[] அனிச்ச மலர்கள் தேமொழி freetamilebooks.com Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 அனிச்ச மலர்கள் 1. அனிச்ச மலர்கள் 1. Anicha Malargal 2. அச்சுப் பதிப்பு 3. அணிந்துரை 4. வாழ்த்துரை 5. என்னுரை 6. மதிப்புரை 7. நூலாசிரியர் 8. சமர்ப்பணம் 2. 1. சிலை அழுதது 3. 2. பழங்கணக்கு 4. 3. கொஞ்சமாவது பொறுப்பிருக்கா உனக்கு? 5. 4. யாருக்காக அழுதாள்? 6. 5. நீ என்றுமே என் மகன்தான் 7. 6. சான்றோனாக்குதல் தந்தையின் கடன் 8. 7. அம்மனோ சாமியோ !!! 9. 8. காசியில் பிடிச்சத விடணும்! 10. 9. எழுதிச் செல்லும் விதியின் கைகள் 11. 10. தீதும் நன்றும் பிறர் தர வாரா 12. 11. சற்றே இளைப்பாற … 13. 12. தெய்வமே கலங்கி நின்ற நேரம் 14. 13. உண்மைக் காதல் 15. 14. மை லிட்டில் ரெட் வேகன் 16. 15. ஜினா என்றொரு க்ருயெல்லா 17. 16. வரவேண்டும் பிள்ளையென்று காத்திருந்தாள் 18. 17. அனிச்ச மலர்கள் 1. எங்களைப் பற்றி - Free Tamil Ebooks அனிச்ச மலர்கள் அனிச்ச மலர்கள் (சிறுகதை தொகுப்பு)   தேமொழி   மின்னூல் மறுவெளியீடு : freetamilebooks.com   உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   Anicha Malargal Author: Themozhi Language: Tamil Genres: Fiction / Short Stories (single author) EBook Version of the book:- EBook ISBN: 978-0-9963993-1-9 Published in: March-2017 Publisher: Arivoli Pathippu Print Version of the book:- Print ISBN: 9789381134498 Pages: 192 Published in: October-2013 Publisher: Gowtham Pathippagam, Chennai Copyright Information: Creative Commons license: Attribution-NoDerivs 3.0 Unported (CC BY-ND 3.0). You are free: to Share — to copy, distribute and transmit the work; to make commercial use of the work. Under the following conditions: Attribution — You must attribute the work in the manner specified by the author or licensor (but not in any way that suggests that they endorse you or your use of the work). No Derivative Works — You may not alter, transform, or build upon this work. ______________________________________________________________ அனிச்ச மலர்கள் ஆசிரியர்: தேமொழி மொழி: தமிழ் வகை: சிறுகதைத் தொகுப்பு மின்னூல் வெளியீடு: மார்ச் - 2017 மின்னூல் பதிப்பு: அறிவொளி பதிப்பு EBook ISBN: 978-0-9963993-1-9 காப்புரிமை தகவல்: நூலில் எந்த ஒரு மாறுதலும் செய்ய அனுமதியில்லை என்ற நிபந்தனையின் கீழ் பதிப்புரிமை வழங்கப்படுகிறது. இதை விலையில்லாமல் விநியோகிக்கவோ, அச்சிட்டு வெளியிடும் செலவினை ஈடுகட்டும் விதமாக கட்டணம் வசூலித்து விற்பனை செய்யவோ முழு உரிமையும் வழங்கப்படுகிறது அச்சுப் பதிப்பு முதற் பதிப்பு: அக்டோபர் 2013 ISBN: 9789381134498 நூற் பெயர்: அனிச்ச மலர்கள் ஆசிரியர்: தேமொழி பொருள்: சிறுகதை நூலின் அளவு: 1/8 டெம்மி பக்கங்கள்: 192 அச்செழுத்து: 12 புள்ளி அச்சிட்டோர்: பத்மாவதி பிரிண்டர்ஸ், சென்னை-2, பேசி:+91-44-28450105 வெளியிடுவோர்: கெளதம் பதிப்பகம், 2. சத்தியவதி நகர் முதல் தெரு, பாடி, சென்னை - 600 050 (பேசி: 96888-29900, 90422-76544) விலை: ரூபாய் 80.00 அணிந்துரை கீதா பென்னட் “அனிச்ச மலர்கள்” என்ற தலைப்பில் தேமொழி அவர்கள் எழுதிய சிறுகதைகள் புத்தக வடிவில் என்னை வந்தடைந்த போது ஒரு வாரம் எடுத்துக் கொண்டு ஒவ்வொன்றாகப் படித்து விட்டு அணிந்துரை எழுதித் தரலாம் என்று தான் எண்ணியிருந்தேன். ஆனால் தொகுப்பின் முதலில் உள்ள ‘சிலை அழுதது’ கதையைப் படித்தவுடன் முழு மூச்சாக அந்த முழுப் புத்தகத்தையும் படித்து விட்டுத் தான் கீழே வைத்தேன். நான் எழுத ஆரம்பித்த காலங்களில் திரு. சுஜாதா அவர்கள் சொன்னது: “நீ உன் வீட்டு சன்னல் கதவைத் திறந்து பார். அங்கே நடப்பதை எழுது”. அதையே தான் தேமொழியின் எழுத்துக்களில் பார்க்கிறேன். அவர் அமெரிக்காவைப் பற்றியும் எழுதுகிறார். திருச்சியைப் பற்றியும் எழுதுகிறார். தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதத்தில் சுவாரசியமாக உள்ளது. முதல் கதை, கடைசி கதை ‘அனிச்ச மலர்கள்’ இரண்டுமே ஜாதி, நிற வேறுபாடுகளை முறையே அமெரிக்காவிலும், தமிழ் நாட்டிலும் பற்றிப் பேசுகின்றன. ஆனால் மிகவும் நுணுக்கமான முறையில் எழுதியிருப்பது பாராட்டுக்குரியதாகும். சாதாரணமாக எழுத்தாளர்கள் ஒன்று நகைச்சுவை எழுதுவார்கள். அல்லது மிகத் தீவிரமான விஷயங்கள் பற்றி எழுதுவார்கள். தேமொழிக்கு இரண்டுமே வெகு லகுவாக வருகின்றன. நகைச்சுவைக்கு ‘அம்மனோ சாமியோ’ கதை ஒரு உதாரணம். அதே சமயம் கண்களில் நீர் வரவழைக்கும் ‘காசியில் பிடிச்சத விடணும்’ போன்ற கதைகளையும் இவரால் எழுத முடிகிறது. சுற்றி நடப்பதைப் பார்த்து ஆதங்கப் பட்டு எழுதிய கதைகளில் எனக்கு ‘சான்றோனாக்குதல் தந்தையின் கடன்’ மிகவும் பிடித்தமானது. ஆண்டவன் கட்டளை படத்தில் வருகின்ற ஆறு மனமே ஆறு பாட்டைக் கேட்கும்போது இனி நானும் தேமொழி மாதிரியே சோசியம் பற்றி யோசிப்பேன் என்று நினைக்கிறேன். தேமொழியின் இந்தத் தமிழ்க் கதைகளில் ஆங்கில வார்த்தைகளின் கலப்படம் இல்லை. அதுவே முதலில் நம் மொழிக்கு செய்கின்றதொண்டு. மிகவும் வேண்டிய இடத்தில் மட்டும் அதுவும் வாசகர்களுக்குப் புரிய வேண்டும் என்ற ஒரே நோக்குடன் ஆங்கிலத்திலேயே வார்த்தைகளைக் கொடுத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. இம்மாதிரி பற்பல தொகுப்புகளைத் தேமொழி தமிழ் வாசகர்களான நம்மோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். கீதா பென்னட் geethabennett@india.com 6908 Sherwood Drive La Verne, CA 91750, USA வாழ்த்துரை தேமொழியும் நானும் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது அறைத்தோழிகளாக இருந்தோம். அவரது தமிழார்வம் எங்களது நட்பினை 84 முதல் தொடரச் செய்துள்ளது. எனது முனைவர் பட்ட ஆய்வில் ஒரு பகுதியான பதிப்பு வேறுபாடு செய்ய எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். “தன்னாசான் தன்னோடு கற்றோன்” என்னும் நன்னூலாசிரியரின் வாக்கிற்கு இணங்க தன்னோடு கற்றோன் என்னும் தகுதியின் அடிப்படையில் நானும் முன்னுரை எழுதத் தகுதி பெறுகின்றேன். வாழ்க்கையை எழுத்தில் பதிவு செய்யும்போது படைப்பிலக்கியமாகி கலை வடிவம் பெற்றுக் காலக் கண்ணாடியாகின்றது. நேற்றைய நிகழ்வுகள் இன்றைய கதைகளாகின்றன. அதிலும், தமிழரது வாழ்க்கையில் கதை என்பது பிரிக்க முடியாத ஒன்று. சொல்லி மாளாத கதைகள் ஏராளம். அவற்றில் சிலவற்றைத் தேமொழி இங்கு பதிவு செய்துள்ளார். தேமொழியின் கதைகள் அவருடைய மற்றும் சகமனிதர்களுடைய அனுபவங்களின் பதிவுகள் ஆகும். கதை, கட்டுரை, கவிதை, குறுநாவல், ஆய்வுக்கட்டுரை, மொழிபெயர்ப்பு என்னும் பல வடிவங்களில் இணைய தளங்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். முதல் முயற்சியாக அனிச்ச மலர்கள் நூல் வடிவம் பெறுகின்றது. வாழ்த்துகள். மனித மனத்தின் பல்வேறு பரிமாணங்கள் கதைகளில் அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஆசிரியரின் பன்னோக்குப் பார்வையைப் பல இடங்களில் உணர முடிகின்றது. சிறுகதையின் வடிவம் சிறப்பாக உள்ளது. ஆசிரியரின் சமுதாய அக்கறையும், முனைப்பும் தேடுதலும் ஊக்கமும் கதைகளில் பரவி கிடக்கின்றன. அனிச்ச மலர்கள், புத்தகத்தின் தலைப்பிற்கு ஏற்ற கதை எழுத்தாளர் திருச்சியைச் சேர்ந்தவர் என்பது அவரது வருணனையில் நன்கு தெரிகிறது. அந்தக் காலத்தில் இப்படித்தான் வருண பேதங்கள் நிறைந்திருந்தன. இது ஒரு இன ஒற்றுமைக்கான கதையாகவே உள்ளது. அத்துடன், கடைசி இரண்டு கதைகளும் நூலுக்குச் சிகரம் வைத்தது போல உள்ளன.இவரது இந்தத் தொகுப்பு இவரை மேலும் உயரத்திற்குக் கொண்டு செல்லும் என்ற நம்பிக்கயைத் தருகின்றது. வாழ்த்துகளுடன் சுபாஷிணி நம்பியார் என்னுரை ஊர்கூடி தேர் இழுப்பது போல, இந்தச் சிறுகதைகள் நூலாக வெளிவருவதில் பலரின் பங்கு அடங்கியிருக்கிறது. பொழுது போக்காக, விளையாட்டு போல எழுதத் துவங்கிய என்னை உற்சாகமூட்டி, தொடர்ந்து என் எழுத்துக்களைப் படித்து, ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கி ஊக்கமூட்டிய அனைத்து நட்புகளுக்கும் இத்தருணத்தில் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன். சிறு வயது முதலே எனது கலை ஆர்வத்தை ஊக்குவித்து வந்த எனது தந்தையின் பங்கு என்னை இவ்வாறு ஒரு பட்டாம்பூச்சியாக உருமாற்றம் பெறவைத்திருக்கிறது. என்கதைகளைச்சேகரித்துப்படிக்கக்கொடுத்தபொழுது அவற்றை நூலாக வெளியிட தனது ஆலோசனையை வழங்கியதுடன், வாழ்த்துரையும் வழங்கிய தோழி சுபாஷிணிக்கும் பொறுமையாகப் படித்து என் எழுத்துக்களில் உள்ள பிழைகளை நீக்கி மாற்றங்களைப் பரிந்துரைத்த அன்புத் தோழி மேகலா இராமமூர்த்திக்கும் இந்நூல் வெளிவருவதில் பெரும் பங்கு இருக்கிறது. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல. பல ஆண்டுகள் வாசகியாக இருந்ததைத் தவிர, முன்னர்ச் சிறிதும் பழக்கமில்லாத காரணத்தினால் மிகவும் தயங்கி அணிந்துரை வேண்டி அணுகிய பொழுது, மிக்க அன்புடன் கதைகளைப் படித்து அணிந்துரை வழங்கிப் பெருமைப்படுத்திய திருமதி கீதா பென்னெட்டிற்கு மனம் கனிந்த நன்றிகள். எழுத்துலகில் என் போன்ற புதுமுகங்கள் வளர அனுபவம் வாய்ந்த திருமதி கீதா பென்னெட் போன்ற கதாசிரியரின் ஆசி கிட்டியது நான் பெற்ற பேறு. அன்புடன் தேமொழி themozhi@yahoo.com 1042 Waverly Circle Hercules, CA 94547, US மதிப்புரை அனிச்ச மலர்கள் mathippurai.com அனிச்ச மலர்கள், தேமொழி, கௌதம் பதிப்பகம் இது ஒரு சிறுகதைத் தொகுப்பு. இந்த நூலில் மொத்தம் 17 சிறுகதைகள் உள்ளன. அதில் உள்ள கடைசி சிறுகதையின் தலைப்புதான் இந்த நூலின் தலைப்பான அனிச்ச மலர்கள். இந்த சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் முனைவர் தேமொழி (தேன்மொழி அல்ல). திருச்சியில் பிறந்து அமெரிக்காவில் வசித்துவருபவர். பல மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார். தற்பொழுது இணையத்தில் தொடர்ச்சியாக எழுதிவருகிறார். சிறுகதை எழுதும் முறையில் பல வகைகள் உள்ளன. நடந்த சம்பவத்தை சுருக்கமாகக் கூறுவது, ஒரு நாளில் ஒருவன் வாழ்வில் நடந்ததைக் கூறுவது, ஒரு ஆரம்பம் ஒரு பிரச்சனை, முடிவு என கொஞ்சம் பெரிய சிறுகதையாகக் கூறுவது என பலவகையில் உள்ளன. சுஜாதா போல சாதாரண கதையில் கிளைமாக்ஸில் சின்ன திருப்பம்/அதிர்ச்சி/டுவிஸ்ட் வைப்பது என்பது பொதுவான சிறுகதை பாணியாகும். இந்த நூலில் முதல் கதை “சிலை அழுதது”. ஒரு ராணுவ வீரனின் மரணத்துக்குபின் அவன் காதல் மனைவி எடுக்கும் முடிவைப் பற்றியது. உணர்வுபூர்வமான கதை. முடிவு எதிர்பாராதது மற்றும் ஒரு வார்த்தையில் பல விஷயங்களைப் புரியவைக்கும் அழகான முடிவு. ஆனால் இந்தக் கதையின் ஆரம்பத்தில் வரும் இறுதிச்சடங்கு பற்றிய வர்ணனை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா என கேட்கத் தோன்றுகிறது. 31 பக்க சிறுகதையில் (!) 7 பக்கங்கள் இந்த வர்ணனையே போய்விடுகிறது. ஆனாலும் அதில் வரும் தகவல்கள் பல புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள உதவுகிறது என்பதை மறுக்கமுடியாது. உதாரணமாக சவப்பெட்டியை எப்படித் தூக்கி வருவார்கள், அதில் உள்ள தேசியக்கொடியை எப்படி அகற்றவேண்டும், எப்படி மடிக்க வேண்டும் என விரிவாகக் கூறியுள்ளார். இரண்டாம் கதை இன்றைய “படித்த” இளைஞர்கள் பற்றியது. ஆர்க்கிடேக் படித்த இஞ்சினியரை விட சாதாரண கொத்தனார் தெளிவாகக் கணக்கு போடுவார் என்பார்கள், அதுபோல இந்தக் கதையில் கணக்கில் புலி என சொல்லக்கூடியவர் காலரைக்கால், முக்காலே அரைக்கால் என்ற அளவை எல்லாம் எப்படி எழுதவேண்டும் என்று தெரியாமல் முழிப்பது இன்றைய கல்விமுறையை தோலுரித்துக் காட்டுகிறது. மூன்றாம் கதை மிகச் சாதாரணமானது. வெளிநாட்டில் இருந்து வரும் ஒரு பெண்மணி தன் தம்பி, தம்பி மனைவி இருவரும் வேலைக்குச் சென்றுவிட வீட்டில் தனியாக இருக்கிறார். முன்பு தன் தாய் இருந்தபோது வீடு கலகலப்பாக இருந்தது, இப்போது இல்லை என வருத்தப்படுகிறார். இதில் என்ன புதுமை என எனக்குத் தெரியவில்லை? ஒருவேளை வெளிநாட்டில் எழுத்தாளர் இருப்பதால் அவருக்கு பிரிவுத் துயரம் பெரிதாக இருக்கலாம். நூலில் தலைப்பாக வந்துள்ள சிறுகதை, ஒரே வகுப்பில் படிக்கும் மூன்று மாணவிகள் பற்றியது. அதில் ஒருவர் அய்யர், ஒருவர் முஸ்லிம். பள்ளி விழாவில் நடனமாட உள்ள பெண்ணுக்கு சலங்கை தேவைப்பட அதை எடுக்க மூவரும் அய்யர் பெண் வீட்டுக்குச் செல்கின்றனர். அங்கு பல இடங்களில் உள்ளது போல ஒரு பழைய பஞ்சாங்கப் பாட்டி இருக்கிறது. வீட்டினுள் கால் வைக்க வரும் பெண்ணை அதட்ட அவர்கள் கோபப்பட்டு திரும்பிச் சென்றுவிடுகின்றனர். உண்மையில் மிக அருமையான கதை இது. இந்தக் கதை முதல்கதையாக இருந்திருக்கலாம். இதை கடைசியில் வைக்கும் ஐடியாவைக் கொடுத்த புண்ணியவான் யாருன்னு தெரியல. மாணவிகளின் குடும்பச் சூழல், அவர்களின் குணநலன்கள் அனைத்தையும் கதை நடக்கும்போதே அழகாகப் புரியவைத்துவிடுகிறார் ஆசிரியர். முஸ்லிம் பெண்களை அவர்கள் வீட்டார் அதிக தூரம் நடக்க விடமாட்டார்கள் என்பதைக்கூட அழகாகச் சொல்லியுள்ளார். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களிடம் மாட்டிக்கொண்டு வாட்ச்மேன்கள் படும்பாட்டைக்கூட விடவில்லை. இப்படி கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தகத்தைப் படிக்கத் துவங்குபவர்கள் கடைசிக் கதையில் இருந்து வருதல் நலம். எல்லா கதைகளையும் பற்றி எழுதினால் இந்த நூலைவிட அதிகம் எழுதவேண்டி வரும். இதில் என்னைக் கவர்ந்த கதைகள் என்றால், 1. அனிச்ச மலர்கள் 2. பழங்கணக்கு 3. காசியில் பிடித்ததை விடணும் 4. உண்மைக்காதல் 5. சற்றே இளைப்பாற சில கதைகளில் சில வார்த்தைகள் தூய தமிழில் வருகின்றன. அடுத்த வார்த்தை சாதாரண ஆங்கிலத்தில் வருகிறது, இரண்டையும் ஆங்கிலம் அல்லது தூய தமிழ் என எழுதியிருக்கலாம். இதுபோல சில குறைகள் இருந்தாலும் பாராட்டப்படவேண்டிய சிறுகதைத் தொகுப்பு இது. – ராஜராஜன் https://mathippurai.com/2015/04/09/anichcha-malargal/#more-609 நூலாசிரியர் [] இணைய இதழ்களில் எழுதிவரும் தேமொழி; கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், அறிவியல் கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதுவதில் ஆர்வம் உள்ளவர். நிர்வாகயியலில் முனைவர் பட்டம் பெற்று ஓக்லஹோமா மாநில அரசில் திட்ட ஆய்வாளராகவும் பணிபுரிந்தவர். முப்பது ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வரும் இவர் திருச்சியைச் சேர்ந்தவர், தற்பொழுது தனது குடும்பத்துடன் கலிஃபோர்னியாவில் வசித்து வருகிறார். தொடர்பு: themozhi@yahoo.com https://www.facebook.com/themozhi சமர்ப்பணம் \begin{center} இனி என்றும் அன்பு இதயங்களின் நினைவுகளில் மட்டுமே வாழும் என் தங்கை மணிமொழிக்கு [] 1. சிலை அழுதது அந்தச் சிறிய சாலையின் இருமருங்கிலும் நின்ற மக்களின் கையில் அமெரிக்க தேசிய கொடிகள் படபடத்துக் கொண்டிருந்தன. வயது வித்தியாசமின்றி அனைவரும் கையில் ஆளுக்கொரு வாசகங்கள் எழுதிய அட்டையையோ, தேசிய கொடியையோ ஆட்டியவண்ணம் இருந்தனர். உன்னை மறக்க மாட்டோம் ரிச்சர்ட், உன் ஆன்மா சாந்தி அடையட்டும், நீ எங்களைப் பெருமை அடையச் செய்துவிட்டாய், நீ ஒரு சிறந்த வீரன் ரிக்கி, எனத் தங்கள் மனத்தில் ரிச்சர்டைப் பற்றி எழுந்த எண்ணங்களுக்கு உருவம் கொடுத்த பதாகை அட்டையை ஏந்திக்கொண்டு அவன் மறைந்த துக்கத்தை அனுசரித்துக் கொண்டிருந்தார்கள். வெய்யிலுக்குக் கண்ணைச் சுருக்கிக் கொண்டிருந்த அனைவரது கண்களும் அந்த “ஃபர்ஸ்ட் பாப்டிஸ்ட் சர்ச்’ என்ற தேவாலயத்தின் வாசலையே நோக்கிக் கொண்டிருந்தன. நிகழ்ச்சியின் சோகத்தால் யாரும் உரத்துப் பேசாமல்”கிசு கிசு" என்று பேசிக் கொண்டிருந்தாலும் அதுவும் ஒரு ‘கசமுசா’ சத்தத்தை உருவாக்கிக் கொண்டிருந்தது. தேவாலயத்தின் உள்ளே இராணுவ வீரர்களும், மிக முக்கிய உறவினர்களும், நண்பர்களும் ரிச்சர்டின் இறுதிச் சேவையில் பங்கெடுத்துக் கொண்டிருந்தனர். தேவாலயத்தின் வாசலுக்கு இருபுறத்திலும் மக்களின் ஊர்திகள் நிறுத்துவது தடை செய்யப்பட்டு அரை மைல் தொலைவிற்குச் சாலை வெறிச்சோடி இருந்தது. தேவாலயத்தின் வாசலில் ஒரு கருப்பு நிற அமரர் ஊர்தியும், அதன் அருகில் இரு இராணுவ வீரர்களும் மட்டுமே இருந்தார்கள். ரிச்சர்ட் வில்லியம்ஸ் பிறந்து வளர்ந்து படித்த ஊர் அது. பல தலைமுறைகளாக அவன் குடும்பம் அங்கிருப்பதால் பெரிய உறவினர் கூட்டமும், கணக்கிடலங்கா நண்பர்கள் கூட்டமும் அந்த ஊரில் இருந்தனர். அனைவருக்கும் ரிச்சர்ட் தனது முப்பது வயது தாண்டுவதற்குள் இறந்தது அதிர்ச்சியைத் தந்தது. வில்லியம்ஸ் குடும்பம் தீவிர நாட்டுப்பற்று உள்ள குடும்பம். அப்பா வில்லியம்ஸ் தனது பரம்பரையில் அனைவரும் அமெரிக்க இராணுவப் பணிக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் என்பதில் அளவிட முடியாப் பெருமை கொண்டவர். அப்பா வில்லியம்ஸின் தாத்தா இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றவர். வில்லியம்ஸின் தந்தை வியட்நாம் போரிலும், வில்லியம்ஸின் பெரியப்பா கொரியன் போரிலும் பங்கேற்றவர்கள். வில்லியம்ஸும் அவரது சகோதரர்களும் ஈராக் போரிலும், ஆபரேஷன் டெசெர்ட் ஸ்டார்மிலும் (Operation Desert Storm) பங்கேற்றவர்கள். தனது மகன்களும் மகளும் அதுபோன்றே தங்கள் பரம்பரைப் பெருமையைக் காக்கும் வண்ணம் இராணுவத்தில் சேர்ந்தது அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது. முதல் மகனும், அடுத்த மகளும் ஆபரேஷன் அனகொண்டா (Operation Anaconda) வில் பங்கேற்று ஆப்கானிஸ்தான் சென்றார்கள் ஒருவர் கண்ணிவெடிகுண்டில்(landmine) சிதற மற்றவர்தற்கொலைப்படைத் தாக்குதலில் (suicide attack) உயிர் இழந்ததற்கு வில்லியம்ஸ் மிக வருந்தினாலும், அதனால் அவர் அசரவில்லை. அடுத்து ரிச்சர்ட் தானும் இராணுவத்தில் சேரப்போகிறேன் என்றதும் மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தார். சென்ற வாரம் அவனும் சில வீரர்களும் பயணித்த “ப்ளாக் ஹாக்” (Black Hawk) ஹெலிகாப்டர் விமானம் கிழக்கு ஆஃப்கானிஸ்தான் பகுதியில் விபத்திற்குள்ளாகி வீரர்கள் அனைவரும் அதில் உயிரிழந்தனர். இராணுவம் இன்னமும் விபத்தின் காரணத்தைப் பற்றிய விசாரணையை முடிக்கவில்லை. இராணுவத்தினர் ரிச்சர்டின் உடலைச் சவப் பரிசோனைக்குப் பிறகு இன்று குடும்பத்திடம் ஒப்படைத்துத் தங்கள் இறுதி மரியாதையைச் செலுத்த வந்துள்ளனர். இனி தனது பரம்பரையில் அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றுவதைத் தொடர யாரும் இல்லை என்ற அதிர்ச்சியிலும், இருந்த ஒரே மகனையும் பறிகொடுத்ததிலும் அப்பா வில்லியம்ஸ் மிகவும் ஆடிப்போயிருந்தார். சிறிது நாட்களுக்கு முன்தான் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு நடக்கமுடியாமல் போனார். இப்பொழுது அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. தேவாலயத்தின் கதவு திறந்தது. அனைவரும் தங்கள் பேச்சுக்களை நிறுத்தியதால் அந்த இடத்தில் பேரமைதி நிறைந்தது. ரிச்சர்ட் விமானப் படையில் இருந்ததால், விமானப்படை வீரர்கள் ஆறு பேர், சவப் பெட்டியைச் சுமக்கும் ’பால் பியரர்ஸ்’ஆக, பக்கத்திற்கு மூவராக, அமெரிக்கக் கொடி போர்த்திய அவனது சவப்பெட்டியைச் சுமந்து கொண்டு மிகவும் விறைப்பாக அணிவகுத்து வந்தனர். அவர்களுக்கு முன்புறம் ஒரு வீரரும் பினபுறம் ஒரு வீரரும் அவர்களைப் போலவே விறைப்பாக நடந்து வந்தனர். அவர்களுக்குப் பின்னர்க் கருப்பு ஆடைகளும் தொப்பிகளும் அணிந்த நண்பர்களும், உறவினர்களும் கண்களைத் துடைத்துக் கொண்டு வந்து நின்றனர். உள்ளூர் தொலைக்காட்சி நிலையப் படம் பிடிப்பவர்களும், செய்தியாளர்களும் மட்டுமே சிறிது அங்கும் இங்கும் ஓடிப் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். சவப்பெட்டியைச் சுமந்து வந்த வீரர்களில் இரு பெண் வீராங்கனைகளும் இருந்தார்கள். அனைவரும் ஒவ்வொரு காலாக எடுத்து வைத்து, படிப்படியாக ஐந்து முறை திரும்பி, 90 பாகையில் நேர் செங்குத்தாகத் திரும்பி மீண்டும் விறைப்பாக நடந்து அமரர் ஊர்தியில் சவப்பெட்டியை ஏற்றினார்கள். பிறகு வண்டியின் இரு பக்கமும் பக்கத்திற்கு நால்வராக அணிவகுத்து விரைந்து நடந்து, வண்டியைத் தாண்டியதும் வரிசை கலைந்து ஓடிப்போய்த் தேவாலய ஊர்திகள் நிறுத்துமிடத்தில் இருந்த தங்கள் இராணுவ வண்டியில் ஏறிக் கொண்டார்கள். எங்கிருந்தோ சொல்லி வைத்தது போல உச்சியில் விளக்குகள் மின்னக் காவல்துறை ஊர்தியும், அதற்குமுன் இரு மோட்டார்பைக் காவலர்களும் திடுமெனத் தோன்றி அமரர் ஊர்தி முன்னர்த் தங்கள் ஊர்திகளை நிறுத்திக் கொண்டனர். இதற்குள் ரிச்சர்ட் குடும்பத்தின் உறவினர்களும் நண்பர்களும் ஊர்திகள் நிறுத்துமிடத்திற்குச் சென்று தங்கள் வண்டிகளில் ஏறிக் கொண்டார்கள். சக்கரநாற்காலியில் அப்பா வில்லியம்ஸைத் தள்ளி வந்த ரிச்சர்டின் அம்மாவும், ரிச்சர்டின் மனைவி அபியும் அவருக்காகப் பிரத்யேகமாகத் தருவிக்கப்பட்ட சக்கர நாற்காலியை ஏற்றும் வாடகை வேன் அருகில் வந்ததும் அதில் அவரை ஏற்றினார்கள். அப்பா வில்லியம்ஸ்டன் அம்மா பின்னால் அமர்ந்துகொள்ள, அபி முன்னிருக்கையில் அமர்ந்து கொள்ளவும் வண்டி புறப்பட்டது. தேவாலய வாசலில் நின்ற அனைவரும் அமைதியாகக் கொடிகளை அசைத்தனர். முன்னால் காவலர்களின் வண்டிகள், ரிச்சர்டின் அமரர் ஊர்தி, இரு இராணுவ வாகனங்கள், தொடர்ந்து ரிச்சர்டின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் ஊர்திகள் என ஊர்வலம் நகரின் மற்றொரு புறத்தில் இருந்த மயானத்தை நோக்கி ஊர்ந்தது. சாலையின் போக்குவரத்துச் சிறிது தடங்கலுற்றது. காவலர்களின் சைகைக்குக் காத்திராமல் இறுதி ஊர்வலம் என்று தெரிந்த உடனேயே ஊர்திகளில் சென்றவர்கள் தானாகவே சாலையில் ஓரங்கட்டி வழி விட்டனர். வழியில் நின்ற “பேஸ் பால் கேப்” தொப்பிகள் அணிந்திருந்த ஒரு சில இளைய தலைமுறையினரும் தொப்பிகளை அகற்றித் தலைகுனிந்து அஞ்சலி செலுத்தினர். வில்லியம்ஸின் வண்டி ரிச்சர்ட் படித்த பள்ளியை நெருங்கியது. பள்ளியின் வாசலில் உள்ள அறிவிப்புப் பலகையில், “உன் ஆன்மா சாந்தி அடையட்டும் ரிச்சர்ட் வில்லியம்ஸ்; உன் வாழிகாட்டுதலை நாங்களும் தொடர்வோம், நாட்டுப் பணியில் பங்கேற்போம்” என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. அதைப் பார்த்ததும் அபியின் கண்கள் கலங்கின. பின்னால் ரிச்சர்டின் அம்மாவிடம் இருந்து ஒரு விசும்பல் தோன்றியது. எத்தனை முறை மகனை இந்தப் பள்ளியின் வாசலில் வண்டியில் கொண்டு வந்து இறக்கி விட்டிருக்கிறார். எத்தனை முறை அவன் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகளில் பார்வையாளராக வந்து மகனுக்கு உற்சாகமூட்டியிருக்கிறார். அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை. அப்பா வில்லியம்ஸ் உணர்ச்சிகளற்ற சிலையாகவே அமர்ந்திருந்தார். வண்டி மயானத்தை அடைந்தது. மீண்டும் இராணுவ வண்டிகளில் இருந்து வெளிப்பட்ட எட்டு வீரர்களும் விறைப்பாக நடந்து அமரர் ஊர்தியை நெருங்கினார்கள். ரிச்சர்டின் குடும்பத்தினரும், உறவினர்களும், நண்பர்களும் அங்குத் தற்காலிகமாகப் போடப்பட்டிருந்த பந்தலில் அமர்ந்தார்கள். முன் வரிசையில் ரிச்சர்டின் அம்மா, சக்கரநாற்காலியில் ரிச்சர்டின் அப்பா, பிறகு அபி என அமர்ந்து கொண்டார்கள். இரு பாதிரியார்கள் விவிலியத்தைக் கையில் வைத்துக் கொண்டு பிரார்த்தனைக்காகத் தயாராக நின்றார்கள். வீரர்கள் முன்போலவே பக்கத்திற்கு மூவராக அணிவகுத்து, முன்னும் பின்னும் இருவர் தொடர ரிச்சர்ட் உறங்கிய சவப்பெட்டியைக் கொண்டுவந்து பந்தலுக்கருகில் இருந்த ஒரு மேடையில் வைத்தார்கள். பிறகு லாவகமாகச் சடாரெனச் சப்பெட்டியின் மேல் போர்த்தியிருந்த தேசிய கொடியை உருவினார்கள். பக்கத்திற்கு நால்வராக நின்று கொண்டு சடார் சடாரென ஒலி வரும் வண்ணம் கொடியை உதறி, நீள வாக்கில் மடித்து தொடர்ந்து நீவிவிட்டவாறே மடிக்கத் தொடங்கினர். சிவப்பு வெள்ளைப் பட்டைகள் மட்டும் உள்ள பகுதியில் மடிக்க ஆரம்பித்து 13 முறை முக்கோண வடிவில் மாற்றி மாற்றிப் போட்டு மடித்து, வெள்ளை நட்சத்திரங்களும், நீல வண்ணமும் கொண்ட பகுதி வெளியில் தெரியுமாறு முக்கோண வடிவில் மடித்து முடித்தனர். அதை ஒருவர் மட்டும் கையில் பெற்றுக்கொள்ள மற்ற வீரர்கள் அணிவகுத்து மீண்டும் வெளியேறிய பிறகு கலைந்து சென்றனர். கொடியைப் பிடித்திருந்த வீராங்கனை மட்டும் விறைப்பாக ரிச்சர்டின் குடும்பத்தை நோக்கி நின்றார். ரிச்சர்டின் அம்மாவும், அபியும் எழுந்து நின்று கொண்டார்கள். பாதிரியார்கள் ஒவ்வொருவராகப் பிரார்த்தனை முடித்து “ஆமன்” சொல்லி முடித்ததும் வீராங்கனை, அபியை நெருங்கி இராணுவ மரியாதை செய்த கொடியை அவள் கையில் கொடுத்துவிட்டு, ரிச்சர்டின் பணிக்கு இராணுவத்தின் சார்பாக நன்றி சொல்லிவிட்டு, அவன் ஆன்மா சாந்தியடையட்டும் என்று சொல்லிச் சல்யூட் அடித்துவிட்டு விரைப்புடன் நடந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து இறுதி மரியாதைகள் நடந்து ரிச்சர்ட் அடக்கம் செய்யப்பட்டான். அவ்வப்பொழுது தாள முடியாமல் அபியும் ரிச்சர்டின் அம்மாவும் கண்கலங்கினர். அல்லது விசும்பினர். ஆனால் அப்பா வில்லியம்ஸ் மட்டும் சிலை போன்று உணர்ச்சிகளற்ற முகத்துடனேயே இருந்தார். சடங்குகள் அனைத்தும் முடிந்து அனைவரும் வெளியே வந்து தங்கள் ஊர்திகளில் கிளம்பினர். அபியும், ரிச்சர்டின் அம்மாவும் மீண்டும் சக்கரநாற்காலியை வாகனத்தில் ஏற்றினர். ரிச்சர்டின் அம்மா ஏறியவுடன் கதவைச் சாத்த உதவிய அபி, முன்னிருக்கை கதவை நோக்கி நகர்ந்தாள். அதற்குள், “வண்டியை எடு!” என்று அப்பா வில்லியம்ஸின் கடினமான குரல் கேட்டது. அபி அதிர்ச்சி அடைந்தாள். அவளைப் போலவே அதிர்ச்சியுடன் வண்டியோட்டியும், ரிச்சர்டின் அம்மாவும் வில்லியம்ஸின் முகத்தைப் பார்த்துவிட்டு, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு அபியைப் பார்த்தனர். அவள் முகத்தில் இருந்து அபி அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளவில்லை என்று தெரிந்தது. திறக்கப்போன வாகனத்தின் கைப்பிடியில் இருந்து தனது கைகளை அதிர்ச்சியில் இருந்து மீளாமலே அகற்றிக் கொண்டாள். ரிச்சர்டின் அம்மா “அபி” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தார். இடைவெட்டிய வில்லியம்ஸ் வண்டியோட்டியை நோக்கி, “இன்னமும் கிளம்பவில்லையா?” என்று உறுமினார். வண்டியோட்டியும் பரிதாபமாக ஒருமுறை அபியை நோக்கிவிட்டுத் தயக்கத்துடன் வண்டியை ஓட்டத் தொடங்கினார். வண்டி அவளைக் கடந்தபொழுது தலைகுனிந்து, கண்ணிர் வழிந்த முகத்துடன் ரிச்சர்டின் அம்மாவின் முகமும், சிலையாக இருந்த வில்லியம்ஸின் முகமும் அபியின் பார்வையில் தட்டுப்பட்டது. இனி எவ்வாறு மயானத்தில் இருந்து ஊருக்குள் செல்வது, ஏதேனும் நண்பர்களோ உறவினர்களோ சவாரி கொடுத்து உதவி செய்ய இருக்கிறார்களா அல்லது வாடகை வண்டியை எப்படி மயானத்திற்கு வரவழைப்பது? என்று குழம்பிய அபி சுற்றும் முற்றும் பார்த்தாள். ✮✮✮✮✮ “மிஸ்ஸஸ் வில்லியம்ஸ் உங்கள் வண்டி வரும் என்று காத்திருக்கிறீர்களா? உங்களுக்கு உதவ எங்களை அனுமதிப்பீர்களா?” என்ற குரல் கேட்டு அபி திரும்பினாள். வாட்ட சாட்டமான உருவத்துடனும், துக்கத்தை அனுசரிக்கக் கருப்பு ஆடை அணிந்திருந்த ஒரு சிறுவனையும் சிறுமியையும் இருகைகளிலும் பிடித்துக் கொண்டு கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவள் அவமானப் படுத்தப்பட்டு விட்டுச் செல்லப்பட்டதைப் பார்த்திருந்தாலும், அது தனக்குத் தெரியாதது போல நாகரிகமாகக் கேள்விகளை எழுப்பிய அவர் மேல் அபிக்கு ஒரு மரியாதை வந்தது. “என் பெயர் அபிகெயில். அபி என்று எல்லோரும் அழைப்பது போலவே நீங்களும் கூப்பிடுங்கள். நீங்கள்… உங்கள் பெயர் மிஸ்டர்…” என இழுத்தாள். “என் பெயர் தாமஸ் ஜோன்ஸ், டாமி என்று என்னை எல்லோரும் அழைப்பது போலவே நீங்களும் கூப்பிட்டால் மகிழ்ச்சி அடைவேன். இது எனது மகள் கேண்டிஸ்ஸும், மகன் கேரியும்.” என அறிமுகப்படுத்தினார். சிறுவர்கள் இருவரும் அபியின் கையைக் குலுக்கினர். அபிக்கு வழிகாட்டியவாறு தனது வண்டியை நோக்கி நடந்த டாமி, தான் ரிச்சர்டின் பள்ளிநாட்களின் நண்பன் என்றும், இப்பொழுது மாநிலத்தின் பல்கலைக்கழகக் கால்பந்தாட்டக் குழுவின் பயிற்சியாளர் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். டாமியும் அபியும் முன்னிருக்கையிலும், குழந்தைகள் பின்னிருக்கையிலும் அமர்ந்து கொள்ள, டாமி நகரை நோக்கி வண்டியைச் செலுத்தினார். “உன்னை எங்கே இறக்கிவிடவேண்டும் அபி?” “நான் விடுதியில் இருந்து தேவாலயத்திற்கு வாடகை வண்டியில்தான் வந்தேன், அங்கிருந்து மயானத்திற்கு ரிச்சர்டின் பெற்றோர்களுடன் வந்தேன். என்னை நான் தாங்கும் விடுதியிலேயே இறக்கிவிட்டால் நலம். விமானநிலையத்திற்கு அருகில் இருக்கும் “ஹாலிடே இன்னில்” தங்கியிருக்கிறேன்.” “திரும்பவும் எப்பொழுது ஊருக்குப் போகிறாய்? எங்கள் வீட்டிற்கு வர நேரமிருக்குமா?” “வரவேற்பிற்கு வந்தனம் டாமி, ஆனால் நாளை அதிகாலை விமானப்பயணத்திற்குத் திரும்பிச் செல்லும் பயணச்சீட்டை பதிவு செய்திருப்பதால் இம்முறை வர இயலாது. அடுத்தமுறை பார்ப்போம். சொல்லு டாமி! இதுவரை ரிச்சர்ட் தனக்கு ஒரு கால்பந்தாட்டக் குழு பயிற்சியாளர் நண்பன் இருந்ததைச் சொன்னதில்லையே!” “இல்லை, இது எனது புதிய பணி அபி. பணியில் சேர்ந்து ஓராண்டுதான் ஆகிறது. எனது பின்புலம், கல்லூரியில் படித்தது எல்லாம் கணினி அறிவியல். கணினி நிரல்கள் எழுதுவதில் எனக்கு விருப்பம் அதிகம். ஆனால் பள்ளி நாட்களில் இருந்து கால்பந்தாட்டத்தில் சூரன். அதனால் நல்ல நிதியுதவி பெற்றுப் புகழ் பெற்ற பல்கலையில் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. பிறகு புகழ் பெற்ற சிலிக்கான் பள்ளத்தாக்கு நிறுவனம் ஒன்றில் நல்ல ஊதியத்தில் ஒரு நல்ல வேலையும் கிடைத்தது. ஆனால் மனிதரை மனிதர் காலை வாரிவிடும் வணிக நிறுவனங்களில் என்னால் ஆர்வத்துடன் வேலை செய்ய முடியவில்லை. என் கனவு, குறிக்கோள் எல்லாம் கால்பந்தாட்டம்தான். அதனால் இந்த மாநிலப் பல்கலையில் பயிற்சியாளராகப் பணிபுரிய ஒரு வாய்ப்பும் கிடைத்ததால் மீண்டும் ஊருக்கே வந்துவிட்டேன்.” “அதனால் என்ன டாமி? வாழ்க்கையில் உனக்குப் பிடித்த பாதையில் நீ பயணம் செய்கிறாய், அதுதானே முக்கியம். அத்துடன்மாநில அரசுப்பணிகளில் அதிக ஊதியம் பெறுபவர்கள் பல்கலைகளின் கால்பந்தாட்டக் குழுவின் பயிற்சியாளர்கள்தானே. ஊதியத்தைப் பொறுத்தவரை நீ அதிகமாகத் தியாகம் செய்ய வேண்டியிருந்திருக்காது. உன் திறமை சரியாக வெளிப்பட்டால் பெரிய தேசிய அளவுக் குழுக்களிலும் நீ இடம் பெற வாய்ப்பும் கிடைக்கலாம், அப்படிக் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அப்படி நடந்தால் தொலைக் காட்சியில் கால்பந்தாட்ட வீரர்களிடம் நீ தொண்டை கிழியக் கத்துவதையும், அடுத்தப் பந்துகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்குப் படம் போட்டு விளக்கித் தலை தலையாக அடித்துக் கொள்வதையும் பார்த்து ரசிக்கலாம் அல்லவா?” என்று அபி சிரித்தாள். “ஆனால் உன் கணினி நிரல்கள் எழுதும் திறமை வீணாகிறதே என்றுதான்…..”என்று இழுத்தவள். திடீரென நினைவு வந்தவளாக, முகம் பளீரிட, “இரு. இரு. நீதானே பள்ளி இறுதி ஆண்டின் “ப்ரோம்” நடனத்தில் உன் நடனத் துணையை ரிச்சர்டுக்கு மாற்றிக் கொடுத்து உதவி செய்த டாமி?” என்றாள். “ஹ… ஹா… ஹா…” என்று சப்தமாகச் சிரித்த டாமி, “உனக்கு அதை ரிக்கி சொல்லியிருந்தாலும், நீ மறக்காமல் நினைவு வைத்திருப்பதுதான் ஆச்சரியம்” என்றான். பிறகு பள்ளி நாட்களை நினைத்து அவன் முகம் மலர்ந்தது. “ஷெர்லி டேவிஸ், ஆஷ்லி டேவிஸ் என்ற சகோதரிகள் இருவர், இரட்டையர்கள்” என்றாள் அபியும் புன்னகைத்தப்படி. “அட பரவாயில்லையே, உனக்கு நல்ல ஞாபக சக்திதான் அபி” என்று புருவத்தைத் தூக்கிக் கண்கள் விரிய வியந்தான் டாமி. “ஆமாம், இந்த ஷெர்லி ரிக்கியின் தோழி. பள்ளி இறுதியாண்டு “ப்ரோம்” நடனத்தின்போது அவனது நடனத் துணையாக ரிக்கியுடன் அவள் நடனமாட ஒருவருக்கொருவர் முடிவு செய்திருந்தார்கள். அவள் சகோதரி ஆஷ்லி என் நடனத் துணைவி. அந்தப் பள்ளி நாட்களின் இறுதி வாரத்தில் ஒருநாள் நாங்கள் “மெக் டானால்ட்ஸ்” சிற்றுண்டிச் சாலைக்குச் சென்று அரட்டை அடித்தவாறே கொறித்துக் கொண்டிருந்தோம். பேச்சு அப்படியே அரசியல் பக்கம் போயிற்று. அப்பொழுது குடியரசுக் கட்சியின் சார்பில் மீண்டும் இரண்டாம் முறையும் அதிபராக விரும்பி அதற்குப் போட்டியிட்டு ஜார்ஜ் புஷ் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது இது. ஷெர்லி ஒரு தீவிரக் குடியரசுக் கட்சி ஆதரவாளி, ரிக்கியும்தான். நானும் ஆஷ்லியும் மக்களாட்சிக் கட்சியின் ஆதரவாளர்கள் என்றாலும் அரசியலுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ரிக்கி அன்று ஏதோ ஒரு உற்சாகமான மனநிலையில் இருந்தான். தேர்தலைப் பற்றியும் புஷ்ஷின் திறமை பற்றியும் ஷெர்லி ஆவலுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இவன் குறுக்கே குறுக்கே இடக்காகப் பேசி, “புஷ் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவர், போன தேர்தலிலேயே ஃப்ளோரிடாவில் மீண்டும் மீண்டும் வாக்குகளை எண்ணித்தான் அதிபரானார். இந்த முறை எத்தனை தடவை வாக்குகளை எண்ணித் தொலைய வேண்டுமோ இவரை மீண்டும் அதிபராக்க!” என்றெல்லாம் கூறி அவளைச் சீண்டிவிட்டுக் கொண்டே இருந்தான். அவளுக்கோ கோபம் ஏறிக் கொண்டே போனது. இறுதியில் அவனது சீண்டலைத் தாளமுடியாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஃப்ரென்ச் ஃப்ரயை அவன் முகத்தில் விட்டெறிந்து, குடித்துக்கொண்டிருந்த மில்க் ஷேக்கை அவன் தலையில் கொட்டி முழுக்காட்டி விட்டு வெளியேறிவிட்டாள். பிறகு அவனுடன் முகம் கொடுத்தும் பேசவில்லை. ரிக்கி “விளையாட்டுக்குத்தான் சொன்னேன்” என்று சமாதானப்படுத்தியும் பார்த்தான். ம்ம்ம்ஹூம்…. அவள் கோபமே குறையவில்லை. பிறகு ரிக்கிக்கும் அவளது அடம் கோபத்தை ஏற்படுத்தியது. எப்படி இவர்கள் இணைந்து நடனமாடப் போகிறார்கள் என்று நண்பர்கள் நாங்கள் பேசிக் கொண்டோம். அது போலவே இருவரும் எனக்கு நடனத் துணையாக நீ தேவையில்லை என்று ஒருவருக்கொருவர் அறிக்கை விட்டுப் பள்ளியில் களேபரம் செய்தார்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் தங்களது நடனத் துணை யாரென்று அச்சாரம் செய்து விட்டதால் கடைசி நேரத்தில் மாற்று நடனத் துணையும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. கடைசியில் நானும் ஆஷ்லியும் ஆள் மாற்றிக் கொண்டு அவர்களுக்கு உதவ முன் வந்தோம். ரிக்கியும் ஆஷ்லியும், நானும் ஷெர்லியும் அந்த விழாவில் ஒருவருக்கொருவர் துணை” என்றான் டாமி சிரித்தவாறு. ரிக்கியே இதனைப் பலமுறை அபியிடம் சொல்லியிருக்கிறான். இன்று டாமியும் அதையே ஆர்வத்துடன் சொல்லும் பொழுது அபி வியப்புடன் குறுக்கிடாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த நண்பர்கள் கூட்டம் அனைவருக்கும் இது பசுமை மாறாத நிகழ்ச்சியாக இருப்பதைப் புரிந்து கொண்டாள். “இப்பொழுது அந்தச் சகோதரிகள் எங்கே இருக்கிறார்கள் டாமி?” “ஹ்ம்ம்… அவர்கள் அப்பாவிற்குப் பிட்ஸ்பர்கில் வேறு ஒரு நல்ல வேலை கிடைத்ததும் குடும்பத்துடன் குடிபெயர்ந்தார்கள். ஷெர்லியும் ஆஷ்லியும் அங்கேயே பல்கலையில் படிப்பைத் தொடர்ந்தார்கள். பிறகு எங்களுக்குள் தொடர்பு விட்டுப் போயிற்று. ஃபேஸ்புக்கில் நானும் சில நண்பர்களும் அவர்களைத் தேடினோம். அடுத்த ஆண்டு பள்ளியில் நாங்கள் பட்டம் பெற்ற பத்தாமாண்டு விழா வருகிறது. அதனால் வகுப்புத் தோழர்கள் அனைவரையும் தொடர்பு கொண்டோம். இந்தப் பெண்களைத் தேடிக் கண்டுபிடிக்கக் கொஞ்சம் சிரமமாக இருந்தது. திருமணமானதும் தமது கணவர்களின் குடும்பப் பெயருக்கு மாறிவிட்டார்கள். அதனால் சிரமம். உனக்குத் தெரியுமோ? அவர்கள் இருவருக்கும் மீண்டும் இரட்டைக் குழந்தைகள், ஆளுக்கு இரண்டு இரண்டு பையன்கள்.” “இதைக் கேட்டால் ரிக்கி மிகவும் மகிழ்ச்சி அடைவான்” என்றாள் அபி. பிறகு தான் பேசியதில் உள்ள தவறு அவளுக்குப் புரிந்தது. “இதைக் கேட்டிருந்தால் ரிக்கி மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பான், இல்லையா டாமி?” என்று கரகரத்த குரலில், கலங்கிய கண்களுடன் பரிதாபமாக அவனைப் பார்த்துக் கேட்டாள். அவளது கலங்கிய முகத்தைத் திரும்பிப் பார்த்த டாமி, இடது கையால் வண்டியை ஒட்டிக் கொண்டே வலது கையால் அவளது முதுகில் ஆதரவாகத் தட்டிக் கொடுத்தான். அவளது கண்ணீர் அவனையும் கண் கலங்கச் செய்தது. தொண்டையைச் செருமிக் கொண்டு சாலையில் கவனமாக இருப்பவன் போல முகத்தைத் திருப்பிக் கொண்டான். பிறகு சோகமான குரலில், “உனக்கு ஒன்று தெரியுமா அபி, பிற்காலத்தில் வாழ்வில் சிறந்த சாதனைகள் செய்யப் போகிறவனாக அவனை மாணவர்கள் நாங்கள் யாவரும் தேர்ந்தெடுத்தோம். அது கனவாகப் போய்விட்டது.” “ஆமாம், நானும் உங்கள் பள்ளியின் ஆண்டு மலரில் பார்த்திருக்கிறேன் உன்னையும் நீ பெரிய “பில்கேட்ஸாகவோ, ஸ்டீவ் ஜாப்” ஆகவோ வரப் போகிறவன் என்றும் குறிப்பிட்டிருந்தது. அந்த ஆண்டு மலரில் உன் படத்தையும் பார்த்திருக்கிறேன். அப்பொழுது தலை நிறையச் சுருள் சுருளான கருகரு முடியுடன் ஒடிசலாக இருந்தாய். இப்பொழுது மொட்டைத் தலையுடன், சிறிது எடையும் போட்டு ஆளையே அடையாளம் தெரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது.” “அடுத்த ஆண்டு நடக்கப்போகும் பத்தாண்டு சந்திப்பில் என்னை யாருக்கும் அடையாளம் தெரியப்போவது இல்லை எனத் தெரிகிறது. இல்லையா அபி? ஆனால் எங்களுடன் ரிக்கி அந்த விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை என்பதை நம்புவது எனக்குச் சிரமமாக இருக்கிறது.” என்றான் கம்மியக் குரலில். சிறிது நேரம் இருவரும் அமைதியாக இருந்தார்கள். ரிக்கியைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்க எண்ணினார்கள். வண்டியில் பெருத்த அமைதி நிலவியது. சிறுவர்களும் அவர்களது உரையாடலில் குறுக்கிடாமல், தொந்தரவு செய்யாமல் அமைதி காத்தார்கள். அபி பேச்சை மாற்ற எண்ணி அவர்கள் நல்ல பிள்ளைகளாக நடத்துக் கொள்வதற்கு அவனையும் சிறுவர்களையும் பாராட்டினாள். “எல்லாம் எனது அம்மா, அவர்களது பாட்டியின் கண்டிப்பான வளர்ப்பு செய்யும் மாயம். அவர்கள் நல்லொழுக்கத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அதனால் நானும் என் மனைவியும் அவர்கள் வளர்ப்பில் குறுக்கிடுவதே இல்லை,” என்றான் பெருமையாக, பிறகு “நீ இப்பொழுது என்ன செய்கிறாய் அபி, எங்கிருக்கிறாய்?” என்றான். “எனது மேல்படிப்பு முடிய இன்னமும் ஓர் ஆண்டு இருக்கிறது. நிர்வாக இயலில் நிதிநிர்வாகத்தைச் சிறப்புப் பாடமாகப் படிக்கிறேன். இப்பொழுது நியூ யார்க்கில் உள்ள “வால்ஸ்ட்ரீட்” நிதி நிறுவனம் ஒன்றின் கிளையில் கோடைக் காலத்தில் செயல்முறை பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறேன். அடுத்த ஆண்டு பட்டம் பெற்றதும் பிரபல நிதி நிறுவனங்கள் ஒன்றில் உதவியாளராகச் சிறிது காலம் பணி புரிய உத்தேசம். தேவையான அனுபவம் கிடைத்ததும் சேமிப்பு, பங்கு முதலீடு போன்றவற்றிற்கு ஆலோசனை வழங்கும் நிதி ஆலோசகராகச் சொந்தத் தொழில் செய்யும் திட்டமும் இருக்கிறது.” “என் உத்தியோக வருமானங்களை ஒப்பிட்டு நீ கருத்துச் சொன்ன பொழுதே நினைத்தேன், நீ இவ்வாறு நன்கு பொருளாதார ரீதியில் ஆராய்ந்து முடிவெடுப்பவள் என்று. பணத்தின் மதிப்பை நன்கு உணர்ந்தவள் என்று சொல், நல்ல திட்டம்தான். நீ தொழிலை ஆரம்பித்ததும் சொல், நான் உன் வாடிக்கையாளராகச் சேர்ந்து பயன் பெறுகிறேன். முதலில் ஃபேஸ்புக்கில் நாம் நண்பர்களாக மாறுவோம்” என்றான். சிறிது நேர அமைதிக்குப் பிறகு திடீரென, “அப்பா வில்லியம்ஸிற்கு ரிக்கி உன்னைக் கலப்புமணம் செய்து கொண்டதில் வருத்தம் என்பது இங்கு அவன் நண்பர்கள் யாவருக்கும் ஓரளவுக்குத் தெரியும். ஆனால் இன்று நடந்ததற்கு அவர் மீது வருத்தம் கொள்ளாதே பக்கவாதத்தினால் முடக்கப்பட்ட வாழ்க்கை, மகனின் இழப்பு, நிதிநிலைமை சரியில்லை என அடிமேல் அடி ஏற்கனவே அவர் கொஞ்சம் முசுடு என்பது பலருக்கும் தெரிந்த உண்மை” என்றான். “என்ன நிதி நிலைமை சரியில்லையா?” “ஆமாம், ஏகப்பட்ட மருத்துவச் செலவு என நினைக்கிறேன். அத்துடன் வசிக்கும் வீட்டின் மேலும் கடன் வாங்கியிருப்பார்கள் போலிருக்கிறது. கடன் அட்டையிலும் இனி வாங்க முடியாத நிலை. இது எனக்கு எதேச்சையாகத் தெரிந்தது. எனது தம்பி பல்கலையில் படிப்பவன் அவ்வப்பொழுது கிடைக்கும் பகுதி நேர வேலை செய்து படிப்புக்குப் பணம் சேர்ப்பான். வில்லியம்ஸிற்குச் சக்கர நாற்காலி வாழ்க்கை என்றதும் அவர்கள் வீட்டில் பல மாறுதல்கள் செய்ய வேண்டி வந்திருக்கிறது. கட்டுமானப் பணியில் இவனும் ஈடுபட்டிருந்தான். வாசலில் சக்கரநாற்காலிக்குத் தோதாகச் சரிவு அமைப்பது, சில வாசல்களை அகலப்படுத்துவது, குளியலறையை மாற்றுவது போன்ற வேலைகள். அப்பொழுது ஒருமுறை அவரும் அவர் மனைவியும் மருத்துவமனைக்குச் சென்றுவிட, தம்பியும் அவன் நண்பர்களும் வீட்டில் தனியாக வேலை செய்து கொண்டிருந்திருக்கிறார்கள். தொலைபேசியில் பல அழைப்புக்கள் வந்ததாம். செய்திப் பெட்டியில் செய்திகள் விட்டுச்சென்றவர்களில் இருந்து அழைத்தவர்கள் கடனை வசூல் செய்ய நெருக்கடி கொடுத்து, கிட்டிபோட்டுக் கடன் வசூலிக்கும் நிறுவனங்கள் என்று தெரிந்திருக்கிறது. தம்பி சொல்லித்தான் எனக்குத் தெரியும். என்ன செய்வது…. வயதான பின்பு நோய் என ஏதும் வந்தால் சிரமம்தான். மருத்துவச் செலவுகள் செய்து கட்டுப்படியாகாது. வில்லியம்ஸிடம் வசதியாகச் சக்கரநாற்காலியை ஏற்றி இறக்கும் வாகனமும் இல்லை. ஒவ்வொரு முறையும் வெளியே செல்ல வாடகைக்கு வண்டி எடுக்க வேண்டியிருக்கிறது. சொந்த வண்டி இருந்தால் அவர்களுக்கு அடிக்கடி வெளியே போய்வர வாய்ப்பிருக்கும். அவ்வாறு செல்வது மனச்சுமையைக் குறைக்கும். எப்பொழுதும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். போதாக்குறைக்கு அடிமேல் அடி விழுகிறது அவர்களுக்கு. மனிதர் வெறுப்பின் உச்சத்தில் இல்லாமல் வேறு எப்படி இருப்பார்?” அபி மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். ரிக்கியின் அம்மா அப்பாவின் நிலையை நினைத்து, வயதான காலத்தில் பிள்ளைகள் அனைவரையும் பறிகொடுத்துவிட்டு, உதவிக்கு யாரும் இன்றி, கடனுடனும் நோயுடனும் போராடிக்கொண்டு எவ்வளவு சிரமமாக இருக்கும் என்று தோன்றியது. அவர்கள் நிலைமையை மனிதாபிமானத்துடன் நோக்கி அவர்களுக்காக வருந்தியும் பரிந்தும் பேசும் டாமியின் மீது அவளுக்கு மதிப்பு அதிகமாகியது. அவளை அவளது விடுதியில் விட்டுவிட்டு டாமியும் அவன் குழந்தைகளும் சென்றுவிட்டார்கள். அறைக்குச் சென்று அபி விட்டத்தைப் பார்த்துக் கொண்டு ரிக்கியை நினைத்துக் கொண்டு படுத்திருந்தாள். அவளுக்கு உறக்கம் வரவில்லை. அவளுக்குரியவன் நகரின் ஒரு மூலையில் பெட்டிக்குள், தரைக்கடியில் மீளாத் துயில் கொண்டு இவள் வேதனையைப் பற்றிச் சிறிதும் அறியாமல் இருப்பதும், இவள் நகரின் மற்றொரு மூலையில் அவனை நினைத்து அழுது கொண்டிருப்பதும் நடக்கப்போகிறது என்று சென்ற வாரம் வரை அவள் நினைத்திருக்கவில்லை. அவனும் அவளும் சேர்ந்து கண்ட கனவுகளும், போட்ட திட்டங்களும் இப்பொழுது அர்த்தம் இல்லாமல் போனதை அவளால் நம்பமுடியவில்லை. ✮✮✮✮✮ அபி பால்டிமோரில் வளர்ந்தவள். ரிக்கியைவிட நான்காண்டுகள் வயதில் சிறியவள். அவளும் ரிச்சர்டும் முதலில் சந்தித்தது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு. அப்பொழுது அவள் “மேரிலாண்ட் பல்கலை”யின் “ஸ்மித் ஸ்கூல் ஆஃப் பிசினெஸ்”ஸில் நிதியியல் மூன்றாமாண்டு முடித்திருந்தாள். கோடையில் “இண்டர்ன்” ஆகப் பயிற்சி பெற வில்லியாம்ஸ்பெர்கில் இருக்கும் “பால் கார்ப்பரேஷனுக்கு” மூன்று மாதங்களுக்கு வேலைக்கு வந்திருந்தாள். அப்பொழுது ரிச்சர்ட் தனது படிப்பை முடித்துவிட்டு ஹாம்ப்டனில் உள்ள “லேங்லி ஏர் ஃபோர்ஸ் பேஸில்” பணிபுரிந்து கொண்டிருந்தான். அந்த ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி சுதந்திர தினக் கொண்டாட்டம் ஹாம்ப்டனில் உள்ள “ஃபோர்ட் மன்றோ”வில் நடந்தது. வாணவேடிக்கை, கண்ட்ரி மியூசிக் பாடகர்கள் “எமிலி வெஸ்ட்” மற்றும் “ஜிம்மி வெய்ன்” ஆகியோரின் சிறப்பு இசைநிகழ்ச்சிகள் நடந்தன. அபிக்கு எமிலி வெஸ்ட்டின் பாடல்கள் மிகவும் பிடிக்கும். அதனால் அவள் தன்னுடன் வேலை பார்க்கும் மற்றும் இரு பயிற்சி நிலையில் பணிபுரியும் மாணவர்களுடன் வந்து கலந்து கொண்டாள். எமிலி வெஸ்ட்டின் நிகழ்ச்சி முடிந்து அடுத்து ஜிம்மி வெய்னின் நிகழ்ச்சி நடந்த பொழுதுதான் ரிக்கியை முதலில் பார்த்தாள். அவன் “கவ் பாய்ஸ் அண்ட் இன்ஜின்ஸ்” பாடல் ஆரம்பித்த பொழுது உற்சாகமாகக் கூச்சலிட்டான். பிறகு தனது நண்பர்களுடன் ஆட ஆரம்பித்தான். பாடல் முடிந்ததும் பக்கச் சுவரில் முதுகைச் சாய்த்துக்கொண்டு ஒரு காலை மடக்கிச் சுவரில் ஊன்றி ஓய்வு எடுத்தான். அபி அவனுக்கு மேல் வரிசையில் நின்று கொண்டு லெமனேட் குடித்துக் கொண்டிருந்தாள். “பரவாயில்லையே நன்றாகவே ஆடுகிறான் இவன்” என்று மனத்தில் நினைத்துக் கொண்டாள். அப்பொழுது அவளுக்குப் பின் ஒருவரை ஒருவர் துரத்திக் கொண்டு ஓடி விளையாடிய சிறுவர்கள் இவள் மேல் இடித்துவிட அபியின் கையில் இருந்த லெமனேட் இருந்த காகிதக் கோப்பை அவள் கை தவறி அவன் தலையில் விழுந்து அவனை முழுக்காட்டியது. அவள் அவசர அவசரமாக மன்னிப்பு கேட்பதற்குள், ரிக்கிக்கு இது எப்படி நடந்தது எனப் புரிந்து விட்டது. ஒரே சமயத்தில் அவள் “மன்னித்துவிடுங்கள்” என்றும், அவன் “பரவாயில்லை” என்றும் சொல்லிக் கொண்டார்கள். “என்னைப் பானத்தால் குளிப்பாட்டும் இரண்டாவது பெண் நீங்கள்” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டுச் சிரித்தவாறே போய்விட்டான். மறுபடியும் எதிர்பாராமல் அடுத்த வார இறுதியிலும் அவனைச் சந்தித்தாள். இம்முறை “வில்லியம்ஸ்பர்க் புஷ் கார்டன்” உல்லாசப் பூங்காவில் நண்பர்களுடன் அவள் சுற்றிக் கொண்டிருந்த பொழுது எதிர்ப்பட்டான். அந்தச் சமயமும் அவள் சோடா குடித்துக் கொண்டிருந்தாள். கையில் பானத்துடன் அவளைப் பார்த்ததும், அவன் மேல் ஊற்றிவிடுவாள் என்று அச்சம் கொண்டவன் போலச் சட்டென்று திரும்பி ஓடுவது போலப் பாசாங்கு செய்து அவளைப் பார்த்துச் சிரித்தான். அவளுக்கும் அவன் செய்கையைப் பார்த்துச் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்து சிரித்ததில் புரைக்கேறியது. பிறகு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவனிடம் தான் அவனை முழுக்காட்டிய இரண்டாவது பெண் என்று அவன் சொன்னதைக் குறிப்பிட்டு முதலாவது பெண் யாரென்று கேட்டாள். அவனும் மிக உற்சாகமாகத் தனது பள்ளி இறுதியாண்டு ப்ரோம் நடனத்துணை ஷெர்லி டேவிஸுக்கும் அவனுக்கும் ஏற்பட்ட தகராறையும், அவள் அவன் தலையில் மில்க் ஷேக் ஊற்றியதையும், நடனத் திட்டம் தடம் மாறிப் போக ப்ரோம் நடனத்திற்கு அவளது சகோதரியுடன் ஆடியதையும் விவரமாகச் சொன்னான். பின்னர்ப் பேஸ்புக்கில் நண்பர்களானார்கள், அவ்வப்பொழுது ஒருவரை ஒருவர் “போக்” செய்து கொண்டார்கள். அவள் தனது பயிற்சி முடிந்து, விடுமுறை முடிந்து இறுதியாண்டிற்கென மீண்டும் பல்கலை சென்ற பின்னர் அவர்களுக்குத் தங்கள் தொடர்பு சாதாரண நட்பு அளவிற்கும் மேலே சென்று விட்டது புரிந்தது. ரிக்கி அவ்வப்பொழுது வார இறுதியில் மேரிலாண்ட் வந்து அவளைச் சந்தித்தான். அவளை மணந்து கொள்ள விருப்பம் தெரிவித்து ஒரு மோதிரம் பரிசளித்தான். அவளும் சம்மதித்து அவள் படிப்பு முடிந்து பட்டம் வாங்கிய பின்னர்த் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டனர். அந்த ஆண்டு இறுதியில் “தேங்க்ஸ் கிவ்விங்” என்னும் நன்றி கூறும் விழா நடக்கும் வார இறுதியில் அவளைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவனது பெற்றோருக்கு அவளை அறிமுகப்படுத்தி அவளை மணந்து கொள்ளப் போவதாகச் சொன்னான். அவனது அப்பா வில்லியம்ஸ் கொதித்தெழுந்தார். அதற்குக் காரணம் வெள்ளை இனத்தவரான அவரால் கறுப்பினப் பெண்ணான அபியைத் தனது மருமகளாகவோ அல்லது தனது மகனின் துணையாகவோ நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. ஆனால் அவனது தாயார் அதனைப் பெரிதுபடுத்தவில்லை. அவர் வெள்ளை இனத்தவரானாலும் நாட்டின் வட பகுதியிலேயே பெரும்பாலும் வாழ்ந்தவர். சிக்காகோவில் பிறந்து, நியூயார்க்கில் வளர்ந்து, வாஷிங்டன் டி.சி. யில் படித்து வேலை பார்த்தவர். அப்பொழுதுதான் இராணுவத்தில் பணிபுரிந்த ரிச்சர்டின் அப்பாவைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்து மணந்து கொண்டார். அத்துடன் இயல்பாகவே அவர் பரந்த மனத்துடன் இன வேறுபாடுகளைப் பொருட்படுத்தாதவர். ஆனால் ரிச்சர்டின் தந்தை வில்லியம்ஸின் பின்புலம் வேறு. அவர் குடும்பத்தினர் நாட்டின் தென் மாநிலங்களில் ஒன்றில் பரம்பரை பரம்பரையாகக் குடியிருப்பவர்கள். வெள்ளை இனத்தவர்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று ஆழ் மனத்தில் அசைக்க முடியாத நம்பிக்கையும் கொண்டவர்கள். அப்பா வில்லியம்ஸின் தந்தையும் பெரிய தந்தையும், அதாவது ரிச்சர்டின் தாத்தாவும் பெரிய தாத்தாவும், இனவெறிக் கொண்ட “கே.கே.கே.” அல்லது “கு க்ளக்ஸ் கிளான்” (KKK / Ku Klux Klan), என்ற இனவெறிக் கும்பலுடன் மறைமுகத் தொடர்பு கொண்டு ஆதரவும் அளித்ததாக அரசல் புரசலாக ஊரில் செய்திகள் உண்டு. இந்த இனவெறிக்கூட்டம் கொள்ளையர்கள் போன்று தங்கள் முகத்தைக் காட்டாமல் வெள்ளை முகமூடி அணிந்து, நீண்ட வெள்ளை அங்கி அணிந்து, கறுப்பர்களுக்குச் சம உரிமை தருவதை 1950 மற்றும் 1960 களில் எதிர்த்துக் கலவரம் செய்த தீவிரவாதிகள். கறுப்பர்களைத் துன்புறுத்துவதையும், அவர்களது வீட்டு வாசல்களில் சிலுவைகளை எரித்து அச்சுறுத்துவதையும் அமெரிக்காவின் தென் மாநிலங்களில் அந்தக் கும்பல் பரவலாகச் செய்து வந்தது. இதுபோன்ற அர்த்தமற்ற பிடிவாதப் போக்குக் கொண்ட கொள்கைகளைக் கொண்ட கும்பலுடன் தொடர்பு கொண்டவர்களது குடும்பத்தோர் கறுப்பின ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்து கொள்வதை நினைத்தும் பார்க்க முடியாதுதான். ஆனால் கறுப்பின ஒபாமாவை நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுத்த இக்கால இளைஞர் கூட்டத்தைச் சார்ந்தவன் ரிச்சர்ட். அவனுக்கு ஏனோ எப்பொழுதும் இன வேற்றுமை மனத்தில் தோன்றியதில்லை. அபியையும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. தேங்க்ஸ் கிவிங் பண்டிகைக்கு அபியை அவன் அழைத்துவந்து இவள்தான் என் வருங்கால மனைவியாக வரப் போகிறவள் என்று அறிக்கைவிடுவான் என்று அவன் குடும்பத்தில் யாரும் எதிர்பாக்கவில்லை. அப்பா வில்லியம்ஸ் அபியிடம் முகம் கொடுத்துப் பேசவேயில்லை. ரிச்சர்டின் விருப்பம் தெரிந்தவுடன் அவனிடமும் பேச மறுத்துவிட்டார். அபிக்கு அந்தக் குடும்பப் பண்டிகை அவளது வரவால் மகிழ்ச்சி இழந்தது வருத்தமாக இருந்தது. ஆனால் ரிக்கி சிறிதும் அலட்டிக் கொள்ளவில்லை. அவளையும் அடுத்த நாளே அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான். அபியிடமும், “வருந்தாதே, அவர்கள் அக்கால மனிதர்கள், பழமையிலிருந்து வெளி வர விரும்பாத அசட்டுப் பிடிவாதம் என் அப்பாவிற்கு அதிகம். நீயும் நானும் சிறியவர்கள் அல்ல. உனக்கும் எனக்கும் என்ன பிடிக்கிறது என்று நமக்குத் தெரியும். வாழ்க்கையில் எது சரி, எது தவறு என்று ஆராய்ந்து பார்க்கும் அறிவு உள்ளவர்கள்தான் நாம். நமக்குப் பிடித்த வாழ்க்கையை நாம் தேர்ந்தெடுத்ததில் எந்தத் தவறும் இல்லை.” என்று ஆறுதல் சொன்னான். தொடர்ந்து கோடையில் அவர்கள் திட்டப்படியே அபி பட்டம் வாங்கியதும் அவர்கள் திருமணம் நடந்தது. அபியின் குடும்பமும் உறவினர்களும், நண்பர்களும், ரிக்கியுடன் பணியாற்றும் நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டார்கள். அவன் பெற்றோர் திருமணத்தைப் புறக்கணித்து விட்டனர். அவன் தனது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அவனது திருமணப் படங்களின் தொகுப்பையும் காணொளியையும் யூ டியுப், பிக்காஸா, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்து கொண்டு செய்தி அனுப்பினான். திருமணமான கையோடு அவனுக்கு ஆஃப்கானிஸ்தான் செல்ல வேண்டிய உத்தரவு கிடைத்தது. எனவே அவன் திரும்பி வரும் வரை குழந்தை பெற்றுக் கொள்வதைத் தள்ளிப் போடவும், அவள் மேல் படிப்பில் சேர்ந்து அவன் திரும்பி வருவதற்குள் அவளது படிப்பை முடிக்கவும் திட்டம் போட்டார்கள். ரிக்கிக்குப் பெண் குழந்தை என்றால் மிகவும் ஆசை என்று அவளுக்குத் தெரியும். குழந்தை பிறக்கும் பொழுது அவன் உடன் இருப்பதை அபியும் விரும்பினாள். பெரும்பாலான இராணுவ வீரர்களுக்குத் தங்கள் குழந்தைகள் பிறக்கும் பொழுது அருகிருக்கும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. படங்களையும் காணொளிகளையும்தான் முதலில் பார்ப்பார்கள். போர் முனையில் இருந்து வந்து சேர்வதற்குள் குழந்தை வளர்ந்திருக்கும். யாரோ மூன்றாவது மனிதரை அறிமுகப்படுத்துவது போல இதுதான் உன் அப்பா, இதுதான் உங்கள் பிள்ளை என்று அறிமுகப்படுத்த வேண்டியிருக்கும். அவர்களும் வாழ்வில் ஒரே ஒரு முறை கிடைக்கும் அரிய வாய்ப்பினை விரைவில் வளரும் குழந்தைகளின் முதல் மழலைச் சொல், முதல் நடை போன்ற மகிழ்ச்சி தரும் அனுபவங்களைத் தொலைத்துவிடுவார்கள். எனவே அவன் போருக்குச் சென்றதும் இவள் படிப்பைத் தொடர்ந்தாள். இருவரும் மின்னஞ்சல் மூலம் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை வளர்த்துக் கொண்டார்கள். மீண்டும் திருமணத்திற்கு முன் இருந்த கல்லூரி நாட்கள் போலவே காலம் சென்றது. அவன் திரும்பி வருவதையும், அவள் பட்டம் வாங்குவதையும் ஒரு சேரக் கொண்டாட ஹவாய் அல்லது கரீபியன் தீவுகளுக்கு உல்லாசப் பயணம் சென்று கொண்டாடுவது, அல்லது உல்லாசக் கப்பல் பயணம் போவது, எங்கு வாழ்க்கையைத் தொடங்குவது போன்ற சிறியதும் பெரியதுமாகப் பலப் பல திட்டங்கள் இருவரிடமும் இருந்தன. ஆனால் அத்தனை திட்டங்களும் இராணுவத்தில் இருந்து ஒரு நாள் நள்ளிரவு வந்த தொலைபேசி அவசரச் செய்தி ஒன்றில் சிதைந்து சுக்கு நூறாக நொறுங்கியது. ஆஃப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் நிகழ்ந்த “ப்ளாக் ஹாக்” ஹெலிகாப்டர் விமான விபத்தில் ரிச்சர்டும் மேலும் சில வீரர்களும் இறந்து விட்டார்கள் எனவும், அவனது உடல் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு டெலாவேரில் உள்ள “டோவர் ஏர் ஃபோர்ஸ் பேஸிற்கு” அனுப்பி வைக்கப்படவிருப்பதை அறிவித்து வருத்தமும் தெரிவிக்கப்பட்டது. தூக்கத்தில் சிறிது நேரம் ஏதும் பயங்கரக் கனவு கண்டு கொண்டிருக்கிறோமோ என்ற சந்தேகம் அபிக்கு வந்தது. அதிர்ச்சி மட்டும்தான் அவளுக்கு அப்பொழுது இருந்தது; அழுகை சுத்தமாக வரவேயில்லை. நிலைமை உண்மைதான் என உணர்ந்ததும் ரிச்சர்டின் தாயைக் கூப்பிட்டுச் செய்தியைச் சொன்னாள். பிறகு அவனது உடலை அவன் ஊருக்கு எடுத்துச் சென்று இறுதி மரியாதை செய்வதற்கும் அடக்கம் செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தாள். ரிச்சர்டின் பெற்றோர்கள் அவர்கள் பங்குக்கான ஏற்பாடுகளைத் தங்கள் ஊரில் தயாராகச் செய்து வைத்திருந்தார்கள். அபி நேற்று இரவு ரிச்சர்டின் ஊருக்கு வந்தாள், நாளை பொழுது விடியும் முன்னரே மீண்டும் பால்டிமோருக்குப் பயணமாவாள். ஏனோ வாழ்க்கையே ஒரு முடிவுக்கு வந்தது போல, அர்த்தமில்லாமல் போனது போல உணர்ந்தாள். கைபேசியை எடுத்து மணியைப் பார்த்தாள் நள்ளிரவுக்கு மேலே ஆகியிருந்தது. இன்னமும் மூன்று மணி நேரத்தில் கிளம்ப வேண்டும் தூக்கம் வரும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. கைபேசி வழியே தனது ஃபிலிக்கர் தளத்திற்குச் சென்று தனது படங்களின் தொகுப்பில் ரிச்சர்டின் படங்களாகத் தேடித் தேடி பார்க்க ஆரம்பித்தாள், கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. பார்வையை மறைத்தது. கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மீண்டும் பார்ப்பதைத் தொடர்ந்தாள். ரிச்சர்டிற்குப் பிறகு கையோடு தன்னை வெட்டிவிட்ட ரிச்சர்டின் தந்தை மீதோ, அதனை மறுத்து ஏதும் செய்ய இயலாமல் கலங்கிப் போயிருந்த ரிச்சர்டின் தாயின் மீதோ அவளுக்கு ஏனோ சிறிதும் கோபமே வரவில்லை. ரிச்சர்டே போன பிறகு இவர்கள் யார் என்ற நிலைக்கு அவள் மனம் எப்பொழுதோ சென்றுவிட்டிருந்தது. ✮✮✮✮✮ அபிக்கு மீண்டும் வகுப்புகள் ஆரம்பித்து அதில் மூழ்கிப் போனாள். ரிக்கியின் நினைவுகள் வரும்பொழுது புத்தகங்களையே வெறுமையாகப் பார்த்துக் கொண்டிருப்பாள், தலையில் எதுவும் ஏறாது. ரிக்கி ஆயுள் காப்பீடு எடுத்திருந்திருக்கிறான். அந்த இழப்பீட்டுத் தொகை அவளுக்குக் கிடைத்தது. அவனுக்கு இறுதி மரியாதை செலுத்தும்பொழுது வீர வணக்கத்துடன் முக்கோண வடிவில் மடித்துக் கொடுக்கப்பட்ட தேசிய கொடிக்கு ஒரு கண்ணாடி போட்ட முக்கோண வடிவ மரப்பெட்டியை வாங்கி அதில் கொடியைப் பத்திரப்படுத்தி ரிக்கியின் புகைப்படத்திற்கு அருகில் வைத்துக் கொண்டாள். நவம்பரில் ‘வெட்டரன்ஸ்’ நாள் (Veterans day) என்னும் வீரர்கள் தினத்தில் ரிக்கியின் நினைவு அவளை அதிகம் வாட்டியது. அவனது பெற்றோர்களுக்கும் அப்படித்தானே இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள். அவர்கள் மூன்று பிள்ளைகளையுமே நாட்டுக்காக இழந்தவர்கள், அவர்களுக்கு வலி அதிகமாகத்தான் இருக்கும். ஒருமுறை அவர்களைப் போய்ப் பார்த்து வந்தாலென்ன என்று தோன்றியது. வரும் தேங்க்ஸ் கிவிங் நாளுக்குச் சென்று வர விமானப் பயணச் சீட்டு ஏற்பாடு செய்து கொண்டாள். ஆனால் ரிக்கியின் பெற்றோர்களுக்கு அவள் வருவதைத் தெரிவிக்க விரும்பவில்லை. வரத் தேவையில்லை என்று சொல்லிவிட்டால் மீறிப் போவது நன்றாக இருக்காது. திடீரெனப் போய் எதிரில் நின்றால் அவர்களால் தவிர்க்க முடியாது என்று அபிக்குத் தோன்றியது. ✮✮✮✮✮ மரங்களில் இருந்து இலைகள் உதிரத் தொடங்கின. குளிர் சிறிது சிறிதாக அதிகரித்தது. ரிக்கியின் தந்தை வில்லியம்ஸ் தனது சக்கரநாற்காலியை உருட்டிக் கொண்டு போர்ட்டிகோவிற்கு வந்தார். வாசலில் இருந்த பெரிய மக்னோலியா மரங்கள் ஏதோ அலுத்துச் சலித்துப் போனது போல அசைவற்று நின்றன. பெரும்பாலான வீடுகளின் வாசலில் தேங்க்ஸ் கிவ்விங் நாள் அலங்காரம் இருந்தது. வைக்கோல் கட்டும். சில சோளத் தட்டைகளும், சோளக் கொல்லை பொம்மைகளும், வாசல் கதவில் அலங்கார மலர் வளையங்களும் அல்லது குறைந்தது ஒரு ஆரஞ்சு வண்ணப் பூசணிக்காயாவது இருந்தது. வில்லியம்ஸ் குளிருக்கு இதமாக இருக்கச் சிவப்புக் கட்டம் போட்ட ஃப்ளேனெல் முழுக்கைச் சட்டை அணிந்து, பழுப்பு கார்டுராய் கால்சராயும் அணிந்திருந்தார். மடியில் புத்தகமும், கழுத்தில் கயிற்றில் தொங்கவிடப்பட்ட படிக்கும் கண்ணாடியும் இருந்தன. ஆனால் படிப்பில் ஆர்வம் இல்லாது வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். ரிக்கியின் அம்மா இரண்டு கோப்பைகளில் சூடான மால்ட் பானமும் அதில் மார்ஷ்மல்லோ கட்டிகளையும் மிதக்கவிட்டுக் கொண்டுவந்தார். வில்லியம்ஸின் அருகில் இருந்த முக்காலியில் அவரது கைக்கெட்டும் தூரத்தில் கோப்பைகளை வைத்தார். தனது தோளில் போட்டு எடுத்து வந்திருந்த சால்வையை வில்லியம்ஸின் தோளில் போர்த்திவிட்டு, போர்ட்டிகோவில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து கொண்டார். மனைவி வந்ததோ, அதைத் தொடர்ந்து அவர் செய்த பணிவிடைகளோ வில்லியம்ஸிடம் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. சிலைபோலவே இறுகிய முகத்துடன் இருந்தார். அவரும் அவர் மனைவியும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதும் குறைந்து விட்டது. ஏதோ மிச்சமிருக்கும் நாட்களைக் கழிக்க வேண்டுமே என்ற வெறுப்பில் நாட்களை ஓட்டும் மனப்பான்மையில் இருந்தார்கள். வாசலில் ஒரு வண்டி வந்து நின்றது இருவர் கவனத்தையும் கவரவில்லை. விமான நிலையத்தில் இருந்த ஊர்திகளில் ஒன்றை வாடகைக்கு எடுத்து அந்த வண்டியை அபியே ஒட்டிக் கொண்டு வந்திருந்தாள். வண்டியின் கதவு திறந்து சாத்தப்படும் சப்தம் கேட்டு இருவரும் ஒரு சேரத் திரும்பிப் பார்த்தார்கள். அவர்களைப் பார்த்து கையை அசைத்து விட்டு வண்டியின் டிக்கியில் இருந்து ஒரு பெரிய தோல் பையை எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டாள் அபி. அவளைப் பார்த்து எரிச்சலடைந்த வில்லியம்ஸ் தனது மனைவியை நோக்கித் திரும்பி, “ஏன் இந்தக் கறுப்பி இங்கே வந்திருக்கிறாள்? நீ ஏதும் அழைத்தாயா? என் நிம்மதியைக் குலைக்கவே பிறந்தவள் இவள். ஏதேனும் பணம் அல்லது உதவி என்று கேட்டால் துரத்திவிடு, இனி இந்தப் பக்கமே வராதே என்று எச்சரித்து விடு,” என்றார். அவர் பேசியது எங்கே அபியின் காதில் விழுந்துவிடுமோ என்று கலவரம் அடைந்த ரிக்கியின் அம்மா, “நான் அழைக்கவில்லை, அவள் வரப்போவது எனக்குத் தெரியாது. சரி, சரி, நீங்கள் அமைதியாக இருங்கள். இப்படிப் பேசுவது அவள் காதில் விழுந்தால் அவள் வருந்த மாட்டாளா? என்ன இருந்தாலும் அவள் நம் ரிக்கியை மணந்தவள் இல்லையா? நீங்கள் எதுவும் பேசாதீர்கள். அவளிடம் நானே பேசிக் கொள்கிறேன்,” என்று மெதுவான குரலில் அவரைக் கண்டித்து விட்டு எழுந்தார். “ஆமாம், இவளுடன் பேச எனக்கு என்ன இருக்கிறது?” என்று முணுமுணுத்தார் வில்லியம்ஸ். அவரது செய்கையால் ஆயாசம் அடைந்த அவர் மனைவி அவரைக் கண்களால் அடக்கிவிட்டு வாசலுக்கு வந்தார். “வா, அபி. என்ன இந்தப் பக்கம், நான் உன்னை எதிர்பார்க்கவே இல்லை.” “மாம், நீங்கள் மிகவும் மெலிந்து விட்டீர்கள்.” என்று கூறிய அபி ரிக்கியின் அம்மாவை அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டாள். தோளில் தொங்கிய பையைப் போர்ட்டிகோவின் வாசல் கதவருகில் இருந்த ஆடும் நாற்காலியில் வைத்துவிட்டு, குளிருக்காக அணிந்திருந்த அங்கியின் தலைக் குல்லாவை நீக்கிவிட்டாள். “மாம், திடீரென முடிவெடுத்துப் புறப்பட்டுவிட்டேன், உங்களுக்குத் தெரிவிக்க அவகாசம் இல்லாமல் போனது.” என்றவள் சக்கரநாற்காலியில் அவளை வரவேற்காமல், வேறு புறம் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்த வில்லியம்ஸிடம் சென்று அவரையும் கட்டி அணைத்துக் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள். “உங்கள் உடல் நலம் எப்படி இருக்கிறது டாட்?” வில்லியம்ஸ் அவளைத் திரும்பியும் பார்க்கவில்லை. அதைப் பொருட்படுத்தாத அபி பையைத் திறந்து அதில் ரிக்கிக்கு இராணுவ மரியாதை செய்து முக்கோணமாக மடித்து அளிக்கப்பட்ட தேசிய கொடியை அது வைக்கப் பட்டிருந்த முக்கோண மரப்பேழையுடன் எடுத்துக்கொண்டு வீட்டிற்குள்ளே சென்றாள். ரிக்கியின் அம்மாவும் அவளைத் தொடர்ந்தார். “அபி, குளிருக்கு இதமாகச் சூடாகக் குடிக்க ஒரு சாக்லேட் பானம் செய்து தருகிறேன்” என்றவாறு சமையலறைக்குச் செல்லத் திரும்பினார். “வேண்டாம் மாம். நன்றி. இப்பொழுதுதான் விமான நிலையத்தில் பருகினேன், சிரமப்பட வேண்டாம், இந்தாருங்கள் இராணுவத்தினர் தந்த தேசிய கொடி ரிக்கியின் படத்திற்கு முன் வையுங்கள்” என்று கொடுத்தாள். “நீயே வைத்துவிடு அபி.” சுவரில் வரிசையாக மாட்டப்பட்டிருந்த படங்களில் இராணுவ உடையுடன் இருந்த ரிக்கியின் கொள்ளுத் தாத்தா, தாத்தா, பெரிய தாத்தா, அண்ணன், அக்கா, ரிச்சர்ட் என அனைவரும் அவளைப் பார்த்துப் புன்னகைப்பது போல இருந்தது அபிக்கு. பொதுவாக அனைவருக்கும் ஒரு சல்யூட் வைத்தாள். அனைவரது படங்களுக்கும் கீழே அவரவர் தேசிய கொடி இருந்தது. ரிக்கியின் படத்திற்கு முன் இருந்த இடத்தின் கீழே மட்டும் அந்த நீண்ட ஷெல்ஃப் பலகை காலியாக இருந்தது. அபி அவன் படத்தின் முன்பு கொடியை வைத்துவிட்டு மீண்டும் அவனுக்கு மட்டும் ஒரு சல்யூட் வைத்தாள். அவன் திடீரெனப் படத்திலிருந்து எழுந்து வந்து, அபி அவன் மீது பானம் ஊற்றிவிடுவாள் என்பது போல அச்சப்படுவதாகப் பாசாங்குக் காட்டி ஓடிச் சிரிக்க மாட்டானா என்று தோன்றியது அபிக்கு. முதல் முறை அவனைப் பார்த்த பொழுது இருந்த அதே போன்ற அவனது தனித் தன்மையான முத்திரைச் சிரிப்புடன் படத்தில் அவன் இருந்தான். அவன் படத்துக்குப் பறக்கும் முத்தம் ஒன்றை அனுப்பிவிட்டு அபி திரும்பினாள். அவள் கண்கள் கலங்கி இருந்தன. ரிக்கியின் அம்மாவும் கண்ணைத் துடைத்துக் கொண்டார். அபி அவர் தோளை ஆதரவாகத் தட்டிக் கொடுத்துவிட்டு மீண்டும் வெளியே வாசலுக்கு வந்தாள். அவளைத் தொடர்ந்த ரிக்கியின் அம்மா, “உன் படிப்பு எப்படிப் போகிறது அபி, வரும் கோடையில் முடித்து விடுவாயல்லவா?” என்றார். “ஆமாம் மாம். நன்றாகப் படிக்கிறேன், வரும் கோடையில் முடித்துவிடுவேன்.” அபி பையைக் குடைந்து அதிலிருந்து சிறிய கைப்பை ஒன்றை எடுத்து அதிலிருந்த ஒரு உறையை ரிக்கியின் அம்மாவிடம் கொடுத்தாள். “என்ன அபி இது?” என்றவாறு பிரித்தவர் அதில் உள்ள காசோலையை எடுத்துப் பார்த்தார். அதில் பெறுநர் ‘மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் வில்லியம்ஸ்’ என்று குறிப்பிடப்பட்டு நானூறு ஆயிரம் டாலர்களுக்குத் தொகை நிரப்பப்பட்டிருந்தது. அவரது கேள்விக்குறியான பார்வையைப் புரிந்து கொண்ட அபி, “மாம், இது ரிக்கியின் உயிர் காப்பீட்டுத் தொகை எனக்குச் சேரவேண்டும் என்று குறிப்பிட்டு காப்பீட்டுப் பத்திரம் எடுத்திருந்திருக்கிறான். அதனால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.” “நானூறு ஆயிரம் டாலர்களுக்குக் காப்பீடா!!! இராணுவம் வழங்கும் உச்ச காப்பீட்டு அளவுத் தொகை அல்லவா இது?” “ஆமாம் மாம். காப்பீடு செய்தது தெரியும், ஆனால் இந்த அளவுக்கு ஒரு பெரிய தொகைக்கு ரிக்கி செய்திருப்பான் என்று எனக்குத் தெரியாது.” “அதை ஏன் நீ எங்களுக்கு எழுதிக் கொடுக்கிறாய் அபி? அவன் உன் நலனுக்காகக் கொடுத்திருக்கிறான். அவனுக்கு ஏதாவது நேர்ந்தால் நீ சிரமப்படக் கூடாது என்பது அவன் நோக்கமாக இருந்திருக்கிறது. அதை நீ எங்களுக்குத் தர நினைப்பது தவறு. உன் படிப்பு முடிந்ததும் படிப்புக்காக நீ வாங்கிய கல்விக்கடனை அடைக்கலாம், ஒரு வேலை கிடைக்கும்வரை உள்ள இடைப்பட்ட காலத்தைத் தள்ள உதவியாயிருக்கும். ஒரு சிறிய ஊரில் நீ வாழ நினைத்தால் தொகையில் ஒரு பகுதியைப் போட்டு சிறிய வீடும், மற்றொரு பகுதியை மூலதனமாக வைத்து உனது திட்டப்படி ஒரு தொழிலும் தொடங்க முடியும், அதனால் உன் எதிர்கால வாழ்க்கையும் சீராக அமையும், இந்தா இதைப் பிடி. ரிக்கியின் விருப்பத்துக்கு மாறாக நீ இதைச் செய்வதோ, அதற்கு உடன்பட்டு நாங்கள் ஏற்றுக் கொள்வதோ சரியல்ல.” காசோலையை உறையில் போட்டு மீண்டும் அவளது பையிலேயே போட்டார் ரிக்கியின் அம்மா. “இல்லை மாம். போர் முனையில் மரணம் எதிர்பார்க்கக் கூடியது என்றாலும் ரிக்கியும் இவ்வளவு சீக்கிரம் அவன் வாழ்வு முடிவடையும் என நினைத்திருக்க மாட்டான். எங்களுக்குக் குழந்தைகள் இருந்தால் எப்படித் திட்டமிடுவானோ அது போல முன்னெச்சரிக்கையாகத் திட்டமிட்டிருப்பான் போலும். அவ்வாறு ஏதும் பிள்ளை பிறந்திருந்தால் நானே உங்களிடம் இந்தப் பணத்தைத் தர எண்ணாமல் அவன் குழந்தையின் நல்வாழ்விற்குத்தான் பயன்படுத்துவேன். ஆனால் நாங்கள் சிறிது காலம் போகட்டும் என நினைத்ததால் குழந்தைகளைப் பற்றிய எங்கள் திட்டங்கள் நிறைவேறாமல் போய்விட்டது. இவ்வளவு பணம் எனக்கு எதற்கு? எனக்குப் படிப்பு இருக்கிறது. உழைக்கும் காலம் இன்னமும் நிறைய இருக்கிறது. ஆர்வமும் இருக்கிறது. அந்த மூலதனமே எனக்குப் போதும் என் எதிர்காலத்தை நானே எதிர்கொள்வேன். டாடும் நீங்களும் சக்கரநாற்காலியை ஏற்றி இறக்கும் ஒரு வண்டியை இதில் வாங்கிக் கொண்டால் ரிக்கி நிச்சயம் மகிழ்வான், இல்லையா?” அபி மீண்டும் பையிலிருந்து உறையை எடுத்து ரிச்சர்டின் அம்மாவின் கையில் திணிக்க முயன்றாள். அவர் தடுத்தார். அபி சக்கரநாற்காலிக்கு அருகில் சென்று வில்லியம்ஸின் முன் முழங்காலிட்டு அமர்ந்தாள். அவர் அவளை ஏறெடுத்தும் பார்க்காமல், பொருட்படுத்தாமல் இன்னமும் சிலை போலவே அமர்ந்திருந்தார். அபி அவரது சட்டைப் பையில் உரையை மடித்துச் செருகினாள். அவரது மடி மீது முகத்தைப் புதைத்துக் கொண்டு “என்னை மன்னித்துவிடுங்கள் டாட்” என்றாள். அவர் மெதுவாகத் திரும்பி அவளைப் பார்த்தார். அபி தலையை உயர்த்திக் கலங்கிய கண்களுடன் மீண்டும், “என்னை மன்னித்துவிடுங்கள் டாட், உங்கள் பரம்பரையின் சிறப்பைத் தொடர, உங்கள் ஆசைப்படி, இராணுவத்தில் பணியாற்ற ரிக்கியின் வாரிசை உங்களுக்கு என்னால் கொடுக்க முடியாமல் போய்விட்டது. இதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.” என்றவள் எழுந்து வில்லியம்ஸை ஆறுதலாக அணைத்து மீண்டும் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு, “உடல்நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள் டாட்” என்று சொன்னாள். ஆடும் நாற்காலியில் இருந்த தனது தோள்பையை எடுத்து மாட்டிக் கொண்டு ரிக்கியின் அம்மாவை அனைத்து அவர் கன்னத்திலும் முத்தமிட்டாள். பிறகு வாசலைக் கடந்து திரும்பிப் பார்க்காமல் வெளியேறினாள். வண்டியில் ஏறும் முன்பு கையசைத்து, “குட் பை, மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் வில்லியம்ஸ்” என்று கூறி வண்டியைக் கிளப்பிச் சென்றுவிட்டாள். அதுவரை டாட், மாம் என்றவள் சட்டென்று யாரோ முன்பின் தெரியாத மூன்றாம் மனிதர்களை அழைப்பது போல மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் என்றதிலிருந்து நீங்களும் நானும் இனி யார் யாரோ, நமக்குள் இனி எந்தத் தொடர்பும் இல்லை, இனி நீங்களே அழைத்தாலும் உங்கள் வீட்டில் நான் காலடி எடுத்து வைக்க மாட்டேன் என்று அபி குறிப்பால் உணர்த்தியது ரிக்கியின் அம்மாவிற்குப் புரிந்தது. தனது மகன் அன்பு செலுத்திய ஒரே உயிரும் அவர்களை விட்டு நீங்கியது புரிந்தது. அபியின் அந்த வேதனைக்குக் காரணம் அவள் வந்த பொழுது வில்லியம்ஸ் பேசியது அவள் காதில் விழுந்து விட்டதால் என்பதும் புரிந்தது. ஒரு தேங்க்ஸ் கிவிங் பண்டிகையில் தொடங்கிய அவளது உறவு மற்றொரு பண்டிகைச் சமயத்தில் முறிந்து விட்டது. அவர்கள் அவளைச் சரிவர நடத்தாவிட்டாலும் அவள் அந்தக் குடும்பத்திற்குத் தனது நன்றியைக் காண்பித்து விட்டாள். ஒரு பெருமூச்சுடன், வேதனை நிறைந்த முகத்துடன் ரிக்கியின் அம்மா வில்லியம்ஸைத் திரும்பிப் பார்த்தார். இதுவரை சிலை போலவே இருந்த வில்லியம்ஸ் இப்பொழுது குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்தார். ••••••• 2. பழங்கணக்கு மாமா வந்திருந்தார். சாப்பாட்டு அறை மேஜைக்கருகில் அமர்ந்து அம்மா கொடுத்த காஃபியைக் குடித்துக் கொண்டே மேஜையை நோட்டம் விட்டார். அவரது வீட்டிற்கு எங்கள் வீட்டுச் சாப்பாட்டு அறையின் மேஜை போலவே ஒன்று செய்ய விரும்பினார். “அம்மாடி ஒரு அளவு நாடா எடுத்துட்டு வாம்மா” “இதோ மாமா, இந்தாங்க என்ன செய்யப்போறீங்க?” “ஒரு தாளும் பேனாவும் எடு, நான் இந்த மேஜை அளவை அளந்து சொல்றேன், குறிச்சுக்கோ” “சரிங்க மாமா, சொல்லுங்க” “அகலம்… ம்ம்ம்… (என்று ஹம் செய்துவிட்டு) மூணு அடி மூணு அங்குலம்னு எழுதிக்கோ” மெட்ரிக் அளவு படித்த என் கணித அறிவை மாமாவிடம் காட்ட எண்ணினேன். “ஒரு மீட்டர்னு எழுதவா மாமா?” “வேணாம் எனக்கு அது ஒத்து வராது. இது ஒரு 99 சென்டிமீட்டர் சொச்சம்தான் இருக்கு எனக்குப் பழைய கணக்குதான் வசதி, பேசாம நான் சொல்றத எழுது.” சே… சே… இந்தப் பழைய பஞ்சாங்கங்கள் மாறவே மாறாது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு எதிர்வாதம் செய்யாமல் சொன்னதை எழுதினேன். கல்லூரியில் வேறு பாடம் எடுத்துப் படித்திருந்தாலும் மாமா கணக்கில் புலி என்று பள்ளியில் படிக்கும் காலத்தில் பெயர் வாங்கியவர். இருபதாம் வாய்ப்பாட்டை இருபது வரை படித்தவர். நம்மைப் போலப் பன்னிரண்டாம் வாய்பாட்டைப் பன்னிரண்டுடன் நிறுத்தியவர் இல்லை. பள்ளிநாட்களில் தங்கப் பதக்கம் கொடுக்கும் வழக்கம் இருந்திருந்தால், ஒவ்வொரு ஆண்டும் என் அண்ணன் தங்கப் பதக்கம் வாங்கியிருக்குமாக்கும் என்று அம்மா தனது அண்ணனைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள். மாமா மேஜைக்கு அடுத்தப் பக்கம் சுற்றி வந்தார். ஒரு கை தேர்ந்த சிற்பி தான் வடித்த சிற்பத்தைப் பல கோணங்களில் இருந்து பார்ப்பது போல யாரோ முன்பின் தெரியாத ஒரு தச்சர் செய்த மேஜையைப் பல கோணங்களில் நின்று பார்த்தார். “நீளம் இந்த மேஜைய விடக் கொஞ்சம் ஒரு அடி அதிகமா வச்சு செஞ்சுக்கலாமா?” என்று சித்திரகுப்தன் போல வெறும் கணக்கைக் குறித்துக் கொண்டிருந்த என்னிடம் யோசனை கேட்டார். நானும் என் மேதா விலாசத்தைக் காட்டக் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட மனமில்லாமல், “மாமா, உங்க வீட்டுச் சாப்பாட்டு அறை நீளத்திற்கு இன்னமும் கொஞ்சம் 30 சென்டிமீட்டர் அதிக நீளமாகச் செய்யலாமே” என்றேன். “அப்படியா சொல்ற?” மாமா நாற்காலியில் அமர்ந்தார், “என் வீட்டுச் சாப்பாட்டு அறையை இந்த அறையோட ஒப்பிட்டா அது கொஞ்சம் பெரிசுதான், இல்லியா?” சொல்லிவிட்டு மாமா அறையைச் சுற்றும் முற்றும் பார்த்தார். நானும் எதிர் நாற்காலியில் அமர்ந்து சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அவரைப் பார்த்தேன். மாமா அவர் வீட்டின் அறையை மனக்கண்ணில் கொண்டு வருவதற்காக விட்டத்தைப் பார்த்து யோசித்தார். நானும் அவருடன் சேர்ந்து விட்டத்தைப் பார்த்தேன். விட்டத்தில் எந்தக் காட்சியும் எனக்குத் தெரியவில்லை. மாமா எழுந்து யோசனையுடன், “சரி நாம ஒரு அடி கூட அளவு வச்சுக்கலாம், சரியா?” “சரி மாமா, ஒரு 30 சென்டிமீட்டர் அதிகமா வச்சுக்கலாம்.” எனக்கென்ன போயிற்று, அவர் வீடு, அவர் மேஜை. மேலும் ஒரு 45 சென்டிமீட்டர் என்றாலும் அதனால் எனக்கென்ன பாதிப்பு? “சரி நாடாவப் புடி அம்மாடி” நான் தாளையும் பேனாவையும் மேஜையில் போட்டு விட்டு நாடாவின் ஒரு பக்க முனையைப் பிடித்தேன். “நீளம்… ம்ம்ம்… (மீண்டும் ஹம்மிங்) இந்த மேஜை அஞ்சு அடி, கூட ஒரு முக்காலே அரைக்கால் இருக்கு. நாம கூட ஒரு அடி வச்சுக்கலாம், ஆறு அடி முக்காலே அரைக்கால் அப்படின்னு எழுதும்மா” என்னது முக்காலே அரைக்காலா???!!! இத எப்புடி மெட்ரிக் அளவாக மாற்றி எனது புத்திக் கூர்மையைக் காட்டுவது? குழம்பினேன். நமக்கெல்லாம் அட்ரா… அட்ரா… நாக்க முக்க… நாக்க முக்கதானே தெரியும். “என்னம்மா யோசனை? எழுதும்மா” “நீளம் ஆறு அடி முக்காலே அரைக்கால்” என்று சத்தமாகச் சொல்லிக் குறித்துக் கொண்டேன். அடுத்து மாமா தொடர்ந்து மேஜையின் கால் ஒன்றினை அளந்து “காலே அரைக்கால்” என்று ஏதோ தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார். “இல்லீங்க மாமா, மேஜையோட கால் முழுக்காலாத்தானே இருக்குது.” “அம்மாடி, அறுக்காதம்மா” “காலை அறுத்தாதானே மாமா அரைக்காலா மாத்த முடியும்” “என்னால தாங்க முடியல, பேசாம நான் சொல்றத எழுது” என்று சொல்லிவிட்டு மேஜையின் கால் அளவு, மேற்பலகையின் தடிமன் என அளந்து மாமா சொன்னதை எல்லாம் மறு பேச்சில்லாமல் குறித்துக் கொண்டேன். இருவரும் மீண்டும் நாற்காலியில் உட்கார்ந்தோம். “அந்தத் தாளக் கொடு, அளவைப் பார்ப்போம்” என்றார் மாமா. மாமா பார்த்துவிட்டுச் சிரித்தார். ஹி… ஹீ… ஹீ… ஹீ… எனக்குக் கோபம் வந்தது. “ஏன் மாமா சிரிக்கிறீங்க?” மாமாவுக்குச் சிரிப்புத் தாங்கவில்லை. ஹி… ஹீ… ஹீ… ஹீ… என்று சிரித்துவிட்டு மீண்டும் தாளைப் பார்த்தார். மீண்டும் ஹி… ஹீ… ஹீ… ஹீ… அவரால் படிக்க முடியாத அளவுக்கு அப்படி ஒரு நகைச்சுவையையும் நான் எழுதவில்லையே. என் கையெழுத்து அவ்வளவு கேவலமாகவா இருக்கிறது? கோபத்துடன் அவர் கையிலிருந்த தாளைப் பிடுங்கிப் பார்த்தேன். முக்காலே அரைக்கால் என்பதில் எழுத்துப் பிழை, “மூக்காலே அரைக்கால்” என எழுதியிருந்தேன். எனக்கும் சிரிப்பு வந்தது. ஆனால் ஒரு சின்னத் தவறுக்கு இப்படி ஒரு சிரிப்பா? என்று எரிச்சலும் வந்தது. உர்ர்… என்று முகத்தை வைத்துக் கொண்டு பிழையைத் திருத்தி அவரிடம் நீட்டினேன். கையில் வாங்கிப் பார்த்த மாமா மீண்டும் சிரித்தார். ஹீ… ஹீ… ஹீ… ஹீ… “போதும் மாமா, அதான் திருத்திட்டேனே. இன்னமும் என்ன சிரிப்பு?” என்று கடுப்படித்தேன். மாமாவிற்குச் சிரித்துச் சிரித்துக் கண்ணீரே வந்து விட்டது. “காலே அரைக்கால், முக்காலே அரைக்கால், இந்த அளவெல்லாம் உனக்கு எழுதத் தெரியாதாம்மா?” “அதான் எழுதி இருக்கேனே மாமா!” “இல்லம்மாடி எழுத்தால இல்லம்மா, எண்ணால் எழுதணும். கால், அரை, முக்கால் இதெல்லாம் எப்படி எழுதுவியோ… ஒண்ணுங் கீழ நாலு, ஒண்ணுங் கீழ ரெண்டு, மூணுங் கீழ நாலு அப்படின்னு, அதுபோல எண்ணால எழுதணும்மா” காலே அரைக்கால் = 3/8, முக்காலே அரைக்கால் = 7/8 என்று மாமா எழுதிக் காண்பித்து, “இப்படி எண்ணால எழுதணும்மா” என்றார். மாமா சிரித்த காரணம் புரிந்து அசடு வழிந்தேன். “இல்ல மாமா, என்னால எழுத முடியாது. எனக்குத் தெரியாது.” ••••••• 3. கொஞ்சமாவது பொறுப்பிருக்கா உனக்கு? காலை நேரத்தில் பள்ளிக்குக் கிளம்ப வேண்டிய பரபரப்பில், அலுவலத்திற்குச் செல்ல வேண்டிய அவசரத்தில் வீடு களேபரமாக இருந்தது. மேகலையின் தம்பியும், தம்பி மனைவியும் வீடு முழுவதும் ஓடி ஆடிக் கொண்டிருந்தார்கள். அவர்களது ஐந்து வயது மகள் மஞ்சரி தன் பங்கிற்குப் பள்ளி கிளம்ப அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தாள். காலை மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்ஸில் வந்து இறங்கி இருந்தாள் அத்தை மேகலை. அவள் வெளி நாட்டில் இருந்து கொண்டு வந்து பரிசாகக் கொடுத்த ‘ஹாலோ கிட்டி’ பொம்மையுடன் விளையாட வேண்டும், அத்தையுடன் விளையாட வேண்டும். இதை எல்லாம் விட்டு விட்டுப் பள்ளிக்குப் போவதா? அவளது நியாயமான கோரிக்கையை யாரும் கண்டு கொள்ளவில்லை. கடைசிக் கணையாகப் பொம்மையைப் பள்ளிக்கு எடுத்துச் செல்வேன் என்ற அம்பையும் விட்டு அடம் பிடித்தாள். அவசரத்தில் இருந்த அம்மாவிடம் அநியாயமாக அடி வாங்கி அழுதவாறு தோல்வியைத் தழுவி குளிக்கப் போனாள். தம்பி மனைவிக்குத் தன்னால் ஆன உதவி செய்ய எண்ணிச் சமையலறைக்குப் போனாள் மேகலை. அவள் அம்மா ஆட்சி செலுத்திய சமயலறையில் தம்பி மனைவி உரிமையுடன் வலம் வருவதைக் காண அவளுக்குச் சகிக்க முடியாமல் இருந்தது. பல பொருட்களும் இடம் மாற்றி வைக்கப்பட்டு அவள் வளர்ந்த வீடே மேகலைக்கு அந்நியமாகப் போய்விட்டது வேதனையாக இருக்க ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள். தம்பி மனைவி, “அண்ணி, இந்தாங்க காபி குடிங்க, இதோ இட்லி வெந்துடும்” என்றாள். “நீ வேலைக்கு வேற கிளம்பணுமே மல்லி, நான் ஏதாவது உதவி செய்யவா?” என்றாள் மேகலை. “நீங்க டையர்டா இருக்கீங்க, ரெஸ்ட் எடுங்க அண்ணி. எனக்கும் உங்க தம்பிக்கும் வேற இன்னிக்கு லீவு தராம ஆபீசில கழுத்தறுத்திட்டாங்க. உங்கள சரியாக் கவனிக்க முடியலேன்னு கஷ்டமா இருக்கு. நீங்க உதவி செய்யறேன்னு சொல்றதக் கேட்க வருத்தமா இருக்கு. இன்னைக்கு அத்தை இருந்தா உங்களுக்கு நல்லா இருந்திருக்கும்” என்றவாறு இட்லி குக்கர் விசில் கேட்டு மீண்டும் சமையலறைக்கு ஓடினாள் மல்லி. மேகலையின் அம்மா இறந்து ஐந்து ஆண்டுகள் ஓடி விட்டிருந்தன. அம்மா மறைவுக்கு வந்து போன மேகலை இப்பொழுதான் மீண்டும் இந்தியாவிற்கு வந்திருக்கிறாள். சென்ற முறை வந்த பொழுது தம்பிக்குத் திருமணம் ஆன புதிது, குழந்தை பிறந்திருக்கவில்லை. முன்னறை சோபாவில் உட்கார்ந்து காபி குடித்த வண்ணம் தொலைக்காட்சி பார்த்த மேகலை அசதியில் சரிந்து தூங்க ஆரம்பித்தாள். மகளுக்குத் தலை வாரிவிட அங்கு வந்த மல்லி, “அண்ணி, தூங்கிடாதீங்க, சாப்பிட்டுட்டுத் தூங்கலாம், ஏங்க, ஏன் இவ்வளவு நேரம்? இங்க பாருங்க உங்க அக்காவுக்குத் தூக்கம் வருது. பேச்சுக் கொடுத்திக்கிட்டிருங்க. இதோ சாப்பாட்ட மேஜை மேல வைக்கிறேன்” என்று சொல்லியவாறு மஞ்சரிக்குச் சடை பின்னத் தொடங்கினாள். அக்கா படிக்க வாரப் பத்திரிக்கைகளைக் கடையில் இருந்து அள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்த தம்பி, “சாப்பிட வா, அக்கா” என்று சொல்லி, பத்திரிக்கைகளை அவளிடம் கொடுத்தான். “நான் அப்புறமா சாப்பிடறேன் தம்பி, கொஞ்ச நேரம் தூங்கறேன்” என்ற அக்காவை நன்கு புரிந்த தம்பி, “சரி, வா படுக்கையில படுத்துக்கோ” என்று சொல்லிப் படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றான். “அத்தை” என்று கூச்சலிட்டவாறு ஓடி வந்த மகளை “உஷ், கத்தாதே” என்று அடக்கினான். “ஏசி போடவாக்கா?” “வேணாம் ஃபேன் போதும்” என்று சொல்லியவாறு தூங்கிவிட்ட அக்காவிற்குப் போர்வையைப் போர்த்திவிட்டு, ஜன்னல் கதவைத் திறந்து வைத்துவிட்டு, அறைக்கதவை சாத்திக்கொண்டு சென்றான் தம்பி. மீண்டும் மேகலை கண் விழித்த பொழுது சிறிது நேரம் அவளுக்கு எங்கு இருக்கிறோம் என்று புரியவில்லை. மின்சாரம் நின்று, மின்விசிறியும் நின்று லேசாக வியர்த்ததில் விழித்துக் கொண்டிருந்தாள். வீடே அமைதியாக இருந்தது. வெளியில் காகம் கரையும் ஒலி கேட்டுக் கொண்டிருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தாள். அவளும் அவள் தங்கையும் அங்கு வளர்ந்த பொழுது பகிர்ந்து கொண்ட அதே படுக்கை அறைதான். அலமாரியில் அவள் கதைப் புத்தகங்கள், அவள் உபயோகித்த மேஜை, நாற்காலி எல்லாம் அப்படியே இருந்தன. ஆனால் இப்பொழுது அது மஞ்சரியின் அறையாக மாறிவிட்டிருந்த சாயலும் இருந்தது. பொம்மைகள், சுவரில் கார்ட்டூன் உருவப் படங்கள் என அறையில் புதிய அலங்காரங்கள். படுக்கைக்குப் பக்கத்தில் அவளுடைய கைபேசி, ஹாட்பேக்கில் உணவு, தண்ணீர், டவல், சோப்பு, பேஸ்ட் ப்ரஷ் என அவளுக்குத் தேவையானவற்றைக் கைக்கெட்டும் தூரத்தில் வைத்துவிட்டு, தம்பியும் மல்லியும் வேலைக்குச் சென்றுவிட்டது புரிந்தது. மஞ்சரியும் பள்ளிக்குச் சென்றிருப்பாள். கைபேசியில் மணி பார்த்தாள். காலை மணி பதினொன்றரை. தெருவில் ஆட்டோ போகும் ஒலி தேய்ந்து மறைந்தது. யாரோ இருவர் பேசிக்கொண்டே போனார்கள். அதைத்தவிர எங்கும் அமைதி காகம் மீண்டும் கரைந்தது. அம்மா இருக்கும்பொழுது வீடே கலகலப்பாக இருக்கும். தெருக்கதவைச் சாத்தியதே இல்லை. இவ்வளவு நேரம் தூங்கினால் அம்மாவிடம் இருந்து ஏகப்பட்ட திட்டு கிடைக்கும். இவளது பொறுப்பில்லாத தன்மையைச் சுட்டிக்காட்டியும், அம்மா வளர்ந்தபொழுது அதே வயதில் அம்மாவிற்கு என்னென்ன பொறுப்புகள் இருந்தன என்றும் சொல்லிக்காட்டுவார்கள். வழக்கமாகச் சொல்லும் உன் வயசில எனக்கு ரெண்டு கைக்குழந்தைங்க போன்ற வசனங்கள்தான். இதுபோல நண்பகலில் விழித்து ஒருமுறை அம்மாவிடம் திட்டு வாங்கியது நினைவில் ஓடியது. ஆண்டுத்தேர்வு முடிந்து கோடை விடுமுறைக்கு விடுதியில் இருந்து வீட்டிற்கு வந்திருந்தாள். இரயிலில் பயணம் செய்த பொழுது, அவள் தோழி அடைக்கலமேரி ஹிக்கின்பாதம்ஸில் வாங்கிய சிட்னி ஷெல்டனின் “ப்ளட் லைன்” புத்தகம் படித்துவிட்டு அதைப் பற்றிப் புகழ்ந்து பேசிக்கொண்டே வந்தாள். மேகலை வீட்டில் ஆங்கில நாவல்கள், திரைப்படங்களுக்குத் தடை இப்பொழுதுதான் பல்கலக்கழக நூலகத்தில் சில ஆங்கிலப் புதினங்கள் படிக்கிறாள். ஆனாலும் பாடங்கள் அதிகமாக இருந்ததால் கதைகளுக்கு அதிகம் நேரம் ஒதுக்க முடிந்ததில்லை. அடைக்கலத்திடம் இருந்து அந்தப் புத்தகத்தை இரவல் வாங்கினாள் மேகலை. இரயிலில் படித்துக் கொண்டே வந்தாள். கதை மிக விறுவிறுப்பாக இருந்ததால் இரவு உணவை அவசர அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு, இதே படுக்கையில் குப்புறப்படுத்துக் கொண்டு தொடர்ந்து படித்தாள். அம்மா அப்பாவிடம் கூட சரியாகப் பேசவில்லை. அவர்களும் தொலைகிறது என்று விட்டு விட்டார்கள். இரவு மணி இரண்டு, மூன்று என ஓடிக் கொண்டே இருந்தது. கதையின் நாயகி எலிசபெத்தைக் கொலைகாரன் ஒரு மாளிகையில் கொலை செய்யத் துரத்துகிறான். மேகலைக்கோ திகில், அவளால் புத்தகத்தைக் கீழே வைக்க முடியவில்லை. “என்ன இன்னமும் தூங்கலையா?” என்ற குரல் கேட்டு மேகலைக்குத் தூக்கி வாரிப் போட்டது. நெஞ்சு படப் படவென அடித்துக்கொண்டது. திரும்பிப்பார்த்தாள். அப்பா கோபமாக முறைத்துப் பார்த்துவிட்டு விளக்கை அணைத்து விட்டுப் போனார். அவர் நகர்ந்ததும் இவள் ஓடி, ஒரு டார்ச் விளக்கைத் தேடி எடுத்துத் தலை முழுவதும் போர்த்திக் கொண்டு மீண்டும் போர்வைக்குள் தொடர்ந்து படித்தாள். மீண்டும் விளக்கைப் போட்டு அப்பாவிடம் திட்டு வாங்க பயம். கதையைப் படித்து முடித்த பொழுது விடிந்து விட்டது. வீட்டு வேலைக்கு வந்த சரோஜா கேட்டைத் திறக்கும் சப்தம் கேட்டு வெளிக்கதவைத் திறந்து விட்டாள். சரோஜா, “எப்பக்கா வந்தீங்க? என்ன அதுக்குள்ள எந்திரிச்சிட்டீங்க?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள். “ராத்திரி எட்டு மணி வண்டில வந்தேன், படிச்சுக்கிட்டிருந்தேன், இன்னமும் தூங்கப் போகலை சரோஜா” என்று சொல்லிவிட்டு வந்து படுக்கையில் படுத்தவள் மீண்டும் விழித்த பொழுது ஏறத்தாழ இன்று எழுந்த அதே நேரம்தான். வெளியில் அம்மா தரையைத் துடைத்துக் கொண்டிருந்த சரோஜாவிடம் பேசுவது கேட்டது. “சரோஜா, இத முடிச்சிட்டுக் கொஞ்சம் சின்ன வெங்காயம் தோல் உறிச்சுக் கொடுத்துடு” “சரிங்கம்மா, அக்காவுக்கு இன்னமும் பரீட்சை முடியலையா?” “ஏன் கேக்கிற? நேத்தே முடிஞ்சிடுச்சே” “இல்லம்மா, அக்கா காலையில கதவத் திறந்து விட்டப்போ, ராவு முழுக்கப் படிச்சேன், இப்பத்தான் தூங்கப் போறேன்னு சொன்னாங்க” “ஆமா, நீயும் உன் அருமை அக்காவும், ராத்திரி முழுக்கக் கதைப் பொஸ்தகம் படிக்க வேண்டியது. விடிஞ்ச பிறகு தூங்க வேண்டியது. வயகக்கேத்த பொறுப்பில்லை. சரி, நீ அங்க கொஞ்சம் நல்லாப் பாத்துத் தரையத் தொட, தம்பி காபியைக் கை தவறிக் கொட்டிடுச்சி. சக்கரைக்கு எறும்பு மொய்க்கும். ஊர்ல இருந்து ஐயாவோட தங்கச்சியும் அவங்க பேரனும் வருவாங்க. சின்னப்புள்ள ஜட்டி இல்லாம எங்க பாத்தாலும் மண்டி போட்டுப் போவான். எறும்பு கடிச்சிடப்போவுது” என்று சொன்ன அம்மாவின் குரலில் கடுப்பு அதிகமாக இருந்தது. அவர்கள் பேசுவதைக் கேட்டவாறு எழுந்திருக்க மனமில்லாமல் படுத்திருந்த மேகலை, அவள் அறையை நோக்கி வரும் அம்மாவின் காலடிச் சத்தம் கேட்டவுடன் துண்டையும் மாற்றுடையையும் அள்ளிக் கொண்டு குளியலறைக்கு ஓடிக் கதவைச் சாத்திக் கொண்டாள். அம்மாவிடம் “பொறுப்பிருக்கா உனக்கு?” என்று திட்டு வாங்குவதை அப்பொழுதைக்குத் தவிர்த்தாள். இன்றும் அதே போல நண்பகலில் விழிக்கிறாள். விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தவள் மெதுவே எழுந்து முழங்காலைக் கட்டிக்கொண்டு சாத்தியிருந்த அறைக்கதவைப் பார்த்தாள். அம்மா கதவைத் திறந்து கொண்டு வந்து “எழுந்திரிக்கிற நேரத்தைப் பாரு, வயசாச்சே தவிரக் கொஞ்சமாவது பொறுப்பிருக்கா உனக்கு?” என்று திட்ட மாட்டார்களா என்று ஏக்கமாக இருந்தது. அம்மா இனிமேல் வரவே மாட்டார்கள், அவளைத் திட்டவே மாட்டார்கள் என்ற உண்மை புரிந்த பொழுது தலையணையில் முகம் புதைத்துப் பொங்கிப் பொங்கி அழ ஆரம்பித்தாள். ••••••• 4. யாருக்காக அழுதாள்? இருக்கையை விட்டு எழுந்த வண்ணம் வாயில் பென்சிலைக் கவ்வி கொண்டு மேஜையில் கிடந்த தாள்களையும், நோட்டுப் புத்தகங்களையும் பையில் திணித்தேன். அவிழ்ந்திருந்த கூந்தலை வாரிக் கொண்டை போட்டுப் பென்சிலை அதில் செருகினேன். முதுகில் பையைச் சுமந்து கொண்டு, கைபேசியை ஜீன்ஸ் பேண்ட்டில் உள்ள ஒரு பக்கப் பையில் செருகிக் கொண்டேன். அடுத்தப் பக்கப் பையில் சில்லறைகள் வைத்திருக்கும் சிறிய பர்ஸும், வீட்டுச் சாவியும் இருக்கிறதா என நிச்சயப்படுத்திக் கொண்டேன். நாற்காலியின் சாயுமிடத்தில் தொங்கிய, பெரிய, மஞ்சள் கரடியின் பாதத்தில் “Cal” எனப் படம் போட்ட நீல நிற ஹூடி அங்கியை மாட்டிகொண்டு வகுப்பறைக்கு வெளியே வந்தேன். வகுப்பு முடிந்து இரண்டு நிமிடத்திற்குள் வகுப்பும், நீண்ட தாழ்வாரமும் காலியாகி இருந்தன. பல்கலைக்கழகத்தை விட்டு வெளியில் வந்ததும் நவம்பர் மாத முதல் வாரமாக இருந்தாலும் பளீரென அடித்த மதிய வெய்யிலும், நீலவானமும், இதமான வெப்பத்துடன் இருந்த சூழ்நிலையும், வரப்போகும் நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களும் மனதுக்கு ஏதோ ஒரு மகிழ்ச்சியைக் கொடுத்தன. பார்ட் (BART) இரயில் நிலையத்தை நோக்கி நடந்த பொழுது இப்பொழுதே வீட்டிற்குப் போய் என்ன செய்வது என்ற எண்ணம் வந்தது. ரஹீம் ஏதோ ஒரு கருத்தரங்கு என்று சியாட்டில் சென்று இரண்டு நாளாகிவிட்டது. மீண்டும் திங்களன்றுதான் வீட்டுக்கு வருவார். இம்முறையும் அவர் உருவத்தையும் பெயரையும் பார்த்து, விமான நிலையத்தில் பயணிகளைச் சோதனை செய்பவர்கள் அவரைத் தனியே அழைத்துத் தட்டித் தடவி, உடமைகள் மற்றும் பெட்டிகளைக் கொட்டிப் பார்த்து அலைக்கழித்திருக்கிறார்கள். ஒருமுறை கூட விமானப் பயணத்தில் அவருக்கு இது நடக்கத் தவறியதில்லை. சியாட்டில் போய்ச் சேர்ந்ததும் தொலைபேசியில் அழைத்து ஆற்றாமை தாங்காமல் என்னிடம் அதைப் பொரிந்து தள்ளிய பொழுது அமைதியாகக் கேட்டுக் கொண்டேன். மனக் குமைச்சலை வெளியிட்டால் ஆறுதலாவது கிடைக்கும் அல்லவா? மீண்டும் திரும்பி வரும்பொழுதும் நிச்சயம் இந்தக் கூத்து நடக்கும். இதனை “ராண்டம் செர்ச்” என்று வேறு சொல்லிக் கொள்வார்கள். ரஹீம் சொல்வது போல இந்த ராண்டம்னஸ் பரிசுச் சீட்டு வாங்கும்பொழுதும் இருந்தால் அவர்கள் இப்பொழுது மில்லியனர்களாக இருந்திருப்பார்கள். இந்த வெள்ளியன்று குலுக்கும் மெகாமில்லியன் பரிசுத் தொகை நூற்று இருபத்தியைந்து மில்லியனாக உயர்ந்துள்ளது. ஆனால் அப்பொழுது மட்டும் இந்த ராண்டம்னஸ் வேலை செய்வதில்லையே அது ஏன்? யோசித்தவாறே சாலையில் இருந்து படி இறங்கிச் சுரங்கப் பாதையில் இருக்கும் பார்ட் இரயில் நிலையத்தை அடைந்தேன், பயண அட்டையைக் கதவு போட்ட வேலியின் இயந்திரத்தில் நுழைத்து அனுமதி பெற்று உள்ளே நுழைந்தேன். ஆரஞ்சு வண்ண வழித்தடத்தில் தெற்கு நோக்கிச் செல்லும் வண்டி வர எவ்வளவு நேரம் இருக்கிறது என்று அறிவிப்புப் பலகையில் மாறி மாறி மின் எழுத்துக்களில் வரும் அறிவிப்பைப் பார்த்துக்கொண்டே நடந்த பொழுது “ஹாய் மேடி” என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். என் வகுப்புத் தோழன் ஸ்டீவ். வாட்டசாட்டமான உருவமும் மொட்டைத் தலையும் உள்ள அவன் கருப்பு இன வழி வந்தவன். அவன் மிதிவண்டியைப் பிடித்தவண்ணம் நின்றிருந்தான். அந்தச் சைக்கிள் அவன் உருவத்துடன் ஒப்பிடும் பொழுது ஒரு பொம்மை போல இருந்தது. பளீர் என்ற வழக்கமான சிரிப்பு அவனிடம். மாதவி என்ற என் பெயரை பலருக்கு இங்கே சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை. பெரும்பாலும் ‘மதாவி’ என்று நெடிலைத் தூக்கித் தேவையற்ற இடத்தில் போட்டு என் பெயரை ‘சதக் சதக்’ செய்யும் கொடுமையைத் தாங்காமல் ‘மேடி’ என எல்லோரையும் அழைக்கச் சொல்வேன். ‘ஆர்னால்ட் ஷுவிஷனைகர்’ என்ற அவர்களது மாநில ஆளுநரின் நீண்ட, கடுமையான பெயரைச் சரியாக உச்சரிக்கத் தெரிந்தவர்களுக்கு, எனது குட்டிப் பெயரைச் சரியாக உச்சரிப்பதில் ஏனிந்த சிரமமோ தெரியவில்லை. எம்மிற்கு அடுத்து டபுள் ஏ போட்டால் சரியாக உச்சரிப்பார்களோ என்னமோ? அந்தக் கருப்பழகனுடன் அவன் தோழி மஞ்சளழகியும் நின்று கொண்டிருந்தாள். எனக்கு இன்னமும் ஒருவரின் முகவெட்டைப் பார்த்து அவர்கள் ஃபிலிப்பைன்ஸ், சீனா, ஜப்பான், வியட்நாம், கொரியா போன்ற கிழக்காசிய நாடுகளில் எந்த நாட்டில் இருந்து வந்தவர்கள் என்று சொல்லத் தெரிவதில்லை. எல்லோருமே சீன நாட்டவர்கள்தான் எனக்கு. அந்த மஞ்சளழகியும் சீன நாட்டவள்தான் என்னைப் பொறுத்தவரை. அவளுடைய மூதாதையர்கள் அங்கே இருந்து குடி பெயர்ந்திருக்கலாம். இவள் பேசும் ஆங்கிலம் அமெரிக்கர்கள் ஆங்கிலம்தான். என்னைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு தன் காதில் வந்து விழும் ‘ஐ பாட்’ இசைக்குத் தலையைத் தலையை ஆட்டியவாறு இருந்தாள். நான் வீட்டுக்குப் போகும் வழியில் வழக்கமாக இருவரும் ஓக்லாண்ட் நிலையத்தில் இறங்கிவிடுவார்கள். வந்த இரயில் வண்டி நடைபாதையில் போடப்பட்ட கோடுகளுக்கு நேர் எதிரே கதவுகள் சரியாகப் பொருந்துவது போல நிறுத்தப்பட்டது. இறங்குபவர்களுக்கு வழி விட்ட பின்பு ஏறுபவர்கள் ஒழுங்காக வரிசையாக ஏறினார்கள். ஸ்டீவ் தன் தோழியுடனும் சைக்கிளுடனும் இறங்க வசதியாகக் கதவுப் பக்கமே உட்கார்ந்து கொண்டான். நான் போகும் ‘ஹேவர்ட்’ நிலையத்திற்கு அரைமணிக்கும் மேல் பயணம். உள்ளே தள்ளி வசதியாக ஒரு இருக்கையைப் பிடித்து அமர்ந்து, எனது ‘ஐ பேட்’ மின்பலகையை எடுத்து, விட்ட இடத்தில் இருந்து படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தைத் தொடர்ந்தேன். ‘டிங் டிங்’ என்று கைபேசி ஒலி எழுப்பியது. அது குறுஞ்செய்தியின் அறிவிப்பு ஒலி. லீலா அனுப்பியிருந்தாள். “என் வீட்டிற்கு உடனே வர முடியுமா?”, “ஓகே” என்று பதில்அனுப்பிவிட்டு வெளியே பார்த்தேன். வண்டி ‘ஆஷ்பி’ நிலையத்தை அடைந்திருந்தது. அடுத்து வரும் மெக்கார்த்தர் நிலையத்தில் இறங்கி வண்டி மாறினால் லீலாவின் வீட்டிற்குப் போகலாம். எழுந்து கதவருகில் வந்து தயாராக நின்று கொண்டேன். ஏன் இங்கேயே இறங்குகிறாய் என்ற கேள்வியைப் பேசாமல் புருவத்தை மட்டும் உயர்த்திக் கண்களால் ஸ்டீவ் கேட்டான். தோழியைப் பார்க்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு அடுத்தநிலையத்தில் இறங்கிக் கொண்டேன். வண்டி நகர்ந்த பொழுது புன்னகையுடன் “ஹாவ் எ நைஸ் வீக்கெண்ட்” என்று அவனும் மஞ்சளழகியும் கையசைக்கவே நானும் வாழ்த்திக் கையசைத்தேன். அறிவிப்புப் பலகை குறிப்பிட்டபடி வடக்கு நோக்கிச் செல்லும் மஞ்சள் வழித்தடத்தின் வண்டி வரும் நேரத்தையும், ‘வால்நட்க்ரீக்’ நகரில் இருக்கும் லீலாவின் வீட்டிற்கு உள்ள பயணத் தூரத்தையும் கணக்கிட்டு, அரைமணி நேரத்தில் உன் வீட்டில் இருப்பேன் என்று அவளுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். வண்டி வந்து ஏறி உட்கார்ந்ததும் லீலாவைப் பற்றிய சிந்தனை ஓடியது. இம்முறை லீலாவைப் பார்த்து மூன்று நான்கு மாதங்கள் ஆகியிருக்கலாம் எனத் தோன்றியது. அவள் தாய் மொழி தெலுங்கு. ஒரே நாட்டில் இருந்து வந்திருந்தாலும் ஆங்கிலத்தில் மட்டுமே ஒருவருக்கொருவர் உரையாடிக்கொள்ளும் நிலை. இருவரும் ஒன்றாகப் படித்துப் பட்டம் வாங்கினோம். அவள் திருமணம் குழந்தைகள் என்று குடும்ப வாழ்க்கைக்கு மாறிவிட்டாள். மேற்கொண்டு படிக்கச் சிறிது பணம் சேர்ப்பதற்காக நான் மூன்றாண்டுகள் வேலை செய்த பின்பு மீண்டும் முதுநிலைப் பட்டம் வாங்க பல்கலைக்கழகத்தில் நுழைந்து வாழ்க்கை இன்னமும் மாணவப் பருவத்திலேயே இருந்தது. லீலாவிற்கு இரண்டு மகன்கள், மூன்றாவதாக ஒரு பெண் வேண்டும் என்று முயற்சி செய்கிறாளாம். அவள் கணவனுக்கு நல்ல வேலை, நல்ல வருமானம். அவளுக்கும் வேலைக்குப் போக விருப்பம்தான், ஆனால் மற்றொரு கார் செலவு, வேலைக்கேற்ற உடை, குழந்தைகளைக் காப்பகத்தில் விடும் செலவு, வருமான வரி பிடித்தம் என எல்லாமும் சேர்ந்து “தானிக்கு தீனி” எனச் செலவழிந்து கடைசியில் ஒன்றும் மிஞ்சாது. எனவே பொருளாதார அடிப்படையில் கணக்கிட்டால் வீட்டிலிருப்பதே மேல் என முடிவு செய்திருந்தாள். பிள்ளைகள் வளர்ந்த பின்பு வேலைக்குப் போவாளாம். புஷ் ஆட்சி காலத்தில் மட மடவென வீழ்ந்த வீடுகளின் விலைச் சரிவினால், இப்பொழுது வீடு வாங்கிக் கையைச் சுட்டுக் கொள்வதைத் தவிர்க்க ஒரு அப்பார்ட்மெண்ட் தொடர் குடியிருப்பில் வசிக்கிறாள். இரயில் நிலையத்தில் இருந்து அவர்கள் வீடு பக்கம்தான். அழைப்பு மணியை அழுத்திய சிறிது நேரத்தில் கதவு திறந்தது. அழுது சிவந்த கண்களுடன் மூக்கை உறிஞ்சிக்கொண்டு நின்ற லீலாவைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தேன். பேசும் பொழுது புரிவது போலக் குறுஞ்செய்தி வழியே செய்தி அனுப்புபவரின் உணர்ச்சிகள் அவ்வளவாகப் புரிவதில்லையே. “என்ன ஆச்சு லீலா?” என்றேன். என்னையும் அறியாமல் என் குரலில் பதட்டம் வந்துவிட்டது. ‘மேடி’ என்று கூச்சலிட்ட வண்ணம் அவள் மகன்கள் ஓடி வந்து என் காலைக் கட்டிக்கொண்டார்கள். அவர்களிடம் என்னை ‘ஆண்ட்டி’ என்று அழைக்கக் கூடாது ‘மேடி’ என்றுதான் கூப்பிடவேண்டும் என்று சொல்லிவைத்திருக்கிறேன். இன்னொரு இந்திய ஆண்ட்டியாக என்னை அடையாளம் காட்டிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை. லீலா சமையலறையை நோக்கி நடந்தாள், நானும் பின் தொடர்ந்தேன். அவள் மகன்கள் மீண்டும் தொலைக்காட்சி பார்க்க ஓடி விட்டார்கள். இப்பொழுதுதான் பார்த்தேன், அந்தச் சிறுவர்களின் வயதை ஒத்த இரு சிறுமிகளும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவள்தான் எங்கள் ‘மேடி ஆண்ட்டி’ என்று மூத்தவன் அந்தச் சிறுமிகளுக்கு என்னைப் பெருமையுடன் அறிமுகப் படுத்தினான். அதில் என்ன பெருமை என்பது எனக்கு விளங்கவில்லை. அந்த இரண்டு சிறுமிகளும் அழகான கொழுக் மொழுக் செல்லுலாயிட் பொம்மைகள். புன்னகை உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. மீண்டும் மழலைப் பட்டாளம் “டோரா” தொலைக்காட்சியில் சொல்லிக்கொடுப்பதை ஆவலுடன் சேர்ந்து கூடவே சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் சமையலறைக்குப் போனதும் லீலா எனக்கு விருந்தோம்பலாகக் கொடுத்த கோக் டப்பாவைத் தள்ளி வைத்துவிட்டு “என்ன ஆச்சு சொல்லு” என்றேன். உணவருந்தும் மேஜையின் நாற்காலியில் அமர்ந்த வண்ணம் “அந்தப் பெண்குழந்தைகளைப் பார்த்தாயா?” எனறாள். “உன் பக்கத்துக்கு வீட்டிற்கு டெக்ஸாஸில் இருந்து புதிதாக ஒரு இந்தியக் குடும்பம் வந்திருக்கிறது. அவள் பெயர் நிஷா என்று நீ தொலைபேசியில் சொன்ன ஞாபகம். அவர்களுக்கு இரண்டு பெண்கள் என்று நீ சொன்னதும் நினைவிருக்கிறது. அந்தக் குழந்தைகளா இவர்கள்?” “ஆமாம், நீ யூகித்தது சரிதான்” “அதற்கும் உன் அழுகைக்கும் என்ன தொடர்பு?” “குழந்தைகளுடைய பெற்றோர்கள் நேற்று இரவு சாலை விபத்தில் இறந்து விட்டார்கள், குழந்தைகளுக்கு இன்னமும் அந்த விபரம் தெரியாது. சொன்னாலும் புரியாது” என்று அந்தக் குழந்தைகளைப் பார்த்தவாறே விம்மினாள். லீலா விரிவாகச் சொல்லத் தொடங்கினாள். சமீபத்தில் அங்குக் குடிவந்த நிஷாவின் குடும்பம் மிகச் சிறிய மகிழ்ச்சியான குடும்பம். திருநெல்வேலி பக்கம் ஏதோ ஒரு சிறிய கிராமம் நிஷாவின் கணவனுக்கு. நிஷா மும்பையில் வளர்ந்தவள். வந்த சில நாட்களிலேயே குழந்தைகளும் நிஷாவும் லீலா குடும்பத்துடன் நன்கு பழகி விட்டார்கள். சில நாட்களுக்குப் பிறகு நிஷாவும் வேலைக்குப் போக நினைத்திருக்கிறாள். குழந்தைகளை இரவில் கணவனும், பகலில் அவளும் பார்த்துக்கொள்ள வசதியாக ஒரு இரவு நேர வேலை கிடைத்தது. இரவு எட்டு மணிக்குக் கிளம்பினால் காலையில் ஆறு மணி போல வீடு திரும்பும் வகையில் ஒரு மருத்துவமனையில் வேலை. நேற்று இரவு நிஷாவின் கணவன் லீலா வீட்டின் கதவைத் தட்டியிருக்கிறான். நிஷா வேலைக்குக் கிளம்பும் முன்பு பார்த்த பொழுது அவள் காரின் சக்கரம் பழுதடைந்திருக்கிறது. காற்று இல்லை. எனவே தன் காரில் கொண்டு விட்டு வர நினைத்திருக்கிறான். அவன் குழந்தைகள் லீலாவின் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்களைத் தொந்தரவு செய்ய விருப்பமில்லாமல், ஒரு அரை மணி நேரத்தில் திரும்பி வந்து அழைத்துக் கொள்வதாகக் கூறிவிட்டு மனைவியுடன் சென்றுவிட்டான். இரவு மணி பத்திற்கும் மேலாகிக் குழந்தைகளும் லீலாவின் வீட்டிலேயே தூங்கி விட்டார்கள் என்னவோ, எதுவோ சரியில்லை என லீலாவின் கணவன் நிஷாவின் கணவனை அவனது கைபேசியில் அழைத்திருக்கிறான். ஆனால் மறுமுனையில் பேசியதோ போலீஸ். குடிகாரன் ஒருவன் தாறுமாறாக வண்டி ஓட்டி இவர்கள் காரில் மோதிப் பெரிய விபத்து. வண்டி உருண்டு தீப்பிடித்துவிட இறுகிப்போன காரின் கதவையும் உடனே திறந்து அவர்களை வெளியே இழுக்க முடியாமல் காலதாமதமாகிப்போன காரணத்தினால் அவர்களது உயிரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. போலீஸ் அந்தக் கைபேசியின் வழியே உறவினர் யாரையாவது தொடர்பு கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். நாங்கள் பேசிக்கொண்டிருந்த பொழுது இடையில் லீலாவிற்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. அவளது மொழியில் பேசினாள். அவளது கணவன் போலிருக்கிறது. பேசி முடித்தவுடன் மீண்டும் அழுதாள். அவளைச் சுற்றி மூக்கைச் சிந்திய டிஷ்யூ காகிதம் குவிந்திருந்தது. கொஞ்ச நாள் பழக்கத்தில் அந்த நிஷா தம்பதியினரின் மறைவுக்கு எப்படி அழுகிறாள், என்ன ஒரு இளகிய மனம் இவளுக்கு என்று லீலா மீது இரக்கமாக இருந்தது. அவளாகவே மேலும் பேசட்டும் என மெளனமாகத் திரும்பி அந்தச் சிறுமிகளைப் பார்த்தேன். இப்பொழுது அவர்கள் சின்னத் திரையில் டோரா விடுத்த வேண்டுகோளின்படி “ஸ்வைப்பர் நோ ஸ்வைப்பிங்”, “ஸ்வைப்பர் நோ ஸ்வைப்பிங்”, “ஸ்வைப்பர் நோ ஸ்வைப்பிங்” என்று கூச்சலிட்டார்கள். அவர்கள் அதை அந்தக் கதையில் வரும் சூழ்ச்சிக்கார நரியிடம் சொல்வதாக எனக்குத் தோன்றவில்லை. தங்கள் பெற்றோரைக் கொண்டு சென்ற விதியிடம் சொல்வதாகத் தோன்றியது. பெரும்பாலும் தோல்வியடைந்து “ஓ மேன்” எனச் சலித்துக் கொள்ளும் கார்ட்டூன் நரி இந்த முறை “யு ஆர் டூ லேட்” என்று கூறி “ஹெக் ஹெக் ஹே…” என்று சிரித்து டோராவின் பொருளைத் திருடிக் கொண்டு ஓடியது. அது அந்தச் சிறுமிகளின் விண்ணப்பத்திற்கு நரியின் வழியாக விதி சொன்ன பதிலாகத் தோன்றியது. இந்த அழகுக் குழந்தைகளை வளர்க்க முடியாமல் போன, இதுவரை பார்த்திராத நிஷா தம்பதியரின் மீது எனக்கும் பரிதாபமாக இருந்தது. எதேச்சையாகத் திரும்பி என்னைப் பார்த்த சிறுமிகளில் ஒருத்தியிடம் ‘இங்கே வா’ எனச் சைகை செய்தேன். அவள் வந்து என் மடியில் உட்கார்ந்து கொண்டாள். அவளைப் பார்த்தவாறே, “இவர்களை இவளது உறவினர்கள் வந்து பெற்றுக்கொள்ளும் வரை எங்களுடன் வைத்துக்கொள்ளப் போலீஸ் அனுமதி கொடுத்துள்ளார்கள்” என்றாள் லீலா. “இதைத்தான் உன் கணவர் இப்பொழுது சொன்னாரா?” ஆமாம் என்று தலையாட்டிய லீலா, “நிஷாவுக்கு உறவுகள் யாரும் இல்லை, அதனால் நிஷாவின் கணவனது தம்பியைத் தொடர்பு கொண்டு அவர் செய்தி சொன்னாராம். அந்தத் தம்பி இந்தியாவில் இருந்து உடனே புறப்பட்டு வந்து குழந்தைகளைத் தன்னுடன் அழைத்துச் செல்வதாகச் சொன்னாராம். அந்தச் சின்னக் கிராமத்தில் இவர்கள் எதிர்காலம் என்னவாகுமோ தெரியவில்லையே” என்றாள். “என்ன இருந்தாலும் அப்பா அம்மா பார்த்துப் பார்த்து இவர்களை வளர்ப்பது போலாகுமா?” என்று உடைந்த குரலில் சொன்ன லீலா, திடீரென அந்தச் சிறுமியிடம் கைநீட்டி “பாவி, பாவி, உங்களை எப்படி எல்லாம் வளர்க்க வேண்டும், படிக்க வைக்க வேண்டும் என்று கனவு கண்டாள் உன் அம்மா, இப்படி நட்டாற்றில் விட்டு விட்டுப் போனாளே அந்தப் பாவி” என்று தலை தலையாய் அடித்துக் கொண்டு அழுதாள். அந்தக் குழந்தைக்கு எதுவும் புரியாமல் திருத் திருவென விழித்து அழுது விடுவது போல முகம் மாறியது. நான் உடனே சட்டென்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு டிவி முன் உட்காரவைத்து அதன் கவனத்தைத் திசை திருப்பிவிட்டு அங்கிருந்தே லீலாவைத் திரும்பிப் பார்த்தேன். இப்பொழுது அவள் இந்தக் குழந்தைகளுக்காக, இவர்களது எதிர்காலத்தை எண்ணி அழுவது புரிந்தது. இது போன்று அடுத்தவர்களின் குழந்தையின் எதிர்காலத்தை எண்ணித் துடிக்க ஒரு பெண்ணால் அவள் தாயான பின்புதான் முடியுமோ என்று தோன்றியது. இந்த நிலையில் லீலாவின் உடனிருப்பதுதான் அவளுக்கு நல்லது, இன்றிரவு இங்கேயே தங்கி விடலாம் எனத் தீர்மானித்தேன். லீலாவின் இளைய மகன் சமையலறைக்கு ஓடி மேஜையடியில் உட்கார்ந்திருந்த அம்மாவின் முகத்தைப் பார்த்தான். பிறகு சமையலறையில் உள்ள மேடையைப் பார்த்தான், பிறகு மீண்டும் திரும்பி அம்மாவைப் பார்த்தான். அவனுக்கு என்னவோ வேண்டும் ஆனால் அழும் அம்மாவிடம் கேட்கத் தயக்கம் எனப் புலப்பட்டது. அவனிடம் சென்று தோளைத் தட்டி ‘ஹாய் ஹாண்ட்ஸம், என்ன வேண்டும் உனக்கு?’ என்றேன். “மேடி, சாக்லேட் டோநட் கொடு,” என்று ஒரு பெட்டியைக் காட்டிக் கேட்டான். அதிலிருந்து ஒரு டோநட்டை அவனிடம் எடுத்துக் கொடுத்துவிட்டு, தொலைக்காட்சியில் மூழ்கிவிட்ட மற்றக் குழந்தைகளுக்கும் ஆளுக்கு ஒன்று கொடுத்துவிட்டுத் திரும்பினேன். இளையவன் டோநட் சாப்பிட்ட வண்ணம் அம்மாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனைத் தூக்கி மேஜையில் லீலாவின் அருகில் உட்கார வைத்தேன். இவனைப் பார்த்தாவது சமாதானம் அடைவாள் இல்லையா? சப்புக் கொட்டியவாறு டோநட் சாப்பிட்டுக் கொண்டு, அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டுத் தலையைத் தடவிக் கொடுத்த மகனை அமைதியாகச் சிறிது நேரம் பார்த்தாள் லீலா. பிறகு மீண்டும் பெரிதாக விசும்பி விசும்பி அழத் தொடங்கினாள். இப்பொழுது அந்த அழுகையில் ஒரு அச்சமும் கலந்து இருந்தது. நிஷாவின் குழந்தைகள் இடத்தில் இப்பொழுது தன் குழந்தைகளை வைத்துப் பார்ப்பாளோ? தானும் தன் கணவனும் திடீரென ஒருநாள் இதுபோலவே சாலை விபத்தில் இறந்துவிட்டால் தன் மகன்களின் கதி என்ன ஆகும்? அவர்கள் அநாதைகளானால் அவர்களது எதிர்காலம் என்ன ஆகும்? என்ற அவளது அச்சம் அவள் அழுகையின் ஊடே வெளிப்படுவதாகத் தோன்றியது, அவள் இப்பொழுது அழுவது அவளது மகன்களுக்காகவோ? ••••••• 5. நீ என்றுமே என் மகன்தான் மணி மாலை ஐந்தை நெருங்கியது. நார்மா அன்று வேலை செய்தவரை போதுமென்ற முடிவுடன் அனைத்தையும் ஒழுங்கு செய்துவிட்டு, கணினியை நிறுத்திவிட்டு, கைப்பையை எடுத்துக் கொண்டு அறையை விட்டுக் கிளம்பினாள். “பை, பை, நார்மா, நாளை பார்க்கலாம்.” என்று புன்னகைத்தாள் உடன் பணி செய்யும் ரோஸ். மெலிதாக வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் தலையை அசைத்துவிட்டு வெளியே வந்தாள் நார்மா. குளிரூட்டிய கட்டிடத்தில் இருந்து வெளியே வந்ததும் கோடை வெயில் தகித்தது. கார் நிறுத்துமிடத்தை நோக்கி நடந்தாள். மகளின் கல்விக்காகக் கடன் வாங்குவதற்கு வங்கியில் அவள் செய்த விண்ணப்பத்திற்கு நாளை முடிவு தெரிந்துவிடும் என நினைத்துக் கொண்டாள். அவள் கணவன் கார்லின் நம்பிக்கைத் துரோகம் இந்த இரண்டு மாதங்களில் அவள் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது. காரை நெருங்கிய நார்மா கதவைத் திறந்தவண்ணம் வழக்கம் போலப் பிள்ளைகளைப் பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு வீடு செல்லத் தீர்மானித்தாள். அவளது வண்டி கிளம்பிய பொழுது கைபேசி ஒலித்தது. அவளது வழக்கறிஞர் வில்லியம் அழைக்கிறான் எனத் தெரிந்தது. வண்டியை நிறுத்திவிட்டு, கதவின் கண்ணாடிகளைக் காற்று நன்கு வரும்படி இறக்கிவிட்டு நார்மா அவனுடன் பேசினாள். வில்லியமின் குரலின் தொனியில் இருந்து அவளால் அவன் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் இயந்திரம் போலப் பேசினான். “நார்மா, டி.என்.ஏ மரபணுச் சோதனையின் முடிவுகள் வந்துவிட்டன. அதன்படி உன் மகன் டேனியல் உன் கணவன் கார்லின் மகன் அல்ல.” நார்மாவிற்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. அதைத்தொடர்ந்து வில்லியம் சொன்னதன் பொருள் அவளுக்குச் சுத்தமாக விளங்கவே இல்லை. “நார்மா, டேனியல் உன் மகனும் அல்ல.” நார்மா பேச்சிழந்தாள், மறுமுனையில் அமைதியைக் கண்டு வில்லியம், “நார்மா, நார்மா” என்று பதறினான். “சொல்லு வில்லியம், நீ என்ன சொல்கிறாய் என்று எனக்குப் புரியவில்லை” என்றாள் நார்மா. “நீ எங்கிருக்கிறாய் நார்மா?” “வேலையில்தான், இப்பொழுதுதான் காரைக் கிளப்பினேன், பிள்ளைகளைப் பள்ளியில் இருந்து அழைத்து வரப் போகிறேன்.” “வேண்டாம், நீ வண்டியை ஓட்டாதே. அங்கேயே இரு நான் வந்து உன்னையும் பிள்ளைகளையும் வீட்டுக்கு அழைத்துப் போகிறேன். உன்னுடன் பேச வேண்டும். குழந்தை பிறந்த பொழுது மாறி இருக்க வேண்டும். ஒரு கால் மணி நேரத்தில் வந்து விடுகிறேன். அங்கேயே இரு” என்று அவள் மறுத்துப் பேச வாய்ப்பளிக்காமல் தொலைபேசியைத் துண்டித்தான் வில்லியம். அவன் கடைசியாகச் சொன்னதன் பொருள் இப்பொழுதுதான் நார்மாவிற்குப் புரிந்தது. டேனியல் தன் மகன் இல்லை என்றா சொன்னான்? ஐயோ, அதை நினைத்தால் அவள் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. டேனியலின் துறுதுறுப்பான முகம் கண்முன் வந்தது. கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தும் அதற்கிடையே டேனியலின் புன்னகை நிறைந்த முகம் தெரிந்தது. இது போன்ற செய்தியைக் கேட்கும் நிலைக்குத் தன்னைத் தள்ளிய கணவன் கார்ல் மீது கோபம் கோபமாக வந்தது. கார்ல், நகரில் உள்ள ‘சீமென்ஸ்’ என்னும் ஜெர்மன் பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தான். மின்னணுவியல் கருவிகளின் வர்த்தகப் பிரிவில் அவனுக்கு வேலை என்பதால் பெரும்பாலும் ஜெர்மனியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கும் பிற நாடுகளுக்கும் சென்று வருவது கார்லின் பொறுப்பாக இருந்தது. மாதத்தில் பாதிக்கும் மேலான நாட்கள் வேலை காரணமாகப் பயணம் செய்வதிலேயே கழிந்துவிடும். அவனது முன்னோர்கள் ஜெர்மனியில் இருந்து வந்து குடியேறியவர்கள். அதனால் கார்லுக்கு ஜெர்மன் மொழியில் நன்கு பேசவும் தெரியும் என்பது அவன் வேலையில் அதிவேகமாக வளர உதவியிருந்தது. நார்மா, நகரில் உள்ள கிறிஸ்டோபர் நியூ போர்ட் பல்கலைக் கழகத்தில் நிர்வாகப் பிரிவில் வேலை செய்து கொண்டிருந்தாள். அவர்களுக்குத் திருமணமாகி இருபது ஆண்டுகள் உருண்டோடி விட்டன. பிள்ளைகளில் பெரியவள் மகள் டெப்ரா ஒரு தனியார் பள்ளியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தாள். மகன் டேனியல் மகளை விட நான்கு வயது இளையவன். அவனும் டெப்ரா படிக்கும் அதே தனியார் பள்ளியில் நடுநிலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். நார்மாவிற்குத் தனது பிள்ளைகளைப் புகழ் பெற்ற “ஐவி லீக்” கல்லூரிகளில் படிக்க அனுப்ப வேண்டும் என்று விருப்பம். கார்லின் ஆண்டு வருமானம் ஆறு இலக்கங்களில் இருந்ததால் அவளது கனவினைச் செயல்படுத்த முடிந்தது. புகழ்பெற்ற பல்கலைக்கழங்களில் படிக்க வைப்பதற்குத் தயார்ப்படுத்தும் விதமாகப் பிள்ளைகளை நல்ல தனியார் பள்ளியில் சேர்க்க முடிந்தது. இதோ, அடுத்த ஆண்டு டெப்ராவிற்குக் கார்நெல் பல்கலைக்கழகத்தில் சேர அனுமதி கிடைத்துவிட்டது. எல்லாம் அவள் நினைத்த வண்ணம், திட்டமிட்ட வண்ணம் வாழ்க்கையில் நடப்பதாக நினைத்த பொழுது எதிர்பாராத அதிர்ச்சி அளிக்கும் நிகழ்வும் நடந்தது. எதிர்பாராதது என்று சொல்வது சரியாக இருக்காது. அவளுக்குக் கார்லின் நடவடிக்கையில் மாறுதல் தெரிந்தது. சென்ற ஆண்டுப் பதவி உயர்விற்குப் பின்பு அவனது வெளிநாட்டுப் பயணங்கள் அதிகரித்தன. வீட்டிற்கு வருவது குறைந்தது. இருந்த நாட்களிலும் முன்பு போலப் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு புஷ் கார்டன், கொலோனியல் வில்லியம்ஸ்பர்க், விர்ஜீனியா பீச் என ஊர் சுற்றுவதைக் குறைத்துக் கொண்டான். திரைப்படம், உறவினர் வீடு, விருந்துகள் எனக் குடும்பத்துடன் எங்கும் செல்வதில் ஆர்வம் காட்டவில்லை. இதைப்பற்றி நார்மா ஏதேனும் கேட்டால், தனது பதவி உயர்விற்குப் பிறகு பணிச்சுமை அதிகரித்து விட்டது. நிற்கவும் நேரம் இல்லை என்பது போன்ற பதில் வரும். அத்துடன் அவள் பொறுப்பாகக் குடும்பத்தைப் பார்த்துக் கொண்டு, பிள்ளைகளையும் வளர்த்து வருவது அவனுக்கு வேலையில் கவனம் செலுத்த உதவியாக இருக்கிறது என்று நன்றி சொல்லுவான். மேலும் இதுபோன்று கடுமையாக உழைத்தால் விரைவில் ஜெர்மனியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நிர்வாகத் துறையில் பணி செய்ய நல்ல வாய்ப்பும் இருக்கிறது என்பான். அவளுக்கு அதில் அவ்வளவாக விருப்பம் இல்லாவிட்டாலும், அவன் வீட்டில் இருக்கும் ஓரிரு நாட்களில் எப்பொழுதோ நடக்கப் போவதைப் பற்றி விவாதிக்க விரும்பியதில்லை. அந்தச் சமயம் வரும் பொழுது அதைப்பற்றிக் கவலைப் பட்டுக் கொள்ளலாம் என அமைதியாக இருந்து விடுவாள். டெப்ராவின் பள்ளி நாட்கள் முடிய இரண்டு மாதங்கள் இருக்கும்பொழுது நார்மாவிடம் இருந்து திருமணமுறிவு கேட்டுக் கார்ல் நீதிமன்றம் வழியாக அனுப்பிய அறிவிப்புக் கிடைத்தது. “அவளுடன் இனி வாழ விருப்பம் இல்லை” என்பது அவன் கூறிய காரணம். வாழ்வின் மத்திய வயதில் சிலருக்கு வரும் “மிட் லைஃப் கிரைசிஸ்” என்னும் பைத்தியக்காரத்தனம் இவனுக்கும் வந்துவிட்டது போலிருக்கிறது என்று நார்மா எண்ணினாள். கடைசியாகக் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்கு வீடு வந்து சென்றவன் அதுவரை மீண்டும் வீட்டிற்கு வராத காரணமும் புரிந்தது. இந்த முறை அவன் வீட்டிற்கு வந்து நான்கு மாதங்கள் போலாகிறது. முதலில் இதை அவள் பிள்ளைகளிடம் சொல்லி அவர்களது மன அமைதியைக் குலைக்க விரும்பவில்லை. கார்லைத் தொடர்பு கொள்ள அவள் செய்த எந்த முயற்சியும் பலிக்கவில்லை. அவளது தொலைபேசி அழைப்பு, மின்னஞ்சல் என அனைத்தையும் தவிர்த்தான். இனி நீதிமன்றம் வழியேதான் அவர்கள் தொடர்பு என்பது போலிருந்தது அவனது நடவடிக்கை. வேறு வழியின்றிக் கார்லுடன் பணியாற்றும், அவனுடன் பெரும்பாலான பயணங்களில் துணையிருக்கும் ஆண்ட்ரூவைத் தொடர்பு கொண்டாள். அவன் ஒருவாறு மென்று விழுங்கிச் சொன்ன செய்தி மேலும் அதிர்ச்சி அளித்தது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகவே கார்லுக்கு ஜெர்மனியில் ஒரு தோழி இருப்பதாகத் தெரிந்தது. அதை ஆண்ட்ரூ சாதாரண நட்பு என நினைத்ததாகச் சொன்னான். ஆனால், கார்ல் இப்பொழுது ஜெர்மனியில் உள்ள தலைமையகத்தில் வேறு வேலை ஒன்றைத் தேடிக்கொண்டு இப்பொழுது அந்தப் பெண்ணுடனேயே வசித்து வருவதாகச் சொன்னான். அவனுக்கு மீண்டும் அமெரிக்காவிற்கு வரும் எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை, திருமண முறிவிற்குப் பிறகு அந்தப் பெண்ணையே மணக்க எண்ணியிருக்கலாம் எனவும் சொன்னான். இந்தப் பிரச்சனைக்கு வேறு முடிவில்லை என்பது நார்மாவிற்குப் புரிந்தது. பிள்ளைகளிடம் சொல்லிவிட்டுத் தனது பள்ளிநாட்களில் உடன் படித்த, இப்பொழுது திருமணமுறிவு வழக்குகளைக் கையாள்வதில் சிறந்தவன் எனப் பெயர் வாங்கிய வில்லியமைத் தொடர்புகொண்டாள். தானும் திருமண முறிவிற்குச் சம்மதிப்பதாகவும், குழந்தைகளை வளர்ப்பதற்கு ஆதரவாகத் தந்தை என்ற முறையில் கார்லிடம் இருந்து மாதா மாதம் பணம் ஒழுங்காக வருவதற்கு ஏற்பாடு செய்வதை மட்டுமே அவள் விரும்புவதாகத் தெரிவித்தாள். கார்ல் மீது ஏற்பட்ட வெறுப்பில், அவன் செய்த நம்பிக்கைத் துரோகத்தில் கொதித்துப் போன நார்மாவிற்குக் கார்லிடம் உதவித் தொகை எதிர்பார்ப்பது கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஆனால் டெப்ராவின் கல்லூரிக்காகும் கல்விச் செலவையும், டேனியல்லின் தனியார் பள்ளி கல்வியையும் அவளது வருமானத்தில் மட்டுமே சமாளிக்க முடியாது. அத்துடன் தந்தையின் கடமையில் இருந்து கார்ல் எளிதாகத் தப்பி விடுவதையும் அவள் விரும்பவில்லை. பிள்ளைகளின் நல்ல எதிர்காலத்திற்கு அவள் இதைச் செய்தே ஆக வேண்டும். வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. நீதிமன்றத்திற்கு வந்த கார்ல் நீதிபதியிடம் மகளுக்குப் பதினெட்டு வயது தாண்டிவிட்டதால் அவளது செலவிற்கு இனி தான் பொறுப்பேற்க முடியாது என்று தெரிவித்தான். நார்மாவின் வழக்கறிஞர் வில்லியம் நார்மாவின் காதில் மெதுவாக, “இதுதான் கார்லின் திட்டம் போலிருக்கிறது. இது போன்று தவிர்ப்பதற்காகவே இதுவரை பொறுத்திருந்து, மகளுக்குப் பதினெட்டு வயது தாண்டியதும் அத்துடன் கையைக் கழுவி கொள்வதற்குத் திட்டமிட்டு, இப்பொழுது திருமண முறிவிற்குக் கார்ல் விண்ணப்பித்திருக்கிறான்.” என்றான். நார்மா பல்லைக் கடித்துக் கோபத்தை அடக்கிக் கொண்டாள். ஆனால் கார்ல் அடுத்துச் சொன்னதை நார்மாவும் வில்லியமும் கொஞ்சமும் எதிர்பார்க்காமல் அதிர்ச்சி அடைந்தார்கள். கார்ல் மிக அமைதியாக நீதிபதியிடம், டேனியல் தனக்குப் பிறந்தவன் இல்லை. தனது சாயல் அவனிடம் சிறிதும் இல்லை. டேனியல் தன் மகன்தானா என்றே சந்தேகமாக இருப்பதால் அவனை வளர்ப்பதற்குத் தன்னால் உதவித் தொகை தர இயலாது என்றான். அத்துடன் நார்மா தனக்குத் துரோகம் செய்திருக்கிறாள் என்ற அடிப்படையில்தான் அவனுக்குத் திருமணமுறிவு பெறவேண்டும் என்ற எண்ணமே எழுந்ததாகவும் சொன்னான். நார்மா தன் மேல் விழுந்த பழியை எண்ணிக் கொதித்துப் போனாள். சடாரென இருக்கையை விட்டு எழுந்தவளை வில்லியம் கையைப் பிடித்திழுத்து இருக்கையில் அமர்த்தினான். அவள் உதடு துடித்தது. அவள் கையை அழுத்தி அமைதியாக இரு என்று சைகை செய்தான். கார்லின் அவதூறுக்குப்பதறிய நார்மாவை நீதிபதி திரும்பிப் பார்த்துவிட்டு, மீண்டும் கார்லைத் திரும்பிப் பார்த்தார். சிறிது மெளனத்திற்குப் பிறகு கார்லிடம் அவன் என்ன சொல்கிறான் என்று புரிந்துதான் பேசுகிறானா என்று கேட்டார். கார்ல் அழுத்தம் திருத்தமாக, தெளிவாகத் தான் புரிந்துதான் பேசுவதாகக் கூறினான். நீதிபதி இப்பொழுது வில்லியமைத் திரும்பிப் பார்த்தார். இதற்குள் அடுத்துச் செய்ய வேண்டியதை முடிவு செய்திருந்த வில்லியம், டி.என்.ஏ. மரபணுச் சோதனை செய்வதற்கு நார்மா தயாராக இருப்பதைத் தெரிந்து கொண்டு நீதிபதியிடம் அவள் விருப்பத்தைத் தெரிவித்தான். பரிசோதனை முடிவு வரும் வரை வழக்கும் தள்ளி வைக்கப்பட்டது. சோர்ந்து போய் வீடு வந்த நார்மாவிற்கு இதைப் பிள்ளைகளிடம் எப்படிச் சொல்வது என்றே தெரியவில்லை. அவள் ஒரு வழியாகச் சொல்லி முடித்ததும், பிள்ளைகள் இருவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். டேனியல் கண்கள் கலங்கி அழுதவாறு தன் அறைக்கு ஓடிவிட்டான். பதினான்கு வயது சிறுவனுக்கு இதைவிட அதிர்ச்சி இருக்க முடியாது. பிள்ளைகளைச் சமாதானப் படுத்தவோ, மற்ற வேலைகளைச் செய்யவோ திறனின்றி நார்மா படுக்கையில் சாய்ந்தாள். அதிர்ச்சியில் அழ முடியாமல் அவள் மனம் வெறுமையாக இருந்தது. தொடர்ந்து சில நாட்கள் நார்மாவும் பிள்ளைகளும் இயந்திரம் போல இயங்கி வாழ்க்கையை ஓட்டினார்கள். அவளுக்குத் தெரியாமலே டேனியல் தனது மகன்தானா என்று சந்தேகப்பட்டுக் கார்ல் டி.என்.ஏ. மரபணுச் சோதனை செய்திருப்பான் போலிருக்கிறது என்று இப்பொழுது நார்மாவிற்குத் தோன்றியது. அதுதான் அவ்வளவு ஆணித்தரமாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியிருக்கிறான் போலிருக்கிறது. ஆனால் டேனியல் அவள் மகனும் இல்லை என்ற இந்த மரபணுச் சோதனையின் முடிவை அவனும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. கடந்து முடிந்தவைகளைப் பற்றிய சிந்தனையில் இருந்த நார்மாவைக் கார் ஹாரனின் ஒலி நினைவுலகத்திற்குக் கொண்டு வந்தது. அருகில் வந்து நின்ற வில்லியமின் வண்டியின் பின் இருக்கைகளில் டெப்ராவும், டேனியலும் அமர்ந்திருந்தார்கள். அவர்களை அவனே அழைத்து வந்துவிட்டான். தன் காரின் கண்ணாடிகளை ஏற்றிவிட்டு, கதவையும் பூட்டிவிட்டு நார்மா வில்லியமிற்கு அருகில் வந்து உட்கார்ந்தாள். பிள்ளைகளைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைப்பதைத் தவிர்த்தாள். அது அவளது அழுத முகத்தை அவர்களிடம் இருந்து மறைக்க அவள் செய்த முயற்சி. ஆனால் அவர்கள் அவள் முகத்தையே பார்ப்பது அவளுக்குப் புரிந்தது. வில்லியமின் காரில் பீஸா மணம் வந்தது. அவனே அவளது நிலையை உணர்ந்து கொண்டு, அவர்களுக்கு இரவு உணவும் வழியில் வாங்கி வந்திருந்தான். அவனுக்கு எப்படி நன்றி சொல்வதெனப் புரியாமல் கலங்கிய கண்களுடன் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் நார்மா. அவன் அமைதியாக அவள் தோளை ஆதரவாகத் தட்டிக் கொடுத்துவிட்டுக் காரைக் கிளப்பினான். அன்றிரவு பிள்ளைகளின் பொறுமையைச் சோதிக்காமல், நார்மா ஒரு வழியாக டி.என்.ஏ. மரபணுச் சோதனை முடிவுகளை விசும்பிக் கொண்டே மெதுவாகத் தெரிவித்தாள். டேனியலின் முகத்தைவிட்டுத் தன் கண்களை நார்மாவால் அகற்ற முடியவில்லை. செய்தியைக் கேட்டதும் அவள் மடியில் முகம் புதைத்து டேனியல் அழுதான். நார்மாவும் அவனுடன் சேர்ந்து அழுதாள். டெப்ரா அருகில் வந்து அமர்ந்து டேனியலின் முதுகை வருடிக் கொடுத்துக் கொண்டே இறுகிப் போன குரலில், “இப்பொழுது என்ன செய்வது வில்லியம்?” என்றாள். “உன் தந்தையை இனி குழந்தை வளர்ப்பில் பங்கேற்கச் சொல்லி உதவித் தொகை கேட்டுக் கட்டாயப்படுத்த முடியாது…” என்று தொடங்கிய வில்லியமை டெப்ரா இடைமறித்து, “அவர் பணம் எங்களுக்குத் தேவையில்லை, எங்களால் எங்கள் சக்திக்கு ஏற்றவாறு வாழமுடியும்.” என்று நறுக்கெனப் பதில் சொன்னாள். “டேனியல் என் தம்பி இல்லை என்றால், அவன் யார்? அவன் பெற்றோர்கள் யார்? பிறந்த பொழுது குழந்தை மாறியிருக்கலாம் என்றால் என் தம்பியாக இருப்பவன் எங்கே இருப்பான்?” என்றாள். “அதை டேனியல் பிறந்த மருத்துவமனையில் இருந்து ஆரம்பித்துத் துப்புத் துலக்க வேண்டும், அந்தச் சமயம் பிறந்த குழந்தைகளை மரபணுச் சோதனைக்கு உட்படுத்தித் தெரிந்து கொள்ளலாம், நான் ஏற்பாடு செய்கிறேன்,” என்று சொல்லிவிட்டு வில்லியம் விடைபெற்றுக் கொண்டான். நார்மாவின் காரையும் தன் நண்பன் உதவியுடன் அவள் வீட்டிற்குக் கொண்டு வந்து நிறுத்திவிட்டுப் போனான். அவன் சொன்னபடியே அடுத்த நாளே மருத்துவமனை நிர்வாகத்தினரைச் சந்திக்க ஏற்பாடு செய்தான். மருத்துவமனை, குழந்தை மாறியிருக்கும் என்ற செய்தியை முதலில் வன்மையாக, ஆணித்தரமாக மறுத்தது. பின்பு நீதிமன்ற வழக்கின் படி செய்த மரபணுச் சோதனை என்பதினால் தயக்கத்துடன் தகவல்களை ஆராய அனுமதி அளித்தது. டேனியல் பிறந்த அன்றே பிறந்த ராபர்ட் என்ற சிறுவனின் தகவல்கள் மேலும் பொருந்தி அவனைத் தேடிச் சென்றார்கள். ராபர்ட்டின் குடும்பம் அருகில் உள்ள யார்க் டவுனில் தான் வசித்து வந்தனர். சந்தேகம் என்ற ஒன்று தோன்றிவிடவே அதைத் தீர்க்க அவர்களும் தயாரானார்கள். மீண்டும் மரபணுச் சோதனைகள், மீண்டும் அவற்றின் முடிவுகள். இந்த முறை ராபர்ட்தான் நார்மாவின் குழந்தை என்றும், டேனியல் ராபர்ட் இடத்தில் இருந்திருக்க வேண்டியவன் என்பதும் தெளிவானது. சிறுவர்கள் இருவருமே முடிவைக் கேட்டு அலறினார்கள். “அம்மா, அம்மா என்னை அனுப்பிவிடாதீர்கள்” என்று ஒருபுறம் அழுதான் டேனியல். “அம்மா, நான் உங்களுடன்தான் இருப்பேன், அவர்கள் வீட்டிற்குப் போக மாட்டேன்” என்று ராபர்ட்டும் தன் அம்மாவின் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டான். இரண்டு குடும்பங்களும் இரண்டு சிறுவர்களையுமே தங்களுடன் வைத்துக் கொள்ளவே விரும்பினார்கள். ஆனால் முடிவில் சிறுவர்களின் விருப்பப்படி அவரவர் வளர்ந்த இடத்திலேயே அவர்கள் தொடர்ந்து வளரட்டும், அவ்வப்பொழுது பெற்றோர்கள் வந்து மற்றக் குழந்தையைப் பார்த்துச் செல்லலாம் என்ற முடிவுக்கு ஒப்புக் கொண்டார்கள். “அம்மா, நீங்கள் என்னை அனுப்பிவிடுவீர்களோ என்று பயந்தேன்” என்று நார்மாவைக் கட்டிக் கொண்டான் டேனியல். நார்மா அவன் தலையைக் கோதியபடி, “நீ என்றுமே என் மகன்தான் டேனியல், நம்மைப் பொருத்தவரை நான் உன் அம்மா, நீ என்றும் என் அன்பு மகன்தான்” என்றாள். “நீ என்றுமே… என்றுமே என் தம்பிதான் டேனியல், உண்மை என்ன என்று தெரிந்து கொண்டோம், அவ்வளவுதான்” என்று டேனியலை அனைத்துக் கொண்டாள் டெப்ரா. ••••••• 6. சான்றோனாக்குதல் தந்தையின் கடன் தேசத்தந்தை காந்தியும் தந்தை பெரியாரும் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். “ஐயா, நீங்க சுதந்திரம் வாங்கினவுடனே காங்கிரஸ கலைக்கச் சொன்னீங்க. நானும் திராவிட இயக்கம் அரசியலில், தேர்தலில் ஈடுபடாம மக்களுக்கு உழைக்கும் இயக்கமாக மட்டுமே இருக்கணும்னு சொன்னேன். நீங்க சொன்னதையும் யாரும் கேக்கல, நான் சொன்னதையும் கேக்காம திராவிட முன்னேற்றக் கழகம்னு பிரிஞ்சி போயி இந்தக் கூத்தாடிங்க மக்களைப் பாடாப் படுத்திக்கிட்டு இருக்காங்க” என்றார் பெரியார். பொறுமையாகக் கடலை சாப்பிட்டுக்கொண்டு பொக்கை வாய் திறந்து சிரித்தார் தேசத்தந்தை “சரி, விடுங்க நாயக்கரே, நம்மால இப்ப என்ன செய்யமுடியும் சொல்லுங்க? இந்தாங்க கொஞ்சம் கடலை சாப்பிடுங்க” என்று கடலையைப் பெரியாரிடம் நீட்டுகிறார். “வேணாங்க ஐயா, நீங்களே வச்சிக்கிடுங்க. பார்க்கிறவங்க இந்த வயசிலையும் கடலை போடுறேன்னு கன்னா பின்னான்னு குறை சொல்லுவாங்க, வெங்காயம்” என்கிறார் பெரியார். அருகில் இருந்த மணியம்மையும் காந்தியும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். அப்பொழுது உற்சாகமாக, “எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே” பாடியவாறே வருகிறார் பாரதியார். “வாங்க தம்பி வாங்க, எங்க இந்தப் பக்கம்?” என்று முகம் மலர்கிறார் பெரியார். “தந்தையர்தின வாழ்த்துகளைச் சொல்லவந்தேன் தேசத்தந்தையே, தந்தை பெரியாரே உங்களை வணங்குகிறேன்” என்று பணிவாக வணங்கிச் சொல்கிறார் பாரதி. அவர்கையில் கொஞ்சம் கடலையைக் கொடுத்துவிட்டு, பாரதியின் தோளைத் தட்டி, “நீங்களும் கொஞ்ச நாள் அதிகம் வாழ்ந்திருந்தால் உங்களையும் ஏதாவது ஒரு தந்தை என்று மக்கள் சொல்லியிருப்பார்கள் பாரதி” என்று சிரிக்கிறார் காந்தி. “இல்லை, என்னையும் சில இலக்கியவாதிகள் “சிந்துக்குத் தந்தை” என்று என் பாடல்களின் சொல்நயத்தில் மகிழ்ந்து பாராட்டியதுண்டு.” “பைந்தமிழ்த் தேர்ப் பாகன், அவனொரு செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை! குவிக்கும் கவிதைக் குயில்!…” என்று பாரதிதாசன் பாராட்டியது நினைவிற்கு வருகிறது.” “சரி போகிறது… அப்படியே எனக்குத் தந்தை பட்டம் இல்லாதிருந்தாலும் என்ன குறைந்துவிடும் என்கிறீர்கள் ஐயா? எப்படியும் நாம் சொல்லும் நல்ல அறிவுரைகளைக் கேட்கப் போவதில்லை என்று மக்கள் முடிவு எடுத்துவிடுகிறார்கள். “தந்தை” என்று பட்டம் கொடுத்தால், சூசகமாக நீங்கள் சொல்வதை நாங்கள் ஒருபொழுதும் கேட்கவே போவதில்லை என்று சொல்லும் மறைமுக அறிக்கைதானே அது “தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்று சொன்னாலும், அப்பா பேச்சுக்கு மரியாதை கொடுத்துக் கேட்டு நடப்பவர்கள் இந்த உலகத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?” என்கிறார் பாரதி ஆதங்கத்துடன். “தம்பி என்னமா யோசிக்கிறீங்க?” என்று ஆச்சரியத்துடன் பாராட்டுகிறார் பெரியார். “தம்பி, நீங்க கொஞ்சநாள் அதிகமா வாழ்ந்திருந்தா சுயமரியாதை இயக்கத்திற்கு நிறையப் பாடல்கள் எழுதியிருப்பீர்கள், 38 வயசெல்லாம் போகிற வயசா என்ன? நீங்க உயிரோட இருந்திருந்தா இரண்டு பேரும் சேர்ந்து வேலை செய்து எவ்வளவோ சாதித்திருக்கலாம். நீங்கள் மறைந்து 20 ஆண்டுகள் கழித்து நான் திராவிட இயக்கம் ஆரம்பித்த பொழுது இந்நேரம் தம்பி இருந்தால் சுயமரியாதை இயக்கத்தைப் போற்றி எழுச்சியுடன் எத்தனையோ பாடல்கள் பாடியிருப்பார் என நினைத்தேன்.” “சமீபத்தில் உங்களைப் பற்றிய படம் ஒன்று பார்த்தேன். நம்ம பேராண்டி இளையராஜா இசையில உங்களுடைய…. “கேளடா மானிடவா! எம்மில் கீழோர் மேலோர் இல்லை ஏழைகள் யாருமில்லை செல்வம் ஏறியோர் என்றுமில்லை வாழ்வினில் தாழ்வென்றும் இல்லை என்றும் மாண்புடன் வாழ்வோமடா வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர் பிள்ளைகள் பெற்றதப் பூனை அவை பேருக்கொரு நிறம் ஆகும் சாம்பல் நிறமொரு குட்டி கருஞ்சாந்து நிறமொரு குட்டி பாம்பு நிறமொரு குட்டி வெள்ளைப் பாலின் நிறமொரு குட்டி எந்த நிறமிருந்தாலும் அவை யாவும் ஒரு தரம் அன்றோ இந்த நிறம் சிறிதென்றும் இது ஏற்றம் என்றும் சொல்லலாமோ? சாதிப் பிரிவுகள் சொல்லி அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார் நீதிப் பிரிவுகள் செய்வார் அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார் சாதிக் கொடுமைகள் வேண்டாம்; அன்பு தன்னில் செழித்திடும் வையம்; ஆதரவுற்றிங்கு வாழ்வோம் தொழில் ஆயிரம் செய்வோம். பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன் மண்ணுக் குள்ளே சிலமூடர் நல்ல மாதரறிவைக் கெடுத்தார் கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்திக் காட்சி கெடுத்திடலாமோ? பெண்க ளறிவை வளர்த்தால் வையம் பேதைமை யற்றிடுங் காணீர்” என்ற பாட்டைக் கேட்டு அப்படியே கண்ணு கலங்கிடுச்சுங்க தம்பி. நாம தலை தலையா அடிச்சிக்கிட்டு சொன்னதையே இந்தத் தம்பியும் சொல்லியிருக்காரு. இப்படி அற்ப ஆயுசில போயிட்டாரேன்னு ரொம்ப வருத்தமாயிடிச்சி. அப்புறம் மணியம்மை சமாதானப்படுத்தினாங்க” என்றார் பெரியார். “என்ன செய்யிறதுங்க ஐயா? “நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராயோ, - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி சிவசக்தி, - நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?” என்று சக்தியிடம் புலம்பிப் பாடினேன். சக்தி என்மேல் இரக்கப்பட்டு நிலச்சுமை என வருந்தாதே என்று அழைத்துக் கொண்டு விட்டார்கள்” என்று ஆறுதலாகச் சொல்கிறார் பாரதி. தொடர்ந்து “நானும் உங்களைப்பற்றி வந்த திரைப்படம் பார்த்த பின்பு வருத்தப்பட்டேன் ஐயா. எவ்வளவு படித்துப் படித்துச் சொல்லிவிட்டுச் சென்றீர்கள். ஒரு திரைப்படம் எடுப்பதுடன் தங்கள் கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறார்களே. சொன்னதை நடைமுறைப்படுத்துவதில் தவறி விடுகிறார்கள் நம் மக்கள் என்பது வேதனைதான்” என்றார் பாரதி. “உங்கள் இருவருக்குமாவது பரவாயில்லை, என் படத்தை ரூபாயில் போட்டதுடன் மறந்துவிட்டார்கள். என்ன ஒரு தலைவலி கொடுத்தேன், எத்தனை விரட்டி அடித்தேன். என்னை அத்தனை திட்டு திட்டினாலும் கடைசியில் என்னை மதித்து என் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுத்தவன் அந்த வெள்ளைக்காரன்தான்” என்றார் காந்தி. பிறகு “சரிபாரதி, நம் மக்கள் ஜாதிய விட்டொழிக்கிறதா தெரியலையே, இதுக்கு ஏதாவது ஒரு வழி தோன்றுகிறதா உங்களுக்கு?” என்று ஆவலுடன் கேட்டார் காந்தி. “இல்லாமலா? ஆனால் அதைச் சொன்னாலும் யாரும் கேட்கப்போவதில்லை என்று வெறுப்பாக இருக்கிறது” மீசை துடிக்கக் கோபத்துடன் முழங்கினார் பாரதி. “பரவாயில்லை, சொல்லுங்க தம்பி, ஜாதியை எப்படி ஒழிக்கலாம்?” என்று நிமிர்ந்து உட்கார்ந்து, புதிதாகப் பிறந்த உற்சாகத்துடன் தாடியை நீவிக்கொண்டு ஆர்வத்துடன் கேட்டார் பெரியார். “ஐயா, இதற்கு முதலில் கலப்பு மணத்தை ஆதரிக்கவேண்டும். அத்துடன் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதை மேம்படுத்தவேண்டும்.” “இன்னும் கொஞ்சம் புரியற மாதிரி விளக்கமா உங்க திட்டத்தச் சொல்லுங்க!” “ஐயா, கலப்பு மணம் செய்பவர்களையும், இந்தக் கலப்பு மணத்தில் பிறந்த குழந்தைகளையும் ஒரு புதிய வகைப் பிரிவில் சேர்த்து அவர்களுக்குச் சிறப்புச் சலுகை தரவேண்டும். மீண்டும் தந்தையின் ஜாதியோ அல்லது தாயின் ஜாதியோ, அல்லது எந்த ஜாதிக்கு அதிகச் சலுகை என்று முடிவு செய்து அந்த ஜாதிப் பெயரைத் தேர்ந்தெடுக்கவோ விடக்கூடாது. கலப்பு மணத்தில்… ஜாதியோ, மதமோ, இனமோ… எந்தக் கலப்பாக இருந்தாலும், கலப்பு மணம் செய்பவர்களையும் அதில் பிறந்தவர்களையும் “சான்றோர்” எனக் குறிப்பிட்டு அவர்களைப் பாராட்டிச் சான்றிதழ் வழங்க வேண்டும். அந்தச் சான்றோர்களுக்கே அரசு சலுகை கொடுப்பதில் முன்னுரிமை என அறிவிக்க வேண்டும். அதனால் சான்றோர் என்றால் “நற்பண்புகள் உள்ளவர்” என்ற பொருளைக் குறிப்பதற்குச் சமத்துவ எண்ணமே அடிப்படையானது என்பதையும் உணர்த்தலாம்.” “இவ்வாறு செய்தோமானால் சான்றோர் எனக் குறிப்பிடப்படாதவர்களுக்கு, தாங்கள் சான்றோர்கள் இல்லை என்பதை மறைமுகமாகக் குறிப்பிடுவதாக நினைத்து அவமானம் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. ஆனால் சலுகை கிடைக்கும் என்றால் நம் மக்கள் சான்றோராக மாற முயல்வார்கள். அப்படியும் கண்டு கொள்ளாமல் கலப்புமணத்தை ஆதரிக்காத பெற்றோர்களையும், தங்கள் ஜாதியில் வரன் பார்க்கும் பெற்றோர்களையும் அவர்கள் பிள்ளைகள் “சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடன்” எனச் சுட்டிக்காட்டி இடித்துரைப்பார்கள். “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.” என்பார்களே, ஏன் உங்களுக்கு அந்த விருப்பம் இல்லை என்று அன்னையிடம் வாதிடுவார்கள். எதையும் தனக்குச் சாதகமாக உபயோகிக்க இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்குத் தெரியும். நாங்கள் சான்றோர்கள் ஆவதில் உங்களுக்கு விருப்பம் இல்லையா? என்று போர்முழக்கம் இடுவார்கள். வளர்ப்பதில் குறை வைத்த குற்றவாளிகள், பிள்ளைகளிடம் அன்பில்லாதவர்கள், அவர்களது நல்வாழ்வில் அக்கறை இல்லாதவர்கள் என்பது போன்ற வார்த்தைகளைக் கேட்க எந்தப் பெற்றோர்களும் விரும்ப மாட்டார்கள். பிறகென்ன, காலப்போக்கில் நிறையச் சான்றோர்கள் உருவாவார்கள். சான்றோரும் சான்றோரும் இணைந்து தமிழகம் எங்கும் சான்றோர்களே நிறைந்திருப்பார்கள். பின்பு தமிழகத்தைப் பார்த்து வியந்து மற்றவர்களும் பின்பற்ற இந்தியா முழுவதும் ஜாதி, மத, இன பேதங்களே இல்லாத இந்தியாவாக மாறக்கூடும்” “அருமையான யோசனை பாரதி” எனக் கைத்தட்டிப் பாராட்டுகிறார் காந்தி. “தம்பி, நம்ம மக்கள சான்றோராக்கிறது அவ்வளவு சுலபமில்ல, எப்படியோ இப்படி ஒரு குறுக்கு வழியில் அவங்களச் சான்றோராக்க முயற்சி செய்யலாம்னு சொல்நீங்க” என்று குலுங்கிக் குலுங்கி உரத்த குரலில் சிரிக்கிறார் பெரியார். “தம்பி, இதை நடைமுறைப்படுத்த முடியும், மக்கள் ஒத்துழைப்பார்கள் என நினைக்கிறீர்களா?” என்று சந்தேகத்துடன் கேட்டார் பெரியார். “ஆமாம், பாரதி எனக்கும் அதைப்பற்றி யோசனையாக இருக்கிறது” என்று ஆழ்ந்த சிந்தனையுடன் காந்தி சொன்னார். “ஐயா, எனக்கு இளைய சமுதாயத்திடம் என்றும் நம்பிக்கை உண்டு. உங்களைப் பின்பற்றிய அந்தக்கால இளைய பாரதத்தினர் இந்தியா சுதந்திரம் அடைவதில் பெரும்பங்கு வகிக்கவில்லையா? இன்றைய இளைய சமுதாயத்தையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்” என்று சொல்லியவாறு எழுந்த பாரதி, “இளைய பாரதத்தினாய் வா வா வா எதிரிலா பலத்தினாய் வா வா வா ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும் உதயஞாயி றொப்பவே வா வா வா” என்று பாடியவாறு கையசைத்து விடைபெற்ற வண்ணம் வீறுநடை போட்டுக் கிளம்பினார். ••••••• 7. அம்மனோ சாமியோ !!! என் சிறு வயதில் ஒரு நாள்… வயது எனக்கு அப்பொழுது என்ன ஒரு எட்டோ அல்லது ஒன்பதோ இருந்திருக்கலாம் என நினைக்கிறேன். சரியாக நினைவில்லை, அந்த நாள், வழக்கம் போல் ஒரு சாதாரண முக்கியத்துவம் இல்லாத நாளாகத்தான் தொடங்கியது. பள்ளியில் இருந்து திரும்பிய பிறகு வீட்டின் கொல்லைப்புறம் விளையாட ஆரம்பித்தேன். உடன் விளையாடியவர்கள் என்னைவிட ஒரு வயது சிறிய தங்கை, ஐந்து வயது சிறிய தம்பி மற்றும் எங்கள் அண்டை அயல் வீட்டுச் சிறுவர் சிறுமியர் கூட்டம் என ஒரு ஏழெட்டு பேர். எங்கள் வீடு தெருவில் கடைசி வீடு. அதனால் மற்ற வீடுகளை விட வீட்டின் இடதுபுறம் அதிகப்படியான இடம் இருந்தது. உடன் படிக்கும் தோழர் தோழிகளும் பக்கத்து வீடுகளிலேயே குடியிருந்தது வசதியாகிப் போனது. பள்ளி முடிந்து திரும்பியவுடன் மீண்டும் ஒன்றுகூடி எங்கள் வீட்டின் குட்டி மைதானத்தில் ஏதாவது விளையாடிக் கொண்டிருப்போம். ஒரு சிறிய பள்ளி நடப்பது போலக் கூச்சலும் களேபரமும் அமர்க்களமாக இருக்கும். வழக்கத்திற்கு மாறாகக் கொல்லைப்புறம் விளையாடச் சென்றதன் காரணம் அன்று எங்களுடன் விளையாடிய பக்கத்து வீட்டுப் பிள்ளைகளான ராஜேஸ்வரி, ரஞ்சனி மற்றும் ஆனந்த். ராஜேஸ்வரி என் வகுப்பு, ரஞ்சனி என் தங்கை வகுப்பு, என் தம்பியும் ஆனந்தும் பள்ளியில் சேரும் வயதைத் தொட்டிருக்கவில்லை. பக்கத்து வீட்டின் மதில் சுவர் பக்கம் எங்கள் அம்மாவும், பக்கத்து வீட்டு ராஜேஸ்வரியின் அம்மாவும் அவரவர் வீட்டில் இருந்தபடி மதில் மேல் சாய்ந்துகொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள். எங்கள் மீதும் ஒரு கண் வைத்துக்கொள்ளும் பொருட்டு அவர்கள் பார்வையில் கொல்லைப்புறத்தில் அன்று விளையாட விட்டிருந்தார்கள். இவர்கள் பேச்சில் வீட்டில் கைவேலைகளுக்கு உதவியாக இருக்கும் முஷீராவும் கலந்து கொண்டார்கள். முஷீரா கல்லுரலில் மாவு ஆட்டும் முன் அரிசி களைந்து கொண்டே பேசிக்கொண்டிருக்க, அவர் மகள் தாவணி போட்டவயதில் இருந்த நூர்ஜஹான் எங்களுடன் விளையாட வந்துவிட்டாள். அவசரத் தேவைக்கு அவ்வப்பொழுது நூரை முஷீரா அழைத்து வருவது வழக்கம்தான். அன்று நூர் நடன ஆசிரியையாக மாறி எங்களைக் கொல்லைப்புறப் படிக்கட்டில் கொலுபொம்மைகள் போல் வரிசைக்கு மூவர் என நிறுத்தி, கலா மாஸ்டர் அவதாரம் எடுத்து நடனம் சொல்லிக் கொடுத்தாள். “மாடி வீட்டுப் பொண்ணு ஒரு ஜோடி தேடும் கண்ணு ஆடி ஆடி நடக்கும்போது அதிருதடா மண்ணு ஐயயோ வாட் ஷல் ஐ டூ, டெல் மீ வாட் டு டூ அமம்ம்மோ வாட் கேன் ஐ டூ, ஐயாம் மாட் ஆஃப்ட்டர் யூ கொக்கரக் கொக்கோ, கொக்கரக் கொக்கோ, கோ கோ கோ கோ” என்ற பாடலைப் பாடி ஆடிக் கொண்டிருந்தோம். பெரும்பாலும் டுவிஸ்ட்தான். சின்னப் பசங்களுக்குப் பல வார்த்தைகள் தெரியாமல் பாடுவதாகப் பாசாங்கு செய்தாலும், எல்லோருக்கும் “கொக்கரக் கொக்கோ” மட்டும் நன்றாகத் தெரிந்தது. அந்த வார்த்தைகள் மட்டும் உற்சாகம் மீறிட உரத்த குரலில் பாடப்பட்டு, சிரிப்பும் கும்மாளமுமாகக் கொல்லைப்புறம் அதிர்ந்தது. பேசிக்கொண்டிருந்த அம்மாக்கள் குழந்தைகள் கூக்குரலினால் பேச்சுத் தடைப்பட்டு, கோபத்துடன் எங்களை அடக்க நினைத்தவர்கள் அதை மறந்து எங்கள் ஆட்டத்தைப் பார்த்து ரசிக்க ஆரம்பித்தார்கள். அதன் பிறகு அம்மாக்கள் தங்களுடைய விவாதத்தின் தலைப்பை மாற்றித் தங்கள் மழலைப் பட்டாளத்தின் குறும்புகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். ராஜேஸ்வரியின் அம்மா அன்று தன் மகள்கள் செய்த குறும்பைப் பற்றிச் சொன்னவர்கள், இவர்களைக் குச்சியினால் விளாசினால்தான் அடங்குவார்கள் என்று கூறித் தண்டனையைப் பற்றி எண்ணி தன் அடுத்தகட்ட நடவடிக்கைக்குப் போனார்கள். இதற்குள் நூரு நாங்கள் அனைவரும் சூழ்ந்திருக்க வித்தை காண்பித்தாள். அவள் கையில், நடுவில் சிறிய சதுரக் கண்ணாடி வைத்து, பக்கத்திற்கு நான்கு நடிகர் நடிகைகள் படம் அச்சடித்த இரண்டு தாள்கள், நட்சத்திரங்களின் படம் வெளிப்புறம் தெரியுமாறு ஒட்டப்பட்ட ஒரு வித்தை சாமான் இருந்தது. நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்களின் பெயராக மஞ்சுளா, ஜெயலலிதா, சிவாஜி, எம்.ஜி.ஆர்., முத்துராமன், வாணிஸ்ரீ, ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா எனச் சொன்னால், அவள் படத்தாள்களை லாவகமாக மடித்துக் கண்ணாடியின் பின்புறம் வைத்து நாங்கள் தேர்ந்தெடுத்த நட்சத்திரம் கண்ணாடி வழியே தெரியும்படி செய்து எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தாள். மழலைப் பட்டாளம் வித்தையில் மயங்கியிருக்க, ராஜேஸ்வரியின் அம்மா என்னைக் கூப்பிட்டு “அம்மாடி இங்க வா, மாடில போயி ஒரு வேப்பங்குச்சி ஒடிச்சிட்டு வா. இன்னைக்குப் போடுற போடுல, இவளுங்க இனிமே பம்பரமா நான் சொல்றபடி ஆடனும்” என்றார்கள். உடனே அம்மா, “ச்சே… வேணாங்க பாவம்” என்று இடைமறித்துவிட்டு, “ஏய்,நீபோகாத” என்று தோழிகளுக்குத் தண்டனை வழங்கக் குச்சி ஒடிப்பதில் இருந்து என்னைத் தடுத்தார்கள். ராஜேஸ்வரியின் அம்மாவோ “நீ போம்மா” என்று என்னைத் தூண்டினார்கள். என் கண்களோ நூரின் வித்தையில் இருந்தது. பாதியில் விட்டுப் போகவோ மனமில்லை. இருந்தாலும் குச்சி கொண்டு வந்து கொடுத்துவிட்டால் தொந்தரவு இன்றி வித்தை பார்க்கலாம் என்று எண்ணி, பள்ளியில் வந்து இன்னமும் மாற்றாத நீல-வெள்ளைச் சீருடையுடன், மடித்துக் கட்டப்பட்ட இரட்டைச் சடைகளில் ஒன்று வால் போன்று அவிழ்ந்து தொங்க மாடியை நோக்கி ஓடினேன். எங்கள் வீட்டின் முன்புறம் இரு பெரிய வேப்ப மரங்கள் வளர்ந்து, வளைந்து மொட்டைமாடியில் தலைக்கு மேல் பந்தல் போட்டிருக்கும். அதனால் சிறுவயதினரும் சுலபமாக அதை எட்ட முடியும். நானும் மொட்டைமாடியின் அறைக்கதவைத் திறந்து சென்று ஒரு குச்சியும் ஒடித்துக் கொண்டு வந்துவிட்டேன். ஆனால் மொட்டைமாடிக்கதவைத் திறப்பதற்கு என்றும் அம்மாவின் சிறப்பு அனுமதி தேவை. அது நவ்டால், திண்டுக்கல் என்று எந்த ஒரு பூட்டும் போடமுடியாத சாதாரணக் குமிழ்க் கைப்பிடி வைத்த தாழ்ப்பாள் உள்ள கதவு. வீட்டில் சிறுபிள்ளைகள் இருப்பதால் அம்மாவிடம் அனுமதி கிடைத்தால் மட்டுமே, அவர்கள் மேற்பார்வையிலோ அல்லது அம்மாவின் நம்பிக்கைக்குரிய ஆள் என அங்கீகாரம் பெற்றவர் முன்னிலையிலோதான் அந்தச் சொர்க்க வாசல் திறக்கப்படும். ஏதோ ஒரு தர்ம நியாயத்திற்குக் கட்டுப்பட்டு நாங்களும் அந்த வயதில் அதைக் கடைப்பிடித்தோம். நான் அவசரமாகத் திரும்பி வருவதற்குள் வித்தையை முடித்துவிட்டு நூர் தன் அம்மாவிற்கு உதவியாக மாவாட்டப் போய்விட்டிருந்தாள். மற்றவர்களும் வேறு ஏதோ விளையாட ஆரம்பித்துவிட நான் ஒடித்து வந்த குச்சியை ராஜேஸ்வரியின் அம்மாவிடம் சேர்த்துவிட்டு விளையாட்டில் கலந்துகொண்டேன். அம்மாக்களும் உரையாடல்களைத் தொடர்ந்தார்கள். அப்பொழுது திடீரென வார்த்தைகள் குழறிய வண்ணம் பயத்தில் ஒரு கூக்குரல் கேட்டது. வீட்டின் பக்கத்தில் உள்ள தெரு தாண்டி அடுத்த வரிசையில் வசிக்கும் லதாவின் அம்மா வானத்தை நோக்கிக் கையை விரித்து “ஆதிமூலமே” எனக் கூப்பாடு போடுவது போல, “ஐயோ புள்ள புள்ள” என்று ஏதோ சொல்ல முயற்சித்தார்கள். ஆனால் பாவம் திகிலில் வார்த்தைகள் கோர்வையாக வரவில்லை. எல்லோரும் அவர் காட்டிய திசையில் நோக்கினால்… அங்கே என் தம்பி மாடியில். மொட்டைமாடியின் பின்புற மற்றும் பக்கவாட்டுக் கைப்பிடி மதில்சுவர்கள் இணையும் இடத்தில் உள்ள சமையலறைப் புகைப்போக்கியின் மேல் ஏறி நின்று கொண்டிருந்தான். பாவி… எனக்குத் தெரியாமல் என்னைப் பின்தொடர்ந்து வந்து, எப்படியோ சுவரின் வளையத்தில் வானொலிக்காக நட்டு வைக்கப்பட்ட ஏரியல் கம்பில் ஏறி, கையகல மதிலிலும் நடந்து, புகைப்போக்கியிலும் ஏறி, இமயத்தின் மேல் வெற்றி வாகை சூடி நின்ற கரிகாலன் போல் நின்று கொண்டிருந்தான். அவசரம் போலும், ஏனோ கையில் புலிக்கொடியை மட்டும் எடுத்துச் செல்ல மறந்துவிட்டிருந்தான். அவன் அங்கு நின்றுகொண்டு விமானத்தில் இருந்தவாறு வெள்ளச் சேதத்தைப் பார்வையிடும் அமைச்சர் போல வீட்டின் சுற்றுப்புறத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான். எல்லோருக்கும் அதிர்ச்சி. அடுத்து என்ன நடக்குமோ, அவன் இன்னமும் நகர்ந்து கீழே விழுந்துவிடுவானோ என அச்சம். இரண்டு பெண்கள் நமக்குப் போதும் என்று அப்பா சொல்லச் சொல்லக் கேட்காமல், அம்மா ஆசை ஆசையாக வேண்டும் என்று மூன்றாவதாகப் பெற்றெடுத்த மகன் அவன். அன்று அவன் அவ்வாறு ஓர் “உயர்ந்த” இடத்தில் இருப்பதைப் பார்த்ததும் அம்மாவிற்கு வயிற்றில் புளியைக் கரைத்தது போல் இருந்திருக்க வேண்டும். அம்மா உடனே சமயோசிதமாக, “அவனோட யாரும் பேசாதீங்க, நகரப் பார்த்தான்னா நில்லுன்னு கத்துங்க” என எங்களிடம் சொல்லிவிட்டு, அவன் கவனத்தைக் கவராமல் இருப்பதற்காக வீட்டின் பின் வாசலைத் தவிர்த்து, வீட்டின் பக்கவாட்டில் உள்ள சந்து வழியாக ஓடி, முன்புற வாசல் வழியாக மொட்டைமாடிக்கு பி. டி. உஷா போல ஓடினார்கள். ராஜேஸ்வரியின் அம்மா சுலபமாக மதில் ஏறிக் குதிப்பவர். எங்கள் வீட்டிற்கு அவர்கள் வழக்கமாக அப்படித்தான் வருவார்கள். அவரும் மதிலை லாவகமாகத் தாண்டிக்குதித்து உஷாவைத் தொடர்ந்து ஓடும் ஷைனி ஆப்ரஹாம் போல அம்மாவைத் தொடர்ந்தார்கள். இதற்குள் லதாவின் அம்மா, குடத்தில் தண்ணீருடன் சென்ற பெண்கள், பூக்காரி, சைக்கிளில் கோலமாவு விற்றவர், கடைக்குப் போகிறவர்கள், சோன்பப்டி வண்டிக்காரர், வீடு திரும்பும் மாணவர்கள் போன்ற பார்வையாளர்கள் எனச் சிறு கூட்டமே பக்கத்துத் தெருவில் நின்று அண்ணாந்து தம்பியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மொட்டைமாடியை அடைந்த அம்மா சத்தமில்லாமல் பையப் பைய அடியெடுத்து வைத்துத் தம்பியைப் பின்புறமாக நெருங்கினார்கள். முதுகுப் பக்கம் எக்ஸ் போல உள்ள சஸ்பெண்டார் வைத்த கால்சட்டை மட்டுமே தம்பி அணிந்திருந்தான். தம்பியின் கால்சட்டையின் முதுகு வாரை அம்மா கபால் எனப் பிடித்துத் தூக்கியதும், அவன் பயத்தில் அந்தரத்தில் நீந்துவது போல் கை கால்களை உதைத்துக் கொண்டு வீறிட்டு அழ ஆரம்பித்தான். அதுவரை மூச்சைப் பிடித்துக் கொண்டு அசையாமல் இருந்த அனைவரும், “நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாம்” எனத் தம்பி பாடியது போல் உடனே அசைய ஆரம்பித்தோம். தெருவில் போனவர்கள் பிள்ளை பெற்றும் வளர்க்கத் தெரியாத அம்மாவின் துப்புக் கெட்டத்தனத்தை விமரிசித்த வண்ணம் அம்மாவின் மேல் வசை பாடியவாறு கலைந்து சென்றார்கள். சிறுவர் சிறுமியர் நாங்களும் வீட்டின் குறுக்கே புழுதி நிறைந்த கால்களுடன் தட தடவென ஓடி மாடியை அடைந்தோம். தம்பி எப்படி மாடிக்கு வந்தான்? யார் மொட்டைமாடிக் கதவைத் திறந்தது? என்று அம்மாவின் மூளை துப்புத் துலக்க ஆரம்பித்தது. அடுத்த வீட்டுப் பிள்ளைகளைத் தண்டிக்க ஒடித்த வேப்பங்குச்சியில் இருந்து உருவிப் போட்ட வேப்பிலைகள் தரையில் சிதறிக் கிடக்க, என்னைச் சுற்றிலும் என் குற்றத்திற்கான தடயங்களுடன் நான் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தேன். என் நிலைமையைப் புரிந்து கொண்ட ராஜேஸ்வரியின் அம்மா தவறு தன்மேல் என்று அப்ரூவராக மாறி என்னை அடிக்கக்கூடாது என்று வேண்டிக் கேட்டுக் கொண்டார்கள். அம்மாவும் மரியாதையின் பொருட்டு சரி… சரி… என்று சொல்லி அவரைச் சமாதானப்படுத்தி அவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். பின்னர் “அடுத்தவங்கள அடிக்கக் குச்சி ஒடிக்கிறையா நீ” என்று கூறி அதே வேப்பமரத்தில் இருந்து குச்சியை ஒடித்து எனக்கு அம்மா பூசை நடத்தினார்கள். சாமியாடிக்குத்தான் வழக்கமாகவேப்பிலை அடிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அன்று முதன் முறையாகச் சாமியாடியே வேப்பிலை அடித்தார். ••••••• 8. காசியில் பிடிச்சத விடணும்! தன் அப்பா ஸ்ரீதரின் தோளில் சாய்ந்து கொண்டு அவன் அரவணைப்பில் இருந்த ராஜஸ்ரீயின் வலது கையில் நூலில் பறந்து கொண்டிருந்த ஹீலியம் பலூன் இருக்க, இடதுகை கட்டை விரலைச் சூப்பிக்கொண்டிருந்தாள். அவர்கள் பின்னால் மெதுவாக வந்துகொண்டிருந்தனர் அவளது அம்மா ராஜலக்ஷ்மியும் அண்ணன் பிரபுவும். பிரபுவின் வலது கையிலும் ஹீலியம் பலூன் ஒன்று பறக்க இடது கையால் தன் அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு வந்தான். ராஜலக்ஷ்மி நடக்க வாகாகத் தன் புடவைக் கொசுவத்தைச் சிறிது தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தாள். அவளது அருகில் அவளது தம்பி கதிரேசன் தோளில் ஒரு பையும் கையில் ஒரு பிளாஸ்டிக் வயர் கூடையுமாக வந்து கொண்டிருந்தான். கதிரேசன் கான்பூர் ஐ.ஐ.டியில் எம்.டெக் முடித்து இந்த ஆண்டுப் பட்டம் வாங்குகிறான். அவனுக்கும் ராஜலக்ஷ்மிக்கும் ஜெயங்கொண்டம் சொந்த ஊர். ஸ்ரீதரைத் திருமணம் செய்துகொண்ட பின்பு ராஜலக்ஷ்மி சென்னையில் குடும்பத்துடன் வசித்துவர, துவாக்குடி பொறியியல் பல்கலையில் பி.டெக் முடித்திருந்த கதிர் மேற்படிப்பிற்குக் கான்பூர் வந்திருந்தான். ஸ்ரீதரின் உடன் படித்த நண்பன் ஒருவனுக்கு டெல்லியில் குடிபெயர்ந்த பின்பு தனது முப்பதாவது வயதிலாவது திருமணத்தைச் செய்துகொள்ளும் எண்ணம் தோன்றியதால் அவனது திருமணத்திற்கு வரச்சொல்லி ஸ்ரீதருக்கு அன்புக் கட்டளை போட்டிருந்தான். பிள்ளைகளுக்குப் பள்ளியில் கோடைவிடுமுறை ஆரம்பித்திருந்தது. கதிர் படிப்பு முடித்து ஊருக்குத் திரும்பி வருவதற்குள் மொழிதெரியாத இடங்களை அவன் உதவியுடன் சுற்றிப் பார்த்துவிடும் எண்ணத்திலும், அத்துடன் திருமணத்திற்கும் சென்று வந்துவிடலாம் என்ற திட்டத்துடனும் ஸ்ரீதரும் ராஜலக்ஷ்மியும் குழந்தைகளுடன் வடக்கே பயணமாகியிருந்தார்கள். திருமணத்தில் பங்கேற்றுவிட்டு, டெல்லியைச் சுற்றிப் பார்த்த பின்னர், ஆக்ராவில் தாஜ்மஹால், அலகாபாத் என்று ஒரு சுற்று சுற்றிவிட்டு வாரணாசிக்கு வந்திருந்தார்கள். காசியில் சாமி கும்பிட்ட பின்பு சென்னை திரும்புவதாகத் திட்டம். தங்கியிருந்த விடுதியில் இருந்து கோவிலுக்கு வரும் வழியில் குழந்தைகளுக்கும் பலூன் வாங்கியாகிவிட்டது. ராஜஸ்ரீக்கு ஆறு வயதாகியும் அவ்வப்பொழுது விரல் சூப்பும் பழக்கம் எட்டிப் பார்க்கும். அம்மா பெயரின் முதல் பகுதியையும் அப்பா பெயரின் முதலெழுத்தையும் சேர்த்து அவளுக்குப் பெயர் வைத்திருந்தார்கள். அவள் விரல் சூப்புவதைக் கவனித்த ராஜலக்ஷ்மி, “ராஜிக்குட்டி வாயிலிருந்து விரலை எடுடா” என்றாள். தரையில் கிடந்த ஏதோ ஒன்றை எடுக்கக் குனிந்த பிரபு கவனம் சிதறியதால் பலூனைத் தவறவிட்டு அது பறக்கவும் அழ ஆரம்பித்தான். ராஜலக்ஷ்மி உடனே ராஜிக்குட்டியின் கையிலிருந்த பலூனைப் பிடுங்கி பிரபு கையில் கொடுக்க, இப்பொழுது ராஜி அழ ஆரம்பித்தாள். ஸ்ரீதருக்குக் கோபம் வந்தது. “ஏய், உனக்கு அறிவிருக்கா? அவனைச் சமாதானப்படுத்தரத விட்டுட்டு, சின்னக் குழந்தை பலூனைப் பிடுங்கறியே” என்று திட்டினான். ராஜலக்ஷ்மிக்கும் தான் சிறிதும் யோசிக்காமல் செய்த தவறு புரிந்தது. ஏன் அப்படிச் செய்தாள் என்று அவளுக்கே விளங்கவில்லை. கதிர் பலூனை மீண்டும் ராஜிக்குட்டி கையில் கொடுத்து, “எங்க நீயும் பிரபு மாதிரி பலூனப் பறக்கவிடு, யார் பலூன் வேகமாப் பறக்குது பாக்கலாம்.” என்றான். அவளும் பறக்கவிட குழந்தைகள் “என் பலூன்தான் வேகமாப் பறக்குது என் பலூன்தான்.” என்று கூச்சல் போட, பலூன் பறந்த கவலை திசை திரும்பியது. ஆற்றில் ஒரு முழுக்குப் போடும் எண்ணத்தில் ஆற்றை நோக்கிப் படியில் இறங்க ஆரம்பித்தார்கள். கதிர் சுற்றும் முற்றும் பார்த்தவாறு, “அக்கா இன்னைக்கு ரொம்பக் கூட்டமா இருக்கில்ல” என்றான். ஸ்ரீதர், “அவ முன்ன பின்ன..” என்று ஆரம்பித்தவன் ராஜலக்ஷ்மி முறைப்பதைப் பார்த்த பின்பு அபசகுனமாப் பேசாதீங்க என்ற திட்டு விழும்முன், “நாங்க இப்பத்தானே முதன் முதலா வரோம், எங்களுக்கு என்ன தெரியும்?” என்றான். கதிர், “நான் போன தடவ என் ஃபிரெண்ட்ஸ்ஸோட வந்தப்ப இவ்வளவு கூட்டம் இல்லை. இருங்க அத்தான், பாரிடமாவது இன்னைக்கு என்ன விசேஷம்னு கேட்கிறேன்” என்று சொல்லியவாறு சுற்றும் முற்றும் பார்த்தான். காலை வெய்யிலில் பள, பள என மின்னும் வழுக்கைத் தலையுடன், ஹிந்தியில் ஏதோ எழுதியிருந்த காவித்துண்டு ஒன்றை உடலில் போர்த்தியிருந்த ஒரு வயதானவர் ஆற்றில் இருந்து படியில் ஏறி வந்து கொண்டிருந்தார். அவரிடம் கதிர் கசமுக என்று ஹிந்தியில் பேச அவரும் ஹிந்தியில் பதில் சொல்லிவிட்டுப் படியேறலானார். “இன்னைக்கு நீர் ஜால ஏகாதசியாம் அக்கா, அதான் இவ்வளவு கூட்டம்” என்றான் கதிர். மேலே ஏறிக் கொண்டிருந்த பெரியவர் மீண்டும் இறங்கி வந்து கதிரின் தோளைத் தட்டி ஏதோ சொல்ல ஆரம்பித்தார். கதிரும் மிகப் பவ்யமாக வாயில் கைபொத்திக் கேட்டுக் கொண்டான். அவன் பணிவில் மகிழ்ந்தவர் போலப் பெரியவர் அவனது தலையில் கைவைத்து ஆசீர்வதித்துவிட்டு மீண்டும் படியேறினார். “என்ன மச்சான், உன்ன ஆசீர்வதிக்க மறந்து போயிட்டாரா? அதான் திரும்பி வந்தாரா? என்ன சொல்றாரு அந்தப் பரோட்டாத்தலை?” என்றான் ஸ்ரீதர் கிண்டலாக. “மரியாதை … மரியாதை” என்று ஞாபகப்படுத்தி, இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தாள் ராஜலக்ஷ்மி. “நான் தப்பா உச்சரிச்சிட்டேன்னு சொல்றார் அத்தான். நீர் ஜாலம், மாயா ஜாலமெல்லாம் இல்ல, அது நிர்ஜலம், தண்ணி கூடக் குடிக்காம விரதம் இருப்பாங்களாம், நிர்ஜல ஏகாதசி அப்படின்னு மகாபாரதக் கதை ஒன்றை சொல்லிட்டு போறாரு” என்றான் கதிர். “அட, அப்படியா நமக்குத் தெரியாமலே நல்ல நாளாப் பார்த்துத்தான் கோவிலுக்கு வந்திருக்கோம்” என்று மகிழ்ந்தாள் ராஜலக்ஷ்மி. ஆற்றில் காவியுடைச் சாமியார்கள் நிறைந்திருந்த படகு ஒன்று போனது. மற்றொரு படகில் இந்திய வெயில் தாளாத மேலை நாட்டுக்காரர்கள், ஆண் பெண் என்ற பேதமில்லாமல் அரைக்கால் சட்டை தொப்பி, கறுப்புக் கண்ணாடி போன்றவற்றை அணிந்து போய்க்கொண்டிருந்தார்கள். அதில் ஒரு வெள்ளைக்காரப் பெண் பார்த்தவற்றையெல்லாம் படம் எடுத்துக் கொண்டு சென்றாள். “எல்லாத்தையும் படம் எடுக்குறாப்பா இந்தப் பொண்ணு, நாம தும்மினாலும் அதையும் படம் எடுப்பாளோ?” என்றான் ஸ்ரீதர், அதைக் கேட்டு மற்றவர்கள் சிரிக்க, ராஜிக்குட்டிக்கு அவர்கள் ஏன் சிரிக்கிறார்கள் என்றே புரியவில்லை. “ஏன்பா சிரிக்கிறீங்க?” என்று ஸ்ரீதரை உலுக்கினாள். அவளுக்கு விளக்கிச் சொல்லப் பொறுமை இல்லாத ஸ்ரீதர், “அப்பாவுக்குத் தும்மல் வருது அப்படின்னு சொன்னேன்டா” என்றான். “இல்லப்பா, தப்பா சொல்றீங்க. அப்பாவுக்குச் சிரிப்பு வருது” என்று தன்னால் முயன்ற அளவு ராஜிக்குட்டி அவனது தவற்றைச் சுட்டிக் காட்டவும், மீண்டும் சிரிப்பு அலை எழுந்தது. “அத்தான், காசிக்கு வந்தா ஏதாவது பிடித்தத விட்டுடனும்னு சொல்வாங்களே, நீங்க எத விடப் போறீங்க?” என்றான் கதிர் “வேணும்னா உங்க அக்காவ இங்கயே விட்டுடலாம்னு இருக்கேன், என்ன சொல்ற மச்சான்?” என்று அவனைச் சீண்டினான் ஸ்ரீதர். மூக்குக் கண்ணாடியை விரலால் தள்ளிச் சரி செய்துகொண்டு அவனை முறைத்தான் கதிர். இதைக் கவனித்த ராஜலக்ஷ்மி தம்பியின் தலையில் தட்டி, “அவர் விளையாட்டுக்குத்தானே சொல்றார். இதுக்கு ஏண்டா உனக்குக் கோபம் வருது?” என்று சிரித்தாள். ஆனால் தனக்காகத் தன் தம்பிக்கு வந்த கோபத்தைப் பார்த்து அவள் முகத்தில் பெருமையும் தெரிந்தது. “இல்ல, நான் நெசமாத்தான் சொல்றேன்” என்றான் ஸ்ரீதர். “நல்லாக் கவனிங்க, பிடிச்சத விடணும்னு சொல்லுவாங்க, அப்படின்னா நான் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சவன்னு ஒத்துக்கிறீங்களா?” என்று மடக்கினாள் ராஜலக்ஷ்மி. “ஏன் மச்சான் உங்க அக்காவ வக்கீலுக்குப் படிக்க வச்சிருக்கலாம்ல” என்றான் ஸ்ரீதர். “நான் ராஜிக்குட்டியோட சண்டை போடுறத விட்டுடறேன்” என்றான் பிரபு. “நானும் பிரபு கூட இனிமே சண்டை போடுறத விட்டுடறேன்” என்றாள் ராஜிக்குட்டி. “குடும்பத்தில யாருமே நடக்கிறதாப் பேசவே மாட்டீங்களோ? நீங்களே உங்க அம்மா அப்பாவுக்கும் எத விடலாம்னு சொல்லுங்க” என்றான் கதிர். ராஜிக்குட்டி சிறிது யோசனைக்குப் பின், “அம்மா என்னோட பொம்மைய எடுத்துப் பிரபு கிட்ட கொடுக்கறத விட்டுடனும்” என்றாள். ராஜலக்ஷ்மி குற்ற உணர்வுடன் “ஸாரிடா குட்டி, அம்மா இனிமே அப்படிச் செய்றத விட்டுடுவேனாம், சரியா?” என்று ராஜிக்குட்டிக்குக் கையில் முத்தம் கொடுத்தாள். ஸ்ரீதர் பிரபுவின் உடைகளைக் களைந்து போட்டுவிட்டு அவனை ஜட்டியுடன் நீரில் இறக்கிக் குளிப்பாட்டினான். குனிந்து குளிப்பாட்டும் பொழுது அவன் கழுத்தில் ஒற்றை ருத்திராட்சம் கோர்த்த தங்கச் சங்கிலி ஆடிக்கொண்டிருந்தது. பிரபு, “அப்பா, இனிமே நீங்க இந்த மணி கோத்த சங்கிலி போடறத விட்டுடுங்க.” என்றான். “ஏண்டா?” என்றான் ஆச்சர்யத்துடன் ஸ்ரீதர், “இதச் சாமியார்தான் போட்டுக்குவாங்களாம். நீங்கதான் சாமியார் இல்லையே” என்றான். பிரபு பிரபுவுடன் சேர்ந்து ஸ்ரீதரும் ஒரு முழுக்குப் போட்டுவிட்டு எழுந்தான். ஏதோ யோசனையாக இருந்த ராஜலக்ஷ்மி, “கதிர், இன்னைக்கின்னு சிறப்புப் பூஜை அப்படின்னு ஏதாவது செய்றது வழக்கம்னா, நாமும் செய்யலாமே.” என்றாள். இதற்குள் குளித்து மாற்றுடைக்கு மாறியிருந்த கதிர் தன் தோள்பையில் இருந்து துண்டு, மாற்றுடை போன்றவற்றை மற்றவர்களுக்கு எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். “சரிக்கா, நான் யாரிடமாவது விசாரிச்சிட்டு வரேன்” என்று கூட்டத்தை விலக்கிக் கொண்டு கதிர் படியேறினான். அவன் சிறிது தூரம் போன பின்பு, “கதிர், ஏய் தம்பி கதிர்” என்று கூவினாள் ராஜலக்ஷ்மி. “இப்ப ஏன் கூப்பாடு போடற, உனக்கு என்ன வேணும்? ராஜிக்குட்டியும் நீயும் குளிச்சிட்டு மேலே வாங்க” என்று சொல்லிய ஸ்ரீதர் பிரபுவைத் துவட்டிவிட்டு ஒரு துண்டை அவன் இடுப்பில் கட்டி விட்டு, தனக்கு மாற்றுடை அணிய ஆரம்பித்தான். “இல்லீங்க, அப்படியே பூஜைக்கு ஏதாவது வாங்கணும்னா கையோட வாங்கிட்டு வரச் சொல்லலாமேன்னுதான் அவனக் கூப்பிட்டேன்” என்றாள் ராஜலக்ஷ்மி. “அவனுக்கு இந்தச் சத்தத்தில எங்கே காதில விழப்போவுது, நானும் அவன் கூடப் போயிட்டு வந்துடறேன்.” என்று சொல்லியவாறு சட்டையை மாட்டி, பையில் பர்சையும் வைத்துக் கொண்டான் ஸ்ரீதர். “பிரபு, அம்மாவுக்குக் கொஞ்சம் உதவி பண்றியா கண்ணா?” என்று மகனிடம் கேட்டுக் கொண்டு, அவன் முடியைக் கோதி ஈரமாக இருக்கிறதா என்ற ஒருமுறை பார்த்துவிட்டுப் படி ஏறினான். வெள்ளைக்காரர்கள் சென்ற படகு மீண்டும் திரும்பி வர, அந்தப் படமெடுக்கும் பெண் இவர்களைப் பார்த்துக் கையாட்டினாள். “அம்மா, கைய ஆட்டுறாங்கம்மா” என்று பிரபு பதிலுக்குக் கையை ஆட்டிச் சிரித்தான். ராஜலக்ஷ்மி ராஜிக்குட்டியின் கவுனைக் கழட்டிப் போட்டுவிட்டு அவளைக் குளிப்பாட்டினாள். பிறகு முகத்தைத் திருப்பாமல் கைகளை மட்டும் நீட்டி, “பிரபு, அந்தத் துண்டை எடுத்துக் கொடுப்பா” என்றாள். கைக்குத் துண்டு வராததால், ஏதாவது பராக்கு பார்க்கிறானோ என்று எண்ணித் திரும்பி, “பிரபு” என்றாள். பிரபு அங்கே இல்லை. திடீரென உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது போன்ற அதிர்ச்சியில் “பிரபு, பிரபு” உரத்த குரலில் கூவியவாறு மேலே செல்லும் படிகளை நோட்டமிட்டாள், ஆற்றின் பக்கம் பார்த்தாள். எங்கும் பிரபுவைக் காணவில்லை. இவள் போட்ட கூச்சலில் பக்கத்தில் இருந்தவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். “பிரபு, பிரபு” என்று கூவியவாறு கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு படியேறி ஓடியவள், பாதியில் நினைவு வந்தவளாக மீண்டும் இறங்கி வந்து ஈர உடலுடனும் ஜட்டியுடனும் படியில் நின்றுகொண்டிருந்த ராஜிக்குட்டியையும் இழுத்துக் கொண்டு மேலே ஓடி இரு புறமும் பார்த்து மீண்டும் “பிரபு, பிரபு” என்று கூவினாள். கதிரும் ஸ்ரீதரும் சிறிது தூரத்தில் பேசிக்கொண்டே திரும்பி வந்தவர்கள் இவள் போட்ட கூச்சலையும், கோலத்தையும் பார்த்து வேகமாக ஓடி வந்தார்கள். ஒரு வழியாக ஒரு நிமிடத்தில் காணாமல் போன பிரபுவைப் பற்றி அழுகையுடன், பதட்டத்துடன் ராஜலக்ஷ்மி சொல்லிமுடிக்க, கதிர் படியிறங்கி ஓடி ஆற்றில் இறங்கி அங்கும் இங்கும் துழாவி தேடினான். பிரபு ஆற்றில் விழுந்திருப்பானோ என்ற சந்தேகம் அவனுக்கு பக்கத்தில் நின்றவர்களைக் கேட்டான். ஸ்ரீதர் தான் வந்த வழியே திரும்பி ஓடி, மகன் தன்னைத்தேடி வந்திருப்பானோ என்ற யோசனையுடன் தேடினான். இதற்குள் பித்துப் பிடித்தவள் போல் ராஜலக்ஷ்மி கரையில் கூட்டத்தைத் தள்ளிக் கொண்டு கண்ணிற்கெட்டிய தூரம் வரை இரண்டு பக்கமும் இடுப்பில் ராஜிக்குட்டியுடன் “பிரபு, பிரபு” என்று பார்ப்பவர்களுக்கு நெஞ்சைப் பிசையும்படியான வேதனை தருமளவிற்கு தன் அடிவயிற்றில் இருந்து கூவிக்கொண்டு ஓடினாள். நேரம் செல்லச் செல்ல குழந்தை நீரில் விழுந்து மூழ்கிவிட்டானோ, குழந்தைகளை வைத்துப் பிச்சை எடுக்கும் கூட்டம் தூக்கிச் சென்றுவிட்டதோ, இல்லை ஏதாவது வேடிக்கை பார்க்கச் சென்றவன் கூட்டத்தில் வழி தடுமாறிக் காணாமல் போய்விட்டானோ என்ற கவலை மட்டுமே மிஞ்சி நின்றது. காவல் நிலையம் சென்று கதிரின் உதவியுடன் பையனைக் காணவில்லை என்று புகார் கொடுத்தார்கள். பர்ஸில் இருந்த குடும்பப் படத்தை அடையாளத்திற்குக் கொடுத்தார்கள். அந்தப் படத்தில் இப்பொழுது மூன்றாவது வகுப்பு முடித்திருந்த பிரபு இன்னமும் சிறிய வயதில் இருந்தான். விடுதிக்குச் சென்று சரியான சாப்பாடு தூக்கம் எதுவும் இன்றி நாட்களை ஒட்டினார்கள். சாப்பிட உட்கார்ந்தால் பிரபுவுக்குப் பசிக்குமோ, அவனுக்குச் சாப்பிட ஏதாவது கிடைக்குமோ என்று ஒவ்வொருவர் மனத்திலும் எண்ணம் ஓடியது. சாப்பாடு இறங்கவில்லை. படுத்தால் பிரபுவுக்குக் குளிரினால் போர்வை இருக்கமோ என்ற எண்ணம் ஓடியது. ஆனால் யாருக்கும் வெளியில் சொல்லத் தைரியம் இல்லை. அவன் ஆற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என்பதை மட்டும் மனம் எண்ணிப் பார்க்கக்கூட விரும்பவில்லை. வெளியில் சென்றால் கண்கள் பிரபுவைத் தேடி அலை பாய்ந்தன. ஆனால் ராஜிக்குட்டிக்கு இன்னமும் பிரபு காணாமல் போன விவரம் சரியாகப் புரியவில்லை. அழுது கொண்டே இருக்கும் அம்மாவையும், கவலை தோய்ந்த முகத்துடன் இருக்கும் மாமாவையும் அப்பாவையும் தொந்தரவு செய்து பிரபு எங்கே என்று கேட்கத் தெரியவில்லை. அவ்வப்பொழுது இவளும் எங்கே காணாமல் போய்விடுவாளோ என்று ராஜலக்ஷ்மி மகளை இறுக்கிப் பிடித்துக் கொள்வாள். மூன்று வாரங்கள் ஓடியது. காவல் நிலையத்தில் உள்ளவர்கள் பையன் கிடைத்தால் சொல்கிறோம், நாங்களும் தேடிக் கொண்டுதான் இருக்கிறோம். முகவரி கொடுத்துவிட்டுச் செல்லுங்கள் என்று சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லவோ, உதவவோ முடியாத நிலையில் இருந்தார்கள். ஊரை விட்டு வந்து ஒரு மாதமாகி விட்டதால் பழைய வாழ்க்கைக்கு பிரபு இல்லாமல் ஊருக்குத் திரும்புவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. கிளம்பும் நாள் அன்று மீண்டும் அதே படித்துறைக்குச் சென்று பிரபு கிடைக்க மாட்டானா என்ற நப்பாசையில் தேடினார்கள். வானத்தில் ஒரு பலூன் தனியாகப் பறந்து சென்றது. அதைப் பார்த்தவாறே இருந்த ஸ்ரீதர் தோளில் இருந்த ராஜிக்குட்டியின் விசும்பல் கேட்டுத் திரும்பினான். அவள் பக்கத்தில் விளையாடிய இரண்டு பையன்களைப் பார்த்தவாறு கலங்கிய, கண்ணீர்ப் பளபளக்கும் கண்களுடன் இருந்தாள். சிறிது தூரத்தில் எப்பொழுதும் நாசூக்காக உடை உடுத்தி, நளினமாக நடந்து கொள்ளும் ராஜலக்ஷ்மி தலை கலைந்து, உடை கலைந்து சுற்றுப்புறம் பற்றிய கவலை இல்லாமல் தரையில் விழுந்து தொண்டை அடைப்பது போலக் கேவிக் கேவி அழுது கொண்டிருந்தாள். மூக்கிலும் கண்ணிலும் நீர் கொட்ட தொண்டைக் கரகரத்துப் போய் ஆற்றைப் பார்த்துக் கதறிக் கொண்டிருந்தாள். தன் மனத்தில் உள்ளது போலவே பிரபு வளர்ந்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் அவள் மனத்திலும் படமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பது ஸ்ரீதருக்குப் புரிந்தது. ஸ்ரீதர் தன்தோளில் ராஜிக்குட்டியைச் சுமந்தபடி, அரற்றிக் கொண்டிருக்கும் மனைவியிடமும் கதிரிடமும் சென்றான். அவளை எழுப்ப முயன்ற பொழுது ஏக்கத்துடன் அவனைப் பார்த்த அவள் கண்களை அவனால் சந்திக்க முடியவில்லை. அம்மாவைப் பார்த்து ராஜிக்குட்டியும் அழுததால் அவள் கண்ணீர்த்துளிகள் அவன் தோளில் விழுந்தன. அழும் மனைவி மகள் முகத்தைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு ஏனோ யார் மீதோ ஆத்திரம் வந்தது. அப்பொழுது கோயில் மணி ஒலிக்க அது வந்த கோபுரத்தைத் திரும்பிப் பார்த்தான். கோபுரத்தில் இருந்து ஒரு பறவை கூட்டம் கிளம்பிப் பறந்து சென்றது. கோபுரத்தையே வெறித்துப் பார்த்தவன் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவன் போலத் தன் கழுத்தில் இருந்த ருத்திராட்ச மணி கோர்த்த சங்கிலியை வெருட்டென்று இழுத்து நீக்கி ஆற்றை நோக்கி வீசிவிட்டு, மனைவியை இழுத்துக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தான். ••••••• 9. எழுதிச் செல்லும் விதியின் கைகள் சற்று ஓய்வெடுக்கலாம், இன்று விடுமுறை நாள்தானே மதியம் முழுவதும் ஏதாவது தொலைக்காட்சி பார்த்தால் போயிற்று என்று ரிமோட் கன்ட்ரோலுடன் இருக்கையில் சரிந்து உட்கார்ந்து ரிமோட் பட்டனைக் கிளுக்கினேன். “உங்கள் டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா?” என்ற கேள்விக்குப் பதில் சொல்ல விருப்பமின்றி அடுத்து “கிளிக்”, வீட்டில் சகல ஐஸ்வர்யமும் கிடைக்க ஸ்ரீ தனலக்ஷ்மி எந்திரம் வாங்கு என்று ஆலோசனை சொன்னது அடுத்து வந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி. மீண்டும் “கிளிக்”, இங்கே ஏதோ ஒரு பாட்டுக்குச் சீருடையில் ஒரு கூட்டமே நடனம் என்ற பெயரில் நடுத் தெருவில் குதித்துக் கொண்டிருந்தது. இது உதவாது என்ற எரிச்சல் வந்து மறுபடியும் “கிளிக்”, திரையில் இப்பொழுது இடுப்பில் இடது கையை முட்டுக் கொடுத்தவண்ணம் அந்த மனிதர் படியில் இறங்கி வந்தார். தலையைத் தலையை ஆட்டிய வண்ணம் ஒரு விரக்திச் சிரிப்பு சிரித்தவாறு தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார். அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. இந்த மனிதரை முன்பே பார்த்திருக்கிறேன். இப்பொழுது சின்னத் திரையைக் கண்கள் வெறுமனே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, என் கவனம் அந்த மனிதரின் கடந்த கால வாழ்க்கையை நினைக்க ஆரம்பித்தது. பார்த்தால் ஒரு முப்பது அல்லது முப்பத்திரண்டு வயது போன்ற தோற்றம். என் கணிப்புச் சரியாக இருக்குமா என யோசித்தேன். இருக்கலாம். கல்லூரியில் விரிவுரையாளர் வேலையில் இருந்தவர், அதனால் இருபது வயதில் இளங்கலைப் பட்டமும், இருபத்திரண்டில் ஒரு முதுகலைப் பட்டமும் வாங்கியிருக்கலாம். கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்க்க ஒருமுனைவர் பட்டமும் கூட வாங்கியிருக்கக்கூடும், அப்படியென்றால் படித்து முடிக்க ஒரு இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி ஆறு வயதாகியிருக்கும். கல்லூரியில் ஆசிரியர் ஆனவுடன் மாணவர்கள் மிகவும் மதித்து விரும்பும் ஆசிரியராகக் கருதப்பட்டார். ஆனால், திருமண வாழ்க்கையோ பெண்களோ அவரைக் கவராமல் போனது. காலத்தை இப்படிக் கொஞ்ச நாள் தள்ளினார் (அப்போ. நான் நினைத்தது சரி, அவருக்கு முப்பதுகளின் ஆரம்ப வயதுதான்). கெளரவமான, மதிப்பான வாழ்க்கை எல்லாம் கொஞ்ச நாள்தான். என்று அந்தப் பெண்ணின் மேல் விருப்பம் வந்து காதலிக்க ஆரம்பித்தாரோ அன்று தொலைந்தது நிம்மதி. காதலியை அடைய அவள் குடும்பம் முட்டுக்கட்டை போட்டது. பின் அவளும் நீரில் மூழ்கிவிட மனிதர் மேல் கொலைப்பழி விழுந்தது. நீதிமன்றம், வழக்கு என அலைந்தார், வேலை போனது, மதிப்பும் போனது. சமுதாயத்தில் கெளரவக் குறைவு என வாழ்வு அவரைப் புரட்டிப் போட்டுவிட்ட பின் இப்பொழுது சந்நியாசி போல ஊர் ஊராக அலைகிறார். எப்படி இருந்தவர் இப்படி ஆகி விட்டார் என்ன ஒரு பரிதாப நிலை. திடீரென இணையத் தளம் ஒன்றில் படித்த ஜோதிடப் பதிவு ஒன்று நினைவிற்கு வந்தது. ஒரு வேளை இவருக்குக் கேது தசை நடக்கிறதோ? என்று தோன்றியது. கேது தசை ஞானம் கொடுக்கும் என்று பதிவின் ஆசிரியர் எழுதியிருந்தாரே என்ற எண்ணம் வர உடனே கணினியைத் தட்டி, இணையத்தில் கலந்து, அந்த வலைப்பதிவில் கேது தசைப் பற்றித் தேடலானேன். “பொதுவாகக் கேது தசை 90% பேர்களுக்கு நன்மையளிப்பதாக இருக்காது. கேது ஞானகாரகன். தசை முழுக்கப் பலவிதமான கஷ்டங்களுக்கு ஜாதகனை உட்படுத்தி இறுதியில், தசை முடிவில் ஜாதகனுக்கு ஞானத்தைக் கொடுப்பான். கஷ்டப்படாமல் ஞானம் எங்கிருந்து வரும்? இழப்புக்கள், பிரிவுகள், நஷ்டங்கள், துயரங்கள், துரோகங்கள், துன்பங்கள், உடல்வலி, மனவலி என்று பலவிதமான வலிகளைக் கொடுத்து முடிவில் ஜாதகனை மேன்மைப்படுத்துவான். ஜாதகத்தில் மற்ற அம்சங்களைப் பொறுத்து வலியின் அளவுகள் மாறுபடும்.” என்று கேது தசா புக்திப் பதிவில் அந்த ஆசிரியர் எழுதியிருந்தார். மேலும், “தீயவன் எங்கிருந்தாலும் தீமையையே செய்வான். அவன் எதைச் செய்தாலும் தீமையே விளையும். ஆனால் கேது ஞானகாரகன் என்பதால், அவனுடைய தீமைகளால், நமது புத்தி தெளிவுறும். நல்லது கெட்டது உறைக்கும். நமது எதிரிகளையும், நமக்குத் துரோகம் செய்பவர்களையும் அடையாளம் காணமுடியும். மொத்தத்தில் கேது தசை முடிவில் நமக்கு ஞானம் உண்டாகும்.” என்றும் எழுதியிருந்தார். சரி… ஒவ்வொரு தசா புக்திக்கும் அவர் பரிந்துரை செய்த புலிப்பாணிப் பாடல்கள் படிக்கலாம் என்று படித்தேன். கேது மகாதசையில் கேதுவின் சுயபுக்திக்குப் பிறகு வருவது கேதுவில் சுக்கிரபுக்தி, சுக்கிரனால் ஒரு சில சந்தோஷங்கள் இருந்தாலும், புக்திக்காலம் பாங்கில்லாமல் இருக்கும் என்று தொடங்கி, “… நாரிழையாள் தன்னுடனே அபமிருந்துகாணும் வகையான ராசாவால் மனமகிழ்ச்சியாகி மனைவி மக்கள் தன்னுடனே வாழ்வான் காணே!” என்று விளக்கியது புலிப்பாணியின் பாடல். அப்போ, நம்ம மனிதர் அப்பத்தான் அந்தப் பொண்ணு பக்கம் திரும்பியிருக்காரு போல. என்று நினைத்தேன். மற்றொரு இடத்தில் கேது மகாதசையில் மனோகாரகன் சந்திரனுடைய புக்தி நன்றாக இல்லை என்று புலிப்பாணி தன் பாடலில் குறிப்பிட்டார்… “…ஆயிழையாள் விலகி நிற்பாள் அற்பமாகும் தோணுவான் தோகையரும் புத்திரரும் பாழாம் தொகுதியுடன் பொருளதுவுஞ் சேதமாகும் நாணுவான் நாரிகையும் சலத்தில் வீழ்ந்து நன்றாக மடிந்திடுவாள் நலமில்லைதானே” என்று பாடினார் புலிப்பாணி. வரிகளைப் படித்தவுடன் கொஞ்சம் அதிர்ச்சி… என்னது?… நாரிகையும் சலத்தில் வீழ்ந்து நன்றாக மடிந்திடுவாளா? தசா புக்திப் பாடல்களில், இங்கொன்று அங்கொன்று எனப் பொருந்த நம்ம ஆளுக்குக் கேது தசை தான் என்று ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். கேது மகா தசை மொத்தம் ஏழு ஆண்டுக் காலம் நடைபெறுமாம், கேது தசை முடியும் போது வாழ்க்கையைப் பற்றி ஒரு தெளிவான ஞானம் வந்துவிடுமாம். அப்படியானால், நம்ம ஆளும் ஞானம் வந்தவர் போல் அலைவதைப் பார்த்தால் உத்தேசமாக ஒரு இருபத்தி ஐந்து வயது போல் கேது தசை அவருக்கு ஆரம்பித்திருக்கக் கூடும். இருபத்திஐந்து வயது போலக் கேது தசை ஆரம்பம் என்றால் என்ன நட்சத்திரத்தில் பிறந்திருப்பார் என்று அடுத்தக் கேள்வி தோன்றியது. உடனே நம் வீட்டுக்காரருக்குச் சின்ன வயதில் கேது தசை வந்ததே என யோசித்து, அவருடைய ஜாதகத்தைப் பார்த்ததில் முப்பதுகளில் அவருக்குக் கேது தசை, ஆனால் இதை அவரிடம் சொல்லாமல் விட்டு விடுவது நல்லது. எத்தனை ராசிகள் இருக்கிறது, ராசிக் கட்டத்தில் எத்தனை கட்டம் என்ற விபரமெல்லாம் தெரியாதவர் அவர். உங்களுக்கு முப்பது வயது முடிந்து கொஞ்ச காலத்தில் கேது தசை ஆரம்பம் என்று சொன்னால், அதனால் என்ன? என்பார். கேது தசைன்னா கெட்டகாலம் அப்படின்னு அர்த்தம் என்று விளக்க வேண்டி வரும். அவருக்கு முப்பது வயதானபின் எங்கள் திருமணம் நடந்ததால், உடனே இடக்காகக் கல்யாணம் ஆனவுடனே கெட்ட நேரம் ஆரம்பம்னு எனக்குத் தெரியும், இதுக்குப் போய் ஜோசியம் பார்க்கத் தேவையில்லைன்னு சொல்லலாம். சொல்லிவிட்டு அவர் நகைச்சுவைக்கு அவரே சிரித்து மேலும் எனக்கு வெறுப்பேற்றலாம், எதுக்கு வீண் வம்பு, சண்டை, சச்சரவு எல்லாம். மீண்டும் வலைப்பதிவில் படிக்கத் தொடங்கினேன். “புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பது நட்சத்திரக்காரர்களும் கேது தசையைச் சந்தித்தாக வேண்டும். அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு பிறக்கும்போதே கேது தசை இருக்கும். ஏனென்றால் அம்மூன்று நட்சத்திரங்களுக்கும் கேது அதிபதி” அப்படியானால் அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களை விலக்கி விடலாம். அப்படியானால் எந்த நட்சத்திர ஜாதகர்களுக்கு 25 வயதில் கேது தசை என்று சிந்தனை தொடர்ந்தது. அப்பொழுது “டொயிங்” என்ற சத்தத்துடன் “amma” என்று மகள் இணைய வழி அரட்டைக்கு என்னை அழைத்து என் கவனத்தைத் திசை திருப்பியிருக்காவிட்டால், அந்த மனிதரின் ஜாதகத்தை இன்னமும் எவ்வளவு குடைந்திருப்பேனோ தெரியாது. யார் அந்த மனிதர் என்று தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆவலாக இருந்தால் “ஆறுமணமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு” என்ற பாடலின் காணொளியை ஒரு முறை பாருங்கள். ••••••• 10. தீதும் நன்றும் பிறர் தர வாரா காரை விட்டிறங்கிய சிவகுமார் மெதுவாகக் கழுத்து டையைத் தளர்த்திய வண்ணம் உள்ளே நுழைந்தார். மதிய உணவிற்காகவும், குட்டித் தூக்கத்திற்காகவும் அவர் வீட்டிற்கு வருவது வழக்கம். இந்த ஊருக்கு வந்து பதினைந்து ஆண்டுகளில் மருத்துவமனையும், மருத்துவத் தொழிலும் துவங்கி ஊரே அதிசயிக்கும் வண்ணம் நல்ல கைராசிக்காரர் எனப் பெயரும் புகழும் பெற்றுவிட்டார். அவர் மருத்துவமனையும் நகரப் பேருந்து வழித்தடத்தில் ஒரு முக்கிய நிறுத்தம் என ஆகிவிட்டது. களைப்புடன் உள்ளே வந்தவர் முன்னறையில் கூடை நாற்காலியில் அமர்ந்து ஆனந்த விகடன் படித்துக்கொண்டிருந்த சின்ன மைத்துனரின் மனைவி தமிழ்ச்செல்வியை அப்பொழுதான் பார்த்தார். சின்ன மைத்துனரின் பெண் இவர் வீட்டில்தான் தங்கி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். மைத்துனர் இருப்பது சிறிய ஊர், அத்துடன் கல்லூரி வசதியும் இல்லாததால் இந்த ஏற்பாடு. ஊர் பக்கத்தில்தான் என்பதால் வார இறுதியில் தன் பெண்ணைப் பார்க்க மைத்துனரோ அல்லது அவரது மனைவியோ தவறாது வருவார்கள். “என்னம்மா எப்ப வந்தீங்க? சின்னவர் நல்லா இருக்காரா?” “பதினோரு மணி பஸ்ல வந்தேன், அவரும் சவுக்கியந்தாண்ணே” “சரி, சாப்பிட்டீங்களா?” “நீங்க போய்ச் சாப்பிட்டு தூங்குங்கண்ணே, நானும் ஜனனியும் அப்புறம் சாப்பிடறோம்” சரி என்று சொல்லிச் சிவகுமார் உள்ளே சென்றதும் விகடனில் விரல் அடையாளம் வைத்திருந்த இடத்தில் இருந்து சிவசங்கரியின் “ஒரு மனிதனின் கதை”யைத் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தார் தமிழ்ச்செல்வி. உடை மாற்றிக்கொண்டு சாப்பாட்டு மேஜையில் அமர்ந்த சிவகுமார் டிரான்சிஸ்டர் ரேடியோவைத் திருப்பினார் “வடிவேலன் மனசு வச்சான் மலர வச்சான் மணக்குது ரோஜாச் செடி” என்ற அவருக்குப் பிடித்த பாடல் ஒலித்தது. மனைவி ஜனனி கையில் சாம்பார் பாத்திரத்துடன் வந்த பொழுது அவர் முகம் சரியில்லாததைக் கண்டு பாடல் ஒலியைக் குறைத்தார். “சின்னண்ணி என்ன சொல்றாங்க?” என்று பேச்சுக் கொடுத்தார். இதற்காகவே காத்திருந்தது போல் பொரிந்து தள்ளினார் ஜனனி. சமீபத்தில் ஜனனியின் பெரியண்ணன், அவர் குடும்பமும் சின்ன அண்ணன் இருக்கும் அதே ஊர்தான், தன் மாமனாருக்கு உடல்நலம் சரியில்லாததால் ஜனனியின் கணவரிடம் அழைத்துவந்து அவர் மருத்துவமனையிலேயே சேர்த்துச் சிகிச்சை பெற வைத்தார். மீண்டும் அதே காரணம், இந்த ஊரில் மருத்துவ வசதி அதிகம், அத்துடன் மைத்துனர் மருத்துவமனையில் சிறப்புக் கவனிப்பும் கிடைக்கும் என்பதால். நீரிழிவு, இரத்தக் கொதிப்பு என ஏகப்பட்ட உடல் உபாதைகளுடன் இருந்த அந்த மாமனாரும் மிகவும் வயோதிகர். இரண்டு வாரம் தீவிர சிகிச்சை. ஊரில் இருந்து உறவினர் குடும்பம் ஒவ்வொன்றாக வந்து நலம் விசாரிக்க என்று தங்கிச் சென்றவண்ணம் இருந்ததால் ஜனனி வீட்டில் எப்பொழுதும் ஒரே கூட்டம் அலை மோதியது. சளைக்காத தொடர்ந்த வேலை ஜனனிக்கு. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்ததால் நோயாளியை யாராலும் பார்க்க முடியாத வருத்தம் அனைவருக்கும். பெரிய அண்ணனின் மாமியார் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டார். அதுவும் சில வேளைகளில் மட்டும். நோயாளியின் உடல்நிலையில் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை. உறவினர்கள் விசாரணைகளுக்கு, அதெல்லாம் சரியாகி விடுவார் என்று சிவகுமார் ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார். தேவையில்லாமல் யாரையும் கவலையடையச் செய்வது அவருக்குப் பழக்கமில்லை. இரண்டு வாரம் தாண்டியபின் ஒரு நாள் அந்த வயோதிகர் கோமாவில் விழுந்ததுடன் நிலைமை மோசமானது. உடனே சிவகுமார் பெரிய மைத்துனரை அழைத்து நிலைமையை விளக்கினார். பெரியவருக்கு இனிமேல் எந்தச் சிகிச்சையும் பலனளிக்காது. உயிருடன் இருக்கும்பொழுதே ஊருக்கு அழைத்துச் சென்று விடுங்கள் என்று தன் மருத்துவமனை ஊர்தியில் செவிலியர் உட்படச் சகல வசதிகளுடன் ஊருக்கும் அனுப்பி வைத்தார். அந்த மாமனாருக்குச் சொந்த மகன்கள் ஊரிலேயே இருந்தாலும் பெரிய அண்ணி தன் தந்தையின் மீது உள்ள அதீத அன்பால் அவரைத் தன்னுடனேயே வைத்துப் பராமரித்து வந்தவர் மீண்டும் பராமரிப்பைத் தொடர்ந்தார். ஆனால் அவரது வயோதிகத் தந்தை ஓரிரு நாட்களில் மரணமடைந்தார். ஜனனியும் குடும்பத்துடன் இறுதி மரியாதை செலுத்திவிட்டு வந்தார். இது நடந்து ஒரு மாதம் இருக்கும். அந்த வயோதிகர் மறைந்த பின் குடும்பத்தில் ஒரு களேபரமே நடந்திருக்கிறது. என்ன எல்லாம் சொத்துத் தகராறுதான், வேறென்ன? பெரிய அண்ணியின் தந்தை உயில் எதுவும் எழுதவில்லை. சொத்தில் ஆண் பெண் அனைத்து வாரிசுகளுக்கும் சம உரிமை உண்டு என்ற சட்டம் இல்லாத காலம் அது. பெரிய அண்ணி மற்ற மகன்களை விட அன்பும் பாசமும் வைத்துத் தன் தந்தையைப் பராமரித்திருந்தாலும், உயில் இல்லாததால் அவர் சகோதரர்கள் ஆண் வாரிசுகளுக்குள் சொத்தைப் பிரித்துக் கொண்டு சகோதரிக்கு பெரிய நாமம் போட்டு விட்டார்கள். ஆத்திரம் தாளாத பெரிய அண்ணிக்குச் சிவகுமார் தன் தந்தையின் நிலையை முன்பே எச்சரித்திருந்தால் அப்பாவிடம் உயில் எழுதி வாங்கியிருக்கலாம் என ஆதங்கம். கோமாவில் இருந்தவரிடம் என்ன எழுதி வாங்க முடியும். வெறுப்பின் உச்சத்தில் இருந்தவர் ஊரில் துக்கம் விசாரிக்க வந்தவர்களிடம் சிவகுமார்தான் தன் தந்தையைக் கொன்றுவிட்டார்(?) என்று பழி போட ஆரம்பித்தார். தன் நாத்தனாரின் கணவரின் மேல் வீண் பழி போடுகிறோம் என்ற எண்ணம் அவருக்குக் கொஞ்சமும் இல்லை. ஜனனியின் பெரிய அண்ணனும் தன் மனைவியைக் கண்டித்தபாடில்லை. இதனால் ஜனனியின் பிறந்த ஊரில் அவரையும், அவர் கணவரைப் பற்றியும், அவரது தொழில் திறமையைப் பற்றியும் ஒரே பேச்சாக வதந்தி உலாவ ஆரம்பித்திருந்தது. சின்னஅண்ணி தமிழ்ச்செல்வியைப் பார்ப்பவர்கள் எல்லோரும் சிவகுமாரின் தொழில் திறமையை, கைராசியைப் பற்றிக் கேள்வி கேட்டுத் துளைக்க அவர் நிலைமை தர்ம சங்கடமானது. ஊரில் இருந்து வந்த தமிழ்ச்செல்வி முதல் வேலையாக இதை ஜனனியிடம் சொல்லிப் பெரியவர் குடும்பத்தின் பழிபோடும் படலத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கச் சொன்னார். தன் கணவரின் புகழையும், திறமையையும் கண்டு பெருமையாக இருந்த ஜனனிக்கு இதைக் கேட்கச் சகிக்கவில்லை. பெரிய அண்ணனிடமும், பெரிய அண்ணியின்மேலும் ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. யாரோ சொன்னால் பரவாயில்லை, தன் சொந்த அண்ணன் குடும்பமேவா இதைச் செய்கிறது என்ற வேதனை ஜனனிக்கு. கணவருக்கு உணவு பரிமாறிக்கொண்டே ஆத்திரமும் அழுகையும் தொண்டையை அடைக்க, வார்த்தை தடுமாறச் சொல்லி முடித்தார். ஏதாவது ஒரு வார்த்தை சொன்னாலும் மடை திறந்தது போல் அழுதுவிடும் நிலையில் இருந்த ஜனனியைப் பார்த்து, சரி, சரி விடு, சொத்துக் கிடைக்காம போன ஏமாற்றம் அவங்களுக்கு என்று சமாதானமாகச் சொல்லிவிட்டு ட்ரான்சிஸ்டருடன் படுக்கை அறைக்குப் போய்விட்டார் சிவகுமார். எதற்கும் அசராத குணம் அவருடையது. அதன்பின் சாப்பிட அமர்ந்த ஜனனியும் தமிழ்ச்செல்வியும் உரையாடலைத் தொடர்ந்தார்கள். மேலும் விபரம் கேட்கக் கேட்க வெறுப்பின் உச்சியில் இருந்த ஜனனி, தமிழ்ச்செல்வியிடம், “சின்னண்ணி, இப்படியெல்லாம் பேசறாங்களே, இவங்க கும்புடுற திருப்பதிசாமி இவங்கள என்னன்னு கேட்பாரு பாருங்க” என்று நொந்து போய்ச் சொன்னார். ஜனனியின் குடும்பம் தெய்வ நம்பிக்கை உள்ள குடும்பம். ஆனால் அதற்காக எப்பொழுதும் கடவுளைப் பற்றியே பேசிக் கொண்டும், நினைத்துக் கொண்டும் இருக்கிற தீவிர பக்தி வகையைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் வீட்டில் சிலருக்குச் சாமி பெயர் இருக்கும், சிலருக்கு மதச் சார்பற்ற பெயரும் இருக்கும். கடவுள் பெயர்களில் சைவப் பெயர்களும் இருக்கும், வைணவப் பெயர்களும் இருக்கும். முக்கியமான நாட்களில் முடிந்தால் கோவிலுக்குப் போவார்கள். சிவனோ, விஷ்ணுவோ, ஏசுவோ அதைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை. போக முடியாவிட்டால் அதற்காக வருத்தப்பட மாட்டார்கள். விரதம், நோன்பு இது போன்ற எதையும் கடைப்பிடிப்பதில்லை. அனைத்துப் பண்டிகைகளையும் கொண்டாடுவார்கள். கடவுள், மதம் இவற்றைப் பொறுத்தவரை மிதவாதிகள் எனக் கூறலாம். ஆனால் பெரிய அண்ணி ஊர்மிளாவின் குடும்பம் அதற்கு நேர் மாறானது. பரம்பரை பரம்பரையாக அதிதீவிர வைணவர்கள். குடும்பத்தில் ஒருவருக்கும் மருந்துக்கும் கூட வைணவப் பெயர் தவிர வேறு பெயர் இருக்காது. திருப்பதி வெங்கடாஜலபதியின் தீவிர பக்தர்கள். பெரியண்ணன் சிவநேசன் பெயரையும் சிவராமனாக்கி விட்டார்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும், விரதம் நோன்பு என அமர்க்களப்படுத்துவார்கள். புரட்டாசி ஆரம்பித்தால் “வெங்கட்ரமணா கோவிந்தா” என்ற கோஷம்தான். ஆண்டுக்கு ஒரு முறையாவது திருப்பதி செல்லாமல் இருக்கமாட்டார்கள். இது நடந்து ஏறத்தாழ ஓராண்டு ஓடியிருக்கும். கணவரையிழந்த ஊர்மிளாவின் தாயாரும் அந்தச் சோகத்தைத் தாங்க முடியாமல் உடல் நலிவுற்றார். வழக்கம் போல் பெற்றோரின் மேல் பாசமுள்ள பெரிய அண்ணி ஊர்மிளா தன் தாயைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார். ஆனால் உறவு நலிவடைந்ததால் சிவகுமாரிடம் மருத்துவத்திற்கு அழைத்துவர விரும்பவில்லை. வீட்டிலேயே மருத்துவ வசதி செய்துகொடுத்தார்கள். ஆனாலும் அந்த வயதான மூதாட்டியும் போகும் நேரம் வந்ததால் தன் கணவரைத்தேடி வைகுண்டப் பதவியடைந்தார். சிவகுமார் என்ன சொல்லியும் ஜனனி தன் பெரிய அண்ணனைத் துக்கம் விசாரிக்கச் செல்லவும் இல்லை, மரியாதை நிமித்தமாகச் செல்ல நினைத்த சிவகுமாரையும் போக விடவுமில்லை. கோபமாக அவங்க உறவே நமக்கு வேண்டாம் என்று சொல்லித் தடுத்து விட்டார். சொத்திற்கு மதிப்புக் கொடுத்து உறவுகளை இழித்துப் பேசிய பெரிய அண்ணன் குடும்பத்தை உறவினர் என்று ஏற்றுக் கொள்ள அவர் விரும்பவில்லை. வழக்கம் போல் தன் பெண்ணைப் பார்க்க வந்த ஜனனியின் சின்ன அண்ணன் ஆனந்தனும், சின்ன அண்ணி தமிழ்ச்செல்வியும் ஒருவிதப் பரபரப்புடன் ஜனனியிடம் வந்தார்கள். காபியைக் கலந்து கொடுத்தவண்ணம் அவர்களை நலம் விசாரித்தார் ஜனனி. “ஜனனி, இதக் கேட்டியா? உனக்கு ட்ரங்கால் போடாம நேராவே வந்து சொல்லணும்னு நினைச்சேன்.” “என்ன அண்ணி என்ன ஆச்சு? உங்க பொண்ணுக்கு வரன் ஏதும் வந்திருக்கா?” “அட அதில்லைங்கறேன். நீ சொன்ன மாதிரியே திருப்பதிசாமி பாடம் கத்துக் கொடுத்திட்டாரு பெரியவர் வீட்டுக்கு.” பிறகு அண்ணனும் அண்ணியும் ஜனனியிடம் சொன்ன தகவல் இது. பெரிய அண்ணி ஊர்மிளாவின் தாய் இறக்கும் முன் அவரிடம் கையிருப்பாகக் கணிசமான தொகை இருந்தது. தன் கணவரின் நிதி நிர்வாகத்தில் குறிப்பிடக்கூடிய வகையில் பங்கு வகித்த அந்த மூதாட்டி தன் கைவசம் பல ஆயிரங்களுக்கு ஒரு நல்ல தொகையைப் பல ஆண்டுகளாகவே சேமித்து வைத்திருந்தார். பேரப்பிள்ளைகளுக்கு அந்தப் பணத்தில் பரிசுகளாகவும் வாங்கித் தரும் பணக்கார அன்புப் பாட்டி அவர். மேலும் அவரும் பெரிய இடத்தில் பிறந்து வளர்ந்ததால் கொத்து, கொத்தாகத் தங்க, வைர நகைகளும், அத்துடன் அவர் கணவர் வருமான வரி காரணமாகவும், அவர் பெயரில் துவக்கினால் ராசி என்று நம்பிக்கையில் ஆரம்பித்த சில வியாபார நிறுவனங்களையும் சட்டபூர்வமாக அவர் வசத்தில் வைத்திருந்தார். இவை அனைத்தும் உயில் மூலம் பெரிய அண்ணி ஊர்மிளாவின் கைவசம் இப்பொழுது. தாய் இறந்த பின்பே இதைத் தெரிந்து கொண்ட ஊர்மிளாவின் சகோதரர்கள் சொத்துக் கைவிட்டுப் போன கொதிப்பில் தன் சகோதரி மேல் பழி போட ஆரம்பித்துள்ளார்கள், அதுவும் எப்படி? சொத்துக்காக அலைந்த ஊர்மிளா எப்படியும் தன் தாய் வசம் இருக்கும் சொத்தினைக் கைப்பற்ற எண்ணி அவரைத் தன் வீட்டிலேயே பராமரிக்கிறேன் என இருத்திக் கொண்டு, உடல் நலமில்லாதவரிடம் உயில் எழுத நிர்பந்தித்து, உயில் கையில் கிடைத்தவுடன் மற்றவர்கள் உயில் எழுதிவிட்ட விபரம் அறியக் கூடாதென்று விஷம் வைத்துக் கொன்று விட்டார். மாறாக, அந்தத் தாயே தன் மகளுக்குக் குடும்பச் சொத்தில் ஒன்றும் இல்லாது போனதை எண்ணி வருந்தி உயில் எழுதி வைத்திருக்கக்கூடும். எது எப்படியோ, ஆனால், இப்பொழுது ஊர் முழுவதும் ஊர்மிளாவின் சகோதரர்கள் பரப்பிவிடுவது சொத்துக்கு ஆசைப்பட்டு எங்கள் சகோதரியே எங்கள் அம்மாவிற்கு விஷம் வைத்து விட்டார் என்பதே. ஊர் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்ட செய்தியாகப் போனது இது. ••••••• 11. சற்றே இளைப்பாற … பந்தலடியில் இருந்து காந்தி ரோட்டில் வடக்கு நோக்கித் திரும்பிக் கொஞ்சதூரம்தான் நடந்திருப்பேன். சட்டென்று மின்விளக்குகள் அணைந்து தெருவே இருளில் மூழ்கியது. யாரோ ஒரு அம்மா “நாசமாப் போக, இப்படிச் சொல்லாமக் கொள்ளாம கரண்ட்ட எடுத்து உயிர வாங்குரானுவோ, புள்ளைங்க பரிட்சைக்குப் படிக்கிறதா வேணாமா?” என்று தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு விட்ட சாபம் அசரீரியாகக் கேட்டது. இரண்டு நாளில் வரும் தோழி வீட்டுத் திருமணத்தைப் பற்றி எண்ணிக்கொண்டே வந்ததால் சரியாக எங்கிருக்கிறோம் என்று கவனிக்கவில்லை. வாணக்கார வீதிப் பக்கத்தில் வந்திருக்கலாம் எனத் தோன்றியது. எதிர்பாராமல் இருட்டைப் பார்த்ததும் ஆபத்து என்றால் உதவிக்குக் கூப்பிட வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தில் எச்சரிக்கையாகக் கையில் கைபேசியை எடுத்துக் கொண்டேன். கைபேசி மணி மாலை 7:33 எனக் காட்டியது. தெரு முழுவதும் மங்கலாகத் தெரிந்தது. யாரோ இரண்டு இளவட்டங்கள் நாளைக்கு வெளியாகப் போகும் படம் ஒன்றைப் பற்றிய தீவிர விவாதத்தில் இருந்தவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். என்னைப் பார்த்ததும் சிறிது நிதானித்துத் திரும்பித் திரும்பிப் பார்த்துவிட்டு, குரலைத் தாழ்த்திப் பேசிவிட்டு, மீண்டும் திரும்பிப் பார்த்தார்கள். கொஞ்ச தூரம் போனவுடன் நின்றுவிட்டார்கள். தனியாக வரும் ஆள் என்பதால் கொள்ளை அடிக்கலாம் எனத் திட்டம் போடுகிறார்களோ? எதிர்பாராமல் இருளைச் சந்திக்க நேர்ந்ததால் நானும் அச்சத்தில் என் பங்குக்கு மின்சார வாரியத்தை மனத்தில் திட்டினேன். என்னையறியாமல் என் கை தோள்பையின் கைப்பிடியை இறுகப் பற்றியது. மேற்கொண்டு நடந்தால் அவர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவர்கள் நல்லவர்களா? அல்லது இருளைப் பார்த்ததும் அவர்களுக்கு மனதில் கெட்ட எண்ணம் எதுவும் துவங்கி விட்டிருக்குமோ? என எண்ணி என் நடையில் தயக்கம் ஏற்பட்டது. அப்பொழுது “எங்கம்மா போறீங்க?” என்ற ஆண் குரல் பின்னாலிருந்து கேட்டதும் தூக்கிவாரிப் போட்டது. அதிர்ச்சியுடன் திரும்பியபொழுது பின்னால் ஒருவர் லைட்டரை க்ளிக் செய்து சிகரட்டைப் பற்ற வைத்தபடி இருப்பது தெரிந்தது. லைட்டர் வெளிச்சத்தில் அவர் மிக வயதானவர் என்று தெரிந்தது. வெள்ளெழுத்துக் கண்ணாடியும், முற்றிலும் நரைத்த முடியுமாக, வெட வெட என்று ஒடிசலாக, உயரமாக இருந்தார். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, கையில் ஒரு கைத்தடி, தோளிலும் ஒரு துண்டு. வயது அறுபத்தி ஐந்து அல்லது அதற்கு மேலும் இருக்கலாம், புகையை மெதுவாக உள்ளிழுத்தார். மற்ற நேரத்தில் நான் எங்கே போகிறேன் என்பது உங்களுக்கு அனாவசியம் என்றோ, இல்லை முறைத்துப் பார்த்துவிட்டோ போகும் எனக்கு அவர் துணையாக வருவாரா என்ற ஆசையில் “இங்கே உள்ளூர்க் காலேஜ்ல லெக்ச்சரரா இருக்காங்க சித்ரான்னு ஒருத்தங்க, அவங்க வீட்டுக்குப் போறேன், திருப்பாற்கடல் தெருவில், லக்ஷ்மி நாராயணா கோயில்தாண்டி கொஞ்ச தூரம் தள்ளி வீடு” என்றேன். “அட நம்ம வீட்டுப் பக்கந்தானா? அப்போ, வாங்க நாம பேசிக்கிட்டே போகலாம்” என்றார். இருவரும் சேர்ந்து அந்த இளவட்டங்களைத் தாண்டி நடந்தோம். இருளில் இளவட்டங்களின் முகபாவம் சரியாகத் தெரியவில்லை. என்னைத் தாக்கலாம் என்று எண்ணியிருந்திருந்தால் அவர்கள் எண்ணத்தில் மண் விழுந்து ஏமாந்து போயிருப்பார்களோ? தாத்தா மீண்டும் புகையை உள்ளிழுத்தார். “யார் வீடும்மா நீங்க? நான் உங்கள இந்தப் பக்கம் பார்த்ததே இல்லியே” என்றார். “நான் சென்னையிலிருந்து வரேன் சார். நீடாமங்கலத்தில என் ஃப்ரெண்ட் வீட்டுக் கல்யாணம், அவ எனக்கு ஒருவகையில தூரத்துச் சொந்தம். அவளும், நானும், இங்க திருப்பாற்கடல் தெருவில இருக்கிற சித்ராவும் ஒன்னாவே காலேஜ் வரை படிச்சோம். அதான் இவளும் நானும் சேர்ந்து அவ வீட்டுக் கல்யாணத்திற்குப் போலாம்னு ஒரு பிளான்.” “என்னம்மா வெளியூர்க்காரங்க நீங்க, இப்படிப் புது ஊருக்கு இருட்டுல தனியா வரலாமா? வண்டி ஏதாச்சும் புடிச்சாவது வரலாமில்ல, வீட்டு அட்ரெஸ்ஸாவது சரியாத் தெரியுமா?” “இல்லேங்க, வண்டி ஏதும் கிடைக்கல, காத்திருக்கிறதுக்குப் பதில் இருபது நிமிஷம்தானே நடந்திடலாம்னு நினைச்சேன். அத்தோட பஸ்ல வந்தப்பக் கால ஒரே இடத்தில வச்சி நோவுது. நடந்தாக் கொஞ்சம் நல்லா இருக்குமேன்னு தோணிச்சு. எனக்கு ஊரு புதுசில்லீங்க, நான் இந்த ஊர்ல கொஞ்ச வருஷம் இருந்திருக்கேன், கான்வெண்ட் ஸ்கூல்லதான் படிச்சேன். அப்பதான் சித்ரா ஃப்ரெண்ட்டானா. அப்பாவுக்குக் கான்பூர்ல மாற்றலாகிப் போனதும் நானும் அண்ணனும் இங்கே பெரியப்பா வீட்ல தங்கிக் கொஞ்சநாள் படிச்சோம்.” “அண்ணனா? அவர் எந்த ஸ்கூல்மா? ஃபின்லே ஸ்கூலா?” “இல்ல சார், நேஷனல் ஸ்கூல், பங்குனித் தேர்த் திருவிழால ஸ்கூல் பிள்ளைங்களோட தேரெல்லாம் இழுத்திருக்கான்.” “ஆமாம் அந்த ஸ்கூல் பிள்ளைங்க தேர் இழுக்கிறது வழக்கம்தான், ஏம்மா நீங்க உங்க பெரியப்பா வீட்ல போய்த் தங்கலியா? அவங்க வீடு எங்கிருக்கு?” “பெரியப்பா போனதற்கு அப்புறம் பெரியம்மா குடும்பத்தோட அவங்க சொந்த ஊர்த் திருத்துறைப்பூண்டிக்குப் போய்ட்டாங்க, இப்போ இங்கே யாருமில்ல. காசுக்காரச் செட்டித் தெருல ஒரு பெரிய வீட்ல இருந்தோம். வீட்டு வாசல் இருக்கிறது ஒரு தெருன்னா, கொல்லைப்பக்கம் இருக்கிறது பின்புறத் தெரு. பின்னாடிக் கதவத் திறந்தா அப்படியே கல்கி தியேட்டருக்குப் படம் பார்க்கப் போய்டலாம்” “இப்ப கல்கி தியேட்டருக்குப் பதில் அங்க பெட்ரோல் பங்க்தான் இருக்கு. உங்க கான்வெண்ட் ஸ்கூல் ஒரு காலத்தில அங்க பின்புறத் தெருவில் இருக்கிற பழனி ஆண்டவர் தீர்த்தக் குளம் பக்கம்தான் ஒரு சின்னக் கட்டடித்தில இருந்திச்சு, அது ஐம்பதுகளில், அப்புறம்தான் பஸ் ஸ்டாண்ட் பக்கம் போய்ட்டாங்க” “ஆமாம் சார், கேள்விப்பட்டிருக்கிறேன்.” பேசிக்கொண்டே யானை வாகன மண்டபம் தாண்டி, கோவிலையும் தாண்டி வந்து விட்டோம். தாத்தா மீண்டும் ஒரு சிகரெட்டை எடுத்து, லைட்டரைக் கிளுக்கினார். சங்கிலித் தொடராகத் தொடர்ந்து புகைக்கும் பழக்கம் போலிருக்கிறது. மீண்டும் லைட்டர் வெளிச்சத்தில் அவர் முகம் தெரிந்தது. அவர் மூக்கு கருடாழ்வார் மூக்குப் போலிருந்தது. எங்கேயோ பார்த்த சாயலும் இருந்தது. அவர் லைட்டர் புராதனக் கலைப் பொருள் போல அலங்காரத்துடன் இருந்தது. வெள்ளியில் செய்ததாக இருக்கலாம். நான் பார்ப்பதை அவரும் கவனித்தார். “என்னம்மா பாக்கறீங்க, சற்றே இளைப்பாற” என்று அந்தக்கால சார்மினார் சிகரெட் விளம்பரம் போல் தன் கையை ஸ்டைலாக ஆட்டிச் சொன்னார். இப்பொழுது என் கண்கள் கோவில் வரிசையில் இருந்த, இருளில் மூழ்கியிருந்த வீடுகளைப் பார்க்க ஆரம்பித்தன. “என்ன பாக்கறீங்க? உங்க சித்ரா வீடு இங்க இல்லை” “ஆமாம் சார், இன்னம் கொஞ்சம் தூரம் போகணும்” மீண்டும் என் கண்கள் அந்தப் பக்கமே போயின. “என்ன? அப்புறம் என்னம்மா பாக்கறீங்க அங்கே?” “வந்து… இந்த வீடுங்களுக்குப் பின்னாடிதான பாமினி ஆறு ஓடுது?” “ஆமாம்” “சின்ன வயசில ஸ்கூல்ல பேசிப்பாங்க. இங்க ராத்திரில பேய் துணி தோய்க்கிற சத்தம் கேக்கும்னு”, மெதுவாகத் திக்கித் திக்கிச் சொன்னேன். தாத்தா சத்தமாகச் சிரித்தார். “என்னம்மா பேய்க்கு வேற வேலையில்லையா? துணி தோய்க்கிறதுதான் வேலையா? படிச்சவங்க நீங்க இப்படிப் பேய்க்குப் பயப்படலாமா? இப்ப என்னோட வர்றீங்கல்ல, அப்புறம் பாருங்க பேய் பிசாசுக்கெல்லாம் பயப்படலாமா? கூடாதான்னு? உங்களுக்கே நல்லாப் புரியும்” என்று சொன்னவர் அவர் கைத்தடியை உயர்த்தி ஒரு வீட்டைச் சுட்டிக் காட்டி இதுதான் நீங்க சொன்ன வீடு இல்லையா?” எனறார். அவர் கைத்தடியை உயர்த்தவும் மந்திரம் போட்டது போல் மின்சாரம் வந்து, எங்கும் விளக்குகள் எரிந்து ஒளி வரவும் சரியாக இருந்தது. அவர் கைத்தடியும் மயில்தலை போன்ற முகப்பு வைத்து அழகாக இருந்தது. அவருக்கு நன்றியும், குட் நைட்டும் சொல்லிவிட்டுக் கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்து அழைப்பு மணியை அழுத்தினேன். “வா, உமா, வா, வா, நீதான் கரெண்ட் கொண்டு வந்த மகராசியா? ஏன் இவ்வளவு லேட்டு? எதுக்கு நடந்து வர்ற?” என்று மூச்சு விடாமல் கேள்வி கேட்டாள் சித்ரா. அவள் பெண் செல்வியும், கணவரும் கரெண்ட் வந்ததும் டி. வி. பார்க்க ஓடிவிட்டார்கள். கேம் என்ன ஆயிற்றோ என்ற கவலை அவர்களுக்கு. சித்ராவின் கணவர் சின்னத் திரையில் இருந்து பார்வையைத் திருப்பாமலே “வாங்க” என்றார். அவர் வரவேற்றது என்னையா? அல்லது டி. வியில் தோன்றிய கிரிக்கெட் வீரர்களையா என்று குழப்பமாக இருந்தது. அந்த வீடு மிகப் பழைய வீடு. சித்ராவிற்கு அவள் பாட்டியிடம் இருந்து பூர்வீகச் சொத்தாகக் கிடைத்தது. எப்பொழுதோ பள்ளி நாட்களில் அவள் வீட்டிற்கு வந்த பொழுது பார்த்தது போலவே இப்பொழுதும் இருந்தது. நான் பெரியப்பா வீட்டில் தங்கிப் படித்தது போல், அவள் தன் பாட்டியின் வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தாள். அவள் பெற்றோர்கள் துபாய்க்குப் போய்விட்டிருந்தார்கள். எங்கள் இருவருக்கும் இருந்த வளர்ப்புச் சூழலின் ஒற்றுமை எங்கள் நட்பை வளர்த்து, கல்லூரி வரை தொடர்ந்து பலப்படுத்தியிருந்தது. சித்ராவின் தங்கையையும், பாட்டியையும் தவிர இதுவரை யாரும் அவள் குடும்பத்தில் எனக்குப் பரிச்சயமில்லை. தாத்தா, பாட்டி மறைவுக்குப் பிறகு, இதே ஊர்க்காரருடன் திருமணமானதால் பாட்டியின் அதே பழங்காலத்து வீட்டினில் நவீன வசதிகள் செய்து குடியிருக்கிறாள். சமையலறையில் அவள் சுட்டுக் கொடுத்த தோசையைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது என்னுடன் அரட்டை அடித்தவண்ணம் நான் வழியில் வாங்கி வந்த இனிப்புகளைச் சித்ரா சுவைத்துக் கொண்டிருந்தாள். அரட்டை போதும் தூங்கலாம் என முடிவெடுத்தவுடன், பாத்ரூம் எங்கிருக்கிறது எனக் காட்டிவிட்டு, கூடத்திற்குப் பக்கத்திலிருந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்றாள். அங்கு ஒற்றைப் படுக்கையுடன், அது ஒரு அலுவலக அறை போலவோ, படிக்கும் அறை போலவோ அல்லது நூலகம் போலவோ இருந்தது. “செல்வி இன்னைக்கு எங்களோட படுத்துப்பா, இது அவளோட ரூம், நீ இங்கேயே படுத்துக்கோ, நைட்டி ஏதும் வேணுமா?” “நானே கொண்டு வந்திருக்கிறேன்.” என் தோள் பையை மேஜை மேல் வைத்து நைட்டி ஒன்றை உருவி நாற்காலியில் போட்ட பொழுது மேஜை மேல் பேழை போன்றிருந்த ஒரு மரப் பெட்டியில் அந்த வெள்ளி லைட்டரை மீண்டும் பார்த்தேன். உடனே கையில் எடுத்தேன். துணைக்கு வந்த தாத்தா வைத்திருந்தது போலவே இருந்தது. “சித்ரா இந்த லைட்டர்…” என்று ஆரம்பிக்குமுன், சித்ரா அதை வாங்கி “இது வேலை செய்யாது. பழசு, தாத்தாவோடது. அவருக்கு யாரோ பரிசாக் கொடுத்தது. அவரோட ஃப்பேவரிட் லைட்டர்” என்று சொல்லியதுடன் நிற்காமல் அதைக் கிளிக் செய்து சிகரட் பற்ற வைப்பதுபோல் பாவனைச் செய்து “சற்றே இளைப்பாற” என்று ஸ்டைலாகச் சொன்னாள். உடனே மகள் ஏதும் தன் செய்கையைப் பார்த்து விட்டிருப்பாளோ என்று அவசரமாகக் கூடத்தையும் திரும்பிப் பார்த்துக் கொண்டாள். அவள் பார்வையைத் தொடர்ந்து சென்ற என் பார்வை கூடத்திற்குப் போகும் வாசல் கதவின் மேல் மாட்டியிருந்த அந்தப் படத்தைப் பார்த்ததும் நிலை குத்தி நின்றது. அங்கே அந்தத் துணைக்கு வந்த தாத்தாவின் படம் நெட்டி மாலை போட்டு, குங்குமப் பொட்டு வைத்து மாட்டப்பட்டிருந்தது. பக்கத்தில் அந்த மயில்தலை முகப்பு வைத்த கைத்தடியும் அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தது. “சித்ரா இது…. இது…. யார் படம்?” என்றேன் உதறும் கைகளைக் கட்டுப்படுத்த முடியாமல். “செத்துப்போன என் தாத்தா படம், அவர் இருந்த பொழுது இது அவர் ரூம்தான்” என்றாள். அதே கருடாழ்வார் மூக்குச் சாயலை உடைய சித்ரா. “இப்ப என்னோட வர்றீங்கல்ல, அப்புறம் பாருங்க பேய் பிசாசுக்கெல்லாம் பயப்படலாமா? கூடாதான்னு? உங்களுக்கே நல்லாப் புரியும்” என்று தாத்தா சொன்னது மீண்டும் காதில் ஒலிக்க, “பே.பே.பேய்….. பே.பே.பேய்….” என்று உடல் உதறலுடன், வாயும் உளற ஆரம்பித்தது எனக்கு. “ஏய்…. ஏய்…. என்னாச்சு உனக்கு என்ன சொல்றே?” என்று சித்ரா என்னை உலுக்கினாள். “அம்மாடி, இந்தால பாரு. என்னாச்சு…. என்னாச்சு?” என்று பக்கத்திலிருந்த வயதான அம்மா உலுக்கவும் கண்விழித்தேன். அப்பொழுதான் இன்னமும் பஸ்ஸில் இருப்பதும், தூங்கியிருப்பதும் புரிந்தது. தோழி வீட்டுக் கல்யாணத்திற்கு வந்த பொழுது, வழியில் உள்ள ஊர்மக்கள் திடீரெனப் போராட்டம் நடத்திப் பேருந்துகளை நிறுத்திவிட்டார்கள். வால் போன்று நீண்டிருந்த பேருந்துகள் வரிசையில் கடைசியாக நின்றிருந்த எங்கள் வண்டிக்கும் பின்னே, இன்னமும் வால் வளர்ந்து விட்டது போல் மேலும் பல வண்டிகள் இப்பொழுது நிறுத்த பட்டிருந்தன. வாகாக ஒரு மரத்து நிழலில் வண்டி நின்றதால், சிலு சிலுவென்று வீசிய காற்றில் தூங்கியதுடன் நிறுத்தாமல் கனவு வரை போய் உளறி இப்பொழுது மானம் போகிறது. மணி என்ன இருக்கும் எனக் கைபேசியை எடுத்து நேரம் பார்த்தேன். இந்நேரம் ஊர் போய்ச் சேர்ந்திருக்க வேண்டும். இன்னமும் எவ்வளவு நேரம் ஆகுமோ என்ற தவிப்பு வந்தது. பக்கத்தில் இருந்த அம்மா நான் உளறியதைப் பார்த்துச் சிரிக்கிறாரோ என்ற சந்தேகத்தில் கைபேசியை மெதுவாகத் திருப்பி அதில் அவர் பிரதிபலிப்பைப் பார்த்தேன். அவர் ஏதோ புத்தகம் படிப்பதில் மூழ்கியிருந்தார். யார் யாரோ பெரிய தலைகள் வந்து, ஊர்மக்களைச் சமாதானம் செய்து, அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்து ஒரு வழியாகப் போராட்டம் கைவிடப்பட்டது. வண்டி மெல்லக் கிளம்பி ஊர் வந்து சேரும் பொழுது சூரியன் மறைந்து தெரு விளக்குகள் ஒளிர ஆரம்பித்தன. நின்றிருந்த ஒன்றிரண்டு வண்டிகளையும் மற்றவர்கள் பிடித்துவிட, மற்ற ஆட்டோவோ, ரிக்க்ஷாவோ எதுவும் கண்ணில் படவில்லை. சித்ரா வீட்டிற்குப் போகும் வழியில் அவளுக்குப் பெரியக்கடைத்தெருவில் இருக்கும் குஞ்சான் செட்டியார் மிட்டாய்க் கடையில் இருந்து பக்கோடா, பலகாரம் எல்லாம் வாங்கிக் கொண்டு பிறகு வண்டி பிடித்துக் கொள்ளலாம் என்று நடக்க ஆரம்பித்தேன். பலகாரமும் வாங்கியாகிவிட்டது, ஆனால் வழியில் வண்டி எதுவும் கிடைக்கவில்லை. தொடர்ந்து நடந்து பந்தலடியும் தாண்டிக் காந்தி ரோட்டில் திரும்பி நடக்க ஆரம்பித்தேன். சட்டென்று மின்சாரம் நின்றுபோய் விளக்குகள் அணைந்து தெரு இருளில் மூழ்கியது. ••••••• 12. தெய்வமே கலங்கி நின்ற நேரம் வெளியில் ஆம்புலன்ஸோ, ஃபையர் என்ஜினோ அவசர உதவிக்கு வரும் ஏதோ ஓர் ஊர்தி ஒலி எழுப்பி ஓடி மறைந்த சப்தம் கேட்டு என் தூக்கம் தடைப்பட்டது. பாவம் யாருக்கு என்ன கஷ்டமோ என்று நினைத்தவாறு மணியைப் பார்த்தேன். மணி இரவு பன்னிரண்டு. பக்கத்தில் குறட்டை ஒலி ஊரைத் தூக்கியது. புரண்டு புரண்டு படுத்தும் மீண்டும் தூக்கம் வரவில்லை. பக்கத்தில் டிவி ரிமோட் இருந்ததால் தூக்கம் வரும் வரை ஏதாவது டி. வி. பார்க்க நினைத்தேன். எத்தனை அலைவரிசை இருந்தாலும் தொலைக்காட்சியில் உருப்படியாகப் பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை. மாற்றி மாற்றி விளம்பரங்களைப் பார்த்து அலுத்துப் போய் ஏதாவது வீடியோவாவது பார்க்கலாம் என்று தோன்றியது. நல்லவேளை எழுந்துபோய்ப் போடும் அளவுக்கு வேலை வைக்காமல் ஏதோ ஒரு ஒளிநாடா டெக்கின் உள்ளே இருந்தது. என்றோ பார்த்துப் பாதியில் நிறுத்திவிட்ட “கந்தன் கருணை” படம் தொடர்ந்து ஓட ஆரம்பித்தது. சின்னத்திரையில் ஒளவை நாவல் பழத்தை ஊதிவிட்டு முருகருடன் பேசிக்கொண்டிருந்தார். “முருகா! முருகா! ஞானபண்டிதா! நீயா என்னை இப்படிச் சோதிப்பது?” என்று வியந்தார் ஒளவையார். “ஆம், தமிழால் உன்னோடு விளையாடவே யாம் இவ்வாறு வந்தோம்” என்றார் முருகர். தொடர்ந்து எதுவுமே தெரியாதது போல முருகர். கேள்வி மேல் கேள்வி கேட்க, ஒளவையும் தன் புலமையெல்லாம் வெளிப்படுத்திப் பாட ஆரம்பித்தார். “என்றும் புதியது, பாடல் என்றும் புதியது பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது முருகா உன்னைப் பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது.” “திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது” என்ற எனக்குப் பிடித்த பாடல் வரிகள் வந்தவுடன் நானும் ஒளவையுடன் சேர்ந்துகொண்டேன். அதுவரை சுகமான குறட்டை ஒலியுடன் தூங்கிக்கொண்டிருந்த கணவர் தூக்கிவாரிப் போட்டு எழுந்தார். குழப்பத்துடன் “என்ன செஞ்சுக்கிட்டிருக்க?” எனறார். “தெரியல?! பாடிக்கிட்டிருக்கேன்” “மணி என்ன ஆவுது?” “என்ன ஒரு பன்னிரண்டரை இருக்கலாம்னு நினைக்கிறேன்.” “அடுத்தவங்களத் தூங்க விடமாட்டியா? முருகா, வர வர மனுஷனுக்கு ராத்திரிலேயும் நிம்மதி இல்லாமப் போச்சே, முருகா, முருகா” என்று புலம்பியவாறு மீண்டும் படுத்துத் தலையணையை முகத்தின் மேல் வைத்துக் கொண்டார். நான் மீண்டும் தொலைக்காட்சிப் பக்கம் திரும்பிப் பார்ப்பதைத் தொடர்ந்தேன். அப்பொழுது அதனருகில் பள பள என்று ரேடியம் ஒளி போலத் தோன்றிய ஒளி தொடர்ந்து பிரகாசமானது. கண்களைக் கசக்கி உற்றுப் பார்த்தால் மயில் மேல் அமர்ந்த முருகர் தெரிந்தார். “முருகா! நீங்களா?!” “ஆமாம், நானேதான்,” என்று புன்முறுவல் செய்தார். “என்ன செய்துகொண்டிருக்கிறாய் எனத் தெரிகிறதா?” என்றார் சிறிது கோபம் கலந்த குரலில். “கோபம் வேண்டாம் முருகா, நான் சுடாத வீடியோகேஸட் தான் பார்க்கிறேன் முருகா.” “நான் என்ன கேட்கிறேன். நீ எதைப் பற்றிச் சொல்கிறாய்? அது என்ன சுடாத வீடியோகேஸ்ட் நான் கேள்விப்பட்டதில்லையே?” “என்ன முருகா இப்படிக் கேட்டுட்டீங்க? சுட்ட பழம், சுடாத பழம் தெரிந்த உங்களுக்குச் சுடாத வீடியோகேஸ்ட் பற்றித் தெரியாதுன்னு சொல்றது நம்புற மாதிரி இல்லையே! படம் வெளியிட்டவங்களே வெளியிட்ட வீடியோ, காசு கொடுத்து வாங்கிப் பார்க்கிறேன் முருகா” என்றேன் தொடர்ந்து. “அது சரி, எங்கே இந்தப் பக்கம், தமிழால் என்னோடு விளையாட விரும்பி வந்தீர்களா, முருகா?” “நினைப்புப் பிழைப்பைக் கெடுக்கும் என்பதைக் கேள்விப்பட்டதில்லையா நீ?” என்றார் சிறிது கடுப்பு நிறைந்த குரலில். “துன்பத்தில் இருக்கும் பக்தர்களைக் காப்பது என் கடமையல்லவா?” “இங்கே யாரும் துன்பத்தில் இல்லையே முருகா” என்றேன் குழப்பத்துடன். “அதை நீ சொல்லக் கூடாது.” “முருகா, உங்களை நான் சொற்றமிழால் வரிசைப்படுத்திப் பாடவா?” “வேண்டாம் விட்டு விடு” “நான் நல்லாவே பாடுவேன் முருகா” “அதை நீ சொல்லக் கூடாது.” “என்ன முருகா கீறல் விழுந்த இசைத்தட்டு போல “அதை நீ சொல்லக் கூடாது”ன்னு திருப்பித் திருப்பி அதையே சொல்றீங்க” என்று கண்டனம் தெரிவித்துவிட்டு முருகரின் அனுமதி இல்லாமலே, “முருகா என்றழைக்கவா? முத்துக்குமரா என்றழைக்கவா? கந்தா என்றழைக்கவா? கதிர்வேலா என்றழைக்கவா? எப்படி அழைப்பேன் உன்னை? எங்கே காண்பேன்?” என்று பாட ஆரம்பித்தேன். “சரி, கண்ணைப் பரிசோதனை செய்து ஒரு நல்ல கண்ணாடியாய் மாட்டிக்கொள், எதிரே வந்த பின்பும் எங்கே காண்பேன்? என்று கேட்கும் அளவிற்கு இருக்கிறது உன் பார்வை.” “மன்னிச்சுக்கோங்க முருகா, தப்பான சிச்சுவேஷன் பாட்டுப் பாடிட்டேன்” என்று சொல்லிவிட்டு அவசர அவசரமாக , “முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்…” என்று பாட ஆரம்பித்தேன். “தாயே பராசக்தி” என்றார் அதிர்ச்சி நிறைந்த குரலில் முருகர். அந்த அரைகுறை இருளிலும் அவர் முகத்தில் தோன்றிய அதிர்ச்சி எனக்குப் புரியவும் உடனே பாடுவதை நிறுத்தினேன். “ஏன் முருகா பராசக்தியைக் கூப்பிடறீங்க?” “அருணகிரிக்கு அடி எடுத்துக் கொடுத்தபொழுது இந்தக் கொடுமையை நான் எதிர்பார்க்காமல் விட்டுவிட்டேன்.” “என்ன கொடுமை? எது கொடுமை? எங்கே கொடுமை? அது சரி, நீங்கள் ஏன் உங்கள் அன்னையைக் கூப்பிட்டீர்கள் என்று இன்னும் சொல்லல முருகா.” “வள வளவென்று பேசிக்கொண்டே இருக்காதே. என் சிந்தனையைக் கலைக்கிறாய், உன் மனம் புண்படாமல் எப்படிப் புரிய வைப்பது என்ற யோசனையில் இருக்கிறேன்.” “ஓஹோ” “சரி, உனக்குப் பிடித்த பாடகர் என் பக்தன் டி.எம்.எஸ். பாடல் மூலமே புரிய வைக்கிறேன்.” “என் வீட்டுக்காரருக்கும் அவர் பாடல்கள் ரொம்பப் பிடிக்கும் முருகா, “உனக்கெனவா நான் பிறந்தேன் எனக்கெனவா நீ பிறந்தாய் கணக்கினிலே தவறு செய்த கடவுள் செய்த குற்றமடி” என்ற வரிகள் அவருக்கு மிகவும் பிடித்த வரிகள், எப்போ பார்த்தாலும் அதையே பாடிக்கிட்டிருப்பாரு.” “குறுக்கே குறுக்கே பேசாதே. உன்னால் எனக்குக் கணக்குத் தெரியவில்லை என்ற பழிவேறு. என் பக்தன், உன் கணவர் அந்த வரிகளைப் பாடுவதன் காரணத்தை என்றாவது யோசித்தாயா?” “அவருக்கு டி.எம்.எஸ். பாட்டுன்னா ரொம்பப் பிடிக்கும் அதனாலதான்.” “இதுதான் நீ புரிந்து கொண்டதா? டி.எம்.எஸ். பாடல்கள் எத்தனை இருக்கிறது. இதை மட்டும் பாடிக்கொண்டிருப்பதன் காரணம் என்ன? நாளையில் இருந்து தினமும் வெண்டைக்காய் சாப்பிடு.” “சாப்பாட்டுக்கு முன்பா? இல்லை சாப்பிட்ட பிறகா? தினமும் வெண்டைக்காய் சாப்பிட்டால் அவர் அந்த வரிகள் பாடுவதன் காரணம் புரிந்துவிடுமா?” “நீ வெண்டைக்காயையே முழு உணவாகச் சாப்பிட்டாலும் பலன் இருக்கப் போவதிலை என்று தெளிவாகத் தெரிகிறது. அது இருக்கட்டும், என் அன்னையை அழைத்த காரணம் சொல்கிறேன்.” “காஞ்சிப்போன பூமி எல்லாம் வற்றாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும் அந்த நதியே காஞ்சிப் போயிட்டா? துன்பப் படறவங்க அந்தக் கவலையை தெய்வத்துகிட்ட சொல்லி முறையிடுவாங்க. ஆனா, தெய்வமே கலங்கி நின்னா? அந்தத் தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?” என்ற பாடல் நினைவிற்கு வருகிறதா?” “ஆமாம், ஆமாம் முருகா! “சோதனை மேல் சோதனை போதுமடா சாமி” என்ற பாடலின் இடையில் வரும் வசனம் அது, இதுவும் என் வீட்டுக்காரருக்கு மிகவும் பிடித்து அடிக்கடிப் பாடும் டி.எம்.எஸ். பாடலின் வரிகள்தான்.” “இவ்வளவு நடக்கிறது. இதற்கு மேலும் இங்கு யாரும் துன்பத்தில் இல்லை என்கிறாய் நீ. கிடக்கிறது விடு, எனக்குத் துன்பம் நேரும்பொழுது என் தாயை நான் அழைப்பதன் காரணம் அதுதான்.” “சாமி உங்களுக்கே ஒரு கஷ்டம்னா உங்க அம்மாவைக் கூப்பிடுறதா சொல்றீங்கன்னு புரியது. ஆனா ஒண்ணு புரியல்லே.” “எது? என் அன்னையை நான் அழைக்க வேண்டிய அளவிற்கு ஏற்பட்ட துன்பம் என்னவென்றா???!!” “அட அது இல்ல முருகா, காஞ்சிப்போன பூமி எல்லாம் அப்படின்னு ஆரம்பிச்சு ஏன் விடு விடுன்னு வேகமா வசனத்தச் சொல்லி முடிச்சீங்க?” “காஞ்சிப்போன பூமி எல்லாம் வற்றாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும் அந்த நதியே காஞ்சிப் போயிட்டா? துன்பப் படறவங்க அந்தக் கவலையை தெய்வத்துகிட்ட சொல்லி முறையிடுவாங்க.” இந்தவரிகளச் சொல்றப்ப கொஞ்சம் சோகமாச் சொல்லணும். “ஆனா, “தெய்வமே கலங்கி நின்னா?” அப்படின்னு சொல்லி ஒரு சின்ன இடைவெளி கொடுக்கணும்.அப்புறம் “அந்தத் தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?” அப்படின்னு சொல்றப்பக் கொஞ்சம் குரல் தழதழக்கச் சொல்லணும்” எங்கே இன்னொருதரம் முயற்சி பண்ணுங்க சரியா வருதான்னு பார்ப்போம்.” “தாயே பராசக்தி” என்றார் மீண்டும் முருகர் அதிர்ச்சி நிறைந்த குரலில், இம்முறை முருகரின் மயில் என்னை முறைத்துப் பார்த்து, எனக்குத் தெரியாத மொழியில் கோபத்துடன் ஏதோ அகவி விட்டு, முருகரின் கட்டளைக்குக் காத்திராமல் அவருடன் பறந்துவிட்டது. “முருகா, முருகா நில்லுங்க முருகா, நான் இன்னமும் பாட்டப் பாடி முடிக்கலையே, முருகா, முருகா” என்று கூவினேன். என் கணவர் என்னை உலுக்கினார். “இப்ப என்ன ஆச்சு, நீயும் என்னைப்போல முருக பக்தையா ராவோட ராவா மாறிட்டியா? ஏன் முருகா, முருகான்னு கத்தற” என்றார். அப்பொழுதுதான் படம் பார்த்துக்கொண்டே தூங்கிவிட்டதும், கனவில் முருகர் வந்து பேசிக்கொண்டிருக்கும்பொழுதே இடையில் பறந்து போய்விட்டதும் புரிந்தது. அதை அவரிடம் சொன்னேன். “அவரு கொடுத்து வச்சவரு, தப்பிச்சுட்டாரு நம்மால நினைச்சாலும் முடியுதா சொல்லு? இன்னைக்குத் தூக்கம் அவ்வளவுதான்!” என்று புலம்பியவாறு குளியலறையை நோக்கி நடையைக் கட்டினார் அவர். ••••••• 13. உண்மைக் காதல் “வேணாம், வேணாம்… சிலிண்டரத் தூக்காத ஆனந்தி. நான் ஸ்டவ்வ எடுத்துக்கிட்டு முன்னாலப் போறேன். நீ பின்னாடியே உருட்டிகிட்டே வா…. என்ன? நேத்துதான் புதுக் கேஸ் சிலிண்டர் போட்டேன் கனமா இருக்கும், பார்த்து உருட்டு”, என்றால் அகிலா. “சரிங்கம்மா” என்று எரிவாயு சிலிண்டரை உருட்டியவாறு அடுப்பை எடுத்து முன் செல்லும் அகிலாவைத் தொடர்ந்தாள் ஆனந்தி. வயது ஐம்பதைத் தாண்டிய அவளால் முடியவில்லை என்பது அவள் படும் சிரமத்தில் இருந்து புரிந்தது அகிலாவிற்கு. வேலையை மாற்றிக்கொள்ளலாம் என நினைத்து அடுப்பைக் கீழே வைக்கப் போனவளுக்கு மகனை உதவிக்குக் கூப்பிடலாமே எனத் தோன்றியது. “கொஞ்சம் பொறு ஆனந்தி” என்று சொல்லிவிட்டு, “அசோக், இங்க கொஞ்சம் வாயேன்” என்று கூவினாள். “என்னம்மா? இதோ இந்த வீட்டுப்பாடம் முடிசிட்டேன்னா நான் விளையாடப் போகலாமில்ல”, என்று அவன் சலித்துக் கொள்ளும் குரல் கேட்டது. “கொஞ்சம் வாடா ராஜா, உடனே போய்டுவியாம், வந்து ஆனந்திக்கு உதவி பண்ணு” என்றாள். “தொம் தொம்” என்று சத்தமாக அடி எடுத்து வைத்து, முணுமுணுத்தவாறு வந்ததில் அசோக்கின் கோபமும் எரிச்சலும் தெரிந்தது. “அசோக், நீ சிலிண்டர் அடியப் புடி, ஆனந்தி நீ மேல் வலயத்தப் புடிச்சிக்கோ, பார்த்துக் கால்ல போட்டுக்காத” என்று அடுக்கடுக்காக ஆனந்தி போட்ட கட்டளைகளுக்கேற்றவாறு செயல்பட்டு அகிலா, ஆனந்தி, அசோக் மூவரும் கேஸ் அடுப்பை ஊர்வலமாகச் சாப்பாட்டு அறைக்குக் கொண்டு வந்து தரையில் வைத்தார்கள். அசோக் மீண்டும் ஓடிப் போய் வீட்டுப் பாடத்தைத் தொடர்ந்தான். சாப்பாட்டு அறை மேஜை மேல் புத்தகங்களையும், நோட்டுக்களையும் கடை பரப்பியிருந்தான் அவன். அவனது தங்கை, அவனுக்கும் இளையவளான பப்பி என அழைக்கப்படும் பத்மினி மேஜை மேலேயே ஏறி உட்கார்ந்து கொண்டு அவளும் வீட்டுப் பாடம் செய்து கொண்டிருந்தாள். அடுத்தச் சில நாட்களில் வரும் தீபாவளிக்காக முறுக்கு சுடும் படலம் தொடங்கியிருந்தது. ஆனந்தி உதவிக்கு வந்திருந்தாள். அவள்தான் முதலில் அகிலாவின் வீட்டில் வேலை செய்தாள். பிறகு தனது மகள் சுகந்தி பள்ளிப் படிப்பை முடித்ததும் அவளைத் துணைக்கு அழைத்து வந்து, பழக்கிவிட்ட பின்னர் அவள் வேறு இடத்திற்கு வேலைக்குச் சேர்ந்துவிட்டாள். ஆனந்தி கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவள். அவளுக்கும் அவள் கணவருக்கும் வசந்தி, சுகந்தி, ஜெயந்தி என மூன்று பெண்கள்தான். அம்மாவும் பெண்களும் அவர்களது பெயர்கள், பூ பொட்டு, உடை உடுத்துவது என எதிலும் வேறுபாடு காட்டாததால் முதலில் பார்ப்போருக்கு அவர்களைக் கிறிஸ்துவர்கள் எனப் புரிந்துகொள்ள முடியாது. அந்த ஊருக்கு மாற்றலாகி வந்தவுடன் அகிலா வேலைக்கு ஆள் தேடிய பொழுது, குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ரிக்க்ஷாக்காரர் அழைத்து வந்தவள் ஆனந்தி. வேலை, சம்பளம் எல்லாம் பேசி முடிக்கும் பொழுது, ஞாயிறு காலை மட்டும் சர்ச்சுக்குப் போவதால் பத்து மணி போலத்தான் வேலைக்குத் தாமதமாக வரமுடியும் என்று ஆனந்தி சொன்ன பொழுதுதான் அவள் கிறிஸ்டியன் என அகிலாவிற்குத் தெரிந்தது. அவளும் ஞாயிறு அன்று தாமதமாக எழுபவள் என்பதால் அதைப் பொருட்படுத்தியதில்லை. ஆனந்தியின் பெண்கள் அனைவருமே படிப்பில் கெட்டிக்காரிகள். பெரியவள் வசந்தி பட்டம் வாங்கிய பின்பு ஆசிரியை வேலைக்குப் பயிற்சிக்குச் சென்றாள். அங்கு உடன் பயிற்சிக்கு வந்த ஒருவனுடன் காதல் ஏற்பட்டு அவனைத்தான் மணப்பேன் என்று ஒற்றைக்காலில் நின்றாள். ஆனந்திக்கு ஏனோ அந்தப் பையனின் மூஞ்சும், முழியும் கொஞ்சமும் பிடிக்கவில்லை. வேண்டாம் என்று சொன்னாள். ஆனால், வசந்தி அவனது குழந்தைக்குத் தான் தாயாகப் போவதால் உடனே திருமணம் நடத்த வேண்டும் என்றவுடன் அரண்டு போனவளாகக் கன்னா பின்னா என்று மகளைத் திட்டிவிட்டு “எப்படியோ நாசமாப் போ, ஒழி” என்று ஆசீர்வாதம் செய்து ஒத்துக் கொண்டாள். திருமணமாகிச் சில நாட்கள் ஆனதும்தான் தெரிந்தது தனது பெற்றோர்களை ஒத்துக்கொள்ள வைப்பதற்கு வசந்தி அவ்வாறு பொய் சொல்லித் தன் காரியத்தைச் சாதித்துக் கொண்டது. அடுத்தவள் சுகந்தி, இவள் ஒரு செவிட்டூமை. ஆனந்தியின் சோகமே இவள்தான். சிறு வயதில் துறு துறுவென்று ஓடி விளையாடியவளுக்கு ஏதோ காய்ச்சல் வந்து ஒரு வாரம் படுக்கையில் கிடந்து எழுந்த பின்னர், காது கேட்பதும், வாய் பேசமுடிவதும் இயலாது போய்விட்டதாக ஆனந்தி புலம்புவாள். ஆனாலும் அவளும் பள்ளி இறுதி வரை படித்து வந்து விட்டாள். சுகந்தி அந்த ஊனங்களையும் கடந்த மிக மிகப் புத்திசாலி என்பது அவளுடன் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும். அதனால் தனக்குப் பதிலாக ஆனந்தி தனது மகள் சுகந்தியை வேலைக்கு விட்ட பொழுது அகிலா ஒன்றும் மறுப்புச் சொல்லவில்லை. தனது வீட்டைப் போன்ற ஒரு பாதுகாப்பான வீடு அந்தச் செவிட்டூமைப் பெண்ணுக்குக் கிடைக்காது என்பதால் ஏற்படும் இடையூறுகளைச் சமாளித்துக் கொள்ள முடிவு செய்திருந்தாள். சுகந்தியும் எந்த வேலையையும் நறுவிசாகச் செய்து விடுபவள். அதனால் அவளை வேலைக்கு வைத்திருப்பதில் பிரச்சனை வந்தது இல்லை. ஆனந்தியின் கடைசி மகள் ஜெயந்தி இப்பொழுதான் பிளஸ் டூ சேர்ந்திருக்கிறாள். அவளும் படிப்பில் சூட்டிகை. அகிலாவின் வீட்டில் சுகந்தியுடன் அதிகம் உரையாடுவது பப்பிதான். சிறுவயது பிள்ளைகளுக்கே உரிய பிறர் குறைகளைப் பொருட்படுத்தாதது, சலிக்காமல் பேசுவது போன்ற குணங்களினால் பப்பி சுகந்தியின் தோழியாகி விட்டாள். சுகந்தி ஏதாவது திரைப்படம் பார்த்துவிட்டு வந்தால் அந்தக் கதையைக் கூட அபிநயத்துடன், விசித்திரமான ஒலியுள்ள ஊமை மொழியில் பப்பிக்குச் சொல்லுவாள். பப்பியும் மேலும் சொல்லு, சொல்லு என்று சைகை செய்து உற்சாகப்படுத்துவாள். அவள் சொல்லும் கதையைக் கேட்டு விழுந்து விழுந்தும் சிரிப்பாள். ஆனால் சுற்றி உள்ளவர்களுக்குத்தான் அவர்களது உரையாடல் ஒன்றுமே புரியாது. அகிலா ஓரளவிற்கு மேலே அவளால் சைகையால் விளக்க முடியாமல் போனால், பேசாமல் சுகந்தியிடம் எழுதிக் காண்பித்துவிடுவாள். நேற்று பப்பியின் துணை கொண்டு சுகந்தியிடம் பேசி, முறுக்குச் சுற்ற உதவியாக ஆனந்தியை இன்று வரவழைத்திருக்கிறாள். சமையலறையில் இடம் போதாமல், இது போலச் சாப்பாட்டு அறைக்கு அனைத்தையும் எடுத்து வந்து பலகாரம் செய்வது அகிலாவின் வழக்கம். அடுப்புக்கு எதிர் எதிராக இரண்டு பலவாக்கட்டைகள் போடப்பட்டு, இருப்புச்சட்டி, ஜல்லிக்கரண்டி, முறுக்குக்கம்பி, முறுக்கு அச்சு, எண்ணையை உறிஞ்ச பழைய செய்தித்தாள் பரப்பிய பெரிய தாம்பாளம், பெரிய பித்தளைச் செம்படங்கள், எண்ணெய்த் தூக்கு, பிசைந்த மாவு உள்ள பாத்திரம் இவைகளும் கொண்டு வந்து வைக்கப்பட்டன. அகிலாவும் ஆனந்தியும் எதிர் எதிராக உட்கார்ந்து கொண்டார்கள். இருப்புச்சட்டிக்குப் பின் அமர்ந்து ஜல்லிக் கரண்டியின் மேல் அச்சால் பிழிந்து முறுக்குச் சுற்றி எண்ணெயில் போட வேண்டியது ஆனந்தியின் வேலை, அடுப்பின் முன்இருந்து சுட்ட முறுக்கைக் கம்பியால் எண்ணெயில் இருந்து எடுத்து, தாம்பாளத்தில் எண்ணெயை வடியவிட்ட பின்பு, செம்படத்தில் அடுக்க வேண்டியது அகிலாவின் பொறுப்பு. இருவரும் ஊர்க்கதைகளைப் பேசியபடி முறுக்குச் சுட்டுக் கொண்டிருந்தார்கள். அசோக் வீட்டுப்பாடத்தை முடித்துவிட்டுத் தெருவில் மற்றப் பசங்களுடன் கிரிக்கெட் விளையாட ஓடிவிட்டான். பப்பி இன்னமும் வீட்டுப்பாடத்தை முடித்தபாடில்லை. சுகந்தி வீடு கூட்ட விளக்குமாறுடன் வந்து முன்னறையில் இருந்து கூட்டத் துவங்கினாள். ஆனந்தியுடன் பேசிக்கொண்டிருந்த அகிலாவை இடைமறித்துக் கணக்குப் பாடத்தில் உதவச் சொன்னாள் பப்பி. “அம்மா வேலையா இருக்கேன் பப்பிம்மா, அசோக் வந்ததும் கேளு, சொல்லிக் கொடுப்பான்” “நீங்க எங்கவேலையா இருக்கீங்க? பேசிக்கிட்டுத்தானே இருக்கீங்க? சுகந்தி அம்மாவப் பார்த்துக்கச் சொல்லிட்டு இங்க வந்து எனக்குச் சொல்லிக் கொடுங்க” “பப்பிம்மா, சொல்றதக் கேளுடா” என்று அகிலா சொல்லிக்கொண்டிருந்த பொழுது அசோக் தட தட வென உள்ளே ஓடிவந்தான். “அசோக், பப்பிக்குக் கொஞ்சம் கணக்குச் சொல்லிக் கொடுப்பா” என்றாள் அகிலா. வேகமாகத் தனது அறைக்கு ஓடி ஒரு பந்தை எடுத்து வந்த அசோக், “போங்கம்மா, இப்ப முடியாது. பந்து காணாப்போச்சுன்னு வேற பந்து எடுக்க வந்தேன், விளையாடி முடிச்சிட்டு வந்து சொல்லித்தரேன்” என்று சொல்லியவாறே பதிலுக்குக் காத்திராமல் ஓடி விட்டான். பப்பிக்குக் கோபம் வந்து தனது அருகில் இருந்த பென்சில் டப்பாவை எடுத்து அவன் போன திசையைப் பார்த்து விட்டெறிந்தாள். “வர வர இந்தப் பொண்ணு அதோட அப்பா கொடுக்கிற செல்லத்தில ஆட்டமா ஆடுது, அடி கொடுக்க வேண்டிய நேரம் வந்தாச்சு. என்ன பழக்கம் இது பத்மினி”, என்று சீறினாள் அகிலா. பப்பி “உர்” என்று முகத்தை வைத்துக் கொண்டாள். இதுவரை நடந்தது எதுவும் காதில் விழாததால் விச்சிராந்தியாகத் தரையைக் கூட்டிக் கொண்டிருந்த சுகந்தி, பென்சில் டப்பா அவள் முன் வந்து விழவும், துடைப்பத்தைக் கீழே போட்டுவிட்டு, டப்பாவில் இருந்து சிதறியவற்றை மீண்டும் பெட்டியில் போட்டுக் கொண்டு வந்து பப்பியிடம் கொடுத்தாள். பப்பியின் கோபத்திற்குச் சைகையால் காரணம் கேட்டாள். பப்பி வீட்டுப் பாடத்தைக் காட்டி விளக்கினாள். சுகந்தி பப்பியிடம் ஒரு தாளும் பென்சிலும் சைகையால் கேட்டாள். பப்பிக் கிழித்தது தெரியாது இருக்குமாறு, நோட்டுப் புத்தகத்தின் நடுப்பக்கத்தை ஒரு குயர் நோட்டில் இருந்து கிழித்துக் கொடுக்க, சுகந்தி அதில் எழுதிச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தாள். “எதுவானாலும் சுகந்திய நீ படிக்க வச்சிட்ட ஆனந்தி, இல்லாட்டி….” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தவாறே திரும்பிய அகிலா, ஆனந்தி கண்களில் வழிந்த கண்ணீரைப் புடவைத் தலைப்பால் துடைத்துக் கொள்வதைப் பார்த்ததும் நிறுத்தினாள். “என்னாம்மா செய்யிறது. ரொம்பப் புத்திசாலிப் பொண்ணும்மா. மேலே படிக்க வச்சாலும் நல்லாப் படிக்கும். இந்தக் குறை இல்லாட்டி டியூஷன் வேலையப் பாத்தே பொழச்சிக்கும். படிச்சிருந்தும் இப்பப் படிக்காத என்ன மாதிரி வீட்டு வேலைய செய்யுது. எங்களுக்கு அப்புறம் இதுக்கு யார் துணை? நினச்சாலே அடிவயிறு கலங்குது. இந்தக் குறையோட இதுக்கு ஒரு கல்யாணம் காட்சின்னு நெனச்சிக் கூடப் பாக்க முடியுமா? இது சபிக்கப்பட்ட பொண்ணும்மா” என்ற ஆனந்தியின் குரல் தழுதழுத்திருந்தது. ✮✮✮✮✮ ஆனால் யாரும் எதிர்பாராததும் நடந்தது. அது காலத்தின் கோலம். ஒருநாள் பப்பியும் சுகந்தியும் பேசிக் கொண்டிருந்தார்கள். பப்பி உற்சாகத்தில் கூச்சலிட்டாள். “அம்மா, அம்மா சுகந்திக்குக் கல்யாணமாம்!” “நல்லாக் கேளு, அவளுக்குக் கல்யாணமா? இல்லை ஏதாவது கல்யாணத்திற்குப் போக லீவு வேணும்கிறாளா?” “இல்லம்மா, சுகந்திக்குத்தான் கல்யாணமாம்” “என்னது? உண்மையாவா!” என்று கேட்டவாறு வந்த அகிலா “உன் மாப்பிள்ளையின் பேர் என்ன?” என்று கழுத்தில் தாலி கட்டுவது போலச் சைகை செய்து கேட்டாள். சுகந்தி ஒரு தாளில் எழுதினாள், “சண்முக சுந்தரம்.” “இது என்ன இந்துப் பெயரா இருக்கு? பப்பிம்மா இந்தச் சுகந்தி ஏதோ உளறுதுன்னு நினைக்கிறேன். அவங்க அம்மாவச் சாயங்காலம் அழச்சிட்டு வரச் சொல்லு நான் பேசிக்கிறேன்.” ✮✮✮✮✮ சாயங்காலம் வந்த ஆனந்தியின் வாயெல்லாம் பல். “கடவுளுக்குச் சோஸ்திரம் அம்மா, இந்தப் பொண்ணு அதிர்ஷ்டக்காரிதான் போல. இவளையும் கட்டிக்கிடணும்னு ஒருத்தன் துடியாத் துடிக்கிறான், என்னால நம்பவே முடியல்ல” “விவரமாச் சொல்லு, மாப்பிள்ளை பேரு சண்முக சுந்தரம்னு சொல்லிச்சு, என்ன நடக்குது. ஏதாவது கிழவனா? ரெண்டாம் தாரமா கட்டிக் குடுக்கிறியா?” “இல்லம்மா, பையன் சின்ன வயசுதான். ஹைஸ்கூல் முடிச்சிருக்காப்ல, ஏதோ ஏஜென்சில வேலையாம். அநாதைப் பையன். சொந்த பந்தம் இல்லையாம். தனக்குன்னு ஒரு குடும்பம் வேணும்மின்னு வீட்டோட மாப்பிள்ளையா இருக்கவும் விருப்பமாம்.” “எங்க புடிச்ச இந்த மாப்பிள்ளைய?” “அட நீங்க வேறம்மா, நான் எங்கன புடிச்சேன்? காதல் கல்யாணம் அம்மா” “இரு, இரு என்ன சொல்ற நீ? சுகந்தி காதலிச்சுதா? என்னென்னு பேசி அந்த ஆளுக்கு இது மனசப் புரிய வச்சிது? பதினைஞ்சு வருஷமாவுது கல்யாணமாகி, இன்னமும் பப்பி அப்பாவுக்கு நான் சொல்றது எதுவும் புரியற மாதிரித் தெரியல்லியே? நம்பவே முடியல்ல ஆனந்தி” “ஆமாம்மா, எங்களாலேயும் நம்ப முடியல்ல, ஒரு நாள் தெருவில அந்தப் பையன் சைக்கிள ஒரு கையில் புடிச்சிகிட்டு சுகந்தி கூடப் பேசினதைப் பார்த்தேன். இதுவும் கையைக் கையை ஆட்டி ஏதோ சொல்லிச்சு. யாரோ ஏதோ அட்ரெஸ் கேக்கிறாங்களோ? பேச முடியாத இவளப் போய்க் கேக்கிறாங்களே? கேலி செய்யறாங்களான்னு நெனச்சி எனக்குக் கோவம் கூட வந்திச்சு. அப்புறம் அந்தப் பையனே வீட்டுக்கு வந்து விவரமாப் பேசிக் கல்யாணம் செய்து தரச் சொல்லிச்சு அம்மா” “ஆமா, எப்ப கல்யாணம்? எதுக்கும் கவனமாப் பையனப் பத்தி நிறைய விசாரிச்சிடு ஆனந்தி, நாளை தள்ளிப் போடாத பொறாமையில அடுத்தவங்க அந்தப் பையன் மனச மாத்துறதுக்கு முன்னால கல்யாணத்தச் சுருக்க முடிச்சிடு” “சரிங்கம்மா” அடுத்தச் சில நாட்களில் பப்பியின் விருப்பப்படி, வெள்ளைப் பட்டில் சிவப்பு சரிகைக்கரை போட்ட கல்யாணப் புடவையைப் பரிசாகச் சுகந்திக்கு வாங்கிக் கொடுத்து, சர்ச்சில் கல்யாணத்திற்கும் சென்று வந்தார்கள். சண்முக சுந்தரம் மதம் மாறி, அருள் பிரகாசம் என்ற புதுப் பெயருடன் சுகந்தியை மணந்து கொண்டான். பார்க்க வாட்ட சாட்டமாக, களையாக இருந்தான். நல்ல சம்பளத்துடன் வேலை பார்க்கும், நல்ல களையுடன் இருக்கும் ஒருவன், சல்லிக்காசு வாங்காமல், அவளுக்காக மதம் மாறி, செவிட்டூமையான சுகந்தியைக் கைப்பிடித்ததுடன், காதல் மனைவியின் வீட்டிலேயே மகன் இல்லாத குறை நீங்க வீட்டோடு மருமகனாக இருக்கச் சம்மதித்தான் என்ற செய்தியே அனைவருக்கும் வியப்பாக இருந்தது. சிலர் உண்மைக்காதல் இதுவல்லவா என்றார்கள். சிலர் இவன் சரியான கிறுக்கன் போலிருக்கிறது என்றார்கள். ஆனால் அனைவரும் வியந்து பாராட்டியது இப்படி ஒரு மாப்பிள்ளையைப் பிடித்த சுகந்தியையும், அவளது அதிர்ஷ்டத்தையும்தான். போதாக்குறைக்கு அவள் கர்ப்பமானவுடன், வேலை செய்தது போதும் எனச் சொல்லி அவளை வேலையில் இருந்து நிறுத்திவிட்டு, ஒரு தையல் கடையும் ஆரம்பித்துக் கொடுத்தான். ஆனந்தி புது ஆளை அகிலாவின் வீட்டுவேலைக்குப் பேசிச் சேர்த்து விட்டாள். ✮✮✮✮✮ ஒரு நாள் அகிலா வாசலில் பூ வாங்கிக் கொண்டிருந்தாள். “சவுக்கியமா இருக்கீங்களா அம்மா?” என்ற குரல் கேட்டுத் திரும்பினாள். ஆனந்தி நின்று கொண்டிருந்தாள். “அடடே! ஆனந்தியா? வா… வா… வா…. பூக்காரரே இன்னும் ரெண்டு முழம் மல்லிப்பூ கொடுங்க” என்று வாங்கி அதை ஆனந்தியின் கையில் கொடுத்து, “சுகந்திட்ட நான் கொடுத்தேன்னு சொல்லிக் கொடு, உன் மாப்பிளை எப்படி இருக்கார்? சுகந்திக்கு எப்போ பிரசவம்? நீ எப்படி இருக்க? நீ வீட்டு வேலைய நிறுத்திட்டு ஸ்கூல் புள்ளைங்களுக்குச் சாப்பாடு கொண்டு போற பிசினஸ் பண்றதா இப்போ இங்க வீட்டில வேலை பாக்கிற அம்மா சொன்னிச்சு, எப்படி இருக்கு பிசினெஸ்?” “ஆமாம் அம்மா, அதுக்குதான் நானும் வந்தேன், நம்ம பப்பிம்மாவுக்கும், அசோக்குக்கும் நானு சாப்பாடு கொண்டு போய்க் குடுக்கட்டுங்களா?” “நல்ல யோசனைதான், நாளைக்கு வாயேன், புள்ளைங்களையும் அவரையும் கேட்டுட்டு சொல்றேன். உன் கடைசிப் பொண்ணு ஜெயந்தி எப்படி இருக்கு? எப்படிப் படிக்குது? அதுக்கும் நீதான் சாப்பாடு கொண்டு போறியா?” “இல்லம்மா, ஜெயந்தி ஊரில இல்ல, நாகர்கோயில்ல என் அக்கா வீட்டில தங்கிப் படிக்குது?” “ஏன்? என்னாச்சு? எதுக்கு அங்க விட்டு வச்சிருக்க?” “மாப்பிள்ளை, அந்த நாசமாப் போற சுகந்தி புருஷன், ஜெயந்தியையும் எனக்கே கட்டி வைங்க, உங்க செவிட்டூமைப் பொண்ணுக்கு வாழ்வு கொடுத்திருக்கேன்ல? உங்க சின்னப் பொண்ணையும் எனக்குக் கட்டி வச்சா என்ன கேடு? அப்படின்னு தெனம் தெனமும் ஒரே ரப்ச்சரும்மா. வயசு வந்த பொண்ண அந்தப் படுபாவிக் கண்ணில இருந்து காப்பாத்துரத்துக்கோசரம் ஊர்ல அவ பெரியம்மாவுக்கு ஒடம்பு சரியில்ல, போய் ஒத்தாசை செய்யப் போறான்னு சொல்லி அனுப்பி வச்சிட்டேன்.” ••••••• 14. மை லிட்டில் ரெட் வேகன் மாற்றுடைகளைத் தோளில் போட்டுக்கொண்டு துவாலையும் கையுமாகக் குளிக்கக் கிளம்பிக் கொண்டிருந்தார் பானுமதி. அவரது கணவர் சுந்தர் ‘ஜெயா பிளஸ்’ செய்தி பார்த்துக் கொண்டிருந்தார். செய்திகள் வாசிப்பவர், கட்சியின் இளைஞர் பாசறையைச் சேர்ந்த ஒருவர் சாலை விபத்தில் இறந்ததாகவும், முதலமைச்சர் அவர் குடும்பத்திற்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டதுடன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உதவித் தொகை வழங்கியதாகவும், கட்சி அன்பர்கள் பயணம் செய்யும்பொழுது இனிமேல் மிகவும் கவனத்துடன் இருக்குமாறு முதலமைச்சர் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டதாகவும் அறிவித்துக் கொண்டிருந்தார். பேரன் ரவி ஹைசேரில் உட்கார்ந்து அதன் ட்ரேயில் பரப்பியிருந்த ஹனி நட் சீரியோஸ்ஸை சாப்பிட்டுக் கொண்டிருந்தான். மருமகள் கீதா மாடிப்படிக்கு அடியில் உள்ள க்லோசெட்டில் இருந்து சில அட்டைப் பெட்டிகளை வெளியில் எடுத்து அவற்றில் உள்ளவற்றைப் பரிசோதித்துக் கொண்டிருந்தாள். “இப்போ எதுக்கு இதக் கடை வைக்கிற கீதா?” என்று அவற்றை அருகில் வந்து பார்வையிட்ட வண்ணம் கேட்டார் பானுமதி. “ரெண்டு நாள் முன்னால கேன்சர் ரிசெர்ச் செய்யிற நிறுவன ஆளுங்க வந்து பழசை நன்கொடையாக் கேட்டு வாசல்கதவில ஒரு பெரிய பிளாஸ்டிக் பை வச்சாங்க அத்தை. இன்னைக்கு அவங்க வண்டில வந்து கொடுக்கிறத சேகரிச்சிட்டுப் போவாங்க. நமக்குத் தேவையில்லாத பொருளையெல்லாம் நடைபாதையில் மூட்டை கட்டிப் போட்டால் எடுத்திட்டுப் போவாங்க.” “நல்ல காரியம்தான், நமக்கு உபயோகப்படாதது யாருக்காவது உபயோகமா இருந்தாச் சரி, இவ்ளோ பெரிய பணக்கார நாடான அமெரிக்காவில ஆராய்ச்சி செய்ய அரசாங்கமே பணம் கொடுக்காதா? இப்படிப் பழசு பண்டத்த சேகரிச்சு வித்து, காசாக்கி ஆராய்ச்சி செய்யிற அளவுக்கு மோசமான நிலைமையா?” என்று சொல்லிக் குளியலறைக் கதவைச் சார்த்திக் கொண்டார் பானுமதி. “பிளேன தூக்கிட்டுப் போய் அடுத்த நாட்டோட சண்டைக்குப் போகச் சொல்லு, உடனே செய்வாங்க, அதுக்கு மட்டியும் பணம் எங்கிருந்துதான் வருதோ?” என்றார் எரிச்சல் மிகுந்த குரலில் சுந்தர். அதைக் கேட்டுச் சிரித்தவண்ணம், அளவில் சிறியதாகிப் போன மகன், மகளின் உடைகளையும், காலணிகளையும், பொம்மைகளையும் எடுத்து, அவற்றில் சேதம் ஆகாமலும் மிகவும் பழையதாகத் தோற்றமளிக்காதவற்றையும் தேர்ந்தெடுத்து அட்டைப் பெட்டிகளில் நிரப்பிக் கொண்டிருந்தாள் கீதா. கார் காரேஜின் கதவைத் திறந்து, அதன் வழியாக அப்பெட்டிகளைக் கொண்டு சென்று வீட்டின் முன் உள்ள நடைபாதையில் வைத்தாள். நன்கொடை கேட்ட நிறுவனம் விட்டுச் சென்ற பிங் கலர் பையையும் அதன் மேல் அடையாளத்திற்காகக் கட்டி வைத்தாள். குளித்த பின்பு ஈரத் தலையைத் துவட்டியவாறு வாசலுக்கு வந்த பானுமதி “பொம்மையெல்லாம் கூடவா எடுத்துப்பாங்க?” என்றார். “ஓ, எடுத்துப்பாங்களே” “அப்ப இதையும் அதோடபோட்டுடு” என்று கீதாவின் பதிலுக்குக் காத்திராமல், கார் காரேஜில் கிடந்த அவளது பேத்தி ராதிகாவின் ரெட்வேகனைத் தரதரவென இழுத்துச் சென்று நடை பாதையில் மற்றப் பெட்டிகளுக்கருகில் விட்டு விட்டு வந்தார். குழந்தை ரவியைத் தோளில் தூக்கிக் கொண்டு வெளியில் வந்த சுந்தர், கீதாவின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியைப் பார்த்து, “பானு என்ன இது? ராதிகா அழாதா? திருப்பி எடுத்திட்டு வா” என்றார். இதற்குள் தன்னைச் சமாளித்துக் கொண்ட கீதா, “பரவாயில்லை மாமா, அவளும் கொஞ்சம் பெரிய பொண்ணா வளந்திட்டால்ல, காணாமப் போனாக் கொஞ்சம் தேடுவா, அழுவா, அப்புறம் மறந்திடுவா. அப்படியே அழுது அடம் பிடிச்சாலும், அது பழசாயிடுச்சி கிறிஸ்துமஸ் கிஃப்ட்டா வேற வாங்கிக்கலான்னு சொல்லிடலாம்” என்றாள். ✮✮✮✮✮ பானுமதியும் சுந்தரும் கோடையில் அமெரிக்காவின் தட்பவெப்பம் நன்றாக இருக்கும் காலமாகப் பார்த்து மகன் பரணியுடன் அமெரிக்காவில் தங்க வந்திருந்தார்கள். இதோ இன்று நவம்பர் முதல் தேதி, செப்டெம்பரில் துவங்கிய குளிர் வர வர அதிகமாகிக் கொண்டிருந்தது. அடுத்த வாரம் கிளம்பி விடுவார்கள். தீபாவளிக்கு இந்தியாவில் இருப்பார்கள். பேரன் பேத்திகளுடன் விளையாடியதில் நாட்கள் ஓடியதே தெரியவில்லை. பானுமதிக்கு உலக மகா எரிச்சல் தருவது பேத்தியின் அந்த ரெட்வேகன் பொம்மைதான். இதெல்லாம் என்ன பொம்மைன்னு நீ வாங்கிக் கொடுத்தே என்று மகனிடம் முடைவார். ராதிகாவிற்கு மிகவும் விருப்பமான பொம்மை அவளது அந்தச் சிவப்பு நிற சக்கரங்கள் கொண்ட , நீண்ட கைப்பிடியுடன் இருக்கும் ரெட் வேகன்தான். வீட்டிற்குள் அவளது பொம்மைகளை வேகனில் நிரப்பி வைத்திருப்பாள். வெளியில் அடுத்த வீட்டுப் பிள்ளைகளுடன் விளையாடப் போனால் அதில் அவளது “டெட்டி” கரடிப் பொம்மையையும், “டாமி” பூனைப் பொம்மையையும், “மிக்கி மவுஸ்” பொம்மையையும், “ஸ்னூப்பி” நாய் பொம்மையையும் வைத்துச் சவாரி அழைத்துப் போவாள். கடற்கரைக்கு விளையாடப் போனாலும் மணல் வீடு கட்டும் பிளாஸ்டிக் உபகரணங்கள் அதில் வைத்துத்தான் இழுக்கப்பட்டு வரும். தபால் பெட்டியில் இருந்து தபால்களைச் சேகரித்து வேகனில் வைத்துத்தான் இழுத்து வருவாள். கடைக்குப் போய் வந்தால், கார் ட்ரங்க்கில் இருந்து சாமான்கள் நிரம்பிய பைகளை அதில் வைத்து இழுத்து வந்து அப்பாவிற்கு உதவி செய்வாள். ஒரு நாள் தம்பி ரவியை வேகனில் வைத்து வீட்டிற்குள் அங்கும் இங்கும் இழுத்து அவள் விளையாடிய பொழுதுதான் எரிச்சல் தாளாமல், கோபம் தலைக்கேறி பானு அவளை அடிக்கவே போய்விட்டார். பிறகு இந்த நாட்டில் இதெல்லாம் செய்தால் கம்பியை எண்ண வேண்டும், வந்த இடத்தில் ஏன் பொல்லாப்பு என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். “நம்ம ஊர்ல முடமானவங்களத்தான் இந்த மாதிரி வச்சு இழுத்துக்கிட்டுப் போய்ப் பிச்சை கேக்கிறதப் பார்த்திருக்கேன். பார்க்கவே சகிக்கல, முதல்ல புள்ளைய வண்டில இருந்து தூக்கு” என்று கீதாவிடம் சீறி விழுந்தார். நேற்று அக்டோபர் 31 என்று “ஹாலோவின்” (Haloween) கொண்டாடினார்கள் அந்தப் பகுதியில் வாழ்ந்தவர்கள். இருட்டிய பிறகு ராதிகாவும் கோமாளி போல உடை உடுத்திக் கொண்டு, கையில் ஆரஞ்சு வண்ணப் பிளாஸ்டிக்கில் கோர முக வடிவம் வரைந்த பூசணிக்காய் பாத்திரத்தைத் தூக்கிக் கொண்டு கிளம்பினாள். பெரியவர்கள் யாராவது சிறுவர்களுடன் துணைக்குப் போகவேண்டும் என்பதால் பரணியும் கிளம்பினான். ஏற்கனவே பேத்தியின் கோமாளி உடையைப் பார்த்துப் பொருமிக் கொண்டிருந்தார் பானு. “நம்மூரில் நவராத்திரிக்கு என்ன அழகாகக் குழந்தைகளை அலங்கரிப்பார்கள், இங்கே பார்த்தால், கோமாளியாம், பேயாம், பிசாசாம், சூனியக்காரியாம் என்ன ஒரு அலங்காரம்? என்ன ஒரு கேவலமான ரசனை? ச்சே…” என்று திட்டிக் கொண்டிருந்தார். போதாக்குறைக்கு மகனும் உடன் கிளம்ப “நீ எங்கே கிளம்புற?” என்று விரட்டினார். “இல்லம்மா, வந்து. நான் துணைக்குப் போகணும்மா…” என்று வார்த்தைகளை மென்று முழுங்கினான் பரணி. “அப்பாவும் பொண்ணுமாச் சேர்ந்து வீடு வீடாய்ப் போய் மிட்டாய்ப் பிச்சை வாங்கப் போநீங்களா? நாடு விட்டு நாடு வந்து, அமெரிக்கா வந்து மிட்டாய்ப் பிச்சை எடுக்கணும்னு தலையெழுத்தா? சரி, சரி என்னவோ செய், நீயாச்சு, உன் பொண்ணாச்சு. ஆனா, இதையெல்லாம் பெருமைன்னு மட்டும் நினைச்சி படம் எடுத்து ஃபேஸ்புக்கிலப் போட்டு என் மானத்த வாங்காத?” என்று திட்டி அனுப்பினார். ராதிகா பூசணிக்காய்ப் பாத்திரத்தை வேகனில் வைத்து இழுத்துக் கொண்டு சென்றாள். இருக்கட்டும் இந்தப் பொம்மையை ஒழிச்சுக் கட்டிட்டுத்தான் மறுவேலை என்று மனத்திற்குள் கருவி கொண்டார். இப்பொழுது அதனைச் செயலிலும் காட்டி விட்டார். ✮✮✮✮✮ பானுமதியும் சுந்தரும் வீட்டைச் சுற்றி உள்ள பகுதிகளில் வழக்கம் போல வாக்கிங் சென்றுவரக் கிளம்பி விட்டார்கள். நேரம் காலைப் பத்து மணிபோல இருக்கும், அப்பொழுது தொலைபேசி வந்தது. கீதா எடுத்துப் பேசினாள் அழைப்பு ராதிகாவின் பள்ளியிலிருந்து. ராதிகா பள்ளியில் வாந்தி எடுத்ததால், பள்ளி நர்ஸ் அவளை உடனே வந்து அழைத்துப் போகச் சொன்னார். கீதா பதட்டத்துடன் பரணியின் கைபேசி எண்ணை அழைத்தாள், வழக்கம் போலப் பதில் இல்லை. உடனே கூப்பிடுங்கள் என்று செய்தி வைத்தாள். ரவிக்கு அவசர அவசரமாக டயாப்பர் மாற்றி காரின் பின்னிருக்கையில் குழந்தையின் கார் சீட்டில் பெல்ட் போட்டுக் கட்டி வைத்தாள். அவன் அழ ஆரம்பிக்கவும் அவனது பாசிஃபயரை மறந்து விட்டது நினைவு வந்தது: மீண்டும் உள்ளே ஓடினாள். ராதிகாவிற்கு ஏன் இப்படி உடம்பு சரியில்லாமல் போனது என்ற குழப்பத்தில் அவளால் சரிவரச் சிந்திக்க முடியவில்லை. அவசரத்திற்குத் தொடர்பு கொள்ள முடியாத பரணியின் மீதும் எரிச்சல் வந்தது. அவள் காரை ரிவர்ஸ் கியரில் போட்டுக் கேரேஜூக்கு வெளியில் கொண்டு வரும்பொழுது பானுவும் சுந்தரும் வீடு திரும்பிக்கொண்டிருப்பது தெரிந்தது. கீதாவும் குழந்தையும் வெளியில் கிளம்பத் தயாராக இருப்பதைப் பார்த்து அவர்கள் நடையை எட்டிப் போட்டுக் காரை அடைந்தார்கள். காரணம் தெரிந்தும், ஐயையோ, என்னாச்சு? நாங்களும் வருகிறோம் என்று காரில் ஏறிக் கொண்டார்கள். அந்நேரத்தில் பள்ளிக்கும் வேலைக்கும் செல்பவர்களின் கூட்டம் குறைந்து சாலைச் சிறிது அமைதியாக இருந்தது. “காலையில ராதிகா நல்லாத்தானே இருந்தது, பரணி ஸ்கூல்ல விடறப்போ எப்படி இருந்துச்சாம்?” “தெரியல அத்தை, அவரோட பேச முடியல, உடனே கூப்பிடச் சொல்லி மெசேஜ் வச்சிருக்கேன்.” “எல்லாம், ஹாலோவீன், ஹாலோவீன் அப்படின்னு ஆட்டம் போட்டு, கண்ட கண்ட மிட்டாயப் படுக்கப் போறதுக்கு முன்னால கணக்கு வழக்கில்லாம தின்ன வேண்டியது. அப்புறம் உடம்பக் கெடுத்துக்க வேண்டியது. சொன்னா யார் கேக்கிறாங்க, இன்னைக்குப் பரணி வீட்டுக்கு வரட்டும், அவன உண்டு இல்லன்னு ஆக்கிடுறேன்.” பானு சொல்வதிலும் உண்மை இருக்கலாம் என்பதால் சுந்தரும் கீதாவும் அமைதியாக இருந்தார்கள். அவர்கள் பள்ளிக்குச் சென்றபொழுது மணி பதினொன்றுதான் என்றாலும், காலை நேர பகுதி நேர அரைநாள் கிண்டர்கார்ட்டன் வகுப்புகள் முடியும் நேரம் என்பதால் பார்க்கிங் பகுதியில் கார்களுடன் பெற்றோர்கள் கூட்டம் நிரம்பி இருந்தது. இடம் தேடிக் காரை நிறுத்திவிட்டு, ரவியைக் காரில் பானுவுடனும், சுந்தருடனும் விட்டு விட்டு பிரின்ஸ்பால் அறையை நோக்கி விரைந்தாள் கீதா. சில வகுப்புகளுக்கு மட்டும் மதிய உணவு நேரம் ஆரம்பித்து அந்த மாணவர்கள் கேஃப்டீரியாவிற்குச் சென்று கொண்டிருந்தார்கள். பள்ளி அலுவலகத்தில் ஸ்கூல் நர்ஸ்ஸின் அறைக்கு வழி சொன்னார்கள். கீதா அங்குச் சென்றபொழுது ஒரு ஒரமான நாற்காலியில் ராதிகா உட்கார்ந்திருந்தாள். சோர்ந்திருந்தாலும் அவள் சரியான நிலையில் இருப்பதைப் பார்த்து கீதாவின் மனத்திற்கு நிம்மதி ஏற்பட்டது. அவளை வரவேற்ற நர்ஸ், “ராதிகா சரியாகத்தான் இருக்கிறாள், எனக்கு அவள் உணவில் சந்தேகம், வேறு வகையான உணவு எதுவும் கொடுத்தீர்களா? அடுத்தவர்கள் கொடுத்த ஹாலோவீன் மிட்டாய்களை நன்கு பரிசோதித்துவிட்டுத்தானே உண்ண அனுமதித்தீர்கள்? உங்கள் வீட்டுக்கருகில் உள்ள வேறு ஏதாவது குழந்தைகளுக்கும் இப்படி ஏதாவது நடந்ததாகத் தெரிந்தால் உடனே போலீசுக்குத் தகவல் கொடுங்கள். மிட்டாய்களில் நச்சுக் கலக்கும் ஏதாவது கிறுக்கர்களின் சதி வேலையாக இருக்கக்கூடும். வீட்டிற்கு அழைத்துப் போய் ஓய்வு கொடுங்கள். மீண்டும் வாந்தி எடுத்தால் டாக்டரிடம் அழைத்துப் போங்கள்” என்று ஆலோசனைக் கூறினார். காரின் பின்னிருக்கையில் ராதிகா பாட்டியின் மடியில் தலையை வைத்துப் படுத்துக் கொண்டாள். தாத்தாவும் பாட்டியும் கவலை நிறைந்த முகத்துடன் அவளது கழுத்தையும் நெற்றியையும் தொட்டுத் தொட்டுக் காய்ச்சல் ஏதும் அடிக்கிறதா என்று பார்த்தார்கள். வீட்டிற்குக் காரைக் கிளப்பும் நேரத்தில் பரணியிடம் இருந்து அழைப்பு வந்தது. கீதா அவனுக்கு நிலைமையைச் சொல்லி அவன் வரத் தேவையில்லை, தேவை ஏற்பட்டால் டாக்டரிடமும் அழைத்துச் செல்கிறேன் என்று கூறினாள். காரில் வீடு திரும்பும் பொழுது அனைவரும் அமைதியாக இருந்தார்கள். வீடு இருக்கும் சாலைக்குக் காரைத் திருப்பிய பொழுது கீதாவிற்குப் பகீரென்றது. நன்கொடை கேட்டவர்கள் இன்னமும் வந்து நடைபாதையில் வைத்திருந்த பொருட்களைச் சேகரித்துக் கொள்ளவில்லை. கிளம்பிய அவசரத்தில் அதைப் பற்றிய நினைவே இருந்திருக்கவில்லை. கீதா பின்னால் திரும்பி பானுவிடம் கண்ணால் ரெட் வேகனைக் காட்டி ஜாடை செய்தாள். பானு, மடியில் படுத்திருந்த ராதிகா தனது தலையைத் தூக்கிவிடாதவாறு அழுத்திக் கொண்டாள். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, எதிரில் வந்த கார் ஒன்று ஒருவீட்டின் காரேஜில் இருந்து சரியாகக் கவனிக்காமல் பின்னோக்கி வந்த காருடன் மோதலைத் தவிர்க்கப் போட்ட சடன் ப்ரேக்கின் ஒலியும், டயர் கிறீச்சிடும் ஒலியும், விபத்தைத் தவிர்த்த கார்காரர் எழுப்பிய எரிச்சல் நிறைந்த கார் ஹாரன் ஒலியும் அவர்கள் திட்டத்தைத் தவிடு பொடியாக்கியது. ராதிகா தலையைத் தூக்கிப் பார்த்து விட்டாள். அவளது ரெட் வேகன் மற்ற நடைபாதைப் பொருட்களுடன் இருப்பதையும் பார்த்து விட்டாள். “மாம் ஹவ் குட் யு டு திஸ்?” என்றவள் கேள்வியை முடிக்கும் முன் அழத் தொடங்கினாள். காரை சாலையில் இருந்து திருப்பிக் கேரஜில் கொண்டு நிறுத்தும் வரை நிலைகொள்ளாமல் இருந்தவள். கார் நின்றவுடன் கதவைத் திறந்து, குதித்து உடனே நடைபாதையை நோக்கி வேகமாக ஓடினாள். குற்ற உணர்ச்சியுடன் தாத்தா, பாட்டி, அம்மா அனைவரும் அவளைத் தொடர்ந்தார்கள். ஆனால் விரைந்து ஓடிய ராதிகா சடாரென நின்றுவிட்டாள். அழுக்காடை அணிந்து “ஹோம்லெஸ், வில் வொர்க் ஃபார் ஃ புட்” என்று எழுதிய அட்டையைக் கையில் வைத்திருந்த ஒரு வயதான ஆள் ராதிகாவின் ரெட் வேகன் அருகில் நின்றிருந்தார். தோளில் சுமந்திருந்த அவரது உடைமைகள் நிறைந்த மூட்டையை ரெட் வேகனில் இறக்கி வைத்து இழுக்க ஆரம்பித்தவர் வேகமாக ஓடி வந்திருந்த ராதிகாவின் காலடி ஓசையால் திரும்பினார். அது அவளது வேகன் என்பது அவருக்குச் சட்டெனப் புரிந்துவிட்டது. “சாரி யங் லேடி, ஐ தாட் யு லெஃப்ட் திஸ் வேகன் அஸ் எ டோனஷன், ஃபார்கிவ் மீ. பை தி வே ஐ ஆம் ஜோயி” “நைஸ் டு மீட் யு மிஸ்டர் ஜோயி, நெவெர் மைண்ட். ஐ ஜஸ்ட் காட் ஃபெட் அப் வித் தட் டாய் ஆல்ரெடி. ஐ தின்க் தட்ஸ் வொய் மை மாம் லெப்ஃட் தட் அஸ் எ டொனேஷன் ஃபார் தி குட் வில் பீப்பிள். பட், இஃப் யூ லைக் யூ கேன் ஹேவ் இட்” தனது உடைமை நிறைந்த மூட்டையை வைத்திருந்த வேகனை இழுத்துக் கொண்டு நகர்ந்த ஜோயி திரும்பிப் பார்த்து, “பை தி வே, சைல்ட். டூ யூ நோ தி மீனிங் ஆஃப் தி சேயிங்?… இட்ஸ் யுவர் லிட்டில் ரெட் வேகன், அண்ட் யூ ஹாவ் டு புல் இட்?” “அஃப் கோர்ஸ், ஜோயி, ஐ நோ இட். இட் மீன்ஸ் எவெரி ஒன் மஸ்ட் பி அக்கவுண்ட்டபிள் ஃபார் தேர் ஒன் ஆக்க்ஷன்ஸ்” “யூ ஆர் எ ஸ்மார்ட் கிட், தேங்க் யூ. மே காட் ப்ளஸ் யூ மை ஸ்வீட்டி, பை… பை” “பை…பை…ஜோயி” ••••••• 15. ஜினா என்றொரு க்ருயெல்லா அடர்ந்து பெரிய மரங்களாக வளர்ந்து, நல்ல நிழல் தரும் சாலையில் தனது வண்டியைத் திருப்பினாள் ஜினா. மரங்களின் வளர்ச்சியும் வீடுகளின் கட்டிட அமைப்பும் அப்பகுதி உருவாகி ஒரு ஐம்பதாண்டுகள் ஆகியிருக்கலாம் எனத் தோன்றியது. நகரை விட்டு விலகி, அமைதியான வாழ்க்கையை வேண்டி புறநகர்ப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த குடியிருப்புகளில் ஒன்று அது. அப்பகுதியின் மரங்கள் தரும் நிழலும் காற்றும் அந்த வெயில் கொளுத்தும் கோடையின் கசகசப்பில் மிகவும் இதமாக இருந்தது. ஜினா போக வேண்டிய வீட்டினை அடையாளம் காண்பதில் அவளுக்குச் சிரமமாக இல்லை. அவளுக்கு முன்பே அவளது காவல்துறையின் பரிவாரங்கள் அங்கு வந்து சேர்ந்து வேலையைத் தொடங்கி விட்டிருந்தனர். வீட்டின் முன் “நுழையத் தடை” என்ற வாக்கியம் பொறிக்கப்பட்ட மஞ்சள் நாடா சுற்றிக் கட்டப்பட்டிருந்தது. அக்கம் பக்கம் வீடுகளின் வாசலில் ஒரு சிலர் வந்து நின்று வேடிக்கைப் பார்த்தனர். ஜினாவின் கண்கள் மார்ட்டினைத் தேடித் துழாவின, அவனைக் காணவில்லை. ஸ்டியரிங் வீலில் இருந்து எக்கி ரேடியோவைத் தட்டி, “மார்ட்டின், எங்கே போனாய், போக்குவரத்து அதிகமா? வழியில் மாட்டிக்கொண்டாயா?” என்றாள். “ஆமாம், மாட்டிக்கொண்டேன் சீஃப், ஆனால் போக்குவரத்தில் அல்ல, எஃப்.பி.ஐயிடம் இருந்து ஒரு அவசர வேண்டுகோளைக் கவனிக்க வேண்டிய சூழ்நிலை. எனக்குப் பதில் உங்களுக்கு உதவ வேறு ஆளை அனுப்பியிருக்கிறேன்.” “ஏன் அதனை உடனே எனக்குச் சொல்ல என்ன கேடு? உனக்குப் பதில் யாரை அனுப்பினாய்?” எனச் சிடுசிடுத்தாள் ஜினா. ஜினாவின் சள்ளென்று விழும் முன்கோபம் நகரக் காவல்துறை பணியாளர்களிடம் பிரசித்தி பெற்றது. “இது போல உங்களுக்குக் கோபம் வரும் என்றுதான் சொல்லவில்லை சீஃப், அதைவிடப் பதிலுக்கு வந்திருக்கும் ஆளின் பெயர் உங்களுக்கு மேலும் எரிச்சலூட்டும், அதனால் தவிர்த்தேன், தேவையான தகவல்களைச் சேகரித்துக் கொண்டு ரெக்ஸ் ஏற்கனவே அங்கிருக்கிறான்.” “யார்?!!.. அந்த டி-ரெக்ஸ் கோமாளியா? அர்த்தமில்லாமல் நகைச்சுவை சொல்லிக்கொண்டு, எதற்கெடுத்தாலும் அபத்தமாகச் சிரித்துக் கொண்டு…. ச்சே….. ச்சே…உனக்கு வேறு ஆளே கிடைக்கவில்லை, உன்னை வந்து கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்கிறேன். அதோ வருகிறான் அறுவைத் திலகம், அப்புறம் பேசுகிறேன் உன்னுடன்,” என்று ஜினா ஒலிவாங்கியை நிறுத்தும்முன் ரேடியோவின் கர….கர….ஒலியின் பின்னணியில் மார்ட்டின் சிரித்துக்கொண்டே “கூல் டவுன், சீஃப்” என்று சொல்வது கேட்டது. வண்டியிலிருந்து இறங்கித் தொப்பியை மாட்டிக்கொண்ட ஜினா, தன்னை நோக்கி விரைந்து வந்து “ஹை சீஃப், மார்ட்டினுக்குப் பதில் நான் வந்திருக்கிறேன்” என்ற ரெக்ஸைத் தன்னையும் அறியாமல் முறைப்பதைத் தவிர்த்தாள். “சரி ரெக்ஸ், சுருக்கமாகச் சொல்லு” “அதோ அந்தக் கிறிஸ்துவ மதம் பரப்பும் போதகர்கள்தான் முதலில் பார்த்து 911ஐ கைபேசியில் அழைத்திருக்கிறார்கள். கூப்பிட்டுப் பார்த்துவிட்டு யாரும் வராததால் முன்கதவில் பிரசுரங்களைச்செருகமுயன்றவுடன் கதவு திறந்து கொண்டிருக்கிறது. தொலைக்காட்சியின் சப்தம் அதிகமாயிருந்திருக்கிறது. அதன் முன் மிஸ்டரும் மிஸ்ஸஸ் ஸ்மித்தும் ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்து தூங்குவது போல இருப்பதைப் பார்த்துத் திரும்ப எண்ணினார்களாம். ஆனால் துர்நாற்றம் வரவும் சந்தேகம் வந்து, உள்ளே சென்று அவர்கள் தோளைத் தொட்டு உலுக்கவும் உடல்கள் சரிந்து விட்டிருக்கின்றன. உடனே ஆம்புலன்ஸை அனுப்பச் சொல்லியிருக்கிறார்கள்.” என்று சொல்லிய ரெக்ஸ் நடைபாதையில் மரத்தடியில் நின்றுகொண்டிருந்த கருப்புக் கோட் சூட் அணிந்து, பிரசாரப் பத்திரிக்கைகள் தாங்கிய தோள் பையுடன் நிற்கும் இளைஞர்களைக் காட்டினான். “சரி, நீ அவர்களின் முகவரி போன்ற தகவல்களை வாங்கிக் கொண்டு, மேலும் விசாரணையை முடித்துக் கொண்டு, அவர்களை அனுப்பிவிட்டு உள்ளே வா” கதவைத் தள்ளிக்கொண்டு ஜினா உள்ளே நுழைந்த பொழுது வீடு அளவுக்கு மீறிக் குளிரூட்டப்பட்டிருப்பது தெரிந்தது. அறுபத்தி ஐந்து அல்லது அதற்கு மேல் வயதுள்ள, தளர்ந்த வெளிறிய, வயோதிக ஸ்மித் தம்பதியினர் இன்னமும் தொலைக்காட்சி பார்ப்பவர்கள் போலச் சரிந்து அமர்ந்திருக்க, தொலைக்காட்சியில் ஒரு சோப் ஒப்பரா நிகழ்ச்சியில் இரு பெண்கள் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். காவல்துறைப் பணியாளர்கள் வீட்டையும், ஸ்மித் தம்பதியினரையும் பல கோணங்களில் படம்பிடித்துக் கொண்டிருந்தனர். கைரேகைத் தடயங்களுக்காகப் பொடி தூவி, துரிகையால் பல இடங்களை வருடிக்கொண்டு இருந்தார்கள். அனைத்தையும் சிறு புத்தகத்தில் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தவர், கையுறைப் பெட்டியிலிருந்து உறைகளை உருவி ஜினாவிடம் கொடுத்துக் கொண்டே, “எதையும் மாற்றவில்லை, அசைக்கவில்லை சீஃப் என்றார்.” கையுறையை மாட்டிக் கொண்டே “ஏதும் செக்யூரிட்டி கேமரா சிஸ்டம் வைத்திருக்கிறார்களா?” என்றாள் ஜினா. “ஊஹூம் இல்லை. இன்னமும் பழைய லாண்ட் லைன் தொலைபேசியை மட்டுமே விரும்பும் வயோதிகர்கள். ஒரு கைபேசியோ, கணினியோ கூட வீட்டில் இல்லை. அவசர அழைப்பிற்கு என்று குளிர்பதனப் பெட்டி மேலே ஒட்டியிருந்த தாளில் கண்டு, அதில் சில தொலைபேசி எண்களைத் துரத்திப் பிடித்தத்தில் இவர்களுக்கு ஒரே மகள், கணவனை இழந்த அவள் பதின்ம வயது மகளுடன் சாக்ரமெண்ட்டோவில் இருக்கிறாள் எனத் தெரிந்தது. தகவல் சொல்லியிருக்கிறோம். இனிமேல் கிளம்பினாலும் ஒரு மணி நேரத்தில் வந்து விடுவார்கள்.” ஸ்மித் தம்பதியினருக்கு எதிரே ஆளுக்கொரு கோக் டின் இருந்தது. துப்பாக்கிக் காயம் போல எதுவும் இல்லை, இரத்தம் சிந்தியிருக்கவில்லை. சோடாவில் நஞ்சு கலந்து குடித்து உயிரை விட்டார்களோ என எண்ணியவாறு வீட்டை அங்குலம் அங்குலமாக நோட்டம் விட்டாள் ஜினா. கோக் அருகே கவிழ்த்த ஒரு டிவி நிகழ்ச்சி நிரல் புத்தகமும், தபாலில் சேர்க்க வேண்டிய கடிதங்களும் இருந்தன. அவை அனைத்தும் தொலைபேசி, தண்ணீர், மின்சாரம், பத்திரிக்கை சந்தா, கேசோலின் எனக் கட்டவேண்டிய தொகைகளுக்காக அனுப்பவேண்டியவை. கணப்புக்கு மேலிருந்த திட்டில் இருந்த புகைப்படங்களில் சில குடும்பப் படங்கள், வாழ்த்து அட்டைகள் இருந்தன. மிஸ்டர் ஸ்மித் இராணுவத்தில் பணிபுரிந்ததைச் சொல்லும் படங்கள், அவர் பிடித்த பெரிய மீனுடன் ஒரு படம், அக்கால ஹாலிவுட் நடிகை போன்ற தோற்றத்துடன் இளவயதில் மிஸஸ் ஸ்மித், பல் விழுந்த சிரிப்பைக் காட்டும் சிறுவயது மகளைக் கட்டிக் கொண்டு கடற்கரையில், பட்டம் வாங்கிய மகளுடன், பேத்தியுடன் போன்ற வழக்கமான படங்கள். சற்றுத் தள்ளி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே உடற்பயிற்சி செய்ய ஒரு அசையா மிதிவண்டி இயந்திரம். சமையலறைக் குளிர்பதனப் பெட்டியில் பழங்கள், காய்கள், கோழி என நிறைந்திருந்தன. அதன் கதவில் பேத்தியின் கிறுக்கலான ஓவியம் “ஐ லவ் யு கிரான்மா” என்றது. அத்துடன் அதன் கதவின் மேல் வாங்கவேண்டிய மளிகைப் பட்டியல் ஒன்று. அதில் சோயாப் பால், சர்க்கரையற்ற, கொழுப்புக் குறைந்த பண்டங்களின் பெயர்கள். அதனருகில் தொலைபேசி எண்கள் பட்டியல். டிஷ் வாஷரில் பாத்திரங்கள் காய்ந்து எடுத்து அடுக்கத் தயாராகக் காத்திருக்க, மிகவும் சுத்தமான சமையலறையாக இருந்தது. அருகில் இருந்த சிறிய லாண்டரி அறையில் வாஷிங் மெஷின் காலியாக இருக்க, உலர்த்தும் பெட்டியில் துணிகள் உலர்ந்து மடிக்கக் காத்திருந்தன. சிறிதும் கலையாத படுக்கை அறை எல்லாவற்றையும் பார்வையிட்டுவிட்டு மீண்டும் முன் அறைக்கு ஜினா வந்த பொழுது ரெக்ஸ் மற்றவர்களிடம் தகவல் சேகரித்துக் கொண்டிருந்தான். “மரணத்திற்கு என்ன காரணம் என்று உனக்குத் தோன்றுகிறது ரெக்ஸ்?” என்றால் ஜினா. “தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே தற்கொலை செய்து கொண்டு விட்டார்கள், சீஃப். அவர்களை அந்த அளவுக்கு அவர்கள் பார்த்த நிகழ்ச்சி பாதித்துள்ளது. என்ன நிகழ்ச்சி என்று தெரிந்தால் அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரித்த நிறுவனத்தை ஷியூ பண்ணலாம். துர்நாற்றம் வருவதால் இறந்து மூன்று நாட்களுக்கு மேலிருக்கலாம், சரியான நேரம் தெரிந்தால் என்ன நிகழ்ச்சி என்று கண்டுபிடித்து விடலாம். யாராவது இந்த உயிரிழப்புக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்.” என்றான் மோவாயைத் தடவி கொண்டு. “இறந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன, ரெக்ஸ். அநேகமாகச் சென்ற வியாழன் இதே நேரம் இறந்திருக்கிறார்கள்.” ரெக்ஸ் ஆச்சரியத்துடன், “அது எப்படி உங்களுக்குத் தெரியும் சீஃப்?” என்றான். “நான் நினைப்பதை போஸ்ட் மார்ட்டம் அறிக்கை உறுதிப்படுத்த வேண்டும். டிவி நிகழ்ச்சி நிரல் புத்தகம் அந்தப் பக்கத்தில் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கிறது. வீட்டில் அனைத்தும் அடுத்த வேலைக்கு. அடுத்த நாளைக்கு எனப் பல வேலைகள் காத்து இருக்கின்றன. உடல்நலம் பேணும் உணவாகப் பார்த்துப் பார்த்து வாங்குவதாகவும் தெரிகிறது. உடற்பயிற்சி செய்பவர்கள், உடல்நலத்தில் அதிக அக்கறை செலுத்துபவர்கள்.” “பிறகு ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும், சீஃப்?” “அவர்களுக்கும் அந்த நிமிடம் வரை உயிர் விட எண்ணம் இருந்ததாக இந்த வீட்டின் சூழல் காட்டவில்லை.” “ஆமாம், திடீரென உயிரை விட எடுத்த முடிவாகத்தான் இருக்கும் சீஃப், மிஸ்டர் ஸ்மித் வெளியில் காரைக் கழுவிக் கொண்டிருந்தவரும் பாதியில் வந்ததாகத்தான் தெரிகிறது. வெளியில் எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டு வந்திருக்கிறார். அப்படியானால் வேலை செய்த களைப்புடன் சிறிது ஓய்வெடுக்க, குளிர்பானம் குடிக்க உள்ளே வந்திருக்கிறார். மனைவி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறார். இவர் நிகழ்ச்சி நிரல் பார்த்து விட்டு வேறு ஏதோ ஒரு நிகழ்ச்சி மாற்றச் சொல்லியிருக்கிறார். இருவருக்கும் வாக்குவாதம் ஆரம்பித்து, சண்டை முற்றிப்போய், இதென்ன வாழ்க்கை என வெறுப்பேறி, விஷம் கலந்து குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்கள் இருவரும்.” “ஆமாம், நாற்பது ஆண்டுகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தவர்கள்தான் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வாக்குவாதம் செய்து உயிரை விட முடிவெடுத்தார்களா?” என்ற ஜினாவின் குரலில் எரிச்சல் கலந்த சலிப்புத் தெரிந்தது. “நாற்பது ஆண்டுகளா, அது உங்களுக்கு எப்படித் தெரியும், சீஃப்?” ஜினா கணப்பின் திட்டின் மேலிருந்த திருமணநாள் வாழ்த்து அட்டையைக் காட்டினாள். “ஸ்மித் காரைக் கழுவி கொண்டிருக்கும் பொழுது யாரோ தெரிந்தவர்கள் வந்திருக்க வேண்டும். வரவேற்று எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். கெட்ட எண்ணம் உள்ள விருந்தாளி அவர்களைத் திசை திருப்பிவிட்டு, அவர்களுக்குத் தெரியாமல் அவர்களது பானத்தில் நஞ்சு கலந்துவிட்டிருக்கலாம். பிறகு சந்தடி இன்றித் தனது பானத்துடன் வெளியேறி இருக்க வேண்டும். கதவினைப் பூட்டாத காரணமும் அதுதான். வீடு அதிகக் குளிராக இருப்பதன் காரணமும் மரணம் நடந்தது உடனே அனைவருக்கும் தெரியவராமல், உடல் அழிவதைத் தாமதப்படுத்தும் நோக்கமாக இருக்க வேண்டும். எனவே திட்டமிட்ட கொலை, பர்ஸ்ட் டிகிரி மர்டர் என்றால் கொலை செய்த நபர் கைரேகைத் தடயம் எதையும் விட்டுச் செல்ல வழியில்லை.” “வாவ், என்ன ஒரு சிறந்த போலீஸ் மூளை” “எனக்கு ‘வாவ்’ சொல்வது இருக்கட்டும் ரெக்ஸ், நான் சொன்ன கோணத்தில் ஏதேனும் லாஜிக் இடிக்கிறதா என்று பார்? மரண அறிக்கை இறந்த நேரம் என்ன வென்று சொல்கிறது என்று பார்ப்போம், பானத்தில் நஞ்சுதான் கலந்திருந்தது என உறுதியாகத் தெரிந்தால், அண்டை வீட்டுக்காரர்களிடம் அவர்கள் யாரையாவது பார்த்தார்களா? அவர்கள் வீட்டில் செக்யூரிட்டி கேமெரா ஏதும் உண்டா? அதில் ஏதும் பதிவாகி இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரணையைத் தொடரலாம். ஸ்மித் மகள் வந்து இறுதிச் சடங்குகள் முடிந்த பின்பு அவளையும் விசாரிக்க வேண்டும். சொத்து அவளுக்குப் போகும் என்றால் அவள் கொலை செய்யத் தேவை இராது. உயிலையும் படிக்க வேண்டும். சரி, நீ மற்ற வேலைகளை முடித்துவிட்டு வா. இது தற்கொலை அல்ல கொலை என்று நிரூபிக்கச் சரியான காரணம் வேண்டும்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள் ஜினா. ✮✮✮✮✮ தொடர்ந்து வந்த அடுத்த வாரம் உள்ளூர் நிகழ்ச்சிக்குப் பாதுகாப்புக் கொடுப்பது, ஒன்றிரண்டு நீதிமன்ற விசாரணைக்குச் சாட்சி சொல்ல வேண்டிய கடமை என ஜினாவிற்குக் காலம் ஓடி விட்டது. ஸ்மித் கேஸ்ஸின் மரண அறிக்கை, பானத்திலும் இறந்தவர்கள் குடலிலும் ஒரே நஞ்சு என்றும், மரண நேரம் குத்துமதிப்பாக ஜினா ஊகித்த நேரம்தான் என்றும் ஆதாரம் கொடுத்தது. இறந்த தம்பதியினர் மகளுக்குப் பெரும்பான்மையான சொத்தையும், அவர்கள் படித்த பல்கலைக்கழகங்களுக்கு ஒரு சிறு தொகையை நன்கொடையாகவும் எழுதி வைத்திருந்தனர். ஸ்மித் தம்பதிகளுக்கு உடல் உபாதைகள் எதுவும் இருந்திருக்கக் கூடும் எனவும் மரணஆய்வு அறிக்கை கூறவில்லை. கடன் சுமை போன்ற எந்த ஒரு பிச்சுப் பிடுங்கலுமின்றி, நல்ல உடல்நலமுடன் ஓய்வுக் காலத்தை அனுபவித்துக் கொண்டிருந்தவர்கள், ஒரு காரணமும் இல்லாமல் உயிரைவிட முடிவெடுப்பார்களா? இந்த மரணத்தை ஓர் ஓப்பன் அண்ட் ஷட் கேஸாக முடிவு செய்ய ஜினாவின் மனம் ஒத்துக்கொள்ள மறுத்தது. ரெக்ஸின் விசாரணையின் மூலம் அக்கம் பக்கம் வசித்த குடும்பங்கள் எந்தவித விபரீத நடவடிக்கையையோ, வேற்று மனிதர்களையோ பார்த்ததாகத் தகவல் கிடைக்கவில்லை. ஒரு வேளை அந்தக் கிறுக்கன் ரெக்ஸ் சொன்னது போலத் திடீர் வாக்குவாதம் தற்கொலையில் முடிந்ததா? நினைக்கவே அபத்தமாக இருந்தது ஜினாவிற்கு தொலைபேசியில் பேசிய பொழுது ஸ்மித் தம்பதியினரின் இறுதிச் சடங்குகள் முடிந்த பின்பு அவர்கள் மகள் அந்த வீட்டில் சிலகாலம் இருக்கப்போவதாகத் தெரிந்தது. எதற்கும் ஒரு நடை போய் அவளுடன் பேசினால் ஏதேனும் தெரியும் என்று ஜினா முடிவெடுத்தாள். ✮✮✮✮✮ ஜினாவும் ரெக்ஸ்ஸும் வண்டியை ஸ்மித் இல்லத்தின் முன் நிறுத்திய பொழுது, நடைபாதையில் ஸ்கேட் போர்ட்டில் பயணித்த பதின்ம வயது சிறுவனொருவன் அவர்களைப் பார்த்துக் கையசைத்துவிட்டு, லாவகமாக எம்பி, ஸ்கேட் பலகை காலிலிருந்து நழுவாமல் சாலையில் குதித்து, சாலையின் குறுக்கே கடந்தான். மீண்டும் எதிர்சாரி நடைபாதையில் எம்பிக் குதித்து இரு வீடுகளுக்கு இடையே மின்சார, எரிவாயு, தண்ணீர் சேவைகளின் பயன்பாடுகளுக்காக இருந்த வெற்றிடச் சந்தில் ஸ்கேட் செய்து குறுக்கு வழியில் பக்கத்துத் தெருவிற்குள் சென்று மறைந்தான். ஜினா அழைப்பு மணியை அழுத்தியதும் கதவைத் திறந்த வாட்ட சாட்டமான வழுக்கைத்தலை ஆள் வாருங்கள் என வரவேற்று, “என் பெயர் ஜோ, நான் ஸ்மித் மகள் டெய்ஸியின் வருங்காலக் கணவன்.” என்று தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு கை குலுக்கினான். “அப்படியா உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. டெய்ஸியைப் பார்த்து வருத்தம் தெரிவித்துவிட்டுச் சிறிது தகவலும் சேகரிக்கலாம் என்று வந்தோம். என் பெயர் ஜினா, இந்த ஆஃபிசரின் பெயர் ரெக்ஸ், நாங்கள் இருவரும் ஆரம்பத்தில் இருந்து இந்தக் கேஸின் விசாரணையைச் செய்து வருகிறோம்.” “டெய்ஸியும் மகளும் கடைக்குப் போயிருக்கிறார்கள், எந்நேரமும் வந்து விடலாம். நான் எந்த வகையிலாவது உதவ முடியுமா?” “நீங்கள் எந்த ஊரிலிருக்கிறீர்கள்? என்ன செய்கிறீர்கள்? எவ்வளவு காலமாக டெய்ஸியுடன் பழக்கம்? உங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளத்தான் கேட்கிறேன். சாதாரணமாக அனைவரும் கேட்பது போன்ற கேள்விகள் இவை போலீஸ் விசாரணை அல்ல.” “புரிகிறது” எனச் சிரித்தான். நானும் சாக்ரமெண்ட்டோவில்தான் இருக்கிறேன். அங்கு டெய்ஸி வீட்டிற்குச் சிறிது அருகில் எனது வீடு, நாங்கள், அதாவது நான், டெய்ஸி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்த டெய்ஸியின் கணவன். நாங்கள் யாவரும் சிறு வயதில் இருந்து ஒன்றாகப் பள்ளியில் படித்தவர்கள். நல்ல நண்பர்கள். என் மனைவியும் இறந்து விட்டாள். எனவே நானும் டெய்ஸியும் திருமணம் செய்து கொண்டு ஒருவருக்கொருவர் துணையாக இருக்கலாம் என்று சென்ற மாதம்தான் முடிவு செய்தோம்.” “நல்லது வாழ்த்துகள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று சொல்லவில்லையே” “ஓ, மன்னிக்கவும், நான் ப்ளம்பிங் பிசினஸ் செய்கிறேன், தேசிய அளவில் பிரான்ச்சைஸ் உள்ள ஒரு நிறுவனத்தின் சாக்ரமெண்ட்டோ கிளை என்னுடையது. என் நிறுவனத்தில் என்னையும் சேர்த்துப் பதினோரு பேர் இருக்கிறோம்.” ரெக்ஸ் இடைமறித்து, “ஓஹோ, நீங்கள்தான் அந்த “ஜோ தி ப்ளம்பரா”? ஏன் சென்ற தேர்தலில் மிட் ரோம்னிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யவில்லை?” என்று கேட்டுத் தனது நகைச்சுவைக்குத் தானே ஹெஹ்….ஹெஹ்….ஹே….என்று சிரித்தான். ஜோவிற்கு இந்த நகைச்சுவை பிடிக்கவில்லை என்பதை அவன் முகபாவம் காட்டியது. ஜினா இடைமறித்து, “ரெக்ஸ், விளையாடாதே, பீ சீரியஸ். மன்னிக்கவும் மிஸ்டர் ஜோ, ரெக்ஸிற்குச் சிறிது விளையாட்டுப் புத்தி தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்று கூறி ரெக்ஸ்ஸை முறைத்தாள். அவன் அதைக் கவனிக்காதது போல முகத்தைத் திருப்பிக் கொண்டான். அப்பொழுது வாசல் கதவு திறந்து ஷாப்பிங் செய்த பைகளுடன் டெய்ஸி தனது மகளுடன் வந்தாள். ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டார்கள். டெய்ஸி தன் மகளை வாங்கிய சாமான்களை உள்ளே அடுக்கி வைக்கச் சொன்னாள். ஜோ, சிறுமியிடம் “கொஞ்சம் பொறும்மா நானும் வந்து உதவுகிறேன், முதலில் ஒரு தம்மடித்துவிட்டு வருகிறேன்” என்று அவளை ஆதரவுடன் தடவிக் கொடுத்துவிட்டு வெளியே சென்றான். “மற்றவர்களுக்குச் செஹண்ட் ஹாண்ட் ஸ்மோக்கிங்கினால் விளையும் தீமையைச் செய்ய ஜோவால் முடியாது. எப்பொழுதும் புகைப்பது வெளியே சென்றுதான்” என்று சொன்ன டெய்ஸியின் குரலில் பெருமை பொங்கி வழிந்தது. மேற்கொண்டு நடந்த உரையாடலில் பெரிதாக ஒன்றும் தகவல்கள் கிடைக்கவில்லை. டெய்ஸி ஜோவைத் திருமணம் செய்துகொள்வதில் அவளது பெற்றோருக்குச் சிறிதும் விருப்பம் இல்லாதது தெரிந்தது. ஜோவின் சிறுவயது முதலே ஜோவை ஸ்மித் தம்பதியினர் விரும்பியதில்லையாம். அவர்களைச் சமாதானப்படுத்த டெய்ஸி முயற்சி செய்து கொண்டிருக்கும் பொழுதே அவர்கள் இறந்தும் விட்டார்கள். அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு என்ன வருத்தம் என்பது டெய்ஸிக்குச் சிறிதும் புரியவில்லை என்றாள். ஜினாவும் ரெக்ஸ்ஸும் ஸ்மித்தின் வீட்டை விட்டு வெளியேறிய பொழுது, ஸ்கேட் போர்டு சிறுவன் ஒரு கைபேசியில் அவர்களது போலீஸ் வண்டியைப் படம்பிடித்துக் கொண்டிருந்தான். “ஏய், என்ன செய்கிறாய் நீ? யூட்யூபில் படம் போடுவதற்காகப் போலீஸ் வண்டியையே படம் எடுக்கிறாயா?” என்று ஜினா அதட்டினாள். “கோபிக்காதீர்கள் சீஃப். பொடியன்தானே. இவன் போலத்தான் நானும் போலீஸ் ஆகவேண்டும் என்ற கனவுடன் சிறு வயதில் பார்க்கும் போலீஸ்காரர்களுடன் எல்லாம் படம் எடுத்துக் கொள்வேன்.” அதற்குள் ஜினாவிற்கு அழைப்பு வர, அவள் அவர்களை விட்டு விலகிச் சென்று கைபேசியில் பேச ஆரம்பித்தாள். சிறுவன் போலீஸ் வண்டியில் சாய்ந்து கொண்டு, ரெக்ஸின் தொப்பியைத் தலையில் மாட்டிக் கொண்டு போஸ் கொடுக்க, ரெக்ஸ் அவனைப் படம் பிடித்தான். பிறகு இருவரும் சேர்ந்து காமெராவை உயரே தூக்கி வைத்துச் சேர்ந்து தங்களைப் படம்பிடித்துக் கொண்டார்கள். அதன் பிறகு இருவரது கைபேசிகளையும் உற்று உற்றுப் பார்த்து விவாதித்துக் கொண்டார்கள். இவற்றைக் கவனித்துக் கொண்டே ஜினா பேசி முடித்துவிட்டு வண்டியில் ஏறியதும், கார் ஹாரனை எரிச்சலுடன் அழுத்தினாள். ரெக்ஸ் ஓடி வந்து காரில் ஏறிக் கொண்டான். வண்டியை ஓட்டிக் கொண்டே “அது என்ன பைண்ட் சைஸ் பசங்களோட தோழமை, என்ன செய்கிறீர்கள் இருவரும்?” என்றாள். “இருவரும் படம் எடுத்துக் கொண்டோம்,சீஃப். அவனுடைய யூட்யூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்ய விருப்பம் தெரிவித்து என் கைபேசிக்குச் செய்தி வழியே ஒரு சுட்டி அனுப்பச் சொன்னேன்.” “ஆமாம், ரொம்ப முக்கியம்” என்ற ஜினாவின் குரலில் கிண்டல் தொனித்தது. அதைப் பொருட்படுத்தாது, “இந்தக் கேஸில் இப்பொழுது உங்கள் முடிவு என்ன சீஃப்?’ என்றான் ரெக்ஸ். “அந்த ஆள் சரியில்லை.” “யார்?” “அதுதான் அந்த ஜோ. என்னவோ ஒரு போலித்தன்மை அவனிடம் இருக்கிறது. அவன் அந்தச் சிறுமியிடம் பழகுவதில் எனக்கு விருப்பம் இல்லை, அவன் பார்வையோ, தொடுதலோ ஏதோ ஒன்று சரியில்லை.” “இது அந்த மகளின் அம்மாவிற்குத் தெரியாதா? டெய்ஸிக்கு இல்லாத அக்கறையா உங்களுக்கு?” “அவளுக்குக் காதல் கண்ணை மறைக்கிறது. அவனைப் பற்றி மேலும் தகவல் சேகரி ரெக்ஸ். ஏதேனும் குற்றப் பின்னணி இருக்கிறதா? சிறார்களுடன் பழகுவதில் தவறு செய்தவனா? அவன் மனைவி எப்படி இறந்தாள்? நிறையப் பணம் இன்ஷூர் செய்திருந்தானா அவள் மீது? அவனிடம் ஏதோ தப்பு. காரணம் இல்லாமல் ஸ்மித் பெற்றோர் இந்தத் திருமண ஏற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். ஜோவிற்கு இந்தச் சிறுமி மேல் ஒரு கண் இருந்திருக்க வேண்டும். அது அந்தத் தாத்தா பாட்டிக்கும் புரிந்திருக்க வேண்டும். பேத்தியைக் காப்பாற்றும் எண்ணத்தில் ஜோவை எதிர்த்திருக்கலாம்.” “வாவ், இது போலீஸ் மூளையா? இல்லை விமன்ஸ் இன்டியூஷனா?” “பெரும்பாலும் நீ இரண்டாவதாகச் சொல்வது.” ✮✮✮✮✮ அடுத்த நாள் ஜினா கதவைத் தள்ளித் திறந்து கொண்டு அலுவலகத்தில் நுழைந்த பொழுது மார்ட்டின் எதிர்ப்பட்டான். “என்ன சீஃப், சிட்டி ஹாலில் சந்திப்பு எப்படி? நகராட்சித் தலைவர் என்ன சொல்கிறார்?” “தி பெஸ்ட் லுக்கிங் அட்டர்னி ஜெனெரல் இன் தி கன்ட்ரி, கமலா ஹாரிஸ் நகரக் காவல்துறையினரின் ஒத்துழைப்பு வேண்டி நகர மேயர்களிடம் பேசலாம் என எதிர்பார்க்கிறார். அதற்காக நம் துறை பற்றிச் சிறிது தகவல் சேகரித்தார்” என்று சொல்லிக் கண்ணடித்தாள். மார்ட்டின் கவலையுடன், “சொன்னால் கோவிக்காதீங்க சீஃப், கொஞ்ச நாள் பழக்கத்திலேயே ரெக்ஸின் தாக்கம் உங்கள் பேச்சில் தெரிகிறது. அட்டர்னி ஜெனெரல் ஹாரிஸ் பற்றி நீங்களும் இது போலப் பேசி வெள்ளை மாளிகை போல வம்பில் மாட்டிக் கொள்வீர்கள் போலிருக்கிறது.” “ஆமாம், உண்மைதான், ரெக்ஸின் தாக்கம் பற்றி நீ சொல்வது கவலையைத் தருகிறது. உன் அக்கறைக்கு நன்றி. நம் துறையின் சென்ற மீட்டிங் மினிட்ஸ் கோப்பை ஒரு பிரதி எடுத்துக் கொண்டு என் அறைக்கு வா. நகரத் தலைவருக்கு நம் நடவடிக்கைகளைப் பற்றி ஒரு “டாக்கிங் பாய்ண்ட்ஸ் மெமோ” கொடுத்தனுப்பினால் அவருக்கு உதவியாக இருக்கும்.” “அதை அவர் எடிட் செய்தால் என்ன செய்வது?” என்று மார்ட்டின் சிரித்தான். “ஏதேது!!! நீயும் பேசியே வம்பை விலைக்கு வாங்குவாய் போல இருக்கிறது. முதலில் இந்த ரெக்ஸை இங்கிருந்து துரத்திவிட வேண்டும், இல்லாவிட்டால் எல்லோருமே அவனைப் போல மாறிவிடுவோம்.” ஜினா தனது அறையை அடையும் முன் ரெக்ஸின் மேஜையில் எட்டிப் பார்த்தாள். அவன் யூடியூப் காணொளியில் மூழ்கி இருந்தான். அவனது அரை டிக்கட் நண்பன் ஸ்கேட் வித்தை காண்பிக்கும் படத்தினில் ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் மீண்டும் மீண்டும் பார்த்தான். “ஹேய், ரெக்ஸ் வேலை நேரத்தில் காணொளியா பார்க்கிறாய்? இரு உன் பெர்ஃபார்மன்ஸ் ரீவ்வியூவில் தீட்டி விடுகிறேன் உன்னை.” “வாங்க சீஃப், அது நடக்கப் போவதில்லை, பதவி உயர்வுக்குத்தான் பரிந்துரை செய்வீர்கள் நான் கண்டுபிடித்ததைச் சொன்னால், இங்கே வந்து பாருங்கள், என்ன தெரிகிறது? படத்தில் பையனைப் பார்க்காதீர்கள் அவன் பின்னால் என்ன நடக்கிறது பாருங்கள்.” காணொளியை ரெக்ஸ் ஓடவிட்டான். அதில் அவனது பைண்ட் சைஸ் நண்பன், மரணமடைந்த ஸ்மித் வீட்டருகே வசிப்பவன், ஸ்கேட் போர்டில் வித்தை காண்பித்தான், அவனுடன் மேலும் சில சிறுவர்கள் இருந்தார்கள். பின்புறம் உள்ள வீடுகளுக்கிடையே இருந்த ஒரு சந்தில் இருந்து ஒரு மனிதன் வந்தான். கையில் இருந்த சோடாக் கேனில் இருந்து கொஞ்சம் குடித்தான். பிறகு கால்சராயின் பையைத் துழாவி சாவியை எடுத்து ஒரு வேனின் கதவைத் திறந்து அதனை ஓட்ட ஆரம்பித்தான். அந்த வண்டி ஸ்கேட் செய்யும் சிறுவர்களை நோக்கி அவர்கள் இருக்கும் திசையில் வந்தது. விளையாடும் சிறுவர்களுக்காக மிக மெதுவாக ஓட்டியதில் வேனின் பதிவு எண்ணும், அது சாக்ரமெண்ட்டோவைச் சேர்ந்த ஒரு ப்ளம்பிங் நிறுவனத்தின் வேன் என்பது அதன் ஒரு பக்கத்தில் எழுதியிருந்த விளம்பர வாக்கியங்களில் இருந்தும், ஓட்டுவது ஜோ எனவும் தெளிவாகத் தெரிந்தது. ஜினாவின் கண்களில் ஓடிய மின்னல் போன்ற மகிழ்ச்சியைப் பார்த்துச் சிரித்த ரெக்ஸ், “ஆமாம் சீஃப், நீங்கள் நினைப்பது சரி. என் பைண்ட் சைஸ் பார்ட்னரின் நண்பன் எடுத்த காணொளி இது. அவர்களுடன் பேசித் தேதியைச் சரி பார்த்து உறுதி செய்துவிட்டேன். ஸ்மித் மரணநாளில் எடுத்திருக்கிறார்கள். அந்தப் பாவி ஸ்மித் தெருவில் வண்டியை நிறுத்தி யார் கவனத்தையும் கவருவதைத் தவிர்த்திருக்கிறான். இந்தப் பையனின் தெருவில் நிறுத்திவிட்டு இடைப்பட்ட சந்தில் நுழைந்து காரைக் கழுவி கொண்டிருந்த ஸ்மித்துடன் அவர் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறான். கணவன் மனைவி இருவருக்கும் சந்தேகம் வராமல் அவர்களை வேலை தீர்த்திருக்கிறான். பிறகு வீட்டை அதிகக் குளிரூட்டிவிட்டு, கதவைச் சார்த்திவிட்டு மீண்டும் சந்து வழியாகவே வந்து தனது நிறுவன வேனில் ஏறிச் சாக்ரமெண்ட்டோவிற்குப் பறந்துவிட்டிருக்கிறான். காணொளி எடுத்த நேரம் துல்லியமாக அதில் பதிவாகிவிட்டது. அவனது கைபேசி நிறுவனத்திடம் பேசி அவனது ஃபோனின் ஜிபிஎஸ் ரெகார்ட் வாங்கி ஒத்துப் பார்த்துவிட்டேன். இரண்டும் கச்சிதமாகப் பொருந்துகிறது. மச்சி வசமாக மாட்டிக்கொண்டான்.” “குட் பாய், சூப்பர் வர்க் என் அறைக்கு வா, நீதிபதியிடம் பேசி அரெஸ்ட் வாரண்ட் வாங்குவதைப் பற்றிய அடுத்த நடவடிக்கையினை விவாதிப்போம். கைது செய்து, தனி அறையில் போட்டு விசாரணை என்ற பெயரில் நெருக்கடி கொடுத்தால் கக்கிவிடுவான் உண்மையை, லை டிடெக்டர் வழியாகவும் உறுதி செய்து விடலாம்.” தனது அறையில் நுழைந்த ஜினாவிற்குப் பசித்தது. உணவு நேரம் கடந்துவிட்டது நினைவு வந்தது. வயிற்றைத் தடவி கொண்டே தனது உணவுப் பையைக் கவிழ்த்து மேஜை மேல் கொட்டி அதிலிருந்த ஒரு வாழைப் பழத்தை எடுத்துக் கொண்டாள். தனது நீலக் கால்சராயை முட்டிக்கு மேல் சிறிது இழுத்துவிட்டு மேஜை நுனியில் தொத்தியவாறு உட்கார்ந்தாள். அறைக் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்த ரெக்ஸ், தகவல்கள் சேகரித்து அந்தத் தாள்களை ஒரு கோப்பில் அடுக்கி அவளது பார்வைக்குக் காண்பித்தான். அவைகளைப் புரட்டிப் பார்த்தவாறே, “இது போதும் என நினைக்கிறேன் ரெக்ஸ். உன் திறமையை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. மேற்கொண்டு நீயே இந்தக் கேஸை முன்நடத்திச் செல், உனக்குப் பதவி உயர்வு நிச்சயம்” என்றாள் ஜினா புன்னகையுடன், “நன்றி சீஃப்,” என்று கதவை நோக்கி நடந்த ரெக்ஸ், “பார்ட்னர் மார்ட்டின் உங்களைப் பற்றிச் சொல்வது சரிதான்” என்றான். அப்பொழுது கதவைத் திறந்து ஒரு கோப்புடன் உள்ளே நுழைந்த மார்ட்டின், “நான் என்ன சொன்னேன் சீஃப்பைப் பற்றி?” என்றான். வாழைப் பழத்தை சாப்பிட்டுக் கொண்டே ஜினாவும், “வாஷ் ஷி ஷஷ் அபௌஷ் மீ?” என்றாள். “பழகுவதற்குத்தான் நீங்கள் வெளித்தோற்றத்தில் க்ருயெல்லா போல இருப்பீர்கள், ஆனால் உங்கள் மனம் அத்தனையும் தங்கமானது என்றான்.” இதை எதிர்பார்க்காத மார்ட்டினின் முகத்திலும் ஜினாவின் முகத்திலும் அதிர்ச்சி தெரிந்தது. ஜினா மெல்லுவதை மறந்தாள். ஆனால் மார்ட்டின் உடனே சுதாரித்துக் கொண்டு “சீஃப், இதோ நீங்கள் கேட்ட கோப்பு” என்று ஜினாவின் மேஜையில் கோப்பைப் போட்டுவிட்டு, “அடேய் பாவி, நாசமாப் போறவனே, உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று திட்டியவாறு வெளியேறும் ரெக்ஸை நோக்கி ஓடினான். கோபத்துடன் சுற்றும் முற்றும் பார்த்த ஜினா கைக்கு வாகாக எதுவும் கிடைக்காததால் சாப்பிட்டுக் கொண்டிருந்த வாழைப் பழத்தையே அவர்களை நோக்கி விட்டெறிந்தாள். அதற்குள் அவர்கள் இருவரும் வெளியேறிவிட பழம் கதவில் பட்டுத் தரையில் விழுந்தது. ••••••• 16. வரவேண்டும் பிள்ளையென்று காத்திருந்தாள் “சாந்தி… சாந்தி…. இதப்பாரு கதவத் திற…. சாந்தீ.” என்ன இந்தப்பொண்ணு இப்படிச் செய்யறா? என்று எண்ணிய ராஜத்திற்குச் சட்டென்று முகம் முழுவதும் சூடாகியது. தலைக்குள் வேகமாக ரத்தம் பாய்வது போன்ற உணர்ச்சி வந்தது. இன்னமும் தனது மருமகள் சாந்தி செய்த செய்கையின் தீவிரம் புரிய ஆரம்பிக்கவில்லை ராஜத்திற்கு. ஒரு உப்புப் பெறாத விவகாரத்திற்கு அந்த விவாதம் தொடங்கியது. உண்மையிலேயே அது “உப்புப் பெறாத” ஒரு விவகாரம்தான். சென்ற ஆண்டு அந்தச் சிறிய ஊரின் கடைத்தெருவில் ஒரு மருந்துக்கடை வைத்திருந்த கணவர் வடிவேலு இறந்தபொழுது ராஜத்திற்கு அறுபத்தியிரண்டு வயது. அவர் ராஜத்தைவிட ஐந்து வயது மூத்தவர். சொந்தத் தாய்மாமன்தான். தாயற்ற பிள்ளையாக வளர்ந்த தனது அக்காவின் மகளான ராஜத்தைக் கைப்பிடித்தார். ராஜத்தின் பள்ளிப் படிப்பு 11ஆம் வகுப்பு வரைதான். பதினாறு வயது ஆனதும் ஊரில் நல்ல சொத்து பத்தோடு இருந்த ராஜத்தின் தந்தை அவளைத் தனது மைத்துனருக்குத் திருமணம் செய்து வைத்தார். அப்பொழுதும் வடிவேலுவிடம் இருந்தது அந்த ஒரு மருந்துக்கடைதான். அவருக்குப் பரம்பரையாக வந்த சொத்து அது. சொந்தம் விட்டுப் போகக்கூடாது என்று இறந்த மனைவிக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வடிவேலுவுக்குத் திருமணம் செய்து வைத்தாலும், அருமையாகச் செல்வச் செழிப்புடன் வளர்த்த தனது மகள் ராஜத்தைத் தன்னைப்போலவே வடிவேலுவாலும் அருமையாக வைத்துக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை ராஜத்தின் அப்பாவிற்குச் சிறிதும் இல்லை. கணவனுடன் வாடகை வீட்டில் வசித்து வந்த தனது மகளுக்கு முதல் குழந்தையாக அவரது பேரன் சந்திரன் பிறந்ததும் ஒரு நல்ல வீடாக வாங்கிக் கொடுத்தார். அதைத் தனது மருமகன் பேரிலும் எழுதி வைக்கவில்லை, தனது மகள் பேரிலும் எழுதி வைக்கவில்லை. அவருக்கு வடிவேலுவின் திறமையிலும் நம்பிக்கை இல்லை, சூட்டிகையாக இல்லை என்று அவர் கணித்திருந்த ராஜத்தின் மீதும் நம்பிக்கை இல்லை. கணவன் ஏதாவது சிரமம் என்று கேட்டால் யோசிக்காமல் வீட்டை விற்க அனுமதித்துவிட்டு நடுத்தெருவில் நிற்கும் நிலை வரலாம் என்பது அவர் எண்ணம். எனவே பேரன் பிறந்த கையோடு அவனது பெயரில் ஒரு வீடு வாங்கி எழுதி வைத்தார். பேரன் பெரியவனாகும்வரை யாரும் வீட்டை ஒன்றும் செய்ய முடியாது, பிறகு வளர்ந்து அவன் அம்மாவைக் காப்பாற்றுவான் என்பது அவர் தனது மகளுக்காகச் செய்த எதிர்காலத் திட்டம். ஆனால் இப்பொழுது அந்த வீட்டின் வாசலில் நின்று கொண்டுதான் ராஜம் தன் மருமகள் சாந்தியைக் கதவைத் திற என்று கெஞ்சிக் கொண்டிருந்தார். காலையில் குளித்து முடித்து, முடியைக் கோடாலிக் கொண்டையாகப் போட்டுக் கொண்டு, முருகா என்று கை கூப்பி முருகனுக்கும், அருகிருந்த மறைந்த கணவரின் படத்திற்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு, திருநீரை அள்ளி நெற்றியில் பூசிக் கொண்டு சமையலறைக்குச் சாப்பிட வந்தார். நீரிழிவு நோய் வேறு படுத்துகிறது. வேளாவேளைக்குச் சாப்பிடாவிட்டால் அவருக்குத் தலை சுற்றல் வந்துவிடுகிறது. ஒரு தட்டில் அடுப்பு மேடையில் இருந்த பாத்திரத்தில் இருந்து மூன்று இட்லிகளையும், கொஞ்சம் சட்னியையும் வைத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தார். மருமகள் சாந்தி செய்த சமையல் அது. அவள் வாசலில் கீரையோ காய்கறியோ வாங்கிக் கொண்டு பேரம் பேசும் சப்தம் கேட்டது. இரண்டு விள்ளல் எடுத்து வாயில் போட்டவுடன், சட்னியில் உப்பு இல்லை என்று தெரிந்து முகம் சுளித்தார். பேசாமல் சாப்பிட்டிருக்கலாம், ஆனால் விதி யாரை விட்டது. கீரையுடன் உள்ளே வந்த சாந்தியிடம், “என்ன சாந்தி இது, நீ சட்னிக்கு உப்புப் போடலையே” என்றார். ஏதோ எரிச்சலில் இருந்த சாந்தி, “ஏன் உப்பில்லாவிட்டால் உங்களால் சாப்பிடமுடியாதா?” என்று எகத்தாளமாகக் கேட்டுவிட்டு அவர் கையில் இருந்த தட்டைப் பிடுங்கி பாத்திரம் விளக்கும் இடத்தில் தூக்கிப் போட்டாள். இந்த அவமரியாதையில் அதிர்ச்சி அடைந்த ராஜம் திடுக்கிட்டு, “இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு…..” என்று ஆரம்பிக்கவும், இடைமறித்தாள் சாந்தி. “எழுந்திரிங்க சொல்றேன்” என்று சாந்தி அதட்டவும் மெதுவாக, ஒன்றும் புரியாமல் எழுந்தார். “இங்க வாங்க சொல்றேன்” என்று கையைப் பிடித்துத் தர தரவென்று வாசலுக்கு இழுத்துப் போய், “போங்க வெளியே!” என்றாள். “யார் வீட்டில் இருந்து கொண்டு யாரை வெளியே போகச் சொல்றே, இது என் வீடு, எங்க அப்பா எனக்குக் கொடுத்த வீடு” “இல்ல, இது என் வீடு, என் வீட்டுக்காரர் பேரில் இருக்கிற வீடு, அனுசரிச்சுப் போகத் தெரியலேன்னா போங்க வெளியே” என்று சொல்லி ராஜத்தின் கழுத்தில் கையைக் கொடுத்து வெளியில் தள்ளினாள். ராஜம் அவமானத்திலும் அதிர்ச்சியிலும் நிலைகுலைந்து, சாந்தி தள்ளியதில் நிலைதடுமாறி விழாமல் இருக்க கம்பிக் கதவை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சமாளித்தார். அவர் கையைக் கம்பிக் கதவில் இருந்து விடுவித்து வெளியே தள்ளி, கம்பிக் கதவை மூடித் தாழ்ப்பாளில் ஒரு நவ்தால் பூட்டையும் போட்டுப் பூட்டி, சாவியை எடுத்துக் கொண்டு சாந்தி உள்ளே சென்று விட்டாள். கதவைப் பிடித்துக் கொண்டு நின்ற ராஜம் அழைப்பு மணியை அழுத்தினார். மின்சாரம் இல்லாததால் அது வேலை செய்யவில்லை. அவமான உணர்வுடன் கண்ணில் முட்டிக் கொண்டு வந்த கண்ணீருடன், “சாந்தி கொஞ்சம் கதவைத் திற” என்று குரலை உயர்த்தாமல் அழைத்தார். சுற்றும் முற்றும் பார்த்தார். அண்டை அயலில் யார் காதிலும் விழாமல் சாந்திக்கு மட்டும் கேட்கும் வண்ணம் எப்படி அவளை அழைப்பது? கணவர் வடிவேலு உயிருடன் இருந்தவரை நன்றாகத்தான் ஓடியது. பெரியவன் சந்துருவிற்குப் பின், மீண்டும் ஒரு மகன் சங்கர், பிறகு ஆசை ஆசையாய் எதிர் பார்த்தது மாதிரி மகள் தேவி பிறந்தார்கள். அனைவரும் நன்கு படித்தனர். சந்துருவுக்குப் பக்கத்தில் ஐந்து ஊர் தள்ளி இருக்கும் பல்கலையில் பேராசிரியராக வேலை. திங்களன்று தொடர்வண்டி ஏறினால், அங்கேயே தங்கிவிட்டு வார இறுதிக்குத்தான் வீடு வருவான். சின்னவன் சங்கர் கணினி படித்துவிட்டு ஹைதிராபாத்தில் வேலை, மகள் தேவிக்கு ஆஸ்திரேலியாவில் வாழ்க்கை அமைந்தது. சந்துருவிற்குச் சொந்தத்தில் வடிவேலுவின் பலநாள் நண்பர் மகள் சாந்தியையே மணம் முடித்தார்கள். சாந்தியும் தன்னைப் போன்ற தாயில்லாப் பெண் என்பதால் ராஜத்திற்கு அவள் மீது என்றும் பரிவு உண்டு. சாந்தியின் திருமணத்தில் அவளுக்குப் போடுகிறேன் என்று வாக்குக் கொடுத்த நகையைப் போட முடியாமல் போனது சாந்தியின் அப்பாவிற்கு. இழுபறியில் இருந்த நீதிமன்ற வழக்கு அவருக்கு எதிராகத் தீர்ப்பாகியதில் திருமணத்திற்காகக் கையில் இருந்த பணமெல்லாம் கரைந்து போக, அடுத்த ஆண்டிற்குள் செய்து விடுகிறேன் என்று கூறித் தனது நெடுநாள் நண்பரிடம் கூனிக் குறுகினார். அதைப் பற்றி இவர்கள் யாரும் பொருட்படுத்தவே இல்லை. ஆனால் அடிக்கு மேல் அடியாக அவருக்கு மாரடைப்பு, மருத்துவமனைச் செலவு என்று தொடங்கி, சம்பந்தி ஓராண்டிற்குள் உயிரையும் விட்டு விட்டார். சாந்தி குடும்பத்தின் சொத்தினைப் பங்கு போட்டுக் கொண்ட சகோதரர்களிடம் தந்தை தனக்குத் தருவதாகச் சொன்ன நகைகளைக் கொடுத்துவிட்டு பங்கு போட்டுக் கொள்ளச் சொல்லப் போவதாகச் சொன்னாள் சாந்தி. ஆனால் வடிவேலு தடுத்துவிட்டார். உனக்கு இருக்கும் சொந்தமே உன் அண்ணன்கள்தான். அவர்களுக்கே தெரிந்திருக்க வேண்டும் அவர்களது கடமையைப் பற்றி. அதை அவர்கள் மதிக்காத பொழுது சொத்துக் கேட்டு உறவை முறிக்காதே. அவர்கள் வரப் போக உனக்கும் உறவு என ஒருவர் இருக்க வேண்டும். உறவு முக்கியம். யாரும் இனி நகையைப் பற்றியோ சொத்தைப் பற்றியோ சாந்தியிடம் பேசக் கூடாது என்று கட்டளை இட்டார். அவரது பெருந்தன்மை நினைவுக்கு வந்து கண் கலங்கியது ராஜத்திற்கு. மருமகள் மாதிரியா வைத்திருந்தோம் அவளை என்று எண்ணியவாறு மீண்டும் வீட்டிற்குள் எட்டிப் பார்த்தார். ஆள் அரவமே இல்லை. எவ்வளவு நேரம்தான் வெளிப்படியில் நிற்பது கால் வலித்தது. வாசல் படியில் அமர்ந்தார். அந்தக் காலத்து வீட்டின் வாசலில் இரு புறமும் இருந்த பெருந்திண்ணைகளைப் பாதுகாப்பிற்காகவும், இடத்தை உபயோகத்திற்குக் கொண்டு வருவதற்காகவும் இரும்புக் கிராதி போட்டு அடைத்துக் கம்பிக் கதவுகள் போட்டதில் உட்காரும் இடம் பறிபோய் வாசல் படி மட்டும்தான் மிஞ்சியிருக்கிறது அவருக்கு இப்பொழுது. வெயில் ஏறியது, மணி ஒரு பத்தரை இருக்குமோ என்று எண்ணினார். காலையில் இருந்து ஒரு வாய் காப்பிக் கூடக் குடிக்காமல் பசி காதை அடைத்தது. கணவர் வடிவேலு இறந்தவுடன் மருந்துக் கடையைச் சங்கருக்கு என்று குறித்து வைத்து, அதைக் குத்தகைக்கு விட்டு அதன் வருமானம் சின்னவன் சங்கருக்கு அனுப்புவது போல் சொத்துப் பிரித்தார்கள். பெரியவன் சந்துருவிற்குத் தாத்தா எழுதி வைத்த வீடே இருக்கட்டும் என்று முடிவெடுத்தார்கள். போன மாதம் கோடை விடுமுறைக்கு மகள் தேவி ஊருக்கு வந்த பொழுது ராஜம், தனக்குப் பரம்பரை பரம்பரையாக வந்த நகைகள் அனைத்தையும் அவளுக்குரிய சொத்தின் பங்கு என்று சொல்லிக் கொடுத்து விட்டார். அவள் தடுத்துப் பார்த்தாள். தனக்கு இருப்பது இரண்டும் பையன்கள்தான், வெளிநாட்டில் தனக்கும் நகைகள் போட வாய்ப்பில்லை. எனவே நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று மறுத்தும் வற்புறுத்திக் கொடுத்துவிட்டார். தனது கடமை முடிந்தது போன்ற மகிழ்ச்சி அவருக்கு. ஆனால், இதற்குப்பிறகுதான்சாந்தியின்குணம் மாறியது. சாந்தியின் ஒரு பெண்ணும் ஒரு மகனும் வெளியூரில் கல்லூரியில் படிக்கிறார்கள். சாந்தி தனது மாமியாரின் நகையைத் தனது மகளுக்குரியதாக நினைத்திருப்பாள் போலும் நேராகவே சண்டைக்கு வந்தாள். “பசங்கள மட்டியும் வச்சிருக்கிறவங்க வேணாம், வேணாம்னு சொல்றாங்க, அப்படியும் அள்ளிக் கொடுக்காட்டி என்ன? இங்க கல்யாண வயசில ஒரு பேத்தி இருக்கிறது நினைப்பு இல்லையா?” என்று எரிந்து விழுந்தாள். “நீ ஏம்மா அடுத்தவங்க சொத்துக்கு ஆசைப்படுறே? உனக்கு வேணும்னா உன் வீட்டுக்காரன செஞ்சி கொடுக்கச் சொல்லு. என் பரம்பரை சொத்தை என் பொண்ணுக்குக் கொடுத்தேன், அதில் உனக்கேன் கோபம்?” என்று ராஜமும் பதிலுக்குச் சண்டைக்குப் போனார். இந்தப் பிரச்சனையை வைத்து தினமும் இருவருக்குள் சண்டை வர ஆரம்பித்தது. வார இறுதியில் வீட்டிற்கு வரும் சந்துருவிற்கு இவர்களின் சண்டையைத் தீர்ப்பதற்கே சலிப்பாக இருந்தது. ஏன் வீட்டிற்கு வருகிறோம் என்று வெறுத்துப் போய் “மனுஷன நிம்மதியா இருக்க விட மாட்டீங்களா?” என்று அவனும் தன் பங்கிற்குக் கத்திவிட்டு மடிக்கணினியைத் தூக்கிக் கொண்டு மாடிக்குப் போய் உட்கார்ந்து விடுவான். பக்கத்து வீட்டில் வேலை செய்யும் பெருந்தேவி, வெய்யிலில் படியில் உட்கார்ந்திருக்கும் ராஜத்தை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு, “தபாலுக்காகக் காத்திருக்கீங்களா பெரீம்மா, தபால்காரர் மத்தியானம்தான் வருவாரு” என்று அவளாகவே ஒரு காரணமும் கற்பித்துப் பதிலும் வழங்கிவிட்டுப் போனாள். இதற்கு மேல் மொட்டை வெய்யிலில் வாசல் படியில் உட்கார்ந்திருந்தால் அடுத்தவர்கள் வித்தியாசமாகப் பார்ப்பார்கள் என்று தோன்றியது ராஜத்திற்கு. தெருமுனையில் இருக்கும் ராமுத்தம்பி கடைக்குச் சென்று மகனை அவன் கைபேசியில் அழைக்கலாம் என்றால் தொலைபேசி எண்ணும் தெரியவில்லை. தொலைபேசியில் ப்ரோக்ராம் செய்த பட்டனை அழுத்தி அழுத்திப் பேசியதில் எண் மனப்பாடம் ஆகாமலே போய்விட்டது. நல்ல வேளை இன்று வெள்ளிக் கிழமை, மகன் வீடு வந்துவிடுவான். மாலையில் அவன் வந்ததும் அவனுடன் வீட்டிற்குள் போய் விடலாம். இனிமேல் சாந்தியுடன் தர்க்கம் செய்ய வேண்டாம். கொல்லைப்புறத் தாழ்வாரத்தில் முடங்கிக் கொள்ளலாம். கயிற்றுக் கட்டில், கிணற்றடி கழிவறை எல்லாம் வசதியாக இருக்கும். சொந்த வீட்டிலேயே அப்படிப் பின்னால் அநாதையாகக் கிடந்தால் ஊருக்கு நிலைமை தெரியும் அவமானம் இல்லை. சாந்தி ஒரு வேளை சோறு கொடுத்தாலும் குழாயில் தண்ணீர் பிடித்துக் குடித்துவிட்டு, அரை வயிற்றோடு படுத்துக் கொள்ளலாம். வரட்டும், சாயுங்காலம் சந்துரு வரட்டும். இவ்வளவு நாள் இந்த வீட்டில் சாந்தி என்னை விட்டு வைத்திருந்ததே அந்த நகைக்காகத்தானா? பேரன் பெயரில் வீடு எழுதி வைத்த அப்பாவும் இப்படி நான் நடுத்தெருவில் நிற்பேன் என நினைத்திருக்க மாட்டாரே என்று எண்ணிய ராஜத்திற்குத் தன்னிரக்கத்தில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. மகன் வரட்டும், இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது அவன் வர, இப்பொழுது மணி என்ன ஒரு பன்னிரண்டு இருக்குமா? ராஜத்திற்கு ஒருமுறை கழிவறை சென்று வந்தால் பரவாயில்லை என்று தோன்றியது. அந்தக் காலத்தில் வீட்டின் பின்புறமாக வந்து தோட்டி சுத்தம் செய்யும் ட்ரை லட்ரீன் வைத்த பழைய வீடு. கொல்லைப்புறம் நாராசாலையின் கதவு வழியாக அவர்கள் வந்து போக வழி இருக்கும். அதனால் வீட்டின் பின்புறம் போக இக்கால வீடுகள் போலப் பக்கத்துச் சந்து இல்லை. ஒவ்வொரு வீட்டுச் சுவரும் அடுத்த வீட்டின் சுவராகப் பங்கு போட்டு அமைந்த பழங்காலத்து வீடு. காலம் மாறி நவீனக் கழிவறையாக மாற்றியாகிவிட்டது. ஆனால் பின்புறம் உள்ள அதை அணுக வீட்டின் உள்வழியாகத்தான் செல்ல வேண்டும். இவளுக்கு இது போன்ற தேவைகள் இருக்கும் என்று சாந்திக்குத் தோணாதா? வரட்டும், சந்துரு வரட்டும் என்று மனம் கருவினார். மெல்ல எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தார். உச்சி வெய்யிலில் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாமல் போயிருந்தது. மெதுவாகத் தெருமுனைக்குச் சென்று அங்கிருந்த குட்டிச் சுவருக்குப் பின்புறம், மீண்டும் யாரும் பார்க்கிறார்களா என்று ஒருமுறை பார்த்துவிட்டு ஒதுங்கி விட்டு வந்தார். “ஐயோ என் நிலை இப்படி ஆயிடுச்சே, யார் யாரையோ பழிச்சேனே, என்ன இது ஆடு மாடு மாதிரி தெருவில் ஒதுங்கறாங்களேன்னு கேலி செய்வேனே, நானே அந்த நிலைமைக்கு வந்துட்டேனே, கடவுளே” என்று மனத்திற்குள் புலம்பினார். அங்கிருந்தே வீட்டின் வாசல்படியைப் பார்த்த பொழுது அது உச்சி வெய்யிலில் காய்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. சாயுங்காலம் சந்துரு வரும் வரை எங்காவது நிழலாகப் போய் உட்காரவேண்டியதுதான் என்று எண்ணியபொழுது, இரண்டு தெரு தள்ளி இருக்கும் வரசித்தி விநாயகர் கோயில் மணியின் ஒலி காற்றில் வந்தது. அங்குப் போய் மண்டபத்தில் உட்கார்ந்து கொள்ளலாம், மீண்டும் மாலையில் வீட்டுக்கு வரலாம் என எண்ணிக் கோயிலை நோக்கி மெல்லத் தள்ளாடித் தள்ளாடி நடந்தார். வியர்த்த முகத்தை முந்தானையால் துடைத்துக் கொண்டார். கோயில் வாசலில் பிச்சை கேட்டவர்களைப் பார்த்த பொழுது விரக்திச் சிரிப்பு வந்தது. நானும் இப்பொழுது உங்களைப் போலத்தான் என நினத்துக் கொண்டு உள்ளே சென்றார். யாரோ தங்கள் வேண்டுதல் நிறைவேறியதில் மகிழ்ந்து சாமிக்குச் சர்க்கரைப் பொங்கலும், தயிர்சாதமும் படைத்துவிட்டு அனைவருக்கும் தொன்னையில் அன்னதானம் கொடுத்தார்கள். யாராயிருந்தாலும் நல்லா இருங்கப்பு என்று மனதில் வாழ்த்திக்கொண்டு வரிசையில் நின்று சர்க்கரைப் பொங்கலும் தயிர் சாதமும் வாங்கிக் கொண்டு மண்டபத்தில் போய் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தார். நீரிழிவு நோய்க்குச் சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டால் என்ன ஆவது என்ற கவலை மின்னலெனத் தோன்றி, அதே வேகத்தில் வயிற்றுப் பசிக்கு முன் இப்படி யோசிப்பது தேவையில்லை என்றும் தோன்றியது. மனத்தில் இப்படிப் பிச்சைக்காரி போலத் தானம் வாங்கிச் சாப்பிடும் நிலைக்கு வந்தது ராஜத்தின் மனத்தை அறுத்தது. இதே கோயிலில் தனது பேரக் குழந்தைகளின் காதுகுத்திற்கு கணவரின் நினைவு நாள் என்று தானும் அன்னதானம் கொடுத்தது நினைவு வரத் துக்கம் தொண்டையை அடைத்தது. மூச்சுவிடச் சிரமமாக இருந்தது. “நெஞ்சை அடைக்குதா ராஜம்” என்ற கணவரின் பரிவான குரல் அவர் காதில் கேட்டது. கண்கள் இருண்டன. “ஆமாங்க, நெஞ்சை அடைக்குதுங்க, பாருங்க மாமா, உங்களுக்கப்புறம் என் நிலைமை இப்படி ஆயிடுச்சே, பிச்சைக்காரியா, அநாதையா ஆயிட்டேனே” என்று வாய் விட்டுப் புலம்பினார். அருகில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பூஜை சாமான் விற்கும் கடைக்காரம்மா, “என்ன தாயீ சொல்ற, நெஞ்சடைக்குதா?” என்று கேட்டு விட்டு அருகில் குடும்பமாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களிடம் பாட்டிலில் நீர் இருப்பதைப் பார்த்து, “ஐயா, இந்தப் பெரியம்மாவுக்குத் தொண்டையடைக்குதாம் கொஞ்சம் தண்ணி கொடுங்க” என்றாள். அந்தக் குடும்பத்தின் கடைக்குட்டி சிறுவனிடம் தண்ணீர் பாட்டிலைக் கொடுத்து, “கண்ணா, ஓடு பாட்டிக்குக் கொஞ்சம் தண்ணி கொடுப்பா” என்று அனுப்பினார்கள். அவன் “பாட்டி இந்தாங்க” என்று ராஜத்திடம் நீட்டிய பொழுது அவருக்கு மார்பில் சுரீரென்ற வலி ஏற்பட்டு ஒரு கையால் நெஞ்சைப் பிடித்துக் கொண்டார். நீருக்காக நீட்டிய கை துவண்டு விழுந்தது. பளீரென்று ஒரு ஒளி அவர் கண்முன் தோன்றி மறைந்தது போலிருந்தது ராஜத்திற்கு. “ஐயோ, பெரீம்மா இங்கன பாருங்க” என்று சுற்றி இருந்தவர்கள் அவரை உலுக்கி, பிறகு அவரை அடையாளம் கண்டு, அவரை அவரது வீட்டில் சேர்த்த பின்பு அவர் மறைந்த செய்தி தெரிந்து அரக்கப் பரக்க ஓடி வந்த சந்துருவிடமும், அண்டை, அயலார், உறவினர்களிடம், சாந்தி சொல்லிக் கொண்டிருந்தாள் “அத்தை மனசு சரியில்லேன்னு கோயிலுக்குப் போயிட்டு வரேன்னு சொன்னாங்க, புண்ணியவதி கோயில்லேயே சாமி கூடப் போய்ச் சேர்ந்துட்டாங்க.” ••••••• 17. அனிச்ச மலர்கள் மணி ஒரு மூன்றேகால் இருக்கலாம். கடைசிப் பீரியட். ஸ்டெல்லா டீச்சர் மின்கலன்களின் வகைகள் பற்றிய பாடத்தை நடத்திவிட்டு, பாடப் புத்தகத்தில் அந்தப் பாடத்தின் கீழ் இருந்த 2, 3, 6 கேள்விகளுக்கு விடை எழுதி வரவேண்டியது மறுநாளுக்கான வீட்டுப் பாடம் என்றும், மின்கலங்கள் 1, 2, 3 படங்களை டயாக்ராம் நோட்டில் வரைந்து அந்த வார இறுதியில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். கடைசி மணி அடிக்கும் வரை மிச்சம் இருக்கும் நேரத்தில் வீட்டுப் பாடத்தையோ, படங்கள் வரைவதையோ செய்யலாம் என்று அனுமதி கொடுத்தார்கள். படியத் தலைவாரி இரட்டை சடைகள் போட்டுக்கொண்டு, நீலம் வெண்மை நிறங்களில் பாவாடை, சட்டை, தாவணி போன்ற சீருடை அணிந்த மாணவிகள் தங்கள் வேலைகளை மும்முரமாகச் செய்தார்கள். ஸ்டெல்லா டீச்சர் கையில் இருந்த சாக்பீஸ் பொடியைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே மாணவிகளின் இருக்கைகளின் இடையே இருந்த இடைவெளியில் நடந்து கொண்டே கண்காணித்தார்கள். வகுப்புகள் அமைதியாக இருந்ததால் பள்ளியே அமைதியாக இருந்தது. அவ்வப்பொழுது வெளியே பள்ளியின் சுற்றுச்சுவரை ஒட்டிய சாலையில் ஓடும் பேருந்துகளின் ஓசையைத் தவிர வேறு ஓசை இல்லை. மாடியில் இருந்த அந்த ஸ்டெல்லா டீச்சரின் வகுப்பின் வெளியே, வராந்தாவில் வேக வேகமாக யாரோ நடந்து போகும் ஓசை கேட்டு அனைவரும் ஒட்டு மொத்தமாகத் தலையை உயர்த்திப் பார்த்தார்கள். தமிழாசிரியை அரங்கநாயகிதான் படபடப்பாக நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டு கடைசியில் இருக்கும் வகுப்பிற்குச் சென்றார். அவர் நடையில் ஒரு பதட்டம் தெரிந்தது. இன்று மாலையில், மாடியில் இருக்கும் மெடோனா ஹாலில் நடக்கப் போகும் வீரமாமுனிவர் தமிழ்ச்சங்க நிகழ்ச்சியை ஒட்டி நடக்கும் பள்ளியின் கலைநிகழ்ச்சியின் மொத்தப் பொறுப்பும் அவருடையது. அதனால்தான் அந்தப் படபடப்பு என அனைவருக்கும் புரிந்தது. சிறிது நேரத்தில் புயல் போல மீண்டும் அவர்கள் வகுப்பைத் தாண்டி வந்த வழியே திரும்பிச் சென்றார். ஸ்டெல்லா டீச்சரால் கேட்காமல் இருக்க முடியவில்லை. “என்ன மிஸ் ரொம்ப டென்ஷனா இருக்கீங்க?” என்றார். திரும்பிப் பார்த்த அரங்கநாயகி, “ஒன்னண்டயும் ஒருதரம் கேட்டுட்டாப் போறது” என்றவாறு இவர்கள் வகுப்பிற்குள் வந்தார். “இன்னக்கி சாயங்காலம் ரீட்டா பரதநாட்டியம் ஆடுறா இல்ல, அலங்காரம் செஞ்சுட்டுக் கால்ல சலங்கையக் கட்டுறப்பக் கைதவறி விட்டுட்டா, அது மேடைக்கும், பின் ஸ்க்ரீனுக்கும் சுவருக்கும் இடையே எங்கேயோ போய் இடுக்கிலே விழுந்துடுத்து, மேடை அடியில் இருட்டில் தேடியும் கிடைக்கலே, டொமினிக், ஜோசப் ரெண்டு பேரையும் கொஞ்சம் தேடிப் பார்த்து எடுத்துக் கொடுங்கோப்பான்னு கேட்டேன். அவாளும் மேடைக்கு அடியில் எலெக்ட்ரிக் வயர் போற இடத்திலே நன்னாத் தேடிட்டோம் அங்க இல்ல மிஸ் அப்படிங்கறா. என்ன செய்றதுன்னு நேக்குத் தெரியலே. வேற சலங்கையும் இல்ல. ரீட்டாதான் சபிதா மிஸ் கிளாசில விஜயாவும், சாந்தா மிஸ் கிளாசில மீனாளும் டான்ஸ் ஆடுவாங்க டீச்சர் அவங்க வீட்டில இருந்து கொண்டு வந்து கொடுப்பாங்களான்னு கேட்கிறேன்னு சொன்னா. இருடிம்மா நானே கேக்கிறேன். ஸ்டுடெண்ட் கேட்டா எந்த டீச்சரும் பெர்மிஷன் கொடுக்க யோசிப்பான்னு நானே வந்தேன். சபிதா மிஸ் ஸ்டூடெண்ட் இன்னைக்கி ஆப்செண்டாம். அதான் சாந்தா மிஸ் கிளாசுக்குப் போறேன், ஏன் ஸ்டெல்லா உன் ஸ்டுடெண்ட்ஸ் யாரானும் வச்சிருப்பாளோ?” என்று கேட்டவர், ஸ்டெல்லா டீச்சர் பதிலுக்குக் காத்திராமல் மாணவிகளை நோக்கி, “ஏண்டிம்மா உங்க யார் ஆத்திலேயாவது சலங்கை இருக்கா? ஆத்துக்குப் போயி எடுத்துண்டு வந்து கொடுத்தா ஷேமமா இருக்கும்.” என்றார். மாணவிகள் அமைதியாக இருந்தார்கள், “பதில் சொல்லுங்கம்மா யார்கிட்டேயும் இல்லையா?” என்றார் ஸ்டெல்லா டீச்சரும் தொடர்ந்து. “என் மாமா பொண்ணு டான்ஸ் ஆடுவா டீச்சர், நான் போய் எடுத்து வரவா?” என்றாள் லலிதா. “நோக்குப் புண்ணியமாப் போகும், ஸ்டெல்லா இவள ஆத்துக்கு அனுப்பி எடுத்துண்டு வரச் சொல்லேன், நாழியாறது” என்றார். “சரி மிஸ், நான் அனுப்பி வைக்கிறேன். நீங்க நிம்மதியா அடுத்த வேலையைப் பாருங்க” என்றார் ஸ்டெல்லா டீச்சர். அவரை அனுப்பிவிட்டு, மாணவிகளிடம் திரும்பி “லலிதாவுக்குத் துணையா அவகூட யாராவது போயிட்டு வாங்கம்மா, யாரு போறீங்க?” என்றார். “நான் போறேன் மிஸ்,” என்றாள் கோதை. கோதை அந்த வகுப்பின் கிளாஸ் லீடர். மிகவும் சூட்டிகை. உறையூரில் இருக்கும் வக்கீலின் பெண். நாச்சியார் கோயிலின் பக்கம் வீடு. தினமும் ஒன்பதாம் நம்பர் பஸ்ஸில் பள்ளிக்கு வருவாள். அப்பா அரசு தரப்பு வக்கீல். பெண் இப்பொழுதே தன்னை அரை வக்கீல் என நினைத்துக் கொண்டுதான் வாதம் செய்வாள். துணிச்சலின் மறுபெயர் கோதை. குறிப்பாக ஒன்றும் சொல்ல முடியாதவாறு பார்வைக்கு மிகவும் சராசரியான தோற்றமுள்ள ஒரு பெண். ஆனால் தலைமை ஏற்று நடத்தும் தகுதிகள் அதிகம். அடுத்த ஸ்கூல் பீப்பிள் லீடராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவளைத் துணைக்கு அனுப்ப அதிகம் யோசிக்கத் தேவை இல்லாததால், “சரி, சீக்கிரம் போயிட்டு வாங்கம்மா” என்றார் ஸ்டெல்லா டீச்சர். லலிதா மெதுவாக, “மிஸ் நான் சலங்கையைக் கோதையிடம் கொடுத்தனுப்பி விட்டு வீட்டிலேயே இருந்துக்கவா? திருப்பி வர்றச்சே ஸ்கூல் முடிஞ்சிருக்குமே” என்றாள். அவள் ஏற்கனவே மாலையில் நடக்கப் போகும் தமிழ்ச்சங்க நிகழ்ச்சிக்கு வரமுடியாத நிலை என்று அனுமதி கேட்டிருந்ததும் டீச்சரின் நினைவிற்கு வந்தது. “நல்ல யோசனைதான், ஆனால் திரும்பி வர்றப்ப கோதை தனியால்ல வரணும். இப்ப அவளுக்கும் துணைக்கு ஒரு ஆள் அனுப்பணுமா? யாரும்மா இவங்களோட போறீங்க?” என்று கேட்டு டீச்சர் வாய் மூடவில்லை, “நான் போயிட்டு வரேன் மிஸ்” என்று ரஹமதுனிசா கிளம்பினாள். டீச்செருக்குப் பகீர் என்றது. ரஹமதுனிசா கோதை மற்றும் லலிதாவின் உற்ற தோழி. மூவரும் எங்குப் போனாலும் பிரியாமல்தான் இருப்பார்கள். ரஹமதுனிசா மிகவும் பெரிய இடத்துப் பெண். அவள் அப்பா ஜாஃபர்ஷா தெருவில் ஏற்றுமதி வியாபாரம் செய்யும் பெரிய பணக்காரர். உறையூர் பீடி, கல்கி பீடி, இஞ்சின் பீடி, ஹாட்டின் பீடி, சங்கு மார்க் லுங்கி போன்றவற்றை வாங்கி வெளிநாடுகளுக்கு மொத்தமாக விற்பனை செய்வார். அவருடைய பெண்ணை டிரைவரை நம்பி அவர்களது காரில் அனுப்பாமல், அவர் வாங்கி வாடகைக்கு விட்டிருக்கும் ரிக்க்ஷாக்களில் ஒன்றில் துணையுடன் பள்ளிக்கு அனுப்புவார். ஆட்டோவில் கூட அவள் பள்ளிக்கு வந்ததில்லை. யாரும் தனது பெண்ணைச் சுலபமாகக் கடத்திவிடக்கூடாது என்ற திட்டமோ என்னவோ. ரஹமதுனிசா ஒரு நாளுக்கு மொத்தமாக ஒரு கிலோ மீட்டார் நடந்தால்கூட அது அதிசயம்தான். இவளை அனுப்பினால் ஏதும் பெரிய இடத்து வம்பு வந்து சேருமோ என்று டீச்சருக்குத் தோன்றியது. ஆனால் அதைக் குறிப்பிட்டு வேறுபாடு காட்டி மாணவிகளுக்கு முன்பு சொல்லத் தயக்கமாக இருந்தது. “சரி சீக்கிரம் போயிட்டுப் பத்திரமா சீக்கிரமா வாங்கம்மா, வாட்ச்மேன் சூசையண்ணன் விடமுடியாதுன்னு சொன்னா, நான் ஹெச் எம்மிடம் பெர்மிஷன் சொல்லிக்குவேன்னு சொல்லுங்க, மாடிப்படியில் தட தடன்னு ஓடாதீங்க, ஸ்கூல் இன்னமும் முடியல்ல நினைப்பு வச்சுக்கோங்க” என்றார். “வாப்பா, இன்னா இவ்ளோ ஸ்லோவா இருக்க” என்றாள் ரஹமதுனிசா. அவளுக்குத் தாய்மொழி உருது, தமிழ் அவளிடம் படாதபாடு படும். வாப்பா, போப்பா என்றுதான் பேசுவாள். “இருடி இவ ஒருத்தி அவசரப்படுத்திண்டு” என்று முணுமுணுத்தவாறு தனது புத்தகங்களைச் சேகரித்து வயர் கூடைக்குள் திணித்தாள் லலிதா. தனது குடும்பப் பின்புலம், வளர்ப்புச்சூழ்நிலையால் யாரையும் வாடி போடி என்று “டீ” போட்டுத்தான் லலிதா பேசுவாள். இருவருக்குமிடையில் கோதை பேசுவது கொஞ்சம் மொட்டையாக இருக்கும். யாரையும் “டீ” போடுவது மரியாதைக் குறைவு என்று கண்டித்து வளர்க்கப் பட்டவள். எனவே, “சரி கிளம்புங்க ரெண்டு பேரும்” என்று தனது வழக்கமான முன்னின்று நடத்தும் பாணியில் பேசி அழைத்துக் கொண்டு வெளியேறினாள். டீச்சர் எதிர்பார்த்தது போலவே ஹெச் எம்மின் பெர்மிஷன் ஸ்லிப் இல்லாமல் சூசையண்ணா பள்ளி முடியும் முன் அவர்களை வெளியேற அனுமதிக்கவில்லை. ஸ்டெல்லா டீச்சர் ஹெச் எம்மிடம் எங்களுக்காகப் பெர்மிஷன் கேப்பாங்க, என்று மாணவிகள் சொன்னதும் அவர்கள் வகுப்பை அண்ணாந்து பார்த்தார். மாடி வராண்டாவில், நெட்டிலிங்க மரங்களுக்கிடையே தலையை நீட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்டெல்லா டீச்சர் அனுப்புங்க, அனுப்புங்க என்று கையால் ஜாடை காட்டினார். “இவங்க ஒருத்தங்க, ஹெச் எம் எனக்குக் கண்டிஷனா சொல்லியிருக்காங்க, இப்போ நான் அனுப்பிச்சா, யாரைக் கேட்டு செஞ்சே என் பெர்மிஷன் இல்லாம. எப்படி அனுப்பலாமின்னு ஹெச் எம் என்னையில்ல திட்டுவாங்க” என்று முணுமுணுத்தவாறு பெரிய கேட்டில் இருந்த சிறிய திட்டிவாசல் போன்ற கேட்டைத் திறந்துவிட்டார் சூசை. மாணவிகள் வெளியே வந்ததும் பேசிக்கொண்டே இடதுபுறம் திரும்பி செயின்ட் ஜோசப் சர்ச் நோக்கி நடந்தார்கள். கோதை, லலிதாவின் வேகத்திற்கு ரஹமதுனிசாவால் ஈடு கொடுத்து நடக்க முடியவில்லை. அவள் காலில் அணிந்திருந்த அவளது அத்தா சிங்கப்பூரில் இருந்து வாங்கி வந்த கலையழகுள்ள புதுச் செருப்பும் கடித்தது. அதனால் அவள் பின்தங்க ஆரம்பித்தாள். “ஏம்ப்பா, ஒன் வீடு ஆண்டார் வீதிலதான இருக்கு” “ஆமாண்டி, இப்பவே ஆரம்பிச்சுட்டியா? நடக்க முடியலையா?” “என்னம்மா பேகம், புதுச் செருப்புக் கடிக்குதோ?” என்று விளையாட்டாகக் கேட்ட கோதை லலிதாவிடம், “கொஞ்சம் மெல்லப் போ, பாவம் ரஹமதுனிசாவுக்கு நம்மைப்போல நடந்து பழக்கம் இல்லை, பாரு இப்பவே முகம் சிவந்து வேர்த்து விட்டது” என்று சொல்லி நடையை நிதானமாக்கினாள். ரஹமதுனிசா கொஞ்சம் கழுக் மொழுக் வகை. பெண்கள் எல்லோரும் நீல நிறப் பாவாடை தாவணி, வெள்ளை சட்டை அணிந்து பள்ளி வந்தால், இவள் சீருடையைத் தலைகீழாக்கி வெள்ளை நிறப் பைஜாமா, நீல நிற குர்தா அணிந்து வெள்ளைத் துப்பட்டா போட்டு வருவாள். யாரும் கிள்ளிப் பார்க்க விரும்பும் சிறிது உப்பிய கன்னம். தலை நிறைய உள்ள நீண்ட அடர்த்தியான முடியை இரட்டையாகப் பிரித்துக் குதிரைவால் போலப் போடுவாள். சுருக்கமாகச் சொன்னால், அசப்பில் “காத்திருந்த கண்களே, கதை அளந்த நெஞ்சமே” எனப் பாடி ஆடும் ஜெயலலிதா போல உடை, நிறம், சாயல், வளர்த்தி எல்லாம். பள்ளிக்குப் பின்புறம் உள்ள கோட்டை ஸ்டேஷனுக்கு இரயிலில் வந்திறங்கி பள்ளிக்கு வரும் பெருகமணி, எலமனூர், ஜீயபுரம், முத்தரசநல்லூர் போன்ற பக்கத்துக் கிராமத்துப் பெண்களோடு நிறுத்தினால் தள தள வென்று தனித்துத் தெரிவாள். அவள் காலில் தங்கக் கொலுசு போட்டிருப்பதைப் பிற மாணவிகள் அதிசயமாகப் பார்ப்பார்கள். தங்கத்த காலில் போடக்கூடாது. அது லக்ஷ்மி, மரியாதைக் கொடுக்கணும் என்றும் சிலர் சொல்லிப் பார்ப்பார்கள். மொத்தத்தில் பள்ளியில் அவள் தனித்துத் தெரிவாள். யாராவது அவளை “பம்பிளிமாஸ்” என்று கேலி செய்தால் அவள் கண்டுகொள்ள மாட்டாள். ஆனால் கோதை அவளுக்கு வக்காலத்து வாங்கிச் சாமியாடி, வக்கீல் போலப் பேசிப் பேசியே நியாயம், அநியாயம் என்று நீதி கேட்டுப் பெண்களை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவாள். கோதையின் தாக்குதலில் அகப்பட்ட பெண்களுக்கு ஹெச் எம்மின் அறைவாசலில் செய்த தவறுக்கு அரை நாள் முட்டி போடுவது கூடப் பிச்சாத்துத் தண்டனையாகத் தெரியும். ரஹமதுனிசாவைத் திட்டவோ, கோபிக்கவோ உரிமையுள்ள ஒரே உயிர் கோதை என்பது பள்ளியில் எழுதாத சட்டம். காந்தி சிலை, மெயின் கார்ட் கேட், செயின்ட் ஜோசெப் சர்ச் எனக்கடந்து, பர்மா பஜாரில் நுழைந்து, தெப்பக்குளம் அருகில் இடது பக்கம் திரும்பி வடக்கு ஆண்டார் வீதியை நோக்கி நடந்தார்கள். சிந்தாமணி சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வந்த பாப்கார்ன் வாசனை மூக்கைத் துளைத்தது. கோதை லலிதாவிடம், “லலிதா உன்னை ஒன்னு கேக்கணும்னு ரொம்ப நாளா நெனச்சேன், நீ ஏன் உன் வீட்டுப் பக்கம் இருக்கும் சாவித்திரி வித்யா சாலைக்குப் போகாம நம்ம ஸ்கூல்ல சேர்ந்தே?” என்றாள். அதன் பொருள்…. நீ ஏன் உங்க வீட்டுப் பக்கம் இருக்கும் மற்ற அய்யர் வீட்டுப் பெண்களைப் போல வீட்டின் அருகிலேயே இருக்கும் பிராமணர்கள் பள்ளியில் சேரவில்லை? ஏன் சிறிது தொலைவில் இருக்கும் கிறிஸ்துவ ஸ்கூலுக்கு வருகிறாய் என்பது. இப்படிக் கேட்பது நாகரிகமில்லை என்பது அவள் வளர்க்கப் பட்ட விதத்தினால் கற்றுக்கொண்ட பாடம். அதனால் மேலோட்டமாக நயமான வார்த்தைகளால் கேட்டாள். “ஓ… அதுவாடி, என் அப்பா அம்மா ஆக்சிடெண்டுல போன பிறகு, மாமா அவராத்துக்கு என்ன அழச்சுண்டு வந்திட்டார். நான் எங்க ஊர்ல ஒரு கான்வெண்ட் ஸ்கூல்லதான் படிச்சேன். மாமா அவாட்டே என் ட்ரான்ஸ்ஃபர் சர்டிஃபிகேட் கேக்கறச்சே, எங்க ஸ்கூல்ல ஹெச். எம்மாக இருந்த மதர் நம்ம ஸ்கூல்ல சேர்க்கச் சொல்லி, டி சி யோட நம்ம ஸ்கூல் ஹெச் எம்மிற்கு ஒரு ரெகமண்டேஷன் லெட்டரும் கொடுத்தாங்க. அதனாலேதான் வருஷ நடுவிலயும் அட்மிஷனுக்குச் சிரமப்படாம ஸ்கூல்ல சேர முடிஞ்சது. மாமாவாலயும் மறுக்க முடியல” என்றாள். கோதைக்கு அந்தப் பேச்சை அத்துடன் விட்டுவிட விருப்பமாக இருந்தது. லலிதாவின் பெற்றோர் மரணத்தைப் பற்றிய நினைவைத் தேவையில்லாமல் தூண்டிவிட்டு விட்டோமோ என்று யோசித்தாள். பேச்சை மாற்ற எண்ணி, “உன் மாமா பெண் டான்ஸ் கத்துக்கறாங்களே, நீ ஆட மாட்டியா?” என்றாள். “நான் பாட்டு கத்துண்டிருக்கேன், நேக்கு சங்கீதம்னா ரொம்ப இஷ்டம். இரண்டு பேரும் படிப்பு முடிஞ்சதும் நான் பாட அவள் அதற்கு ஆடற மாதிரி ப்ரோக்ராம் கொடுக்கத் திட்டம் போட்டிருக்கோம். இப்போகூடக் கொஞ்ச நாள்ல திருவானைக்கா கோயில்ல ஒரு ப்ரோக்ராமும், அத்திம்பேர் ஆத்துக் கல்யாணத்தில் ஒரு ப்ரோக்ராமும், எஸ். ஆர். காலஜில ஒரு ப்ரோக்ராமும் கொடுக்கப் போறோம்.” “ஏய் நீ ரொம்போ பெரிய ஆளுதாம்பா!!” “ரஹமதுனிசா சொல்றது சரி, ப்ரோக்ராம் நடக்கறப்போ சொல்லு, நானும் வந்து பாக்கறேன்.” “சரி செஞ்சுட்டாப் போறது. இதுதான் என் மாமா வீடு” என்று ஒரு வீட்டைக் காட்டினாள். வீட்டு வாசலில் முற்றத்தில் செங்காவிக் கோலம் போட்டு, பச்சை வண்ணத்தில் வாசல் கம்பிக் கதவிற்கு வண்ணம் பூசி, சிறிது பழையதான தோற்றத்துடன் அந்த வீடு இருந்தது. வாசலில் இருந்த கம்பிக் கதவின் இடுக்கு வழியே உள்ளே கையை விட்டு, தாழ்ப்பாளை நீக்கிக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள் லலிதா. நிலைப்படியில் இருந்து சற்றே சரிவாக இறங்கிய சிவப்புச் சிமிண்ட் தரையின் இருபுறமும் தூணுடன் திண்ணைகள் இருந்தன. அடுத்து அக்கால மர வேலைப்பாடு உடைய கதவும், அதனுடன் மாவிலைத் தோரணமும், குங்குமம் சந்தனம் இட்ட நிலைப்படியும் இருந்தது. வீட்டின் வாசலில் இருந்து அடுத்து ஒரு அறை, பிறகு நடுவில் மேல் பக்கம் கம்பி போட்ட முற்றம், அதில் பித்தளை அண்டா சொம்பு, மாவாட்டும் கல், பிறகு ஒரு நீண்ட நடை என்று கொல்லையில் துளசி மாடம் வரை வாசலில் இருந்தே தெரிந்தது. திண்ணையைக் கண்டதும் செருப்பைக் கழற்றி விட்டு, குடு குடு என்று ஓடி, “உஸ்… அப்பாடா” என்று பெருமூச்சு விட்டு, முகத்தைத் துப்பட்டாவால் துடைத்து விட்டு உட்கார்ந்து காலை அமுக்க ஆரம்பித்தாள் ரஹமதுனிசா. அவளது சோர்வைப் பார்த்துச் சிரித்தார்கள் கோதையும் லலிதாவும். “போங்கப்பா, சிரிக்காதீங்கப்பா, என்னால முடியல. நானு இங்கன உட்காந்துப்பேன், கொஞ்சம் தண்ணி கொடுப்பா. தாகமா இருக்கு” “இருடி, ஜலம் கொண்டு வரேன். அதோ அங்க பொஸ்தம் படிக்கறாளே அவ என் பாட்டி, தூணண்ட பூத் தொடுக்கறாளே அவள் என் மாமி” முற்றத்தில் ஒரு ஈசிச்சேரில் உட்கார்ந்து, காவிப் புடவையுடன் தலையை முக்காடு போட்டு, கண்ணாடி போட்டுக் கொண்டு ஒரு வயதான அம்மா ஆனந்தவிகடன் படித்துக்கொண்டிருந்தார். இவர்களை ஒரே ஒரு முறை மட்டும் நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் படிக்க ஆரம்பித்தார், எதுவும் பேசவில்லை. பெண்கள் கொடுத்த வணக்கத்தையும் கண்டு கொள்ளவில்லை. மாமி புன்னகையுடன் “வாங்கோம்மா, லல்லி இவாள்ளாம் உன் பிரெண்ட்ஸா, ஏண்டி சுருக்க வந்திட்ட ஸ்கூல்ல உங்கள சீக்கிரமா விட்டுட்டாளா?” என்றார். லலிதாவிற்கு லல்லி என்று வீட்டில் பெயரா என்பது போலத் தோழிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள். லலிதா உள்ளே சென்று மாமியிடம் பேசிக் கொண்டே மாலைப் பள்ளி நிகழ்ச்சிக்குச் சலங்கை வேண்டும் என்று கேட்பது அவர்களுக்குக் கேட்டது. பிறகு ஒரு சொம்பில் நீரும், மறு கையில் சலங்கைகளையும் கொண்டு வந்து கொடுத்தாள். ரஹமதுனிசா தண்ணீரை வாங்கி அண்ணாந்து மடக் மடக்கெனக் குடிக்க, கோதை தனது காலில் சலங்கைகளை வைத்து அழகு பார்த்தாள். பிறகு சலங்கைகளை ரஹமதுனிசாவிடம் கொடுத்துவிட்டுப் பாதி நீரை வாங்கிக் குடிக்க ஆரம்பித்தாள். “லல்லி” என்று உள்ளிருந்து மாமியின் குரல் கேட்டது. “சரி, நீங்க ஜலம் குடிச்சிட்டுச் சொம்பை இங்கேயே வச்சிடுங்கோ, இதோ வந்திடறேன்” அவள் உள்ளே சென்றதும் வாசல் கம்பிக் கதவைத் திறந்து கொண்டு நடுத்தர வயதில் ஒரு பெரியவர் வேகமாக உள்ளே வந்தார், நெற்றியில் பட்டை, சிவ சிவ என்று எழுதியிருந்த காவித்துண்டைப் மேலே போர்த்தி, தலையில் குடுமி வைத்திருந்தார். இவர்களைப் பார்த்து நட்புடன் சிரித்து, “வாங்கோம்மா, லலிதாம்பிகாவோட பிரெண்ட்ஸா?” என்று கேட்டு பதிலை எதிர்பார்க்காமல் வேகமாக உள்ளே சென்றுவிட்டார். பெண்கள் இருவரும் அரக்கப் பரக்க எழுந்து கும்பிட்டு, இவர்தான் லலிதாவின் மாமாவா? என்று யோசித்து “ஆமாம். மாமா” என்று சொல்லுவதா? இல்லை “ஆமாம். சார்” என்று சொல்லுவதா? என்று குழம்பியதைக் காண அவர் காத்திருக்கவில்லை. மீண்டும் வேகமாக உள்ளிருந்து அடுத்து இருந்த அறைக்கு வந்து நிலைக்கண்ணாடி பதித்த கதவுடன் இருந்த மர பீரோவைத் திறக்க முயன்றார். அது பூட்டி இருந்தது. அலமாரியின் மேல் கையால் துழாவிச் சாவியைத் தேடினார். அது கிடைக்கவிலை உள்புறம் நோக்கி “லலிதாம்பிகா, அலமாரி சாவி” என்று தந்தி மொழியில் குரல் கொடுத்தார். பிறகு இவர்களைத் திரும்பிப் பார்த்து, “மாமி பண்டிகைக்குப் பட்ஷணம் செய்திருக்கா, உங்களுக்குத் தட்டையும் சீடையும் லலிதாம்பிகா கொண்டு வந்து தருவா, சாப்பிட்டுட்டுப் போங்கோ, காஃபி குடிப்பேளா, மாமி காஃபி நன்னாயிருக்கும்” என்றார். பெண்கள் இருவரும் மாமா என்று கூப்பிடலாம் என்று இதற்குள் முடிவு செய்துவிட்டது போல, “இல்லே மாமா, காஃபி குடிக்கிற பழக்கமில்லே” என்றார்கள் கோரஸ்ஸில். “நினைச்சேன்” என்று சொல்லிய அவரிடம் சாவியைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு லலிதா வேகமாக உள்ளே ஒடத் திரும்பினாள். பெண்கள் இருவரும், “லலிதா, நாங்க கிளம்பறோம் நேரமாவுது” என்று கூறியவாறு எழுந்தார்கள். “ஒரு நிமிஷம் இருங்கடி, இதோ வர்றேன்” என்று லலிதா மீண்டும் உள்ளே ஓடினாள். மாமா அலமாரியைத் திறந்து, குடைந்து ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு கதவை மூடாமல் அப்படியே விட்டு விட்டு மீண்டும் உள்ளே அவசரமாகச் சென்றார். கோதை திண்ணையில் அமர்ந்தவாறே அந்தத் திறந்த அலமாரியின் கதவில் இருந்த நிலைக்கண்ணாடியை உற்றுப் பார்த்தாள். அதில் எதிர் சுவரில் இவர்கள் கண்களுக்கு மறைவாக மாட்டப்பட்டிருந்த ஒரு புகைப்படம் பிரதிபலித்தது. அதில் ஏழெட்டு வயது உள்ள சிறுமி ஒருத்தி ஒற்றைச்சடை பின்னிக் குஞ்சம் வைத்து, சடையில் பூவைத்துத் தைத்து, அந்தச் சடை அலங்காரம் பின்புறம் இருந்த நிலைக்கண்ணாடியில் பிரதிபலிக்குமாறு நின்று கொண்டிருந்தாள். பட்டுப் பாவாடையும் நிறைய நகைகளும் அணிந்திருந்தாள். அந்தச் சிறுமியிடம் லலிதாவின் சாயல் இருப்பது போலத் தெரிந்தது. “ஏய் இவளே, இந்தப் பொண்ணு லலிதா மாதிரி இல்ல?” “யாருப்பா?” “அதோ அந்தக் கண்ணாடியில் தெரியும் படத்தைப் பார், அந்தப் பொண்ணு.” கையில் வைத்திருந்த சலங்கையுடன் எழுந்து, படத்தை நன்றாகப் பார்க்க நிலைப்படியைத் தாண்டி ஒரு காலை வீட்டின் உள்ளே வைக்கப் போனாள் ரஹமதுனிசா. “ஏய், நில்லுடி, யார் ஒன்ன ஆத்துக்குள்ள வரச் சொன்னா?” என்று அதட்டினார் இதுவரை அவர்கள் அங்கிருப்பதையே கவனிக்காதது போலப் படித்துக் கொண்டிருந்த ஆனந்த விகடன் பாட்டி. செல்லப் பெண்ணாகவே வளர்க்கப்பட்ட பெரிய இடத்துப் பெண் ரஹமதுனிசா இந்த அதட்டலையும், அதில் இழைந்தோடிய அவமானப்படுத்தும் தொனியையும், தான் அவமரியாதை செய்யப்படும் காரணத்தையும் புரிந்து விக்கித்துப் போனாள். அவளுடைய தங்கக் கொலுசு போட்ட தூக்கிய கால் “காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே” பாடலுக்கு அபிநயம் பிடிப்பது போல் அந்தரத்திலேயே நின்றுவிட்டது. கையில் இருந்த சலங்கை கை நழுவி சிவப்புச் சிமெண்ட் நடைபாதைச் சரிவில் கிண்கிணித்தவாறு சரிந்தோடியது. பாட்டியின் குரல் கேட்டுச் சட்டென்று எகிறிய கோபத்துடன் புயல் போல வெளியேறிய கோதை, வாசலைக் கடந்து நடு வீதிக்குச் சென்றதும் திரும்பிப் பார்த்தாள். ரஹமதுனிசா இன்னமும் அப்படியே திகைத்துப்போய் நிற்பதைப் பார்த்து ஆத்திரத்துடன், “ஏய் உனக்கு அறிவில்ல, ரோஷமில்ல, வா வெளியே” என்று திட்டிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் நடந்தாள். அவள் குரல் கேட்டு அதிர்ச்சியிலிருந்து மீண்ட ரஹமதுனிசா, “ஏய்…. ஏ…. ஏய்… கோதை கொஞ்சம் இருப்பா” என்று கூவியவாறு வெளியே ஓடினாள். தவறவிட்ட சலங்கை நினைவிற்கு வர மீண்டும் உள்ளே ஓடித் தரையில் கிடந்த சலங்கைகளை எடுத்துக் கொண்டு, வழியில் கிடந்த அவளது செருப்பைக் கவனியாது மிதித்து, அதில் இருந்த அலங்கார மணிகள் அவள் காலில் குத்திப் பதம் பார்த்துவிட, வலி தாளாமல் இரண்டு நொண்டு நொண்டிவிட்டுச் செருப்பையும் சலங்கைகளையும் கைகளில் அள்ளிக் கொண்டு வெறுங்காலுடன் கோதையைத் தொடர்ந்து மூச்சிறைக்க ஓடினாள். கையில் பலகாரத் தட்டுக்களை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்த லலிதா, அவர்களைக் காணாது திகைத்து, என்ன இவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் போய் விட்டார்கள் என நினைத்தாள். பாட்டியிடம் சொல்லிக் கொண்டிருப்பார்களோ என நினைத்து. “பாட்டி அவாள்ளாம் போய் நாழியாச்சா, பட்ஷணம் கொண்டு வரதுக்குள்ளே போய்ட்டாளே” என்றாள். பாட்டியிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. லலிதாவைப் பொருட்படுத்தி நிமிர்ந்து பார்க்கவும் இல்லை. பலகாரத் தட்டுக்களைத் திண்ணையில் வைத்துவிட்டு வாசல் கம்பிக் கதவைத் தாண்டி வெளியில் வந்து, மேற்கு நோக்கி மறையத் தொடங்கிய சூரியனின் ஒளியினை மறைக்கக் கையைத் தலைக்கு மேல் வைத்து லலிதா பார்த்த பொழுது, ஆண்டார் வீதி வளைந்து திரும்பும் முக்கில் ரஹமதுனிசாவின் வெள்ளைத் துப்பட்டா காற்றில் படபடத்துப் பார்வையில் இருந்து மறைந்தது. ••••• எங்களைப் பற்றி - Free Tamil Ebooks மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள் நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும் எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. vinavu 2. badriseshadri.in 3. maattru 4. kaniyam 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948 நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். email : freetamilebooksteam@gmail.com Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? Shrinivasan tshrinivasan@gmail.com Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org Arun arun@fsftn.org இரவி Supported by Free Software Foundation TamilNadu, Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/ உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி - http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி - http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2. படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி - கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை - ஒரு அறிமுகம் http://www.kaniyam.com/introduction-to-creative-commons-licenses/ http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். நூலின் பெயர் நூல் அறிமுக உரை நூல் ஆசிரியர் அறிமுக உரை உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் நூல் - text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில். அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்? - தமிழில் காணொளி - https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் - http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !