[] []   அரிய இயல் தாவரங்கள் (சேர்வராயன் மலை)                  ஏற்காடு இளங்கோ                               மின்னூல் வெளியீடு : http://www.FreeTamilEbooks.com  உரிமை : Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். ஆசிரியர் - ஏற்காடு இளங்கோ yercaudelango@gmail.com  அட்டைப்படம் - மின்னூலாக்கம் - த. சீனிவாசன் tshrinivasan@gmail.com பொருளடக்கம் என்னுரை 7  சேர்வராயன் மலை 8  1. மலை சுத்தி 16  2. சடகை 17  3. முயல் காது செடி 19  4. ஐலக்ஸ் 21  5. பாறை பால்சம் 22  6. முயல் கொம்புச் செடி 23  7. கள்ளி மடையன் 24  8.பிராக்கிஸ்டெல்மா 25  9.கொடிக்கள்ளி 26  10. பிட்டோஸ்போரம் 28  11.காந்தள் 29  12. நரிவெங்காயம் 31  13. காட்டு வெங்காயம் 33  14. டிப்கேடி 35  15. வசம்பு 37  16. யானை காது செடி 38  17. பாதாள மரம் 40  18. சிலண்டி 42  19.கவியா 44  20. ஆச்சா 46  21.அழுகண்ணி 48  22. கொசு வெட்டி 50  23. செங்குருந்து 52  24. காட்டு பிகோனியா 53  25. மலை கொய்யா 55  26. கில்டிகார்டியா 57  27.செந்தனுக்கு 59  28. சாலம்பூ 61  29. குழல் பூ லில்லி 63  30. நீலக்குறிஞ்சி 65  31. ஸ்டீமோனா 67  32. கரிந்து 69  33. காட்டுத்துவரை 71  34. சந்தனம் 73  35. வண்டுக்கடிச்செடி 75  36. மிளகு 77  37. சிறுகுறிஞ்சா 79  38. ஜிம்னிமா 81  39. மருந்து கூர்கான் 82  40. கொட்டம் 84  41. உரிக்கால் செடி 85  42. ஆட்டுக்கால் கிழங்கு 86  43. நீட்டம் 88  44. சைலோட்டம் 90  45. யானை பெரணி 92  46. முழு இலைபெரணி 94  47. பூ பெரணி 96  48. பெரணி மரம் 98  49. குதிரைவால் செடி 100  50. லைக்கோபோடியம் 102  51. போட்ரிக்கியம் 103  52. அக்கேந்தபிப்பியம் 104  53. சைத்தானின் விரல்கள் 105  54. லைப்பேரிஸ் 106  55. பல்போபில்லம் 107  56. கேஸ்ட்ரோசில்லஸ் 108  57. இரியா 109  58. டேனியோபில்லம் 110  59. பாலிஸ்டேக்கியா 111  60. ஏஞ்சல் ஆர்க்கிடு 112  61. சிலந்தி ஆர்க்கிடு 113  62. 200 ஆண்டு காட்டு மாமரம் 114    என்னுரை [] சேலம் மாவட்டத்தில் உள்ள சேர்வராயன் மலையானது பல்வேறு தாவரங்களைக் கொண்ட ஒரு இயற்கை வளம் நிறைந்த பகுதியாக விளங்கி வருகிறது. மலைப்பகுதியில் வளர்ச்சி என்ற பெயரால் தாவரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. அதனால் பல்வேறு தாவரங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. இம்மலையில் அழிந்து வரும் தாவரங்களும், அரிதான தாவரங்களும் குறிப்பிடும்படியான அளவில் இருக்கின்றன. இம்மலையில் இயற்கையாக வளரும் இயல் தாவரங்கள் மற்றும் வேறு பல பகுதிகளில் இருந்து கொண்டு வந்து பாதுகாக்கப்படும் அரிய தாவரங்களும் உள்ளன. தாவரவியல் பயிலும் மாணவர்களுக்கும் மற்றும் தாவரங்களின் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கும் இது பயனுள்ளதாக அமையும். மேலும் இது போன்ற அரிதான தாவரங்களைப் பாதுகாத்து, பராமரிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளேன்.   இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு எனக்குப் பெரும் உதவியாக விளங்கியது பொட்டானிக்கல் சர்வே ஆப் இந்தியா என்னும் தாவரங்கள் மதிப்பாய்வுத் துறையாகும். இங்கு பணிபுரியும் அனுபவத்தைக் கொண்டே இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளேன். இதனை எழுதுவதற்கு உதவி புரிந்த எனது மனைவி திருமிகு இ.தில்லைக்கரசி அவர்களுக்கும், பிழைத் திருத்தம் செய்து கொடுத்த ஆசிரியர் திருமிகு சி.சீனிவாசன் அவர்களுக்கும் நன்றி. மேலும் இப்புத்தகத்தை தட்டச்சு செய்து கொடுத்த திருமிகு ந.மு.கார்த்திகா அவர்களுக்கும், இதனை வெளியிட்ட Freetamilebooks.com எனது மனமார்ந்த நன்றி. வாழ்த்துகளுடன் ஏற்காடு இளங்கோ         சேர்வராயன் மலை ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் முக்கியமான கோடை வாசஸ்தலம் ஏற்காடு ஆகும். ஏற்காடு சேர்வராயன் மலையில் இடம் பெற்றுள்ளது. சேர்வராயன் மலை எனச் சொன்னால் பலருக்குத் தெரியாது. ஏற்காடு மலை எனச் சொன்னால் அனைவருக்கும் தெரியும். இந்திய சுற்றுலா பயணிகளைத் தவிர வெளிநாட்டு பயணிகளும் சுற்றுலா வந்து செல்லும் அளவிற்கு உலகளவில் பிரபலமான பகுதியாக ஏற்காடு விளங்குகிறது. தமிழ்நாட்டில் உள்ள மலைச் சுற்றுலாத் தளங்களில் ஊட்டி, கொடைக்கானல் ஆகிய இரண்டு இடங்களுக்கு அடுத்தபடியாக பிரபலம் அடைந்திருப்பது ஏற்காடாகும். சேலம் நகரத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் ஏற்காடு அமைந்துள்ளது. சேர்வராயன் மலையில் உள்ள 67 கிராமங்களின் தலைநகரமாக விளங்குவது ஏற்காடு நகரமாகும். சேர்வராயன் மலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 350-1610 மீட்டர் (5500 அடி) உயரம் கொண்டது. இந்த மலைத் தொடரானது சுமார் 400 சதுர கிலோமீட்டர் (99,000 ஏக்கர்) பரப்பளவு கொண்டது. இதன் தட்பவெப்பநிலை என்பது 11 டிகிரி செல்சியஸ் முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது. தற்போதைய சராசரி ஆண்டு மழையளவு என்பது 136-148 சென்டி மீட்டராகும். இதனை கிழக்கு மலைத்தொடரின் ’ராணி’ என வர்ணிக்கின்றனர். இந்த மலையின் பிரதான வணிக பயிராக காபி விளங்குகிறது. சுமார் 13,000 ஏக்கர் நிலப்பரப்பில் காபி பயிரிடப்படுகிறது. பெரும்பகுதி காபி எஸ்டேட்டுகளைக் கொண்டதாக இருக்கிறது. தாவரங்களின் அழிவு :  சேர்வராயன் மலையில் மக்களின் குடியேற்றம் என்பது சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கி.பி 8 ஆம் நூற்றாண்டில் நடந்தது. அது முதலே இங்கு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஏற்காடு பழங்குடி மக்கள் அல்லது மலைவாழ் மக்கள் என்பவர்கள் சுமார் 1200 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். ஆரம்பத்தில் தாங்கள் வாழ்வதற்கும், விவசாயம் செய்வதற்கும் சிறிய அளவில் காடுகளை அழித்து அதனைப் `பயன்படுத்தினர். அவர்களுக்கு வாழ்வு கொடுக்கும் மலைக்காடுகளை பாதுகாத்தும் வந்தனர். ஏற்காட்டில் ஆங்கிலேயர்களின் குடியேற்றம் என்பது 1820 ஆம் ஆண்டில் துவங்கியது. 1840 ஆம் ஆண்டில் காடுகளை அழித்து காபி தோட்டங்களை ஏற்படுத்தினர். அதனால் மலையில் இயற்கையாக வளர்ந்த இயல் தாவரங்கள்(Wild) அழிக்கப்பட்டன. தொடர்ந்து காபி தோட்டங்கள் உருவாக்குவதற்காக காடுகள் அழிக்கப்பட்டன. அந்த இடங்களில் காபி பயிரிட்டனர். அதுதவிர இந்திய மரங்களுக்குப் பதிலாக சில்வர் ஓக் போன்ற மரங்களை நட்டு வளர்த்தனர். பணம் தரக்கூடிய மரவகைகளுக்கே முன்னுரிமை தந்தனர். அதே சமயத்தில் பல பழங்களைத் தரக்கூடிய வெளிநாட்டு மரங்களையும் சேர்வராயன் மலையில் வளர்த்தனர். இன்றைக்கு காபி தோட்டங்கள் எத்தனை ஏக்கர் நிலப்பரப்பில் இருக்கிறதோ அவை அனைத்தும் 1840 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வரை வனக்காடுகளாகவே இருந்தன. ஆகவே இங்கு வளர்ந்த இயல் தாவரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. எந்த எந்த தாவர இனங்கள் இங்கு வாழ்ந்தன என்பதைக் கண்டறியும் முன்பே பல இனங்கள் அழிக்கப்பட்டுள்ளன. சுதந்திரம் அடைந்த பிறகே காபி தோட்டங்கள் ஆங்கிலேயர்களிடமிருந்து இந்திய தோட்ட அதிபர்களின் கைக்கு மாறியது. அதன் பிறகு வனச்சட்டங்கள் மூலம் காடுகள் அழிப்பது என்பது கட்டுப்பாட்டிற்குள் வந்தது. 1990 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட உலகமயமாக்கல் கொள்கையால் காபி உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்பட்டது. காபிக்கான விலை வீழ்ச்சி ஏற்பட்டது. அதன் பின்னர் சிறு சிறு காபி தோட்டங்கள் ரியல் எஸ்ட்டேட்டாக மாறத்தொடங்கியது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           சுற்றுலா வளர்ச்சி என்ற காரணத்தால் பல தங்கும் விடுதிகள் தோன்றின. 1984 ஆம் ஆண்டில் ஏற்காட்டில் 4 தங்கும் விடுதிகள் மட்டுமே இருந்தன. ஆனால் 2016 ஆம் ஆண்டில் கணக்கிடும் போது 300 க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உருவாகிவிட்டன. இதனால் அந்த இடங்களில் இருந்த இயல் தாவரங்கள் மற்றும் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் வளர்க்கப்பட்ட தாவரங்கள் ஆகியவற்றிற்கும் அழிவு ஏற்பட்டு விட்டன. விடுதிகளின் முன்பு அழகிற்காக அந்நிய நாட்டுத் தாவரங்களே வளர்க்கப்படுகின்றன.  சந்நியாசி மலையில் வெளிநாட்டு மரமான சடை சவுக்கு (Callitris rhomboidea) அதிகம் இருந்தது. இது திருமணம் போன்ற விழாக்களில் அழகிற்காகப் பயன்படுத்தத் தொடங்கினர். அதன் விளைவாக இம்மலையில் உள்ள சடை சவுக்கு இலைகளைத் தொடர்ந்து வெட்டி எடுத்துச் சென்று விற்பனை செய்தனர். அதனால் சந்நியாசி மலை முழுவதும் பரவி இருந்த சடை சவுக்கு மரமும், அதன் நாற்றுகளும், விரைவில் அழிந்து போயின. 1985 ஆம் ஆண்டில் சந்நியாசி மலை முழுவதும் பரவி பசுமையாக இருந்தது. 2004 ஆம் ஆண்டில் மிகவும் வேகமான அழிவை நோக்கிச் சென்றது. தற்போது 2016 ஆம் ஆண்டில் பார்க்கும் போது ஒரு சில மரங்களை மட்டுமே காண முடிகிறது. இதே போல் சேர்வராயன் கோயிலை ஒட்டிய சரிவு பகுதியில் இருந்த சடை சவுக்கு மரங்களும் அழிந்து விட்டன. பசுமையாக காட்சியளித்த இடங்களில் உண்ணி புதர்செடிகள் வளர்ந்து உள்ளன. பூமாலை மற்றும் அலங்காரத்திற்காக நெப்ரோ லெப்பிஸ் (Nephrolepis multiflora) என்ற பெரணியின் இலைகளை அறுத்து விற்பனை செய்கின்றனர். இதனால் இவை வளரும் இடங்களில் உள்ள பசுமையும், ஈரப்பதமும் குறைந்து விட்டது. 2015 ஆம் ஆண்டிலிருந்து ஆட்டுக்கல் கிழங்கு என்ற பெரணியின் கிழங்குகள் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து விற்பனை செய்தால் சேர்வராயன் மலையில் உள்ள இந்த பெரணி தாவரம் முழுவதும் 3 ஆண்டுகளில் அழிந்துவிடும். இது ஆபத்தில் உள்ள மருத்துவ தாவரமாக கருதப்படுகிறது. இது ஆபத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தாவரம் என தாவரயியல் அறிஞர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளை இணைய தளத்தில் காணமுடிகிறது. சோலைக்காடுகள்:  சேர்வராயன் மலைப்பகுதியில் சோலைக்காடுகள் சில மட்டுமே உள்ளன. குறிப்பாக காகா சோலையைக் கூறலாம். அதனை ஒட்டி வால்சோலை, சாப்புக்காடு சோலை, மாரியம்மன் தோப்பு சோலை என உள்ளன. புல்வெளியும், குட்டையான மரங்களையும் கொண்டது. இந்தப்பகுதியில் வளரும் மரங்கள் பொருளாதார முக்கியத்துவம் இல்லாதவை. இருப்பினும் சுற்றுச்சூழலை பாதுகாக்கக்கூடியவை. ஆர்க்கிடுகள் போன்ற தாவரங்கள்  வளர வாழிடம் தருபவையாக சோலைக்காடு விளங்குகிறது. தற்போது சோலைக்காடுகள் அனைத்தும் அழிவை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றன. பாக்சைடு மண் வெட்டி எடுப்பதனாலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்பகுதியில் உள்ள அரிய வகைத் தாவரங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கை என்பது மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக இங்கு காணப்பட்ட மரப்பெரணிகள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. அதன் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது. சுமார் 15 அடி உயரம் கொண்ட மரப்பெரணி மரங்கள் அப்பகுதியில் இருந்தன.  இன்றைக்கு மிக உயரமான மரப்பெரணிகளை அங்கு காணமுடியவில்லை. வகைப்பாடு:  சேர்வராயன் மலையில் உள்ள தாவரங்களை வகைப்படுத்துதல் என்பது 1830 ஆம் ஆண்டுக்கு பிறகே நடந்துள்ளது. இந்தப் பணியில் ஆங்கிலேய தாவரவியல் வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மூலம் தாவரங்கள் வகைப்படுத்தும் பணி நடந்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்தப் பிறகு பல்வேறு சர்வேக்களை செய்துள்ளனர். சேர்வராயன் மலையில் தாவரங்களை மதிப்பீடு செய்து அதனை தங்களது புத்தகங்களில் வெளியிட்டவர்களில் குறிப்பிடும்படியாக இரண்டு பேரைக் குறிப்பிடலாம். கேம்பிள்:  ஜேம்ஸ் சைக்ஸ் கேம்பிள்(James Sykes Gamble) என்கிற ஆங்கில தாவரவியல் வல்லுநரின் பங்கு மிகப்பெரியது. அவர் டேராடூனில் உள்ள வனத்துறையின் பிரிட்டிஷ் இம்பீரியல் என்ற பள்ளியின் இயக்குனராகப் பணி புரிந்தார். அத்துடன் ராயல் சொசைட்டியின் விருதினையும் பெற்றுள்ளார். [] கேம்பிள் 1847 ஆம் ஆண்டு லண்டனில் பிறந்தார். அவர் 1868 ஆம் ஆண்டில் இந்திய சிவில் சர்வீஸ் (ICS) தேர்வில் வெற்றி பெற்றார். இந்தியாவில் வனத்துறையில் பணியில் சேர்ந்தார். இவர் டேராடூனில் பணிபுரிந்த போது வனத்துறை பள்ளி ஹெர்பேரியத்தை உருவாக்கினார்.   இவர் 1899 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அலகாபாத், சென்னை போன்ற பல்கலைக்கழகத்தின் உறுப்பினராகவும் செயல்பட்டார். இவர் லண்டனில் 1899 ஆம் ஆண்டில் வெளிநாட்டு மரங்களை 72 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிட்டார். அதன் விதைகளை சேகரித்தும் வந்தார். தாவரங்கள் சார்ந்த பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். அதில் குறிப்பிடும்படியான புத்தகம் Flora of the Presidency of Madras என்பதாகும். இந்தப் புத்தகத்தை 1921 ஆம் ஆண்டில் லண்டனில் வெளியிட்டார். இதன் மறுபதிப்பு 1957 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகம் 3 தொகுதிகளைக் கொண்டதாகும். இந்தப் புத்தகத்தில் சேர்வராயன் மலையில் உள்ள தாவரங்களை விவரித்துள்ளார். அவரால் கண்டறியப்பட்ட 48 தாவரங்களும் உள்ளன. அவரால் பெயரிடப்பட்ட தாவரங்களும் இதில் அடங்கும். இவர் தனது 78 ஆவது வயதில் 1925 ஆம் ஆண்டு அக்டோபர் 16 அன்று இயற்கை எய்தினார். மேத்தீவ்:  கேரளா மாநிலத்தில் அருட்தந்தை முனைவர் கே.ம். மேத்தீவ் (K.M.Matthew)         1930 ஆம் ஆண்டு மார்ச் 16 அன்று ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். தனது உயர் கல்வியை திருச்சியில் முடித்தார். தாவரவியல் துறையில் பட்டம் பெற்றார். இவர் மேற்கு மலைத் தொடரில் உள்ள பழனி மலையில் உள்ள தாவரங்களை சேகரித்து உலர் தாவரமாக (Herbarium) பதப்படுத்தி வைத்தார். [] சூழலியல் சார்ந்த பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார். சுற்றுச்சூழலுக்கான கல்வி நிறுவனம் ஒன்றினை கொடைக்கானலில் உருவாக்கினார். அதன்மூலம் சுமார் 65000 மேற்பட்டவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு போன்ற பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   அருட்தந்தை மேத்தீவ் அவர்களின் மிக முக்கியமான பங்களிப்பு தாவரங்களை வகைப்படுத்தும் பணியாக இருந்தது. அவரின் மிக முக்கியமான புத்தகம் The Flora of the TamilNadu Carnatic என்பதாகும். தாவரங்களை கண்டறிவதற்கு மற்றும் தாவரங்களின் பண்புகளைத் தெரிந்து கொள்வதற்கு தாவரவியல் அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் மற்றும் தாவரவியல் பயிலும் மாணவர்களுக்கு இப்புத்தகம் பெரிதும் உதவுகிறது. எந்த எந்த பகுதியில் எந்த எந்த தாவர இனங்கள் வளர்கின்றன என்பதைக் கண்டறிய உதவுகிறது.       மேத்தீவ் அவர்கள் தொடர்ந்து 596 நாட்கள் தாவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவர் 29538 தாவர மாதிரிகளை (Field No.) சேகரித்து அதனை முறையாக   வகைப்படுத்தியுள்ளார். தனது புத்தகத்தில் 2037 தாவர இனங்கள், 990 பேரினங்கள் மற்றும் 180 தாவரக்குடும்பங்கள் என தமிழ்நாடு மற்றும் கர்நாடகா பகுதியில் கண்டறிந்து அதனை தொகுத்து புத்தகமாக்கியுள்ளார். இந்தப் புத்தகம் 1983 ஆம் ஆண்டு டிசம்பர் 30 அன்று வெளியிடப்பட்டது. இவர் முதலில் அழிந்து வரும் அரிதான தாவரங்களைப் பற்றி எழுதி முடித்த பிறகே இப்புத்தகத்தை எழுதி முடித்தார். சேர்வராயன் மலைப்பகுதியில் காபி பயிரிட்டதால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சுற்றுலாவால் ஏற்பட்ட பாதிப்பு பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கையின்போது முதலில் தாவரங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளப்படவில்லை எனக்குறிப்பிட்டுள்ளார். சுற்றுலாவிற்காக எந்தவிதமான மரங்கள் அழிக்கப்பட்டன என்பதையும் அவர் தெரிவித்துள்ளார். அதிகமான தாவரத்தின் கிழங்குகளை சேகரிப்பதன் மூலம் காட்டு மஞ்சள் அழிந்து கொண்டிருக்கிறது என்பதையும் கூறியுள்ளார். சில அழகு தாவரங்களை அதிகளவில் சேர்வராயன் மலைப்பகுதியில் சேகரித்ததன் மூலம் அழிந்து போவதையும் சுட்டிக்காட்டியுள்ளார். மேத்தீவின் பணியைப் பாராட்டி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் சார்பாக 2002 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி பரியாவரன் புரஸ்கர் விருது வழங்கப்பட்டது. இது தனிமனித சாதனைக்காக முதன் முதலில் வழங்கப்பட்ட விருதாகும். இத்துடன் 5 இலட்ச ரூபாயும் வழங்கப்பட்டது. மேத்தீவ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 அன்று இயற்கை எய்தினார்.   ஐ.யூ.சி.என்:  உலகளவில் இயற்கைக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதை ஐக்கிய நாடுகள் சபை  உணர்ந்தது. இயற்கையை பாதுகாத்தல் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் என்ற நோக்கில் இயற்கையை பாதுகாக்கும் சர்வதேச யூனியன் (International Union for Conservation of Nature and Natural Resource – IUCN) என்ற அமைப்பு உருவானது. இந்த அமைப்பை உருவாக்குவதற்கு யுனெஸ்கோ (UNESCO) பெரும் பங்கு வகித்தது. யுனெஸ்கோவின் முதல் டைரக்டர் ஜெனரலாக இருந்த ஜூலியன் ஹஸ்லே (Julian Huxley) என்பவரே இந்த ஐயுசிஎன் உருவாக முன்முயற்சி எடுத்தார். இவர் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி ஆவார்.   [] இந்த அமைப்பானது 1948ஆம் ஆண்டு அக்டோபர் 5 அன்று பிரான்சில் உருவாக்கப்பட்டது. இது உலகளவில் செயல்படும் சர்வதேச அமைப்பாகும். இயற்கை வளங்களையும், பல்லுயிர்ப் பெருக்கத்தையும் பாதுகாத்தல் என்பதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும். இந்த அமைப்பில் அரசு மற்றும் அரசு சாராத நிறுவனங்களைச் சேர்ந்த 1200 உறுப்பினர்கள் உள்ளனர். சுமார் 11000 விஞ்ஞானிகள் தன்னார்வத்துடன் பணிபுரிகின்றனர். இத்துடன் 60 நாடுகளைச் சேர்ந்த முழுநேர ஊழியர்களும் பணிபுரிகின்றனர். இயற்கை வளங்களின் புள்ளி விவரங்களைச் சேகரித்தல், பரிசோதித்தல், ஆய்வு மேற்கொள்ளுதல், பல்வேறு திட்டங்களை மேற்கொள்ளுதல், கல்விக்காக உதவுதல் போன்ற பணிகளும் இந்த அமைப்பின் மூலம் நடைபெறுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாத்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற செயல்பாடுகளும் உலகளவில் மேற்கொள்ளப்படுகிறது. அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பட்டியலை தயாரித்து பொதுமக்கள் அறியும்படி, அதனை வெளியிடுகிறது. இதனை ஐயூசிஎன் சிவப்பு பட்டியல் (IUCN Red List) என அழைக்கின்றனர். இந்தப் பட்டியலில் இடம் பெறும் தாவரம் மற்றும் விலங்குகளின் இனங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனையை ஏற்படுத்துகிறது. ஒரு தாவரம் அல்லது விலங்கின் தகுதி நிலையை அறிந்து கொள்வதற்கு இது உதவுகிறது. ஐயுசிஎன் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் அதனை பாதுகாப்பதற்கு நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இது காட்டுகிறது. தமிழ்நாடு:  தமிழ்நாடு 1,30,069 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இதில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் 20844 சதுர கிலோ மீட்டர்கள் உள்ளன. தமிழ்நாட்டில் பூக்கும் தாவரங்களை வகைப்படுத்தும் பணியை இந்தியத் தாவரவியல் மதிப்பாய்டவுத் துறை (Botanical Survey of India) மேற்கொண்டு வருகிறது. இத்துறை தென்னிந்தியாவில் முதன் முதலாக 1955 ஆம் ஆண்டில் கோயம்புத்தூரில் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான தாவரவியல் தோட்டம் ஏற்காட்டில் 1963 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. கோவை அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் உலர் தாவரங்களைக் கொண்டு 1982 ஆம் ஆண்டில் ப்ளோரா ஆப் தமிழ்நாடு (Flora of TamilNadu) என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இது மூன்று தொகுதிகளைக் கொண்டது. 