[] 1. Cover 2. Table of contents அருந்ததியர்கள் ஆதித்தமிழர்களே அருந்ததியர்கள் ஆதித்தமிழர்களே   கருவூர் இரா.பழனிச்சாமி   r.palaniswamy1@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - கருவூர் இரா.பழனிச்சாமி - r.palaniswamy1@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/arunthathiyargal_aathi_thamilargalae மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation அருந்ததியர்கள் ஆதித்தமிழர்களே கருவூர் இரா. பழனிச்சாமி அறநெறி மன்றம் பத்லாபூர் கிழக்கு, தானே மாவட்டம் ** மகாராஷ்டிரா - 421 503.** நூல் : அருந்ததியர்கள் ஆதி தமிழர்களே! ஆசிரியர் : கருவூர் இரா. பழனிச்சாமி உரிமை : ஆசிரியர்க்கு தொடர்புக்கு : Flat No. A-02, Gr. Floor Sai Darshan Aparts, Opp.Vatsalya Hospital Katrap Road, BADLAPUR EAST Maharashtra-421 503. Email : r.palaniswamy1@gmail.com Mobile : 9869411373 முதல் பதிப்பு : திருவள்ளுவராண்டு 2053, மே 2022 வெளியீடு (முகவரி) : அறநெறி மன்றம் பத்லாபூர் கிழக்கு, தானே மாவட்டம் மகாராஷ்டிரா - 421 503. கணினி தட்டச்சு : தேன்மொழி கணினியகம், அச்சிட்டோர் பத்லாபூர் கிழக்கு - 421 503. அன்பளிப்பு : ரூ. 100 எந்நாளும் என் நெஞ்சம் நிறைந்து நல்லருள் புரியும் அம்மா அப்பாவிற்கு இந்நூலை சமர்பிக்கிறேன். […] […] […] […] […] […] நூல் ஆசிரியர் பற்றி [கருவூர் இரா. பழனிச்சாமி] இராமசாமி பெருமாள் - முத்தம்மாள் தம்பதிகளுக்கு மகனாக கரூர் மாவட்டம், பஞ்சமாதேவி காளிபாளையம் (பூந்தோட்டம்) கிராமத்தில் (16.01.1950) பிறந்தவர். ஆரம்பக் கல்வி மும்பையிலும், பின் கல்லூரிப் படிப்பு கரூர் அரசு கலைக் கல்லூரியிலும் படித்தவர். இந்தியாவின் முதல் மீன்வள நிகர் நிலைப் பல்கலைக் கழகம் (Central Institute of Fisheries Education, Deemed University - ICAR, MUMBAI) மும்பையில் தொழில் நுட்ப அதிகாரியாகப் (TECHNICAL OFFICER) பணியாற்றி ஓய்வு பெற்றவர் இலக்கிய ஆர்வம் மிகுந்த இவர் மதுரை பாண்டியன் கவிதைப் பயிற்சிக் கல்லூரியில் 1988 ஆம் ஆண்டு அஞ்சல் வழியில் கவிஞருக்கான “கவிதைப் பயிற்சி நிறைவுச் சான்றிதழ்” மேலும் சோதிடக் கலை பற்றி அறிய விரும்பி (Kadalangudi Astrological Research Centre) அஞ்சல் வழிக் கல்வியில் 1991 ஆம் ஆண்டு Diploma in Hindu Astrology (D.H.A) சோதிடக் கலைச் சான்றிதழும் பெற்றவர். மும்பை மாநகர் தி.மு.க. பொறுப்பாளராக 18.04.2016 முதல் கழகப் பணியாற்றி வருகிறார். மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் செயலாளராகவும்,(2004-2009), 2009 முதல் ஆலோசகராகவும், ஒர்லி, உத்யோக் நகர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் அறங்காவர் பொறுப்பில் (1988-2009) தொடர்ந்து 22ஆண்டுகளாக இருந்த இவர் மும்பையில் பல்வேறு அமைப்புகளில் முக்கிய பொறுப்பு வகித்து வந்துள்ளார். 2017 முதல் பத்லாபூர் தமிழர் நலச் சங்கத் தலைவராகவும் உள்ளார். அருந்ததியர் இன விழிப்புணர்ச்சி மற்றும் சமுதாய மறுமலர்ச்சிப் பணிகளிலும் மிகுந்த அக்கறை காட்டி வருகிறார். சீர்திருத்த சிந்தனைக் கட்டுரைகள் எழுதி வரும் இவர் இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் பாராட்டும் மற்றும் பல சீரிய எழுத்தாளர்கள், வாசகர்கள் பாராட்டும் பெற்ற “மனித நேயம் மலரட்டும்” என்ற நூல் கருவூர் இரா. பழனிச்சாமி - ஞான. அய்யாப் பிள்ளை ஆகியோர் இணைந்து எழுதி வெளியிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி இவரது சிந்தனைத் துளிகளில் பல்வேறு நாளிதழில்களில் வெளிவந்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூலான “வாழ்வுரிமை விழிப்புணர்வு” கட்டுரை நூலை வெளியிட்டுள்ளார். இரண்டு நூல்களும் மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம் வெளியிட்டுள்ளது சிறப்புக்குரியது. திருக்குறள் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழி பெயர்ப்பும், ஒலி பெயர்ப்பும் அமைந்த மும்மொழி தொகுப்பு நூல் ஒன்று தமிழ்க் காஞ்சனை பதிப்பகம் (மும்பை), மும்பை இலக்கிய கூடம் சார்பில் 15.01.2021 அன்று பாண்டுப் திருவள்ளுவர் மன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மீன்வளக் கல்வி நிறுவனம், மீன்வள மேலாண்மை பிரிவின் முதன்மை (Central Institute of Fisheries Education-ICAR, Fisheries Resource Management Section) விஞ்ஞானிகளுடன் இணைந்து எழுதிய 3 செய்முறைப் பாட நூல்களும், முதன்மை விஞ்ஞானிகள், ஆராய்ச்சி மாணவர்களுடன் இணைந்து 22 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 6.07.2003 அன்று பம்பாய் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற கலை இலக்கிய பெருவிழாவில் “இலக்கியச் சிகரம் கருவூர் இரா.பழனிச்சாமி” என பாராட்டிதழ் வழங்கப்பட்டது. முனைவர் ஆ.கோ. குலோத்துங்கன் டி.லிட். ஆசிரியராகக் கொண்ட சமூகம், கலை இலக்கியம் பல்சுவைத் திங்களிதழ் “கண்ணியம்” மார்ச் 2008 இதழில் கண்ணிய பெருமக்கள் வரிசையில் “மும்பை முத்தமிழ் முத்து” என சிறப்பித்து பாராட்டப்பட்டது. 6.10.2018 அன்று மாட்டுங்கா மைசூர் அசோசியேஷன் குளிர் அரங்கில் நடைபெற்ற வணக்கம் மும்பை ஆறாவது ஆண்டு விழாவில் “மும்பைத் தமிழர் விருது - 2018” விருதினை வணக்கம் மும்பை முதன்மை ஆசிரியர் பி.எம்.ஜெயா ஆசிர் அவர்கள் வழங்கி பெருமைபடுத்தினார். அணிந்துரை [“இலக்கிய மாமணி” எழில் இளங்கோவன்] அருந்ததியர் வரலாற்று ஆய்வாளர் அருந்ததியர்களின் வரலாறும், பண்பாடும் தமிழ் இனத்தின் மரபோடு கலந்தவை. அதனால் அருந்ததியர்கள் தமிழர்கள்; குறிப்பாக ஆதித்தமிழர்கள் என்ற முனைப்போடு, “அருந்ததியர்கள் ஆதித்தமிழர்களே !” என்ற இந்த நூலை எழுதியிருக்கிறார் நண்பர் கருவூர் இரா. பழனிச்சாமி அவர்கள். இந்நூலின் முகவுரையில், “அருந்ததியர்கள் தமிழர்கள் என்று அடையாளப் பட்டு விட்டால் தங்கள் உரிமைக்கும், வாழ்வியலுக்கும் பிரச்சனை வந்து விடும் என்று நினைக்கும் பார்ப்பன இந்து சக்திகளுக்குத் துணை போகும் வலதுசாரித் தமிழ்த் தேசியவாதிகளும், பார்ப்பனிய மேலாதிக்கத்தைக் கடைப்பிடிக்கும் தலித்துகளும் திட்டமிட்டு அருந்ததியர்களின் வரலாறை மறைத்தும், திரித்தும் வருகிறார்கள்” என்று குறிப்பிடுகிறார்.  அந்த ஆதங்கத்தின் விழைவாக இந்நூலை ஓர் ஆய்வு நூலாக முன்னெடுத்துள்ளார், அவர். ஆய்வு செய்வதோ, ஆய்வு நூல் எழுதுவதோ அவ்வளவு எளிதான பணியில்லை. நிறைய படிக்க வேண்டும். சான்றுகளைத் தேட வேண்டும். கல்வெட்டு, மெய்கீர்த்தி, செப்பேடு, ஓலைச்சுவடி போன்றவைகளை ஆராய வேண்டும். ஆவணக் காப்பகங்கள், நூலகங்கள் எனத் தேடிச் சென்று சான்றுகளைத் திரட்ட வேண்டும். கிடைத்த சான்றுகளை ஒப்பு நோக்கிச் சரிபார்க்க வேண்டும். இவைகளை எல்லாம் இறுதி செய்த பின்னர் அவைகளை ஒழுங்கு படுத்தி எழுத்தில் கொண்டு வந்து நூலாகச் செய்வது என்பது மிகப்பெரும் ஆற்றல் வாய்ந்த பணியாகும். ஓலைச்சுவடிகளை ஆய்வு செய்யும்போது சற்று கவனமாக இருக்க வேண்டும். ஓலைச் சுவடிகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று வரலாறு சொல்பவை, மற்றொன்று கதைப் பாட்டிலக்கியம். வரலாறு சொல்லும் சுவடிகள் ஆய்வுக்குப் பெரிதும் பயன்படக்கூடியவை. எடுத்துக் காட்டாக “இடங்கை வலங்கை சாதி வரலாறு ; ஓலைச்சுவடி எண் : டி 2751” கதைப் பாட்டிலக்கியம் என்பது முழுமையான நம்பிக்கைக்கு உரியதாக எடுத்துக் கொள்ள முடியாது என்றாலும், அதைப் புறம் ஒதுக்கவும் கூடாது. முத்துப் பட்டன் கதை என்ற அருந்ததியர் கதைப் பாட்டிலயக்கியத்தை முத்துப் புலவர் பார்ப்பனிய ஆதிக்கச் சாதியத்திற்காக திருத்தியும், மாற்றியும் வில்லுப் பாட்டு வழியாகக் கதை சொன்னதாக பேராசிரியர் நா.வானமாமலையிடம் நேரில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதை அப்படியே முத்துப்பட்டன் கதை நூலில் பதிவு செய்திருக்கிறார் பேராசிரியர் நா.வானமாமலை. அப்படிப்பட்டக் கதைப் பாட்டிலக்கியங்கள் வரிசையில் மதுரை வீரன் அம்மானை போன்றவையும், நொண்டி (ஒண்டி) வீரன் சிந்து போன்றவையும் வருகின்றன என்பதை மறந்து விடக் கூடாது. இந்நூல் ஒரு நல்ல முயற்சி, வரவேற்க வேண்டிய நூல் என்பதோடு சில முரண்பாடுகளும் இதனுள் இருக்கின்றன. சங்க இலக்கியத்துள் பத்துப்பாட்டில் ஒருபாட்டு திருமுருகாற்றுப் படை. இதை இயற்றியவர் புலவர் நக்கீரர். இதில் வரும் பாட்டுடையத் தலைவனான முருகனுக்கு ஒரே மனைவி, அவள் பெயர் வள்ளி. ஆனால் பின்வந்த காலங்களில் தெய்வானை என்ற ஒரு பெண்ணை முருகனுக்கு மனைவியாக்கிவிட்டது பார்ப்பனியம். உண்மையில் தெய்வானை என்பவள் வலிந்து சேர்க்கப்பட்ட ஒரு கற்பனைப் பெண், கற்பனைப் படைப்பு. அது போலத்தான் மதுரை வீரனின் மனைவி தமிழச்சி வெள்ளையம்மாள் இருக்கக் கற்பனைப் படைப்பான ‘பொம்மி’ என்பவளைச் சிரம் மேல் வைத்து மதுரைவீரனின் மனைவி என்று பேசுகிறார்கள். தமிழ்ப் பெண்ணான வெள்ளையம்மாள் தூற்றப்படுகிறாள், புறக்கணிக்கப்படுகிறாள்.  சரி! பொம்மி பொம்மபாளையத்தின் இளவரசி, அவளின் அப்பா பெயர் பொம்மண்ண மகாராசா, அம்மா பெயர் என்ன? அவருடைய அமைச்சர் பெயர் என்ன? படைத் தலைவரின் பெயர் என்ன? அந்த நாட்டைப் பற்றிய வரலாறு அல்லது செய்தியாவது உண்டா என்றால் இவைகளுக்குப் பதிலும் இல்லை, யாரும் சொல்லவும் இல்லை. ஆனால் மதுரை வீரன் என்றதும் பொம்மி மட்டும் தான் பேசப்படுகிறாள் என்பது வியப்பாக இருக்கிறது. இதன் மூலம் மதுரை வீரனைத் தெலுங்கு அடையாளத்தில் கொண்டு வந்து நிறுத்தும் முயற்சியாக இதைக் கருத வேண்டியிருக்கிறது. மதுரை வீரனின் மனைவி பொம்மி என்றால் இவர்களின் வழி வந்த அருந்ததியர்கள் தெலுங்கர் அடையாளத்தைப் பெற்று விட மாட்டார்களா? இவைகளை எல்லாம் கருத்தில் கொண்டு பொம்மி என்ற கற்பனையான பெண் வடிவத்தை மதுரைவீரனிடம் இருந்து நீக்க வேண்டியது அவசியம். காரணம் அருந்ததியர்கள் தமிழர்கள் என்பதால். அடுத்து மாவீரன் ஒண்டிவீரன் குறித்துப் பேசும் போது அவன் குதிரைகட்டும் இடத்தில் ஒளிந்ததாகவும், அவர் உள்ளங்கையில் முழை அடித்ததாகவும் அதனால் தன் கையால் தன் கையை வெட்டிக் கொண்டதால் அவ்வீரன் ஒண்டிவீரன் என்று அழைக்கப்பட்டதாகவும் கதைப் பாட்டிலக்கிய ஓலைச் சுவடிகள் சொல்வதை இன்றும் பேசிக் கொண்டு இருப்பதை இந்நூலாசிரியர் மிகச் சரியாக மறுத்திருக்கிறார். ஒண்டிவீரன், பூலித்தேவனுடனும் இணைந்தும், தனித்தும் நடத்திய போர்களைப் பற்றிச் சுவைபட எழுதியிருக்கிறார் ஆசிரியர். இவை ஒருபுறம் இருக்க, ஒண்டிவீரன் மரணம் எப்படி, எங்கே, யாரால் நிகழ்ந்தது?  கட்டபொம்மன், ஊமைத்துரை, பெரிய மருது, சின்ன மருது போன்ற வீரர்கள் ஆங்கிலேயரால் தூக்கில் இடப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் குடும்பத்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இப்படி இருக்கும் போது ஒண்டிவீரன் மரணம் தூக்கிலா அல்லது சுடப்பட்டா அல்லது வேறு விதமா என்பது இங்கு கேள்விக்கு உரிய செய்தியாகிறது. ஒண்டிவீரனின் மரணத்துடன் பிரிட்டீஷ் உலகில் மிகப் புகழ் பெற்ற இரண்டு ஆங்கிலேய அதிகாரிகளுக்கும், சென்னை, நெல்லையின் இரண்டு அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்ற செய்தியை புறக்கணிக்க முடியாது. இப்பொழுது கேள்வி என்னவென்றால் அந்த நான்கு அதிகாரிகள் யார் யார்? அவர்கள் மூலம் ஒண்டிவீரன் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது பற்றியெல்லாம் அருந்ததியர்களும், வரலாற்று உலகமும் இதுவரை பேசாமல் இருப்பதும் வியப்பாகத் தான் இருக்கிறது. இவை போன்ற வெளியிடப்படாத வரலாறுகள் வெளிவர வேண்டும் என்ற உணர்வை கருவூர் இரா. பழனிச்சாமி இந்நூலின் மூலம் மேலெடுப்பது பாராட்டுக்கு உரியதாகும். இந்நூல் ஆய்வு நூல் என்பதால் ஆர்வ மேலீட்டால் உலகின் தோற்றம், உயிர்களின் தோற்றம், மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி, தமிழ் திராவிடம் போன்றவைகள் பற்றியும் ஆழ்ந்த செய்திகளுடன் இந்நூலில் எழுதியிருக்கிறார். நண்பர் கருவூர் இரா. பழனிச்சாமியின் வரலாறு குறித்தத் தேடலும், ஆய்வும், அதனால் உருவான “அருந்ததியர்கள் ஆதித்தமிழர்களே” என்ற இந்நூலில் காணும் அவரின் உழைப்பும் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் உரியது.         எழில். இளங்கோவன் மதிப்புரை [அலிசேக் மீரான்] செயலாளர் மும்பைப் புறநகர் மாநிலத் திராவிட முன்னேற்றக் கழகம் மகாராட்டிரா. நண்பர் கருவூர் இரா.பழனிச்சாமி அவர்கள் எனக்கு சுமார் 40 ஆண்டுகளாக அறிமுகம். இருவரும் ஒரே இயக்கத்தில் பணியாற்றுகின்ற காரணத்தினால் நண்பர்களாக விளங்குகின்றோம். அதுவும் சிறந்த நண்பர்களாக விளங்குகின்றோம். அவர் தொடக்க காலத்தில் மும்பை ஒர்லி என்ற பகுதியில் வசித்த போது அங்கே ஒரு படிப்பகத்தைத் தொடங்கி அங்கேயுள்ள இளைஞர்களுக்கு புத்தகங்களைப் படிக்கக் கூடிய நல்ல வாய்ப்பினை உருவாக்கித் தந்தவர். தான் பிறந்த அருந்ததியர் சமூக மக்கள் மும்பையில் ஏராளமாக வசிக்கிறார்கள். அவர்களுக்காக, அவர்களின் முன்னேற்றத்திற்காக, நலனுக்காக ஏராளமான நல்ல காரியங்களை செய்திருக்கின்றார் என்பதை நான் அறிவேன். அவர் மிகச் சிறந்த எழுத்தாளர் என்பதை அனைவரும் அறிவோம், மிகச்சிறந்த பேச்சாளரும் கூட, சிறந்த வாதத்திறமை மிக்கவர். மீன்வளத்துறையில் பணியாற்றுகின்ற நேரம் போக எஞ்சிய நேரத்தில் பொதுப்பணிக்காக தனது நேரத்தை செலவிட்டவர். அப்படிப்பட்டவர் இன்றைக்கு இந்த சிறந்த நூலை நமக்குத் தந்திருக்கிறார். தான் சார்ந்த அருந்ததியர் சமுதாயம் ஆதித் தமிழர்களே என்று ஆணித்தரமாக சொல்லக் கூடிய வாதங்களை எடுத்து இயம்பியிருக்கின்றார் இந்த நூலிலே. மனித வாழ்வு அன்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பிண்ணப்பட்டிருக்கிறது. அந்த அன்பு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் மகிழ்வும் அமைதியும் நிலை கொண்டிருக்கும். அப்பேற்பட்ட அன்பு சிதைக்கப்பட்டிருக்கும் இடத்தில் எல்லாம் வேற்றுமையும் பிணக்குகளும் குடி கொண்டிருக்கும். இது போன்ற நிலை தான் மனங்களுக்குள் குழப்பத்தை உண்டு பண்ணி ஒற்றுமைக்குள் விரிசல்களையும் பிளவுகளையும் ஏற்படுத்துகிறது. மனங்களைப் பிரிக்கிறது; மனிதத்தை சிதைக்கிறது; இனமென்றும் மதமென்றும் சாதியென்றும் துண்டு துண்டாக உடைபட்டு நிற்கிறது. இந்த நிலைமை இன்றல்ல நேற்றல்ல பல நூற்றாண்டுகளாகவே தொடர்ந்து வருவதனால் மனிதன், தான் செய்யும் தொழிலின் பெயரில் அடையாளப் படுத்தப்பட்ட நிலையானது இன்று சாதிகளாக அடையாளப் படுத்தப்பட்டுக் கிடக்கின்றான். பல நூற்றாண்டுகளைக் கடந்து தமிழினம் அரசியல், இலக்கியம், சமூகவியல், அறிவியல், மெய்யியல் எனப் பல்வேறு வழிகளில் வளர்ச்சி அடைந்திருந்தாலும் சாதிகளாகப் பிரிந்திருக்கும் இழிநிலை இன்றும் தொடர்ந்திருக்கிறது என்பதனை சொல்லிக் கொள்ள வெட்கப்படுகிறேன். மனிதத்தைப் பிரித்து பல்வேறு கூறுகளாக பிரித்தெடுத்துள்ள சமூக முறைகளைக் களைகின்ற நோக்கில் தான் கடந்த நூற்றாண்டில் அயோத்திதாசரின் தொடர்பணியாக திராவிட இயக்கமெனும் சமூக நீதிக்கான கருவூலம் தந்தைப் பெரியாரால் கட்டமைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பேரறிஞர் அண்ணா அவர்களின் வழிகாட்டுதலில் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகமும் அவர்களுடைய சிந்தனைகளுக்கு உரமூட்டிய தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களும் மனிதர்களுக்குள் சமத்துவத்தை உண்டு பண்ணத் துடித்தார்கள் என்பதெல்லாம் சொல்லித் தெரியவேண்டியவையல்ல. இன்றும் அதே வழியில் பயணித்து மனிதம் ஒன்றே எங்கள் தீர்வென வாழ்ந்து கொண்டு ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தும் இந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சி என்று பறைசாற்றிக் கொண்டிருக்கின்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அயராது உழைத்துக் கொண்டிருப்பதற்கு அடிநாதமே சமூக நீதி தான். எனவே தான் சமூக நீதிக்கு வலுச் சேர்க்கும் இயக்கத்தைச் சார்ந்தவராக இருப்பதனாலேயே இயல்பாகவே பொதுமைச் சிந்தனையும் தமது இயக்கத் தலைவர்களின் எழுத்தும் பேச்சும் ஏற்படுத்திய தாக்கமும் நண்பர் கருவூர் பழனிச்சாமியை மராத்திய மாநிலத்தில் வாழ்ந்து வந்தாலும் மும்பை திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறுப்பாளராகவும் ஆக்கியிருக்கிறது. அப்பேற்பட்டவரால் எழுதப்பட்டதுதான் “அருந்ததியர்கள் ஆதித்தமிழர்களே!” என்ற இந்த நூலை எழுதத் தூண்டியுள்ளது என்பதை நம்மால் உணர முடிகின்றது. பூமிப்பந்தின் அமைப்பு, உயிரிகளின் தோற்றம், ஓரறிவு, ஈரறிவு, மூன்றறிவு, நான்கறிவு, ஐந்தறிவு, ஆறறிவு சார்ந்த நுண்ணுயிரிகள், புழுப் பூச்சிகள், விலங்குகள், மனிதயினம் என்று வரிசைப்படுத்தி உலக மனிதர்களின் தொடக்கம், வாழ்க்கை முறை தமிழினத்தின் எழுச்சி, ஆஸ்திரேலியா வரை விரிந்து கிடந்த நிலப்பரப்பு, தொலைந்துபோன லெமூரியாக் கண்டம் அதைத் தொடர்ந்து எஞ்சியுள்ள நிலப்பரப்பு என அலசி ஆராய்ந்து பல்வேறு சான்றுகளை ஆதாரப்பூர்வமாக எடுத்து வைத்து இந்த நூலைத் தொகுத்துள்ள நூலாசிரியர், இப்படிப்பட்ட வகையில் வந்த மனிதயினம் எந்த அடிப்படையில் ஒருவனைத் தாழ்ந்தவனாகவும் தன்னை உயர்ந்தவனாகவும் ஆக்கிக் கொண்டுள்ளது என்று கேள்விக் கணைகளை சாட்டைகளாக முடுக்கி விட்டுள்ளார் என்பதனை வாசகர்கள் உணர்ந்து படித்தார்கள் என்றால் ஆசிரியரின் கருத்துடன் கண்டிப்பாக உடன்படவே செய்வார்கள். அந்த அளவிற்கு, எந்தச் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எப்பேர்ப்பட்ட மனிதர்களாக இருந்தாலும் மனிதத்தை மட்டும் தூக்கிப் பிடிக்க வேண்டும் என்ற புரிதலுக்குள் வருவதற்கு தாமதிக்க மாட்டார்கள். அப்படியிருக்க அருந்ததியர் இன மக்களைத் தமிழர் அல்லாதவர்கள் என்றும் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் என்றும் பிரித்துப் பார்ப்பதோடு மிகவும் தாழ்ந்த சமூகத்தினராகவும் பிற சமூகத்தினர் பார்ப்பது என்பது நேர்மையற்ற அணுகுமுறை என்று கடிந்துள்ளார். அருந்ததியினர் என்பதனை அருமை + தமிழர் என்று பிரித்து அருந்தமிழர் என்ற சொல் தான் அருந்ததியினர் என்று மருவியுள்ளது என்றும் அப்பேற்பட்ட சிறப்பிற்குரிய குடிமக்களை தமிழரல்லாதவர் என்றும் கீழ்மக்களாகவும் கருதி வருவது ஏற்றுக் கொள்ளத் தக்கது மட்டுமல்ல கண்டிக்கத் தக்கதுவும் கூட என்று பல்வேறு சான்றாதாரங்களோடு விளக்கியிருக்கும் முறை பெரிதும் பாராட்டத்தக்கது, போற்றத்தக்கது. அதியமான் - ஔவையின் சிறப்பையும் அவர்களுக்கு இடையிலான நட்பையும் போற்றிக் கூறுகின்ற தருவாயில் அதியமானின் போர் வலிமையையும் அவனது ஆயுதக்கிடங்கில் கூர் மழுங்கிக் கிடப்பவையெல்லாம் பல்வேறு போர்களில் அவன் கண்ட வெற்றியினால் ஏற்பட்ட அடையாளங்களே! எனப் பாராட்டிப் புகழந்துரைத்த ஔவைப் பிராட்டி- நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என்று கருதி தனக்குக் கிடைத்த நெல்லிக்கனியை ஔவை உண்டு நீண்ட ஆயுளைப் பெறட்டும் என்றெண்ணிய பாங்கையெல்லாம் சுட்டிக் காட்டிய நூலாசிரியர் என்ன சொல்ல வருகிறார் என்றால் ‘தகடூர்’ என்ற அதியமானின் நாடுதான் இந்தக் காலத்தில் ‘கிருஷ்ணகிரி’ என்று அழைக்கப்படும் இடமென்றும் அங்கே வாழ்ந்த மக்களான அருந்தமிழர்கள் பிழைப்பிற்காக அருகிலிருக்கும் ஆந்திர நிலப்பரப்பில் சென்று குடியேறியவர்கள் போக்குவரத்து வசதிக்குறைவால் மீண்டும் தமது இருப்பிடம் வந்து சேர இயலாததால் அங்கேயே தங்கிவிட்டார்கள் என்றும், தமிழகம் திரும்பியவர்கள் முறையாகத் தெலுங்கில் சரிவரப் பேசத் தெரியாதவர்கள் என்றும் தமிழில் மிகச்சரியாக தொன்மையான பல சொற்களின் பயன்பாடுகள் அவர்களது உரையாடலில் தான் மிகுந்து உள்ளது என்றும் கூறுகின்ற நண்பர் பழனிச்சாமி அவர்கள் ஆதலினால் இன்றைய தமிழர்களே அறியாத பலவற்றை அறிந்து வைத்துள்ள சமூகத்தினரை தூக்கிப் பிடிப்பதை தவிர்த்து இழிவு படுத்துதல் எந்த வகையில் நீதிக்குரியது என்று வெகுண்டெழுகின்றார். இப்படிப் பலதரப்பட்ட தரவுகள் இந்த நூலில் பரவிக் கிடக்கின்றன. இரண்டு மூன்று பக்க மதிப்புரையில் அனைத்தையும் எடுத்தியம்புவது எளிதல்ல. 168 பக்கங்களில் பல செய்திகள் ஆதாரப்பூர்வமாக பல்வேறு ஏடுகளில் சமூக சிந்தனையோடு எழுதியுள்ள பல எழுத்தாளர்களின் நூல்களில் இருந்து பலவற்றை தொகுத்து வழங்கியுள்ளார் என்பதனை நாம் அறிய முடிகிறது. இந்த நூல் வெறுமனே பொழுது போக்காகப் படித்து விட்டு மறந்து போவதற்கல்ல. மாறாக, தமிழின் பெருமை கூறும் மக்களை, மதித்துப் போற்றத்தக்க மக்களை, இழிவு படுத்தும் கேட்டினைத் தவிர்க்கவும், அவர்களின் பழமையையும் தொன்மையையும் பின்பற்றவும் வேண்டும் என்பதுதான் வாசகர்கள் அறிந்து தெளியத்தக்கது. மக்கள் மனித நேயத்தோடு வாழ வேண்டும் என்று ஏங்குகின்ற நூலாசிரியர் கருவூர் பழனிச்சாமி அவர்கள் இருபது ஆண்டுகளுக்கு முன்னரே “மனிதநேயம் மலரட்டும்” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதி அதுவே நூலாகத் தொகுக்கப்பட்டு மிகுந்த புகழுடைந்தது என்பதெல்லாம் அறிந்து பாராட்டத்தக்கது. அதே சிந்தனையோடு எழுதப்பட்ட “அருந்ததியர்கள் ஆதித்தமிழர்களே!” என்ற இந்த நூல் உலகெங்கும் வாழும் தமிழர்கள் படித்தறிந்து அருந்ததிய இன மக்களின் சிறப்பின் ஊடாக அருமைத் தமிழின் சிறப்பைப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு இது போன்று மேலும் பல நூல்களைப் படைத்து அன்னைத் தமிழுக்குச் சிறப்புச் சேர்க்கவும், மனிதயினம் பாகுபாடின்றி அன்பு கொண்டிருக்கவும், அன்னைத் தமிழின் உறவுகளை அயலானாக எண்ணுகின்ற போக்கினை உடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும் என்றும் வேண்டி விரும்பிக் கேட்டு நிறைவு செய்கிறேன். நன்றி வணக்கம். அலிசேக் மீரான் பாராட்டுரை [பாவரசு முனைவர் வதிலை பிரதாபன்] தலைவர் மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம்           உலகு மனிதம் சார்ந்தே இயங்குகிறது.  அன்பே அதன் உரமாகும். உறவோ நட்போ எதுவாயினும் அன்பில்லையேல் வீணே!  அப்படி இருக்கும்போது பிறர்நலம் என்பது கேள்விக்குரியே! “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனாரின் கூற்றை உலகெங்கும் பரப்பிக் கொண்டிருக்கும் உள்ளங்களுக்கு நடுவே தம்மவரையே வேற்றுவராகக் கருதும் கேட்டினை தகர்க்கின்ற நற்பண்புகள் நம்மில் சிலருக்குத்தான் உண்டு. அந்த வெகு சிலரில் ஒருவர் தான் இந்த நூலாசிரியர் திரு. கருவூர் பழனிச்சாமி ஆவார். சிறந்த இலக்கிய அறிவும், அரசியல் தெளிவும், பொதுமைச் சிந்தனையும், சமூக நீதிக்கு எதிரான கருத்துகளை போக்கவேண்டும் என்ற தீரமும் கொண்டவராதலால் அனைத்து உயிரிகளின் வரலாறும் உலக மாந்தரின் தோற்றமும் அன்னைத் தமிழ் பேசும் உள்ளங்களின் செம்மையும் எடுத்துரைக்கும் அதே வேளையில் தமிழருக்குள்ளேயே தரம் பிரிக்கும் தரமற்ற உளத்தோருக்கு வரலாற்று சான்றாதாரங்களோடு பலவற்றை தொகுத்து “அருந்ததியர்கள் ஆதித்தமிழர்களே!” என்ற நூலாக வழங்கியுள்ளார். மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் நிர்வாகக் குழுச் செயலாளராக 2004 லிருந்து 2009 வரை இருந்துள்ளார். அதேபோல் 2019 லிருந்து இன்றுவரை ஆலோசகராகவும் இருக்கின்ற நூலாசிரியர் மனிதம் காக்கப்பட வேண்டும் என்று எண்ணும் இத்தகைய படைப்பைத் தந்துள்ளதால் எங்கள் மன்றமும் பேருவகை கொள்கிறது. இந்த நூலினைப் படித்து மிகவும் மகிழ்ந்தேன். உணர்வுப்பூர்வமான நூல்.  அடித்தட்டு மக்களை உயரத்தை நோக்கித் தூக்கி நிறுத்த வேண்டும் என்ற தமது ஆதங்கத்தை வெளிப்படுத்திய பதிவு.  மனிதம் சார்ந்த உண்மைகளை உலகெங்கும் வாழும் மனிதயினம் அறியத்தக்க வகையில் மனிதனின் தோற்றம் மற்றும் வாழ்க்கை முறைமையை அறிவியல் பூர்வமாக சமூக அக்கறையோடு அறியப்படுத்தி விழிப்புணர்வூட்டும் நூல். காலங்கடந்தும் பத்திரப்படுத்தி படித்து அறிந்து மனிதம் போற்றும் இன்றியமையாமையை சொல்லிக் கொண்டிருக்கும் நூல்.  இந்த நூலை பல்வேறு தரவுகளைச் சான்றுகளாகக் கொண்டு உலகை புரியவைக்கும்  நூலாசிரியரின் முயற்சி கண்டிப்பாக போற்றப்படும். அருந்ததியர் மட்டுமல்ல அனைத்துச் சாதிகளைச் சார்ந்தவர்களும் தெரிந்து கொள்ளத்தக்க உண்மைகள் பல இங்கே புதைந்து கிடக்கின் றன.  படிக்கின்றவர்கள் அனைவருமே சிந்திக்கின்ற அளவு அனைத்துப் பக்கங்களும் சிறந்த முறையில் திரைக்கதை போல தொகுக்கப்பட்டு எடுத்துக் கொண்ட பொருளை இடையில் கைவிட்டு விடாமல் சொல்லப்பட வேண்டிய முறையில் சொல்லி உள்ளமை போற்றத்தக்கது. மற்றபடி ஒரே முறையில் படித்து முடிக்கக்கூடிய நூல் அல்ல. தேவையான பொழுதெல்லாம் எடுத்துப் படிக்கத்தக்க வரலாற்று நூல். அருந்ததியர் மக்களின் சிறப்புகளை அதியமான் ஔவையார் நட்பு, தகடூரின் சிறப்பு எனப் பலவகைகளில் சொல்லியமையும் தேவைப்படுகிற இடங்களில் எல்லாம் தொல்காப்பியத்தையும் குறளையும் சுட்டிக்காட்டி நூலுக்கு வலுவூட்டியமையும் பாராட்டத்தக்கது.   இனம் மொழி, வீரம், நாடு உட்பட தமிழ்நெறிப் பண்பாடுகளில் மிகச் சிறந்தவர்களாக வாழ்ந்தவர்கள் அதியர்கள். சிறந்த “அருமைக்குரியவர்களை (பொருந்திய) அதியர்” என்பது மருவி அருந்ததியர் ஆயிற்று. அதேபோல் “மா” என்றால் மிகவும் சிறந்த என்பது தமிழின் வேறு பொருள். “மா அதியர்” என்பது மருவி “மாதியர்” ஆயிற்று. “மாதியர்” என்பது அருந்ததியர்களின் இன்னொரு பெயர். அருந்ததியர், மாதியர் ஆகிய இவ்விரு பெயர்களிலும் அதியர் என்ற குடும்பப்பெயர் இணைந்து வருவது அருந்ததியர், அதியர் குடியினர் என்பதை விளக்க ஒரு நல்ல எடுத்துக் காட்டு ஆகும். இப்படி மருவி வரும் குடும்பப் பெயர்கள் பற்றி வின்சன்ட் ஸ்மித் என்ற பேராசிரியர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் போன்ற பல அறிஞர்கள் தத்தம் ஆய்வு நூல்களில் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கம் கூறி இருப்பதும் இங்கு நினைக்கத்தக்கது" என அருந்ததியர் அதியர் குடியினர் என்பதை சுருக்கமாக விளக்கியுள்ளார் (ஆசிரியர் எழில் இளங்கோவன். ⁽¹⁾ என்பது போன்ற பல சிறப்புகளை இந்த நூலில் ஆசிரியர் தந்துள்ளார் என்பது அறிந்து மகிழத்தக்கது. ஒரு எழுத்தாளர் தம் பிறவிப் பயனை அடைந்தாற் போன்ற படைப்பு இது.  தங்களது பொதுமைச் சிந்தனையும் படைப்பாற்றலும் போற்றப்படட்டும் மென்மேலும் இதுபோன்ற பல நூல்களைப் படைத்து மக்களுக்கு விழிப்புணர்வூட்ட அன்பு வேண்டுகோள் விடுத்து பாராட்டி மகிழ்ந்து நிறைவு செய்கிறேன். வதிலை பிரதாபன் [கவிஞர் வ.ரா. தமிழ்நேசன்] அமைப்பாளர், இலக்கிய அணி, மும்பை புறநகர் மாநில தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், மும்பை இலக்கியக் கூடம். வரலாற்றின் பக்கங்களில் …. காலங்காலமாக மக்களுக்கு கற்பிக்கப்பட்ட, கற்பிக்கப்பட்டு வருகின்ற வரலாறு என்பது ஒரு திசையிலும், உண்மை வரலாறு என்பது அதற்கு நேரெதிர் திசையிலும் இருப்பதை வரலாற்றை நுணுக்கி பார்பவர்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம். மட்டுமின்றி, வரலாறு என்பது காலந்தோறும் வெவ்வேறு வடிவம் பெறுவதையும் காலக் கண்கொண்டு காணவேண்டும். இன்றைக்கு தமிழகத்தில் நடைபெற்று வரும் கீழடி, பொருநை அகழ்வாய்வுகள் தமிழ் பண்பாட்டின் மீது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சி வருகின்றன. அதற்கும் முந்தைய ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆய்வுகளும் தமிழர் நாகரிகத்தை பறைசாட்டுவதை காணமுடியும். ஹரப்பா, மொகஞ்சதோரா நாகரீகம் ஆரிய நாகரீகம் என்று சொன்னவர்கள் தான் இன்றைக்கு கீழடி, பொருநை நாகரீகம் நதிக்கரை நாகரீகமல்ல என்றும், கரிம பகுப்பாய்வில் கூறப்படும் ஆண்டு கணக்குகளை கேள்விக்கு உட்படுத்தியும் வருகின்றனர். வரலாற்று ஆய்வுகளை இரண்டு வகையாக பிரிக்கலாம், அகழ்வாய்வில் கிடைக்கும் பருப்பொருள்களின் கரிம பகுப்பாய்வின் மூலம் கிடைக்கும் முடிவைகளையும், கல்வெட்டுகளில் கிடைக்கும் செய்திகளையும் கொண்டு வெளிப்படும் வரலாறு ஒன்று. இலக்கியங்கள், வாய்மொழிக் கதைகள், வாய்மொழிப் பாடல்கள் மூலம் கிடைக்கும் சான்றுகளின் அடிப்படையில், ஒரு இனத்தின் சமூக பண்பாட்டு அசைவுகளில் மரபின் நீட்சியாக வரும் பாண்பாட்டு நிகழ்வின் அடிப்படையில் நிகழ்த்துவது மற்றொன்று. முன்னதான பருப் பொருள் சான்றாய்வுகள் உறுதித்தன்மை வாய்ந்ததெனவும்; இலக்கியங்கள்,  கதைகள், பாடல்கள், பாண்பாட்டு அசைவுகள் மூலம் கிடைக்கும் சான்றுகளின் அடிப்படையிலான ஆய்வுகள் நெகிழ்வுத் தன்மை வாய்ந்ததெனவும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக அவ்வாய்வுகளை  புறந்தள்ளி விடவும் முடியாது. மனிதன் தான் கண்டதை, கேட்டதை முதலில் வாய்மொழி மூலமாகவும், அடுத்து பாறை ஓவியங்கள் மூலமாகவும், எழுத்து கற்றுக் கொண்ட பிறகு இலக்கியங்கள் மூலமாகவும் வெளிப்படுத்தினான் என்பதை வரலாற்று கண் கொண்ட எவராலும் எளிதில் கண்டுவிட முடியும். இந்த அடிப்படையில் ஆய்வுகளை அணுகினால் மட்டுமே நாம் உண்மைக்கு அருகில் சென்றடைய முடியும். அப்போதும் உண்மையை தொட்டுவிட முடியாது. ஆய்வு முடிவுகள் எப்போதும் மாறும் தன்மையுடையது. இன்றைக்கு கீழடியில் கிடைத்த எழுத்துருக்களை கொண்டு தமிழ் மொழியின் எழுத்து தோற்றம் கி.மு ஆறாம் நூற்றாண்டு என்று நாம் அறுதியிட்டு சொல்ல முடியாது. இப்போதைக்கு கிடைத்த சான்றுகளின்படி படி வேண்டுமானால் கி.மு ஆறாம் நூற்றாண்டு என்று வேண்டுமானால் சொல்லலாம். இன்னும் பல ஆண்டுகள் கழித்து அதற்கும் முந்தைய காலக்கட்டத்தில் தமிழ் எழுத்துக்கள் இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கக்கூடும் ஏனெனில் அதற்கான சான்றுகள் நமக்கு பழந்தமிழ் இலக்கியங்களிலும், நாட்டார் பாடல்களிலும், பண்பாட்டு நீட்சியிலும் காணமுடிகிறது .    வரலாறு எப்போதுமே இரண்டு முகங்களை கொண்டுள்ளது. வரலாற்றுக்கு இரண்டு முகங்களல்ல வரலாற்றை எழுதியவர்கள், எழுதிக்கொண்டிருப்பவர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது கருத்துக்கு தேவையான பக்கங்களை மட்டுமே கொண்டு ஆய்வு செய்வதால் வரலாற்றுக்கு இரண்டு முகங்கள் போல் நமக்குத் தோன்றுகிறது. இதுவரை கண்டடைந்த ஆய்வுகளின் அடிப்படையில் ஹோமோ எரெக்டஸ் (சற்றொப்ப 18.9 முதல் 14.3 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஆப்பிரிக்கா, மற்றும் ஆசியாவின் சில பகுதிகள் ), ஹோமோ ஹைடல்ஜென்சிஸ், ( சற்றொப்ப 7 இலட்சம் முதல் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகள் ), ஹோமோ நியான்டர் தாவென்சிஸ் (சற்றொப்ப 4 இலட்சம் அண்டுகள் முதல் 40 ஆயிரம் ஆண்டுகள் வரை ஐரோப்பாவிலும், தென்மேற்கு, மற்றும் மத்திய ஆசியாவிலும் வாழ்ந்தனர்) , ஹோமோ சேப்பியன்ஸ் காலடித்தடங்கள் தான் மனிதகுல வரலாறு என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஹோமோ சேப்பியன்சிலிருந்தே இன்றைய நாகரிக மனிதன் தோன்றினான் என்றும், ஹோமோ சோப்பியன்ஸ், நியாண்டர்தாலுடன் கலந்தற்கான டி.என்.ஏ சான்றுகளும் உள்ளதாக அறுதியிட்டு கூறுகின்றது. ஆய்வுலகம்.  உலகம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு இடப்பெயர்வுகளும், கலப்புகளாலும் மட்டுமே மனித இனம் செழுத்தோங்கி வளர்ந்தது. இன்றைக்கு நாம் பேசுகின்ற எந்தவிதமான தூய்மையின வாதமாயினும், நம் மூதாதையர்களின் காலடித் தடங்களைப் பற்றி பின்னோக்கி நகர்ந்தால் அது ஆப்பிரிக்காவிலோ? குமரிக் கண்டத்திலோ? சென்று முடியும் போது செல்லாக்காசாகி விடும் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.  "அருந்ததியர்கள்,   ஆதித்தமிழர்களே!’ என அறுதியிட்டு கூறும் இந்நூல்  4.5 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் சோலார் நெபுலா வெடித்துச் சிதறியதில் தொடங்கி பூமியின் தோற்றம், பூமியில் உயிர்த் தோற்றம், மனித இனத் தோற்றம், வளர்ச்சி, மொழிகளின் தோற்றம், தமிழினத்தின் தொன்மை என தொடர்ந்து அருந்ததியர் சமூகத்தின் குலக்கதைகளில் முடிகிறது. இந்நூலாசிரியர் தன்கூற்றுக்கு சான்றுகளாக கல்வெட்டுகள், செப்பேடுகள் என பருப்பொருள்  சான்றுகளையும், இலக்கியங்களில் இருந்தும், வழிபாடு வழியாக பண்பாட்டு சான்றுகளைகயும்,  பெயர் முதலான சொல்லாய்வுகள் மூலமாகவும் இந்நூலுக்கு வலுசேர்க்கிறார். மட்டுமின்றி பல்வேறு ஆய்வு முடிவுகளையும், பல நூல்களில் தான் கண்டடைந்த முடிவுகளையும் குறிப்பிடத் தவறவில்லை, நடுகல் வழிபாட்டின் மூலமாகவும் இந்நூலுக்கான கூறுகளை கண்டடைகிறார். நடுகல் வழிபாட்டின் நீட்சிதான் இன்றைக்கும் நாம் வழிபடும் சிறு தெய்வ வழிபாடு. மதுரை வீரன், ஒண்டிவீரன் பகடை, குயிலி, பொல்லன் பொட்டிப் பகடை போன்ற குலக்கதைகளாக பேசப்படுகின்ற மாவீரர்களின் வரலாற்றையும் சுருக்கமாக பதிவு செய்துள்ளார். அப்படி பதிவு செய்வதன் மூலமாக அவர் குலப்பெருமை பேசவில்லை. மாறாக அப்பெருமித உணர்வை அருந்ததிய சமூக மக்கள் பெறுவார்களாயின் அதனூடாகவாவது அம்மக்கள் மானவுணர்ச்சி பெறவேண்டும் என்பதே நூலாசிரியன் நோக்கமாக இருக்கிறது. 2009 ஆம் ஆண்டு, அப்போதைய முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கொண்டுவரப்பட்ட “அருந்ததியர் உள்ஒதுக்கீடு” சட்ட திருத்த மசோதாவும், அருந்தியர் சமூக மக்களின் நல்வாழ்வுக்காக கொண்டுவரப்பட்ட சமூக நலத்திட்டங்களையும் நன்றியுணர்ச்சியோடு நினைவு கூறுகிறார். தற்போதைய தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களால் நிறைவேற்றப்பட்ட அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்ட நடைமுறை. 2001 ஆகஸ்ட் 14 ஆம் நாள் சமூகநீதி வரலாற்றில் மிக முக்கியமான மைல் கல். கோயில் கருவறையில் கடைபிடிக்கப்படும் தீண்டாமையை அகற்ற அனைத்து சாதியினரும் அரச்சகராக வேண்டும் என தம் வாழ்நாள் முழுவதும் பெரியார் போராடியது முதல் 1970 ஆம் ஆண்டு முதல் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சட்ட நடவடிக்கைகளையும் விரிவாக பேசுகிறது இந்நூல். நூலாசிரியர் அதோடு நின்றுவிடவில்லை. நூலின் கடைசிப் பகுதியாக பட்டியலின மக்களுக்கு அரசு செய்யவேண்டிய பணிகளையும் பட்டியலிட்டுள்ளார். தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல் திறத்தை காணும்போது நூலாசிரியரின் விருப்பம் நிறைவேறும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று உறுதியாக சொல்லலாம்.   இது போன்றதொரு நூல் இக் காலக்கட்டத்தில் வெளிவருவதென்பது பொருத்தமானதா? அதற்கான வரலாற்று தேவை இருக்கிறதா எனில் “ஆம்” என்ற ஒரு சொல் விடையே போதுமானது தான். தமிழ்ச் சமூகச் சூழலில் விளிம்பு நிலையினும் கடைநிலையில் இருக்கும் சமூகம் தான் அருந்ததியர் சமூகம். இவர்கள் தெலுங்கு பேசுபவர்கள் என்றும், ஆந்திராவிலிருந்து வந்தவர்கள் என்றும் இன்னும் கடுமையாக வந்தேறிகள் என்று உரைப்பதன் மூலம் அப்படி சொல்பவர்கள் சாதிக்க நினைப்பதென்ன என்ற கேள்வி நமக்குள் எழாமல் இல்லை. நூலாசிரியர் தனக்கான நேர்மையோடு வரலாற்றை அணுகி அருந்ததியர் ஆதித்தமிழர் என்று நிறுவுகிறார் . ஹரப்பா , மொகஞ்சசதோரா காலத்திலிருந்தே இப் பெருநிலம் முழுதும் தமிழர்களே வாழ்ந்தார்கள். ஹரப்பா, மொகஞ்சதோரா நாகரீகம் அழிவின் விளிம்பில் இருந்த தருவாயில்  ஸ்டெப்பி  புல்வெளியிலிருந்து வந்தவர்களே ஆரியர் என்ற உண்மை வெளிப்பட்ட பின்னும், அண்ணல் அம்பேத்கார் இம்மண்ணின் ஆதிக் குடிகள் தமிழர்களே, அவர்கள் நாகர்கள் என அழைக்கப்பட்டனர் என தனது ஆய்வின் மூலம் எடுத்தியம்பிய பின்னும், இன்னும் ஜோதிபாசு, ஜவகர்லால் நேரு போன்ற மேதைகள் நிறுவிய பின்னும் தெலுங்கு மொழி பேசுவதால் அவர்கள் தமிழரல்ல; திராவிடம் என்பது மாயை போன்ற சொல்லாடல்கள் யாருக்கான ஊதுகுழல் என வரலாறு அறிந்த அனைவருக்கும் புரிந்த ஒன்றுதான், என்றாலும் இந்நூல் தனது பதிவின் மூலமாக நிறுவவேண்டிய தேவை காலத்தின் கட்டளை என்றே நினைக்கிறேன்.  இன்னுமொரு கேள்வியும் எனக்குள் எழுகிறது, தெலுங்கு மொழி தோன்றி சற்றொப்ப ஆயிரத்தென்னூறு ஆண்டுகள், கன்னடம் தோன்றி ஆயிரத்தைந்நூறு ஆண்டுகள், மலையாளத்திற்கு ஆயிரம் ஆண்டுகள் கூட ஆகவில்லை. இப்போது தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் மக்கள் தங்கள் மொழி தோன்றுவதற்கு முன் பேசிய மொழிகள் என்ன என வந்தேறிகள் பட்டம் சூட்டும் மகுடிகளால் கூறமுடியுமா? தமிழ் மொழியிலிருந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகள் தோன்றின என்பது தமிழ் மொழிக்கான பெருமையா? சிறுமையா? தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு   போன்ற திராவிட மொழிகள் தமிழ் மொழியிலிருந்து தோன்றியவை எனில் அம்மொழி பேசுகின்ற மக்களுக்கும் தாய் மொழி தமிழாகத்தானே இருக்க முடியும். இதை மறுப்பானேன்?  திராவிடம் என்ற சொல்லாடலை மறுப்பதன் மூலம் தமிழுக்கும், தமிழருக்கும் இவர்கள் தீங்கிழைக்க முனைந்தார்கள் என்றுதான் வரலாறு பதிவு செய்யும். தெலுங்கு மொழி பேசுவதால் அருந்ததியர் தமிழரல்ல என்று  கூறுவதன் நோக்கம் தான் என்ன?  அவர்கள் விஜயநகரப் பேரரசு காலத்தில் படைகளோடு வந்தவர்கள், விஜயநகரப் பேரரசால் குடியேற்றப்பட்டவர்கள் என்றாலும் கூட இன்றைக்கும் அவர்களுக்கு  ஆந்திரவோடு  கொள்வினை, கொடுப்பினை கூட இல்லை. ஐந்து நூற்றாண்டுகளுக்கு மேலாக இம்மண்ணோடு ஐக்கிய மானவர்கள்.  தமிழ்ச் சமூக சூழலில் விளிம்பு நிலையில் வாழ்பவர்கள். அவர்களால் தமிழ்ச் சமூகம் அடைந்த இழிவென்ன? மாறாக ஈராயிரம் ஆண்டுகளாக கல்வியை மறுத்த, அனைத்து விதமான இழிவுகளையும் சுமத்திய இன்றளவும் ஆதிக்கம் செலுத்துகின்ற ஆரிய கூட்டத்தை எதிர்ப்பது தானே தமிழுக்கான, தமிழருக்கான விடிவாக அமையும். இன்றைக்கு கூட கீழடி, பொருநை தொல்லியல் ஆய்வுகளை மறுப்பது மட்டுமின்றி  எதிராக எழுதுவதும்,  எள்ளி நகையாடுவதும் யார்?  பொதுப்பகையை விடுத்து உட்பகையை உருவாக்குவது எதிரிக்கு தானே வழிகோலாக அமையும் என்ற அடிப்படை புரிதல் இல்லாதவர்களா? என அடுக்கடுக்காக வினாக்கள் எழுவதை தவிர்க்க இயலவில்லை.        இது போன்ற உட்பகையை உருவாக்கும் ஊதுகுழல்களின் வாயை அடைக்க அடிப்படையான சான்றாதாரங்களோடு எழுதப்பட்ட நூல் தான் “அருந்ததியர்கள், ஆதித் தமிழர்களே” என்னும் இந்நூல். இந்நூலாசிரியர் இயல்பிலேயே தமிழ்மொழிப் பற்றும், திராவிட இயக்கப் பற்றும் கொண்டவர். மகாராஷ்டிரா மாநிலத்தில்  இட ஒதுக்கீட்டில் தமிழர்களுக்கும் இடம் வேண்டும் என்பதற்காக சாதிச் சான்றிதழ் பெறுவதற்கு பல முன்னெடுப்புகளை செய்தவர். “வாழ்வுரிமை விழிப்புணர்வு”, “மனித நேயம் மலரட்டும்” போன்ற சமூக விழிப்புணர்வு நூல்களையும் எழுதியுள்ளார். இந்தி, ஆங்கிலம் ஆகிய  மொழிகளின் மொழிபெயர்ப்போடு தமிழிலும் சேர்த்து  திருக்குறள் மும்மொழி நூல்  தொகுப்பொன்றையும் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கியுள்ளார். முந்தைய நூல்கள் போலவே “அருந்ததியர், ஆதித்தமிழர்களே!” என்னும் இந்நூலையும் ஒரு சமூக கடமையாகவே எண்ணி எழுதியுள்ளார். நூலாசிரயரது இம்முயற்சி தனது  இலக்கினை அடைவதோடு நூலாசிரியர் இது போன்ற சமூக விழிப்புணர்வு நூல்கள் பல எழுத வேண்டும் என்ற விருப்பத்தையும் பதிவு செய்வதுடன், அவரை நெஞ்சார  பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன்! வாழிய நலமுடன்!  அன்புடன் வ.ரா. தமிழ்நேசன் வாழ்த்துரை [பாவரசு முகவைத் திருநாதன்] ஆலோசகர் மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் மும்பை தி.மு.க-வின் பொறுப்பாளராக சேவை செய்துகொண்டிருக்கும் தோழர் ஐயா கரூர் பழனிச்சாமி அவர்கள் சீரான சிந்தனைகளை உள்ளடக்கிய, மிகவும் அமைதியான, நாகரீகப் பண்புமிக்க பகுத்தறிவாளர். இந்தியத்துள் மூடர்களால் வரிந்துகட்டி பாதுகாக்கப்பட்ட சாதிமுறை நீதியற்றது, நியாயமற்றது, நேயமற்றது, நேர்மையற்றது, நாகரீகமற்றது, தனிமனித உரிமைக்கும், தன்மானத்திற்கும், சுயமரியாதைக்கும் புறம்பானது என்பதை நன்கறிந்த முன்னனி பகுத்தறிவாளர். பண்பற்ற பொய்களின் அடிப்படையில் நிலைநிறுத்தப்பட்ட சமுதாய சாதிக் கட்டமைப்புகளால் பாதிப்புக் குள்ளானவர்களின் இழிநிலை கண்டு, சரித்திரத்தில் திணிபட்ட கருத்துப் பிழைகளை நீக்கிட வேண்டி, தனியொரு மனிதனாக சிறந்த ஆய்வுகளை மேற்கொண்டு, அலசி ஆராய்ந்து, பிழிந்தெடுத்த சாராக தனது புத்தகமான அருந்ததியர்கள் - ஆதித்தமிழர்களே!" என்ற நூலில் தாம்கண்ட உண்மைகளை பிறரறிய படைத்துள்ளார். இந்த ஆய்வுநூல் மண்ணுலக தோற்றம் பற்றிய சரிதம், மற்றும் அதில் உண்டான உயிர்களின் தோற்ற பரிநாமங்கள் பற்றிய விஞ்ஞானம் கண்ட வழித்தடங்கள், பின்பு சூதுமன மனித இனத்தால் திணிக்கப்பட்ட மரபுச் சரித்திரத்தைச் தொடர்ந்து, தற்போதுள்ள நடப்புமுறை வரை தெளிவுபடுத்தியுள்ளார். சாதிமுறை என்பது சமூகத்துள் திணிக்கப்பட்ட அநீத அட்டகாசத்தின் அடையாளமாகும். வஞ்சகத்தால் வளைபட்ட, அநீதியின் முத்திரையாகும். நீதங்களையும், பேதங்களையும், பாதகங்களையும், கொடுமைகளையும், இல்லாதவன் பெயரில், அவன்தந்த நீதிமுறை அதுதானென்று பெருமையாக பீற்றியும் கொண்டார்கள். மூடத்தை முதலாகக் கொண்டவர்கள், மடமையை வளர்ப்பதில் விசேட ஆர்வம் காட்டி, மேடைகளிலும், பள்ளிகளிலும் நெறிமுறை தத்துவங்களாக படிக்கவும் வைத்தார்கள். மடமையுள் ஊறிப்போன மன்னர்களும், சிந்தனை இழந்தவர்களாய், மூடர்கள் ஆட்டிவைக்கும் பொம்மைகளாகச் செயல்பட்டார்கள். சாக்ரட்டீஸ், பெரியார் போன்ற பகுத்தறிவு ஞானிகள் அப்பப்போது அங்கங்கே தோன்றினாலும், தாம் கொண்ட உடல்பலத்தாலும், ஆயுத பலத்தாலும், தன்கைக்குள் அடங்கிய சட்டமுறை அமைப்புகளாலும், அநீதியே நீதியென நிரூபணம் செய்து தண்டணை கொடுத்தார்கள். சாக்ரட்டீஸ், இயேசு பிரான், கலிலியோ போன்றோர் உண்மை பேசியதற்காக அவர்களின் உயிரையே எடுத்தார்கள். இவர்களின் அடங்காத அட்டகாசங்களில் சிக்குண்டு சிதைந்தவர்கள் கணக்கற்ற பல கோடிகள்; சாதி, இனம், மொழி, பகுதி, தொகுதியென்று பிரிக்கப்பட்டு, பலமிழந்து திணிக்கப்பட்ட ஏழை நிலையில், அதுதான் தன் விதியென்று மனதை ஆற்றிக்கொண்டு வாழ்நாட்களைக் கடத்தினார்கள். பலமுள்ளவையே வாழத் தகுதி பெற்றவை யெனும் தத்துவத்தின் அடிப்படையில் ஊருக்கோர் பல்வான் நிலத்திற்கு சொந்தம் கொண்டாடி, தனைத்தானே தானந்த ஊருக்கு தலைவன் அல்லது ராசன்யென பிரகடனம் செய்து கொண்டான். மெலிந்தவன், தோற்றவன், வென்றவனுக்கு கீழ்படிந்து கப்பம் கட்டினான் அல்லது அடிமையாக சேவகம் செய்தான், அல்லது போரிட்டு செத்து மடிந்தான். இதன் அடிப்படையில் அரசன், பேரரசன், சாம்ராட்யென பகுக்கப் பட்டார்கள். இவ்வாறு ஆளுங்கூட்டத்தின் ஆளுமை முறையே அவலத்தின் அடையாளமாக அமைந்திருந்தது. இவர்களை நெறிப்படுத்த தர்மம் எனும் பெயரில் மடமை இவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது. இறைவன் பெயரில் அவர்கள் சொன்னதெலாம் விதியாகி பாமரர்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கும் நெறிச் சாலையாகி நின்றது. சிந்தனையற்ற செயல் விதி முறைகள் இவர்களின் செயல்பாடுகளை ஆண்டது. இப்படிப்பட்ட அநீதங்கள் பெற்றெடுத்த மறைமுக குழந்தைகள்தாம் சாதி, மதம், பொருளுடைமைத் தத்துவங்கள். காலப்போக்கில் சிந்தனைப் பெருக்கால், கல்வி பரவலால் உரிமை, மரியாதை, சமத்துவம், சமவாய்ப்பு பற்றிய புரிதல் ஏற்பட்டு, இவை ஒவ்வொரு மனிதனின் பிறப்புரிமை யென்பது ஏற்கப்பட்டு, பெரும்பாலான நாடுகள் மக்களாட்சியை மலரச் செய்தன. இந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தங்களின் அரசியல் சட்டத்தை அமைத்துக் கொண்டார்கள். எல்லோர்க்கும் பொதுவான அரசியல்ச் சட்டம் ஏற்கப்பட்ட பின்னும், எழுபத்தைந்து ஆண்டுகள் கழிந்த பின்னும், இந்தியத்துள் யாரும் விரும்பாத வேண்டாத சாதிமுறை தம் அகோர முகத்தை அழுகுபடுத்திக் கொண்டிருக்கிற தென்றால், நீசர்கள் இன்னும் ஆட்சிக் கட்டிலை அலங்கரிக்கிறார்கள் என்றுதானே அர்த்தமாகிறது. அதனால்த்தான் அய்யா பழனிச்சாமி போன்றோர் இவை பற்றிய இலக்கியம் படைக்க அவசியமாயிற்று. சரித்திரம் தாம் கடந்த சாலையை பின்திரும்பிப் பார்த்து தம்மைத்தாமே திருத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறது என்பது வெளிப்படையாகிறது. முக்கியமாக இந்திய மக்கள்உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை அடைய வேண்டிய அவசியத்தில் இருக்கிறார்கள். அரசியல்ச் சட்டத்தை ஏற்று அதன்படி நடப்போமென்று உறுதிமொழி கொடுத்தபிறகு, அரசியல்ச் சட்டத்தை அவமதிக்கும் வண்ணம் நடந்து கொள்வது சட்டவிரோதம் மட்டுமல்ல அது தேச துரோகத்துள் இடம்பெறும். ஆகையினால் தாம் அறிந்தோ அறியாமலோ தேசதுரோக பாதையில் தம்மை இனம் காண்பீர்களானால், துரிதம் தனைத் திருத்திக்கொண்டு தேச பக்தர்களாதல் தற்போதைய அவசிய தேவையாகும். மனித வர்க்கத்தை தமது வசதிக்கேற்ப சாதி, மதம், இனம், மொழி, நிறம், நிலவரையென பல வழிகளில்ப் பிரித்து, சிந்தனையில் குறைபாடுள்ளவர்கள், அரசியல் லாபத்திற்காக அடையாளப் படுத்து கிறார்கள். அருந்ததியர்கள் தெளுகுவழி ஒலிமொழியில் பேசுகிறார்கள், அதனால் இவர்கள் தமிழர்கள் இல்லை யென்கின்றனர் சிலர். இவர்கள் திராவிடர்களே இல்லையென்று கூறும், சரித்திரம் படிக்காத, சரித்திரம் அறியாத, அறிந்தும் அறியார்போல் நடிக்கும் அரை வேக்காடுகளும் உண்டு. இவர்களின் கூற்றுப்படி பார்க்கப்போனால் தமிழகத்தின் பாதிபாகம் கேரளாவுக்கும், கர்னாடகாவுக்கும், ஆந்திராவிற்கும் சொந்தமாகிவிடும். கன்னியாகுமரி, நாகர்கோவில் மூணாறு, தேனீ, நீலகிரி, ஓமலூர், வடஆர்க்காடு, வடசென்னை உள்ளவர்கள் இருமொழி பேசுபவர்கள். சில இடங்களில் மும்மொழி பேசுபவர்களுமுண்டு. சிந்தனையுள்ளவர்கள் புரிந்துகொள்வது எளிது. தற்போதைய உலகம் இனம், மொழி, நிறம், பண்பாடு, கலாச்சாரங்களில் கறைபட்டு நிற்கிறதென்பது நிதர்சனமான உண்மை. நாம் மனிதயினம் நம்முள் மனிதத்தை மட்டும் காப்பதுதான் நாகரீகம். இந்தியா திராவிடரின் நாடு என்பதை சரித்திரம் அறியும். ஹரப்பா மோகஞ்சதாரோ நாகரீக அகழாய்வுக் கண்டுபிடிப்புகள் இதற்கு சான்றாகி விளங்குகிறது. அப்படிப்பட்ட மண்ணின் மைந்தர்களாகிய திராவிடரை, விந்தியத்திற்கு வடக்கேயுள்ள வந்தேறி சந்ததிகள், தக்கணவாசிகளை இந்தியர்களாக ஏற்கவும் தயங்குகிறது. உலகம் முழுமைக்கும் இதுதான் நடப்பு. மடமைச் சிறையிலிருந்து சிந்தனையை விடுதலை செய்யாதவரை, பிரிவினை வாதிகளின் பிதற்றலில் உலகம் உழன்றுகொண்டு தானிருக்கும். உலகுள் உடமை பொதுவாகும்வரை, கல்வி இலவசமாகும்வரை ஏற்றத்தாழ்வுகளும், பிரிவுகளும், உரிமைப் பறிப்புகளும், அநீதங்களும் ஏதாவதொரு வடிவில் வாழ்ந்து கொண்டு தானிருக்கும். நாகரீகத்தின் உச்சமான பொதுஉடமை போற்றும் சமநிலை பெறுவதற்கு சில படிநிலைத் தடங்கள்களைக் கடந்தே ஆக வேண்டும். அதற்கு தனி ஒருவனின் உரிமை, மரியாதை, சமத்துவத்தின் அடித்தளமறிந் தொழுகள் அவசியம். ஒவ்வொரு சமூகமும் குறிப்பாக அதன் தலைவர்கள் தமது பொறுப்புகளை உணர்ந்து, தட்டிக்கழிக்காமல், பாசாங்கு செய்யாமல் தியாகங்களைச் செய்யத் தயாராக வேண்டும். அவர்கள் ஒன்றுகூடி அதற்கான வழிவகைகளை பாரபட்சமற்று ஆராய்ந்து ஆக்கப்பூர்வமாக முன்னெடுக்க வேண்டும். கல்வியை அவசியமாகவும், இலவசமாகவும் யாவர்க்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். சமத்துவபுரங்களை, சமத்துவ பட்டினங்களை, பள்ளி, கல்லூரி, தொழிற்கூடங்களோடு, குடிநீர், போக்குவரத்து போன்ற சகல வசதிகளையுடைய கனவுலகத்தை கலைஞரின் கனவு நிறைவேற வசதியாய், அரசாங்கம் முழுமனதுடன் தாலுகாவுக் கொன்றாவது தோற்றுவிக்க வேண்டும். அவர்களுக்கான வேலை வசதிக்கு விசேச ஏற்பாடுகள் அமைந்திருக்க வேண்டும். நாளடைவில் இந்த நாகரீகப் பண்பாடு நாடெங்கும் வியாபிக்க வேண்டும். இவற்றிற்கு எதிராக சூதுகளை ஏவிவிடும் மடமைகளுக்கு மரணஅடி கொடுக்கவும் வழிவகை செய்திருக்க வேண்டும். சமூகத் தலைவர்களே, நீங்கள் சரித்திரத்தில் நிற்க வேண்டுமானால் சரித்திரத்தைப் புரட்டிப்போடும் சாத்தியம் கொண்ட துணிவான மாற்றங்களைக் கொண்டுவர தயாராகுங்கள். தங்களோடு சேர்த்து தங்கள் சமூகத்தையும் சேர்த்து மேலெடுத்து நடத்த தைரியம் கொள்ளுங்கள். அறிவிற் சிறந்த பெரியார் தமிழகம் இதற்கு முன்னோடி யாகுமானால் அதைவிட மகிழ்வுக்குரியது வேறொன்றுமில்லை. ஆளுங் கூட்டம் இதுவரை செய்த, பாழுஞ் சேவை யாதெனக் கேட்பின்; பிறரை அடக்கி அடிமை யாக்கி, அவருரிமை பறித்து நீதி கொறித்து, தவறாது சமூக நீதி கொன்றதாமே! இவருள்ப் பிரிவுகள் ஆயிரம் கொடுத்து, அவருள் ஒற்றுமை வராது காத்து, சுவர்க்க நம்பிக்யைின் மடமை காத்ததே! கல்வி மறுத்து செல்வம் பறித்து, கொல்லும் வறுமையைக் கொடையாய்த் தந்ததே! சமத்துவக் கொலையை நன்னெறி யென்று, அமங்கள தீபத்தை சாதிவழி யேற்றி, எமனெனப் பிறர்முன் னிருந்துகோ லோச்சியதே! இந்நிலை மாற சமத்துவம் தேற, இந்திய மக்கள் சாதிமதம் மறுத்து, மனித நேயமே நம்மத மென்று, இனிதே போற்றும் பகுத்தறிவு போற்றி, புனித பெரியாரின் பாதை நடந்தாலே, நனிபுகழ் சமத்துவம் நாட்டுள்க் கிட்டுமே. குறுகிய நோக்கும் குற்றமுள போக்கும், கருகிடும் சமூக நீதியும் உணர்ந்து, பருகிட சுதந்திரம் சமத்துவம் மலருமே! இந்நிலை உணர்த்த இந்நூல் ஆசிரியர், முந்நூல்ச் சரித்திரம் பலப்பல தோண்டி, புத்தியின் விளக்கெரிக்க உழைப்பை ஊற்றி, (சரித்திர) தத்துவ தவறுகளை உலையிட்டு ஆராய்ந்து, உண்மைகளை உம்முன் வைக்க முயன்றுள்ளார்; கண்ணியம் கண்ணேற்றி காண்பீர் கருப்பொருளே. இந்த நூல் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையா அல்லது முகமூடிகளின் முகத்திரையைக் கிழிக்கும் ஈட்டியா என்று சந்தேகப்படும் அளவுக்கு கருத்தாழமும், கடின உழைப்பும், மனதைக் குத்திக் கிழிக்கும் கீழ்த்தட்டு மக்களின் அவலக்குரலும் இழைந்தோட நிற்கிறது. இந்த நூலின் தாக்கம் இந்திய மக்களை எந்த அளவுக்கு அறிவுத் தெளிவையும், மனதில் மாற்றத்தையும் ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். வாழ்க தமிழ்! வாழ்க பாரதம்!! பாவரசு முகவைத் திருநாதன். வாழ்த்துரை [வி.பி. அண்ணாதுரை] செயலாளர், மராத்திய மாநில ஆதித்தமிழர் பேரவை “அருந்ததியர்கள் ஆதித்தமிழர்களே” நூல் ஆசிரியர் கருவூர் பழனிச்சாமி அவர்களுடனான தொடர்பு எனது இளமை காலத்திலிருந்தே உள்ளது. ஒர்லி, உத்யோக் நகரில் எங்களோடு இணைந்து சமூக பணிகள் ஆற்றிய போது அவரது நேர்த்தியான ஆற்றலை உணர்ந்தவன். தன் கருத்துகளை வலியுறுத்தும் பாங்கு பாராட்டத்தக்கது. மும்பை அருந்ததியர் சங்க செயலாளராக பொறுப்பேற்று பணியாற்றிய போது முதன்மை ஆலோசகராக இருந்து அனைத்திலும் வழி காட்டியாக இருந்து 1997 ல் சுதந்திரப் பொன்விழா ஆண்டு மற்றும் மும்பை அருந்ததியர் சங்க 20 வது ஆண்டு சிறப்பு மலர் ஆசிரியராக இருந்து தமிழ் சமுதாயத்தினரும் பாராட்டும் படியான சிறப்பான மலர் வெளியிட பாடுபட்டவர். அதேபோல் ஆசிரியர் எழில் இளங்கோவன் அவர்கள் எழுதிய “அருந்ததியர் வினாவும் விளக்கமும்” என்ற நூல் மும்பை அருந்ததியர் சங்கம் சார்பில் முதல் பதிப்பு வெளியிட 1998 ஆம் ஆண்டு அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டவர். இதேநூல் ஆதித்தமிழர் பேறவை சார்பில் இரண்டாம் பதிப்பு வெளியிட்டு சிறப்பும் பெருமையும் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. அருந்ததியர் இனம் கல்வியிலும், பொருளாரத்திலும் ஒற்றுமையிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற சீரிய சிந்தனை, செயல்பாடுகள் மட்டுமல்ல, அருந்ததியர் இன வீர வரலாறுகளை வெளிக்கொணர வேண்டும் என்ற வேட்கையோடு அதை மும்பையில் வெளிவரும் வார இதழ்களில், நாளிதழ்களில் கட்டுரைகள் மூலம் பதிவிட்டவர். ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் இரா. அதியமான், பொதுச்செயலாளர் எழில் இளங்கோவன், சமூக எழுச்சிப் பேச்சாளர் நீலவேந்தன் மற்றும் நிர்வாகிகளை மும்பை வரவழைத்து மும்பை அருந்ததியர் சங்கம் சார்பில் வரவேற்புக் கூட்டம் ஏற்பாடு செய்து அறிமுகம் செய்தவரும், 23.09.2007 அன்று மும்பை தமிழ்ச் சங்கம் குளிர் அரங்கில் சிறப்பான ஏற்பாடுகள் செய்து மேள தாளம் முழங்க, வான வேடிக்கையுடன் வரவேற்று “மராத்திய மாநில ஆதித் தமிழர் பேரவை” மும்பையில் துவக்க விழாவிற்கு ஆணி வேராக பணியாற்றியவர். தமிழ் நாட்டில் அருந்ததியர்கள் பற்றி வந்தேறிகள் என தவறான கருத்துகள் பேசப்படும், பரப்பப்படும் இச்சூழலில் இந்நூல் சரியான விளக்க நூலாக, தெளிவு தரும் நூலாக அமையும் என்பது உறுதி. “அருந்ததியர்கள் ஆதித்தமிழர்களே” என்பதை கல்வெட்டு, செப்பேடு ஆதாரங்கள் மூலம் விளக்கியுள்ளது பாராட்டத்தகுந்தது. ஒற்றை உயிரணுவிலிருந்து தோன்றியது தான் உயிரினம், மனிதயினம். இதில் பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டை என்றுமே பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளாது என்பதை உணர்த்தியுள்ளார். இந்நூல் அனைவர் கரங்களில் தவழ்ந்து, மனம் தெளிவடைய வேண்டும் என்பதோடு அண்ணல் அம்பேத்கர், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் வழியில் சமூக நீதி, சமத்துவம், சம உரிமை காக்கவும், அருந்ததியர் விழிப்புணர்வுக்கும் கருவூர் இரா. பழனிச்சாமி அவர்களின் எழுத்துப்பணி தொடர வேண்டும் என மராத்திய மாநில ஆதித்தமிழர் சார்பில் பாராட்டி வாழ்த்துகிறது வி.பி. அண்ணாதுரை என்னுரை உலகின் மூத்த முதல் மொழி, செம்மொழியாம் தமிழ் மொழி என்பது உலகம் ஒப்புக் கொண்ட ஒன்று. அத்தகைய தமிழ் மொழி பேசும் “தமிழன்” என்பதிலே நான் பெரும் மகிழ்வு கொள்பவன். மும்பையிலே வாழ்ந்தாலும் பகுத்தறிவு பகலவன் பெரியார், அண்ணல் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழி நடந்து பொதுத் தளத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் சமூக நீதி, சமத்துவம் பெற பணிகளை தொடர்பவன். அருந்ததியர் இன வளர்ச்சிக்கும், விழிப்புணர்ச்சிக்கும் என்னாலான சிறு பணிகளை ஆற்றுபவன் எனக் கூறிக் கொள்வதில் தயக்கமில்லை. சமீப காலத்தில் ஒடுக்கப்பட்ட பட்டியல் இன மக்களே போலி தமிழ் தேசியம் பேசும் சிலரின் கருத்துகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அருந்ததியர் இன மக்களை வந்தேறிகள் என்றும் தெலுங்கர்கள் என்றும் பேசி வருவது வேதனையளிக்கும் ஒன்றாக உள்ளது. அருந்ததியர் இன மக்கள் ஆதி தமிழர்களே என தக்க பதிலடி அளிக்கும் வண்ணம் ஆதி தமிழர் பேரவை, அருந்ததியர் ஊடகம், சில முன்னணி தலைவர்கள் விளக்கமளித்துக் கொண்டுள்ளனர். அந்த வகையில் எனது சிறு பங்காக சில தரவுகளை வைத்து அருந்ததியர் இன மக்கள் ஆதித் தமிழர்களே என வரலாற்றுச் சான்றுகளோடு என் உணர்வுகளையும் வெளிப்படுத்த எழுந்ததே இம்முயற்சி. அருந்ததியர்கள் தமிழர்கள் என்று அடையாளப்பட்டு விட்டால் தங்கள் உரிமைக்கும் வாழ்வியலுக்கும் பிரச்சனை வந்து விடும் என்று நினைக்கும், பார்ப்பன இந்து சக்திகளுக்கு துணை போகும் வலது சாரி தமிழ் தேசிய வாதிகளும், பார்ப்பன சாதி மேலாதிக்கத்தை கடை பிடிக்கும் தலித்களும் திட்டமிட்டு அருந்ததியர் மக்களின் வரலாறுகளை மறைத்தும் திரித்தும் பொய் பரப்பி வருகிறார்கள். அக்காலத்தில் குடிகள் என்பது முன்னோரின் தொழில், வாழ்க்கை முறைபோன்றவற்றுள் ஏதேனும் ஒன்றை தெரியப்படுத்தும் காலக் கண்ணாடியாகத் திகழ்ந்தது. இன்று அவையே வேரூன்றி ஆலமரம் போல் அசைக்க முடியாமல் மனித சமூகத்தில் வேற்றுமையைக் காட்டும் சாதிகளாக நடமாடி வருகின்றன. இதில் உயர்ந்தவர் என்றோ தாழ்ந்தவர் என்றோ பிரித்துப் பார்ப்பதற்கு எதுவும் இல்லை. எனவே சாதிகளை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் சாதிகள் ஏற்பட்ட காலத்தில் அவை பிறப்பை மையமாகக் கொண்டு அமையவில்லை அவர்கள் செய்யும் தொழிலைக் கொண்டே அமைந்தது. மற்றும் அவை ஒருவனுக்கோ அல்லது ஒரு சமூகத்துக்கோ நிரந்தரமாகவும் அமைந்தவை அல்ல அதாவது அவன் செய்யும் தொழில் மாறுபட்டால் அவன் சாதியும் மாறும். ஆனால் இன்று சாதி என்பது பிறப்பை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது. ஒருவர் என்ன தொழில் செய்தாலும் சாதி மட்டும் மாறுவதில்லை. இது இடையில் ஏற்பட்ட மாறுதல்களே ஆகும். இவற்றை நாம் மாற்ற வேண்டும். மனிதன் தோன்றியது ஓர் அணுவில்/ ஓருயிரில் இருந்துதான் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். அப்படியிருக்க அனைவரும் ஒருவருக்கொருவர் உறவுமுறை கொண்டவராக இருக்கவே வாய்ப்புண்டு. ஒவ்வொரு சாதியும் எப்படி உருவாகியது. அதன் வரலாறு என்ன என்பதை அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏன் தங்கள் சாதிதான் பெரிது என்று பேசுகிறவர்கள் கூட‌ அவர்கள் சாதியின் வரலாறு என்ன என்று அறிந்திருக்க மாட்டார்கள். அப்படி அறிந்திருந்தால் ஏற்றத் தாழ்வு பற்றி பேசமாட்டார்கள். அதனால் இங்கே சாதிகளின் வரலாறு என்ன என்பதைக் காண்போம். சாதி என்றால் என்ன? சாதியம் என்றால் என்ன? மனிதன் உலகத்திற்கு வரும்போது தனியாக வருகிறான், உலகத்திலிருந்து செல்லும் போதும் தனியாகவே செல்கிறான்.  ஆனால் இடைப்பட்ட காலத்தில் வாழும்போது அவனால் தனியாக வாழ முடியாது. அதனால் தான் நாகரீகம் தோன்றிய காலகட்டத்தில் மனிதர்கள் இயல்பாகவே கூட்டம் கூட்டமாக குடும்பங்களாகவும், குழுக்களாவும் வாழத் தொடங்கினர்.  இவை பின்னர் சமூகங்களாக மாறின. உலகின் எல்லா சமூகங்களிலும் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் போன்று சில பொதுவான அம்சங்களால் பிணைக்கப்பட்டுத் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டன.  இம்மண்ணில் தோன்றிய சமூக அமைப்புகளின் இன்றைய வடிவமே சாதிகள். தான் சார்ந்த சாதி மேல் என்றும், மற்றவை கீழானவை என எண்ணும் போக்கே சாதியம் எனப்படும்.  அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இவ்வித வரலாற்று அமைப்பு தொடர்வதை மனதில் கொண்டு இத்தகைய போக்கை பிராம்மணீயம் என அழைக்கிறார். ஆனால், ஒவ்வொரு சாதியிலும் தாம் உயர்ந்தவர் பிறர் தாழ்ந்தவர் என்கிற எண்ணம் வேரூன்றியுள்ளது என்பதே நிதர்சனமாகக் காணும் உண்மை. மனிதர்கள் அனைவரும் ஒன்றே. ஒவ்வொரு சாதியினரும் தன்னுள் ஊறிப்போயிருக்கும் இந்த சாதிய எண்ணத்தை அழித்து மனித நேயத்தை வளர்க்க வேண்டும். பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பிரிவுகளாக ஏணிப்படி வரிசையில் எண்ணிப் பார்க்கும் போக்கும் அதற்கு ஏற்றபடி நடக்கும் முறையும் மாற வேண்டும். சிந்தனையில் மாற்றம் வேண்டும். சீர்திருத்த எண்ணம், சமத்துவப் போக்கு வளர வேண்டும். மாந்தரில் சாதி வகுப்பது சரியா? மக்கள் ஒரேகுலமாய் வாழ்வது சரியா? (பாரதிதாசன் கவிதைகள் 50. ஆய்ந்துபார் - 1) என்று கேட்கும் கேள்விக்கு நாம் என்ன பதில் சொல்வோம்? ‘மக்கள் ஒரே குலமாய் வாழ்வதுதான் சரி’ என்று தானே சொல்ல வேண்டும் அதிலும் தமிழகத்தின் பூர்வக்குடிகளாய் உள்ள அருந்ததியர்களை தமிழர்கள் அல்ல எனக் கூறிக்கொண்டு தமிழன் தமிழனை அறியாதவனாக, ஒற்றுமை உணர்வு இல்லாதவனாக, பார்ப்பணீய கொள்கைகளை ஏற்றுக்கொண்டு தன்னை இன்னொருவன் அடிமைப்படுத்துகிறானே என்பதை உணராது தனக்கு கீழே ஒரு சாதி இருப்பதில் பெருமைபட்டுக் கொள்பவனாக தன்னைதானே அழித்துக் கொள்பவனாக இருக்கிறானே! இந்த ஏமாளித்தனத்தைப் பயன்படுத்திகொண்ட பார்ப்பனர்கள் அமைதியாக நல்லவர் போல் நாடகமாடிக் கொண்டு நம் கண்ணை நம் விரலைக் கொண்டே குத்த வழி காட்டும் பார்ப்பணீய, சனாதன, வர்ணாசிரமக் கொள்கையை ஏற்றுக்கொண்ட தமிழன் என்று கைவிடுகிறானோ அன்று தான் தமிழன் மேலும் முன்னேறுவான், கல்வியில் சிறந்து வரலாறு படைக்கும் சாதனையாளர்களாய் மாறுவான். தேடல் என்பது உள்ளவரை அறிவில் தெளிவிருக்கும் என்பதை உணர்ந்து, புவியின் தோற்றம், மனிதகுலத்தின் பரிணாமம் மற்றும் மொழித் தோற்றம், தமிழன் வரலாறு என்ன, சாதிகள் எவ்வாறு, எப்படி தோன்றியது தமிழன் முன்னேற, குறிப்பாய் காலமெல்லாம் அருந்ததியர்களை கல்வி கூட பெற முடியாமல் தடுத்து முன்னேற முடியாமல் வைத்துள்ளார்களே அது ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாக்களுக்கு எனக்கு கிடைத்த பதில்கள், முயற்சிகளின் பலன் தான் இந்நூல். பிறப்பால் யாரும் உயர்ந்தவர் இல்லை. பழைமையை எண்ணிப்பார்க்க நேரிடுமானால் உலகில் அனைவருக்கும், அனைத்துக்கும் மூதாதையர் ஓர் அணு தான். இந்திய அரசியல் சாசனத்தை வகுத்த பேராசான்! உலகெங்கிலும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் இழந்துவிட்ட உரிமைகளைப் பிச்சைக் கேட்டுப் பெறமுடியாது; போராடித்தான் பெற்றாகவேண்டும். கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்! என்று போதித்த புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் தான் கற்ற கல்வியால் உயர்ந்தார். உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் மிக உயர்ந்த பட்டங்களை பெற்றவர். ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட மக்களுக்கு வழி காட்டினார், தீண்டாமையை ஒழிக்க இறுதி மூச்சு வரை தன் உழைப்பைத் தந்து அனைவரும் சம உரிமையுடன் நடத்தப்பட வேண்டும் எனப் போராடியவர். இவற்றிற்கெல்லாம் முழு காரணம் அவர் பெற்ற கல்வி தான். அருந்ததியர்கள் ஆதித்தமிழர்கள், வீரத்தால், உழைப்பால் தன்னிகரற்றவர்கள் எனக் காட்டுவது மட்டுமல்ல நோக்கம். அவர்கள் கல்வியால், பொருளாதாரத்தால், அரசியல் பங்களிப்பால் உயர வேண்டும், வரலாற்றில் முன்னிடம் பெற வேண்டும், பெரியார் வழியில் சம உரிமை, சமத்துவம், சமூக நீதிக்காக போராடி தமிழரின் வாழ்வியல்படி சாதியற்ற சமுதாயம் காண வேண்டும். இதுவே இந்நூலின் முயற்சி என்பதை பணிவோடு தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். கல்வியும், வீரமும், விவேகமும் ஒரு சாதிக்கானதல்ல. அனைவருக்கும் பொதுவானது. அருந்ததியர் வரலாற்றினை ஆய்ந்து, தெளிந்து பல நூல்கள் எழுதியுள்ள “இலக்கிய மாமணி” எழில் இளங்கோவன் அவர்கள் அளித்துள்ள “அணிந்துரை” நூலுக்கு சிறப்பும் பெருமையும் சேர்க்கும் என்பதோடு ஆய்வுத் தேடலுக்கும் வழி வகுத்தால் மேலும் மகிழ்வேன். வெளியிடப்படாத வரலாறுகள் வெளிவர வேண்டும் என்ற உணர்வை கருவூர் இரா. பழனிச்சாமி இந்நூலின் மூலம் மேலெடுப்பது பாராட்டுக்கு உரியதாகும் என்றும் இந்நூல் ஆய்வு நூல் என்பதால் ஆர்வ மேலீட்டால் உலகின் தோற்றம், உயிர்களின் தோற்றம், மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி, தமிழ் திராவிடம் போன்றவைகள் பற்றியும் ஆழ்ந்த செய்திகளுடன் இந்நூலில் எழுதியிருக்கிறார் என்றும் நண்பர் கருவூர் இரா. பழனிச்சாமியின் வரலாறு குறித்தத் தேடலும், ஆய்வும், அதனால் உருவான “அருந்ததியர்கள் ஆதித்தமிழர்களே” என்ற இந்நூலில் காணும் அவரின் உழைப்பும் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் உரியது எனக் குறிப்பிட்டுள்ளார். மகிழ்ச்சி, நன்றி. அணிந்துரையில் அவர் எழுப்பும் கேள்விகளில் உள்ள நியாயத்தை அறிகிறேன். இந்நூல் படித்து சிலர் அந்த ஆய்வினை மேற்கொள்வார்களானால் அதுவே சற்று ஆறுதல் அளிக்கக்கூடியதாக அமையும். அதற்கும் அவரைப் போன்ற ஆய்வுத் தேடல் உள்ளவர்கள் வழி காட்ட வேண்டும் என விரும்புகிறேன். மும்பைப் புறநகர் மாநிலத் திராவிட முன்னேற்றக் கழகச் செயலாளர் மரியாதைக்குரிய திரு அலிசேக் மீரான் அவர்கள் என் உணர்வுகளோடு ஒன்றி “அறிஞர் பெருமக்கள் காட்டிய வழியில் மனிதம், மனித நேயம் போற்றவும், மனித இனம் பாகுபாடின்றி அன்பு காட்டி சமத்துவம், சமூக நீதி காண்போம்” என்பதை வலியுறுத்தி “மதிப்புரை” வழங்கியமைக்கு நன்றி. 40 ஆண்டுகால நட்பு, மும்பை ஒர்லி என்ற பகுதியில் வசித்த போது அங்கே ஒரு படிப்பகத்தைத் தொடங்கி அங்கேயுள்ள இளைஞர்களுக்கு புத்தகங்களை படிக்கக் கூடிய நல்ல வாய்ப்பினை உருவாக்கித் தந்தமை, அருந்ததியர் சமூக மக்கள் முன்னேற்றத்திற்காக, நலனுக்காக ஆற்றிய பணி ஆகியவைகளையும் நினைவோடு குறிப்பிடுகிறார். இந்த நூல் வெறுமனே பொழுது போக்காகப் படித்து விட்டு மறந்து போவதற்கல்ல. மாறாக, தமிழின் பெருமை கூறும் மக்களை, மதித்துப் போற்றத்தக்க மக்களை, இழிவு படுத்தும் கேட்டினைத் தவிர்க்கவும், அவர்களின் பழமையையும் தொன்மையையும் பின்பற்றவும் வேண்டும் என்பதுதான் வாசகர்கள் அறிந்து தெளியத்தக்கது என குறிப்பிட்டுள்ளார். மனமார்ந்த நன்றி. மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் பாவரசு முனைவர் வதிலை பிரதாபன் அவர்கள் “அருந்ததியர் மட்டுமல்ல அனைத்துச் சாதிகளைச் சார்ந்தவர்களும் தெரிந்துகொள்ளத் தக்க உண்மைகள் பல இந்நூலில் புதைந்து கிடக்கின்றன எனவும் மனிதம் சார்ந்த உண்மைகளை உலகெங்கும் வாழும் மனிதயினம் அறியத்தக்க வகையில் மனிதனின் தோற்றம் மற்றும் வாழ்க்கை முறைமையை அறிவியல் பூர்வமாக சமூக அக்கறையோடு அறியப்படுத்தி விழிப்புணர்வூட்டும் நூல். காலங்கடந்தும் பத்திரப்படுத்தி படித்து அறிந்து மனிதம் போற்றும் இன்றியமையாமையை சொல்லிக் கொண்டிருக்கும் நூல்” எனவும் பாராட்டி “பாராட்டுரை” எழுதியுள்ள அவரது பரந்த உள்ளத்திற்கு நன்றி. மராத்திய மண்ணில் வாழ்ந்தாலும் ‘மும்பை இலக்கிய கூடம்’ காணொளி அமர்வு மூலம் வாராவாரம் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களைப் பற்றி பேச வைத்தும், என்னுடைய “திருக்குறள் மும்மொழி நூல் (தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகியவற்றின் மொழி பெயர்ப்பும், ஒலிபெயர்ப்பும் அடங்கியவை)” காஞ்சனை (மும்பை) பதிப்பகம் மூலம் பதிப்பிட்டு மும்பை இலக்கிய கூடம் சார்பில் சிறப்பான நூல் வெளியீட்டு விழா நிகழ்வினை நடத்தி 15.01.2021 அன்று வெளியிட்டும் மேலும் பல நூல்களை வெளியிட்டும் தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சிப் பணியினைத் தன்னலமற்று தொடர்ந்து ஆற்றி வரும் மும்பை புறநகர் தி.மு.க. இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ.இரா. தமிழ்நேசன் அவர்கள் இந்நூலுக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் “வாழ்த்துரை” வழங்கியுள்ளார். “இது போன்றதொரு நூல் இக் காலக்கட்டத்தில் வெளிவருவதென்பது பொருத்தமானதா? அதற்கான வரலாற்று தேவை இருக்கிறதா எனில்”ஆம்" என்ற ஒரு சொல் விடையே போதுமானது தான். தமிழ்ச் சமூகச் சூழலில் விளிம்பு நிலையினும் கடைநிலையில் இருக்கும் சமூகம் தான் அருந்ததியர் சமூகம். இவர்கள் தெலுங்கு பேசுபவர்கள் என்றும், ஆந்திராவிலிருந்து வந்தவர்கள் என்றும் இன்னும் கடுமையாக வந்தேறிகள் என்று உரைப்பதன் மூலம் அப்படி சொல்பவர்கள் சாதிக்க நினைப்பதென்ன என்ற கேள்வி நமக்குள் எழாமல் இல்லை. நூலாசிரியர் தனக்கான நேர்மையோடு வரலாற்றை அணுகி அருந்ததியர் ஆதித்தமிழர் என்று நிறுவுகிறார் .தமிழ்ச் சமூக சூழலில் விளிம்பு நிலையில் வாழ்பவர்கள். அவர்களால் தமிழ்ச் சமூகம் அடைந்த இழிவென்ன? மாறாக ஈராயிரம் ஆண்டுகளாக கல்வியை மறுத்த, அனைத்து விதமான இழிவுகளையும் சுமத்திய இன்றளவும் ஆதிக்கம் செலுத்துகின்ற ஆரிய கூட்டத்தை எதிர்ப்பது தானே தமிழுக்கான, தமிழருக்கான விடிவாக அமையும்" என தனது ஆழமான கருத்தினை வரலாற்றின் பக்கங்களில் பதிவிடுகிறார். அவருக்கும் என்றும் நன்றிக் கடன்பட்டவனாவேன். மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்ற ஆலோசகர் பாவரசு முகவைத் திருநாதன் அவர்கள் இந்நூல் சிறப்பாக அமைய பல ஆலோசைனைகளையும் வழங்கியும் “இந்தியத்துள் யாரும் விரும்பாத வேண்டாத சாதிமுறை தம் அகோர முகத்தை அழுகுபடுத்திக் கொண்டிருக்கிறதென்ற” வேதனையை வெளிப்படுத்தி பகுத்தறிவுச் சிந்தனை கொண்டு நம்முள் மனிதத்தை மட்டும் காப்பதுதான் நாகரீகம் என வலியுறுத்தி “வாழ்த்துரை” வழங்கி ஊக்கப்படுத்தியுள்ளார். இவர்களைப் போன்ற மூத்தவர்களின் வழிகாட்டுதல் மிக மிக அவசியம் என்பதை உணர்கிறேன். மராத்திய மாநில ஆதித்தமிழர் பேரவை செயலாளர் வி.பி. அண்ணாதுரை அவர்கள் வாழ்த்துரை வழங்கியது மட்டுமல்ல என்றும் உற்ற துணையாக இருந்து ஊக்கப்படுத்துபவர். அவருக்கும் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். அருந்ததியர் இனக் காவலர், விழிப்புணர்ச்சிச் சமூகப் போராளி, ஆதித் தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் இரா. அதியமான் அவர்களுடன் கருத்துப் பரிமாறும் போது தமிழகத்தில் அருந்ததியர் இனத்தவரை வந்தேறிகள் எனக் குறிப்பிட்டு சிலர் அறியாமல், புரியாமல் பேசி வருவது மனதை வருத்துகிறது. நான் மும்பையில் வாழ்ந்தாலும் அவர்கள் தெளிவடைய இலக்கிய தரவுகள், கல்வெட்டுச் சான்றுகள், செப்பேடுகள் மூலம் “அருந்ததியர்கள் ஆதித்தமிழர்களே” என்ற தலைப்பில் சிறு நூல் முயற்சி மேற்கொண்டுள்ளேன் எனக் கூறியவுடன் சற்றும் தயங்காது தோழரே இந்நூல் “ஆதித்தமிழர் பேரவை” சார்பாகவே வெளியிடலாம் எனக்கூறி எனது பெருஞ்சுமையை தன்னகத்தே ஏற்றுக்கொண்ட பெருந்தன்மைக்கும் சமூகப் பற்றிற்கும் தலை வணங்குகிறேன். அருந்ததியர்கள் வரலாற்றினை, மாபெரும் வீரர்கள் பற்றிய நூல்களை வெளிக்கொணர்ந்து அருந்ததிய இனத்திற்கு விழிப்புணர்ச்சியூட்டும் பெருமை ஆதித் தமிழர் பேரவையைச் சாரும். அந்த வரிசையில் “அருந்ததியர்கள் ஆதித்தமிழர்களே” என்ற நூலையும் வெளியிட முன்வந்த நிறுவனத்தலைவர் அய்யா அதியமான் அவர்களுக்கும், பொதுச்செயலாளர் தோழர் கோவை இரவிக்குமார் மற்றும் ஆதித் தமிழர் பேரவை நிர்வாகிகளுக்கும், ஆதித்தமிழர் பேரவைக்கும் நன்றி பாராட்டுகின்றேன். எனது அரசியல் மற்றும் எழுத்துப் பணிகளில் ஊக்கமளித்து உறுதுணையாக இருந்த அய்யா த.மு.பொற்கோ, சீர்வரிசை சண்முகராசன், “மனித நேயம் மலரட்டும்”, “வாழ்வுரிமை விழிப்புணர்வு” ஆகிய நூல் சிறப்பாக வெளிவர தன்னலமற்ற பங்களிப்பை அளித்த மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்ற முன்னாள் தலைவர் பேராசிரியர் சமீரா மீரான், சுயமரியாதைச் சுடர் சு. குமணராசன், கவிதாயினி புதிய மாதவி ஆகியோர் என்றும் நன்றிக்குரியவர்கள். சிலர் மறைந்தாலும் அவர்களை என்றும் நெஞ்சம் மறப்பதில்லை. கவிஞர் ஜெ.சுகுமாறன் அவர்கள் இந்நூலில் பிழைத்திருத்தம் செய்து செம்மைப்படுத்தியமைக்கு நன்றி. எனது நூல்கள் வெளிவர தார்மீக ஆதரவு மட்டுமல்ல கழகப்பணிகளில் துணையாக, உறுதியுடன் நின்று பேராதரவு தரும் மும்பை தி.மு.க. அவைத்தலைவர் வே.ம.உத்தமன் அவர்களுக்கும், நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். எப்பணி செய்தாலும் அப்பணிக்கு பொறுமை காத்து பெருந்துணையாக இருந்து வரும் துணைவியார் திருமதி ப. சின்னம்மாள், மகள்கள் பூங்கோதை ஜனார்தன், வெற்றிக்கனி சண்முகம், முத்துச்செல்வி பழனிச்சாமி, தேன்மொழி சேகர் ஆகியோரும் பேத்தி பேரன்களும் என்றும் நெஞ்சில் நிறைந்தவர்கள். கருவூர் இரா. பழனிச்சாமி புவி மற்றும் உயிர் தோற்றம் சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இந்த சோலார் நெபுலா வெடித்து சிதறியதால் உருவானது தான் இந்த சூரிய மண்டலம். சோலார் நேபுலாவின் மையப்பகுதி சூரியன் ஆனது. அதன் சிதறல்கள் மற்ற கோள்களாகவும், அதிலிருந்து துணை கோள்களும் உருவாகின. இந்த கோள்களில் ஒன்று தான் நம் பூமி. பூமியின் வயது 450 கோடி ஆண்டுகள். பூமி அதன் தாயான சூரியனை சுமார் மணிக்கு 107,000 கிமீ வேகத்தில் சுற்றி வருகிறது. இதற்கு காரணம் சூரியனின் ஈர்ப்புவிசை என்பது நமக்குத் தெரியும். ஓயாத சுழற்சியினால் தான் பூமி உட்பட அனைத்து கோள்களும் கோள வடிவம் பெற்றன. பூமியின் மேற்பரப்பு குளிரத் தொடங்கியது. ஆனால் உட்பகுதியில் இருந்த வெப்ப அழுத்தத்தின் காரணமாக எரிமலைகள் வெடித்து கார்பன்-டை-ஆக்ஸைட், நீராவியை பெருமளவில் வெளியேற்றின. ஆரம்ப காலத்தில் பூமியில் ஆக்சிஜன் இல்லை. இவ்வாறு வெளியேறிய நீராவி காலப்போக்கில் குளிர்ந்து நீராக மாறி பூமியின் ஆரம்ப கடல் தோன்றியது. கடலுக்குள் நிகழும் ஒரு இயற்கையான நிகழ்வு ஹைட்ரோ தெர்மல் வெண்ட். அதாவது பூமியிலிருந்து வெப்பம் மற்றும் கணிமங்கள் கடல் நீரில் வெளியேறும். இந்த பகுதியில் கடல் நீர் வெப்பமாகவும், கணிம சத்துகள் மிகுதியாக இருக்கும். இது ஆழத்தில் நிகழ்வதால் சூரியனின் புறவுதா கதிர்கள் இந்த பகுதியை அடைந்து இருக்க முடியாது. எனவே கடலில், இப்பகுதியில் தான் உலகின் முதல் உயிரினம்- (Unicellular) ஒற்றை உயிரணு சயனோபாக்டீரியா தோன்றியது. சயனோ பாக்டீரியா ஒரு ஒளிசேர்க்கை செய்யும் உயிரி. இது உயிர்வாழ CO_2, நீர், சூரிய ஒளி போதும். இவை அனைத்தும் கடலில் கிடைத்ததால் இந்த ஒளிசேர்க்கை செய்யும் சயனோபாக்டீரியா முதல் உயிரியாக நீரில் உருவானது. இது பல்கி பெருகத் தொடங்கியது. இந்த ஒளிசேர்க்கை செய்யும் சயனோபாக்டீரியா பல மில்லியன் ஆண்டுகளாக மாற்றம் அடைந்து நீர் வாழ்த் தாவரமாக மாறின. அங்கிருந்து நிலத்திற்கு பரவின. தாவரங்களுக்கு ஆக்சிஜன் தேவை இல்லாததால் அவை, அப்போது பூமியில் இருந்த CO_2, மழை நீர், சூரிய ஒளி கொண்டு வளர தொடங்கின. பூமியில் மேலும் பல வகையான உயிர்கள் தோன்றக் காரணம் ஆயின. இந்த மாற்றங்கள் நிகழ நாம் பூமிக்கு நானூறு கோடி ஆண்டுகள் தேவைப்பட்டன. இந்த நானூறு கோடி ஆண்டுகளில் நிகழ்ந்த மாற்றங்களே வெறும் நெருப்பு கோளமாக இருந்த பூமியை உயிர்கள் உருவாகி நாம் வாழும் இந்த உலகமாக மாற்றியது. இது தான் நம் பூமியின் வரலாறு. ⁽¹⁾ அறிவியல் வரலாறு பூமியின் வரலாறு – பெருவெடிப்பு தொடங்கி உயிர் தோற்றம் வரை சுருக்கம் பூமியின் வரலாறு. நாம் வாழும் பூமி உருவானது சோலார் நெபுலா வெடிப்பிலிருந்து தான். இந்த சோலார் நெபுலா என்பது சூப்பர் நொவா என்னும் முதல் பெரு வெடிப்பில் இருந்து வந்தது. சற்று விரிவாக பார்த்தால், சூப்பர் நொவா தான் இந்த யூனிவர்ஸ் அல்லது பிரபஞ்சத்தின் தாய். […] சுமார் 13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த சூப்பர் நொவா எனும் மிகப்பெரிய எரியும் கோளம் வெடித்து சிதறியது. அதிலிருந்து அண்டம் முழுவதும் எறியப்பட்ட சிதறல்கள் தான் நாம் இப்போது காணும் மில்லியன் கணக்கில் நட்சத்திரங்கள். அதில் ஒன்று தான் சோலார் நெபுலா எனும் தூசு மற்றும் ஹீலியம், ஹைட்ரஜன் நிரம்பிய நெருப்பு பந்து. […] […] பூமியின் மேற்பரப்பு குளிர தொடங்கியது. ஆனால் உட்பகுதியில் இருந்த வெப்ப அழுத்தத்தின் காரணமாக எரிமலைகள் வெடித்து கார்பன்டை ஆக்ஸைட், நீராவி பெருமளவில் வெளியேறின. இதனுடன் சிறிதளவு, மீதேன் மற்றும் அமோனி யாவும் வெளியேறின. ஆரம்ப காலத்தில் பூமியில் ஆக்சிஜன் இல்லை. இவ்வாறு வெளியேறிய நீராவி காலப்போக்கில் குளிர்ந்து நீராக மாறி பூமியின் ஆரம்ப கடல் தோன்றியது. பூமியிலிருந்து நீராவி வெளியேறுவது இன்றும் சில இடங்களில் நிகழ்கிறது.  […] […] கடலுக்குள் நிகழும் ஒரு இயற்கையான நிகழ்வு ஹைட்ரோ தெர்மல் வெண்ட். அதாவது பூமியிலிருந்து வெப்பம் மற்றும் கனிமங்கள் கடல் நீரில் வெளியேறும். இந்த பகுதியில் கடல் நீர்வெப்பமாகவும், கனிம சத்துகள் மிகுதியாக இருக்கும். இது ஆழத்தில் நிகழ்வதால் சூரியனின் புறஊதா கதிர்கள் இந்த பகுதியை அடைந்து இருக்க முடியாது. எனவே கடலில், இப்பகுதியில் தான் உலகின் முதல் உயிரினம்- சயனோ பாக்டீரியா தோன்றியது. […] இந்த சயனோ பாக்டீரியா ஒரு ஒளிசேர்க்கை செய்யும் உயிரி. இது உயிர்வாழ கார்பன்டை ஆக்ஸைட், நீர், சூரிய ஒளி போதும். இவை அனைத்தும் கடலில் கிடைத்ததால் இந்த ஒளிசேர்க்கை செய்யும் சயனோபாக்டீரியா முதல் உயிரியாக இந்த உலகில் உருவானது. […] இது பல்கி பெருக தொடகியது. இந்த ஒளிசேர்க்கை செய்யும் சயனோபாக்டீரியா பல மில்லியன் ஆண்டுகளாக மாற்றம் அடைந்து நீர் வாழ் தாவரமாக, மாறின. அங்கிருந்து நிலத்திற்கு பரவின. தாவரங்களுக்கு ஆக்சிஜன் தேவை இல்லாததால் அவை, அப்போது பூமியில் இருந்த கார்பன்டை ஆக்ஸைட், மழை நீர், சூரிய ஒளி கொண்டு வளர தொடங்கின. […] இவ்வாறு பூமி முழுவதும் உண்டான தாவரங்கள் கார்பன்-டை-ஆக்ஸைட்யை கிரகித்து ஆக்ஸிஜனை வெளியிட்டன. இதனால் கார்பன்-டை-ஆக்ஸைட் அளவு குறைய தொடங்கி அவை பிராண வாயுவாக மாறின. மேலும் ஒரு பகுதி கார்பன்டை ஆக்ஸைட் படிமங்களாகவும், கடலிலும் கரைந்தன. […] இவ்வாறாக கார்பன்டைஆக்ஸைட் அளவு குறைந்தது. ஆக்சிஜன் அளவு அதிகரித்தது. இந்த ஆக்சிஜன் UV கதிர்கள் எனும் புறஊதா கதிர்களால் தாக்கப்பட்டு 0_3 எனும் ஓசோன் மண்டலம் உருவானது. இந்த ஓசோன் மண்டலம் தான் பூமியை புறவுதா கதிர்களிடம் இருந்து காப்பாற்றி பூமியில் மேலும் பல வகையான உயிர்கள் தோன்ற காரணம் ஆயின. […] இவ்வுலகம் மட்டுமல்ல, அண்ட வெளியில் காணும் அனைத்துப் பொருள்களும் அணுக்களின் திரட்சியால் ஆனவை. சடப் பொருளும் அணுக்களின் திரட்சி தான். கண்ணுக்குத் தெரியாத ஒவ்வொரு அணுவுக்கு உள்ளும் மூன்று கூறுகள் இருக்கின்றன. அவை புரோட்டான் என்ற உயிர்ப்பொருள், நியூட்ரான் என்ற அசைவற்ற நிலை, எலெக்ட்ரான் என்ற இயக்கம். இவைகளால் ஏற்படும் அணுவுக்கும் உள்ளான இயக்க நிலை, அவ்வணுக்களால் ஆக்கப்பட்ட சடப்பொருளுக்குள்ளும் ஏற்படுகிறது. சாங்கியத்தின் நிறுவனர் கபிலர், “பிரகிருதி என்ற மூல இயற்கையிலிருந்து தோன்றுவது பிரதானம். அது சடப்பொருள். அதில் இருந்து இயல்பாகவும், இயற்கையின் நியதியாகவும் தோன்றியது உலகம்” என்று சொல்வதன் மூலம் உலகின் பரிணாம வளர்ச்சியை மிகச்சரியாகத் தொடுகிறார்^(.) “நிலம்நீர் தீவளி விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்” (தொல்.மரபு–90) என்கிறது தொல்காப்பியம். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து பொருட்களின் கலப்பே உலகம் இது தொல்காப்பியர் தமிழ் மரபு. . தொடக்க கால கிரேக்க தத்துவ சிந்தனையாளர் தேல்ஸ் “உலகம் தோன்ற அடிப்படைக் காரணம் நீர்” என்றும், ஹெராக்ளிடஸ் “நெருப்பு தான் அடிப்படை” என்றும், அனாக்சிமென் “காற்று தான் உலகத் தோற்றத்தின் அடிப்படை” என்றும், கூறினர். இவர்கள் தனித்தனியாகச் சொன்னதை எம்படோக்ளிஸ் ஒருங்கிணைத்துச். “உலகத் தோற்றத்திற்கு அடிப்படை நீர், நெருப்பு, காற்று, நிலம்” என்று சொன்னார். அதே காலகட்டத்தில் (கி.மு. ஆறாம் நூற்றாண்டில்) இங்கே வாழ்ந்த புத்தர் சொல்கிறார், நான்கு கந்தங்களில் இருந்து உலகம் தோன்றியது என்று. கந்தம் என்பது நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகியவைகளைக் குறித்து சொல்லப்பட்ட சொல்.⁽²⁾ புவியின் நீண்ட நெடிய வரலாற்றை நிலவியல் ஆய்வாளர்கள் நெடுங்காலம் (Era), காலம் (Period), ஊழி (Epoch) என்று பிரிக்கிறார்கள். ஒரு பில்லியன் = 100 கோடி; 1 மில்லியன் = 10 லட்சம் - நுண்ணுயிரிகளின் வடிவில் உயிர்கள் தோன்றியதற்கான சான்றுகள் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் காணப்படுகின்றன. - சுமார் 600 முதல் 542 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்லுயிரூழியில் (Proterozoic) பல செல் உயிரினங்கள் முதலில் தோன்றின. - பழந்தொல்லுயிருழீயல் (Palaeozoic -542 முதல் 251 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) மீன்களும், ஊர்வனவும், பல்வேறு தாவரங்களும் தோன்றின. - இடைத் தொல்லுயிரூழி (Mesozoic) காலகட்டத்தில் (251 முதல் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) டைனோஸர்கள் வாழ்ந்தன. - ஆஸட்ரோலாபித்திஸைப், என்பதற்குத் ‘தெற்கத்திய மனிதக் குரங்கு’ என்று பொருள். சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பாலூட்டிகள் காலத்தில் (Cenozoic) தோன்றின. ⁽³⁾ […] இயற்கை என்பது இயல்பானது; மனித சக்தியில்லாமல் தானே தோன்றிய பொருள்கள் அனைத்தும் இயற்கை எனப்படும். உலகில் தோன்றிய உயிரினங்கள் அனைத்தும் அறிவு பெற்றவையாக உள்ளன. அவற்றின் உணரும் சக்திக்கேற்ப ஓரறிவு, ஈரறிவு, மூவறிவு, நாலறிவு, ஐந்தறிவு, ஆறறிவு உயிர்கள் எனப் பகுத்துக் காட்டியவர் நம் தொல்பழமை தொல்காப்பியர். தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்திலுள்ள 27 மரபியல் பகுதியில் இந்த நூற்பா இடம்பெற்றுள்ளது: ⁽⁴⁾ ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே இரண்டு அறிவதுவே அதனொடு நாவே மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே. (1526) இவற்றுள் முதல் ஐந்தறிவு தோல், வாய், மூக்கு, கண், காது ஆகியவை துளையிட்டுக்கொண்டு வெளிப்படும் ஐம்பொறிகள். ஆறாம் அறிவாகிய மனம் துளையிடப்படாமல் வெளிப்படுவது ஆகும். ஓரறிவு முதல் ஆறறிவு வரை இன்பம் நுகரும் ஆவல் கொண்ட உயிரினமே உலகில் பரந்து விரிந்துள்ளன எனலாம். - புல்லும், மரமும் உற்றறியும் தொடு உணர்வைக் கொண்ட ஓரறிவு உயிரினமாகும். - நத்தை, சிப்பி போன்றவை தொடு உணர்வோடு உண்ணுதல் என இரண்டறிவுப் பெற்ற உயிரினமாகும். - எறும்பு, சிதல் (கரையான்) போன்ற உயிரினங்கள் மெய்யால் தொடும் உணர்வு வாயால் பூசிக்கும் உணர்வோடு மூக்கால் முகரும் அறிவு ஆகிய மூன்றறிவு உயிரினமாகும். - நீரிலும், நிலத்திலும், வானத்திலும் வாழும் முதலை,ஆடு ,மாடு, குரங்கு, பறவைகள் தொடு உணர்ச்சியறிவு, வாயால் சுவைக்கும் அறிவு, கண்களால் பார்க்கும் அறிவு, காதால் கேட்கும் அறிவையும் சேர்த்து ஐந்தறிவு உயிரினமாகும். - உயிரின படைப்பில் உயரிய படைப்பாக, மேற்கூறிய ஐந்தறிவுகளோடு சிந்தித்துச் செயல்படும் திறன் கொண்ட மனம் என்னும் ஆறாம் அறிவைப் பெற்ற உயிரினமாக மனித இனம் திகழ்கிறது. ஆனால் ஆறாம் அறிவுக்கும் மேலானதாக ஏழாம் அறிவு என்று ஒன்றுள்ளதாகப் பல அறிஞர்களும், சான்றோர்களும் எடுத்துக் காட்டியுள்ளனர். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருவள்ளுவர் கூட எடுத்துக் காட்டியுள்ளார். அந்த ஏழாம் அறிவு என்பது எது ? ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல். (திருக்குறள்: 702 ) சிறிதும் ஐயமே இல்லாத வகையில் எதிரில் உள்ளவரின் உள்ளத்தில் உள்ள உணர்வுகளை முழுமையாக உணர்ந்தும், தன் எண்ணத்தை அவர்க்கு உணர்த்தி இயங்க வைக்கும் வலிமைக் கொண்டவரைத் தெய்வத்தோடு இணையாக வைத்துப் போற்ற வேண்டும். ⁽⁵⁾ நன்றியுடன் சான்றாதாரக் குறிப்புகள் 1. பூமியின் வரலாறு – பெருவெடிப்பு தொடக்கம் உயிரதோற்றம் வரை varalattruariviyal.blogspot.com Friday 24 June 2016. Google 2. எழில் இளங்கோவன் - இந்திய தத்துவ சிந்தனையில் வேதமரபும், வேதமறுப்பும் – 4. சாங்கியம், பக்கம் 55: வெளியீடு-கருஞ்சட்டைப் பதிப்பகம் 3. மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் : வரலாற்றுக்கு முந்தைய காலம் 9th Social Science Leon 1 Notes in Tamil (Google) 4. தொல்காப்பியம், பொருளதிகாரம் மரபியல். 27 -1526 5. திருக்குறள் – 702 மனிதகுலத்தின் பரிணாமம் மற்றும் மொழித் தோற்றம் ஆதியில் ஹோமோ ஹபிலிஸ் - ஹோமோ சேபியன்சிஸ் மொழியைப் பயன்படுத்தும் வல்லமையற்ற, மனிதரல்லாத மூதாதையிலிருந்து தோன்றினர் எனத்தெரிகிறது. பின் இரண்டு கால்களில் நடந்து திரிந்த ஹோமோ எரக்டஸ் எனப்படும் இனத்தவர்களின் தொன்மைப் படிமங்களில் இதுபோன்ற விரிவு இல்லை. எனவே மனிதர்கள் எப்போது மொழியைப் பயன்படுத்தத் தொடங்கி இருப்பார்கள் என்பதற்கான அடிப்படை கால வரையறை கிடைக்கவில்லை. ‘’உண்மையில் நியாண்டர்தால் மனிதர்கள், நம்மைவிட பெரிய உருவத்தினர் என்பதால், அவர்களுடைய மூளையின் அளவு நமது மூளையின் அளவைவிடப் பெரியதாக இருந்திருக்கிறது’’ என்று பேராசிரியர் டாலர்மேன் கூறுகிறார். பரிணாம வளர்ச்சியில் அழிந்து போய்விட்ட நியாண்டர்தால் மனிதர்களின் தொன்மை படிமங்களை ஆய்வு செய்ததில், அவர்கள் 600,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் என்றும், உதர விதானம் அவர்களுக்கு விரிந்து இருந்ததும் தெரிய வருகிறது. சிம்பன்சிகளுக்கு அறிந்து கொள்ளும் தன்மை, அறிவு, விருப்பு என்பவை இருப்பதை ஒவ்வொரு சிம்பன்சியும் புரிந்து கொள்கிறது எனத் தெரியவந்தது. உயிர் வாழ்வதற்கு சாப்பிட்டாக வேண்டும் என்ற உந்துதல் காரணமாக, உணவு போன்றவை கிடைத்திருக்கும் தகவலை ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வதற்கான திறனை மனிதன் உருவாக்கும் தேவை ஏற்பட்டிருக்கலாம்.. மொழிப் பயன்பாட்டுக்கு மனக் கோட்பாடு தேவை. சைகைகள், ஒலி, அடையாளக் குறி, சித்திரங்கள் போன்றவை முழுமையான மனக் கோட்பாட்டு வளர்ச்சிக்கு வழி வகுத்தது. பின்னரே, மனிதர்களிடம் மொழிப்பயன்பாடு தோன்றியது என்கிறார் பேராசிரியர் டாலர்மேன். நியாண்டர்தால்கள் 2007 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட நியாண்டர்தாலின் நாவடி எலும்பு ஒன்று, நியாண்டர்தால்கள் தற்கால மனிதர்களுடையதை ஒத்த ஒலிகளை எழுப்புவதற்கான வல்லமையைக் கொண்டிருக்கக்கூடும் என்ற கருத்தை வலுப்படுத்துகிறது. நாவடிக் கால்வாய் ஊடாகச் செல்லும் நாவடி நரம்பு, நாக்கின் அசைவுகளைக் கட்டுப்படுத்துகிறது. அதன் அளவு, பேச்சு வல்லமையை எடுத்துக் காட்டுவதாகக் கூறப்படுகிறது. 300,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஒமினிட்டுக்களுடைய நாவடிக் கால்வாய் தற்கால மனிதருடையதைக் காட்டிலும், சிம்பன்சிகளுடைய நாவடிக் கால்வாய்களையே கூடிய அளவுக்கு ஒத்திருந்தது. நியாண்டர்தால்கள் பேசுவதற்குரிய உடற்கூறுகளைக் கொண்டிருந்திருப்பினும் அவர்கள் ஒரு முழுமையான மொழியைக் கொண்டிருந்திருப்பார்கள் என்பது ஐயத்துக்கு உரியதே என 2004 ஆம் ஆண்டில் ரிச்சார்ட் ஜி. கிளெயின் (Richard G. Klein) என்பார் கூறியுள்ளார். உடற்கூறுகள் தேவையான அளவுக்கு வளர்ச்சி பெற்றிருந்தால் கூட நியாண்டர்தால்களின் மூளை தற்கால மொழிகளை யொத்த மொழியொன்றைப் பேசுவதற்கான சிக்கல் தன்மையைக் கொண்டிருந்திருக்க முடியாது எனக் கிளெயின் கருதுகிறார். பரிணாமவியல் அறிவியல்: எப்படித் தோன்றினோம்? எங்கிருந்து வந்தோம்? அறிவியல், வரலாறு இரண்டுக்குமே ஆதாரங்கள் அவசியம். வரலாற்றைத் தங்களுக்கு வசதியாக மாற்றிக்கொள்ள நினைப்பவர்கள், அறிவியல் ஆதாரங்களைத் தீவிரமாக எதிர்க்கிறார்கள். மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியது. இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய ஹோமோ சேப்பியன்ஸின் (Homo sapiens) புதைபடிவம் ஒன்று எத்தியோப்பியாவின் ஒமோ கிபிஷ் (Omo Kibish) என்ற இடத்தில் கிடைத்துள்ளது. தற்கால மனிதச் சிற்றினமான ஹோமோ சேப்பியன்ஸ், 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ எரக்டஸில் (Homo erectus) இருந்து தோன்றியது. வாலில்லாக் குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பொது மூதாதை இருந்தது. அதிலிருந்தே மனித இனம் தோன்றியது. ஒரு குழு தன் தாய்நிலத்திலிருந்து இடம்பெயர்ந்து வேறொரு நிலப் பகுதியில் குடியேறிய பிறகு, புதிய நிலத்தில் நிலவும் காலநிலை, தட்பவெப்பநிலை, புவியியல் தன்மை ஆகியவற்றுக்கு ஏற்பத் தகவமைத்து வாழத் தொடங்குகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக இப்படி வாழும்போது இயல்பாகவே உடல் தோற்றம், நிறம் போன்றவை சுற்றுச்சூழலுக்கு ஏற்பத் தகவமைத்துக்கொண்டு மாறிவிடுகின்றன. இதைப் பரிணாமவியல் கொள்கையின் ஒரு பகுதியாக டார்வின் விளக்கியிருக்கிறார். சார்லஸ் டார்வின் இங்கிலாந்து நாட்டின் வரலாற்று மேதை திரு. சார்லஸ் டார்வின் எழுதிய “உயிரினத்தோற்றம்” வாயிலாக கடல் வாழ் உயிரினங்கள், மற்றும் குரங்கையொத்த உருவைக் கொண்ட “மாந்தன் (Lemuria)” போன்ற உயிரினத் தோற்றங்களை அறிகின்றோம். மேலும் ‘மனிதனின் பாரம்பரிய வளர்ச்சி’ என்னும் நூலின் வாயிலாக குமரிமாந்தனையும், மனித இன பரிணாம வளர்ச்சியையும் உணரமுடிகிறது. சார்லஸ் டார்வின் “உயிரினக்களின் தோற்றம் குறித்து” (On the Origin of Species) என்ற நூலை 1859லும், மனிதனின் தோற்றம் (The Descent of Man) என்ற நூலை 1871லும் வெளியிட்டார். இயற்கைத் தேர்வு – தங்களது சூழ்நிலைக்கு சிறந்த முறையில் தகவமைத்துக் கொள்ளும் உயிரினங்கள் பிழைத்து, அதிகமாக இனப் பெருக்கம் செய்து பல்கிப் பெருகும் செயல்முறை இயற்கைத் தேர்வு எனப்படும். தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும் – என்பது அடுத்தடுத்த தலைமுறைகளில் தனது சந்ததியை அதிக எண்ணிக்கையில் விட்டுச் செல்லும் ஓர் இனம் உழைத்து நீண்டு வாழ்வதைக் குறிக்கிறது. புதை படிவங்கள் (Foils) – கடந்த காலத்தில் வாழ்ந்த விலங்குகள், தாவரங்களின் எச்சங்கள், தடங்கள், அடையாளங்கள் அப்படியே பாதுகாக்கப்பட்டிருப்பது புதைபடிவங்கள் (Foils) எனப்படும். கனிமமாக்கல் (Mineralization)காரணமாக விலங்கின் எலும்புக்கள் அப்படியே பாதுகாக்கப்பட்டு விடும். புதைபடிவுகள் குறித்த ஆய்வு புதைபடிவ ஆய்வியல் (Palaeontology) என்று அழைக்கப்படுகிறது. […] ஹோமோ சேப்பியன்ஸ் எனப்படும் மனித இனம் ஆப்பிரிக்காவில் இருந்து 65,000 ஆண்டுகளுக்கு முன் இந்தியா, வடக்கு ஆசியா உள்ளிட்ட பகுதிகளுக்குப் பரவியது. அந்தக் காலத்தில் இருந்த நிலப் பாலங்கள் வழியாக வெவ்வேறு கண்டங்களுக்கு அவர்கள் நடந்தே சென்றடைந்தார்கள். இந்தப் பரவல் மத்தியத் தரைக்கடல் நாடுகள் வழியாகவே நடைபெற்றிருக்க வேண்டும். ஏனென்றால், நன்கு வளர்ந்த மனித நாகரிகம் அந்தப் பகுதியிலேயே அறியப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் இந்த நிலத்திலேயே தோன்றியவர்கள் இல்லையா? திருவள்ளூர் மாவட்டம் அத்திரம்பாக்கத்தில் 2.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட கற்கால ஆயுதங்கள் கிடைத்துள்ளன. இந்தியாவில் கண்டறியப்பட்ட மிகப் பழமையான கற்கால ஆயுதங்கள் இவை. அத்துடன், 65,000-50,000 ஆண்டுகளுக்கு முன் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் சென்னை பல்லாவரம், வடமதுரை, செங்கல்பட்டு, அச்சிறுபாக்கம் போன்ற பகுதிகளில் கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் இரண்டு வகை மனித மண்டையோடுகள் கிடைத்துள்ளன. ஒன்று ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களுடைய ஆஸ்திரலாய்டு மண்டையோட்டைப் போலவும், மற்றொன்று மத்தியத் தரைக்கடல் பகுதி மக்களின் மண்டையோட்டைப் போலவும் இருந்தன என்று லண்டனைச் சேர்ந்த பேராசிரியர்கள் எலியட் ஸ்மித், ஸக்கர்மேன் ஆகியோர் 1930-லேயே நிரூபித்துள்ளார். முதல் வகை மண்டையோடு தற்போதைய தமிழகப் பழங்குடிகளுடன் ஒத்துப்போகிறது. மற்றொன்று தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் திராவிட மக்களின் மண்டையோடு போன்றுள்ளது (மனிதப்பரிணாமவியல் வகைப் பாட்டின்படி தமிழ் மக்கள் திராவிடர்கள் என்றே வகைப்படுத்தப்படுகிறார்கள்). மரபியல் ஆய்வுகளும் இதைத் தெளிவுபடுத்து கின்றன. ஆஸ்திரேலிய அபாரிஜினப் பழங்குடிகளின் டி.என்.ஏ., மலைக்கள்ளர் டி.என்.ஏ. உடன் ஒத்துப்போவதால், மனிதர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வழியாகவே ஆஸ்திரேலியாவுக்குப் பரவியிருக்க வேண்டும். லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் கற்காலத்தில் தமிழக நிலப் பகுதியில் மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. அந்தக் காலகட்டத்தில் மிகப் பெரிய அளவில் அறிவு வளர்ச்சியை எட்டியிருக்காத அவர்களின் எண்ணிக்கை, குறைந்த அளவிலேயே இருந்தது. வேட்டையாடி, உணவு சேகரிக்கும் வாழ்க்கை முறையையே அவர்கள் பின்பற்றி வந்தார்கள். இன்றைய பழங்குடிகளிடம் அவர்களுடைய மரபுக்கூறு, பண்பாட்டு எச்சங்கள் போன்றவை மிச்சமிருப்பதைப் பார்க்கலாம். கற்கால மனிதர்களின் தொடர்ச்சியாகப் பழங்குடிகளைக் கருதலாம். அதேநேரம், சமவெளிப் பகுதிகளில் இன்றைக்குப் பல்கிப் பெருகியுள்ள தமிழ்நாட்டு மக்கள், சிந்துவெளியில் இருந்து இடம்பெயர்ந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள். ஏற்கெனவே கற்காலத்திலிருந்து இங்கு வாழ்ந்துவந்த மனிதர்களுடன் அவர்கள் கலந்தார்கள். அந்தக் கலப்பில் பிறந்தவர்களே இன்றைய திராவிட, தமிழ் மக்கள். வரலாற்று அகழாய்வு ஆதாரங்களும் மரபணு ஆதாரங்களும் இதை உறுதிப்படுத்துகின்றன. ⁽¹⁾ பரிணாம வளர்ச்சியில் தற்கால மனிதனுக்கு முந்தைய மனிதச் சிற்றினங்கள் அனைத்துமே இல்லாமலாகிவிட்டன. […] நன்றியுடன் சான்றாதாரக் குறிப்புகள் 1. மொழியின் தோற்றம் https://ta.wikipedia.org/s/kp3 பேராசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தியின் ‘தமிழரும் தாவரமும்’ நூல் 2. மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் : வரலாற்றுக்கு முந்தைய காலம் 9th Social Science Leon 1 Notes in Tamil. தமிழ் மொழியும் திராவிடமும் தமிழ் மொழி, தமிழர்கள் வாழ்வியல் பற்றி முச்சங்க வரலாறு, சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். குமரிக்குத் தெற்கேயுள்ள நிலப்பகுதியே தமிழ் மக்கள் வாழ்வதற்குத் தக்க நிலையை அடைந்தது. அங்குதான் முதன் முதலில் மக்கள் தோன்றி வளர்ந்து நாகரிகத்தை உலகிற்குப் பரப்பினர்.-அறிஞர் ஹெக்கல். தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலெமுரியாக் கண்டம், தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்கங்கள் குறித்து இறையனார் களவியல் உரை கொடுக்கும் கால வரையறையின் படி குமரி நிலத்தின் “ப∴றுளி ஆறு” பாய்ந்த மதுரையில் முதல் தமிழ் சங்கம் சுமார் 4440 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றதாக குறிப்பிடுகிறது. இந்த கால எல்லையின் முடிவில் முதல் கடல்கோள் ஏற்பட்டு குமரி நிலத்தின் ஒரு பகுதியை கடல் கொண்டுவிட்டதாக சிலப்பதிகார உரை கூறுகிறது. இதன் பிறகு குமரி நிலத்தின் கபாடபுரத்தில் பாண்டியர்களின் அரசு மீண்டும் அமைந்தது. அடுத்து இரண்டாம் தமிழ் சங்கம் சுமார் 3750 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றன. இதன் முடிவில் இரண்டாம் கடல்கோள் அழிவு நிகழ்கிறது. குமரி நிலத்தின் கபாடபுரமும் கடலுக்குள் மூழ்கிறது. அடுத்து வந்த 1850 ஆண்டுகள் மூன்றாம் தமிழ் சங்கம் தொடர்ந்து செயல்படுகிறது. இதன் முடிவில் இறுதியும் மூன்றாவதுமான கடல்கோள் பேரிடர் நிகழ்கிறது. இந்த அழிவோடு குமரி நிலம் ஒட்டுமொத்தமாக கடலுக்குள் சென்று விடுகிறது. இறையனார் உரை குறிப்பிடும் மூன்றாம் இறுதி கடல்கோள் அழிவு நடைபெற்றதற்கான நிலவியல் ஆதாரங்களை வரலாற்றாய்வுலகமே தற்போது உறுதி செய்திருக்கிறது.. சுமார் கி.மு 15,000 ஆண்டுகளுக்கு முன் முதல் முறையாக உலகம் முழுவதிலும் கடலின் நீர் மட்டம் உயர்ந்து பேரழிவு ஏற்பட்டதாக ஆய்வுகள் உறுதி செய்கின்றன. சுமார் கி.மு 11350 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் முறையாக உலகம் முழுவதிலும் கடலின் நீர்மட்டம் உயர்ந்து பூமியின் பெரும்பகுதி நிலங்கள் கடலுக்குள் சென்றதாக நிலவியல் ஆய்வுகள் சொல்கின்றன. இன்றிலிருந்து சுமார் 9500 ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதிலும் கடலின் நீர்மட்டம் உயர்ந்து பூமியில் மிகப்பெரும் பேரழிவுகள் நிகழ்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. முதல் சங்கம் இயங்கிய ஆண்டுகளான 4440 ஆண்டுகளுடன் சேர்ப்போமானால் 19440 ஆண்டுகள் வரும். அப்படியெனில் அதற்கு முன்பே ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தமிழர்கள் வாழ்ந்து தமிழ் இலக்கியம் படைத்துள்ளார்கள் என்பது தெளிவு. பாண்டியன் ஆட்சிக்காலத்தில் முதல் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சிவன் என்போரும் உண்டு. அடுத்து நம் மனிதில் எழும் கேள்வி சிவன் தலைமையேற்று நடத்திய முதல் சங்கமே ஆழிப் பேரலையில் மூழ்கிவிட்டதே எனத்தோன்றும். அப்படியெனில் சிவன் ஆற்றல்மிகு மனிதனாக நல்லதையெண்ணி செயல்படுத்திய நல்லவராக இருந்திருக்கலாம். மூதாதையரும், சித்தர்களும், வீரரும் தெய்வங்களாவது தொடர்ந்து நிகழ்ந்து வந்தது. விவேகமும் புகழும் மிகுந்தவர் என்றவகையில் சிவன் தெய்வமாக ஆனது இயல்பானதே. மனிதர்களைக் கடவுள் போல ஆக்குவது என எண்ணிப் போற்ற வாய்ப்புண்டு. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும். (திருக்குறள்: 50)  தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான். முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட் கிறையென்று வைக்கப் படும். ( திருக்குறள் : 388) நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப் படுவான். கடலியல் தரவுகளும் (Oceanographic Records) மூன்று வெவ்வேறு காலக் கட்டங்களில் முறையே கி.மு 15100, கி.மு 11350, கி.மு 9550 ஆண்டுகளுக்கு முன் பூமியின் கடல் நீர் மட்டம் சுமார் 120 - 130 மீட்டர்களுக்கு உயர்ந்திருப்பதாக சொல்கின்றன. மூன்றாம் முறையாக நிகழ்ந்த கடல் நீர் மட்ட உயர்வு (சங்க இலக்கியம் குறிப்பிடும் மூன்றாம் கடல்கோள்) தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் பெரும் அளவிலான நிலப்பகுதியை விழுங்கி விட்டது.^. (1)^ திராவிட மொழிகளில் மிகப் பழமை வாய்ந்த மொழி தமிழ். சுமார் ஐந்தாயிரம் (5,000) ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண நூல்களையும் பல இலக்கியங்களையும் பெற்று பாரெங்கும் புகழ்பரவ, பெரும் வளர்ச்சி பெற்றிருந்த ஒரே மொழி தமிழாகும். திராவிட மொழியை ஆய்வு செய்த பேரறிஞர்கள் திரு. பர்ரோவும், திரு. எமனோவும் இணைந்து “திராவிடச் சொற்பிறப்பியல் அகராதி” (Dravidian Etymological Dictionary) வெளியிட்டனர் என்றால், தமிழ் மொழியின் வளர்ச்சியை உணரலாம். அக்காலத்தே அறிவியல் பூர்வமாக உயிர்களின் மரபு நெறிப்படுத்தியவர் தொல்காப்பிரயன்றோ! தமிழினமும், அவன் தாய் மொழியாகிய தமிழ் மொழியும், மூன்றுமுறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்களால் அழிவுற்றது. அப்பெரும் கடல் கோள்களால் குமரிக்கண்டம் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலுமே பேரழிவுகளால் மலை மடுவானது, உலகின் பல நாடுகள் அழிவுற்றன. உயிரினங்கள் மாண்டன, மொழிகளும் சிதைவுற்றன. அவ்வாறே குமரிக்கண்டமும் நீரில் மூழ்கி அழிவுற்றது. இந்த அழிவுகளால் தமிழின் மரபு, பண்பாடு, கலாச்சாரம், தமிழ் இலக்கணங்கள், இலக்கியங்கள் அத்தனையும் சிதைந்து நாசமாகியது. உலகின் பூகோள வடிவமே மாற்று வடிவம் பெற்றது. ⁽¹⁾ 1863 ஆம் ஆண்டில், உயிரியல் எர்ன்ஸ்ட் ஹேகல் இந்த பழங்கால நிலப்பரப்பின் இருப்பை உறுதிப்படுத்தினார், மேலும் விலங்கியல் நிபுணர் பிலிப் ஸ்க்லேட்டர் 1864 இல் அதற்கு லெமூரியா என்று பெயரிட்டார். இது பப்புவா நியூ கினியாவுடன் பொருந்துகிறது. அவர்கள் ‘இணைக்கப்பட்ட நிலப் பாலம்’ இருப்பதை மட்டுமே பரிந்துரைக்கிறார்கள் - இது மனிதர்கள் நகரும் ஒரு தொடர் பாலங்கள். 1916 ஆம் ஆண்டில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுப்பிரமணிய சாஸ்திரி, மடகாஸ்கரை பப்புவா நியூ கினியாவுடன் இணைக்கும் ஒரு கற்பனைக் கோட்டை வரைந்தார். இது கடற்கரைகள் மற்றும் டெக்டோனிக் மாற்றங்கள் பற்றிய நல்ல புரிதல் இல்லாத நேரத்தில். அந்த ஆண்டுகளில், மிகச் சிலரே கடலை ஆழமாக ஆராய்ந்தனர், அப்போது சாஸ்திரியின் தீர்ப்புக்கு உதவும் வகையில் கடல் ஆழத் தரவு இல்லை. இதுவரை நிலவும் கோட்பாடுகள் இலக்கிய ஆராய்ச்சியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. ஒரிசா பாலு போன்றவர்கள் மட்டுமே ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக மடகாஸ்கர் செல்லும் வழியில் உள்ள கடல் மற்றும் தீவுக்கூட்டங்களை அறிவியல் பூர்வமாகப் படிக்கத் தொடங்கினர். ஒரு 1000 சதுர. கிமீ கன்யாகுமரியில் இருந்து 54 கிமீ தொலைவில் உள்ள பெரிய தீவு ‘மரிக்கினா’ இப்போது மூழ்கியுள்ளது. லட்சத்தீவில் உள்ள மினிகாய் தீவுகள் முதல் மாலத்தீவின் 1800 தீவுகள் வரை பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பகுதி வரை 6,80,000 சதுர கி.மீ. மஸ்கரேன் தீவுகள், சீஷெல்ஸ் தீவுக்கூட்டம், மொரிஷியஸ், கொமோரோஸ் தீவுகள், பிரெஞ்சு ரீயூனியன் தீவுகள், கெர்குலென் தீவுகள் இந்தியப் பெருங்கடலில், அதைத் தொடர்ந்து மடகாஸ்கர். கடந்த 15 ஆண்டுகளாக இந்த நீரில் மூழ்கிய தீவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மடகாஸ்கருக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே இயற்கையான இணைப்பு இருப்பதாக நம்புகின்றனர். பண்டைய தமிழ் இலக்கியங்கள் உறைந்த கடல்களைப் பற்றி பேசுகின்றன. தமிழ் காவியமான சிலப்பதிகாரம் மடகாஸ்கர் பகுதியை தெற்கில் காவல் எல்லை என்று குறிப்பிடுகிறது. மடகாஸ்கருக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் உள்ள பகுதியை ஆராயும் போது தான், லெமுரியா மற்றும் அதனுடன் தொடர்புடைய பல்வேறு கருதுகோள்களைப் படிக்க முடியும். லெமூரியா கருதுகோள் 1898 இல் ஜே எம். நல்லசாமி பிள்ளை அவர்களால் தொடங்கப்பட்டது, அவர் இலக்கியச் சான்றுகள் மூலம் லெமூரியாவைக் கணித்தார். மேலும் 1922 இல், இது குமரி காண்டம் என்ற கருத்தாக மாறியது. 1940 ஆம் ஆண்டில், இது கடல் கொண்ட தென்னாடு (பெருங்கடலுடன் இணைந்த தெற்கு நாடு) என்ற கருத்துக்கு முன்னேறியது. மேலும், நம்மைப் போன்றவர்கள்தான் முதன்முதலில் இந்த இலக்கியங்களின் அடிப்படையிலான உரிமை கோரல்கள் மற்றும் புவியியல் தலைமையிலான எக்ஸ்ட்ராபோலேஷன்களின் உண்மைத் தன்மையை கடற்பரப்புகளை ஆராய்ச்சி செய்வதன் மூலம் முதலில் சோதித்தனர். இத்தகைய ஆராய்ச்சிக்கு கூகுள் மேப் மட்டும் போதாது! கடலோர நிலப்பரப்பைப் பற்றிய புவி இயற்பியல் ஆராய்ச்சிக்கு பல அலை சோனார் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் தேவை. மேலும் பொய்கள் மற்றும் பிழைகளின் அடுக்குகளை நாம் அகற்ற வேண்டும். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. ( திருக்குறள் : 423) எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும். இல்லையெனில், மிகவும் சக்திவாய்ந்த பல அலை சோனார் அல்லது செயற்கைக்கோள் படங்கள் கூட நீரில் மூழ்கிய நகரத்தை வெளிப்படுத்த முடியாது. பிளாங்க்டனின் (Plankton) (சிறிய மற்றும் நுண்ணிய உயிரினங்கள்) ஒரு அடுக்கு இடிபாடுகளை மூடினாலும், தரவை முழுவதுமாக இழப்போம். எனவே கூகுள் தரவு மட்டும் போதாது. எதிரொலி கற்றைகள், ரேடார் மற்றும் பிற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் தைரியமான ஸ்கூபா டைவர்ஸ் தேவை. இது ஒரு தீவிர செயல்முறை என ஒரிசா பாலு விளக்குகிறார். ⁽²⁾ தென் மதுரை, கபாடபுரம் ஆகிய பாண்டியத் தலைநகர்களை கடல் அழித்தது பற்றி சிலம்பும் கலியும் செப்புவது என்ன? “வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை; ஊழிதோறு ஊழி உலகம் காக்க; அடியில் தன்னளவு அரசர்க்கு உணர்த்தி வடிவேல் எறிந்த வான்பகை பொறாது பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென் திசை ஆண்ட தென்னவன் வாழி!” ( இரண்டாவது மதுரைக் காண்டம் 11. காடுகாண் காதை (15 - 22)) ⁽³⁾ இளங்கோவடிகள் தந்த இதே செய்தியை முல்லைக் கலியில் சோழன் நல்லுருத்திரனும் (கலித் தொகை) சொல்கிறார்: அடியார்க்கு நல்லார் போன்றவர்கள் சொல்வது எல்லாம் உண்மை என்பது அர்த்தசாஸ்திரத்தில் (கி.மு.300) பாண்டிய கவாடம் என்னும் முத்து பற்றிக் குறிப்பதாலும், வால்மீகி இராமாயணம் கபாடபுரம் என்னும் இரண்டாம் தமிழ்ச் சங்க ஊர் பற்றிக் குறிப்பிடுவதாலும், இராமனுக்கு நினவுப் பரிசாக இலங்கை அரசன் விபீஷணன் ஏழு தங்கப் பனைமர பொம்மைகளைக் (ஏழ்குறும் பனைநாடு) கொடுத்ததாக கூறுவது நடந்த சில உண்மை நிகழ்வுகளோடு புனையப்பட்ட கதைகளாகத் தான் கருதத் தோன்றுகிறது. இந்து மகாசமுத்திர கடலுக்கடியில் உள்ள மலைகள் படத்தை நேஷனல் ஜியாக்ரபிக் மேகசின் (மாத இதழ்) சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டது. அதிலும் ஒரு புறம் லட்சத் தீவுகள் வரையிலும் மறுபுறம் அந்தமான் நிகோபர் தீவுகள் – இந்தோ நேஷியத் தீவுகள் வரையும் கடலடி மலைகள் இருப்பதைக் காண முடிகிறது. மிகவும் பழங்காலத்தில் ஆஸ்திரேலியா வரை நிலமும் கடலும் விட்டு விட்டு இருந்திருக்கலாம். ஆனால் இதெல்லாம்- ஒருவேளை நாகரீகம் மிக்க மனித இனமே தோன்றாத காலத்து இருந்திருக்கலாம். அடியார்க்கு நல்லார் 700 காதம் என்பதை சிலர் 7000 சதுர மைல் என்பர். அது மிகப் பெரிய நிலப்பரப்பு. இரண்டு முறை அடுத்தடுத்து சுனாமிப் பேரலைகள் தாக்கியதால் பாண்டிய மன்னன் இருமுறை தலை நகர்களை மாற்றினான். ஆகவே 700 சதுர மைல்களாவது கடலுக்குள் போயிருக்கலாம். ⁽⁴⁾ பஃறுளி என்ற ஆறு வட எல்லையாக இருந்தது. குமரி ஆறு தென் எல்லையாக இருந்தது. இதன் இடையே இருந்த தென் மதுரையைக் கடல் விழுங்கியதால் முதல் தமிழ் சங்கத்தை இழந்தோம். அதன் பிறகு கபாடபுரம் தலை நகரமானது. பின்னர் தற்போதைய மதுரையில் மூன்றாம் தமிழ் சங்கம் நிறுவப்பட்டது. தலைநகர் மாற்றம் பற்றி ரோமானிய யாத்ரீகர்களும் சொல்லுவதால் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இருந்த கபாடபுரம் அதற்குப் பின் கடலுக்குள் போனதாகவும் ஊகிக்கலாம். எகிப்து காசா பிரமீட்டில் எழுதப்பட்டு இருக்கும் “கந்தன்” எகிப்து பிரமிட்டில் கந்தன் என்னும் சொல் அக்கால தமிழ் நாட்டு பகுதியில் பாவிக்கப்பட்ட தமிழி எழுத்துகளால் எழுதப்பட்டு இருக்கிறது.(கி.மு ஆறாயிரம் ஆண்டு கால பகுதியில் பயன்படுத்திய எழுத்துகள் என்று சொல்லப் படுகின்றது). மொழி ஆய்வாளர் மதிவாணன் இதனை உறுதி செய்துள்ளார். எகிப்தில் ஆயிரக்கணக்கான பிரமிட்டுகள் உள்ளன. அவற்றுக்கெல்லாம் முக்கிய பிரமிட் காசா பிரமிட் தான். இந்த பிரமிட்டில் தான் மேலே நாம் குறிப்பிட்டது போல “கந்தன்”  என்று முருகனை குறிக்கும் சொல் தமிழி எழுத்தில் எழுதப்பட்டு உள்ளது. ⁽⁵⁾ [கந்தன் காசா பிரமிட்] எகிப்து, காசா பிரமீடு நுழைவு வாயிலில் இருக்கும் கந்தன் என்ற தமிழி எழுத்து ⁽⁵⁾ எகிப்தியர்களின் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றில் தமிழர்களின் தொன்ம அடையாளங்கள் ஏராளம் உள்ளதாக கடல் சார் தமிழ் பண்பாட்டு ஆய்வாளர் ஒரிசா பாலு தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, உலகம் முழுவதும் பரவியது தமிழர்களின் கடல் கடந்த வணிகம். இதில், உலகின் மேற்கு பகுதியை இணைக்க மையப்பகுதியில் இருக்கும் எகிப்து நாட்டின் வணிகம் மிக முக்கியமானது. ஏனெனில், உலகின் மையப்பகுதியில் இருக்கும் நாட்டில் கடல் வணிகம் செய்யும் திறன் பெற்றவர்கள், உலகம் முழுவதும் வணிகம் செய்யும் திறன் பெற்றவர்காளாக இருக்க முடியும். அந்த வகையில், உலக கடல் பயணத்தின் போது ஒரு குறிப்பிட்ட திசையை துல்லியமாக அறியும் வகையில் திசை அறியும் திறன், இடி, மின்னல் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும் திறன், சுனாமி, கடல் சீற்றம் போன்ற இயற்கை சீற்றத்தில் இருந்து தப்பிக்கும் திறன் பெற்றவர்களில் கைத்தேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அந்த வகையில், தமிழர்கள் அனைத்து திறன்களையும் பெற்று கடல் வணிகத்தில் சிறந்த ஆளுமையாக திகழ்ந்தவர்கள் எனலாம். மூலம் […] எகிப்து நாட்டில் கிடைத்த பானை ஓடுகளில் இருக்கும் தமிழி எழுத்துக்கள் ⁽⁶⁾ தமிழகமும் எகிப்தும் தொடர்பற்ற நிலப்பரப்புகளே என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. இங்கு தான் ஆதாரங்கள் பல கேள்விகளை எமக்கு முன் வைக்கின்றன. 1. கடல் வணிகத்தில் அன்றே தமிழர்கள் தலை சிறந்து விளங்கினர். 2. கண்டப்பிளவுக்கு முன்னர் இருந்த கண்டங்கள் 3. பிரமிட் கட்டுமானங்களில் விமானங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்னும் சந்தேகங்கள். கடவுள்கள் திணிக்கப்பட முருகன் (கந்தன்) என்னும் கடவுளும் அச்சொல்லும் நம்மிடையே முக்கியமான ஒன்றாக ஊறிப் போய் இருக்கிறது. பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம் வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக் கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முற்றோன்றி மூத்த குடி. (35) புறப்பொருள் வெண்பாமாலை ( கரந்தைப் படலம் 13. குடிநிலை ) ⁽⁷⁾ மலை தோன்றி மண் தோன்றாத் காலம் ஒன்று உண்டு. அதாவது மருத நிலம் தோன்றுவதற்கு முன்னமேயே இருந்த குறிஞ்சியில் முதற்கண் தோன்றிய மூத்த குடியென்றும், அக்குடி தோன்றிய போதே வாளோடு தோன்றியதென்றும், ஆநிரையை மீட்டு வந்தது, அக்குடியில் பிறந்தோர் நாள்தோறும் மெய்யான புகழை வளர்த்துக் கொள்கின்றனர் என்றும் கூறியதால் மறக்குடியின் தொன்மையும் தோலும் புலப்பட்டு நிற்கின்றனர். மனித உடல் வெப்பமண்டல காலநிலைகளில் இருப்பதற்காக வடிவமைக்கப் பட்டுள்ளது. நாம் வெப்பமண்டல நாட்டில் இருக்கிறோம். நம் தற்போதைய நிலப்பரப்பு இப்படித்தான் இருக்கிறது. அதனால்தான் நம் நிலம் எவ்வாறு மாறிவிட்டது, கடற்கரை எங்கே விரிவடைந்தது என்பதைப் பார்க்க நாம் பின்னோக்கிப் பார்க்க வேண்டும். புவியியல் மூலம் கலாச்சாரம் ஒரு முக்கிய அணுகுமுறையாகும். இன்று ஆஸ்திரேலிய மொழிகளில் தமிழ் மொழியின் எச்சங்கள் உள்ளன, அவை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சென்றதாக நம்பப்படுகிறது. மெக்ஸிகோ, மடகாஸ்கர், தமிழில் காணக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்திய நாடுகள் உலகம் முழுவதும் ஏராளமாக உள்ளன. பண்டைய கடற்படையினருடன், தமிழ் உலகளவில் சென்றது. இப்போது, ​​தமிழ்நாட்டிற்கு குடியேற்றம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ் மொழியின் அடிப்படை அச்சுறுத்தலாகத் தெரிகிறது. 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு (1.5 மில்லியன் ஆண்டுகள்) கூட மக்கள் இங்கு வாழ்ந்ததாக போலியோலிதிக் கருவிகள் கூறுகின்றன. மேலும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மக்கள் தங்கள் பொருட்களை எவ்வாறு வர்த்தகம் செய்வது என்று அறிந்திருந்தனர். ஒரு மொழி இல்லாமல் கூட, அவர்களால் ஒரு கல் கோடரியை உருவாக்கி, தேவைப்படுபவர்களுக்கு விற்க முடிந்தது. அதுவே நம் மொழி தமிழை வெவ்வேறு வர்த்தகத்தின் மூலம் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் சென்ற முதல் நபர்களாக இருந்திருக்க வேண்டும் என்பதை இது வெளிப்படுத்தும். பிராந்திய இந்திய மொழியாக மட்டுமல்லாமல், தமிழை உலகளாவிய மொழியாக நான் கருதுகிறேன் என்கிறார் கடல் ஆய்வாளர் ஒரிசா பாலு. ஒரு காலத்தில் உலகின் எல்லா மூலைகளிலும் சென்ற மொழி. அதனால்தான் உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழர்களிடமும் எனக்கு ஒரு சிறப்பு கோரிக்கை உள்ளது. இப்போது வரை, நாங்கள் தமிழை உயர்த்தியுள்ளோம், மேலும் பல தமிழ் மொழி ஆசிரியர்களைக் கொண்டுள்ளோம். வெளிப்படையாக, மனிதர்கள் மொழியை உலகின் அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச் சென்றனர், எனவே, இந்த மக்கள் தங்கள் தொழிலில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவர்களின் திறமைகள் என்ன? அதனால்தான், எத்தனை பேர், ஒரு நெசவாளர், ஒரு கடற்படை, ஒரு தொழிலாளி, ஆட்சியாளர்கள் தமிழை வெவ்வேறு மூலைகளுக்கு அழைத்துச் சென்றார்கள் என்பதை நாம் படிக்க வேண்டும். அந்த லென்ஸைப் பார்க்கும்போது. ஒரிசா பாலு சொல்கிறார் 25 ஆண்டுகளாக தமிழை நேசித்தேன், ஆனால் நான் தமிழ் மக்களை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன். நமது பண்டைய தமிழர்கள் எங்கே போனார்கள்? எந்த சந்தேகமும் இல்லாமல், முதலில் இங்கு தமிழ் பேசப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளால் அடைக்கப்பட்டுள்ள நிலத்தைச் சுற்றியுள்ள கடல் மொழி. கடல்களில் இருந்து ஏராளமான செல்வம். மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண். ( திருக்குறள் : 742) ஆழமும் அகலமும் கொண்ட அகழ், பரந்த நிலம், உயர்ந்து நிற்கும் மலைத்தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்றை உடையதே அரணாகும். நித்திய நீர், சமவெளி, மலைகள் மற்றும் குளிர்ந்த நிழல் காடுகளால் சூழப்பட்டுள்ளதே இயற்கை அரணாகும். எனவே, ஏராளமான இயற்கை வளங்களை அனுபவித்த அந்த வகையான மக்கள் மற்ற நாடுகளுக்கு என்னை அழைத்துச் செல்வார்கள்? அவர்கள் வர்த்தகத்தின் மூலம் என்ன கொண்டு வந்தார்கள்? அதனால்தான், தமிழ் மொழி ஆராய்ச்சியிலிருந்து என்னைப் போன்றவர்கள் இப்போது தமிழ் மக்களின் வரலாறுகளை ஆராய்ச்சி செய்கிறார்கள். கடல் வாணிபம் மூலம் உலகின் அனைத்து மூலை முடுக்குகளுக்கும் பயணித்த தமிழர்கள் அங்கே பொருட்களை மட்டுமல்ல, பண்பாட்டையும் பகிர்ந்து கொடுத்தே வந்திருக்கிறார்கள் (ஒரிசா பாலு). உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. அந்த இணையத்தளம் தந்தவற்றை அப்படியே தருவதுடன், அது வரிசைப்படுத்தியதையும் தருகிறேன். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. தமிழ் (Tamil) 1 வது, சமஸ்கிருத மொழி (Sanskrit) 2 வது, எகிப்து மொழி (Egyptian) 3 வது, கிரீக் (Greek) 4 வது, சீன மொழி (Chinese) 5 வது, அராமிக் மொழி (Aramic) 6 வது, எபிரேய மொழி (Hebrew) 7 வது, கொரியன் மொழி (Korian) 8 வது, ஆர்மேனியன் மொழி (Armenian) 9 வது, லத்தீன் மொழி (Lattin) 10 வது தமிழ் மொழி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான மொழி. செம்மொழியாம் தமிழ் மொழி இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது. எண்ணிலடங்கா வாழ்வியல் நெறி, சமய இலக்கியங்கள், அறிவு நூல்கள் தன்னகத்தே கொண்ட செம்மொழி தமிழ் மொழியாகும். தெலுங்கு ‘தெலுங்கு மொழியின் வரலாறு’ என்ற தனது புத்தகத்தில், தென் மத்திய திராவிட பிரிவில் இருந்து தெலுங்கு மொழி எப்போது பிரிந்தது என்பதைக் கூற முடியாது என்றாலும், தனி மொழியாக தெலுங்கு உருவானது கி.பி. 5-6 நூற்றாண்டு காலத்தில் தான் நடந்துள்ளது என்று கூற முடியும். கி.பி. 78-102 வரையிலான சாதவாகனப் பேரரசு காலத்தில் கௌதமபுத்ரன் சதகர்னியின் கீழான ஆட்சிக் காலத்தில் அங்கு பிராகிருதம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகள் இருந்துள்ளன. ஆய்வாளர் மன்னர் மன்னன் (பயிற்று) அவர்களின் கூற்றுப்படி அக்காலத்தில் வெளியிட்டுள்ள நாணயங்களில் கூட பிராகிருதம், தமிழி (தமிழ்) ஆகிய மொழிகள் மட்டுமே அச்சிடப்பட்டிருந்தன என்றும் தமிழர்கள் அங்கு வாழ்ந்துள்ளனர் என்றும் உறுதியாக கூறுகிறார். தெலுங்கு மொழியின் மூலம் தமிழ் அதனோடு பிராகிருதம், சமஸ்கிருதம் கலந்து உருவானது. அதன் தோற்றம் சுமார் 1500 ஆண்டுகளாகத்தான் என்பதும் தெளிவாகிறது. தெலுங்கு மொழியில் நன்னய்யரின் (கி.பி 1022– கி.பி 1063) முதல் இலக்கியமாக மகாபாரதம் கருதப்படுகிறது.  எனினும், பதினாறாம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயரின் காலம் தான் தெலுங்கு இலக்கியத்தின் பொற்காலம் என அழைக்கப்படுகிறது. விஜயநகர காலத்தில் தஞ்சாவூர் மற்றும் மதுரையில் பல்வேறு தெலுங்கு இலக்கியங்கள் தோன்றின. ⁽¹¹⁾ பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! (மனோன்மணியம்" பெ.சுந்தரனார்)  ⁽⁸⁾ தெலுங்கு மொழியின் தாய் தமிழ் என்பது மறுக்க இயலாதது. பதின்மூன்றாம் நூற்றாண்டில் தான் தெலுங்கு இலக்கணம் தொகுக்கப்பட்டது. தெலுங்கில் 1400 க்கும் மேற்பட்ட தமிழ் சொற்கள் உள்ளன, ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. ஆந்திரப் பகுதியில் தமிழ் கற்சிற்பங்கள் உள்ளன. கர்நாடகாவில் சுமார் 25,000 தமிழ் கற்சிற்பங்கள் உள்ளன.( ஒரிசா பாலு). ⁽²⁾ குமரிக்கண்டம் சுமார் கி.மு.5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு நீண்ட நிலப்பரப்பு இருந்தது என்கிறார், அறிஞர் ஓல்டுகாம் அவர்கள். பேரறிஞர் எக்கேல் மற்றும் கிளேற்றர் இருவரும் ஒருமனதாக சந்தாத் தீவுகளிலிருந்து தொடங்கி ஆசியாவின் தென்கரை வழியாக ஆப்பிரிக்காவின் கீழைக்கரை வரை ஒரு பெரிய நிலப்பரப்பு பரவியிருந்ததாகவும், அங்கே குரங்கையொத்த உயிரினம் இலெமூரியா (Lemuria) வாழ்ந்தன எனக் கூறுகின்றனர். பேரறிஞர் திரு. கட்டு எலியட் என்பவர் தாம் எழுதிய மறைந்த இலெமூரியா (Lost Lemuria) என்ற நூலில் காட்டியுள்ள நில வரைபடத்தில் ஒரு பெரிய மலைத் தொடர் மேலைக்கடலில் தொடங்கித் தென் வடக்காகக் குமரிமுனை வரை சென்று பின்பு தென் மேற்காகத் திரும்பி மடகாசுக்கர் என்னும் ஆப்பிரிக்கத் தீவு வரை சென்றது எனச் சுட்டிக் காட்டுகிறார் என பேராசிரியர் திரு. கா. சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள் கூறுகின்றார். ஆஸ்திரேலியா, சாலித்தீவையும், தென்னாப்பிரிக்காவையும் தன்னுடன் இணைத்துக் கொண்டிருந்த நாடே குமரிக் கண்டம் என்கிறார் திரு. தேவநேயப்பாவாணர். இக்கண்டத்தில் தோன்றியவன் தான் மாந்தன் இவனை குமரிமாந்தன் என்பர். குமரிமாந்தரின் மொழியற்ற நிலை சைகை மொழி குமரி நாட்டு மாந்தன், முற்காலகட்டத்தில் ஆடையின்றி விலங்குகளைப் போல் தன் இச்சைகளைப் பெற்று வந்தான். மொழியுணர்ச்சியுமின்றி, உணர்ச்சியொலிகளையும், விளியொலிகளையும் கையாளத் தொடங்கினான். காலப் போக்கில் தன் கருத்துக்களைச் சைகைகளாலேயே வெளிப்படுத்தி வந்தான். (Gesture Language or Sign Language) இதை ஊமையர் மொழி என்றே கூறலாம். தமிழ்மொழியின் தோற்றம் மூவகைச் சுட்டொலிகளிலிருந்து சொற்கள் தோன்றியதே தமிழ் மொழியின் முதல் தோற்றமாகும். இதைச் செயற்கை மொழி (Artificial Language or Artificial Speech) என்கிறோம். மொழித்துணையின்றி மூவகைச் சுட்டொலிச் சொற்களால் கருத்துக்களைப் பரிமாறும் ஊமையர் நிலையைக் கருத்தில் கொள்ளுங்கள். தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலெமூரியாக் கண்டம். இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிட நாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும் உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பினர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும், கல்வெட்டுகளும் உதவுகின்றன. குமரிக்கண்டப் பழங்குடிமக்கள் தமிழர்களே! குமரிக்கண்டத்தின் பெரும் பகுதியாகிய பழந்தமிழ் நாட்டை ஆண்டவன் தமிழனே! அம்மொழியும் தமிழ் மொழியே! பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் கடல்கோள்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, நான்கு முறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்கள் குமரிக் கண்டத்தை அழித்து நாசமாக்கியது. நான்கு பெருங் கடல் கோள்கள் 1. முதல் சங்கம் " தென்மதுரை " கடல் கொண்டது 2. இரண்டாவது " நாகநன்னாடு " கடல் கொண்டது 3. மூன்றாவது " கபாடபுரம் " கடல் கொண்டது 4. நான்காவது " காவிரிப்பூம்பட்டிணம் " கடல் கொண்டது. சிறுகடல் கோள்கள் எண்ணில் அடங்காது. தொல்காப்பியம் பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த குமரிமாந்தனின் காலத்தைவிட பல்லாயிரம் ஆண்டுகள் பிந்தியதே தொல்காப்பியம். தொல்காப்பியம் தோன்றிய காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டிற்கும், கி.மு 5-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலமாகும். தொல்காப்பியர் காலத்திற்கு வெகு காலத்திற்கு முன்பே தமிழ் மொழி மிகச் சிறப்புற்றிருந்தது. சிறப்பு மிக்க தமிழ் இலக்கியங்கள் பல இருந்தன. ஆனால் அவைகள் அனைத்தும் கடல் கோள்களால் முழுமையாக அழிவுற்றன. மூன்று தமிழ் தமிழ் மொழி தோற்றத்தையும் வரலாற்றுக் காலத்தையும் 3 பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம். 1. பழந்தமிழ், 2. இடைக்காலத்தமிழ், 3. தற்காலத்தமிழ் இந்தியா என்று இன்று சொல்லப்படுகின்ற நாட்டின் ஆதி (பூர்வீக) குடிமக்கள் தமிழர்களே. இந்தியா என்ற பெயர் எப்படி வந்தது? சிந்து நதி திபெத்திய பீடபூமியில் ஊற்றெடுத்து ஜம்மு-காஷ்மீரின் லடாக் மாவட்டம் வழியாகக் கடந்து பாகிஸ்தானின் கில்கிட்-பல்டிஸ்தான் பகுதிக்குள் நுழைகிறது. பின், பாகிஸ்தானின் முழு நீளத்திற்கும் ஓடி தென்மேற்கில் அரபிக் கடலில் கராச்சி நகருக்கருகில் கலக்கிறது. கராச்சி மட்டுமல்லாமல் வேறு பல முக்கியமான பாகிஸ்தானிய நகரங்களும் இதன் கரையிலேயே உள்ளன. கராச்சி தவிர ஹைதராபாத், இஸ்லாமாபாத் ஆகிய நகரங்கள் சிந்து நதிக்கரையில் உள்ளன. லாகூர் மற்றும் மூல்தான் ஆகிய நகரங்கள் சிந்துவின் துணை நதிகளான ராவி மற்றும் சீனாப் ஆகியவற்றின் கரைகளில் உள்ளன. சிந்து நதியைப் புராதனக் காலத்திலிருந்து பல பெயரிட்டுப் பலரும் அழைத்து வந்துள்ளார்கள். பாரசீக மொழியில் இண்டிகோ நீல நீர் எனப் பொருள்படும் வகையில் “நீலௌ” என்றழைத்தனர். பஷ்டூன் மொழியில் நதிகளின் தந்தை எனப் பொருள்படுமாறு “அபாசின்” என்றழைத்தனர். இண்டோஸ் என இந்த நதியை அழைத்த கிரேக்கர்கள் சொல்லிலிருந்தே இண்டியா என்ற வார்த்தை வருகிறது. இதைக் கொண்டே பின்னாளில் ஐரோப்பியர் மொத்த துணைக்கண்டத்திற்கும் இண்டியா எனப் பெயரிட்டு துணைக்கண்டத்தின் கீழே இருந்த பெருங்கடலுக்கும் இந்தியப் பெருங்கடல் என்று பெயரிட்டு விட்டார்கள். சிந்துவின் பூர்வகுடிகள் தமிழர்களின் முன்னோடிகள். தமிழினம் வடமேற்கே சிந்துவிலிருந்து தெற்குக் கோடியில் குமரிக் கடல் வரை பரந்து விரிந்து வாழ்ந்து வந்தார்கள். ஆழிப்பேரலைகளால் குமரிக் கண்டத்தின் தென்பகுதிகள் கடலுக்குள் மூழ்க, பேரலைகளால் குமரிக் கண்டத்தின் வடமேற்குப் பகுதிகள் அழிக்கப்பட்டுத் தமிழ் நாகரிகத்தின் சிகரமாக விளங்கிய ஹரப்பா, மொகஞ்சொதாரோ ஆகிய நகரங்கள் அழிக்கப்பட்டன. ஹரப்பா, மொகஞ்சதாரோவை விடப் பல மடங்கு நாகரிகத்தில் சிறந்த தொல்தமிழர் நகரங்கள் குமரிக் கடலின் கீழ் ஆழ்ந்து கிடக்கின்றன. அழிந்து விட்ட இவ்வரலாறுகளைப் பற்றிய குறிப்புகள் பழந்தமிழ் நூல்களெங்கும் நிறைந்து கிடக்கின்றன. குமரிக் கடலில் அகழ்வாராய்ச்சி செய்தால் அமிழ்ந்து கிடக்கும் இந்நகரங்கள் மட்டுமன்றி தற்சங்கம் மற்றும் இரண்டாம் சங்கம் ஆகிய சங்க கால முழு தகவலும் கிடைப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது. ^(10) ^ திராவிடம் திராவிட மொழிகள் பல உள்ளன. அவைகள் அனைத்தும் தமிழ் என்ற ஒரு மூல மொழியிலிருந்து உருவானவைகள். தொல்பழங்காலத்தில் திராவிட மூல மொழியாக இருந்த தமிழ் மொழியிலிருந்து பிரிந்து, காலத்தாலும் இடமாற்றங்களாலும் வெவ்வேறு மாற்றமடைந்து வளர்ந்தவைகளே பிறமொழிகள். அவற்றை நாம் “திராவிட மொழிக் குடும்பம்” என்று அழைக்கிறோம். பல மொழிகள் உருவாக மூலமாக, கருவாக இருந்த மொழியினைத் தொல்திராவிட மொழி அல்லது மூலத்திராவிட மொழி (Proto Diravidan Language) என்கிறோம். மூலத்திராவிட மொழி அல்லது தொல் திராவிட மொழியாகத் திகழ்ந்த தமிழ் மொழியிலிருந்து பிரிந்து சென்ற மொழிகளைத் திராவிட மொழிக் குடும்பம் என்கிறோம். தமிழ், கோண்டி, கூயி, கூவி, கோவாமி, மண்டா, கொண்டா போன்றவைகளோடு இன்னும் பல உண்டு. திராவிட மொழிகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். 1. தென் திராவிட மொழிகள் “தமிழ், மலையாளம், கன்னடம்”. 2. நடுத்திராவிட மொழிகள் " தெலுங்கு, கோண்டி, கூயி, கூவி மேலும் பல உள்ளன. 3. வடத்திராவிட மொழிகள் " குருக், மால்தோ, பிராகூப் மேலும் பல உள்ளன. சுமார் ஐந்தாயிரம் (5000) ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண நூல்களையும் பல இலக்கியங்களையும் பெற்றுப் பாரெங்கும் புகழ்பரவ, பெரும் வளர்ச்சி பெற்றிருந்த ஒரே மொழி தமிழாகும். திராவிட மொழியை ஆய்வு செய்த பேரறிஞர்கள் திரு. பர்ரோவும், திரு. எமனோவும் இணைந்து திராவிடச் சொற்பிறப்பியல் அகராதி (Dravidan Etymological Dictionary) வெளியிட்டனர் என்றால், தமிழ் மொழியின் வளர்ச்சியை உணரலாம். இந்திய துணைகண்டத்தின் பூர்வகுடிகள் திராவிடர்கள், இந்தோ- ஆரியர்களுக்கு முன்பாகவே அவர்கள் அங்கு வசித்தனர் என்பதும் உறுதி என்பது இந்த ஆய்வை மேற்கொண்டவர்களின் கருத்து. எங்கு, எப்போது திராவிட மொழிகள் வளர்ச்சிப் பெற்றன என்ற கேள்விகான விடையை கண்டறிய திராவிட மொழிகளுக்கு இடையே உள்ள வரலாற்று உறவை ஆய்வாளர்கள் விரிவாக ஆய்வு செய்திருக்கிறார்கள். ஆய்வாளர்கள் பயன்படுத்திய புள்ளியியல் தொழில்நுட்பம் மிகவும் நவீனமானதும் முன்னேறியதுமானதாகும். பல வழிகளில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ஆய்வை மேற்கொண்டபோதும் ஒவ்வொரு முறையும் ஒரே முடிவே கிடைத்துள்ளது. அதேபோல இம்முடிவுகள் அகழ்வாராய்ச்சியின் முடிவுகளோடும் ஒத்துப் போகின்றன. ‘’அனைத்து வெவ்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் குறைந்தபட்சம் 10,000 ஆண்டுகள் அல்லது அதற்கு முன்பு பன்முகத்தன்மையோடு வாழ்ந்திருப்பார்கள் என தெரிய வருகிறது. எனவே, குறைந்தபட்சம் அப்போதும் கலப்புகள் இரு்திருக்கும்’’ என்பது ஆய்வாளர்களின் கூற்று. ⁽¹³⁾ இன்றளவும் வட இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகளைப் பேசும் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். திராவிடர் நாகரிகம் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டது. ஆரிய நாகரிகம் ஆடு, மாடு மேய்த்தலை அடிப்படையாகக் கொண்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள்! திராவிட இயக்கத்தின் தோற்றம் திராவிட மகாஜன சபை என்பது திராவிட இயக்கத்தை தோற்றுவித்தவரான அயோத்தி தாசர் என்பவரால் கி.பி. 1891 தொடங்கப்பட்டது. அயோத்தி தாசர் 1885 ஆண்டிலேயே ‘திராவிட பாண்டியன்’ என்னும் இதழைத் தொடங்கினார். அவர் கி.பி. 1886ஆம் ஆண்டில் இந்துக்களில் தீண்டத்தகாதவர்கள் எனப்பட்டவர்கள் இந்துக்கள் அல்லாதவர்கள் என்றார். அவர்கள் யாரும் சாதியற்ற திராவிடர்கள் என்னும் கருத்தையும் முன்வைத்தார். இதனால் இவர் திராவிட கருத்தியலின் முன்னோடி என அறியப்பட்டார். 1912 ஆம் ஆண்டில் திராவிடர் நலனை முன்வத்து இயக்கம் ஒன்று சென்னையில் தொடங்கப்பட்டது. 1916 ஆம் ஆண்டில் இதன் பெயர் தென்னிந்திய நல உரிமைக் கழகம் என மாற்றப்பட்டது. பொதுவாகவே வைதீக எதிர்ப்பாளர்கள், தமிழர் மத்தியில் நிலவிய சாதிக் கொடுமை முதலியவற்றுக்கு, வைதீகத்தையும், பிராமணரையுமே குற்றஞ்சாட்டினர். வைதீகத்துக்கு முந்திய பண்டைத் தமிழகம் சாதிப் பாகுபாடற்ற சமூகமாக இருந்ததை எடுத்துக்காட்டிய அவர்கள், இனம், மொழி, பண்பாடு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி மக்களை அணி திரட்டினர். ⁽¹²⁾ பெரியாரும் திராவிட இயக்கமும் தொடக்கத்தில் இந்திய தேசிய காங்கிரசில் ஈடுபாடு காட்டிய பெரியார், ஒடுக்கப்பட்ட மக்கள் நலன், சாதிப்பாகுபாட்டு ஒழிப்பு முதலிய விடயங்களில் காங்கிரஸ் காட்டிய மெத்தனப் போக்கை எதிர்த்து வெளியேறினார். தன்மான இயக்கத்தைத் தொடங்கித் திராவிடர் மத்தியில் சமூகச் சீர்கேடுகள், அறியாமை, மூடநம்பிக்கை என்பவற்றை எதிர்த்துப் போராடினார். 1944 இல் நீதிக்கட்சித் தலைவராக பெரியார் முன்னின்று நடத்திய நீதிக்கட்சிப் பேரணியில் ‘திராவிடர் கழகம்’ என பெயர் மாற்றப்பட்டு, அன்று முதல் திராவிடர் கழகம் என அழைக்கப்பட்டது. பார்ப்பன புரோகிதர்களின் அடையாளங்களான இந்தி மற்றும் சமயச்சடங்குகள் தமிழ்ப் பண்பாட்டுக்கு விரோதமானவை என அடையாளம் காணப்பட்டு விலக்கி வைக்கப்பட்டன. பெரியாரின் சமுதாயப் பங்களிப்பைப் பாராட்டி 1970 சூன் 27 அன்று யுனஸ்கோ மன்றம் என்ற அமைப்பு “புத்துலக தொலைநோக்காளர்; தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி” என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது. ⁽¹⁴⁾ திராவிடர் கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக அண்ணா அவர்கள் திகழ்ந்தார். திராவிடர் கழகத்தின் செயற்பாடுகள் சமுதாய மட்டத்திலேயே முனைப்புப் பெற்றிருந்தது. சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பிராமண ஆதிக்க எதிர்ப்பு, பெண்களின் உரிமைகள் ஆகியவை தொடர்பான விடயங்களில் தீவிர கவனம் செலுத்தினர். தமிழைச் சொல்லி ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள் தமிழ் வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை, தமிழை ஆங்கிலத்திடம் அடகு வைத்துவிட்டார்கள் என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர். அவர்களுக்கு உண்மை என்னவென்று தெரியும், ஆனால் தெரியாததுபோல் நடிக்கின்றனர். 1965-ம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீக்குளித்து இன்னுயிர் ஈந்த தியாகிகளிலும், காவலர்களின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களிலும் பெரும்பாலானோர் தி.மு.க.வினரே, அல்லது தி.மு.க ஆதரவாளர்களே. அது மட்டுமல்ல, அன்றைக்கு அரசு கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறையால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களும் தி.மு.க.வினரே. திராவிட முன்னேற்றக் கழகம் என்பதிலே :திராவிட" என்பதை நினைத்துக் கொண்டிருப்பதாலே “தமிழ்நாடு” என்பதிலே அக்கரை இல்லாமல் போய்விடுமோ என்று சிலர் எண்ணிய நேரத்தில் “தமிழ்நாடு” என்று பெயரிடுதல் வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நாங்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்திக் கொண்டு வந்திருக்கிறோம் என பேரறிஞர் அண்ணா அவர்கள் 18.07.1967 அன்று பேரவையில் பதில் அளித்தார். அறிஞர் அண்ணா அவர்கள் பதவியேற்றவுடன் கூடிய முதல் கூட்டத் தொடரிலேயே “தமிழ்நாடு” என்று பெயரிடப்படவேண்டும் எனும் தீர்மானத்தை முன் மொழிந்தார். நீண்ட போராட்டதிற்குப் பின் வெற்றி வாகை சூடிய மாவீரனாக முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்கள் அத்தீர்மானத்தை முன் மொழிந்து பேசும் உரையில் "இது தமிழுக்கு வெற்றி!, தமிழ் வரலாற்றுக்கு வெற்றி!, தமிழ் நாட்டுக்கு வெற்றி! என்றார். அத்தீர்மானம் குடியரசுத்தலைவர் தமது இசைவினை 20.12.1968 அன்று அளித்து பொங்கல் திருநாளான 14.1.1969 அன்று ‘மதராஸ் ஸ்டேட்’ என்ற பெயர்  “தமிழ்நாடு” என்னும் பெயர்  பெற்றது. முதன் முதலில் - இந்த நாட்டுக்குத் “தமிழ்நாடு” என்ற பெயர் சூட்டி - அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி - கட்சிப் பாகுபடின்றி அனைவரும் சட்டமன்றத்தில் “தமிழ்நாடு வாழ்க” என்று முழக்கம் செய்த போது என் 58 ஆண்டு காலத்திலும் கேட்டறியாத கீதத்தை - செவியில் பாயாத செந்தேனை - பார்த்தறியாத காட்சியை நான் உணர்ந்தேன்" என்றார் அறிஞர் அண்ணா. ⁽¹⁵⁾ அவர் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகள் ஏராளம். சட்டமன்றத்தில் புதிய தமிழ் சொற்களை பழக்கத்தில் கொண்டு வந்தார். முத்தமிழறிஞர் கலைஞர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள்   செம்மொழி தமிழ் 2004-ம் ஆண்டு மே மாதம் 27-ம் நாள், பிரதமர் மன்மோகன் சிங் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் குறைந்த அளவு பொதுச்செயல் திட்டத்தை வெளியிட்டார். கலைஞர் வலியுறுத்தலுக்கு இணங்க, தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படும் என்ற கோரிக்கை அத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. அதன்படி, 2004-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ம் நாள் நடைபெற்ற நடுவண் அரசின் அமைச்சரவை கூட்டத்தில், தமிழை செம்மொழியாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஆணை, 2004 அக்டோபர் 12-ம் நாள் நடுவண் அரசால் வெளியிடப்பட்டது. 2007, ஆகஸ்ட் 18-ம் நாள் சென்னையில் முதலமைச்சர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற விழாவில், நடுவண் அமைச்சர் அர்ஜூன் சிங், செம்மொழி தமிழ் மைய நிறுவனத்தைத் தொடங்கி வைத்தார். அதற்கான அலுவலகக் கட்டடம், 2008 ஜூன் 30-ம் நாள் கலைஞர் அவர்களால் சென்னையில் திறந்து வைக்கப்பட்டது. அகரமுதலி 1974-ம் ஆண்டு அன்றைய கழக அரசில் “செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்” நிறுவப்பட்டு, மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர் அவர்கள் அதன் முதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். 1974 முதல் 1980 வரை முழுமையாக உழைத்தும் பாவாணர் அவர்களால் “ஆசைமொழி” வரைதான் எழுத முடிந்தது. 1981-ம் ஆண்டு பாவாணர் மறைந்தார். அதன்பின் 1985 ஜனவரியில் அவர் உருவாக்கிய முதல் தொகுதி நூல் வெளியிடப்பட்டது. 1989-ம் ஆண்டுக் கழக அரசு அகரமுதலித் திட்டத்திற்கு அளித்த ஊக்கம் காரணமாக இரண்டாம் தொகுதி உருவாக்கப்பட்டது. 1991 ஜனவரியில் கழக அரசு கலைக்கப்பட்டதன் காரணமாக இப்பணியில் தொய்வு ஏற்பட்டு, இந்த இரண்டாம் தொகுதி நூல் 8.5.1992-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. 13.5.1996-ல் கழக அரசு அமைந்த பிறகு அகரமுதலி உருவாக்கும் திட்டம் முடுக்கிவிடப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் மூன்றாம் பாகம் உருவாக்கப்பட்டு, 25.2.1997-ல் வெளியிடப்பட்டது. “அ” முதல் “ஒள” வரையிலான சொற்கள் தொகுக்கப்பட்டு நூல்களாகி விட்டன. இணையம்   1999 பிப்ரவரியில் உலகத் தமிழ் இணைய மாநாடு தமிழக அரசினால் நடத்தப்பட்டு, கணினியின் பயன் சீராக்கப்பட்டதுடன், உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இணையத்தில் தலைவர் கலைஞர் அனுப்பிய தமிழ் வாழ்த்துச் செய்தியே தமிழ் இணையத்தின் முதல் வாழ்த்துச் செய்தியாகும். இந்தியாவிலேயே இணையத்தில் அதிகப் பக்கங்களைக் கொண்ட மொழி தமிழ்தான் என்று அப்போதைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.   சென்னை பெயர் மாற்றம் “மெட்ராஸ்” என்னும் பெயர் “சென்னை” என 30.9.1996 அன்று மாற்றப்பட்டு, இன்று ஆங்கிலத்திலும், பிற மொழிகளிலும் சென்னை என்றே உலகெங்கும் அழைக்கப்படுகிறது. அய்யன் திருவள்ளுவருக்கு அழகிய சிலை   தலைமுறைகளுக்கும் தனித்தோங்கி நிற்கும் தலையாயப் பணி, சூழும் தென்கடல் ஆடும் குமரியில் அய்யன் திருவள்ளுவருக்கு அகிலமே கண்டு வியக்கும் அளவுக்கு 133 அடி உயரத்தில் 7,000 டன் எடைகொண்ட மாபெரும் சிலை 9 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் அமைத்திட்ட பணியாகும். தலைவர் கலைஞர் அவர்கள், இருபத்தைந்து ஆண்டு காலமாக எண்ணி எண்ணி விடுத்த பெருமூச்சு வீண்போகாமல், விண் முட்டும் சிலை ஒன்றை விரிகடல் பரப்பின் எல்லையில் எழுப்பி இருக்கிறார். தமிழ் கட்டாயப் பாடம், தமிழ் உரைநடை வளர்ச்சி, தமிழ்க் கவிதை வளர்ச்சி, திரைப்படங்கள் வழியே தமிழ் வளர்த்தல், வழக்குமன்ற மொழியாகத் தமிழ் இருக்கவேண்டும் என்பதுதான் அண்ணாவின் கொள்கை அதற்கான முயற்சி, நடுவண் அரசின் ஆட்சிமொழியாகத் தமிழ் வேண்டும் என்ற கோரிக்கை, உலகத் தமிழர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு இவற்றோடு மேலும் பல தமிழ் வளர்ச்சிப் பணிகள் மேற்கொண்டுள்ளன. ⁽¹⁶⁾ திராவிடம் என்ற சொல்லே சமூக நீதிக்கான மாற்றுச் சொல் தான். ‘திராவிடம்’ - சொல் அன்று, வரலாறு! என்கிறார் பேராசிரியர் சுப.வீ. பார்ப்பனர் அல்லாதவர் அதாவது ஆரியத்தை எதிர்ப்போர் திராவிடர் ஆவர். திராவிடர் என்ற சொல் தன்மான உணர்வை தட்டியெழுப்பும் சொல்லாக, சாதியைத் தகர்த்து, சமூக மாற்றத்தை சாதித்து வரும் சொல்லாக தமிழர்கள் உணர்கின்றனர். “திரவிட மொழிநூல் ஞாயிறு” ஞா. தேவநேயப் பாவாணர் தந்தை பெரியார் கைகளால் தேவநேயப் பாவாணருக்கு நல்கிய மொழிஞாயிறு பட்டயம் இஃதே! மொழிஞாயிறு’ தேவநேயப் பாவாணர் என சுருக்கமாக அழைத்தாலும். ‘திராவிட மொழிநூல் ஞாயிறு’ தேவநேயப் பாவாணர் என்பதே முழுமையான பெயர்! சேலத்தில் 1957 ஆம் ஆண்டு விழாவில் வழங்கியவர் தந்தை பெரியார்! ⁽¹⁷⁾ […] தமிழ்ப் பேரவை சேலம் தந்தை பெரியார் ஈ.வே.இராமசாமி அவர்கள் தலைமையில் தமிழின் தூய்மை தொன்மையை நிலைநாட்டும் திரு ஞா. தேவநேயப் பாவாணர் அவர்களின் அருந்தமிழ்த் தொண்டினைப் பாராட்டி “திரவிட மொழிநூல் ஞாயிறு” எனச் சிறப்புப் பெயரும் பொன்முடிப்பும் அளித்த சான்று, வழங்கிய பட்டயம் தமிழ்ப் பேரவையினர். பண்டைக் காலத்தில் நாட்டுப்பெயர்களும் மொழிப்பெயர்களும் ‘அம்’ ஈறு பெற்றே வழங்கின. தமிழகம் என்பது குலம், நாடு, மொழி ஆகிய மூன்றையும் குறிக்கும் சொல். தெளிவின் பொருட்டு நாட்டைக் குறிக்கும் போது தமிழகம் என வழங்கினர். சமற்கிருத நூல்களில் (தமிழம்) ‘த்ரமிளம்’ என்று வழங்கிவந்த சொல், த்ரமிடம், த்ரவிடம் எனத் திரிந்து தமிழில் திரவிடம் என்றாகிப் பின்பு திராவிடம் என நீண்டு வழங்குகின்றது. தமிழ் என்னும் பெயர் எங்ஙனம் திராவிடம் எனத்திரிந்ததோ, அங்ஙனமே தமிழாகிய மொழியும் பிற திரவிட மொழிகளாய்த் திரிந்ததென்க. (பாவாணரின் ‘திரவிடத்தாய்’) ⁽¹⁸⁾ தமிழ் மொழி, உலகிலேயே மிகத் தொன்மையான மொழி; திராவிடத்துக்குத் தாயாகவும், ஆரியத்துக்கு மூலமாகவும் விளங்கும் மொழி’’ என வாதிட்டவர் தேவநேய பாவாணர். தமிழ்-உயிர், திராவிடம்- உடல்! உயிர் இல்லையேல். உடல் இல்லை! ஆனால், வாழ உடல் வேண்டும்! மொழியை, உயிரை உணர்வைத் தருவது தமிழ் அம்மொழி மக்களுக்கு சமூகநீதியை மானத்தைத் தருவது திராவிடம்! இது பாவாணரின் இறுதி முடிவு. ⁽¹⁸⁾ திமுக அரசுக்குப் பாவாணர் பாராட்டு! "கடந்த மூன்றரையாண்டுக் காலத்திற்குள் தி.மு.க அரசு தமிழ் விடுதலைக்கும் முன்னேற்றத்திற்கும் செய்துள்ள ஆக்கப் பணிகள் மூன்று. அவை, இந்திய அமைப்புத் திட்டத்தில் தமிழ்நாட்டின் பெயர் சென்னை நாடு என்று இருந்ததைத் தமிழ்நாடு எனத் திருத்தியது, தமிழ்க் கரணத்தைச் சட்டமுறைப்படிச் செல்லுபடியாக்கியது, கோவில் வழிபாட்டிற்குக் கடந்த மூவாயிரம் ஆண்டாக விலக்கப்பட்டு இருந்த தமிழை மீண்டும் புகுத்தியது, என்பன. அம் மூன்றும் முறையே ஒன்றினொன்று சிறந்தவை. தமிழர் முன்னேறும் வழி தமிழேயாதலால் ஆங்கிலத்திற்கும் ஆரியத்திற்கும் அடிமைப்பட்டுக்கிடந்த தமிழை அவற்றினின்று விடுவித்து அரசியல் மொழியும் மதவியல் மொழியுமாக்கியது, தமிழ் நாட்டிற்கு உயிர்நாடித் திட்டமாகும். சிவநெறியும், திருமால் நெறியும் தமிழர் கண்ட சமயங்களேயாதலால் தமிழ் நாட்டில் தமிழர் கட்டிய கோவில்களில் தமிழர் தொன்று தொட்டு வந்த தமிழ் முறையைத் தள்ளிவிட்டு அறியாத அயன் மொழியில் வழி பட, அறியாமையும் அடிமைத்தனமுமன்றி வேறோரு கரணியமுமில்லை. பிராமணர், காலத்திற்கேற்பத் தம் கருத்தை மாற்றிக் கொள்ளவும், ஆண்டி முதல் அரசன் வரை எப்பதவிக்கும் தம்மை ஏற்றவராக்கிக் கொள்ளவும் இயல்பாகவே திறம் படைத்தவர். இன்று பிராமணியத்தை நடத்தி வருபவர் அடிமைத்தனமும் தன்னலமும் மிக்க போலித் தமிழரே. வடமொழியை அறவே விலக்க தமிழைக் கோவில் வழிபாட்டு மொழியாக்க வேண்டுமென்பது உலகத் தமிழ்க் கழகத்தின் அடிப்படைக் குறிக்கோள். அதை எளிதாக நிறைவேற்ற வழிவகுத்த தி.மு.க அரசே தமிழ் நாட்டை வழி வழி ஆள்க. அதை ஆற்றலுடன் நடத்திவரும் அருட் செல்வனார் நீடு வாழ்க! இனி, இம்மட்டில் நின்றுவிடாது, தமிழின் உண்மையான இயல்பையும் வரலாற்றையும் அறிந்து, தமிழ்நாட்டிற்குத் தமிழிலும் வெளியுலகத்திற்கு ஆங்கிலத்திலும் வெளிப்படுத்தல் வேண்டும். தமிழ் கி.மு. 50,000 ஆண்டுகட்கு முன்பே குமரி நாட்டில் தோன்றி முழுவளர்ச்சியடைந்து உலகெங்கும் திரிந்தும், சிதைந்தும் பரவியுள்ளது. குமரிநாட்டுத் தமிழே திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாகும். தமிழர் தென்னாட்டுப் பழங்குடி மக்களேயன்றி, ஆரியர்போல் வெளிநாட்டிலிருந்து வந்தவரல்லர்." ⁽¹⁹⁾ கீழடி, ஆதிச்சநல்லூர் , சிவகளை தொல்லியல் ஆய்வுகள் தமிழர் பண்பாட்டின் வேர்களை தேடி இந்திய நாடெங்கும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின் தனது பேச்சில், மாமன்னர்கள் பலர் இந்தியாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது, தனிக்கொடையின் கீழ் ஆட்சி நடத்தி வந்த மண் தமிழ் மண். இதை எல்லாம் இலக்கிய ஆதாரங்களை மட்டும் சொல்லவில்லை. அசைக்க முடியாத தொல்லியல் சான்றுகள் இதற்கு உள்ளன. மறுக்க முடியாது இதை எல்லாம் யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. முதல்வராக கருணாநிதி இருந்த போதே கடல் சார் ஆய்விற்கும், ஆழ்கடல் தொல்லியல் ஆய்விற்கும் மிகுந்த முயற்சி மேற்கொண்டார். 1990ல் கடல் சார் ஆய்விற்கு பெரும் திட்டம் தீட்டியதும், பின்னர் கடலில் மூழ்கிய பூம்புகார் நகரத்தை கண்டுபிடிக்க சோதனை மேற்கொள்ளப்பட்டதும். அதில் சில கட்டுமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சியின்கீழ் தான். கீழடி தற்போது சிவகங்கையில் உள்ள கீழடியில் மாபெரும் ஆராய்ச்சிகள், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலக நாடுகள் எல்லாம் கீழடி ஆராய்ச்சியை திரும்பி பார்த்து உள்ளது. தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை இது வெளிக்கொண்டு வருகிறது. இதை ஒன்றிய அரசு பாதியில் கைவிட்ட போது திமுக அதை எதிர்த்தது. நான் நேரில் சென்று கீழடியில் பார்வையிட்டேன். அரிய அணிகலன்கள், கல் மணிகள், சுவர்கள், காளையின் எலும்புகள், சிந்து சமவெளி நாகரீக ஒற்றுமைகள், கருப்பு சிவப்பு நிறம் கொண்ட பானைகள் காணப்பட்டன. செழிப்பு நாம் மிகவும் செழிப்புடன் வாழ்ந்தது இந்த ஆய்வில் தெரிய வந்தது. அதோடு கார்பன் டேட்டிங் சோதனையில் கி.மு. 6 ம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவுமிக்க சமூகமாக தமிழ் சமூகம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. கீழடி என்பது உலக தமிழ் மக்களை ஒன்றிணைத்தது. இதன் காரணமாகவே கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, மயிலாடும்பாறை, கங்கை கொண்ட சோழசுரம் ஆகிய இடங்களில் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வு மற்றும் அதன் பின் நடத்தப்பட்ட ஆலோசனை அடிப்படையில், பல திட்டங்களை தமிழ்நாடு அரசு கொண்டு வர இருக்கிறது. இங்கு பல நாணயங்கள் கி.மு. 6 ம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தமாக கீழடி நாகரீகம் கி.மு. 6 ம் நூற்றாண்டை சேர்ந்தது என்று கார்பன் டேட்டிங் சோதனை உறுதி செய்யபட்டுள்ளது. முந்தைய அகழாய்வுகளில் செய்யப்பட்ட கார்பன் டேட்டிங் சோதனை முடிவின் படி கொற்கை துறைமுகம் கி.மு. 8 ம் நூற்றாண்டுக்கு முன்பே செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொற்கை துறைமுகம் வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்டதை கண்டுபிடித்துள்ளனர். அதேபோல் ஆதிச்சநல்லூர், சிவகளை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நெல் மணிகள் அமெரிக்காவிற்கு சோதனைக்கு அனுப்பப்பட்டது. அதன் ஆய்வு முடிவுகள் கிடைத்துள்ளது. நெல்மணிகள் கார்பன் டேட்டிங் சோதனையில் இந்த நெல்மணிகள் காலம் கி.மு. 1155 என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரை நாகரீகம் 3200 ஆண்டுகள் முற்பட்டது என்பதை இந்த சபையில் அறிவிப்பதில் மிகுந்த பெருமை கொள்கிறேன். இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு இனி தமிழ்நாட்டில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இந்திய துணை கண்டத்தின் வரலாறு இனி தமிழ்நாட்டிலிருந்து துவங்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நன்றியுடன் சான்றாதாரக் குறிப்புகள் 1. கி.மு.10,000 தொல் நாகரீகம் - தொல் தமிழர் நாகரீகம், நவீனா அலெக்சாண்டர். Amezon Kindle. 2. குமரி கண்டம் - இந்திய பெருங்கடலில் புதைந்திருக்கும் ஓர் தொடர் பாலம் | ஒரிசா பாலு | மெய்ப்பொருள்) . 3. இரண்டாவது மதுரைக் காண்டம் 11. காடுகாண் காதை (15 - 22) 4. தமிழ் பூமி- தமிழ் நாடு- Research Paper written by London Swaminathan, Research Article No.1652; Dated 15^(th) February 2015). 5. எகிப்து காசா பிரமீட்டில் எழுதப்பட்டு இருக்கும் “கந்தன்” http://thuruvi.com/tag 6. 7. thuruvi.com/tag/kawthan  8. எகிப்து நாட்டில் கிடைத்த பானை ஓடுகளில் இருக்கும் தமிழி எழுத்துக்கள் 9. புறப்பொருள் வெண்பாமாலை ( கரந்தைப் படலம் 13. குடிநிலை ) 10. மனோன்மணியம்" பெ.சுந்தரனார் 11. திருக்குறள் 50, 388, 423, 742 12. லெமுரியா - லெமூரியா கண்டம் - இலெமூரியா (குமரிக்கண்டம்) - lemuria - lemuria continent - lemuria continent tamil- lemuria tamil continent (Google) 13. தெலுங்கு மொழியின் வரலாறு – Google 14. அயோத்தி தாசர் https://ta.wikipedia.org/s/lx 15. திராவிட மொழிக் குடும்பம் https://ta.wikipedia.org/s/3nv 16. ஈ. வெ. இராமசாமி, https://ta.wikipedia.org/s/ex 17. ந. முடிகோபதி - “சட்டமன்றத்தில் அண்ணா” பக்கம் (31, 36, 37), மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 18. தி.மு.க. சாதனைகள் (DMK). 19. ‘திராவிட மொழிநூல் ஞாயிறு’ தேவநேயப் பாவாணர் பட்டயம் KRS/ கரச/@kryes 20. திரவிடத்தாய் (நூல்) https://ta.wikipedia.org/s/740 21. திமுக அரசுக்குப் பாவாணர் பாராட்டு http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=196&pno=97 இராமரும் அகத்திய முனிவரும் இராமாயணம் ஒரு நடந்த கதை. இராமர் பிறந்தது கி.மு. 5114 ஜனவரி மாதம் 5 கிரகங்கள் சேர்திருந்த உச்சநிலையில் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர். இப்போது கணக்கிட்டால் 2022 உடன் சேர்த்து 7136 ஆண்டுகள் ஆகிறது. இராமருக்கு 12 வது வயதிலும் சீதைக்கு 6 வயதிலும் திருமணம் நடந்தது. அவர் வனவாசம் போனது 24 வயது முடிந்து 25 வயதிலும் சீதைக்கு அப்போது 18 வயதுமாக இருந்தது. பட்டாபிஷேகம் நடந்தது 14 ஆண்டுகள் முடிந்து 39வது வயதில் சீதைக்கு 32 அல்லது 33 எனக் கொள்ளலாம். 2 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கைக்கு பின் 35 வது வயதில் கர்ப்பம் தரிந்திருந்த நிலையில் சீதை வால்மீகி ஆசிரமத்தில் கொண்டுவந்து விடப்படுகிறாள். வால்மீகி குடிலில் லவ, குச என்ற இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தாள். லவ, குச 5 வயதில் வால்மீகி அவர்கள் இராமாயணம் பற்றி எடுத்துரைக்க அதை இராமரின் ஆட்சியின் இராமாயணக் கதையைப் பாடுகிறார்கள். அப்போது இராமருக்கு வயது 46. பின் லவ குச தன் குழந்தைகள் என அறிந்தபின் அவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்து தனது 60 வயதில் ஜலசமாதி என்ற பெயரில் சர்யு நதியில் மூழ்கி உயிர் விடுகிறார். ⁽¹⁾ சென்னையில் செயல்பட்டு வரும் பாரத் ஞான் என்ற அமைப்பின் நிறுவனர் டி.கே.ஹரி. தொல்லியல், வானியல் மற்றும் ஜாதக நிபுணர். ஹரி துவக்கியுள்ள அமைப்பு, இந்து புராணங்களில் கூறப்பட்டு இருப்பவற்றை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து வருகிறது. பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள கிரகங்களின் அம்சங்கள் அடிப்படையிலும், இராமாயண இதிகாசத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளின் அடிப்படையிலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளோரின் பிறந்த தினத்தை, ஆங்கில காலண்டர் முறைப்படி இவர் கணித்துள்ளார். இதற்கெனவே, தேதிகளை கண்டுபிடிக்கும் கம்ப்யூட்டர் மென் பொருளையும் தயாரித்துள்ளார். இதன் மூலமும், புஷ்கர் பட்நாகர் எழுதிய, கடவுள் இராமரின் காலத்தை நாளிடுதல் என்ற புத்தகத்தின் அடிப்படையிலும், இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களின் அடிப்படையிலும், இந்த தேதிகளை ஹரி கண்டுபிடித்துள்ளார். இராவணனுடன் போருக்கு முன்பாக, இலங்கைக்கு அனுமன் கி.மு., 5076ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி சென்று, அங்கிருந்து இரண்டு நாள் கழித்து, செப்டம்பர் 14ம் தேதி இந்தியா திரும்பி உள்ளார். இதை கண்டுபிடிப்பதற்காக, 27 நட்சத்திரங்கள் மற்றும் ஏழு கோள்களின் அமைப்புகள் ஆராயப்பட்டன. அவை இருந்த இடம், ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. இராமர் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர். நாசா மையமும் கோள்களின் அமைப்பு குறித்து விரிவாக ஆராய்ந்து வருகிறது. இராமர் குறித்த எங்களது ஆராய்ச்சி, முழுக்க முழுக்க அறிவியல் அடிப்படையிலானது. இவ்வாறு ஹரி கூறினார். ⁽²⁾ இதிலிருந்து இராமர் பிறந்தது கி.மு., 5114ம் ஆண்டு, ஜனவரி 10ம் தேதி என்று கூறியுள்ளார் தொல்லியல் மற்றும் வானியல் ஆய்வு நிபுணர் டி.கே.ஹரி. (இராமர் பிறந்தது திரேதாயுகம் என்பதும், 12,96,000 ஆண்டுகள். இராமர் வாழ்ந்தது துவாபரயுகம் 8,64,000 ஆண்டுகளுக்கு முந்தியது என்பதெல்லாம் பொய் என்பது தெளிவாகிறது). வேதம், இதிகாசங்களில் முத்து வேதத்தில் முத்து பற்றிய குறிப்புகள் உள்ளன. ரிக் வேதத்தில் (கி.மு. 1,700-1,100) க்ரிசனா (Krisana) என்ற சொல் பல ஸ்லோகங்களில் இடம்பெற்றுள்ளது. இவற்றின் பொருள் முத்தைக் குறிக்கின்றனவாம். அதர்வண வேதத்தில் (கி.மு. 1,200-1,000) முத்துப் பதித்த மோதிரம் பற்றிக் குறிப்பு இடம்பெற்றுள்ளது. இராமாயணம், கிஷ்கிந்தா காண்டத்தில் (4-41-18)⁽³⁾ சீதையை தென்திசை நோக்கித் தேடிச்சேல்லும் வானரப்படைப்பிரிவிடம் சுக்ரீவன் கூறியது: ततो हेममयम् दिव्यम् मुक्ता मणि विभूषितम् || ४-४१-१८ युक्तम् कवाटम् पाण्ड्यानाम् गता द्रक्ष्यथ वानराः | ததோ ஹேமயம் திவ்யம் முக்தா மணி விபூஷிதம் || 4-41-18 யுக்தம் கவாடம் பாண்டியானம் கத த்ராக்ஷயத் வனராஹா கவாடம் பாண்ட்யானாம் என்ற சொற்றொடர் பாண்டியனின் கோட்டைக் கதவு என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கவாடம் என்பதைக் கோட்டை மதில் எனக் கொள்ளாமல் கவாடபுரம் என்ற இடைச்சங்கத்துப் பாண்டியர் தலைநகராகவும் கொள்ளலாம். அல்லது பாண்டியரின் கொற்கை போன்ற கடற்கரைப் பட்டினமாகவும் கொள்ளலாம். பாண்டியரின் இரண்டாம் தலைநகரமாக இது இருந்திருக்கக்கூடும். சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும் எனும் நூலில் உ.வே. சாமிநாதையர் வர்கள் விளக்கும் போது “இரண்டாம் ஊழியதாகிய கபாடபுரத்தில் இடைச்சங்கத்துத் தொல்காப்பியம் புலப்படுத்திய மாகீர்ததியாகிய திருவிற் பாண்டியனவை களத்து அகத்தியனாரும், தொல்காப்பியனாரும், சிறுபாண்டரங்கனாரும், மதுரையாசிரியன் மாறனாரும் துவரைக்கோமானும், கீரந்தயாரு மென்றித தொடக்கதார ஐம்பதொன்பதின்ம உள்ளிட்ட மூவாயிரத்து எழுநூற்றுவ தமமாற் பாடப்பட்ட கலியும் குருகும வெண்டாளிய் முதலிய செய்யுளிலக்கிய மாராய்ந்து செய்த உதயணன் கதையுள்ளும்” என்றெழுதியிருப்பதை நோக்குகையில் கொங்குவேள் காலத்தில் இடைச்சங்க நூல்களிற் சில இருந்தனவென்பதும் அவை அவராலும் அக்காலத்திலிருந்த ஏனையோராலும் ஆராயப்பெற்று வந்தனவென்பதும் தெரிகின்றன. ⁽⁴⁾ . இடைச்சங்கமிருந்த கபாடபுரம் வால்மீகத்திலும் குறிப்பிடப்பட்டிருக் கிறது. சீதையைத் தேடி செல்ல வேண்டிய வழியைச் சுக்கிரீவன் வானரர்களுக்குச் சொன்னபோது, “தென்றிசையிற் கபாடபுரத்தைக் காண்பீர்கள்” என்று சொன்னதாகக் கிஷ்கிந்த காண்டம், 47 வது சருக்கும், 19 வது சுலோகத்திற் காணப்படுகிறது. “தமிழொடு பிறந்தபழ மதுரையில் வளர்ந்தகொடி” என்றதனாலும் அகத்தியர் தமிழ் நாட்டிற்கு வருவதற்கு முன்னமேயே அந்நாட்டில் இருந்த தமிழின் தொன்மை விளங்கும். அகத்திய முனிவர் செய்த இலக்கணம் “அகத்தியம்”; அது இயல், இசை, நாடகமென்னு மூன்றிலக்கணங்களையுடையது; அது மூன்று சங்கத்தார்களுக்கும் இலக்கணமாயமைந்து பல புலவர்களாலும் பெரிதும் போற்றப்பட்டு முதனூலாகவும் எண்ணப்பட்டு வந்தது. இது “வினையினீங்கி” (தொல்கப்பியம், மரபியல், சூத்திரம், 94) என்னுஞ் சூத்திர உரையால் புலனாகிறது.⁽⁵⁾ அகத்திய முனிவரிடம் முத்தமிழ் பயின்ற மாணாக்கர்களுள் இயற்றமிழிலக்கண மியற்றினவர்கள் தொல்காப்பியர் முதலிய பன்னிருவரென்பர். தசரதன், கைகேயிக்கு வழங்கிய வரத்தினால், ஆரண்ய காண்டம் இராமர் பதினான்கு ஆண்டு காடுறை வாழ்க்கைகாக வனம் செல்லும் போது, இலக்குவன் மற்றும் சீதை இராமருடன் செல்கின்றனர். தண்டகாரண்யத்தில் அகத்தியரைச் சந்தித்த இராமருக்கு, மந்திர ஆயுதங்கள் வழங்கினார். அகத்தியர் அறிவரைப்படி, இராம, இலக்குவனர், சீதை பஞ்சவடி சென்றனர். அங்கு ஜடாயுவைச் சந்தித்து நட்பு பாராட்டினர். பஞ்சவடியில் இலக்குவன், இராமர் - சீதை தங்குவதற்கு குடிலை அமைத்தார். இராமர் பிறந்து வாழ்ந்த காலத்தை குறிப்பிட்டதற்கு காரணம். இராமன் தொழுத அகத்தியரை இராமாயணம் குறிப்பிடுகிறது. இராமர் வாழ்ந்த காலத்தில் அகத்திய முனிவர் வாழ்ந்துள்ளார். இரண்டாம் சங்க கால பாண்டியர் ஆட்சி காலம், கபாடபுரம் இருந்துள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகப் பேரசிரியர் ஏ.எல். பாஷம், இந்தியாவிற்குள் படையெடுத்து வந்தவர்கள், தங்களை ஆரியர்கள் என்று அழைத்துக் கொண்டார்கள் என்பதை சுட்டிகாட்டுவது கவனத்திற்கு உரியது. கே.எம். பணிக்கர், ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தது கி.மு.2500 ஆம் ஆண்டுகளில் என்று சொல்வதை மறுக்கிறார் ஜோசப் இடமருகு. “கேம்ப்ரிஜ் ஹிஸ்டரி ஆ,,ப் இந்தியா”என்ற நூலை மேற்கோள் காட்டி இந்தியாவில் கி.மு. 1200 முதல் கி.மு. 1000 வரையுள்ள இக்காலகட்டத்தில் மேற்கு பஞ்சாபில் இருந்து தான் ரிக் வேதத்தின் ஆரம்பகால ஸ்தோத்திரப் பாடல்கள் எழுதப்பட்டன என்றும், கி.மு. 800 காலகட்டத்தில் ரிக்வேதத்தின் பிற்காலப் பாடல்கள் எழுதப்பட்டன என்றும் கூறுகிறார் இடமருகு. கி.மு. 1500 காலகட்டங்களில் இந்துகுஷ் மலைக்கணவாய்களின் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்கள், மாடுகளை மேய்த்துக் கொண்டு, புல்வெளிகளைத் தேடியலைந்து பஞ்சாபில் குழுக்களாக சிறிய கிராமங்களாக வாழத் தலைப்பட்டனர் என்று சொல்கிறார் ரொமிலோ தாப்பர். ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் சமஸ்கிருதப் பேராசிரியர் டி. பர்ரோ சொல்வதைக் கேட்போம். இந்தியாவின் சாஸ்திரிய நாகரீகமானது வேத நாகரீகததில் இருந்து வளர்ந்தது. அந்த வேத நாகரீகமானது இங்கே ஊடுறுவிய ஆரியர்களின் படைப்பாகும். இந்தியத் துணைக் கண்டத்திற்குள் அவர்கள் முதன் முதலாக வந்தது கி.மு. 1500 என்று அநேகமாகக் காலப்படுத்தலாம். ஆரியர்கள் எங்கிருந்து வந்தார்கள்? அல்லது அவர்களின் பூர்வீகம் எது? என்ற கேள்விக்கு வேதங்களை ஆய்வு செய்தவர்களுள் ஒருவர் பாலகங்காதர திலகர். அவர் “ஆரியர்கள் இந்திய மண்ணைச் சேர்ந்தவர்கள் இல்லை. அவர்கள் இந்தியாவுக்கு வெளியில் இருந்து இங்கு வந்தவர்கள்” என்று துல்லியமாகக் கூறுகிறார். அவர் எழுதிய “வேதங்களில் ஆர்ட்டிக் சொந்த பூமி” என்ற நூலில் இருந்து , திலகரின் கருத்தை அப்படியே பதிவு செய்கிறார், பேராசிரியர் அருணன். “பிராமணர்கள் மற்றும் பார்சிகளின் புனித நூல்களில், ஒரிஜினல் துருவ சொந்த பூமியின் பாரம்பரியங்கள் நன்கு பாதுகாக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டால், சைபீரியாவின் வடக்கே தான் ஆதி சொந்த பூமி இருந்தது என்றாகிறது. இதை வேத மற்றும் அவெஸ்தா ஆதாரம் தெளிவாக நிலைநாட்டுகிறது. ஆதி காலத்தில் அங்கே தட்பவெப்ப நிலை மிதமாகவே இருந்தது. பனி ஊழிக்காலம் வந்த பிறகு தான் சூழல் மாறியது. எனவே ஆரியரின் சொந்த பூமி துருவ பிரதேசங்களில் தான் இருந்தது என்றே முடிவு கட்ட வேண்டியுள்ளது”. ⁽⁶⁾ "The Aryans migration are supposed to have taken place about a thousand years after the Indus Valley period.; and yet it is poible that there was no considerable gap and tribes and peoples came to India from north-west from time to time, as they did in later ages, and became absorbed in India. ’’ – The Discovery of India ⁽⁹⁾ சிந்து சமவெளி காலத்திற்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு ஆரியர்கள் இடம்பெயர்ந்து வந்ததாகக் கருதப்படுகிறது. பழங்குடியினர் மற்றும் வடமேற்கில் இருந்து மக்கள் இந்தியாவிற்கு அவ்வப்போது வந்து தங்கி நிலையானார்கள். ரிக்வேதம் எழுதப்பட்ட தொடக்க காலம் கி.மு. 1200 என்றால் அதற்குச் சற்று முன், அதாவது கி.மு. 1500 ஆண்டுகளில் இந்தியாவிற்குள் ஆரியர்கள் வந்தார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறார் ⁽⁶⁾ வரலாற்று ஆசிரியர் எழில் இளங்கோவன். இதனால் இராமயணக்காலம் முன் பின் முரணாகவே காணப்படுகிறது. இராமயணக் காலம் - பொய் இராமாயணப்படி திரேதாயுகம், துவாபரயுகம் இவ்விரண்டிற்கும் முறையே 12,96,000, 8,64,000 ஆண்டுகள் மொத்தம் 21,60,000 ஆண்டுகள். ஆகவே இப்போது நடக்கும் கலியுகத்தை நீக்கி இராமாயணம் நடந்து 21,60,000 ஆண்டுகள் ஆகின்றன என்று கொள்ளலாம். புத்தர் பிறந்த இன்றைக்கு 2550 ஆண்டுகள் தான் ஆகின்றன. இவ்விதம் 2550 ஆண்டுக்குள் இருந்த புத்தரைப் பற்றி திரேதாயுகத்தில் 21,60,000 ஆண்டுகளுக்கு முன் நடந்த இராமாயணத்தில் காணப்படுவன பற்றி ஆதாரங்களுடன் கீழே தரப்படுகின்றன. (சி.ஆர். சீனிவாசய்யங்கார் மொழி பெயர்ப்பு) இராமனைப் பார்க்க வந்த பரதனிடம் இராமன் கேட்கும் பொழுது “பவுத்தன், சார்வாகன் முதலிய நாஸ்திக பிராமணர்களுடன் பழகாமலிருக்கிறாயா? புராணக் கதைகளையும், தர்ம சாஸ்திரங்களையும், பெரியோர்களுடைய சம்பிரதாயம் பரம்பரைப்படி அர்த்தம் செய்யாமல் கேவலம் தர்க்கத்தைப் பிரயோகித்து அவை இகத்திலும், பரத்திலும் பயனற்றவை என்று வாதிப்பவர்கள் அவர்கள்” எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. ⁽⁷⁾ இராமனுக்கு தசரதன் பாட்டாபிஷேகம் செய்ய நகரை அலங்கரிக்கும் பொழுது “வெளுத்த மேகம் போன்ற தேவாலயங்கள், நாற்சந்தி மண்டபங்கள், வீதிகள், புத்தரின் ஆலயங்கள், மதிற்சுவரின் மேல் கட்டப்பட்டிருக்கும் நாற்கால் மண்டபங்கள் முதலிய இடங்களில் கொடித்துணியுள்ள துவஜங்களும், கொடித் துணியில்லாத துவஜங்களும் எடுத்துக் காட்டப்பட்டன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. (அயோத்தி காண்டம்). ⁽⁷⁾ 21 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகச் சொல்லப்படும் இராமாயணக் கதையில் 2500 ஆண்டுக்குள் இருந்து வந்த புத்தரைப் பற்றி கூறுகிற சேதியைக் கொண்டு ஆராய்ந்தால் இராமாயணக் கதை 1500 ஆண்டுகளுக்குள்ளாகவே எழுதப்பட்டிருக்க வேண்டும். அதனால் இராமயணக் காலம் திரேதாயுகம் என்பது பொய்யாகும்".⁽⁸⁾ நன்றியுடன் சான்றாதாரக் குறிப்புகள் 1. ராமாயணம் கட்டுக்கதையா? | Ramayana myth or reality #Ramayana #DushyanthSridhar #pandeyinterview #Guru #gurulive #templelive #Guru (துஷ்யந்த் ஸ்ரீதர் ஆன்மீக சொற்பொழிவாளர்) … 2. பாரத் ஞான் என்ற அமைப்பின் நிறுவனர் டி.கே.ஹரி. தொல்லியல், வானியல் மற்றும் ஜாதக நிபுணர். Google … 3. இராமாயணம், கிஷ்கிந்தா காண்டத்தில் (4-41-18), 4. சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும்- உ.வே. சாமிநாதையரவர்கள், 1929. 5. தொல்கப்பியம், மரபியல், சூத்திரம், 94 6. எழில் இளங்கோவன் - இந்திய தத்துவ சிந்தனையில் வேதமரபும், வேதமறுப்பும்–1.ஆரியர்கள், பக்கம் 13-14. வெளியீடு-கருஞ்சட்டைப் பதிப்பகம். 7. அயோத்தி காண்டம், 6வது சர்க்கம், பக்கங்கள் 23, 24 வது, 100 சர்க்கம், 374 வது பக்கம். 8. பெரியார் - இராமாயணக் குறிப்புகள், நூல் பக்கம் 10,11. வெளியீடு: பெரியார் திராவிடர் கழகம், சென்னை. 9. Jawaharlal Nehru – The Discovery of India, 1946 Page 73. சங்க இலக்கியங்களில் புலம் பெயர்தல் பொதுவாக ஒருவரது முன்னோர் பிறந்து வளர்ந்த நிலப்பரப்பே புலம் எனப்பட்டது. அக, புற நெருக்கடிகள் காரணமாக தாம் வாழ்ந்து வந்த இடத்தை விட்டு வேறிடத்திற்குச் சென்று அங்கு தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் புலம்பெயர் மக்கள். “பதியெழு அறியாப் பழங்குடி கெழீஇய”(சிலம்பு) எனப் புலம்பெயராது ஒரே இடத்தில் மக்கள் வாழ்ந்த செய்தியைச் செவ்வியல் இலக்கியங்கள் பதிவு செய்ததைப் போன்று புலம்பெயர்தலைப் பற்றி முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, புறநானூறு, பட்டினப்பாலை,  நற்றினை ஆகியன கூறுகின்றது.  “புலம்பெயர் மாக்கள் கலந்தினிது உறையும்” என்று வெளிநாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து வந்து புகாரில் வாழ்ந்தவர்களைப்பற்றிப் பட்டினப்பாலை எடுத்துரைக்கின்றது.  “அவன் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து” என நற்றிணையும், “கலந்தரு திருவின் புலம்பெயர் மாக்காள்” எனக் கடலாடு காதையில் இளங்கோவடிகளும், “ஓதல் பகையே துதிவை பிரிவே” எனத் தொல்காப்பியரும் கூறுகின்றார். ஆங்கிலேயர் ஆட்சியின் போது சென்னை ஆளுநரும், ‘தென்னிந்தியக் குடிகளும் குலங்களும்’ என்ற நுலை எழுதியவருமான எட்கர் தர்ஸ்டன் சக்கிலியர் என்பவர் ஆந்திரம், கஞ்சம் ஜில்லாவில் இருந்து நாயக்கர் காலத்தில் தமிழகத்தில் குடியேறியவர்கள் என்று கூறினார். இன்றைய நிலையில் உள்ள ஆந்திரா மற்றும் தெலுங்கானா பட்டியல் இனப்பிரிவில் கூட சக்கிலியர், பகடை என்ற சாதியே இல்லை என்கிறபோது ஒன்றை நாம் உறுதியிட்டு கூற முடியும் அவர் கூறியது போல் சக்கிலியர் புலம் பெயர்ந்ததற்கான வாய்ப்பே இல்லை எனலாம். ஒரு பகுதியில் இருந்து ஒரு இனம் நூற்றுக்கு நூறு புலம் பெயர்ந்து விட மாட்டார்கள். - எட்கர் தர்ஸ்டன் கூறும் நாயக்கர் காலத்தில் தமிழகத்தில் புலம் பெயர்ந்தோர் ஆதி ஆந்திரா மக்களாக இருக்கக் கூடும். சக்கிலியர், மாதாரி, பகடை, செம்மான் - தமிழ் குடிகளே! சென்னை மாகாணத்தில் 1881 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் 130,386 பேர் மாதிகா இனத்தவர்கள் இருந்தனர். 1931 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது சென்னை மாகாணத்தில் 17,396 பேர் மாதிகா என்ற பெயரை புறக்கணித்து விட்டு அருந்ததியர் என்ற பெயரிலேயே தங்களை பதிவு செய்தனர். முன்னாள் நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனன் குழு அறிக்கை (2008) படி தமிழகத்தில் மாதிகா இனத்தவர்கள் 5,103 பேர் உள்ளார். அதாவது மாதிகா இனத்தை சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் மாதிகா என்ற பெயரை புறக்கணித்து விட்டு அருந்ததியர் என்ற பெயரிலேயே தங்களை பதிவு செய்ததால் 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 7,71,659 பேர் அருந்ததியர்கள் உள்ளனர். “சக்கிலி” என்ற வடமொழிச் சொல்லைத் தவிர்க்க “அருந்ததியர்” என்ற பெயர் 1920 ஆம் ஆண்டுக்கு பின் அரசு ஆவணங்களில் பதிவானது. ⁽¹⁾ தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள எட்கர் தர்ஸ்டன் (ஆங்கில மூலம்) தமிழாக்கம் முனைவர் க. இரத்னம் அவர்களின் “தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்” தொகுதி இரண்டு கஞ்சி முதல் ஜூங்கு வரை நூலில் சக்கிலியரைப் பற்றி குறிப்பிடும் போது "தெலுங்கு பேசப்படும் பகுதிகளுக்குரிய மாதிகர்களுக்கு ஒப்பானவர்கள் தமிழ் நாட்டில் தோலில் பணிபுரியும் சக்கிலியர். இவர்கள் தெலுங்கு அல்லது கன்னடம் வழங்கும் மாவட்டங்களிலிருந்து வந்து குடியேறி இருத்தல் வேண்டும். தொன்மையான தமிழ்க் கல்வெட்டுகளிலோ இலக்கியங்களிலோ இவர்களைப் பற்றிய குறிப்பேதும் இல்லை எனக் குறிப்பிடுகிறார். ⁽²⁾ - எட்கர் தர்ஸ்டன் குறிப்பிட்டதை முழுமையாக மறுக்கும் வகையில் கீழ்க்காணும் சக்கிலியர், பகடைகள் வரலாற்று கல்வெட்டுச் சான்றுகள், செப்பேடு பட்டயங்கள் ஆதாரங்களின் தலைப்பில் பார்த்தால் தெளிவு பிறக்கும் . நன்றியுடன் சான்றாதாரக் குறிப்புகள் 1. விக்கிப்பீடியா – மாதிகா 2. “தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்” எட்கர் தர்ஸ்டன் (ஆங்கில மூலம்) தமிழாக்கம் முனைவர் க. இரத்னம் அதியர் குடி 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சேர, சோழ, பாண்டியர்கள் ஆகிய பேரரசர்களுடன், வேளிர் என்ற மரபைச் சேர்ந்த குறுநில மன்னர்களும் தமிழகத்தை ஆட்சி செய்திருக்கிறார்கள். இந்த வேளிர் மரபில் சில குடிப் பிரிவுகள் இருந்தன. அதில் ஒன்று ’ அதியர் குடி‘. கடை எழு வள்ளல்களில் ஒருவனான அதியமான் அதியர் குடிவழி வந்த குறுநில மன்னன். இவன் ஆட்சி செய்த நிலப் பகுதியின் பெயர் குதிரைமலை. பின்னாளில் இது தகடூர் ஆகி, இன்று தர்மபுரியாக இருக்கிறது. மன்னன் அதியமானும், புலவர் ஒளவையாரும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பதைப் புறநானூற்றுப் பாடல்கள் உறுதி செய்கின்றன. ஒளவையார் அதியமானை ’அதியர் கோமான்’ என்று புகழ்ந்து பேசுகிறார். தனக்குக் கிடைத்த சாவா மருந்தாகிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாது ஔவையாருக்குக் கொடுத்தார் என்றும் அவரது கொடையின் திறம் பேசப்படுகிறது. […] அதியமான் தனக்குக் கிடைத்த சாவா மருந்தாகிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாது ஔவையாருக்குக் கொடுத்த அவரது கொடையின் திறம் (ஆசிரியர் தகடூரான், கூகுள் படம்) ⁽¹⁾ அருந்ததியர் யார்? அருந்ததியர் “அதியர் குடியினர்” என்பதை நாம் உறுதியிட்டுக் கூற இயலுமா? என்ற வினாவிற்கு விளக்கமாக அருந்ததியர் வரலாற்று ஆய்வாளர் எழில் இலங்கோவன் அவர்கள் விளக்குவதைக் காண்போம். இயேசு கிருஸ்து பிறப்பதற்கு முன்பே சங்கம் அமைத்து மொழி, வீரம், வாழ்வியல் செழிக்க வாழ்ந்தவர்கள் தமிழர்கள். தமிழ் நிலத்தை சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூன்று வேந்தர்கள் ஆட்சி செய்தனர். இவர்கள் தவிர குறுநில மன்னர்களும் தமிழ் நிலத்தில் ஆட்சி செய்துள்ளனர். இவர்கள் வேளிர் என அழைக்கப்பட்டனர் இவ்வேளிர் பிரிவனருள் ஒரு பிரிவினரான “அதியர்” குடியினர் அன்றைய தகடூர் நாட்டை (இன்று தருமபுரியும் அதை ஒட்டிய நிலப்பகுதி) ஆட்சி செய்தனர். இந்த “அதியர்” குடி வழி வந்தவர்களே “அருந்ததியர்கள்”. ⁽²⁾ […] ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாளி (ஜம்பைக் கல்வெட்டு} (Jambai_Tamil_Brahmi) Tamil Brahmi inscription in jambaimalai ⁽⁴⁾ விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூருக்கருகில் உள்ள ஜம்பை என்னும் ஊரில் அமைந்த குகைத்தளத்தில் தமிழி (தமிழ் பிராமி) எழுத்துகளால் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்று அதியமானைப் பற்றியதாகும். 1987-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கல்வெட்டுப் பயிற்சி மாணவரான கே.செல்வராஜ், தனது கள ஆய்வின்போது இக்கல்வெட்டு இருப்பதைக் கண்டறிந்தார். அப்போதைய துறை இயக்குநர் இரா. நாகசாமியால் இது படிக்கப்பட்டுத் தமிழிலும், ஆங்கிலத்திலும் படத்துடன் கட்டுரையாக நாளிதழ்களில் வெளியிடப்பட்டது. அண்மைக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகச் சிறப்பு வாய்ந்த அரிய கல்வெட்டு இது." வரலாற்றை வரையறை செய்யத் துணை நின்ற சிறப்புடைய கல்வெட்டு இந்த ஜம்பைக்கல்வெட்டாகும்.   அசோகச் சக்கரவர்த்தியின் கல்வெட்டில் இடம்பெறும் சதியபுத என்பது மேற்படி ஜம்பைக் கல்வெட்டில் ‘சதியபுத’ அடைமொழியோடு கூறப்பட்ட அதியமான் நெடுமான் அஞ்சியையே குறிக்கிறது என்னும் செய்தி நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் நிறுவப்பட்டுள்ளது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியருக்கு இணையாக ஒரு குறுநில மன்னனான அதியனும் அசோகன் போன்றதொரு பேரரசனால் சுட்டப்பெறுகிறான் என்பது அதியனின் சிறப்பு நிலையைக் காட்டுகிறது. சங்ககாலத் தமிழ் இலக்கியமான புறநானூற்றில் பேசப்படுபவனும், தகடூர்த் தலைவனுமாகிய அதியமான் நெடுமானஞ்சி ஒரு குகை வாழிடத்தைத் தானமாகக் கொடுத்ததை இக் கல்வெட்டு அறிவிக்கின்றது. கல்வெட்டின் செய்தி:  ஸத்திய புத்திரன் அதியன் நெடுமான் அஞ்சி என்பவர் தானமாகக் கொடுத்தே பாளி (சமணர் படுக்கை) ⁽⁴⁾ […] ஸதிய புதோ -  ஜம்பைக்கல்வெட்டில்  […]          ஸதிய புதோ -  கிர்னார்   கல்வெட்டில் தமிழ் மன்னர்களின் பெயர்கள் […] சோடா   பா   ண் டா    தி    ய      பு   தோ     கே   த    ல   பு  தா முனைவர் மா.பவானி, உதவிப் பேராசிரியர், கல்வெட்டியல் துறை கொங்கு கல்வெட்டு ஆய்வு நாகரிக வளர்ச்சி பெறா மிகப்பழங்காலத்தில் ஒரு பழங்குடியினரிட மிருந்து மற்றொரு பழங்குடியினருக்கும், ஒரு கடற்துறை நகரிலிருந்து பிறிதொரு கடற்துறைக்குமாக வணிகம் நடைபெற்றது என்கிறார் திரு ஸ்காப்.. ⁽²⁾திரு. ஸ்காப் அவர்களின் கூற்றுப்படி கி.மு. 7 ஆம் நூற்றாண்டுக்கு மிக நீண்டகாலம் முன்பிருந்தே தமிழர்கள், அரேபியர்கள் மூலம் மெசபடோமியப் பகுதிகளுக்கும், கிழக்கு ஆப்பிரிக்காவுக்கும், எகிப்துக்கும், பாலஸ்தீனத்துக்கும், கிழக்கே சீனா வரையிலும் வணிகம் செய்து வந்தனர் எனலாம். தமிழர்களின் கடல் வணிகத்தில் சேர சோழ பாண்டியர்களுக்கு இணையாக அதியமான் உலகம் முழுவதும் வணிகம் செய்யும் திறன் பெற்றவராக இருந்துள்ளார் என்பதும் புகழ் பரவியுள்ளதும் தெளிவாகிறது. […] அதியமான் - வரலாற்று மையம் (மெசபடோமியா) ⁽⁵⁾ டைக்ரிஸ் மற்றும் யூப்ரடீஸ் நதிகளுக்கு இடையில் உள்ள பழைய மெசபடோமியாவின் சமவெளிக்கு மிக அருகில் இருப்பது, அதியமான் ஆரம்பகால வரலாற்றைக் காட்டும் வரலாற்று மையமாக இருந்து வருகிறது. 669மீ உயரத்தில், நிலம் மலைப்பாங்கானது, டாரஸ் மலைகளின் விரிவாக்கங்கள் வடக்கு பக்கத்தை உள்ளடக்கியது. புகழ்பெற்ற யூப்ரடீஸ் (ஃபிரத்) நதி இப்பகுதிகளில் பாய்ந்து கிழக்கு மற்றும் தெற்கு எல்லைகளை வரையறுக்கிறது. ⁽⁵⁾ […] துருக்கியில் ஊர் பெயர் கரயோல்லாரி - அதியமான் உலகளாவிய தமிழரின் வரலாறு - ஒரிசா பாலு - by Mind your Mind with Stephenraj ⁽⁶⁾ புறநானூறு - 95. புதியதும் உடைந்ததும்! ⁽⁷⁾ இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக் கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய் அணிந்து, கடியுடை வியன்நக ரவ்வே : அவ்வே, பகைவர்க் குத்திக், கோடுநுதி சிதைந்து, கொல்துறைக் குற்றில மாதோ ; என்றும் உண் டாயின் பதம் கொடுத்து, இல் லாயின் உடன் உண்ணும், இல்லோர் ஒக்கல் தலைவன், அண்ணல்எம் கோமான், வைந் நுதி வேலே. திணை: பாடாண் திணை. (ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.) துறை: வாண் மங்கலம். (அரசனுடைய வாளைப் புகழ்தல்.) செல்வம் இருந்தால் மற்றவர்களுக்கு உணவளித்துப் பிறகு தான் உண்ணுவதும், செல்வம் இல்லையானால் (குறைந்தால்) தன் உணவைப் பிறரோடு பகிர்ந்து உண்ணும் பண்புடைய, வறிய சுற்றத்தார்களின் தலைவனாகிய பெருமைக்குரிய என் வேந்தன் அதியமான். “இங்கே ஆயுதங்கள் எல்லாம் பூவாலும் மயில் பீலியாலும் அலங்கரிக்கப்பட்டு நெய் தடவி புதிதாக உள்ளன. ஆனால் அதியமானின் படைக்கலத்திலே காட்சி இப்படி இல்லை. அவன் ஆயுதங்கள் எல்லாம் பகைவர்களின் ரத்தம் தோய்ந்து அவர்களின் கிழிந்த சதைகள் ஒட்டி நிறம் மாறி கூர் மங்கி கொல்லனிடத்தில் சரிசெய்ய வைக்கப்பட்டுள்ளன”. ஔவையின் இந்த பாடல் மூலம் அதியமானின் வீரத்தை உணர்ந்து ஔவையாருக்கு உயர்ந்த மரியாதைகளை செலுத்தி வழியனுப்பினான். அத்துடன் போரிடும் எண்ணமும் விட்டு அதியமானுடன் நட்பு பாராட்டினான் தொண்டைமான், போரிடும் எண்ணமும் விட்டு அதியமானுடன் நட்பு பாராட்டினான் தொண்டைமான். இங்கே ‘கோ" என்பதற்கு பெரிய, சிறந்த, பெருமை வாய்ந்த என்று சிறப்புப் பெயர்கள் உண்டு. ’கோ’ என்ற ஓரெழுத்துச் சொல்லும், ‘மா’ என்ற ஓரெழுத்துச் சொல்லும், இருசொல் ஒருபொருள் ஆகும். எனவே அதியர் குடியினர் சிறப்பு வாய்ந்தவர் என்பதை உணர்த்த அவர்கள் மா+அதியர் என்று அழைக்கப்பட்டனர். மாதியர் – இதுதான் அருந்ததியரின் முதல் இனப்பெயர். அதுபோல அருமை (யான) +அதியர் என்பது அருந்ததியர் ஆயிற்று. மாதியர், அருந்ததியர் ஆகிய இவ்விரு பெயர்களும் மரபு வழியான அருந்ததியர்களின் குடிப் பெயர்கள் ஆகும். இனம் மொழி, வீரம், நாடு உட்பட தமிழ்நெறிப் பண்பாடுகளில் மிகச் சிறந்தவர்களாக வாழ்ந்தவர்கள் அதியர்கள். சிறந்த “அருமை (பொருந்திய) அதியர்” என்பது மருவி அருந்ததியர் ஆயிற்று. இப்படி மருவி வரும் குடிப்பெயர்கள் பற்றி வின்சன்ட் ஸ்மித், பேராசிரியர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் போன்ற பல அறிஞர்கள் தத்தம் ஆய்வு நூல்களில் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கம் கூறி இருப்பதும் இங்கு நினைக்கத்தக்கது" என அருந்ததியர் அதியர் குடியினர் என்பதை சுருக்கமாக விளக்கியுள்ளார் ஆசிரியர் எழில் இளங்கோவன். ⁽¹⁾ அடுத்து பறம்பன் என்ற பெயரைப் பார்ப்போம். 2000 அடி உயரத்திற்கு உள் இருக்கும் மலையைப் பறம்பு என்று சொல்வார்கள். மலையும் மலையைச் சார்ந்த இடம் குறிஞ்சி என்று அழைக்கப்படும். எனவே பறம்பு என்பது குறிஞ்சி நிலம். குறிஞ்சியின் தலைவன் முருகன், அவனின் தாய் கொற்றவை. அதனால் கொற்றவையை வணங்கும் (தாய் வணக்கம்) பறம்பு என்ற குதிரை மலையை ஆட்சி செய்த அதியர், பறம்பர் என்றும் அழைக்கப்பட்டனர். பறம்பு என்பது நிலம் சார்ந்து வருவதால் இப் பெயர் இடவாகு பெயர் என்று இலக்கணம் சொல்கிறது. எட்கர் தர்ஸ்டன் சொன்ன, கொற்றவையை வணங்கி ஆட்சி செய்தவர் மாதியர் என்பதற்கும், தேவநேயப் பாவாணர் சொன்ன பறம்பர் என்பதற்கும் வரலாற்றுச் சான்றாய் இருக்கும் மன்னன் அதியமானின் ‘அதியர் குடி’ வழி வந்த அருந்ததியர்கள் - ஆதித் தமிழர்கள் என்பதே தமிழ் நாட்டின் வரலாறு^. (8)^ அருந்ததியர்கள் தமிழர்கள் என்றால் அவர்கள் ஏன் தெலுங்கு, கன்னடம் பேசுகிறார்கள்? என்ற கேள்விக்கு பதிலாக: நம் முன்னோர்கள் வாழ்ந்த தகடூர் என்ற தருமபுரிக்குச் சற்று தொலைவில் கர்நாடகாவுக்குப் போக வழி அமைந்திருக்கிறது. எனவே அங்கு சென்ற அருந்ததியர்கள் குறைவு. ஆனால் தருமபுரிக்கு அண்மையில் ஆந்திராவுக்குப் போகும் வழி அமைந்திருந்ததால் அருந்ததியர் மக்கள் ஆந்திராவுக்குப் போய் விட்டார்கள். ஏன் போனார்கள்? தருமபுரியை விட ஆந்திரா நிலவளம், நீர்வளம் மிக்க விவசாய நாடு. தருமபுரியில் அத்தகைய வளம் இல்லை. எனவே தருமபுரியின் எல்லைப் பகுதிக்குள் வாழ்க்கைக்காக வேலை தேடிச்சென்றனர். இன்னும் சிலர் வணிகம் (வியாபாரம்) காரணமாகச் சென்றுள்ளார்கள். அப்படிச் சென்றவர்கள் அடிக்கடி போய்வர, இன்று போல அன்று போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் அங்கேயே தங்கி இருக்கிறார்கள். இதுபோன்ற காரணங்களால் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டில் சென்று தங்கும் மக்களைப், பட்டினப்பாலை - சிலப்பதிகாரம் ஆகிய இலக்கியங்கள் ’ புலம் பெயர் மாக்கள் ’ என்று சொல்கிறது. அப்படிப் புலம் பெயர்ந்து சென்ற அருந்ததியர்கள் ஆந்திராவின் மையப் பகுதிகளுக்குச் செல்லாமல் தமிழகத்தை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் மட்டுமே தங்கினார்கள். ஆந்திர எல்லைப் பகுதிகளில் தங்கிய, தமிழகம் திரும்பிய அருந்ததியர் ஆந்திரத் தெலுங்கைப் பள்ளியில் முறையாகப் படிக்கவில்லை. எனவே நன்னயர் என்ற தெலுங்கு அறிஞரால் செப்பம் செய்யப்பட்ட தெலுங்கு அருந்ததியருக்குத் தெரியாது. அருந்ததியர் பேசுவது தெலுங்கு இல்லை. தெலுங்கு முலாம் பூசப்பட்டு, தெலுங்கு மொழியின் ஓசை - ஒலியில் தமிழைத்தான் பேசுகிறார்கள் என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை. நன்றியுடன் சான்றாதாரக் குறிப்புகள் 1. ஆசிரியர் தகடூரான், கூகுள் (படம்) 2. ஆசிரியர் எழில் இளங்கோவன் அவர்களின் “அருந்ததியர் வரலாறு வினாவும் விளக்கமும்” என்ற நூல். மும்பை அருந்ததியர் சங்கம்,(1998) ஆதி தமிழர் பேரவை வெளியிட்டவை. 3. SOURCE ; THE PERIPLUS OF ERITHRYAN SEA-English translation by W.H.SCHOFF Page.227,228. 4. ஜம்பைக் கல்வெட்டு ( கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா ) https://ta.wikipedia.org/s/biy 5. அதியமான் - வரலாற்று மையம் (மெசபடோமியா) 6. உலகளாவிய தமிழரின் வரலாறு - ஒரிசா பாலு - by Mind your Mind with Stephenraj துருக்கியில் ஊர் பெயர் கரயோல்லாரி - அதியமான் 7. புறநானூறு - 95. புதியதும் உடைந்ததும்! 8. ஆதித் தமிழர் அருந்ததியர் (Facebook) சாதிகளின் தோற்றம் ஜாதி என்ற சொல்லே தமிழல்ல. ஜா என்பது ஜனனம் (பிறத்தல்) என்பதுடன் தொடர்புடையது. ஜாதி என்ற சொல் தமிழல்ல என்பது மட்டுமல்ல, அதற்கு இணையான தமிழ்ச்சொல் வேறு எதுவும் கூட வழக்கில் இல்லை. குலம், குடி போன்றவையே தமிழ்ச்சொற்கள். “சாகுபடிக்கு கிணறு தோண்டினவர்களுக்கு தோட்டி (தோண்டு-வெட்டு) என்கிற பெயர் வந்தது. கி.பி. 3-4 வது நூற்றாண்டிலிவர்கள், ஆம்பூர், வேலூர் ஆகிய பகுதிகளை ஆண்டு வந்த எயினர்களுக்கு கொட்டகாரம் என்கிற களஞ்சியங்களும், எயில் எனும் கோட்டைகளும் இருந்தன. அவர்களுக்கு பாணன் என வாத்தியக்காரர்களும், செம்மான் என்கிற செருப்பு தைக்கிறவர்களும் இருந்தார்கள்” எனக் குறிப்பு உள்ளது. ⁽¹⁾ (ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம் - 4வது அத்தியாயம், 12 - 16 பக்கம்). (பக்கம் 63 முதல் 66 வரை கீழ்காணும் கருத்துகளை அனைவரின் பார்வைக்கு அப்படியே பதிவு செய்துள்ளேன்) ⁽²⁾ “ஆரியர் சுமார் முவ்வாயிரம் வருஷங்களுக்கு முன் மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவின் வடமேற்கு கணவாய் வழியாய் இந்தியாவிற்கு வந்தனர். இவர்கள் வந்து இந்தியாவில் விந்திய பர்வதத்திற்கும் நர்மதைக்கும் வடக்கில் தாங்கள் பெயரிட்ட”ஆரியவர்த்தம்" என்கிற பாகத்தில் நெடுங்காலமிருந்தனர். இவர்கள் பூர்வீக சாஸ்திரங்களின் படி ஆரியவர்தத்தை விட்டு தென்புறம் வரத்தகாதவர். தென்னிந்தியாவில் தமிழர்கள் ஆரியருக்கு இடங்கொடாமல் தங்கள் திராவிட பாஷைகளைப் பேசிக் கொண்டு சுயாச்சியாய் நெடுங்காலமிருந்தனர். இத்திராவிடர் ஜாதிகுல வேற்பாடுகளற்றவர்களாய் ஒருவரோடொருவர் விவாகம் பிரிதிபோசனம் முதலியவைகள் எவ்வித ஆக்ஷேபனையுமின்றி செய்து கொண்டும், பிரதேசங்களுக்கு கப்பல் யாத்திரை சென்று வியாபார முதலியது செய்தும் கல்வியிற் சிறந்தவர்களாகவும் அதிக நாகரீக முடையவர்களாகவு மிருந்தார்கள். இத்திராவிட ராஜ்ஜியங்களைப் பற்றி மனுதர்ம சாஸ்திரத்திலும் ஆரியர் புராணமாகிய இராமாயணத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. திராவிட நாட்டின் சிறப்பைப் பற்றியும் அவர்கள் நாகரீகத்தைப் பற்றியும் இராமாயணத்திலேயே பார்க்கக் காணலாம். இவ்வண்ணம் சிறப்புற்று சுத்த சைவசீலராய் சகோரத்துவம் நிறைந்து சுகமாய் வாழ்ந்து வந்த நாட்டிற்கு ஆரியர் முதலில் யாத்திரைப் பிரயாணிகளாக வந்தனர். அவர்களுக்கு “மிலேச்சர்” என்று திராவிடர் பெயரிட்டனர். பண்டைகாலத்து நிகண்டுகள், திவாகரம், பின் கலந்தை முதலியவைகளில் “ஆரியர்” என்பதற்கு “மிலேச்சர்” என்றே சொல்லப்பட்டிருக்கிறது. ஆரியரில் சிலர் அனுசரித்து வந்த ஆசாரங்களும் நடத்தைகளும் திராவிடர்களின் நடவடிக்கைகளுக்கு தாழ்ந்திருந்தமையால் அம்மாதிரி “மிலேச்சர்” என்று பெயரிட்டிருக்க வேண்டும். சமஸ்கிருத பாரதத்திலேயே சிந்துநதியின் கணவாயிலிருந்த சில ஆரியர்களுக்கு “மிலேச்சர்” என்று பெயரிடப்பட்டிருக்கிறது. மேலும் ஆரியருக்கு “சுரர்” என்கிற ஒரு பெயர் உண்டு. அதன் பொருள் “சுரா” சம்மந்தமுடையவர் எனப் புலப்படுகிறது. “சுரா” என்பது கள், மது என பொருளாம். இவ்வாரியர்கள் குதிரை ஆடு மாடு முதலியவைகளை தின்பதுடன் சோமபான மென்னுப கட்குடித்தலு முடையவராதலினால், வைதீக கிரியை என்று யாகங்கள் செய்வதும், அவற்றுள் ஆடு, மாடு அசுவமாதிய இவைகளை பலியிட்டு புசிப்பதுமின்றி புருஷமேத யாகமென மனிதரையும் பலியிட்டு தின்று வந்தார்கள். இதனாலே தான் ஆரியருக்கு ஆதி காலத்தில் மிலேச்சர் என்றும் சுரர் என்றும் பூர்வகால நூலாசிரியர்கள் கூறியிருக்கின்றனர். மேலும் தமிழகத்தில் முதன் முதல் வரும் போது ஸ்தமபதத்தின் பேரிலாடுபவர்களாகவும் வந்தார்கள்- ஆகையினால் தமிழர்கள் அவர்களை தொம்பரென்றும் ஜாலவித்தைகாரர் களென்றும் நினைத்தார்கள். “ஆரியக் கூத்தாயினும் காரியத்தின் பேரில் கண்ணாயிரு” என்கிற பழமொழியில் நாளைவரையில் ஆரியக்கூத்து என்கிற பதம் தமிழிலிருக்கிறது. மேலும் இன்னொரு பதமாகிய “ஆரியப்பாவை” என்பது ஆரியர்கள் தமிழ்நாட்டில் ஆட்டக்காரர்களாக திரிந்து கொண்டிருந்தார் களென்பதை நியாபகப்படுத்துகிறது. இவ்விதமாக ஆரியரில் சிலரிருந்த போதிலும் அவர்கள் மொத்தத்தில் அறிவுள்ளவர்களாகவும் நாகரீகமுடையவர் களாகவே இருந்தார்களென்று ஏற்படுகிறது. ஆரியர் தமிழகம் வந்து சேர்ந்து சுமார் 400, 500 வருஷங்களுக்கு பின்னர் எழுதப்பட்ட தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் செய்யுளியலில் ஆரியரைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி சீர்த்தகு சிறப்பின் கிழவன் கிழத்தியொடு அளவு இயல் மரபின் அறு வகையோரும் களவின் கிளவிக்கு உரியர் என்ப. (181) ஆரிய பிராமணர்கள் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் மத்தியில் தாங்கள் நிற்பவர்களென்றும், அநேக வித மந்திர வித்தைகளை தெரிந்தகளென்றும், மனிதர்களுக்கு தாங்கள் தேவர்களென்றும், எதையும் செய்ய சக்தியுள்ளவர் களென்றும் நவக்கிரகங்கள் தாங்கள் சொல்லுகிறபடி நடக்க வேண்டியவை களென்றும், வேண்டும்போது மழை பெய்யச்செய்ய சக்தியுள்ளவர்களென்றும் தமிழர்களை பலவகையில் பயமுறுத்தி ஏமாற்றியுள்ளனர். பண்டைகாலத் தமிழரசர்கள் நீங்கி விபசாரத்தால் பிறந்த தமிழரசர்களை கைவசப்படுத்திக் கொண்டு பலவித தந்திரங்கள் செய்து ஏமாற்றி, குற்றமற்ற தமிழர்கள் ஆரியர்களிடமுள்ள தீய ஒழுக்கங்களையும் ஆசாரங்களையும் ஏற்றுக் கொள்ளும் படி செய்தனர். தமிழ் நூல்களெல்லாம் கடலுக்கு இறையாய் விட்டபடியினால், பின்னிட்டு வந்த தமிழ் வித்துவான்கள் வியாசர் கட்டுபாடு செய்து எழுதிய நூல்களையே ஆதாரமாக எண்ணி தமிழர் எல்லாம் ஆரியரென்று சரித்திரம் தெரியாமல் கூறிப் போயினர். ஆரியர் தமிழர்களிடத்திலிருந்து தங்களுக்கு வேண்டியது எவ்வளவோ அவ்வளவு தெரிந்து கொண்டு, தங்கள் சுயநன்மைகளைக் கோரி எழுதிக் கொண்ட சுருதிஸ்மிருதி இதிகாசங்களையே தமிழ் வித்துவான்கள் உண்மையான நூல்களென நம்பி தாங்கள் அவைகளை அனுசரித்தும் பிறரை அனுசரிக்கும்படி ஏற்பாடுகள் செய்துவிட்டு போயினர். அவ்வித கொள்கைகளையும் அனுசரிக்க அநேக நூல்களையும் எழுதிவிட்டார்கள். தமிழகத்தில் ஆரியரிடம் ஆசாரங்களையும் நடவடிக்கைகளையும் ஏற்றுக் கொள்ளாதவர்களை தாழ்ந்தவர் என்கிற கருத்தும் பரவியது. இவ்விதமெல்லாம் தமிழர்களை ஏமாற்றி தங்கள் ஆசாரங்களையும் தீய ஒழுக்கங்களை எல்லாம் ஏற்றுக் கொள்ளும்படி ஆரியர் செய்தனர். அவ்வகை ஏற்படுத்தியதில் ஜாதி வித்தியாசம் என்பது ஒன்று. கபிலர் தம் அகவலில் பிராமணரைக் குறித்து சொல்லும்போது முற்படைப் பதனில் வேறாகிய முறைமைபோல நால்வகை ஜாதியை யிந்நாட்டினீர் நாட்டினீர் ……. என்றார். தமிழத்தில் ஜாதி வித்தியாசங்கள் கிடையா. ஜாதிப் பெயர்களெல்லாம் தொழிலைக் காண்பித்தே ஒழிய யாதொரு ஜாதியையும் காண்பிக்கவில்லை. கிருஸ்து பிறந்த பின் 800 வருஷங்களான பின்னும் ஒருவரோடொருவர் விவாகம் போசன முதலியன செய்து கொண்டு வந்தார்கள். கி.பி. 14வது நூற்றாண்டில் மத்தியில் “வள்ளுவபறை பதினெட்டு ஜாதி” யிருந்ததாக ஏற்படுகிறது. தமிழகத்தில் ஆரியரிடம் நால்வகை வகுப்பாகிய பிரம, சத்திரிய, வைசிய, சூத்திர வகுப்புகளை ஏற்படுத்த முயன்றபோது பிராமண பட்டம் தமிழ் ஜாதியா யாருக்கும் குடுக்காமல் அதை தாங்களே பற்றிக் கொண்டனர். மற்ற மூவகை ஜாதிகளை ஏற்படுத்தியது. 1. போசனம், 2. தொழில், 3. மதம், 4. இடம் இவைகளையனுசரித்து ஆரியரும் திராவிடரும் கி.பி. 250 வது வருஷம் வரையில் மாமிச பட்சனிகளாயிருந்தார்கள். சமணமதம் வந்த பிறகு பிராமணர் அதை விட்டு விட்டார்கள். திராவிடரில் சிலரும் அதை நீக்கினர். அதிலும் பிராமணர்களுக்கு வேண்டிய பிராணிகள் அதிக மேன்மையானவைகள், அவ்வகை பிராணிகளை கொல்லுதல் பாவம் என்றார்கள். பிராமணருக்கு வேண்டிய பஞ்சகவியத்தை தரும் பசு பரிசுத்தமானதாயிற்று. அதைக் கொல்லுதல் பெருத்த பாவமென்று பிராமணர்கள் சொன்னார்கள். பத்துப் பாட்டிலும் புறநானூறிலும் எயின வேடர்கள் பன்றியிறைச்சியும், காட்டுப் பசுவையும் தின்று மதுபானம் செய்து வந்தார்களென்று சொல்லப்படுகிறது. தற்காலத்திலும் அவ்வழக்கம் நீங்கவில்லை. எயினராகிய “பறையர்” என்போர் பசு மாமிசத்தை கொன்று தின்றபடியினால் பிராமணர் அவர்களை மிக தாழ்மைபடுத்தினர். அவர்களை தீண்டத்தகாதவர் என்றனர். பிராமணர் முன் மேலுக்கு வரவேண்டுமானால் மாட்டு மாமிசத்தை சாப்பிடும் வழக்கம் விட்டுவிட வேண்டியதாயிருந்தது. அதன்படியே இதர எயின வமிசத்தினராகிய கைக்கோளர், பாணர், செம்மான், கம்மாளர் முதலியவர்கள் அவ்வழக்கத்தை விட்டு மேன்மை அடைந்தனர். அப்படி விடாத பறையர் தாழ்மையடைந்தார். சஷ்குழி - என்ற வடமொழிச் சொல் “சக்கிலி” என்று மறுவியுள்ளது, இதன் பொருள் செத்த மாடு சாப்பிடுபவன்! பிராமணர்கள் தான் இவர்களை இத்தாழ்வான நிலைமைக்கு கொண்டுவந்தவர் என்று “தமிழ் வாசகங்கள்” எழுதிய சீனிவாச அய்யங்காரரே ஒத்துக் கொள்கிறார்." ⁽²⁾ (ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம் - 4வது அத்தியாயம், 12 - 16 பக்கம்). 1920 ஆம் ஆண்டு வெளிவந்த நூல் கோபால் செட்டி எழுதிய கருத்துகளை அனைவரின் பார்வைக்கு மேற்கண்டவை அப்படியே பதிவு செய்துள்ளேன்). தமிழ்நாட்டில் தோல் தொழிலைச் செய்துகொண்டிருந்தவர் பறம்பர் (செம்மார்) என்னும் தமிழ் வகுப்பார். இவர் பாணருள் ஒரு பிரிவினர். பாணர் பறையர். பாணரும் சக்கிலியரைப்போல் மாடு திண்பவர். மாட்டுத் தோலைப் பதனிட்டு, அதனாற் செருப்பு, கூனை முதலிய பொருள்களைச் செய்வது, மாடு திண்பார்க்கே மிக இசையும். தோல் வேலை செய்பவர் கடைக் கழகக் காலத்திலேயே தமிழ்நாட்டிலிருந்தமை, தோலின் துன்னர் என்று சிலப்பதிகாரத்தில் கூறியிருப்பதால் அறியப்படும். பாணருக்குத் தையல் தொழிலுமுண்டு. “பாணர்க்குச் சொல்லுவதும்…. தை….” என்று காளமேகப் புலவர் கூறியிருத்தல் காண்க. தையல் என்னும் பெயர் துணி, தோல் என்னும் இரு பொருள்களை மூட்டுவதற்கும் பொதுவாகும். துன்னம் என்னும் பெயரும் இங்ஙனமே. சக்கிலியர் பறம்பரின் தோல் தொழிலை மேற் கொண்ட பின், செம்மார் பிற தொழிலை மேற்கொண்டு பெயர் மறைத்தனர். சக்கிலியருக்குச் ‘செம்மான்’ என்னும் தமிழ்ப் பெயரும், ’சக்கிலி¹ என்னும் வடமொழி பெயரும் இன்று வழங்கி வருகின்றன. சக்கிலியர் தோல் தொழில் செய்வோர், வெளாண்மைக்கு நீர் இறைக்க தோலினாலான பரி செய்வர். செருப்பு தைப்போர் இவைகளுக்கு ஆடு, மாடுகளின் தோல் தேவை. எனவே ஆடு மாடுகள் சாப்பிடும் பழக்கமும் ஏற்பட்டிருக்கும். எல்லோரும் ஆடு மாடுகளை சாகடித்து தான் சாப்பிட முடியும் உயிரோடு சாப்பிட முடியுமா. பிராமணர்கள் முன்பு சாப்பிடும் போது கூட சாகடித்து செத்த குதிரை, பசு மாடுகள் எல்லாம் வேள்வியில் போட்டு பூசைகள் முடித்த பின் சாப்பிட்டுள்ளார்கள். ஆரியர்களும், புனித ஆவினமும்..! தமிழர்கள் மாட்டு இறைச்சியைச் சாப்பிட்டதுபோல் பார்ப்பனர்களும் மாட்டு இறைச்சியை சாப்பிட்டு இருக்கிறார்களா? என்ற வினாவிற்கு பதிலாக ஆசிரியர் எழில் இளங்கோவன் அவர்கள் அளித்த தெளிவான பதில்: “மாட்டு இறைச்சி மட்டுமல்ல குதிரை இறைச்சியையும் சாப்பிட்டவர்கள் தாம்! இருக்கு வேதம் X-86:14, இருக்கு வேதம் : X 91:14, மாதவ சூத்திரம்: 19:22, பட் சூத்திரம், 12:51-54, தைத்திரிய பிராமண ஸ்மிருதி போன்ற பார்ப்பன நூல்களே, அவர்கள் பசு - எருது- மலட்டுப் பசு - செம்மறி ஆடு - குதிரை போன்ற விலங்குகளின் இறைச்சியை சாப்பிட்ட கதையை தெளிவாகக் கூறி இருக்கின்றன என்பதை அம்பலப்படுத்தியுள்ளார். பேரறிஞர் டாக்டர் அம்பேத்கர், ராகுல்ஜியின்”வால்காவில் இருந்து கங்கை வரை" என்ற நூல் இதற்கு இன்னும் ஒரு சான்று! இப்போது இவர்களையும் தாழ்ந்தவர், தாழ்த்தப்பட்டவர் எனச் சொல்லலாம் அல்லவா? மீண்டும் சொல்கிறேன் மாட்டு இறைச்சி சாப்பிட்டதால் அருந்ததியர் தாழ்ந்தவர் அல்ல! இல்லை தாழ்ந்தவர் என்றால், பார்ப்பனர்களும் கூடத் தாழ்ந்தவர் தாம் மாட்டு இறைச்சியைச் சாப்பிட்டவர்கள் என்பதால்! என உறுதியிட்டுக் கூறுகிறார் ஆசிரியர் எழில் இளங்கோவன் ⁽³⁾ பசு, குதிரை, போன்றவற்றை வேள்விகளில் இட்டு யாகம் முடிந்தபின் பிராமணர்களே எடுத்து பிராமணர், சத்திரியர்கள் பங்கிட்டு சாப்பிடுவதும் சூத்திரர்களுக்கு பங்கிடாமல் உண்பதும் இவர்களின் மனு தர்ம சாஸ்திர முறை. ஆனால் செத்த மாட்டை சாப்பிட்டான் என்பதற்காக சஷ்குழி பட்டமா? இவர்கள் மந்திரம் ஓதிவிட்டால் எல்லாம் புனிதமாகி விடும். மந்திரம் ஓதாமல் சாப்பிட்டால் அவர் சஷ்குழியா? (சக்கிலியா?). ⁽⁴⁾ ஆயுர்வேதத்தைக் பின்பற்றச் சொல்லும் பிராமணர்கள் பிரபலமான சுஸ்ருத சம்ஹிதை, சரகர் சம்ஹிதையில் "மூச்சுத்திணறல், மூக்கடைப்பு போன்றவற்றிற்கு மாட்டுக்கறி மாமிசம் தான் சிறந்தது என்று உள்ளதே அதை இவர்கள் பின்பற்றுகிறார்களா? அதுமட்டுமல்ல மாட்டுக் கறியை எப்படி சமைத்து சாப்பிட வேண்டும் என்று மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார். பிராமணர்கள் தனது வேதம் பின்பற்றப்படவேண்டும் என்பதிலே தான் கண்ணுங்கருத்தாக இருப்பார்கள். கடந்த காலங்களில் மாட்டுக் கறியை தின்று கொண்டிருந்த பார்ப்பனர் கூட்டம் இப்போது திண்பதில்லை என்பதற்காக மற்றவர்களும் திண்பதற்கு விடக்கூடாது. ஆயுர் வேதத்தை தூக்கிப்பிடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தற்போது மக்களை மிகவும் பாதித்துள்ள கொரோனா மூச்சுத்திணறலுக்கு மாட்டுக்கறி சாப்பிடுங்கள் என்று சொல்வார்களா? ⁽⁴⁾ மாடு எப்படி அடித்து கொல்ல வேண்டும் எந்த மந்திரம் சொல்லி அறுக்க வேண்டும் என்பதற்கு - கிருஹஜ்ய சூத்திரம் - அஷ்டக விதானம் மிகத் தெளிவாக உள்ளது. இறைச்சிக்குரிய மிருகங்களை உண்பது பாவமல்ல, உண்பவர்களையும், உணவுகளையும் பிரம்மனே படைக்கிறான் என்பது - மனுஸ்மிருதி பாகம் 5 வசனம் 30லும், அறுத்து பலியிடும் இறைச்சியை உண்ணாதவன் 21 ஜன்மங்களுக்கு பலியிடும் விலங்காக உருவெடுப்பான் - மனுஸ்மிருதி பாகம் 5 வசனம் 35 ல் உள்ளது. இந்துமதத் துறவி விவேகானந்தர், மாட்டிறைச்சிப் பற்றிய தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.  ‘இராமன்-சீதை’ மாட்டிறைச்சியை விரும்பி உண்டனர் என்று கூறும் விவேகானந்தர், மாட்டிறைச்சி உணவை நிறுத்தியதால் தான், இந்த நாடு ஆண்மை இழந்து போனது என்றும் கூறுகிறார். “நான் சொல்வதைக் கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். நமது பழங்கால பழக்கவழக்கத்தின் படி மாட்டுக்கறியை சாப்பிடாதவன் நல்ல இந்து அல்ல..!” (He is not a good Hindu who does not eat beef) (தொகுதி-3. அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் ‘ஷேக்ஸ்பியர் கிளப்பில்’ 1900 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 2 ஆம் நாளன்று விவேகானந்தர் ஆற்றிய உரை.) இந்து புனித நூல்களும் இந்து மத சீர்திருத்தவாதிகளும் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு தடை போடவில்லை என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.. (இந்து மதத்தில் மாட்டிறைச்சிக்கு தடையில்லை - பதிவுகள் July 31, 2021) முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ப்ராஹ்மணர் மார்கண்டேய கட்ஜூ சவால் விடுத்தார். மார்கண்டேய கட்ஜு, "நான் ஒரு இந்து ப்ராஹ்மின். ஆனாலும், நான் மாட்டுக்கறி சாப்பிடுகிறேன். இனிமேலும் சாப்பிடுவேன். மாட்டுக்கறி சாப்பிடுவதில் என்ன தவறு இருக்கிறது.? உலகத்தில் 90% பேர் மாட்டு இறைச்சி சாப்பிடுகின்றனர். அவர்கள் எல்லோரும் பாவம் செய்தவர்களா?  மாடு புனிதமானதாகவோ, நமது தாயாகவோ இருக்க முடியும் என்பதை நான் மறுக்கிறேன். ஒரு விலங்கு எப்படி மனிதர்களுக்கு தாயாக இருக்க முடியும்" என்றார். பசுவதை குறித்த இந்து மதத்தின் உண்மையான கருத்து தான் என்ன..? என்பதற்கு நமக்கு மிகவும் தெரிந்த, மறைந்து விட்ட ‘மகாப்பெரியவர்’ என்று அக்கிரஹாரம் போற்றும் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ன சொல்கிறார்.? மற்றவர்கள் சொன்னால் அது சாதாரண குரல், இந்த பெரியவாளே சொன்னால், அது தெய்வத்தின் குரல் அல்லவா. பசுஹோமம் பண்ணுவதிலே தப்பே இல்லை. பிராமணர்கள் செய்வதில் மிகவும் உயர்ந்ததான வாஜபேயத்துக்கும் 23 பசுக்களே கொல்லப்படுகின்றன. சக்கரவர்த்திகளே செய்கிற மிகப் பெரிய ஹோமத்துக்குக்கூட 100 பசுக்கள் தான் சொல்லியிருக்கிறது." தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதி - யக்ஞம் எனும் தலைப்பில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ⁽⁵⁾ வேதக் காலத்தில் குதிரை, மாடு முதலியவற்றைப் பலியிட்டுத் தின்றுள்ளனர். “உங்கள் பிள்ளைகள் அறிவுடையோராகவும், வேதமறிந்த வராகவும், நீண்ட ஆயுளைப் பெற்றவராகவும் இருக்க வேண்டுமானால் நெய் சேர்த்த மாட்டுக்கறி சாப்பிடுங்கள்..!” என்று பிருகதாரண்ய உபநிடதம் (6-4-18) ⁽⁵⁾ குறிப்பிடுகிறது. இதற்கு ஆதி சங்கராச்சாரி உரையும் எழுதியுள்ளார் ஆரியர்களின் தெய்வங்கள் அனைத்துமே உயிர்ப்பலி தரப்பட்ட விலங்குகளின் இறைச்சி மீது குறிப்பாக மாட்டிறைச்சியின் மீது பேரார்வம் காட்டியிருக்கின்றன. ஆரியர்களின் மேய்ச்சல் நில வாழ்க்கையில் இந்தக் கால்நடைகள் மிகப் பெரிதாக மதிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. கடவுளுக்கு படைக்கப்பட்ட படையலின் எச்சங்களைப் பங்கு பிரித்துக் கொள்வதில் இவர்கள் பெரும் ஆர்வம் காட்டினார்கள். வேதச் சடங்குகளிலும், வேள்விகளிலும் பயன்படுத்தப்பட்ட பொருட்களைப் பார்க்கும் போது ஒரு விஷயத்தை ஊகமாகப் பெற முடிகிறது. வேதகால மக்கள் தாங்கள் உண்ண விரும்பிய பொருட்களையே கடவுளுக்குப் படையல்களாகப் படைத்தார்கள் என்பதுதான் அது.!  ⁽⁵⁾ வேதகாலக் கடவுளர்களிலேயே மிகப்பெரிய கடவுளான, சிற்றின்ப பிரியனான இந்திரனுக்கு படைக்க எருதுகளின் இறைச்சி சமைக்கப்பட்டது குறித்து ரிக்வேதம் அடிக்கடி குறிப்பிடுகிறது. ’’அவர்கள் எனக்காக பதினைந்து, இருபது எருதுகளை சமைத்தார்கள்..! என்று ஓரிடத்திலும் (ரிக்வேதம் X,86. 14ab.) பசுமாட்டு காளைகளை உண்டதாக மற்றோர் இடத்திலும் இந்திரன் கூறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. (ரிக்வேதம் X.28.3c.) (5) இந்திரனுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் கொண்ட அக்னிக்கு, “எருதும், மலட்டுப் பசுவுமே அவனது உணவாக இருந்தன..!” என்று ரிக்வேதம் குறிப்பிடுகிறது. (ரிக்வேதம் VIII 43.11.) குதிரைகள் (அஸ்வம்), காளைகள் (ரிஷபம்), எருதுகள் (உக்ஷன்) மலட்டு பசுக்கள் (வசு), ஆட்டுக்கடா (மேஷம்), போன்றவை அக்னி தேவனுக்கு பலியாக தரப்பட்டதாக ரிக்வேதம் இயம்புகிறது. (ரிக்வேதம் X.91.14.ab.) ⁽⁵⁾ பசுவைக் கொன்று, யாகங்கள்.! (யஜுர் வேதத்தில்) 1.  கோஸவம். (பசுமாடு காளைமாடு இவைகளைக் கொல்லும் யாகம்) 2.  வாயவீய ஸ்வேதபக. (வாயு வேதனைக்காக வெள்ளைப்பசு யாகம்) 3.  லத்ஸோப கரணம். (கன்றுக்குட்டியை கொலை செய்து நடத்தும் யாகம்.) 4.  அஷ்டதச பசு விதானம். (பதினெட்டு பசுக்களைக் கொலை செய்து நடத்தும் யாகம்) 5.  ஏகாதசீன பசுவிதானம். (பதினொன்று பசுக்களை கொல்லும் யாகம்) 6.  க்ராமாரண்ய பசு ப்ரசம்ஸா. (நாட்டிலும் காட்டிலும் உள்ள பசுவைக் கொன்று யாகம் செய்தல்). 7.  உபாகரண மந்திரம். (யாகத்தில் கொல்லப்படும் பசுவைச் சுத்தி செய்யும் மந்திரம்). 8.  கவ்ய பசுவிதானம். (பசு மாட்டைக் கொன்று நடத்தும் யாகம்) 9.  ஆதித்ய தேவ தாகபசு. (சூரிய தேவதைக்கு பசு யாகம்) சிவானந்த சரஸ்வதி. ‘மத விசாரணை நூல்.’ பக்கம்-79,80. ⁽⁵⁾ விருந்தினர்களை உபசரிக்கும் சடங்கான அர்கியம் அல்லது மதுபர்கம் என்று மிக பிரபலமாக அழைக்கப்பட்ட ஒரு ஆர்வத்திற்குரிய சடங்கு குறித்து பிற்கால வேதநூல்கள் அடிக்கடி குறிப்பிடுகின்றன. விருந்தினர்களை கவுரவிக்க பசுக்களை கொல்லும் நடைமுறை பண்டைய காலத்திலிருந்தே இருப்பதாக தெரிகிறது. “விருந்துக்குப் பொருத்தமான பசுக்கள்” என்ற பொருள் தரும் அதிதினிர் (Atithinir) என்ற சொல் ரிக்வேதத்தில் (X-68.3) காணப்படுகிறது. “விருந்தினர்களுக்காக பசுக்களை கொல்பவர்..” என்ற பொருள் கொண்ட அதிதிக்வா (Atithigva) என்ற சொல் வேதகால வீரனை குறிப்பிடுகிறது. திருமணம் போன்ற விழாக்காலங்களில் போதும்கூட பசுக்கள் பலி தரப்பட்டன. எடுத்துக்காட்டாக திருமண விழாவின் போது பசு பலி தரப்பட்டது குறித்து ரிக்வேதம் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. “ஆட்சியாளர்களோ, மரியாதைக் குரியவர்களோ விருந்தினர்களாக வந்தால் மக்கள் காளையையோ, பசுவையோ பலி தந்தார்கள்.” என்று அய்த்தரேய பிராமணத்தில் சொல்லப்பட்டுள்ளது. தனக்குப் பிறக்கும் மகன் நீண்ட ஆயுளும்,நல்ல அறிவும் கொண்டவனாக இருக்கவேண்டுமென்று விரும்பினால் அவர்கள் வேகவைத்த கன்றின் இறைச்சியுடன் அல்லது மாட்டிறைச்சியுடன் (அல்லது வேறு ஏதாவது இறைச்சியுடன்) அரிசிச் சோறும், நெய்யும் கலந்து உண்ண வேண்டும் என பிரகத் ஆரண்யக (உபநிடதம் VI.4.18)  சொல்கிறது. ⁽⁵⁾ “வேதம் அறிந்த பார்ப்பனனை பெரிய எருது அல்லது வெள்ளாடு, சுவையான உணவு, இனிமையான வார்த்தைகளோடு உபசரிக்க வேண்டும்..!” என்றும் யாக்ஞவல்கியர் கட்டளையிடுகிறார். ⁽⁵⁾ பார்ப்பனர்களின் உணவில் இறைச்சி சாதாரணமாக இடம் பெற்று வந்தது என்ற தகவலை ஆதிபர்வத்தில் இடம் பெற்றுள்ள கல்மாசபாதம் என்ற கதை கூறுகிறது. (மகாபாரதம், 1.166.20. ஜான் பிராக்கிங்டன், The Sanskrit Epics,  ஈ.ஜே.பிரில், லெய்டன், 1998, பக்கம் 225). பார்ப்பனர்களுக்கு இறைச்சி, அரிசி, நெய், பால், ஆகியவற்றை வழங்கவேண்டும் என அனுஷாசன பர்வத்தில் நாரதர் அறிவித்துள்ளார். (மகாபாரதம், XIII.63.6.) ⁽⁵⁾ இறைச்சி உணவு மீது சீதை பெரும் ஆர்வம் காட்டி வந்தாள் என்ற விசயத்தையும் இராமாயணத்திலுள்ள பல பாடல்களிலிருந்து ஊகிக்க முடிகிறது. கங்கையைத் தாண்டியபோது அரிசிச் சோறும், இறைச்சியும் கங்கையாற்றுக்கு சமைத்து தருவதாக சீதை உறுதி தந்தாள். தன் கணவனுடன் பத்திரமாக திரும்பி வந்தால், ஏராளமான மதுவையும் தருவதாக வாக்குறுதி அளித்தாள். (Vaalmiki Ramayana, 2.52.89.) ⁽⁵⁾ தன்னுடைய கணவன் அவனது சபதத்தை நிறைவேற்றி முடித்தால், ஆயிரம் பசுக்களையும், நூறு ஜாடி மதுவையும் யமுனை ஆற்றுக்குப் படையல் தருவதாக அந்த ஆற்றைக் கடக்கும்போது சீதை வேண்டிக் கொள்கிறாள். (Vaalmiki Ramayana, 2.55.19.) மான் இறைச்சி மீது சீதை வைத்திருந்த விருப்பத்தின் காரணமாகவே அவள் கணவன், பொன்மான் வேடமிட்டு வந்த மாரீசனை துரத்திச் சென்று கொல்கிறான்; அதனால் வரும் கேடுகளை உணர்ந்திருந்த போதிலும், அந்தப்புள்ளி மானைக் கொன்று, அதன் இறைச்சியை எடுத்து வர ராமன் தயக்கம் காட்டவில்லை.  (Vaalmiki Ramayana, 3.42.21.) ⁽⁵⁾ சீதை கர்ப்பமாக இருந்தபோது அவளுக்குப் பல வகைப்பட்ட மதுவையும் இராமன் தந்ததாகவும், வேலைக்காரர்கள் அவளுக்கு இறைச்சியும், பழங்களும் தந்ததாகவும் இராமாயணத்தின் இறுதிப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. (Vaalmiki Ramayana , 7.41.13-14.) ⁽⁵⁾ விட்டுவிட்டு வரும் காய்ச்சலுக்கு மாதுளம் பழச்சாற்றில் ஊறவைத்த மாட்டிறைச்சிக் கஞ்சியை சரகர் பரிந்துரைக்கிறார். மூச்சுத்திணறல், மூக்கடைப்பு,  அவ்வப்போது வரும் காய்ச்சல் ஆகிய நோய்களுக்கு மாட்டிறைச்சி மருந்தாக அமையுமென்று தெளிவாக விவரிக்கிறார். (Caraka Sutra II.31. / Caraka Sutra XXVII.79.) ⁽⁵⁾ மூச்சுத்திணறல், மூக்கடைப்பு, இருமல், தொடர்ச்சியான காய்ச்சல் ஓயாத பசி போன்ற நோய்களுக்கு மாட்டிறைச்சி நல்ல மருந்து என்பது மெய்பிக்கபட்ட ஒன்று என்று கூறும் சுஷ்ருதர், மாட்டிறைச்சி புனிதமானது, சுவையானது என்றும் அதனை வர்ணித்துள்ளார்.. (Susruta Sutra, XLVI.) ^(5) ^ பசுக்களைக் கொல்லாமல் இருப்பதோ, இறைச்சி உணவு உட்கொள்ளாமல் இருப்பதோ பார்ப்பனர்களின் அல்லது பார்ப்பனிய சமூக அமைப்பின் சமூக அடையாளங்களாக இருந்திருக்கவே முடியாது என்பதை இதுகாறும் கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவாக புரிந்துக் கொள்ள முடியும். தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தீண்டாமை முதலான கொடுமைகளை கொண்ட வர்ணாசிரமத்தை திணித்திடும் ஒரு சூழ்ச்சியாகவும், இந்துத்துவ வெறியர்களின் இந்த ‘புனிதப்பசு’ நாடகம் அரங்கேறி வருகிறது என்பதை யாவரும் புரிந்து கொண்டு விழிப்படைய வேண்டும். (5)      மாட்டுக்கறி தின்னக்கூடாது என்பவர்கள் கோமாதாவைக் கொன்று தோலை உரித்துச் செருப்பு போட்டு மிதிக்கலாமா? கடவுளே பிள்ளைக் கறியை ஏற்கும்போது, பக்தன் மட்டும் மாட்டுக்கறியைத் தின்னக் கூடாதா? நன்றியுடன் சான்றாதாரக் குறிப்புகள் 1. D. கோபால் செட்டி – “ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்”, 3வது அத்தியாயம், பக்கம் 9,சென்னை "நியுரி பராமர் பாத்திராதிபர், 1920. 2. D. கோபால் செட்டி–“ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்”,4வது அத்தியாயம், பக்கம் 12௧6, சென்னை "நியுரி பராமர் பாத்திராதிபர், 1920. 3. ஆசிரியர் எழில் இளங்கோவன் " அருந்ததியர் வரலாறு வினாவும் விளக்கமும்" பக்கம் 28, மும்பை அருந்ததியர் சங்கம், 1998. 4. ஆதிகால மனிதனின் உணவு முறையும், பார்பபனர்கள் தின்ற பசு மாமிசமும் பேராசிரியர் கருணானந்தன். (ஏன் - சுமன் கவி you Tube) 5. ஆரியர்களும், அவர்களது புனித பசுவும்..! பூமராங், Tuesday, 3 Nov.2015. டி.என்.ஜா, தமிழில் வெ. கோவிந்தசாமி “பசுவின் புனிதம் மறுக்கும் ஆதாரங்கள்” பக்கங்கள் 27,63,67,70 பாரதி புத்தகாலயம். வெள்ளைக்காரர்களால் நாம் அடைந்த பயன்கள் வெள்ளைக்காரர்களால் நாம் அடைந்த பயன்கள் எண்ணிலடங்காதவை. பிராமணனுக்கு மட்டுமே கல்வி கற்க உரிமை உண்டு எனவும் சத்திரியனுக்கு மட்டுமே நிலம் மற்றும் அரசனாகவும் உரிமை உண்டு எனவும், வைஷ்யனுக்கு மட்டுமே வியாபாரம் செய்யும் உரிமை உண்டு எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும் எனவும் இருந்த இந்து மனுதர்ம முறையை பிரிட்டீஷார் ஏற்றுக்கொள்ளாமல் சட்டம் என்றால் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் 1773 ஆம் ஆண்டு பிரிட்டீஷார் சட்டத்தை எழுதத் தொடங்கினர். அதன் விளைவாக சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உரிமையை அனைவரும் சொத்து வாங்க உரிமை உண்டு என 1795 ஆம் ஆண்டு உரிமை வழங்கப்பட்டது. 1804 பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசானை வெளியிடப்பட்டது. 1813 இல் கொத்தடிமை முறை ஒழிக்கப்பட்டது. பிராமணப் பெண்ணை கெடுத்த சூத்திரன் கொல்லப்பட வேண்டும் என்பது இந்து மனு சட்டம் 7: 374, 375. பிராமணன் தப்பு செய்தால் அவனும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் 1817 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. 1813ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இந்தியர்களுக்கு கல்வி வழங்குவதை தனது பணியாக ஏற்பதாக அறிவித்தது. இந்த நடவடிக்கை “1813ன் கல்வி சாசனம்” (CHARTER OF 1813) என்று அழைக்கப்படுகிறது. இந்த சாசனம் “இந்திய மக்களுக்கு கிழக்கிந்திய கம்பெனியின் பல்வேறு துறைகளில் வேலை செய்ய சாதி மதம் அந்தஸ்து எதுவும் தேவையில்லை. கல்வித்தகுதி அடிப்படையில் மட்டுமே வேலை வழங்கப்படும்.” என்று அறிவித்தது. இந்தக் கல்வித் தகுதி “ஆங்கில வழி” கல்வி ஆகும். ⁽¹⁾ மெக்காலே குறிப்புகள் ( MACAULAY’S MINUTES) 1834-ல் மெக்காலே இந்தியாவிற்கு வருகை புரிந்தார். அப்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த பென்டிங் பிரபு, மெக்காலேவை “பொது போதனை துறை” (Public instruction) எனும் கல்வித் துறையின் தலைவராக நியமனம் செய்தார். நான்கு மாதங்கள் இந்தியாவின் கல்வி முறையை ஆய்வு செய்த மெக்காலே, MACAULAY’S MINUTES (மெக்காலே குறிப்புகள்) எனும் அறிக்கையைத் தாக்கல் செய்தார். மெக்காலேவின் நோக்கம் “வர்ணாசிரம தர்மத்தை” கடைப்பிடித்து வந்த ஆரியர் வர்ணாசிரம கல்வி முறையை மாற்றி அனைவருக்கும் கல்வி வழங்குவதாக இருந்தது. “நாம் (ஆங்கிலேயர்) இப்போது செய்ய வேண்டிய முக்கிய பணி, நமக்கும், நாம் ஆளுகின்ற மக்களுக்கும் இடையே நல்லெண்ணத் தூதுவராக செயல்படவேண்டிய புதிய வர்க்கம் ஒன்றைக் கல்வியின் மூலம் தோற்றுவிப்பது ஆகும். இவர்கள் ரத்தத்தால், நிறத்தால் இந்தியர்கள். ஆனால் உணர்வால், நிலைப்பாட்டால் நடத்தையால், எண்ணத்தால், விருப்பு வெறுப்பால் ஆங்கிலேயர்கள்” என்றார். மேலும், அதாவது கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தில் அனைத்து இந்தியருக்கும் கல்வி அளிப்பதும், ஆங்கிலத்தில் உள்ள புத்தகங்கள் அனைத்தையும் பிராந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பதும் கடினம். அது மட்டுமன்றி ஆங்கிலேயர்களுக்கு அவர்களது மொழியைப் புரிந்து கொண்டு அதை அவர்கள் ஆளும் மக்களிடம் அவர்களது மொழியில் பேச ஆட்கள் உடனடியாக தேவைப்பட்டது. எனவே முதலில் ஆங்கிலத்தை இந்தியாவில் உள்ள ஒரு சிலரிடம் கற்றுக்கொடுப்போம். அவர்கள் ஆங்கிலத்தில் உள்ள புத்தகங்கள் எல்லாவற்றையும் படித்து தங்களது மொழியில் மொழி பெயர்த்து அனைவருக்கும் கொண்டு செல்லட்டும்" என்றார். 