[] 1. Cover 2. Table of contents அப்பம் தின்ற முயல் அப்பம் தின்ற முயல்   பாவலர் நாரா. நாச்சியப்பன்     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ச. ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/appam_thindra_muyal} மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ச. ஐஸ்வர்யா - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: S.Iswarya - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/appam_thindra_muyal This Book was produced using LaTeX + Pandoc இந்த மின்னூலைப் பற்றி உங்களுக்கு இம்மின்னூல், இணைய நூலகமான, விக்கிமூலத்தில் இருந்து கிடைத்துள்ளது1 இந்த இணைய நூலகம் தன்னார்வலர்களால் வளருகிறது. விக்கிமூலம் பதிய தன்னார்வலர்களை வரவேற்கிறது. தாங்களும் விக்கிமூலத்தில் இணைந்து மேலும் பல மின்னூல்களை அனைவரும் படிக்குமாறு செய்யலாம். மிகுந்த அக்கறையுடன் மெய்ப்பு செய்தாலும், மின்னூலில் பிழை ஏதேனும் இருந்தால் தயக்கம் இல்லாமல், விக்கிமூலத்தில் இம்மின்னூலின் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கலாம் அல்லது பிழைகளை நீங்களே கூட சரி செய்யலாம். இப்படைப்பாக்கம், கட்டற்ற உரிமங்களோடு (பொதுகள /குனு -Commons /GNU FDL )2 [3] (http://www.gnu.org/copyleft/fdl.html) இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே, இந்த உரையை நீங்கள் மற்றவரோடு பகிரலாம்; மாற்றி மேம்படுத்தலாம்; வணிக நோக்கத்தோடும், வணிக நோக்கமின்றியும் பயன்படுத்தலாம் இம்மின்னூல் சாத்தியமாவதற்கு பங்களித்தவர்கள் பின்வருமாறு: - Balajijagadesh - Parvathisri - Balu1967 - Vasantha Lakshmi V - Jothieswari - Info-farmer - Krishh naa ------------------------------------------------------------------------ 1. ↑ http://ta.wikisource.org 2. ↑ http://creativecommons.org/licenses/by-sa/3.0/ 3. ↑ http://www.gnu.org/copyleft/fdl.html உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம். பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை. இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம். Universal (CC0 1.0) Public Domain Dedication This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode No Copyright The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission. This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx. பதிப்புரை முயல் குட்டியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? வெள்ளை வெளேரென்று பனி நிறத்தில் எவ்வளவு அழகாக இருக்கிறது. அதன் கண்களும் காதுகளும் எவ்வளவு அழகாக இருக்கின்றன. அது துள்ளிப் பாயும்போது மின்னல் பறப்பது போல் இருக்கும். அவ்வளவு வேகமாகப் பாயும். இவ்வளவு அழகான பத்து முயல் குட்டிகளை வைத்து திரு. நாரா நாச்சி யப்பன் உங்களுக்கு இங்கே பத்துக் கதைகளை எழுதித் தந்திருக்கிறார். பத்தும் பத்து விதமான கற்பனை. படிக்கப் படிக்கச் சுவையூட்டும் மிக விந்தையான இந்த முயல்கள், உங்கள் மனத்தை விட்டுப் போகா. இந்த முயல்கள் ஒவ்வொன்றும் உங்களுக்கு ஒவ்வோர் அருமையான கருத்தை விளக்குக்கின்றன. கருத்துக்குக் கருத்து-கதைக்குக் கதை-வாழ்க்கைக்கு வழிகாட்டி! இந்த அருமையான கதைகளை நீங்கள் படியுங்கள்-உங்கள் நண்பர்களைப் படிக்கச் சொல்லுங்கள்-உங்கள் தம்பி தங்கையருக்குச் சொல்லுங்கள். உங்கள் அருமைப் பெற்றோருக்கும் புதிய கதை சொல்லிக் களிப்படையச் செய்யுங்கள். உங்கள் வீடு இன்பமயமாகத் திகழ இந்தக் கதைகள் பயன்படும். -தமிழாலயம் அப்பம் தின்ற முயல் அது ஒரு மலைக்காடு. ஒரு பெரிய மலை. அதன் சரிவுகளில் பெரிய பெரிய மரங்கள் வளர்ந்து காடாய் மண்டிப் போய்க் கிடந்தது. அந்த மலைக் காட்டில் ஒரு குட்டி முயல் இருந்தது. ஒரு நாள் அந்தக் குட்டி முயல் காட்டுக்குள்ளே அங்கும் இங்குமாகத் துள்ளிப் பாய்ந்து குதித்துக் கும்மாளம் போட்டது. பாய்ந்து, பாய்ந்து ஒடிக் கொண்டிருந்த அந்தக் குட்டி முயலுக்குத் திடீரென்று ஒர் ஆசை தோன்றியது. மலை உச்சி வரை போய்ப்பார்த்து விடவேண்டும் என்பது தான் அந்த ஆசை. உடனே அது உச்சி நோக்கிப் பாய்ந்து செல்லத் தொடங்கியது. மரங்களுக்கிடையே புல்வெளிகளிலே குறுக்கும், நெடுக்குமாக வளர்ந்திருந்த செடிகளையும், கொடிகளையும், புதர்களையும் தாண்டிக் குதித்து மேலே, மேலே சென்று கொண்டிருந்தது. போகப் போக மலை உச்சி நெருங்கி வருவதாகத் தெரியவில்லை. மலை அவ்வளவு உயரமாக இருந்நது. குட்டி முயல் நினைத்த செயலை முடிக்காமல் தூங்காது போல் இருந்தது. சிறிதுகூட அயராது அது துள்ளிப் பாய்ந்து சென்று கொண்டிருந்தது. அது உச்சி சென்று சேர்ந்த நேரம் இருட்டி விட்டது. உச்சியில் நின்று அந்தக் குட்டி முயல் சுற்று முற்றும் பார்த்தது. மலையடிவாரத்தில் இருந்த பெரிய பெரிய மரங்களெல்லாம் சின்னச் சின்ன செடிகள் போல் காட்சியளித்தன. ஏரி, குளங்களெல்லாம் சிறிய, சிறிய பள்ளங்கள் போல் தோன்றின. கிழக்குப் பக்கத்தில் இருந்த கடல் ஓர் ஏரியைப் போல் காட்சியளித்தது. அப்பொழுது கடலின் அடி மட்டத்திலிருந்து வெள்ளை நிறமான ஓர் அப்பம் வெளிவந்தது. அந்த அப்பத்தைப் பார்க்க பார்க்கக் குட்டி முயலுக்கு அதைக் கடித்து தின்ன வேண்டும்போல் இருந்தது. உடனே கீழ் நோக்கிப் பாய்ந்தது. சிறிது தொலைவு கீழே இறங்கியவுடன் கிழக்குத் திசையில் திரும்பிப் பார்த்தது. அந்த அப்பம் மேலே வந்து கொண்டிருந்தது. கடலில் தோன்றி வந்த நிலவைத்தான் குட்டி முயல் அப்பம் என்று நினைத்தது. அப்பம் மேலே வந்து கொண்டிருக்கிறது. அது அருகில் வந்த உடன் பிடித்துத் தின்னலாம். ஏன் கீழே இறங்க வேண்டும். இவ்வாறு எண்ணிய குட்டி முயல் அந்த இடத்திலேயே நின்று மேலே வரும் அப்பத்தையே பார்த்துக் கொண்டிருந்தது. அப்பம் மேலே மேலே வந்தது. ஆனால் முயல் குட்டிக்கு அருகில் வரவில்லை. தொலைவிலேயே இருந்தது. தொலைவில் இருந்தபடியே வானத்தின் உச்சிக்குப் போய் விட்டது. மலை உச்சியிலிருந்து வானத்து உச்சியையே பார்த்துக் கொண்டிருந்த முயல் குட்டிக்கு அழுகை அழுகையாக வந்தது. அப்பம் எட்டவில்லையே, அப்பம் எட்டவில்லையே என்று கத்திக் கதறி அழுது கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக ஒரு காட்டு யானை வந்தது. ’யானையாரே, யானையாரே,உச்சியில்இருக்கும் அப்பம் எனக்கு எட்டவில்லை. உங்கள் நீண்ட துதிக்கையால் அதைப் பிடித்துத் தாருங்கள்" என்று குட்டி முயல் கேட்டது. யானை வானத்தை நோக்கித் தன் துதிக்கையை நீட்டி அப்பத்தைப் பிடிக்க முயன்றது. அந்த முயற்சியில் தன் முன்னங்கால் இரண்டையும் மேலே தூக்கி துதிக்கையை நீட்டிக் கொண்டு அது எழுந்து நின்ற பொழுது தடுமாறி மலைச்சரிவில் உருண்டு விழுந்து விட்டது. முயல்குட்டிக்கு மேலும் அழுகை அழுகையாக வந்தது. யானையார் விழுந்து விட்டார். அவரைக் காப்பாற்றவும் முடியவில்லை. அப்பத்தைப் பிடிக்கவும் முடியவில்லை. என்ன செய்வேன் என்று சொல்லி அது அழுது கொண்டிருந்தது. அப்போது அந்தப் பக்கமாக ஒட்டைச்சிவிங்கி ஒன்று வந்தது. குட்டிமுயல் அதைக் கூப்பிட்டது. “சிவிங்கியாரே,சிவிங்கியாரே,வானத்து உச்சியில் உள்ள அப்பத்தைப் பிடிக்க என்னால் முடியவில்லை. உங்கள் நெட்டைக் கழுத்தை நீட்டி அதை எனக்குப் பிடித்துத் தாருங்கள்” என்று குட்டி முயல் கேட்டது. பாவம் குட்டி முயல் வானத்து அப்பத்துக்காக மிகவும் ஏங்குகிறது; பிடித்துத் தான் கொடுப்போமே என்று கூறிக் கொண்டே ஒட்டைச்சிவிங்கியார் தன் நெட்டைக் கழுத்தை நீட்டி அந்த அப்பத்தைப்பிடிக்க முயன்றார். ஆனால் அந்த வானத்து அப்பத்தை அவரால் எட்டிப் பிடிக்க முடியவில்லை, “குட்டி முயலே, குட்டி முயலே இங்கே வா. என் தலையில் ஏறிக்கொள். உன்னை நான் வீசுகிறேன். நீ பாய்ந்து சென்று அந்த அப்பத்தைப் பிடித்துக் கொள்” என்று கூறியது. உடனே குட்டி முயல் பரபரவென்று ஒட்டைச் சிவிங்கியின் மேல் ஏறி முதுகுக்குச் சென்று கழுத்தின் வழியாகத் தலை உச்சியை அடைந்தது. அதன் தலையில் ஏறி நின்றவுடன் ஒட்டைச் சிவிங்கி தன் தலையை வேகமாக ஆட்டி குட்டி முயலை ஒரு தட்டுத் தட்டி உயரத்தில் வீசி விட்டது. ஒட்டைச் சிவிங்கியால் வீசியெறியப்பட்ட அந்தக் குட்டி முயல் அம்புபோல் பறந்து சென்று அந்த வானத்தின் அப்பத்தை அடைந்தது. அந்த வானத்து அப்பம் குட்டிமுயலைப் போல் ஆயிரம் மடங்கு பெரிதாய் இருந்ததால், முயலால் அதை கடித்துத் தின்ன முடியவில்லை. அந்த அப்பம் தான் முயலை விழுங்கி விட்டது. குழந்தைகளே, நிலாவை உற்று நோக்குங்கள். அதன் நடுவில் அந்தக் குட்டி முயல் இருப்பதை இன்றும் காணலாம். ஒநாய் வயிற்றில் ஒரு குட்டி முயல் ஒரு காட்டில் ஒரு பெரியமுயல் இருந்தது. அதற்கு நான்கு குட்டிகள். அந்தக் குட்டிகள் மெல்ல மெல்ல வளர்ந்தன. உடம்பில் வலு ஏற்பட்டதும் துள்ளிஓடி விளையாடின. ஒடத் தெரிந்து விட்ட அவற்றிற்கு நல்லது கெட்டது தெரியவேண்டும் என்று தாய் முயல் விரும்பியது. இல்லாவிட்டால் வெள்ளை மனம் படைத்த அவற்றைத் தீங்கு வந்து சூழ்ந்து கொள்ளும் என்று அது அஞ்சியது. ஒரு நாள் தாய்முயல் குட்டிமுயல்களைக் கூட்டிக் கொண்டு காட்டைச் சுற்றிக் காட்டியது. மரம், செடி கொடிகளை யெல்லாம் அது காட்டியது. எந்தெந்த இலைகளைத் தின்னலாம், எது எதைத் தின்னக்கூடாது, எப்படி அடையாளம் கண்டு பிடிப்பது என்றெல்லாம் அது விளக்கிச் சொல்லியது. அது ஒவ்வொன்றையும் தெளிவாக விளக்கிச்சொல்லச் சொல்ல மூன்று குட்டிமுயல்கள் மிக உன்னிப்பாகக் கேட்டுத் தெரிந்து கொண்டன. சொன்னவற்றையெல்லாம் திரும்பத் திரும்பக் கேட்டுச் சொல்லிப் பார்த்துத் தெரிந்து கொண்டன. ஆனால் ஒரு முயல்குட்டி அப்போது, தாய் சொன்ன செய்திகளைக் கவனிக்காமல், பாப்பாத்திப் பூச்சிகளைத் துரத்திப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தது. அது தன் வாழ்க்கைக்கு வேண்டிய அரிய செய்திகளைத் தெரிந்து கொள்ளாமல் விளையாடிக் கொண்டிருந்தது. தாய் முயல் அடுத்த பாடமாகப் புல் வகைகளைப் பற்றி விளக்கிக் கூறியது. எந்தெந்தப் புல் சுவையாக இருக்கும். எது தின்றால் உடம்புக்கு நல்லது, எது கெட்டது என்றெல்லாம் விளக்கிச் சொல்லியது. சில முட் செடிகளைக் காட்டி, இவற்றின் இலைகள் இருக்கிற பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கக் கூடாது. நச்சுத்தன்மையுள்ளவை என்றெல்லாம் எடுத்து விளக்கியது. அந்த ஒரு