238 தாவரக் குடும்பங்களைச் சேர்ந்த 6640 இனத் தாவரங்களைப் பற்றி எழுதியுள்ளனர். தமிழ்நாட்டில் அப்போது 15 மாவட்டங்கள் இருந்தன. தாவரங்கள் எந்த எந்த மாவட்டத்தில் உள்ளன என்பதையும் குறிப்பிட்டுள்ளனர். தாவரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் குறியீடுகளையும் (Symbols) இட்டுள்ளனர். குறியீடுகளைக் கொண்டு அத்தாவரத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம். O: Endemic species (குறிப்பிட்ட இடம் வாழ் தாவரங்கள்)             +: Endangered species (அழிந்து வரும் தாவரங்கள்) R: Rare (அரிதான தாவரங்கள்) E: Economically important species (பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த                                  தாவரங்கள்) B: Species useful in plant breeding (வளர்க்க பயன்படும் தாவரங்கள்) இந்தக் குறியீடுகளின் அடிப்படையில் நாம் எந்த தாவரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பாதுகாக்க வேண்டும் என்பதை உணரமுடிகிறது. தாவர வளம்:  சேர்வராயன் மலைப்பகுதியில் உள்ள இயல் தாவரங்கள் வளரும் முறையை மூன்று வகையாகப் பிரிக்கின்றனர். புதர் செடிகள் கடல் மட்டத்திலிருந்து 400-700 மீட்டர் உயரங்களில் வளர்கின்றன. வருடந்தோறும் இலைகளை உதிர்த்துக்கொண்டே வளரும் மரங்கள் (Deciduous) 800 மற்றும் 1200 மீட்டர் உயரம் கொண்ட பகுதிகளில் வளர்கின்றன. மேலும் பகுதி பசுமைக்காடுகள் (Semi evergreen) 1300-1600 மீட்டர் உயரமான பகுதிகளில் வளர்கின்றன. சேர்வராயன் மலையில் காடுகள் அழிக்கப்பட்டு இருப்பினும் தாவர வளம் நிறைந்த பகுதியாகவே உள்ளது. இம்மலையில் சுமார் 140 தாவரக்குடும்பங்கள் உள்ளன. பூக்கும் தாவரங்கள் மற்றும் பூவாத்தாவரங்களும் உள்ளன. பூவாத்தாவரத்தைச் சேர்ந்த பெரணி இனங்கள் இம்மலையில் உள்ளன. அது தவிர பூக்கும் தாவரத்தைச் சேர்ந்த 517 பேரினத்தில் 940 இனத் தாவரங்கள் உள்ளன. இதில் ஆர்க்கிடு எனப்படும் தாவரங்கள் 52 உள்ளன. ஆங்கிலேயர்கள் மூலம் இம்மலையில் வெளிநாட்டுத் தாவரங்கள் வளர்க்கப்பட்டன. அவர்களுக்கு பிறகும் பூங்காக்கள், தனியார் தோட்டங்கள், பங்களாக்கள், சர்ச், பள்ளிகள், கல்லறை, சாலையோரம், நர்சரிகள், தங்கும் விடுதிகள் எனப் பல இடங்களில் வெளிநாட்டுத் தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன. வெளிநாட்டுத் தாவர வகைகள் சுமார் 1000க்கும் மேற்பட்ட இனங்களைக் கொண்டிருக்கின்றன. இம்மலையில் இயற்கையாக வளரும் இயல் தாவரங்களை விட வெளிநாட்டுத் தாவரங்களே அதிகம் உள்ளன. அரிய வகைத் தாவரங்கள்:  சேர்வராயன் மலையில் அரிய வகைத் தாவரங்களும், அழிந்து வரும் தாவர இனங்களும் உள்ளன. ஐயூசிஎன் சிவப்புப் பட்டியல் மற்றும் அரிதான தாவரக் குறியீடு, அழிந்து வரும் தாவரக் குறியீடு அடிப்படையில் பார்க்கும்போது, சுமார் 60க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் இம்மலையில் வளர்கின்றன. அது தவிர வெளி இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட அரிய தாவரங்கள், தாவரயியல் மதிப்பாய்வுத் துறையில் வளர்க்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இம்மலையை மட்டுமே தாயகமாக கொண்ட தாவரங்களும் இதில் அடங்கும். இனி இத்தாவரங்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.       1. மலை சுத்தி   தாவரவியல் பெயர்: மோனோசிஸ் சேர்வராயன்சிஸ் (Monosis shevaroyensis (Gamble) H.Rob & Skvarla). குடும்பம்: கம்போசிட்டே தமிழ்ப்பெயர் : மலை சுத்தி, சிலுவை மரம். [] சேர்வராயன் மலைப்பகுதியில் முற்றிலும் அழிந்து போன மரம் மலை சுத்தி எனப்படும் மரமாகும். இம்மரத்தை முதன்முதலில் கண்டுபிடித்து அதற்கு வெர்னோனியா சேர்வராயன்சிஸ் எனப் பெயரிட்டவர் கேம்பிள் ஆவார். இவர் 1920 ஆம் ஆண்டு வெளிவந்த தனது புத்தகத்தில் இம்மரத்தை விவரித்துள்ளார். இம்மரம் உலகளவில் சேர்வராயன் மலையில் மட்டுமே வளர்வதால் இதற்கு இவர் சேர்வராயன்சிஸ் எனப் பெயரிட்டார். இது குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே வளரும்(Endemic)     இயல் தாவரம் ஆகும்.      சேர்வராயன் மலைப்பகுதியில் மரப்பாலம் என்னும் இடத்தில் இம்மரங்கள் இயற்கையாக வளர்ந்துள்ளன. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1350 மீட்டர் உயரத்தில் இவை காணப்பட்டன. இந்த இடத்திலிருந்து இதன் உலர் தாவர மாதிரிகள் (Herbarium)1966 மற்றும் 1979 ஆம் ஆண்டுகளில் சேகரித்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன. காகாசோலையிலிருந்து ஓடிவரும் காட்டாற்றின் கரை ஓரம் 2 மரங்கள் இருந்தன. இம்மரத்தின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டியதன் அடிப்படையில் சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் வனத்துறையினர் இந்த இரண்டு மரங்களையும் பாதுகாக்கும் நடவடிக்கையை 1979 ஆம் ஆண்டில் மேற்கொண்டனர். மரத்தைச் சுற்றி கற்களால் ஆன கட்டிடத்தை உருவாக்கினர். ஏற்காடு மலையில் கிறிஸ்துவர்கள் அதிகம் இருப்பதால் அம்மரத்தில் ஒரு சிறு சிலுவையை வைத்தனர். மேலும் மரத்தின் கீழே இந்து கடவுளை குறிக்கும் வகையில் நடுகற்களை வழிபாட்டிற்காக வைத்தனர். சிறு சிலுவையை இம்மரத்தில் பொறுத்தி வைத்த காரணத்தால் இதனை சிலுவை மரம் என பலர் அழைத்தனர். இம்மரத்தை அதிகப்படுத்தும் முயற்சியில் பொட்டானிக்கல் சர்வே ஆப் இந்தியா சார்பாக முயற்சி எடுக்கப்பட்டது. விதைகள் சேகரித்து பல முறை முயன்றும் விதைகள் முளைக்கவில்லை. 1979 ஆம் ஆண்டில் முதல் முறையாக 35 குச்சிகளும், இரண்டாவது முறையாக 50 குச்சிகளையும் நட்டு பராமரித்தனர். இரண்டாவதாக 1979 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடப்பட்ட 50 குச்சிகளில் 4 மட்டும் முளைக்கத் தொடங்கின. பிறகு அதில் ஒன்று இறந்து விட்டது. 3 மட்டுமே வளர்ச்சியடைந்தது. இதன் மூலம் 3 மரங்கள் இந்திய தாவரவியல் மதிப்பாய்வுத் துறையின் மூலம் வளர்க்கப்படுகிறது. வனப்பகுதியில் இயற்கையாக காணப்பட்ட 2 மரங்களில் ஒன்று 1999 ஆம் ஆண்டும், மற்றொன்று 2002 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அடித்து செல்லப்பட்டன. ஆகவே சேர்வராயன் மலையில் இயற்கையாக காணப்பட்ட 2 மரங்கள் முற்றிலும் அழிந்து போயின. இந்திய தாவரவியல் மதிப்பாய்வுத் துறை எடுத்த பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக 4 பெரிய மரங்களும், 6 சிறு செடிகளும் இங்கு உள்ளன. இவற்றில் ஒன்று பெரிய மரமாக உள்ளது. இது ஏற்காட்டின் பாரம்பரிய சின்னமாக காட்சி தந்து கொண்டிருக்கிறது. இந்த மரம் 30 அடி உயரம் கொண்டது. இதன் பூக்கள் வெளிறிய ஊதா நிறம் கொண்டவை. நறுமணம் வீசும். இதன் விதைகளில் கரு இல்லாதக் காரணத்தால் விதை முளைப்பதில்லை. இக்காரணத்தினாலேயே இயற்கையில் இம்மரம் முழுவதும் அழிந்துவிட்டது. மகரந்தச் சேர்க்கையை ஏற்படுத்தும் ஒரு வகையான பூச்சி இனம் இம்மலையில் அழிந்து போன காரணத்தால், இம்மரத்தின் இனமும் அழிந்து போயிருக்கலாம் என நினைக்கத் தோன்றுகிறது. விதை முளைக்காதக் காரணத்தால் இதன் குச்சிகளை நறுக்கி நடுவதன் மூலமும், விண்பதியம் (Air-layering) மூலமும் புதிய நாற்றுகளை உருவாக்கலாம். ஆனால் அவையும் வெற்றிகரமாக வளர்வதில்லை. 3 அல்லது 4 ஆண்டுகளுக்குப் பிறகு இறந்து விடுகின்றன. விண்பதியத்தின் மூலம் மரத்திலேயே வேர் வந்த பிறகு நறுக்கி நடப்பட்ட ஓர் ஆண்டுக்குப் பிறகு அது இறந்து விடுவதும் உண்டு. திசு வளர்ப்பு மூலம் புதிய செடிகள் உருவாக்க முடிகிறது. அவை 5 ஆண்டுகள் உயிருடன் இருப்பது சிரமமாகி விடுகிறது. அதிகமாக கவனம் செலுத்துவதன் மூலமே அதனை பாதுகாக்க முடிகிறது. இது அழிந்து வரும் தாவரமாகும். ஆரம்பத்தில் இதற்கு வைக்கப்பட்ட பெயர் தற்போது மாறியுள்ளது. இதற்கு மோனோசிஸ் சேர்வராயன்சிஸ் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உலகளவில் ஏற்காட்டில் மட்டுமே இம்மரம் உள்ளது. இந்தியத் தாவர மதிப்பாய்வுத் துறையின் மூலம் பாதுகாத்து வளர்க்கப்படுவது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் இம்மரத்தைக் கண்டு ஆச்சரியப்படுவதுடன், அதனுடன் சேர்ந்து புகைப்படத்தையும் எடுத்துச் செல்கின்றனர்.      2. சடகை          தாவரவியல் பெயர்: வெர்னோனியா ஆர்போரியா (Vernonia arborea Buch-Ham) குடும்பம்: கம்போசிட்டே தமிழ்ப்பெயர்: சுத்தி, சடகை, கரணா [] கம்போசிட்டே எனப்படும் சூரிய காந்திக் குடும்பத்தில் சுமார் 25000 தாவர இனங்களும், சுமார் 30000 கலப்பினங்களும் உள்ளன. அவற்றில் மூன்றைத் தவிர அனைத்தும் சிறு செடி, புதர்செடி, கொடிகள் ஆகும். வெர்னோனியா ஆர்போரியா மற்றும் வெர்னோனியா திருவாங்கூரியன்சிஸ் ஆகிய இரண்டு மட்டுமே மரங்களாக வளர்கின்ற்ன. ஆகவே மரமாக இக்குடும்பத்தில் வளர்வது என்பது மிகவும் அரிதான ஒன்றாக விளங்குகிறது. இம்மரம் கொல்லிமலை, சேர்வராயன் மலை உள்பட பல இடங்களில் வளர்கின்றன. சேர்வராயன் மலையில் மிக அதிகமாக இருந்த இம்மரங்களின் எண்ணிக்கை தற்போது மிகவும் குறைந்து விட்டது.      இது அழகான சிறுமரம், சுமார் 35 அடி உயரம் வளரக்கூடியது, இது 1824 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் பெயரிடப்பட்டது. இதன் பூக்கள் இனம் சிவப்பு கலந்த ஊதா வண்ணமுடையது. நன்கு வாசனை கொண்டது. பூக்கள் மலர்ந்த சமயத்தில் தேனீக்கள் இந்த மலர்களை மொய்த்தபடி இருக்கும். இதன் விதைகளில் கரு உள்ளது. அதனால் விதைகள் முளைக்கின்றன. அதுதவிர வெட்டி நடப்படும் சிறு குச்சிகளும் தழைத்து விடுகின்றன. இம்மரம் இருக்கும் இடங்களில் கூட்டம் கூட்டமாக ஒரு காலணியாக உள்ளன. சேர்வராயன் மலையில் கடல் மட்டத்திலிருந்து 1200 மீட்டர் உயரங்களில் வளர்கின்றன. குறிப்பாக காகாசோலை மற்றும் கிளியூர் நீர்வீழ்ச்சி பகுதிகளிலும் வளர்கின்றன. ஆனால் இதன் எண்ணிக்கை தற்போது குறைந்தபடியே உள்ளது.      3. முயல் காது செடி   தாவரவியல் பெயர்: கிளினியா சேர்வராயன்சிஸ் Kleinia shevaroyensis குடும்பம் : கம்போசிட்டே தமிழ்ப்பெயர்: முயல் காது செடி, நாய் நாக்கு ஆங்கிலபெயர்: Rabbits ear, Dogs tongue [] இது சேர்வராயன் மலையில் மட்டுமே வாழக்கூடிய ஒரு சிறு தாவரமாகும். இதனை பைசன்(Fyson) என்பவர் முதன்முதலாக சேர்வராயன் மலையில் 1932 ஆம் ஆண்டில் கண்டுபிடித்து இதற்கு பெயர் சூட்டினார். அவர் இதற்கு நொட்டோனியா சேர்வராயன்சிஸ் (Notonia Shevaroyensis) எனப் பெயரிட்டார். சேர்வராயன் மலையில் மட்டுமே இத்தாவரம் காணப்பட்டதால் இதற்கு சேர்வராயன்சிஸ் எனப்பெயரிட்டார். இது உலகளவில் சேர்வராயன் மலையில் மட்டுமே உள்ளது. பைசன் அவர்களுக்குப் பிறகு கேம்பிள் இத்தாவரத்தை கண்டுபிடித்துள்ளார். கேம்பிள் 1957 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புத்தகத்தில் இத்தாவரத்தை விவரித்துள்ளார். கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் உயரத்தில் இத்தாவரத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.   இச்செடி 25-50 செ.மீ உயரம் வளரக்கூடியது. தண்டானது நேராக கிளைகள் இல்லாமல் இருக்கும். நன்னீரை ஒட்டிய சதுப்புகளில் வளர்கிறது. இலையானது 6-8 செ.மீ நீளமும், 2.5-3 செ.மீ அகலமும் கொண்டிருக்கும். பூவானது மஞ்சள் நிறத்தில் இருக்கும். விதை காற்றில் பறக்கும். காபி தோட்டம் உருவாக்குவதற்காக நிலங்கள் அழிக்கப்பட்டதாலும்  சுற்றுலாவிற்காக விடுதிகள் கட்டுதல், பாக்சைடு சுரங்கம் தோண்டுதல் போன்ற காரணங்களால் இச்செடி அழிவை நோக்கிச் சென்றதாக ஐயூசிஎன் சிவப்பு பட்டியலின் தகவல் கூறுகிறது. இச்செடி 1997 ஆம் ஆண்டில் சிவப்புப் பட்டியலில் வெளியிடப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் ஐயூசிஎன் பட்டியலில் இது அழிவை நோக்கிச் செல்லும் தாவரமாக குறிப்பிடப்படுகிறது. இதற்கு Vu(Vulnerable) என்ற குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது சேர்வராயன் மலையில் எத்தனை தாவரங்கள் உள்ளன என்ற மதிப்பீடு தெரியவில்லை. இத்தாவரம் மருத்துவ குணம் கொண்டதல்ல. வர்த்தகரீதியான பயன்பாடும் இல்லை. இருப்பினும் இது அழிந்து கொண்டே இருக்கிறது. இதனைப் பாதுகாக்கும் நடவடிக்கை தேவை என தாவரவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.     4. ஐலக்ஸ்   தாவரவியல் பெயர்: ஐலக்ஸ் டெண்டிகுலேட்டா             (Ilex dentiIculata wall ex wight.) குடும்பம்: அக்கிஃபோலியேசி தமிழ்ப்பெயர்: சோலைமரம் ஆங்கிலப்பெயர்: Shola [] மரமாக வளரக்கூடியது. சுமார் 15 மீட்டர் உயரம் வளரும். எப்போதும் பசுமையாகக் காணப்படும். இதன் மரங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் இருந்தால் அது ஒரு சோலையாகக் காட்சி தரும். இது 1850 ஆம் ஆண்டில் கண்டுபிடித்து பெயரிட்டனர். இது இந்தியா, சீனா, இலங்கை ஆகிய நாடுகளில் காணப்பட்டாலும், இது ஒரு அரிதான மரமாக மட்டும் அல்லாமல் அழிந்து வரும் பட்டியலிலும் உள்ளது. இன்னும் சில பகுதிகளில் முற்றிலும் அழிந்து (Extinct) போய்விட்டது. சேர்வராயன் மலையில் காகாசோலை பகுதியில் வளர்கிறது. இது 2007 ஆம் ஆண்டில் ஐயூசிஎன் சிவப்புப் பட்டியலில் குறிப்பிடப்பட்டு, இதனைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இம்மரத்தின் பட்டை வழுவழுப்பானது. சாம்பல் நிறம் கொண்டது. உள்பட்டையானது சிவந்த பழுப்பு நிறம் கொண்டது. இதில் ஆண் பூ, பெண் பூ என தனித்தனியாக உள்ளன. ஆண் மலர்கள் சிறியதாகவும், மஞ்சரியாகவும், இருக்கும். பெண் பூ கொத்தாக இலைக்காம்பு இணையும் தண்டு பகுதியில் காணப்படும். பூக்கள் வெண்மை நிறம் கொண்டவை. இதன் பழங்கள் உள்ளோட்டுத் தசைகனி (Drupe) வகையைச் சார்ந்தது. உருண்டையாகவும், சிவப்பு முதல் இளம் ஊதா சிவப்பு நிறத்தில் இருக்கும். கனியானது 4 அறைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அறையிலும் ஒரு விதை காணப்படும். இம்மரங்கள் மலைகளின் உயரமான பகுதிகளில் வளர்கின்றன. இவை பசுமை மாறாக் காடுகளில் காணப்படுகின்றன. கடல் மட்டத்திலிருந்து 1400-2500 மீட்டர் உயரமான மலைகளில் வளர்கின்றன. 5. பாறை பால்சம்    தாவரவியல் பெயர் : இம்பேசன்ஸ் அகாலிஸ் (Impatiens acaulis Arn.) குடும்பம்                                           : பால்சாமினேசி தமிழ்ப்பெயர்             : பாறை பால்சம்; ஆர்கிடு பால்சம் ஆங்கிலப்பெயர்       : Rock Balsam; Orchid Balsam    [] இது ஒரு சிறு தாவரம். இதற்கு தண்டு கிடையாது. இதன் அடியில் சிறு கிழங்கு உள்ளது. இதன் இலையானது பல்வேறு அளவுகளில் உள்ளன. பாறை மீது வளர்வதால் பாறை பால்சம் என்கின்றனர். இதன் பூவானது மிகவும் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருக்கின்ற காரணத்தால் இதனை ஆர்கிடு பால்சம் என்று அழைக்கின்றனர். பூவானது இளம்சிவப்பு நிறத்தில் அல்லது ரோஸ் நிறத்தில் இருக்கும். இதன் தாயகம் தென்னிந்தியாவின் மேற்கு மலைத் தொடர் மற்றும் இலங்கையாகும். இதனை 1835 ஆம் ஆண்டிலேயே கண்டுபிடித்துவிட்டனர். இத்தாவரம் சேர்வராயன் மலையில் இருப்பதை கண்டுபிடித்து அதனை தனது புத்தகத்தில் மேத்தீவ் அவர்கள் 1981 ஆம் ஆண்டில் எழுதியுள்ளார். இச்செடியானது சேர்வராயன் கோயில் மலையில் உள்ளது. சேர்வராயன் கோயிலுக்கு எதிர்புறத்தில் உள்ள பாறை சரிவுகளில் மிக அரிதாகக் காணப்படுகிறது. மேத்தீவ் இதனை கண்டுபிடித்த போதே மிக அரிதாக காணப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டும் அல்லாமல் சேர்வராயன் மலையில் அழிந்துவரும் தாவரம் எனக் குறிப்பிட்டுள்ளார். 2005 ஆம் ஆண்டில் இங்கு சுமார் 30 செடிகள் மட்டுமே இருந்தன. 2013 ஆம் ஆண்டில் பார்க்கும் போது 10 செடிகள் மட்டுமே உள்ளன. இங்குள்ள பாறைகளில் நீர் கசிந்து ஓடும் பகுதிகளில் மட்டுமே இவை இருந்தன. முன்பு போல் இங்கு நீர் கசிவானது அதிகளவில் இல்லை. சுற்றுச்சூழல் பாதிப்பால் இத்தாவரம் படிப்படியாக அழிந்து விட்டது. இன்னும் ஒரு சில ஆண்டுகளில் சேர்வராயன் மலையில் முற்றிலும் அழிந்துவிடும் நிலையில் உள்ளது. 6. முயல் கொம்புச் செடி   தாவரவியல் பெயர் : கேரலூமா அடசன்டன்ஸ் (Caralluma adscendens (Roxb.) Haw.var.adscendens Hook.f.) குடும்பம்               : அஸ்கிலிபியடேசி தமிழ்ப்பெயர்           : இளவம் [] இச்செடி சதைப்பற்றுள்ளது. இலைகளைக் காண முடியாது. வறண்ட பகுதியில் புதர்களின் ஊடே குத்துச் செடியாக வளர்கின்றன. சாலை ஓரங்களிலும், வேலிகளின் ஓரங்களிலும், பாறைகளின் ஓரங்களிலும் எல்லை போல் வளர்கின்றன. தண்டானது பட்டையாக இருக்கும். பசுமையான சாம்பல் நிறத்தில் காணப்படும். 1 முதல் 2 அடி உயரம் வளரக் கூடியது. பூ சிறியது. ஒன்று அல்லது இரண்டு பூக்கள் ஜோடியாக இருக்கும். பூ பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அடர்ந்த கருஞ்சிவப்பு நிறத்தில் மஞ்சள் வரிக்கோடுகளைக் கொண்டிருக்கும். இதனை இந்தியாவில் பல நூற்றாண்டுகளாகவே பச்சையாக அப்படியே உண்கின்றனர். எங்கும் அதிகமாகக் காணப்பட்ட இச்செடி இப்போது அரிதான (Rare) செடியாக மாறிவிட்டது. மலைக்காடுகளில் ஆடு, மாடு மேய்க்கச் செல்பவர்கள் தங்களின் தண்ணீர்த் தாகத்திற்காக இதனைச் சாப்பிடுகின்றனர். இதன் தண்டு சதைப்பற்றுடன் சற்று கெட்டியாக இருக்கும். இதனை உடைத்து பாறை அல்லது இரு உள்ளங்கைகளில் வைத்து உருட்டித் தேய்க்கும்போது இளகி, மிருதுவாகிவிடும். அதனை சாப்பிடும்போது மலை நெல்லிக்காய் போல் இருக்கும். ஆரம்பத்தில் சிறிது கசக்கும், பின்பு இனிக்கும். அதனால் தண்ணீர்த் தாகம் தீர்ந்துவிடும். மேலும் இதனை சட்டினி, ஊறுகாய் செய்கின்றனர். இதனைக்கொண்டு சேலம் போன்ற இடங்களில், சாலையோரம் உள்ள கீரைகள் விற்பனை செய்யும் கடைகளிலும் விற்பனை செய்கின்றனர். தற்போது இச்செடிகளை தேடி கண்டுப்பிடிப்பது என்பது சிரமமாக உள்ளது. இதனை பாதுகாக்க வேண்டியது அவசியம். இல்லை என்றால் இன்னும் சில ஆண்டுகளில் அழிந்து போய்விடும். 7. கள்ளி மடையன்   தாவரவியல் பெயர்: கேரலூமா டிப்பூசா (Caralluma diffusa (wight) N.E.Br.) தமிழ்ப்பெயர்      : எருமை கள்ளி, பாறைக் கள்ளி []        இது ஒரு சதைப்பற்றுள்ள சிறு செடி. பாறைகளின் வெடிப்புகள் மற்றும் பாறைகளின் ஓரங்களில் குத்து குத்தாக வளரக்கூடியது. இதன் தண்டுகள் பருத்து, தடித்து, கிளைகள் விட்டு வளர்கின்றன. 4 சதுர பட்டை வடிவம் கொண்டது. அதன் விளிம்புகளில் சிறு இலைகள் இருக்கும். ஆனால் பொதுவாக இலையைக் காணமுடியாது. ஆனால் இலை இருந்ததற்கான வடுக்களைக் காணலாம். பூக்கள் ஒரு  கொத்தாக 10க்கும் மேல் இருக்கும். பூ பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அடர்ந்த கருஞ்சிவப்பு, பழுப்பு கலந்த நிறத்துடன் இருக்கும். இதில் மிக நேர்த்தியாக சிறு சிறு வெள்ளைக்கோடுகள் இடம் பெற்றிருக்கும். வண்டுகள் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறும். இத்தாவரத்தை முதன்முதலாக 1858 ஆம் ஆண்டில் ராபர்ட் வைட் (Robert wight) என்பவர் கோயம்புத்தூரில் கண்டுபிடித்தார். இதற்கு போச்சிரோசியா டிப்பூசா (Boucerosia diffusa) எனப் பெயரிட்டார். கேம்பிள் அவர்களும் 1923 இல் இச்செடியை கோயம்புத்தூர் ஒட்டிய மலைகளில் கண்டுபிடித்தார். 1987 ஆம் ஆண்டில் இது ஆபத்திற்குள்ளான, அரிதான, அழிந்து வரும் தாவரம் எனக்குறிப்பிட்டனர். இதன் இளம் தண்டை உடைத்து சாப்பிடுகின்றனர். இரத்தம் சுத்தப்படுத்துதல், உடல் பருமனைக் குறைத்தல் போன்ற மருத்துவ குணம் உள்ளது எனக்கூறி இதனைச் சாப்பிடுகின்றனர். மேலும் இதன் இளம் தண்டை நெருப்பில் சுட்டு, வதக்கி சட்டினியாகப் பயன்படுத்துகின்றனர். இது கோவை மாவட்டத்தில் மட்டுமே வளரும் தாவரம் எனக் குறிப்பிட்டுள்ளனர். தற்போது (2013) ஏற்காடு மலையிலும், ஏலகிரி மலையிலும் இது இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இது ஏற்கனவே வளர்ந்த இடத்தில் முற்றிலும் அழிந்து விட்டதா அல்லது இருக்கிறதா என்ற சந்தேகம் உள்ளது. இது அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதனைப் பாறை தோட்டங்களில் வளர்த்துப் பாதுகாக்கலாம். 8.பிராக்கிஸ்டெல்மா   தாவரவியல் பெயர்: பிராக்கிஸ்டெல்மா எலனாடூயன்ஸ் (Brachystelma elenaduense Sathyan) குடும்பம்: அஸ்கிலிபியடேசி [] இது ஒரு சிறு செடியாகும். இச்செடியானது கர்நாடகா மாநிலத்தில் தும்கர் (Tumkur) மாவட்டத்தில் எலனாடு (Elenadu) என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் இதற்கு எலனாடூயன்ஸ் எனப் பெயரிடப்பட்டது. 1978 ஆம் ஆண்டில் சத்தியன் என்பவர் இதனைக் கண்டுபிடித்து விவரித்துள்ளார். இச்செடி தமிழ்நாட்டிலும் உள்ளது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். கொல்லிமலை மற்றும் சேர்வராயன் மலையிலும் இச்செடிகள் உள்ளன. சேர்வராயன் மலையில் 2013 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.  இச்செடியானது செம்மடுவு மற்றும் சந்நியாசி மலை ஆகிய இடங்களில் உள்ள நீர் கசிந்து செல்லும் பாறைகளின் மீது வளர்கிறது. கடல் மட்டத்திலிருந்து 1400 மீட்டர் உயரத்தில் இவை வளர்கிறது. இது தவிர சேர்வராயன் கோயிலின் எதிர்புறத்தில் உள்ள பாறைகளிலும் இவை இயற்கையாக வளர்கின்றன. இது 10 செ.மீ உயரம் மட்டுமே வளரக்கூடியசெடி. இதன் அடிப்பகுதியில் கிழங்கு உள்ளது. பூ முடிந்தவுடன் செடி காய்ந்து விடும். பிறகு மீண்டும் மழைகாலத்தில் கிழங்கிலிருந்து புதிய செடி தோன்றும். பூவானது தனியாக ஒன்று மட்டும் இலைக் கக்கத்தில் தோன்றும். பூவானது அடர்சிவப்பு கலந்த நீல நிறமும் நுனியான மஞ்சள் நிறத்திலும் இருக்கும். பூ சிறியதாக இருக்கும். செடி காய்ந்த பிறகு அதன் மேல்புறத்தில் விதை வெடித்து பறந்து போன பிறகு அதன் காயின் ஓடுகள் மட்டும் தெரியும். அதனை வைத்து இச்செடியை கண்டறியலாம். சேர்வராயன் மலையில் மூன்று இடங்களில் காணப்பட்டாலும் சுமார் 100க்கும் குறைவான தாவரங்களே உள்ளன.   9.கொடிக்கள்ளி   தாவரவியல் பெயர்: சார்கோஸ்டீம்மா இண்டர்மீடியம் (Sarcostemma intermedium Decne.) குடும்பம்           : அஸ்கிலிபியடேசி [] தமிழ்ப் பெயர்       : கொடிக்கள்ளி   இதனை முதன் முதலாக 1844 ஆம் ஆண்டில் ஜோசப் டிகாசின்(Joseph Decaisne) கண்டுபிடித்து விவரித்துள்ளார். இது பால் வடியும் ஒரு கொடி. வறண்ட பகுதியில் பாறை மீதும், புதர்களின் மீதும் படர்ந்து வளரும். கணுக்கள் நீளமானவை. பசுமை நிறத்தில் கொடி இருக்கும். கொடிகளில் இலைகளைக் காணமுடியாது. புதர் மீது படர்ந்து மிகவும் சிக்கலான வலைபின்னல் போல் இருக்கும். இதனை எடுத்தால் கொத்துக் கொத்தாக வரும். இதன் பசுமையான தண்டுகள் வளைந்து தொங்கும். உடைத்து நட்டு வைத்தால் தண்டுகள் முளைத்துவிடும். படர்ந்து இருக்கும் இடத்தில் தண்டுகள் உடைந்து தரையில் விழுந்தாலும் வேர்விட்டு தழைத்து விடும். இதில் பூக்கள் கொத்தாக இருக்கும். ஒரு மஞ்சரியில் 10-15 பூக்கள் இருக்கும். பூவானது 1.5 செ.மீ விட்டம் உடையது. இளம் மஞ்சள் அல்லது வெளிறிய மஞ்சள் நிறத்தில் பூக்கள் இருக்கும். இதில் காயானது ஒரு சில மட்டுமே இருக்கும். காய் வெடித்து அதன் உள்ளே இருக்கும். விதைகள் காற்றில் பறந்து செல்லும். இக்கொடிகளைக் கால்நடைகள் மேய்கின்றன. இது மருத்துவத் தாவரமாகப் பயன்படுத்துகின்றனர். இக்கொடியில் மாலிக் அமிலம் உள்ளது. உடலில் அடிப்பட்டு வீக்கம் ஏற்பட்டால் இதனை வெளிப்பூச்சாக பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் சேர்வராயன், ஏலகிரி, சித்தேரி, கொல்லிமலை போன்ற மலைகளின் அடிவாரங்களில் இதனைக் காணலாம். இது அரிய வகைத் தாவரங்களின் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே இதனைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.     10. பிட்டோஸ்போரம்   தாவரவியல் பெயர்: பிட்டோஸ்போரம் டாசிகாலோன் (Pittosporum dasycaulon Miq.) குடும்பம் : பிட்டோஸ்போரேசி தமிழ்ப்பெயர்: காட்டு சம்பங்கி இது ஒரு சிறு மரம். சுமார் 8 மீட்டர் உயரம் வளரக்கூடியது. மேற்கு மலைத் தொடரில் மட்டுமே வளரக்கூடிய குறிப்பிட்ட இடம் வாழ் தாவரமாகும். இருப்பினும் இது சேர்வராயன் மலையிலும் உள்ளது. இவை பசுமை மாறாக் காடுகளின் விளிம்பு ஓரங்களில் வளர்கின்றன. இதனை முதன்முதலாக வில்கெல்ம் மைக்யூல் (Wilhelm Miquel) என்பவர் கண்டுபிடித்து இதற்கு பெயரிட்டு 1850 ஆம் ஆண்டில் விவரித்துள்ளார். இம்மரம் சேர்வராயன் மலையில் இருப்பதை 1932 ஆம் ஆண்டில் பி.எப்.பைசன் (Fyson) என்பவர் கண்டறிந்துள்ளார். இம்மரம் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் பட்டையிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. ஆகவே இதன் எண்ணிக்கை குறைந்து  கொண்டே வந்தது. இது 1987 ஆம் ஆண்டில் அரிதான தாவரங்கள் பட்டியலில் வெளியிடப்பட்டது. தற்போது அழிந்துவரும் தாவரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. []   மரத்தின் பட்டை பழுப்பு நிறமுடையது. உள்பட்டை வெள்ளை நிறம் கொண்டது. மரத்தில் இலைகள் அடர்த்தியாக, கூட்டமாக இருப்பதால் மரம் பசுமையாக காட்சி தரும். பூக்கள் தண்டின் நுனியில் மஞ்சரியாக காணப்படும். இதன் பூக்கள் வெளிறிய மஞ்சள் நிறத்தில் காணப்படும். கனியானது வெடிக்கக்கூடியது. இரண்டு அறைகளைக் கொண்டது. உலரும் போது கருப்பு நிறத்தில் இருக்கும். விதைகள் 4 இருக்கும். அவை ஆரஞ்சு முதல் சிவப்பு நிறமானது.   11.காந்தள்   தாவரவியல் பெயர்: குளோரியோசா சுபர்பா (Gloriosa superba L.) குடும்பம்: கோல்ச்சியேசி தமிழ்ப்பெயர்: கலப்பைக் கிழங்கு, கண்ணு வலிச்செடி, காந்தள் மலர் ஆங்கிலப்பெயர்: Flame lily, Glory lily, Tiger claw, Fire lily. [] தமிழகத்தின் மாநில மலர் என்பது காந்தள் மலராகும். இது உலகளவில் ஒரு அழகு தாவரமாகும். இது ஒரு கொடி. 4 மீட்டர் உயரம் வரை வளரும். கடல் மட்டத்திலிருந்து 2500 மீட்டர் உயரம் வரை வளரும். இதன் இலை நுனியானது பற்றுக்கம்பியாக மாறுகிறது. நுனியில் சுருளத் தொடங்கி ஆதாரத்தைப் பற்றிக் கொண்டு மேலே ஏறி வளர்கிறது. இச்செடியின் அடியில் உள்ள கிழங்கானது கலப்பை வடிவத்தில் உள்ளதால் இதை கலப்பைக் கிழங்குச் செடி என்றும் அழைக்கின்றன. பூ முடிந்து, விதை வந்தப்பிறகு செடி காய்ந்துவிடும். பிறகு மீண்டும் கிழங்கிலிருந்து புதிய தாவரம் உருவாகும். இதன் பூவானது அடர்ந்த சிவப்பு முதல் ஆரஞ்சு நிறம் கொண்டது. இதன் கீழ்ப்பகுதி மஞ்சள் நிறத்தில் இருக்கும். விதை சிவப்பு நிறத்தில் இருக்கும், விதையிலிருந்தும் புதிய தாவரம் தோன்றும். இச்செடி சத்துக்குறைவான மண்ணிலும் வளரும். இது இயற்கையாக வனங்களில் அதிகளவில் காணப்பட்டன. இதன் விதை, கிழங்கு ஆகியவை மருத்தாகப் பயன்படுவதால் மக்கள் இதனை அதிகளவில் சேகரித்ததால் வனங்களில் மிகவும் வேகமாக அழியத் தொடங்கியது. இது அழிந்து வரும் மருத்துவச் செடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐயூசிஎன் சிவப்புப் பட்டியலில் லீஸ்ட் கன்சர்ன் (Least Consern) என 2013 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது. இது வணிகப் பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் இயற்கையில் குறைவாகவே காணப்படுகிறது. சாகுபடி செய்யும் இடங்களில் பல்வேறு கலப்பினங்கள் உள்ளன. இது இயற்கையான தாவரத்திலிருந்து வேறுபட்டு உள்ளது. இந்தியாவில் இதன் மருத்துவக் குணத்திற்காக அதிகளவில் சேகரித்து விட்டனர். ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இதனை வனங்களில் பாதுகாப்பதற்கான நடவடிக்கை ஏதும் இல்லை.   12. நரிவெங்காயம்   தாவரவியல் பெயர்: லெடிபோரியா ரிவோலூட்டா (Ledebouria revoluta (L.f )Jessop.) குடும்பம் : ஹையசிந்தேசி தமிழ்ப்பெயர்: நரிவெங்காயம், காட்டு வெங்காயம் ஆங்கிலப்பெயர்: Wild Onion, South Indian Squill [] இது கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் உயரம் உள்ள பகுதிகளில் வளரக்கூடியது. ஈரம் அதிகம் நிறைந்த பகுதியிலும், நீர் கசிந்து ஓடும் பாறைகளின் சிறு சிறு பள்ளங்களிலும் இவை நன்கு வளர்கின்றன. இது ஒரு சிறு தாவரம். இதன் அடியில் குமிழம் (Bulb) உள்ளது. இது 5 செ.மீ விட்டம் கொண்டது. இலை ஒன்று முதல் பல உள்ளன. இலைகளின்  மீது இளம் ஊதா சிவப்பு அல்லது அடர்ந்த பச்சை நிற புள்ளிகள் உள்ளன. இவை இலைகளின் மீது பொட்டு வைத்தாற்போல் உள்ளதால் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். பூக்கள் கொத்தாக இருக்கும். பூக்கள் இளம் ஊதா சிவப்புடன் பச்சை கலந்து இருக்கும். பூக்கள் சிறியது. மகரந்தத்தாள்களும் இளம்சிவப்பு அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும்.   இத்தாவரம் ஏற்காட்டில் சந்நியாசி மலை, செம்மடுவு, கொட்டச்சேடு, மஞ்சக்குட்டை பகுதியில் வளர்கின்றன. மஞ்சக்குட்டையில் புதியதாக உருவாக்கப்பட்ட காட்சி முனைப் பகுதியில் (View point) இது அதிகம் இருந்தது. தற்போது அங்கு சுற்றுலாவிற்காக காட்சி முனைக்கான கட்டிடம் கட்டப்பட்டக் காரணத்தால் இவை அங்கு முற்றிலும் அழிந்துவிட்டன. உள்ளூரில் கால்நடைக்கான மருந்தாகப் பயன்படுகின்ற காரணத்தால் இவை அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. இது ஐயூசிஎன் பட்டியலில் 2001 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இது தற்போது அரிதான தாவரமாக மாறியுள்ளது. அழிந்து வரும் மருத்துவத் தாவரமாக இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.       13. காட்டு வெங்காயம்   தாவரவியல் பெயர்: லெடிபோரியா ஹைதராபாதன்சிஸ்         (Ledebouria hyderabadensis M.V.Ramana) குடும்பம்: ஹையசிந்தேசி தமிழ்ப்பெயர்: காட்டு வெங்காயம் ஆங்கிலப்பெயர்: Wild Onion இச்செடி நரி வெங்காயம் போன்றதே. நரி வெங்காயம் உள்ள இடங்களில் இதுவும் கலந்து வளர்கின்றன. நரி வெங்காயத்திற்கும், இதற்கும் வேறுபாடுகள் நன்றாகத் தெரிந்த போதிலும், இதுவும் நரி வெங்காயம் என்றே கருதி வந்தனர். நரி வெங்காயத்தின் இலைகளில் புள்ளிகள் இருக்கும். ஆனால் இதன் இலைகளில் புள்ளிகள் இல்லை. இப்படித் தெளிவான வேறுபாடு இருந்தும் இது தனி இனமாக (Species) வகைப்படுத்தாமல் இருந்துவிட்டனர். 2012 ஆம் ஆண்டு ஹைதராபாத் பகுதியில் இதனை கண்டுபிடித்தபின்னர் இதற்கு ஹைதராபாதன்சிஸ் எனப்பெயரிட்டனர். இது சேர்வராயன் மலையில் செம்மடுவு, சந்நியாசி மலை, மஞ்சக்குட்டை போன்ற இடங்களில் உள்ளது. ஆனால் நரி வெங்காயத்தைவிட குறைவாகவே உள்ளன. எனக்குத் தெரிந்து சுமார் 25 ஆண்டுகளாக சேர்வராயன் மலையில் உள்ளது. சரியாக இதற்கு முன்பே பெயரிட்டிருந்தால் சேர்வராயன்சிஸ் என்கிற அந்தஸ்து கிடைத்திருக்கும். []   இச்செடி பாறைகளின் மீது குறைவான மண் உள்ள பகுதியில் வளர்கிறது. இதனை காட்டு வெங்காயம் மற்றும் நரி வெங்காயம் என்றே அழைக்கின்றனர். இதன் குமிழம் 5 செ.மீ விட்டம் கொண்டது. பூக்கள் வெளிறிய இளம் சிவப்பு நிறம் கொண்டது. இது மருத்துவ தாவரமாக பயன்படுகிறது. புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டதால் இதன் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. சேர்வராயன் மலையில் 100க்கும் குறைவான தாவரங்களே உள்ளன. இது ஹைதராபாத்தை மட்டுமே இருப்பிடமாக கொண்டு (Endemic) இருப்பதாகக் குறிப்பிட்டாலும், சேர்வராயன் மலையிலும் உள்ளது. இது அரியவகை தாவரம் மட்டும் அல்லாமல், சேர்வராயன் மலையில் அழிந்து வரும் தாவரமும் ஆகும்.   14. டிப்கேடி   தாவரவியல் பெயர்: டிப்கேடி மாண்டேனம் வெரைட்டி மெட்ராசிக்கம் (Dipcadi montanum (Dalz) Baker var.madrasicum (Barnes &Fischer)   Deb & Dasgupta)   குடும்பம்: ஹையசிந்தேசி [] இது ஒரு சிறு தாவரம். இது புற்களுடன் கலந்து புற்கள் போல் வளரக்கூடியது. ஆகவே இத்தாவரம் பலருக்குத் தெரியாது. இதனைப் பற்றி நன்கு அறிந்தவர்களால் மட்டுமே கண்டுபிடிக்கமுடியும். ஈரப்பதம் அதிகம் உள்ள பாறையை ஒட்டிய பகுதி, பாறையில் தேங்கி இருக்கும் மண், நீர் கசிவுள்ள பாறைப்பகுதிகளில் இது நன்கு வளரும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 1100-1300 மீட்டர் உயரத்தில் வளரக்கூடியது. இதனைப் பற்றி பலருக்குத் தெரியாதக் காரணத்தால் இதற்கு என்று தமிழ்ப்பெயர் கிடையாது. இந்த டிப்கேடி பேரினத்தில் உள்ள மாண்டேனம் என்ற இனத்தில் ஒரு வகை (Variety) இருப்பதை முதன்முதலாக 1978 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டு இதற்கு மெட்ராசிக்கம் என்ற பெயரினை டெப் மற்றும் தாஸ்குப்தா ஆகியோர் இட்டனர்.   இச்செடியின் கீழே சிறு குமிழம் உள்ளது. இலையானது 2-4 மட்டுமே இருக்கும். 10 முதல் 20 செ.மீ நீளம் மட்டுமே இருக்கும். மழை பெய்து முடித்தவுடன் இது தோன்றி வளரும். ஒரு நாள் மட்டுமே தோன்றி மறைவது போல் தோன்றும். பூக்கள் வந்தவுடனே இச்செடி இருப்பது தெரியும்.  பூக்கள் பழுப்பு நிறத்தில் இருக்கும். சில சமயம் உள் இதழ்கள் மட்டும் அடர்ந்த நிறத்தில் இருக்கும். இலையுதிர்க் காடுகள், உலர் பசுமைமாறாக் காடுகளில் இவை வளர்கின்றன. இது அரிய தாவர வகையைச் சேர்ந்தது. சேர்வராயன் மலையில் .இரண்டு இடங்களில் மட்டுமே உள்ளன. கிளியூர் நீர்வீழ்ச்சிக்குச் செல்வதற்கு முன்பு வாகனங்கள் நிறுத்தப்படும் இடத்தை ஒட்டிய பகுதியில் இருந்தது. சுற்றுலாவிற்காக பாதை அமைப்பு, தளம் அமைத்தல், புதிய கட்டிடங்கள் கட்டுதல் காரணத்தால் அங்கு இருந்த இத்தாவரம் முழுவதும் அழிந்துவிட்டது. தற்போது செம்மடுவு பகுதியில் மட்டுமே உள்ளது. இங்கும் குறைந்த அளவிலேயே உள்ளது. இது மூலிகைத் தாவரமாகப் பயன்படுகிறது. ஆகவே வேறு இடங்களில் உள்ள இத்தாவரமும் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது ஐயூசிஎன் சிவப்புப் பட்டியலில் 1997 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.   15. வசம்பு தாவரவியல் பெயர் : அக்கோரஸ் கலாமஸ் (Acorus calamus L.) குடும்பம்              : ஏரேசி தமிழ்ப்பெயர்          : வசம்பு ; பிள்ளை வளர்த்தி ; உரைப்பான் ஆங்கிலப் பெயர்     Sweet Flag ; calamus ; Beewort ; Bitter papper root; Myrtle grass; Rat root ; Sea sedge. [] வசம்பு ஒரு மூலிகைத் தாவரம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இது ஆறு, ஏரிகளின் ஓரங்களில் இயற்கையாக வளரும் ஒரு வகைப் பூண்டு. சதுப்பு நிலங்கள், களிமண் மற்றும் ஈரப்பதம் அதிகம் உள்ள பகுதிகளில் நன்கு வளரும். இதன் அடிப்பகுதியில் நெருக்கமான கணுக்களை உடைய மட்டத்தண்டு கிழங்கு உள்ளது. இது பூமிக்கு அடியில் 3 அடி நீளம் வரை படரும். இலைகள் 2-3 அடி உயரம் வரை இருக்கும். இலையும், மட்டத்தண்டு கிழங்கும் நல்ல நறுமணம் வீசக்கூடியது. இதில் இலை போன்ற தோற்றம் கொண்ட பூ மடல் (spathe) உருவாகும். பூக்கள் நெருக்கமாக இருக்கும். வசம்பு பல்வேறு நாடுகளில் இயற்கையாக வளர்கிறது. வசம்பில் அசரோன், அகோரின் மற்றும் கொலாமினால் போன்ற வேதிப் பொருட்கள் உள்ளன. இது கிழங்கின் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. வசம்பு ஒரு அரிய வகைத் தாவரம் என்றால் ஆச்சரியப்படுவீர்கள். இது இயற்கையாக வனப்பகுதியில் வளரும். ஆனால் தற்போது இதனை வனப்பகுதியில் காண முடியாது. மருத்துவத் தாவரம் என்பதால் இவை அழிக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் மிக அதிகமாக இருந்தது. தற்போது அரிதாகிவிட்டது. இதன் மருத்துவ குணத்திற்காக வீடுகளிலும், கிராமங்களின் கிணற்று நீர் பாயும் ஓரங்களிலும் வளர்க்கின்றனர். சேர்வராயன் மலையில் இயற்கையாக ஓடைகளின் ஓரங்களில் இவை வளர்ந்தன. தற்போது இதனை வனப்பகுதியில் இயற்கையாக வளரும் இடங்களில் கண்பது அரிது. இது ஐயூசிஎன் பட்டியல் 2011 இல் லீஸ்ட் கன்செர்ன் (Least concern) எனவும் 2014 ஆம் ஆண்டில் ஆபத்திற்கு உரிய மருத்துவத் தாவரம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.   16. யானை காது செடி   தாவரவியல் பெயர் : ரிமுசேசியா விவிபரா (Remusatia vivipara (Lodd.)Schott) குடும்பம்              : ஏரேசி தமிழ்ப்பெயர் : யானை காது இலை செடி ஆங்கிலப் பெயர்        Elephant ear [] இத்தாவரம் மிக அழகானது. இது பொதுவாக மரங்களின் கிளைகளில் ஒரு தொற்றுத்தாவரமாக வளரும். அது மட்டும் அல்லாமல் பாறை இடுக்குகளில் வளர்கின்றன. அதே சமயத்தில் ஈரம் அதிகம் நிறைந்த பகுதிகளில் மட்டுமே வளர்கிறது, இச்செடியின் அடிப்பகுதியில் தட்டையான உருண்டை வடிவ கிழங்கு உள்ளது. இது 2-4 செ.மீ விட்டம் உடையது. கிழங்கு சிவந்த நிறமும் அதன் மீது பழுப்பு நிற நார் மூடி உள்ளது. கிழங்கு விசத்தன்மை கொண்டது. ஆனால் மூலிகையாகப் பயன்படுகிறது. இதில் 1-2 இலைகள் மட்டுமே தோன்றுகின்றன. இலை பெரியதாக யானையின் காது போல் காற்றில் ஆடிக்கொண்டு இருக்கும். இலை அடர்ந்த பச்சை நிறத்திலும், அதில் உள்ள நரம்புகள் ஆரம்பத்தில் பச்சை பழுப்பு நிறத்திலும், பிறகு வெளிறிய நிறத்திலும் இருக்கும். இச்செடியானது வருடம் முழுவதும் இருப்பதில்லை. நவம்பர் முதல் ஜனவரி காலங்களில் இலை உதிர்ந்து, உறக்க நிலையில் இருக்கும். பிப்ரவரி மாதத்தில் பூவானது தோன்றும், கனியானது ஏப்ரல் மாதம் முதல் காணலாம். இச்செடியில் பூக்களைக் காண்பது என்பது அரிது. இலை முடிந்த                                                                                 பிறகு பூ மட்டும் தோன்றும். பூக்களை மஞ்சள் நிற மடல் (Spathe) மூடி இருக்கும். பார்ப்பதற்கு அழகாகவும் வாசனையும் கொண்டிருக்கும். ஒரு செடியானது ஒரு வருடம் இடைவெளிவிட்டு அடுத்த வருடம்தான் பூக்கும். பூக்காமல் செடியில் ஒரு தண்டு உருவாகும். அதில் சிறிய சிறிய முடிச்சு கிழங்குகள் (Bulbiliferous) தோன்றும். அதில் உள்ள சிறு கொக்கிகளின் மீது கால்நடைகள் உரசும்போது அதன் மூலம் வேறு இடங்களில் பரவி முளைக்கின்றன. இச்செடியானது கடல் மட்டத்திலிருந்து 700-1300 மீட்டர் உயரம் வரை வளரும். சேர்வராயன் மலை மற்றும் கொல்லிமலையில் இதனைக் காணலாம். ஆனால் தற்போது சேர்வராயன் மலையில் இச்செடியைக் காண்பது என்பது மிகவும் அரிது.        17. பாதாள மரம்   தாவரவியல் பெயர்: டிரோஸ்பெர்மம் சிலோனோடிஸ் (Stereospermum chelonoides (L..f)Dc) குடும்பம்: பிக்னோனியேசி தமிழ்பெயர்: அம்புவாகினா, பூபடிரி, பத்திரிவர், பாத்திரி ஆங்கிலப்பெயர்: Snake Fruit Tree, Fragrani Padri Tree இது ஒரு மரமாகும். 10 முதல் 20 மீட்டர் உயரம் வளரக்கூடியது. அடர்ந்த இலை கொண்ட மரம். சில மரங்கள் 3.4 மீட்டர் விட்டம் கொண்டவை. அந்தளவிற்கு பெரிய மரங்களும் உள்ளன. இதன் பட்டையானது மஞ்சள் கலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும். இலையானது கூட்டிலைகளை கொண்டது. அதாவது 1-2 அடி நீளம் வரை இலை கொத்து இருக்கும். மூன்று முதல் நான்கு இலை ஜோடிகளைக் கொண்டது. பூவானது மஞ்சள் கலந்த அல்லது இளம் ஊதா சிவப்பு நிறத்தில் இருக்கும். பெல் வடிவம் கொண்டது. பார்ப்பதற்கு அழகாகவும், வாசனை  வீசக்கூடியதாகவும் இருக்கும். இதில் காயானது 1-2 அடி நீளம் இருக்கும். காயானது பாம்பு போல் தொங்கும். காய் உருண்டையாகவும், வளைந்தும், கரடுமுரடாக அல்லது சொர சொரப்பாக, நேர்த்தியில்லாமல் இருக்கும். விதையானது அழுத்தப்பட்டு, மூன்று கோணங்களை கொண்டிருக்கும். விதை பறந்து விடும். []   இது மருத்துவக் குணம் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டர் உயரத்திற்கு மேல் வளரும். தாழ்வான பள்ளத்தாக்கு பகுதியிலும், உயர்ந்த பள்ளத்தாக்கு பகுதியிலும் வளர்கிறது. இது இந்த இரண்டு பகுதியிலும் பூக்கும் காலம் என்பது மாறுபடுகிறது. இதில் வருடம் முழுவதும் காயைக் காணலாம். இது அழிந்துவிடும் தாவர பட்டியலில் உள்ளது. இது இந்தியாவில் மட்டுமே வாழும் குறிப்பிட்ட இடவாழ் தாவரம் (Endemic to India) ஆகும். மேற்கு மலைத் தொடரில் பசுமை மாறாக்காடுகளில் இவை வளர்கின்றன. தமிழ் நாட்டில் சேலம் மாவட்டத்தில் வளர்கின்றன. சேர்வராயன் மலையில் குறைந்த அளவே காணப்படுகின்றன.                                            18. சிலண்டி   தாவரவியல் பெயர்:             ஆக்னா அப்டுசேட்டா வெரைட்டி கேம்பிளி (Ochna obtusata Dc.Var.gamblei (King ex Brandis)Kanis) குடும்பம்: ஆக்னேசி தமிழ்பெயர்: கல்குறுவை, சிலன்டி ஆங்ப்கிலப் பெயர்: Micky Mouse Plant, Golden Champak           [] இது ஒரு சிறுமரம், 8 மீட்டர் உயரம் வளரக்கூடியது, வறண்ட பகுதி மற்றும் பாறைகள் நிறைந்த மலைகளிலும் வளரும், இந்த பேரினத்தில் அப்டுசேட்டா என்ற இனத்தில் ஒரு வகை  (Variety) உள்ளது. கனிஷ் என்ற தாவரவியல் அறிஞர் கேம்பிள் என்பவரை கெளரவிக்கும் விதமாக கேம்பிளி எனப் பெயரிட்டுள்ளார். மேத்தீவ் என்பவர் 1981 ஆம் ஆண்டில் கண்டறிந்துள்ளார். இது சேர்வராயன் மலையில் குறைவாகவும், சித்தேரி மலையில் இதைவிட அதிகமாகவும் இருக்கிறது. கொல்லிமலையில் இம்மரம் கிடையாது. இது அழிந்துவரும் தாவர (Endangered) இனமாக வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே இதனைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.   இம்மரத்தில் இலைகள் நெருக்கமாக இருக்கும். மிகவும் அழகான பூக்கள் கொண்டவை. கவர்ச்சிகரமான மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்டது. பூ வாசனை மிகுந்தது. பூவானது 5 இதழ்களைக் கொண்டது. பூ முடிந்தவுடன் விதைகள் புல்லிவட்டத்தின் மீது உறுதியாக ஒட்டிக்கொண்டு இருக்கும். புல்லிவட்டம் சிவந்து இருக்கும். இதன் மீது விதைகள் கருப்பு நிறத்தில் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். விதை பொருந்தி இருக்கும் பகுதி கிண்ணம் (cup) போல் இருக்கும். இது மிக்கி மவுஸ் முகம் போல் தெரியும். விதை மற்றும் கடினமான கொம்புகளை வெட்டி நடுவதன் மூலம் புதிய செடிகளை உருவாக்கலாம். இம்மரத்தின் இலைகள் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் உதிர்ந்து, பின்னர் புதிய இலை தோன்றும். இது மருத்துவக் குணம் கொண்ட தாவரம் என்பதால் மூலிகை தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன. சர்க்கரை வியாதிக்கு எதிரான மூலிகை மருந்து இதன் இலைகள் மூலம் தயாரிக்கப்படுகிறது.   19.கவியா   தாவரவியல் பெயர்: கிரிவியா அபுட்டிலிபோலியா    (Grewia abutilifolia Juss)   குடும்பம்: டில்லியேசி தமிழ்பெயர் : கவியா ஆங்கிலப்பெயர்: Mallow Leaved cross berry [] இது ஒரு புதர் செடி அல்லது சிறுமரம். சுமார் 2 முதல் 5 மீட்டர் உயரம் வளரக்கூடியது. மலைப்பகுதிகளில் கடல் மட்டத்திலிருந்து 500-1400 மீட்டர் உயரமான பகுதிகளில் வளர்கிறது. குறிப்பாக மலையின் சரிவுப் பகுதிகளில் வளரும் தன்மை கொண்டது. கிரிவியா என்ற பேரினத்திலேயே மிகப்பெரிய இலை கொண்ட தாவரம் கவியா ஆகும். இலையானது 7-13 செ.மீ நீளமும், 5-9 செ.மீ விட்டமும் கொண்டது. இலையின் அடிப்பகுதியில் சிறு சிறு முடிகள் இருக்கும். பல பூக்கள் இதில் உருவாகும். பூக்கள் ஆரம்பத்தில் வெள்ளை நிறமாகவும், பின்னர் மஞ்சள் நிறமாகவும் மாறும். அதாவது பூக்கள் முதிர்ச்சியடைந்து வளரும் தருவாயில் மஞ்சள் நிறமாக மாறும். பூவும், கனியும் வருடம் முழுவதும் இருக்கும். கனி உருண்டை வடிவத்தில் இருக்கும்.   இத்தாவரம் அதிகப்படியாக உள்ளூர் பயன்பாட்டிற்காக சேகரிக்கப்படுகிறது. இதன் பட்டையை உறித்து நார் எடுக்கின்றனர். அதன் மூலம் கயிறு தயாரிக்கின்றனர். இதன் வேரை தண்ணீர் தாகத்திற்காக பயன்படுத்துகின்றனர். இது அரிதான தாவரம் மட்டும் அல்லாமல் அழிந்து வரும் தாவரமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஐயூசிஎன் சிவப்புப் பட்டியலில் 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இதிலிருந்து நார் எடுப்பதனால் இத்தாவரம் பல பகுதிகளில் அழிக்கப்பட்டு வருகின்றது. ஆகவே இதிலிருந்து நார் எடுப்பதைத் தடுப்பதன் மூலம் இத்தாவரத்தினை பாதுகாக்கலாம். இது சேர்வராயன் மலைப்பகுதிகளில் வளர்கிறது. வனப்பகுதியில் வளர்வதால் இதன் முக்கியத்துவம் தெரியாமலே அழிக்கப்படுகிறது.     20. ஆச்சா தாவரவியல் பெயர்: ஆர்டுவிக்யா பைனேட்டா (Hardwickia binata Roxb) குடும்பம்: சிசால்பினியேசி தமிழ்ப்பெயர்: ஆச்சா, ஆசா, கராச்சி ஆங்கிலப்பெயர்: Indian Black wood, Anjan [] இது ஒரு இந்திய மரமாகும். தாவரவியல் அறிஞர் தாமஸ் ஆர்டுவிக்கி என்பவரை கெளரவிக்கும் வகையில் வில்லியம் ராக்ஸ்பர்க் (William Roxburgh) என்ற தாவரவியல் அறிஞர் ஆர்டுவிக்யா என இந்த பேரினத்திற்கு பெயரிட்டார். இந்த மரம் கடினமானது, சுமார் 15 மீட்டர் உயரம் வளரக்கூடியது. மரப்பட்டையானது சொர சொரப்பாகவும், ஒழுங்கற்று வெடித்தும் இருக்கும். பூவானது சிறியதாகவும், வெள்ளை அல்லது பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆச்சா மரம் சேர்வராயன் மலையில் மிகக் குறைந்தளவே உள்ளன. ஜனவரி மாதத்தில் இம்மரம் இலைகளை உதிர்த்து விடுகிறது. காட்டு மாடு, யானை போன்ற விலங்கினங்கள் இதன் பட்டை மற்றும் இலைகளை உணவாக உட்கொள்கின்றன. இதன் மரப்பட்டையை உறித்து கயிறு தயாரித்தலுக்குப் பயன்படுத்துகின்றனர்.   இதன் இலைகள் பசுந்தழை உரமாகப் பயன்படுகிறது. பூக்களிலிருந்து தேனீக்கள் தேன் மற்றும் மகரந்தத்தூள்களைச் சேகரிக்கிறது. மரம் கடினமாக இருப்பதால் விவசாயக் கருவிகள் தயாரிக்கின்றனர். மரச்சாமான்கள் தயாரிக்க மரங்களை வெட்டுகின்றனர். இம்மரத்திலிருந்து உலக்கை மற்றும் நாதஸ்வரம் போன்றவை தயாரிக்கின்றனர். வைரம் பாய்ந்த நடுக்கட்டையிலிருந்து ஒலியோ கோந்துகள் பெறப்படுகின்றன. இதனை வண்ணப்பூச்சுகள் தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர். இது ஒரு அரிதான மரமாகவே கருதப்படுகிறது. வனத்துறையின் மெத்தனத்தால் அரியவகை ஆச்சா மரங்கள் திருட்டுப் போகின்றன என தினமலர் நாளிதழ் செய்தியும் வெளியிட்டுள்ளது. இம்மரத்தின் பயன் கருதி இதனை வெட்டுகின்றனர். ஆகவே இது ஆபத்தை (Threatened) எதிர்நோக்கி உள்ள மரப்பட்டியலில் உள்ளது.     21.அழுகண்ணி   தாவரவியல் பெயர்: திரோசிரா பர்மான்னி (Drosera burmanni Vahl.) குடும்பம்: திரோசிரேசி தமிழ்ப்பெயர்: பனிப்பூண்டு, சூரியனின் வெண்பனி. ஆங்கிலப்பெயர்: Sundews, Rainbow plant, Dewy pines, Burmann’s Sundew. [] இது ஒரு பூச்சி உண்ணும் தாவரமாகும். 18 ஆம் நூற்றாண்டில் பர்மான் (Burmann) என்ற டச்சு தாவரவியல் அறிஞர் திரோசிரா எனப் பெயரிட்டார். அவருடைய பெயராலேயே பர்மான்னி என இச்செடிக்கு பெயரிடப்பட்டது. இது ஒரு சிறு பூண்டு தாவரம்,   5-10 செ.மீ உயரம் மட்டுமே வளரும். இதன் இலைகள் சிவந்து வட்ட வடிவில் ரோஜா பூ போல் தெரியும். அதாவது காதில் அணியும் தோடு போலத் தெரியும். இலைகளின் மீது சுரப்பிகளை உடைய உணர்கொம்புகள் இருக்கும். இதன் நுனியில் சிறு சிறு பனித்துளி போன்ற திரவம் இருக்கும். இதன் சுவையும், மனமும் சிறு சிறு பூச்சிகளை கவர்ந்து இழுக்கும். இதன் இலையின் நடுவில் பூச்சி அமர்ந்தவுடன் இதில் உள்ள உணர்கொம்புகள் பூச்சியை சுற்றி வளைத்து பிடித்துக்கொள்ளும். சில வினாடிகளில் பூச்சியை சுற்றி வளைத்துக் கொள்ளும். இச்செடி வேகமாக பூச்சியை பிடிக்கும். பின்னர் ஜீரண நீர் சுரந்து பூச்சியை செரித்து தனக்கு வேண்டிய நைட்ரஜன் மற்றும் பாஸ்பேட் சத்தினை பூச்சியிலிருந்து எடுத்துக்கொள்ளும். பூச்சி செரித்தப் பிறகு இலையானது மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி விடும். இது ஒரு அரிதான காயகற்ப மூலிகைத் தாவரமாகும். நீர்க் கசிவுள்ள பாறைகள் மற்றும் குறைவான மண் உள்ள ஈரமான பகுதிகளில் மட்டுமே வளரும். வெட்டவெளியில் களிமண் கலந்த சரிவுகளில் பருவமழை பெய்தபிறகு முளைக்கும். செடியின் அடியில் ஈரம் இருந்து கொண்டே இருக்கும். செடியில் வெண்மை கலந்த இளம் ஊதா சிவப்பு மலர்கள் தோன்றும். 15-20 பூக்கள் இருக்கும். பூவானது காலை 9 மணிக்கு மலரும். சேர்வராயன் மலையில் செம்மடுவு, மஞ்சக்குட்டை, சந்நியாசி மலை, சேர்வராயன் கோயில் மலை ஆகிய பகுதிகளில் மட்டுமே உள்ளன. இது மூலிகைத் தாவரம் என்பதால் இதனைச் சேகரித்து செல்கின்றனர். இதன் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. ஆகவே இது ஒரு அரிதான தாவரமாகி விட்டது.   22. கொசு வெட்டி   தாவரவியல் பெயர்: திரோசிரா பெல்டேட்டா (Drosera peltata Thunb) குடும்பம்: திரோசிரேசி தமிழ்ப்பெயர்: கொசுவெட்டி [] ஆங்கிலப் பெயர்: Shield Sundew, Pale Sundew. இது ஒரு சிறு தாவரம். வெட்டவெளியில் பாறைகளின் ஓரங்களில் குறைந்த மண் உள்ள ஈரமான பகுதியில் இச்செடி வளர்கிறது. மழைக்காலம் தொடங்கிய பிறகே செடி முளைக்கிறது. இச்செடியின் அடிப்பகுதியில் சிறு கிழங்கு உள்ளது. இச்செடி சுமார் 20 செ.மீ உயரம் வரை வளர்கிறது. இது ஒரு பூச்சி உண்ணும் தாவரமாகும். இதன் இலை சிறிய கேடயம் (Shield) போல காட்சி தரும். இலையில் சுரப்பிகளைக் கொண்ட உணர்கொம்புகள் உள்ளன. பூச்சி இலையின் மீது அமர்ந்தால் உடனே உணர்கொம்புகள் பூச்சியை சுற்றி இலை மூடிக்கொள்ளும். ஜீரண நீர் சுரந்து பூச்சியை செரித்து தனக்கு தேவையான நைட்ரஜன் மற்றும் பாஸ்பேட் சத்தினை எடுத்துக்கொள்கிறது. இச்செடியில் வெள்ளை நிறப் பூக்கள் மலர்கின்றன. இது ஒரு பருவச் செடியாகும். இதன் கிழங்கு உருண்டையாகவும், சிவப்பாகவும் இருக்கும். இச்செடியினை முதன்முதலாக கார்ல் பீட்டர் தன்பர்க் என்பவர் 1797 ஆம் ஆண்டில் பெயரிட்டு, விவரித்து எழுதினார். இச்செடியை காகிதத்தில் அழுத்தி தேய்த்தால் ஒரு இரவுக்குள் காகிதம் சிவப்பாக மாறிவிடும். இது மூலிகைத் தாவரமாகப் பயன்படுகிறது. ஆகவே மருந்து தயாரிக்கும் கம்பெனிகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். உலகின் பல்வேறு பகுதியில் இவை வளர்ந்தாலும் மருத்துவப் பயன்பாட்டிற்காக அழிக்கப்படுகிறது. இது ஐயூசிஎன் பட்டியலில் 2011 ஆம் ஆண்டு லீஸ்ட் கன்சர்ன் (L.C) எனக்குறிப்பிட்டுள்ளனர். சேர்வராயன் மலையில் செம்மடுவு, மஞ்சக்குட்டை, சந்நியாசி மலை ஆகிய இடங்களில் குறைந்தளவே இச்செடி உள்ளது. சர்வதேச பூச்சி உண்ணும் தாவரக்கழகத்தின் பட்டியலிலும் இச்செடி இடம் பெற்றுள்ளது. இயற்கையில் வளரும் இச்செடியை வீடுகளில் வளர்ப்பது என்பது சிரமம். இது கடல் மட்டத்திலிருந்து 1000-1300 மீட்டர் உயரங்களில் வளர்கின்றது. ஆகவே இதனை அழிக்காமல் அது வளரும் இடங்களில் பாதுகாப்பதே சிறந்ததாகும்.   23. செங்குருந்து தாவரவியல் பெயர்: பிகோனியா மலபாரிக்கா  (Begonia malabarica Lam) குடும்பம்: பிகோனியேசி தமிழ்ப்பெயர்: செங்குருந்து, செந்தண்டு. ஆங்கிலப் பெயர்: Malabar Begonia. இச்செடியானது 1-2 அடி உயரம் வளரக்கூடியது. ஈரப்பதம் அதிகம் கொண்ட வனப்பகுதியில் இது வளர்கிறது. கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரங்களில் வளர்கிறது. இதன் தண்டு, இலைக்காம்பு, இலையின் நரம்பு ஆகியவை சிவப்பு நிறத்தில் இருக்கும். அதிக நிழல் கொண்ட இடத்திலும், பாறைகளின் வெடிப்புகளிலும் இவை வளரும். இலையானது 6 முதல் 15 செ.மீ நீளமும், 4-8 செ.மீ அகலமும் கொண்டிருக்கும். இலையில் 7-9 நரம்புகள் இருக்கும். இலை பார்ப்பதற்கு அழகாக இருக்கும். கோடை காலத்தில் இச்செடியில் இலைகள் இருக்காது. பூவானது ரோஸ் முதல் வெளிறிய வெள்ளை நிறத்தில் இருக்கும். ஆண் பூக்களில் இரண்டு இதழ்கள் மட்டுமே இருக்கும். மகரந்தத்தூள் மஞ்சள் நிறம் கொண்டது. []   இது ஒரு அரிதான, குறிப்பிட்ட இடம் வாழ் தாவரம் என மேகாலாயா மாநிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு மூலிகைத் தாவரமாகும். இதன் இலை வயிற்றுப்போக்கு, ரத்தப் புற்றுநோய், தோல் வியாதி, நுரையீரல் தொற்று போன்ற வியாதிகளுக்கு  மருந்தாகப் பயன்படுகிறது. இது மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த தாவரம் ஆகும். இதனை அழகு தாவரமாகவும் வீடுகளில் வளர்க்கலாம். இது மருத்துவத் தாவரம் என்றாலும் இதனை விவசாயிகள் யாரும் சாகுபடி செய்யவில்லை. இயற்கையில் உள்ள தாவரங்களே சேகரிக்கப்படுகிறது. சேர்வராயன் மலையில் சோலை பகுதியில் மட்டுமே இச்செடியைக் காணலாம். கிளியூர் நீர்வீழ்ச்சியை ஒட்டியப் பகுதிகளிலும் இதனைக் காணலாம். மலையின் மற்ற இடங்களில் இதனைக் காண முடியவில்லை. 24. காட்டு பிகோனியா   தாவரவியல் பெயர்: பிகோனியா சப்பெல்டேட்டா (Begonia subpeltata Wight) குடும்பம்:               பிகோனியேசி தமிழ்ப்பெயர்: காட்டு பிகோனியா [] இச்செடியை முதன் முதலாக 1852 ஆம் ஆண்டில் ராபர்ட் வைட் (Robert Wight) என்ற ஸ்காட்லாந்து மருத்துவர் மற்றும் தாவரவியல் அறிஞர் கண்டறிந்து பெயரிட்டார். அதன் பிறகு கேம்பிள் 1957 ஆம் ஆண்டில் தனது புத்தகத்தில் வெளியிட்டுள்ளார். மேத்தீவ் 1981 ஆம் ஆண்டில் சேர்வராயன் மலையில் இருப்பதைக் கண்டறிந்தார். இது தமிழ்நாட்டில் திருநெல்வேலி மற்றும் சேலம் மாவட்டத்தில் மட்டுமே உள்ளது. சேர்வராயன் மலையில் கிளியூர் நீர்வீழ்ச்சியிலிருந்து செல்லும் நீரோடையை ஒட்டிய சில இடங்களில் மட்டுமே இச்செடி உள்ளது. இது ஒரு அரிதான (Rare) தாவரம் ஆகும். இது ஒரு சிறு செடியாகும். இச்செடிக்கு மட்டத்தண்டு கிழங்கு உள்ளது. மட்டத்தண்டு கிழங்கானது கிடைமட்டமாக செல்கிறது. மட்டத்தண்டு கிழங்கு சிறியது, 5 செ,மீ நீளமும், 1-3 செ.மீ விட்டமும் கொண்டது. மட்டத்தண்டு கிழங்கை பழுப்பு நிற செதில் இலைகள் மூடியுள்ளன. முதிர்ந்த செதில் இலைகள் சிவந்த நிறத்தில் கசப்புத் தன்மை கொண்டதாக இருக்கும்.   இச்செடியிலிருந்து சிறிய மட்டத்தண்டு கிழங்குகள் கிளைவிட்டு பிரியும். அதில் பெரிய இலைகள் தோன்றும். இலையானது பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும். இளம் இலையின் கீழ்ப் பரப்பில் சிறு சிறு வெண்மையான முடிகள் இருக்கும். இலையானது 8-14.5 செ.மீ நீளமும், 10-15 செ.மீ அகலமும் கொண்டிருக்கும். இலையில் 5-6 நரம்புகள் மிகவும் பிரகாசமாகத் தெரியும். இதனால் இலை மிகவும் அழகாக, கவர்ச்சியாகத் தெரியும். இலைக்காம்பானது 7-33 செ.மீ நீளம் இருக்கும். பூவானது வெள்ளை நிறம் கொண்டது. ஒரு பூங்கொத்தில் 1-25 பூக்கள் மலரும். ஆண் பூக்களில் 4 இதழ்களும், பெண்பூக்களில் 5 இதழ்களும் இருக்கும். பெண் பூக்கள் வெளிறிய இளம் ஊதா சிவப்பு (Pale pink) நிறத்தில் இருக்கும். விதை சிறியது, பழுப்பு நிறத்தில் இருக்கும். இச்செடி அழகாக இருப்பதால் வீடுகளில் வளர்க்கலாம். இது ஐயூசிஎன் சிவப்புப் பட்டியலில் 1997 ஆம் ஆண்டு அரிதான மற்றும் ஆபத்திற்குள்ளான தாவரம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.     25. மலை கொய்யா   தாவரவியல் பெயர்: ரோடோமிர்டஸ் டொமென்டோசா   (Rodomyrtus tomentosa (Ait)Hassk.) குடும்பம்: மிர்டேசி தமிழ்ப்பெயர்: சிறு கொய்யா, மலை கொய்யா ஆங்கிலப் பெயர்: Rose myrtle; Downy myrtle; Downy rose myrtle; Hill goose berry, Hill guava,. [] இது ஒரு சிறுமரம். சுமார் 4 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. அடர்த்தியாகவும், பசுமையாகவும் காட்சித்தரும். உலகின் பல பகுதிகளில் இது வளர்கிறது. இமயமலையிலும் வளர்கிறது. தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, மதுரை ஆகிய மாவட்டங்களில் உயரமான மலைப்பகுதியில் வளர்கிறது. சேர்வராயன் மலையில் இருப்பதற்கான பதிவுகள் இல்லை என்றாலும் சேர்வராயன் கோயிலுக்கு எதிரே உள்ள சரிவில் இரண்டு சிறுமரஙகள் இருந்தன. இந்த இரண்டு மரங்களைத் தவிர மலையின் வேறு பகுதிகளில் இது இல்லை. ஆகவே இது சேர்வராயன் மலையில் அரிதான மரமாகும். 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஐயூசிஎன் பட்டியலிலும் இது இடம் பெற்றுள்ளது.   இதன் பூக்கள் இளம் ஊதா சிவப்பு நிறத்தில் இருக்கும். இதன் வெளிப்புறத்தில் வெண்மையான திட்டுகள் இருக்கும். பூவானது 2.5-3 செ.மீ விட்டமும், 5 இதழ்களைக் கொண்டிருக்கும். கனியானது சிறியது. அதாவது 10-15 மி.மீ நீளம் உடையது. கனி இளம் சிவப்பு நிறமுடையது. இதனை சாப்பிடலாம். கனியின் உள்ளே 40-45 விதைகள் இருக்கும். விதையானது பறவைகள் மற்றும் பாலூட்டிகள் மூலம் பரவுகின்றது. பழத்திலிருந்து ஜாம், சாலட், ஜெல்லி போன்றவை வெளிநாடுகளில் தயாரிக்கின்றனர். வியட்நாம் நாட்டில் பழத்திலிருந்து ஒயின் தயாரிக்கின்றனர். சிரப் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கின்றனர். இது அழகுத் தாவரமாக வளர்க்கின்றனர். அழகிற்காகவும், பழங்களுக்காகவும் பூங்காக்களில் இதனை வளர்க்கின்றனர்.   26. கில்டிகார்டியா   தாவரவியல் பெயர்: கில்டிகார்டியா பாப்புலிபோலியா                           (Hildegardia populifolia (Roxb.)Schott & Endl.) குடும்பம்: ஸ்டெர்குலியேசி [] இது ஒரு மரமாகும். மெதுவாக வளரக்கூடியது. சுமார் 20 மீட்டர் உயரம் கூட வளரும். பொதுவாகப் பாறைகளை ஒட்டி வளரும். கிழக்குமலை தொடர்ச்சியிலேயே வளரக்கூடிய குறிப்பிட்ட இடவாழ் தாவரமாகும். தமிழ்நாட்டில் சேலம், தர்மபுரி, தென் ஆற்காடு மாவட்டங்களில் வளர்கிறது. குறிப்பாக ஆந்திராவில் அதிகம் வளர்கிறது. கல்வராயன் மலையில் கடல் மட்டத்திலிருந்து 300-600 மீட்டர் உயரத்தில் வளர்கிறது. கல்வராயன் மலையில் இது விரைவாக அழிந்து வருகிறது. 20 மரங்கள் மட்டுமே இருப்பதாகக் கூறுகின்றனர். சேர்வராயன் மலையில் இது குறைவாகவே காணப்படுகிறது. வனப்பகுதியில் எளிதாகக் காணமுடியவில்லை. இதன் இலை இதய வடிவம் கொண்டது. பசுமையான மரம். ஆனால் மரத்தில் உள்ள இலைகள் ஜனவரி மாதத்தில் முழுவதும் கொட்டிவிடும். பின்னர் புதிய இலை பிப்ரவரி மாதத்தில் துளிர்க்கும். மரங்களில் ஆண் பூக்கள் மற்றும் இருபால் பூக்கள் தோன்றுகின்றன. பூவானது சிவப்பு நிறத்தில் இருக்கும். பூவில் இதழ்கள் இல்லை. புல்லி இதழ்கள் மட்டுமே இருக்கின்றன.   இதன் பூக்களிலிருந்து ட்ரைகோனா என்னும் ஈக்கள் தேனையும், மகரந்தத்தையும் எடுக்கின்றன. கொண்டலாத்தி பறவை உள்பட பல பறவைகள் இம்மரத்திற்கு வருகின்றன. ஈப்பிடிப்பான் பறவை, மீன் கொத்திப் பறவை உள்பட இம்மரத்தைத் தேடி வருகின்றன. பறவைகள் ஈக்களைப் பிடித்து உண்ணுகின்றன. இம்மரம் ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் மட்டுமே கிழக்கு மலைத் தொடர் பகுதியில் உள்ளது. இது அழிக்கப்படுகிறது. இது அச்சுறுத்தலுக்கு உள்ளான மரமாகக் கருதப்பட்டு வந்தது. 1998 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஐயூசிஎன் பட்டியலில் இது மிகவும் வேகமாக அழிந்து வரும் தாவரமாக (Critically Endangered) அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மரம் அமெரிக்காவில் கூட நடப்பட்டு உள்ளது. ஆனால் இயற்கையாக வளரும் வனப்பகுதியில் இது ஆபத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஏற்காடு தாவரவியல் மதிப்பாய்வுத் துறையில் ஒரு மரம் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதனை அதிகப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.     27.செந்தனுக்கு   தாவரவியல் பெயர்: ஸ்டெர்குலியா யூரன்ஸ் (Sterculia urens Roxb.) குடும்பம்: ஸ்டெர்குலியேசி தமிழ்ப்பெயர்: செந்தனுக்கு, செந்தாளமரம், காவாளம், வெள்ளைபுடாளி. ஆங்கிலப்பெயர்: Kulu, Indian tragacanth, Gum karaya,katira, Sterculia gum, kateera gum. [] இது ஒரு மரமாகும். சுமார் 40 அடி உயரம் வரை வளரும். இதன் கிளைகள் கிடைமட்டமாகப் பிரிந்து செல்லும். மரத்தின் பட்டை மிருதுவாகவும், நாரிழைகளுடன் தடித்து, சாம்பல் நிறத்தில் இருக்கும். அதில் வெள்ளை நிறத் திட்டுகள் உள்ளன. பட்டையானது உரிந்து சிறு சிறு தட்டுகளாகப் பிரிந்து, வெடித்து இருக்கும். இதனை உறித்து எடுக்கலாம். பட்டை 3 அடுக்குகளைக் கொண்டிருக்கும். உள்பகுதி மெல்லிய காகிதம் போல் இருக்கும். மரம் மிருதுவானது. நடு சோற்றுப்பகுதி சிவப்பு ரெசின் குழாய்களைக் கொண்டிருக்கும். இலை 20-30 செ.மீ விட்டம் கொண்டதாக, நட்சத்திரம் போன்ற முனைகளைக் கொண்டிருக்கும். பூவானது மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும். பூக்களில் ஆண், பெண் மற்றும் இருபால் பூக்கள் என அனைத்தையும் ஒரே மரத்தில் காணலாம். பூக்களில் கொடுக்கு போன்ற முடிகள் உள்ளதாலேயே இம்மரத்திற்கு யூரன்ஸ் எனப்பெயரிட்டுள்ளனர்.   இதன் காயானது வெடித்து 6 சதுரங்களைக் கொண்டது போல் தெரியும். விதை பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும். விதைகளை வறுத்துச் சாப்பிடலாம். இளம் வேரினையும் சாப்பிடலாம். பட்டையில் காயம் ஏற்பட்டால் இதிலிருந்து பிசின் கிடைக்கும். மரத்தைக் காயப்படுத்துதல், பட்டையை உரித்தல், கோடாரியால் ஆழமாக வெட்டுதல் போன்ற காரியங்கள் செய்து இதிலிருந்து பிசின் எடுக்கின்றனர். இப்படிச் செய்வதால் மரம் இறந்துவிடுகிறது. இந்த பிசின் மருந்தாகவும், பசை தயாரிக்கவும் பயன்படுகிறது. மேலும் உணவாகவும், குளிர் பானங்கள் தயாரிக்கவும் உதவுகிறது. இம்மரத்தை சேர்வராயன் மலையின் அடிவாரத்தில், சாலையின் ஓரங்களில் காணலாம். இது கடல் மட்டத்திலிருந்து 400-800 மீட்டர் உயரத்தில், பாறையை ஒட்டிய இடங்களில், நேரடி சூரிய ஒளிபடும் இடங்களில் நன்கு வளர்கிறது. இது ஐயூசிஎன் பட்டியலில் வேகமாகக் குறைந்துவரும் தாவரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.   28. சாலம்பூ   தாவரவியல் பெயர்: சோரியா ராக்ஸ்பர்க்கி   (Shorea roxburghii G..Don) குடும்பம்: டிப்டீரோகார்பேசி தமிழ்ப்பெயர்: குங்கிலியம், சாலம்பூ, தலூரா. ஆங்கிலப்பெயர்: Taloora Lac Tree, white meranti; Lac Tree. [] இம்மரம் சுமார் 25 மீட்டர் உயரம் வளரக்கூடியது. பட்டையானது பழுப்பு நிறம் கொண்டது. இதிலிருந்து ரெசீன் கிடைக்கிறது. இது கிழக்கு மலைத்தொடரில் மட்டுமே வளரக்கூடிய குறிப்பிட்ட இடம் வாழ் தாவர வகையைச் சேர்ந்தது. மிக அழகான மரம், மர வேலைக்கு பயன்படக்கூடியது. இது மிகவும் அரிதான மரமாகும். இது வேகமாக அழிந்துவரும் (Critically Endangered) தாவரம் என ஐயூசிஎன் சார்பில் 2011 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, தர்மபுரி, சேலம், மதுரை போன்ற மாவட்டங்களில் வளர்கிறது. கல்வராயன் மலையில் அதிகம் உள்ளது. ஆனால் சேர்வராயன் மலையில் மிக அரிதாக, அபூர்வமாகவே காணப்படுகிறது. குறிப்பாக கிளியூர் நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் பாதையிலும், குண்டூர் கிராமத்திலும் மட்டுமே காணப்படுகிறது. சேர்வராயன் மலையில் மிகவும் வயதான மரம் ஒன்று இருப்பதை மேத்தீவ் அவர்கள் 1981 இல் குறிப்பிட்டுள்ளார். காபி தோட்டத்தில் 25 மீட்டர் உயரமான மரம் உள்ளது. அது 2.4 மீட்டர் விட்டம் கொண்டது எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அது எந்த காபி தோட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடப்படவில்லை. இம்மரத்தில் பூக்கள் மிக அழகாக இருக்கும். வெளிறிய இளம் ஊதா சிவப்பு நிறத்தில் பூக்கள் இருக்கும். பூக்கள் முடிந்தபிறகு கனி உருவாகிய பிறகும், புல்லி இதழ்கள் ஒட்டிக்கொண்டு இருக்கும். அது இறகுகள் போல் செயல்படும். இந்த இறகுகளில் பிரகாசமான நரம்புகள் பார்ப்பதற்கு கவர்ச்சியாக தெரியும். விதையானது பறந்து செல்வதற்கு இந்த இறகுகள் பயன்படுகின்றன. பூவானது மிகவும் அழகாகவும், வாசனை  கொண்டதாகவும் இருக்கும். பெண்கள் தங்கள் கூந்தலில் இம்மலரை சூடுகின்றனர். பூச்சிகளின் மூலமே மகரந்தச் சேர்க்கை நடைபெறுகின்றது. அம்மரம் வளரும் பகுதியில் உள்ள குறிப்பிட்ட இனப் பூச்சிகள் மூலமே மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. மரம் உறுதியானது என்பதாலேயே இது வெட்டி அழிக்கப்படுகிறது.   29. குழல் பூ லில்லி   தாவரவியல் பெயர்: லில்லியம் வாலிட்சியானம் வெரைட்டி நீலகிரியன்ஸ் (Lilium wallichianum Schultes & Schultes f.Var.neilgherrense(Wight)Hars.) குடும்பம்: லில்லியேசி தமிழ்ப்பெயர்: குழல் லில்லி [] இத்தாவரத்திற்கு மருத்துவர் நத்தானியல் வாசிட் (Nathaniel Wallich)என்ற டேனிஸ் நாட்டுமருத்துவர் மற்றும் தாவரயியல் அறிஞரின் பெயரைச் சூட்டியுள்ளனர். இதன் ஒரு வெரைட்டியை நீலகிரி மலையில் கண்டறிந்து அப்பெயரை 1975 இல் சூட்டினர். இச்செடியானது தமிழ்நாட்டில் மதுரை, நீலகிரி, இராமநாதபுரம், திருநெல்வேலி, சேலம் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1000 மீட்டருக்கும் உயரமான இடங்களில் வளர்கிறது. சேலம் மாவட்டம் சேர்வராயன் மலையில் மேத்தீவ் 1981 ஆம் ஆண்டில் மட்டுமே சேகரித்துள்ளார். இச்செடியானது சேர்வராயன் மலையில் நாகலூர் செல்லும் வழியில் ஜெ.ஜெ.நகர் என்ற இடத்தில் மட்டுமே இருந்தது. அந்த இடத்தில் புதியதாக வீடுகள் கட்டப்பட்டன. பின்னர் அரசு மருத்துவமனை, பள்ளி போன்றவை கட்டப்பட்டுள்ளன. இவ்விடத்தில் இருந்த இச்செடிகள் முழுவதும் அழிந்துவிட்டன. அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட மண் மூலம் வேறு இடத்தில் இச்செடி உயிர் பெற்றுள்ளதா என்பதில் சந்தேகம் உள்ளது. சேர்வராயன் மலையில் இச்செடி மிகவும் அபூர்வமாகவும், அரிதாகவும் உள்ளது என மேத்தீவ் 1982 இல் குறிப்பிட்டுள்ளார். தற்போது இச்செடியைக் கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளது. இது ஒரு அழகு செடி. இதன் அடியில் குமிழம் உள்ளது. இதன் செதிலிலைகள் தடித்து, சதைப்பற்றுள்ளதாகி, நீரையும் உணவையும் சேமித்து வைத்துள்ளது. இச்செடி கிளைகள் இல்லாமல் 1 மீட்டர் உயரம் வரை வளரும். நுனியில் 1-3 பூக்கள் மலரும். அரிதாக ஒரு பூ மட்டும் தோன்றுவதுண்டு. பூவானது புனல் வடிவில், வெண்மை நிறத்தில் வாசனை வீசக்கூடியதாக இருக்கும். பூவானது 15-18.5 செ.மீ நீளம் வரை இருக்கும். இதில் 6 மகரந்தத்தாள்கள் 16 செ,மீ நீளம் வரை இருக்கும். பூவின் வெளியே மகரந்தத்தாள் தெரியும். இப்பூவானது மிக அழகாக இருக்கும். இப்படிப்பட்ட ஒரு அரிதானச் செடி சேர்வராயன் மலையில் ஏற்பட்ட கட்டிட விரிவாக்கத்தால் அழிந்து போய்விட்டது எனலாம்.     30. நீலக்குறிஞ்சி   தாவரவியல் பெயர்: ஸ்ட்ரோபலைன்தீஸ் குந்தியானா (Strobilanthes kunthiana (Nees)T.Anderson) குடும்பம்: அக்கேன்தியேசி தமிழ்ப்பெயர்: குறிஞ்சிச்செடி, நீலக்குறிஞ்சி. ஆங்கிலப்பெயர்: Kurinji [] இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் இச்செடி நீல நிறத்தில் பூத்துக் குலுங்கியதால் அந்த மலை நீலநிறத்தில் தோன்றியது. அதனாலேயே நீலகிரி மலை எனப்பெயர் பெற்றது. இது கிழக்கு மலைத்தொடரான சேர்வராயன் மலையிலும் வளர்கிறது. இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலர்வதால் இதனை காண மக்கள் வந்து செல்வார்கள். இது உலக பாரம்பரிய அந்தஸ்தையும் பெற்ற செடியாகும். வெளிநாடுகளில் வாழும் மக்களையும் இது கவர்ந்து இழுக்கும். இச்செடியானது சேர்வராயன் மலையின் உச்சியில் உள்ள பீடபூமி மற்றும் சரிவுகளில் அதிகம் வளர்ந்தன. இச்செடியின் வளர்ச்சியானது மெல்ல மெல்ல குறைந்துவிட்டது. அப்பகுதியில் வெட்டப்படும் பாக்சைடு சுரங்கத்தினால் இச்செடிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது.  அதுமட்டுமல்லாமல் காபி தோட்டங்களில் அடிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்தின் காரணமாக தேனீக்களும் குறைந்துவிட்டன. இதனால் செடிகளில் மகரந்த சேர்க்கை நடப்பது குறைந்ததால் செடிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. பூவானது ஒரே சமயத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும். தற்போது 2016 ஆம் ஆண்டில் ஆகஸ்டு முதல் நவம்பர் வரை குறிஞ்சிச் செடியில் பூக்கள் மலர்ந்துள்ளன. சேர்வராயன் கோயில் மலை, சந்நியாசி மலை, காகாசோலை ஆகிய இடங்களில் இவை வளர்கின்றன. வளர்ச்சி குன்றி குட்டையான செடிகளாக உள்ளன. சில இடங்களில் 1 மீட்டர் உயரம் வரை வளர்கிறது. ஆழமான பள்ளங்கள் மற்றும் நிழல் நிறைந்த பள்ளத்தாக்கில் மட்டும் 3 மீட்டர் உயரம் வரை வளர்கிறது. பூக்கள் மலர்ந்தால் மிகவும் அழகாக இருக்கும். இது ஊதா நிறமும் வைலட் நிறமும் கொண்டிருக்கும். நேரடியாக சூரிய ஒளிப்படும் இடங்களில் பூக்கள் வெளிறிய ஊதா நிறத்திலும் இருக்கிறது. வாசனை வீசும். தேனீக்கள் மலரைத் தேடி வரும். குறிஞ்சி மலரின் தேன் மிகவும் இனிமையாக இருக்கும். இது அரிதான, அபூர்வமான தாவரம் என குறிப்பிட்டுள்ளனர். மேலும் 2010 ஆம் ஆண்டில் ஐயூசிஎன் சிவப்புப் பட்டியலில் அச்சுறுத்தலுக்கு உள்ளான (Threatened) தாவரம் எனக் குறிப்பிட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலரைக் காண்பது கண்கொள்ளாக் காட்சியாகும். இதனை சரியாக பாதுகாக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் குறிஞ்சிச் செடியைக் காண்பதே அரிதாகிவிடும்.     31. ஸ்டீமோனா   தாவரவியல் பெயர்: ஸ்டீமோனா டுபரோசா (Stemona tuberosa Lour) குடும்பம்: ஸ்டீமோனேசி தமிழ்ப்பெயர்: ஸ்டீமோனா ஆங்கிலப்பெயர்: Hundred parts, Stemona இது ஒரு கொடியாகும். 4 மீட்டர் உயரம் வரை அருகில் உள்ள கொம்புகளைப் பற்றி ஏறும். கொடியின் அடிப்பகுதியானது தடிமனாக இருக்கும். வேர்ப்பகுதியானது கிழங்காக இருக்கும். சிறு கிழங்கு 10-30 செ.மீட்டர் நீளமும் 2-3 செ.மீ தடிமனும் கொண்டது. இலையானது இதய வடிவம் கொண்டது. 9 நரம்புகள் பிரகாசமாகத் தெரியும், பூவானது கிண்ணம் போன்று இருக்கும். பச்சையும், இளம் ஊதா சிவப்பும் கொண்டிருக்கும். பார்ப்பதற்கு மிக அழகாக தெரியும். இது ஒரு மருத்துவத் தாவரம். சீனாவில் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் இதன் மருத்துவக் குணத்தை குறைவாகவே அறிந்து இருக்கின்றனர். தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரை ஒட்டியுள்ள பச்சைமலைப் பகுதியில், இச்செடியை 1981 ஆம் ஆண்டு மேத்தீவ் கண்டுபிடித்துள்ளார். அங்கு மிகக்குறைவாக, அரிதாகவும், அபூர்வாகவும் காணமுடிந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். சேர்வராயன் மலையில் இருப்பதாக யாரும் குறிப்பிடவில்லை. ஆனால் சேர்வராயன் மலையில் கொட்டச்சேடு கிராமத்திலிருந்து குப்பனூர் செல்லும் வழியிலும், சேலத்திலிருந்து ஏற்காடு வரும்போது 60 அடி பாலம் அருகிலும் இச்செடி உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரத்தில் உள்ளது.   [] பூவின் வாசனை கிருமி நாசினியாகப் பயன்படுகிறது. இதன் கிழங்கு பாக்டீரியா எதிர்ப்பு, ஒட்டுண்ணி எதிர்ப்பு மற்றும் கப நிவாரணியாக பயன்படுகிறது. இதில் ஸ்டோமைன் என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது பூச்சிக்கொல்லியாக பயன்படுகிறது. அதுதவிர கொசுவின் புழுக்களை அழிக்கவும், உண்ணி, தெள்ளுப்பூச்சி, மூட்டைப்பூச்சி போன்றவற்றை அழிப்பதற்கும் பயன்படுகிறது. இதன் வேரை இடித்து நீரில் கரைத்து செடிகளின் மீது உள்ள ஒட்டுண்ணிகளை அழிப்பதற்காக தெளிக்கின்றனர். இது ஒரு பருவச்செடியாகும். செடி காய்ந்து, மீண்டும் குறிப்பிட்ட பருவத்தில் வேரிலிருந்து மீண்டும் முளைக்கும். விதைகள் மூலமும் பரவும். இது சேதமடைந்து வரும் (Vulnerable) மருத்துவத் தாவரம் என ஐயூசிஎன் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.                 32. கரிந்து   தாவரவியல் பெயர்: கெப்பாரிஸ் சேவராயன்சிஸ் (Capparis shevaroyensis Sund-Ragh.) குடும்பம்: கெப்பாரேசி இது ஒரு புதர்ச்செடி. ஒழுங்கற்ற வடிவில் பல கிளைகள் உள்ளன. இதில் உள்ள சிறு சிறு கிளைகள் கம்பி போன்று மெல்லியதாக இருக்கும். இச்செடியை முதன்முதலாக 1872 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டு அதற்கு கெப்பாரிஸ் பார்விபுளோரா எனப்பெயரிட்டனர். இது தமிழ்நாட்டில் கோயமுத்தூர், ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் வளர்கின்றன. கடல் மட்டத்திலிருந்து சுமார் 400-800 மீட்டர் உயரங்களில் வளர்கிறது. இச்செடிக்கு 1982 ஆம் ஆண்டில் சுந்தரராகவன் என்பவர், இத்தாவரத்தை நன்கு ஆராய்ந்தப் பின்னர் இதற்கு கெப்பாரிஸ் சேவராயன்ஸ் எனப்பெயரிட்டுள்ளார். இது கியூ புல்லட்டனில் முதன் முதலாக 1982 ஆம் ஆண்டில் வெளிவந்தது. பின்னர் புளோரா ஆப் இந்தியா என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் தாவரத்திற்கு அந்த இடத்தின் பெயரை வைப்பதே நடைமுறையில் உள்ளது. அந்த அடிப்படையில் பார்க்கும்போது இச்செடி சேர்வராயன் மலையில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. []   இது குறிப்பிட்ட மற்றும் ஆபத்திற்கு உரிய (Endemic and Threatened) தாவரமாகும். இது ஐயூசிஎன் பட்டியலில் குறைந்து கொண்டிருக்கும் (Vulnerable) தாவரமாகும். இச்செடியில் சிறு முட்கள் உள்ளன. இலையின் மேல்பரப்பு மங்கலான பச்சை நிறமும், அடிப்பகுதி மஞ்சள் கலந்த பச்சை நிறமும் கொண்டிருக்கும். பூவானது வெள்ளை அல்லது சந்தன வெள்ளை நிறத்தில் உள்ளது. பூ நறுமணம் கொண்டிருக்கும். பூக்கள் சிறியது. அதே சமயத்தில் ஒரு மஞ்சரியில் 5-10 பூக்கள் உள்ளன. ஒவ்வொரு பூவிலும் 20-42 மகரந்தத்தாள்கள் உள்ளன. பழங்கள் உருண்டை வடிவத்தில் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். பழத்தினுள் ஒரு விதை மட்டுமே இருக்கும்.   33. காட்டுத்துவரை   தாவரவியல் பெயர்: குரோடலேரியா சேவராயன்சிஸ் (Crotalaria shevaroyensis Gamble) குடும்பம் : பேபேசி தமிழ்ப்பெயர்       : காட்டுத்துவரை [] இது ஒரு சிறு புதர்ச்செடி, புல்வெளிகளிலும், மலையின் சரிவுகளிலும் வளர்கிறது. கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ள பகுதியில்  நன்கு வளர்கிறது. இதனை 1917 ஆம் ஆண்டு கேம்பிள் கண்டறிந்து பெயரிட்டார். சேர்வராயன் மலையில் முதலில் கண்டுபிடித்ததால் இதற்கு சேவராயன்சிஸ் எனப்பெயரிட்டார். இது தர்மபுரி, மதுரை போன்ற மாவட்டத்தில் உள்ள மலைகளில் இருப்பதை மேத்தீவ் கண்டறிந்துள்ளார். இது கிழக்கு மற்றும் மேற்கு மலைத்தொடரில் மட்டுமே வாழக்கூடிய ஒரு குறிப்பிட்ட இடம் வாழ் தாவரமாகும். அது மட்டும் அல்லாமல், இது ஒரு அரிய (Rare) தாவரமும் ஆகும். இச்செடி சுமார் 3 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. கிளை விட்டு வளரும். இலை தனி இலையாகவும், இருபுறமும் சிறு ரோமங்களைக் கொண்டிருக்கும். அடிப்பகுதியானது சற்று வெண்மையாக இருக்கும்.   இச்செடி பார்ப்பதற்கு அழகாக இருக்கும். பூக்கள் கொத்தாகக் கூம்பு வடிவில் அடுக்கப்பட்டிருக்கும். பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். பூங்கொத்தானது 15 செ.மீ நீளம் வரை இருக்கும். மேலும் பல்வேறு சிறு சிறு கிளைகளைக் கொண்டிருக்கும். ஒரு சிறு கிளையில் 3-5 பூக்கள் இருக்கும். வண்ணத்துப்பூச்சிகள் கூட்டம் கூட்டமாக இச்செடியில் அமர்ந்திருக்கும். இதில் பீன்ஸ் வடிவில் காய்கள் 3.5-4 செ.மீ நீளத்திற்கு இருக்கும். ஒவ்வொரு காயினுள்ளும் 12-16 விதைகள் இருக்கும். பூவும், காயும் செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை இருக்கும். இதனைப் பசுந்தழையாகப் பயன்படுத்துகின்றனர். பசுந்தழையில் நைட்ரஜன் சத்து அதிகம் உள்ளது. இச்செடியை சேர்வராயன் மலையில் எளிதில் காணமுடியாது. பரவலாக வெகு தொலைவிற்கு ஒன்று அல்லது இரண்டு என்கிற விகிதத்தில் மட்டுமே காணமுடியும், ஒரே இடத்தில் ஒரு கூட்டமாக இதனைக் காண்பது என்பது அரிது.   34. சந்தனம்   தாவரவியல் பெயர்: சேன்டலம் ஆல்பம் (Santalum album L.) குடும்பம்: சேன்டலேசி தமிழ்ப்பெயர்: சந்தனம், ஸ்ரீ கண்டம், சிலிகம் ஆங்கிலப்பெயர்: Sandalwood, Indian Sandalwood [] சந்தனம் என்பது ஒரு சிறு மரமாகும். சுமார் 4-9 மீட்டர் உயரம் வரை வளரும். இந்திய மரங்களில் விலையுயர்ந்த மரம் சந்தன மரமாகும். இதன் தாயகம் இந்தியாவாகும். நன்கு வளர்ந்த மரம் வாசனை நிறைந்தது. இதே போல் இதன் வேரும் வாசனை நிறைந்தது. அதனால் இம்மரத்தை அனைவரும் காண விரும்புகின்றனர். சந்தன மரத்தின் வைரம் நிறைந்த கட்டையில் அகர் என்னும் எண்ணெய் உள்ளது. இது மருத்துவ குணம் கொண்டது. இது உடல் சருமத்திற்கு குளிர்ச்சி தரக்கூடியது. சந்தன மரம் 100 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியது. இது தனித்து வாழாது. மற்ற மரத்தின் அருகிலேயே வாழும். இதன் வேரானது அடுத்த மரத்தின் வேரினில் ஒட்டிக்கொண்டு தனக்கு தேவையான ஊட்டச்சத்தை எடுத்து வாழும் ஒரு சாறுண்ணியாகும். மரம் வளர்ந்து 3 வருடத்தில் பூக்கும். பூவானது கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். பழங்கள் 3 வருடத்தில் உருவாகும். ஆனால் 5 ஆண்டுகள் நிரம்பிய மரத்தின் விதைகளே முளைக்கும் திறன் கொண்டது. சந்தன மரங்கள் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1500 மீட்டர் உயரம் உள்ள இடங்களிலும் வளர்கிறது. வனங்களில் இதனை திருட்டுத்தனமாக வெட்டுவதனால் இது முழுவதும் அழியும் தருவாயில் உள்ளது. இது மிகவும் ஆபத்தை சந்திக்கக்கூடிய மரமாக உள்ளது. இதனை சாகுபடியும் செய்து விவசாயிகள் வளர்க்கின்றனர். அரசுக்கு வருமானத்தைத் தரக்கூடியதாக சந்தனமரங்கள் விளங்குகின்றன. ஒரு குறிப்பிட்ட சுற்றளவு கொண்ட மரங்கள் அரசுக்கு சொந்தமானவை. ஆகவே மரத்தை வெட்டும் உரிமை அரசுக்கு மட்டுமே உண்டு. சேர்வராயன் மலையில் இருந்த மரங்கள் பெரும்பாலும் திருட்டுத்தனமாக வெட்டப்பட்டதன் காரணமாக சந்தன மரங்களைக் காண்பது என்பது அரிது. சந்தன மரங்களைத் தங்களது தோட்டப்பகுதியில் வளர்ப்பதால் சட்ட சிக்கல் ஏற்படுவதால் இதனை வளர்க்க யாரும் விரும்புவதில்லை. இது ஐயூசிஎன் பட்டியலில் விரைவாக குறைந்து வரும் தாவரம் எனக்குறிப்பிட்டுள்ளனர்.     35. வண்டுக்கடிச்செடி   தாவரவியல் பெயர்: ரூபியா கார்டிபோலியா (Rubia Cordifolia L.) குடும்பம் : ரூபியேசி தமிழ்ப்பெயர்: பச்சை முருளி, சேவள்ளி, மாண்டித்தி. ஆங்கிலப்பெயர்: Common madder, Indian madder. இது ஒரு கொடியாகும். சுமார் 5 அடி உயரம் வரை படர்ந்து வளரும் தன்மை கொண்டது. இதன் இலையின் நுனியில் ஒரு சிறு கொக்கியைப் பயன்படுத்தி படர்ந்து ஏறும். இக்கொடியின் கிளைகள் நான்கு சதுரம் கொண்டது. இலையானது 4-7 வரை வட்டவடிவில் தண்டின் கணுவில் பொருந்தி இருக்கும். பார்ப்பதற்கு நட்சத்திரம் போன்று அழகாக தெரியும். பூக்கள் சிறியவை. வெளிறிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். பின்னர் கனி உருவாகும். இது சதைப்பற்றுடன், உருண்டையாகவும், பழுத்தப்பிறகு சிவப்பிலிருந்து கருப்பு நிறமாக இருக்கும். இது ஒரு மூலிகைத் தாவரம். உடலில் வண்டுக் கடி ஏற்பட்டால் அவ்விடத்தில் இதன் இலையை கசக்கி தேய்ப்பார்கள். அதனால் இதற்கு வண்டுக்கடிச் செடி எனப்பெயர். இது ஐயூசிஎன் சிவப்புப் பட்டியலில் குறைந்துவரும் தாவரம் (Vulnerable) எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. []   இதன் வேரிலிருந்து சிவப்புச் சாயம் கிடைக்கிறது. அதற்காக இது 19 ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்திலிருந்து பல நாடுகளில் மூலிகைத் தாவரமாக சாகுபடி செய்கின்றனர். இதன் வேரானது 1 மீட்டர் நீளமும் 12 மி.மீ தடிமனும் கொண்டது. இந்த வேரில் அலிஜரின் (Alizarin) என்ற வேதிப்பொருள் உள்ளது. இது ஜவுளித் துறையில் நூல்களுக்குச் சிவப்புச் சாயம் ஏற்றப்பயன்படுகிறது. இதனை ரோஸ் மாடெர்  என்கின்றனர். அது தவிர பெயிண்ட் தயாரிக்கவும் பயன்படுகிறது. இதன் வேரானது ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்துகின்றனர். வியாபார நோக்கில் மஞ்சீத் (Manjith) என்ற இந்தி பெயரில் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் இதிலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் ரத்த சர்க்கரை நோயைக் குணப்படுத்த இதனைப் பயன்படுத்துகின்றனர். சேர்வராயன் மலையில் இச்செடி வேலியின் ஓரங்களில் படர்ந்து இருப்பதைக் காணலாம்.      36. மிளகு   தாவரவியல் பெயர்: பைப்பர் நைகிரம் (Piper nigrum L.) குடும்பம்: பைப்பரேசி தமிழ்ப்பெயர்: மிளகு, குருமிளகு ஆங்கில பெயர்: Pepper; Piper மிளகு என்பது ஒரு பல்லாண்டு வாழ்தாவரமாகும். இது ஒரு கொடி வகைத் தாவரம். மிளகுக்கொடி என்பது சுமார் 4 மீட்டர் உயரம் வரை மரத்தில் பற்றி ஏறும். இதன் ஒவ்வொரு கணுவிலும் வேர்கள் தோன்றி மரத்தின் பட்டையின் மீது கெட்டியாக பற்றிக் கொண்டு ஏறும். இது மரத்தில் பின்னிப் பிணைந்து அடர்த்தியாகப் படர்ந்து வளரும். இலை வெற்றிலை போல் இருக்கும். காண்பதற்கு அழகாக இருக்கும். பூக்கள் சிறியவை. மலர்கள் காய்களாக வளர்ச்சி பெற்ற பிறகு 15 செ.மீ நீளம் வரை இதன் பூக்காம்பு இருக்கும். ஒரு சரத்தில் 20-30 மிளகுக் கனிகள் இருக்கும். கனியானது உருண்டை வடிவத்தில் கருநிறமாக இருக்கும். மிளகின் தாயகம் தென்னிந்தியா ஆகும். இது இயற்கையாக வனப்பகுதியில், இயல் தாவரமாக வளர்கின்றது. ஆனால் தற்போது இதனை வனப்பகுதியில் காணமுடிவதில்லை. இதனைக் காட்டு மிளகு என்று அழைப்பர். இயற்கையில் ஒரு சில கொடிகளை மட்டுமே காண முடிகிறது. ஆகவே இது அழிந்துவரும் தாவரப்பட்டியலில் உள்ளது. []   மிளகினை வணிகப் பயிராக சாகுபடி செய்கின்றனர். ஆகவே இதனை சேர்வராயன் மலைப்பகுதியில் காபி தோட்டங்களில் காணலாம். மிளகின் கனிகள் உலர வைக்கப்பட்டு நறுமணப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும், உணவிற்குச் சுவையூட்டும் பொருளாகவும் உலகம் எங்கும் பயன்படுத்தப்படுகிறது. மிளகின் இலை மற்றும் வேர் ஆகியவையும் பயன்படுகிறது. மிளகு வாணிப லாபம் தரக்கூடியதாக இருப்பதனால் இதனைக் கருப்புத்தங்கம் என்று குறிப்பிடுகின்றனர். மிளகில் பெப்பரைன் என்ற வேதிப்பொருள் உள்ளதாலேயே அது காரத்தன்மையுடன் இருக்கிறது. மிளகினைப் பதப்படுத்தும் முறையை அடிப்படையாகக் கொண்டே கரு மிளகு, வெண் மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு எனப்பெயரிடப்படுகின்றன. இந்த மிளகின் காட்டுக் கொடிகளை அடர்ந்த சோலை உள்ள வனப்பகுதியில் காணலாம். ஆனால் அது சாகுபடி செய்யப்படும் மிளகை விட சிறிய கனியை மட்டுமே கொண்டிருக்கும்.     37. சிறுகுறிஞ்சா தாவரவியல் பெயர்: ஜிம்னிமா சில்வஸ்ட்ரி (Gymnema sylvestra R.Br.) குடும்பம்: அஸ்சிலிபியடேசி தமிழ்ப்பெயர்: கண்ணு மின்னயம் கொடி, பசானி, கோகிலம், சர்க்கரைக் கொல்லி ஆங்கிலப்பெயர்: Cowplant, Gymnema, Gurmari; Miracle Fruit [] இது ஒரு கொடியாகும். இதனைச் சர்க்கரைக்கொல்லி என்றும் அழைப்பர். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதனைக் காணலாம். இது ஒரு மூலிகைத் தாவரம் என்பதால் இதனை அதிகமாகச் சேகரிக்கின்றனர். ஆகவே இது அதிகம் சேதமடையக் கூடிய தாவரம் (Vulnerable) என ஐயூசிஎன் பட்டியலில் குறிப்பிட்டுள்ளனர். இக்கொடியானது புதர்களின் மீதும், மரத்தின் மீதும், படர்ந்து தொங்கும். இக்கொடியில் பால் இருக்கும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 400-1400 மீட்டர் உயரமுடைய இடங்களில் இது வளரும். இலையானது 1.5-5 செ.மீ நீளமும், 1-4 செ.மீ அகலமும் கொண்டிருக்கும். பூவானது பிரகாசம் இல்லாமல் அழுக்குப் படிந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும்.   இக்கொடியின் இலையில் அதிகப்படியான வேதிப்பொருட்கள் உள்ளன. இதில் ட்ரைடெர்பினாய்டு, சேப்போனின்ஸ், ஜிம்னேமிக் போன்றவை உள்ளன. ஜிம்னேமாக் என்ற அமிலம் உள்ளது. இந்த இலையை வாயில் அசைபோட்ட பின்னர் சர்க்கரை சாப்பிட்டால் இனிப்புச் சுவையை உணர முடியாது. சர்க்கரையானது மணல் போல் இருக்கும். நாக்கில் உள்ள சுவை மொட்டுகளை இது மறக்கச் செய்கிறது. ஆகவே இந்த இலையை மென்றப்பிறகு சர்க்கரை அல்லது மிளகாயை கடித்தாலோ அதன் சுவையை உணர முடியாது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக சர்க்கரை வியாதிக்கு பரிகாரமளிக்கும் மூலிகை என பாவிக்கப்படுகிறது. இருப்பினும் இது போதிய அறிவியல் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும் இதனை சர்க்கரை வியாதியின் type-1 மற்றும் type-2 ஆகியவற்றிற்கு கொடுக்கின்றனர். சிறுகுறிஞ்சான் பொடி என சித்த மருத்துவக் கடைகளில் விற்பனையும் செய்யப்படுகிறது.   38. ஜிம்னிமா   தாவரவியல் பெயர்: ஜிம்னிமா எலிகன்ஸ் (Gymnema elegans Wight &Arn.) குடும்பம்: அஸ்கிலிபியடேசி இது ஒரு மெல்லியக்கொடி. அரிதாகவே காண முடியும். தமிழ்நாட்டில் சேலம், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் காணலாம். இது தென்னிந்தியாவில் மட்டுமே வாழக்கூடிய ஒரு குறிப்பிட்ட இடம் வாழ் (Endemic) தாவரமாகும். இக்கொடியானது 8 மீட்டர் உயரம் வரை வளரும். புதர் நிறைந்த வனப்பகுதி மற்றும் வறண்ட வனப்பகுதிகளில் வளர்கின்றன. மரத்தின் மீதும், புதர்களின் மீதும் படர்ந்து வளர்கின்றன. இதுவும் சிறுகுறிஞ்சா செடியைப் போன்றதே. ஆனால் இதன் இலை சற்றுப் பெரியது. இதன் இலையானது 7 செ.மீ நீளம் வரை இருக்கும். இலையின் அகலம் 3.5 செ.மீ வரை இருக்கும். இலையானது நீண்ட இதய வடிவம் கொண்டது. இக்கொடியில் பால் வரும். பூ கொத்தாக இருக்கும். ஒரு மஞ்சரியில் 10-15 பூக்கள் இருக்கும். பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். []   இது ஒரு அரியவகைத் தாவரம் (Rare) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐயூசிஎன் பட்டியலில் இது அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் தாவரம் (Threatened) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கொடியை 1834ஆம் ஆண்டிலேயே கண்டறிந்து பெயரிட்டுள்ளனர். இது ஒரு மூலிகைத்தாவரமாகும். மலைப்பகுதியின் அடிவாரங்களில் இதனைக் காணலாம். சேர்வராயன் மலையில் இது குறைவாகவே காணப்படுகிறது. சிறுகுறிஞ்சா கொடியைப் பற்றி மக்களுக்குத் தெரியும். ஆனால் இக்கொடியைப் பற்றி அதிகம் தெரியாது. அதனால் இதற்கு தமிழ்ப்பெயர் கிடையாது. இருப்பினும் இதை பெரும் சர்க்கரைக் கொல்லிச்செடி எனச் சிலர் கூறுகின்றனர். இதனை யாரும் வீடுகளில் வளர்ப்பது கிடையாது.   39. மருந்து கூர்கான்    தாவரவியல் பெயர்: பிளக்ட்ராந்தஸ் பார்பேட்டஸ் (Plectranthus barbatus Andrews) குடும்பம்: லேமியேசி தமிழ்ப்பெயர்: மருந்து கூர்கான் ஆங்கிலப்பெயர்: Forskohlii; Indian coleus; Coleus makandi. [] இது ஒரு பருவச்செடி. மலைச்சரிவுகளில் ஈரம் நிறைந்த மண்ணிலும், பாறையை ஒட்டியபகுதியிலும் வளரக்கூடிய செடி. இதன் அடியில் சதைப்பற்றுள்ள வேர் உள்ளது. இந்த வேரிலிருந்து புதிய செடி உருவாகிறது. மலைப்பகுதியில் சுமார் 500 மீட்டர் உயரத்திற்கும் மேல் உள்ள இடங்களில் வளர்கிறது. செடி 50 செ.மீ உயரம் வரை வளரும். இலையானது 3-9 செ.மீ நீளமும், 2-5 செ.மீ அகலமும் கொண்டிருக்கும். பூக்கள் இளம் ஊதா சிவப்பு (Purple) நிறத்தில் இருக்கும். இச்செடி வாசனை உடைய செடியாகும். இது கற்பூரம் போன்ற வாசனை உடையது. இது ஒரு மூலிகைத் தாவரமாகும். இது அழிந்து வரும் தாவரம் என ஐயூசிஎன் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. சேர்வராயன் மலையில் ஒரு சில செடிகளை மட்டுமே காணமுடிகிறது.    இச்செடியின் வேரானது மருத்துவ குணம் கொண்டது என்பதால் பல்வேறு இடங்களில் விவசாயிகள் இதனை சாகுபடி செய்கின்றனர். மராத்தி மொழியில் இதன் வேரினை மெய்ன்மூலா (Mainmula) என்கின்றனர். இதனை ஊறுகாய் போடப் பயன்படுத்துகின்றனர். இது இதயத்தின் தசைகளை வலுப்பெறச் செய்கிறது. கென்யாவின் கிராமப்புறத்தில் உள்ளவர்கள் இதன் இலையை கிக்குயூ கழிவரை காகிதமாகப் (kikuyu toilet paper) பயன்படுத்துகின்றனர். இதன் வேரில் போஸ்கோலின் என்ற வேதிப்பொருள் உள்ளது. அது தவிர ரோஸ்மேரினிக் என்ற அமிலமும் உள்ளது. பழங்கால சமஸ்கிருதப் புத்தகத்தில் இதயம் மற்றும் நுரையீரலுக்கான டானிக் தயாரிக்கப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது உடல் எடையைக் குறைப்பதற்கான மருந்து இதிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இச்செடியிலிருந்து கண்களுக்கான சொட்டு மருந்து தயாரிக்கின்றனர். இது தவிர மேலும் பல நோய்களுக்கான மருந்துகளும் தயாரிக்கின்றனர். ஆகவே இச்செடியானது இயற்கையில் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.       40. கொட்டம் தாவரவியல் பெயர்: சைலோகாஸ்டஸ் ஸ்பீசியோசஸ்  (Cheilocostus speciosus (J.koing)C.Specht) குடும்பம்: காஸ்டேசி தமிழ்ப்பெயர்: கொட்டம், கோஸ்டம் ஆங்கிலப்பெயர்: Sprial ginger, Crepe ginger கொட்டம் ஒரு புதர் செடியாகும். இது சதைப்பற்றுடன் கூடியது. நாணல் தண்டு போல் கணுக்களைக் கொண்டது. இதன் அடிப்பகுதியில் அதிகப்படியான மட்டத்தண்டு கிழங்குகள் உள்ளன. செடியானது 3 மீட்டர் உயரம் வரை வளரும். தண்டானது சிவப்பு நிறத்தில் இருக்கும். இலையானது தண்டில் சுழல் வடிவில் (Sprial) பொருந்தி இருக்கும். ஆகவே இதனைப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இதனால் இதனை சுழல் இஞ்சிச் செடி என்கின்றனர். ஆனால் இஞ்சிச் செடிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இதனைக் காணலாம். ஓடைகளின் ஓரம் மற்றும் சோலைக்காடுகளில் இதனைக் காணலாம். அது தவிர மலைப்பகுதியில் ரோட்டு ஓரம் உள்ள சாக்கடைப் பகுதிகளிலும் இது வளர்கிறது. இதில் பூக்கள் வெண்மை நிறத்திலும் மையப்பகுதியில் மஞ்சள் நிறமும் கொண்டிருக்கும். []   இத்தாவரம் ஐயூசிஎன் சிவப்புப் பட்டியலில் அச்சுறுத்தலை நோக்கியுள்ள (Near Threatened) தாவரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்னை மூலிகைத் தாவரமாக ஆயுர் வேதம் மருத்துவத்தில் பயன்படுத்துகின்றனர். காய்ச்சல், ஆஸ்துமா, குடற்புழுக்கள் நீக்கம் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். பறவைகள் இதன் விதைகளை உண்பதன் மூலம் பரவுகிறது. மேலும் மட்டத்தண்டு கிழங்கு மூலமும் வளர்கிறது. இச்செடியினை மருத்துவத் தாவரமாகவும், அழகுத் தாவரமாகவும் வீடுகளில் வளர்க்கின்றனர். மழைக் காலத்திலேயே இச்செடி பூக்கிறது. இச்செடியில் இலைகள் பொருந்தியுள்ள அழகிற்காகவே வீடுகளில் வளர்க்கின்றனர். ஆனால் இயற்கையாக வளரும் வனப்பகுதியில் இச்செடிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சேர்வராயன் மலையில் மிக அரிதாகவே காண முடியும்.   41. உரிக்கால் செடி தாவரவியல் பெயர்: அரிஸ்டலோக்கியா இன்டிகா (Aristolochia indica L.) குடும்பம்: அரிஸ்டலோக்கியேசி தமிழ்ப்பெயர்: பெரு மருந்துக்கொடி, தழை சுருளிக் கோழிக்குண்டு, உரிக்கால் செடி, ஈஸ்வரமுள்ளி. ஆங்கிலப் பெயர்: Common Birdwing, Southern Birdwing [] இது ஒரு கொடியாகும். மரங்களின் மீதும் பாறைகளின் மீதும் படர்ந்து வளரும். புதர்கள் மற்றும் வேலிகளின் மீது படர்ந்து வளரும். மரங்களின் மீது பல மீட்டர் உயரத்திற்கு ஏறிச்சென்று படரும். இதன் இலைகள் பசுமையாகவும், பார்ப்பதற்கு அழகாகவும், இருக்கும். வனப்பகுதியின்  சரிவுகளிலும், புதர் நிறைந்த பகுதிகளிலும், நடைபாதை ஆற்று ஓரங்களிலும் இச்செடி வளர்கின்றது. இதனை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் காணலாம். ஆனால் குறைவான எண்ணிக்கையிலேயே காணமுடியும். இதனை வரலாற்றுக்காலம் முதல், மருந்தாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இது இந்தியாவில் அழிந்துவரும் தாவரமாக (Endangered) உள்ளது. வருடத்திற்கு ஒரு முறை பூத்து, விதை உருவாகிறது. இதன் மட்டத்தண்டு கிழங்கு மூலம் புதிய தாவரங்களை உருவாக்கலாம். இதன் பூ பார்ப்பதற்கு பறவைகளின் தலை போலவும், டச்சு மனிதனின் புகைப்பிடிப்பான் (Dutchman’s pipe)போலவும் இருக்கும். புல்லி வட்டம் இணைந்து குழாயாக மாறியுள்ளது. குழாயானது அடர்ந்த நிறமுடையது. இதிலிருந்து வெளிப்படும் வாசனையால் பூச்சிகள் கவரப்படுகின்றன. பூச்சிகள், ஈக்கள் மூலம் மகரந்த சேர்க்கை நடைபெறுகிறது. அது தவிர வண்ணத்துப்பூச்சிகளும் இச்செடியில் முட்டை இடுகின்றன. ஒரு குறிப்பிட்ட வண்ணத்துப்பூச்சியின் கம்பளிப் புழுவானது, இதன் இலையை உண்டு வளர்ச்சியடைகிறது. இச்செடியின் விநோதமான பூவின் வடிவத்திற்காகவே பல பூங்காக்களில் வளர்க்கப்படுகிறது. இக்கொடியின் தண்டு, வேர், இலை ஆகியவை மருந்தாகப் பயன்படுகிறது. இதில் அரிஸ்டலோகிக் என்ற அமிலம் உள்ளது. உடல் எடையைக் குறைக்கும் மூலிகையாக இதனைப் பயன்படுத்துகின்றனர். அது தவிர பாம்புக்கடியின் விச முறிவிற்காக மூலிகையாகப் பயன்படுகிறது. ஆகவே இதனைப் பாம்பு வேர்ச் (Snake root) செடி என்றும் அழைக்கின்றனர். 42. ஆட்டுக்கால் கிழங்கு தாவரவியல் பெயர்: திரைனேரியா குயர்சிபோலியா (Drynaria quercifolia (L)J.Sm.) குடும்பம்: பாலிபோடியேசி தமிழ்ப்பெயர்: ஆட்டுக்கால் கிழங்கு, முடவாட்டுக்கிழங்கு ஆங்கிலப்பெயர்: Oakleaf fern; Pakpak larvin. [] இது ஒரு பெரணிச் செடியாகும். பூவாத் தாவரம். இது பாறைகள் மீதும், மரத்தின் மீதும் ஒட்டி வளரும் ஒரு ஒட்டுண்ணி (Epiphytic) தாவரமாகும். இதில் மட்டத்தண்டுக் கிழங்கு இருக்கும். மட்டத்தண்டு கிழங்கானது 2 செ.மீ தடிமன் கொண்டிருக்கும். இதை அடர்த்தியான செதில்கள் செம்பழுப்பு நிறத்தில் மூடி இருக்கும். செதில்கள் 1 செ.மீ நீளம் இருக்கும். இது ஆட்டுக்காலின் மீது உள்ள ரோமம் போன்ற தோற்றத்தைக் கொடுப்பதால் இதனை தமிழகத்தில் ஆட்டுக்கால் கிழங்கு என்கின்றனர். இதனை மலைப்பிரதேசங்களில் ரோட்டின் ஓரங்களில் உள்ள மரங்களில் காணலாம். அது தவிர செங்கல் சுவர்களின் மீதும் ஒட்டி வளர்வதைக் காணலாம். இதில் இரண்டு வகையான இலைகளைக் காணலாம். இதய வடிவம் கொண்ட இலையைக் கூடு இலை (Nest) என்கின்றனர். இது ஓக் மரத்தின் இலையைப் போல் அழகாக இருக்கும். முதிர்ந்த நிலையில் பழுப்பு நிறமாக மாறிவிடும். ஆனால் இது உதிர்வதில்லை. மற்றொரு இலையானது நீண்டு, பல பிரிவுகளைக் கொண்டது. இது முதிர்ச்சியடைந்த பிறகு உதிர்ந்துவிடும்.   இதன் மட்டத்தண்டுக்கிழங்கை உலகின் பல நாடுகளில் மூலிகையாகப் பயன்படுத்துகின்றனர். இக்கிழங்கின் சிறு  துண்டுகளை இடித்து அதனுடன் மிளகு, சீரகம் போன்றவற்றைச் சேர்த்து சூப் தயாரிக்கின்றனர். சாதாரணமாக நாம் சூப் தயாரிப்பதற்கு எந்த எந்த பொருட்களைப் போடுகிறமோ, அதனை இதனுடன் சேர்த்தால் மட்டுமே சூப் என்று சொல்லமுடியும். இதனை முடக்கு வாதத்திற்கு பயன்படும் என்றும், மூட்டு வலிக்குப் பயன்படும் என்றும் சொல்கின்றனர். இது ஒரு வணிகப்பொருளாக விற்பனை செய்வதால் விற்பனை செய்பவர்கள் பல்வேறு மருத்துவக் குணங்களை கூறி விற்பனை செய்கின்றனர். ஆனால் அதற்கு அறிவியல் பூர்வமான போதிய ஆதாரம் இல்லை. இத்தாவரத்தை அதிகப்படியாக அழித்து விற்பனை செய்வதால் இது மருத்துவ ரீதியாக அழிந்துவரும் மூலிகைத் தாவரம் என்கின்றனர். இந்தப் போக்கு தொடர்ந்தால் இத்தாவரம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிடும் என பல ஆய்வுக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன. 2007 ஆம் ஆண்டு வெளிவந்த ஏ.பி சவுத்ரி என்பவரின் புத்தகத்திலும் அழிந்துவரும் தாவரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கொல்லிமலையில் இது விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது 2014 ஆம் ஆண்டு முதல் ஏற்காடு ஏரிக்கு அருகில் உள்ள தெரு ஓரக் கடைகளிலும் ஒரு கிலோ நூறு ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. இது இயற்கையாக வளரக்கூடியத் தாவரம். யாரும் விவசாயப் பயிராக சாகுபடி செய்வதில்லை. சுமார் 50-100 ஆண்டுகளாக வளர்ந்த இத்தாவரத்தை விற்பனை செய்கின்றனர். இந்த நிலைத் தொடர்ந்தால் சேர்வராயன் மலையில் உள்ள இத்தாவரம் இன்னும் சில ஆண்டுகளில் முற்றிலும் அழிந்துவிடும்.     43. நீட்டம் தாவரவியல் பெயர்: நீட்டம் உலா (Gnetum ula Brongn.) குடும்பம்: நீட்டேசி தமிழ்ப்பெயர்: யானை பெண்டு நீட்டம் என்பது பூவாதத் தாவரத்தைச் சேர்ந்த ஜிம்னோஸ்பெர்ம் (Gynosperm) என்னும் பிரிவைச் சேர்ந்தது. பரிணாமத்தில் பூக்கும் தாவரத்திற்கு மிகவும் நெருக்கமானது. இதனை 1829 ஆம் ஆண்டு கண்டுபிடித்து பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு மிகப் பெரிய கொடியாகும். மலைப்பிரதேசங்களில் இது மரம் போன்ற அடிப்பகுதியைக் கொண்டிருக்கும். கொடியானது வளைந்து யானை தும்பிக்கை போல் இருக்கும். இதன் இலையானது பூக்கும் தாவரத்தின் இலையைப் போலவே இருக்கும். புதிய இலைகள் மார்ச் மாதத்தில் தோன்றும். பூவானது மார்ச் மாதத்தில் தோன்றும். இதில் ஆண், பெண் என வெவ்வேறு கொடிகள் உள்ளன. கனியானது ஏப்ரல் மாதத்திலிருந்து உருவாகும். நவம்பர் மாதத்தில் மஞ்சள் நிறமாக பழுக்கும். இக்கனியினை வெளவால் சாப்பிடும். வெளவால் சாப்பிட்டு போட்ட விதைகள் நன்கு முளைக்கின்றன. இதன் பழத்தைச் சாப்பிடலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. விதையை வறுத்துச் சாப்பிடலாம். விதையிலிருந்து எண்ணெய் எடுக்கின்றனர். எண்ணெய் மருந்தாகவும். எரிபொருளாகவும் பயன்படுத்துகின்றனர். []   இக்கொடியானது பல்வேறு இடங்களில் வளர்ந்தாலும, இது சில இடங்களில் அரிதான மற்றும் அழிந்து வரும் தாவரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பிரதேசங்களில் அச்சுறுத்தலுக்கு உள்ளான தாவரம் என்கின்றனர். ஆனால் உலகின் பல பகுதிகளில் அதிகளவிலும் உள்ளன. ஆனால் இந்தியாவில் பரவலாக உள்ளது. இந்தியாவில் முக்கியமான பயனுள்ள தாவரமாகக் கருதப்படுகிறது. இருப்பினும் இது ஐயூசிஎன் பட்டியலில் அச்சுறுத்தலுக்கு உள்ளான தாவரம் என 2011 ஆம் ஆண்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொல்லிமலையிலும் இக்கொடி உள்ளது. சேர்வராயன் மலையில் இதனை சந்நியாசி மலைப்பகுதியில் மட்டுமே காண முடிகிறது. இம்மலையில் இக்கொடியினைக் காண்பது என்பது மிகவும் அரிதாகவே உள்ளது. இந்தியத் தாவரவியல் மதிப்பாய்வுத் துறையின் தோட்டத்தில் 70 ஆண்டுகள் வயதுடைய கொடி ஒன்று இயற்கையாகவே உள்ளது. இத்தோட்டம் தவிர சந்நியாசி மலை உள்பட சுமார் 10 பெரிய கொடிகளை மட்டுமே காணமுடிகிறது. இதனைப் பாதுகாக்கவேண்டும் என்கிற அக்கறை மிகக்குறைவாகவே உள்ளது எனலாம்.     44. சைலோட்டம் தாவரவியல் பெயர்: சைலோட்டம் நூடம் (Psilotum nudum (L)P.Beauv.) குடும்பம்: சைலோடேசி தமிழ்ப்பெயர்: துடைப்பச்செடி ஆங்கிலப்பெயர்: Whisk Fern; Skeleton fork fern;Curious club-moss இது பெரணியைப் போன்ற ஒரு சிறு செடி. 30 செ.மீ உயரம் வரை வளரும். தாவர பரிணாம வளர்ச்சியில் மிக முக்கியமான தாவரமாகக் கருதப்படுகிறது. சாற்றுக் குழாய்களைக் கொண்ட மிகவும் பழமையான தாவரம். ஈரல் செடி (Liverwords) என்னும் தாவரத்திற்கு அடுத்தபடியாக உயர்நிலைத் தாவரங்கள் தோன்றியதற்கு ஆதாரமாக இருப்பது சைலோட்டம் ஆகும். இதைவிட மிகவும் பழமையான (Primitive plant) சாற்றுக்குழாய் கொண்ட தாவரம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இது ஆரம்பத்தில் தோன்றிய சாற்றுக்குழாய் தாவரம் எனக் கருதப்படுகிறது. இது சுமார் 40 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் தோன்றியது. டிவோனியன் (Devonian) மற்றும் சுல்லுரியன் (Silurian) ஆகிய காலங்களில் மிக அதிகப்படியான அளவில் இப்பூமியில் வாழ்ந்தன. இத்தாவரம் தரையிலும், மரத்தின் கிளை வெடிப்புகளில் ஒட்டியும் வளரும். அதுதவிர பாறைகளின் வெடிப்புகளிலும் வளர்கிறது. [] இச்செடிக்கு வேர் குறைவாகவே இருக்கும். இதில் செதில் இலைகள் இருக்கும். தண்டானது இரண்டிரண்டாக பிரிந்து செல்லும். இதில் உண்மையான இலைகள் கிடையாது. தண்டானது முக்கோண வடிவத்தில் சற்று சிறகு போன்று இருக்கும். தண்டானது பல்வேறு பிரிவுகளைக் கொண்டு இருக்கிறது. பார்ப்பதற்கு ஒரு சிறு துடைப்பம் போல் தெரிகிறது. இச்செடியானது கைநிறைய பிடிக்கக்கூடிய கிளைகளைக் கொண்டு இருப்பது போலவே உள்ளது. அதாவது அடிப்பகுதி சிறுத்தும், கிளைப்பகுதிகள் அதிகரித்தும் இருக்கிறது. தண்டின் கக்கத்தில் மஞ்சள் நிற உருண்டைகள் போன்ற ஸ்போராஞ்சியம் உள்ளன. இது வெடித்து இதிலிருந்து ஸ்போர்ஸ் எனப்படும் விதைத்துகள்கள் வெளியேறுகின்றன. இது உலகில் பல நாடுகளில் வளர்கிறது. இருப்பினும் இது மிகவும் முக்கியமான தாவரம். இது அச்சுறுத்தலுக்கு உள்ளான தாவரம். விவசாயம், அணை கட்டுதல், வெள்ளப்பெருக்கு, கட்டிடங்கள் கட்டுதல் போன்ற காரணங்களால் அழிக்கப்படுகிறது. இது அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் தாவரம் என ஐயூசிஎன் பட்டியல் மூலம் தெரிய வருகிறது. சேர்வராயன் மலையில் செம்மடுவு மற்றும் சந்நியாசி மலைப்பகுதியில் இதனை மிக அரிதாகவே காணலாம். இது மூலிகைத் தாவரம் கிடையாது. அதே போல் தோட்டக்கலைத் தாவரமாக விற்பனை செய்யப்படுவதும் கிடையாது.    45. யானை பெரணி தாவரவியல் பெயர்: ஆஞ்சியோப்டெரிஸ் எவக்டா (Angiopteris evecta (G.Forst.) Hoffm.) குடும்பம்: மராட்டியேசி(Marattiaceae) தமிழ்ப்பெயர்: ராட்சத பெரணி, யானை பெரணி, பெரும் பெரணி ஆங்கிலப்பெயர்: Giant fern; king fern; Oriental vessal fern; Mule’s foot fern; Elephant fern இது பூவாதத் தாவரமான பெரணி வகையைச் சேர்ந்தது. இது ஆரம்பக்கால பெரணியாகும். இது மிகவும் வித்தியாசமான தோற்றம் கொண்டது. இது அரிய வகை மற்றும் அழிந்துவரும் பெரணியாகும். ஈரம் நிறைந்த, நிழல் பாங்கான, நீர் ஓடைகளை ஒட்டியப்பகுதிகளில் நன்கு வளர்கிறது. மிகவும் பசுமையாகக் காணப்படும் இறக்கைத் தாவரமாகும். இது 1786 ஆம் ஆண்டிலேயே கண்டறியப்பட்டு, பெயரிடப்பட்டது. இதன் தற்போதைய பெயர் 1796 ஆம் ஆண்டில் வைக்கப்பட்டது. இதன் அடிப்பகுதி மட்டத்தண்டுக் கிழங்கை உடையது. அது பருத்து, உப்பி சதைப்பற்றுடன் இருக்கும். இது 150 செ.மீ உயரம் வரை இருக்கும். இலையானது மிக நீண்டது. சுமார் 8 மீட்டர் (25 அடி) நீளம் வரை இருக்கும். இலையானது கூட்டிலைகளைக் கொண்டிருக்கும். இலைக்காம்பின் அடிப்பகுதி பருத்து உருண்டையாகச் சதைப்பற்று கொண்டதாக இருக்கும். இது பொருந்தி இருப்பது நமது உடலில் உள்ள பந்துகிண்ண மூட்டு போலவே இருக்கும். இலைக்காம்பைப் பிடித்துச் சுற்றினால் அது பொருந்திய இடத்தில் லேசாகச் சுற்றும். இச்செடிக்குத் தண்ணீர் பற்றவில்லை என்றால் அது துவண்டு இலைக்கொத்து கீழே படுத்துவிடும். மீண்டும் தண்ணீர் கிடைத்தால் அது நிமிர்ந்து நிற்கும். []   இதன் மட்டத்தண்டுக் கிழங்கை சில பகுதிகளில் பட்டினி கால உணவாக உண்கின்றனர். இளம் இலையைக் கீரையாகச் சமைத்து உண்கின்றனர். இதிலிருந்து எண்ணெய் எடுக்கின்றனர். இதனைத் தேங்காய் எண்ணெயில் வாசனைக்காகக் கலந்து பயன்படுத்துகின்றனர். சில பகுதிகளில் இதன் இலையை இருமல் மற்றும் வீக்கத்திற்கான மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். அடிப்பகுதியில் உருவாகும் இளம்செடியைப் பிரித்துப் புதிய செடியை உண்டாக்குகின்றனர். இச்செடியின் இலையின் இருபுறமும் இரண்டு வரிசையாக ஸ்பொராஞ்சியம் 307 உள்ளன. இதிலிருந்து வெளிப்படும் ஸ்போர்கள் மூலம் புதிய செடி உருவாகிறது. இச்செடியினைப் பூங்காக்களில் வளர்க்கின்றனர். சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் இது உயிருடன் இருக்கிறது. சேர்வராயன் மலையில் காகாசோலை மற்றும் பட்டிப்பாடி ஆற்றின் ஓரங்களில் இதனைக் காணலாம்.   46. முழு இலைபெரணி தாவரவியல் பெயர்: ஓபியோகுளோசம் ரெட்டிகுலேட்டம் (Ophioglossum reticulatum L.) குடும்பம்: ஓபியோகுளோசேசி தமிழ்ப்பெயர்: முழு இலை பெரணி, பாம்பு நாக்குச்செடி. ஆங்கிலப்பெயர்: Adder’s tongue fern இது ஒரு சிறு பெரணி. சுமார் 40 செ.மீ உயரம் வரை வளரும். பெரணிகளிலே பார்ப்பதற்கு முழுக்க வித்தியாசமாகத் தெரியும். இதன் வேரானது சதைப்பற்றுடன் பல நாரிழைகள் போல் இருக்கும். இதற்குச் சிறிய மட்டத்தண்டு கிழங்கு இருக்கும். அது உருளை வடிவில், சற்று உருண்டையாக இருக்கும். இச்செடியானது ஒரு சிறு காலனியாக வளர்ந்திருக்கும். இலையானது எந்தவித பிரிவும் இல்லாமல், தனி இலையாக இருக்கும். இலையில் பல்வேறு நரம்புகள் இருக்கும். ஆனால் மைய நரம்பு இருக்காது. ஓபியோகுளோசம் என்றச் சொல் கிரேக்க மொழியிலிருந்து வந்தது. இதற்கு பாம்பின் நாக்கு என்பது பொருளாகும். முளைக்கும் தன்மை கொண்ட ஒரு தண்டு இலையை ஒட்டித் தோன்றும். அது 20 செ.மீ நீளம் இருக்கும். அதன் நுனியில் 5-6 செ.மீ நீளத்திற்கு ஸ்பொராஞ்சியம் இருக்கும். சுமார் 20-45 ஜோடி ஸ்பொராஞ்சியம் இரண்டு வரிசையாக அடுக்கப்பட்டு இருக்கும். இது பார்ப்பதற்கு பாம்புகளின் நாக்கு போலவே இருக்கும். []   இந்தச் செடியில் இலை இருக்கும். ஆனால் ஸ்பொரஞ்சியம் கொண்ட தண்டு எப்போதும் இருக்காது. எப்போதும் செடியானது இலையுடன் இருக்காது. அது ஓய்வு நிலையில் இருக்கும். தனக்கு வேண்டிய உணவை மண்ணில் வாழும் பூஞ்சையிடமிருந்து பெற்றுக்கொள்ளும். ஒரு ஆண்டு வரை கூட ஓய்வு நிலையில் இருக்கும். சரியான சூழ்நிலை கிடைத்தால் மீண்டும் இலையைத் தோற்றுவிக்கும். இதனை இந்தோனேஷியாவில் கீரையாகவும், மற்ற காய்கறிகளுடன் கலந்து சாலட்டும் தயாரிக்கின்றனர். இதனை எண்ணெயில் கொதிக்க வைத்து புண்கள் மீது தடவுகின்றனர். ஓபியோகுளோசம் மிகவும் முக்கியமான பரிணாமப் பின்னணி கொண்ட தாவரம். பூமியில் வாழும் உயிரினங்களிலேயே அதிகமான குரோமோசோம்களைக் கொண்ட உயிரினமாகும். மனிதனுக்கு 26 ஜோடி அதாவது 46 குரோமோசோம்கள் உள்ளன. ஆனால் ஓபியோகுளோசத்திற்கு 630 ஜோடிகள்  அல்லது 1260 குரோமோசோம்கள் உள்ளன. இது ஐயூசிஎன் பட்டியலில் லீஸ்ட் கன்சார்ன் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. சேர்வராயன் மலையில் பால்மடிஸ் (Balmadies) என்னும் இடத்தில் மட்டுமே உள்ளது.   47. பூ பெரணி   தாவரவியல் பெயர்: அனிமியா சிம்பெரியானா (Anemia schimperiana Presl). குடும்பம்: அனிமியேசி தமிழ்ப்பெயர்: பூ பெரணி ஆங்கிலப் பெயர்: Flower fern; Flowering fern. []        இது ஒரு பூவாத் தாவரமாகும். ஈரப்பதமும், நிழலும் கொண்ட மலைப் பிரதேசங்களில் வளர்கிறது. பாறை ஒட்டிய மண் பகுதியிலும், மலையின் மண் சரிவுகளிலும் வளர்கிறது. இது ஒரு சிறு தாவரமாகும். ஆனால் பசுமையான இலைகளைக் கொண்டிருக்கும். இதனை முதன் முதலாக கார்ல் போரிவாஜ் பிரிசல் என்பவர் கண்டறிந்து பெயரிட்டார். இவர் 1794-1852 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்தார். இவர் ஒரு தாவரவியல் அறிஞர் மற்றும் தாவரங்களை வரையக்கூடிய ஓவியர். இவர் தாவரங்களைக் கொண்ட பல புத்தகத்தை எழுதியுள்ளார். அப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள தாவரங்களின் படங்களையும் அவரே வரைந்துள்ளார். இந்தப் பெரணியின் இலைக்காம்பானது நீளமானது. அதன் அடிப்பகுதியில் ரோமங்கள் அடர்த்தியாக உள்ளன. இலையானது இறகு போன்று கூட்டிலைகளாக உள்ளன. பல்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ளது. செடியில் இரண்டு அல்லது மூன்று இலைக் கொத்துகளை மட்டுமே கொண்டுள்ளது,   இத்தாவரத்திலிருந்து பூ கதிர் தோன்றும். ஆனால் அது பூ கதிர் அல்ல. பார்ப்பத்ற்கு பூ போல தோன்றுவதாலேயே  இதனை பூ பெரணி என்கின்றனர். இது 15-30 செ.மீ நீளம் வரை இருக்கும். இது ஆண்டனா போன்ற தோற்றமுடையது. அதாவது கற்பனை உருவான  வேற்றுக்கிரக வாசியின் ஆண்டனா போன்றது. இது பெரணியின் இலையிலிருந்தே ஒரே காம்பிலிருந்து வளர்கிறது. இது இரண்டாகப் பிரிந்தும் உள்ளது. பார்ப்பதற்கு கலைமான் கொம்பு போன்ற தோற்றமுடையது. புதிய தாவரம் விதைத்துகள்களில் இருந்து உருவாகிறது. இத்தாவரத்தினைப் பூந்தொட்டிகளில் வளர்க்கலாம். சேர்வராயன் மலையில் சந்நியாசி மலை மற்றும் நகரின் சில இடங்களிலும், ரோட்டின் ஓரத்திலும் வளர்கின்றன. இச்செடி ஒரு மூலிகைத் தாவரம் அல்ல. இருப்பினும் சுற்றுச்சூழல் பாதிப்பினால், மண்ணின் ஈரப்பதம் குறைவதால் இத்தாவரத்தின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.   48. பெரணி மரம்   தாவரவியல் பெயர்: சையாத்தியா ஜெய்ஜாண்டியா (Cyathea gigantea Wallich ex w.f.Hooker Holttum) குடும்பம்: சையாத்தியேசி தமிழ்ப்பெயர்: மரப்பெரணி, பெரணி மரம், யானை வணங்கி. ஆங்கிலப்பெயர்: Tree fern. [] பெரணி செடி இனங்களில் மரம் போன்று வளரக்கூடியது. இத்தோற்றம் அனைவரையும் கவரக்கூடியது. இந்த பெரணி மரங்கள் பனை, தென்னைகளில் இருப்பது போல் தூண் போன்ற தண்டுகளை கொண்டிருக்கிறது. பெரணிகளில் வேர், தண்டு, இலை போன்ற வேறுபாடுகள் உண்டு. அதனை இப்பெரணிகளில் எளிதில் காணலாம். மரப்பெரணியானது தரைக்குமேலே நேராக நிமிர்ந்து கிளைகளின்றி இருக்கும். சில சமயம் நுனிப்பகுதியில் கிளைகள் இருக்கும். வேர் நார் போன்றவை. அவைகள் எல்லாம் தண்டிலிருந்து உண்டாகும் ஒட்டு வேர்கள் ஆகும். மரமானது 5 மீட்டர் உயரம் வரை வளரும். இதில் இலைகள் இரண்டு அல்லது மூன்று கூட்டிலைகளைக் கொண்டது. இலைக் கொத்தானது 2-3 மீட்டர் நீளமுடையது. இலை முதிர்ச்சி அடைய 2 முதல் 3 ஆண்டுகள் ஆகும். பெரணியின் தளிர்கள் வில்போன்ற நுனியடிச் சுருள் வடிவில் மடிக்கப்பட்டிருக்கும். இது யானையின் தும்பிக்கை போல் இருக்கும். அதனால் இதனை யானை வணங்கி என்றும் கூறுகின்றனர். இலை வளர வளர மெல்ல விரிந்து கொண்டே போகும்.   இலைகள் உதிர உதிர தண்டின் மீது செதில்கள் உருவாகின்றன. செதில்கள் அடர்ந்த பழுப்பு நிறமும். நெருக்கமாகவும், நீண்ட வெளிறிய விளிம்புகளையும் கொண்டிருக்கிறது. இது எளிதில் உடையும் தன்மை கொண்டது. மரப்பெரணியானது வடகிழக்கு மற்றும் தென் இந்தியப் பகுதிகளில் வளர்கிறது. நீரோடையின் இரு ஓரங்களில் வளரும். இதனால் நீரோடையைக் காண மிக அழகாக இருக்கும். சேர்வராயன் மலையில் சேர்வராயன் கோயிலுக்கு எதிரில் பெரிய மரங்கள் உள்ளன. புருக்கிலின் எஸ்டேட், செம்மடுவு போன்ற பகுதிகளின் ஓடைப்பகுதிகளிலும் காணலாம். சேர்வராயன் பீடபூமி பகுதியில் பாக்சைடு சுரங்கம் வெட்டுவதினால் அப்பகுதியில் இருந்த மரப்பெரணிகள் அழிந்துவிட்டன. இதன் இலையில் மருத்துவ குணம் உள்ளது. இலையிலிருந்து மெத்தானோலிக் வடித்து எடுக்கப்படுகிறது. இது கல்லீரல் பிரச்சனையை தீர்க்கிறது. மரப்பெரணியின் மட்டத்தண்டு கிழங்குடன் மிளகு சேர்த்து பொடியாக்கி, பாலுடன் கலந்து ஒரு நாளைக்கு இரு வேலை என ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் வெள்ளைபடுதலுக்கு எதிரான வயிற்றுவலி சரியாகும் என்கின்றனர். இது ஒரு அரிதான தாவரம். அதுமட்டும் அல்லாமல் மரப்பெரணி என்பது ஒரு அதிசயம் வாய்ந்த தாவரமாகும். இதனைப் பூங்காக்களிலும் வளர்க்கின்றனர்.         49. குதிரைவால் செடி   தாவரவியல் பெயர்: ஈக்வீசிட்டம் ஆர்வன்ஸ் (Equisetum arvense L.) குடும்பம்: ஈக்வீசிட்டேசி தமிழ்பெயர்: குதிரைவால் செடி, சூனிய சுல்தான் ஆங்கிலப்பெயர்: Field horsetail; Common horsetail; Snake grass, puzzle grass. இது மிகவும் பழங்காலத் தாவரம். சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மிக அதிகளவில் வாழ்ந்தன. இக்குடும்பத்தைச் சேர்ந்த சில இனங்கள் மிகப்பெரிய மரங்களாக வளர்ந்தன. சுமார் 30 மீட்டர் உயரம் கொண்ட மரங்கள் கூட இருந்துள்ளன. இவை அழிந்து போய்விட்டன. அவற்றில் சில இனங்கள் மட்டுமே இன்றுவரை உயிருடன் இருக்கின்றன. ஆகவே இதனை உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் புதைபடிவத் தாவரம் (Living Fossil) என்கின்றனர். இத்தாவரம் ஈரம் நிறைந்த மணல் பாங்கான இடத்தில் வளர்கிறது. நீர் நிலைகளிலும், சதுப்புப் பகுதிகளிலும் இவை வளர்கின்றன. இதன் தண்டானது கணுக்கணுவாக இருக்கும். சவுக்கு மரத்தின் இலைத் தண்டுகளைப் போலவே இருக்கும். இது 10 முதல் 90 செ.மீ உயரம் வரை வளரும். தண்டானது 3-5 மி.மீ விட்டம் கொண்டிருக்கும். கணுக்களில் பல சிறு கிளைகள் இருக்கும். இச்செடியைப் பார்க்கும்போது குதிரையின் வால் போல் தெரியும். ஒவ்வொரு கணுவும் 2-5 செ.மீ நீளம் வரை இருக்கும். []   ஒவ்வொரு கணுவிலும் வட்ட வடிவில், பல சிறிய இலைகள் இருக்கும். கணுவில் 10 சதவீதம் சிலிக்கான் உள்ளது. இது தவிர பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற தாது உப்புகளும் உள்ளன. ஆகவே இச்செடியின் தண்டினைப் பயன்படுத்தி உலோகப் பொருட்கள், தண்ணீர் குடிக்கும் பாத்திரம், சமையல் பாத்திரம், டின் போன்றவைகளைத் துலக்குவதற்கு பயன்படுத்துகின்றனர். ஆகவே இதனைப் பாத்திரம் சுத்தம் செய்யும் செடி என்கின்றனர். இதன் வித்தியாசமான தோற்றத்தைக் கொண்டு இதனை சூனியக்கார செடி என்று கூறுபவர்களும் உண்டு. சில இடங்களில் இதனை பீடைச் செடி என்கின்றனர். இதனைச் சில நாடுகளில் மூலிகைத் தாவரமாகவும் பயன்படுத்துகின்றனர். இதன் இளம் குருத்துகளை ஜப்பான் மற்றும் கொரியா நாடுகளில் காய்கறியாகப் பயன்படுத்துகின்றனர். இந்த ஈக்வீசிட்டத்தைத் தவிர மற்ற இனங்கள் நச்சுத்தன்மை கொண்டவையாகும். அசுத்தம் அடைந்த ஈக்வீசிட்டம் செடியானது நிக்கோட்டினைக் கொண்டிருக்கும். ஈரம் கொண்ட இடங்களில் இதனை நட்டால் அந்த இடத்தில் உள்ள ஈரத்தன்மையை இது உறிஞ்சி குறைத்துவிடும். இதற்குக் காரணம் இதில் உள்ள சிலிக்காவாகும். ஆஸ்திரேலியாவில் இச்செடியைக் கொண்டு டீ தயாரிக்கின்றனர். நீரில் கொதிக்க வைத்து குளிப்பதற்குப் பயன்படுத்துகின்றனர். தோல் வியாதி, சிறுநீரகம், சிறுநீர் பாதைப் பிரச்சனை போன்றவற்றிற்கு நாட்டு மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர். இச்செடியின் அடிப்பகுதியில் மட்டத்தண்டும் அத்துடன் கிழங்கும் உள்ளது. இலைகளின் கக்கங்களில் உருவாகிற கிளைகளின் மிகச் சுருக்கமாகக் குறுகியுள்ள நுனிகளில் ஸ்பொராஞ்சியங்கள் உண்டாகின்றன. இதில் ஸ்போர்கள் எனப்படும் விதைத்துகள்கள் உண்டாகின்றன. இந்த அமைப்பை ஸ்ட்ரோபிலா (Strobilla) கிண்ண அடுக்கு என்கின்றனர். இதில் உள்ள ஸ்போர்கள் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கும். இந்த இனத்தில் 108 ஜோடிகள் அதாவது 216 குரோமோசோம்கள் உள்ளன. சேர்வராயன் மலையில் மஞ்சக்குட்டை கிராமத்தை ஒட்டிய கிரேக்மோர் பகுதியில் உள்ள சதுப்பு நிலத்தில் இச்செடியினைக் காணலாம்.           50. லைக்கோபோடியம்   தாவரவியல் பெயர்: கூப்பர்ஜியா மேக்ரோஸ்டேக்கிஸ் (Huperzia macrostachys (Spring) Holub) குடும்பம்: லைக்கோபோடியேசி ஆங்கிலப் பெயர்: Lycopodium [] பசுமையான காடுகளில் இது வளர்கிறது. இது ஒரு தொற்றுத்தாவரமாகும். ஈரப்பதம் நிறைந்த மரத்தின் கிளைகளில் ஒட்டி வளர்கிறது. வேரானது சிறியது. இச்செடியின் தண்டு 40 செ.மீ உயரமும், 4 செ.மீ விட்டமும் கொண்டிருக்கும். தண்டின் மீது நெருக்கமாக இலைகள் இருக்கும். இலையானது அடர்ந்த பச்சை நிறமும், பளபளப்பாகவும் 1.5-2 செ.மீ நீளமும், 0.4-0.8 செ.மீ அகலமும் கொண்டிருக்கும். மையநரம்பு கீழ்ப்பகுதியில் புடைத்தும், இலையின் மேல்பகுதி குறுகிய பள்ளத்தையும் கொண்டிருக்கும். தண்டில் இலைகள் பொருந்தி இருப்பது மிகவும் அழகாக இருக்கும். தண்டின் நுனியில் கவை போன்ற கிளை பிரிந்து கோன் (Cones) எனப்படும் விதைக் கூம்புகள் உருவாகி இருக்கும். இது 10-15 செ.மீ நீளம் வரை இருக்கும். இதில் எதிர் எதிராக ஸ்பொராஞ்சியம் எனப்படும் விதைப்பைகள் உள்ளன. அது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதில் விதைத்துகள்கள் உள்ளன.   இது 1964 ஆம் ஆண்டு வெளிவந்த ஐயூசிஎன் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஒரு அரிய வகைத்தாவரம். ஆரம்பத்தில் இதற்கு லைக்கோபோடியம் எனப் பெயரிட்டிருந்தனர். 1985 ஆம் ஆண்டில் கூப்பர்ஜியா எனப்பெயர் மாற்றம் செய்துள்ளனர். சேர்வராயன் மலையில் உள்ள சேர்வராயன் கோயில் அருகில் உள்ள பெரிய மரத்தின் மீது இது ஒட்டித் தொற்றுத்தாவரமாக வளர்ந்திருந்தது. தற்போது அம்மரத்தின் மீது இதனைக் காணமுடியவில்லை. இச்செடி காகாசோலையில் உள்ள மரங்களின் மீதும் இருந்தது. ஆனால் தற்போது குறைந்த அளவே உள்ளது. இதனைத் தேடி கண்டுபிடிப்பது என்பது சிரமமானக் காரியமாக உள்ளது. இச்செடியின் எண்ணிக்கை குறைவதற்கு சுற்றுச்சூழல் பாதிப்பே காரணமாகும்.   51. போட்ரிக்கியம்   தாவரவியல் பெயர்: போட்ரிக்கியம் லானுஜினோசம்                      (Botrychium lanuginosum Wall ex Hook & Grev.) குடும்பம்: ஓபியோகுளோசேசி ஆங்கிலப் பெயர்: Botrychium Fern இது ஒரு சிறு பெரணி பசுமையான தாவரம். ஈரம் நிறைந்த மலைப்பிரதேசங்களில் வளர்கிறது. தாய்லாந்து, இந்தியா, சீனா போன்ற நாடுகளிலும் இவை வளர்கிறது. தரையிலும், பாறையின் வெடிப்புகளிலும் வளர்கிறது. செடியானது 20 செ.மீ உயரம் வரை இருக்கும். இலைகள் வருடத்திற்கு ஒரு முறை காணலாம். குளிர்காலத்தில் இதன் இலைகளைக் காண முடியாது. வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே புதிய இலை தோன்றும். இதன் அடிப்பகுதியில் மட்டத்தண்டு கிழங்கு இருக்கும். அது சிறியதாகவும், அதிலிருந்து வேர்கள் சதைப்பற்றுடன் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய குருத்து தோன்றி புதிய இலைகளை உருவாக்கும். பழைய இலையானது வாடிவிடும். இச்செடியில் ஒரு கூட்டிலையை மட்டுமே காண முடியும். []     இலையைக் கொண்டிருக்கும் தண்டிலேயே விதைத்துகள்களை உருவாக்கும். பூக்கொத்து தோன்றும். இது பல கிளைகளாகப் பிரிந்து இருக்கும். இது 6-12 செ.மீ நீளம் வரை இருக்கும். இதில் ஸ்பொராஞ்சியங்கள் இருக்கின்றன. இதிலிருந்து வெளிப்படும் ஸ்போர்கள் எனப்படும் விதைத்துகள்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இப்பெரணி ஸ்போர்கள் மூலம் தோன்றும். மட்டத்தண்டுக் கிழங்கை எடுத்து நடுவதன் மூலமும் புதிய செடியை உருவாக்கலாம். இது பூந்தொட்டிகளில் வளர்ப்பதற்கு ஏற்றத் தாவரம் அல்ல. ஏனெனில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே இலை இருக்கும். மீதி காலத்தில் செடியானது உறக்க நிலையில் இருக்கும். சேர்வராயன் மலையில் காக்காசோலை பகுதிகளில் உள்ள பாறைகளின் வெடிப்புகளில் தேங்கி இருக்கும் மண்ணில் இவை வளர்கின்றன. பாறையில் வளர்ந்திருக்கும் போது இதனை எளிதில் கண்டுபிடிக்கலாம். மற்றக் காலங்களில் இதனைக் கண்டுபிடிக்க முடியாது. 52. அக்கேந்தபிப்பியம்   தாவரவியல் பெயர்: அக்கேந்தபிப்பியம் பைகலர் (Acantheppium bicolor Lindley) குடும்பம்: ஆர்க்கிடேசி [] இது தரையில் வாழும் மண் அமர் தாவரமாகும். ஆர்க்கிடு எனப்படும் பகட்டு மலர் கொண்ட தாவரமாகும். இதனை 1835 ஆம் ஆண்டில் ஜான் லின்டல் (John Lindley) என்ற தாவர அறிஞர் பெயரிட்டு விவரித்தார். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவர் ஒரு தாவரவியல் அறிஞர், ஆர்க்கிடு தாவரங்களை வகைப்படுத்துவதில் சிறந்தவராக விளங்கினார். இவர் மிகக்குறைவான மக்கள் மத்தியில் தெரிந்து இருந்தாலும், இவர்தான் லண்டனில் உள்ள கியூ பொட்டானிக்கல் கார்டனை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இந்த ஆர்க்கிடு ஒரு அரிதான தாவரம். அது மட்டும் அல்லாமல் அழிந்து வரும் தாவரம். சேர்வராயன் மலையில் பசுமை நிறைந்த சோலைகளில் வளர்கிறது. மக்கிய பழைய இலைகள் கொண்ட ஈரம் நிறைந்த பகுதியில் மட்டுமே இதனைக் காணமுடியும். காகாசோலைப் பகுதியிலும், அதிக நிழல் கொண்ட சில இடங்களில் மட்டுமே இவை உள்ளன.   இந்த ஆர்க்கிடு தாவரத்திற்கு போலிக்குமிழம் (Pseudobulb) உள்ளது. இதிலிருந்து இலைகள் தோன்றுகின்றன. இலை இரண்டு முதல் மூன்று இருக்கும். அடிப்பகுதியில் பழைய இலைகள் வாடி இருக்கும். இலைகள் பசுமையாகவும், குட்டையான காம்பில் நீளமாக உள்ளது. போலிக்குமிழத்திலிருந்து மலர் கொத்து தோன்றுகின்றன. ஒரு மலர் கொத்தில் 3-7 மலர்கள் உள்ளன. பூக்கள் நெருக்கமாக அமைந்துள்ளன. பூவானது ஒரு பை போல அல்லது ஜாடி போல் உள்ளது. பூக்கள் வெண்மையாகவும் அதனுடன் மஞ்சள் கலந்த புள்ளிகளும், அதன் ஊடே சிவப்புப் புள்ளிகளும் உள்ளன.  பூ நறுமணம் வீசக்கூடியது. பூக்கள் பார்ப்பதற்கு அழகாகவும், விநோதமாகவும் இருக்கும். இதன் ஒரு பூ வாடுவதற்கு 15-20 நாட்கள் ஆகிறது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பூக்கள் மலர்கின்றன. அதனைத் தொடர்ந்து கனி உருவாகிறது. இதனுள் மிக நுண்ணிய விதைகள் லட்சக்கணக்கில் உள்ளன. விதைகள் அனைத்தும் முளைப்பதில்லை. குமிழத்தைப் பிரித்து நடுவதன் மூலம் இதனை இனப்பெருக்கம் செய்யலாம்.   53. சைத்தானின் விரல்கள் தாவரவியல் பெயர்: டென்ட்ரோபியம் அக்கியூயம்                                                                                                                                                   (Dendrobium aqueum Lindley) குடும்பம்: ஆர்க்கிடேசி ஆங்கிலப் பெயர்: Devil’s Fingers. [] இது ஒரு மரம் அமர் ஆர்க்கீடு தாவரமாகும். மரங்களில் ஒட்டி தொற்றுத்தாவரமாக வளரும். ஆனால் மரத்திற்கு எந்தவிதத்தீங்கும் செய்யாது. இதன் பெயர் இனிமையான ஓசை நயமிக்கது. டென்ரோபியம் என்ற கிரேக்க சொல்லுக்கு மரத்தின் மீது வாழ்க்கை நடத்தக்கூடியது என்பது பொருளாகும். அக்கியூயம் என்பதற்கு நீர் போன்றது என்ற ஜாடையை குறிப்பதாகும். இது தென்னிந்தியாவில் வளரக்கூடிய குறிப்பிட்ட இடம் வாழ் தாவரமாகும்.காபி தோட்டங்களில் உள்ள மரங்களில் வளர்கின்றன. கடல் மட்டத்திலிருந்து 900-1200 மீட்டர் உயரம் கொண்ட பகுதியில் வளர்கிறது. இது ஒரு அரிதான (Rare) ஆர்க்கீடாகும். சாலை ஓரங்களில் உள்ள மரங்களிலும் வளர்கின்றன. சாலை விரிவாக்கத்தின் காரணமாக இவை அழிகின்றன. சேர்வராயன் மலையில் உள்ள காகாசோலை பகுதியில் இவை வளர்கின்றன. சில சமயம் பாறைகளிலும் ஒட்டி வளர்கின்றன. மரத்தில் ஒட்டி வளர்ந்து தொங்குகின்றன. அதனால் இதனை சைத்தான் விரல்கள் என்கின்றனர். 2 முதல் 3 அடி நீளம் வரை வளர்கிறது. போலி குமிழ் தண்டுகள் கணுக்களைக் கொண்டுள்ளன. இலை உதிர்ந்த தண்டுகள் அடர்ந்த கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கின்றன. இலைகள் 7.5-15 செ.மீ நீளம் வரை இருக்கும். இலையின் எதிர்புறத்தில் பூக்கள் தோன்றுகின்றன. 2-3 பூக்கள் ஒரு கொத்தில் இருக்கும். பூவானது வெண்மை நிறத்தில் இருக்கும். பூ 3.5 – 4.5 செ.மீ அளவு உடையது. நறுமணம் வீசக்கூடியது. பூவின் மையத்தில் உள்ள உதடு வடிவ இதழ் மஞ்சள் வெளிறிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் பூக்கள் 10-15 நாட்கள் வரை வாடாமல் இருக்கும். பூக்கள் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மலரும். இச்செடி நீண்டு வளைந்து தொங்குவதால் வனப்பகுதியில் இதனை எளிதில் கண்டறியலாம். வீடுகளில் மரக்கட்டைகளில் கட்டி இதனை வளர்க்கலாம்.   54. லைப்பேரிஸ் தாவரவியல் பெயர்: லைப்பேரிஸ் வாக்கரி (Liparis walkerial Grah.) குடும்பம்: ஆர்க்கிடேசி [] இது ஒரு தரைவாழ் ஆர்க்கிடு தாவரமாகும். சதைப்பற்று உள்ள ஒரு சிறு தாவரம். புல்வெளி நிறைந்த பகுதியில் வளர்கிறது. இது வளரும் பகுதியில் ஈரம் நிறைந்திருக்க வேண்டும், குளிர்ப்பிரதேசங்களில் நன்கு வளர்கிறது. இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2200 மீட்டர் உயரம் உள்ள இடங்களில் இது வளர்கிறது. சேர்வராயன் மலையில் சுமார் 1500 மீட்டர் உயரமான காகா சோலையில் இது வளர்கிறது. இத்தாவரத்தை 1840 ஆம் ஆண்டில் ஓவியமாக வரைந்துள்ளனர். இது சதைப்பற்று கொண்ட போலிக்குமிழம் கொண்ட தாவரமாகும். 10-15 செ.மீ உயரம் வரை வளர்கிறது. இதன் பக்கவாட்டில் புதிய செடிகள் தோன்றுகின்றன.   போலிக்குமிழ்களுடன் சதைப்பற்றுள்ள தண்டுகள் உள்ளன. இதில்  2-3 இலைகள் உள்ளன. மலர்க்கொத்து ஒல்லியாகவும், நிமிர்ந்தும் அநேகச் சிறிய மலர்களைக் கொண்டிருக்கிறது. பூக்கள் சிறியதாக இருப்பதனால் கவர்ச்சியாக இருப்பதில்லை. பூக்கள் கருஞ்சிவப்பு நிறத்திலும், விளிம்புகள் மஞ்சள் நிறத்திலும் இருக்கின்றன. ஆகவே மலர் முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை. புற இதழ்களும், பூவிதழ்களும் பின்புறமாக நிமிர்ந்து இருக்கின்றன. மடல் இல்லாத உதடு நடுப்பாகம் வளைந்துள்ளது. அதன் நுனியில் பிளவும், பற்களைப் போன்ற விளிம்பும் இருக்கிறது. இப்பூவில் 4 மகரந்தங்கள் உள்ளன. இச்செடி அரிய வகையாகும். சுற்றுச்சூழல் பாதிப்பினால் இச்செடி அழிந்து வருகிறது.   55. பல்போபில்லம் தாவரவியல் பெயர்: பல்போபில்லம் கெய்டென்ஸ் (Bulbophyllum kaitense Raitense) குடும்பம்: ஆர்க்கிடேசி [] மரத்தில் ஒட்டி வளர்க்கூடிய மர அமர் தாவரமாகும். இது ஒரு சிறிய ஆர்க்கிடு தாவரமாகும். இதன் போலிக்குமிழம் வெவ்வேறு அளவுகளில் உள்ளது. வடிவத்திலும் சில வேறுபாடுகள் உள்ளன. இது மரக்கிளைகளில் படர்ந்து ஒரு மெத்தை போன்று இருக்கும். மிக நெருக்கமாக இருக்கும். தடித்த தண்டானது மரத்தில் படர்ந்திருக்கும். அதன் மீது போலிக்குமிழம் தொடர்ச்சியாக இருக்கும். போலிக்குமிழ்த் தண்டின் உச்சியில் ஒரே ஒரு இலை மட்டும் இருக்கும். இலையில் சிறிய காம்பு இருக்கும். இலை மெல்லியதாகவும், அடர் பச்சை நிறத்தைக் கொண்டிருக்கும். போலிக்குமிழ்த்தண்டின் அடியிலிருந்து மலர் கொத்து தோன்றி அதில் பல பூக்கள் மலரும், இது ஒரு பதக்கம் போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும். பூக்கள் தளர்வாக இடைவெளிவிட்டு மலர்ந்திருக்கும். பூவானது வெளிறிய பச்சை நிறத்தில் மலர்ந்திருக்கும். பின்னர் மஞ்சள் நிறமாக மாறி அதன் பிறகு சிவப்பாகும். பூ முதிர்ச்சி அடையும் போது அழுக்கு கலந்த சிவப்பாகும். பூவில் மகரந்தங்கள் இருக்கும். அவை இரண்டு சமமற்ற ஜோடிகளாக இருக்கின்றன. இந்த ஆர்க்கிடு ஒரு அரிய வகைத் தாவரமாகும். தமிழ் நாட்டில் கொல்லிமலை, நீலகிரி, சேர்வராயன் மலைகளில் உள்ளது. சேர்வராயன் மலையில் காகாசோலைப் பகுதியில் காணப்படுகிறது. ஈரப்பதம் நிறைந்த இடத்தில் உள்ள மரங்களின் மீது நன்கு படர்ந்து வளர்கிறது. பாசான் பிடித்த மரத்தில் நன்கு வளர்கிறது. தற்போது ஏற்பட்டு வரும் சுற்றுச்சூழல் பாதிப்பால் இதன் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இத்தாவரம் ஈரக்கசிவு உள்ள பாறைகளின் மீதும் வளர்கிறது. ஆகவே பாறை வாழ் தாவரம் என்றும் அழைக்கலாம். இது தனக்கு வேண்டிய உணவை தானே தயாரித்துக் கொள்கிறது. பல பஞ்சு போன்ற திசுக்களுடைய வேர்கள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொண்டு வளர்கிறது                                 56. கேஸ்ட்ரோசில்லஸ் தாவரவியல் பெயர்: கேஸ்ட்ரோசில்லஸ் அக்குவாலிஸ் (Gastrochilus acaulis (Lindley)kuntze) குடும்பம்: ஆர்க்கிடேசி [] கேஸ்ட்ரோசில்லஸ் என்ற ஆர்க்கிடு பேரினத்தாவரத்தை முதன்முதலாக நேபாள நாட்டில்தான் கண்டுபிடித்தனர். இந்த ஆர்க்கிடு தாவரம். ஒரு மரம் அமர் தாவரம் மிகச் சிறிய தண்டினை மட்டுமே கொண்டது. தண்டானது 2 செ.மீ நீளம் மட்டுமே உடையது. ஆனால் இதிலிருந்து வளர்ந்து மரத்தில் ஒட்டிச் செல்லும் வேரானது நீண்ட தூரத்திற்கு படரும். சுமார் 60 செ.மீ நீளம் வரை செல்லும். செடியில் 4 முதல் 5 இலைகள் இருக்கும். இலையானது 4-10 செ.மீ நீளமும், 1 செ.மீ அகலமும் கொண்டிருக்கும். இலையின் நுனியானது சிறிது இரண்டாக பிரிந்து இருமடல் கொண்டிருக்கும். பூக்கொத்தானது தண்டின் கணுவிலிருந்து எழும்பும். பூக்காம்பானது குட்டையாக இருக்கும். அதில் சில பூக்கள் இருக்கும். பூ 2 செ.மீ விட்டம் உடையது. பூவானது மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும். இதில் இளம் ஊதா சிவப்புகள் உள்ளன. இப்பூவின் உதடு இதழானது மஞ்சள் கலந்து இளம் ஊதா சிவப்பு நிறம் கொண்டிருக்கும். இதில் மஞ்சள் புள்ளிகள் உள்ளன. இத்தாவரம் பசுமையான காடுகளில், ஈரப்பதம் நிறைந்த வனப்பகுதிகளில் வளர்கிறது. தமிழ்நாட்டில் சேர்வராயன் மலை, கொல்லிமலை ஆகிய இடங்களில் சோலைப்பகுதியில் உள்ள பசுமையான மரங்களில் வளர்கிறது. சேர்வராயன் மலையில் காகாசோலை மற்றும் கரடி குகை காபி தோட்டத்தின் மரத்தில் இவை வளர்கிறது. இது ஒரு அரிதான தாவரம். சேர்வராயன் மலையில் இது மிகக்குறைவாகவே உள்ளது. செங்கல் மற்றும் கரிக் கொட்டை கலந்து தயாரிக்கப்பட்ட தொங்கும் பூந்தொட்டிகளில் இச்செடியினை வளர்க்கலாம். இச்செடியில் பூவானது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மலர்கின்றன. இதன் பூக்கள் 15 நாட்களுக்கு மேல் வாடாமல் இருக்கின்றன. ஆனால் இது அழகுத் தாவரமாக யாரும் வீடுகளில் வளர்ப்பது கிடையாது. ஆகவே இதனை இயற்கையில் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். 57. இரியா தாவரவியல் பெயர்: இரியா நானா (Eria nana A.Rich) குடும்பம: ஆர்க்கிடேசி [] `இது ஒரு மரம் அமர் ஆர்க்கீடு தாவரமாகும். இதற்கு போலிக்குமிழம் உள்ளது. இந்த போலிக்குமிழம் என்பது உருண்டையாகவும், அதே சமயத்தில் தட்டையாகவும் இருக்கும். அதாவது சட்டையில் உள்ள பட்டன் போன்ற தோற்றமுடையது. போலிக் குமிழங்கள் மரத்தின் மீது படர்ந்து செல்லும். மிக நெருக்கமாக இவை அமைந்திருக்கும். கிடைமட்டமாக உள்ள மரக்கிளைகளில் மட்டுமே இத்தாவரம் வளர்கிறது. இதில் இரண்டு இலைகள் மட்டுமே தண்டின் மையத்திலிருந்து தோன்றும். இலைகள் பசுமையாக இருக்கும். மலர் கொத்து இலையை விட நீளமானது. பல பூக்கள் உள்ளன. பூக்கள் சிறியவை. அவை வெளிறிய மஞ்சள் நிறத்தில் அல்லது சந்தன நிறத்தில் இருக்கும். இத்தாவரம் அரிதானது. தமிழகத்தில் கோவை, நீலகிரி, மதுரை, சேலம் போன்ற மாவட்டங்களில் இது வளர்கிறது. சேர்வராயன் மலையில் கடல் மட்டத்திலிருந்து 1400-1600 மீட்டர் உயரம் கொண்ட பகுதியிலேயே வளர்கிறது. ஆனால் குறைந்தளவே சேர்வராயன் மலையில் உள்ளது. இது வியாபார நோக்கில் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதன் போலிக்குமிழம் பார்ப்பதற்கு மிக அழகாக இருப்பதால் இதனை ஆர்க்கிடு மீது ஆர்வம் கொண்டவர்கள் வளர்க்கின்றனர்.   58. டேனியோபில்லம்  தாவரவியல் பெயர்: டேனியோபில்லம் அல்விசி (Taeniophyllum alwisii Lindl.) குடும்பம்: ஆர்க்கிடேசி [] ஆர்க்கிடு தாவரங்களில் மிகவும் வித்தியாசமான தாவரம் இதுவாகும். இது ஒரு மரம் அமர் தாவரம். பசுமையான காடுகளில் வளர்கிறது. சேர்வராயன் மலையின் காகா சோலையில் இது காணப்படுகிறது. இதனை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில் இது மிகச்சிறிய தாவரம். அதுமட்டுமல்லாமல் இதற்கு இலைகள் கிடையாது. தண்டு மிகச் சிறியது. ஆனால் அதனைத் தண்டு என்று கூட சொல்லமுடியாது. இதற்கு வேர் உண்டு. வேரானது 1-2 செ.மீ நீளம் மட்டுமே இருக்கும். வேர் பச்சை நிறத்தில் இருக்கும். ஒரு சிறிய புழு மரக்கிளையில் ஒட்டி இருப்பது போலவே காட்சித் தரும். வேர் ஏதோ ஒரு சில செடியில் மட்டும் 5 செ.மீ நீளம் வரை இருக்கும். இச்செடியின் வேரானது காற்றில் உள்ள சத்துக்களை பெற்றுக்கொள்கிறது. வேர்ப்பகுதி பச்சை நிறத்தில் உள்ளதால் சூரிய ஒளி மூலம் ஸ்டார்ச் தயாரித்துக் கொள்கிறது.   இந்தச் சிறிய தாவரத்தைக் கண்டுபிடிக்கும் போதெல்லாம் தாவரவியல் அறிஞர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். இதில் மிகச்சிறிய மலர்கொத்து சிறிய தண்டின் மையத்திலிருந்து தோன்றும். மலர் கொத்தானது 5-10 மி.மீ நீளம் கொண்டிருக்கும். ஒரு மலர் கொத்தில் 1-3 பூக்கள் மட்டுமே இருக்கும். பூவும் மிகச் சிறியது. பூவானது பச்சைக் கலந்த வெண்மை நிறத்தில் இருக்கும். பூக்கள் செப்டம்பர் முதல் மார்ச் மாதம் வரை தோன்றும். இது ஒரு அரிதான தாவரம். மிகச் சிறிய தாவரம் என்பதால் இது அழிந்து கொண்டு இருக்கிறது என்பதே தெரியாமல் போய்விட்டது. இயற்கையில் உள்ள காடுகளைப் பாதுகாப்பதன் மூலமே இதனைப் பாதுகாக்க முடியும்.   59. பாலிஸ்டேக்கியா தாவரவியல் பெயர்: பாலிஸ்டேக்கியா கான்கிரியேட்டா (Polystachya concreata (Jacq.)Garay & H.R.Sweet) குடும்பம்: ஆர்க்கிடேசி ஆங்கிலப்பெயர்: Yellow spike orchid; Greater Yellow spike orchid. இது மரத்தில் தொற்றி வளரக்கூடிய ஒரு மரம் அமர் ஆர்க்கிடு தாவரமாகும். தாவரம் சிறியது. தண்டு சிறு சிறு கணுக்களை கொண்டுள்ளது. வேர் அதிகமாக இருக்கும். மரத்தை நன்கு பற்றிப் பிடித்திருக்கும். வேர் 2-3 மி.மீ விட்டம் கொண்டது. செடியில் 3-5 இலைகள் உள்ளன. இலை நேராகவும். மெல்லியதாகவும் உள்ளது. இலை 3.5-20 செ.மீ நீளமும், 1.1-3 செ.மீ அகலமும் கொண்டிருக்கும். இச்செடியில் தோன்றும் பூங்கொத்தானது 50 செ.மீ நீளம் வரை இருக்கும். பூவானது பச்சைக் கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். பூக்கள் ஆகஸ்டு மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மலரும். []   இச்செடியானது மாங்குரோவ் காடுகளிலும் வளர்கின்றன. தமிழ்நாட்டில் நீலகிரி, கொல்லிமலை, சேர்வராயன் மலை ஆகிய பகுதியில் உள்ள காடுகளில் வளர்கிறது. சேர்வராயன் மலையில் கடல் மட்டத்திலிருந்து 1200 மீட்டர் உயரம் உள்ள பகுதிகளில் உள்ள மரங்களில் இது வளர்கிறது. அது தவிர காகா சோலையிலும் இதனைக் காணலாம். ஆனால் மிகக்குறைவான செடிகள் மட்டுமே உள்ளது. இது ஒரு அரிய வகைத்தாவரமாகும்.       60. ஏஞ்சல் ஆர்க்கிடு  தாவரவியல் பெயர்: ஹெபனேரியா கிராண்டிபுளோரிபார்மிஸ் (Habenaria grandifloriformis Blatter & Mccann) குடும்பம்: ஆர்க்கிடேசி தமிழ்ப்பெயர்: தேவதை ஆர்க்கிடு ஆங்கிலப்பெயர்: Single Leaved Hubenaria; Large Flowered Habenaria; Angel Orchid [] இது தரையில் வாழும் தரை அமர் ஆர்க்கிடாகும். இதனை முதன்முதலாக 1932 ஆம் ஆண்டில் பிலாட்டர் மற்றும் மிக்கேன் ஆகிய இருவரும் கண்டுபிடித்தார்கள். இது ஒரு சிறுசெடி. சுமார் 12 செ.மீ உயரம் மட்டுமே வளரும். இதன் அடியில் ஒரு கிழங்கு உள்ளது. இது முட்டை வடிவத்தில் 1.8 செ.மீ நீளமும், 1 செ.மீ விட்டமும் கொண்டது. இச்செடியில் ஒரே ஒரு இலை மட்டும், தரையோடு ஒட்டிப் படர்ந்து இருக்கும். இலை வட்ட வடிவில் இதயம் போன்ற அமைப்பு கொண்டது. இத்தாவரம் நிலச்சரிவில், உயரம் குறைவான புல்வெளியின் இடையில் வளர்கிறது. இதற்கு நேரடியான சூரிய ஒளி தேவைப்படுகிறது. இச்செடியின் நுனியில் 1-4 பூக்கள் மலர்கின்றன. பூ வெள்ளை நிறத்தில் இருக்கும். பூவானது ஏஞ்சல் போன்று (Cloaked angel) இருக்கும். பூவிலிருந்து மென்மையான வாசனை வீசும். பூவினைப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.     மழை தொடங்கியவுடன் முதலில் பூக்கும் ஆர்க்கிடு தாவரமாக இது உள்ளது. தமிழ்நாட்டில் சேர்வராயன் மலையில் மட்டுமே இது உள்ளது. சேர்வராயன் கோயிலை ஒட்டிய புல்வெளியிலும், செம்மடுவு என்ற இடத்திலும் இத்தாவரம் வளர்கிறது. இதனை சிலர் சாகுபடி செய்கின்றனர். பூந்தொட்டியில் வளர்க்கின்றனர். 50 சதவீதம் ஆற்று மணல், 40 சதவீதம் மக்கிய இலை சருகு, 10 சதவீதம் மண்புழு உரம் ஆகியவற்றை கலந்து 10 செ.மீ ஆழத்தில் இதன் கிழங்கை நட வேண்டும். இதனை நிழல் பகுதியில் வளர்க்க வேண்டும். ஆர்க்கிடு தாவரங்கள் மீது ஆர்வம் கொண்டவர்கள் மட்டுமே இதனை வளர்த்து வருகின்றனர். இது ஒரு அரிய ஆர்க்கிடு ஆகும்.   61. சிலந்தி ஆர்க்கிடு தாவரவியல் பெயர்: ஹெபனேரியா மல்டிகாடேட்டா (Habenaria multicaudata Sedgw.) குடும்பம்: ஆர்க்கிடேசி தமிழ்ப்பெயர்: சிலந்தி ஆர்க்கிடு ஆங்கில பெயர்: Spider orchid [] இது ஒரு தரைவாழ் ஆர்க்கிடு தாவரமாகும். இதன் அடிப்பகுதியில் கிழங்கு உள்ளது. இத்தாவரத்தை முதன்முதலாக 1919 ஆம் ஆண்டில் லியோனார்டு ஜான் செட்ஜ்விக் (Leonard John Sedgwick) என்பவர் கண்டறிந்து பெயரிட்டார். இவர் 1883 ஆம் ஆண்டு பிறந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்றார். இவர் ஆங்கிலேய ராணுவ வீரராக இந்தியாவில் பணிபுரிந்தார். அப்போது இவர் மேற்கு மலைத்தொடரில் உள்ள தாவரங்களைக் கண்டறிந்து வகைப்படுத்தி பெயரிட்டார். அதனால் இவர் ஒரு பிரபலமான தாவரவியல் அறிஞராக மாறினார்.   இத்தாவரம் 2 முதல் 30 செ.மீ உயரம் வரை வளரும். தண்டின் மையத்தில் இலைகள் காணப்படும். இலையானது 6-25 செ.மீ நீளமும், 2-5 செ.மீ அகலமும் கொண்டிருக்கும். தண்டின் மையத்திலிருந்து பூங்கொத்து உருவாகும். அது 30 செ.மீ நீளம் வரை இருக்கும். இதில் நிறைய மலர்கள் தோன்றும். பூவானது பச்சை கலந்த மஞ்சள் நிறம் அல்லது பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும். பூவானது பார்ப்பதற்கு சிலந்திப் பூச்சியைப் போலவே தெரியும். இத்தாவரம் பூ முடிந்து முதிர்ச்சியடைந்தப் பிறகு மறைந்துவிடும். மீண்டும் மழைக் காலத்தில் கிழங்கிலிருந்து புதிய தாவரம் உருவாகும். இது தென்மேற்கு மலைத்தொடரில் மட்டுமே வாழும் குறிப்பிட்ட இடத்தாவரமாகும். கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வளர்கிறது. அதே சமயத்தில் இது சேர்வராயன் மலையிலும் வளர்கிறது. இது ஒரு அரிய வகைத்தாவரம் (Rare) ஆகும்.     62. 200 ஆண்டு காட்டு மாமரம்  தாவரவியல் பெயர்: மாஞ்சிபெரா இன்டிகா                 (Mangifera indica L.) குடும்பம்: அனகார்டியேசி தமிழ்ப்பெயர்: காட்டு மாமரம்; காரல் மாமரம் ஆங்கிலப் பெயர்: Wild mango Tree. வனப்பகுதியில் இயற்கையாக வளரக்கூடிய மாமரத்தை காட்டு மாமரம் என்கின்றனர். இது இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இயற்கையாக வனப்பகுதியில் வளர்கிறது. இந்தியாவின் தேசியப்பழம் மாம்பழமாகும். இதே போல் பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் நாடுகளின் தேசியப்பழம் மாம்பழமாகும். பங்களாதேஷ் நாட்டின் தேசிய மரம் மாமரமாகும். மாஞ்சிபெரா என்ற பேரினத்தில் 8 இனங்கள் உள்ளன. அது தவிர பல்வேறு வகைகள் உள்ளன. இந்தியாவில் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பே மாமரத்தை வீடுகளில் வளர்க்கத் தொடங்கினர். பின்னர் பல வகைகளையும், ரகங்களையும் கலப்பினம் மூலம் உருவாக்கினர். நாடு முழுக்க கலப்பினம் செய்யப்பட்டவைகளையே சாகுபடி செய்கின்றனர். அது தவிர உலகின் பல நாடுகளிலும் கலப்பினங்கள் பயிர் செய்யப்படுகிறது. []   மாமரம் சுமார் 100 அடி உயரம் வளரக்கூடியது. மரம் குடை போல் பரந்து விரிந்திருக்கும். அடிமரம் 12 அடி சுற்றளவு வரை இருக்கும். மாம்பழம் மஞ்சள் நிறத்தில் சதைப்பற்றுடன் இருக்கும். இதன் மையத்தில் ஒரு கடினமான ஓடுடன் கூடிய விதை இருக்கும். இது கோடை காலங்களில் கனி கொடுக்கும். மாமரத்தை முதன் முதலாக 1753 ஆம் ஆண்டில் லின்னேயஸ் என்ற தாவரவியல் அறிஞர் அறிவியல் பூர்வமாக விவரித்து எழுதினார். கொழுந்து இலை கருஞ்சிவப்பாகவும், வளர வளர பச்சை நிறத்தில் மாறும். இலை எப்போதும் பசுமையாக இருக்கும். சேர்வராயன் மலையில் பல்வேறு இடங்களில் காட்டு மாமரங்கள் உள்ளன. ஏற்காட்டிலிருந்து 29 கி.மீ தொலைவில் சின்னமதூர் என்ற கிராமத்தில் ஒரு காட்டு மாமரம் உள்ளது. அது 100 அடி உயரமும், 100 அடி பரப்பளவில் படர்ந்து குடை போல் உள்ளது. இம்மரத்தின் அடி சுற்றளவு 44 அடி உள்ளது. சுமார் 20 அடி உயரத்திற்கு மரத்தின் தூண் உள்ளது. தரையிலிருந்து 5 அடி உயரத்தில் இதனை அளவிடும் போது 39 அடி சுற்றளவு கொண்டிருக்கிறது. இம்மரத்தின் வயது சுமார் 200 ஆண்டுகள் இருக்கும் என அப்பகுதியில் வாழ்பவர்கள் கூறுகின்றனர். இம்மரத்தில் ஆந்தைகள் வாழ்கின்றன, கனி சிறியது, புளிப்பு சுவை கொண்டது . சதைப்பற்று குறைவாகவும், நார் அதிகமாகவும், விதை பெரியதாகவும் உள்ளது. இலைகள் அகலம் குறைந்து நீளமாக உள்ளன. மரம் எப்போதும் பசுமையாக உள்ளது. இம்மரத்தை அங்குள்ள மக்கள் முனி மரம் என்கின்றனர். இம்மரத்தின் கனியை யாரும் உண்ணுவதில்லை. இலையைப் பறித்தால் முனி அடித்து செத்துவிடுவர் எனக்கூறி யாரும் இதைத் தொடுவது கிடையாது. ஒரு கிளை உடைந்து கீழே விழுந்துள்ளது. அது 70 அடி நீளம் வரை இருக்கும். அதை யாரும் தொடாமல் அப்படியே கிடக்கிறது. இப்படி பழமை வாய்ந்த மரம் ஏற்காட்டின் ஒரு பாரம்பரியச் சின்னமாகக் கருதலாம். இதனை நேரில் பார்க்கும்போது, ஆச்சரியத்தை ஏற்படுத்தும். இம்மரத்தின் கிளையில் ஆலமரம் ஒன்று முளைத்து வளர்கிறது. ஆலமரம் வளர்ந்தால் இம்மரத்திற்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.       