[] அன்புள்ள மணிமொழிக்கு… தேமொழி freetamilebooks.com Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 அன்புள்ள மணிமொழிக்கு… 1. அன்புள்ள மணிமொழிக்கு… 1. Anbulla Manimozhikku 2. அன்புள்ள மணிமொழிக்கு … 3. அணிந்துரை 4. இசைக்கவி இரமணன் 5. அன்பு மணிமொழிக்கு, 6. நன்றியுரை 7. சமர்ப்பணம் 2. 1. முதற்பரிசு: கவா கம்ஸ் 3. 2. இரண்டாம் பரிசு: மாதவன் இளங்கோ 4. 3. மூன்றாம் பரிசு: ரஞ்சனி நாராயணன் 5. 4. ஆறுதல் பரிசு [1]: கீதா மதிவாணன் 6. 5. ஆறுதல் பரிசு [2]: விசாலம் 7. 6. ஆறுதல் பரிசு [3]: சரஸ்வதி ராஜேந்திரன் 8. 7. சிறப்புப் பரிசு [1]: நந்திதா 9. 8. சிறப்புப் பரிசு [2]: வி. பாலகுமார் 10. 9. சிறப்புப் பரிசு [3]: ஞா. கலையரசி 11. 10. சிறப்புப் பரிசு [4]: ராஜலஷ்மி பரமசிவம் 12. 11. சிறப்புப் பரிசு [5]: சங்கர் சுப்ரமண்யன் 13. 12. சிறப்புப் பரிசு [6]: புதுவை பிரபா 14. 13. கடித இலக்கியப் போட்டியில் பங்குபெற்ற எழுத்தாளர்களும் அவர்களது படைப்புகளும் 1. எங்களைப் பற்றி - Free Tamil Ebooks அன்புள்ள மணிமொழிக்கு… அன்புள்ள மணிமொழிக்கு   தேமொழி   மின்னூல் மறுவெளியீடு : freetamilebooks.com   உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   Anbulla Manimozhikku Edited by: Themozhi Language: Tamil Genres: Collections of Best Literary Letters (by many authors) ISBN: 978-0-9963993-0-2 Pages: 82 Published in: March – 2017 Publisher: Arivoli Pathippu Cover Art Contributor: Themozhi Cover Picture Courtesy: Biswarup Ganguly Copyright Information: Creative Commons license: Attribution-NoDerivs 3.0 Unported (CC BY-ND 3.0). You are free: to Share — to copy, distribute and transmit the work; to make commercial use of the work. Under the following conditions: Attribution — You must attribute the work in the manner specified by the author or licensor (but not in any way that suggests that they endorse you or your use of the work). No Derivative Works — You may not alter, transform, or build upon this work. ______________________________________________________________ அன்புள்ள மணிமொழிக்கு … தொகுப்பாசிரியர்: தேமொழி மின்னூல் வெளியீடு: மார்ச் - 2017 மின்னூல் பதிப்பு: அறிவொளி பதிப்பு EBook ISBN: 978-0-9963993-0-2 மேலட்டை உருவாக்கம்: தேமொழி மேலட்டை பட உதவி: பிஸ்வரூப் கங்குலி காப்புரிமை தகவல்: நூலில் எந்த ஒரு மாறுதலும் செய்ய அனுமதியில்லை என்ற நிபந்தனையின் கீழ் பதிப்புரிமை வழங்கப்படுகிறது. இதை விலையில்லாமல் விநியோகிக்கவோ, அச்சிட்டு வெளியிடும் செலவினை ஈடுகட்டும் விதமாக கட்டணம் வசூலித்து விற்பனை செய்யவோ முழு உரிமையும் வழங்கப்படுகிறது. அணிந்துரை பவள சங்கரி நம் எண்ணத்தின் ஓசைகளே கடிதங்களின் வடிவங்கள். அந்த வகையில் கடிதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வண்ணத்தில், வெவ்வேறு வடிவங்கள் பெறுகிறது என்பதே நிதர்சனம். இந்த ஆயிரம் வாசல் இதயத்தில், ஆயிரம் எண்ணங்கள் உதயமானபோதும் நெய் தீபமிட்டு தீண்டப்படுகிற ஒரு சில எண்ணங்கள் சுடரொளியாகவும் பிரகாசிக்கக்கூடும் என்பதற்குச் சான்றுதான் இந்தக் கடித இலக்கியப் போட்டியில் பங்கு பெற்ற ஒவ்வொரு படைப்பும். “அன்புள்ள மணிமொழிக்கு …” என்று தலைப்பிட்ட இப்போட்டியின் அடிப்படையான திருமதி. தேமொழி அவர்களின் வலுவான, உணர்வுப்பூர்வமான காரணம் அனைத்துப் படைப்புகளிலும் அழகாகப் பிரதிபலித்துள்ளதைக் காண முடிகிறது. இணையமும் செல்பேசிகளும் பரவலாகிவிட்ட இந்தக் காலக்கட்டத்தில், கடிதம் எழுதும் வழக்கம் அருகி வருகிறது. குறுஞ்செய்திகளில் நம் எண்ணங்களைச் சுருக்கி இரண்டு வரிகளில் அளிக்க வேண்டிய நிலையில், நம் உள்ளக் கிடக்கைகளை விலாவாரியாக விவரிக்கும் கடித இலக்கியம் இன்று பெரும்பாலும் மறைந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் அரிதான கடித இலக்கியத்தை ஊக்குவிக்கும் வகையில் நம் வல்லமையில் இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது நம் அனைவருக்கும் ஒரு நல்ல அனுபவமாக அமைந்தது. ஒவ்வொரு கடிதமும் அவரவர் உள்ளக்கிடக்கையை உறுதியாக வெளிப்படுத்தியுள்ள ஒன்றாகவே அமைந்துள்ளது சிறப்பு. ஒவ்வொன்றும் வித்தியாசமான படைப்புகளாகவே இருந்ததால் நடுவராக பொறுப்பேற்றிருந்த திரு இசைக்கவி ரமணன் அவர்களுக்கு இது ஒரு சவாலாகவே இருந்திருக்கிறது என்பதற்கான ஆதாரம், ஏற்கனவே அறிவித்திருந்த பரிசுகளுடன், மேலும் ஆறு பேர்களுக்கு தலா ரூ. 200 வீதம் ஆறுதல் பரிசாக தானே வழங்குவதாக அறிவித்திருந்ததுதான். அந்த வகையில் பெரும்பாலான படைப்புகள் பரிசுக்குரிய தகுதி பெற்றிருந்ததையே அது உறுதிப்படுத்துகிறது. ஒருவர் எத்தனை கடிதங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம் என்ற விதி பலருக்கும் வசதியாக அமைந்துவிட்டது. மணிமொழியை சகோதரியாக, மகளாக, மருமகளாக, பேத்தியாக, தோழியாக, காதலியாக அவரவர் கற்பனைக்கேற்ப வரித்துக் கொண்டு அற்புதமாக காவியம் படைத்துவிட்டனர். வேண்டுகோள் விடுத்தல், அறிவுரை சொல்லுதல், தனது அன்பை சொல்லுதல், நட்பை வெளிப்படுத்துதல் என மனம் திறந்த மடல்களாகக் குவிந்துவிட்டது. திரு இசைக்கவி ரமணன் அவர்கள் மகிழ்ச்சியுடன் தேர்வு செய்து தன் பங்கிற்கும் ஆறு பரிசுகளை மனமுவந்து வழங்கியுள்ளார்கள். அவருக்கு நம் மனமார்ந்த நன்றி. போட்டியில் உற்சாகமாக பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். பரிசு பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள். அன்புடன், பவள சங்கரி - நிர்வாக ஆசிரியர் - வல்லமை மின்னிதழ் இசைக்கவி இரமணன் உலகம் அழகானது. ஆனால், வாழ்க்கைக்கு அதனளவில் அழகேதும் கிடையாது. வைக்கோலைத் தின்று வெந்நீர் குடிக்கும் சுவாரசியமே உள்ள இந்த வாழ்க்கையில், பிறந்த கணத்திற்கு முன்பிருந்தே உயிரின் பிடரியை மரணம் கவ்விக் கிடக்கும் இந்தக் கணநேரக் கூத்தில் என்ன அழகு இருக்க முடியும்? வாழ்க்கை வேறு, வாழுதல் வேறு. நன்கு வாழுவதன் மூலமே ஒன்றுமற்ற வாழ்க்கை ஒளிபொருந்தியதாக மாறுகின்றது. அதுதான் வாழ்வாங்கு வாழுதல். அதற்கு இரண்டு அம்சங்கள் தேவைப்படுகின்றன. ஒன்று, நேயம். இன்னொன்று கலை. நேயம், மனிதனை மனிதனாக்குகிறது. கலை, மனிதனுக்கும் இறைவனுக்கும் பாலம் போடுகிறது. வாழ்க்கை, காட்டாறாக இருந்தாலும், பாலத்திலிருந்து பார்க்கும்போது நமக்குப் பதற்றமில்லை. கலை, எல்லாவற்றையும் படைத்து இயக்கும் பரமசக்தியிடமிருந்தே வருகிறது. அந்தப் பரம்பொருள், மனிதனில் தன்னை நேயம் என்றே பதிவு செய்துகொண்டுள்ளது. சேதி சொல்லும் இயற்கை, நியதி காட்டும் கோள்கள், பாதி சொல்லும் உயிரினங்கள், பாடம் சொல்லும் வாழ்க்கை, இவையே கலைகள் விளங்கும் தளங்கள். இயற்கையிலும் வாழ்க்கையிலும் ஏற்கனவே தென்படுவதை, நேயமென்னும் தூரிகை ஏந்தி ஓவியன் சித்திரம் தீட்டுகிறான். கவிஞன் கவிதை பாடுகிறான். இன்னொருவன் கல்லை தெய்வமாக்கிக் காட்டுகிறான். கலைகளில் கடிதமும் அடக்கம் என்பது உண்மை. பேசும் சொல்லும், பதியும் எழுத்தும் கலை வயப்படுவது இயல்புதானே? கலை மிளிரும் எழுத்தே இலக்கியம். எனவேதான், வல்லமைக் குழுமத்தார், ஒரு கடித இலக்கியப் போட்டியை அறிவித்தார்கள். வந்து குவிந்தன கடிதங்கள். வம்பாய், என்னைத் தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள். எதையும் தட்டிக் கொடுப்பவன் எதைத் தட்டிப் பார்த்து எப்படித் தெரிந்து எதனை எடுப்பான்? ஆனால், வந்து சேர்ந்த கடிதங்கள் எல்லாம் சுசீந்திரத்துத் தூண்கள் போலானதால், தட்டி மகிழ்ந்தேன். அவற்றை, நான் நன்று, மிக நன்று, மிக மிக நன்று என்றே வகைப்படுத்த முடிந்தது. அறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்று பற்பலரும் பலவித வண்ணம் காட்டியிருக்கிறார்கள். முதலில், அவர்கள் அனைவருக்கும் என் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சரி, எந்த அடிப்படையில் நான் பரிசுகளுக்கு உரியவை இன்னின்னவை என்று தேர்ந்தெடுத்தேன்? சொந்த அனுபவம், சற்றே அறிவு, கொஞ்சம் கற்பனை, நிறைய நேசம், இவை கலந்துவரும் கடிதங்களே மனதில் நிற்க வல்லவை. அல்லவா? ஒரு கடிதத்தின் நீளம், அது தாளில் எடுக்கும் இடத்தைப் பொறுத்தல்ல, மனதில் பிடிக்கும் இடத்திற்கு ஏற்பவே நிச்சயிக்கப்படுகிறது. அமைப்பாளர்கள், இரண்டு பக்கங்கள் என்பதாக ஓர் அளவை நிர்ணயம் செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த அளவோடு நிறுத்திவிடுவதாலேயே அந்தக் கடிதம் சரியான நீளத்தில் இருப்பதாகக் கருதிவிட முடியாது. வளவளவென்று போகுமானால், ஒரு பக்கத்திற்கும் குறைவான கடிதம் கூட நீளமாகவே தெரியும். நமக்குத் தெரிந்தவற்றையெல்லாம் கொட்டித் தீர்த்துவிட வேண்டும் என்னும் ஆவல் மேலிடும் போது, கடிதம் சுமையாகி விடுகிறது. கட்டுரை, கடிதமாகாது. கவிதையும் அப்படித்தான்! கடிதம், உரைநடையின் தளம். அதில், கவிதையின் தறுவாய் தென்படலாம். கட்டுரையின் சாயல் தட்டுப்படலாம். நமது அனுபவத்தைச் சார்ந்திருந்து, அன்பின் அடிப்படையில் வருகின்ற சொற்கள், நேரடியான அறிவூட்டும் நடவடிக்கைகளை விட மேலானவை. ‘இவருக்கு நண்பர்கள் வேண்டாம், முகவரிகள் போதும்!’ என்று சொல்லும் அளவுக்குச் சில கடிதங்கள் இருக்கின்றன. சொல்ல நினைத்ததைச் சொல்வதற்கு பதிலாக, என்ன கேட்க விரும்புவார்கள் என்று அன்பார ஊகித்தல் கடிதங்களை அழகாக்கும். இவ்வளவு சொன்னால் போதும் என்று தோன்றுகின்றது. எப்படி இருப்பினும், என்னுடைய தேர்ந்தெடுப்பு என்னுடைய ரசனை, புரிதல், அறிவு இவற்றிற்கேற்பத்தான் இருக்குமே அன்றி, இதுதான் சரியான முடிவு என்பதாக இருக்க முடியாது. ஏனெனில், நான் சராசரிக்கும் குறைவான சாதாரண மனிதன். முதற்பரிசு: கவா கம்ஸ் கடிதத்தின் இறுதியில்தான் அது ஒருவர் தனக்கே எழுதிக்கொண்ட கடிதம் என்பது விளங்குகிறது. ஓர் அறிவியல் புனைவும், ஆழமான காதலும் கலந்து மிகவும் விறுவிறுப்பாகவும் மிளிர்கின்றது இந்தக் கடிதம். கொஞ்சம் கூட சுருதி விலகாத பாடல் போன்று இருக்கின்றது. இரண்டாம் பரிசு: மாதவன் இளங்கோ இது தனது ரசிகைக்கு ஓர் ஓவியர் எழுதிய கடிதம். இந்தக் கோணமே மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. ஒரு கலைஞனின் மனம், அவனுடைய படைப்பைக் காட்டிலும் எத்தனை நுண்மையானது, பரிசைக் காட்டிலும் அவன் எப்படி ரசனையைத்தான் நம்பி வாழ்கிறான் என்பதெல்லாம் இந்தக் கடிதம் சிறப்பாக உணர்த்துகின்றது. மூன்றாம் பரிசு: ரஞ்சனி நாராயணன் அம்மாவுக்கு மகன் எழுதிய கடிதம். நெஞ்சைத் தொட்டது. ஆறுதல் பரிசுகள்: கீதா மதிவாணன்: அம்மா, தன் மகனுக்கு எழுதிய அழகான கடிதம் விசாலம் : மகளுக்குத் தாய் எழுதிய மனதைத் தொடும் கடிதம் சரஸ்வதி ராஜேந்திரன்: அம்மா, மகளுக்கு எழுதிய அன்புக் கடிதம் திரு. இரமணன் அவர்கள் வழங்கும் சிறப்புப் பரிசு ரூ. 200 பெறுபவர்கள் நந்திதா : தாய்க்கு எழுதிய அருமையான வரலாற்றுக் கடிதம் வி. பாலகுமார் : ஒரு கணவன் மனைவிக்கு எழுதியிருக்கும் அன்புக் கடிதம் கலையரசி : பெண்ணைப் பெற்றவள் தோழிக்கு எழுதிய கடிதம் ராஜலஷ்மி பரமசிவம் : தோழிக்கு எழுதிய கடிதம் சங்கர் சுப்ரமண்யன் : காதலிக்கு – சமர்ப்பிக்கப்படாத மடல் புதுவை பிரபா : ஹாஸ்டலில் சேர்த்த மகளுக்கு அப்பா எழுதியது எழுதுகோலை எடுக்கும் முன்பே, இதயத்தைத் திறந்துவிடுவோம்! அன்பு காட்டும் வழியில் வந்து விழட்டும் சொற்கள்! அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள். வாய்ப்பளித்த வல்லமைக்கு வணக்கம் கலந்த நன்றி. அன்புடன், ரமணன் இசைக்கவி இரமணன் அன்பு மணிமொழிக்கு அன்பு மணிமொழிக்கு, உன் அக்கா தேமொழியின் அன்புக் கடிதம். ‘அன்பு மணி’ என்றுதான் எழுத நினைத்தேன்…ஆனால் நான் உன்னை ‘மணி’ என்றழைத்தால், “மணி என்று நாய்க்குட்டிக்குத்தான் பெயர் வைப்பார்கள், நான் என்ன நாய்க்குட்டியா? மணிமொழி என்று கூப்பிடு” என்று நீ அதட்டுவதும் நினைவு வந்தது. நமக்குள் ஒரு வயதே வித்தியாசம் (சரியாக எனக்குப் பிறகு 500 நாட்கள் கழித்துப் பிறந்தவள் நீ) என்ற காரணத்தால் நம்மிருவருக்கும் சகோதரிகள் என்பதைவிடத் தோழிகள் என்ற அளவிற்கும் உறவு இருந்தது. எத்தனை எத்தனை இனிய நினைவுகள் நாம் வளர்ந்த காலத்தில்… என்னை நீ “ஏய்…தேமொழி” என்று அழைப்பதைக் கேட்டு நம் பாட்டிக்கு வருமே கோபம் அதையும் நான் மறப்பதற்கில்லை. அந்தக் கோபத்தில் தனது பொக்கை வாயில் இல்லாத பற்களை அவர்கள் கடிக்கும் பொழுது, அதைப் பார்த்து உனக்கு வருமே சிரிப்பு, அதையும் நான் மறப்பதற்கில்லை. அவர்களுக்கு கோபம் வரவழைக்கவே நீ மீண்டும் மீண்டும் “ஏய்.. தேமொழி” “ஏய்.. தேமொழி” என்றழைத்து அவர்களுக்கு எரிச்சலூட்டுவாய். அவர்கள் எதிர்ப்பை நீ பொருட்படுத்தியதே இல்லை. அவர்கள் மட்டுமா நீ அவ்வாறு அழைப்பதை மாற்ற முயன்றார்கள். அப்பாவும்தான் முயன்று பார்த்தார்கள். அதற்காக அப்பாவும் முன்னுதாரணமாக இருக்க விரும்பி என்னை “அக்கா” என்று கொஞ்ச காலம் கூப்பிட்டுப் பார்த்தார்கள். ஆனால் நீயோ அல்லது தம்பியோ அவ்வாறு என்னை “அக்கா” என்று அழைக்காமல் பெயர் சொல்லித்தான் அழைத்தீர்கள். கடைசியில் “அக்கா” என்றழைத்தது அப்பா மட்டுமே என்ற ஒரு நிலை வந்ததும் அப்பாவும் அவர்களது முயற்சியைக் கைவிட்டு விட்டார்கள். முதல்வர் ஜெயலலிதாவை எல்லோரும் ‘அம்மா’ என்றழைப்பது போல, உனது தோழிகள், நம் தம்பியின் நண்பர்கள், கல்லூரியிலும் பள்ளியிலும் பயின்ற காலத்தில் என்னைவிட இளைய மாணவர்கள் பலரும் அந்த நாட்களில் என்னை “அக்கா” என்றுதான் அழைத்தார்கள். பிறகு இப்பொழுது கூகிள் குழுமங்களிலும் என்னைப் பலர் அப்படி ‘அக்கா’ என்றுதான் அழைக்கிறார்கள். இப்பொழுதெல்லாம் நாம் வளர்ந்தபொழுது நிகழ்ந்த பல இளம் பருவ நினைவுகளை அசைபோடுவது எனக்கு வாடிக்கையாகிவிட்டது. அம்மாவுக்கு இருந்த ஆசையில் நமக்கு ஒரே துணியில் சீருடை போன்று அணிவித்த கவுன்கள், பாவாடை சட்டைகளில் உலாவந்தது நினைவிற்கு வருகிறது. என்னதான் ஒரே போன்ற ஆடை உடுத்தினாலும் பம்புளிமாசாக இருந்த…இருக்கும் நானும், காற்றில் பறந்துவிடும் அளவிற்கு எலும்பு மேல் தோல் போர்த்திய அளவிற்கு மெல்லிய உருவமான நீயும் ஒரே போன்று என்றுமே இருந்தில்லை. விவேகானந்தர் பாறைக்கு நாம் சென்ற பொழுது பலமாக வீசிய காற்றில் நீ தள்ளாடுவதைப் பார்த்த அப்பாவின் நண்பர், “மணி, அக்கா கையப் பிடிச்சிக்கோம்மா, காத்தில பறந்திடப் போற” என நம்மிருவரையும் ஒரே சமயத்தில் கலாய்த்ததும் நினைவு வருகிறது. உருவத்தில் மட்டுமல்ல குணத்திலும் நாம் இருவரும் என்றுமே இரு துருவமாகத்தான் இருந்திருக்கிறோம். அம்மா என்னுடைய மனம் கல் என்று என்னைத் திட்டுவார்கள், கண்ணில் சுலபமாக கண்ணீர் வரவே வராது, அப்படியே உனக்கு உன் அப்பாவின் குணம் என்று சொல்வார்கள். ஆனால் நீ அம்மா இறந்து பல ஆண்டுகள் கழிந்த பின்னரும் அவர்களைப் பற்றிப் பேச்சு வந்தால் பொசுகென்று அழுதுவிடுவாய், பொல பொலவென்று கண்ணீர் வரும், அம்மாவைப் போலவே மென்மையான, இளகிய மனம் உனக்கு. எத்தனை எத்தனை சுவையான இனிய இளம் பருவ நினைவுகள் நமக்கு. இருவரும் செவன்த் கிராஸ் முக்கில் இருக்கும் பாய் கடைக்கு ஓடிப் போய் பட்டம் வாங்குவோம். எனக்கு எப்பொழுதும் வயலெட் வண்ண பட்டம்தான் வாங்குவேன். உனக்கு “என்ன பாப்பா உனக்கு ருக்குமிணி கலர் பட்டமா?” என கடைக்கார பாயே கேட்டு சிரித்துக் கொண்டே வெளிர் நீலவண்ணப் பட்டத்தை உனக்குக் கொடுப்பார். அவருக்கும் உன் விருப்பம் நன்கு தெரியும். “ருக்குமணியே பர பர” என்றப் பாட்டு பிரபலமான காலம் அது. “அடுத்தாத்து அம்புஜத்த பார்த்தேளா” என்று நாமிருவரும் சேர்ந்து நடனம் ஆடுவோம். டர்க்கி டவலை முந்தானை போல தோளில் போட்டுக் கொண்டு டீச்சர் விளையாட்டும் விளையாடுவோம். உனக்கு எப்பொழுதும் நீதான் கடைசி வார்த்தை சொல்ல வேண்டும். எந்த விவாதம் என்றாலும் நீ சொல்வதுதான் கடைசி வார்த்தையாகவும் இருக்கும், last word freak என்று ஆங்கிலத்தில் அழைப்பார்களே, அது போல என்று நினைத்துக் கொள்வேன். அது போலவே நீதான் முதலில் வரவேண்டும் என்று செயல்படுவதைப் பலமுறை பார்ததுண்டு. ஒருமுறை, சிறுமியாக நீ பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது எதிர் திசையில் வேலையிலிருந்து அப்பாவும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். உடனே நீதான் முதலில் வீட்டிற்குப் போக வேண்டும் என்று வீட்டை நோக்கி ஓட, அப்பாவும் பதிலுக்கு விளையாட்டாக வீட்டை நோக்கி ஓட ஆரம்பிக்க, தெருவில் போனவர்கள் அந்தப் போட்டியைப் பார்த்து சிரிக்க, அது நல்ல வேடிக்கையாக அன்று இருந்தது. அது மட்டுமா, பள்ளி செல்லும் பொழுது வக்கீல் வீட்டுப் பெண் சித்திராவை வழியில் பார்த்தால் நீ ஓட்டமும் நடையுமாக முந்தப் பார்ப்பாய், அந்தப் பெண்ணும் சளைக்காமல் வேகமெடுக்க, பிறகு பள்ளிக்குச் செல்வது உங்களிருவருக்கும் ஓட்டமும் நடையுமாகத்தான் இருக்கும். ப்ளஸ் டூ படிக்கும் பொழுது, உன் தோழி வாசுகிக்கு ஃபோன் போடுவாய். அந்தப் பக்கம் வாசுகி இந்த இந்தப் பாடம் படித்தேன் என்றால், உடனே போட்டி தொடங்கிவிடும். நீயும் முந்துவதற்காக விழுந்து விழுந்து படிப்பாய். அந்த ஆரோக்கியமான போட்டியினால் நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரிக்கும் சென்றாய். ஒருமுறை அம்மா என்னிடம், இரண்டாவதும் பெண்ணாகப் பிறந்ததே என்று நீ பிறந்த பொழுது கொஞ்சம் வருத்தமாக இருந்ததென்றும், ஆனால் நீ அப்பாவுக்கு அசிஸ்டெண்ட் போல ஸ்டெத்தஸ்கோப் அணிந்து அப்பாவுடன் ஹாஸ்பிட்டல் வார்டில் சுற்றி வருவதைப் பார்த்துப் பிற்காலத்தில் பெருமையாகவும் இருந்தது என்றும் சொல்லியிருக்கிறார்கள். அந்த அளவிற்கு நம்மூவரிலும் அம்மா உயிருடன் இருக்கும்பொழுது அவர்களைப் பெருமைப்பட, மனம் மகிழ வைத்தது நீதான். இவ்வாறு மருத்துவம் படிக்க உனக்கு உதவியது படிப்பில் முந்த வேண்டும் என்ற உனது மனப்பான்மை. ஆனாலும் மணி, எல்லாவற்றிலும் முந்த வேண்டும் என்ற எண்ணம் உனது குணமாகிப் போனதில், இப்படி எங்கள் அனைவருக்கும் முன்னரே உலகை விட்டு மறையவும் முந்துவாய் என நான் நினைத்தும் பார்த்ததில்லை. மனம் ஒப்புக் கொள்ள இயலாத அதிர்ச்சிதான் இது. அயல் நாட்டில் வாழ்பவர்களின் இயலாமைகளில் ஒன்று வீட்டில் நடக்கும் பல நிகழ்வுகளில் பங்கு பெற இயலாமல் போவது. நான் உனது பட்டமளிப்பையும் பார்த்ததில்லை, திருமணத்திற்கும் வந்ததில்லை, உனது மகன் பிறந்தபொழுதும் செய்திதான் கேட்டேன், சென்ற 2013 அக்டோபரில் நீ இறந்த பொழுதும் வரமுடியாது போனது. வல்லமையில்’சிறுகதைப் போட்டி’ முடிந்து அதைத் தொடர்ந்து ‘புத்தக மதிப்புரை’ போட்டி பற்றிய அறிவிப்பு வந்த நேரம் அது. உன் நினைவாக வல்லமை இதழில் நானும் ஒரு கவிதைப் போட்டியை அறிமுகப்படுத்தி அதற்குப் பரிசு வழங்கினால் என்ன என்று எனக்குத் தோன்றியது. புத்தக மதிப்புரை போட்டி முடிவுக்கு வந்த பிறகு (அதில் எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது, ஆனால் அதை உன்னிடம் பகிர்ந்து கொள்ள எனக்கு வாய்ப்பில்லாது போனது ஒரு சோகம்) வல்லமை இதழின் ஆசிரியர் பவள சங்கரியையும், நிறுவனர் அண்ணாகண்ணனையும் அணுகி என் வேண்டுகோளை வைத்தேன். போட்டியை எனது எண்ணப்படி கவிதைப் போட்டியாக வைக்கலாமா? அதற்கு இசைக்கவி இரமணன் நடுவராக இருக்க சம்மதிப்பாரா? போட்டியில் மணிமொழி என்ற தலைப்பு இருக்க வேண்டும் என்று நான் வைக்கும் வேண்டுகோள் கவிதை எழுதுபவர்களில் சிந்தனை சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தாதா? ஏற்கனவே கதை, கட்டுரை போன்ற போட்டிகளை அறிவித்தாகிவிட்ட நிலையில் மீண்டும் அது போன்ற போட்டிகளையே தேர்ந்தெடுக்கத் தேவையா? என்று பலப்பல கேள்விகளை வல்லமையின் நிர்வாகக் குழு அலசி ஆராய்ந்து, அதற்கு பல யோசனைகளும் முன் வைக்கப்பட்டன. அதில் அண்ணாகண்ணன் முன் வைத்த ‘கடித இலக்கியப் போட்டி’ குழுவினருக்குப் பிடித்துப் போய்விட அந்த வழியிலேயே தொடர்ந்து போட்டியும் அறிவிக்கப்பட்டது. ஆனால் சொன்னால் நீ நம்ப மாட்டாய் மணி, அறுபதுக்கும் மேற்பட்ட “அன்புள்ள மணிமொழிக்கு” கடிதங்கள் போட்டிக்காக (http://www.vallamai.com/?p=43736) அனுப்பப்பட்டன. r u ok? LOL, how r u? என்று குறுஞ்செய்திகளில் பழகிப்போன நம் மக்கள் ஆர்வத்துடன் கடிதங்கள் எழுதினார்கள். கடித இலக்கியப் போட்டி என்ற ஒன்றை அறிவித்ததற்காக எனக்குப் பல பாராட்டுகளும் கிடைத்தன. ஆனால் அத்தனைப் பாராட்டிற்கும் உரியவர் நிறுவனர் அண்ணாகண்ணன் அவர்கள்தான். அவர் முன்மொழிந்த ‘கடித இலக்கியப் போட்டி’ என்ற யோசனை ஒரு நல்ல யோசனைதான். நானும் வல்லமை நிர்வாகக் குழுவினர் போட்டியை முன்னின்று நடத்தும் பொழுது இடையில் உண்மை விளம்பியாக, இதற்காகப் பாராட்டப்பட வேண்டியவர் அண்ணாகண்ணன் என்று அறிக்கைகள் விட்டுக் குளறுபடி செய்யக் கூடாது என்று பொறுமை காத்தேன். போட்டியின் முடிவுகள் வெளியாகிவிட்டன. சிறந்த கடிதங்களை நடுவர் இசைக்கவி இரமணன் தேர்ந்தேடுத்தார். நான் நினைத்தது போலவே, அவரும் இத்தனை அருமையான கடிதங்களில் எவ்வாறு சிறந்த கடிதங்கள் என்று மூன்றையும், ஆறுதல் பரிசுகளுக்கு என்று மேலும் ஒரு மூன்றையும் மட்டும் தேர்ந்தெடுக்க முடியும், அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததாக இல்லையே என்று கருதி அவரும் மேலும் ஆறு சிறப்புப் பரிசுகளை வழங்கிவிட்டார். இதற்கும் மேல் போட்டிக்கு வந்த கடிதகளின் சிறப்பைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? ஆனால் நீ எதையும் படிக்கப் போவதில்லை மணி, அதனால் அதற்காக நான் வருந்தப் போவதுமில்லை. பள்ளி நாட்களில் உனக்கு தமிழ் இரண்டாம் தாளில் கற்பனைக் கட்டுரையாக ‘இரயில் தனது வரலாறு கூறுதல்” பற்றி எழுதச் சொன்னாலே உனக்கு கற்பனை வராமல் அழுகைதான் வரும் என்பது எனக்குத் தெரியும். இது போன்ற இலக்கியப் போட்டிகளில் என்றும் உனக்கு ஆர்வம் இருந்ததில்லை. கதை படிக்கும் பொழுது, பெரிய பெரிய பத்திகளாக இருந்தால், அவற்றைத் தவிர்த்துவிட்டு, தாவித் தாவி மேலே படிப்பாய். பின்னர் முடிவைப் படித்த பிறகு கதை உனக்குப் புரியாமல் போகும். நானும் தம்பியும்தான் உனக்குக் கதையினைச் சொல்லி விளங்க வைக்க வேண்டி வரும், எனக்கு அது மறக்குமா? நீண்ட கட்டுரைகள், கடிதங்கள் உனக்குப் பிடிக்காது என்று தெரிந்தும் நான் எழுதும் மிக நீண்ட கடிதம் இது. நீதானே சொல்லுவாய், “சும்மா நீள நீளமாகப் பேசிக்கொண்டே இருக்காதே, நீ சொல்ல வேண்டியதை எல்லாம் எழுதி ஒரு புத்தகமாகப் போடு, எனக்கு நேரம் கிடைக்கும் பொழுது படிக்கிறேன்,” என்று அதுவே என் நினைவில் இப்பொழுதும் இருக்கிறது. அதனால் நான் நினைப்பதை நீண்ட கடிதமாகவும் எழுதிவிட்டேன், நான் ஒரு சிறுகதைப் புத்தகமும் எழுதி வெளிவந்துவிட்டது, ஆனால் உனக்குத்தான் இப்பொழுது இவற்றையெல்லாம் படிக்க நேரமில்லாது போய்விட்டதே என்ற ஆற்றாமையும் வருகிறது. என்றும் என் நினைவில் நீங்காதிருப்பாய் என் அன்பு மணிமொழி. உன் அன்பு அக்கா, தேமொழி நன்றியுரை “அன்புள்ள மணிமொழிக்கு …” என்ற கடித இலக்கியப்படைப்புகள் நூல் வடிவம் பெற பலரின் உதவி இன்றியமையாததாக இருந்திருக்கிறது. இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி அவர்களுக்கு நன்றி கூறுதல் என் கடமையாகும். முதற்கண் பிப்ரவரி 21, 2014 முதல் மார்ச் 31, 2014 வரை நடைபெற்ற போட்டியில் கடிதங்கள் வரைந்து போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்ற எழுத்தாளர்கள் 44 பேருக்கும் என் நன்றிகள் உரித்தாகின்றன. பத்திற்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கடிதங்களை ஆர்வத்துடன் எழுதிப் போட்டியில் பங்கேற்றனர். ஒரு சிலர் நான்கு கடிதங்கள் வரை வரைந்தனர். இது போன்ற ஆர்வம் அறுபதுக்கும் மேற்பட்ட கடிதங்களை போட்டியில் அறிமுகப்படுத்தியது. கடித இலக்கியப் போட்டியை ஆதரித்து, முன்னேற்று நடத்திய வல்லமை இதழ் நிர்வாகிகளுக்கும், ஆசிரியர் குழுவினருக்கும், குறிப்பாக நிறுவனர் முனைவர் அண்ணாகண்ணன் அவர்களுக்கும், ஆசிரியர் திருமதி பவளசங்கரி அவர்களுக்கும் எனது அன்பு நிறைந்த நன்றிகள். எழுத்தாளர்களின் கடிதங்களை படித்து, அவர்களுக்கு கருத்துரைகள் வழங்கி உற்சாகப்படுத்திய வல்லமை இதழ் வாசகர்களின் பங்களிப்பும் போற்றத்தக்கதே. இலக்கியப் போட்டிக்கு நடுவராகப் பொறுப்பேற்று சிறந்த கடிதங்களைத் தேர்ந்தெடுத்து வழங்கியதுடன், மேலும் தன் சார்பாக ஆறு சிறப்புப் பரிசுகளை வழங்கி எழுத்தாளர்களை ஊக்குவித்த இசைக்கவி இரமணன் அவர்களுக்கும் என் நன்றிகள் உரித்தாகிறது. எனது வேண்டுகோளை ஏற்று, போட்டியில் பரிசுபெற்ற தங்கள் கடிதங்களை இந்நூலில் பதிப்பிக்க அனுமதியளித்த கடிதங்களின் ஆசிரியர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவிக்க இவ்வேளையில் கடமைப்பட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நூலின் தொகுப்புசார் உதவியில் பங்கேற்ற ‘வேந்தன் அரசு’ என்று அன்புடன் அழைக்கப்படும், இயூஜினில் வசிக்கும் எனது நண்பர் திரு. ராஜு ராஜேந்திரன் அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொகுப்பாசிரியர் தேமொழி சமர்ப்பணம் இனி என்றும் அன்பு இதயங்களின் நினைவுகளில் மட்டுமே வாழும் என் தங்கை மணிமொழிக்கு [] டாக்டர். மணிமொழி தோற்றம் : 4.11.1963 மறைவு : 7.10.2013 1. முதற்பரிசு: கவா கம்ஸ் அன்புள்ள மணிமொழிக்கு, வணக்கம். நீ யார் என்று எனக்குத் தெரியும். நான் யார் என்று உனக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால், இந்த கடிதம் உனது வாழ்க்கையையே புரட்டிப் போடும் என்பது மட்டும் சர்வ நிச்சயம். நான் கூறும் இக்கதையை கேள். அதன்பிறகு, நான் யார் என்பதை நீயே அறிந்து கொள்வாய். அவள், சென்னையின் அந்த நேர்த்தியான சாலையில் திக்குத் தெரியாமல் நடந்து கொண்டிருந்தாள். யாரையோ தேடுவதுபோல் தோன்றியது. அவளது விழிகளோ, பல நாட்கள் சூரியனைக் காணாத மலர்களை போல் வாடியிருந்தது. உதடுகள் பாலைவன நிலமாய் வறண்டு வெடித்திருந்தது. உடம்பில் விலையுயர்ந்தது என்று பார்த்தால் ஒரே ஒரு தங்க சங்கிலி மட்டுமே. காதில் பிளாஸ்டிக் தோடும் கைகளிலே மரவளையல்களும் அணிந்திருந்தாள். கால்களில் கொலுசு இருந்ததா இல்லையா என்பதை அவளது புடவை ரகசியமாய் வைத்திருந்தது. அந்த சாலையில் கார்களும் வேன்களும் தமக்கே உரிய வேகத்துடன் பறந்து கொண்டிருந்தன. ஓரமாய் சென்று கொண்டிருந்த அவள், தடுமாறியவளாய் சாலையின் உள்ளே நுழைந்து குடிகாரனை போலத் தள்ளாடித் தள்ளாடி நடந்தாள். பலநாள் பட்டினி போலும். அப்போது, அந்த வழியே வேகமாக வந்த டாக்ஸி அவள் மேல் மோதியது. மயங்கி சரிந்தாள் அவள். “அம்மா ! அம்மா ! எழுந்திரு ! ரொம்ப அடி பட்டிடுச்சா ?,” என்று பதறினான் டாக்ஸி டிரைவர். பதில் ஏதும் கிடைக்காததால், அவளைத் தூக்கி டாக்ஸியில் போட்டுக் கொண்டு, கூட்டம் கூடும்முன் அங்கிருந்து கிளம்பி சென்று தப்பித்தான். அவளை ஒரு அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றான். “ உங்க பேர் என்ன ? ”, டாக்டர். “ ஹரி “, என்றான் டாக்ஸி டிரைவர். “ இந்த பெண் உனது மனைவியா ? என்ன கேட்டாலும் பதிலே சொல்ல மாட்டேங்குது “, டாக்டர் உண்மையை சொன்னால் போலீஸ் கேஸ் ஆகி உதைபடுவது உறுதி. ஒரு முடிவுடன் , “ ம் …. ம் … ஆமாங்க ! “, என்றான் ஒரு பயத்துடன். “ பேரு ? “, டாக்டர். “ ம் .. ம் .. ! .. ஹரிணி “, என்று கூறிவிட்டு அந்த பெண்ணை ஏறிட்டான். அந்த பெண் அமைதியாய் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. “ ரொம்ப பெரிசா ஒண்ணுமில்லை .. கை கால்ல லேசா சிராய்ப்பு … அவ்வளவுதான். நாலு நாளா சாப்பிடலை போல… புருஷன் பொண்டாட்டி சண்டைன்னா பட்டினி போடுவையா ? போலிச கூப்பிடணுமா என்ன ? “, என்று அதட்டினார் டாக்டர். “ இல்லீங்க … இனிமேல் ஒழுங்கா பார்த்துப்பேன் .. “, என்றான் ஹரி. தன் வீட்டிற்கே அவளைக் கூட்டிச் சென்றான். சின்னதாய் ஒரு ஒட்டு வீடுதான் என்றாலும் அங்கிருந்தவர்களின் மனது மிகப்பெரியதாக இருந்தது. தனது அம்மா, அப்பா, தங்கையிடம் விவரமாக நடந்தவற்றை கூறினான். ஹரியின் தங்கை , “ ஹையா ! எனக்கு கதைபேச ஒரு ஆன்டி கிடைச்சாச்சு “, என்று குதூகலித்தாள். “ அம்மா ! அப்புறமா அவ யாரு என்னன்னு விசாரிங்க. நான் எது கேட்டாலும் பதில் சொல்ல மாடேங்கறா. பேந்தப் பேந்த முழிக்கறா. முதல்ல அவளுக்கு சாப்பாடு கொடு. கொஞ்ச நேரம் தூங்கட்டும். அப்புறம் கேட்டுக்கலாம் “, என்று அம்மாவிடம் ஹரி கூறினான். நன்கு தூங்கி எழுந்த பின்னும் அவள் திரு திருவென்றே விழித்துக்கொண்டிருந்தாள். நீ யாரம்மா ? எங்கிருந்து வந்திருக்க ? கைல துணிமணி, பணம் எதுவுமே இல்லாம எப்படி வந்த ? உங்க வீடு எங்க ? கொண்டுபோய் விட்டுடறோம் சொல்றியா ? “, என்றெல்லாம் கேட்டாள் ஹரியின் அம்மா. ஒரு மாணவனுக்கு, தேர்வில் அத்தனை கேள்விகளும் “அவுட் ஆப் சிலபஸ்” ஆக இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அவளுக்கு. அதிர்ச்சியாகி மயங்கி சரிந்தாள். அதன்பிறகு அவர்கள் அவளை விசாரிப்பதையே நிறுத்திவிட்டனர். அவள் குடும்பத்தில் வாழ பிடிக்காமல் ஓடி வந்திருக்கலாம் என்று யூகித்தனர். செய்தித்தாளில் தகவல் கொடுக்கலாம் என்று யோசித்து, பின் அவளுக்கு பிரச்சனையை கொடுக்கலாம் என்பதால் அதையும் கைவிட்டனர். நாட்கள் மாதங்களாயின. மாதங்கள் வருடங்கள் ஆகின. நான்கு வருடங்கள் ஓடிவிட்டது. அவள் அந்தக் குடும்பத்தினர் மனதில் ‘ஈஸி சேர்’ போட்டு நன்கு அமர்ந்துவிட்டாள். அவளுக்கும் அந்த குடும்பமே உலகமாய் ஆனது. தனது கடந்த காலத்தைப்பற்றி யோசிப்பதையே விட்டுவிட்டாள். கூடவே ஹரிக்கும் அவளுக்கும் சிநேகம் காதலாய் மாறியது. ஆனால், அதை மனதளவில் உணர்ந்திருந்த இருவருமே வாய்விட்டுக் கூறிக்கொள்ளவே இல்லை. கணவன், குழந்தையென்று யாராவது வந்து விடுவார்களோ என்ற அச்சம் ஹரிக்கு. “ நான் யார் ? “, என்ற கேள்விக்கே விடைதெரியாத போது காதல் தனக்கு ரொம்ப அவசியமா ? என்ற பதைபதைப்பு அவளுக்கு. அந்த நாள் ! அனைவரும் பயந்து கொண்டிருந்த அந்த நாள் வந்தேவிட்டது. ஆம், அவர்கள் கோவிலில் குதூகலித்துக் கொண்டிருந்தபோது, ஒரு வயதான பெரியவர் அவளை அடையாளம் கண்டுகொண்டார். “ அம்மா ! மணிமொழி ! இத்தனை நாளா எங்கே போய்ட்ட … எங்க செல்வமே ! உங்கப்பா அம்மா உன்ன தேடாத இடமில்லை… என்னைத் தெரியலையா ? நான்தான் உன் பெரியப்பா மா ! “, என்று கூறி அழுதார். அவர்களது சொந்த ஊர் மதுரை. அந்த ஊரிலேயே மிகப்பெரிய பணக்காரரின் மகள், மணிமொழி. காலேஜ் டூர் வந்த இடத்தில் அவள் விபத்துக்குள்ளானாள். அப்போது ஏற்பட்ட பாதிப்பில் அவளுக்கு பழைய நினைவுகள் அழிந்து போயின. அவளை பத்திரமாக பெற்றோரிடம் சேர்க்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் முடிவெடுத்த சமயத்தில் அவள் காணாமல் போய்விட்டாள். கல்லூரி பேரைக் காப்பாற்ற நிர்வாகமும், குடும்ப கவுரவத்தை காப்பாற்ற பெற்றோரும் போலிசுக்கு போகாமல் தாங்களே சென்னையில் தங்கி இரண்டு வருடங்கள் தேடினர். பின்பு, நம்பிக்கையிழந்து திரும்பிவிட்டனர். இந்த விஷயங்களை அந்த பெரியவர் மூலமாக அனைவரும் அறிந்து கொண்டனர். அவளுக்கு இது அனைத்தும் வேறு யாரோ ஒருவருடைய கதைபோல் இருந்தது. பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, ஒரு மிகப்பெரிய மருத்துவமனையில் அவளுக்கு சிகிச்சை தரப்பட்டது. ஒரு சிறிய ஆபரேஷன் செய்தால், பழைய நினைவுகள் அனைத்தும் வந்துவிடும் என்று டாக்டர்கள் கூறிவிட்டனர். ஆனால், இந்த நான்கு வருடத்து நினைவுகள் அழிந்து போய்விடும் என்ற செய்தி ஹரிக்கும் அவளுக்கும் இடியாய் இறங்கியது. அவளின் பொக்கிஷ நினைவுகளை அழிக்கும் புண்ணிய நாளும் முடிவாகிவிட்டது. “ ஹரி “ “ ஹரி “ என்று சதா ஜெபம் செய்துகொண்டிருந்தாள். இன்னும் பத்து நாட்களில் தன் ஹரியை தனக்கே அடையாளம் தெரியாது என்று எண்ணும்போதே அவள் கண்கள் சூடேறின. கண்ணீர் சுட்டது. அதற்காகத்தான், அதற்காகத்தான் இந்தக் கடிதம் ! அவள் ஹரியை எவ்வளவு நேசிக்கிறாள் என்பதை உணர்த்துவதற்காகவே இந்த கடிதம். ஆம். அந்த “ அவள் “ நீதான். ஹரியை விட்டுவிடாதே ! ஹரியை விட்டுவிடாதே ! உன் மானம் காத்தவன் ! உனக்கென ஒரு குடும்பத்தைக் கொடுத்தவன் ! நிராயுதபாணியாக நின்ற உனக்கு வாழ்வளித்தவன் !! அவன் இல்லையேல், எங்கோ யாரோ ஒரு காமவெறியன் கையில் சிக்கி சின்னாபின்னப்பட்டு இறந்திருப்பாய் ! ஹரி ஏழைதான். ஆனால், உத்தமன். ஹரியை மறந்துவிடாதே ! ஹரியை ஏமாற்றிவிடாதே !! என்று உனக்குக் கூறவே இக்கடிதம். நான் யார் என்று இப்போது அறிந்திருப்பாய். ஆம் ! அந்த நீ நான்தான். நான் எனக்காகவே எழுதிக்கொள்ளும் கடிதம். இன்னும் பத்து நாட்களில் நான் நானாக இருக்க மாட்டேன் அல்லவா ? அதற்காகத்தான் இந்த கடிதம். இந்த நான்காண்டுகளில் எனக்கு என்ன ஆயிற்று என்று நானே என் கைப்பட எனக்கு எழுதிய கடிதம். இதை நான் என் பெற்றோரிடம் கொடுக்கமாட்டேன். அவர்கள் கிழித்து எறிந்து விடுவார்கள். ஹரி பெற்றோரிடமும் கொடுக்க மாட்டேன். எனக்கு நல்லது செய்வதாக எண்ணி மறைத்துவிடுவார்கள். என் மனதை நன்கு உணர்ந்த எனது தோழி, ஹரியின் தங்கையிடம் கொடுத்துவிட்டுச் செல்கிறேன். ஆபரேஷன் முடிந்தவுடன் இந்த கடிதம் என் கைகளில் கிடைக்கும். பின்பு, இதே மலர்ச்சியுடன் எனது காதலுக்காகப் பெற்றோரிடம் போராடுவேன். நிச்சயமாக ! ஹரியிடம் எனது காதலை சொல்வேன், மணிமொழியாக ! - அதுவரையில் காத்திருப்பேன் ஹரியின் ஹரிணியாக !!! முதற்பரிசு கடிதம் - கவாகம்ஸ்: கடிதத்தின் இறுதியில்தான் அது ஒருவர் தனக்கே எழுதிக்கொண்ட கடிதம் என்பது விளங்குகிறது. ஓர் அறிவியல் புனைவும், ஆழமான காதலும் கலந்து மிகவும் விறுவிறுப்பாகவும் மிளிர்கின்றது இந்தக் கடிதம். கொஞ்சம் கூட சுருதி விலகாத பாடல் போன்று இருக்கின்றது. – ரமணன் 2. இரண்டாம் பரிசு: மாதவன் இளங்கோ கலாரசிகை மணிமொழிக்கு, வணக்கம். தங்கள் கடிதம் கிடைக்கப்பெற்றேன். உண்மையிலேயே பேருவகை அளித்த மடல். உங்கள் கடிதத்தைப் படித்து முடித்தவுடன், சுஜாதா அவர்கள் ஒரு சிறுகதையில் லாட்டரியில் பரிசு கிடைப்பதற்கான சாத்தியம் பற்றி எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது - “ஒரு குரங்கு டைப் அடிக்கிற இயந்திரத்துக்கு முன்னால் உட்கார்ந்துவிட்டு, தக்கா புக்கான்னு அடிச்சு, அடிச்ச விஷயம் அகஸ்மாத்தா கம்பராமாயணத்தில் ஒரு பாட்டா அமையதறதுக்கு எவ்வளவு சான்ஸ் இருக்கோ, அவ்வளவு சான்ஸ் தான் இந்த லாட்டரியில..” என்று எழுதியிருப்பார். என்னைப் பொறுத்தவரையில், என் போன்ற ஓவியர்களுக்கு இதுபோன்ற கடிதங்கள் வருவதென்பதும், லாட்டரியில் பரிசு விழுவதென்பதும் ஒன்று தான்! என்னை ‘தக்கா புக்காவென தட்டச்சும் குரங்கு’ என்று கூறவில்லை. உங்களைப் போன்ற கலாரசி(கர்)கைகள் எல்லாம் பேரதிசயம் என்றே கூற வருகிறேன்! எவ்வளவு அழகாக என் ஓவியங்களை உள்வாங்கியிருக்கிறீர்கள்? உங்கள் கடிதத்தைத் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டே இருக்கிறேன். உண்மையில் இந்தக் கடிதமே ஒரு அழகிய ஓவியம்! என் படைப்புகளைப் பற்றி நீங்கள் பாராட்டி எழுதியதற்காகச் சொல்லவில்லை. உண்மையில், நீங்கள் தான் அந்த ஓவியங்களை வரைந்து முடித்துள்ளீர்கள். உங்கள் கேள்விக்கு வருவோம். “அது என்ன ‘து..தூ.. (TuToo)’ என்று ஒரு புனைபெயர்? குறில் நெடிலென கவித்துவமாயும் இருக்கிறது; ஒன்றும் புரியாததாயும் இருக்கிறது?” கவிதைக்கான அனைத்து லட்சணங்களும் என் புனைபெயரிலேயே வந்து விட்டன என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள். :-) கவிஞனுக்கும், ஓவியனுக்கும் அடிப்படையில் வேறுபாடு எதுவும் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. கவிஞன் ஒரு ஓவியத்தை மனக்கண்ணால் தரிசித்துவிட்டு கவிபடைக்கிறான். ஓவியன், கவிதையைக் மனதிலேயே எழுதிமுடித்துவிட்டுப் பின் ஓவியம் வரைகிறான். ஒரு கவிஞனுக்குள் நிச்சயம் ஒரு ஓவியனும், ஒரு ஓவியனுக்குள் நிச்சயம் ஒரு கவிஞனும் இருந்தே ஆகவேண்டும் என்பது என் அபிப்பிராயம். சரி, என் புனைபெயருக்கு வருவோம். இதற்கான பதிலை நிச்சயம் ஒரு வரியில் என்னால் கூற முடியாது. அது ஒரு பெரிய கதை! சிறிது நேரம் இந்த ஓவியனுக்குள் இருக்கும் கதாசிரியனையும் பொறுத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன், மணிமொழி. அன்றைய தினத்து நினைவுகளின் வண்ணங்கள் இன்னும் என் மனதில் திட்டுத் திட்டாக ஒட்டிக் கொண்டு இருக்கின்றன. அன்றைக்கு அலுவலகத்தில் “அட போங்க! என்ன வாழ்க்கையோ?” என்று ஒரு நான்கு நண்பர்களிடமாவது சொல்லிப் புலம்பி இருப்பேன். காலை வீட்டிலிருந்து கிளம்பும் போது, வீட்டாருடன் பெரிய வாக்குவாதம். என் அண்ணன், அண்ணி, தாய்மாமா, பற்றாக்குறைக்கு என் மாமனார் வேறு. என்னைக் கிட்டத்தட்ட ஒரு விசாரணைக் கைதியைப்போல் நிறுத்திக் கேள்விகளைக் கேட்டுவிட்டு, பின்னர் அறிவுரை வழங்கி அனுப்பிவைத்தனர். அதற்கு முந்தைய வாரம் மும்பையில் நடந்த சர்வதேச ஓவியக் கண்காட்சியில் பங்கேற்க வந்திருந்த என் ஆதர்ச ஓவியர் ராம் எங்கள் வீட்டில்தான் தங்கினார். நான் அலுவலகத்துக்கு ஒரு வாரம் விடுப்பு எடுத்து விட்டு கண்காட்சியில் அவரோடு இருந்தேன். அதுவே என் வீட்டாருக்கு அப்போது இமாலயப் பிரச்சினை. “இயந்திரவியல் முடித்துவிட்டு பஜாஜ் நிறுவனத்தில் வாகன வடிவமைப்பாளராகப் பணியாற்றும் எனக்கெதற்கு இந்த ஓவியக் குப்பைகள் எல்லாம்?” என்பது அவர்கள் வாதம். மும்பை காண்டிவிலியில் நாங்கள் வசித்துவந்த வீடு என் தந்தை கட்டியது. மிகப் பெரிய இரண்டடுக்கு வீடு. கீழ் வீட்டில் என் அண்ணனும், மேலே நானும் குடியிருந்தோம். அவருடைய குழந்தைகள் எப்போதும் என் வீட்டில்தான் விளையாடிக்கொண்டிருப்பார்கள். நான் சிறுசிறு வீட்டுப் பராமரிப்பு வேலைகளைக்கூட செய்வதில்லை என்பது என் அண்ணனின் குற்றச்சாட்டு. மளிகைக் கடைக்குச் செல்வது, காய்கறிகள் வாங்கி வருவது போன்ற வேலைகளைச் செய்வதில்லை என்பது என் மனைவியின் குற்றச்சாட்டு. தங்கள் வீட்டில் நடக்கும் முக்கியமான குடும்ப நிகழ்ச்சிகளில்கூட நான் பங்கேற்பதில்லை என்பது சென்னையிலிருந்து வந்திருக்கும் என் மாமனாரின் குற்றச்சாட்டு. என் அண்ணனின் குழந்தைகளை படிப்பில் கவனம் செலுத்தவிடாமல், ஓவியம் வரையச் சொல்லி கட்டாயப்படுத்துகிறேன் என்று என் அண்ணன் மூலமாக பழி சுமத்திய என் அண்ணி. இவையனைத்திற்கும் மூலகாரணமே ஓவியக்கலையில் எனக்கு இருந்த நாட்டம் தான். என் ஓவியப்படைப்புக்களைப் பார்த்தாலே அவர்களுக்கு ஏனோ கோபம் பொத்துக்கொண்டு வந்தது. நிலைமை இப்படி இருக்க, ஒரு ஓவியர் வந்து வீட்டில் ஒரு வாரம் தங்கினால் சும்மா இருப்பார்களா? யோசித்துப் பாருங்கள். அதிலும் அவருக்காக நான் விடுப்பு வேறு எடுத்துக்கொண்ட விஷயம் என் மாமனாரை ரொம்பவுமே பாதித்துவிட்டதுபோல் தெரிந்தது. “வீட்டக் கொஞ்சம் பாருங்க மாப்ள. ஏதோ பெயிண்டிங் முடிக்கணும்னு சொல்லி, என் மொத பொண்ணு சீமந்தத்துக்குக் கூட வரமாட்டேன்னு சொல்லிட்டீங்க. இன்னைக்கி எவனோ ஒருத்தனுக்காக அலைஞ்சிட்டு இருக்கீங்க! இது என்ன நியாயம்?” என்றார் என் மாமனார். “பெரியவங்க கஷ்டம் இவங்களுக்கு புரியாது ராமநாதன். சிவா, எவ்வளோப்பா செலவு பண்ண அந்த பெயிண்ட் அடிக்கற தாடிக்காரப் பயலுக்கு?” – இது என் தாய்மாமா கிருஷ்ணமூர்த்தி. “பெயிண்ட் அடிக்கிறவரா? கலைத்தாய் இவர் மேல கொஞ்சம் கருணை காட்டியிருக்கலாம்” என்று நினைத்துக்கொண்டு அமைதியாக நின்றேன். என்னைச்சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் எனக்கு எதிராகப் பேசிக்கொண்டிருக்கும் தருணங்களில் அமைதியைக் கடைப்பிடிப்பது என் வழக்கம். ஏனென்றால் அந்த சமயங்களில் நாம் பேசுவதால் எந்த உபயோகமும் இல்லை. அது பிரச்சினையை இன்னும் அதிகப்படுத்தவே செய்யும். மேலும், நாம் செய்து கொண்டிருப்பது என்னவென்றே தெரியாமல் நம்மை விமர்சனம் செய்துகொண்டிருப்பவர்களிடம் பிரதிவாதம் செய்வது என்பது, குருடனுக்குப் பச்சை நிறம் எப்படி இருக்கும் என்று விளக்குவது போன்றது. “”உங்கப்பா கஷ்டப்பட்டு சேத்ததெல்லாம் அழிச்சிடாதப்பா. அவ்ளோதான் சொல்லமுடியும். நல்ல வேலைல வேற இருக்க. அதுல ஒழுங்கா ஷைனாகற வழிய பாரு சிவா.” ஏதோ வேலைக்குப் போகாமல் குடித்துவிட்டு தெருவில் விழுந்து கிடப்பவனிடம் பேசுவது போன்று தொடர்ந்து விடாமல் அறிவுரைகளை பொழிந்துகொண்டிருந்தார் என் மாமா. ராமை அந்தேரிக்கு அழைத்துச் சென்றதிலும், அவருடன் உணவு அருந்தியதிலும் என் சொத்தே அழிந்துவிட்டது போன்ற பிரமையை உருவாக்கிய அவர் பேச்சு எனக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. இருந்தாலும் என் வாதங்களை முன்வைக்க நான் விரும்பவில்லை – மேலே கூறிய அதே காரணங்களுக்காக. இவர்களாவது பரவாயில்லை. என்னைக் காதலித்து மணந்துகொண்ட என் மனைவிக்கு என்ன ஆயிற்று? அவளால் கூட என்னைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. திருமணத்திற்கு முன்பே, என் கனவுகளைப் பற்றி எவ்வளவு விஷயங்களை அவளிடம் பகிர்ந்து கொண்டேன். அத்தனைக்கும் துணையாய் இருப்பேன் என்று கூறிய அவள் இன்று, “அவர் வேணும்னா அவர் உண்டு அவர் பெயிண்டிங் உண்டுன்னு ஜாலியா இருக்கட்டும். நான் சென்னைக்கு போயி வேலை பார்க்கப்போறேன்” என்று நாக்கூசாமல் சொன்னாள். அதற்குக் காரணம் அவளுடைய பொசசிவ்னெஸ் என்றே நினைக்கிறேன். என்னுடைய ஓவியக்கலையைக் கிட்டத்தட்ட அவள் சக்களத்தியாகவே பார்க்கிறாள். அதிலும் ஏதாவது ஒரு பெண்ணின் படம் வரைந்தால் போதும் – முடிந்தது கதை! எல்லாவற்றுக்கும் மேலாக, அவளுடைய அக்காவின் சீமந்தத்திற்கு நான் போகாதது, நான் இழைத்த தவறுகளிலேயே ‘உலக மகா தவறு!’. அன்றுதான் முதன்முதலாக என் பெற்றோர்கள் இல்லாத வெற்றிடத்தை முழுவதுமாக உணர்ந்தேன். சிறுவயதில் இருந்தே எனக்கு ஓவியம் என்றால் அவ்வளவு நாட்டம். நான் ஆறுவயதில் மூன்று கோடுகளைப் போட்டதற்கே கைதட்டி ரசித்து, என்னை ஊக்கப்படுத்துவதற்காகவே, வண்ண வண்ண பென்சில்களையும், ஸ்கெட்சுகளையும், தூரிகைகளையும், வெள்ளைத் தாள்களையும் வாங்கி வந்து குவித்தவர்கள் அவர்கள். அத்தனை அவிவேகிகளும் சேர்ந்து என்னைக் கேள்வி கேட்பதைப் பார்த்துக்கொண்டு அவர்கள் சும்மா இருந்திருப்பார்களா? இல்லை, அவர்களுக்கெல்லாம் என் தந்தை முன்பு பேசத்தான் துணிவு இருந்திருக்குமா? ஓவியர் ராம் போன்றவர்கள் வீட்டிற்கு வருவது எவ்வளவு பெரிய பாக்கியம். இதுபோன்ற வாய்ப்புக்கள் என்னைப்போன்ற வளரும் கலைஞர்கள் அனைவருக்கும் கிடைக்குமா? என் ஓவியங்களை எல்லாம் பார்த்து எவ்வளவு ரசித்தார், பாராட்டினார். அந்த மகா கலைஞன் இந்த அற்பனின் ஓவியம் ஒன்றை ‘மாஸ்டர் பீஸ்’ என்று கூறியதோடு மட்டுமில்லாமல், அந்த சர்வதேசக் கண்காட்சியில் என் ஓவியங்கள் சிலவற்றையும் வைத்து அழகு பார்த்தாரே! அந்தப் பெருந்தன்மையைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரிந்திருக்கும்? எத்தனை பெரிய கலைஞர்களை அங்கே எனக்கு அறிமுகப்படுத்தினார்! அதற்கு முன்புவரை எத்தனை பத்திரிக்கைகளுக்கு எனது ஓவியங்களை அனுப்பி இருப்பேன்? அவற்றிற்கெல்லாம் பதில் கடிதம் கூடக் கிடைத்ததில்லை. ஆனால், ராம் என்னுடைய ஓவியங்களை அவரே அவருக்குத் தெரிந்த பத்திரிக்கை நண்பர்களுக்கு அனுப்பினாரே! அவரோடு நானிருந்தது எனக்கல்லவா பயன்பட்டது. அவர் நினைத்திருந்தால் ஒரு விடுதியில் தங்கியிருக்கலாம். ஆனால், ஒரு ரசிகன் மீதிருந்த அதீத அன்பினாலல்லவா அவர் என்னோடு வந்து தங்கினார். ஒரு கலைஞனுக்குத் தான் எத்தனை பிரச்சினைகள் பாருங்கள் மணிமொழி – வீட்டிலும், சமுதாயத்திலும்? சமுதாயத்தில் தொடர்ந்து அவன் படைப்பின் மேலெழும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்க வேண்டி இருக்கிறது. அதுவாவது பரவாயில்லை என்பேன். வீட்டில், முதலில் ஒரு படைப்பை உருவாக்குவதற்கே போராட வேண்டியிருக்கிறது. இப்படி ஏதேதோ எண்ணவோட்டங்களில் அன்றைக்கு தொலைந்து போயிருந்த என்னை உலுக்கியது என் உடன் பணிபுரிந்த நண்பர் சேகரின் கணீரென்ற குரல். “என்னங்க ஷிவா, ப்ரூட் ஜூஸ் குடிக்கபோறேனு சொல்லிட்டு வந்து கேன்டீன்ல இவ்ளோ நேரம் உக்காந்து என்ன கனவு கண்டுட்டு இருக்கீங்க?” என்று கேட்டுக்கொண்டே என் முன்னால் வந்து அமர்ந்தார். “அதான் காலைலயே சொன்னேனேங்க.” “அட விடுங்க ஷிவா. இதெல்லாம் ஒரு பிரச்சினையா? உங்களுக்கு ஒரு நல்ல ஐடியா கொடுக்கட்டுமா? நீங்க மொதல்ல எங்கூட MBA பார்ட் டைம் கோர்ஸ் ஜாய்ன் பண்ணுங்க.” “என்ன ஷேகர் சொல்றீங்க? இதுக்கு எங்க வீட்ல இருக்கறவங்களே பரவாயில்லை போல இருக்கே?” “நோ.. நோ. நான் இன்னும் முடிக்கல. MBA கிளாஸ் போறேன்னு சொல்லிட்டு ஈவினிங்லயும், வீக்கெண்டுலயும் ஒரு சின்ன ரூம் ரென்ட்டுக்கு எடுத்து அங்க பெயிண்ட் பண்ணுங்க.” “இது ரியலிஸ்டிக்காவே படலையே ஷேகர். வேற ஏதாவது ஐடியா கொடுங்க.” “ஷிவா, அவனவன் எதுக்கெல்லாமோ சின்ன வீடு வெச்சிருக்கான். நீங்க உங்க ட்ரீம்ஸ்காக ஒரு ஸ்மால் ரூம் ரெண்ட் எடுக்கறது தப்பா? இன்னைக்கி எத்தனையோ ஆர்டிஸ்ட் புனைபெயர்ல வரையறாங்க, எழுதறாங்க. நீங்க பாட்டுக்கு சைலன்டா உங்க வேலைய பாருங்க ஷிவா” சிந்தனையில் ஆழ்ந்த என்னிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார் ஷேகர், “நம்ம மக்கள் எப்பவுமே ஜெயிச்சவன் கொடுக்கற பேட்டிய ஆ..னு வாயத் தொறந்து டிவி-ல பாத்து கைதட்டுவாங்க. நம்ம வீட்லயே ஜெயிக்கறதுக்குப் பாடுபடறவன கண்டுக்க மாட்டாங்க. ஆனா கிண்டல் மட்டும் நல்லா பண்ணுவாங்க.” “அப்போ ஏன் ராம் மாதிரி ஆளுங்கள கண்டுக்க மாட்டேங்கறாங்க.” “தட்ஸ் பிகாஸ் தே டோன்ட் நோ அபோவ்ட் திஸ் ஆர்ட். இதுல வேற நீங்க மாடர்ன் ஆர்ட் ஆசாமி. அவங்களுக்கு என்ன புரியும்? எதையோ கிறுக்கி டைம் வேஸ்ட் பண்றான்னு நெனெக்கிறாங்க. இதுவே நீங்க ஒரு கீபோர்டிஸ்டா இருந்து A.R.ரஹ்மான் உங்க வீட்டுக்கு வந்தா இப்படி பிகேவ் பண்ணுவாங்களா யோசிச்சு பாருங்க? அவ்வளோ ஏன்? இந்த ராம் மட்டும் ஒரு டிவி சீரியல்ல நடிசிருந்தார்னா இப்போ நெலமையே வேற மாதிரி இருந்திருக்கும்.” என்று சேகர் பேசிய விஷயங்கள் எனக்கு நியாயமாகப்பட்டது. அதிலும் புனைபெயரில் வரைவது என்பது சிறந்த யோசனையாகப்பட்டது. மாலை வீட்டிற்குச் செல்லும் வழியில் பல புனைபெயர்கள் தோன்றின. எதுவுமே எனக்குப் பிடிக்கவில்லை. இப்படிச் சிந்தனையில் ஊறியபடியே வீட்டிற்குள் நுழைந்த போது, எங்கள் வீட்டு ரோஜா செடிகளுக்கு மத்தியில் நான் கண்ட காட்சி என்னை உலுக்கியது. ராம் என்னிடம் மாஸ்டர் பீஸ் என்று பாராட்டிய என்னுடைய ஓவியம் கீழே கேட்பாரற்று விழுந்து கிடந்தது. சற்றுநேரத்திற்கு முன்பு என் மனைவியோ அல்லது அண்ணியோ, உலரவைப்பதற்காகக் கம்பியில் தொங்கவிடப்பட்ட துணியிலிருந்து விழுந்த தண்ணீர்த் துளிகள், சொட்டுச் சொட்டாய் என் ஓவியத்தை அழித்துக்கொண்டிருந்தன. ஓடிச்சென்று அதை எடுக்க குனிந்தபோதுதான் கவனித்தேன். என் ஓவியம் அப்படியொன்றும் உருக்குலைந்து போய்விடவில்லை. இன்னும் சொல்லப்போனால், அந்தத் துளிகள் ஒவ்வொன்றும் தூரிகைகளாய் மாறி என் ஓவியத்தை மேலும் அழகுபடுத்திக்கொண்டிருந்தன. அதைப் பார்த்து ரசித்துக்கொண்டே இருந்தபோது, “துளிகளே தூரிகைகளாய்…” என்கிற கவித்துவமான தலைப்போடு சேர்த்து, அந்தத்துளிகள் வரைந்த ஓவியத்தைப் பற்றிக் கவிதை வரிகளும் கொட்டின. அப்போது பிறந்தது து..தூ.. (TuToo) என்கிற என் புனைபெயர் மட்டும் அல்ல; எனக்குள் இருந்த கவிஞனும்தான். நாம் நிச்சயம் சந்திக்கவேண்டும், மணிமொழி. ஓவியங்களால் சூழப்பட்ட இந்தச் சிறு வீடு உங்கள் வருகைக்காகக் காத்திருக்கிறது. என்றென்றும் அன்புடன், து..தூ.. (என்கிற) சிவா. இரண்டாம் பரிசு கடிதம்: மாதவன் இளங்கோ இது தனது ரசிகைக்கு ஓர் ஓவியர் எழுதிய கடிதம். இந்தக் கோணமே மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. ஒரு கலைஞனின் மனம், அவனுடைய படைப்பைக் காட்டிலும் எத்தனை நுண்மையானது, பரிசைக் காட்டிலும் அவன் எப்படி ரசனையைத்தான் நம்பி வாழ்கிறான் என்பதெல்லாம் இந்தக் கடிதம் சிறப்பாக உணர்த்துகின்றது. – ரமணன் 3. மூன்றாம் பரிசு: ரஞ்சனி நாராயணன் மணிமொழியாகிற என் அன்பு அம்மாவே! உன் நெடுநாளைய ஆசையை இன்று நிறைவேற்றியிருக்கிறேன். நீ சொல்வாயே, இந்த ஈமெயில் கொசு மெயில் எல்லாம் எனக்கு வேண்டாம். கொஞ்ச நேரம் எனக்காக செலவழித்து காகிதமும் பேனாவும் எடுத்து சற்று மெனக்கெட்டு நாலுவரி எழுது. எனக்குத் தோன்றும் போதெல்லாம் படித்துப் பார்ப்பேன் என்பாயே, அந்த உன் ஆசையை நிறைவேற்றிவிட்டேன். இப்போதெல்லாம் பழைய நினைவுகளே அதிகம் வருகின்றன, அம்மா. உன் கையைப் பிடித்துக் கொண்டு பள்ளிக்குப் போவேனே, அந்த நினைவுகள். இன்னும் இன்னும் அந்த காலத்திய நினைவுகள் பசுமையாக மனதில் வாசம் வீசிக் கொண்டிருக்கின்றன, அம்மா. ‘எனக்கு ஏன் மணிவண்ணன் என்று பெயர் வைத்தாய், என் பள்ளித்தோழன் என்னை வணி மண்ணன் என்று கேலி செய்கிறான்’ என்று ஒருமுறை உன்னிடம் வந்து அழுதேன், நினைவிருக்கிறதா, அம்மா? நீ என்ன சொன்னாய் தெரியுமா? ‘அட! உன் தோழனுக்கு தெரியுமா? இரண்டு வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை மாற்றிப் போட்டுப் பேசுவது தான் உன் பெயரை அவன் என்ன அழகாக மாற்றி இருக்கிறான் பார்’ என்று இன்னும் பல ஸ்பூனரிச வார்த்தைகளைச் சொன்னாய். ‘என்.