முயல் குட்டி தவிர மற்ற குட்டிகள் எல்லாவற்றையும் கவனமாகத் தெரிந்து கொண்டன. அதுமட்டும் அங்குமிங்கும் துள்ளிக் குதித்து ஏதேதோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அடுத்தாற்போல் பெரிய முயல், குட்டிகளுக்கு விலங்குகளைப் பற்றிக் கூறியது. இதோ இந்தச் சிறிய அடிச்சுவடுகள் அணிலின் சுவடுகள். கீறல் கீறலாக இருக்கும் இந்தச் சுவடுகள் காட்டுக் கோழிச் சுவடுகள். கலைமான்களின் சுவடு களைப் பார்த்தீர்களா? பெரியவை. கலைமான்களும் பெரியவைதான். ஆனால் நமக்கு அவற்றால் துன்பமில்லை. குள்ளநரிகள் ஓநாய்கள் நமக்குத் துன்பம் தருபவை. ஏன் நம்மையே உண்டு வாழ்பவை. அவற்றின் சுவடுகளை நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள். அவை சென்ற பாதையில் கூடச் செல்லக்கூடாது. மூன்று முயல் குட்டிகளும் தாய் சொன்ன அந்தச் செய்திகளை நன்றாகக் கவனித்து மனத்தில் இருத்திக் கொண்டன. ஓநாய்கள், நரிகள் வாழக் கூடிய இடங்கள், அவை கையாளும் போர்த்தந்திரங்கள், மற்ற விலங்குகளை அவை வேட்டையாடும் முறைகள், உணவாகக் கொள்ளும் வழக்கம் எல்லாவற்றையும் விரிவாகக் கேட்டுத் தெரிந்து கொண்டன. நான்காவது முயல்குட்டியோ, எந்தக் கவலையும் இல்லாமல் வெட்டுக் கிளிகளை விரட்டி விரட்டி விளையாடிக் கொண்டிருந்தது. நாள்தோறும் தாயின் சொல்லைக் கவனித்துக் கேட்டுக் கட்டுப்பாட்டோடு வளர்ந்த முயல் குட்டிகள் பெரிதாக வளர்ந்தன, நான்காவது குட்டியும் பெரிதாகி விட்டது. இனிமேல் நீங்கள் விருப்பம் போல் காட்டுக்குள் போய் வரலாம். என் துணை வேண்டியதில்லை. இனி மேல் நீங்களே உங்களைப் பாதுகாத்துக் கொண்டு வாழுங்கள்! என்று கூறி அவற்றைத் தனிவாழ்க்கை நடத்த அனுப்பியது தாய், அவை விடுதலையுணர்வோடு அங்கும் இங்கும் ஓடின. உணவைத் தேடின. பசித்தபோது உண்டன. தூக்கம் வந்த போது புதர்களில் பதுங்கின. இன்பமாக வாழ்ந்தன. நான்காவது முயல்குட்டியும் காட்டுக்குள் ஓடியது. பாப்பாத்திப் பூச்சிகளையும், வெட்டுக்கிளிகளையும் துரத்தி விளையாடியது. பசி வந்தது. சில பச்சை இலைகளைக் கொரித்துத்தின்றது. அவை நச்சுத் தன்மையுள்ளவை. வயிற்றில் இறங்கியவுடன் குட்டி முயல் மயங்கி விழுந்தது. மயக்கம் தெளிந்து அது எழுவதற்கு முன் ஒர் ஒநாய் அந்த வழியாக வந்தது. லபக்கென்று அதை விழுங்கியது. அவ்வளவு தான் அதன் கதை முடிந்தது. பொறுப்பற்றவர்களின் வாழ்க்கை.பொசுக்கென்று போய்விடும் என்பதற்கு அந்தக் குட்டி முயலின் வாழ்க்கை ஒர் எடுத்துக்காட்டு. பள்ளிக்கூடத்தில் முயல் குட்டிகள் காடு முழுவதும் ஒரே பேச்சாய் இருந்தது. விலங்குகள் ஒன்றை ஒன்று சந்திக்கும்போது விசாரித்துக் கொண்டன. “கழுதை அக்கா, உன் குட்டியைச் சேர்த்து விட்டாயா?” “இல்லை குரங்கண்ணா. என் குட்டிக்கு கழுதை வயது ஆகிவிட்டதாம். அந்த ஆசிரியர் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்.” “புலிக்குட்டியைக் கூட சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டாராமே. எல்லாப் புலிகளும் உறுமிக் கொண்டிருக்கின்றன.” “அதற்குக் காரணம் தெரியுமோ? புலிக்குட்டியின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு மான்குட்டியும், ஆட்டுக்குட்டியும் பாடம் படிக்கவா முடியும்.” இப்படிப்பட்ட பேச்சுகளெல்லாம் அந்தக் காட்டில் பட்டணத்து அல்சேசன் அண்ணாவி தொடங்கியுள்ள பாலர் பள்ளி பற்றித்தான். பாலர் பள்ளியில் மென்மையான இயல்புள்ள விலங்குகளின் குட்டிகளுக்கு மட்டும்தான் இடம் உண்டு என்று அல்சேசன் அண்ணாவி அறிவித்து விட்டார். இதில் வன்மையான இயல்புள்ள விலங்குகளுக்கு முதலில் கோபம் கோபமாக வந்தது. ஆனால் அண்ணாவி விளக்கஞ் சொன்ன பிறகு அவை எதிர்ப்பை நிறுத்திக் கொண்டு விட்டன. பெரியவர்கள் எடுத்துச் சொன்னதின் பேரில் கடைசியாக கழுதைக் குட்டிகளையும் பாலர் பள்ளியில் அண்ணாவி சேர்த்துக் கொண்டு விட்டார். பள்ளிக்கூடம் தொடங்கி பத்து நாள் கழித்துத்தான் முயலம்மாவுக்குச் செய்தி தெரியும். முயலம்மா செய்தி தெரிந்த மறுநாளே தன் நான்கு குட்டிகளை யும் அழைத்துக் கொண்டு காட்டுப்பள்ளி கூடத்துக்குச் சென்றது. பட்டணத்து அல்சேசன் அண்ணாவி இந்த நான்கு முயல் குட்டிகளையும் உற்றுப்பார்த்தார். அவை பள்ளிக் கூடத்துக்குள் நுழைந்தவுடன் பள்ளிக்கூடமே களை கட்டி விட்டது. அங்கு இருந்த எல்லா மாணவ, மாணவிகளைக் காட்டிலும் இந்த முயல் குட்டிகளே அழகாய் இருந்தன. நான்கும் வெள்ளை, வெளேரென்று பனிக்கட்டியின் நிறத்தில் பளிச்பளிச்சென்று அழகாய் இருந்தன. அவற்றின் அழகுக்காகவே அண்ணாவி பள்ளியில் சேர்த்துக் கொண்டார். அழகாக மட்டும் அல்ல அறிவுள்ள குழந்தைகளாகவும் அந்த முயல் குட்டிகள் இருந்தன.கேட்ட கேள்விகளுக்கெல்லாம் கடகடவென்று பதில் கூறின. விளையாட்டிலும், அவை நல்ல மதிப்பெண்கள் வாங்கின. பள்ளிக்கூடம் தொடங்கி ஒரு வாரம் ஆயிற்று. தன் மாணவர்கள் எல்லாம் ஒருநாள் கூட குளிக்காமல் வருவதை அண்ணாவி மோப்பம் பிடித்தே அறிந்து கொண்டார். உடனே அவர் ஒரு கட்டளையிட்டார். நாள்தோறும் குளித்து, துவைத்த சீர் உடைகளையே அணிந்து வரவேண்டும் என்று கட்டாயமாகக் கூறி விட்டார். எல்லாக் குட்டிகளும் மறு நாள் காலையில் குளிப்பதற்காக காட்டுக் குளத்திற்கு சென்றன. முதன் முதலாகச் சென்ற எருமைக் கன்றுகள் குளத்தில் இறங்கித் தண்ணிரைக் கலக்கி விட்டன. ஆதலால் குளத்துநீர் முழுவதும் சேறும் சகதியும் ஆகிவிட்டது. பின்னால் வந்த மற்ற குட்டிகளெல்லாம் குளிக்காமல் திரும்பி விட்டன. அக்கம் பக்கத்தில் வேறு குளம் ஒன்றும் கிடையாது. அவை என்ன செய்யும். குளத்து நீர் தெளிந்த பிறகுதான் குளிக்கலாம். அண்ணாவியிடம் சொல்லி மறுநாள் காலையில் மற்ற எல்லோரும் குளித்த பிறகு தான் எருமைக் கன்றுகள் குளிக்க வேண்டும் என்று ஆணை பெற்றன. இதற்கிடையில் முயலம்மா பட்டணத்திற்குச் சென்று ஒரு மரத்தொட்டியும் சோப்புக் கட்டியும், புதிய சீர் உடைகளையும் வாங்கிக் கொண்டு வந்தது. பிறகு தன் குட்டிகளை அழைத்துக் கொண்டு நாலு கால் பாய்ச்சலில் மலையடிவாரத்திற்குச் சென்றது. அங்கிருந்த தெளிந்த நீரோடையில் தண்ணிர் பிடித்தது. மரத்தொட்டியில் நீரை நிரப்பி அதற்குள் தன் குட்டிகளை விட்டு குளிப்பாட்டியது. ஒவ்வொரு குட்டியாக பிடித்து சோப்புத் தேய்த்து தலையில் நீர் ஊற்றி அழகாக குளிப்பாட்டியது. அதன் பிறகு குட்டிகளின் உடலில் மணப்பொடி தூவி சீர்உடை அணிந்து புல் உணவு தந்து பள்ளிக்கு அனுப்பியது. பள்ளிக்கூடத்திற்குள் நான்கு முயல் குட்டிகளும் நுழைந்த போது கம கம வென்று மணம் கமழ்ந்தது. மற்றகுட்டிகளெல்லாம். ஏதோ காரணம் சொல்லி குளிக்காமல் வந்தன. ஆனால் முயல் குட்டிகள் மட்டும் அண்ணாவியின் பேச்சை மதித்து குளித்து அழகாக வந்திருந்தன. அல்சேசன் அண்ணாவிக்கு அந்த முயல் குட்டிகளை பார்க்கப்பார்க்கப் பெருமையாய் இருந்தது. அண்ணாவி மற்ற மாணவர்களைப் பார்த்து “டே குட்டிகளா நீங்களும் படிக்க வந்து விட்டீர்களே.இதோ பாருங்கள் இந்த முயல் குட்டிகள் குளித்து எவ்வளவு அழகாக வந்திருக்கின்றன” என்று கேட்டார். உடனே குரங்குக் குட்டி ஒன்று எழுந்து நின்றது. “அண்ணாவி ஐயா நீங்கள் ஒரு நாள் முயலம்மா வீட்டுப் பக்கம் போய் வாருங்கள். அப்புறம் சொல்லுங்கள்” என்று சொல்லியது. அந்தக் குரங்குக் குட்டி ஏன் இப்படிச் சொன்னது என்று அண்ணாவிக்குப் புரியவில்லை. அன்று மாலை பள்ளிக்கூடம் விட்டதும் அண்ணாவி முயல் குட்டிகளைப் பின் தொடர்ந்து சென்றது. முயலம்மா தன் குட்டிகளோடு ஒரு புதரின் நடுவில் வாழ்ந்து வந்தது. மாலையில் புதருக்கு வெளியே வந்து குட்டிகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது. குட்டிகள் நான்கும் துள்ளித்துள்ளிப் பாய்ந்து ஒடிச் சென்றன. அம்மாவைச் சுற்றிக் கொண்டன. அம்மாவும் ஒவ்வொன்றையும் முத்தம் இட்டது. தன் நாவினால் ஒவ்வொரு குட்டியையும் தடவிக் கொடுத்தது. தொலைவிலேயே இந்த அன்புக் காட்சியை அண்ணாவி அல்சேசன் பார்த்தது.ஆனால் அதனால் அந்தப் புதரின் அருகில் நெருங்கிச் செல்ல முடிய வில்லை. அந்த முயல்கள் வாழ்ந்த இடத்திலிருந்து வந்த தீய நாற்றம் அதை நெருங்க விடவில்லை. இத்தனை அழகாகவும் பளபளப்பாகவும் பார்க்கப் பரிசுத்தமாகவும் இருக்கும் இந்த முயல்கள் வாழும் இடம் இப்படி இருக்கிறதே. ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொரு குறை இருப்பது இந்த உலகத்து இயற்கை போலும். எல்லா நிறையும் உள்ளவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் போல் இருக்கிறது என்று அண்ணாவி நினைத்துக் கொண்டது. மறுநாள் முதல் அண்ணாவி அல்சேசன் எல்லா மாணவர்களையும் ஒன்றுபோல் நடத்தியது. உயர்ந் தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடின்றி எல்லாக்குட்டி களையும் சமமாக நடத்தியது. அதனால் அண்ணாவியின் புகழ் காடெங்கும் பரவியது. அண்ணாவி ஓர் அதிசய ஞானி என்று அந்தக் காட்டு விலங்குகள் பேசிக்கொண்டன. அது தொடங்கிய பாலர் பள்ளி சீரும் சிறப்புமாக நடந்தது. மரக் கிளையில் ஒரு முயல் குட்டி பொழுது விடியும் நேரம். வானத்தில் இருந்த விண்மீன்கள் ஒவ்வொன்றாக மறைந்து கொண்டிருந்தன. ஆயிற்று இன்னும் ஒன்றுதான். அதுவும் மறைந்துவிட்டது. கிழக்கில் செங்கதிர் வண்ணப்பந்து போல் தலை நீட்டிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் முன் திட்டமிட்டபடியே முருகனும் மாதவனும் முயல் வேட்டைக்குப் புறப்பட்டார்கள். இருவர் கையிலும் வேட்டைத் துப்பாக்கிகள் இருந்தன. மாதவன் வனத்துறையில் ஒரு பெரிய அதிகாரி. அவரிடம் கண்ணன் என்ற வேட்டை நாய் ஒன்று இருந்தது. “கண்ணா!” என்று அழைத்தால் பாய்ந்தோடி வரும். சொன்ன வேலையைச் சொன்னபடி செய்யும். முயல்களை விரட்டிப் பிடிப்பதில் மிகத் திறமையுடையது கண்ணன். அப்படிப்பட்ட நாயை அன்று அவர்கள் அழைத்துச் செல்லவில்லை. அது ஒரு பாறையிலிருந்து சறுக்கி விழுந்ததால், காலில் சுளுக்கு ஏற்பட்டு வீட்டிலேயே தங்கி மருந்து போட்டுக் கொண்டிருந்தது. கண்ணன் கூட வராதது ஒரு பெருங் குறை. முயல்களைக் கண்டு பிடிப்பதற்கு அவர்கள் மிக அலைய வேண்டியதாயிற்று. கண்ணன் வந்திருந் தால் மோப்பம் பிடித்தே முயல்கள் இருக்கும்.இடத்தை அறிந்து விடும். முருகனும் மாதவனும் உச்சிப்பொழுது வரை அலைந்தும் ஒரு முயல் கூடக் கண்ணில் அகப் படவில்லை. “பசிக்கிறது உணவுண்ட பிறகு தேடலாம்.” என்று முருகன் சொல்லவே, இருவரும் ஒரு மரத் தடிக்குச் சென்றார்கள். நிழலில் உட்கார்ந்து கட்டிக் கொண்டு வந்திருந்த தயிர்ச்சோற்றைப்பையிலிருந்து எடுத்தார்கள். அப்போது பக்கத்தில் இருந்த ஒரு புதருக்குள் ளிருந்து ஒரு முயல் பாய்ந்தோடியது. சோற்றுப் பொட்டலத்தை அப்படியே போட்டுவிட்டு அது பாய்ந்த திசையில் ஓடினார்கள். ஆனால் எவ்வளவு தொலை ஒடியும் மீண்டும் அது கண்ணில் படவே இல்லை. மீண்டும் சோர்ந்து போய் உணவு உண் பதற்காக மரத்தடிக்கு வந்தார்கள். மரத்தடியில் உட்கார்ந்து மீண்டும் கட்டுச் சோற்றை எடுக்கும்போது பக்கத்துப் புதர் சல சலத்தது. ஒருமுயல் அவர்கள் முன்னேகுதித்தது. பர பரவென்று ஏறி எதிரில் இருந்த ஓர் அரச மரத்தின் கிளையில் குந்திக் கொண்டது. அவர்களை உற்றுப் பார்த்தது. மாதவன் வியப்புடன் சொன்னார். “நானும் வனத்துறையில் பத்து ஆண்டுகளாகப் பணி புரிகிறேன். மரமேறும் முயலை இது வரை பார்த்ததே யில்லை. இது ஒரு விந்தைதான்!” [] “விந்தையல்ல; மூடத்தனம்’ என்று ஒருகுரல் கேட்டது.” இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். மற்றொரு வனத்துறை அதிகாரி குமரன் என்பவர் அவர்களை நோக்கி நடந்து வந்தார். “குமரன், அதோ பார்த்தாயா? மரக்கிளையில் ஒரு முயல் குட்டி! நீ இதுவரை முயல் குட்டி மரமேறிப் பார்த்ததுண்டா?” என்று மாதவன் கேட்டார்! காலங் கெட்டுவிட்டது" என்றார். “கொலம் கெடவில்லை; உங்கள் கண் தான் கெட்டுவிட்டது! கண்களைக் கசக்கிக் கொண்டு நன்றாகப் பாருங்கள்!” என்றார் குமரன். முருகனும் மாதவனும் உற்றுப் பார்த்தனர். “உண்மையில் மரக்கிளையில் ஏறி உட்கார்ந்து கொண்டிருந்தது முயலல்ல; ஒரு வெள்ளைப் பூனைக் குட்டி!” அந்தப் பூனைக் குட்டி எழுந்து நின்று அவர்களைப் பார்த்து "மியாவ்’ என்றது. “நாங்கள் சரியான அறிவிலிகள்!” என்று கூறிச் சிரித்துக் கொண்டே தயிர்ச் சோற்றுப் பொட்டலத்தைப் பிரித்தனர். இரண்டு பொட்டலங்களை மூன்று பேரும் பங்கு போட்டுக் கொண்டனர். அந்த முயல் வேட்டையை நினைத்துப் பார்த்தால் இன்றைக்கும் அவர்களுக்குச் சிரிப்பு வருகிறது! பட்டணத்துக்குச் சென்ற குட்டி முயல்கள் ஒரு காட்டில் ஒரு முயல் இருந்தது. அதற்கு ஒரு நாள் பொழுதே போகவில்லை. காட்டுக்குள் எங்கெங்கோ துள்ளிக் குதித்து ஒடியது. புல்வெளிகளில் பாய்ந்து ஒடி நல்ல அருகம்புல்லாகத் தேர்ந்தெடுத்துத் தின்றது. நெல் வயல்களில் புகுந்து விளையாடியது. காவற்காரன் கம்பெடுத்ததும் ஒரே தாவில் வேகமாய்த் தாண்டி விழுந்து எழுந்து ஓடியது. - பூஞ்சோலைகளில் புகுந்து அங்கு பூத்திருந்த வகை வகையான பூக்களின் மணத்தைச் சுவைத்தது. பூஞ்செடிகளின் இளந்தளிர்களைக் கொரித்துச் சுவைபார்த்தது. மூங்கிற் புதர்களின் மத்தியிலே பாய்ந்து சிலம்பவித்தை யாடியது. என்ன செய்தும் பொழுதுபோகவில்லை. மீதிப் பொழுதை என்ன செய்து கழிப்பது என்று அதற்குப் புதிராய் இருந்தது. வெட்டிப்பேச்சுப் பேசுவதற்குக் காட்டில் யாரும் கிடைக்காததால் அது நகரத்துக்குப் போவதென முடிவு செய்தது. தனியாகப் போவதை விடத் துணைக்கு யாராவது வந்தால் நன்றாயிருக்குமே என்று அந்த முயல் நினைத்தது. அப்படி அது நினைத்துக் கொண்டிருக்கும் போது அந்த இடத்திற்கு ஒரு குட்டி முயல் வந்தது. அந்தக் குட்டி முயலைப் பார்த்து இந்த ஆண் முயல் கேட்டது. “ஏய் குட்டி, எங்கே கிளம்பி விட்டாய்?” ‘அண்ணா, காலையிலிருந்து பொழுதே போகவில்லை. அதுதான் உன்னைத் தேடிவந்தேன்’ என்றது குட்டி முயல். - “என்னைத் தேடி எதற்கு வந்தாய்? என்னிடம் வந்தால் பொழுது போய்விடுமா!” என்று கேட்டது ஆண் முயல். " நீ பல இடங்களுக்கும் செல்கிறவன். உன் னிடம் வந்தால் ஏதாவது கதை சொல்லுவாய். பொழுது பொடுக்கென்று போய்விடும் " என்று கூறிய குட்டி முயல். எனக்கு கதை சொல்லத்தெரியாது. நான் இப்போது நகரத்துக்குப் புறப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். நீயும் கூட வருகிறாயா?" என்று கேட்டது ஆண்முயல், நகரத்தில் உனக்கு என்ன வேலை?" என்று கேட்டது குட்டி முயல். “வேலையில்லாமலா நகரத்துக்குப் போகிறேன். எனக்கு நிறைய வேலையிருக்கிறது. நீ வருகிறாயா என்ன? வருவதாய் இருந்தால் தொண தொண வென்று பேசக்கூடாது?” என்று கட்டளையிட்டது ஆண் முயல். - குட்டி முயல் தொந்தாவு செய்வதில்லை என்று வாக்குறுதி கொடுத்தது. - உடனே இரண்டு முயல்களும் சோடியாகப் புறப்பட்டன. மின்னல் வெட்டியது போல் அவை துள்ளித் துள்ளி ஓடிப் பட்டணத்து எல்லையை அடைந்தவரை யாரும் அவைகளைத் தடைப்படுத்தவில்லை. நகர எல்லையில் ஒரு விளையாட்டு வெளி.அங்கு சின்னஞ் சிறு பிள்ளைகள் இரண்டு பேர் பந்தாடிக் கொண்டிருந்தார்கள். முயல்கள் அந்த இடத்தையடைந்தன. - அந்தப் பிள்ளைகள் பந்து விளையாடுவதை இரண்டு முயல்களும் கவனித்துக் கொண்டிருந்தன. பந்து இரண்டு புறமும் போய்ப் போய் மாறிவருவது அழகாகத்தான் இருந்தது. ஆனால் முயல் பாய்வதைப் போல் அப்படிச் சுழித்துத் திரும்பித் தாவினால் எவ்வளவு அழகாய் இருக்கும். அந்தப் பிள்ளைகளுக்கு தங்கள் விளையாட்டைக் காட்ட வேண்டும் என்று இரண்டு முயல்களும் நினைத்தன. ஆண்முயலும் குட்டிமுயலும் அந்தப் பந்தின் ஊடாகப் பாய்ந்தன. இங்கும் அங்குமாகச் சுழித்துத் திரும்பித் தாவி விளையாடின. அந்தச் சிறுவனும் சிறுமியும் முயல்களின் விளையாட்டை மிக ஆவலோடு கவனித்தார்கள். அவர்களுக்கு அந்த முயல்களைப் பிடித்துத் தங்கள் மடியில் வைத்துக் கொள்ளவேண்டும் என்று ஆசையாய் இருந்தது. அந்த முயல்களை நோக்கி ஓடி வந்தார்கள். ஆனால் முயல்கள் பிடிபடாமல் தப்பிக்கொண்டேயிருந்தன. முயல்களைப் பிடிக்க முடியவில்லை என்றவுடன் அந்தச் சிறுமி தரையில் உட்கார்ந்து கொண்டு அழுதாள். சிறுவன் அவளை அழாமல் இருக்கும்படி கேட்டுக் கொண்டான். ஆனால் அவள் தொடர்ந்து அழுது கொண்டிருந்தாள். ஆண்முயல் அதைப் பார்த்து இரக்கங் கொண்டது. மெல்ல அந்தச் சிறுமியின் அருகில் சென்றது. குட்டி முயலும் அதைத் தொடர்ந்து சென்றது. “முத்தம்மா, கண்ணைத் திறந்து பார். முயல்கள் உன்னிடம் வந்து விட்டன” என்று சிறுவன் கத்தினான். அந்தச் சிறுமி அழுகையை நிறுத்தி விட்டுக் கண்ணைத் திறந்தாள். அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இரண்டு முயல்களையும் இரண்டு கைகளாலும் முதுகில் தடவிக் கொடுத்தாள். அன்போடு வாரித் துக்கி மடியில் வைத்துக் கொண்டு மாறி மாறி முத்தம் கொடுத்தாள். முத்தம் முத்தமாக அவள் தொடர்ந்து முத்தமழை பொழிவதைப் பார்த்துத்தான் அவளுக்கு முத்தம்மா என்று பெயர் வைத்தார்களே என்னவோ! அண்ணா, இந்த முயல்களை நாம் வீட்டுக்குக் கூட்டிச் செல்வோமா என்று முத்தம்மா கேட்டாள். அவனும் ஒப்புக் கொண்டான். அவர்கள் தங்கள் வீட்டுக்கு முயல் இரண்டையும் தூக்கிக் கொண்டு சென்றார்கள். [] அன்று முழுவதும் முயல்களை வைத்துக் கொண்டு அவர்கள் பொழுது போக்கினார்கள். முயல்களுக்கும் அந்தக் குழந்தைகளோடு இருப்பது இன்பமாயிருந்தது. அன்புள்ள குழந்தைகள். ஆசையோடு விளையாடினார்கள். அவ்வப்பொழுது இரை கொடுத் தார்கள். பேசிச் சிரித்துக் கல கலவென்று இருந்தார்கள். முயல்களுக்குப் புதிய இடத்தில் பொழுது மிக மகிழ்ச்சியாகக் கழிந்தது. மறுநாள் காலையில், அந்தப் பிள்ளைகள் இரண்டு பேரும் பள்ளிக் கூடம் சென்று விட்டார்கள். முயல்களுக்குப் பொழுது போவது மிகக் கடுமையாக இருந்தது. பிள்ளைகள் இல்லாமல் நாம் இங்கிருப்பது தண்டனையனுப்பவிப்பது போல் இருக்கிறது என்று குட்டி முயல் கூறியது. வா நாம் காட்டுக்கே போய் விடுவோம் என்று ஆண்முயல் அழைத்தது. பேசி முடிவெடுத்தவுடன்அவை அங்கிருந்து புறப் பட்டன. துள்ளித் துள்ளிப் பாய்ந்தோடித் தங்கள் காட்டுக்கு வந்து சேர்ந்தன. நகரத்துப் பிள்ளைகளைப் பற்றியும், அவர்கள் அன்பைப்பற்றியும், அவர்கள் வீட்டைப் பற்றியும் தோட்டத்தைப் பற்றியும் அவை மற்ற முயல்களிடம் எடுத்துச் சொல்வதிலேயே நன்றாகப் பொழுது போயிற்று. ஆறு நாள் ஆயிற்று. அவற்றிற்கு மறுபடியும் அந்தப் பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. இந்தத்தடவை கூட இரண்டு முயல் குட்டிகள் அவற்றுடன் கிளம்பின. - நான்கு முயல்களும் அந்த சிறுவனும் சிறுமியும் இருக்கும் வீட்டுக்கு வந்தன. உரிமையோடு உள்ளே நுழைந்தன. அந்தப் பிள்ளைகளுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நான்கு முயல்களோடும் அவர்கள் விளையாடினார்கள். . அன்று மாலையே முயல்கள் காட்டுக்குத் திரும்பின. “சமர்த்து முயல்கள்! அடுத்த ஞாயிற்றுக் கிழமை கட்டாயம் வந்துவிடுங்கள்” என்று அந்தச் சிறுமி டாட்டா கூறினாள். - அதன்படியே நான்கு முயல்களும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பட்டணத்து வீட்டுக்குச் சென்று வருவதை வழக்கமாக்கிக் கொண்டன. ஒரு முயல் குட்டி சாபம் போட்டது ஒரு காட்டில் ஒரு குட்டி முயல் இருந்தது. ஒரு நாள் அது ஒரு பாறையின்மேல் ஏறியது. அதன் உச்சியில் ஏறி நின்று பார்த்தது. சிறிது தொலைவில் உள்ள நிலத்தில் பச்சைப் பசேலென்று புல் வளர்ந்திருந்தது. நீள நீளமாகத் தளதள வென்று வளர்ந்திருந்த புல் வெளியைக் கண்டது. இளம்பச்சைப் புல் நிறைந்திருந்த அந்த நிலம் பார்க்கப் பார்க்க அழகாயிருந்தது. முயல் குட்டிக்கு அந்தப் புல்லைக் கடித்துக் கடித்துத் தின்ன வேண்டும் என்று ஆசையாயிருந்தது. பாறையிலிருந்து துள்ளிக் குதித்தது. தாவித்தாவி அந்தப் புல்வெளியை நோக்கி ஓடியது. அங்கும் இங்குமாக ஒடி ஒடி ஆசைதிரப் புல் நுனிகளைக் கடித்துக் கடித்துத் தின்றது. ஒரு புல்லைக் கடிக்கப் போகும் போது கூர்மையாயிருந்த அந்தப் புல்லின் தாள் முயலின் மூக்கை அறுத்து விட்டது. சிறிது குருதி வழிந்தது. எரிச்சலோடு கூடிய வலி ஏற்பட்டது. முயல் குட்டிக்குச் சினம் பொங்கியது. இந்தப் புல் என் மூக்கையறுத்துவிட்டது. என்ன திமிர் இதற்கு! கடவுளே! இந்தப் புல்லெல்லாம் எரிந்து சாம்பலாகப் போகட்டும் என்று சாபம் போட்டது. [] பிறகு மூக்குப் புண்ணோடு தான் இருக்கும் இடத்திற்குத் திரும்பி வந்தது. சிறிது நேரத்தில் தூங்கிப் போய் விட்டது. திடீரென்று அந்தப் புல்வெளியெங்கும் தீப்பற்றிக் கொண்டது. நெருப்புப் பட்டு அந்தப் புல் அனைத்தும் கருகின. தீ மெல்ல மெல்லப் பரவி முயல் குட்டி இருக்கும் இடம் வரை இருந்த புல் அனைத்தும் நெருப்பில் கருகிச் சாம்பலாய்ப் போயின. "வேண்டும்! வேண்டும்! புல்லே! என் மூக்கையறுத்தாய் அல்லவா! உன் கூட்டத்தோடு ஒழிந்தாய்’’ என்று முயல் குட்டி கும்மாளம் போட்டது. - சிறிது நேரத்தில் முயல்குட்டிக்குப் பசி எடுத்தது. “ஐயோ! ஒரு புல் கூட இல்லாமல் எரிந்து போயிற்றே! எதைத் தின்பேன்!” என்று முயல்குட்டி கவலை கொள்ளத் தொடங்கியது. அதற்கு அழுகை அழுகையாக வந்தது. ஆராயாமல் தான் இட்ட சாபத்தால் அத்தனை புல்லும் கருகிப் போய் விட்டதே என்று தன் மீதே குறைப் பட்டுக் கொண்டது. புல் அறுத்துவிட்ட தன் மூக்கு எப்படியிருக்கிறதென்று தன் முன்னங் காலால் தடவிப் பார்த்தது. அது ஆறிக் காய்ந்து போயிருந்தது. “சற்றுநேரம் ஏற்பட்ட வலிக்காக அவ்வளவு புல்லும் எரிந்து போகச் சாபம் கொடுத்தேனே நான் ஒரு முட்டாள்!” என்று கத்திக் கொண்டே தலையை ஆட்டியது. தூக்கம் கலைந்து கண் விழித்தது. அதைச் சுற்றிலும் எந்தப் புல்லும் கருகவில்லை. பாறையின் மீது ஏறிப் பார்த்தது. புல்வெளி முன்னைப் போலவே இருந்தது. புல் அனைத்தும் தள தள வென்று காற்றில் ஆடிக் கொண்டிருந்தன. முயலுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. நல்ல வேளை! கனவுதான் கண்டேன். இல்லா விட்டால்–என் முட்டாள் தனமான சாபம் நிறை வேறியிருந்தால் என்ன ஆகியிருக்கும்! கடவுளே! என்னைப் போன்ற மூடர்களின் சாபம் பலிக்காமல் செய்யும் உனக்கு ஆயிரம் நன்றி! ஆயிரம் வணக்கம்! இவ்வாறு கூறிக் கொண்டே முயல் புல் வெளியை நோக்கித் தாவிப் பாய்ந்து ஓடியது. பந்தயத்தில் வெள்ளை முயல் காட்டில் ஒரே கொண்டாட்டமாக இருந்தது. என்ன வென்று தெரிந்து கொள்வதற்காக தினசரித் தாள் செய்தியாளர்கள் அங்கு பறந்து வந்தார்கள். பேருந்து ஒட்டி வந்தவன் சொன்னான். காட்டு நடுவில் உள்ள ஒரு பொட்டலில் எங்கு பார்த்தாலும் இலைகளும் பூக்களும் தோரணம் கட்டியிருந்ததாம். விலங்குக்ள் அங்கும் இங்கும் அவசர அவசரமாகவும் கூட்டம் கூட்டமாகவும் அந்தப் பொட்டலில் திரிந்து கொண்டிருந்தனவாம். இந்தச் செய்திகளைக் கேட் டதும் தினசரித்தாள் செய்தியாளர்கள் அங்கு பறந் தார்கள். செய்தியாளர்களைக் கண்டவுடன் விலங்குகளுக்கு மேலும் தெம்பு வந்துவிட்டது. முதலியேயே தெரிவித் திருந்தால், எவ்வளவு நன்றாய் இருந்திருக்கும் என்று யானையார் கூறினார். - மணியோசை முன்னால் வரும். யானையார் பின்னால் தான் வருவார். தலைவர் யானையாருக்குப் பின்னால் தான் எல்லா நினைப்புகளும் தோன்றும். செய்தியாளர்களைக் கண்டபிறகுதான் வானொலிக்கும் தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் தெரிவிக்கவில்லை என்பது நினைவு வந்தது. செய்தியாளர்கள் யானையாரைச் சூழ்ந்து கொண்டார்கள். காட்டில் இன்று என்ன சிறப்பு என்று கேட்டார்கள். சிறப்பாக ஒன்றும் இல்லை. விளையாட்டுப் போட்டி ஒன்று வைப்பதென நேற்று ஒரு முடிவெடுத்தோம். பொதுக்குழு முடிவின்படி இன்று உடனே போட்டி வேலைகளைத் தொடங்கி விட்டோம். “உங்களுக்கு எப்படி இந்தச் செய்தி கிடைத்தது?” என்று யானையார் கேட்டார். உலகில் எந்த மூலை முடுக்கில் எது நடந்தாலும் நாங்கள் விடமாட்டோம். “காற்று நுழையாத இடத்திலும் கடவுள் நுழைவார். அவர் நுழையாத இடத்திலும் நாங்கள் நுழைந்து விடுவோம்.” என்று செய்தியாளர்கள் கூறினார்கள் யானையார் வந்திருந்த பத்திரிகையாளர்களை ஒவ்வொருவராகத் தன் துதிக்கையால் தூக்கி ஒரு மரக் கிளையில் உட்கார வைத்தார். போட்டிகள் தொடங்கின. முதலில் பொட்டல் வெளி நடுவில் ஐந்து கழுதைகள் வந்து நின்று கடவுள் வாழ்த்துப் பாடின. ஐந்தும் ஒரே குரலில் ஒருமித்துப் பாடியபோது அவற்றின் குரல் கைலாசத்துக்கு எட்டியிருக்க வேண்டும் என்று மிருகங்கள் பேசிக் கொண்டன. அடுத்து நடனப் போட்டி நடை பெற்றது. ஆறு மயில்கள். மூன்று மூன்று எதிர்க்கட்சியாக இருந்து தோகை விரித்து தாளத்திற்கேற்பக் கால்போட்டு ஆடியது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. அடுத்தது குரங்குகள். கைகூப்பி வணக்கம் சொன்னபின் அவை குட்டிக் காரணம் பேர்ட்டே மேடையை வலம் வந்தன. அவை செய்த வேடிக்கையைப் பார்த்துக் கூடியிருந்த விலங்குகள் அனைத்தும் கூக்குரலிட்டு ஆரவாரம் செய்தன. அடுத்தது மல்யுத்தம். இரண்டு காட்டானைகள் ஒன்றை யொன்று மோதிச் சண்டையிட்ட காட்சி உடம்பு நடுங்க வைத்தது. துதிக்கையால் வளைத்தும் காலால் மிதித்தும். கட்டிப் புரண்டும் படுபயங்கரமாகச் சண்டையிட்டன. - எருதுச் சண்டையைப் பார்த்த போது, யானைச் சண்டை சாதாரணமாகி விட்டது. சேவற் சண்டை கண்ணுக்கு விருந்தாயிருந்தது. புலிச்சண்டை தான் எல்லாவற்றிலும் பயங்கர மாய் இருந்தது. சில விலங்குகள் பயந்து கண்ணை மூடிக் கொண்டன. சில அந்தத் திடலை விட்டு ஒடியே போய் விட்டன! அடுத்து ஒட்டப் பந்தயம் தொடங்கியது. காளை மாடுகள் ஐநூறு முழ ஓட்டப்பந்தயம் ஓடின. வேட்டை நாய்கள் ஆயிரமுழ ஒட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டன. குதிரைகள் இரண்டு கல் பந்தயம் ஓடின. மான்கள் ஐந்து கல் பந்தயம் ஓடின. கடைசியாக முயல்கள். அவை ஆறுகல் பந்தயம் ஒடத் தொடங்கின. ஆமையோடு போட்டியிட்டுத் தோற்ற முயலின் கதையைக் கூறி அப்படியாகிவிடக் கூடாது என்று எல்லா விலங்குகளும் பேசிக் கொண்டன. பத்து முயல்கள் ஒட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டன. அதில் சிவபக்தி மிகுந்த முயல் ஒன்று இருந்தது. பந்தயத்துக்கு வரும் முன்னாலேயே காட்டுக்குளத்தின் கரையில் அரசமரத்தடியில் இருந்த சிவலிங்கத்திற்கு லிங்க பூசை செய்து விட்டு அது பந்தயத்திற்கு வந்திருந்தது. " கடவுளே என் கால்களுக்கு விசையைக் கொடு. எல்லாருக்கும் முன்னால் நான் ஓடி வந்து முதல் பரிசு பெற எனக்கு அருள் செய்ய வேண்டுகிறேன் " என்று பாடித் தொழுதது. சிவபெருமான் அதன் கால்களுக்கு மிக விரைந்து செல்லும் ஆற்றலைக் கொடுத்தார். கதிரவன் செல்லும் வேகத்தில் நீ செல்லுவாய் என்று சிவலிங்கப் பெருமான் அந்த முயலுக்கு வரம் கொடுத்தார். முயல்கள் பந்தயத்தில் ஒடத் தொடங்கின. அந்தத் திடலில் அவை ஒடிய காட்சி கண்கொள்ளாக்காட்சியாயிருந்தது. [] அம்பு போலப் பாய்வதும், சக்கரம் போல் சுழித்துத் தாவுவதும் பார்க்கப் பார்க்க வியப்புத் தோன்றியது. சிவபக்தி மிகுந்த அந்த முயல் ஒடத் தொடங்கியபோது மற்ற முயல்களைக் காட்டிலும் மிக வேகமாக்த் துள்ளிப் பாய்ந்து ஓடியது. ஒரே பாய்ச்சலில் அது ஒடிக்கொண்டே இருந்தது. பந்தயம் நடக்கும் இடத்தைத் தாண்டி காட்டைத் தாண்டி, ஊரைத்தாண்டி, கடலைத்தாண்டி அப்படி துள்ளித் துள்ளித் ஒடிக் கொண்டிருந்தது. அது எந்த நேரம் தலை நிமிர்ந்து பார்த்தாலும் கதிரவன் அதன் தலைக்கு மேலேயே காட்சி தந்தான். அது எவ்வளவு நேரம் ஒடியும் பொழுது சாயவே இல்லை. . பொழுது சாய்வதற்குள் உலகத்தைச் சுற்றி வந்து விடவேண்டும் என்று அது திட்ட மிட்டது. ஆனால் அது எவ்வளவு நேரம் ஒடியும் பொழுது சாயவே இல்லை. சிவபெருமான் கதிரவனைப் போல் அந்த முயலும் விரைந்து செல்ல அருள் புரிந்ததால் அது எப்பொழுது பார்த்தாலும் தலைக்கு மேல் இருக்கும் கதிரவனே தோன்றியது. சரியாக இருபத்து நான்கு மணி நேரம் மேற்கு நோக்கியே சென்ற முயல் தான் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தது. அப்பொழுது பந்தயம் நடந்த இடத்தில் யாரும் இல்லை. அந்த வெட்டவெளியானது வெறும் மொட்டை வெளியாகக் காட்சி தந்தது. கூடியிருந்த விலங்குகள் கொரித்துச் தின்ற கடலைத் தோல்களும் பறித்துத் தின்ற வாழைப்பழத் தோல்களும் அங்கங்கே சிதறிக் கிடந்தன. புலிகளும், எருதுகளும் நடத்திய போராட்டக் காட்சிகளில் வழிந்த குருதி திட்டுத் திட்டாய் உறைந்து கிடந்தது. இவற்றையெல்லாம் கண்ட அந்த வெள்ளை முயலுக்கு குழப்பமாய் இருந்தது. பந்தயம் முடிவதற்குள் இந்தக் காட்டு விலங்குகள் எல்லாம் எங்கே ஓடிவிட்டன. ஏன் ஓடி விட்டன. பரிசு கொடுக்க வேண்டிய அந்த யானையார் எங்கே என்றெல்லாம் அது நினைத்துக் குழம்பியது. அப்பொழுது அந்தப் பக்கமாக வந்த குட்டி மான் ஒன்று அதன் அருகில் வந்தது. “முயல் அண்ணா நேற்று நீ எங்கே போய் விட்டாய்? பந்தயத்தில் ஓடியதும் பரிசு வாங்காமல் எங்கே போனாய். யானையார் உனக்காக அரைமணி நேரம் காத்திருந்தார். எல்லாரும் கலைந்து போன பிறகும் கூட உனக்குப் பரிசு கொடுக்க வேண்டும் என்பதற்காக தலைவர்கள் ஐந்தாறு பேர் உனக்காக காத்திருந்தார்கள். அண்ணா நீ எங்கே போய் வருகிறாய்..?” மான் குட்டியின் கேள்வி முயலை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டது. " நான் இன்னும் பந்தயத்தை முடிக்கவில்லையே, இன்னும் பொழுது சாயவில்லையே; அதற்குள் நீங்கள் ஏன் கலைந்து போனிர்கள்?" என்று கேட்டது வெள்ளை முயல். " முயல் அண்ணா, உனக்கென்ன பைத்தியமா? நேற்று ஒருநாள் தானே பந்தயம் வைத்திருந்தோம். பந்தயம் முடிந்து நேற்றே எல்லாருக்கும் பரிசு கொடுத்தாய் விட்டது. உனக்குக் கொடுக்க வேண்டிய தங்கக் கோப்பையை யானையார் தான் இருக்கும் இடத்தி லுள்ள அரசமரப் பொந்தில் பத்திரமாக வைத்திருக்கி றார். வா போய்ப் பார்க்கலாம். பாவம் எல்லார் முன்னேயும் நீ பரிசு வாங்கினால் எவ்வளவு பெருமையாய் இருக்கும் " என்று கூறி வெள்ளை முயலை மான்குட்டி யானையாரிடம் அழைத்துச் சென்றது. யானையார் “பரிசு வாங்கக் கூட இருக்காமல் எங்கே போனாய்?” என்று கோபித்துக் கொண்டார். ஆனால் முயலின் ஒட்டத்தைப் பாராட்டினார். கதிரவன் கூட உன் வேகத்திற்குத் தோற்றுப் போவான்" என்று யானையார் சொன்ன போதுதான் முயலுக்கு உண்மை புரிந்தது. சிவபெருமான் வரங்கொடுத்தபடி அது கதிரவனின் வேகத்தில் பாய்ந்து சென்றதால், கதிரவனும் அந்த முயலும் ஒரே வேகத்தில் போயிருக்கின்றன. அதனால்தான் அது எப்போது திரும்பிப் பார்த்தாலும் கதிரவன் அதன் தலைக்கு நேரேயே இருந்திருக்கி றான். பொழுதும் சாயாமல் இருளும் வராமல் இருபத்து நான்கு மணிநேரம் ஓடி இருந்த இடத்திற்கே திரும்பி வந்திருக்கிறது. அதற்குத் தெரியாமலே அந்தக் காட்டில் ஒரு நாள் ஒடிப்போய் இருக்கிறது. தான் இல்லாவிட்டாலும் தனக்காகப் பரிசை வைத்திருந்த காட்டு விலங்குகளின் பெருந்தன்மையை எண்ணி அது மனம் பூரித்தது. தன் பரிசான தங்கக் கோப்பையை எடுத்துக் கொண்டு காட்டுக் குளத்தின் கரையில் அரச மரத்தடியில் இருந்த சிவலிங்கப் பெருமானை வணங்கி நன்றி கூற அந்த முயல் சென்றது. அப்போது அங்கங்கே எதிர்ப்பட்ட வன விலங்குகளெல்லாம் அதைப் பார்த்துப் பாராட்டிப் புகழ்ந்தன. வெள்ளை முயல் மிக்க மகிழ்ச்சியோடு தனக்கு வரங்கொடுத்த சிவபெருமானைச் சென்று வணங்கி நன்றி கூறித் திரும்பியது. அதன் உள்ளம் எல்லாம் மகிழ்ச்சி நிறைந்திருந்தது. பகைவென்ற சிறு முயல் வேலூருக்குப் பக்கத்தில் ஒரு பெரிய காடு இருந்தது. அந்தக் காட்டை வேலூர்க்காடு என்றே மக்கள் அழைப்பார்கள். அந்தக் காட்டில் ஒரு பெரிய நாகப் பாம்பு வாழ்ந்து வந்தது. அந்த நாகப் பாம்பு அந்தக் காடு முழுவதும் சுற்றிச் சுற்றி வரும். பெரிய மிருகங்களை அது பெரும்பாலும் நெருங்குவதில்லை. தவளை, கோழிக்குஞ்சு போன்ற சில உயிர்களைக் கொன்று தின்பது அதன்வழக்கம். ஆடு, நாய், முயல், குரங்கு, மான்போன்றவற்றையும் அது சில சமயம் ஏதாவது காரணம் கூறிச் சீறிப் பாய்ந்து திண்டிவிடும். அந்தச் சின்ன உயிர்கள் நஞ்சு தாங்காமல் இறந்து போகும். ஒரு நாள் அந்த வேலூர்க் காட்டின் வழியாக ஒரு பார்ப்பன வழிப் போக்கன் சென்று கொண்டிருந்தான். அவன் தலையில் அரிசிமூட்டையும், தோளில் காய்கறிகள் நிறைந்த ஒரு மூட்டையும், கையில் ஒரு செம்பு நிறையப் பாலும் வைத்திருந்தான். அவன் காட்டு வழி யாக நடந்து செல்லும் போது பாதையின் குறுக்கே அயர்ந்து படுத்திருந்த நாகப் பாம்பைக் கவனிக்க வில்லை. ஏதோ நினைப்பில் நடந்து கொண்டிருந்த அவன் தெரியாமல் அந்தப் பாம்பை மிதித்துவிட்டான். நாகப் பாம்பு சீறிக் கொண்டு அவனைக் கடிக்க வந்தது. அவன் பயந்து தொங்கு, தொங்கென்று ஓடினான். அப்படி ஒடும்போது அவன் கையில் இருந்த பால் செம்பு கீழே விழுந்தது. செம்பில் இருந்த பாலில் ஒருபாதி கீழே கொட்டிவிட்டது. மேலும் ஒரு பாதி செம்பில் இருந்தது. [] பின்னால் துரத்திக் கொண்டு வந்த நாகப் பாம்பு கீழே சிந்திய பாலைக் குடித்தது. பிறகு செம்பினுள் இருந்த பாலையும் குடித்தது. அகன் சீற்றம் தணிந்தது. செம்பை எடுப்பதற்காக திரும்பிய பார்ப்பனன் செம்புப் பாலை நாகப்பாம்பு குடிப்பதைப் பார்த்துவிட்டு அப்பொழுது ஓடினால்தான் தப்பமுடியும் என்று ஒரே ஒட்டமாக ஓடிவிட்டான். நாகப்பாம்பும் வயிறு நிறைந்து விட்டதால் பார்ப்பனனை விரட்டு வதை மறந்துவிட்டது. இரண்டு நாள் கழித்து அந்தப் பார்ப்பனன் அந்த வழியாகத் திரும்பி வந்து கொண்டிருந்தான். வழியில் தான் போட்டுச் சென்ற பால் செம்பு கிடப்பதைக் கண்டு அதை எடுப்பதற்காக அதை நோக்கிச் சென்றான். சிறிது தொலைவிலேயே அந்த செம்பைச்சுற்றிக் கொண்டு நாகப்பாம்பு படுத்திருப்பதைக் கண்டான். பயந்து வேறு வழியாக ஓடினான். அவன் ஒடுகின்ற ஓசையைக் கேட்டு நாகப்பாம்பு விழித்துக் கொண்டது. " பார்ப்பனரே, பார்ப்பனரே சிறிது நில்லும் " என்று பாம்பு கத்தியது. பார்ப்பனன் மேலும் வெகமாக ஓடினான். நாகப் பாம்பு விரட்டிக் கொண்டு சென்றது. பார்ப்பனன் ஒடும் வழியில் வேகமாகச் சென்று எதிரில் நின்று படமெடுத்தாடத் தொடங்கியது. பார்ப்பனன் வெல வெலத்துப் போனான். " நாக ராசா, உன்னைக் கும்பிடுகிறேன். என்னைக் கடிக்காமல் விட்டு விடு" என்று பார்ப்பனன் கெஞ்சினான். "பார்ப்பனரே, உம்மை நான் கடிக்கவில்லை. ஆனால் நீர் எனக்கு உதவி செய்ய வேண்டும். இரண்டு நாளைக்கு முன் நீர்கொண்டு வந்த பால் மிகச் சுவையாக இருந்தது. அது போல் வாரம் ஒரு முறையாவது எனக்கு நீர் பால் கொண்டு வந்து தர வேண்டும். அப்படிச் செய்தால் உம்மையும் கடிக்க மாட்டேன், உம்முடைய பிள்ளைகுட்டிகளையும் கடிக்க மாட்டேன். நீர் தாராளமாக இந்தக் காட்டில் எப்பொழுது வேண்டுமானாலும் பயம் இல்லாமல் போய் வரலாம்." . இதைக் கேட்ட பார்ப்பனனுக்கு என்ன செய்வ தென்று புரியவில்லை. ஒப்புக்கொண்டால் வாக்குக் கொடுத்தபடி தொடர்ந்து பால் கொடுத்து வர வேண்டும். ஏழைப் பார்ப்பனனாகிய தன்னால் அவ்வாறு செய்யமுடியுமா என்று மலைத்தான். ஒப்புக் கொள்ளா விட்டால் அந்தப் பொல்லாத நாகப்பாம்பு அப்பொழுதே அவனைக் கடித்துக் கொன்று விடும். உடனே சாவது நல்லதா, தொடர்ந்து தொல்லைப் படுவது நல்லதா என்று அவன் மயங்கினான். இந்த நெருக்கடியான நிலையில் யாரும் ஒரே முடிவுக்குத்தான் வர முடியும். எப்படியும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் யாருக்கும் தோன்றும். பார்ப்பனனும் பாம்புக்கு வாரந்தோறும் பால் கொண்டு வருவதாக வாக்குக் கொடுத்து விட்டுப் புறப்பட்டான். ஐந்தாறு வாரங்கள் எப்படியோ சமாளித்து பாம்புக்குப் பால்கொண்டு போய்க்கொடுப்பான். தானம் வாங்கும் பணத்தில் ஒருபகுதி பாலுக்குச் செலவாவது அவனால் தாங்க முடியாததாய் இருந்தது. இதை எப்படிச் சமாளிப்பது என்று எண்ணி எண்ணிப் பார்த்தான். தொடர்ந்து சிந்தித்தால் ஒரு வழி தோன்றாமலா போய் விடும். பார்ப்பனன் ஒரு வழியைக் கண்டு பிடித்தான். “காட்டில் ஒரு நாகராசன் இருப்பதாகவும் அவனுக்கு வெள்ளிக் கிழமை தோறும் பால் வைத்தால் தீராத துன்பம் எல்லாம் தீரும்” என்றும் ஊருக்குள் கண்டவர்களிடம் எல்லாம் சொல்லி வந்தான். நாகப்பாம்பை ஒரு தெய்வம் போல நினைத்து அதற்கு பால் ஊற்றி வழிபட்டால் தங்கள் குறை எல்லாம் தீரும் என்று நம்பி பல மக்கள் முதலில் பார்ப்பனனிடம் பால் கொடுக்கத் தொடங்கினார்கள். பிறகு அவர்களே நேரில் சென்றும் பாம்புக்குப் பால் வார்க்கத் தொடங்கினார்கள். - நாகப் பாம்பின் பக்தர் கூட்டம் பெருகியது. மூட மக்கள் கூடக் கூடப் பாம்புக்கு யோகம் அடித்தது. பல ஊர் மக்கள் சேர்ந்து அந்த இடத்தில் நாகப்பாம்புக்கு ஒரு கோயிலும் கட்டினார்கள். வேண்டுதல் செய்து கொண்டு பாலோடு முட்டை, கோழிக்குஞ்சு, முதலியவற்றையும் படைக்கத் தொடங்கினார்கள். நாகப்பாம்புக்கு மனிதர்களுடைய இந்தப் படையல்கள் மிகுதிப்பட மிகுதிப்பட, ஆணவமும், செருக்கும் தன்னை விடப் பெரியவர் யாரும் இல்லை என்ற நினைப்பும் கூடிவிட்டன. தன்னுடைய பெருமையை நிலை நாட்டிக் கொள் வதற்காக அது தேவையில்லாமல் காட்டு விலங்கு களை அடிக்கடி தீண்டிக் கொன்று வந்தது. காட்டில் ஒவ்வொரு நாளும் அதன் தீய செயல்கள் மிகுந்து வந்தன. சின்னஞ்சிறு விலங்குகளை சீறிப்பாய்ந்து தீண்டிக் கொன்று விடும். பெரிய விலங்குகளை அவை தூங்கும் போது கடித்துக் கொன்றுவிடும். நாளுக்கு நாள் காட்டு விலங்குகள் பாம்பினால் இறந்து வந்தன. அதன் தொல்லையை அவற்றால் பொறுக்க முடியவில்லை. ஒரு நாள் காட்டில் உள்ள விலங்குகளெல்லாம் ஒன்று கூடிப் பாம்பின் தொல்லையிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள என்ன வழி என்று ஆலோசனை செய்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வழியைச் சொன்னது. ஆனால் எந்த வழியும் சரியாகத் தோன்றவில்லை. பெரிய பெரிய விலங்குகளெல்லாம். தங்களால் அந்தப் பாம்பின் தலையை நசுக்கிக் கொன்று விட முடியும் என்றும், ஆனால் தாங்கள் கொல்லுவதற்கு முன்னால் அந்தப் பாம்பு தங்களைக் கடித்து விட்டால் உடல் முழுதும் நஞ்சு பரவி தாங்கள் இறந்து போக நேரும் என்றும் அஞ்சின. சிறிய விலங்குகளோ பாம்பின் எதிரில் செல்லவே பயந்தன. இந்த நிலையில் எந்த முடிவுக்கும் வர முடியாமல் அவை கலைந்து போயின. பாம்பின் அட்டுழியம் தொடர்ந்து வந்தது. ஒரு நாள் ஒரு புதர் நிழலில் சின்ன முயல் ஒன்று தூங்கிக் கொண்டிருந்தது. அதன் உடம்பில் ஏதோ வளவள என்று ஊறுவது போல் இருந்தது. கண் விழித்த முயல் தன் மீது அந்த நாகப் பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்டது. ஒரே பாய்ச்சலில் முயல் தாவிக் குதித்தது, பாம்பு எங்கோ சிதறி விழுந்தது. “குட்டி முயலே, என்னைத் தட்டிவிட்டா ஒடுகிறாய். இருஇரு உன்னை என்னசெய்கிறேன்” என்று சீறிக்கொண்டே பாம்பு சென்றது. அந்தச் சின்ன முயல் தப்பித்தோம்,பிழைத்தோம் என்று பாய்ந்தோடி ஒரு மரத்தடியில் நின்றது. அந்த மரத்தின் கிளை ஒன்றில் ஒரு குரங்கு குந்திக் கொண்டிருந்தது. சின்ன முயலே, சின்ன முயலே என்ன வேகம், என்ன வேகம்" என்று குரங்கு கூறியது. “குரங்கண்ணா இது வெறும் வேகம் இல்லை, உயிர் வேகம்! உயிர் தப்புவதற்காக ஓடிவந்த வேகம்” என்று முயல் கூறியது. “இந்தக் காட்டிலலே நீதான் அழகானவன். நீ யாருக்குப் பயந்து ஓடி வருகிறாய்?” என்று குரங்கு கேட்டது. "அந்த நாசமாய்ப்போன நாகப் பாம்புக்குப் பயந்து தான் ஓடி வருகிறேன்’ என்றது முயல். குரங்கு தொபுக்கென்று கீழே குதித்தது. முயலின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டது. “குட்டி முயலே இந்த நாகப்பாம்பைத் தொலைப்பதற்கு ஒரு வழியும் இல்லையா?” என்று ஆத்திரத்தோடு கேட்டது. அ-4 “இந்த மனிதர்கள் பாம்புக்குப் பால் வார்க்கிறார்கள். அதற்குத் தலையில் கொழுப்பு ஏறி விட்டது. அதைத் தொலைத்தால் தான் நாம் அமைதியாகத் தூங்கமுடியும்”என்றது குட்டி முயல். [] “குட்டி முயலே இதற்கு ஒரு வழி கண்டு பிடி. எனக்கும் தூக்கம் சரியாக வரவில்லை. சில சமயம் என் வாலைப் பார்த்தே பாம்பென்று நான் பயந்து விடுகிறேன்” என்றது குரங்கு. குட்டி முயல் ஒன்றும் பதில் சொல்லவில்லை. வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது. “என்ன மேகங்களை எண்ணுகிறாயா?” என்று குரங்கு கேட்டது. வானத்தில் சில கரிய மேகங்கள் காற்றினால் உந்தப்பட்டு ஒரு பக்கமாக ஓடிக் கொண்டிருந்தன. முயலின் கண்கள் அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தன. காற்றின் வேகம் சிறிது நேரத்தில் வலுவாயிற்று. காட்டு மரங்களெல்லாம் காற்றினால் அலைக்கப்பட்டன. மரக்கிளைகள் ஆடியபோது அவற்றிலிருந்து பழங்கள் உதிர்ந்து விழுந்தன. இவற்றை யெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த முயலின் முகத்தில் மகிழ்ச்சி மின்னியது. - சிறிது நேரத்தில் சடசடவென்று மழை பெய்யத் தொடங்கியது. உடனே முயலை வாரி அணைத்துக் கொண்டு மரத்தின் அடிப்பாகத்திற்கு ஓடியது குரங்கு. மழை விழாத இடத்திற்குச் சென்றதும் குரங்கு முயலைப் பார்த்துக் கேட்டது. “கார் மேகத்தைக் கண்டால் மயிலுக்குத்தான் மகிழ்ச்சி உண்டாகும். நீ மகிழ்ச்சியடையக் காரணம் என்ன?” “குரங்கண்ணா எனக்குத் திடீரென்று ஒரு கருத்துத் தோன்றியது. காற்றில் பழங்கள் உதிர்வதை நீ பார்த் தாய் அல்லவா? குரங்கண்ணா கவனித்துக்கேள். நீ தான் ஒரு பெரிய வேலை செய்யப் போகிறாய். உன்னை இந்தக் காட்டு விலங்குகளெல்லாம் வாழ்த் தப் போகின்றன.” முயல் இவ்வாறு சொல்லிக் கொண்டு வரும் போதே" ஐயையோ என்னால் முடியாது. அந்தப் பாம்பு கடித்தால் நான் செத்துப் போய் விடுவேன்" என்று குரங்கு ஒலமிட்டது. “சும்மா பயப்படாதே. நான் சொல்வதைத் தெளிவாகக் கேட்டுக் கொள். உன் உயிருக்கு ஆபத்து வரும்படி நான் சொல்ல மாட்டேன்” என்றது முயல். “சரி சொல்லு,” குரங்கு கேட்கத் தயாராய் இருந்தது. “குரங்கண்ணா, மனிதர்கள் இந்த வெள்ளிக்கிழமையன்று பாம்புக்குப் பால் கொண்டு வருவார்கள். குடம் குடமாகப் பாலைக் குடித்து விட்டு அது படம் விரித்துக் கூத்தாடும். அந்தக் கோயிலுக்குப் பக்கத்தில் வரிசையாகப் பனைமரங்கள் நிற்கின்றன. அவற்றின் உச்சியில் நுங்குகள் குலை குலையாகக் காய்த்துத் தொங்குகின்றன” என்று முயல் சொல்லிக் கொண்டு வரும் போதே குரங்கு குதித்தது. - “புரிந்து கொண்டு விட்டேன். முயல் குட்டியே நீ மிகுந்த அறிவாளி. இனி நீ கூற வேண்டாம். நாளை நடக்கப் போகிறதை நீ ஈச்சம் புதர் மறைவிலிருந்து பார்த்து மகிழலாம். வெற்றி, வெற்றி” என்று.ஆனந்தக் கூத்தாடியது குரங்கு. வெள்ளிக்கிழமை வந்தது. வேலூரிலிருந்து பக்தியுள்ள பெண்மணிகள் வெள்ளிக் குடங்களில் பாலை எடுத்துக் கொண்டு காட்டு நாகராசன் கோயிலுக்கு வந்தார்கள். பார்ப்பனர் அந்தக் குடங்களையெல்லாம் கோயில் வாசலில் வரிசையாக வைத்து தீபம் காட்டினார். பிறகு நாகராசனை வரவழைப்பதற்காக சில மந்திரங்களை முனுமுனுத்தார். நாகப்பாம்பு வந்தது. குடம் குடமாக நகர்ந்து சென்று பாலை வயிறு முட்டக் குடித்தது. உடைத்து வைத்திருந்த கோழி முட்டைகளையும் உறிஞ்சிக் குடித்தது. ஆனந்தம் பொங்கப் படமெடுத்து ஆடியது. அப்பொழுது அதன் தலையின் மீது கணிரென்று ஒரு நுங்கு வந்து விழுந்தது. தொடர்ந்து தட தடவென்று நுங்குகள் பாய்ந்து வந்தன.பக்தியோடு நாகராசனைப் பார்த்துக் கொண்டிருந்த ஆண்களும், பெண்களும் தலை தப்பினால் போதும் என்று ஓடிவிட்டார்கள். அவர்களைத் தொடர்ந்து பூசாரிப் பார்ப்பனரும் ஓடிவிட்டார். முப்பது குரங்குகள் பனைமரங்களின் உச்சியில் இருந்து பறித்துப் போட்ட நுங்குகள் பாம்பின் தலை யிலும், அதன் உடம்பின் பல பகுதிகளிலும் சட சட வென்று கனமாக வந்து விழுந்ததால் அது அந்த இடத்திலேயே நசுங்கிச் செத்தது. அது செத்து விட்டதைக் கண்ட முயல் புதர் மறைவிலிருந்து துள்ளிக் குதித்து வெளியில் வந்தது. பனைமரத்திலிருந்து குரங்குகள் அனைத்தும் இறங்கி வந்தன. செத்த பாம்பின் உடலைத் தூக்கி வீசிக் கொண்டு அவை காட்டுக்குள் சென்றன. எல்லாக் காட்டு விலங்குகளுக்கும் தங்கள் பொதுப் பகைவனான நாகப்பாம்பு இறந்த செய்தியை அறிவித்தன. குரங்குகளையும், முயலையும் காட்டு மிருகங்கள் அனைத்தும் வாழ்த்தின.அந்த நாள் தொட்டுவழிப்போக்கர்கள் அந்தக் காட்டில் பயமின்றி நடந்துசென்றனர். சின்ன முயலும் சிங்க அரசனும் காவிரியாற்றங்கரையில் ஒரு பெரிய காடு இருந்தது. அந்தக் காட்டில் ஓர் அரசாங்கம் நடந்தது. அந்த அரசாங்கத்தில் யார் மன்னராக இருந்தார் என்று உங்களுக்குத் தெரியுமா? எந்தக் காட்டு அரசாங்கத்திற்கும் மன்னராக இருக்கக் கூடிய தகுதி சிங்கம் ஒன்றுக்கே இருந்தது. அதுபோல் அந்தக் காட்டுக்கும் ஒரு சிங்கம்தான் அரசராக இருந்தது. ஒரு நாள் இரவில் முழு நிலா தன் பால் ஒளியை வீசிக் கொண்டிருந்தது. அந்த அழகிய நிலவொளியில் காட்டின் நடுவில் ஒரு வெட்ட வெளியில் அரசவை கூடியது. உயர்ந்த அரியணை ஒன்றில் சிங்கமாமன்னர் அமர்ந்திருந்தார். அருகில் கூரிய வாள் தக தகவென மின்ன அதை வாயில் பற்றியபடி படைத்தலைவர் புலியார் நின்றுகொண்டிருந்தார். பாராங்கல்லாலான இருக்கைகளில் அமைச்சர்கள் வீற்றிருந்தார்கள். திரு நீறு பூசிய நெற்றியுடன் அமைச்சர் வேலனார் என்று சிறப்புப் பெயர் பெற்ற யானையாரும், பரிப்பெருமாள் என்று பெயர் பெற்ற குதிரையாரும், சாணக்கியனார் என்ற பெயருள்ள நரியாரும், தந்தியார் என்ற பெயர் உள்ள காட்டெருதும், அமைச்சர்களாக வீற்றிருக்க, வேட்டைநாய்கள், காட்டெருமைகள் ஆகிய படைவீரர்கள் சூழ்ந்திருக்க அந்த அரசாங்கம் கூடியிருந்தது. காட்டுவிலங்குகளின் பாதுகாப்பு, குடியுரிமை, உணவு விதிகள் போன்ற பல இன்றியமையாத சட்டங்கள் பற்றி அங்கு ஆய்வு செய்யப்பட்டது. சற்றுத் தொலைவில் இருந்த ஒரு புதர் மறைவில் இருந்து ஒரு சின்ன முயல் இந்த அரசவை நடவடிக் கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தது. அங்கு விற்றிருந்த அமைச்சர்களின் பெருமிதமான தோற்றமும் அவர்கள் கணிரென்று பேசிய கருத்துரைகளும் அந்தச் சின்ன முயலின் உள்ளத்தைக் கவர்ந்து விட்டன. அந்த அமைச்சர்களைப் பார்க்கப் பார்க்க தானும் ஓர் அமைச்சராக வேண்டும் என்ற ஆசை அந்த முயலின் உள்ளத்தில் கொழுந்து விட்டு எரிந்தது. சிங்க அரசரின் பக்கத்தில் ஓர் அமைச்சராக வீற்றிருந்தால் எவ்வளவு பெருமையாக இருக்கும் என்று அது நினைத்துப் பார்த்தது. சிங்கத்தைக் கண்டாலே முயல்களுக்கு உடம்பெல்லாம் வெடவெட என்று ஆடும். சிங்கம் தன் முன் கையால் ஓர் அறை அறைந்தால் ஒரு முயல் அப்படியே செத்துப்போய் விடும். ஆனால் இந்த முயல் குட்டிக்கோ சிங்கத்தின் பக்கத்தில் போய் அமைச்சராக இருந்து ஆட்சி செய்ய வேண்டும் என்று ஆசை பிறந்து விட்டது. - ஒரு நாள் வேட்டையாடி வயிறு புடைக்கத்தின்று விட்டு ஒய்வெடுத்துக் கொண்டிருந்தது சிங்க மன்னன். அப்போது அதன் எதிரே போய் தொபுக்கென்று குதித்தது சின்ன முயல். சிங்கம் நிமிர்ந்து பார்த்தது. மாமன்னரே வணக்கம் என்று சிங்கத்தின் பாதத்தைத் தொட்டு வணங்கியது சின்ன முயல். “அடே, குட்டிப்பயலே உனக்கு என்னால் என்ன ஆக வேண்டியிருக்கிறது. ஏன் கூழைக்கும்பிடு போடுகிறாய்?” என்று சிங்க மன்னன் கேட்டது. “அரசே, இந்தச் சிறுவனின் விண்ணப்பம்ஒன்று. தாங்கள் செவிசாய்த்துக் கேட்க வேண்டும். ஒரு குட்டிப் பயலால் என்ன முடியும் என்று அலட்சியமாக நினைக்கக் கூடாது. தாங்கள் என் விருப்பத்தை நிறைவேற்றி வைத்தால், என் வாழ்நாள் முழுவதும் என் உயிரும் உடலும் உங்களுக்கே ஒப்படைப்பேன்” என்று பணிவாகக் கூறியது சின்ன முயல். “உன் உயிரால் எனக்கு எந்தப் பயனும் இல்லை. உன் உடலோ என் ஒரு வேளைச் சாப்பாட்டுக்குக் கூடப் பயனில்லை. நீ எனக்கு என்ன உதவி செய்து விடப்போகிறாய்? ஒன்றுமில்லை. இருந்தாலும் சரி, உன் விருப்பம் என்ன சொல்” என்று கேட்டது சிங்க மன்னன். “அரசே, சின்னவனின் ஆசை எல்லாம் தங்கள் அரசவையில் ஒர் அமைச்சனாக வீற்றிருக்க வேண்டும் என்பதுதான். இதைத் தாங்கள் மறுக்கக் கூடாது” என்றது முயல். [] சிங்கம் ஆவாவா என்று சிரித்தது. அதன் சிரிப்பொலி அந்தக் காடெங்கும் எதிரொலித்தது. சின்ன முயல் சிங்கத்தின் பதிலை எதிர்பார்த்து ஏக்கத்துடன் நின்று கொண்டிருந்தது. “பிடித்தால் ஒரு பிடி இருக்க மாட்டாய், உனக்கு அமைச்சர் பதவியா? யாருக்கு என்ன ஆசை இருக்க வேண்டும் என்ற கணக்கே இல்லாமல் போய் விட்டது” என்று கூறிய சிங்கம் முயலை உற்று நோக்கியது. ஏக்கத்தோடும் பெருநம்பிக்கையோடும் நின்று கொண்டிருந்த சின்ன முயலின் தோற்றம் அதற்கு இரக்கத்தை உண்டாக்கியது. “சின்னப் பயலே, உன் ஆசையை நிறைவேற்றுகிறேன். நாளை முதல் உன்னை அமைச்சனாக ஆக்குகிறேன். உனக்கு நாள் ஒன்றுக்கு ஒரு புறா வீதம் சம்பளம் தருகிறேன்” என்றது சிங்கம். முயல் விழி, விழியென்று விழித்தது. எனக்கு எதற்குப் புறா என்று அது சிந்தித்தது. உடனே கல கலவெனச் சிரித்த சிங்கம் "ஒவோ! நீ சைவம் அல்லவா? உனக்கு நாள் ஒன்றுக்கு ஒரு முட்டைக்கோசு சம்பளமாகத் தருகிறேன்?’ என்று கூறியது. முயலுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. சிங்கத்தின் காலடியைத்தொட்டு வணங்கி விடை பெற்றுக் கொண்டு துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடியது. அது தங்கியிருக்கும் குகைக்குச் சென்று அங்கிருந்த எல்லா முயல்களிடமும் “நான் அமைச்சனாகி விட்டேன் அரசர் ஆணையிட்டு விட்டார். நாளைமுதல் இந்தக் காட்டுக்கு நான் ஓர் அமைச்சன்” என்று சொல்லிப் பெருமைப் பட்டுக் கொண்டது. முதலில் அந்த முயல்கள் அதன் பேச்சை நம்ப வில்லை. ஆனால் அது நடந்த செய்திகளையெல்லாம் தொகுத்துக் கூறிய பொழுது, அந்த முயல்கள் எல்லாம் நம்பின. இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்காக அந்தக் குகையின் எதிரில் அன்று நிலா விருந்து நடத்தின. முயல் மறு நாள் காலை அரசவைக்குச் சென்று அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. அாசவை வேலையெல்லாம் முடிந்து கலையப்போகிற நேரம் ஒரு பூனைக் குட்டி ஓடி வந்தது. “அரசே, பக்கத்துக் காட்டுக்குப் போயிருந்தேன். அந்தக் காட்டரசன் நம் காட்டின் மீது படையெடுக்கத் திட்டமிட்டிருக்கிறான். அங்கே இதே பேச்சாய் இருக்கிறது. படை திரட்டுகிறார்கள். எப்போது பாய்ந்து வருகிறார்கள் என்பது தெரியவில்லை, எதற்கும் நாம் அணியமாக இருக்க வேண்டும்” என்று சொல்லி விட்டுச் சென்றது. உடனே அவையில் இருந்த எல்லா விலங் களையும் போகச் சொல்லிவிட்டு அரசனும், அமைச்சர் களும் மட்டும் கமுக்கமாக இருந்து ஆலோசனை நடத்தினார்கள், படையெடுப்பை எப்படிச் சமாளிப்பது என்று ஒவ்வொரு அமைச்சனும் தம் தம் கருத்தை எடுத்துச் சொன்னார்கள். அமைச்சர் வேலனார் என்ற யானை, அரசே, எதிரிகளின் காட்டில் இருப்பவை அனைத்தும் வலுவில்லாத சிறு விலங்குகளே. அவைகளை நம் காட்டு எல்லைக்குள்ளேயே வர விடாமல் தடுப்பதற்கு மிக எளிய வழி ஒன்று இருக்கிறது. நம் காட்டில் மொத்தம் முந்நூறு யானைகள் உள்ளன. இந்த முந்நூறு யானைகளையும் அடுத்த காட்டின் எல்லையிலேயே வரிசையாக நிறுத்தி வைத்தால் சின்னஞ் சிறிய விலங்குகள் தொலைவிலேயே பயந்து திரும்பி ஓடி விடும். மீறி வருபவற்றை நம் வீர யானைகள் துதிக்கையால் பற்றித் தூக்கி மரங்களில் அடித்து மோதிச் சின்னாபின்னமாக்கி விடும், மிக எளிதில் நாம் வெற்றி பெறலாம் " என்று கூறியது. அடுத்த அமைச்சராகிய பரிப்பெருமாள் என்ற குதிரையார் தம் தொண்டையைக் கனைத்துக் கொண்டு தம் கருத்தைக் கூறலானார். “மன்னருக்கு மன்னனே, மாவீரனே, சிங்க வேந்தே, உன் பொன் அடிக்கு வணக்கம். நம் காட்டில் உள்ள குதிரைகள் எண்ணிக்கை மொத்தம் 925 ஆகும். இவற்றில் சின்னஞ் சிறுசுகள், நோய் நொடி உற்றவை, நொண்டிகள் ஆகியவற்றைத் தள்ளி விட்டால் எண்ணுறுக்குக் குறையாமல் இருக்கின்றன. அத்தனை குதிரைகளும் போர்ப்பயிற்சி மிக்கவை. தாங்கள் உத்தரவிட்டால் இப்பொழுதே நான் சென்று எல்லாக் குதிரைகளையும் அழைத்துக் கொண்டு அடுத்த காட்டின் மீது படையெடுக்கிறேன். வெற்றி நமதே, விடை கொடுங்கள்” என்று கூறியது. அடுத்து சாணக்கியனார் என்ற பெயருடைய அமைச்சர் நரியார் பேசத் தொடங்கினார். “அரசே, ஒரு பகைவன் போர் தொடுக்கத் திட்டம் தீட்டுகிறான் என்றால் ஏதோ அவனிடம் புதிய பலம் சேர்ந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வளவு நாளும் அடங்கிக் கிடந்த அடுத்த காட்டான், நம் மீது படையெடுக்கிறான் என்றால், அவனுக்கு யாரோ மறைமுகமாக உதவி செய் கிறார்கள் என்று பொருள். ஆகவே, நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்தக் காட்டுக்குள் முதலில் நம் ஒற்றர்களை அனுப்பி உளவு பார்த்து நிலைமைகளைச் சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். படையெடுப்பதற்கு முடிவு செய்த காரணம் தெரிந்தால் அதற்குத் தகுந்த தந்திரங் களைக் கையாண்டு எதிரியை எளிதாக முறியடிக்கலாம்.” அடுத்து நந்தியார் என்ற அமைச்சர் காட்டெருது தன் கருத்தைச் சொல்லியது. "மன்னர் பிரான் அவர்களே, நரியார் சொன்ன ஆலோசனை வரவேற்கத் தக்கதே. ஆனால் நாம் உளவு பார்த்து மறுபடியும் ஆலோசனை செய்து நட. வடிக்கை எடுப்பதற்குச் சிறிது காலம் செல்லும். அதற்குள் எதிரி படையெடுத்து வந்து விட்டால் அதைச் சமாளிப்பதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். ஆகவே உடனடியாக நம் காட்டில் உள்ள வலிவு மிக்க விலங்குகள் அனைத்தையும் திரட்டிப் போர்ப்பயிற்சி அளிக்க வேண்டும். எதிரி எந்த நேரத்தில் நுழைந்தாலும் விரட்டியடிக்க நாம் விழிப்போடு இருக்க வேண்டும்.’’ நான்கு அமைச்சர்களும் கூறிய கருத்துக்களைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிந்த் சிங்கமா மன்னர், ஒரு சிறிய உறுமலுடன் நிமிர்ந்து உட்கார்ந்தார். "எங்கே அந்தக் குட்டிப் பயல்?’’என்று கேட்டுக் கொண்டே சின்ன முயல் எங்கே இருக்கிறது என்று திரும்பித் திரும்பிப் பார்த்தார். “அரசே, இதோ இருக்கிறேன்!” என்று கூறிக் கொண்டே முன்னால் தாவி வந்தது முயல். “நான்கு அமைச்சர்களும் தங்கள் கருத்தைச் சொல்லி விட்டார்கள். நீ என்ன சொல்லுகிறாய்;” என்று அலட்சியமாகக் கேட்டது சிங்கம். "மன்னர் பெருமானே, போர் இல்லாத காலத்திலேயே உணவுக்காகவென்றும் மனிதர்கள் வேட்டையாடுவதாலும் நம்முடைய விலங்கு இனங்கள் நாள் தோறும் குறைந்து கொண்டே வருகின்றன. இந்த நிலையில் போர் ஒன்று தோன்றுமானால் இரண்டு பக்கத்திலும் ஏராளமான விலங்குகள் தேவை யில்லாமல் கொல்லப்படும்; இந்தப் போரைத் தவிர்த்து நம் விலங்கு இனங்கள் பூண்டோடு அழியாமல்பார்த்துக் கொள்ள வேண்டியது தங்களைப்போன்ற மேலான அரசர்களின் கடமையாகும். "அடுத்த காட்டு அரசர் ஏதோ ஒரு தவறான தூண்டுதலால் இந்தப் போரைத்தொடங்க எண்ணி யிருந்தால் அவரிடம் தக்க முறையில் பேசி அவரு டைய எண்ணம் சரியல்ல என்று எடுத்துக் காட்டிப் போரை நிறுத்த வேண்டியதே முதலில் நாம் செய்ய வேண்டியதாகும். இதனால் நம் வீரத்திற்குக் குறை எனறு நினைக்கக் கூடாது. இது நம் இனங்கள் வாழ்வு பெற நல்ல முறை என்று எண்ண வேண்டும். “அரசே, இந்தச் சிறியவனின் கருத்தை ஏற்று அதற்குரிய நடவடிக்கைகளைச் செய்ய வேண்டிக் கொள்கிறேன்.” இதைக் கேட்ட சிங்கம், "முயல் குட்டியே உன் கருத்து சரிதான். ஆனால் இதை நிறைவேற்றுவதில் தான் தொல்லை இருக்கிறது. அந்த மூட அரசன் நல்ல எண்ணத்தில் இதை ஏற்றுக் கொண்டால் எல்லாம் நல்ல படியாக முடியும். ஆனால் நாம் போருக்குப் பயந்த கோழைகள் என்றும், அதனால் தான் நாம் சமாதானம் பேச வருகிறோம் என்றும் அவன் நினைத்தால் அதைவிடக் கேவலமானது ஒன்றுமில்லை. “மன்னர் பெருமானே, தாங்கள் ஆணையிட்டால் நானே அடுத்த காட்டுக்குப் போய் அந்தக் காட்டரசனைச்சந்தித்து. சமாதானம் பேசிக் கொண்டு வருகிறேன். இதனால் தங்கள் பெருமைக்குச் சிறிதும் களங்கம் ஏற்படாதபடி பார்த்துக் கொள்வேன். நம் விலங்கினத்தின் நன்மையை முன்னிட்டுத் தாங்கள் என் கருத்தை ஏற்று எனக்குக் கட்டளையிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.” மற்ற அமைச்சர்களுக்கு முயல் சொன்ன கருத்துச் சரியாக தோன்றாவிட்டாலும், சிங்கஅரசன் அதை ஊக்கப்படுத்திப் பேசியதால் அவை வாய்மூடிக் கொண்டிருந்தன. சிங்கம் சரி என்று நினைக்கிற ஒரு கருத்தை மறுத்துச் சொன்னால் அதற்குக் கோபம் வந்து விடும் என்று கருதியே அவை பேசாமல் இருந்தன. . முயல் சொன்ன கருத்தை நினைத்துப் பார்க்கப் பார்க்க அது மிகச்சரியான கருத்தாகத் தோன்றியது சிங்கமன்னனுக்கு. ஆனால் தன்னைப்போலவே அடுத்த காட்டு மன்னனும் நல்ல எண்ணம் உள்ளவனாக இருந்தால்தான் இந்த முயற்சி வெற்றி பெறும். இல்லாவிட்டால் இது பைத்தியக்காரத்தனமாகவே கருதப்படும். இந்த நிலையில் முயலை ஆதரிப்பதா, வேண்டாமா என்று சிறிது நேரம் சிங்கம் சிந்தித்தது “விலங்கு இனத்தின் நன்மையை முன்னிட்டுக் கட்டளையிடுங்கள்” என்று முயல் குட்டி சொன்ன சொற்கள் சிங்கத்தின் மனத்தில் ஒரு மந்திரம் போல் பதிந்து விட்டன. முயற்சி பண்ணித்தான் பார்ப்போமே என்று அது நினைத்தது. "குட்டிப் பயலே, இப்பொழுது நாம் பேசுவது எளிய செயலைப் பற்றியதல்ல. வாழ்வா, சாவா என்ற மிகப்பெரிய லட்சியத்தைப் பற்றியது ஆகும். ஆகவே இதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உனக்கு ஒருநாள் தவணை தருகிறேன். நாளை இரவு இதே நேரம் வருவதற்குள் நீ எனக்கு விடைசொல்ல வேண்டும். உன் முயற்சியை நீ இப்பொழுதே தொடங்கலாம். நாளைப் பொழுதுக்குள் முடிவு தெரியாவிட்டால் நாம் போர் செய்வது உறுதி. "படைத்தலைவர் புலியாரே, நம் படைகளையெல்லாம் ஆயத்த நிலையில் வைத்திருங்கள். எந்த நொடியும் கட்டளை பிறக்கலாம். அந்த நொடியிலேயே பகை மீது பாய நம் படைகள் அணிய மாகட்டும்.’’ சிங்கம் முயலுக்கு ஒப்புதல் கூறிய உடன், அதன் காலில் விழுந்து வணங்கி எழுந்து மற்ற அமைச்சர்களிடமும் ஆசி பெற்றுக் கொண்டு, அடுத்த காட்டை நோக்கிப் பாய்ந்து சென்றது. அடுத்த காட்டில் ஆட்சி புரிந்தது ஒரு கிழட்டுச் சிங்கம். அதன் குகைக்குள் முயல் போய்ச் சேர்ந்த நேரத்தில் அது குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டி ருந்தது. குகை வாயிலில் யாரும் காவலுக்கு இல்லாததால் முயல் நேரே உள்ளே சென்றது. பொதுவாகச் சிங்கங்கள் பகலில்தான் உறங்குவது வழக்கம். இரவில் அவை மிகச்சுறுசுறுப்பாக இருக்கும். ஆனால் அந்தக் கிழட்டுச் சிங்கமோ அந்த இரவுநேரத்திலும் குறட்டை விட்டுக் கொண்டிருந்தது வியப்பாய் இருந்தது. முயல் அதன் முன்னே போய்ச் சற்று தொலைவில் நின்று கொண்டு “மன்னவா, மன்னவா” என்று அழைத்தது. மன்னவன் காதில் அந்தச் சின்னவன் குரல் எட்டவில்லை. முயல் தன் காலடியில் கிடந்த ஒரு சின்னக் கல்லை எடுத்து அந்தக் கிழட்டுச் சிங்கத் தின் மீது வீசியெறிந்தது. சிறிது புரண்டு படுத்த அந்தச் சிங்கம் சோதிடர் வந்து விட்டாரா?" என்று கூறிக்கொண்டே கண் விழித்தது. எதிரில் ஒரு முயல் நிற்பதைப் பார்த்ததும் அதற்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. “கடவுளின் தூதரே, நலம் தானா? சிவபெருமான் பார்வதி தேவி எல்லாரும் நலம்தானா?”என்று கேட்டது. முயலுக்கு ஒரு ஐயம் தோன்றியது. இத்த கிழட்டுச் சிங்கம் உண்மையில் அரசர் தானா? இல்லை அரைப் பைத்தியமா என்று நினைத்தது. இருந்தாலும், அது அரசனாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு கட்டிக் கொண்டு அதனுடன் பேசத் தொடங்கியது. அரசே, என்னைக் கண்டவுடன் தாங்கள் இவ்வளவு மகிழ்ச்சியடையக் காரணம் என்ன? தெரிந்து கொள்ளலாமா?’ என்று கேட்டது. “சிவபெருமான் தூதரே, உங்களைப் பார்த்ததால் என் கவலை எல்லாம் தீர்ந்து விட்டது. இரண்டு நாட் களுக்கு முன் என் இனத்தவர்கள் ஒரு மானிடக் கிழவனை இங்கு பிடித்து வந்தார்கள். அவன் யார் என்று விசாரித்தபோது பட்டணத்து ஆலமரத்தடியில் சோதிடம் சொல்பவன் என்று தெரிந்தது. என் ஜாதகத்தைப் பார்த்து விட்டு இந்த வாரத்திற்குள் போர் தொடங்கினால் எனக்கு வெற்றி நிச்சயமென்றும் அந்த வெற்றிக்கு அடையாளமாகச் சிவபெருமான் ஒரு முயல் தூதரை அனுப்புவாரென்றும், அந்தச் சோதிடர் சொன்னார். அவர் சொன்னபடியே இன்னும் இரண்டு நாளில் அடுத்த காட்டின் மேல் படையெடுக்கப் போகிறேன். அந்தப் போரில் எனக்குத் தான் வெற்றி என்பதற்கு அடையாளமாகச் சிவதூதர் நீரும் வந்து விட்டீர். அந்தச் சோதிடன் திறமைசாலி தான்!” என்று அந்த கிழட்டுச் சிங்கம் கூறியது. அதைக்கேட்ட முயல் கலகலவென்று சிரித்தது. "அரசே, நான் கேட்கிற சில கேள்விகளுக்கு உண்மையான பதிலைச் சொல்ல வேண்டுகிறேன். தங்கள் காட்டில் எத்தனை சிங்கங்கள் இருக்கின்றன??? “ஏழு” “எத்தனை புலிகள் இருக்கின்றன?” “இருபது” “எத்தனை யானைகள்?” “ஐம்பது” “குைதிரைகள்?” “முப்பது.” "அரசே, நான் சொல்லுவதைத் தாங்கள் சினங்கொள்ளாமல் கேட்க வேண்டுகிறேன். தங்களிடம் உள்ள வலிமை மிக்க விலங்குகளின் தொகை மிகக் குறைவாக இருக்கிறது. பக்கத்துக் காட்டிலோ பத்து மடங்கு கொடிய விலங்குகள் உள்ளன. அவை அத்தனையும் ஒன்று சேர்ந்து தங்கள் காட்டைத் தாக் கினால் அரைமணி நேரத்தில் ஒன்றுகூட மிஞ்சாமல் போய்விடும், "யாரோ வழியில் அகப்பட்ட சோதிடன் தான் உயிர் பிழைத்துப் போவதற்காகச் சொல்லிய பொய்யுரையை நம்பிக் கொண்டு தாங்கள் போராடப் புறப்படுவது பேதைமையாகும். “இந்த வழியாக வந்த நான் நம் அரசரைப் பார்த்து வாழ்த்துப்பெற்றுச் செல்லலாம் என்று உள்ளே வந்தேன். தாங்களோ பாதுகாப்பே இல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். சரியான வலுவில்லாமல் பகையைத் தேடிக் கொள்வது நமக்கே தீமையாக முடியும். :பக்கத்துக் காட்டில் உள்ளவர்கள் போரைப் பற்றியே நினைக்காமல் இருக்கும் போது நீங்கள் ஓர் போரை உண்டாக்கி வீணாகப் பல உயிர்களை இழக்க முடிவு செய்திருப்பது சரியல்ல.” “தாங்கள் விரும்பினால், நான் பக்கத்துக்காட்டு அரசனுடன் தங்களுக்கு நட்பு ஏற்படச் செய்கிறேன். இருவரும் நண்பர்களாகவும் ஒற்றுமையாகவும் இருந்து எங்களையெல்லாம் காப்பாற்ற வேண்டுகிறேன்.” முயலைச் சிவபெருமான் தூதரென்றே நினைத்துக் கொண்டிருந்த கிழட்டுச் சிங்கம் அதன் சொல்லுக்கு மதிப்பு அளித்தது. “தூதரே உங்கள் பேச்சில் உண்மை இருக்கிறது. உங்கள் கருத்துப் படியே நான் நடக்க விரும்புகிறேன். அடுத்த காட்டு அரசனுக்கு என்னை நண்பனாக்குவதை நான் வரவேற்கிறேன்” என்று கிழட்டுச்சிங்கம் கூறியது. அடுத்த நாள் மாலையில் ஒர் ஆலமரத்தடிக்கு வந்திருக்கும் படியும் அந்த மரத்தடிக்கு அடுத்த காட்டு அரசனை அழைத்து வருவதாகவும் சொல்லி விட்டு முயல் அங்கிருந்து கிளம்பியது. . அந்தக் கிழட்டுச் சிங்கம் நட்புக்கொள்ள வருகிற செய்தியை அப்பொழுதே சென்று தன் அரசனிடம் கூறியது சின்னமுயல். சென்ற இரண்டு மணி நேரத் திற்குள் சொன்னபடி ஒரு நல்ல முடிவை வந்து சொன்ன முயலின் மீது சிங்கத்திற்குப் பெரும் மதிப்பு ஏற்பட்டது. . மறுநாள் கிழட்டுச்சிங்கத்துடன் அன்புடன் நட்புக் கொண்டு உறவாடி விட்டு மகிழ்ச்சியோடு திரும்பியது சிங்கஅரசன். அதன் அரசாங்கத்தில் அந்தச் சின்ன முயல் தலைமை அமைச்சராகி விட்டது. ஒரு பெரிய போரைத் தன் திறமையால் நிறுத்தி வைத்த அந்தக் குட்டி முயலைப் பற்றிக் கேள்விப்பட்டு இரண்டும் காட்டிலும் இருந்த விலங்குகள் எல்லாம் அந்த முயலைப் போற்றிப் பாராட்டின. - சின்ன உருவம் இருந்தாலும் ஒரு பெரிய செயலைச் செய்து முடித்த பெருமை அந்த முயலை அந்தக் காட்டுக்கே பெரிய தலைவனாக்கி விட்டது. இரங்கூன் முயலும் யானை வேட்டையும் நமது தமிழ் நாட்டுக்குக் கிழக்கே ஒருபெரிய கடல் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். கண்ணகி சிலை இருக்கும் கடற்கரைக்குக் காற்று வாங்கச் செல்கிறோம். அங்கே அலைமோதிக் கொண்டிருக்கும் கடலில் இறங்கிக் காலை நனைத்துக்கொண்டால் ஒரு மகிழ்ச்சி உண்டாகிறது. சில சிறுவர்கள் கடலுக்குள் இறங்கி அலைகளை எதிர்த்து நீந்திக் குளிப்பதைப் பார்க்கும் போது அவர்கள் அடையும் இன்பத்தை நாம் அளவிட்டுக் கூறமுடியாது. இந்தக் கடலை நாம் வங்கக் கடல் என்று அழைக் கிறோம். இந்த வங்கக் கடலில் கப்பலில் ஏறிக் கிழக்கே சென்றால் ஆயிரம் கல் தொலைவில் இரங்கூன் என்ற நகர் உள்ளது. இரங்கூன் பர்மிய நாட்டின் தலைநகரமாகும், இரங்கூன் நகரிலிருந்து கிழக்கே சென்றால் ஒரு பெரிய காடு இருக்கிறது. அந்தக் காட்டில் ஒரு குட்டி முயலுக்கு ஒரு முறை பிறந்த நாள் வந்தது. பிறந்த நாள் அன்று அதன் அம்மா ஒரு பெரிய விருந்து வைத்தது. அந்த விருந்துக்கு வந்த பல முயல்கள் வகை வகையான இலைகளையும் குழைகளையும் பரிசாகக் கொண்டு வந்து கொடுத்தன. குட்டி முயலின் அம்மாவுக்கு ஏராளமான உறவினர்கள் இருந்ததால் பல பகுதிகளிலிருந்து முயல்கள் வந்து வாழ்த்துக் கூறின. ஷான் நாட்டிலிருந்து வந்த சின்ன முயல் ஒன்று குட்டி முயலுடன் அன்பாகப் பழகியது. இரண்டும் நண்பர்களாகி விட்டன. விருந்தெல்லாம் முடிந்தபிறகு ஷான் நாட்டு முயல், குட்டி முயலைப் பார்த்து உங்கள் காடெல்லாம் சுற்றிப் பார்க்கலாம் வருகிறாயா என்று கேட்டது. குட்டி முயலும் அம்மாவிடம் ஒப்புதல் பெற்றுக் கொண்டு அந்த வெளியூர் முயலுடன் புறப்பட்டது. காட்டுப் பகுதிகளையெல்லாம் சுற்றிப் பார்த்துக் கொண்டு இரண்டு முயல்களும் துள்ளிப் பாய்ந்து ஓடின. கால்வாய்களைக் கடக்க ஒரு தாவல். கரும்புத் தோட்டங்களின் இடையே ஒரு துள்ளல். நெல் வயல்களின் ஊடே ஒரு ஒட்டம். காட்டு மரங்களின் நடுவில் ஒரு ஆட்டம். புதர்களைத் தாண்டி ஒரு பாய்ச்சல். இப்படியாக அவை போட்ட ஆட்ட பாட்டங்களுக்கு அளவில்லை, இரண்டு முயல்களும் போட்டிபோட்டுக் கொண்டு பாய்ந்த போது, ஒரு மரத்தடியில் படுத்திருந்த ஒரு காட்டானை மீது விழுந்தன. சினத்தோடு விழித்தெழுந்த காட்டானை தன் துதிக்கையை நீட்டி அவற்றை வளைத்துப் பிடித்து வீசி எறிந்தது. விட்டெறிந்த பந்துகளைப் போல் அந்த முயல் குட்டிகள் இரண்டும் ஒரு தேக்க மரத்தின் அடியில் மோதி விழுந் தன. உடம்பெல்லாம் ஒரே வலி! [] இன்னொருமுறை என் தூக்கத்தைக் கெடுத்தால் உங்களை வானுலகத்திற்கே அனுப்பி விடுவேன் என்று அந்தக் காட்டானை பிளிறியது. தப்பித்தோம், பிழைத்தோம் என்று அந்தக் குட்டி முயல்கள் அங்கிருந்து ஒட்டம் பிடித்தன. ஒரு கால்வாய்க் கரையில் இருந்த மாமரத்தின் அடியில் இரண்டு முயல்குட்டிகளும் இளைப்பாறுவதற் காகத் தங்கின, அப்போது ஷான் நாட்டுச் சின்ன முயல், “இந்த யானை தூக்கி எறிந்ததில் என் முதுகெல்லாம் வலிக்கிறது?” என்றது. ’எனக்கு வயிற்றில் நல்ல அடி. இன்னும் வலிக் கிறது?" என்றது குட்டி முயல். “இந்த யானைக்கு ஒரு பாடம்காட்ட வேண்டும். நீ என்ன சொல்லுகிறாய்?”என்று கேட்டது ஷான் நாட்டுச் சின்னமுயல். - “அது எவ்வளவு பெரிய விலங்கு. அதை நாம் என்ன செய்யமுடியும்?” என்று கூறியது குட்டிமுயல். இவ்வாறு பேசிக்கொண்டே அங்கிருந்து புறப்பட்டன. வழியில் வெட்டிக் கிடந்த ஒரு பள்ளத்தைக் கண்டன. இரண்டும் ஒரே தாவலில் அந்தப் பள்ளத்தைக் கடந்தன. - “கொஞ்சம் நில். இப்படிச் செய்யலாமா?” என்று ஷான் முயல் கேட்டது. “என்ன செய்யலாம்?” என்று கேள்விக் குறியோடு பார்த்துக் கொண்டே குட்டி முயல் கேட்டது. "இந்தப் பள்ளத்தில் அந்தக் காட்டானையை விழச் செய்யவேண்டும். அது மேலே ஏற முடியாமல் தத்தளிக்கும் போது எங்களை வீசி எறிந்தாயே இப் போது எப்படி இருக்கிறது? என்று கேட்க வேண்டும் என்று சொல்லியது ஷான் நாட்டு முயல், “அது எப்படிப் பள்ளத்தில் வந்துவிழும். பள்ளத்தைக் கண்டால் ஒதுங்கித்தானே போகும்” என்று சொல்லியது இரங்கூன் முயல், “பள்ளம் இங்கே இருப்பது அதற்குத் தெரியக்கூடாது. ஆனால் அது இந்த வழியாக வரவேண்டும். கண்ணைத் திறந்து கொண்டே அது பள்ளத்தில் விழ வேண்டும்” என்றது ஷான் முயல். "பாவம் விழுந்து அடிபட்டால் அதற்கு உடம்பெல்லாம் வலிக்குமே!’ என்று இரக்கப் பட்டது இரங்கூன் முயல். "நமக்கு வலிக்கிற மாதிரி அதற்கும் வலிக்க வேண்டும். அப்போது தான் அதற்குப் புத்தி வரும்!?? என்று சினத்துடன் கூறியது ஷான் முயல். ஷான் நாட்டு முயலின் கருத்துப்படி இரண்டு முயல் குட்டிகளும் செயல்புரிந்தன. பக்கத்துக் கரும்புத் தோட்டத்தில் வெட்டிக் கிடந்த கரும்புகளை ஒவ்வொன்றாகக் கெளவி இழுத்து வந்தன. பள்ளத்தில் குறுக்கில் இருபது கரும்புகளை வரிசையாக அடுக்கின. அதை இலை தழைகளால் மூடின. பள்ளத்தின் எதிரில் கரும்புகளைக் குறுக்கும் நெடுக்குமாகப் போட்டு வைத்தன. அந்தக் கரும்புக் குவியலிலிருந்து பள்ளத்தின் குறுக்காக, வரிசையாகக் கரும்பைப் போட்டன. பள்ளம் இருந்த இடத்திலிருந்து பத்து அடிக்கு ஒரு கரும்பாக, யானை இருக்கும் இடம் வரையில் போட்டுக் கொண்டே சென்றன. யானை பார்க்குமுன் புதர் மறைவில் ஓடி மறைந்து கொண்டன. காட்டில் உலாவிக் கொண்டிருந்த யானையின் கண்ணில் தரையில் கிடந்த கரும்பு தெரிந்தது.உடனே அது ஓடி வந்து அதை எடுத்தது. துதிக்கையால் வளைத்து அப்படியே வாய்க்குள் செலுத்தியது. கடித்துக் கடித்துத் தின்றது. சற்று தள்ளிக் கிடந்த கரும்பைப் பார்த்தது. ஒடி வந்து இழுத்துக் கடித்துத் தின்றது. இன்னும் சற்று தொலைவில் கிடந்த கரும்பை இழுத்துக் கடித்தது. இப்படியாக ஒவ்வொரு கரும்பாகத் தின்று கொண்டே, பள்ளத்தின் அருகில் வந்து விட்டது. பள்ளத்தின் எதிரில் குவியலாகக் கிடந்த கரும்புகளைப் பார்த்தவுடன் யானை விரைவாக நடந்தது. அப்படி நடந்து செல்லும்போது, பள்ளத்தின் வழியாகச் சென்றது. பள்ளத்தின் குறுக்காகப் பரப்பியிருந்த கரும்பு களின் மேல் அது காலடி யெடுத்து வைத்தவுடன், யானையின் பளுவைத் தாங்காமல், கரும்புகள் ஒடிந்து யானை பள்ளத்திற்குள் விழுந்து விட்டது. பள்ளம் ஒடுக்கமாகவும் ஆழமாகவும் இருந்ததால், அந்தக் காட்டு யானையால் அசையவோ, நகரவோ, மேலேறவோ முடியவில்லை. விழுந்த அதிர்ச்சியில் அது பிளிறிய பிளிறல் காடெங்கும் எதிரொலித்தது. “எங்களைத் தூக்கி எறிந்து துன்பப் படுத்தினாயே, இப்போது எப்படியிருக்கிறது?” என்று கேட்டுக் கொண்டே ஷான் நாட்டு முயல் வெளியே வந்தது. “பாவம் யானையாரை இப்போது யார் காப்பாற்றுவார்கள்!” என்று கேட்டது இரங்கூன் முயல். அப்போது ஏதோ புதுவிதமான ஒலி கேட்டது இரண்டு முயல்குட்டிகளும் திடுக்கிட்டுத் திரும்பின. இரண்டு சரக்குப் பேருந்துகளும் ஒரு சிறிய உந்தும் அந்தக் காட்டுக்குள் வந்து நின்றன. அவற்றிலிருந்து பதினைந்து மனிதர்கள் இறங்கினார்கள். அவர்களில் ஒருவன் யானை பள்ளத்தில் விழுந்து தத்தளிப்பதைப் பார்த்து விட்டான். “தலைவரே, யானை பிடிக்க வந்தோம். இதோ பிடிபட்டே யானை கிடைத்திருக்கிறது” என்றான். “நம் வேலை எளிதாகி விட்டது” என்று கூறிக் கொண்டே தலைவர் யானையை நோக்கி நடந்தார். பிறகு அவருடைய கட்டளைப்படி சில ஆட்கள் யானையைக் கயிற்றால் கட்டினார்கள். சரக்குப் பேருந்து ஒன்றின் மீது இருந்த சுழல் தூக்கியால் யானையை அப்படியே மேலே தூக்கினார்கள். சுழல் தூக்கியை இயக்கினார்கள். அது அப்படியே யானையைத் தூக்கி மற்றொரு பேருந்தின் மீது வைத்து விட்டது. யானை அசையாதபடி பேருந்துடன் சேர்த்துப் பல கயிறுகளைக் கொண்டு கட்டினார்கள். பிறகு அவர்கள் வேறு யானைகள் ஏதாவது அகப்படுமா என்று காட்டைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்கள். யானை பள்ளத்தில் விழுந்ததிலிருந்து இரங்கூன் முயலுக்குத் துன்பமாய் இருந்தது. ஷான் முயல் பேச்சைக் கேட்டுத் தான் தவறான செயலைச் செய்வதாக மனத்தில் உறுத்தியது. இப்போது மனிதர்கள் அதைக் கட்டித் தூக்கிக் கொண்டு போகப் போவதை எண்ணிய போது அதற்கு மனமே உடைந்து போய் விடும் போல் இருந்தது. ஷான் முயல் யானையைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இரங்கூன் முயல் அதற்குத் தெரியாமல் அங்கிருந்து நழுவியது. சிறிது தொலைவில் சுண்டெலிகள் இருக்கும் பகுதிக்குச் சென்றது. சுண்டெலிகளின் தலைவன் குட்டி முயலைக் கண்டவுடன் வெளியே வந்தது. "குட்டி முயலே, உன் பிறந்தநாள் விருந்துக்கு வர முடியவில்லை. உன் அம்மாவிடம் மன்னிப்புக் கேட்டதாகச் சொல். என் மனைவிக்கு உடல் நலம் இல்லை’ என்று சுண்டெலித்தலைவன் கூறியது, “எலியண்ணா, நான் இப்போது உங்கள் உதவியை நாடி வந்திருக்கிறேன்.”என்று குட்டி முயல் கூறியது. நடந்த கதையைக் கூறி யானையைக் காப்பாற்ற உதவ வேண்டும் என்று குட்டி முயல் சுண்டெலியை மன்றாடிக் கேட்டது. “உன்னைப் போல் எல்லாருக்கும் நன்மையே எண்ணுகின்ற மனம் எல்லாருக்கும் இருந்து விட்டால், இந்த உலகம் பொன்னுலகம் ஆகிவிடும்” என்றுகூறிய சுண்டெலி, அங்கு இருந்த நூறு எலிகளையும் அழைத்துக் கொண்டு முயலுடன் புறப்பட்டது. நூறு எலிகளும் யானையைக் கட்டியிருந்த பேருந்தின் மேல் சரசரவென்று ஏறின. கயிறுகளை அங்கங்கே கடித்துக் குதறின. எல்லாக் கட்டுகளும் அவிழ்ந்தவுடன் பாய்ந்தோடித் தங்கள் இருப்பிடத்திற்குத் சென்று விட்டன. கட்டுத் தளர்ந்தவுடன், யானை பேருந்தின் பக்க அடைப்புகளை ஒடித்துக் கொண்டு கீழே இறங்கியது. பிளிறிக் கொண்டு அங்கிருந்து ஓடியது. காட்டைச் சுற்றிப் பார்க்கச் சென்ற யானை பிடிக்கும் வீரர்கள் திரும்பி வந்தார்கள். கயிறுகள் தூள் தூளாய் அறுந்து கிடப்பதையும் யானை தப்பியோடி விட்டதையும் கண்டு அவர்கள் வியப்படைந்தார்கள். அவ்வளவு பலமான கட்டுக்களைக் குதறி எறிவது யானையால் முடியாது. ஏதோ தெய்வம் தான் வந்து இதைச் செய்திருக்க வேண்டும். அந்தத் தெய்வம் வனதேவதையாகக் கூட இருக்கலாம். வனதேவதைக்கு அன்பான யானையைத் தாங்கள் பிடித்தது அந்தத் தெய்வத்துக்குப் பிடிக்க வில்லை போலிருக்கிறது. இந்தக் காட்டில் மேற்கொண்டு தங்கினால், தங்களுக்கு, வனதேவதையால் ஏதாவது கேடு வரும் என்று அஞ்சி உடனே புறப்பட்டுச் சென்று விட் டார்கள். குட்டி முயலுக்கு அப்போதுதான் மன அமைதி ஏற்பட்டது. []  FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.