1835 ஆம் ஆண்டு இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த பென்டிங் பிரபு மெக்காலேவின் பரிந்துரைகளை அமல்படுத்தினார். மெக்காலேவின் நோக்கம் “வர்ணாசிரம தர்மத்தை” கடைப்பிடித்து வந்த இந்திய பாரம்பரியக் கல்வி முறையை மாற்றி அனைவருக்கும் கல்வி வழங்குவதாக இருந்தது. பார்ப்பனர்கள் மட்டுமே கல்வி கற்க வேண்டும் என்ற முறையை லார்டு மெக்காலேவின் சீரிய முயற்சியால் சூத்திரர்களும் கல்வி கற்கலாம் என 1835 ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. இந்து மனுதர்ம சட்டத்தை 1868 ஆண்டு தடை செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ⁽²⁾ **cநன்றியுடன் சான்றாதாரக் குறிப்புகள் 1. VID-20170804-WA0069(2) BRITISH RULE (News) 2. மெக்காலே குறிப்புகள் ( MACAULAY’S MINUTES) Google அருந்ததியர் தொழில் அருந்ததியர்களின் முக்கியத் தொழிலான கிணற்றுப் பாசனத்தைக் கொண்டிருந்த விவசாயத்திற்குத் தேவையான தோல்பரியை மூட்டித் தருவது, வயல்களுக்கு ஏற்றம் இரைத்துப் பாய்ச்சுவது, போர்முனைகளுக்குத் தேவையான தோல்கருவிகளைத் தயாரிப்பது, செருப்பு தைப்பது என பெரும்பாலும் தோல் பணியாளர்களாகவே அறியப்பட்டனர். அதுமட்டுமின்றி ஆடு மாடு மேய்த்தல், மாட்டிறைச்சி வியாபாரம், குத்தகை முறை விவசாயம், பல்வேறு விதமான குடிசைத் தொழில்கள், சிறு வணிகர்கள் மற்றும் பறையிசை கலைஞர்கள் போன்ற தொழில்கள் செய்து வந்தனர். காடு மேடுகளில் நடக்கும் போது கல், முள் குத்தாமல் பாதுகாக்கும் ஒரு அரணாக இருந்தும் தன் உடலையே தாங்கிச் செல்லும் வல்லமை படைத்த செருப்பை தினந்தோறும் அணிந்து கொண்டே செருப்பு தைப்பவனை, அவர்கள் பதப்படுத்தி தோலினால் செய்த பரியை கிணற்றிலுருந்து நீர் இறைத்து வயல் வெளிகளுக்கு பாய்ச்சி வேளாண்மை செய்தாலும் அப்பணி செய்வோரை, அவர்கள் செய்த காலணி அணிந்து கொண்டே தீட்டு என்றும், பார்ப்பனர் களின் சொல்லைக் கேட்டுக் கொண்டு தீண்டாமையை பின்பற்றி தீண்டத்தகாதவனாகப் பார்த்தார்கள் என்றால் அவர்களின் அறிவை எந்த அளவு நாம் ஏற்றுக்கொள்ள முடியும்? அதுமட்டுமல்ல பார்ப்பனர்கள அவர்களுக்கு கீழுள்ள அனைவரையும் அனைத்து சாதியினரையும் கோவிலுக்கு உள்ளே விடாமல், அவன் பாதம் பணிய வைத்தார்களே கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா? ஒவ்வொருவரும் நமக்கு கீழே ஒருவன் இருக்கிறான் என்ற அற்பத்தனமான ஆணவப்புத்தி தானே? தற்போது பெரும் பணக்காரர்கள் தோல் பதனிடும் தொழிற்சாலைகள், செருப்பு கம்பெனிகள் வைத்து பெரும் பணம் சம்பாதிப்பதாலும், ஒன்றிய, மாநில அரசுகளும் இவர்களுக்கு சாதகமான நிலையே மேற்கொள்ளுவதாலும் மேலும் மின்சாரம் - பம்புசெட் - பிளாஸ்டிக் - ரப்பர்- என்று உருவான மாற்றங்களால் தங்களது பாரம்பரியத் தோல் தொழிலை இம்மக்கள் இழந்து தாழ்வான துப்புரவுப் பணிக்கு தள்ளப்பட்டார்கள். வரலாற்றின் ஒரு காலத்தில், இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் சில மக்கள் குழுவினர் பலவந்தமாகவும், சமயக் கட்டுப்பாடுகள் மூலமாகவும் இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனடிப்படையில் இந்தியா முழுவதும் சக்கிலியர்க்கு இணையான சாதிகளைக் காணலாம். வட இந்தியாவின் மோச்சி, சண்டாலா, பங்கி போன்றவை உதாரணங்களாகும். இவர்கள் சிலரின் தொழில் துப்புரவுப் பணியாளர்கள் என்றபடியால் கிராமப்புறங்களில் மற்ற தலித் பிரிவினராலேயே ஒதுக்கப்படுகின்றனர். மேல்தட்டு மக்களுக்கு மனத்தூய்மையும், மனித நேயமும் குறைந்து விட்டதாலும், மனிதம் போற்றாமலும் இவர்களை கல்வியறிவு பெற்று முன்னேற்றம் காண முடியாமல் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, தீண்டாமை எனும் பேரிலும் அடிமைகளாக நடத்தும் மனப்போக்கு மேலோங்கி விட்டதால் இத்தொழிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார்கள். ஒன்றிய, மாநில அரசுகள் இம்மக்களின் கல்விக்கும், பொருளாதாரத்திற்கும், சுய வேலை வாய்ப்புத் திட்டங்கள் மூலம் முன்னேற்றத்திற்கும் கவனம் செலுத்தி திட்டங்கள் தீட்டி வழிவகை செய்ய வேண்டியது மிக மிக அவசியம். சக்கிலியரைப் பற்றி 1868 ஆம் ஆண்டு மதுரை மாவட்டக் கையேடு கூறுவதாவது “இவர்கள் தோல் பதனிடுவதோடு செருப்புகள், குதிரைச் சேணங்கள், தோல் பொருட்கள் ஆகியவற்றைத் தயாரிக்கின்றனர். சென்னை மாநிலத் தோல் தொழில் பற்றித் திரு ஏ.சாட்டெர்டன், தோல் பதனிடுதலும் தோல் தொழிலும் பற்றிய தனி நூல், 1904 ⁽¹⁾ எழுதியவர் பின்வரும் கருத்தில் கொள்வதற்குரிய தகவல்களைத் தந்துள்ளார்.”தென் மாவட்டங்களில் வாழும் சக்கிலியர் நிலை வட பகுதிகளில் வாழும் மாதிகர் நிலையிலும் பெரிதும் வேறுபட்டதாக உள்ளது. வெட்டியான்கள் ஊர்ப்புறங்களிலிருந்து இறந்து போன கால்நடைகளை எடுத்துச் செல்லும் உரிமை பெற்றுள்ளனர். அதற்கு ஈடாக உழவுத் தொழிலுக்குத் தேவையான தோலினைத் தந்து உதவுகின்றனர். சக்கிலியர்களில் பெரும்பாலோர் தோல் பதனிடுவதில்லை. தோற்பொருட்கள் மட்டுமே செய்கின்றனர். வெட்டியானிடமிருந்து பச்சைத் தோலையும் உலர்ந்த தோலையும் வாங்குவதைவிட நேரிடையாகப் பதனிடும் மையங்களிலிருந்து கொண்டு வரப்படும் பதனிட்ட தோலினை வணிகர்களிடமிருந்து வாங்கு வதையே அவர்கள் விரும்புகின்றனர். செருப்புகளையோ, அடிபுதை செருப்புகளையோ செய்யத் தொடங்கும் சக்கிலியன் தனக்குத் தேவையான தோலினையோ, பச்சைத் தோலினையோ கடைவீதியில் வாங்கி வீட்டுக்கு எடுத்துச் சென்று அதனைப் பதப்படுத்தத் தொடங்குகின்றான். முதலில் தோல் நனைக்கப்பட்டு நன்கு நெகிழ்த்தப்படுகிறது. பின்னர் ‘அனிலைன்" சாயம் ஏற்றுகின்றனர். ’படிச்சே அனலின்’ சோட பேப்ரிக்கான செஞ்சிவப்புச் சாயமே பெரிதும் அவர்கள் பயன்படுத்தும் வண்ணமாகும். இச்சாயப் பவுடர் பொட்டலங்கள் கடைவீதியில் வாங்கப்பட்டுத் தண்ணீரில் கரைக்கப்பட்டு அதனோடு சிறிது ஆக்சாலிக் அமிலம் கலக்கப்படுகிறது. இச்சாயத்தை ஒரு பழந்துணியில் நனைத்துத் தோலின் சொரசொரப்பான பக்கத்தில் பூசி உலர வைப்பர். தோல் உலர்ந்தபின் ஊன் இருந்த உட்பக்கத்தில் புளிக்கலவையைப் பூசியபின் அதனைக் கைகளிடையே உருட்டித் தோலின் வெளிப்புறத்தில் சொரசொரப்பான புள்ளிகள் அமையுமாறு செய்வர். அடிபுதை செருப்பு செய்யும்போது தோலினை நனைத்து மரத்தாலான உருவ அமைவுகளில் பொருத்தி வடிவம் தருகின்றனர். தைப்பதற்கு இவர்கள் பருத்தி நூலினையே பயன்படுத்துக்கின்றனர். இங்கிலாந்தில் செருப்பு தைப்பவன் பயன்படுத்தும் மெழுகு பூசப்பட்ட நூலினை இவர்கள் அறியார். வயல்களில் குவலையில் தண்ணீர் இறைக்கும் ஏற்றத்துக்கான பரிகள் செய்யவே தோல் மிகுதியும் பயன்படுத்தப்படுகிறது. நெய், எண்ணெய் முதலியவற்றை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு எடுத்துச் செல்லும் பைகள் தைக்கவும் தோல் பயன்படுத்தப்படுகின்றது. மாநிலத்தில் 6,00,000 கிணறுகள் உள்ளன. ஒரு சில இரும்புப் பரியினைப் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான கிணறு நீர் இறைக்கத் தோலாலான பரியை தோல் வாலுடன் பயன்படுத்தப்படுகின்றது. பத்து முதல் ஐம்பது காலன் தண்ணீர் கொள்ளும் அளவுடையது. அவை நன்கு பதப்படுத்தப்பட்ட மாட்டு தோலால் மூட்டப்படுகின்றன. மிகப் பெரிய பரிகளை எருமைத் தோல் கொண்டு மூட்டுவர். மாநிலத்தில் பெருமளவிலான எண்ணெய், நெய் வைக்கும் பைகள் உபயோகத்தில் உள்ளன. இதற்காகத் தோல் பைகளை உபயோகிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. விலை மலிவானதும் அடுக்கி வைக்க ஏற்ற வடிவிலானதுமான மண்ணெண்ணெய் டின்கள் இப்பொழுது எண்ணெய் வைக்க ஏற்றதாகக் கருதப்படுகின்றன.⁽¹⁾ குதிரையின் மேல் அமர்வதற்காக அதன் முதுகின் மேல் பூட்டப்படும் தோல் இருக்கை “சேணம்” போன்றவையும் தோலைப் பதப்படுத்தி செய்யப்படுவனவாகும். தோல் இசைக்கருவிகள் தோலினால் ஆன இசைக்கருவிகள் செய்ய தோலைப் பதப்படுத்தும் முறையிலும் வல்லவர்களாக இருந்துள்ளனர். இசையின் உயிராகத் தோற்கருவிகள் விளங்குகின்றன. தோலால் போர்த்தப்பட்ட கருவிகள் தோற்கருவிகள் என்று அழைக்கப்படுகின்றன. உடுக்கை, உறுமி, கஞ்சிரா, கடம், கிணை, தண்ணுமை, தவில், பம்பை, பறை, மிருதங்கம், முரசு, பேரிகை, பேரிமத்தளம், போன்ற தோல் இசைக்கருவிகள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன. இவை ஆவின் தோல், ஆட்டுத்தோல், காளையின் தோல் போன்றவற்றால் போர்த்தப்படுகின்றன. தோல்களை இறுக வளைத்துக்கட்ட தோல் வார்களைப் பயன்படுத்தி வருகின்றனர். பறை ஒரு தமிழிசைக் கருவியாகும். இது தோலால் ஆன மேளமாகும். தோலிசைக் கருவிகளின் தாய். பறையானது மாட்டுத்தோலில் செய்யப்படுவதால் இசைக்க ஆரம்பிக்கும் முன் பறையடிப்பவர்கள் பறையைத் தீயில் காட்டி விறைப்பேற்றுவார்கள். அது தோலில் உள்ள ஈரப்பதத்தை அகற்றி, தோலை இறுகச் செய்யும். தோல் உறுதியாகி, அடிக்கும்போது உயர் சுருதியில் நல்ல ஓசையை எழுப்பும். மிருதங்கம் மூன்றுவிதமான தோல்களால் செய்யப்படுகிறது. பசுவின் தோல், எருமை மாட்டின் தோல், ஆட்டின் தோல். பசுவின் தோல் பயன்படுத்தப் படுகிறதென்பது மிருதங்கம் வாசிப்பவர்கள் எல்லோருக்குமே தெரியும். மிருதங்கம் வாசிப்பவர்களில் 99 சதவீதம் பேர் பிராமணர்கள். மிருதங்கம் செய்பவர்களில் 99 சதவீதம் பேர் தலித்துகள். மாட்டைக் கொன்று, அதன் தோலை எடுத்து, ஆணி அடித்துக் கட்டி - இதெல்லாம் எளிதான வேலையில்லை. அவர்களுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் வரும். சிலவற்றைத்தான் நான் எழுதியிருக்கிறேன். சிலவற்றை எழுதவில்லை. இதையெல்லாம் தாண்டி, நீங்கள் புனிதமாகக் கருதும் ஓர் இசைக் கருவியைத் தருகிறார்கள். அப்படியிருக்கும்போது, அவர்களைப் புறக்கணிப்போது சமூக அநீதி என்றே சொல்வேன். எல்லா மாட்டுத் தோலிலும் இதைச் செய்ய முடியாது. தோலைப் பார்த்துதான் தேர்ந்தெடுப்பார்கள். மாட்டிற்கு எவ்வளவு வயதாகியிருக்கிறது, இந்தத் தோலை பயன்படுத்தினால் நாதம் வருமா? என்பதையெல்லாம் பார்த்துதான் தோலைத் தேர்வு செய்கிறார்கள். ⁽⁵⁾ செருப்பு சொல்லும் கதை நான் செருப்பு. என் கதையை கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள். பல தேவைகளுக்காக காலில் அணியப்படும் ஒரு கால் காப்புடை ஆவேன். மனிதர்கள் நடக்கும் பொழுதும், ஓடும் பொழுதும், தம் கால்களில் கல்லும் முள்ளும் குத்தாமல் இருக்கவும், சுடு வெப்பத்தில் இருந்தும், கடுங்குளிரில் மற்றும் பனியில் இருந்து காக்கவும், அழகு உள்ளிட்ட சிறப்பான பிற தேவைகளுக்காகவும் காலில் அணியப்படும் ஒரு கால் காப்புடை ஆகும். எனக்கு தூய தமிழ்ப் பெயர்கள் பல உண்டு. காலணி என்றும் அழைக்கப்படும் என்னை - அடையல் (தற்காலத்தில் ஷூ எனப்படும் இனத்தைச் சேர்ந்த காலணி) - அரணம் (பெரும்பாணாற்றுப்படையில் “அடிபுதை அரணம்” என ஆளப்பட்டுள்ளது) - கழல் (செருப்பு வகை) - குத்திச் செருப்பு - குறட்டுச் செருப்பு (கால் பெருவிரலை மட்டும் சுற்றி வார் இருக்கும் செருப்பு) - தொடுதோல் (கயிறால் கட்டப்படும் காலணி) - தோற்பரம் (படையாளிகள் அணியும் கெட்டியான காலணி) - நடையன் (பொதுவாக செருப்புக்குப் பயன்படுகின்றது) - மிதியடி (பொதுவாக செருப்புக்குப் பயன்படுகின்றது எனினும், முற்காலத்தில் மரக்கட்டையால் ஆனது) - பாதக்காப்பு - அரண் - அடிபுனைதோல் - சப்பாத்து - மூடிய வகையான காலணிக்கு இச்சொல் வழங்கப்படுகிறது. இது ‘சப்பை’ என்கிற தமிழ் சொல்லை தழுவியுள்ளது. எஸ்பானியம், போத்துகீசு மொழிகளில் இதற்கு ஒத்த சொல்லான Sapatos வழங்கப்படுகிறது. ⁽³⁾ பல பெயர்களில் பல இடங்களில் அழைப்பார்கள். வழக்கமான செருப்பு, மிதியடி போன்றவைகளும், அதேபோல் புறங்கால்களையும் குதிகால்களையும் மூடியிருக்கும் ஷூ, பூட்ஸ் முதலிய கால்பூட்டணிகளும், கணுக்கால் வரையும் மூடியிருக்கும் கால்பூட்டணிகளும், கெண்டைக்கால், முழங்கால் வரையும் மூடியிருக்கும் கால்பூட்டணிகளும் உண்டு. கால்பூட்டணிகள் பெரும்பாலும் துணியால் அல்லது தோலால் ஆன வாரினால் கட்டி, முடிச்சிட்ட, பூட்டப்பட்டிருக்கும். பல்வேறு இடச் சூழல்களுக்கும், தொழில்களுக்கும், தட்ப வெப்பத் தேவைகளுக்கும் ஏற்ப காலணிகள் பல வகையாக என்னை பலவிதமான உருமாற்றங்கள் செய்து அவரவர் தேவைக்கு தகுந்தாற்போல் என்னை பயன்படுத்துவார்கள். முதன் முதலில் காலில் செருப்பு முதலிய காலணிகள் எப்பொழுது மக்கள் அணியத் தொடங்கினார் என்பது எனக்கும் நினைவில்லை. ஆனால் எகிப்தியர்கள் கி.மு. 3700 க்கும் முன்னரே காலணிகள் அணிந்தது தெரிகின்றது. அண்மையில் (2010இல்) 5,600 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்திய தோலால் ஆன காலணிகள் அர்மேனியக் குகையில் கண்டு பிடித்துள்ளனர். எனக்கு பெருமையாக இருக்கின்றது. பழங்காலத்தில் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியர்களும், கிரேக்கர்களும், ரோமானியர்களும் பல்வேறு வகை காலணிகள் அணிந்ததற்கு புடை சிற்பங்களும் பிற தொல்லியல் சான்றுகளும் உள்ளன. சீனாவில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே மரம், துணியால் ஆன செருப்பு வகைகளைப் பயன்படுத்தினர். இத்தாலியில் ரோமானியர்களுக்கு முன்னமே அங்கிருந்த எற்றசுக்கன் மக்கள் கால் விரல் நுனிப்பக்கம் மேல்நோக்கி உயர்ந்து இருக்கும்படியான காலணிகள் அணிந்திருந்தனர். பழங்காலந் தொட்டே கால்களில் காப்பணியாக மட்டும் அணியாமல் ஒரு அழகு அணியாகவும் அணிந்து வந்துள்ளனர். ஆடு மாடுகளினால் ஆன தோலில் மட்டுமல்ல முதலைத் தோலினால் ஆன சப்பாத்து எனப்படும் காலணி கூட செய்து போட்டுக் கொண்டார்கள். […] 5,600 ஆண்டுப் பழமையான தோலால் ஆன காலணி. அர்மேனியாவில் உள்ள குகையில் கண்டுபிடித்தது. (கிறிஸ்தவத்தை அதிகாரபூர்வ சமயமாக கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் அறிவித்த உலகின் முதல் நாடு ஆர்மீனியா ஆகும்). […] முதலைத் தோலால் செய்த சப்பாத்து அகநானூற்றில் மூன்று இடங்களில் செருப்பினைக் குறிக்கும் “தொடுதோல்” என்னும் பெயர் இடம் பெற்றுள்ளது. "தொடுதோல் கானவன் கவை பொறுத்தன்ன இருதிரி மருப்பின் அண்ணல் இரவை (அகநானூறு, 34: 2- 4) ⁽²⁾ கானவன் ஒருவனது முறுக்கேறிய கவைக்காம்பு போல் இருந்தது என்கிறார் மதுரை மருதன் இளநாகனார் என்னும் புலவர். அந்தக் கானவன் தனது காலில் தொடுதோல் என்னும் செருப்பினை அணிந்தபடி கையில் கவைக் கம்பினை வைத்திருக்கிறான் என்றும் காட்சிபடுத்தியுள்ளார். இன்னொரு பாடலில் ஆநிரைகளைக் கொள்ளையிடுவதற்குச் செல்லும் எயினர்கள் தங்கள் காலடித் தடத்தைப் பிறர் அறிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக் செருப்பு அணிந்து செல்கிறார்கள். என்று தெரிவிக்கிறார். மாமூலனார். "அடிபுதை தொடுதோல் பறைய ஏகிக் கடிபுலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர் (அகநானூறு, 101: 8- 9) ⁽²⁾ "செம்மறி ஆட்டுக்கடாவின் கொம்பு இரண்டு பக்கமும் வளைந்து சுருண்டு இருக்கும். அந்தக் கொம்பினைப் போல் வளைந்து சுருண்டு சுற்றிய தலைமுடியைக் கொண்டவர்கள் எயினர்கள். அந்த எயினர்கள் பசுக்கூட்டங்களைக் கொள்ளையடிக்கச் செல்லும்பொழுது செருப்பினை அணிந்து கொள்வார்கள் குறிஞ்சி நிலத்தில் பயிர் அறுவடையான பின் அதனை நெருப்பிட்டுக் கொளுத்துவார்கள். அவ்வாறு கொளுத்தும் கானவர்கள் தங்கள் காலில் நெருப்புப் படாமல் இருப்பதற்காகக் காலணி அணிந்துள்ளார்கள் என்கிறார் மதுரை மருதன் இளநாகனார். "தொடுதோல் கானவன் சூடுறு வியன்புனம் கரிபுறம் கழீஇய பெரும்பாட்டு ஈரத்து (அகநானூறு, 368: 1 - 2 ) ⁽²⁾ என்னும் அடிகளில் செருப்பு என்னும் காலணியைக் குறிப்பதற்கும், காலைத் தொட்டபடி இருக்கும் வேற்றுத் தோல் என்பதைக் குறிப்பதற்காகவே “தொடுதோல்” என்னும் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக தோலினால் செருப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு நெடுங்காலத்திற்கு முன்பே சாதாரண மக்கள் தமிழகத்தில் செருப்பை பயன்படுத்தியுள்ளார்கள் என அறியலாம். "செருப்பு இராமரின் அடையாளம்! அவர் வனவாசம் சென்றவுடன் அவரது செருப்புதான் நாட்டை ஆண்டது; என்னை அரியணையில் வைத்து 14 ஆண்டுகள் நாட்டையே ஆண்டுள்ளார்கள். எனக்கு மாலை மரியாதை செய்துள்ளார்கள். ஆனால் எனக்கு ஒரு வருத்தமும் கவலையும் உண்டு இவ்வளவு சிறப்புகள் மிக்க என்னை உருவாக்கியவர்களை மட்டும் கீழான நிலைக்கு தள்ளுவதும், அவர்களின் குழந்தைகளை படிக்கக் கூட விடாமல் அடிமைகளாக கருதுவதும், கோவில்களுக்கு உள்ளே விடாமல் தடுத்ததும் வேதனையாக இருந்தது. இப்போது மாற்றம் ஏற்பட்டது அண்ணல் அம்பேத்கர், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கடும் போராட்டங்களினால் மாற்றம் உருவானது கொஞ்சம் மகிழ்ச்சியாய் உள்ளது. அவர்களுக்கு நன்றியைத் தெரிவிக்க ஆசையாய் இருக்கிறது. என்னை வைத்து பணம் சம்பாதிக்கும் பெரிய கம்பெனிகள் பணக்காரர்கள் மட்டும் மரியாதிக்குரியவர்களாய் மதிக்கப்படுவது நல்லது. அதேபோல் எல்லோரையும் நினைக்க வேண்டும் என்பதே என் எண்ணம். காலம் ஒரு நாள் மாறும் என் கவலைகள் யாவும் தீரும். நம்பிக்கை வைக்கிறேன். நன்றியுடன் சான்றாதாரக் குறிப்புகள் 1. ஏ.சாட்டெர்டன், தோல் பதனிடுதலும் தோல் தொழிலும் பற்றிய தனி நூல், 1904 . (Monograph of Tanning and Working in Leather, 1904).. 2. அகநானூறு, 34: 2- 4: 101: 8- 9; 368: 1 – 2 3. காலணி https://ta.wikipedia.org/s/3maThe original uploader was  at  தமிழ் விக்கிப்பீடியா. - Transferred from ta.wikipedia to Commons. 4. தோற்கருவிகள், Tamil Virtual Academy, கூகுள் இணையதளம். 5. டி.எம். கிருஷ்ணா: ‘பசுவின் தோலால் மிருதங்கம் செய்யப்படுவது வாசிப்பவர்களுக்கு தெரியும்’ கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா Sebastian & Sons என்ற பெயரில் மிருதங்கம் செய்யும் கலைஞர்கள் குறித்து புத்தகம், புதுப்பிக்கப்பட்டது 23 நவம்பர் 2020. கூகுள் இணையதளம். அருந்ததியர்கள் பேசும் மொழி தமிழ் பேசும் சக்கிலியர்களுக்கும் தெலுங்கு பேசும் மாதிகாக்களுக்கும் பல வேறு பாடுகள் உண்டு என தென்னிந்திய குலங்கலும் குடிகளும் நூலில் குறிப்புகள் இருக்கிறது. இப்படி ஆந்திராவுக்கு தமிழ் நாட்டில் இருந்து பிழைப்பு தேடிச் சென்ற அருந்ததியர்கள், அங்குள்ள தெலுங்கைப் படிக்காமல், அக்கம் பக்கம் பேசும் வட்டாரத் தெலுங்கு ஒலியில், தெலுங்குச் சாயலில் தமிழைப் பேசும் அருந்ததியரை தெலுங்கர் என்று எப்படிச் சொல்ல முடியும்? இப்பொழுதும் தாயகம் திரும்பி நிரந்தமாக வாழும் அருந்ததியர்கள் சிலர் கூட அப்படித்தான் பேசுகிறார்கள். இன்றைய தலைமுறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நம் தாய் மொழி ‘தமிழ்’ தான் என உணர்ந்து வீட்டிலும் பேசத் தொடங்கியுள்ளனர். ஓரிரு தலைமுறைகளில் மொழி, திருத்தம் முழுமை அடையும். இன்னும் கூடுதலாக செல்ல வேண்டும் என்றால், தூய தமிழ்ச் சொற்களை இன்றளவும் பேசுபவர்கள் அருந்ததியர்களே.! ⁽¹⁾ … தெலுங்கில் அருந்ததியர் பேச்சில் - நய்னா - அய்யா - தல்லி - அம்ம - கெஞ்சி - கஞ்சி - தங்கம் - தங்கம் (பவுன்) - போ - போ - வயது - வயசு - புலுசு - சாறு வன்னம் - சோறு தமிழில் அருந்ததியர் பேச்சில் கடை - அங்காடி வீடு - இல்லு (இல்லம்) தூக்கம் - நித்தரை சொல் - செப்பு பசு - ஆவு சேலை - சீரை உடல் - மெய் சிரிப்பு - நகு பைத்தியம் - பித்து வேலை - பணி வான் மழை - வான “தமிழ்” அது அருந்ததியர்களின் “உயிர்” இவர்கள் பேசும் பல தமிழ் வார்த்தைகள் உலகமறை என்று சொல்லக்கூடிய திருக்குறளில் எடுத்து கூற முடியும். தமிழை மட்டும் பேச கூடிய அருந்ததியர்கள் விவசாய குடி மக்களாக இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். அருந்ததியர் பேசும் மொழியினைத் தெலுங்கு எனக் குறிப்பிடுவது குறித்து எனக்கு ஆட்சேபனைகள் இருக்கின்றன. அருந்ததியர் பேசும் மொழிக்கும், நாயக்கர் பேசும் மொழிக்கும், ஆந்திரத்தில் பேசுகிற தெலுங்குக்கும் ஒற்றுமைகள் இருக்கின்றன. இந்திக்கும், உருதுக்கும் இருப்பது போன்ற ஒற்றுமை. அருந்ததியரும் தாங்கள் பேசும் மொழியைத் தங்களுக்குள் சொல்லிக் கொள்ளும் போது ‘மாதிய மாட்ட’ (மாதிகர் மொழி) என்றே குறிப்பிடுகின்றனர். எனக்குப் போதிக்கப்பட்ட எல்லாமும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. அதிலும் குறிப்பாக, அருந்ததியர் போன்ற எல்லாராலும் புறக்கணிக்கப்பட்ட பிரிவினர் குறித்துப் பேசும்போது சிறிது கவனம் தேவை என நினைக்கிறேன் என்கிறார் எழுத்தாளர் ம. மதிவண்ணன். ⁽²⁾ தெலுங்கு நாட்டின் “வடுகர்” என்போரை தமிழ் நாட்டிலும் “வடுகர்” என்றே அழைப்பர். அவர்கள் தெலுங்கு பேசுபவர்களாவர். மாதிகா: இவர்கள் சக்கிலியருக்குச் சமமான தெலுங்கர். இவர்களின் தேவராட்டி மாதங்கி எனப்படுவாள். எல்லம்மாவைப் புகழ்ந்து பாடுவர். இவர்களை சாம்பவர் என்றும் அழைப்பர். ⁽³⁾ 6.02.1925 அன்று சட்டசபையில் பேசிய திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன், அவர்கள் தெலுங்கு மொழி பேசும் தாழ்த்தப்பட்டோரான மாலா, மாதிகாவை ஆதி ஆந்திரர் என அழைக்கும் போது புலையர், தீயர்களை ஏன் மலையாளத் திராவிடர் என ஏன் அழைக்கக்கூடாது எனக் கேள்வி எழுப்பியுள்ளார் எனில் தமிழகத்தில் தெலுங்கு பேசும் தாழ்த்தப்பட்டோர் ஆதி ஆந்திரர் என்பது தெளிவாகிறது. ⁽⁴⁾ தமிழ் நாட்டின் எல்லையோரப் பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்ததால் அருந்ததியர்கள் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழி பேசக்கூடியவர்களாக மட்டும் இருந்துள்ளார்கள். ஆனால் அவர்களின் தாய்மொழி தமிழாகவும் கற்கும் கல்வியெல்லாம் தமிழ் மொழியாகவே இருந்தது! இருக்கின்றன!! இருக்கும்!!!. அருந்ததியர்கள் என்றும் தமிழர்களாகவே வாழ்கின்றனர். ^^ நன்றியுடன் சான்றாதாரக் குறிப்புகள் 1. ஆசிரியர் எழில் இளங்கோவன் அவர்களின் " அருந்ததியர் வரலாறு வினாவும் விளக்கமும்" பக்கம் 14. மும்பை அருந்ததியர் சங்கம், 1998. 2. எழுத்தாளர் ம. மதிவண்ணன் 3. ந.சி. கந்தையா - தென்னிந்திய மக்கள் குலங்களும் குடிகளும், பக்கங்கள் 96,97,118 உதயம் அச்சகம், சென்னை, 1999. 4. திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் https://ta.wikipedia.org/s/oik அருந்ததியர்கள் ஆதித்தமிழர்களே! அருந்ததியர், சக்கிலியர், மாதரி, பகடை, செம்மான் ஆகியோரின் முன்னோர் பிறந்து வளர்ந்த நிலப்பரப்பு தமிழகமே. எனவே அருந்ததியர்கள் ஆதித்தமிழர்களே. அதேபோல் ஆதி திராவிடர் என்ற பெயர் ஆந்திர மாநிலப் பட்டியலில் உள்ளதாலே அவர்களை ஆந்திராவிலிருந்தோ அல்லது தமிழகத்திலிருந்தோ புலம் பெயர்ந்தவர்கள் என நாம் கூறிவிட முடியாது. 1953 ஆண்டு ஆந்திரா மாநிலம் தனித்து பிரிக்கப்படுவதற்கு முன்பிருந்தே இன்றுள்ள ஆந்திரா தெலுங்கான மாநிலங்களிலுள்ள நெல்லூர், சித்தூர், திருப்பதி மற்றும் சில மாவட்டங்களில் தமிழர்கள் 50 விழுக்காடுகளுக்கு மேல் வாழ்வதால் அவர்களை நாம் புலம் பெயர்ந்த தமிழர்கள் என கடுகளாவது எண்ணிவிட முடியுமா? அவர்கள் அம்மண்ணின் பூர்வகுடிகளே ஆவர். மாதியர் என்பது அருந்ததியரின் இன்னொரு பெயர். அருந்ததியர்கள் முற்காலத்தில் குறிஞ்சி நிலத்திற்குரிய ’முருகன்“, முல்லை நிலத்திற்குரிய”மாயோன்/திருமால்“, பாலை நிலத்திற்குரிய”கொற்றவை" ஆகிய தெய்வங்களை வழிபடக்கூடிய வாய்ப்புகள் இருந்திருக்கலாம். தோல் தொழில்களில் முனைப்பாக இருந்து கிணற்றிலுருந்து நீர் இறைக்க தோலினால் செய்யப்பட்ட தோற்பரி செய்து வயல்களுக்கு பாய்ச்சி விவசாயத்திற்கு உதவக்கூடியதாக இருந்துள்ளது. காடும் காடு சார்ந்த இடங்களில் முற்கள், மற்றும் புழு பூச்சிகளை எளிதாக கடந்து நடந்து செல்லக் கூடிய வகையில் தோலினால் ஆன செருப்புகள் பயன்படுத்தவும், குறிஞ்சி வாழ் மக்களுக்கும் தேவையான தோல் மற்றும் விவசாயம் போன்றவற்றிக்கு இவர்களின் உதவி தேவைப்பட்டுள்ளதால், குறுஞ்சி, முல்லை, பாலை அகிய மூன்று நிலப்பகுதிகளிலும் இவர்களின் அவசியம் இருந்துள்ளது. தொடர்பும் இருந்துள்ளது. மாயோனை வழிபட்ட முல்லை நிலத்தவர் காடும் காட்டைச் சார்ந்த பகுதிகளில் விவசாயம், ஆடு மாடுகள் மேய்ப்பது தொழிலாகக் கொண்டு சேரிகளில் வாழ்ந்து வந்துள்ளனர். வயலும் வயல் சார்ந்த மருத நிலம் உருவானதிலும் அருந்ததியர்களின் அயராத உழைப்பும் தேவையும் இருந்திருக்க வேண்டும். ஆகவே தான் சேயோன் (முருகன்), மாயோன் (திருமால் அதை பெருமாள் என்று கூறி அதிகப்படியான மக்கள் குல தெய்வமாக வணங்குகின்றனர்), கொற்றவையை, காளியம்மன், மாரியம்மன், வீரமாத்தி எனவும் தற்காலத்தில் மதுரை வீரன், ஒண்டிவீரன் போன்றவைகளையும் வழிபட்டு வருகின்றனர். மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையான் சொல்லவும் படுமே. தொல்காப்பியம்-பொருளதிகாரம்-அகத்திணை இயல் : எண் 5 ⁽¹⁾ திருமால் வேதத்தில் வணங்கப்படவில்லை. விஷ்ணுவை பின்னாளில் ஒட்டவைத்தது. “சாமி உனது - பூசை எனது” என மாற்றி விட்டார்கள் என்பார் சொல்வேந்தர் சுகி சிவம். திருமாலை / பெருமாளை ஆரியக்கடவுளாக “விஷ்ணு” வாக காக்கும் கடவுளாக பார்ப்பனர்கள் மாற்றி விட்டனர். குல தெய்வங்களில் பெரும்பான்மையாக “பெருமாள்” எனப்படும் திருமாலையும் அருந்ததியர் மக்கள் வணங்கி வருகின்றனர். அதிலும் தொல்காப்பியம் குறிப்பிடும் “மாயோன்” என்பதை “மாயவன்” என பேச்சு வழக்கில் இன்றும் குறிப்பிடுவர். தமிழர்களின் நடுகல் வழிபாடாக இறந்தவர்களின் நினைவாக நடுகல் இட்டு வழிபடுவதையும் அருந்ததியர்கள் வழக்கமாக இன்றும் தொடர்கின்றனர். அருந்ததியர், மாதியர், பகடை என்ற மூன்று பெயர்கள் அருந்ததியர்களைக் குறிக்கும் வேறு பெயர்கள். முன் இரண்டு பெயர்கள் அதியர்கள் என்பதைக் குறித்தும், பகடை என்பது வீரத்தைக் குறித்தும் அமைந்த பெயர்களாகும். மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர் அருந்ததியரைப் “பறம்பன்” என்று குறிப்பிடுகிறார். பறம்பு மலையை உடையவன் பறம்பன். பறம்புமலைத் தலைவன் வேள் பாரி, இப்பெயர் அருந்ததியருக்கும் வேளிருக்கும் உள்ள உறவை தெளிவாகக் காட்டுகிறது. ஆனாலும் பறம்பன் என்ற பெயர் நடைமுறையில் இல்லை. மாதிகா, மாதாரி என்பது மா அதியர் என்பதன் மரு உ சொல். சக்கிலியர் என்பது திணிக்கப்பட்ட பெயர். ⁽²⁾ பறம்பர் என்ற பெயர் அருந்ததியரைக் குறிப்பதாக தமிழ் கலைக் களஞ்சியம் அபிதான சிந்தாமணியும், சிலப்பதிகாரமும் சொல்கின்றன. ஆகவே நாம் 2000 ஆண்டுகளுக்கு முன் உள்ள தமிழக வரலாற்றில் இருந்து அருந்ததியரின் வரலாற்றைத் தேடவேண்டும். சிந்தாமணி நிகண்டு - செய்யுள் 347 ⁽³⁾ கறங்குதல் சுழலல் கற்றாவிளங்கன்றுப் பசுவைக் காட்டும் குறங்குதான்றெடை குறும்பூழ்காடை யினாமங்கூறும் எறும்பியென்பதுமா தங்கமேற் மேற்போரே பரிசிலாளர் பறம்பர் தோல்வினைஞரென்ப பற்றற்றார் முனிவராமே சூடாமணி செய்யுள்- 134 ⁽⁴⁾ பொல்லரே துன்னர் என்ப புகன்ற தோல் துன்னர் செம்மார் உல்லியர் கூவல் நூலோர் ஒளிவளை போழ்நர் தாமே மெல்லிய சங்க றுப்போர் சூனர் ஊன் விற்போர் என்ப சொல்லிய பறம்பர் தாமே தோல்வினை மாக்கள் நாமம் பறம்பர் என்றால் தோல்வினைமாக்கள், தோல்வினைஞர் எனப் பொருள்படும் என அறியலாம். சூடாமணி தேவப்பெயர் செய்யுள்-134 பொல்லர்-துணியைப் பொருத்தித் தைப்பவர், துன்னர்-தைக்கும் தொழில் செய்பவர் தோல்துன்னர்-தோலில் தைப்பவர் செம்மார்-தோலைச் செம்மைப்படுத்தித் தொழில் செய்பவர் கூவனுலோர்-கிணறு பற்றிய நூலறிவு உடையவர் உல்லியர்-கிணறு குறிப்போர் சங்கறுப்போர் வளை போழ்நர்-சங்கை அறுத்துப் பிளப்பவர் ஊன்-இறைச்சி சூனர்-கொலைத்தொழில் உடையவர் தோல்வினைமாக்கள்-தோலைப்பதப்படுத்துவோர் பறம்பர்-தோல் பிசிர் நீக்கிப் பதம் செய்வோர். சக்கிலியர் என்னும் தெலுங்கு வகுப்பார் தமிழ் நாட்டிற்கு வந்த பின் ‘பறம்பர்’ என்னும் தமிழ் வகுப்பார் மறைந்தனர் என அறிஞர் தேவநேயப் பாவாணர் சொன்னதில் தெலுங்கு வகுப்பார் என சொல்வதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. காரணம் நாயக்கர் காலத்திற்கு முன்பிருந்தே சங்க காலம் முதல் இன்னும் சொல்லப்போனால் தொல்காப்பியம் காலம் முதல் சக்கிலியர்கள், பகடைகள், செம்மான்கள் அருந்ததியர்கள் தமிழகத்தில் வாழ்ந்தவர்கள். பல கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கிய சான்றுகள் பல உள்ளன. ஆரியர்கள் சாதியை கொண்டு வந்த பின் காலப்போக்கில் பறம்பர் என்ற தமிழ்ச் சொல் வழக்கத்தில் இல்லாமல் சக்கிலியர் என்ற சொல் பயன்பாட்டிற்கு வந்திருக்கலாம். (ஆசிரியர் எழில். இளங்கோவன்). அறிஞர் அம்பேத்கர் அவர்கள், ஆர்.கே.முகர்ஜி எழுதிய “இந்தியக் கப்பல்கள்” என்ற நூலை மேற்கோள் காட்டி இப்படிச் சொல்கிறார் : ⁽⁵⁾ “மருவூப்பாக்கத்தில்… சுங்க வரி செலுத்தப்பட்ட பின்னர், சரக்குகள் மீது புலிச்சின்னம் பதிக்கப்பட்டுப் பண்டகச் சாலைக்கு அனுப்பப்பட்டன. அதற்கு அருகில் யவன வணிகர்களின் குடியேற்றங்கள் அமைந்திருந்தன. அங்கே கொல்லர்கள், தச்சர்கள், ஓவியர்கள், சிற்பிகள், பொற்கொல்லர்கள்,”செம்மான்கள்" போன்ற இவர்கள் அனைவரும் மருவூப்பாக்கத்தையே உறைவிடமாகக் கொண்டிருந்தனர். "(தமிழில் நூல் தொகுதி-23). இது சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு சொல்லப்பட்ட செய்தி - காலம் கி.பி.250. சரி, யார் இந்தச் செம்மான்கள்? சிலப்பதிகாரம், இந்திரவிழாவூரெடுத்த காதையில், 32 ஆம் வரியில் " தோலின் துன்னர் " என்ற பெயரைச் சொல்கிறார் இளங்கோ அடிகளார். கி.பி.10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உரையாசிரியர் அரும்பதவுரைக் காரர், தோலின் துன்னர் என்பதற்குச் “செம்மான்” என்று பொருள் சொல்கிறார். கி.பி. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அடியார்க்கு நல்லார் “பறம்பர்” என்று சொல்கிறார். எனவே செம்மார் - பறம்பர் என்ற இரு பெயர்களும் ஒர் இன மக்களையே குறிப்பிடுகிறது. தோலின் துன்னர் என்றால், தண்ணுமை, பேரிகை, மத்தளம், போர் முரசம் போன்ற இசைக் கருவிகள் செய்வதற்காகப் பதப்படுத்தியத் தோலை இழுத்துத் தைப்பவர்கள் என்கிறது தமிழ்க் கலைக்களஞ்சியமான அபிதான சிந்தாமணி. எனவே தோல் இசைக்கருவி செய்யும் தோலின் துன்னர்கள், செம்மான் என்று அழைக்கப் பட்டிருக்கிறார்கள் என்கிறது சிலப்பதிகாரம். தோலின் துன்னர் ஆகிய செம்மான்களைப் பறம்பர் என்கிறார் அடியார்க்கு நல்லார். “கொற்றவை என்ற பெண் தெய்வத்தை வணங்கியவர்கள்”மாதியர்" என்கிறார் எட்கர் தர்ஸ்டன்.  கொற்றவை குறிஞ்சி நிலத் தலைவி என்கிறது சங்க இலக்கியம். கொற்றவை என்பவள் குறிஞ்சி நிலத்துக்குரிய தெய்வமாகப் சில பழந் தமிழ் நூல்களிலே குறிப்பிடப்பட்டாலும், பிற்காலத்தில் கொற்றவை பாலை நிலத்துக்கு உரிய தெய்வமாகவே பெரும்பாலும் விவரிக்கப்படுகிறாள். பாலைக்கு என்று தனி நிலம் இருந்திடாமல் முல்லையும் குறிஞ்சியும் முறை திரிந்து கதிரவன் வெம்மையாலே எங்கும் வளமை தீய்ந்து போயுள்ள இடங்களே பாலை என ஆனதால், குறிஞ்சி நிலத்தில் வழிபட்டதாக கருதப்படும் கொற்றவை பாலை நிலக் கடவுளாக ஆகியிருக்கலாமென கருதவும் வாய்ப்புண்டு. குறிஞ்சி என்பது மலையைச் சார்ந்தது. ஏறத்தாழ 2000 அடிக்கும் குறைவான உயரம் கொண்ட மலையைப் “பறம்பு” மலை என்பர். இந்த மலையில் சங்க காலங்களில் வாழ்ந்த குறிஞ்சி நிலப் பறம்பர்கள் காலமாற்றங்களால் வாழ்வியலுக்காக இடம்  பெயர்கிறார்கள். அப்படி அவர்கள் இடம் பெயர்ந்து, குடி பெயர்ந்து வந்து தங்கிய இடம் தான் மருவூப்பாக்கம். பறம்பு மலையில் தேன், தினை எடுத்தக் குறிஞ்சி நிலப் பறம்பர்கள், மருவூப்பாக்கத்தில் செம்மான்களாக, தோல் இசைக் கருவிகள் செய்யும் தொழிலாளர்களாக, வணிகர்களாக “தோலின் துன்னர்”களாக வாழ்ந்துள்ளார்கள் என்பதை டாக்டர் அம்பேத்கர் நமக்கு நினைவூட்டுகிறார். செம்மான், பறம்பர் (தோலின் துன்னர்) ஆகிய இவர்களைச் சக்கிலியர்கள் என்கிறார் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். இவைகளின் அடிப்படையில் ஏறத்தாழ கி.பி. 250 க்கு முன்பே அருந்ததியர்கள் தமிழகத்தில் வாழ்ந்தவர்கள் என்பதை உறுதியாகப் பதிவு செய்கிறேன். ⁽⁵⁾ எழில்.இளங்கோவன் அவர்களின் “அருந்ததியர் இயக்க வரலாறு” நூல் அறிமுகத்தில் தோழர் இக்லாஸ் உசேன் குறிப்பிடுகையில் உலகெங்கிலும் மனிதன் நிர்வாணமாகத்தான் பிறக்கிறான். இந்தியாவில் மட்டுமே உயர் சாதியாய், தாழ்ந்த சாதியாய்ப் பிறக்கிறான். இந்திய சாதிய ஏற்றத்தாழ்வு இருள் நிறைந்த திசையற்ற பாதைக்கு இந்நாட்டை இட்டுச் செல்கிறது. காலநிலையில் கூட மாற்றம் ஏற்படுகிறது. சாதி அடுக்குகளில் ஈராயிரம் ஆண்டுகளாக எந்த மாற்றமும் நிகழாமல் நீடிக்கிறது. இனத்தூய்மை காப்பதுதான் சாதியின் குறிக்கோள் என்று இனவாதம் பேசுபவர்கள் கருதுகின்றார்கள். ஆனால் சாதி, அதே இனத்தைச் சார்ந்தவர்களை, ஒரு சாராரைத் தூய்மையற்றவர்களாக மாற்றி வைத்த கொடுமையும் இங்கு நீடிக்கிறது. சமமற்ற சமூகத்தைக் கட்டமைப்பதில் சாதி முக்கியப் பங்காற்றுகிறது. சமமற்ற சமூகத்தைச் சமூகநீதிச் சமூகமாக மாற்றப் போராடிய அருந்ததியர் இயக்க வரலாறே இந்நூல். அருந்ததியர்களைத் தமிழர்களே அல்ல, வந்தேறிகள் என்று வாய்கூசாமல் பொய் பேசுகிறார்கள். கூகுள், விக்கிபீடியா கூட அருந்ததியர்கள் அந்நியர்கள் என்றே விவரிக்கின்றன. அவ்வெறுப்புக் கருத்துகளைத் தக்க ஆதாரங்களைக் கொண்டு தகர்த்தெறிகிறார் ஆசிரியர் எழில் இளங்கோவன். 1920 ஆம் ஆண்டு தொடங்கி அருந்ததியர் இயக்கத்தின் செயல்பாடுகளை இந்நூல் விவரிக்கிறது. அருந்ததியர் மகாஜன சபை, சென்னை அருந்ததியர் சங்கம் முதன்முதலில் தொடங்கப்பட்டது, கல்வி உரிமை, வாழ்வாதாரம், சமூகநீதியைக் கொள்கையாகக் கொண்டே அருந்ததியர்கள் இயக்கம் செயல்பட்டது, அருந்ததிய மக்களிடையே மண்டிக்கிடந்த தாழ்வு மனப்பான்மையை நீக்கி பகுத்தறிவுச் சிந்தனையையும் வளர்த்தது எனப் பல செய்திகளை இந்நூலில் காணலாம். எல்.சி குருசாமி அருந்ததியர் சங்கத் தலைவராக மட்டும் இல்லாமல் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கான சமூகநீதியை நிலைநாட்ட எல்.சி.குருசாமியின் பேச்சு நீதிக்கட்சிக்குத் துணைநின்றது. ⁽⁶⁾ "சக்கிலியர்கள் தமிழர்கள் தான் என்பதில் சந்தேகமே இல்லை’’ தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும், மற்ற சமுதாயங்களுக்கு எவ்வளவு உரிமை உண்டோ, அத்தனையும் சக்கிலியர் சமுதாயத்திற்கும் உண்டு. விவசாயம் உள்ளிட்ட ஏனைய பணிக்களங்களில் சிறப்பாக வாழ்ந்த இந்த சமுதாயம், காலனியாதிக்கத்தின் கீழேயே தன் நிலை இழந்து பெருவாரியாகத் தாழ்த்தப்பட்டது. இந்த தாழ்த்தப்பட்ட நிலையை, அவர்களது தமிழ் இலக்கிய அறிவு மூலம் கதைகள், கவிதைகள் விடுகதைகள் மூலம் கண்டறிய முடிந்தது. இவர்களில் பெரும்பான்மையோர் இருமொழி பேசுவோர். இது குறித்து அவர்களைத் தமிழரல்லர் என்று கருதுவது தவறு. ஏனைய தமிழருக்கு இல்லாத, கூடுதலான திறமையிது என்றே கொள்ள வேண்டும். அவர்கள் இருமொழி பேசுவதால், தமிழில் அவர்களுக்குள்ள திறமை, ஏனையோருடையதை விடச் சற்றும் குறைந்தது அல்ல. ⁽⁷⁾ நன்றியுடன் சான்றாதாரக் குறிப்புகள் 1. தொல்காப்பியம்-பொருளதிகாரம்-அகத்திணை இயல்-பாடல் : எண் 5 2. ஆசிரியர் எழில் இளங்கோவன் அவர்களின் " அருந்ததியர் வரலாறு வினாவும் விளக்கமும்" பக்கம் 21 மும்பை அருந்ததியர் சங்கம், 1998. 3. சிந்தாமணி நிகண்டு - செய்யுள் 347 4. சூடாமணி செய்யுள்- 134 5. எழில் இளங்கோவன், முகநூல் பதிவு 20.11.2019. 6. கீற்று, இணையதளம் : கருஞ்சட்டைத் தமிழர்-பிப்ரவரி 2020. 7. கீற்று, இணையதளம்: ஞான.அலாய்சியஸ், 8. தலித் முரசு - செப்டம்பர் 2005. வரலாற்று கல்வெட்டுச் சான்றுகள் சக்கிலி, மாதாரி, பகடை, செம்மான் ஆகிய பிரிவினர் பற்றி சோழர் கால கல்வெட்டு ஆதாரங்கள் செப்பு பட்டையங்கள் கிடைத்துள்ளன. இவற்றின் மூலம் இவர்கள் விஜய நகர அரசின் வருகைக்கு முன்பே தமிழகத்தில் இருந்த தமிழ் குடிகள் என்பது நிரூபணமாகியுள்ளது. சக்கிலி பகடை மாதாரி செம்மான் போன்ற சமூக பிரிவினர் ஆந்திரத்தில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அருந்ததியர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து அய்நூறு ஆண்டுகள் தாம் ஆகின்றன என்றால், அந்த அய்நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் அவர்களைப் பற்றிய குறிப்புகள் இருக்கக் கூடாது அல்லவா? ஆனால் உண்மை நிலவரம் என்ன? சில கல்வெட்டுச் சான்றுகளைக் காண்போம். கி.பி.10 ஆம் நூற்றாண்டிலிருந்து பல தமிழ் கல்வெட்டுகளில், செப்பேடு சான்றுகளில் சக்கிலியர், பகடை, மாதாரி, செம்மான் என்ற பெயர்கள் உள்ளன. தமிழ்நாட்டில் கிடைக்கும் ஏறத்தாழ ஒரு லட்சம் எண்ணிக்கையுள்ள கல்வெட்டுகளில் வெறும் 15 ஆயிரம் கல்வெட்டுகள் மட்டுமே பதிப்பிக்கப் பட்டுள்ளன என கல்வெட்டு அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். பதிப்பித்தவற்றுள் நமக்குக் கிடைத்த கல் வெட்டுக்கள் இவை. பதிப்பிக்கப்படாதவற்றுள் எத்தனை இருக்கிறதோ யாருக்கு தெரியும்? கல்வெட்டுகள் அனைத்துமே விஜய நகரப் பேரரசு கி.பி. 1336 இல் தோன்றியதற்கும் முன்னரே, கிருஷ்ண தேவராயனின் காலமான கி.பி. 1509-1529 காலகட்டத்துக்கு வெகு காலம் முந்திய கல்வெட்டுக்கள். இங்கு தரப்பட்டுள்ள கல்வெட்டுகளில் காலத்தால் முந்தியது கி.பி. 1030 ஆம் ஆண்டின் கல்வெட்டாகும். அக்கல்வெட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தின் பெயர் சக்கிலியன் குண்டில் என வழங்கப்படுவதை கல்வெட்டு குறிப்பிடுகிறது. ஒரு இடத்துக்கு அவ்வாறு பெயர் வழங்கப்பட்டதை முன்னிட்டு, சக்கிலியர்கள் அதற்கும் வெகுகாலத்திற்கும் முன்பாக அங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை நாம் உறுதியாக அறிந்து கொள்ளலாம். மேலும் தமிழ்நாட்டில் சாதி , தீண்டாமை வழக்கத்திற்கு வந்ததும் 11 ஆம் நூற்றாண்டுக் காலத்தில் தான் என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த நூற்றாண்டின் முதற்பகுதியிலேயே அருந்ததியர்கள் தமிழ் நாட்டில் இருந்திருக்கின்றனர் என்றால் தமிழ்நாட்டின் எந்தச் சாதிக்கும் பிந்தையதல்ல அருந்ததியர்களின் இருப்பு என்பதை அக்கல்வெட்டு உணர்த்துகிறது. [Fig.1 South Indian Inscriptions Vol. 8 Page 36 (67 – 4)] இன்னொரு கல்வெட்டு மேலும் ஆச்சரியத்தை வரவழைக்கூடியதாக இருக்கிறது. இக்கல்வெட்டு பரகேசரி என்ற பட்டமுடைய இராசேந்திரச் சோழ மன்னரின் 18வது ஆட்சியாண்டில் நிலத்தின் 4 எல்லைகளைக் குறிப்பிடும் போது அதன் ஒரு எல்லையாக “சக்கிலியன் குண்டில்” எனக் குறிப்பிடுகிறார்கள், “செப்பத்தத்துக்குத் துணை நிலமாக இட்ட கிழன்மெலாய்க் கிடக்கும் வாவைக்கும் வடக்கில் நாலடியில் கிழைவாவையில் கிழ்வரம்புக்கு வடக்கும்மெல்பார்க்கெல்லை வடக்கின் நாலடியர் வடவரம்புக்கும் சக்கிலியன் குண்டிலுக்கும் பெருநான்கெல்லை. நத்தத்தில் நாறுகாலுக்கு கிழக்கும் வடபார்க்கெல்லை ….” (South Indian Inscriptions Vol-8 பக்கம் 36) தென்னிந்திய தொல்துறையின் தொகுதி 8, பக்கம் 36 ஆவணக் குறிப்பில் உள்ளது. இராசேந்திரச் சோழன் 1012 இல் ஆட்சிக்கட்டில் ஏறினான். எனில் இக்கல்வெட்டின் காலம் கி.பி. 1030 ஆகும். [Fig. 2 South Indian Inscriptions Vol. VIII 46 (No. 86 -8)] சக்கிலியர் குறித்த ஒம்படைக்கிளவி இடம்: அருணாச்சலேஸ்வரர் கோவில், திருவண்ணாமலை அரசன் : இரண்டாம் ராசராசனின் 5வது ஆட்சியாண்டு கி.பி. 1151 கல்வெட்டு வரிகள்: பிள்ளயார் ஸ்ரீ பாதம் விட்டு ஓடிப் பொநாமாகிலெங்கள் மிணாட்டிமாரை சக்கிலியர்க்கு குடுத்துப் பாத்திருந்தொமாவொம் இவ்விருவொம். [Fig. 3 South Indian Inscriptions Vol. 8 Page 68 (151-4)] “பசு விடுகையாலும், ஐந்தலை மணியிடுகையாலும், சக்கிலிக்கு தெரிசனம் காட்டி தொலாலெ செய்த திருவடி நிலைக்கு மெகடுக்குகைய்க்கு பத்துக்குப் பொத செம்பொன் அறுகழஞ்சுயிடுகையாலும்” என உள்ளது இந்த கல்வெட்டு கி.பி. 1202 ஆம் ஆண்டைச் சேர்ந்தது. “சக்கிலிக்கு தெரிசனம் காட்டி” என வருகிறது. இந்த கல்வெட்டின் மூலம் தாழ்த்தப்பட்டவர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும் கருதப்படும் சக்கிலியர்கள் 1202 ஆம் ஆண்டில் குலோத்துங்க சோழர்கள் காலத்தில் கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளார்கள் என்பது உறுதியாகிறது. இதிலிருந்து தமிழர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்கள் சாதிய கொடுமைகளுக்கு உள்ளாகவில்லை என அறிய முடிகிறது. [Fig. 4 South Indian Inscriptions Vol. 7 Page 49 (118 - 4)] திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் த்ரிபரேஷ்வர் கோவில் கல் வெட்டில் மேற்கண்ட வரிகள் இருக்கின்றன. “நியாயத்தாரும் பன்னிரண்டு பணி மக்களு முள்ளிட்ட பெரும் வெடரும், பறையரும், பறை முதலிகளும், செக்கிலியரும். இருளரு முள்ளிட்ட அனைத்தும் அந்தணன் தலையாக அரிப்பன் கடையாக உள்ளுப்பட்ட அனைத்து சாதிமார்க்கு” என உள்ளது. இந்த கல்வெட்டைப் பற்றிய குறிப்பு தொல்லியல் துறையால் வெளியிடப்பட்ட (South Indian Inscription, 7 வது தொகுதியில் 49 ஆம் பக்கத்தில் உள்ளது. இது சோழர் காலத்து கல்வெட்டு. இதன் காலம் கி.பி.1258. இதில் செக்கிலியர் என்பது சக்கிலியர்களைத் தான் குறிக்கிறது. அருந்ததியர் குறித்த சிறு விளக்கமாய் கீற்று, இணையதளத்தில் 03 ஏப்ரல் 2017 அன்று ம.மதிவண்ணன் அவர்கள் சுட்டிக்காட்டிய கட்டுரை. தற்காலத்திலும் வரலாற்று ஆசிரியர்கள் கல்வெட்டுகளில் உள்ளவற்றைக் கூட திரித்தும் மறைத்தும் வெளியிடுவது அருந்ததியர் இனம் சிந்திக்கவேண்டிய ஒன்று. அருந்ததியர்கள் குறித்து நமது கல்வித் துறை சார்ந்த ஆய்வறிஞர்கள் என்போர் தமிழ்ச் சமூகத்திற்கு அப்படிச் சொல்லவில்லை என்பதற்காக அருந்ததியர்களுக்குப் பெருமை மிகுந்த ஒரு கடந்த காலம் இருந்தது என்பதை நாங்கள் சொல்லக் கூடாதா? உண்மையில் இந்த செய்திகளை அருந்ததியர்கள் அல்லாத மற்றவர்கள்தான் சொல்லியிருக்க வேண்டும். ஏனெனில், ஆய்வு போன்றவை இவ்வளவு நீண்ட காலமாய் அருந்ததியருக்கு அந்நியமாய் இருந்தது. இது விஷயத்தில் ஒரு மிகப் பெரிய சதி நடந்திருப்பதாக நாம் சந்தேகப்படக் கூடிய அளவிற்கு செய்திகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு ஒரேயொரு செய்தியை மட்டும் முன்வைக்க விரும்புகிறேன். கே.கே.பிள்ளை எழுதிய ‘தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்’ நூல் தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற நூல். இளங்கலை வரலாறு, முதுகலை வரலாறு ஆகியவற்றுக்குப் பாடநூலாக அந்நூல் விளங்குகிறது என அந்நூலின் முகப்புரையே சொல்கிறது. மேலும், அந்நூல் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற போட்டித் தேர்வுகளுக்குப் பாடநூலாகவும் விளங்குகிறது என்றும் சொல்கிறார்கள். அந்நூலில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்திலுள்ள 1258-ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு மேற்கோள் காட்டப்படுகிறது. அந்த மேற்கோள் வருமாறு: “நியாயத்தாரும், பன்னிரண்டு பணிமக்களுமுள்ளிட்ட பெரும் வேடரும், பாணரும், பறையரும், இருளரும் உள்ளிட்ட அனைத்துச் சாதிகளும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.         சௌத் இந்தியன் இன்ஸ்கிரிப்சன்ஸ் நூலின் எட்டாவது தொகுதியில் இடம்பெறும் அதன் உண்மையான பகுதி: “நியாயத்தாரும், பன்னிரண்டு பணிமக்களுமுள்ளிட்ட பெரும் வெடரும், பாணரும். பறைமுதலிகளும், செக்கிலியரும் இருளரும் உள்ளிட்ட அனைத்துச் சாதிகளும்” என்பதாகும். இதிலுள்ள சக்கிலியர் என்கிற ஒரு சொல் மட்டும் கே.கே.பிள்ளை எதற்காக எடிட் பண்ணினார் என நமக்குத் தெரியாது. (South Indian Inscriptions Vol. 7 Page 49 (118 - 4). தமிழறிஞர்கள் யாரைக் கேட்டாலும் சொல்வார்கள்! தமிழ்நாட்டிலுள்ள தெலுங்கு பேசும் மக்களை வடுகர் என்றே கல்வெட்டுக்களும், பழந்தழிழ் இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன என்பதை. மேலே குறிப்பிட்ட அனைத்துக் கல்வெட்டுக்களும், பழந்தமிழ் இலக்கியங்களுள் சிலவும் சக்கிலியர் எனத் தெளிவாகவே குறிப்பிடுகின்றன தற்காலத்திலும் வரலாற்று ஆசிரியர்கள் கல்வெட்டுகளில் உள்ளவற்றைக் கூட திரித்தும் மறைத்தும் வெளியிடுவது தமிழினம் குறிப்பாக அருந்ததியர் இனம் சிந்திக்கவேண்டிய ஒன்று. அதேபோல, வெள்ளைக்குதிரை இதழில் வெளியான எனது கட்டுரையில், கி.பி. ஆயிரம் ஆண்டுக்கும் கி.பி. ஆயிரத்து நானூறாம் ஆண்டுக்கும் இடைப்பட்டதான சக்கிலியரைக் குறிப்பிடுகிற ஐந்து கல்வெட்டுகளைக் குறிப்பிட்டிருக்கிறேன். அதில் குறிப்பிடப்படாத மற்றொரு கல்வெட்டும் உள்ளது. இக்கல்வெட்டுக்களைத் தமிழ் கூறு நல்லுலகிலுள்ள அறிஞர்கள் குறிப்பிடாதது ஏன் என எனக்கு விளங்கவில்லை. ⁽⁵⁾   இக்கல்வெட்டுக்களைத் தவிரவும் கர்நாடகாவின் தமிழ்நாட்டு எல்லையில் இருக்கும் கோலார் மாவட்டத்தின் சிந்தாமணி தாலுகாவிலுள்ள கைவாரவில் உள்ள தமிழ் கல்வெட்டு ஒன்றில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “ஜொம்மண்ண உடையார் மகமை மக்க திரைகார்த்திகை பாடி உள்ளயும்… நாட… நாய் ஆடு திரைதாம …. கை தெண்டம் உண்டிகை எ….. யும்…..காணிபட்டு நார் எண்ணெய் நால் எருது நார் பசுநால் எருமை நனி…..ந்த….தாகு இரும்பு சக்கிலித்திரை வெற்றிலை …. மை மற்றுமும் ஊர் …. பா….காணிக்கையும் சர்வ மானியம் ஆக” (6). இவற்றைத் தவிரவும் செருப்பு எனும் தனது நூலில் நண்பர் ஜெய வீரதேவன் குறிப்பிடும் இன்னொரு கல்வெட்டு உள்ளது. அது பிற்காலச் சோழர் கால கல்வெட்டில் "எனக்கு சரி இன்னாத சக்கிலியன் செருப்பும் எடுத்துத் தம்பலமும் தின்றவனாவேன்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள சக்கிலிச்சி ஏரியில் உள்ள கல்வெட்டில் “சக்கிலிச்சி ஏரி” எனவும் பாசான வசதிக்காக் சக்கிலியர்களால் உருவாக்கப்பட்டதென குறிபிடப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டாகும். ⁽⁷⁾ மேலும் கோலார் மாவட்டக் கல்வெட்டு அருந்ததியர்களுக்கு என்று தனியே வரி விதிக்கப்பட்டது எனவும் அவ்வரியின் பெயர் “சக்கிலித் திரை” எனவும் அறியத் தெரிகிறது. வலங்கை – இடங்கை சக்கிலியர் என்பது பிற்காலத்தில் வந்த சாதிப் பெயர். பறம்பர் அருந்ததியர் என்பது குறிஞ்சிநில பறம்பை ஆண்ட அதியர்குடி என்பதை உணர்த்தும் குடிப்பெயர், மரபுப்பெயர், இனப்பெயர். ⁽⁸⁾ பிற்காலச் சோழப்பேரரசில் வலிமையும், புகழும் மிக்க வேந்தர்களான இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழனுக்குப் பிறகு மற்றொரு வலிமை வாய்ந்த வேந்தனாக அநபாயன் என்ற முதலாம் குலோத்துங்கன் 1070ம் ஆண்டு ஜூன் திங்கள் 9 ம் நாள் “இராசகேசரி” என்ற பட்டத்துடன் ஆட்சிக்கு வருகிறான். குறிப்பாக “வலங்கை - இடங்கை” என்ற சாதிரீதியான அமைப்பு இந்தச் சோழர்களின் காலத்தில் அதிலும் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் தான் உருவாக்கம் பெற்றது. இதில் வலங்கை பிரிவில் 98 சாதிகளும், இடங்கைப் பிரிவில் 98 சாதிகளும் இருந்ததாகக் கூறும் அச்சுததேவராளியர் கல்வெட்டில் சொல்லப்படும் அந்த இடங்கை - வலங்கை சாதி வரலாறு பற்றி பேசும் ஓலைச்சுவடி ஒன்றில் பட்டியலிட்டுள்ள சாதிகளில் இடங்கைச் சாதி பட்டியலில் 97 வது சாதியாக சக்கிலிப் (பறம்பர்) சாதியும் குறிப்பிட்டுள்ளது எனில் கி.பி. 1070 முன்பிருந்தே “சக்கிலி” என்ற சாதி இருந்துள்ளது, இவர்கள் எப்படி 17ஆம் நூற்றாண்டில் ஆந்திராவில் இருந்து வந்த தெலுங்கர்களாக இருக்க முடியும்? ⁽⁸⁾ நன்றியுடன் சான்றாதாரக் குறிப்புகள் 1. Fig.1 South Indian Inscriptions Vol. 8 Page 36 (67 – 4) 2. Fig. 2 South Indian Inscriptions Vol. VIII 46 (No. 86 -8) 3. Fig. 3 South Indian Inscriptions Vol. 8 Page 68 (151-4) 4. Fig. 4 South Indian Inscriptions Vol. 7 Page 49 (118 - 4) 5. எழுத்தாளர் தோழர் ம. மதிவண்ணன் 6. Epigraphy of Carnatic Volume- 10 7. அருந்ததியர்கள் தமிழர்கள் என்பதற்கான ஆவண தொகுப்பு (Arunthathiyar Tamilar documents) ARUNTHATHIYAR OODAGAM 8. எழில் இளங்கோவன் - அருந்ததியர் வரலாறும் பண்பாடும், பக்கம் 30, 31, ஆதித் தமிழர் பேரவை - 2002. செப்பேடு பட்டயங்கள் மேற்கண்ட கல்வெட்டுச் சான்றுகளைத் தொடர்ந்து சில செப்பேட்டுச் சான்றுகளையும் பார்க்கலாம். [Fig. 5 கி.பி. 1499 ஆம் ஆண்டு ஒரு செப்பு பட்டயத்தில் உள்ளன. புலவர் செ. இராசு அவர்கள் வெளியிட்ட “கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள்” நூலில் பக்கம் 284.] “ஒன்னப்ப கவுண்டர் கோனியம்மன் கோவிலுக்கு மாதாரிகளைக் கூட்டிக்கொண்டு போயி மாதாரிகள் கயியெழுத்து விபறம். பெற்ற பகடை, யெண்டபகடை, மயப்பகடை, வீரபகடை, பாழியபகடை, பகடிகத்திப்பகடை, வட்டிக பகடை, மல்லிக பகடை, பூவுலு பகடை, சிந்துரம் பகடை, கள் பகடை, கவுரிபகடை, கருசி பகடை, வன்ன கரிய பகடை, அண்ணவி பகடை, குலியபகடை, குஞ்சலி பகடை, உரைகாற பகடை, கொகுளி பகடை, சீரங்க பகடை, வடிலு மாதாரிகள் அனவோரு ஒன்னப்ப கவுண்டருக்கு அடிப்பித்துக் குடுத்த செம்பு பட்டையம்.” அருந்ததியர் இனக் குழுவில் உள்ள பகடை, மாதாரி என்பவர்களும் தமிழர்களே. பகடை என்போர் போரின் போது முன் வரிசையில் இருந்து போரிடும் வல்லமை உடையவர்கள். [Fig. 6 கொங்கு வேளாளர் செப்பேடு பட்டயங்கள் பக்கம் 268 கி.பி.1374 சங்கத்தமிழன் TV] கொசவன். குறவன், மறவன், வலையன், பறயன், சக்கிலியன் இவர்களுக்கு வரியில்லாமல் விடுவிச்சுபட்டம் காற்றுக்கு ஏவினவூளியம் செயிது கொண்டுவரவும் (கி.பி.1374 ஆம் ஆண்டு - கொங்கு வேளாளர் செப்பேடு பட்டயங்கள் பக்கம் 268) [Fig. 7 சிறுவாலை ஜமீன் செப்பேடு கி.பி.1323 சங்கத்தமிழன் TV] “சாலிய வாகன வறுசங்கள் ஆயிரத்து இருநூற்றுநாற்பத்தி அஞ்சாண்டு செல்லா நின்ற சருவசித்திவையாசி சா தசமி ஆதவாறமும் உத்திர நஞ்சத்நட்சேத்திரமும் காலவாகற்ணமும் பிரமநாமயோகமும்யிப்படிக் கொற்ற சுபதினத்தில் அனுப்பச் சக்கிலியற் கொல்ல சக்கிலியற் மதுரை சக்கிலியற் கான காட்டுச் சக்கிலியற்யிந்த சக்கிலியச் சாதி அனவறில் ஆசாரந்தப்பான பேருக்கும் கவறும் கொட்ட கோலும் கொடுத்து சாதியாசாறம் வளுவாமல் நடத்திச்சிக் கொள்ளும் படிக்கு சாதி அனவோரும் எளுதிகுடுத்தி பட்டயம்” விஜய நகரப் பேரரசு உருவாவதற்கு முன்பே தமிழகத்தில் சக்கிலியர், மாதாரி, செம்மான் பிரிவைச் சேர்ந்தவர்கள் சிறப்பாக வாழ்ந்துள்ளார்கள். படை வீரர்களாகவும் நில உடைமையாளர்களாகவும், தோல் பொருள்கள் செய்பவர்களாகவும் வளமுடன் வாழ்ந்துள்ளார்கள். ஆனால் ஆதி ஆந்திரா பிரிவைச் சேர்ந்தவர்கள் பற்றி தமிழகத்தில் எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை. விஜய நகர மன்னர்கள் பார்ப்பனர்கள் பேச்சை முழுமையாக கேட்டு நடப்பவர்கள். அவர்களுக்கு மூட நம்பிக்கைகள் அதிகம். இதனால் கோவில்கள், அணைகள், பாலங்கள் கட்டும் போது பார்ப்பனர்கள் பேச்சைக் கேட்டு சக்கிலியர்களை நாயக்க மன்னர்கள் நரபலி கொடுத்துள்ளார்கள். ஒரு காலத்தில் சிறப்பாக வாழ்ந்த சக்கிலியர், மாதாரி, பகடை, செம்மான் பிரிவினர் விஜய நகர ஆட்சியின் போது இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நன்றியுடன் சான்றாதாரக் குறிப்புகள் 1. Fig. 5 கி.பி. 1499 ஆம் ஆண்டு ஒரு செப்பு பட்டயத்தில் உள்ளன. புலவர் செ. இராசு அவர்கள் வெளியிட்ட “கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள்” நூல் பக்கம் 284. 2. Fig. 6 கொங்கு வேளாளர் செப்பேடு பட்டயங்கள் பக்கம் 268 கி.பி.1374 சங்கத்தமிழன் TV 3. Fig. 7 சிறுவாலை ஜமீன் செப்பேடு கி.பி.1323 சங்கத்தமிழன் TV வழிபாடுகள், பழக்க வழக்கங்கள் [Fig. 8 தென்னிந்திய குலங்களும் குடிகளும் எட்கர் தர்ஸ்டன் பக்கம் 8 சங்கத் தமிழன் TV] மாதிகரின் சிறப்புத் தெய்வமான மாதங்கியைக் சக்கிலியர்கள் வழிபடுவதில்லை. மதுரை வீரன், மாரியம்மன், முனீசுவரன், கங்கம்மா, திரௌபதி ஆகியோரே இவர்கள் வழிபடும் தெய்வங்கள்" என “தென்னிந்திய குலங்களும் குடிகளும்” நூலில் பக்கம் 8 எட்கர் தர்ஸ்டன் ⁽²⁾ இல் குறிப்பிட்டுள்ளார். அருந்ததியர், சக்கிலியர், பகடை போன்றோர்கள் மதுரை வீரன், பெருமாள், மாரியம்மன், முனீஸ்வரன் மற்றும் முன்னோர்களின் நடுகல் ஆகியவை தான் இன்றளவும் வழிபாட்டு தெய்வங்களாகும். கோவிலில் வழக்கமான அன்றாட பூசைகளுக்கோ, திருவிழாக்களுக்கோ பார்ப்பனர்களை அழைப்பதில்லை. குல தெய்வ கோவில்களுக்கு அந்தந்த குலங்களில், ஊர்களில் அவர்களே கோவில் பூசாரிகளை நியமித்துக்கொள்வார்கள். திருமணங்கள் கூட ஊர் பெரியமனிதர்களே முன்னின்று நடத்தி வைப்பார்கள். [Fig. 9 தென்னிந்திய குலங்களும் குடிகளும் எட்கர் தர்ஸ்டன் பக்கம் 9] சங்கத் தமிழன் TV மாதிகர்களுடையே சிறப்புத் தெய்வமான மாதங்கியினைச் சக்கிலியர் வழிபடுவதில்லை. மதுரை வீரன், மாரியம்மன், முனீசுவரன் ஆகியோரே இவர்கள் வழிபடும் தெய்வங்கள். சக்கிலியர் இனப் பெண்கள் பத்மினி பிரிவைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுவது வியப்பிற்குரியதாகவே உள்ளது. அதாவது அப்பெண்கள் தனித்த முகஅழகும் உடற்கட்டும் வாய்க்கப்பட்டிருப்பதோடு நல்ல நடத்தையும் உடையவர்களாக உள்ளனர். “சக்கிலியப் பெண்ணும் சோளக் கதிரும் கூடப் பருவம் வரும்போது அழகாகவே இருப்பர் என்ற தமிழ்ப் பழமொழியும் உள்ளது. 1883 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டக் கையேட்டில்,”சக்கிலியர் மிகக் தாழ்ந்த சாதியராகக் கருதப்படுகின்றனர். இவர்கள் தமிழ் பேசினாலும் தெலுங்கு மாதிகர்களைப் போல வட பகுதிகளில் கோத்திரம் எனவும், தென் மாவட்டங்களில் கிளை எனவும் வழங்கும் புறமணக்கட்டுப்பாடுடைய குலப் பிரிவுகளைக் கொண்டுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சக்கிலியப்பெண் பூப்படையும் போது தீட்டுப்பட்டவர்களாகத் தனியே பசுந்தளிர்க் கொத்துகளால் வேயப்பட்ட குடிசையில் வைக்கப்படுவாள். அக்குடிசையை அவள் கணவனோ தாய் மாமனோ அமைப்பர். அவர் அச்சமயத்தில் ஊன், பால், தயிர் ஆகியவற்றை உண்ணுதல் கூடாது. தீட்டு நீங்கும் இறுதி நாளன்று அக்குடிசை எரிக்கப்படும். மண நிகழ்ச்சியின் போது ஒரு சக்கிலியனே புரோகிதனாக இருந்து சடங்கை நடத்துவான். ஒரு பெண்ணை மணம் செய்து தரும் முன் அவள் தாய் மாமனின் உடன்பாடு பெறுதல் வேண்டும். பெயரளவில் சைவர்களாக உள்ள இவர்கள் தேவதைகளையே உண்மையில் வழிபட்டு வருகின்றனர். இவர்கள் ஆவாரம் செடியை (Caia auriculata) மிகவும் போற்றி மதிக்கின்றனர். மணச் சடங்குகளின்போது முதலில் ஆவாரம் செடிக்கு இவர்கள் தாலி கட்டுகின்றனர். இந்தியாவில் தோல் பதனிடும் தொழிலில் ஆவாரம் பட்டை மிகுந்த மதிப்புடையதாகக் கருதப்படுகிறது. சிறுமியர் பருவமடைந்த பின்னரே மணம் செய்விக்கப் படுகின்றனர். மணமகன் மணகளை விட வயதில் இளையவனாகவும் இருக்கலாம். கைம்பெண்கள் மறுமணம் செய்து கொள்ளலாம். மணமகளோ மணமகனோ உள்ளூர்ச் சாதித் தலைவர் முன்னிலையில் ரூ. 12-12-0 செலுத்தியபின் தங்கள் விருப்பப்படி மணமுறிவு பெற்றுக் கொள்ளும் உரிமை உள்ளது. இச்சாதியைச் சேர்ந்த பெண்கள் நல்ல அழகிகள் எனக் கருதப்படுகிறார்கள். நெறிமுறைப் படுத்தப்படாத சக்தி வழிபாடு செய்பவர்கள் அதற்காக இச்சாதியைச் சேர்ந்த பெண்களையே தேர்ந்தெடுக்கின்றனர். இவர்கள் போதை தரும் மதுவகைகளை அருந்துவதோடு பன்றி, மாடு போன்ற எல்லா வகை விலங்குகளின் இறைச்சிகளையும் உண்ணுகின்றனர். இதனாலாயே இவர்கள் ஊன் உண்பதில் முற்பட்டவர் என்ற பொருள்பட ‘சஷ்குலி’ என வடமொழிப் பெயருக்குரியர்வர்களாகி உள்ளனர். பதினெட்டாம் நூற்றாண்டில் சானெரட் - சக்கிலியர் செருப்புத் தைக்கப் பசுவின் தோலினைப் பயன்படுத்துவதால் இழிந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள் எனக் குறித்துள்ளார். "தீபகற்பப் பகுதி முழுவதிலும் சக்கிலியர் அல்லது செருப்புத் தைப்பவர்கள் தாழ்ந்தவர்களாகவே கருதப்படுகின்றனர். (எட்கர் தர்ஸ்டன்) ^((3).) நன்றியுடன் சான்றாதாரக் குறிப்புகள் 1. Fig. 8 தென்னிந்திய குலங்களும் குடிகளும் எட்கர் தர்ஸ்டன் பக்கம் 8 சங்கத் தமிழன் TV 2. Fig. 9 தென்னிந்திய குலங்களும் குடிகளும் எட்கர் தர்ஸ்டன் பக்கம் 9 சங்கத் தமிழன் TV 3. எட்கர் தர்ஸ்டன் (ஆங்கில மூலம்), தமிழாக்கம் முனைவர் க. ரத்னம் தென்னிந்தியக் குலங்களும் குடிகளும், தொகுதி இரண்டு கஞ்சி முதல் ஜூங்கு வரை பக்கம் 2-9, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 1987. நடுகல் வழிபாடும் தமிழர் நம்பிக்கையும் […] […] […] […] Fig. 10 தமிழர்கள் வழிபடும் நடுகல் வழிபாடு மரபு முறைகளை இன்றளவும் அருந்ததியர் மக்கள் வழிபட்டு தொடர்கின்றனர்.⁽¹⁾ நடுகல் இறந்தவர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுக் கல் ஆகும். இவற்றை “வீரக் கற்கள்” என்றும் கூறுவர். தமிழ் நாட்டில் நடுகல் எடுக்கும் வழக்கம் மிகப் பழங்காலம் முதலே இருந்துள்ளமை, தொல்லியல் ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இது தவிரச் சங்கப் பாடல்களிலும், பின்னர் எழுதப்பட்ட நூல்களிலும் நடுகற்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. செங்கம், தருமபுரி, தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளிலேயே பெருமளவில் நடுகற்கள் காணப்படுகின்றன. இப் பகுதிகளில் ஆட்சி செய்த அதியமான் போன்ற அரசர்கள் காலத்தில் நடுகற்கள் எழுப்பப்பட்டு உள்ளது தெரிகின்றது. ’நடுகற் பீலிசூட்டி நாரரி சிறுகலத்து குப்பவும்" என்று அதியமான் நெடுமானஞ்சியின் நடுகல் குறித்து ஔவையார் வருந்துவதாகவும் கூறுகிறார். நடுகல் என்பது வெறும் கல் அல்ல, அது பண்பாட்டின் வெளிப்பாடு, நம்பிக்கை, நன்றி பாராட்டல், வெகுமதி என்றுதான் அதனை அணுக வேண்டியுள்ளது. தமிழர்களின் அறக்கோட்பாட்டிற்குச் சான்று பகர்வதிலும் இது முக்கியப் பங்காற்றுகிறது. ‘வீரன்கல், வீரக்கல், நடுகல்’ எனவும் ‘நினைவுத்தூண்’ என்றும் இக்கற்கள் அழைக்கப்படுகின்றன. வீரயுகக் காலம் என்று அழைக்கப்படுகின்ற காலங்களில் ஏற்பட்ட போர்களில் விழுப்புண்பட்டு மடியும் வீரனுக்காக, அவனது வீரத்தைப் போற்றுகின்ற வகையிலும், அவனது தியாகத்தினை மதிக்கின்ற வகையிலும் கல் ஒன்றினை நட்டு, அதனை வழிபடுவது தமிழரின் மரபாக இருந்துள்ளதனை செவ்வியல் இலக்கியங்கள் வாயிலாக அறிகின்றோம். இடுகாடுகள் உள்ள இடங்களிலும் நடுகற்கள் இருந்துள்ளன. நடுகற்களில் வீரனின் உருவம், பெயர், செயல் போன்ற குறிப்புகள் பெரும்பாலும் இருப்பதைக் காணமுடிகின்றது. இலக்கியத் தரவுகளையும், நடுகற்களில் காணப்படும் உருவங்களையும், எழுத்துக்களையும் ஆராய்கின்றபோது கொடிய விலங்குகளுடன் போரிட்டோ, பலியாகவோ தான் சார்ந்திருக்கும் சமூகத்திற்காகவோ இறக்கும் வீரனுக்கே நடுகல் எழுப்பப்பட்டுள்ளது. தொல்காப்பியர் நடுகல் எடுப்பதற்கான ஆறு நிலைகள் பற்றிக் குறிப்பிடுகின்றார். அவை, காட்சி, கால்கோல், நீர்ப்படை, நடுதல், பெரும்படை, வாழ்த்தல் என்பதாகும். இதனடிப்படையில் நோக்குகையில் இவ்வழக்கம் தொல்காப்பியர் காலந்தொட்டே இருந்துள்ளதை அறியலாம். என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்ன முன்நின்று கல்நின் றவர் (திருக்குறள்: 771) ⁽²⁾ எனப் போரில் இறந்த பகைவர் கல்லாகி (நடுகல்) நின்றதாகத் திருவள்ளுவரும் பதிவுசெய்கின்றார். எனவே நடுகல் மரபு என்பது நீண்ட வரலாற்றுப் பின்புலத்தினைத் தன்னுள் இணைத்துக் கொண்டுள்ளதனை அறியமுடிகின்றது. கடவுள் குறித்த கோட்பாடுகளும். நம்பிக்கைகளும் தீவிரமடையாத காலங்களில் இனக்குழு மக்கள் நடுகற்களை வழிபட்டு வந்தனர் என்றுணர முடிகின்றது. சங்ககாலச் சிற்றூர் மக்கள் நடுகல்லினைப் போற்றி வணங்கியதைப் புறப் பாடல்கள் வழி அறியலாம். தம் இனத்திற்காக உயிர்துறந்த வீரனுக்குச் செய்யும் மரியாதையாகவும், செய்நன்றி மறவாப் பண்பினையும் இச்செயல் காட்டுகின்றது. நடு கல்லினை மனிதன் என்று எண்ணிய யானை அதைத் தம் காலால் உதைக்கின்றது. நடுகல் சாயவில்லை மாறாக யானையின் கால்நகம் உடைந்தது என்ற செய்திகளை அறிகின்றோம். போர்க்களத்தில் விழுப்புண்பட்டோர் நடுகல் அருகே வந்து அப்புண்ணைக் கிழித்து உயிர் விடுவர். நடுகல்லை வணங்கினால், மழைவரும், அரசன் வெற்றிபெறுவான், பயிர் செழிக்கும் என்கிற நம்பிக்கைகளும் அக்காலத்தில் மக்களிடையே இருந்துள்ளன. இறந்த வீரனின் பெயரையும் செயலையும் கல்லில் பொறிப்பர். அக்கலுக்கு நீராட்டி, நெய்பெய்து, வாசனைப் புகை காட்டி விளக்கேற்றுவர். அதற்குப் பூச்சொரிவர், மாலை சூட்டுவர், மயிற்பீலி சாத்தி காப்பு நூல் கட்டுவர். ஆட்டுக்கிடாய்களைப் பலியிட்டு துடிப்பறை ஒலிப்பர், எண்ணெய் பூசி, கள் படைப்பர், வில், வேல், வாளால் அதனைச் சுற்றி வேலியமைப்பர். இச்செயல்கள் யாவும் நடைபெறுவதற்குக் காரணம், அக்கல்லில் இறந்த வீரனின் சக்தி நிலைகொண்டுள்ளதாக அவர்கள் நம்பினர். இறந்த வீரனைப் புதைக்கையில் அவன் பயன்படுத்திய போர்க் கருவிகளையும், புழங்கு பொருட்களையும் புதைகுழியிலிட்டே புதைத்தனர். அண்மைக் காலங்களில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகளில் கண்டறியப்பட்ட நடுகற்களின் அருகே, கற்பதுக்கைகளும் அவற்றினுள் கிடைத்த பல உலோகக் கருவிகள், மண்பாண்டங்கள், அணிகலன்களும் இவற்றை மெய்ப்பிக்கின்றன. இறந்தவர்களின் நினைவும், அதுசார்ந்த நம்பிக்கையும் தங்களுக்கு ஆற்றலை வழங்கும் என்ற கருத்தியலின் அடிப்படையிலேயே நடுகல்லினை மக்கள் வழிபட்டிருக்கக் கூடும். பிற்காலங்களில் நடுகல் வழிபாட்டில் ஆடு, கோழி வெட்டிப் பலியிடுவது வழக்கமாகிப் போனது. கல்லுக்குரிய வீரனுக்குப் பிடித்த உணவுகள் படைக்கப்பட்டு வழிபடப்பட்டது. மறைந்த முன்னோர்க்கு அவர்கள் விரும்பிய பண்டங்களை அடக்கம் செய்த (கல்லறையில்) இடத்தில் படைத்துப் பூமாலை சூட்டி, நறுமணப்புகை காட்டிவழிபடும் வழக்கம் உள்ளது. இதற்கும் நடுகல் வழிபாட்டிற்கும் தொடர்பு உள்ளதை அறியமுடிகின்றது. சங்கப் பாடல் வரிகள் நடுகல் வீரனுக்கு அவர்கள் விரும்பிய பண்டங்களை படையல் இட்டு வழிபட்டதை விவரிக்கின்றன. படைக்கப்பட்ட பண்டங்களை வீரனின் ஆவி ஏற்றுக்கொள்வதாகவும், அதனால், இறந்தவர்களின் அருள், வெற்றியும், விரும்பியது கிட்டும் என்று மக்கள் நம்பியதை இதன் வாயிலாக உணர முடிகின்றது. காலங்காலமாக தமிழர்களிடையே வழங்கப்பட்டு வரும் மரபுகளும் நம்பிக்கைகளும் பண்பாடுகளைப் பறைசாற்றுவனவாகும். அவற்றில் அதீத கற்பனையும், மூடநம்பிக்கைகளும் இருந்த போதிலும், அவை தமிழ்ப் பண்பாட்டுடன் இரண்டறக் கலந்தவை என்பதையும் நாம் உணர வேண்டும். அய்யனார், மதுரைவீரன், ஒண்டிவீரன், சங்கிலிக் கருப்பன், பாவாடைராயன் போன்ற சிறு தெய்வங்களும் நடுகல் வழிபாட்டுடன் தொடர்புடையவை ஆகும். தமிழகத்தில் கண்டறிப்பட்டுள்ள நடுகற்கள் பல்வற்றிலும் வட்டெழுத்துகள் காணப்படுகின்றன. கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னரே வட்டெழுத்து முழுமையான வரி வடிவத்தையும் பெற்றதால் 6ம் நூற்றாண்டுக்குப் பின்னர் நடுகற்கள் அதிக அளவில் நடப்பட்டிருக்கலாம். திருக்குறள், அகம், புறம், மலைபடுகடாம், பட்டினப்பாலை ஆகிய நூல்களில் காணப்படும் குறிப்பு கி.மு. 4-5ஆம் நூற்றாண்டிகுரிய பொருங்கற்படைச் சின்னங்கள் மெல்ல மெல்ல தன் நிலையில் இருந்து மாறி வீரக்கற்களாக (நடுகல்) உருமாறின என்பதை மிகச் சிறப்பாக எடுத்து இயம்புகின்றது. இதன் மூலம் சங்க இலக்கியம் பல நூற்றாண்டு கால தமிழரின் வாழ்வியல் நிலையை பதிவு செய்கின்றது. இறந்தவர்களுக்கு தெய்வீக சக்தி இருப்பதாக மக்கள் நம்பினர். அதற்கேற்ப சடங்குகள் செய்யவும் வழிபடவும் முற்பட்டனர். உலகெங்கும் இப்பழக்கம் உருவாயிற்று. இறந்தவன் ஆன்மா நடுகல்லில் வருவதாக நம்பிக்கை ஏற்பட்டது. தொடக்க காலத்தில் நடுகற்களில் எழுத்தோ, உருவமோ இல்லை. நடுகல்லை வழிபட்டால் மழை வரும் என்ற நம்பிக்கை தமிழக மக்களிடையே நீண்டகாலமாக இருப்பதை புறம் 263 பாடல், வீரர்களுடைய நடுகற்கள் வழிபாடு பிற்காலத்தில் பள்ளிப்படைக் கோயில்கள் தோன்ற காரணமாயிற்று. ⁽³⁾ நன்றியுடன் சான்றாதாரக் குறிப்புகள் 1. Fig. 10 தமிழர்கள் வழிபடும் நடுகல் வழிபாடு மறபு முறைகளை இன்றளவும் அருந்ததியர் மக்கள் வழிபட்டு வருகின்றனர். 2. திருக்குறள்- 771. 3. ஆ.நந்திவர்மன், தொல்லியல் ஆய்வாளர், நடுகல் கூறும் தமிழரின் வாழ்வு நெறிகள், தமிழ்நாடு 04 ஜனவரி 2013. கீற்று 4. Google தென்னக அருந்ததியர் இனப் பட்டியல் Government of India, Ministry of Social Justic & Empowerment State wise list of Scheduled Castes updated up to 26-10-2017 […] இந்திய ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகார அமைச்சகம் சார்பில் 26.10.2017 வரை புதுப்பிக்கப்பட்ட பட்டியல் சாதிகளின் மாநில வாரியான பட்டியலில் அருந்ததியர் இன சாதிகள் சில. - இதில் ஆதி ஆந்திரா, ஆதி திராவிடா, ஆதி கர்நாடகா போல் அருத்ததியர் சாதியும் தென்னிந்திய சாதி பட்டியலில் புதுச்சேரி தவிர்த்து தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் உள்ளன. தோட்டி சாதி 6 மாநிலங்களிலும் உள்ளன. - சக்கிலியன் என்ற சாதி கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் உள்ளது போல் ஆந்திரா, தெலங்கானா, மாநிலங்களில் இல்லை. - அதேபோல் பகடை என்ற சாதியும் தமிழ்நாடு தவிர்த்து எந்த மாநிலத்திலும் இல்லை. - 1911,1921, 1931 ஆண்டுகளின் மக்கள் தொகை கணக்கெடுப்பைத் தொடர்ந்து 1950 ஆம் ஆண்டு இந்திய குடியரசு தலைவர் உத்தரவின் படி மற்றும் 1951 இல் மெட்ராஸ் (8) வெளியிடப்பட்ட சாதிகளின் மக்கள் தொகையிலும் அருந்ததியர், சக்கிலியன், பகடை சாதிகள் உள்ளடங்கியுள்ளன. ஆனால் இந்திய ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகார அமைச்சகம் சார்பில் 26.10.2017 வரை புதுப்பித்து வெளியிடப்பட்டுள்ள பட்டியல் சாதிகளின் மாநில வாரியான பட்டியலில் அருந்ததியர் இனக் குழுவில் உள்ள சக்கிலியன், பகடை போன்ற சாதிகள் ஆந்திரா, தெலங்கானா மாநிலப் பட்டியலில் இல்லை என்பதில் இருந்தே அருந்ததியர் இனக் குழுவில் உள்ள சக்கிலியன், பகடை போன்ற சாதிகள் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு புலம் பெயர்ந்தவர்கள் இல்லை, அருந்ததியர்கள் தெலுங்கர்கள் இல்லை என்பது தெளிவாகிறது. சில வரலாறு அறியாதவர்களின் கூற்றுப்படி அருந்ததியர்கள் “வந்தேறிகள்”அல்ல. “அருந்ததியர்கள்” தமிழகத்தின் பழங்குடிகளான “ஆதித் தமிழர்களே” என்பது முற்றிலும் தெளிவான ஒன்றாகும். நன்றியுடன் சான்றாதாரக் குறிப்புகள் 1. Government of India, Ministry of Social Justic & Empowerment State wise list of Scheduled Castes updated up to 26-10-2017 . 2. Estimated Population by Castes-1951 : 8 Madras, Office of the Register General, India. Ministry of Home Affairs, Government of India. கல்வியின் அவசியம் மனிதராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் கல்வி மிகவும் அவசியமானது. கல்வி ஒன்றுதான் பிறப்பிலுருந்து இறப்புவரை ஒரு மனிதனுடன் கூட வரக்கூடியது. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை. (திருக்குறள் : 400) ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடையது) செல்வம் அல்ல. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடிய பாடலொன்று புறநானூற்றில் உள்ளது. அந்தப் பாடல் இது: ⁽¹⁾ உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே பிறப்பு ஓர் அன்ன உடன் வயிற்று உள்ளும் சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும் ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக என்னாது அவருள் அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே (புறம் 183) ஒரு தாய் ஒரு வயிற்றுப் பிறந்தவருள்ளும், அவரவர் சிறப்பின் காரணமாகத் தாயும் தன் பாசத்திலே ஓரளவிற்கு வேறுபடுபவளாவள். ஒரு குடிவந்த பலருள்ளும், மூத்தோனை வருக என்று அழையாது, அறிவுடையோனையே வருக என்று அரசனும் சென்று கேட்பான். வேற்றுமைப்பட்ட நால்வேறு வகையான மக்களுள்ளும், கீழ்நிலையிலுள்ளான் ஒருவன் கல்வி கேள்விகளிலே வல்லான் ஆயின், மேல்நிலையிலுள்ளவனும் அவனுக்கு ஆட்படுவான். இதனால் ஊறுபாடு நேர்ந்தவிடத்து உதவியும், மிக்க பொருளைக் கொடுத்தும், அதனால் நேரும் இழப்பு வருத்தம் முதலிய நிலைகளைக் கண்டு வேறுபடாதும், முயற்சியுடன் அனைவரும் கற்ற அறிவுடையவராகி மேம்படுதலே நன்றாகும். அதனால், சிறப்பும் அறிவும் நூற்பயிற்சியும் பெற்று இவ்வுலகத்து வாழ்விலும் உயரலாம் என்பதே இதன் பொருள். அதிவீரராம பாண்டியர் தாம் பாடிய வெற்றி வேற்கை என்ற நூலில் ⁽²⁾ "கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே கல்லா ஒருவன் குணநலம் பேசுதல் நெல்லினுள் பிறந்த பதரா கும்மே. நாற்பால் குலத்தின் மேற்பா லொருவன் கற்றில னாயின் கீழிருப் பவனே எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும் அக்குடியில் கற்றோரை மேல்வருக என்பர் அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும். பிச்சை புகினும் கற்கை நன்றே என்றால் பிச்சை எடுத்து அந்தப் பணத்தில் படிக்க வேண்டும் என்பது இதன் பொருளல்ல. கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவே இப்படிச் சொல்லியுள்ளார். கல்வியை நல்லாசிரியரிடம் சென்று கெஞ்சிக் கூத்தாடியாவது படிக்க வேண்டும் என்பதே இதன் உண்மையான பொருள். கற்றவர்கள் எப்போதும் சமூகத்தில் உயர்ந்த இடத்திலேயே மதிக்கப்படுகின்றனர். ஒருவரிடம் எவ்வளவுதான் செல்வங்கள் கொட்டிக் கிடந்தாலும் கல்விச் செல்வம் இல்லையேல் அவரிடம் உள்ள ஏனைய செல்வங் களுக்கு மதிப்பில்லை. “இன்று உலகத்தை மாற்றக் கூடிய ஒரு ஆயுதம் உள்ளது எனில் அதன் பெயர் கல்வி” என்று நெல்சன் மண்டேலோ குறிப்பிடுகின்றார். கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு" கல்வியின் பெருமையை மூதுரை இவ்வாறு குறிப்பிடுகின்றது. படிக்காமல் இருப்பதனை விட பிறக்காமல் இருப்பதே மேல் என்கின்றார் பேரறிஞர் பிளாட்டோ. ஒரு மனிதன் கல்வியை கற்காமல் இருப்பானானால் அவனது பிறப்பிற்கே எந்த வித அர்த்தமும் இல்லை. சிறந்த கல்வி ஒரு மனிதனை உயர்ந்த இடத்திற்கு இட்டுச் செல்லும். இந்த உலகத்தில் கல்வியால் உயர்ந்தவர்கள் பலரை உதாரணமாக குறிப்பிடலாம். அவர்களுள் அண்ணல் அம்பேத்கர், டாக்டர் அப்துல் கலாம், அரிஸ்டாட்டில், ஆபிரகாம் லிங்கன், பிளாட்டோ மற்றும் சாக்கிரட்டீஸ் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாவர். அப்துல் கலாம் சிறுவயதில் இருந்தே கல்வி மேல் கொண்ட ஆர்வம் தான் அவரை விஞ்ஞானியாக உருவாக்கி, உலகம் கொண்டாடும் மனிதராக மாற்றியது. பழம்பெரும் புலவரான ஒளவையார் தமிழ் கல்வி மீது புலமை கொண்டமையே அவரை இன்றளவும் தமிழ் உலகம் நினைவு வைத்திருக்க காரணமாகியது. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர். (திருக்குறள் : 393) ⁽³⁾ கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார் கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும் ஒருவர் சிறந்த கல்வியைப் பெற்று உயர்ந்த பதவிகளை பெறும் போது பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அவரது வாழ்க்கைதரம் உயர்வடைகின்றது. நாம் காண விரும்பும் சமத்துவம், சம உரிமை இவையாவும் கல்வியினால் மட்டுமே முடியும் ன்பதை உணர்ந்து கல்வியில் சிறந்து விளங்க முயல்வோம். நன்றியுடன் சான்றாதாரக் குறிப்புகள் 1. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடிய புறநானூற்றில் பாடல் 2. அதிவீரராம பாண்டியர் - வெற்றிவேற்கை (நறுந்தொகை) (18-19 ) 3. திருக்குறள் அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு வரலாறு மாண்புமிகு தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் தலைமையில் அமைத்த குழு பரிந்துரையை ஏற்று அருந்ததியர் சமுதாய மக்களுக்கு இட ஒதுக்கீடு மசோதா சட்டமன்றத்திலே நிறைவேற்ற மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பி அவர் இந்த மசோதாவினை முன்மொழிந்து மசோதா அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அருந்ததியர்கட்கு 3 விழுக்காடு உள் ஒதுக்கீடு மசோதா சட்டமாக்கப் பட்டு தமிழக அரசு ஆதி திராவிடர் நலத்துறையினால் G.O.(Ms)No..50. 29.04.2009 நாளிட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. அருந்ததியர் உள் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் தமிழகத்தில் அருந்ததியருக்கான உள் ஒதுக்கீடு மசோதா நிறைவேறி யுள்ளது. இதன்மூலம் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 18 சதவீத ஒதுக்கீட்டில் 3 சதவீதம் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு செய்யப்படும். அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டத்தின் முன்வடிவை சட்டசபையில் கொண்டு வந்த தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் தலைமையில் அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரை செய்ய ஒரு நபர் குழு கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி அமைக்கப்பட்டது. இது குறித்து விரிவாக ஆய்வு செய்த குழுத் தலைவர், அருந்ததியர், சக்கிலியர், மாதாரி, ஆதிஆந்திரர், பகடை, மாதிகா, தோட்டி ஆகிய பிரிவினரை உள்ளடக்கிய அருந்ததியர்களுக்கு அவர்களின் மக்கள் தொகை அடிப்படையில் ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்தார். 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தொகை 1 கோடியே 18 லட்சத்து 57 ஆயிரத்து 504. அதில் அருந்ததியர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 61 ஆயிரத்து 457. அதாவது மொத்த தாழ்த்தப்பட்ட மக்கள் தொகையில் 15.7 சதவீதமாகும். இதனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் 18 சதவீத ஒதுக்கீட்டுக்குள் அருந்ததியினருக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என ஜனார்த்தனம் குழு பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரை கடந்த ஆண்டு நவம்பர் 27ம் தேதி நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதத்துக்கு கொண்டு வந்து ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 338 (9) பிரிவின் கீழ் தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்துடன் ஆலோசிக்கப்பட்டது. இப்படி சட்டரீதியான நடவடிக்கைகள் அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்றிய பிறகுதான் இந்த சட்டமுன்வடிவு பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அருந்ததியர்கள் மாற்றுத் தொழிலில் ஈடுபட உதவுவதற்காக ரூ. 22 கோடியில் மறுவாழ்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட்டில் அறிவித்தபடி துப்புரவுப் பணியாளர்கள் கழிவுநீர் குழாய்களில் இறங்குவதைத் தவிர்க்க சென்னை மாநகராட்சி மற்றும் 9 நகராட்சிகளில் ரூ. 6.3 கோடி செலவில் அடைப்புகளை அகற்றும் இயந்திரங்கள் வாங்கப்படும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டை 16 லிருந்து 18 சதவீதமாகவும், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 25லிருந்து 31 சதவீதமாகவும் உயர்த்தியவர்கள் நாங்கள். அருந்ததியர்களை உயர்த்துவதில் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த சட்ட முன்வடிவை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்டார். முத்தமிழறிஞர் கலைஞர் கடிதம் இந்த மசோதாவை முதல்வர் தானே வந்து முன்மொழிவதாக இருந்தார். ஆனால் டாக்டர்களின் அறிவுரை காரணமாக அவர் வரமுடியாமல் போய்விட்டது. அதனால் தனது உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தி ஒரு கடிதமாக அனுப்பியுள்ளார். அதில், இன்று என் வாழ்வில் ஒரு முக்கியமான நாள். ஆம், அருந்ததியர் சமுதாய மக்களுக்கு இட ஒதுக்கீடு மசோதா சட்டமன்றத்திலே நிறைவேறுகின்ற நாள். இந்த நாளில் சட்டசபை வந்து இந்த மசோதாவை நானே முன்மொழிந்து நிறைவேற்றித் தரவேண்டும் என எண்ணியிருந்தேன். சட்டசபைக்கு வருவதாக இருந்தது. ஆனால், டெல்லி டாக்டரும், சென்னை டாக்டர் நண்பர்கள் குழுவும் அளித்த அறிவுரையாலும் அச்சுறுத்தலாலும் வர இயலவில்லை. மன்னிக்க வேண்டுகிறேன். எனினும் இன்று காலையில் நானே அருந்ததியர் மசோதாவினை அவையிலே முன்மொழிவதற்கான உரையை என் கைப்பட எழுதி அவையிலே அதனை படிக்குமாறு உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்து எனக்கு பதிலாக இந்த மசோதாவினை அவரை முன்மொழியுமாறு கேட்டுக்கொண்டேன். கருத்து மாறுபாடுகளுக்கிடையிலேயும் நீங்கள் காட்டும் கனிவு. இன்று நம்மை மீண்டும் இணைக்கிறது. தமிழ்த்தாயின் கரம் நம்மை ஒரு சேர அணைக்கிறது. அறிவியக்கம், ஆன்மிகம், நாத்தீகம் மற்றும் ஆத்திகம் இந்த வேறுபாடுகள் மாறுபாடுகள் கடந்த நன்றியுணர்வையும் நம் மனித நேயமும் வளர்த்திடுவோம். அருந்ததியினருக்கான இந்த இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென்ற எனது உள்ளத்தின் அடித்தளத்தில் நீண்ட பல ஆண்டுகளாக இருந்து அதனை சட்டமாக நிறைவேற்றுகின்ற நேரம் இப்போதுதான் வந்துள்ளது. இந்த சட்டத்தின் காரணமாக சமுதாயத்தின் அடித்தளத்திலே இருக்கின்ற அந்த அருந்ததிய மக்கள் நாளை, நாளை மறுநாள் அவர்களும் வாழ்க்கையிலே வளம் பெறுவார்களேயானால், அன்று தான் என்னுடைய உள்ள வேட்கை முழுவதுமாக நிறைவேறிய திருப்தி எனக்கு ஏற்படும். இதனை சட்டமாக கொண்டு வருவதற்குள் நான் பட்ட பாட்டினை நான்தான் அறிவேன். இதற்காக நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் தலைமையிலே ஒரு குழுவினை அமைத்து, அல்லும், பகலும் பாடுபட்டு இது சம்பந்தமான பல சட்டப் பிரிவுகளையும் படித்தாய்ந்து இதற்கான அறிக்கையினை அரசுக்கு அளித்தார்கள். அதன்பிறகு இதனை சட்டமாக கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு, அரசு உயர் அதிகாரிகள் சிலரிடம் இது குறித்து நான் பேசிக் கொண்டிருந்த போது, அவர்கள் இந்த சட்டத்தினை கொண்டு வருவதற்கு மேலும் சில கால நீடிப்பு தேவை என்று கூறினார்கள். அப்போது நான் அவர்களிடம் கூறினேன். இது என்னுடைய சொந்தப்பிரச்சினை. இது எவ்வளவுக்கெவ்வளவு விரைவில் நிறைவேறுகிறதோ, அந்த அளவிற்கு நான் மகிழ்ச்சி அடைவேன். எனவே இந்த மசோதா இந்த கூட்டத்தொடரிலேயே நிறைவேற வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். அவ்வாறே இது நிறைவேறுகிறது. நீதியரசர் ஜனார்த்தனம் இது குறித்த பரிந்துரைகளை அரசிடம் தாக்கல் செய்து, அந்த செய்தி ஏடுகளில் வெளிவந்த நேரத்தில்- இந்த அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த சுமார் 50 பேர் என்னை தலைமை செயலகத்தில் வந்து சந்தித்தார்கள். அப்போது அவர்களிடம் நான் பேசிக் கொண்டிருந்த போது, எங்கள் சமுதாயத்திற்காக இவ்வளவு உறுதியாக இதுவரை யாரும் செயல்பட்டதில்லை. ஆனால் நீங்கள் இந்த அளவிற்கு எங்களுக்காக எடுத்துக்கொள்ளும் முயற்சிகளுக்காக நாங்கள் என்ன கைமாறு செய்யப் போகிறோமோ? எது எப்படியிருந்தாலும் இந்த பரிந்துரைகளை ஏற்று இடஒதுக்கீடு செய்து அது சட்டமாக வர நாங்கள் உங்களோடு துணை இருப்போம் என்று தெரிவித்தார்கள். அவர்களின் எண்ணப்படி இன்றையதினம் அருந்ததிய சமுதாயத்தின ருக்காக 3 சதவீத உள்ஒதுக்கீடு நிறைவேறுகிறது. இந்த நாள் அவர்கள் வாழ்நாளில் எந்த அளவிற்கு முக்கியமான நாளாக விளங்குமோ, அது போலவே என்னுடைய வாழ்வில் இந்த சட்டத்தைக் கொண்டு வருவதற்கு காரணமானவன் நான் என்ற முறையில் எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது. என் முதுகுதண்டில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு, காயம் பரிபூரணமாக குணம் ஆனதில் எந்த அளவிற்கு நான் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றேனோ, அதைவிட அதிக அளவிற்கு அருந்ததிய சமுதாயத்திற்காக நடைபெற்றுள்ள சமூகநீதி அறுவை சிகிச்சையில் இன்று முதல் அந்த சமுதாயமே பெரிதும் நலம் அடையப்போகின்றது என்ற எண்ணத்தோடு மகிழ்ச்சி அடைகின்றன. அருந்ததியர்களுக்கான நல்வாழ்வை அளித்திடக் கூடிய இந்த மசோதாவை சட்டமாக ஆக்கிட உதவி செய்த அத்தனை சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், இந்த சட்டம் வெளிவர பெரிதும் எனக்கு துணையாக நின்ற நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் கருணாநிதி எழுதியுள்ளார் என அந்த கடிதத்தை ஸ்டாலின் வாசித்து முடித்தார். இதையடுத்து சட்ட முன்வடிவு சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. 1922 ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில் இருந்த பொழுது சென்னை மாகாண சட்டசபையில் கொண்டு வரப்பட்ட ஒரு தீர்மானத்தின் அடிப்படையில் சில சாதிகளின் பெயர்களை மாற்றி ஆணை பிறப்பித்தனர். வேளாண்மைத் தொழில் செய்து வந்த ‘பள்ளர்’ எனப்படுவோரை “தேவேந்திரக்குல வேளாளர்” என்றும் பறையடித்ததல் தொழில் மேற்கொண்டிடுருந்த ‘பறையர்’ என்பதை “ஆதி திராவிடர்” என்றும், தோல் தொழிலில் ஈடுபட்டு வந்த செம்மான், சக்கிலி, பகடை, மாதாரி, மாதிகா என்று அழைக்கப்பட்டு வந்தவர்களை ஒரே பெயரில் “அருந்ததியர்” என்றும் பெயர் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பழைய சாதிப் பெயர்களும் மறையாமலேயே நடைமுறையிலும் அரசு ஆவணங்களிலும் இருந்து வந்தன. சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் தலைமையில் அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரை செய்ய ஒரு நபர் குழு கடந்த ஆண்டு 2008 மார்ச் 25ம் தேதி அமைக்கப்பட்டது. இது குறித்து விரிவாக ஆய்வு செய்த குழுத் தலைவர், அருந்ததியர், சக்கிலியர், மாதாரி, ஆதிஆந்திரர், பகடை, மாதிகா, தோட்டி ஆகிய பிரிவினரை உள்ளடக்கிய “அருந்ததியர்களுக்கு” அவர்களின் மக்கள் தொகை அடிப்படையில் ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்தார். தமிழகத்தில் அருந்ததியருக்கான உள் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றி . இதன்மூலம் ஆதிதிராவிடரகளுக்கு வழங்கப்பட்டு வரும் 18 சதவீத ஒதுக்கீட்டில் 3 சதவீதம் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்ட முன்வடிவை சட்டசபையில் தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அருந்ததியர் உள் ஒதுக்கீடு மசோதா சட்டமாக்கப்பட்டு தமிழக அரசு ஆதி திராவிடர் நலத்துறையினால் G.O.(Ms) No.50, 29.04.2009 நாளிட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. மாண்புமிகு தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு அருந்ததியர் இனம் என்றென்றும் நன்றிக் கடன்பட்டுள்ளது. நன்றியுடன் சான்றாதாரக் குறிப்புகள் 1. Adi Dravidar and Tribal Welfare (TD2) Department G.O. (Ms).No.50 Dated 29.4.2009 ORDER: The following Notification will be published in the Tamil Nadu Government Gazette Extraordinary, dated the 29^(th) April 2009. (3% Reservation to Arunthathiyar) அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் தமிழகத்தில் முதன்முறையாக பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர் நியமனம்: சமூக நீதிக்கான முக்கிய நகர்வு ஏற்பட்டுள்ளது. கோயில் கருவறையில் கடைபிடிக்கப்படும் தீண்டாமையை அகற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதை தம் வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியார் இறுதியில் அது நிறைவேறும் முன்பே மறைந்தார். அதனால் தான், பல்வேறு சட்ட மற்றும் நடைமுறைச் சிக்கல்களைத் தாண்டி 2006 ஆம் ஆண்டில் தான் முதல்வராக இருந்தபோது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான தனிச்சட்டத்தை இயற்றிய கலைஞர் கருணாநிதி, பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்குவதற்கான நடவடிக்கை தான் இது எனக் கூறினார். 1970 ஆம் ஆண்டு டிசம்பர் 2 தேதி தமிழ்நாடு சட்ட மன்றத்தில் முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் “அறநிலையத் துறை சட்டத்திருத்த மசோதா” ஒன்றை முன்மொழிந்தார். முதல் திருத்தம்: “ஆகமங்கள் முறையாகப் பயின்ற யார் வேண்டுமானாலும், எந்தச் சாதியைச் சார்ந்தவராக இருந்தாலும் அர்ச்சகர் ஆகலாம்” என்பது இரண்டாவது திருத்தம்: ஒவ்வொரு கோவிலின் அறங்காவலர் குழுவிலும் பட்டியல் இனத்தைச் சார்ந்த ஒருவர் கண்டிப்பாக உறுப்பினராக இருக்க வேண்டும்" என்பது. ⁽¹⁾ அந்த மசோதா 1971 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வந்தது. ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் 25 மற்றும் 26 ஆகிய பிரிவுகள் வழங்கியுள்ள மத சுதந்திரம் - வழிபாட்டுரிமை ஆகியவற்றில் தமிழக அரசு தலையிடுவதாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் பட்டர்கள் தாக்கல் செய்த மனு உட்பட 12 மனுக்கள் இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. மசோதா ஏற்கப்பட்ட போதும், ஆகமவிதிகள் மீறல் உள்ளிட்ட சந்தேகங்களை எழுப்பி, அர்ச்சகர் நியமனத்தில் குறைபாடுகள் இருந்தால் உச்ச நீதிமன்றத்தில் முறையிடலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வாய்ப்பு முடங்கியது. அதன்பிறகு 1974-ல் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் விதத்திலான சட்டத் திருத்தத்தைக் முதல்வர் கலைஞர் கொண்டு வந்தார். பின்னர், ஆட்சி மாற்றங்கள் நடைபெற்று 2006 ஆம் ஆண்டில் தனிச்சட்டத்தை நிறைவேற்றினார் முதல்வர் கலைஞர், தொடர் நடவடிக்கையாக 2007 ஆம் ஆண்டில் சைவ முறைப்படி திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி, மதுரை ஆகிய நான்கு மாவட்டங்களிலும், வைணவ முறைப்படி ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களிலும் ஆகம பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், இந்த சட்டத்தையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் தான், 2015 ஆம் ஆண்டு அனைத்து சாதியினரும், அர்ச்சகராகும் சட்டம் செல்லும், என்று நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ரமணா ஆகியோர் தீர்ப்பளித்தனர். எனினும், அத்தீர்ப்பின் பகுதி 43-ல், ஒவ்வொரு நியமனமும் செய்யப்பட்டு, அதனால் பாதிக்கப்பட்டவர் வழக்கு போட்டால் அதன்படிக்கான சட்டப் பரிகாரமே இறுதித் தீர்வாக அமையும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. ⁽¹⁾ ஏன் இது வரலாற்று சாதனை? சட்டம் இயற்றிய பிறகும் பார்ப்பனரல்லாத ஒருவரை அர்ச்சகராக்க முடியாமல் சிக்கல்கள் நீண்டுகொண்டே இருந்தன. சட்டம் இயற்றி 12 ஆண்டுகள் கழித்துதான் தமிழகத்தில் முதல்முறையாக மதுரையில் பார்ப்பனரல்லாத ஒருவர் இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருந்தார். இது ஏன் வரலாற்று சாதனை என்பது குறித்து பேசிய வழக்கறிஞர் அருள்மொழி, "மனிதர்கள் அனைவரும் பிறப்பால் சமம் என்பதுதான் மனிதப் பண்பாடு. இதற்கு எதிரான தத்துவம் எல்லா நாடுகளிலும் உள்ளது. இந்தியாவில் அது சாதியாக அடையாளம் காணப்பட்டது. தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லப்படும் சாதியில் பிறந்து தகுதியாலும் பொருளாதாரத்தாலும் உயர்ந்து, எவ்வளவு உயர்ந்த பதவிகளை அடைந்தாலும் பிறப்பால் ஏற்பட்ட அடையாளம் மாறாது. உயர்ந்ததென்றால் போற்றத்தக்கது, தாழ்ந்ததென்றால் இழிவு செய்வோம் என்பதுதான் இந்து சனாதன மனப்பான்மை. இந்த மனப்பான்மைக்கு எதிராக ஒவ்வொரு அமைப்பையும் கேள்வி கேட்டது தான் பெரியாரியம். பல இடங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் என சொல்லப்படுபவர்கள் நுழைவது தடுக்கப்பட்டது. இப்போது அதை உடைத்தாகிவிட்டது. எங்காவது தற்போது இரட்டைக் குவளை முறையோ, பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கத் தடை உண்டாக்கினால், சம்பந்தப்பட்டவர்கள் சிறை செல்ல வேண்டும். அதற்கான சட்டப் பாதுகாப்பு வரை உருவாகி விட்டது. 1971 வரை இந்தியாவில் எந்தவொரு உயர் நீதிமன்றத்திலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் நீதிபதியாக இல்லை. இந்த வருத்தத்தை அப்போது முதல்வராக இருந்த கலைஞரிடம் பெரியார் தெரிவிக்கிறார். உடனே அப்போதுதான் வரதராசன் என்பவரை உயர் நீதிமன்ற நீதிபதியாக்குகிறார் முதல்வர் கருணாநிதி. அவர்தான் இந்தியாவிலேயே முதன்முதலாக நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். உச்ச நீதிமன்றத்தில் அமர்ந்த முதல் ஒடுக்கப்பட்ட சமூக நீதிபதியும் அவர்தான். ஆனால், அப்படிப்பட்ட தமிழகத்தில் பார்ப்பனரல்லாத ஒருவரை அர்ச்சகராக நியமிக்க முடியவில்லை. கோயில்களில் பூஜை செய்வதற்கு என்ன தகுதிகள் இருக்க வேண்டும்? வேத -ஆகம பயிற்சி பெறுதல், அதற்கென உள்ள கட்டுப்பாடு முறைகளை பின்பற்றுதல் இவை இருந்தால் ஒருவர் அர்ச்சகராகலாம். ஆனால், இவற்றையெல்லாம் அறிந்திருந்தாலும், ஆகம விதிகள் என்ற பெயரில் பிராமணராகப் பிறந்திருக்க வேண்டும் என கூறுகின்றனர். ஆக, ஏற்கெனவே கூறிய விதிமுறைகள் இருக்கிறதா? என்று தெரியாமலேயே பல கோயில்களில் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அர்ச்சகராக உள்ளனர். மிகப்பெரிய கோயில்களில் அர்ச்சகர்களாக சம்பளம் வாங்குபவர்களுக்கு இத்தகுதிகள் இருக்கின்றனவா என யாரும் சோதனை செய்யவில்லை. ஆனால், மற்ற சமூகங்களில் பிறந்தவர்கள் ஆர்வத்தாலும், ஈடுபாட்டாலும் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு வந்தாலும் அர்ச்சகராக முடியாது எனக் கூறுவது மனிதப் பிறப்பின் மீது சுமத்தப்படும் இழிவு. கோயில்களில் சமூக நீதிக்கான மிக முக்கியமான நகர்வு இது என்றாலும், மதுரை மீனாட்சியம்மன் கோயில், தஞ்சை பெரிய கோயில் போன்ற பெரும் கோயில்களில் பார்ப்பனரல்லாத ஒருவரை அர்ச்சகராக்க நியமிப்பதற்கு இன்னும் பயணிக்க வேண்டும் என்கிறார் அருள்மொழி. “இது முக்கியமான முன்னெடுப்புதான். இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோயில் ஒன்றில் பார்ப்பனரல்லாத ஒருவரை அர்ச்சகராக நியமித்திருக்கின்றனர். வரும் காலங்களில் பெரிய கோயில்களில் நியமிக்க முடியும். அது இயல்பாக நடக்க வேண்டும். பிறப்பினால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதை அடையாளப்படுத்தும் இடம் கோயில். அந்த இடத்திலிருந்து அதனை அப்புறப்படுத்துவது சாதனையாக உள்ளது” என்று அருள்மொழி அவர்கள் கூறியதற்கு இப்போது விடிவு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து பேசிய அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரங்கநாதன், "2007 ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஆகம பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டன. சைவ முறைப்படி திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி, மதுரை ஆகிய இடங்களிலும், வைணவ முறைப்படி ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களிலும் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டன. அங்கு பயிற்சி வழங்கப்பட்டு முறையாக தீட்சையும் அளிக்கப்பட்டது. படிப்பின் இடையிலேயே பல எதிர்ப்புகள் எழுந்தன. அதனையெல்லாம் தாண்டித்தான் படித்தோம். படித்து முடித்ததும் உடனடியாக சான்றிதழ் வழங்கவில்லை. தவிர உச்ச நீதிமன்றத்தில் தென்னிந்திய பிராமண நலச்சங்கம் உட்பட பல சங்கங்கள் இதனை எதிர்த்து வழக்குத் தொடுத்திருந்தன. தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த பட்டர்கள், கோயிலுக்குள் பிராமணர்கள் தவித்து வேறு சமூகத்தினர் சென்றால் கோயிலின் புனிதத் தன்மை போய்விடும் என மக்கள் கருவதாகக் கூறி தடை பெற்றனர். தொடர்ச்சியாக அந்த வழக்கு நடைபெற்றது. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கமும், மக்கள் உரிமை பாதுகாப்பு அமைப்பு, வழக்கறிஞர்கள் சேர்ந்து வழக்கை நடத்தினோம். 2015, டிசம்பர் 14-ல் ஆகமப் பயிற்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக நியமிக்கலாம் என தீர்ப்பு வந்தது. எல்லோரும் அதனை வரவேற்றனர். ஆனால், அதில் சில குழப்பங்கள் உள்ளன. உதாரணமாக, திருவண்ணாமலை கோயிலில் பிராமணரல்லாத ஒருவரை நியமித்து, அவர் ஆகம விதிகளில் ஏதேனும் தவறு செய்தால், அதனை சுட்டிக்காட்டி அவரின் நியமனத்திற்கு தடை வாங்க முடியும். ஸ்ரீரங்கம், மதுரை போன்ற பெரிய கோயில்களில் பிராமணரல்லாத சமூகத்தைச் சேர்ந்தவர்களை அர்ச்சகராக நியமிப்பதை நோக்கி அரசு நகர வேண்டும். ஆகமம் உள்ள கோயில்களில் பிராமணரல்லாதவர்கள் நியமிக்கப்பட வேண்டும். பயிற்சி நிலையங்கள் அதிகமாக திறக்க வேண்டும். பல கோயில்களில் இன்னும் வாரிசு முறைப்படிதான் அர்ச்சகர்கள் உள்ளனர். இது ஒழிய வேண்டும். பயிற்சி பெற்று மீதமுள்ளவர்களுக்கு கோயில்களில் அர்ச்சகர் பணி வழங்க வேண்டும்" என்றார் ரங்கநாதன். பிறப்பால் ஏற்றத்தாழ்வு கருதாமல் ஆகமம் உள்ள பெரிய கோயில்களில் பிராமணரல்லாத ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்படும்போது தான் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் முழுமையாக அகற்றப்படும். தந்தை பெரியார் கொள்கை வழி, கலைஞர் பிறப்பித்த சட்டத்தை செயல்படுத்தி “பெரியார் நெஞ்சில் தைத்த முள்” அகற்றினார் முதல்வர் ஸ்டாலின் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமை என்ற தந்தை பெரியாரின் கொள்கையை சட்டமாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர், அதைச்செயல்படுத்தி வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார் தமிழ் நாடு முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்கள். கருவறைக்குள் ஒளிந்து கொண்டிருந்த சாதி தீண்டாமை எனும் கொடுமையை அடித்து விரட்ட அரை நூற்றாண்டு கால நீதிமன்ற, வீதி மன்ற அறப்போர்களுக்குக் முடிவு கட்டி ஆட்சியின் சட்டங்கள் மூலமே சாதித்து காட்டி வரலாறு படைத்துள்ளார். மயிலைக் கபாலீஸ்வரர் கோவில் மண்டபத்தில் 58 பேருக்கு (அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் நியமன ஆணை அளித்தார். முதலமைச்சர் வழிகாட்டுதல்படி செயத்தக்க வகையில் சிறப்புடன் செயல்படும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு பி.கே. சேகர்பாபு அவர்கள் முன்னிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 14.08.2021 அன்று மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் மண்டபத்தில் திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயின்று தேர்வு செய்யப்பட்ட பட்டியல் இனம் உட்பட அனைத்துச் சாதிகளையும் சார்ந்த 24 அர்ச்சகர்கள், இதர பாடசாலையில் பயிற்சி பெற்ற 34 அர்ச்சகர்கள் / பூசாரிகள் / பட்டாசாரியார்கள், 20 ஓதுவார்கள் உள்ளிட்ட 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி அமைதிப் புரட்சியாக, அறிவுப் புரட்சியாக அகிலம் பாராட்டும் வண்ணம் சமூகப் புரட்சியை, சான்றோர்கள், ஆதீனங்கள், அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் அனைவர் முன்னிலையில் சாதித்துக் காட்டியுள்ளார். இந்நாள் வகுப்புரிமை சமூகநீதிப் போராட்டத்தை 1950 ஆம் ஆண்டு ஆகஸ்ட், 14 தந்தை பெரியார் அறிவித்த நாள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாடு ஆட்சிப் பொறுப்பேற்ற 100 வது நாளில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வரலாற்றுச் சாதனையை பெருமையுடன் எண்ணிப் போற்றத்தக்கதாகும். “ஆன்மிக தளத்தின் பிரார்த்தனை, சாத்திரம் பல பேசும் சழுக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்” எனக்கேட்ட அப்பர் பெருமாள், இராமானுஜர், குன்றக்குடி அடிகள் ஆகியோர் எண்ணிய கனவுகளும் நனவாகியுள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சராகலாம் என்ற திட்டத்தால் ‘தமிழக முதல்வரை ஆன்மீக உள்ளங்கள் வாழ்த்தும்’ என குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வாழ்த்து தெரிவித்துள்ளார். “தாய்மொழியில் அர்ச்சனை செய்வதே சரியானது, அனைத்து சாதிகளிலிருந்தும் அர்ச்சகர்கள் வர வேண்டும்” எல்லா சமூகத்தினரும் வருகிற போது தான் இந்து மதம் பலமடையும், வளமடையும் என்பது என்னுடைய தீர்க்கமான கொள்கை. இது வரவேற்கத்தக்க ஒன்று. ஏனென்றால் தாய்மொழியில் ஒருவர் உருக்கமாகவும், நெருக்கமாகவும் கடவுளை நெருங்குவது மாதிரி வேறு மொழியில் நெருங்க முடியாது" எனவே தாய்மொழியில் வழிபாடு செய்வது தான் சரியான அணுகுமுறை" என முதல்வர் பணிநியமன ஆணையை வரவேற்று ஆன்மீக சொற்பொழிவாளர் சுகி. சிவம் கருத்து தெரிவித்துள்ளார். அதேபோல் பேரூர் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், தவத்திரு குமர குருபர ஆதீனம், தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் வா. ரங்கநாதன் உட்பட, அனைத்து தமிழர்களும் வரவேற்றுள்ளனர். ⁽²⁾ ஆனந்தக் கண்ணீர்ப் பீறிட்ட அந்தத் தருணம்! விடுதலையில் (August 15, 2021 Viduthalai) வெளியான உணர்ச்சி மிகுந்த இந்த உரையாடலை கூறிப்பிடுவதற்கு காரணம் தந்தை பெரியார் அவர்கள் சமூக விடுதலை, உரிமைப் போராட்டத்திற்கு வித்திட்ட நிகழ்வு நம் வாழ்வில் என்றும் நினைவில் கொள்ளத்தக்கதாகும். அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற தந்தை பெரியாரின் போர்க் குரல் மனித உரிமையின் உச்சம் - சாதி - தீண்டாமை ஒழிப்பின் உன்னத வெளிச்சம்! அந்த வகையில் 2021 ஆகஸ்ட் 14 வரலாற்றில் வாகை சூடிய நாள். தளபதி மானமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் தம் நூறாம் நாள் ஆட்சியன்று அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் என்ற அடிப்படையில் 58 பேர்களுக்கு ஆணை வழங்கிய நாள். ஆடிப்பாடி மகிழ வேண்டிய அறிவுப் பெரு நாள். அந்நாளில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முக்கிய அமைச்சர்கள் புடைசூழ தந்தை பெரியாரின் நினைவிடத்தில் மாலை 5.50 மணிக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர் - சம்பிரதாயமானதல்ல. மனிதனின் மகத்தான குணமான நன்றி உணர்ச்சியின் வெளிப்பாடே! உயிரினும் மேலான கொள்கையின் பிளீறலே! அய்யா தங்கிய, அறிக்கைகளை எழுதிய அந்தக் கூடத்திற்கு (இப்பொழுது அது அறிவுலக ஆசானின் அருங் காட்சியகம்) அமைச்சர்கள் துரைமுருகன், க.பொன்முடி, பி.கே. சேகர்பாபு, தி.மு.க.வின் பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி., துணைப்பொதுச் செயலாளர், ஆ. இராசா எம்.பி., எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ. பரந்தாமன் ஆகியோர் புடைசூழ முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் வருகை தர திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அன்போடு வரவேற்றார். அருங்காட்சியகத்தில் உள்ள அய்யா சிலை முன் முதல் அமைச்சருக்குப் பொன்னாடை போர்த்தி, பேராசிரியர் முனைவர் கண்ணபிரான் இரவி சங்கர் எழுதிய “தமிழா? சமஸ்கிருதமா?”என்ற நூலையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அமைந்த உரையாடலை விவரிக்க வார்த்தைகள் போதாது. அவை நிகழ்ச்சிகள் அல்ல- சொல் குடுவையில் அடக்குவதற்கு; அந்த 20 நிமிட நேரம் ஆனந்தக் கண்ணீரின் ஊற்று! அளவளாவல் என்னும் இலக்கணத்திற்கான பாயிரம். அய்யா அவர்கள் ஓய்வு எடுக்கும் கட்டில். அதில் அய்யாவின் உருவப்படம். அதனை ஒட்டி திராவிட இயக்க வழித்தோன்றல்கள். பழையவற்றை அசைப் போட்டார்கள்; மலரும் நினைவுகள் மணம் வீசின. ஆசிரியர் பேசுகின்றார் உணர்ச்சித் ததும்ப - "இதே இடத்தில்தான் (அய்யாவின் கட்டில்) அய்யா அமர்ந்திருந்தார்கள். முன் கூட்டியே எவ்வித அறிவிப்புமின்றி முதல் அமைச்சர் கலைஞர் வருகிறார் - அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி - அய்யா எழுந்திருக்க முயலுகிறார் - கலைஞர் தடுத்தாள்கிறார். உரையாடல் தொடங்குகிறது. தொடர்ச்சியாக முதல் அமைச்சர் - "அய்யா, உங்கள் அறிக்கையினைப் பார்த்தேன். அனைத்து சாதியினருக்கும் அர்ச்ச உரிமைக்கான கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சிக்கான அறிக்கையைப் படித்தேன். அய்யா, உங்கள் பிள்ளைகள் ஆட்சியில் இருக்கும்போது நீங்கள் போராட்டம் நடத்த வேண்டுமா? வீதியில், இறங்கிப் போராட வேண்டுமா?’ என்று நெகிழ்ச்சியோடு, வாஞ்சையோடு கலைஞர் கேட்கிறார். ’இதில் என்ன இருக்கிறது? ஒரு கொள்கைக்காகப் போராட வேண்டியது என் கடமை. அதனைத் தான் நான் செய்கிறேன். எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். நீங்களோ ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறீர்கள். உங்கள் கடமையைச் செய்யுங்கள்- சட்டப்படி என்னைக் கைது செய்யலாம்" என்றார். ‘உங்களைக் கைது செய்யவா அய்யா நாங்கள் ஆட்சியில் இருப்பது?’ என்று வார்த்தைகள் தழுதழுக்க அய்யாவின் கரங்களைப் பற்றுகிறார். அவரை அறியாமலேயே கண்களில் நீர் கொட்டுகின்றது - மிகவும் உணர்ச்சிகரமான தருணம் இது! அய்யா என்ன செய்தார்? முதல் அமைச்சர் கலைஞரின் முதுகை ஒரு தட்டுத் தட்டி ‘உங்களை வீரராக நினைத்தேன். இப்படிக் கோழையாக இருக்கிறீர்களே!’ என்றார். ‘இல்லை அய்யா மன்னிக்கணும். நாங்கள் சட்டம் இயற்றி உங்கள் கொள்கையை நிறைவேற்றுகிறோம் - தயவு செய்து கர்ப்பக்கிரகக் கிளர்ச்சியை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று வேண்டிக் கொண்டார். ‘ரொம்ப மகிழ்ச்சி! ரொம்ப மகிழ்ச்சி!’ எனக்குக் காரியம் தான் முக்கியம். சட்டம் செய்யுங்கள்- அறிவித்த பேராட்டத்தை ஒத்தி வைக்கிறேன்’ என்று தந்தை பெரியார் சொன்னதை அப்படியே கழகத் தலைவர் சொன்னபோது அவரே உணர்ச்சி வயப்பட்டார். முதல் அமைச்சர் உட்பட அனைவரும் ஒரு நிமிடம் உணர்ச்சிமயமாக உறைந்து விட்டனர். அன்றைக்கு அய்யாவிடம் முதல் அமைச்சர் கலைஞர் சொன்னது - அய்யா அவர்கள் அதற்குப் பதில் சொன்னது எல்லாம் நடைபெற்ற இதே இடத்தில்தான் நாமெல்லாம் அந்தப் பணியின் வெற்றியின் பெருமிதத்தோடு அமர்ந்து கொண்டு இருக்கிறோம் என்று இன்றைக்கு 51 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சியை கூடுதல் குறைச்சல் இன்றிக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார் திராவிடர் கழகத் தலைவர். ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் வரலாற்று வெற்றியை நெஞ்சில் தாங்கி உணர்வுகளைப் பரிமாறிக் கொண்ட உன்னத நிகழ்ச்சியும், காட்சியும் அது. முதல் அமைச்சர் கழகத் தலைவரைப் பார்த்து, நீங்கள் இன்றைக்குப் பெரு மகிழ்ச்சியில் திளைத்திருப்பீர்கள் என்று நாங்கள் எல்லாம் பேசிக் கொண்டிருந்தோம் - ஆனால் இந்த அளவுக்கு உணர்ச்சிப் பிழம்பாக இருப்பீர்கள் என்று நினைக்கவில்லை’ என்றார். அப்பொழுது ஆசிரியர் சொன்னார்.’உண்மை தான். கரோனா கடும் தொற்று நாட்டில் பரவிக் கொண்டிருந்த நிலையில், வயதையும் எண்ணி எனக்குள் ஒரு எண்ணம் இடறிக்கொண்டே இருந்தது. இரண்டு பிரச்சினைகளை நிறைவேற்ற வேண்டும் - அதுவரை நம் உயிர் இருக்க வேண்டும். ஒன்று, அய்யா களத்தில் நின்ற இறுதிப் போராட்டமான அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை நிறைவேறுவதைப் பார்க்க வேண்டும். இரண்டு, தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்பதை நான் பார்க்க வேண்டும் என்பது தான் என் ஆசையாக இருந்தது. இந்த இரண்டையும் நான் பார்த்து விட்டேன் அது போதும்’ என்று ஆசிரியர் அவர்கள் தழுதழுத்து சொன்னபோது முதல் அமைச்சரும், அமைச்சர் துரைமுருகனும் ஆசிரியர் அவர்களின் கரங்களைப் பற்றி உணர்ச்சி வயப்பட்டனர். அங்கு இருந்த அனைவரும் உணர்ச்சி வயப்பட்ட தருணம் அது. ஆம், வரலாற்று வரிகளின் வாய்கள் பேசின. ஆனந்தமயமான மகிழ்ச்சியும், உணர்ச்சியும் ஒன்று கலந்த சங்கமத்தைப் பார்க்க முடிந்தது. இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சில தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இன்றைக்கு மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களுக்கான ஆணையை முதல் அமைச்சர் வழங்கினார். அதே மயிலாப்பூர் கோயிலில் 1971இல் நடந்த ஒன்றைக் கழகத் தலைவர் நினைவூட்டினார். மயிலாப்பூர் தொகுதியில் திமுக கூட்டணியில் ம.பொ.சி. நின்றார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அனந்தநாயகி போட்டியிட்டார். பக்தரான ம.பொ.சி. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சென்று அர்ச்சகரிடம் தன்பெயரில் ஓர் அர்ச்சனை செய்யச் சொல்லி அதற்குரிய தட்சணையையும் கொடுத்தார். கபாலீஸ்வரர் அருளால் தேர்தலில் வெற்றி பெற வேண்டினார். அத்தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். அதைப்பற்றி தேர்தல் நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் ம.பொ.சி.யே சொன்னது தான் சுவையான தகவல். ‘கபாலீஸ்வரர் கோயிலில் எனது வெற்றிக்காக அர்ச்சனை செய்யக் கேட்டுக் கொண்டேன். ஆனால் அந்த அர்ச்சகர் அவ்வாறு செய்யவில்லை என்பதை மற்றவரிடம் அர்ச்சகரே சொன்னதை நான் கேள்விப்பட்டேன் பெரியாரும், வீரமணியும் இவர்கள் பற்றிக் கூறும் கருத்தை அப்பொழுது உணர்ந்தேன்’ என்று ம.பொ.சி. அவர்கள் சொன்னதையும் ஆசிரியர் சொன்னபோது ஒரே சிரிப்பு - கலகலப்பு! மயிலாப்பூர் கபாலீஸ்வரர் என்கிறபோது ஒரு கூடுதல் தகவல்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு மற்றெல்லாரையும் விட அதிகத் தொகையாகிய ரூ.10 ஆயிரம் நன்கொடை அளித்தார் மேயரான பிடி. தியாகராயர். அந்தக் காலத்தில் ரூபாய் 10 ஆயிரம் என்பது மிகப் பெரிய தொகையே! கும்பாபிஷேகத்தன்று மேயர் தியாகராயர் செல்கிறார். அவரை மேடையில் உட்கார வைக்காமல், கீழே உட்கார வைத்தார்கள். அதே நேரத்தில் அவர் மேயராக இருக்கும் அலுவலகத்தில் பணிபுரியும் சிப்பந்திப் பார்ப்பனர் உட்பட பலரும் மேடையில் அமர்ந்திருந்தனர். அந்தக் காட்சியைக் கண்ட தியாகராயருக்குச் சுயமரியாதை உணர்வு சூடேறியது. அதுவரை எலியும், பூனையுமாக இருந்தவர்கள் தியாகராயரும், டாக்டர் டி.எம். நாயரும் டிரைவரைக் கூப்பிட்டு, எடு வண்டியை-நாயர் வீட்டுக்கு விடு என்றார். டிரைவருக்கோ ஆச்சரியம்! ஏனென்றால் இருவரும் அப்படிப் பகை உணர்ச்சி கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர் (தியாகராயர் ஆன்மிகவாதி, டாக்டர் டி.எம். நாயர் நாத்திகர் என்பதும் குறிப்பிடத்தக்கது). தியாகராயரைக் கண்ட நாயருக்கு மிகவும் ஆச்சரியம் - ஏன் அதிர்ச்சியும் கூட ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டனர். பார்ப்பனர்களின் ஒரு துவேஷ நிகழ்ச்சி ஒரு பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தைகட்டி அமைப்பதற்கு ஒரு வகையில் தூண்டுகோலாக அமைந்ததும் நல்லதாகவே போய்விட்டது. அதே கபாலீஸ்வரர் கோயிலில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் நியமன ஆணை வழங்கும் விழா திமுக ஆட்சியில்! - வரலாற்றின் விசித்திரம்தான் என்னே! ⁽³⁾ கோவில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” எனும் கொள்கையில் திளைத்த தமிழ் அறிஞர் பெருமக்கள் மற்றும் பக்தர்களின் விருப்பத்திற்கிணங்க தமிழில் அர்ச்சனை மற்றும் வழிபாடுகள் செய்ய ஏதுவாக 12 இறைவன் போற்றிப் பாடல் நூல்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 12.08.2021 அன்று வெளியிட்டது மட்டுமல்ல, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 47 முதுநிலைக் கோவில்களில், விவரங்கள் வெளியிடப்பட்டதோடு தமிழில் வழிபட வேண்டும் என்ற பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை தமிழ் நாடு அரசு நிறைவேற்றியுள்ளது. நன்றியுடன் சான்றாதாரக் குறிப்புகள் 1. பேராசிரியர் சுப வீ 2. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் - nandhini.v@thehindutamil.co.in 3. விடுதலை (August 15, 2021 Viduthalai) தமிழர் போற்றும் வீரத்தின் அடையாளம் மதுரை வீரன் வீர வரலாறுகள் அண்ணல் அம்பேத்கர் 1956 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் நாள் இந்து மதத்தை விட்டுப் பவுத்த மார்க்கத்தைத் தழுவினார். அவரைப் பின்பற்றி 10 இலட்சத்திற்கும் மேலானோர் பவுத்த மார்க்கத்தை தழுவினார்கள். அப்பொழுது 22 அம்சங்கள் அடங்கிய உறுதிமொழியை எடுத்துக் கொண்டார்கள். அதில் ஒன்று “பகவான் புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதை நான் நம்பமாட்டேன். இது மக்களைத் திசை திருப்பும் செயலாகும். இத்தகைய பிரச்சாரம் விஷமத்தனமானது, தவறானது என நம்புகிறேன்” என்பதாகும். வரலாற்றை மாற்றி, திருத்தி எழுதி நம்ப வைக்கும் ஆரியரின், ஆதிக்கவர்க்கத்தினரின் சூழ்ச்சிகள் அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வரலாற்று ஆசிரியர்கள் பெரும்பாலும் ஆரியர்களாகவும், ஆதிக்க வர்க்கத்தினராகவும் இருந்ததால் தாழ்த்தப்பட்டோரின் வீரவரலாறுகளை மறைத்தும், திரித்தும் எழுதியதோடு வாய்மொழிக் கதைகள் மூலமும் மக்களை நம்ப வைத்து வந்துள்ளனர். மாவீரர் மதுரை வீரன் வரலாற்றையும் ஆதிக்க வர்க்கத்தினருக்கு சாதகமான கருத்துகள் வாய்மொழிக் கதைகள், நாடகங்கள் மூலம் பரப்பி அனைவரையும் நம்ப வைத்து விட்டனர். அருந்ததியர் இனத்தில் அழகும், அறிவும், ஆற்றலும் நிறைந்த நல்ல உடல் வலிமையும், நற்பண்புகளும், சமயோசித புத்திக்கூர்மையும் உடைய வீரத்தளபதிகள் பலர் இருந்துள்ளனர். பூலித்தேவர் காலத்தில் ஒண்டி வீரன் தளபதியாகவும், பாளையத்துத் தலைவராகவும், கட்டபொம்மன் பாஞ்சாலங் குறிச்சியில் ஆட்சி செய்த போது முத்தன் பகடை, பொட்டிப் பகடை, கந்தன் பகடை, தாமன் பகடை ஆகியோர் படைத்தளபதிகளாகவும், பாளையத்துத் தலைவர்களாகவும் இருந்துள்ளனர். இவர்கள் அஞ்சா நெஞ்சம் கொண்டவர்களாக, வாள், சிலம்புச் சண்டைகளில் கைதேர்ந்தவர்களாகவும், கொரில்லாப் போர் முறையில் எதிராளிகளை எளிதில் தாக்கும் வலிமை பெற்றவர்களாகவும் திகழ்ந்துள்ளனர். கூத்து என்ற நாடகக்கலையில் சிறந்தவர்களாகவும் காடு, தோட்டம் கொண்டு செல்வாக்கு மிக்கவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். எனது தாத்தா சுவாமிநாதன் அவர்கள் 7 ஆடி உயர திடகாத்திரமான உடல்வாகு கொண்டவர். அவர் பம்பாயிலும் (மும்பை) பின் பல ஆண்டுகள் இராஜஸ்தான் மாநிலத்திலும் வாழ்ந்ததால் இராஜஸ்தான் தாத்தா என்றே அழைப்போம். அவர் சாதாரணமாக இருக்கும் போது அமைதியாக காணப்படுவார். கம்பைக் கையில் எடுத்துச் சிலம்பு விளையாடும் போது சுழன்று சுழன்று அடிப்பார். பம்பரமாய்ச் சுற்றுவார். எதிரி கல்லால் அடித்தால் அதே கல் வீசியவர் மீதே திருப்பி விழும் வகையில் கம்பைச் சுழற்றுவார். அவர் விரல் அசைத்து பேசும் போது விரல்களே கம்பாக சுழல்வது போல் தோன்றும். நாடகக் கலையில் எனது இன்னொரு தாத்தா ரங்கபாளையம் பெருமாள் அவர்கள் அழகாகவும், நடிப்பாற்றல் உள்ளவராகவும் குரல் வளம் மிக்கவராகவும் விளங்கியுள்ளார். பாட்டுப்பாடினால் அவரது இனிமையான குரல் நிசப்தமான அந்த இரவு நேரத்தில் பக்கத்திலுள்ள ஐந்தாறு ஊர்களில் கேட்கும் என்பார்கள். இதுபோன்று ஆற்றல் மிக்கவர்கள் அருந்ததியர் இனத்தவருள் இன்றும் கூட பல மாவட்டங்களில் சிலம்பு போன்ற வீரவிளையாட்டுகள், நாடகக்கலைகள் போன்றவற்றில் சிறந்து விளங்குபவர்கள் ஏராளமாய் உள்ளனர். இன்று நிலவும் தாழ்ந்த நிலைக்கு காரணம் என்ன? அருந்ததியர் இனமக்களிடையே நிலவிய, இன்றும் நிலவும் ஒற்றுமையின்மை, தன்னைத்தான் உணராதது, தனக்குள் உள்ள ஆற்றலை உணராதது. அதற்கும் மேலாக ஆதிக்க சாதியினர் தனது மண்ணை, காடு, தோட்டங்களைக் கவனிக்கும் முழுப்பொறுப்பை இவர்களிடம் ஒப்படைத்திருந்ததால் ஆதிக்க வர்க்கத்தின் சேவைக்காக முழுக்குடும்பத்தினரின் உழைப்பை ஆண்டு முழுதும் அர்ப்பணித்து இறுதியில் கிடைக்கும் தானியம், கொஞ்சம் பணம் இவற்றிலேயே மனநிறைவு கொண்டவர்களாக வாழ்ந்து விட்ட பழக்கம். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிக் கல்வி கற்க வைக்கும் எண்ணம் உருவாகாமலேயே வாழ்ந்து விட்டனர். அந்த எண்ணம் தோன்றும் சிலரையும் உன் பையன் என்ன கலெக்டராகவா போகப்போறான் பேசாம பண்ணையில் ஒழுங்கா வேலை பார்க்கச் சொல்லு என அடிமைப்படுத்தி வைத்திருந்ததால் இன்றும் அடிமைத்தளத்திலிருந்து மீளமுடியாத நிலையில் சில ஊர்களில் உள்ளனர். கடவுளின் பெயரால் சொல்லப்படும் கருத்துகளை எளிதில் நம்பி ஏமாறுபவர்களாக, மீற மனம் இல்லாதவர்களாக, துணிவில்லாதவர்களாக மாறி, கடவுள் விட்ட விதி என்ற மனப்போக்கில் வாழ்வது தனது முன்னோர்களின் வீரவரலாறுகளை அறிய முற்படாதது. அறிந்தவர்கள் வருங்கால சந்ததிகளுக்கு உணர்த்தாதது இவைகள் தான் அருந்ததியர் இனவீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாகும். கதிரவன் மறைவது போல் தோன்றுவதும் பின் தன் கதிர்களைப் பரப்பி உலகம் ஒளிபெறச் செய்வதும் இயற்கையின் நியதி. அதேபோல் வாழ்ந்தவர் வீழ்வதும், வீழ்ந்தவர் மீண்டும் எழ, வாழ முயல்வதும் உலக நியதி. அருந்ததியர் அடிமைக் குணத்திலிருந்து மீண்டு தன்னை உணர வேண்டிய நிலையில் இன்றும் உள்ளனர். உலக மாற்றங்களுக்கு தகுந்தாற்போல் கல்வியில், பொருளாதாரத்தில், அரசியல் பங்களிப்பில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் கொண்டு வாழ்வில் எதிர்நீச்சல் போட்டு வாழ வேண்டிய அவசியத்தில் உள்ளனர். தனது முன்னோர்களின் வீரவரலாறுகளை அறிந்து துணிவும், போராட்ட குணமும் கொண்டு உறுதியுடன் செயலாற்ற வேண்டும். அருந்ததியர் இனம் காத்த மாவீரர் மதுரைவீரன் பற்றி அறிவோம். மாவீரர் மதுரை வீரன் காசி மன்னன் துளசிராயன் மகனாகவோ, வேறு எந்த அரசருக்கோ பிறக்கவில்லை. கழுத்தில் கொடி சுற்றியும் பிறக்கவில்லை. கழுத்தில் கொடி சுற்றிப் பிறந்ததால் குலத்திற்கு ஆகாது என சோதிடர் சொல்ல, பிறந்த குழந்தையைக் காட்டில் போட்டார்கள் என்பதோ, ஓடும் ஆற்றில் விட்டார்கள் என்பதோ எல்லாம் கட்டுக்கதை. காசியில் ஓடும் கங்கையும், திருச்சியில் ஓடும் காவிரியும் இன்றும் ஒன்றாக இணையவில்லை. சங்கமமாகவில்லை. பின் எப்படி காசியில் ஆற்றில் விட்ட குழந்தை, மூன்று நாட்களுக்குப்பின் சின்னான் கையில் கிடைக்கும்? மற்றொரு கதையாய் காட்டில் கண்டெடுக்கப்பட்டதாய் சொல்வதும் பொய்யே. இவையெல்லாம் மதுரை வீரன் பிறப்பால் அரச குலத்தவன் என்பதால் தான் அவருக்கு வீரம் இருந்தது. விவேகம் இருந்தது. நல்ல குணம் இருந்தது என்பது போல் காட்ட ஆதிக்க சாதியினரால் புனைந்துரைக்கப்பட்ட கட்டுக் கதைகளேயாகும். “முத்துப்பட்டன் பார்ப்பனர் குடும்பத்தில் பிறந்தவர். இளமையிலேயே சகல வித்தைகளிலும் வல்லவனாகிறான். அண்ணன்மார் ஏழு பேரையும் தாய் தந்தையரையும் விட்டு முத்துப்பட்டன் கொட்டாரகரைக்குச் சென்று ராமராஜன் என்ற சிற்றரசனிடம் சேவகத்தில் அமர்ந்தான். தாய் தந்தையர் தேடி அலைந்து கண்டுபிடித்து மீண்டும் ஊருக்குக் அழைத்துச் செல்கிறார்கள். போகும் வழியில் தாகமூண்டதாக அரசடித் துறையில் நீர் குடிக்க இறங்கும் போது இனிய பாட்டின் ஒலி கேட்க, வனத்தில் தேடி பெண்கள் இருவரையும் இடைமறித்து பேச”நாங்கள் சக்கிலிச்சிகள்" என்று கூறிவிட்டு ஓடிக் காட்டுக்குள் மறைகிறார்கள். பெண்கள் தங்கள் தகப்பன் வாலப்பகடையிடம் சொல்ல, அவன் வெகுண்டெழுந்து கத்தியைக் கையில் எடுத்துக் கொண்டு வர, மயங்கி கிடந்த பட்டனைப் பார்த்து தன் மக்களிருவரை ஒரு பார்ப்பான் மோசம் செய்ய முயன்றதாகவும் அவனைக் கண்டதுண்டமாக வெட்டியெறியவே தேடுகிறேன் என்றான். முத்துப்பட்டன் தன் எண்ணத்தைத் தெரிவித்து வாலப்பகடையின் நிபந்தனைகளுக்கெல்லாம் கட்டுப்பட்டு குடுமியையும், பூணூலையும் களைந்து விட்டு நாற்பது நாட்கள் சக்கிலியத்தொழில் செய்து திம்மக்கா, பொம்மக்கா இருவரையும் மணக்கிறான். மணநாள் அன்று இரவு வாலப்பகடையின் மாடுகள் வன்னியர் களவு கொண்டு போனதாகவும் முத்துப்பட்டன் யாரையும் அழைத்துச் செல்லாமல் மாடுகளை களவாடிச் சென்ற வன்னியரை தேடிச் சென்று எதிர்த்துப் போரிட்டான். முத்துப்பட்டனை வஞ்சகமாக சப்பாணி ஒருவன் ஒளிந்திருந்து குத்தினான் . இந்த கதையையும் பார்ப்பான் ஒருவன் சக்கிலியப் பெண்களை மணப்பதா?! வர்ணாசிரம முறையை கணக்கில் கொண்டு அந்த பெண்கள் இருவரும் சிவபிரான் அருளால் பிறந்தது என்றும் முறை தவறிப் பிறந்ததால் காட்டில் விட காட்டில் ஒரு நாகம் குழந்தைகளைக் காக்க வாலப்பகடையும் அவன் மனைவியும் அவ்வழி போகும் கண்டெடுத்து வளர்த்தனர்."⁽¹⁾ அப்பொழுதே வர்ணாசிரம வெறி, சாதி வெறி கொண்டு ஆணவக் கொலை புரிபவர்களாக இருந்துள்ளார்கள் என்பதும் தெரிகிறது. அருந்ததியர்கள் யாரும் வீரமும் அழகும் உடையவர்களாக இருக்க மாட்டார்கள், அருந்ததியப் பெண்கள் அழகாக இருக்க மாட்டார்கள் என்பது எவ்வளவு முட்டாள்தனம். அருந்ததியப் பெண்கள் முத்துப்பட்டன் காலத்திலேயே முதல் சந்திப்பிலேயே மனதைக் கொள்ளை கொள்ளும் பேரழகும், இனிமையான குரல் வளம் படைத்தவர்களாக இருந்துள்ளார்கள் என்பது நிரூபணமாகிறது. வரலாறுகளை திரித்தும், மறைத்தும் கையாள்வதில் பார்ப்பனர்களும், ஆதிக்க சக்திகளும் எவ்வளவு சூழ்ச்சிகளைக் கையாண்டுள்ளார்கள் என்பது தெளிவாகிறது. மதுரை வீரன் 1608 ஆம் ஆண்டில் பொம்மண்ணன் என்பவர் ஆட்சி செய்த பாளையத்தில் பணிபுரிந்த சின்னான் - செல்வி என்ற அருந்ததியர் தம்பதிகளுக்கு மகனாய் பிறந்து வீரய்யன் எனப் பெற்றோரால் பெயர் சூட்டப்பட்டவர். நல்ல அழகும், இளம் வயதிலேயே வீர விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுபவராகவும், புத்திக் கூர்மையுள்ளவராகவும் இருந்து, வளர்ந்து வாலிபனாக மாறும் போது அறிவும், ஆற்றலும் பிறர் நலன் நாடும் நல்ல பண்பும், உரிமைக்குரல் எழுப்பும் உயரிய சிந்தனையுள்ளவராகவும் இருந்தார். பொம்மண்ணன் மகள் பொம்மி பருவமடைகிறாள். அன்றைய வழக்கப்படி தனியாக வைக்கப்பட்டிருந்த பொம்மியை காவல் காக்கும் பொறுப்பு அருந்ததியர் சின்னான் அவர்கள் கடமையாகிறது. சின்னான் உடல் நலக் குறைவால் அவர் மகன் வீரய்யன் அப்பொறுப்பை ஏற்று காவல் காக்கிறார். இளமை உணர்வின் உந்துதலால் இருவர் உள்ளத்திலும் காதல் அரும்புகிறது. இருமனம் இணைந்து திருமணம் செய்ய இசைகிறது. கடுமையான சாதிக்கட்டுபாடுகள் இவர்கள் இணைவதைத் தடுக்கிறது. காதலை அறிந்த பொம்மண்ணன் கடுங்கோபம் கொண்டு வீரய்யனைக் கொல்லத் திட்டமிடுகிறார். இதையறிந்த காதலர் இருவரும் வெளியேறுகின்றனர். இதனால் பொம்மண்ணன் வீரய்யன் இருவருக்குமிடையே நடந்த கடும் சண்டையில் பொம்மண்ணன் மரணமடைகிறார். வீரய்யன் பொம்மியுடன் திருச்சி சென்று அங்கு ஆட்சி செய்து வந்த விஜய ரங்க நாயக்கர் படையில் சேர்ந்து தனது வீரத்தால், திறமையால் முன்னேறி மன்னரின் நன்மதிப்பைப் பெறுகிறார். மதுரையை ஆண்ட பிற்காலப் பாண்டிய மன்னர்களிடையே ஏற்பட்ட அரசுரிமைப் போராட்டத்தைப் பயன்படுத்தி டில்லி சுல்தான் அலாவுதின் கில்ஜியின் படைத்தலைவன் மாலிக்காபூர் மதுரையின் மீது போர் தொடுத்து பாண்டிய சகோதர்களின் ஆட்சியை இழக்கச் செய்கிறார். இதைத் தொடர்ந்து இஸ்லாமியர் களை விரட்டியடித்து விஜய்நகரப் பேரரசை நிறுவுகிறார்கள். தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களினால் கிருஷ்ண தேவராயர் வலிமைமிக்க நாயக்கர் மன்னராகிறார். பாண்டியர்கள் ஆட்சியின்போது பெருமளவில் போர்வீரர்களாய் இருந்த கள்ளர்கள் மாலிக்காபூரின் படையெடுப்பு, பின் வந்த நாயக்கர் ஆட்சிகளினால் கள்ளர்கள் படைப் பிரிவிலிருந்து ஒதுக்கப்படுகிறார்கள். இந்நிலைகளினால் வாழ்க்கையில் மிகமோசமாக பாதிக்கப்பட்டு கள்ளர்கள் கொள்ளையடிக்கும், வழிப்பறி செய்யவும் முற்படுகின்றனர். மதுரையில் ஆட்சி செய்த திருமலை நாயக்கரின் ஆட்சியின்போது பிறமலைக் கள்ளர்கள் அட்டகாசம் அதிகரிக்கிறது. அதை அடக்க ஏற்ற தளபதி தேவை என திருச்சி மன்னர் விஜய ரங்க நாயக்கரிடம் வேண்டினார். வீரய்யன் தான் இப்பணிக்கு ஏற்றவன் என திருச்சி மன்னர் வீரய்யனை மதுரைக்கு அனுப்புகிறார். வீரய்யன் தன் மனைவி பொம்மியுடன் மதுரையை அடைந்த பின் திருமலை நாயக்கர் வீரய்யனிடம் கள்ளர்களை அடக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். யாராலும் வெல்லமுடியாத மதுரை மக்களை பயமுறுத்திக் கொண்டிருந்த சங்கிலி கருப்பன் என்ற கொள்ளையனை வென்று கொன்றதால் மகிழ்வுற்ற மன்னன் திருமலை நாயக்கன் வீரய்யனை ஒரு படைப்பிரிவின் தலைவனாக நியமிக்கிறார். வீரனும் மிகத்திறமையாக இரவு பகலாக மதுரைக்கு பலத்த காவலை ஏற்படுத்திக் கிட்டத்தட்ட 4000 கொள்ளையர்களின் கொட்டத்தை அடக்கி மதுரையில் அமைதியை நிலவச் செய்கிறார். இதனால் மகிழ்ந்த திருமலை நாய்க்கர் வீரய்யனை “மதுரைவீரன்” எனச் சிறப்பித்து பெருமைப் படுத்துகிறார். 1634 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் படையெடுப்பு, 1635 ஆம் ஆண்டில் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் சமஸ்தானத்தின் மீது போர் தொடுப்பு, நாஞ்சில் நாட்டைக் கைப்பற்ற ஆரவாய்மொழிக்கணவாய் வழியாக மலையாள மன்னர்கள் படையெடுப்பின் போதும் படைத்தலைவனாகப் பொறுப்பேற்று திருமலை நாயக்கருக்கு மகத்தான வெற்றியை பெற்றுத் தந்தார் மதுரை வீரன். இத்தகைய மாவீரர் மதுரை வீரனை தண்டிக்கும் அளவு திருமலை நாயக்கருக்கு கடுங்கோபத்தை உருவாக்கிய நிகழ்ச்சி தான் என்ன? காரணம் தான் என்ன? ஆராய்வோம். திருமலை நாயக்கர் அவர் நினைவாக திருமலை நாயக்கர் மகால் கட்ட தீவிர முயற்சியில் ஈடுபடுகிறார். மகால், மண்டபங்கள் கட்டும் போது கட்டக்கட்ட இடிந்து கொண்டேயிருந்ததாகவும், ஒரு சக்தி வாய்ந்த முனியின் வேலையென்றும் அதை விரட்ட வேண்டுமாயின் அம்முனி திருப்தியடையும் வரை நரபலியிட்டு விரட்டுவதைத் தவிர வேறுவழியில்லை என சோதிடர் கூறியதை நம்பி மூடநம்பிக்கையில் மூழ்கிப்போன திருமலை நாயக்கர் ஆணையின் பேரில் நரபலி கொடுப்பதற்காக அருந்ததியர் இனமக்களை கூட்டம் கூட்டமாக சிறையிலடைத்து தூண்களை நிறுவும் போது நரபலி கொடுத்து வந்தனர். தூண்கள் உறுதியுடன் நின்று மண்டபங்கள் சாயாமல் இருக்க தொடர்ந்து நரபலி கொடுத்தபடி இருந்தனர். உயிருக்குப் பயந்து இவ்வினமக்களும் ஓரிடத்தில் தங்காமல் பல்வேறு இடங்களில் பாதுகாப்புத் தேடி சிதறினார்கள். ⁽²⁾ “மூடநம்பிக்கையுள்ள நாயக்கர் மன்னர்கள், கோயில் கட்டும்பொழுதும், அணைகள், பாலங்கள் கட்டும் பொழுதும், நரபலி கொடுப்பதுண்டு. அதற்காக இழிந்தவரெனக் கருதப்பட்ட சக்கிலியர்களப் பிடித்துச் சிறையிலிடைத்துப் பலமுறை பலி கொடுத்தார்கள். உயிருக்குப் பயந்து அவர்கள் ஓரிடத்தில் தங்காமல் சிதறினார்கள். அவ்வாறு சிதறியவர்கள் திருநெல்வேலி மாவட்டம் என்று இன்றழைக்கப்படும் பகுதியில் பல சிற்றுர்களில் குடியேறினார்கள். குடியேறியவர்கள் தங்கள் பரம்பரைத் தொழிலைச் செய்து பிழைத்தார்கள். இவ்வரலாற்றைக் கவனிக்குமிடத்து மதுரையில் திருமலை நாயக்கன் கட்டிடப்பணிகள் நடத்திய காலத்திற்கு முன்னர் சக்கிலியர் தென்தமிழ் நாட்டில் பரவினார்கள் என்று கருதலாம். கட்டபொம்மன் கதையில் அவனுடைய முன்னோர்கள், திருமலை நாயக்கனிடம் நரபலி கொடுப்பதற்காகச் சிறையிலடைக்கப்பட்டிருந்த சக்கிலியர்களை மீட்க வாதாடினார்கள் என்றும், திருமலை நாயக்கனும் அதற்கிணங்கினான் என்றும் ஒரு செய்தி கூறப்பட்டுள்ளது. இது மேற்கண்ட கருத்தையும் வலியுறுத்தும் திருமலை நாயக்கன் கட்டிடப் பணிகள் செய்த காலம் 1623 முதல் 1655 வரை.”⁽⁶⁾ அருந்ததிய இனமக்களை அநியாயமாக நரபலியிடும் செய்தி அறிய நேர்ந்த மதுரை வீரன் துடித்துப் போனார். படைத்தலைவன் என்ற அதிகாரத்தால் அக்கொடுஞ்செயலை தடுத்து நிறுத்துகிறார். நரபலி தடுக்கப்பட்டு தனது பெயரால் கட்டப்படும் திருமலை நாயக்கர் மகால் பணியை நிறுத்தப்படும் செய்தி மன்னன் அறிகிறார். மன்னனின் ஆணை ஒரு படைத்தலைவனால் அதுவும் அருந்ததியரால் நிறுத்தப்படுவதா? பெருத்த அவமானமாக மன்னன் உணர்கிறார். எரிமலையாய்க் கொதிக்கிறது திருமலை நாயக்கர் உள்ளம். திருமலை மன்னனின் சாதி ஆதிக்கத்தை கொடுஞ்செயலை கண்டித்து உரிமைக்குரல் எழுப்புகிறார் மதுரை வீரன். மக்கள் செல்வாக்கும், படை வீரர்களின் ஆதரவும் மதுரை வீரரின் நியாயமான நிலைக்கு பக்கபலமாய் இருப்பதைக் கண்டு திருமலை மன்னன் திகைக்கிறார். மதுரை வீரரின் இன உணர்வோடு வெகுண்டெழுந்து, சோதிடரின் சொல்படி யாரும் அறியாமல் மறைத்து செய்யப்பட்ட நரபலியை மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக்கி விட்டானே என்ற ஆத்திரம். இச்செயலை காரணங்காட்டித் தண்டிக்கப்பட்டால் மதுரை வீரன் பேரும் புகழும் அடைவதோடு தனது பெருமைக்குச் சிறுமையாகும் என்பதை எண்ணிப் பார்க்கிறார். தனது ஆணையை எதிர்த்துப் போராடத் துணிந்தவனை இனியும் விட்டு வைக்கக்கூடாது எனப் பொருமுகிறான் திருமலை மன்னன். இச்சூழலில் மதுரைவீரனை பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்த பிறமலைக் கள்ளர்கள், மதுரை வீரன் மீது வெள்ளையம்மாள் கொண்ட காதல் விவகாரம் திருமலை மன்னனிடம் கூறியதை மனதில் கொள்கிறான். தான் அடைய விரும்பிய வெள்ளையம்மாளை தனக்கு கிடைக்காமல் செய்து விட்டானே என்ற பொறாமை உணர்வு இவை அனைத்தும் திருமலை மன்னன் மனதை எரிமலையாக்கியுள்ளது. பொல்லாத வீரையனும் பொங்கியே வீசலுற்றார் கள்ளர் படைகளெல்லாம் கலங்கியே மெய்மறந்து காலொடிந்து வீழ்வாரும் கையொடிந்து வீழ்வாரும் மெய்யசந்து வீழ்வாரும் விதிவசமே யென்பாரும் கள்ளர் படைகளெல்லாம் கருவறுக்க தானுமவர் 1515. ⁽⁴⁾ இப்படி கள்ளர்களைக் கருவறுத்தான் வீரன். அவன் துண்டு துண்டாக வெட்டிச் சாய்த்ததில் உடல்கள் கொல்லிமலை போலக் குவிந்தனவாம். அச்சமில்லாக் கள்ளர்களையும் அச்சமில்லாமல் எதிர்த்து முறியடித்தான். செய்திகேட்ட திருமலை மன்னர் அகமகிழ்ந்து போனார். கள்ளர்களை ஒடுக்கவும் ஒருவன் பிறந்து வந்தானே என்று பூரித்துப் போனார். வெற்றி வீரனாய் வலம் வரும் வீரன் இப்போது மதுரைக்கே வீரன் அவனே மதுரை வீரன். அவனை வரவேற்க ஏற்பாடு செய்தார். வெற்றிவாகைக் சூடி வருபவனுக்கு ஆரத்தி எடுக்க ஏற்பாடு செய்தார். கோவில் தாசிகள் இந்தப் பணியைச் செய்வார்கள். மதுரைக் கோவிலுள் எண்ணற்ற தாசிகளில் ஒருத்தியைத் தேர்ந்தெடுத்தார் திருமலை. ஆயிரம் பேர் தாதியர்க்கு மேலான தாதியரே தேனாச்சி மீனாட்சி செண்பகப்பூ நாச்சியாரே ஆனந்த வல்லி அங்கயற்கண் மீனாட்சி பச்சை நிறத்தாளே பவளக் கொடியாளே அங்கயற்கண் மீனாட்சி அம்மனுக் குகந்தவளே மாசுபடாப் பத்தினியாள் மானத்தருந் ததியாள் ஆலத்தி வெள்ளயரே அன்புடனே தானழைத்து (1561-1568) ⁽⁴⁾ ஆயிரம் தாசிகள் இருக்க அதில் வெள்ளையம்மாளைத் தேர்ந்தெடுத்தார் திருமலை. அவள் யார் என்றால் அம்மனுடைய தூங்கும் மஞ்சத்தை ஆட்டிவிடும் பெண்மகள் அதிலும் மாசுபடாப் பத்தினியாள். தாசி முறை பரம்பரையாக வந்தது அல்லது சிறு பெண்ணாய் இருக்கும்போதே பொட்டுக் கட்டி விடுவார்கள். அதாவது கோவிலுள் நேர்ந்து விடுவார்கள். இவர்களை பூசாரிகளோ அல்லது தனவந்தர்களோ ஆண்டு கொள்வார்கள். இன்னும் அப்படி ஆளப்படாதலால் அம்மன் விக்கிரகம் படுத்திருக்கும் மஞ்சத்தை ஆட்டிவிடும் தகுதி படைத்தவளாக இருந்தாள் போலும் எப்படியோ இவள் கோவில் சொத்து. இத்தகைய வெள்ளையம்மாளைத் தேர்ந்தெடுத்து ஆரத்தி எடுக்கச் சொன்னார் திருமலை என்றால் இந்த வெற்றியை அவர் அவ்வளவு பெரிய வெற்றியாகக் கருதினார் எனலாம். ஆரத்தி எடுக்க வந்தாள் வெள்ளையம்மாள். “வெள்ளையம்மாள் ஓர் அருந்ததியப் பெண்” அவள் மதுரை வீரனின் மனைவி என்றும் கூறுகிறார் அறந்தை நாராயணன். மதுரை “சமுதாய சிந்தனை, செயல், ஆய்வு மையம்” என்ற அமைப்பு 13 பேர்கள் அடங்கிய குழுவுடன் அருந்ததியர் மக்கள் மத்தியில் நடத்திய ஆய்வின் பயனாக" மதுரை வீரன், அங்கு வாழும் வெள்ளையம்மா என்னும் மாதாரியர் (அருந்ததியர்) பெண் மீது காதல் கொள்கிறான்" என்றும்,; “அவன் (மதுரைவீரன்) தங்கள் குழுவைச் சேர்ந்த வெள்ளையம்மா என்ற மாதாரியார் (அருந்ததியர்) பெண்ணை மணமுடித்ததால்….” என்றும்; மதுரை வீரன், “மாதாரிப் பெண் ஒருத்தியை (வெள்ளையம்மாள்) விரும்பும் போது தான் தன்னுயிரை இழந்தான் என்று நம்புகின்றனர்” என்றும் மிகத் தெளிவான கருத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்" ஆனால்…." ⁽⁵⁾ மதுரைவீரனின் கொலையை நியாயப்படுத்த வேண்டும் என்பதற்காக, திருமலை நாயக்கனுக்கும் வெள்ளையம்மாளுக்கும் இடையே ஏதாவது ஒரு உறவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நாட்டியக்காரியாகவும், தாதிப் பெண்ணாகவும், காதலியாகவும், மகளாகவும் வெள்ளையம்மாளைக் கூறி மதுரை வீரனின் வரலாற்றைக் கொச்சைப்படுத்த திசை திருப்ப முயன்றிருக்கிறார்கள் இந்த நூலாசிரியர்கள். இதற்குச் சாதி ஆதிக்கமும் ஒரு கருவியாக இருக்கிறது. அதை விடக் கொடுமையாக, மதுரை வீரன் கற்பழிப்பவன், கொலை செய்பவன், கொள்ளை அடிப்பவன், குடிகாரன் என்றெல்லாம் சில நூலாசிரியர்களால் (டாக்டர் க. சண்முகசுந்தரம், மதுரை வீரன் கதை பக். 170) சொல்லப்படுவதும், அதன் மூலம் மதுரை வீரனின் வரலாற்று உண்மைகளை மறைக்க முயல்வதும் சாதியத்தின் வெறித்தனம் என்பது உறுதி செய்கிறது. ⁽⁶⁾ தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இணைப்பேராசிரியர் டாக்டர் ஆறு இராமநாதன் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். “நாயக்க மன்னர்கள் கோயில்கள், அணைகள் கட்டும் பொழுது நரபலி கொடுப்பதற்கு இழிந்தவர்கள் எனக் கருதப்பட்ட சக்கிலியர்களைப் பயன்படுத்தினார்கள். இதனால் உயிருக்குப் பயந்த சக்கிலியர் ஓரிடத்தில் தங்காமல் தமிழகம் எங்கும் சிதறிப் போனார்கள்”. ஆக, நாயக்கர்கள் குறிப்பாக திருமலை நாயக்கன், கட்டடங்கள் கட்ட அருந்ததியர்களை கூட்டம் கூட்டமாக சிறையில் அடைத்து நரபலி கொடுத்துள்ள இந்த செய்தி அதிர்ச்சியை மட்டுமே அல்ல, நெஞ்சம் நொறுக்கும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. ⁽⁶⁾ ’மதுரை வீரன் அம்மானை" யில் தன்னைத் தூக்கி வந்தவனுக்கு கிடைத்தது சரியான தண்டனை என நினைக்காமல் “அமிர்தம் கடைகையிலே அரவவிசம் வீழ்ந்தாற்போல்” என்று வெள்ளையம்மாள் புலம்புகிறாள் என்றாள் ஆரத்தி எடுக்கும் போது வெள்ளையம்மாள் மனமும் அலை பாய்ந்துள்ளது. மதுரை வீரனும் வெள்ளையம்மாளும் ஒருவரையொருவர் முழு மனதோடு விரும்பியுள்ளார்கள் என்பது தெளிவாகிறது. கதையில் மாறுகால் மாறுகை வாங்கியது மன்னர் திருமலைக்குத் தெரியாமல் சேவகர்களே செய்துவிட்டதாக ’மதுரை வீரன் அம்மானை" கூறுவதும், அதுமட்டுமல்ல சில இடங்களில் முன்பின் முரணாக சில செய்திகள் முன் வைக்கிறது. மற்ற படைப்புகளில் திருமலையின் ஆணைப்படியே இந்த தண்டனை தரப்பட்டதாக வருகிறது^(.(4)) மதுரை வீரன் தண்டனை பெற்றதற்கு இரண்டு விதமாக ஊகிக்கலாம். 1. திருமலை நாயக்கர் காலத்தில் மதுரைக் கோவில் நிர்வாகம் அபிடேக பண்டாரம் என்பவரிடம் இருந்தது. அப்போது கோவில் நிர்வாகம் சீர்கேடான நிலையில் கிடந்தது. வழிபாட்டு முறைகள் சரிவர நடைபெறவில்லை. கோவில் வருவாய் முழுவதும் கொள்ளையடிக்கப்பட்டு வந்தது. அவரின் தனி ஆட்சி நடந்திருக்கிறது. வெள்ளையம்மாள் எனும் கோவில் சொத்தை திருட முயன்றதாக அதுவும் தேவதாசி ஒருத்தியை பஞ்சமன் ஒருவன் தொட்டு தூக்கியதற்காக அவனை மாறு கால் மாறுகை வாங்குமாறு அந்த அபிடேக பண்டாரம் ஆணையிட்டிருக்கலாம், அதற்கு தலைமை பட்டர்கள் உள்ளிட்ட அனைவரும் சம்மதம் தந்திருக்கலாம். ⁽³⁾ நந்தன் காலத்திலிருந்தே பெருந்தெய்வ கோவில்களுக்குள் பஞ்சமர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மதுரை மீனாட்சி கோவிலிலும் அதுதான் நிலையாய் இருந்தது. மாறுகால் மாறுகை வாங்கப்பட்ட வீரன் கோவில் வாசலிலுருந்து தட்டுத் தடுமாறி ஊர்ந்து கோவிலுக்குள் நுழைந்ததைக் கண்டு பதறிப்போய் ஒரு பஞ்சமன் மீனாட்சி கோவிலுக்குள் நுழைந்ததால் வருணாசிரமக் கட்டுப்பாடு எனும் மலை முதன் முதலாக வீரனின் மீறலால் பொடிப்பொடியானது. அதாவது மதுரை மீனாட்சி கோவிலில் முதன் முதலில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தியவன் மதுரை வீரன் என்றாகிறது. அப்படி நுழைந்தவனை மீனாட்சி சன்னதிலேயே அந்தப் பெண் தெய்வம் முன்னாலேயே கம்பத்தடி அருகில் தலையை வெட்டிவிட்டார்கள் கோவில் நிர்வாகிகள். இன்னும் கூட ஊகிக்கலாம். மதுரை வீரன் இப்படிக் கொடூரமாகத் தண்டிக்கபட்டது உள்ளிட்ட நிகழ்வுகளே; அதுவும் தனது ஒப்புதல் இல்லாமல் செய்யப்பட்ட செயல்களே - கோவில் அதிகாரத்தை மன்னர் திருமலை தன் கையில் எடுத்துக் கொண்டதற்கு காரணம் என்றும் கூறலாம். இதன் விளைவே மன்னர் திருமலையின் மரணமும் மர்மமானதே. அவர் மரணதிற்கும் பாதிக்கப்பட்ட கோவில் நிர்வாகத்தினர் காரணமாய் இருக்க வாய்ப்பும் உள்ளது. அம்மனுடைய தூங்கும் மஞ்சத்தை ஆட்டிவிடும் பெண்மகள் அதிலும் மாசுபடாப் பத்தினியாள். இத்தகைய வெள்ளையம்மாளைத் தேர்ந்தெடுத்து ஆரத்தி எடுக்கச் சொன்னார் திருமலை என்றால் ஆரத்தி எடுக்கும் அவள் மீது திருமலை மன்னர் ஒருதலையாய் மோகம் கொண்டவராகவும் இருக்கலாம். 2. மதுரை வீரரின் இன உணர்வோடு கூடியதும் சோதிடரின் சொல்படி யாரும் அறியாமல் மறைத்து திருமலை மகால் கட்ட அருந்ததியர்கள் நரபலி கொடுக்கப்பட்டதை மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக்கி விட்டானே என்ற ஆத்திரம். தனது ஆணையை எதிர்த்து போராடத் துணிந்தவனை தண்டிக்க வேண்டும் என்று எண்ணியவருக்கு கோவில் நிர்வாகிகள் தண்டிக்கும் போது அதைத் தடுக்கும் ஆற்றலை இழந்தவராய் இருந்திருக்கலாம். ஆனால் தண்டனையை ஆதரித்தவராகவே தெரிகிறது. காரணம் மதுரை வீரனை மாறுகால் மாறுகை முறையில் கொன்றவர்களுக்கு மன்னன் பரிசாக வழங்கிய ரத்த பட்டயம் மூலம் நிலங்களை வழங்கியதாகவும் அந்நிலங்களை இன்று வரை அவர்களது வாரிசுகள் வழிவழியாக அனுபவித்து வருவதாக ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர். ⁽⁷⁾ திருமலை நாயக்கர் சதித்திட்டத்தால் மதுரை வீரன் கைது செய்யப்படுகிறார். வஞ்சக எண்ணம் கொண்ட மன்னனால் நீதி விசாரணை எதுவுமின்றி இரவோடு இரவாக மாறுகால் மாறுகை வெட்டப்பட்டு மதுரை வீரன் கொலை செய்யப்படுகிறார். வெள்ளையம்மாளைக் கடத்திய குற்றத்திற்காக மதுரை வீரன் தண்டிக்கப்பட்டதாக மன்னரால் கதை கட்டப்பட்டு மக்களிடம் பரப்பப்படுகிறது. மதுரை வீரன் கொலை செய்யப்பட்டதை அறிந்த அவர் மனைவி பொம்மியும், அவரை இதயத்தில் ஏந்திய வெள்ளையம்மாளும் உயிரை விடுகின்றனர். தீர விசாரிக்காமல் தான் செய்த தவற்றை திருமலை நாயக்கர் உணர்கிறார். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதைப் போல மதுரை வீரன் மரணத்திற்குப் பின் எதிர்பாராத விதமாக திருமலை நாயக்கரின் உடல் ஒரு ஆழ் கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழைவாயிலில் மதுரை வீரன் காவல் தெய்வமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளார் எனில் மதுரை வீரரின் வீரமும் புகழும் என்றென்றும் மறுக்கமுடியாத, மறக்கமுடியாத ஒன்று என்பது மிகத் தெளிவானதாகும். திருமலை நாயக்கர் மகாலில் 5 அடி விட்டத்தோடு 58 அடி உயரமுள்ள 248 தூண்களாகட்டும், அரண்மனை, நாடகச்சாலை கொண்ட சுவர்க்க விலாசம், ரங்க விலாசம், மண்டபங்கள் அனைத்திலும் அருந்ததியர்களின் இரத்தமும் வியர்வையும் நீராகப் பயன்பட்டுள்ளன. திருமலை நாயக்கர் மகால் என்பதை விட “அருந்ததியர் நினைவாலயம்” என்பதே சரியாகும். இந்நிலையில் வஞ்சகத்தால் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் மதுரை வீரனை பிடித்து எந்த விசாரணையும் இல்லாமல் இரவோடு இரவாக மாறுகால், மாறுகை என்னும் முறையில் தண்டிக்கப்பட்டு கொலை செய்து விடுகின்றனர், மதுரைவீரன் மாறுகால் மாறுகை வாங்கப்பட்டதை அறிந்த அருந்ததியர் இன மக்கள் மதுரையிலும், திருச்சியிலும் வெகுண்டெழுந்துள்ளனர். பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு மதுரையை துவம்சம் செய்துள்ளனர். போராட்டங்களை சமரசம் செய்யும் விதமாக மீனாட்சி அம்மன் கோவில் கம்பத்தடி வீரனாக வைத்து முதல் பூசை அவருக்கு நடந்த பின்புதான் மீனாட்சிக்கே பூசை நடக்கும் என்ற முறை ஏற்படுகிறது. கள்ளர்களிடம் இருந்து மக்களை பாதுகாத்ததினால் தென்மாவட்டங்களில் மதுரைவீரனை அனைத்து இனத்தவரும் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். காலப்போக்கில் முதல் பூசையும் மறக்கடிக்கப்படுகிறது. கம்பத்தடி வீரன் கிழக்குப் புற கோபுர சுவரையொட்டி மிகச்சிறிய கோவில் கட்டி தெய்வமாக வைத்து கும்பிடப்படுகிறார். கம்பத்தடி வீரா எனும் பெயர் நினைவிலிருந்து அகற்றப்பட்டு மதுரை வீர சாமியாக மாறிப்போனதும் அருந்ததியர்களின் ஓர் எழுச்சிக்கு வித்திட்டவர் என்பதும் மறக்கடிக்கப்படுகிறது. எங்கு வைத்து கும்பிட்டாலும் வர்ணாசிரம முறையை தகர்த்தெரிந்து தமிழர் போற்றும் வீரத்தின் அடையாளமாக திகழ்கிறர் மாவீரர் மதுரை வீரன். 1608 ஆம் ஆண்டு பிறந்த மதுரை வீரன் தனது 21 வது வயது முதல், மன்னனால் அநியாயமாகக் கொல்லப்பட்ட 1641 ஆம் ஆண்டு 33 வயது வரை திருமலை நாயக்கருக்காக களம் பல கண்டு வெற்றி வாகை சூடித்தந்தவர். பிறமலை கள்ளர்களின் அட்டகாசங்களை அடக்கி மதுரையில் அமைதியை நிலவச் செய்தவர். பொம்மியைத் திருமணம் செய்து கலப்பு மணத்திற்கு வித்திட்ட முதல் சாதி ஓழிப்பு போராளியாவார். முதன் முதலில் மீனாட்சி கோவிலுக்குள் நுழைந்து வருணாசிரமக் கட்டுபாடுகளைத் தகர்த்தவர். சாதிப் பாகுபாட்டை எதிர்த்து, சமத்துவத்தை நிலைநாட்ட விரும்பி ஆதிக்க அதிகார சக்திகளை எதிர்த்து போராடி வெற்றி கண்டவர். சாதி அடக்குமுறை, அடிமைத்தனத்தை எதிர்த்து புரட்சி செய்தவர். அருந்ததியர் இனத்தில் மாவீரர்கள் உண்டு என்பதையும், இன்று வரை வீரத்திற்கு எடுத்துக்காட்டாக அனைத்து மக்கள் மனதில் நின்று நிலைப்பவர் மதுரை வீரன். அருந்ததியர்கள் தம் முன்னோர் பற்றிய வீர வரலாறுகளை உணர வேண்டும். மதுரை வீரனை சாமியாக்கிக் கள்ளும், சாராயமும், கறியும், சுருட்டும் படைப்பதைத் தவிர்க்க வேண்டும். மாவீரர் மதுரை வீரன் நினைவைப் போற்றி வீர வரலாறுகள் படைப்போம். அறிவால், வீரத்தால், உயர்வோம்! ஒற்றுமை காப்போம்!! நன்றியுடன் சான்றாதாரக் குறிப்புகள் 1. நா வானமாமலை அவர்கள் பதிப்பித்த “முத்துப்பட்டன் கதை” பக்கம் 9,10. மதுரை காமராசர் பல்கலை கழகம், மதுரை. 1971. 2. கருவூர் இரா. பழனிச்சாமி - வாழ்வுரிமை விழிப்புணர்வு, 102, 103 மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம், மும்பை 2007. 3. அருணன் - மதுரை வீரன் -முதல் சாதி ஓழிப்பு போராளி – பக்கம் 52 (ஆதி தமிழர் பேரவை வெளியீடு 2007.) 4. மதுரை வீரன் அம்மானை- பதிப்பாசிரியர் : ம. சீராளன், நூலகர் (ஓய்வு), சரசுவதி மகால், நூலகம், தஞ்சாவூர். தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு எண். 401, 1999. 5. எழில் இளங்கோவன் - அருந்ததியர் வரலாறும் பண்பாடும் பக்கம் 55. ஆதித் தமிழர் பேரவை. கோவை, 2002. 6. எழில் இளங்கோவன் - மதுரை வீரன் கொலையும் திருமலை நாயக்கர் மகாலும்" (பக்கம் 18, 28) ஆதித் தமிழர் வெளியீடு, கோவை, 2003. 7. மதுரை வீரன் https://ta.wik ipedia.org/s/cxw ஒப்பில்லா விடுதலைப் போராளி மாவீரர் ஒண்டிவீரன் பகடை இந்திய விடுதலைப் போராட்டம் அல்லது கிழக்கிந்திய கம்பெனிகளின் எதிர்ப்புக்கான போராட்டக்களத்தில் முன்னிலை வகித்தது தமிழ்ச் சமூகம் தான். இந்த உண்மை நிலையை எடுத்துச் சொல்ல கிடைத்த ஒரு பெருஞ் சான்று மாவீரன் ஒண்டிவீரனின் வரலாறு. கி.பி. 1857 இல் நடைபெற்ற வேலூர் சிப்பாய்க் கலகம் அல்லது அச்சமயத்தில் வட இந்தியாவில் எழுந்த கிளர்ச்சிகளையே இந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கமாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். மாமேதை கார்ல் மார்க்ஸ் சிப்பாய்க் கலகத்தை முதல் இந்திய விடுதலைப் போராட்டம் என வர்ணிக்கிறார். எனினும் பிரித்தானிய அரசு நிர்வாகம் உருவாக்கப்படுவதற்கு முன்னதாக கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுமைக்கு உட்பட்டிருந்த காலகட்டத்திலிருந்தே, அதாவது சிப்பாய்க் கலகத்திற்கு ஒரு நூற்றாண்டிற்கு முன்னதாகவே வெள்ளையர்களின் எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி விட்டது. இப்போராட்டம் தென் தமிழகத்திலிருந்து தொடங்கியதால் வடநாட்டு வரலாற்றாசிரியர்கள் (குறிப்பாக ஆரியர்கள்) மறைத்துவிட்டார்கள். தென் தமிழகத்தில் பாளையக்காரர்களாக விளங்கி பிரித்தானிய எதிர்ப்பால் தம் உயிரை ஈந்த மாவீரர்களும் உண்டு. பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன் இவர்களின் பங்கு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது நாம் அறிந்ததே. ஆனால் சாதியால் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக மாபெரும் போராளிகளின் வரலாறு குழி தோண்டிப் புதைக்கப்பட்டிருப்பது வெட்கக் கேடானது. அதை மீட்டெடுக்கின்ற மாபெரும் பணியில் இன்று ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களும், அவர்களுக்கு ஆதரவான சமூக நீதி சக்திகளும் எடுத்துள்ள முயற்சியின் வெளிப்பாடே ஒண்டிவீரன், சுந்தரலிங்கம் போன்றோரின் வரலாற்றுப் பதிவுகள். அந்த வரிசையில் வரலாற்றில் தனித்து நிற்கின்ற ஒப்பில்லா விடுதலைப் போராளி ஒண்டிவீரனின் வரலாற்றை நாம் தான் அறியச் செய்ய வேண்டும். இன்றைய நெல்லை மாவட்டத்தில், சங்கரன் கோவிலிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் வடமேற்கே அமைந்துள்ள ‘நெற்கட்டும் செவ்வயல் கிராமமும்’ அதனைச் சுற்றி 20 கி;.மீ. தொலைவில் அமைந்துள்ள கிராமங்களுமே ‘நெற்கட்டும் செவ்வயல் பாளையமாகும்’. கி.பி.1750 காலகட்டத்தில் விசயநகரப் பேரரசின் நிர்வாகக் கட்டமைப்பில் தமிழகம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்றுதான் நெற்கட்டும் செவ்வயல் பாளையம். அக்காலகட்டத்தில் பாளையங்கள் பேரரசுகளுக்கு வரியாக நெல் செலுத்தி வந்ததால் அது நெற்கட்டும் செவ்வயல் பாளையம் என அழைக்கப்பட்டதாக வரலாற்றில் குறிப்புள்ளது. விசயநகரப் பேரரசின் நிர்வாகக் கட்டமைப்பில் நெற்கட்டும் செவ்வயலி லிருந்து வரி வசூலிக்கும் உரிமையை முகலாய மன்னர்கள் பெற்றிருந்தனர். தங்களது ஆடம்பரமான செலவினங்களாலும், சூழ்ச்சியாலும் முகலாய மன்னர்கள், வரி வசூலிக்கும் அதிகாரத்தை ஆங்கிலேயர்களின் கிழக்கிந்தியக் கம்பெனிக்குத் தாரை வார்த்துக் கொடுத்தனர். வணிகம் செய்து பிழைக்க வந்த பிரித்தானியர்கள் மிகக் கடுமையான வரிகளை உருவாக்கிச் சுரண்டலின் உச்சகட்டத்தை அடைந்தனர். இந்தச் சுரண்டலுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியவர்; மாவீரர் பூலித்தேவன, அவருக்குத் தலைமைப் படைத்தளபதியாய் ஒப்பில்லா வீரனாகக் களத்தில் நின்றவர் தான் ஒண்டிவீரன். வரிகொடுக்க மறுத்த காரணத்திற்காக ஏற்கெனவே வரி வசூலித்து வந்த முகலாய மன்னர்களும், புதிதாக வரி வசூலிக்கும் உரிமையைப் பெற்ற கிழக்கிந்தியக் கம்பெனியாரும் இணைந்து கி.பி.1755 இல் முதல் போரைத் தொடுத்தனர். இப்போரில் பாளையத்தின் எல்லையிலேயே அவர்களை விரட்டியடித்தார் ஒண்டிவீரன். தொடர்ந்து கங்கை கொண்டார் போர், ஆழ்வார் குறிச்சிப் போர், வாசுதேவ நல்லூர்ப் போர் என மூன்று தாக்குதல்களைக் கிழக்கிந்தியக் கம்பெனி நடத்திய போதும் மண்டியிடவில்லை மானமிகு பூலித்தேவனும் ஒண்டிவீரனும். . மன்னன் பூலித்தேவனின் படை வீரர்கள் சண்டையிட வரும் போது அவர்கள் மீது பீரங்கியால் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு அவற்றில் வெடி மருந்தும் நிரப்பி வைத்திருந்தனர் வெள்ளையர்கள். வெள்ளையர்களின் நவீன யுத்த ஆயுதமான பீரங்கிகளை எதிர்த்து அன்றைக்கு யுத்தம் செய்வது நினைத்துப் பார்க்கக்கூட முடியாதவை என்றே கூறலாம். ஆங்கிலேயர் இப்படிச் சவால் விடுத்தனர்: “உங்களில் எவனாவது வீரனாயிருந்தால், எங்கள் முகாமிற்குள் ஊடுருவிப் பட்டத்துக் குதிரையையும் பட்டத்து வாளையும் எடுத்துக் கொண்டு, நாங்கள் கட்டித் தொங்க விட்டிருக்கின்ற வெங்கல நகராவை ஒலிக்க வைத்து விட்டால் நாங்கள் நெற்கட்டும் செவ்வயல் பாளையத்தை உங்களிடமே தந்து விடுகிறோம்.” என்றனர். அந்த ஆற்றல்மிகு செயலை செய்ய சரியான வீரன் ஒண்டிவீரன் தான் என்று முடிவு செய்து, வெள்ளையர்கள் முகாமிற்கு ஒண்டி வீரனை அனுப்பி வைத்தார் மன்னன் பூலித்தேவன். இதுதான் சரியான தருணம் என்று உணர்ந்த ஒண்டிவீரன், தன்னந்தனியாக, ஒரு சாதாரணக் கூலித் தொழிலாளியைப் போல் ஆங்கிலேயர் முகாமிற்குள் ஊடுருவினார். யாரென வினவிய ஆங்கிலேயருக்கு, குதிரைக்கு வார்த்தைக்கக் கூடியவன், போர்வீரர்களின் காலணிகளை (பூட்ஸ்களை) செப்பனிடக் கூடியவன் என்று பதில் கூறி ஒண்டிவீரன் உள்ளே புகுந்தார்;. சில நாட்கள் அந்த முகாமில் தங்கிப் பட்டத்துக் குதிரை மற்றும் வாள் போன்றவை வைக்கப்பட்டிருந்த இடத்தை முதலில் அறிந்தார். வெங்கல நகரா கட்டி விட்டிருப்பதையும், மணி ஒலித்தவுடன் எதிரிகளைத் தாக்கக் கூடிய பீரங்கிகள் தயார் நிலையில் இருப்பதையும் கண்டுணர்ந்த ஒண்டிவீரன் சவாலில் வெல்ல கும்மிருட்டைத் தேர்வு செய்தார். வெள்ளையர்களை அவர்களது பீரங்கியை வைத்தே கதையை முடித்துவிட வேண்டும் என முடிவு கட்டினார் ஒண்டிவீரன். முதலில் முகாமின் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த பீரங்கிகளை ஆங்கிலேயர் பக்கமே திருப்பி வைத்தார் ஒண்டிவீரன். தடுக்க முயன்ற காவலர்களைக் குத்திக் கொன்றார். பட்டத்து வாளை எடுத்துத் தனது இடுப்பில் செருகிக்கொண்டு, குதிரையைக் கிளப்ப முயன்ற போது குதிரை ஒத்துழைக்க மறுத்துக் கனைத்து ஓடியது. குதிரை வீரர்கள் என்னவென்று காண ஓடி வந்தனர். ஒண்டிவீரன் குதிரைக்குத் தீனி போடுகின்ற காடியில் புற்களைத் தன்மேல் பரப்பிக் கைகளை நீட்டி குப்புரப் படுத்துப் கொண்டார். ஆங்கிலேயப் படை வீரன் குதிரையைக் கட்டும் போது மறைந்திருந்த ஒண்டி வீரனின் உள்ளங்கையில் முளையை அடித்து அதில் குதிரையை கட்டி விட்டுச் செல்கிறான். கையை எடுக்க முடியாத ஒண்டிவீரன் தன் மறு கையால் வாளை உருவி அந்தக் கையை வெட்டி எறிந்து விட்டு நாறாவை அடித்து ஓசை எழுப்பி வெள்ளையர்களை உசுப்பிவிட்டுத் தன் குதிரையில் ஏறி வெற்றியுடன் பூலித்தேவரிடம் சென்றடைகிறார்".⁽¹⁾ என்பதெல்லாம் பாட்டிலக்கியங்கள், வாய்மொழிக் கதைகள். ஒண்டிவீரன் தன் கையைத் தானே வெட்டிக் கொள்வதாக வாய்மொழிகதைகளும், பாட்டிலக்கியங்களிலும் மையக்கருவாக கொண்டிருந்தாலும் சிறந்த மாவீரர் வரலாற்றை மறைக்கப்பட்டு குதிரையைக் கட்டும் இடத்தில் போய் ஒளிந்து கொண்டிருந்தார். தன் கையைத் தானே வெட்டிக் கொண்டார் என அவரது வீரத்தை தாழ்த்தி விட்டனர். காரணம் பிறப்பால் அருந்ததியர் என்பதால் தான் திரித்துக் கூறப்பட்டுள்ளதாக, புனையப்பட்டதாக கருத வேண்டியுள்ளது. ஒண்டி வீரன் பகடை போர் ஆற்றலால் படைத்தலைவனாகக் இருந்தவர். பூலித் தேவருக்குப் பின் “நெற்கட்டும் செவ்வயல்” பாளையத்தை சிறப்பாக ஆட்சி செய்தவர். குதிரையைக் கிளப்பிக்கொண்டு வெங்கல பேரிகையை அடித்து ஓசையை எழுப்பி விட்டுப் புயலெனப் புறப்பட்டார் ஒண்டிவீரன். எதிரிகள் வந்துவிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு பீரங்கியை இயக்கினார்கள் வீரர்கள். பீரங்கிக் குண்டுகள் தங்கள் முகாம் மீதே வெடிப்பதைக் கண்டு அதிர்ந்தது ஆங்கிலேயர் படை. அழிந்தது வெள்ளையர் முகாம். ஆயிரக் கணக்கான வீரர்கள் செத்து மடிந்தனர். தனியொருவனாக, ஒண்டியாக எதிரி முகாமுக்கு சென்று ஆங்கிலேயப் படையை நிர்மூலமாக்கி வெற்றியுடன் திரும்பியவன் ஒண்டிவீரன். போர்க்களத்தில் ஒண்டிவீரனுக்கு நிகர் அவனே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டதாக பூலித்தேவன் பாராட்டினார். எனினும் தொடர்ந்து அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆங்கிலேயரின் நவீன பீரங்கிகள், துப்பாக்கி களுக்கு முன்னால் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்குத் தமிழர் படையின் வாளும் ஈட்டியும் தாக்குப் பிடித்ததே மாபெரும் வெற்றியாகும். மூன்று முறை தோற்று ஓடிய ஆங்கிலேயத் தளபதி ஹெரான், கான்சாகிப் யூசுப்கான், மாபூஸ்கான் போன்றோரின் மிகப் பெரிய படைகளை எதிர்த்து போரிட்டவர்கள். நவாப் முகமது அலி தன் பிரதிநிதியாக மாபூஸ்கானையும், அவனுக்குத் துணையாக கிழக்கிந்திய கம்பெனி தளகர்த்தர் லார்ட் இன்னிங்சையும் நெல்லைச் சீமைக்கு வரிவசூல் செய்ய படையுடன் அனுப்பி வைத்தார். ஆனால் நெல்லைச் சீமை மாபூஸ்கானுக்கு அடங்க மறுத்தது. நெற்கட்டும் செவ்வயல் பாளையத் தலைவர் பூலித்தேவன் தலைமையில் மேற்குத் தமிழ்ப் பாளையங்கள் ஒன்று திரண்டது. படைக்குத் தலைமை ஏற்றார் படைத்தலைவர் ஒண்டி வீரன். ஆற்காடு நவாபின் மாபூஸ்கான், இன்னிங்ஸ் தலைமையிலான படையை பூலித்தேவர், ஒண்டிவீரர் ஆகியோரின் போர்தந்திர உத்திகளும் வீரமும் ஆற்காட்டானின் படையை சிதறடித்தது. ஒண்டிவீரர் கண்ட முதல் பெரும் போராகும். ஆங்கிலேயர்களுக்குத் தென்புறச் சீமையில் சிம்மசொப்பனமாக அவர்களுக்கு அடிபணியாமல் அச்சத்தை ஏற்படுத்திய பாளையம் நெற்கட்டும் செவ்வயல் பாளையம் ஆகும். இது ஆங்கிலேயர்களுக்கு ஆத்திரமாகவும், அவமானமாகவுமிருந்தது. எனவே எப்படியும் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் நெற்கட்டும் செவ்வயலின் இராணுவத்தளமாக இருந்த வாசுதேவநல்லூர் கோட்டையைத் 1767 ஆம் ஆண்டு மே திங்கள் ஆங்கிலேய படைத்தளபதி டொனால்ட் கம்பேல் தாக்கினார். போர் மிகக் கடுமையாக இருந்தது. பாளையப் படைகள் நடத்திய வீரப்போரைப் பார்த்து திகைத்தார் தளபதி டொனால்ட். இருந்தாலும் ஆங்கிலேயர்களின் பீரங்கிகள், துப்பாக்கிகளுக்கு முன்னால் பூலித்தேவன், ஒண்டிவீரன் படைகளிடம் இருந்த வாள்களும் வேல்களும் எதிர்நிற்க முடியவில்லை. எதிரிகளிடம் சிக்கக் கூடாது என எண்ணிய பூலித்தேவர் சங்கரன்கோவிலில் உள்ள தன் குலத்தெய்வமான “ஆவுடை நாச்சியார்”கோவிலில் தஞ்சம் புகுந்தார். அதன் பின் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. இந்நிலையில் ஆவுடை நாச்சியார் கோவிலில் தஞ்சம் புகுந்த பூலித்தேவன் அங்கேயே சோதியில் அய்க்கியமானதாகச் சொல்லப்படுகிறது. வழக்கமாகத் துரோகத்தால் அல்லது சூழ்ச்சியால் கொல்லப்பட்டவர்களைத் தான் சோதியானதாகக் குறிப்பிடுவர். (உதாரணமாக நந்தனார் வரலாறு). இந்த மண் தமிழனுக்குத்தான் சொந்தம் என எதிரிகளை விரட்டி விரட்டி அடித்த பூலித்தேவன் கி.பி. 1767 இல் மறைந்தார். அதே போல 1771 வரையில் எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த, கொரில்லாப் போர் முறையிலும் கைதேர்ந்த, எதிரிகளின் முகாமை தனியொருவனாக அழித்த ஒண்டிவீரன் சகாப்தம் தென்மலைப் போரோடு முடிந்ததாகச் சொல்லப் படுகிறது. பூலித்தேவரின் மறைவுக்குப்பிறகு ஒண்டிவீரர் பகடை நெற்கட்டும் பாளையத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். அதுமட்டுமல்ல பூலிதேவரின் மகன்களான சிவஞானபாண்டியன், சித்திரபுத்திர தேவர் மற்றும் மகள் கோமதி, முத்துச்தலைச்சி ஆகிய மூவரையும் நான்கு ஆண்டுகள் தன் பாதுகாப்பில் சிறப்பாக வைத்திருந்தார் ஒண்டிவீரர். ஒண்டிவீரர் பாளையத்தலைவராக பொறுப்பேற்ற பின்னர் களக்காடு, கங்கை கொண்டான், திருவில்லிபுத்தூர், தென்மலை போன்ற இடங்களில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டுள்ளார். தென்மலைப் போர் தான் ஒண்டி வீரரின் இறுதிப்போர் எனத் தெரிகிறது. அவர் மரணம் அப்போர்க்களத்தில் ஏற்பட்ட வீரமரணமாக இருக்கலாம். ⁽²⁾ பூலித்தேவர் தேவர் சமூகத்தில் பிறந்தவர்! ஒண்டிவீரன் அருந்ததியர் சமூகத்தில் பிறந்தவர். ஆனால் வல்லாதிக்க எதிர்ப்புப் போரில் பூலித் தேவன் மறைந்த பிறகும் எதிரிகளுக்கு விலை போகாமல் மீண்டும் பல போர்களை எதிர்நோக்கிய நேர்மையான தமிழன் ஒண்டிவீரன். தனது இறுதி காலம் வரை பூலித்தேவனின் மக்களை, குடும்பத்தாரைப் பாதுகாத்து வந்தவர் ஒண்டிவீரன். அதனால்தான் இன்றும் தேவர் சமூகம் ஒண்டிவீரனைக் காவல் தெய்வமாகவும், ஒண்டிவீரனின் சமூகம் பூலித் தேவனை நன்றியுணர்வோடும் வழிபட்டு வருகிறார்கள். தேவர் சமூகத்தில் பிறந்த முனைவர் இராசய்யாவும், இறைப்பணி செய்து வரும் அருட்தந்தை மார்க் அவர்களும் அருந்ததியர் சமூகத்தில் பிறந்த வரலாற்றாசிரியர் எழில் இளங்கோவன், எழுத்தாளர் பிரபஞ்சனும் இணைந்து ஒண்டிவீரனின் வீரஞ் செறிந்த வரலாற்றை தமிழ் கூறும் நல்லுலகம் அறியச் செய்தனர். விடுதலைப் போராட்டத்தில் வெள்ளையர்களை, அவர்களுக்கு துணை நின்ற பகைவர்களை அவர்களின் ஆயுதத்தைக் கொண்டே அழித்தொழித்து முன்னோடியாக ஒப்பில்லாப் போராளியாக விளங்கியவர் ஒண்டிவீரன். தமிழர்களின் வீரம் - தமிழர்களின் விவேகம் - தமிழர்களின் போர்த் தந்திரம் மிக்க ஒண்டிவீரனின் வரலாற்றினை முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். அதுமட்டுமல்ல மாவீரர் ஒண்டிவீரன் அவர்களின் வீர வரலாற்றை தமிழ்நாடு அரசும், இந்திய ஒன்றிய அரசும் சி.பி.எஸ்.சி பாடத்திட்டங்களில் கொண்டு வரவேண்டும். 250 வது நினைவு ஆண்டு முன்னிட்டு இந்திய ஒன்றிய அரசு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பிக்க வேண்டும். ஒண்டிவீரன் புகழையும் வீரத்தையும் போற்றி வணங்குவோம்! நன்றியுடன் சான்றாதாரக் குறிப்புகள் (1)` சமுக நீதித் தமிழ்த் தேசம் ஜனவரி 2011 இதழ் - கீற்று 2. வரலாற்றாசிரியர் எழில் இளங்கோவன் - மாவீரர் ஒண்டிவீரன் பகடை, பக்கம் 29, 30. கருஞ்சட்டைப் பதிப்பகம், 2004. 3. கருவூர் இரா. பழனிச்சாமி - வாழ்வுரிமை விழிப்புணர்வு பக்கம் - 73. மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம், மும்பை. முதல் தமிழ் தற்கொலைப் போராளி குயிலி..! இலட்சியத்திற்கான பயணத்தில் எதிரிகளை வீழ்த்துவதற்காகவோ, அல்லது சுரணையற்ற சமூகத்தில் ஒரு எழுச்சியை ஏற்படுத்துவதற்காகவோ, ஒருவர் தம் உயிரையே அர்ப்பணிப்பாரெனில் அவரைத் தற்கொலைப்படைப் போராளி என்கிறோம். தற்கொலைப் போராளிகளின் தொடக்கம் இரண்டாம் உலகப் போரில்தான் என்கிறது எழுதப்பட்ட வரலாறு. ஜெர்மனிக்கும், ஜப்பானுக்கும் இடையே நீர்மூழ்கிக் கப்பலில் நடைபெற்ற யுத்தத்தில் ஜப்பானிய வீரர்களின் தற்கொலைப் போராட்டமே இதற்கான தொடக்கமாகக் கருதப்படுகிறது. ஆனால் இரண்டாம் உலகப்போர் நடைபெறுவதற்கு 150 ஆண்டுகளுக்கு முன்னரே, பிரிட்டிஷாரை எதிர்த்துத் தமிழ் மண்ணில் நடைபெற்ற போர்க்களத்தில் தான் முதன்முதலாக ‘தற்கொலைப் போராளி’ உருவானார் என்பது நாம் அறியாதது. அந்தப் போராளி வீரமங்கையின் பெயர்தான் குயிலி. 1776ம் ஆண்டு வேலுநாச்சியார், வெள்ளையர் எதிர்ப்பில் தம் கணவர், சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்து வடுகநாதரைப் பறிகொடுத்து, எட்டாண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த காலம். அப்போது வேலுநாச்சியார் விருப்பாட்சி என்ற ஊரில் தங்கியிருந்தார் குயிலி. அதுதான் அவள் பெயர். வயது பதினெட்டு. பிறந்த மண்ணையும், வீரத்தாய் வேலு நாச்சியாரையும் உயிரென மதிப்பவள் வேலுநாச்சியாரின் சிலம்பு வாத்தியார் வெற்றிவேல் ஒருநாள். குயிலியிடம் வந்தார், ‘குயிலி’ எனக்கொரு உதவி செய்வாயா?" “சொல்லுங்கள் ஐயா’’”நீ உன் ஊரான பாசாங்கரைக்கு செல்லும் போது இந்தக் கடிதத்தை, சிவகங்கை அரண்மனைக்கருகில் இருக்கும் வீட்டில், மல்லாரிராயன் என்பவனிடம் சேர்ப்பிக்க வேண்டும். சேர்த்து விடுவாயா.? ‘’சரி’’ என்றபடி, குயிலி வாங்கிக் கொண்டாள். அன்றிரவு குயிலி குத்தீட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு சிலம்பு வாத்தியாரின் இருப்பிடம் விரைந்தார். அடுத்த நிமிடம் சிலம்பு வாத்தியாரின் குடிசையிலிருந்து அலறல் சத்தம். இரத்த வெள்ளத்தில் மிதந்துகிடந்த சிலம்பு வாத்தியாரின் உடலையும் அருகே ஒரு கையில் குத்தீட்டியோடும் மறு கையில் சிலம்பு வாத்தியாரின் கடிதத்தோடும் கண்கள் சிவக்க தலைவிரி கோலமாக நின்ற குயிலியை வேலுநாச்சியார் உள்ளிட்ட அனைவரும் கண்டார்கள். குயிலி ஓடிவந்து அவர் காலில் விழுந்து கதறியழுதாள். கடிதத்தை நீட்டினாள். கடிதத்தை வாங்கிப் படித்த வேலுநாச்சியாரின் முகம் உணர்ச்சியில் துடித்தது. கடிதத்தில், வெற்றிவேல் வாத்தியார் மல்லாரிராயன் என்பவனுக்கு வேலு நாச்சியார் குறித்த சில விஷயங்களை எழுதியிருந்தார். நம்பிக்கைக்குரியவராக இருந்த சிலம்பு வாத்தியார் தன் காலைச் சுற்றியிருந்த நச்சுப்பாம்பு என அறிந்து வேலுநாச்சியார் அதிர்ச்சியுற்றார். தன் மீதும் நாட்டின் மீதும் கொண்ட பற்றின் காரணமாக ஒரு பெண் துணிச்சலாக மேற்கொண்ட செயலைக் கண்டு அகமகிழ்ந்தார். கூட்டத்தில் பத்தோடு பதினொன்றாகப் பார்க்கப்பட்ட குயிலி அன்றிலிருந்து இராணி வேலுநாச்சியாரின் மெய்க்காப்பாளரானார். குயிலி தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவள். இதைக் காரணம் காட்டி ஒரு கும்பல், குயிலியின் மேல் துவேஷத்தை வளர்க்க முனைந்தது. வேலு நாச்சியாரோ குயிலிக்கு தம் ஆதரவுக் கரத்தை இரும்பு அரணாக வைத்து காத்து வந்தார். ஒருநாள் நள்ளிரவு. வேலு நாச்சியார் மஞ்சத்தில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். குயிலி தூக்கம் வராமல் அங்குமிங்கும் நடைபயின்று கொண்டிருந்தாள். வெளியே காலடிச் சத்தம் கேட்டு உஷாரானாள். மறைந்து நின்று கொண்டாள். ஒரு உருவம் சாளரத்தின் வழியே குதித்து இறங்கியது. அங்குமிங்கும் பார்த்தபடி வேலுநாச்சியாரின் மஞ்சத்தினருகே மெதுவாகப் போனது. கையை ஓங்கி, கத்தியால் வேலு நாச்சியாரை குத்த முனைய, மறைந்திருந்த குயிலி ஓடி வந்து தன் கைகளால் அந்தக் கத்தியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். அந்த உருவம் திமிற, கத்தியில் வெட்டுப்பட்ட குயிலியின் கரங்களில் ரத்தம் ஆறாக ஓடியது. சத்தம் கேட்டு வேலு நாச்சியார் எழுந்து கொண்டார். அந்தக் கயவன் சடாரெனத் துள்ளி, சாளரத்தின் வழியே குதித்து ஓடிப் போனான். மயங்கிச்சரிய இருந்த குயிலியை தாங்கிப் பிடித்துக் கொண்டார் வேலுநாச்சியார். அன்று முதல் குயிலி, வேலுநாச்சியாரின் நெஞ்சில் பன்மடங்கு உயர்ந்தார். மெய்க்காப்பாளராக விளங்கிய குயிலி பெண்கள் படைக்குத் தளபதியாக்கப்பட்டார். நாட்கள் கடந்தன. 8 ஆண்டுகளுக்குப் பிறகு போருக்குத் தேவையான தளவாடங்கள் வந்து சேர்ந்தன. பன்னிரண்டு பீரங்கி வண்டிகள், நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் திப்பு சுல்தானால் வேலு நாச்சியாரிடம் ஒப்படைக்கப்பட்டன. 1780ம் ஆண்டு ஐப்பசி மாதம் 5ம் நாள் விருப்பாச்சி பாளையத்திலிருந்து சிவகங்கையை நோக்கி வேலு நாச்சியாரின் படை புறப்பட்டது. உடையாள் பெண்கள் படைக்குத் தலைமையேற்று குயிலி கம்பீரமாக வந்து கொண்டிருந்தார். முத்துவடுகநாதரின் படுகொலையில் பெரும்பங்கு வகித்த மல்லாரி ராயன், முதலாவதாக வேலுநாச்சியாரின் படையை மதுரை கோச்சடையில் எதிர்த்து நின்றான். ஒரு மணி நேரப் போரிலேயே மல்லாரிராயன் குத்திக் கொலை செய்யப்பட்டான். ஆங்கிலத் தளபதி ஜோசப் சுமித் காளையார் கோவிலில் வேலுநாச்சியாரின் படையை எதிர்கொண்டான். அங்கும் தமிழர் படை வெற்றிக்கொடி நாட்டியது. ஆங்கிலப் படைகள் புறமுதுகிட்டு ஓடின. வேலுநாச்சியாரின் படைகள் சிவகங்கைச் சீமையில் வெற்றி முழக்கத்துடன் நுழைந்தன. ஆனால் அங்குதான் யாரும் எதிர்பாராத ஆபத்து காத்துக் கொண்டிருந்தது. தனது நயவஞ்சகத்தால் மறைந்திருந்து வேலுநாச்சியாரின் கணவரது உயிரைப் பறித்த கொடுங்கோலன் ஆங்கிலத் தளபதி பாஞ்சோர் காளையார் கோவிலிலிருந்து சிவகங்கை அரண்மனை வரையிலும் அடிக்கு ஒரு போர் வீரனை நிறுத்தியிருந்தான். அனைவரது கைகளும் துப்பாக்கி ஏந்தியிருந்தன. பீரங்கிகளும் அரண்மனையைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான துப்பாக்கிகளும் வெடிபொருட்களும் அரண்மனைக் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப் பட்டிருந்தன. என்ன தான் வீரமறவர்கள் வேலுநாச்சியாரின் படையில் இடம் பெற்றிருந்தாலும் ஆங்கிலேயரின் நவீன ஆயுதங்கள் மிகப்பெரிய சவாலாக இருந்தன. விருப்பாச்சியிலிருந்து தொடர் வெற்றிகளைக் குவித்து வந்த வேலுநாச்சியாருக்கு இறுதிப் போரில் தோற்றுவிட்டால் என்ன ஆவது என நினைப்பதற்கே அச்சமாக இருந்தது. இருப்பினும் நம்பிக்கையைக் கைவிடவில்லை. அந்த நேரம் அங்கே ஒரு தள்ளாத கிழவி ஒருத்தி வந்து கொண்டிருந்தாள். சபையின் நடுவே தடுமாறி நடந்து வந்த அவள், வேலுநாச்சியாரை வணங்கிவிட்டு, பேசத் தொடங்கினாள். “தளவாய் பெரிய மருது அவர்களே, இப்போது நவராத்திரி விழா நடந்து வருகிறது. நாளை மறுநாள் விஜயதசமி. அன்று சிவகங்கைக் கோட்டையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் கொலு வைக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்காக அன்று ஒருநாள் காலை மட்டும் மக்களுக்கு, அதுவும் பெண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதைப் பயன்படுத்தி ராணியாரின் தலைமையில் பெண்கள் படை உள்ளே கோட்டைக்குள் புகுந்துவிடும். பிறகு என்ன? வெற்றி, நமது பக்கம் தான்.’’ அவள் மூச்சுவிடாமல் சொல்ல, அத்தனை பேரின் கண்களும் வியப்பில் விரிந்தன. பெரிய மருதுவின் சந்தேகப் பார்வையைக் கண்டதும் அந்தப் பெண் கடகடவென நகைத்தாள்.”பேராண்டி பெரிய மருது, இப்போது என்னைத் தெரிகிறதா?’’ என்றபடியே மெல்ல தனது தலையில் கை வைத்து வெள்ளை முடியை விலக்கினாள். அந்த முடி, கையோடு வந்தது. குயிலி புன்னகை மின்ன நின்றிருந்தாள். ஆம், சிவகங்கைக் கோட்டையை உளவு பார்க்க ராணியின் உயிர்த்தோழி குயிலி மாறுவேடத்தில் சென்றாள் என்ற உண்மை வெளிச்சமிட்டு நின்றது. "என்ன பெரிய மருது, உங்கள் சந்தேகம் தீர்ந்ததா? நாளை மறுநாள் நமது படைகள் போர்முரசு கொட்டட்டும், இந்த முறை ஒலிக்கும் முரசு, வெள்ளையரின் அடிமை விலங்கை ஒடித்து, விடுதலை வெளிச்சத்தைக் கொண்டுவரும் முரசாக ஒலிக்கட்டும்!’’ ஆணையிட்டுவிட்டு சென்றார் வேலுநாச்சியார். ராணி குறித்தது போல படைகள் இரண்டு பிரிவாகப் பிரிந்து, முரசறைந்து போர் முழக்கமிட்டுப் புறப்பட, ராணி வேலுநாச்சியாரின் தலைமையில் பெண்கள்படை சிவகங்கை நகருக்குள் புகுந்தது. அம்மனுக்கு சாத்தி வழிபட அவர்கள் கையில் பூமாலைகளோடு அணிவகுத்தனர். பூமாலைக்குள் கத்தியும், வளரியும் பதுங்கி இருந்தது பரங்கியருக்குத் தெரியாது. வேலுநாச்சியாரும் தனது ஆபரணங்களை எல்லாம் களைந்துவிட்டு சாதாரணப் பெண்போல மாறுவேடத்தில் கோயிலுக்குள் புகுந்தார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவரோடு கோட்டைக்குள் இருந்து வெளியேறிய பிறகு, இன்று தான் மட்டும் தனியே மாறுவேடத்தில் வரவேண்டி வந்துவிட்டதே என்று எண்ணி வேலு நாச்சியார் ஒரு கணம் கலங்கினார். ஆனால், ஒரே நொடியில் அந்தக் கலக்கம் காலாவதியானது. "எனது கணவரை மாய்த்து நாட்டை அடிமைப்படுத்திய நயவஞ்சகரை ஒழிப்பேன். விடுதலைச் சுடரை நாடு முழுக்க விதைப்பேன்!’’ என்ற வீரசபதம் நினைவில் புகுந்தது. அவரது கண்கள் கோட்டையின் ஒவ்வொரு பகுதியையும் அலச ஆரம்பித்தது. விஜயதசமி என்பதால் ஆயுதங்கள் அனைத்தையும் கோட்டையின் நிலமுற்றத்தில் வழிபாடு நடத்த குவித்து வைத்திருந்தனர். ஒரு சில வீரர்களின் கையில் மட்டுமே ஆயுதங்கள் இருந்தன. ராணி கோட்டையை அளவெடுத்தது போலவே குயிலியின் கண்களும் அளவெடுத்தன. நிலா முற்றத்தில் குவிக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கண்டதும், அவளது மனதில் ஒரு மின்னல் யோசனை தோன்றி மறைந்தது. ஆனால், அந்த யோசனையை வெளியே சொன்னால் செயல்படுத்த அனுமதி கிடைக்காது என்பதை அறிந்திருந்த குயிலி, மெதுவாக ராணி வேலுநாச்சியாரைப் பிரிந்து கூட்டத்தோடு கலந்துகொண்டாள். அதே நேரத்தில் கோட்டையில் பூஜை முடிந்தது. அனைவரும் கோட்டையை விட்டு வெளியேற ஆரம்பித்தனர். பொதுமக்கள் கூட்டமும் மெதுவாக கலையத் தொடங்கியது. வேலுநாச்சியார் தனது போரைத் தொடங்க இதுவே தருணம் என்பதை உணர்ந்தார். அவரது கை மெல்ல தலைக்குமேல் உயர்ந்தது. மனத்திற்குள் ராஜராஜேஸ்வரியை வணங்கியபடியே, "வீரவேல்! வெற்றிவேல்!!’’ என்று விண்ணதிர முழங்கினாள். அந்த இடிக்குரல் அரண்மனையே கிடுகிடுக்கும் அளவிற்கு முழங்கியது. ராணியின் குரலோசையைக் கேட்டதும் பெண்கள் படை புயலாய்ச் சீறியது. புது வெள்ளமாய்ப் பாய்ந்தது. மந்திர வித்தைபோல பெண்களின் கைகளில் வாளும் வேலும் தோன்றின. ஆயுதங்கள் அனைத்தையும் மின்னலெனச் சுழற்றி வெள்ளையர்களை சிவகங்கைப் பெண்கள் படை வெட்டிச்சாய்த்தது. இந்தக் காட்சியை மேல்மாடியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலேயன் பான்சோருக்கு இடிவிழுந்தது போலாயிற்று. "சார்ஜ்!..’’ என்று பான்சோர் தொண்டை கிழியக் கத்தியபடியே, தனது இடுப்பில் இருந்த 2 கைத்துப்பாக்கிகளை எடுத்து சரமாரியாகச் சுட ஆரம்பித்தான். வெள்ளைச் சிப்பாய்கள் ஆயுதக் குவியலை நோக்கி ஓடிவர ஆரம்பித்தார்கள். வேலு நாச்சியார் பான்சோரைப் பிடிக்க மேல்மாடத்திற்குச் செல்வதற்குள் அங்கிருந்த குயிலின் எண்ணம் ஆயுதக் கிடங்கின் மேல் நின்றது. அப்போது அவள் எண்ணினாள், நமது விடுதலைக்கான இறுதிப்போர் இது. இதில் நாம் தோல்வி அடைந்தால் இனி எத்தனை பிறவி எடுத்தாலும் வெற்றி பெற முடியாது. நான் வெற்றிக்கு வழிகாட்ட ஒளியூட்டப் போகிறேன் என்று கூறியபடியே உடல் முழுவதும் நெய்யை ஊற்றிக்கொண்டு, கோயிலில் இருந்த எரியும் பந்தத்தோடு அரண்மனையின் உப்பரிகையை நோக்கிப் பறந்தாள். அரண்மனை உப்பரிகையை அடைந்ததும் தீப்பந்தத்தால் தனது உடலில் தனக்குத்தானே தீவைத்துக்கொண்டு , "வீரவேல், வெற்றிவேல்’’ என்று, அண்டம் பொடிபடக் கத்தியபடியே ஆயுதக்கிடங்கை நோக்கி கீழே குதித்தாள். நிலா முற்றத்தில் இருந்த ஆயுதங்கள் அனைத்தும் வெடித்தும், தீபிடித்தும் எரிந்தன. ஆயுதக் குவியலில் பற்றிய தீயைக் கண்டதும் பான்சோரும், அவனது வீரர்களும் நிராயுதபாணியாகி பயந்து நின்றனர். பான்சோர் தப்பி ஓட முயன்றான். ஆனால் வேலுநாச்சியாரின் வீரவாள் அவனை வளைத்துப் பிடித்தது. தளபதி சரணடைந்தான். கோட்டை மீண்டும் ராணியின் கைக்கு வந்தது. இதே நேரத்தில் பெரிய மருது வெற்றியோடு வந்தார். திருப்பத்தூர் கோட்டையை வென்ற சின்ன மருதுவும் தனது படைகளோடு வந்து சேர்ந்தார். வெற்றி முழக்கம் எங்கும் ஒலித்தது. ஆனால் வேலுநாச்சியாரின் கண்களோ தன் உயிரான தோழியும், இந்த வெற்றிக்கு வித்திட்ட பெண்கள் படை தளபதியுமான குயிலியைத் தேடியது. குயிலி என்ன ஆனார்? மானம் காக்கும் மறவர் சீமையின் விடுதலைக்காக குயிலி தன்னையே பலி கொடுத்தார் என்பதை அறிந்ததும் அந்தத் தியாக மறத்திக்காக வேலுநாச்சியாரின் வீர விழிகள் அருவியாய் மாறின. கண்ணீர் வெள்ளம் அவரது உடலை நனைத்தது. அவர் மட்டுமா அழுதார்? குயிலிக்காக சிவகங்கைச் சீமையே அழுதது. குயிலி போன்ற தியாகச்சுடர்கள் தந்த ஒளியின் ஒட்டு மொத்தக் கூட்டுத்தொகைதான் இந்தியாவிற்கு விடுதலை வழிகாண வைத்தது. தங்கள் உடலையே எரிபொருளாக்கிய எத்தனையோ குயிலிகள் இன்னும் சரித்திரம் ஏறாமலேயே சருகாய்ப் போனார்கள். அவர்களது உன்னத தியாகத்திற்குத் தலைவணங்குவோமாக! (நடந்து முடிந்த சட்டசபையில் உறுப்பினர்கள் வேண்டுகோளுக்கிணங்க வேலு நாச்சியாருக்கு மணி மண்டபம் கட்டும் போது அதில் குயிலிக்கும் மண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.) முதல் தமிழ் தற்கொலைப் போராளி வீரமங்கை குயிலி அவர்களின் வீர வரலாற்றை தமிழ்நாடு அரசும், இந்திய ஒன்றிய அரசும் சி.பி.எஸ்.சி திட்டங்களில் கொண்டு வரவேண்டும். குயிலியின் புகழையும் வீரத்தையும் போற்றி வணங்குவோம்! […] […] Feminism in India English, August 15, 2020. ⁽³⁾ Kuyili Kuyili was the commander-in-chief to Velu Nachiyar, Woman), this freedom fighter was born in a lower caste family of Arunthathiyar. She led her army on an attack against the Britishers. In the proce, drenched in oil, she set herself on fire and self-sacrificed her life. நன்றியுடன் சான்றாதாரக் குறிப்புகள் 1. பாரதம், தமிழ்தேசம், மகளிர் வரலாறு கட்டுரையாளர்களுக்கு 2. கருவூர் இரா.பழனிச்சாமி - தென்னரசு இதழ், மும்பை 3. Feminism in India English, August 15, 2020. விடுதலைக்கு வித்திட்ட பொறுப்புமிகு தளபதி பொல்லான் விடுதலை உணர்வோடு வெள்ளையர்களை எதிர்த்து போரிட்ட மாவீரர்கள் பலர் தமிழ் நாட்டில் இருந்துள்ளனர். வரலாற்று ஆசிரியர்கள் நுனிப்புல் மேய்ந்தது போல் பாளையத்துத் தலைவர்கள், தலைமைப் பொறுப்பில் இருந்து கொண்டு போரிட்டவர்கள் பற்றி மட்டும் சிலரைக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு பெரும் துணையாக இருந்து அவர்கள் வெற்றிக்கு காரணமாய் இருந்தவர்கள், தியாகம் புரிந்தவர்கள், மாவீரர்கள் பற்றி குறிப்பிடாமல் போனது சாதி ஆதிக்க உணர்வே என்பதை அறிய முடிகிறது. வட இந்தியத் தலைவர்கள், வீரர்களை அடையாளம் காட்டி வரலாறு எழுதியவர்கள் தென் தமிழ் நாட்டு தலைவர்களை, மாவீரர்களை மறைத்தும் திரித்தும் எழுதியுள்ளது கண்கூடானது. விடுதலை வீரர் தீரன் சின்னமலை வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து, தனது இறுதி மூச்சு வரை அடிபணியாமல், அவர்களை எதிர்த்துப் போரிட்டு தொடர் வெற்றிகளைப் பெற்றார் என்றால் அதற்கு ஒற்றர் படைத் தலைவர் தளபதி மாவீரர் பொல்லான் அவர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. அவர் வரலாற்றினை சுருக்கமாக காண்போம். காவிரி நதியில் முக்கொம்பு, கொள்ளிடம், கல்லணை பகுதிகளை உள்ளடக்கிய திருச்சியை தலைநகராகக் கொண்டு இன்று கரூர் மாவட்டமாக உள்ள தென்னிலை அருகில், கோடந்தூர் கிராமம், சக்கிலியங்காடு தற்போது வெட்டுக்காட்டுவலசு என்று அழைக்கப்படும் ஊரில் தந்தை நாச்சி தாயார் தங்காயி ஆகியோருக்கு மகனாக 28.12.1765 அன்று பொல்லான் பிறந்தார். இவர் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவராவர். சிறு வயதில் சிலம்பாட்டம் போன்ற வீர விளையாட்டுகளில் சிறந்து, அதேபோல் தந்தை சொற்படி கேட்டு நடக்கும் பிள்ளையாக ஆடு, மாடு, மான் ஆகியவற்றின் தோலை உரித்து அதைப் பதப்படுத்தி தோல்பொருட்கள் அதில் பொம்மைகள் செய்வதிலும் பெயர் பெற்றவனாய் இருந்துள்ளார். பொல்லான் தோல்ப்பொருட்கள், வாள் உறை, கத்தி உறை போன்றவை மிக நேர்த்தியாக செய்வதைக் கண்டு வியந்து தீரன் பாராட்டியுள்ளார். தீரன் சின்னமலை அவர்கள் தனது சகோதரர் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு, பொல்லான் தனது நண்பர்களோடு செய்து காட்டிய சிலம்பாட்டம் போன்ற வீர விளையாட்டுகளையும் உருவத் தோற்றத்தையும், அறிவார்ந்த பேச்சையும் கண்டு, வியந்து பொல்லானுக்கு குதிரை ஏற்றம், வாள் சண்டை, எறிகுண்டு எறிதல் போன்ற பயிற்சிகளை தீரன் சின்னமலை கற்றுக் கொடுக்க பொல்லான் மிகவும் ஆர்வமாக எளிதில் கற்றுக் கொண்டார். ஓடாநிலையில் ஆயுதக்கிடங்கை பராமரித்து பாதுகாக்கும் பணியமர்த்தபட்டு, அனைத்து போர் பயிற்சிகளையும் கற்றுக் கொண்ட பொல்லானை பாதுகாப்புப் படை தளபதியாக்கி, தளபதிகள் நல்லமங்காபாளையம் சுபேதார் வேலப்பன் மற்றும் கருப்பசேர்வை ஆகியோருக்கு தீரன் சின்னமலை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பிறகு சமூக வேற்பாடின்றி அனைவரும் ஒற்றுமையாக வெள்ளையர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என் சபதம் பூண்டனர். தீரன் சின்னமலை பெயர் காரணம் தீர்த்தகிரி கவுண்டர் அவர்களின் பிறப்பிடமான கொங்கு நாடு மைசூர் மன்னர் ஆட்சியில் இருந்ததால், அந்நாட்டின் வரிப்பணம், அவரது அண்டைய நாடான சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு எடுத்துச் செல்லப்படும். ஒருநாள், தனது நண்பர்களுடன் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி, அவ்வரிப்பணத்தைப் பறித்து, ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்தார். இதைத் தடுத்த தண்டல்காரர்கள் கேட்ட போது, “சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாக மைசூர் மன்னர் ஹைதரலியிடம் சொல்” என்று சொல்லி அனுப்பினார். அன்று முதல், அவர் ‘தீரன் சின்னமலை’ என்று அழைக்கப்பட்டார். திப்பு சுல்தானுடன் கூட்டணி தீரன் சின்னமலை வளர வளர வளர்ச்சியுடன், நாட்டில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கமும் வளர்ந்தது. இதை சிறிதளவும் விரும்பாத சின்னமலை, அவர்களைக் கடுமையாக எதிர்த்தார். அச்சமயத்தில், அதாவது டிசம்பர் மாதம் 7ஆம் தேதி, 1782 ஆம் ஆண்டில் மைசூர் மன்னர் மரணமடைந்ததால், அவரது மகனான திப்பு சுல்தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அவரும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை வேரோடு வெட்ட எண்ணினார். இதுவே, அவர்களுக்கும் சாதகமாக அமைந்தது. ஆகவே, அவரது நண்பர்களோடு அவர் ஒரு பெரும் படையைத் திரட்டி, மைசூர் மன்னர் திப்பு சுல்தானுடன் கைக்கோர்க்க முற்பட்டார். ஏற்கனவே, திப்புவின் தந்தையை ஒருமுறை எதிர்த்த நிகழ்வையும், அவரது வீரத்தையும் பற்றி அறிந்த திப்பு சுல்தான், அவருடன் கூட்டணி அமைத்தார். தீரன் சின்னமலையின் நாட்டுப்பற்றுடைய செயல் திப்பு சுல்தான் அறியவே பொது எதிரியான வெள்ளையனை விரட்ட தீரன் சின்னமலையின் துணையும் தேவைப்பட்டது. திப்பு சுல்தான் அழைப்பின் பேரில் சீரங்கப்பட்டினம் சென்று தீரன் சின்னமலை, கருப்ப சேர்வை, வேலப்பன், பொல்லான் ஆகியோர் சந்திக்கின்றனர். அனைத்து வகை பயிற்சிகளையும், போர்த் தந்திரங்களையும் கற்றனர் அவர்களின் கூட்டணி, சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போன்ற இடங்களில், ஆங்கிலேயர்களை எதிர்த்து நடந்த மூன்று மைசூர் போர்களில் ஆங்கிலேயர்களின் படைகளுக்குப் பெரும் சேதம் விளைவித்து, வெற்றிவாகை சூடியது. நான்காம் மைசூர் போர் மூன்று மைசூர் போர்களிலும், திப்புசுல்தான் – தீரன் சின்னமலை கூட்டணி வெற்றியடைந்ததைக் கண்டு வெகுண்டெழுந்த ஆங்கிலேயர்கள், பல புதிய போர் யுக்திகளைக் கையாளத் திட்டம் தீட்டினர். இதனால், திப்பு சுல்தான், மாவீரன் நெப்போலியனிடம், நான்காம் மைசூர் போரில் தங்களுக்கு உதவிப் புரியக் கோரி, தூது அனுப்பினார். நெப்போலியன் உதவி கிடைக்காத நிலையிலும் தங்களது படைகளோடு துணிச்சலுடனும், வீரத்துடனும் திப்புவும், சின்னமலையும் அயராது போரிட்டனர். ஜெனரல் டேவிட் பெய்ர்டு சீரங்கப்பட்டிணத்தின் மீது திடீர் தாக்குதல் நடத்தி கைப்பற்றினார். ஆங்கிலேயப்படைகளின் திடீர் பீரங்கித் தாக்குதலால் சீரங்கப்பட்டினம் சீரழிகிறது. மாளிகைகள் தரைமட்டமாக்கப்படுகிறது. துரதிஷ்ட வசமாக "கிழக்கிந்திய கம்பெனியினரை குலை நடுங்க வைத்த மைசூர் மன்னருமான திப்பு சுல்தான் அவர்கள், நான்காம் மைசூர் போரில், மே மாதம் 4 ஆம் தேதி, 1799 ஆம் ஆண்டில் போர்க்களத்திலே வீரமரணமடைந்தார். தீரன் சின்னமலையின் பிற வெற்றிகள் திப்பு சுல்தான் அவர்களின் வீரமரணத்திற்குப் பின்னர், கொங்கு நாட்டில் உள்ள ஓடாநிலை என்னும் ஊரில் தீரன் சின்னமலை தங்கியிருந்தார். திப்புவின் மரணத்திற்குப் பழிதீர்க்கும் வண்ணமாக, அவருக்கு சொந்தமான சிவன்மலை – பட்டாலிக் காட்டில் தனது வீரர்களுக்குப் பயிற்சி அளித்து, பிரெஞ்சுக்காரர்கள் உதவியோடு பீரங்கிகள் போன்ற போர் ஆயுதங்களையும் தயாரித்தார். பின்னர், கி.பி 1799ல் தனது படைகளைப் பெருக்கும் விதமாக, திப்புவிடம் பணிபுரிந்த முக்கியமான சிறந்த போர்வீரர்களான தூண்டாஜிவாக், அப்பாச்சி போன்றோரை தனது படையில் சேர்த்ததோடு மட்டுமல்லாமல், தன்னை ஒரு பாளையக்காரராக அறிவித்து, அண்டைய நாட்டில் உள்ள பாளையக்காரர்கள் அனைவரையும் ஒன்று திரட்டினார். லெஃப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க எண்ணிய அவர், ஜூன் மாதம் 3 ஆம் தேதி, 1800 ஆம் ஆண்டில், கோவைக்கோட்டையைத் தகர்க்கத் திட்டமிட்டார். சரியான தகவல் பரிமாற்றங்கள் இல்லாத ஒரே காரணத்தால், கோவைப்புரட்சி தோல்வியுற்றது. திப்பு சுல்தான் கொல்லப்படுகிறார். அவரது மரணம் தீரன் சின்னமலைக்கு பேரிழப்பாக இருந்தது. ஆங்கிலப்படைகளை தடுத்து நிறுத்த இயலாது என உணர்ந்து தளபதிகளுடன் கொங்குச் சீமைக்கு திரும்புகின்றனர். ஆனால் வரும் வழியில் சுபேதார் வேலப்பன், மற்றும் தளபதி பொல்லான் ஆகியோர் ஆங்கிலேயர்களால் சிறை பிடிக்கப்பட்டு கள்ளிக்கோட்டைக்கு கொண்டு வரப்படுகிறார்கள். ஆங்கிலேயர்களிடம் பிணைக் கைதிகளாக இருந்த சுபேதார் வேலப்பன், தளபதி பொல்லான் ஆகிய இருவரும் கள்ளிக்கோட்டையில் வெள்ளையர்களின் போர்த்தந்திரங்கள், இராணுவ இரகசியங்கள், போர்த் தொடுக்கும் நாள் போன்ற விவரங்களை இரகசியமாக கண்காணித்து பொல்லானின் ஆலோசனைப்படி தோலில் வேலப்பன் எழுதிக்கொடுக்க பொல்லான் தோல்ப்பொருட்கள் கையாளுவதில் வல்லவனாக இருந்ததால் இரகசிய செய்திகள் எழுதிய தோலை செருப்பு வடிவில் மாற்றி அதனைக் காலில் அணிந்து கொண்டு பொல்லான் மாறு வேடத்தில் ஓடாநிலைக்கு அருகில் உள்ள ஓலவலசு என்ற ஊரின் பெரிய ஆலமரத்தின் அடியில் தீரன் சின்னமலையை சந்திக்கிறார். ஆங்கிலேயரின் கண்ணில் மண்ணைத் தூவி உயிரைப் பணையம் வைத்து நாட்டைக் காப்பாற்ற வெள்ளையர்களின் சதிச் செயல்களை முன்கூட்டியே தெரிவித்து உளவு வேலையைச் சரியாக செய்த பொல்லானை கட்டித்தழுவி பாராட்டுகிறார். அன்று இரவு உணவாகத் தீரன் சின்னமலையும் பொல்லானும் ஒரே மண் குவளையில் மாறி மாறிக் குடித்து வேற்றுமை பாராது உடன் பிறப்பைப் போல் சமமாக கருதிய தீரன் மேல் உயரிய மரியாதை பொல்லானுக்கு மேலும் உண்டாகிறது. தீரன் சின்னமலையும் பொல்லானும் அடிக்கடி செய்தியைப் பரிமாறிக்கொள்ளும் இடமாகவும் ஓலை கொடுத்ததால் ஓலைவலசு என்ற பெயர் பெற்ற ஊர் தற்போது ஓலவலசு என மாறி உள்ளது. கி.பி.1801, கி.பி.1802, கி.பி.1804 ஆம் ஆண்டுகளில் தீரன் சின்னமலைக்கும், ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியருக்கும் மூன்று முறை பெரும் போர்கள் நடந்துள்ளன. ஆற்றல் மிக்கதும் பல போர்களில் களம் கண்டு வெற்றியையே கண்ட வெள்ளைப்படைகளைச் சின்னமலை சிறுபடையைக் கொண்டு காவிரிக்கரையில் போரிட்டு வெற்றி பெற்றது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். போர் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்கதாகும். சின்னமலை மற்றும் அவர் படைத்தளபதிகளை போர் தொடுத்து அழிக்க பிரெஞ்சுக்காரரான கர்னல் மேக்ஸ்வெல் என்ற ஆங்கில படைத்தளபதி தலைமையில் திரண்டு வந்தது. படையெடுக்கும் செய்தியை முன்கூட்டியே பொல்லான் மூலம் அறிந்த கருப்ப சேர்வை தலைமையில் காவிரிக்கரையில் காவல்படைகள் தீரமுடன் எதிர்த்துப் போராடியது. சின்னமலையின் குதிரை வீரப் படையினரும் போரிட்டனர். இவர்களோடு போரிடமுடியாமல் ஆங்கிலேயப்படை பின்வாங்கினர். ஆங்கிலேயரோடு நடைபெற்ற முதற்போரில் மாபெரும் வெற்றி பெற்றார் தீரன் சின்னமலை. 1802 ஆம் ஆண்டு பெரிய படை தீரன் சின்னமலையுடன் போர் புரியச் சங்ககிரியிலிருந்து புறப்பட்டது. பெரும்பாலும் வெள்ளையர்கள் அடங்கிய படை, பல போர்களில் வெற்றி கண்ட படை போர்பயிற்சி முறையாகப் பெற்ற ஆற்றல்மிகு படை கர்னல் மேக்ஸ் வெல் தலைமையில் மீண்டும் வந்தது. இப்படையை எதிர்த்து நிற்கக் கருப்பு சேர்வையின் காவிரிக்கரையின் படையால் இயலவில்லை. காவிரியைக் கடந்து வந்த கம்பெனிப்படை வழிநெடுக கொள்ளையடித்துச் சென்றனர். அறச்சலூரில் இருந்த பொல்லான் காவல் படையினர் மூலம் ஓடாநிலையில் தகவல் அறிந்த உடன் தீரன் சின்னமலை போருக்குத் தயாரானார். நான்கு புறமும் குதிரை வீரர்களை அனுப்பிச் சிலம்பக் கூடங்களிலிருந்த படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சின்னமலை படை வரும் வரை காத்திராமல் பொல்லான் தளபதியின் சிலம்பப்படை (தடிவரிசை வீரர்கள்) வீரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டனர். ஓடாநிலை எல்லையிலேயே இப்போர் நடைபெற்றது. தளபதி பொல்லானால் பயிற்சி பெற்ற சிலம்பப் படை சிறிதும் பின்வாங்காது நின்ற இடத்திலேயே நிலையாகப் எதிர்த்துப் போரிட்டனர். பின் வாங்காது நின்று போரிட்ட தமிழர்களின் வீரத்தைக் கண்டு மிரண்டது வெள்ளையர் படை. சிலம்புச் சண்டை என்பது ஆங்கிலேயருக்கு தெரியாது என்பதால் பலமுனைகளிலும் பின்வாங்கியது. தீரன் சின்னமலை கருப்ப சேர்வை படைகளும் வந்து சேர்ந்த பின் பெரும் வீரத்தோடு போரிட்டான். தீரன் சின்னமலை தன் படையின் முன் வந்து போரிட கர்னல் மேக்ஸ் வெல்லும் தன் படைக்கு முன் வந்து போரிட்டான். இருவருக்கும் கடும்போர் நடந்தது. இறுதியில் தீரன் சின்னமலையால் கர்னல் மேக்ஸ்வெல்லின் தலை செவ்விளநீர் போல் வெட்டப்பட்டு கீழே துண்டாக விழுந்தது. அதுகண்டு வெள்ளையர் படை பின்வாங்கி ஓடியது. இப்போரின் வெற்றிக்கு காரணமாக இருந்த தளபதி பொல்லானை தீரன் சின்னமலை, கருப்பு சேர்வையும் வேலப்பனும் வெகுவாகப் பாராட்டினார்கள். கி.பி. 1804 காலாட் படைகளால் சின்னமலையை வெற்றிகொள்ள முடியாது என்று கண்ட கம்பெனியார் தங்கள் மேலிடத்திற்குக் கூறி குதிரைப்படையினரை வரவழைத்து சங்ககிரியிலிருந்து புறப்பட்டனர். மிக வேகமாக வந்த குதிரைப்படை காவிரியைக் கடந்து அறச்சலூர் வந்து சேர்ந்தது. அறச்சலூரில் குதிரைப்படைகள் தங்கின. தம்பட்டபாறையிலிருந்து தளபதி பொல்லான் மூலம் ஓடாநிலைக்குத் தகவல் வந்தது. அப்போது தீரன் சின்னமலை அத்தாணி மண்டபத்தில் இருந்தார். பெரும் குதிரைப்படை வருவதையும் அறச்சலூரில் தங்கியிருப்பதெல்லாம் கேள்விப்பட்டார். தீரன் சின்னமலை மட்டும் திடீரென்று தன் ஆற்றல்மிகு குதிரை மீது தாவி ஏறிப் பாய்ந்தார். குதிரை வடக்கு நோக்கி மிக வேகத்தில் பறந்தது. தீரன் சின்னமலை கையில் வெடிகுண்டு ஒன்று இருந்தது. அறச்சலூரில் நத்தமேடு என்னும் இடத்தில் குதிரைகள் அணிவகுத்து தெற்கு நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருந்தது. அப்போது குதிரைப்படைக்கு தலைமை தாங்கி வந்து கொண்டிருந்த கர்னல் ஹாரிஸ் தன்னை நோக்கித் தன்னந்ததனியாக ஒரு குதிரை வீரன் மட்டும் தலை தெறிக்க வேகமாக ஓடி வருவதைக் கண்டு ஒன்றும் தோன்றாமல் நின்றுவிட்டான். தனியாக வருவதால் தூதனோ என நினைத்தான். மின்னல் வேகத்தில் தீரன் சின்னமலையின் கையிலிருந்த குண்டு ஹாரிஸ்ஸின் குதிரை மார்பில் வந்து பட்டு பாய்ந்து வெடித்தது. உடனே அக்குதிரைக்கு ஏற்பட்ட காயத்தின் வலி தாங்காமல் பயந்து திரும்பி வந்த வழியே ஓட ஆரம்பித்தது. அதைத்தொடர்ந்து எல்லாக் குதிரைகளும் வடக்கு நோக்கி பின் தொடர்ந்து ஓடியது. தீரன் சின்னமலை வெற்றிக்களிப்பில் நின்றார். அவரைத் தொடர்ந்து அறச்சலூர் வந்து சேர்ந்த தளபதிகள் கருப்பு சேர்வை மற்ற படை வீரர்கள் நடந்தவற்றை அறிந்து தன்னந்தனியாகச் தீரன் சின்னமலை பெரும் குதிரைப்படையை வென்றதற்கு பாராட்டி புகழ்ந்தனர். சங்ககிரி, கள்ளிகோட்டையிலிருந்து தளபதி வேலப்பனும், தளபதி பொல்லானும் அனுப்பிய இரகசிய கடிதம் பொல்லானின் உறவுக்காரர் தில்லான் மூலம் தீரன் சின்னமலை பெறுகிறார். அதில் “தங்களை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என வெள்ளையர் திட்டம் தீட்டியுள்ளனர். ஓடாநிலைக் கோட்டையைத் தாக்க இன்றிலிருந்து எட்டாவது நாள் முப்பத்தாறு பீரங்கிகள் புறப்பட உள்ளன. அத்தோடு 72 முரட்டு காளைகளும் தயார் செய்யப்பட்டுள்ளன. அவர்களின் இராட்சதப் பீரங்கிகள் மிகப் பெரியது என்றும் அதன்முன் நம் சிறுரக பீரங்கிகள் நிற்க முடியாது. எனவே ஓடாநிலையை விட்டு சிலநாள் பாதுகாப்பான இடத்திற்கு நீங்களும் மற்ற வீரர்களும் சென்று படைபலத்தைப் பெருக்கி பெரிய பீரங்கிப் போருக்கு தயாராகுங்கள். தலைமறைவாகவும் எச்சரிக்கையாகவும் இருங்கள். இக்கடிதம் படித்தவுடன் கிழித்துவிடவும்” எனக் குறிப்பிட்டிருந்தது. தீரன் சின்னமலை அக்கடிதத்தை பலமுறைப் படித்து சகோதரர்கள் மற்றும் கருப்ப சேர்வையிடமும் ஆலோசனை பெற்றார் அதன்படி ஓடாநிலைக் கோட்டையை விட்டு இரகசிய இடத்திற்கு செல்ல ஆயத்தமானார்கள். ஆனால் பொல்லான் கொடுத்த இரகசிய செய்திகள் அடங்கிய தோல் பொருட்கள் செருப்பு வடிவில் இருப்பதால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள், கண்டுபிடிப்பதும் அரிது என எண்ணி அவற்றை அப்படியே விட்டு விட்டு வெளியேறினர். அது மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. பயணத்திற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யும் அவசரத்தில் பொல்லான் அனுப்பிய இரகசிய கடிதத்தையும் அங்கேயே மறந்து வீட்டு விட்டார் தீரன் சின்னமலை. கருமலைக்குச் சென்ற சகோதரர்கள் தம் குழுவோடு சில மாடுகள், குதிரைகள் போர் வீரர்கள் ஆகியோர் சென்றனர். சமையல்காரன் நல்லானும் உடன் சென்றான். கி.பி. 1805 ஆம் ஆண்டு ஆடி 01 தலை ஆடியன்று தளபதி மெகபூப் தலைமையில் கள்ளிக்கோட்டைப் பீரங்கிகள் ஓடாநிலை நோக்கி நகர்ந்து மேற்கே உள்ள ஓலவலசு என்னும் ஊரில் பீரங்கிகள் வந்து நின்றன. வெள்ளையர்கள் ஓடாநிலைக் கிழக்கு தோட்டத்தில் 72 எருதுகளையும் மேய விட்டனர். தடுத்த உழவர்களைத் துரத்தினர். உடன் அழைத்து வந்த வேலப்பனையும் வேறு சிலரையும் கோட்டைக்குள் சென்று பார்க்க உத்திரவிட்டனர். வேலப்பனை அழைத்துக் கொண்டு கோட்டையின் அனைத்துப் பகுதிகளையும் சுற்றிப்பார்த்தனர். தீரன் சின்னமலை படுத்திருந்த இரகசிய அறையில் பயன்படுத்தாத செருப்பு வடிவில் தோல் பொருட்கள் அதிக அளவில் இருந்தன. வீட்டிற்கு வெளியே இருக்க வேண்டிய செருப்புகள் கோட்டைக்குள்ளே இருப்பது கண்டு ஆங்கிலேயருக்கு மிகுந்த சந்தேகம் ஏற்பட்டது. ஆங்கிலேய வீரர்கள் செருப்புகளை எடுத்து ஆய்வு செய்த பொது அது வேலப்பன் கையெழுத்து என்பதும் இதைக்கொண்டு சேர்த்தவன் தளபதி பொல்லான் என்பதையும் கண்டு பிடித்தனர். தமிழ் படிக்கத் தெரிந்தவர் மூலம் படித்து செய்திகள் அறிந்து கொதித்தெழுந்தான் தளபதி மெகபூப். ஆத்திரத்தில் சில பீரங்கிகளை இயக்கினர். சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டை தூள் தூளாயிற்று. பொல்லான் வாழ்ந்த வாழைத்தோட்ட வலசிற்குச் சென்று தேடினர். பொல்லானைக் கண்டு பிடிக்க முடியவில்லை. பொல்லான் அவரது உறவுக்காரர் தில்லானின் ஊர் ஓடாநிலைக்கு தெற்கே உள்ள நல்லமங்காபாளையத்தில் இருப்பதாக தகவல் அறிந்து அங்கு சென்றனர். நல்லமங்காபாளையம் வேலப்பனின் சொந்த ஊராகும். உடனே வேலப்பனை அழைத்துக் கொண்டு நல்லமங்காபாளையம் வந்தனர். வேலப்பனைப் பார்த்த மகிழ்ச்சியில் பொல்லான் வெளியில் வர ஆங்கிலேயரிடம் பிடிபட்டார் பொல்லான். ஆங்கிலேயர்களுடைய இராணுவ இரகசியங்கள், போர்த் தந்திரங்கள், போர்த் தொடுக்கும் நாள் போன்ற முக்கிய இரகசியச் செய்திகளை அனுப்பி தீரன் சின்னமலைக்கு உதவியும், உயிரைக் காப்பாற்றியும், மூன்று முறை ஆங்கிலேயரை போரில் வெற்றி பெறச் செய்தும் ஆங்கிலேயருக்கு துரோகம் செய்த பொல்லான், வேலப்பன் இருவரின் உயிரை சித்ரவதை செய்து கொல்ல வேண்டும் என்றும் அப்போது தான் தீரன் சின்னமலை அச்சமடைந்து சரணடைவான் என தளபதி மெகபூப் முடிவு செய்தார். பொல்லான், வேலப்பன் இருவரையும் நல்லமங்காபாளையத்தில் தலைகீழாக தொங்க விட்டு தோலை உரித்து சுட்டுக் கொன்றனர். துப்பாக்கிக் குண்டுகள் இருவரின் உடலையும் சல்லடையாகத் துளைத்தன. மாவீரர்கள் பொல்லான், வேலப்பன் இருவரும் வீர மரணம் எய்தினார்கள். தளபதிகள் பொல்லான், வேலப்பன் ஆகியோரின் கொடூர மரணத்தைக் கேள்வியுற்ற தீரன் சின்னமலை மிகவும் வேதனையடைந்தார். தீரன் சின்னமலையை போரிட்டு வெல்ல முடியாது என்பதை உணர்ந்த ஆங்கிலேயர் அவர் கருமலையில் தங்கியிருந்த தகவலை மோப்பம் பிடித்து சூழ்ச்சியால் வஞ்சம் தீர்க்க எண்ணி சமையல்காரன் நல்லானுக்குப் பொன் பொருள் ஆசை காட்டியதன் மூலம் நல்லான் தீரன் சின்னமலையைக் காட்டிக் கொடுத்துவிட்டான். ஆங்கிலேயரால் சிறை பிடிக்கப்பட்டு தீரன் சின்னமலையும், கருப்பு சேர்வையும் அவரது சகோதர்களும் சங்ககிரி கோட்டையில் 1805 ஆம் ஆண்டு ஆடி மாதம் 18ஆம் நாள் (31.07.1805) தூக்கிலிடப்பட்டனர். வீர மரணம் எய்தினார்கள். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தீரன் சின்னமலைக்கு முழு உருவச் சிலையோடு கட்டிய மணிமண்டபம். தீரன் சின்னமலைக்குத் தமிழக அரசு ஈரோடு மாவட்டம் அறச்சலூர் ஓடாநிலையில் நான்கு ஏக்கர் நிலத்தில் ஐம்பது இலட்சம் செலவில் முழு உருவச் சிலையோடு மணிமண்டபம் கட்டி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெருமை சேர்த்தார். 30.07.2005 அன்று இந்திய ஒன்றிய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களின் சீரிய முயற்சியின் பேரில் ஒன்றிய அரசு தீரன் சின்னமலைக்கு அஞ்சல் தலை வெளியிட்டது. இதன் விழா சென்னை கலைவாணர் அரங்கில் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டு சிறப்புரையாற்றிய போது தீரன் சின்னமலை அனைத்து சமுதாய இளைஞர்களையும் ஒருங்கிணைத்து ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டார். சமூக ஒற்றுமையைப் பேணிக்காத்தவர். தீரன் சின்னமலைக்கு "நல்லது செய்தவன் பொல்லான் கெட்டது செய்தவன் நல்லான்" எனப் பேசினார். மாவீரர் பொல்லானின் பெருமையை உலகறியச் செய்தவர் முன்னாள் தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். குறிப்பு: அத்தகைய பெருமைமிகு மாவீரர் பொல்லான் அவர்களுக்கு சிறப்பான முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கவும், ஒன்றிய அரசு மூலம் அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பு சேர்க்கவும் தமிழ் நாடு அரசின் மாண்புமிகு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பணிவான வேண்டுகோளை அருந்ததியர் இன மக்கள் சார்பில் முன் வைத்து நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். நன்றியுடன் சான்றாதாரக் குறிப்புகள் 1. ஈரோடு வடிவேல் இராமன்- சுதந்திர போராட்ட மாவீரர் புகழ்மிகு பொல்லான் 2. கூகுள் இணையதளம் பொட்டிப் பகடை பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டது 1799-ம் ஆண்டு. அவருக்குப் பிறகு பாளையக்காரராகத் தம்மை அறிவித்துக்கொண்ட, அவரது தம்பி ஊமைத்துரை கொல்லப்பட்டது 1801-ம் ஆண்டு. இடையில் கழிந்த இரண்டு ஆண்டுகள் மேலும் முப்பது நாட்கள், (கும்பனிக்கு} வெள்ளையருக்கு எதிராக, ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்தினார் ஊமைத்துரை என்கிற குமாரசுவாமி. ஊமைத்துரையோடு அவருக்கு நிகராக, சில வேளைகளில் மேலாகப் போர்ச் செயல்பாடுகளில் ஈடுபட்டவர், பாஞ்சாலங் குறிச்சியின் தளபதியாக இருந்த கட்ட கருப்பச் சுந்தரலிங்கத் தேவேந்திரர் என்றே வரலாறு பதிவு செய்திருக்கின்றது. இப்போதும் வெள்ளையருக்கு எதிராகப் படைகளும், நாயக்கர்களும் தேவேந்திரர்களும் கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள், ஊமைத்துரைக்கு ஆதரவாக.கயத்தாறில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட 16.10.1799 அன்று ஊமைத்துரை யும் அவருக்கு நெருக்கமான உறவும், சில வீரர்களும் ஆகப் 16 பேரும் பாளையங்கோட்டைச் சிறையில், தூக்குக் கயிறை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் கைவிலங்கும், கால் விலங்கும் போடப்பட்டு மிக விழிப்பாகக் கண்காணிக்கப்பட்டனர். முன்னர் 9.9.1799 அன்று கோல்வார்பட்டியில் நடந்த சண்டையின்போது தலைமறைவான தளபதி சுந்தரலிங்கம், சும்மா இருக்கவில்லை. தலைமறைவுக் காலமான அந்த ஐந்து மாதங்களைப் பயன்படுத்திக்கொண்டு, பாஞ்சாலங்குறிச்சியின் பக்கத்தில் அவர் பிறந்த ஊரான சுவர்னகிரி, பசுவந்தனை, பட்டணமருதூர் முதலான ஊர்களில் தேசப்பற்றும் (தேசம் என்பது அந்தக்காலத்தில் பாஞ்சாலங்குறிச்சி தான்), போர் ஆர்வமும் கொண்ட இளைஞர்களைத் திரட்டி படையாக்கிப் போர்ப் பயிற்சி கொடுத்தார். இப்படியாகச் சிறுபடையைத் தயார் செய்து கொண்டிருந்த தளபதி சுந்தரலிங்கம், பாளையங்கோட்டை சிறையை உடைத்து ஊமைத்துரை மற்றும் குழுவினரையும் மீட்கத் திட்டமிடத் தொடங்கினார். சிறையிலிருக்கும் ஊமைத்துரைக்கும் தளபதி சுந்தரலிங்கம் முதலான புரட்சிக்காரருக்கும் பாலமாக இருந்து பெரும்பணி செய்தவர் பொட்டிப் பகடை. ஊமைத்துரைக்கு உணவு கொண்டு போய் கொடுக்கும் பணியில் இருந்த பொட்டிப் பகடை, ஊமையன் குழுவினர் சொல்வதைப் புரட்சிக்காரர்க்கும், இவர்கள் திட்டத்தை ஊமையனுக்கும் சொல்லி வந்து, சிறை உடைப்புக்கு உருவம் கொடுத்தார். வெளியில் இருந்த புலிக்குட்டி நாயக்கரும் உதவி செய்ய முன்வந்தார். (ஊமையன் என்ற சொல் அன்போடு பயில்கிறது, வரலாற்றில்) சிறை உடைப்பு 1801-ஜனவரி இரண்டாம் தேதி என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு முதல் நாள் சுமார் 200 புரட்சியாளர்கள், நெல்லை-பாளையங்கோட்டை சாலையில் காணப்பட்டார்கள். அவர்கள் திருச்செந்தூர், முருகனுக்குக் காவடி எடுப்பதுபோல, காவடிகளைத் தம் தோளில் வைத்துக்கொண்டு சிந்துப் பாடல்கள் பாடியபடி வந்தார்கள். இடுப்பில் மஞ்சள் துண்டு கட்டிக்கொண்டு, மந்திரங்கள் ஓதியபடி பக்தர்களுக்குத் திருநீறு அளித்துக்கொண்டு நடந்தார்கள். முன்னரே அங்கிருந்த வீரர்களுடன் சங்கேதச் சொற்களில் உரையாடியபடியும் பாளைச் சிறைச்சாலைக்கு முன்பாக நடந்து இடத்தைக் கவனித்தார்கள். அதில் பெரிய காவடி எடுத்தவராகச் சுந்தரலிங்கம் இருந்தார்.இதேநாள், சிறைச்சாலையில் இருந்த ஊமையன் குழுவினர், ஒரு நாடகம் நடத்தத் தொடங்கினார்கள். சிறையில் பெரியம்மை வந்த ஒரு கைதி இறந்ததை முன்னிட்டு, ஊமையன் குழுவினரின் கை விலங்குகள் விலக்கப்பட்டிருந்தது, அவர்களுக்கு நல்ல வாய்ப்பைத் தந்தது. அதோடு, போரில் இறந்த உற்றார் உறவினர்களுக்குத் திதி கொடுக்க விரும்புவதாகவும், அதற்கான வாழை இலை, தேங்காய், சூடம் பொங்கலுக்கான அரிசி, வெல்லம், விறகு போன்றவை வாங்க அனுமதி வேண்டும் என்று சிறையதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். விஷயம் தெய்வ நம்பிக்கை சார்ந்ததாக இருப்பதால், தனக்குத் தெய்வக் குற்றம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் அதிகாரி அனுமதி கொடுத்தார். அதே நேரம் காவடி எடுத்துக்கொண்டு வந்த சுந்தரலிங்கம் குழுவினர், விறகுகள், வாழை, பழங்கள், அரிசி, பருப்பு விற்கும் வியாபாரிகளாக உருமாறினார்கள். திருச்செந்தூருக்குக் காவடி எடுத்து வரும் பக்தர்கள், ஆங்காங்கே தங்கிப் பொங்கிச் சாப்பிடுவது யதார்த்தம் ஆனதாலும், இம்மாதிரி வியாபாரிகள் அங்கு திரிவது இயல்பானது என்பதாலும், சிறை அதிகாரி, ‘இந்த’ வியாபாரிகளை விகற்பமாக நினைக்கவில்லை. அதோடு, சிறை அதிகாரி, அந்த வியாபாரிகளைச் சிறைக்குள் அனுமதித்தார். சிறைக்குள் புகுந்த வியாபாரிகள் ஊமையனின் சைகையைப் பெற்றவுடன், அந்தச் சமயத்தில் சிறைக்குள் இருந்த இருட்டைப் பயன்படுத்திக்கொண்டு, விறகுச் சுமைக்குள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை வெளியே எடுத்தார்கள். சிறைக்குள் அடுத்து ஏற்பட்ட சண்டையில் சிறைக்கதவு உடைக்கப்பட்டு ஊமையன் குழுவினர் வெளியேறினர். புரட்சியாளர்கள், ஜனவரி 2-ம் தேதியைத் தேர்ந்தெடுத்தமைக்கான காரணம், அன்று கும்பனி அதிகாரி மெக்காலே வீட்டில் மாலை நடந்த விருந்துக்கு, இருபது அதிகாரிகளும், அவர்களது பாதுகாப்புக்கு நிறைய சிப்பாய்களும் கலந்து கொண்டிருந்தார்கள். சிறை பாதுகாப்பு பலவீனப்பட்டிருந்தது. ஊமையன் குழுவும், சுந்தரலிங்கம் வீரர்களும் நேராகப் பாஞ்சாலங்குறிச்சிக்கு (சுமார் 30 கல் தொலைவில் இருக்கிறது) வந்து சேர்ந்தார்கள். ஆங்கிலேயரால் இடித்துப் பாழ்பட்ட கோட்டையை மீண்டும் கட்ட வேண்டியதே முதல் பணியாக அவர்களுக்கு இருந்தது. ஆறு நாளில், கோட்டை உருவாயிற்று. சுமார் 500 அடி உயரமும் நீளமும், 200 அடி அகலமும் கொண்ட கோட்டை. கோட்டைச் சுவரின் உயரம் 12 அடிகள். ஊமையனின் சிறையுடைப்பு கும்பனிக்கு மாபெரும் பின்னடைவு என்பதை அவர்கள் உணரவே செய்தார்கள். கயத்தாற்றை நோக்கி கும்பனிப் படைகள் புறப்பட்டன. குலைய நல்லூரிலும் மற்றும் பல ஊர்களிலும் ஊமையனின் கொரில்லா முறைத் தாக்குதலில் பெரும் நஷ்டங்களைச் சந்தித்தது கும்பனி படை. இந்தக் கட்டத்திலும் ஊமைத் துரை, ஒரு கூட்டணிக்கு முயற்சி செய்தார். பாளையக்காரர்கள் பலருக்கும் தனக்கு உதவுமாறும், உதவவில்லை என்றாலும், கும்பனிக்கு உதவ வேண்டாம் என்றும் சுதந்திரத்தின் பெயரால் ஓலை அனுப்பினார். தஞ்சை, புதுக்கோட்டை, எட்டையபுரம், ஊத்துமலைப் பாளையங்கள் ஊமையன் கோரிக்கையை நிராகரித்தன. தொடக்கத்தில் ஊமையன் சில குறிப்பிடத்தகுந்த வெற்றிகளைப் பெற்றார். என்றாலும் கும்பனிப் படை பலம், பீரங்கிகள் போன்ற நவீன ஆயுதபலம், தமிழ் நிலத்தில் நிலைபெற்றிருக்கும் துரோக பலம் ஆகியவற்றின் உதவியால் கும்பனி, வெற்றியை ஈட்டத் தொடங்கியது. பாஞ்சாலங்குறிச்சி கோட்டை 24.5.1801-ல் வீழ்ந்தது. ஊமைத் துரையும் சுந்தரலிங்கமும் தப்பித்து வெளியேறினார்கள். பகடைகளும், தேவேந்திரர்களும், நாயக்கர்களும் இரத்தத்தாலும், வியர்வையாலும் கட்டிய கோட்டை சிதைந்தது. போரிட்டுக் கொண்டே சென்றதில் பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் கோட்டைக்கு வெளியே சிதறிக் கிடந்தனர். கோட்டையில் இருந்து மூன்று கல் தொலைவில் இருந்த சுவர்னகிரிக்கு அருகில் ஊமையனும், சுந்தரலிங்கம், வேறு பலரும் வெட்டுக் காயங்களுடன் மண்ணில் கிடந்தனர். வீழ்ந்துக்கிடந்த வீரர்களின் மத்தியில் தளபதி சுந்தரலிங்கத்தைக் கண்டுபிடித்தார், சுந்தரலிங்கத்தின் தாயாரான முத்தம்மாள். சுந்தரலிங்கம், தன் தாயிடம் ‘என்னை விடு, பக்கத்திலே கிடக்கும் சாமியைக் (குமாரசாமியாகிய ஊமைத்துரை) காப்பாற்றும்மா’ என்று சொல்லி இருக்கிறார். முத்தம்மாள் இருவரையுமே, தன் வீட்டுக்கு எடுத்து வந்து, காயங்களுக்கு மருந்திட்டுக் காப்பாற்றி இருக்கிறார். உடல் நிலை தேறியதும், ஊமைத்துரையும் சுந்தரலிங்கமும், மருது சகோதரர்களின் உதவியைப் பெற சிறுவயலுக்குச் சென்றார்கள். ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்தமைக்காக, கும்பனி சிவகங்கை மேல் படையெடுத்தது. மருது சகோதரர்கள் மற்றும் ஊமைத்துரை, சுந்தரலிங்கம் ஆகியோர் அணிதிரண்டு போரிட்டார்கள். நான்கு மாதங்கள் தொடர்ந்த இந்தப் போரின் இறுதி, மிக்க சோகத்தில் முடிந்தது. மருது சகோதரர்கள் தூக்குக் கயிற்றில் தங்கள் சுதேச மானத்தை எழுதினார்கள். விருப்பாட்சியில் ஊமையனும், சுந்தரலிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலங்குறிச்சி பீரங்கி மேட்டில் வைத்து, 16.11.1801 அன்று ஒரே நாளில் ஒரே இடத்தில் தூக்கிலிடப்பட்டார்கள். இப்படியாக சுதந்திரப் போராட்டம், பாஞ்சாலங்குறிச்சியைப் பொறுத்தவரையில் ஒரு முடிவுக்கு வந்தது. மாபெரும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தமிழ் நிலத்துப் போர், தமிழர்கள் பெருமைப்படும் விதத்திலேயே நடந்து முடிந்தது. வரலாற்றின் பக்கங்களை, வரலாறு நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, யாரும் அறிவதும் இல்லை. உணர்வதும் இல்லை. பல காலங்களுக்குப் பிறகு, வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் ஓர் ஆய்வாளர், வரலாற்று நிகழ்ச்சிகளை, வரலாற்றை உருவாக்கிய மாமனிதர்களின் பங்கை, தன் அறிவையும் தன் சார்பையும் கொண்டு அளவிடுகிறார். போராட்டமே வரலாற்றை உருவாக்குகிறது என்கிற ஞானம் கைவரப்பெற்ற ஆய்வாளர், தன் வரலாற்றைப் போராளிகளைச் சார்ந்து உருவாக்குகிறார். கான்கிரீட் தரையிலும் மீன் பிடிக்க ஆசைப்படும் ஆய்வாளர், நிறுவனங்கள் தமக்குச் சாதகமாக உருவாக்கி இருக்கும் கருத்துகளோடு உடன்பட்டுப் பொய்யை விரிக்கிறார். பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் பற்றிய கதைப் பாடல்கள், அவர்கள் அனைவரும் மறைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகே, அதாவது 1850க்குப் பிறகே உருவாக்கப் படுகின்றன. 1847-ம் ஆண்டு, கும்பனி அரசு அடிமை முறையை ஒழித்த பிறகே, இந்தக் கலை இலக்கியங்கள் வெளிப்படத் தொடங்கின. நாட்டுப் புலவர்கள், தங்களுக்கு வந்து சேர்ந்த நிகழ்ச்சிகளின் புரிதல் அடிப்படையில் மட்டுமே அல்லாது, அவர்கள் காலத்து ஊரின் பாடப்படும் இடத்தின் சாதி மேலாண்மைக்கு தம் பாடல்களைப் பாடி இருக்கிறார்கள். பாஞ்சாலங்குறிச்சி போர் இலக்கியத்தில் நிறைய புனைவுகள் புகுந்துள்ளன. இப்புனைவுகளில் இருந்து, உண்மையைத் தேடும் சில ஆய்வாளர்கள் அண்மைக் காலத்தில் உருவாகி இருக்கிறார்கள். மேற்சாதித் தலைவர்களோடு, சமகாலத்தில் சம அளவில் பங்குகொள்ளும் வீரர்கள், அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தால், வரலாற்றில் இருந்தே அழிக்கப்பட்ட இழி நிலையை மாற்றும் ஆய்வாளர்கள், கடந்த சில ஆண்டுகளில் தான் வந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் சுந்தரலிங்கத்தை வெளிக்கொணர்ந்த தமிழவேள். பாஞ்சாலங்குறிச்சிப் போரில் முக்கியமானவர்களாக கட்டபொம்மன், ஊமைத்துரை, சிவத்தையா, தானாபதிப் பிள்ளை, சுந்தரலிங்கம், தாலாடி கருப்பணர், கந்தன் பகடை, முத்தன் பகடை, பொட்டிப் பகடை ஆகியோரே முக்கியமானவர்கள் என்கிறார் தமிழ்வேள். தேவேந்திரன், பகடை, பறையர்கள் என்று எழுதவே ஆதிக்க சாதிப் பேனாக்கள் மறுக்கும் சூழ்நிலையே வரலாறு முழுதும் இருந்துள்ள காலகட்டத்தில் இவர்களின் தியாகம் மறைக்கப்பட்ட காரணத்தை விளங்கிக் கொள்ள முடிகிறது. பாஞ்சாலங்குறிச்சி வரலாற்றில் வெள்ளையத் தேவன், வெள்ளையம்மாள் இருவரும் புனைப் பாத்திரங்கள் என்கிறார் தமிழ்வேள். பாஞ்சாலங்குறிச்சிப் போரில் முதல் களப்பலியே துணைத் தளபதி கந்தன் பகடை. வரலாற்று ‘மேற்குல’ ஆசிரியர்களுக்கு அதை எழுதவே கை கூசுகிறது. ஆனால், மக்கள் தங்கள் வீரர்களை மறப்பதில்லை. நன்றியுடன் சான்றாதாரக் குறிப்புகள் 1. ஆசிரியர் எழில் இளங்கோவன் அவர்களின் " அருந்ததியர் வரலாறு வினாவும் விளக்கமும்" பக்கம் 31 மும்பை அருந்ததியர் சங்கம், 1998. 2. Potti Pagadai, Muthan Pagadai, Kanthan Pagadai songs முப்பகடையர் பாடல் (ஆதித் தமிழர் கட்சி) Mar 28, 2020 3. ஆதித் தமிழர் அருந்ததியர் Facebook May 6, 2019. தமிழ் நாடு மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு சில வேண்டுகோள்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழர் முன்னேற்றத்திற்கும் சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றிற்கும் பெரும் பணி ஆற்றியுள்ளனர். அவர்கள் வழி பின்பற்றும் தமிழ் நாடு முதல்வர் பொறுப்பேற்றிருக்கும் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் கல்வியில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். - பட்டியல் இன குழந்தைகளுக்கு பள்ளி ஆரம்பம் முதல் பல்கலைக்கழக படிப்பு வரை மாணவ மாணவிகளுக்குப் படிக்கக் கட்டணம் இல்லாமல் 100% மானியத்தில் (கியூபா நாட்டின் கல்வி முறை போன்று ) ஒவ்வொரு மாணவருக்கும் அரசே கல்வி அளிக்க வேண்டும். இலவசத்தை எதிர்நோக்காமல் நிரந்தர பணி கிடைக்கும் வகையில் கல்வித் தரம் உயர்த்தி பொருளாதார முறையில் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும். - அரசு பள்ளிகள், கல்லூரிகளின் உள்கட்டமைப்பு தரம், கல்வி பாடத்திட்டங்கள் ஆகியவை அரசுக்கும் தனியார் பள்ளி கல்லூரிகளுக்கும் வேறுபாடின்றி அமைந்து அனைவரும் அரசு பள்ளி, கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் வகையில் கல்வி மற்றும் வாழ்வின் தரம் உயர்ந்து, நிரந்தரப் பணி கிடைக்கும் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும். - எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற வகையில் பட்டியல் இன மக்களின் கல்வி, பொருளாதாரம் உயர்ந்தால் சாதி பேதங்கள் குறைந்து சமத்துவ நிலை ஏற்படும். - தமிழர்களின் வாழ்வியல் முறை, கல்வி, பண்பாடு, அறிவியல், மருத்துவம் (சித்த மருத்துவம் உட்பட), மறைக்கப்பட்ட தமிழர்களின் வீர வரலாறு வெளிக்கொணர்தல் போன்றவை கல்விப் பாடத்திட்டங்களில் இடம் பெற்று புதிய வரலாற்றைப் படைக்க வேண்டும். - துப்பரவுத் தொழில் செய்வோரை அரசுப் பணிகளில் நிரந்தமாக்கி இயந்திரங்களைப் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மிக்க நன்றியுடன் கருவூர் இரா பழனிச்சாமி கணியம் அறக்கட்டளை [] தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழலை உருவாக்குதல். பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். எமது பணிகள் - கணியம் மின்னிதழ் - kaniyam.com - கணிப்பொறி சார்ந்த கட்டுரைகள், காணொளிகள், மின்னூல்களை இங்கு வெளியிடுகிறோம். - கட்டற்ற தமிழ் நூல்கள் - FreeTamilEbooks.com - இங்கு யாவரும் எங்கும் பகிரும் வகையில், கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில், தமிழ் மின்னூல்களை இலவசமாக, அனைத்துக் கருவிகளிலும் படிக்கும் வகையில் epub, mobi, A4 PDF, 6 inch PDF வடிவங்களில் வெளியிடுகிறோம். - தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கம் - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல். மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். https://github.com/KaniyamFoundation/Organization/issues இந்த இணைப்பில் செயல்களையும், https://github.com/KaniyamFoundation/Organization/wiki இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account