[] [] []       ஆசிரியர் -  நடராஜன்  கல்பட்டு       மின்னூலாக்கம் - தனசேகர் tkdhanasekar@gmail.com     மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com    உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். பொருளடக்கம்   1. ஒரு அன்னையின் கனவு 6  2. அபலையின் கண்ணீர் -1 8  3. அபலையின் கண்ணீர் - 2 10  4. அபலையின் கண்ணீர் - 3 12  5. என்ன குற்றம் புரிந்தார் இவர்? 14  6. குமுறுது ஒரு பெண் சிசு 16  7. இதயத் தீ 17  8. எங்கே போகிறோம் நாம் = Quo Vadis? 26  9. சுதந்திரம் 27  10. தப்புத் தாளம் 32  11. தாயா அன்றி…… 35   12. விடியல் வராதா? 36  13. சுந்தரி சொன்னாள் ஒரு சேதி 41  14. ஜொலிப்ப தெல்லாம் தங்கமல்ல 46                                                                                     அபலைகள்      முன்னுரை     பெண்கள் வாழ்ந்திடும் தியாக வாழ்க்கையினையும், அவர்களுக்கு எதிராய் ஆண்கள் புரிந்திடும் குற்றங்களை எதிர்த்துப் போரிடும் சக்தி அற்ற தன்மையையும் மனதில் கொண்டு அவர்களை அபலைகள் என்று சொல்கிறோம். (அ + பலை = பலம் அற்றவர்.)   அபலைகள் பற்றி கவிதை வடிவிலும் கதை வடிவிலும் உள்ள என் சிந்தனைகள் சிலவற்றை ஒரு தொடராய் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1. ஒரு அன்னையின் கனவு   []     தூளியிலே ஒரு நாளு தூங்கிய எங்கொளெந்தெ தூக்கினா அடிச்சான் மூஞ்சியிலே மூத்திரத்தெ பன்னீரு தெளிச்ச சந்தோசம் அவன் மனசுலெ பொக்க வாயெத் தொறந்தே சிரிச்சிட்டான் என்னெயப் பாத்தே பள்ளியிலெ படிக்குறான் அவன் இப்போ சுள்ளி ஒண்ணெக் கையிலெ எடுத்துகிட்டே ஓட ஓட வெரட்டுறான் என்னியே பள்ளிக்கு நேரத்துலெ வரவோணும் பாடத்துலெ கவனம் செலுத்த வோணுமின்னே சட்டாம் புள்ளே அவந்தானாம் எட்டங் கிளாசுலெ அவன் இப்போ எட்டாத ஒசரத்தெ எட்டியே புடிச்சிடுவானோ பத்தங்கிளாசு தாண்டினா எம் புள்ளெ படிக்கோணும் மேலெ நான் பட்டணந்தான் போயிம்பான் சட்டுனு எடுத்தே கொடுத்திடுவவேன் சட்டிலெ சேத்து வெச்செ பணங்காசெ அவங் கையிலே படிச்சுடுவான் எம் புள்ளே பட்டமுந்தான் வாங்கிடுவான் ஒரு நாளு படிச்ச புள்ளெக்கு வேலெ ஏது இந்தப் பட்டிக் காட்டு ஊருலே பறந்து போவான் எம் புள்ளே எட்டாத தூரத்துகே ஒரு நாளு எங்கெருந்தா என்ன எம்புள்ளெ நல்லா இருந்தாப் போது மவன் சிரிச்சுக் கிட்டே காலெத்தெ கழிச்சுடுவேன் பொட்டெப் புள்ளெ நானுந் தான்     2. அபலையின் கண்ணீர் -1     (படம் உபயம் – துரை ந.உ.)   பொறந்த ஊரு வுட்டு ஊரு வந்தேன் பொளப்பு தேடி கல்லு தூக்கிப் பொளெச் சிருந்தேன் கால் வயித்துக் கஞ்சியோட வந்த இடத்துலெ ஒட்டி கிட்டான் வெட்டிப் பய லொருத்தன்   சொரம் ஒண்ணு வந்திருச்சு சுருண்டே தான் படுத்திருக்கேன் வந்திருவான் இப்போ மொடாக் குடியன் காசுக்கு எங்கெ போவேன் நான் குடுக்கத்தான் அவனுக்கு வாய் கூசாமெ ஏசிடுவான் ஆரு கூட நீ படுத்தே கைத் துட்டெக் குடுத்திட்டேன்னே   கொள்ளி கொண்டே போவோணும் இந்த கள்ளு சாராயம் விக்குற ஆளுங் களை யெல்லாம்   11-05-2011                                      நடராஜன் கல்பட்டு 3. அபலையின் கண்ணீர் - 2   []     அன்று கேட்டிலை நான் அன்னை சொல் பேச்சினை இன்று நான் தெருவினிலே எடுத்திடுறேன் பிச்சை   அணைத்தவன் ஆண்டவன் என நினைத்தே அன்னை சொல் வெறுத்தேன் தந்தை சொல் மறுத்தேன் பின் விளை வறிந்திடாதே பின் சென்றேன் அவனுடனே   அணைத்தவன் வாழ்ந்திட வில்லையே பிணைப்பொடு என்னோடு பணத்திற்கே விற்றிட்டான் குணக் கேடன் அவனென்னை   ஒருவன் மட்டுமல்ல கயவன் உலகில் உள்ளார் பலரவன் போல் பெண்கள் அவர் கையிலோர் விளையாட்டு பொம்மை   ஆடி முடித்தபின் அவர் ஆட்டம் வீசி எறிந்திடுறார் வீதியிலே சேத முற்ற பொம்மை சேர்ந்திடுமோ மீண்டும் பழய நிலை   (படம் திரு வென்கடராம் ஸ்ரீநிவாஸ் அவர்கள் இன்று அனுப்பிய ஒரு மடலில் இருந்து)   4. அபலையின் கண்ணீர் - 3   []     நீரில் மூழ்கியே தன் தீராத் துயரம் போக்கிட முனைந்தவள் வேதனையொடு நினைத்தாள் தீயவன் அவனை யோர் கணம்   அபலையின் கண்ணீர் அழித்திடும் ஒரு நாள் அறிந்திடாதே இதை புரிந்திடுறான் அந்தோ கொடுஞ் செயல்களை மலர் விட்டு மலர் தாவும் வண்ணத்துப் பூச்சியாய் அவன்   (படம் முகமூடியின் மடலில் இருந்து – படம் பிடித்தது sztyh)   5. என்ன குற்றம் புரிந்தார் இவர்?   என்ன குற்றம் புரிந்தார் இவர் பெண்ணாய்ப் பிறந்தது குற்றமா அன்றி கண்ணுக் கழகாய் வளர்ந்து குற்றமா அறிவிற் சிறந்தே விளங்கியது குற்றமா அன்றி வெளியே சென்றது குற்றமா   அமிலம் ஊற்றி அழித்திட முனைகிறார் தன் இச்சைக்கு உடன் படாப் பெண்ணினை சிலர் எண்ணை ஊற்றி எரிப்போரும் உண்டிங்கு ஏனிந்த அவலம் இன்று   பணம் படைத்தோர் பாலியல் குற்றங்கள் புரிந்து வளர்ச்சி யெந்தன் கண்டு சகியாதோர் செய்திடும் சதியிது வந்திடுவேன் வெளியில் நல் வக்கீல்கள் துணை கொண்டு என் றிருமாப்புடன் வலம் வந்திடுறார்   அண்ணன் இல்லை அப்பா இல்லை மாமன் இல்லை பாட்டன் இல்லை வயது பற்றிக் கவலை இல்லை பார்த்திடாதே இவை யெதுவும் வீட்டுள்ளே புரிந்திடுறார் பலாத்காரம்   வீதியிலே பலாத்காரம் ஓடும் பேருந்திலே பலாத்காரம் இல்லையோ முடிவேதும் இவற்றுக்கே   முக்கண் கொண்டவன் சிவன் என்பார் எரித்திடுவான் அவன் குற்றங்கள் புரிவோரை என்பார் மூடினானோ அவனும் தன் கண்களையே காணச் சகித்திடாதே இவ் வவலங்களை   என்ன குற்றம் புரிந்தார் பெண்கள் பெண்ணாய்ப் பிறந்தது பெரும் குற்றமா அன்றி…… 6. குமுறுது ஒரு பெண் சிசு   ஆணுக்குத் தேவை யொரு பெண் அணைத்து மகிழ்ந்திட பின் பெற்றோருக்கு ஏன் வேண்டாம் ஒர் பெண் சிசு வீணுக்கு ஏன் இந்தக் கொலை வெறி போக்கிடப் பெண் சிசுவின் உயிரினை   அம்மா உன்னை நான் ஒன்று கேட்பேன் பெண்ணாய்ப் பிறந்த தென் குற்றமா அன்றி பெண் எனைப் பெற்றெடுத்த உன் குற்றமா இல்லையே இருவர் குற்றமு மது   தாயிற் சிறந்த கோயிலு மில்லை தந்தை சொல் மிக்க மந்திர மில்லை என்றார் சான்றோர் அன்று ஓதுகின்றார் என் தந்தை சாவு மந்திரம் இன்று கோயிலில்லை நீ கருங் கல்லால் ஆன கல்லறை நீ   கூசாமல் பாலுடன் கலந்தே போட்டிட முனைகிறாயே கள்ளிப் பாலினை எனக்கு அம்மாவா நீ     7. இதயத் தீ   Until my ghastly tale is told My heart within burns --Samuel Taylor Colleridge   சோகக் கதை யெந்தன் சொல்லி முடிக்கு முன் ஓயாதென் இதயத்துள் கனிந்திடும் தீ      --சேமுவெல் டெய்லர் காலெரிட்ஜ்   []     ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தி ஏழு ஆகஸ்ட் பதினைந்து இந்தியர்கள் மறக்க முடியாத தினம்.  இந்தியா சுதந்திரம் பெற்ற தினம்.  நானும் ஒரு இந்தியக் குடி மகளாயிற்றே?  என்னால் மட்டும் எப்படி மறக்க முடியும் அந்த நாளை?  மேலும் அன்று தானே என் சுதந்திரம் பறி போன நாள்? அந்த வருடம் ஜூலை மாதத்தில் ஒரு நாள் மாலை அப்பா கோவிலுக்குப் போய் விட்டு வீடு திரும்பியதும் அம்மாவிடம் சொன்னார், “கோமளம் நம்ம சௌந்தர்யாவுக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு.  கோவில்லெ தரகர் தர்மராஜனெப் பாத்தேன்.  அவர்தான் சொன்னார்.  ‘பையன் ரயில்வேலெ வேலேலெ இருக்கான்.  கை நெரெய சம்பாதிக்கறான்.  சொந்தமா வீடு இருக்கு.  மனுஷா ரொம்ப நல்லவா.  விஷயம் வெளிலெ பரவறதுக்குள்ளெ காதும் காதும் வெச்சாப்புளெ முடிச்சுடலாம் ஓய்’ ன்னார் அவர்.  நீ என்ன சொல்றே?”   []   (“நம்ம சௌந்தர்யாக்கு நல்ல வரன் வந்திருக்கு” - படம் சேட்டை என்னும் தமிழன் வேணு)   “நான் என்னன்னா சொல்றதுக்கு இருக்கு?  ஒங்களுக்குத் தெரியாதா எது நல்லது எது கெட்டதுன்னு?”  இது அம்மா. சௌந்தர்யா வேறெ யாரும் இல்லெ.  சாக்ஷாத் நாந்தான்.  பேருக்கேத்தாப்புளெ எங்காத்துலெயே நான் தான் ரொம்ப அழகுன்னு எல்லாரும் சொல்லுவா என்னெ.   எனக்கு மூணு அக்கா.  அவா மூணு பேருக்கும் கல்யாணம் ஆயிடுத்து.  மூத்தவளுக்கு வந்தவர் சாஸ்திரிகள்.  ரெண்டாவது மாப்பிள்ளெ சமையல் காரர்.  மூணாவது, அப்பா வேலெ செய்யற எலிமென்டரி ஸ்கூல்லெ வாத்தியார்.  எனக்கு ஒரு தங்கெ.  அவொ இப்பொதான் ஒம்பதாவது படிக்கறா.  அண்ணா தம்பின்னு யாரும் கெடெயாது. “அப்பா எனக்கு இப்பொ கல்யாணம் வாணாம்பா.  என் டீச்சர் சொல்றாப்பா, ‘கிளாசுலேயே நீதான் நன்னா படிக்கறே.  காலேஜுலெ சேந்து மேலெ படிச்சு முன்னுக்கு வரணும்’ னு.” “ஆமாண்டீ நீ படிச்சு என்ன கிழிக்கப் போறே?  யாரு கிட்டெ இருக்கு பணம் காலேஜு ஃபீஸுக்கு கொட்டி அழறதுக்கு?  காலா காலத்துலெ ஒங்களெத் தள்ளி உட்டூட்டு நான் போற வழியெப்பாக்க வாணாம்?” அன்னிக்கி ராத்திரி பூரா அழுததுலெ என் கண்ணு ரெண்டும் செவந்து போச்சு.  மூஞ்சியும் உப்பிப் போச்சு.  ஆனா என் பேச்சு யாரு காதுலெ விழப்போறது?  அவசர கதிலெ புள்ளெயாத்துக் காராளோட பேச்சு வார்த்தெ, பெண் பாக்கற படலம், நிச்சயதார்த்தம்னு எல்லாம் நடந்து முடிஞ்சுது.  கல்யாணம் ஆகஸ்ட் பதினஞ்சு, 1947.   தரகர் சொன்னாப்புளெ காதும் காதும் வெச்சாப்புளெதான் நடந்துது என் கல்யாணம்.  பத்திரிகையெல்லாம் ஒண்ணும் அடிக்கலே.  முக்கியமான சொந்தக் காராளுக்கு போஸ்ட் கார்டுலெ மஞ்சள் தடவி விஷயத்தெத் தெரிவிச்சா. ஆத்து வாசலெலேயே பந்தல் போட்டு அதுலெதான் கல்யாணம் நடந்துது.  கல்யாணத்தெ நடத்தி வெச்சது வேறெ யாரும் இல்லெ.  மொதல் அத்திம்பேர்தான்..   வீட்டுக் கொல்லப் புரத்துலெ கோட்டெ அடுப்பு கட்டி சமையல்.  சமையல் காரர் என்னோட ரெண்டாவது அத்திம்பேர்.  மூணாவது அத்திம்பேர் எடுபுடி வேலை. கல்யாணத்துக்கு மாப்பிள்ளையோட அம்மா வரலெ.  ஒடம்பு சரியில்லாத்துனாலெ வரலேன்னு சொல்லிண்டா. கல்யாணம் ஆன மறு நாள் கட்டு சாதக் கூடையோட என்னையும் கூட்டிண்டு போனா பொன்மலைக்கு, அதான் புள்ளையாத்துக்கு, புள்ளையாத்துலெ மொத்தமா ஆறு பேரு இருந்தா.  இவர், இவரோட அப்பா, அம்மா, அக்கா, அக்காவோட ஒரு புள்ளெ, அப்புறம் ஒரு பொண்ணு.  அந்தப் பொண்ணு யாருன்னு அப்பொ எனக்குத் தெரிலெ யாரும் சொல்லவும் இல்லெ.  அக்கா நெத்திலெ குங்குமமும் தலெலெ பூவும் இருந்தது.  ஆனா அவொ ஆத்துக் காரரெக் காணும்.  அவர் ஊருலெ இருக்கார்.  ஒடம்பு சரியில்லாத்துனாலெ வரலேன்னா. இவரோட அம்மா ஒரு நாலு சக்கரம் வெச்செ பலகேலெ ஒக்காந்துண்டு இருந்தா.  கையாலெ உந்தித் தள்ளிண்டே தான் வீடு பூரா சுத்தி வந்திண்டு இருந்தா. எங்களெப் பாத்ததும் இவரோட அம்மா, “வாடிம்மா மகாலக்ஷ்மி வலது காலெ எடுத்து உள்ளெ வெச்சு வந்து சாமி கிட்டெ விளக்கேத்து” ன்னா.  ஆத்துலெ அம்மா சொல்லு வா, “சந்த்யாகாலம் ஆச்சுடீ.  வந்து சாமி கிட்டெ வெளெக்கேத்து” ன்னு.  அப்பொ ஒரு நாளும் பண்ணலெ அதெ.  வெளெக்கேத்தறச்சே என் கையெல்லாம் நடுங்கீத்து.  நெருப்புக் குச்சி அடி வரெய்க்கும் எரிஞ்சு என் கை சுட்டுடுத்து.  நல்ல வேளெ.  ஏத்தி முடிச்சேன் ஒரு வழியா.  ஒரே குச்சிலெ ஏத்தணுமாமே அதெ?  அதுலெதானே தெரியுமாம் பொண்ணு சிக்கனமாக் குடித்தனம் நடத்துவாளா மாட்டாளான்னு? அப்பா சொன்னபடி என்னைத் தள்ளிதான் விட்டு விட்டார்.  ஆனால் எங்கே?  பாழுங் கிணத்தில்.  இது மறு நாளில் இருந்துதான் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது எனக்கு. மறு நாள் காலை வீடு பெருக்கிப் பத்துப் பத்திரம் தேய்த்திட வேலைக் காரி மாரியாத்தா வந்தாள்.  நான் பத்திரங்களைக் கொண்டு கிணற்றடியில் போடப் போனேன்.  அப்போது அவள் என்னைக் கேட்டாள், “ஏம்மா நீதான் இந்த ஊட்டுக்கு மூணாவதா வந்திருக்குற மாட்டுப் பொண்ணா?  வேறெ எடமே கெடெய்க்கலியா ஒங்க அப்பாவுக்கு?” “என்ன சொல்ல வரீங்க நீங்க?” “மொதலுலெ ஒருத்தி வந்தா.  ஒரு பொம்பிளெப் பிள்ளெயெப் பெத்துப் போட்டூட்டு கண்ணெ மூடீட்டா மவராசி.  நீ பாக்குறையே ஒரு பொண்ணு.  அதான் அந்தப் பொண்ணு.  ரெண்டாவதா ஒருத்தி வந்தா.  அவளெ ரெண்டே வருசத்துலெ வவுத்துலெ புள்ளையோட அடிச்சு வெறெட்டீட்டாங்க அவொ பொறந்த ஊட்டுக்கே.” இதைக் கேட்ட எனக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.  என் தலை விதியை நொந்து கொண்டேன்.  வேறென்ன செய்ய முடியும் என்னால்?  கல்யாணப் பேச்சு அரம்பித்த போதே அதை என்னால் நிறுத்த முடிய வில்லை.  நடந்த கல்யாணத்தையா அழித்து கேலண்டரைத் திருப்பிட முடியும்? இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு தான் தரகர் சொன்னாரோ “விஷயம் வெளிலெ பரவறதுக்கு முன்னெ காதும் காதும் வெச்சாப்புளெ நாம கல்யாணத்தெ முடிச்சுடணும்” னு? ஒரு நாள் என் மாமியார் சொன்னாள், “நாளைக்கு ஏகாதசி வரது.  எனக்கும் ஒங்க மாமனாருக்கும் ஒரு வேளெ தான்.  அதுவும் பலகாரம்  பலகாரத்துக்கு இட்டிலியோ தோசையோ வாக்கணும்.  ஒரு டம்ப்ளர் உளுந்தும், நாலு டம்ப்ளர் அரிசியும் எடுத்து தனித் தனியா ஊரப் போடு. ஒரு மணி நேரம் ஆனதும் உளுந்தெ எடுத்துக் களெய்ஞ்சு, கருப்புத் தோலெ எல்லாம் எடுத்தூட்டு, கல்லொரலெ அலம்பீட்டு அதுலெ போட்டு அறெச்சு எடுத்து வை.  தெரியுமோல்லியோ உளுந்து களைய, கல்லொரலுலெ அறைக்க எல்லாம்?” “ஊம்.  தெரியும்” என்று தலையை ஆட்டினேன். இதெல்லாம் அம்மா சொல்லும் போது வேண்டா வெறுப்பாக செய்த காரியங்கள்.  இப்போது என் உதவிக்கு வந்தன.  அன்று செய்து முடித்தேன் அதை. மறு நாள் சாதம், ரசம், ஒரு கறி செய்து முடித்து விட்டு தோசைக் கல்லை அடுப்பில் போட்டேன்.  சற்று நேரம் ஆனதும் ஒரு கரண்டி மாவை எடுத்து கல்லில் விட்டு கரண்டியால் அதைப் பரப்ப முயன்றால், கல்லில் ஒட்டிக் கொண்ட மாவு அசைவதாகக் காணோம்.  இதை பக்கத்தில் சக்கரப் பலகையில் அமர்ந்த படி பார்த்துக் கொண்டிருந்த என் மாமியார் கேட்டார், “எண்ணை உட்டையா?” “இல்லெ” மெல்லெச் சொன்னேன் நான். “நன்னா இருக்கு.  எண்ணெ உடாமெ தோசெ வாப்பாளோ?. ஒரு கரண்டி முட்டை எண்ணையை எடுத்து விட்டு மீண்டும் முயற்சி செய்தேன்.  அப்போது பாதி வெந்திருந்த மாவு கல்லில் ஒட்டிக் கொண்டு அசைய மறுத்து.   []   (கிண்டல் தோசை படம் கலசலிங்கம்.காமில் இருந்து)   “தோசெக் கரண்டியெ எடுத்துத் திருப்பிப் போடு.” அவர் சொன்னதைச் செய்ய முயன்றேன்.  கல்லில் ஒட்டிக் கொண்டிருந்த மாவு துண்டு துண்டாக வந்தது.  அடுத்த முறை முதலில் சிறிது எண்ணை ஊற்றிப் பின் கரண்டி மாவை எடுத்து விட்டு, தோசைக் கரண்டியின் அடிப் பாகத்தால் மாவை வட்டமாக பரப்ப முயன்றால் அது வந்தது பூகோள அட்லாஸில் காணும் கண்டங்களின் படம் போல.  மனதுள் நினைத்தேன், ‘தோசைக் கென்ன அழகா முக்கியம்?  அது என்ன அழகுப் போட்டிக்கா போகப் போகுது?  வயிற்றுக்குள் தானே போகப் போகிறது?   திருப்பி போட நினைத்து, தோசைக் கரண்டியால் முயன்றால், கல்லில் இங்கும் அங்கும் ஒட்டிக் கொண்டிருந்த தோசை துண்டு துண்டாக வந்தது.  சாதம் வடிக்க, ரசம், குழம்பு, கறி என செய்யச் சொல்லி கொடுத்த அம்மா தோசை வார்க்கவும் பழக்கி இருக்கக் கூடாது?’    அவ்வளவுதான் மாமியார் உரக்கக் கத்தினார், “நன்னா இருக்குடீ நீ தோசெ வாக்கற லட்சணம்.  எங்களெப் பட்டினி போட்டே கொன்னூடறதுன்னு முடிவு பண்ணீட்டையா?  கண்ணா ஓடிப்போய் மாடியாத்து மாமியெக் கூட்டிண்டு வாடா.” என்று’ கண்ணன், அதான் என் கணவரின் சகோதரி மகன், ஓடிப்போய் அழைத்து வந்தான் மூன்றாவது வீட்டு மடிசார் மாமியை. மாமியைப் பார்த்ததும் கத்தினாள் என் மாமியார், “கல்யாணம் ஆகி புக்காம் வந்த பொண்ணுக்கு ஒரு தோசெ வாக்கத் தெரிய வாணாம்?  லக்ஷ்மீ நீயே பாரு அவொ தோசெ வாத்திருக்கற லட்சணத்தெ.” பதில் பேசாமல் நின்றிருந்தார் லக்ஷ்மி மாமி.  திடீரெனப் பலகை வண்டியை அடுப்பருகே கையால் தள்ளி கொண்டு வந்த என் மாமியார் என் வலது கையைப் பிடித்து இழுத்து தோசைக் கல்லின் மீது வைத்துத் தேய்த்தாள்.   “அய்யோ… அம்மா” என்று அலறினேன் வலி பொறுக்க முடியாமல். வாயடைத்து நின்ற மாடியாத்து மாமி வந்த வழியே திரும்பிச் சென்றாள்.  வேறென்ன செய்ய முடியும் லக்ஷ்மி மாமியால்?  ஹிட்லர் அவதாரத்திடம் சண்டையா போட முடியும்?   திரும்பிடப் பழய நிலைக்கு என் கை பிடித்துக் கொண்டது ஒரு மாதம்.  இன்றும் என் வலது கையில் பெரிய பெரிய தழும்புகளுக் கிடையே தான் ரேகைகள் ஓடும், மலைகள் இடையே ஓடும் நதிகள் போல. அக்டோபர் மாதம் வந்தது. கூடவே தீபாளியுந்தான்.  நீபாவளிக்கு ஒரு வாரம் முன் அப்பா வந்திருந்தார், கடிதம் ஒன்று போட்டு விட்டு. “இந்த வருஷம் மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் தலை தீபாவளி.  நீங்க எல்லாரும் தீபாவளிக்கு எங்காத்துக்கு வரணும்” னு என் மாமனார் கிட்டெ சொன்னார்.  அதுக்குள்ள அங்க வேகமா வந்த என் மாமியார் சொன்னா, “தாராளமா தீபாவளி கொண்டாடுங்கோ.  நாங்க எல்லாரும் வரதுங்கெறது முடியாது.  எங்க புள்ளெயயும் ஒங்க பொண்ணையும் அனுப்பி வெக்கறோம்.  ஒண்ணு சொல்ல மறந்தூட்டேன்.  கல்யாணத்தும் போதே புள்ளைக்கு கம்பிக் கரெ போட்டு வேஷ்டி எடுத்தூட்டேள்.  தீபாவளிக்காவது நல்ல அகலமா ஜரிகெக் கரெ போட்டு வேஷ்டி துண்டு எடுங்கோ.” “சரி மாமி செஞ்சூடறேன்.”  சன்னக் குரலில் என் அப்பா. “இருங்கோ இருங்கோ.  நான் சொல்ல வந்ததெ இன்னும் முடிக்கலெ.  தீபாவளி முடிஞ்சதும் எங்க புள்ளெ மறு நாளே திரும்ப வந்தூடுவான்.  ஆபீசு போகணு மோல்லியோ.  ஒங்க பொண்ணு ஒங்க கூட கொஞ்ச நாள் இருந்தூட்டு வரட்டும்.  நாங்க லெட்டர் போடறோம்.  அப்புறமா அழெச்சிண்டு வந்தா போறும்,” என்றாள் என் மாமியார். என் மனதுள் ஒரு சந்தோஷம்.  அப்பா, அம்மா, தங்கை இவர்களோடு கொஞ்சம் நாட்கள் இருக்கமுடியுமே! வெகு நாட்களுக்கு நீடிக்க வில்லை இந்த சந்தோஷமும்.  காரணம் தீபாவளி கழிந்து ஒரு மாதம் தாண்டி விட்டது.  ஆனால் அவர்கள் விட்டில் இருந்து ஒரு தகவலும் இல்லை.  அப்பா போட்ட இரண்டு கடிதங்களுக்கும் பதில் இல்லை. “ஒருக்கால் நாம் போட்ட கடுதாசு போய்ச் சேரலையோ என்னமோ?  நான் நேரிலே போய் பாத்தூட்டு வரேன்” னு கிளெம்பிப்போன அப்பா அன்னிக்கி சாயங்காலமே மூஞ்சியெத் தொங்கப் போட்டுண்டு திரும்பி வந்தா.   அம்மா கேட்டா, “ஏன்னா என்னாச்சு?  ஏன் இப்பிடி மூஞ்சியெத் தொங்கப் போட்டுண்டு வரேள்?” னு. “ஒங்க பொண்ணெ நீங்களே வெச்சுக் கோங்கோ.  ஒரு தோசெ கூட வாக்கத் தெரியாத பொண்ணு எங்களுக்கு வாணாம்னூட்டா”, அழுகையை அடக்கிக் கொண்டு சொன்னார் அப்பா. நான் அழவில்லை.  மாறாக என் உள்ளங்கையைப் பார்த்துக் கொண்டேன் ஒரு முறை.  உள் மனம் சொன்னது. ‘இதுவும் நன்மைக்கே’ என்று. கல்யாணம் ஆகி மூன்றாவது மாதமே இரண்டு மாத கர்பிணியாய் வீடு திரும்பிய எனக்கு, அதற்கடுத்த ஆண்டு மே மாதம் ஒரு பிள்ளை பிறந்தது.  அப்பா அவர்களுக்கு கடிதம் போட்டார்.  பதில் எதுவும் வரவில்லை.  அடுத்த வருஷமே தங்கைக்கு ஒரு தாலூக்கா ஆபீஸ் குமாஸ்தாவைத் தேடிப்பிடித்து கல்யாணம் செய்து வைத்தார். தங்கை கல்யாணம் முடிந்த ஆறாம் மாதம் அப்பா சொன்னபடித் தன் கடமை முடித்து போக வேண்டிய வழி தேடிப் போய் விட்டார்.  போனவர் சும்மாவா போனார்?  அம்மாவையும் இரண்டே மாதத்திற்குள் தன்னிடம் அழைத்துக் கொண்டு போய் விட்டார்.  காசு இருந்தோ இல்லையோ பரஸ்பர நேசமும் விசுவாசமும் இருந்தது அவர்களிடையே. அத்திம்பேர் மூவரும் கிராமத்தில் இருந்தால் முன்னேற முடியாது என்று தத்தம் குடும்பத்தோடு பட்டணம் போய் விட்டார்கள்.   அப்பா, அம்மா, அக்காக்கள், தங்கை என சந்தோஷமாய் வாழ்ந்து வந்த அந்த சின்ன விட்டில் நான் தனியாக விடப் பட்டேன்.  இரண்டு வீடுகளில் சமையல் செய்து எங்கள் வயிற்றைக் கழுவினோம்.  பையன் இலவசப் பள்ளியில் படித்தான் பதினொன்று வரை.  பின் ஒரு தரும நிதியில் இருந்து உதவிச் சம்பளம் பெற்று, பொறி இயல் பட்டம் படித்து வெளி நாடு சென்றான், பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் சேர்ந்து. காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.  நிற்காது ஓடுகிறது அது.  ஓடி விட்டன இருபத்தைந்து வருடங்கள். ஒரு நாள் காலை வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த போது, கையில் கோலூன்றி, தட்டுத் தடுமாறி என் முன் வந்து நின்றார் ஒரு மொட்டைத் தலைக் கிழவர்.  “என்ன வேணும்?  யாரைப் பாக்கணும்?” “ஒன்னெத் தான் பாக்கணும்.  நீ தான் வேணும்.” “என்ன ஒளரறேள்?  பயித்தியம் புடிச்சிடுத்தா?” “ஒளரவும் இல்லெ.  பயித்தியமும் புடிக்கலே.  பயித்தியம் தெளிஞ்சிருக்கு.” “யாரு நீங்க?” “என்னெத் தெரிலே?  நான் ஒன்னோட ஆத்துக்கார் ராமன்மா.” கட்டுக் குடுமி எங்கே?  வரிசையாய் இருந்த முப்பத்திரெண்டு பற்கள் எங்கே?  இரண்டையும் காலம் கொண்டு போய் விட்டதோ? நெருப்பைக் கக்கிட நினைத்த என் உள்ளத்து எரிமலையை அடக்கி, “உள்ளே வாங்கோ” என்றேன். உள்ளே வந்தவர் அங்கிருந்த நாற்காலியில் பொத்தென்று அமர்ந்தார்.  “அக்கா, அம்மா பேச்செக் கேட்டு ஒன்னெ ரொம்ப கொடுமைக்கு ஆளாக்கிட்டேம்மா.  என் தப்பு எனக்குப் புரிஞ்சிடுத்து.  அவா எல்லாரும் போய்ச் சேந்தூட்டா.  நீ என்னெ மன்னிச்சு எங்கூட வந்து இருக்கணும்மா.  ஒன்னெ நன்னா வெச்சுக்குவேன்.  ஆயுசு பூராக் காப்பாத்துவேம்மா.” யார் யாரை ஆயுசு பூரா வெச்சு நன்னா பாத்துக்கப் போறது?  கிழவருக்கு தனியா இருக்க முடியலே.  அதான் இப்பொ வந்திருக்கார் என்னெத் தேடி.  யாரு போவா இவர் கூட?  அடுத்த கணம் நினைத்தேன் இந்த உலகில் எது சாசுவதம்?  உடல் நலிந்த ஒருவனுக்கு ஒத்தாசை செய்ததாகத் தான் இருக்கட்டுமே என்று. “எனக்கு ஒரு இருபது நாள் டைம் குடுங்கோ. என் முடிவெ சொல்றேன்” என்று சொல்லி ஒரு காப்பி போட்டுக் கொடுத்து அவரை அனுப்பி வைத்தேன்.  அன்றே பையனுக்கும் தபாலில் செய்தி சொன்னேன்.   பையனிடம் இருந்து கடிதம் வந்தது.  “அம்மா அவர் என்ன இருந்தாலும் என் அப்பாம்மா.  பாவம் வயசான காலத்துலெ தனியாக் கடந்து தவிக்கறார் போல இருக்கும்மா.  என்னாலெ ஒன்னையும் இந்த ஊருக்கு நிரந்தரமா அழெச்சிண்டு வரதுக்கு முடியாது.  நீ அவரோட போனா ஒருத்தருக்கு ஒருத்தர் தொணையா இருக்கும்மா” என்று வந்தது பதில். சொல்லி வைத்தாற் போல் இருபத்தோராவது நாள் வந்து சேர்ந்தார் என் கணவர்.  சாப்பாடு முடிந்ததும், எனது துணி மணிகளை எடுத்துக் கொண்டு, வீட்டைப் பூட்டி விட்டுக் கிளம்பினேன் அவருடன். பொன்மலை வந்து சேர்ந்ததும் பழய விட்டிற்குச் செல்ல வில்லை “நான்.  அதை வித்தூட்டு வேறெ வீடு வாங்கி இருக்கேன், பழய ஞாபகங்களே வாணாம்னு” என்றார்.  புதிய வீட்டில் என்னை விட சுமார் ஐந்தாறு வயது அதிகமுள்ள ஒரு மாமி இருந்தாள்.   “யார் அது?  சமையல்கார மாமியா?” என்று கேட்டேன். “இல்லை யில்லை.  அது அது ஒனக்கு அக்கா.  அதான் என்னோட ரெண்டாவது சம்சாரம்” என்றார் அவர்! ராஜ வம்சமோ இவர் இடது பக்கம் ஒன்று வலது பக்கம் ஒன்று என வைத்துக் கொள்ள? கனவு காணும் நாட்களெல்லாம் கழிந்த பின்னே கணவனுடன் இருந்தென்னா?  இல்லாதிருந்தென்ன?  இருந்தும் முடங்கிட வில்லை என் மாமியார் போல நான்.  நடந்து கொண்டு தான் இருக்கிறேன் வீட்டுள், ஆனால் நடைப் பிணமாய். கண்ணீரில் கரைந்த கதை யொன்று கண்டேன் தண்ணீரில் எழுதினாளோ அவளதை மண்ணிலே உளரே இப்படிப் பண்பற்ற மாந்தர் இன்றும்   (இதயத் தீ படம் இணையத்தில் இருந்து) 8. எங்கே போகிறோம் நாம் = Quo Vadis?   தினசரியைப் பிரித்தால் தினமும் திடுக்கிடும் செய்திகள். “பதிமூன்று வயதுப் பெண்ணை தந்தை, மாமன், அண்ணன் மூவருமாய் மாறி மாறி பலாத்காரம்.  பள்ளியில் இருந்து வீடு திரும்ப மறுத்து அழுது நின்ற சிறுமி.” “ஒன்றரை வயதுக் குழந்தையை எதிர் வீட்டுப் பையன் பாலியல் பலாத்காரம்.  வீறிட்டழுத குழந்தைக்கு பீரிட்டது ரத்தம்.” “பள்ளி ஆசிரியை மாணவன் கத்தியால் குத்திக் கொலை.” “சரியாய் ஏன் பள்ளிக்கு வருவதில்லை எனக் கேட்ட ஆசிரியருக்கு அடி உதை.” “காரில் சென்ற பெண்ணை வழி மறித்து நிறுத்தி அதனுள் ஏறிய ஐவர் அவரை கத்தியால் வெட்டிக் கொலை.” “காதலிக்க மறுத்த பொறி இயல் படித்து மென் பொருள் விற்பன்னராய்ப் பணி புரிந்திடும் பெண்ணை, கட்டிட மேஸ்திரி அமிலம் ஊற்றிப் பழி தீர்த்தான்.” “அண்மையில் உத்திரப் பிரதேசத்தில் நடந்த பாலியல் பலாத்காரம் பற்றிக் கேட்ட பத்திரிகை நிருபரிடம், முதன் மந்திரி அகிலேஷ் யாதவ், “நீ நலமாகத் தானே இருக்கிறாய்?  உன் கஷ்டம் என்ன?” என்று கேட்டாராம். கலி முற்றிட இந்த உலகம் அழிந்திடும் என்கிறார்களே, அவர்கள் சொல்வது இந்த அழிவினைத் தானோ? இதற்கெல்லாம் காரணம் என்ன?  எங்கே போகிறோம் நாம்? இலை மறைவு காய் மறைவாய் இருந்திட வேண்டிய வற்றை ஆடை நீக்கி, அரிதாரம் பூசி, வெளிச்சம் போட்டுத் திரையில் காட்டிடும் சினிமாக் கலாசாரம் தான் என்பேன்.   என்று தணியும் இந்த சினிமா மோகம் என்று மடியும் இந்த கலாச்சார அழிவு   9. சுதந்திரம்   Full many a gem of purest ray serene, The dark unfathom'd caves of ocean bear: Full many a flower is born to blush unseen, And waste its sweetness on the desert air  - Thomas Gray -   Our Sweetest Songs are those that tell us the saddest thoughts. - Shelley   -0-   “அப்பா இப்பொ கல்யாணத்துக்கு என்னப்பா அவசரம்?  இப்பொதான் எனக்கு பதினாறு வயசாகுது. நான் காலேஜுக்குப் போயி படிச்சு பட்டம் வாங்கணும்பா.  சங்கீதத்துலெ இன்னும் நெறய கத்துக்க வேண்டியது இருக்குப்பா.  பல மேடேலெ ஏறிக் கச்சேரி பண்ணணும்.  பத்து பேரு சொல்லணும், “மீனாட்சி கச்சேரியா?  மிஸ் பண்ணக் கூடாதுப்பா” ன்னு.  சித்திரம் நெறெய வரையணும்.  சிறுகதையும் எழுதணும்பா.” “அவ்வொளோ தானா இன்னும் எதுனா பாக்கி இருக்குதா?” “தோணுற போது அப்பொப்போ சொல்லறேம்ப்பா.”  சிரித்துக் கொண்டே ஒடுகிறாள் மினாட்சி. சுந்தரத்தின் மனம் ஐந்தாண்டுகள் பின்னே செல்கிறது.  மனைவி மரணப் படுக்கையில்.  அவன் கையைப் பிடித்துக் கொண்டு சன்னக் குரலில் கெஞ்சுகிறாள், “நாளெக் கடத்தாமெ என் அண்ணன் மவன் மதியழகன் கையிலெ நம்ம பொண்ணெப் புடிச்சுக் கொடுத்துடுங்க.  அதான் அவளுக்கு வாள்க்கெ பூரா காவலா இருக்கும்.”  கண்களைத் துடைத்தபடி, “சரி சரி” என்கிறார் அவர்.  அவளும் கண்களை மூடினாள் நிரந்தரமாய்.   கொடுத்த வாக்கெக் காப்பாத்த வாணாம் சுந்தரம்?  அதனால தான் மீனாட்ச்சி “வாணாம்பா”ன்னு சொன்னாலும் கேக்காமெ கல்யாண்த்தெ நடத்தி முடித்தார். மீனாட்சி புகுந்த வீடு சென்றடைந்தாள்.  வீடு சிறிய ஓட்டு வீடுதான்.  பக்கம் பக்கமாகப் பல வீடுகள் அந்தத் தெருவில்.  விட்டிலே மதியழகனைத் தவிற வேறு யாரும் கிடையாது  அவன் ஆத்தா போய் இரண்டு வருடங்களுக்குள்ளேயே அப்பனும் போய்விட்டான்.  கூடப் பிறந்தவர்கள் யாரும் இல்லை.  தனிக் கட்டை அவன். மதி சுய தொழில் செய்பவன்.  வீடுகளுக்கு வெள்ளை, பெயின்டு அடிப்பவன்.  காலை எட்டு மணிக்குக் கிளம்பிப் போனால் இரவு ஒன்பது மணிக்கோ பத்து மணிக்கோதான் திரும்புவான், தனியாக அல்ல உடலுக்குள்ளே சில பாட்டில்கள் சாராயத் தண்ணியோடு. மணமாகி ஒரு வாரம் கழிந்தது.  வாசலில் வந்த மல்லிகைப்பூவில் இரு முழம் வாங்கி வீட்டில் இருந்த ஒரே சாமி படத்துக்கு ஒரு முழம் வைத்துத் தானும் வைத்துக் கொண்டாள் தலையில் மிச்சத்தை மீனாட்சி,. இரவு வந்த மதி கத்தினான் வீட்டிற்குள் காலடி வத்ததும், “என்னடீ இது வீடு பூரா பொண நாத்தம்?” “மல்லிகெ நல்லா இருந்தீச்சு வாசமா இருக்குமேன்னு நாந்தான் வாங்கினேன்.” “மல்லிகெயுமாச்சு மண்ணாங் கட்டியு மாச்சு. இதெப் பாகுறப்போல்லாம் எங்க ஆத்தா நெப்புதான் வருது.  அவொ மஞ்சளோடெ போய்ட்டான்னு மல்லிகெப் பூவெ மாலெ மாலெயா வாங்கி சாத்தி இருந்தாங்க. தூக்கி எறிடீ வாசல்லே.”, என்று கத்தினான் மதி எட்டு வீட்டிற்குக் கேட்கும் படியாக. கண்களில் இருந்து வழிந்த நீரைத் துடைத்தபடி தலையிலும் படத்திலும் இருந்த மல்லிகைப் பூ சரத்தை எடுத்து வாசலில் வீசினாள் மீனாட்சி. வீட்டில் தனிமையில் வாடிய மீனாட்சி தன்னுடன் கொண்டு வந்திருந்த சுருதிப் பெட்டியை வைத்துக் கொண்டு தான் கற்ற சில பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பாள் தன் பொழுதைப் போக்கிட.  தான் பாடுவதை சுவர்கள் தான் கேட்டுக் கொண்டிருக்கின்றன என்று எண்ணிவந்த மீனாட்சிக்கு ஒரு அதிர்ச்சி. ஒரு நாள் அவள் பாடிக் கொண்டிருந்த போது ஜன்னலருகே ஒரு உருவம் நகர்ந்தது போல் தெரியவே வாசல் கதவைத் திறந்து பார்த்தாள்.  அங்கு ஒரு பத்து பன்னிரெண்டு வயதுள்ள சிறுவன் நின்று கொண்டிருந்தான். “யாரு நீ?  எதுக்கு எங்க வீட்டு ஜன்னல் கிட்டெ நிக்கிறெ?” “அக்கா எம் பேரு பாலு.  பக்கத்து ஊட்டுலெதான் இருக்கேன்.  எனக்கு பாட்டுன்னா ரொம்பப் புடிக்கும்.  எங்கெ பாட்டு வந்தாலும் நின்னு கேட்டு கிட்டு இருப்பேன்.  எங்கூடப் படிக்குற பசங்களெல்லாம் என்னெ ‘ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் வந்திடுச்சிடா’ ம்பாங்க.   தினோம் நீங்க பாடும் போது வாசல்லெதான் நின்னு கேட்டுகிட்டு இருப்பேன்.  இன்னிக்கித்தான் இவ்வொளோ நல்லாப் பாடுறாங்களே யாரு பாடுறதுன்னு பாக்கலாம்னு சன்னல் வழியே எட்டிப் பாத்தேன். தப்பு தாங்கா.   நீங்க சின்னஞ்சிறு கிளியேன்னு ஒரு பாட்டு பாடினீங்களே அதெ இன்னோரு வாட்டி பாடுங்க அக்கா.  அதெக் கேக்குற போதெல்லாம் என் செத்துப் போன அக்கா ஞாபகம் வரும்.  கண்ணுலெ தண்ணி தானா வரும்.  ஆனாலும் அந்தப் பாட்டு எனக்கு ரொம்பப் புடிக்கும்.” “சரி பாடறேன்.  வா உள்ளெ வந்து ஒக்காரு”, என்று சொல்லியபடி சுருதிப் பெட்டியை மீண்டும் இயக்க ஆரம்பித்தாள் மீனாட்சி. “சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா” என்று மீனாட்சி ஆரம்பித்த உடனேயே கண்கள் குளமுடைக்க தலையைத் திருப்பிக்க் கொண்டான் பாலு.  அழுவது மீனாட்சிக்குத் தெரியக் கூடாது என்ற எண்ணமோ என்னவோ தெரியவில்லை.  அப்படியே திரும்பிய தலையை ஒரு 360 டிகிரி சுற்றி வீட்டின் சுவர்களை ஒரு நோட்டம் விட்டான்.  ஆங்காங்கே காகிதத்தில் வரைந்து ஒட்டப் பட்ட ஓவியங்கள்.  ஒன்றை விட ஒன்று அழகு. அமுத கானம் வந்து கொண்டிருந்தது மீனாட்சியின் வாயில் இருந்து. “உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ?” என்று மீனாட்சி பாடியபோது பாலுவின் நெஞ்சில் உதிரம் கொட்டாததுதான் பாக்கி.  அவன் கண் முன்னே படுக்கையில் அவன் அக்கா, பேச இயலாத நிலையில்.  அவன் கைகளை அவளருகே நீட்ட மெல்ல முயற்சி செய்து அவன் கைகளைத் தொட்டாள்.  இருவர் கண்களிலும் கண்ணீர்.  அதுதான் அவர்கள் கடைசியாகப் பேசிக் கொண்ட மவுன வார்த்தைகள். பாட்டு முடிந்தது. நினைவுகளை மாற்ற எண்ணி, பாலு கேட்டான், “அக்கா இதெல்லாம் நீங்க வரெஞ்சதா?” “ஆமாம். எனக்குப் போது போகலேன்னா படம் வரைவேன்.  இல்லேன்னா குட்டி குட்டி கதெய்ங்கெ எழுதுவேன்.” “கதெ கூட எழுதுவீங்களா?  பத்திரிகைகள்லெ ஒங்க ஓவியங்களெ, கதெய்ங்களெப் போட்டதுண்டா அக்கா?” “போடலாந்தான்.  யாரு அனுப்பறது?” “அக்கா எங்கிட்டெ குடுங்கக்கா.  நான் நம்மூர்லெ இருக்குற பத்திரிகெ ஆபீசுலெ கொண்டு சேக்குறேன்.” ஒரு வாரம் கழிந்தது.  ஒரு சனிக்கிழமை. கையில் ஒரு வாரப் பத்திரிகையை வைத்துக்கொண்டு மூச்சிறைக்க தாழ்ப்பாள் போடாதிருந்த கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்த பாலு கத்தினான், “அக்கா ஒங்களோட படமும், கதெயும் இந்த வாரம் வந்துருக்கக்கா ” என்று. வேலைக்குத் செல்லாமல் வீட்டில் படுத்திருந்த மதி கத்தினான், “எவண்டா அவன் எனக்குப் புதுசா மொளெச்ச மச்சான்?  நான் ஊட்டுலெ இல்லதபோது ரெண்டு பேருமா கொஞ்சிக் கும்மாளம் அடிக்கிறீங்களா?” பேச்சோடு நிற்கவில்லை மதி.  எழுந்து பளார் என்று பாலுவின் கன்னத்தில் அறைந்தான். “சின்னப் பையனைப் போய்...” சொல்ல வந்ததை பூராவுமாகச் சொல்லி முடிக்க வில்லை அவள்.  மீனாட்சியின் கன்னத்தில் விழுந்தது அடுத்த அறை. “என்னடி? சின்னப் பையன் கேக்குதோ ஒனக்கு?  நான் கெளவனாயிட்டேனோ?” பாலு ஒன்றும் பேசாது வெளியே சென்றான்.  மீனாட்சியும் ஒன்றும் பதில் பேசவில்லை.  குடிகாரனிடம் நியாயமா பேச முடியும் மறு நாள் காலை ஏழு மணிக்கு எழுந்த மதி பல் துலக்கி விட்டு “ஏய் மீனாச்சி டீ கொண்டாடி நான் வேலெக்கு போவணும்” என்றான்.  ஐந்து நிமிஷம் ஆயிற்று.  மீனாட்சியைக் காணோம். சமயல் அறைக்குள் சென்று பார்த்தான்.  அங்கும் அவளைக் காண வில்லை.  பக்கத்து வீட்டு வாசலில் நின்று கத்தினான், “ஏய் பாலூ வாடா வெளியே”, என்று.  பாலுவின் அம்மா வந்து சொன்னாள் “பாலு காலெலெயே வெளிலெ கெளம்பிப் போயிட்டானுங்களே.” “எங்கெ போனான் அந்த ராஸ்கல்?” “சொல்லீட்டு போகலீங்களே.” ‘அவங்கூட ஓடிப் போயிருப்பாளோ?  இருக்காது.  எங்க போயிருக்கப் போறா களுதெ.  அப்பன் ஊட்டுக்குப் போயிருப்பா.  ராவிக்கு வந்துருவா.  நாம போவலாம் வேலெக்கு’ என்று மனதிற்குள் சொல்லியபடி வீட்டைப் பூட்டி சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டுக் கிளம்பினான். இரவு மதி வீடு திரும்பியபோது வீடு பூட்டியபடி இருந்தது.  பக்கத்து வீட்டில் இருந்து சாவியை வாங்கிக் கொண்டு பூட்டை திறந்து ஊள்ளே சென்றான்.  வயிற்றில் பசி கொல்ல அடுப்பங்கரைக்குச் சென்றால் அங்கு பாத்திரங்கள் எல்லம் கவிழ்த்தபடி இருந்தன.  களுதெ வரட்டும்.  “நாளெக்கி அவளுக்கு வெச்சுக்கறேன் கச்சேரி”, என்றபடி தரையில் படுத்தான். மறு நாள் காலை வீட்டுக் கதவை யாரோ தட்ட, மதி கதவைத் திறக்க, வாசலில் இரு போலீஸ்காரர்கள்.  அவர்களில் ஒருவர் கையில் இருந்த கடிதத்தை மதியிடம் நீட்டி, “நேத்து கடற்கரைலெ ரெண்டு பாடி ஒதுங்கீச்சு. ஒண்ணு சுமார் அம்புது வயசு ஆம்பிளெ.  இன்னோணு பதினாறு, பதினேளு வயசுப் பொண்ணு.  அக்கம் பக்கத்துலெ விசாரிச்சதுலெ இந்தப் பொண்ணு இந்த ஊட்டுலெதான் இருந்தீச்சுன்னு சொன்னாங்க. இதெப் படிச்சுப் பாருங்க” என்றார். கடிதத்தை வாங்கிப் படித்தான் மதி. “நான் எண்ணியபடி வாழத்தான் சுதந்திரம் இல்லை எனக்கு.  சாகவுமா இருக்காது அது எனக்கு?  என்னை பிறர் கண் படாதபடி வைத்து, விஷமென மனம் நோக வார்த்தைகளைக் கக்கி, உடல் நோக அடித்து வளர்த்த என் புருசனின் கைகளுக்கு காப்புகள்தான் போட வேண்டும்.  நானும் அப்பாவும் செல்கிறோம் இவ்வுலகை விட்டு. இப்படிக்கு மீனாட்சி”. கடிதத்தைப் படித்த மதி, “அடிப்பாவீ, இப்படிப் பண்ணீட்டெயெடி” என்று கத்தியபடி ஓடப் பார்த்தான்.  அவனைத் தாவிச்சென்று பிடித்த போலீஸ்காரர், “நான் போடுறேன் காப்பு ஒங்க கைக்கு.  இ.பி.கோ. செக்ஷன் 306ன் கீழெ கேசும் ஏற்கெனவே பதிவு பண்ணி வெச்சிருக்காரு இன்ஸ்பெக்டர் ஐயா” என்றபடி மதியை போலீச் வண்டியில் ஏற்றினார். தெருக் கோடியில் இருந்த பூங்காவில் வானொலியில் டி.கே. பட்டம்மாள் பாடிய  “ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று ஆடுவோமே” என்ற பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது. மதியழகன் என்று அழகாகப் பெயர் வைத்தார்களே யொழிய அவன் மதி அழகில்லாமல் போய் விட்டதே என்ன செய்ய?  பெயர்வைக்கும் போது அவன் குணம் எப்படி இருக்கும் என்று தெரியாதே. என்று வரும் நாட்டுக்கு உண்மை சுதந்திரம் இந்த சாராயக் கடைகள் தானோ நிரந்தரம்       10. தப்புத் தாளம்   சின்ன வயசிலேந்தே எனக்கு பாட்டுன்னா உசிரு.  எதுக்காவது அடம் புடிச்சேன்னா என் சித்தி, அதான் என் அம்மாவோட தங்கை, “அம்மூ இங்கெ வா பாட்டு சொல்லித் தறேன்” ன்னு கூப்பிடுவா.  நான் பொட்டிப் பாம்பா அடங்கி ஒடுங்கி சித்தி முன்னாடி போய் ஒக்காருவேன்.  சித்தியும் “சா…… பா….. சா…..” ன்னு ஆரம்பிப்பா.  நானும் கூடவே “சா….. பா….. சா…..” ன்னு சன்னக் குரலுலெ பாடுவேன். “வாயெ நன்னா தொறந்து கணீர்னு பாடணும்.  அப்பொதான் சங்கீதம் வரும்” னு சொல்லுவா சித்தி.  நான் ஒரத்திக் கத்துவேன்.   “அவ்வொளோ ஒரத்திக் கத்தினையானா பாட்டு வராது.  வண்ணான் வந்தூடுவான் தன் கழுதெயெத் தேடிண்டு” னு சித்தி சிரிப்பா.  உடனே என்னெத் திருத்திண்டு ஒழுங்காப் பாடுவேன்.  எப்பிடியாவது கத்துக்க வாணாம் சங்கீதம்? சரளி வரிசெ, ஜண்ட வரிசென்னு ஆரம்பிச்சு ‘லம்போதர லகுமிகர’ ன்னு கீதம் வரைலும் வந்தூட்டேன்.  அப்பாக்கும் தோணித்து இவளுக்கு பாட்டு சொல்லிக் குடுத்தா வரும் போல இருக்கேன்னு.  ஒரு பாட்டு வாத்தியாரெ ஏற்பாடு பண்ணா.  கூடவே ஒரு ஆர்மோனியமும் வாங்கினா.   []   (படம் ஸ்ருதி.காமில் இருந்து)   வாத்தியார் பேரு ராம அய்யங்கார்னு.  கட்டுக் குடுமி.  நெத்திலெ நாமம்.  கையிலெ சாயம் போன கருப்புக் கொடெ ஒண்ணு.  ஸ்ரீரங்கத்துலேந்து பொன்மலைக்கு ட்ரெய்ன்லெ வருவார்.  என்னோட பெரியண்ணா என்னெக் கேப்பான், “ஏண்டீ ஒன் வாத்தியாரு பேரு ராம அய்யங்காரா இல்லே நாம அய்யங்காரா?” ன்னு.  அவ்வொளோ பெரிசா இருக்கும் அவர் நெத்திலெ நாமம். ஒரு நாளு வாத்தியார் ஒரு அடி சொல்லிக் குடுக்க நான் அதெ தப்பாப் பாட ரெண்டாம் வாட்டி சொல்லிக் குடுத்தார்.  மறுபடியும் தப்புப் பண்ண, மூணம் வாட்டி சொல்லிக் குடுத்தார்.  எனக்கு அதெ அப்பொவும் சரியாப் பாட வரலே.  ஆனா வாத்தியாருக்கு வந்தது அசாத்திய கோபம்.  அவர் பக்கத்துலெ வெச்சிண்டு இருந்த கொடையாலெ என்னெ அடிக்க ஓங்கினார்.  கூடத்துலெ ஒக்காந்துண்டு இருந்த என் பெரியண்ணன் ஒரே தாவலுலெ பாய்ஞ்சு வந்து கொடெயெப் புடுங்கி வாசலுலெ உட்டெறிஞ்சான்.  அன்னிக்கிப் போன வாத்தியார் அப்புறம் வரவே இல்லெ. அப்பா எதுத்த தெருவிலெ இருந்த ஜானகி டீச்சரெ ட்யூஷன் சொல்லிக் குடுக்க ஏற்பாடு பண்ணா.  கேரளாவெச் சேந்த ஜானகி டீச்சர் பரம சாது.  ஒரத்திக் கூட பேசமாட்டா.  அப்பிடி இப்பிடி கீர்த்தனெ வரெ வந்தூட்டேன்.  ஜானகி டீச்சரோட கணவனுக்கு வேறெ ஊருக்கு மாத்தலாயிடுத்து. அப்புறமா அண்ணாமலை யுனிவர்சிடிலெ படிச்ச சங்கீத பூஷணம் வெங்கட்ராமன் என்பவர் பாட்டு சொல்லிக் கொடுத்தார்.  கொஞ்ச நாளுலெ அவரும் மெட்ராஸுக்குப் போயிட்டார்.  ஆனா நான் சங்கீதத்தெ மறக்கலெ.  பாடறதெ உடலே.  ரேடியோலெ வர கச்சேரிகளெ, அது பெரிய வித்வானோட கச்சசேரியோ இல்லெ கத்துக் குட்டியோட கச்சேரியோ, ஒண்ணு உடாமெ கேப்பேன்.  என் வாயி எப்பொவும் ஏதாவது ஒரு பாட்டெ மொண மொண்த்திண்டு இருக்கும்.  அப்பொப்போ ஒரத்தியும் பாடுவேன். பொண்ணாப் பொறந்தா கல்யாணம்னு ஒண்ணு பண்ணணுமே?  அப்பொதானே தங்க கடெமெ முடிஞ்சதா பெத்தவா நெனெப்பா?  எனக்கும் நடந்தது கல்யாணம்.  அவருக்கு மெட்ராஸுலெ வேலெ. “ஒனக்கென்னடீ.  புருஷனுக்கு மெட்ராஸுலெ வேலெ.  பழசெல்லாம் மறந்தூடுவையா?  எங்களெல்லாம் நீ ஞபகத்துலெ வெச்சுப்பையா இல்லியா?”  என் நண்பிகளின் கேள்விகள் இவை. “எப்டிடீ மறப்பேன் ஒங்களெ எல்லாம்?” திருப்பிக் கேட்டேன் நான். “ஒன் சங்கீதம் என்னடீ  ஆகும்?  அவருக்கும் புடிக்குமா கர்னாடக சங்கீதம்?” “சங்கீதம் ஒண்ணும் ஆகாது.  அதுலெ எனக்கிருக்கற ஆர்வம் ஒரு நாளும் கொறையாது.  அவருக்கு கர்னாடக சங்கீதம் புடிக்குமா புடிக்காதான்னு அங்கே போனப்புறந்தான் தெரியும்” என்றேன் அவர்கள் கேள்விக்கு பதிலாய். என் மெட்ராஸ் வாசம் ஆரம்பித்தது.  வீட்டில் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் என் மனதுக்குள் பாடிக் கொண்டிருப்பேன். ஒரு நாள் இரவு ஏழரை மணிக்கு எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் கச்சேரி.  அவர் இசைக்கு இந்த ஒலகத்துலெ ஏது ஈடு?  ஆனந்தமாய் ஆரம்பித்தார், “வாதாபி கணபதிம் பஜே” என்று ஹம்ஸத் த்வனியில்.  என்னை அப்படியே ஏதோ ஒரு வேற்று உலகத்துக்கு இழுத்துக் கொண்டு போனது அந்த இசை. வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்க போய்க் கதவைத் திறந்தேன்.  “எத்தெனெ தடவெ தட்டறது?  என்ன பண்ணிண்டு இருக்கே?” என்றார் என் கணவர். “ரேடியோலெ பாட்டு”.  சொல்ல வந்ததை முடிக்க வில்லை நான்.  நேராக ரேடியோ அருகே சென்ற அவர் அதன் ஸ்விச்சை அணைத்தார்.  பின் தன் ஆபீஸ் பேகில் இருந்து ஏதோ ஒன்றை எடுத்துத் தன் காதில் மாட்டிக் கொண்டு, கட்டை விரல்களை கூரையைப் பார்ப்பது போல வைத்துக் கொண்டு, மற்ற விரல்களை மடக்கிப் பிடித்துக் கொண்டு ஜிங்கு ஜிங்கு என்று குதிக்க ஆரம்பித்தார். “ரேடியோலெ எம்.எஸ். கச்சேரி கேட்டிண்டுருந்தேன்” என்றேன்.  ஒனக்கு சரிகமபதநிஸ தான் புடிக்கும்னா ஒனக்கும் வாங்கித் தறேன் இது போல ஒண்ணு.  நீயும் காதுலெ மாட்டிண்டு கேளு” என்றார் அவர். ஒரு நாள் மாலை தியாகராஜரின் மோஹன ராக கீர்த்தைனையான “நன்னு பாலிம்ப நடச்சி வச்சீரீ ஓ” என்று பாடிக் கொண்டிருந்தேன்.  மாலை நெரமாயிற்றே என்று வாசல் கதவை மூட வில்லை. ஆபீசில் இருந்து அன்று சீக்கிரம் வந்த அவர், “என்ன பாட்டு இது அர்த்தம் புரியாமெ?” என்றார். “தியாகராஜரெப் பாக்க ராமர் அவர் வீட்டுக்கே வராறாம்.  ‘என்னெக் காப்பாத்தறதுக்காக நடந்தே வந்தயா ராமா?’ ன்னு கேட்டு பாடறார் அவர் என்றேன்.   “நீ இப்பிடி வாசக் கதெவெத் தெறந்து வெச்சிண்டு பாடினையானா ராமர் மட்டும் இல்லெ.  ராவணனும் வருவான்.  நிறுத்து ஒன் பாட்டெ” என்று எரிந்து விழுந்தார். “மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்று பாடினார் கவிஞர் கண்ணதாசன்.   கணவன் அமைவ தெல்லாம் யார் கொடுத்த வரமாம்?       11. தாயா அன்றி……   தாய்க்கில்லை ஈடு இவ்வுலகில் எவரும் என்பார் பலரும்.  இது நூற்றுக்கு நூறு உண்மையா என்ற சந்தேகம் எனக்கு எழுந்தது இன்று. பத்திரிகையைப் பிரித்தேன் படித்திட.  அதில் சுடச்சுட ஒரு செய்தி: பெல்காம் மாவட்டம் சிக்கோடி தாலுக்கா சித்தாபூர்வாடியைச் சேர்ந்த ஷோபா ராஜு ஹதல்கி என்ற பெண் போலீசாரால் கைது செய்யப் பட்டாள். அந்தப் பெண் எதற்கு தெரியுமா கைது செய்யப் பட்டாள்? அவள் தனது கள்ளக் காதலனை விட்டு தன் 19 வயது மகளுக்கு குளீர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, அவள் மயக்கமுற்றதும், கள்ளக் காதலனை விட்டு அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய வைத்தாள்.  அதைக் கண்டு ரசித்தாள். இதை அவலத்தைப் பொருத்துக் கொள்ள முடியாத மகள் தன் அத்தையிடம் சொல்ல, அவள் போலீசில் புகார் அளிக்க, போலீஸ் ஷோபாவைக் கைது செய்துள்ளது.  தலை மறைவான கள்ளக் காதலன் அப்பா சாஹேபை போலீசார் தேடி வருகின்றனர்.” இவள் தாயா அன்றி பேயா?:      12. விடியல் வராதா?   []     எண்பது தொண்ணூறுகளில் அசோக் நகரில் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் ஒன்றில் எங்களுக்குச் சொந்தமான ஒரு பகுதி வீட்டில் வசித்து வந்தோம்.  அந்தக் குடி இருப்புகளுக்கு இரு பக்கம் பிரதான சாலைகள்.  ஒரு பக்கம் அரசினர் வாடகைக் குடியிருப்பு வீடுகள்.  மறு பக்கம் பல குடிசைகள்.  காலனி வீடுகளில் பகுதி நேரப் பணி செய்ய வரும் பெண்கள் எல்லாம் அனேகமாக அந்தக் குடிசைகளில் இருந்து வருபவர்களே.  அந்தக் குடிசைகள் இருந்த பொது நிலத்தை அவர்களுக்கே உரிமையாக்கித் தந்திருந்தது அரசு.   அந்தக் குடிசைகளில் இருந்து வந்தவர்கள் தான் எங்கள் வீட்டில் பணி புரிய வந்த பாப்பாவும், ஆவின் டிப்போவில் இருந்து பால் பேக்கெட்டுகள் கொண்டு வந்து கொடுக்கும் ஆயாவும்.   சூரியன் உதிக்க மறந்தாலும் மறக்குமோ என்னவோ ஆயா ஒரு நாளும் விடுமுறை எடுத்துக் கொண்டதில்லை. பாப்பாவின் கதையே தனி.  சம்பளம் கொடுத்து ஒரு வாரம் கூட ஆகி இருக்காது.   “அம்மா இன்னிக்கி ரேசன்லெ அரிசி போடப் போறாங்களாம்மா.” என்பாள். “அதுக்கென்ன இப்போ?” இது என் மனைவி. “ஒரு நூறு ரூவா அட்வான்சு குடுங்கம்மா.  அடுத்த மாசச் சம்பளத்துலெ புடிச்சுக்கோம்மா.” “இப்பொதானே சம்பளம் கொடுத்தேன்.  அதெ என்ன பண்ணே?” “என் ரெண்டாம் மவன் என்னெ அடிச்சி புடுங்கிகிட்டுப் போயி குடிச்சு தீத்துட்டாம்மா.” “அவன் வேலெ வெட்டி எதுவும் செய்யுறது இல்லியா?” “செய்யுறாம்மா.” “என்ன வேலெ?” “ஊடுங்களுக்கு பெயின்டு அடிக்கிற வேலெம்மா.” “அதுலெ வர காசெ என்ன பண்ணுவான்?” “குடிச்சே தீத்துடுவாம்மா.  ஏண்டா இப்பிடிக் குடிச்சு அளியறேன்னு கேட்டா, ‘ஒனக்கு என்னா ஆத்தா தெரியும் நான் செய்யுற வேலெ என்ன பேஜாரான வேலென்னு?  நாள் பூரா அந்தப் பாளாப் போற பெயிண்டு வாசெனெ புடிச்சீட்டு ராவுலெ சாராயம் குடிக்கலேன்னா மக்கா நாளு வேலெக்கிப் போவ முடிமா?’ ன்னு என்னியெத் திருப்பிக் கேப்பாம்மா.” சாப்பாட்டுக்கு இல்லென்னுதான் கேக்குறா பாவம்.  நாங்களும் கொடுத்தோம் நூறு ருபாய். “இதெ ரெண்டு மாசமாக் களிச்சுக் கோங்கம்மா” என்பாள் கையில் பணம் வந்த உடன்.  வேறு வழி.  “சரி” என்றோம். “ஒன் பெரிய புள்ளெ எங்கெ இருக்கான்?” “அவன் இந்த ஊரிலேயேதான் இருக்காம்மா.  ஆனா எங்கூட இல்லேம்மா.  அவனுக்கு கண்ணாலம் கட்டியாச்சு.  ரெண்டு பொட்டெப் புள்ளெங்க.  அப்போப்பொ வருவான்.  ‘ஏ கெளவி ஒனக்கு வயசாயிடிச்சு.  இந்த ஊட்டெ வெச்சிகிட்டு என்னா பண்ணப் போறெ?  எம் பேருலெ எளுதிக் குடு’ ன்னு சண்டெ போடுவாம்மா.  ‘நீ எளுதிக் குடுக்கலேன்னா நீ செத்து போனப் புறம் அரசே எடுத்துகிடுவாங்க’ ம்பான்.” “எளுதிக் குடுத்தூட்டு அவன் கூடயே போயி இருக்கறது தானே?” “அவன் கூடயா?  அங்கெ இருக்காளே ஒரு மவராசி, ஒரு வேளெக் கஞ்சி ஊத்துவா எனக்கூங்கெறெ?  அப்பாலெ என் சின்ன புள்ளெக்கு என்னம்மா கதி?” இரண்டு மாதங்கள் கழிந்தன.  ஒரு நாள்,  “அம்மா ஒரு ஐநூறு ரூவாக் குடும்மா.  ஒரு ஆளு என் சின்ன மவனுக்கு ரேசன் கடேலெ வேலெ வாங்கித் தறேன்னு சொல்றாம்மா.  மாசா மாசம் சம்பளமும் வரும்.  கூடவே அரிசி, சக்கரே, கிரிஷ்ணாயில்னு காசில்லாமெ கெடெய்க்கும்.” அதையும் கொடுத்தோம்.  கொடுத்தோம் என்று சொல்வதா?  கொடுத்துக் கெடுத்தோம் என்று சொல்வதா என்று எனக்குப் புரியவில்லை.  காரணம் அடுத்த மாதமே பாப்பா ஆரம்பித்தாள் அவள் புலம்பலை. “அந்த ஆளு எம் புள்ளெயெ ஏமாத்தீட்டாம்மா.  ரூவாயெ எடுத்துகிட்டு ஓடிட்டாம்மா.”  ஏமாற்றியது யார்? ‘அந்த ஆளா’ அல்லது அவள் செல்ல மகனா?  இன்று வறை எங்களுக்குப் புரியாத புதிர் இது. “அம்மா எனக்கு சின்ன மருமவ வந்தூட்டாம்மா.  நல்ல செவப்பும்மா அவொ.  என்ன ஒண்ணு அவொ வேரெ சாதியாம்மா.  துலுக்கப் பொண்ணுன்னு சொல்லுறான் பையன்.  வெள்ளெ அடிக்கப் போன எடத்துலெ அவளுக்கும் இவனுக்கும் ஒரு இது வந்திடிச்சாம்மா.  என்ன சாதியானா என்னம்மா?  அவுங்க நல்லா இருந்தா சரி.  ஊட்டுக்கு புதுசா வந்தவளுக்கு விருந்து சமையல் பண்ணண வாணாம்மா.  ஒரு நூறு ரூவாக் குடேம்மா.” “சரி.”   எந்த ஒரு மாசமும் அவள் முழுச் சம்பளம் வாங்கியதாக எனக்கு நினைவில்லை. வேரொறு நாள் “அம்மா ஒரு நூறு ரூவா குடும்மா.  எம் பேத்தி பெரியவளா ஆயிருக்காளாம்.  சீரு செய்யணும்மா.” பிள்ளையோடு பேச்சு வார்த்தை இல்லை.  பேத்திக்கு சீரு செய்யணுமாமே?  அதனால் என்ன?  நல்ல காரியந்தானே?  கொடுத்தோம் பணம். ஒரு நாள், “அம்மா ஒரு நூறு ரூவாக் குடும்மா.” “இப்பொ எதுக்கு?” எங்க தெருலெ ஒரு கெளவி போய்ட்டாம்மா.  அவளுக்கு மருவாதி செய்ய வாணாம்?  மாலெ வாங்கிப் போடணும்மா.” “எந்தக் கெளெவி செத்துப் போயிட்டா?’ “அதாம்மா எப்பொ பாத்தாலும் கெட்டெ வார்த்தெய்ங்க சொல்லி யாரு கூடெயாவது சண்டெ போட்டுகிட்டே இருப்பாளே அவம்மா.” “நியாயம் தானே.  இறந்தவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டுமே.  இல்லா விட்டால் அவர்கள் ஆவி வந்து நமக்குத் தீங்கிழைத்து விட்டால்!!!” கை மாறியது நூறு ரூபாய். பாப்பாவின் குடிசை வாசலிலும் அங்கிருந்த மற்ற குடிசைகளின் வாசலில் எல்லாமும் முருங்கை மரங்கள்.  அவற்றுக்கு அவர்கள் தண்ணீர் ஊற்றுவதாக் கூடத் தெரியவில்லை.  ஆனால் சடை சடையாய்க் காய்கள் அந்த மரங்களில்.  எங்கள் வீட்டருகேயும் ஒரு முருங்கை மரம் வைத்தோம்.  அதில் இலைகள் மண்டிடுமே தவிர காய்கள் காய்ப்பதில்லை. பாப்பாவைக் கேட்டோம் ஒரு நாள், “அதெப்படி.  நாங்க வெச்ச முருங்கை மரத்ததுலெ காய்ங்க வரதில்லெ.  உங்க வீடுங்க கிட்டெ இருக்குற மரங்கள்லெ மட்டும் அப்பிடிக் காய்க்குது?” “நாங்க அதுக்கு கவுச்சு வெப்போம்மா.” “என்னது? கவுச்சு வெப்பாளாமே?  அடுத்த வேளெக் கஞ்சி எங்கெ கெடெய்க்கும்னு இருக்குற இவொ முருங்கைக்கு கவுச்சு வெப்பாளாமே?”  இது என் மனதில் எழுந்த மற்றொரு சந்தேகம். அதற்கடுத்த மாதம் இரண்டு மூன்று நாட்கள் பாப்பா வரவில்லை வேலைக்கு.  பின் அவள் வந்த போது கேட்டாள், “அம்மா ஒரு ஐநூறு ரூவாக் குடும்மா.” “எதுக்கு?” “எம் மவனெ போலீசுலெ அடிச்சு இளுத்துகிட்டு போயிட்டாங்கம்மா.  ‘நீ ஐநூறு ரூவாக் குடு.  உடறேங்’ கறாங்கம்மா.” “எதுக்கு அவனெ போலீசுலெ புடிச்சு இழுத்துகிட்டுப் போனாங்க?” “கிளியாட்டம் வந்திருக்கா எனக்கு சின்ன மருமவன்னு சொன்னேன் இல்லெ.  அவொ நாலு நாளு முன்னெ மண்ணெண்ணெயெ ஊத்திகிட்டு பத்த வெச்சுகிட்டாம்மா.  ஆசுபத்திரிக்குத் தூக்கிட்டு போனோம்.  ‘அவொ செத்து போயாச்சு’ ந்னு சொல்லீட்டாங்கம்மா.  அவொ அப்பா அம்மாக்கு சொல்லி அனுப்சேன்.  அவங்க போலீசோட வந்து எம் புள்ளெய அடிச்சு இளுத்து கிட்டுப் போயிட்டங்கம்மா.” “பாப்பாவுக்கு விடிவு காலமே வராதா?” என் மனத்துள் ஒரு கேள்வி. பலமாடிக் குடியிருப்புகளுக்கே உரித்தான சிலெ கஷ்டங்கள் வந்ததால் 1995ல் தனி வீடு கட்டிக் கொண்டு குரோம்பேட்டைக்குக் குடி பெயர்ந்தோம். பதினைந்து வருடங்களுக்குப் பின் சென்ற வருடம் அசோக் நகருக்குச் சென்றிருந்தேன் எனது பகுதிக் குடியிருப்பில் நடந்து வந்த சிறு மராமத்துப் பணிகளைப் பார்வையிட.  ஒரு பக்கம் இருந்த குடிசை வீடுகளுக்குப் பதிலாக இரட்டை மாடிக் கட்டிடங்களும் ஓட்டு வீடுகளும் வந்திருந்தன்.  என்ன ஒரு மாற்றம்!   வழக்கம் போல மூன்று காலனி காவல்காரர்கள் தலையைச் சொரிந்து கொண்டு வந்து நின்றனர்.  “அய்யா இங்கெ இருந்தப்போ பொங்கலு, திவாளின்னு எனாம் கொடுப்பீங்க.”  சொரிந்த தலைகள் ஒவ்வொன்றுக்கும் பத்து ரூபாய் கொடுத்து விட்டு, அவர்களுள் மூத்தவரை, “பாப்பா  இருந்தாக் கூட்டி வாப்பா” என்றேன். “அவொ வர மாட்டா சார்.” “ஏன் வர மாட்டா?  எங்க மேலெ கோவமா?” “இல்லெ சார்.  அவொ போயிட்டா சார்.” “எங்கெ?  மொத புள்ளெயோடெயா?” “இல்லெ சார்.  திரும்ப வரவே முடியாத எடத்துக்குப் போய்ச் சேந்தூட்டா சார் அவொ.” “பால் ஆயா?” “அவ இப்போ வயச்சாயி வீட்டொட படுத்துக் கெடெக்கா சார்.” என் கேள்விக்கு விடை கிடைத்து விட்டது.  பாப்பாவுக்கும், பால் ஆயாவுக்கும் விடியல் வந்து விட்டது.     13. சுந்தரி சொன்னாள் ஒரு சேதி   “கீதா மேடம்….” “என்ன வேணும் சொல்லும்மா சுந்தரி.” “மேடம் ஒங்களெப் பாத்தா எனக்குப் பொறாமையா இருக்கு மேடம்.” “என்னெப் பாத்து பொறாமெப் படுற மொத ஆளு நீ தாம்மா.  எனெக்குக் கூடதான் ஒன்னெப் பாத்தா பொறாமையா இருக்கு என்ன அழகு பேருக்கு ஏத்தாப்புளெ,  என்ன கலரு,  எப்பிடி ஒடெம்பெ ஸ்லிம்மா வெச்சிண்டு இருக்கா பாரூன்னு.  நீ சொல்லு என்னெப் பாத்து எதுக்குப் பொறாமெப் படுறே?” “நீங்க கொடுத்து வெச்சவங்க மேடம்.” “நான் யாரு கிட்டெயும் எதுவும் குடுத்து வைக்கலெ யேம்மா.  புதிரு போடாமெ நேரா விஷயத்தெச் சொல்லு.” “போன வாரம் நான் சென்னை பாக்கணும்னு சொன்னேன்னு கூட்டீண்டு போனீங்க இல்லியா?” “ஆமாம் அதுக்கென்ன இப்போ?  ஒன்னெ மட்டும் கூட்டிண்டு போகலையே.  இன்னும் ரெண்டு பேரை சேத்துதானே கூட்டிண்டு போனேன்.” “ஒங்க அப்பா அம்மா விட்டுலெ தங்க வெச்சீங்க இல்லே.” “ஆமாம்.  அவுங்களுக்கு வீடு இருக்கு அங்கெ.  அதுனாலெ ஒன்னெயும் கூட வந்த இன்னும் ரெண்டு பொண்ணுங்களையும் எங்கூட தங்க வெச்சிண்டேன்.” “ஒங்க அப்பா அம்மவெப் பாத்தாலும் பொறாமையா இருக்குங்க மேடம்,” “போச்சுடா.  மொதலுலெ எம்மேலெ பொறாமையா இருக்கூன்னே.  இப்போ என்னோட அப்பா அம்மா மேலெ பொறாமையா?  பொறாமெப் படறதுக்கூன்னே பொறந்த ஜென்மமா நீ?” “கிண்டலடிக்காதீங்க மேடம்.  என் மனசுலெ இருக்குற துக்கத்தெ யாரு கிட்டெயாவது கொட்டி ‘ஓ’ ன்னு ஒரு கொரல் அழணும் போல இருந்தீச்சு.  அதான்….” “சாரீம்மா சுந்தரி.  நீ சொல்ல வந்ததெச் சொல்லு.” “மேடம் ஒங்க வீட்டுலெ போய் இறங்கினதும் என்னாச்சு?”  “நாம காரெ விட்டு இறங்கினதும் மொத மாடி ஃப்ளேட்டுலெ இருக்குற ஒங்க அப்பா என்ன பண்ணாரு?” “என்ன பண்ணாரு>” “வாசக் கதெவெத் தெறந்து வெச்சுக்கிட்டு. வாசல் வெராண்டாவுலேயே நின்னுக் கிட்டு இருந்த  அவரு வாம்மான்னு சிரிச்ச மொகத்தோட நம்ம எல்லாரையும் வரவேத்தாரு.  ஒங்க அம்மா என்ன பண்ணாங்க?” என்னம்மா இத்தெனெ நாழியாயிடித்து?  வண்டி லேட்டா?  சரி “கை காலெ அலம்பிண்டு சாப்பிட வாங்கோன்னாங்க.” “இதுக்குப் போயி என் மேலெயும் அவுங்க மேலெயும் ஏன் பொறாமெப் படணூம்?”. “சொல்றேன் மேடம்.  மறு நாளு என்னாச்சு?” “நாம ஊர் சுத்திப் பாக்கப் போனோம்.’ “கெளெம்பற போது அப்பா என்ன சொன்னாரு?” “என்ன சொன்னாரு?” “எங்கெ போறதா இருந்தாலும் நாலு பேரும் ஒண்ணாப் போங்கோ.  செல் போனுங்களே கையிலெ வெச்சுக் கிட்டோ அல்லது அதுலெ பேசிக் கிட்டோ நடந்து போயீட்டு இருக்காதீங்கோ.  ஹேண்ட் பேகும் பத்திரமா வெச்சுக் கோங்கோன்னாரு.  கூடவே நடந்து வருவாங்க சில பேரு.  நீங்க அசந்த சமயம் பாத்து செல் போனையோ இல்லெ ஹேண்ட் பேகையோ புடுங்கீட்டு ஓடீடுவாங்க.  சங்கிலியெ அறுத்துக் கிட்டு போறவங்களும் உண்டு.  அதுனாலெ தான் அப்பா அப்பிடி சொன்னாரு.  “இது எல்லார் வீட்டுலெ இருக்குற பெரியவங்களும் சொல்றது தானேம்மா?” “சரி அதெ உடுங்க மேடம்.  நாம ஊரு சுத்தினப்போ எத்தினி வாட்டி போனு பண்ணாரு ஒங்க அப்பா?  அப்பொ அவரு என்ன கேட்டாரு?  காபீ டீ எதுனா குடிச்சீங்களா?  டிபன் சாப்டீங்களா?  அடிக்கடி தண்ணியோ ஜூசோ குடிங்க.  மதிய உணவு சாப்டீங்களா?  எப்பொ கெளம்புவீங்க மகாபலிபுரத்துலேந்து?  அப்பொப்பொ போனு பண்ணிக் கிட்டு இரும்மான்னு சொன்னரில்லெ?”. “அது சரி அவரு பேசினது என்னான்னு ஒனக்கெப்படித் தெரியும்?” “நீங்க சொன்ன பதிலுங்களுலெ இருந்து தான் மேடம்.” “ஒங்க அப்பா அம்மா இப்படி இருக்க மாட்டாங்களா?” “இதுலெ நூத்துலெ ஒரு பங்கு இருந்தாக் கூட நான் சந்தோஷப் படுவேங்க.  அவுங்களெ அப்பா அம்மான்னு சொல்லிக்கவே வெக்கமா இருக்குங்க மேடம்.” “அப்பிடி என்ன கொடுமை பண்ணீட்டாங்க அவுங்க?” வந்த அழுகையை அடக்கிக் கொண்டு, “ஒண்ணா ரெண்டா மேடம்? சொல்றேன் கேளுங்க” ஆரம்பித்தாள் சுந்தரி தன் சோகக் கதையை.   “நான் பி.டெக். முடிச்சதும் மாலெத் தீவுக்குப் போனேன் வேலைக்கு.  அங்கெ ரெண்டு வருசம் வேலெ செஞ்சேன்.  மாசா மாசம் வீட்டுக்கு நெறெய பணம் அனுப்புவேன்.  அதுலெ வீட்டு செலவு போக மிச்சத்தெ பேங்குலெ டெபாசிட்டா போட்டு வையுங்கன்னு சொல்லுவேன்”. “ஒன் செலவும். வீட்டு செலவும் போக பேங்குலெ டெபாசிட்டும் போடும்படியா இருந்துதுன்னா நெறெயவே தான் சம்பாதிச்சிருப்பே.  அந்த வேலெயெ ஏன் உட்டூட்டு வந்தே?”   ”எங்கூட வேலெ செய்யுறவங்க எங்கிட்டெ நடந்துக்கிட்ட விதமும், எனக்கு அங்கு கெடெச்ச சாப்பாடும் புடிக்கலெ.  அதுனாலெ அந்த வேலையெ உட்டூட்டேன்.  திரும்பி வந்து எம்.சி.ஏ. படீக்க சேந்தேன்.  உடனே அப்பா அம்மா ஆரம்பிச்சூட்டாங்க எனக்குக் கல்யாணம் பண்ணனும்னு.  எவ்வொளோ சொல்லியும் கேக்காமெ எனக்குக் கல்யாணமும் பண்ணி வெச்சூட்டாங்க.”   ஒனக்கு நல்லது பண்ணணும்னு தானே அப்பிடி செஞ்சாங்க?” “நல்லது பண்ணணும்னா?  அன்னிக்கி புடிச்சிது என் வாழ்க்கைலெ சனியன்.  என்னெக் கல்யாணம் பண்ணிண்டவன் என்ன படிச்சிருக்கான், எங்கெ வேலெ செய்யுறான் எதுவுமே விசாரிக்காமெ, அவனோட அப்பா அம்மாக்கு நெலமிருக்கூன்னு எனக்கு அவனெக் கட்டி வெச்சூட்டாங்க.  தினோம் நாள் பூரா எங்கெயாவது சுத்தீட்டு, குடிச்சூட்டு ராத்திரி பத்து பதினோரு மணிக்கு வருவான்,  வந்ததும் கர கரன்னு என்னெ படுக்கெ உள்ளுக்கு இழுத்திண்டு போயி, கொடூர பாலியல் வக்ரம் எத்தினி உண்டோ அத்தனையும் செய்வான்.  படிக்கவே உட மாட்டான் என்னெ.  அதுனாலெ அது வரெயிலும் க்ளாசிலெ மொத இடத்துலெ வந்துண்டு இருந்த நான் ஃபைனல் எக்சேம்லெ ஒரு சப்ஜெக்ட்டுல பெயிலாயிட்டேன்.  அதெ என் கூடப் படிச்சவங்களாலெ நம்பவே முடீலெ.  இதுலெ கர்ப்பமும் ஆயிட்டேன்.  பிரசவத்துக்கு எங்க வீட்டுக்கு வந்த போது மறுபடி படிச்சு, பரீட்சை எழுதிப் பாஸ் பண்ணேன்.” “அப்புறம் என்ன?  பாஸ் பண்ணீட்டே.  இப்போ நல்ல வேலேலெயும் இருக்கே.  இன்னுன் என்ன வேணும்?” “கீதா மேடம் நான் இன்னும் என் கதெயெ முடிக்கலே மேடம்.  என் பையனுக்கு எட்டு மாசம் இருக்கும்.  ஒரு நாளு வெளிலெ போயிட்டு வீடு திரும்பினா கொழெந்தெயெக் காணும்.  கேட்டதுக்கு அப்பா சொன்னாரு அது எங்கெ போய்ச் சேரணுமோ அங்கெ சேத்தூட்டேன்.  நீயும் போய்ச் சேருன்னு.  இடிஞ்சு போயிட்டேன்.  ஆனாலும் போகமுடியாதுன்னு பிடிவாதமா சொல்லீட்டேன்.  தினோம் நீ கெளெம்பிப் போ கெளெம்பிப் போ.  நீ போகலேன்னா நான் எப்படி உன் தங்கெய்க்குக் கல்யாணம் பண்ணுவேன்?  ஒன் தம்பிக்கு யாரு பொண்ணு குடுக்க வருவாம்பாங்க அப்பாவும் அம்மாவும்.  ஒரு நாளு அப்பாவெக் கேட்டேன், “அச்சா நான் பேங்க் எக்சேம் எழுதலாம்னு இருக்கேன்.  அதுக்கு கோச்சிங் கிளாசுலெ சேரணும்.  ஒரு ஐயாயிரம் வேணும்னு.  என் கையிலெ நயா பைசா கெடெயாது.  வேணும்னா இந்த காகிதங்களெ எடுத்துண்டு போயி பேங்குலெ வெச்சு பணம் வாங்கிக்கோன்னு எம் மூஞ்சிலெ உட்டு எறிஞ்சாரு ரெண்டு மூணு காகிதங்களெ.” “லோன் கெடெச்சுதா?” “இல்லெ மேடம்.  மேனேஜர் கேட்டாரு, ஒன்னெப் பாத்தா படிச்சவளாட்டம் இருக்கே.  யாரு பேரிலேயோ இருக்குற டெபாசிட் ரசீதெக் கொண்டு வந்து லோனு வேணும்னா யாரும்மா குடுப்பாங்க லோனுன்னு.  ரசீதுங்களெ வாங்கிப் பாத்தா எல்லாம் அப்பா பேரிலெயும் அம்மா பேரிலெயும் இருக்கு.  அப்போ நான் கையெழுத்துப் போட்டு அனுப்பின ஃபாரம் எல்லம் என்னாச்சு?” “அப்புறம் என்ன பண்ணே?  சின்ன சின்ன வேலெ பாத்து கொஞ்சம் பணம் சேத்து கோச்சிங்க் கிளாசுலெ சேந்து பரீட்செ எழுதி இப்பொ ஒங்க முன்னாலெ நான் இருக்கேன்.” “பையன் என்ன ஆனான்?” “பையன் அவுங்க வீட்டுலேயேதான் இருக்கான்.  தினோம் போனுலெ அவங்கூட பேசுவேன். சில சமயம் அவன் கேப்பாம் அம்மா எனக்கு இது வேணும் அது வேணும்னு.  நானும் உடனே வாங்கி அனுப்புவேன் அவன் கேட்டதெ.  அவன் பொறந்த நாளுக்கும் கிஃப்டுங்க வாங்கி அனுப்புவேன்.  என் கையிலெ கொஞ்சம் காசு சேந்ததும், விவாக ரத்துக்கும், பையனோட கஸ்டடிக்கும் கேசு போடறதா இருக்கேன் மேடம். “மேடம் அன்னிக்கி நீங்க கடேலெ ரெண்டு ஜோடி செருப்பு வாங்கினீங்க பல ஜோடிங்களெக் கையிலெ எடுத்துப் பாத்து.  அப்பொ நான் கேட்டேன் காலுலெ போட்டுப் பாக்காமெ வாங்குறீங்களே செருப்பு.  போட்டுப் பாருங்க மேடம்னேன்.  நீங்க சொன்னீங்க செருப்பு எனக்கில்லே அப்பாக்கூன்னு.  வீட்டுக்குப் போனதும் அப்பாவெ போட்டுப் பாக்கச் சொன்னீங்க.  அப்பாவும் போட்டுப் பாத்தூட்டு நன்னா இருக்கும்மான்னாரு.  மறு நாளு ஒங்க செருப்பு பிஞ்சிருக்க, அப்பாவெக் கேட்டீங்க ‘அப்பா ரப்பர் சொல்யூஷன் இருக்கான்னு.  ஒடனே அப்பா ஒரு டிராயரெத் திறந்து ரப்பர் சொலூஷனெ எடுத்து அதெ எப்பிடி உபயோகிக்கணும்னு சொல்லிக் கொடுத்தாரு.  அப்பொ எனக்கு ஒங்களுக்குள்ள இருக்குற பாசத்தெப் பாத்து பொறாமையா இருந்தது மேடம்.” “ஏன் நீ செய்ய மாட்டியா இதெல்லாம்?” “நானுந்தான் செய்வேன் மேடம்.  இப்பொவும் அவுங்களுக்கு செலவுக்கு பணம் அனுப்பிக் கிட்டுதான் இருக்கேன் மேடம்.  ஆனா அவுங்க கிட்டேந்து எனக்குக் கடுகளவு பாசம் கூட்க் கெடெய்க்குறது இல்லே மேடம்.  அவுங்களெப் பொறுத்த வரெ நான் ஒரு நடமாடுற ஏடீயெம் மேடம்.   போன வருஷம் அம்மாக்கு திடீர்னு முதுகெலும்புலெ ஒரு ப்ராப்ளம் வந்து அதுனாலெ கால் மொடங்கிப் போச்சு.  நாந்தான் ஏகப் பட்ட பணம் செலவழிச்சு வைத்தியம் பாத்தேன்.  இப்பொ நல்லா இருக்காங்க.  கேனடாவுலெ புருசனோட இருக்குற என் தங்கெ எங்களாலெ வரமுடியாது.  டிக்கெட்டுக்கே ஏகப் பட்ட பணம் ஆகும்னூட்டா,  கல்யாணகி டெல்லிலெ இருக்குற தம்பி நான் இப்பொதான் புது வேலெலெ சேந்திருக்கேன்.  என்னாலெ வர முடியாதூன்னுட்டான்.  ரெண்டு பேரும் பணமும் அனுப்பலே. இப்போ சொல்லுங்க மேடம் ஒங்களெயும் ஒங்க அப்பா அம்மாவையும்  பாத்தா எனக்குப் பொறாமையா இருக்குமா இருக்காதான்னு.?” “சுந்தரீ நீ போன வாரம் ஒனக்குக் கல்யாணம் ஆயிடிச்சான்னு கேட்ட போது இல்லைனு சொன்னே.  பேங்குக்கு பயோ டாட்டா குடுக்குற போதும் அப்பிடியே தான் குடுத்திருக்கையா?  பின்னாடி பேங்குக்கு உண்மெ தெரிஞ்சா ஒன் வேலெயே போயிடுமேம்மா.” “இல்லே மேடம்.  அதுலெ கரெக்ட்டா தான் கொடுத்திருக்கேன்.” “பின்னெ ஏன் கல்யாணம் ஆகலேன்னு சொன்னே?” “அப்பிடிச் சொல்லலேன்னா ஹஸ்பெண்டு எங்கெ இருக்காரு?  என்ன வேலெ பண்ணுறாரு?  நீ ஏன் அவரு கூட போகலேன்னு கேப்பாங்க.  ஒவ்வொருத்தரு கிட்டெயும் என் சோகக் கதெயெச் சொல்லணுமா மேடம்?” “அது சரிதான்.  ஆனா ஒனக்குக் கல்யாணம் ஆகலேன்னு நெனெச்சு யாராவது ஜொள்ளு உட ஆரம்பிச்சா….?” “பாலம் வர போது அதெத் தாண்டுவோம்னு சொல்லுவாங்களே மேடம்,  அது போல ஜொள்ளு விடற போது பாத்துப்போம் மேடம்.” எதிர் நீச்சல் போடுற தன்மெ ஒங்கிட்டெ ரொம்பவே இருக்கும்மா.”   “மேடம்.” “என்னம்மா?” “ஒங்களெ நான் அம்மான்னு கூப்பிடலாமா மேடம்?” “ஒனக்கு எப்பிடிக் கூப்பிடணும்னு தோணுதோ அப்பிடிக் கூப்பிட்டுக்கோ.  ஆனா தனியா இருக்குற போது அப்பிடிக் கூப்பிடு.  இல்லாட்டி அடுத்த வருஷம் ஜாயின் பண்ணுற வங்க யாராவது என்னெ கீதாப் பாட்டின்னு கூப்பிட ஆரம்பிச்சூடுவாங்க.’ இருவரும் சிரித்தோம்.  சுந்தரி கிளம்பிச் சென்றாள் தன் இடத்திற்கு. ““சுந்தரி சொன்னாள் ஒரு சேதி நொந்ததே உள்ளம் அது கேட்டு” முணு முணுத்த தெந்தன் வாய் (கதையல்ல இது.  நிஜம்.) 14. ஜொலிப்ப தெல்லாம் தங்கமல்ல   []     “நூரு….. எப்பிடிடீ இருக்கே?  அவரு வந்திருக்காப்புலெ இருக்கே.  ஒரே கொண்டாட்டந் தான்னு சொல்லு.” “ஆமாண்டீ.  கொண்டாட்டத்தெப் பாத்தா இவொ.  ஜொலிக்கற தெல்லாம் தங்கமில்லேடி.” “என்னடீ சொல்றே?  அப்போ நீ போட்டுருக்குற நகையெல்லாம் அலிமா கவரிங்கா?” “இல்லேடீ.  அதெச் சொல்லலெ நான்.  அதெல்லாம் ஒரிஜினல் தான்.” பின்ன என்ன கொறெ பட்டுக்கறெ நீ?  வசதியான ஊடு.  ஊரெச் சுத்தி வரக் காரு. ஊட்டோட காரெ ஓட்ட ட்ரைவரு.  போட்டுக்க வித விதமா நகைங்க.  இன்னும் என்னடி வேணும் ஒனக்கு?” “அதெல்லாம் இருக்கு.  இல்லேன்னு சொல்லலெ.” “பின்னெ என்னவாம்?  ஊட்டுக் காரரும் வந்திருக்காரு துபாய்லேந்து.  இந்த வாட்டி இன்னும் தங்கமா?  இல்லே எச்டீ. டீவீ. யா?  ஐபேடா?” “மூணுந்தான்.” “அப்புறம் என்னவாம்?  மூஞ்சியெ எதுக்கு நசுங்கிப் போன ஈயச் சொம்பாட்டம் வெச்சிக்கிட்டு இருக்கே?” “அதெ எப்டிடீ சொல்றது ஒங்கிட்டே?” “வாயாலெ சொல்றது.  என்னத்தெ சொல்ல முடியாமெ தவிக்கிறே?” “நேத்து என் சின்னப் பையன் கவுசு கேக்குறான், ‘அம்மிஜான் யாரு அந்த ஆளு?  நான் ஒருத்தன் ஒம் பக்கத்துலெ இருக்கேங் கறெதெக் கூடப் பாக்காமெ ஒன்னெக் கட்டுறான்.  என்னென்னமோ பண்ணுறான்.  நீயும் அவனெப் பாத்துப் பல்லெ இளிக்குறே?’ ன்னு.  இப்பொ சொல்லுடீ நீ ஜொலிக்கிற தெல்லாம் தங்கமான்னு.” “ஆமாண்டீ….. பாவண்டீ நீ.  சலீமோட அத்தா, அதான் என் ஊட்டுக் காரரு, இங்கெ பேங்குலெ வேலெ பாக்குறாரு.  அஞ்சடிச்சா டாண்ணு ஊட்டுக்கு வந்துடறாரு.  சமோசா சாயின்னு இருக்கறதெச் சாப்டூட்டு சலீமெக் கூட்டிகிட்டு பார்க்குக்கு போயிடறாரு அவனோட வெளையாட.” “அதுக்கெல்லாம் அல்லாவோட துவா வேணுண்டீ.  எனக்கு அது இல்லெ போலெ.”