[] 1. Cover 2. Table of contents அம்பேத்கரும் கம்யூனிசமும் அம்பேத்கரும் கம்யூனிசமும்   ஆர். பட்டாபிராமன்   pattabieight@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/ambedkar_and_commmunism மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/ambedkar_and_commmunism This Book was produced using LaTeX + Pandoc முன்னீடு அம்பேத்கரும் கம்யூனிசமும் என்கிற இந்த சிறிய வெளியீடு அம்பேத்கர் குறித்த புத்தகம் ஒன்றிற்காக எழுதிபார்க்கப்பட்ட பகுதிகளில் ஒன்று. அம்பேத்கர் இயக்கங்களுக்கும் மார்க்சிய இயக்கங்களுக்கும் கருத்து நிலைகளில் வேறுபாடுகள் அவ்வப்போது இருந்தாலும் சமூக மாற்றம் என்பதற்கான பல புள்ளிகளில் அவை சந்தித்து கரம்கோர்க்கவேண்டிய அவசியத்தில் இருக்கின்றன. உலக தொழிலாளிவர்க்க விடுதலையின் பெரும் ஆளுமையான மார்க்சை அந்த அந்தப்பகுதியில் அவர் சொன்ன சில முழக்கங்களை முன்வைத்து எடுத்துச் செல்வதா - இல்லையாயின் குறிப்பிட்ட சமூகத்தின் உச்சபிரச்னைகளை முரண்பாடுகளை புரிந்து அவரை உள்வாங்கிக்கொள்வதா என்பது எல்லா நாடுகளின் விவாதப் பொருளாகவே இருக்கிறது. இதை மண்ணிற்கேற்ற மார்க்சிசம் எனவும் சுருக்கி புரியும் போக்கும் இருக்கிறது. குறிப்பிட்ட நாட்டின் பெரும் ஆளுமைகளாக உரு எடுப்பவர்கள் தங்கள் மக்களின் விடுதலைக்காக சொந்த நாட்டு அனுபவத்துடன் மார்க்சியத்தையும் எதிர்கொண்டு தங்கள் எதிர்வினைகளை தந்துள்ளனர். இவ்வரிசையில் இந்தியாவில் மார்க்சியத்தை எதிர்கொண்டவர்கள் எனும் ஆளுமைகளாக மகாத்மா காந்தி, பண்டிட் ஜவஹர்லால், பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர், இந்திய சோசலிஸ்ட்களான ஜேபி, லோகியா, ஆச்சார்யா நரேந்திரதேவ் ஆகியோர் முன்வரிசையில் வருகின்றனர். தமிழகத்தில் தந்தை பெரியார் வருகிறார். இவர்கள் மார்க்சியத்தின் நடைமுறைகளை இங்குள்ள அன்றைய இளம் கம்யூனிஸ்ட்கள் வாயிலாக அவர்களின் போதாமையுடன் பார்த்தனர். சோவியத் யூனியன் பெருமிதம் என்கிற கட்டுமான ஒற்றைபரப்பை மட்டுமே தங்களுக்கான சிந்தனை தளமாக கொண்டு இளம் கம்யூனிஸ்ட்கள் செயல்படுவதை அவர்கள் கண்ணுற்றனர். மேற்கூறிய ஆளுமைகளுக்கு பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க தொடர்புகள் மற்றும் அவர்களின் சிந்தனா முறைகளும் பழக்கமாக இருந்தது. சிந்தனை பரப்பு என்பதில் அவர்கள் சோவியத்துடன் என்று தங்களை நிறுத்திக்கொள்ளவில்லை. புரட்சி குறித்தும், ஸ்டாலின் கால செயல்பாடுகள் குறித்தும் மேற்கத்திய தகவல்களை அவர்கள் ஏற்பவராகவும் இருந்தனர். ஜவஹர் இதில் சற்று மாறுபட்டவராக இருந்தாலும் அவரும் முழு ஏற்பை தரவில்லை. தமிழகத்தில் அறிஞர் சாமிநாத சர்மா போன்றவர்கள் இன்றும் நிலைத்து நிற்கும் கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாற்றை 1942லேயே முழுவடிவில் தரமுடிந்தது. சாமிநாத சர்மா அதற்கு சோவியத் வெளியீடுகளை அல்லது பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்களை கணக்கில் கொள்ளாமல் லண்டன் பாபியன் சோசலிஸ்ட்களின் வெளியீடான ஹரால்ட் லாஸ்கியின் Essay on Marx என்பதையும் 1939ல் வந்த இசையா பெர்லினின் புகழ்வாய்ந்த Karl Marx His Life and Environment என்கிற ஆக்கத்தையும் அடிப்படையாக கொண்டே எழுதியுள்ளதை நாம் பார்க்கமுடியும். இப்புத்தகம் இன்றும் மார்க்சியர் பலரால் வாசிக்கப்பட்டு வரும் புத்தகமாகவும் இருக்கிறது. புத்தர் குறித்து தான் ஏராளம் படித்தது போலவே மார்க்ஸ் குறித்தும் மற்ற எவரையும்விட அதிகமாக படித்ததாக அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். அவர் மார்க்சின் எந்த எந்த நூல்களை அல்லது மார்க்ஸ் குறித்து எழுதப்பட்ட நூல்களில் எவற்றையெல்லாம் படித்தார் என்பதை நம்மால் சரியாக தெரிந்துகொள்ளமுடியவில்லை. இந்திய சமூகம் குறித்தும் சாதி குறித்தும் அவர் ஏராளம் எழுதியுள்ளார். செவ்வியல்தரம் வாய்ந்த ஆக்கங்களாக பலவற்றை நாம் பார்க்கமுடியும். மனித உறவுகள் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் அடிப்படையில்தான் அது அரசியலானாலும், சமூகமானாலும் மற்றும் மதமானாலும், பொருளாதாரமானாலும் இருக்கவேண்டும் என்பதைத்தான் அவர் வாழ்நாள் முழுதும் வற்புறுத்திவந்தார். மனிதனின் ‘டிக்னிட்டி’ என்பதற்கு அவர் முன்னுரிமை கொடுத்தார். அன்றாட அரசியல் நிகழ்வுகள், தொழிற்சங்கம், பிரிட்டிஷாருடன் உறவு, காங்கிரஸ் காந்தியுடனான உறவு, இந்து மதம் சாதி படிநிலைகள் போன்ற பல்வேறு அம்சங்களில் அவர் தனது கருத்துக்களை சொல்லவேண்டியிருந்தது. தனது அடித்தட்டு மக்களின் விடுதலைக்காக மேற்கூறிய சக்திகளுடன் உறவையும் மோதலையும் அவர் கைக்கொள்ள நேர்ந்தது. இதன் ஒரு பகுதியாக அவரின் மார்க்சியம் குறித்த கம்யூனிஸ்ட்கள் குறித்த கருத்துக்களை நாம் புரிந்துகொள்ளமுடியும். இந்திய சமூகத்தை புரிந்துகொள்வதற்கான் விமர்சனகுறிப்புகளாக அம்பேத்கர் அவர்கள் கம்யூனிஸ்ட்கள் மீது வைத்த விமர்சனங்களை புரிந்துகொள்ளலாம் என்றால் வர்க்கப் போராட்டம் அதில் அம்பேத்கரின் நடைமுறைகள்- விடுதலைப் போராட்டம் அதில் அம்பேத்கரின் நடைமுறைகள் குறித்த விமர்சனங்களாக கம்யூனிஸ்ட்களின் எதிர்வினையை புரிந்துகொள்ளலாம்.. இந்த சிறு வெளியீட்டில் அம்பேத்கர் இந்தியாவில் கம்யூனிசம் என்பதை எழுத ஆரம்பித்து அப்படியே நின்று போன சிறு ஆக்கங்கள் குறித்தும், அதனை தனிப்புத்தகமாக்கி அதற்கு ஆனந்த டெல்டும்டே எழுதிய முன்னுரையும் , சாதியை ஒழிக்க எனும் அம்பேத்கர் ஆக்கத்தில் அம்பேத்கர் கம்யூனிஸ்ட்களை குறித்து முன்வைத்த விமர்சனங்களும், அம்பேத்கர் பல்வேறு கூட்டங்களில் எத்தகைய (புத்தரா கார்ல் மார்க்சா உள்ளிட்டு) கருத்துக்களை வெளியிட்டு வந்தார் என்பதை தொகுத்த அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் தமிழ் வால்யூம் 37ம் (ஆங்கிலம் 17 பகுதி 3) விவாதிக்கப்பட்டுள்ளன. அம்பேத்கர் குறித்து உயர் மதிப்பீடுகளுடன் கூடிய W N குபர் ஆய்வுகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அம்பேத்கர் கம்யூனிசம் குறித்து பேசிய அனைத்துமோ, கம்யூனிஸ்ட்கள் அம்பேத்கர் குறித்து முன்வைத்த அனைத்துமோ இவ்வாக்கத்தில் முழுமையாக இடம்பெற்றுள்ளது என ஏதும் சொல்லமுடியாது. ஆனால் ஓரளவிற்கு விவாத பரப்பை அறிமுகப்படுத்த முயற்சிக்கப்பட்டுள்ளது எனச் சொல்லமுடியும். - ஆர். பட்டாபிராமன் 2-12-2020 1 இந்தியாவும் கம்யூனிசமும் என்கிற புத்தகத்தை அம்பேத்கர் எழுத முற்பட்டார். ஆனால் அது முழுமை பெறவில்லை. மார்க்ஸ் குறித்தும் இந்திய கம்யூனிஸ்ட்கள் குறித்தும் அவ்வப்போது அம்பேதகர் தனது விமர்சனபார்வையை முன்வைத்துள்ளார். அம்பேத்கரின் இந்தியாவும் கம்யூனிசமும் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள The Hindu Social Order- its essential principles The Hindu Social Order- Its unique features என்கிற இரு ஆக்கங்களும் பார்க்கப்படவேண்டியவை. இந்த ஆக்கங்கள் அம்பேத்கரின் ஆங்கில வால்யூம் 3ல் இடம்பெற்றவைதான். இதை தனியாக எடுத்து டெல்டும்டே அறிமுகத்துடன் லெஃப்ட்வேர்ட் பதிப்பகமும் வெளியிட்டுள்ளது. முதல் ஆக்கமான இந்து சமூக முறை- அதன் இன்றிமையாக் கோட்பாடுகள் என்பதின் சாரத்தைப் பார்க்கலாம். இந்தியாவின் பொதுவுடைமைக்கான முற்படுதேவைகள் என நிபந்தனை குறித்த ஆக்கமாக அம்பேத்கர் இதை எழுதினார். இந்து சமூக அமைப்பு சுதந்திரமான ஒன்றா என்ற கேள்வியை எழுப்பி அம்பேத்கர் தன் ஆய்வை மேற்கொண்டார். தனிமனிதர் தனக்குத்தானே முழு எல்லையாகிறார். தனி மனிதர் சமூகத்தில் தன்னை உட்படுத்திக்கொள்வது என்பது தன் மேம்பாட்டிற்காகவும், அவசியமான அளவிற்கும்தான். சமூக வாழ்வில் அதன் உறுப்பினர்கள் மத்தியிலான உறவு சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் அடிப்படையில் அமைந்திருத்தல் வேண்டும். இவ்விரண்டு அம்சங்களும் அடிப்படைகள் என்றார் அம்பேத்கர். கார்ல் மார்க்சின் எழுத்துக்களால் வர்க்க உணர்வு, வர்க்கப்போராட்டம் என்ற கோட்பாடுகள் தோன்றின என்று எண்ணப்படுகிறது. இது முற்றிலும் தவறு. இந்திய மண்ணில்தான் வர்க்க உணர்வும், வர்க்கப் போராட்டமும் நடந்தேறின. ( தமிழ் வால்யூம் 6 பக் 143) சமத்துவம் என்பதை இயல்பியல் கணிதம் வாய்ப்பாட்டு முறையில் அல்லாமல் தார்மீக சமத்துவம் எனக்காட்டுகிறார் அம்பேத்கர். சுதந்திரப் பிரகடனம் கூட அனைவரும் சமம் என்று சொல்லாமல் சமமாக படைக்கப்பட்டுள்ளனர் என்றே கூறியது. பொருள் வளமும் திறமைகளும் உடையோர் அவற்றில் குறைந்தோரை அடக்கிவைக்கும் உரிமை இல்லை என்பதே தார்மீக சமத்துவத்தின் ( moral equality) இலட்சியம் . சகோதரத்துவம் என்பது கூடிவாழும் இயல்பை வலுப்படுத்துவது. மற்றவர் நலனில் ஒவ்வொருவரும் ஆர்வம் கொள்வது- ஈடுபடுத்திக்கொள்வது- மற்றவரிடம் மரியாதை காட்டுவது- மற்றவரை தோற்கடித்தால்தான் இன்புற்று வாழமுடியும் என நினைப்பவன் சமூக உணர்வு வளர்ச்சி பெறாதவனாக இருக்கிறான் . சுதந்திரம் என்பதில் சிவில் மற்றும் அரசியல் உரிமையைப்பற்றிப் பேசவேண்டும். சட்டப்படியன்றி வேறுவழியில் சிறைப்படுத்தாமை, பேச்சுரிமை - எழுத்துரிமை, செயலுரிமை. சிவில் உரிமை போன்றவை அடிப்படையானவை. இரண்டாவதானது கருத்து சுதந்திரம். செயலுரிமை என்பது உண்மையானதாக இருத்தல் வேண்டும். இதன் பொருளை அம்பேத்கர் விரித்து பேசுவார். ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை அடக்கியாள முடியாத இடத்தில்தான், வறுமையும் வேலையின்மையும் இல்லாத இடத்தில்தான், தான் விரும்பிய செயலின் விளைவால் தன் வேலை, வீடு, உணவு ஆகியவற்றை இழந்து விடுவோமோ என்னும் அச்சம் இல்லாத இடத்தில்தான் உண்மையான செயலுரிமை இருக்க முடியும். எவருடைய உரிமைகளை காப்பதற்காக என்று அமைக்கப்பட்டிருக்கிறதோ அவர்களிடமிருந்துதான் அரசு தன் அதிகாரத்தைப் பெறுகிறது. ஆளப்படுபவரின் சம்மதம் பேரிலேயே அரசாங்கத்தின் அதிகார எல்லையும் இருப்பும் இயங்கவேண்டும் . இப்படிப்பட்ட கோட்பாடுகளை இந்து சமூக அமைப்பு ஏற்றுக்கொள்கிறதா- தனிமனிதனை ஏற்கிறதா என்கிற வினாக்களை எழுப்பினார் அம்பேத்கர். இந்து சமூகத்தில் வர்க்கத்தைக் குறிக்கும் வர்ணமே அடிப்படை அலகாக உள்ளது, இங்கு சமூக உறுப்பினர் ‘தனி பிராமணர்’, ‘தனி சத்திரியர்’, ‘தனி வைசியர்’, ‘தனி சூத்திரர்’, ‘தனிப்பஞ்சமர்’ அல்லர். உரிமையும் தனிமனிதன் சார்ந்து வரவில்லை- வர்ணம் சார்ந்து வந்ததுதான். சாதி என்பது பன்மையில்தான் இருக்கிறது; ஒருமையில் இல்லை. சாதி என்பது ஒன்றே ஒன்று என்று இருக்க முடியாது- பன்மையில்தான் இருக்கமுடியும். பிரிந்து நிற்பதும் தனித்து நிற்பதுமான வெளிப்பாட்டை சாதி முறையில் காணலாம். இந்த சாதிகள் ஒன்றுடன் ஒன்று எவ்வாறு நடந்துகொள்கின்றன? தனியாக இரு, ஒன்றாக உண்ணாதே, மணவுறவு கொள்ளாதே, தீண்டாதே என்று வழி நடத்துகின்றன. இந்து சமூக அமைப்பில் ஏணிப்படி போல ஒன்றன் மேலொன்று அடுக்கப்பட்ட சாதியமைப்பு உள்ளது; தமக்கு மேலுள்ள வகுப்பினரை வெறுக்கிறார்கள், கீழுள்ளவரை அவமதிக்கிறார்கள். இந்து சமூக அமைப்பு வரிசைப்படுத்தப்பட்ட சமமின்மைக் கோட்பாடு அடிப்படையானது. வேறுபட்ட 4 வருணங்கள் சமமான படுக்கைக்கோட்டில் அமைந்தவை அல்ல. செங்குத்தாக அமைந்தவை. சூத்திரனுக்கு கீழ் தீண்டாதார் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வரிசைப்படுத்தப்பட்ட சமமின்மை கோட்பாடு பொருளாதாரத் துறைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தொழில்கள் வர்க்கத்திற்கேற்ப நிலையாக நிர்ணயிக்கப்பட்டதாகும் என்பது இந்து சமூக இரண்டாம் கோட்பாடு. முன்னோர்கள் தொழிலையே தனிநபர் செய்தல் வேண்டும். தப்பிக்க முடியாத விதி இது. மரியாதை அடிப்படையிலும் தொழில்களை அது தரம் பிரிக்கிறது. இங்கு தொழிலை தேர்ந்தெடுக்க சுதந்திரமில்லை. அது முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வர்ணம் என்பதைதான் இங்கு அம்பேத்கர் வர்க்கம் என்று சொல்கிறார். மூன்றாம் கோட்பாடு மக்களை அந்தந்த வர்க்கத்துக்குள்ளேயே அடக்கி வைத்தல். இந்து சமூக அமைப்பின் சிறப்பம்சம் வர்க்கங்கள் சுதந்திரமாக உறவாடுவதையும், ஊடாடுவதையும் தடைசெய்வதே. உடன் உண்ணவும், மணஉறவு கொள்ளவும் இந்து சமூகத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கு சான்றாதாரங்களை மனுவிடமிருந்து அம்பேத்கர் காட்டுகிறார். இந்து சமூக அமைப்பு இறுக்கமானது. தனிமனிதன் என்ற முறையில் எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்தாலும் தான் பிறந்த குலத்தின் அந்தஸ்தில் எம்மாற்றமும் நிகழாது. வேறு வர்க்கத்தில் பிறந்த இன்னொருவருடன் அவருக்குரிய உறவு மாறாது. முதன்மையானது இறுதிநிலைக்கு இறங்காது. இறுதிநிலையில் உள்ளது முதல்நிலைக்கு ஏறவும் முடியாது. To sum up, the Hindu social order is an order based on classes and not on individual. It is an order in which classes are graded one above the other. It is an order in which the status and functions of the classes are determined and fixed. The Hindu social order is a rigid order. No matter what changes take place in the relative position of an individual his social status as a member of the class he is born in relation to another person belonging to another class shall in no way be affected. The first shall never become the last. The last shall never become the first. ( vol 3 page 115) ‘இந்து சமூக அமைப்பின் தனித்தன்மைகள்’ என்கிற அவரது ஆய்வில் மூன்று அம்சங்களை அம்பேத்கர் குறிப்பிடுகிறார். மனித இயல்பிற்கு அப்பாற்பட்ட மாமனித வழிபாடு என்கிற முதல் தனித்தன்மை பற்றி விளக்கும்போது நீட்ஷேயின் தத்துவம் பற்றி அறிமுகப்படுத்தி நீட்ஷே எப்படி ஏற்கப்படாமல் போனார் என்பதை பேசுகிறார். பிராமணனை இந்து சமூக அமைப்பில் எப்படி மாமனிதனாக பல சலுகைகள் பெறுவதற்குரியவனாக மனுதர்மம் மாற்றியுள்ளது. எல்லாவற்றையும் தீர்மானிக்கும் இடத்திலும் அவனுடைய நலன்களை சார்ந்தே அனைத்தும் செயல்படுமாறு வைக்கப்பட்டுள்ளன. சாதாரண மனிதனுக்கு வாழ உரிமையேதுமில்லை. அவன் அனைத்தையும் தியாகம் செய்யும் நிலையில் வைக்கப்பட்டுள்ளான் என்கிற பார்வையையும் அம்பேத்கரின் ஆய்வில் காண்கிறோம். ஜராதுஸ்ட்ரர் என்பது மனுவின் மறுபெயரே என்பதிலும், அந்த பொன்மொழிகள் மனுஸ்மிருதியின் புதிய பதிப்பே என்பதிலும் அய்யம் இருக்கமுடியுமா என அம்பேத்கர் வினவினார். நீட்ஷே மாமனிதரினம் ஒன்றை படைக்க விரும்பினால் மனு தம்மை உயர்ந்த மனிதர்கள் என்றாக்கிக்கொண்ட வகுப்பாருக்குரிய சிறப்புரிமைகளைக் கட்டிக்காப்பாற்றுவதிலே ஆர்வம் கொண்டிருந்தார். நீட்ஷே உண்மையிலேயே எதிலும் தனிப்பற்றினைக் காட்டாத தத்துவ ஞானி. ஆனால் மனுவோ ஒரு குறிப்பிட்ட குழுவில் பிறந்த ஒரு கூட்டத்தாரின் நலன்களைக் காப்பதற்காக ஒரு தத்துவத்தை உருவாக்க முனைந்த கைக்கூலி என்கிற கடுமையான விமர்சனத்தை அம்பேத்கர் தந்தார். நீட்ஷேயின் ‘சிறந்த மனிதன்’ கோட்பாட்டோடு ஒப்பிடும்போது மனுவின் சிறந்த மனிதத்துவம் தாழ்வுற்றது வெறுத்தொதுக்கத்தக்கது எனவும் அவர் விமர்சனம் வைத்தார். இந்து மதத்தின் அடுத்த தனித்தன்மை அதனைப் பேணிப் பாதுகாப்பதற்கான நுணுக்கமான உத்திகள். இதற்கும் மனுவிடமிருந்து ஆதாரங்களை அம்பேத்கர் பட்டியலிட்டு சொல்கிறார். புரட்சியே தோன்றாமல் தவிர்ப்பது- அப்படியே தோன்றினாலும் அடக்கிவிடுவது- அதை அடக்கியாளக்கூடிய விதிகளை சார்ந்து செயல்படுதல் என்கிற நிலைகளையும் சேர்த்தே இந்த தனித்தன்மையை புரிந்து கொள்ளவேண்டியுள்ளது. இந்து சமூக அமைப்பு சமுதாயத்தின் அடித்தளத்திலுள்ளவர்களின் சமூக அந்தஸ்தை ஒரே மாதிரியாக காலந்தோறும் மாற்றமுடியாதபடி நிர்ணயித்துள்ளது. கல்வி வாய்ப்பை மறுத்துள்ளது. அவர்களின் பொருளாதார நிலையும் மாற்றமுடியாதபடி நிலைப்படுத்தப்பட்டுள்ளது.. இழிநிலையே துயருக்கு காரணம் என தோன்றாமல் தலைவிதி என ஆக்கப்பட்டுள்ளது. எவரும் பொறுப்பாளியாக்கப்படவில்லை. இந்து அமைப்பில் ஆயுதம் ஏந்தும் உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் முஸ்லீம், நாஜிகளின் அமைப்பில் இந்த உரிமை உள்ளது. அங்கு சமவுரிமை, கல்வி பெறும் வாய்ப்புள்ளது. இங்கு அறிவைப்பெறவும் ஆயுதம் ஏந்தும் உரிமையும் மறுக்கப்பட்டு மனிதனை ஆண்மையற்றவனாக முடமாக்கும் வேலையை மனுவின் மூலம் செய்துள்ளதை அமபேத்கர் சுட்டிக்காட்டுகிறார். வன்முறையற்ற செயல்முறையை பல இடங்களில் பேசிவந்த அம்பேத்கர் இங்கு ஆயுதம் ஏந்துவது உரிமையாக வேண்டும் எனும் சுதந்திரம் பற்றி ஏன் பேசுகிறார் என்பது புரிந்துகொள்ள சற்றுக் கடினமானதாகவே இருக்கிறது. இங்கு அவர் கம்யூனிஸ்ட்கள் கோரும் ஆயுதப்போராட்டம் என்பதிலிருந்து எப்படி வேறுபடுகிறார் என்பதும் தெளிவுப்படுத்தப்படாமல் இருக்கிறது. இந்து சமூகத்தின் மூன்றாவது தனித்தன்மை கடவுள் உருவாக்கிய தெய்வீக அமைப்பாக அதனை ஆக்கியது. அது புனிதமானது- அழிக்கமுடியாதது. மாற்றங்களுக்கும் குற்றங்களுக்கும் இடமளிக்காதது. இதற்கு கிருஷ்ணரின் கீதை உபதேசங்களை மேற்கோளாக அம்பேத்கர் காட்டுகிறார். பாசிசம், நாசிசம் போல்ஷ்விசம் ஆகிய அமைப்புகள் சமூக அமைப்புகளே தவிர தெய்வத்தொடர்பு கொண்டவை என்றோ பக்தியுடன் மீறமுடியாததாகவோ, காப்பாற்றப்பட வேண்டியவையாகவோ ஆக்கப்படவில்லை. அம்பேத்கர் சுட்டிக்காட்டிய மூன்று அமைப்புகளும் அவர் கூறியதைப்போல் காலஓட்டத்தில் காப்பாற்றப்படாமல் போனதையும் நாம் பார்க்கமுடிகிறது. ஆனால் அவை முழுமையாக அரசியல்வடிவ அமைப்புக்கள்தான். நாசிசம் யூதர் விஷயத்தில் பிறப்பு என்பதை பார்த்தாலும் இந்து அமைப்பு போல சமூக முறைமை கொண்டதல்ல. ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் இடையேயுள்ள உறவுகள் மதத்தால் திருநிலைப்படுத்தப்பட்டு தெய்வத்தன்மையுடையதாகவும், நிரந்தரமானதாகவும் மாற்ற முடியாததாகவும் உள்ள பொருளாதார அமைப்பினை உலகில் இந்துக்கள் மட்டுமே பெற்றிருக்கின்றனர் என்கிற வரிகளை கோட்பாடுபோல அம்பேத்கர் தருகிறார். ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்குமிடையேயுள்ள உறவுகளை இறுகிய வடிவமாக்கிய சமூக அமைப்பாக வரையறுத்து தெய்வீகத்தன்மையை இஸ்ரேலியர், கிறிஸ்துவர், முஸ்லீம்கள் ஆக்கிக்கொண்டதில்லை. இந்த வகையில் இந்துக்கள் மட்டுமே தனித்து நிற்கிறார்கள். இப்படி ஆக்கப்பட்டிருப்பதாலேயே காலத்தால் அழித்தொழித்து மாற்றமுடியாததான வலிமை இந்து சமூக அமைப்பிற்கு கிடைத்துள்ளது. டெல்டும்டே இவ்வாக்கம் பற்றி பேசும்போது கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார். He was absolutely right in saying that unless caste consciousness is wiped out, class consciousness would not germinate..a question of struggle against caste as a class. It is only through struggle that caste consciousness would be displaced and class consciousness germinated. டெல்டும்டே சொல்லும் முதல் வரியை அப்சல்யூட்டாக மார்க்சியரால் ஏற்க முடியாது. இரண்டாவது வரி நடைமுறையில் அவசியமானது. ஏற்கனவே சமூக காரணிகளாக இருக்கின்ற சாதி, மத சமுதாயத்தில்தான் தொழிலாளர்கள் என்கிற வகையில் அவர்கள் வர்க்க கண்ணோட்டம் பெற முயற்சிக்கிறார்கள். இது புதுவகைப்பட்ட காரணி. முதலாளிகளுக்கும் இப்பிரச்னை இருக்கிறது. அவர்களுக்கும் பாரம்பரிய இந்திய சமூகத்தில் நிலவும் சாதி, மத சிந்தனைகளின் ஊடாகத்தான்- அதையும் தாண்டித்தான்- அவைகளிலிருந்து விடுபட்டும் விடுபடாமலும் முதலாளித்துவ வர்க்க உணர்வு வரவேண்டியுள்ளது. இதை புரிந்துகொண்டால்தான் சாதி- வர்க்க உறவுகள்- எது எதன் மீது எத்தருணங்களில் செல்வாக்கு செலுத்துகிறது என்பதை புரிந்து கொள்ள இயலும். முதலாளித்துவ உற்பத்தி உறவுகளில் வேகமாக வளரும் சமுதாயத்தில் சாதி ஒன்று மட்டுமே அல்லது வர்க்கம் ஒன்று மட்டுமே குறிப்பிட்ட மதம் ஒன்று மட்டுமே அனைத்தையும் தீர்மானிக்கும் அடிப்படை அலகு என்பது மயக்கத் தோற்றமாகவே இருக்கும். சாதி தொழிற்படும் இடங்களும் வர்க்க சிந்தனை தொழிற்படும் இடங்களுமாக இந்தியத் தொழிலாளி- முதலாளி இழுவைக்குள்ளாவதை நடைமுறை வாழ்வில் காணமுடிகிறது. இந்த ஊடாட்டம் இன்னும் நூற்றாண்டுகள் கூட இந்திய சமூகத்தில் தொடரலாம். சாதி தன் சாயமிழந்து வீர்யமற்று வரலாற்று மண்ணில் புதைந்து போக ஆண்டுகள் பல தேவையாகலாம். மனிதர்கள் சமதையானவர்கள் என்பதற்கான போராட்டங்கள் பலவடிவங்களை எடுக்கலாம். கடமைகளை பொருட்படுத்தாது உரிமைகளுக்காக மட்டும் நிற்கும் இயக்கங்களால் தற்காலிக வெற்றிகள் ஏற்படலாம். சாதி என்பதே அடிப்படையில் ‘பிறப்பொக்கும்’ என்கிற வளரவேண்டிய சிந்தனைக்கு எதிரானது என்பதை ‘பிறப்பால் தன்னோடு இணைத்துவிடப்பட்டுள்ள சாதி ஒட்டுக் கொண்ட’ அனைத்து மனிதர்களும் மெல்லவாவது உணர்ந்துவிடுபடும் போராட்டம் கடுமையான ஒன்றாகவே இருக்கும். அம்பேத்கர் குறித்து 1970களிலேயே மிகச் சிறந்த ஆய்வை மேற்கொண்ட W N குபரின் வரிகள் சிந்தனைக்குரியது The dividing line between class and caste was so thin that one could not tell where caste ended and class began. 