள், போக பூமியோர் என்னும் பதினெட்டு வகையினரைச் சொல்வர் புறநானூற்று உரை யாசிரியர். இவற்றிற் சிறிது வேறு பாட்டுடன் கூறுவோரும் உண்டு. எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய அருந்தவத் தோன் என்று கூட்டி, உயிர்களைக் காப்பாற்றுபவன் சிவபெருமான் என்று கொள்வதும் பொருந்தும். கரகம் என்பதற்குக் குண்டிகை என்றே பொருள் உரைப்பார் பழைய உரையாசிரியர். 'கரகத்தாலும் சதையாலும் சிறந்த செய்தற்கரிய தவத்தை யுடையோனுக்கு' என்பது அவர் உரை. 'தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும் என்பதற்கு, அவ்வடிவுதான் எல்லாப் பொருளையும் தன்னுள்ளே அடக்கி அவ்விறைவன் கூற்றிலே மறையினும் மறையும் என்று உரைப்பினும் அமையும்' என்று மற்றோர் உறையும் கூறுவர். 'இப் பெரியோனை மனமொழி மெய்களால் வணங்க, அறம் முதல் நான்கும் பயக்கும் என் பது கருத்தாகக் கொள்க' என்று கருத் துரைப்பர். கடவுள் வாழ்த்து என்பது புறத்துறைகளில் ஒன்றாதலால் புறத்துறைகள் அடங்கிய புறநானூற்றின் அகத்தே இது முதற் பாட்டாக அமைந்தது.   5. 2. அறப்போர் உலகில் தோன்றிய உயிர்கள் எல்லாவற்றிற்கும் பொதுவாகச் சில தொழில்கள் இருக்கின்றன. உண்பது, உறங்குவது, சந்ததியை உண்டுபண்ணுவது ஆகிய செயல்கள் பறவை, விலங்கு, மக்கள் என்ற எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை. உடம்போடு கூடிய உயிர் களாகிய இவற்றிற்கு உடம்பின் தொடர்புடைய செயல்களில் பல பொதுவாக இருப்பது இயல்பு. ஆயினும் இந்தப் பொதுவான செயல்களில் ஆறு அறிவுடைய மனிதன் தன் அறிவைப் பயன்படுத்திக் கொள்கிறான். கீரைப்பாத்தியில் கீரை நன்றாக வளர்ந்திருக்கிறது. அந்தக் கீரையை மாடும் உண்ணும்; மனிதனும் உண்ணுவான். மாடு தன் நாக்கை வளைத்துச் சுருட்டிப் பாத்தியில் இருந்தபடியே கீரையை உண்டுவிடும். மனிதன் அப்படிச் செய்வதில்லை. கீரையைப் பக்குவமறிந்து பறித்துத் தண்டைக் குழம்புக்கும் கீரையை மசியலுக்கும் உபயோகப்படுத்துகிறான். கீரையைக் கீரை வடைக்கும் பயன்படுத்துகிறான். அவனுக்குள்ள அறிவை உணவு விஷயத்திலே செலுத்திச் செயல் செய்வதால் இந்த நாகரிகம் அமைகிறது. இப்படியே களைத்தபோது கிடைத்த இடத்தில் உறங்குவது விலங்கு. மனிதனோ கட்டில் தேடி மெத்தையும் தலையணையும் தேடி உறங்குகிறான். உணவை உண்டு பசி தீர்வதும் உடம்பை மறந்து உறங்கி இளைப்புத் தீர்வதும் விலங்குக்கும் மனிதனுக்கும் பொதுவாக இருந்தாலும், உண்ணுவதற் கமைந்த உணவுப் பொருளையும், உறக்கத்துக்குத் துணையான பொருள்களையும் அழகழாக இனியவையாகக் கலைத்திறம் படைத்தனவாக அமைத்துக் கொள்ளும் அறிவு மனிதனிடம் இருக்கிறது. மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அவனுடைய அறிவு விளங்குகிறது. அவன் செய்யும் காதலில் அன்புடன் அறிவும் இருக்கிறது. அவன் மக்களை வளர்க்கும் முறையிலும் அன்போடு அறிவு விளங்குகிறது. பசுவானது தன் கன்றுக்குப் பாலூட்டுவதும் தாய் தன் குழந்தைக்குப் பாலூட்டுவதும் பொதுவான செய்கையே. ஆனால் தாய் அறிவுடையவளாதலின் அவள் செய்கை நாகரிகமாக இருக்கிறது. கோபம் வந்தால் விலங்கினங்கள் தம்முள்ளே போரிடும்; ஒன்றை ஒன்று கொன்று விடும். சில சமயங்களில் ஒரு கூட்டம் மற்றொரு கூட்டத்தை எதிர்த்துப் போரிடுவதும், ஒரு விலங்கே வேறு விலங்குக் கூட்டத்தை எதிர்த் துக் குலைப்பதும் காட்டு வாழ்க்கையில் நிகழ்கின்றன. மனிதனுக்கும் கோபம், பகை எல்லாம் உண்டு. அவற்றோடு அவனுக்கு அறிவும் இருப்பதால் அந்தத் தீய குணத்தை அடக்கப் பார்க்கிறான். அறிவிலே பழுத்தவர்கள் கோபமே இல்லாமல் வாழ்கிறார்கள். எல்லோருமே அப்படி இருந்துவிட முடியுமா? கோபத்தை வராமலே அடக்குவது பேரறிவு. கோபம் வரும்போதும், வந்தபின்னும் அடக்குவது அதைவிடக் குறைந்த அறிவு. வந்தபின் வார்த்தையளவிலே அந்தச் சினத்தைக் காட்டி அமைவது அதைவிடக் குறைவான அறிவு. ஆனால் வார்த்தைகளுக்கும் அப்பால் சினம் செல்வதுண்டு. பிறரை அடித்தலும், கொலை செய்தலும் ஆகிய செயல்களாக அந்தக் கோபம் விளைவதும் உண்டு. அப்போது கூட மனிதனுக்கு அறிவு இருப்பதனால் தந்திரமாகவும் கருவிகளைக் கொண்டும் அந்தக் காரியங்களைச் செய்கிறான். ஒரு சமுதாயமே மற்றொரு சமுதாயத்தை எதிர்ப்பது உண்டு. அதைப் போர் என்று சொல்வார்கள். இந்தப் போருக்கு மூலகாரணம் தனி மனிதனுடைய விருப்பு வெறுப்பு அன்று; ஒரு சமுதாயத்தினரின் நன்மை தீமைகளை எண்ணியே போர் நிகழ்கிறது. உலகத்தில் எந்த நாடும் போர் செய்யாமல் இருந்ததில்லை. தனி மனிதனுடைய வாழ்க்கை வரலாற்றுக்கும் ஒரு நாட்டின் சரித்திரத்துக்கும் அடிப்படியான வேறுபாடு இது. மனிதன் தன்னுடைய ஆற்றலால் கல்வி, செல்வம் ஆகியவற்றை ஈட்டி உயர்கிறான். அவனுடைய ஜீவிய சரித்திரத்தில் அவன் செய்த ஆக்க வேலைகளே பெரும்பாலும் இடம் பெறுகின்றன. ஆனால் தனி மனிதர் பலர் சமுதாயமாக வாழும் நாட்டினது சரித்திரத்தைப் பார்த்தாலோ போர்ச் செயல்களே சிறப்பான பகுதிகளாக இருக்கின்றன. சரித்திரம் என்பதே போர் நிகழ்ச்சிகளின் கோவை என்றுகூட மாணாக்கர்கள் நினைத்துப் படிக்கும் அளவுக்குச் சில நாடு வரலாறுகள் அமைந்திருக்கின்றன. போரில் ஈடுபடுபவனும் மனிதன்தான். ஆகவே அதிலும் அவன் தன் அறிவைப் பயன்படுத்திக் கொள்கிறான். பகைவர்களை எளிதிலே மாய்க்கும் படைகளைக் கண்டுபிடிக்கிறான். அவனுடைய கல்வி, செல்வம், மனித சக்தி எல்லாம் போரில் ஈடுபடுகின்றன. இதனால் போர் செய்தலையும் ஒரு கலைபோல எண்ணி அதற்குரிய கருவிகளையும் முறைகளையும் பெருக்கி வருகிறான். மனிதனுடைய அறிவு பகைவனை அழிக்கும் திறத்தில் ஈடுபடுகிறது; அதனால் மனித சமுதாயத்தின் போரில் சில நாகரிக முறைகள் அமைகின்றன. மனிதர்களுக்குள் கோபமே வராமல் அடக்கும் சான்றோர்களும், வந்த பிறகும் செயற்படாமல் அமையும் நல்லவர்களும் இருக்கிறார்கள். அவைகளுடைய அறிவு மனித சமுதாயம் ஒன்றனை ஒன்று அழித்துக் கொள்ளும் போரில் ஈடுபடுவதற்கு உடம்படுவதில்லை. இந்த வெறியை எப்படி அடக்கலாம் என்று எண்ணி அதற்குரிய வழி துறைகளை வகுக்கப் புகுகிறார்கள். ஒருபால் போரைத் திறம்பட நடத்திப் பகைவரை அழிக்கும் கலை வளர்ந்து வந்தாலும், ஒருபால் போரே நிகழாமல் அமைதியை நிலைநிறுத்த வேண்டும் என்ற கருணையும் படர்ந்து வருகிறது. உலகில் எந்தச் சமுதாயத்திலும் கருணையுடைய சான்றோர் மிகச் சிலரே இருக்கக்கூடும். ஆதலின் போர் நிகழ்வது அதிகமாகவும், நிகழாமல் அமைவது குறைவாகவும் இருக்கின்றன. ஆயினும் அந்த நல்லோர்களுடைய அறிவும் கருணையும் போரை அறவே தடுத்து நிறுத்தாவிட்டலும், போரிலும் சில வரையறைகளைக் கடைபிடிக்கும்படி செய்தன. வீட்டில் அழுக்குப்படாமல் இருப்பது மிக நல்லது. ஆனாலும் மனிதன் அழுக்குச் செய்கிறான். வீடு முழுவதும் அழுக் கடையும்போது அதை அலம்புகிறோம். கழுவிய நீரைப் பல இடங்களிலும் பரவவிடாமல் ஓரிடத்தில் விட்டு அதற்கு எல்லை கோலிச் சாக்கடை ஆக்குகிறோம். மனித சமுதாயத்திலும் அழுக்கு முழுவதையும் தடுக்க வகையில்லாவிட்டாலும் பலவகை அழுக்குகளை வரையறைக்கு உட்படுத்தி வெளிப்படுத்தும் சாக்கடைகளைப் பெரியவர்கள் வகுத்திருக் கிறார்கள். இதனால்தான் போரிடுபவர்களிடையிலும் சில விதிகள் இருக்கின்றன. போர் செய்வதற்கும் சில சட்டங்கள் உலகத்து நாடுகள் பலவற்றுக்கும் பொதுவாக இருக்கின்றன. தனி மனிதன் தனி மனிதனைக் கொலை செய்யும் திறத்தில் ஒரு வரையறையும் இல்லை. அதை அறவே விலக்கவேண்டும் என்று எல்லோருமே ஒப்புக்கொண்டு விட்டார்கள். ஆகவே கொலை செய்வது குற்றமாகிவிட்டது. ஆனால் தொகுதியாகச் சேர்ந்து கொலை செய்யும் போர் குற்றமாகவில்லை. ஞானிகளுக்கும், மனிதப் பண்பை வளர்ப்பவர்களுக்கும் அது குற்றமாகவே தோன்றும். முன்னே சொன்னபடி அப்படி நினைப்பவர்கள் சிலரேயாதலால் போர் குற்றமாகவில்லை. ஆனால் போர் செய்யும்போது சில வரையறைகளை அமைத்திருப்பதால், சில முறைகள் குற்றமாக எல்லா வகையினராலும் ஒப்புக்கொள்ளபட் டிருக்கின்றன. புலால் உண்பதே தவறுதான். ஆனாலும் எல்லாருமே புலால் உண்ணாமல் இருப்பது என்பது இன்றைய உலகில் நடக்கக்கூடியதாக இல்லை. அதனால் நல்லவர்கள் புலால் உண்பவர்களுக்கும் ஒரு தர்மத்தைச் சொல்லி வைத்தார்கள். 'நீ பசுவின் புலாலை உண்ணாதே; அமாவாசையில் புலாலை உண்ணாதே' என்று வரையறை செய்தார்கள். புலால் உண்ணாமல் இருப்பதைவிட இந்த வரையறையின்படி நடப்பது எளிதாக இருக்கிறது. ஆதலின் இந்த நாட்டில் புலால் உண்ணுதலாகிய அதர்மம் செய்பவர்களிடத்திலும் ஒரு தர்மம், ஒரு வரையறை இருக்கிறது. போரில் உள்ள தர்மங்கள் அல்லது வரையறைகளும் இத்தகையனவே. போரை அறவே ஒழிக்க இயலாத நிலையில், எல்லாக் காலத்திலும் எல்லா இடத்திலும் எந்த முறையிலும் போரிட்டு உலகை நாசமாக்காமல் இருப்பதற்குரிய வழி துறைகளை ஆன்றோர்கள் வகுத்தார்கள். ஆதலின் போரிலும் அறப்போர் என்ற வகை உண்டாயிற்று. மகாத்மா காந்தியடிகள் நடத்திய அறப்போர்தான் இதுகாறும் உலகம் கண்டறியாத சிறப்புடையது. அவர் செய்த போர், அழிவை எவ்வளவு குறைவாக்கலாமோ அப்படி ஆக்கிற்று. போரில் எதிர் நின்ற இரண்டு கட்சிகளில் ஒன்று உண்மையில் போரிடவே இல்லை; அந்தக் கட்சியினரின் செயலால் எதிர்க் கட்சியாகிய ஆங்கில அரசாங்கத்தாருக்கு உயிரழிவு இல்லை. அவர்கள் தேசீயக் கட்சியினருக்குச் சிறை விதித்தார்கள். இந்த அறப்போரில் எதிர்க் கட்சியினருக்குக் கூட மனிதரை மாய்க்கும் வாய்ப்புக் கிட்டவில்லை! போர் நிகழ்ந்தது, ஆனால் உயிரழிவு இல்லை என்றால் உலகத்தில் எந்த நாட்டுச் சரித்திரத்திலும் இந்த அற்புதத்தைக் காண முடியாது. இந்த அஹிம்சா யுத்தமாகிய அறப்போரை வகுத்த சான்றோர் மகாத்மா காந்தியடிகள். அவருடைய செயல் செயற்கரியது. பாரத தேசத்தில் பழங்காலம் முதற் கொண்டே போர் நடந்து வந்ததுண்டு. ஆனால் அந்தப் போர்களில் சில வரையறை இருந்தன. இன்ன இடத்தில் இன்ன காலத்தில் இன்னமுறையில் போர் செய்யவேண்டும் என்ற திட்டம் இருந்தது. இராமாயணப் போரில் இரா மன் வெறுங் கையுடன் நின்ற இராவணனைக் கொல்லாது, "நாளை வா" என்று கூறி அனுப்பியது அறச் செயல். இத்தகைய பல அறச் செயல்கள் போரிடையிலும் நிகழ்வதால் அது போரேயானாலும் அறப்போராக இருந்தது. தமிழ் நாட்டில் நிகழ்ந்த போர்களும் அறப் போர்களே. அவற்றிற்குரிய வரையறைகளைப் புலவர்கள் அமைத்தார்கள். எவரேனும் வரையறை கடந்து போர் செய்தால் அவர்களைப் புலவர்கள் பாடமாட்டார்கள். அவர்களுடைய பழி பரவி மற்றவர்களை அஞ்சச் செய்யும். சில இடங்களில் சில கொடுஞ் செயல்கள் நிகழ்ந்த துண்டு. ஆயினும் பெரும்பாலும் அறப்போர்களே நிகழ்ந்து வந்தன. போர் செய்யும்போது படை இல்லாதவனையும், ஒத்த படை கொள்ளாதவனையும், புறமுதுகு காட்டினவனையும், சோர்வுடையவனையும் எதிர்த்துப் பொருவது அறமன்று என்ற வரையறை இருந்தது. 'சிறப்புடை அரசியலாவன: மடிந்த உள்ளத் தோனையும் மகப்பெறாதோனையும் மயிர் குலைந் தோனையும் அடிபிறக்கிட்டோனையும் பெண் பெயரோனையும் படையிழந்தோனையும் ஒத்த படை எடாதோனையும் பிறவும் இத்தன்மை யுடையோரையும் கொல்லாது விடுதலும், கூறிப் பொருதலும் முதலியனவாம்' (தொல்காப்பியம் புறத்திணையியல், 10) என்று நச்சினார்க்கினியர் எழுதுகிறார். போர் தொடங்கியது முதல் முடிவு வரையில் இத்தகைய அறச் செயல்கள் பல போர்க்களத்தில் நிகழ்வதைத் தொல்காப்பியத் திலும், புறப் பொருள் இலக்கணங்களை வகுக்கும் பிற நூல்களிலும் உள்ள செய்திகளால் அறியலாம்; புறநானூறு முதலியவற்றில் போரிடையே இத்தகைய அறச் செயல்களைச் செய்த வீரப் பெருமக்களின் வரலாற்றைக் குறிப்பிடும் செய்யுட்கள் பல உண்டு * போர் தொடங்கப் போகிறது. ஒரு நாட் டின் அரசன் தான் பகைவனை எதிர்த்துப் போர் செய்யப் போவதைத் தன் வீரர்களுக்கு அறிவிக்கிறான்; முரசறைந்து அறிவிக்கிறான். அதுகேட்டு வீரர்களுடைய தினவெடுத்த தோள்களெல்லாம் பூரிக்கின்றன. போர் என்ற சொல்லைக் கேட்டாலே அவர்களுக்கு பயம். --- txt to be fixed at the last line ---- பகைவர் நாட்டில் உள்ள மக்கள் யாவரையும் அழிக்கவேண்டு மென்பது அரசனது நோக்கம் அன்று. பிறருக்குத் தீங்கு செய்யா தவர்களையும், தமக்குப் பின் குடிகாத்து ஓம்பும் மக்களைப் பெறாதவர்களையும் கொல்வது தீது. ஆதலின் பகையரசனுடைய நாட்டில் உள்ள அந்த வகையினரைப் பாதுகாக்கவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாகப் பசுக்களைக் காக்க வேண்டும். இதற்காகப் பகை நாட்டார் தெரிந்து கொள்ளும் வண்ணம் தாம் போர் செய்யப் போவதை வெளிப்படையாகத் தெரிவித்து விடுவார்கள். 'பசுக்களும், பசுவையொத்த அந்தணர்களும், பெண்களும், நோயாளிகளும், பிதுர் கர்மங்களைச் செய்தற்குரிய மக்களைப் பெறாதவர்களும் தங்களுக்குப் பாதுகாப்பான இடத்தைத் தேடி அடைந்து விடுங்கள். நாம் போரிடப் போகிறோம்' என்று முரசு அறையச் செய்வார்கள். இந்தச் செய்தியைக் கேட் டவர்கள் என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்வார்கள். இதை உணர்ந்து தமக்குரிய பாதுகாப்பைச் செய்வதற்குரிய அறிவில்லாத பசுமாடுகள் இருக்கின்றனவே, போரிடத் துணிந்த அரசன் அவற்றை வழிமடக்கித் தன் ஊருக்குக் கொண்டு வந்து பாதுகாப்பான். இது போர் முழக்கம் செய்யும்போதே நிகழும் நிகழ்ச்சி. இப்படிப் பகைவருடைய ஆநிரையைக் கொண்டு வருவது வெட்சித்திணை யென்ப தன்பாற்படும். புறப்பொருளில் முதல் திணை இது. வெட்சித் திணையே, போர் செய்தாலும் அதிலும் அன்பும் அறமும் இடம் பெறும் என்பதைக் காட்டுவதற்கு அறிகுறியாக நிற்கிறது. உலகியலில் நிகழ்ந்தாலும் நிகழா விட்டாலும் அதுவே எம்முடைய குறிக்கோள் என்று, அதை மக்கள் மறவாத வண்ணம் இலக்கண நூல் வற்புறுத்துகிறது. நூல்களில் இந்த வரையறையைக் கடைப்பிடித்துப் புலவர் கள் இலக்கிய உலகில் இதை நிகழ்த்தட்டும் என்று இலக்கண நூலார் இத்தகைய போரறங்களை-யுத்த தர்மங்களைச் சொல்லி வைத் தார்கள். 'இருபெரு வேந்தர் பொருவது கருதியக் கால் ஒருவர், ஒருவர் நாட்டு வாழும் அந்தணரும் ஆவும் முதலியன தீங்கு செய்யத் தகாத சாதிகளை ஆண்டு நின்றும் அகற்றல் வேண்டிப் போதருக எனப் புகறலும், அங்ஙனம் போதருதற்கு அறிவில்லாத ஆவினைக் களவினால் தாமே கொண்டுவந்து பாதுகாத்தலும் தீதெனப்படாது அறமேயாம்' என்றும், 'மன் னுயிர் காக்கும் அன்புடை வேந்தற்கு மறத் துறையினும் அறமே நிகழும்' என்றும் நச்சினார்க்கினியர் (தொல். புறத்திணை. 2, உரை) எழுதுகிறார். திருவள்ளுவர் மறத்துறையிலும் இத் தகைய அன்புச் செயல்கள் இருத்தலை எண்ணியே, அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்; மறத்திற்கும் அஃதே துணை. என்று கூறினார். பகைகொண்ட அரசனிடத்தும் அவனைச் சார்ந்து போர் செய்யும் வீரர்களிடத்தும் சினத்தைக் காட்டும் மன்னன் மற்றவர்களிடம் அன்பு காட்டுவது மறத்திடையே தோற்றிய அறம். ஆநிரைகளைப் பகைவர் நாட்டினின்றும் மீட்டுவரும் மரபு தமிழ் நாட்டில் இலக்கிய இலக்கணங்களால் வெளியாகிறது. "சண்டைக்கு எடுபிடி மாடுபிடி" என்ற பழமொழிகூட இந்த அறத்தைச் சுட்டிக் காட்டுகிறது. பழமொழியாக வழங்குமளவுக்கு இந்தச் செயல் தமிழ் நாட்டில் ஊன்றியிருக்கிறது. பாரதத்தில் விராடபர்வத்தில் துரியோதனாதியர் விராட தேசத்து மாடுகளைக் கவர்ந்து வர, அவரெதிர் சென்று அருச்சுனன் அவற்றை மீட்டான் என்ற வரலாறு வருகிறது. தமிழ் இலக்கணத் தில் மிகப் பழமையானது தொல்காப்பியம். அதில் ஆநிரை கவரும் வெட்சிக்கு இலக்கணம் இருக்கிறது. அந்த இலக்கணம் தொல்காப்பியர் புதியதாகப் படைத்தது அல்ல. அதற்கும் முன்பே இருந்த நூல்களில் உள்ளவற்றை அடியொற்றியே அந்த இலக்கணத்தை அவர் வகுத்தார், அகவே, பழங்காலத்திலேயே ஆநிரை கொள்வது தமிழ் நாட்டில் மரபாக இருக்கிறதென்று கொள்ளலாம். இந்த மரபை உணர்ந்த மன்னர்கள், பாரதப் போர் தொடங் கும் முன்னர், இந்தத் தமிழ் நாட்டு மரபு நல்ல தென எண்ணித் தாமும் மேற்கொண்டார்கள் என்றே தோன்றுகிறது * இத்தகைய அறப்போரைச் செய்த தமிழ் நாட்டு மன்னர்களில் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி ஒருவன். அவன் முடியுடை மூவேந்தர்களில் ஒருவராகிய பாண்டியர் குலத்தில் வந்தவன். பல யாகங்களைச் செய்வித்தவன். அவனுடைய தலைநகரில் உள்ள மதிலை அழிக்கும் ஆற்றல் எந்தப் பகையரச னுக்கும் இல்லை. அந்த மதிலிலுள்ள சிகரங்களாகிய குடுமிகள் பல காலமாக வண்ணங் கெடாமல் முதுகுடுமியாகவே இருந்தன. அவனுக்கு அமைந்த பெயரே இத்தனை சிறப்புக்களையும் தெரிவிக்கின்றது. இவ்வளவு நீளமான பெயரை உடையவனானாலும் புலவர்கள் சுருக்கமாகக் குடுமி என்றும் அழைப்பார்கள்; பாட்டில் வைத்துப் பாடுவார்கள். அப்படிப் பாடியவர்களில் நெட்டிமையார் என்ற புலவர் ஒருவர். மிகப் பெரியவர்களையும் மிகச் சிறியவர்களையும் அவர்களுக்குரிய சொந்தப் பெயரால் அழைப்பது பெரும்பாலும் வழக்கமன்று. பெரியவர்கள் பெயரை வெளிப் படையாகச் சொல்வது மரியாதையன்று என்று பழங்காலத்தில் எண்ணினார்கள். இந்தக் காலத்தில்கூடப் பிள்ளையவர்கள், தாசீல்தார் ஐயா என்று சொல்கிற வழக்கம் இருக்கிற தல்லவா? நெட்டிமையார் என்ற புலவருக்கு அவருடைய தாய் தந்தையர் வைத்த பெயர் இன்னதென்று நமக்குத் தெரியாது. அவருக்கு நீண்ட இமைகள் இருந்தமையால் அந்த அடை யாளங்கொண்டு அவரைக் குறிப்பது வழக்கமாகப் போயிற்று. இப்படி உறுப்பினால் பெயர் வைத்து வழங்கும் வழக்கம் தொல்காப்பியத்திலிருந்துகூடத் தெரிகிறது. நெடுங்கழுத்துப் பரணர், பரூஉ மோவாய்ப் பதுமனார், தங்கால் முடக்கொல்லனார், முடமோசியார் என்று உறுப்புக்களைக் கொண்டு புலவர்களைச் சுட்டும் வழக்கம் தமிழ் நாட்டில் இருந்தது. இதில் ஒரு சிறப்பு உண்டு. உறுப்புக் குறையைச் சுட்டி இத்தகைய பெயர்கள் வரும் பொது, அந்தப் பெயர்கள் இழிவான பொருளைத் தரவில்லை. உறுப்பிலே குறை நேர்வது மனிதனுடைய செயல் அல்லவே. அப்படி இருக்க அதனை இழிவாகக் கருதுவது எவ்வளவு பைத்தியக் காரத்தனம்! தமிழர்கள் உறுப்புக் குறையை இழிவாகக் கருதவில்லை. அப்படிக் கருதியிருந்தால் உறுப்புக் குறையைச் சுட்டும் பெயர்களைப் புலவர்களுக்கு இட்டு வழங்குவார்களா? முடமோசி யென்று முடப் புலவரைச் சுட்டு வதில் இழிவுக் குறிப்பிருந்தால் அதை நூலில் எழுதுமளவுக்குக் கொண்டு வருவார்களா? கரிகாலன் என்று ஒரு சக்கரவர்த்திக்குப் பெயர். அது அவனுடைய சொந்தப் பெயர் அல்ல. அவன் கால் கரிந்து போனமையால் அந்தப் பேர் வந்தது. இந்தக் காலத்தில் அப்படிப் பேரிட்டு அழைத்தால் அழைப்பவன் நாக்குக் கரிந்துவிடும். அக்காலத்தில் அதை இழிவாகக் கருதவில்லை. அந்தப் பெயரைப் பாட்டில் வைத்துப் பாடினார்கள்; மற்றவர்களுக்கும் வைத்தார்கள். இமை நீண்ட புலவரை நெட்டிமையார் என்று வழங்கும் வழக்கமும் இந்த வகையில் சேர்ந்ததே. நெட்டிமையார் முதுகுடுமியை வாழ்த்தப் புகுந்தார். அவனுடைய நல்லியல்பை எடுத்துக் கூறி, நீ நீண்ட நாள் வாழவேண்டுமென்று சொல்ல எண்ணினார். அவன் பல சிறந்த இயல்புடையவன். அந்த இயல்புகளுக்குள் எதை இப்போது சொல்லலாமென்று ஆராய்ந்தார். அவன் வாழவேண்டும்; அவனால் நாடு முழுவதும் வாழவேண்டும். புலவர், உலகத்தில் உள்ள உயிர்கள் அத்தனையும் வாழவேண்டும் மென்று நினைப்பவர். ஆனால் போர் என்று ஒன்று மற்ற நாட்டினரை வாழாமல் அடிக்கிறது. அதை நடவாமல் நிறுத்த முடியுமா? ஆனாலும் அந்தப் போரிலும் அறநெறி ஒன்றைப் பின்பற்றி, அந்த அறத்தாற்றிலே நடப்பது சிறப்பல்லவா? அந்தச் சிறப்பு முதுகுடுமியிடம் இருக்கிறது. ஆகவே அவனுடைய இயல்புகளில் அறத்தாற்றின் வழியே போர் செய்யப் புகும் கொள்கையைச் சிறப்பிக்கலாம் என்று தோற்றியது. பாட ஆரம்பித்தார். * போர் செய்யப் போவதைப் பகை நாட்டில் உள்ளோருக்கு அறிவிக்கத் தலைப்பட்ட முதுகுடுமி தீங்கு செய்யத் தகாதவர்களென்று யார் யாரை நினைத்தான்? முதலில் ஆவை நினைத்தான்? எந்தக் காரணத்தைக் கொண்டும் தீங்கு செய்யத் தகாதது அது. தன் கன்றை ஊட்டுவதற்கு அமைந்த பாலால் உலகையும் ஊட்டும் தன்மை உடையது. அதற்கு அடுத்தபடி தம் நலத்தைச் சிறிதளவே கருதிப் பிறர் நலத்தைப் பெரிதாகக் கருதி வாழும் அந்தணர்களை நினைத்தான். தன் கன்றுக்குச் சிறிதளவு பால் தந்து பெரிதளவு பாலைப் பிறருக்கு வழங்கும் ஆவைப் போன்றவர்கள் அவர்கள். ஆகவே ஆவை நினைத்த வுடன் ஆனின் இயல்புடைய பார்ப்பன மாக்களை நினைத்தான். அவரை அடுத்துப் பாதுகாப்புக்குரியவர்கள் மகளிர்; போர் புரிவதற்குப் பயன்படாதவர்கள். அவர்களையும் நினைத்தான். மற்ற மக்களிலும் சிலரைப் போரில் ஈடுபடுத்துவது தவறு. பிணியுடையவர்களைப் போரிலே புகுத்தக்கூடாது. போர்க்களத்தில் நோயுடையவர்கள் வந்தாலும் அறப்போர் முறையில் அவர்களோடு பொருதல் தகாது. பிணியின்றி இருப்பவர்களாயினும் புதல்வர் இல்லாதாரையும் போரில் அழித்தல் தவறு. புதல்வர் இருந்தால் அவர்களுடைய கால்வழி இடையறாது உலகில் நிலைபெறும். தாம் இறந்த பின்பும் பிதிரர்களை நோக்கிச் செய்யும் அருங் கடன்களை அவர்கள் புரிவார்கள். புதல்வர்கள் பொன் போன்றவர்கள். தளர்ச்சியுற்ற காலத்தில் துணையாவதோடு, இறந்த பிறகும் நன்மை தரும் கடன்களைச் செய்தலின் அவர்கள் பொருளைப் போன்றவர்கள். பின்னால் தளர்ந்த காலத்தில் உதவுவதற்காகப் பொருளைச் சேமித்து வைப்பார்கள். அதற்கு எய்ப்பில் வைப்பு என்று பெயர். புதல்வர்கள் எய்ப்பில் வைப்புப் போன்றவர்களே. அதனால்தான், தம்பொருள் எம்பதம் மக்கள் என்று திருவள்ளுவர் கூறினார். பொருள் என்றே பிள்ளைக்கு ஒரு பெயர் உண்டு. பொன் போன்ற புதல்வர்களைத் தென்புலத்தில் வாழும் பிதிரர்களுக்கு அருங்கடனை இறுப் பதன் பொருட்டுப் பெறாதவர்களும் போரில் விலக்குதற் குரியவர்கள். இவர்களெல்லாம் கேட்கும்படி, "எம்முடைய அம்பைக் கடிதிலே விடுவோம். நீங்கள் உங்களுக்கு அரணாக உள்ள இடங்களைத் தேடி அடையுங்கள்" என்று முதுகுடுமி நுவலுவானாம். இது சிறந்த அறத்தாறு அல்லவா? போர் செய்யப்புகும் போதும் இந்த அறநெறியை மேற்கொள்ளும் விரதம் உடையவன் அவன். அறநெறி யென்று சொல்லி, போர் வந்தால் கோழையாகி நிற்போரும் உண்டு. முது குடுமிப் பெருவழுதி அறநெறி வழி ஒழுகுபவன். போர் செய்யும் வீரமும் உடையவன்; மறக் கலையில் மாட்சி பெற்றவன். அவன் போர் செய்யப் புகுவானானால் அவனுடைய படையின் பெருமை அப்போதுதான் புலப்படும். படையிலே சிறப்பான பகுதியானைப் படை. யானை ஒன்று ஆனாலும் பத்து ஆளுக்கு ஒப்பானது. "யானையுடைய படை" என்று சிறப்பாகச் சொல்வார்கள். யானைகள் வெறும் அலங்காரமாக வருவன அல்ல. எல்லாம் ஆண் யானைகள்; ஆண்மையிலே சிறந்த யானைகள்; பகைவரைத் துகைத்துக் கொல்லும் களிறுகள். அவற்றின் மேலே கொடிகளை நாட்டி யிருப்பார்கள். யானையின் பெரும்படை முன்னே செல்லும்போது அவற்றின் மேலே ஏற்றிய கொடிகள் வானை மறைக்கும். எங்கும் நிழலைப் பரப்பும். இவற்றை யெல்லாம் நினைத்தார் புலவர். போர் செய்யப் புகும்போதும் அறத்தாற்றை நுவலும் அவன் கொள்கையையும், அவனுடைய படைப் பெருமையையும் கூறி, "நீ வாழ்வாயாக!" என்று வாழ்த்தப் புகுந்தார். ஆவும் ஆன்இயற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணிஉடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் எம்அம்பு கடிவிடுதும்; நும்அரண் சேர்மின்என அறத்தாறு நுவலும் பூட்கை, மறத்திற் கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும் எங்கோ வாழிய குடுமி! முதுகுடுமிப் பெருவழுதியை எப்படி வாழ்த்துவது! அவனுக்கு மேலும் மேலும் வெற்றி உண்டாக வேண்டுமென்று வாழ்த்தலாம். எல்லா இன்ப நலங்களும் கிடைக்க வேண்டுமென்று வாழ்த்தலாம். நீடூழி வாழவேண்டுமென்று வாழ்த்தலாம். புலவர் அவன் பல்லாண்டு வாழ வேண்டுமென்று வாழ்த்த விரும்பினார். பல ஆண்டுகள் என்பதற்கு ஓர் உவமையைச் சொல்ல நினைத்தார். வானத்தில் தோன்றும் மீன்கள் கணக்கற்றவை; அவற்றைப் பன்மைக்கு உவமையாகச் சொல்வது மரபு. மழை பெய்யும்போது உண்டாகும் மழைத் துளிகளும் பல; அவற்றையும் சொல்வதுண்டு. கடல் மணல், ஆற்று மணல் ஆகியவற்றை எண்ணி முடியாது; அவற்றையும் பன்மைக்குச் சொல்வதுண்டு. நெட்டிமையார் ஆற்று மணலைச் சொல்ல வருகிறார். சோழன் ஒருவனை வாழ்த்த வந்த புலவர் ஒருவர் அவனுடைய நாட்டில் உள்ள காவிரி யாற்றின் மணலைவிடப் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்று வாழ்த்தினார். சிறக்கநின் ஆயுள் மிக்குவரும் இன்னீர்க் காவிரி எக்கர் இட்ட மணலினும் பலவே. இங்கே நெட்டிமையார் பாண்டிய மன்னனை வாழ்த்துகிறார். ஆதலின் பாண்டி நாட்டி லுள்ள ஆற்றிலிருக்கும் மணலைச் சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். முதுகுடுமிப் பெருவழுதியின் காலத்தில் பாண்டி நாட்டில் இருந்த நதிகள் வையையும் பொருநையும். நெட்டிமையார் அந்த ஆறுகளைக் குறிப்பிட வில்லை. புலவர்கள் யாரேனும் ஒரு மன்னனைப் பாடும்போது அவர்களுடைய முன்னோரின் புகழையும் இணைத்துப் பாடுவது வழக்கம். முதுகுடுமியை வாழ்த்தும்போது அவனுடைய முன்னோன் ஒருவனையும் பாராட்ட நினைந்தார் புலவர். குடுமியின் வாழ்நாள் பல்குக என்பதற்கு ஏற்ற உவமையும், அவன் முன்னோன் ஒருவனுடைய சிறப்பும் ஆகிய இரண்டையும் ஒருங்கே அமைக்கும் நயமான வாய்ப்பு இந்தப் புலவருக்குக் கிடைத்தது. * மிகப் பழங் காலத்தில் பாண்டிநாடு இப்போது உள்ளதைவிட அதிகப் பரப்பை உடையதாக இருந்தது. குமரித் துறைக்கும் தெற்கே பல காவதங்கள் தமிழ்நாடு விரிந்திருந் தது. அந்தப் பகுதியில் ஆறுகளும் மலைகளும் இருந்தன. குமரிமலை, குமரி ஆறு, பஃறுளி யாறு என்பன அப்பகுதிகளில் இருந்தன என்று தெரிகிறது. அந்தப் பழங்காலத்தில் தெற்கே மதுரை என்ற நகர் இருந்தது. அதைப் பாண்டிய மன்னர்கள் தம்முடைய தலைநகாராகக் கொண்டு ஆட்சி புரிந்தார்கள். அக்காலத்தில் கடல்கோள் ஒன்று நிகழ்ந்தது. தமிழ் நாட்டின் தென் முனையில் ஒரு பகுதி யைக் கடல் விழுங்கியது. மதுரை மறைந்தது. பாண்டிய மன்னர் தம் தலைநகரை வடக்கே தள்ளி வைத்துக் கொண்டார்கள். மதுரை தலைநகராக இருந்த காலத்தில் பாண்டியர்கள் அங்கே ஒரு தமிழ்ச் சங்கத்தை வைத்து வளர்த்து வந்தார்கள். அதைத் தலைச் சங்கம் என்று சொல்வார்கள். மதுரையைக் கடல் கொண்ட பிறகு கபாடபுரம் என்ற நகரம் பாண்டியர்களின் இராசதானியாயிற்று. அங்கும் தமிழ்ச் சங்கத்தை அவர்கள் நடத்திவந்தார்கள். அதற்கு இடைச் சங்கம் என்று பெயர். கபாடபுரத்திற்குத் தெற்கே உள்ள பகுதியை வேற்றரசர் சிலர் கைப்பற்றினர். கடல் கோள் நிகழ்ந்தமையால் தளர்வுற்ற பாண்டியர்களின் சோர்வு கண்டு வேற்றரசர் இவ்வாறு செய்தனர். பாண்டியன் மாகீர்த்தி என்ற அரசன் முடிசூடினான். அவன் வீரமும் புலமை யும் நிரம்பியவன். தன பகைவரை வென்று அவர் பெற்றிருந்த நிலத்தையும் தன்னுடைய தாக்கிக் கொள்ளவேண்டுமென்று உறுதி பூண்டான். பகைவர்மேற் படையெடுத்துச் சென்று தென்கோடி வரை போய்த் தென் கடற்கரையளவும் தன ஆணையைச் செலுத்த வேண்டும் என்பது அவன் நினைவு. போர்க்கோலம் பூண்டு புறப்பட்டான். புறப்பட்டபொழுது அவன் ஒரு வஞ்சினம் இயம்பினான். "நான் கடலளவும் சென்று, அந்தக் கடல்வடிம்பிலே நின்று என் கால்களை அந்தக் கடலின் நீராலே அலம்பிக் கொண்டாலன்றி மீளேன்!" என்று நெடுமொழி கூறினான். படையெடுத்துச் சென்று குறும்புகளை அடக்கித் தென் கடலுக்குச் சென்றான். அங்கே கடலோரத்தில் வடிம்பு அலம்ப நின்றான். அன்று அவனுக்கும் பிற மக்களுக்கும் உண்டான மகிழ்ச்சி எல்லை காணாதபடி இருந்தது. அன்றுமுதல் அந்த மன்னனுக்குக் கடல் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்ற பெயர் உண்டாயிற்று. பகைவர்பால் இருந்த நிலத்தை மீட்டுக் கொண்டமையால் நிலந்தரு திருவிற் பாண்டியன் என்ற பெயரும் அவனுக்கு அமைந்தது. உருவாலும் புகழாலும் உயர்ந்து நின்றமையால் அவனை நெடியோன் என்று புலவர் புகழ்ந்தனர். அவன் காலத்தில் பஃறுளியாறு என்ற ஆறு பாண்டிநாட்டில் ஓடியது. அவன் காலத்தில் இடைச் சங்கத்தில் தொல்காப்பியர் ஒரு புலவராக இருந்தார். அவர் தொல்காப்பியம் என்ற அரிய இலக்கணத்தை இயற்றி நிலந்தரு திருவிற் பாண்டியன் அவைக்களத்தில் அரங்கேற்றினார். அப்பாலும் ஒரு கடற்கோள் நிகழ்ந்தது. பாண்டியர்கள் பின்னும் வடக்கே வந்து ஒரு நகரை அமைத்துக் கொண்டு தம் பழம்பதியாகிய மதுரையின் பெயரையே அதற்கு இட்டு வழங்கினர். அங்கே கடைச் சங்கத்தை நிறுவி வளர்த்தனர். முதுகுடுமிப் பெருவழுதி அந்தக் காலத்தில் வாழ்ந்தவன். புலவர், வடிம்பலம்ப நின்ற பாண்டியனையும் அவன் காலத்தில் பாண்டி நாட்டிலே ஓடிய பஃறுளியாற்றையும் நினைத்தார். "நீ பஃறுளி யாற்று மணலைக் காட்டிலும் பல ஆண்டுகள் வாழ்வாயாக!" என்று முதுகுடுமியை வாழ்த்தினார். நெடியோனாகிய வடிம்பலம்ப நின்ற பாண்டியனுடைய பஃறுளியாற்று மணலைப் போல வாழ்வாயாக என்று அந்தப் பழம் பாண்டியனையும் தொடர்பு படுத்தினார். அவன் சிறப்பையும் சிறிது சேர்த்துச் சொல்லுகிறார். அந்த நெடியோன் பாண்டிய குலத்தில் வந்த பெரிய மன்னர்களில் ஒருவன். ஒருகுலத்தில் பல மன்னர்கள் பிறந்திருந்தாலும் யாரேனும் சிலருடைய பெயராலே அந்தக் குலத்தைக் குறிப்பது வழக்கம். அந்தப் பெயரை உடையவர்கள் மிக்க சிறப்பைப் பெற்றவர்கள் என்பதை அவர்கள் குலம் என்று சுட்டிச் சொல்லும் வழக்கத்தினால் உணரலாம். சூரிய வம்சத்தில் பலர் உதித்தாலும் ரகு என்ற மன்னன் சிறந்தவனாக இருந்தான். அதனால் ரகுகுலம் என்ற பெயர் இராமன் பிறந்த குலத்துக்கு ஏற்பட்டது. அப்படி முதுகுடுமிப் பெருவழுதி யாகிய பாண்டியனுக்கு முன்னோர்கள் பலர் இருந்தும் புலவர் வடிம்பலம்ப நின்ற பாண்டியனை நினைத்தார். பாண்டிய குலத்தினருக்குத் தலைவன் என்று அவனைச் சொல்கிறார். "தம் கோ" என்று சிறப்பிக்கிறார். அந்த மன்னனுடைய வீரத்தை அவன் பெயரே காட்டும். அவன் கலைஞர்களிடத்தில் பேரன்புடையவன். புலவர், பாணர், கூத்தர் ஆகியவர்களுக்கு நிதி மிக வழங்கும் வள்ளல். செம்பொன்னையும் பசும்பொன்னையும் கூத்தருக்கு வாரி வாரி ஈயும் வண்மையுடையவன். தென்கடலைத் தன தாக்கிக்கொண்டு அந்த நன்னாளில் அங்கே பெருவிழாச் செய்தவன். முந்நீராகிய கடலின் கரையிலே வடிம்பலம்ப நின்றவன்; முந்நீர் விழ வினையுடைய நெடியோன். படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தன்மைகளை உடைமையால் முந்நீர் என்ற பெயர் கடலுக்கு வந்தது. நீர் என்பது இயல்பைக் குறிக்கும் சொல். ஆற்று நீர், ஊற்று நீர், வேற்று நீர் என்ற மூன்று நீர்களும் சேர்ந்து அமைந்தமையால் அவ்வாறு பெயர் பெற்றது என்று சில உரையாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். நிலம் தோன்றுவதற்கு முன்னே தோன்றியது என்ற பொருள்பட முன்னீர் என்றும் சொல்வதுண்டு. முதுகுடுமியை வாழ்த்துகிறார் புலவர்; "உங்களுடைய குலத்தில் பேரரசனாக இருந்தவனும், செம்மையான பசிய பொன்னைக் கூத்தர் களுக்கு வழங்கியவனும், கடலை அடைந்து விழா வெடுத்த முந்நீர் விழாவை உடையோனும், நெடியோனுமாகிய வடிம்பலம்ப நின்ற பாண்டியனுடைய, நல்ல நீரை உடைய பஃறுளியாற்று மணலைக் காட்டிலும் பல ஆண்டுகள் நீ வாழ்வாயாக!" என்று வாழ்த்துகிறார். 'ஆவும் ஆன்இயற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் எம்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்'என, அறத்தாறு நுவலும் பூட்கை, மறத்திற் கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும் எங்கோ வாழிய குடுமி; தம்கோச் செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே. *'பசுக்களும், பசுவின் இயல்புடைய அந்தணர்களும், மகளிரும், நோயுடையவர்களும், போற்றித் தென் திசையில் வாழ்பவராகிய பிதிரர்களுக்குச் செய்யவேண்டிய அரிய கடன்களைக் கொடுக்கும் உரிமையுடைய செல்வத்தைப் போன்ற பிள்ளைகளைப் பெறாதவராகிய நீங்களும், நாம் எம் அம்பை விரைவிலே எய்யப்போகிறோம் ஆதலின், நுமக்கு ஏற்ற பாதுகாப்பான இடங்களை நாடி அடையுங்கள்' என்று அறத்தின் நெறியை வெளிப்படையாகக் கூறும் கொள்கையையும் வீரத்தையும் உடையவனும் போர்க்களத்தில் பகைவரைக் கொல்லும் களிறுகளின் மேலே ஏற்றிய கொடிகள் ஆகாயத்தை நிழல் செய்யும் எம்முடைய அரசனுமாகிய முதுகுடுமிப் பெருவழுதியே! நீ வாழ்வாயாக; பாண்டிய குலத்து அரசனும் செம்மையான இயல்புடைய பசும்பொன்னைக் கூத்தர்களுக்கு வழங்கியவனும் கடல் விழாவை நடத்தியவனும் நெடியோனுமாகிய கடல் வடிம்பலம்ப நின்ற பாண்டியனுடைய நல்லநீரையுடைய பஃறுளியாற்று மணலைக் காட்டிலும் பல ஆண்டுகள். மணலினும் பல வாழிய என்று கூட்டிக் கொள்ள வேண்டும். இயல் - இயல்பு, ஆ முதலியவற்றை முன்னிலைப்படுத்திச் சொல்வதுபோல அமைந்திருப்பதால் பிணியுடையீரும் பெறாஅதீரும் என்பவை முன்னிலையாக இருக்கின்றன. பிணியுடையவர்களாகிய நீங்களும், பெறாதவர்களாகிய நீங்களும் என்று பொருள் கொள்ளவேண்டும். தென்புல வாழ்நர் - பிதிரர்; இவர் தேவ சாதியினர். அவரவர்கள் தம் முன்னோரைக் கருதி ஆற்றும் கடன்களை ஏற்று, அவற்றின் பயன்களை அம் முன்னோர் எவ்விடத்து எப்பிறவியில் இருந் தாலும் அவர்களுக்குச் சார்த்தும் செயலையுடையவர்கள். மாடாகப் பிறந்த ஆன்மாவை நோக்கி அதன் முற்பிறப்பில் தொடர்புடையார் கடன் ஆற்றினால் அதன் பயனைத் தென்புல வாழ்நராகிய பிதிர் தேவதைகள் ஏற்று, அந்த மாட்டுக்கு உரிய புல்லுணவாகவும் பிறவாகவும் கிடைக்கும்படி செய்வார்கள் என்று சாத்திரங்கள் கூறும். இறுக்கும் - அளிக்கும். கடி-விரைவில். விடுதும்-எய்வோம். அரண்-காப்பாக உள்ள இடம். சேர்மின் - அடையுங்கள். அறத்தாறு - அற நெறியிலே. பூட்கை - கொள்கை. மறம்-வீரம். மீமிசை - மேலே. நிழற்றும்-நிழல் செய்யும். கோ-அரசன். செந்நீர் என்றது கலப்பற்ற தன்மையைக் காட்டியது; பசும்பொன் என்றது பொன்னின் வகையைக் காட்டியது. பசும் பொன்-கிளிச்சிறை என்னும் பொன். வயிரியர்-கூத்தர். ஈத்த-வழங்கிய. முந்நீர் விழவு-கடல் விழா; கடல் தெய்வத் திற்கு எடுத்த விழா என்று பழைய உரையாசிரியர் எழுது கிறார்* இச் செய்யுள் புறத்திணைகளில் ஒன்றாகிய பாடாண்திணையில் இயன்மொழி என்னும் துறையைச் சார்ந்தது. பாண்டிய மன்னனுடைய இயல்பை முன்னாலே கூறியமையால் இயன்மொழி ஆயிற்று. இது புறநானூற்றில் ஒன்பதாவது பாட்டு.   6. 3. பெற்ற பரிசில் பழந்தமிழ் நாட்டில் ஆட்சி புரிந்த மன்னர்களில் தலைமை பெற்றவர்கள் சேர சோழ பாண்டியர்களாகிய மூவர். அந்த மூவரும் வேறு எந்த மன்னர்களுக்கும் இல்லாத சிறப்பை உடையவர்கள். முடியை அணியும் உரிமை அவர்களுக்குத்தான் உண்டு. மற்ற மன்னர்கள் முடி அணிவதில்லை. அதனால் சேர சோழ பாண்டியர்களை முடியுடை மூவேந்தர் என்று சொல்வார்கள். அவர்கள் வீரத்தாலும்ம் ஈகையாலும் புகழ் பெற்றவர்கள். புலவர்களைப் போற்றி, அவர்களுக்கு வேண்டிய பரிசில்களை வழங்கி, அவர் கள் பாராட்டிப் பாடும் பாடல்களைப் பெற்றவர்கள். புலவர் பாடும் புகழ் இல்லாதவர்கள் மக்களால் இகழப் பெற்றனர். சில மன்னர்கள் தாமே புலமை மிக்கவர்களாகவும் இருந்தனர். பாலைபாடிய பெருங்கடுங்கோ என்ற சேரனும், பாண்டியன் நெடுஞ்செழியனும், கிள்ளிவளவனும் போன்ற முடியுடை வேந்தர்கள் புலவர்களாகவும் விளங்கினர். அவர்கள் பாடிய பாடல்கள் பழந்தமிழ்த் தொகை நூல்களில் இருக்கின்றன. சேரமான் பாலைபாடிய பெருங் கடுங்கோ என்னும் அரசன் பாலைத்திணையைப் பாடுவதில் வ‌ல்ல‌வ‌ன். அத‌னால்தான் 'பாலைபாடிய‌' என்ற‌ அடை அவ‌ன் பெய‌ரோடு அமைந்த‌து. அவ‌னைப் ப‌ல‌ புல‌வ‌ர்க‌ள் பாராட்டிப் பாடியிருக்கிறார்க‌ள். பேய்ம‌க‌ள் இளஎயினி என்ற‌ பெண் புல‌வ‌ர் பாடிய‌ பாட்டு ஒன்றில் அவ‌னுடைய‌ வீர‌மும் ஈகையும் ஒருங்கே புல‌ப்ப‌டுகின்ற‌ன‌. எயினி என்ப‌து வேட்டுவ‌க் குல‌ப் பெண்ணின் பெய‌ர். இளஎயினி என்ப‌து எயினி என்பவ‌ளுடைய‌ த‌ங்கை என்ப‌தைக் குறிக்கும். எயினியை யாவ‌ரும் அறிவாராத‌லின் அவ‌ளுக்குத் த‌ங்கை என்று சுட்டிக் கூறின‌ர். எயினிக்கும் இளவெயினிக்கும் தாய், பேய் என்னும் பெய‌ரையுடைய‌ பெருமாட்டி. இன்னாருடைய‌ ம‌க‌னார் என்று ஆண் புல‌வ‌ரைக் கூறுவ‌து வ‌ழ‌க்கு; ம‌துரைக் க‌ண‌க்காய‌னார் ம‌க‌னார் ந‌க்கீர‌னார் என்று ந‌க்கீரரைக் குறிப்பார்க‌ள். அப்படியே பெண் புல‌வ‌ரைக் குறிப்பிடும்போது இன்னாருடைய‌ ம‌க‌ளார் என்று அவ‌ருடைய‌ தாயின் பெய‌ரையும் சார்த்திச் சொல்வ‌து வ‌ழ‌க்கம் போலும். சேரமான் பாலைபாடிய பெருங் கடுங்கோவைப் பாடின‌ பெண் புல‌வ‌ர் பேய் என்ப‌வ‌ளுக்கு ம‌க‌ளார்; எயினி என்பவ‌ளுக்குத் த‌ங்கையார். பேய் என்றும் பூத‌ம் என்றும் வ‌ரும் பெய‌ர்க‌ளை ஆணும் பெண்ணும் வைத்துக்கொள்வ‌து ப‌ழங்கால‌ வ‌ழ‌க்க‌மென்று தெரிகிற‌து. பேய‌னார், பூதனார் என்ற பெய‌ர்க‌ளைப் ப‌ழைய‌ நூல்களிலே காண‌லாம். பேயாழ்வார் பூத‌த்தாழ்வார் என‌ முத‌லாழ்வார்க‌ளில் இருவ‌ர் அப்பெய‌ர்க‌ளை உடைய‌வ‌ர்க‌ள். ஆத‌லின், பேய்ம‌க‌ள் என்ப‌து பேயென்னும் பெய‌ரையுடைய‌ த‌ந்தைக்கு ம‌க‌ள் என்றுகூட‌க் கொள்ள‌லாம். பேய்ம‌க‌ள் என்ப‌த‌ற்குத் தேவ‌ராட்டி அல்ல‌து பூசாரிச்சி என்று ஸ்ரீம‌த் ம‌காம‌கோபாத்தியாய‌ டாக்ட‌ர் ஐய‌ர‌வ‌ர்க‌ள் பொருள் எழுதியிருக்கிறார்க‌ள். ** பேயாக‌ இருந்த‌ ஒருத்தி பெண்ணாக‌ வ‌டிவு கொண்டு பாடினாள் என்றும் சில‌ர் முன் கால‌த்தில் எண்ணியிருந்தார்க‌ள்.@@ --- ** 'பேய்ம‌க‌ள் - ‍தேவ‌ராட்டி; பூசாரிச்சி; பேயின‌து ஆவேச‌ம் உற்ற‌வ‌ள். இந்த‌ வ‌கையார் இக்கால‌த்தும் அங்க‌ங்கே உள்ளார்.' புற‌நானூறு, பாடினோர் வ‌ர‌லாறு. @@ புற‌நானூறு, 11, உரை. இனி, பேய்ம‌க‌ள் இள‌எயினியின் பாட்டைப் பார்ப்போம். * சேர‌மானுடைய‌ த‌லைந‌க‌ர‌ம் வ‌ஞ்சி. அத‌ன் புக‌ழ் விண்ண‌ள‌வும் ஓங்கியிருப்ப‌தாம். அந்த‌ ந‌க‌ரத்தில் நிக‌ழும் காட்சி ஒன்றை ந‌ம‌க்குக் காட்டுகிறார் புல‌வ‌ர். வஞ்சிமா நகரத்துச் சிறுபெண்கள் துள்ளிக்குதித்து விளையாடுகிறார்கள். மணலிலே சிறு வீடு கட்டி விளையாடுகிறார்கள். வஞ்சிமா நகருக்கு அணி செய்கின்ற பொருநை நதிக் கரையில் உள்ள மணற் பரப்பிலே சிறுசிறு பாவை போல வகுத்து அதைத் தம் குழந்தை யென்று பாராட்டிச் சீராட்டுகிறார்கள். அந்தப் பேதைப் பருவப் பெண்கள் எத்தனை அழகாக இருக்கிறார்கள்! இயற்கை யெழிலும் செயற்கை யெழிலும் அவர்களிடம் நிரம்பியிருக்கின்றன. மணலிலே வீடு கட்டுகிறார்கள். அதன் நடுவே பாவைபோல அமைக்கிறார்கள். அதற்கு அலங்காரம் செய்யவேண்டாமா? ஆற்றங்கரையில் மலர் மரங்கள் பல வளர்ந்திருக்கின்றன.அந்த மரத்தின் கொம்புகளை வளைத்துப் பூவைப் பறிக்கிறார்கள். கையை நீட்டி மலரைக் கொய்யும்போது அந்த முன்னங்கையின் அழகு நன்றாகத் தெரிகிறது. அந்தப் பெண்களின் உடல் வளப்பத்தையும் தேக வளர்ச்சியும் அது காட்டுகிறது. மிக மெல்லிதாகிய உரோமம் நெருங்கிப் பார்த்தால் தெரியும்படி உள்ள கை; திரண்ட முன்கை. அவர்கள் தம் உடம்பில் தூய பொன்னால் ஆகிய இழைகளை அணிந்திருக்கிறார்கள். எவ்விடத்தும் சென்று ஓடியாடி விளையாடும் பேதைப் பருவத்துப் பெண்கள் அவர்கள்; வால் இழை மடமங்கையர். அரிமயிர்த் திரள் முன்கையை நீட்டி அவர்கள் பூவைக் கொய்கிறார்கள். வரிவரியாகக் கீறிக் கோலஞ் செய்த மணலிலே அமைத்த பாவைக்காக வளைந்த கொம்புகளிலிருந்து பூவைக் கொய்து சூட்டுகிறார்கள். சிறிது நேரம் இப்படி விளையாடிய பிறகு தண்ணிய நீர் சலசலவென்று ஓடும் பொருநை நதியிலே பாய்ந்து ஆடுகிறார்கள். மணலிலே ஓடியாடியும் சிற்றில் இழைத் தும் பாவை வனைந்தும் அதற்குப் பூச்சூட்டியும் விளையாடிய விளையாட்டினால் பெற்ற இளைப் பானது தண்ணிய பொருநை நதியிலே ஆடுவதனால் போய்விடுகிறது. பெண் புலவர் ஆதலின் வஞ்சிமா நகரில் உள்ள பிறருடைய செயலை நினைக்காமல் பெண்களுடைய விளையாட்டையே நினைத்தார். ஆற்றால் அழகு பெற்ற நகர், அழகு மலிந்த பெண்களால் எழில் பெற்ற நகர், உடல் வளமும் செல்வ வளமும் பெற்ற இளம் பெண் கள் கவலை ஏதும் இன்றி விளையாடி மகிழும் நகர் என்றெல்லாம் விரிவாக நினைக்கும்படி இந்தக் காட்சியைக் காட்டினார். இவ்வாறு மடங்கையர் பொருநைப் புன லிலே பாயும் வஞ்சிமா நகரம் விண்ணைமோதும் புகழை உடையது; வெற்றியை உடையது; விண்பொரு புகழ் விறல் வஞ்சி. அரிமயிர்த் திரள்முன்கை வால்இழை மடமங்கையர் வரிமணற் புனைபாவைக்குக் குலவுச்சினைப் பூக்கொய்து தண்பொருநைப் புனல்பாயும் விண்பொருபுகழ் விறல்வாஞ்சி. இந்த அழகான விறல் வஞ்சிக்கு அரசன் பெருங்கடுங்கோ. அவனைப் புலவர் பலர் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள். வெற்றி மேம்பாடுடையவனாதலால் புலவர்கள் அவனைப் பலபடியாகப் பாடியிருக்கிறார்கள். பாடல் சான்ற விறலையுடைய அவ்வேந்தன் போர் செய்து பகைவரைப் புறங்கண்ட பெருமையைப் புலவர் சொல்கிறார். * அணிமையில்தான் சேரமான் ஒரு பெரிய போரில் வெற்றி பெற்று வந்திருக்கிறான். அதை அறிந்தே பேய்மகள் இளஎயினியார் அவனைப் பாராட்டிப் பாட வந்தார். காட்டரண், நாட்டரண், மலையரண் என்று சொல்லும் அரண்களால் தம்முடைய நகரங்களைப் பகைவர் அணுகுவதற்கு அரியனவாக அமைத்திருந்தார்கள் பகைவர்கள். நாட்டுக் குடிகளுக்குப் பாதுகாப்பாக இருந்த அவை பகைவர்களுக்குத் துன்பத்தைத் தருவனவாக இருந்தன. பகைவர்கள் கண்டாலே அஞ்சி நடுங்கும் பொறிகளை அந்த அரண்களில் வைத்திருந்தார்கள். அவை கொடிய அரண்கள்; வெம்மை யான அரண்கள்; வெப்புடைய அரண்கள். மற்ற மன்னர்கள் எல்லாம் கண்டு அஞ்சிய அந்த அரண்களையும் அவற்றினுள்ளே வாழ்ந்த பகைவர்களையும் சேரமான் கண்டு அஞ்ச வில்லை. தன்னுடைய விறலைப் புலப்படுத்த அவ்வரண்கள் கருவியாக உதவும் என்ற ஊக்கத்தையே கொண்டான். ஒரு சிங்கவேறு யானைக் கூட்டத்தைக் கண்டால் எழுச்சி பெற்று அதனை அழித்துவிடுவது போலச் சேரமான் அந்த அரண்களை அழித்தான். பகைவர் பலர் புறங்காட்டி ஓடினார்கள். சேரமான் வெற்றி பெற்றான். மிக்க வலிமையையுடைய பகைவர்கள் தோல்வியுற்றார்கள். இந்தப் போரிலே உண்டான வெற்றியினால் பலர் பல பொருளைப் பெற்றனர். முக்கியமாக மூன்றுபேர் என்ன என்ன பெற்றார் கள் என்பதை இளவெயினியார் சொல்கிறார். * சேரமான் பகைவர்களிடமிருந்து பல பொருளைப் பெற்றான். ஆனால் அவற்றைத் தனக்கென்று வைத்துக் கொள்ளவில்லை. தான் பெற்ற நாடுகளைத் தன் சேனைத் தலைவர்களுக்கும், துணைவந்த மன்னர்களுக்கும் பகிர்ந்து அளித்துவிட்டான். நாட்டின்மேல் ஆசையை மண் ஆசை என்று சொல்வார்கள். மண்ணாசை சேரமானுக்கு இல்லை. பொல்லாத மன்னர்களின் கொடுங்கோன்மையை மாற்ற வேண்டுமென்பதே அவன் ஆசை. ஆதலின் பகைவர் தோற்று ஓடியதனால் வந்த பொருளை அவன் தனக்கென்று வைத்துக் கொள்ள வில்லை. பகைவர் விட்டு ஓடிய பொருள்களைப் பலருக்கும் வாரி வழங்கினான். ஆனால் பகைவர் பால் அவன் பெற்ற பொருள் ஒன்று உண்டு. அவர்களுடைய முதுகைப் பெற்றான். அவர்கள் தங்கள் முதுகைக் காட்டியதால் உலகத்துக் கெல்லாம் சேரமானுடைய விறலைக் காட்டின வர்களானார்கள். துப்பை (வலியை) உடைய எதிரிகள் புறத்தை மன்னன் பெற்றான். அவன் வேண்டியது அது ஒன்றுதான். வேறு யாதும் அன்று. வெற்றி பெற்றுப் பகைவருடைய புறம் பெற்ற வேந்தனை எல்லோரும் பாராட்டினார்கள். கலைஞர்கள் பழுத்த மரத்தை நாடும் பறவைகளைப்போல வந்தார்கள். புலவர்கள் அழகான பாடல்களைப் பாடித் தந்தார்கள். அந்தப் பாடல்களைத் தன்னுடைய இனிய குரலால் பாடினாள் ஒரு விறலி. பகைவருடைய புறம் பெற்ற வலிமையையுடைய சேர வேந்தனது வீரத்தை இன்னிசையோடு விறலி பாடினாள். அப்படி மறம் பாடிய படினி, பாட்டு மகள், ஒரு பரிசு பெற்றாள். பெண்களுக்கு எதைக் கொடுத் தால் உள்ளம் மகிழும் என்பதை நன்கு அறிந் தவர்கள் மன்னர்கள். விறலியர் பாடினால் அவார்களுக்குச் சிறந்த பொன்னணிகளை வழங்குவது அக்கால வழக்கம். இந்த விறலியும் பொன்னிழையைப் பெற்றாள். எத்தகைய இழை தெரியுமா? இப்போதெல்லாம் இத்தனை பவுன் என்று நகையின் அளவைக் குறிப்பிடுகிறார்கள். முன்பெல்லாம் அதன் எடையைச் சுட்டிச் சொல்வார்கள். நிறுத்தலளவையிலே கழஞ்சு என்பது ஒன்று. இத்தனை கழஞ்சுப் பொன் என்று சொல்வார்கள். வயவேந்தனுடைய மறம் பாடிய பாடினி பெற்ற சிறப்பான இழை எத்தனை கழஞ்சு இருந்தது? புலவர் கணக்கிட்டுச் சொல்லவில்லை. ஒரு நகையைச் செய்தால் சின்னதாகவும் செய்யலாம்; பெரியதாகவும் செய்யலாம். அந்த இரண்டு வகைக்கும் எல்லையுண்டு. 'சங்கிலி ஒற்றைவடம் இரண்டு பவுனால் செய்யலாம்; நாலுவடம் பன்னிரண்டு பவுனால் செய்யலாம்' என்று நகையின் குறைவான அளவையும் அதிகமான அளவையும் குறித்துப் பேசுவது இக்காலத்தும் உண்டு. தலையளவு ஒன்று உண்டல்லவா? இத்தனை கழஞ்சுக்கு மேல் போனால் இந்த நகை அழகாயிராது என்று சொல்லும் வரையறையே அந்தத் தலை யளவு. இங்கே விறலிக்குக் கிடைத்த நகை எத்தனை கனமாகச் செய்யலாமோ, அத்தனை கனமாகச் செய்தது; தலையளவை உடையது; அதிகப்படியான கழஞ்சுப் பொன்னால் அமைந்தது. விழுப்பமான கழஞ்சினால் செய்த இழை, கனமான - சீருடைய இழை (சீர் - கனம்), அழ கான பொன்னால் செய்த இழை அது. அதை விறலி பெற்றாள். விறலி யென்பவள் ஆடலாலும் பாடலா லும் பிறரை உவப்பிக்கும் கலைத் திறமை உடையவள்; பாண்சாதியிலே பிறந்தவள்; பாணனுடைய மனைவி. அவள் ஆடும்போதும் பாடும் போதும் பக்க வாத்தியம் வாசிப்பான் பாணன். தன் யாழை மீட்டி அவள் பாடும் பாட்டைத் தொடர்ந்து வாசிப்பான். பாடினி பாடும்போது அவள் குரலுக்கு ஏற்றபடி சுருதி வைத்து அவள் பாட்டோடு இழையும்படி பாடுவான். ஏழு சுரங்களுக்கும் தமிழில் தனித்தனிப் பேர் உண்டு. முதல் சுரமாகிய ஸட்ஜத்துக்குக் குரல் என்று பெயர். இயற்கையான குரல் எதுவோ அதுவே முதல் சுரமாதலின் அதற்குக் குரல் என்று பேர் வந்தது. பாணன் அவளுடைய குரல் எதுவோ அதற்கு ஏற்றபடி சுருதியைப் பொருத்திக் கூட்டிப் பாடுவான். குரலோடு புணர்ந்த சீரையுடைய கொளையில் (பாட்டில்) வல்ல பாண் மகன் அவன். அவனும் ஒரு பரிசு பெற்றான். அக்கால வழக்கப்படி அவன் பொன்னாலாகிய தாமரைப் பூவைப் பெற்றான். விளக்கமான தீயிலே உருக்கி ஆக்கப்பட்ட பொற்றாமரை அது; வெள்ளி நாரால் தொடுத்து அணிவது; ஒள்ளிய அழகிலே புரிந்த தாமரையின், வெள்ளிநாரால் கட்டப்பெறும் பூவை, இழைபெற்ற பாடினிக்குக் குரல் புணர்சீர்க் கொளையில் வல்ல பாண் மகன் பெற்றான். ஆக, சேரமான் பகைவர் புறம்பெற்றான்; புறம்பெற்ற மறத்தைப் பாடிய பாடினியோ இழைபெற்றாள். அந்தப் பாடினிக்குக் குரல் புணர்சீர்க் கொளையை வாசித்த பாண்மகன் பொற்றாமரையைப் பெற்றான். இப்படி அவரவர் பெற்றதைச் சொன்ன புலவரின் கருத்து யாது? 'அவர்களெல்லாம் உன்னைப் பாடியும் பாட் டுக்கு யாழ் வாசித்தும் பரிசு பெற்றார்கள்' என்று சொன்னது, 'நான் ஒன்றும் பெறவில்லை' என்ற குறிப்பைப் புலப்படுத்துகிறது. 'எனக்கும் ஏதாவது பரிசில் தரவேண்டுமே! ஒன்றும் இல்லையா?' என்று சொல்லாமற் சொன்னார் இளஎயினியார். அமிமயிர்த் திரள்முன்கை வால்இழை மடமங்கையர் வரிமணற் புனைபாவைக்குக் குலவுச்சினைப் பூக்கொய்து தண்பொருநைப் புனற்பாயும் விண்பொருபுகழ் விறல்வஞ்சிப் பாடல்சான்ற விறல் வேந்தனும்மே வெப்புடைய அரண்கடந்து துப்புஉறுவர் புறம்பெற்றிசினே; புறம்பெற்ற வயவேந்தன் மறம்பாடிய பாடினியும்மே ஏருடைய விழுக்கழஞ்சில் சீருடைய இழைபெற்றிசினே; இழைபெற்ற பாடினிக்குக் குரல்புணர்சீர்க் கொளைவல்பாண் மகனும்மே என ஆங்கு ஒள்அழல் புரிந்த தாமரை வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே. *மென்மையான மயிரையுடைய திரண்ட முன் கையையும் தூய அணிகளையும் அணிந்த மடப்பத்தையுடைய பேதைப் பருவப் பெண்கள், கோடு கிழித்த மணலிலே புனைந்த பாவைக்கு வளைந்த கொம்பிலே உள்ள பூவைக் கொய்து தண்ணிய பொருநையாற்றுப் புனலிலே குதிக்கும், வானை முட்டும் புகழையும் வெற்றியையும் உடைய வஞ்சிமாநகரில் உள்ளவனாகிய, புலவர் பாடும் புகழ்ப் பாடல்கள் பல அமைந்த வெற்றி வேந்தனாகிய சேரமான் பகைவருக்கு வெம்மையையுடைய அரண்களை வென்று வலிமையையுடைய எதிரிகளின் புறத்தைப் பெற்றான்; அவ்வாறு புறத்தைப் பெற்ற வலிமையையுடைய வேந்த னுடைய வீரத்தைப் பாடின விறலியும் அழகையுடைய உயர்ந்த அளவுக் கழஞ்சுப் பொன்னாற் செய்த கனமான ஆபரணங்களைப் பெற்றாள்; அவ்வாறு ஆபரணத்தைப் பெற்ற விறலிக்குக் குரலோடு புணர்ந்த, தாள அளவை யுடைய, பாட்டிலே வல்ல பாணனும் விளக்கமான தீயிலே செய்ததும் வெள்ளி நாரால் தொடுக்கப்பெறுவதுமாகிய பொற்றாமரைப் பூவைப் பெற்றான். (யான் ஏதும் பெறவில்லை அரி - மென்மை. இழை - நகை. மடம்-பேதைமை. மங் கையர் என்பது பருவத்தைக் குறியாமல் பொதுவாகப் பெண்களைச் சுட்டியது. வரி-கோலம் செய்யும்; கோடு கிழிக்கும். குலவு-வளைவையுடைய. சினை - கொம்பு. பொருநை-வஞ்சி நகரத்தில் ஓடும் ஆறு; பூர்ணா நதி என்பர். பொரு-மோதும். விறல்-வெற்றி. சான்ற - நிரம்பிய. வெப்பு- வெம்மை; கொடுமை. கடந்து-வென்று. துப்பு-வலிமை. உறுவர்-எதிர்வந்து போர் செய்தவர்; பகைவர். புறம்- முதுகை. பெற்றிசின்-பெற்றான், பெற்றாள். வய-வலிமை. மறம்-வீரத்தை. பாடினி-பாடுகிறவள்; விறலி. ஏர்-அழகு. விழக்கழஞ்சு-உயர்ந்த கழஞ்சுகள்; தலையளவாகிய கழஞ்சு கள். சீர்-கனம்; சிறப்புமாம். இழை-ஆபரணம். குரல் - முதல் சுரம். சீர்-தாள அளவு. சுருதி, லயம் என்னும் இரண்டை யும் இசைக்குத் தாயாகவும் தந்தையாகவும் சொல்வார்கள். அந்த இரண்டும் நன்றாக அமைந்ததைப் புலவர் இங்கே குறிப்பிடுகிறார். குரல் புணர்தல் சுருதியின் அமைதியைக் காட்டுகிறது. சீர் என்பது தாளத்தைக் காட்டுகிறது. எனவே சுருதியும் லயமும் அமைந்த பாட்டு அது என்று தெரிகிறது. கொளை-பாட்டு. பாண் மகன்-பாணன்; பழங் காலத்தில் யாழை வாசிக்கும் தொழிலையுடைய சாதியிற் பிறந்தோன். என ஆங்கு: அசை நிலைகள். அழல்-நெருப்பு. புரிந்த-செய்யப் பெற்ற. அழல்புரிந்த என்றதனாலும் வெள்ளி நார் என்றதனாலும் இங்கே சொன்ன தாமரைப் பூவானது பொன்னாலாகியது என்று கொள்ளவேண்டும். பாணர்களுக்குப் பொற் பூத் தருவது பழங்கால வழக்கம்.* இந்தப் பாட்டுப் பாடாண் திணையைச் சார்ந்தது. ஒருவருடைய புகழைப் பாராட்டிக்கூறும் பலவகைத் துறைகள் அடங்கியது அத்திணை. இது அந்தத் திணையில் பரிசில் கடாநிலை என்னும் துறையைச் சார்ந்தது. பரிசில் வேண்டுமென்று கேட்கும் நிலை என்பது அத்துறைக்குப் பொருள். 'பாடினி இழையும், பாணன் பொற் பூவும் பெற்றான். நான் ஒன்றும் பெறவில்லை' என்பதைக் குறிப்பித்து, மறைமுகமாகத் தமக்குப் பரிசு வேண்டுமென்பதைப் புலப் படுத்தியமையின் இது பரிசில் கடாநிலை ஆயிற்று. இந்தப் பாடலைக் கேட்ட சேரமான் இள வெயினியாருக்குப் பரிசில் பல தந்தான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? 7. 4. சேரமான் புகழ் அரசன் திருவோலக்கத்தில் வீற்றிருந்தான். புலவர்கள் பலர் அவையில் நிரம்பியிருந்தனர். தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் புலவர்கள் ஈடு பட்டிருந்தனர். அரசனும் அவர்களோடு ஒரு வனைப்போல மிக நுட்பமான பொருள்களை எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தான். புலவர் கூட்டத்தில் ஒருவராகக் குறுங்கோழியூர் கிழார் வீற்றிருந்தார். அவருடைய ஊர் குறுங் கோழியூர். அதனால் அவரைக் குறுங்கோழியூர் கிழார் என்று வழங்கினர். அவருடைய இயற் பெயரை யாரும் வழங்குவது இல்லை. அதனால் அவருடைய சொந்தப் பெயர் இன்ன தென்றே தெரியவில்லை. அவையில் வீற்றிருந்த புலவர்கள் மிக்க மகிழ்ச்சியோடு பேசிக் கொண்டிருந்தனர். குறுங்கோழியூர் கிழாருக்கோ மகிழ்ச்சியோடு வியப்பும் மிகுதியாயிற்று. 'வாழ் நாள் முழுவதும் தமிழே பயின்று உலகியலையே தெரிந்து கொள்ளாமல் வாழும் நமக்குத் தமிழில் ஊற்றம் இருப்பது இயற்கை. அரசியலில் ஈடுபட்டு எத்தனையோ சிக்கல்களில் அறிவைச் செலுத்தி ஆட்சியை நடத்தும் இப் பெருமானுக்கு இவ்வளவு தமிழறிவு இருப்பது வியப்பிலும் வியப்பு!' என்று அவர் வியப்பில் ஆழ்ந்தார். சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற நீண்ட பெயரை உடையவன் அந்த அரசன். சேரர் குலத்தில் வந்தவன். முடியுடை மூவேந்தரில் ஒருவன். அவனுடைய கண்கள் சிறியனவாக இருந்தன. யானைக் குக் கண்கள் சிறியனவாகவே இருக்கின் றன. அதனால் அந்த யானையின் பெருமை குறைந்து விடுமா? அவன் கண்களின் சிறுமை யையும் அவனுடைய பெருமையையும் ஒருங்கே எண்ணியவர்கள் அவனை யானைக்கட் சேய் என்று சொல்லலானார்கள். அந்த அரசன் இப்போது அரசவையில் வீற்றிருந்து புலவ ருடன் அளவளாவிக் கொண்டிருந்தான். புலவர் கூட்டம் கலைந்தது. குறுங் கோழியூர் கிழாருக்கு உண்டான வியப்பு அவர் உள்ளத்தே நிலை பெற்றது. * மற்றொரு நாள் பாணரும் விறலியரும் சேர்ந்து தம்முடைய இசைத் திறமையையும் ஆடல் திறமையையும் அரசவையில் வெளிப் படுத்திக் கொண்டிருந்தனர். அவர்களுடைய கலைகளில் நுட்பமான பகுதிகளை அறிந்து சுவைத்துக் கொண்டிருந்தான் அரசன். பாட்டும் கூத்தும் முடிந்த பிறகு அந்த நுட்பங்களை எடுத்துக் கூறிப் பாராட்டினான். பாணரும் விறலியரும் அரசனுடைய கலையறிவை உணர்ந்து மகிழ்ந்தனர். கலையுணர்ச்சியில்லாதவர் வானளாவப் புகழ்ந்தாலும் கலைஞர் களுடைய உள்ளம் குளிர்வதில்லை. கலை நுட்பம் தெரிந்தவர்கள் தலையை அசைப்பது ஒன்றே அவர்களுக்கு மிக்க ஊக்கத்தை உண்டாக்கும். அப்படி இருக்க, கலை நுட்பம் அறிந்து பாராட்டிப் பரிசிலும் வழங்கும் மன்னனிடம் அவர்களுக்கு அளவற்ற மதிப்பு உண்டாவது இயற்கைதானே? பாணர்கள் மன்னனிடம் விடை பெற்றுச் சென்றபோது தம்முள்ளே அவனைப் பற்றிப் பேசிக் கொண்டார்கள். "நம் அரசப் பிரானுடைய பேரறிவை என்னவென்று சொல்வது! பல காலம் இசையைப் பயின்று அறிய வேண்டிய நுட்பங்களை எளிதில் உணர்ந்து பாராட்டுகின்றாரே!" என்று ஆச்சரியப் பட்டார் கள். அவர்கள் பேசிய பேச்சுக் குறுங் கோழியூர் கிழார் காதில் விழுந்தது. 'தமிழ் இலக்கிய இலக்கணங்களில் இவர் தேர்ந்த அறிவுடையவர் என்று அறிந்தோம். இசையிலும் கூத்திலுங் கூட இவருடைய அறிவு ஆழ்ந்து சிறந்து நிற்கும் போல் இருக்கிறதே!' என்று எண்ணி எண்ணி மகிழ்ந்தார். * பின் ஒருநாள் அமைச்சர்களோடு புலவர் பேசிக் கொண்டிருந்தார். அமைச்சர்கள் அரசனுடைய கூரிய அறிவைப் பாராட்டினார்கள். "எத்தனையோ சிக்கலான சந்தர்ப்பங்களில் தெளிவு புலப்படாமல் நாங்கள் திண்டாடுவோம். அப்போது நம்முடைய மன்னர் பிரான் திடீரென்று ஒரு வழியைக் கூறுவார். அந்த உபாயத்தால் நிச்சயம் காரியம் கைகூடிவிடும். நாங்கள் யாவரும் சேர்ந்து மண்டையை உடைத்துக் கொண்டும் புலப்படாத வழியை அவர் சொல்லிவிடுவார். அவருடைய அறிவின் ஆற்றல் அளவிட முடியாதது" என்று சொன்னார்கள். இதையும் காது குளிரக் கேட்பார் புலவர். ' இப்பேரரசருடைய அறிவுக்கு நம்மால் எல்லைகோல முடியாது போலிருக்கிறது. எந்தத் துறையிலே புகுந்தாலும் சிறந்து நிற்கும் ஆற்றல் அவ்வறிவுக்கு இருக்கிறது' என்று முடிவு கட்டினார். * குடி மக்கள் பலர் ஏதோ ஒரு சிற்றூரில் ஒரு விழாவை நடத்திக் கொண்டிருந்தார்கள். புதிய ஆடைகளை அணிந்து அணிகளைப் புனைந்து உவகைக் கடலில் மூழ்கியிருந்தனர். குறுங் கோழியூர் கிழார் அந்த ஊருக்கு அப்போது போயிருந்தார். அந்த ஊரில் உள்ளவர்கள் அவருக்குப் பழக்கமானவர்களே. திரு விழாவிலே ஈடுபட்டுக் கொண்டானடிக்கும் கூட்டத்தினரில் சிலரைக் கண்ட போது அவருக்கு வியப்பு ஏற்பட்டது. சென்றமுறை அந்த ஊருக்கு வந்திருந்தபோது அந்த மக்களைக் கண்டிருக்கிறார். இளம் பருவத்தையுடைய அவர்கள் தாய்தந்தையரை இழந்து வறுமையில் வாடியிருந்தனர். இப்போதோ புத்தாடையும் அணிகலனும் பூண்டுவிளங்கினர். "இவ்வளவு விரைவில் இவர்கள் வறுமை நீங்கியதற்குக் காரணம் என்ன?" என்று புலவர் தம் நண்பர்களைக் கேட்டார். "சேரமானுடைய அன்பு தான் காரணம்" என்றனர் நண்பர்கள். "சேரமானுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு?' என்று புலவர் கேட்டார். சில நாட்களுக்கு முன் அரசர் பிரான் இவ்வூருக்கு வந்திருந்தனர். இந்த இளைஞர்களைக் கண்டார். நல்ல குடியில் வந்தவர்களாக இருந்தும் இப்போது வறுமையால் வாடுகிறார்களென்பதை அறிந்து உடனே இவர்களுடையவறுமையைப் போக்க முற்பட்டார். நிலமும் பொருளும் வழங்கினார். அவருடைய ஈர நெஞ்சத்தின் பெருமையை அன்று நாங்கள் உணர்ந்து கொண்டோம்" என்று நண்பர்கள் கூறினர். 'ஈர நெஞ்சம்' என்ற சொற்கள் குறுங் கோழியூர் கிழாரின் காதையும் கருத்தையும் குளிர வைத்தன. 'அறிவுடையவர் அரசர், அவர் அறிவுக்கு அளவில்லை என்று எண்ணினோம். அது போற்றுதற்குரியது தான். அறிவாற்றல் ஒருவனுக்குப் பெருமையையும் ஊதியத்தையும் அளிப்பது. ஆனால் அறிவு மாத்திரம் போதாது. அதோடு அன்பும் வேண்டும். அறிவாகிய ஒளி மாத்திரம் இருந்தால் அதனால் வெப்பமே ஏற்படும். தீயின் ஒளியோடு வெப்பமும் இருப்பது போல அறிவொளி ஒருவருக்கு விளக்கந்தந்தாலும் பிறருக் குத் துன்பத்தை விளைவிக்கவும் கூடும். ஆகவே தண்மையும் ஒளியும் கலந்த திங்களைப் போல அன்பும் அறிவும் கலந்திருந்தால் உலகத்துக்கே அவரால் இன்பம் உண்டாகும். நம்முடைய அரசர் பெருமானுக்கு அறிவும் ஈரமும் ஒருங்கே இருக்கின்றன. அதனால்தான் அவருடைய ஆட்சியிலே யாவரும் இன்புற்று வாழ்கின்றனர்' என்று புலவர் எண்ணமிடலானார். அவர் கண்ட காட்சிகளும் கேட்ட செய்திகளும் இத்தகைய விமரிசனத்துக்கு அடிப்படையாக இருந்தன. * ஒருநாள் சேரமான் தலைநகரமாகிய வஞ்சிக்குச் சென்றிருந்தார். காணார், கேளார், கால் முடப் பட்டோர், பிணியாளர் ஆகியவர்களைப் பாதுகாக்கும் ஆதுலர் சாலைக்குப் போனார். அறம் கொழுந்து விடும் அவ்விடத்திற்கு அவர் போன பொழுது அவர் கண்ட காட்சி அவரைப் பிரமிக்கும்படி செய்து விட்டது. அரசனே அங்கே வந்து ஒவ்வொரு வரையும் தனித் தனியே விசாரித்துக் கொண்டிருந்தான். தாய் தன் குழந்தைகளிடம் அன்போடு பேசும் நிலையைப் புலவர் எண்ணி ஒப்பிட்டுப் பார்த்தார். முன்னே அரசன் ஈர நெஞ்சத்தின் பெருமையை உணர்ந்து பாராட்டியவர்களின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. இப்போது புலவரே நேரில் அரசனது ஈர நெஞ்சத்தின் இயல்பைக் கண்டார். 'இவர் கல்விக்குத்தான் அளவில்லை என்று எண்ணி னோம். இவருடைய ஈர அன்புக்கும் எல்லை இல்லை போலும்!' என்று அறிந்து விம்மிதம் அடைந்தார். * "நேற்றுவரையில் இந்தக் குடும்பத்தினர் பகையரசனுக்கு உளவாளிகளாக இருந்தார்கள். இது யாவருக்கும் தெரியும். ஆனாலும் இவர்கள் குற்றத்தை மறந்து பழையபடியே இவர்களுக்கு உரிய பொருளை உதவும்படி அரசர் கட்டளையிட்டிருக்கிறார். அவருடைய பெருந்தன்மையை இந்தப் பாவிகள் உணர்வார்களா?" என்றார் அதிகாரி ஒருவர். "உணர்ந்ததாகக் காட்டாவிட்டாலும் இவர்கள் நெஞ்சு அறியும். வேறு ஓர் அரசராக இருந்தால் இவர்கள் குடும்பத்தையே பூண்டோடு அழித்திருப்பார். நம் அரசரோ, என்ன இருந்தாலும் நெடுங்காலமாக இந்த நாட்டிலே வாழும் குலத்தில் பிறந்தவர்களென்ற தாட்சிண்யத்தால் இவர்கள் குற்றத்தைப் பொறுத்து அருள்செய்தார்" என்றார் மற்றோர் அதிகாரி. "நம்முடைய அரசருடைய கருணைக்கு எல்லையே இல்லை. அந்தச் சிற்றரசன் தன் அளவை மறந்து சேர நாட்டுக் குடிமக்களுக்குத் துன்பத்தை விளைவித்தான். அவனைக் காலில் தளையிட்டுக் கொண்டு வந்து நிறுத்தினார் சேனாபதி. நம்முடைய மன்னர் அந்தச் செயலைக் கண்டு மகிழவில்லை. உடனே காலில் உள்ள தலையைத் தறிக்கச் சொன்னார். அரச குலத்தில் பிறந்தவர் அறியாமையால் தவறு செய்தாலும், நாம் அந்தக் குலத்தின் மதிப்பை உணர்ந்து நடக்கவேண்டுமென்று அறிவுறுத் தினார். இந்தக் கருணையை நினைக்கும்போதெல் லாம் எனக்கு உள்ளம் உருகுகிறது" - இது ஒருவர் பேச்சு. "கான கண்ணோட்டம்@ என்று புலவர்கள் சொல்வார்கள். கண் இருந்தும் கண்ணோட்டம் இல்லாவிட்டால் பயனில்லை என்று சான்றோர்கள் கூறுவதைக் கேட்டதில்லையா? இப்படி ஒருவர் பேசினார். இந்தப் பேச்சையெல்லாம் அருகிலே இருந்து கேட்டார் குறுங்கோழியூர்கிழார். அரசனிடம் உள்ள குணங்கள் இப்படி இன் னும் எத்தனை எத்தனையோ என்று ஆச்சரியப் பட்டார். 'உலகத்தில் அளக்க முடியாத பொருள்கள் என்று எதை எதையோ சொல்கிறார்கள். கடலின் ஆழத்தை அளவிட முடி யாது என்கிறார்கள். விசாலமான நிலப் பரப்பை அளவுகாண இயலாது என்கிறார்கள். காற்று அடிக்கிற திசையின் நீளத்தையும் எல்லை கண்டு அளந்து சொல்ல முடியாதாம். எல்லாவற்றையும் தனக்குள்ளே அடக்கிக் கொண்ட்டிருக்கிற ஆகாயத்துக்கும் அளவில்லை. இப்படி அளவிடப்படாத கடலும் ஞாலமும் திசையும் ஆகாயமும் ஆகிய நான்கு பொருளோடும் ஒருசேர வைத்து எண்ணுவதற் குரியவை நம்முடைய மன்னர்பிரானுடைய அறிவும் ஈரமும் கண்ணோட்டமும்' என்று அவர் சிந்தனை விரிந்தது. மறுபடியும் அதில் ஒரு சுழிப்பு ஏற்பட்டது. 'ஒருங்கு வைத்து எண்ணுவதா? விசாலமான முந்நீரின் ஆழத் தையும் அளந்தறிவார் இருக்கலாம். வியன் ஞாலத்து அகலத்தையும் ஏதேனும் உபாயத் தால் அளவு காண்பதும் இயலும். வளி வழங்கு திசையையும் ஒருகால் அளத்தல் கூடும். ஒரு வடிவும் இன்றி வறிதே நிலைபெற்ற ஆகாயத் தையும் யாரேனும் தெய்வத் தன்மையுடையார் அளந்தறிந்து சொல்லலாம். ஆனால் நம்முடைய வேந்தருடைய அறிவையும், ஈரத்தையும், பெருங் கண்ணோட்டத்தையும் அளந்தறிவது இயலாத காரியம்' என்ற தீர்மானத்துக்கு வந்தார். ***** Missing Images in several places in page 64, 65 ! கவிஞர்களுக்கு ஏதேனும் அரிய செய்தி புலப்பட்டாலும், அற்புத உணர்ச்சி எழுந் தாலும் அவை அப்படி அப்படியே நின்று ***** அவர்களுடைய கவிதை உள்ளத் ***** நினைவுகள் ஊறிப் பின்பு கவிதையாக மலரும். குறுங்கோழியூர்கிழார் தம் அரசனுடைய இயல்புகளை அறிந்து வியந்தார். அந்த வியப்பு அவர் உள்ளத்தே நின்றது; அது கவியாக வெளிப்படும் காலத்தை எதிர் நோக்கி நின்றது. அதற்குள் அந்த உணர்ச்சிக்குப் பின்னும் வளமூட்டும் செய்திகளைப் புலவர் அறிந்து கொண்டார். நல்ல ஆட்சியில்லாத நாட்டில் பகைவர்களால் குடிமக்களுக்கு நேரும் துன்பங் ள் பல. கொடுங்கோலாட்சியானால் மன்னனாலே விளையும் அல்லல்களே பலவாக இருக்கும். கடும்புலி வாழும் காட்டிலேனும் ஒளிந்து வாழலாம். கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டில் அம்மன்னனது கொடுங்கோன்மைக் குத் தப்பி வாழ முடியாது. ஒவ்வொரு நாளும் தீயிலே நிற்பவரைப் போல அல்லற்பட்டு வாழ வேண்டியிருக்கும். அத்தகைய கொடுமையைச் சேர நாட்டுக் குடிகள் கனவிலும் அறியார். பகையின்மையினால் அயலாருடைய கொடுமை அந்நாட்டினருக்கு இல்லை. மன்னன் ஈரம் உள்ளவனாதலின் அவனால் கொடுமை உண்டாக ஏது இல்லை. ஆகவே வெம்மையை உணராதவர்கள் சேர நாட்டு மக்கள். யாரும் அவர்களைத் தெறுவதில்லை. ஆயினும் இரண்டு வெம்மை அந்த நாட்டில் உண்டு. அந்த இரண்டு வெம்மை யினாலும் குடிமக்களுக்கு நன்மையே உண்டாயின. சோற்றைச் சமைக்கும் நெருப்பு வெம்மை உடையது; தெறலை உடையது, சூரியனது கதிர்கள் வெம்மையை உடையன. இந்த இரண்டு வெம்மையும் உயிர்கள் வாழ இன்றியமையாதன. ஆதலின் உள்ளங் குளிர்ந்து ஏற்றுக் கொள்வதற்கு உரியன. அவை அந்த நாட்டில் இருக்கின்றன. சேரமானுடைய நாட்டிலே பிறராலே தெறப்படும் செயல் இல்லை. சோற்றை உண்டாக்கும் தீயின் தெறலும், செஞ்ஞாயிற்றின் தெறலும் அல்லாமல் பிறிது தெறலைக் குடிமக்கள் அறியார். அவனுடைய குடை நிழலில் தண்மை பெற்றுக் குறை விலா நிறைவுடன் அவர்கள் வாழ்கிறார்கள்.. அந்த நாட்டுக் குடிமக்களுக்கு வில் என்று ஓர் ஆயுதம் இருப்பதே தெரியாது. பகைவர்கள் யாரும் இல்லாமையால் போரும் இல்லை. போர் இருந்தால்தானே வில்லுக்கும் அம்புக்கும் வேலையுண்டு? பழைய வில்லும் அம்பும் எந்தக் கொட்டிலிலே தூங்குகின்றனவோ! அமைதியான இன்ப வாழ்வு வாழும் நாட்டில் வில்லுக்கு வேலை இல்லை அல்லவா? ஆனால் வேறு ஒரு வில்லை அவர்கள் அறிவார்கள். அதனைக் கண்டு களிப்பார்கள். அது எந்த வில் தெரியுமா? வண்ண அழகு காட்டிவானத்தில் தோன்றும் இந்திர வில்லாகிய திரு வில். மேகமூட்டம் போட்டிருக்கும்போது இனி மழை வரும் என்ற நம்பிக்கையை ஊட்டி, அழகு காட்டி இலகும் அந்த வானவில் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவது அல்லவா? அந்தத் திருவில்லையன்றிக் கொலை வில்லைச் சேரமான் நாட்டுக் குடிமக்கள் அறியமாட் டார்கள். வில் கிடக்கட்டும்; வாள், கேடயம் முதலிய வேறு படைகள் பல உண்டே; அவற்றில் ஏதேனும் அவர்களுக்குத் தெரியுமா? அவற்றையும் அவர்கள் அறியமாட்டார்கள். பிறரைத் துன்புறுத்தவோ கொலைபுரியவோ முயல்பவர்களுக்கல்லவா அவை வேண்டும்? இங்கே யாவரும் அன்பிலே இணைந்து வாழும்போது படைக்கலத்துக்கு வேலை ஏது? படையை நினைப்பதற்கே வாய்ப்பு இல்லை. ஆனாலும் ஒரு படை அவர்களுக்குத் தெரியும். அதை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். அதனால் அவர்கள் வாழ்கிறார்கள். அதுதான் உழுபடையாகிய கலப்பை. அந்த உழுபடை தான் அவர்களுக்கு உணவைத் தருவது. நாஞ்சிலாகிய கலப்பைதான் அவர்கள் அறியும் படை; கைக்கொண்ட படை; போற்றிப் பாது காக்கும் படை. நாஞ்சில் அல்லது வேறு படையை அவர்கள் அறியார். * அரசர்கள் பிறர் நாடுகளை வௌவி அவற்றால் வரும் பயன்களை நுகர்பவர்கள். அதனால் 'பிறர் மண்ணை உண்ணுபவர்கள்' என்று அவர்களைச் சொல்வார்கள். 'பூபுக்' என்று வட மொழியில் ஒருதொடர் மன்னர்களுக்கு வழங்கும். 'மண்ணை உண்போர்' என்பது அதன் பொருள். சேரமான் தன்னுடைய பேராற்றலால் பகைவரை ஒடுக்கினான். மிக்க திறமையை உடைய வீரர்கள் பலரோடு பகைவர்கள் வந்தாலும் அந்த வயவர்களை மாய்த்துப் பகைவரைத் தேய்த்து அவர்கள் நாட்டைத் தனதாக்கிக் கொள்ளும் பெருவீரம் படைத்தவன் அவன். பிறர் மண் உண்ணும் செம்மல் சேரமான். ஆனால் அவன் நாட்டை யாரும் கைப்பற்ற இயலாது. அவன் மண்ணை யாரும் உண்ணமுடியாது. பகைவர் உண்ணுதற்கு அரிய பெருமையை உடைய மண் அது. ஆனால் அந்த மண்ணை உண்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பகை வேந்தர்கள் அல்ல; வீரர்கள் அல்ல; ஆடவர் களே அல்ல; பெண்கள். ஆம், சேரநாட்டில் வாழும் பெண்களே அந்த மண்ணை உண்பார்கள். எல்லாப் பெண்களும் அல்ல; கருவுற்ற பெண்கள் மயற்கை யுடையவர்களாய் மண்ணை உண்ணுவார்கள்; வேட்டு உண்ணுவார்கள். வயவுற்ற மகளிர் வேட்டு உண்பதல்லாமல் பகைவர் உண்ணாத மண் சேரநாட்டு மண். இவற்றையெல்லாம் புலவர் கவிதையுள்ளத் தோடு நினைத்துப் பார்த்தார். அவன் நாட்டில் வாழ்பவர்கள் அறியாதவற்றையும் அறிந்த வற்றையும் அடுக்கிப் பார்த்தார். அவர்கள் பிறரால் உண்டாகும் தெறலை அறியார்; ஆனால் சோறுண்டாக்கும் தீயின் தெறலும் செஞ் ஞாயிற்றுத் தெறலும் அவர்களுக்குத் தெரியும். கொலை வில்லை அறியார்; திருவில்லை அறிவார். பிறர் உண்ணா மண் அரசனது மண்; ஆனால் அதை வயவுறு மகளிர் உண்பார்கள். எத்தனை அமைதியான நாடு! இன்ப வளமுடைய நாடு! * இப்படிக் கவிதைக்கு ஏற்ற பொருள்களை அவர் உள்ளம் ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த் துக் கொண்டே வந்தது. மேலும் அவருடைய எண்ணம் விரிந்தது. அரசனுக்கு வாய்த்த பண்புகளையும் திறமையையும் கருவிகளையும் எண்ணி எண்ணி இன்புற்றார். பகைவர்கள் அணுகுதற்கு அரிய மதிலையுடையவன் சேரமான். அந்த அரண் கட்டுக் காவலை உடையது. பலபல வீரர்கள் அந்த அரணில் இருந்தார்கள். அங்கே உள்ள அம்பு வகைகளுக்குக் கணக் கில்லை. அவ்வளவு இருந்தும் அவற்றைப் பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. அந்த அம்புகள் அங்கே வேலையற்றிருக்கின்றன; அம்பு துஞ்சும் கடி அரண் அவனுடைய கோட்டை. சேரமான் நடத்தும் செங்கோலாட்சி நாடறிந்தது. புலவர் நாவறிந்தது.தரும தேவதை அவன் நாட்டில் தங்கி நாலுகாலாலும் நின்று நடைபோடுகிறது. அவனுடைய நாடு அறமம் வளரும் கோயில். அவ்வறம் யாதோர் இடையூறும் இன்றி இனிதே தங்கும்படி செங்கோல் செலுத்தும் பேராளன் சேரமான். அறம் துஞ்சும் செங்கோலை உடைய அவனுடைய நாட்டில் வாழும் குடிமக்களுக்குக் குறை ஏது? பசி இல்லை; பிணி இல்லை; பகையும் இல்லை. ஒரு நாட்டில் வளம் குறைந்தால் அங்கே உள்ள குடிமக்கள் வேற்று நாட்டுக்குப் போய் விடுவார்கள். அதற்குமுன் அங்குள்ள பறவைகள் வேற்று நாட்டுக்குப் போய்விடும். புதிய புள் வந்தாலும் பழைய புள் போனாலும் ஒரு நாட்டுக்குத் தீமை உண்டாகும் என்று அக்காலத்தில் எண்ணினார்கள். அந்த இரண்டும் தீய நிமித்தங்கள். மற்ற நாடுகளில் இவை நிகழ்ந்தால், "இனி என்ன ஏதம் வருமோ?" என்று அந்நாட்டில் உள்ளார் அஞ்சுவார்கள். ஆனால் சேரமானுடைய நாட்டிலுள்ளார் எவ்வகையிலும் நிரம்பினவர்கள் ஆதலின் இத்தகைய தீய நிமித்தங்களுக்கு அஞ்ச மாட்டார்கள். கரையிலுள்ள மரத்தைப் பற்றிக் கொண்டவனுக்கு ஆற்று நீர் எவ்வளவு வேகமாக ஓடினால்தான் என்ன? புதிய புள் வரினும் பழம் புள் போனாலும் அவற்றைக் கண்டு இந்த நாட்டார் அஞ்சுவதில்லை; நடுங்குவதில்லை. அவ்வளவு சிறந்த வளப்பம் நிறைந்திருந்தது அந்த நாட்டில். என்ன பஞ்சம் வந்தாலும் குடிமக்கள் துன்புறாமல் இருப்பதற்கு ஏற்ற பொருள்களைச் சேரமன்னன் சேமித்து வைத்திருந்தான். ஆகவே தீய சகுனம் கண்டு நடுங்க வேண்டியதில்லையே! இவ்வாறு நாட்டு மக்களுக்கு வேண்டியவற்றை முன்கூட்டியே நினந்து சேமித்து வைத்துப் பாதுகாக்கும் மன்னனைத் தாயென்று சொல்லலாமா? தெய்வமென்று சொல்லலாமா? இன்னும் உயர்வாகக்கூடச் சொல்லலாம். அவனைப் போன்ற மன்னனை உலகம் முன்பும் அறிந்தது இல்லை; பின்னும் அறியப் போவதில்லை. அவனிடத்தில் குடிமக்களுக்கு அன்பு மிகுதியாக இருந்ததென்று சொல்லவும் வேண்டுமா? ஒரு விதத்தில் அவன் அவர்களுக்குத் தாயைப் போல இருந்தான். மற்றொரு விதத்தில் குடிமக்கள் அவனுக்குத் தாயைப் போல இருந்தார்கள். தாய் தன் குழந்தையிடத்தில் காட்டும் அன்பு மிகமிக உயர்ந்தது. அதன் நலத்துக்கு வேண்டிய பொருள்களைத் தேடிக் கொணர்ந்து வழங்குவாள். எவ்வளவு பாதுகாத்து வந்தாலும் தன் அருமைக் குழந்தைக்கு ஏதேனும் நேர்ந்து விடுமோ என்று அஞ்சிக் கொண்டே இருப்பாள். அந்தக் குழந்தையை அலங்காரம் செய்து அழகு காண்பாள்; அடுத்த கணத்திலே, " ஐயோ! என் கண்ணே பட்டுவிடப் போகிறதே!" என்று விரலை மடக்கித் தரையில் நெரித்துத் திருஷ்டி கழிப்பாள். வீதியில் போனால் வண்டி ஏறிவிடுமோ என்று அஞ்சுவாள். அன்பு அதிகமாக அதிகமாகத் தன் குழந்தை சௌக்கியமாக வளரவேண்டுமே என்று கணந்தோறும் அஞ்சிக் கொண்டே இருப்பாள். இங்கே குடிமக்கள் தாய் நிலையில் இருந்தார்கள். கிடைப்பதற்கரிய மன்னன் தமக்குக் கிடைத்திருக்கிறான் என்ற மகிழ்ச்சி மீதூர்ந்தாலும், அவனுக்கு எந்த விதமான இடையூறும் நேராமல் இருக்கவேண்டுமே என்ற கவலை யோடிருந்தார்கள். அவன் மிக மிகச் சிறப்புடையவனாக இருந்ததலினால் மன் னுயிர் யாவும் இவ்வாறு அஞ்சின. இதையும் நினைத்துப் பார்த்தார் புலவர். தாம் கண்டது, கேட்டது, நினைத்தது எல்லாவற்றையும் பிணைத்துக் கவிதையாக விழைந்தார். அவனையே முன்னிலைப் படுத்திச் சொல் லும் முறையில் பாவைத் தொடுத்தார். கடலின் ஆழத்தையும், ஞாலத்தின் அகலத்தையும், திசையின் நீளத்தையும், ஆகாயத்தின் பரப்பையும் அளந்தறிந்தாலும் அளந்தறிய முடியாத அவனுடைய அறிவையும் ஈரத்தையும் கண்ணோட்டத்தையும் பாராட்டினார். அவன் நாட்டில் வாழ்வோர் தீயின் தெறலையும் செஞ்ஞாயிற்றின் தெறலையும் அன்றிப் பிரிது தெறலையறியாத நிலையையும், திருவில் அல்லது கொலை வில்லையும் நாஞ்சில் அல்லது பிற படையையும் அறியாத தன்மையும் சிறப்பித்தார். பகைவர் மண்ணை அவன் உண்டாலும் மயற்கையுற்ற மகளிர் உண்பதை யன்றிப் பகைவர் உண்ணாத மண்ணைப் புகழ்ந்தார். அம்பு துஞ்சும் கடியரணையும், ஆறாம் துஞ்சும் செங்கோலையும், குடிமக்கள் தீய நிமித்தம் கண்டாலும் நடுங்காமல் உள்ள பாதுகாப்பையும் எடுத்துரைத்தார். 'நீ இப்படி இருத்தலினால்தான் மன்னுயிரெல்லாம் நினக்கு எந்தச் சமயத்தில் என்ன நேரமோ என்று அஞ்சுகின்றன' என்று பாடலை நிறைவேற்றினார். கவிதை முழு உருவம் பெற்றது. அவருக்கே அதைப் பாடியமையால் பெருமிதம் உண்டாயிற்று. சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையை நாடிச் சென்றார். தம் கவியைப் பாடினார். அவையில் இருந்த புலவர்கள் யாவரும் ஒவ்வோரடியையும் கேட்டு இன்பத்தில் ஆழ்ந்தனர். ஒவ்வொரு சொல்லையும் சுவைத்தனர். புலவர் பரிசு பெற்றார் என்று சொல்லவும் வேண்டுமா? அவர் பாடிய பாடல் வருமாறு: இருமுந்நீர்க் குட்டமும் வியன்ஞாலத்து அகலமும் வளிவழங்கு திசையும் வறிதுநிலைஇய காயமும், என்றாங்கு அவைஅளந்து அறியினும் அளத்தற்கு அரியை அறிவும் ஈரமும் பெருங்கண் ணோட்டமும்; சோறுபடுக்கும் தீயொடு செஞ்ஞாயிற்றுத் தெறல்அல்லது பிறிதுதெறல் அறியார்நின் நிழல்வாழ் வோரே; திருவில் அல்லது கொலைவில் அறியார்; நாஞ்சில் அல்லது படையும் அறியார்; திறன்அறி வயவரொடு தெவ்வர் தேயஅப் பிறர்மண் உண்ணும் செம்மல், நின் நாட்டு வயவுறு மகளிர் வேட்டுஉணின் அல்லது பகைவர் உண்ணா அருமண் ணினையே; அம்புதுஞ்சும் கடிஅரணால் அறம்துஞ்சும் செங்கோலையே; புதுப்புள் வரினும் பழம்புள் போகினும் விதுப்புறவு அறியா ஏமக் காப்பினை; அனையை ஆகல் மாறே, மன்னுயிர் எல்லாம் நின்அஞ் சும்மே. *பெரிய கடலினது ஆழமும், அகன்ற நிலத்தினது அகலமும், காற்று வீசுகின்ற திசைகளும், உருவமின்றி நிலைபெற்ற ஆகாயமும் என்று சொல்லப் பெறும் அவற்றை அளந்து அறிந்தாலும், அறிவும் அன்பும் பெரிய கண்ணோட்டமும் அளப்பதற்கு அரியை நீ; சோற்றை உண்டாக்கும் தீயின் வெம்மையும் சிவந்த கதிரவனுடைய வெம்மையும் அல்லாமல் வேறு வெம்மையை நின் குடைநிழலில் வாழும் குடிமக்கள் அறியார்; அழகிய வானவில்லையன்றி வேறு கொலைத் தொழிற்குரிய வில்லை அறியார்; கலப்பையை யன்றி வேறு ஆயுதத்தை அறியார்; போரிடும் வகைகளை யெல்லாம் அறிந்த வீரர்களோடு பகைவர் அழியப் பிறருடைய நிலத்தை உண்ணும் பெருமையை உடைய வனே, நின் நாட்டில் உள்ள கருவுற்ற மயற்கையுள்ள மகளிர் விரும்பி உண்ணுவதையன்றிப் பகைவர் உண்ண மாட்டாத அரிய மண்ணை உடையாய்; அம்புகள் செய லொழிந்து தங்கும் காவலையுடைய அரணையும், அறம் கவலையின்றித் தங்குதற்குக் காரணமான செங்கோலையும் உடையாய்; புதிய பறவைகள் வந்தாலும் பழைய பறவைகள் போனாலும் நடுங்குவதையறியாத இன்பமான பாதுகாப்பைச் செய்பவன் நீ; அத்தகைய பெருமைகளை உடையவனாக இருக்கும் காரணத்தால் நின்னாட்டிலுள்ள உயிர்க் கூட்டமெல்லாம் நினக்கு ஏதேனும் இடையூறு வருமோ என்று நின்பொருட்டு அஞ்சும். இருமுந்நீர்-கரிய கடல் என்றும் சொல்லலாம். குட்டம்- ஆழம். வியல்-அகலம். ஞாலம்-நிலம். வளி-காற்று. வறிது- உருவமின்றிச் சும்மா. நிலைஇய-நிலைபெற்ற. காயம்-ஆகா யம்; முதல் எழுத்துக் குறைந்து நின்றது; முதற் குறை. என்ற ஆங்கு அவை-என்று சொல்லப் பெறும் அவற்றை. ஈரம்-அன்பு. கண்ணோட்டம்-குறையை எண்ணாது காட் டும் அன்பு. படுக்கும்-உண்டாக்கும். தெறல் சுடுதல்; வெம்மை. பிறிது-வேறு. நின்நிழல்-நினது குடைநிழலில். திரு வில்-அழகிய இந்திர வில். நாஞ்சில்-கலப்பை. படை-போர்க்கருவி. திறன்-போர் செய்யும் வகை. வயவர்-வன்மை மிக்க வீரர். தெவ்வர்-பகைவர். தேய- அழகிய. மண் உண்ணும்-நாட்டைக் கைக் கொண்டு பயன் படுத்தும். செம்மல்-பெருமையை உடையவன். வயவுறு மகளிர்-கருவுற்ற பெண்கள். வயா-மயற்கை நோய். வேட்டு-விரும்பி. துஞ்சும்-வேலையின்றிக் கிடக்கும். கடி- காவலையுடைய. அரணால்-கோட்டையோடு; ஆல் என்ற உருபு ஓடு என்ற பொருளில் வந்தது. அறம் துஞ்சும் - தரு மம் கவலையின்றித் தங்கியிருக்கும். புள்-பறவை. விதுப் புறவு-நடுங்குதல். ஏமம்-இன்பம். காப்பினை-காவலைச் செய்வாய். அனையை-அத்தகைய இயல்புடையாய். மாறே-காரணத்தால். அஞ்சும்மே-அஞ்சுமே என்றது செய்யுள் நோக்கி விரிந்தது. இது வாகைத் திணையில் அரசவாகை என் னும் துறையில் அமைந்த பாட்டு. அரசன் தன் இயல்பிலே சிறந்து நிற்பதைப் பாடுவதனால் இத்துறை ஆயிற்று. இது புறநானூற்றில் உள்ள 20-ஆவது பாட்டு.   8. 5. மறப்பது எப்படி? சோழ நாட்டில் உள்ள ஆவூர் என்ற ஊரிலே பிறந்தவர் மூலங்கிழார் என்னும் புலவர். அவர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவராதலின் அவருக்கு அப்பெயர் வந்தது என்று தோன்றுகிறது. அக்காலத்தில் கிள்ளிவளவன் என்னும் அரசன் சோழ நாட்டை ஆண்டு வந்தான். புலவர்களைப் பாராட்டி உபசாரம் செய்து பரிசில் வழங்குவதில் அவன் சிறந்தவன். ஆதலின் அடிக்கடி புலவர்கள் அவனை நாடிச் சென்று தங்கள் புலமைத் திறத்தைக் காட்டிப் பரிசில் பெற்றுச் செல்வார்கள். அந்தப் புலவர் கூட்டத்திலே ஆவூர் மூலங் கிழாரும் ஒருவர். பல புலவர்கள் வந்தாலும் அவரவர் தகுதியை அறிந்து பாராட்டி மரியாதை பண்ணும் இயல்பு கிள்ளிவளவனிடம் இருந்தது. இப்படித் தரம் அறிந்து பரிசில் தருவதை வரிசையறிதல் என்று பழம் புலவர் கள் சொல்வார்கள். கல்லையும் இரும்பையும் தங்கத்தையும் ஒரேமாதிரி எண்ணாமல் வெவ்வேறாக அறிந்து பயன்படுத்திக் கொள்வது போல, வெவ்வேறு புலவர்களை அவரவர்கள் புலமை வகையை அறிந்து அவர்களுடைய தகுதிக்கு ஏற்பப் பாராட்டிப் பரிசில் வழங்கு வதை உயர்வாகக் கொண்டாடுவார்கள் புலவர்கள். கிள்ளிவளவன் வரிசையறிவதில் வல்லவனாதலின் சிறந்த புலவர்கள் பலர் அவனை நாடி வந்தனர். வளவனுடைய பெருமதிப்புக்குரிய புலவர்களுக்குள் ஆவூர் மூலங்கிழாரும் ஒருவர். அவரைப் போன்ற பெரும் புலவர்களோடு இடைவிடாது பழகவேண்டும் என்ற ஆர்வம் கிள்ளிவளவனிடம் இருந்தது. தொடர்ந்து பல நாட்களாக ஆவூர் மூலங் கிழார் கிள்ளிவளவனைப் போய்ப் பார்க்க வில்லை. வேறு வேலை இருந்தமைதான் அதற் குக் காரணம். அதோடு வேறு ஊர்களுக்குச் செல்லவேண்டியும் இருந்தது. அவரை நெடு நாட்களாகக் காணாமையினால் கிள்ளிவளவனுக்குத் துன்பம் உண்டாயிற்று. அவரைப் பற்றி விசாரித்துக் கொண்டே இருந்தான். புலவர்கள் எந்த இடத்துக்குச் சென்றாலும் சிறப்பைப் பெற்ற காலம் அது. சோழ நாட்டிலே பிறந்த புலவராக இருந்தாலும் சேர பாண்டிய நாடுகளுக்குச் சென்று அங்கே பல காலம் தங்கி அங்குள்ள மன்னர்களாலும் செல்வர்களாலும் சிறப்புப் பெறுவதுண்டு. ஒரு நாட்டிலே பிறந்தார் வேற்று நாட்டுக்குச் சென்று வாழ்வதும் உண்டு. மன்னர்களுக்குள் போர் நிகழ்ந்தால் ஒரு நாட்டிலுள்ள குடி மக்கள் மற்றொரு நாட்டுக்குப் போவது இயலாது. ஆயினும் புலவர்கள் மாத்திரம் தம் மனம் போல எங்கே வேண்டுமானாலும் போகலாம். ஒரு நாட்டிலே பிறந்தவராயினும் புலவர்கள் எல்லா நாட்டுக்கும் உரியவரென்றும், அவர்களால் தீங்கு நேராதென்றும் மக்கள் நம்பி வந்தனர். புலவர்களுடைய ஒழுக்கம், அறிவு இரண்டும் மக்களுடைய பாராட்டுக்கு உரியனவாகச் சிறந்து விளங்கின. மூலங்கிழார் வராததனால், அவர் பாண்டி நாட்டுக்கோ சேர நாட்டுக்கோ சென்று அங்குள்ளவர்களின் உபசாரத்தில் இன்புற்றிருப்பார் என்று சோழ மன்னன் எண்ணினான். புலவர்களிடம், "அவரைக் கண்டீர்களா?" என்று விசாரித்தான். அவனுக்குப் புலவரிடம் இருந்த பேரன்பே அப்படி ஆவலோடு விசாரிப்பதற்குக் காரணமாக இருந்தது. கிள்ளிவளவன் தம்மைப் பற்றி அடிக்கடி விசாரிக்கிறான் என்ற செய்தி மூலங்கிழார் காதுக்கு எட்டியது. அவனைப் பார்க்கக்கூடாது என்றா அவர் இருந்தார்? பல ஊர்களுக்குச் சென்று வந்த இளைப்பினால் சில காலம் எங்கும் போகவேண்டாம் என்று தம் ஊரில் தங்கியிருந்தார்; அவ்வளவுதான். கிள்ளிவளவன் அவரைப் பார்க்கவேண்டுமென்ற ஆர்வத் தோடு இருப்பதை உணர்ந்தவுடன் அவர் உறையூரை நோக்கிப் புறப்பட்டார். உறையூரை அடைந்து சோழனது அவைக்களத்தைப் புலவர் அணுகினார். பல நாட்களாகப் பசித்திருந்தவன் உணவைக் கண்டது போல வளவனுக்கு இன்பம் உண்டாயிற்று. இருக்கையினின்று எழுந்து வந்து புலவரை வரவேற்றான். தக்க ஆசனத்தில் இருக்கச் செய்து ஷேமலாபங்களை விசாரித்தான். "தமிழ் நாடு மிக விரிந்தது. புலவர்களுக்கு யாதும் ஊர்; யாவரும் உறவினர். தங்களைப் போன்ற பெரிய கவிஞர்களுக்குச் சென்ற சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டு. எத்தனை ஆண்டுகள் இருந்தாலும் அன்று வந்த விருந்தினரைப்போல மிக்க அன்புடன் பாராட்டிப் போற்றுவார்கள். தங்கள் சோழ நாட்டையும் என்னையும் இவ்வளவு காலமாக மறந்து போனீர்களே! அவ்வாறு எம்மை அடியோடு மறக்கச் செய்யும்படியாகத் தங்களை வழிபட்டுப் போற்றிய நாடு எதுவென்று நான் தெரிந்து கொள்ளலாமா? இவ்வளவு காலம் எங்கே தங்கியிருந்தீர்கள்?" என்று கேட்டான் அரசன். "தமிழுக்கு எங்கே போனாலும் மதிப்பு உண்டு என்பது உண்மைதான். ஆனாலும் அப்படிப் மதிப்பிட்டு உபசரிப்பதிலும் தரம் இருக்கிறதே! புலவர்களின் தகுதியை அறிந்து அதற்கு ஏற்பப் பேணும் இயல்பு உயர்ந்தது என்று யாவரும் சொல்கிறார்கள். உபகாரி களிலும் வேறுபாடு இருக்கிறது. பரிசில் தருவ தனால் எல்லாப் புரவலர்களும் ஒரே மாதிரி இருப்பவர்கள் என்று கொள்ளக் கூடாது. அவர்களிடத்திலும் தகுதியினால் வேறுபாடு உண்டு; வரிசை உண்டு." "தங்கள் சென்ற நாடுகளில் இந்த நாட் டில் உள்ளவர்களைவிடத் தகுதியால் உயர்ந்த புரவலர்களைத் தாங்கள் பார்த்திருப்பீர்களென்றே தோற்றுகிறது. அதனால்தான் எங்களையெல்லாம் அடியோடு மறந்து விட்டீர்களோ!" என்று வளவன் கேட்டான். புலவர்: அப்படி நான் சொல்லவில்லையே! புரவலர் புலவர்களின் வரிசையறிந்து உதவுவது போலவே, புலவர்களும் புரவலர்களின் தரத்தை அறிந்து போற்றுவார்கள். ஒளியைத் தருகின்ற பொருள்கள் பல உண்டு. கதிரவன் ஒளியைத் தருகிறான். சந்திரனும் இரவில் ஒளியைத் தருகிறான். விளக்குகள் இருளைப் போக்குகின்றன. மக்கள் எல்லாவற்றாலும் பயனை அடைகிறார்கள். ஆனாலும் அவற்றின் தரத்தை அவர்கள் உணர்ந்தே பயன் கொள்கிறார்கள். விளக்கை ஏற்றும் போது அது கதிரவனைவிடச் சிறந்த தென்றோ, கதிரவனுக்குச் சமானமான தென்றோ நினைப்பதில்லை. வளவன்: ஆனால் கதிரவன் இல்லாதபோது தானே விளக்கை ஏற்றுகிறார்கள்? புலவர்: கதிரவன் உள்ளபோதும் விளையாட் டுக்காகவும் மங்கல காரியங்களுக்காகவும் விளக்கை ஏற்றுவது உண்டு. அதனால் அவர்களுக்குக் கதிரவனிடத்தில் உள்ள மதிப்புப் போய்விட்டதென்றோ, கதிரவனை அவர்கள் மறந்துவிட்டார்களென்றோ சொல்லலாமா? வளவன்: தாங்கள் உலகம் போற்றும் பெரும் புலவர். தங்களோடு எதிர் நின்று வாதிட நான் யார்? தங்களைக் காணாமல் என் உள்ளம் மிகமிக வருந்தியது. தாங்கள் வேற்று நாட்டுக்குச் சென்று அங்கே பெற்ற உபசாரத்தால் என்னை மறந்து விட்டீர்களோ என்று நினைத்தேன். தாங்கள் என்னை மறந்தாலும் நான் தங்களை மறப்பதில்லை புலவர்: மறப்பதா! மன்னர்பிரானுடைய உயர்ந்த ஆற்றலையும் புலவரைப் போற்றும் திறத்தையும் தமிழுலகம் முழுதும் அறிந்து பாராட்டுகிறதே! இங்கே பழகிய பிறகு மற்ற இடங்களிலே தங்கும் ஆசை வருமா? புலவர் என்றால் பல இடங்களுக்குப் போய் வரவேண்டி இருக்கலாம். ஆனாலும் அவர் களுடைய உள்ளம் வரிசை அறிந்து பாராட் டும் கிள்ளிவளவரிடந்தான் இருக்கும். வளவன்: அந்த அந்த நாட்டிலே உள்ள புலவர் கள் அந்த அந்த நாட்டில் உள்ள அரசர்களை மதித்து வாழ்த்துதல் இயற்கைதான். புலவர்: மற்றக் குடிமக்கள் அவ்வாறு எண்ணுவது இயற்கையே. ஆனால் பரிசிலர்களாகிய புலவர்கள் அத்தகையவர்கள் அல்லர். அயலார் வீட்டில் இருப்பதானாலும் மல்லிகைப் பூ மல்லிகைப் பூத்தானே? ஆகவே பிறநாட்டு மன்னராயினும் செல்வராயினும் அவர்கள் தகுதியை வெளிப்படையாகப் பாராட்டுவது புலவர்கள் கடமை. அன்றியும் அவர்களுக்குத்தான் எல்லா நாடுகளும் சொந்த நாடு ஆகுமே! வளவன்: தாங்கள் வேறு ஏதோ நாட்டில் அத்தகைய சிறந்த புரவலரைக் கண்டு, அதுவே சொந்த நாடு போல எண்ணித் தங்கி விட்டீர்களோ? புலவர்: வேறு நாடுகளுக்குச் சென்றபோது அதற்கு மாறான உண்மை ஒன்றை உணர்ந்தேன். பரிசிலர்கள் புரவலர்களின் தகுதியை எப்படி அறிந்து வைத்திருக்கிறார்கள் என் பதை அறிந்து கொண்டேன். வளவன்: தாங்கள் சொல்வதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளும் ஆற்றல் எனக்கு இல்லை; சற்றே தெளிவுபடுத்த வேண்டும். புலவர்: நான் வெளிநாடுகளுக்குப் போன பொழுது மன்னர்பிரானை மறந்து விட்டதாக ஒரு கருத்துத் திருவுள்ளத்தில் இருப்பதாகத் தெரிகிறது. அப்படி இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த நாட்டிலிருந்து பிற நாட்டுக்குச் சென்று அங்குள்ள புரவலர்களைப் பார்க்கிறவர்கள், மன்னர் பிரானை நினைப்பது ஆச்சரியம் அன்று. அந்த நாட்டிலுள்ள பரிசிலர்களும் இந்த நாட்டையும் இந்த நாட்டு மன்னரையும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மன்னனுக்கு இன்னும் தெளிவு பிறக்க வில்லை. அதைப் புலவர் உணர்ந்து கொண்டார். விரிவாகச் சொல்ல ஆரம்பித்தார். * மன்னர் ஏறே! இந்த நாட்டுக்குரிய படை மிகச் சிறந்தது. விரிவான படையும் அதற்கு ஏற்றவிறலுடைய மன்னரும் இந்தச் சோழ நாட்டுக்குக் கிடைத்திருக்கிறதை யார் அறியமாட்டார்கள்? படைகளுக்கு முன்னாலே யானை கள் வரிசையாகச் செல்வதைப் பார்த்தாலே பகைவனுக்கு நடுக்கம் கண்டுவிடுமே. யானை களின்மேல் இருக்கும் பல நிறங்களை உடைய கொடிகள் ஓங்கி உயர்ந்து அசையும். மலை போன்ற யானையின்மேல் அவை அசைவது வானத்தை மாசு மறுவின்றித் துடைக்கும் வேலையை அவை மேற்கொண்டிருக்கின்றனவோ என்று எண்ணத் தோன்றும். இத்தகைய படைப் பலத்தைக் கொண்டு என்ன காரியந்தான் செய்யக்கூடாது? மன்னர்பிரானுடைய கோபம் எங்கே பாய்கிறதோ அவ்விடம் அடியோடு அழிந்து போய்விடும்; எல்லாம் பற்றி எரிந்து பாழாகிவிடும். அப்படி இன்றி விருப்பத்துடன் பார்க்கும் பார்வை எங்கே படுகிறதோ அந்த இடம் பொன் விளையும் பூமியாக மாறும். தீப்பார்வை ஏரியைக் கொளுத்த, நயந்த பார்வை பொன் பூப்பச் செய்யும் விறலும் கருணையும் உடைய மன்னர்பிரான் பெருமையைத் தமிழுலகம் முழுதும் உணர்ந்திருக்கின்றது. நல்ல வெயில் வீசும்போது அந்த வெயிலை மாற்றி நிலாவாக்க வேண்டும் என்று விரும்பினாலும், வெண் திங்கள் நிலாவை வீசும்போது வெயில் வேண்டுமென்று நினைத்தாலும் வேண்டியதை வேண்டியபடியே விளைக்கும் ஆற்றல் மன்னர் பெருமானுக்கு உண்டு. இதையும் பரிசிலர் நன்றாக உணர்வார்கள். அவர்களுக்குச் சொர்க்கபூமி என்றாலும் அதனிடத்தில் மதிப்பு இல்லை. வியாபாரியிடம் பணத்தைக் கொடுத்தால் பண்டம் கிடைக்கிறது. ஒரு வீட்டை உடையவனிடம் குடிக்கூலி கொடுத் தால் அந்தக் கூலி உள்ளவரையில் அந்த வீட்டில் வாழலாம். தேவலோகம் என்பது குடிக்கூலி கொடுத்து வாழும் இடந்தானே? மிகவும் இனிய போகத்தை உடையது, பொன் மயமான கற்பகப் பூங்காவை உடையது என்று சொல்லும் அவ்வுலகத்தில் உள்ளவர்கள் தாம் செய்த நல்வினைக்கு ஈடாக அங்கே வாழ்கிறார் கள். நல்வினை தீர்ந்தால் சொர்க்க போகமும் போய்விடும். அது ஒரு பெருமையா? அங்கே எதையாவது யாருக்காவது கொடுத்து உவக்க முடியுமா? ஈவோரும் ஏற்போரும் இல்லாத நாடு அல்லவா? உடையவர் ஈந்து உவக்கும் இன்ப மும், இல்லாதவர் நல்ல உபகாரிகளிடம் இரந்து பொருள் பெரும் இன்பமும் இல்லாத அந்த நாட்டில் பரிசிலர் போய் என்ன செய்ய முடியும்? அருமையான தமிழ்ப் பாட்டடை அங்கே போய்ச் சொன்னால் யார் கேட்கப் போகிறார்கள்? கேட்டாலும் பரிசில் தருவார்களா? ஒன்றும் இல்லை. ஆகவே அந்த நாட்டில் வாழும் வாழ்வு நாமாகச் செயல் செய்யும் சுதந்தரம் இல்லாத வாழ்வு. கொடுக்கும் கையையும் வாங்கும் கையையும் கட்டிப் போட்டிருக்கிற நாடு. செயல் அற்றுப்போன நாடு. அதைப் பரிசிலர்கள் விரும்புவதில்லை. இப்படித் தேவருலகத்தையும் விரும்பாத பரிசிலர் சோழநாட்டை விரும்புகிறார்கள். எப்போதும் இந்த நாட்டை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாடு சோறுடைய சோழ நாடாதலின் சொர்க்க போகம் இங்கே இருக்கிறது. அதற்குமேல், விண்ணாட்டில் இல்லாத ஈகை இங்கே இருக்கிறது. இவ்வளவுக்கும் மூல காரணமாக மன்னர்பிரான் இருந்து நாட்டு வளத்தையும் வரிசையரிந்து ஈயும் ஈகையையும் வளர்த்து வருவதனால், பகைவர் நாட்டிலே வாழ்ந்தால் கூடப் பரிசிலர்களெல்லாம் இந்த நாட்டையே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்க, மன்னர்பிரானுடைய குடை நிழலிலே பிறந்து அந்த நிழலிலே வளர்ந்து வரும் எங்களைப் பற்றிச் சொல்லவேண்டுமா, என்ன? எங்கே போனால்தான் என்ன? மற்ற இடங்களுக்குப் போகும்போதுதான் இந்த நாட்டின் பெருமையையும் மன்னர்-பிரானுடைய அருமையையும் நன்றாக உணர்ந்து, பின்னும் அதிகமாக நினைந்து வாழ்த்தத் தோன்றுகிறது. to check from here onwards page 109 * புலவர் ஒருவாறு சொல்லி நிறுத்தினார். அருகில் இருந்தவர்கள் கேட்டு வியந்தார்கள். "மன்னர்பிரானுடைய இயல்பை நாங்கள் நன்கு அறிந்திருக்கிறோம். ஆனால் மூலங்கிழார் அதை எடுத்துச் சொல்லும் பொழுது அழகாக இருக்கிறது. எங்கள் உள்ளம் குளிர்கிறது." என்றார் அங்கிருந்த அமைச்சர்களில் ஒருவர். "மன்னர்பிரான் கேட்ட கேள்விக்கு விடை கூறும் வாயிலாகப் பேசும் பேச்சிலே இத்தனை அழகு இருக்குமானால், இப்புலவர் பிரான் இதையே கவிதையாக வழங்கினால் எப்படி இருக்கும்!" என்றார் மற்றோர் அமைச்சர். இயல்பாகவே ஊக்கம் மிகுதியாக இருந்த ஆவூர் மூலங்கிழாருக்கு இந்த வார்த்தை கவிதை பாடும் உணர்ச்சியைக் கிண்டிவிட்டது. உடனே அவரிடமிருந்து மலர்ந்தது ஒரு பாட்டு. வரைபுரையும் மழகளிற்றின்மிசை வான்துடைக்கும் வகையபோல விரவுஉரவின கொடிநுடங்கும் வியன்றானை விறல்வேந்தே! நீ, உடன்றுநோக்கும்வாய் எரிதவழ நீ, நயந்துநோக்கும்வாய் பொன்பூப்பச் செஞ்ஞாயிற்று நிலவுவேண்டினும் வெண்திங்களுள் வெயில்வேண்டினும் வேண்டியது விளைக்கும் ஆற்றலை; ஆகலின் நின் நிழல் பிறந்து நின் நிழல் வளர்ந்த எம்அளவு எவனோ? மற்றே; இன்னிலைப் பொலம்பூங் காவின் நன்னாட் டோரும் செய்வினை மருங்கின் எய்தல் அல்லதை உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும் கடவது அண்மையின் கையறவு உடைத்துஎன, ஆண்டுச்செய் நுகர்ச்சி ஈண்டுங் கூடலின் நின்நாடு உள்ளுவர் பரிசிலர், ஒன்னார் தேஎத்தும் நின்உடைத்து எனவே. மலையைப்போன்ற இளைய ஆண் யானைகளின் மேல் வானத்தை மாசு மறுவறத் துடைக்கும் வேலையை உடையவைபோல, பல நிறங்கள் விரவிய கொடிகள் அசையும் பரந்த படையையும் வெற்றிமிடுக்கையும் உடைய வேந்தனே! நீ கோபித்துப் பார்க்கும் இடம் தீப் பரவ, நீ விரும்பிப் பார்க்கும் இடம் பொன் விளங்க, சிவந்த சூரிய னிடத்திலே நிலவு வேண்டுமென்று விரும்பினாலும், வெள் ளிய திங்களிடத்தில் வெயில் உண்டாக வேண்டுமென்று விரும்பினாலும் நீ வேண்டிய பொருளை வேண்டியபடி உண்டாக்கும் வலிமையை உடையாய்; ஆதலின் நினது குடைநிழற் பட்ட இடத்திலே பிறந்து அந்த நிழலிலே வளரும் எம்முடைய நினைவின் அளவு (கிடக்கட்டும்; அதைத் தனியே எடுத்துச் சொல்லவேண்டுமா) என்ன? இனிய நிலையையும் பொற்பூவையுடைய கற்பகச் சோலை யையும் உடைய நல்ல நாடாகிய சொர்க்கபூமியில் உள்ள வர்களும் தாம் பெறும் இன்பத்தைத் தாம் செய்த நல்வினையின் சார்பினாலே பெறுவதல்லது, செல்வம் உடையவர் ஈதலும் செல்வம் இல்லாதவர் இரத்தலுமாகியவை செய்யக் கடவதாகிய இடம் அது அன்று; ஆதலின் அது செய லிழந்து நிற்கும் வருத்தத்தை உடையதென்று எண்ணி, அங்கே நுகரும் இன்ப நுகர்ச்சி இங்கும் கிடைப்பதனால் நின்னுடைய சோழநாட்டை நினைப்பார்கள் பரிசில் பெரும் புலவர்கள், பகைவர் தேசத்தில் இருந்தாலும், இந்த நாடு உன்னை உடையதாக இருக்கின்றது என்று கருத்தினால். 'வேந்தே, கூடலின், பரிசிலர் நின்னுடைத்தென நின்னாடு உள்ளுவர்; எம் அளவு எவனோ' என்று கூட்டிப் பொருள்கொள்ள வேண்டும். வரை-மலை. புரையும்-ஒக்கும். மழ-இளமை. வகைய- வகுத்த வேலை. விரவு உரு-கலந்த நிறம். நுடங்கும்-அசை யும். வியல் தானை-விரிவாங்க படை. விறல்-வெற்றி மிடுக்கு. உடன்று-சினந்து. வாய்-இடம். நயந்து-விரும்பி எவனோ- என்னவோ. மற்று, ஏ: அசை நிலைகள். இன்நிலை-இனிய நிலை. பொன் என்பது மற்றச் சொற்களோடு சேரும்போது பொலன் என்று செய்யுளில் ஆகும். கா-சோலை. மருங்கின்- சார்பினால். அல்லதை: ஐ, சாரியை. கடவது-முடியும் தன்மையை உடையது. அண்மையின் - அல்லாமையால். கையறவு-செயலற்று நிற்கும் நிலை. நுகர்ச்சி-இன்ப அநு பாவம். கூடலின் - கிடைப்பதனால். உள்ளுவர் - நினைப்பார். பரிசிலர் - பரிசில் பெறுவோர்; இங்கே புலவர். ஒன்னார் - பகைவர். தேஎம்-தேசம். நின்உடைத்து-நின்னை உடையது. நின்னுடைத்து என்றாலும் சோழ நாட்டில் நீ இருந்து சிறப்புச் செய்கிறாயென்ற பொருளிலே சொன்னதாகக் கொள்ளவேண்டும். . * கவிஞர் பாடிய பாட்டை யாவரும் கேட்டு மகிழ்ந்தனர். இது அரசனைப் பாராட்டும் பொருளையுடையது. ஆதலால் பாடான் திணை என்ற புறத்திணையைச் சார்ந்தது. அரசனுடைய நல்லியல்புகளை எடுத்து மொழிந்தமையால் இயல் மொழி என்ற துறையில் அமைந்தது. 'அவன் "எம்உள்ளீர் எந்நாட்டீர்" என்றாற்கு ஆவூர் மூலங்கிழார் பாடியது' என்பது இப்பாட்டுக்குரிய பழங்குறிப்பு. தமிழ்நாட்டில் வாழ்ந்த மன்னர்களும் செல் வர்களும் தாம் பெற்ற பொருளைப் பிறருக்கு ஈந்து இன்புற்றார்கள். குறிப்பறிந்து கொடுத் தார்கள். ஈவதால் வரும் புகழோடு வாழாத வாழ்வு சிறந்ததன்று என்பது அவர்கள் கொள்கை. பரிசிலர்கள் அத்தகைய புரவலர்கள் பால் சென்று இரத்தலை இழிவாகவே கருதுவ தில்லை. தம்மிடத்தில் உள்ளதைச் சிறிதும் மறைக்காமல் கொடுக்கும் இயல்புடையவர் களிடத்தில் சென்று யாசிப்பதும், ஈவதைப் போன்ற சிறப்புடையது என்று எண்ணி னார்கள். இரத்தலும் ஈதலே போலும், கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு என்பது வள்ளுவர் வாய்மொழி. ஈகை இல்லாத நாடு சிறந்த நாடு அன்று என்று எண்ணிய புலவர்கள் விண்ணுலகத்தை யும் விரும்புவதில்லை என்று ஆவூர் மூலங்கிழார் கூறுகிறார். அறஞ்செய் மாக்கள் புறங்காத்து ஓம்புநர் நற்றவஞ் செய்வோர் பற்றற முயல்வோர் யாவரும் இல்லாத் தேவர்நன் னாட்டுக்கு இறைவ னாகிய பெருவிறல் வேந்தே. என்று இந்திரனைப் பார்த்து ஆபுத்திரன் கூறித் தேவலோகத்தைக் குறிப்பாக இகழ்ந்த தாக மணிமேகலையில் ஒரு செய்தி வருகிறது. ஈவாரும் கொள்வாரும் இல்லாத வானத்து வாழ்வாரே வன்க னவர். என்பது ஒரு பழம் பாட்டு. இவை ஈகையின் சிறப்பை நேர்முகமாக அன்றிக் குறிப்பாகச் சொல்கின்றன. மூலங்கிழார் கிள்ளிவளவனுடைய வீரத்தை யும் பேராற்றலையும் ஈகையையும் அவன் புலவர் கலைப் பாராட்டு அன்பையும் நாட்டை வளப் படுத்தும் திறமையையும் இந்தப் பாட்டிலே புலப்படுத்தி யிருக்கிறார். இது புறநானூற்றில் உள்ள 38 - ஆவது பாட்டு.   9. 6. கோட்டிடை வைத்த கவளம் சேரநாட்டில் முடியுடையரசன் ஆண்டு கொண்டிருந்தாலும் அந்நாட்டின் ஒரு பகுதி யைத் தன்னதாக்கி ஆண்டுவந்த அதியமான் நெடுமான் அஞ்சியின் புகழே மிகுதியாகப் பரவியிருந்தது. சேர அரசனுக்கு இந்தச் சிற்றரசனிடத்தில் உள்ளூரக் காழ்ப்பு இருந் தது. அதியமான் சேரர் குலத்தில் உதித்தவன். ஆகவே அவன் சேரர்களுக்குரிய பனை மாலையையே அணிந்திருந்தான். சேர அரசன் வஞ்சிமா நகரில் இருந்தான். அதிகமான் தகடூரில் இருந்தான். தர்மபுரி என்று இன்று வழங்கும் ஊரே அக்காலத்தில் தகடூர் என்ற பெயரை உடையதாக விளங் கியது. தர்மபுரிக்கு அருகில் அதிகமான் கோட்டை என்ற பெயருள்ள இடம் ஒன்று இன்றும் இருக்கிறது. தகடூர் பேரரசன் ஒருவனுடைய இராச தானி நகரம் போலவே சிறப்பாக இருக்கும். அதிகமான் தமிழ் நயம் தேர்வதில் சிறந்தவன். எந்தக் காலத்திலும் புலவர்களின் கூட்டத்தின் இடையே இருந்து, அவர்களுடைய புலமையை வியந்தும் பாராட்டியும் மகிழ்பவன். புலவர்களைப் பலநாள் வைத்திருந்து உபசரித்துப் பரிசில் வழங்குவதே அவனுடைய நித்தியத் தொழில் என்று சொல்லி விடலாம். புலவர்களுக்கு வரிசை அறிந்து பரிசில் தரும் வண்மை அவன்பால் இருந்ததனால் அப் புலவர் பாடும் புகழை அவன் காணியாக்கிக் கொண்டான். அதனால் நாடு முழுவதும் அவ னுடைய வள்ளன்மையைப் பற்றிய செய்திகள் பரவின. சேரநாடு முழுவதும் பரவிச் சேர அரசன் காதையும் எட்டியது. அது மட்டுமா? சோழ பாண்டிய நாடுகளிலும் அவற்றிற்கு அப்பாலும் அவன் புகழ் பரவியது. "ஒரு சிற்றரசனுக்கு இத்தனை புகழா!" என்று பேரரசர்கள் அழுக்காறடைந்தார்கள். கடை யெழு வள்ளல்கள் என்று புலவர்கள் ஏழு பேரைத் தேர்ந்தெடுத்துத் தம்முடைய பாடல் களிலே பாராட்டியிருக்கிறார்கள். அதியமான் அவ்வெழுவரில் ஒருவன். * அதியமானுடைய இயல்புகளில் ஈடுபட்டு வியந்த புலவர்களில் ஔவையார் ஒருவர். தகடூருக்கு அவர் எப்போது வந்தாலும் அதிய மானுடைய பெருமைக்கு அடையாளமான ஒரு நிகழ்ச்சியை அவர் அறிந்து பாராட்டுவார். ஒருமுறை ஔவையார் வந்திருந்தார். நாலைந்து நாட்கள் அங்கே தங்கியிருந்தார். அதியமான் செய்யும் உபசாரத்தைப் பெற்றால் மாதக் கணக்காக, ஆண்டுக்கணக்காக அங்கேயே இருந்துவிடலாமென்று தோன்றும். ஔவையார் தங்கியிருந்த காலத்தில் ஒவ் வொரு நாளும் புலவரும் பாணரும் விறலியரும் கூத்தரும் வந்து வந்து அதியமானிடம் பரிசு பெற்றுச் சென்றார்கள். அவனுடைய ஈகைத் திறத்தைக் கண்டு கண்டு ஔவையார் கண் களித்தார். ஒரு புலவர் முதல் நாள் வந்து பரிசு பெற் றுச் சென்றார். மறுநாளும் அவர் வந்தார். அவரைக் கண்டதும் அரண்மனையில் இருந்தவர் களில் ஒருவர் "நேற்றுத்தானே வந்தீர்கள்?" என்று கேட்டார்.புலவர் "ஆம்" என்றார். அதியமானிடம் அவர் சென்றார். "நேற்று வந்து பரிசில் பெற்றுச் சென்றவர்" என்று யாரோ சொன்னது அதியமான் காதில் விழுந்தது. "இருந்தால் என்ன? நேற்றும் உணவு கொண்டோம். அது போதுமென்று நிற்கி றோமா? இன்றும் உணவு கொள்கிறோம். ஒரே நாளில் இரண்டு மூன்று தடவை உணவு கொள்கிறோமே, அது தவறா? ஒவ்வொரு நாளும் நாம் ஒருவருக்குப் பரிசில் தருவது எப்படித் தவறாகும்? ஒரு நாள் வந்தவர் மீட்டும் வந்தால் நம்மிடத்தில் அவருக்குள்ள ஆழ்ந்த அன்பைத்தானே அது காட்டும்?" என்று சொல்லி அன்றும் அப் புலவருக்குப் பரிசில் வழங்கினான் அதியமான். மூன்றாவது நாளும் அந்தப் புலவர் வந்தார். மறுபடியும் அவருக்குப் பரிசில் கிடைத்தது. ஔவையார் இதைக் கண்டார். கொடுக்கச் சலியாக் குணக்குன்றாக நிற்கும் அதியமானுடைய வண்மையை நினைந்து நினைந்து உருகினார். நான்காவது நாளும் அந்தப் புலவர் வந் தார். ஆனால் இந்த முறை வேறு பல புலவர் களையும் கூட்டிக்கொண்டு வந்திருந்தார். ஒரே கூட்டம். புலவர் பல நாள் வந்து செல்வதைப் பொறாமல் குறைகூறியவர் இப்பொழுது இந் தக் கூட்டத்தைக் கண்டு பிரமித்துப் போய் விட்டார். "என்ன அநியாயமாக இருக்கிறது? கரும்பு ருசி யென்று வேரோடு பிடுங்கலாமா? ஊரிலுள்ள இரவலர்களை யெல்லாம் இந்த மனிதர் கூட்டிக்கொண்டு வந்து விட்டாரே!" என்று முணுமுணுத்தார். அதியமான் என்ன செய்தான்? புலவர் கூட்டத்தைக் கண்டவுடன் அவனுக்கு அள வற்ற ஊக்கம் உண்டாகிவிட்டது. முதல் நாளில் அந்தப் புலவருக்கு எவ்வளவு அன்போடு உபசாரம் செய்தானோ அதே அன்போடு எல்லோருக்கும் உபசாரம் செய்யத் தொடங்கி னான். பல நாட்களாகப் பாராதிருந்த நெருங்கிய உறவினரை அன்புடன் வரவேற்று உப சரித்துப் பழகுவதுபோலப் பழகினான். புலவர்க ளுடைய புலமைத் திறத்தை அறிந்து பாராட்டி னான், அந்தக் கூட்டத்தில் புலமை நிரம்பாதவர் களும் இருந்தார்கள். அவர்களுக்கும் இன் சொல் சொல்லி ஊக்கமூட்டினான். இந்தக் காட்சியையும் ஔவையார் கண் டார். புலவர்களுக்குக் காமதேனுவைப் போல வும் கற்பகத்தைப் போலவும் அதியமான் விளங்குவதைக் கண்டு ஆனந்தங் கொண்டார். 'வெவ்வேறு மக்களுக்கு அடுத்தடுத்து ஈவ தென்றாலே எல்லாச் செல்வர்களுக்கும் இய லாத காரியம். கொடையிலே சிறந்தவனென்று பெயர் பெற்ற கண்ணன்கூட ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தில்தான் தானம் செய் வான். இவனோ எந்த நேரத்திலும் புலவர்களை வரவேற்று உபசரிக்கிறான். ஒருவரே பல நாள் வந்தாலும் மீட்டும் மீட்டும் பாராட்டிப் பரிசில் தருகிறான். தனியாக வந்தாலும் பலரோடு வந்தாலும் சிறிதும் வேறுபாடின்றி அன்பு காட்டுகின்றான். அகமும் முகமும் மலர்ந்து பரிசில் தருகிறான். முதல் முதல் எத்தனை ஆர்வமும் அன்பும் காட்டுகிறானோ அதே ஆர்வத்தையும் அன்பையும் எப்போதும் காட்டுகிறான். இப் படி வேறு யாரும் உலகில் இருப்பதாகத் தெரிய வில்லையே! இவன் தெய்வப் பிறவி' என்று ஔவையார் அதியமானுடைய இயல்பை நினைத்து வியந்தார். அவனிடம் விடைபெற் றுக் கொண்டு சென்றார். *** பின் ஒரு முறை ஔவையார் தகடூருக்கு வந்தார். அப்பொழுது அதியமான் அரசியல் பற்றிய செயல்களில் ஈடுபட்டிருந்தான். சேர அரசன் தன்னைக் கருவறுக்க எண்ணியிருக்கிறா னென்ற செய்தியை அவன் அறிந்தான். தகடூரை முற்றுகையிடவும் கூடும் என்று ஒற் றர்கள் வந்து சொன்னார்கள். ஆதலின் தன் னுடைய படை வலியையும் மாற்றானுடைய படை வலியையும் தனக்குத் துணைவராக வரு வாருடைய படை வலியையும் ஆராய்வது இன்றியமையாததாகி விட்டது. அமைச் சர்களுடன் ஆராய்ந்தான். சேர அரசன் முடியுடையபேரரசன். அவனுடைய படை மிகப் பெரிய படை. அதியமானோ சிற்றரசன். அவ னிடத்தில் சேரமான் படையை எதிர்த்து வெல்லும் அளவுக்கு படை இல்லை. புதிய கூலிப் படையைச் சேர்க்கலாம் என்றால், பெரும் பொருள் வேண்டுமே! பொழுது விடிந்தால் புலவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு அவர் களுக்குக் கணக்கில்லாமல் பரிசில் வழங்கி வரும் அவனிடம் அதிகப் பொருள் எப்படி இருக்கும்? இந்த நிலையில் என்ன என்ன செய்ய வேண்டும் என்ற ஆராய்ச்சியில் அதியமானும் அவன் அமைச்சர்களும் ஈடுபட்டிருந்தார்கள். அரண்மனையில் உள்ள அதிகாரிகள் யாவரும் எப்போதும்போல் முகமலர்ச்சியுடன் இருக்க வில்லை. யோசனையில் ஆழ்ந்தவர்களைப் போலவே யாவரும் காணப்பட்டனர். ஔவையார் அங்கே இருந்த அமைதியைப் பார்த்தார். 'நாம் சரியான காலத்தில் வர வில்லை. இப்போது அதியமானைப் பார்ப்பது அரிதுபோலும்!' என்று எண்ணினார். அதியமானுக்கு ஔவையார் வந்திருப்பது தெரிந்தது. உடனே அவரைப் பார்த்து அன் புடன் பேசினான். அந்தப் பேச்சிலே எத்த கைய வேறுபாடும் இல்லை. "இன்னும் சில நாட்கள் இங்கே தங்கிச் செல்லலாம் அல்லவா?" என்று ஔவையாரைக் கேட்டான். "மாட் டேன்" என்று சொல்ல வாய்வருமா? அவர் ஒப்புக் கொண்டார். நாள் முழுவதும் புலவர்களுடன் பொழுது போக்க இயலாத நிலையில், ஒவ்வொரு நாளும் * சிறிது நேரம் அதியமான் ஔவையாரைப் பார்த்துப் பேசினான். ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாட்கள் ஆயின. அதியமான் ஏதோ மிகமிக முக்கியமான ஆலோசனையில் ஈடுபட் டிருக்கிறான் என்பதை ஔவையார் உணர்ந்து கொண்டார். ஆதலின் அவனாக எப்போது விடை கொடுக்கிறானோ, அப்போது போகலாம் என்று நினைத்தார். பின்னும் சிலநாள் அங்கே தங்கியிருந்தார். 'நமக்குப் பரிசில் தருவதைப் பற்றி ஏதேனும் யோசித்து இப்படி நாட்களை நீட்டிக்கிறானோ?' என்ற எண்ணம் ஒரு கணம் ஔவையாருக்குத் தோன்றியது. மறுகணமே அவ்வாறு எண் ணியதற்கு வருந்தினார். 'என்ன பைத்தியக்கார எண்ணம்! ஏ நெஞ்சமே! நீயா இப்படி நினைத்தாய்? இதைக் காட்டிலும் தாழ்ந்த எண்ணம் வேறு இல்லை. அதியமானுடைய இயல்பை அறிந்தும் இப்படி நினைக்கலாமா? அட பேதை நெஞ்சே! நமக்குக் கிடைக்க்கும் பரிசில் எங்கே போகப் போகிறது? அவன் தரும் பரிசிலைப் பெற்றுப் பயன் அடைய வேண்டும் என்ற ஆவல் உனக்கு அதிகமாக இருக்கிறது. அதனால்தான் அவன் தருவானோ மாட்டானோ என்று ஏங்குகிறாய். அவன் தருவதை நுகர, அருந்த, ஏமாந்த நெஞ்சமே! நீ வருந்த வேன்டாம்.' ஔவையார் தமக்குத் தாமே நகைத்துக் கொண்டார். மறுபடியும் நெஞ்சை வேறாக வைத்துப் பேசலானார். 'இத்தனை நாள் பழகி அதியமானுடைய சீரிய இயல்புகளை அறிந்தும் உனக்கு இந்த எண்ணம் ஏன் வந்தது? இதற்கு முன்னாலே நாம் இவ்விடத்திலே கண்ட காட்சிகளை நினைத் துப் பார். ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல, பல நாள் அடுத்தடுத்து வந்தாலும் அவன் சிறிதாவது சலித்துக் கொண்டானா? இன்னும் பலரைக் கூட்டிக் கொண்டு வந்தோ மானாலும் அவன் வள்ளன்மையிலே ஏதேனும் குறைவு நேர்வதுண்டா? நினைத்துப் பார். அப்படி அடுத்தடுத்து வரும்போது அவனுடைய அன்பு மற்ற இடங்களைப்போல ஒரு நாளுக்கு ஒரு நாள் அளவிற் குறைந்தா வந்தது? முதல் நாள் எத்தனை விருப்பத்தை உடையவனாக இருந்தானோ அதே விருப்பத்தைப் பல நாள் அடுத்தடுத்துச் சென்றாலும் காட்டும் இயல் புடையவனையா இப்படி நினைத்தாய்! 'அவனுக்கு என்ன குறைவு? அழகான அணிகலங்களை அணிந்த யானைகளும் வேக மாகச் செல்லும் தேர்களையும் உடையவ னல்லவா அவன்? புலவர்களுக்குக் கொடுக்க இயலாத வறுமையா வந்துவிட்டது? அதியமான் பரிசில் நிச்சயம் நமக்குக் கிடைக்கும். அது இன்று கிடைக்கிறதோ, நாளைக் கிடைக் கிறதோ, அதைப் பற்றிக் கவலை இல்லை. அந்தக் காலம் நீட்டித்தாலும் நீட்டிக்காவிட் டாலும் பரிசில் கிடைப்பது மாத்திரம் உறுதி. வேறு ஒருவருடைய கையில் உள்ள பரிசில் அது, நமக்கு எப்படி எப்போது வரும் என்ற எண்ணமே வேண்டாம். நம் கையில் இருப்ப தாகவே எண்ணிக் கொள்ளலாம். 'யானைக்க்குத் தழையுணவைக் கொடுக்கி றோம். அது அதை உடனே உண்ணாமல் தன் கொம்பினிடையிலே வைத்துக் கொள்கிறது. "அடடா, இதை இது உண்ண வேன்டுமென் றல்லவா கொடுத்தோம்? இது இங்கே வைத் துக் கொண்டு விட்டதே" என்று கவலைப் படலாமோ! யானை எப்படியும் அதை உண்டே விடும். யானை தன் கோட்டிடையே வைத்த கவளத்தைப் போன்றது, அதியமான் நமக்குத் தரப்போகும் பரிசில்; அது நம் கையிலே இருப்பது போன்றதுதான். அது கிடைக்காமற் போகாது. இதை அனுபவத்தில் நாம் நன்றாக உணர்ந்திருக்கிறோமே அப்படி யிருந்தும் நீ ஐயுறலாமோ! 'இத்தகைய சிறந்த ஈகையையுடைய அதியமானை நாம் வாழ்த்தவேண்டும். கிடைக்குமோ, கிடைக்காதோ என்று நீ வருந்த வேண்டியதில்லை. அவன் ஏதோ முயற்சியில் ஈடுபட்டிருக்கிறான். அதில் வெற்றி பெறுவானாக என்று நாம் வாழ்த்த வேண்டும். அவன் முயற்சி வாழட்டும் என்று வாழ்த்துவோம்.' இப்படியெல்லாம் நெஞ்சோடு பேசிய பேச்சைப் பிறகு ஔவையார் ஒரு பாட்டாக உருவாக்கினார். ஒருநாள் செல்லலம்; இருநாள் செல்லலம்; பலநாள் பயின்று பலரொடு செல்லினும் தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ! அணிபூண் அணிந்த யானை, இயல்தேர் அதியமான் பரிசில் பெறூஉம் காலம் நீட்டினும் நீட்டா தாயினும், யானைதன் கோட்டிடை வைத்த கவளம் போலக் கையகத் ததுவே; பொய்ஆ காதே; அருந்தே மாந்த நெஞ்சம், வருந்த வேண்டா; வாழ்கவன் தாளே! ஒருநாள் செல்வோம் இல்லை; இரண்டு நாட்கள் செல்வோம் இல்லை; பல நாட்கள் அடுத்தடுத்துப் பல மக்க ளோடு சென்றாலும் முதல் நாள் நம்மிடம் காட்டிய விருப்பத் தோடே இருப்பான்; அணிதற்குரிய நெற்றிப் பட்டம் கிம்புரி முதலிய பூண்களை அணிந்த யானையையும், ஓடும் தேரையும் உடைய அதியமான் தரும் பரிசிலானது, அதனைப் பெறுவதற்கு அமையும் காலம் நீண்டாலும், நீளாவிட்டாலும், யானை உண்ணும் பொருட்டுத் தன் கொம்பினிடையே வைத்த கவளத்தைப்போல, நம் கையிலே இருப்பதுதான்; அது நமக்குக் கிடைப்பது தவறாது. அவன் தரும் பரிசிலை நுகர ஏமாந்து நிற்கும் நெஞ்சமே, பரிசில் கிடைக்குமோ கிடைக்காதோ என்று நீ வருந்தவேண்டாம்; அவன் முயற்சி வாழட்டும். செல்லலம் - போகோம். பயின்று - அடுத்தடுத்துப் பழகி. தலைநாள் - முதல் நாள். மாது, ஓ: அசை நிலைகள். பூண் - ஆப ரணம். இயலுதல் - இயங்குதல், ஓடுதல். கோடு - கொம்பு. கையகத்தது - கைக்கு அகப்பட்டது. அருந்த ஏமாந்த என் றது செய்யுள் விகாரத்தால் அருந்தேமாந்த என வந்தது. நெஞ்சம்: விளி. வாழ்க அவன் என்பது வாழ்கவன் என விகாரமாயிற்று. தாள் - முயற்சி. அவன் அடி வாழ்க என்று வாழ்த்தியதாகவும் கொள்ளலாம். அதியமானை மறுநாள் கண்ட ஔவையார் இந்தப் பாடலைச் சொன்னார். குறிப்பறியும் திறம்பூண்ட அவன் உடனே இந்தப் பெரும் புலமைப் பிராட்டியாருக்குரிய பரிசிலை வழங்கி விடை கொடுத்தனுப்பினான். இது பாடாண்டிணையில் பரிசில்கடா நிலை என்னும் துறையைச் சார்ந்தது. பரிசில் கொடுக்க வேண்டும் என்று குறிப்பாகக் கேட் கும் பொருளை உடையதாதலால் இத்துறை அப் பெயர் பெற்றது. இது புறநானூற்றில் 101 - ஆவது பாட்டு.   10. 7. புலவரின் வள்ளன்மை முன் காலத்தில் வாழ்ந்திருந்த வள்ளல் களில் மிகச் சிறப்புப் பெற்றவர்கள் ஏழுபேர். புலவர்கள் அந்த எழுவரையும் தனியாக எடுத் துச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்கு முன் புராண காலத்தில் இருந்தவர்களான பதினான்கு பேர்களைத் தனித் தனி ஏழு ஏழு பேர்களாகக் கூட்டித் தலை ஏழு வள்ளல்கள் என்றும், இடை ஏழு வள்ளல்கள் என்றும் சொல்லும் வழக்கம் பிற்காலத்தில் உண்டா யிற்று. அதனால் முன் சொன்ன ஏழு வள்ளல் களைக் கடை எழு வள்ளல்கள் என்றும் சொல்வ துண்டு. அந்த ஏழு வள்ளல்களாவார்: பாரி, வல்வில் ஓரி, மலையமான் திருமுடிக்காரி, அதிய மான் நெடுமான் அஞ்சி, பேகன், ஆய், நள்ளி என்போர். இவர்களை ஒன்றாகச் சேர்த்துச் சிறுபாணாற்றுப்ப் படை என்ற நூலும், புறநானூற்றில் உள்ள 158-ஆம் பாட்டும் சொல்கின்றன. இந்த ஏழு வள்ளல்களின் காலத்துக்குப் பிறகும் பல மன்னர்களும் சிற்றரசர்களும் பிறரும் கொடையிலே சிறந்தவர்களாக இருந் தார்கள். அவர்களுக்குள்ளே தலைமை பெற்ற வனென்று புலவர்கள் பாடும் புகழைப் பெற்றவன் குமணன் என்னும் மன்னன். புலவர் களுக்குக் கணக்கின்றிக் கொடுக்கும் வள் ளன்மை உடையவன் அவன். அதனால் அவன் பெயர் புலவர்களின் செய்யுட்களாகிய அணி கலத்தில் பதிக்கப் பெற்ற வைரம்போல ஒளிர் கிறது. முதிரம் என்ற மலையைச் சார்ந்த நாட்டை ஆண்டு வந்தவன் அம் மன்னன். குமணனைப் பாடிய புலவர்களில் பெருஞ் சித்திரனார் என்பவர் ஒருவர். அவர் சித்திரத் தொழிலில் வல்லவராதலால் அந்தப் பெயரைப் பெற்றார் போலும். அவர் வறுமையால் வாடி நின்றார். பிறரிடம் சென்று தமக்கு வேண்டிய வற்றை இரந்துபெற அவர் உள்ளம் இடம் கொடுக்கவில்லை. அவருக்குக் கல்யாணம் ஆயிற்று. அவருடைய குடும்பம் பெரிதாகவே, பெற்றதைக் கொண்டு வாழ அவரால் இயல வில்லை. வறுமை வரவர மிகுதியாக அவரை நெருக்கியது. தமிழ்ப் புலமை மிக்கவரானாலும் யாரிடமேனும் சென்று அவரைப் பாடி எனக் குப் பொருள் வேண்டும் என்று கேட்க அவர் நா வளையாது போல் இருந்தது. அவருடைய மனைவி சிறந்த அறிவுடைய வள். கணவனுடைய வருவாய்க்குத் தக்க வண்ணம் செலவு செய்பவள். தன்னோடு பழகும் மகளிரைத் தன்வசமாக்கும் நற்குணமும் இனிய மொழியும் படைத்தவள். கிடைத்ததை வைத் துக் கொண்டு இல்லறத்தை நடத்தி வந்தாள். அவளுடைய அன்பிலே ஈடுபட்டவர்கள், அவ்வீட்டின் வறிய நிலையை உணர்ந்து தங்க ளால் இயன்ற உதவியைப் புரிந்து வந்தார்கள். அவள் அவற்றைப் பெறுவதற்கு உடம்பட வில்லை. அன்புடையவர்களோ எப்படியேனும் உதவி புரியவேண்டும் என்ற எண்ணம் கொண் டார்கள். ஆகவே, "இந்தப் பொருள்களை நாங்கள் தானமாகக் கொடுக்கவில்லை. எப் போது உன்னால் திருப்பிக் கொடுக்க முடிகிறதோ, அப்பொழுது கொடுத்தால் நாங் கள் வாங்கிக் கொள்கிறோம். நீ இரந்து பெற்று வாழ்வதாக எண்ணாதே. இத்தனை நாளைக்குள் கொடுத்துவிடவேண்டும் என்ற கணக்கும் வேண்டாம்" என்றார்கள். "நான் திருப்பிக் கொடுக்க முடியாமலே போய்விட்டால்-?" என்று கேட்டாள் புலவர் மனைவி. "அதனால் எங்களுக்கு ஒரு குறைவும் வந்துவிடாது. இவற்றை மீட்டும் வாங்கிக் கொள்ளவேண்டும் என்ற எண்ணமே எங்க ளுக்கு இல்லை. நீயோ சும்மா வாங்கிக் கொள்ள மாட்டா யென்பது எங்களுக்குத் தெரியும். ஆகவே கடனாக வாங்கிக் கொள்வாருக்குக் கொடுப்பது போலக் கொடுக்கிறோம். உனக்கு வசதி உண்டாகும்போது திருப்பிப் பெற்றுக் கொள்கிறோம். எப்போதுமே இந்த வறுமை இராது. உன் கணவர் பெரும் புலவர். அவ ருடைய பெருமை இன்னும் தக்கவண்ணம் மற்றவர்களுக்குப் புலனாகவில்லை. நாளைக்கே சிறந்த வள்ளல் ஒருவனுடைய நட்பு அவருக் குக் கிடைக்குமானால் பிறகு இந்த வீட்டில் திருமகள் நடனமாடுவாள். இந்த வாசல் ஆனை கட்டும் வாசலாகிவிடும். அப்படி ஒருகாலம் வரத்தான் போகிறது. ஆகையால் இவற்றை வாங்கிக்கொள். உனக்குப் பொருள் கிடைக் கும்போது ஓர் இம்மியும் குறையாமல் நாங்கள் திருப்பி வாங்கிக் கொள்வோம்." அந்த ஏழைப் புலவரின் இல்லத்துக்கும் விருந்தினர் வந்துவிடுவார்கள். அக்காலங்களில் முகங் கோணாமல் அவர்களை உபசரித்து விருந் துணவு உண்ணச் செய்து அனுப்புவதில் சிறி தும் குறைவின்றி ஈடுபடுவாள் புலவர் மனைவி. வேண்டிய பண்டங்களை அண்டை அயலோர் தந்து விடுவார்கள். விருந்தினர்கள் விடைபெற்றுச் சென்ற பிறகு புலவர் தமக்கு உண்டான ஐயத்தைப் போக்கிக் கொள்ள முற்படுவார். தம் மனைவியை அழைத்து, "விருந்தினர்களுக்கு மிக இனிய விருந்தை அளித்தாயே! அதற்கு வேண்டிய பண்டங்கள் உனக்கு எப்படிக் கிடைத்தன?" என்று கேட்பார். "பிறகு தந்துவிடுவதாகப் பிறரிடம் வாங் கினேன்" என்பாள் அவர் மனைவி. எப் பொழுது கொடுப்பது, எப்படிக் கொடுப்பது என்பவற்றைப் பற்றி அவர் கேட்கமாட்டார். வறிய நிலையில் இருந்தாலும் அவர் வீட் டுக்கு அடிக்கடி உறவினர்கள் வந்து கொண்டு தான் இருந்தார்கள். அவருடைய மனைவியின் சுற்றத்தாரில் மிக ஏழையாக இருந்த யாரேனும் அங்கே வந்து சில நாட்கள் தங்கியிருந்து செல் வார்கள். இப்படி வறுமையிலும் செம்மையாக வாழும் வாழ்க்கையைப் புலவர் மனைவி தெரிந்து கொண்டிருந்தாள். பெருஞ்சித்திரனார் தம் இல்வாழ்க்கை யென்னும் வண்டி இந்த வறிய நிலையிலே நெடு நாள் ஓட இயலாது என்பதை உணரலானார். எப்படியேனும் பொருள் ஈட்டவேண்டும் என்ற நினைப்பு எழுந்தது. கண்ட கண்ட பேரிடம் போய்ப் பஞ்சத்துக்குப் பிள்ளையை விற்பவரைப் போலப் பாட்டுப் பாடிப் பல்லைக் காட்டிப் பரிசு பெற அவர் விரும்பவில்லை. மிகமிகச் சிறந் தவனும், புலவருடைய மதிப்பை நன்கு அறிந்தவனும், வரிசையறிந்து பாராட்டுபவனும், உள் ளன்பு காட்டுபவனும், தமிழ் நயந் தேர்ந்து சுவைப்பவனும், நற்குணம் உடையவனுமாகிய ஒருவனை அண்டி அவன் தருவதைப் பெற்று வாழ்வதே போதும் என்பது அவருடைய நோக்கம். ஆனால் அந்த நோக்கத்துக்கு இணங்க அமையும் வள்ளல் கிடைக்கவேண்டுமே! மற்றப் புலவர்களோடு பழகியபோது அவ ரவர்கள் தாம் தாம் சென்று கண்டு பாடிய செல்வர்களைப் பற்றியெல்லாம் சொன்னார்கள். பல காலம் முயன்ற பின்பு மனங்கனிந்த கல் நெஞ்சக்காரர்கள் சிலரைப் பற்றிக் கேள்வி யுற்றார். புலவர்கள் தம்மை வானளாவப் புகழ அதனால் மகிழ்ச்சி பெற்று ஓரளவு பரிசில் வழங்கும் தன்னலத்தினர் சிலரைப் பற்றியும் கேள்வியுற்றார். புலவர்களுக்கு அளித்தால் ஊரார் புகழ்வர் என்ற எண்ணத்தால் சில புலவர்களுக்குப் பொருள்வழங்கி அதனைத் தாமே யாவருக்கும் ஆரவாரத்தோடு எடுத்துச் சொல்லும் அகங்கார மூர்த்திகள் சிலரைப் பற்றி அறிந்தார். பாடலின் நயத்தைப் பாரா மல் தம் பெயரைப் பாட்டில் அமைத்திருக்கிறார் களா என்று ஆராய்ந்து பரிசளிக்கும் சிலரைப் பற்றியும் அறிந்தார். அத்தகைய செல்வர் களிடம் போவதைவிட வறுமையால் வாடுவதே நன்று என்று எண்ணினார் பெருஞ்சித்திரனார். கடைசியில் முதிரமலைக்குத் தலைவனாகிய குமணன் என்பவன் குணத்தாலும் கொடையா லும் புலவரைப் போற்றும் திறத்தாலும் சிறந் தவன் என்ற செய்தியை அவர் அறிந்தார். அவனிடம் சென்று வந்த புலவர் அனைவரும் அவனுடைய புகழை ஒரே மாதிரி சொல்வதைக் கேட்டார். அவனை அணுகித் தம் புலமையைக் காட்டிப் பரிசு பெறலாம் என எண்ணினார். முதிரத்துத் தலைவன் குமணனிடம் பெருஞ் சித்திரனார் சென்றார். முதிரமலையின் வளப்பத் தைக் கண்டார். பலாவும் மாவும் ஓங்கி வளர்ந் திருந்தன. பழங்கள் கொத்துக் கொத்தாகத் தொங்கிக் கொண்டிருந்தன. பிறகு குமண னையும் கண்டார். அம்மன்னன் புலவரை வாருங்கள் என்று கூறும்போதே அச்சொல்லில் அன்பு கலந் திருந்தது. அவன் அகமும் முகமும் மலர்ந் திருந்தன. புலவர் அங்கே முதல் முறையாக வந்தாரேனும் அவன் காட்டிய அன்பு பலகால மாகப் பழகியவர் காட்டும் அன்பு போல இருந் தது. குமணன் அவரைப் போற்றி உபசரித் தான். நாவுக்கு இனிய உணவை அளித்தான். காதுக்கு இனிய அன்புரை பேசினான். மனத்துக்கு இனிய வகையில் புலவருடைய புலமைத் திறத்தை உணர்ந்து பாராட்டினான். பலகாலமாக யாரிடமும் சொல்லாமல் ஒதுங்கி ஒதுங்கி வாழ்ந்த புலவருக்கு இப்படி ஒரு வள்ளல் கிடைக்கவே, அவர் சொர்க்க பூமிக்கே வந்துவிட்டவரைப் போல ஆனார். அவருடைய பாடல்களைக் கேட்டுக் கேட்டு மகிழ்ந்தான் குமணன். "இவ்வளவு காலமாக உங்களை உணராமல் இருந்தது பெரிய பிழை" என்றான் அரசன். "இத்தனை காலம் இவ்விடத்தை அணுகா திருந்ததற்கு என் பண்டைத் தீவினையே கார ணம்" என்றார் புலவர். "இப்பொழுதேனும் தங்களைக் கண்டு பழ கும் வாய்ப்புக் கிடைத்ததற்கு மகிழ்ச்சி அடை கிறேன்" என்றான் அரசன். "என் வாழ்நாள் முழவதுமே நல்ல வள்ள லைக் காணாமல் கழியுமோ என்று அஞ்சியிருந்த எனக்கு இந்த இடத்தை மிதித்தவுடன் இவ் வளவு காலமும் வாழ்ந்திருந்ததற்குப் பயன் கிடைத்து விட்டதென்ற ஆறுதல் உண்டா யிற்று" என்றார் பெருஞ்சித்திரனார். "இறைவன் திருவருள் எப்பொழுது கூட்டி வைக்கிறதோ, அப்பொழுதுதானே எதுவும் நிறைவேறும்? தங்களுடைய பழக்கத்தைப் பெற்றதனால் நான் பெரும்பேறுடையவ னானேன். இந்த நட்பு என்றும் வாடாமல் மேலும் மேலும் உரம் பெறும் வண்ணம் நான் நடந்துகொள்ள அவனருள் கூட்டுவிக்கும் என்றே நம்புகிறேன்" என்றான் குமணவள்ளல். அவனுடைய பேச்சிலே அடக்கமும் அன் பும் ததும்புவதை உணர்ந்த பெருஞ்சித்திரானார் இன்பக் கடலில் நீந்தினார். பொழுது போவதே தெரியாமல் புரவலனும் புலவரும் அளவளா வினர். சில நாட்டள் குமணனுடைய அரண் மனையில் அரச போகம் பெற்றுத் தங்கினார் புலவர். பிறகு தம் மனைவி முதலியோருடைய நினைவு வரவே, மெல்ல விடைபெற்றுக்கொண்டு புறப்பட எண்ணினார். அவரை அனுப்புவதற்குக் குமணன் விரும்பவில்லை. இன்னும் பல நாட்கள் புலவரைத் தன்னுடன் இருக்கச் செய்ய விரும்பினான். ஆயினும் புலவருடைய மனைவி குழந்தையை ஈனும் பருவத்தில் இருக்கிறாள் என்பதைக் கேட்டு விடை கொடுத்தனுப்பினான். பல மாதங் களுக்கு ஆகும் வண்ணம் உணவுப் பண்டங் களையும் ஆடை அணிகளையும் பொன்னையும் வழங்கினான். அவற்றைச் சுமந்து சென்று புலவருடைய வீட்டிலே சேர்க்கும்படி ஆட்களை யும் வண்டிகளையும் அனுப்பினான். "உங்களை நான் தெரிந்து கொள்ளாமல் இருந்தது தவறு என்று உங்களைக் கண்ட அன்று நினைத்தேன். இன்றோ, நான் உங்க ளோடு பழக நேர்ந்தது தவறு என்று நினைக் கிறேன். உங்களோடு பழகியதனால் உங்கள் புலமையை உணர்ந்தேன். உங்களோடு சில நாள் சேர்ந்து வாழும் பேறு பெற்றேன். எப்போதும் நீங்கள் என்னுடனே தங்கியிருப் பீர்கள் என்ற எண்ணம் என்னை அறியாமலே என்னுள்ளே ஒளித்திருந்தது. இப்போது அந்த எண்ணம் தவறு என்று தெரிகிறது. நீங்கள் எத்தனையோ செல்வர்களைப் பார்ப்பீர் கள். முடியுடை மன்னர்கள் உங்களை வர வேற்று உபசரிக்கக் காத்திருக்கிறார்கள். ஆகவே என்னைப் பிரிவதனால் உங்களுக்குத் துன்பமோ, குறைவோ யாதும் இல்லை. எனக் குத்தான் உங்களைப் பிரிவது மிக்க துன்பத்தை விளைவிக்கிறது. உங்களைத் தெரிந்து கொள்ளா மலே யிருந்திருந்தால் இந்தத் துன்பம் உண்டாக நியாயம் இல்லை அல்லவா? எப்படியானாலும் நீங்கள் போகத்தான் வேண்டும். உங்களைத் தடை செய்ய நான் யார்? ஆனால் ஒன்று விண் ணப்பம் செய்து கொள்கிறேன். உங்கள் திருவுள்ளத்தில் எனக்கும் ஓரிடம் கொடுக்க வேண்டும். அடிக்கடி இங்கே வந்து சில நாட் கள் தங்கிச் சென்றால் எனக்கு எவ்வளவோ இன்பம் உண்டாகும்" என்று குமணன் கூறி விடை யளித்தபோது புலவர் உள்ளம் உரு கியது. "வருகிறேன்" என்று சொல்லிவிட்டு வந்தார். அவர் செல்வதற்கு முன் அவர் பெற்ற பரிசிற் பொருள்கள் அவர் வீட்டுக்குச் சென்றன. * குமணன் அனுப்பிய பொருள்களை யெல் லாம் வீடு நிரம்ப வாங்கி வைத்துக் கொண்டார் புலவர். அவருடைய மனைவி அவற்றைப் பார்த் தாள். வியப்பில் மூழ்கினாள். வாய் திறந்து பேச முடியவில்லை அவளுக்கு. உணர்ச்சியினால் ஊமையானாள். புலவர் ஆனந்தத்தால் துள்ளிக் குதித்தார். அவருக்குத் தம் மனைவி மிக்க அல்லற்பட்டுக் குடித்தனத்தை நடத்தி வந்தது தெரியும். உறவினர்களும், பழக்கமானவர்களும், விருந் தினர்களும் வீட்டுக்கு வருவதை அவர் அறி வார். பலரிடமிருந்து பண்டங்களை அவள் அவ்வப்போது கடனாக வாங்கி, வந்தவர்களை உபசரித்து அனுப்பியதும் அவருக்குத் தெரி யும். அப்போதெல்லாம் அவர் மனத்துக்குள் பட்ட வேதனை அவருக்குத்தான் தெரியும். இப் போது எல்லாத் துன்பங்களும் தீர்ந்தன. வறுமைப் பேய் கால்வாங்கி ஓடிவிட்டது. தம் மனைவியை அழைத்தார். அவளிடம் மிக்க ஊக்கத்துடன் சொல்லத் தொடங்கினார். "இதோ பார். இவைகள் யாவும் குமண வள்ளல் தந்தவை. பழம் தொங்கும் முதிர மலைக்குத் தலைவனாகிய அவன் நல்கிய வளத்தால் நம்முடைய வறுமை இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிந்துகொண்டது. இத்தனை செல்வம் இருக்கும்போது நமக்கு என்ன குறை? எல் லோருக்கும் மனம் கொண்ட மட்டம் வாரி வழங்குவதில்தான் உயர்ந்த இன்பம் இருக் கிறது. நான் அந்த இன்பத்தை இனிச் சுவைக்கப் போகிறேன். நீயும் இரண்டு கை யாலும் கொடு. உன்னை விரும்பி வந்து உன் னிடம் அன்பு காட்டி இங்கே தங்குகின்ற மகளிர் சிலர் உண்டே; அவர்களுக்கு வேண்டிய தைக் கொடு. நீயாக விரும்பிச் சென்று அன்பு பாராட்டும் மகளிர் இருப்பார்கள்; அவர்களுக் கும் நிறைய வழங்கு. உனக்கு உறவினர், அவர்களைச் சார்ந்தார் யாராயிருந்தாலும் கொடு. உன் கற்புத் திறத்தை நான் நன்றாக உணர்ந் திருக்கிறேன். பல வகையில் அது சிறந்து விளங்குவதை அறிவேன். சுற்றத்தாரும் மற்ற வரும் வந்த பொது நீ நம் வறுமையை அவர் களுக்குப் புலப்படுத்தாமல் அவர்களை உபசரித்தாய். அப்பொழுதெல்லாம் பண்டங்களைத் திருப்பிக் கொடுப்பதாக அளந்து வாங்கினாயே, அந்தக் குறி எதிர்ப்பைகளை யெல்லாம் ஒன்று தவறாமல் கொடுத்துவிடு. இன்னாருக்குத் தான் கொடுக்கவேண்ண்டும் என்று யோசிக்க வேண்டாம். மனங்கொண்ட மட்டும் கொடு. என்னைக் கேட்டுக் கொடுக்கவேண்டும் என்று எண்ணாதே. என்னைக் கேட்கவேவேண்டாம். யாருக்காவது கொடுக்கவேண்டுமென்றால் உடனே கொடுத்துவிடு; யோசித்துக்கொண்டு நிற்காதே. 'இவ்வளவு காலமும் வறுமையில் வாழ்ந்தோமே; வந்ததைப் போற்றிப் பாது காத்துச் சாமர்த்தியமாக வாழலாம்' என்று எண்ணாதே. இந்த வளத்தைத் தந்த வள்ளல் இருக்கிறான்; என்ன கேட்டாலும் கொடுப்பான். கேளாமலே வேண்டியதை அறிந்து கொடுப் பான். ஆகையால் எல்லோர்க்கும் கொடு. நானும் கொடுக்கிறேன். நீயும் கொடு. இந்த வீட்டுக்கு நீதானே தலைவி? ஆதலால் நீ தாராள மாகக் கொடு. உன்னைத் தடுப்பவர் யார்?" இவ்வாறு புலவர் சொன்னதைக் கேட்ட அவர் மனைவி என்ன சொல்வாள்! முன்னே சில மகளிர் வருங்காலத்தைப் பற்றிச் சொல்லியவை அவள் நினைவுக்கு வந்தன, அவள் கண்களில் இன்பத்திவலைகள் எழுந்தன. புலவர் தம் கூற்றைப் பாடலாகவும் அமைத்தார். மறு முறை குமணனிடம் சென்ற போது, "இங்கே பெற்ற வளத்தை நான் என்ன செய்தேன் தெரியுமா? எல்லோருக்கும் கொடுத்தேன். என் மனைவியிடமும் சொல்லி எல்லோருக்கும் கொடுக்கச் சொன்னேன்" என்று சொல்லிப் பாட்டைச் சொன்னார். நின்நயந்து உறைநர்க்கும் நீநயந்து உறைநர்க்கும் பல்மாண் கற்பின்நின் கிளைமுத லோர்க்கும் கடும்பின் கடும்பசி தீர யாழநின் நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும் இன்னோர்க்கு என்னாது என்னொடும் சூழாது வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும் எல்லோர்க்கும் கொடுமதி; மனைகிழ வோயே! பழம்தூங்கும் முதிரத்துக் கிழவன் திருந்துவேற் குமணன் நல்கிய வளனே. இந்த வீட்டுக்குத் தலைவியே, பலவகைப் பழங்கள் மரங்களில் பழுத்துத் தொங்கும் முதிர மலைக்கு உரியவனும் செம்மையான வேலையுடையவனுமாகிய குமணன் வழங்கிய இச் செல்வத்தை, நின்னை விரும்பித் தங்கும் பெண்களுக் கும், நீயாக விரும்பி அழைத்து வந்து வைத்துக்கொண்டி ருக்கும் மகளிருக்கும், பலவகையில் மாட்சிமைப் பட்ட கற்பை உடைய உன்சுற்றத்தார் முதலியவர்களுக்கும், நம் சுற்றத்தின் கடும் பசி தீரும்பொருட்டு உனக்கு நெடுங் காலமாகக் கடன் கொடுத்தவர்களுக்கும், இன்னோருக்கு என்று யோசிக்காமல், என்னோடு சொல்லி ஆலோசனை செய்யாமல், இனிச் சாமர்த்தியமாக இவற்றைப் பாதுகாத்து வாழ்வோம் என்றெண்ணாமல், (நான் கொடுக்கிறேன்); நீயும் எல்லோருக்கும் கொடுப்பாயாக. நயந்து - விரும்பி. உறைநர் - தங்குவோர். பன்மாண் - பல மாட்சியையுடைய. கிளை - சுற்றத்தார். கடும்பு - சுற்றம். யாழ: அசை நிலை. குறி எதிர்ப்பை - அளவு குறித்து வாங் கிப் பின் கொடுக்கும் பண்டம்; 'குறி எதிர்ப்பையாவது அளவு குறித்துவாங்கி அவ்வாங்கியவாறே எதிர் கொடுப்பது' என்று பரிமேலழகர் (குறள், 221) எழுதுவார். நல்கியோர் - வழங்கியவர்கள். சூழாது - ஆராயாமல். வல்லாங்கு - சாமர்த் தியமாக. கொடுமதி - கொடு. மனைகிழவோயே - வீட்டுக்குத் தலைவியே. தூங்கும் - தொங்கும். கிழவன் - உரியவன். திருந்து வேல் - இலக்கணங்கள் அமைந்த வேல். வளன் - செல்வம். பன்மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும் என் பதற்கு, 'பல குணங்களும் மாட்சிமைப்பட்ட கற்பினை யுடைய நினது சுற்றத்து மூத்த மகளிர்க்கும்' என உரை எழுதினார் பழைய உரையாசிரியர். 'நீயும் என்ற உம்மை, யானும் கொடுப்பேன்; நீயும் கொடு என எச்ச உம்மை யாய் நின்றது' என்பது அவர் எழுதிய விசேட உரை * இதைக் கேட்ட குமணன் செல்வத்தை இயல்பாகப் படைத்த தன் வண்மையைக் காட் டிலும், புலவருடைய வள்ளன்மை சிறந்தது என்று உணர்ந்து, வியந்து பாராட்டுவதுதானே இயல்பு? இது பாடாண் திணையில் பரிசில் என்னும் துறை. புலவர் தாம் பெற்ற பரிசிலைப் பற்றிச் சொல்வதனால் இத் துறையாயிற்று. இது புறநானூற்றில் 163-ஆவது பாட்டு.   பிழைதிருத்தம் பக்கம் வரி பிழை திருத்தம் 24 10 பேரறங்களை போரறங்களை 48 கடைசி இரண்டு வரிகளை நீக்கிவிடுக. 60 11 பருவத் பருவத்தை ----------------------   This file was last updated on 10 April 2010. Feel free to send corrections to the webmaster.