எஸ். கிருஷ்ணன் இந்த உத்தியை ‘சந்திரலேகா’ படத்தில் பயன்படுத்துவார். ‘தரையிலே உக்காரு’ என்பதை உரையிலே தக்காரு என்பார்’ என்றாய். நான் கொஞ்சம் சமாதானம் ஆனவுடன், ‘இத பாரு மணி, நம் குடும்பமே ‘மணி’ குடும்பம். மணிமணியான குடும்பம்! உன் அப்பா பெயர் மணிமாறன், என் பெயர் மணிமொழி, உன் பெயர் மணிவண்ணன். உன் அக்கா மணிமேகலை. வேறு யாருக்காவது இப்படி கிடைக்குமா? இன்னொரு விஷயம் ஒப்பிலியப்பனை ஆழ்வார் ‘பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன்’ என்கிறார். திருமங்கையாழ்வாரும் ‘முத்தினை, மணியை, மணி மாணிக்க வித்தினை’ திருவிண்ணகர் போய் சேவித்துவிட்டு வாருங்கள்’ என்கிறார். உனக்குத் தெரிந்த திருப்பாவையில் மாலே! மணிவண்ணா! என்று கண்ணனை அழைக்கிறாள் ஆண்டாள். உன் பெயர் அத்தனை அழகான பெயர்’ என்று சொல்லிவிட்டு, ‘உன் மனைவியின் பெயரும் இதேபோல மணி என்று வரவேண்டும்’ என்றாய். நான் சின்னவன் அப்போது. ‘போம்மா’ என்று சிணுங்கிக்கொண்டு எழுந்து போய்விட்டேன். ஆனால் நீ இதைப் பற்றி எத்தனை தீவிரமாக இருந்திருக்கிறாய் என்று பிறகு தெரிந்தது. எனது மனைவி பெயர் ரமா என்றிருந்ததை நீ ரமாமணி என்று மாற்றினாய், எங்கள் திருமணத்திற்குப் பிறகு. எப்படியம்மா நீ ஸ்பூனரிசம் பற்றியும் பேசுகிறாய், திவ்யபிரபந்தம் பற்றியும் பேசுகிறாய் என்று வியந்து நின்றேன் மனதிற்குள். இப்போதும் அந்த வியப்பு மாறவில்லை அம்மா! எனக்கு உன்னையும் அப்பாவையும் நன்றாக நினைவிருக்கிறது. நீ கொஞ்சம் கருப்புதான் ஆனாலும் ரொம்பவும் அழகு. அப்பா நல்ல நிறம். சட்டென்று பார்த்தால் நீதான் உயரம் போலத் தோன்றும். உன் ஆளுமை அப்படி. உன் பெயர் போலவே நீ சொல்லும் மொழிகளும் மணிதான். பேசும்போதே உன் குரலின் மென்மை மற்றவர்களை வசீகரிக்கும். வார்த்தைகளையும் அப்படித்தான் தேர்ந்தெடுத்துப் பேசுவாய். கோவம் என்பதே வராது உனக்கு. மென்மையான குரலில் நீ பாடும் ‘ஆசை முகம் மறந்துபோச்சே’ இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறதம்மா. கடிதம் எழுதுவதும் நான் உன்னிடமிருந்து கற்றதுதான். குட்டிகுட்டியாக உன் எழுத்துக்கள் ஒரு சீராக மணிமணியாக இருக்கும். உன் அப்பா நீ இப்படித்தான் இருப்பாய் என்று அகக்கண்களால் உணர்ந்து இப்படி ஒரு பெயர் வைத்தாரோ? உன் கடிதங்களைப் படிக்கும்போது உன் வார்த்தைகள் அருவமாக நின்று மனதை வருடிக் கொடுக்கும். உன்னையும் அப்பாவையும் பலமுறை இங்கு வந்து என்னுடன் இருக்கும்படி சொன்னேன். ஏனோ இருவருக்கும் இங்கு வர விருப்பம் இல்லை. அக்காவிற்கும், எனக்கும் திருமணம் ஆகி இருவரும் வேறு வேறு ஊர்களில் இருந்தோம். நீங்கள் இருவரும் ஒவ்வொரு வருடம் ஒவ்வொரு திவ்ய தேசம் போய் அங்கு தங்கி எல்லா உற்சவங்களும் சேவித்துவிட்டு வருகிறோம் என்று சொல்லி கிளம்பிவிட்டீர்கள். எனக்கு மிகவும் வருத்தம். ஒருமுறை நீங்கள் இருவரும் திருக்கண்ணபுரத்தில் இருந்தபோது நான் மனைவி குழந்தைகளுடன் அங்கு வந்திருந்தேன். இரவு முநியதரையன் பொங்கல் வாங்கி வரச்சொல்லி எங்களுக்குக் கொடுத்தாய். இரவு நாமிருவரும் மெல்லியதாக அலையடித்துக் கொண்டிருந்த மிகப்பெரிய குளக்கரையில் உட்கார்ந்திருந்தபோது சொன்னாய்: ‘ஸ்ரீரங்கத்தில் பிறக்க வேண்டும்; திருக்கண்ணபுரத்தில் பரமபதிக்கவேண்டும். எனக்கு அந்த பாக்கியம் கிடைக்குமா? ஸ்ரீரங்கத்தில் பிறந்துவிட்டேன். ‘சரணமாகும் தனதாளடைந்தார்கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்’ எனக்கு இந்த பாக்கியத்தைக் கொடுப்பாரா?’ என்றாய். என்னுடன் வர மறுத்துவிட்டாய். நீ இங்கு வரவேண்டும் அம்மா. வந்து என் குழந்தைகளுக்கு நிறைய கதைகள் சொல்லவேண்டும். சௌரிபெருமாள் பக்தனுக்காக கூந்தல் வளர்த்தது, தவிட்டுப் பானை தாடாளன், ஸ்ரீரங்கம் பெருமாளின் ஈரவாடை வண்ணான் சேவை – ஆ! மறந்துவிட்டேனே, திருவரங்கனின் உலா பற்றி நிச்சயம் சொல்லவேண்டும். இதைப்போல சரித்திர நிகழ்வுகளை நம் அடுத்த தலைமுறைக்கு நாம்தானே சொல்லவேண்டும் என்று நீதானே அடிக்கடி சொல்லுவாய்? குழந்தைகளுக்கு தாத்தா பாட்டி இருப்பது எத்தனை பெரிய பாக்கியம்? இன்னும் ஒரு விஷயம், அம்மா. சீர்காழியில் இருக்கும் நம் பூர்விக வீட்டை விற்றுவிட வேண்டாம். நாங்கள் சின்ன வயதில் கோடைவிடுமுறை என்றால் ஸ்ரீரங்கத்தில் இருந்த பாட்டி வீட்டிற்குத் தான் போவோம். மறக்கமுடியாத நாட்கள்! கொளுத்தும் வெயில் எங்களை ஒன்றுமே செய்யாது. காலையில் எழுந்து காப்பி குடித்துவிட்டு (அப்போதெல்லாம் காப்பி தான் எங்களின் ஆரோக்கியபானம்) கொள்ளிடத்திற்குப் போவோம். நாங்களாகவே நீச்சல் கற்றுக் கொண்டோம். வேடிக்கை என்ன தெரியுமா, அம்மா? என் பிள்ளைகளுக்கு பயிற்சியாளர் வந்து நீச்சல் சொல்லிக் கொடுப்பார். சிறுவயதில் ‘இளங்கன்று பயமறியாது’ என்பதற்கேற்ப ஆடிப்பெருக்கன்று ரயில் பாலத்தின் மேலிருந்து கொள்ளிடத்தில் குதித்து நீந்திக் கரை சேர்ந்ததை அவர்களிடம் சொல்லிச் சொல்லி பெருமைப்படுவேன். என் குழந்தைகளுக்கும் பாட்டி வீடு என்கிற சொர்க்கத்தைக் காட்ட விரும்புகிறேன். என் ஞாபகசக்தி உனக்கு வியப்பாக இருக்கிறது, இல்லையா? ஆனால் ‘வர வர இப்போது நடப்பதெல்லாம் உங்களுக்கு நினைவே இருப்பதில்லை’ என்று ரமாமணி சொல்கிறாள் அடிக்கடி. டாக்டர் வருகிறார். ஏதேதோ மருந்துகள் கொடுக்கிறார். இதோ இப்போதும் என் காலடியில் ஒரு சின்னப் பையன் உட்கார்ந்திருக்கிறான். என்னை தாத்தா, தாத்தா என்கிறான். யார் என்றே தெரியவில்லை. உன்னுடன் செலவழித்த நாட்கள் மட்டுமே நினைவில் இருக்கின்றன. உனக்கு தினமும் பல பல கடிதங்கள் எழுதுகிறேன். மணிமொழியாகிற என் அம்மா…..என் அம்மா….. மூன்றாம் பரிசு கடிதம்: ரஞ்சனி நாராயணன் அம்மாவுக்கு மகன் எழுதிய கடிதம். நெஞ்சைத் தொட்டது. – ரமணன் 4. ஆறுதல் பரிசு [1]: கீதா மதிவாணன் அன்புமகன் மணிமொழிக்கு, அம்மா எழுதுகிறேன். நலமாக இருக்கிறாயா? நீ எப்போதும் குன்றாத உடல்நலத்தோடும் குறைவிலாத மகிழ்வோடும் வாழவேண்டும் என்பதுதான் பெற்றவர்களாகிய எங்கள் எண்ணமும் ஆசையும். மனத்தாங்கலுடன் ஊருக்குப் புறப்பட்டுச் சென்ற நீ இந்நேரம் வருத்தம் நீங்கி தெளிவடைந்திருப்பாய் என்றும் எப்போதும் போல் தொலைபேசியில் பேசுவாய் என்றும் நாங்கள் காத்திருந்தோம். ஆனால் கடந்த நான்கைந்து நாட்களாக உன்னிடமிருந்து அழைப்பு வரவேயில்லை. நாங்களாக அழைத்தபோதும் நீ வேலையாக இருப்பதாக உன் அறைத்தோழன்தான் பேசினான். உண்மையில் வேலையாகத்தான் இருக்கிறாயா? அல்லது மனவருத்தம் இன்னும் குறைந்தபாடில்லையா? என்ற கவலையோடு எங்கே உனக்கு உடல்நிலை சரியில்லையோ என்ற புதிய கவலையும் சேர்ந்துகொண்டது. நடந்த விஷயத்தை எண்ணி இன்னும் நீ மருகிக்கொண்டிருக்கிறாயெனில் அதைப் போக்கித் தெளிவேற்படுத்தவேண்டியது பெற்றோரான எங்கள் கடமை. அதன் பொருட்டே இக்கடிதத்தை எழுதுகிறேன். நீ அமைதியான மனநிலையில் இருக்கும்போது இதைப் படிக்குமாறு வேண்டுகிறேன். நீ படித்தவன்; புத்திசாலி. நான் சொல்வதை நிதானமாக யோசித்துப் புரிந்துகொள்வாய் என்று நம்புகிறேன். நம் உறவினர்களும் நண்பர்களும் உன் அப்பாவைப் பார்த்து வியக்கும் ஒரு விஷயம்… எப்படி ஒருவரால் என்றுமே கடன் வாங்காமல் இப்படியொரு நல்ல வாழ்க்கையை வாழமுடிகிறது என்பதுதான். உச்சபட்சமாய் கலங்கிய நெஞ்சத்துக்கு “கடன்பட்டார் நெஞ்சம்போல” என்றொரு உவமையைக் காட்டுவார் கம்பர். அப்படியொரு கலக்கத்தை இதுவரை உன் அப்பாவும் அனுபவித்ததில்லை. நம்மையும் அனுபவிக்க வைத்ததில்லை. எனக்கும் உன் அப்பாவுக்கும் திருமணமானபோது வறுமைக் கோட்டுக்கும் கீழேதான் எங்கள் வாழ்க்கை இருந்தது. இப்போது உன் அப்பா மேலாளராய் பணிபுரியும் அதே நிறுவனத்தில்தான் ஒரு கடைநிலைத் தொழிலாளியாய் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார். ஆனால் தன் உழைப்பாலும் திறமையாலும் கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறி இன்று இந்த நிலையை அடைந்திருக்கிறார். ஆரம்பகாலத்தில் அவருக்குக் கிடைத்த சொற்ப வருமானத்திலும் திட்டமிட்ட வாழ்க்கையை வாழ்ந்தோம். நான் என்னுடைய ஓய்வுநேரங்களில் கைவினைப் பொருட்கள் செய்து விற்று முடிந்தவரை உன் அப்பாவுக்கு உதவினேன். எதிலும் சிக்கனத்தைக் கடைப்பிடித்தோம். அநாவசிய செலவுகளைத் தவிர்த்தோம். மருத்துவம், கல்வி, போன்ற அவசியத் தேவைகளுக்கு சேமித்துவைத்தோம். அதற்காக கஞ்சத்தனமாகவும் இல்லை. விருந்தோம்பல், உறவினர் திருமணம், சுற்றுலா போன்ற மகிழ்வான தருணங்களையும் தவறவிடவில்லை. யாவும் நீ அறிந்ததுதான். அந்த சூழ்நிலையிலும் உன்னையும் உன் தங்கை மலர்விழியையும் நல்லபடியாகவே வளர்த்தோம். எங்களுக்கு சிரமம் தராமல் நீங்களும் நல்ல பிள்ளைகளாக வளர்ந்தீர்கள்; நீ மணிமொழிச்செல்வன் என்ற உன் பெயருக்கேற்ப மணிமணியாய் பேசுவாய்; அனைவரிடமும் அன்புடனும் மரியாதையுடனும் நடந்துகொண்டாய்; அரசுப்பள்ளியில் படித்தாலும் நன்கு படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல்மாணவனாய்த் தேறினாய். சென்னையில் நல்ல கல்லூரியில் இடம் கிடைத்து எங்களை விட்டுப் பிரிந்து சென்றாய். வாழ்க்கைப்பாடத்தைக் கற்றுக்கொள்ள உனக்கு இதைவிடவும் நல்ல வாய்ப்பு அமையாது என்று எங்கள் மனத்தை திடப்படுத்திக்கொண்டு உன்னை விடுதிக்கு வழியனுப்பிவைத்தோம். கல்லூரியிலும் கருமமே கண்ணாக படித்து, நல்மாணாக்கனாய்த் தேறி மும்பையிலிருக்கும் பெரிய நிறுவனமொன்றில் நல்லதொரு உத்தியோகமும் பெற்றுக்கொண்டாய். அதன் பின்னணியிலான உன் கடுமையான உழைப்பை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். நீ வேலையில் சேர்ந்து இந்த மாதத்துடன் ஒருவருடம் ஓடிவிட்டது. நினைத்துப்பார்க்கவே மலைப்பாக உள்ளது. நேற்றுதான் உன்னை முதன்முதலாகப் பள்ளியில் சேர்த்த நினைவு! நீயும் படித்துப் பட்டம் பெற்று நல்ல உத்தியோகமும் கிடைத்து ஒருவருடம் முடிந்துவிட்டது என்றால் நம்பத்தான் முடியவில்லை. இதோ… இந்த வருடம் உன் தங்கையும் கல்லூரியில் காலடி எடுத்துவைத்துவிட்டாள்… “வேலை கிடைத்தவுடன் அந்தப் பணத்தை என்ன செய்யப்போகிறாய் அண்ணா?” என்று மலர்விழி கேட்டாள். நீ உன் சம்பளப்பணத்தை முழுவதுமாய் அப்பாவிடம் தந்துவிடப்போவதாக சொன்னாய். அப்பா அதை மறுத்துவிட்டு அந்தப் பணத்தை உன் செலவுகளுக்காக பயன்படுத்திக்கொள்ளுமாறும் மீதத்தை உன் பெயரில் வங்கியில் சேமித்துவைக்கும்படியும் சொன்னதோடு அவரே அதற்கான முயற்சிகளையும் செய்து உன் பெயரில் வங்கிக்கணக்கைத் துவக்கியும் கொடுத்தார். மாதமொருமுறை ஊருக்கு வந்துபோகும் நீ ஒவ்வொருமுறையும் மனங்கொள்ளாத அன்புடனும் கைகொள்ளாத அன்பளிப்புகளுடனும் வருவதையே வழக்கமாக்கிக் கொண்டாய். நீ உன் முதல்மாத சம்பளத்தில் எனக்கு ஒரு பட்டுப்புடவையும் அப்பாவுக்கு ஒரு கைக்கடிகாரமும் மலர்விழிக்கு ஒரு மடிக்கணினியும் வாங்கித்தந்தாய். அவை ஒவ்வொன்றின் விலையும் மிகவும் அதிகம் என்றபோதும் உன் திருப்திக்காக நாங்கள் அவற்றை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டோம். அதன்பின் தொடர்ந்து உன் சம்பளப்பணத்திலிருந்து எங்களுக்கு, தங்கைக்கு, வீட்டுக்கு அது இது என்று எதையாவது வாங்கித் தந்துகொண்டேதான் இருக்கிறாய். ஒன்றிரண்டு முறை நானும் அப்பாவும் சூசகமாக உன்னிடம் சேமிப்புப் பற்றித் தெரிவித்தோம். நீ அதைப் புரிந்துகொண்டாயா என்று தெரியவில்லை. புரிந்திருந்தால் நீ தேவையற்றப் பொருட்களில் பணத்தைப் போடுவதை நிச்சயம் தவிர்த்திருப்பாய். சென்றவாரம் வந்தபோது அதிநவீன கைபேசிகளை ஆளுக்கொன்றாய் வாங்கிவந்திருந்தாய். அதன் விலை என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் சாதாரண கைபேசியைவிடவும் அதிகமாக இருக்குமென்று தெரியும். அது எங்களுக்குத் தேவைதானா? யோசித்துப் பார்… கைபேசியின் முக்கியப் பயன் தொலைவில் உள்ளவர்களோடு தகவல் தொடர்பை பரிமாறிக் கொள்வதுதான். அதற்கு இப்போதிருக்கும் சாதாரண கைபேசியே போதுமானது அல்லவா? நீ உன் அப்பாவிடம் அந்த கைபேசியைக் கொடுத்தபோது, “எதற்கு இந்த அநாவசியச் செலவு? இனி இதுபோல் தேவையின்றி செலவழிக்காதே” என்றார். நீ முகம் சுருங்கிப் போனாய். எதுவும் சொல்லாமல் அறைக்குள் சென்று முடங்கிக்கொண்டாய். அதன்பின் நீ எங்களுடன் சரியாகப் பேசவே இல்லை. அண்ணன் எப்போது வருவான் என்று ஆசையாய்க் காத்திருந்த உன் தங்கை மலர்விழியிடம்கூட முகம் கொடுத்துப் பேசவில்லை. சரியாக சாப்பிடவும் இல்லை. நானும் உன் மனநிலை சற்று மாறியதும் உன்னுடன் பேசி தெளிவுபடுத்தலாம் என்று காத்திருந்தேன். நான்குநாட்கள் தங்குவதாகச் சொல்லி வந்திருந்த நீ வேலை இருக்கிறது என்றுசொல்லி மறுநாளே மும்பை கிளம்பிச்சென்றுவிட்டாய். மனவருத்தத்துடன்தான் நீ ஊருக்குச் செல்கிறாய் என்று தெரிந்தாலும் நான் தடுக்கவில்லை. நிதானமாக யோசித்தால் நீயே புரிந்துகொள்வாய் என்று விட்டுவிட்டேன். ஆனால் உன் எண்ணத்தில் சிறிதும் மாற்றமில்லை என்று தெரியவரும்போது வருத்தமாய் உள்ளது. பிள்ளைகள் தவறு செய்யும்போது திருத்துவது பெற்றவர் கடமை அல்லவா? மன்னனுக்கே இது பொருந்தும்போது… மகனுக்குப் பொருந்தாதா? இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் என்னும் குறளின் விளக்கம் நீ அறியாததா? உழைப்பு, சிக்கனம், சேமிப்பு இவற்றின் மூலமே சீரான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழமுடியும் என்று வாழ்ந்துகாட்டிக்கொண்டிருப்பவர் உன் அப்பா. ஆரம்பநாட்கள் முதலே அதற்குத் உறுதுணையாயிருந்தவர்கள் நானும் எங்கள் பிள்ளைகளாகிய நீங்களும். ஆம். சிறுகுழந்தையிலிருந்தே பார்க்கும் எதற்கும் ஆசைப்படாதவர்கள் நீங்கள். அதுவேண்டும் இதுவேண்டும் என்று நச்சரிக்காதவர்கள். ஒரு பொருளைக் கேட்டு அது கிடைக்காவிடில் அதற்காக பிடிவாதம் பிடிக்காதவர்கள். மொத்தத்தில் குடும்பத்தின் நிலையை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட்டவர்கள். முக்கியமாய் நீ! உனக்கு நினைவிருக்கிறதா? உனக்கு பத்துவயதாயிருக்கும்போது ஒருமுறை திருவிழாவுக்குச் சென்றிருந்தோம். உன் தங்கை ஊதல் வேண்டுமென்று கேட்டாள். அப்பா வாங்கித்தர முன்வந்தபோது நீ சொன்னாய், “ஏன் அப்பா ஊதலுக்கு செலவு செய்கிறீர்கள்? நம் வீட்டு பூவரசு இலையில் நான் அவளுக்கு பீப்பீ… செய்து தருகிறேன்” என்று சொன்னதோடு, வீட்டுக்கு வந்தவுடனேயே விதவிதமான ஒலியெழுப்பும் ஏராளமான பீப்பீக்களைச் செய்துகொடுத்து அவளை மகிழ்வித்தாய். நானும் உன் அப்பாவும் உன் செயலை எண்ணி வியப்பும் பெருமையும் அடைந்தோம். இரண்டு வீடு தள்ளியிருக்கும் கடையில் தேங்காய் வாங்கிவரச்சொன்னால் இரண்டுதெரு தள்ளியிருக்கும் கடைக்குச் சென்று வாங்கிவருவாய். கேட்டால் இந்தக் கடையைவிடவும் அந்தக்கடையில் விலை மலிவு. பொருளும் தரமாக இருக்கும் என்பாய். பன்னிரண்டு வயதில் உனக்கிருந்த பொறுப்பை எண்ணி வியந்தேன். சிறுவயதில் அவ்வளவு பொறுப்புடன் இருந்த நீ இப்போது முறையற்ற செலவுகளை செய்வதைப் பார்த்து இப்போதும் வியக்கிறேன். நீ இப்போதுதான் வாழ்க்கையைத் துவங்கியிருக்கிறாய். இனி திருமணம், குடும்பம், குழந்தைகள் என்று பொறுப்புகள் அதிகரிக்கும். செலவுகளும் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் எவ்வளவோ ஏற்படலாம். எதிர்காலத்தை எப்போதும் மனத்தில் வைத்து நிகழ்காலத்தில் செயல்படுவதே புத்திசாலித்தனம். வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் அல்லவா? எங்களை வசதியாக வாழவைக்கவேண்டுமென்பதுதான் உன் ஆசையென்று அடிக்கடி சொல்வாய். வளர்ந்து பெரியவர்களானதும் பெற்றவர்களைத் திரும்பியும் பார்க்காத பிள்ளைகளுக்கு மத்தியில் இப்படியொரு அற்புதமான பிள்ளையைப் பெற்றதற்காக ஈன்ற பொழுதினும் நாங்கள் பெரிதும் மகிழ்கிறோம். இந்த அன்பு ஒன்றே போதும். வசதியான வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தந்துவிட்டாய். இனி ஏதேனும் வாங்குவாயானால் அது ஆடம்பரம்தான். அது நமக்குத் தேவையில்லாத ஒன்று. இனியாவது உன் சேமிப்பில் கவனம் செலுத்து. எந்தவொரு பொருளையும் வாங்குவதற்கு முன் அது நமக்கு அவசியம் தேவைதானா என்று ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து வாங்கு. சிக்கனமும் சேமிப்பும் பணத்தில் மட்டுமன்று… தண்ணீர், மின்சாரம், எரிபொருள் என்று நமக்கு அத்தியாவசியத் தேவையான எல்லாவற்றிலும் சிக்கனத்தைக் கடைப்பிடித்தால் பின்னாளில் கையைப் பிசைந்துகொண்டு கலங்கிநிற்கவேண்டிய அவசியம் ஏற்படாது. வருமுன் காப்பவன்தானே அறிவாளி? வந்தபின் தவிப்பவன் ஏமாளியல்லவா? நீ அறிவாளியாக இருக்கவிரும்புகிறாயா? ஏமாளியாகப் போகிறாயா? அப்பாவின் சொற்ப வருவாயில் நாம் சந்தோஷமாக வாழ்ந்த காலங்களை நினைத்துப்பார். இப்போது நீ கைநிறைய சம்பாதிக்கிறாய்… ஆனால் உன் எதிர்காலத்தைக் குறித்து எங்களை கவலையுறச் செய்திருக்கிறாய்… மகனே மணிமொழி! இதுவா நீ எங்களை மகிழ்வாய் வைத்திருக்கச் செய்யும் முயற்சி? நிதானமாக யோசித்துப்பாரப்பா! அடுத்தமுறை நீ நம் வீட்டிற்கு வரும்போது பை நிறைய பரிசுப்பொருள் வேண்டாம். மனம் நிறைக்கும் அன்பை மட்டுமே அள்ளிக்கொண்டுவா! நம் குடும்பத்துடன் குதூகலமாய் உன் விடுமுறை நாட்கள் கழியட்டும்! எங்களுக்கு உண்மையான மகிழ்ச்சி அதுதான் என்பதை உணர்ந்துகொள்! உன் உடல்நிலையைக் கவனித்துக்கொள். உடல்நிலை சரியில்லையெனில் அலட்சியமாய் இருக்காதே. உடனே மருத்துவரிடம் காட்டு. ஏதேனும் தேவையெனில் எனக்குத் தெரிவி. உன் அறைத்தோழர்களைக் கேட்டதாகச் சொல். நாங்கள் அனைவரும் உன் அடுத்த வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறோம். என்றும் அன்புடன், உன் அம்மா 5. ஆறுதல் பரிசு [2]: விசாலம் என் அன்புள்ள மணி, நீ அங்க சௌக்கியமா? மாப்பிள்ளை எப்படி இருக்கார்? உங்க இரண்டு பேருக்கும் என் ஆசீர்வாதங்கள். நீ எங்கிட்ட கோச்சுண்டு போனதிலிருந்து எனக்கு மனசே சரியா இல்லை. குட்டி சூடாமணி அதாண்டி நீ ஆசை ஆசையா சூடின்னு கூப்பிடுவாயே அந்த செல்லக்குட்டி எப்போதும் போல் எங்கிட்ட சமத்தாய் இருக்கிறாள். லோவர் கேஜி போய்ட்டு வராள். உங்குழந்தைய விட்டுட்டு இருப்பது உனக்கு சிரமம் தான். மனசு கஷ்டந்தான். ஆனா என்ன செய்ய? நீ கூப்பிட்டா அவ உங்கூட வர மாட்டேங்கறாளே. நான் என்ன செய்ய? யானை தன் தலை மேல தானே மண்ணை வாரிப்போட்டுண்ட மாதிரி நீயே தான் இந்த நிலைமைக்கு காரணமாயிட்டே. இன்னிக்கு இந்தக்கடிதாசுலே என் மனச கொட்டிடப்போறேன். ஏன்னா எனக்கும் வயசாச்சு. ஒரு நாள் இருப்பது போல் உடம்பு ஒரு நாள் இல்லை. அப்பா இல்லாத பொண்ணாச்சேன்னு உன்னை நன்னா படிக்க வச்சேன். படிப்பு வேஸ்ட் ஆக்காமல் வேலைக்கு போகப்போறேன்னு நீ சொன்னே. எனக்கு என்ன தெரியும் நீ மாடலாகவும் இருக்க போறேன்னு. எனக்கு பிடிக்காத ஒரு பேஷன் கம்பெனில சேர்ந்தே. அங்க சேர்ந்தப்பறம் என்னிடம் வந்து ‘சேரட்டுமா” ன்னு கேட்டே. உன் பிடிவாதம் தான் ஜயிச்சுது. அங்க தான் போனேயே. எப்போதும் பணம் பிசின்ஸ்ன்னு மெஷினப்போல் வேலை செய்யற ஒருத்தனை காதலிச்சே. அவன் உன்னை மாடலிங்ல நன்னா யூஸ் பண்ணிண்டான். உன்னால அவனுக்கு வந்த லாபம் கொஞ்சமா நஞ்சமா! இப்படியே விடப்பிடாதுன்னு நினைத்து உங்க இருவருக்கும் கல்யாணமும் செஞ்சு வச்சேன். அப்பறந்தான் எனக்கு நிம்மதி கிடைச்சுது. போதுண்டி இனி இந்த வேலை வேண்டாம்ன்னு சொன்னேனே, உனக்கு ஞாபகம் இருக்கா? ஆனா நீ என்ன சொன்னே ‘அம்மா நான் ஒரு குழந்த பெத்துண்டப்பறம் வேலையை விட்டுடறேன்’ன்னு சொன்னே. ஆனா உன் அழகு குலஞ்சுபோய்டும்ன்னு நாளை கடத்திண்டே வந்தே. ஆனாலும் கடவுள் என் பிரார்த்தனையைக் கேட்டுட்டார். அன்னிக்கு எனக்கு நன்னா ஞாபகம் இருக்கு. காலைல பூஜை பண்ணி முடிச்சேன். உன் போன் கால் வந்தது. “அம்மா நான் கன்ஸீவ் ஆயிருக்கேன்.” “ஆஹா மணி எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. மும்பையில் மழை ரொம்ப ஜாஸ்தி. மழைல எல்லாம் நனையாதே” “நிறுத்தும்மா. நானே வருத்தமா இருக்கேன். சனியன் பிடித்தது இப்போவே வந்திடுத்து. இன்னும் ஒரு வருஷத்துக்கு மாடலிங் எல்லாம் குளோஸ்” ன்னு சொன்னாயே ஞாபகம் வரதா? அப்பறம் அழகு பிம்பமாக உனக்கு சூடாமணி பொறந்தா. எதோ கடமையேன்னு பெத்துப்போட்டாப்போல் அந்தக் குழந்தைய எங்கிட்ட கொடுத்துட்டே. ஏதோ ஒரு இரண்டு மாசம் பால் கொடுத்தே. அப்பறம் உன் அழகு குலைஞ்சுடுமேன்னு அதையும் நிறுத்திட்டே. எப்போ பாத்தாலும் ஆபீஸ், புகழ் பணம்ன்னு நீங்க இரண்டு பேரும் அலஞ்சீங்க. போறாதத்துக்கு மாப்பிள்ளைக்கு சிங்கப்பூரில் வேலை கிடைச்சு போனார். நீயும் அங்க அவரோட போவேன்ன்னு அடம் பிடிச்சே. அது சரிதான். புருஷன் இருக்கற இடத்தில தான் நீயும் இருக்கணும். ஆனா உன் குழந்தையும் அழச்சிண்டு போகணுமா வேண்டாமா? “சூடி உங்கிட்ட இருக்கட்டும், அவ உங்கிட்ட வளரட்டும். ஏன்னா எனக்கும் வேலைல பிரமோஷன் கிடச்சிருக்கு, எனக்கு குழந்தையோட நிம்மதியா வேலை செய்ய முடியாது. அது வேற ஙொய் ஙொய்ன்னு அழும் . அந்த ஊசி இந்த ஊசின்னு அதெல்லாம் வேற பாத்துக்கணும் என்னால முடியாதம்மா”ன்னு கட் அன்ட் ரைட்டா எங்க்கிட்ட சொன்னாயே, அது ஞாபகம் இருக்கா? அன்னிலேந்து இந்த எட்டு வருஷமா சூடி எங்கிட்டதான் இருக்கா. வருஷத்தல ஒரு மாசம் வந்து இவளோட இருந்தா எப்படி ஒட்டிப்பா? சொல்லு. ஆபீசில யாரோ குழந்த உங்கிட்ட ஒட்டாம போயிடும் அதனாலே உங்கிட்ட அழைச்சுண்டு வந்திடுன்னு சொன்னதாக நீ சொன்னே. அதனாலே போன மாசம் நீ வந்தவுடனே ஆசையா சிங்கப்பூர்ல வாங்கிய கவுனை காட்டி நீ கூப்பிட்டே. அது என்ன வெறும் பொம்மையா? அதுக்கும் உணர்ச்சிகள் இருக்கே. “உங்கம்மா உன்னை விட்டுட்டு சிங்கப்பூரில இருக்காடின்னு அவ பிரண்டு அவளிடம் சொல்றாளாம். அதான் அன்னிக்கு சூடி தன் மூஞ்சியைத் திருப்பிண்டு இது யாரம்மா இந்த ஆன்டினு சொன்னா. நீயோ விடாமே ‘அட சூடிக்குட்டி! என் செல்லமே! நான் தான் உன் மம்மின்னு சொன்னே. உன் கையை நீட்டி வான்னு சொன்னே. அதுவோ, ‘போ ஆன்டி. நீ என் மம்மி இல்லை. இவதான் என் மம்மி’ன்னு என் கழுத்தை கட்டிண்டா. நீ கூப்பிட கூப்பிட மூஞ்சியை திருப்பிண்டா. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? இதுக்காக கோச்சுண்டு ஊருக்குப் போனால் என்ன செய்யறது? உனக்கு குழந்தையா இருக்கச்ச பாத்துக்க முடிலை. இப்ப அழகா எட்டு வயசு சிறுமியா இருக்கச்ச உனக்கு கூட வச்சுக்கணும் போல இருக்கு. எனக்கும் இனிமே இந்தக் குழந்தையை விட்டுட்டு இருப்பது கஷ்டம் தான். நீ என்னையும் அங்கு கூப்பட தயங்கறாய். உன் பிரஸ்டிஜ் என்ன ஆகும்ன்னு உனக்கு தோன்றது! ரொம்ப நாளா என் மனசில இருக்கறத உங்கிட்ட கொட்டிடணும்னு இருந்தேன். நீ கோபத்தல போன்ல கூட சரியா பேசல. அதனால இந்த லெட்டர் எழுதறேன். குழந்த வளர்ப்பு என்பது சும்மா இல்லை. அது ஒரு வரப்பிரசாதம். கொடுத்து வச்சிருக்கணும். அங்கு பணம் பெரிசில்லை. புகழ் பெரிசில்லை. அந்தஸ்து பெரிசில்லை. இனியாவது புரிஞ்சுக்கோ. நம்மிட்ட நமக்கு வேணுங்கற சொத்து இருக்கு. அதனாலே வேலையை விட்டுட்டு சூடியோட ஒரு இரண்டு வருஷமாவது இரு. அவ உன்னோட ஒட்டிண்டுடுவா. என்ன இருந்தாலும் ரத்த பாசம் ஆச்சே. மேலே எனக்கு என்ன எழுதறதுன்னு தெரிலை. கோபத்தை தூக்கிப்போட்டுட்டு அமைதியா யோசி. உடம்ப பாத்துக்கோ. ராத்திரி வேலைன்னு அலையாதே. சரியான சமயத்ல சாப்பிடு. நேரம் கெட்ட நேரத்ல சாப்பிட்டா அல்சர் வந்துடும். இந்த லெட்டர் வந்தவுடனே எங்கிட்ட பேசு. எல்லாம் ஒரு நாள் இல்லாட்டா ஒரு நாள் சரியாய்டும். இப்படிக்கு உன் அம்மா 6. ஆறுதல் பரிசு [3]: சரஸ்வதி ராஜேந்திரன் அன்புள்ள மணிமொழிக்கு நலம், நாடுவதும் அதுவே, மணிமொழி ஒரு இடத்தில் உள்ள செடியை பிடுங்கி வேறு இடத்தில் நடும்போது அது முதலில் சற்று வாடி பின் தான் தழைக்கும் அதுதான் இயற்கை. ஏனெனில் புதிய மனிதர்கள் புதிய சூழ் நிலை, புதிய இடம் ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருக்கும் ,போக போக பழகிடும் ஏனெனில், பள்ளியில் நீ வீட்டிலிருந்தபடியே பள்ளியில் இருக்கமுடியுமா? எல்லா இடங்களிலும் வீட்டிலிருந்த படி சுதந்திரமாக இருக்க முடியாதே, இது உனக்கும் தெரியும்தானே? உனக்கு நான் அறிவுரை கூறுவதாக எண்ணாதே, அன்புரை என்று எடுத்துக் கொள்ளவும். நீ புதிய பொறுப்புகளை ஏற்றியிருக்கிறாய் . அந்த மனைவி என்ற பதவியில் உனக்கு இப்போது பொறுப்புகள் அதிகம், நேரமும் இருக்காது ,அதனால், நான் சொல்ல வேண்டிய விஷயங்களை சுருக்கமாக சொல்லிவிடுகிறேன் மனித வாழ்வின் மகத்துவமான குடும்ப வாழ்வின் வெற்றியை பொறுத்ததுதான் எப்போதும் சுய நலமும் ,சுக வாழ்க்கையும். குடும்ப வாழ்க்கை என்பது ஒரு வேள்வி போன்றது ஒரே குடும்பத்தில் பிறந்த நம்மிடையே எத்தனையெத்தனை வேறுபாடான குணங்களிருக்கிறது. அதேபோல் தான் புகுந்த வீட்டிலுள்ளவர்கள் குணமும் அப்படித்தானே இருக்கும். அதனால் ஒருவருக்குகொருவர் விட்டுக் கொடுக்க வேண்டும், தேவைப்படும்போது தியாகமும் செய்யவேண்டும் . உன் மாமனார், மாமியாரை பெற்றவர் போல் பாவிக்க வேண்டும் , உன் நாத்தி, மைத்துனரை தங்கை, தம்பி என்று நினைத்துக்கொண்டால் எந்த பிரச்சனையும் இருக்காது இப்படியாக எண்ணி பொறுமையாகவும் , சகிப்புத்தன்மையுடனும் இருந்து நீ புகுந்த வீட்டில் எல்லோரையும் சரிக்கட்டிக்கொண்டு வழி நடத்துவாய் என்று எனக்கு தெரியும் ஏனெனில் நீ புத்திசாலியாற்றே, விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்று நீயே சொல்வாயே ! அதுதான் சிறந்த பண்பு . வீடென்றால் நல்லது கெட்டது இருக்கத்தான் செய்யும், இதை பகுத்துணர்ந்து உன் புத்திசாலித்தனத்தால் எல்லாவற்றையும் வென்று கணவனும், மனைவியும் ஒற்றுமையாக வாழ்ந்து நன்மக்கட்பேறு பெற்று குடும்பத்தை மங்கலமாக ஆக்குவாய் என்ற நம்பிக்கை எனக்குண்டு. குடும்ப பாரம்பரியத்தைக் காப்பதுதானே பாரதப்பண்பாடு. உன்னைப்போல் நானும் உன் பிரிவை தாங்கிக் கொள்ள என்னை தயார் படுத்திக்கொள்கிறேன் சேக்கிழார் சொன்னதை ஞாபகத்தில் வை ,பெண் மனையறத்தின் வேர் என்பதை. குடும்பத்தை பற்றி என் நண்பர் எழுதிய பாடலுடன் என் கடிதத்தை முடிக்கிறேன். கூட்டாமல் கழிக்காமல் குடும்பம் இல்லை கோணாமல் நாணாமல் இன்பம் இல்லை நீட்டாமல் முடக்காமல் வாழ்க்கை இல்லை நெளிவின்றிச் சுளிவின்றி நியதி இல்லை ஊட்டாமல் ஆட்டாமல் குழந்தை இல்லை ஓயாமல் சாயாமல் முதுமை இல்லை பூட்டாமல் திறக்காமல் கதவு இல்லை புகழாமல் இகழாமல் வளர்ச்சி இல்லை மகளே, குடும்ப வாழ்க்கையை படம் பிடித்துக்காட்டிய இந்த கவிதையைவிட வேறு உதாரணம் வேண்டுமா என்ன ? உன் அன்பில் மகிழும் அம்மா அமுதா கணேசன் 7. சிறப்புப் பரிசு [1]: நந்திதா அன்புள்ள மணிமொழிக்கு…. பார் புகழும் பாண்டிய நாட்டின் அரசி மணிமொழி தேவியாரின் பொற்பாதங்களைத் தொழுது, தங்கள் திருவளர் செல்வன் பொன்மாறன் எழுதியதை என் மெய்காப்பாளன் மார்த்தாண்டத்திடம் கொடுத்து தங்களிடம் சேர்ப்பிக்குமாறு கட்டளை இட்டுள்ளேன். திருமுகத்தின் மேல் பொறிக்கப்பட்ட “மீன் இலச்சினையையும், என் கணையாழியின் சின்னத்தையும் கண்டு தங்கள் திரு குமாரன் நலமுடன் இருக்கிறான் என்பதை அறிந்து, தங்கள் திருமுகம் ஆதவனைக் கண்ட தாமரை மலர் போல் மடல் விரிவதை என் மனக் கண்ணால் காண முடிகிறது. தங்களின் உத்தரவு பெற்று நானும் மார்த்தாண்டனும் மாறு வேடத்தில் நள்ளிரவில் நகர் வலம் வர புறப்பட்டோம். நாட்டு மக்களின் நலனையும், பிற நாட்டு ஒற்றர்கள் ஊடுவுறுவதை அறியவும் வேட்கை கொள்வது நல்ல அரசனின் அழகு அன்றோ. அவ்விதம் செல்ல நம் நாட்டு மக்கள் நலமுடனும், மகிழ்வுடனும் இருப்பதை அறிந்தோம் நாங்கள் இருவரும். எல்லாம் அந்த ஆலவாயான் அருளே. நகரத்தைச் சுற்றிவிட்டு திரும்பும் வேளை அந் நள்ளிரவில், ஒரு கரிய உருவம் பதுங்கி ஓட, நாங்கள் ஐயத்துடன் உருவத்தின் பின் செல்ல செல்ல நாங்கள் ஊர் எல்லையைத் தாண்டி விட்டதை சிறிது நேரம் சென்ற பின்னர்தான் உணர்ந்தோம். இந்த உருவம் பல வினாக்களை எழுப்பவே அரண்மனை திரும்பும் எண்ணத்தைக் கைவிட்டோம். பாண்டிய வம்சத்தில் வந்த நான் எப்படி என் கடமையிலிருந்து தவறுவது? முன்னால் சென்ற உருவம், நகர எல்லையைக் கடந்து, வயல்களையும் கடந்து சென்றது. முடிவில் நாங்கள் வெகுதூரம் வந்து விட்டதை உணர்ந்தோம். அப் பாதை மிகக் கடினமாகி சிறு கற்களும், பாறைகளும் எங்கள் காலைப் பதம் பார்த்தன. கரிய உருவம் மேலே ஏறுவது தெரிய இடுப்பில் செருகிய வாளைத் தொட்ட வண்ணம் அதே பாதையில் முன்னேறினோம். நாங்கள் செல்லும் பாதை தற்பொழுது மலைப் பாதை என அந்த இருட்டில் உணர்ந்தோம். உருவத்திற்கு இப் பாதை பழக்கம் போலும். அதனால் ஏறி எங்கோ இருட்டில் மறைந்து விட்டது. இனி எங்கே செல்வது என்னும் வேளையில் தோளில் ஏதோ உராயவே, வாளை உருவி வெட்ட, அது ஆலம் விழுது என உணர்ந்தோம். ஏதோ மிருகத்தின் உறுமல் கேட்க, சிந்தனை செய்யாது ஆல விழுதைப் பற்றிக் கொண்டு மேலே ஏறி பத்திரமாக ஒரு கிளையில் இளைப்பாறினோம். மார்த்தாண்டன் கூறினான், “இளவரசே தாங்கள் கொஞ்சம் இளைப்பாறுங்கள். நான் காவல் புரிகிறேன். இந்த இருட்டில் எங்கு செல்வது? என்றான். அவனது யோசனை சரி எனப் படவே நான் இளைப்பாறினேன். நான்கு புறத்திலும் மலைக் கன்னியை கரிய போர்வை மூட அவளோ நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தாள். அவள் உறங்க வண்டுகள் பண் இசைத்துக் கொண்டிருக்க, மின் மினிப் பூச்சிகள் நடன மாடிக் கொண்டிருந்தன. நேரம் மெதுவாக நகர்ந்து இருளின் கரிய போர்வையை ஆதவன் தன் பொன் கிரணங்களால் நீக்க மலைக் கன்னி தன் இமைகளைத் திறந்தாள். ஆதவனின் கிரணங்கள் நெடுந்துயர்ந்த மரத்தின் இலைகளின் ஊடே வந்து மரகதப் பட்டில் வட்ட வட்ட சரிகை வேலை செய்து நெய்த கம்பளம் போல் காட்சி அளித்தது. மலைக் கன்னி தன் அழகைப் பூரணமாக காட்டவில்லை. அவ்வளவு அடர்ந்த காடு. எனினும், விடியலுக்காகக் காத்திருந்த புள்ளினங்களின் ஓசை மனதிற்கு இனிமையை சேர்த்தது. அங்கு குயில், கிளிகள், மரங்கொத்தி, வலியான், ஆனைச் சாத்தான், பல வர்ணத்தில் வண்டுகள், தேனீக்கள், இவைகளின் பாட்டுக்குத் தாளம் போடுவது போல், அருகில் ஓடும் ஓடையின் சல சலப்பு. இவற்றைக் கண்டு மெய் மறந்து விட்டோம். அப்பொழுது தான் தெரிந்தது அது குறிஞ்சி நிலம் என. குறிஞ்சியின் மாண்பினை அப்படியே வண்ணக் கலவையில் தீட்டியது போல் இருந்தது அக் காட்சி. அதுவும் நம் பாண்டிய நாட்டின் மிக அருகிலேயே உள்ளதை நாம் அறியவில்லை என தெரிந்ததும் வருத்தமாக இருந்தது. நம் பார்வை இங்கு படவே இல்லையா அல்லது இங்குள்ள மக்கள் நம் நாட்டு மக்களுடன் கலக்கவில்லையா? ஒருவேளை நாம் யவன தேசத்தாருடன் வாணிபம் செய்து, குதிரை இறக்குமதி செய்வதிலும், இங்கிருந்து முத்து, பவளம், பட்டு, சங்கு, பருத்தி, மிளகு இவற்றை ஏற்றுமதி செய்வதிலும், தமிழ்ச்சங்கம் அமைத்து, தமிழ் வளர்ப்பதிலும் மட்டும் கவனம் செலுத்தி இருந்தோமா. அல்லது , எதிரிகளின் தாக்குதலை எதிர் கொள்ள படையைப் பலப் படுத்துவதில் இருந்து விட்டோமா தெரியவில்லை. இந்தப் பிராந்தியம் நம் எல்லைக்கு அருகில் இருக்க இம் மக்களைப் புறக்கணித்து விட்டோமா. அதனால் இங்கு உள்ளவர் நம் ஊருக்குள் வந்து இருந்தாரோ. பல எண்ணங்கள் தோன்றியது. எப்படியும் ஊர் திரும்பாமல், இப் பிரதேசத்தை அறிவது என முடிவெடுத்தேன். அதற்கு கால தாமதம் ஆகி தாங்கள் கவலை கொள்வீர்கள் என எண்ணி மார்த்தாண்டனை திருமுகத்தோடு அனுப்பி உள்ளேன். மேலும் மடலைத் தொடர்கிறேன்… நாங்கள் மெதுவாக மரத்திலிருந்து இறங்கி பாறைகளைக் கடந்து மேலே சென்றோம்.வழியில் ஓடிய ஓடையில் முகம், உடலைச் சுத்தம் செய்து மேலே செல்ல பல குரல்கள் விசித்திர மொழியில் பேசும் ஓசை கேட்டது. வழியில் பல வித தாவரங்கள், மூலிகைச் செடிகள், கொடிகள், சந்தனம், அகில், மூங்கில், கடம்பு, கருங்காலி, பலா, திமிசு, வேங்கை, தேக்கு, மருதம், கனமில்லா பலகை செய்ய உதவும் மரங்கள் வானை முட்டும் உயரத்தில் வளர்ந்து இக் காட்டுக்கு அழகு சேர்க்கிறது தாயே. அத்துடன், மரங்களில் தாவிச் செல்லும் கவிகள், கீழே கரடிகள், மான், யானை, காட்டு எருமை, உடும்பு, காட்டு ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. ஆர்வத்தால் மேலே சென்றோம். அங்கு பல குடிசைகள், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் சிறுமிகள் காணப் பட்டனர். அவ்வேளையில் ஒருவன் எங்களைக் கண்டு, ஈட்டி போல் ஒன்றை ஏந்தி ஓடிவந்தான். நானும் மார்த்தாண்டனும் எங்களிடம் ஆயுதம் ஏதும் இல்லை என இரு கரங்களைத் தூக்கி நின்றோம். அக் கணம், அக் குடிகளின் தலைவன் போலும், வெளியில் வந்து ஈட்டிக் காரனை நிறுத்தினான். பிறகுதான் தெரிந்தது அது ஈட்டி இல்லை, ஈட்டி போன்ற ஆயுதத்தை மூங்கிலில் செய்துள்ளனர் என. அத் தலைவனை அங்கு கூடியிருந்த அனைவரும் வணங்கினர். எங்களை அருகில் அழைக்க நாங்களும் சென்று வணங்கி நின்றோம். அன்னையே, அவர்கள் பேசும் மொழி நம்முடைய தமிழ் போன்று இல்லை. நாங்கள் தலைவனை வணங்க நாங்கள் அமர ஒரு இருக்கையைப் போட்டு அமரச் சொல்ல நாங்களும் அமர்ந்தோம். தலைவன் தன் கைகளைத் தட்ட ஒரு பெண் ஒரு மரத்தட்டில் பால், தினை, தேன்,கிழங்கு, உப்பு கொண்டு வைக்க எங்களுக்கு சைகைக் காட்டினான் தலைவன். உப்பு வேண்டுமா அல்லது தேன் வேண்டுமா. முதலில் புரியாமல், யோசித்து செயல் பட்டேன். பாலில் தேன் சேர்ப்பது வழக்கம், உப்பு சேர்ப்பதில்லையே.. என பாலில் தேன் சேர்த்தேன். தலைவன் முகத்திலும், மற்றவர் முகத்திலும் புன்னகையைக் கண்டேன். அவனை வணங்கிவிட்டு, பாலை அவனுக்கு கொடுக்க அவனும் பாலை எடுத்துக் கொண்டான். தன் இரு கைகளை கூப்பி ஆகாயத்தையும், மலையைச் சுற்றியும் வணங்கினான். அப் பொழுது உணர்ந்தே. நம்மைப் போல் தெய்வங்களை சிலை வடிவத்தில் ஆராதிப்பதில்லை என. மனித சக்தியை விட இயற்கைக்கு சக்தி அதிகம். எனவே இயற்கையை வணங்குகிறார்கள். அவன் தேனுடன் உப்பு வைத்தது பற்றி யோசிக்க, எனக்கு ஒன்று புரிந்தது. அம் மக்களை நண்பர்களாக எண்ணுபவர்கள் பாலும் தேனும் கலந்து சாப்பிட வேண்டும், இல்லை எதிரியாக நினைத்தால் உப்பைக் கலப்பார்கள் என்று. நம் தமிழர் பண்பாடு எல்லாரையும் அரவணைப்பது, அன்பு செலுத்துவது அன்றோ. நான் கொடுத்த பாலைக் குடித்து விட்டு, என்னை ஆரத் தழுவிக் கொண்டான். அன்று அங்கு என்னை தங்கச் சொல்லவே, நானும் சம்மதித்தேன். உங்களுக்கு இச் செய்தியை கொடுக்காவிடில் நீங்கள் துயரம் அடைவீர்கள் என மடலை அனுப்பி உள்ளேன். நான் நாளை காலை வரும் வேளை தாங்கள் பாலும் தேனுமே தந்து இத் தலைவனை வரவேற்பீர்களாக. இங்கு உள்ள மக்கள் கல்வி அறிவு இல்லாதவர்கள். நம்மைப் போல் ஆடைகள் உடுத்துவதில்லை. நல்ல பலசாலிகள். இங்குள்ள மூலிகைகளைப் பற்றி நன்றாக அறிந்து வைத்துள்ளார்கள். நாகப் பாம்பின் விஷத்தை முறிக்கும் மூலிகை இங்கு உள்ளது. நாங்கள் பால் அருந்தும் போது ஒரு கீரீயும் பாம்பும் சண்டை போட்டு, பாம்பு இறந்து விட்டது. கீரீயின் உடலை பல முறை பாம்பு தீண்டி இருக்க அது அருகில் இருந்த ஒரு செடியில் புரண்டு புரண்டு எழுந்து மறு கணம் ஓடி விட்டது. இதைத்தவிர இவர்களின் வீடுகளில் பல வண்ண ஓவியங்களைக் கண்டு அந்த வர்ணத்திலேதான் இம் மடலை எழுதியுள்ளேன். இம் மக்களை நாம் அன்புடன் அரவணைத்து நல் வாழ்வை அமைத்துக் கொடுத்தால் நம் நாட்டு எல்லையும் விரியும். இவர்களும் எல்லையைக் காப்பாற்றுவார்கள். யுத்தம் புரிந்து பல ஆயிரம் மக்களைப் பலியாக்கி அந்த சவங்களின் மேல் சாம்ராஜ்ஜியம் எழுப்புவதை நான் விரும்பவில்லை அன்பு செலுத்தி, ஏழை எளியவர்களுக்கு, கல்வி, கலாச்சாரம் புகட்டுவோம்.. அகநானூறு தொகுப்பித்த உக்கிரப் பெருவழுதி குறிஞ்சி விருத்தம் பாடுவதில் வல்லவர். அவர் வழி வந்தவன் நான். புறநானூறும் பெருமையாகக் கூறும் வரிகள் முன்னூறு ஊர்த்தே தன் புறம்பு நன்னாடு என்று…. இதை பறை சாற்றும் வழியில் நாம் இக் குறிஞ்சி வாழ் மக்களை நம் பாண்டிய நாட்டுடன் இணைப்போம் நாளை இம் மலை நாட்டுத் தலைவனுடன் வருகை புரிகிறேன். இங்ஙனம் தங்கள் பொற்பாதங்களைத் தொழும் பொன் மாறன் 8. சிறப்புப் பரிசு [2]: வி. பாலகுமார் அன்புள்ள மணிமொழி, இன்மை உணர்தல் ஆகாயத்தை எட்டிப்பிடிக்க முயன்று கொண்டிருக்கும் காரைக்கட்டிட அட்டைப்பெட்டி அலுவலகத்தின் புழுக்கத்திலிருந்து வெகு தூரம் தள்ளி வந்து, தனித்து வியாபித்திருக்கும் பெரிய பூவரசமரத்தில், பறவைகள் அடையும் சத்தத்தினூடே இதனை எழுதத் துவங்குகிறேன் மணிமொழி ! உன் வீட்டு மொட்டை மாடியில் வடகிழக்கு மூலையில் உள்ள திண்டில் பறவைகள் வந்து நீர் அருந்தட்டுமென வைத்திருக்கும் வாய் அகலமான தண்ணீர்த் தொட்டியில் குறைந்திருக்கும் நீர் அளவைப் பார்த்து, உனக்கு மிகப்பிரியமான மிக்கி மௌஸ் படம் போட்ட ஊதா நிற பிளாஸ்டிக் குவளையை வலது கையால் பிடித்து நீர் கோரி தொட்டியை நிரப்பியபடி, காற்றில் படபடக்க விடாமல் லாவகமாய் பிடித்த படி கண்களாலும், கழுத்தாலும் உன் பிரத்யேக செய்கையசைவில் வளைந்து வளைந்து, இடது கையில் பிடித்திருக்கும் இந்தக் கடிதத்தை வாசித்துக் கொண்டிருப்பதாய் கற்பனை செய்து பார்க்கிறேன். உன் வீட்டுக் கொல்லையில் இருக்கும் வேம்பு காய்க்கும் பருவமல்லவா இது. மொட்டை மாடியெங்கும் வேப்பம்பழங்கள் சிதறிக் கிடக்க, அவற்றை சேகரித்து வட்டவட்டமாய் உருவம் அமைத்து மொட்டைமாடியெங்கும் சிரிப்பான்களாய் பரப்பி வைத்திருப்பாயே, அது ஏனோ இன்று காலை எழும் போதே நினைவில் வந்தது. இல்லை, அப்படிக்கூட சொல்ல முடியாது. அந்த வேப்பம்பழ சிரிப்பான்கள் தாம் கனவில் வந்து பொழுது புலர்வதற்கு முன்பாகவே என்னை எழுப்பி விட்டன. அது முதலே, ஒரு இனம்புரியாத பரவசம் என் மனமெங்கும் சிறகடிக்கத் துவங்கி விட்டது. எழுந்து தேநீர்க்கடைக்குச் சென்றால், அங்கே அடுத்த ஆச்சர்யம்! நூலகத்தின் நிசப்தத்தில், முல்லை நிலத்து வாழ்க்கை முறையை நாம் குறிப்பெடுத்துக் கொண்டிருந்த, மென்தூறல் விழுந்த இளமாலைப் பொழுதில் நீ உயிரைக் குழைத்து, என் கண்ணீர்க்குளங்களை தழும்பச் செய்து சன்னமான குரலில் எனக்காக மட்டும் பாடிய “கங்கைக்கரைத் தோட்டம்” ஒலித்துக் கொண்டிருந்தது. உயிருடனான முழு விலங்கை வாய் கொள்ளாமல் முழுங்கும் மலைப்பாம்பைப்போன்று நீண்ட பாலங்களாலும், தங்க நாற்கரச்சாலைகளாலும் சுற்றியிருந்த கிராமங்களை எல்லாம் தனக்குள் இழுத்துச் செறித்து, மீந்ததைத் துப்பி விரிவாக்கப்பகுதிகளாக தள்ளி வைத்திருக்கும் இந்த பெருநகரத்தின் ஒரு மூளையில் சந்திப்புச்சாலையைத் தாண்டி ஒடுங்கிப்போயிருக்கும் இந்த சிறு தேநீர்க்கடைக்குள்ளும், உயிர் கசியும் ஒரு தேவநொடியை எங்கிருந்தோ மீட்டுக்கொண்டு வர முடிகிறது இந்த இசையினால். “கண் திறந்து பார்த்தேன், கண்ணன் அங்கு இல்லை” என்று சுசீலாம்மாவின் குரலில் உன் விசும்பலை நினைத்த அந்த கணம், என்னையும் அறியாமால் கண்கள் கசிந்து அமர்ந்திருந்தேன். என்றோ நிகழ்ந்த ஒரு உன்னத நிகழ்வின் ஞாபகச்சரடு காலங்களுக்குள் எத்தனை முறை நம்மை மீண்டும் மீண்டும் பிணைத்துக் கொள்ளுமோ, மொழி ! அலைபேசி அலாரத்தை குறைந்தது ஒரு மணி நேரத்திற்க்காகவேணும் கண்ணயர்வு கொள்ளச் செய்து தினமும் கடிகாரத்துடன் சண்டையிட்டு அடித்துப்பிடித்து அலுவலகத்துக்கு விரைபவன் நான். இன்று உனது வேப்பம்பழ சிரிப்பான் அதிகாலையே என்னை எழுப்பி விட்டு, அதிசயமாய் தேநீர்க்கடைக்கும் செல்ல வைத்து, அங்கே ஒரு மகிழ்ச்சிப் பொட்டலத்தையும் இசையாய் விரித்து வைத்திருந்தது. அந்த மென்கீதத்தின் ரீங்காரத்தூடே அறைக்கு வந்து, நிதானமாக அதே சமயம் பரவசமாக இதழ்களுக்குள் மெல்லியதொரு புன்னகையை பரவ விட்ட படியே ஆயத்தமானேன். எவ்வளவு நிதானமாகக் கிளம்பி, தயாரான பின்னும் அலுவலக வாகனம் எங்கள் பகுதிக்கு வந்து சேர இன்னும் இரண்டு மணிநேரமிருந்தது. அதற்கு மேல் அறைக்குள் இருப்புக்கொள்ளவில்லை. மெதுவாக தெருமுனைக்கு வந்தேன். அந்தப்பகுதி அவ்வளவு அமைதியாக இருக்கமுடியுமா என்று ஆச்சர்யமாக இருந்தது. ஆறரை மணிக்கும் எட்டரை மணிக்கும் இடையில் உள்ள உவமிப்பு பிரம்மிப்பூட்டுவதாக இருந்தது. தெருமுனையில் இன்னும் தண்ணீர் லாரி வந்திருக்கவில்லை. ஷேர் ஆட்டோக்களின் சாகசங்கள் இன்னும் தொடர்ந்திருக்கவில்லை. வழக்கமாக எட்டரை மணி சுமாருக்கு, தலை நிறைய எண்ணெய் தேய்த்து வகிடெடுத்து, படிய சீவி விட்டு, எண்ணெய்க் கைகளில் பாண்ட்ஸ் பவுடர் கொட்டி குழந்தைகளின் முகங்களை வெள்ளையடித்து, பொதியேற்றி பள்ளி வாகனத்திற்குள் திணிக்கும் வழக்கமுள்ள புறநகரத்துப் பெண்மணிகள் அப்பொழுது தான் அன்றைய தினத்தின் முதல் வேலையாக வாசல் தெளிக்கத் துவங்கியிருந்தனர். வீட்டு வாசல்களில் படுத்திருந்த தெருநாய்கள் தண்ணீர் பட்டும் பதற்றம் காட்டாமல், மெதுவாக எழுந்து நெட்டி முறித்து ஓரமாய்ச் சென்று மறுபடியும் படுத்துக் கொண்டன. அந்தப்பகுதியின் அடையாளமாக, தங்கள் இருப்பை எப்போதும் சத்தமிட்டு பறைசாற்றி தங்களுக்குள் சத்த யுத்தம் நடத்தும் இரும்புப்பட்டறைகள் யாவும் இன்னும் துயில் எழுந்திருக்கவில்லை. மூடியிருக்கும் அந்த பட்டறைகளின் கனத்த கரந்தியல் சாத்திகளின் மீது தியானித்திருக்கும் கடவுளின் உருவங்கள் வரையப்பட்டிருந்தது ஆச்சர்யமாக இருந்தது. காலியான அதிகாலை நேரத்து தெருக்களைப் பார்க்கும் போது, அவை இரவில் அகலமடைந்து, பகல் செல்லச்செல்ல சுருங்கிக் கொள்கின்றனவோ என்று தோன்றியது. நகரப்பேருந்துகள் காலியாகக் கூட செல்லும் என்று இன்றைக்குத் தான் தெரிந்தது, மொழி ! ஒரு ஜன்னலோர இருக்கையை தேர்ந்து சாலையை மௌனமாய் பார்த்தபடியே பயணம் செய்தேன். அடுக்கங்களின் சிறு முன்றில்களில் வளர்க்கப்படும் போன்சாய் மரங்களைப் பார்த்து நீ விசனம் கொண்ட நிகழ்வு, அனிச்சையாய் நினைவுக்கு வந்தது. பிராணிகளை வளர்க்கத் தடையுள்ள, வாரமொரு முறை தாழ்வாரங்களை ஆள்வைத்து சுத்தம் செய்து, அங்கே கூடுகட்ட எத்தனிக்கும் புறாக்களை அதைரியம் கொள்ளச்செய்யும் அடுக்குமாடி குடியிருப்போர் சங்கத்தின் அறிக்கையொன்றில் நீ செய்து காண்பித்த கத்திக்கப்பல் மனதில் தோன்றியது. ஒரு மணிநேரப்பயணத்தின் முழுமைக்கும் என் அருகில் நீ அமர்ந்து வருவதாகவே எண்ணிக் கொண்டேன் மொழி ! நாம் வாசித்த கவிதைத் தொகுப்புகளை, புதினங்களை, சிறுகதைகளை நீ ஓயாமல் பேசிக்கொண்டே வந்தாய், பேருந்துக்கு வெளியே எதிர் திசையில் விரைந்து கொண்டிருக்கும் மிதமான குளிர்க்காற்றை, அவ்வப்பொழுது வலது கையால் தடுத்து உன் முகத்துக்கு நேராக திருப்பி விட்டுக் கொண்டே வந்தேன். காற்றிலாடும் முடியை காதிற்கு பின் தள்ளியபடியே நீ பேசிக்கொண்டே வந்தாய். அலுவலக நிறுத்தம் நெருங்குவதை உணர்ந்து உன்னை அப்படியே விட்டுவிட மனமில்லாது தவித்தேன். பின், அலுவலகத்திற்கு முந்தைய நிறுத்ததிலேயே இறங்கி, அருகிலிருந்த மரங்களடர்ந்த பூங்காவிற்குச் சென்றேன். விடாமல் தொடர் கேள்வி கேட்டுக் கொண்டு, தம் அப்பாக்களை வழி நடத்திச் செல்லும் சிறு பெண் குழந்தைகளின் நடைப்பயிற்சியால் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது அந்த காலை நேரத்து பூங்கா. அந்த சிறுமிகளைப் பார்த்து புன்னகைத்தபடியே மூச்சுப்பயிற்சி செய்து கொண்டிருந்த முதியவர்களின் முகங்கள் பரிசுத்தமாய் காட்சியளித்தன. பூங்காவின் பெரும்பகுதி தெரிவது போன்ற இடத்தைத் தேர்ந்து, அங்கேயிருந்த இருக்கையில் அமர்ந்தேன். கண்களை மூடி ஆழ்மூச்சில் சுவாசிக்கத் துவங்கியவுடன், அருகில் மஞ்சளின் வாசமும், செம்பருத்தியின் மணமும் கலந்த உன் வாசனையை நுகர்ந்து அருகில் நீ அமர்ந்திருப்பதை உணர்ந்தேன். கண்கள் மூடிய படியே உன் அருகாமையை ரசித்தபடியே வெகு நேரம் அமர்ந்திருந்தேன் மொழி ! வெயில் மெல்ல ஏறத்துவங்கியவுடன், அங்கிருந்து நடந்தே அலுவலகம் செல்வதென முடிவெடுத்து மெதுவாக அலுவலகம் சென்றடைந்தேன். எனக்குத் தெரியும் மொழி, பூங்காவில் இருந்த நீ, அங்கே கண்ணிற்குத் தட்டுப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு செல்ல பெயர் வைத்திருப்பாய், மரங்களிலிருந்து உதிர்ந்த ஒவ்வொரு மலரோடு ஏதேனும் ஒரு ரகசிய மொழி பேசியிருப்பாய். பகலா, இரவா, வெளியே மழையா, வெயிலா, என்ன நேரம் என்ன திசை என்று கூட அறிந்து கொள்ள முடியாத கருப்புக் கண்ணாடிகள் பதித்த அடுக்குமாடி அலுவலகம் உனக்கு பிடிக்காது என எனக்குத் தெரியும். எனவே தான் உன்னை உனக்குப் பிடித்தமான பூங்காவிலேயே இருக்கும் படி நினைத்துக் கொண்டேன். இன்று முதல் ஆளாக அலுவலகம் வந்து இருந்தேன். மனம் முழுதும் நீயே நிறைந்து இருந்தாய். என் இன்றைய தினத்தின் பூரிப்பை, அகவெழுச்சியை, உள்ளே பொங்கும் மனவூற்றை எப்படி வெளிக்காட்டுவது என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே அலைந்தேன். நாள் முழுமைக்கும் யாருடனும் பேசப்பிடிக்கவே இல்லை. நிமிடத்துக்கொரு முறையென கணினியிலும் , அலைபேசியிலும் ஆயிரக்கணக்கான சிரிப்பான்களை குறுந்தகவல்களாக, மின்னஞ்சல்களாக எனக்கு நானே அனுப்பிக் கொண்டேன். அதை நான் திறந்து பார்க்கும் போதும் மஞ்சள் நிறத்தில் ஒளிரும் ஒவ்வொரும் சிரிப்பானிலும் வேப்பம்பழத்தின் வாசமும், உன் வெள்ளந்திச்சிரிப்பின் வாசமும் மாறி மாறி வீசிக் கொண்டே இருந்தது. இந்த நாளை முழுமையாக அனுபவிக்க வைத்தாய் மொழி, இன்று என்னை மீண்டும் நானாய் உணர வைத்திருக்கிறாய் மொழி. நமது இந்த பிரிவு உன் காதலை, நட்பை, அருகாமையை, இருப்பை, தேவையை, உன்னை எனக்கு உணர்த்தியிருக்கிறது மொழி ! உன் தாய் வீட்டிற்குச் சென்றிருக்கும் இந்த சிறு விடுமுறைப் பிரிவில், ஆழத்தில் புதைந்து கொண்டிருந்த நம் காதலை உன் சிரிப்புருவினால் மீட்டெடுத்திருக்கிறாய் மணிமொழி ! உன்னை உன் வெகுளித்தனங்களோடும், ரசனையோடும், குழந்தைமையோடும் காதலிக்கும் உன் உயிர்த்தோழனை, நம் திருமணமான இத்தனை நாளில் தினப்பாடுகளுக்கும், அலுவலக வேலைப்பளுவுக்கும், எரிச்சல்களுக்கும், பொறுமையின்மைக்கும், நோய்மைக்கும் ஒப்புக் கொடுத்து விட்டு, ஒரு சராசரி கணவனாய் மட்டும் இருந்திருக்கிறேன் என்பதை இந்தப்பிரிவினால் உணர்த்தியிருக்கிறாய் மணிமொழி ! உன்னை நீயாய் இருக்க வைப்பதற்கான எல்லா முயற்சிகளையும் மனதாரச் செய்யும் உன் உற்ற தோழனாய் என்னை பழையபடி மாற்றியிருக்கிறாய் மணிமொழி ! போதும், நீ பாசமாய் வளர்த்த வேப்பமரத்துக்கும், மருதாணிச்செடிக்கும், உன் தாய்வீட்டுக்கும் அவசரமாய் ஒரு பிரியா விடை கொடுத்து விட்டு உடனே நம் வீட்டுக்கு வா என் அருமை மனைவியே ! இப்படிக்கு உன் இன்மையில் உன்னை முழுவதுமாய் உணரும் உன் கணவன் 9. சிறப்புப் பரிசு [3]: ஞா. கலையரசி சென்னை, 28/12/1984. அன்புள்ள தோழி மணிமொழிக்கு, ஆதிரை எழுதியது. இங்கு யாவரும் நலமே. அங்கு எல்லோரது நலமும் அறிய ஆவல். எனக்கு 11/12/84 அன்று, அரசு பொது மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. சுகப்பிரசவம் தான். கவின்மலர் என அவளுக்குப் பெயர் சூட்டியுள்ளோம். முன்பே உனக்குக் கடிதம் எழுத நினைத்தும், வேலைப்பளு காரணமாய் முடியவில்லை. குழந்தைகளுக்குத் தமிழில் தான் பெயர் வைக்கவேண்டும் என்ற கொள்கை உடையவள் நான். இது உனக்குத் தெரியுமாதலால், மற்றவர்களைப் போல், “பழைய பெயராக இருக்கிறதே, இக்காலத்துக்கேற்ப புது பேஷனாக வைக்கக்கூடாதா?” எனக் கேட்கமாட்டாய். “வருவோர் போவோருக்குப் பதில் சொல்லிச் சொல்லி அலுத்துவிட்டது. பேசாமல் எல்லோரையும் போல, திவ்யா, அக்ஷ்யா, ஐஸ்வர்யா என்று புதுமையாக வைச்சிருக்கலாம்; உன் பேச்சைக் கேட்டது தப்பாப் போச்சு” என்று என் கணவர் புலம்பத் துவங்கிவிட்டார் என்றால் பார்த்துக்கொள். தமிழ்க் குழந்தைக்குத் தமிழில் பெயர் வைத்தால், அது பழைய பேஷனாம்! கவின் என்றவுடன், ஏதோ கிரேக்கம், லத்தீன் சொல்லைக் கேள்விப்பட்டது போல, சிலர் முழிக்கும் முழி இருக்கிறதே, படு கேவலமாயிருக்கிறது மணி! குழந்தையைப் பார்த்துப் பெரியவள் கயல், கொஞ்சம் ஏங்கத்தான் செய்கிறாள். நீ ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது போல, அவ்வப்போது அவளையும் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறேன். என் கவனத்தை ஈர்க்கவேண்டும் என்பதற்காகவே, தொட்டதற்கெல்லாம் பிடிவாதம் பிடிக்கிறாள். சின்ன விஷயங்களுக்கெல்லாம், அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுகிறாள். கோபப்படக்கூடாது என்பதில் பல சமயம் கவனமாயிருந்தாலும், சில சமயம் யார் மீதோ உள்ள கோபத்தை அவள் மீது காட்டி அடித்துவிடுகிறேன். உன் யோசனைப்படிக் கோபத்தைக் கட்டுப்படுத்த நானும் முயலாமலில்லை. ஆனால் குழந்தையைப் பார்க்க வருவோரின் பேச்சும் நடவடிக்கையும், என் கோபத்தைக் கிளறி அதிகமாக்குகின்றனவே, நான் என்ன செய்யட்டும் மணி? “உன்னை விட தங்கச்சி ரொம்ப அழகாயிருக்கா, சிவப்பாயிருக்கா, இனிமே உன்னை யாரும் தூக்கமாட்டாங்க, உன்னை யாரும் சட்டை பண்ணமாட்டாங்க, இனிமே அவளுக்குத் தான் செல்லம் அதிகம்,” போன்ற வசனங்களைப் பேசிக் குழந்தையின் மனதைக் காயப்படுத்தி, தங்கையின் மீது பாசம் உண்டாக்குவதற்குப் பதில், ஏற்கெனவே இருக்கும் வெறுப்பை இன்னும் அதிகமாக்குகின்றனரே! குழந்தையைப் பார்க்க வரச் சொல்லி யார் இவர்களை அழைத்தது? அப்படித்தான் வருகிறார்களே, வந்தோமா, பார்த்துவிட்டுப் போனோமா என்றில்லாமல், தேவையற்ற விஷயங்களைப் பேசிக் குடும்பத்தில் குழப்பம் பண்ணுகிறவர்களை, ஓங்கி ஓர் அறை விடலாமா என்று கூட சமயத்தில், எனக்கு ஆத்திரம் வருகிறது. முதல் குழந்தை பெண் என்பதால், இரண்டாவது ஆணாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்; அடுத்தது கண்டிப்பாக ஆண்தான் என நம்பிக்கையோடு இருந்த எனக்கு, கவின் பெண்ணாகப் பிறந்தவுடன் ஏமாற்றமாகப் போய்விட்டது. பிறந்த குழந்தையைச் சரியாகக் கவனிக்காமல் ஒரு சில நாட்கள் வருத்தத்துடன் இருந்தேன். பாவம்! குழந்தை என்ன செய்யும்?அதன்பின் ஓரிரு நாட்களில் மனதைத் தேற்றிக்கொண்டு, குழந்தையைக் கொஞ்ச ஆரம்பித்துவிட்டேன். ஆனால் வருகிறவர்கள், நான் மறக்க நினைக்கும் செய்தியைத் திருப்பித் திருப்பிப் பேசித் துன்பத்தை அதிகமாக்கும்போது, என் ஆத்திரம் எல்லையை மீறுகிறது மணி! அன்றொரு நாள், என் மாமியாருக்குத் தூரத்துச் சொந்தம் ஒரு பாட்டி. அது வரும் போதே, ஏதோ துக்க வீட்டுக்கு வருவது போல் முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு வந்தது. த்சொ, த்சொ என உச்சுக் கொட்டிக்கொண்டு, “இதுவாவது ஆணா பொறந்திருக்கக்கூடாதா, என்னமோம்மா, போன ஜென்மத்துல நீ செஞ்ச பாவம், இதுவும் பொட்டையாயிடுச்சு,” எனஅங்கலாய்த்தது. “ஏன்? இது பொண்ணா இருந்தா, ஒங்களுக்கென்ன கஷ்டம்? வளர்க்கப் போறவ நான் தானே?” என்றேன், நான் காட்டத்துடன். நான் கோபமாக இருக்கிறேன் என்பதைப் புரிந்துகொண்டு, அதோடு வாயை மூடிக் கொண்டு போயிருந்தால், எந்தப் பிரச்சினையுமில்லை. “சாண் புள்ளைன்னாலும் ஆண்புள்ளைன்னு சும்மாவா சொன்னாங்க அந்தக் காலத்துல?பொட்டைப் புள்ளைங்க கல்யாணம் ஆயி, புருஷன் வீட்டுக்குப் பூடும். ஆம்பளைப் புள்ளைதான் கடைசிக்காலத்துல நம்மளை வச்சுக் காப்பாத்தும், கஞ்சிஊத்தும்,” என்றது அது. “ஒங்களுக்கு ரெண்டும் ஆம்பிளை புள்ளைங்க தானே?கடைசி காலத்துல ஒங்களை வைச்சு, ஒரு வேளை கஞ்சிக் கூட ஊத்தாம, ஏன் வூட்டை விட்டு துரத்தினாங்க?” என்றேன் நான். வாயடைத்து விட்டது கிழவிக்கு. என் மாமியாரிடம் போய் என்னைப் பற்றி என்ன வத்தி வைத்ததோ, அதற்குப் பிறகு வீட்டில் ஒரே கசமுசா. சம்பாதிக்கும் திமிர் என்ற வார்த்தை மட்டும், அடிக்கடி என் காதில் விழுந்தது. என் காதில் விழவேண்டும் என்பதற்காகவே, சத்தமாகச் சொல்லியிருக்கலாம். உண்மையைச் சொன்னால், எனக்குச் சம்பாதிக்கும் திமிராம்! நீ அடிக்கடி சொல்வது போல், இப்படியெல்லாம் யாரையும் முகத்துக்கு நேராக எடுத்தெரிந்து பேசக்கூடாது என்று தான் நினைக்கிறேன். ஆனால் இந்தக் காலத்திலும் பொட்டச்சி என்றெல்லாம், ஒரு பெண் குழந்தையை மட்டமாக, அதுவும், ஒரு பெண்ணே பேசுவதை என்னால் ஜீரணிக்க முடியவில்லையே மணி! நான் என்ன செய்ய? அந்தப் பாட்டி கிளம்பின மறுநாள், “வயசானவங்க ஏதாவது சொல்வாங்கதான். அதுக்காக வாய்த்துடுக்காப் பேசி மரியாதைக் குறைவாக இப்படி நடந்துக்கக்கூடாது,” எனக் கடுமையாக எச்சரித்தார் என் கணவர். அவருக்கு ஏற்கெனவே என் மேல் கோபம். இரண்டாவதும் பெண் குழந்தை என்றவுடன், அவரது அம்மா பேச்சைக் கேட்டுக்கொண்டு, “குடும்பக் கட்டுப்பாடு இப்போ வேணாம்; மூணாவது குழந்தையைப் பார்த்துட்டுச் செஞ்சுக்கலாம்; அது ஆம்பிளைப் புள்ளையாயிருந்தா, நம்ம எல்லாருக்கும் மகிழ்ச்சிதானே?” என்றார். அது ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பதற்கு என்ன உத்திரவாதம்? அதுவும் பெண் குழந்தையாக இருந்துவிட்டால் என்ன செய்வது? என்று கேட்டுப் பிடிவாதமாக இருந்து, குழந்தை பிறந்த மூன்றாவது நாளில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டுவிட்டேன். இப்போது இந்தக் கிழவியிடம் நான் கேட்ட கேள்வியால் ஏற்பட்ட கோபத்தோடு, பழைய கோபமும் சேர்ந்து கொண்டதால், எப்போதும் என்னிடம் கடுகடு என்றிருக்கிறார். என் கால்களில் நான் நிற்கும்போதே, என் தேவைகளுக்காக இவர்களை எதிர்பார்க்காத போதே, என் குழந்தையைப் பற்றி இவர்கள் இப்படிப் பேசும்போது, ஒருவேளை நான், இவர்கள் கையை எதிர்பார்க்கிறவளாக இருந்திருந்தால், என்ன நடந்திருக்கும் என்று யோசிக்கிறேன். தென்தமிழகத்தில், பெண் குழந்தைகளைக் கள்ளிப்பால் அல்லது நெல்மணி போட்டுக் கொல்கிறார்களாமே, அதுபோல் என்னையும் கொல்லச் சொல்லியிருப்பார்களோ? இது போன்றத் தேவையில்லாத எண்ணங்கள், என் மனதை அலைக்கழிக்கின்றன மணி! நான் மருத்துவமனையில் இருந்தபோது, பக்கத்து அறையில் இருந்தவருக்கும் பெண் குழந்தை தான் பிறந்தது. அந்தம்மா பாவம், என்னிடம் புலம்பித் தீர்த்துவிட்டார். அவருக்கும் இது இரண்டாவது குழந்தையாம். “ஆம்பிளைப் புள்ளை பொறந்தா வீட்டுக்கு வா, இல்லேன்னா, உங்கம்மா வீட்டுலேயே இரு”ன்னு சொல்லிவிட்டுப் போய்விட்டாராம், அவரது கணவர். “நீங்களாவது சம்பாதிக்கிறீங்க. ஒங்கப் புருஷன் ஒங்களைக் கைவிட்டாலும் பாதகமில்லை. எங்கம்மாவூட்டிலேயும் வசதியில்லை. ரெண்டு பொம்பிளைப் புள்ளைகளை வைச்சிக்கிட்டு நான் என்னம்மா செய்வேன்,” என்று ஓன்னு கதறி விட்டார் அவர். எனக்கு அவரைப் பார்க்க மிகவும் பாவமாயிருந்தது. பெண்களுக்குக் கல்வியும், சொந்தக் காலில் நிற்கும் பொருளாதாரச் சுதந்திரமும், மிகவும் முக்கியம் என்று நீ அடிக்கடி சொல்வாயல்லவா?அது எவ்வளவு உண்மை என்பதை, அன்றைக்குத் தெரிந்துகொண்டேன் மணி. குழந்தை பெண்ணாகப் பிறக்கிறதுக்கும், ஆணாகப் பிறக்கிறதுக்கும் காரணம் கூடத் தெரியாமல், அப்பாவி பெண்டாட்டி மேல் பழியைப் போடுகிற கடைந்தெடுத்த முட்டாள், ஒருவேளை நம் கணவனாக வாய்த்து விட்டால் நம் கதி? என் அம்மாவிடம் எப்போதாவது என் மனக்குறையைச் சொல்லத் துவங்கினால் போதும். “ஆரம்பத்துல எல்லாம் அப்படித்தான் இருக்கும். போகப் போகச் சரியாயிடும். நீதான் எல்லாரையும் கொஞ்சம் அனுசரிச்சுப் போகணும்,” என்று சொல்லி, என்வாயை அடைத்துவிடுகிறார். கணவரிடமும் உன்னிடம் பேசுவது போல், எல்லா விஷயங்களையும் பேச முடியவில்லை. என் உள்ளக் குமுறல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல், வீட்டிலேயே அடைப்பட்டுக் கிடப்பதால், என் மன அழுத்தம் அதிகமாகிக் கொண்டே செல்கிறது மணி. தபாலாபீஸ் சென்று டிரங்கால் பதிவு செய்து, உன்னிடம் தொலைபேசியில் பேசுவோமா என்று முதலில் நினைத்தேன். அலுவலக நேரத்தில் உன்னைத் தொந்திரவு செய்வதை நீ விரும்பமாட்டாய். மேலும் டிரங்கால் இணைப்பு எளிதில் கிடைக்காமல், நம் பொறுமையைச் சோதித்துவிடும். பொது இடத்தில், தனிப்பட்ட செய்திகளைப் பேசவும் எனக்குத் தயக்கம். வீட்டுக்கு வரச் சொல்லிக் கடிதம் எழுதுவோமா என்றும் நினைத்தேன். ஆனால் இங்கு எல்லோருக்கும் முன்னால், மனம் விட்டு எதுவும் பேச முடியாது என்பதால், மனதில் உள்ளவற்றை ஒன்று விடாமல் கொட்டிக் கடிதம் எழுதுவதெனத் தீர்மானித்தேன். இக்கடிதத்தில் என் மனச் சுமையை உன்னிடம் இறக்கி வைத்த பிறகு, மனம் இலகுவாகி, சிறகுகள் முளைத்து, வானில் பறப்பதுபோல் உணர்கிறேன் மணி. நீண்ட நாட்களுக்குப் பிறகு, இன்று மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் மன அழுத்தத்தை நீக்கிப் புத்துணர்வு கொடுத்த, இந்தக் கடிதத்துக்குத் தான் நான் நன்றி சொல்ல வேண்டும். உரிமையுடன் என்னைக் கண்டித்து, நான் செய்த தவறுகளைச் சுட்டிக் காட்டிப் புத்திமதி சொல்லி, உடனே நீ பதில் எழுதுவாய் என எனக்குத் தெரியும். என் நலனில் உண்மையான அக்கறை உள்ளவள் என்பதால், நீ என்ன சொன்னாலும் கேட்டு, அதன்படி நடப்பேன். உன்னைப் போன்ற தோழி, எனக்கு வாய்த்தது நான் செய்த புண்ணியம். ஒரு மகிழ்ச்சியான செய்தி மணி! முதலிலேயே எழுத மறந்துவிட்டேன். என் குழந்தை பிறந்த நாளைக் கவனித்தாயா? எனக்குப் பிடித்த பாரதியாரின் பிறந்த நாளில் தான், என் கவியும் பிறந்திருக்கிறாள். வருங்காலத்தில் ‘அச்சமும் நாணமும் நாய்கட்கு வேண்டுமாம்,’ என்று சொல்லும் பாரதியின் புதுமைப் பெண்ணாக, இவள் பிரகாசிப்பாளோ? நான் விடுப்பு முடிந்து வேலையில் சேர, இன்னும் இரு மாதங்களுக்கு மேலாகும். குழந்தை பிறந்த விஷயத்தை அலுவலகத்தில் எல்லோரிடமும் தெரிவித்து விடு. அங்கு ஏதும் சிறப்புச் செய்திகள் உண்டா? உன் கடிதங் கண்டு பதில், இப்படிக்கு உன் அன்பு நண்பி ஆதிரை 10. சிறப்புப் பரிசு [4]: ராஜலஷ்மி பரமசிவம் அன்புள்ள தோழி மணிமொழிக்கு, நீயும் உன் வீட்டினரும் நலமுடன் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இப்பொழுது கடிதம் எழுத என்ன அவசியம் என்று தோன்றலாம். மேலே படி உனக்கே புரியும். எனக்கு மிகவும் தெரிந்த ஒருவருடைய மகள், நன்கு படித்தவள், நல்ல உத்தியோகம், சம்பளம், கண் நிறைந்த கணவன், அழகான குழந்தை என்று வாழ்ந்து கொண்டிருந்தவள் சட்டென்று விவாகரத்து செய்வதாக சொன்னவுடன், என் மனம் தாங்க முடியாத வேதனையில் ஆழ்ந்தது. என் ஆதங்கத்தை யாரிடமாவது சொல்ல நினைத்தேன். அதனால் தான் இக்கடிதம் எழுதுகிறேன். இப்பொழுதெல்லாம் விவாகரத்து என்பது சர்வ சாதாரணமாகி விட்டதே என்கிற ஆதங்கம் தான் மேலோங்கியது. எங்கே தவறு செய்கிறோம் என்று யோசித்தேன். என் மனதில் தோன்றியதை இதோ கொட்டி விட்டேன். உலகமே நம்மைப் பார்த்து மூக்கில் விரல் வைக்கும் ஒரு விஷயம் உண்டென்றால், அது நம் குடும்ப அமைப்பு தான். அந்தக் குடும்ப அமைப்பை போற்றிப் பாதுகாத்து, சிறிதளவும் சிதையாமல் அடுத்தத் தலைமுறைக்கு கொண்டு செல்வதில், நம் பெண்களுக்கு மாபெரும் பங்கு இருக்கிறது என்பதை யாருமே மறுக்க முடியாது. அதை நம் பெண்களும் லாவகமாக, நேர்த்தியாக கொண்டு சென்றார்கள். ஆனால் இப்பொழுது அந்தக் குடும்ப அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து கொண்டிருக்கிறது. நான் சொல்லவில்லை. குடும்ப நல நீதி மன்றத்தில் மலையாய் குவிந்திருக்கும் விவாகரத்து வழக்குகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. நம் பாட்டித் தலைமுறைப் பெண்கள் வீட்டிற்குள்ளேயே தன் ராஜாங்கத்தை அடக்கி வாழ பழக்கப்பட்டவர்கள். பெரும்பாலும் கூட்டுக் குடும்ப வாசிகள் இவர்கள். அவர்களுக்கு கருத்து சுதந்திரம் கிடையாது. அவர்களுக்கு அடுத்தத் தலைமுறைப் பெண்கள் வீட்டையும், அலுவலகப் பணியையும் ஒருங்கே செய்து இரட்டைக் குதிரை சவாரி செய்தவர்கள். அவர்களுக்கு ஓரளவு சுதந்திரம் இருந்தது என்று சொல்லலாம். அதற்கும் அடுத்த தலைமுறைப் பெண்கள், இக்கால இளம் மங்கையர், பெயருக்குப் பின்னால் பல பட்டம் தாங்கியவர்கள். இவர்களில் பெரும்பாலோர் அலுவலகத்தில் பணி புரிகிறவர்கள். இவர்களுக்கு இன்னும் கூடுதல் சுதந்திரம் இருக்கிறது. இவர்களுக்கு அவர்கள் கணவர்களுடைய உதவி பெரிய அளவில் கிடைக்கவே செய்கிறது. சமையலாகட்டும், குழந்தை வளர்ப்பிலாகட்டும் எல்லாவற்றிலும் கணவன் உதவிக் கரம் நீட்டுகிறான். பொருளாதாரத்திலும் பெண்களின் நிலைமை முன்னேறியிருக்கிறது. இக்காலப் பெண் பொருளாதாரத்திற்காக கணவனை நம்பியிருக்க வேண்டிய நிர்ப்பந்தமில்லை. இது அத்தனையும் பாராட்டுக்குரியதே. ஆனால் விவாகரத்தும் அதிகமாகிக் கொண்டு வருகிறது. ஏன்? மிகப் பெரிய கேள்வி இது. இந்தத் தன்னிறைவுத் தன்மையை சில பெண்கள் தவறாகப் பயன்படுத்திக் கொள்கிறார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது. பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தினால் அவர்களின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, சகிப்புத்தன்மை எல்லாவற்றையும் தொலைத்து விட்டார்களோ என்கிற அச்சம் எழுகின்றது. விட்டுக்கொடுத்துப் போவது என்பது அடங்கி வாழ்வது என்று தவறாகப் புரிந்து கொள்வதன் விளைவு, விவாகரத்தில் முடிகிறது. நான் எல்லாப் பெண்களையும் சொல்லவில்லை. அற்பக் காரணங்களுக்காக விவாகரத்து செய்து, வாழ்க்கையைத் தொலைத்து விட்டு நான் சுதந்திரமாக இருக்கிறேன் என்று பெருமைப்படும் பெண்களை என்ன சொல்வது? இப்படிக் கண்ணை விற்று ஓவியம் வாங்கத் துணியும் பெண்களைப் பற்றி தான் குறிப்பிடுகிறேன். ஆணாகட்டும், பெண்ணாகட்டும் திருமணத்திற்கு முன் கனவுகளையும், கற்பனைக் கோட்டைகளையும் கட்டி வைத்திருப்பார்கள். சந்தேகமில்லை. அந்த எதிர்பார்ப்புகள் நடக்கவில்லையென்றால், அந்தக் கனவுக் கோட்டை தகர்ந்து நொறுங்கிப் போவதை அவர்களால் எதிர்கொள்ள முடியாமல் போய், ஒரு கால கட்டத்தில் தம்பதிகள் கோர்ட் படியேறி விடுகிறார்கள். சரி. விவாகரத்தும் ஆகிவிடுகிறது என்றே வைத்துக் கொள்வோம். அதற்குப் பிறகு…..? தம்பதிகள் இருவருக்கும் வாழ்க்கை ஒரு பெரிய கேள்விக்குறி தானே! குழந்தைகள் இருந்தால் அவர்களும் உள ரீதியாக அலைக்கழிக்கப்படுவது நிஜம். அப்படி என்றால் என்ன சொல்ல வருகிறாய்? விட்டுக் கொடுப்பது எப்பொழுதும் மனைவியாகத் தான் இருக்க வேண்டும் என்று சொல்கிறாயா? ஏன் கணவன் விட்டுக் கொடுத்தால் குறைந்து போய் விடுமா? என்று விவாதம் செய்ய வேண்டாம். தம்பதிகளுக்குள் யார் விட்டுக் கொடுப்பது என்பதில் சர்ச்சையே இருக்க வேண்டாமே. தொலை நோக்கில் பார்த்தோமானால், யார் விட்டுக் கொடுப்பது என்கிற வீர விளையாட்டில் இன்று தோற்பவர் தான், பின்பு வெற்றி காண்கிறார். எங்கோ படித்தது நினைவிற்கு வருகிறது. திருமணம் என்பது வங்கி சேமிப்பு கணக்குப் போன்றது. நாம் எவ்வளவு அன்பை செலுத்துகிறோமோ, கண்டிப்பாக அது வட்டி போட்டு பலமடங்காகி நமக்கு திருப்பி வரும். அன்பு மட்டும் தான் பலமடங்காக வருமா என்ன? வெறுப்பை உமிழ்ந்தால், அதுவும் பலமடங்காகி விடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த சமயத்தில் ‘ O Henry ‘ன் கதை ஒன்று நினைவிற்கு வருகிறது. நிறைய பேருக்கு இது தெரிந்திருக்கலாம். அதன் தமிழாக்கம் இதோ… வறுமையில் வாடும் கணவன் மனைவி. ஒருவருக்கு ஒருவர் கொடுத்துக் கொள்வதற்கு அன்பைத் தவிர வேறெதுவும் பெரிதாக இல்லை. மனைவி தன் நீண்ட அழகிய கூந்தலை சீவி முடித்து கொண்டையிடும்போது ஒரு “ப்ரூச்” இருந்தால் அழகாக இருக்குமே என்று நினைக்கிறாள். அவள் நினைப்பது அவள் கணவனுக்குத் தெரியும். ஆனால் வாங்குவதற்கு கணவனிடம் வசதியில்லை. கிறிஸ்துமஸ் பரிசாகவாவது கொடுக்க முயல்வோம் என்று நினைக்கிறான் கணவன். கிறிஸ்துமஸ் வருகிறது… மனைவிக்கு, அவள் கணவனிடம் இருக்கும் பாரம்பர்யமான வாட்ச் பற்றித் தெரியும். அதற்கு தங்க ஸ்ட்ராப் வாங்கி கொடுக்க நினைக்கிறாள். கிளம்புகிறாள். கணவனோ இவள் கூந்தலிற்கு ‘ப்ரூச்’ வாங்கக் கிளம்புகிறான். இருவரும் பணத்திற்காக அலையோ அலை என்று அலைகிறார்கள். கிடைக்கவில்லை. மாலை இருவரும் வீடு திரும்புகிறார்கள், மனைவி வாட்ச் ஸ்ட்ராப்புடனும், கணவன் ‘ப்ரூச்’சுடனும். வீடு திரும்பிய இருவருமே அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள். கணவன் தன்னுடைய பாரம்பர்ய வாட்சை விற்று ப்ரூச் வாங்கியிருக்கிறான். மனைவியோ தன் கணவருக்காக அழகிய நீண்ட கூந்தலை ‘விக்’ செய்யும் கடைக்கு விற்று விட்டு வாட்ச் ஸ்ட்ராப் வாங்கி வந்து விடுவாள். இருவருக்கும் புரிகிறது தாங்கள் வாங்கி வந்தது இனிமேல் உபயோகப்படாது என்று. கண்கள் குளமாகின்றன. காதலோடு மனைவியை இழுத்து அணைத்துக் கொள்கிறான். அங்கு வார்த்தைகளே இல்லாமல் காதல் உணரப்பட்டது.வறுமையின் உச்சத்திலும் காதல் வளமாக இருக்கிறது இல்லையா? உண்மைக் காதல், துணையை அவர்களின் குறைகளோடு ஏற்றுக்கொள்ளச் செய்யும் என்பதில் சந்தேகமேயில்லை. இதை சகோதரிகள் உணர்ந்து கொள்வார்களா? குறையில்லாத மனிதர் யார்? ஒருவரை சுட்டிக்காட்ட முடியுமா நம்மால்? இதை மனதில் வைத்தால் கண்ணை விற்று ஓவியம் வாங்க முயல மாட்டோம். நீ என்ன நினைக்கிறாய் இதைப் பற்றி…. சொல்லேன். நான் நினைப்பது சரி தானே? அன்புடன், உன் தோழி, ராஜலக்ஷ்மி பரமசிவம். 11. சிறப்புப் பரிசு [5]: சங்கர் சுப்ரமண்யன் அன்புள்ள மணிமொழிக்கு எப்படி இருக்கிறாய்..! என்று என் இதயத்திலிருந்து எழும் மெல்லியதொரு கேள்விக் குரல், என் மெளனம் கலைக்காமல் வெளிவந்து காற்றோடு உனைத் தேடிப் பயணிக்கிறது. கண்கள் இலேசான கண்ணீரில் திரையிட்டுக் கொள்ள, என் நினைவுகள் எனைக் கேளாமல் நம்முடைய நினைவுப்புத்தகத்தின் பக்கங்களைத் திறக்கிறது. நம் முதல் சந்திப்பில் நான் எப்படியாக உன்னை உணர்ந்தேன் என்பதுதான், என்னை நானே பலமுறையாக கேட்டுக் கொள்ளும் கேள்வி… அந்த இளந்தென்றல் வீசிய மாலைப்பொழுதில், ஒரு துாரத்து சொந்தத்தின் திருமணவிழாவில், நீ எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டாய், இலேசான கேலியுடன், புத்தகப் புழு..! என்று . ஆச்சரியங்களுடன் நான் உன்னை பார்க்க, அடக்கமான புன்னகையுடன் ஏற்றுக்கெண்டாய். ஏதாவது பேசலாம் என்று வார்த்தைகள் தேட, மறுப்பு இல்லா புன்னகையுடன் நீ இடம் மாறிக்கொண்டாய் . யாரிடமும் பெரியதொரு வார்த்தை பரிமாற்றம் இல்லாமல், பெரும்பாலும் மெளனமாகவே…. திருமணம் முழுவதும், ஆனால் ஏதாவது காரியங்கள், யாராலோ கட்டளையிடப்பட, அதை நீயும் மாறாத புன்னகையுடன் நிறைவேற்றி கொண்டிருக்க, என் பார்வை உன்னை என்னில் முழுமையாக பதிக்க முயற்சித்து கொண்டே இருந்தது, அந்த நாள் முழுவதும். இயல்பாகவும் நானாகவும் ஏற்படுத்திக் கொண்ட அடுத்தடுத்த சந்திப்புகள் நம் எண்ண அலைகளை நேர் வரிசையில் கொண்டு செல்ல, என் எண்ணங்களில் நீ பவனி வருவது அதிகமாகிக் கொண்டே போக, உன்னில் தடுமாற்றங்களை தாண்டி என்னுடைய நினைவுகள் பதிந்ததை நீ அழுத்தமாக எனக்கு வெளிப்படுத்தியதும், நான் நானற்றுப்போய் என்னுள் நீ முழுமையாக வியாபித்துக்கெண்டாய். உன் முகம், உன் நினைவு, உன் கனவு என என்னுடைய தினங்களின் அத்தனை கணங்களிலும் நீயே நிறைந்து, எப்பொழுதும் குதுாகலிக்கும் மனம், எல்லாவற்றையும் ஆழமான இரசிப்புடன் பார்க்கும் பார்வை என என்னையறியாமலே நான் முழுமையாக மாறிப்போக…!, இப்பவும் என் மனம் அந்த காலகட்டத்தின் எப்பக்கம் திறப்பினும் இதயபக்கமெல்லாம் நிறைந்து வழியும் உன் நினைவுகள்… மயக்கம், மயக்கமின்மை என இரண்டும் கலந்து போன நிலையில், இரவுகள் நீண்டு கொண்டே போகும் உன் நினைவுகளுடன் நித்திரையில்லாமல் படுக்கையில். இருளும் வெளுப்புமில்லாத அந்த அதிகாலை வேளையில் , உன் எண்ணங்களோடு நான் நடந்து போக, எனைக் கடக்கும் அத்தனை பேரையும் அடையாளங்களற்ற உருவங்களாகத் தான் என் மனம் உணர்ந்தது. கண்டு கொண்ட சந்தோசத்தில், ஆர்ப்பரித்து வேகத்துடன் தொடவரும் அலைகளின் கரையோரம் அமர்ந்திருந்த, என் அருகாமையில் நெருக்கமாக அமர்ந்து , தோள் சாய்ந்து நீ விடும் மூச்சுக் காற்றில் கலந்து வரும் உன் உயிர், தென்றலாக இதயம் தடவி என் உயிர் தீண்டியதும். சத்தமில்லாத மௌனத்தில் இந்த உலகமே இயங்க மறந்து நின்று போக, எனைக் கேளாமல் என்னிலிருந்து பிரிந்த என்னுயிர் உன்னில் கரைந்து காணாமல் போனது. அப்படியாக….. இப்பொழுது நினைத்தாலும் என்னால் மீளமுடியாத சந்தோசத்தில் என் இதயத்தை நிறைத்து கொள்ளும், பல…! மறக்க முடியாத தருணங்கள். எண்ணமும், வாழ்க்கையின் நிஜங்களும் எப்பொழுதுமே ஒரே நேர் கோட்டில் பயணிப்பதில்லை. வாழ்க்கை விளையாட்டு என்ற விதி சாஸ்திரம், எதிர்ப்பதங்களை வைத்து சோதிக்கவே விரும்புவதாக எனக்கு எப்பொழுதுமே தோன்றும். அப்படியான அந்த காலகட்டத்தில், என்னை