2 1937 செப்டம்பர் துவக்கத்தில் ஒடுக்கப்பட்டோர் மாநாடு ஒன்றில் அம்பேத்கர் உரையாற்றினார். அதில் தொழிலாளி வர்க்கம் மற்றும் ஏழைகளின் பாதுகாவலராக இருக்கும் தகுதி காந்திக்கு இல்லை என விமர்சித்தார். காங்கிரஸ் கட்சி புரட்சிகரமானதாக இருந்தால் அதில் நான் சேர்ந்திருப்பேன் என்றார். அம்பேத்கர் கம்யூனிஸ்ட்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் தகுதியில்லை என சொல்லாமல் தகுதிப்படுத்திக்கொள்ள தவறுகிறார்கள் என சுட்டிக் காட்டுவதை இத்துடன் சேர்த்து பார்க்க வேண்டியிருக்கிறது. பரம எதிரி என காந்தியை சொன்னது போல் கம்யூனிஸ்ட்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனிமனிதர்கள் கட்டுப்பாட்டில் உற்பத்தி சாதனங்கள் இருக்கும் வரையில் சமத்துவப் பிரகடனம் சாத்தியமே இல்லை. வண்டியில் இரண்டு மாடுகளுடன் உழவனையும் சேர்த்து பூட்டுவதுதான் காந்தியம். கம்யூனிஸ்ட்கள் தொழிலாளர்களைத் தங்களுடைய அரசியல் நோக்கத்திற்காகச் சுரண்டுபவர்கள். நான் அவர்களின் இயக்கத்தில் சேருகிற சாத்தியக்கூறே இல்லை. நான் அவர்களின் பரம எதிரி எனக் குறிப்பிட்டார். ( பக்கம் 212 தமிழ் வால்யூம் 37) சோலங்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தில் டிசம்பர் 31 1937ல் பந்தர்பூரில் கூட்டம் பேசினார். அங்கு சுயமரியாதை சுய உதவி இயக்கத்தின் அவசியத்தை வற்புறுத்தினார். ஜாதியம் இருக்கும்வரை சமத்துவம் கிடைக்காது. முதலாளிகள் கையில் காங்கிரஸ் இருக்கும்வரை எதுவும் செய்யும் என நம்பாதீர்கள். முதலாளிகளுக்கு எதிராக அய்க்கிய முன்னணியை திரட்ட வேண்டிய அவசியம் வந்துவிட்டது. பொருளாதார சுதந்திரத்தை வென்றெடுக்கவேண்டும். இழப்பதற்கு எதுவும் உங்களிடம் இல்லை. அடைவதற்கு மட்டும் எல்லாம் உண்டு என கம்யூனிஸ்ட்கள் பேசுவதைப் போலவே அவரது உரையும் இருந்தது. ஜனவரி 4 1938ல் அவருக்கு ஷோலாப்பூர் நகராண்மைக் கழகம் வரவேற்பு தந்தது. அங்கு அம்பேத்கர் உரை நல்கினார். ஜனநாயகம் எல்லா சூழலுக்கும் பொருத்தமானது என தான் நம்பவில்லை. கொஞ்ச காலத்திற்கு அறிவார்ந்த எதேச்சதிகாரியின் வலிமையான தலைமை இந்தியாவிற்கு தேவைப்படுகிறது. இந்தியாவில் கோலோச்சும் ஜனநாயகத்தில் அறிவு கொஞ்சம் கூடப் பயன்படுத்தப்படுவதில்லை. நாடு ஒரு கட்சியால் கட்டுண்டு கிடக்கிறது- இது பலஹீனம்- நோய்- தீங்கு என காங்கிரசை கடுமையாக சாடினார். இந்திய மக்களுக்கு நம்பிக்கை மட்டுமே இருக்கிறது. அறிவு மிக மிகக் குறைவு. மகாத்மா- யோகி எனச் சொல்லி ஆட்டுமந்தை போல் பின்பற்றத் தொடங்கிவிடுகிறார்கள். எப்படிப்பட்டதாக ஜனநாயகம் இருக்கவேண்டும் என அவர் விளக்கினார். ஒன்றுக்கு மேற்பட்ட கருத்தோட்டங்கள் இருந்தால்தான், ஒரு பிரச்னைக்குப் பல தீர்வுகள் என்னும் நிலை இருந்தால்தான் அவற்றையும் வெளிப்படையாக விவாதிக்க மக்கள் முன்வந்தால்தான், அவர்கள் கருத்துக்கும் ஜனநாயகம் மதிப்பளித்தால்தான் அந்த ஜனநாயகம் உண்மையான ஜனநாயகமாக இருக்கும். ஜனவரி 10 1938 அன்று பம்பாயில் தானா, ரத்தினகிரி, கொலாபா, சதாரா, நாசிக் மாவட்ட விவசாயிகளை அணிதிரட்டினார். கோட்டிமுறை ஒழிப்போம் என்கிற பிரதான முழக்கத்துடன் அவர்கள் திரண்டனர். ஊர்வலத்தை காவல்துறை தடுத்து நிறுத்தியது. பம்பாய் பிரதமரை (முதல்வர்) பார்க்க அம்பேத்கர், பருலேகர், இந்துலால் யக்னிக், சித்ரே, எஸ் வி ஜோஷி ஆகியோர் அனுமதிக்கப்பட்டனர். விவசாயத்தொழிலாளிக்கு குறைந்தபட்சக் கூலி, குத்தகை கூலி, கோட்டிமுறை இனாம்தார் முறை பிரச்னைகளை தீர்த்தல் என்பன கோரிக்கைகளாக வைக்கப்பட்டன. நீர்ப்பாசன கட்டணங்களை சிறு விவசாயிகளுக்கு குறைக்க வேண்டும் என்பதும் கோரப்பட்டது. நிலபிரபுத்துவ ஒழிப்பு பற்றியதாக விவாதப்பொருள் அமைந்தது. பேச்சுவார்த்தை முடிந்து பொதுக்கூட்டத்திற்கு வந்து அம்பேத்கர் உரையாற்றினார். கம்யூனிஸ்ட்களை விமர்சித்தும் பேசினார். அவர்களைவிட அதிகமான புத்தகங்கள் படித்தவன் நான் என்றார், செயல்பூர்வமான அணுகுமுறையை அவர்கள் மேற்கொள்வதில்லை. விவசாயிகளும் தொழிலாளர்களும் சாதி பார்வையை தாண்டி சுரண்டலுக்கு எதிராக சேரவேண்டும். உண்மையான பிரதிநிதிகளை சட்டமன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கவேண்டும். அப்படி செய்தால் உணவும் உடையும் உறைவிடமும் கிட்டும் என்றார். கிரேட் இந்தியன் பெனிசுலா இரயில்வேயில் பணிபுரியும் ஒடுக்கப்பட்டவர் பிரச்னையை விவாதிக்க பிப்ரவரி 12, 13 1938ல் மாநாடு மன்மத் எனும் பகுதியில் கூட்டப்பட்டது. அம்பேத்கர் வந்து இரு நாட்களும் இருந்தார். அப்பகுதியில் சுதந்திரத் தொழிலாளர் கட்சியின் இளைஞர்கள் மாநாடும் நடந்தது. தீண்டப்படாத பெண்கள் மாநாடும் நடந்தது. பெரும் எழுச்சியுடன் நடந்த இரயில்வே தொழிலாளர் மாநாட்டில் இதுவரை ஒடுக்கப்பட்டவர்கள் எனும் வகையில் பிரச்னையை சந்தித்தவர்கள் இப்போது தொழிலாளர் எனவும் சந்திக்கிறார்கள் என அம்பேத்கர் தனது உரையை துவங்கினார். மத பொருளாதார அதிகாரத்தைப் போல் அரசியல் அதிகாரம் அத்தகைய வீரியம் கொண்டது அல்ல என்றாலும் அரசியல் அதிகாரம் பலன் தரக்கூடியதாகும். நாம் வென்றெக்கும் அதிகாரம் பகைவர்களின் சூழ்ச்சி, நம்மிடமுள்ள தான் தோன்றிகள் சுயநல பேராசைக்காரர்களின் சீர்குலைப்பால் பறிக்கப்படுவதும் உண்டு. பொருளாதார பிரச்னைகள் மீது உரிய கவனம் செலுத்த நீண்ட காலமாக நாம் தவறி விட்டோம் என்பதை அம்பேத்கர் ஒப்புக்கொள்வதாக கூறினார். இது புதிய திருப்பம். சமூக விடுதலையை நாம் பெறுவோம் என்று அவரது உரையின் சாரமாக அமைந்தது. தொழிலாள தலைவர்கள் சிலர் தொழிலாளர்களை பிளவு செய்வதாக சொல்கிறார்கள். இந்த நாட்டில் இரண்டு பகைவர்களுடன் போராட வேண்டியுள்ளது. ஒன்று பிராமணியம்- இரண்டாவது முதலாளித்துவம். நமது விமர்சகர்கள் நாம் பிராமணியம் எதிர்த்தும் போராடவேண்டியுள்ளது என்பதை புரிந்து கொள்ள தவறுகிறார்கள். பிராமணியம் என்றால் என்ன?. ஒரு வகுப்பினர் என்ற அடிப்படையில் அதிகாரம் உரிமைகள் நலன்கள் பெறுவதல்ல பிராமணீயம். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உயிர்ப்புகளின் எதிர்மறைதான் பிராமணியம். பிராமணர்கள் அதை தோற்றுவித்தவர்கள் என்ற போதிலும் அது எல்லா வகுப்பினர்க்கிடையிலும் ஊடுருவி உள்ளது என்பது உண்மை என அம்பேத்கர் குறிப்பிட்டார். இந்தப் பிராமணியம் எங்கும் பரவி எல்லா வகுப்பினரின் சிந்தனை, செயல்களில் ஆதிக்கம் செலுத்துவது மறுக்க முடியாத உண்மை. சேர்ந்துண்ணல், கலப்பு மணம் ஆகியவற்றுடன் நின்றுவிடவில்லை. சிவில் உரிமைகளை அது பதம் பார்க்கிறது. பொதுப்பள்ளிகள், கிணறுகள், கழிப்பிடங்கள், பொது மருந்தகங்கள் என பொதுமக்கள் நிதியின் மூலம் நிர்வகிக்கப்படும் எல்லாம் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரியன. இவை மறுக்கப்படுகிறது. பொருளாதார வாய்ப்புக்களை பாதிக்கும் சர்வ வல்லமையாக பிராமணியம் விளங்குகிறது. தீண்டப்படாதவன் என்பதால் எத்தனை வாய்ப்புகள் மூடப்படுகின்றன. பருத்தித் தொழிலில் பம்பாய், அகமதாபாத் அனுபவங்களை எடுத்து வைக்கிறார் அம்பேத்கர். இங்கு இரயில்வேயில் கேங்க்மேனாக மட்டுமே எந்தவித உயர்வும் இல்லாமல் பணிபுரியும் நிலையுள்ளது. போர்ட்ட்ராக கூட வரமுடிவதில்லை. நமது முயற்சிகள் நியாயமானவை. நம்மீது குற்றம் சாட்டும் தொழிலாளர் தலைவர்கள் ஏதோ ஒருவிதப் பிரமையில் இருக்கிறார்கள், அவர்கள் மார்க்சைப் படித்தவர்கள். உடைமை வர்க்கம்- தொழிலாளர் வர்க்கம் இரண்டு வர்க்கம்தான் என்பவர்கள். நமது கடமை முதலாளித்துவ ஒழிப்பே எனக் கருதுபவர்கள். இவர்கள் இரண்டு தவறு செய்கிறார்கள். மார்க்ஸ் சொன்னதை ஒரு கருத்து நிலையாகக் கொள்ளாமல் மெய்ம்மை என்று நினைப்பது அவர்கள் செய்யும் முதல் தவறு. இரண்டு வர்க்கங்களே உண்டு என்பது கருத்துநிலை. அதை வறட்டுத் தத்துவமாகத் தொழிலாளர் தலைவர்கள் பிடித்துக்கொண்டு விட்டார்கள். இரு வர்க்கம் என்பதை அடிப்படையாகக் கொண்டு பிரச்சாரம் நடத்தினால் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. எல்லா வகுப்பிலும் ஒரு பொருளாதார மனிதன், பகுத்தறிவுள்ள மனிதன், தர்க்க நியாயத்திற்கு உட்பட்ட மனிதன் இருப்பதாக நம்புவது எததனை பொய்மையானதோ அத்தனை பொய்மையானது இவர்கள் சிந்தனையும் செயலும். அய்ரோப்பாவில் கூட மார்க்ஸ் சொன்னது சரியாக இருந்தது என்று சொல்வதற்கில்லை. உடைமை வர்க்கம், இல்லாத வர்க்கம் எனும் பிரிவினை உணர்வு இந்தியாவில் ஏற்படவேயில்லை. எல்லாத் தொழிலாளர்களும் ஒன்று- ஒரு வர்க்கம் என்பது ஒரு லட்சியம்; அது அடையப்படவேண்டிய லட்சியமே தவிர இருக்கிற யதார்த்தம் என்று முடிவு செய்து கொள்வது தவறு. ஒரு பிரிவுத் தொழிலாளர் இன்னொரு பிரிவுத் தொழிலாளர்களை நசுக்குவதைத் தடுப்பதன் மூலம் அவர்களிடையே ஒற்றுமையை உருவாக்க முடியும். ஒடுக்கப்பட்ட பிரிவுகள் அமைப்பு ரீதியாகத் திரள்வதைத் தடுப்பதன் மூலம் அது முடியாது. தொழிலாளர்களிடையே ஒற்றுமையைக் கொண்டுவரச் சிறந்த மார்க்கம் என்னவென்றால் ஒரு தொழிலாளி மற்ற தொழிலாளர்களுக்குத் தர விரும்பாத உரிமைகளை அவன் மட்டும் பெறவேண்டும் என்பது தவறான சிந்தனை என்று அவனுக்கு எடுத்துச் சொல்வதுதான். சுருங்கச் சொன்னால் சமத்துவமின்மை என்னும் குணாம்சத்தை அதாவது பிராமணியத்தைத் தொழிலாளர் மத்தியிலிருந்து அடியோடு களைந்தெறிய வேண்டும். இத்தகைய முயற்சியில் இறங்கிய தொழிலாளர் தலைவர் யார்? பிராமணியத்திற்கு எதிராக எவரும் பேசியதாகத் தெரியவில்லை. மெளனம் வெளிப்படையாகத் தெரிகிறது. தொழிலாளர் பிளவுண்டு கிடப்பதற்கு பிராமணியமே காரணம்- அப்போக்கு தொழிலாளர்களிடம் நிலவுவதை விளக்கியே ஆகவேண்டும். நாம் அமைப்புரீதியாக திரள்வதற்கு முதலாளிகள் பின்புலமாக அமைந்திருக்கிறார்கள் என சொல்லமுடியுமா- சவால் விடுகிறேன் என அம்பேதகர் உரை நிகழ்த்தினார். ( பக் 232-33 தமிழ் வால்யூம் 37) இந்தியாவில் தொழிற்சங்க இயக்கம் மிகவும் வருந்தத்தக்க நிலையில் இருக்கிறது . உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கைத்தரம் சரிந்துவிட்டால் பாதுகாப்பதே அதன் தலையாய நோக்கம். இந்திய தொழிலாளிக்கு நாள் ஓடினால் போதும் என்கிற எண்ணமே இருக்கிறது. தரமுள்ள வாழ்வில் நாட்டமில்லை. அய்ரோப்பிய தொழிலாளிபோல் இல்லை. இந்தியாவிற்கு தொழிற்சங்க இயக்கம் மிக அவசியம். ஆனால் அது நாற்றம் வீசுகின்ற குட்டையாய் கிடக்கிறது. இதன் தலைவர்கள் கோழைகள், சுயநலக்காரர்கள், தவறாக வழிகாட்டப்பட்டவர்கள் என்பதும்தான் காரணம். சிலர் சாய்வு நாற்காலி தத்துவ ஆசிரியர்கள்- அறிக்கையாளர்கள். சிலர் தமது பதவிக்காக மட்டுமே தொழிற்சங்கம் நடத்துபவர்கள்- தங்களை முன்னிறுத்திகொள்பவர்கள் என்கிற விமர்சன கணைகள் அம்பேத்கரிடமிருந்து பாய்ந்தன. கம்யூனிஸ்ட்கள் இன்னொருவகை. அவர்கள் அர்த்தமுள்ளவர்கள்தான். ஆனால் தவறான வழிகாட்டுதலில் இயங்குபவர்கள். அவர்களைவிட தொழிலாளி வர்க்கத்திற்கு பேரழிவைக் கொண்டு வந்தவர்கள் வேறு எவரும் இல்லை. இன்று முதலாளிகள் கை ஓங்கி தொழிலாளி வர்க்கத்தின் முதுகெலும்பு உடைக்கப்படுகிறது. காரணம் இந்தக் கம்யூனிஸ்ட் தலைவர்கள்தான். இவர்கள் வேலையே தொழிலாளர்களிடையே அதிருப்தியை வளர்ப்பதுதான். அதிருப்திதான் புரட்சியத் தூண்டும் என்று கணக்கு போடுகிறார்கள். இதற்காகவே அதிருப்தி பிரசாரத்தை முடுக்கிவிட்டு பிளவு சிதறலை ஓர் அமைப்பு அலையாக தொடர்ந்து விளைவித்து வருகிறார்கள். இவர்கள் தொழிலாளர்கள் மீது திணிக்கும் தொடர்வேலை நிறுத்தங்களுக்கு என்ன அர்த்தம்? சிதறலை திட்டமிட்டு செய்யும் முயற்சிதானே? வெற்றிகரமான புரட்சிக்கு அதிருப்தி மட்டுமே போதாது. அரசியல் சமூக உரிமைக்கான நியாயம், அவசியம், முக்கியத்துவம் ஆகியவை பற்றிய உண்மையான நம்பிக்கை இருந்தால் மட்டுமே வெற்றிகரமான புரட்சி சாத்தியமாகும். ஒரு புரட்சிகர மார்க்சிஸ்ட் வேலை நிறுத்தம் நடத்துவதே வேலை என்று அலைய மாட்டான். வேலை நிறுத்தத்தை மார்க்சிஸ்ட்கள் ஒரு புரட்சி நடவடிக்கையாக எப்போதுமே தீர்மானித்துக்கொண்டதில்லை. எல்லாவழிகளும் அடைக்கப்பட்ட பின்னர் இறுதி நடவடிக்கையாகவே வேலைநிறுத்தம் கையாளப்படவேண்டும் என்பதே மார்க்சியம். மேற்சொன்ன இந்த உண்மைகளை கம்யூனிஸ்ட்கள் காற்றில் பறக்க விட்டு விட்டார்கள். அதிருப்தியை உருவாக்க தங்களுக்கு கிடைத்த தெய்வீக சாதனமாக வேலை நிறுத்தங்களை ஒவ்வொரு கட்டத்திலும் திணித்தார்கள். இதனால் அதிருப்தி வளர்ந்ததோ இல்லையோ அவர்களுக்கு ஆற்றலும் அதிகாரமும் தந்த தொழிற்சங்க இயக்கமே உருத்தெரியாமல் சிதைந்து வருகிறது. சுற்றுவட்டத்தில் தீ விபத்தை உண்டாக்குவதற்கான வெடிகுண்டை எறிந்த ஒருவன் தன் சொந்த வீட்டையும் சேர்த்து எரித்துவிட்ட நிலையில் இன்றைய கம்யூனிஸ்ட் இருக்கிறார் என்கிற கடுமையான கண்டனங்கள் அம்பேத்கரின் உரையில் வெளிப்பட்டன. ( பக் 235-36 தமிழ் வால்யூம் 37) இக்கூட்டத்தில் தொழிற்சங்கங்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றார் அம்பேத்கர். அரசியல் அதிகாரம் இல்லாமல் தொழிற்சங்க நலன்களை பாதுகாக்கமுடியாது. சட்டத்தின் அங்கீகாரம் இருந்தால்தான் தொழிற்சங்கங்களின் ஆற்றல் வலுப்படும். சங்கமாக திரள்வதுடன் அரசியலிலும் பங்கேற்றால்தான் குறைந்தபட்ச ஊதியம், வேலைநாட்கள், பொதுவிதிகள், பேச்சுவார்த்தைகள் எல்லாம் கைகூடும் என்றார். நமது இலக்கு இந்த கூலி அடிமைத்தனம் என்னும் கருத்தோட்டத்தலிருந்து விடுபட்டு விடுதலைக் கோட்பாட்டை அடைவதாக இருக்கவேண்டும். இங்கு அவர் மார்க்சின் சிந்தனையொற்றி பேசுகிறார். சமுதாய புனர்நிர்மாணமே தொழிலாளிவர்க்க கடமை. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இலக்குகளை நோக்கி தொழிற்சங்க இயக்கத்தை வழிநடத்தவேண்டும். எனவே அதிகாரத்தை கைப்பற்றியாகவேண்டும். அரசியல் அதிகாரம் என்பது ஒரு சாதனம். அதன்மூலம்தான் தங்கள் மீது இழைக்கப்படும் அநீதிகளை நீக்கமுடியும். இதை தொழிலாளர் உணராமல் இருப்பது சோகம். அதே நேரத்தில் கட்சி அரசியல் பெயரில் வர்க்க நலன்கள் பலியிடப்படுவது ஏற்கப்படமுடியாத ஒன்று என அம்பேத்கர் விமர்சித்தார். அதே உரையில் கட்சிப் பின்னணி இல்லாத அரசியல் வீண்வேலை. அவன் நிலத்தில் ஒரு புல் கூட முளைக்காது. அரசியல்வாதிகள் சுயேட்சை என சொல்வது நல்ல விலையை எதிர்பார்த்துதான் எனவும் பேசினார். கட்சியில்லாமல் அர்த்தமுள்ள அரசியல் நடத்தமுடியாதென்றார். எம் என் ராய் ஒரு புதிர் என விமர்சித்தார் அம்பேத்கர். அவருடைய சில கருத்துக்களைக் கேட்டால் கல்லறையில் இருக்கும் லெனின் கூட புரண்டு படுப்பார். ஏகாதிபத்தியம் மறைந்தால் இந்திய முதலாளித்துவமும் அடையாளம் தெரியாமல் நொறுங்கிவிடும் என்பதை நிரூபித்தால் ராயின் கருத்தை ஏற்கமுடியும். காங்கிரஸ் சோசலிஸ்ட்கள் குறித்தும் அம்பேத்கர் அப்போது பேசினார். வெள்ளைக்காரர்கள் போனபின்னரும் தொழிலாளி தனது நலன்களைக் காப்பாற்றிக்கொள்ள போராடித்தான் தீரவேண்டும். அதற்காக அவன் திரள்வது அவசியம். காங்கிரஸ் சோசலிஸ்ட்கள் இதை புரிந்துகொண்டுள்ளனர். ஆனால் அவர்களோ காங்கிரசில் உள் அமைப்பு என்கிறார்கள். காங்கிரசில் உள்ள வலதுசாரிகளை மனமாற்றம் செய்வோம்- சோசலிசம் கொணர்வோம் என்கின்றனர். மனித இனத்தையே புரிந்துகொள்ள மறுக்கும் சோகமான கருத்துநிலை இது. வலதுசாரிகள் சொட்டு சோசலிசத்தை சகித்துக்கொள்ள மாட்டார்கள். ராயிஸ்ட்களும், காங்கிரஸ் சோசலிஸ்ட்களும் சிந்தனைக் குழப்பத்தின் காரணமாக தவறான புரிதலில் அவதிப்படுகிறார்கள். பொது எதிர்ப்பு முன்னணியைக்கொண்டுதான் ஏகாதிபத்தியத்துடன் போரிடமுடியும் எனக் குறிப்பிட்ட அம்பேத்கர் தனது கட்சியில் சேர தொழிலாளர்களுக்கு ஆலோசனை தருகிறார். Independent labour party அரசியல் அமைப்புக்கு உட்பட்ட எல்லா வழிமுறைகளையும் தனது திட்ட செயலாக்கத்திற்கு கடைபிடிக்கிறது. அரசியல் அமைப்பை மீறிய நெறிமுறைகளில் நடைபோடாது. வர்க்கப்போராட்டம் என்பதன் அவசியத்தை அது தவிர்த்துவிடுகிறது. அதேநேரம் வர்க்க அமைப்பு என்னும் கோட்பாட்டின் மீது அது நிலையாக நிற்கிறது. அது பம்பாய் மாகாணத்தில் மட்டும் இயங்குகிறது. அந்த அமைப்பு வளரவேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தொழிலாளர் அமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்தமான இந்தியத் தொழிலாளி வர்க்கத்திற்கு நாம் பெரிய உந்து சக்தியாக இருக்கமுடியும். இட ஒதுக்கீடு ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு மட்டுமல்ல தொழிலாளர் வர்க்கம் முழுமைக்கும் பயன்தரக்கூடியது. அவரது தலைமைஉரை நீண்ட ஒன்றாக இருந்தாலும் அவரின் தொழிலாளர் குறித்த அடிப்படை நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்தது. பிப்ரவரி 12 1938ல் நடந்த இளைஞர் மாநாட்டில் உயர்ந்த குறிக்கோள், கடும் உழைப்பு, எளிமை, சமூக சேவை, பொறுமை ஆகியவற்றின் அவசியம் பற்றி அம்பேத்கர் அறிவுறுத்தினார். கற்றவனுக்கு நன்னடைத்தையும் எளிமையும் இல்லாவிடில் விலங்கைவிட ஆபத்தான நிலைக்கு போய்விடுவான். நேர்மை கல்வியைவிட மிக அவசியம். மதத்தை இளைஞர்கள் அலட்சியமாக நினைப்பது வருத்தத்திற்குரியது. யாரோ சொன்னது போல் மதம் ஓர் அபினியல்ல. என்னிடமிருக்கும் நல்ல பண்புகளுக்கும் என் கல்வியால் சமுதாயத்திற்கு கிடைத்த நல்ல பயன்களுக்கும் என் மத உணர்வே காரணம். மதம் எனக்குத்தேவை- அதேநேரம் மதம் என்னும் பெயரில் கபட நாடகம் போடுவது பிடிக்காது. இங்கு அவர் ஏன் மார்க்சின் பெயரை கூறாது தவிர்த்து ‘யாரோ some one’ எனப் பயன்படுத்தினார் என தெரியவில்லை. டிசம்பர் 25 1938ல் அம்பேத்கர் சுவாமி சகஜானந்தாவிற்கு வரவேற்பு கொடுத்தார். அந்த தருணத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பில் காங்கிரஸ் உண்மையாக போராடினால் அதனுடன் இணையத்தயார் என்றார். சுவாமி சகாஜானந்தா வேண்டுகோளை ஏற்று அம்பேதகர் தனது பிரகடனமாக இதை அறிவித்தார். அதே நேரத்தில் காங்கிரசின் கொள்கைகள் குறித்து விமர்சனங்களை முன்வைத்த அவர் எங்கள் நலனை காப்பதற்காக காங்கிரசுடன் சேர்வது தற்கொலை முயற்சியாகும் என்றார். சுவாமி அவர்கள் காங்கிரஸ்தான் மக்களைத் தட்டி எழுப்புகிறது. மக்கள் அதன் மீது நம்பிக்கை விசுவாசம் வைத்திருக்கிறார்கள். முதலில் நாட்டை அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க வேண்டும். அதற்கு எல்லா சக்திகளும் இணைந்து போராடவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். ஜூலை 2, 1939ல் பம்பாய் பரேலில் ரோகிதாச் சிக்சன் சமாஜில் அம்பேத்கர் உரை ஒன்றை நிகழ்த்தினார். தாழ்த்தப்பட்ட சாதியினரிடத்தில் உள்சாதிகள் ஒழியவேண்டும். ஆனால் திருமணம் என்பதை வலுக்கட்டாயமாக முடிவு செய்ய முடியாது, மஹர் வகுப்பு பெண்ணை சமார், மாங் வகுப்பை சேர்ந்த வாலிபனுக்கு மந்திரக்கோல் ஒன்றை ஆட்டுவதன் மூலம் மணம் செய்து வைத்துவிட முடியாது. தனது கட்சியில் பெரும்பகுதியினர் மஹர் வகுப்பினர் என்பது உண்மையே. எனினும் தனிப்பிரிவினரின் உணர்வுகளைப் போக்குவதற்கு ஒரே வழி வேறு ஒரு மதத்தைத் தழுவிக்கொள்வதுதான் என்றார் அம்பேத்கர் . அம்பேத்கர் ஜூலை 13, 1941 அன்று பம்பாய் நகராட்சி காம்கார் தொழிற்சங்க ஆண்டுவிழாவில் பங்கேற்று உரையாற்றினார். பஞ்சாலை தொழிற்சங்கங்கள் கடந்த 14 ஆண்டுகளாக பல வேலைநிறுத்தம் மேற்கொள்ள செய்துள்ளனர். ஆனால் ஒரு கோரிக்கையைக் கூட பெறமுடியவில்லை. ஆட்குறைப்பும், துயரங்களும்தான் அதிகரித்தன. தாழ்த்தப்பட்ட தொழிலாளர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களை இணைத்துக்கொள்ளவேண்டும். வடக்கு பம்பாயில் அம்பேத்கர் போட்டியிட்டபோது அங்கு அரிஜன வாக்காளர் 8000 மட்டுமே இருந்தனர். இந்து வாக்காளர் 48000 இருந்தனர். அனைத்து ஒடுக்கப்பட்டவர்களும் வாக்குசாவடிக்கு வந்ததை அவர் அவ்வுரையில் பாராட்டிச் சொன்னார். பிரிட்டிஷாருக்கு விசுவாசமாக தான் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். தாழ்த்தப்பட்ட மக்கள் நாலாபுறமும் எதிரிகளால் சூழப்பட்டுள்ள நிலைமையில், ஒரே நேரத்தில் பல முனைகளில் போராட முடியாது. ஜாதி இந்துக்களின் 2000 ஆண்டுக்காலக் கொடுங்கோன்மை எதிர்த்துப் போராடி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமவுரிமை பெறுவதற்கு முன்னுரிமை கொடுத்தேன் என்பதைக் குறிப்பிட்டார். 1942 ஜூலை 12 அன்று நகராட்சி தொழிலாளர் மத்தியில் பேசும்போது தாழ்த்தப்பட்ட தொழிலாளர் தனி அமைப்பு கேடு பயக்காது நன்மையே உண்டாக்கும் எனப் பேசினார். பின்னர் விவசாயிகள் தாழ்த்தப்பட்டவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் வைஸ்ராய் நிர்வாகக் கவுன்சிலில் இந்தியத் தொழிலாளர் நலன்களைக் காக்கவும் அவர்களை முன்னேற்றவும் சரண் அடையமாட்டேன் என்கிற உறுதிமொழியை தந்தார். பிராமணர் அல்லாதார் இயக்கத்துடன் உள்ள உறவு குறித்து தெரிவித்த அம்பேத்கர் கடந்த 10 ஆண்டுகளாக இணக்கமாக இருக்கிறேன் என்றார். அந்தப்பகுதி உழைக்கும் மக்களை எமது கட்சியில் சேரவேண்டும் என வற்புறுத்தவே மாட்டேன். தாழ்த்தப்பட்ட வகுப்புத் தொழிலாளரின் உரிமையை சாதி இந்து அமைப்புகள் அங்கீகரிக்காமல் இருக்கலாம். காலடியில் போட்டு மிதிக்கலாம். 1929 பஞ்சாலை வேலைநிறுத்த அனுபவத்தை அம்பேத்கர் மீண்டும் பகிர்ந்துகொண்டார். சிலதுறைகளில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு இருந்த தடையை நீக்க அந்த தலைவர்கள் எதுவும் செய்யவில்லை. நாம் கோட்டி முறையை ஒழிக்க இயக்கம் தொடங்கினோம். ஆனாலும் கோட்டி நிலம் வைத்திருந்த சாதி இந்துக்களுக்கும் அது உதவிகரமாக இருந்தது.. எங்கள் பிரிவினர் இயக்கத்தால் மற்ற பிரிவினருக்கு தீங்கு நேராது என்பதை அம்பேத்கர் எடுத்துரைத்தார். நாக்பூரில் அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் மாநாடு ஜூலை 18, 19 1942ல் கூட்டப்பட்டது. அம்பேத்கர் வைஸ்ராய் கவுன்சிலில் இருந்ததால் சிவராஜ் தலைமை தாங்கினார். அம்பேத்கர் பங்கேற்று உரையாற்றினார். தான் தலைமை ஏற்று நடத்திய 20 ஆண்டுகளின் கணக்கை தருவது தன் கடமை. தாழ்த்தப்பட்டவர் மேன்மைக்காக என்ன செய்யப்பட்டுள்ளது- இனி என்ன செய்யவேண்டும் என நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும். தீண்டத்தகாதோர் பெருமுன்னேற்றம் அடைந்துள்ளனர். அரசியல் உணர்வு, கல்வித்துறை, பொதுப்பணிகளில் சேர்தல் என மூன்று விஷயங்களில் முன்னேற்றம் வந்துள்ளது. பட்டதாரிகள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள் என வந்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி இல்லை. போலீஸ், இராணுவத்திலும் சேர வாய்ப்புகிட்டியுள்ளது. இந்த முன்னேற்றங்கள் இந்துக்களின் தர்ம சிந்தனையால் விளையவில்லை. நம் சொந்த உழைப்பில் கிட்டிய வெற்றிகளே அவை. இதை நாம் எப்படி கட்டிக்காக்கப் போகிறோம் என்பதுதான் கேள்வி. நமக்குத் தேவை அரசியல் அதிகாரம்தான். ஆதரவு சக்திகள், எதிர்ப்பு சக்திகளை நாம் புரிந்துகொள்ளவேண்டும். தீண்டத்தகாதோர் இந்துக்களின் ஒரு பிரிவு அல்ல, அவர்கள் இந்திய தேசிய வாழ்வில் ஒரு முழுமையான அங்கம் என்பதே என் அரசியலின் அடிப்படை. இந்திய முஸ்லீம்களைப் போல தீண்டத்தகாதவர் தனி அந்தஸ்து கொண்டவர்கள். இந்துக்களைப் போலவே தனியான அரசியல் உரிமைகள் உண்டு. இதைக் கருத்தில் கொள்கிற எவரும் என் அரசியலை தவறாக புரிந்துகொள்ளமாட்டார்கள் என சுய விளக்கமளித்தார் அம்பேத்கர். ( பக் 318 வால் 37) வட்டமேசை விவாதங்களை அவர் நினைவு கூர்ந்தார். காந்தியோ இந்துக்கள் தீண்டத்தகாதவர் நலன்களை காப்பார்கள் என நம்பக் கோரினார். நான் மேற்கொண்ட நிலை முற்றிலும் மாறுபட்டது. தீண்டத்தக்காதவர் தேசத்தின் வாழ்வில் தனியான தெளிவான கூறு என்றேன். இந்துக்கள் அவர்களது பரம்பரை விரோதிகள் - அவர்கள் அடிமைகளாக வைத்துக்கொள்ளவே விரும்புவர். எனவே இந்துக்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் இடையே அரசியல் பிரிவினை செய்யப்படவேண்டும் என்றேன் ( பக் 319 வால்யூம் 37). வட்டமேசை மாநாட்டில் மகாத்மா தோல்வியுற்றார்- தீண்டத்தகாதவர்கள் வெற்றிபெற்றனர். இந்தப் போட்டியின் முடிவுதான் வகுப்புவாரித் தீர்ப்பாகும். இந்தியாவின் தேசிய வாழ்வில் தீண்டத்தகாதவர்கள் அங்கீகரிக்கப்பட்டு தனி அரசியல் உரிமைகளைக் கோரிப்பெற தகுதி பெற்றதிலும்தான் அதன் சிறப்பே உள்ளது. மகாத்மா உண்ணாவிரதம் இருந்தாலும் அவர் தோல்வியுற்றார். நான் வைத்த கோரிக்கையை புனா ஒப்பந்தத்தில் அவர் ஏற்றுக்கொள்ளவேண்டியதாயிற்று. காந்தியும் காந்தியமும் எங்கள் நிலைப்பாட்டை வலுவிழக்கச் செய்ய முயன்று கொண்டிருக்கும் ஒரு தீய கூறு ஆகும். புனா ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டதன் மூலம் திரு காந்தியின் உயிரைக் காப்பாற்ற நான் உதவினேன். உடன்பாட்டின் அடிநாதமான கொள்கைகளுக்கு திரு காந்தி எப்போதுமே தனது உண்மையான நேர்மையான ஒப்புதலைக் கொடுத்ததில்லை. அவரை விரோதி எனக் கூறுவதற்கு நியாயங்கள் இருந்தாலும் அதைப் பயன்படுத்த விரும்பவில்லை. அவர் முதற்பெரும் எதிரி என்கிற விமர்சனத்தை அம்பேத்கர் அக்கூட்ட வாயிலாக முன்வைத்தார். அதேபோல் கிரிப்ஸ் எடுத்த நிலைப்பாட்டையும் அவர் விமர்சித்தார். அரசியல் சட்ட மாற்றங்களுக்கு இந்து முஸ்லீம் ஒப்புதல் மட்டுமே தேவை என கிரிப்ஸ் கூறினார். தீண்டப்படாதவர் தனித்தன்மை என்பதை அவர் இதன் மூலம் முடிவிற்கு கொணரப்பார்க்கிறார் . அரசைப் பொறுத்தவரை இது குட்டிக்கரணம் என்று அம்பேதகர் விமர்சனம் நீண்டது. அடுத்து முஸ்லீம் லீக் குறித்தும் அவர் பேசினார். சிறுபான்மையினர் என இயக்கம் ஆரம்பித்து பாகிஸ்தான் தீர்மானத்திற்கு பின்னர் முஸ்லீம்கள் தனி தேசிய இனம் என அவர்கள் கருதத்துவங்கினர். பிறருடன் ஒட்டும் உறவும் இல்லை என்ற நிலைப்பாட்டையும் எடுக்கத்துவங்கினர். இந்த மாற்றம் தீண்டத்தகாதோரிடையே மோசமான விளவுகளை உருவாக்கியது. தீண்டப்படாதவர் ஒரு கூட்டாளியை இழந்தனர். முஸ்லீம் லீக் எதிலும் 50 சதம் என பேசியது தீண்டத்தகாதோர் உள்ளிட்ட முஸ்லீம் அல்லாதவர்களின் நலன்களுக்கு எதிரானது. இதனால் முஸ்லீம்கள் தீண்டப்படாதவர்கள் இடையே மோதல் ஏற்படும் என அம்பேத்கர் தனது விமர்சனமாக வைத்தார். அரசியல் அதிகாரம், பொதுப்பணியிடங்களில் ஒதுக்கீடு, காலத்தில் நிரப்புதல் போன்றவை போலவே வேறு ஒரு கோரிக்கை ஜீவாதாரமானது என அம்பேத்கர் எழுப்பினார். இந்து கிராமங்களிலிருந்து பிரிந்து தனியாக தீண்டத்தகாதோருக்கான புதிய குடியிருப்புகள் அவசியம் என அதற்கான காரணங்களை எடுத்து சொன்னார். கிராம ஆதிக்க சாதிப்பிடியிலிருந்து அடிமை சங்கிலி அறுத்து விடுதலைப்பெற இது தான் ஒரே வழி என்றார். புதிய தனி கிராமங்களை அரசு செலவில் அமைக்க அரசியல் சட்டத்தில் உறுதி செய்யப்படவேண்டும். அரசுக்கு சொந்தமான ஏராள நிலங்களை இதற்காக ஒதுக்க முடியும் என்றார். இரண்டாம் உலக யுத்தம் பற்றிக் குறிப்பிட்ட அம்பேத்கர். யுத்த முயற்சிகளுக்கு ஆதரவு தந்துள்ளோம் என்றார். இனத்திமிரின் சர்வாதிகாரம் மற்றும் அதீத காட்டுமிராண்டித்தனம் எதிர்த்த ஜனநாயகப்போர் என அதை அவர் வர்ணித்தார். இழிந்த நாசி சர்வாதிகாரம் அழிக்கப்படவேண்டும் என்றார். நாக்பூரில் ஜூலை 20 1942ல் கொடுத்த வரவேற்பிற்கு நன்றி தெரிவித்து பேசும்போது தனது வாழ்நாள் குறிக்கோள் என்ன என்பதை சுருக்கமாக விளக்கினார். இந்த நாட்டின் அரசாங்கத்தை நடத்துவதில் இந்துக்களோடும் முஸ்லீம்களோடும் மரியாதைக்குரிய கூட்டாளிகளாக சரி சமமான மரியாதைக்குரிய நிபந்தனைகளோடு கூடிய கூட்டாளிகளாக தாழ்த்தப்பட்டோரையும் அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதே அந்த குறிக்கோள் என்றார். இதை கண்டிப்பாக அடைய முயற்சிப்பேன் என உறுதி கூறினார். நமது போராட்டம் அகநிலை சார்ந்தது. அதில் பருப்பொருள் சார்போ இழிவோ இல்லை. போராட்டம் செல்வத்திற்கோ அதிகாரத்திற்கோ அல்ல. இது விடுதலைக்கான போராட்டம். இந்து சமூக அமைப்பினால் சிதைக்கப்பட்ட மனிதப் பண்பியல்களை மீட்டெடுப்பதற்கான போராட்டம். நாம் தோல்வி அடைந்தால் இந்துக்கள் வெற்றிபெற்றால் ஒடுக்கப்படுவது தொடரும். கற்பி, கிளர்ச்சி செய், ஒன்றுதிரட்டு என்பதுதான் எனது ‘அறிவுரை வார்த்தைகள்’ எனச் சொல்லி அக்கூட்டத்தில் இம்முழக்கத்தை அறிவுறுத்தினார். ஜூலை 20 1942ல் அகில இந்திய தாழ்த்தப்பட்ட பெண்கள் மாநாடு நாக்பூரில் நடந்தது. அதில் மணமுறிவு சட்டம் வற்புறுத்தப்பட்டது. கணவனை இரத்து செய்யும் உரிமை சட்டப்படி வேண்டும் என கோரப்பட்டது. அதேபோல் பலதார மணத்தைக் கட்டுப்படுத்த சட்டம் வேண்டும் என்பதும் சொல்லப்பட்டது. மில்கள், இரயில்வே, நகராட்சி பெண் தொழிலாளர் கோரிக்கைகள் பற்றியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. அதில் 20 ஆண்டுகள் பணிமுடித்தால் ரூ 15 ஆவது ஓய்வூதியம் எனக் கேட்கப்பட்டிருந்தது. பெண்கல்வி மேம்பாட்டிற்காக மாவட்டந்தோறும் விடுதிகள், கல்வித்தொகை வழங்கவேண்டும். ஆலைகளில் பெண்களை மேற்பார்வையிட ஆண் தொழிலாளி இல்லாமல் பெண் தொழிலாளியே இருக்கவேண்டும். சட்டமன்ற தொகுதிகளில் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு பிரதிநிதித்துவம்வேண்டும் போன்ற பல மாநாட்டு தீர்மானங்களாக வடிக்கப்பட்டன. அதே நாளில் நாக்பூரில் தொண்டர்படை மாநாடு நடந்தது. அம்பேத்கர் பங்கேற்று உரையாற்றினார். அவ்வுரையிலும் சமதையாக இருப்பதற்கான போராட்டம் பற்றி குறிப்பிட்டார். தனித்த மாறுபட்ட கூறாக இந்துக்களுடன் சம அந்தஸ்திற்காக நாம் நிற்கிறோம். தாழ்த்தப்பட்ட வகுப்பினரிடையே இந்துக்களுடன் சமூக சமத்துவம் என்ற கோரிக்கையை ஊட்டி வளர்ப்பதுதான் இந்த தொண்டர்படையின் நோக்கம். இந்துக்களிலிருந்து முற்றிலுமான பிரிவினையைக் கொண்டுவருவதன் மூலம் இந்துக்களுடன் சமூக சமத்துவத்தைப் பெறுவதே நோக்கமாகும். மதத்திலிருந்து பிரிவதன் மூலம் அதை நாம் அடைய விரும்புகிறோம். நாம் படிப்படியாக செல்ல வேண்டியுள்ளது. அரசியல் சமத்துவ கோரிக்கையே கூட கடினமான வேலையாக இருக்கிறது. எவரின் தலையீடும் இல்லாமல் நாம் நம் அரசியல் வேலையை செய்யமுடிவது இந்த தொண்டர்படை வலிமையால்தான். என் அளவில் அகிம்சையை நம்பினாலும் அகிம்சையையும் பணிதலையும் நான் வேறுபடுத்திப் பார்க்கிறேன். பணிதல் வலிவற்ற தன்மை. தனக்குத்தானே புகுத்திக்கொள்ளும் வலிவற்ற தன்மை சிறப்பானதல்ல. துக்காராம் சொல்கிறார்: அனைத்து உயிர்களிடத்தும் அன்பும் கருணையும் காட்டுதல்- கேடு செய்பவர்களை அழித்தல். இந்த இரண்டாவது வரி மறைக்கப்படுகிறது. கேடு விளவிப்பவர்களை அழிப்பது அகிம்சை தத்துவத்தின் மூலாதாரமான கூறாகும். அது இல்லாமல் அகிம்சை வெறும் கூடு. பேரின்பம் மட்டுமே. அங்கு ஆக்கப்பணி அற்றுப்போகிறது. I am myself a believer in Ahimsa. But I make a distinction between Ahimsa and Meekness. Meekness is weakness, and weakness which is voluntarily imposed upon itself is not a virtue. I am a believer of Ahimsa but in the sense defined by your great saint Tukarama. Love and Kindness to all creatures and destruction of all evil doers. The second part of this definition is oftern lost sight of.. To destroy all evil doers is the principal element in the doctrine of ahimsa. Without that Ahimsa is an empty shell, only beatitude. It ceases to be a positive duty. ( 17-3 Vol page 289) மேற்கண்ட பல உரைகளில் அவர் வலியுறுத்தி சொல்வதெல்லாம் அரசியல் அதிகாரத்தில் சமத்துவ உரிமை, இந்துக்களுடன் சமூக சமத்துவம் என்கிற இரு சமத்துவ அம்சங்களை என்பதை காணமுடியும். இந்த அம்சங்கள் உறுதியானால் பொருளாதார சமத்துவம் நோக்கி செல்ல முடியும் என அவர் கருதினார். இந்தியத் தொழிலாளர் சம்மேளனம் மே10, 1943ல் அளித்த வரவேற்பில் இந்திய அரசின் தொழில்துறை உறுப்பினராக அம்பேத்கர் பேசினார். இந்திய தொழிலாளர் இயக்கம் ஆழமற்று மேம்போக்காக இருப்பதை அவ்வுரையில் சுட்டிக்காட்டினார். இந்தியாவிலும் பிரிட்டன் போல தொழிற்கட்சி அமைக்கலாம். இந்தியாவில் சுயராஜ்யம் வரும்போது அது இந்தியத் தொழிற்சங்க இயக்கத்தின் கைகளில் இருக்கவேண்டும் என்றார். 1944 ஜனவரி 31 ஆம் நாள் அன்று கான்பூரில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மாநாட்டில் உரையாற்றினார். எதிர்கால இந்தியாவில் நாம் ஆட்சிபுரியும் இனமாக இருப்போம் என உறுதி ஏற்கவேண்டும். பணிந்து நடப்போராகவோ, வேலைக்காரர்களாகவோ இருக்க மறுப்போம். எஜமான்களாக விளங்குவோம். சுயராஜ்ய அரசு அமையும் போது ஆட்சி அதிகாரத்தை இந்து, முஸ்லீம், அரிஜனங்கள் என்ற மூன்று கட்சிகள் பகிர்ந்துகொள்ளும் என்கிற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார். அம்பேத்கர் தென்னிந்திய சுற்றுப்பயணத்தை செப்டம்பர் 1944ல் மேற்கொண்டார். அப்பயணத்தில் அரிஜன வகுப்பினர் இந்திய தேசிய வாழ்வில் ஒரு அங்கம் என்பதை ஜாதி இந்துக்கள் ஏற்றுக்கொள்வது நல்லது. இந்த நாடு சுதந்திரம் பெறவேண்டும் என்பதை நாங்கள் அவர்களைப் போலவே முழுமையாக விரும்புகிறோம். ஆனால் எந்தப் புதிய அரசிற்கும் இந்து, முஸ்லீம், அரிஜன் வகுப்பினர் மூன்று சாராருமே வாரிசுகள் ஆவர். இந்த உரைகளில் எல்லாம் அவர் முழுமையாக வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பதை மட்டுமே அடிப்படையாக கொண்ட ஆட்சி அதிகார பகிர்வையே பேசுவதை நாம் பார்க்கமுடியும். இங்கு வர்க்கம் சார்ந்த உரையாடலை காணமுடியவில்லை. செப்டம்பர் 23 1944ல் மதராஸ் கன்னிமாரா ஹோட்டலில் அளிக்கப்பட்ட விருந்தில் அம்பேத்கர் கலந்துகொண்டு உரையாற்றினார். பிராமணர் அல்லாதார் கட்சி தோன்றியிருப்பது வரலாற்றில் முக்கிய நிகழ்ச்சியாகும். பிராமணர்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் இடைப்பட்ட ஒரு வகுப்பார் இதனை வழிநடத்துகின்றனர். ஜனநாயக வழிப்பட்டதாக அந்தக் கட்சி செயல்படவில்லை என்றால் அதனால் ஒரு பயனும் இல்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அனைவரும் இக்கட்சியின் வளர்ச்சியை கவலையுடனும் அக்கறையுடனும் கவனித்து வருகின்றனர். பிராமணர் அல்லாதார் கட்சியின் தோற்றம் நாட்டின் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். அக்கட்சியின் வீழ்ச்சியும் வேதனையுடன் காணவேண்டிய நிகழ்ச்சியே. நீண்டகாலம் அதிகாரத்தில் இருந்த அக்கட்சி அட்டைவீடு போல சரிந்து போனது எதனால்? பிராமணர் அல்லாதார் மத்தியிலேயே இக்கட்சியின் செல்வாக்கு கெட்டது எதனால்? வீழ்ச்சிக்கு இரண்டு காரணங்கள் என நினைக்கிறேன். முதலாவதாக , பிராமணர் பிரிவுக்கும் இவர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன என்பதை இவர்கள் உணரவில்லை. பிராமணர்களுக்கு எதிராக தீவிரமாக அவர்கள் பிரச்சாரம் செய்த போதும், இவர்களுக்கு இடையிலுள்ள வேறுபாடுகள் கொள்கை வழிப்பட்டவை என்று இவர்கள் கூற முடியுமா?. பிராமணர் தன்மை அவர்களிடமே இருந்தது. இரண்டாம்தர பிராமணர்களாக தங்களை எண்ணிக்கொண்டார்கள். பிராமணியத்தை விட்டொழிப்பதற்கு பதிலாக, எட்டத்தகுந்த இலக்காக கருதி அதன் ஆத்மாவை இவர்கள் இறுகப் பற்றியிருந்தார்கள். பிராமணர்களுக்கு எதிராக இருந்த கோபம் எல்லாம் தங்களுக்கு அவர்கள் இரண்டாந்தரப் பட்டம் தருகிறார்கள் என்பதே. மதராசில் செப்டம்பர் 24 1944 அன்று இந்தியாவில் பகுத்தறிவுவாதம் என்கிற தலைப்பில் பிராட்வே பிரபாத் டாக்கீசில் அம்பேத்கர் உரை நிகழ்த்தினார். மதராஸ் பகுத்தறிவு சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. அடிப்படை உண்மை என்னெவெனில் பண்டைக்கால இந்தியாவில் புத்தமதத்துக்கும் பிராமணியத்துக்கும் இடையில் ஒரு பெரும் போராட்டம் நடந்து வந்தது. இப்போராட்டம்தான் இந்திய வரலாற்றை நிர்ணயம் செய்தது. இது சமூகத் தத்துவவியல் புரட்சியாகவும் விளங்கியது. வேதங்கள் பிரகடனப்படுத்தியதே உண்மை என்றது பிராமணக்கோட்பாடு. திறமைசாலிகளாக இருந்த பிராமணர்கள் கோமாளித்தனமான விஷயங்கள் தவிர வேறேதும் இல்லாத இந்தப்புத்தகங்களுக்கு அதீத புனிதத்தன்மையை அதிகாரத்தை கொடுத்தது குறித்து ஆச்சரியப்படுவதாக அம்பேத்கர் தனது உரையில் குறிப்பிட்டார். உலக சரித்திரத்திலேயே சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற செய்தியை சொன்னவர் புத்தர்தான். புத்தமதத்தினர் தோற்றதால் புத்தரின் பகுத்தறிவு மறைந்து போனது. ஒவ்வாத கோட்பாடுகள் அரசியலில் புகுந்தன. செப்டம்பர் 28 1944 அன்று அம்பேத்கருக்கு தரப்பட்ட வரவேற்பிற்கு நன்றி தெரிவித்து அவர் ஆற்றிய உரையில் காந்தியை அமெரிக்க ஆப்ரகாம் லிங்கனுடன் ஒப்பிட்ட கருத்து குறித்து தெரிவித்தார். நாட்டின் அய்க்கியம் என இருவரும் பேசினர். லிங்கன் அடிமைகளுக்கு 1863ல் விடுதலை பிரகடனம் செய்தார். காந்திக்கு விடுதலையும் வேண்டும், வர்ணாஸ்ரம தர்மமும் வேண்டும்.. காந்தியிடம் நான் காண்கின்ற குறை அவருக்கு தொலைநோக்கு இல்லாததைத்தான். தொடர்ந்து தோல்விகளை காந்தி தழுவியதற்கு காரணம் இதுதான். காந்தி தனது தவறை உணர்வார் என நம்புகிறேன் என வெளிப்படையாக தன் கருத்தை வைஸ்ராய் கவுன்சில் பொறுப்பிலிருந்த அம்பேத்கர் தெரிவித்தார். ஆனால் காந்தியோ எப்போதும் one step என்பதில் பெரும் நம்பிக்கை வைத்து அனைத்து தரப்பு மக்களையும் வேறு எவரையும்விட அடர்த்தியாக திரட்டியதில் வெற்றியே பெற்றார். அதையும் கூட தனக்கு வெற்றி பிறருக்கு தோல்வி என்பதற்காக அவர் செய்யவில்லை என்பதை விருப்பு வெறுப்பு இல்லாமல் காந்தியை அணுகிப்பார்க்கும் எவராலும் கண்டுணரமுடியும். சிறுபான்மையினரின் நலன்களைக் காக்கும் விதிகளுக்கு எதிராக இருக்கும் எந்த இந்தியனும் நமது நாட்டின் நண்பனாகவோ ஜனநாயகவாதியாகவோ இருக்கமுடியாது. அவன் நாட்டின் விரோதியென்று அம்பேத்கர் குறிப்பிட்டார். இந்த உரையில் வேறு ஒரு முக்கிய அழுத்தத்தையும் அம்பேத்கர் தந்திருந்தார். காந்தி தவிர்க்கப்படமுடியாதவர் என்கிற அவர் மீதான நம்பிக்கையை அம்பேத்கர் வெளிப்படுத்துவதாகவே அது இருந்தது. " நம்மிடையே எவ்வளவு ஒற்றுமையை நாம் வளர்த்துக்கொள்கிறோம் என்பது மிகவும் முக்கியம். நமக்குள் நிலவும் சர்ச்சைகளை நாம் தீர்த்துக்கொண்டால், நாம் வரைகிற அரசியல் சாசனத்தில் இந்நாட்டின் பல்வேறு வகுப்பாரின் பிரதிநிதிகளும் கையொப்பம் இடுவர். பிரதம மந்திரியிடமோ வேறு எவரிடமோ நமது ஏகப் பிரதிநிதியாக காந்தியை நாம் அனுப்பலாம். இது காந்தி என்ன கருத்துக்கொண்டிருக்கிறார் என்பதைப் பொருத்திருக்கிறது" ( பக் 432 தமிழ் வால்யூம் 37) ஜனவரி 2 1945 அன்று கல்கத்தாவில் அரிஜன வகுப்பு சார்ந்த கல்லூரி மாணவர்களிடம் அம்பேதகர் உரையாற்றினார். அகில இந்திய மாணவர் சம்மேளனத்தை அதில் விமர்சித்தார். அரிஜன மாணவர்கள் அதிலிருந்து விலகி தனி அமைப்பை உருவாக்க வேண்டினார். அரசியலிருந்து ஒதுங்கியிருந்து அரிஜன வகுப்பாரின் சமுதாய கஷ்டங்கள் மீது கவனம் செலுத்த வேண்டினார். ஆழ்ந்த அக்கறையுள்ள விஷயமாகக் கல்வியை கருதவேண்டுமே தவிர தேநீர்நேர அனுபவிப்பாக நினைக்கக்கூடாது என்கிற முக்கிய அறிவுரையை தந்தார். ஜனவரி 3 1945 அன்று கல்கத்தாவில் பீப்பிள்ஸ் ஹெரால்ட் பத்திரிகை துவக்க நிகழ்வில் அம்பேத்கர் உரையாற்றினார். பிரிட்டிஷ் சென்றபின் காங்கிரஸ் சிதறும் என்கிற தனது கணிப்பை அவர் வெளிப்படுத்தினார். ஆனால் அரிஜன வகுப்பாரின் கட்சி நிரந்தரமாக எப்போதும் இருக்கும் . அவர்கள் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்திற்காக போராடுகிறார்கள் - அவர்கள் கொள்கைகள் இந்தியாவை மட்டுமல்ல உலகையே சீரமைக்கக்கூடியவை என்றார். காங்கிரசில் இணைந்து வேலை செய்தால் அதன் தலைவராகலாமே என்று கூட சொல்கிறார்கள். அரிஜனங்களை மேம்படுத்துவதைவிட இந்தியாவில் வேறொரு சிறந்த காரியம் இருப்பதாக நினைக்கவில்லை என அவ்வேலைக்கான முக்கியத்துவத்தை அவர் வெளிப்படுத்தினார். சுதந்திரத்திற்காக பாடுபவர்களுக்கான கேள்வி ஒன்றையும் அம்பேத்கர் முன்வைத்தார். தேச சுதந்திரம் என்பதை எடுத்துக்கொள்ளுங்கள்- வலிமையானவர்கள் எளியவர்களை ஒடுக்குவதற்கான சுதந்திரத்திற்கும் பலவீனமானவர்கள் முழுமனிதனாக வளர்வதற்கு வாய்ப்பு தரும் சுதந்திரத்திற்கும் இடையில் பெருத்த வேறுபாடு உள்ளது. சுதந்திரம் பற்றி பிதற்றுகிற இந்து தேசபக்தர்களிடம் நான் கேட்பேன் இந்த சுதந்திரத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?. அவர்கள் பெறப்போகும் சுதந்திரம் ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் என்றால், ஒருவர் ஏன் சுதந்திரத்திற்காகப் போராடவேண்டும்… எங்கள் நோக்கம் குறுகியதல்ல என அம்பேதகர் பதில் அமைந்தது. தங்களை தொடர்ந்து ஒடுக்க இந்துக்கள் பெறும் அதிகாரமாக சுதந்திரம் அமைந்துவிடக்கூடாது என்கிற அய்யப்பாட்டில் இப்படியொரு வாதத்தை அம்பேத்கர் முன்வைத்தார். அதேநேரத்தில் காங்கிரசோ- அதைச் சார்ந்த பலரோ பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை என்பதற்கான போராட்டத்தை இவ்வாதத்தை ஏற்று நிறுத்திக்கொள்ளவில்லை. சுய அதிகாரம் என்பதற்காக அவர்கள் பயணம் இருந்தது. இதை சரியாக காந்தி அறிந்ததால்தான் அவர் விடுதலைக்கான போராட்டப் பாதையை பிரிட்டிஷ் எதிர்ப்பு என்கிற ஒற்றைப்பயணமாக்காமல், அரிஜன முன்னேற்றம் உட்பட உள்போராட்ட ஆக்கபூர்வ வேலைத்திட்டமாக்கினார். வைஸ்ராய் கவுன்சில் உறுப்பினர் என்கிற வகையில் மே 20 1945ல் பம்பாய் கூட்டம் ஒன்றில் பேசும்போது இந்தியா சுந்தந்திரம் அடையவேண்டும் என்பதில் எந்த சர்ச்சையும் இல்லை என்பதை அம்பேத்கர் தெளிவுபடுத்தினார். பெரும்பான்மையோரே ஆட்சி செய்யலாம் என்பது சரியா? அரசாங்கத்தின் தேவைதான் முக்கியம், தனிநபர்நலன் அல்ல என்பது பாசிசம் என்றார். தனிநபரைக் காப்பது அரசின் கடமையாகும். பெரும்பான்மை என்பதை அரசியல் பெரும்பான்மை, வகுப்புரீதிப் பெரும்பான்மை என்றும் வகைப்படுத்தலாம். பிறப்புவழி பெரும்பான்மை சகிக்கமுடியாத ஒன்று. அரசியல் பெரும்பான்மை என்பது மாறிக்கொண்டே இருக்கும் என்ற விளக்கத்தை பார்க்கிறோம். 1945 அக்டோபர் 3 அன்று புனாவில் அரசியல் ஆர்வம் கொண்ட அரிஜன வகுப்பினரின் பள்ளி ஒன்றில் உரை நிகழ்த்தினார். கோகலே, ரானடேயின் தாராள சிந்தனை, வங்க புரட்சிகர சிந்தனையோட்டங்களை அவர் குறிப்பிட்டு அங்கு நுழைய அரசியலில் தெளிந்த அறிவு வேண்டும் என்றார். அங்கு தரம், உயிர்த்தியாகம் இருந்தது. காந்தியின் மேடையோ முட்டாள்கள், குறும்புக்காரர்களுக்காக திறந்திருக்கிறது. கற்றலும் ஞானமும் தேவையானதாகக் கருதப்படவில்லை என அம்பேத்கர் விமர்சித்தார். காந்தியை சுற்றியிருந்த ஏராள மனிதர்கள் மற்றும் அவர்களின் வேலைப்பாங்கு குறித்து ஒருவர் அறியும்போது அம்பேத்கரின் இந்த விமர்சனத்தில் நியாயம் இருப்பதாக புரிந்துகொள்ளமுடியாது. நவம்பர் 30, 1945 அன்று பேசும்போது 1942 ஆகஸ்டில் அரசாங்கம் எடுத்த தீவிர நடவடிக்கைகள் நியாயமானவைதான் என அம்பேத்கர் வாதாடினார். இல்லையெனில் இந்தியா ஜப்பானியர்களால், ஜெர்மானியர்களால் கைப்பற்றப்பட்டிருக்கும் என்றார். குவிட் இந்தியா போராட்டக் காலத்தில் கம்யூனிஸ்ட்கள் எடுத்த நிலைப்பாட்டால் இன்றளவும் அவர்கள் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஆனால் ராஜாஜியோ, பெரியாரோ, அம்பேத்கரோ கம்யூனிஸ்ட்கள் அளவிற்கு விம்ர்சனத்திற்கு உள்ளாகாமல் இருப்பது இந்திய அரசியலில் வியப்புக்குரிய ஒன்றாகவே இருக்கிறது. அம்பேத்கர் தனது 55வது பிறந்தநாளை டில்லியில் கொண்டாடினார். பம்பாயில் மக்கள் சூழ்ந்துவிடுவர் என அஞ்சி டில்லி வந்ததாக தெரிவித்தார். ஏப்ரல் 14 1947ல் அவர் உரையாற்றியபோது தொடர்ந்து பிரிட்டிஷ் பின்னால் ஓடப்போவதில்லை. அவர்கள் ஏதும் செய்யாமல் வெளியேறுகிறார்கள் என விமர்சித்தார். காங்கிரஸ் தன்னுடன் தாழ்த்தப்பட்டவர்கள் அதிகாரம் என்பதில் உடன்பாட்டிற்கு வரவில்லையெனில் அரசியல் அமைப்பு சட்ட நிர்ணயசபையிலிருந்து விலகிவிடுவேன் என அப்போது அறிவித்தார். 292 பேர் உள்ள அவையில் என்ன அறிவுத்திறமையுடன் வாதாடினாலும் 291பேர் ஏற்காமல் போனால் உதவியற்றவனாகிவிடுவேன்- தனியாக நிற்க நேரும். நாம் பெறப்போகும் உரிமைகள்கூட ஒரு கால அளவுக்குத்தான் இருக்கும். நாட்டில் எவருக்கும் உரிமைகள் மறைந்து போகும் காலம் வரும். அப்போது உங்கள் அமைப்பு வலிமைதான் அதனை தற்காக்கும் - ஒற்றுமையாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள் என தாழ்த்தப்பட்டவர்க்கு அறிவுரை வழங்கினார். பிரிட்டிஷார் வெறும் வாக்குறுதிகளை மட்டும் கொடுத்துவிட்டு அரிஜன வகுப்பினரை ஓர் அரசியல் பிரிவாக அங்கீகரிக்காமல் ஏமாற்றிவிட்டனர் என்ற கருத்தே அம்பேத்கரிடம் இக்காலத்தில் மேலோங்கியிருந்தது. பம்பாயில் 1947 செப்டம்பர் 25ல் சித்தார்த் காலேஜ் கூட்டம் ஒன்றில் அமபேத்கர் அரிஜனத் தலைமை எப்படி இருக்கவேண்டும் என வரையறுத்தார். செட்யூல்டு சாதிகள் சம்மேளனம் அதன் கோட்பாடுகளுக்காக பிரிட்டிஷ் லேபர் பார்ட்டியைப்போல் வெற்றிபெறும். அதற்கு மூன்று அம்சங்கள் அவசியம் என்றார். 1. சம்மேளனம் தன் ஸ்திரத்தன்மையை எந்த நிலையிலும் காப்பாற்றி வரவேண்டும் 2. உங்களுக்கு திறமையான தலைவர்கள் இருக்கவேண்டும். பிற கட்சிகளில் உள்ள பெரிய தலைவர்களின் தைரியமும் துணிவும் உங்களுக்கு வேண்டும் 3. ஒரு காலத்திலும் விலைபோகாத தலைமை கட்சிக்கு அவசியம். கடமைப் பொறுப்புள்ள ஊழியர்கள் இரண்டாவது முக்கிய அம்சம். இத்துடன் இரண்டு காரியங்கள் செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார். 1. உங்களின் மனம் ஆரோக்கியம், தொலைநோக்கு பார்வை, சிந்தனை, சிக்கல் தீர்க்கும் திறமை ஆகியவற்றை அதிகரித்துக்கொள்ளுங்கள் 2. பெரும்பான்மையான மக்களுக்கு இன்று எதிர்ப்படுகின்ற பிரச்னைகளைப்பற்றிய தீர்விற்கு உங்கள் திறனை, வல்லமையை பயன்படுத்துங்கள். அப்போது அவர் நாடாளுமன்ற ஜனநாயகம், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் குறித்தும் பேசினார். We have today what is called Parliamentary Democracy. Let us know that word. It is a very singular institution. It differs from autocracy or unlimited monarchy because in autocracy there is no such thing as parliament. People’s wishes count for nothing… The King cliams to represent the will of the people and governs the people according to what might be called his own will. We have another system in vogue which is called the dicatatorship of the proletariat. The difference between the two from our point of view is very minor. Autocracy has taken upon itself the obligation to serve what are called the masses but fundamentally this kind of dictatorship does not materilly differ from absolute monarchy because in neither of them the people play any part. இவ்வாறு மக்களுக்கு இடமளிக்காமை என்பதில் அரசரின் முடியாட்சியும், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமும் ஒன்றாகவே இருக்கிறது என்ற கருத்தை அம்பேத்கர் வெளிப்படுத்தினார். சந்தைப்படுத்தல் வசதிகளைச் செய்து தரும் முதலாளித்துவ அரசாங்கமே நல்ல அரசாங்கம் எனச் சிலரும், சோசலிச வடிவ அரசாங்கமே நல்ல அரசாங்கம் என சோசலிஸ்ட்களும் சொல்வர். சிக்கலான ஒரு சமுதாய அமைப்புக்கொண்ட நமக்கு முழுமையான ஒரே அபிப்பிராயமாக நல்ல அரசாங்கம் பற்றிய கருத்து இருக்க முடியாது என அவர் கருதினார். லக்னோவில் ஏப்ரல் 24 அன்று அரிஜன வகுப்பார் சம்மேளனத்தில் ஒரு தலைவர், ஒரு கட்சி, ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றுபடுங்கள் என அறைகூவல் விடுத்தார். சமுதாய முன்னேற்றம் அனைத்துக்கும் திறவுகோல் அரசியல் அதிகாரமே. தாழ்த்தப்பட்டோரின் மேன்மைக்கு அவர்கள் இந்த அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். இவர்களுக்கு எதிர்கட்சிகளாக இயங்கும் காங்கிரஸ் கட்சிக்கும், சோசலிஸ்ட் கட்சிக்கும் இடையில் ஒரு மூன்றாவது சக்தியாக இது விளங்க வேண்டும். பிரிட்டிஷ்காரர்கள் நம்மை நட்டாற்றில் விட்டுச் சென்று விட்டனர். நமது வகுப்பினரும் பிளவுபட்டுள்ளனர். நமது அணியிலேயே காட்டிக் கொடுப்போர் பலர் இருந்தனர். எனவே ஒரு பெரும்பலம் கொண்ட ஸ்தாபனத்துடன் ( காங்கிரஸ்) போரிடுவது நமது நலனுக்கு உகந்ததல்ல. சமரசக் கொள்கையை கடைப்பிடித்தோம் - பெருமளவு வெற்றிகளும் பெற்றுள்ளோம். சட்டப்பேரவைகளில், வேலைவாய்ப்புகளில் ஒதுக்கீடு கிடைத்துள்ளது, தனி வாக்காளர் தொகுதி கிடைக்கவில்லை. இதற்காக நாம் வெட்கப்படவேண்டியதில்லை. சிறுபான்மையினருக்கும் அது கிடைக்கவில்லை. காங்கிரசிடம் தகராறு செய்ய இது தருணம் அல்ல. மாறாக சமரசம், ஒத்துழைப்பு மூலமாக நமக்கு வேண்டியதை முடிந்த அளவு பெற்றுக்கொள்ளவேண்டும் என்கிற நிலைப்பாட்டையும் அம்பேத்கர் எடுத்தார் என்பதை இவ்வுரை புலப்படுத்தும். நேரு அமைச்சரவையில் சேர்ந்தது பற்றியும் அவர் விளக்கமளித்தார். என்னை அமைச்சரவையில் சேர எந்தவித நிபந்தனையுமின்றி அழைத்தனர். தாழ்த்தப்பட்டவர்க்கு வெளியிலிருந்து செய்வதைவிட அரசாங்கத்தின் உள்ளிருந்து சிறப்பான சேவை செய்ய முடியும் என கருதியதை அவர் அத்தருணத்தில் விளக்கினார். காங்கிரசில் சேர்வதா அல்லது சோசலிஸ்ட்களுடன் இணைவதா என்கிற கேள்வி எழுந்தது. நாம் மூன்றாவது கட்சி அமைத்து நம் துணையுடன் ஆட்சி என்றால்தான் பேரம்பேச முடியும். அதிகாரத்தையும் பெறமுடியும். பின்தங்கிய வகுப்பினருடன் ஒற்றுமை என்பதையும் அவர் பேசினார். ஆனால் அவ்வகுப்பினர் தயாராக இல்லை என்பதையும் உணர்ந்தவராக இருந்தார். பின் தங்கிய வகுப்பார் ஒன்றுபட்டு அரசியல் கட்சி அமைக்கவேண்டும். அவர்கள் துணிந்து செயல்படவில்லை. அமைப்புரீதியில் ஒன்றுபட்டு செயல்பட்டால் அரசாங்கத்தைக் கைப்பற்றலாம் என்கிற அறிவுரையையும் அவர் கொடுத்தார். ஜனவரி 14 1950 ஜனதா இதழில் பொதுச் சட்டம் கொண்டுவருவதற்கு இந்துச் சட்டமே சரியான முதல்படி என்ற அவரின் குறிப்பை காணமுடிகிறது. இந்துச் சட்டத்தின் சில பிரிவுகளை ஒழுங்குப்படுத்துவதும் திருத்துவதுமே இந்த மசோதாவின் நோக்கம். இந்துக்களின் சமூக வாழ்க்கையும் சமய வாழ்க்கையும் ஒரே விதமான சட்டங்கள் தான் நிர்வகிக்க வேண்டும்.. எந்த அடிப்படையில் சட்ட மசோதா வரையப்பட்டிருக்கிறது என்பதைப் பொருத்தவரை, இந்து சாஸ்திரங்கள், ஸ்மிருதிகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அவை திருத்தப்பட்டுள்ளன. சொத்துரிமைக்கு வகை செய்வது த்யாபாக் முறை. பிரித்தீஸ்வன்யா அடிப்படையில் குழந்தை, தந்தையின் சாதியைப் பெறுகிறது. கெளடில்யா, பராஷாரா ஸ்மிருதிகள் விவாகரத்துக்கு ஆதரவு தருகின்றன. ப்ருஹஸ்பதி ஸ்மிருதி பெண்களுக்கு சொத்துரிமை வழங்குகிறது என்பதையெல்லாம் அவர் தெளிவுபடுத்துகிறார். 1950 மே 2 அன்று அம்பேத்கர் புத்தமதத்தில் சேர்தல் குறித்து ஆற்றிய உரையில் புத்தமத எழுச்சி இந்தியாவில் தொடங்கிவிட்டது என்றார். சோசலிஸ்ட்களும் கம்யூனிஸ்ட்களும் சொல்வதுபோல் மதம் தேவையில்லை என தான் கருதவில்லை. நீதி, தர்ம சாஸ்திரங்களைப் போல மனித குலத்தை எந்த அரசாங்கமும் பாதுகாக்கவோ ஒழுங்குபடுத்தவோ இயலாது என்கிற கருத்தை அம்பேத்கர் எடுத்துரைத்தார். பெளத்தர்களின் உலகத் தோழமை மாநாடு கொழும்பில் 1950 ஜூனில் நடைபெற்றது. ஜுன் 6 அன்று அம்பேத்கர் அதில் உரை நிகழ்த்தினார். இந்தியாவில் மதம் பெற்ற மாறுதல்களை குறிப்பிட்டார். வேதவழி மதம் பிராமணியமாக உருவெடுத்து அதன்பின் இந்து மதமானது. பிராமணர் ஆதிக்கத்தின்போது புத்தமதம் தோன்றியது. வேதவழி எளிது. யாகம் பிரதான பூசை. பசுக்கள் பலி நடந்தது. வேதகால தர்மம் இந்த வகையில் வன்முறைக்கு ஊக்கமளித்தது. யாகங்களை செய்த பிராமணர்கள் வர்ணங்களை உருவாக்கினர். எந்த ஒரு மதத்தின் அடிப்படைக்கொள்கையும் சமுதாயத்தைப் பிரிப்பதாக இருக்குமா? இதை பிராமணர்கள் செய்தனர். ஆனால் புத்தமதம் சமத்துவத்திற்கான சிந்தனை சுதந்திரத்தை சுயவளர்ச்சியை எல்லோருக்கும் வழங்குகிறது. வன்முறையை வெறுத்து ஒதுக்குகிறது. இந்தியாவில் ஜனநாயகமும் சோசலிசபாணி சமுதாயமும் தோன்றுவதற்கு வழிவகுத்தது. இந்தியாவில் புத்த மதம் ஏன் அழிந்தது- இந்து மதம் ஏன் இருக்கிறது என்கிற கேள்விக்கும் அவர் விடை தேடினார். ஒரு மதம் என்னவாக இருந்தபோதும் அதனைப் பாதுகாப்பதற்கு புரோகிதர் வகுப்பு ஒன்று அவசியமாகும். புத்த துறவிகள் குறைந்ததால் அம்மதம் வீழ்ந்தது. இந்து மதத்தில் பிராமணனின் மகன் பிறவியிலேயே புரோகிதன் ஆகிவிடுகிறான். எனவே தனியாக ஒரு புரோகிதர் வகுப்பு மதத்தை காப்பாற்ற தேவையில்லை என்றார் அம்பேத்கர். சங்கர வாதத்திறமையால் புத்த மதம் அழிந்தது என்பதை ஏற்காத அம்பேத்கர் சங்கராச்சாரியாரே புத்த மதம் சேர்ந்தவர்தான். அவரது குருவும் பெளத்தரே என்றார். 1950 டிசம்பர் 26 அன்று பெல்காமில் செட்யூல்ட் சாதிகள் சம்மேளனத்தில் அம்பேத்கர் உரையாற்றினார். இந்து சட்டம் குறித்து பிரபல பெண் தலைவர் எவரும் அக்கறை காட்டவில்லை என விமர்சித்தார். ஸ்மிருதிகள் பல உரிமைகளை பெண்களுக்கு வழங்கியுள்ளன. இவற்றிற்கு ஏற்ற வகையில்தான் மசோதாவை நான் வரைந்துள்ளேன். சுதந்திரம் என்பது செல்வத்தைப் பொருத்திருக்கிறது. தனது சுதந்திரத்தை தக்க வைத்துக்கொள்வதற்கு தனது சொத்துக்களையும் உரிமைகளையும் ஒரு பெண் தக்க வைத்துக்கொள்ளவேண்டும். 1951 அக்டோபர் 21 அன்று ஜலந்தரில் மாணவர்கள் மத்தியில் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சிறப்பு குறித்து அம்பேத்கர் உரை ஒன்றை தந்தார். நேரு அமைச்சரவையிலிருந்து அவர் தன் விலகலை கொடுத்துவிட்டு வந்த நேரமது. அரசியல் நிர்ணய சபையில் இந்தியாவிற்கு எந்த முறை அமெரிக்க முறையா- பிரிட்டிஷ்முறையா என்ற விவாதம் வந்தது. ருஷ்ய முறை தேவை என கம்யூனிஸ்ட்கள் பேசினர். அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக கூட சோசலிஸ்ட்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாடாளுமன்ற அரசாங்கம் என்பது பரம்பரை ஆட்சியை மறுக்கிறது. வாரிசு ஆட்சிக்கு அங்கு இடமே இல்லை. எந்த தனிநபரும் எல்லாம் தெரியும் என சட்டம் இயற்ற முடியாது. நாடாளுமன்ற விவாதம் ஆலோசனை அடிப்படையில்தான் முடியும். நாடாளுமன்ற ஆட்சி முறை இரு தூண்களில் நிற்கிறது. எதிர்கட்சி, சுதந்திரமான நேர்மையான தேர்தல்கள் என்பவையே அவை. இந்த நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகம் தோற்றுப்போனால் அதன் விளைவாக கலகம், அராஜகம், கம்யூனிசம் தோன்றும். வாரிசு வழி அதிகாரத்தை மக்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை ஆட்சியில் உள்ளவர் புரிந்து கொள்ளவில்லை எனில் இந்த நாடு அழிந்தே போகும். கம்யூனிசம் இங்கும் வரலாம். ருஷ்யா நமது நாட்டில் மேலாண்மை பெற்று தனிமனித சுதந்திரத்தை ஒழித்துவிடும் என்கிற எச்சரிக்கையை அவர் விடுத்தார். கலகம் அராஜகம் என்பதுடன் கம்யூனிசம் என இணையாக அவர் பேசினார். 1951 நவம்பர் 7 அன்று லக்னோ பல்கலை மாணவர்கள் மத்தியில் அம்பேத்கர் உரை நிகழ்த்தினார். சமத்துவ அந்தஸ்து பெறுவதில் தாழ்த்தப்பட்டவர்கள் தோல்வியுற்றால் அவர்கள் கம்யூனிசம் என்கிற முறையை விரும்பக்கூடும்; அப்போது நாட்டின் கதி மோசமாகும் என எச்சரிக்கையை விடுத்தார். அன்று ருஷ்யாவின் அக்டோபர் புரட்சி தினம் என்பதை நாம் அறிவோம். அம்பேத்கர் அவ்வப்போது வாய்ப்பு கிடைத்த இடத்தில் எல்லாம் சோவியத்வகைப்பட்ட கம்யூனிசம் குறித்த கண்டனங்களை வெளியிட்டு வந்துள்ளதை நாம் காணமுடியும். அப்போது காஷ்மீர் குறித்தும் அவர் பேசினார். அங்கு அரசு என்பது இந்து, பெளத்த, முஸ்லீம்களின் கலப்பு வகுப்பாகும். அய் நா வின் சர்வஜன வாக்கெடுப்பு நடந்து முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு வாக்களித்தால் மற்ற 20 சத மக்களின் கதி கேள்விக்குரியதாகும் எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து 1951 நவம்பரில் நடந்த கூட்டங்களில் நேரு அமைச்சரவையிலிருந்து தான் விலகியது குறித்தும், காங்கிரசிற்கு தாழ்த்தப்பட்டவர் முன்னேற்றத்தில் பொறுப்போ அக்கறையோ இல்லை என்றும், 10 ஆண்டுகளுக்கு பின்னர் இட ஒதுக்கீடு என்னவாகும் என்பது குறித்தும் அவர் விளக்கம் அளித்து வந்தார். அப்போது சோசலிஸ்ட்களுடன் கூட்டணியில் இருந்தார் அம்பேத்கர். நேருவை அம்பேத்கர் விமர்சித்தாலும் அவர் சூதுவாதற்றவர்- எதார்த்தவாதி- காங்கிரஸ்காரர்களைவிட அவரை நான் நன்கறிவேன் எனவும் குறிப்பிட்டார். காங்கிரசில் வலதுசாரி பிரிவு அவரை கைவிட்டுவிடுவார்கள் - அவரது நிலைமை என்னவாகுமே எனவும் அய்யமுற்றார். சோசலிச கட்சியும் தாழ்த்தப்பட்டவர் சம்மேளனமும் ஜனநாயக சோசலிசத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் சம்த்துவத்திற்காகவும் தேர்தலில் போட்டியிடுவதாக அம்பேத்கர் உரை நிகழ்த்தினார். வலுவான எதிர்கட்சியாகவாவது இருப்போம் என்றார். எண்ணிக்கையைவிட எதிர்கட்சியின் தரம் முக்கியம் என்ற அவர் எந்த ஒரு கட்சிக்கும் வரம்பற்ற அதிகாரம் வந்துவிட மக்கள் அனுமதிக்கக்கூடாதென்றார். 1951 நவம்பரில் பல தேர்தல் கூட்டங்களில் பிரஜா சோசலிஸ்ட்களுடன் சேர்ந்து அவர் உரை நிகழ்த்தினார். மக்களுக்கு தூய்மையான அரசை தர காங்கிரஸ் தவறிவிட்டது என்ற குற்றசாட்டை எழுப்பி வந்தார். நிர்வாகத்தூய்மை, சட்டம் எவ்வாறு அமுலாகிறது என்பன மிக முக்கியமானவை. இந்திய அரசாங்கத்தில் தன்னால் ஒர் அடிமையாக இருக்கமுடியாதென தன் விமர்சகர்களுக்கு அவர் பதில் தந்தார். அம்பேத்கருக்கு கொலம்பியா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டமளிப்பு விழாவை ஜூன் 5 1952ல் வைத்திருந்தது. இதை அறிந்த சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் தங்களுக்கு கிடைக்கும் சட்டத்துறை டாக்டர் பட்டம் பற்றி மகிழ்ச்சி. அரசியல் சாசனத் தயாரிப்பில் தாங்கள் மகத்தான பணியாற்றினீர்கள் என கடிதம் எழுதி பாராட்டினார். அம்பேத்கர் பயணத்தில் அவரது மருத்துவ சிகிட்சைக்கும் ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. டாலர்கள் போதாமையால் உடன் துணைவியாரை அவர் அழைத்து செல்லமுடியாத நிலையில் இருப்பதாக இல்லஸ்ட்ரேட் வீக்லி ஜூன் 1952ல் செய்தி வெளியிட்டது. 1952 ஜூன் 1 அன்று அவருக்கு நியுயார்க் செல்லும் முன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் இந்திய நலன்களை விட்டுக்கொடுப்பது போல் அமெரிக்காவில் ஏதும் பேசமாட்டேன் என்றார். தன்னை கோபக்காரன் என பலர் சொன்னாலும் ஒருபோதும் நாட்டுத் துரோகியாக இருந்ததில்லை என்றார். இந்தியாவின் நலன்கள் பொருத்தவரையில் நான் மகத்தான காந்திக்கு 200 மைல் முன்னதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜனநாயகம் என்பது இரத்தம் சிந்தாமல் மக்களின் பொருளாதார, சமூக வாழ்க்கையில் புரட்சிகர மாற்றத்தைக் கொண்டுவரும் ஒரு வடிவம் என்பதுதான். இந்த தலைப்பில் நீண்ட உரை ஒன்றை அவர் புனே மாவட்ட சட்ட நூலகம் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் வழங்கினார். ஜனநாயகம் வெற்றிபெற தேவைப்படும் நிபந்தனைகள் குறித்து நீண்ட விளக்கமாகவும் அவ்வுரை அமைந்தது. முதல் நிபந்தனை சமுதாயத்தில் ஒடுக்கப்படும் வர்க்கம் என ஏதும்- ஏற்றத்தாழ்வுகள் ஏதும் இருக்கக்கூடாது. அனைத்து சுமைகளையும் சுமக்கும் வர்க்கம் என்பதும் கூடாது. இரண்டாவது தேவை எதிர்கட்சிகள் இருப்பதாகும். அரசாங்கம் தான் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் தனது கட்சியைச் சாராதவர்களுக்கு நியாயப்படுத்திக் காட்டவேண்டும். துரதிருஷ்டவசமாக நமது நாட்டில் எல்லா செய்திப் பத்திரிகைகளும் விளம்பர வருவாய்க்காக எதிர்கட்சிகளைவிட அரசாங்கத்துக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன. மூன்றாவது நிபந்தனை சட்டத்தை நடைமுறைப்படுத்துவது - நிர்வாகத்தில் சமத்துவ போக்கை கடைபிடிப்பது. நான்காவது நிபந்தனை அரசியல் சாசன நீதிமுறையைக் கடைப்பிடிப்பதாகும். ஜனநாயகத்தின் பெயரால் சிறுபான்மையினர் மீது பெரும்பான்மையினரின் கொடுங்கோன்மை இருக்கக்கூடாதென்பதும் மற்றொரு அம்சம். அடுத்த அம்சம் சமுதாயத்தில் தார்மிக ஒழுங்கு நிலவுவதாகும். அறவியலின்றி அரசியல் செயல்படமுடியும். ஆனால் நமது அறிஞர்கள் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த தார்மீக ஒழுங்கு என்பதை ஹரால்ட் லாஸ்கிதான் சுட்டிக்காட்டினார். தார்மீக ஒழுங்கு இல்லையேல் ஜனநாயகம் உடைந்து சிதறிப்போகும். இறுதியாக என அவர் சுட்டிக்காட்டியது ஜனநாயகத்துக்கு பொதுஜன மனசாச்சாட்சி தேவை என்பதைத்தான். 1952 டிசம்பர் 24 ஆம் நாள் அன்று கோலாப்பூர் கல்லூரி ஒன்றில் அறிவுதான் வாழ்க்கையின் அடித்தளம் என்றார் அம்பேத்கர். பம்பாயில் மே 27 1953 உரை ஒன்றில் புத்தமதத்தை பலப்படுத்தப்போவது பற்றி அவர் பேசினார். சாதி வர்க்கங்கள் அற்ற சமுதாயம் தோற்றுவிக்கப்பட்டாலன்றி நாடு முன்னேறாது எனவும் அவர் குறிப்பிட்டார். நவம்பர் 16 1953 அன்று அம்பேத்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவுரங்கபாத் மாவட்ட நில சத்தியாக்கிரகத்தை கைவிட அறிவுரை தந்தார். 1700 சத்தியாகிரகிகளில் 1100 பேரை ஹைதராபத் அரசாங்கம் விடுவித்தது கனிவான நடவடிக்கை. மரங்களை வெட்டியது தவறு என வருந்துவதாகவும் குறிப்பிட்டார். சத்தியாகிரகம் அனைத்திந்திய அளவில் அவசியம் என்றால் அதை செய்வோம் என்கிற நம்பிக்கையை தந்தார். என் வாழ்க்கை தத்துவம் என்பது குறித்து அம்பேத்கர் சுருக்கமாக பேசியுள்ளார். அதில் பகவத்கீதை சொல்லும் இந்து சமூகச் சித்தாந்தத்தை நிராகரிப்பதாகவும் - சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்கிற மூன்று வார்த்தைகளில் தன் சமூக சித்தாந்தத்தை சொல்லவும் முடியுமென்றார். எனது சித்தாந்தம் அரசியல் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல- மதத்தை அடிப்படையாக கொண்டதே. இவற்றை என் குரு புத்தரின் போதனைகளிலிருந்து பெற்றுள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டார். சட்டம் சமய சார்பற்றது- எவரும் அதை மீறலாம். ஆனால் சகோதரத்துவம் அல்லது சமயம் புனிதமானது. அதற்கு மதிப்பு தரவேண்டும். இந்தியர்களை இரண்டு வேறுபட்ட சித்தாந்தங்கள் ஆட்கொண்டுள்ளன. அரசியல் சாசன முகப்புரை சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் நிறைந்த வாழ்க்கையை உறுதி செய்கிறது. மதமோ இதை அவர்களுக்கு மறுக்கிறது என்ற உண்மையை உணர அவர் வேண்டிக்கொண்டார். 1954 அக்டோபர் 3 அன்று அகில இந்திய வானொலி இவ்வுரையை ஒலிபரப்பியது. அம்பேத்கருக்கு வைரவிழாக் கொண்டாட்டம் ஒன்றை பம்பாயில் அக்டோபர் 28 1954ல் அவரது அன்பர்கள் சேர்ந்து நடத்தினர். அவ்விழாவில் பங்கேற்று அம்பேத்கர் பேசும்போது தன் பிறந்த தேதியை தந்தை சரியாக கணித்து வைக்கவில்லை. என் வயது அறுபதுக்கு மேலோ அல்லது கீழோ இருக்கக்கூடும் என்றும் தன்னை பிரசவிக்கும்போது தாயார் தாங்கமுடியாத வலியால் அவதிப்பட்டதையும் நினைவு கூர்ந்தார். அந்த சமயத்தில் தன்னைப்பற்றி இவ்வாறு அவர் குறிப்பிட்டார். “கெளதமபுத்தர், கபீர், மகாத்மா பூலே ஆகியோரின் பக்தன்- கல்வி சுயமரியாதை, நற்குணம் ஆகியவற்றை போற்றுபவன் - என்னிடம் கெட்ட பழக்கங்கள் எதுவும் கிடையாது. படிப்பில் எனக்கு உயிர்.” 1954 டிசம்பர் 4 அன்று ரங்கூனில் சர்வதேச பெளத்த மாநாட்டில் அவர் பங்கேற்றார். அங்கு ஆற்றிய உரையில் அவர் முன்வைத்த அம்சங்கள்: பெளத்தம் இந்தியாவுக்கு அந்நியமான மதமல்ல அதன் சித்தாந்தம் சமத்துவமாகும் பெளத்தம் பகுத்தறிவு சார்ந்த மதம். அங்கு மூடநம்பிக்கைகளுக்கு இடமில்லை. புத்த்மதம் இந்தியாவிலிருந்து மறைந்து போனதற்கு காரணங்கள் வேறுபட்டவை. அது பிராமணர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டது. பிராமணியத்தின் எழுச்சி இந்தியாவில் புத்தமதம் நசுக்கப்படுவதற்கு வழிவகுத்தது என்றால், இந்திய நாட்டின் மீது முஸ்லீம் படையெடுப்பு புத்தமதம் அழிவதற்கு இட்டுச் சென்றது. புத்த விகார்களை அழித்து அவர்கள் பெளத்த பிட்சுகளைக் கொன்று குவித்தனர். அதேநேரத்தில் புத்தமதத்துக்கு இஸ்லாமால் ஆபத்து ஏற்படவில்லை. பிராமணியத்தால்தான் ஏற்பட்டது. புதுடில்லி மகாபோதி கழக கூட்டத்தில் பிப்ரவரி 5 1956ல் மிக முக்கிய பிரச்னை ஒன்றை அம்பேத்கர் எழுப்புகிறார். கம்யூனிசத்திற்கு பதில் அளிக்கமுடியாத எந்த மதமும் நிலைத்திருக்க முடியாது. கம்யூனிசத்திற்கு மாற்றாக இருக்கும் தகுதிபடைத்த ஒரே மதம் புத்தமதம்தான். மறு பிறப்பில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு என்பதையும் அம்பேத்கர் அப்போது குறிப்பிட்டார். பிரக்ஞை, கருணை, சமதாவை போதிப்பதால் புத்தமதத்தை தான் விரும்புவதாகவும் அவர் விளக்கம் சென்றது. “என்னைப் பொறுத்தவரையில் புத்த மதம் மார்க்ஸ்க்கும் கம்யூனிசத்திற்கும் மாபெரும் சவால் என்பேன். ரஷ்ய பாணி கம்யூனிசம் இரத்தக் களறியான ஒரு புரட்சியின் மூலம் அதனைச் சாதிக்க முயல்கிறது. பெளத்த கம்யூனிசமோ இரத்தம் சிந்தாத மனப்புரட்சியின் வாயிலாக அதனைக் கொண்டு வருகிறது. பெளத்த சங்கம் ஒரு கம்யூனிச அமைப்புதான். அதில் தனிச் சொத்துடைமை இல்லை. அது வன்முறை மூலம் சாதிக்கப்படவில்லை மனமாற்றத்தின் மூலம் சாதிக்கப்பட்டது. ரஷ்யர்கள் என்றும் செய்யமுடியாத பணியைச் செய்து முடித்திருக்கிறார்களென்பதில அய்யமில்லை. தொடர்ந்து மக்களுக்கு ஏன் சுதந்திரம் அளிக்கவில்லை.” இந்த கேள்விகளையும் விளக்கத்தையும் அவர் தென்கிழக்கு நாடுகளின் மக்களுக்காக தருகிறார். அவர்களை எச்சரித்து ரஷ்யவலையில் விழவேண்டாம் என் அறிவுறுத்துவதற்காக சொல்கிறார். இந்த கருத்துக்களை அவர் அறிக்கை ஒன்றின் மூலம் மே 12, 1956ல் தெரிவித்துள்ளார். ஜூன் 2, 1956 தேதியிட்ட எழுத்தொன்றில் அவர் சாவர்க்கர் பற்றி குறிப்பிட்டுவிட்டு இந்துமதம் மற்றும் புத்தமதம் இடையிலான அடிப்படையான வேறுபாடுகளை விளக்குகிறார். இந்து வேத சாஸ்திரங்களை நன்கு அறிந்தவன் - என் மக்களை மீட்பவன் என்கிறார். அப்போது அவர் கம்யூனிஸ்ட்களுக்கு புத்தமதம் பற்றி நன்கு தெரிந்து கொள்ளுங்கள் என்கிற வேண்டுகோளையும் வைத்தார். அப்படி தெரிந்துகொள்ளும்போது மனிதகுலத்தை பீடித்திருக்கும் அவலநிலைகளை எவ்வாறு அகற்றுவது என்பதை கம்யூனிஸ்ட்கள் புரிந்துகொள்ளமுடியும் என்றார். வாய்ஸ் ஆப் அமெரிக்காவில் மே 20 1956ல் அம்பேத்கர் ஜனநாயகம் குறித்து அற்புதமான விளக்கத்தை தந்தார். நாடாளுமன்றம், குடியரசு என்பதுடன் ஜனநாயகம் என்பது மாறுபட்டது. அது அரசாங்க வடிவத்திற்கு அப்பாற்பட்டது. ஜனநாயகத்தின் வேர்களை சமூக உறவுமுறையிலும், சமுதாயத்தின் அடித்தளமாக விளங்கும் மக்களது ஒன்றிணைந்த வாழ்க்கைமுறையிலும்தான் தேடிக்காணவேண்டும். எங்கெல்லாம் சமூக வேறுபாடுகள் மலிந்து கிடக்கிறதோ அங்கெல்லாம் பொருத்திக்கொள்ளவேண்டிய உலகளாவிய வரையறை என்றே இதைக்கருத தோன்றுகிறது. இந்திய சமுதாயம் வெறும் தனிநபர்களைக் கொள்ளாமல் ஜாதிகளைக் கொண்டுள்ளது. தம்முள் பகிர்ந்து கொள்வதற்கான பொது அனுபவத்தை, பந்தம் பாசம், பரிவு எனும் பிணைப்பை பெற்றிருக்கவில்லை என இந்திய சமுதாயம் பற்றி அவர் தரும் விளக்கம் செவ்வியல்பட்ட ஒன்றே. தேர்தல், தொழில் என எல்லாமே உள் நுழைந்து பார்த்தால் சாதி தெரிவதாக இருக்கிறது என்றார் அம்பேத்கர். சாதியின் விசேட அம்சம் அதன் படிநிலையிலான ஏற்றத்தாழ்வு. ஒன்றின்மேல் ஒன்று ஏறி நிற்பவை அவை. சாதி ஏறுமுகமாக காழ்ப்பாகவும் இறங்குமுகமான வெறுப்பாகவும் இருக்கிறது. சாதியும் வர்க்கமும் ஓரம்சத்தில் வேறுபடுகின்றன. சாதியைப் போல் வர்க்கமுறையில் முற்றிலும் ஓரங்கட்டும் போக்கு இல்லை. குறிப்பிட்ட சாதி குறிப்பிட்ட வேலையைத்தான் எனும்போது அங்கு ஜனநாயகத்தின் வேர் வெட்டப்படுகிறது. இவ்விவாதத்தில் சாதிச் சேற்றில் மூழ்கிப்போயுள்ள இந்திய சமுதாயம் தனது முடிவான இலட்சியத்தை எட்ட முடியுமா? சாதி அமைப்பு முறையில் நல்லிணக்கமான சமூக அமைப்பு இருக்கமுடியுமா? என்கிற கேள்விகளை அம்பேத்கர் தொடுக்கிறார். கல்வி சாதியை ஒழித்துக்கட்டுமா- முடியும் முடியாது என்கிற இரு பதில்களையும் தந்து அம்பேத்கர் விளக்குகிறார். கல்வி கற்ற பிராமணர் சாதிக்கு எதிராக குரல் எழுப்பாததை அவர் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் கீழ்த்தட்டு மக்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும் . அவர்களுக்கு கல்வி வசதி செய்து தந்தால் சாதிமுறை நொறுங்கும் என அம்பேத்கர் மதிப்பிட்டார். அக்டோபர் 14 1956ல் நாகபுரியில் புத்தமதம் தழுவுதல் குறித்த அறிவிப்பையும் வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சிக்காக இந்திய ரயில்வே சிறப்பு ரயில் ஒன்றை பம்பாயிலிருந்து நாக்பூருக்கு விட்டது. அம்பேத்கர் மதம் மாறியது தொடர்பான தன் உரையை அக்டோபர் 15 1956ல் தந்தார். ஆர் எஸ் எஸ் தலைமையிடமான நாக்பூரை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்பதற்கு உரிய வரலாற்றுரீதியான பதிலை அம்பேத்கர் இவ்வுரையில் தந்தார். நாகர் எனும் தொன்மை பற்றி விளக்கினார். மனிதகுலம் முன்னேற மதம் முற்றிலும் இன்றிமையாதது, மார்க்சைப் படித்த பிறகு சமய மறுப்பாளர் குழு உருவாயிற்று. மதம் பயனற்றது என்பது மார்க்ஸ் கருத்து . பொருளாதார மேம்பாடு மிக முக்கியம். ஆனால் காளைக்கும் மனிதனுக்கும் வேறுபாடு இருக்கிறது. மனிதனுக்கு உடலுடன் மனம் ஒன்றும் இருக்கிறது. அது பண்படவேண்டும். உணவைத்தவிர பண்பட்ட மனதிற்கு வேறு உறவில்லை எனப் பேசும் நாட்டொடு, மக்களோடு எத்தகைய சம்பந்தமும் எனக்கு வேண்டாம். மனித உறவிற்கு ஆரோக்கிய உடலுடன் பண்பட்ட மனமும் அவசியம் என்றார் அம்பேத்கர். இங்கு அவர் நாடு என்று குறிப்பால் எந்த நாட்டை உணர்த்துகிறார் என அறியமுடியும். மதம் ஏழைகளுக்கு ஒடுக்கப்பட்டவர்களுக்கு அவசியமானது. மனிதன் நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டுதான் வாழ்ந்து வருகிறான். மதம் நம்பிக்கையை அளிக்கிறது. புத்த மதம் மாறுபட்டது . ஆண்டவனுக்கோ ஆன்மாவுக்கோ இடமில்லை. மனிதனை துயரத்திலிருந்து விடுவிப்பதே அதன் பணி. புத்தர் கூறியவற்றிலிருந்து மாறுபட்ட எதையும் கார்ல் மார்க்ஸ் கூறிவிடவில்லை. புத்தர் குறுக்கும் நெடுக்குமாக சுற்றி வளைத்து எதையும் சொல்லவில்லை என அம்பேத்கர் விளக்கம் அவ்வுரையில் சென்றது. ஆனால் அம்பேத்கரிடமிருந்து மார்க்ஸ் என்னவெல்லாம் கூறினார்- அது புத்தர் சொன்னதைவிட எவ்விதத்தில் குறைந்த அறிவோ- நடைமுறை சாத்தியமோ இல்லாமல் இருந்தது என்பதற்கான ஆய்வுகளை நம்மால் பெறமுடியவில்லை. வாழ்நாள் அனுமதித்திருந்தால் அவர் செய்திருக்கக்கூடும் என்பது ஆறுதல் செய்தியாக இருக்கலாமே தவிர நிரூபண ஆவணமாக இருக்கப்போவதில்லை. காட்மண்டில் புத்த மாநாட்டில் நவம்பர் 26 1956ல் ‘புத்தமதத்தில் அகிம்சை’ எனப் பேசும்படிதான் உலக புத்தமத கவுன்சில் தலைவர் மலால் கேட்டுக்கொண்டிருந்தார். அம்பேத்கரும் இசைவை தந்தார். மாநாட்டில் பிரதிநிதிகள் புத்தரா காரல் மார்க்சா என பேச வலியுறுத்தினர். நேபாள மன்னர் அம்மாநாட்டில் பங்கேற்றார். அய்ரோப்பா ஆசிய இளைஞர்கள் வழிபடவேண்டிய தீர்க்கதரிசி மார்க்ஸ் என நினைக்கின்றனர். பிக்குகள் இதை கவனத்தில் கொண்டு மார்க்சுடன் ஒப்பிடும் அளவிற்கு தங்களை சீர்திருத்திக்கொள்ளவேண்டும். அப்போதுதான் பெளத்தம் அதனுடன் போட்டியிடமுடியும் என மிக துணிச்சலான் கருத்தை மதத்துறவிகளுக்கு அவர் வழங்கினார். பெளத்தத்திற்கும் கம்யூனிசத்திற்கும் இடையே இலட்சிய ஒற்றுமைகள் என்ன- வேற்றுமைகள் என்ன எது பாதை என பேசப்போவதாக அம்பேத்கர் சொல்லி உரையைத் தருகிறார். வாழ்க்கையில் குறுக்கு வழியில் செல்லாதீர்கள்- சுற்றிவளைத்து செல்லும் பாதையில் மெதுவாக செல்வது ஆபத்தில்லாதது என்கிற அறிவுரையையும் அவர் வழங்கினார். கம்யூனிச சித்தாந்தம் என்பது என்ன? ஏழைகள் சொத்துள்ள செல்வந்தர்களால் சுரண்டப்படுகிறார்கள். எனவே குறிப்பிட்ட வர்க்கம் துயரத்திலிருந்து விடுபட தனியார் சொத்துரிமையை ஒழித்துக்கட்டுவது ஒன்றுதான் வழி என மார்க்ஸ் தீர்வை முன்வைக்கிறார். உபரிமதிப்பை உற்பத்தி செய்யும் தொழிலாளியிடமிருந்து முதலாளி உடைமையாளன் அபகரித்துக்கொள்கிறான். இந்த நிலையை மாற்ற மார்க்ஸ் முன்வைப்பது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம். அதாவது அரசாங்கம் சுரண்டும் வர்க்கங்களால் நிர்வகிக்கப்படக்கூடாதென்பது . மார்க்ஸ் சொன்னதையே 2000 ஆண்டுகளுக்கு முன்னர் புத்தர் எவ்வாறு சொன்னார் என்பதை அம்பேத்கர் விளக்கினார். புத்தர் சுரண்டல் என்று சொல்லவில்லை. உலகில் துக்கம் இருக்கிறது. வறுமை எனும் பொருளிலும் பெளத்த நூல்கள் அதை பேசியுள்ளன. எனவே அடித்தளம் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. அதற்காக மார்க்சிடம் போகவேண்டியதில்லை. புத்தரின் ‘தர்மசக்கர பரவர்த்தன் சுத்தம்’ படித்தால் இதில் தெளிவு பெறமுடியும். புத்தர் தமது மதத்திற்கான அடித்தளத்தை கடவுள் ஆன்மா மீது இடவில்லை. மக்களின் துயர் நீக்கம் என்பதே அவரின் தலையாய பிரச்னை. மார்க்ஸ் சொத்து பற்றி பேசியதை அறிவோம். துறவி எவரும் சங்க உறுப்பினர் எவரும் சொத்து வைத்துக்கொள்ளக்கூடாதென்பதை புத்தம் சொல்கிறது. தனியார் சொத்துரிமை கூடாது எனும் மார்க்ஸ் சொன்னது விதியாக புத்தரின் தத்துவத்தில் இடம் பெற்றுள்ளது. கம்யூனிஸ்ட்கள் பகைவர்களை கொல்வது எனும் வன்முறை பாதையை சொல்கின்றனர். ஆனால் புத்தம் கடைபிடிக்கும் வழி ஒழுக்க போதனையும் அன்புமாகும். புத்தரின் வழி மனசோர்வூட்டும் எனலாம். நீண்டவழி ஆனாலும் சத்தியமான வழி என்பதில் எனக்கு சந்தேகமில்லை கம்யூனிஸ்ட்களிடம் மக்களை ஆள பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் ஏன் எனக் கேட்டால் இது இடைக்கால முறை என்கின்றனர், எத்தனை ஆண்டுகள் 50 இருக்கலாமா என்றால் பதில் இல்லை. அரசு தானாக மறைந்துவிடும் என அரைத்த மாவை அரைப்பது போல் பதில் சொல்கின்றனர். அது மறையும்போது எம்மாதிரி அரசாங்கம் என்றால் அதற்கும் அவர்கள் பதில் சொல்வதில்லை. ஆனால் புத்தர் வழி மனித மனம் மாற்றம் குறித்த வழி. மனம் மாற்றப்பட்ட வழியில் இடர்ப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. " நான் மார்க்சையும் கம்யூனிசத்தையும் பற்றி ஆராய்வதில் நிறைய நேரம் செலவிட்டுள்ளேன். அதே சமயம் புத்தரின் தம்மத்திலும் ஆழமாக ஈடுபட்டுள்ளேன். இரண்டையும் ஆய்வு செய்ததில் புத்தர் பரிகாரம்தான் பாதுகாப்பானது . கம்யூனிஸ்ட்களின் வெற்றியில் எவரும் மயங்கிவிடவேண்டாம். புத்தரைப் போல் விழிப்படைந்தால் அன்பு நீதி நல்லெண்ணம் எனும் வழிமுறைகள் மூலம் சாதனையை ஏற்படுத்த முடியும்" என்பதாக அவ்வுரை சென்றது. இவ்வுரைதான் அவரின் புத்தரா மார்க்ஸா என பலராலும் பேசப்படுகிற உரையாக அமைந்தது. 3 Annihilation of caste சாதி ஒழிப்பு எனும் ஆற்றப்படமுடியாமல் போன உரையில் (பின் புத்தகமாக வந்தது) அம்பேத்கர் அரசியல் சீர்திருத்தம் சமூக சீர்திருத்தத்துக்கு முன்னோடியாக இருக்க முடியாது என்றார். அரசியல் சாசனத்தை இயற்றுபவர்கள் சமூக சக்திகளைக் கணக்கில் கொள்ளவேண்டும். இதை மார்க்சின் நண்பர் பெர்டிணாண்ட் லசால் ஏற்றுக்கொண்டு 1862ல் பேசினார். எனது கருத்தின்படி அரசியல் சாசனமானது சமூக நிறுவனங்களைக் கணக்கில் கொள்ளவேண்டும் என்பதில்தான் அதன் முக்கியத்துவம் இருக்கிறது. சமுதாய சீர்திருத்தத்தை அலட்சியப்படுத்தியதன் விளைவே வகுப்புவாரி இடஒதுக்கீடு என்றார். ரோம் நாட்டின் அனுபவத்தை எடுத்துச்சொல்லி அம்பேத்கர் மிக முக்கிய விடயத்தை எடுத்து வைக்கிறார். அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்குகிற போது நம் நாட்டில் நிலவும் சமுதாய அமைப்பில் இருந்து எழுகிற பிரச்னையை அசட்டை செய்துவிட்டு ஒரு அரசியல் சாசனத்தை உருவாக்கிவிடமுடியாது. இதை எழுதிய 13 ஆண்டுகளுக்கு பின்னர் 1949ல் அவரே அரசியல் அமைப்பு சட்ட உருவாக்கப்பணியில் தலைமையேற்று இதை அமுலாக்கவும் செய்தார். இந்த உரையில் அவர் சோசலிஸ்ட்கள் பற்றியும் பல கேள்விகளை எழுப்பி தன் புரிதலைத் தருகிறார். இந்தியாவில் சோசலிஸ்ட்கள் அய்ரோப்பாவை பின்பற்றுகின்றனர். அதை இந்திய நிலைகளுக்கு பொருத்திட எண்ணுகிறார்கள். மனிதனை பொருளாதார ஜந்து என்றும் அவனது செயல் மற்றும் அபிலாஷைகள் பொருளாதார நிலைகளால் கட்டுப்படுத்தப்படுபவை என்றும், சொத்து மட்டுமே அதிகாரத்திற்கான மூல ஆதாரம் என்றும் கருதுகின்றனர். அவர்களுக்கு அரசியல், சமூக சீர்திருத்தங்கள் மாயையாக படுகிறது. பொருளாதார சீர்திருத்தமே அடிப்படை எனக் கருதுகின்றனர். பொருளாதார அதிகாரம் மட்டுமே ஒரே அதிகாரம் என்பதை சமூகவியல் ஏற்பதில்லை. இந்தியாவில் சாதாரண மனிதனின்மீது நீதிபதிக்கு உள்ள செல்வாக்கைவிட சந்நியாசிக்கு செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. மதம் அதிகாரத்திற்கான ஓர் ஆதாரம் என்பதை இந்திய வரலாறு நிரூபிப்பதாக அவர் எழுதினார். மதம், சமுதாய அந்தஸ்து, சொத்து ஆகிய எல்லாம் ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் உரிமைகளைக் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்துக்கும் ஆதிக்கத்துக்குமான அடிப்படைகள். இதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலகட்டத்தில் மேலோங்கி மேல் ஆதிக்கம் செலுத்துகின்றன. இது மட்டுமே இந்த அடிப்படைகளுக்கு இடையிலான வேறுபாடு ஆகும். ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில், அதிகாரத்துக்கும் ஆதிக்கத்துக்குமான அடிப்படைகளாக சமுதாயமும் மதமும் இருந்தால் அந்த கட்டத்தில் நாம் மேற்கொள்ளவேண்டிய சீர்திருத்தம் சமுதாய சீர்திருத்தமும் மத சீர்த்திருத்தமுமே ஆகும் என்கிற முடிவிற்கு அம்பேத்கர் நம்மை அழைத்துச் செல்கிறார். இங்கு இந்த இரண்டு அம்சங்களையும் பிரதான முரண்பாடுகளாக அவர் சுட்டிக்காட்டுகிறார் என கம்யூனிஸ்ட்கள் புரிந்துகொள்ளலாம். அவர் சோசலிஸ்ட்களிடம் விடுத்த கேள்வி சமுதாய அமைப்பை முதலில் சீர்திருத்தாமல் நம்மால் பொருளாதார சீர்திருத்தத்தைக் கொண்டு வரமுடியுமா என்பதைத்தான். சோசலிசம் வந்தால் பல்வேறு வகுப்பினரும் சமத்துவமாக நடத்தப்படுவர் என நம்பிவிட்டால் போதுமா என்கிற கேள்வியையும் அவர் முன்வைத்தார். புரட்சியை வெற்றிகரமாக நடத்தியபின் தாங்கள் சமத்துவமாக நடத்தப்படுவோம் என்கிற நம்பிக்கை ஏற்பட்டால்தான் மக்கள் புரட்சியில் சேர்வார்கள். இந்திய பாட்டாளிவர்க்கம் ஏழை பணக்காரன் என்ற வேறுபாட்டைத்தவிர வேறு எதையும் பார்ப்பதில்லையா. சாதி மதம் - கீழ் மேல் பார்ப்பதில்லையா? அதிர்ஷ்டக்காற்று அடித்து சோசலிஸ்ட்கள் அதிகாரத்திற்கு வந்தபின் மேல் கீழ்- தீண்டப்படாதவர் போன்ற தவறான எண்ணங்களை- பிரச்னைகளை சமாளிக்காமல் இந்தியாவில் சோசலிச அரசு தாக்குப்பிடிக்குமா என்கிற சந்தேகத்தையும் அவர் எழுப்பினார். சமூக சீர்திருத்தம் என்பது அடிப்படையானது. இதிலிருந்து தப்பமுடியாதென்றார் அம்பேத்கர். சாதி அரக்கனை ஒழிக்காமல் அரசியல் சீர்த்திருத்தத்தையோ பொருளாதார சீர்திருத்தத்தையோ அடைய முடியாது. தொழிலைப் பிரிப்பது வேறு. தொழிலாளைகளைப் பிரிப்பது வேறு என புரிந்துகொள்ள வேண்டினார். ஒருவர் தனக்கு திறமையும் ஆர்வமும் உள்ள தொழிலை தேர்ந்து கொள்ள தக்க சூழல் வேண்டும். சாதி கோட்பாட்டில் இது மீறப்படுகிறது. அது ஒருவரது வேலையை முன்கூட்டியே நிர்ணயித்துவிடுகிறது. பெற்றோரின் சமூக அந்தஸ்தில் வேலை நிர்ணயக்கப்படுகிறது. பரம்பரையில்லாத தொழில்களுக்கு செல்வதை சாதி அமைப்பு அனுமதிப்பதில்லை. தனிமனிதரின் இயற்கையான ஆற்றல்களையும் இயல்பான விருப்பங்களையும் சமூக விதிகளின் நிர்பந்தத்துக்கு உள்ளாக்குவதே சாதியின் தன்மையாக இருப்பதால், பொருளாதார அமைப்பு என்கிற வகையில் சாதி தீமை தரும் நிறுவனம் என்றார் அம்பேத்கர். பஞ்சாப் பிராமணனுக்கும் சென்னை பிராமணனுக்கும் இடையில் மரபுரீதியான ஒற்றுமை என்ன எனக் கேள்வி எழுப்பிய அம்பேத்கர் சென்னை பிராமணனும், பறையனும் மரபு இனத்தால் ஒரே கூட்டத்தை சார்ந்தவர்களே என விளக்கம் தந்தார். சாதியினால் பொருளாதார மேம்பாடு முடக்கப்பட்டு இந்துக்களை முற்றிலும் சீரழித்து சின்னாபின்னமாக்கியதே சாதி செய்த காரியம் என்கிற முடிவிற்கு அம்பேதகர் வருகிறார். ஒவ்வொரு இந்துவிடம் இருப்பது சாதி உணர்வுதான். இதனால் அவர்களால் சமுகமாகவோ தேசமாகவோ ஆகமுடியவில்லை. இந்துக்கள் பல்வேறு சாதிகளைச் சேர்ந்த கதம்பம் மட்டுமல்ல- தன் சொந்த நலனுக்காக மட்டும் வாழும் பரஸ்பரம் போட்டி மனப்பான்மை கொண்ட கூட்டங்களாகவும் உள்ளனர். சாதியில் எவர் வேண்டுமானாலும் உறுப்பினர் ஆகமுடியாது. புதியவர்களை சாதியில் சேர்த்துக்கொள்ளுமாறு எந்த சாதியையும் நிர்பந்திக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை. சாதி சட்டங்களை மீறுகிறவனை விலக்கி வைக்க அதிகாரம் சாதிக்கு இருக்கிறது. சாதி பிரஷ்டத்திற்கும் மரணதண்டனைக்கும் அதிக வேறுபாடு இல்லை. பொது நலன் என்கிற உணர்ச்சியையே சாதி கொன்று விட்டது. பரோபகார உணர்ச்சியையும் அழித்துவிட்டது. இந்து மதத்தவன் பொது மக்கள் எனக் கருதுவது தன் சாதியினரையே- தன் சாதிக்கு மட்டும் அவன் பொறுப்பாளியாக இருக்கிறான் என்கிற ஆய்வு விமர்சனங்கள் அம்பேத்கரிடமிருந்து வெளிப்பட்டது. இந்த நிலைமைகள் எந்தவித மாற்றமும் இல்லாமல் அப்படியே அதே நிலையில் தொடர்கின்றன என சொல்ல முடியாது என்றாலும் சாதி எனும் மனோபாவத்தில் மாற்றம் ஏற்படவில்லை என்பதே இந்திய சமூக யதார்த்தமாக இன்றும் இருக்கிறது. சகோதரத்துவம் ஜனநாயகத்தின் மற்றொரு பெயர் என பேசிய அம்பேத்கர் அதற்கான குணநலன்களைத் தருகிறார். உன்னத சமூகம் இயக்கத்தன்மை கொண்டு ஒரு பகுதியில் ஏற்படும் மாற்றங்களை பரவிட செய்ய வழிகொண்டதாகவும் இருக்க வேண்டும். தொடர்பிற்கு சுதந்திர வழிகள் வேண்டும். சமூக கலப்பு ஏற்படவேண்டும். இது தான் சகோதரத்துவம் என அம்பேத்கர் விளக்கம் செல்வதை நாம் காணலாம். ஜனநாயகம் சாரத்தில் சக மனிதர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செய்யும் மனப்பாங்கு என்றார் அவர். சமத்துவம் என்பது கற்பனையாக இருந்தாலும் அதைத்தான் வழிகாட்டும் கோட்பாடாக ஏற்கவேண்டும் . மனிதர்கள் சமநிலையில் இல்லாததால் ஏற்றத்தாழ்வுடன் நடத்தப்படவேண்டுமா என்கிற கேள்வி சமத்துவம் பேசுபவர்களுக்கு மிக முக்கியமானது என்றார் அம்பேத்கர். நால்வர்ண அமைப்பு முறையில் மக்களை திரட்டுவது சாத்தியம் அல்ல- தீமையானது என்ற அறிவுரையை அவர் தருகிறார். ராமராஜ்யம் என்பது அவரைப்பொருத்தவரை நால்வருண அமைப்பைக் கொண்ட ராஜ்யம்தான். நால்வருணமுறை மனிதர்களை இழிவுபடுத்தும் முறையும் கூட. ஒரே மதத்தவன் என்கிற உணர்வைவிட சாதிக்காரன் என்கிற சாதி உணர்வு தாழ்வானது என்று கருதச் செய்கிற சக்திகள் இந்து மதத்தில் குறைவு. இந்துக்கள் தங்கள் சமூக அமைப்பை மாற்றினால் ஒழிய முன்னேறவே முடியாது என்ற கருத்திற்கு உறுதியாக வந்தார் அம்பேத்கர். சாதிகளை ஒழிப்பது என்பதற்கு உபசாதிகளை ஒன்றினைப்பது என்பது எதிர்மறை விளவைத்தான் தரும் என்பது அம்பேத்கர் கருத்து. சாதியை தகர்த்தெறிய உண்மையான வழி கலப்புத்திருமணம் என்பதே அவரது வழிகாட்டுதல். சாதி என்பது ஒரு மனோநிலை- எனவே பெளதீகத் தடையை தகர்ப்பது போன்றதல்ல. மனநிலையில் மாறுதலை உருவாக்கவேண்டும். சாஸ்திரங்களை நிராகரித்து அதன் அதிகாரத்தை மறுக்கவேண்டும். இந்து மதம்தான் உங்கள் குறை என்று சொல்லும் துணிச்சல் வேண்டும். வேத சாஸ்திர அதிகாரத்தை ஒழிப்பதன் மூலமே சாதி புனிதம் தெய்வீகம் என்பதை ஒழிக்கமுடியும் என அம்பேத்கர் கருதினார். இங்கு ஒவ்வொரு சாதியும் சாதி ஏணி வரிசையில் தான் மற்றொரு சாதியைவிட மேல்நிலையில் இருப்பதில் ஆறுதல் அடைகிறது. பெருமிதம் கொள்கிறது. உயர்வான சாதிக்கேற்ற உரிமைகள். கீழான சாதி எனில் குறைவான உரிமைகள் என வைக்கப்பட்டுள்ளன. சாதியமைப்புக்கு எதிராக இந்துக்களை தட்டி எழுப்ப காரல்மார்க்சின் கோஷமான ‘பாட்டாளிகளே நீங்கள் இழக்கப்போவது அடிமை சங்கலிதவிர வேறில்லை’ என்பது பயன் தராது என்ற எண்ணம் அம்பேத்கரிடம் வலுவாக இருந்தது. இந்து மதத்தில் செய்யப்படவேண்டிய சீர்திருத்தம் என அவர் பட்டியலிட்டவை: 1. ஒரே புனித நூல். அதற்கு அனைத்து இந்துக்களின் ஏற்பு. 2.வேத சாஸ்திர புராணங்கள் புனிதமானவையோ அதிகாரபூர்வமானவையோ அல்ல எனச் சட்டம் 3. புரோகிதர் முறை ஒழிக்கப்படுவது நலம். சாத்தியமாகாது எனக் கருதினால் பரம்பரை புரோகிதம் என்பது ஒழிக்கப்பட்டு புரோகிதத் தொழிலுக்கு அரசுத்தேர்வு- சான்றிதழ் எனும் சட்டம். 4. சான்றிதழ் பெறாத புரோகிதர் செய்யும் சடங்குகள் செல்லாது. மீறுவது தண்டனைக்குரிய குற்றம் எனச் சட்டம். 5. புரோகிதன் அரசு ஊழியன். அரசு விதிகளுக்கு கட்டுப்பட்டவன் என ஆக்கப்படவேண்டும். புரோகிதர் எண்ணிக்கையும் கட்டுக்குள் இருக்கவேண்டும். மார்க்சியவாதிகள் தங்கள் கட்சி சார்பாக அறிவிக்கும் திட்டங்களில் இப்படியெல்லாம் பேசியிருக்கமாட்டார்கள் என்பதை அக்கட்சிகளின் திட்டங்களை பார்த்தவர்களால் அறியமுடியும். அம்பேத்கர் முன்வைக்கும் திட்டங்களை செய்திட அசாத்திய அரசியல் துணிச்சலும் சாதகமான சூழலும் தேவைப்படும். அதிரடியாக சட்டம் போட்டு செய்து பார்த்தால் பெரும் கொந்தளிப்புகள் ஏதும் வெகுஜனத்திரளிலிருந்து வந்துவிடாது என்றே எண்ணத்தோன்றுகிறது. கட்டாய கலப்பு மணம் என்பது வேண்டுமானால் பல சாதிக்காரர்களிடமிருந்து எதிர்ப்பை சந்திக்கலாம். ஆனால் புரோகிதமுறை சீரமைப்பு என்பதில் பிராமணர்கள் மட்டுமே பாதிப்பை உணரலாம். அரசியல் அமைப்பு சட்ட நிர்ணய சபையில் மேற்கூறிய அவரின் திட்டங்களை முன்வைத்து சட்டம் இயற்றுவதற்காக அம்பேத்கர் நேரிடையாக ஏதும் பேசியது போல் தெரியவில்லை. அவரின் ‘இந்து கோடு’ மசோதாவையே நிறைவேற்ற முடியாமல் அவர் தன் அமைச்சர் பதவியிலிருந்து நேரு காலத்தில் விலகினார் என்பதையும் சேர்த்து நாம் மதிப்பிடவேண்டியுள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதுடன் இம்முழக்கம் நின்று போய் உள்ளது. அனைத்து சாதியினரும் அனைத்து சாதியினருக்கும் இந்து மத புரோகிதராக இருக்கலாம் என்பதோ, அது அரசு வேலையாக இருக்க வேண்டும் என்பதோ அரசியல் களத்தில் தொடர் கோரிக்கைகளாகக் கூட எழுப்பப்படவில்லை. 4 இந்து இந்தி இந்தியா எனும் புத்தகத்தில் தோழர் எஸ் வி ராஜதுரை 10 வது அத்தியாயமாக அம்பேத்கர் குறித்து 50 பக்கங்கள் எழுதியுள்ளார். அம்பேத்கர் சோசலிசம் தொடர்பாக எஸ் வி ஆர் தரும் சித்திரத்தை கீழ்கண்ட வகையில் தொகுத்துக்கொள்ளலாம். அம்பேத்கர் அரசு சோசலிசத்தை ஆதரித்தவர். ருஷ்யா- சீன ஆட்சிமுறைகளை விமர்சித்தவர்- ஜனநாயகமும் சோசலிசமும் பிரிக்க முடியாதவை என்றவர். சியாட்டோ ஒப்பந்தங்களை பாராட்டும் அளவிற்கு சென்றவர் அம்பேத்கரின் தாராளவாத சிந்தனைகளை பூர்ஷ்வா தாராளவாத சிந்தனையுடன் ஒப்பிடக்கூடாது. தனிமனிதர்களுக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரம் என்பதை அவர் ஏற்கவில்லை. அம்பேத்கர் 1930 களில் சாதி ஒழிப்பு திட்டத்தை உள்ளடக்கிய இடதுசாரி சித்தாந்தத்தை உருவாக்கி அரசியல் வடிவம் கொடுத்தார்- வெற்றி பெறமுடியவில்லை. அம்பேத்கர் காங்கிரசை பூர்ஷ்வா பார்ப்பனர் கட்சியாகவே பார்த்தார். தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி வாக்காளர் தொகுதி, தனிக்கிராமங்களை அவர் வற்புறுத்தினார். இந்திய சமூகம் இந்து முஸ்லீம் கூட்டமைப்பு என்கிற கருத்தே காந்தி, நேரு, பொதுவுடையாளர்களிடம் இருந்தது. சாதி, மொழி, தேசிய இன அடையாளங்கள் தீவிர கேள்விக்கு உள்ளாகவில்லை. பொதுவுடைமைக்காரர்கள் தங்கள் திட்டத்தில் சாதி ஒழிப்பை சேர்த்திருக்கவில்லை. மாநிலங்களில் ஆதிக்க சாதியினர் இழைக்கும் கொடுமையிலிருந்து தாழ்த்தப்பட்டவர்க்கு பாதுகாப்பு அளிக்க வலுவான மத்திய அரசாங்கம் தேவை என அம்பேத்கர் கருதினார். நிலம் கூட்டுடையாக்கப்படவேண்டும் என்ற அவர் சிறு உழவர்களின் நலன் பாதுகாக்கப்படுவதன் தேவையை உணரவில்லை. தனி சொத்துரிமை என்பதற்கான அரசியல் சட்டம் விதி 31 யை அவர் எதிர்த்தார்- நேரு, படேல், பந்த் ஆகியவர்களின் உடன்பாட்டின் விளவு அது என்றார். புத்தரையும் மார்க்சையும் ஒப்பிட்டு புத்தரே ஏற்புக்குரியவர் என்றார். கம்யூனிஸ்ட்களின் தொழிற்சங்க நடைமுறைகளை விமர்சிப்பவராக இருந்தார். வன்முறை எதிர்ப்பு என்பதை அவர் உத்தியாகப் பார்த்தார். காந்தியின் அகிம்சை போன்றதல்ல அது.1938ல் பம்பாயில் தொழிற்தராறு சட்டம் வந்தபோது கடுமையாக எதிர்த்தார். வேலை நிறுத்தம் ஒருவகைப்பட்ட தெய்வீக உரிமை என்றார். பார்ப்பனியம் என்பதை சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மறுப்பு என்கிற பொருளில் அம்பேத்கர் பார்த்தார். பார்ப்பனியம் எல்லா வகுப்புகளிலும் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. பொருளாதார வாழ்க்கையை பாதிக்கும் அளவு வலிமையாக இருக்கிறது. வர்க்கம் என்பதுடன் சாதி குறித்தும் அதிகம் பேசினார் அம்பேத்கர். மார்க்சியர் பேசிய அடித்தளம்- மேலடுக்கு ஆகிய கருத்தாக்கங்களுக்கு புதிய பொருளை அம்பேத்கர் வழங்கினார். மரபு மார்க்சியர்களைப் போல அடித்தளத்திற்கு அவர் முதன்மை வழங்கவில்லை. சித்தாந்த மேலடுக்கிற்கு முதன்மை கொடுத்தார். சாதி எதிர்ப்பு போராட்டத்தை ஜனநாயக, முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிச போராட்டமாக அவர் வரையறுத்தார். சாதி எதிர்ப்புப் போராட்டங்களை பொருளாதார சுரண்டலுக்கு எதிரான போராட்டமாக வரையறுக்கவும், மாற்று பொருளாதார சிந்தனையுடன் சாதி எதிர்ப்புக் கொள்கைகளை இணைக்கவும் அவரால் முடியவில்லை. பெளத்தம் பற்றி உயர்வாக அவர் நினைத்த போதிலும் பொருளாதார சுரண்டலை ஒழிக்க மார்க்ஸ், புத்தர் இருவரிடமிருந்து பொருத்தப்பாடனவற்றை அவர் எடுத்துக்கொண்டார் பொதுவாக சொன்னால் அவர் சாதிப் பிரச்னைகளுக்கு அரசியல் தீர்வுகளை வழங்கினாரே தவிர பொருளாதார மாற்றங்களும் அரசியல் தீர்வுகளும் இணைந்து காணப்பட்டத் தீர்வு எதையும் அவர் முன்வைக்கவில்லை. சோசலிச கருத்துக்களை ஏற்றுக்கொண்ட அவர் தனது அறிவிற்குட்பட்டிருந்த பொருளாதார கருத்தாங்களை சோசலிச சிந்தனைக்கேற்ப மறுவரையறை செய்யாது விட்டுவிட்டார் . அவர் அறிந்தது அதிகாரவர்க்க சோசலிசம் தான். இந்த அரசு சோசலிசம் இந்தியச் சுழலில் பார்ப்பன பனியா மேலாண்மையையே சாத்தியப்படுத்தும் என்பதை அவர் காணாதது முரண். அவர் சோசலிச ஆய்வுகள் எதையும் மேற்கொள்ளவில்லை. அதே நேரத்தில் வேறு ஆய்வுகளில் ஈடுபட்டு சில அரிய செய்திகளை வெளிக்கொணர்ந்தார். வரலாற்று வல்லுநராக செயல்பட்டார். அம்பேத்கரை ஆழமாக கற்பது இந்திய துணக் கண்டத்தில் நிறைவேற்றப்படவேண்டிய பார்ப்பன பனியா எதிர்ப்பு புதிய ஜனநாயக போராட்டத்திற்கும் சோசலிச போராட்டத்திற்கும் இன்றியமையாததாகும். மார்க்சியர்களால் ஏற்கத் தகுந்த மதிப்பீடுகளாகவே எஸ் வி ஆர் முன்வைத்தவற்றை புரிந்துகொள்ளலாம். சாதி குறித்த அம்பேத்கர் புரிதலை மார்க்சியர்களின் வர்க்கம் சார்ந்த புரிதலுக்கு தேவையான நட்பு உரையாடலாக எடுத்துக்கொண்டு இந்திய சமூகம் அடுத்தக் கட்டம் நோக்கி நகர்தல் அவசியம் என்பது பொதுவாக இன்று மார்க்சியர்களாலும் தலித் சிந்தனையாளர்களாலும் ஏற்கப்பட்டுள்ளது. ஆனந்த் டெல்டும்டே அம்பேத்கரின் Indian communism என்பதற்கு நல்ல அறிமுகம் ஒன்றை எழுதியுள்ளார். அம்பேத்கரியர் கம்யூனிஸ்ட்களின் இணக்கம் மேம்பட்டு சரியான புரிதல் வரவேண்டும் என்பதை அவர் நோக்கமாக நாம் புரிந்துகொள்ளலாம். டெல்டும்டே முன்வைப்பதை சுருக்கமாக பார்க்கலாம். அம்பேதகர் தனது ஆய்வுகளின் மூலம் கம்யூனிஸ்ட்களின் வழிகளைவிட புத்தரின் முறைகளே ஏற்கத்தகுந்தது என வந்தடைகிறார். சில சக்திகள் அவரை கம்யூனிஸ்ட்களின் எதிரியாக சித்தரிக்க முனைகின்றனர். இதனால் அவரை பிற்போக்கு சக்திகளிடம் தள்ளிவிடும் ஆபத்தையும் அவர்கள் செய்கின்றனர். நேரிடையாக அம்பேத்கர் மார்க்ஸ் சொன்ன பொருளில் வர்க்கம் என்பதை ஆளாவிட்டாலும் தலித் என்பது quasi class term என்கிறார் டெல்டும்டே. கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக அம்பேத்கரை நிறுத்தியவர்கள் பிராமணீய- முதலாளித்துவ கேம்பில் போய் நிற்பதை பார்க்கமுடிகிறது. இத்துடன் தலித்களின் பொருளாதார நலன்கள் என எவர் பேச ஆரம்பித்தாலும் அவர்களை கம்யூனிஸ்ட்கள் என முத்திரை குத்துவதும் நடக்கிறது. அம்பேத்கர் மறைவிற்கு பின்னர் ஆர் பி அய் 1957 துவக்கப்பட்டது. அடுத்த ஆண்டே அது காம்ப்ளே அணி, கெய்க்வார்ட் அணியாக பிளவுண்டது. அரசியல் அமைப்பு சட்டத்தின் தந்தை அம்பேத்கர், அனைத்தும் அவர் காட்டியுள்ள சட்டவடிவ முறையிலேயே என காம்ப்ளே பிரிவு பேசியது. சத்தியாக்கிரகம் அம்பேதகரின் பாதையில்லை என்றது. கெய்க்வார்ட் அணியினர் கம்யூனிச தாக்கத்தில் உள்ளனர் என விமர்சித்தது. கெய்க்வார்டு பிரிவு நிலப்பகிர்விற்கான போராட்டம் அவசியம் எனக் கருதியது. இருவரும் அம்பேத்கர் வாக்கியங்களை மேற்கோள்காட்டி பேசமுடிந்தது. வாக்மேர் எஸ் சி எஃப் தலைவர் 1953ல் அம்பேத்கரை சந்தித்தபோது அம்பேத்கர் அவரிடம் எவ்வாறு தன் ஏமாற்றம் குறித்து பேசினார் என்பதை பார்க்கத் தவறக்கூடாது என்றது கெய்க்வார்ட் பிரிவு. நகர்ப்புற தலித்கள் கொஞ்சமாவது பலனடைந்தனர்- ஆனால் கிராமப்புறத்தில் உள்ளோர் நிலையில் மாற்றம் ஏற்படுத்த முடியாமல் போயுள்ளதே என்பதை வாக்மேர் சந்திப்பில் அம்பேத்கர் சொல்கிறார். ராம்விலாஸ் பாஸ்வான், உதித் ராஜ் போன்றவர்கள் அரசியலில் பி ஜே பி பக்கம் போய் நிற்கையில், அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் அம்பேத்கருக்கு விரோதியானவர் மாவோயிஸ்ட்களின் அனுதாபியாகவுள்ளவர் எனும் சித்தரிப்புகள் நடந்தன. அம்பேத்கர் தன்னை மார்க்சிஸ்ட் என அழைத்துக் கொள்ளாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர் சோசலிச எண்ணங்களைக் கொண்டவர். மக்களின் வறுமை அறியாமை போக்கப்படவேண்டும் என்ற எண்ணம் அவரை உந்தி செயலுக்கு தள்ளியது. கல்வித்தொகை கிடைக்கும் என்ற எண்ணத்தில் லண்டன் ஸ்கூல் ஆப் எகானமிக்ஸில் அம்பேத்கர் சேர்ந்தார். கிடைக்காத காரணத்தால் அவர் ஜூன் 1917ல் பரோடா சமஸ்தானத்தில் சேர்ந்தார். அங்கு உயர் மிலிட்டரி செக்ரடரி பதவியில் அமர்த்தப்பட்டார். சாதியின் பெயரால் பல அவமானங்களை சந்திக்க நேர்ந்தது. இக்காலத்தில்தான் அக்டோபர் புரட்சி ருஷ்யாவில் நடந்தேறுகிறது. ஆனால் அதைப் பற்றிய பிரதிபலிப்புகள் ஏதும் அவர் செய்ததாக அறியமுடியவில்லை. அக்டோபர் புரட்சிக்கு பின்னர் 12 ஆண்டுகள் கழித்து பகிஷ்கிருத் பாரத்தில் தலையங்கம் ஒன்றை ( செப் 27 , 1929) அவர் எழுதினார். First Top then Foundation எனப்பொருள் தரும் தலைப்பில் அத்தலையங்கம் எழுதப்பட்டது. முன்னதாக 1928 வேலைநிறுத்தக் காலத்தில் அவர் அந்த பத்திரிகையில் எழுதியதாக டெல்டும்டே குறிப்பிடுவதாவது: The communists are trying to capture the labour movement in the country…the main aim behind the strikes not to improve the economic condition of workers but to train them for revolution. கம்யூனிஸ்ட்கள் பேசும் இலட்சிய சமூகம் அமைந்திட இந்த சமூகத்தின் உணர்வுநிலை இன்னும் தயாராகவில்லை. முன்கூட்டி செய்யவேண்டிய தயாரிப்பு வேலைகளில் கவனம் செலுத்தாமல் கம்யூனிஸ்ட்கள் புரட்சி குறித்த கனவில் இருக்கிறார்கள் என அம்பேத்கர் எழுதினார். நவம்பர் 15, 1929ல் அப்பத்திரிகையில் what is called revolution என்கிற பொருள்பட எழுதியிருந்தார். இது குறித்து டெல்டும்டேயின் பதிவானது: He wrote that the communists did not pay attention to truth- untruth, just-unjust and did not even mind unleashing atrocities in pushing their aim of establishing a state like Soviet Russia. He said these methods were not acceptable to him because not only did they come in the way of progress of the country but they would also push it backward. சைமன் கமிஷனுடன் அம்பேத்கர் ஒத்துழைக்கிறார் என்கிற விமர்சனத்தை கம்யூனிஸ்ட்கள் வைத்ததின் எதிர்வினையாக அம்பேத்கர் தனது விமர்சனங்களைத் தந்தார். வேலைநிறுத்தத்தில் தலித்கள் பங்கேற்கவேண்டாம் என அறிவுறுத்தியதும் கம்யூனிஸ்ட்களின் விமர்சனத்திற்கு உள்ளானது. அம்பேத்கர் மட்டுமல்ல முஸ்லீம்களும் இதில் பங்கேற்கவேண்டாம் என்கிற எதிர்வினையையும் கம்யூனிஸ்ட்கள் அவ்வேலைநிறுத்தம் போது சந்தித்தனர். வாழ்நாள் முழுதுமான அம்பேத்கர் விமர்சனம் இங்கிருந்த கம்யூனிஸ்ட்களின் நடைமுறை சார்ந்த அம்சங்களில் இருந்ததே தவிர மார்க்சியம் எனும் கோட்பாட்டின் மீதாக இல்லை என சொல்லலாம். இங்கு புரட்சி எனப்பேசியவர்கள் அதற்கு முன் தேவையாகவுள்ள சாதி பிரச்னைகளின்பாற் கவனம் கொள்ளாமை- moral infirmities of Communist methods தான் அவரின் விமர்சனத்திற்கான காரணங்களாக டெல்டும்டே சொல்கிறார். இந்தியாவில் சாதிகள் எனும் ஆய்வில் வர்க்கங்களின் இருப்பை அம்பேத்கர் பேசுகிறார். இந்தியா விதிவிலக்கல்ல எனவும் சொல்கிறார். Society is composed of classes. It may be an exaggeration to assert the theory of class conflict, but the existence of definite classes in a society is a fact. Their basis may differ. They may be economic, or intellectual or social, but an individual in a society is always a member of a class. This is universal fact and early Hindu society could not have been exception… we have only to determine what was the class that first made itself into a caste, for class and caste, so to say are next door neighbours, and it is only a span that separates the two. A caste is an enclosed caste அம்பேதகரின் மிகமுக்கிய விளக்கமாக இது பார்க்கப்படவேண்டும். மார்க்சிய வகைப்பட்ட வர்க்கம் என்கிற வரையறையுடன் எங்கு மாறுபடுகிறது என்பதை பார்க்கவேண்டும். மார்க்ஸ் இந்தியா பற்றி எழுதும்போது The Future Results of British Rule in India 1853ல் சாதி இந்தியாவின் வளர்ச்சிக்கு மிக தீர்மானகரமான தடை the most decisive impediment to India’s progress and power என எழுதியுள்ளார். வம்சவழிப்பட்ட உழைப்பு பிரிவினை என்கிற இம்முறை பிரிட்டிஷாரின் இரயில்வே உள்ளிட்ட வருகையாலும் தொழில்நுட்ப பொருளாதார வளர்ச்சியிலும் பாரம்பரிய கிராம முறை நொறுங்கிப் போகலாம் என அவர் நினைத்தார். இதை விளக்கும் போது டெல்டும்டே சொல்வதானது: Marx realized later that he had exaggerated the possible impact of the spread of Railways, on the traditional relations of production characterized by the Indian village community. The important point is that Marx clearly and casually connected the archaic social formation of castes in India with the relations of productions. மார்க்சின் இந்த கட்டுரைகளை அம்பேத்கர் படித்திருந்தார் என்பதற்கு நமக்கு ஏதும் ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்கிறார் டெல்டும்டே.. சாதியை எதிர்த்த போராட்டம் வர்க்கப் போராட்டத்துடன் இணைந்த ஒன்று என்பதை அம்பேத்கர் மறுக்கவில்லை. சாதி எதிர்த்த போராட்டத்தையே அவர் வர்க்கப்போராட்டம் எனக்கூட தெரிவித்தார். பொருளாதார அடிப்படை மட்டுமே என கம்யூனிஸ்ட்கள் பேசியதை அவர் ஏற்காமல் இருந்தார். அவரிடம் அரசியல் புரட்சிகள் எல்லாம் மத- சமூக புரட்சிகளை அடுத்தே நடந்தன என்ற கருத்து வலுவாக இருந்தது. இந்தியாவில் இரயில் வருகை மட்டுமல்ல தொடர்ந்த பெரும் தொழில்மயமாக்கலாலும்கூட சாதியின் கோட்டையை தகர்க்க முடியவில்லை. இங்கு சாதி ஏற்பாடு காலகாலமானது- நிரந்தரமானது என்கிற உணர்வுதான் மேலோங்கியிருக்கிறது. A caste is an Enclosed Class என அம்பேத்கர் கூறினார். தீண்டப்படாதவர்களை தலித் வர்க்கம் என மராத்தியில் குறிப்பிட்டார். இது மார்க்சிய வகைப்பட்ட வரையறையாக இல்லாமல் போகலாம்- வெபர் சார்ந்ததாக இருக்கலாம் என்கிறார் டெல்டும்டே. 1909 மின்டோ மார்லி சீர்திருத்தக் காலத்தில் ஆதிவாசிகளும், தீண்டப்படாதவர்களையும் இந்துக்கள் என்கிற அடைப்பில் வைக்கக்கூடாது என முஸ்லீம்லீக் பேசியது. இது அம்பேத்கருக்கும் உகந்த கருவியானது. 1927 மகத் சத்தியாகிரகத்திற்குப் பின்னர் இந்துக்கள் மீது இருந்த நம்பிக்கை அவருக்கு முற்றிலும் சரிந்தது. 1930 வட்டமேசை மாநாட்டை நல்வாய்ப்பாக அம்பேத்கர் புரிந்துகொண்டு ஒடுக்கப்பட்டோர் கோரிக்கைகளை முன்னெடுத்தார். தொடர்ந்த போராட்டத்தில் அவரால் பிரிட்டிஷ் பிரதமராக இருந்த ராம்சே மாக்டோனால்ட் அவர்களை வரலாற்றுத் தன்மை நிறைந்த கம்யூனல் அவார்ட்டை ஆகஸ்ட் 4 1932ல் கொடுக்க வைக்க முடிந்தது. காந்தி உண்ணாநோன்பை அடுத்து புனா உடன்பாடு ஏற்பட்டு கூட்டுவாக்காளர் தொகுதியில் கூடுதல் இடங்களை அம்பேத்கரால் பெறமுடிந்தது. கம்யூனிஸ்ட்கள் தனித்த வாக்காளர் முறையை எதிர்த்தனர். The Govt is far more interested in the mainly artificial and ultimately reactionary ‘depressed classes’ movement and in giving them a separate electorate என்று மீரட் சதிவழக்கின்போது பேசினர். இந்திய அரசாங்க சட்டம் 1935யைத் தொடர்ந்து 1937 தேர்தல்கள் மாநிலத்திற்கு நடந்தன. அம்பேத்கர் 1936 ஆகஸ்டில் இண்டிபெண்டெண்ட் லேபர் பார்ட்டியை துவங்கினார். பிரிட்டிஷ் பாபியன் சோசலிஸ்ட்களின் மாதிரியை அவர் மனதில் கொண்டார். கம்யூனிஸ்ட்களும் சோசலிஸ்ட்களும் அப்போது காங்கிரசிற்குள் சோசலிஸ்ட் பார்ட்டி என செயல்பட்டு வந்தனர். அம்பேத்கரும் சோசலிஸ்ட்களும் இணைந்து ஜனவரி 1938ல் விவசாயிகளின் பெரும்பேரணியை மும்பையில் நடத்தினர். இக்கூட்டத்தில் பணம்படைத்த சாதி, ஏழைசாதி என இரண்டுசாதிகள் மட்டுமே உள்ளது. சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து நாம் திரளவேண்டும் என அம்பேத்கர் உரையாற்றினார். வர்க்கப்போராட்டம் என்பதில் மாறுபாடு இருந்தாலும் கம்யூனிச தத்துவம் நமக்கு நெருக்கமானதே என்றும் குறிப்பிட்டார். இதேபோல் கொடுமையான தொழிற்தகராறு சட்டம் ஒன்றை 1938ல் பம்பாய் அரசாங்கம் கொணர்ந்தபோது அம்பேத்கரும் கம்யூனிஸ்ட்களும் எதிர்த்து போராடினர். சட்டமன்றத்தில் வேலைநிறுத்த உரிமைக்கான குரலை அம்பேத்கர் உரக்க எழுப்பினார். The right to strike is another name for the right of freedom என்றார். கம்யூனிஸ்ட்கள் அம்பேத்கரின் சுதந்திர லேபர் கட்சியை முழுமையாக வரவேற்கவில்லை. அம்பேத்கரும் அவர்கள் தொழிலாளர் உரிமை என்கிறார்களே தவிர மனித உரிமைகளுக்காக போராடவில்லை என விமர்சித்தார். 1946ல் ‘செட்யூல்ட் காஸ்ட் பெடெரேஷன்’ சார்பில் States and Minorities எழுதி வெளியிட்டார். அதில் அரசு சோசலிச கண்ணோட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அரசாங்கமே தொழில் நடத்துவது, இன்ஸ்யூரன்ஸ் அரசாங்கமே நடத்துவது, கூட்டுறவுமுறையில் அரசாங்க மூலதனத்துடன் தேசியமயமான நிலம் போன்றவைகளை அம்பேத்கர் பேசியிருந்தார். அம்பேத்கரின் ‘ராடிகல்’ எனும் கட்டம் எஸ் சி எஃப் துவங்கிய 1942ல் முடிவுற்றதாக டெல்டும்டே சொல்கிறார். அய் எல் பி கட்சி கைவிடப்படுவதும், வைஸ்ராய் கவுன்சிலில் அவர் சேர்வதும் நடக்கிறது. சிவில் ஒத்துழையாமையை ஒடுக்குவதில் பிரிட்டிஷ் தீவிரமாக இருந்த நேரமது. அம்பேத்கர் தொழிலாளர்க்கு சாதகமான சில விஷயங்களை கொண்டுவந்தார். நாடே முழுமையாக கம்யூனலாக இருக்கும்போது வர்க்க அரசியலை தொடர்வதில் அர்த்தம் ஏதுமில்லை என அவர் கருதியிருக்கக்கூடும். கெயில் ஓம்வெத் பார்வையில் 1930களில் மார்க்சியத்துடன் அருகாமையில் இருந்த அம்பேத்கர் 1950களில் விலகி சமூக ஜனநாயகவாதியாக காட்சியளிக்கிறார். கம்யூனிசம் குறித்த ஆர்வம் அவரிடம் இருந்தது. கொலம்பியா பல்கலையில் பேரா ஜான் துவேயின் செல்வாக்கால் அவர் ஈர்க்கப்பட்டார். துவே காரிய சாத்திய சிந்தனையாளராகவும், பாபியன் சோசலிஸ்ட்டாகவும் அங்கு புகழுடன் இருந்தார். அம்பேத்கர் பேசிய ஸ்டேட் சோசலிசம் என்பதை மார்க்சிய பொருளாதார ஏற்பு என கருதமுடியாது என்கிறார் டெல்டும்டே. அரசு சோசலிசம் என்பது அரசின் மூலமாக நலன்களை அனைவருக்கும் உருவாக்குதலை நோக்கமாக வைக்கும். அரசு உதிர்ந்துபோதல், அரசு நீக்கம் என்பது அங்கு பேசப்படுவதில்லை. ஆகஸ்ட் 26 1954ல் அம்பேத்கர் தன் உரை ஒன்றில் ருஷ்ய சார்புநிலையை அரசாங்கம் எடுத்து வருவதை விமர்சித்தார். கம்யூனிசம் காட்டுத்தீ போன்றதென்றார். communism is like a forest fire- it goes on burning and consuming anything and everything that comes in its way எனக் குறிப்பிட்டார். ஆனால் ஸ்டாலின் இறந்ததை அறிந்து அவர் உண்ணாமல் இருந்து துக்கம் அனுசரித்தார். ஜனதா டிசம்பர் 1945ல் Beware of Communists என்கிற கட்டுரையை அவர் எழுதினார். 1952 தேர்தலில் டாங்கேவும் அம்பேத்கருக்கு வாக்களிக்காதீர் எனப் பேசினார். அம்பேத்கர் செலிக் ஹாரிசன் என்ற பத்திரிகையாளருக்கு 1953ல் தந்த பேட்டியில் மராத்திய கம்யூனிஸ்ட்களின் பலவீனத்தை விமர்சிக்கிறார். The Communist Party was originally in the hands of some Brahmin boys. They have been trying to win over the Maratha and SCs. But they made no headway why? Because they are mostly bunch of Brahmin boys. The Russian made a great mistake to entrust the Communist movement in India to them. Either the Russians did not want Communism in India- they wanted only drummer boys- or they did not understand. இதை பம்பாய் கம்யூனிஸ்ட்கள் நடத்தைக்கான விமர்சனமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இந்த பிராமணப் பையன்களிடம் கம்யூனிசம் ஒப்படைக்கப்படாமல் அம்பேத்கரோ வேறு எவராவதோ தடுத்து இந்திய நிலைமைகளை ருஷ்யர்களுக்கு புரிய வைத்திருக்கலாமே. அப்படி அம்பேத்கரோ வேறு எவரோ முயற்சி எடுத்து அதை ருஷ்யர்களோ அல்லது அன்றிருந்த பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியோ அல்லது அகிலமோ உதாசீனப்படுத்தியதற்கு எவ்வித ஆதாரமும் தெரியவில்லை. அம்பேத்கர் தனது ஆவணங்களை சோவியத் கட்சிக்கு அனுப்பியதாகவோ அதை அவர்கள் நிராகரித்து தாங்கள் சொல்லும் வர்க்கப்போராட்டம் ஒன்றே வழி- அதற்கு இது போன்ற பிராமண பையன்கள்தான் தலைமை தாங்க வேண்டும் என சொன்னதாக அறியமுடியவில்லை. சோவியத் கட்சி காந்தியை உற்று நோக்கி கருத்து தெரிவித்த அளவு அம்பேத்கர் இயக்கத்தை ஏன் கவனிக்கவில்லை என்பதும் இன்று முக்கிய கேள்வியாக எழுவது தவிர்க்கமுடியாதது. இந்தியாவிலும் they took Marxism as a creed, a quasi religion என்கிற விமர்சனம் அம்பேத்கரியர்களிடமிருந்து இன்றும் இருப்பதை பார்க்கமுடியும். இங்கு எம் என் ராய், டாங்கே உட்பட எவரும் சாதி என்பதை மிக முக்கிய காரணியாக பார்க்கவில்லை என டெல்டும்டே விமர்சிக்கிறார். தோழர் அதிகாரி தொகுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணத்திலிருந்து கீழ்கண்ட வரிகளை டெல்டும்டே தருகிறார். It should be understood that from the stand point of communism this question of untouchability is purely an economical problem. Whether this class of people are admitted in temples or streets is not a question connected with our fight for swaraj. With the advent of Swaraj these social and religious disabilities will fall off themselves Communists have neither caste nor creed nor religion. As Hindus, Mohammedans or Christians they may have private views about them. The question of untouchability is essentially associated with economic dependence of the vast masses of these Indians. No sooner their economic dependence is solved, the social stigma of untouchability is bound to disappear ( vol 2 Documents of history of CPI page 651) கே என் ஜோக்லேகர் போன்ற பஞ்சாலைத் தொழிற்சங்கத்தலைவர்கள் பிராமண சபா உறுப்பினராக இருந்தது பிரச்சனையாகி 1927ல் கட்சி அவரை சபாவிலிருந்து வெளியேற அறிவுறுத்தியதாக டெல்டும்டே சொல்கிறார். அதிகாரியும் மற்றவர்களும் சேர்ந்து 1933ல் கட்சி உறுப்பினர் என்பதை வரையறை செய்கிறார்கள். அதில் சாதி சபாக்களில் இருக்கக்கூடாது என நிபந்தனை ஏதுமில்லை எனவும் டெல்டும்டே சுட்டிக்காட்டுகிறார். A member of the party is any person who recognizes the programme of the Communist International, the Draft platform of CP and who works in one of the party organizations, obeys the decision of the party and the Communist International and regularly pays membership dues என்ற வாசகங்களே இருந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்று ஆவணங்கள் வால்யூம் 3ல் காணப்படும் அம்பேத்கர் குறித்த விமர்சன வரிகளையும் டெல்டும்டே காட்டுகிறார் Reformist separatist leader who kept untouchables away from the general democratic movement and to foster illusion that the lot of untouchables could be improved by reliance on imperialism (page 15-16) அதேபோல் 1952 மார்ச்சில் சி பி அய்யின் மத்திய கமிட்டி செட்யூல்ட் காஸ்ட் பெடெரேஷன் குறித்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. அதில் காணப்படும் சில வரிகளை டெல்டும்டே தருகிறார். The economically most exploited and socially most oppressed Schduled caste masses urge for economic betterment and social equality have been given a distorted and disruptive form by their pro imperialist and opportunist leader, Dr Ambedkar who has organized them on a communal, anti caste Hindu basis in the SCF. The party must sharply expose the policies of Ambedkar and wean the SCF masses away from his influence by boldly championing the democratic demands of the SC masses, by fighting caste Hindu oppression against them and by drawing them into mass organizations டிசம்பர் 3 1944ல் பீப்பிள்ஸ் வார் இதழில் பி டி ரணதிவே அவர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பில் அம்பேத்கர் நிற்க தவறுவதை விமர்சித்திருந்தார். ஒடுக்கப்பட்ட தீண்டத்தகாதவர்களுக்கு விடிவு என்பது விடுதலை போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொள்வதில்தான் இருக்கிறது. நாட்டை தொழிற்மயப்படுத்தல், நிலபிரபுத்துவ ஒழிப்பு ஆகியவை மூலம் தலித்களை சுயமாக நிற்கவைத்தலில் தான் அது சாத்தியமாகும் என தோழர் ரணதிவே எழுதியிருந்தார். கிராஸ்ரோட்ஸ் அக்டோபர் 19 1951ல் அம்பேத்கர் மந்திரிசபையிலிருந்து வெளியேறியது குறித்து கேலி தொனியில் எழுதியதை டெல்டும்டே சுட்டிக்காட்டுகிறார். அக்கட்டுரையின் தலைப்பு Ambedkar’s move to detach SC from the Left என்பதாகும். அதில் கீழ்கண்ட விமர்சனம் காணப்பட்டது. Kept the SCs out of the national movement by exploiting their just grievances against Congress, they developed separatist tendencies among them, prevented their radicalization and helped, along with the communal Muslim league leaders, the astute British imperialists in playing their diabolical game of divide and rule. They advanced neither the cause of India’s political emancipation nor economic and social progress . காபினட் மிஷன் தலித்களை சிறுபான்மை வகுப்பினர் என ஏற்காததை எதிர்த்து ஜூலை 15 1946ல் புனேவில் இயக்கம் நடந்தது. போலீசார் அடக்குமுறையை கட்டவிழ்த்தனர். சி பி அய் கட்சி இந்த அடக்குமுறைகளை கண்டித்தது என்றாலும் அம்பேத்கர் பிரிட்டிஷாருடன் உறவாடியதையும் அவர்களை நம்பி செயல்படுவதையும் விமர்சித்து பீப்பிள்ஸ் ஏஜ் பத்திரிகையில் எழுதியது. அம்பேத்கரும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதை ஏற்கவில்லை. அம்பேத்கருக்கு அரசியல் ஜனநாயகத்துடன் பொருளாதார ஜனநாயகம் என்பது அவசர அவசியமாக இருந்தது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை தாம் புத்தரிடமிருந்து எடுத்துக்கொண்டதாக அவர் தெரிவித்தார். சமூக உறவுகள் நிறைந்த கூடி வாழ்தல்முறையை ஜனநாயகம் என அவர் வரையறுத்தார். இந்தியாவும் கம்யூனிசமும் என்கிற புத்தகத்தை அவர் முழுமையாக எழுதி முடித்திருப்பாரேயானால் அவருடைய பார்வை மேலும் சரியாக புலப்பட்டிருக்கும். இது தொடர்பாக அவர் திட்டமிட்ட தலைப்புகளில் இந்து சமூக முறை, இந்து சமூக முறையின் அடிப்படைகள் என்பன மட்டும்தான் நமக்கு கிடைத்துள்ளன என டெல்டும்டே குறிப்பிடுகிறார். அம்பேத்கர் குறித்து விரிவான ஆய்வை w N குபர் செய்திருந்தார். பீப்பிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ் வெளியீடாக Ambedkar a critical study வந்தது. Builders of Modern India வரிசையிலும் குபர் அம்பேத்கர் வாழ்க்கை மற்றும் பணிகள் குறித்து எழுதியிருந்தார். குபர் ஆய்வுகள் மார்க்சிய கண்ணோட்டம் கொண்டது என பொதுவான ஏற்பை பெற்றது. குபர் தரும் சித்திரத்தை சுருக்கமாக புரிந்துகொள்வோம். அம்பேத்கர் ஏழை எளிய மனிதர்களுக்காக உறுதியாக நின்றவர். அவர்களின் வறுமை மீது தாக்குதல் தந்து மீட்க எண்ணி செயல்பட்டவர். ஒடுக்கப்பட்டவர்களுக்கு அரசியல் அமைப்பு சட்டப்படியும் நாடாளுமன்ற ஜனநாயக முறையிலும் அரசியல் அதிகாரம் பெற போராடியவர். வெற்றியும் பெற்றவர். அரசாங்க சோசலிச வகைப்பட்டு அவர்களின் பொருளாதார முன்னேற்றம் சாத்தியம் எனக் கருதியவர். எந்திரத்தொழில் அவசியம் எனவும் கருதியவர். The slogan of democratic society must be machinery, more machinery- civilization more civilization என்றார் அம்பேத்கர். அதே நேரத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் வர்க்கப் போராட்டம் என போய் விழுந்துவிடக்கூடாது எனவும் எச்சரித்தார். State Socialism by law என்பது அவர்தம் நிலைப்பாடாக இருந்தது. அரசியல் அமைப்பு சட்டம் என்பது அரசியல் வடிவமுறையை மட்டும் காட்டுவதாக இருக்கக்கூடாது- அதில் பொருளாதார வடிவமும் தெரிதல் வேண்டும் என்று சொல்லிவந்தார். குபர் எழுதும்போது இந்த மதிப்பீட்டை தருகிறார்: Ambedkar did not believe in the annihilation of moneyed classes, but he wanted a radical change in their attitude towards human affairs…wanted to curb their unlimited sense of property and possession. அவருக்கு தர்மகர்த்தா கொள்கை மீது ஈர்ப்பு இல்லை. அதை கேலிக்குரியதாகவே பார்த்தார். ஏழைகள் அவ்வாறு இருப்பது பூர்வ ஜென்ம பலன் என பணம் படைத்தவர் சொல்லி தப்பிச் செல்லும் மத சிந்தனை அதில் உள்ளது என புரிந்துகொண்டார். அதை எதிர்த்து போராடவேண்டும். இங்கு சாதி பிடிமானம்தான் கிராமப்புறங்களில் முன்னேற்றத்திற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருப்பது என அறிவித்தார். According to him, the problem of Socialism in India was more social than economic என்ற மதிப்பீட்டையும் குபேர் தெரிவித்தார். புத்தர் காட்டிய வழி மார்க்சின் வழியைவிட பாதுகாப்பானது என்ற முடிவிற்கு அம்பேத்கர் வந்தடைந்தார். இதை மார்க்சியர் என சொல்லிக்கொள்ளும் எவரும் ஏற்பது கடினம். புத்தர் பேசிய வன்முறையற்ற வழி என்பதை இந்தியாவில் ஏற்றுக்கொண்ட கம்யூனிஸ்ட்கள் இருக்கின்றனர். அம்பேத்கர் பம்பாய் சட்டமன்றத்தில் செப்டம்பர் 17 1937ல் மகர் வாடன் எனும் முறையை ஒழிக்கும் மசோதாவைக் கொணர்ந்தார். 1927 முதல் தொடர்ந்து 10 ஆண்டுகள் இம்முறை எதிர்த்து அவர் போராடிவந்தார். குத்தகைதார்முறையில் அடிமைத்தனம் எதிர்த்த முதல் மசோதா இது. சட்டவழிமுறைகளில் அவர் இப்பிரச்னைகளை தீர்க்க விழைந்தார். நிலவருவாய் கூட வருமானவரிக்குள் (இன்கம்டாக்ஸில்) வருவது நல்லது எனக் கருதினார். நிலமற்ற ஒடுக்கப்பட்டவர்களுக்கு கூட்டுப்பண்ணைமுறை பயனளிக்கும் என்றார். நிலபிரபுத்துவம் ஒழிப்பு என்பதை ஏற்ற அவர் அரசே நில உரிமையாளராக இருப்பது பற்றிய மாற்றை கீழ்கண்டவாறு முன்வைத்தார். I too agree, that after abolishing landlordism, the state must be the owner of the land and not the proprietor or the peasant. The natural consequence of the abolition of landlordism must be collective farming or cooperative farming. But we are too much individualists..the whole outlook of our peasants must be changed, then only we would be able to reap the fruits of our revolutionary attempt to throw off the yoke of landlords ( kuber page 255) நிலபகிர்வு என பேசிய தோழர் டாங்கேயிடம் அனைவருக்கும் கொடுக்க எங்கே போதுமான நிலம் இருக்கிறது என அம்பேத்கர் வினவினார். I prefer soviet system-collectivisation- according me it is the best- சோவியத் கூட்டுப்பண்ணைமுறை சிறந்தது என தெரிவித்தார். ராஜ்யசபா விவாதம் ஒன்றில் செப்டம்பர் 18 1953ல் மூலதன திரட்சி குறித்து தன் கருத்துக்களை அவர் வெளிப்படுத்தினார். நமது வரிமுறை அதற்கு வழிவகை செய்வதாக இருக்கவேண்டும் என்றார். If we were a communist country- I have no doubt that we shall very soon become one or our economic life, industrial life or agri life, taken charge of the Govt- it would matter very little, how much we save and how much we do not save. But so long as we have not got a communist regime which takes complete responsibility for the welfare of the people and their education it is very necessary that our taxing system should be such that it should leave sufficient for the purpose of creating capital மதுவிலக்கு எனும் பிரச்னையில் அவர் அரசிற்கு வேண்டிய நிதி தேவையா இல்லையா என்பதைக் கணக்கிட்டு பார்க்கவேண்டும் என்றார். நாட்டில் மதுபழக்கம் இருக்கும்போது கள்ளசந்தையில் எவரோ பணம் எடுத்து செல்வதை தடுக்கவேண்டும் எனக் கருதினார். 1936 ஆகஸ்ட் 15ல் எஸ் சி எஃப் சார்பில் 5 ஆலோசனைகளை அவர் முன்வைத்தார். இராணுவச் செலவைக் குறைத்தல், உப்புவரியை மீண்டும் கொணர்தல், மதுவிலக்கை ரத்து செய்தல், காப்பீட்டு துறையை தேசியமயமாக்கல், அனைத்து தொழிலாளர்க்கும் கட்டாய காப்பீட்டு முறையைக் கொணர்தல் என்பனவே அவை. மனிததேவைகள் வேறுபட்டு இருக்கும் என்பதால் முழுமையான சமத்துவம் என்பது இருக்க முடியாது. எவருக்கும் சிறப்பு சலுகை என்பதில்லாமல் போதுமான வாய்ப்புகளை உருவாக்குதல் அவசியம் என சமத்துவம் என்பதை அவர் விளக்கினார். எனது வகுப்பாரின் மேம்பாடு என்ற ஒன்றிற்காகவே நான் நிற்கிறேன். அதற்காகத்தான் காங்கிரசாருடன் கூட ஒத்துழைத்தேன். எனது வாழ்வின் மூன்று நோக்கங்கள் என மார்ச் 18 1955ல் அவர் பட்டியலிட்டார்- கல்வியை பரவ செய்தல், அரசாங்க சேவைகளில் தாழ்த்தப்பட்டவர்க்கு அதிக இடங்கள் பெறுதல், கிராமப்புற ஒடுக்கப்பட்டோரின் மேம்பாடு. வேறு அறிவுரை ஒன்றையும் அவர் எச்சரிக்கையாக விடுத்தார். கிராமங்களைவிட்டு வெளிக்கிளம்பாதவரை அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்காது. எனது கிராம மக்களுக்கு என்ன நேரப்போகிறது என கண்ணீர் ததும்ப அவர் பேசியதையும் நாம் அறிய முடியும். It is my solemn vow to die in the service and cause of those downtrodden people among them whom I was born, brought up and Iam living என அவர் உறுதியாக செயல்பாட்டை அமைத்துக்கொண்டார். அம்பேத்கர் தனக்கான மூன்று வழிகாட்டிகளாக கபீர், ஜோதிபா பூலே, புத்தர் ஆகிய மூவரையும் குறிப்பிட்டார். ஒவ்வொருவரின் செல்வாக்கையும் அவர் குறிப்பிட்டார் Ambedkar regarded three greatmen as preceptors. The first was Kabir- who took him to the Bhakti cult. the second was Jyotiba Phooley who inspired him to strive for anti Brahminism and amelioration of masses, their education and uplift. The third was Buddha who gave him mental and metaphysical satisfaction and showed the way leading to the emancipation of the untouchables, by resorting to the path of mass conversion. ( W N kuber Ambedkar Publication Division) உலகில் எதுவும் நிரந்தரமானதல்ல என்பதை அம்பேத்கர் சொல்கிறார் There is nothing fixed, nothing eternal, nothing sanatan: that everything is changing, that change is the law of life for individuals as well as for society ( Annihilation of caste BRA) In an ideal society, there should be many interests consciously communicated and shared. there should be social endosmis" ( Ranade, gandhi and Jinnah) சமூகம் நிலைத்திருக்க வேண்டும் எனில் இந்தியா தனது சாதிமுறையை வெளியேற்றிக்கொள்ளவேண்டும் எனக் கருதினார். சமூக சமத்துவ சேனையை அவர் அமைத்தார். ஆனால் மகாத்மா படுகொலைக்குப் பின்னர் இவ்வமைப்பும் தடை பெற்றது. Ambedkar formed the Samata Sainik Dal ( social Equality Army). Its aim was to dislodge all those values which conserved and fostered anti- human elements in the name of traditional and cultural heritage. After the assassination of gandhiji in 1948, the Dal was banned. Ambedkar was against disbanding the Dal and remarked that to disband it was an act of cowardice.( kuber page 33) அவர் சுதந்திர தொழிலாளர் கட்சியை துவங்கும்போது லேபர் என்பது ஒடுக்கப்பட்ட மக்களை உள்ளடக்கியதென்றார். ஜூலை 2 1942ல் அவர் வைஸ்ராய் கவுன்சில் பட்டியலில் இடம் பெற்றார். தொழிலாளர் இலாகாவை ஏற்றார். சுரண்டல் ஒழிப்பு, தொழிலாளர் நலன் குறித்து பேசவும் நடைமுறைகளை உருவாக்கவும் முயன்றார். காந்தியும் காங்கிரசும் அறிவித்த குவிட் இந்தியா போராட்டத்தை அம்பேத்கர் பொறுப்பில்லாத பைத்தியக்காரத்தன போராட்டம் என விமர்சித்தார். சிலர் வைஸ்ராய் கவுன்சிலிருந்து விலகினாலும் அம்பேத்கர் பொறுப்பில் தொடர்ந்தார். Ambedkar described Gandhiji’s all out open rebellion as both ( quit India) irresponsible and insane and a bankrutcy of statesmanship. The Congress papers in criticismstated that Ambedkar justified the British policy as a return gift for the Labour membership of the Viceroy’s Executive Council. Gandhiji statrted a 21 day fast on Feb 10 1943. M S aney, H P Modi, N R sarkar of the Executive council resigned, but Ambedkar and J P Srivatsava remained unmoved ( kuber page 58) ஆட்சி மாற்றம் என்பது இந்து முஸ்லீம் தாழ்த்தப்பட்டவர் என மூன்று பிரிவினரின் முத்தரப்பு உடன்பாடாகவே வரும் என காந்தியிடம் வைஸ்ராய் அறிவித்துவிடவேண்டும் என அம்பேத்கர் விழைந்தார். SCF சார்பில் அம்பேத்கர் May 6 1945 ல் தன் திட்டத்தை தந்தார். அரசியல் அமைப்பு சட்ட சீர்திருத்தம் என்பதில் பெரும்பான்மை எனச் சொல்லி ஆட்சியை இந்துக்கள் எடுத்துக்கொள்ளமுடியாது என்றார். அனைத்துவகைப்பட்ட சிறுபான்மையினருக்கும் (ஒருசேர) பெரும்பான்மை இந்துக்களைவிட அதிகம் பிரதிநிதித்துவம் பெறவேண்டும் என்றார் 1.Majority rule is untenable in theory and unjustifiable in practice 2. Hindus could not claim absolute majority of representation on the basis of their numbers 3. the relative majority rep to the Hindus should not be so large as to enable them to establish their rule 3. a combination of major minorities should not have such rep as to enable them secure an absolute majority 4. all minorities put together should have absolute majority of rep in the legislatures. அவரின் முன்மொழிவாக மத்திய சட்டமன்றத்தில் 40 சத இந்துக்கள், 32 சத முஸ்லீம்கள், 20 சதம் செட்யூல்ட் வகுப்பினர், 3 சதம் கிறிஸ்துவர்கள், 4 சதம் சீக்கியர், 1 சதம் ஆங்கிலோ இந்தியன் என்கிற பகுப்பினை பார்க்கிறோம் . பூர்வீக குடிகள் போதுமான விழிப்புணர்வு பெறாத நிலையில் அவர்களுக்கு தேவையில்லை என்றார். அரசியல் நிர்ணய சபை என்கிற முன்மொழிவை அவர் வேண்டாம் என்றார். டொமீனியன் அந்தஸ்து சரியானது எனக் கருதினார். பிரதமர் மற்றும் இந்து அமைச்சர்களை மைனாரிட்டியும் சேர்ந்துதான் முடிவெடுக்கவேண்டும்- ஆனால் சிறுபான்மை அமைச்சர்களை அவர்கள்தான் முடிவெடுக்கவேண்டும் என்றார். 1946 தேர்தலில் எஸ் சி எஃப் தோல்வியை சந்தித்தது. அரசியல் நிர்ணய சபை என்பதை அவர் பின்னர் ஏற்றுக்கொண்டு மேற்கு வங்கத்திலிருந்து இடம் பெற்றார். அரசியல் சட்ட வரைவு கமிட்டி சேர்மனும் ஆனார். சோவியத் அரசியலமைப்பில் சொல்லப்பட்டது போல் பொருளாதார வடிவத்தை குறிப்பிட்டு இந்தியாவில் சொல்ல அவசியமில்லை- அது தனிநபரின் சுதந்திரத்தின் மீதான தலையீடாக அமைந்துவிடும் என அம்பேத்கர் விளக்கம் தந்தார். அரசியல் ஜனநாயகம் நான்கு அடிப்படைகளில்தான் நிலைக்கும். தனிநபர் இறுதியானவர், அரசியல் அமைப்பு சட்டப்படியாக சில அடிப்படை உரிமைகளைப் பெற்றவர், சலுகைகளைப்பெறுவதற்காக அரசியல்மைப்பு சட்டம் தரும் எந்த உரிமைகளையும் அவர் இழக்கக்கூடாதவர், அரசு எந்த தனிப்பட்டவருக்கும் பிறரை ஆள முடிவைத் தருவதில்லை. அரசியல் அமைப்பு சட்டம் வெறும் அரசியல் கருவி மட்டுமல்ல அது பொருளாதார கருவியாகவும் இருக்கும் என அம்பேத்கர் தெளிவு படுத்தினார். விவசாய தொழிலாளர் கட்சி என்கிற PWP கட்சியை சங்கர்ராவ்மோர் என்பார் நடத்திக்கொண்டிருந்தார். அம்பேத்கார் எஸ்சிஎஃப் நடத்திக்கொண்டிருந்தார். PWP மார்க்சியம் என பேசிவந்தது. கம்யூனிஸ்ட் கட்சியுடன் மோர் இணைய விரும்புகிறார் என்கிற தகவலை ஜெயபிரகாஷ் நாரயண் அம்பேத்கரிடம் தெரிவித்தபோது அதை அம்பேத்கர் விமர்சித்தார். அவர்கள் மக்களை அழிவிற்கு கொண்டுபோய் சேர்க்கின்றனர் என்றார். Ambedkar said that if this was to happen the More was ruining the masses..PWP according to him a communal party dominated by Marathas ( page 77 kuber). 1952 தேர்தலில் பிரஜா சோசலிஸ்ட்களுடன் அம்பேத்கர் கூட்டணி அமைத்தார். இரு கட்சி ஜனநாயக முறை என அம்பேத்கர் முன்மொழிந்தார். ஆறு அம்சங்களை சொல்லி அதன் அடிப்படையில் தான் எஸ் சி எஃப் ஆதரவை நல்கும் என்றார். கம்யூனிஸ்ட்கள், இந்து மகாசபா எதற்கும் ஆதரவில்லை என்றார். No support to Independents No alliance with Hindu mahasabha or the RSS Working alliances with BC organisations No alliance with CPI No belief with Totalitarian parties No multiplicity of Parties- ideal was two party democracy அம்பேத்கர் சோசலிஸ்ட் கூட்டணியை நேரு விமர்சித்தார். தனது அமைச்சரவை சகாவாக 4 ஆண்டுகள் இருந்தபோது தமது அரசாங்கத்தின் வெளிநாட்டுக்கொள்கை குறித்து எந்த விமர்சனமும் அம்பேத்கரிடம் இல்லை. இப்போது பேசுகிறார் என்றார் நேரு. அம்பேத்கர் 1952 தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். அவர் காஷ்மீரை பிரிக்கவேண்டும் எனப் பேசியதும், முஸ்லீம்களுக்கு தனி வாக்காளர் தொகுதி எனப் பேசியதும். அவர் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அவர் ராஜ்யசபாவிற்கு மார்ச் 1952ல் தேர்வாகிறார். 1954 ல் மக்களவைக்கு நின்ற அவரால் வெல்லமுடியாமல் போனது. ஊரக மக்களிடம் கட்சி செல்லாமல் தேர்தலில் வெல்வது கடினம் என்பதை அவரால் உணரமுடிந்தது. அவரை பொறுத்தவரை மனிதனுக்கு மதம் அவசியம்தான். ஆனால் அதை சமூக நெறிகளைக்கொண்டு மதிப்பிடவேண்டும் எனக் கருதினார். The Religion which discriminates between two followers is partial and the religion which treats crores of its adherents worse than dogs and criminals and inflicts upon them insufferable disabilities is no religion at all" அம்பேத்கர் நான்கு அடிப்படைகளை மதம் குறித்து முன்வைத்தார். ஒழுக்கநெறி, காரணகாரிய அறிவு, சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்பவை ஏற்பு, வறுமையை கொண்டாடாமை என குறிப்பிட்டார். 1. Religion in the sense of morality, must therfore remain the governing principle in every society. 2. Religion,if it is to function, must be in accord with reason which is merely another name for science 3. Its moral code must recognise the fundamental tenets of liberty, equality and fraternity. Unless a religion recognises these three fundamental principles of social life, religion will be doomed. 4. Religion must not sacntify or ennoble poverty. அதே நேரத்தில் இந்து மதம் பற்றிப் பேசும்போது What is called religion by Hindus is nothing but a multitude of commands and prohibitions. இந்து மத தீங்குகளாக அவர் சிலவற்றை பட்டியலிட்டார். It has deprived moral life of freedom It has only conformity to commands The laws are ininequitous in that they are not the same for one class as for another.. இந்து மதத்தில் செய்யப்படவேண்டிய மாற்றங்களையும் அவர் பட்டியலிட்டார். அதை குபர் கீழ்கண்டவாறு பதிவு செய்துள்ளார். He wanted a change from a religion of rules to a religion of principles. The requirements were a. one standard book of Hindu Religion b. No hereditory priesthood - exam system open to all c. State sanads- permission required for priests d. Limit by law the number of Priests e. state supervision of the Priests’ morals beliefs and worship ( page 81 Kuber) புத்தரா மார்க்சா எனும் அம்பேத்கர் ஒப்பீட்டை குபர் ஏற்கவில்லை. இருவரும் காலத்தால் மிக வேறுபட்டவர்கள். பொருளாயதவகைப்பட்ட கருத்தாக்கத்தை மார்க்ஸ் பேசினார் என குபர் ஆய்வு செல்கிறது. புத்தமதம் மாறுவதற்கு ஏதுவாக அவர் புனைவு ஒன்றையும் செய்தார். தீண்டப்படாதவர் அனைவரும் ஒரு காலத்தில் புத்தமதம் சார்ந்தவர்கள்தான் . இதைத்தான் குபர் ஏற்காமல் புனைவு என்கிறார். தீண்டப்படாதவர் போராட்டம் வர்க்கப்போராட்டமே என்ற அவரது கருத்திற்கு இந்த மதமாற்றம் துணையாகவில்லை எனவும் குபர் விமர்சித்தார். விடையை எழுதிவிட்டு அதற்கேற்ப தத்துவம் ஒன்றை கொணர அவர் முயற்சித்ததாக குபர் சொல்கிறார். ஜெலியட் கருத்தின்படி ambedkar’s embracing of a new religion, was meant to act as a bulwark against communism. அம்பேத்கர் வர்க்கபோராட்டத்தை தவிர்க்க நினைத்ததாகவே குபேர் எழுத்து செல்கிறது. ( பக் 88 ) அம்பேதகர் இந்து மதத்திற்கான சவால் என காந்தி எழுதினார். ஆனால் மதம் என்பது கற்பதினால் வருவதில்லை. ஆன்றோர் துறவிகளின் வாழ்க்கையும் செய்தியுமாக வருகிறது. மதத்திற்கும் சாதிக்கும் சம்பந்தமில்லை. அம்பேதகர் தனது வழக்கை அதீத நிருபணமாக்குகிறார் என்பது காந்தியின் எதிர்வினை. அம்பேத்கரின் தேசியம் என்பது வித்தியாசமான சிந்தனையை உள்வாங்கிய ஒன்று. நாட்டின் விடுதலை என்பதுடன் அது நிற்காது. வெளி மேலாண்மையிலிருந்து விடுதலை என்பதுடன் அது நின்றுபோகும். அதே நேரத்தில் உள்மேலாண்மை என்பதிலிருந்து விடுதலை - ஒடுக்கப்பட்டவர்க்கான விடுதலை என்பதையும் சேர்த்தே அவர் தனது நேஷனலிசமாக முன்வைத்தார். He made a clear distinction between the freedom of the country and the people of that country- No internal slavery என்றார். வகுப்புவாத கொடுமை- சாதிய எண்ணப்பாங்கிலிருந்து விடுதலைதான் தேசியம் என கருதினார். சமூக சகோதரத்துவம் என்பதை அடையமுடியாமல் தேசியம் எவ்வாறு இருக்கும் எனக் கேள்வி எழுப்பினார். அப்போது இருந்த நிலைமைகளை பரிசீலித்த அம்பேத்கர் இவ்வாறு வரையறுத்தார். Any claim for the sharing of power by the minority is called communalism, while monopolising the whole power by the majority is called nationalism" How can people divided into several thousands of castes be a nation? என்கிற கேள்வியை அவர் எழுப்பிக்கொண்டேயிருந்தார். அம்பேத்கர் பிராமணர் அல்லாதார் இயக்கங்களுடன் அவ்வப்போது இணக்கமாக இருந்தாலும் அவர்களை அவர் விமர்சிக்காமல் இல்ல. இது குறித்து குபேர் எழுதுவதை பார்க்கமுடியும். " Ambedkar said that the Non Brahmin parties prostituted their positions of power for providing jobs for their men and nothing more. They forgot the class from which they came. Ambedkar criticised that many of the Non- Brahmin partymen tried to become second class Brahmins; they have not abandoned Brahminism. They forgot to bring the nonbrahmin castes on equal footing. ( page 118) மகாராஷ்ட்ர அனுபவத்தைப் பார்த்து அம்பேத்கர் எழுதினார். The Non- Brahmins have effaced the memory of Jytoba Phooley completely. Not only that but that class has shamlessly betrayed his philosophy" பாராளுமன்ற ஜனநாயகம் என்பதை குறித்த தேர்ந்த வரையறையை அம்பேத்கர் நாட்டிற்கு வழங்கினார். இரத்தம் சிந்தாமல் சமூகத்தில் புரட்சிகரமான பொருளாதார மாற்றங்களை கொணரமுடியும் - அதற்கு கீழ்கண்ட நிபந்தனைகள் அவசியம் என்றார். 1. There should not be glaring inequlaities in society- வெளித்தெரியும் அசமத்துவம் ஏதும் சமூகத்தில் இருக்கக்கூடாது 2. Existence of Opposition- எதிர்கட்சியின் இருப்பு 3. equality in law and administration - சட்டம் மற்றும் நிர்வாகத்தில் சமத்துவம் 4. Observance of Constitutional morality- அரசியல் அமைப்பு சட்ட நெறிகளை பின்பற்றுதல் 5. No tyranny of the majority- பெரும்பான்மை கொடுமையின்மை 6. Moral order of society - சமூகமே நெறி ஒழுங்குடன் இருத்தல் 7. Public conscience. - பொது மனசாட்சி மொழிவாரி மாநிலம் குறித்தும் அம்பேத்கர் மாறுபட்ட சிந்தனை கொண்டவராகவே இருந்தார். ஒடுக்கப்பட்டவர் நலனுக்கு குந்தகமாகக் கூட அது அமையலாம் எனக் கருதினார். He said that the constituents in a federal state should not be on linguistic principles. The danger lies in creating linguistic provinces with the language of each province as its official language. Ambedkar stated to allow this is to allow the provinces to become independent nations. He favoured one language, many states formula ( page 126-27 kuber) சம்யுக்த மகாராஷ்ட்ரா சமிதி என்கிற பெயரில் டி ஆர் காட்கில், போடேடார், டாங்கே, சங்கர் ராவ், ஜெயகர் போன்ற பெரும் ஆளுமைகள் போராடிய போது அம்பேத்கர் தனது மாற்றுக்கருத்தையே மாநிலங்கள் சீரமைப்பு குழுவில் வைத்தார். According to him, linguism in the country was only another name for communalism. Those who are going to rule are not Marathas by speech , but Marathas by caste- the minories especially- kuber 132 அரசியல் அமைப்பு சட்ட அசெம்பிளியில் கே டி ஷா அவர்கள் முதல் ஷரத்தில் திருத்தம் கோரினார். India shall be a secular, federal, socialist union of states". இதற்கு அம்பேத்கர் கீழ்கண்ட பதிலை தனது விளக்கமாக அளித்தார். அவர் பதில் வழிகாட்டும் நெறிகள் சோசலிச திசையை கொள்கையைத்தான் கொண்டிருக்கின்றன என்பதாக அமைந்தது. If these Directive Principles are not socialistic in their direction and in their content, I fail to understand what more socialism can be. These socialistic principles are already embodied in our constitution" அம்பேத்கர் தொழிலக தொழிலாளிகளைப்போலவே விவசாயத் தொழிலாளர்களுக்கும் பி எஃப், பென்ஷன், இன்ஷ்யூரன்ஸ் போன்ற பாதுகாப்புகள் தரப்படவேண்டும் என அரசியல் சட்ட அசெம்பிளியில் பேசினார். விவசாயம் என்பதை State Industry ஆக்கவேண்டும் என்றே அவர் சொல்லிவந்தார். தரிசு நில மேம்பாட்டு திட்டம் மூலமாக விவசாயத்தொழிலாளர்க்கு நிலவிநியோகம் குறித்தும் அவர் பேசியிருக்கிறார். அம்பேத்கர் தன்னை தொழிலாளர் தலைவனாக பார்க்கவேண்டாம்- கம்யூனிட்டி தலைவனாகவே பாருங்கள் என கிரிப்ஸ் இடம் கூறியது ஏன் அவரை அப்படி பேசவைத்த வலிகள் என்ன என்பது ஆய்வுக்குரிய ஒன்று என குபர் குறிப்பிடுகிறார். John Dewey’s Pragmatism அம்பேத்கரிடம் செல்வாக்கு செலுத்தியதாக சொல்லமுடியும். பிரச்னைகளை தீர்வு கொடுக்கும் பலாலன்களை கொண்டு பார்க்கும் ஒருவகை இன்ஸ்ட்ருமெண்டலிசம் அம்பேத்கரிடம் செயல்பட்டதாக குபர் வரையறுக்கிறார். அவர் எதற்கும் அஞ்சாத துணிச்சலான அறிவுஜீவியாக விளங்கினார். அவரது சிந்தனைப்பாங்கை சமூக மனிதாபிமானம் social humanism என குபர் விளக்குகிறார். மானுட சமத்துவம், ஒவ்வொருவரும் அவரவவர் அளவில் இறுதியானவர், சமூக பொருளாதார, அரசியல் மதம் சார்ந்த உரிமை, எவரொருவர் தேவையை நிறைவு செய்வதும் அச்சத்திலிருந்து அப்புறப்படுத்துவதும் அவசியம், சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம் என்கிற கோட்பாடுகளை அனுசரித்தல், சுரண்டலிலிருந்து விடுவித்தல், பாராளுமன்ற ஜனநாயகம், அகிம்சை வழிப்பட்ட சமூக மாற்றம், எந்த இசத்தையும் அதுவே இறுதி என ஏற்காத மனநிலை, ஆன்மீக ஒழுங்கு, புத்தரின் போதனைகளான அன்பு, சகோதரத்துவம், சமத்துவம் போன்ற சிந்தனைகளை சமூக மனிதாபிமானம் கொண்டிருக்கும் என்கிறார் குபர். His rejection of Marxism and embracing Buddhism were reactionary steps. He had no class programme. It is inconceivable how he could achieve socialism by repudiating Marxism and making Buddhism an alternate to Marxism. In a way he had led the whole movement of workers and peasants into reactionary and metaphysical conceptions ( page 111) என்கிற கடுமையான விமர்சனம் குபேர் மதிப்பீட்டில் வருகிறது. மார்க்சியம் வகைப்பட்டு வந்தால்தான் அதை சோசலிசமாக ஏற்கவேண்டும் என்கிற அதீத நம்பிக்கைபாற்பட்ட விமர்சனமாக இதை பார்க்கமுடிகிறது. மார்க்சியத்திற்குள்ளேயே அறிவுலகையும் மீட்சியையும் காட்டும் பார்வையாகவும் இது குபேரிடம் இருக்கிறது. உதவிய ஆக்கங்கள் : 1. Ambedkar A Critical Study W N Kuber – PPH 2. Builders of Modern India Ambedkar Kuber Publication division 3. India and Communism Intro by Anand Teltumbde - Left word 4. Annihilation of Caste Dr Ambedkar 5. அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் தொகுதி 6 6. அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் தொகுதி 37 [RP 5.jpg] ஆசிரியரின் பிற நூல்கள் 1. மார்க்சியத் தடங்கள் 2. ரோசாலக்ஸம்பர்க் 3. போராளிகளின் குரல் 4. பகவத்கீதை பன்முகக் குரல்கள் 5. Trade Justice in Telecom 6. Selected Ideas of O.P Gupta 7. ஹெகல் துவங்கி.. 8. கார்க்கியின் அரசியல்வெளி 9. நவீன சிந்தனையின் இந்தியப் பன்முகங்கள் 10. காந்தியைக் கண்டுணர்தல் 11. நேருவின் மரபு 12. பெரியாரின் பொதுவுடைமை புரிதல் சிறு வெளியீடுகள் 1. ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா 2. சிகாகோ மேதின தியாகிகள் 3. பகுனின் போராட்ட வாழ்வும் அனார்க்கிசமும் 4. விடுதலைக்கு முன்னர் எம் என் ராய் 5. பிரடரிக் எங்கெல்ஸ் நட்பின் சிகரம் 6. நேதாஜி சுபாஷ் – கம்யூனிஸ்ட்கள் உறவும் உரசலும் www.pattabiwrites.in FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.