[] []     அந்தமான் அழகு       ஏற்காடு இளங்கோ                                   அந்தமான் அழகு     ஆசிரியர் - ஏற்காடு இளங்கோ - yercaudelango@gmail.com  உரிமை : Creative Commons Attribution-NonCommercial-ShareAlike அட்டைப்படம் :  க சாந்திபிரியா gkpriya246@gmail.com  மின்னூலாக்கம் : க சாந்திபிரியா மின்னஞ்சல் : gkpriya246@gmail.com  வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   பொருளடக்கம் என்னுரை 10  1.அந்தமான் நிக்கோபார் தீவுகள் 12  வரலாறு 12  நிக்கோபார் தீவுகள் 14  அந்தமான் தீவுகள் 14  பழங்குடிகள் 16  தமிழர்கள் 20  பல்லுயிர் வளம் 21  தீவுகளுக்கு பெயர் மாற்றம் 21  ரயில் 22  போக்குவரத்து 23  சுற்றுலா 23  2.அடையாளச் சின்னங்கள் 26  அந்தமான் படாக்: 26  பின்மா மலர் 27  மரப்புறா 27  டகாங் 28  3.மிதக்கும் கப்பல் பழுதுபார்க்கும் தளம் 30  4.உயரமான சிகரம் 32  சேடல் பீக் 32  கல்போங் ஆறு 33  மின் நிலையம் 33  5.எரிமலைகள் 35  பாரன் தீவு 35  நார்கொண்டம் தீவு 37  சுற்றுலா 38  6.மரம் ஏறும் நண்டு 39  7.கடல் மீன் 42  8.மரம் ஏறும் மீன் 45  9.கடல் முள்ளெலி 47  10.கடல் ஆமைகள் 49  பேராமை 50  சிற்றாமை 50  அளுங்காமை 51  பச்சை ஆமை 52  பெருந்தலைக் கடலாமை 53  தட்டை முதுகு ஆமை 53  கெம்ஸ் ரிட்லே ஆமை 53  11.அந்தமான் கிளிகள் 55  சிவப்பு மார்பக கிளி 55  நீண்ட வாலுடைய கிளி 57  12.யானைகள் 59  இண்டர்வியூ தீவு 59  13.பவளப் பாறைகள் 61  வகைகள் 62  14.அலையாத்திக் காடுகள். 64  நிபா பனை 65  15.அபெர்தீன் கடிகாரக்கோபுரம் 67  16.மெரினா பார்க் 69  I Love India 70  போலீஸ் இசைக்குழு 71  நீர் விளையாட்டு வளாகம் 72  அபெர்தீன் படகுத்துறை 72  ராஜீவ் சிலை 73  சுனாமி நினைவிடம்: 73  அபர்தீன் போர் நினைவுச் சின்னம் 73  நடை பயிற்சி 75  17.ராஸ் தீவு 76  ராஸ் 76  சுற்றுலா 78  நேதாஜி தீவு 80  18.நார்த் பே தீவு 81  கலங்கரை விளக்கம் 82  கடற்கரை 83  நீர் விளையாட்டுகள் 84  ஸ்கூபா டைவிங் 85  ஸீ வாக்கிங் 86  ஸ்னார்கலிங் 86  டால்பின் ரைடு 87  பனானா ரைடு 87  கண்ணாடிப் படகு சவாரி 88  19.வைப்பர் தீவு 89  வைப்பர் 89  சிறைச்சாலை 91  தூக்கு 93  ஷெர் அலி 94  சுற்றுலா 95  20.அந்தமான் சிறைச்சாலை 97  செல்லுலார் ஜெயில் 98  கொடுமை 100  நினைவுச் சின்னம் 102  21.சிடியா தபு 105  சிடியா தபு உயிரியல் பூங்கா 106  உவர் நீர் முதலை 107  நண்டு உண்ணும் குரங்கு 108  பறவை நோக்குதல் 108  மலை குன்று 109  கடற்கரை 112  சூரிய அஸ்தமனம் 113  22.அந்தமான் பச்சை நிற வெண்கலப் பாம்பு 115  பச்சைப் பாம்பு 115  பச்சை நிற வெண்கலப் பாம்பு 115  உடல் 117  23.ஹேவ்லாக் தீவு 119  சுற்றுலா 120  24.பாராடங் பயணம் 123  ஜிர்காடங் 124  பயணம் 124  25.சேற்று எரிமலை 130  புதைசேற்று எரிமலை 131  பாராடங் 133  26.சுண்ணாம்புக்கல் குகை 136  பயணம் 136  27.நீல் தீவு 139  சுற்றுலா 141  28.கார்பைன் கோவ் கடற்கரை 142  பாம்பு தீவு 143  நீர் விளையாட்டுகள் 144  29.சாத்தம் ஆலை 146  இரண்டாம் உலகப் போர் 148  சுற்றுலா 149  குண்டு 149  அருங்காட்சியம் 150  30.மானிடவியல் அருங்காட்சியகம் 152  31.காந்தி பூங்கா 154  32.சமுத்ரிகா கடல் அருங்காட்சியகம் 157  நட்சத்திர மீன் 158  கடல் தாமரை 158  மெல்லுடலிகள் 159  சிப்பிகள் 160  முத்துசிப்பி 161  33.ஜோக்கர்ஸ் பார்க் 162  Reference 165  ஆசிரியர் பற்றிய குறிப்பு 166    என்னுரை   உலகமே உற்று நோக்கும் ஒரு அற்புதச் சுற்றுலாத் தலமாக அந்தமான் தீவுகள் உள்ளன. வாழ்க்கையில் ஒரு முறையேனும் அந்தமான் தீவிற்குச் சென்று வர வேண்டும். பூமியின் சொர்க்கம் என அந்தமான் தீவுகளை சிலர் கூறுகின்றனர். சொர்க்கம் என்பது எப்படிப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அந்தமான் தீவுகள் இயற்கை வளம் நிறைந்த தீவுகளைக் கொண்டுள்ளது. மனிதச் சுரண்டலுக்கு ஆட்படாத பல தீவுகள் இருக்கின்றன. எந்தப்பக்கம் சென்றாலும் கடலும், தீவுகளுமே தெரிகின்றன. நீலக்கடலுக்கு இடையே பச்சை நிறம் கொண்ட தீவுகள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. இங்கே அமைதியான மாசுபடாத, வெண்மணல் கொண்ட கடற்கரையைக் காணலாம். அரிய தாவரங்கள், விலங்குகள், பறவைகள் என பல்லுயிர் வளம் மிக்க பகுதியாக அந்தமான் தீவுகள் விளங்குகின்றன. கடற்கரை ஓரத்திலேயே பல வண்ணம் கொண்ட பவளப் பாறைகளையும், அதன் ஊடே நீந்திக் திரியும் பல வண்ண மீன்களையும் ரசிக்க ஏற்ற இடம். இயற்கை அழகோடு வரலாற்றுச் சிறப்பு மிக்க பல இடங்களும் உள்ளன. அந்தமான் பயணத்தில் முழுக்க, முழுக்க சுற்றுலா அனுபவத்தைப் பெறலாம். ஒரு வார காலம் அந்தமானில் இருந்தபோது பார்த்த இடங்கள், கேட்டுத் தெரிந்து கொண்ட விபரங்கள், படித்தவை, வீடியோவில் பார்த்தவை என அனைத்தையும் ஒன்று சேர்ந்து இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளேன். அந்தமானில் பார்க்க வேண்டிய இடங்கள் மற்றும் அங்கு செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்த நண்பர் திருமிகு.C.P.விவேக் மற்றும் அவரது மனைவி ஜிஞ்ஜி ஜார்ஜ் ஆகியோருக்கு எனது நன்றி. இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு உதவியாக இருந்த என் மனைவி திருமிகு.தில்லைக்கரசி அவர்களுக்கும், தட்டச்சு செய்து கொடுத்த திருமிகு.N.நவீன் குமார் அவர்களுக்கும் நன்றி. அத்துடன் இந்தப் புத்தகத்தை செழுமைப்படுத்தி கொடுத்த திருமிகு.சரவணமணியன் அவர்களுக்கு எனது நன்றி. மேலும் என்னுடைய 88 ஆவது புத்தகத்தை மின்னூலாக வெளியிட்ட FreeTamilebooks.com மிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.   வாழ்த்துகளுடன்   ஏற்காடு இளங்கோ         1.அந்தமான் நிக்கோபார் தீவுகள்   இந்தியாவில் 7 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. டெல்லி தேசிய தலைநகர் பகுதி, சண்டீகர், தமன்தியூ, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, புதுச்சேரி, லட்சத்தீவுகள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகியவை 7 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசினால் நிர்வகிக்கப்படுகின்றன. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளன. இவை இரண்டு தீவுக் கூட்டங்களாக அமைந்துளன. அந்தமான் மற்றும் நிக்கோபர் என்பது தனி தீவுகள் அல்ல. பல தீவுகளின் கூட்டங்கள் அவை. இந்த யூனியன் பிரதேசத்தின் தலைநகரம் போர்ட் பிளேயர் (Port Blair) ஆகும். மொத்தம் 572 தீவுகளைக் கொண்டிருந்தாலும் 38 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். இத்தீவுகள் சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றின. இத்தீவுகள் சுற்றிலும் கடல் நீரால் சூழப்பட்டுள்ளன. கடலுக்கடியில் வீற்றிருக்கும் ஒரு பெரிய மலைத் தொடரின் வெளிநீட்சிகளே இத்தீவுகளாகும். இந்தக் கடலடியில் உள்ள மலைத் தொடர் அமைப்பானது தெற்கு வடக்கே அமைந்துள்ளது. இது சுமார் 800 கி.மீ. நீளம் கொண்டுள்ளது.   வரலாறு அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சுமார் 60,000 ஆண்டுகளாக பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். வெளி உலக மக்கள் இத்தீவிற்கு சென்றது என்பது முதலாம் இராஜேந்திர சோழன் என்னும் தமிழ் சோழ அரசரின்  (1014 – 1042) காலத்தில் நடந்தது. சோழர்கள் இத்தீவைக் கடற்படைத் தளமாகப் பயண்படுத்தினர். இத்தீவுகளை தின்னமத்த தீவு என அழைத்தனர். கிபி.1050 ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்றில் இத்தீவுகளை நக்காவரம் (Nakkavaram) எனக் குறிப்பிட்டுள்ளனர். நக்கம் என்றால் அம்மணம் (Naked Land) என்று பொருள். இது கரிய நிறம் கொண்ட மனிதர்கள் நிர்வாணமாக வாழும் தீவு என்பதைக் குறிக்கும் பெயராகும். இத்தீவுகள் 17 ஆம் நூற்றாண்டில் மராட்டியப் பேரரசின் ஒரு தற்காலிகக் கப்பல் தளமாக அமைந்தது. அதன் பின்னர் டச்சுக்காரர்கள் 1755 ஆம் ஆண்டு டிசம்பர் 12 இல் இத்தீவிற்கு வந்தனர். பிறகு இத்தீவுகள் டச்சுக்காரர்களின் ஆட்சிக்குக் கீழ் வந்தது. அவர்கள் இதற்கு புதிய டென்மார்க் (New Denmark) எனப் பெயரிட்டனர். அதன் பின்னர் பிரடெரிக் தீவுகள் எனப் பெயர் மாற்றம் செய்தனர். இத்தீவுகளில் 1754 முதல் 1848 வரை தொடர்ந்து மலேரியா நோய் தாக்கியதால் தீவிலிருந்து வெளியேற முடிவு செய்தனர். நிக்கோபார் தீவுகளின் உரிமையை 1868 ஆம் ஆண்டு அக்டோபர் 16 அன்று பிரிட்டிஷ் அரசிடம் விற்றனர். 1869 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் அதனை பிரிட்டிஷ் இந்தியாவுடன் இணைத்தனர். 1872 ஆம் ஆண்டில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஒரு தலைமை கமிஷனரின் கீழ் போர்ட் பிளேயர் மூலம் இணைக்கப்பட்டது. அந்தமான் என்பதற்கு மலாய் மொழியில் அனுமன் என்பது பொருளாகும். நிகோபார் என்ற நவின பெயர் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் சூட்டப்பட்டது. நிக்கோபார் என்றால் நிர்வாண மக்கள் வாழும் இடம் என்று பொருள். இத்தீவுகளின் மொத்த நிலப்பரப்பு 8249 சதுர கிலோ மீட்டர் ஆகும். மொத்த மக்கள் தொகை 3,80,520 பேர். இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, வங்காளம், ஆங்கிலம் என பல மொழிகள் பேசும் மக்கள் வாழுகின்றனர். ஆகவே இதனை ஒரு குட்டி இந்தியா என அழைக்கின்றனர். இது 1950 ஆம் ஆண்டில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. பிறகு 1956 இல் யூனியன் பிரதேசமாக அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அறிவிக்கப்பட்டன. இங்கு ஒரு மக்களவை தொகுதி உள்ளது. துணைநிலை ஆளுநர் நிர்வாகத்தின் கீழ் அந்தமான் நிக்கோபார் தீவுகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மூன்று மாவட்டங்கள் உள்ளன.   நிக்கோபார் தீவுகள் அந்தமான் தீவுகளுக்கு தெற்கிலும், இந்தோனேசியத் தீவான சுமாத்திராவுக்கு வடமேற்கிலும் நிக்கோபார் தீவுகள் அமைந்துள்ளன. நிலப்பகுதியில் இருந்து 1300 கி.மீ தொலைவில் வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளது. இத்தீவுகளின் மொத்த நிலப்பரப்பு 1841 சதுர கிலோமீட்டர் ஆகும். மொத்தம் 22 தீவுகளைக் கொண்டுள்ளது. பெரிய நிக்கோபார், கார்ட்டா டெரசா, கார் நிககோபார், டெராசா, சிறிய நிக்கோபார் ஆகியவை முக்கியமான தீவுகளாகும். 10 தீவுகளில் மட்டும் மக்கள் வசிக்கின்றனர். தென் தீவுகள் மலைப்பாங்கானவை. வட தீவுகளில் தென்னை மரங்கள் பயிரிடப்படுகின்றன. இங்கு நான்கெளரி (Nankawri) என்னும் துறைமுகம் இருக்கிறது. இந்தியாவின் தென்கோடி என்பது இந்திரா முனையாகும். இது நிக்கோபார் தீவில் தான் உள்ளது. இத்தீவின் மிக உயரமான மலை துளியர் மலை. இதன் உயரம் 642 மீட்டர் ஆகும். நிக்கோபார் தீவில் நிக்கோபார் மாவட்டம் என்று ஒன்று மட்டுமே உள்ளது. இது 1974 ஆம் ஆண்டு உருவானது. இந்த தீவின் தலைநகரமாக கார் நிக்கோபார் செயல்படுகிறது. தீவுகளில் 65 சதவீதம் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் சோம்பன் மற்றும் நிக்கோபார் மக்கள் ஆவார்.   அந்தமான் தீவுகள் அந்தமான் தீவுகள் என்பது 550 தீவுகளைக் கொண்டது. இவற்றில் 28 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். அந்தமான் தீவில் வடக்கு மற்றும் நடு அந்தமான் மாவட்டம் மற்றும் தெற்கு அந்தமான் மாவட்டம் என இரண்டு மாவட்டங்கள் உள்ளன. இதன் தீவுகள் ஒரு சங்கிலித் தொடராக அமைந்துள்ளன. நீளம் 352 கி.மீ.,        அகலம் 51 கி.மீ., என 6408 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. தெற்கு அந்தமான் தீவு நடு அந்தமான் தீவு மற்றும் வடக்கு அந்தமான் தீவு என மூன்று பெரும் தீவுகள் ஒரு சங்கிலித் தொடர் போல் அமைந்துள்ளன. சங்கிலித் தொடர் போல் இருந்தாலும் அவற்றை கால்வாய்கள் பிரிக்கின்றன. இந்த தீவுகளை ஒட்டி நூற்றுக் கணக்கான குட்டி தீவுகள் அவற்றின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளன. தெற்கு அந்தமான் தீவில்தான் போர்ட்பிளேர் இருக்கிறது. இந்த நகரமே நிர்வாக மையமாக செயல்படுகிறது. அந்தமான் தீவுகளில் மூன்றாவது பெரிய தீவு இதுவாகும். இது 93 கி.மீ நீளமும், 31 கி.மீ அகலமும், 1348 சதுர கி.மீ பரப்பளவும் கொண் அந்தமான் தீவுகளின் மையத்தில் அமைந்துள்ள தீவு நடு அந்தமான் தீவாகும். இது 1536 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இத்தீவில் ஜாரவா பழங்குடிகள் வாழ்கின்றனர். மேலும் வங்காளி, தமிழர், மலையாளிகளும் வசிக்கினறனர் ரங்காட், பில்லிகிரவுன்ட், கடம் தாலா, பக்குல்டாட்டா, பேதாப்பூர் போன்ற நகரங்கள் இத்தீவில் உள்ளன. []     அந்தமான் தீவுகளின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள தீவுப் பகுதி வடக்கு அந்தமான் தீவு ஆகும். இதன் நிலப்பகுதி 1376 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இங்கு திக்லிப்பூர் என்னும் முக்கியமான நகரம் இருக்கிறது.   பழங்குடிகள் அந்தமான் தீவில் 6 தொல் பழங்குடி இன மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் தங்களுக்கு என தனி மொழி, கலாச்சாரம் மற்றும் பிராந்திய குழுக்களைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். அழியும் நிலையில் உள்ள மனித இனம் எனச் சொல்லும் அளவிற்கு அவர்களின் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது. நிக்கோபார் தீவில் நிக்கோபாரீஸ் என்னும் பழங்குடிகள் வாழ்கின்றனர். இவர்கள் நிக்கோபாரீஸ் எனப்படும் மொழியைப் பேசுகின்றனர். சோம்பென் (Sompen) என்னும் பழங்குடியினர் கிரேட் நிக்கோபார் தீவுகளின் வனப்பகுதியில் மறைந்து வாழ்கின்றனர். 2011 ஆம் ஆண்டில் எடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 229 பேர் மட்டுமே இருக்கிறார்கள் என அறியப்படுகிறது. அந்தமான் தீவுகளில் கிரேட் அந்தமானியர், ஒன்கே, ஜாரவா, சென்டினலி என 4 தொல் பழங்குடி இனமக்கள் வாழ்கின்றனர். இவர்களில் சில பழங்குடிகள் 60,000 ஆண்டுகளாக அந்தமான் தீவுகளில் வாழ்கின்றனர். இவர்களை பாதுகாக்கப்பட வேண்டிய பழங்குடி மக்கள் என இந்திய அரசு அறிவித்துள்ளது. அந்தமானியப் பழங்குடிகள் (Andamanese people) என்பவர்கள் 26,000 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து அந்தமான் தீவுகளில் குடியேறியவர்கள். இவர்கள் குள்ளமானவர்கள். கூட்டாக வாழும் பண்பு கொண்டவர்கள். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் 7,000 பேர் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளனர். நோய்த் தொற்றின் காரணமாக இவர்களின் எண்ணிக்கை குறைந்தது. தற்போது 400 – 500 பேர் மட்டுமே உள்ளனர். ஒன்கே (Onge) என்பவர்கள் சிறிய அந்தமான் (Little Andaman) தீவுகளில் வாழ்கின்றனர். அந்தமான் தீவுகளில் நான்காவது பெரிய தீவு இதுவாகும். 1957 ஆம் ஆண்டு முதல் இத்தீவு ஒன்கே மக்களுக்கான சிறப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் ரட்லண்ட் தீவு மற்றும் தெற்கு அந்தமானின் தென் முனையில் வாழ்கின்றனர். இவர்கள் ஒன்கே என்னும் மொழியைப் பேசுகின்றனர். இம்மொழி மிகவும் அரிதானது. 1901 ஆம் ஆண்டில் 672 ஆக இருந்த மக்கள் தொகை படிப்படியாக குறைந்தது. தற்போது 95 ஒன்கே பழங்குடியினர் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். ஜாரவா (Jarawa) பழங்குடிகள் கருமை நிறமானவர்கள். ஜாரவா என்றால் மண்ணின் மைந்தர்கள் எனப் பொருள். இவர்களின் மரபணுக்களை ஆய்வு செய்து பார்த்த போது, இந்தியர்களின் மரபணு இவர்களின் உடலில் இல்லை எனத் தெரிய வந்தது. மேலும் பசிபிக் தீவைச் சேர்ந்தவர்களின் மரபணுவே இவர்களின் உடலில் உள்ளது. ஆகவே இவர்கள் பசிபிக் தீவுகளில் இருந்தே அந்தமான் தீவிற்கு வந்தவர்கள் என உறுதியாகிறது. தெற்கு அந்தமானின் மேற்குப் பகுதி மற்றும் நடு அந்தமான் தீவில் சில இடங்களில் இவர்கள் வாழ்கின்றனர். இவர்கள் சுமார் 60,000 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வருகின்றனர். ஆங்கிலேயர்கள் குடியேற்றம் ஆரம்பித்த பிறகு ஜாரவாவின் மக்கள் தொகை குறையத் தொடங்கியது. 1789 முதல் தொற்று நோய் தாக்கி பலர் இறந்தனர். 1970 ஆம் ஆண்டில் நெடுஞ்சாலை் (Trunk Road) ஜாரவா வாழும் காடு வழியாகப் போடப்பட்டது. யாருடனும் தொடர்பு கொள்ளாமல் வாழ்ந்த இவர்கள் 1997 ஆம் ஆண்டில் வனப்பகுதியை விட்டு சாலைப் பகுதிக்கு வந்தனர். இதனால் தட்டம்மை (Measles) நோய் அவர்களுக்கு ஏற்பட்டது. மேலும் 1998 ஆம் ஆண்டிலிருந்து வெளியாட்களின் தொடர்பு மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகையின் காரணமாக இவர்களுக்கு தொற்று நோய்கள் ஏற்பட்டன. அதனால் இவர்களின் மக்கள் தொகை வெகுவாகக் குறைந்து விட்டது. தற்போது 400 பேர் மட்டுமே இருப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஜாரவாக்கள் தங்களுக்குள் ஒரு மொழியில் பேசிக்கொள்கிறார்கள். மேலாடை அணிவதில்லை. இவர்களுக்கு சிகப்பு நிறம் அதிகம் பிடிக்கும். காட்டுப் பன்றிகள் இவர்களின் முக்கியமான உணவாகும். கடலில் அம்பு எய்து மீனை வேட்டையாடுகின்றனர். பெண் ஜாரவாக்கள் கூடையில் மீனை வேட்டையாடுகின்றனர். பல வகையான மலர்களைத் தலையிலும், கழுத்திலும் அணிந்து கொள்கின்றனர். முகத்திற்கு சிவப்பு நிறத்தால் ஆன மண்ணைப் பூசிக் கொள்கிறார்கள். பன்றியின் கொழுப்பு மற்றும் ஒருவகையான சிவப்பு மண் மற்றும் வேறு சில பொருட்களை கலந்து முகப்பூச்சு மற்றும் பவுடரைத் தயாரிப்பதாகத் தெரிய வருகிறது. ஆமை, மீன், முட்டைகள், பழங்கள், சிப்பிகள் போன்றவை இவர்களின் உணவாகும். தேன் சேகரிக்கின்றனர். தேனீக்கள் கடிக்காமல் இருக்க தாவரத்தின் சாற்றைப் பயன்படுத்தி தேனீக்களை விரட்டுகின்றனர். இவர்கள் மிக சிறிய குடிசைகளில் வசிக்கிறார்கள். வேட்டையாடும் சமூகமாகவே இவர்களின் வாழ்க்கை உள்ளது. சுற்றுலாப் பயணிகள், வேட்டைக்காரர்கள் மூலம் இம்மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஜாரவா பெண்கள் பாலியல் தொல்லைக்கும் ஆளாகியுள்ளனர். ஜாரவா இனம் அழியும தருவாயில் உள்ளது. ஆகவே இவர்களை பாதுகாக்கப்பட்ட இனம் என இந்திய அரசு அறிவித்துள்ளது. ஜாரவா குடியிருப்புப் பகுதிக்குள் செல்லக் கூடாது; சாலை ஓரத்தில் வரும் ஜாரவா மக்களுக்கு உணவளிப்பது, புகைப்படம் எடுப்பது, தொல்லை தருவது, பாலியல் துன்புறுத்தல் செய்வது வாகனங்களை நிறுத்துவது ஆகிய செயல்களில் ஈடுபடக்கூடாது என பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. மீறுபவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. சென்டினல் (Sentinelese) என்னும் பழங்குடி மக்கள் தெற்கு அந்தமானில் உள்ள வடக்கு சென்டினல் தீவில் வாழ்கின்றனர். போர்ட் பிளேரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இத்தீவு உள்ளது. இது சுமார் 60 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இவர்கள் சென்டினலீஸ் என்னும் மொழியைப் பேசுகின்றனர். இந்த மொழி மற்ற அந்தமான் பழங்குடிகள் பேசும் மொழியிலிருந்து மாறுபட்டது. இவர்கள் ஆப்பிரிக்க மக்களைப் போல் உருவமும், நிறமும் கொண்டுள்ளனர். இவர்கள் சுமார் 60,000 ஆண்டுகளாக இத்தீவில் வாழ்கின்றனர். இவர்கள் வெளி உலக மக்களுடன் தொடர்பு இல்லாமல் அடர்ந்த காடுகளில் வாழ்கின்றனர். வில் அம்புகளுடன் காட்டில் உள்ள விலங்குகளை வேட்டையாடுகின்றனர். வேட்டையாடும் சமூகமாகவே இவர்கள் இருக்கின்றனர். சுமார் 350 அடி தொலைவுக்கு அப்பால் உள்ள எந்தப் பொருளையும் குறி தவறாமல் அம்பு எய்வதில் வல்லவர்களாகத் திகழ்கின்றனர்.   ஆங்கிலேயர் 1901 முதல் 1921 வரை எடுத்த கணக்கின்படி இம்மக்கள் 117 பேர் வரை வாழ்ந்தனர். எனக் கூறுகின்றனர். 1960 இல் அங்கு சென்ற மானிடவியல் அறிஞர் டி.என்.பண்டிட் என்பவரின் குழு  90 சென்டினல்கள் இருப்பதாகக் கூறியுள்ளது. அதன் பின்னர் அவர்களின் மக்கள் தொகை குறைந்து கொண்டே வந்து தற்போது 48 பேர்தான் இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் மானிடவியலர்கள் சுமார் 400 பேர் வரை இருக்கலாம் என்கிறார்கள். []   இவர்கள் வெளியாட்களைப் பார்க்க விரும்புவதில்லை. தங்கள் பகுதிக்குள் அந்நியர்கள் வருவதை விரும்புவதில்லை. தங்கள் பகுதிக்குள் நுழைந்தால் எச்சரிக்கை செய்கின்றனர். தங்கள் பகுதிக்குள் அத்துமீறி நுழைபவர்களை அம்பு எய்து கொன்றுவிடுகின்றனர். சில பத்திரிக்கைகள் சென்டினல் பழங்குடியினரை அதி பயங்கரமானவர்கள் என எழுதுகின்றனர். இவர்கள் தாங்கள் வாழும் பகுதியை தங்கள் சொந்த மண்ணாகக் கருதுகின்றனர். தங்கள் பகுதியில் யார் நுழைந்தாலும் அந்நியர்கள்தான். இவர்கள் யாருடைய நிலத்தையும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை. அவர்களை கொடூரமானவர்கள் என சித்தரிப்பது தவறு. இந்திய அரசு சென்டினல் மக்களை பழங்குடியினர் பட்டியலில் வைத்துள்ளது. அவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. அவர்கள் வாழும் தீவுக்குள் அந்நியர் நுழையத் தடை விதித்துள்ளது. அவர்கள் வாழும் வாழ்க்கை முறையிலேயே விட்டு விட வேண்டும் என அரசு கூறுகிறது. அந்தமான் நிக்கோபார் தீவு பாதுகாப்புச் சட்டம் 1956 இன் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக சென்டினல் தீவு உள்ளது. தடையை மீறி உள்ளே நுழைவது சட்டப்படிக் குற்றமாகும். அப்பகுதியில் நுழையும் அந்நியரை சென்டினல்கள் கொல்வது குற்றமாகாது. பாதுகாக்கப்பட்ட சென்டில்களுக்கு எதிராக எந்த ஒரு குற்றச் சாட்டையும் சுமத்த முடியாது. அவர்களுக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்காமல் வாழ விடுங்கள் என்றே மானிடவியலாளர்கள் கூறுகின்றனர்.   தமிழர்கள் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மக்கள் தொகையில் தமிழர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். பல மொழிகள் பேசக்கூடிய தீவாக அந்தமான் இருக்கிறது. 1951 இல் எடுத்த கணக்கின்படி 1874 தமிழர்கள் இருந்தனர். 2001 இல் எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 62,961 பேர் தமிழர்கள் உள்ளனர். இது அந்தமான் மக்கள் தொகையில் 18 சதவீதமாகும். தமிழ் கல்விக்காக 1981 ஆம் ஆண்டில் க.கந்தசாமி மற்றும் சுப.சுப்பிரமணியன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் 15 நாட்கள் நடந்தது. அதன் பலனாக 7 உயர்நிலைப் பள்ளிகளும், 10 நடுநிலைப் பள்ளிகளும், 25 துவக்கப்பள்ளிகளும் தொடங்கப்பட்டன. அந்தமான் தீவுகளில் தமிழ் உள்பட 5 கல்வி மொழிகளில் போதிக்கப்படுகிறது. அதுபோல வானொலியிலும் தமிழ் உள்ளபட 7 மொழிகள் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. இந்து, அந்தமான் முரசு மற்றும் அந்தமான் குரல் என தமிழ் இதழ்கள் வெளிவருகின்றன. தேசிய அரசியல் கட்சிகள் இருப்பது போல் தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளும் உண்டு. ரசிகர் மன்றங்களின் போஸ்டர்களையும் காணலாம். இத்தீவில் வாழும் தமிழர்களிடையே சாதிச் சங்கங்கள் இருக்கின்றன. காலண்டர்களில் சாதி சங்கத்தின் பெயர்கள் இருப்பதை நேரில் காண முடிந்தது. எங்கு வாழ்ந்தாலும் சாதிச் சங்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக தமிழர்கள் இருப்பது வேதனை தருகிறது.   பல்லுயிர் வளம் அந்தமான் தீவுகள் அடர்ந்த வனப்பகுதியைக் கொண்டுள்ளது. கடற்கரையை ஒட்டிய சதுப்புப் பகுதிகளில் மாங்குரோவ் எனப்படும் காடுகள் உள்ளன. 15 க்கும் மேற்பட்ட அலையாத்தித் தாவரங்கள் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள 12 உயிர்ப்புவியியல் மண்டலங்களில் (Biographical zone) அந்தமான் நிக்கோபார் உயிர்கோளமும் அடங்குகிறது. இயற்கை வளம் நிறைந்த இத்தீவுகளில் அரிய வகைத் தாவரங்கள், பறவைகள், விலங்குகள் காணப்படுகின்றன. சுமார் 5,500 விலங்கினங்கள் தீவுகளிலும், கடலிலும் வாழ்கின்றன. இவற்றில் 2,000 இனங்கள் இங்கு மட்டுமே வாழக்கூடியவை. இங்கு சுமார் 2,200 தாவர இனங்கள் உள்ளன. இவற்றில் 1300 இனங்கள் இத்தீவுகளைத் தவிர வேறு எங்கும் கிடையாது. குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே வாழக்கூடிய (Endernic) தாவரங்கள் மற்றும் விலங்குகள் நிறைந்திருக்கின்றன.   தீவுகளுக்கு பெயர் மாற்றம் இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியர்கள் 1942 ஆம் ஆண்டில் அந்தமானைக் கைப்பற்றினர். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அந்தமான் தீவிற்குச் சென்று 1943 ஆம் ஆண்டில் ஜிம் கானா மைதானத்தில் இந்திய தேசியக் கொடியை ஏற்றினர். பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து அந்தமான் விடுதலை அடைந்ததாக அறிவித்தார். அவர் தியாகிகள் தீவு (Shaheef dweep) மற்றும் சுயாட்சி தீவு (Swaraj dweep) என இரு தீவுகளுக்கு பெயரிட்டார். மேலும் இந்திய தேசிய ராணுவத்தின் அப்போதைய ஜெனரலாக இருந்த ஏ.டி.லோகநாதன் என்பவரை அந்தமான் ஆளுநராக நியமித்தார். பிரிட்டிஷ் படைகள் 1945 ஆம் ஆண்டில் அந்தமான் தீவுகளைக் கைப்பற்றியது. ஜப்பான் படை சரணடைந்தது. அதனால் மீண்டும் பிரிட்டிஷ் ஆட்சியே அந்தமானில் ஏற்பட்டது. அங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்து அந்தமான் மீட்கப்பட்டு அங்கு சுதந்திரக் கொடி ஏற்றிய 75 ஆவது ஆண்டு தினம் அந்தமானில் கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அந்தமான் சென்று 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 30 இல் 75 அடி உயரம் கொண்ட கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது ராஸ் தீவு – நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு எனவும், நீல் தீவு – வாஹூத் தீவு எனவும், ஹேவ்லாக் தீவு – ஸ்வராஜ் தீப் தீவு என 3 தீவுகளுக்கு பெயர் மாற்றம் செய்து அறிவித்தார்.   ரயில் அந்தமானில் ரயில் போக்குவரத்து கிடையாது. அங்கேயே பிறந்து வாழும் மக்கள் ரயிலைப் பார்த்தது கிடையாது. தற்போது தலைநகர் போர்ட் பிளேரில் இருந்து திக்லிபூர் வரை ரயில் போக்குவரத்து துவங்கிட மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது. போர்ட் பிளேயரில் இருந்து திக்லிபூர் வரை உள்ள 350 கி.மீ தூரத்தை சாலை வழியாகக் கடக்க 14 மணி நேரம் ஆகிறது. கப்பலில் பயணம் செய்தால் 24 மணி நேரம் ஆகிறது. பயண நேரத்தைக் குறைக்கவும், சுற்றுலாவை வளர்ச்சியடையச் செய்யவும் ரயில் போக்குவரத்தை ஏற்படுத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக 2413 கோடி நிதி ஒதுக்க திட்டமிட்டுள்ளனர். ரயில் பாதை அமைத்தால் அது ஜாரவா பழங்குடி மக்கள் வாழும் பகுதி வழியாகவே செல்லும். இதனால் 60,000 ஆண்டுகளாக வாழும் ஜாரவா பழங்குடி இனம் மக்கள் தொற்று நோயால் அழிந்துவிடும் ஆபத்து இருப்பதாக மானிடவியல் அறிஞர்கள் கவலைப்படுகின்றனர். 60,000 ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த போ என்னும் மொழி, அந்தமானில் தற்போது அழிந்து விட்டது. அது போலவே ஜாரவா பழங்குடி இனமக்களும் அழிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆகவே ரயில் பாதை அமைப்பது தேவையற்றது என்றே பல சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.   போக்குவரத்து போர்ட் பிளேரில் இருந்து சென்னையில் இருந்து 1200 கி.மீ. தொலைவில் போர்ட் பிளேர் உள்ளது. சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத், புது டெல்லி போன்ற நகரங்களுக்கு விமான சேவை உள்ளது. அது தவிர சிங்கபூர், மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் விமான சேவை வசதி இருக்கிறது. சென்னையில் இருந்து 2.15 மணி நேரத்தில் போர்ட் பிளேர் சென்று அடையலாம். போர்ட் பிளேரில் துறைமுகமும் உள்ளது. கப்பல் போக்குவரத்து வசதியும் உண்டு. சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா துறைமுகங்களில் இருந்து பயணிகள் கப்பல் போக்குவரத்து வசதிகள் உள்ளன. சென்னையில் இருந்து போர்ட் பிளேர் சென்றடைய 50 மணி நேரம் ஆகும். மேலும் அங்கிருந்து நிக்கோபார் தீவிற்கு செல்ல கப்பல் போக்குவரத்தும், ஹெலிகாப்டர் வசதியும் உள்ளது. பல்வேறு தீவுகளுக்குச் செல்ல சொகுசுக் கப்பல், படகு வசதிகள் இருக்கின்றன.   சுற்றுலா இந்தியாவிலிருந்து அந்தமான் தீவிற்கு செல்வதற்கு விசா தேவை இல்லை. வெளிநாட்டுப் பயணிகள் மட்டுமே விசா வாங்க வேண்டும். அந்தமானில் மொழிப் பிரச்சனையோ, உணவு பிரச்சனையோ கிடையாது. எல்லா மாநில மக்களும் இங்கு வசிக்கின்றனர். தமிழ்நாட்டில் இருக்கும் நேரத்திற்கும், அந்தமான் தீவில் உள்ள நேரத்திற்கும் வேறுபாடு இருக்கிறது. அங்கு சூரியன் காலை 5 மணிக்கும் முன்பாக உதயமாகி மாலை 5 மணிக்குள் மறைந்து விடுகிறது. அது பர்மாவின் நேரத்துடன் ஒத்துப் போகிறது. உலகமே உற்றுப் பார்க்கும் இடமாக அந்தமான் உள்ளது. நீல நிறக் கடலுக்கு இடையே பச்சை நிறத் தீவுகள் இடம் பெற்றுள்ளன. அதானல் இதனை எமரால்டு தீவுகள் என்றும் அழைக்கின்றனர். விமானத்தில் பயணம் செய்யும்போது, போர்ட் பிளேரை நெருங்கும் போது கடலில் பல தீவுகளின் அழகைக் காணலாம். இதுவே ஒரு அரிய காட்சியாக நம்மைக் கவரும். வெண்மையான கடற்கரை வெண்மையான மணல் பரப்பு. தூய்மையாக பராமரிக்கப்படுகிறது. இங்கு பவளப் பாறைகளையும், கடல் வாழ் உயிரினங்களையும் காணலாம். இயற்கை அழகு நிறைந்த தீவுகள் பல இங்கு உள்ளன. ஸ்கூபா டைவிங்கிற்கு ஏற்ற பல இடங்கள் அந்தமானில் இருக்கின்றன. வெளிநாட்டிற்கு செல்ல முடியாதவர்களுக்கு அந்தமானே வெளிநாடு போன்றது. வாழ்நாளில் ஒரு முறையாவது அந்தமான் தீவிற்குச் சென்று வர வேண்டும். பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டதாக அந்தமான் தீவுகள் உள்ளன. அந்தமான் செல்வதற்கு ஒரு திட்டமிடல் தேவை. மழைக் காலங்களில் செல்லக்கூடாது. ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை அதிக மழை பொழியும். அப்போது சுற்றிப்பார்க்க எங்கும் செல்ல முடியாது. அக்டோபர் முதல் மே மாதம் வரை சுற்றுலாக் காலம். அங்கு அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படும். கடல் கொந்தளிப்பாக இருந்தால் பல தீவுகளுக்குச் செல்ல முடியாது. குறைந்த பட்சம் ஒரு வாரம் தங்க வேண்டும். ஒரு மாதம் வரை தங்கி, சுற்றிப் பார்க்கும் அளவிற்கு பல தீவுகளும், சுற்றுலா இடங்களும் இருக்கின்றன. சுற்றுலா ஒரு தொழிலாக அங்கு மாறி வருகிறது. 2009 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 2018 ஆம் ஆண்டில் 5 லட்சம் சுற்றுலாப் பயணிகள் அந்தமான் வந்து சென்றுள்ளனர்.   2.அடையாளச் சின்னங்கள்   அந்தமான் மாநிலத்திற்கான பல்வேறு சின்னங்கள் உள்ளன. அவைகளில் சில. 1. மாநில மரம் – அந்தமான் படாக். 2. மாநில மலர் – பின்மா மலர். 3. மாநில பறவை – மரப்புறா. 4. மாநில விலங்கு – டகாங்.   அந்தமான் படாக்: அந்தமான் மாநிலத்தின் மரமாக அந்தமான் படாக் (Padauk) விளங்குகிறது. இம்மரம் 120 அடி உயரம் வரை வளரும். அந்தமான் தீவுகளில் மட்டுமே வளரக்கூடிய குறிப்பிட்ட இடவாழ் (Endermic) இனமாகும். இது மிகவும் கடினமான மரமாகும். மரத்தின் அடிப்பகுதியின் வேரானது புடைத்து நாலாபுறமும் தாங்கி நிற்கும் வகையில் அமைந்துள்ளது. இம்மரத்தின் தாவரவியல் பெயர் டிரோகார்பஸ் டால்பெர்ஜியாடஸ் (Pterocarpus delbergiodes) என்பதாகும். இது நம் ஊரில் உள்ள வேங்கை மரம் மற்றும் ஆந்திராவில் வளரும் செம்மரம் ஆகியவற்றின் பேரினத்தில் உள்ள ஒரு சிற்றினமாகும். இம்மரத்தை அந்தமான் செம்மரம் (Red wood) என்றும் அழைப்பார்கள். இம்மரம் 6 அடி விட்டம் கொண்டளவிற்கு விரி்ந்து வளரும். மையப்பகுதி அடர்ந்த நிறம் கொண்டது. அந்தமான் தீவை மட்டும் தாயகமாகக் கொண்டுள்ளது.   பின்மா மலர் []   அந்தமான் மாநிலத்தின் மலராக பின்மா (Pinma flower) செப்டம்பர் 2014 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இம்மரத்தை பெமா (Pema Tree) எனவும் அழைக்கின்றனர். இதன் தாவரவியல் பெயர் லாஜெர்ஸ்ரோமியா ஹைபோலிகா (Lagerstroemia hyploeuca) என்பதாகும். இது மிக உயரமாக வளரக் கூடிய மரம். இதன் பட்டை வெண்மை நிறம் கொண்டது. பூக்கள் மிகப் பெரிய கொத்தில் மலர்கின்றன. பூக்கள் இனம் சிவப்பு கலந்த நீலம் நிறமுடையவை. பார்ப்பதற்கு மிக அழகாகக் காட்சி தரும். ஜூலை முதல் ஆகஸ்டு மாதம் வரை பூக்கள் மலர்கின்றன. இம்மரம் அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் பரவலாக வளர்கின்றது.   மரப்புறா அந்தமான் மாநிலப் பறவை அந்தமான் மரப் புறா (Andaman wood pigeon) ஆகும். இதனை அந்தமான் புறா மற்றும் வுட் பீஜியன் (Wood pigeon) எனவும் அழைக்கின்றனர். இதன் விலங்கியல் பெயர் கொலம்பா பால்ம்போயிட்டஸ் (Columba palumboides) என்பதாகும். இவை அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் வாழ்கின்றன. []   இப்புறா 36 – 41 செ.மீ நீளம் வரை வளரும். உடல் எடை 510 – 520 கிராம் வரை இருக்கும். தலை வெண்மையாகவும், கழுத்து சில்வர் நிறத்திலும், உடல் கருமையாகவும் காணப்படும். இதன் அலகு சிகப்பு – மஞ்சளாக இருக்கும். வனப்பகுதியில் ஜோடியாகவும் அல்லது சிறு கூட்டமாகவும் வாழும். ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவிற்குப் பறந்து செல்லும். பழங்களை உண்ணும். குறிப்பாக அத்திப் பழங்களை விரும்பி உண்ணும். இந்த புறாக்களின் இனம் தற்போது மிகவும் குறைந்து வருகிறது.   டகாங் டகாங் என்கிற விலங்கு ஒரு கடல் பாலூட்டியாகும். இது கடலில் மட்டும் வாழக்கூடிய விலங்காகும். இதனைக் கடல் பசு (Sea cow), கடல் பன்றி, கடல் ஒட்டகம், கடல் கன்னி எனவும் அழைக்கின்றனர். இது பசுவைப் போன்ற தோற்றமும், பயந்த சுபாவமும் கொண்ட விலங்கு என்பதால் இதனைக் கடல் பசு என்கின்றனர். மீனவர்கள் இதனை ஆவுளியா என்கின்றனர். இதன் விலங்கியல் பெயர் டகாங் டகான் (Dugong dugon) என்பதாகும். இதனை அந்தமான் மற்றும் நிக்கோபர் மாநிலத்தின் விலங்காக அறிவித்துள்ளனர். இந்த கடல் பசுக்கள் 3 மீட்டர் நீளமும், 400 கிலோ எடை என்கிற அளவிற்கு வளர்ச்சி பெரும். சுமார் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழும். கடலில் உள்ள தாவரங்களை மட்டுமே உண்ணும். மேலும் தாவரங்களின் வேர்களையும் உண்ணும். ஒரு நாளைக்கு சுமார் 45 கிலோ எடை கொண்ட தாவரங்களைச் சாப்பிடும். பிறந்த குட்டியானது 3 அடி நீளமும் 30 கிலோ எடையும் கொண்டிருக்கும். அந்தமானில் லிட்டில் அந்தமான் தீவுகளில் இதனைக் காணலாம். இது 6 நிமிடத்திற்கு ஒரு முறை நீர் மட்டத்திற்கு வந்து மூச்சுவிட்ட பிறகு மீண்டும் கடலுக்குள் செல்லும். இதற்கு முதுகு துடுப்பு இல்லாத காரணத்தால் தண்ணீருக்கு வெளியே தாவ முடியாது. கடல் பசுவின் இறைச்சி சுவை மிக்கது. ஆகவே இதனை அதிகம் வேட்டையாடுகின்றனர். எண்ணெய், இறைச்சி, தோல் போன்றவற்றிற்காக இதனைப் பிடிக்கின்றனர். இதன் தோலை் உரித்து செருப்பு செய்கின்றனர். மருந்திற்குப் பயன்படுகிறது எனக் கூறி இதனை அதிகம் வேட்டையாடுகின்றனர். இதனால் இவ்விலங்கு மிக வேகமாக அழிந்து வருகிறது. இதனைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுப்பட்டு வருகிறது.   3.மிதக்கும் கப்பல் பழுதுபார்க்கும் தளம்   நடுக் கடலில் கப்பல்கள் பழுது அடைந்துவிட்டால் அதனைப் பழுது பார்ப்பதற்காக மிதக்கும் கப்பல் தளத்தை கடலில் அமைக்கிறார்கள். பல்வேறு நாடுகளில் இது போன்ற மிதக்கும் கப்பல் தளங்கள் உள்ளன. அதே போல் இந்தியாவிலும் ஒரு மிதக்கும் கப்பல் பழுது பார்க்கும் தளம் உள்ளது. அது அந்தமான் தீவில் உள்ள போர்ட் பிளேர் துறைமுகத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மிதக்கும் கப்பல் தளம் 1987 ஆம் ஆண்டு ரஷ்யாவிடம் இருந்து விலைக்கு வாங்கப்பட்டது. இந்தியாவில் மிதக்கும் கப்பற்கூடம் அந்தமானில் மட்டுமே உள்ளது. கடற்படைக்குச் சொந்தமான ராணுவக் கப்பல்கள் இங்கு பழுது பார்க்கப்படுகின்றன. அது தவிர அரசின் கப்பல்களும், தனியார் மற்றும் சரக்கு கப்பல்களும் இங்கு பழுது பார்க்கப்படுகின்றன. போர்க் கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென பழுதானால், அதே இடத்திற்கு இந்த மிதக்கும் கப்பல் தளத்தைக் கொண்டு சென்று பழுது பார்க்கப்படுகிறது. இதுதான் மிதக்கும் கப்பல் தளத்தின் சிறப்பு அம்சமாகும். ரஷ்யாவிடம் வாங்கிய மிதக்கும் கப்பல் தளமானது தனது ஆயுள் காலம் முடியும் நிலையில் இருந்தது. ஆகவே ஒரு புதிய மிதக்கும் கப்பல் தளத்தை உருவாக்கும் பணி சென்னையில் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 2015ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கப்பட்டது. சென்னை அருகில் உள்ள காட்டுப்பள்ளி என்னும் இடத்தில் டிட்கோ மற்றும் லார்சன் & டூப்ரோ (L&T) மூலமாகக் கட்டி முடிக்கப்பட்டது. இது உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட முதல் மிதக்கும் கப்பல் தளமாகும். இது 468 கோடி ரூபாயில் கட்டி முடிக்கப்பட்டது. இது 10,000 டன் எடை கொண்டது. []   இந்த மிதக்கும் கப்பல் பழுது பார்க்கும் தளம் இந்திய கப்பல் படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இது அந்தமானில் செயல்பட்டு வந்த மிதக்கும் கப்பல் தளத்தைப் போலவே உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு FDNI எனப் பெயரிட்டுள்ளது. இதில் பல்வேறு கூடுதல் வசதிகள் உள்ளன. இது அந்தமான் கொண்டு செல்லப்பட்டு முழுமையான செயல்பாட்டிற்கு அர்பணிக்கப்பட்டது. இந்த மிதக்கும் பழுதுபார்க்கும் கப்பல் தளத்தில் 21,600 டன் எடை கொண்ட கப்பல்களையும் பழுது பார்க்க முடியும். பல்வேறு விதமான போர்க் கப்பல்களையும் கையாள முடியும். இது கப்பல் போலவே வடிவைமக்கப்பட்டுள்ளது. கடல் பரப்பில் சென்று கொண்டிருக்கக் கூடிய சரக்குக் கப்பல், போர்க் கப்பல், பயணிகள் கப்பல் ஆகியவை பழுதடைந்தால் அதே இடத்திற்கு விரைந்து சென்று கப்பலை மீட்டு பழுது பார்க்கும் திறன் கொண்டதாக இது உள்ளது. இதனை நாம் அந்தமான் கப்பல் துறைமுகப் பகுதியில் காணலாம்.   4.உயரமான சிகரம்   அந்தமான் தீவில் மிக உயரமான சிகரம் திக்லிபூர் தீவில் (Dhiglipur) உள்ளது. போர்ட் பிளளேரில் இருந்து திக்லிபூர் 290 கி.மீ தொலைவில் உள்ளது. இது ஒரு பெரிய நகரம். இத்தீவில் 42877 மக்கள் வாழ்கின்றனர். இது வடக்கு அந்தமான் தீவில் அமைந்துள்ளது. திக்லிபூர் கடல் மட்டத்திலிருந்து 43 மீட்டர் (141அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இத்தீவில் நெல், தென்னை, வாழை, பாக்கு ஆகியவை விளைகின்றன.   சேடல் பீக் இத்தீவில் சேடல் மலை (Saddle Hill) உள்ளது. இதன் உயரமான பகுதியே சேடல் பீக் (Saddle Peak) ஆகும். இந்தச் சிகரம் கடல் மட்டத்தில் இருந்து 737 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இத்தீவில் சேடல் தேசியப் பூங்கா 1987 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் பூங்கா 32.54 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டுள்ளது. இதைச் சுற்றி பாறையால் சூழ்ந்த கடற்கரை உள்ளது. []   பசுமையான காடுகள், அரிய தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆகியவை தேசிய பூங்கா பகுதியில் காணப்படுகிறது. காட்டுப் பன்றி, நீரில் வாழும் ஓனான், உப்பு நீர் முதலை போன்ற விலங்குகள் இத்தீவில் வாழ்கின்றன. அது தவிர குறிப்பிட்ட இடவாழ் பறவைகளும் இங்கு உள்ளன. இந்தப் பூங்காவில் நன்னீர் ஏரியும் உள்ளது. இது ஒரு வெப்ப மண்டல மழைக் காடாகும். இப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடுதல், ஆடு மாடு மேய்த்தல், மரம் வெட்டுதல், விவசாயம் செய்தல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன. இங்கு அமைக்கப்பட்டுள்ள தேசியப் பூங்காவானது திக்லிபூரில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. சேடல் பீக்கானது நுழைவு வாயில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மலையேற்றத்தில் ஆர்வம் கொண்டவர்கள் இந்த சிகரத்திற்கு நடந்து செல்கின்றனர். அதற்கான வழிகாட்டிகளும் உள்ளனர். பயணிகள் வழிகாட்டியின் உதவியுடன் சேடல் சிகரத்திற்குச் சென்று வருகின்றனர். மேலும் வாகனத்தின் மூலமும் சிகரத்திற்குச் செல்லும் வசதி கிடையாது. பயணிகள் ஓய்வு எடுப்பதற்காக ஆங்காங்கே பல குடில்களும் அமைத்துள்ளனர்.   கல்போங் ஆறு அந்தமான் தீவில் ஒரே ஒரு நதி மட்டுமே உள்ளது. அது கல்போங் (Kalpong) என்னும் நதியாகும். இது சேடல் பீக்கில் உற்பத்தியாகிறது. சுமார் 35 கி.மீ நீளம் கொண்டுள்ளது. இந்த நதியின் கரையில் திக்லிபூர் அமைந்துள்ளது. திக்லிபூருக்கு தேவையான குடிநீர் சேடல் பீக் தேசிய பூங்காவில் உள்ள நன்னீர் ஏரியில் இருந்து வழங்கப்படுகிறது. இங்குள்ள பூங்காவில் 10 வற்றாத நதிகளும், 132 மழைக்கால நீர் ஓடைகளும் உள்ளன. ஆகவேதான் இத்தீவின் வனப்பகுதி பசுமையாகவும், செழிப்பாகவும் உள்ளது.   மின் நிலையம் இந்த நதியின் குறுக்கே ராக் பில் அணை (Rock Fill) உள்ளது. இது 25 மீட்டர் (82அடி) உயரம் கொண்டது. இங்கு நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின் நிலையத்தில் இருந்து 5.5 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. ஆண்டிற்கு 14.83 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தியாகிறது. அந்தமான் தீவில் உள்ள ஒரே நீர் மின் நிலையம் இதுவாகும்.   5.எரிமலைகள்   இந்தியாவில் 6 எரிமலைகள் உள்ளன. அவற்றில் மூன்று அந்தமான் தீவுகளில் இருக்கின்றன. இவற்றில் இரண்டு மட்டும் உயிர்ப்புடன் உள்ளன. மற்றவை உறங்கும் நிலையில் (Dormant volcano) உள்ள வகையைச் சேர்ந்தவை ஆகும். மகாராஷ்டிரத்தில் உள்ள எரிமலை 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சீறியது. தற்போது அழிந்த நிலையில் காணப்படுகிறது. அதே போல் குஜராத் மாநிலத்தில் தினோதர் மற்றும் அரியானா மாநிலத்தில் தோசிமலை ஆகியவையும் அழிந்த நிலையில் உள்ளன. அந்தமான் தீவுகளில் பாராடங் தீவில் சேற்று எரிமலை உள்ளது. பாரன் தீவு மற்றும் நார்கொண்டம் தீவு ஆகியவற்றில் எரிமலைகள் உள்ளன.   பாரன் தீவு அந்தமான் தலைநகரான போர்ட் பிளேரில் இருந்து 138 கி.மீ தொலைவில் பாரன் தீவு (Barren Island) உள்ளது. இது தரிசாக உள்ள தீவாகும். வடக்கு மற்றும் தெற்கு அந்தமான் மாவட்டத்தின் அதிகார வரம்பிற்குள் இத்தீவு வருகிறது. இங்கு ஒரு எரிமலை உள்ளது. இது 1.8 மில்லியன் ஆண்டுகள் வயதுடையது. அதுமட்டும் அல்லாமல் கிழக்கு ஆசியாவிலேயே விழித்திருக்கும் (Active volcano) ஒரே எரிமலை இதுவாகும். []   இங்குள்ள எரிமலை முதன் முறையாக கி.பி. 1787 ஆம் ஆண்டில் வெடித்தது என பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது 1787, 1789, 1795, 1803 – 04, 1852 ஆகிய ஆண்டுகளில் வெடித்தது. பின்னர் மீண்டும் 1991 ஆம் ஆண்டில் வெடித்தது. கிட்டதட்ட 140 ஆண்டு செயலற்று உறங்கிக் கொண்டிருந்த எரிமலை மீண்டும் வெடித்தது. 1991 ஆம் ஆண்டில் வெடித்துப் பின்னர் அது 6 மாதங்கள் தொடர்ந்து குமுறியபடியே இருந்தது. இந்த எரிமலை மீண்டும் 1994 – 95 மற்றும் 2005 – 2007 ஆகிய காலக் கட்டங்களில் வெடித்தது. சமீபத்தில் 2017 ஆம் ஆண்டு ஜனவரி 25 இல் புகை மற்றும் லாவாக் குழம்பை வெளியேற்றியது. அதன் மூலம் இந்த எரிமலை உயிர்ப்புடன் உள்ளது. எனத் தெரிய வருகிறது. மேலும் இந்தியாவில் உயிர்ப்புடன் உள்ள எரிமலை இதுவாகும். அதே சமயத்தில் இந்த எரிமலையால் எந்த ஆபத்தும் இல்லை எனக் கூறப்படுகிறது. பாரன் தீவின் மொத்தப் பரப்பளவு 8.34 சதுர கிலோ மீட்டராகும். இங்குள்ள எரிமலையின் உயரம் 353 மீட்டர் (1158 அடி) ஆகும். அதே சமயதத்தில் கடல் மட்டத்திற்கு கீழே 2250 மீட்டர் (7380 அடி) ஆழத்தில் இருந்து எழுந்துள்ளது. இது ஒரு சுழல் வடிவ எரிமலையாகும். இத்தீவில் மனிதர்கள் யாரும் வாழவில்லை. 16 இனப் பறவைகள், 51 பூச்சி இனங்கள் குறைந்தளவிலான ஆடுகள், பழந்தின்னி வெளவால்கள் மற்றும் எலிகள் மட்டுமே உள்ளன. இத்தீவிற்கு சுற்றுலா செல்கின்றனர். டிக்கட் கட்டணம் 7499 ரூபாய் வசூலிக்கிறார்கள். முன் அனுமதியுடனே செல்ல முடியும். உலகின் மிகச் சிறந்த ஸகூபா டைவிங் இடங்களுள் இதுவும் ஒன்றாகும். இங்கு பளிங்கு போன்ற தெளிவான கடல் நீர் உள்ளதால் கடல்வாழ் உயிர்களை நன்றாகக் காணலாம். பாசல்ட் (Basalt) உருவாக்கம், ஏற்கனவே ஓடிய லாவா குழம்பின் படிவம் மற்றும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் பவளத் தோட்டங்களையும் (Coral Garden) கடலில் காணலாம்.   நார்கொண்டம் தீவு நார்கொண்டம் தீவு (Narcondam Island) என்பது ஒரு சிறிய தீவாகும். இரு போர்ட் பிளேரில் இருந்து 256 கி.மீ. தொலைவில் உள்ளது. இது பர்மாவிற்கு அருகில் அதாவது 160 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. அதே சமயத்தில் இந்திய கடல் எல்லைக்கு உட்பட்டது. இது வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறது. திக்லியூர் என்னும் இடத்திலிருந்து படகு மூலம் இத்தீவிற்குப் பயணம் செய்யலாம். இத்தீவிற்கு காவல் துறையின் அனுமதியின் பேரில்தான் செல்ல முடியும். நரக குண்டம் என்னும் தமிழ் வார்த்தையில் இருந்தே நார்கொண்டம் என்னும் பெயர் தோன்றியது எனக் கூறுகிறார்கள். இத்தீவு 6.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இத்தீவில் உள்ள எரிமலையானது உறங்கும் நிலையில் (Dormant) உள்ளது. இங்கு பெரும் பகுதி வனக்காடுகளால் ஆனது. இத்தீவில் காணப்படும் சிகரம் கடல் மட்டத்திலிருந்து 710 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது அந்தமானில் உள்ள சிகரங்களில் இரண்டாவது உயரம் கொண்டது என்கிற சிறப்பைப் பெற்றுள்ளது. நார்கொண்டம் தீவில் 1983 ஆம் ஆண்டில் ஒரு கலங்கரை விளக்கம் நிறுவப்பட்டது.   சுற்றுலா இத்தீவில் 16 பேர் மட்டுமே வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே குடியிருப்பில் வாழ்ந்து வருகின்றனர். சிறிய விளைச்சல் நிலத்தில் தேங்காய் மற்றும் வாழை வளர்க்கப்படுகிறது. இந்த 16 பேரும் ஆண்கள். இவர்கள் காவலர்களாகப் பணிபுரிகின்றனர். []   வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் இங்கு அனுமதிக்கின்றனர். இத்தீவில் ஒரு வனவிலங்கு பாதுகாப்புச் சரணாலாயம் உள்ளது. இது யுனெஸ்கோவின் பாரம்பரிய இடங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இத்தீவில் நார்கொண்டம் இருவாச்சி (Narcondam Hornbill) எனப்படும் பறவைகள் உள்ளன. இவை அழிந்து வரும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இது இத்தீவில் மட்டும் (Endemic) வாழக்கூடிய அரிதான பறவை. இதனை பாதுகாக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது. இத்தீவில் பல பறவைகளைக் காணலாம். அழகான வனப்பகுதியும் உண்டு. பவளப் பாறைகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களை கண்டு மகிழலாம். அது தவிர நார்கொண்டா சிகரத்தையும் காணலாம்.   6.மரம் ஏறும் நண்டு   உலகளவில் சுமார் 850 நண்டு இனங்கள் உள்ளன. சிறியது முதல் மிகப்பெரியது வரை நண்டுகள் இருக்கின்றன. யாரும் எளிதில் பார்க்காத அறிந்திராத அதிசய நண்டு அந்தமான் தீவுகளில் உள்ளன. இதற்கு மரம் ஏறும் நண்டு (Tree climbing crab) என்று பெயர். அது தவிர கொள்ளைக்காரன் நண்டு (Robber crab), திருட்டு நண்டு, தேங்காய் நண்டு (Coconut crab) எனப் பல பெயர்கள் உண்டு. மேலும் நண்டு இனங்களிலேயே மிகப் பெரியது இதுவாகும். அதுதவிர நிலத்தில் வாழக்கூடிய முதுகெலும்பு இல்லாத உயிரினங்களில் இந்த நண்டுதான் பெரியது. இந்த வகை நண்டுகள் பசிபிக் பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. தென்னை மரங்கள் உள்ள தீவுகளில் இவற்றைக் காணலாம். தமிழ்நாட்டில் தூத்துக்குடி கடலை ஒட்டிய குருசடைத் தீவு, முயல் தீவு, அப்பா தீவு போன்ற தீவுகளிலும் இந்த நண்டுகள் உள்ளன. []   இந்த நண்டு 3 அடி நீளம் வரை வளரும். சுமார் 4 கிலோ எடை வரை பருமனாகும். இதற்கு 10 கால்களும், ஓட்டினால் ஆன உடல் அமைப்பும் உள்ளது. இதற்கு நுகரும் சக்தி அதிகம். இவை பழங்கள், கொட்டைகள் விதைகள், கடலின் கழிவுகள் மரங்களில் வாழும் சிறு பூச்சிகள் மற்றும் மரத்தின் உள்பகுதி சோறு ஆகியவற்றையும் உணவாக உண்கிறது. இந்த நண்டுகள் பல வண்ணம் கொண்டவை. இந்த நண்டுகள் தென்னை மரம் ஏறுகின்றன. மரத்தில் ஏறி தேங்காயைப் பறித்து, நாரை உறித்து, அதை உடைத்து பருப்பை உண்கிறது. அதனால்தான் இதனை தென்னை நண்டு என்கின்றனர். இளநீரைத் துவாரம் செய்தும் அதை உண்கிறது. தென்னை மரத்தில் பதுங்கியும் வாழ்கிறது. தென்னை மரம் ஏறுபவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைவதும் உண்டு. இந்த நண்டுகள் மனிதர்கள் வாழும் பகுதிக்குள் வருகின்றன. வீட்டினுள் நுழைந்தால் அங்குள்ள பாத்திரம், சட்டி போன்றவற்றை உருட்டிக் கொண்டு சென்று விடும். ஆகவேதான் இதனை திருட்டு நண்டு என செல்லமாக அழைக்கின்றனர். பெண் நண்டுகள் கடலின் ஓரத்தில் முட்டைகளை இடுகின்றன. முட்டையிலிருந்து வெளிவந்த குஞ்சுகள், சிப்பி மற்றும் சங்குகளில் ஒட்டிக் கொண்டு உயிர் வாழத் தொடங்கும். ஓரளவிற்கு வளர்ச்சி அடைந்த நண்டுகள் நிலத்தில் குழி தோண்டி அதில் தேங்காய் நார்களை மெத்தையாகப் பரப்பி அதில் வாழும். இவை பிறந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகே முழுவளர்ச்சி அடைகின்றன. அதன் பிறகே இனப் பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இந்த நண்டின் விலங்கியல் பெயர் பிர்கஸ் லேட்ரோ (Birgus Latro) என்பதாகும். தென்னை மரம் ஏறுபவர்கள் இந்த நண்டை அடித்துக் கொல்கின்றனர். இந்த நண்டின் இறைச்சியில் மருத்துவக் குணம் உண்டு எனக் கூறி இதனை வேட்டையாடுகின்றனர். அதனால் இந்த மரம் ஏறும் நண்டு இனம் அழியும் அபாயத்தில் உள்ளது. இதில் மருத்துவ குணம் கிடையாது. ஆகவே இந்த அரிய வகை நண்டை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும். அரசும் கவனம் செலுத்தி இந்த நண்டு இனத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.   7.கடல் மீன்   மீன் காட்சிச் சாலைகளில் கல் மீன்களைக் (Stone Fish) காணலாம். இது மிக முக்கியமான காட்சிப் பொருளாக மாறிவிட்டது. அந்தமான் மீன் காட்சியகத்தில் இந்த அரிய வகை மீனைக் காண முடிந்தது. பார்ப்பதற்கு கல் போலவே உள்ளது. கல் போலவே கிடக்கிறது. மீனிடம் எந்த அசைவும் இல்லை. நன்கு கவனித்தால் கண்கள் தெரியும். இது அசைவற்ற கல்போல் நீரினுள் கிடப்பதாலேயே இதற்கு கல் மீன் என்கிற பெயர் வந்தது. உலகளவில் 20 வகையான கல்மீன் இனங்கள் உள்ளன. இவை வெப்ப மண்டலக் கடல் பகுதியில் வாழ்கின்றன. இது 30 – 50 செ.மீ. நீளம் வரை வளரும். சுமார் 2 கிலோ எடை வரை வளர்ச்சியடையும். இவை கூட்டம் கூட்டமாக வாழும். பெரிய தலையும், சிறிய கண்களும் உண்டு. மீனின் உடல் கரடு, முரடாகவும், பார்ப்பதற்கு அசிங்கமாகவும் தெரியும். உடலின் மீது மருக்கள் காணப்படும். இம்மீன் பழுப்பு அல்லது சாம்பல் நிறம் கொண்டுள்ளது. ஆங்காங்கே சிகப்பு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற திட்டுகள் காணப்படும். இது வாழும் இடத்திற்கு ஏற்பவே இதன் உடலின் நிறம் இருப்பதால், எளிதில் கண்ணுக்குத் தெரியாது. மேலும் அதிகம் நீந்தாமல், சோம்பேறியாக, அசைவற்றுக் கிடக்கும். இது மிகவும் சாதுவானது. ஆனால் விஷத்தன்மை உடையது. உலகிலேயே அதிக விஷம் கொண்ட மீனாகக் கருதப்படுகிறது. []   இந்த மீனின் முதுகுப்புறத் துடுப்பானது 13 முட்களாக மாறியுள்ளன. முட்களுக்கு அடியில் சுரப்பிகள் உள்ளன. மீனை பாறை என நினைத்து மிதித்து விட்டால் முட்கள் விரிந்து, விஷம் உடலில் சென்று விடும். உடலில் விஷம் ஏறியவுடன் கடுமையான வலி ஏற்படும். வாயில் நுரை தள்ளும். திசு அழுகல் மற்றும் முடக்கு வாதம் ஏற்பட்டு உயிர் இழக்க நேரிடும். இதன் விஷம் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும். 2 – 3 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் இறப்பு ஏற்பட்டு விடும். மீனின் உடலில் இருந்து விஷம் வெளியேறி விட்டால், மீண்டும் இரண்டு வாரத்தில் சுரந்து பை நிறைந்து விடும். முத்துக் குளிப்போர் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த மீன்களால் ஆபத்து ஏற்படும். ஆகவே தடிமனான காலடிகளை அணிந்து கொள்கின்றனர். இந்த மீன் அசைவற்றுக் கிடக்கும். இதன் அருகில் இரை வந்தவுடன் அதிவேகமாக வாயைத் திறந்து, சட்டென்று பிடித்து, இரையை விழுங்கி விடும். இது தண்ணீருக்கு வெளியே வந்தால் கூட சுமார் 24 மணி நேரம் வரை உயிர் வாழும் ஆற்றல் கொண்டுள்ளது. மேலும் தண்ணீரைத் துப்பும் குணம் இதற்கு உண்டு. இந்த வகையான கல் மீன்கள் சுமார் 5 முதல் 10 ஆண்டுகள் வரை உயிர் வாழும். இந்த விஷ மீனை சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் உண்கின்றனர். இதனை வேக வைத்தால் விஷம் போய் விடும் என்கின்றனர் அவர்கள்.   8.மரம் ஏறும் மீன்   நமது உலகில் வாழும் விலங்குகளில் சில அதிசயமான ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடிய விலங்கினங்களும் உள்ளன. மீன்களில் பல அழகான மீன்கள் இருக்கின்றன. மீன்கள் தண்ணீரில் மட்டுமே வாழும். இவற்றில் ஒரு சில இன மீன்கள் மட்டுமே நீரிலும், நிலத்திலும் வாழ்கின்றன என கூறினால் ஆச்சரியப்பட்டாமல் வேறு என்ன செய்ய முடியும். அதுமட்டும் அல்லாமல் நிலத்தில் நடக்கவும் செய்கின்றன. மரத்திலும் ஏறுகின்றன. இப்படிப்பட்ட இந்த மீனிற்கு மட்ஸ்கீப்பர் (Mudskipper) என்று பெயர். உலகளவில் இவ்வகை மீன்களில் 32 இனங்கள் உள்ளன. சுமார் ஒரு அடி நீளம் வரை வாழும். உடலானது பழுப்பு, நீலம் ஆகிய நிறங்களைக் கொண்டிருக்கும். இவை மாங்குரோவ் எனப்படும். சதுப்பு நில காடுகளில் வாழ்கின்றன. இவைகளுக்குக் கால்கள் கிடையாது. ஆனாலும் மரம் ஏறுகின்றன. நடப்பதற்கும், மரம் ஏறுவதற்கும் தன்னுடைய இடுப்பு மற்றும் மார்பு துடுப்புகளைப் பயன்படுத்துகின்றன. []   இதன் தலைப்பகுதியில் விஷேசமான உறுப்பு உள்ளது. தரைக்கு வந்தவுடன் அதன் மூலம் சுவாசிக்கிறது. நீரை விட்டு வெளியே வந்து 6 – 8 மணி நேரம் தரையில் இவை வாழ்கின்றன. பெரிய கடல் அலைகள், கொந்தளிப்பு மற்றும் நீரின் சூழ்நிலை சரியில்லாத காலங்களில் இவை தண்ணீரை விட்டுத் தரைப்பகுதிக்கு வருகின்றன. அலையாத்திக் காடுகளில் உள்ள மரங்களில் ஏறுகின்றன. கடற்கரையை ஒட்டியுள்ள பாறைகளின் மீதும் நடந்து செல்கின்றன. இந்த மீன்கள் நீரிலும், நிலத்திலும் மாறி மாறி வாழும். இவை சேற்றுப் பகுதியில் குழி தோண்டி அதில் முட்டைகளை இடுகின்றன. அந்தமான் தீவுகளில் அபைஸ் ஸ்கேன்டென்ஸ் எனப்படும் மட்ஸ்கீப்பர் மீன்கள் வாழ்கின்றன. இது ஒரு அரிய வகையாகும். இப்படிப்பட்ட அரிய வகை மீன்களை காணும் போது ஒரு அதிசயத்தைக் கண்ட திருப்தி நமக்கு ஏற்படும். இப்படி ஒரு மீனைப் பார்த்தேன் என மற்றவர்களிடம் செல்லி மகிழ்ச்சி அடைய முடியும். அலையாத்திக் காடுகள் உள்ள பகுதிக்கு நீங்கள் செல்ல வாய்ப்பு கிடைத்தால் இந்த வகையான மரம் ஏறும் மீன்கள் இருக்கின்றனவா எனக் கேட்டு தெரிந்து கொண்டு அதனைக் கண்டு மகிழுங்கள். அது வாழ்க்கையில் என்றும் அழியாத ஒரு நினைவாக இருக்கும்.   9.கடல் முள்ளெலி   கடல் முள்ளெலி (Sea Urchin) என்பது கடலில் வாழும் ஒரு பிராணி. இதனை கடல் மூரை என்னும் அழைப்பார்கள். இவை கடல் நட்சத்திரத்துடன் தொடர்புடையவை. கூட்டம் கூட்டமாக வாழும். இது மிகவும் வித்தியாசமான, கோள வடிவம் கொண்ட விலங்கு. இவற்றில் ஆண், பெண் என உண்டு. இவற்றின் உடல் முழுக்க முட்களால் ஆனது. முட்கள் சிறியது முதல் பெரியது வரை உள்ளன. முட்கள் (Spiny) 3 முதல் 10 செ.மீ நீளம் வரை இருக்கின்றன. இவை கூரிய முட்களாக இருப்பதால், இதனைத் தொட முடியாது. இதன் நெருங்கிய உறவினர்களாகிய கடல் குக்கீன்கள் (Sand dollarrs) போன்றவற்றுடன் ஒட்டிக் கொண்டு வாழ்கின்றன.  இது பார்ப்பதற்கு ஊமத்தங்காய் போல் காணப்படும். இதன் உடலில் உள்ள முட்கள் அசையும். இதற்கு முகம் கீழ் நோக்கி உள்ளது. முள்ளெலி அசைந்தாலும், அசையாமல் இருந்தாலும் முகம் கீழ்நோக்கியே இருக்கும். இதன் உடல் கூடு போன்றது. கூட்டின் அடிப்பகுதியில் வாய் உள்ளது. மேற்புறத்தில் சிறிய மலவாய் உண்டு. இவைகளுக்குக் கால்கள் உண்டு. அது குழாய் வடிவத்தைக் கொண்டது. குழாய்க் கால்கள் 5 பட்டைகளாக அமைந்துள்ளது. அதில் உள்ள துளைகள் வழியாக கால்கள் வெளி வருகின்றன. கால்கள் மற்றும் முட்கள் உதவியால் நகர்ந்து செல்லும். []   இவை நீரில் முட்டை இடும். லார்வா வளர்ந்து முதிர்ச்சி அடையும். படகு மற்றும் கப்பல்களில் ஒட்டியும் வளரும். இவை கூட்டமாக வாழ்வதால் அதன் ஒட்டுமொத்த எடையால் படகு மற்றும் கப்பலின் வேகத்தைக் குறைக்கும். முட்கள் உதிர்ந்த பிறகு கூடுகள் கடற்கரையில் ஒதுங்கும். இதனை நாமப்பெட்டி என்று சொல்வார்கள். இதன் உடலில் உள்ள முட்களை மூராங்குச்சி என்பார்கள். கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்கள் சிலேட்டுப் பலகையில் எழுதுவதற்கு இதனை பல்ப்பமாகப் பயன்படுத்துகின்றனர். ஆகவே இந்தப் பிராணியைக் கடல் பல்ப்பம் என்றும் அழைக்கின்றனர். அந்தமானில் உள்ள மீன் காட்சியகத்தில் கடல் முள்ளெலியைக் காணலாம். அது தவிர மெரினா பூங்காவை ஒட்டிய படகுத் துறையின் சுவரை ஒட்டிய கீழ்ப்பகுதியில் இதனைக் காணலாம். கருமை நிறத்தில் முட்களுடன் கூடிய பந்து போன்ற உயிரியாக நமக்குத் தெரியும். இதன் விந்தையான உடல் அமைப்பு நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது.   10.கடல் ஆமைகள்   உலகில் சுமார் 275 ஆமை வகைகள் உள்ளன. இவை நிலம், நீர், நீர் - நிலம் போன்ற இடங்களில் வாழ்கின்றன. இவற்றில் 7 இனங்கள் கடலில் வாழ்கின்றன. கடலில் வாழ்வதால் இதனைக் கடல் ஆமைகள் (Sea Turtle) என அழைக்கப்படுகின்றன. கடலில் வாழ்ந்தாலும் முட்டை இடுவதற்காக கரைக்கு வருகின்றன. கடல் ஆமைகளில் சில 150 ஆண்டுகள் வரை உயிர் வாழும். ஆமைகள் சுமார் 245 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி விட்டன. டைனோசர் தோன்றுவதற்கு முன்பே ஆமைகள் இருந்தன. ஆமைகளுக்கு பற்கள் கிடையாது. தாடையே அலகாக மாறியுள்ளது. ஆமைக்கு பொதுவாக நீண்ட ஆயுள் உண்டு. இதற்கு காரணம் அதன் இதயம் நிதானமாகத் துடிப்பதே. கடலில் வாழும் ஆமைகளுக்கு அதன் கால்களே துடுப்பாக அமைந்துள்ளது. அந்தமான் தீவுகளில் கடல் ஆமைகள் உள்ளன. குறிப்பாக திக்லிபூர் தீவில் உள்ள காலிப்பூர் கடற்கரை ராஸ் தீவு, ஸ்மித் தீவுகளில் கடல் ஆமைகளைக் காணலாம். சூரியன் மறைந்த பிறகு ஆமைகள் முட்டை இடுவதற்காக கடற்கரைக்கு வந்து செல்கின்றன. அதுதவிர அந்தமானில் உள்ள லிட்டில் அந்தமான் மற்றும் வேறு சில இடங்களிலும் முட்டை இடுவதற்காக ஆமைகள் கடற்கரைக்கு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அதே இடத்திற்கு முட்டை இட வரும் அதிசயக் குணம் கொண்டுள்ளது. இவை முட்டை இட வரும் இடங்களை அந்தமான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.    பேராமை ஏழுவரி ஆமை, ஓங்கல் ஆமை மற்றும் தோல் முதுகு ஆமை (Leather Back Turtle) என பல பெயர்கள் இந்த ஆமைக்கு உண்டு. கடலில் வாழக்கூடிய ஆமைகளில் மிகப் பெரியது பேராமையாகும். இது 3 முதல் 6 அடி நீளம் வரை வளர்ச்சியடையும். உடல் எடையானது 250 – 700 கிலோ வரை இருக்கும். இந்த ஆமையின் மேல் ஓடு மென்மையான எலும்பால் ஆனது. சாம்பல் கலந்த பழுப்பு நிறமும், அதன் மீது வெள்ளைப் புள்ளிகளும் உள்ளன. பெண் ஆமை மலைக்காலத்தில் கரைக்கு வந்து, ஒரு மீட்டர் ஆழத்தில் குழி தோண்டி அதில் 80 – 100 முட்டைகளை இடும். இது கடலில் மணிக்கு 2 – 10 கி.மீ. வேகத்தில் நீந்திச் செல்லும். கடலில் 4,200 அடி ஆழம் வரை நீந்திச் செல்லும். சுமார் 30 முதல் 100 ஆண்டுகள் வரை உயிர் வாழும். இதன் விலங்கியல் பெயர் டெர்மோசிலிஸ் கோரிசியா (Dermochelys coriacea) என்பதாகும். இந்த ஆமைகளின் முட்டைகளை மனிதர்கள் சேகரித்து உண்கின்றனர். மேலும் இதன் இறைச்சிக்காக வேட்டையாடுகின்றனர். அதனால் இந்த ஆமைகள் அழியும் தருவாயில் உள்ளன. []     சிற்றாமை இது மிகச் சிறிய கடல் ஆமை. இதற்கு தலை சிறியதாக இருக்கும். இது ஆலிவ் பச்சை நிறத்தில் (Olive Coloured) இருப்பதால் ஆலிவ் ரிட்லே ஆமை (Olive Ridley Turtle) எனப் பெயரிடப்பட்டது. இது இதய வடிவம் கொண்டுள்ளது. பெண் ஆமையை இடுலி என்பர். தலை முக்கோண வடிவத்தில் இருக்கும். இந்த ஆமை 2 அடி நீளம் வரை வளரும். ஆணும், பெண்ணும் ஒரே அளவுடையது. எடை 25 – 50 கிலோ வரை இருக்கும். இந்த ஆமையின் விலங்கியல் பெயர் லெபிடோசிலிஸ் ஒலிவாசியா (Lepidochelys olivacea) என்பதாகும். கடலில் 22 –55 மீட்டர் ஆழத்தில் நீந்திச் செல்கிறது. 50 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கிறது. ஒரே சமயத்தில் 40 – 125 முட்டைகளை இடுகின்றன. நண்டுகள், மீன்கள், இறால்கள் போன்றவற்றை பிடித்து உண்கிறது. இது குறைந்து வரும் விலங்குகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.   அளுங்காமை அளுங்காமைதான் (Hawksbill Turtle) கடல் ஆமைகளிலேயே மிக அழகானது. இதன் ஓடு பழுப்பு நிறத்தில், மஞ்சள் புள்ளிகளைக் கொண்டுள்ளது. பறவை அல்லது பருந்தின் அலகு போல் அமைந்திருப்பது இதற்கு தனிச்சிறப்பு. உடல் தட்டையாகவும், ஓட்டின் விளிம்பு ரம்பம் போலவும் இருக்கும். கடல் நீரின் வெப்பநிலைக்கு ஏற்ப ஆமையின் நிறம் மாறும். இதன் விலங்கியல் பெயர் எரிட்மோசிலிஸ் இம்பிரிகேட்டா (Eretmochelys imbricate) என்பதாகும். []   பவளப் பாறைகளுக்கு இடையே இதனைக் காணலாம். இது ஒரு மீட்டர் நீளம் வரை வளரும். உடல் எடை 80 கிலோ வரை இருக்கும். 90 – 160 வரை முட்டைகளை இடும். இதன் இறைச்சி விஷத்தன்மை கொண்டுள்ளதால் யாரும் உண்பதில்லை. இருப்பினும் இதன் அழகான ஓட்டிற்காக இவை வேட்டையாடப்படுகின்றன. ஜப்பானில் மட்டும் ஆண்டிற்கு 33,000 கிலோ ஏற்றுமதி செய்யப்பட்டது. 1950 முதல் 1992 ஆம் ஆண்டு வரை மட்டும் 2 மில்லியன் ஆமைகளை ஜப்பான் ஏற்றுமதி செய்துள்ளது. 1994 ஆம் ஆண்டிலிருந்து வணிகம் செய்வதை நிறுத்தியுள்ளது. தற்போது இது அழிந்து வரும் பட்டியலில் உள்ளது.   பச்சை ஆமை பச்சை ஆமையை (Green Turtle), பச்சைக் கடல் ஆமை என அழைக்கின்றனர். இதன் ஓட்டின் அடியில் பச்சை நிற கொழுப்பு உள்ளதால் இதற்கு பச்சை ஆமை என்கிற பெயர் வந்தது. இதன் விலங்கியல் பெயர் செலோனியா மைடஸ் (Chelonia mydas) ஆகும். இதன் ஓடு இதய வடிவமும். ஆலிவ் அல்லது கருப்பு நிறமும் கொண்டது. ஓடு கெட்டியானது. இது மந்தமான உயிரினம், தனியாக வாழும். 5 அடி நீளமும், 180 கிலோ எடை அளவிற்கு வளர்ச்சி அடையும். மணிக்கு 2.5 – 3 கி.மீ வேகத்தில் நீந்தும் 2,600 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்து, கடற்கரையில் முட்டை இடும். ஒரு சமயத்தில் 100 முட்டைகள் வரை இடும். இதனை இறைச்சிக்காக வேட்டையாடுகிறார்கள். மீனவர்களின் வலையில் சிக்கியும் இறக்கின்றன. தற்போது அழிந்து வரும் இனமாக உள்ளது.   பெருந்தலைக் கடலாமை இந்த ஆமையின் தலை பெரியதாக இருக்கும். ஆகவேதான் இதை பெருந்தலைக் கடல் ஆமை (Loggerhead Sea Turtle) என்கின்றனர். இதன் விலங்கியல் பெயர் கேரீட்டா கேரீட்டா (Caretta caretta) என்பதாகும். இதற்கு உறுதியான தாடை இருக்கிறது. ஆமையின் ஓடானது மஞ்சள் முதல் பருப்பு நிறம் கலந்தது. ஓடு மிகவும் கெட்டியானது. அதாவது உலகில் வாழும் ஆமைகளில் மிக கடினமான ஓடு கொண்ட இரண்டாவது ஆமை என்கிற சிறப்பு இதற்கு உண்டு. இந்த ஆமை 2 – 5 அடி நீளமும்,   70 – 100 கிலோ எடை வரை வளர்ச்சி அடையும். ஒரே சமயத்தில் 60 முதல் 200 முட்டைகளை இடும். இதன் சராசரி ஆயுட்காலம் 67 ஆண்டுகளாகும்.   தட்டை முதுகு ஆமை இந்த ஆமையின் ஓடு தட்டையாக இருப்பதால் இதற்கு தட்டை முதுகு ஆமை (Flatback Turtle) என்று பெயர். இதன் விலங்கியல் நாட்டடர் டெப்ரஸ்சஸ் (Natator depressus) என்பதாகும். இது 76 – 96 கிலோ எடை கொண்டது. ஒரு முறை 50 முட்டைகளை இடும். இந்த ஆமை ஆஸ்திரேலியாவில் மட்டுமே வாழ்கிறது.   கெம்ஸ் ரிட்லே ஆமை கெம்ஸ் ரிட்லே ஆமை (Kemp’s Ridley Turtle) என்பது மிகச் சிறிய கடல் ஆமையாகும். இவை மெக்சிகோ வளைகுடா, அட்லாண்டிகா கடல் பகுதியில் மட்டும் வாழ்கின்றன. ரிச்சர்டு கெம்ப் (Richard Kemp) என்பவரின் நினைவாக 1906 ஆம் ஆண்டில் கெம்ஸ் ரிட்லே ஆமை எனப் பெயரிடப்பட்டது. இதன் விலங்கியல் பெயர் லெப்பிடோசிலிஸ் கெம்பி (Lepidochelys Kempii) என்பதாகும். இது 2 அடி நீளமும், 45 கிலோ எடையும் கொண்டது. இது அழிந்து வரும் பட்டியலில் உள்ளது.   11.அந்தமான் கிளிகள்   கிளிகள் பொதுவாக வெப்பமண்டல மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகளில் வாழ்கின்றன. உலகில் உள்ள 86 இனங்களில் சுமார் 372 வகையான கிளிகள் உள்ளன. மிகச் சிறியது முதல் பெரிய கிளிகளும் உண்டு. 8 செ.மீ நீளமும், 10 கிராம்  எடை கொண்ட கிளியும் உண்டு. அது தவிர ஒரு மீட்டர் நீளம் கொண்ட கிளியும், 4 கிலோ எடை கொண்ட கிளிகளும் உள்ளன. பறக்க முடியாத, தத்தி தத்தி செல்லும் கிளியும் உண்டு. கிளி 50 ஆண்டுகள் வரை உயிர் வாழும். புத்திக் கூர்மையானது. பயிற்சி கொடுத்தால் சில வார்த்தைகளை அதனால் பேச முடியும். வளைந்த அழகான அலகும், பளீர் வண்ணமும் கொண்டிருக்கும். இவைகளால் தனது மேல் அலகை மட்டுமே அசைக்க முடியும். விதைகள், பழங்கள், கொட்டைகள், பூ மற்றும் மொட்டுகளை உண்கின்றன. அதே சமயத்தில் கியா என்ற கிளி மட்டும் மாமிசம் தின்கிறது. இது ஆஸ்திரேலியாவில் வாழ்கிறது. அந்தமானில் பல்வேறு வகையான கிளிகள் வாழ்கின்றன. இருப்பினும் அவற்றில் இரண்டு அரிய வகைக் கிளிகள் உள்ளன.   சிவப்பு மார்பக கிளி அலெக்சாண்டரி பச்சைக் கிளி என்கிற கிளி இனம் உள்ளது. இது மற்ற பச்சை கிளிகளை விடப் பெரியது. ஆகவே சாதாரண கிளிகளில் இருந்து இதனை வேறுபடுத்தி காணலாம். இதனை பெரிய பச்சைக் கிளி என்பார்கள். பேரரசர் அலெக்சாண்டர் பெரிய  பச்சைக் கிளிகளை பஞ்சாப் முதல் ஐரோப்பா மற்றும் மத்திய தரைக்கடல் பிரதேசங்களில் இருந்து ஏற்றுமதி செய்தார். ஆகவேதான் இந்த பெரிய பச்சைக் கிளிகளை அலெக்சாண்டர் கிளி என அழைக்கின்றனர். []   இந்த வகை பெரியக் கிளிகளில் இருந்து சற்று மாறுபட்டு காணப்படும் கிளிதான் சிவப்பு மார்பக கிளி (Red Brested Parakeet) ஆகும். இவை பரவலாக காணப்படுகிறது. இருப்பினும் புவியியல் வேறுபாடுகளின் காரணமாக இந்த இனக் கிளிகளில் பல வேறுபாடுகள் உள்ளன. இவற்றின் மார்புப் பகுதியில் பெரிய அளவில் சிவப்பு நிறம் உள்ளது. அதனால் இதனை எளிதில் அடையாளம் காண முடிகிறது. முதன் முதலாக லின்னேயஸ் (Linneaus) என்பவர் 1758 ஆம் ஆண்டில் சைட்டாகுலா அலெக்சாண்டரி (Psittacula alexandri) என்கிற அறிவியல் பெயரை இக்கிளிகளுக்குச் சூட்டினார். இந்த அலெக்சாண்டரி இனத்தில் தற்போது 8 துணை இனங்கள் இருக்கின்றன. அதாவது கிளை இனங்கள் (Subspecies) உள்ளன. இந்தோனேசியா, தென்கிழக்கு ஆசியா, இமயமலை அடிவாரம், ஜாவா ஆகிய பகுதிகளில் பல துணை இனங்கள் உள்ளன. அதே போல் அந்தமான் தீவில் ஒரு துணை இனம் உள்ளது. அது சைட்டாகுலா அலெக்சாண்ட்ரி அபோட்டி (Psittacula alexandri abbotti) என்பதாகும். இது 1919 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கிளியானது பெரிய பச்சைக்கிளி போன்றது. இதன் மார்பு பகுதியில் மட்டும் பெரியளவில் சிவப்பு நிறம் உள்ளது. கழுத்துப்பகுதியில் சிறிய வளையம் காணப்படுகிறது. சிவப்பு மார்பு பகுதிக்குக் கீழே அடர் பச்சை நிறம் கொண்டுள்ளது. இக்கிளியை தூரத்தில் இருந்து பார்க்கும் போது நமது தேசியக் கொடி போல தெரிகிறது. அந்தமானில் காந்தி பூங்காவில் உள்ள மிக உயரமான மரங்களில் இவை இருப்பதைக் காண முடிந்தது. கிளி கத்துவதைக் கேட்டு, மரத்தைப் பார்த்த போதுதான் இது நம்ம ஊர் கிளியிலிருந்து வேறுபட்டு உள்ளது எனத் தெரிய வந்தது. இப்படி பல அதிசயங்களை நாம் அந்தமான தீவுகளில் காணலாம்.   நீண்ட வாலுடைய கிளி நீண்ட வாலுடைய கிளிகள் (Long-tailed parakeet) அந்தமான் – நிக்கோபார் தீவுகள், சுமத்ரா, போர்னியோ, மலேசிய தீப கற்பம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய பகுதிகளில் பரவலாக காணப்படுகின்றன. அந்தமான் தீவுகளில் சிகப்பு மார்பக கிளிகளுடன் இணைந்தே காணப்படும். இது ஒரு சமூக பறவை. மற்ற பறவைகளுடன் சேர்ந்தே வாழ்கிறது. அதே சமயத்தில் இக்கிளிகள் சிறு கூட்டமாக வாழ்கின்றன. []   இக்கிளியின் பறவையியல் பெயர் சைட்டாகுலா லாங்கிகாடா (Psittaculla longicauda) என்பதாகும். இதில் அங்கீகரிக்கப்பட்ட 5 துணை இனங்கள் அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் வாழ்கின்றன. அவற்றில் ஒன்று அந்தமான் நீண்ட வாலுடைய கிளி (P.longicauda tytleri) மற்றொன்று நிக்கோபர் நீண்ட வாலுடைய கிளி (P.longicauda nicobarica) என்தாகும். இக்கிளிகளுக்கு மற்ற கிளி இனங்களை விட வால் நீளமானது. இந்த வாலானது பச்சை மற்றும் நீல நிறம் கொண்டது. ஆண் கிளியின் முகம் சிகப்பு, தலைப்பகுதி கருப்பு நிறமானது. இது தொப்பி அணிந்தது போல் காட்சி தரும். ஆனால், பெண் கிளியின் தலைப்பகுதியில் கருப்பு நிறம் கிடையாது. முகம் வெளிறிய சிகப்பு நிறமுடையது. இக்கிளிகள் சதுப்பு நிலப்பகுதி, எண்ணெய் பனை தோட்டங்கள், தென்னந்தோப்பு, மற்றும் பூங்காக்கள் ஆகிய இடங்களில் வாழ்கின்றன. மேலும் விவசாயிகளின் தோட்டங்களிலும் இவற்றைக் காணலாம். இவை பொதுவாக 300 மீட்டர் உயரத்தில் காணப்படுகின்றன. பெண் கிளியானது பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 2 முதல் 4 முட்டைகளை இடுகின்றன. வனங்கள் அழிக்கப்படுவதால் இவை வாழும் பகுதிகள் பாதிப்புக்குள்ளாகிறது. சட்ட விரோதமாக, வியாபார நோக்கத்திற்காக இவை பிடிக்கப்படுகின்றன. அதனால் இவைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இக்கிளிகள் அழிய வாய்ப்புள்ள இனமாக உள்ளன. ஆகவே இந்தியாவில் கிளிகளை வளர்ப்பதோ அல்லது விற்பனை செய்வதோ சட்டப்படி குற்றமாகும்.   12.யானைகள்   அந்தமான் தீவுகளில் இயற்கையாகவே யானைகள் கிடையாது. அந்தமான் தீவுகளில் மர வேலைக்காக இந்தியாவில் சோனபூர் (Sonepur) என்னும் இடத்தில் யானைகள் விலைக்கு வாங்கப்பட்டு அங்கு கப்பல்களின் மூலம் கொண்டு செல்லப்பட்டன. யானைகளை கப்பலில் இருந்து அந்தமான் தீவுகளில் இறக்கிய புகைப்படம் சாத்தம் ஆலையின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. யானைகள் 1906 ஆம் ஆண்டு முதல் அங்கு கொண்டு செல்லப்பட்டன. வெட்டப்படும் மரங்களைத் தூக்குவதற்காக யானைகள் பயன்படுத்தப்பட்டன. மரம் வெட்டுவதற்கு எதிராக வெளிவந்த தீர்ப்பின் காரணமாக யானைகளுக்கு என சரணாலயம் ஆரம்பிக்கப்பட்டது.   இண்டர்வியூ தீவு போர்ட் பிளையரில் இருந்து 125 கி.மீ. தொலைவில் இண்டர்வியூ தீவு (Interview Island) உள்ளது. இது வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டத்தின் நிர்வாக எல்லையில் அமைந்துள்ளது. இது 99 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. கடல் மட்டத்தில் இருந்து 113 மீட்டர் உயரம் கொண்டது. இத்தீவில் வேலை செய்வதற்காக யானைகள் கொண்டு வரப்பட்டன. தற்போது அவைகளுக்கு வேலை கொடுக்கப்படுவதில்லை. இங்கு 70 – 100 வரையிலான யானைகள் உள்ளன. இத்தீவில் 1985 ஆம் ஆண்டில் வனவிலங்கு சரணாலயம் ஆரம்பிக்கப்பட்டது. 1997 ஆம் ஆண்டு முதல் இத்தீவிற்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். பறவைகள், விலங்குகள் ஆகியவை இத்தீவில் அதிகம் உள்ளன. அதைக் காண சுற்றுலாப் பயணிகள் இத்தீவிற்குச் சென்று வருகின்றனர். இத்தீவில் உள்ள கலங்கரை விளக்கம் மனிதர்களால் இயக்கப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு எடுத்த மக்கள் தொகையின் அடிப்படையில் இங்கு 16 பேர் மட்டுமே வசிக்கின்றனர். கடற்கரையைக் கண்காணிக்க போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.   13.பவளப் பாறைகள்   பவளம் என்னும் உயிரினம் கடலில் வாழ்கின்றது. இந்த உயிரினத்திற்கு பாலிப் (Polyp) என்று பெயர். இது மென்மையானது மற்றும் ஒளி ஊடுருவும் தன்மை கொண்டது. இதற்கு வாயும், உணர்வுக் கொம்புகளும் உண்டு. உணர்வுக் கொம்புகளின் மூலம் நுண்ணிய மிதவைத் தாவரங்களை பிடித்து உண்ணும். ஆபத்து ஏற்படும்போது உணர்வுக் கொம்புகள் உள்ளே இழுத்துக் கொள்ளும். இந்த உயிரினங்கள் சுண்ணாம்பு கூட்டின் மீது ஒட்டிக் கொண்டிருக்கும். இவற்றால் இடம் விட்டு இடம் நகர முடியாது. இவை குழியுடலிகள் வகுப்பைச் சேர்ந்தவை ஆகும். இந்த உயிரினங்கள் சுண்ணாம்புப் பொருளை சுரக்கின்றன. அவை படிந்து பவளப்பாறைகளாக (Coral Reefs) உருவாகின்றன. ஆயிரக்கணக்கான பவள உயிரிகளின் தொடர் நடவடிக்கையால் பவளப்பாறைகள் தோன்றுகின்றன. இதற்கு பல லட்சக் கணக்கான ஆண்டுகள் ஆகின்றன. பவளப் பாறைகள் மஞ்சள், பழுப்பு, பச்சை, கருஞ்சிவப்பு என பல வண்ணங்களில் காணப்படுகின்றன. பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கு பவளப்பாறைகள் இடமளிக்கின்றன. 25 சதவீதமான உயரினங்கள் பவளப்பாறைகளைச் சார்ந்தே வாழ்கின்றன. ஆகவேதான் பவளப்பாறைகளை கடலின் மழைக்காடுகள் என அழைக்கின்றனர். பவளப்பாறைகள் அனைத்துக் கடலிலும் வளர்வதில்லை. அவை வளர்வதற்கு குறிப்பிட்ட வெப்பநிலை, ஈரப்பதம் தேவை. அலைகள் இல்லாத கடல் மற்றும் சூரிய ஒளி நன்கு ஊடுருவக் கூடிய பகுதிகளில் மட்டுமே பவளப்பாறைகள் உருவாகின்றன. அந்தமான் தீவுகளில் அதிகளவில் பவளப்பாறைகளைக் காணலாம். []     வகைகள் பவளப்பாறைகளில் பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றிற்கு அமைப்பு மற்றும் தோற்றத்தின் அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ளது. அவற்றில் விரல் பவளம், தட்டு பவளம், காளான் பவளம், மான் கொம்பு பவளம், மூளைப்பவளம் என்பவை முக்கிய வகைகளாகும். மேலும் நீலக் கோரல், சிவப்புக் கோரல், பயர் கோரல், ஹெல்மெட் கோரல், மார்பிள் கோரல், போல்டர் கோரல் போன்றவையும் உள்ளன.   விரல் பவளம் என்பது கைவிரல் போன்ற அமைப்பு கொண்டது. தட்டு பவளம் (Plate coral) என்பது பல தட்டுகள் போல் இருக்கும். காளான் பவளம் என்பது காளான் (Mushroom) வடிவைக் கொண்டது. மான் கொம்பு (Staghorn) பவளம் என்பது பல கிளைகளைக் கொண்டது. பார்ப்பதற்கு மானின் கொம்பு போன்ற வடிவத்தில் தெரியும். இவை உடைந்தால் கூட மீண்டும் கிளை விட்டே வளரும். மூளைப் பவளம் (Brain coral) மிக அழகானது. ஆச்சரியமான வடிவம் கொண்டது. பார்ப்பதற்கு மனிதனின் மூளை போன்ற தோற்றமுடையது. மூளையில் காணப்படும் பள்ளங்களைப் போலவே இவற்றில் பல பள்ளங்கள் உள்ளன. இது மனிதனின் தலை அளவு வளர்வதற்கு 20 ஆண்டுகள் ஆகும். இது போன்ற பவளப் பாறைகளை நார்த்பே தீவு, ஹேவ்லாக் தீவு போன்ற தீவுகளில் காணலாம். கடலுக்கு அடியில் அற்புத சிற்பங்களாகத் தெரியும். இதன் ஊடே வண்ண மீன்கள் நீந்திச் செல்வதைக் காணலாம். கண்ணாடி அடித்தளம் கொண்ட படகில் பயணம் செல்லும் போது இவற்றைக் கண்டு மகிழலாம்.     14.அலையாத்திக் காடுகள்.   அலையாத்திக் காடுகளை ஆங்கிலத்தில் மாங்குரோவ் காடுகள் (Mangrove forest) என்கின்றனர். இந்த வகைக் காடுகளில் சுமார் 80க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இத்தாவரங்களை அலையாத்தித் தாவரங்கள் அல்லது கண்டல் தாவரங்கள் எனவும் அழைக்கின்றனர். கடற்ரை ஓரங்களிலும், சதுப்பு நிலங்களிலும் அலையாத்தித் தாவரங்கள் வளர்கின்றன. கடலும், நிலமும் சேருகின்ற பகுதியில் சேறு உண்டாவதுண்டு. இந்த சேற்றுப் பகுதியில் சில அடி உயரத்திற்கு நீர் நிறைந்து இருக்கும். இங்கு உள்ள நீரில் உப்பு கலந்திருக்கும். இந்த வித்தியாசமான சூழ்நிலையில் அலையாத்தித் தாவரங்கள் மற்றும் மரங்கள் வளர்கின்றன. இத்தாவரங்கள் உள்வரும் கடல் அலையைத் தடுத்து திருப்பி அனுப்புகின்றன. ஆகவேதான் இங்கு வளர்ந்துள்ள தாவரங்கள் மற்றும் மரங்கள் நிறைந்த இடத்தை அலையாத்திக் காடு என அழைக்கப்படுகிறது. அலையாத்திக் காடுகளில் சில செடிகள் முதல் 60 மீட்டர் உயர் வரை வளரக் கூடிய மரங்களும் உள்ளன. இவற்றின் வேர்கள் நீருக்கு மேலே தெரியும். மரங்கள் சாய்ந்து விடாமல் முட்டுக் கொடுப்பது போல் வேர்கள் தாங்கி நிற்கின்றன. இதனால் மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. கடல் அலையின் வேகத்தைக் கட்டுப்படுத்துகிறது. புயல் மற்றும் சுனாமியினால் ஏற்படும் அலையைத் தடுக்கக் கூடிய வகையில் அலையாத்திக் காடுகள் அமைந்துள்ளன. அலையாத்திக் காடுகளில் மிக மெதுவாக நகரும் ஆறுகள் உள்ளன. கடல் நீர் காடுகளினுள் புகும்போது அலையாத்திக் காடுகள் அதனைத் தடுக்கும் போது சிறிய நகரும் நீர் நிலை உருவாகிறது. அதன் வழியாக படகுச் சவாரி செய்கின்றனர். உலகளவில் மிகப்பெரிய அலையாத்திக்காடு சுந்தரவனத்தில் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக தமிழ்நாட்டில் உள்ள பிச்சாவரம் என்ற ஊரில் உள்ள அலையாத்திக் காடாகும். இதே போல் தமிழ்நாட்டில்  கோடியக்கரை அடுத்துள்ள முத்துப்பேட்டையிலும் அலையாத்திக் காடுகள் உள்ளன. அந்தமான் தீவுகளிலும் சதுப்பு நிலக்காடுகள் உள்ளன. கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் அலையாத்திக்காடுகள் உள்ளன. அந்தமான் தீவில் சுமார் 671 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அலையாத்திக் காடுகள் இருக்கின்றன. இந்த அலையாத்திக் காடுகள் பல்வேறு தீவுகளில் அமைந்துள்ளன.   நிபா பனை நிபா (Nipa) எனப்படும் மரமானது பனைக் குடும்பத்தைச் சேர்ந்தது. பனைக் குடும்பத்தில் சுமார் 210 பேரினங்களும், 2500 சிற்றினங்களும் உலகளவில் உள்ளன. இவற்றில் சுமார் 25 பேரினங்களும், 225 சிற்றினங்கள் மட்டும் இந்தியாவில் உள்ளன. குறிப்பாக பனைக் குடும்பத்தில் நிபா என்னும் பனை மட்டுமே சதுப்பு நிலத்தில் வளர்கிறது. இது மாங்குரோவ் காடுகளில் மட்டுமே வாழ்கிறது. ஆகவே இதனை மாங்குரோவ் பனை (Mangrove palm) என அழைக்கின்றனர். []   நிபா என்னும் பேரினத்தில் புருட்டிகேன்ஸ் (Nypa fruticans) என்னும் சிற்றினம் மட்டுமே உள்ளது. இது அரிதான பனை. அந்தமான் தீவுகளின் கடற்கரை ஓரங்களில் உள்ள சதுப்பு நிலத்தில் இதனைக் காணலாம். இதன் மரப்பகுதி சேற்றில் புதைந்துள்ளது. மிருதுவான சேற்றில் இது காணப்படுகிறது. இதன் இலை கீற்று 30 அடி நீளம் கொண்டது. பூக்கள் சேற்றுப் பகுதியிலிருந்து, தண்ணீருக்கு வெளியே வருகின்றன. ஒரே கொத்தாக, உருண்டையான பூங்கொத்தில் பூக்கள் உள்ளன. இந்த நிபா பனையானது நமது பூமியில் சுமார் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி விட்டது. அதற்கு ஆதாரமாக இதன் மகரந்தத்தூள் புதைப்படிவம் கிடைத்துள்ளது. இந்த பனை உப்பு நீரில் வாழும் தன்மை கொண்டது. இதன் விதைகள் நீரின் மூலம் பரவுகிறது. கடலில் கலக்கும் ஆறுகளின் மூலம் நிலத்தின் உள்ளபகுதிக்கும் சென்று விட்டது. அங்கு நன்னீரிலும் இவை வளர்கின்றன. மிக நெருக்கமாக சதுப்புப் பகுதிகளில் வளர்வதால் கடல் அலையின் சீற்றத்தைத் தடுக்கிறது. இந்த பனையிலிருந்து பதநீர் எடுக்கின்றனர். இதில் மிக அதிளவில் சர்க்கரை உள்ளது. புளிக்கச் செய்து எத்தனால் தயாரிக்கிறார்கள். இதன் கீற்று கூரை மேயவும், கூடைகள் பின்னவும் பயன்படுகிறது. பதநீரைக் கொண்டு இனிப்பு வகைகளும் செய்கின்றனர். பர்மாவில் இதன் மரக்கட்டைகளை தண்டவாளத்தின் குறுக்கு கட்டையாகப் பயன்படுத்துகின்றனர்.   15.அபெர்தீன் கடிகாரக்கோபுரம்   போர்ட் பிளேரின் மையப்பகுதியில் அபெர்தீன் கடிகாரக் கோபுரம் (Aberdeen Clock Tower) உள்ளது. இதனை ஒட்டி அபெர்தீன் பஜார் எனப்படும் கடை வீதிகள் பல உள்ளன. இது மிகப் பழமையான கோபுரம். பிரிட்டிஷ்காரர்களால் கட்டப்பட்டது. முதல் உலகப்போர் 1914 – 1918 வரை நடைப்பெற்றது. முதல் உலகப் போரின் போது அந்தமான் தீவைப் பாதுகாப்பதற்காக பிரிட்டிஷ் ராணுவ வீரர்களும், இந்திய ராணுவ வீரர்களும் போரில் ஈடுப்பட்டனர். தீவைப் பாதுகாக்கும் போரில் பலர் உயிரிழந்தனர். அவர்களுக்காக ஒரு நினைவிடத்தை அபெர்தீனில் உருவாக்கியுள்ளனர். []   முதலாம் உலக யுத்தம் முடிந்த பிறகு இந்த நினைவுச் சின்னம் கட்டப்பட்டது. இது சதுர வடிவம் கொண்ட தூபி (Obelish Shaped) ஆகும். இது 100  ஆண்டுகளாக அங்கு நிமிர்ந்து நின்று கொண்டிருக்கிறது. இந்த ஸ்தூபி முதலாம் உலக்ப்போரின் நினைவுச் சின்னமாகும். இது அடர்ந்த மஞ்சள் நிறம் கொண்டது. இதன் மேல்புற உச்சியின் நான்கு புறமும் கடிகாரங்கள் உள்ளன. அபெர்தீன் பஜாரில் இது ஒரு கலங்கரை விளக்கம் போல் தெரிகிறது. போக்குவரத்திற்கும் உதவுகிறது. நேரத்தை எளிதில் காண உதவுகிறது. இரவு நேரத்தில் வண்ண ஒளி விளக்கால் இந்த கோபுரம் பிரகாசமாக ஒளிர்கிறது. இது தற்போது ஒரு முக்கிய இடமாகும். இதனைச் சுற்றி பல கடைகள் உள்ளன. அருகில் ATM மற்றும் கட்டபொமமன் என்னும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹோட்டலும் இருக்கிறது. இது ஒருவர் எப்படி செல்ல வேண்டும் என்பதைக் கூறுவதற்கு உதவும் ஒரு அடையாளக் குறியீடாக அபெர்தீன் கடிகாரக் கோபுரம் உள்ளது. இது முக்கியமான இடமாக (Land mark) போர்ட் பிளேரில் கருதப்படுகிறது.   16.மெரினா பார்க்   போர்ட் பிளேரில் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் மெரினா (Marina park) உள்ளது. அபெர்தீன் கடிகார கோபுரத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. ஒருவர் 10 நிமிடத்தில் நடந்து சென்று விடலாம். மாலைப் பொழுதில் பூங்காவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதைக் காணலாம். இது ஒரு பொழுது போக்கு இடம். மாலையில் குளிர்ச்சியான கடற்காற்று வீசும். பெரியவர்கள் தங்களுடைய குடும்பத்துடன் அங்கே கூடுகின்றனர். குழந்தைகள் விளையாடுவதற்கு பல்வேறு விளையாட்டுச் சாதனங்கள் உள்ளன. []   கடற்கரையை ஒட்டி பெரிய மதில் சுவர் கட்டப்பட்டுள்ளது. அதனால் கடற்கரை அசுத்தம் செய்யப்படாத இடமாக உள்ளது. குடும்பத்துடன் அமர்வதற்கு பல்வேறு இடங்களில் இருக்கைகள் உள்ளன. மதில் சுவரில் அமர்வதற்கு ஏற்ப வசதியாக கட்டியுள்ளனர். இது ஒரு பொழுதுப் போக்கு பூங்காவாக இருந்த போதிலும், முக்கியமான பிக்னிக் இடமாகவும் உள்ளது. உள்ளூர் மக்களைத் தவிர வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளும் இங்கு ஓய்வெடுக்கிறார்கள். பூங்காவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவில் பழமையான இரண்டு பீரங்கிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்திய ராணுவத்திற்காக முதன் முதலில் விஜந்தா (Vijanta) என்னும் பீரங்கி 1963 – 65 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டது. அதில் ஒன்று காட்சிக்காக இங்கு வைக்கப்பட்டுள்ளது. இது 39 டன் எடை கொண்டது. மேலும் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பயணிக்கும்.   I Love India மெரினா பூங்காவிற்கு எதிரில் அந்தமான் கவர்னர் மாளிகை உள்ளது. இது வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இதனை ராஜ் நிவாஸ் (Raj Niwas) என அழைக்கின்றனர். மலையடிவாரத்தில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த மாளிகை கட்டப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகை 1870 ஆம் ஆண்டில் ஆங்கிலேய அரசினால் கட்டி முடிக்கப்பட்டது. இங்கு பசுமையான புல் வெளியும், அழகான மலர்த் தோட்டமும் பராமரிக்கப்பட்டு வருகிறது. கவர்னர் மாளிகையின் பின்புறம் பசுமையான புல்வெளி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மையத்தில் இந்தியாவின் வரைபடத்தை உருவாக்கி உள்ளனர். பல்வேறு வண்ணத்துடன் மாநிலங்களும் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் மையத்தில் அசோக சக்கரமும் இடம் பெற்றுள்ளது. []   இந்த வரைபடத்தின் மேல் பகுதியில் I LOVE INDIA என்று வெள்ளை எழுத்துகளால் எழுதப்பட்டுள்ளது. அதே போல் வரைபடத்தின் கீழ் பகுதியில் மேரா தேஷ் பாரத் என இந்தி மொழியிலும் எழுதியுள்ளனர். மெரினா பார்க்கை ஒட்டியுள்ள சாலைக்கு மேல்புறம் இந்த வரைபடம் உள்ளது. மெரினா பார்க்கில் இருந்து இந்த வரைப்படத்தைக் காணலாம். அற்புதமான இந்த அழகிய காட்சி காண்போரை கவர்ந்திழுக்கிறது.   போலீஸ் இசைக்குழு மெரினா பூங்காவிற்கு நாம் சனி மற்றும் ஞாயிறு மாலை 5 மணிக்குச் சென்றால் போலீஸ் பேண்ட் (Police Band) மற்றும் போலீஸ் கேளிக்கை குழு சார்பாக நடத்தப்படும் இசை மாலையைக் கண்டு ரசிக்கலாம். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் போலீஸ் குழுவினால் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மக்களிடம் நல்லுறவை வளர்க்கவும், மக்கள் போலீஸூடன் நட்பு ரீதியாக அணுகலாம் என்கிற நோக்கத்துடனும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அது தவிர பல்வேறு சமூகப் பிரச்சனைகளைப் பற்றிய விழிப்புணர்வையும் இந்த நிகழ்ச்சி மூலம் ஏற்படுத்துகின்றனர். சமூகப் பிரச்சனைகள், தேச பக்திப் பாடல்கள், நாடகங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் இதில் இடம் பெறுகின்றன. இந்த நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்கிறது. []     நீர் விளையாட்டு வளாகம் ராஜீவ் காந்தி நீர் விளையாட்டு வளாகம் ஒன்று மெரினா பார்க்கில் உள்ளது. இதன் உள்ளே மீன் அருங்காட்சியகம் உள்ளது. இதில் பல வகையான மீன்கள், ஆமைகள், உள்ளன. இது ஒரு சுற்றுலாத் தலம். பல்வேறு மீன்களையும் அதன் வாழ்க்கையையும் காணலாம். கடல் சார்ந்த கல்வியை கற்கும் இடமாக இது உள்ளது. குழந்தைகள் கண்டு மகிழக் கூடிய வகையில் அமைக்கப்பட்ட காட்சிக் கூடமாக இது விளங்குகிறது. அதுதவிர, பல்வேறு நீர் விளையாட்டுகள் இங்கு உள்ளன.   அபெர்தீன் படகுத்துறை அபெர்தீன் ஜெட்டி (Aberdeen Jetty) என இதனை அழைக்கின்றனர். ராஸ் தீவிற்கும், நார்த்பே தீவிற்கும் இங்கிருந்து படகுகள் செலுத்தப்படுகின்றன. இது நீர் விளையாட்டு வளாகத்தின் ஒரு பகுதியாகும். படகில் பயணம் செய்வதற்கு டிக்கட் இங்கு வழங்கப்படுகிறது. டிக்கட்டில் எந்தப் படகில் பயணம் செய்ய வேண்டும் என தெளிவாகக் குறிப்பிடப்படுகிறது. படகு புறப்படும் நேரமும் அந்த படகில் பயணம் செய்பவர்களின் பெயரும் அறிவிக்கப்படுகிறது. பயணம் செய்பவர்கள் எந்த குழப்பமும் அடையாமல் பயணிக்கலாம். இங்கு சரியான திட்டமிடல் பின்பற்றப்படுகிறது. []     ராஜீவ் சிலை அபெர்தீ்ன் படகுத்துறைக்கு அருகில் ராஜீவ் காந்தியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. பாரம்பரிய நீண்ட தளர்ச்சியான சட்டை அணிந்தும், கையில் மாலையை தூக்கி வீசுவது போல் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு அன்பை வழங்குவதற்கான அடையாளச் சின்னமாக காட்சி தருகிறது. இது ஒரு அழகிய காட்சியாகத் தெரிகிறது. ஏனெனில் சிலை கடலுக்கு மேலே வட்டமான மேடையில் அமைந்துள்ளது. இதற்கு கீழே அழகான மீன்கள் நீந்திக் கொண்டிருக்கின்றன. எதிர்புறத்தில் ராஸ் தீவு பின்புலமாக அமைந்துள்ளது.   சுனாமி நினைவிடம்: அபெர்தீன் படகுத்துறை பகுதியில் சுனாமி நினைவிடம் (Tsunami Memorial) உள்ளது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று சுனாமி பேரலை தாக்கியது. இந்த பேரலை 33 அடி உயரம் எழுந்து தாக்கியது. இதனால் சுமார் 2,000 பேர் உயிரிழந்தனர். 40,000 பேர் வீடுகளை இழந்தனர் சுமார் 4,000 குழந்தைகள் அனாதையானார்கள். தீவுகளில் புதியதாகக் குடியேறியவர்களே அதிகம் இறந்தனர். பல தலைமுறையாக வாழ்பவர்களுக்கு பாதிப்பு குறைவாகவே இருந்தது. இந்த சுனாமி தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் விளக்கு ஒளியில் நினைவிடம் பிரகாசமாகத் தெரிகிறது. வெகு தூரத்தில் இருந்து பார்த்தால் கூட நினைவிடம் தெரிகிறது. இரவு நேரத்தில் இந்த இடத்தில் அமர்ந்து ஓய்வு எடுக்கின்றனர்.   அபர்தீன் போர் நினைவுச் சின்னம் மெரினா பூங்காவில் சுனாமி நினைவுச் சின்னத்திற்கு நேர் எதிரில் அபெர்தீன் போர் நினைவுச் சின்னம் (Memorial for the Battle of Aberdeen) அமைக்கப்பட்டுள்ளது. அந்தமான் தீவை பிரிட்டிஷ்காரர்களால் ஆக்கிரமிப்பு செய்தபோது அவர்களை எதிர்த்துப் போரிட்டு உயிர் நீத்த பழங்குடி இனத்தவருக்காக எழுப்பப்பட்ட நினைவுச் சின்னம். அந்தமான் தீவில் நடந்த அபெர்தீன் போர் என்பது வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. []   இந்தியாவில் ஏற்பட்ட சிப்பாய் புரட்சியின் காரணமாக அந்தமானில் கைதிகளுக்காக சிறைச்சாலையும், காலனியும் உருவாக்க ஆங்கிலேய அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில் 1858 ஆம் ஆண்டில் கைதிகளுடன் அந்தமானில் இறங்கினார்கள். 1857 ஆம் ஆண்டில் நடந்த முதல் சுதந்திரப் போராட்டத்தில் துத்னாத் திவாரி (Dudhnath Tewari) என்பவரும் கலந்து கொண்டார். அவரின் கைதி எண் 276. அந்தமான் தீவிற்கு கொண்டு சென்ற கைதிகளில் அவரும் ஒருவராவார். ராஸ் தீவில் காலனி அமைக்கும் வேலைகளை கைதிகள் செய்து வந்தனர். அப்போது துத்னாத் திவாரி மற்றும் 90 கைதிகளுடன் 1858 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தப்பிச் சென்றார். அவர்களில் திவாரி மட்டும் அந்தமான் பழங்குடி மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அடைக்கலம் தரப்பட்டார். ராஸ் தீவில் உள்ள மரங்களையும், வனத்தையும் அழிப்பதை பழங்குடியினரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆகவே போர் தொடுக்கத் திட்டமிட்டனர். இதனை அறிந்த திவாரி அங்கிருந்து புறப்பட்டு, காலனியின் கண்காணிப்பாளர் டாக்டர் ஜே.பி.வாக்கர் (J.P.Walker) என்பவரிடம் நடக்கப் போகும் தாக்குதலை தெரிவித்தார். அப்போது திவாரி கைது செய்யப்பட்டார். பழங்குடி மக்கள் வில், அம்பு, ஈட்டி, கத்தி போன்ற ஆயுதங்களுடன் 1859 ஆம் ஆண்டு ஏப்ரல 6 மற்றும் 14 ஆகிய தினங்களில் தாக்குதல் தொடுத்து பலரைக் கொன்றனர். மீண்டும் ஒரு யுத்தத்தை மே 17இல் நடத்தினர். பழங்குடிகளில் இரு பிரிவினர் ஒன்று சேர்ந்து இரண்டு பகுதிகளில் இருந்து புறப்பட்டு அட்லாண்டா முனையில் இருந்து அபெர்தீனைத் தாக்கினர். வில், அம்பு, ஈட்டி, கத்தி ஆகியவற்றைக் கொண்டு போரில் ஈடுப்பட்டனர். படகில் இருந்து கடலில் குதித்தவர்களில் விலங்கிடப்படாதவர்களை மட்டும் கொன்றனர். அதே சமயத்தில் பிரிட்டிஷ் கடற்படையினர் துப்பாக்கியால் பழங்குடியினரைச் சுட்டுக் கொன்றனர். இதில் பலர் இறந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். அதன் பின்னர் பழங்குடியினர் பின் வாங்கினர். மீண்டும் யுத்தம் செய்யவில்லை. இந்த அபெர்தீன் போரில் இறந்த பழங்குடி வீரர்களுக்காக எழுப்பபட்டதுதான் இந்த நினைவுச் சின்னம்.   நடை பயிற்சி மெரினா பூங்காவில் மாலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்கள். கடலின் மீது ஒரு பாலம் ராஜீவ் காந்தி சிலை வரை உள்ளது. இரவில் பாலத்தின் இருபுறமும் மின் விளக்கால் பிரகாசிக்கிறது. அமர்வதற்கு பல இடங்களில் இருக்கைகள் உள்ளன. அபெர்தீன் படகுத்துறையிலும் இருக்கைகள் உள்ளன. அங்கு குளிர்ந்த காற்று வீசுகிறது. சுனாமி நினைவுச் சின்னத்தின் அருகில் பெரிய திரையில் ஆழ்கடல் உயிரினங்கள் மற்றும் ஸ்கூபா டைவிங் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கிறது. மெரினா பூங்கா ஒரு அருமையான பொழுது போக்கு இடம் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.   17.ராஸ் தீவு   ராஸ் தீவு (Ross Island) தெற்கு அந்தமான் மாவட்டத்தின் கீழ் செயல்படுகிறது. இதனை பொதுவாக ரோஸ் ஐயலண்ட் என்றே அழைக்கின்றனர். இது ஒரு சிறிய தீவு. தற்போது முழுவதும் சிதைந்த நிலையிலேயே காணப்படுகிறது. மெரினா பார்க்கிலிருந்தும், செல்லுலார் சிறைச் சாலையிலிருந்தும், நார்த் பே  தீவிலிருந்தும் இத்தீவைக் காணலாம். போர்ட் பிளேரில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இத்தீவு உள்ளது. இத்தீவு கடல் மட்டத்திலிருந்து 45 மீட்டர் உயரத்தில் உள்ளது. 3.12 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இது இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தீவாகக் கருதப்படுகிறது. அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுக் கூட்டத்தின் நிர்வாகத் தலைமையகமாக இது செயல்பட்டு வந்துள்ளது. இந்தத் தீவுதான் போர்ட் பிளேரைப் பாதுகாக்கும் அரணாக உள்ளது. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலைகளைத் தடுத்து, போர்ட் பிளேரில் பெரும் சேதம் ஏற்படாமல் பாதுகாத்தது. தற்போதும் போர்ட் பிளையரை பாதுகாக்கும் ஓர் இயற்கை அரணாகத் திகழ்ந்து வருகிறது.   ராஸ் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த கடல் சர்வேயர் கேப்டன் சர் டேனியல் ராஸ் (Daniel Ross) என்பவர் முதன் முதலாக இத்தீவை சர்வே செய்தார் ஆகவே இவரின் நினைவாக இத்தீவுக்கு ராஸ் தீவு எனப் பெயரிடப்பட்டது. இந்தியாவில் ஏற்பட்ட சிப்பாய் புரட்சியின் காரணமாக தீவிரமாகப் போராடியவர்களை கைதிகளாக 1858 ஆம் ஆண்டில் அந்தமான் தீவிற்கு அனுப்பி வைத்தனர். ராஸ் தீவு சிறியதாக இருந்தாலும் அதில் தண்ணீர் இருந்தது. ஆகவே அத்தீவில் ஆங்கிலேயர்கள் கட்டிடங்களைக் கட்ட முடிவு செய்தனர். []   ராஸ் தீவு அடர்ந்த காடாக இருந்தது. கைதிகளாக வந்தவர்களை வைத்து அத்தீவு சுத்தம் செய்யப்பட்டது. அதுவரை ஆங்கிலேயர்கள் கப்பலிலேயே தங்கி இருந்தனர். அத்தீவில் பெரிய அலுவலகம், குடியிருப்பு பகுதி, மருத்துவமனை, சொகுசான மாளிகைகள், தேவாலயம் உள்பட பல கட்டிடங்களைக் கட்டினர். டென்னிஸ் மைதானங்களை அமைத்தனர். ஆங்கிலேயர் தங்குவதற்கு ஏற்ற அனைத்து வசதிகளையும் செய்த பின்னர் கைதிகளை வேறு தீவுக்கு மாற்றினர். மேலும் பெரிய டீசல் ஜெனரேட்டர்கள் மூலமாக மின்சார வசதியும் செய்தனர். அதனால் ராஸ் தீவு மட்டும் இரவு நேரங்களில் பிரகாசமாக ஒளி வீசியது. இத்தீவு ஆங்கிலேயரின் தலைமையகமாக மாற்றப்பட்டது. இத்தீவில் அச்சகம், தபால் நிலையம், பேக்கரி, நூலகம், தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் என பல்வேறு வசதிகளை ஏற்படுத்தினர். பொழுது போக்கிற்காக கிளப் வசதிகளும் உருவாக்கப் பட்டது. அழகிய தோட்டங்களும், புல்வெளிகளும் கைதிகளால் உருவாக்கினர். மான்களையும் இத்தீவிற்கு கொண்டு வந்தனர். ராஸ் தீவு பல்வேறு வசதிகள் கொண்ட தீவாக மாறியது. பாரீஸ் நகருடன் ஒப்பிடும் வகையில் வளர்ச்சி கண்டது. ஆகவே இத்தீவை கிழக்கு பாரீஸ் என்று அழைத்தனர். இப்படி பல்வேறு வளர்ச்சி கண்ட இத்தீவிற்கு பல்வேறு சோதனைகளும் ஏற்பட்டது. 1940 ஆம் ஆண்டு ஜூன் 26 அன்று ஏற்பட்ட மிகப் பெரிய பூகம்பத்தால் இத்தீவு மிகவும் பாதிக்கப்பட்டது. தீவு இரண்டாகச் சிதைந்தது. கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அதன் காரணமாக தலைமையகம் போர்ட் பிளேருக்கு மாற்றப்பட்டது. இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜப்பான் அந்தமான் தீவைக் கைப்பற்றியது. ராஸ் தீவில் இருந்த பிரிட்டிஷ்காரர்கள் தீவை விட்டு வெளியேறினர். 1942 முதல் 1945 வரை ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஜப்பான் நாட்டினர் இங்கு பல இடங்களில் பங்கர்களை அமைத்து காவல் காத்தனர். அந்த பங்கர்கள் இன்றும் ராஸ் தீவில் உள்ளன. 1946 ஆம் ஆண்டில் மீண்டும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இருப்பினும் மீண்டும் இத்தீவில் குடியேறுவதைக் கைவிட்டனர்.   சுற்றுலா வரலாற்றுச் சிறப்பு மிக்க பல கட்டிட அமைப்புகள் ராஸ் தீவில் இருந்தன. அவை தற்போது சிதிலம் அடைந்துள்ளன. 80 ஆண்டுகளுக்கு மேலாக இத்தீவில் ஆங்கிலேயர்கள் வாழ்ந்தனர். ஜப்பானியர்கள் இத்தீவை ஆக்கரமிப்பு செய்த பின்னர் இது கவனிப்பாறின்றிக் கிடந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் இத்தீவை நன்கு பராமரித்தனர். இருப்பினும் இங்கு யாரும் வசிக்கவில்லை. இத்தீவு 1979 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 முதல் இந்திய கடற் படையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. []   ராஸ் தீவைப் பராமரித்து தற்போது சுற்றுலா தலமாக வைத்துள்ளனர். அபார்தீன் நகரை ஒட்டியுள்ள ராஜீவ் காந்தி நீர் விளையாட்டு அரங்கத்தின் அருகில் உள்ள படகுத் துறையிலிருந்து இத்தீவிற்குச் சென்று வரலாம். முழுக்க முழுக்க கப்பற்படையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை மற்றும் வெளியேற்றம் ஆகியவை கண்காணிக்கப்படுகிறது. விசைப் படகில் அங்கு சென்று வர ஒரு நபருக்கு 500 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இரண்டு மணி நேரம் சுற்றிப்பார்க்கலாம். பின்னர் எந்த விசைப் படகில் சென்றோமோ அதே விசைப் படகில்தான் திரும்பி வர வேண்டும். இத்தீவில் சுற்றிப் பார்க்க பல கட்டிடங்கள் உள்ளன. ஆங்கிலேயர்கள் வசித்த போது அவர்கள் அமைத்த கடை வீதி, நீச்சல் குளம், மாதாக் கோயில், இத்தீவைப் பற்றிய குறிப்புகள், வரலாற்றுப் புகைப்படங்கள் ஆகியன உள்ளன. மயில், மான், முயல் ஆகியவற்றைக் காணலாம். அங்கு ஆட்டோக்களும் உண்டு. நடக்க முடியாதவர்கள் ஆட்டோவில் ஏறி, சுற்றிப்பார்க்கலாம். இத்தீவில் தென்னை மரங்கள் அதிகம் உள்ளன. கடற்கரை ஓரத்தில் வளைந்து, தரையைத் தொட்டு வளர்ந்த தென்னை மரங்களைக் காணலாம். இத்தீவில் ஆங்கிலேயர்களின் கல்லறைகளும் உள்ளன. ராஸ் தீவில் பல்வேறு திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழ் படங்களுக்கான படப்பிடிப்புகளும் நடந்துள்ளது. கடல் என்னும் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் சில காட்சிகளும் எடுத்துள்ளனர். அது தவிர காக்க காக்க என்ற திரைப்படத்தில் வரும் உயிரின் உயிரே என்ற பாடலுக்கான காட்சிகள் முழுவதும் ராஸ் தீவில் மட்டுமே படமாக்கப்பட்டன. சுற்றுலாப் பயணிகளை இத்தீவிற்கு அனுப்பலாமா வேண்டாமா என்கிற உத்தரவு தினமும் பிறப்பிக்கப்படுகிறது. புதன் கிழமை விடுமுறை தினமாகும். மற்ற நாட்களில் மட்டுமே இத்தீவிற்கு செல்ல முடியும். கடல் கொந்தளிப்பாக இருந்தால் இத்தீவிற்குச் செல்ல அனுமதி கிடையாது. கடல் கொந்தளிப்பு காரணாமாக 3 நாட்கள் அத்தீவிற்கு செல்ல முடியாமல் வேறு சுற்றுலா இடத்திற்கு சென்றோம். விசைப் படகில் செல்பவர்களை ராஸ் தீவு பிறகு நார்த் பே தீவு ஆகிய இரண்டு இடத்திற்கும் அழைத்துச் செல்கிறார்கள்.   நேதாஜி தீவு இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் அந்தமான் தீவைக் கைப்பற்றியது. அப்போது ஆங்கிலேயர்களிடம் இருந்து அந்தமான் விடுவிக்கப்படுவதாக நேதாஜி பிரகடனம் செய்தார். நேதாஜி 1943 ஆம் ஆண்டு டிசம்பர் 30 அன்று அந்தமான் சென்றார். போர்ட் பிளேயரில் இந்திய தேசியக் கொடியை நேதாஜி ஏற்றினார். அதன் 75 ஆவது ஆண்டு தினம் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 30 இல் கொண்டாடப்பட்டது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்தமான் சென்று, தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர் ராஸ் தீவின் பெயரை மாற்றினார். இத்தீவிற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு (Netaji Subash Chandra Bose Island) எனப் பெயரிடப்பட்டது. அந்தமான் செல்பவர்கள் இனிமேல் நேதாஜி தீவிற்குச் சென்று வந்தேன் எனக் கூறுவார்கள்.   18.நார்த் பே தீவு   நார்த் பே தீவு (North Bay Island) என்பது ஒரு சிறிய தீவு. இது போர்ட் பிளேருக்கு வடக்குப் பகுதியில் அமைந்தள்ளது. போர்ட் பிளேரில் இருந்து 28 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தீவை மெரினா பார்க்கின் அருகில் உள்ள படகுத் துறையிலிருந்து பார்க்கலாம். ராஸ் தீவுக்கு அருகில் இது உள்ளது. மெரினா படகுத் துறையில் இருந்து ராஸ் தீவு பிறகு நார்த் பே தீவிற்கு விசைப் படகில் அழைத்து செல்வார்கள். கடல் சீற்றமாக இருந்தால் ஜங்கிலிகாட் (Junglighat) என்னும் படகுத் துறையிலிருந்து 100 பேருக்கு மேல் பயணம் செய்யும் பெரிய விசைப் படகில் சென்று வரலாம். ஒரு நபருக்கு 700 ரூபாய் கட்டணமாக வசூலிப்பார்கள். []   நார்த் பே தீவில் மக்கள் யாரும் குடியிருக்கவில்லை. ஆனால் இது மிக முக்கிய சுற்றுலாத் தலம். இங்கு அழகான கடற்கரை உள்ளது. மிக முக்கிய நீர் விளையாட்டுகளுக்கு (Water sports activities) பெயர் பெற்ற இடம். இத்தீவிற்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர். நீர் விளையாட்டுகளில் ஏதாவது ஒன்றில் ஈடுபடவில்லை என்றால் அங்கு சென்று வருவதில் எந்தப் பலனும் கிடையாது.   கலங்கரை விளக்கம் இத்தீவில் ஒரு கலங்கரை விளக்கம் (Lighthouse) உள்ளது. அது 1969 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. நமது 20 ரூபாய் நோட்டின் பின்புறம் உள்ள படத்தை நன்கு கவணித்தால், அதில் தீவும், கலங்கரை விளக்கமும் இருப்பது தெரியும். 20 ரூபாய் நோட்டில் காணப்படும் கலங்கரை விளக்கம் நார்த் பே தீவில் உள்ளதுதான். அதுதான் இத்தீவின் சிறப்பம்சமாகும். இந்தக் கலங்கரை விளக்கம் மலைக் குன்றின் மீது அமைந்துள்ளது. இதன் அருகில் வரை செல்வதற்கு என சிமென்டால் ஆன சாலை உள்ளது. 20 நிமிடத்தில் அங்கு சென்று விடலாம். 100 அடிக்கு மேல் உயரமானது. அதன் உள்ளே படிக்கட்டில் ஏறி, உச்சிக்குச் செல்லலாம் எனக் கூறுவார்கள். நாங்கள் சென்ற போது பூட்டி வைத்திருந்தனர். இந்தக் கலங்கரை விளக்கத்திற்கு சிகப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரு வண்ணங்கள் பூசப்பட்டுள்ளன. பழைய 20 ரூபாய் நோட்டுகளில் தென்னை மரங்கள், சூழப்பட்டு அதன் நடுவே கலங்கரை விளக்கம் பொறிக்கப்பட்டிருக்கும். கடலில் பயணம் செய்யும் போது ரூபாய் நோட்டில் தென்படும் அதே காட்சியைக் காணலாம். அது மட்டும் அல்லாமல் ரூபாய் நோட்டில் உள்ள காட்சியை, உள்ளபடியே காண படகின் மூலம் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று காட்டுபவர்களும் உண்டு. கலங்கரை விளக்கத்தின் மீது கீழிருந்து மேல் வரை சிகப்பு மற்றும் வெள்ளை வண்ணம் சுழல் வடிவில் அடிக்கப்பட்டுள்ளது. இது வெகு தொலைவில் இருந்து பார்த்தாலும் நன்கு தெரிகிறது. கலங்கரை விளக்கத்தின் மேல் கோபுரத்தில் நின்று வேடிக்கை பார்க்கும் வகையில் வட்ட வடிவில் பாதுகாப்பு வளையத்துடன் மேடை உள்ளது. இங்குள்ள கலங்கரை விளக்கத்திற்கு வடக்கு முனை கலங்கரை விளக்கம் (North point Lighthouse) எனப் பெயரிட்டுள்ளனர். []   இந்தியாவின் இருபது ரூபாய் பணத் தாள் வரிசையில் மகாத்மா காந்தியின் படம் இடம் பெற்றது. இது 1992 இல் இந்திய ரிசர்வ் வங்கி மூலம் அறிமுகம் ஆனது. இந்த வரிசையானது தற்போதும் புழக்கத்தில் உள்ளது. 20 ரூபாய் தாள் 147 X 63 மி.மீ அளவில் உள்ளன. இத்தாள்கள் சிவப்பு – ஆரஞ்சு நிறத்தால் ஆனவை. முன்பக்கம் மகாத்மாக காந்தி படம் இடம் பெற்றிருக்கும். பணத்தாளின் பின்பக்கம் ஹாரிட் மலை மற்றும் நார்த் பே கலங்கரை விளக்கம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த பணத்தாளிலும் பார்வையற்றவர்கள் அடையாளம் காணும் வகையில் பிரெயில் அம்சம் உள்ளது.   கடற்கரை நார்த் பே தீவிற்குச் சென்றால் அங்கு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடவும், இயற்கையை கண்டு மகிழவும் 3 மணி நேரம் நமக்குத் தருகிறார்கள். அதற்கு பிறகு நாம் எந்தப் படகில் சென்றோமோ அதே படகில் திரும்பி விட வேண்டும். மாலை 3 மணி வரை நாம் அங்கு இருக்கலாம். அங்கு பல கடைகள் உள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் கடைகளும் உண்டு சிப்பிகளால் கோர்க்கப்பட்ட மாலைகள், பொருட்கள் ஆகியவை கிடைக்கின்றன. அங்கு தொப்பி விற்பனை செய்கின்றனர். அங்கு சென்று திரும்பும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் அத்தொப்பிகளை வாங்கி அணிந்து கொள்கின்றனர். []   கடற்கரை ஓரம் குளிக்கலாம். அலையின் சீற்றம் குறைவாகவே உள்ளது. உடைந்து சிதைந்த பவளப்பாறைகளின் துண்டுகள் கடற்கரையில் சிதறிக் கிடக்கின்றன. முழங்கால் ஆழத்தில் சில பவள உயிரிகளைக் காண முடிகிறது. அது தவிர மீன்கள் மற்றும் நண்டுகளையும் காண முடிகிறது. இத்தீவின் கரையில் உடை மாற்றுவதற்கான வசதியும் உண்டு. டீ, காபி, குளிர்பானம், இளநீர் மற்றும் உணவு விடுதிகளும் உண்டு. இக்கடைகளை வைத்திருப்பவர்கள் அனைவரும் போர்ட் பிளேரில் வாழ்கிறார்கள். காலையில் சென்று கடையைத் திறந்து வைத்து, மாலையில் வீடு திரும்புகிறார்கள்.   நீர் விளையாட்டுகள் நார்த் பே தீவை ஒட்டிய கடல் பகுதி அனைவரையும் ஈர்க்கக் கூடிய முக்கியமான சுற்றுலாத் தளமாகும். இங்கு அனைத்து விதமான நீர் விளையாட்டுகளும் உள்ளன. பவளத் திட்டுகள் (Coral) அதிகம் நிறைந்த பகுதியாக இது உள்ளது. கடற்கரை முழுவதும் பவளப் பாறைகளால் நிறைந்துள்ளது. அதனால் இத்தீவை கோரல் தீவு (Coral Island) அதாவது பவளத் தீவு எனவும் அழைக்கின்றனர். இங்கு சென்று சேருவதற்கு முன்பாகவே அங்கு என்னென்ன நீர் விளையாட்டுகள் உள்ளன. அதன் செயல்பாடுகள் மற்றும் எதை எதை காணலாம் என்பதை படகிலேயே விளக்குவார்கள். ஒவ்வொரு செயல்பாட்டில் ஈடுபடுவதற்கு எவ்வளவு கட்டணம் என்பதையும் கூறுகிறார்கள். நாம் கடற்கரையில் இறங்குவதற்கு முன்பாகவே டிக்கட் பதிவு செய்து விடுகிறார்கள். அதற்குத் தகுந்தாற்போல் வேறு சிறிய விசை படகிற்கும் நம்மை மாற்றி விடுகிறார்கள். எந்தவித நீர் விளையாட்டிலும் ஈடுபடவில்லை என்றால் அங்கு சென்றது வேஸ்ட் என்ற மனநிலை ஏற்பட்டு விடும். இப்பகுதியில் ஸ்கூபா டைவிங், சீவாக்கிங், கிளாஸ் போட், ஸ்னார்க்கலிங், டால்பின் ரைடு எனப் பல விதமான நடவடிக்கைகள் உண்டு.   ஸ்கூபா டைவிங் ஸ்கூபா டைவிங் (Scuba Diving) என்பது நீருக்கடியில் மூழ்குவதாகும். நீருக்கு அடியில் சுவாசிக்க ஏற்ற ஒரு மூச்சு எந்திரத்தை (Secba) முதுகில் மாட்டிக் கொண்டு நீரில் மூழ்குவதைக் குறிக்கிறது. நீரில் மூழ்குபவர் பிரத்யேகமான உடை மற்றும் முதுகில் ஆக்சிஜன் சிலிண்டரை அணிந்து கொண்டு கடலில் மூழ்குகிறார்கள். இத்துடன் கால்களில் தவளைக் கால் போன்று ஒரு அமைப்பும் மாட்டப்படுகிறது. அதன் உதவியால் எளிதில் நீந்தலாம். ஆனால் நீச்சல் தெரியாதவர்கள் இதில் ஈடுபட முடியாது. உடலில் அதற்கென உரிய உடை மற்றும் முகமூடி அணிந்து கொண்டு பயிற்சியாளர்களின் உதவியுடன் கடலின் ஆழம் வரை செல்லலாம். கடலின் ஆழத்தில் பல்வேறு வகையான வண்ண மீன்களைக் காணலாம். பவள உயிரிகளையும் காணலாம். பவள உயிரிகள் சில சுருங்கி விரிவதையும் கண்டு மகிழலாம். அணிந்திருக்கும் கண்ணாடியானது நீருக்கு அடியில் உள்ளதைத் தெளிவாகக் காட்டும். கடலுக்கு அடியில் குறைந்த பட்சம் 25 அடி ஆழம் வரை செல்லலாம். இது மீன்களுடன் நீந்தி மகிழும் ஒரு விளையாட்டு. ஸ்கூபா டைவிங்கிற்கு சிறந்த இடம் அந்தமான் எனக் கூறப்படுகிறது. நார்த் பே தீவு, எலிபெண்ட் தீவு போன்ற இடங்கள் ஸ்கூபா டைவிங்கிற்கு ஏற்ற இடம். ஸ்கூபா டைவிங்கில் 30 நிமிடம் ஈடுபடலாம். இதற்கு 4000 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும்.   ஸீ வாக்கிங் நீச்சல் தெரியாதவர்களும் இதில் பங்கு பெறலாம். 7 வயது 70 வயது வரை உள்ளவர் ஸீ வாக்கில் (Sea walk) ஈடுபடலாம். ஆண், பெண் என்ற பாகுபாடு கிடையாது. மூச்சு விடுதற்கு ஏற்ப பெரிய பலூன் போன்ற கண்ணாடியால் ஆன ஹெல்மெட்டை அணிந்து கொள்ள வேண்டும். இது தண்ணீர் புகாத தலைக்கவசமாகும். இது 40 கிலோ எடை வரை இருக்கும். ஆனால் தண்ணீரின் உள்ளே சென்று விட்டால் எடை தெரியாது. மேலும் அதன் மறுமுனை மேலே உள்ள பெரிய படகில் இருக்கும். அதன் வழியாக சுவாசிப்பதற்கு ஆக்சிஜன் சென்று வரும். பெரிய படகில் உள்ள ஏணி வழியாக நீருக்கு அடியில் செல்ல வேண்டும். கடலின் தரையானது 20 முதல் 30 அடி ஆழத்தில்தான் இருக்கும். அங்கு நீந்தி செல்லும் மீன்களைக் காணலாம். கடலின் தரையில் கால்களால் நடந்து செல்லலாம். மீன்களுக்கு உணவு வழங்கலாம். பவளப் பாறைகளை தொட்டுப் பார்க்கலாம். பயிற்சியாளர் ஒருவரும் உடன் இருப்பார். 20 நிமிடங்கள் நடந்தப் பின் ஏணி வழியாக திரும்பி விடலாம். கடலின் தரையில் நடந்ததை புகைப்படமாகவும், வீடியோவாகவும் நமக்கு தந்து விடுவார்கள். இதற்குக் கட்டணமாக 2500 – 3000 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள்.   ஸ்னார்கலிங் ஸ்னார்கலிங் (Snorkeling) என்னும் நீர் விளையாட்டில் ஈடுபடுபவர் கடலுக்குள் நீந்த வேண்டிய அவசியம் இல்லை. இது ஒரு முதல் நிலை தண்ணீர் சாகச விளையாட்டாகும். இதற்கு கருப்பு நிறம் கொண்ட மிதவை ஜாக்கட்டை அணிந்து கொள்ள வேண்டும். சுவாசிப்பதற்காக நீர்பரப்பிற்கு மேல், பிளாஸ்டிக் குழாயும் உண்டு. வாயில் அதை கவ்விக் கொண்டு, தலையை தூக்காமல் நீந்திக் கொண்டே செல்ல வேண்டும். கடலின் அடியில் உள்ள மீன்களையும், பவளப் பாறைகளையும் பார்த்து ரசிக்கலாம். நீர் மட்டத்தில் இருந்தபடியே கடல் வாழ் உயிரினங்களைக் கண்டு மகிழலாம்.   டால்பின் ரைடு டால்பின் வடிவப் படகில் (Dolphin Ride) அதிவேகமாக பயணம் செய்யலாம். இதன் மையத்தில் சக்தி வாய்ந்த உருப்பெருக்கி உள்ளது. அது கடலின் ஆழத்தில் உள்ள பவளப்பாறைகள் மற்றும் மீன்களை நம் அருகில் கொண்டு வந்து காட்டும். []     பனானா ரைடு மிக வேகமாக செல்லக் கூடிய படகின் பின்புறத்தி்ல் வாழைப் பழ (Banana) வடிவ பலூன் இணைக்கப்பட்டுள்ளது. அதன் மீது சிலர் அமரலாம். படகு வேகமாகச் செல்லும். குறிப்பிட்ட தூரம் வரை சென்ற பிறகு படகைத் திருப்புவார்கள். வாழைப்பழ பலூன் மீது அமர்ந்தவர்கள் கடலில் விழுவார்கள். இது ஒரு விளையாட்டு ஆனால் ஆபத்து இல்லாதது.   கண்ணாடிப் படகு சவாரி இப்படகின் தரைப்பகுதியில் பல கண்ணாடிகள் பதிக்கப்பட்டுள்ளன. இப்படகை கண்ணாடிப் படகு (Glass Bottom Boat) என்கிறார்கள். இப்படகில் 10 பேர் வரை அமரலாம். இக்கண்ணாடியானது கடலின் அடியில் உள்ளவற்றைப் பெரிது படுத்தி நமக்குக் காட்டும். இச்சவாரியில் பல்வேறு வடிவம் கொண்ட பவளப் பாறைகளைக் காணலாம். பவளப் பாறைகளின் இடையே நீந்திச் செல்லும் பல வண்ணம் கொண்ட மீன்களையும் காணலாம். சுமார் அரை மணி நேரம் படகில் அமர்ந்தபடியே கடல்வாழ் உயிரகளைக் காணலாம். இந்தக் கண்ணாடி படகில் பயணம் செய்ய நபருக்கு 700 ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறார்கள். நாங்கள் பயணம் செய்த படகை இயக்கிய இருவரும் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் என்பது மகிழ்ச்சியைத் தந்தது. அவர்கள் ஒவ்வொன்றாக எங்களிடம் விளக்கி காட்டினார்கள்.   19.வைப்பர் தீவு   வைப்பர் தீவு (Viper Island) என்பது அந்தமான் தீவுகளில் மிகவும் முக்கியமான தீவாகக் கருதப்படுகிறது. இது தெற்கு அந்தமான் மாவட்டத்தில் உள்ளது. போர்ட் பிளேரில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் வடமேற்காக அமைந்துள்ளது. இது மிகச் சிறிய தீவு. படகின் மூலம் இத்தீவிற்குச் சென்று வரலாம். இது 800 மீட்டர் நீளமும், 500 மீட்டர் அகலமும் 34 ஹெக்டேர் பரப்பளவும் கொண்டது. கடற்கரை 2.7 கி.மீ நீளத்திற்கு உள்ளது. []   இந்திய சுதந்திரப் போராட்டம் என்றாலே அந்தமான் சிறைச்சாலையைப் பற்றி பேசமால் இருக்க முடியாது. அந்தமானில் செல்லுலார் சிறைச்சாலை கட்டுவதற்கு முன்பே வைப்பர் தீவில் ஒரு சிறைச் சாலையை ஆங்கிலேயர்கள் கட்டினர். இதுவும் தனிப்பட்ட செல்லாகவே இருந்தது. சுதந்திரப் போரட்ட வீரர்கள் பல்வேறு சித்ரவதைக்கு ஆளானார்கள். இந்தச் சிறைச் சாலையும் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தது.   வைப்பர்   ஆர்ச்சாபால்ட் பிளேர் (Archibald Blair) என்பவர் 1788 – 89 ஆம் ஆண்டுகளில் சர்வே செய்வதற்காக அந்தமான் வந்தார். அவர் பயணம் செய்த கப்பல் எச்.எம்.எஸ்.வைப்பர் (H.M.S.Viper) என்பதாகும். இந்தக் கப்பல் ஒரு விபத்தில் சிக்கியது. அதனுடைய சேதமடைந்த பகுதிகள் ஒரு தீவின் அருகில் கிடைத்தன. ஆகவே அந்த தீவிற்கு அக்கப்பலின் பெயரால் வைப்பர் தீவு எனப் பெயரிடப்பட்டது. அது தவிர இத்தீவில் கண்ணாடி விரியன் (Viper Snake) பாம்புகள் நிறைந்திருந்ததால் வைப்பர் தீவு எனப் பெயர் வந்தது எனக் கூறுபவர்களும் உண்டு. சாத்தம் தீவில் முதன் முதலாக 1796 இல் முதல் குடியேற்றம் நடந்தது. அதன் பிறகு 60 ஆண்டுகள் வரை அந்தமான் தீவுகள் தனித்தே இருந்தன. இந்தியாவில் ஏற்பட்ட சிப்பாய்ப் புரட்சி அல்லது இந்தியாவின் முதலாவது விடுதலைப் போருக்குப் பிறகே அந்தமானில் குடியேற்றம் தொடங்கியது. பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் சிப்பாய்கள் 1857 ஆம் ஆண்டு மே 10 அன்று மீராட் நகரில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடினார்கள். சிப்பாய்களின் கிளர்ச்சியானது பல இடங்களுக்கும் பரவியது. பொதுமக்களும் சிப்பாய்களுக்கு ஆதரவாக போரட்டத்தில் பங்கு கொண்டனர். சிப்பாய்களின் போராட்டம் பிரிட்டிஷ் படையினருக்கு ஒரு பெரும் சவாலாக அமைந்தது. இருப்பினும் 1858 ஆம் ஆண்டு ஜூன் 20 அன்று இந்தப் போராட்டம் அடக்கப்பட்டது. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுப்பட்ட 200 பேர் அந்தமான் தீவிற்குக் கடத்தப்பட்டனர். கால் விலங்கிட்டு (Fetters) சங்கிலியால் பிணைக்கப்பட்டு கைதிகளாக சாத்தம் தீவிற்கு கொண்டு வந்தனர். 1858 ஆம் ஆண்டு மார்ச் 10 அன்று சாத்தம் தீவில் சுதந்திரப் போராட்ட வீரர்களை இறக்கினர். அதன் மூலம் சாத்தம் தீவில் மீண்டும் பிரிட்டிஷ்காரர்களின் குடியேற்றம் தொடங்கியது. போர்ட் பிளேர், ராஸ் தீவுகளில் ஆங்கிலேயர்கள் குடியேறினர். முதல் சுதந்திரப் போராட்டம் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து வாகாபி இயக்கம் (Wahabi movement), நாம்தாரி இயக்கம் (Namdhari movement) மற்றும் பல இயக்கங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தோன்றின. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. தீவிரமாகப் போராடிய வீரர்களை அந்தமான் தீவிற்கு அனுப்பினர்.   சிறைச்சாலை சுதந்திரப் போராட்ட வீரர்களை 1858 அக்டோபரில் அடைப்பதற்காக முதன் முதலாக வைப்பர் தீவில் ஒரு சிறைச்சாலையை ஆங்கிலேயர்கள் கட்டினர். கைதிகளைக் கொண்டே தீவை சுத்தம் செய்தனர். மலைக்குன்றை சமன் செய்தனர். இங்கு 1864 ஆம் ஆண்டு தொடங்கி 1867 ஆம் ஆண்டில் சிறைச்சாலை கட்டி முடிக்கப்பட்டது. அது மட்டும் அல்லாமல் சிப்பாய்களுக்கான குடியிருப்பு, கார்டு ஹவுஸ் (Guard House) மற்றும் சிக்னல் நிலையம் போன்றவையும் இத்தீவில் கட்டப்பட்டன. அந்தமான் தீவில் செல்லுலார் சிறை கட்டுவதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பாகவே வைப்பர் தீவில் சிறைச்சாலை கட்டப்பட்டது. லெப்டினன்ட் கர்னல் பார்னெட் போர்ட் (Barnet Ford) என்பவர் கண்காணிப்பு அதிகாரியாக இருந்தார். இவரின் மேற்பார்வையில் சிறைச்சாலை கட்டும் பணி நடந்தது. அது தவிர ஒரு போலிஸ் இன்ஸ்பெக்டர், ஒரு தலைமைக் காவலர், 2 சார்ஜென்ட், நான்கு முதல் நிலை காவலர்கள் மற்றும் 30 இரண்டாம் நிலை காவலர்கள் என பணியில் அமர்த்தப்பட்டனர். பின்னர் படிப்படியாக போலீஸ்காரர்களை அதிகரித்தனர். []   கைதிகள் தங்களுக்காகவே சிறைச்சாலையைக் கட்டினர். இங்கு ஒவ்வொரு கைதியும், தனித் தனியாகவே அடைக்கப்பட்டனர். இங்கு தூக்கு மேடையும் (Gallow) கட்டப்பட்டது. வைப்பர் சிறைச்சாலையில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் தாங்கொணாத்துயரத்தை அனுபவித்தனர். சிறைச்சாலையில் யாரும் மரியாதையாக நடத்தப்படவில்லை. யாருக்கும் இரக்கமும் காட்டப்படவில்லை. கைதிகளை சங்கிலியால் பிணைத்தும் வைத்தனர். கால் விலங்கிட்டும், கை விலங்கிட்டும், சுவரில் சங்கிலியால் கட்டி வைத்தும் துன்பப்படுத்தினர். அவர்களுக்கு சவுக்கடியும் கொடுக்கப்பட்டது. இந்த வைப்பர் சிறைச்சாலையை ஒரு நரகம் என்றே சொன்னார்கள். இங்கு சிறையை கட்டுவதற்கு முன்பு இது ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக இருந்தது. கைதிகளை கை, காலில் சங்கிலியால் பிணைத்து விட்டுள்ளனர். தண்ணீர், உணவு இன்றி வெயில், குளிர் மற்றும் மழையில் நனைந்து துன்பத்தை அனுபவித்துள்ளனர். உணவின்றி பட்டினியால் இறந்தவர்களும் உண்டு. பாம்புக் கடியால் இறந்தவர்களும் உண்டு. செல்லுலார் சிறைச்சாலையைக் கட்டிய பிறகு அங்கு கைதியாக இருந்தவர்கள் விடுதலையானால் வைப்பர் தீவில் கொண்டு வந்து விடப்பட்டனர். அவர்கள் எங்கும் செல்ல முடியாமல் இத்தீவிலேயே மடிந்துள்ளனர். இத்தீவில் பெண்களும் கைதிகளாக இருந்துள்ளனர். ஆகவே இச்சிறைச்சாலையை வைப்பர் சைன்கேங் ஜெயில் (Viper Chain gang Jail) என அழைக்கின்றனர்.   தூக்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்கள் இறுதி நாட்களை இங்கு கழித்தனர். இங்கு அடைக்கப்பட்டவர் பெரும்பாலும் இறந்து போனார்கள். நெஞ்சை நெகிழச் செய்யும் பல கசப்பான சம்பவங்கள் இங்கு நடந்துள்ளன. ஆங்கில அரசை எதிர்த்துப் போராடிய பல அரசர்களும் இங்கு சிறையில் வைக்கப்பட்டனர். இச்சிறையில் யூரி மஹாராஜாவான பிரிஜ் கிஷோர் சிங் தியோ (Brij Kishore Singh Deo) என்பவர் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு எந்த இரக்கமும் காட்டப்படவில்லை. அவர் 1879 ஆம் ஆண்டில் இச்சிறையில் இறந்து போனார். இச்சிறையில் பலர் தூக்கிலிடப்பட்டனர். அவர்களில் மிக முக்கியமானவர் ஷெர் அலி (Sher Ali) ஆவர். இவரை 1872 ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று தூக்கிலிட்டனர். அந்தமானைச் சேர்ந்த பியா லோலா (Bia Lola) என்பவரை 1880 ஆம் ஆண்டு மே 19 அன்று தூக்கிலிட்டனர். அதே நாளில் மேலும் ஒருவர் தூக்கிலிடப்பட்டார். அவர் பெயர் தெரியவில்லை. மற்றொரு சுதந்திரப் போராட்ட வீரர் (Tokha) என்பவர் 1879  ஆம் டிசம்பர் 12 அன்று தூக்கில் இடப்பட்டார். இவருடைய கைதி எண் 21545 என்பதாகும். இங்கு தூக்கில் இடப்பட்டு இறந்த பின்னர் அவர்களின் உடலை கடலில் தூக்கி வீசி உள்ளனர்.   ஷெர் அலி []   ஷெர் அலி அஃரிடி (Sher Ali Afridi) என்பவர் 1860 களில் பஞ்சாப் மவுண்ட் போலிஸில் பணியாற்றினார். பிறகு குதிரைப் படைப் பிரிவில் சேர்ந்தார். அப்போது மேஜர் ஹக் ஜேம்ஸ் (Hugh James) என்பவரின் தலைமையில் பெஷாவரில் ஒரு குதிரைப் படை வீரனாகப் பணிபுரிந்தார். இவர் திறமையாகப் பணி புரிந்ததற்காக ரெய்னஸ் டெய்லர் ஒரு குதிரை, துப்பாக்கி மற்றும் சான்றிதழும் வழங்கினார். இதனால் ஐரோப்பியர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். டெய்லரின் குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பும் இவருக்கு வழங்கப்பட்டது. ஒரு நாள் குடும்பச் சண்டையின் காரணமாக தனது உறவினர் ஹைதர் என்பவரை பெஷாவரில் கொலை செய்தார். அதானால் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு அந்தமான் தீவிற்கு அனுப்பப்பட்டார். இவரின் நன்னடத்தைக் காரணமாக போர்ட் பிளேரில் முடி திருத்தும் பணி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்தியாவில் வைஸ்ராய் மாயோ (Lord Mayo) அந்தமான் சென்று குற்றவாளிகள் மற்றும் அரசியல் கைதிகளைப் பார்வையிட்டு பல்வேறு சோதனைகளை மேற்கொண்டார். சோதனைகளை முடித்துக் கொண்டு படகின் மூலம் இரவு 7 மணி வாக்கில் திரும்பினார். இருட்டில் மறைந்திருந்த ஷெர் அலி திடீரென தோன்றி மாயோவைக் கத்தியால் குத்திக் கொன்றார். இச்சம்பவம் 1872 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 அன்று நடந்தது. உடனே 12 பாதுகாப்பு அதிகாரிகளால் ஷெர் அலி கைது செய்யப்பட்டார். பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்ட இந்தியாவின் உச்ச அதிகாரியான வைஸ்ராய் கொலை இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஷெர் அலி கண்பாணிப்பாளர் மற்றும்  வைஸ்ராயையும் கொலை செய்ய திட்டமிருந்தார். ஆனால் ஒருவரை மட்டுமே கொலை செய்ய முடிந்தது. இந்தக்  கொலைக் குற்றத்திற்காக 1873 ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று வைப்பர் தீவில் தூக்கில் இடப்பட்டார்.   சுற்றுலா []   இன்றைக்கு இந்தச் சிகப்பு நிறக் கட்டிடம் சிதைந்த நிலையில் உள்ளது. இரண்டடுக்கு கொண்ட இந்தக் கட்டிடம் ஒரு பாழடைந்த கட்டிடமாகக் காட்சி தந்து கொண்டிருக்கிறது. சுதந்திரப் போராட்ட வீரர்களின் துன்பத்தையும், துயரத்தையும் எடுத்துக் கூறும் சாட்சியாக விளங்குகிறது. வரலாற்றில் கொடுமைகளின் எச்சமாக, சிதிலங்களுடன் இன்றும் வைப்பர் தீவில் உள்ளது. இது தியாகிகளின் நினைவாகக் காட்சி தந்து கொண்டிருக்கிறது. அதை பராமரித்துப் பாதுகாக்க வேண்டும். பல சுற்றுலாப் பயணிகள் இத்தீவிற்குச் சென்று வருகின்றனர். அங்கு சென்று வரும் போதுதான், நமக்கு கிடைத்த சுதந்திரம் என்பது பல தியாகிகளின் வீரத்தால் விளைந்தது என்பதை உணர முடிகிறது. அந்தமான் செல்லக் கூடியவர்கள் வைப்பர் தீவிற்கு அவசியம் சென்று வர வேண்டும். அது தவிர அத்தீவை முழுவதும் கடல் வழியாக படகின் மூலம் சுற்றி வந்தால் அது ஒரு அற்புதமான பிக்னிக் (Picnic) இடம் என்பது தெரியும். எது எப்படியோ அந்தமான் சென்றால் வைப்பர் தீவுக்குச் சென்று அங்கு உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திவிட்டுத் திரும்புங்கள்.   20.அந்தமான் சிறைச்சாலை   கொலை, கொள்ளை ஆகியவற்றில் ஈடுபடும் குற்றவாளிகள் நாடு கடத்துவது என்பது பல நாடுகளில் இருந்தது. அதே போல் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தேசபக்தர்களை நாடு கடத்திய கொடுமை இந்தியாவில் நடந்தது. 1857 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சிப்பாய்ப் புரட்சி எனப்படும் முதல் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட வீரர்களை அந்தமான் தீவில் கொண்டு போய் விட்டனர். அந்தமான் தீவில் விடப்பட்டவர்கள் தப்பித்து எங்கும் செல்ல முடியாது. அப்படித் தப்பித்து வேறு தீவிற்குச் சென்றால் அவர்களை அங்கு வாழும் பழங்குடியினர் கொன்று விடுவார்கள். மேலும் வன விலங்குக்கும் இரையாகிவிடுவார்கள். []   ஆயுள் தண்டனை வழங்கப்பட்டவர்களை அந்தமான் தீவிற்கு அனுப்பி விட்டனர். டேவிட் பேரி (David Barry) என்னும் சிறை கண்காணிப்பாளர் மற்றும் மேஜர் ஜேம்ஸ் பாட்டிசன் வாக்கர் (James Pattison Walker) என்னும் மருத்துவரின் பாதுகாப்பில் கைதிகளை அனுப்பினர். மேலும் இவர்களுக்கு உதவியாக 733 பேர் கராச்சியில் இருந்து வரவழைக்கப்பட்டு இங்கு பணியமர்த்தப்பட்டனர். இந்தியா மற்றும் பர்மா கைதிகள் அந்தமான் தீவில் அடைக்கப்பட்டிருந்தனர். 1868 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 238 கைதிகள் தப்பித்துச் சென்றனர். பலர் இறந்து போனார்கள், பலர் தற்கொலை செய்து கொண்டனர். 87 பேர் மட்டும் பிரிட்டிஷ் போலிசிடம் சிக்கினர். வாக்கர் உத்தரவின் பேரில் 87 பேரும் தூக்கிலிடப்பட்டனர். இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடந்தது. தீவிரமாக போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தனித்தனி அறையில் 6 மாதங்கள் அடைக்க வேண்டும் என்கிற முடிவை பிரிட்டிஷ் அரசு எடுத்தது. அதற்காக ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது. அந்தமான் தீவில் ஒரு பெரிய சிறைச்சாலையைக் கட்டுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.   செல்லுலார் ஜெயில் கைதிகளை கொண்டே போர்ட் பிளேரில் துறைமுகம் மற்றும் கட்டிடங்கள் கட்டப்பட்ட அந்தமான் சிறைச்சாலையும் கட்டப்பட்டது. மெக்கலன் என்னும் பொறியாளர் மேற்பாற்வையில் 1896 ஆம் ஆண்டில் சிறைச்சாலையைக் கட்டத் தொடங்கினர். கட்டுமானத்திற்கான செங்கல்லும், தேக்கும் பர்மாவில் இருந்து கொண்டு வரப்பட்டது. 10 ஆண்டுகள் தொடர்ந்து வேலை நடந்தது. பல கைதிகள் கட்டுமானத்தில் சிக்கி இறந்து போனார்கள். இச்சிறைச்சாலை 1906 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. சிறைச்சாலை முழுக்க செங்கல்லால் கட்டப்பட்டது. இதற்கு மேல்பூச்சு கிடையாது. கட்டிடம் முழுவதும் செங்கல் நிறத்திலேயே (Puce coloured) உள்ளது. இந்தச் சிறைச்சாலை புதுமையான வடிவமைப்பைக் கொண்டது. ஆங்கில தத்துவஞானி மற்றும் சமூக அறிஞர் ஜெரிமி பெந்தம் (Jeremy Bentham) என்பவரின் எண்ணத்தில் உருவான வட்டக் கண்காணிப்பு சிறை (Panopticon) என்பதை அடிப்படையாகக் கொண்டு இச்சிறை சாலை வடிவமைக்கப்பட்டது. []   இக்கட்டடம் 7 பக்கப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மையத்தில் உயர்ந்த கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. கோபுரத்தில் அபாயாமணியும் வைக்கப்பட்டுள்ளது. இது சைக்கிளின் சக்கரம் அல்லது குதிரை வண்டியின் சக்கரம் போல் உள்ளது. சக்கரத்தின் அச்சு போல் மையத்தில் கோபுரம் உருவாக்கப்பட்டுள்ளது. அதிலிருந்த ஆரைக்கால்கள் (Spokes) செல்வது போல் 7 கட்டிட பகுதிகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் மூன்று அடுக்குகளைக் கொண்டுள்ளன. கண்காணிப்புக் கோபுரத்திலிருந்து காவலர் ஒருவர் ஒரே சமயத்தில் 7 பகுதியையும் கண்காணிக்க முடியும். மூன்று தளங்களை கொண்ட இந்த சிறைச்சாலையை கட்டி முடிப்பதற்கு 5,17,352 ரூபாய் செலவு ஆனது. இச்சிறை 696 அறைகளுடன் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இதில் படுக்கைகள் கிடையாது. ஒவ்வொரு அறையும் 4.5 மீட்டர் நீளம், 2.7 மீட்டர் அகலம், 3 மீட்டர் உயரம் கொண்டது. மேலும் மூன்றடி நீளமும் ஒரு அடி அகலமும் கொண்ட ஜன்னல். இது குறைந்த வெளிச்சத்தையே கொடுத்தது. ஒவ்வொரு அறையும் தனித்தனியானது. ஒரு அறைக்கும் மற்றொரு அறைக்கும் தொடர்பு கிடையாது. ஒரு கைதி மற்றொரு கைதியைப் பார்க்கவோ, பேசவோ முடியாது. அதே போல் எதிரே உள்ள பிரிவுகளில் உள்ளவர்களையும் பார்க்க முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு பிரிவும் மற்றொரு பிரிவின் பின்புறத்தை நோக்கி இருக்கும் .யாருடனும் தொடர்பு கொள்ள முடியாத வகையில் அறைகள் கட்டப்பட்டுள்ளதால் இது சிற்றறைச் சிறை (Cellular Jail) என்கிற பெயரைப் பெற்றது. ஒவ்வொரு பிரிவிலும், அறையின் முன்புறம் 4 அடி அகலம் கொண்ட வராண்டா உள்ளது. இவை அனைத்தும் மையக் கோபுரத்துடன் இணைகிறது. ஒவ்வொரு அறைக்கும் பூட்டு உண்டு. அதே போல் ஒவ்வொரு வராண்டவையும் பூட்டுகின்றனர். ஆகவே கைதிகள் தப்பித்துச் செல்ல முடியாது. அது தவிர சிறையைச் சுற்றி உயரமான மதில் சுவர் கட்டப்பட்டுள்ளது. மேலும் சிறைச்சாலையைச் சுற்றி கடலும் அமைந்துள்ளது. கைதிகள் தப்பிச் செல்ல முடியாத வகையில் திட்டமிட்டு இந்தச் சிறைச்சாலை கட்டப்பட்டுள்ளது.   கொடுமை இச்சிறைச்சாலை ஒரு தனி உலகம். இந்த சிறைச்சாலைக்குச் சென்றவர்கள் உயிருடன் மீண்டு வருவது சிரமம். ஆகவே இதனை காலா பாணி (Kala pani) என்றனர். காலா பாணி என்றால் கருப்புத் தண்ணீர் எனப் பொருள். இந்திய சுதந்திரத்திற்காக போராடிய தேச பக்தர்கள் பலர் இச்சிறையில் அடைக்கப்பட்டனர். பெரும்பாலோனோர் இச்சிறையிலேயே இறந்து போனார்கள். மனிதத் தன்மையற்ற முறையில் கைதிகளை இங்கு சித்ரவதை செய்தனர். உலகில் கொடுமைக்குப் பெயர்போன சிறைச்சாலைகளில் அந்தமான் சிறைச்சாலையும் ஒன்று எனக் கூறலாம். சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகச் செயல்பட்டவர்களை இங்குள்ள தனி தனி அறைகளில் அடைத்தனர். கை, கால்களில் விலங்கிடப்பட்டது. அறைக்குள் சுவரோடு சேர்த்து கொக்கிகளில் மாட்டி நிற்க வைத்தனர். நிர்வாணப்படுத்தி அறையில் அடைத்தனர். தண்டனை வழங்கும் இடத்தில் நிர்வாணமாக கட்டி வைத்து சவுக்கால் அடித்தனர். தூக்கில் இடுவதற்கு என தனி வளாகமும் உள்ளது. அது மரணக்கிணறு. மூன்று தூக்கு கயிறுகள் இன்றைக்கும் தொங்கிக் கொண்டிருக்கிறது. சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுபவர்கள் இந்தியாவிற்குள் இருந்தால் ஆபத்து எனக் கருதியே அந்தமான் சிறையில் அடைத்தனர். அவர்களை ஆயுள் கைதியாக வைத்தனர். எதிர்த்துப் பேசியவர்களை கை மற்றும் காலில் விலங்கு பூட்டி சித்ரவதை செய்தனர். எதிர்த்துக் குரல் கொடுத்தவர்களைத் தூக்கிலிட்டனர். வீரம் மிக்கவர்களைக் கூட அடக்கி, ஒடுக்குவதற்கான கடுமையான வேலைகளைக் கொடுத்தனர். கல் உடைப்பது, தேங்காயை உடைத்து நார் எடுப்பது, கயிறு திரிப்பது போன்ற வேலைகள் கொடுக்கப்பட்டன. []   அந்தமான் தீவில் தென்னை மரங்கள் அதிகம். ஆகவே தேங்காய் நாரில் இருந்து கயிறு திரித்தல், தேங்காய் எண்ணெய் எடுத்தல் ஆகிய வேலைகள் கைதிகளுக்கு வழங்கப்பட்டது. ஒரு கைதி தினமும் 20 முற்றிய தேங்காயை, மரச்சுத்தியால் அடித்து மட்டையை பிரித்து நார் எடுக்க வேண்டும். மரச்சுத்தியலால் அரை மணி நேரம் அடித்தால்தான் நார் பிரியும். விரல்கள் வீங்கி விடும். இது கடினமான வேலை. காயம் ஏற்பட்டாலும் விடமாட்டார்கள். வயதானவர், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு கயிறு திரிக்கும் வேலை வழங்கப்பட்டது. மாடுகளுக்குப் பதிலாக கைதிகள் செக்கு இழுக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு கைதி 30 பவுண்ட் எண்ணெய் எடுக்க வேண்டும். எடுத்து முடித்தால்தான் தூங்கச் செல்ல முடியும். எவ்வளவு வீரம் மிக்கவராக இருந்தாலும், இரண்டு நாட்கள் செக்கு இழுத்தால் அடங்கி விடுவார்கள். அந்தளவிற்கு அது கொடுமையான வேலை. தினமும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். வேகாத உணவைத் தருவார்கள். கைதிகள் குளிப்பதற்கு மூன்று குவளை கடல் தண்ணிர் கொடுப்பார்கள். அத்தண்ணிரிலேயே துணிகளையும் துவைத்துக் கொள்ள வேண்டும். மலம், சிறுநீர் கழிக்க தார் பூசிய மண் பாத்திரம் கைதிகளுக்கு வழங்கப்பட்டது. அதனை அவர்களே சுத்தம் செய்து பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு சிறையில் அனுபவித்த கொடுமைகளை சொல்ல மாலாது. வகாபி இயக்கம், மாப்ள இயக்கம், ராம்பா இயக்கம், கதர் புரட்சி, கோதாவரி ரும்பா விவசாயிகள், பர்மாவைச் சேர்ந்த தர்வாடிகள், புரட்சிகர அமைப்பின் தலைவர்கள் என பலருக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதில் இளைஞர்கள்  அதிகம் இருந்தனர். சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுப்பட்ட பெண்களும் அந்தமான் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். உயிரை துச்சமாக மதித்தவர்கள் தூக்கிலிடப்பட்டனர். தண்டனைக்குப் பயந்து மன்னிப்புக் கடிதம் கொடுத்தவர்களை மட்டும் அந்தமானில் இருந்து இந்தியச் சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்தனர். ஒரு சமயத்தில் 10,000 க்கும் மேற்பட்ட கைதிகள் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். சிறையில் நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக 1933 ஆம் ஆண்டில் 33 பேர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அவர்களில் மகாவீர் சிங் (Mahavir singh) முக்கியமானவர். இவர் பகத்சிங்கின் நண்பர். இவரை உணவு அருந்த கட்டாயப்படுத்தி பாலை வாயில் ஊற்றினர். பால் நுரையீரலுக்குச் சென்றதால் உயிரிழந்தார். அவரின் உடல் கடலில் தூக்கி வீசப்பட்டது.   நினைவுச் சின்னம் சிறைச்சாலையில் நடக்கும் கொடுமைக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக 1938 ஆம் ஆண்டில் சிறைவாசிகளைத் தாயகம் திருப்பி அனுப்பினர். இரண்டாம் உலகப்போரின் போது அந்தமான் தீவை ஜப்பான் 1942 ஆம் ஆண்டில் கைப்பற்றியது. ஜப்பானியர்கள் அந்தமான் சிறையின் இரண்டு பிரிவுகளை இடித்தனர். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மேலும் இரண்டு பிரிவுகள் இடிக்கப்பட்டன. அந்தமான் சிறையின் முன்னாள் கைதிகள் 26 பேர் சிறைச்சாலையை இடிக்கக் கூடாது என கொல்கத்தாவில் போராட்டம் நடத்தினர். சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகம் மறைந்து விடக் கூடாது என்றனர். முன்னால் சுதந்திரப் போராட்ட வீரர்களின் எதிர்ப்பால் மீதம் இருந்த 3 பிரிவுகள் இடிக்காமல் நிறுத்தப்பட்டன. சிறைச்சாலையின் ஒரு பகுதியில் கோவிந்த் பல்லாப் பந்த் (Govind Ballabh Pant) எனப்படும் மருத்துவமனை 1963 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 40 மருத்துவர்கள் பணி புரிகின்றனர். நோயாளிகளுக்காக 500 படுக்கைகளும் உண்டு. இந்தியப் பிரதமர் மொராஜி தேசாய் (Moraji Desai) ஆட்சிக் காலத்தில் அந்தமான் சிறைச்சாலை தேசியச் சின்னமாக 1979 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 இல் அறிவிக்கப்பட்டது. இங்கு அந்தமான் சிறைக் காவலர்கள் அணிந்த உடை, அதிகாரிகள் அணிந்த உடை, கைதிகளின் கை, கால்களில் பூட்டிய விலங்கு, சங்கிலி, கழுத்தில் அணிவித்த கம்பி வளையம் என காட்சிக் கூடத்தில் உள்ளன. ஒரே சமயத்தில் மூன்று பேரைத் தூக்கிலிடுவதற்கான கொலைக் களம் அங்கு உள்ளது. தூக்கிலிடுவதற்கு முன்பாக அவர்களுக்கு இறுதிச்சடங்கு நடத்துவதற்கான மேடை தற்போதும் பராமரிக்கப்பட்டு வருகிறது. எண்ணெய் ஆட்டிய செக்கும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கைதிகளுக்கு தண்டனை வழங்கும் காட்சி உள்பட தற்போது சாட்சியாக விளங்குகிறது. சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு மண்டபத்தில் சுதந்திர ஜோதி அமைக்கப்பட்டுள்ளது. அது தொடர்ந்து அணையாமல் சுடர்விட்டு எரிந்து கொண்டே இருக்கிறது. தினமும் மாலை நேரத்தில் சவுண்ட் அண்டு லைட் ஷோ சிறையின் வளாகத்தில் நடத்தப்படுகிறது. அமர்ந்து பார்க்க இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரம் நிகழ்ச்சி நடைபெறும். இதனைக் காண்பதற்காக முன்கூட்டியே டிக்கட் பதிவு செய்து கொள்ள வேண்டும். அந்தமான் செல்லக் கூடிய ஒவ்வொருவரும் இந்தச் சிறைச்சாலையை காண வேண்டும். நமது சுதந்திரம் சும்மா கிடைக்கவில்லை. சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தால் கிடைத்தது. சித்திரவதைக்குச் சாட்சியாக அந்தமான் சிறைச்சாலை நின்று கொண்டிருக்கிறது. இது நமக்கு இன்று சுற்றுலாத் தலம். ஆனால் இது சுதந்திரப் போராட்ட வீரர்களின் ரத்தத்தின் சாட்சியாக, உயிரின் சாட்சியாக விளங்குகிறது.   21.சிடியா தபு   அந்தமான் சுற்றுலா செல்பவர்கள் சிடியா தபு (Chidiya Tapu) தீவிற்கு அவசியம் சென்று வருவது நல்லது. அது சுற்றுலாவிற்கு ஏற்ற சிறந்த இடம். இது போர்ட் பிளேரில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது. சாலை வசதி உண்டு. பஸ் மற்றும் வாடகை வாகனங்களில் பயணிக்கலாம். வாடகை வாகனத்திற்கு 1500 ரூபாய் கட்டணமாக பெறுகின்றனர். சிடியா தபு என்கிற தீவிற்கு பறவைகள் தீவு (Birds Island) என்கிற மற்றொரு பெயரும் உண்டு. சிடியா (Chidiya) என்பதற்கு பறவை எனவும், டபு (Tapu) என்பதற்கு தீவு எனவும் பொருள்படுகிறது. இங்கு பறவைகள் அதிகம் உள்ளன. ஆகவேதான் சிடியா தபு என்கிற பெயர் பெற்றது. இது தென் அந்தமானில் அமைந்துள்ளது. போர்ட் பிளேரில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள் இங்கு சென்று விடலாம். சிடியா டபு என ஒரு சிறிய கிராமம் உண்டு. செல்லும் சாலையின் இருபுறமும் கடை மற்றும் வீடுகள் அங்கொன்றும், இங்கொன்றும் உள்ளது. பாதை வளைந்து, வளைந்து செல்கிறது. சில இடங்களில் கடற்கறையை ஒட்டி வாகனம் செல்கிறது. நீலக் கடலின் அழகை ரசித்தவாரே செல்லலாம். இங்கு செல்பவர்கள் பின் வருவனவற்றைக் காணலாம். 1. உயிரியல் பூங்கா 2. பறவைகள் காணுதல் 3. மலைக்குன்று காட்சி முனை 4. முண்டா பஹார் கடற்கரை 5. சூரிய அஸ்தமனம்   சிடியா தபு உயிரியல் பூங்கா இதனை பறவை தீவு உயிரியல் பூங்கா (Bird Island Biological Park) என்றும் அழைக்கிறார்கள். உயிரினங்கள் வாழக்கூடிய பகுதியில் அவை பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கில் அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் உயிரியல் பூங்காக்கள் ஆரம்பிக்கப்பட்டன. குறிப்பாக குறிப்பிட்ட வாழ் விலங்குகள் (Endermic) மற்றும் அழிந்து வரும் விலங்கினங்கள் (Endangered) போன்றவற்றைப் பாதுகாத்து, ஆய்வுகள் மேற்கொள்வதற்காக உயிரியல் பூங்கா துவங்கப்பட்டுள்ளது. அந்தமான் தீவுகளில் அதிகப்படியான உயிரினங்கள் வாழ்கின்றன. 2001 ஆம் ஆண்டு முதல் உயிரினங்களின் பல்லுயிர் வளத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. []   இந்தப் பூங்கா கடந்த 20 ஆண்டுகளில் மூன்று பகுதியாக வளர்ச்சியடைந்துள்ளது. அதன் ஒரு பகுதி பொது மக்களின் பார்வைக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளது. பசுமையும், அடர்ந்த காடும் கொண்ட இப்பகுதியில் விலங்குகள் இயற்கையாக வாழ்வதற்கு ஏற்ற இடமாக விளங்குகிறது. 40 ஹெக்டேர் பரப்பளவில் பல்வேறு வகையான தாவரங்களும் உள்ளன. ஆர்கிடு தாவரங்களும் காணப்படுகின்றன. பறவைகள், காட்டுப்பன்றி, புள்ளிமான், கேளையாடு, உப்புநீர் முதலை, நண்டு உண்ணும் குரங்கு, அக்குவாரியம், ஊர்வன, வண்ணத்துப்பூச்சி இல்லம் போன்றவை இந்தப் பூங்காவில் காணப்படுகின்றன. பூங்காவின் நுழைவு வாயிலிலிருந்து செல்வதற்கு முன்பாக திமிங்கலத்தின் மண்டை ஓடு (Skull of Whale) காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. திமிங்கலம் நீரில் வாழும் பாலூட்டியாகும். உலகின் மிகப் பெரிய பாலூட்டி நீலத்திமிங்கலம் ஆகும். இது 100 அடி நீளமும், 150 டன் எடையும் கொண்டது. இதன் நாக்கில் மட்டும் 50 பேர் அமரலாம். அந்தளவிற்கு பெரிய நாக்கு. இது ஒரு நாளைக்கு 3600 கிலோ அந்தளவிற்கு உண்கிறது. உருவத்தில் பெரியதாக இருந்தாலும் இவை மிகவும் சாதுவான விலங்காகும். பூங்காவின் நுழைவு வாயில் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் காட்டுப் பன்றிகளைக் காணலாம். வாயின் இருபுறமும் வெளியே பற்கள் நீட்டிக் கொண்டிருக்கும். இவை காடுகளில் மட்டுமே வசிக்கின்றன. இந்திய காட்டுப் பன்றிகளில் அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் மட்டுமே வாழக்கூடிய ஒரு துணை இனம் உள்ளது. இதனை அந்தமான் காட்டுப்பன்றி (Andaman Wildpig) என்கின்றனர். இதன் விலங்கியல் பெயர் சஸ் ஸ்குரோபா அந்தமானென்சிஸ் (Susscroba andamansis) என்பதாகும்.   உவர் நீர் முதலை உவர் நீர் முதலையை (Saltwater crocodile) இங்கு கண்டு மகிழலாம். இதனை செம்மூக்கு முதலை எனவும் இதனை அழைக்கின்றனர். இந்த முதலையே (Crocodylus porobus) உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊர்வனங்களிலேயே மிப்பெரியது. இதன் மூஞ்சி நீளமாகவும், தடிமனாகவும் இருக்கும். ஆண் முதலை 6 மீட்டர் நீளம் வரை வளரும். மேலும் 1300 கிலோ எடையளவுக்கு வளர்ச்சி அடையும். பெண் முதலைகள் 4.2 மீட்டர் நீளமும், 450 கிலோ எடையும் கொண்டிருக்கும். இது போன்ற பெரிய முதலைகளைக் காணலாம்.   நண்டு உண்ணும் குரங்கு நண்டு உண்ணும் குரங்கை (Crub-eating macaque) இப்பூங்காவில் காணலாம். இக்குரங்கிற்கு நீளமான வால் இருப்பதால் இதனை நீண்ட வால் குரங்கு (Long-tailed macaque) எனவும் அழைக்கிறார்கள். இது அனைத்தும் உண்ணக்கூடிய அனைத்துண்ணி வகையைச் சேர்ந்தது. பழங்கள், விதைகள், தாவரங்கள், விலங்குகள் போன்றவற்றை உண்கிறது. கடற்கரைப் பகுதியில் நண்டுகள் அதிகம் கிடைப்பதால் அதனை விரும்பி உண்கின்றது. []       பறவை நோக்குதல் பறவை நோக்குதலுக்கு (Birds watching) ஒரு சிறந்த இடமாக இத்தீவு விளங்குகிறது. இங்கு பல்வேறு வகையான பறவைகளைக் காணலாம். வெளிநாட்டுப் பறவைகளை இங்கு காண்பது அரிது. அந்தமான் தீவுக்கே உரித்தான பறவைகளே இங்கு அதிகம் உள்ளன. இத்தீவில் மட்டும் 46 குறிப்பிட்ட வாழ் பறவைகள் (Endemic) மற்றும் அரிதான் அழிந்து வரும் பறவை இனங்களைக் கண்டு மகிழலாம். பறவை நோக்கர்களுக்கு சிறந்த இடம். விதவிதமான பறவைகளின் ஒலிகளைக் கேட்டு மகிழலாம். அதுதவிர கடற்கரை ஓரங்களிலும் பறவைகளின் சங்கீதத்தைக் கேட்க முடிகிறது.   மலை குன்று சிடியா தபு தீவில் உள்ள மலைக் குன்றில் (Hillock) ஒரு அழகிய காட்சி முனை (View point) உள்ளது. அங்கு செல்வதற்கு கட்டணம் கிடையாது. அதன் நுழைவு வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் அங்கு பணிபுரியும் ஒருவர் நீங்கள் தமிழா எனக் கேட்டார். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் அல்ல. இருப்பினும் தமிழ் தெரிந்திருந்தார். தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என நான் கூறிய உடன் மேலே செல்லுங்கள். ஒரு தற்கொலை காட்சி முனை (Sucide point) உள்ளது என்றார். ஒரு பெண் குன்றின் சிகரத்தில் இருந்து தற்கொலை செய்து கொண்டதால் அப்படி அழைக்கிறார்கள் எனத் தெரிந்து கொண்டேன். []   மலை குன்றிற்குச் செல்வதற்கு காட்டு வழிப்பாதை செல்கிறது. ஒரு கிலோ மீட்டர் நடை பயணத்திற்குப் பிறகு அங்கு சென்று அடையலாம். பாதையை அடைவதற்கு முன் கடல் நீர் வெளியேறும் ஒரு சிறிய ஓடை. அதன் மீது 20 அடி நீளத்திற்கு 2 மரத்தை போட்டுள்ளனர். அது ஒரு மரப்பாலம். அதன் மீது நடந்து செல்வது ஒரு பயிற்சிதான். மலைக்குன்றை நோக்கி பயணம் துவங்கும் இடத்தின் இருபுறமும் பசுமையான தாழம்பூ மரங்கள். சிகரத்தை நோக்கிச் செல்லும் போது இருபுறமும் அடர்ந்த காடுகள். இது மலை ஏறும் பயிற்சி மேற்கொள்வதற்கு ஏற்ற இடம். வழியில் அமர்ந்து ஓய்வு எடுப்பதற்கு என ஒரு மரத்தின் அடியில் மரப்பலகையால் அமைந்த இயற்கையான இருக்கை. அங்கு அமர்ந்த போது மேலே இருந்து கீழே இறங்கிய ஒருவர், மலைச் சிகரம் எங்கு உள்ளது எனத் தெரியவில்லை. அது மிக தூரம் என ஆங்கிலத்தில் கூறினார். அவர் தனியாகச் சென்றதால் அந்த இடத்தை அடையாமலே திரும்பி விட்டார். இருப்பினும் நாங்கள் அங்கு செல்வது என முடிவு செய்தோம். இருக்கையை ஒட்டி ஒரு அபாய எச்சரிக்கை போர்டும் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு அப்பால் கடல் தெரிந்தது. அது சரிவுப் பகுதி. அங்கு சென்றால் மண் சரிந்து கடலில் விழும் ஆபத்து உள்ளது. நடைபாதை மேல்நோக்கி செல்கிறது. மரத்தின் வேர்கள் சாலையில் படர்ந்து உள்ளன. வழியில் விழுந்து மட்கிப் போன மரத்தில் அழகான காளான் இருந்தது. அது பாலிபோரஸ் (Polyporus) எனப்படும் பூஞ்சை. சுழல் போல் சுருண்டு விரிந்து காணப்படுகிறது. மஞ்சள், ஆரஞ்சு, பழுப்பு ஆகிய பல வண்ண ரிப்பன்கள் பூஞ்சையின் மீது உள்ளது. உடலில் வியர்வை கொட்டி சோர்வு எற்பட்டது. முதன் முதலாக செல்வதால் செல்லக்கூடிய இடம் வெகு தொலைவில் இருப்பதாகத் தோன்றியது. பாதையின் இடது புறத்தில் ஒரு சரிவு உள்ளது. அங்கு சென்று பார்த்தால் 500 அடிக்கு கீழே கடல். ஆபத்தான பகுதி. மேலே பார்த்தால் கலங்கரை விளக்கம் தெரிந்தது. ஆகவே இன்னும் சிறிது தொலைவில் தான் காட்சி முனை உள்ளது என்கிற உற்சாகம் ஏற்பட்டது. அந்த சரிவுப் பகுதியை புகைப்படம் எடுத்தேன். அது இந்திய வரைபடத்தில் தென் இந்தியா போலவே தென்படுகிறது. மீன்டும் நடையைத் தொடர்ந்த போது எதிரில் இந்தி பேசும் குடும்பத்தினர் திரும்பி வந்தனர். அவர்களிடம் கேட்ட போது அருகில் தான் உள்ளது. 500 அடி தூரம் என ஆங்கிலத்தில் கூறினார்கள். கலங்கரை விளக்கத்தை அடைந்தும். அது பாதுகாக்கப்பட்ட பகுதி. உள்ளே நுழைந்தால் தண்டனை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை ஒட்டிய ஒற்றையடிப்பாதை ஒரு மண் திட்டில் முடிந்தது. அற்புதமான காட்சி கடல் விரிந்து எல்லையற்று சென்றது. அந்த மண்மேட்டின் எல்லையில் தடுப்பு வேலி போடப்பட்டிருந்தது. எச்சரிக்கை பலகையும் இருந்தது. அதனை தாண்டிச் செல்லக்கூடாது. வேலிக்கு அப்பால் செங்குத்தான சரிவு. அது கடலில் முடிகிறது. மண் திட்டின் எதிரே ஒரு மொட்டைக் கரடு. அங்கு செல்ல முடியாதவாறு தடுத்து இருந்தனர். அது 500 அடி தொலைவில் முழுக்க பாறையால் ஆனது. அதுதான் தற்கொலை காட்சி முனை. அது செங்குத்தானது. அதிலிருந்து குதித்து தற்கொலை செய்துள்ளனர். ஆனால் அது அழகை ரசிப்பதற்கான காட்சிமுனை. கடல் அலைகள் பாறையின் அடிப்பகுதியில் வந்து மோதிச் செல்கிறது. அது கடல் நீரிலிருந்து 700 – 1000 அடி உயரம் கொண்டதாக இருக்கும்.  மண் திட்டில் இருந்து பார்த்தால் எட்டிய தூரம் வரை கடலின் விரிந்த காட்சி. மூன்று புறமும் கடலால் சூழப்பட்டுள்ளது. எதிர்புறம் கடல் மற்றும் இருபுறமும் நீண்ட தொலைவிற்கு அப்பால் தீவுகள் உள்ளன. சிரமப்பட்டு நடந்து சென்ற பிறகு, ஒரு ரம்யமான காட்சியைக் காண முடிந்தது. அப்படிப்பட்ட ஒரு இயற்கையின் அழகை வேறு எங்கும் கண்டதில்லை. []   மண் திட்டின் அருகில் ஓய்வுக் கூடம் உள்ளது. சிறிது ஓய்வு எடுத்த பிறகு திரும்பத் தொடங்கினோம். வழியில் செங்காந்தள் மலரை காண முடிந்தது. தமிழகத்தின் மாநில மலரான செங்காந்தள் செடி அங்கும் உள்ளது. புதரில் மிக வேகமாக ஓடிய அரிய பச்சைப் பாம்பையும் காண முடிந்தது. எதிரில் கேரளத்தை சேர்ந்தவர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களிடம் அருமையான இடம் என்றேன். அதில் ஒரு இளைஞன் நான் ஏற்கனவே  வந்துள்ளேன். அந்தமானில் வேலை செய்கிறேன். எனது உறவினர்கள் வந்தனர். அவர்களை அழைத்துச் செல்கிறேன் என்றார். வழியில் ஒருவர் மட்டும் வியர்க்க ஏறி வந்தார். அவரிடம் தொலைவில் காட்சி முனை உள்ளது. ஆனால் அருமையான இடம் என ஆங்கிலத்தில் தெரிவித்தேன். ஏற்கனேவே நான் வந்துள்ளேன். அருமையான இடம் என ஆங்கிலத்தில் பதில் அளித்தார். அழகிய காட்சி முனையைக் கண்ட ஓர் இனிய அனுபத்துடன் திரும்பினோம்.   கடற்கரை சிடியா தபு கடற்கரை அல்லது முண்டா பஹாடு கடற்கரை (Munda pahad) என இங்குள்ள கடற்கரையை அழைக்கின்றனர். நுழைவு வாயிலில் சூழல் நட்புக் கடற்கரை என குறிப்பிட்டுள்ளனர். 2004 ஆம் ஆண்டின் போது ஏற்பட்ட சுனாமியால் விழுந்த மரம் கடலில் கிடக்கிறது. அதை அப்படியே விட்டு வைத்துள்ளனர். அது கடலின் பின்புறக் காட்சியுடன் அழகாக உள்ளது. பலர் அங்கு நின்று புகைப்படம் எடுக்கின்றனர். மேலும் விழுந்த மரங்களைக் கொண்டு சோபா, இருக்கைகள், மேஜை போன்றவைகளை உருவாக்கியுள்ளனர். இவை இயற்கையாக உருவாக்கப்பட்டது. தச்சு வேலை செய்யப்படாதவை. மிகப் பெரிய மரத்துண்டுகளைக் கொண்டே இதனை வடிவமைத்துள்ளனர். அது இயற்கையாக காட்சி தருகிறது. அதில் அமர்ந்து பலர் புகைப்படம் எடுக்கின்றனர். []   வளைந்து நெளிந்து செல்லும் கடற்கரை. அது தீவை ஒட்டிச் செல்கிறது. இங்குள்ள கடல் ஆழமில்லாதது. கடற்கரையை ஒட்டி வெகுதூரம் வரை ஆழம் குறைந்துள்ளது. நீர் மிகத் தெளிவானது. வெண்மையான மணல் பரப்பு, நீரில் மீன்கள், மற்றும் நண்டுகளைக் காண முடிந்தது. அழகிய சிறிய மீன்கள் கரையின் ஓரத்தில் நீந்துவதைக் காணலாம். அவை நம்மைக் கண்டு அஞ்சி ஓடுவதில்லை. கடற்கரை ஓரமாக நீரில் பயம் இல்லாமல் நடந்து செல்லலாம். குளிப்பதற்கும் ஏற்ற இடம். ஜோடிகள் பல கடற்கரை ஓரமாக நடந்து செல்கின்றனர். இது அலைகள் குறைவான கடல். கடற்கரையின் ஓரத்தில் நீரானது பளிங்கு போல் மின்னுவதைக் காணலாம். இக்கடலின் அழகை அவரவர் ரசனைக்கு ஏற்றவாறு வர்ணிக்கலாம்.   சூரிய அஸ்தமனம் சிடியா தபு கடற்கரையானது சூரிய அஸ்தமனக் (Sunset View) காட்சிக்குப் பெயர் பெற்ற இடம். அது மட்டும் அல்லாமல் சூரிய உதயக் காட்சியைக் (Sunraise) காணபதற்கும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். சூரிய அஸ்தமனத்தைக் காண்பதற்காக மாலை நேரத்தில் இங்கு வருகின்றனர். சூரிய உதயத்தைக் காண்பதற்காக மாலை நேரத்தில் இங்கு வந்து இதன் அருகில் உள்ள விடுதிகளில் தங்குகின்றனர். சூரியன் மறைதல் என்பது தீவுகளின் மலைத்தொடர் பின்னனியில் நடக்கிறது. சூரியக்கதிர்கள் கடல் நீரில் பட்டு பொன் நிறமாக ஒளிர்கிறது. அது அழகிய காட்சி. அதனைக் காணத்தான் பணத்தை செலவு செய்து சுற்றுலாப் பயணிகள் அங்கு கூடுகின்றனர். மாலை பொழுதில் கடல் உள் வாங்குகிறது. உள் வாங்கிய பிறகு கடல் மணல் அலை அலையாக படிந்துள்ளது. வெண் மணல் பரப்பில் சூரிய ஒளியில் அவை பிரகாசமாக மின்னுவதைக் காணலாம். இப்படி இயற்கையின் அழகினை பல்வேறு காட்சியாகக் கண்டு மகிழலாம். சில இடங்களில் வண்டல் மணல் (Sylvan sand) காட்சியையும் காணலாம். கடல் உள்வாங்கும் போது கடலில் மறைந்திருந்த பாறைகளும் வெளியே தெரியும். சிடியா தபு தீவு அருகில் படகு சவாரியும்  உண்டு. அதன் மூலம் ரூட் தீவு (Rutt Island) மற்றும் சிண்கு தீவு (Cinque Island) ஆகிய இடங்களுக்கும் பயணிகள் செல்கின்றனர். மேலும் கலாபத்தர் (Kalapathar) என்ற இடத்தில் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இங்கு கரும்பாறைகள் மற்றும் கடற்கரையும் உள்ளது. சிடியா தபு பயணம் செல்லக் கூடியவர்கள் இப்படி பல்வேறு இடங்களைக் காணலாம். முழுக்க இது ஒரு பயனுள்ள சுற்றுலாத் தலம் என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது.     22.அந்தமான் பச்சை நிற வெண்கலப் பாம்பு   பாம்பு என்பது ஒரு ஊர்வன விலங்காகும். இதற்கு நீளமான உடலும், சிறு தலையும் உள்ளது. பாம்பிற்கு கால்கள் மற்றும் காதுகள் கிடையாது. பாம்பின் மீது உள்ள தோலானது செதில்களால் மூடப்பட்டிருக்கும். குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை பாம்பு தனது தோலை உரித்து விடும் பண்பு கொண்டது. பாம்புகள் நீரில் நன்றாக நீந்தும் ஆற்றல் படைத்தவை. உலகில் சுமார் 2700 வகையான பாம்பு இனங்கள் உண்டு. இந்தியாவில் சுமார் 230 பாம்பு இனங்கள் உள்ளன. இவற்றில் 50 இனப் பாம்புகள் மட்டுமே நச்சுத்தன்மை கொண்டவை.   பச்சைப் பாம்பு பாம்புகள் பல்வேறு நிறங்கொண்டவை. அவற்றில் பச்சை நிறம் கொண்ட பாம்புகளும் உள்ளன. பொதுவாக பச்சை நிறப் பாம்புகள் விஷத் தன்மையற்றவை. அல்லது குறைவான விஷம் கொண்டிருக்கும். உயிரை போக்கும் அளவிற்கு விஷத்தன்மை கிடையாது. அந்தமான் தீவுகளிலும் பச்சை நிற பாம்புகள் வாழ்கின்றன.   பச்சை நிற வெண்கலப் பாம்பு அந்தமானில் வாழக்கூடிய பச்சைப் பாம்பை அந்தமான் பச்சை நிற வெண்கல மரப்பாம்பு (Andaman Green Bronzeback Tree Snake), அந்தமான் வெண்கல முதுகுப் பாம்பு (Andaman Bronzeback) மற்றும் அந்தமானன் ப்ரோன்ஸ்நாட்டர் (Andamanen Bronzenatter) போன்ற பெயர்களில் அழைக்கிறார்கள். இதன் விலங்கியல் பெயர் டென்டிரிலாபிஸ் அந்தமானென்சிஸ் (Dendrelaphis andamanesis) என்பதாகும். இப்பாம்பு அந்தமான் தீவுகளில் மட்டுமே வாழக்கூடிய குறிப்பிட்ட இடவாழ் விலங்காகும். ஆகவே இது அரிய இனத்தைச் சேர்ந்தது. இது அந்தமான் மற்றும் லிட்டில் அந்தமான் தீவுகளில் மட்டுமே வாழ்கின்றது. []   இப்பாம்பு அழகிய நிறம் கொண்டுள்ளது. பெரும்பாலும் மரங்களில் வசிக்கின்றது. மரக்கிளைகளில் வேகமாகப் பயணம் செய்யும். ஒரு கிளையிலிருந்து அடுத்தக் கிளைக்கு தாவிச் செல்லக் கூடியது. இவை இரையை பிடிப்பதற்காக மரத்தை விட்டு கீழே தரைக்கு வருகின்றன. மரத்தில் இருக்கும்போது இதனை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இதன் பச்சை நிறம், இலைகளின் பச்சை நிறத்துடன் கலந்து விடுவதால் காண்பது அரிது. இருப்பினும் சுற்றுலாப் பயணிகளின் பார்வையில் இவை தென்பட்டு வருகின்றன. பகல் பொழுதில், இதன் மீது சூரிய ஒளிபடுகிறது. அப்போது பாம்பின் உடல் பிரகாசமாக மின்னுகிறது. நாங்களும் சிடியாதபு என்னும் தீவில் அமைந்துள்ள வனப்பகுதியில் இப்பாம்பைக் கண்டோம்.  இப்பாம்பு தரையில் மிகவும் வேகமாக ஊர்ந்து சென்றது. சுமார் 4 அடி நீளம் கொண்டது.    4 புகைப்படங்களை எடுத்தேன். அது செல்லக் கூடிய வேகத்தில் முழு பாம்பையும் படம் எடுக்க முடியவில்லை. சருகின் உள்ளே நுழைந்து, நுழைந்து வேகமாகச் சென்றது. எடுத்த புகைப்படங்களைப் பார்த்தால் அதன் தலைப்பகுதி கிடைக்கவில்லை. மேலும் அது ஒரு பச்சை நிற பிளாஸ்டிக் கயிறு போலவே புகைப்படத்தில் காட்சியாகத் தெரிகிறது.   உடல் இப்பாம்பை முதன் முதலாக 1871 ஆம் ஆண்டில் ஆண்டர்சன் (Anderson) என்பவர் அறிவியல் பூர்வமாக விவரித்து பெயரிட்டுள்ளார். இப்பாம்பு 100 – 130 செ.மீ நீளம் வரை வளரக்கூடியது. மெல்லிய, நீண்ட உடலைக் கொண்டுள்ளது. தோலின் மீது மென்மையான செதில்கள் மூடியுள்ளன. புல்லின் பச்சை நிறத்துடன் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் அதன் மேல்பாகம் உள்ளது. உடலின் அடிப்பகுதி வெளிறிய பச்சை நிறமும், விளிம்புப் பகுதி கருப்பு நிறத்தையும் கொண்டுள்ளது. தலை தட்டையாகவும், கழுத்தை விட நீண்டு இருக்கிறது. தலைப்பகுதி பச்சை நிறம் கொண்டது. உதடுகள் மற்றும் கீழ்த்தாடை வெளிர் மஞ்சள் அல்லது வெளிறிய பச்சை நிறமுடையது. மூக்குப்பகுதியிலிருந்து கருப்பு நிறக்கோடு கண்களின் இருபுறம் செல்கிறது. நாக்கு சிகப்பு நிறமும், அதன் நுனிப்பகுதி மட்டும் கருமை நிறமும் கொண்டதாக உள்ளது. பெரிய கண்களும் அதில் வட்ட வடிவமான கண்மணிகளும் உள்ளன. இளம் வாலிபப்பருவமுடைய பாம்புகளின் மேல்பகுதி வெண்கலம் போல ஒளிர்கிறது. இப்பாம்புகள் சூரிய ஒளியை மிகவும் நேசிக்கின்றன. பகல் பொழுதில் புதர் மீதும், மரங்களின் மீதும் சுறுசுறுப்பாக செயல்படும். மிக நீண்ட தூரத்திற்கு ஒரு கிளையிலிருந்து, மற்றொரு கிளைக்கு தாவிக்குதிக்கும். மோசமான பருவநிலையின் போது மட்டும் சுறுசுறுப்பின்றி காணப்படும். இது கூச்ச சுபாவம் கொண்டது. கையில் பிடித்தால் பலமுறை கடிக்கும். கடித்த இடத்தில் ஒரு மணி நேரம் வரை வீக்கம் இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதன் முக்கிய உணவு பல்லிகள், ஓனான், தவளைகள், தேரைகள் மற்றும் சிறிய பறவைகள் போன்றவை ஆகும். பல்லிகளைப்பிடிப்பதற்காக மரக்கூரைகள் வழியாக வீட்டில் நுழைவதும் உண்டு. பாம்பின் மீது உள்ள தவறான நம்பிக்கை காரணமாக இவை கொல்லப்படுகின்றன. சாலைப்பகுதியில் வாகனங்களால் அடிப்பட்டு இறக்கின்றன. பாம்பைப் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இப்பாம்புகளுக்கு அச்சுறுத்தல் தொடர்ந்து நடக்கிறது. மேலும் பருவநிலை மாற்றத்தின் காரணமாகவும், இப்பாம்பு இனம் அழிந்து போகும் விளிம்பு நிலையில் உள்ளது.     23.ஹேவ்லாக் தீவு   ஹேவ்லாக் தீவானது (Havelock Island) போர்ட் பிளேரில் இருந்து 57 கி.மீ தொலைவில் உள்ளது. அந்தமானில் உள்ள பெரிய தீவுகளில் இதுவும் ஒன்றாகும்.      இது 8 கி.மீ அகலமும், சுமார் 113.93 சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும் கொண்டது. இத்தீவு 58.5 கி.மீ நீளமான கடற்கரையைக் கொண்டுள்ளது. இத்தீவின் மிக உயரமான பகுதி உலுடாங்க (Yulutang) என்பதாகும். இது கடல் மட்டத்திலிருந்து 548 அடி (167 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது. இத்தீவில் 2011 ஆம் ஆண்டில் எடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 6351 பேர் வசிக்கின்றனர். இது கிரேட் அந்தமான் (Great Andaman) சங்கிலியைச் சேர்ந்த ஒரு தீவு. இது தெற்கு அந்தமான் மாவட்ட நிர்வாகத்தின் எல்லைக்கு உட்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயத் தளபதியாக இருந்த ஹென்றி ஹேவ்லாக் (Henry Havelock) என்பவரின் நினைவாக ஹேவ்லாக் என இத்தீவிற்குப் பெயரிடப்பட்டது. 1971 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் பிரிவினை நடந்தபோது ஏற்பட்ட போரின் போது வங்க தேசத்தைச் சேர்ந்த அகதிகள் ஹேவ்லாக் தீவில் குடியேறினர். ஆகவே வங்காள மொழி பேசுபவர்கள் அதிகமாக உள்ளனர். []   இத்தீவில் கோவிந்தா நகர் (Govinda Nagar), விஜய் நகர் (Vejoy Nagar), ஷியாம் நகர் (Shyam Nagar), கிருஷ்ண நகர் (Kishna Nagar), ராதா நகர் (Radha Nagar) என 5 கிராமங்கள் உள்ளன. மேலும் ஷியாம் நகருக்கும், கிருஷ்ணா நகருக்கும் இடையில் உள்ள சாலையிலும் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள கிராமங்களில் கோவிந்தா நகரில் மிக அதிகமாக மக்கள் வசிக்கின்றனர். இத்தீவின் வடக்கு முனையில் ஒரு கலங்கரை விளக்கம் 2005 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது கோவிந்தா நகருக்கு அருகில் உள்ளது. மேலும் 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் ஹேவ்லாக் தீவின் பெயரை ஸ்வராஜ் தீவு (Swaraj Island) என பெயர் மாற்றம் செய்துள்ளனர்.   சுற்றுலா அந்தமானில் உள்ள சுற்றுலாத் தளங்களில் ஹேவ்லாக் தீவும் ஒன்று. மிக முக்கியமான சுற்றுலாத் தீவாக ஹேவ்லாக் கருதப்படுகிறது. இத்தீவில் ராதா நகர் கடற்கரை, எலிபென்ட் கடற்கரை, விஜய் நகர கடற்கரை மற்றும் காலா பாத்தர் கடற்கரை என பல கடற்கரைகள் உள்ளன. மேற்குக் கடற்கரையில் கடற்கரை எண் 7 என்ற எண்ணைக் கொண்டது. ராதா நகர் கடற்கரை ஆகும். இது ஆசியாக் கண்டத்தில் மிகவும் சுத்தமான மற்றும் அழகான கடற்கரை என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. இதனை 2004 ஆம் ஆண்டில் டைம் பத்திரிக்கை தேர்வு செய்து அறிவித்தது. ராதா கடற்கரை சுத்தமாகவும், வெண்மையான மணல் பரப்பையும் கொண்டது. வெளிநாட்டுப் பயணிகள் இங்கு அதிகம் வந்து செல்கின்றனர். தேனிலவு வருபவர்களுக்கு ஏற்ற இடம். இது உலகளவில் பிரபலமான கடற்கரை. இங்கே கடலுக்கு அடியில் உள்ள பவளப் பாறைகளை கண்டு மகிழலாம். சூரிய அஸ்தமனக் காட்சியைக் காண்பதற்காக சுற்றுலாப் பயணிகள் இங்கு மாலையில் கூடுகின்றனர். எலிபென்ட் பீச் எனப்படும் யானைக் கடற்கரை ராதா நகர் கடற்கரைக்கு அருகிலேயே உள்ளது. இங்கே நடந்தே சென்று விடலாம். படிகம் போன்ற நீர் பரப்பும், அருகில் பசுமையான காடும் உள்ளது. இங்கு யானை மீது சவாரி செய்யலாம். ராஜன் என்ற கடலில் நீந்தும் யானை இங்குள்ளது. 75 வயதுக்கு மேல் ஆன இந்த ஒரு யானை மட்டும் கடலில் நீந்துகிறது. யானைகள் பொதுவாக கடலில் நீந்தாது. ஆனால் இந்த யானைக்கு சிறு வயதிலேயே நீச்சல் கற்றுத் தந்ததால் இது கடலில் நீந்துகிறது. சில பயணிகள் இந்த யானையுடன் சேர்ந்து நீந்தியுள்ளனர். வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் ராஜன் யானையுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் அதனுடன் கடலில் நீந்தவும் விருப்பம் கொண்டுள்ளனர். []   விஜய் நகர கடற்கரையும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. இங்கு ஸ்கூபா டைவிங் மூலம் பவளப் பாறை, அழகிய மீன்களையும் கண்டு மகிழ்கின்றனர். இங்கு கைவினைப் பொருட்களும், கடல் மற்றும் கடல் சிப்பிகளால் செய்யப்பட்ட பொருட்களும் கிடைக்கின்றன. எலிபென்ட் கடற்கரைக்கு 5 என்ற எண் கொடுக்கப்பட்டுள்ளது. விஜய் நகர் கடற்கரைக்கு 3 எண்ணும், காலாபாந்தர் (Kalapanthar) என்ற கடற்கரைக்கு எண் 1 எனக் கொண்டுள்ளது. ஹேவ்லாக் தீவில் உள்ள அனைத்துக் கடற்கரைகளுமே அழகான சுற்றுலாப் பகுதிளாக உள்ளன. இங்கு ஒருநாள் தங்கி அனைத்தும் கண்ட பிறகு போர்ட் பிளேர் திரும்பலாம்.   24.பாராடங் பயணம் பாரடங் (Baratang) என்பது அந்தமானில் உள்ள ஒரு தீவு. இதனைப் பாரடாங் தீவு என்றும் அழைப்பார்கள். இந்த தீவு போர்ட் பிளேரில் இருந்து 150 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது 242.6 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த தீவின் வடக்கே நடு அந்தமான் தீவும், தெற்கே தெற்கு அந்தமான் தீவும் அமைந்துள்ளன. மேலும் இத்தீவிற்குக் கிழக்கே 14 கி.மீ தொலைவில் ரிட்சி (Ritchie) என்னும் தீவும் உள்ளது. இத்தீவு வடக்கு மற்றும் மத்திய அந்தமான் நிர்வாக மாவட்டத்தின் கீழ் உள்ளது. நிர்வாகத்தின் அடிப்படையில் ரங்கட் தாலுக்காவின் கீழ் பாராடங் செயல்படுகிறது. இத்தீவிற்கு ராஞ்சிவாலாஸ் தீவு (Ranchiwalas) என்கிற மற்றொரு பெயரும் உண்டு. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ராஞ்சி நகரம் அரசியல் எழுச்சி கண்டது. அதனால் பலர் கிறிஸ்துவ மிஷனரிகளின் மூலம் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினர். பிரிட்டிஷ் அரசு வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் பயிரிட முடிவு செய்தது. அதன் அடிப்படையில் பாராடங் தீவில் பயிர் செய்வதற்காக ராஞ்சியில் இருந்து தொழிலாளர்கள் அங்கு குடியேறினார்கள். அதன் மூலமாக ராஞ்சி தொழிலாளர்கள் ஒரு புதிய வாழ்க்கையை பாராடங்கில் ஏற்படுத்தினர். பாராடங்கில் கடல் போக்குவரத்திற்காக 1985 ஆம் ஆண்டில் அதன் கிழக்கு புறத்தில் ஒரு கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. ஒரு டிரங்க் சாலை பாராடங் ரங்கட் (Rangat) மற்றும் மாயாபந்தர் (Mayabunder) ஆகியவற்றை இணைக்கிறது. பாராடங் ஒரு மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இப்பகுதியில் சேற்று எரிமலை (Mud volcano), சுண்ணாம்புப் பாறை குகை (Limestone cave), கிளி தீவு (Parrot Island) மற்றும் பாலுடிரா கடற்கரை (Baludera Beach) ஆகியன உள்ளன. ஆகவே இங்கு வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் பாராடங் தீவு பயணம் என்பது ஒரு சாகசம் நிறைந்த (Adventurous) பயணமாகவே கருதப்படுகிறது.   ஜிர்காடங் ஜிர்காடங் (Jirkatang) என்பது ஒரு சிறிய கிராமம். இது தெற்கு அந்தமான் மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளது. இதை ஒட்டி 77 சிறு கிராமங்கள் உள்ளன. இது ஒரு வெப்பமண்டலப் பகுதி. இந்தப் பகுதி முழுவதும் மரங்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் அதிகம் வாழ்கின்றன. கார் மற்றும் பஸ் மூலம் பயணம் செய்கின்றனர். ஜிர்காடங்கில் ஒரு சோதனைச்சாவடி (Check post) உள்ளது. அதனை அடுத்து ஜாரவா பழங்குடி (Jarawa Tribe) மக்கள் வாழக்கூடிய காட்டுப்பகுதி உள்ளது. அந்த வனப் பகுதியைக் கடந்துதான் பாராடங் தீவிற்குச் செல்ல வேண்டும். இந்த வனப்பகுதி வழியாக 1970 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட டிரங்க் ரோடு செல்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த வழியாகப் பயணம் செய்வது என்பது ஆபத்தானதாக இருந்தது. ஏனெனில் ஜாரவா பழங்குடி இன மக்கள் வாழும் காட்டு வழியாக நாம் செல்வதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களால் தாக்கலாம். ஆகவேதான் இந்த வழியாகச் செல்லும் பயணம் ஒரு சாகசப் பயணமாகக் கருதப்பட்டது.   பயணம் பாராடங்கிற்குச் செல்ல என்றால் அதிகாலையில் புறப்படுவது நல்லது. பஸ் மற்றும் வாடகை கார் மூலம் பயணம் செய்யலாம். நான், எனது மனைவி தில்லைக்கரசி, மகன் ஹோசிமின் ஆகிய மூவரும் அதிகாலை 3 மணிக்கே தயாராகிவிட்டோம். அப்பகுதிக்குச் செல்வதற்கு என உரிமை பெற்ற வாடகை வாகனத்தில் காலை 3.15 மணிக்கு புறப்பட்டோம். போர்ட் பிளேரில் இருந்து பாராடங் சென்று வர கட்டணமாக ரூ.5,000 வசூல் செய்கிறார்கள். இதில் எந்த பேரமும் கிடையாது. []   போர்ட் பிளேரில் இருந்து ஜிர்காடங் செல்லும் பாதை குண்டும், குழியுமானது. ஆகவே வாகனம் மெதுவாகச் செல்கிறது. பல வாகனங்கள் அதிகாலையிலேயே அவ்வழியாகச் சென்று கொண்டிருக்கிறது. ஏனென்னறால் ஜிர்காடங் இடத்தில் உள்ள சோதனைச் சாவடி வழியாக காலை 6 மணி, 9 மணி, 12, மணி மற்றும் மாலை 3 மணி என்ற கால அட்டவணை அடிப்படையில் மட்டுமே ஜாரவா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் (Jarawa Reserve) வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. 10 – 20 வாகனங்கள ஒன்று சேர்ந்து, ஒரு பாதுகாப்பு வளையத்தின் (Convoy) கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டே வாகனங்கள் அனுப்பப்படுகின்றன. இது ஜாரவா பழங்குடி மக்களுக்கும் சுற்றுலா செல்லும் பயணிகள் ஆகிய இரு பிரிவுகளுக்கும் செய்யப்படும் பாதுகாப்பாகும். ஜிர்காடங்கை அதிகாலை 4.45 மணிக்கு சென்று சேர்ந்தோம். பிறகு ஒரு விண்ணப்பப் படிவத்தில் எங்கள் பெயர், விலாசம், தொலைபேசி எண் என அனைத்தையும் எழுதிக் கொடுத்தோம். பிறகு நாங்கள் செல்லும் வாகனத்தின் எண், ஓட்டுனர் பெயர், விலாசம் அனைத்தும் அந்த படிவத்தில் ஓட்டுனர் எழுதிக் கையொப்பம் இட்டு அனுமதி பெற்றார். சோதனைச் சாவடியில் போலீஸ் மற்றும் வனத்துறையினர் உள்ளனர். அவர்களின் அனுமதி பெற்ற பிறகே பாராடங் செல்ல முடியும். சரியாக 6 மணிக்கு வண்டி புறப்படும். அதற்குள் காலைக் கடன் முடித்து, டிபன் சாப்பிட்டு விட்டு வண்டிக்கு 5.45 மணிக்குள் திரும்பி வந்துவிட வேண்டும் என எங்கள ஓட்டுனர் அறிவுறுத்தினார். சோதனைச் சாவடி அருகில் கழிப்பிட வசதிகள் இருந்தன. சோதனைச் சாவடியை நெருங்குவதற்கு முன்பாக இருபுறங்களிலும் டீ கடை மற்றும் டிபன் கடைகள் இருந்தன. கடையிலிருந்து இந்தி, பெங்கால், தமிழ், ஆங்கிலம் என பல மொழிகளில் கடைகாரர்கள், சுற்றுலாப் பயணிகளை கூவி, கூவி அழைத்தனர். மதுரை மல்லி பூ இட்லி வாங்க…. என தமிழில் பலமான குரல் ஒலித்தது. இங்கு தமிழர்கள், பெங்காலி மற்றும் இந்தி பேசுபவர்கள் உள்பட பலர் கடைகள் வைத்திருக்கின்றனர். அது தவிர இவர்கள் தமிழ், பெங்காலி, இந்தி என மொழிகளில் பேசும் திறமை கொண்டவர்களாக உள்ளனர். பாராடங்கில் டிபன் கடை குறைவு. டிபன் கிடைப்பது சிரமம். ஆகவே ஜிர்காடங்கில் சாப்பிட்டு விடுங்கள் என டிரைவர் கூறினார். அதன் அடிப்படையில் காலை 5 மணிக்கு டிபன் சாப்பிட்டோம். என் வாழ்நாளில் முதன் முதலாக காலை 5 மணிக்கு டிபன் சாப்பிட்டேன். இது ஒரு புதிய அனுபவம். மேலும் அந்தமான் தீவில் காலை 5 மணிக்கு சூரியன் ஒளி வந்துவிடும். மாலை 5 மணிக்கு எல்லாம் இருட்டாகிவிடும். இது கூட ஒரு புதிய அனுபவம்தான். மதுரையைச் சேர்ந்த கடைகாரரின் கடையில் சுடச்சுட இட்லி கிடைத்தது. அவரிடம் கேட்டபோது, அவர்களுக்கு வீடு, நிலம் என ஜிர்காடங் கிராமத்தில் உள்ளது என கூறினார். காலை 6 மணிக்கு வாகனங்கள் செல்ல அனுமதி கிடைத்தது. ஒரு பாதுகாப்பு வளையத்தில் வாகனங்கள் ஒரே வேகத்தில் பயணித்தன. ஜாரவா பாதுகாப்பு வனப்பகுதியானது 50 கி.மீ. நீளம் கொண்டது. இப்பகுதியில் வாகனத்தை நிறுத்தக்கூடாது. தாவரங்கள் உள்பட எதையும் புகைப்படம் எடுக்கக்கூடாது. ஜாரவா மனிதர்களைக் கண்டால் புகைப்படம் எடுக்கக்கூடாது. மேலும் அவர்களுக்கு எதுவும் வழங்கக்கூடாது போன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீறுவோருக்கு தண்டனையும், அபராதமும் விதிக்கப்படுகிறது.  டிரங்க் ரோட்டின் இருபுறமும் அடர்ந்த காடுகள். இந்தக் காட்டின் உள்பகுதியில்தான் ஜாரவாக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் சிலர் டிரங்க் ரோட்டிற்கு வருவதுண்டு. அவர்களைக் காண்பது என்பதும் சுற்றுலாப் பயணிகளின் விருப்பமாகும். நாங்கள் ஒரு பெண் மற்றும் மூன்று குழந்தைகளைக் கண்டோம். பெண் தனது முகத்தில் சிகப்பு வண்ணத்தைப் பூசி இருந்தார். வாகனத்தைப் பார்த்து ஏதோ கூச்சலிட்டது மட்டும் தெரிந்தது. வாகனங்கள் அனைத்தும் 50 கி.மீ. பயணத்திற்குப் பிறகு ஒரு படகுத்துறையை அடைந்தது. அனைவரும் அங்கே இறக்கப்பட்டனர். படகுத் துறையில் மிகப்பெரிய படகு (Jungar) இருந்தது. அதில் பஸ், வேன், உள்ளூரைச் சேர்ந்த வாகனங்கள் ஆகியவற்றை படகில் ஏற்றினார்கள். சுற்றுலா பயணிகள் ஒருவருக்கு டிக்கட் ரூபாய் பத்து என வசூலிக்கப்பட்டது. அந்த பெரிய விசைப் படகில் வாகனங்களுடன் சேரந்து கடலில் பயணம் செய்தோம். ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள பாராடங் படகு துறையை அடைந்தோம். பாராடங் உங்களை வரவேற்கிறது என்கிற போர்டு அனைவரையும் வரவேற்றது. []   பாராடங்கில் இருந்துதான் சுற்றுலாப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டும். ஒரே நாளில் இடங்களைப் பார்க்க முடியாது. அங்கு தங்கி பார்த்து வரலாம். வண்டியை வாடகைக்கு எடுத்து செல்பவர் குறிப்பிட்ட நேரத்திற்குள் திரும்பிச் செல்ல வேணடி இருக்கும். அதற்குள் பார்க்கும் இடத்தைத் திட்டமிட வேண்டும். நாங்கள் சேற்று எரிமலைக்குச் சென்று விரும்பினோம். பாராடங்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் கடை வைத்திருக்கின்றனர். அந்தமான் தீவில் தென்னை மரங்கள் அதிகம் இருந்தாலும் இளநீர் முப்பது மற்றும் நாற்பது ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். ஒரு பெரிய இளநீர் 40 ரூபாய். அதில் 2 ஸ்ட்ரா போட்டுக் கொடுக்கிறார்கள். இரண்டு கைகளால் பிடிப்பதே சிரமம். ஒரு ஸ்ட்ரா வழியாக இளநீரை உரியும் போது, மற்றொறு ஸ்ட்ரா வழியாக காற்று உள்ளே செல்கிறது. அப்போதுதான் நீரை உறிஞ்சிக் குடிக்க முடியும். இது கூட ஒரு புதிய அனுபவம்தான். பாராடங் படகு துறை மிக அழகானது. எதிரே பசுமையான தீவுகள் தென்படுகின்றன. பெரிய படகுகளும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே புறப்படுகின்றன. மறுபுறத்திலிருந்து வந்த பிறகு அதில் உள்ள வாகனங்களும், சுற்றுலாப் பயணிகளும் இறங்கிய பிறகு மீன்டும் அதில் பஸ், லாரி, கார் உள்பட் வாகனங்கள் ஏற்றப்பட்டன. பயணிகளும் ஏறிக் கொண்ட பிறகு பெரிய விசைப் படகு புறப்பட்டுச் சென்றது. எங்களுடைய வாகனம் நிறுத்தப்பட்ட இடத்திற்கு மீண்டும் வந்து சேர்ந்தோம். அங்கிருந்து பல வாகனங்களை ஒன்று சேர்த்து பிறகு பாதுகாப்பு வளையத்துடன் ஜிர்காடங் நோக்கி அணிவகுத்தன. திருப்பி வரும்போது இரண்டு ஜாரவா பழங்குடி இளைஞர்களைக் காண முடிந்தது. அவர்கள் இருவரும் வாகனத்தின் இருபுறமும் வந்தனர். கை நீட்டி ஏதோ கேட்பது போல் தெரிந்தது. வாகனத்தை நிறுத்தாமல் சென்றபோது வாகனத்தை அவர்கள் தட்டினர். அந்த இருவரும் மேலாடை அணியாமல் இருந்தனர். கருத்த உடல், தலைமுடி கருமையான சுருட்டை முடி, மூக்கு மட்டும் பெரியதாக, நீண்டு கூர்மையாக இருந்தது. கண்கள் முட்டை போல் பெரியதாகவும், வெள்ளைப் பகுதி மட்டும் பிரகாசமாகத் தெரிந்தது. மேலும் வாகனம் செல்லும் போது புதர் மறைவில் இருந்து, மறைந்து நின்று வேடிக்கை பார்த்த பெண்ணையும் பார்க்க முடிந்தது. []   ஒரு மனிதன்  மற்றொரு மனிதனை அதிசயமாக பார்க்கும் ஒரு நிகழ்வாகவே இது இருந்தது. ஜிர்காடங்கில் உள்ள சோதனைச் சாவடியில் நாங்கள் திரும்பி வந்ததை பதிவு செய்த பின்னர் போர்ட் பிளேர் நோக்கி புறப்பட்டோம். பாராடங் பயணம் முடிந்து மீண்டும் போர்ட் பிளேரில் உள்ள தங்கும் இடத்திற்குத் திரும்பினோம். நாங்கள் திரும்பி வந்த பிறகு எங்களிடம் கேட்ட முதல் கேள்வி ஜாரவா பழங்குடி மனிதனைப் பார்த்தீர்களா என்பதுதான். அவர்களை பார்த்தோம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தோம். தமிழ்நாடு திரும்பி வந்த பிறகு அந்தமானில் பழங்குடி மக்களை பார்த்தீர்களா என நண்பர்கள் கேட்டனர். அந்தளவிற்கு அந்தமான் பழங்குடிகள் மீது ஆர்வம் கொண்டவர்களாக மக்கள் உள்ளனர்.     25.சேற்று எரிமலை   எரிமலையை ஆங்கிலத்தில் வால்கனோ (Volcano) என்கின்றனர். இது இத்தாலிய மொழியிலிருந்து பெறப்பட்டதாகும். ரோமானியர்களின் நெருப்புக் கடவுள் வால்கன் ஆகும். அதன் அடிப்படையிலேயே வால்கனோ என்ற சொல் உருவானது. எரிமலை பொதுவாக கூம்பு வடிவம் கொண்டதாக இருக்கும். அதன் சிகரத்தில் வாய் போன்ற அமைப்பு உள்ளது. அதன் வழியாக பூமியிலிருந்து சூடான கற்குழம்பு, சாம்பல், நீராவி மற்றும் வாயுக்கள் வெளிப்படுகின்றன. வெளிப்படும் கற்குழம்பானது வாயைச் சுற்றிலும் வழிந்து, இறுகிக் கூம்பிய மலையை உண்டாக்குகிறது. எரிமலையின் வாயிலிருந்து பூமியின் உள்பாகம் வரை துவாரம் உள்ளது. அத்துவாரத்தின் வழியாகவே பூமியின் உள்பகுதியில் உள்ள திரவ வடிவிலான பாறைக் குழம்பு வெளிப்படுகிறது. இக்குழம்பானது 700 – 1200 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்டிருக்கும். எரிமலை வெடித்து கிளம்பும் போது நெருப்பு போல் தீக்குழம்பு வெளிப்படுகிறது. ஆகவேதான் எரிமலை என்றாலே மக்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. எரிமலை என்றாலே தீக்குழம்பைக் கக்கும் என அனைவரும் நினைக்கிறோம். ஆனால் சேற்றைக் கக்கும் எரிமலைகளும் உள்ளன என்றால் நம்ப மாட்டார்கள். ஆம், சேற்றைக் கக்கும் எரிமலைகள் உலகின் பல பகுதிகளில் உள்ளன. []     புதைசேற்று எரிமலை எரிமலைகளில் பல வகை உண்டு. அவற்றில் ஒன்று புதைசேற்று எரிமலை (Mud Volcano) ஆகும். இதனை புதைசேற்று குவிமாடம் (Mud dome) என்றும் அழைக்கின்றனர். இது லாவா (Lava) எனப்படும் எரிமலைக் குழம்பை வெளியேற்றுவது கிடையாது. அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இது சேறு போன்ற சகதியை வெளியேற்றுகிறது. ஆகவேதான் இதனை சேற்று எரிமலை என்கின்றனர். இந்த எரிமலை 1 முதல் 2 மீட்டர் உயரமும், 1 முதல் 2 மீட்டர் அகலமும் கொண்டிருக்கும். ஒரு சில இடங்களில் 700 மீட்டர் உயரமும், 10 கிலோ மீட்டர் அளவிற்கு அகன்று, விரிந்து இருக்கும். இவை பெரிய சேற்று எரிமலையாகும். மிகச்சிறிய சேற்று எரிமலையானது மட்பாண்டங்கள் (Mud pots) போல காட்சியளிக்கின்றது. சேற்று எரிமலையானது சூடான நீர் மூலம் உருவாகிறது. பூமியின் மேற்பரப்புக்குக் கீழே ஆழமான பகுதியில் நீர் சூடாகி அது மண்ணில் உள்ள கனிமப் பொருட்களை கரைத்து கலக்கத் தொடங்குகிறது. இது சேற்றுக் குழம்பாக உருவாகிறது. நிலத்தடியில் ஏற்படும் அழுத்தம், ஏற்றத் தாழ்வுகள் காரணமாக புவியில் ஏற்படும் பிளவின் வழியாக வெளியே தள்ளப்படுகிறது. இப்படி வெளியேற்றப்படும் சேற்றில் வெப்பம் உள்ளது. ஆனால் நெருப்புக் குழம்பபைக் கக்கும் எரிமலைகளை விட வெப்பம் குறைவானது. பொதுவாக 2 டிகிரி முதல் 100 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும். மிகக் குறைவான வெப்பம் கொண்ட எரிமலையில் சேற்றுக் குளியல்  (Mud baths) போடுகிறார்கள். இந்த சேற்றுக் குளியல் பல இடங்களில் மிக பிரபலமாக உள்ளது. ஆகவே இதனை புதைசேற்று எரிமலை எனவும் அழைக்கிறார்கள். இந்த எரிமலையிலிருந்து குழம்பிய மண், நீர் மற்றும் வாயுக்கள் வெளிப்படுகின்றன. இது பூமியின் உள்ளே ஏற்படும் பல்வேறு இயற்கை நிகழ்வின் காரணமாக உண்டாகிறது. சாதாரண எரிமலைகள் வெளியிடும் கடும் வெப்பத்தை விட மிகக்குறைவாகவே வெளியிடுவதாலேயே இதன் அருகில் செல்ல முடிகிறது. மேலும் இதன் சகதியில் உருண்டு, பிரண்டு குளியல் போட முடிகிறது. இந்த எரிமலையில் இருந்து வெளிப்படும் வாயுக்களில் மீத்தேன் வாயு மிக அதிகமாக உள்ளது. வெளியிடப்படும் வாயுக்களில் 86 சதவீதம் மீத்தேன் வாயுவாகும். அது தவிர கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் வாயுக்களும் உமிழப்படுகிறது.தண்ணீருடன் கலந்த திரவத்தில் உப்பு, அமிலங்கள் மற்றும் பல்வேறு ஹைட்ரோ கார்பன்களினால் ஆன கலவைகளும் இருக்கின்றன. இவை ஒரு துளையின் வழியாகவே வெளிப்படுகின்றன. []   உலகளவில் 110 சேற்று எரிமலைகள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஈரான், பாகிஸ்தான், இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இந்த வகை எரிமலைகள் உள்ளன. குறிப்பாக சீனாவில் ஜின்சியன் மாகாணத்தில் மிக அதிகப்படியான சேற்று எரிமலைகள் உள்ளன. தைவானில் 2 எரிமலைகள் செயல்பாட்டுடன் இருக்கின்றன. சேற்று எரிமலைகள் தீக்குழம்புகளை வெளிப்படுத்தாவிட்டாலும், சில சமயம் வெறும் தீயை மட்டும் வெளியிடுகின்றன. அஜர்பைஜான் நாட்டில் உள்ள சேற்று எரிமலை 2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தீயை மட்டும் கக்கியது.   பாராடங் இந்தியாவில் சேற்று எரிமலையானது அந்தமான் தீவில் மட்டுமே உள்ளது. அந்தமானில் பாராடங் தீவில் (Baratang Island) இந்த எரிமலை உள்ளது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. பாராடங் தீவின் படகுத்துறையிலிருந்து எரிமலை பகுதிக்குச் சென்று வர வாடகை வாகனத்திற்கு ரூபாய்.500 கொடுக்க வேண்டும். பாராடங் படகுத்துறையிலிருந்து பயணம் செய்தால் எரிமலை உள்ள பகுதியை அடையலாம். சாலையை ஒட்டி எரிமலை பகுதிக்கு செல்வதற்கான நுழைவு வாயில் உள்ளது. அது ஒரு மேடான பகுதி. நுழைவு வாயிலிருந்து 160 மீட்டர் உயரத்தில் சேற்று எரிமலைகள் உள்ளன. நடை பாதையின் இருபுறமும் மரச்சட்டத்தால் அமைக்கப்பட்ட தடுப்பு வேலிகள் உள்ளன. இருபுறம் மரங்கள் சூழ்ந்துள்ளன. மேல்பகுதியை அடைந்தால் அங்கு தடுப்பு வேலிகள் மரச்சட்டத்தால் அமைக்கப்பட்டுள்ளன. அதன் உள்பகுதியில் சேற்று எரிமலைகள் உள்ளன. []   எரிமலை உள்ள அந்த பகுதியைச் சுற்றி வருவதற்கு ஏற்ப பாதையின் இருபுறமும் மரச்சட்டத்தால் ஆன தடுப்பு வேலிகள் உள்ளது. எரிமலையின் அருகில் செல்ல முடியாதவாறு தடுப்பு வேலிகள் உள்ளது. ஒரு எரிமலையிலிருந்து சேறும், நீரும் வழிந்து செல்கிறது. அது ஒரு மீட்டர் உயரம் கொண்டது. மற்றொரு எரிமலையிலிருந்து ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை நிலத்தடியிலிருந்து ஒரு குமிழ்த் தோன்றி அது உடைந்து சேற்றுடன் திரவமும், வாயுக்களும் வெளிப்படுகிறது. அது ஒரு குவிமாடமாக உள்ளது. தடுப்பு வேலிக்கு உள்பகுதியில் 7 இடங்களில் சேற்று எரிமலைகள் உள்ளன. இதில் ஒன்று மட்டுமே சற்றுப் பெரிதாக உள்ளது. அதிலிருந்து சேறும், திரவமும் வழிந்து வேலிக்கு வெளியே சென்று கொண்டிருக்கிறது. அதனை தொட்டுப்பார்த்தால் வெதுவெதுப்பாக உள்ளது. அதில் வெப்பம் கிடையாது. அந்த சேறானது மிருதுவாக இருந்தது. எரிமலையின் வாய்ப்பகுதி மண் சகதியாகக் காணப்படுகிறது. அந்த இடத்தில் நீர் குமிழ் தோன்றி ஒரு வட்டமான வளையத்தைத் தோற்றுவிக்கிறது. நீர்க் குமிழ் வெடித்தவுடன், மீண்டும் ஒரு குமிழ் சேற்றில் தோன்றுகிறது. இது ஒரு அரிய நிகழ்வு. இந்த சேற்று எரிமலைகளை உள்ளூர் மக்களால் ஜால்கி என அழைக்கப்படுகிறது. இந்த எரிமலை 1983 ஆம் ஆண்டில் ஒருமுறை சீற்றத்தைக் காண்பித்தது. பிறகு 2003 ஆம் ஆண்டில் ஒருமுறை வெடித்துள்ளது. அதன் பின்னர் 2005 ஆம் ஆண்டில் கடைசியாக வெடித்துள்ளது. இங்குள்ள சேற்று எரிமலை ஒரு புவியியல் அற்புதம் எனக் கூறப்படுகிறது. இது ஒரு சுற்றுலாத் தலமாக அறவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் தீவிற்கு சுற்றுலா செல்பவர்கள் இந்த இயற்கை அதிசயத்தைக் காணச் செல்கின்றனர். இப்பகுதியில் பல ஆய்வாளர்களால் ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இங்கு ஒரு புதிய நத்தை இனமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தமானிற்கு செல்லக்கூடிய ஒவ்வொருவரும் இந்த சேற்று எரிமலைகளைக் காண்பது அவசியமாகும்.   26.சுண்ணாம்புக்கல் குகை   குகைகளில் பல வகைகள் உண்டு. இவற்றில் சுண்ணாம்புக்கல் குகையும் (Lime stone cave) அடங்கும். இது கரைசல் வகையைச் சேர்ந்தது. குகைளில்  மேற்கூரையிலிருந்து விழுதுகள் போல் தொங்கும் அமைப்பையும், தரையிலிருந்து மேல் நோக்கி எழும் புற்று போன்ற அமைப்பையும் பொதுவாக குகைகளில் காணலாம். கரையான் புற்று போல் தரையிலிருந்து மேல்நோக்கி வளர்வதை புற்றுப்பாறை (Stalagmite) என்கின்றனர். குகையின் கூரையின் மேலிருந்து, கீழ் நோக்கி தொங்குவதை விழுதுப் பாறை எனவும் அழைக்கின்றனர். சுண்ணாம்புக்கல் குகைகளில் மேலிருந்து சொட்டு சொட்டாக கனிமங்கள் விழுந்து அது படிப்படியாக வளர்கிறது. இது புற்றுப்பாறை முறையாகும். அந்தமானில் உள்ள பாராடங் என்னும் தீவில் ஒரு சுண்ணாம்புக்கல் குகை உள்ளது. இதனுள் பல புற்றுப்பாறைகள் உள்ளன. அந்தமான் செல்லும் பயணிகள் இந்தக் குகைக்கும் சென்று வருகின்றனர்.   பயணம் பாராடங் படகுத் துறையிலிருந்து விசைப்படகின் மூலம் குகை இருக்கும் இடத்திற்குச் செல்லலாம். கடலில் 45 நிமிடப் பயணம் மேற்கொள்ள வேண்டும். கடல் பிறகு அலையாத்தி காடுகளின் (Mangrove) இடையில், சதுப்பு நிலத்தின் சிற்றோடை வழியாகச் செல்ல வேண்டும். சதுப்பு நில காடுகளின் வழியாகப் பயணம் செய்தல் என்பது ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும். சதுப்பு நில பகுதியில் மரத்தால் அமைக்கப்பட்ட நயாடிரா (Nayadera) என்னும் படகுத் துறை உள்ளது. அங்கு ஓய்வு எடுக்க குடில்கள் உண்டு. இப்பகுதி வனத்துறையினரால் பாதுகாக்கப்படுகிறது. பயணிகள் இங்கு இறங்கி சுண்ணாம்புக்கல் குகைக்குச் செல்ல வேண்டும். []   சுண்ணாம்புக்கல் குகை உள்ள இடத்திற்கு நடந்து செல்ல வேண்டும். வழித்தடத்தின் இருபுறமும் காடுகளும், பெரிய பாறைகளும் உள்ளன. படகுத் துறையில் இருந்து 1 கி.மீ. தொலைவில் இந்த சுண்ணாம்புக் கல் குகை உள்ளது. இது ஒரு இயற்கை அதிசயம். இக்குகை பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் உருவானது. சுண்ணாம்புக்கல் நீரில் எளிதில் கரையக்கூடியது. மழை நீரினால் கரைந்து கார்பனிக் அமிலமாக மாறி தொடர்ந்து சுண்ணாம்பு பாறைகள் அரிக்கப்பட்டு, பெரிய குகையாக மாறியுள்ளது. தொடர்ந்து குகையில் மாற்றம் நடந்து கொண்டே இருக்கிறது. இக்குகை சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளமுள்ளது. இதில் 14 குகைகள் உள்ளன. வெளிப்புறத்தை விட குகையின் உள்புறம் குளிர்ச்சியாக இருக்கும். தரைப்பகுதி ஈரமாகவும், வழுக்கும் தன்மையும் கொண்டது. குகையின் மேற்புறத்தில் உள்ள ஓட்டைகளின் வழியாக சூரிய ஒளி உள்ளே நுழைகிறது. குகையின் உள்ளே பல்வேறு இயற்கை வடிவங்களைக் காணலாம். பல்வேறு டிசைன்கள் சுவர், கூரை மற்றும் தரைப்பகுதியில் இருந்து எழும் பாறைகளில் உள்ளன. கூரைப்பகுதியில் இருந்து மெழுகுவர்த்திப் போன்ற விழுதுகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. தரையில் பூக்கூடை போன்ற அமைப்புகளும் உள்ளன. அது தவிர யானைத் தலை போன்ற அமைப்பு ஒரு இடத்தில் உள்ளது. கவிழ்ந்த தாமரை மொட்டு போன்ற அமைப்பு, கூரையின் மேலிருந்து கீழே தொங்கிக் கொண்டிருக்கிறது. தரையில் இருந்து மேல்நோக்கி எழும்பும் படிவமும், மேல் கூரையிலிருந்து கீழ் நோக்கி தொங்கும் தூண் பகுதியும் சந்திக்கும் ஒரு காட்சி உள்ளது. ஆனால் இவை இரண்டிற்கும் இடையே சிறிது இடைவெளி உள்ளது. []   சில நூறு ஆண்டுகளுக்குப் பின் இவை இரண்டும் ஒன்று சேர்ந்து ஒரே தூணாக மாறலாம். ஏனெனில் இதில் ஒரு சதுர சென்டி மீட்டர் வளர 100 ஆண்டுகள் பிடிக்கின்றன. இந்த குகையின் உள்ளே காணப்படும் இயற்கை அமைப்புகள் யாவும் உடனே தோன்றியவை அல்ல. இன்னும் 1000 ஆண்டுகள் கழித்து இக்குகையை பார்த்தால், இன்றைக்கு இருக்கும் காட்சிகளில் இருந்து முழுவதும் மாறுபட்டுக் காணப்படும்   27.நீல் தீவு   நீல் தீவு போர்ட் பிளேரில் இருந்து 36 கி.மீ தொலைவில் உள்ள ஒரு சிறிய தீவு. கடல் வழியாகவே பயணம் செய்ய வேண்டும். இது தெற்கு அந்தமான் நிர்வாகத்திற்கு உட்பட்டது. இத்தீவின் பரப்பளவு 14 சதுர கிலோ மீட்டராகும். இத்தீவில் 5 கிராமங்கள் உள்ளன. சித்தாப்பூர், பரத்பூர், நெய்ல் கேந்தரா, லட்சுமண்பூர், நாம் நகர் என 5 கிராமங்கள் இருக்கின்றன. இவற்றில் சுமார் 3040 பேர் வசிக்கின்றனர். இங்கு 85 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். இத்தீவிற்கு ஜெனரல் ஜேம்ஸ் நில் (James Neill) என்பவரின் நினைவாக அவருடைய பெயரை பிரிட்டிஷ் அரசாங்கம் வைத்தது. இவர் இந்தியாவில் ஏற்பட்ட சிப்பாய்ப் புரட்சியை அடக்கியவர் ஆவார். இத்தீவிற்கு நீல் எனப் பெயரிட்ட போதிலும் 1960 ஆம் ஆண்டிற்கு முன்பு வரை இங்கு மக்கள் வசிக்கவில்லை. இந்தியாவிலிருந்து பங்களாதேஷ் பிரிக்கப்பட்ட போது ஏற்பட்ட போர் மற்றும் கலவரத்தின் காரணமாக அகதிகள் 1971 ஆம் ஆண்டுகளில் இத்தீவில் குடியேறினர். அகதிகளின் வம்சாவளியினர் இன்றைக்கும் இத்தீவில் வசிக்கின்றனர்.   []   பிரதமர் நரேந்திர மோடி 2018 ஆம்ஆண்டு டிசம்பர் 30 அன்று நீல் தீவின் பெயரை மாற்றி ஷாஹீத் தீவ் தீவு (Shaheep Sweep Island) எனப் பெயரிட்டார். அந்தமானின் பசுமைக் கின்னம் என இதை அழைக்கின்றனர். கடல் மட்டத்தில் இருந்து 101 மீட்டர் உயரம் கொண்டது. மற்ற தீவுகளுடன் ஒப்பிடும் போது இது சமமான நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. இத்தீவில் மிக உயரமான இடம் நிப்பிள் மலை (Nipple Hill) என்பதாகும். இத்தீவில் மிக குறைந்தளவே வனப்பகுதி உள்ளது. இத்தீவில் நெல் பயிரிடப்படுகிறது. அது தவிர காய்கறிகள், பழங்கள் விளைவிக்கப்படுகிறது. அந்தமான் தீவுகளில் வாழும் மக்களுக்கு இங்கிருந்து காய்கறிகள் மற்றும் பழங்கள் ஏற்றுமதி அனுப்பப்படுகிறது. ஆகவே நீல் தீவை அந்தமான் தீவுகளின் காய்கறிக் கிண்ணம் (Vegetable Bowl) என அழைக்கின்றனர். தற்போது இங்கு முழுக்க இயற்கை விவசாயம் பின்பற்றப்படுகிறது. இதன் காரணமாக முழுமையான இயற்கை விவசாயத்தைப் பின்பற்றும் தீவு என அறிவிக்கப்பட்டுள்ளது.   சுற்றுலா இத்தீவில் மூன்று சுற்றுலாத் தலங்கள் உள்ளன. சீத்தாப்பூர் கடற்கறை, பரத்பூர் கட்றகரை மற்றும் ஹவ்ரா இயற்கைப் பாலம் போன்றவை ஆகும். சீத்தாப்பூர் கடற்கரை மிகவும் அமைதியான கடற்கரை. பாறைகளின் மீது பாசி படர்ந்திருக்கும். அதிகாலையில் சூரிய உதயத்தை இங்கு காணலாம். பரத்பூர் கடற்கரையில் அலைகள் இல்லாமல் இருக்கும். அது மட்டுமல்லாமல் கடற்கரையில் இருந்து நூறடி தூரம் கடலின் உள்ளே சென்றாலும் ஆழம் குறைவாகவே இருக்கும். ஆகவே இங்கு கடலில் குளிக்கலாம். இங்கு பவளப்பாறைகளும் நிறைந்துள்ளன. சுற்றுலாப் பயணிகள் ஸ்கூபா டைவிங்கில் ஈடுபடலாம். கடற்கரையின் மணல் வெண்மையாக இருக்கும். கடல் நீர் வண்ணமயமாகத் தெரியும். []   மேற்கு வங்காளத்தில் ஹவ்ரா மற்றும் கொல்கத்தாவை இணைக்கும் பிரம்மாண்டமான பாலம் உள்ளது. நீல் தீவில் இயற்கையாகவே அமைந்த ஒரு பாலம் இருக்கிறது. அதற்கு ஹவ்ரா இயற்கைப் பாலம் எனப் பெயரிட்டுள்ளனர். இந்தப் பாலம் பல திரைப்படங்களில் காட்சியாக்கப்பட்டுள்ளது. இது ஆர்ச் வடிவில் பாறையால் ஆனது. இது கடல் அரிப்பின் காரணமாக இயற்கையாக அமைந்துள்ளது. இதனைக் காண சுற்றுலாப் பயணிகள் இங்கு சென்று வருகின்றனர்.     28.கார்பைன் கோவ் கடற்கரை   கார்பன் கோவ் கடற்கரை (Corbyn’s Cove Beach) ஒரு சிறிய, அழகான கடற்கரை. விமான நிலையத்தில் இருந்து 4 கி.மீ தொலைவிலும், போர்ட் பிளேர் நகரின் மையத்தில் இருந்து 8 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. இக்கடற்கரை பார்ப்பதற்கு பிறை நிலா வடிவில் (Crescent Shape) காணப்படுகிறது. அந்தமானில் உள்ள மிக முக்கியமான கடற்கரைகளில் ஒன்றாக இது மதிப்பிடப்படுகிறது. இயற்கையான இந்த சிறிய கடற்கரையை ஒட்டி தென்னை மரங்கள் நிறைந்துள்ளன. மெரினா பார்க்கை ஒட்டிய கடலின் மதில் சுவரை ஒட்டியே பயணம் செய்தாலும் இந்தக் கடற்கரையை அடையலாம். ஆட்டோ அல்லது டாக்சி மூலம் இக்கடற்கரைக்குப் பயணிக்கலாம். டாக்சியில் சென்று வருவதற்கு 200 ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறார்கள். இந்தக் கடற்கரைக்கு செல்லும் வழியின் இருபுறமும் மரங்கள் சூழ்ந்துள்ளன. அது தவிர கடற்கரைக்குச் செல்லும் பாதையின் ஓரங்களில் ஜப்பானியர்கள் அமைத்த பதுங்குக் குழிகள் உள்ளன. அதில் மறைந்திருந்து எதிரிகளை சுட்டுக் கொள்வதற்காக இந்த பதுங்குக் குழுிகளை (Bunker) அமைத்திருந்தனர். கடல் நீல நிறமாக காட்சி தருகிறது. கடற்கரையின் வெண்மையான மணல் பரப்பில் நடந்து மகிழலாம். இக்கடலில் பலர் குளிக்கின்றனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இந்தக் கடற்கரைக்கு வருகின்றனர். அவர்களும் கடலில் குளியல் போடுகின்றனர். சூரியக் குளியலிலும் வெளிநாட்டுப் பயணிகள் ஈடுபடுகின்றனர். அதுதவிர இங்கு உடை மாற்றுவதற்கான அறைகளும் உள்ளன. இங்கிருந்து சூரியன் மறையும் காட்சியையும் காணலாம். கடற்கரையை ஒட்டி மதில் சுவர் கட்டப்பட்டுள்ளது. அதில் அமர்ந்து கடலில் எழுந்து வரும் அலைகளை ரசிக்கலாம். கடல் வண்ணமாய் ஜொலிக்கும். கருநீலம், வெளிர் நீலம் மற்றும் ஊதா என பல நிறங்களில் சூரிய ஒளிக்கு ஏற்ப இங்கு கடல் நீரின் நிறம் மாறுபடுகிறது என்கிறார்கள்.   பாம்பு தீவு கடற்கரையில் இருந்து பார்த்தால் சற்றுத் தொலைவில் ஒரு தீவு உள்ளது. இதனைப் பாம்பு தீவு (Snake Island) என அழைக்கின்றனர். படகில் அத்தீவு வரை சென்று வர ஒரு நபருக்கு 400 ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறார்கள். படகு நிறுத்தி இருக்கும் இடம் வரை செல்ல பிளாஸ்டிக்கால் ஆன மிதவை பாலத்தை செயற்கையாக அமைத்துள்ளனர். கடலின் அலைக்கு ஏற்ப பாலம் அசைந்து ஆடுகிறது. பாலத்தில் நடக்கும்போது உறுதுணைக்கு அதில் கைப்பிடிகள் உள்ளன. அதனைப் பிடித்துக் கொண்டு பயம் இல்லாமல் நடந்து செல்லலாம். பலர் இங்கு புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார்கள். []   விசைப் படகில் பயணம் செய்யும் போது பாதுகாப்பிற்கான லைப் ஜாக்கெட்டையும் கழுத்தில் மாட்டி விடுகிறார்கள். நாங்கள் பயணம் செய்யும் போது கடல் கொந்தளிப்பாக இருந்தது. கடல் கொந்தளிப்பாக இருப்பதால் தண்ணீர் முகத்தில் அடிக்கும் என படகோட்டி எங்களிடம் தெரிவித்தார். அதுமட்டும் அல்லாமல் நன்றாகப் பிடித்துக்கொண்டு அமருங்கள் எனவும் கூறினார். பாம்புத் தீவின் அருகில் வரை மட்டுமே செல்ல முடியும். அத்தீவில் இறங்க முடியாது. மிக அருகில் சென்றவுடன் புகைப்படம் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். தீவை மட்டும் பல புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். அத்தீவில் பல இறந்த பாம்புகள் கிடக்கும் என்றார். பகல் பொழுதில் பாம்புகள் அத்தீவில் வெய்யில் காயும் என்றனர். இத்தீவில் மரங்கள் இல்லை. ஒரு இடத்தில் பாறையும், மரங்களும் உள்ளன. அப்பாறை முகம் போன்ற அமைப்பு கொண்டது. இத்தீவை ஒட்டி பவளப் பாறைகளும், பல்வேறு வகையான மீன்களும் உள்ளன.   நீர் விளையாட்டுகள் இங்கு பல கடல் விளையாட்டுகளும் உண்டு. குதிரை சவாரி, ஸ்கூபா டைவிங், சர்ஃபிங் (Surfing), படகு பாராசூட் பறப்பு போன்ற சாகச பொழுது போக்கு அம்சங்களும் இருக்கிறது. அலைச் சறுக்கு (Surfing) என்பது ஒரு நீர் விளையாட்டாகும். கடலில் எழுந்து வரும் அலையில் விளையாடுவார்கள். சர்ப் போட் எனப்படும் தக்கை பலகையை தன் காலில் கட்டிக் கொண்டு அலைகளின் மீது சறுக்கி விளையாடுவார்கள். அலைச் சறுக்கர்கள் அலையின் வேகத்திற்கு ஈடு கொடுத்து பயணம் செய்வர். சீறி வரும் அலைகளின் மீது தாவிச் செல்வார். இது முழுக்க முழுக்க ஒரு சாகச விளையாட்டாகும். []   வாட்டர் ஸ்கூட்டர் (Water Scooter) என்பது ஸ்கூட்டர் போன்றது. ஆனால் தண்ணீரில் மிக வேகமாக சறுக்கி ஓட்டலாம். இதை போட்டர் சைக்கிள் (Boater cycle) என நகைச்சுவையாக அழைக்கின்றனர். சில சமயத்தில் இதன் கம்பெனி பெயராலேயே ஜெட் ஸ்கை (Jet Skei) எனவும் அழைக்கிறார். ஜெட் ஸ்கை என்பது ஜப்பானில் உள்ள கம்பெனியின் வணிகப் பெயராகும். இவர்கள் இது போன்ற வாட்டர் ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனைச் செய்கின்றனர். பல்வேறு திரைப்படங்களின் பாடல் காட்சிகளில் வாட்டர் ஸ்கூட்டரில் பயணம் செய்வது படமாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் இருவர் அல்லது மூன்று பேர் பயணம் செய்கின்றனர். ஸ்கூட்டரின் உள்ளே உள்ள இயந்திரம் குழாய் வடிவ ஜெட்டால் ஆனது. கைப்பிடியை திருக்கும் போது நீரை கிழித்துக் கொண்டு அதன் மீது சறுக்கிக் கொண்டு வேகமாக பாய்ந்து செல்கிறது. உதவியாளரின் உதவியுடன் பாம்புத் தீவு வரை சென்று, பிறகு திருப்பி வரும்போது பயணம் செய்பவரை ஓட்டுவதற்கு அனுமதிக்கின்றனர். நீரில் ஸ்கூட்டர் சறுக்கி வரும் போது அதன் பின்புறம் ஒரு குழாய் மூலம் நீர் மேல்நோக்கி பாய்ந்து விழுந்து கொண்டே வருகிறது. அதுமட்டும் அல்லாமல் பயிற்சியாளர் ஸ்கூட்டரை வளைத்தும் நெளித்தும் ஓட்டச் செய்கிறார். இது ஒரு சாகசப் பயணமாக உள்ளது. இந்த சாகச வாட்டர் ஸ்கூட்டரில் பயணம் செய்ய நபருக்கு 600 ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறார்கள். கடற்கரையில் அமர்ந்துக்கொண்டு இங்கு நடக்கும் சாகச விளையாட்டுகளை கண்டு களிக்கலாம்.  அது தவிர இங்கு போடப்பட்டிருக்கும் நீண்ட இருக்கையில் கால் நீட்டி படுத்து தென்னை மரத்தின் அழகை ரசிக்கலாம். தற்போது கடற்கரையை ஒட்டி அருகில் உள்ள சிறு தீவிற்கு சாலை அமைக்கும் பணியும் நடந்து கொண்டிருக்கிறது. எதிர் வரும் காலத்தில் அருகில் உள்ள தீவிற்கும் நடை பயணம் மேற்கொள்ளலாம்.   29.சாத்தம் ஆலை   சாத்தம் ஆலை (Chatham Saw Mill) என்பது மரங்களை அறுக்கும் ஒரு தொழிற்சாலை. இது ஆசியாக் கண்டத்திலேயே மிகப்பெரிய ஆலையாகும். சாத்தம் என்னும் தீவில் இது அமைந்துள்ளது. சாத்தம் மர அறுவை ஆலையானது மிகவும் பழமையானது. தற்போது வனத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. போர்ட் பிளேரில் இருந்து 11 கி.மீ. தொலைவில் இந்த மில் அமைந்துள்ளது. சாத்தம் என்பது ஒரு குட்டித் தீவாகும். இதில் 40 சதவீத பரப்பளவில் இந்த மர அறுவை மில் அமைந்துள்ளது. அந்தமானின் தலைநகரான போர்ட் பிளேருக்கு அருகில் இத்தீவு உள்ளது. 100 மீட்டர் நீளத்தில் ஒரு பாலம் அமைக்கப்பட்டு, சாத்தம் தீவை போர்ட் பிளேருடன் இணைத்துள்ளனர். சாத்தம் தீவின் எதிரில் சாலையும், கடலும் உள்ளது. அதில் கப்பல்களும் உள்ளன. சாத்தம் மில்லின் நுழைவு வாயிலுக்கு எதிர்புறம்தான் கடலும், கப்பல்களும் உள்ளன. இது அழகிய காட்சியைத் தருகிறது. []   ஆர்ச்சிபால்ட் பிளேர் (Archibald Blair) என்பவர் சர்வே செய்வதற்காக 1789 ஆம் ஆண்டில் சாத்தம் தீவிற்கு வந்தார். இவர் ஒரு காலனிய குடியேற்றப் பகுதியாக இத்தீவை மாற்றினார். இருப்பினும் பிரிட்டிஷ்காரர்கள் தங்கள் குடியேற்றப் பகுதியாக வடக்கு அந்தமானைத் தேர்வு செய்தனர். இந்தியாவில் ஏற்பட்ட சிப்பாய்ப் புரட்சியின் காரணமாக 1857 ஆம் ஆண்டில் சாத்தம் தீவை, குடியேற்றப் பகுதியாக மாற்ற முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து சாத்தம் தீவில் குடியேற்றம் அதிகரித்தது. குடியேற்ற பகுதியை விரிவுப்படுத்துவதற்காக அங்கிருந்த காடுகளை அழித்தனர். அத்தீவில் மிக உயர்ந்த மரங்கள் இருந்தன. அதனைக் கண்டு ஆங்கிலேயர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். அன்றைக்கு அவர்களால் எடுக்கப்பட்ட பழைய சாத்தம் தீவின் புபை்படம் மற்றும் அதில் காணப்படும் மரங்கள் ஆகியவற்றைக் காணும்போது இதனைத் தெரிந்து கொள்ளலாம். இங்கு வெட்டப்பட்ட பெரிய பெரிய மரங்களை இங்கிலாந்து கொண்டு சென்று அங்கு பயன்படுத்தத் திட்டமிட்டனர். மரத்தை அப்படியே கொண்டு செல்வது கடினம் என்பதால் அதனை அறுத்து பலகையாக, சட்டங்களா, ரீப்பராக கொண்டு செல்வது எளிது என்பதை உணர்ந்து ஒரு மர அறுவை ஆலை அமைக்கத் திட்டமிட்டனர். பிரிட்டிஷ் அரசாங்கம் 1883 ஆம் ஆண்டில் சாத்தம் சாமில்லை (Chantham Saw mill) இத்தீவில் நிறுவியது. மரங்களை அறுப்பதற்காக இயந்திரங்களை இற்குமதி செய்தனர். இந்த மில்லில் படாக் என்னும் மரங்களே அதிகம் அறுக்கப்பட்டது. அது தவிர மார்பிள், கர்ஜன், சாடின் போன்ற உறுதியான மரங்களும் வெட்டப்பட்டு பல்வேறு அளவுகளில் பலகை, தூண்கள், சிலிப்பர் என அறுக்கப்பட்டு அதனை ரசாயனத்தில் உலர வைத்து பதப்படுத்தி விற்பனை செய்தனர். படாக் மரங்கள் மிகவும் உறுதியானவை. நாள்பட கருப்பாக மாறும். வற்றாது, வளையாது. சட்டம், கட்டை, பலகை, ரீப்பர் போன்ற அனைத்திற்கும் ஏற்றது. மரவேலைபாடு செய்வதற்கும் தகுதியானது. இது பாலீஷ் செய்வதற்கு ஏற்ற மரம். ஆகவே இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் அந்தமான் படாக்கை பயண்படுத்தியுள்ளனர்.   இரண்டாம் உலகப் போர் இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான், அந்தமான் தீவைத் தாக்கியது. குறிப்பாக சாத்தம் தீவில் உள்ள மர அறுவை ஆலை மீது குண்டுகளை வீசியது. 1942 ஆம் ஆண்டு மார்ச் 10 அன்று குண்டுகளை வீசியதில் ஆலை தீப்பிடித்து எரிந்தது. பல தொழிலாளர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். கடல் கொந்தளித்து சாத்தம் தீவைச் சிதைத்தது. அந்தமான் தீவுகள்  1942 ஆம் ஆண்டு மார்ச் 22 அன்று  முதல் ஜப்பானின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. அதனால் சாத்தம் மில்லின் வேலைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. ஜப்பானின் கட்டுப்பாட்டில் அந்தமான் 1945 ஆம் ஆண்டு அக்டோபர் 7 வரை இருந்தது. அதன் பின்னர் மீண்டும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் வந்தது. ஜப்பானிடம் இருந்து அந்தமான் தீவை பிரிட்டிஷ் அரசு மீட்ட பிறகு 1946 ஆம் ஆண்டில் ஆலை புதுப்பிக்கப்பட்டது. 1950 முதல் 1960 ஆம் ஆண்டுகள் வரை இலங்கை, கிழக்கு பாகிஸ்தான், பர்மா மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து அந்தமானில் குடியேறிய தொழிலாளர்கள் மூலம் தேவைக்கு ஏற்ப மரங்கள் அறுக்கப்பட்டன. இங்கு உள்ள பல அறுவை இயந்திரங்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை. கடல் நீரில் மரங்களை மிதக்கவிட்டு, ஊற வைத்து அதை ரக வாரியாகவும், சைஸ் வாரியாகவும் அறுக்கிறார்கள். இதற்காக சுமார் 750 பேர் இங்கு வேலை செய்கின்றனர். பெரிய பெரிய மரங்களை இயந்திரங்கள் மூலம் விரைவாக துண்டித்து, ரக வாரியாக அறுத்து எடுக்கின்றனர். அதனை மிகப் பெரிய குடோனில் அடுக்கி சேமித்து வைக்கின்றனர். ஆரம்பத்தில் மூன்று சிஃப்டு (Shifts) முறையில் ஆண்டிற்கு 20,000 கண மீட்டர் மரங்கள் அறுக்கப்பட்டன. தற்போது அது குறைந்துள்ளது. தற்போது 23 வகையான மரங்கள் அறுக்கப்படுகின்றன. வனத்துறையின் மேற்பார்வையில் மரங்கள் வெட்டப்படுகின்றன. அதனை கடல் மூலமாக இந்த ஆலைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு உற்பத்திச் செய்யப்படும் மரச்சாமான்கள் அந்தமான் தீவுகள், உள்நாடு மற்றும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கதவு, ஜன்னல், கட்டில், மேஜை, நாற்காலி போன்ற வீட்டுப் பொருட்களுக்கு இவை பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. வெளி இடங்களுக்கு கப்பலில் கண்டெய்னர்கள் மூலமாகவே அனுப்பப் படுகிறது.   சுற்றுலா இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய ஜனாபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் இத்தீவிற்கு வந்து சென்றார். இத்தீவிற்கு முதன் முதலாக சிறைக் கைதிகளாக வந்த சுதந்திர போரட்ட வீரர்களின் 150 ஆவது ஆண்டு நினைவாக ஒரு தூண் இங்கு நிறுவப்பட்டது. இது ஒரு பாரம்பரியமிக்க சுற்றுலா இடமாக தற்போது விளங்கி வருகிறது. இங்கு வருபவர்கள் மர அறுவை ஆலையைச் சுற்றிப் பார்க்கலாம். ஆலையின் உள்ளே செல்லும் போது பாதுகாப்பிற்காக அனைவருக்கும் ஹெல்மெட் அணிவிக்கப் படுகிறது. பெரிய பெரிய இயந்திரங்கள் மரத்தை அறுக்கும் சப்தம் நம் காதுகளைத் துளைக்கின்றன. எப்படி அறுவை செய்யப்படுகிறது என்பதை விளக்குவதற்கும் ஆட்கள் உண்டு. அறுவை இயந்திரங்களைப்பார்த்து விட்டு வேறு வழியாக நாம் வெளியே வரலாம். []     குண்டு இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜப்பான் போட்ட குண்டினால் ஏற்பட்ட மிகப் பெரிய பள்ளம் இங்குள்ளது. அதனை இங்கு பாதுகாத்து வருகின்றனர். சுமார் 15 அடி ஆழமும் 30 அடி விட்டமும் கொண்ட பெரிய பள்ளம் அது. அதனைக் காண அதன் மேல் ஒரு தொங்கு பாலம் கட்டியிருந்தனர். தற்போது அப்பாலம் சிதைந்து விட்டது. குண்டு விழுந்த குழியில் (Bomb pit) தண்ணீர் தேங்கியுள்ளது. இரண்டாம் உலக யுத்தத்தின் ஒரு வரலாற்று நிகழ்வை இங்கு காணலாம். அது தவிர இங்கு ஒரு பதுங்கு அறையும் (Bunker) உள்ளது. குண்டு விழும்போது தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இதனுள் சென்று மறைந்து கொள்ளலாம். இது ஒரு சிறிய அறைதான். ஆனால் உறுதியானது.   அருங்காட்சியம் சாத்தம் ஆலையின் உள்ளே ஒரு அறையில் வனத்துறையின் சார்பாக ஒரு அருங்காட்சியகம் (Museum) செயல்படுகிறது. இது 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கப்பட்டது. மரங்களால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு வரலாற்று சிறப்பு மிக்க புகைப்படங்கள், கலாச்சாரம், அறிவியல் மற்றும் கல்வி சார்ந்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன. டால்பின், நிக்கோபாரி குடிசை மாடல், கடல் திசைகாட்டும் கருவி என பல உள்ளன. []   படாக் மரத்தில் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் கண்ணைக் கவரும் வகையில் பளபளப்பாகக் காட்சி தருகின்றன. செரிவான சிகப்பு, பொன்னிறம் போன்ற நிறங்களில் அது பளிச்சென்று மின்னுகிறது. ஒரே பலகையால் செய்யப்பட்ட கழுகு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் அல்லாமல் தராசு பொம்மை (Balancing Doll) ஒன்று உள்ளது. அந்த பொம்மை ஒற்றைக் காலில் நிற்கிறது. அதன் இரண்டு கைகளிலும் நீளமான தடியும், அதில் பெரிய பந்துகளும் உள்ளன. இவை அனைத்தும் மரத்தால் கலையம்சத்துடன் செய்யப்பட்டுள்ளன. அது தவிர தாயும், சேயும் என்ற பொம்மையை மிக அழகாக வடிவமைத்துச் செய்துள்ளனர். இப்படி பல கலைப் பொருட்கள் இங்கு உள்ளன. அவை ஒவ்வொன்றும் நம்மை ஆச்சரியம் அடையச் செய்கின்றன. சாத்தம் ஆலையின் உள்ளே செல்ல நுழைவு கட்டணம் உண்டு. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வரை சுற்றிப் பார்க்கும் அளவிற்கு பல்வேறு சிற்பங்கள் இங்கு உள்ளன.   30.மானிடவியல் அருங்காட்சியகம்   போர்ட் பிளேர் நகரின் மையத்தில் எம்.ஜி. ரோட்டில் மானிடவியல் அருங்காட்சியகம் (Anthropological Museum) உள்ளது. இது ஃபீனிக்ஸ் பேவிலுள்ள பெங்காலி கிளப்பின் அருகே அமைந்துள்ளது. இந்த மியூசியம் 1975 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. போர்ட் பிளேரில் உள்ள மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி.மீ தொலைவில் இது உள்ளது. அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் 6 வகையான பழங்குடிகள் வாழ்கின்றனர். இவர்களில் நிக்ராய்டுயுடன் தொடர்பு உடைய ஓங்கீ, சென்டினலி, ஜராவா மற்றும் அந்தமானீ ஆகிய 4 பழங்குடிகள் ஆவர். சோம்பன் மற்றும் நிக்கோபாரி ஆகிய 2 பழங்குடிகள் மான்லாயிட்டுகளுடன் தொடர்பு உடையவர்கள் ஆவர். இந்த பழங்குடிகள் உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்தவர்களாக கருதப்படுகின்றன. இந்தப் பழங்குடிகள் உலகின் மற்றப்பகுதிகளுடன் மிகச் சிறிய அளவிலேயே தொடர்பு வைத்திருக்கிறார்கள். இவர்கள் வசிக்கும் பகுதிக்கு பார்வையாளர்கள் செல்ல பொது அனுமதி கிடையாது. சிறப்பு அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். []   அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் வாழக்கூடிய பழங்குடிகளின் வாழ்க்கை, பண்பாடு, கலாச்சாரம் ஆகிய விபரங்களை அறிந்து கொள்ளக்கூடிய வகையில் மானிடவியல் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமான மானிடச் சான்றுகளை இங்கு காணலாம். பழங்குடிகளின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் காட்சிகள் இங்குள்ளன. அவர்களின் குடிசை மாதிரிகள், மரத்தால் குடையப்பட்ட படகுகள் மற்றும் அவர்களின் புகைப்படங்களும் உள்ளன. பழங்குடிகள் பயன்படுத்தும் கைவினைப் பொருட்கள், கருவிகள், ஆயுதங்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், உடைகள் ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஜராவா பழங்குடிகள் பயன்படுத்திய மார்பு பாதுகாப்புக் கவசம், தென்னை ஓலையால் செய்யப்பட்ட கூடைகள் ஆகியனவும் இடம் பெற்றுள்ளன. அது தவிர சென்டினலியின் பழங்கால மண்டை ஓடும் இங்குள்ளது. களிமண் மற்றும் வைக்கோலைக் கொண்டு செய்த மாதிரிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பழங்குடிகளைப் பற்றிய புத்தகங்கள் இங்கு கிடைக்கின்றன. அருங்காட்சியத்தைக் காண நுழைவுக் கட்டணம் உண்டு. அதன் உள்ளே புகைப்படங்கள் எடுக்க அனுமதி கிடையாது. பூர்வீக மக்களின் வாழ்க்கை மற்றும் தொடக்கக் காலை சகாப்தத்தை காண விரும்புபவர்களுக்கு இந்த அருங்காட்சியகம் சிறப்பு மிக்க இடமாக விளங்கி வருகிறது.       31.காந்தி பூங்கா   போர்ட் பிளேர் நகரின் மையப்பகுதியில் காந்தி பூங்கா அமைந்துள்ளது. இது ஒரு பொழுது போக்குப் பூங்கா மக்கள் குடும்பத்துடன் இங்கு வந்து உலாவுகின்றனர். குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்றவாறு பல விளையாட்டுச் சாதனங்கள் உள்ளன. ஊஞ்சல், சறுக்கி விளையாட்டுகள், குழந்தைகளை கவர கங்காரு சிலை, பெரிய மீன் வாயைத் திறந்தபடி உள்ள சிலை என பல உள்ளன. அமருவதற்கு என பல இடங்களில் இருக்கைகள் உள்ளன. ஓய்வெடுத்து, புத்துணர்ச்சி பெறுவதற்கு ஏற்ற இயற்கையான சூழல் இங்கு உள்ளது. []   இந்தப் பூங்காவில் ஒரு ஏரி உள்ளது. அந்த ஏரிக்கு தில்தமன் (Dhilthaman) என்பது பெயர். அந்தமான் மக்களின் தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்கும் முக்கிய நீர் ஆதாரமாக இது அமைந்துள்ளது. இந்த ஏரியில் படகோட்டி மகிழலாம். ஏரியின் ஓரங்களில் மலர்ந்திருக்கும் ஊதா நிற அல்லி மலர்கள் ஏரிக்கு அழகைக் கூட்டுகிறது. ஏரியின் மையத்தில் மரங்கள் அடர்ந்த ஒரு தீவும் உள்ளது. ஏரியைச் சுற்றி குன்றுகள் உள்ளன. ஏரியின் அழகை ரசித்துக் கொண்டே நடப்பதற்கு ஏற்றவாறு அதன் கரையோரம் பாதை உள்ளது. பூங்காவின் மையத்தில் மகாத்மா காந்தியின் சிலையை பிரமாண்டமாக அமைத்துள்ளனர். பொன் நிறத்தில் மிக நேர்த்தியாக அதை வடிவமைத்துள்ளனர். ஒரு காலை மடக்கியும், ஒரு காலை தொங்கவிட்டும் அமர்ந்திருப்பது போல் சிலையை உருவாக்கியுள்ளனர். காந்தி புத்தகத்தை படிப்பது போல் காட்சி தருகிறார். காந்தி அமர்ந்திருக்கும் மேடைக்கு எதிரில் 25க்கும் மேற்பட்ட படிகட்டுகள் உள்ளன. தரைப்பகுதியில் இருந்து பார்க்கும் போது இது ஒரு அற்புதமான காட்சியாக உள்ளது. []   இந்தப் பூங்காவில் இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் நாட்டு படை வீரர்களால் அமைக்கப்பட்ட பதுங்குக் குழிகள் பல உள்ளன. அதுமட்டும் அல்லாமல் ஜப்பான் கோயிலும் உள்ளது. அழகிய வேலைபாடுடன் அமைக்கப்பட்ட கோபுர வடிவ பீடத்தின் மீது வேலைபாடுடன் புத்தர் சிலை உள்ளது. நுழைவு வாயிலின் இருபுறமும் உள்ள தூண்களின் மீது இரு பறவைகள் இறக்கையை விரித்தப்படி அமைக்கப்பட்டுள்ளது. சிற்பம் மிக அருமையாக உள்ளது. மிக உயர்ந்த மரங்களின் அடியில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. அமைதியாக அமர்ந்து புத்தகம் படிப்பதற்கு ஏற்ற சூழல் அங்குள்ளது. பசுமையான புல்வெளிகளும் உள்ளன. இந்தப் பூங்காவில் பல வகையான பறவைகளைக் காணலாம். அந்தமான் கிளிகள் உயரமான மரக்கிளையில் அமர்ந்து கீச்சிடுவதை இங்கு காண முடிந்தது. அது தவிர மீன் கொத்திப் பறவை பெரிய ஒலியை எழுப்பி, ஏரியில் உள்ள மீனின் மீது பாய்ந்து கொத்திச் செல்வதையும் அங்கு காணலாம். அது தவிர பல்வேறு பறவைகளையும் அங்கு பார்க்கலாம். இந்தப்பூங்காவிற்கு எளிதில் செல்ல முடியும். ஆட்டோ வசதி, மினி பஸ் வசதியம் உண்டு. பூங்காவின் நுழைவு வாயில் பகுதியில் பல கடைகளும் உள்ளன. இந்தப்பூங்காவின் உள்ளே சென்று சுற்றிப் பார்ப்பதற்கு என்று நுழைவுக்கட்டணம் எதுவும் கிடையாது. மனதை அமைதிப் படுத்தி சமாதானத்தைக் கொடுக்க ஏற்ற இடம்தான் காந்தி பூங்கா.   32.சமுத்ரிகா கடல் அருங்காட்சியகம்   போர்ட் பிளேரில் இருந்து 9 கி.மீ தொலைவிலும் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து 2 கி.மீ தொலைவிலும் சமுத்ரிகா கடல் அருங்காட்சியகம் (Samudrika Naval Marine Museum) அமைந்துள்ளது. இதனை இந்தியக்கடற்படை நடத்தி வருகிறது. இது மிக முக்கியமான சுற்றுலா இடமாக விளங்குகிறது. அந்தமான் தீவுகளின் சுற்றுச்சூழல், தாவரங்கள், விலங்குகள், பழங்குடி சமூகங்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் பற்றிய தகவல்களுடன் இது பராமரிக்கப்பட்டு வருகிறது. அருங்காட்சியகத்தின் வெளிப்புறத்தில் ஒரு பெரிய நீல திமிங்கலத்தின் எலும்புக் கூடு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இது நிக்கோபர் தீவில் ஒதுங்கிய திமிங்கலத்தின் எலும்புக் கூடாகும். இங்கு பழங்குடிகளின் குடிசை மாதிரிகள் மற்றும் அவர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் புடைப்புச் சித்திரங்களும் உள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் 5 கேலரிகள் உள்ளன. அவற்றில் வரலாறு, புவியியல், மானுடவியல் மற்றும் கடல் வாழ்க்கை ஆகியவை இடம் பெற்றுள்ளன. ஒரு சிறிய மீன் காட்சியகமும் உள்ளன. அதில் அரிதான, அழகிய மீன்கள், பவள உயிரிகள் என வளர்க்கப்படுகின்றன. அந்தமான் தீவின் வரலாறு மற்றும் எரிமலை பற்றிய விளக்கமும் உள்ளது. ஒரு அறையில் சிப்பிகள், சங்குகள், ஆமையின் ஓடு போன்றவையும் இடம் பெற்றுள்ளன. கடலின் சுற்றுச்சூழல் மற்றும் கடலில் வாழும் உயிரினங்கள் ஆகியவற்றைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த அருங்காட்சியகம் நடத்தப்படுகிறது.   நட்சத்திர மீன் நட்சத்திர மீன் (Star Fish) என்பது நட்சத்திரம் போன்ற வடிவில் தெரியும். இதனை கடல் விண்மீன், விண்மீன் உயிரி எனவும் அழைப்பார்கள். சுமார் 2,000 வகையான நட்சத்திர மீன்கள் உள்ளன. பெரும்பாலான நட்சத்திர மீன்களுக்கு 5 கைகள் இருக்கும். சில இனங்களில் 6 அல்லது அதற்கு மேலும் இருக்கும். இதன் உடல் கால்சியம் கார்பனேட் எனப்படும் சுண்ணாம்பால் ஆனது. நட்சத்திர மீனிற்கு வாய் அடிப்புறத்தில் அமைந்துள்ளது. ஒவ்வொரு கைகளில் உள்ள வரிப்பள்ளங்களில் நீண்ட வரிசையில் குழாய் கால்கள் உள்ளன. சில விண்மீன்கள் தாவரங்களை உண்கின்றன. மேலும் சிறு மீன்கள், சிப்பிகள், பூச்சிகளை []   இரையாக்கிறது. இவை தன்னுடைய வாயை விடப் பெரிதான இரையை விழுங்கி விடுகின்றன.   கடல் தாமரை கடல் தாமரை (Sea anemone) என்பது குழியுடலி என்னும் வகையைச் சார்ந்தது. இதன் உடலின் மையத்தில் நீண்ட குழல் போன்ற பகுதியும், ஆரச் சமச்சீர் கொண்ட உடலையும் கொண்டது. இது கடலில் மட்டுமே உயிர் வாழ்கிறது. இது பார்ப்பதற்கு சாமந்தி மலர் போலத் தெரிவதால் கடல் சாமந்திகள் என்கிற பெயராலும் அழைக்கப்படுகின்றது. இது ஒரு செ.மீ. முதல் 2 மீட்டர் வரை வளரும். சிறிய மீன், கடல் பஞ்சு, இறால், கடல் குதிரை, நண்டு, பாசிகள் போன்றவை வாழ்வதற்கு இருப்பிடம் கொடுக்கிறது.   மெல்லுடலிகள் இந்த உயிரினத்திற்கு சுண்ணாம்புப் பொருளால் ஆன கூடு உள்ளது. சிலவற்றில் ஒரே துண்டு, சிலவற்றில் 2 துண்டுகள் அல்லது ஓடுகளைக் கொண்டு உடலை மூடியிருக்கும். கால்கள் என்னும் தசைத் திசுவினால் இடம் பெயர்ந்து செல்லும். சங்கு என்பதன் கூடானது ஒரே ஒரு ஓடாக இருக்கும். அது திருகலாக முறுக்கிக் கொண்டிருக்கும். []   கடல் நத்தைகளின் கூடுகள்தான் சங்கு ஆகும். இது பொதுவாக பெரிய, சுருள் அமைப்புள்ளது. பொதுவாக 80 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. வெண் சங்கு என்பது ஊதுவதற்குப் பயன்படுகிறது. நமது நாட்டில் கிடைக்கக் கூடிய சங்கை வலம்புரிச் சங்கு, இடம்புரி சங்கு என வகைப்படுத்தியுள்ளனர். இதில் வலம்புரிச் சங்கு அரிதானது. இதற்கு சிலுவைச் சங்கு என்கிற பெயரும் உண்டு. சங்குகளில் பல அபூர்வமானவையும் உள்ளன. விரல் சங்கு, பால் சங்கு, இளம்சிவப்பு சங்கு, கீற்றுச் சங்கு, சிலந்தி சங்கு, போர் சங்கு என பலவகையான சங்குகள் பிரபலமானவை. இது பார்ப்பதற்கு மிக அழகானது. இது போன்று பல்வேறு வகையான சங்கு வகைகளை சமுத்ரிகா அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைத்துள்ளனர். இவை அனைத்தும் அந்தமான் கடலில் வாழக்கூடிய சங்கு இனத்தைச் சேர்ந்தவை.    சிப்பிகள் சிப்பிகளில் நூறுக்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இவை இரண்டு ஓடுகளைக் கொண்ட மெல்லுடலி. ஓடுகளின் இரு பகுதியும் ஓர் இடத்தில் மட்டும் ஒன்று இணைந்திருக்கும். பெரும்பாலும் அதன் ஓடுகள் திறந்தே இருக்கும். பருவக் காலத்தில் மிக அதிகமாக முட்டைகளை இடும். கோடிக்கணக்கான முட்டைகளை இட்டுத் தள்ளுகிறது. இதிலிருந்து வெளிவரும் குஞ்சுகளுக்கு ஓடு கிடையாது. ஒரு நாள் கழித்தே ஓடுகள் உண்டாகிறது. சிப்பி முழு வளர்ச்சி அடைய 5 ஆண்டுகள் ஆகின்றது. []   சிப்பிகளை மட்டி என்றும் அழைக்கிறார்கள். மட்டிகளில் மிகப் பெரியவையும் உள்ளன. அவற்றில் 2 முதல் 4 மீட்டர் வரை வளர்கிறது. இதற்கு பெரிய மட்டிகள் என்று பெயர். இவை 10 மீட்டர் ஆழத்தில் வாழ்கின்றன. தன்னை நாடி வரும் உயிரினங்களை மட்டுமே உணவாக்கிக் கொள்கிறது. இவை புழுக்களை உண்டு வாழ்கிறது. அதே சமயத்தில் வேட்டையாடும் குணமற்றது. அந்தமான் கடலில் பெரிய மட்டிகள் அதிகம் உள்ளன. பெரிய மட்டிகளில் (Giant clam) டிரைடாக்னா ஜிகாஸ் (Tridacna gigas) மற்றும் டிரைடாக்னா மேக்சிமா ஆகியவை அரிதானவை. இதனை மிகப்பெரிய மெல்லுடலிகள் என்பர். 20 மீட்டர் ஆழத்தில் வாழ்கின்றன. 4 அடி விட்டம் கொண்டது. சுமார் 200 கிலோ எடை வரை வளர்ச்சியடையும். இதன் ஆயுட்காலம் 100 ஆண்டுகள். இந்த பெரிய மட்டியின் இரண்டு ஓடுகளும் மூடிக் கொள்ள முடியாது. ஓடு மிக அழகானது. வெள்ளி போன்று வெண்மையும், பளபளப்பும் கொண்டுள்ளது.   முத்துசிப்பி கடலுக்குள் பல லட்சக்கணக்கான ஓடுகள் உள்ள உயிரினங்கள் வாழ்கின்றன. இவற்றின் முத்துச்சிப்பியும் ஒன்று. முத்துசிப்பியில் 100க்கும் மேற்பட்ட உயிரினங்கள் உள்ளன. இவை 10 செ.மீ முதல் ஒரு மீட்டர் வரை வளரும். இவைகளுக்கு இரண்டு ஓடுகள் உண்டு. சிப்பிகளின் உள்ளடுக்கில் பல வண்ணம் கொண்ட முத்துத் தாய்ப்பொருள் (Mother of pear) உள்ளது. இந்த அடுக்கில் சிறு புடைப்புகள் உண்டாகியிருக்கும். சிலவற்றில் திராட்சைக் கொத்து போன்று தோன்றும். அவையே முத்துக்களாகும். முத்துக்கள் சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகிய நிறங்களிலும் கிடைக்கின்றன. முத்துகளை தங்கத்தில் பதிப்பார்கள். முத்து மாலை செய்வார்கள். வேறு பல மணிகளுடன் சேர்த்து ஆபரணங்கள் தயாரிக்கிறார்கள். பலவிதமான அழகான பொருட்களை செய்வதற்கு ஓடுகளைப் பயன்படுத்துகின்றனர்.   33.ஜோக்கர்ஸ் பார்க்   போர்ட் பிளேர் நகரின் ஒரு உயரமான மலைக்குன்றின் மீது ஜோக்கர்ஸ் பார்க் (Jokker’s park) அமைக்கப்பட்டுள்ளது. இது விஐபி (VIP) சாலையின் அருகில் உள்ளது. மிகச் சிறிய அழகான, அமைதியான பூங்கா. இதனை மிகவும் சுத்தமாக பராமரித்து வருகிறார்கள். பலர் விடுமுறையின் நாட்களில் ஓய்வு எடுப்பதற்காக இந்தப் பூங்காவிற்கு வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் நடை பயிற்சி மேற்கொள்கின்றனர். இங்கு ஏர் ஜிம் (Air Gym) 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 27 அன்று திறந்துள்ளனர். உடற்பயிற்சி செய்வதற்காகவும் இங்கு பலர் வந்து செல்கின்றனர். காலைப் பொழுதில் சூரிய உதயத்தை இங்கிருந்து காணலாம். நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு வளைந்து, வளைந்து செல்லக்கூடிய அழகான பாதை அமைத்துள்ளனர். வெறுங்காலிலும் நடக்கலாம். பலர் ஜோக் அடித்துக் கொண்டே நடந்து செல்கின்றனர். மாலை நேரத்தில் ஓய்வு எடுக்கவும், நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் வருகின்றனர். இது உயரமான பகுதி என்பதால் இங்கிருந்து ராஸ் தீவு, நார்த்பே தீவு ஆகியவற்றைக் காணலாம். இரவில் போர்ட் பிளேர் நகர் மின்விளக்கால் பிரகாசிக்கும் அழகைக் காணலாம். []   இந்தப் பூங்காவின் எதிரில் விமான நிலையம் அமைந்துள்ளது. ஓடு தளம் பளிச்சென்று தெரியும். பெரிய விமானங்கள் வந்து இறங்குவதையும் காணலாம். அது மட்டும் அல்லாமல் விமானம் புறப்பட்டு, மெதுவாக நகர்ந்து பிறகு ஒரு இடத்தில் வந்து திரும்பி, வேகமாக ஓடுதளத்தில் ஓடி அதன்பின்னர் எழும்பி படிப்படியாக உயர்ந்து பறக்கும். இந்த அற்புதமான காட்சியை இங்கிருந்து காணலாம். இரவில் விமானம் வந்து இறங்குவதையும், புறப்பட்டுச் செல்வதையும் காணலாம். இதன் அருகில் கடற்படை விமான நிலையமும் உள்ளது. குட்டி ராணுவ விமானங்கள் புறப்பட்டுச் செல்வதையும் காணலாம். மேலும் பல ஹெலிகாப்டர்கள் விமான நிலையத்தின் அருகில் இறங்குவதையும், புறப்பட்டுச் செல்வதையும் ஜோக்கர்ஸ் பார்க்கில் இருந்து கொண்டே கண்டு மகிழலாம். புதிதாக திருமணம் ஆன தம்பதிகளும் இங்கு வருகின்றனர். இங்கு செல்லப்பிராணிகளை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தமான் சுற்றுலா செல்பவர்கள் ஜோக்கர்ஸ் பார்க் செல்லாமலே திரும்பி வருகின்றனர். ஆனால் இங்கு கட்டாயம் சென்று ஓய்வு எடுக்க வேண்டும். அது தவிர தாங்கள் பயணம் செய்யப் போகும் விமான தளத்தைக் காண வேண்டும். சுற்றுலா சென்றவர்கள் விமானம் புறப்பட்டு செல்லும் அந்த அழகிய, அரிய காட்சியை கண்ட பின்பு தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புங்கள்.     Reference   1. கலைக்களஞ்சியம். 2. தினமணி – சிறுவர் மணி 3. விகடன் கட்டுரைகள் 4. இணையதளம் 5. www.tourmyindia.com 6. Tamilonline 7. Native planet Tamil                                       ஆசிரியர் பற்றிய குறிப்பு   தமிழ் மொழியில் நல்ல அறிவியல் நூல்கள் இல்லாத குறையைக் களைவதில் ஏற்காடு இளங்கோ முக்கியப் பங்காற்றுகிறார். 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த இவரது முதல் நூல் அதிசய தாவரங்கள். அன்றிலிருந்து 19 ஆண்டுகளாகத் தொடர்ந்து பல நூங்களை எளிய தமிழில் எழுதி வருகிறார்.  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேலம் மாவட்ட உதவிச் செயலாளராக 12 ஆண்டுகளும், மாவட்டச் செயலாளராக 8 ஆண்டுகளும் பணிபுரிந்துள்ளார். பின்னர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேலம் மாவட்டத் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். இவர் மக்களிடம் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்த முக்கியக் காரணியாக உள்ளார். []   இவருடைய பழங்கள் மற்றும் செவ்வாய் கிரகமும், செவ்வாய் தோஷமும் ஆகிய இரண்டு நூல்கள் அனைவருக்கும் கல்வி இயக்கம் என்ற அமைப்பின் சார்பாக 38000 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.  - தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிடும் துளிர் அறிவியல் மாத இதழின் ஆசிரியர் குழுவில் முக்கியமானவர். - எழுத்துச்சிற்பி, அறிவியல் மாமணி, வல்லமைமிகு எழுத்தாளர், உழைப்பாளர் பதக்கம் ஆகிய விருதுகளால் கெளரவிக்கப்பட்டார். - 1992 ஆம் ஆண்டு ஏற்காட்டில் உள்ள பெரிய ஏரியில் மண்டிக் கிடந்த ஆகாயத் தாமரைகளை மாணவர்கள், தொண்டு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக, நீக்கி ஏரியைச் துப்புரவு செய்தார். - தன் இறப்பிற்குப் பிறகு தன் உடலை மருத்துவ ஆய்வுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று தன் விருப்ப ஆவணத்தில் பதிவு செய்துள்ளார். - ஏற்காடு மலையில் உள்ள தாவரங்களை வகைப்படுத்தி, பெயரிட்டு அதன் புகைப்படங்களை இணையதளம் பொதுவகத்தில் 2340 தாவரங்களின் 8006 படங்களை இணைத்துள்ளார்.  - ப்ரீ தமிழ் இபுக்ஸ் மூலம் 21 புத்தகங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவை ஜூன் 2015 முதல் பிப்ரவரி 2019 வரை 4,50,820 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.    சிறிய அளவிலும், பெரிய அளவிலும் 88 புத்தகங்கள் இதுவரை எழுதியுள்ளார். தொடர்ந்து அறிவியல் நூல்களை எழுதி வருகிறார்.   ***