நிலைப்படுத்தி கொள்ள நான் எடுத்த அத்தனை முயற்சிகளுக்கும் தோல்வி முடிவு எழுதி, எனைப்பார்த்து விதி நகைத்த அதேவேளை, மன அகங்காரங்கள் என்ற மாய வலையில் வீழ்ந்த உன் குடும்பம், உன்னை சுற்றி எழுப்பிய தடைகளை நீ எதிர்க்க முடியாமல், எதிர்த்து கூட்டி செல்வேன் என்று எதிர்பார்த்த என்னாலும் எதுவும் முடியாமல், திணறிப் போராடிய உனக்கும்… மிஞ்சியது உடல் வலிகளும் மனவலிகளும்தான். வார்த்தைகள், விவாதங்கள், போராட்டங்கள், சோர்வுகள் என மாறிமாறி, நம்மைக் கலங்கடித்த, அத்தனை சந்தர்ப்பங்களும் நமக்கு எதிர் நின்று, கட்டுப்பாடில்லா ஆழங்களுக்கு நம்மை தள்ளிப்போனது. மீளமுடியாமல் இருவரும் கண்ணீரும், அழுகையும், கடவுள் நம்பிக்கையும் என பிடிமானத்திற்கு சிறு கொடி தேடி, தவித்து , கலைத்து போனோம். இன்னமும் அழிக்க முடியாத சாட்சியாக நினைவில் நிலைத்திருக்கிறது, அந்த கடைசி நேர சந்திப்பு… எப்பொழுதும் மடைதிறந்த வெள்ளம் போல் பாயும் உன் வார்த்தைகளை, என் மௌனத்தின் வாயிலாகவே இரசித்து, என் மெளனப்புன்னகையே உன் வார்த்தைகளுக்கு அர்த்தமான பதிலாக வெளிப்படுத்தும் நான், அன்று பதில்களற்ற மெளனத்தில் கரைய, நீயோ வார்த்தைகளற்ற மெளனத்தி்ல் அமர்ந்திருந்தாய் என் பக்கத்தில். கலையாத அந்த நிசப்தம் நம் உள் மனதை அசைத்து திருப்ப, கண்ணீரில் நிறைந்தன நம் இருவருடைய கண்களும் வார்த்தைகள் தேடித்தேடி கலைத்தது. நம் இருவரது மனமும், தாங்கமுடியாத ஒரு கணத்தில் என் கையை எடுத்து உன் கைகளுக்குள் வைத்து இறுகப்பற்றி கொள்ள, பிரபஞ்சம் தாண்டிய உலகத்தில் நாம் இருவர் மட்டும் காற்றில் பறப்பதாகத்தான் எனக்கு தோன்றியது. விட்டு வெளிவர முடியாமல் கணங்கள் நீண்டுகொண்டே போக, நம்முடைய உலக இருத்தல் இந்த கணமோடு மடிந்து விடாதா.. என்ற ஏக்கங்கள் மட்டுமே நெஞ்சில் நிறைந்திருந்தது. கடினப்பட்ட மனதுடன், தளும்பிய கண்ணீருடன் வருகிறேன்.. என்று, உன் கைகளை சடெக்கென்று விடுவி்த்து, திரும்பி பார்க்கவும், தைரியமின்றி நீ ஓடிச்சென்றாய்….. அந்த வானம் மொத்தமாக நழுவி என் தலையில் விழுந்த மாதிரியான, தாங்கமுடியாத கனத்துடன் என் இதயம் நொறுங்கிப் போனது. நானும் இந்த உலகமும் வேறுவேறாக பிரிந்து, பிடித்தரமற்ற உயரத்திலிருந்து, தலைகீழாக நேர்பாதையில், வேகத்துடன் கீழ் நோக்கிப் பயணிப்பதாகத்தான் தோன்றியது. எப்படியாவது என்னிலிருந்து என் உயிர் நழுவாமல் தக்க வைத்து கொள்ள போராடித் தவித்த அந்த கணங்கள், என்னால் எப்பொழுதுமே மறக்க முடியாத, இப்பொழுது நினைத்தாலும் மனம் கனத்து கண்களில் கண்ணீர் திரையிட்டு நான் எனை மறந்து போகும் கணங்கள். ஒவ்வொரு முறையும் உன் ஞாபகங்களில் என்னைத் தேடும் பொழுதெல்லாம், என்னுள் நிகழும் மாயாஜாலங்களில் எழும் அத்தனை உணர்வுகளையும் வார்த்தைகளுக்குள் அடக்கி, அழகாக அந்த வார்த்தைகளை கோர்த்து, உன்னிடம் மடலாக சமர்ப்பிக்கவே விரும்புகிறேன். ஆனால் மணிமொழி இருவேறு துருவங்களாக மாறிப்போன நம் வாழ்க்கை பாதையில், நீயோ எங்கோ ஒரு தூர தேசத்தில், தேடிவரமுடியாத தொலைதூரத்தில் உயிர் வாழ, என்னால் எப்பவுமே சமர்ப்பிக்க முடியாத இந்த மடல்கள்தான், என் உயிர் வாழ்க்கையின் ஆதாரமாக, என் இதய பக்கங்களில் நிறைந்து கிடக்கிறது. சங்கர் சுப்ரமணியன் 12. சிறப்புப் பரிசு [6]: புதுவை பிரபா அன்புள்ள மணிமொழிக்கு.. அப்பா எழுதுவது. நலமா அம்மு? எப்படி இருக்கிறது கல்லூரி வாழ்க்கை? எப்படி இருக்கிறது விடுதி உணவு? எப்படி இருக்கிறது இந்த தற்காலிகப் பிரிவு? பன்னிரண்டாம் வகுப்புவரை உனை பார்க்காமல் நானும்..எனை பார்க்காமல் நீயும் இருந்த நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பதினெட்டு ஆண்டு காலமாக இத்தகைய நீ…ளமான பிரிவை காலம் எனக்கு தராமல் இருந்ததற்கு அதை பாராட்டுவதா? அல்லது கொடுத்து கொடுத்து பழக்காமல் விட்டதற்கு அதன் மீது கோவித்துக்கொள்வதா என்று தெரியவில்லை எனக்கு. உன்னை நான் விடுதியில் விட்டுவிட்டுவந்து சரியாய் பதினைந்து நாட்கள்தான் ஆகிறது. ஆனால் மாதங்கள் பல ஆனதுபோல் இருக்கிறது. அழுதுகொண்டே இருக்கும் உன் அம்மாவிற்கு ஆறுதல் வார்த்தைகள் கூற முற்படும் வேளைகளிலெல்லாம் மௌனம் என்னை ஆட்படுத்திக்கொள்கிறது. சரி.. உன் தவிப்பையும் நன்கு உணர்ந்தவன் நான் என்கிற முறையில் உன்னை மேலும் சங்கடப்படுத்த விரும்பவில்லை நான். சில நாட்களுக்கு, புதிய இடம்.. புதிய தோழர் தோழியர்.. புதிய வகை உணவு.. இவற்றை ஏற்றுக்கொள்ள சற்று சிரமமாய் இருக்கும். அப்பா அம்மாவைவிட்டு பிரிந்திருக்கும் உணர்வும் உன்னை உழற்றும். நிதானமாய் நீ இருக்கவேண்டிய மிக முக்கிய தருணம் இது. சிறுவயதிலிருந்தே நான் சொல்லி சொல்லி வளர்த்த வாசகம் உனக்கு நினைவிருக்கிறதா? படிப்பிற்காக எதையும் விட்டுவிட துணியலாம். ஆனால் எதற்காகவும் படிப்பை விட்டுவிடக்கூடாது. ஆம். உன் வாழ்க்கையின் இலக்கு நோக்கி வெற்றிப் பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறாய் நீ. உனக்கு ஆர்வமான பாடப்பிரிவு ஆயிரத்து ஐந்நூறு கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் கல்லூரியில்தான் கிடைக்கும் என்று தெரிந்தும் துணிவுடன் நீ படிக்க புறப்பட்டது மட்டற்ற மகிழ்ச்சியை எனக்குள் பாய்ச்சியது. இலக்கே இல்லாமல் படிப்பதும், கிடைக்கும் பாடப்பிரிவை எடுப்பதும், அற்ப காரியத்திற்கெல்லாம் தங்களது எண்ணங்களை சமரசம் செய்துக்கொள்ளும் சராசரி மாணவ மாணவியர் மத்தியில் கொள்கை பிடிப்போடு படிக்கும் நீ, நான் பிரமிக்கும் பெருமை. அப்பா அம்மாவைவிட்டு இவ்வளவு தொலைவு வந்து இத்தகைய படிப்பு தேவையா? தவறு செய்துவிட்டாய் நீ என்று சக தோழர் தோழியர் கூறலாம். அல்லது உனக்கேகூட தோன்றலாம். அவர்களது சொற்களோ..உனது மாற்று எண்ணமோ.. உனது கொள்கையின் ஆணிவேரில் அமிலம் ஊற்றிவிடாமல் பார்த்துக்கொள். படி. ஆழ்ந்து படி.. தெளி. தெளிந்தபின் தொடந்து படி. எழும் ஐயங்களை உடனுக்குடன் தீர்த்துக்கொள். அறிவு என்பது பாடப்புத்தகங்களால் மட்டுமே வாய்ப்பது கிடையாது என்று நன்கு உணர்ந்தவள் நீ. ஆகையால்…நேரம் கிடைக்கும்போது இலக்கியம் படி. தன்னம்பிக்கை வளர்க்கும் புத்தங்களை கல்லூரி நூலகத்தில் தேடித்தேடி படி. ஆரோக்கியமான சிந்தனைகளை உன்னுள் விதைத்துக்கொண்டே இரு. மகளே!… மனதை உன் முழு கட்டுப்பாட்டில் வை. உன் கட்டுப்பாட்டைவிட்டு விலகிவிலகி ஓட ஆசைப்படுகிற இயல்பு இந்த பருவ வயது மனதுக்குடையது. அதை சமாளிக்க கற்றுக்கொள். இயன்றவரை தனிமை தவிர். இயங்கிக்கொண்டே இரு. தூக்கம் தொடர்ந்து தொந்தரவு செய்தால்மட்டும் படுக்கைக்கு போ! விழியின் நுனிக்கு விழிப்பு வரும்போதே கண்விழி. படுப்பதற்கு மட்டும் கட்டிலை பயன்படுத்து. படிப்பதற்கு அதை உபயோகிக்காதே. உட்கார்ந்து படி. கட்டிடத்திற்கு அடித்தளம்போல உடல்நலம். அதைப்பேணு. உணவு வகை, உணவு முறை மாற்றத்தால் சிற்சிறு பிரச்சனைகள் தலைதூக்கலாம். கவனத்தோடு அதை கையாள்க. எக்காரணம் கொண்டும் பட்டினி கிடக்காதே. உடலுக்கும் அறிவு இருக்கிறது என்று சிறு வயதிலேயே உனக்கு நான் எடுத்துக்காட்டுடன் கூறியவை நினைவிருக்கிறதா? ஆம். உன் உடல் மிகவிரைவில் உன் புதுவகை உணவை ஏற்றுக்கொள்ள பழகிவிடும். மகளே… மணிமொழி… உன்னை இன்னும் ஆறுமாத காலம் கழித்துதான் பார்ப்பேன் என்று நினைக்கும்போதே நெஞ்சு கனக்கிறது. உன் பிரிவினை பழகிக்கொள்ள இன்னும் எத்தனை நாட்கள் பிடிக்கப்போகிறதோ தெரியவில்லை. பரவாயில்லையம்மா. நீ எங்களைப்பற்றிய கவலையை மற. மறக்க முடியாவிடில் முயற்சிசெய். அதைவிட மறக்காமல் கடிதம் எழுது.. அடிக்கடி எழுது. நானும் எழுதுகிறேன். அன்பு மகளுக்கு…ஆசை முத்தங்களோடு…. அப்பா 13. கடித இலக்கியப் போட்டியில் பங்குபெற்ற எழுத்தாளர்களும் அவர்களது படைப்புகளும் 1. மணிமொழிக்கு ஒரு மடல்! தஞ்சை வெ.கோபாலன், பிப்ரவரி 21, 2014; http://www.vallamai.com/?p=42298 2. மணிமொழிக்கு ஓர் கடிதம் தமிழ்த்தேனீ, பிப்ரவரி 21, 2014; http://www.vallamai.com/?p=42294 3. மணி மொழிக்கொரு மடல் நடராஜன் கல்பட்டு, பிப்ரவரி 21, 2014; http://www.vallamai.com/?p=42285 4. மணி​மொழிக்கு ஓர் கடிதம்! விசாலம், பிப்ரவரி 24, 2014; http://www.vallamai.com/?p=42337 5. மணிமொழிக் கொரு மடல் நடராஜன் கல்பட்டு, பிப்ரவரி 24, 2014; http://www.vallamai.com/?p=42360 6. மணிமொழியே ஒரு மடல் சத்தியமணி, பிப்ரவரி 26, 2014; http://www.vallamai.com/?p=42429 7. மணிமொழியாம் தமிழுக்கொரு மடல் கீதா மதிவாணன், பிப்ரவரி 26, 2014; http://www.vallamai.com/?p=42421 8. அன்புள்ள மணிமொழிக்கு பி.தமிழ் முகில், பிப்ரவரி 26, 2014; http://www.vallamai.com/?p=42408 9. அன்புள்ள மணிமொழி எஸ். பாலசுப்ரமணியன், பிப்ரவரி 28, 2014; http://www.vallamai.com/?p=42485 10. மதுமொழியானாய் ! மணிமொழியே! சத்தியமணி, பிப்ரவரி 28, 2014; http://www.vallamai.com/?p=42432 11. அன்புள்ள மணிமொழிக்கு நபிதாஸ், மார்ச் 3, 2014; http://www.vallamai.com/?p=42578 12. மணிமொழிக்கு ஓர் அன்புமடல் ஞா. க​லையரசி, மார்ச் 3, 2014; http://www.vallamai.com/?p=42523 13. என் மனம் நிறைந்த மணிமொழிக்கு!… ஜெயஸ்ரீ ஷங்கர், மார்ச் 10, 2014; http://www.vallamai.com/?p=42843 14. அன்புள்ள மணிமொழிக்கு எஸ். பழனிச்சாமி, மார்ச் 12, 2014; http://www.vallamai.com/?p=42865 15. அன்புள்ள மணிமொழி பி. தமிழ் முகில், மார்ச் 14, 2014; http://www.vallamai.com/?p=42940 16. யாரினுமினிய மணிமொழிக்கோர் ஆசை மடல்! மேகலா இராமமூர்த்தி, மார்ச் 14, 2014; http://www.vallamai.com/?p=42944 17. அன்புள்ள மணிமொழி!… வில்லவன் கோதை/பாண்டியன். ஜி., மார்ச் 14, 2014; http://www.vallamai.com/?p=42981 18. அன்புள்ள மணிமொழிக்கு நேசமித்ரன், மார்ச் 19, 2014; http://www.vallamai.com/?p=43175 19. அன்புள்ள மணிமொழிக்கு சங்கர் சுப்ரமணியன், மார்ச் 19, 2014; http://www.vallamai.com/?p=43123 20. அன்புள்ள மணிமொழிக்கு சங்கர் சுப்ரமணியன், மார்ச் 19, 2014; http://www.vallamai.com/?p=43127 21. மணிமொழிக்கு ஒரு மடல்! சுப. திருப்பதி, மார்ச் 21, 2014; http://www.vallamai.com/?p=43253 22. மணிமொழிக் கொரு மடல் நடராஜன் கல்பட்டு, மார்ச் 21, 2014; http://www.vallamai.com/?p=43205 23. அன்புத் தோழி மணிமொழிக்கு சுலோச்சனா, மார்ச் 21, 2014; http://www.vallamai.com/?p=43729 24. அன்புள்ள (மணிமொழி) அம்மாவுக்கு! டி. சச்சிதானந்தம், மார்ச் 22, 2014; http://www.vallamai.com/?p=43297 25. அன்புள்ள தோழி மணிமொழி அமீர், மார்ச் 25, 2014; http://www.vallamai.com/?p=43439 26. பிரியமான மணிமொழிக்கு தி. சுபாஷிணி, மார்ச் 25, 2014; http://www.vallamai.com/?p=43392 27. அன்புள்ள தோழி மணிமொழி சித்திரை சிங்கர், மார்ச் 25, 2014; http://www.vallamai.com/?p=43396 28. அன்புக்குரிய மணிமொழி நிர்மலா ராகவன், மார்ச் 25, 2014; http://www.vallamai.com/?p=43400 29. அன்பு மிக்க மணிமொழிக்கு நந்திதா, மார்ச் 25, 2014; http://www.vallamai.com/?p=43403 30. அன்பு மகள் மணிமொழிக்கு தமிழ் செல்வி, மார்ச் 26, 2014; http://www.vallamai.com/?p=43722 31. அன்புள்ள மணிமொழிக்கு ஜெயராமன், மார்ச் 26, 2014; http://www.vallamai.com/?p=43406 32. அன்பு மணிமொழிக்கு!… ஞா.கலையரசி, மார்ச் 26, 2014; http://www.vallamai.com/?p=43454 33. அன்புள்ள மணிமொழிக்கு!… மு.கோபி சரபோஜி, மார்ச் 26, 2014; http://www.vallamai.com/?p=43452 34. மணிமொழியாகிற என் அன்பு அம்மாவே! ரஞ்சனி நாராயணன், மார்ச் 26, 2014; http://www.vallamai.com/?p=43445 35. அன்புள்ள தோழி மணிமொழி!… சித்திரை சிங்கர், மார்ச் 26, 2014; http://www.vallamai.com/?p=43448 36. ரசிகை மணிமொழிக்கு ஒரு மடல்.. மாதவன் இளங்கோ, மார்ச் 26, 2014; http://www.vallamai.com/?p=43419 37. பொன் மாறனின் திருமுகம்! நந்திதா, மார்ச் 26, 2014; http://www.vallamai.com/?p=43460 38. “அன்புள்ள மணிமொழிக்கு” … செண்பக ஜெகதீசன், மார்ச் 28, 2014; http://www.vallamai.com/?p=43501 39. அன்புள்ள மணிமொழி!.. வி.பாலகுமார், மார்ச் 28, 2014; http://www.vallamai.com/?p=43517 40. அன்புள்ள மணி மொழிக்கு டி. விப்ரநாராயணன், மார்ச் 28, 2014; http://www.vallamai.com/?p=43571 41. அன்புள்ள மணிமொழிக்கு டி. விப்ரநாராயணன், மார்ச் 28, 2014; http://www.vallamai.com/?p=43567 42. அன்புள்ள மணிமொழிக்கு நந்திதா, மார்ச் 28, 2014; http://www.vallamai.com/?p=43546 43. அன்புள்ள மணிமொழி!… கீதா மதிவாணன், மார்ச் 29, 2014; http://www.vallamai.com/?p=43604 44. அன்புள்ள மணிமொழிக்கு தினேஷ், மார்ச் 29, 2014; http://www.vallamai.com/?p=43616 45. அன்புள்ள தோழி மணிமொழிக்கு டி. விப்ரநாராயணன், மார்ச் 29, 2014; http://www.vallamai.com/?p=43580 46. அன்புள்ள தோழி மணிமொழிக்கு ராஜலக்ஷ்மி பரமசிவம், மார்ச் 29, 2014; http://www.vallamai.com/?p=43612 47. அன்புள்ள பேத்தி மணிமொழிக்கு டி. விப்ரநாராயணன், மார்ச் 29, 2014; http://www.vallamai.com/?p=43577 48. அன்புள்ள மணிமொழிக்கு கவா கம்ஸ், மார்ச் 30, 2014; http://www.vallamai.com/?p=43677 49. அன்பு நண்பி மணிமொழிக்கு! ஞா. கலையரசி, மார்ச் 30, 2014; http://www.vallamai.com/?p=43673 50. கண்ணின் கருமணியாம் மணிமொழிக்கு! சேஷா சீனிவாசன், மார்ச் 30, 2014; http://www.vallamai.com/?p=43670 51. அன்பு மகள் மணிமொழிக்கு பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்), மார்ச் 31, 2014; http://www.vallamai.com/?p=43701 52. அன்புள்ள மணிமொழிக்கு புதுவை பிரபா, மார்ச் 31, 2014; http://www.vallamai.com/?p=43699 53. அன்புத் தோழி மணிமொழி வைரமணி நடராஜன், மார்ச் 31, 2014; http://www.vallamai.com/?p=43712 54. அன்புள்ள மணிமொழிக்கு சரஸ்வதி ராஜேந்திரன், மார்ச் 31, 2014 ; http://www.vallamai.com/?p=43706 55. மதிப்பிற்குரிய மணிமொழிக்கு! ச. பொன்முத்து, மார்ச் 31, 2014; http://www.vallamai.com/?p=43717 56. அன்பே மணிமொழி! என் ஆனந்தக் காதலி! கவிஞர் காவிரி ​மைந்தன், மார்ச் 31, 2014; http://www.vallamai.com/?p=43708 57. அன்புள்ள மணிமொழி பாரதி, மார்ச் 31, 2014; http://www.vallamai.com/?p=43714 58. அன்பே மணிமொழி.. ஆருயிர்க் காதலியே! கவிஞர் காவிரி ​மைந்தன், மார்ச் 31, 2014; http://www.vallamai.com/?p=43680 59. அன்பே மணிமொழி! கவிஞர் காவிரி ​மைந்தன், மார்ச் 31, 2014; http://www.vallamai.com/?p=43686 60. அன்பே மணிமொழி.. எந்தன் இன்னுயிரே.. கவிஞர் காவிரி ​மைந்தன், மார்ச் 31, 2014; http://www.vallamai.com/?p=43683 61. அன்புள்ள மணிமொழிக்கு… பாரதி, மார்ச் 31, 2014; http://www.vallamai.com/?p=43690 எங்களைப் பற்றி - Free Tamil Ebooks மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள் நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும் எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. vinavu 2. badriseshadri.in 3. maattru 4. kaniyam 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948 நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். email : freetamilebooksteam@gmail.com Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? Shrinivasan tshrinivasan@gmail.com Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org Arun arun@fsftn.org இரவி Supported by Free Software Foundation TamilNadu, Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/ உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி - http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி - http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2. படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி - கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை - ஒரு அறிமுகம் http://www.kaniyam.com/introduction-to-creative-commons-licenses/ http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். நூலின் பெயர் நூல் அறிமுக உரை நூல் ஆசிரியர் அறிமுக உரை உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் நூல் - text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில். அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்? - தமிழில் காணொளி - https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் - http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !