[] 1. Title Page 2. Cover 3. Table of Contents அண்ணா சில நினைவுகள் அண்ணா சில நினைவுகள்   கவிஞர் கருணானந்தம்     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/anna_some_memories மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/anna_some_memories This Book was produced using LaTeX + Pandoc இந்த மின்னூலைப் பற்றி உங்களுக்கு இம்மின்னூல், இணைய நூலகமான, விக்கிமூலத்தில் இருந்து கிடைத்துள்ளது1 இந்த இணைய நூலகம் தன்னார்வலர்களால் வளருகிறது. விக்கிமூலம் பதிய தன்னார்வலர்களை வரவேற்கிறது. தாங்களும் விக்கிமூலத்தில் இணைந்து மேலும் பல மின்னூல்களை அனைவரும் படிக்குமாறு செய்யலாம். மிகுந்த அக்கறையுடன் மெய்ப்பு செய்தாலும், மின்னூலில் பிழை ஏதேனும் இருந்தால் தயக்கம் இல்லாமல், விக்கிமூலத்தில் இம்மின்னூலின் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கலாம் அல்லது பிழைகளை நீங்களே கூட சரி செய்யலாம். இப்படைப்பாக்கம், கட்டற்ற உரிமங்களோடு (பொதுகள /குனு -Commons /GNU FDL )2 [3] (http://www.gnu.org/copyleft/fdl.html) இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே, இந்த உரையை நீங்கள் மற்றவரோடு பகிரலாம்; மாற்றி மேம்படுத்தலாம்; வணிக நோக்கத்தோடும், வணிக நோக்கமின்றியும் பயன்படுத்தலாம் இம்மின்னூல் சாத்தியமாவதற்கு பங்களித்தவர்கள் பின்வருமாறு: - Balajijagadesh - Sridhar G - La.ethirajan - Bjthivagar - Sgvijayakumar - Aarlin Raj A - Info-farmer - Balu1967 - Guruleninn - HoboJones - Be..anyone - Fleshgrinder - Patricknoddy-commonswiki - Mecredis - Rocket000 - Xato உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம். பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை. இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம். Universal (CC0 1.0) Public Domain Dedication This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode No Copyright The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission. This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx. பவள வாயில் Some reminiscences of my association with Anna— அண்ணாவுடன் என் அணுக்கத்தில் சில நினைவுக் குறிப்புகள்-இந்த நூலுக்குப் பொருத்தமான தலைப்பு இப்படித்தான் இருக்கவேண்டும். ஆனால் நமது தமிழ் மொழிக்கு உள்ள இயற்கையான வளமையினால் “அண்ணா-சில நினைவுகள்” என்று சுருக்கமாகச் சொன்னாலே, இந்நூலின் உள்ளடக்கம் என்ன என்பது புரிந்துவிடும். இரண்டு மாதங்கட்கு முன்புவரை இப்படி ஒரு நூல் எழுதுவேன் என நான் எண்ணியதில்லை. 1974-ல் வெளியான “என் அண்ணா காவியம்”, இத்தனை ஆண்டுகளாக இரண்டாம் பதிப்பினைக் காணவில்லை. அதனைப் பதிப்பித்தால் போதும் என்று விரும்பினேன். நட்பின் செல்வர் மூவேந்தர் முத்து அப்பணியினைத் தாமே விழைந்து ஏற்றுக்கொண்டார். சிற்சில திருத்தங்களுடன் அஃது இப்போது அச்சாகி வருகின்றது. சென்ற 15.10.1986 அன்று என்னுடைய 62-ஆவது பிறந்தநாள். அண்ணா வழியில் அதே நோய்க்கு ஆளாகி எதிர்காலத்தைக் கணிக்க இயலாச் சூழ்நிலையில், நாட்களை நகர்த்தி வருகிறேன் நான். வழக்கமாக என்னைக் கண்டு மகிழ அன்று வருகை தந்த நண்பர்கள், ஒரே குரலில் கோரிக்கையொன்றினை என் முன் வைத்து வலியுறுத்தினர்; அண்ணா அவர்களைப்பற்றி நான் உடனே ஒரு நூல் எழுதிடவேண்டும் என்பதே அது. அருமைத் தோழர்களான மூவேந்தர் முத்து, நல்லரசு, நம்மாழ்வார், தமிழ்ப்பித்தன், தி. வ. மெய்கண்டார், மாமூலன், பூங்கொடி சுப்பய்யா, பி. எல். இராசேந்திரன் ஆகியோர் என்னை வற்புறுத்தவே, வேறு வழியின்றி, எழுதுவதாக வாக்குறுதி வழங்கினேன். என் வலது கட்டை விரலில் பொறுக்கவொண்ணா வலி இருப்பதெல்லாம் அவர்களுக்குத்தெரியாது. என் புறத்தோற்றம் இப்போதும் நன்றாகவே உள்ளது. ஆனால் நான்கு பெரிய நோய்களின் நிலைக்களனாக என் உடல் போராடிக் கொண்டிருக் கின்றது. எனினும் நோய்களின் மருட்டுதலை மறக்க எழுத்து உதவட்டுமே! அண்ணா அவர்களிடம் 27 ஆண்டுகள் நெடிய தொடர்பு எனக்கு உண்டு. அச்சமோ கூச்சமோ இன்றி அவரிடம் துவக்க நாட்களிலேயே மிக இயல்பாக நான் பழகிடக் காரணமாயிருந்தவர் என் இனிய நண்பர் ஈ.வெ.கி. சம்பத் அவர்களே! இருப்பினும் அண்ணா அவர்களைப்பற்றி இம்மாதிரியான ஒரு நூல் எழுதிட நான் தயங்கினேன். தந்தை பெரியார் அவர்களிடம் சில் ஆண்டுகள் குருகுலவாசம்’ செய்ததுபோலவோ, கலைஞர் அவர்களிடம் அதைவிடப் பல ஆண்டுகள் ஒன்றாக உறைந்ததுபோலவோ, நான் அண்ணா அவர்களிடம் தொடர்ந்து தங்கியிருந்ததில்லை என்பதால்தான்! - எழுத்தாளர்களான தம்பி அரங்கண்ணலும், நண்பர் தில்லைவில்லாளனும் அண்ணாவிடம் குருகுலவாசம்’ செய்தவர்கள். வீட்டுப் பிள்ளையான தம்பி டாக்டர் பரிமளமும் எழுதத் தெரிந்தவர். அண்ணாவின் அருமைத் தம்பிமார்களில் எழுதுந் திறனும் தகுதியும் உடையார் புலர் இன்னும் இருக்கின்றார்கள். இவர்களெல்லாரும் எழுத முனையாதபோது, நாம் “அண்ணா-சில நினைவுகள்” எழுதலாமா? சரி. நாம் எழுதிய பின்னரே னும் இவர்கட்கு ஒர் உந்துதல் ஏற்பட்டு, அதனால் மேலும் அண்ணாவைப்பற்றிய உண்மையான சில நூல்கள் வெளி வரட்டுமே, எனத் துணிந்தேன். நவம்பர் திங்கள் முழுவதும் என் நினைவாற்றலை நன்கு தூண்டிவிட்டு, நாள்தோறும் முற்பகல் ஒன்றும், பிற்பகல் ஒன்றுமாக எழுதினேன். எழுதி முடித்த பின் என் துணைவியாருக்கு மட்டும் படிக்கத் தருவேன். அவர்கள் முகத்தில் நிறைவைக் கண்டதும், தலைப்புச் சூட்டுவேன். பின்னர் இருமுறை படித்துப் பார்த்து: நானே முழுநிறைவு பெறும்வரை திருத்தங்கள் செய்வேன். இப்படியாக அனைத்தையும் ஒரே மாதத்தில் நிறைவேற்றி, அச்சுக்குத் தந்தேன். சிறுகதை உத்தியையும், நாடக உத்தியையும் நிறையக் கையாண்டேன். உரையாடல்களை மய்யமாகக் கொண்டே இதனை அமைக்க வேண்டியிருந்ததால், சுவை குன்றாமலிருக்க, எளிய இயல்பான நடையிலேயே எழுதியுள்ளேன். என் மாமனார் மன்னார்குடி சி. தம்புசாமி அவர்கள் நினைவிற்கு இந்நூலை உரித்தாக்குகின்றேன். நானே வெளியிட்டு, உங்கள் கரங்களில் இந் நூலினை வழங்கிட உதவிய மூவேந்தர் அச்சகத்தார்க்கும், ஒவியர்க்கும், புகைப்பட வல்லுநர்க்கும் நன்றி. 1969 பிப்ரவரி 3 ஆம் நாள்வரையில் நாம் எல்லாரும் எப்படியிருந்தோம் என்பதைத் திரும்பிப் பார்த்துக் கொள்ளவும் இந்நூல் உதவி செய்யும் என நம்பி, என் நினைவில் தேங்கி நின்ற உண்மை வெள்ளத்தைத் திறந்து வடியவிட்டிருக்கிறேன். மறதியினால் ஏதாவது பிழை ஏற்பட்டிருப்பின் பொறுத்தருள வேண்டுகிறேன். அன்புடன்⁠ ** S. கருணானந்தம்** விபத்தை மறக்கச் செய்த முடிவு! “இதே வார்டில் உனக் கொரு ரூம் தரச் சொல்கிறேன். இங்கேயே அட்மிட் ஆகிப் பார்த்துக்கய்யா. காலில இவ்வளவு பெரிய காயமிருக்கே. கவனக் கொறவா யிருக்கியே!” என்றார் முதலமைச்சர் அண்ணா மிக்க கரிசனத்துடன். பெரிய காயம் ஒண்ணுமில்லேண்ணா. டாக்டர் கலாநிதி இங்கே G.H.க்கே வந்து எனக்கு A.T.S. இஞ்செக்ஷன் போட்டு, இத்தைல் கிளிசரைன் மருந்து வைத்து பேண்டேஜும் அவரே கட்டிவிட்டார். நீங்க அந்தக் கருப்பு மருந்தைப் பார்த்துதான் பயந்துட்டீங்க” என்று பதில் சொல்லிக்கொண்டே காயத்தையும் வலின்ய யும் மறைக்க முயல்கிறேன். உள்புற அறையில் கலைஞர் காயங்களுடன் படுத்திருக்கிறார். இரவு நேரம். அன்று காலை 4 மணிக்குத் தொழுப்பேடு அருகில் கார் விபத்து. மூன்று முறை கரணம் போட்டு மல்லாந்து கிடந்த காரில் பயணம் செய்தவர்கள் யாரும் உயிர் பிழைத்திருக்க முடியாது என்றே காரின் சேதத்தைப் பார்த்தவர் எண்ணினர். ஆனால் கலைஞருக்குத்தான் முகத்தில் கண்ணாடித் தூள்கள் நிறைய செருகிக் கொண்டன. மதுரைமுத்துவுக்கு இரண்டு கைகளிலும் அடி. புலவர் பொன்னிவளவனுக்கு லேசான அடிதான். எனக்கு இடது காலில் சிறாய்ப்பு. டிரைவர் பாண்டியன் ஆறுமாதம் படுக்கையில் கிடந்தார். விபத்துக்குள்ளான காரிலிருந்து ஒவ்வொருவரையும் தூக்கி வெளியே கொணர்ந்து, காவலர் ஜீப்பில் ஏற்றித் திண்டிவனம் மருத்துவமனைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தவன் நான்தான். சென்னைக்கு Phone செய்து, செய்தி சொன்னவனும் நானே. சிறிது நேரத்தில் அதிகாரிகள் வந்து, அமைச்சரான கலைஞருடைய உடல்நலத்துக்குப் பொறுப்பேற்றபின்-சென்னை சென்று கலைஞருடைய குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதல் சொல்ல வேண்டிய பொறுப்பிலுள்ளவனும் நானே. வழக்கறிஞர்களான வேலூர் நாராயணன், நா. கணபதி இருவரும் காரிலிலேயே திண்டிவனம் வந்து கலைஞரைப் பார்த்ததும் அவர்கள் காரில் சென்னை திரும்பிக் கடமைகளை முடித்தேன். முதலமைச்சர் அண்ணா அவர்களே திண்டிவனம் சென்றார்கள். கலைஞரை ஆம்புலன்சில் ஏற்றி, மாலையில் சென்னைக்குக் கொண்டுவந்தனர். என் உடலில் வேட்டி, துண்டு இல்லாமல், ஜிப்பா மட்டுமே இருந்தது. திண்டிவனம் தங்கவேல் தனது வேட்டி துண்டுகளைக் கொணர்ந்து தந்தார். அந்தக் கோலத்தில், மாற்றுடையில்லாமல், இரவு மாயவரத்துக்கு Call போட்டு என் உடல்நிலை குறித்து அஞ்சவேண்டாம் என்று நானே பேசி, துணிகள் கொணரவும் சொன்னேன். உளமார்ந்த அக்கறையுடன் அண்ணா என்னை விசாரித்துக், கவலைப்பட ஏதுமில்லை எனத் தெளிவாக உணர்ந்தபின், “சரி, அப்ப, எங்ககூட வீட்டுக்கு வா. தர்மலிங்கம், நீயும் வா!” என்று அழைத்தார்கள், அவர் (அண்மையில் மறைந்த) திருண்ணாமலை தர்மலிங்கம். மொட்டை மாடியில் போய் அமர்ந்தோம். “இங்க பார்! இப்ப என் இடத்திலே, தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு, முரசொலி மாறனை நிறுத்தலாம்னு நான் முடிவு பண்ணிருக்கேன். சீக்கிரமே பைஎலக்ஷன் வந்துடும். கருணாநிதி ஒத்துக்கலெ! வீட்டிலே அவுங்க அக்கா எல்லாருமே வேண்டாம்ண்ணு சொல்றாங்களாம். நீ அவுங்க எல்லாரையும் கன்வின்ஸ் பண்ணி ஒத்துக்க வக்கணும். அது உன்னாலெதான் முடியும்—” என்றார் அண்ணா என்னிடம். பெரிய பொறுப்பான ஒரு சுமையை என் தலையில் இறக்கிவைத்த நிம்மதி அவர் முகத்தில் பொலிந்தது. தர்மலிங்கம், “சரிங்கண்ணா! கலைஞரை நான் சரிப்படுத்தறேன். வீட்டில் அக்காமார் களிடம் இவர் பேசட்டும்” என்று, பாதிச்சுமையை அவர் ஏற்றுக்கொண்டார். மீதி என்னிடம், உடனேயே G.H. திரும்பினோம் நாங்களிருவரும். “அய்யய்யோ.வேனவே வேணாங்க. அது ரொம்ப சின்னப்பிள்ளை. டெல்லிக்குப் போயி அது எங்க தனியா இருக்கப் போவுது. வீட்டிலேருந்து ஒரு பிள்ளயத்தான் பொது வேலைக்கு அனுப்பிட்டோம். இது வா வது குடும்பத்தைக் கவனிக்கட்டும். கெடுத்துடாதீங்க. அண்ணா கிட்டே நீங்களே சமாதானம் சொல்லுங்க” என்று கலைஞரின் பெரியக்கா சின்னக்கா இருவருமே பிடிவாத மாய் என்னிடம் சொன்னார்கள், அண்ணா வைத்த குறி தப்பவில்லை. தர்மலிங்கமும் நானுந்தான் இறுதியில் வெற்றி பெற்றோம். இடைத் தேர்தலில் மாறன், அண்ணாவைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மைனர் மோசசும் நானும் இணையாக ஒரு மாதம் அரும்பாடு பட்டு உழைத்தோம். பி. ஏ. ஆனர்ஸ் பட்டம் பெறும்போது தியாகராஜ சுந்தரம்; “முரசொலி”ப் பொறுப்பேற்றபோது நெடு மாறன்; நாடாளுமன்றத் தேர்தலுக்கு நின்றபோது முரசொலி மாறன். அன்று முதல் இன்று வரை தம்பியை யாரும் பெயர் சொல்வதில்லை; எம். பி. என்றே வீட்டிலும் வெளியிலும் அழைக்கிறார்கள்! 1967 செப்டம்பர்.தஞ்சையில் அண்ணா கவியரங்கத்தில் பங்கேற்கச் சென்றபோது-கார்விபத்துக்குள்ளான அன்றே, ஆஸ்பத்திரி வார்டில் வைத்து, அண்ணா எடுத்த முடிவும் முயற்சியும் வெற்றிபெற, நானும் முக்கிய கருவியா யிருந்தேன் அல்லவா?  கழகத்தொண்டன் அலுவலரான கதை இல்லறத்தை வெறுத்து ஒதுக்கிவிட்டுக் காவி கமண்டலம் தாடி மீசையோடு நாடோடியாய்ப் போன ஒருவன், மீண்டும் துறவறத்தைத் துறந்து, இல்லறத்தை ஏற்றுக்கொண்ட கதைதான் என் கதையும். அரைக்கிணறு தாண்டியது. போல, இண்ட்டர்மீடியட் தேர்வு எழுதி விட்டுக் கல்லூரிப் படிப்பைத் தொடராமல் விடுத்துத், திராவிடர் இயக்கக் கொள்கைகளின்பால் ஏற்பட்ட காதல் வெறியால் ஈரோடு சென்று, அங்கே தங்க நேரிட்டது, அண்ணா. அவர்களால் ஈர்க்கப்பட்ட காரணந்தான். பின்னர், கழகப் பணிகளில் முழு நேரம் மூழ்கி நிற்காமல், பகுதி நேரப் பணியாற்றினாலே போதும் என்ற முடிவு மேற்கொண்டு, மத்திய அரசு ஊழியராக மாறியதும் அண்ணா அவர்களின் தூண்டுதலால்தான்! எப்படி? திருச்சி புத்தூர் மைதானத்தில் 1945 செப்டம்பரில் இரு மாநாடுகள். 29-ஆம் நாள் நீதிக்கட்சி மாநாடு அய்யா அவர்கள் தலைமையில், இதன் வரவேற்புக் குழுத் தலைவர் தி. பொ. வேதாசலம். மறுநாள் சுயமரியாதை இயக்க - மாநாடு திருவெற்றியூர் T. சண்முகம் தலைமையில், இதன்: வரவேற்புக் குழுத்தலைவர் அண்ணா. மாநாட்டு வேலைகளை முன்கூட்டியே நேரில் கண் காணிக்க, ஒருவாரம். இருக்கும்போதே பெரியார் திருச்சி வந்துவிட்டார். பரிவாரங்களாகிய மணியம்மையார், தவமணி இராசன், நான்-உடன் வந்தோம். டாக்டர், மதுரம் பங்களாவில் தங்கல். அண்ணாவும் இருந்தார்கள். பந்தல் அலங்காரங்கள் முடிந்துவிட்டன, மாநாட்டுக்கு, முதல் நாள் மாலை திடீரென்று பயங்கர மழை பிடித்துக் கொண்டது. பந்தலுக்குக் கீழே சேறாகிவிட்டது. ஆற்று மணல் லாரிகளில் கொண்டுவரப்பட்டது. அதற்கிடையே, உள்ளே தேங்கும் தண்ணிரை வெளியேற்றினால் நல்லது என்றார் அண்ணா. தொண்டர்களாகிய நாங்களே செயலில் இறங்கினோம். நாடகம் நடத்த வந்திருந்த எம். ஆர். ராதா, தனது பேண்ட்டை முழங்காலுக்கு மேல் மடித்துவிட்டு, ஒரு மண்வெட்டியுடன் வேலை தொடங்கினார். எனக்கு அந்தத் தொல்லையில்லை. நான் எப்போதுமே Pant அணிந்ததில்லை. வேட்டிதான். Shoes அணிந்ததுமில்லை. செருப்புதான். ஆகவே வேட்டியை வரிந்து கட்டித் தலையில் முண்டாசுடன் பணியாற்றினேன். ஒரளவு திருப்தி ஏற்பட்டது. தயார் செய்து முடித்து விட்ட அயர்வுடன் மேடையின் ஒரத்தில் அண்ணாவின் அருகே அமர்ந்தேன். நானே அண்ணாவிடம் ஆரம்பித்தேன். அண்ணா! நாளைக்கு இந்தமாநாட்டுக்கு நம்ம திருவாரூர் கருணாநிதியை வரச் சொல்லியிருக்கேன். மாநாடுகள் முடிந்து நாங்கள் அய்யாவுடன் ஈரோடு திரும்புறப்ப, அவரையும் அழைச்சிட்டுப் போயிக் குடி அரசில் சேர்த்துடாலாம்ணு, அய்யாகிட்ட அனுமதி கேட்டேன். சரி, வரச்சொல்லுண்ணார் அய்யா. அவரை ஈரோட்டுல வச்சிட்டு, நான் கொஞ்சம்திருத்துறைப் பூண்டி போகலாம்னு இருக்கேன், பெற்றோர்கிட்டே.” “நல்ல வேலை செஞ்சே. ஏன்?” “ஒண்ணு, படிப்பைத் தொடர்ந்துமுடிச்சிப் பட்டதாரி ஆகனும் இல்லே, ஏதாவது உருப்படியான் வேலை தேடிக்கணும்மிண்னு அப்பான்முதியிருக்காங்க!” அது ஞாயந்தானேய்யா! இவ்வளவு மாசம் ஒன்னெ இங்க இருக்க அனுமதிச்சதே உங்கப்பாவோட பெருந்தன்மைதானே! நீ எவ்வளவு காலம் ஈரோட்டில் இருந்தாலும் அய்யா கூசாமெ சாப்பாடு போட்டுவிடுவார். ஆனா, எத்தனை காலத்துக்கு நீ அப்படியே இருந்துட முடியும்? நாளக்கி ஒனக்கு ஒரு வாழ்க்கை, குடும்பம் அமைய வேண்டாமா? நான் நெனக்கிறேன், ஒனக்கு இனிமே படிப்பிலே கவனம் வராது! அதனாலெ, ஏதாவது ஒரு நல்ல நெலயான வேலையை ஒங்கப்பா மூலியமாகவே தேடிக்க. அப்புறம் ஒய்வு கெடைக்கும்போது கழகப்பணிகளையும் செய்து, வரலாம்-” என்று அண்ணா நெடியதொரு அறிவுரையை அன்புடன் அளித்தார்கள். “சரியண்ணா” என்று சொல்லிவிட்டு, ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிக் கிடந்தேன் இரவில். ஈரோடு திரும்பினோம். ‘மு. கருணாநிதியைக் கொண்டு வந்து இங்கே அமர்த்தியதால், இவன் ஊருக்கு ஒடி விடுவானோ?’ என்று என்னைப்பற்றி அய்யாவுக்குச் சந்தேகம்! அடுத்த நாள் என்னைக் கூப்பிட்டு, “ஏம்ப்பா உன் இனிஷியல் என்ன?“ என்றார் அய்யா; “எஸ்” என்றேன். அவருக்கா தெரியாது! ஏதோ ஒர் பாவனை! என்ன எழுதுகிறார் என்று எட்டிப் பார்த்தேன். “கருப்புச் சட்டைப் படை அமைப்பு. தற்காலிக அமைப்பாளர்கள் ஈ.வெ.கி. சம்பத், எஸ்.கருணானந்தம்” எனச் செய்தி எழுதி, ‘குடி அரசு’ இதழில் வெளியிடச் செய்தார் தொடர்ந்து வாரா வாரம். 1945 இறுதியில், திருத்துறைப்பூண்டியிலிருந்த பெற்றோரிடம் போய்ச் சேர்ந்ததும் சும்மாயிருக்கவில்லை நான். அரங்கண்ணல் துணையுடன் திராவிட மாணவர் மாநாடும், கருப்புச் சட்டை மாநாடும் நடத்தினேன். தஞ்சையில் RMS சார்ட்டர் வேலைக்குப் பயிற்சியாளராக ஆணை வந்து விட்டது அந்த நேரத்தில்…! சூசை மாணிக்கம் என்ற அதிகாரி, அப்போது நம் இன இளைஞர்களை நிறைய அலுவலில் சேர்த்தார். வேலையில் சேர்ந்து தஞ்சையிலிருந்தபோது, அண்ணா வந்தார்கள். மிக்க மகிழ்வுடன் ஊக்கமளித்தார்கள். 24 ஆண்டுகள் அந்தப் பணியில் நல்ல ஓய்வுடன் இருந்ததால்தான் ஏராளழான கழகப் பணிகளை நான் செய்ய இயன்றது. தலைமை திருமணத்தோடு போகாது “கவிஞர் சத்திரம் இதுதானே? தெருவில் வந்து நின்ற காரின் சத்தத்தோடு போட்டி போடும் கனமான கட்டைச் சாரீரத்தில் யாரோ விசாரிக்கிறார்கள்! திருவரம்பூர் காமாட்சியின் குரல் மாதிரித் தோன்றுவதால் யாரோ தலைவர்கள்தாம் வந்திருக்க வேண்டும் என யூதித்து வெளியே ஒடினேன். முற்பகல் நேரம், நான் நினைத்தது முற்றிலும் மெய்யே! என்னை வியப்பில் ஆழ்த்திய வண்ணம் அண்ணா இறங்குகிறார்கள். தொடர்ந்து நடிப்பிசைப்புலவர் கே. ஆர். இராமசாமி, பின்புறத்திலிருந்து பெரியவர் பூவாளுர் அ. பொன்னம் பலனார், அவருக்குப் பின்னால் இருவர் எனக்கு அறிமுகமில்லாத ஆணும் பெண்ணுமாய் நடுத்தர வயதினர்! எல்லாரையும் மரியாதையுடன் வரவேற்று, உள்ளே அழைத்துச் சென்று அமரச் செய்தேன். அண்ணாவோ வீட்டின் உட்புறத்தைச் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். ஆம். இது சத்திரம் போலத்தான் இருக்கும். மாயவரத்தில் நான் வசித்த 22 ஆண்டுகளிலும் 3 தெருக்களில், 4 வீடுகளில் குடியிருந்துள்ளேன். இது மிகமிகப் பெரிய வீடுதான். 1959-ல் சில நாட்களுக்குமுன் மாயவரத்தில் தி.மு.க. பொதுக்குழு நடந்தபோது, எல்லாத் தலைவர்களும் இங்கே தங்கியிருந்தனர். அவர்கள் மட்டுமல்ல, கலைஞரின் உதயசூரியன் நாடகக் குழுவினரும் இங்கே வசதியாகத் தங்கிட இடமிருந்தது. ஒரு காலத்தில் புகழ் மேவிய கூறைநாடு பட்டுப்புடைவைகளை நெய்வதற்கான தறிகள் இங்கே எத்தனை ஒடினவோ? இன்று இவ்வீட்டின் உரிமையாளர், இதை நிர்வகிக்க இயலாமல், எனக்குக் குறைந்த வாடகைக்கு அளித்திருக்கிறார். பொதுக்குழுவை இங்கேயே நடத்தியிருக்கலாம், முன்பே தெரிந்திருந்தால், என்றார் சம்பத். பொன்னம்பலனார் புதிதாக வந்தவர்களை எனக்கும் குடும்பத்தாருக்கும் அறிமுகம் செய்தார். என் துணைவி யார் பொறுப்பில் அவர்களை உட்புற அறையில் தங்கச் செய்தேன். கே. ஆர். ஆரும், காமாட்சியும் பிரம்மாண்டமான திண்ணையை அலங்கரித்தனர். “என்ன கருணை ஆனந்தம்? நான் ஒரு சொந்த வேலையா இப்ப வந்திருக்கேன். 2, 3 நாள் தங்குவோம். நீ உன் dutyயை adjust செய்துகொண்டு எங்களோடு இருக்க முடியுமா?” என்று அண்ணா என்னைக் கனிவுடன் வினவிட-இதைவிட எனக்கு வேற ஒண்னும் முக்கியமில்லே அண்ணா. அதெல்லாம் சரிசெய்து கொள்வேன்” என்றேன். “சரி, அப்படியானால்-நமது செம்பனார் கோவில் கணேசனை உடனே வரவழைக்க முடியுமா?” என்றவுடன், ‘இதோ ஆளனுப்புகிறேன்’ என்ற நான் ராசகோபாலனை அழைத்து, “அடேய், விளநகர் கணேசன் இங்கே லட்சுமி ஸ்டுடியோவில் இருக்கிறாரா பார். இல்லா விட்டால் நீயே செம்பனார் கோயில் போய், கையோடு அழைத்துவா” என்று விரைவாக அனுப்பினேன். அதற்குள் அண்ணா வந்திருக்கும் செய்தி எப்படியோ பரவிட, கழகத்தார்களான கிட்டப்பா, பழனிச்சாமி எல்லாரும் என் வீட்டில் குழுமிவிட்டனர். அண்ணா, அவர்களைப் பார்த்து அன்புடன், “நான் ஒரு சொந்த வேலையா வத்திருக்கேன். இரண்டு நாள் இருப்பேன். அந்த வேலை முடிந்த பிறகு பார்க்கிறேன்” என்று அனுப்பி வைத்தார். கணேசனும் வந்துவிட்டார். தம்முடன் வந்தவர் களிடம் கணேசனை அறிமுகம் செய்த பின், அவர்களை யெல்லாம் உள்ளே போகச் சொன்னார். “ரொம்ப சங்கட மான மனசோடு நான் இப்ப வந்திருக்கேன்! கொஞ்சநாள் முன்னாலே, புதுக்கோட்டையில், இவர்கள் பெண்ணின் திருமணம் என் தலைமையில் நடந்தது. மாப்பிள்ளை செம்பனார் கோயில். உனக்குத் தெரியுமா?” என்று அண்ணா கணேசனைக் கேட்டார். “திருமணத்துக்கு நான் வரமுடியலே. பையனைத் தெரியும். பெயர்….B. T. வாத்தியாரா இருக்கான். நம்ம அனுதாபிதான்” என்றார் கணேசன். ஏராளமான சீர்வரிசைகளுடன், பெண்ணை மகிழ்வாக மணமகன் வீட்டுக்கு நம்பி அனுப்பியவர்கள், ஏமாந்தார்கள்! பெண் அங்கு வாழ முடியாமல் ஊருக்கே திரும்பிவிட்டது! இந்தச் சேதி உனக்குத் தெரியுமா?!“ என்னும்போது அவர் திடுக்கிட்டார். “தெரியாதண்ணா! ஏன்?” என்று கேட்டார். “அதைத்தான் நீ சரியாகத் தெரிந்து சொல்லணும். முடிஞ்சா, அந்தப் பையனை இங்கு அழைத்து வரணும். நிதானமா நடந்துக்கணும். போய் நாளைக்கு வா!” எனக்கு விவரிக்கவொண்ணாத வியப்பு. ஒரு சீர் திருத்தத் திருமணத்தில் தலைமை தாங்குகிறவருக்கு இவ்வளவு பொறுப்புகளா? ஒரு புரோகிதர், தாம் நடத்திய திருமண மக்களைப் பற்றி இப்படி நினைத்துப் பார்ப்பதுண்டா? கணேசன் மறுநாள் காலையில் தனியாக வந்தார். முகம் பிரகாசமாயில்லை. என்ன சங்கதி? பையன் நல்லவனென்று நினைத்தது தவறாகப் போய்விட்டதாம். துருவி விசாரித்ததில் மிகமிக ஒழுக்கக்கேடனாம்; ஏராளமான பெண்களுடன் உறவாம்! ஏற்கனவே மனைவி ஸ்தானத்தில் ஒரு பெண்ணும், அதற்கொரு பிள்ளையும் இருக்கிறார்களாம்! புதிய இந்தச் செய்திகளை ஒரளவு யூகித்திருந்தாலும் அண்ணா மனமொடிந்து போனார்! “அந்தப் மையன் வருவானா? நேரில் பேசிப் பார்க்கலாம்!” என்று சொன்னார் அண்ணா, மாலையில் அந்த ’மணமக’னோடு கணேசன் வந்துவிட்டார். சும்மா என் வீட்டுக்குப் போகலாம் என்று சொல்லியே அழைத்து வந்தாராம். அண்ணா அவர்களையும், தன் மாமனார் மாமியார், மற்ற பெரியவர்களையும் பார்த்ததும் பையன் பயந்துபோய்விட்டான். அப்போதும் எல்லாரையும் உள் அறைக்குப் போகச் சொல்லிவிட்டு, அண்ணா அந்தப் பையனிடம் அருளொழுகப் பேசினார். எப்படியோ அவன் திருந்தி நல்ல ஒழுக்கமுள்ளவனாக மாறி, அந்தப் பெண்ணோடு மட்டும் வாழ்க்கை நடத்த மாட்டானா என்ற ஆதங்கம் அண்ணாவின் உரையாடலில் தொனித்தது. ஆனால்…… ஆனால்…… அவன் சொல்கிறான்: “என்னால் முதல் சம்சாரத்தைக் கைவிட முடியாது. இந்தப் பெண்ணையும் சேர்த்துக் கொள்கிறேன். தடையில்லை” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் இது காறும் பொறுமையின் உச்சியில் நின்ற அண்ணா, கணமும் காக்க முடியாத வெகுளியின் உச்சிக்கே சென்று, உரத்த குரலில், “நீ பெரிய தசரதச் சக்கரவர்த்தி! எத்தனை பெண்டாட்டி வேணும்னாலும் வச்சிக்குவியோ? ஒழுக்கம் எவ்வளவு சிறந்ததுண்ணு யோசிச்சுப் பார்த்தியா? நீயெல்லாம் படிச்சது ஒரு படிப்பா? நீ வாத்தியார் உத்தி யோகம் பார்க்கிற லட்சணம் இதுவா? என்கிட்டவே இப்படிச் சொல்ல உனக்கு எவ்வளவு துணிவு? உன்னிடத்தில் இனி அந்தப் பெண் எப்படி வாழும்?” என்று பொரிந்து தள்ளிவிட்டார். நான் கணேசனுடைய கைகளைப் பிடித்துக் கொண்டேன்; இல்லாவிடில் அண்ணாவின் பேச்சுக்கு மாறாக, அவர் செயலில் இறங்கி விடுவார் போலிருந்தது! “சரிசரி, நீ எழுந்து வெளியே போப்பா! நீ எல்லாம் ஒரு மனுசனா?” என்று நான் சொல்லிக் கொண்டே அந்தப் பையனை வெளியில் அழைத்துச் சென்றேன்; காமாட்சி மச்சான், கே. ஆர். ஆர் ஆகியோர் வாயிலில் நிற்கிறார்களே என்கிற அச்சத்தினால்! ஆனால் அவனோ, கவிழ்ந்த தலையுடன் சென்று…… சே! பெட்டி பெட்டியாய் நகைகள், லாரி லாரியாய்ச் சாமான்கள், சீர்வரிசை திருமண போட்டோ ஆல்பத்தை என் துணைவியும் நானும் கணேசனும் பார்த்தபோது திகைத்துவிட்டோம். இவற்றுக்கு ஆசைப்பட்டு, முன்னரே காதலியுடன் குடும்பம் நடத்தியவன், யோக்கியன்போல் வேடமிட்டு, ஏமாற்றியிருக்கிறான். இந்தப் பெண் வந்த பிறகும் வீட்டு வேலைக்காரிகள், மாட்டுத் தொழுவம் கழுவும் பெண் ஆகியோரிடமும் விளையாடியிருக்கிறான் காமவெறியன். அந்தப் பெண்ணின் பெற்றோர்க்கு, அண்ணாவும் நாங்களும் மிகவும் ஆறுதல் மொழிகள் சொன்னோம். சட்டரீதியான மணவிலக்குப் பெறுவதென முடிவு செய்யப்பட்டது. வந்த மூன்றாவது நாள் அண்ணா புறப்பட்டார்கள், ஆர்வம் குன்றிச் சோர்வு மேலிட்ட முகத்துடன்! அவர்களை வழியனுப்பி வைத்தபோது, இத்தனை ஆண்டுகளாக நான் பார்த்துப் பழகிவந்த அந்த அறிஞர் அண்ணா கண்முன் தெரியவில்லை. இலட்சக்கணக்கான தம்பிமார்களின் சுக துக்கங்களில் நேரடியாகப் பங்கேற்று, துயர்களைந்திட அயர்வின்றிப் பணியாற்றும் அருளாளர், அன்பாளர்-ஈடு இணையிலாத இனத்தின் தலைவர் - தனித்த-பெரு மகனார்-அய்யோ நினைக்க நினைக்க என் விழியூற்றுப் பீரிட்டுப் பார்வையை மறைத்தது! நீண்ட நேரமாயிற்று என் கண்ணிரருவி வறண்டு போக!  கேலிக்குத் துணைபோன வேதனை! திராவிட மாணவர்கள் முதலாவது பயிற்சி முகாம் 1944 ஏப்ரல் 16, 17 தேதிகளில் ஈரோட்டில் பெரியார் மாளிகையில் நடைபெறுகிறது; பெரும்பான்மையான மாணவர்கள் வந்து கலந்துகொள்ள வேண்டுமெனப் பெரியார் அழைக்கிறார் என்று அப்போது அய்யாவிடம் தனிச் செயலராயிருந்த எஸ். கஜேந்திரன் கும்பகோணம், திருச்சி, அண்ணாமலை நகர் ஆகிய ஊர்களுக்கு நேரில் சென்று செய்தி அறிவித்தார். தவமணிஇராசன் தலைமையில் நாங்கள் கும்பகோணம் கல்லூரியிலிருந்து 5, 6 மாணவர் போயிருந்தோம். திடீரென்று அய்யாவுக்குக் காய்ச்சல் அதிகமாக வந்து விட்டது. அண்ணாவே முழுப்பொறுப்பேற்று, மேடையில் பேக்வது எப்படி என்றும், கழகக் கொள்கைகளை விளக்கி யும் பயிற்சி வகுப்பு நடத்தினார்கள், இரண்டு நாட்களும், செ. தெ. நாயகம் தலைமையில். அந்தக் கோடை விடுமுறையின்போது, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறுசிறு குழுவினராக மாணவர்கள் சென்று பிரச்சாரம் செய்யவேண்டும்; எங்களுக்குத் தென்னார்க்காடு மாவட்டம் கிடைத்தது! 17.4.44 அன்று ஈரோடு மகாசன உயர்நிலைப் பள்ளியின் சரசுவதி ஹாலில் திராவிட இளைஞர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்ற மாதம் ஈரோடு சென்றிருந்த பொழுது அந்த சரசுவதிஹாலைப் பார்த்தேன். எவ்வளவு சிறியது! இதிலா மாநாடு நடத்தினோம் என்று வியந்தேன். ஆயினும் அது 1944-ல் அல்லவோ? பழைய கோட்டை என். அர்ச்சுனன் வரவேற்புக் குழுவின் தலைவர். தமது பெரிய பிளிமத் காரில், அரிசி காய்கறியெல்லாம் அவரே ஏற்றிக் கொண்டுவந்து, மாணாக்கர்கள் சாப்பாட்டுக்காக இறக்கியது கண்டு வியந்தோம். மாநாட்டுக்கு அண்ணாதான் தலைவர். நெடுஞ்செழியன் திறப்பாளர். அன்பழகன் கொடி உயர்த்தினார். அவர்களைப் போலவே மாணவர்களான நாங்கள் ஆளுக்கொரு தீர்மானத்தின்மீது சொற்பொழிவு ஆற்றினோம். இரவு நீண்டநேரம் மாநாடு தொடர்ந்து நடைபெற்றது. இரண்டு நாள் பயிற்சியில் ஈடுபட்டதால், எல்லோருக்கும் கிட்டத்தட்ட உறக்கம் வந்து உலுக்குகின்ற நிலைமை. அப்போது மேடையில் நடிகமணி டி.வி. நாராயணசாமி, பேசிக் கொண்டிருக்கிறார் உணர்ச்சி பொங்கப் பொங்க! அன்றைக்கும் அவர் பேசத் தொடங்கினால் விரைவில், முடிக்கத் தெரியாது. மேடைக்கு எதிரில் தரையில் நாங்கள், அதாவது ஈ. வெ. கி. சம்பத், திருப்பூர் எஸ். ஆர். சுப்பிரமணியம், ஈரோடு எஸ். ஆர். சந்தானம் (அவர் தான் மாநாட்டுச் செயலாளர்) ஆகிய நாங்கள் ஒரு சிறு குழுவாக அமர்ந்திருந்தோம். சம்பத், இண்ட்டர்மீடியட் படித்தாலும் விளையாட்டுப் பிள்ளையாக இருந்த காலம் அது. மேடையில் தலைமை ஏற்றிருந்த அண்ணாவை நோக்கிக் கீழே வருமாறு சம்பத் சைகை செய்தார். ‘நாராயணசாமி பேசு’ எனக் கைகாட்டி விட்டுக் கீழே இறங்கி வந்து அண்ணா எங்களிடையே அமர்ந்தார். திருப்பூர் எஸ்.ஆர். சுப்ரமணியம் நல்ல வசதிபடைத்த நம் இயக்கத் தோழர். இனிய நண்பர். ஆனால் கொஞ்சம் விவேகமில்லாத தன்மையில் சில நேரங்களில் நடந்து கொள்வார். விளக்கமாகச் சொன்னால் கிறுக்குத்தன் மாகத் தோன்றுவார், அவரது சில நடத்தைகளால்! அவர், சம்பத்தின் கையைப் பற்றிக்கொண்டு, அவருக்குக் கை ரேகை பார்க்க ஆரம்பித்தார், தெரிந்தது போல! ‘எனக்கு எத்தனை மனைவி? எத்தனை பிள்ளைகள் இருக்கும்?’ என்றெல்லாம் சம்பத் கேட்கக் கேட்க, அந்தப் பகுதியில் ஒரே சிரிப்பு: கும்மாளம்! அண்ணாவும் எங்களோடு சேர்ந்து உரக்கச் சிரிக்கிறார்! டி. வி. என். கோபத்தின் உயர் எல்லைக்கே போய் விட்டார். மிகமிக உரத்த குரலில், “ஏன் சிரிக்கிறீர்கள்? என் பேச்சில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது? உயிரைக் கொடுத்து உயர்வான கருத்துகளை எடுத்து வைக்கிறேன், கேட்கவேண்டாமா? இதுதான் நாகரிகமா?” என்றெல்லாம் அண்ணாவைப் பார்த்தும் கேட்கிறார்! அண்ணா அவர்களிடம் மிகுந்த அன்பும் மரியாதையும் உள்ள அவரே, தன் வயமிழந்து போனார். “அண்ணா, இருங்க!” என்று, எழப்போன அண்ணாவை, அப்போதும் சம்பத் தடுக்கிறார். அண்ணா, சம்பத்தின் கையை விலக்கி விட்டு, மேடையை நோக்கிப் போனார்கள். டி. வி. என் அத்தோடு உட்கார்ந்து விட்டார், சினம் ஆறாததால்! ஒருமணி நேரம் அந்த நள்ளிரவிலும் அண்ணா சொன்மாரி பொழிந்தார்கள். எல்லாருக்கும் தூக்கம் கலைந்து போயிற்று. சம்பத்தும் அமைதியாயிருந்தார். ஆனால், அடிக்கடி மற்றவர்களை கேலிப்பொருளர்க்கி நகைப்பதும், அண்ணாவிடம் தனக்குள்ள செல்வாக்கினால் பொது இடங்களில், அவரையும் தன் வசப்படுத்திக் கொண்டு, பிறரை ஏளனம் செய்ய முற்படுவதும், சம்பத்துக்கு ஒரு கெட்ட பழக்கமாகவேயிருந்தது. அதனால், அவருடைய எவ்வளவோ நல்ல தன்மைகள் மறைக்கப்பட்டு, மற்றையோரின் அருவெறுப்புக்கு ஆளாக நேர்ந்தது! அண்ணாவின் பெருந்தன்மையும் துணை போனதுதான் வேதனை இதிலே! முன்னால் வந்தது என்னால்! 9-9-1958 அன்று எனக்கு மன்னார்குடியில் திருமணம். முதல் நாள் இரவு 10 மணிக்கு மன்னார் குடிக்கு வரும் கடைசி ரயிலில் அண்ணா வந்து இறங்கி விட்டார். அவர் வருவது எங்களில் யாருக்கும் தெரியாது. வழக்கத்துக்கு மாறாக இவ்வளவு முன்கூட்டி வருவாரென எதிர்பார்க்காததால், ரயிலடிக்கு யாருமே செல்லவில்லை. அதே வண்டியில் வந்து சேர்ந்த சேலம் சித்தையன், ஈரோடு சண்முக வேலாயுதம், ஈ. வெ. கி. சம்பத், டி. கே. சீனிவாசன் ஆகியோர் கூட்டமாக நடந்தே வந்து 2 பர்லாங் தொலைவிலுள்ள மன்னை நாராயணசாமி மாமாவின் ஓந்திரியர் சத்திரத்துக்குப் போய்விட்டார்கள். அங்குதான் அவர் குடியிருக்கிறார். செய்தி கிடைத்து, சைக்கிளில் ஒடிப்போய்ப் பார்த்தேன். “காலையில் நாங்களே வந்து விடுகிறோம். நீ போ!” என்றார் அண்ணா. திருமணம் என் மாமனார் வீட்டில், என் நிபந்தனைப்படி புரோகிதரில்லாமல். ஆனால் தாலி உண்டு. காலையில் திருமண நிகழ்ச்சி முடிவுற்றபோதும் அண்ணா:இங்கே வந்து சேரவில்லை! தாமதமாகவே வந்தார். பிறகு என்ன செய்ய முடியும். இதையே திருமணப் பாராட்டுக் கூட்டமாக மாற்றி நடத்திவிடலாம் என்றார் தவமணி இராசன். எதிர் வீட்டில் அமைக்குமாறு சொன்னேன். என் மாமனாரைச் சரியாகப் புரிந்துகொள்ளாததால், அவரிடம் மைக்செட் ஏற்பாடு செய்யச் சொல்லப் பயந்து கொண்டு, சும்மா இருந்துவிட்ட செய்தி, முந்தின இரவுதான் என் கவனத்துக்கு வந்தது. திருவாரூரிலிருக்கும் நண்பர் சி. டி. எம். உதவினார். மைக் ஓரிடம், ஆம்பிளிஃபயர் வேறிடம், ஒலிபெருக்கிக்குழாய் இன்னோரிடம்-என்று சேகரித்துக்கொண்டு, எப்படியோ நேரத்துக்கு வந்து சேர்ந்தார் சி. டி. மூர்த்தி. என் மாமனார் வைதிகர் ஆனதால், அண்ணாவை விரும்பமாட்டார் என்று யாரோ தவறாகச் சொல்லி யிருந்திருக்கிறார்கள். அந்தக் கருத்துக்கு மாறாக, அவரே மாலைசூட்டி எல்லாரையும் வரவேற்றது, அனைவர்க்கும் வியப்பினை அளித்தது! குடந்தைப் பெரியவர் கே. கே. நீலமேகம் அவர்கள் தலைமையில் எல்லாரும் வாழ்த்தினார்கள். இறுதியாக அண்ணா. பேசும்போது-(அய்யோ, அந்தக் காலத்தில் டேப்ரிக்கார்டர் இல்லாமல் போயிற்றே?) என்னைப்பற்றிப் புகழ்ந்தே முதலில் அரைமணி நேரம் அருமையாக உரையாற்றினார். பகிரங்கமாக, ஒலிபெருக்கி முன்பு, என்னைப் பாராட்டி, அண்ணா சொற்பொழிவாற்றியது அந்த ஒருமுறைதான்! இப்போது நினைத்தாலும் நெஞ்சம் புகழ்ச்சியால் நெகிழ்கிறது. பெருமிதத்தால் விம்முகிறது. களிப்பால் பூரிக்கிறது. ஏற்கனவே, நான் சுயமரியாதைக் காரன் என்று தெரிந்தும், என் நல்ல பண்புகளைக் கேள்விப்பட்டுத் தமது பெண்ணைக் கொடுக்க முன்வந்த என். மாமனார், அண்ணா அவர்களின் நற்சான்று மொழிகள் கேட்டு, மேலும் உருகிப்போனார். மகிழ்ச்சியில் திளைத்தார். தலையில் குடுமி, காதில் கடுக்கண், நெற்றியில் திருநீறு, மேலே சட்டையணியாத உடல், சவரம் செய்து கொள்வதுகூட நாள் பார்த்துதான்; கோவில் டிரஸ்டி வேறு! தொழில் வட்டிக் கடை, ரங்கூனில் சிறிது காலம் வாழ்ந்தவர்; சங்கராச்சாரியரின் அன்பர்-தம்புசாமிப் பிள்ளை தன் பெண்ணைக் கருணானந்தத்துக்குத் தருவது சுந்தரமூர்த்திப் பிள்ளையோடு செய்யும் சம்பந்தமல்ல. சங்கராச்சாரியாரும், பெரியாரும் சம்பந்தம் செய்து கொள்வதுபோலத்தான்-என்று மன்னார்குடியில் பேச்சு! இப்படிப்பட்ட கோலத்தில் உள்ளவர், என்னை வரவேற்ற ஒரே நிமிடத்தில், அவரது உயர் குணங்களைப் புரிந்து கொண்டேன். அவரோடு நேற்றே நான் பேசியிருந்தால்இந்தத் திருமணமே வேறு விதமாக நடந்திருக்கும்” என்று அண்ணா, என் மாமனாருக்கும் குளிர்ச்சி உண்டாக்கினார். அவ்வளவுதான்! கல்யாணப் பந்தியில் அண்ணா அமர்ந்து சாப்பிட்டு முடிக்கும்வரை,என் மாமனார், தாமே அண்ணாவுக்கருகே நின்று விசிறிக் கொண்டிருந்தது கண்கொள்ளாக் காட்சி! அதன் பிறகு மன்னார்குடிக்கு அண்ணா எப்போது வந்தாலும், தூரத்தில் நின்று அண்ணாவின் பேச்சைக் கேட்டு, ரசிப்பது, என் மாமனாருக்கு வாடிக்கையாகி விட்டது!  தொண்டனைப் பேணிய தலைவன்! மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று மாயவரத்தில் மகத்தான சிறப்புகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், கலந்துகொண்டு பேருரையாற்றிட அண்ணா அவர்கள் வந்தபோது மச்சியும் (அண்ணாவின் தமக்கையார்) தில்லை வில்லாளனும் உடன் வந்திருந்தார்கள். மச்சியை எங்கள் வீட்டிலேயே என் துணைவியாருடன் இருக்கச் சொல்லிவிட்டு, நாங்கள் பொதுக் கூட்ட மேடைக்குச் சென்றோம். மாயவரத்தில் நான் அப்போது குடியிருந்த வீடு மிக மிகச் சிறியது. மின்வசதி கிடையாது. இந்த வீட்டுக்கு வருகை தராத தலைவர்களும் இயக்கத்தில் கிடையாது! அண்ணாவைப்போல யாராவது வரும்போது, இரவில் சாப்பிடுவதற்காக, வாடகை பெட்ரோமாக்ஸ் விளக்கு எடுத்துக் கொள்வேன். அன்றும் அப்படித்தான். கொல்லைப்புறத்தில் ஆள்வைத்து வரால் மீன் குழம்பும் வறுவலும் ஏராளமாகச் சமையல் ஆகிறது. என் துணைவியார் நாகரத்தினம் பிறவி முதல் இன்றுவரை கடுமையான சைவம். அண்ணாவுக்காக மூக்கைப்பிடித்துக் கொண்டு மேற்பார்வை அலுவலில் இருந்ததால், கூட்டம் கேட்க வரமுடியவில்லை - அவர்கள் நிலை பெரும்பாலும் அப்படித்தான்! கூட்ட மேடையில் கிட்டப்பாவுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஒரு நாற்காலியில், பழனிச்சாமி உட்கார்ந்து விட்டார். தனக்கு மேடையில் இடமில்லாதது கண்ட கிட்டப்பா பின்னால் நின்றுகொண்டு, தன் இயல்பின்படி வசைமாரி பொழிந்து விட்டார். மேடையிலிருந்த அண்ணாவின் காதில் அரைகுறையாகச் சில சொற்கள் விழுந்திருக்கவேண்டும்! மாயவரம் ஜங்ஷனில் ரயில்வே புரோக்கர் நடேச படையாட்சியின் இளைய மகன் கிட்டப்பா. ஒரளவு வசதியுள்ள நடுத்தரக் குடும்பம். 1951-ல் பள்ளியிறுதி வகுப்பு முடித்தவுடன், சிதம்பரம் நகராட்சியில் எழுத்தர் வேலை கிடைத்தது. போக மறுத்துவிட்டு, முழுநேரக் கட்சிப் பணியாற்றினார். தொண்டனுக்கொரு உதாரணமாகத் திகழ்ந்த கொள்கைவெறியர் கிட்டப்பா! நிகழ்ச்சி முடிந்து எங்கள் வீட்டுக்கு வந்தோம். அண்ணா சாப்பிட அமர்ந்தார்கள். பின்னர் வந்து சேர்ந்த கிட்டப்பாவின் குரல் உக்கிரமாக ஒலித்தது. பின்னே என்னங்க? தலைவர் வந்தா மட்டும் மேடையிலே உக்கார வர்றானுங்க! மத்த நாளிலே கழகப் பணிக்கோ, வசூலுக்கோ வர்றதில் லே! இவனுங்களுக்கு ஏன் நாற்காலி?” “கிட்டப்பாவைச் சாப்பிடச் சொல்லிக் கூப்பிடு” என்றார் அண்ணா என்னிடம். வெளியில் போய் அழைத்ததும் மிகப் பணிவுடன் வந்து, “நான் அடுத்த பந்தியில் சாப்பிடுகிறேனுங்க!” என்று சொல்லி, வெளியே உட்கார்ந்துகொண்டார். முகத்தில் கோபத்தின் ஜ்வாலை தெரிந்தது அப்போதும்! சாப்பிட்டு முடித்தவுடன், அண்ணா வெளியில் போய் நின்றுகொண்டு, காரை எடுக்கச் சொன்னார். ஊருக்குப் புறப்பாடு என்று நினைத்த மச்சியும் தெருவுக்கு வரவே, “நீ இரு, இதோ வந்துடறேன்” எனச் சொல்லி, “வில்லாளன்! கருணானந்தம்! ரெண்டு பேரும் பின்னாலே ஏறுங்க!” எனவும் பணித்தார் அண்ணா. கார் புறப்பட்டதும், “இப்படி எங்காவது ஆள் இல்லாத பக்கமாப் போலாம்!” என்று என்னிடம் சொன்னார். ரயில்வே சந்திப்பு சென்று, கடைசிப்பகுதியில் எங்கள் ஆர்.எம்.எஸ். அலுவலகத்துக்கு அருகேயுள்ள ஓர் ஒதுக்குப்புறத்தைக் காண்பித்தேன். வண்டியிலிருந்து யாரும் இறங்கவில்லை, டிரைவர் சுந்தா தவிர. சரியாக ஒருமணி நேரம் அண்ணா என்னிடம் பேசினார்கள். திராவிட முன்னேற்றக்கழகம் தொடங்கி மூன்று நான்கு ஆண்டுகளே ஆனபடியால், அதை எப்படி வளர்க்க வேண்டும்; அதற்கு எப்பேர்ப்பட்ட தியாக மனப்பான்மையுள்ள தொண்டர்கள் வேண்டும்; புதிதாக வருபவர்களை, ஏற்கனவே இருப்பவர்கள் எவ்வாறு அரவணைத்து, விட்டுக் கொடுத்து, இணைத்துச் செல்லவேண்டும் என்றெல்லாம் பொதுப்படையாக முதலில் சொன்னார்கள். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை! நான் முழுநேரத் தொண்டனல்லவே - என்னிடம் ஏன் இவ்வளவும் சொல்லி வருகிறார்கள்-என்ற என் திகைப்பு நீங்குமாறு, பதில் உடனடியாகவே வந்துவிட்டது. “நீ கிட்டப்பாவை உன் கைக்குள் வைச்சிக் காப்பாத்தணும். ஏண்ணா, இம்மாதிரி பிற்படுத்தப்பட்ட வகுப்பிலேயிருந்து, அதிலும் இந்தப் பகுதியில் செல்வாக்குள்ள ஒருவகுப்பிலிருந்து-நமக்குத் தொண்டர்கள் கிடைப்பது கடினம். முன்கோபியே தவிர கொள்கைப் பற்றுள்ள பையன். முதலில் நீ அவரைச் சரியாகப் புரிந்துகொள். அதன்பிறகு உன் ஆலோசனைகளை அடிக்கடி கேட்கிறமாதிரி உன்னிடம் தொடர்பு வச்சிக்கணும் அவரு. அதுக்கு ஏற்பாடு செஞ்சிக்க நீ-” என்று பலவாறு கூறிவிட்டு, கிட்டப்பாவை ஒரு ஷேப் (shape)புக்குக் கொண்டுவர வேண்டியது உன் பொறுப்பு தான். நான் ஒன்னத்தான் இனி கேட்பேன்!” என முடித்தார்கள் அண்ணா. தனிப்பட்ட ஒரு தொண்டனை உருவாக்கிட, ஒர் மாபெரும் இயக்கத்தின் தலைவர் இவ்வளவு சிரத்தையும், அக்கறையும் எடுத்துக்கொள்ள முடியுமா என்ற வியப்பு எனக்கு இன்னுங்கூட நீங்கியபாடில்லை! அண்ணாவின் இந்த ஆணையை இனிது நிறைவேற்றிய தாகவே நான் நம்புகிறேன். 1953-ல் பெரிய குழுவினருடன் ரயில் நிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு; கலைஞரோடு திருச்சி சிறையில் முதன்முறையாக நுழைந்த கிட்டப்பா, மாநில மட்டத்தில் தொடர்ந்து புகழ் பெற்றார். சாகும்வரை கழகம் நடத்திய எல்லாப் போராட்டங்களிலும் தவறாமல் சிறைபுகுந்தார். மாயூரம் வட்டத்தில் கழகத்தை ஓங்கி உயர வளர்த்தார். அவர் மாவட்டத் துணைச் செயலாளராகவும் பொதுக் குழு உறுப்பினராகவும் ஆவதற்கு நானே ஓட்டுச் சேகரித்து, உயர்த்தினேன், 1967-ல் தொடங்கி, நான்கு தேர்தல் களிலும் மாயூரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக விளங்கினார். சட்ட மன்றத்திலே. எண்ணிக்கையில் அதிகமான வினாக்கள் எழுப்பி, “கேள்வி மன்னன் கிட்டப்பா” எனப் புகழ்க்கொடி பறக்கவிட்டார். “கருணானந்தம், கருணானந்தம்! இங்க வா! இங்க வா! நம்ம கிட்டப்பா மாயவரத்தில் வெற்றி! கழகத்துக்கு முதல் வெற்றி ரிசல்ட் தந்தது அவர் தான்” என்று அண்ணா அவர்கள் பூரிப்புப் பெருங்குரலில் என்னைக் கூவி அழைத்தார்கள்; 1967 தேர்தல் முடிவுகள் வெளியான. அன்று, நுங்கம்பாக்கம் இல்லத்து மாடியிலிருந்து கொண்டு, கீழே நின்ற என்னைக் கூப்பிட்டுச் சொன்னார்கள்! அப்போது நான் பெருமித நோக்கால் அண்ணாவைப் பார்த்துச் சொன்னேன் - “அண்ணக்கு ஒருநாள் மாயவரத்தில் கிட்டப்பாவைப் பார்த்துக்கொள் என்று சொன்னீங்களே, நெனவு இருக்குதாண்ணா !” என்று புன்னகையால் பதிலளித்தார். அண்ணல் பெருந்தகையார்! பத்திரிகை பலமும் பேச்சாளர் எண்ணிக்கையும் அண்ணா முதலமைச்சராகிச் சில நாட்களுக்குப் பின் ஒருநாள் இரவு 9 மணியிருக்கும். அண்ணா அவர்களின் வீட்டு மாடியில் ஒரு சிறு கூட்டத்தில் நானும் இருக்கிறேன். தொலைபேசி அழைப்பு. நேர்முக உதவியாளர் நண்பர் கஜேந்திரன் அண்ணாவிடம் வந்து உட்கார்ந்துகொண்டு, “அண்ணா! ஆதித்தனார் கேட்கிறார், நீங்கள் அவர் வீட்டில் சாப்பாட்டுக்காகப் புறப்பட்டு விட்டீர்களா என்று! கருணாநிதியும் வரவேண்டுமாம். நேரமாகிவிட்டது என்கிறார்!” என்று, தான் P. A. என்பதை வழக்கம்போல் மறந்து பேசுகிறார். “சரி வாருங்கள்-இப்போது புறப்படாவிட்டால்அவரே நேரில் வந்து விடுவார். நீயும் வாய்யா!” என்றார் முதலமைச்சர் அண்ணா என்னிடம். “நான் வல்லேண்ணா-அவர் எனக்கு அறிமுகமே கிடையாது…” என்றேன். “பரவாயில்லை-என்னோடு வா. நிச்சயம் பிரியாணி யாவது இருக்கும்’ என்று என்னை இழுத்தார். அதற்கு மேலும் ‘பிகு’ செய்யலாமா? அடையாறு போய்ச் சேர்ந்தோம், நுங்கம்பாக்கத்தி லிருந்து. வாயிலிலேயே வரவேற்றார். அண்ணாவுடன் கலைஞர் வந்திருக்கிறாரா என்பதை மட்டும் கவனித்தார். மற்றவர்களை அவர் கண்டு கொள்ளவேயில்லை! கூடத்தில் தரையில் இலை போட்டுச் சாப்பாடு. அண்ணா சொன்னதுபோல் பிரியாணி பரிமாறப்பட்டது. நல்ல மணம், சுவை. ஆனால் அவரெங்கே எங்களைச் சாப்பிட விட்டார்? நாலு முழ வேட்டியும் நீல்ச்சட்டையும் நீள அங்கவஸ்தி ரமும் புரள, அண்ணாவுக்கு எதிரில் வழக்கம் போல் வாயைப் பொத்திக்கொண்டு நிற்கிறார் சபாநாயகர் சி. பா. ஆதித்தனார்; பந்தி விசாரிக்க அல்ல; தன் கோரிக்கையை முன்வைக்க தனியாகப் பேசவேண்டும் என்கிற நாகரிகமும் தெரியவில்லை; வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்கிற முனைப்பே புலப்பட்டது! “அண்ணா! எனக்கு இந்தச் சபாநாயகர் பதவி வேணாம். ஏதோ ஒரு மந்திரியா, கடைசி மந்திரியா, கொடுத்தாப் போதும்- என்று இதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார். அண்ணாவேள் குனிந்த தன்ல நிமிராமல் சாப்பாட்டில் கவனமாயிருப்பது போல் பாவனை செய்தார். நாங்களும் செவிகளைச் செவிடாக்கிக்கொண்டு வந்த வேலையை முடித்திதோம். ஒரு வழியாகப் புறப்பட்டு வாயிற்புறம் வந்து காரில் ஏறு முன்பு ஆதித்தனார்— “அண்ணா! நான் சொன்னது…” எனத் தொடங்குவதை அறிந்து, “கருணாநிதியிடம் பேசுங்க!” என்று சொல்லித் தீர்ப்பு வழங்கிவிட்டார் அண்ணா! நீண்டநேரமாக அடக்கிக்கொண்டிருந்த ஆவலை வினா வாக்கினேன் நான். “இவரை எப்படியண்ணா ஏற்றுக் கொண்டீங்க? பார்ப்பன ஆதிக்கத்தில் இருக்கும் பத்திரிகை ’உலகத்தில் இவர் காலூன்றி, ஒரு தமிழர் முன்னேறி வருகிறர்ரே என்கிற மகிழ்ச்சியில், நாம் இவர் ஏடுகளை வாங்கி ஆதரிச்சோம். ஆனா இதற்குமுந்தி ஒரு நாளாவது இவர் நம்மை அங்கீகாரம் (Recognise) செய்ததில்லை. பெரியாரைப் பேராசைக்காரர் போல் கார்ட்டுன் போடுவார். நமீது கட்சியை இருட்டடிப்பு செய்தார் என். வி. நடராசன் தவிர் வேறு யாருடைய பெயரும் இதுவரை “தினத்தந்தி”, “மாலை முர”சில் வந்ததில்லியே.” “நாம ஒரு கட்சியாயிருந்த வரையில் நாமும் தமிழ் நாட்டுப் பத்திரிகைகளைப் பொருட்படுத்தியதில்லை. கையகலம் உள்ள குடியரசு, திராவிடநாடு, முரசொலியை விச்சிதான் முன்னேறினாம். ஆனா இப்ப நம்ம ஆட்சி நடக்குது வரி செலுத்தும் மக்களுக்கு நம் ஆட்சி என்ன செய்யிது என்கிறதை எடுத்துச் சொல்ல நிறையப் பத்திரிகை வசதி வேணும். இவரிடம் 13 பத்திரிகை இருக்குது. என்ன சொல்றே? இவர் நமக்குத் தேவையா இல்லியா?” “இப்பப் புரிஞ்சுக்கிட்டேன். ஆனாலும் இவர் பேசறதைப் பாத்தா, இவர் லட்சியமே மந்திரியாகுறது ஒண்ணுதானோண்ணு சந்தேகம் வருது! இவர் பத்திரிகை பலம் நமக்கு உதவுது சரி; ஆனா, பத்திரிகையேயில்லாதவர் ம.பொ.சி. அவர் காலமெல்லாம் நம்மை எதிர்க்கவே கட்சி உண்டாக்கினார். நம்மைச் செய்யாத கேலியில்லை. அவரை எதற்காகச் சேர்த்துக் கொண்டீர்கள்?” “அதிலேதான் கொஞ்சம் ஏமாற்றம் எனக்கு. அவரிடத்திலே நல்ல பேச்சாளர்கள் பத்துப்பதினஞ்சு பேர் இருந தாங்க, அவுங்க நமக்காகப் பிரசாரம் செய்வாங்கண்ணு எதிர்பாத்தேன். ஆனா, இவர் நம்மோட சேர்ந்ததும், அவுங்க அத்தனை பேரும் இவரெத் தனியா விட்டுட்டுப் வோய், வேற கட்சி ஆரம்பிச்சிட்டாங்க-” (புலவர் கீரன், கவிவரதன், சந்தானம் போன்றாரை மனத்தில் வைத்து அண்ணா சொல்லியிரு க்கவேண்டும். அண்ணா இருந்த வரையில் ஆதித்தனார் சட்டப் பேரவைத் தலைவராகவும், சிலம்புச் செல்வர் சட்ட மன்ற உறுப்பினராகவும்தான். நீடித்தனர். அண்ணா இவர்களை அமைச்சரவையில் சேர்த்து விடப் போகிறாரோ என்பதில் தந்தை பெரியார் கவனத் துடன், கூடாது கூடாது என்ற எச்சரிக்கையை அடிக்கடி விடுத்து வந்தார்.) சிந்தனைக்குரிய இந்தக் கேள்வியும் பதிலும் ஒரளவு முடிவுக்கு வரும் நேரம், நாங்கள் நுங்கம்பாக்கம் அவென்யு சாலை ஒன்பதாம் எண்ணுள்ள இல்லம் வந்து சேர்ந்து விட்டோம். 1969க்குப் பிறகு ஆதித்தனார் அமைச்சராகவும், சிலம்புச்செல்வர் ம. பொ. சி. சட்டமேலவைத் துன்னத் தலைவராகவும், நான் செய்தித்துறை அலுவலராகவும் விளங்கிய காலகட்டத்தில், எங்களிடையே நல்ல இணக்கமும் இறுக்கமும் ஏற்பட்டிருந்தது. ஆதித்தனார் நாள்தோறும் எனக்கு ஃபோன் செய்து ஒருமணி நேரம் பேசுவார். தி.மு.க, ஆட்சி கலைக்கப்பட்ட மறுநாளிலிருந்து ஒதுங்கிக் கொண்டார். ம.பொ.சியும் அவ்வாறே ஆயினும், என்னிடம் நட்பு பாராட்டுகின்றார் இன்னமும். புதிராகப் பார்த்த சினிமா மாயூரத்திற்குக் காரிலேயே அண்ணா வந்துவிட்டார்கள் காலையிலேயே. நண்பர் G. R. அவர்கள் வீட்டில் தங்கி யிருந்தார்கள். கொத்தங்குடி ராமச்சந்திரன் (ஜி.ஆர்.) சரோஜா பரிமளத்துக்கு அண்ணன் முறை உறவினர்; காவேரி நகரில் வாடகை வீடுதான். நல்ல சைவ சாப்பாடு கிடைக்கும் அங்கே. அண்ணா அன்றையதினம் மாலையில் காரைக்கால் பொதுக் கூட்டத்தில் பேசவேண்டும். “அண்ணா! காரைக் கால் கூட்டம் மாலையில் முன்நேரத்திலேயே தொடங்கி, 8 மணிக்குள் முடித்துவிடவேண்டும். அதற்குமேல் பேசினால் கேட்பவர்கள் எண்ணிக்கை ‘இரண்டு மடங்கு’ ஆகிவிடும்— என்று கலைஞர் கேலியாகச் சொல்வார். ஆனாலும் அது உண்மைதான். சீக்கிரம் புறப்படுவோம்” என்றேன். முன் இருக்கையில் அண்ணா. பின் இருக்கையில் ஜீயாரும் நானும். பேரளம் வழியாகக் கார் சென்றது. காரைக்கால் பொதுக்கூட்டம், நாங்கள் ஏற்கெனவே பேசிக் கொண்டவாறு 8 மணிக்கெல்லாம் முடிந்துவிட்டது. உடனே அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த வழக்கறிஞர் காரைக்கால் ராமசாமி வீட்டுக்கு அழைத்துச் செல்லப் பட்டோம். நண்பர் ராமசாமி பின்னாளில் சிறிது காலம் புதுவை மாநில முதல்வராக இருந்தாரென நினைவு. அண்ணாவின் வருகையினால் அளவிலாப் பூரிப்பும் பெருமையும் புளகாங்கிதமும் பொங்கிடத் தமது இல்லத்தில் பிரமாதமான பிரியாணி விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் ராமசாமி. நேரம் நிறைய இருப்பதால், அண்ணாவுடன் சாவகாசமாகப் பேசிக்கொண்டிருக்க இயலும் என்று நம்பிய இராமசாமிக்கு ஏமாற்றம் ஏற்படுத்தும் வகையில், அண்ணா மிகவும் பரபரப்பும் விரைவும் வெளிப்பட, “ராமசாமி! சிக்கிரம் சாப்பாடு போடு! நாங்கள் போகவேண்டும்” என்றார்கள். எனக்கும் ஜீயாருக்கும் பகீரென்றது. ஏனென்றால், நாங்கள் இரண்டு பேருமே புலால் உணவை வெளியில் கிடைக்கிற இடத்தில் ஒருகை பார்க்கிற ஆட்கள்! பிரியாணி வாசனையோ ஆளைத் தூக்குகிறது. அண்ணா சாப்பிட விடமாட்டார்கள் போலத் தெரிகிறதே என்கிற ஏக்கம் எங்களுக்கு. ஒருவாறு சாப்பிட்டதுமே, அண்ணா போய்க் காரில் அமர்ந்துவிட்டார்கள். எங்கள் இருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை; அண்ணாவிடம் கேட்பது நாகரிகமன்று. மாயூரம் சென்று ஒய்வெடுக்க வேண்டுமோ, என்னவோ? சரி, போகவேண்டியதுதான்! கார் புறப்பட்டுத் திருநல்லாறு வரும்போது ஒரு டயர் பங்ச்சர் ஆகிவிட்டது. “என்னய்யா, என்னய்யா?” என்று அண்ணா பதைக்கிறார்கள். சீக்கிரமாகவே ஸ்டெப்னி சக்கரத்தை எடுத்து மாட்டி, டிரைவர் மீண்டும் பயணம் தொடர்கிறார். பேரளம் கண்ணுக்குத் தெரிகிறது. “இது பேரளம்தானே? சாயுங்காலம் வரும்போதே கவனிச்சேன். இந்தத் திருப்பத்திலே தெரிகிற தியேட்டரில் “அன்பே வா” நடக்கிறது. இதை ஊரிலேயே பார்க்க நினைச்சேன். பார்க்க முடியவில்லை. இங்கே பார்க்கலாமே என்றுதான் காரைக்காலில் அவ்வளவு அவசரப் படுத்தினேன். அப்போதே சொல்லியிருந்தால் உங்களுக்குச் சப்பென்று போயிருக்கும்; என்ன, பார்க்கலாமா?” என்றார் அண்ணா ஜீயாரிடம். அப்பாடா! எங்களுக்குப் புதிர் விடுபட்ட நிம்மதி. “கொஞ்சம் நீங்கள் காரிலேயே இருங்க அண்ணா. மேனேஜர் எனக்குத் தெரிஞ்சவர்தான் போய் இடம் இருக்காண்ணு பாத்துட்டு வர்றேன்” என்று இறங்கிப் போனார் ஜியார். இரவுக்காட்சி தொடங்கிவிட்டிருந்த நேரம் என்னிடம் சொல்கிறார் அண்ணா: கம் செப்டம் பர் கதைண்ணு சொன்னாங்க. ஏவி.எம். நல்லா எடுத் திருக்காங்களாம். அதான் பாக்க நெனச்சேன்………” இதற்குள் கொட்டகை உரிமையாளர், மேலாளர் இரு வருமே காருக்கருகில் பரவசத்துடன் வந்து வணக்கம் தெரி வித்து, உள்ளே அழைத்துப் போனார்கள். படத்தைப் பார்த்துக்கொண்டே அண்ணா, ஆரம்பிச்ச பிறகு வந்தது நல்லதாப் போச்சு, இல்லேண்ணா கூட்டம் சேர்ந்துடும்’ என்று சொல்லி முடிப்பதற்குள், சிங்கிள் புரொஜெக்டர் ஆகையால், ஒரு ஸ்பூல் முடிந்து, ஸ்லைடு போட்டார்கள். ஒரே கைதட்டல், ஆரவாரம்! என்ன என்று வியப்புடன் பார்த்தோம். எங்கள் தியேட்டருக்கு விஜயம் செய்திருக்கும் அறிஞர் அண்ணா அவர்களை வரவேற்கிறோம். வணக்கம். நன்றி! என்று, சிலைடு போடப்பட்டிருக்கிறது! உடனே படம் தொடர்ந்ததால் தொந்தரவில்லை; ஆனால் இடைவேளையில் மக்கள் அண்ணாவைப் பார்க்க வந்து விட்டார்கள். “படம் முடியுமுன்னே போய்விடலாமய்யா” என்று அண்ணா கிசுகிசுத்தார். அவ்வாறே பேரளத்திலிருந்து புறப்பட்டுக் கொல்லுமாங்குடி கடந்து சிறிது தொலைவு சென்றிருப்போம். அண்ணா பேசிக்கொண்டு வந்தார்: “இந்தப் படத்திலே பரவாயில்லேய்யா. இன்னொரு படத்திலே ஜவ்வாது மேடைகட்டிண்ணு ‘ரெண்டு பேரும் ஒவரா விழுந்து புரண்டு……’ “ஆம்மாண்ணா! நான் ஆணையிட்டால் என்று நினைக்கிறேன். குடும்பத்தோட பார்த்தப்ப எனக்கும் கஷ்டமாத்தான் இருந்தது” என்றேன். காரோட்டி, திருச்சி சின்ன பாண்டு (ரங்கன்) திடீரென்று காரை ஓரங்கட்டி நிறுத்தித் தொப்பென்று கீழே குதித்து, நடுச்சாலையில் உட்கார்ந்து, வாந்தி எடுக்க ஆரம்பித்தார். சே! பாண்டு அப்படிப்பட்ட ஆளில்லையே என்ற சந்தேகம் எனக்கு! அண்ணாவும் பதறிப் போனார்கள். “ஒண்ணுமில்லே, புகையிலை வாய்க்குள் போய்விட்டது” என்று சொல்லிக்கொண்டே தரையில் படுத்துவிட்டார். இரவு இரண்டு மணி. அக்கம்பக்கத்தில் வீடும் இல்லை. போக்குவரத்தும் இல்லை. ஜியாருக்கும் எனக்கும் கார் ஓட்டத் தெரியாது. அண்ணாவுக்குச் சிறிது தெரியும். அவர் ஸ்டிரியங்கில் போய் உட்கார்ந்துவிடப் போகி றாரே என்ற அச்சத்தில், பாண்டுவிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தேன். தண்ணீர் பாட்டில் எடுத்து முகத்தில் தெளித்து விட்டேன். பயத்தைப் போக்கிக் கொள்ள ஏதாவது பேசவேண்டுமே. “மாயூரம் எட்டு மைல்தான் இருக்கிறது. இப்படியே பேசிக்கொண்டே இருட்டில் நடந்து போனால் பொழுது புலர மாயூரம் போய்ச் சேர்ந்துவிடலாம்” என்றேன் நான். இந்த நகைச்சுவையை யாரும் ரசிப்பதாகத் தெரிய வில்லை. அரைமணி ந்ேரம் திகைப்பினூடே கழிந்தது. பாண்டு மெல்ல எழுந்து, “மன்னிச்சுக்குங்க அண்ணா. சரியாப் போச்சு” என்று சொல்லிக் காரில் ஏறினார். நாங்களும் நம்பிக்கையுடன் ஏறினோம். பிறகு அசம்பாவிதம் ஏதுமில்லை. மாயூரம் 10 நிமிடத்தில் போய் ஒழுங்காகச் சேர்ந்தோம். சஸ்பென்சாக ‘அன்பே வா’ பார்க்க ஆசைப்பட்டதில் எவ்வளவு இடைஞ்சல்கள் அண்ணாவுக்கு! காதல் அனுபவம் உண்டா? “எங்கே கருணானந்தம்?” என்று கேட்ட இன்ப ஒலி என் செவிப்புலனில் பாய்ந்து, சிந்தையை உலுக்கி, எழச் செய்தது! யார் குரல்? யாருடைய குரல் இது? அண்ணாவின் குரல்போல் இருக்கிறதே? அண்ணா எப்போது ஈரோடு வந்தார்கள்? கேள்வி அலைகள் அடுக்கடுக்காய்ப் புரண்டெழுந்து முடிவதற்குள் “குடி அரசு” அலுவலகத்தின் மெஷின் ரூமில் நான் நின்றிருந்த இடத்துக்கே விரைந்து வந்த வண்ணம் ஈ. வெ. கி. சம்பத், “வாங்க வாங்க! அண்ணா உங்களெப் பாக்க வந்திருக்கார்!” என்று அழைத்தார். புலவர் நா. மு. மாணிக்கம் வியப்புடன் எழுந்து வந்து வேடிக்கை பார்க்கிறார். வெளிப்புற முதல் அறையில் வீற்றிருந்த அண்ணா, என் வலது கரத்தைப் பற்றிக் குலுக்கினார்-“உன்னைப் பாராட்ட வந்தேன்” என்றார், புன்சிரிப்புத் தவழ! இறக்கையின்றி மேகமண்டலத்தில் பறந்து கொண்டிருக் கிறேன் நான்! என் உடம்பிலுள்ள மயிர்க்கால்களெல்லாம் சிலிர்த்து, உணர்வுகளின் உயிர்த்துடிப்போடு, மகிழ்வால் உள்ளம் பொங்கி நிரம்பி வழிகிறது! ஒன்றும் விளங்காமல், “எதற்காக அண்ணா?” என்கிறேன், வினாக்குறி தேக் கிய முகத்துடன், சம்பத்தையும் பார்த்தவாறே! “நீ ‘குடி அரசில்’ எழுதிய நாடக விமர்சனம் ஊரிலேயே படிச்சேன். ஈரோடு வந்தா உன்னெப் பாராட்டணும்னு நெனச்சேன். ரொம்ப அருமையா எழுதி யிருக்கே அனுபவப்பட்ட நாடகத்துறை எழுத்தாளர்  மாதிரி இருக்குது…உனக்கேது இவ்வளவு தூரம் இதிலே அனுபவம்?” “என்னண்ணா கேள்வி இது? நான் தஞ்சாவூர்க் காரணில்லியா? (கருவத்தால் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டேன்!) உங்க நாடகம்-நீங்களே நடிச்சது, நீங்க எழுதினது, எவ்வளவு பார்த்திருக்கேன்! பாட்டுக்கச்சேரி, மேளக் கச்சேரி, நாட்டியம், சினிமா, நாடகம் எல்லாம் சிறு வயசிலிருந்தே பார்த்துப் பார்த்து ஏற்பட்ட பட்டறிவு, அனுபவம்…” “அதெல்லாம் சரி! இந்த விமர்சனத்திலே, காதலைப் பத்தி ரெண்டு மூணு இடத்திலே எழுதியிருக்கியே– அதிலேயும் உனக்கு அனுபவம் உண்டா?” (எனக்கு அப்போது திருமணம் ஆகவில்லை). அருகிலிருந்த சம்பத் கைகொட்டி நகைத்தார். அவரே சொன்னார், “கவிஞராச்சே அண்ணா. அதனால கற்பனை பண்ணி எழுதியிருப்பார்!” என்று. நான் வெட்கத்தால் தோற்றுப் போய்த் தலையைத் தாழ்த்திக் கொள்ள நேர்ந்தது! அண்ணா என் முதுகில் தட்டிக் கொடுத்தார். சம்பத்தோ, “இல்லீங்க கருணானந்தம்! நெஜமாகவே அண்ணா உங்க எழுத்தெப் பாராட்டி, எங்கிட்ட யும் சொல்லிக்கிட்டிருந்தாருங்க!” என்றதும், துணிவுடனே நிமிர்ந்தேன் மீண்டும். “டி. கே. எஸ். சகோதரர்களின் முள்ளில் ரோஜா நாடகம் - ப. நீலகண்டன எழுதியது - இப்போது கோயமுத்துளர் சண்முகா தியேட்டரில், அல்லவா நடக்குது. நீ எப்படி எழுதினே?” என்று வினவினார் அண்ணா. “ஆமாண்ணா!-‘எங்கள் முள்ளில் ரோஜா’ நாடகம் சிறப்பாக நடக்கிறது. ‘குடி அரசு’ பத்திரிகையில் ஒரு விமர்சனம் எழுதினால் எங்களுக்குப் பெருமையாக இருக்கும். உங்கள் உதவி ஆசிரியர் யாரையாவது கோவைக்கு அனுப்பிவையுங்கள்’ என்று டி. கே. சண்முகம் கடிதம் எழுதியிருந்தார். அதனால, நானே போய், நாடகத்தைப் பார்த்துவிட்டு வந்துதான் எழுதினேன். ரயிலில் போக ஒருநாள், திரும்பிவர ஒருநாள் ஆச்சு!” “அவர்கள் யாராவது நீ வந்ததைத் தெரிந்து கொண்டார்களா?“ “ஒ! டி. கே. பகவதி என்னை வரவேற்று, நிறைய நேரம் பேசிக்கிட்டிருந்தார். உங்க மேலயும் ஒரு (புகார்) கம்ப்ளெய்ண்ட் சொன்னார். “என்ன சொன்னார்?” சிரித்துக்கொண்டே கேட்டார் அண்ணா. அதற்குள் வெற்றிலை பாக்கு வாங்கி வந்தார் ‘குடி அரசு’ மேனேஜர் நல்லுசாமி. அண்ணா மெல்ல அவற்றை மெல்லத் துவங்கினார். ஒரு சிட்டிகை பொடியும் உறிஞ்சினார். உற்சாகத்துடன் என்னைக் கேட்கத் தயாரானார். “‘அண்ணாச்சியும் நானும் அண்ணாகிட்டே எவ்வளவோ நாளா எங்களுக்காக ஒரு நாடகம் எழுதித் தரச் சொன்னோம். ஆனா, ராமசாமிக்கு மட்டும் ரெண்டு நாடகம் (ஒர் இரவு, வேலைக்காரி) குடுத்தாங்க; எங்களுக்குத் தர வேயில்லே! ராமசாமி நம்ம பையன்தான்; இருந்தாலும் எங்களுக்கு அது ஒரு மனக்குறை-திராத குறைதான்’ என்று பகவதி வருத்தப்பட்டார் அண்ணா!” என்றேன். “உனக்குத் தெரிந்தது தானேய்யா—நீயே பதில் சொல்லியிருக்கலாமே. இவுங்க கம்பெனியிலே இருக்க முடியாம, கொள்கை ரீதியா கருத்து வேறுபாடு ஏற்பட்டு தானே (டி. வி.) நாராயணசாமி, (எஸ். எஸ்.) ராஜேந்திரன் எல்லாம் வெளியேறினாங்க. கலைவாணர் ஜெயிலுக்குப் போனதாலே (கே. ஆர்.) ராமசாமியெத் தனிக்கம்பெனி வைக்கச் சொன்னேன், இல்லேண்ணா (சிவாஜி) கணேசன், (ஆர். எம்.) வீரப்பன். (பி. எஸ்) தட்சிணாமூர்த்தி, (ஜி. எஸ்.) மகாலிங்கம், (எம். என்) கிருஷ்ணன் எல்லாரும் ரொம்பக் கஷ்டப் பட்டிருப் பாங்களே…” “ஆமாண்ணா-அந்தச் சமயம் நான் தஞ்சாவூர்லே தானே இருந்தேன். அங்கேதானே கம்பெனி துவக்கம்! நீங்க சரியான சந்தர்ப்பத்திலே நாடகம் கொடுக்க லேண்ணா, கே. ஆர். ஆர். நாடகக் கம்பெனி நொடிச்சுப் போயிருக்குமே! நான் இதெல்லாம் ஞாபகப்படுத்தி, டி.கே. பகவதிகிட்டே சொல்லிட்டுதான் அண்ணா வந்தேன். இருந்தாலும் நீலகண்டனுடைய முள்ளில் ரோஜா நாடகம் சுயமரியாதைக் கருத்துக்களுடன் - டி. கே. எஸ். நாடகக் குழுவினரின் தரத்தில், அருமை யாயிருந்ததாலே, அப்படியே எழுதினேண்ணா! ‘குடி அர’ சில் ஒண்ணரை பக்கம் முழுமையாக வந்துட்டுது!” என்றேன். அண்ணா என்னைக் கேலி செய்யத் துண்டிய அந்த இடம் இதுதான்: தாசி கமலத்தின் மகள் மங்கைப்பருவம் அடைகிறாள். அதாவது காமத்தேன் எங்கு கிடைக்கும் எனச் சுற்றி யலையும் கருவண்டுகளைக் கவரும் வண்ணம் மலர்ச்சி அடைகிறாள்… ராகவ முதலியார் துணுக்குச் சேலை கட்டியிருந்தா லும் விரும்பக்கூடிய பரம ரசிகர். அவர் எல்லா நகைகளும் போட்டு, 5000 ரூபாய் பணமும் கொடுத்துச் செல்லத்துக்குச் “சாந்தி” செய்ய ஒத்துக் கொள்ளுகிறார். இதற் கிடையில் மிராசுதார் கந்தசாமிப் பிள்ளையின் மகன் ராமநாதன், நண்பர்களின் சகவாச தோஷத்தால், இளமை இன்பம் துசுரத் தாசி வீடு செல்லத் துணிகிறான்… தாசியின் உயர்குணத்தை எண்ணி எண்ணி அவளிடம் காதல்கொண்டு, அவளையே மணப்பதாக உறுதி பூண்டு கடிதம் எழுதிவிட்டான். ஒருவனையே நாடியிருந்த செல்லமும் காதல் வயப்பட்டாள், சந்திப்புகள் தவறாமல் நடந்தவண்ணமிருந்தன… (“குடி அரசு” 20.12.1947) அண்ணாவின் நினைவலைகள் அதற்குள் எங்கெங்கோ மோதி முட்டித் திரும்பி மீண்டிருக்க வேண்டும். உறங்கி விழித்தவர்போல, “அதெல்லாம் சரி, நீ எழுதிய நாடக விமர்சனம் பெரிதாயிருந்தாலும்.நன்றாயிருந்தது! சரி, வா சம்பத்து வீட்டில் சாப்பிடப் போகலாம்” என்றார். புறப்பட்டோம். அண்ணா, டி. கே. எஸ். சகோதரர்களின் “குமாஸ்தாவின் பெண்” நாடகத்திற்கு எழுதிய விமர்சனந்தான் இது வரை தமிழ் நாடக விமர்சனங்களிலேயே தலைசிறந்ததாகும். அவரே என்னைப் புகழ்ந்தால்…? உலகப் புகழ்பெற்ற படம் “காலையிலே நேரத்தோட புறப்பட்டுப் போங்க சார்! அப்பதான் காஞ்சிபுரம் போயி, படம் எடுத்துகிட்டு, மத்தியான சாப்பாட்டுக்கு இங்கே திரும்பிடலாம்” என்று கலைஞர் விரைவு படுத்தினார். சாப்பாட்டைப் பற்றிக் குறிப்பிட்டால்தான் எனக்குச் சுறுசுறுப்பு வரும் என்பது அவரது (தவறான) கணிப்பு?! “அப்படியா? இதோ புறப்பட்டேன்! எப்படியோ படம் எடுத்துகிட்டுதான் திரும்புவோம். ஆனா, எப்பத் திரும்புவோம் என்பது, எங்க கையிலே இல்லியே!” என்றேன். “இல்லே சார். அண்ணாவிடம் சொல்லியிருக்கிறேன், நீங்க கிளம்புங்க!” என்று தூண்டினார். உடனே ஒடிச்சென்று முன்சீட்டில் அமர்ந்தேன். ஃபியட்காரில் அதுதானே வசதி! பின் சீட்டில் புகைப்பு. நிபுணரும், அப்போது ஓரளவுதான் பருமனாயிருந்தவரும்இப்போது இருமடங்கு பெருத்து விட்டவருமான சுபாசுந்தரம், கேமரா சகிதம், முரசொலி யின் அதிகார பூர்வமான பிரதிநிதியாகத் தம்பி செல்வம். நேரே அண்ணா வீட்டில் போய் இறங்கினோம். உள்ளே போனதும், முற்றத்தின் முன்புறக் குறட்டின் மீது, ஒரு சாய்வு நாற்காலி (Easy chair)யில் அண்ணா ஒய்வாக அமர்ந்திருந்தார்கள். இடுப்பில் வேட்டி, மேலே வெற்றுடம்பு, கலைந்த தலை, மூன்று நாள் சவரத்தைக் காணாமல் முகத்தில் வெள்ளிக் கம்பிகள் முளைவிட்டிருந்தன. என்னுடைய “பூக்காடு” புத்தகத்தைக் கையில் கொடுத்தேன். அருகிலிருந்த மூக்குக் கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டு படிக்கத் துவங்கினார்கள். சுந்தரத்திடம் கண்சாடை செய்தேன். ஒரு படம் பிடித்தார். Flash light வெளிச்சம் தெரிந்ததும், அண்ணா என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து, புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு நிமிர்ந்தார்கள். மறுபடியும் ஒரு Flash. “‘முரசொலி’ மலருக்குப் படம் எடுக்க வந்திருக்கிறோம், அண்ணா!” என்றேன். உடனே சுந்தரத்தைப் பார்த்துக் கையமர்த்தினார், வேண்டாமென்று. எதிரில் அமர்ந்து கொண்டோம், கீழேயே. “ஏன்யா, ‘பூக்காடு’ எவ்வளவு காப்பி வித்துது” என்றார் அண்ணா என்னை நோக்கி. என்னண்ணா இது, நீங்க சொன்னபடிப் புத்தகங்களை நமது தி. மு. கழக மாவட்ட மாநாட்டுக்கெல்லாம் எடுத்துப் போனேன். நான் டிக்கட் விக்கிற கவுண்ட்டரிலேயே வைத்துக் கொண்டேன். பாதிதான் விலைக்குப் போயிற்று. மீதியை எனக்குத் தெரிந்த தோழர்கள்-நம்ம கவிஞரதுதானே - என்று சொல்வி இலவசமாய் எடுத்துப் போனார்கள்” என்றேன் சோகத்துடன். அண்ணாவோ, இது பரவாயில்லெய்யா. பாதி வித்தாகூட, நீ போட்ட முதல் எடுத்துவிடலாம்யா. ஆனா இது நான் நெனச்சமாதிரி பிரிண்ட்டாகலே என்றார். “ஆமாண்ணா, எனக்கும் இப்பதான் ஒரளவு புரியுது. அடுத்த எடிஷன் இன்னும் நல்லாப் போடலாம்” என்றேன் நான். ‘பூக்காடு’ இரண்டாம் பதிப்பில் அண்ணாவின் அணிந்துரை கையெழுத்துப் பிரதியை. அப்படியே பிளாக் எடுத்து வெளியிட்டேன். அட்டையின் முன்புறம் அருமையான வண்ண ஒவியம். பின்புறம் அண்ணா பூக்காடு” படிக்கும் போட்டோ. ஆனால் (1972-இல்) இரண்டாம் பதிப்பு வெளியானபோது அண்ணன் எங்கே எங்கே?? அண்ணா வேண்டுமென்றே பேச்சைத் திசை திருப்புகிறார்கள் என்பது எனக்குப் புரிந்து விட்டது. “சரி யண்ணா! சட்டை போட்டுக்குங்க, படம் எடுக்கலாம்” என்றேன். “ஒண்ணும் அவசரமில்லேய்யா. எதிர் வீட்டு மாடியில் போய் மூணுபேரும் ரெஸ்ட் எடுங்க. செல்வம்! நெறய புக்ஸ் இருக்கும், பாரு! மத்தியானம் சாப்பிட்ட பிறகு போட்டோ எடுக்கலாம். அதுக்குள்ள ஆளை வரச்சொல்லி நானும் ஷேவிங் செய்துகொண்டு, குளிச்சி, ரெடியா வந்துடறேன்” என்றார்கள் அண்ணா. நல்லதுதானே ? எங்கள் மூவருக்கும் மறுத்துப் பேச வாயில்லை. ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல் எதிர்மாடிக்குச் சென்றோம். என்ன விந்தை? அங்கே பெரும் புதையல் ஒன்று எங்களுக்காகக் காத்திருந்தது! என்ன அது? அப்போதெல்லாம் அண்ணா நிறையக் கார்ட்டுன் படங்கள் வரைவதைப் பொழுதுபோக்காகக் கொண்டிருந் தார்கள். அப்படிப் பல்வேறு நேரங்களில் தீட்டிய எண்ணற்ற ஒவியங்கள் அறை முழுக்க இறைந்து கிடந்தன, அவற்றையெல்லாம் மூன்று பேரும் பொறுக்கி எடுத்து ஒழுங்காக அடுக்கி, ஒவ்வொன்றையும் ரசிக்க ஆரம்பித் தோம். பொழுது போனதே தெரியவில்லை. பசியையும் உணரவில்லை. உணவுக்கு அழைப்பு வந்தது. அண்ணா முழுமையாக மாறியிருந்தார்கள். பளபளப்பான முகம். வாரி விடப்பட்ட தலை, சலவை வேட்டி சட்டை மேலாடை. சாப்பாடு முடிந்தபின் வீட்டு மாடியிலும் பின்புறமும் பல்வேறு கோணங்களில் படம் எடுத்தார் சுந்தரம். (அண்ணாவும் நானும் சேர்ந்து எடுத்துக்கொண்ட ஒரு படத்தை இன்னமும் எனக்குத் தரவில்லை சுந்தரம்?) மாலையில் சென்னை திரும்பினோம். பிடிக்கப்பட்ட படங்கள் பின்பு “முரசொலி”யில் மலர்ந்தன. ஆனால், அன்று எடுக்கப்பட்ட படங்களிலேயே உலகப் புகழ் பெற்றது, நாங்கள் திடீரென்று எடுத்த முதல் படந்தான்; அண்ணா மேலாடையின்றி, இயல்பான தோற்றத்தோடு, ‘பூக்காடு’ படித்துக் கொண்டிருக்கும் போஸ். ஒவியர் செல்லப்பன் முகப்பு ஒவியம் தீட்டிய அட்டையுடன் கூடிய புத்தகம் அந்தப் “பூக்காடு.” A. S. ராமன் ஆசிரியராகப் பணியாற்றிய நேரத்தில் Illustrated Weeklyயில் அண்ணாவைப் பற்றி வரலாற்றுப் புகழ் மேவிய கட்டுரை ஒன்றைத் தீட்டியபோது, சுபா சுந்தரம் கிளிக் செய்த இந்தப் படமே மிக முக்கிய இடம் பெற்றிருந்தது. அதற்குப் பின்பும் அந்த போட்டோ நிறையப் பயன்படுத்தப்பட்டுள்ளது எல்லாருக்கும் நினைவிருக்குமே! 1971-இல் என்னுடைய பூக்காடு நூலுக்குத் தமிழக அரசின் முதல் பரிசு கிடைத்தது. ஆனால் எனக்கு அதனி லும் பன்மடங்கு மகிழ்வும் பெருமையும் ஏற்படுவது, அண்ணா அவர்கள் என்னுடைய சுவைஞர் என்பதைப் புறச்சான்றுடன் மெய்ப்பிக்கும் இந்த இயல்பான புகைப் படத்தைப் பார்க்கும் நேரத்தில்தான்! நாயன இசையே உலகில் சிறந்தது திருவாரூர் குப்புசாமி நாயனக்காரரின் மூத்த மகன் தட்சிணாமூர்த்திக்குத் திருமணம், அண்ணா தலைமையில் கிழவடம் போக்கித் தெருவில், T. N. ராமன், லெட்சப்பா, V. நமசிவாயம் (இளம் பாடகர்) ஆகியோர் மணமகனுக்கு உறவினர், திருவாரூர்-சங்கீத மும்மணிகளான தியாகய்யர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் பிறந்த ஊராயிற்றே! அதனால்தானோ என்னவோ, அன்று மணமக்களுக்குச் சொன்ன அறிவுரையைவிட, இசை பற்றிய விரிவுரை அதிகமாயிருந்தது அண்ணாவின் வாழ்த்துரையில். இசை என்றால் இசையவைப்பது. அதனால்தான் தேவார-திருவாசகம், திருப்பாவை திருவெம்பாவை பாடிய நால்வர், ஆழ்வார்கள்-காலத்திலிருந்து, இராமலிங்க அடிகள் காலம்வரை தமிழ்ப் பண்களின் அடிப்படையில் இசைப்பாடல்களாகவே இயற்றித் தமது, சைவ அல்லது வைணவ சித்தாந்தங்களுக்கு மக்களை இசையவைத்தனர்“-என்பதாக இராக ஆலாபனை தொடங்கிய அண்ணா, பிர்காக்கள்-சங்கதிகள் உதிர, மேலே மேலே உச்சஸ்தாயியில் சஞ்சாரம் செய்தார்! இசையிலே உயர்ந்தது தமிழிசையே என்ற பல்லவியும், கருவிகளின் இசையில் உயர்ந்தது நாயன இசையே என்று அனுபல்லவியும் தவில் வாத்தியத்துக்கு இணை உலகிலேயே இல்லை. நயனச் சரணமும் சொல்லி, நிரவல், சுரப்பிரஸ்தாரம், அரோகண அவரோகணம் எல்லாம் செய்து, முற்றாய்ப்பு வைத்தார் அண்ணா! (பாட்டுக் கச்சேரியில் அல்ல: பேச்சுக் கக்சேரியில்!) "நாயனக் கருவிக்கு நிகர் ஏதுமில்லை. ஒலிபெருக்கியின் உதவியில்லாமல், நாயனமும் தவிலும் இணைந்திடும் அந்தப் பேரிசையை, மைல்கணக்கான தூரத்திலிருந்தே கேட்கமுடியும். இவையிரண்டையும் கையாள்வதற்கு நன்கு ‘தம்’ (மூச்சு) பிடிக்கக் கூடிய உடல்வாகு வேண்டும். திடமான கை கால்கள் வேண்டும். சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும். பொறுமையும் நிதானமும், மணிக்கணக்கில் அயராமல் உழைக்கும் தென்பும், துணிவும் வேண்டும். ஆனால், நம் நாட்டில் இசைத்துறையை இன்று நம்மிடமிருந்து கைப்பற்றி வரும் பார்ப்பனர்கள்-இந்த நாயன இசையை மட்டும் நம்மிடமிருந்து வெற்றி கொள்ள முடியவில்லை! அவர்களால் இயலாது என்பதுதான் உண்மையான காரணம்! ஆனால், உண்மையை மூடிமறைத்து, நாயனம்-நாயனம் என்றுகூட அவர்களுக்கு சொல்ல மனம் வராது; நாதஸ்வரம் அல்லது நாகஸ்வரம் என்பார்கள். நீசவாத்யம் என்று ஒதுக்கி வைத்தனர். நாயன வல்லுநர்களை மேதைகளை மேளக்காரர் என்றும் நாவிதர் என்றும், அவர்கள் தீண்டத்தகாதவர் என்றும் சாதிக் கட்டுப்பாடுகள் விதித்தனர். நமது திருவாவடுதுறை ராஜரத்னம் பிள்ளை போன்றவர்களின் சுயமரியாதை உணர்வினால் நாயனக்காரர்களின் நிலை இன்று மேம்பாடடைந்து வருகிறது. ஆயினும், சில நாயன மேதைகள் தீய பழக்கங்களுக்கு (மது) அடிமையாகி இந்த மகோன்னதமான இசைக் கருவிகளின் மேன்மையைப் பாழாக்குவதை எண்ணி வருந்துகிறேன்.” எதிரிலிருந்த பெருங்கூட்டத்தில் குளிக்கரை பிச்சை யப்பாபிள்ளை, திருவாரூர் வைத்தியநாதன் ராஜ ரத்தினம் சகோதரர்கள், ராஜ சந்தானம் பிள்ளை போன்ற முக்கால்வாசிப் பேர் இசை வேளாள மரபினர். கையொலியும் ஆரவாரமும் ஆமோதிப்பும் நீண்டநேரம் நீடித்தது. இம் மணமகன் நாயனத்தைத் தொட்டதில்லை, முன்னின்று இத்திருமணத்தை நடத்தியவர், நாயனத்தைத் தொட்டார்; ஆனால் தொடரவில்லை! யார் இவர்? தங்க நாயனக்காரரான முத்துவேலரின் ஒரே மகன்; இவர் பெயர் மு. கருணாநிதி ! ஆம் நம் கலைஞர்தான்! தன் பால்ய நண்பனும் இணை பிரியாத் தோழனுமாகிய தென்னனுக்குத் திருமணம் நடத்திக் கொண்டிருந்தார்! இயக்கத் தோழர்கள் உரிமையோடு வந்து தங்கி ஆலோசனைகள் கேட்கத் திருவாரூர் கீழ வீதியிலுள்ள அந்தச் சிறிய கூரை வீட்டுக்குத் தென்னனைத் தேடி வருவார்கள், காஞ்சி கல்யாண சுந்தரமும் நானும் அந்தத் திண்ணையில் தங்கி தென்னன் வீட்டில் ‘கறிச்சோறு’ சாப்பிட்ட நாட்கள் எத்தனையோ, எத்தனையோ? மணவிழா முடிந்து, மேடையிலிருந்து அண்ணா கம்பீரமாக இறங்கி வந்தார், நாயனத்தின் ‘சாம்பியன்’ ஆக, அண்ணா! எங்கே அண்ணா மறைத்து வைத்திருந் தீர்கள் இவ்வளவு இசை ஞானத்தை? உங்களுக்கு எப்படி இசையில் பயிற்சி ஏற்பட்டது?” என்ற எல்லாருடைய சந்தேகத்தையும் என் மூலமாக வெளிப்படுத்தினேன். “இதுல என்னய்யா ஆச்சரியம்? காஞ்சிபுரம் நாயனாப் பிள்ளை கச்சேரி எவ்வளவு கேட்டிருப்பேன்! அவருக்கு இணையான லயஞானம் உடைய சங்கீத வித்வான் இன்று வரை எவருமில்லே தெரியுமா? அவர் கச்சேரி எப்பவம் ஃபுல் பெஞ்ச். மிருதங்கம் கஞ்சிரா கடம் முகர் சிங் கொன்னக்கோல் டோலக் பிடில்…இப்படி! நீ அவரெப் பாத்திருக்கமுடியாது!…” இல்லேண்ணா! அவர் சீடர் சித்தூர் சுப்பிரமணிய பிள்ளையும் அதே பாணிதானே! சித்துராரின் கச்சேரி நிறையக் கேட்டிருக்கேன். தாளம் போட்டுப் போட்டு, அவர் வலது தொடையும் உள்ளங்கையும் காய்த்துப் போயிருக்கும். 5 மணி 6 மணி நேரம் அயராமெப் பாடுவார். ஏன், இப்ப நம்ம மதுரை சோமு இவருடைய சீடர்தானே?” “ஆமாம்! சரியாச் சொன்னே. இன்னும் நம்ம சீர்காழி கோவிந்தராஜன் இவுங்கள்ளாம்கூட அசுர சாதகம் செஞ்சி, இப்படி ஒரு நிகரில்லாத நெலமக்கி வந்தவுங்க. இவுங்களோட போட்டி போட பிராமின்ஸ் யாரும் வர முடியிறதில்லே” என்றார் அண்ணா. இந்த அண்ணாதுரைக்குத் தெரியாத துறை ஏதாவது இருக்குமா? கார் வள்ளல் யார்? “புத்தம் புதிய ஸ்டாண்டர்ட் டென் கார் கொண்டு வந்திருக்கேன் அண்ணா! இப்போதே புறப்பட்டால், இரவு ஊர் சேர்ந்து, நன்றாகப் படுத்துத் துரங்கிட்டு, காலையில் பரபரப்பு இல்லாமெ நிதானமா எழுந்து, திருமணத்தை நடத்தலாம் அண்ணா!” என்றேன். இடம் காஞ்சியில் அண்ணா வீடு. வெளியில் வந்து காரைப் பார்த்ததும், “அட ஆமாய்யா! புதிய Standard-10தான்! நம்ம திருவரம்பூர் காமாட்சி வந்திருக்காரே! டிரைவர் இல்லியா?“ என்று கேட்டார்கள் அண்ணா அவர்கள். “நீங்கள் இதில் சவாரி செய்து வருவதைப் பெருமை யாகக் கருதி, ஒட்டுநர் இல்லாமல், என்னை நம்பி, இந்தக் காரைக் கொடுத்தனுப்பிய வள்ளலின் பேரைக் கேட்டால், நீங்களே அசந்து (அயர்ந்து) போவீங்கண்ணா!” சிரிப்புக் கிடையே இவ்வாறு சொன்னேன். “அது யாரய்யா, அப்பேர்ப்பட்ட கருணையுள்ள கார் வள்ளல்?” எனக் கேட்டு முடிப்பதற்குள் “நம்ம திருவாரூர் கருணை எம். ஜமால்தான்” என்றதும், உண்மையிலேயே வியப்பும் மகிழ்வும் கொண்ட அண்ணா அவர்கள்-“சரி. இருவரும் சாப்பிட்டு ஒய்வெடுங்க. இரவு புறப்படலாம்,” என்று, நாங்கள் எதிர்பார்த்துச் சென்றதற்கு மாறாக ஒரு முடிவைச் சொல்லிவிட்டார்கள்! தனியே வெளியில் வந்து “என்ன மச்சான்-நம்ம தந்திரம் பலிக்காது போலிருக்கே! என்ன செய்யலாம்? நீங்க ராத்திரிக்குக் கண் விழிச்சி ஒட்டி முடியுமா?” என்றேன் காமாட்சியிடம். “அதெல்லாம் சமாளிப்பேன். நீங்க பயப்படாதீங்க மச்சான்” என்று எனக்கு தைரியம் சொன்னார்-பின் காலத்தில் திருவரம்பூர் சட்டமன்ற தி. மு. க. உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட காமாட்சி! எதற்காக அண்ணாவை அழைக்கப் போனேன்? திருவாரூர் நகராட்சித் தலைவராகப் பிறகு இருந்தவரும், கருணாநிதி அச்சக உரிமையாளரும், கஞ்சன் என்று நெருங்கிய நண்பர்களாலும் - ‘தஞ்சை மைனர்’ என அண்ணாவாலும்.கேலியாக அழைக்கப்பட்டவரும் ஆன ஜமால், ஏன் கார் கொடுத்தார்? சொல்கிறேன். தஞ்சை மாவட்டத்தில் எங்கு கழக நிகழ்ச்சி நடந் தாலும் தவறாமல் “இந்த இரட்டையர்”களைக் காணலாம். எங்கள் மாவட்டத்தில் பார்ப்பனர்களுக்கு அடுத்த உயர் ஜாதி மனப்பான்மையும், வசதியான நில வளங்களும் உடைய முதலியார் வகுப்பிலிருந்து துணிவுடன் தொண்டாற்ற முன்வந்தவர்கள் இவர்கள் இருவரும். நெடிதுயர்ந்த தோற்றமும், இளம் வழுக்கைத் தலையும் கொண்ட வெங்கிடங்கால் சந்தானம், ஒருவர். இவரைத் தாய் மாமனாகவும், சகோதரியின் கணவராகவும் கொண்டவரான வாழைக்கரை இராச கோபால் இன்னொருவர். பிறகு நாகை சட்ட மன்ற உறுப்பினராயிருந்த வழக்கறிஞர் இராச மாணிக்கம் இராசகோபாலின் தம்பியாவார். இப்போது, வாழைக்கரை ராசகோபால் திருமணத்துக்குத் தலைமை ஏற்பதற்காகத்தான், அண்ணாவைத் தாமதமின்றி அழைத்துவரும் பெரும் பொறுப்பில் என்னை அமர்த்தியிருந்தார்கள். காஞ்சியில் இரவு உண்வுக்குப் பின்புறப்பட்டு, (over night) இரவோடிரவாகத் திருவாரூர்-திருக்குவளை கடந்து, வாழைக் கரைக்கு அதிகாலையில் போய்ச்சேர வேண்டுமே! திருமண வீட்டார் எதிர்பார்த்தபடி முதல் நாளிரவே இயலாவிட்டாலும், விடிவதற்குள் அண்ணாவை அவர்கள் கண்களில் காண்பித்து விட்டதால், எனக்கு நிரம்பப் பாராட்டு! அண்ணாவைச் சிறிதுதுரங்க அனுமதித்தார்கள்; ஆனால் என்னைத் துரங்கவிடவில்லை! கையில் காகிதமும் பேனாவும் தந்து, எதிரிலுள்ள தோட்டத்திற்கு இட்டுச் சென்றார் சந்தானம். “கவிஞரே! சாயங்காலம் மதுரை சோமு கச்சேரி இருப்பது உங்களுக்கும் தெரியும். அவரும் இப்போதே இங்கு வந்துவிட்டார். அவரைக் கேட்டதில், அவருக்குக் கழகப்பாடல் ஒன்றும் தெரியாதாம். நீங்க ரெண்டு பாட்டு எழுதித் தாங்க. அண்ணா முன்னால பாட அவர் விரும்புறாரு” என்றார் மணமகன் ராசகோபால். நினைவாற்றல் மிக்க நண்பர் ராசகோபால் இப்போது இருந்தால் நான் அன்றைக்கு எழுதித் தந்த பாடல்களை அப்படியே ஒப்பிப்பார். நான் அப்போது எழுதித்தந்ததை மறந்துவிட்டேன். ஒரு பல்லவி மட்டும் நினைவில் நிற்கிறது : “மூன்றெழுத்து மந்திரத்தை மொழிவாய் என் தோழி-திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் நமக்காக வாழி!” -இன்னொன்று, விருத்தம். இரண்டு பாடல்களையும் இசைமேதை மதுரை சோமு, அழகுறத் தாமே இசை யமைத்து இன்பமாய்ப் பாடினார் மாலை இசையரங்கில். அண்ணா ஊருக்குத் திரும்பிடப் புறப்படுகையில் “என்ன கருணானந்தம், போவோமா!” எனக் கேட்க, நான் வரவில்லை எனத் தலையசைத்தேன். “அவ்வளவு தானா; தேர்தல் நேரத்தில் ஒட்டுப் போட வாக்காளரை அழைத்து வரக் கார் தந்து, திரும்பும்போது, நடந்து போகச் சொல்வார்களே-அப்படியா?“ என்று நகைச்சுவை வழங்கினார்கள். அப்படியில்லையண்ணா திரும்பிப் போக உங்களுக்கு அதே காரைத் தருகிறார் ஜமால்!” என்று கூறி வழியனுப்பி வைத்தோம்.  சிலப்பதிகாரம் அணிந்த சிறப்புரை உலகமே வியப்பினால் விழியை அகல விரித்திட, இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டைச் சென்னையில் நடத்திக் காட்டினாரல்லவா அண்ணா? பணிகளைக் கவனித்திடப் பல்வேறு துணைக் குழுக்களை அமைத்த போது, சிலவற்றில் அண்ணா எனக்கும் இடந்தந்திருந்தார். ஆயினும், எனக்கு அதிக விருப்பமும் ஈடுபாடும் உடைய இன்னொரு பணியில்தான் நான் முழு மூச்சாக முயன்று வந்தேன். நூல்கள் பதிப்பிக்கும் அலுவல் அது! கலைஞரின் சிலப்பதிகாரம்-நாடக வடிவில் இருந்த தைப் பெரிய அளவில் நூலாக வெளியிட்டோம். எனது அஞ்சல்துறை (தணிக்கைப் பிரிவு) நண்பரும், என் அன்பினால் கட்டுண்டவரும், அரிய ஆங்கிலப் புலமை வாய்க்கபெற்றவருமான T. G. நாராயணசாமி, சிலப்பதி காரத்தை அப்படியே கலைஞரின் எழுத்து நயங்குன்றாது, ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து தர, அதனையும் ஒரு நூலாக்கினோம். தமிழ்ப் புத்தகம் பெரியண்ணனுடைய ஐடியல் பிரிண்டர்சிலும், ஆங்கிலம் B. N. K. பிரசிலும் அச்சாயின. தினமும் இந்த இரண்டு இடங்களுக்கும் போக வர எனக்கு நேரம் சரியாக இருந்தது. ஒவியர்கள் அமுதோன், விஜயா ஆகியோரின் கைவண்ணம் சிறப்பு அம்சம். பூம்புகார் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த படங்களையும் பயன் படுத்தினோம். உலகில் பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்துள்ள அனைத்துப் பிரதிநிதிகளுக்கும் இந்த நூல்களை வழங்கிட வேண்டுமெனக் கலைஞர் விழைந்தார், அதாவது, 1968 ஜனவரி முதல் வாரத்தில் நூல்களை முடித்திட வேண்டுமென எனக்குக் கட்டளை, வழக்கம் போலவே இந்தச் சவாலை ஏற்றுக் கொண்டு செயல்பட்டேன். இதன் விளைவாய்ப், பல லட்சம் மக்கள் பங்கேற்ற பெருங்கூட்டத்தில், அண்ணா கவியரங்கத்திற்கு ஓடிவந்து கலந்துகொண்டு, திரும்ப ஒடிச் சென்ற ஒன்றைத் தவிர, உலகத் தமிழ் மாநாட்டு நிகழ்ச்சி வேறெதையும் நான் காணக்கூட இயலவில்லை! ஆங்கிலச் சிலப்பதிகார நூலுக்கு, அண்ணாவிடம் ஓர் அணிந்துரை கேட்டார் கலைஞர். “தருகிறேன்” என்று அவரிடம் எளிதாகக் கூறிவிட்டார் அண்ணா. “வாங்கிப் போட்டுக்குங்க சார்” என்று ஆணை எனக்கு. அப்போது முதல், அண்ணாவை அடிக்கடி சந்தித்து, “அண்ணா, சிலப்பதிகாரம்! அண்ணா சிலப்பதிகாரம்!” என்று நினைவூட்டத் தொடங்கினேன். முதலமைச்சர் பொறுப்பேற்றுள்ள அண்ணாவிடம் எழுதி வாங்குதல் அவ்வளவு எளிதான காரியமா? நண்பர் கஜேந்திரன்தானே P. A.? அவரிடமும் சொல்லி, அண்ணாவுக்கு நினைவூட்டுமாறு கேட்டுக் கொண்டேன், பலமுறை “ஆகட்டுங்க, கருணானந்தம்.! அண்ணாவுக்கு நேரமில்லிங்க!” என்ற பதிலையே அவரும் அலுக்காமல் தந்து வந்தார். ஒருநாள் எழும்பூர் ரயிலடி சென்று, இரவு திருச்சிக்குப் புறப்பட்ட அண்ணாவைச் சந்தித்து, “வெளியிலிருக்கும்போது, அல்லது ரயிலில் இருக்கும்போது தொந்தரவு குறைவாயிருக்குமே, அண்ணா? இந்தச் சிலப்பதிகார அணிந்துரையை எழுதி வாருங்கள்!” என்று வேண்டிக் கேட்டுக் கொண்டேன். என் பரிதாபத்தைப் பார்த்து இரங்கி, “நாளை மறுநாள் திரும்பும்போது, நிச்சயம் எழுதிக்கிட்டு வர்றேன்யா” என அண்ணா உறுதிமொழி வழங்கினார்கள். மிகுந்த நம்பிக்கையோடு திரும்பினேன். மூன்றாம் நாள் அறு காலையில் எழுந்து, ஒரு டாக்சியில் எக்மோர் சென்தி, இரண்டாம் பிளாட்பாரத்தில் காத்திருந்தேன்! முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து இறங்கிய அண்ணாவின் முகத்தை ஆவலுடன் பார்த்துக் கொண்டே, பிச்சைக் காரன்போல் இருகைகளையும் ஏந்தினேன். உதட்டைப் பிதுக்கி ‘இல்லை’ என உணர்த்தினார் அண்ணா! எத்தகைய ஏமாற்றம் ? “என்னங்க கஜா! புத்தகம் முழுவதும் பிரிண்ட் ஆகி, எல்லா பாரங்களையும் உங்களிடம் தந்துள்ளேன். ராப்பரும் பிரிண்ட் ஆகிறது. உங்கள் மேட்டருக்காகத் தான் காத்திருக்கிறேன்!” என்று சிறிது சினங்கலந்த குரலில் கூறினேன். “நிச்சயம் இன்று இரவு நீங்கள் வரும் போது மேட்டர் தயாராயிருக்கும், கவலைப்படாதிங்க, போங்க!” என்றார் சா. கஜேந்திரன் B. A. ஆ! என்ன விந்தை! சொன்ன வண்ணம் Matter தந்தார் அன்றிரவு! இரண்டு பக்கம் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப்பட்டிருந்தது. அப்போதே எனக்குச் சந்தேகம்- “ஏனுங்க, இது என்ன நீங்க எழுதினதா?” என்றேன். ஆமாங்க! அண்ணாவுக்கு நேரமில்லிங்க! நல்லா எழுதியிருக்கேன். அண்ணா பெயரிலேயே போட்டுக்குங்க! எனப் பதற்றமின்றிச் சொன்னார். என் கோபத்தைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு கோபாலபுரம் திரும்பினேன். கஜேந்திரன் நன்கு ஆங்கிலம் எழுதுவார். எங்களோடு 1944-45இல் ஈரோட்டுக்கு குரு குலத்திலிருந்தபோது அய்யா நடத்திய Justicitc இதழை அவர்தான் பார்த்துக் கொண்டார். ஆனால், அவருடைய எழுத்தையா நாங்கள் மாபெரும் ஒர் இலக்கிய நூலுக்கு அணிந்துரையாகப் போட முடியும்? எனக்கே ஏகப்பட்ட கோபம் என்றால், கலைஞருடைய உணர்வுகள் எப்படியிருந்தன என்பதைச் சொல்லவும் வேண்டுமா? பிறகு நானே கலைஞரைச் சமாதானம் செய்துவிட்டு, அட்டை உட்பட எல்லா அச்சிட்ட ஃபாரங் களையும் மீண்டும் இணைத்து எடுத்துக் கொண்டுபோய், நேரே அண்ணாவின் கையில் தந்து, அண்ணா! இந்த அணிந்துரை உங்கள் பேனாவால்தான் எழுதப்பட வேண்டும். அவரும் அப்படியே கேட்கச் சொல்கிறார் அண்ணா. நாளை இரவு வருகிறேன்!” என்று சொல்லி விட்டுச் சற்று விரைவாகக் கீழே இறங்கி விட்டேன். அண்ணா என்றால் அண்ணா தான்! இனியும் இந்தத் தம்பிகளை ஏமாற்றக் கூடாது என்று, எடுத்தார் பேனாவை. ஷேக்ஸ்பியரும் பெர்னாட்ஷாவும் ஓடி வந்தனர் ஊற்றுப் பேனாவின் மையாக அகில உலகையும் கட்டியாண்ட ஆங்கிலத்தின் இருபத்தாறு எழுத்துகளையும், தம் சிந்தனையால் பாங்குடன் கட்டியாண்ட அண்ணா எழுதத் தொடங்கவும், செங்குட்டுவக் கோமானின் இளவலாம் இளங்கோவடிகளும், பெருந்தகை அண்ணாவின் பேரன்புத் தம்பியாம் கலைஞர் கருணாநிதியும் கரங்கோத்துக் கொண்டு அண்ணாவின் திருமுன்னர் வருகை புரிந்து, “அண்ணா அண்ணா! எங்களையும் எழுதுங்கள்!” என்று இறைஞ்சியதுபோல் உருண்டோடி உதிர்ந்தன எழுத்து முத்துக்கள். உலகத் தமிழ் மாநாட்டுக்கு வந்த பன்னாட்டுப் பன்மொழிப் பிரதிநிதிகள் அனைவர்க்குமே கலைஞருடைய ஆங்கிலத்-தமிழ் சிலப்பதிகாரப் பிரதிகள் இரண்டுமே வழங்கப்பட்டன உரிய நேரத்தில், அண்ணாவின் கருணையால் 18.1.1968 அன்று மாலை. ஆங்கிலச் சிலப்பதிகார நூலை அண்ணா வெளியிட, ஆஸ்திரேலியப் பிரதிநிதி ஜோர்தான் பெற்றுக் கொண்டார். (அண்ணாவின் அந்த அணிந்துரையிலிருந்து சில வைர வரிகளை இங்கே படித்துப் பயன்பெறுவோமா?) No lover of the Tamil classics can risist being, inspired by SILAPPATHIKARAM. One amongst the Five Fine classics of Tamil Literature. Ilango’s magic touch makes every position of this engrossing Epic no true to nature that when one is reading, SILAPPATHIKARAM, he is taken to ancient Tamilagam, with all the Pageantry alive, Nature’s beauty laid before us, a veritable panorama of events and a parade of different types, and all pulsating with life-with brilliance all around. It is most appropriate that THAMBIKARUNANITHI should give us SILAPPATHIKARAM in his own inimitable diction and under the caption POOMPUKAR for his command over the Tamil Language and his mastery over the art of portrayal, so well-known and so well appriciated, gives him sit enough tight to render SILAPPATHIKARAM in the dramatic form-keeping the high standard of diction intact and at the same time embellish it with certain interpretations of events so as to offer logical explantions to some of the events that appear to us being inexplicable, may even unwanted. ஆண் நடிகை தேர்வு! “மாயவரத்தில் நீங்கள் ஒரு நாடகக் குழு அமைத்து, இயக்க நாடகங்கள் நடத்தி வருவதாகவும், அதில் பெண் வேடமிட்டு நடிக்கும் இரண்டு மூன்று நடிகர்களுக்கு நல்ல வேடப் பொருத்தமும் நடிப்புத் திறமையும் இருப்பதாகவும் அண்ணாஅவர்களுக்குச் செய்தி வந்திருக்கிறது. அவர்களை அழைத்துக்கொண்டு காஞ்சிக்கு வருமாறு, அண்ணா உங்களுக்கு எழுதச் சொன்னார்கள். எப்போது வருகிறிர்கள்?” இப்படி ஒரு கடிதம் எனக்கு வந்தது. நான் எப்போது நாடகம் எழுதினேன்? நடத்தினேன்? இரண்டுமே தவறு: அப்படியானால் அண்ணா சொன்னது தவறா? அதுவும் தவறில்லை! என்ன இது குழப்பம்? மாயவரத்தில் தீ. ப. நாதன் என்று ஒரு தோழர், திராவிடர் கழகத்திலும், பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் இன்றுள்ள பல தோழர்களுக்கு அவர் முன்னோடி. அவர் ‘பசி’ என்று ஒருநாடகம் எழுதி, இயக்கி, நடத்தினார். கழகத் தோழர்கள் பலர் நடித்தனர். நாடக அமைப்பில் அவருக்கு மனநிறைவு ஏற்படவில்லை. என்னிடம் வந்தார். நான் சில திருத்தங்கள் செய்து, கழகக் கருத்துகள் நிறைய இடம் பெறச் செய்தேன். சில பாடல்கள் எழுதினேன். மாயூரம் சவுந்தர் (மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பு நிர்வாகியாகப் பின்னாளில் இருந்தவர்) இசையமைத்தார். நடிகர்கள் சொந்தக் குரவில் பாடினர். நண்பர் E. V. K. சம்பத் அவர்கள் தலைமையில் முதல் நாளும், கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் தலைமையில் இரண்டாம் நாளும் நாடகங்கள் நடத்தி, வெற்றியுடன் முடித்தோம். ஓ! இப்போது புரிகிறது! நண்பர் சம்பத் அவர்கள்தான் அண்ணாவிடம் இதுபற்றிக் கூறியிருக்கிறார். உடனே, ‘ஸ்திரிபார்ட்’ (பெண் வேடம்) நடிகர்கள் இருவர், வில்லன் நடிகர் ஒருவர், ஆக மூவரையும் அழைத்துக் கொண்டு காஞ்சி புறப்பட்டேன். தம்பி அரங்கண்ணல் அவர்களும், நண்பர் தில்லை வில்லாளன் அவர்களும், காஞ்சியில் அண்ணா வீட்டில் தங்கி, “திராவிடநாடு” இதழின் துணை ஆசிரியர்களாகப் பணியாற்றிய தருணம் அது. அண்ணா, வில்லாளனிடம் சொல்லி, எனக்குக் கடிதம் எழுதப் பணித்திருக்கிறார்கள். நேரே “திராவிட நாடு” அலுவலகம் சென்றோம். “வாங்கண்ணே! இவர்கள் மூன்றுபேரும் இங்கே தங்கட்டும். சாப்பாடு நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்க வில்லை அழைத்துக்கொண்டு அண்ணா வீட்டுக்குப் போங்க!” என்றார் அரங்கண்ணல், ஈரோட்டிலிருந்து புறப்பட்டு ரயிலில் வந்து, விடியற்காலை அரக்கோணத்தில் இறங்குவதாக, சம்பத் அண்ணாவுக்குத் தந்தி கொடுத்திருந்தார். “இந்தாய்யா வில்லாளனும் நீயும் அதிகாலையில் நம் சுந்த்ர்வை எழுப்பிக் காரை எடுத்துக்கொண்டு, அரக்கோணம்போய், சம்பத் வருகிறான்; அழைத்து வாருங்கள். நான்ஸ் உன் நடிகர்களை ரிகர்சல் பார்ப்போம். சாப்பிடு!” என்றார்கள் அண்ணா. சந்திரமோகன் (சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்) நாடகத்து உரையாடல் பகுதிகள் சில்வ்ற்றை அந்த நடிகர்களிட்ம் தந்து, மனப்பாடம் செய்து வைத்திருக்கச் சொன்னோம். அரக்கோணத்துக்குக் காலை 3 மணிக்கே சென்றுது; சம்பத்தை அழைத்துவந்தோம். “என்ன சம்பத்து, இது உங்கள் வேலையா? என்னை அசல் நாடகக் காரனாகவே ஆக்கிவிட்டிங்களா?” என்றேன் அன்புடன், “இல்லிங்க. அவுங்க ரெண்டுபேர் வேஷப்பொருத்தமும் நடிப்பும் உண்மையிலேயே பெண்கள் போலவே இருந்தது. அதைத்தான் அண்ணாவிடம் சொன்னேன்;” என்றார் சம்பத். மறுநாள் ஒத்திகை பார்க்கப்பட்டதும், “அவர்களை அனுப்பிவிட்டு நீ இரய்யா சம்பத்தும் வந்திருக்கிறானே!” என்றார்கள் அண்ணா. “இல்லேண்ணா லீவு இல்லை. நானும் போகிறேன்” என்று புறப்பட்டேன் அவர்களுடன். அந்த நடிகர்களைத் தம்முடைய நாடகங்களில் பயன் படுத்திக்கொள்ள எண்ணினார்கள் அண்ணா. ஆனால் நேரமின்மையால் அது நிறைவேறவில்லை. வில்லனாக நடித்த தோழர் கே. எம். ஷெரீப்-பின்னர் நண்பர் சம்பத் அவர்களிடமே கார் ஒட்டுநராக ஈரோட்டுக்குச் சென்றார். பெண்வேடம் (கதாநாயகி) தாங்கியவர் O. A. I. K. பாலு. இப்போதும் தஞ்சை மாவட்டம் ஆலத்தம்பாடி கிளையின் தி.மு.க. செயலாளர். வில்லியாகப் (Wamp) பெண்வேடம் புனைந்து, அருமையாக பாடி, நடித்தவர் யார் தெரியுமா? அப்போது அவர் பெயர் K.S. O. துரைராஜன். இப்போது புலவர் அறிவுடை நம்பி! இறால் மீனும் நெத்திலிக் கருவாடும் “செம்பொன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி மக்கள் தங்கள் உறுப்பினரான விளநகர் கணேச லுக்குப் புதிதாக ஒரு ஃபியட் கார் வாங்கி வழங்க இருக்கிறார்கள். அண்ணா, நீங்கள் நேரில் வந்து, அந்தக் கார் சாவியை அவரிடம் தரவேண்டுமாம் என்று தமிழ் நாட்டின் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களிடம் வேண்டினேன். அங்கே வர இப்ப ஏதய்யா நேரம்? ரெண்டாவது, இது ஒரு Bad precedent (கெட்ட முன் மாதிரி) ஆகப் போயிடும். நம்ம கணேசன்னு இப்ப வந்தா-அப்புறம் ஒவ்வொரு M. L.A. வும் தன் தொகுதியிலே கார் நிதி வசூல் தொடங்கிடுவாங்க எனத் தயக்கம் தெரிவித்தார் அண்ணா! தவறான முன்மாதிரியா இருக்கக் கூடாதுதான்! ஆனா, கணேசனெப் பொறுத்தவரைக்கும், ஏற்கனவே ரொம்ப நாளா fiat கார் வச்சிருக்கார். அந்த அளவு தகுதி உள்ள பையன் என்பது உங்களுக்கே தெரியுமே, அண்ணா! எப்படியாவது அந்தப் பகுதியிலே ஒரு பொது நிகழ்ச்சிக்கு வரமாட்டீங்களா என்கிறதுதான் உட்காரணம் எங்களுக்கு! நான் கெஞ்சினேன்; வெற்றி! நான் தேதி கேட்டு அண்ணா மறுத்ததாகச் சரித்திரமே இல்லை! உடனே சென்னையிலிருந்து மாயூரம் விரைந்து, கார் வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யச் சொன்னேன். முதலமைச்சர் பொறுப்பேற்றதற்குப் பின்னர், அண்ணா மாயூரம் வருவதால், அரசு அதிகாரிகள் தம் வழக்கப்படி பயணியர் விடுதிகளில் இடம் வசதி செய்து, தங்குவதற்கான எல்லாச் செயல்களிலும் ஈடுபட்டனர். ரயிலில் வந்து அதிகாலை 2.15 மணிக்கு இறங்கினார்கள். அதிகாரிகள் என்னிடம் விசாரித்தனர், C. M. எங்கே தங்குவார்கள் என்று. நான் சொன்னேன் இப்போதுள்ள வழக்கப்படி ஜி. ஆர். வீட்டுக்குத்தான் செல்லக்கூடும்: என்பதாக இறங்கியவுடன் கேட்டேன். “எங்கே அண்ணா போகிறோம்?” - “வழக்கப்படிதான்” என்ற பதிலும் புன்னகையும் வெளிவந்தன. பிரமாதமான பொதுக்கூட்டத்தில் காரின் சாவியை கணேசனிடம் வழங்கினார்கள் அண்ணா. விழா அருமையாக அமைந்திருந்தது. ஆனால் அடுத்த மாதம் நடந்த நிகழ்ச்சி என் மூக்கை உடைத்து விட்டது!? மாயவரம் தொகுதி மக்கள் தங்கள் எம். எல். ஏ. ஆன கிட்டப்பாவுக்கு ஒரு அம்பாசிடர் கார் வழங்கினார்கள். அதற்கும் அண்ணா அவர்களையே அழைத்தனர். ‘இது ஒரு தீய பழக்கமாகத் தொடரும்’ என அண்ணா தொலை நோக்குடன் கூறியது, நூற்றுக்கு நூறு உண்மையாகிவிட்டதே! இருவரும் என் சொந்த உபயோகத்துக்குத் தங்கள் கார்களைத் தந்து உதவினார்கள் என்பது வேறு விஷயம். இருந்தாலும், இவை யாவும் அண்ணாவுக்குத் தர்ம சங்கடமான காரியங் களாகும் அல்லவா? அதற்கு நானும் கருவியாக இருந்தேனே! இரவு செம்பனார்கோயிலிலேயே விருந்து, கணேசன் சார்பாக சேதுராஜா வீட்டில். இவர்கள் அண்ணாவுக்கும் வேண்டிய குடும்பத்தினர். ஊரிலுள்ள மீன்களையெல்லாம் வலை வீசிப் பிடித்து வந்து விட்டார்கள்! அண்ணாவுக்கு, இடது புறம் தில்லை வில்லாளன், வலது புறம் நான். ஏராளமான (Dishes) வகைகள். இறால் வறுவலின் மணம் மூக்கைத் துளைக்கிறது. வில்லாளனும் என்னைப்போலவே சாப்பாட்டுப்பிரியர்; ரசிகர்! அவர் “இந்த இறாலைவிட, அதில் போட்டிருக்கிற மசாலாதான் ரொம்ப ருசி, அண்ணா!” என்கிறார். நானோ என் இலையிலிருந்த இறால் மசாலாவைச் சாதத்தோடு நன்கு பிசைந்து, அண்ணாவின் இலையில் வைத்துச், ‘சாப்பிடுங்கள்’ என்கிறேன். நான் இறால் சாப்பிட்டால் என் வயிறு கோளாறு செய்யும் என்பதும் ஒரு இரகசியம்! “சின்னச் சின்னதா இன்னொரு மீன் இருக்குமே முழுசா சாப்பிடற மாதிரி. அது என்ன?” — அண்ணா. “அது சென்னா குன்னி” -வில்லாளன். “அது இல்லேய்யா-வெற ஒண்ணு. அது பேரு…” “நெத்திலியா? (நெற்றிலியா?)” —இது நான். “ஆமா அதேதான்! அது கூட எனக்குப் பிடிக்கும்” என்று அண்ணா சொன்னதும் என் மூளையில் எழுதிக் கொண்டேன். இதை மட்டும்! “தெற்குச் சீமையில் நல்ல தண்ணிரில் மிகச்சிறிய அம்பிர்ைமீன் கிடைக்கும். அதையும் முழுசாகச் சாப்பிடலாம். கடல் நீரில் நெத்திலி மீன் இருக்கும். பச்சையாக்வும், கருவாடாகவும் சாப்பிடுவார்கள்” என்று என் பரந்த அனுபவத்தைக் காட்டிக் கொண்டேன். ஐந்து நாட்களுக்கொரு முறை அலுவல் நிமித்தம் சென்னை செல்பவன் நான். அப்போதெல்லாம் நெத்திலிக் கருவாட்டை ஒரு காகிதப் பையில் நிரப்பி, நாற்றத்தை மறைக்கக் கருவேப்பிலைத் தழைகளை நிறையச் சுற்றி, மேலேயும் தாளைப் போட்டு, நன்கு சிப்பமாகக் கட்டி எடுத்துக் சென்று, அண்ணாவுக்கு அதாவது அண்ணியிடம் தருவேன். நெத்திலித் தருவாட்டில் எத்தனையோ ரகம் உண்டு டியூர்தரமான முதல் நிலைக்கருவாடு பொன்னிறமுள்ளது. இதைத் தேர்ந்தெடுத்து எனக்கு வாங்கித் தர இருவரைக் கண்டு பிடித்தேன். விளநகர் கணேசன் ஒருவர்; மற்றொருவர் ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டராக உள்ள ரங்கநாதன். இவர் எனக்கும், என் நண்பர் பயணச்சீட்டுப் பரிசோதகர் குணசேகரனுக்கும், கோடிக் கரையில் பயங்கர மான மீன் விருந்து படைப்பவர். ஒரு நாள் ரயில் தாமதமாகி, நான் அண்ணாவீடு சென்றபோது, நள்ளிரவு நேரம். டாக்சியை நிறுத்தி விட்டு மேலே சென்றேன். அண்ணா படுத்திருந்தார்கள். அவர் களைத் தொந்தரவு செய்ய வேண்டாமென எண்ணி அண்ணியாரிடம் கருவாடு பார் சலைத் தந்து விட்டுத் திரும் பியபோது, ஆள்அரவங்கேட்டு, “யார்?” என்றார்கள் அண்ணா. “நான்தானண்ணா, கருணானந்தம் கொஞ்சம் நெத்திலிக் கருவாடு கொண்டாந்தேன்.” “வேண்டாய்யா. என்னாலே சாப்பிடவே முடியலியே. இது எதுக்கு இனிமே?” என்ற குரலில் வேதனை கலந்த சோகம்இழைந்தது. அதற்குப் பிறகு என்னென்ன நிகழ்ந்து விட்டன! நான் நெத்திலிக் கருவாடு வாங்குவதை மட்டு மல்ல-அண்ணாவின நினைவாக நெத்திலி மீனோ, கருவாடோ—சாப்பிடுவதையும் விட்டுவிட்டேன்! மூன்று சொற்கள்—இரண்டு மணி நேரம்! ’மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப, மணிப்பூ ஆடை போர்த்திக் கருங்கயல் கண்விழித்து, ஒல்கிக் காவிரி நடந்து வரும் மயிலாடுதுறை நகராட்சி மன்றம் இரண்டு உயர்நிலைப் பள்ளிகளை நடத்தி வருகின்றது. மாநிலத்தி லேயே இவை மேனிலையிலிருந்த காலமும் உண்டு. கிட்டப்பா இங்குதான் படிப்பை முடித்தார். என் பிள்ளைகள் எல்லாருமே இங்கே பயின்றனர். தமிழாசிரியர் சிவானந்தம் எனக்கு நண்பர். அவருடைய ஆர்வத்தால் அண்ணா அவர்கள் அந்தப் பள்ளியின் இலக்கிய மன்றத்தில் ஒருநாள் சிறப்புச் சொற்பொழிவாற்றிட ஏற்பாடு செய்தோம். மாலை நேரம். மாணவர் தவிர பொதுமக்கள் கூட்டம் ஏராள மாக இருக்கு மென எதிர்பார்த்து வெளியேயும் ஒலி பெருக்கிக் குழாய்களை அமைத்திருந்தனர். நான்கூட வெளியில் நின்றே கேட்டேன்; இலக்கியக் கூட்டந்தானே. எல்வளவு நேரம் அண்ணா பேசப்போகிறார்—என்று எண்ணி, “கல்லூரியிலோ பள்ளியிலோ கற்கும் மாணவர்கள் நேரிடையான அரசியலில் ஈடுபடக் கூடாது. அரசியலைப் பாடமாகக் கற்கலாம். இளமையில் கல் என்று சொன்னது, கற்கச் சொன்னதே தவிரக் கல் எடுக்கச் சொன்னது அல்ல! அந்தக் “கல்” என்ற சொல்லின் அடிப்படையில் பிறந்த ஒரு குறளைப்பற்றி இன்று பேச எண்ணுகிறேன்” என்று தொடக்கத்திலேயே பேச்சில் கனமும் கம்பீரமும் குடும் சுவையும் பிசைந்துதரவே, நீண்டநேரக் கையொலிக் குப் பின் ஊசி விழுந்தால் கேட்குமளவு மவுன நிலை. கூட்டமும் எள் போட்டால் கீழே விழாத அளவு நெருக்கம். “மாணவர்கள் திருக்குறளைக் கற்கவேண்டும். அதில் என்ன இருக்கிறது என்பதை எடுத்துச் சொல்வதை விடத் திருக்குறளில் இல்லாதது ஏதுமில்லை என்று சொல்வது தான் எளிது. அப்படிப்பட்ட ஒர் ஒப்பற்ற-அப்பழுக்கற்ற -முழுமை பொருந்திய அறநூல் அது. இலக்கியத்திலும், அது ஈடும் எடுப்பும் இல்லாத பேரிலக்கியம். இவ்வளவு சிறந்த நூலை எளிதாக நாம் கற்கவேண்டும் என்பதற் காகவே இரண்டு அடிகளிலே இயற்றிச் சென்றார் திருவள்ளுவர். இரண்டு அடிகளுங்கூட, முழுமையான அடிகளல்ல! ஒண்ணே முக்கால் அடியில் அடங்கும் ஏழே ஏழு சீர்கள்—ஏழு சுரங்களைப் போல! குறளின் மேன்மையை ஒவ்வொரு பாடலுமே தனித் தனியே விளக்கிக் காட்டும் என்றாலும், இப்போது உங்களிடத்திலே நான் ஒரே ஒரு குறளை மட்டும் எடுத்துக் காட்டிட எண்ணுகிறேன். கற்கக் கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. இதிலே, கற்க என்கிறார். அதாவது கல்வியைக் கற்க வேண்டும். சரி, கல்வியைக் கற்கிறோம். எப்படிக் கற்க வேண்டும்? கசடறக் கற்க, என்கிறார். கசடு என்றால் என்ன? குற்றம், பிழை. சரி, கசடு அறக் கற்கிறோம். எதைக் கற்க வேண்டும்? கற்பவை கற்கவேண்டும். கற்கத் தக்கவை.கற்கத் தகாதவை என்று நூல்களை இரண்டாகப் பகுத்துக்கொண்டு கற்கத் தக்கவற்றை மட்டும் கற்க வேண்டும். அதிலும் கசடு அறக் கற்கவேண்டும்.” அண்ணா இந்த இடம் வருவதற்குள் ஒருமணி நேர்ம் கடந்துவிட்டது. அடுத்து அண்ணா தேரழுந்தூர் பொதுக் கூட்டத்துக்குப் போயாக என்ற தவிப்பு எங்களுக்கு. ஆனால் அண்ணாவின் சொன் மாரி தொடர்ந்து பொழிகிறது! கற்க கற்பவை கற்க கசடறக் கற்க கற்பவை கசடறக் கற்க அடுத்த ஒரு மணி நேரத்திலும் கற்க—கசடற—கற்பவை— இந்த மூன்றே மூன்று சொற்களுக்கு மட்டுந் தான் விளக்கம் தர அண்ணாவால் முடிகிறது; அதுவும் ஒரளவு! “மீதியிருக்கும் நான்கு சொற்களுக்கும் இன்னொரு தடவை வரும் போது விளக்கம் சொல்வேன்” என்று, அண்ணா தம் பேருரையை முடித்து, வெளியில் வந்தார்கள். பெரிய வாடகைக் கார் ஒன்று அப்போது அமர்த்தி யிருந்தார் கிட்டப்பா, நாங்கள் அதைத் தேர் என்போம். அதில் ஏறிப் புறப்பட்டதும்-“நீங்க யாரிடத்தில் அண்ணா தமிழ் தனியாகப் படிச்சிங்க?” என்றேன். “நீ ஒண்ணு! எனக்குத் தனியாத் தமிழ் படிக்க எங்கேய்யா வசதியிருந்தது? நானே படிச்சி நானே சிந்திச்சுப் பார்க்கத்தான் நேரமிருந்தது. ஆழமா, அகலமாப் படிச்சா, எல்லா இலக்கியத்தையும் நாமே புரிஞ்சுக்கலாமே! ஆனா, இந்தத் திருக்குறளே தனி! திருவள்ளுவர் எவ்வளவு வருடம் கஷ்டப்பட்டிருப்பாரோ, தெரியல்லே? ஒவ்வொண்ணையும் எழுத, அல்லது ஒவ் வொரு சொல்லையும் அந்த இடத்திலே பொருத்த, அவர் நாள் கணக்கிலே சிந்திச்சிருக்கோணும்! எழுதினவர் பட்ட பாட்டை நினைக்கும்போது, அதை எடுத்துச் சொல்ற நமக்கு ஏது இதில் தொல்லை?” என்றார் அண்ணா. இவற்றையெல்லாம் மறக்காமல் நினைவில் வைத்திருந்தேன். உலகத் தமிழ் மாநாட்டின்போது வெளியிடப்பட்ட சிறப்பு மலருக்குத் திரு கி. வேங்கடசுப்பிரமணியன் என்னிடம் கவிதை கேட்டார். திருக்குறளின் துணையால், சொற்பப் படிப்புள்ள நாட்டுப்புறத்தான் ஒருவன், எல்லா வகையான பிரச்னைகளுக்கும், நன்முறையில் அனைவரும் ஏற்றுப் பாராட்டத்தக்க தீர்வு வழங்கினான் என்பதாக—ஒரு மர்மக் கதைபோல எழுதியிருந்தேன். கருத்து நன்கொடை அண்ணாவின் இந்தச் சொற்பொழிவுதான்!  முதலமைச்சர் சினிமா பார்க்கலாமா? மன்னை நாராயணசாமி மாமாவின் தம்பி நடன சிகாமணியின் மகள் கண்ணகி திருமணம் மன்னார்குடியில், அண்ணா தலைமையில். அப்போதுதான் முதலமைச்சர் பொறுப்பேற்றுச் சில வாரங்கள் ஆகியிருந்தன. திருமணத்துக்கு முதல் நாள் மதுரையில் ஏதோ ஒர் அரசு நிகழ்ச்சி. அங்கு சென்றிருந்து, அண்ணாவை அழைத்துக் கொண்டு, குறிப்பிட்ட நேரத்தில் மன்னார் குடி வந்து சேர வேண்டிய பெருங்கடமை என் தலையில் சூட்டப்பட்டது. எனக்குத் துணையாகத் தஞ்சை நண்பர் வழக்கறிஞர் சாமிநாதன், அவருடைய பியட் காரில். இருவரும் சாவதானமாகப் புறப்பட்டு மதுரை போய்ச் சேர்ந்தோம். அண்ணா முற்பகலில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தபோது சந்தித்தேன். வந்த வேலை யைச் சொன்னேன். “சரி சரி, வா. இங்கே மாலையில் ஒன்றும் function இல்லை. அதனால் இப்போது சாப்பிட்டதும் புறப்பட்டு, நாம் திருச்சி போய் ஒய்வெடுத் துக் கொள்ளலாம். நாளை அதிகாலை புறப்பட்டால், மன்னை திருமணத்துக்கு நேரத் தோட போயிடலாம்” என்று திட்டம் தந்தார்கள் அண்ணா. “எல்லாம் சரி யண்ணா! திருச்சியில் ஒய்வெடுக்கலாம். ஆனால் எந்நேர மானாலும், இரவு தங்குவதற்கு மன்னார்குடிக்கு வந்து விடச் சொன்னார்கள்!” என்றேன். இந்தத் தந்திரம் அண்ணாவிடம் பலிக்குமா? “நீ பேசாமே எங்கூட வாய்யா, பாத்துக்கலாம்” எனக் கூறி என் வாயை அடைத்து விட்டார்கள். திருச்சி சென்றடைந்தபோது மாலை 5 மணியிருக்கும், சர்க்கியூட் அவுசில் தங்கவில்லை. பொதுப்பணித்துறையின் பயணியர் விடுதியில் தங்கினார்கள். தயாராக அங்கிருந்த அன்பிலைத் தனியே கூப்பிட்டு “பிளாசா தியேட்டரில் என்ன படம்? போய்ப்பார்த்துத் தெரிந்துகொண்டு, டிக்கட் வாங்கி வா, மாலைக் காட்சியே பார்க்கலாம்” என்று ரகசியமாகச் சொன்னார்கள். மகிழ்வோடு விரைந்து சென்று அதைவிட மகிழ்ச்சியுடன் திரும்பி வந்தார். “இப்போதே போனால் சரியாயிருக்கும் அண்ணா” என்று அவசரப்படுத்தினார். “இப்ப வேணாய்யா, வெளிச்சமா யிருக்கு. லைட்டெல்லாம் ஆஃப் செஞ்சி, படம் ஆரம்பிச்சப்புறம் போகலாம்” என்று சொல்லி விட்டார்கள். அதேபோலக் காவலர் பரிவாரங்கள் இல்லாமல், மிக அமைதியாகத்தான் இருளில் உள்ளே சென்று அமர்ந்து கொண்டோம். இடைவேளைவிட்டு, விளக்குகள் எரியத் தொடங்கின. எப்படித்தான் மக்கள் தெரிந்துகொண்டார் களோ? இங்கே வந்து குழுமிவிட்டனர் எல்லாரும்! வணக்கங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. வசதிக்காக இடைவேளை நேரம் அதிகரிக்கப்பட்டும், மக்கள் திரும்பி அவரவர் இருக்கைக்குச் செல்வதாகத் தெரியவில்லை. அன்பில் வெளியே சென்று தியேட்டர் மானேஜரைப் பார்த்துப் படத்தைத் தொடரச் செய்தார். ஒருவழியாக அமைதி வந்தது. நான் அண்ணாவைப் பார்த்து ஒரேயடியாகச் சிரித்தேன். “என்னய்யா இப்படிச் சிரிக்கிறே!” என்று கேட்டார்கள். “பின்னே என்னண்ணா? ஒரு முதலமைச்சர் இப்படித் தியேட்டரில் சினிமா பார்க்க வந்துவிட்டாரே! என்று மக்கள் உங்களைப் பற்றித் தவறாக நினைக்க மாட்டார்களா?” என்றேன் சிரிப்பை அடக்கிக் கொண்டு. “நீ அப்படி ஏன்யா நெனக்கிறே? நம்ம அண்ணா, என்னதான் முதலமைச்சரானாலும், பந்தா இல்லாமே, நம்மோட வந்து உக்காந்து தியேட்டரில் சினிமா பாக்கிறாரேண்ணு நம்மைப் பத்தி உயர்வா தான்யா நெனப்பாங்க. என் சுபாவமும் நான் நிறையச் சினிமா பாக்கிற வழக்கமும், எல்லாருக்கும் தெரிஞ்சது தானேய்யா!” என்றார் அண்ணா. “ஆமாண்ணா. நீங்க சொன்னதும் சரிதான், யாரும் ..உங்களெப் பார்த்து அருவருப்பு அடையலெ. எவ்வளவு எளிமையா, நம்ம உட்காரக்கூடிய அதே வகுப்பிலே உக்காந்து, முதலமைச்சர் என்பதை மறந்துட்டு, மக்க ளோட மக்களா இருக்காரேங்குற மகிழ்ச்சிதான் இவுங்க முகத்திலே தெரியுது! ஆனா, இதுக்காக நீங்க பழைய மாதிரியே அடிக்கடி படம் பாக்கப் போயிடாதீங்க!” என்ற வேண்டுகோளுடன் பேச்சை நிறுத்திக் கொண்டேன். மக்கள் கூட்டத்தைச் சமாளிக்கும் எண்ண்த்தில், படம் முடிவதற்கு முன்பே தியேட்டரை விட்டு வெளியேறி னோம். நேரம் நின்றய இருந்ததால் அண்ணாவுடன் பல்வேறு செய்திகளை ஓய்வாகப் பேசக்கூடிய நல்வாய்ப்பு எங்களுக்குக் கிட்டியது இரவில். ‘இரவு திருச்சியில் தங்கியுள்ளோம். காலையில் சீக்கிரம் அண்ணா அவர்களைப் பயணப்படுத்தி அழைத்துக் கொண்டு, கட்டாயம் திருமணத்துக்காகக் குறிப்பிட்டுள்ள நேரத்துக்கு முன்னதாக வந்து விடுகிறேன்’ — என்று மன்னார்குடிக்குச் செய்தி அனுப்பிவிட்டு, நிம்மதியாக உறங்கினேன். வார்த்தையைக் காப்பாற்றினார்கள் அண்ணா! அப்போதெல்லாம் காலையில் விரைவாக எழுந்திருப்பது, தினமும் முகச்சவரம் செய்து கொள்வது, குளிப்பது, சல்வை உடைகளை அன்றாடம் தரிப்பது, தலைவாரிக் கொள்வது போன்ற புதிய பழக்கங்கள் அண்ணாவிடம் ஏற்பட்டிருந்தன. இவ்வளவையும் ஒழுங்குற நிறைவேற்றிய பின்ன்ர், காலத்தைத் தவறாமல், மன்னார்குடி போய்ச் சேர்ந்து, அனைவ்ரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினோம். பார்த்தேன்—சந்தித்தேன்—உரையாடினேன்! அறிஞர் அண்ணா அவர்களை முதன் முதலில் நான் எப்போது சந்தித்தேன்? அல்லது எப்போது பார்த்தேன்? அல்லது எப்போது பேசினேன்? இதயத்தில் இடம்பெற்று நெஞ்சில் நிலைத்திருக்க வேண்டிய நிகழ்ச்சி அல்லவா! என்ன முட்டாள்தனமாக உளறுகிறேன்; இன்னும் இந்த மூடநம்பிக்கை அகலவில்லையே! அறிவியல் உரம் பெற்று வளர்ந்துள்ள இந்நிலையிலும், கவிஞர் கற்பனைக் கூற்றுகளை மெய்போல் கையாளுவதா? நெஞ்சின் ஒரு பகுதியில் இருக்கும் இருதயம், இரத்தத்தைத் துாய்மைப் படுத்தும் பணி ஒன்றை மட்டுமே செய்யக் கூடியது! நினைப்பதற்கும் மறப்பதற்கும் உரிய கருவிகள் நிலை கொண்டிருப்பது, மூளையின் கோடிக்கணக்கான நரம்பு மண்டலத்தின் ஏதோ ஒரு பகுதியில்தான், என்பதல்லவா விஞ்ஞான உண்மை! திருத்திக் கொள்வோமா? உறங்கிக் கொண்டிருக்கும் நினைவாற்றல் உணர்வுகளைத் தட்டி எழுப்பி நடக்க விடுகிறேன், மூளையைக் கசக்கி! 1942-ஆம் ஆண்டு தஞ்சையில் பள்ளியிறுதிப் படிப்பு முடித்துக், கும்பகோணம் அரசினர் கல்லூரியில் நான் சேர்ந்த சமயம், என் சிறிய தகப்பனார் மகளைப் பட்டுக் கோட்டையில் திருமணம் செய்து கொடுத்தோம். அந்த மாப்பிள்ளை மாரிமுத்து பெரியவீட்டுப் பிள்ளை. அவர் அழைப்பின் பேரில் பட்டுக்கோட்டை சென்றிருந்தபோது, அவர்கள் வீட்டுக்கு எதிரில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் அண்ணா பேசினார். எனக்கு முதல் ‘தரிசனம்’ அதுதான்! “திராவிட நாடு” இதழ் துவங்கிய நேரம். அதன் வளர்ச்சிக்குச் சுயமரியாதைக் கோட்டை யாகிய பட்டுக்கோட்டைத் தோழர்கள் திரட்டி வழங்கிய நிதியைப் பெற்றுச் செல்ல அண்ணா வந்திருந்தார். அதே கூட்டத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ் ஆனர்ஸ் மாணவர் நாராயணசாமி என்னும் தாடிக்கார இளைஞரும் பேசினார். ஆமாம் பிற்கால நாவலர் நெடுஞ்செழியன்! பட்டுக்கோட்டையில் அவர் தந்தையார் இராசகோபால் அலுவலில் இருந்தார் அப்பொழுது. “அண்ணா பேச்சு எப்படி?” என் மாப்பிள்ளை எனது தொடையில் தட்டிக் கேட்கிறார். மயக்கத்தினின்று தெளிந்து, “எம். எஸ். சுப்புலட்சுமி கச்சேரி கேட்பதுபோல் இருக்கிறது” என்கிறேன். எனக்கு மிக உயர்வாகத் தோன்றிய உவமை, அதுவரையில் அது ஒன்றே ! அடுத்து, குடந்தையில் சீர்திருத்த நாடகங்களில் நடித்து வந்த எம். ஆர். ராதா அவர்களைப் பாராட்டி, 1943-ல் ஒரு வெள்ளிக் கேடயம் வழங்க மாணவர்கள் முடிவு செய்தோம். அண்ணாவை அதற்காக அழைத்து வந்தார் தவமணி இராசன். நான் டிக்கட் விற்பனையில் முனைந் திருந்ததால், அண்ணா எங்கள் கேடயத்தை ராதாவுக்கு வழங்கியபோதுகூட நான் மேடையருகே செல்லவில்லை. அப்போது மீதமான பணத்தைக் கொண்டுதான் திராவிட மாணவர் கழகம் அமைத்துத், தொடக்க விழாவுக்கு அண்ணா அவர்களையே அழைத்தோம். 1.12.1943 அன்று விடியற்காலை 3 மணி. போட் மெயிலில் வந்து இறங்கிக் குளிருக்காகத் தலையில் மூடிய மேல் துண்டு சகிதம் தோற்றமளித்த அந்த குள்ள உருவத்தை, அண்மையில் நின்று அப்போதுதான் பார்த்தேன். வரவேற்று, திரு. வி. சின்னத்தம்பி அவர்கள் வீட்டில் தங்கவைத்த மாணவர்களாகிய எங்களிடம், “காலையில் வாருங்கள்” என்று சொல்லி உறங்கச் சென்று விட்டார் அண்ணா. 10 மணிக்கு வி. சி. வீடு சென்றேன் நான் மட்டும். ஒரு மேசைக்கு முன்னர் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார் அண்ணா. எதிரில் போய் நின்று, வணக்கம்’ என்று கைகுவித்தேன். எங்கள் கல்லூரி பிரின்சிபால் டாக்டர் கே. சி. சாக்கோ முன்னிலையில் கூட நான் இவ்வளவு பயத்தோடு நின்றதில்லை; அவர் தான் எங்களிடம் பயந்து போயிருந்தார்! “உக்காருங்க. உங்க பேரென்ன?”—அண்ணா. “உட்காருங்கள். உங்கள் பெயர் என்ன?” —ஆகா! எவ்வளவு பெரிய உயர்ந்த மனிதன் நான்; விசுவரூபம் எடுத்த வாமனன் போல! அண்ணாவே என்னை வாங்க போங்க’ என்கிறாரே-பெருமை பிடிபடவில்லை! அந்த விரிந்து பரந்த நெற்றியின் கீழே கரிய பெரிய விழிகளின் காந்த மின்ஆற்றல், என் சிறிய கண்களான இரும்புத் துண்டைக் கவ்வியிழுக்க, அப்படியே போய் ஒட்டிக் கொண்டேன் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு. அந்த ஒரு முறை-ஒரே முறைதான் அண்ணா என்னை ‘வாங்க போங்க’ என்றது. அதன் பிறகு இந்த ‘அந்நியத்தனம்’ அகன்றது. ‘வாய்யா போய்யா’ எனும் அந்நியோந்தியம், பிறந்து விட்டது. நானும் வணக்கம் சொல்வதை நிறுத்திக் கொண்டேன். தன்வயமிழந்த நிலையில் தடுமாறித் தத்தளித்து, ஒரளவு தெளிவு வரப்பெற்று, “என் பெயர் கருணானந்தம், சீனியர் இண்ட்டர் படிக்கிறேன் அண்ணா: காலேஜ் லிட்டரரி அசோசியேஷன்ல, மாலை 3 மணிக்குப் பேசப் போறீங்களே—தலைப்பு என்னண்ணு கேட்டு வரச் சொன்னார் பிரின்சிபால்!“ “The New Life” உடனே சொன்னார். குறித்துக் கொண்டேன். “மாலையில் காலேஜ் மீட்டிங் முடிந்தவுடன், டவுண்ஹாலுக்கு அடுத்த முனிசிபல் பள்ளிக் கூட மைதானத்தில்தான் திராவிட மாணவர் கழகத் தொடக்க விழா. நான் அங்கிருப்பேன். உங்களைத் தவமணி இராசன் கல்லூரிக்கு இட்டுச் செல்வார்” என்று சொல்லி விடைபெற்றேன். மாலை 5 மணிக்கு இங்கே வந்துவிட்டார் அண்ணா. ஆங்கிலப் பேருரையைக் கேட்டு மகிழ நான் போக முடிய வில்லை. இங்கே கூட்ட ஏற்பாடு நான்தானே! நண்பரும் வழிகாட்டியுமான சீராமுலு, அண்ணாவுடனும் கூட்டத் தலைவரான தமிழாசிரியர் சானகிராமனுடனும், எங்கள் திராவிட மாணவர் கழகச் செயல் வீரர்களைப் படம் எடுக்க முனைந்தார். Group Photoவுக்காக நாற்காலியில் உட்கார்ந்திருந்த அண்ணாவின் தூரப் பார்வையில், தொலைவில் ரோட்டில் சென்றுகொண்டிருந்த இருவர், தனித்துத் தென்பட்டனர். “தம்பி கருணானந்தம்! அதோ பார்-திருப்பூர் மொய்தீனும், மூவலூர் ராமாமிர்தம் அம்மாளும் போகிறார்கள், கூப்பிடு!“ என்றார். எழுந்தோடி அழைத்து வந்து, நான் அமர்ந்த நாற்காலியை அவர்கட்குத் தந்து, பின்புறம் நின்று கொண்டேன். அந்த போட்டோ இருக்கிறது என்னிடம். இப்படியாகக், குடந்தையில்தான் அண்ணாவைக் கண்டதும், சந்தித்ததும், உரையாடியதும், ஒருங்கிணைந்து உடன்பிறந்த தம்பியானதும், நிகழ்ந்தன எனக்கு! நோயிலுங்கூட நகைச்சுவை மலருமா? “நாகர்கோயிலுக்குப் புறப்படுகிறேன், அண்ணா!” தமிழ்நாடு சட்டப் பேரவையின் மாண்புமிகு தலைவர் சி. பா. ஆதித்தனார். “சரி, போய் வாருங்கள். ஆனால் வெளிப்படையாக எதிலும் ஈடுபட வேண்டாம்.” தமிழ்நாட்டு முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா. “பார்த்துக் கொள்றேங்க. திரும்ப வந்ததும்…சபா நாயகரா நீடிக்க விடமாட்டீங்கன்னு நெனக்கிறேன்” ஆதித்தனார். இதற்கு பதிலில்லை. மந்திரி பதவிக்கான விண்ணப்பத்தை நினைவூட்டுகிறார் என்பது அண்ணாவுக்கு புரியுமே. இந்த உரையாடல் நடந்தபோது சென்னையிலிருந்தப் நான், மறுநாள் மாயூரம் திரும் பிவிட்டேன். 1967 புரட்சித் தேர்தலில் பெ. சீனிவாசனிடம் விருது நகரில் தோல்வியுற்ற காமராசரை, மார்ஷல் நேசமணி மறைவால் ஏற்பட்ட நாகர் கோயில் இடைத் தேர்தலில் நாடாளுமன்றத்துக்குப் போட்டியிடச் செய்தனர். காங்கிரசார் காமராசர் தோல் விக்குப் பழி தீர்க்க மும் முரமாக முனைந்தனர். காமராசருக்குப் போட்டியான டாக்டர் மத்தியாஸ், சுதந்திரக் கட்சி வேட்பாளர், தி. மு. க. ஆதரவுடன். அண்ணாவுக்குக் காமராசரை நாம் எதிர்ப்பதே பிடிக்கவில்லை. கலைஞரிடமிருந்து ‘டிரங்கால்’ வந்திருப்பதாக மாயூரம் R. S. அஞ்சல் மனையின் தூதுவர் வந்தார். காலைநேரம். ஒடினேன், சைக்கிளில்தான்! “என்ன சார்? அண்ணா உங்களெ உடனே மெட்ராஸ் வரச்சொன்னாங்க கலைஞரின் குரல். “என்னங்க இது? நேத்துதானே அங்கேருந்து வந்தேன். நாளை மறுநாள் டுட்டியிலே வருவேனே!” - “இல்லெ சார், லீவு போட்டுட்டு உடனே வாங்க!” -அவ்வளவுதான்! தொலைபேசித் தொடர்பு முடிந்தது : புறப்பட்டேன்! வேறு வழி? 24.12.68 அன்று கீழவெண்மணியில் 42ஆதித்திராவிடத் தோழர்களை விட்டோடு கொளுத்திய சோக நிகழ்ச்சி, சீர்கெட்டிருந்த அண்ணாவின் உடலை மேலும் பாதித்து விட்டது! நேரில் சென்று சமாதானப்படுத்தி வருமாறு அமைச்சர்களான கலைஞர், மாதவன் இருவரையும் அண்ணா அனுப்பினார்! அவர்கள் திரும்பச் சென்னை செல்லும்போது மாயூரம் வந்து, என்னையும் அழைத்துப் போனார்கள். அண்ணாவைப் பார்த்த பின்னரே மாயூரம் திரும்பியிருந்தேன். “நாகர்கோயிலுக்குப் போய்ட்டு வாய்யா, கருணாநிதி கூட” - இது அண்ணாவின் ஆணை. “இடைத் தேர்தல்லெ போயி நான் என்னண்ணா செய்யப் போறேன்?” நான் நடுக்கத்துடன்! “அட, அதுக்கில் லேய்யா. நீ கருணாநிதி கூடவே பாதுகாப்புக்காக இரு” அவ்வளவுதான்! கலைஞருடன் நாகர்கோயில் போய் இறங்கியவுடன் நன்கு புலனாகிவிட்டது, அண்ணா ஏன் ஒருவகை அச்சத்துடன் அப்படி என்னிடம் கூறினார்கள் என்பது! பயங்கர வன்முறைகளுக்குச் சித்தமாய் ஆயிரக்கணக்கான காங்கிரசார் அங்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்தனர். தி. மு.க. தான் ஆளுங் கட்சியா என்று நாமே கேட்கக் கூடிய அளவுக்கு நமக்கு பலவீனம், பாதுகாப்பற்ற சூழல், எங்கும்! நாங்கள் இரவில் கன்னியாகுமரியில் தங்கல், பகலில் தேர்தல் அலுவல், பொதுக்கூட்டம், கலைஞருக்கு. நான், அவர் வரப்போகும் ஊர்களுக்கு முன்கூட்டியே தனியே ஒரு காரில் செல்வேன். ‘அண்ணா வேண்டுகோள்’ என்று பிரத்தியேகமாக எடுக்கப்பட்ட 16 mm படமும், உலகத் தமிழ் மாநாட்டு ஊர்வலப் படமும் 16 mm புரொஜக்டரில் திரையிடச் செய்வேன். அவை லாரியில் வரும். ஒரு நாள் எனக்குப் பாதுகாப்புக்காக என்று, ஒரு கட்டிளங்காளையை என்னோடு புதிதாக அனுப்பினார்கள். தி. மு. க. தலைமை நிலைய நிர்வாகிகளான நண்பர்கள் சண்முகம்.தேவராஜ், அந்தப் பகுதிகளை நன்கறிந்ததால் உதவியாக இருந்தார். அவர் பெயர் ஜேப்பியார்! ஆதித்தனார் என்னைப் புரிந்து கொண்டதும் அங்கு தான்! சில பெரிய பொறுப்புகளை ஒப்படைத்தார்; இனிது நிறைவேற்றினேன். தேர்தலன்று நாகர்கோயிலில் இருப்பது தவறென்று கருதிச் சென்னை திரும்பிவிட்டோம். காலையில் அண்ணா வீட்டுக்குச் சென்றோம். மாடியில் பின்புறமுள்ள மிகச் சிறிய அறையில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். நோய் முற்றி, உடல்நிலை மிகமிகச் சீர்கேடுற்ற நேரம். “கருணானந்தம், டைகர் பாம் வச்சிருப்பியே. கழுத்திலே பின்பக்கம், பிடரி, தோளிலே கொஞ்சம் தேச்சு விடு. ரொம்ப வலிக்குது” என்கிறார் அண்ணா. ஒரு பழைய காட்சி என்: நினைவுக்கு வருகிறது. அண்ணாவின் முழங்காலுக்குக் கீழே ஒரு நாற்காலியில் இடிபட்டு வீங்கியிருந்தது ஒருநாள். என்னிடம் வேட்டியை விலக்கிக் காலைக் காட்டினார். வழக்கமாக என் ஜிப்பா பாக்கெட்டில் வைத்திருக்கும் டப்பாவிலிருந்து டைகர்பாம் எடுத்ததுதான் தாமதம். “அய்யோ, அய்யோ! அது வேண்டாய்யா. காலை எரியுமய்யா!” என்று கத்திக் கொண்டே, குழந்தை போல அண்ணா எழுந்தோடினார். “எரியாதுண்ணா” என்று கூவிக் கொண்டே நானும் பின்னாலேயே ஒட, அண்ணா வேட்டியால் காலை மறைத்துக் கொண்டு வீக்கத்தைக் காண்பிக்க மறுத்தார். அதே அண்ணா, இப்போது, தானே அந்தத் தைலம் தேய்க்கச் சொல்கிறார் எனில், நோயின் பரிமாணந்தான் என்னே! “எனக்கு, இப்ப தானே ஒடம்பு சரியில்லே? நம்ம கருணாநிதி எப்பவும் நோஞ்சான். மத்த மந்திரிகளுக் கெல்லாம் நல்ல ஒடம் புண்ணு நெனச்சா-இப்ப பாரு, நம்ம கோவிந்தசாமி, நாகர்கோயில்லே ரத்த ரத்தமர் வாந்தியெடுத்து (6.1.69 அன்று) hospitalலே அட்மிட் ஆயிட்டாரு. இந்த முத்துசாமி - நல்ல இளவயசு. அவருக்கும் ரொம்ப சரியில்லியாம். என்னய்யா இது?” என்று அலுத்துக் கொண்டார் அண்ணா. அறையிலிருந்து வெளியில் வரும்போது நான் ஒரு ஸ்டுவில் இடித்துக் கீழே தள்ளினேன். “ஏன் சார்! பார்த்து வரக்கூடாதா?” என்று கலைஞர் கடிந்து கொண்டார். அந்தச் சூழ்நிலையிலும் அண்ணா தமது இயல்பான நகைச் சுவையைக் கைவிடாமல் “அட, அவருமேலே தப்பில்லய்யா! அவரும், மன்னை நாராயணசாமியும், எதையும் இடிக்காமே நடக்க முடியாது! அவங்க மேலே தப்பில்லே! ஒடம்பு அதுக்கு இடங்கொடுக்கிறதில்லே என்கிற காரணந்தான்!” என்று நகையாடுகிறார். மன்னை மாமாவும் நானும் சேர்கமாகச் சிரித்தோம், ரசிக்க விருப்பமில்லாத அளவுக்கு அண்ணாவின் நலம் குன்றிப் போனதால்! கவிதை எழுதவா வரச் சொன்னார்? மாயவரம் ரயிலடியிலிருந்து காந்தியும் நானும் ஆளுக் கொரு சைக்கிளில் புறப்பட்டு, வழக்கம்போல் கூறைநாடு நோக்கிப் போய்க் கொண்டிருந்தோம். எதிரே லட்சுமி போட்டோ ஸ்டுடியோ பக்கிரிசாமி மிக விரைவாக ஒரு சைக்கிளில் வந்தவர், என்னைக் கண்டதும் தொப்பென்று குதித்து, “அண்ணே, ஒங்களெத் தேடிக்கிட்டு அண்ணா வந்தாங்க. நம்ம ஸ்டுடியோகிட்டெ காரை நிறுத்திக் ‘கருணானந்தம் இருக்காரா?’ எண்ணு கேட்டதும் எனக்குக் காலும் ஒடலெ, கையும் ஒடல்லே, வந்து உக்காருங் கண்ணா! இதோ போயி கூப்பிட்டு வந்துடறேன்னு சொல்றதுக்குள்ளே. ’நான் அவசரமா திருச்சி போயிட் டிருக்கேன். அவரை வரச் சொல்லுங்க’ன்னு பேசிகிட்டே காரை எடுக்கச் சொல்லிட்டாங்க! கார் இதுக்குள்ள சித்தக்காடுதான் போயிருக்கும்!” என்று மூச்சு இரைத்த வாறே சொன்னார். சைக்கிளைத் திருப்பி, இருவரும் விரைந்தோம்! கண் மண் தெரியாத வேகத்தில் செலுத்தினோம்! ஒரு அசட்டு நம்பிக்கை, சித்தர்காடு ரயில்வே கேட் சாத்தியிருக்காதா என்று. என்ன விந்தை! எங்கள் எதிர்பார்ப்பு வீண் போக வில்லை. கும்பகோணம், திருவாரூர், தரங்கம்பாடி ஆகிய மூன்று பக்க ரயில்வே லைன் ஒருங்கே செல்வதால், அந்தப் பெரிய ரயில்வே லெவல் கிராசிங் கேட் பெரும்பாலும் மூடப்பட்டே இருக்கும்! அன்றும் அப்படியே! அப்பாடி: அண்ணாவைப் பிடித்துவிட்டோம்! அண்ணாவுக்கு ஆச்சரியம் அடங்கவேயில்லை! “ஏன்யா, சைக்கிள்ள வந்தா காரைப் பிடிச்சிட்டிங்க? எவ்வளவு வேகமா வந்தீங்க? இது ரொம்பத் தப்பாச்சே!” என்றார். குரலில் ஒரளவு கண்டனமும் தொனித்தது. “என்னண்ணா வீட்டுக்கு வராம போறீங்களே?” என்றேன் சிறிது மூச்சு விட்டு, சிரம பரிகாரம் செய்தபின். “நேரமில்லியே. திருச்சி போயாகணும். ஆமா. மாநாட்டு வேலை தொடங்சி யாச்சே, நீ லீவு போட்டு வராம, இன்னும் இங்கேயே யிருக்கியே! நீ என்னா காந்தி?” எனக் கேட்ட அண்ணாவிடம் “நான் லீவு எடுத்துக்கிட்டு நாளைக்கே வந்துடறேன் அண்ணா! மாநாட்டுக்கு இன்னும் ஒரு மாசமிருக்கேண்ணு பார்த்தேன். சரி, பரவாயில்லை. காந்தி, பிறகு வரும்; டிக்கட் விற்பனைக்கு!” என்றேன். கேட் திறக்கப்பட்டது. அண்ணாவின் காரும் புறப் பட்டது. அதற்குள் அங்கு பெருங்கூட்டம் சேர்ந்துவிட்டது. இத்தனைக்கும், அந்த கேட்டிலிருந்து பார்த்தால் என் வீடு தெரியும். ஒரே தெருதான்! காலியாகக் கிடந்த திருச்சி ரேஸ் கோர்ஸ் திடலின் ஒரு பகுதியில் பழைய பங்களா ஒன்று இருந்தது. அதில்தான் அண்ணா முகாமிட்டிருந்தார்கள். அன்பில், மணி, ராபி, அழகமுத்து, நாகசுந்தரம், பாண்டுரங்கன், முத்துக் கிருஷ்ணன்-எல்லாரும் சூழ்ந்திருந்தனர். கட்டடத்தினுள் ஒவியக்கூடம் ஒன்றில் கலைஞரின் ஆலோசனையுடன் சில ஓவியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்-வைத்தியலிங்கம், கருணா போன்றோர். பந்தல் வேலை நடந்து கொண் டிருந்தது. மாயூரம் விற்பன்னர்கள் முகப்பு அலங்காரம் செய்து கொண்டிருந்தனர். “வந்துட்டியா! ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்துக் க. எல்லா எடத்தையும் நல்லா சுத்திப்பார் ! ஒரு மூலையிலே போயி உக்காந்து, அப்படியே இதையெல்லாம் வர்ணிச்சி, ஒரு கவிதை எழுதி கிட்டு வா! இண்ணக்கே கஞ்சீவரம் அனுப்பி, அடுத்த வாரம் திராவிடநாடு ஏட்டிலே அது வெளியாகணும்!” என்று அண்ணா என்னை வரவேற்று வரச்சொன்னதே இதற்குத்தான் என்பது போலவும் ஆஸ்தான கவிஞருக்கு அரசன் கட்டளை போலவும் அண்ணா எனக்கு ஆணை (சோதனை யா?) பிறப்பித்தார், அன்று மாலை “திராவிட நாடு” அலுவலகத்துக்கு ‘டிரங்க்கால்’ போட்டு அண்ணா பேசினார். “கட்டுரை அனுப்பியிருக்கிறேன், மாநாட்டுப் பணிகள் நடந்து வருவதுபற்றி. அதை அப்படியே போடணும். அப்புறம் நம்ம கருணானந்தம் கவிதை ஒண்ணும் அத்தோட வருது. அதையும் நல்லா full page போடணும்” என்று, பத்திரிகாசிரியர் தோரணையில் விளக்கங்கள் அறிவித்தார். அந்தக் கவிதை “திராவிட நாடு” 13.5.1956 இதழில் வெளியாயிற்று. அதிலிருந்து சில வரிகளை நினைவு கூர்வது பொருத்தமாயிருக்குமே: ** அழைப்பு** தென்னகத்து நன்னகராம் திருச்சி, தம்பி! திராவிடத்தின் மையத்தில் திகழும் பேரூர்! முன்னொருநாள் சோழனது மூதூர் ஈதாம்! முட்டவரும் பகையெதையும் வெட்டும் வீரர் இன்னமுந்தான் இருக்கின்றார் இங்கே என்றால், என் மீது தவறில்லை; எழுந்து பாராய்! இந்நகரின் தென்திசையில் பரந்தி ருந்த எழிலான திடலெங்கே? இன்று காணோம்! வள்ளுவரின் பெயராலே நகராம், இங்கே! வானம்போல் விரிந்த பெரும் பந்தல் ஒன்று, வள்ளுவரின் புகழ்போல வளருந் தன்மை, வரலாறு காணாத புதுமை யாகும்! வள்ளுவரின் குறள் போன்ற வடிவம் கொண்டோர், வாயிலிலே நிறுத்தி வைக்க இருசிங் கங்கள், வள்ளுவர் நூல் நயம்போல உயர்ந்த தூண்கள், மாடங்கள் அமைக்கின்றார் மரத்தால் செய்து! அண்மையிலே, அறிவகத்தின் அறையில் கூடி, அருமையுடன் பெருங்கலைஞர் ஆய்ந்து கூற, வண்ணமிகு ஒவியங்கள் வரைந்து வைத்து, வாழ்ந்துகெட்டோர் வரலாறு விளக்கு தற்குக், கண்கவருங் காட்சியொன்று காட்ட எண்ணிக் கண்துயிலா துழைக்கின்றார், அன்புத் தோழர்! மண்திருத்திப், புதரழித்து, மன்றம் கட்ட மகிழ்வுடனே பலதோழர் உழைக்கின்றார்கள்! மூச்செல்லாம் தமிழுக்கே முயற்சி யாவும் முன்னோர்கள் ஆண்டநாட்டை மீட்ப தற்கே! பேச்செல்லாம் பிறர் வாழ! பிறந்த நோக்கம் பேடிகளின் ஆதிக்கம் ஒடச் செய்ய! திச்சொல்லால் பயனில்லை; திருத்திப் பார்ப்போம்! திராவிடரின் மரபென்றும் எடுத்துச் சொல்வோம்! ஏச்செல்லாம் பூச்செண்டு மாலையாகும் என்றுரைக்குத் தலைவரெலாம் இங்கே தானே! குன்றாத செல்வங்கள் எல்லாம் உண்டு; குனியாமல் வாழ்ந்ததற்கு வரலா றுண்டு! அன்றாட நிகழ்ச்சிக்கும் வடநாட் டான்யால் அடிபணிந்து கிடக்கின்ற உணர்வும் உண்டு! என்றேனும் ஒருநாளில் மீட்சி பெற்று எமதரசு காண்பதற்கும் ஏக்கம் உண்டு! ஒன்றாக இவற்றையெல்லாம் சேர்ப்ப தற்கு உதவிடும்நாள் மே.திங்கள் பதினேழாம் நாள்! மலைகளிலே கிடைக்கின்ற மணிகள் தேடி, மண்ணுக்குள் புதைந்திருக்கும் பொன்னும் சேர்த்து அலைகடலில் ஆழ்ந்துறையும் முத்தும் வைத்து அணிகலன்கள் அமைக்கின்ற தொழில்வல்லார் போல் நிலைமறந்தோர் பழங்கால சரிதம் தேடி நெஞ்சத்திற் புதைத்திருக்கும் உணர்வைச் சேர்த்து தலைகனத்தோர் ஆட்சிக்கு முடிவு வைத்துத் தனிநாடு சமைத்திடுவோர் தயார்தான், வாராய்! “கன்வென்ஷனும் கம்ப்பல்ஷனும்” தஞ்சை மாவட்டம் நீடாமங்கலத்தில் திராவிட மாணவர் கழகத்தின் இரண்டாவது மாகாண மாநாடு 1946 பிப்ரவரி 23, 24 தேதிகளில் நடைபெற்றது. இதன் வரவேற்புக் குழு பொருளாளர் நான். முதல் மாநாட்டை நாங்கள்தானே கும்பகோணத்தில் நடத்தினோம்! அப்போது நாங்களே அழைக்காத அய்யா, இந்த மாநாட் டில் கலந்துகொண்டார்கள். வழக்கம்போல் அண்ணா வந்திருந்தார். சேலம் கல்லூரி முதல்வர் இராமசாமிக் கவுண்டர், தமிழாசிரியர் இராசாக்கண்ணனார் பங்கேற்றனர். உள்ளுர் மாணவத் தலைவர் சரவணன் பி.ஏ. இவர் பெரியாரின் அன்பர் நீடாமங்கலம் அ. ஆறுமுகம் அவர் களின் சீடர். சரவணன் வீட்டில் அண்ணாவைத் தங்க வைத் திருந்தோம். மாநாடு துவங்குவதற்கு முன்பு, அண்ணாவை அழைத்து வரப் போனேன். காலைச் சிற்றுண்டி முடிந்தது. ‘இதோ வந்துவிட்டேன்’ என்று அண்ணா புறப்பட்டார். “என்னண்ணா இது-வெள்ளை ஜிப்பாவோட வர் lங்க? கருப்புச் சட்டை எங்கே?” என்றேன். “இங்க ஏன்யா கருப்புச் சட்டை? இது மாணவர் மாநாடுதானே?” என்றார் கள்ளங் கபடமற்ற மனத் துடன் அண்ணா. “சரியாப்போச்சி. வம்புதான் போங்க. அய்யா மேடையிலிருக்கறப்போ, கருப்புச் சட்டை இல்லாதவுங்க, அங்க ஏறவே முடியாதே!” “இதான் எனக்குப் பிடிக்காத சங்கதி! திருச்சி மாநாட்டில என்ன தீர்மானம் போட்டோம்? கருப்புச் சட்டைப் படைன்னு ஒரு வாலண்ட்டியர் படை அமைக் கிறதாத்தானே! உன்னைத்தானே அதுக்கு அமைப் பாளராப் போட்டார் அய்யா. மேடைப் பேச்சாளரும் கருப்புச் சட்டை போடணும்னு தீர்மானம் போட்டோமா?” -அண்ணா கேள்வியில் சிறிது வெறுப்பும் உணர்ந்தேன். நான் அமைதியான மெல்லிய குரலில் அது சரிண்ணா! நம்ம அய்யா வழக்கப்படி (Resolution) தீர்மானத்தை விட, அதற்கு மேம்பட்ட வழக்கத்துக்கு, அதாவது கன்வென்ஷனுக்குதானே (Convention) மதிப்பு அதிகம் என்றேன். “போய்யா-இது கன்வென்ஷன் இல்லே, கம்ப்பல்ஷன். (Compulsion) விருப்பத்துக்கு விரோதமா கட்டாயப் படுத்துறதுதான்! ஆனாலும், இப்ப எங்கிட்ட கருப்புச் சட்டையில்லியே; நான் மேடைக்கி வராம இருந்துடறேனே!” என்றார். “அய்யய்யோ அப்படியெல்லாம் செஞ்சுடாதீங்க அண்ணா! சரவணன்! உங்க கருப்புச் சட்டையில ஒண்ணு குடுங்க!” என்று அவரிடம் ஒடினேன். “எங்கிட்ட காலர் வச்ச சட்டை,தானே இருக்கு. பரவாயில்லையா?” என்று எடுத்துத் தந்தார். வெற்றி எனக்குதான். அண்ணா புதிதாகக் காலர் வைத்த கருப்புச் சட்டையுடன் மேடையில் தோன்றி யதைப் பலரும் வியப்புடன் கண்டு களித்தனர். பெரியாரின் உளப்பாங்கைப் புரியாதவரா அண்ணா? இதற்கும் அடுத்தபடியாக, மே திங்கள் 11, 12 நாட்களில் மதுரையில் கருப்புச் சட்டைப் படையின் முதல் மாநில மாநாட்டை அண்ணாதானே திறந்து வைத்தார்? அங்கு தானே வைத்தியநாதய்யர் கும்பல், தீ வைத்துப் பந்தலைக் கொளுத்தி, மக்களையெல்லாம் குண்டர்களை விட்டு அடிக்கச் சொன்னது? இதன் தொடர்பாகத்தமிழகம் முழுதும் திராவிடர் கழகக் கொடிகளை அறுத்துக் காங்கிரசார் கலவரம் விளைத்தனரே! இதனால் ஓய்ந்தா போனோம். இதற்கும் மறுவாரமே கும்பகோணத்தில் இரண்டு நாள் மாநாடு; ஆசைத்தம்பி தலைமையில். அண்ணா காலில் ஒரு சிரங்குக் கட்டியோடு மாநாட்டில் பங்கேற்றதுடன், இரு இரவுகளிலும் நோயைப் பொறுத்துக் கொண்டு “சந்திரோதயம்” நாடகமும் “சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” நாடகமும் நடத்தினார். காகபட்டர் வேடம் புனைந்து உட்கார்ந்தபடியே சமாளித்தார். சிவாஜிகணேசன் சிவாஜி வேடம் ஏற்றிருந்தார். இங்குதான் பெரியார் அவர்கள் இன்னும் சிலபேர் நம்மில் கருப்புச் சட்டை அணியக் கூச்சப்படுகிறார்கள். வெள்ளைச் சட்டை அணியும் குள்ளநரிகள் என்று அவர்களைச் சொல்லுவேன்” என்று கண்டனம் தெரிவித்துப் பேசினார். இது அண்ணா வைக் குறிப்பிடத்தானோ- என்பதாக எங்களில் பலருக் கும் அய்யமுண்டு! 1948-ல் காந்தியார் சுடப்பட்டதன் விளைவாகக் கருப்புச் சட்டைப் படையை ஒமந்துரார் ஆட்சி தடை செய்தது. (அமைப்பாளர் என்பதால் என்னைக் கூடப் போலீசார் தேடினார்கள்.) அப்போது அண்ணா என்ன செய்தார் தெரியுமா? பகலிலும் இரவிலும், தொடர்ந்து கருப்புச் சட்டை அணிந்திருந்தார். இடுக்கண் வந்துற்ற போது தடுக்கி விழாமல் மிடுக்குடன் நின்றார் அடுக்கு மொழி வேந்தர் அண்ணா! எழும்பாத மதிற்சுவர்! 1956-ல் திருச்சியில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக இரண்டாவது மாநில மாநாடு பல வகையிலும் வரலாற்றுப் புகழ் பெற்றதாகும். தி.மு.க. தேர்தலில் நிற்கும் முடிவு அங்குதானே மேற்கொள்ளப் பட்டது. அதனால் மட்டுமல்ல. பந்தலை இரு பகுதிகளாகப் பிரித்து, ஒரு பகுதியில் பகல் நிகழ்ச்சிகள்; மேடையின் மறுபுறம் இரவில் நாடகங்கள். இவ்வளவு வசதியான பெரிய இடம் வேறெங்கும் கிடைத்ததில்லை. திருவாவடுதுறை நாதசுரச் சக்கரவர்த்தி டி. என். ராஜரத்தினம் அவர்களின் நாயன இசையும், சிதம்பரம் இசைச்சித்தர் சி. எஸ். ஜெயராமன் அவர்களின் தமிழிசையும் வேறெங்கும் நமது மாநாட்டில் நடந்ததாக எனக்கு ஞாபகமில்லை. கலைவாணரின் வில்லிசையும் இங்கு இருந்தது. ஆனால் அவர் நம்முடைய வேறு சில மாநாடுகளிலும் பங்கேற்றுள்ளார். நான்கு நாட்களும் பெரு விழாக்களே. ஈ. வெ. கி. சம்பத் திராவிட முன்னேற்றக் கழத்திலிருந்து விலகப் போவதாக (அப்போதே) ஒரு வதந்தி பரவியிருந்தது. அத்தருணத்தில், அவரது அத்யந்த நண்பரான கவிஞர் கண்ணதாசன், திருச்சிக்கு வலிய வந்து, அண்ணாவிடம், தன்னைக் கழகத்துக்கு அழைத்து வந்த கலைஞரைப் பற்றி ஏதோ கோள் மூட்டிவிட்டு, உடனே காரைக்குடி போய்விட்டார். அதை நம்பியதாலோ என்னவோ, அண்ணா சில நாட்கள் திருச்சியில் கலைஞரிடம் பேசாமல் இருந்து வந்தார். ஆனால் இது வேறு யார்க்கும் தெரியாது. காரணம் திருச்சி மாநாட்டுப் பணிகளைக் கவனிக்கக் கலைஞரும் முன்கூட்டியே வந்து தங்கி யிருந்து, தினமும் அண்ணா இருக்கும் பங்களாவுக்கு வருவார். தான் பொறுப்பேற்று ஆலோசனை வழங்கிய கண்காட்சிக்கான அலுவல்களைப் பார்த்து, ஒவியர்களிடம் வேலை வாங்குவார். அண்ணா எப்போதும் அறிவியலின் அடிப்படைகளிலே அமையக் கூடிய ஓவியக் கலைக் காட்சியில் மிகுந்த அக்கறை காண்பிக்கும் வழக்கம் உள்ளவர். அங்கும் அப்படித்தான். தமது கற்பனையில் உதித்த புதியதொரு ‘ஐடியா’வைச் செயலாக்க, என்னுடைய பணியை விரும்பினார். பந்தலைச் சுற்றிலும் நான்கு புறமும் பனைமரங் களை நட்டு, ஆறடி அகலமுள்ள சணல் கேன்வாஸ் துணிகளை நீளமாக அவற்றின்மீது சுற்றி, அது ஒரு கோட்டை மதிற்கூவர் போல் காட்சியளிக்க வேண்டுமாம். நிறையப் பனைமரங்களைத் துண்டு போட்டுக் கொண்டு வருமாறு அன்பில் தர்மலிங்கத்திடம் சொல்லியிருந்தார். கேன்வாஸ் படுதாக்களை ஏராளமாக வாங்கி வர எம். எஸ். மணியிடம் சொன்னார் ; அவை மட்டும் முன்னதாக வந்துவிட்டன! பலவிதமான கலர் பவுடர்களை எடுத்துத் தனித்தனியே கரைத்துத் தரச் சொன்னார் ஓவியர்களை, அண்ணா வோடு வந்திருந்த சிறுவன் C. N. A. இளங்கோவன் எனக்குத் துணை. இளங்கோவும் நானும் பிரஷ்களை வர்ணத்தில் தோய்த்துக் கையை அசைத்து அசைத்து அந்தப் படுதாக்களில் துளித் துளியாகத் தெளிக்க வேண்டும் (Hand Spray). புள்ளி புள்ளிகளாகப் பல நிறங்களில் அவை விழுந்து, தூரத்திலிருந்து பார்த்தோமானால், கற்சுவர் போன்றே தோன்றும்! அண்ணா முதலில் செய்து காட்டி னார்கள். எங்களால் இயன்றது தினமும் கை ஒயும் வரை வர்ணம் தெளித்துப், படுதாக்களைக் காயவைத்து, அன்றாடம் மாலையில் அவற்றைச் சுருட்டி வைப்பது! இப்படியாக நாங்கள் இருவருமே பல நாட்கள் முயன்று, சில நூறு அடிகள் நீளமுள்ள ‘மதிற்சுவர்கள்’ தயாரித்தோம். ஆனால் யார் பனைமரங்கள் கொண்டு வந்து நடுவது? எங்களால் ஆகுமா? பனைமரங்கள் பந்தலுக்கு வந்து சேரவில்லை! அண்ணா கடுமையாக அன்பிலிடம் கோபங் கொண்டார். முதல் நாள்தான் வந்து ஜேர்ந்தன. அந்த மரங்களையும் பந்தலைச் சுற்றி நட்டால் அல்லவா அவற்றின் மீது படுதாக்களை இழுத்துக் கட்டி ஆணி அடிக்க முடியும்? தனது ஆசை தோல்வியுற்றதோ என எண்ணி அண்ணா ஆயாசங் கொண்டார். கடைசியில் என்ன செய்ய இயன்றது தெரியுமா? ஒவியக் கலைக் கூடத்துக்குச் செல்லும் வழியில் அந்தப் படுதாக்களைச் சும்மா கட்டச் செய்தோம்! வீணாகிப் போன இந்த வேலையை, விடாமல் நான் செய்ததன் பயன்? வலது கையில் பொறுக்க வொண்ணா வலி ஏற்பட்டுப், பிறகு, சென்னை சென்று கலைஞர் வீட்டில் தங்கி நீண்ட நாள் சிகிச்சை செய்ய நேரிட்டதுதான்! இன்னும் அந்தப் பாதிப்பு நீடிக்கிறது. மாநாட்டில் டிக்கட் விற்கும் வேலையை நான் துவங்கி யதும் திருச்சியில்தான். அங்கு மட்டும் எங்களுக்கு கே. கோவிந்தசாமி தலைவர். அடுத்த அனைத்து மாநாடு கட்கும், டிக்கட் கவுண்ட்டர் தலைவர் நானே! எங்கள் கவுண்ட்டருக்கு ஒருமுறை அண்ணா வருகை தந்தது எனக்குப் பெருமையாயிருந்தது. இங்கிருந்துதான் மாநாட்டின் கடைசி நாள், ஒட்டுச் சீட்டுகள் பார்வையாளர்களுக்குத் தந்தோம். அதாவது தி.மு.க. தேர்தலுக்கு நிற்க வேண்டும் என்பதற்கு ஒரு பெட்டி-நிற்க வேண்டாம் என்பதற்கு வேறொரு பெட்டி-மாநாட்டுக்கு வருகை புரிந்தோர், ஜனநாயக முறையில் சீட்டுகளைப் பெட்டியில் போட்டுத், தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். மிகப் பெரும்பான்மையான மக்கள், தி.மு.க. தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றே விரும்பினர்!  தேதி கொடுக்க நிபந்தனையா? “உனக்கு மன்னார்குடியில், 9.9.48 அன்று, பெண் வீட்டில் திருமணம் முடிவு செய்துள்ளோம். உன் அபிப்பிராயம் தெரிவிக்கவும்” —என்று என் தந்தையாரிடமிருந்து கடிதம் வந்தது நான் ஈரோட்டில் ஆர். எம். எஸ். சார்ட்டர். அன்பின் இருப்பிடமான என் தகப்பனாருக்கு எதிரில் நான் உட்காருவதில்லை; நேராக நின்றும் பேசுவதில்லை! அதே மரியாதை என் குடும்பத்தில் இன்றும் நிலவுகிறது. அதனால், நான் ஒரே வரியில் பதில் எழுதினேன்:- “சுயமரியாதைத் திருமணம் நடத்த வேண்டும்; பெரியாரும் அண்ணாவும் வருவார்கள் என்று பெண் வீட்டாரிடம் சொல்லி விடவும்.” ஆனால், என்ன காரணத்தாலோ, என் நிபந்தனையை என் வருங்கால மாமனார் காதில் முழுமையாகப் போடவில்லை என்பது, திருமணத்தன்றுதான் எனக்குத் தெரிய வந்தது. திருமணத்துக்கான தேதி நிச்சயிக்கப்பட்டு விட்டது. நான் அய்யா வீட்டுச் செல்லப்பிள்ளையாக வளர்ந்து வந்த காலம் அது. அந்த நம்பிக்கையில், அய்யா அவர்களிடம் செய்தி சொல்ல மகிழ்வுடன் சென்றேன். கேட்டவுடன் மிகவும் களிப்புற்ற தந்தை பெரியார் அவர்கள், மணியம்மையாரை அழைத்து “மணி! தெரியுமா சேதி? நம்ம கருணானந்தம் இப்போ மாப்பிள்ளையாயிட்டார்” என்று சொல்லிக் கேலி பேசிவிட்டு, என்னைப் பார்த்துத், “தேதி என்ன சொன்னே?” எனக் கேட்ட வண்ணம் டயரியைப் புரட்டிக் கொண்டே வந்தவர்கள், “ஆகா—போச்சு போ! அண்ணக்கிதான் முல்லைக் கொம்மை வடிவேலு திருமணம்—நம்ம தொகரப்பள்ளி கிருஷ்ண மூர்த்தி மிட்டாதார் மகளையல்லவா தருகிறார்: எல்லாருமே வர்றதா ஒதுக்கிட்டோமே!” என்று, சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்துவிட்டார் அய்யா! எனக்கு எப்படியிருக்கும்? கிட்டத்தட்ட ‘ஓ’ என்று. அழுதுவிடும் நிலைமை! ஏமாற்றத்தை எப்படித் தாங்குவேன்? அய்யாவே என் முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டு— “எப்படியும் ஒத்துக்கிட்ட நிகழ்ச்சியெ நான் தவற மாட்டேன்னு ஒனக்குத் தெரியும்; நீயே அதை விரும்ப மாட்டேன்னு எனக்கும் புரியும் ! ஒண்ணு செய்! நம்ம அண்ணாத்தொரெய நீ கூட்டிக்கிட்டுப் போயிடு!” என்றார்கள். சிறிது நேர மவுனத்துக்குப் பின்னர், கண்களைத் துடைத்தவாறு, ‘சரிய்யா’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். அண்ணா அன்றைக்குத் திருச்சியிலிருக்கிறார் என்பது தெரியும். “கே. ஆர், ராமசாமியின் கிருஷ்ணன் நாடக சபா” திருச்சியில் முகாமிட்டிருந்தது. அங்கு மேனேஜராகச் சிறிது காலம் அண்ணாவால் அனுப்பப் பட்டுக், குடும்பத்துடன் வாழ்ந்த சம்பத், டைபாய்ட் சுரத்தினால் தாக்கப்பட்டு, ஈரோடு திரும்பியிருந்தார். துணைவி சுலோச்சனா, கைக் குழந்தை நாகம்மா ஆகியோருடன். அவர் சொன்னார் உடனே போய் அண்ணாவைப் பாருங்கள் என்று. மே மாதம் தூத்துக்குடி மாநாட்டுக்கு அண்ணா போகாமல், அவர்மீது களங்கம் கற்பிக்கப்பட்டு, பின்னர் அய்யா-அண்ணா ஊடல் ஒரளவு சரியாகியிருந்த காலம் அது. திருச்சிக்கு ரயிலேறிச் சென்றேன். வழக்கப்படியே அண்ணா சங்கரன் பங்களாவில் தங்கியிருந்தார். சங்கரனுடைய தம்பி, சாம்புவிடம் விவரத்தைச் சொன்னேன். அண்ணாவிடம் அழைத்துப் போனார். எனக்குத் திருமணம் என்றதும், நகைப்போடு என்னைத் தட்டிக் கொடுத்த அண்ணா, தேதியைக் கேட்டதும்-“அடடே! செப்டம்பர் ஒன்பது, நான் நம்ம வடிவேலு திருமணத்துக்குப் போக வேண்டுமேமாப்பிள்ளை சும்மாயிருந்தாலும், அவர் தம்பி முல்லை சத்தி கோபக்காரராயிற்றே!” என்று தயங்கினார் அண்ணா. “அய்யா சொல்லிவிட்டார் அண்ணா, உங்களை நான் அழைத்துப் போகலாம் என்று!” -நான். “வாயால்தானே சொன்னார்? வேறு நேரமாயிருந் தால் அய்யாவின் வாய்மொழியே எனக்குப் போதும்! ஆனால் இப்போதுள்ள இந்தக் குழப்பமான சூழ்நிலையில் நான் ஒத்துக்க மாட்டேன். நான் உன்னை நம்பாமல் இதைச் சொல்லவில்லை என்பதும் ஒனக்கே தெரியுமய்யா! அய்யாகிட்டேருந்து ஒரு லெட்டர் வாங்கி வந்துவிடு. நான் ரெட்டிப்பு மகிழ்ச்சியோட ஒன் திருமணத்துக்கு வந்துடறேன்”— என்று சொல்லி முடித்த அண்ணாவைப் பார்த்து, சாம்புவும் தலையாட்டி ஆமோதித்தார். வேறு வழி? அடுத்த ரயிலுக்கே ஈரோடு திரும்பி, அய்யாவிடம் ஒடிப்போய், விவரத்தைச் சொன்னேன். ஒரு மிகச் சிறிய துண்டுத் தாளில் “கருணானந்தம் திருமணத்துக்கு நீங்கள் போகலாம். ஈ.வெ.ரா” என்று எழுதித் தந்தார் அய்யா. இப்படி இருவரும் என்னைத் தவிக்க விடுகிறார்களே என்று நொந்து கொண்டே, மீண்டும் திருச்சிக்கு ரயிலேறி, அதிகாலை சாம்பு வீடு சென்றேன். எவ்வளவு அலைச்சல்? அங்கு பெரிய கும்பலொன்று குழுமியிருந்தது! என்ன விசேடம்? அண்ணாவுக்குப் பக்கத்து நாற்காலியில் நான் அதுவரை பார்த்திராத சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம் அவர்கள்! கடிதத்தை அண்ணாவிடம் கொடுத் தேன். சிரித்துக் கொண்டே, என்னை ம. பொ. சி.யிடம் அறிமுகப் படுத்தினார். “இவர் திருமணத்துக்கு, என்னை அழைக்க வந்திருக்கிறார். நான் ஒரு நிபந்தனை விதிச்சேன். அதைச் செய்து விட்டார்; இப்போது இன்னொரு நிபந்தனை!……” எழுந்து ஓடி விடலாமா என்றிருந்தது எனக்கு. பெண் கொடுப்பவர் கூட இப்படி என்னைச் சோதிக்கவில்லை; நம்ம அண்ணா ஏன் நம்மை இப்படி வாட்டி வதைக்கிறார்? என்று சிறிது கோபமே வந்தது. எதிரே தரையில் அமர்ந் திருந்த கே. ஆர். ஆர். நாடகக் குழுவினருக்கு மத்தியில், இராம. வீரப்பன் இருந்தார். எனக்கு நெருங்கிய நண்பராயிற்றே-அவரிடம் சென்று உட்கார்ந்தேன். “சாம்பு ஒரு டைம்பீஸ் வேணும்” என்றார் அண்ணா, கையில் அதை வாங்கிக் கொண்டபின், ஒரு கற்றை தாள்கள் - ஏதோ எழுதப்பட்டுள்ளவை - எடுத்தார்: என்னிடம் கொடுத்தார்! “இதோ பார்! சின்ன வேலை தான். இண்ணக்கி இவரும் நானும் (ம. பொ. சி. யும், அண்ணாவும்) திருச்சி ரேடியோவில் ஒரு உரையாடல் நிகழ்ச்சி நடத்துறோம்; பத்திரிகை உலகம் பற்றி. இரண்டு பேருக்கும் உள்ள பேச்சுகளை இதோ எழுதி வச்சிருக்கேன். வீரப்பனும் நீயும்—நானும் ம. பொ. சி. யுமா இருந்து—இந்த டயலாகைப் படிச்சி, நேரம் எவ்வளவு ஆகுதுண்ணு பாக்கணும். கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கும். எதைக் குறைக்க வேணுமோ—பிறகு பார்க்கலாம்! ரெண்டு பேரும் சத்தமாப் படிங்க” என்றார். வீரப்பன் விரும்பியவாறு அண்ணாவின் பகுதியை அவரிடம் தந்தேன் :— “வணக்கம் சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம் அவர்களே’ என்று கம்பீரமாக அவர் ஆரம்பித்தார். அவருக்கென்ன கஷ்டம்! சோதனைக்கு உள்ளாகி உட்கார்ந்து கிடப்பவன் நானல்லவா? “வணக்கம் அறிஞர் அண்ணாத்துரை அவர்களே” என்று நான் தொடங்கி யதும்-அண்ணா குறுக்கிட்டு, “நான்தான் உன் கல்யாணத்துக்கு வர ஒத்துக்கிட்டேனே. நல்லாப் படிய்யா!” என்றார் புன்னகை தவழ. படித்து முடித்து விடைபெற்றுக் கிளம்பினேன். மாலையில் இதை எந்த ரேடியோவில் கேட்பது? அப்போ தெல்லாம் வீட்டுக்கு வீடு ஏது ரேடியோ? தஞ்சையில் திலகர் திடல்-திருச்சியில் இப்ராகிம் பார்க்-இது போலப் பொது ரேடியோ மட்டுந்தான்! மேலப் புவி வார்ட் சாலை யில் நின்று, கேட்டேன். நேரம் போதாமல் கடைசிப் பகுதியை அண்ணா விரைவாகப் படிப்பது புரிந்தது. சிரித்துக் கொண்டே மன்னார்குடி செல்லத் திருச்சி ஜங்ஷன் நோக்கி நடந்தேன். எந்த நிகழ்ச்சிக்கும் தாமதமாக வருவதை வழக்கமாகக் கொண்டுள்ள அண்ணா அவர்கள், என்னுடைய திருமணத்துக்காக, முதல் நாள் இரவே மன்னார்குடி வந்து தங்கிவிட்டார். அன்பர்களைத் தான் சோதனைக்கு உள்ளாக்குவார்களோ—தலைவர்கள்? ஆனால் இந்தச் சோதனையால் எனக்கு வேதனை ஏற்படவில்லை-அண்ணா முன்கூட்டி வந்து சிறப்பித்தது எனக்கு ஒரு சாதனையே! தம்பித் தலைவர் அவர்களே!! “அடெ, வாய்யா மாநாடு ஸ்பெஷலிஸ்ட்” என்று. உற்சாகத்துடன் அண்ணா என்னை அருகே அழைத்துத் தட்டிக் கொடுத்து “என்னா? எப்போ வந்தே? இங்கே என்னென்ன விசேஷம்?” என்று கனிவுடன் வினவினார். “‘நான் இப்பதான் முதல் தடவையா மாநாடு நடத்தறேன். நீ முன்னாடியே வந்திருந்து எனக்கு உதவணும். உன் அனுபவம் துணையாயிருக்குமல்லவா?’ என்று கடலூர் திராவிடமணி கடிதம் எழுதியிருந்தாரு அண்ணா. அதான் நாலு நாள் முன்னதாக வந்தேன். மாநாட்டு ஏற்பாடுகள், அலங்காரமெல்லாம் பார்த்தீங்களா? பண்ணுருட்டியிலேயிருந்து இந்தப் புதுப்பேட்டை வரை யிலே ரோட்டிலே இரண்டு பக்கமும் தென்னைமட்டை களை முழுசு முழுசாப் புதச்சி வச்சி, மயில் தோகைை விரிச்சாப்போலே அழகா வச்சிருக்கோம்.” “நல்ல புதுமையான கற்பனைதான். சரி, வேறென்ன இங்கே தனியான சிறப்பு?” -அண்ணா கேட்டார். “மாநாட்டுக்கு முதல் நாளே—இது திராவிட மாணவர் மாநாடுதானே—இங்கே நமக்கென்ன வேலைண்ணு எண்ணாமெ—இந்தத் தென்னார்க்காடு மாவட்டத்தின் எல்லாப் பகுதிகளிலேயிருந்தும், கட்டுச். சோறு எடுத்துக் கொண்டு, பிள்ளை குட்டிகளோட, குடும்பம் குடும்பமாய் மக்கள் வந்துட்டேயிருக்காங்க. இந்த மாதிரி எழுச்சியெ வேற எங்கேயும் பார்த்ததில்லே அண்ணா!” வியப்புடன் கூறினேன். கடந்த ஆண்டு நான் சுற்றுப் பயணம் மேற்கொண்ட மாவட்டம் இது. “சரி. சேலம் மாநாட்டுக்குப் பின்னே நாம் எதிர் பார்த்த இப்படிப்பட்ட எழுச்சி உண்டாகியிருக்குது! வீரமணி வந்திருக்குதா, இங்கே?” கேட்டார். “வராமெ இருக்குமா? இந்த ஆர் லே மாநாட்டு வேலையெல்லாம் கழகத்தோழர் இராமலிங்கத்தோட முயற்சிதானே. வீரமணி அவருக்கு உதவியா, ஒடியாடி தொண்டு செய்யுது. இங்கே அது வெறும் பேச்சாளரா வரல்லியே—அவுங்க ‘வாத்தியார்’ திராவிடமணி நடத்துறதாச்சே.” சிறுவன் வீரமணியை அண்ணா சேலம் மாநாட்டிலேயே சந்தித்துப் பாராட்டிவிட்டார். இப்போது உள்ள ஒரு இசைக் கலைஞருடன் வீரமணியை ஒப்பிடு வது சாலப் பொருத்தம். அவர்தான் மாண்டலின் பூ. சீனிவாசன், கர்நாடக இசையை இந்தச் சிறு கருவியில் இசைக்க முடியும் என இதற்கு முன் யாரும் கற்பனை செய்து கூடப் பார்த்ததில்லை. அதே போல வீரமணியும் தன் பத்தாவது வயதிலேயே ஓர் எதிர் நீச்சல் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு இன்றளவும் அதிலேயே நிலைத்திருப்பது, மாபெரும் அற்புதமாகும். இசையுலகில் சிதம்பரம் ஜெயராமன், வீணை பாலச்சந்தர், பாலமுரளி கிருஷ்ணா, புல்லாங்குழல் டி. ஆர். மாலி, மிருதங்கம் டி. கே. மூர்த்தி ஆகியோர் பால்யத்திலேயே திறமை சாலிகள் எனினும், முன்னோர் சென்ற வழியிலேயே தான் இவர்களும் சென்றனர். புதுமையோ புரட்சியோ செய்ய வில்லை. அதைச் செய்த ஒரே சிறுவன் சீனிவாஸ். அஃதே போன்ற புரட்சிச் செய்த சிறுவன் வீரமணி ஒருவரே என்பதை நாம் மறத்தலாகாது! வேறு எவரும் இத் துறையில் இவருக்கு நிகரானோர் இலர்! 1945 சனவரித் திங்கள் இந்த மாநாட்டை முன்னின்று நடத்திய புதுப்பேட்டை இராமலிங்கம் பின்னர் சென்னை யருகே குடியேறி, இன்றைக்கும் அனகாபுத்தூர் இராம லிங்கம் என்ற பெயரில் பொதுத் தொண்டில் ஈடு பட்டுள்ளவர். புதுப்பேட்டை சிறந்த நெசவாளர் மய்யம். அதனால் அவர் கைத்தறியாளர் பிரச்னைகளில் நிபுணராக விளங்குகிறார். சிறந்த சுயமரியாதைத் தமிழன்பரும், கொள்கைக் குன்றும், நிகரிலாத் தொண்டரும். பல வீரமணிகள் உருவாக உழைத்தவருமான கடலூர் ஆ. திராவிடமணி பி.ஏ., அண்மையில் மறைந்துபோனார். சென்ற ஆண்டு, அதாவது, 15.10.1985 அன்று, என்னுடைய மணிவிழாவுக்கு வந்திருந்து, நண்பர்களுடன் நீண்ட நேரம் அளவளாவி மகிழ்ந்தவர். அண்ணா இந்த மாநாட்டில் தனிக்கவனமும் அக்கறையும் செலுத்திடக் காரணம், முதன் முதலாக மாநாட்டுக்குத் தலைமைப் பொறுப்பேற்பவர் அவருடைய அருமருந்தன்ன தம்பியான ஈ. வெ. கி. சம்பத். முழுநேர அரசியல்வாதியாக அவரை உருவாக்கிய பெருமை இந்தப் புதுப்பேட்டை மாநாட்டுக்கு உண்டு. இதற்கு அடுத்த மாதமே அவரும் நானும் எங்கள் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்து 20, 30 பொதுக் கூட்டங்களில் பேசினோம். பயண அமைப்பாளர் திருவாரூர் வி. எஸ். பி. யாக்கூப். அண்ணா ‘விடுதலை’ ஆசிரியராக ஈரோடு சென்ற பின்னர், தனது 10, 11 வயது முதல் அண்ணாவைத் தன் சொந்த அண்ணனாகக் கருதி, மிக மிக அன்புடன் நெருங்கிப் பழகியவர் சம்பத். அண்ணாவும் அவரைத் தனது உடன் பிறந்த தம்பியாகவே நடத்தியதோடு, அவன் இவன் என்று சம்பத் ஒருவரை மட்டுமே உரிமை யுடன் அழைத்தார். பொது மேடைகளிலும்கூடத் ‘தம்பி சம்பத் சொன்னான்-கேட்டான். பேசினான்-’ என்றே குறிப்பிடுவார். அதனால்தான் புதுப்பேட்டை மாநாட்டில் கூட அண்ணா பேச எழுந்தவுடன் , “தம்பித் தலைவர் அவர்களே!” என்று புதுமையாக விளித்தார். புரட்சிக்கவிஞர் இந்த மாணவர் மாநாட்டுக்காக எழுதி அனுப்பிய வாழ்த்துப்பாடலை-க. அன்பழகன் படித்து, எழுச்சியைத் தோற்றுவித்தார். நிகரில்லாத அந்த அகவற்பா என்றும் குன்றா இளமையுடன் நமது நினைவில் நிற்குமே : பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப் பட்டது, சிறுத்தையே வெளியில்வா! எலியென உன்னை இகழ்ந்தவர் கடுங்கப் புலியெனச் செயல்செயப் புறப்படு வெளியே! என்று தொடங்கி… இங்குன் நாட்டுக்கு இழிகழுதை ஆட்சியா? சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி! என்றெல்லாம் ஒடுமே, நமது குருதியில் வெப்பத்தை ஏற்றி! “ஏன் அண்ணா! எப்படியோ சம்பத்தையும் படிக்க விடாமே பண்ணிட்டீங்க, தலைவராக்கி! இண்ட்டர் மீடியட் போதுமா? அப்படியானா படிப்பிலே எனக்கு ஒரு ஜோடி கிடைச்சிட்டாரு!” என்று நான் சொன்னது மகிழ்வால் அல்ல. பெரியாரின் மகனாக எங்களால் எண்ணிப் பார்க்கப்பட்டவர், ஒரு பட்டதாரியாக விளங்க வேண்டும் என்ற ஆசையால்! அந்த ஆசை நிறைவேற வில்லையே! “படிப்பு அவனுக்கு ஒரு குறை இல்லேய்யா. நீ பாரு, நல்லா Shine பண்ணுவான் சம்பத்!” என்றார் நம்பிக்கையுடன் அண்ணா. வடார்க்காடு மாவட்டம் திருப்பத்தூர் வழக்கறிஞர் சாமி நாயுடு நம் இயக்கத்தைச் சார்ந்தவர். அவர் மகன் கஜேந்திரன் பெரியாரிடம் தன்ரிச் செயலராக இருந்தபோது, சம்பத்தின் தமக்கையார் ஈ. வெ. கி. மிராண்டாவை விரும்பி மணந்தார். கஜேந்திரன் திருமணத்தின்போது, அவர் தங்கை சுலோச்சனாவைச் சந்தித்த சம்பத், அவரை மணக்க விரும்பி, அண்ணாவின் ஆதரவை நாடினார். ஏனென்றால், பெரியார், சம்பத்துக்குத், தன் தங்கை மகள் எஸ். ஆர். காந்தியை மண முடிக்க எண்ணியிருந்தார். ஆனால், அண்ணாவின் ஒத்துழைப்பினால்தான் சுலோச்சனாவை சம்பத் மணக்க முடிந்தது! என்றும் சம்பத் தன்னுடனிருப்பாரென அண்ணா நம்பியதில் தவறில்லையே! அந்தோ! அண்ணாவின் நம்பிக்கை இப்படி நசித்து நாசமாகிப் போகுமென யார் எதிர் நோக்கினோம்? 1960 61—ல் “திருவாளர் அண்ணாத்துரை” என்று நாக்கூசாமல் சொல்லிவிட்டாரே சம்பத்? அவர் வீழ்ச்சிக்குத் தானே அமைத்துக் கொண்ட சறுக்கு மேடையாக இந்த மரியாதைக் குறைவான பேச்சுதானே விளங்கிற்று. அண்ணா அவர்கள் தமது வாயால் இந்தக் கருத்தைக் கூறக் கேட்டேனே நான், பின்னாட்களில்! ஒரே இரவில் சிதம்பர ரகசியம் 1957-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலாகப் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தல்லவா? அதன் பிறகு சிதம்பரத்தில் ஒர் இடைத் தேர்தல் வந்து விட்டது. அதில் தி. மு. க. சார்பாகப் புலவர் ஆறுமுகம் போட்டியிட்டதாக எனக்கு நினைவு! தில்லை வில்லாளன் தேர்தல் பணிகளுக்கு முழுப் பொறுப் பேற்றுத் தொண்டாற்றினார். தேர்தலுக்குச் சில நாட் களிருக்கும் போது ஏதோ முக்கியமான செலவுக்குச் சிறிது பொருள் தேவைப்பட்டது போலும் சென்னையிலிருந்த அண்ணாவிடம் தொலைபேசி மூலம் அவர் அது பற்றிப் பேசினார். சென்னை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக மூன்றாவது மாநாடு அப்போது S. T. A. A. திடலில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தத்துவமேதை டி. கே. சீனிவாசன் இங்கே தலைமையுரை ஆற்றிக் கொண்டிருக்கிறார். புதுமையான அமைப்பாகத் தலைவர்கள் அமரும் மேடையிலிருந்து சற்று முன்புறம் தனியே வந்து, அங்குள்ள மைக்கில் பேசவேண்டும் அவ்வாறு அவர் பேசுகிறார். புரட்சி நடிகர் எம். ஜி. ஆர். அவர்கள் அப்போதுதான் மேடைக்கு வந்து அமர்கிறார்! அவரைக் கண்டதும் மக்கள் கைதட்டி ஆரவாரம் செய் இன்றனர்! தலைவருக்குத் தன் பின்னால் நடப்பது என்ன என்பது முதலில் புரியவில்லை! திரும்பிப் பார்க்கிறார்; தன்னுடைய உரை பிடிக்காமல் கைதட்டுகிறார்களோ என்று! உண்மை அறிந்ததும், கோபங்கொண்டு, தொடர்ந்து பேசாமல், போய்த் தனது இருக்கையில் அமர்ந்து கொள்கிறார்! அவரைச் சமாதானம் செய்து பேச்சைத் தொடருமாறு சொல்கிறார்கள் அண்ணாவும் கலைஞரும். இந்தப் பரபரப்பான சூழ்நிலைக்குள், அண்ணா ஆட்பட்டிருந்த போதுதான் சிதம்பரத்திலிருந்து Trunk call வந்து அண்ணாவுடன் வில்லாளன் பேசிப் பணம் கேட்கிறார்? அண்ணாவும் கலைஞரும் மேடையின் விலாப்புறம் சென்று கலந்து பேசுகிறார்கள். பிறகு என்னை அழைத்து வரச் சொல்லி, நான் சென்றதும் என்னிடம் தனியே பேசுகிறார் அண்ணா- ’இதோ பார்! உன்னை ஒரு முக்கியமான வேலையாக இப்போது உடனே சிதம்பரத் துக்கு அனுப்புகிறேன். 10 நிமிடத்தில் தயாராக வா!” என்றார். டிக்கட் விற்பனைப் பொறுப்புகளை சண்முகத்திடம் தந்துவிட்டுத் திரும்ப அண்ணாவிடம் வருகிறேன். “கொஞ்சம் பணம் தருகிறோம். அதை எடுத்துச் சென்று பத்திரமாக வில்லாளனிடம் சேர்த்துவிட்டு, உடனே திரும் பிவிட வேண்டியதுதான். தனியே போவாயா?” எனக் கேட்கிறார் அண்ணா. கலைஞர் சொல்கிறார் “என்னுடைய காரை எடுத்துச் செல்லுங்கள், சார்” என்று. “சரி” என்ற ஒற்றைச் சொல்லில் பதில் தந்தேன். அப்போது கலைஞரிடம் இருந்தது. ஷெவர்லே கார். நிறையப் பெட்ரோல் சாப்பிடும் பெரிய, நல்ல கார். மணிக்கு 100 மைல் வேகம், சாதாரணமாகப் போகும். ரங்கசாமி ஒட்டுநர். காரில் ஏறப்போகும்போது, மீண்டும் அண்ணா அழைப்பதாகச் செய்தி வந்தது. இப்போது அண்ணாவுக்குப் பக்கத்தில் சேலம் தோழர் இராஜாராம் நின்றிருந்தார். அவர் அண்மையில்தான் திராவிடர் கழகத் திலிருந்து விலகி வந்தவர். “இந்தா, கருணானந்தம்! உனக்குத் துணையாக ராஜாராமை அழைத்துப் போ! வழியில் துTக்கம் வராமலிருக்கப் பேசிக்கொண்டே வருவார்” என்றார் அண்ணா. அதேபோல் இருவரும் புறப்பட்டு விரைவாகச் சென்று, சிதம்பரம் அடையும் போது ஏறக்குறைய நள்ளிரவு நேரம். அப்போதும் வில்லாளன் வீட்டிலில்லை. நெடுகிலும் விசாரித்துக்கொண்டே போனோம். ஏதோ ஒரு சிற்றுாரில் அகப்பட்டார். எங்கள் இருவரையும் ஒருசேரக் கண்டதும், ஒரளவு புரிந்துகொண்டு, புன்னகை புரிந்தார். தனியே கூப்பிட்டு விவரம் சொன்னோம். “சரி இருங்கள், உங்கள் காரிலேயே வந்துவிடுகிறேன். சிதம்பரத்தில் என் வீட்டுக்குப் போகலாம்” என்றார். சென்றோம். தந்தோம். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, “ரங்கா! என்ன சொல்றே. இப்பவே திரும்பலாமா?” என்று ஒட்டுநரைக் கேட்டேன். ரங்கன் தயார்! காலையில் அண்ணா எழுந்திருக்கும் முன்பு சென்னை சேர்ந்தாகிவிட்டது! தூங்குகின்ற அண்ணாவை எழுப்பி விவரம் சொல்ல வேண்டுமே? அண்ணாவை எழுப்புவது ஒரு சுவையான அனுபவம். ஒரு சிலருக்கே அந்த உரிமை இருந்தது. அந்தச் சிலரில் நான் ஒருவன்! அண்ணா துரங்கும்போது, பெரும்பாலும் மேலே சட்டையோ, அவர் சொந்தமாகத் தைத்துப் போட்டுக் கொள்கிற கையில்லாத அந்த பனியனோ, இராது; வெற்றுடம்புதான்! நல்ல குறட்டை விடுவார்கள். அருகில் நின்று “அண்ணா! அண்ணா!” என மெதுவாக அழைப்பேன்; பயன் இருக்காது! உரக்க “அண்ணா! அண்ணா!”—அழைத்தால் சிறிது அசைவு தென்படும். அவ்வளவுதான், கண்விழிக்க மாட்டார்கள்! பத்து நிமிடம் பொறுத்து “அண்ணா” என்று பலமாக அழைத்துக் கொண்டே, மெல்ல உடல் மீது கைவைப்பேன். உணர்வின் உந்துதலால் கண் மலர்வார்கள். “எழுந்திருங்க அண்ணா! நேரமாச்சே?” — “ஒரு five minutes பொறுய்யா” என்று ஐந்து விரலைக் குவித்துக் காண்பிப்பார்கள்; அதற்குள் கண்கள் மூடிக்கொள்ளும்! சரி; பதினைந்து நிமிடமே போயிருக்கும்! இப்போது, “அண்ணா! என்னண்ணா இது? நீங்க கேட்ட நேரமெல்லாந் தாண்டிடுச்சி, எழுந்திருங்க அண்ணா!” சத்தமாகச் சொல்லிக்கொண்டே, உடல் மீது கையை அழுந்த வைப்பேன். சரேலென்று எழுந்து உட்கார்ந்து கொள்வார். கண்ணை மட்டும் திறக்கமாட்டார். கை, தலையணைக்கு அடியில் துழாவும். பொடி டப்பாவை எடுத்து ஒரு சிட்டிகை பொடியை உறிஞ்சுவார்கள் அண்ணா. அப்பாடா! அண்ணாவை எழுப்பிவிட்டோம் என்று மகிழ்வதற்குள், மீண்டும் படுத்து விடுவார்கள். அடுத்த கணம்ே குறட்டை ஒலி பெரிதாக எழும்! அப்புறம் கால்மணிநேரம் கழித்துக், கட்டாயம் அண்ணாவை எழுப்பித்தானாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டவுடன், “அண்ணா-அய்யய்யோ-ரொம்ப லேட் ஆயிடுச்சே!” என்று சொல்லிக்கொண்டே கையைப் பற்றிச் சிறிது அசைத்து, உசுப்பிவிடுவேன். வெற்றி, வெற்றி! அண்ணா எழுந்து உட்கார்ந்ததும், அருகில் டீப்பாயின் மீது தொங்கும் சட்டையை எடுத்து அணிந்துகொண்டு, உடனே புறப்பட்டு விடுவார்கள். முகம் கழுவ வேண்டும் என்றோ, தலைவார வேண்டுமென்றோ கருதுவதில்லை. அடுத்த நிமிடம், உலகப்பிரச்னைகளில் எதைப் பற்றிப் பேசவேண்டுமானாலும், அந்த நயாகரா அருவியிலிருந்து கருத்துகள் வெள்ளமாய்ப் பெருகும்! அந்த ’அண்ணாவை எழுப்பும் முறை’யில்தான் அன்றும் நான் எழுப்பிவிட்டுத், தில்லை சென்று வந்த செய்தி ச்ொல்லி முடித்துக், கலைஞரிடம் விரைந்தேன் காரை ஒப்படைக்க. “Overnight தூக்கமில்லாமெ போய் வந்தியே. போயி ரெஸ்ட் எடுத்துக்கோய்யா!” -இவைதாம், அண்ணாவின் நன்றி பாராட்டும் மொழிகள். அவரே தொடுத்த கவிதை மாலை “அடுத்த வாரம் பேராவூருணி செல்வதற்காக மன்னார்குடி வருகிறேனே; அப்போது, நீ தேர்ந்தெடுத்து வைத்திருக்கிற கவிதைகளை அங்கே எடுத்து வா! நான் பார்த்துத் தருகிறேன்” என்று அண்ணா அவர்கள் தம் அன்பான பரிவுரையை நல்கினார்கள், சென்னையில் பார்த்தபோது. 1966-ஆம் ஆண்டு மத்தியில் என்று நினைவு இது என்ன சங்கதி? Story Poems எனப்படும் ஆங்கிலக் கதைப் பாடல்கள் நான் விரும்பிப் படித்தவை. அவை என்னை மிகவும் கவர்ந்தன. இந்தப் பாணியில் புரட்சிக்கவிஞர் போன்றார் இரண்டொன்று எழுதியிருந்தனர். ஆனால் தமிழகத்துக் கவிஞர்களுள் தமிழில் நிறையக் கதைப்பாடல்கள் எழுதியவன் நான்தான். எனக்கு மிக்க ஊக்கமும் உற் சாகமும் அளித்து, இத்தகைய கதைப்பாடல்களை எழுதும் ஒரு தேவையை ஏற்படுத்தித் தந்தவர் கலைஞர்தான். அப்போது அவர் நடத்திவந்த “முத்தாரம்” மாத இதழில், அட்டைப்படம் கே. மாதவன்; உள்ளே என் கவிதைஇரண்டும் கட்டாயம் இடம் பெறும்! இப்படியாகத் தொடர்ந்து எழுதி வந்தபோது, ஒரு நாள் அண்ணா அவர்கள், “ஏன்யா! இந்தக் கவிதைகளை இப்படித் தனியே எழுதுவதால் பயனில்லை. அவ்வப்போது படித்து. மறந்துவிடுவார்கள். இவற்றில் சிலவற்றைத் தொகுத்து, ஒரு புத்தகமாக வெளியிடவேண்டும்’ என்று அரியதோர் ஆலோசனையை வழங்கினார்கள். செய்ய லாம். ஆனால் என் புத்தகத்தைப் பதிப்பிக்க எந்த publisher முன்வரப் போகிறார்?” என்றேன் சலிப்புடன். “நீ யார்கிட்டவும் போக வேணாம். நீயே print செய்துடு. இதோ பார். நீ நம்ம மாநாடுகளில் டிக்கட் விக்கப் போறியில்ல; அப்ப எடுத்திட்டுப் போனா, ஈசியா வித்துடலாம்!” என் உந்தி விட்டார்கள் என்னை; எனக்கும் ஆசை வந்து விட்டது! ஊருக்குத் திரும்பியதும், கையில் கிடைத்த ஒரிஜனல் களைத் தேடி எடுத்து, ஒரு முப்பத்து மூன்று கவிதை களை ஒழுங்குடன் தாள்களில் எழுதித் தயாராக வைத்துக் கொண்டேன்; புத்தகம் எப்படி அச்சாக வேண்டுமோஅதற்கேற்ற டம்மி போல! அண்ணா குறிப்பிட்டவாறு மன்னார்குடி சென்றேன். மாலை 5 மணி இருக்கும் நாங்கள் அங்கிருந்து காரில் புறப்பட்டபோது. முன் இருக்கையில் அண்ணா. அவர்களுக்கு நேர் பின்புறம் நான். எனக்குப் பக்கத்தில் மன்னை மாமா. வேறு யாருமில்லை. நிசப்தமான சூழ்நிலை. கார் பட்டுக் கோட்டை வழியாகப் பேராவூருணி செல்லவேண்டும். மெதுவாக ஒட்டுமாறு சொல்லி வைத்திருந்தோம். சுமார் 35 மைல் தூரம். வரிசைப்படி நான் ஒவ்வொரு கவிதையாக அண்ணா விடம் தருகிறேன். ஆழ்ந்து, உணர்ந்து படிக்கிறார்கள் மெதுவாக. முடித்தவுடன் பின்புறமுள்ள மன்னையிடம் தாளைத் தருகிறார்கள். அவர் அடுக்கி வைத்துக் கொள் கிறார். இப்படியாக 33 கவிதைகளையும் அண்ணா நிதான மாகப் படித்து முடிக்கவும், கார் பேராவூருணி பயணியர் விடுதியை அடையவும், திட்டுமிட்டு வைத்ததுபோல் சரியாக இருந்தது! ஏராளமான கூட்டம் எதிர்கொண்டு நிற்கிறது. அண்ணா கவிதைக் கனவுலக சஞ்சாரத்திலிருந்து விடுபடாமல், “ஏன்யா! சாதகப் பொருத்தம்’ அப்படிங்கற தலைப்பிலே ஒரு கவிதை எழுதியிருந்தியே- இந்தத் தொகுப்பிலே அதைக் காணோமே; எங்க அது?” என்று அண்ணா கேட்டதும், நான் அப்படியே விதிர் விதிர்த்துப் போனேன். அதிர்ச்சியில் எனக்கு மயக்கமே வந்துவிடும் போலிருந்தது. அண்ணா, கார் நின்றதைக்கூட உணராமல், என் முகத்தைத் திரும்பிப் பார்க்கிறார். மாமாவும் அண்ணாவின் அதியற்புதமான நினைவாற்றலைக் கண்டு வியந்துபோய், என்னையே கவனிக்கிறார். உண்மையில் எனக்கு அக்கவிதை மறந்தே போய் விட்டது! எப்போது, எதில் எழுதினேன் என்பதுகூட நினைவில்லை. “சரியண்ணா. அதையும் தேடி எடுத்து, இதோட சேர்த்துடறேன்” என்றுதான் ஈனசுரத்தில் சொல்ல முடிந்தது: பிறகும், அது எனக்கு அப்போது கிடைக்கவில்லை! நூல் அச்சாகி வந்தது சென்னையில். எங்கெங்கோ அலைந்து திரிந்து Feather weight paper வெளிநாட்டுக் காகிதம் கிடைக்குமா என தினகரனும் நானும் தேடினோம். அது கிடைக்காமல், வேறொரு ஃபின்லாந்து நாட்டுக் காகிதத்தான் அகப்பட்டது அதில் அச்சியற்றினோம். “அண்ணா! நீங்கள் ஒரு அணிந்துரை தரவேண்டுமே!” என்று வேண்டினேன். கொடுக்கிறேன் கொடுக்கிறேன் எனத் தமது இயல்பின்படி நாளைக் கடத்தினார்கள் அண்ணா! 1966 ஆகஸ்ட் 30, 31 சிவகங்கையில் இராமநாதபுரம் மாவட்ட தி. மு. க. மாநாடு நடைபெற்றது. வழக்க்ம் போல நான் நுழைவுச் சிட்டு விற்பனையில் ஈடுபட்டிருந்தேன். மாநாட்டின் இறுதியான சிறப்பு நிகழ்ச்சி, எப்போதும் அண்ணாவின் பேருரைதானே! அதற்குச் சற்று முன் கலைஞர் தமது சொற்பொழிவின் ஊடே, மாநாட்டு வசூல் தொகை எவ்வளவு என்பதைச் சொல்லி, அதற்கென ஒரு தனியான கைதட்டல் பெறுவதும் வாடிக்கையல்லவா? நான்தான் மொத்தம் எத்தனை ரூபாய் வசூல் என்பதைச் சொல்லும் அதிகாரி. சாயுங்காலமே கலைஞரிடம் ஒரு கண்டிவுன் போட்டேன்:- “என்னுடைய கவிதை நூலுக்கான அணிந்துரையை அண்ணாவிடமிருந்து இன்றைக்கே எழுதி வாங்கித் தரவேண்டியது உங்கள் பொறுப்பு. நாளை அண்ணா டெல்லி செல்கிறார். நீங்கள் எழுதிவாங்கி என்னிடம் தந்தால்தான் வசூல் தொகையைச் சொல்வேன். அணிந்துரை வராவிட்டால் இதுவும் வராது” என்று உரிமையுடன் சொல்லிவிட்டேன்! மாநாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வேறு பேச்சாளர்கள் பேசுகிறார்கள். என் காதில் விழுகிறது. எனக்குள் டென்ஷனும் ஏறுகிறது. மேடையில் அமர்ந் திருந்த அண்ணா, ஏதோ எழுதுவதை, அங்குள்ளோர் கவனித்தார்களாம். பேசுவதற்கு முன்பு குறிப்பு எடுக்கும் பழக்கம் அண்ணாவுக்குக் கிடையாதே? என்ன எழுது கிறார் என்பது புதிராயிருந்ததாம்! கலைஞர் என்னுடைய நிபந்தனையை அண்ணாவிடம் நகைச்சுவையுடன் எடுத்துச் சொல்லி, அணிந்துரை எழுதுமாறு செய்துவிட்டார் போலும் இடையூறு இல்லாமல் அண்ணா எழுது வதற்கும் கலைஞர் உதவியாயிருந்து, எழுதிய 5 காகிதங் களையும் சேர்த்துத் தென்னரசு மூலமாக என்னிடம் கொடுத்தனுப்பினார். அள்விலா மகிழ்ச்சிக்கடலில் அமிழ்ந்துபோன நான்-தயாராகக் குறித்து வைத்திருந்த டிக் கட்வசூல் மொத்தத் தொகை அளவைத் திரும்ப அவரிடமே தந்தனுப்பினேன். அந்த அணிந்துரையின் தொடக்கமே, அண்ணா என்னை நாட்டுக்கு அறிமுகப்படுத்தும் சிறப்புரையாகும்; ஆனந்தம் என்பார் எனதருமை நண்பர். அருங்குணத்தின் பெட்டகம் அன்னைமொழி எனும் அணிகலனைப் பூண்ட அழகு நெஞ்சினர். அலுவலகத்தில் அஞ்சல் அனுப்பும் பணியாளர். அடுத்த சில வரிகட்குப் பின்னர், நான் எப்பேர்ப்பட்ட கவிஞன் என விளக்குகிறார்! எண்ணத்தை எழிலுருவில் தந்திடும் ஆற்றலதை ஏற்ற முறையில் பெற்றுள்ள கவிஞர் அலர். கவிதை, சிந்தனைக்குத் தேனளிக்கும். அத்தேனே மாமருந்துமாகிவிடும் சீர் இழந்து தவிக்கின்ற தமிழ்ச் சமுதாயம் தனக்கும். இடையிலே ஒரிடத்தில் ‘கவிதை’ என்பதற்கு அண்ணா கூறும் இலக்கணம், கவிஞர் என்போர் அனைவரும் சிந்தை யிற் பதிக்க வேண்டிய சொற்களாகும் : அறிந்ததனை அறிந்தோர்க்கு அறிவிக்கும் போதினிலே அறிந்ததுதான் என்றாலும், எத்தனை அழகம்மா! என்று அறிந்தோரையே மகிழவைக்கும் அருங்கலையே, கவிதையாகும். இதற்கும் பிறகு, என் கவிதைகளின் தனிச்சீர்மை என்ன என்பதையும் அண்ணா விண்டுரைக்கின்றார் :- அணிதெரியும் என்பதற்காய் ஆக்கித் தரப்பட்ட வணிகப் பொருள் அல்ல அவர் கவிதை சமூகப் பிணிபோக்கும் மருந்தளிக்கின்றார், கவிதைத் துளி வடிவில். பருகிட இனிப்பதது; உட்சென்றதும் பிணிபோக்கிப் புதுத்தெம்பு தருவதது. இறுதியாக முற்றாய்ப்பு வரிகள் கட்டாணி முத்துகள் : இக்கவிதை நூலினைத் தந்தவர் என் நண்பர். பெருமை அடைகின்றேன் இத்தகைய நண்பர்தனைப் பெற்றவன் நான் என்பதனால். உங்கள் கரம் தங்கிடவேண்டும் இந்நூல். உங்கள் கருத்தேறிட வேண்டும் இவர் கவிதைச் சுவை முழுவதும். உங்கள் உணர்விலே புதுமை தந்திடவல்ல இக்கவிதை நூலதுவும் உமக்கேற்றதாகும் எனப் பரிந்துரைக்கும் வாய்ப்புப் பெற்றேன்; மிக்க மகிழ்ச்சி கொள்கின்றேன். வாழ்க ஆனந்தன்! வளர்க அவர் கவிதை வளம் ! பின்னர் சென்னை திரும்பியதும், கலைஞர் தமது சிறப்புரையையும். உடனே எழுதித் தந்ததுடன், இந்தத் தொகுப்பு நூலுக்குப் “பூக்காடு” என்ற தலைப்பும் தந்தார். ஒவிய நண்பர் செல்லப்பனை உற்சாகப்படுத்த, உட்புறம் மட்டுமல்லாமல், வெளிப்புற அட்டையின் இரு பக்க ஓவியங்களையும் அவரையே வரைந்து தரச் சொன்னேன். அவருக்கு wrapper design அது முதல் முயற்சி! இந்தப் ‘பூக்காடு’ நூல்தான் பரிசும் புகழும் நிறையப் பெற்றது பிற்காலத்தில்! இது அண்ணா தொடுத்த கவிதை மாலையல்லவா?  தொலைந்துபோன ஒரு படம் முப்பது ஆண்டுகட்கு முன்னர் நான் ஒல்லியாக இருந்தேன் என்று சொன்னால், யாரும். இப்போது நம்ப மறுக்கிறார்கள். அதற்குச் சாட்சியான காட்சியாகிய புகைப்படம் ஒன்று அண்மையில் எனக்குக் கிடைத்து, ஆனால் கைநழுவிப்போய் விட்டது. 1948 ல் அண்ணா வையும் என்னையும் வைத்து நண்பர் கரூர் கூர்மீசை குழந்தைவேல் ஒரு பாக்ஸ் காமிராவினால் எடுத்தது. மொட்டைமாடியின் கைப்பிடிச் சுவரில் அண்ணா அமர்ந் திருக்க நான் அருகில் சாய்ந்து நிற்பேன். கரூரில் நம் இயக்கப் பெரியவர் புலியூர் பெருமாள் (நாடார்) இல்லத்தில், அவரது மூத்தமகன் சோமசுந்தரம் திருமண வரவேற்பு சமயத்தில், ஒய்வாக இருந்த நேரம் படம் பிடித்தார் குழந்தை. சோமுவும் அவர் தம்பி கிட்டுவும் எனக்கு நல்ல நண்பர்கள். அவர்களின் அக்காள் கணவர்தான் மதுரை டாக்டர் அருணாசலம், டாக்டர் இரா. சனார்த்தனம், தனது பிஎச். டி. ஆய் வுக்காக அண்ணாவின் நாடகங்கள் என்பது போன்ற ஒரு தலைப்பை ஏற்றிருந்தார். அந்தக் காலகட்டத்தில் இந்தப் படம் அவரிடம் சிக்கியதாம். அண்ணாவுடனிருப்பது நான் தானோ என்ற சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளத்தான் அந்த போட்டோவை என்னிடம் காண்பித்தார். நானே வைத்திருந்தேன். எப்படியோ, காணாமல் போய் விட்டது. ஆயினும் என் பழைய நண்பர்களுக்குத் தெரி யும், நான் 1958 வரை ஒற்றை நாடியாயிருந்தேன் என்பது. அதனால்தானே பிற்காலத்தில் எனக்குத் தொந்தி விழுந்து விட்டதைப் பல முறை அண்ணா கேலி செய்தது! எதிரே நான் போனால் என் முகத்தைப் பார்க்காமல், வயிற்றைப் பார்த்து நகைப்பாரே! பெருமூச்சோடு அந்தப் பழையகாலத்தை எண்ணிப் பார்க்கிறேன். நண்பர் சோமசுந்தரத்துக்குப் பெண் எடுத்தது குடந்தையில். கும்பகோணத்து மும்மூர்த்திகள் எனப்படும் இயக்கப் பெரியவர்களான கே. கே. நீலமேகம், வி. சின்னத்தம்பி, P. R. பொன்னுசாமி ஆகியோரில், திரு V. C. அவர்களின் மகள்தான் மணப்பெண். திருமணம் குடந்தையில் மிகச் சிறப்போடு நடைபெற்றது. பெரியார். அண்ணா மற்றும் இயக்கத் தோழர்கள் அனை வரும் இருந்தோம். கலை வாணர் என். எஸ். கிருஷ்ணன், நடிப்பிசைப் புலவர் கே. ஆர். இராமசாமி போன்ற கலை யுலகினரும் வந்திருந்தனர். அப்போது ஜெமினியின் ‘சந்திரலேகா’ படம் குடந்தை டயமண்ட் சினிமாவில் வெளியாகியிருந்தது அண்ணா என்னிடம் “செகண்ட் ஷோ பார்க்கலாம் ஏற்பாடு செய்” என்றார்கள். சம்பத் முதலானோர் அண்ணாவுடன் ஒதுங்கிக்கொண்டோம். அது வரை வெளியான தமிழ்ப் படங்களிலேயே அது மிகவும் பிரம்மாண்டமான தயாரிப்பு அல்லவா? அண்ணா வெகு வாக ரசித்தார். ஆயினும் அவருக்குப் புலப்பட்ட குறை ஒன்றினையும் சுட்டிக் காட்டினார். பாருய்யா! எவ் வளவு லட்சம் செலவு பண்ணி எடுத்திருக்கான். வசதியான ஒரு Folklore subject. பெரிய சரித்திரப்படம் போல இருக்கு, ஆனாலும் ஒரு நல்ல வசனகர்த்தாவை வச்சி டயலாக் எழுதத் தெரியல்லே கிராமவாசிகூட அக்ர ஹாரத் தமிழ்லெ பேசுறாங்க. எவ்வளவு பொருத்த மில்லாமல irrelevent ஆக இருக்கு!” என்று அண்ணா உருப்படியான விமர்சனக் கருத்து ஒன்றைத் தெரி வித்தார்கள். திருமணத்துக்கு மறுநாள் கருவூரில் மணமக்கள் வரவேற்பு. “அதற்கும் நாமெல்லாம் போகவேண்டும்” என்றார் அண்ணா. நான் தயங்கினேன். அண்ணா கே. ஆர். ஆர். அவர்களிடம் சாடை காண்பித்தார். அவர் உடனே ஆள் அனுப்பிக் கும்பகோணத்திலிருந்து கரூர் வரையில் ரயிலில் முதல் வகுப்பில் செல்வதற்குப் பத்துப் பதினைந்து டிக்கட் வாங்கி வந்துவிட்டார். சினிமாவில் மிக உச்சகட்டத்தில் நடிப்பிசைப் புலவர் நின்றிருந்த நேரம் அது. அவரைப் போன்ற தாராள மனம் யாருக்கு வரும்? தவமணி, சம்பத், குழந்தைவேலு, நான் எல்லாரும் அண்ணாவுடன் ஒரே கம்பார்ட்மெண்டில்-கூத்தும் கும்மாளமுந்தான். பயனுள்ள கருத்துப்பரிமாற்றங்களும் இடம் பெறாமல் இல்லை. கரூரில் போய் இறங்கிய பிறகுதான் நண்பர் குழந்தை வேலு, தனது திறமையைக் காண்பிக்க அண்ணாவையும் என்னையும் ஒரு போட்டோ எடுத்தார். மிகச் சிறிய சைஸ் படம் அது. என் லார்ஜ் செய்யக் கருதினேன். தொலைந்து போயிற்று. அதைத் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன். கார் தள்ளிய படலம் “வாங்க சார், காஞ்சிபுரம் போயி அண்ணாவைப் பாத்திட்டு வந்திடலாம்! கணேசு! P. A. P. கிட்டெ கார் கேட்டிருந்தேனே, பாருங்க!” சொன்னவர் மூனாகானா என அப்போது,எங்கள் அனைவராலும் அழைக்கப்பட்டவர். அவர் முதலில் விளித்தது என்னை, இரண்டாவதாக சிவாஜிகணேசனை. அவரும் அப்போது ‘கலைஞர்’ ஆகவில்லை. இவரும் ‘நடிகர் திலகம்’ ஆகவில்லை. பராசக்தி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த காலம். மாலை வேளை, இடம் ஏவி எம் ஸ்டுடியோ. சிவாஜி, பராசக்தி தயாரிப்பாளர் பி. ஏ. பெருமாள் அவர்களின் செல்லப்பிள்ளை. அதனால் அவரே ஆணையிட்டார் “கண்ணா! பாண்டியாக் வண்டியை எடுத்துவா!” என்று சிவாஜி முன் சீட்டிலும், நாங்களிருவரும் பின்சீட்டிலும் ஏறிக்கொள்ள, வண்டி காஞ்சிமா நகரை நோக்கி விரைந்தது. என் மனக்குதிரையோ பின்னோக்கி விரைந்தது… அண்ணாவின் அறிவுரைப்படி 1946-ஆம் ஆண்டு தஞ்சையில் “கே. ஆர். ராமசாமியின் கிருஷ்ணன் நாடக சபா” துவக்கி முகாமிட்டிருந்தனர். கரந்தை என். எஸ். சண்முகவடிவேல், நாடிமுத்துப் பிள்ளையின் மருமகன் ஆயினும் நமது இயக்கத் தோழர். எனக்கு உறவினர். அவருக்கு ஜில்லா போர்டு ஆபீசில் அலுவல். எனக்கு ஆர். எம். எஸ். சார்ட்டர் வேலை. இருவருக்கும் சம்பளம் உண்டு. நாடகக் கம்பெனிதான் எங்களுக்குப் பொழுது போக்கும் இடம், சிவாஜி அங்கிருந்தபோது அசைவ சாப்பாடு சரிவரக் கிடைக்காத சூழ்நிலை. நாங்களிருவரும் அவரை அழைத்துக் கொண்டுபோய், ’மீனாட்சி விலாஸ் ராவுஜி மிலிட்டரி ஓட்டலி’ல் ஒருபிடி பிடிப்போம். சிவாஜியின் அண்ணன் W. C. தங்கவேலுவும் அவர்கள் அன்னையாரும், நல்ல சம்பளம் தரக்கூடிய வேறு ஒரு கம்பெனியில் சிவாஜியைச் சேர்த்து விடுமாறு எங்களிடம் கேட்டுக் கொண்டனர். நவாப் ராஜமாணிக்கம்பிள்ளை எங்கள் உறவினர். அவரிடமிருந்து பிரிந்து தனியே சக்தி நாடக சபா அமைத்திருந்த டி. கே. கிருஷ்ணசாமியும் எங்கள் உறவினர். அதனால் திண்டுக்கல்லில் முகாமிட் டிருந்த சக்தி நாடக சபாவில் சிவாஜி கணேசனைக்கொண்டு போய்ச் சேர்த்து, அடிக்கடி சென்று பார்த்து வந்தோம். அங்கும் பெண்வேடம் புனைந்தார் கணேசன். அவர் தான் இன்று பராசக்தியில் முக்கிய பாத்திரத்தில் சினிமா நடிகராக அறிமுகம் ஆகிறார். பாவலர் பாலசுந்தரத்தின் நாடகத்திற்குத் திரைக்கதை வசனம் மு. கருணாநிதி. டைரக்ஷன் கிருஷ்ணன்-பஞ்சு. இசை சுதர்சனம். காஞ்சிபுரம் சென்றதும், அண்ணா மூவரையும் பார்த்துப் பொதுவாக வாங்க என்றார். எதிரில் மூன்று நாற்காலிகளில் அமர்ந்தோம். நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தபோதுதான் கவனித்தேன்-அண்ணா கணேசனிடம் பேசவேயில்லை என்பதை ! கணேசனும் அதைக் காட்டிக் கொள்ளவேயில்லை! நாங்கள் புறப்பட்ட போது “சாப்பிட்டுப்போங்கள்” என்று அண்ணா சொல்ல, சாப்பாடு முடிவதற்குள் மிகப் பலத்த மழை துவங்கி விட்டது. “இவ்வளவு மழையில் போகவேண்டாம். படுத்திருந்து, காலையில் போகலாம்” என்றார் அண்ணா. “இல்லை அண்ணா. பி. ஏ. பி. வண்டியை இரவல் வரங்கி வந்தோம். மெதுவாகப் போய் விடுகிறோம்” என்றார் கலைஞர். “ஜாக்கிரதையாகப் போங்கள் நிறைய லாரிகள் வரும்” என எத்சரித்தார் அண்ணா. நள்ளிரவும் கடந்துவிட்டது. ஆமாம்; அண்ணா ஏன் சிவாஜியோடு பேசவில்லை? கலைஞரோ நானோ அது குறித்துக் கேட்கவில்லை! கலைவாணர் சிறை சென்றவுடன் அவரது நாடகக் கம்பெனி நிர்வாகம் சீர்குலைய, அங்கிருந்த நடிகர்களில் பலரையும் காஞ்சிக்கு அழைத்து வந்து அடைக்கலம் தந்தார் அண்ணா. அதுவரையில் ஸ்திர்பார்ட் நடிகரா யிருந்த கணேசனை அடையாளம் கண்டு, ஒளிந்திருந்த திறமையை வெளிக் கொணரத் தமது ‘சந்திரமோகன்’ நாடகத்தில் சிவாஜி பாத்திரம் ஏற்கச் செய்தார். W. C. கணேசனும் சிவாஜி கணேசனானார். ஆனால் பராசக்தி திரைப் படத்தில் நடிக்க ஒப்பந்தமான போது அண்ணாவிடம் அனுமதி கேட்க மறந்தார் என்பதாக எனக்குச் செய்தி எட்டியது. என்றாலும் நான் இதுவரையும் கேட்டதில்லை. 1953 ஆம் ஆண்டு சிவாஜிகணேசன் கடைசியாகக் கலந்து கொண்ட லால்குடி தி. மு. க மாநாட்டில் “அண்ணா ஆணையிட்டால் அனைத்து ஒப்பந்தப் பத்திரங்களையும் கிழித்தெறிந்து விட்டுப் போராட்டத்தில் குதிப்பேன்” என்று முழங்கியபோதும் நான் அருகிலிருந்தவன். இயக்கத்துக்காக அவர் ஆற்றிய அருந்தொண்டுகள் அளவில. அண்ணாவின் கோபம் விரைவில் ஆறிவிடும் என்பதுதான் என் அனுபவம் ஆயிற்றே! பெரியாருக்கு ஒருவர்மீது கோபம் வந்தால் அவரைப் பார்க்காமல் செய்தித்தாளைப் படிக்க ஆரம்பித்து விடுவார். அண்ணாவுக்கு ஒருவர்மீது கோபமென்றால் அவரைப் பார்ப்பார். ஆனால் அறிமுகமில்லாதவர் போலப் பேசாமல் இருந்து விடுவார். அண்ணா சொன்னது சரியாகிவிட்டது. நாங்கள் திரும்பிச் சென்னை வரும் வழியில், செம்பரம்பாக்கம் ஏரியருகில், பிரேக் பிடிக்காமல் வண்டி தலைக்குப்புற விழ இருந்தது. நல்வாய்ப்பாக ஒர் அங்குலம் முன்னதாகக் கார் நின்றுபோய்-நாங்கள் தப்பினோம்-ஆனால் அதன் பிறகு கார் ஸ்டார்ட் ஆக மறுத்தது. கலைஞரை உட்கார வைத்து, கணேசனும் நானும் பூந்தமல்லி ஹைரோடு வரையில் அந்தப் பெரிய காரைத் தள்ளிக்கொண்டே வந்தோம். அமைந்தகரை வந்ததும் சிவாஜி ஒடிப்போய்த் தான் நடிக்கும் ‘அன்பு’ படத்தயாரிப்பாளரான நடேச னிடம் கேட்டு, வேறொரு கார் வாங்கிவந்தார், பொழுதும் புலர்ந்து விட்டது, நாங்கள் வீடு சேர்ந்தபோது, அண்ணாவைப் பார்த்துவரச் சென்ற நாங்கள், கார் தள்ளிய படலத்தை நினைத்தால் இன்றும் நெஞ்சம் திடுக்கிடுமே ! திரைப்படம் பார்த்ததால் - உருப்பெற்ற க(வி)தை போட்மெயில் எனப்படும் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரயில் மாயூரம் சத்திப்புக்கு இரண்டுங்கெட்டான் நேரத் தில் சென்னையிலிருந்து வந்து சேரும். அதாவது-2.15 மணிக்கு. அண்ணா வருகிறாரென்பதால் முன்னதாகவே விழித்தெழுந்து ரயிலடிக்கு வந்துவிட்டேன். தன் வீட்டுக்கு அழைத்துச் செல்லக் கொத்தங்குடி G ராமச் சந்திரன் ஒரு காருடன் வந்து காத்திருக்கிறார். அது 1965 ஆம் ஆண்டின் மார்கழிக் குளிர்காலம். இதில் வந்து இறங்கியவுடன் வழக்கமாகத் தூங்குவார் அண்ணா, ஆனால் அன்றைக்கு G. R. வீடு போய்ச் சேர்ந்ததும், ஒரு சோபாவில் உட்கார்ந்து கொண்டு, தன் பெட்டியைக் கேட்டார். ஜியார் எடுத்து வந்தார். அண்ணா அதைத் திறந்து ஒரு கற்றைத் தாள்களைக் கையி லெடுத்தார். எழுதப்பட்ட காகிதங்கள் 30, 40 பக்கமிருக்கலாம். “ஏண்ணா, படுக்கலியா?” என்று கேட்ட என்னை, “அப்புறம் படுக்கலாம். நீ இங்கே வந்து உட்காரு” என அழைத்தார்கள். அருகிலேயே போய் அமர்ந்தேன். “இந்தப் பேப்பரை வச்சுக்கோ, வீட்ல போயி படிக்கலாம். இப்ப நான் சொல்ற கதையெக் கேளு. போன வாரம் டெல்லியிலே ஒரு இங்லீஷ் படம் பார்த்தேன். அந்தக் கதை என்னெ ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணினதாலே, அதை அப்படியே இதிலே எழுதி பிருக்கேன், நீ உன்னுடைய பாணியிலே அதைக் கவிதையா ஆக்கிக் கொடு! “காஞ்சி” பொங்கல் மலரில் வெளியிடலாம்” என்ற பீடிகையுடன் கதை தொடங்கினார்கள், அமெரிக்க மக்கள் எவ்வளவுதான் செல்வந்தரா யிருப்பினும், இருப்பதுடன் மனநிறைவடையாமல், மேலும் செல்வத்தைத் தேடி அலை வார்கள் என்பதே மய்யக் கருத்து. அவர்களுக்கு வாழ்வின் இன்பங்களைத் துய்க்கத் தெரியாது. காதல், மணவாழ்க்கை, மக்கட் பேறு இவற்றையெல்லாம் உணர்ந்து சுவைக்க நேரமின்றி, விரைவில் அழியும் பொருட் செல்வத்தை நாடி, நிம்மதி இழந்து தவிப்பார்கள். காதல் வயப்பட்டாள் ஒரு பெண். காதலனுடன் வாழத் துவங்கும் போது அவன் மறைந்து விடுகிறான். பிறகு வேறொருவனை மணக்கிறாள். அவனோ, கண வனாக இருந்து கடமை ஆற்றாமல், பொருள் நாடி மடிகிறான். அடுத்து ஒருவன்! மீண்டும் வேறொருவன்! ஒவ்வொருவரும் வெவ்வேறு வழிகளில் மாண்டு போகிறார்கள். ஆனால் இவளுக்கோ அவர்கள் விட்டுச் சென்ற செல்வம் மலை மலையாய் வந்து குவிகிறது. கடைசியில், யாவற்றையும் துறந்த ஏழ்மை நிலையில் தான் அவள், வாழ்க்கை இன்பங்காண்கிறாள்! கதை சொல்லி முடிக்க அரை மணி நேரம் ஆனது. அண்ணா அப்போது, தமது காஞ்சி வார இதழில், சில நேரங்களில் சில் கட்டுரைகளை, இப்போது புதுக்கவிதை என்கிறார்களே அது போன்ற புதிய நடையைத் தாமே உருவாக்கிக்கொண்டு-அந்த நடையில் எழுதுவதை வழக்க மாக்கியிருந்தார்கள். இந்த சினிமாக்கதை முழுவதையும் அதே நடையில் டெல்லியிலேயே எழுதினார்களாம். அதில் ஏனோ தெரியவில்லை-அவர்களுக்கு மனநிறைவு ஏற்படவில்லையாம். மாயூரம் சென்றவுடன் கருணானந்தத் தைப் பிடித்து, அவருடைய கவிதை வடிவில் எழுதச் சொல்ல வேண்டும் எனத் தீர்மானித்து, மறவாமல் அந்தத் தாள்களைத் தம்முடன் எடுத்து வந்துள்ளார்களாம். அண்ணாவின் தொடக்க வரிகள் சிலவற்றையும், முடிவு வரிகள் சிலவற்றையும், அக்கருத்தை வைத்து நான் வெண்பாத்தளையில் எழுதிய வரிகள் சிலவற்றையும் இங்கு பார்ப்போமா? சின்னாட்களுக்கு முன்பு நான் சிரிப்பைக் கிளறிடும் படமென செப்பினர் நண்பர்கள் என்பதால் சென்றேன் கண்டிட ஆங்கிலப் படமதை. சிந்தனை தன்னைக் கிளறியதப்படம் சிரிக்கவும் வைத்தது என்னை மெத்தவும். ஆங்கிலப் படமது: ஆகவே அதிலே ஆங்கில வாழ்க்கை முறை இருந்தது. -இது அண்ணா. ஆங்கிலம் பேசும் அழகுத் திரைப்படத்தைப் பாங்குடன் கண்டு பரிந்துரைத்தார் நண்பர், விருப்போடு வேண்டியதால் சின்னாள்முன் சென்றேன். சிரிப்பினை மூட்டியே, சிந்தனைக்கும் நல்விருந்தாய் நேர்ந்தது, மேனாட்டார்.நேர்த்திமிகு வாழ்வுரைக்கத் தேர்ந்த சிறந்த கதை; சீராம் கருத்துக்கள். -இது நான். பணம் படுத்தும் பாடுதனை உணர்த்திடவும் பணம் தேடும் அரிப்பினால் ஏற்பட்டுவிடும் பாழ்நிலையை, விபத்ன்த் விளக்கிடவே படம் மெத்தத் தர்மரக்ப் புலன் அளித்திடவே பார்த்ததில் சிரித்து மகிழ்ந்ததுடன் சிந்தைக்கு விருந்து பெற வழி இருந்திடக் கண்டு மகிழ்ந்திருந்தேன் நானே! -இது அண்ணா. பார்த்துவந்த பின்புநான் பாடம் மறக்கவில்லை! “செல்வத்தைத் தேடித் திரிவதால், ஒடுவதால், பல்விபத்தும், பாழும், பயனில்லா வாழ்வுமே சித்திக்கும் என்று, சிரிப்பூட்டும் நற்படத்தில் தித்திக்கும் நன்மருந்து சிந்தனைக்கும் தந்தாரே! ஆளுந் திறனென்ன அற்புதமாய்-என்றெண்ணி நாளும் மகிழ்ந்திருந்தேன் நன்கு. -இது நான். அண்ணாவின் கையெழுத்துப் பிரதிகளைப் பத்திரமாக வைத்துக்கொண்டு, நான் எழுதிய கவிதையை அடுத்த வாரமே சென்னைக்குப் போய் அண்ணாவிடம் தந்தேன். ஆனால் அதற்கும் அடுத்த முறை சென்னை சென்றபோது “கருணானந்தம், உன் கவிதையை எங்கேயே misplace செய்துட்டேன். வேறு எழுதித்தாய்யா, முடியுமா?” எனக் கேட்டார்கள். “ஒரிஜினல் மாயூரத்தில் வைத்திருக்கிறேன். அண்ணா. போனதும் எழுதி எடுத்து வருகிறேன்” என்று சொல்லி, மீண்டும் வேறொரு நகல் எழுதித் தந்து, அது 1966 “காஞ்சி” பொங்கல் மலரில் ‘செல்வத்தைத் தேடி’ என்ற தலைப்பில் வெளியாயிற்று. அந்தப்படத்தின் பெயர்” What a way to go. நீண்ட நாள் கழித்துச் சென்னையில் பார்த்தேன். நான் எழுதிக் கொடுத்தேனே தவிர, அண்ணா எழுதியது மிகவும் அருமையாக இருந்ததால், அதை எப்படிப் பயன்படுத்தலாமென யோசித்து வந்தேன். நல்வாய்ப்பாக அதைப் பாதுகாப்பாக வைத்திருந்தேன். அதனால், 1970-ஆம் ஆண்டில், என் இரணடாவது கவிதைத் தொகுப்பான “கணியமுது” நூலில், அண்ணாவின் எழுத்தோவியத்தை ஒருங்க்கமும், அதற்கு மாற்றாக நான் எழுதியவரிகளை எதிர்ப்பக்கமும் வெளியிட்டேன். ஒவ்வொன்றும் 32 பக்கங்கள் வந்தன. “பூக்காடு” நூல் 1966.ல் தொகுத்தபோது, அண்ணா, தினைவுடன் என்னைக் கேட்டு, நான் தவறவிட்ட கசாதகப் பொருத்தம்’ என்ற கவிதையினையும் தேடிப் பிடித்து, இந்தக் கனியமுது என்னும் இரண்டாம் தொகுப்பில் இணைத்தேன். ஆனால் இது நடந்தது 1970-ஆம் ஆண்டில் அல்லவா? அண்ணனின் விருப்பத்தை நிறைவேற்றினேன். ஆனால் அவரது விழிகளின் பார்வையில் விழ வைத்தேனா? பத்தாயிரம் ரூபாயில் ஓவியக் காட்சி “இந்த விருகம்பாக்கம் மாநாட்டுலே ஒனக்குத் தனியா ஒரு பொறுப்பு குடுக்கப்போறேன். நீ இப்பவே இங்க வந்து தங்கிடு. நீ வழக்கமா செய்ற வேலைகளைத் தவிர இது! ஒன்னயே முழுக்க நம்பி ஒப்படைக்கிறேன். இரண்டு பாயிண்ட் இதிலெ. ஒண்ணு, சிக்கனமா செய்யணும். ரெண்டு, தினமும் எங்கிட்ட கன்சல்ட் பண்ணிக்கிட்டபிறகு, முடிக்கணும்! என்ன கருணானந்தம், தயாரா?” என்று கேட்கிறார்கள் அண்ணா; நுங்கம் பாக்கம் இல்லத்தில்தான். “என்னண்ணா, சஸ்பென்சாகப் பேசுறீங்க! நீங்க. எது சொன்னாலும் தயார்தான். (அரசாங்க) வேலையிலே இருந்து கிட்டே, பகுதி நேரம் கட்சிப் பணி செய்யலாம்னு நீங்க சொன்னதாலேதானே, 1946-ல் நான் வேலக்கே. போனேன். எப்போதுமே நான் பின்வாங்கியதில்லியே அண்ணா?” எனச் சற்றுத் தழுதழுத்த குரலில் பேசினேன். “உன்மேல எனக்குச் சந்தேகமிருந்தா சொல்லியிருக்கவே மாட்டேனே. விஷயம் அதில்லே. கோயமுத்துரர் மாநாட்டிலே நம்ம…… யை நம்பி (அண்ணா, அவர் பெயரைச் சொன்னார்கள். பெரியவர், போகட்டும்? நான் அவர் பெயரைக் காட்டிக்கொடுக்க விரும்பவில்லை; இப்போது அவர் உயிரோடுமில்லை.) இந்த வேலையை ஒப்படைச்சேன். ஒரு லட்சம் ரூபாய் செலவு கணக்குக் காண்பிச்சாரே தவிர, உருப்படியா ஏதுமே செய்யலே. வேறொண்ணுமில்லேய்யா, உனக்குப் பிடிச்ச வேலைதான். எக்சிபிஷன் அமைக்கிறது. இந்தத் தடவை ஒரு பத்தாயிரம் ரூபாயிலேயே முடிச்சுடனும். உனக்கு, வசதியா, பக்கத்துத் தெருவிலேயிருக்கிற ஒரு கல்யாண மண்டபத்தை வாங்கித் தர்றேன், நம்ம பொள்ளாச்சி ஒவியர் அந்தப்பையன் வர்றதாக் கடிதம் போட்டிருக்கார். ஒங்கிட்டே ஒரு டீம் ஒவியர்கள் இருப்பாங்களே அவுங்களை அழைச்சிக்கோ. தினம் காலையில் என்னிடம் வந்து, ஐடியா கேட்டு, ஸ்கெச் வரைஞ்சி காட்டிட்டு, எழுதச் சொல்லு. ரொம்ப இம்ப்ரெஸ்சிவா செய்யணும்.” “முழு நேரமும் இதிலே ஈடுபட்டு, ஒங்களுக்குத் திருப்தியாக் கண்காட்சியை அமச்சி, அதுக்கப்புறமா நான் டிக்கட் விக்கிற வேலக்கிப் போறேண்ணா. இண்ணக்கே, ஊருக்குப் போயி, வீவு போட்டுட்டு வந்துடறேண்ணா. இன்னும் ஒரு மாசம்தானே இருக்கு” —உரையாடல் அவ்வளவுதான்! வக்கீல் சுந்தரம் பொறுப்பிலிருந்தது S. A. P. ஹால், நுங்கம்பாக்கம் வில்லேஜ் ரோடில்; அதை முழுமையாக ஒரு மாத வாடகைக்கு அமர்த்திக் கொண்டோம். அங்குதான் ஒவியக்கூடம். அப்போது அங்கு மாநகராட்சி உறுப்பினரான எம். எஸ். ராமச்சந்திரன் எனக்கு உதவினார். மாயூரம் ஒவியர், நான் எப்போது கட்சிப் பணிக்கு அழைத்தாலும் வந்து, தன் திறமையைக் காண்பித்து, முத்திரை பொறிக்கும் வல்லுநரான P. T. ராஜன் வந்து விட்டார். பிறகென்ன? நான் வழக்கம்போல் கலைஞர் வீட்டில் தங்கல். அப்போது அவரிடமிருந்த ஹெரால்டு காரில் காலையில் வந்து அண்ணா வீட்டில் இறங்கிக் கொள்வேன். அண்ணாவைச் சந்திப்பதில் அப்போதெல்லாம் எனக்குச் சிறப்பான முதலிடம். கருத்துகளையும் கட்டளைகளையும் ஏற்றுக் கொண்டு, அடுத்த தெருவிலுள்ள ஓவியக் கூடம் சென்றால், இரவு வரை நேரம் போவதே தெரியாது! என் நண்பர் மீசை கோபாலசாமி தனக்குத் தெரிந்த தச்சு வேலைத் தோழர் ஒருவரைக் கொண்டு வந்தார். ஒவியர்கள் உட்பட உழைப்பவர் அனைவர்க்கும், அருகிலேயே எளிய உணவுக்கு ஏற்பாடு. சம்பளம் யாருக்கும் கிடையாது. எடுபிடி ஆள் கிடையாது. எல்லாம் நாங்களே. நானே! இந்தி எதிர்ப்புப் போராட்டம் முக்கிய இலக்கு! மிகமிகப் பெரிய பேனரில் போலீசார் துப்பாக்கிச்சூடு, சின்னச்சாமி முதலியோரின் தீக்குளிப்புக் காட்சிகள், அப்போதைய சட்டமன்ற உறுப்பினர்களின் உருவங்கள், செயல்கள். பாளை தனிமைச் சிறை. இப்படியாக மக்களின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கவல்ல. கணக்கற்ற ஒவியங்கள், சிற்பங்கள், பல நிறங்களில் உருப்பெற்றன. இடையிடையே நான் விருகம்பாக்கத்துக்கு ஓடுவேன். என் நண்பர் நீலநாராயணன்தானே வரவேற்புக்குழுத் தலைவர். அவருக்கு உதவியாக அங்கேயே தங்கியிருந்தார். கோ. செங்குட்டுவன். இவர்களோடு கலந்து, பந்தல், முகப்பு, அலங்காரம், சோடனை ஆகிய பணிகளிலும் என் பங்கினைச் செலுத்துவதையும் நான் நிறுத்தவில்லை. அப்படியாக ஒரு காலைப் பொழுதில், என்னோடு நீல நாராயணனும் அண்ணாவைக் காண வந்தார். நான் விரைந்து மேலே ஏறி, அண்ணா படுத்திருந்த அறைக்குள் நுழைந்த போது, அண்ணா தூங்கவில்லை; உட்கார்ந்திருந்தார் வெற்றுடம் போடு! நான் மட்டுந்தான் வந்திருப்பதாக எண்ணி “எங்கேய்யா அந்த நீல நாராயணன்?” என்று கேட்ட வேகத்தைப் பார்த்து, அவர் என்னோடு வந்ததையே சொல்லவில்லை. அவரும் மாடிப்படியிலேயே நின்று, மறைந்திருந்து, அண்ணாவின் குரலை மட்டும் கேட்கிறார்! “என்னய்யா நெனச்சிக்கிட்டு இருக்கீங்க நீங்கள் எல்லாரும்? நான் ஒருத்தன் இங்கே இருக்கிறேனல்லவா? எனக்குத் தெரியாம, எனக்குப் பிடிக்காத சங்கதியைச் செய்திருக்கீங்க! உங்களுக்கெல்லாம். அவ்வளவு தைரியம் வந்திடுச்சா? இனிமெ யாரும் எங்கிட்ட வராதீங்க, போங்க!” என்கிறார் அண்ணா. முகம் சினத்தால், கொதிக்கிறது! “என்னண்ணா விஷயம்” என்று கேட்கிறேன். என் வாயிலிருந்து வந்த சத்தம் எனக்கே காதில் விழவில்லை! “யாரைக் கேட்டுக்கிட்டு மெயின் எண்ட்ரன்ஸ் முகப்பு அந்த ஆளைப் போடச் சொன்னிங்க? நல்லா மூக்கை உடைச்சி அனுப்பிட்டாராமே! அவர் போட மாட்டேண்ணு சொன்னது தப்பில்லே? நீங்க அவருகிட்டே இப்ப போனது தப்பு! நான் டிசைன் வரைஞ்சி குடுத்த மாதிரி, 1967 என்று நுழைவாயில் முகப்பு போடுங்க. என்ன செலவானாலும் நாமே செய்வோம்! நீ போ! அவரை வரச் சொல்லு!” என்று, என்னைத் துரத்தாத குறைதான்! நான் புரிந்து கொண்டேன். நீலநாராயணன் தவறு செய்து விட்டதாக அண்ணா நினைக்கிறார். அவர் வந்து வாங்கிக் கொள்ளவேண்டிய வசவுகளை, அவர் சார்பில் நான் வாங்கி, அவரிடம் சேர்ப்பிக்கவேண்டும். இங்கும் தபால் வேலை? அண்ணா கோபத்தை நான் தாங்கிக் கொள்வேன்! அவர்களால் முடியாது! மேலும் இது என்னைத் திட்டியது அல்லவே! மெதுவாகக் கீழிறங்கி, அங்கு நடுக்கத்துடன் நின்றி ருந்த நீலத்திடம், என் தலைமீது சுமந்து வந்த ஒரு சுமையை இறக்கி, அவர் தலைமீது வைப்பது போல் பாவனை செய்தேன். அந்த நிலையிலும் அவருக்குச் சிரிப்பு வந்து விட்டது. வெளியில் சென்றோம் விரைந்து. மாநாட்டுக்கு முந்திய நாள்-அதாவது 28.12.1966 அன்று எல்லோரும் ஊர்வல ஏற்பாடுகளைக் கவனிக்கச் சென்று விட்டனர். ஒவியக்கூடத்தில் தயாரான வற்றை, நானே லாரிகளில் ஏற்றிச் சென்று, பந்தலுக்குள் தனியே அமைத்த ஓவியக் கண்காட்சிக் கொட்டகையில் இறக்கி, நானே சுமந்து, மாட்டி, fix செய்தேன். அடுத்த நாள் ஏ. கோவிந்தசாமி ஒவியக் கண்காட்சி யைத் திறந்து வைத்தார். இங்கு நுழைவுக்கட்டணம் வெறும் பத்து பைசாதான். அப்படி வைத்தும், அந்த நான்கு நாட்களில், இடைவேளை நேரங்களில் வந்து கண்காட்சி காண முடிந்தவர்கள் மட்டும் ஒரு லட்சம் பேர்! ஆச்சரியமல்லவா? வசூல் பத்தாயிரம் ரூபாய்! அண்ணா அவர்களிடம் செலவுக்குப் பெற்றுக் கொண்ட பத்தாயிரம் ரூபாயைத் திருப்பித் தந்த போது, அண்ணா அளவற்ற மகிழ்வு பூண்டவராய், என்னைப் பாராட்டித் தட்டிக் கொடுத்து எல்லாருடைய முன்னிலையிலும் புகழ்ந்துரைத்த போது, நான் பட்ட சிரமங்களெல்லாம் மறைந்து என் கண்கள் ஆனந்தக் கண்ணிர் உகுத்தன. பொத்தானை மாற்றிப் போட்ட புஷ்கோட் இந்த முறை அண்ணா திருவிழந்தூரில் தங்கியிருந்தார்கள். இடம் ஏற்பாடு, புதியவர் குடவாயில் சி. கிருஷ்ண மூர்த்தி. ஒரு அம்பாசிடர் காரும் அவரிடமிருந்தது. போக வர அவர் உதவியாயிருந்தார். இது 1951ல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தஞ்சை மாவட்ட முதல் மாநாடு, மாயவரம் நகரம், கூறைநாடு திரும்ஞ்சன வீதியில் பந்தலிட்டு நடந்தபோது. மாவட்டச் செயலாளரான கே. கே. நீலமேகம் வரவேற்புக் குழுத் தலைவர். உள்ளூர் பிரமுகர் ஆர். பழனிச்சாமி செயலாளர். அனுபவமில்லாத தால் 17 ரூபாய்தான் மாநாட்டில் மீதியாயிற்று. சாப்பாடு மட்டும் பிரமாதம் எல்லாருக்கும்! இந்த மாநாட்டின் அமைப்புப் பணிகளில் உள்ளூரி விருந்தாலும், எனக்கு முக்கிய பங்கில்லை. காரணம், நான் அப்போது அய்யாவிடமும் தொடர்போடு இருந்தவன். அதனால், தலைவர்களோடு வெறும் பார்வையாளராகவே மாநாட்டுக்குச் சென்றேன். இந்த மாநாடு பலவகையிலும் மறக்கவொண்ணாதது. என் மூத்த மகள் ராணி, பிறந்திருந்த நேரம். அதற்காக என் துணைவியார் மன்னார்குடி சென்றுவிட்டதால், என் வீட்டில் யாரையும் தலைவர்களை அழைத்துத் தங்கவைக்க முடியவில்லை. கலைஞர் புளுரசி நோயால் அவதிப்பட்டுத் திருவாரூரில் படுக்கையிலிருந்தார். புதியவரான கவிஞர் கண்ணதாசன், சென்னையிலிருந்து அரங்கண்ணலோடு ரயிலில் முதல் வகுப்பில் வந்தபோது, அந்தப் பெட்டி Hot Axle ஆகித் தீப்பிடித்து விட்டது. அதனால் தனது பெட்டியை (Suit case ஐ)ப் பறிகொடுத்த கட்டிய வேட்டி சட்டையுடன் வந்து இறங்கினார். அவருக்கு என் நண்பர் காந்தியின் திருமண உடைகளான பட்டுவேட்டி சில்க் சட்டை கொடுத்து, அணிந்துகொள்ளச் செய்தேன். இரவு “சந்திர மோகன்” நாடகத்தில், அப்போதெல்லாம் சிவாஜியாக நடித்துக் கொண்டிருந்த இலட்சிய நடிகர் எஸ். எஸ். இராஜேந்திரனை, “நீ வேண்டாம். நான் இங்கு சிவாஜி வேடம் போடுகிறேன்” என்று நண்பர் E. V. K. சம்பத் விலக்கிட, அவர் தன் மனக் குமுறலை என்னிடம் வெளியிடும் நிலைமை, இண்ட்டர் மீடியட் படித்துவிட்டு, நாகர்கோயிலில் சும்மாயிருந்தவர், அங்கே இருந்துவந்து, முதன்முதலாகக் கழக மாநாட்டில் மலையாளத்திலும், பிறகு தமிழிலும் பேசிக் கவனத்தை ஈர்த்துக் கைதட்டல் பெற்றார் இங்கே ஒரு வாலிபர் : பெயர் நாஞ்சில் கி. மனோகரன். S.S.L.C. முடித்து, முதன் முதலாகக் கழகத் தொண்டர் படையில் இணைந்து இரெ. ஜோசப் தலைமையில், அருந்தொண்டாற்றினார் ஒர் இளைஞர்; அவர், என். கிட்டப்பா. மாநாட்டின் இரண்டாவது நாள், மாலை நேரம், மதிய உணவு இடைவேளைக்குப் பின், அண்ணா அவர்கள் குடவாசல் கிருஷ்ணமூர்த்தியுடன் சென்று, திருவிழந்தூரில் அந்த இல்லத்தில் ஒய்வெடுத்துக்கொண்டிருந்தார். காஞ்சி கல்யாணசுந்தரமும் நானும் அங்கு சென்றோம். “என்னாண்ணா, இன்னும் ஒக் காந்துகினு இக்கிறே? புறப்படு!” என்றார் காஞ்சி கல்யாணசுந்தரம். அவர் அண்ணாவுடன் பள்ளித் தோழர். கழகத் தோழர் களிலேயே, அவர் ஒருவர்தான், அண்ணாவை “வா போ“ என ஒருமையில் அழைப்பவர். சம்பத் அங்கேதான் தங்கியிருந்தார். அவர் தன் னுடைய bush coat ஒன்றை அண்ணாவிடம் தந்து, “இதைப் போட்டுக்கிட்டு வாங்கண்ணா, மாநாட்டுக்கு!” என்ற பரிவுடன் உரைத்தார். என்ன சம்பத்து! நீங்க தான் இண்ணக்கி சிவாஜி போடlங்களாமே?” என்று குறும்பாகக் கேட்டேன். “இது இரண்டாவது நாடகமல்லவா!” என்று பதில் சொல்லிச் சரித்திரகால சிவாஜி ஒல்லியானவன் என்ற வரலாற்று. உண்மையைத் தகர்த் தெறிந்தார் சம்பத்! அண்ணா புஷ்கோட் அணிந்துகொண்டு, மேலே அங்கவஸ்திரம் தரித்து, வழக்கமான பரபரப்புடன் போய்க் காரில் ஏறிக்கொள்ளவும், நாங்கள் தொடர்ந்து ஒடினோம், வண்டியில் ஏற. மாநாட்டுப் பந்தல் வந்ததும், அண்ணா மேடைக்குச் செல்ல, நாங்கள் அண்ணாவின் பேச்சைக் கேட்பதற்காக, எதிரே முன்வரிசையில் தரையில் அமர்ந்திருந்தோம். அண்ணா மேடையில் நாற்காலியில் வீற்றிருந்தபோது எங்களுக்குப் புலப்படாத ஒரு குறை, அவர்கள் சொற். பொழிவாற்ற எழுந்துவந்து மைக் முன்னர் நின்றபோது தெரிந்துவிட்டது! அதாவது, புதிதாக புஷ்கோட்-அதிலும் இரவல்-அணியும்போது, அண்ணா முதல் பொத்தானை இரண்டாவது துளையில் மாட்டி, அதுபோலவே மற்றவற்றையும் தள்ளித் தள்ளிப் போட்டுக்கொண்டதால், சட்டையின் முன்புறத்தில் ஒருபகுதி ஏற்ற்மாகவும் இன்னொரு பகுதி இறக்கமாகவும் தோன்றியதால் எங்களுக் கெல்லாம் அடக்கமாட்டாத சிரிப்பு! கை தட்டிக் கேலி செய்ய, அது தனியிடம் அல்ல! பேசத் தொடங்கிய பின் மேடைக்குப் போய்ச் சொல்வதும் நாகரிகமல்ல. எனவே சிரமப்பட்டு வாயை மூடி, எங்கள் கிண்டலை வெளிக் காட்டாமல் சேர்த்துவைத்திருந்து, மாநாடு முடிந்தவுடன், ஒடிச் சென்று அண்ணாவிடம் சொல்லி, ஒயாச் சிரிப்பில் ஆழ்ந்தோம். பெரியாரின் வழியிலேயே அண்ணாவும், தமது ஆடை அலங்காரங்களில் எப்போதுமே கவனம் செலுத்துவதில்லை என்பது நாடறிந்த உண்மை என்பதற்கு, இந்தச் சம்பவம் ஒர் எடுத்துக்காட்டாகும். தஞ்சைக்கு ஏன் வந்தார்? (அண்ணா அவர்களுக்கு 21 வயது நிறைய 5 நாட்கள் இருக்கும்போது, ராணியம்மாளைத் திருமணம் செய்துவைத்தனர். அதாவது, 10.9.1930 அன்று சின்னக் காஞ்சிபுரம், வரகுவாசல் தெரு, 51-ஆம் எண் இல்லத்தில். திருமண சமயத்தில் அண்ணியார் குடும்பம் தஞ்சாவூரில் இருந்ததாம்.) “நான் ராணியைத் திருமணம் செய்து கொண்ட புதிசில் தஞ்சாவூருக்கு அடிக்கடி வந்திருக்கேன். அப்போ இங்கே வேற யாரையும் தெரியாது. ஒரு Platform ticket வாங்கிக்கிட்டு நேரெ ரயில்வே ஸ்டேஷனுக்குள்ளே வந்து, இந்த ஹிக்கின்பாதம்ஸ்லெ மணிக்கணக்கா நிண்ணு, புத்தகங்களெ வாங்கிப் படிச்சி, பொழுதெக் கழிப்பேன்!” என்று அண்ணா சொல்லி முடிப்பதற்குள்…அண்ணாவின் இணைபிரியாத நண்பர் நகைச்சுவை நாயகர் சி. வி. ராஜ கோபால், “அதனாலெதான் இப்ப நம்ம கருணானந்தம் பிளாட்பாரத்திலேயே நிக்கிது” எனவும், அண்ணாவுடன் வந்திருக்கும் B.V. K. சம்பத். “அது சரிதாண்ணா சிவியார் சொல்றது! நாம தஞ்சாவூர்லெ இறங்காம, தஞ்சாவூர் வழியா வேற எங்காவது போனாக் கூட, நம்ம கருணானந்தம் கரெக்டா பிளாட்பாரத்துக்கு வந்துட்றாரே-” என்றார் வியப்போடு! என்னை முன்னால் வைத்து இவர்கள் ‘தமாஷ்’ பேசிக் கொண்டே, தஞ்சாவூர் ரயிலடியைவிட்டு வெளியே வந்து, நேரே ‘கம்பெனி வீடு’ நோக்கிச் சென்றனர். நான் என் பங்காக என்னுடைய குறையைச் சொல்ல ஆரம்பித்தேன், இதுதான் தக்க தருணமென்று! “நான் ஒருத்தன். தஞ்சாவூர்க்காரன் இருக்கேனே—என்னைப் பார்க்கிறதுக்காகண்ணு அண்ணா எப்பவாவது விசேடமா வந்ததுண்டா?” என்றேன். “அட, நீ தஞ்சாவூர்க்காரன்கிற ஞாபகமே வர்றதில்லியே அய்யா! நீ எப்பவாவது இங்கே இருந்திருக்கியா இதுக்கு முன்னே? ஒன்னை தான் ஈரோட்டிலேயே பார்த்துக்கிறேனே”—உடனே அண்ணா என்னை மடக்க, நான் விடவில்லை. மேலும் தொடர்ந்து “சரி என்னெ விடுங்க. நம்ம டி. கே. சீனிவாசன், ஏ. கே. வேலன், கரந்தை சண்முகவடிவேல், இவுங்களோட பொன்மலை பராங்குசம் : எல்லோருமே தஞ்சாவூரிலே இல்லியா—ஆனா இப்ப கே. ஆர். ஆர். கம்பெனியை தஞ்சாவூர்லெ ஆரம்பிக்கச்சொல்லி, அதுக்காகவே நீங்க. அடிக்கடி தஞ்சாவூர் வர்றிங்க. எப்படியோ, நீங்க. வர்றதிலே எங்களுக்கு மகிழ்ச்சிதான் அண்ணா!” என்று முடித்துக்கொண்டேன். கம்பெனி வீடும் வந்து விட்டது. அது மானோஜி அப்பா வீதியில் பெரிய மாடிக் கட்டடம். வாயிலிலேயே பெருங் கூட்டம். நமது நடிகத் தோழர்கள் அனைவரும் ஆரவாரத்தோடு அண்ணாவை வரவேற்றனர். வாத்தியார் எம். எஸ். முத்துகிருஷ்ணன், நடிகமணி டி. வி. நாராயணசாமி, சிவாஜி கணேசன், பி. எஸ். தட்சணாமூர்த்தி, எஸ். எஸ். சிவகுரியன், வி. எஸ் . நடேசன், ஏ. எம். மருதப்பா, லெட்சுமிபதி. எம். என். கிருஷ்ணன், எஸ். சி. கிருஷ்ணன், டி.என். கருணாகரன், டி. என். கிருஷ்ணன், சிதம்பரம், ஜி. எஸ். மகாலிங்கம், மணி, கடைசியாக Booking clerk இராம. வீரப்பன்…இன்னும் பலர் இருந்தனர். “அண்ணா! புதுநாடகம் கொண்டு வந்துட்டீங்கள் அண்ணா!” எல்லாரும் கோரஸ் பாடினர். “அடுத்த வாரம்!” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு, அண்ணா மாடிக்கு விரைந்தார். வேறென்ன அவசரம்? அப்போது இம்மாதிரி ஓய்வாகச் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சீட்டாட்டம்தான் அண்ணாவுக்குப் பொழுதுபோக்கு! சாப்பிட்டு, நாடகம் பார்த்துவிட்டுத், திரும்ப வந்தபிறகும் தொடர்ந்து சீட்டாட்டம்! “என்னண்ணா இது? துரங்க வேண்டாமா?’ என நான் இரங்கல் மொழியில் கேட்டேன். இனிமே துரங்கினா ரயிலைக் கோட்டை விட்டுவிடுவோம். இப்படியே கொஞ்ச நேரம் விளையாடினா, நேரே மறுபடியும் ரயிலடிக்குப் போயிடலாம். நீ விடிகிற வரைக்கும் என் பக்கத்திலே விழிச்சிக்கிட்டு இருந்தா, ஒனக்கு நாலணா இனாம்” என்று தன் தவற்றுக்கு ஒத்துழைக்க என்னிடம் பேரம் பேசினார் அண்ணா. “சரி வர்றதை விடுவானேன்” என்று பின்னால் உட்கார்ந்து சிகரெட் பற்ற வைத்துக் கொண்டேன். சீட்டாட்டம் எனக்குப் பிடிக்காத சங்கதி, எப்போதுமே! சம்பத்தும் நானும் ஏறக்குறைய செயின்ஸ்மோக்கர்கள் அப்போது! “ஏனய்யா ரெண்டு பேரும் இப்படி ஒயாமெ சிகரெட்டெக் குடிச்சிக் கெட்டுப் போறீங்க?” என்று அண்ணா கடிந்து கொண்டார். நாங்கள் கேட்கவில்லை. ஊதிக்கொண்டுதான் இருந்தோம். அதன் பலனை இரு வருமே அனுபவித்தோமே! சம்பத் அற்ப ஆயுளில் போய் விட்டார். நான் 45 வயதில் சுத்தமாகப் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன் என்பது மட்டுமல்ல; அருகில் யாராவது புகை பிடித்தால் - முடிந்தால் தடுப்பேன், அல்லது விலகிப் போய் விடுவேன்! அந்த அளவுக்கு சிகரெட் புகை எனக்கு வெறுப்பைத் தருகிறது இப்போது. ஆனால், குதிரை ஒடிப் போன பிறகு இலாயத்தை இழுத்து மூடியது போல, உடல் ஆரோக்கியம் கெட்டுப் போன பின்னர் இந்த ஞானோதயம் எதற்குப் பயன்படும்? என்னுடைய அறுபதாவது வயது தொடங்கியபோது தொண்டையில் பயங்கர நோய் வந்துவிட்டதே? காரணம் யாரும் சொல்லாவிட்டாலும், எனக்குப் புரிகிறதே? அண்ணா கண்டித்த போது கேட்காததுதான் காரணம் என்று! வெகு விரைவிலேயே நமது நடிகத் தோழர்களின் நன்மைக்காக அண்ணா ‘ஓர் இரவு’ நாடகம் எழுதித் தந்தார்கள். தஞ்சை மாவட்டம் முழுவதும் அந்நாடகம் காணத் தினமும் தஞ்சை நகருக்குப் படையெடுத்தது புதுமையல்ல. தமிழகமே அங்கே வெள்ளமென விரைந்தது! புகழாதார் யார் “ஓர் இரவு” நாடகத்தை? அப்போது வருகை தந்த கழக முன்னணியினரை நண்பர் இராம. விரப்பனுக்கு அறிமுகம் செய்வது எனக்கு வேலை! ஆனால், அண்ணாவின் “ஒர் இரவு” நாடகம் தஞ்சையில் ராமநாத செட்டியார் ஹாலில் அரங்கேறிய சமயத்தில், முக்கியமான இரு நடிகர்கள் கம்பெனியில் இல்லை. ஒருவர் நடிகமணி டி. வி. நாராயணசாமி, இன்னொருவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அண்ணாவுக்கு அதனால் சற்று மனக்குறை ஏற்பட்டது! எங்கள் தொழிற் சங்கத்தில் சிங்கம் நுழைவு அண்ணா என்னிடம் காஞ்சிபுரத்தில் சொல்லியிருந்த வண்ணம், தஞ்சை ராமநாதன் செட்டியார் மன்றத்துக்குச் சரியாக மாலை 5 மணிக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். வரக்காணோம்! மெல்ல மெல்ல வெளியே வந்து, தெற்கு. நோக்கி நடந்து நடந்து, வண்டிக்காரத் தெரு வந்து விட்டேன். நாகப்பட்டினத்திலிருந்து அண்ணா அந்த வழி யில் தானே வரவேண்டும்! அதோ கார் வந்து விட்டது.1 அண்ணாவின் சம்பிரதாயப்படி ஒரு மணி நேரம் தாமதம். காரை நிறுத்தி ஏறிக் கொண்டேன். 2.6.1957 ஆர். எம். எஸ். ஊழியர்களின் மூன்றாவது மாநில மாநாடு அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கே. துளசி அய்யா வாண்டையார் வரவேற்புக் குழுத்தலைவர். தஞ்சை ஆர். எம்.எஸ். கே. சண்முகம் ஏற்பாடுகளின் பொறுப்பாளர். அப்போது எங்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் P. H. V. S. பாண்டியன், அண்ணா இந்த மாநாட்டுக்கு வரவேண்டுமென்பதில் அளவில்லாத ஒரு பைத்தியமே கொண்டிருந்தார். இத்தனைக்கும் அவர் நமது இயக்கத்தில் நேரடித் தொடர்புடையவரல்லர். அதனாலேயே சென்னைத் தோழர்கள் வஜ்ரவேலு, கோவிந்தராஜன், வீராசாமி போன்றார் இவரை விரும்ப வில்லை எனினும் சுவரொட்டிகள் எல்லாம் அச்சடித்து, அரிய முறையில் விளம்பரங்கள் செய்து, பெருங் கூட்டம் திரட்டியிருந்தோம். மாநாட்டு மேடையில் அப்போதைய காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்களான கிருஷ்ணசாமி கோபாலர், சாமி நாத மேற்கொண்டார் ஆகியோர் உள்ளனர். திருச்சி ஆர். எம். எஸ். ஊழியராயிருந்து கொண்டே அகில இந்திய அனைத்துத் தபால் தந்தி ஊழியர்களுக்கும் ஒப்பற்ற தலை வராகப் பல ஆண்டுகள் வீற்றிருந்த எங்கள் வழிகாட்டி ஏ. பி. துளசிராம் மேடையில். திருச்சி ஆர். எம். எஸ். சார்ட்டராயிருந்த நாவலாசிரியர் நண்பர் அகிலன் என்கிற பி.வி. அகிலாண்டம், மேடையில். இவர்களிருவரையும் அண்ணாவுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். ஏற்கனவே அறிமுகமான காங்கிரஸ் சட்டமன்ற சகாக்களுடன் அண்ணா சகஜமாக உரையாடுகிறார். பல்லாயிரம் பார்வையாளர்களும், சட்டமன்ற உறுப்பின ராகியுள்ள அண்ணா இந்தத் தபால் ஊழியர் மாநாட்டில் என்ன பேசப்போகிறார் என்று ஆவலை முகத்தில் தேக்கி ஆர்வத்துடன் எதிர் நோக்கியுள்ளவர். என்னைத் தனக்குப் பின்புறம் உட்காரச் சொல்லி நான் என்னய்யா பேசுவது? என்கிறார் அண்ணா. நண்பர்களின் வேண்டு கோளின்படி அண்ணாவை அழைத்து வந்தேனே தவிர நானும் அதுவரை எங்கள் தொழிற் சங்கத்தின் தீவிர அலு வலராக இருந்ததில்லை. முன்புறமிருந்த எங்கள் பெரியவர் திரு A.F.T. அவர்களைப் பார்த்துச் சாடை செய்தேன். உடனே இரண்டொன்று குறித்துத் தந்தார். இன்னொரு புறமிருந்த அகிலனும் சில சொன்னார் அண்ணாவிடம். அண்ணாவுக்கு இது போதாதா? எழுந்து நின்றார் . எழுந்த கை தட்டலால் அதிர்ந்தது மண்டபம், தஞ்சை யிலிருந்து கொண்டு, தளபதி C. N. அண்ணாதுரை MA MLA டெல்லியிலுள்ள எங்கள் மத்திய அரசுக்கு அறை கூவல் விடுத்தார். இயந்திரங்கள் பழுதடைந்தால் உடனே ரிப்பேர் செய்கிறோமே. இந்த மனித இயந்திரங்கள் இரவிலும் பகலிலும் உழைத்துத் தேய்ந்து உருக்குலைந்து போகிறார்கள். இவர்களைப் பழுதுபார்க்க வேண்டாமா? இவர்களின் உடல்நலம் பேணிக் காப்பாற்றப்பட வேண்டாமா? இவர்களைச் சார்ந்திருக்கின்ற மனைவி மக்கள் உற்றார் உறவினர் சுற்றத்தார் யாவரும் இவர்களை மதிக்க வேண்டாமா? இவர்கள் ஆரோக்கிய வாழ்வு பாதுகாக்கப்பட,குறைகள் தீர்க்கப்பட, service conditions மேம்பட நிறைய பொருள் தேவை; பணத்துக்கு நாங்கள் எங்கே போவது என்று மத்திய சர்க்கார் சொல்லுமேயானால், அதற்கு உண்டான வழி வகைகளை இவர்களையே கேளுங்கள் உங்களுக்குக் சொல்லித் தருவார்கள். வீண்விரயங்களையும் சேதாரங்களையும் மிச்சப்படுத்துங்கள். ஒட்டைகளை அடையுங்கள். ஊழல் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்துங்கள். இதனால் மிச்சமாகும் பணத்தை இவர்களின் முன்னேற்றத் துக்குச் செலவிடுங்கள்! இவை அனைத்துக்கும் முன்னே-இந்தத் தபால் தந்தித் துறையானது (ulility Service) யூட்டிலிட்டி சர்வீசா (commercial service) கம்மர்ஷியல் சர்வீசா என்பதைத் தெளிவுப்படுத்திவிடுங்கள். அது தெரிந்த பின்பு நாங்களே வழிமுறைகளைத் தெரியப்படுத்துவோம். அண்ணா ஒரு மணி நேரம் பேசினார். ஒழுங்குப்படுத்தப்பட்ட இருகரைகளினூடே ஒடும் தெளிந்த நீரோடை போல, எடுத்துக்கொண்ட தலைப்பினின்றும் ஒதுங்காமல் நகராமல் வழுவாமல் பிசகாமல் பிரச்சினைகளைப் புரிந்து தெரிந்து, தீர்க்கும் மார்க்கம் தெளிவுற வலியுறுத்தினார். அழைக்கச் சொன்னவர்களுக்கும், அழைத்து வந்த எனக்கும் ஏற்பட்ட பூரிப்பும் புளகாங்கிதமும் அளவிட முடியுமா? மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு நான் நன்றி கூட்டம் முடிந்த பின்னர் சிறிது பொழுது தங்குவதற்கு அண்ணாவை ராஜா சத்திரத்துக்கு இட்டுச் சென்றேன். அங்கே நண்பர் பி.சி. கணேசன் B.Sc.,B.T. காத்திருந்தார். அவரை அழைத்து அண்ணாவுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். நீங்கள் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகள் சில வற்றைப் படித்தேன். இப்போது என்ன செய்து கொண் டிருக்கிறீர்கள்?’ என்று உசாவினார் அண்ணா. “திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரி யராக இருக்கிறேன்” “சரி, உங்களால் காஞ்சிபுரம் வந்து தங்க முடியுமா? கருணானந்தம் முன்பே சொல்லியிருப்பாரே! நான் ஒரு ஆங்கிலப் பத்திரிகை ஆரம்பிக்கப் போகிறேன். அதைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.” “இங்கு இருந்து கொண்டே எழுதியனுப்புகிறேனே! இருக்கிற அலுவலை விடுவதற்கு மனமில்லை.” “அப்படியானால், காஞ்சிபுரத்திலே எங்கேயாவது இதே மாதிரி ஆசிரியர் அலுவல் ஏற்பாடு செய்கிறேனே! அப்போது வரலாமல்லவா?” “நான் ஊருக்குப் போய் யோசித்துச் சொல்கிறேன்” என்று பி. சி. கணேசன் விடைபெற்றுப் புறப்பட்டார். ஆங்கிலத்திலும் தமிழிலும் அற்புதமாக எழுதத் தெரிந்தவர். எந்த நேரமும் அறிவுத்தாகமுடைய நண்பர்கள் புடைசூழ, விவாதம் செய்பவர். நடைமுறை யதார்த்த வாழ்வைப் புரிந்து கொள்ளாமல், கற்பனை உலகிலேயே அதிகம் சஞ்சரிப்பவர். அதனால், இவர் அண்ணாவின் அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும், பின்னாளில் சென்னைக்குக் குடியேறினார். அலையும் மனத்தினராய் நிலைபெற முடியாது தவித்தார். திராவிட இயக்கத்தால் அறிமுகமாகிப் பிறகு காங்கிரஸ்காரராக மாறித் திராவிட இயக்கங்களைச் சாடி - மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திரும்பிவந்து-பழைமை விரும்பியாகத் தவறான நெறியில் மறுபடியும் சென்று-இப்போது என்ன கொள்கை என்பதே புரியவில்லை; வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று நினைவூட்ட அவ்வப்போது ஏதோ நூல்கள் வெளியிடுகிறார். அந்தோ! அண்ணா, ராஜாசத்திரத்திலிருந்து பி. சி. கணேசன் புறப்பட்டுப் போனதுமே சொல்லி விட்டார்: “இவர் சரிப்படமாட்டாரய்யா. நாம் போகலாம். நீ எ ன்னிடம் காஞ்சிபுரத்தில் இவரைப் பற்றிச் சொன்னபோதே கொஞ்சம் சந்தேகம் இருந்தது. நேரில் பார்க்கலாம் என்றுதான் உன்னிடம் சொல்லி, இங்கு அழைத்துவர ஏற்பாடு செய்தேன். சரி. பரவாயில்லை. போகலாம்” என்று. எங்கள் மாநிலச் சங்கத்தின் பொதுச் செயலாளராக என்னைத் தேர்ந்தெடுக்கச் சென்னைப் பிரதிநிதிகள் முயன்றனர். அண்ணாவை வழியனுப்பிவிட்டு, அந்தத் தேர்வினின்றும் தப்பித்துக் கொள்ள, நான் அன்றிரவு முழுதும் கரந்தையில் போய் மறைந்து கொண்டேன்! வாழ்க வள்ளுவரும் குறளும்! “நம் வீட்டிலிருக்கிற சின்னக் குழந்தையெ-‘Dining table-ல் வந்து உக்காந்து சாப்பிடப்பா’ எண்ணு கூப்பிட்டா, அது கேக்காது. அது ஒக்காந்திருக்கிற எடத்துக்குத் தாயாரு போயி, சாதத்தை வாயிலே ஊட்டி விட்டா, ரெண்டு மடங்கு தின்னும்” என்று அண்ணா என்னிடம் சொன்ன போது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. “என்னண்ணா இது? திடீருண்ணு குழந்தெ சைக்காலஜி பத்திப் பேசுறீங்க! கையிலெ திருக்குறள் மாதிரி ஏதோ வச்சிருக்கீங்க!” என்று விசாரித்தேன். “இது திருக்குறள் தான்யா! நேத்து நம்ம தோழர் ஒருத்தர் கிட்டெ முக்கியமான, புழக்கத்திலேயிருக்கிற, ஒரு குறளில் பாதியெச் சொல்லி, மீதியைச் சொல்லும்படிக் கேட்டேன். அவரு திருதிருண்ணு முழிக்கிறாருய்யா அதனாலெதான், அவருமாதிரி ஆளுங்ககிட்டே எப்படித் திருக்குறளைக் கொண்டு போய்த் திணிக்கிறதுண்னு யோசிக்கிறேன்!” அண்ணா கவலையுடன் சொன்னார். “நான் ஏதாவது இது சம்பந்தமா செய்யனுமா அண்ணா?” -நான் கேட்டேன் அதே கவலை தொனிக்க. ஆமாய்யா. அடுத்தபடியா தஞ்சாவூர்லெ நம்ம மாவட்ட மாநாடு வருதில்லெ, நீ ரெண்டு நாள் முன்னே அங்கே போயிடு. ஒரு நூறு திருக்குறளை நீயே செலக்ட் பண்ணிக்க. போஸ்டர் டைப்பிலே, அதை வெள்ளைத் தாளிலே ஒரு நானூறு ஐந்நூறு காப்பி பிரிண்ட் பண்ணிக்கோ. அப்புறம், பெரிய ஜவுளிக் கடைகளிலே கேட்டாக் கெடைக்கும். துணி பீஸ்களை மடிப்பதற்கு, நல்ல திக்கான ரெண்டு பவுண்டு அட்டையில்லே, Card board, அதெ உள்ளே வச்சிருப்பாங்க. அதை Cheap பான வெலைக்கு வாங்கலாம். அதை வாங்கி ஒரே சைசாக் Cut பண்ணி, திருக்குறள் வாசகங்களெ அது மேலே ஒட்டி, மாநாட்டுப் பந்தலுக்குக் கால் நடுவாங்க இல்லியா, அதுலே ஆணி அடிச்சி, இதையெல்லாம் ஒவ்வொரு காலுக்கு ஒண்ணா மாட்டிடு, வரக்கூடிய மக்கள் மணிக் கணக்கா சேர்ந்தாப்போலே பந்தலுக்குள்ளே உக்காந்திருக்கறப்போ, ஏதோ நாலு திருக்குறளையாவது அடிக்கடி படிச்சுப் படிச்சு, அது அப்படியே மனப்பாடம் ஆயிடும்!” என்றார், நீண்ட பிரசங்கம் போல, “இது நல்ல ஐடியாதான் அண்ணா! கட்டாயம் இதை நானே செஞ்சுடறேன். நீங்க வந்து பாத்துப் பாராட்டுவீங்க!” எனச் சொல்லி விடை பெற்றேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தஞ்சை மாவட்ட இரண்டாவது மாநாடு தஞ்சாவூரில் நடைபெற்றது. 1954-இல் என்று நினைவு(?) தஞ்சைத் தோழர்களான பெத்தண்ணன், பதி ஆகியோர் வணிகத் துறையிலுள்ள கழகச் செயல் வீரர்கள். எனவே அவர்களை அணுகி, அண்ணாவின் யோசனைகளை எடுத்துச் சொல்லி, திருக்குறள் அச்சடிக்க ஏற்பாடு செய்தேன். அதே போல் கெட்டியான அட்டைத் துண்டுகள் வாங்கி, ஒரே அளவில் தயாரித்துக் கொண்டேன். அண்ணா மாநாட்டுப் பந்தலைப் பார்க்க வருவதற்குள் எல்லாக் கம்பங்களிலும் வள்ளுவர் இருக்க வேண்டுமே! நான் ஒருவனாகவே அந்தப் பணியை மேற்கொண்டேன். “என்னா பிள்ளை! எல்லாம் புதுசா சவுக்குத் தோப்பிலேயே போயி, பச்சையா வெட்டின கம்பு. ஈரமாவே இருக்கு. ஆணி அடிச்சா கஷ்டமில்லாமெ எறங்கும். செய்ங்க!” என்றார் பெத்தண்ணன். ஒரு பெட்டி நிறைய இரண்டங்குல ஆணிகள். பந்து பந்தாய்ச் சணல் கயிறு. ஒரு சுத்தியல். ஒரு கத்தி. ஒரு முக்காலி மொத்தம் 600 கால்கள் நடப்பட்டிருந்ததாகக் கணக்கிட் டேன். தொடங்கினேன் இரவு 8 மணிக்கு. பத்து அல்லது பன்னிரண்டு மணிக்குள் எல்லாத் தூண்களிலும் ஆணி யடித்து மாட்டி விடலாம் என்று தப்புக் கணக்கு போட்டு விட்டேன்; சீக்கிரம் துரங்கப் போகலாம் என! ஒவ்வோரிடமாக நகர்ந்து, ஏறி, இறங்கி, அடித்துக் கட்டி, மாட்டித் தொங்கவிட்டு…… நள்ளிரவு நேரம் ஆன பொழுது, செய்த வேலையைவிட, எஞ்சியுள்ளதே அதிகமா யிருந்தது! கலைஞர் என்னைத் தேடிக் கொண்டு பந்தலுக்கே வந்துவிட்டார். என்ன சார்? நாங்களெல்லாம் நீலவிலாஸ் பங்களாவிலே சண்முக வடிவேல் கூடத் தங்கப் போறோம். நீங்க வல்லியா துரங்க? அய்யய்யோ. என்ன சார் இது? கண்ணு ரெண்டும் ஒரேயடியாகச் சிவந்து கிடக்குது. விடிஞ்சா கூட இந்த வேலையெ உங்களாலெ முடிக்க முடியாது. அதுக்குள்ள ஜுரத்திலெ விழப் போறீங்க. சொல்லிட்டேன்! என்று எச்சரிக்கை விடுத்தவாறே அவரும் போய்விட்டார். மனத்தில் மீண்டும் ஓர் உறுதியும் உத்வேகமும் பிறந்தன. டீ, வெற்றிலை பாக்கு, சிகரெட் உதவியால் சுறுசுறுப்பை ஏற்றிக் கொண்டு, விரைவாகச் செயல்பட்டுப் பணியை நிறைவேற்றினேன். பொழுதும் புலர்ந்தது. போய்ப் படுத்து விட்டேன். மாநாட்டில் எனக்கென்ன வேலை? தி.மு.க. ஆட்சி ஏற்பட்டபோது, கலைஞர் போக்கு வரத்து அமைச்சராக இருந்தாரல்லவா? அன்று சென்னை மாநகரில் ஒடிக் கொண்டிருந்த (பல்லவன் அப்போதில்லை) பேருந்துகளில் திருக்குறளை எழுதிவைக்க வேண்டும் எனத் தீர்மானித்த கலைஞர், என்னிடம் 200 திருக்குறள் தேர்ந் தெடுக்கும் பணியை ஒப்படைத்தார். நான் எழுதித் தந்தேன். அப்போது இயக்குநராயிருந்த திரு. டி. வி. வெங்கட்ராமன் அய். ஏ. எஸ். அவற்றை ஒரு நூலாக அச்சியற்றினார். பேருந்துக்கு ஒவ்வொன்றாகத் திருக்குறளை எழுதச் செய்தார். அண்ணா முதல்வரானதும், திரு. வேணுகோபால் சர்மாவை அவரிடம் அறிமுகப்படுத்தினோம். அவர் தீட்டிய திருவள்ளுவர் ஒவியத்துக்கு அரசு அங்கீகாரம் வழங்கிடச் செய்தோம். பேருந்துகளில் அந்தப் படமும் வைக்கப்பட்டது. இதில் கூட என் பங்கு இருந்திருக்கிறது. எப்படியென்றால், புகழ் செறிந்த இந்தத் திருவள்ளுவர் உருவத்தை, மாயவரத்தில் சில மாதங்கள் தங்கியிருந்த போதுதான் வரைந்தார் வேணுகோபால் சர்மா. எனக்கும் நண்பராகையால், அடிக்கடி அழைத்துக் காண்பித்துக் கருத்து அறிவார் அங்கேயே. பிற்காலத்தில் என்னிடம் மிக்க அன்போடும் நன்றியோடும் பழகினார் சர்மா. அண்ணாவுக்குத் திருக்குறளில் இருந்த ஈடுபாட்டை நன்குணர்ந்த கலைஞர், கடற்கரைச் சாலையில் திருவள்ளுவர் சிலை அமைத்தார். உலகிலேயே ஈடும் எடுப்புமில்லாத நினைவுச் சின்னமாகச் சாதனை படைத்த குறுகிய கால அளவில், வள்ளுவர் கோட்டத்தைச் சமைத்தார். ஆசியாவிலேயே பெரியதொரு அரங்கம் இங்குதானே உள்ளது! தேருக்குள் திருவள்ளுவர் உருவம்! இந்தப் பணி நிறைவெய்தியபோது, இதன் உள்ளே செல்லும் உரிமையைக் கலைஞருக்கு அளிக்கவில்லை மத்திய அரசு. அதனால், இந்த வள்ளுவர் கோட்டம் நிறுவிடப் பெரும்பணியாற்றிய நானும், இதற்குள் இதுவரை நுழைந்திடவில்லை! எனினும், அண்ணன் வாழ்ந்த நுங்கம்பாக்கத்திலேயே வள்ளுவரும் வாழ்கிறாரே-என்ன பொருத்தம்! மாணாக்கரின் பேரெழுச்சி எங்களுடைய திராவிட மாணவர் கழகத்தைக் கும்பகோணத்தில் 1.12.1943 அன்று அண்ணா துவக்கி வைத்தார். 5.12.43 “திராவிட நாடு” இதழில் ‘திராவிடர் கழகம்’ என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் எழுதினார். நீதிக் கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என மாற்றி யமைக்க வேண்டுமென அண்ணா அப்போதே முனைந்து விட்டார். திராவிட மாணவர் கழகத்தைத் துவக்கியதுடன் நாங்கள் சும்மா இருந்துவிடவில்லை. மாநில முழுதும் உள்ள நமது கொள்கைப் பற்று உடைய மாணவர்களைத் திரட்டிக் காண்பிக்க வேண்டும் என எண்ணினோம். முதலிலேயே பெரியாரை அழைத்து, நிகழ்ச்சி ஏதும் நடத்தினால், மாணவர்கள் அரசியலில் ஈடுபடுவதாகப் புரளி செய்வார்கள் என்ற அச்சத்தை, அய்யாவிடமே தெரிவித்தோம். அதனால், பெரியார் இல்லாமல், முதலாவது மாணவர் மாநாடு கூட்டினோம். இப்போது நினைத்தாலும் வியப்பாக இருக்கிறது. இரண்டு நாள் இரவும் பகலும்-அதாவது 1943 பிப்ரவரி 19, 20 குடந்தை வாணி விலாஸ் தியேட்டரில் மாநாடு. தவமணி இராசனும் நானும் அலைந்து திரிந்து வசூலித்த 200 ரூபாய்தான் செலவு. இரண்டு நாளும் மைக்செட் வைத்தவருக்கு ரூ. 12/- தந்தோம். அண்ணா மூன்று நாள் எங்களோடு தங்கியிருந்தார். பெரிய திருவிழா போல் கூட்டம். இடைவிடாத சொற் பொழிவுகள். புதுக்கோட்டை திவானாக அப்போது இருந்த கான்பகதூர் பி. கலிபுல்லா அவர்கள், ரயிலில் தனி சலூனில் வந்து, ஸ்டேஷனிலிருந்து ஒரு மிகப் பெரிய காரில் வந்து இறங்கியதைக் கண்டதும் எங்களுக்குப் பூரிப்பு அடங்க வெகு நேரமாயிற்று. அண்ணா எங்களை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் கை குலுக்கி மகிழ்வு தெரிவித்தார், அரியதோர் உரை நிகழ்த்தினார். தாருல் இஸ்லாம் ஆசிரியர் பா. தாவுத்ஷா பி.ஏ., பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் முத்தையா, கு. மு. அண்ணல் தங்கோ, நடிகமணி டி. வி. நாராயணசாமி, நாவலர் பாரதியாரின் மகன் லட்சுமிரதன் பாரதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கோ. சி. பெரியசாமிப் புலவர், வி. அ. அரங்கசாமிப் புலவர், புலவர் நா. மு. மாணிக்கம் ஆகிய தமிழாசிரியர்கள் பங்கேற்றனர். மாணவர்களா யிருந்த டார்ப்பிடோ சனார்த்தனம் பி.ஏ., இரா. நெடுஞ் செழியன், க. அன்பழகன், கே. ஏ. மதியழகன் இவர்களைத் தவிர அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து இரெ. இளம் வழுதி, இரா. செழியன், பூ, கணேசன், மா. நன்னன், கி. தியாகராசன், த. மா. திருநாவுக்கரசு, திருவையாறு புலவர் கல்லூரி குழந்தையா, முருகையன் ஆகியோர் கலந்து கொண்டனர் சிறப்பாக. அண்ணா முதல் நாளும் மாணவர் நெடுஞ்செழியன் இரண்டாம் நாளும் தலைமை ஏற்றனர். இரண்டு நாட்களி லும் அண்ணா விளக்கவுரை நிகழ்த்தியபோது, எல்லா மாணவர்களும் குறிப்பெடுத்துக் கொண்டனர். ஆரியர் யார், திராவிடர் யார், திராவிட நாடு ஏன்-என்பன போன்ற தெளிவுரைகள் வழங்கினார் அண்ணா. பெரியார் எங்கள் மாநாட்டுக்கு அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியைப் படிக்க என்னால் முடியவில்லை. அப்போது பெரியாரின் எழுத்து (Handwriting) எனக்குப் பழகவில்லை. அதனால் க. அன்பழகனிடம் தந்து படிக்கச் சொன்னேன், அவரும் படித்தார்! “அன்புள்ள தவமணிராசன் அவர்களுக்கு ஈ. வெ. ரா. வணக்கம். தங்கள் 16-ந் தேதி கடிதமும் அழைப்பும் இன்று கிடைத்தது. மிகுதியும் நன்றி செலுத்துகிறேன். தாங்கள் கூட்டியிருக்கும் மாநாடு, திராவிட மாணவர் கழகம் மிகவும் அவசியமானது என்பதுடன் திராவிட நாடு முழுவதும் இம்மாதிரி கழகங்களும் மாநாடுகளும் ஏற்படும்படி செய்ய வேண்டியது உங்கள் போன்றோரின் கடமை யாகும் என்பதை மிகவும் பரிவோடு தெரிவித்துக் கொள்ளுகிறேன். சமீபத்தில் வரப்போகும் ஏப்ரல் வீவு நாட்களில் சில மாணவர்கள் ஒன்று சேர்ந்து திராவிட நாடு முழுவதும் சுற்றிக் கழகத்தின் இலட்சியத்தைப் பரப்பிப் பிரச்சாரம் செய்ய வேண்டியதும் முக்கிய கடமையாகும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன். புதிய திராவிட நாட்டை ஆக்கவும், ஆக்க வேலை செய்யவும், திராவிடர்களுக்கு இன்று மாணவர்கள்தான் இருக்கின்றார்கள். மாணவர் களால் ஆனால் ஆனதுதான். இல்லாவிட்டால் நம்ப இடமில்லை. பெரியவர்களுக்கு வேறு பல பற்றுகள் கவர்ந்து கொண்டதால், ஒழிவில்லாமல் போய்விட்டது. மாநாடு வெற்றியுடன் நடைபெற்று, வீரத்துடன் தொண்டாற்றப் பயன்படுமாக. தங்கள் அன்புள்ள, ஈ. வெ. ராமசாமி இந்தக் கடிதத்தை அண்ணா எடுத்துச் சென்று, 3-3-44 “திராவிட நாடு” இதழில் வெளியிட்டார். மேலும், அங்கு சொற்பொழிவாற்றிய மாணவர்களின் உரைகளை, அவர் களையே எழுதித் தரச்சொல்வி, அவற்றையும் ‘திராவிட நாடு’ இதழில் வெளியிட்டார், தொடர்ச்சியாகச் சில வாரங்கள். இந்த மாநாட்டை நாங்கள் நடத்திக் கொண்டிருக்கும் போதே, எங்கள் கல்லூரி நிர்வாகம் எங்களை மிரட்டத் தொடங்கி விட்டது. Students should not take active part in party or communal politics என்று, சென்னை கல்விச் சட்டம் ஒன்றைக் காண்பித்து, அதில் எங்களிடம் கையெழுத்து வாங்க, எங்கள் Vice principal மார்க்க சகாயம் செட்டியாரே நேரில் வந்தார். அண்ணாவிடம் யோசனை கேட்டேன். “மாநாடு முடிந்த பிற்பாடு கையெழுத்துப் போடுவதாகச் சொல்லிவிடு!” என்றார் அண்ணா. இந்த மாநாட்டின் வெற்றி பெரிதும் பெரியாரைக் கவர்ந்துவிட்டது. அடுத்த வாரம் கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனில் நான் அய்யாவைச் சந்தித்தபோது மகிழ்வுடன் பேசி, “கஜேத்திரனை எல்லா ஊருக்கும் அனுப்பறேன். காலேஜ் மாணவர்கள் எத்தனை பேர் முடிந்தாலும் ஈரோட்டுக்கு வாருங்கள்” என்றார். பெரியாரையும் பின்னர் எங்கள் கல்லூரிக்கே அழைத்து 1.4.44 அன்று சொற்பெருக்காற்றிடச் செய்தோம். புராணப் பிரசங்கம் செய்யத் தொடங்கியிருந்த கிருபானந்த வாரியார், தமது கதாகாலட்சேபத்தின் ஊடே ‘இங்கே பெரியார், என்று ஒரு நச்சு ஆறு ஒடுகிறது. அதை ஒடவிடக் கூடாது’ என்பதாகப் பேசினாராம். இவரை இம்மாதிரிப் பேசவிடக் கூடாது என்று முதன்முதலாகக் குடந்தை மாணவர்கள் முடிவு செய்தோம்! “வாரியாரே விளக்குமின்” என்ற தலைப்பில் 16 கேள்விகளை நான் எழுதி அச்சிட்டேன். கும்பேசுவரன் கோயிலுக்குள் ஏராளமான தொண்டர்களுடன் சென்று, கேள்வித் தாளை வாரியாரிடம் தந்து, பதில் சொல்லிவிட்டுப் பிறகு பேசுமாறு சொன்னோம், மறுத்தார். அவ்வளவுதான்! பெரிய குழப்பம்!! வாரியார் போன இடம் தெரியவில்லை! முன்னும் பின்னும் பாதுகாப்புடன் வெளியேறி விட்டார்! பிரசங்கம் செய்யவில்லை! அண்ணாவிடம் எங்கள் பிரதாபத்தைச் சொல்லி, அந்தக் கேள்வித்தாளையும் கொடுத்தேன். “நன்றாகவே எழுதியிருக்கிறாய். இதற்கு எந்த ஆத்திகனாலும் ஒழுங்காகப் பதில் சொல்ல முடியாதுதான்!” என்று பாராட்டியதோடு, அதை அப்படியே “திராவிடநாடு” ஏட்டிலும் பிரசுரித்தார் அண்ணா. மாணவர் எழுச்சிக்கு மூல காரணகர்த்தாவும் உற்ற துணைவரும் அண்ணா தானே! அனுமதி வழங்கப்பட்டது, வா! திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் அறிஞர் அண்ணா அவர்களுக்குக் கருணானந்தம் எழுதிக் கொண்ட விண்ணப்பம். நாளை ஈரோட்டில் நடைபெற இருக்கும் பொதுக்குழுக் கூட்டத்தில் நானும் ஒரு பார்வை யாளராக உள்ளே அமர்ந்து நிகழ்ச்சிகளைக் கவனிக்க எனக்கு அனுமதி அளிக்க வேண்டுகிறேன். என்னுடன் மாயவரம் சின்னய்யா மகன் காந்தியும் வருவார். தங்கள் அன்புள்ள S. கருணானந்தம் (முகாம் திருச்சி). பெறுநர் அறிஞர் அண்ணா அவர்கள், தி.மு.க. பொதுச் செயலாளர், மே|பா தோழர் E.V.K. சம்பத், பழைய ரயில்வே ஸ்டேஷன், ஈரோடு-இவ்வகையிலான ஒரு Inlaind letter எழுதித் திருச்சியில் RMS வண்டியில் தபாலில் சேர்த்தேன். அது அடுத்தநாள் காலையில் ஈரோடு சேர்ந்துவிடும். நானும் காந்தியும் திருச்சியில் இருக்கிறோம். இன்றிரவு இங்கென்ன அலுவல் எங்களுக்கு? நண்பர் எம். எஸ். மணி பங்கேற்கும் “அரும்பு” என்ற நாடகம் தேவர் ஹாலில் நடைபெற இருக்கிறது; மு கருணாநிதி தலைமையில்; நடிகர் எம். ஜி. ராம்சந்தர் முன்னிலையில்-என்று விளம்பரங்கள் செய்யப் பெற்றுள்ளன. இதைப் பார்த்துவிட்டுக், கலைஞருடன் சேர்ந்து ஈரோடு செல்வதெனத் திட்டம் தீட்டித் திருச்சிக்கு வந்திருக்கிறோம். அண்ணா அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகம் துவக்கியவுடனே, கோவை மாவட்டத்தில் பெரியதொரு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்கள். அத்தருணத் தில் நான் ஒருநாள் ஈரோடு சென்றிருந்தன். சம்பத்து வீட்டுக்கு அண்ணா அவர்கள் வந்தபோது, காலை மலரும் வேளை. உடன் நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ராமசாமியும், பெத்தாம்பாளையம் பழனிச்சாமியும் இருந்தனர். “இந்த நேரத்தில் எப்படி அண்ணா வந்தீங்க?” என்றேன் வியப்புடன். “நீ என்னய்யா நெனச்சே என்னை! தேர்தல் கூட்டம் மாதிரி விடிய விடியப் பொதுக்கூட்டம் நடக்குது இப்போ. சலிக்காமெ பேசிக்கிட்டுவர்றோம்” என்று சொல்லி, அணிந்திருந்த சில்க் சட்டையைக் கழற்றினார். “எப்போ அண்ணா சில்க்சட்டை போட ஆரம்பிச்சிங்க?“ என்றதற்கு “அட, நீ ஒண்ணு. நம்ம ராமசாமி யோட சட்டை. பயங்கர டூர்லே என் சட்டையெல்லாம் அழுக்காப் போச்சு. இங்கதான் துவைக்கணும்!” என்றார். “பாத்திங்களாண்ணா! எங்கே சுத்தினாலும், அழுக்கைப் போக்க ஈரோட்டுக்குத்தான் வந்தாகனும் நீங்க! ஆமா ; இவ்வளவு சுறுசுறுப்பை இப்ப காட்டுற நீங்க, இதிலே பத்திலே ஒரு பங்கைப் போன வருஷம் காட்டியிருந் தீங்களானா, அய்யா எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார். பிரிஞ்சி போற நெலமையும் வந்திருக்காதே!” என்னும் போது என் கண்கள் கலங்கி, நீர் முத்துகள் தோன்றின. “அது கிடக்கட்டும்! அய்யாவைப் பார்த்தியா! என்ன சொன்னார்?” “பாத்தேண்ணா! ஆனா, ஒங்களைப்பத்தி அவர்கிட்டே சொல்றதில்லே நான்…… ?“ பழைய நினைவுகளில் முழ்கியவனாய், 2, 3 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றவன், “அரும்பு” நாடக இறுதியில் கலைஞர் மேடைக்குப் போனதும், சுயபிரக்ஞை பெற்றேன். என்னுடைய நெருங்கிய நண்பர் எம். ஜி. ஆர். புரட்சி நடிகர். மேலே கதராடை அணிந்திருக்கிறாரே தவிர, அவர் உள்ளம் கருப்புச் சட்டை தான் அணிந்திருக்கிறது. கோவையில் பல மாதங்கள் ஒன்றாகத் தங்கி, உண்டு, உறங்கி, குதிரை வண்டியில் சென்று, சென்ட்ரல் ஸ்டுடியோ வில் எங்கள் பொழுதைச் செலவிட்டிருக்கிறோம். தேசிய உணர்வு படைத்த அவர், எனது திராவிடக் கொள்கைகளை அப்போது ஏற்றுக்கொள்ளா விட்டாலும், பெருந்தன்மையுடன் கேட்டுக் கொள்ளுவார். அதன் பயனாக அவர் இப்போது நம்முடன் நெருங்கி வந்திருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் அவர் தீவிரமாக இணையும் நாள் அதிக தூரத்தில் இல்லை. அந்த நாள் எனக்கு ஒரு வெற்றித் திருநாள் ஆகும்!” என்ற போக்கில் தலைமையுரை அமைந்தது. இரண்டு ஆண்டுகளில் அவர் கழகத்தில் சேரும் மனப்பக்குவம் பெற்றவராய், 1953-ல் லால்குடியில் அன்பில் ஏற்பாட்டில் நடைபெற்ற திருச்சி மாவட்ட இரண்டாவது தி.மு.க. மாநாட்டில் பங்கேற்றார். அப்பொழுது சிதம்பரத்தில் வில்லாளன் ஏற்பாட்டில் நடந்த தென்னார்க்காடு மாவட்ட இரண்டாவது தி.மு.க. மாநாட்டில் கண்காட்சியைத் திறந்து வைத்தார் எம்.ஜி.ஆர் அவர்கள். திருச்சியிலிருந்து பின்னிரவில் புறப்பட்ட ரயிலில் ஏறி ஈரோடு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். திரைப்படங்களில் பார்த்த எம். ஜி. ராம்சந்தர் என்ற நடிகரை எண்ணிப் பார்க்கிறேன். எங்களுக்கெல்லாம் தெரியும் காலகட்டத்தில், நமது இயக்க மேடைகளில் முதன்முதல் ஏறிய நடிகர், நமது நடிகமணி டி. வி. நாராயணசாமி. அவர் அப்போது சில பாடல்களும் பாடுவதுண்டு. அண்ணா “சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்துராஜ்ஜியம்” என்ற ஒரு வரலாற்று நாடகத்தை எழுதியபோது, அதற்கு முன்பே “சந்திரோதயம்” எனும் சமூக நாடகத்தை அண்ணா தமிழகத்தில் ஒரு சுற்று நடத்திவிட்டார். சிவாஜி ஆரிய சூழ்ச்சிக்கு அடிபணிந்தானாயினும், அவன் மனச் சாட்சி அவனை எப்படி இடித்துக் காண்பித்திருக்கும் என்ற எண்ணத்துக்கு ஒர் உருவமாய் அண்ணா, சந்திரமோகன் பாத்திரம் படைத்தார்கள் கற்பனையாக உணர்ச்சிப் பிழம்பான அவ்வேடத்திற்கு,அன்றே பொருத்தமானவராக D. W. N, விளங்கினார். சிவாஜி பாத்திரத்துக்கு நடிகர் தேர்வு நடந்த சமயத்தில், எம். ஜி. ஆர். பொருத்தமா யிருப்பாரென அவரை D. V .N. அணுகியபோது M. G. R, இயலாமை தெரிவித்து விட்டதாக, D. W. N. என்னிடமே சொன்னது உண்டு. அதன் பிறகே அண்ணா அதுவரை பெண்வேடமிட்டுவந்த ஒருவரை சிவாஜி பாத்திரத்துக்குத் தேர்ந்தெடுத்துத் தயாரித்தார் - அவர் பெயரே சிவாஜி கணேசனாய் மாறிச் சரித்திரம் படைத்தது தமிழகத்தில் -ஏன்? உலகத்தில்-என்பது கண்கூடான உண்மை யன்றோ!…… ஈரோட்டில் இறங்கிச் சம்பத்து வீடு சென்றோம். அருகிலேயே பந்தலிட்டு, நாற்புறமும் அடைப்பு. அங்குதான் பொதுக்குழு. 1951-ல் அது போதுமானதாயிருந்தது. சம்பத்து வீட்டில் ஏராளமான கோழிகள் உயிரை விட்டுக் கொண்டிருந்தன. பின்னால் பிரியாணி தேக்சாக்கள். ஈ. வெ. கி. செல்வனுடன் சேர்ந்து நான் அவற்றைப் பார்த்துக் கொண்டே நின்றபோது, “யாருய்யா லெட்டர் போட்டுப் பர்மிஷன் கேட்டது. பர்மிஷன் கிராண்டட் (Permission granted.) வா உள்ளே! ஏன்யா; நீ கூட இங்கே அனுமதி கேட்டுதான் வரணுமா?” என்றார் அண்ணா; கையில் என் கடிதம் இருந்ததைப் பார்த்தேன். “இல்லையண்ணா! இதுதான் நேர்மையான முறை, காரணம், நான் அரசு ஊழியன், தி. மு. க. உறுப்பினர் இல்லை. மேலும், அய்யாவிடம் இன்னும் தொடர்பு வைத் திருப்பவன். அய்யாவின் ஒற்றனாயிருப்பேனோ என்று, என்னைச் சரியாகப் புரியாதவர் யாராவது இங்கு நெனைக் கலாமில்லையா?“ என்றேன். சிறிது நேரம்தான் பொதுக் குழு நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதற்குள் கோழி பிரியாணி வாசனை மூக்கில் அவஸ்தை உண்டாக்கவே, அண்ணாவிடம் சாடை செய்துவிட்டு, வெளியே போய்விட்டேன். பொதுக் குழுவில் நடந்த மீதிச்செய்திகளை நமது என். வி. நடராசனிடம் கேட்டால் சொல்லி விடுவார் என் காதோடு! குற்றாலம் கண்டேனா? “குற்றாலத்தைப் பற்றி ஒரு கவிதை எழுதிக் கொடு. பத்திரிக்கையில் வெளியிடவேணும்” என்று அண்ணா என்னிடம் கேட்டார்கள். “குற்றாலத்துக்கும் நமக்கும் என்ன தொடர்பு? அப்படியே இருந்தாலும், இப்பொழுது அதை நமது இதழில் பிரசுரிக்க வேண்டிய கட்டாயத் தேவை என்ன?” என்று கேட்க நினைத்தேன். ஆனால், கேட்கச் சந்தர்ப்பம் அனுகூலமாயில்லை. “சரியண்ணா! எழுதித் தருகிறேன்” எனக் கூறிவிட்டு, ஊருக்குத் திரும்பினேன். அண்ணா கொடுத்த இந்தத் தலைப்பு என்னை மிகவும் சோதனைக்குள்ளாக்கி விட்டது! காரணம், குற்றாலத்தைப் பற்றிய அனுபவம் எனக்குக் கிடையாது! ஒரு முறை கலைஞ ரோடு சென்று,ஓர் இரவு அங்கே தங்க நேர்ந்தது. அப்போது கூட விடுதியின் குளியலறையில், வெந்நீரில் குளித்தேன்; அருவிக்குச் செல்லவில்லை. அண்ணா சொன்னதனால், குற்றாலத்துக்கு நேரில் சென்று, பார்த்து வந்து எழுதலாம். ஆனால், இது ஒரு கவிஞனுடைய கற்பனைத் திறனுக்கு இழுக்கு அல்லவா? நீள யோசித்தேன்! மாயூரத்தில் என்னுடைய அலுவலக நண்பன் நாக ராசனிடம் விசாரித்தால் என்ன? அவர் குற்றாலம் அருகில் உள்ள தென்காசி ஆர். எம்.எஸ். அலுவலகத்தில் வேலை பார்த்திருக்கிறார். இந்த இடத்தில் அலுவலில் இருந்த போதுதான், அகிலன் ‘பாவை விளக்கு’ நாவல் எழுதியதாகக் கேள்விப்பட்டிருந்தேன். நாசராசன் சொன்ன செய்திகளின் அடிப்படையில் எழுதத் தொடங்கினேன். மாயூரத்திலிருந்து சென்னைக்குப் பத்து மணி நேரம் நான் வேலை செய்யும் ரயிலின் ரன்னிங் டைம்! சாவகாச மாகச் சிந்தித்து, ஒடும்போது பென்சிலால் எழுதிக் கொண்டே வந்து, எக்மோரில் இறங்கியதும் பேனாவால் காப்பி செய்துவிடுவது வழக்கம். இந்தக் குற்றாலம் கண்டேன்’ என்ற செய்யுளையும் அவ்வாறே எழுதினேன். காணாததைக் கண்டதாகப் பொய் சொன்னாலும், பொருத்தமாகவே இருக்கிறதைப் பார்க்க முடியும்:– தனிநடந்தேன் நீண்டவழி; தள்ளாடிச் சோர்ந்தேன்! இனி நடக்க அஞ்சி, இருகால்கள் கெஞ்சுகையில்… சிந்தை குளிப்பாட்டும் சில்லென்ற மென்தென்றல் வந்தென் உடல்வருடி வாட்டத்தை ஒட்டிடவே;- நேர்கிமிர்ந்து பார்த்தேன், கிகரில்லா ஒவியந்தான்! யார் வரவை நோக்கும் இளமங்கை என் எதிரில்? மார்பகத்தை மூடுகின்ற வண்ணத் துகில்தானோ கூர்முகட்டைப் போர்த்திக் குவியும் முகிற்கூட்டம்! வெண்சங்கு போல மிளிரும் கழுத்தினின்று கண்கவரும் நெஞ்சுக் கணவாயின் மீதொளிரும் தென்பாண்டி நன்முத்தைச் சேர்த்த சரக்தானோ முன்பாக வீழ்ந்து முறுவலிக்குங் தேனருவி! குற்றாலத்திலேயே நீண்ட காலம் குடியிருந்தவன் எழுதியது போலவே தோன்றுகிறதல்லவா? இடையில் சில வரிகளுக்கு அப்பால் தொடர்கிறேன்:– விந்தைமிக ஆல விழுதிறங்கும் பான்மையோ, முந்திக் கவிழ்ந்திட்ட முன்கை விரலைந்தோ, பண்டைத் திராவிடத்தாய்ப் பாலில் கிளைத் தெழுந்த வண்டமிழும் கன்னடமும் வாழ்தெலுங்கும் மேன்மை குன்றா மலையாளம் கொஞ்சும் துளுவும் போல ஒன்றிற் சுரந்தும் உருவிற் பலவாகி, ஆடிச் சலசலக்கும் அய்ந்தருவிக் காட்சிதான் தேடிக் களிக்கும் தெவிட்டாச் சுவையன்றோ? குற்றால அருவியிலும் கொள்கை மணம் வீசுகிறதா? பிறகு சிலவரிகள்; இறுதியாக முடிக்கும்போது ஒருமைப்பா டென்னும் பெருமை முலாம்பூசி, வெள்ளியினாற் செய்த வெகுநீளச் சங்கிலியால் அள்ளியிந்தத் தென்னாட்டை ஆரப் பிணைத்தது போல்… ஓங்குமலை மீதிருந்து ஓடி வரும் வெள்ளருவி நீங்கா கினைவொன்றை செஞ்சில் நிறுத்தியதே! நீங்களங்கு செல்லும் நிலைமை நேர்ந்திட்டால்… தாங்கிடுவீர் என்கருத்தைச் சார்ந்து! என்று எழுதினேன். இவ்வளவு கற்பனை ஊற்றும் அருவியாய்ப் பொழிய, நான் சிரமப்பட்டு எழுதி எடுத்துக் கொண்டு போய் அண்ணாவிடம் கொடுத்தபின்னர் “ஏன் அண்ணா! குற்றாலம் பற்றி இப்போது எழுத வேண்டிய அவசியம் என்ன?” என்று ஆவல் மீதுறக் கேட்டேன். அண்ணா சொல்லிய பதில் என் ஆர்வக்கோட்டையைத் தரைமட்டமாகத் தகர்த்து எறிந்தது. என்ன? “ஒண்ணுமில்லேய்யா! குற்றாலம் அய்ந்தருவியோட (Block) பிளாக் ஒண்னு சும்மா கிடைச்சுது. அதை உபயோகப்படுத்தலாமேண்ணுதான் சும்மா ஒன்னைக் கவிதை எழுதச் சொன்னேன்” என்றார் அண்ணா சிரிப்புக்கு இடையே, “இது நல்லா இருக்கு அண்ணா! குதிரைச் சவுக்கு சும்மா கிடைச்சதுண்ணு ஒருத்தன் குதிரை வாங்கிய கதைபோல” எனச்சொல்லி, நானும் ஒர் அசட்டுச் சிரிப்பை உதிர்த்தேன். எப்படி அண்ணாவின் சிக்கனம்! கவிஞர் கண்ணதாசன், “அண்ணா (Border) பார்டர்” என்று கேலி செய்வார். அது என்னவெனில், அண்ணா, பத்திரிக்கையில் தாம் வெளியிடும் கட்டுரைத் தலைப்புகளுக்குத், தனியே பிளாக் செய்யமாட்டார். பார்டர்களை அழகாக அடுக்கி, இடையில் தலைப்புக்கான எழுத்துகளை (Compose) அச்சுக்கோத்துப் போடச் சொல்லிவிடுவார். இவை யாவும் பெரியாரின் எளிய வழிமுறைகளாகும். மாயூரம் மாநாடு மறக்கவொண்ணாதது! “ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது” என்று ஒரு பழமொழி மாயவரம் நகரில் மட்டும் வழங்கி வந்தது. இதைப் பழமொழி என்று சொல்வதைவிடப் புதுமொழி என்றே சொல்வது பொருந்தும். ஏனெனில் நீண்ட நாள் இந்தவூர் மாயவரம் என்றே அழைக்கப்பட்டது. அண்ணா என்னைப் பார்க்கும்போது “ஏன்யா, அது என்ன பெயர் மாயவரம் என்று? மாயமான வரமா அல்லது மாயவரமா” (மாய்வதற்கு வரமா?) என்று கேட்பதுண்டு. “இல்லை யண்ணா, மயிலாடுதுறை என்ற அழகான தமிழ்ச் சொல்லை, மயூரம் என்று பார்ப்பனர்கள் வடமொழிக்கு மாற்றி, இந்தவூர் சிவன் பெயரையும் மயூரநாதர் எனச் சூட்டிவிட்டனர். வேதாரண்யம் எப்படி வந்தது ஆரியர் சூழ்ச்சியால்? காடுகளில் வாழ்ந்தபோது பாடிய வேதங் களுக்கும் நம் தமிழகத்துக் காடுகட்கும் என்ன தொடர்பு? இதைச் சிந்திக்காமல், நம்மவர்களிலேயே சிலர் அதைத் தமிழ்ப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு, திருமறைக்காடு என்கிறார்கள். ஆனால் உண்மை என்ன? அங்குள்ள காடுகளில் இன்றும் மான்களும் மட்டக் குதிரைகளும் நிரம்ப உள்ளன. மரை என்றால் மான், மட்டக் குதிரை . இவற்றைத்தான் குறிக்கும். மரைக்காடு என்ற நியாயமான பெயரை எப்படி யெல்லாம் மாற்றி விட்டார்கள்! காவிரிக் கரையையொட்டி ஆடுதுறை, திருஆடுதுறை உள்ளதுபோல மயில் ஆடுதுறை இருந்தது. இதற்காகப் போராடிப் போராடிச் சட்டமன்ற உறுப்பினர் கிட்டப்பா முளைக் கீரையில் பூண்டு சேர்த்துக் கடைவது வெண்ணெய்போல இருக்கும் என்று சொல் வார்களே அது -சீரக ரசம் மணத்துடன் தெளிவாகத் தோன்றும். ஆனால் சுவை மிகுதி. தண்ணிர் போலவே அண்ணா சூடாக அதைத் தம்ளரில் ஊற்றச் சொல்லிக் குடிப்பார்கள். சுண்டைக்காய் வற்றல், மணித்தக் காளி வற்றல் சேர்த்து, பூண்டு ஏராளமாய்ப் போட்டு, நிறைய மிளகு அரைத்து ஊற்றிக் காரமான ஒரு வற்றல் குழம்பு வைப்பதில் என் துணைவியார் ஸ்பெஷலிஸ்ட். நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ஆர். ஒருமுறை இதை ஒரு டப்பாவில் கேட்டு வாங்கிச் சென்று, 2, 3 நாள் வைத்திருந்து சாப்பிட்டார். அதேபோல அண்ணா, பொன்னுவேலுவை வலுக் கட்டாயமாக அழைத்து வந்து, எங்கள் வீட்டில் சைவ உணவு சாப்பிட வைத்தார்கள். மிகவும் (Relaxed) ரிலாக்ஸ் டாக, வெறும் பனியன் அணிந்து, திண்ணையில் உட்கார்ந்து, நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள் அண்ணா. கேட்டு மகிழ்ந்தோம் யாவரும்! தலைப்பு, முந்தியநாள் இரவு பொதுக் கூட்டம் முடித்துவிட்டு, மாயூரத்தில் ஒரு திரைப்படம் பார்த்தது பற்றி. படம் (பேர் நினைவில்லை) பார்க்கும்போதே அண்ணா குறிப்பிட்டார்கள் கவலையுடன். அந்தப் படத்தில் முக்கிய நடிகர்கள் இரண்டு பேரும் பார்ப்பனர். “இவுங்களெப் பார்த்தியா அய்யா. ஹீரோவா நடிக்கிறாங்களே. ஒரு ஆளுக்குக் கண்ணு இருக்கிற இடமே தெரியலே. இன்னொரு ஆள் மூக்கால பேசுறான். ஆனா ரெண்டுபேரும் பேசறது அசல் அக்ரஹாரப் பேச்சு. போட்டுள்ளது நாட்டுப்புற இளைஞர் வேடம். இதையெல் லாம் ஜனங்க ஏத்துக்கிறாங்க. ஆனா ஜனங்க மேல தப்பில்லே. கிடெச்ச எடத்தை நம்ம ஆளுங்க கோட்டை விட்டுட்டாங்களே!” என்றார் அண்ணா என்னிடம் தியேட்டரிலேயே. வளைவுகள் வாசகங்கள் விளம்பரங்கள் செய்திருந்தேன். டெல்லியில் தபால் தந்தி துணைநிலை அமைச்சரான B. பகவதியும், உள்துறை துணையமைச்சரான திருமதி மரகதம் சந்திரசேகரும், அண்ணாவுடன் அளாவளாவி, சொற்பொழிவும் ஆற்றினர். போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் S. R. பாஷ்யமும் பங்கேற்றார் இங்கே! அப்போது சென்னை மாநில முதல்வர் காமராஜர். அவரை நான் ஒரு முறைதான் சந்தித்துப் பேசியுள்ளேன். இந்த மாநாட்டுக்கு முந்திய மாதம் அவர் மாயூரம் வந்திருந்தபோது,என் தெருவிலுள்ள நகராட்சிப் பயணியர் விடுதியில் சந்தித்து, எமது மாநாட்டுக்கு வருமாறு அழைத் தேன். நிற்க வைத்துத்தான் பேசினார். “ஏதப்பா நேரம்?” என்றார். உங்கள் பெயரைப் போட்டுக் கொள்கிறேன். நேரம் கிடைத்தால் வாருங்கள்! அண்ணா நிச்சயம் கலந்துகொள்வார்” என்று சொல்லிவிட்டு வந்தேன். அவர் வரவில்லை! பொதுக்கூட்டம் மிகமிகப் பிரம்மாண்டமாயிருந்தது; டெல்லி அமைச்சருக்கும், எங்கள் பொதுச் செயலாளருக் கும் புதுமையான அனுபவம். அஞ்சல் துறையின் அனைத்து ஊழியர்களுக்கும் பொதுச் செயலாளராயிருந்து அறிவின் முத்திரையை இந்தியா முழுவதும் பொறித்துள்ள எங்கள் அண்ணன் A. S. ராஜன் M.A. அங்கு சொற்பொழிவாற்றினார். அண்ணாவின் பேருரையில், RMS ஊழியர்கள் ஒடுகின்ற வண்டிகளில் ஆடுகின்ற பெட்டிகளில் ஆடாமல் நின்றபடிக் கண்களை மூடாமல் பணியாற்றும் அவலமான நிலைமைகளைக் கவலையுடன் எடுத்துக் கூறி, பணியின் தரம் உயரவும், அஞ்சற் பிரிப்போரின் துயரம் குறையவும்: RMS Mail Vanகளை ஏர் கண்டிஷன் செய்யவேண்டும் என்று, மத்திய அரசுக்கு, அங்கு வந்துள்ள இரு அமைச்சர்கள் வாயிலாக எடுத்துரைத்து வாதாடினார்கள், என்னைப் பொறுத்தவரையில் மாநாட்டின் Climax என நான் எண்ணித் திட்டமிட்டுச் செய்துவந்த ஒன்று, அன்றிரவு மாணவர் விடுதித் திறந்தவெளியில், காவிரி யாற்றின் கரையோரத்தில் நடத்திய நிலாவொளி விருந்து. Moonlight dinner ஆகும். அண்ணாவுடன் நீங்களும் இந்த விருந்தில் கலந்துகொண்டு அருந்தி மகிழ வேண்டும்; எங்களைச் சிறப்பிக்க வேண்டும்! என்று சென்னையி லேயே கலைஞரைக் கேட்டுக் கொண்டேன். அவ்வாறே தஞ்சை மாவட்டச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த அன்னார், இறுதியாகக் குத்தாலம் பொதுக்கூட்டத்தில் பேசி முடித்து, விரைந்துவந்து, எங்களைப் பெருமைப் படுத்தினார். வட்ட வடிவத்தில் நாற்காலி மேசைகளை அமைத்து, எங்கள் ஊழியர்களும், சங்கத் தலைவர்களும் ஒருங்கே அமர்ந்து அண்ணாவுடனும் கலைஞருடனும் உரையாடி மகிழ்ந்து களித்தனர் நெடுநேரம்! இந்த நிலவொளி விருந்து என் நினைவைவிட்டு நீங்காததால் 1973ல் பூம்புகாரில் முதலாவது சித்திரைப் பெருவிழா நிறைவு நிகழ்ச்சியாக ஒரு நிலவொளி விருந்து நடத்தினேன். சித்திரான்னங்களுடன், மீன் குழம்பு மீன்வறுவலும் உண்டு. இசைச் சித்தர் சிதம்பரம் ஜெயராமன் தேனிசை செவிக்கு விருந்து. இதுவரையில் எங்கள் மாநிலச் சங்கத்தின் பொறுப்பு களில் சிக்கிக் கொள்ளாமல் ஒதுங்கி மறைந்த என்னைப் பிடிவாதமாக மாநிலச் சங்கத்தின் துணைத்தலைவராக இங்கு தேர்ந்தெடுத்தனர். அண்ணாவும் கலைஞரும் மயிலாடுதுறை மாநாட்டினின்று அப்போது விடைபெற்றனர். ஆயினும், மீண்டும் அழைக்கும்போது வருவதாக உறுதியளித்துச் சென்றனர், RMS சார்ட்டர் பெருமக்கள் காலமெல்லாம் இத்தகைய பெருமையினை எண்ணி எண்ணி, இன்னமும் பாராட்டி டிவகையில் மிதக்கின்றனர். விமானப் பயணத்தால் விளைந்தது! “என்ன கருணானந்தம், பம்பாய் போய்வந்தாயாமே, என்னண்டே சொல்லவேயில்லயே?” இவ்வாறு அண்ணா என்னிடம் கேட்கும்படி நேர்ந்ததற்காக உண்மையிலேயே வருந்தினேன். தவற்றுக்கு மன்னிப்புக் கோரும் தன்மையில், “ஆமாண்ணா திடீருண்ணு எனக்கு விமானப் பயணத்துக்கு ஒரு சான்ஸ் கிடைச் சுது. நீங்க அந்தச் சமயம் சென்னையிலே இல்லே. அதனாலெ சொல்லாமப் போயி, படாதபாடு பட்டேன் அண்ணா!” எனத் துயரத்துடன் பதிலுரைத்தேன். 1976ல் கலைஞர் தலைமையில் முதன் முதலாகச் சென்னையில் அண்ணா கவியரங்கம் ஏற்பாடு செய்தோம். வேலூர் நாராயணன், வக்கீல் நா.கணபதி, ஜி.லட்சுமணன், சீத்தாபதி ஆகியோர் தூண்டுதலில், பிரமாதமாகச் செய் தேன்; நானும் பாடினேன்! இந்த அண்ணா கவியரங்க நிகழ்ச்சிகள் தொடர்ந்தபோது, ஓரளவு வெளியுலகம் அறிந்திருந்த அப்துர்ரகுமான், குருவிக்கரம்பை சண்முகம், தி. கு. நடராசன், முருகுசுந்தரம், வா. மு. சேதுராமன் போன்றோர் மேலும் புகழ் ஈட்டினர். புதியவர்கள் சிலரையும் மேடையேற்றினேன். பின்னாட்களில் முத்துலிங்கம்: வைரமுத்து, இளந்தேவன் போன்ற புதிய கவிஞர்கள், கலைஞரின் அறிமுகவரிகளால் மக்கள் மனத்தில் இடம் பெற்றனர். இந்தச் சூழ்நிலையில்தான், ஒருநாள், என் தம்பி பரமசிவம், பம்பாயிலிருந்து வந்திருந்த B. V. ரங்கநாத் என்பவரை அழைத்து வந்தான்; ’இவர் பாரதியார் சங்கம் அமைத்திருக்கிறார், கவியரங்கம் நடத்த விரும்புகிறார் என்று! கலைஞர் தலைமையில், அமைச்சர் மா. முத்துசாமி, நான், S. D. சுந்தரம், அப்துர் ரகுமான், கம்பனடிப் பொடி சா. கணேசன் ஆகியோர் பங்கேற்பதாக ஏற்பாடு. எனக்குத் தலைப்பு பாரதிதாசன். அமைச்சர்கள் விமானத் தில் செல்ல முடியும். மற்ற கவிஞர்களுக்கு ரயிலில் போக வர வசதியாகச் செலவுக்குப் பணம் கொடுக்க ஒப்புக் கொண்டார்கள். கலைஞர் என்னிடம் “நீங்க இதுவரை பிளேனில் போனதில்லியே! மேற்கொண்டு ஆகிற செலவை நான் போட்டுக் கொள்கிறேன். என்னோடு பிளேனில் வாங்க” என்று அழைக்கவும், அப்போதே பறக்கத் தொடங்கி விட்டேன். எங்களோடு விமானத்தில் டைரக்டர் பஞ்சு, எஸ். எஸ். ஆர். ஆகியோரும் வந்தனர். கலைஞருடைய டேப்ரிக்கார்டரை என் தோளில் தொங்க விட்டிருந்தேன். அப்போதெல்லாம் ‘மைக்’ தனியாக இருக்கும். பம்பாய் விமான நிலையத்தில் போய் இறங்கியதும், முதன் முறையாகப் பம்பாயைப் பார்ப்பவ னாகையால், வியப்பு மேலிட நடந்த போது, அந்த மைக்” கீழே நழுவியது எனக்குத் தெரியவில்லை. தங்குமிடம் சென்றவுடனே தெரிந்து போயிற்று! கலைஞரிடம் சொல்ல அஞ்சி, நண்பர் ரங்கநாத்துடன் பல இடங்களுக்கும் அலைந்து-அன்று ஞாயிற்றுக்கிழமை வேறு-புதிதாக ‘மைக்’ ஒன்று வாங்கி வந்தேன். அதற்குள், எங்களுடன் வந்திருந்த செக்யூரிட்டி ஆபீசரிடம் நான் ரகசியமாகச் சொல்லியிருந்த விஷயம், கலைஞருக்குத் தெரிந்து போயிற்று! காரணம், காணாமற்போன அதே மைக் பம்பாய் ஏர்போட்டில் கிடைத்து விட்டதாம். கலைஞர் என்னை மிகவும் கேலி செய்தார்! கவியரங்கத்தில் நான் பாடும்போது, குறுக்கே இலட்சிய நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரன் பந்தலில் நுழைய-அவ்வளவுதான் தமிழ் மக்கள் ரசனை! கவனம் எங்கேயோ போய் விடவே-நான் முடித்துக் கொண்டேன் பாடல்களை, இந்தச் செய்திகளெல்லாம் முழுமையாக அண்ணாவின் காதுக்குப் போய்விட்டது போலும்! “நீ ஏய்யா கவியரங்கத் திலே நேரடியாக் கலந்துக்கிறே? நீயே படிப்பது எடு படாது! உன் குரல்வளம் போதாது! அதனாலெ, நீ எழுதிக் கொடுத்து, வேற யாரையாவது விட்டுப் படிக்கச் சொல்லு, இனிமே! பிரமாதமா அதுக்கு வரவேற்பு இருக்கும்!“ என்றார் அண்ணா. அண்ணாவின் இந்த அறிவுரையை சிரமேற் கொண்டு, அதன்பின் எந்தக் கவியரங்கத்திலும் நான் கலந்துகொள்ளவே யில்லை. அமைத்து, மேடை யேற்றி, அறிமுகம் செய்யும் நன்றி எதிர்பாராத நற்பணி யைத் தொடர்ந்து ஆற்றி வந்தேன். துவக்க நாட்களில் கூடத் தவமணி இராசனும் நானும்-நாங்கள் மேடை யேறிப் பேசுவதைவிட, மற்றவர்களுக்கு மேடையமைத்து ஏற்பாடுகள் செய்து பேச வைப்பதைப் பெருமையாகக் கருதியவர்களாவோம். “சரியண்ணா-இனிமே நான் கவியரங்கத்துக்குப் போறதில்லெ. இப்ப கூட நான் பம்பாய் போன காரணம் விமானப் பயண ஆசைதான்!” என்றேன், அசடு வழிய! “விமானத்திலேதானே போகணும், சரி. இப்ப மோரீஷஸ் தீவுக்குப் போறீயா?” எனக் கேட்டபோது, அண்ணா கேலி மொழி புகன்றதாக எண்ணவில்லை நான்! விழித்தேன் புரியாததால்!! “இப்ப, நம்ம சத்தியவாணிமுத்து அமைச்சர், மோரீஸ் நாட்டுக்கு, ஒரு டெலிகேஷன்ல போறாங்க. Short Visit தான். அவுங்ககூட நீயும் போறதானா, நானே அனுப்பறேன்!” “அப்படி ஒண்ணும் ஆசையில்லெ அண்ணா என் மனசிலெ. இங்கேயே இருந்து, உங்களெயெல்லாம் பாத்து கிட்டிருந்தாலே எனக்குப் போதும்!” “இல்லய்யா. மெய்யாவே உன்னை எங்காவது வெளி நாட்டுக்கு அனுப்பறேன்! ஆனா ஒண்னு ஏதாவது ஒரே ஒரு நாட்டுக்குதான் போக முடியும்னா-அது இங்லண்டா தான் இருக்கணும்!” “ஏண்ணா! அமெரிக்கா, ஜப்பான் இதெல்லாம் வளந்த நாடுகளாச்சே?” “வளர்ச்சிண்ணா, எதிலே? இங்கிலாந்து உலகத்துக்கே மொழியையும், நாகரிகத்தையும், ஜனநாயகத்தையும் கத்துக் குடுத்த நாடு. முடி மன்னர்களும் வாழும்போது அவர்களை மதிச்சி, மரியாதை செலுத்துறதிலே குறைச்சல் இல்லாம, குடியாட்சித் தத் துவத்தையும் கோண ல் இல்லாம ஏத்துக்கிட்டிருக்கிற நாடு: அதிக நாகரிகம் என்கிற பேரால அநாகரிகத்தை வளர்க்காத நல்ல நாடு! அங்கே ஒரு தடவை போய்வந்தாப்போதும். உலகம் பூரா சுத்தின அறிவு கெடைக்கும்” -என்று, அண்ணா ஆங்கில நாட்டின் பெருமையை அளவிட்டு, அழகுற விளக்கினார்கள். “அருமையான கருத்தை இப்ப தெரிஞ்சிக்கிட்டேன் அண்ணா!’ என்று சீரியசாகச் சொல்லிவிட்டு, இப்ப என்னை ஒரு நொடியிலே லண்டன் ஏர்போர்ட்டிலே கொண்டுபோய் இறக்கி விட்டுட்டிங்க, பாஸ்போர்ட் இல்லாமெ. இது போதும் அண்ணா!” என நகைப்புக் கிடையே நவின்றேன். நான் ‘மைக்’ தொலைத்த நிகழ்ச்சியைப் “பட்டிக் காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்த்தது போலஎன்பது பழமொழி-ஆனால், கருணானந்தம் பம்பாய் விமான நிலையம் பார்த்தது போல-என்பது புதுமொழி” யெனத் தனது கவியரங்க முன்னுரையில் இணைத்திட்ட கலைஞர், அதனைச் சுவைபட அண்ணா அவர்களிடமும் எடுத்துக் கூறி, என்னை Laughing Stock ஆக்கினார் என்பதைப் புரிந்து கொண்டேன். அண்ணாவிடம் விடை பெற்றுப் புறப்பட்டேன் கலைஞருடன்; அவர் வீடு நோக்கித்தான்! நழுவிப் போன நாடக மேடை வாடிக்கையாக உடன்வரும் வேடிக்கை நண்பர் சி. வி. ராஜகோபாலுக்குப் பதில் இந்த முறை அண்ணா மாயூரம் வந்தபோது அவருடன் டி. கே. பொன்னு வேலுவைக் கண்டதும், வியப்பாயிருந்தது எனக்கு! அதிகம் பேசாமல், ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு, ஒரு பக்கம் ஒதுங்கக் கூடியவர் அவர். அண்ணா K. P. சண்முக சுந்தரம், பேராசிரியர் கந்தசாமி, டாக்டர் சந்திர சேகரன் சகோதரர்களின் வீட்டில் தங்கினார்கள். அங்கே கண்டிப்பாக மரக்கறி உணவுதான். ஒரே நாளில் பொன்னு வேலுவுக்கு bore அடித்து விட்டதாம். மெதுவாக “என்னிடம் வந்து “என்னங்க கவிஞர்! மாயவரம் வந்தால், கவிஞர் வீட்லெ வரால் மீன் குழம்பு ரொம்ப Famous என்று கேள்விப்பட்டேன். எப்ப உங்க வீட்லெ சாப்பாடு?” என்று கிசுகிசுத்தார். இதைக் கவனித்து விட்டார் அண்ணா. “என்ன கருணானந்தம்! பொன்னுவேலுவுக்கு என்ன வேணுமாம்? non விஜிடேரியன் சாப்பாடா? நீ கொடுத்து விடாதே! நான் சொல்றேன்; நாளைக்கு மதியம் உங்க வீட்லெ எங்களுக்குச் சைவ சாப்பாடு போடணும்! வத்தக் குழம்பு, ரசம், பருப்புத் துவையல், கீரை இந்தமாதிரி-உன் wife சில ஸ்பெஷல் அய்ட்டம்ஸ் செய்வாங்க இல்லியா-அதெல்லாம் செய்யச் சொல்லு: அதென்ன பொன்னுவேலு. உனக்கு அப்படி ஒரு பிடிவாதம், அவுங்க வீட்டுச் சைவ சாப்பாடு ரொம்பப் பிரமாதமாயிருக்கும்! மீன் சமையல் செய்யச் சொன்னா, நமக்காக, ஆனா, அவுங்க இஷ்டத்துக்கு மாறாக, ஆள்வச்சி செய்வாங்க, பேசாம இரு!” என்று கடிந்து கொண்டார் அண்ணா. முளைக் கீரையில் பூண்டு சேர்த்துக் கடைவது வெண்ணெய்போல இருக்கும் என்று சொல்வார்களே அது -சீரக ரசம் மணத்துடன் தெளிவாகத் தோன்றும், ஆனால் சுவை மிகுதி. தண்ணீர் போலவே அண்ணா சூடாக அதைத் தம்ளரில் ஊற்றச் சொல்லிக் குடிப்பார்கள். சுண்டைக்காய் வற்றல், மணித்தக்காளி வற்றல் சேர்த்து, பூண்டு ஏராளமாய்ப் போட்டு, நிறைய மிளகு அரைத்து ஊற்றிக் காரமான ஒரு வற்றல் குழம்பு வைப்பதில் என் துணைவியார் ஸ்பெஷலிஸ்ட். நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ஆர். ஒருமுறை இதை ஒரு டப்பாவில் கேட்டு வாங்கிச் சென்று, 2, 3 நாள் வைத்திருந்து சாப்பிட்டார். அதேபோல அண்ணா, பொன்னுவேலுவை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து, எங்கள் வீட்டில் சைவ உணவு சாப்பிட வைத்தார்கள். மிகவும் (Relaxed) ரிலாக்ஸ்டாக, வெறும் பனியன் அணிந்து, திண்ணையில் உட்கார்ந்து, நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள் அண்ணா. கேட்டு மகிழ்ந்தோம் யாவரும்! தலைப்பு, முந்தியநாள் இரவு பொதுக் கூட்டம் முடித்துவிட்டு, மாயூரத்தில் ஒரு திரைப்படம் பார்த்தது பற்றி, படம் (பேர் நினைவில்லை) பார்க்கும்போதே அண்ணா குறிப்பிட்டார்கள் கவலையுடன், அந்தப் படத்தில் முக்கிய நடிகர்கள் இரண்டு பேரும் பார்ப்பனர். “இவுங்களெப் பார்த்தியா அய்யா. ஹீரோவா நடிக்கிறாங்களே. ஒரு ஆளுக்குக் கண்ணு இருக்கிற இடமே தெரியலே. இன்னொரு ஆள் மூக்கால பேசுறான். ஆனா ரெண்டுபேரும் பேசறது அசல் அக்ரஹாரப் பேச்சு. போட்டுள்ளது நாட்டுப்புற இளைஞர் வேடம். இதையெல் லாம் ஜனங்க ஏத்துக்கிறாங்க. ஆனா ஜனங்க மேல தப்பில்லே. கிடெச்ச எடத்தை நம்ம ஆளுங்க கோட்டை விட்டுட்டாங்களே!” என்றார் அண்ணா என்னிடம் தியேட்டரிலேயே. இன்று என் வீட்டுத் திண்ணையில் அதே சப்ஜெக்ட் தொடர்ந்தது:- ஒருகாலத்தில் Stage நம் ஆட்கள் கையில்தானே இருந்தது! பெரிய பெரிய நாடகக் கம்பெனிகள்-நவாப் ராஜமாணிக்கம், டி. கே. எஸ். சகோதரர்கள், பிறகு சக்தி நாடக சபா, என். எஸ் . கே. நாடக சபா, கே. ஆர். ஆர். நாடக மன்றம், தேவி நாடக சபா, வைரம் நாடக சபா, எம். ஆர். ராதா மன்றத்தார், எம். ஜி. ஆர். நாடக மன்றம், எஸ். எஸ். ஆர். நாடக மன்றம், சிவாஜி கணேசன் நாடகங் கள்-என்று பார்ப்பனரல்லாத தமிழ் நடிகர்கள் தமிழகத்து நாடக மேடைகளில் கொடிகட்டிப் பறந்தார்கள். சினிமாவளரத் தொடங்கியபோது கூட, எம். கே. தியாகஜபாகவதர், பி. யூ, சின்னப்பா, பிறகு கே. ஆர். ராமசாமி இவர்களெல்லாம் பாடி நடித்தவர்கள். அதற்கும் அப்புறம் எம்.ஜி ராமச்சந்திரன், எஸ். எஸ். ராஜேந்திரன், சிவாஜிகணேசன் நடிப்பிலே தலைசிறந்து விளங்கினார்கள்! ஆனால், ஆனால், இன்றோ? நாடக மேடை அவர்கள் கையிலே! அனுபவமே இல் வாதவர்களைச் சினிமா நடிகராக்கி உயர்த்திவிட ஒரு கூட்டம் கட்டுப்பாடாக வேலை செய்கிறது. நம்மவர்களில் பலர் தாங்களாகவே கெட்ட பழக்க வழக்கங்களால் வீணாகி விட்டனர். ஆகவே நம் நண்பர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டுக் கலைத்துறைக்கே சம்பந்தமில்லாதவர்கள் உள்ளே நுழைந்து விட்டனர். நாமும் வேறு வழியில்லாமல் இதுதான் தமிழ்த் திரைப்படம் என்று, பார்க்க வேண்டியதாகி விட்டது……” அண்ணா காரில் ஏறும்போது பொன்னுவேலு என்னிடம் சொல்கிறார்:- “கவிஞர்! எங்கே நான் மறுபடி யும் உங்களிடம் மீன் குழம்பு சாப்பாடு கேட்டுவிடுவேனோ என்றுதான், அண்ணா இன்றைக்கு ஒரு Diversion கொடுத் துட்டார் என்று நினைக்கிறேன். Anyhow ஒரு நல்ல Serious Subject பற்றி இன்று ஆழமாகச் சிந்திக்கும்படி செய்துட்டார். Thank you வருகிறேன்” என்று அவரும் புறப்பட்டார். அண்ணா விடைபெற்றுச் சென்றபோது, முகத்தில் கவலை படர்ந்த தோற்றம் தென்பட்டது. என் வீட்டுப் பிள்ளைகள் ராசகோபால், ராணி, மாதவி, குலோத் துங்கன் நால்வருமே அதுவரையில் சாப்பிடாமலிருந்து, அண்ணாவின் பொருள் செறிந்த உரையாடலைக் கேட்டு மகிழ்வுற்றனர். சென்னையில் பொறித்த சின்னம் எங்கள் RMS ஊழியர்களின் எட்டாவது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடந்தபோது எனக்குத் தவைவர் கிரீடம் சூட்டிவிட்டார்கள். அதில் கலந்துகொண்ட விழுப்புரம் நகராட்சி உறுப்பினர் எஸ். இராகவானந்தம் இதற்காகத்தன் வீட்டில் விருந்தளித்து மகிழ்ந்தார் எனக்கு. இக்காரணத்தில் அடுத்த ஆண்டு 4.1.1966 முதல் மூன்று நாட்கள், சென்னையில் எங்கள் ஒன்பதாவது மாநில மாநாட்டை மிகச் சிறப்போடும் சீரோடும் நடத்திக் கொண்டாடினோம். எங்குமில்லாத புதுமையாக முதல் நாளும் மூன்றாவது நாளும் பொதுக் கூட்டங்கள் நடத்தி னோம். முதல் நாள் பொதுக்கூட்டத்திற்கு அண்ணாவை அழைத்தேன். தயங்காமல் ஒத்துக் கொண்டார்கள். மூன்றாவது நாளில் கலைஞர் கலந்து கொண்டார். அப்போது என் நண்பர் மைனர் மோசஸ் சென்னை நகர மேயராகப் பெருமையுடன் வீற்றிருந்த நேரம். நாள் தவறாமல் மாலைநேரங்களில் அவர் அண்ணாவையும் கலைஞரையும் சந்திக்க வருவார். அவரிடம் பேசி, சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான ரெட்ஹில்ஸ் விடுதி ஒன்றை அமர்த்திக் கொண்டேன். தமிழ்நாடெங்கிலு மிருந்து வரும் பிரதிநிதிகள் கூட்டம் 3 நாளும் அங்கே செங்குன்றத்தில் வசதியாக எவ்வித இடையூறுமின்றி என் தலைமையில் நடந்தது. சாப்பாட்டுக்கான அரிசி காய்கறி மளிகை சாமான்கள் சென்னையிலேயே வாங்கிச் சென்றேன். நண்பர் மீசை கோபாலசாமி மூலமாக ஒரு சமையல் அய்யர். அருமையான எளிமையான உணவும் சிற்றுண்டியும் குறித்த நேரத்தில் வழங்கப்பட்டன. என்னைத் தலைமை பீடத்தில் உட்காரச் சொல்லிவிட்டு, என் பணிகளையும் சேர்த்து என் துணைத் தலைவர் எஸ். நாகலிங்கம், பொருளாளர் வீராசாமி, மாநிலச் செயலாளர் நம்மாழ்வார் ஆகியோர் பார்த்துக் கொள்வார்கள். விவாதங்கள் சூடாகவும் சுவையாகவும் இரவில் நெடுநேரம் வரை நடக்கும். அப்படியானால் ஆர். எம். எஸ். இலாக்கா அவ்வளவு முக்கியமானதா? இந்தக் கேள்விக்கு ஒரு மாஜிஸ்ட்ரேட் பதில் சொல்கிறார்: 1960 ஜூலை மாதம் மாயூரம் குற்றவியல் நீதிபதி கோர்ட்டில் கைதியாக அவர் முன் நான் நிற்கிறேன். “நீங்கள்தான் ஸ்ட்ரைக் கைத் துரண்டி விட்டதில் முக்கியமானவர் என்கிறார்கள். என்ன சொல்லுகிறீர்கள்?” கேட்பவர் நீதிபதி. “நான் துண்ட வில்லை. எங்கள் அனைத்திந்திய சங்கம் டெல்லியில் முறைப்படி ஸ்ட்ரைக் நோட்டீஸ் கொடுத்து, வேலை நிறுத்தம் செய்யுமாறு உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டது. சங்கக் கட்டுப்பாட்டுக்கு இணங்க எல்லாரும் வேலை நிறுத்தம் செய்தோம்.” என் பதில் இது. “சரி. பேப்பர்களில் ‘வேலை நிறுத்தம் வெற்றி பெறவில்லை. தபால் ஊழியர்கள் வேலைக் குத் திரும்பி விட்டனர்’-என்று செய்தி போடுகிறார்கள். ஆனால் RMS ஊழியர்கள் மட்டும் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்து வருகிறீர்கள். RMS இல்லாவிட்டால் தபால் இலாக்காவே இயங்காது என்பதை நானே நிதரிசனமாக உணர்கிறேன். ஒரு நாளைக்கு எனக்கு 30, 40 தபால் வருவது வழக்கம். ஆனால் ஒரு வாரமாக தினம் ஒன்று இரண்டுதான் வருகிறது. அதனால், அரசு உங்கள்மேல் குற்றம்சாட்டுவது நியாயமே என்று புரிகிறது. என்றாலும் உங்களை ஜாமீனில் விடுதலை செய்கிறேன்-” என்று , இரண்டு நாள் போலீஸ் ஸ்டேஷனில் ரிமாண்டில் இருந்த என்னை விடுவித்தார். மரத்துக்கு அடியில் மறைந்துகிடக்கும் வேர்போல RMS ஊழியம். இலை காய் கனிதான் தபால்துறை. எல்லாம் சேர்ந்தால்தானே மரம்? அண்ணா அவர்கள் எங்கள் தொண்டினை உணர்ந்திருந்த காரணத்தால், நான் அழைத்தபோதெல்லாம் வந்து சிறப்பித்தார்கள். 4.1.66 சென்னை மவுண்ட்ரோடு தபால் நிலையத்துக்குப் பின்புறம் அதாவது போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் அலுவலக வளாகத்தில் மேடை அமைத் திருந்தோம். (அப்போது யாருக்குத் தெரியும் இது அண்ணாசாலை அஞ்சல் நிலையம் என மாறும் என்பது!) அன்றைய கூட்டம் என் தலைமையில். நண்பர் முஸ்லிம்லீக் தலைவரான ஏ. கே. ஏ. அப்துஸ்சமது, தேசியவாதி T. செங்கல்வராயன், அஞ்சல்துறை இயக்குநர் டி. ஆர். சங்கரன், ஏ. பி. துளசிராம் ஆகியோர் மேடையில் வந்து அமர்ந்துவிட்டனர். கூட்டம் துவங்க வேண்டிய நேரம். அண்ணாவை மட்டும் காணோம்! “நான் நேரே கூட்டத்துக்கு வந்துவிடுகிறேன். நீ கவலைப்படாமல் இரு!” என்று உறுதி சொல்லியிருந்தார் அண்ணா என்னிடம். என்னை ஏமாற்ற மாட்டார் என்ற நம்பிக்கை உண்டு. ஆனாலும் காஞ்சியினின்று வர ஒருமணி அல்லது ஒன்றரை மணிநேரம் போதுமே: இன்னும் காணோமே! பதைப்பு-படபடப்பு-பதற்றம்-நடுக்கம்-பயம்-திகில்-அடுத்து மயக்கந்தான் பாக்கி! P.M.G. அலுவலகத்தில் Returned letter பிரிவினில் உள்ள நம் இயக்க நண்பர் G. லட்சுமணன் துடிதுடிப்போடு மேலே போய் Phone-ல் விசாரிக்கிறார். அண்ணா காஞ்சியை விட்டுப் புறப்பட்டு விட்டாராம். ஆனால் இந்நேரம் வந்திருக்கவேண்டுமே! ஆ! இதோ வந்து விட்டார்!… சரியாக ஒரு மணிநேரம் தாமதமாக வந்து இறங்கி, மன்னிப்புக் கோரும் தோரணையில் “வண்டி ரிப்பேராகி விட்டதய்யா வழியில்” என்கிறார் அண்ணா என்னிடம். பத்திரிகையாளர்கள் என்றுமில்லாத திரு நாளாக நிறையப்பேர் வருகை புரிந்தது அதிசயமே அன்று. காத்திருந்தது அதனிலும் பெரிய அதிசயம்! “நானும் நீண்ட நாட்களாக உங்களைப் பார்த்து வருகிறேன். முன்பு சொன்ன அதே குறைகளை இப்போதும் சொல்கிறீர்கள். எந்தப் பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது. அதனால், கோரிக்கைகளை நீங்கள் அரசாங்கத்திடம் எடுத்துச் சொல்லும் முறை சரியில்லை என்று கருதுகிறேன். ஆகவே பின்னால் நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம் என்ற தைரியத்துடன், நீங்கள் புரட்சி செய்யுங்கள்!” என்று அண்ணா எங்கள்மீது பொங்கிடும் அக்கறை உணர்வால் சிங்கநாதம் செய்தார். 6.1.66 அன்று சென்னை சென்ட்ரல் ஸ்ஷேனில் உள்ள பெரிய RMS அலுவலகத்தில், என் தலைமையில் நடை பெற்ற நிறைவு விழாப் பொதுக் கூட்டத்திலும், கலைஞர் பேசும்போதும் இந்த பாணியில் எங்கள் கோரிக்கைகளுக்காக வாதாடினார். எங்கள் தொழிற்சங்க வரலாற்றிலேயே, இந்த இரு கூட்டங்களின் செய்திகள், சொற்பொழிவுகள், பிரச்னைகள் வெளியான அளவு, வேறு எப்போதும் பத்திரிகைகளில் பிரசுரமானது கிடையாது. அந்த அளவு மக்கள் கவனத்தைக் கவர, நாங்கள் எதிர்பார்த்தவாறே, சென்னை மாநாடு எங்களுக்கு ஒளிவிளக்காக வழிகாட்ட, அண்ணா உறுதுணை புரிந்தார்கள்! அத்தான்! திராவிட நாடு வேண்டும்! அண்ணா முதலமைச்சர் பொறுப்பேற்றவுடனே, வெளியிலிருந்து யாரையாவது நேர்முக உதவியாளராக நியமிக்கலாம் என்று சிந்திக்கப்பட்ட நேரத்தில், ப. புகழேந்தி அங்கே இருந்தாராம். எப்படியோ அந்தச் சமயத்தில் நான் அங்கு இல்லை. அண்ணா சொல்லியிருக்கிறார்கள்- “யாரையாவது போடுவதென்றால், நம்ம கருணானந்தம் அல்லது புகழேந்தி - இந்த மாதிரி ஆட்களைத்தான் போடணும். ஏன்னா, இவுங்க எப்பவுமே எதையும் எதிர்பார்த்து, நம்மகூட இருக்கலெ! இவுங்களாலெ எனக்கு எந்த பிராப்ளமும் ஏற்படாது!” என்று. அதன் பிறகு, நண்பர் கஜேந்திரனைப் போட்டு, அவரால் அண்ணாவுக்குப் பெருமையா சிறுமையா? உதவியா உபத்திரவமா? என்பது விவாதத்துக்குரிய பிரச்சினையானது! சில நாள் கழித்து ஒருமுறை அண்ணா என்னிடம் நேராகவே கேட்டார்கள்:- “ஏய்யா! இப்ப, செய்தித் துறைக்கு ஒரு டைரக்டர் போடணும். நீ வர்றியா?” என்று. “இல்லையண்ணா! நீங்க முதலமைச்சரா இருக்கறதையும், மற்ற நம்ம தோழர்கள் அமைச்சரா யிருக்கறதையும், இப்ப நான் இருக்கிற தொலைவிலேயே இருந்து பார்க்கத்தான் நான் விரும்புறேன். ரொம்ப நெருங்கி வந்துட்டா, இந்த மரியாதை இருக்காது! என்னை மன்னிச்சுடுங்க அண்ணா!” என்று பவ்யமாகப் பகர்ந்தேன். “நீ இல்லேன்னா, நம்ம மாறன் அல்லது செல்வம் இவுங்களைப் போடலாம். பத்திரிகை அனுபவ முள்ளவர்கள்தான் பயன்படுவாங்க!” என்று அண்ணா சொன்னதன் மூலம், என்னைக் காப்பாற்றினார்களே, அது போதும் எனக்கு. என்னைப் பொறுத்தவரையில் நான் என்றைக்கும் சுயமரியாதைக்காரன். 1952 முதல் முழுமையாக தி.மு.க. கைத்தறியாடை அணியுமாறு அண்ணா பணித்தது முதல் வேறு ஆடை அணிவதில்லை. அஞ்சல் துறையிலிருந்த போதே நண்பர் G. லட்சுமணனும் நானும் கருப்பு சிவப்புக் கரைபோட்ட கைத்தறி வேட்டியும் அங்கவஸ்திரமும் எப்போதும் அணிபவர்கள். தி. மு. கழகத்தின் பொதுக் கூட்டம், மாநாடு, தேர்தல் போராட்டம் எதுவாயினும் உதவியோ பதவியோ எதிர் பாராமல் என் பங்கைச் செலுத்தி வருபவன். எந்த நேரத் திலும் எந்தப் பயனையும் நன்றியையும் எதிர்பார்த்த வனல்லன். வாழ்நாள் முழுவதும் அரசுச் சம்பளத்தில் வாழ்ந்தவன். திராவிடநாடு கொள்கை என் குருதியில் கலந்துவிட்ட ஒன்று. என் மூச்சும் பேச்சும் அதுதான் என்பதற்கு, என் பழைய கவிதைகளே சான்று! அண்ணா 1963-ல் ஒரு தடவை சொன்னது மறக்க வொண்ணாதது. “ஏன்யா! திராவிடநாடு பொங்கல் மலரில் ஒரு கட்டுரை எழுதப்போறேன். அதற்காக நமது கவிஞர்களின் கவிதைகளிலிருந்து சில அடிகளை மேற்கோள் காட்டத் தேர்ந்தெடுத்தேன். பொங்கல் விழா ஆகையால் பொதுவான வரிகளாயிருக்கட்டுமே என்று தேடினேன். கடைசியாக ஒன்றே ஒன்று கிடைத்தது. நீ ‘அத்தான்’ என்று தொடங்கினால் கூட, ‘ஆகையால் வேண்டும் திராவிடநாடு’ என்றுதான் உன் கவிதையை முடிக்கிறாய்” என்று கூறியது, என்பால் குறையல்லவே! என் நிறையே இதுதான்! அண்ணா தொடர்ந்து உரைத்தார்கள். இனி, சில கவிதைகளைப் பொதுவாகவும் எழுது!” என்று. அவ்வாறே அதற்குப் பின்னர் நிரம்ப எழுதியுள்ளேன்; அண்ணாவின் ஆணையை நிறைவேற்றுமுகத்தான்! 1956 “திராவிட நாடு” பொங்கல் மலரில் நான் இப்படி ஒரு கவிதையை எழுதியிருந்தேன் உலகம் வியக்க நிலவிய புகழும், கழகம் வளர்த்த பழந்தமிழ் மொழியும், அறநெறி பரப்புங் குறள்நெறி தழுவிப் பிறரைப் பணியாத் திறலும் படைத்த தந்நேர் இல்லாத் தமிழக உழவர்– பொன்னேர் பூட்டிச் செந்நெல் விளைத்தே ஆண்டின் பயனை அடைந்திடும் பெருநாள்! தூண்டிடும் உவகையில் துள்ளிடுந் திருநாள்! ஆயினும், அன்னார் நாயினுங் கீழாய் நலிந்துளம் நொந்து, மெலிந்துடல் வாடி, வறண்ட பாலையில் இருண்ட வேளையில் திரண்டெழுங் காற்றிற் சிக்கியோர் போலத் திகைத்து மீளவும் வகையறி யாது, சுதந்திரம் என்ற இதந்தரும் பெயரால் கொடுங்கோல் ஆட்சிக்கு இடங்கொடுத்து உயர்த்தித், தாய்மொழி மறந்து, தனி அரசு இழந்து, வாய்மை தவறி, வாழ்வினில் தாழ்ந்து, உழைப்பதற் கேற்ற ஊதியம்-உயிருடன் த தழைப்பதற்கான சாதனம் இன்றி, நெடிய வறுமைக்கு அடியவர் ஆகி, முன்னேறும் நிலை எந்நாள் வருமெனக் கண்ணிர் சிந்திக் காத்திருக் கின்றார்! பாட்டாளி மக்கள் படுத்துயர் தொலைத்து நாட்டிலே இன்ப நன்னிலை பொங்க மூட்டுவோம் உணர்வொடு முயற்சித் தீயே! ஏழாண்டுகட்கு முன்னர் நான் எழுதிய இப்பாட்டை அண்ணா அவர்கள் தேடிப்பிடித்து, 1963 “திராவிட நாடு” பொங்கல் மலரில் தாம் எழுதிய ஒரு நீண்ட கட்டுரையின் இறுதிப் பகுதியில்… “கருணானந்தம் தந்துள்ள கவிதைகாட்டுதல் போல்” என்ற தமது முகப்பு வரிகளுடன், என்னுடைய இந்தக் கவிதையிலிருந்து முதல் எட்டு வரிகளை மட்டும் எடுத்து, மேற்கோளாகக் காட்டியிருக்கிறார்கள்! “அது சரி அண்ணா! நீங்கள்-முன்னே சொன்னிங்களே - ‘அத்தான்’ என்று ஆரம்பிச்சாலும் திராவிட நாடு வேண்டும்’னு முடிக்கிறதாக-அது எந்தக் கவிதையைப் பார்த்ததும் உங்களுக்குத் தோணிச்சுது அண்ணா? என்று கேட்டேன். “ஏன்? எத்தனையோ இருக்குதே! உதாரணமா, 1960 ‘திராவிடநாடு பொங்கல் மலரி’லே வந்த உன் கவிதையைத் தான் பாரேன்’ என்றார்கள் அண்ணா. எடுத்துப் பார்த்தேன். அது இதுதான் : உள்ளதைத்தான் கேட்கின்றாள்! நள்ளிரவில் மாளிகையின் பின்முற் றத்தில், நடுக்குகின்ற குளிர் தாக்கப் போர்த்துக் கொண்டு வெள்ளிநிலா ஒளிவழங்க, விண்மீன் கூட்டம் விசிறிவிட்ட வைரமென மின்னல் காட்டத், துள்ளிவரும் சிந்தனையின் அலைகளாலே துயில்கெட்டுப் புரளுகையில், துணைவி வந்து… பள்ளியறைக் காவியத்தைப் பாடு தற்குப் பாங்கான நேரமென்று துவங்கி விட்டாள்: “ஏனத்தான், எத்தனையோ கால மாக எனக்காகக் கேட்டேனே, புடைவை எங்கே? மானத்தை மறைப்பதற்குத் துகில் என் றாலும், மனங்கவரும் பட்டாடை அணிந்தா லென்ன? வீணத்தான் பெட்டிகளில் பூட்டி வைத்தல் : விரும்புவதை எடுத்தளிப்பீர்! நான்தான் உம்மை வானத்தை வில்லாக்கித் தரச்சொன் னேனா ! வைத்திருக்கும் பொருள் தந்தால் வறண்டா போகும்? கண்ணாடிப் பேழைக்குள் கண்ணைக் கவ்வும் கணக்கற்ற பொன்னகைகள் இருக்கக் கண்டேன்! எண்ணாத எண்ண மெல்லாம் எண்ணி யெண் ணி ஏங்குகின்றேன்; இருப்பவற்றை அணிந்து கொண்டால் புண்ணான என்மனமோ ஆறும்; நானும் புதிதாக அணிமணிகள் செய்யச் சொல்லிக் கண்ணான கணவருக்குத் தொல்லை செய்யேன்! காண்பதையே கேட்கின்றேன் தந்தால் என்ன? நல்ல நல்ல பருப்புவகை நவதான் யங்கள் நம் வீட்டில் ஏராளம் குவித்து வைத்தோம்; நெல்லரிசி களஞ்சியத்தில் நிறைய வுண்டு; நேற்றுமுதல் சோறில்லை, கஞ்சி யுண்டோம்! பலவிதமாய் காய்கனிகள் தோட்ட மெங்கும் பசுமையுடன் குலுங்குகையில் பறித்தா லென்ன? இல்லையெனச் சொல் வீரோ, அத்தான்! இங்கே இல்லாத பொருளெதையும் கோர வில்லை! முப்புறமும் அரண் சூழ்ந்த காவ லுக்குள் மூன்றடுக்கு மேன்மாடம் முகிலைத் தீண்டும்; எப்பொழுதும் வற்றாத நீர் ஊற்றுக் கண் ஈன்றெடுத்த தாய்போல அருள் சுரக்கும்; ஒப்புரவாய், ஒற்றுமையாய், இனிது பேசும் உடன் வாழ்வோர் கடல் மணல்போல் ஏரா ளம்பேர்! அப்படியும் நடுமனையில் இடமில் லாமல் அநாதையென நடத்துகின்றீர், ஏனோ அத்தான்? உள்ளதைத்தான் கேட்கின்றேன்; இருந்தும் நீங்கள் ஒன்றையுமே அநுபவிக்கத் தருவதில்லை; உள்ளதெல்லாம் உண்மையுடன் உரைப்பீர்!” என்றே ஊடிநின்ற துணைநலத்துக் கென்ன சொல்வேன்! “உள்ளதைத்தான் கேட்கின்றாய்! ஆனால் கண்ணே, உரிமைநமக் கெதிலுமில்லை, அடிமை யாகி உள்ளதெல்லாம் பறிகொடுத்தோம்! உணர்வு பெற்றால் உரிமையுடன் உலவிடலாம், உலகில்!” என்றேன். இடக்காகக் கேட்டால் மடக்குவார் 1967 பொதுத் தேர்தல் முடிவுகள் ஒவ்வொன்றாய்த் தெரியத் தொடங்கும் நேரம். அண்ணா ஒரு சிறிய டிரான் சிஸ்டர் ரேடியோவை அருகில் வைத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்திருக்கிறார்கள். எதிரே நாங்கள் சிறு கூட்டமாகத் தரையில் உட்கார்ந்து காதைத் தீட்டிய வண்ணம் காத்திருக்கிறோம். அப்போது யார்தான் எதிர் பார்த்தோம், காங்கிரஸ் கப்பல்,காகிதக் கப்பலாய் மூழ்கு மென்று; காங்கிரஸ் கோட்டை மணற்கோட்டையாய்ச் சரிந்து வீழுமென்று! முதல் முடிவு, சென்னை பார்க்டவுனில் காங்கிரஸ் தோற்று, சுதந்திரக்கட்சி வேட்பாளர் டாக்டர் ஹண்டே வெற்றி என்பது. புன்னகை பூத்தார் அண்ணா. அடுத்த முடிவு வரும்போது நான் கீழே போயிருந்தேன். அண்ணா பெருங்கூச்சலிட்டு என்னை விளித்து, மாயூரம் கிட்டப்பாவின் முதல் தி.மு.க. வெற்றியை எடுத்துச் சொன்னார்கள். அப்போது மலரத் தொடங்கிய அண்ணாவின் முகம் செந்தாமரையாய் ஒளி வீசியது எனினும் தி.மு.க. வெற்றியின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக, அண்ணாமட்டும் மகிழ்வினைப் பெருக்காமல், ஒரளவு கவலை படர்ந்த முகத்தினராய்க் காணப்பட்டார்! எங்கள் குதூகலத்துக்கு எல்லையுண்டோ? திடீரென்று, விருதுநகர் தொகுதியில் பெ. சீனிவாசன் வெற்றி என்று வானொலியின் சிறப்பு ஒலிபரப்பு வெளியிட்டதும், நாங்கள் எழுந்து நின்று குதிக்கத் தொடங்கி விட்டோம். “என்னய்யா இது! உண்மையைத் தான் சொல்றானா? அப்படின்னா காமராஜ் தோல்வியா? சேச்சே! இது நடக்கக்கூடாதே! அவரு தோற்கலாமா? நாம அவரைத் தோற்கடிப்பதா?” என விசனப்பட்டு எங்கள் ஆனந்தத்தைக் கருகச் செய்தார், அண்ணா. காமராசரை எதிர்ப்பதே முதலில் அண்ணாவுக்கு விருப்பமில்லை. கலைஞரின் பிடிவாதம் வென்றது. பெ. சீனிவாசன் எம்.ஏ., 1965 இந்திப் போரின் ஒரு தளபதி என்பதால், அவரை நிற்க வைத்துக் காமராசரைத் தோற்கடிக்கலாம் என்பது கலைஞரின் நம்பிக்கை. அண்ணா பல்வேறு நிர்ப்பந்தங்களால் ஏற்க நேரிட்டதே ஒழிய, சீனிவாசன் என்னும் யாரோ ஒரு தி.மு.க. மாணவன், இமயம் போன்ற காமராசரை வெல்லமுடியும் என அவர் நம்பவில்லை. எனக்கு நன்கு நினைவிருக்கிறது; டிரைவ் இன் வுட்லண்ட்ஸ் ஒட்டலில், ஒரு நாள் மாலை, நடிகமணி டி. வி. நாராயணசாமி சூளுரைத்தார் என்னிடம் :- “நான் வேறு தொகுதிகளுக்குப் போகாமல் விருது நகரிலேயே தங்கி, வேலை செய்து, தம்பி சீனிவாசனுடைய வெற்றியுடன் திரும்பி வருகிறேனா இல்லையா பாருங்கள், கவிஞரே!” என்று. “என்னண்ணா நீங்க! படுத்துகிட்டேஜெயிப் பேண்ணாரு: அவ்வளவு அலட்சியம் நம்மைப்பத்தி கட்டை விர லை வெட்டணும்னு சொன்னாரு முந்தி! அவர் தோத்ததுக்கு வருத்தப்படlங்களே? ஜெயிச்சது நம்ம ஆளுங்கறதே உங்களுக்கு மறந்துடுச்சா?” என்று துணிவுடன் கேட்டேன் அண்ணாவிடம், “அரசியலில் அவர் எதிரிங்கறதை நான் மறுக்கலேய்யா. ஆனா தமிழ்நாட்டுக்கு அவரு எவ்வளவு செஞ்சிருக் காருங்கறதை மக்கள் மறந்துட்டாங்களே. அவர் மட்டும் தோத்திருக்கக்கூடாது” என்றார் பெருந்தன்மையின் அருந் துணைவர். அத்துடன் நின்றாரா? நாடாளுமன்றத் தொகுதியில் சி. சுப்ரமணியம் தோல்வி எனத் தெரிந்ததும், மீண்டும் வருந்தினார். “அய்யோ! தமிழர் ஒருவர் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவது போயிற்றே” என இரங்கினார். நாமே நினைத்துப் பாராத அளவு தி. மு. க. வெற்றிச் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஏதேது அண்ணாவின் மனப்பான்மையைப் பார்த்தால் முதல்வர் பக்தவத்சலம் கூட வெற்றிபெற வேண்டுமென விரும்புவாரோ, என எங்களுக்கு அய்யப்பாடு தோன்றிற்று. இல்லை! அப்போது மட்டும் அண்ணா வருத்தப்படவில்லை! அளகேசன் தோற்ற போதும் அவ்வாறே! சரி: ‘இப்போது தான் நமது அண்ணா’ என்று மகிழ்ச்சியில் ஆழ்ந்தோம். ஒரு வழியாக எல்லா முடிவுகளும் தெரிந்துவிட்டன. சுதந்திரம் வாங்கித் தந்து, அதனால் ஆட்சி பீடமேறிய ஒரு கட்சியை, 20 ஆண்டுகள் ஆண்டது போதம், மக்கள் மாண்டது போதுமெனக் கையைப் பிடித்துக் கீழே இறக்கி விட்ட இந்த ஏழைகள் தலைவன், எளிய எம் அண்ணனின் வன்மைதான் என்னே! காங்கிரஸ் 233 இடங்களிலும் (ஒன்று தவிர) போட்டியிட்டு மானத்தைக் காப்பாற்றிக் கொண்டது 49 தொகுதிகளில்! வலது சாரிப் பொதுவுடைமை வாதியினர் தனியே போட்டியிட்டு 33-ல் இரண்டே இடம் பெற்றனர்! தி. மு. க. ஆதரவுடன் சுதந்திரா 27-ல் 20. இடது சாரிப் பொதுவுடமைக் கட்சி 22-ல் 11, முஸ்லிம் லீக் 4-ல் 3, திராவிட முன்னேற்றக்கழகமோ தமிழகத்தின் 173 சட்ட மன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு, 138 வெற்றிக்கனிகளைக் கொய்தது! மாபெரும் சாதனை!! நான் பார்த்ததேயில்லை அவ்வளவு பெரியதொரு (Pressmeet) பத்திரிகை நிருபர்கள் கூட்டத்தை. அனைத்து முடிவுகளும் வெளியானவுடன் அண்ணா வீட்டில் இடமே யில்லை. எல்லாம் செய்தியாளர்களே! எத்தனை. காமெராக்கள்! தொடுத்தனர் கேள்விக்கணைகளை. அனைத்துக்கும் அண்ணா விடுத்தனர் விடைகளைச் சற்றும் தயங்காமல் திராவிட முன்னேற்றக் கழகம் தனித்து ஆட்சி அமைக்கும் (சுதந்திராவும் இணைந்த கூட்டணி ஆட்சி நடக்கும். அனுபவசாலியான நம்மைத்தான் முதலமைச்சராக வீற்றிருக்குமாறு அண்ணா வேண்டுவார் என்று கனவு கண்டார் ராஜாஜி) என்ற திடமான முடிவு முதலில் அண்ணாவால் அறிவிக்கப்பட்டது. பிறகு கோடைமழை போல் குளிர்விக்கும் செயல் திட்டங்கள் தெரிவித்தார். எல்லாம் முடிந்த தறுவாயில், திடீரென ஒரு செய்தியாளர் அண்ணாவை மடக்கிவிட்டதாக எண்ணி ஒரு கேள்வி அம்பை எய்தார். “இவ்வளவும் சொன்னிர்களே, எந்த Capacity யில் (தகுதியில்) ? நீங்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக அல்லவா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள்! தி. மு. க. சட்டமன்றக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லையே?” என்றார். “I am speaking to you in the capacity of the General Secretary of the D. M. K.” என்று சொன்னதும், அனைவரும் வியப்பினால் விரிந்த விழிகளுடன் வாயடைத்துப் போய் நின்றனர்; அதாவது தி.மு. க.கழகத் தின் பொதுச் செயலாளர் என்ற தகுதியினால்தான் இவ் வளவும் கூறினேன்-என்று கணமும் தயங்காமல் கூறி விட்டார் அண்ணா-எம் அண்ணா-அறிஞர் அண்ணா பேரறிஞர் அண்ணா! பிரசாதமல்ல, தின்பண்டம் எதிரே ஒரு தட்டில் புளியோதரை, லட்டு, வடை, தேன் குழல் முதலிய தின்பண்டங்களுடன் அண்ணா ஒரு நாள் காஞ்சிபுரம் இல்லத்தில் அமர்ந்திருக்கும்போது நான் போக நேரிட்டது. “வாய்யா! இந்தா, சாப்பிடு!” என்றார்கள். “ஏதண்ணா இந்த நேரத்தில் இதெல்லாம்?” என்று விசாரித்தேன். “நம்ம வரதராஜ சாமி பிரசாதம்” என்று சாதாரணமாகச் சொன்னார். எனக்கோ பேரதிர்ச்சி! “என்னண்ணா? கோயில் பிரசாதம் என்று கூசாமல் சொல்கிறீர்கள்! நீங்கள் எப்படி இதைச் சாப்பிடலாம்? உங்கள் பேச்சைக் கேட்டதனால் நான் கோயிலுக்குப் போவதில்லை. சாமி கும்பிடுவதில்லை. பண்டிகை கொண்டாடுவதில்லை. புரோகிதர் வைத்துத் திருமணம் செய்தால் உறவினர் வீடுகளுக்குக் கூட போவதில்லை”…… என்று சிறிது பதற்றத்துடன் சொல்லிக் கொண்டே போனேன். சாவதானமாக அண்ணா கையமர்த்தினார். நானும் பேச்சை நிறுத்திவிட்டு, ஆவலை விழியில் கூட்டி, அண்ணா என்ன பதில் உரைக்கப் போகிறார் என எதிர்பார்த்தேன். “இரய்யா. நீ சொன்னது எல்லாமே சரிதான். ஆனா, நான் செய்யிற இந்தக் காரியம், அடியோட வேறெ சமாச்சாரம்! நான், என் வீட்டுக்கு இவ்வளவு பக்கத்திலெ இருந்தாலும், இந்த வரதராஜர் கோயிலுக்குப் போனதில்லே. எங்க ஊரிலேயே இருந்தாலும், சங்கராச்சாரியாரைப் பார்த்ததில்லே. எந்தக் கோயிலுக்கும் அபிஷேகம் அர்ச்சனை ஆராதனை பூஜை செய்றதில்லை. ஆனா இந்தப் பிரசாதம் ஏதுண்ணு கேட்டியானா, இது நைவேத்யம் செய்த பிரசாதமில்லை. பணம் கொடுத்து வாங்கி வந்த தின்பண்டம் (snacks) நொறுக்குத் தீனி ஒட்டலில் வாங்குவது போல! ஆனா ஒட்டலை விட இதெல்லாம் நல்லாயிருக்கும். அதிலும், பெருமாள் கோயில் மடைப்பள்ளிகளில் செய்தவை மிகவும் ருசியாயிருக்கும். இதிலெ தோஷமில்லை; சாப்பிடலாம்” என்றார் நகைத்துக்கொண்டே! என்னுடைய கடுமையான விரதத்தை உடைத்தேன் அன்றையதினம்! அதற்குப் பிறகு, திருப்பதி லட்டு, பழனிப் பஞ்சாமிர்தம் - இவை விலைக்கு வாங்கிவரப்பட்டு என்னிடம் தரப்பட்டால், ரசித்துச் சாப்பிடுவேன். பிரசாதம் என வெறுத்து ஒதுக்கி வந்த என் கொள்கையால், அபூர்வமான ஒரு தின்பண்டத்தை இழக்க இருந்தேன்! திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அக்கார அடிசில் என்னும் சர்க்கரைப் பொங்கல் அது! Full திட்டம் என்று பெயராம். அதில் தண்ணிருக்குப் பதில் நெய்யை ஊற்றி அரிசியை வேக வைத்திருப்பார்களோ? அரிசியை விட முந்திரிப் பருப்பும் திராட்சையும் அதிகமோ? அடடா! என்ன ருசி! திகட்டலான ருசி! அண்ணாவுக்குத் தூள் பக்கோடா தின்பதிலும் விருப்பம் அதிகம். சாதாரணத் தேநீர் விடுதிகளில் தயாரிக்கப்படும் பக்கோடாவை வைத்திருக்கும் பாத்திரத்தின் அடிப்பகுதியில், வெங்காயம் மிகுதியாய்க் கருகலான தூள் தங்கியிருக்கும். அண்ணாவிடம் இந்த ரகசியம் தெரிந்து கொண்ட பின்னர், சுவை கூடிய இந்தத் துரள் பக்கோடா சாப்பிடுவதை நானும் வழக்கமாக்கிக் கொண்டேன். காரில் பயணம் போகும்போது, உளுந்துர் பேட்டையில் முட்டை தோசை போடச் சொல்வி, அண்ணா சாப்பிடுவார்கள். அதையும் அண்ணாவிடமிருந்து புரிந்து கொண்டு சுவைத்துச் சாப்பிட்டேன், சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம்! பதவி ஏற்ற பின்னர் 1968 ஏப்ரலில் ஒரு விடுமுறை நாளில் கோட்டையில் அண்ணா முதலமைச்சர் அறையிலும், கலைஞர் பொதுப் பணித்துறை அமைச்சர் அறையிலும் அமர்ந்து files பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று, கோவிந்தப்ப நாயக்கர் தெருவிலுள்ள ரசிக்லால் கடையில் ஒரு பாக்கெட் dried fruits (உலர்ந்த பழங்கள்) வாங்கி வந்தேன். கல்கண்டு, திராட்சை, பாதாம், முந்திரி, பிஸ்தா, பேரீச்சை முதலியன கலந்திருக்கும் அந்தக் கதம்பத்தில். முன்பு எப்போதோ அண்ணா இதைக் கையில் வைத்துக்கொண்டு, விருப்பமாகச் சாப்பிட்டதைப் பார்த்தேன். அது நினைவுக்கு வரவே இதை வாங்கி, நேரே அண்ணாவின் அறைக்குப் போய் அவர்களிடம் நீட்டினேன். “என்னய்யா இது?” - “பாருங்கள்; உங்களுக்குப் பிடித்ததுதான்!” - “அது சரி; இப்ப இதைக் குடுக்க என்ன காரணம்?” - காரணம் என்ன சொல்லலாம். வெளியில் கேள்விப்பட்ட ஒரு புதுச் செய்தி உதவிற்று. “கோ. சி. மணி M. L. C. தேர்தலில் வெற்றியாம் அண்ணா!” என்று சமயோசிதம் பேசினேன். பாதி எடுத்துக் கொண்டு “மீதியைக் கருணாநிதிக்குக் கொடு” என்றார்கள். அண்ணா ரசிக்லால் மிக்சரைத்தான் விரும்பிச் சாப்பிடுவார்களா! அப்படியும் சொல்லிவிடமுடியாது. ஒரு நாள் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் மன்றத்தில் சிறப்புரை யாற்றச் செல்ல வேண்டும் மாலை 4 மணிக்கு, அண்ணா! அப்போதுதான் உறங்கி எழுந்தவர்கள், வீட்டுத் தோட்டத்தில் காய்த்த மாங் காய்களில் இரண்டு மூன்று பறித்துவரச் செய்து, எதிரே ஒரு தட்டில் உப்புத் தூள் மிளகாய்த்தூள் வைத்துக் கொண்டு, கத்தியால் அரிந்த மாங்காய்த்துண்டங்களை அவற்றில் அமுக்கி, ருசித்து ரசித்துச் சாப்பிடுகிறார்கள்! எதிரில் சென்ற என்னிடம் கொஞ்சம் தந்தார்கள். “மாங்காயா முக்கியம்? கூட்டம் துவங்கும் நேரம் கடந்துவிட்டது. காலேஜ் function ஆச்சே அண்ணா! புறப்படுங்க!” என்றேன். “காலேஜ் மாணவர்களுக்கும் என் பழக்கம் தெரியுமய்யா! ஒரு மணி நேரம் லேட்டாய் போகலாம்! சாப்பிடு மாங்காயை!” என்கிறார்களே ஒழிய, பதற்றப்படவில்லை. நிரந்தினிது சொல்லுதல் வல்ல அந்தப் பேரறிஞரின் சீர்மொழிகளை, இந்த ஞாலம் காத்திருந்து கேட்டதுதான் வரலாறு கூறும் செய்தியாகும்! முதலமைச்சருக்கு முதல் விருந்து “காங்கிரசைப் பூண்டோடு அழிப்பதுதான் இனி என். வேலை. எந்தக் காங்கிரசை இந்தத் தமிழ் நாட்டில் வளர்த் தேனோ, அந்தக் காங்கிரசை இந்தத் தமிழ் நாட்டில், வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தி ஒழிக்கப் பாடுபடுவேன். வருகிறேன்! என்று காஞ்சி மண்ணில் 1925-ல் கர்ச்சித்துத், தடியை ஓங்கித் தரையில் தட்டிச் சூளுரைத் தார் தந்தை பெரியார். அந்தக் காஞ்சித் தளபதியோ, தந்தையின் கொள்கைச் செல்வங்களின் வாரிசல்லவா அதனால், தந்தையின் சூளுரையைத் தனயன் மெய்ப்படுத்துவேன் என வெஞ்சினங் கூறித் தனிவியூகம் அமைத்துத், தளராது போரிட்டு, 1967-ல் காங்கிரசைப் புறங்கண்டு விட்டாரே! 6. 3. 1967 அன்று அண்ணா பதவி ஏற்பதாக அறிவிப்பு வந்து விட்டது. ஆர். எம். எஸ். ஊழியர்களின் நீங்காத் துணைவரல்லவா? நான்கு மாதங்களுக்கு முன்புதானே மருத்துவமனையில் இருந்து, யாருக்கும் தெரியாமல் புறப்பட்டுக், காய்ச்சலின் உச்சக்கட்டத்திலும், காரில் ஏறிச் சென்னையிலிருந்து சோலையார்பேட்டை வந்து திரும்பி னார். வேறு எப்போதும் அண்ணா, இவ்வாறு உடல் நலிவு ஏற்பட்டபோது அய்யோ, ஒத்துக்கொண்டோமே, போய்த் திரவேண்டுமே என்று போனதில்லையே! சரி. அண்ணா வெற்றியை நாம் எப்படிக் கொண்டாடு வது? ஒரு விஷயத்தில் நாம் முந்திக் கொள்வோமே என்று. என் மாநில சங்கத் துணைத்தலைவர் திருச்சி எஸ்.ஏ. ரகீம், ம்ாநிலச் செயலாளர் C. நம்மாழ்வார் ஆகியோருடன் துங்கம்பாக்கம் இல்லம் சென்றேன். அன்று 5.3.67. கையில் என்னிடம் ஒரு பாக்கெட் மில்க் அல்வா இருந்தது. நேரே அண்ணாவிடம் சென்று “அண்ணா வாயைத் திறங்க” என்றேன். திறந்தார். “அண்ணாந்துகிங்க அண்ணா!” அண்ணாந்தார். கைநிறைய அல்வாவை எடுத்து வாயில் போட்டேன். “அட இது எதுக்குய்யா” என்று சொல்லிச் சிறிது மென்றவர்-மெல்ல விழுங்கி விட்டு “அடடே, நல்லாவேயிருக்கிறதே! இன்னும் கொஞ்சம் போடுய்யா!” எனச் சொல்லிய வண்ணம் வாயை அகல விரித்தார். எனக்கென்ன தயக்கம்! கொஞ்சங் கொஞ்சமாக வாயில் இட்டேன். ரசித்துத் தின்றார். அருகிலிருந்த நடிப்பிசைப் புலவர் கே ஆர். ராமசாமிக்கு மிச்சமிருந்த அல்வாவில் சிறு அளவு தந்தேன். “இது அச்சாரந்தான். அடுத்தபடியா பெரிய சங்கதி இருக்கு எங்க RMS Union சார்பா ஒங்களுக்கு ஒரு விருந்து கொடுக்கணும். அதுக்குத் தேதி, நேரம் வேனும் இப்பவே சொல்லிடுங்க!” என வற்புறுத்தினேன். “இப்ப எங்கய்யா விருந்துக்கெல்லாம் நேரம் இருக்கப் போகுது?” “நீங்க சட்டப்படி நாளைக்குத்தான் முதலமைச்சர், அதனாலெ, எங்க அண்ணாவா இருக்கும்போதே சம்மதம் சொல்லிடுங்க.” “சரிய்யா. 14.ந்தேதி வச்சிக்க. ராத்திரியாயிருந்தா வம்பிருக்காது. எங்கே? மெட்ராஸ்லதானே?” “ஆமாண்ணா ஒங்களுக்கு அதிகத் தொந்தரவு இல்லாமெப் பாத்துக்கிறேன்! வருகிறோம்!“ இசைவு கிடைத்தது. யாருக்கு வரய்க்கும் இந்த நற்பேறு! தலைப்பிள்ளை பெற்ற தாயின் மகிழ்ச்சியும் இதற்கு ஈடோ? முதல் விருந்து எங்கள் விருத்தில்லவா! ஆகா! ஆகா துள்ளிக் குதிக்காத குறைதான்! மூவரும் தனியே அமர்ந்து சிந்தித்தோம். அமைதியாக விருந்து நடைபெற வேண்டும். ஒட்டலில் அவ்வளவு நாகரிகமாகாது. யாருடைய வீட்டிலாவது செய்தால்தான், Privacy இருக்கும். கழகத் தலைவர்கள் வீட்டில் செய்வது முறையல்ல…ம்…நண்பர் ரகீம் கைகுலுக்கினார். “இங்கே எங்க மாமா வீடு ஒண்னு இருக்குதுகக. அநேகமா, அது இப்ப காலியாதான் இருக்கும். இங்கே தான், ஜெமினி ஸ்டுடியோவுக்குப் பின்னாலே. வாங்க, இப்பவே போய்ப் பார்ப்போம்! எனவே, புறப்பட்டோம். தனியான சிறிய பங்கள்ா. போதும் அருமை, அருமை” என்றேன். திருச்சியில் ஒய்வுபெற்றுத் தங்கியிருந்த எங்கள் தலைவர் ஏ. பி. துளசிராம் அவர்களையும் அழைத்துக் கொண்டோம். RMS ஊழியர்களில் முக்கியமானவர்கள் பங்கு பெற்றனர். கலைஞர் இல்லாமலா? அவரும் வந்தார் விருந்துக்கு! ரகீமின் நேரடிப் பார்வையில் நெய் மணக்கும் மட்டன் பிரியானி, தக்க பக்கவாத்தியங்களுடன் பிரமாதம். நமது இயக்கத்தின் சிறந்த தொண்டரும், புகைப்பட நிபுண்ருமான நண்பர் சாமுவெல் அன்று எடுத்த படங்கள் என்னிடம் உள்ளன. அண்ணா எவ்வித இடையூறுமின்றிக் குறைந்த துர்ரமே வந்து செல்ல வேண்டியிருந்தது. கலைஞரும் இணைந்து சிறப்பித்தார். எங்கள் ஆனந்தத் துக்கும் அளவிண்டோ? எந்த விளம்பரமும் இல்லாமல்தான் இந்த விருந்தை நடத்தினோம். ஆனால் அஞ்சல் துறையாயிற்றே-செய்தி பரவாமல் போகுமா? அனைத்து இந்திய மட்டத்தில், தொழிற்சங்க ரீதியாக, எங்களுக்கு எதிரிகள் வலது கம்யூனிஸ்ட் அனுதாபிகளான எங்கள் ஊழியர்கள். ஆனால் இடது கம்யூனிஸ்ட் அனுதாபிகள், என்றும் எங்கள் கூட்டணி. தி.மு.க. அனுதாபிகளின் கைதான் தமிழகத்தில் உயர்வு. அஞ்சல் துறைத் தோழர்களான G. லட்சுமணன் C. M. பரிபூரணம், கடலூர் N. C. அம்பலவாணன், திருச்சி மாணிக்கவாசகம், தொலைபேசித்துறை கண்க சொரூபன், முத்துராக்கப்பன் ஆகிய பல அருமை நண்பர்கள் என்னிடம் சண்டைக்கே வந்து விட்டனர். அண்ணா எங்களுக்கும் சொந்தமில்லையா என்று! இண்ங்குவது தவிர இவர்களோடு பிணங்க முடியுமா? சரியென்று துணிந்து, அண்ணாவிடம் அடுத்த மாதமே. இதற்காகச் சென்று, விவரம் சொன்னேன். அருகில் - அப்போது பேராசிரியர் மா.கி. தசரதன், மாயூரம் தொகுதி. நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரவேலு இருந்தனர். “விருந்தை என் வீட்டில் வைத்துக்கொள்ளலாம் கவிஞர்” என்றார் தசரதன். அவர் சுத்த சைவம். பயமில்லை யல்லவா? அண்ணா ஒத்துக்கொண்டார்கள் வருவதற்கு. இந்த விருந்தில் பிரியாணியில்லை. எல்லாமே மீன், மீன், மீன். பல்வகைத் தயாரிப்புகள். “எங்கே கருணா னந்தத்தைக் காணோம்” என்று அண்ணா வேடிக்கை யாகக் கேட்க, “அவரை மீன் மறைத்துக் கொண்டிருக்கிறது” என்று கலைஞர் கேலியாகப் பதில் கூற, நண்பர் சுபாசுந்தரம் ‘கிளிக்’ செய்துகொண்டே யிருந்தார். கடலூர் அம்பலவாணன் “எங்களுக்கும் உங்களுக்கும். தொடர்பு நெருக்கமாக ஏற்பட, ஏதாவது ஒர் அமைப்பு வேண்டும், அண்ணா!” என்று கோரினார். அண்ணா என் பக்கம் கையைக் காட்டி, “இதோ, இவர் ஒருவர் போதுமே!” என உறுதியுடன் பதில் உர்ைத்தார்கள். அனைவர்க்கும் மகிழ்ச்சியே! நடிகர்களை அழைத்து வருவது ஏன்? ஈரோட்டிலிருந்து, என் பெற்றோரைப் பார்க்கத் திருத்துறைப்பூண்டி வந்திருந்தேன். மறுநாள் திருவாரூர் கருணாநிதி தியேட்டரில் அண்ணாவின் ‘சந்திரோதயம்’ நாடகம்-அதாவது 18-8-1944 இரவு. தலைவர் பழைய கோட்டை இளைய பட்டக்காரர் என். அர்ச்சுனன். பார்வையாளராக இருந்து நாடகம் பார்த்த பின், முடிவில் தான் அண்ணாவைச் சந்தித்தேன். நாடகத்தின் இறுதியில் எம். ஆர். ராதா, அண்ணாவுக்கு ஒரு மோதிரம் பரிசளித்தார். ஆனால், அண்ணா பேசும்போது, தான் மோதிரம், ரிஸ்ட் வாட்ச் போன்ற அணிகலன்களை அணிவதில்லை என்று கூறி, நன்றியுடன் அவருக்கே திரும்பவும் அணிவித்து விட்டார், அவர் தந்த மோதிரத்தை! “எப்படியண்ணா இந்தப் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டீர்கள்? ஏன்?” என்று கேட்டேன். சொன்னார் “ஏன்யா! இது நல்ல பழக்கந்தானே! ஒண்ணும் பயமே யில்லை பாரு. நான் நெனச்ச இடத்திலே படுப்பேன். படுத்தவுடன் தூங்கிடுவேன். இதையெல்லாம் போட்டுக்குனு படுத்தாத் தூக்கம் வராது; பயந்தான் வரும்; எவனாவது கழட்டிக்கினு போயிடுவானோண்ணு!” ராதாவும் இதை ஏற்றுக் கொண்டார். அவர் விரைவாக நமது பக்கம் வந்துகொண்டிருந்த நேரம் அது. சிந்தனைச் சிற்பி சி. பி. சிற்றரசு எழுதி, இவருடன் நடித்த ‘போர் வாள்’ நாடகம், பார்ப்போரைப் புல்லரிக்க வைக்கும். ராதாவின் வசனம் உணர்ச்சிப் பிழம்பாக நம்மை மாற்றி விடும். அதனால்தான் திருச்சியில் அழகிரி அண்ணன் ராதாவுக்கு “நடிகவேள்” பட்டம் தந்தார். நடிகமணி டி. வி. நாராயணசாமிக்குப் பிறகு, எம். ஆர். ராதா நம் கழகத்தில் ஒன்றியவர். பின்னர், கலைவாணர்-இவர் முழுமையாக நம் இயக்கத்தவர் என்று கூற இயலாவிடினும், நாம் தேர்தல்களில் போட்டியிடத் தொடங்கியதும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டுந்தான் தேர்தல் பிரச்சாரம் செய்தார். பின்னர், நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ராமசாமி, தமது உடல் பொருள் ஆவி மூன்றை யுமே கழகத்திற்காக ஈந்தார். பிறகு, சிறிது காலமே எனினும், நடிகர் திலகம் சிவாஜிகணேசன், கழகத்தின் நிதி திரட்ட அரும்பாடு பட்டுள்ளார். கடைசியில், இலட்சிய நடிகர் எஸ். எஸ். இராஜேந்திரன். கட்சி வளர்ச்சியில் பெரும்பங்கு இவருக்கு உண்டு. திரைப்படத்துறையில் உச்சியில் நின்ற காலத்தில், இவர் முதன்முதலில் அண்ணாவின் பிறந்த தேதியை ரகசியமாகக் கேட்டறிந்து, அண்ணாவின் 50-ஆவது பிறந்த நாள் அன்று, 50 சவரன் அளித்துச் சிறப்பித்தவர். ஒருநாள் மாயூரம் பொதுக் கூட்டத்துக்கு அண்ணாவும் ராஜேந்திரனும் இவரது பிளிமத் காரில் வந்தனர். கூட்டத்தில் அண்ணா இலட்சிய நடிகரைப் பாராட்டிப் பேசினார். கூட்டம் முடிந்து என் வீடு சேர்ந்ததும், வா ராஜேந்திரன், இண்ணக்கி கருணானந்தம் வீட்லெ சாப்பா டுண்ணு, நீ வரும்போதே யூகமாச் சொல்லிட்டே, சாப்பிட்டுத் துரங்கு. காலையிலே போகலாம்’ என்றார் அண்ணா. ஆனால் எஸ். எஸ். ஆர். என்னிடம் தனியே வந்து, கையைப் பிசைந்தார். “ஒண்னுமில்லிங்க! காலையிலே ஷட்டிங் இருக்கு. மாயவரத்திலெ தங்காமெப் போனாத்தான், நேரத்திலே மெட்ராஸ் சேர முடியும். அண்ணாகிட்டெ நான் எப்படிச் சொல்வேன். இதெ நீங்கதான் சொல்ல முடியும்!” என்றார் ராஜூ. சொன்னேன். சரி, பெட்ரோல் டாங்கை full பண்ணி கிட்டு வரச்சொல்லு அர்ஜுனனை. நான் அதுவரைக்கும் தாங்குகிறேன்” என்று என்னிடம் கூறிக்கொண்டே அண்ணா படுத்து விட்டார்கள். அம்மாதிரியே சிறித் உறங்கியபின் எழுந்துவிடவே உடனே சென்னை நேர்க்கிப் புறப்பட்டனர் இருவரும். அண்ணா அவர்களிடம் ஒரு நல்ல பழக்கம். கார் ஒடும் போது தூங்கமாட்டார்கள். அப்படித் தூக்கம் வந்தால் “சுந்தா! காரை ஓரமா நிறுத்திட்டு, நீயும் தூங்கு” என்று சொல்லிவிட்டுத் தானும் காரிலேயே படுத்துக்கொள்வார்கள். இந்த சுந்தா என்கிற சுந்தர்ராமன் அண்ணா விடம் தன் வாழ்நாள்வரை (25.7.1961)-காரோட்டிய தல்லவர். தோற்றம் மாத்திரம் முரடாகத் தெரியும். கடைசியாக இயக்கத்துக்கு வந்தவராயினும், திட்டமிட்டு, உறுதியாக ஆழமாக வேரூன்றி, வாழ்விலும் பொதுப் பணியிலும் தவறுகளின்றி, நிதானமாக முன்னேறி நிலைத்தவர் புரட்சி நடிகர் எம். ஜி. ராமச்சந்திரன். கழகம் தேர்தலில் நிற்கத் தொடங்கிய பின்னர், இவரது இன்றியமையாமை நன்கு புலப்பட்டது. இவருடைய வளர்ச்சிக்கும் கழகம் உறுதுணையாக இருந்துள்ளது. அண்ணாவின் பரிந்துரையோடு அப்போது இவருடன் இணைந்தவர்தான் இராம. வீரப்பர். என்னைப் போன்றவர்களெல்லாம் குடும்பத்துடன் M.G.R. படம் தவிர வேறு. படம் பார்ப்பதில்லை, பிடிவாதமாய்! இவரும் என்னிடத்திலே மிக்க அன்பு காட்டினார். நீரிழிவு நோயினால் அவதிப்பட்ட நேரத்தில் கையில் எப்போதும் பிளாஸ்கில் காப்பி வைத்துக் கொண்டு நான் அடிக்கடி சாப்பிடுவேன். இதைக் கவனித்தவர், “காப்பி உடலுக்குக் கெடுதல்தானே! இதற்குப் பதிலாக மோர் வைத்துக்கொண்டு எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடுங்க, நல்லது” என்று அறிவுறுத்தினார். நானும் ஏற்றுச் செய்ல் படுத்தி வருகிறேன் எம்.ஜி.ஆர் அவர்களின் அறிவுரையை. இப்படி எம்.ஜி.ஆர். கட்சிக்குள் வந்த பிறகு, அண்ணாவிடம் கேட்டதுண்டு. “ஏன் அண்ணா? நடிகர்களை இந்த அளவு நம் மோடு சேர்த்துக்கொள்ளத்தான் வேண்டுமா? நடிகர்கள்-அதிலும் திரைப்படத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள்-நிறைய sentiments.க்கு இடங்கொடுத்து, மூட நம்பிக்கைகளை வளர்ப்பவர்களாயிற்றே” என்றெல்லாம் நிறைய வினாக்களை எழுப்பி வந்தோம். இவற்றுக்கெல்லாம் தனிப்பட்ட முறையில் அவ்வப்போது சமாதானங்கள் சொல்லிவந்தாலும்-இதைப் பற்றிச் சற்று விளக்கமாக 1953.செப்டம்பரில் அண்ணா நெல்லை மாவட்ட இரண்டாவது சமூக சீர்திருத்த மாநாட்டில் உரையாற்றும்போது ஒரு கருத்துத் தெரிவித்தார் :- “சமுதாய சீர்திருத்தந்தான் அரசியல் சீர்திருத்தத்தின் அடிப்படை. சமுதாயம் மூடநம்பிக்கைகளிலிருந்து விடு பட்டுத் தெளிவு பெற்றால்தான் அரசியலில் விழிப்புடன் பங்கேற்க முடியும். ஆட்சிச் சகடத்தை ஒட்டுகின்ற மக்கள், தெளிவு பெற்ற திறமையாளர்களாக இருக்க வேண்டும். ஒர் அழகான வண்டியில், அரேபியக் குதிரையைப் பூட்டி, உள்ளே நான்கு நீக்ரோக்களை உட்காரவைத்து, வண்டி ஒட்டுவதற்கு ஒரு பிக்மியனை நியமித்தால், அவனால் அந்த அரேபியக் குதிரையை அடக்கி, வண்டியை ஒட்டி, ஒழுங்காகக் கொண்டுபோய்ச் சேர்க்க முடியுமா? மூடநம்பிக்கைகளிலிருந்து மக்களை விடுவிக்கத்தான், தி.மு.க. மாநாடு என்றாலே அது ஒரு கல்லூரி வகுப்பு போலே, அறிவியலையும் தத்துவத்தையும் விளக்குகின்ற பாங்கிலே அமைந்திருப்பதைக் காணலாம். சொற்பொழிவும், இசையும், கலையும், நாடகமும் இதற்காகத்தான் நிகழ்த்துகிறோம். நான் நடிகர்களை நிரம்பப் பயன்படுத்துவது ஏனென்றால், ஒரு காலத்தில் இந்த நாடகத் துறையினர்தான் நாட்டில் மூடக் கருத்துகளைப் பரப்பியவர்கள். இவர்கள் ஆடிக் காட்டிய ஆட்டமும், பாடிக் காட்டிய பாட்டும், பேசிய வசனமும், பூசிய வேஷமுந்தான் நாட்டை இந்தத் தாழ்நிலைக்கு வீழ்த்தின! எனவே, இவர்கள் ஊட்டிய நஞ்சை இவர்களே உறிஞ்சி எடுக்க வேண்டும் என்ற கருத்தில்தான், இவர்களை நான் இப்போது என்னுடன் வைத்துக் கொண்டிருக்கிறேன்; என்னுடன் அழைத்து வருகிறேன்!“ -அண்ணாவின் இந்தக் கருத்தைக் கலையுலகினர் இன்று சிந்திக்க வேண்டும் நன்றாக! நீயுமா, புரூட்டஸ் ? அறுதிப் பெரும்பான்மை பெற்று உறுதியாகத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்கப் போகிறது என்பது தெரிந்தவுடன், நான் மாயவரத்திலேயே ஒரு பட்டியல் தயாரித்தேன். அமைச்சரவையில் யார் யார் இடம்பெறக் கூடும் என்ற என் யூகம் சரியாகவே இருந்தது; ஒன்று தவிர! அமைச்சரவைப் பட்டியல் அறிவிக்கப்பட்ட பிறகு “அது யாரண்ணா, முத்துசாமி?” என்று கேட்டேன். படத்தைக் காண்பித்தார்கள். பெரிய மீசையுடன், அது வரை நான் பார்த்தறியாத முகம். அவரைத் தவிர மற்றையோர் கழகத்திற்குப் புதியவரல்லர்; அறிமுகமானவர்களே. இந்தச் சில நாள் இடைவெளிக்குள் எவ்வளவோ ஆரூடங்கள் சோதிடங்கள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் உந்துதல்கள் கெஞ்சுதல்கள்! .– தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து மந்திரிசபை பதவி ஏற்ற காலம் வரை, தினமும் குறிப்பிட்ட ஒருவரை அமைச்சராக்க வேண்டுமென்று கோரி நாளொன்றுக்கு 50, 60 தந்திகள் வந்த வண்ணம் இருந்தன, அண்ணா பெயருக்கு! அருகிலிருந்த எங்களுக்கு இவற்றை வாங்குவதும் பிரிப்பதும் படிப்பதும் ஒரு வேடிக்கை நிகழ்ச்சியாகவே இருந்தது, இவ்வளவுக்கும், அந்தப் பெயர் கட்சியில் அறிமுகமான பெயரும் அல்ல, ‘அவர் மீனவக் கிறிஸ்துவர். பெயர் ஜி. ஆர், எட்மண்ட், அவரை மந்திரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்’ – அண்ணா வேதனையோடு குறிப்பிட்டார் – இந்த மாதிரி முறையிலே ஒருத்தர் மந்திரியாகி விடலாம்னா, நாமெல்லாம் எவ்வளவு ஏமாளிகள்னு” நெனக்கிறாங்க பாருங்கய்யா! என்று. இதேமாதிரியான இன்னொருவித முறையை, ஏற்கனவே ஒரு நண்பர் கையாண்டார். அதாவது தென் சென்னைத் தொகுதியில் நாடாளுமன்றத்துக்கு அண்ண்ர் போட்டியிட வேண்டும் என்று கழகம் தீர்மானித்தது. அண்ணாவுக்கு வழிவிடும் பொருட்டு நாஞ்சில் மனோகரன் தென்சென்னையிலிருந்து மாறி, வட சென்னைத் தொகுதியில் போட்டியிடலாம் என்றும் முடிவு செய்யப்பட்டு விட்டது. இவ்வளவுக்கும் பிறகு, நுங்கம்பாக்கம் அவென்யூ தெருவில், நாள்தோறும் ஏதாவது ஒரு தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் வரிசையாக அணிவகுத்து நிற்பதும், விண்ணப்ப மனு ஒன்றை அண்ணாவிடம் அளிப்பதும் வழக்கமாகியிருந்தது. என்ன கோரிக்கை என்றால், ‘எங்கள் தொழிற்சங்கத் தலைவர் எஸ். இராகவானந்தம் அவர்களுக்குத் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி தரப்பட வேண்டும்’ என்பது! இதனால் எங்கள் எல்லாருக்கும் தாங்க முடியாத எரிச்சல் ஏற்பட்டது. “என்னய்யா, இப்படியெல்லாம் Irritate செய்கிறதா? தொழிற்சங்கத்தின் வேலையிதுவா? இது நமக்கெல்லாம் புரியாத் வேலையா? நம்மையெல்லாம் தற்குறி என்று நினைத்துக் கொள்வதா?” என்று அண்ணர் ஒருநாள் வேதனையை, வெளிப்படுத்தினார். 1960-களில் மிகவும் தாமதமாக தி. மு. கழகத்தில் நுழைந்த ஒரு தோழரின் கைங்கர்யம் இது. அவர் அத்துடனில்லாமல் கலைஞரிடம் நேரிலேயே கேட்டார்-“அண்ணா எங்கு வேண்டுமானாலும் நின்று ஜெயிக்கலாம். நான் தென் சென்னையில் மட்டுமே நிற்க முடியும். அதனால் எனக்கே தரப்பட வேண்டும்” என்று. கலைஞர் என்ன பதில் சொல்லியிருப்பார் என்று யூகிக்கலாமே Black Prince of Annamatai – அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கருப்பு இளவரசன் என்று பெயர் பெற்ற கடலூர் இரெ. இளம்வழுதி-வழக்கறிஞர். அவர் சாக்கடைத் தண்ணீரில் பேனாவைத் தோய்த்து எழுதியது போல், எப்படியெல்லாம் கடிதங்கள் வரைந்தார் கழகத் தலைவர்களுக்கு! அவரை அமைச்சரவையில் சேர்க்க வில்லையாம். அதற்காக இழிமொழிகள் வசவுகள் சாபங்கள் தாபங்கள்! இவரைவிட நீண்ட நாட்களாகக் கட்சியிலிருந்து வந்த இன்னும் இருவர், மேலும் அநாகரிகமாக நடந்து கொண்டனர். அவர்களிருவருக்கும் தாமே நேரில் வந்து அண்ணாவிடம் கேட்க அச்சம். தத்தம் துணைவியார், மக்கள்-இவர்களை அனுப்பினார்கள். பட்டிக்காட்டுப் பெண்களைப் போல் அவர்கள் அழுது அரற்றிப் புலம்பி மாரடித்து மண்ணை வாரி இறைத்து அண்ணாவின் வீட்டில் அட்டகாசம் செய்தனர். எல்லாரும் பார்த்துக் கொண்டுதாணிருக்கிறோம்; அண்ணாவும் அமைதியாக அமர்ந்திருக்கிறார்! இதே போன்றுதான், தேர்தலில் நின்று தோற்றுப் போனவர் ஒருவர், “அய்யய்யோ! நான் ஜெயிக்கலியே! நான் என்ன செய்வேன்! என்னை மந்திரியாக்க மாட்டீங்களா? அய்யோ! நீங்க உள்ளே போயி உக்காரும்போது நான் வெளியிலேயே நிற்கிறதா?” என்று சுயநினைவு அற்றவராய்த் தள்ளாடி மயங்கி ஓவென்று கதறிக் கதறிப் பல நாட்கள் அழுதார்! அண்ணாவிடம் கேட்டேன் தனியாயிருக்கும் போது “அண்ணா! எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று சொன்னிங்களே - இதையெல்லாம் தாங்கிக்கதான் வேணுமா? பாக்கிறபோதே எங்களுக்கெல்லாம் ஆத்திரமும் கோவமும் வருதே-அவுங்களை நாமே தண்டிக்கலா மாண்ணு! இப்படி நம்ம அருமைத் தோழர்களே செய்றாங்களே? பதவின்னாபத்தும் பறந்து போயிடுமா? தொலைவிலிருக்கிற வெற்றி பெற்ற தோழர்களோ, ஒட்டுப் போட்ட மக்களோ என்ன நெனப்பாங்க? ஒங்களாலே இதை, எப்படித் தாங்கிக்க முடியுது?” என்று. அவர் சொன்னார் -“ஷேக்ஸ் பியர் Play ஜூலியஸ் சீசர் படிச்சோமே! வெறும் பாடமாவா படிச்சோம்; படிப்பினைண்ணு நெனைச்சிதானே படிச்சோம்! ’நீயுமா புரூட்டஸ்’ணு சீசர் கேட்டான்-நானும் கேட்க வேண்டியதுதானா? ’நீயுமா நடராஜன்? நீயுமா சின்னராஜ்? நீயுமா தர்மலிங்கம்ணு: ஆனா, நான் கேட்கலை கேட்கமாட்டேன். ஏண்ணா; நான் சீசரில்லை! வெறும் அண்ணாத்துரை!” என்றார்ட் பொறுமையின் பிறப்பிடம், அமைதியின் இருப்பிடம், கண்ணியத்தின் உறைவிடம்-எண்ணற்ற சோகச் சிதறல்களை மென்று விழுங்கிவிட்டு! தம்பி, தோழராகி விட்டார்! ஈ.வெ.கி. சம்பத் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகிவிட்டர் என்ற பலமான வதந்தி திருச்சி மாநாட்டுக்கு முதல்நாள் பரவியிருந்தது. 1956-ல். அண்ணாவிடம் கேட்டேன். அதெல்லாம் இருக்காது என்று அலட்சியமாகச் சொன்னாலும், அண்ணாவின் உள்ளத்தில் சலனம் உண்டாகி விட்டது என்பதை முகம் காட்டியது. ஆனால், மாநாட்டில் உரையாற்றும்போது சம்பத் “நான், அண்ணாவின் கையைப் பிடித்துக்கொண்டுதான் நடக்கக் கற்றுக் கொண்டவன். என் கையைப் பிடித்து, என்னை அரசியலுக்கு அழைத்து வந்தவர் அவர்தான். அவர் தின்றுவிட்டு மிச்சமாகத் தந்த எச்சில் பக்கோடாவைத் தின்று வளர்ந்தவன் நான். அவரை விட்டு விலகி நான் வேறெங்கே போவேன்?” -என்ற பாங்கில் பேசினார். நம்பும்படியாகவே இருந்தது அப்போது! டிக்கட் விற்கும் பெரிய Counter என் தலைமையில். தலைமைக் கழக சண்முகம், தேவராஜ், மாயூரம் காந்தி ஆகியோர் என் உதவிக்கு. பணம் எண்ணிக் கட்டி வைக்கது. ப. அழகமுத்து உதவி. நாவலர் புதிய பொதுச் செயலாளர்-மாநாட்டுத் தலைவர் அவர்தானே-தலைவரை முன்மொழிந்தும், வழிமொழிந்தும், பலரும் உரை நிகழ்த்துவது எங்கள் காதில் லேசாக விழுகிறது. நாங்கள் கருமமே கண்ணானவர்கள். எழுந்து போக முடியாது; கடைசியாக அண்ணா வழிமொழிவாரே - அந்தப் பேருரையை மட்டும் எப்படியாகிலும் கேட்டுவிட வேண்டும். என்ற ஆவல் எனக்கு. இவர் எங்கள் மாவட்டத்தில் பிறந்தார், படித்தார், பெண் எடுத்தார்-என்ற ரீதியில் பலரும் நாவலரைச் சொந்தம் கொண்டாடிப் பாராட்டினர். அண்ணா பேச எழுந்ததும் சண்முகமும் நானும் பந்தலின் எல்லையில், ஒரு ஒலிபெருக்கி முன்பு நின்று, காதைத் தீட்டிக் கொண்டோம். “தம்பி வா. தலைமை தாங்க வா. உன் ஆணைக்கு அடங்கி நடப்பேன் வா.” -அண்ணா ‘மைக்’ முன்பு வந்தார். சொன்னார். திரும்பினார். நடந்தார். அமர்ந்தார்! நீண்டதொரு சொற்பொழிவை எதிர்பார்த்து, எதிரில் நெருக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்த லட்சக்கணக்கானோர் ஏமாந்தனர். எனினும், திருக்குறள் போல் உலகத்தையே தன்னுள் அடக்கிய சிறிய உரையைக் இக்ட்டோரின் கையொலி அடங்க, நெடுநேரம் ஆயிற்று. ’என்னங்க சண்முகம்! அண்ணா பேச்சைப்பற்றி என்ன தெனக்கிறீங்க?” என்றேன். தீர்க்கமான சிந்தனையும், தெளிவான கருத்துகளும் கொண்ட சிறந்த பேனா மன்னரான இந்தச் சஆமுகத்தை அண்ணா தான் தேர்ந் தெடுத்தார். வில்லாளனை அனுப்பி, இவரைத்தாமே அழைத்துவந்து, தலைமை நிலையத்தை ஒப்படைத்தார். சண்முகத்திடம். அவர் சொன்னார்- சொல்றதுக்கு என்னங்க இருக்கு. ஆப்ரகாம் லிங்கனின் கெட்டிஸ்பர்க் உரைபோல்ண்ணு சொல்லலாம். மக்களாட்சித் தத்துவத்தை இப்படிச் சுருக்கித்தர வேற யாராலும் முடியாது. இதைத் தமிழில் சொல்றதை விட, இங்கிலீஷ்ல சொல்லிப் பாருங்க. ரொம்ப உயர்வாயிருக்கும். Come on my younger brother! Come on to lead! I will obey your commands!” உலகமே, இதைக் கேட்டா, அண்ணாவின் அறிவாற்றலை உச்சிமேல் வச்சி மெச்சிக்கொள்ளும்!” என்று. நாவலரைத் தேர்ந்தெடுத்தது சம்பத்துக்குப் பிடிக்க வில்லையோ? ஆமாம்! நான்காண்டுகளில் அது வெடித்து விட்டதே! என்னிடம் ஒருநாள் சம்பத் சொன்னார். நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லிக்கு போறவன். யாரும் கடைசிவரை நீடிக்க முடியாது கட்சியிலே! அவ்வளவு சுகபோகம், வசதிகள், வாய்ப்புகள் அங்கே! பார்லிமெண்ட் ஹவுசின் ரத்தினக்கம்பளத்திலே, காலடிபட்டாலே சுருண்டு விடுவான் எவனும்” என்று. அவரே இப்படிச் சுருள்வார் என்று நானே எதிர்பார்க்க வில்லை! அண்ணர் அவரிடம் எவ்வளவு எதிர்பார்த்தார்! தர்மலிங்கமும் அவரும், இரண்டுபேர்தான் நமது பிரதிநிதிகள் என நாடாளு மன்றத்தில் வாழ்ந்தபோது, சம்பத்தைத் திருப்திப்படுத்தக் காரில் டெல்லிவரை பயணம் போனார் அண்ணா. தாம் விலகுவதற்கு முன் கழகப் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு நீண்டதொரு விள்க்கக் கடிதம் அனுப்பினாரல்லவா-சம்பத், மாயூரம் கிட்டப்பா பொதுக்குழு உறுப்பின்ராகையால், அவருக்கும் அந்தக் கடிதம் ஒன்று வந்தது. அத்துடன், ஒரு துண்டுச் சீட்டில் “இந்தக் கடிதத்தை நண்பர் கருணானந்தம் அவர்களிடம் காண்பித்து, அவருடைய எண்ணத்தைத் தெரிவிக்குமாறு சொல்லுங்கள்” -எனவும் வரைந்தனுப்பி வைத்திருந்தார். அதை நன்கு படித்துவிட்ட நான், ஒரு பத்துப்பக்கம் உள்ள பெரிய கடிதம் எழுதினேன். அண்ணாவுக்கும். அவருக்கும் இடையே பிறந்து வளர்ந்த பாசம், நேசம். பற்று உறவு, அன்பு ஈடுபாடு இவற்றை ஒவ்வொன்றாக விளக்கி-நீங்கள் இப்படி நடந்து கொள்ளக்கூடாது. இந்த மாதிரி ஒரு கடிதம் எழுதியதே தவறு. எவ்வளவுதான். மனக்குறையிருப்பினும், அண்ணர்விடம் நேரில் பேசி விவாதம் செய்திட உங்களுக்கு, முழு உரிமையும், கடமையும் உண்டு-என்றெல்லாம் எழுதிச் சம்பத்துக்கு அனுப்பியதுடன், ஒரு பிரதி நகல் எடுத்து, அண்ணா அவர்களின் பார்வைக்கும் கொடுத்தனுப்பினேன். என்னுடைய இந்தக் கடிதத்தை அண்ணா அவர்கள் படித்ததும் வெகுவாகப் பாராட்டினார்கள் என்று கேள்விப்பட்டேன். பயனில்லாமல் போயிற்றே! ஒரு காலத்தில், பெரியாரின் வாரிசாகச், சட்டப்படித் தத்துப்பிள்ளையாக வருவார் என எதிர்பார்த்தேன். பெரியாரைப் பகைத்துக் கொண்டு, அண்ணா வெளியேறியபோது, அண்ணாவின் வாரிசாகவாவது சம்பத் நிலைத்திருப்பார் என்று நம்பினேன். அவர் தி. மு. கழகத்தில் தொடர்ந்து இருந் திருந்தால் ஆட்சிப் பொறுப்பில் சிறந்த நிர்வாகியாக விளங்கியிருப்பாரே! காமராஜர் வாழ்ந்த வரையில் அவரிடம் விசுவாசம்.அவர் பிணமாகி வீழ்வதற்குள் இந்திராகாந்தியிடம் விசுவாசம் என்று அவரது தேசியப் பற்றும் தடம் புரண்டுதான் போயிற்று! கோடம்பாக்கம் இந்தி எதிர்ப்பு மாநாட்டை அவர் நடத்தியபோது, மாயூரத்திலிருந்து ஓடோடி வந்தேன். வழக்கமான டிக்கட் விற்கும் பணி என்னிடம் தரப்பட வில்லை. அண்ணா முன்னிலையில் சம்பத்திடம் ஏனென்று கேட்டேன். “நீங்க இப்பதானே ஜெயில்ல இருந்துட்டு வந்திருக்கீங்க. ரெஸ்ட் எடுங்க” என்றார் சம்பத், இது 31.7.1960ல். அன்றைய மாநாட்டில், “தம்பி சம்பத் சொன்னான்” என்றுதான், வழக்கப்படியே பேசினார் அண்ணா! ஆனால்… ஆனால்… ஆனால்! அடுத்து ஆறு மாதங்களுக்குள் சடசடவென்று முன்னேறி, உண்ணாநோன்பு தொடங்கிவிட்டார் சம்பத், அண்ணா அளவிறந்த உளைச்சலுற்ற மனத்தினராய்இனிச் சம்பத்துத் தேறமாட்டான் என்று இறுதியாகப் புரிந்துகொண்டு “தோழர் சம்பத், தன் உண்ணா நோன்பைக் கைவிடுவார் என்று நம்புகிறேன்” என்று, பாஷையை மாற்றிக்கொண்டாரே!.24.2.1901ல் தன் அறிக்கையில்! பிரிந்து சென்றபிறகு அண்ணாவும் சம்பத்தும் சந்தித்துக் கொண்டார்களோ என்னவோ எனக்குத் தெரியாது. நான் பார்க்கவில்லை இருவரையும் ஒரேயிடத்தில்! திருச்சியில் அடிக்கல் நாட்டினார் நான் ஒரு விண்ணப்பம் கொடுத்தேன் முதலமைச்சர் அண்ணா அவர்களிடம், “என்னய்யா, நீ கூட மனு கொடுக்க ஆரம்பித்து விட்டாய்?” என்றார். “நீங்கள்தானே சொல்லியிருக்கிறீர்கள், ஜனநாயக ஆட்சியில் பொது மக்கள் விண்ணப்பம் கொடுப்பதும் தவறல்ல. சிபாரிசுக்காகத் துண்டுத்தாள் தருவதும் குற்றமல்ல என்று.” “சொன்னது மெய்தான். ஒட்டுப்போட்டு ஆட்சியில் அமர்த்திய மக்கள், நம்மிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வார்கள்? அதற்காக, அவர்கள் சொல்வது அனைத்தையும் செய்துவிடவும் முடியாது! நியாயமான கோரிக்கையா எனப் பார்த்து, உரிய முறையில் முடிக்கவேண்டும். உதாரணமாக, ‘ஒரு அதிகாரி சரியில்லை; அவரை எங்கள் ஊரிலிருந்து மாற்ற வேண்டும்’ என்பார்கள். சரி. அவரை வேறொரு ஊருக்கு மாற்றினால் அங்கு போனால் மட்டும் அவர் நல்லவராகி விடுவாரா? அதனால், அம்மாதிரி கோரினால் நான் ஒத்துக் கொள்ளமாட்டேன். ஆனால், அவர் ஊழல் செய்கிறார் என்று நிரூபிக்க முடிந்தால், அவரை வீட்டுக்கு அனுப்பவும் தயங்கமாட்டேன். சரி, இப்போது உன் மனு என்ன? சொல்லு!” என்று கேட்டார் அண்ணா. “திருச்சியில், பிளாசா டாக்கீஸ் அருகில், எங்கள் RMS சூப்பரிண்டெண்டெண்ட் அலுவலகம் இருக்கிறது. அதன் எதிரே சிறிது புறம்போக்கு நிலம் தனியார் உபயோகத்தில் இருந்து வருகிறது. அந்த இடம் எங்களுக்குக் கிடைத்தால், தொழிற்சங்கத்துக்கு ஒரு சிறு கட்டடம் கட்டிக் கொள்வோம். திருச்சியிலுள்ள எங்கள் கோட்டக் கிளையினர் இப்போதே 5000 ரூபாய் நிதி திரட்டி வைத்துள்ளனர்- என்றேன். உடனே ஆவன செய்யுமாறு திருச்சி கலெக்டர் திரு. ஹரிபாஸ்கர் அய். ஏ. எஸ். அவர்களுக்குப் பரிந்துரைத்தார் அண்ணா. அண்ணாவிடம் நேரே இந்தச் சிறு விஷயத்துக்காக வர வேண்டிய சூழல் எப்படி நேர்ந்தது? திருச்சியிலுள்ள என் நண்பர் H. பித்சை ஒருநாள் மாயூரம் ஓடிவந்து என்னிடம் ஓவென அழுதார். தேற்றி, விவரம் கேட்டேன். மேற்படி புறம்போக்கு நிலம் சம்பந்தமாக வருவாய்த்துறை சிறு அலுவலர்களிடம் போய் விசாரித்தபோது, அவர்கள் மரியாதையின்றிப் பேசிவிட்டார்களாம். “இதை உங்களுக்குப் பெற்றுத் தருவது இனி, என் கடமை” என உறுதி கூறி அவரை அனுப்பினேன். நடந்தது! இந்தக் கட்டடத்துக்கு அண்ணாதான் அடிக்கல் நாட்ட வேண்டுமெனவும் திருச்சி நண்பர்கள் விழைந்தனர். “இது சிறிய நிகழ்ச்சியாகும்; இதற்காக அண்ணாவின் நேரத்தை வீணாக்கிடக்கூடாது; திருச்சிக்கு வேறு சந்தர்ப்பத்தில் வரும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்” - என்று சொன்னேன். அவ்வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், அன்றைக்கு அங்குள்ள தொலைபேசி ஊழியர்களின் வேண்டுகோளுக்கிணங்க, (மச்சான்) அன்பில் தர்மலிங்கம் வேறொரு விழா ஏற்பாடு செய்திருந்தார். நான் ஊடே புகுந்து, அதனை ரத்துசெய்து, எங்கள் கால்கோள் விழாவுக்கு மட்டும் அண்ணாவிடம் ஒப்புதல் பெற்றேன். எங்கள் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தின் உள்ளேயே மேடை அமைத்து விழா நடத்தினோம். அப்போது திரு. தியோடர் பாஸ்கரன் அவர்கள் அதிகாரி. என்பால் பேரன்பு பூண்டவர். இவரே சிறந்த இயற்கை விஞ்ஞானி. ஆங்கில எழுத்தாளர். எங்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கியதோடு, விழாவிலும் பேசினார். என் தலைமையில் கூட்டம். நமது பழம் பெரும் தொழிற் சங்கவாதி பொன்மலை பராங்குசம், தொலைபேசிச் சங்கத்தின் செயலாளர் பத்மாவதி நடேசன் ஆகியோரும் உரையாற்றினர். நண்பர் பிச்சை, தானே அப்போது மெட்டமைத்த தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடி, தன் 5 வயது மகன் மனோகரனைக் கொண்டு அண்ணாவுக்கு மாலை சூட்டினார். பத்மாவதி நடேசன், தங்கள் சங்கத்திற்கும் இடம் வேண்டுமெனக் கோரினார். அண்ணா பேருரையில், எங்கள் கண்காணிப்பாளர் திரு எஸ். டி. பாஸ்கரன் அவர்களைப் பாராட்டிப் புகழ்ந்தார்கள். “ஒரு குடும்பத்தில் மகனுக்குத் தந்தை சில சலுகைகள் செய்யும்போது, மகள் சும்மாயிருக்குமா? தனக்கும் ஏதாவது கேட்க எண்ணுமல்லவா? அதே போல, இன்று நான், RMS மூன்றாம் பிரிவு ஊழியர்களுக்குச் சிறியதொரு இடத்தை வழங்கியது போல், தங்களுக்கும் அளித்திட வேண்டுமெனத் திருமதி பத்மாவதி நடேசன் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் விருப்பமும் நிறைவேற ஆவன செய்கிறேன்” என வாக்குறுதி தந்தார்கள் அண்ணா. அந்த அடிப்படைக் கல்லை, எதிரிலுள்ள புறம்போக்கு நிலத்தில் புதைத்து வைத்தோம், ஒரு மூலையில், மிகுந்த நம்பிக்கையோடு, கட்டடம் எழுப்ப எண்ணி! ஆனால் அண்ணா அவர்களே அப்போதைய மாவட்ட ஆட்சியரிடம் நேரில் எங்கள் முன்னிலையில் ஆணை பிறப்பித்தும், செயலளவில் எங்களுக்கு ஒன்றும் நடைபெறவில்லை. பின்னர் அங்கு கலெக்டராக வந்த திரு. வைத்தியலிங்கம் I. A. S. என்னிடம் கேட்டுக் கொண்டார். “அந்த இடத்தில் ஜவான்பவன் வருகிறது. உங்களுக்கு வேறு நிலம் தருகிறேன்” என்று தரவில்லை அவரும். அவர் மேலும் தவறில்லை: follow up action என்பார்களே அந்தத் தொடர் நடவடிக்கை இரு புறத்திலும் இல்லாமல் போயிற்று. எங்கள் தோழர்களும் சிலர் மாற்று தலுக்கு ஆளானார்கள். சங்கமும் பிளவுற்றது. ஆனால் அந்தப் பணம் மட்டும் இன்னும் காத்திருக்கிறது! அண்ணா திறந்துவைத்த அந்த அடிக்கல்லில் என் பெயரும் இருக்கிறது. விழாவில் எடுத்த அருமையான புகைப்படங்கள் திருச்சியில் என் நண்பர் முத்துக்குமாரிடம் உள்ளன. ஆமாம், அந்தக் கல் இப்போது எங்கே? கட்டடம் எழும்பாவிட்டால் பரவாயில்லை! அந்த அடிப்படைக் கல்லே ஒரு நினைவுச்சின்னமாகுமே! யாராவது கண்டு பிடித்துச் சொல்லுங்களேன்! இது நடைபெற்றது 1967 ஆகஸ்ட் திங்களில். தேதி ஞாபகமில்லை! (இந்த விழாவின் புகைப்படமும் 161-ஆம் பக்கத்தி லுள்ள நிகழ்ச்சியின் புகைப்படமும் நூலின் பின்புற அட்டையில் உள்ளன.) நட்பிலும் இருபக்கம் உண்டு பேராசிரியர் மா.கி. தசரதன் சென்னை பச்சையப்பன் கல்லூரி முதல்வராயிருந்து அண்மையில் மாண்டுபோனார். இவர் முதலில் காஞ்சியில் தமிழாசிரியராயிருந்தபோது அண்ணாவுக்கு அறிமுகமானார். பின்னர் நெருக்கம் அதிக மாகி, ஈழத்தடிகள் போன்றார் அண்ணாவுடன் சீட்டு விளையாடும்போது இவரும் அங்கு இணைந்துகொள்வதைப் பார்த்துள்ளேன். ஒரளவு இவருக்கு இயக்க ஈடுபாடும் இருக்கட்டுமென அண்ணா என்னிடம் சொன்னதைச் செயல்படுத்திட என். எஸ். இளங்கோ தஞ்சை மாவட்டச் செயலாளராக இருந்தபோது நடத்திய ஒரு தி. மு. க. மாநாட்டின் ஊடே, தசரதன் தலைமையில் ஒரு கவியரங் கம் நடத்தி, நானும் திராவிடம் பற்றிப் பாடினேன், காரைக்காலில். அண்ணா துங்கம்பாக்கத்தில் குடியேறிய சமயத்தில், இவரும் சென்னைக்கு மாற்றுதல்பெற்று அடிக்கடிஅண்ணா வீட்டில் தென்படுவார். 1967 தேர்தலுக்கு வேட்பாளர் தேர்ந்தெடுக்கும் பணி நடை பெற்றுவந்தபோது, ஒருநாள் அண்ணாவுடன் நான் மட்டும் இருந்த நேரத்தில் தசரதன் “அண்ணா, நான் வேலையை விட்டுவிலகி, நாடாளுமன்றத் துக்குப் போட்டியிட எண்ணுகிறேன்!” என்று மெல்லிய குரலில் அறிவித்தார். “வேண்டாம் தசரதன்! பேசாம வேலையைப் பார்!” என்று பதிலிறுத்ததன் வாயிலாக, அண்ணா அவர் கூற்றை serious ஆக எடுத்துக் கொள்ள வில்லை என்பதை நான் உணர்ந்தேன். ஒரு வாரம் சென்றது. வாய்ப்பு நழுவிப் போய்விடுமோ என்ற அச்சத்தினால், இதே மாதிரி ஒரு தருணத்தில், தசரதன் தனது கோரிக்கையைப் புதுப்பித்தார். “எங்கள் மாத்தூர் இந்தத் தொகுதியில் தான் வருகிறது. நிறைய உறவினர்களும் இருக்கிறார்கள் அண்ணா!” என்று கெஞ்சும் பாவனையில் கேட்டபோது, அண்ணா சிறிது சினமுற்றவராய்த் தொந்தரவு “செய்யாதே தசரதன்! உனக்கு ஏன் தேர்தல் ஆசையெல்லாம்? என்னுடன் இருப் பதை advantage ஆக எடுத்துக் கொண்டுவிடாதே!” என்றார் குரலைச் சிறிதளவு உயர்த்தி, மிகக் கண்டிப்புடன்! எவ்வளவு உயர்வானதொரு பாடத்தைத் தன்னிடம் பழகு வோர்களுக்குக் கற்பித்தார் அண்ணா! இதே அண்ணாவின் மறுபக்க மனத்தில், நட்புக்காகத் தன்தம்பிமார்களிடம் போராடும் பண்பும்மறைந்திருந்ததை வேறொரு நிலவரம் உணர்த்தியது. அது என்ன? தெனாலி ராமன் அல்லது கோமாளி என்றே (அண்ணாவை அறிந்த அனைவராலும்) கருதப்பட்டவர்- சி. வி. ராஜகோபால் உண்மையில் இவரை அண்ணாவின் இடிதாங்கி அல்லது shock absorber என்றே சொல்லலாம். இவருக்கு M.L.C பொறுப்பு தரப்பட வேண்டுமென அண்ணா தெரிவித்த போது, அண்ணாவுக்கு அடுத்த நிலையிலிருந்த கழகத்தலைவர்கள் அனைவருமே விளையாட்டாகவும் கேலியாகவும் கருதினர். தர விரும்பவில்லை. இது அண்ணாவின் கோபத்தைக் கிளறிவிட்டது. சிவியார் “என்னப்பா கருணானந்தம்! அண்ணா சொல்லிக்கூட எனக்கு M. L. C. தரமாட்டாங்களாமே? நானா கேட்டேன் உங்களை? அண்ணாவே ஆசைப்பட்றாரு எனக்குத் தரணும்னு! நான் அண்ணா கூடவே மாட்டு வண்டியிலே போயி படிச்சி வந்தவன். இத்தனை வருஷமா பிரியாமெ இருக்கறதே எனக்கு disqualification என்று நினைக்கிறீங்களா? என்னோட weakness சிலதை அண்ணா பகிரங்கமாக் கண்டிக்கிறதாலே உங்களுக்கு இளக்காரமாப் போச்சா? நீங்க யாருமே நான் செய்கிற இந்தத் தவறு களைச் செய்றதில்வியா?” என்று என்னிடம் உரக்கக் கத்தினார், ஒருநாள் கொத்தவால்சாவடி அருகில்! தி.மு.க. சார்பில் ராஜாஜிக்குக் கருப்புக் கொடி காண்பிக்க முடிவெடுத்த நேரம், காஞ்சி நகர மன்ற வரவேற்புக் காக ராஜாஜி வருகிறார். கழகத் தோழர்கள் யாவரும் முன் கூட்டியே கைது. நகரசபை மண்டபத்தினுள், உறுப்பினர் என்ற தகுதியோடு நுழைந்துவிட்ட C.W.R. தனது கைக் குட்டைபோல் பையில் வைத்திருந்த ஒருகருப்புக் கொடியை நேரே ராஜாஜி கையில் கொடுத்துப் புரட்சியை உண்டாக் கியவர். இந்த வீரசம்பவத்தையெல்லாம் தம்பிமார்களுக்கு நினைவு படுத்தவேண்டிய நிலைமைவந்தது அண்ணாவுக்கு. ராஜகோபாலும் சட்ட மேலவை உறுப்பினரானார் பிறகு. இப்படி, ஒரு நண்பருக்காக வாதாடிய அண்ணாவே, தனது இன்னொரு நண்பரை அவர் தமது கடமையினின்று வழுவியமைக்காகச் சினத்தின் எல்லைக்கே சென்று, சுடு சொற்கள் கொண்டு தாக்கியதையும் நான் கண்ணுற்றேன். அண்ணா முதலமைச்சர். அவருடைய கல்லூரிச் சகாவான நாராயணசாமி (முதலியார்) அட்வகேட் ஜெனரல்; இரண்டொரு கழகச் சார்பான கிரிமினல் வழக்குகளில் ஆஜரான தகுதியினால் பெற்ற பதவி இது. பிற்காலத்தில் இவர் உயர் நீதிமன்றத்துக்கு உயர்த்தப்பட்டும், திருப்தியடையாமல் உச்சநீதி மன்றம், அமைச்சுப்பதவி என ஆசைப்பட்டவர். அரசு வழக்கறிஞர் என்ற நிலையில் தமது கடமையை உரிய முறையில் ஆற்றத் தவறினார் என்பதை அண்ணா அழுத்தமாகச் சுட்டிக் காண்பித்ததுடன், அவர் என்னென்ன செய்திருக்கவேண்டும் என்பதையும், தமது சட்ட அறிவு துணுக்கத்தால் எடுத்துரைத்துக் கண்டித்தார். என்னைப் போன்ற சாமான்யனுக்கே அந்த வார்த்தைகளைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை! அவரோ நேரிலேயே அமர்ந்து எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டார். ராஜினாமா செய்து விட்டுப் போங்கள் என்று மட்டுந்தான் சொல்ல வில்லை அண்ணா! கழகப் பொதுச் செயலாளரான அண்ணாவிடம் யாரா வது எனக்கு வேண்டிய நண்பர்களை வேட்பாளராகச் சிபாரிசு செய்தால், நான் சொல்வதற்கு அண்ணா இசைவார் என்பதில் அய்யமில்லை. ஆனால் நான் அப்படிப்பட்ட பரிந்துரைகளுக்காகப் போனதில்லை. அதற்கு மாறாக 1967.ல், குறிப்பிட்ட ஒருவருக்கு seat தரவேண்டாம் எனக் கேட்டேன். அவர் யார்? அண்ணாவின் எதிரொலி என எங்களால் சிறப்பிக்கப் பெற்ற தத்துவமேதை டி. கே. சீனிவாசன் 1962-ல் கும்பகோணம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார்; 1967-ல் அதே தொகுதியைத் தனக்குக் கேட்கும் உரிமை அவருக்கே உண்டல்லவா? ஆனால் 1966-ன் இறுதிப் பகுதியில் அவர் உடல்நிலையும், மனநிலையும் குன்றித், தஞ்சையில் வாழ்ந்து வந்தார். அவர் நன்மையில் அக்கறையுடைய நண்பர்களான வழக்கறிஞர் சாமிநாதனும் மாணிக்கவாசகமும் ஒருநாள் அவரை அழைத்து வந்து, மாயூரத்தில் என் வீட்டில் விட்டு, நிலைமையை எடுத்து விளக்கினர். அதாவது அவரே கேட்டாலும் தேர்தலில் அவர் நிற்க அனுமதிக்கூடாது என. அண்ணா மாயூரம் வந்திருந்தார்கள், சீனிவாசனை என் வீட்டில் இருக்க விட்டுத், தனியே அண்ணாவைச் சந்தித்து, விவரங்களைக் கூறினேன். அண்ணாவும் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் இருவரும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டாமென நாங்கள் முடிவு செய்தோம். யாவுமே டி. கே. சி. யின் நன்மைக்காகத்தான்! அவரைத் தஞ்சைக்கு ரயிலேற்றி அனுப்பிய பின்னர் அண்ணாவை என் வீட்டுக்குச் சாப்பிட அழைத்து வந்தேன் இரவு. பின்னர் மாநிலங் களவை உறுப்பினர் பொறுப்பினில் கலைஞர் சீனிவாசனை அமர்த்தியபோது நானே, அதனை ஆதரித்தேன். அப்போது அவர் நலமடைந்து விட்டார். நாணயத்தின் இருவேறு பக்கங்களைப் போல அண்ணா வின் நட்பிலும் இருவேறு பக்கங்கள் உள்ளனவே! அழிவினவை நீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு. என்னும் 787-ஆவது திருக்குறள், அண்ணாவின் இப்பேர்ப்பட்ட நட்பினடிப்படையிலான நடவடிக்கைகளுக்கு, நல்ல எடுத்துக்காட்டு ஆகுமன்றோ? காக்கை-நரி கதை, அரசியலில்! “நான் இப்ப ராஜ்யசபைக்குப் போகாமே இருந்திருந்தா, இந்தப் பிரிவினைத் தடைச்சட்டத்தை இவ்வளவு அவசரமாக் கொண்டுவந்திருக்கமாட்டாங்க” என்றார் அண்ணா. “இப்ப இல்லேண்ணாலும், எதிர்காலத்திலே எப்பவாவது கொண்டுவருவாங்களா?” என்று கேட்டேன் நான் அண்ணாவிடம். “கட்டாயம் கொண்டு வரத்தான் செய்வாங்க! ஏன்னா, கருத்துக்குக் கருத்துண்ணு சொல்லி, நம்மோட வாதம் பண்ணி, நம்ம திராவிடநாடு பிரிவினைக் கோரிக்கையிலே இருக்கிற ஞாயங்களைப் புரிஞ்சிக்க வேணுமிண்ணு அவுங்களுக்கு ஏது அக்கறை?” என்று பதில் தந்தார். “பிரிவினையைக் கண்டு ஏன் இப்படிப் பயப்படுறாங்க? இந்தியா சுதந்திரம் பெறுமுன்பே நாம் 1940முதல் 24 வருஷமா திராவிடநாடு பிரிவினை கேட்கிறோம். 1940-ல் நேரு பாக்கிஸ்தான் திட்டம் ஆபாசமானது. விஷமதத்தனமானது காங்கிரஸ் யோசித்துப் பார்க்குமளவு யோக்யதை உள்ள விஷயம் என்று கூட காங்கிரஸ் கருதவில்லை” என்று சொன்னாரே! இவர்களே, கிடைத்தவரை லாபம்னு, பாக்கிஸ்தான் பிரிவினைக்கு ஒத்துக்கிட்டவுங்கதானே?” என்று கேட்டேன். “அதனால்தான் சூடுகண்ட பூனைபோல் பயப்படுறாங்க, நானும் சொல்லிட்டேன். திராவிடநாடு கோரிக்கையை இப்போது நான் கைவிட்டாலும், இதைக் கேட்பதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்று.” அண்ணா தந்த மறுமொழி இது. 1953-ல் அவசர அவசரமாக சர்.சி.பி. ராமசாமி அய்யர் தலைமையில் ஒருமைப்பாட்டுக் குழு ஒன்றை அமைத்தனர். இவரே திருவாங்கூர் திவானாயிருந்த போது, அந்த சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைப்பதற்கு எதிர்ப் பாயிருந்தவர்தானே! எனினும்,இவர் தலைமைப் பதவியை எப்படியோ(?) பெற்றார். அதன் நடைமுறை எப்படி யிருந்திருக்கும்? டெல்லியில் நடந்த மாநாட்டிலும் அண்ணாவை அழைத்துக் கருத்துக் கேட்கவில்லை. அந்தக் குழுவினர் சென்னை வந்தபோதும் நமது கோரிக்கை என்ன, ஏன் பிரிவினை கேட்கிறோம் என்று கேட்டுப் பதிவு செய்து கொள்ளவில்லை. ஒருதலைப் பட்சமாகவே பரிந்துரை கூறி, விரைவில் நாடாளுமன்றத்தில் பிரிவினைத் தடை மசோதா கொணரக் காரணமாயிருந்தது இந்தக் குழு. கருத்தை அறிந்துகொள்ளவே அவ்வளவு அச்சம் அவர்கட்கு! அண்ணா பிரிவினைத் தடைச் சட்டத்தின் சாதக பாதகங்களை நன்கு ஆராய்ந்தார். தன் அருமைத் தம்பிமார்களுடன் மனம் விட்டுப் பேசிக், கலந்து உரையாடினார். நானும் அவ்வப்போது இருந்து, என்கருத்தைச்சொன்னேன். பிரிவினைத் தடைச்சட்டத்தை மீறிச் சிறைசென்று ஆறேழு ஆண்டுகள் வாடுவதால், உருப்படியான பலன் என்ன? அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துக் காங்கிரசார் சிறை சென்றதற்கும், சுதந்திர இந்தியாவில் நாம் சிறை செல்வதற்கும், பயனைப் பொறுத்த வரையில் நிரம்ப வேறுபாடு உண்டே ! அண்ணாவை நான் அறிந்த நாட்களாய், அவர் இல்வளவு கவலையுடனும், எந்த நேரமும் சிந்தனை தேக்கிய முகத்துடனும் வேறு எப்போதும் இருந்ததில்லை. திராவிடர் கழகத்தினின்று விலக நேரிட்டதுபோதும் இந்த அளவு வேதனையுற்றதில்லை! “ஏண்ணா! இப்ப, திராவிடநாடு கொள்கை இந்தியா பூராவும்-ஏன்-உலகம் பூராவும் தெரிஞ்சி போச்சி. இதையே லாபமா நெனச்சி, இப்படி ஜனநாயக விரோதமா ஒரு எதிர்க்கட்சியை அழிக்கவே இந்தச் சட்டம் கொண்டு வாராங்கண்ணு, அவுங்களை Expose பண்ணலாமே” என்று எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன். “செய்யலாம். பிடிவாதமா, சட்டத்தை மீறுவேண்ணும் சொல்லலாம். இருக்கிற நம்ம ஆட்களிலே உறுதியான சிலபேர் ஜெயிலுக்குப் போய் ஏழெட்டு வருஷம் உள்ளே கிடக்கலாம். கட்சி என்ன ஆகும்? நான் அதைத் தான் யோசிக்கிறேன்” என்றார்-அண்ணா. அவர் மன உளைச்சல் நன்கு வெளிப்பட்டது. தமிழ் தேசியக் கட்சி அமைத்திருந்த சம்பத், தோழர் அண்ணாதுரை என்று அண்ணாவையும், மற்ற தி மு. க. தலைவர்களையும், திட்டியதோடு, கழகத் தொண்டர்களையும் தாக்கியதுடன் நில்லாமல், திராவிடநாடு பிரிவினைக் கொள்கையையும் கடுமையாக எதிர்த்தார். “என்னண்ணா இது விபரீதமா யிருக்கு? நீங்க அய்யாவை விட்டு வந்த பிறகும், அவரைத் திட்டவும் இல்லை; சுயமரியாதைக் கொள்கைகளை நூத்துக்கு நூறு ஏத்துக்கிட்டீங்களே ஒழிய, விமர்சிக்கவுமில்லை! இவரு ஏன் இப்படிப் போனாரு!” என்று அண்ணாவிடம் விசனப்பட்டேன். துரத்துக்குடி பொதுக் கூட்டத்தில் அண்ணா பேசினார் :- “திராவிட நாட்டுப் பிரிவினைக் கோரிக்கையை விட்டுவிடுமாறு தோழர் சம்பத் சொல்கிறார். நேரு கூறினார் விட்டுவிடுமாறு. அப்போது நாம் விட்டிருக்கலாம்: அகில உலகத் தலைவர் சொல் கிறாரே-அதைக் கேட்டு நடப்போமே, என்று! ராஜாஜி கூறியபோது விட்டிருக்கலாம்; ராஜ தந்திரி ஒருவர் கூறுகிறாரே என்று! காமராஜர் சொன்னாரே, அப்போது விட்டிருக்கலாம்; கர்ம வீரர் சொல்கிறாரே என்று! அப்போதெல்லாம் கைவிடாத நாம், சம்பத் சொல்கிறாரே என்பதற்காகவா விட்டுவிடப் போகிறோம்? தேவை யில்லை! நாம் தொடர்ந்து செல்வோம்!” என்று. திராவிடநாடு பிரிவினைக் கோரிக்கையைத் தி. மு. க. கைவிடுகிறது என்று அண்ணா அறிவித்தவுடன், கோழைகள் என்று அதே சம்பத் ஏசினார். அண்ணா இதற்காக வருத்தப்படவில்லை. மாறாக, சம்பத் இதை ஓங்கி உரத்த குரலில் அடிக்கடி சொல்லட்டும் என்றார். காக்கை, நரி, வடை-இந்தக் கதையைக்கூட அண்ணா சொன்னார். நேரியைப் போல, நம்மை வஞ்சகமாப் புகழ்ந்து பேசுறவங்களும் இருக்காங்க. நீ பெரிய வீரனாச்சே; பிரிவினைத் தடைச் சட்டத்தை எதிர்த்துப் போராடு, என்பாங்க. இதை நம்பினா, வடையைப் பறி குடுத்த காக்கை கதைதான்! நான் காக்கையாயிருந்து என் கட்சியை அழிக்கத் தயாராயில்லேப்பா,” என்றார் அண்ணா, நாங்கள் கேட்டபோது. இவுங்க கோழைங்கறது னாலெயும் எனக்கு வெட்கமில்லே. “இவங்க விரன்னு சொல்லி என்னை உசுப்பிவிட்டாலும் மயங்கிடமாட்டேன். என் முடிவுக்குப் பேரு ராஜதந்திரம்னு நான் நினைக்கிறேன்” என்றும் அண்ணா திட்டவட்டமாகச் சொன்னார். கூட்டங்களில் அண்ணா பேசினார். நான் பிரிவினை கேட்டபோதும் என்னைத் திட்டினார்கள்; ஏசினார்கள்; இழித்துப் பழித்தும் தூற்றினார்கள், பேசினார்கள்: ஆனால், இன்று நான் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டேன் என்கிறபோது, என்னைப் பாராட்டுகிறார்களா என்றால், இல்லை! அப்போது திட்டிய அதே காமராஜரும், பக்தவத்சலமும், சம்பத்தும் இப்போதும் திட்டுகிறார்கள்! ஆகா! இந்திய ஒருமைப்பாட்டைப் போற்றுகிறான் பார்! என்று அவர்கள் என்னைப் புகழ்ந்தால்தான், என்னைப் பொறுத்தவரையில் நான் ஏதோ தப்பு செய்துவிட்டதாகவே கருதுவேன். அவர்கள் இப்போதும் என்னைத் திட்டுவதால்-ஒகோ, நாம் சரியான பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறோம் என்று கருதுவேன்” எனப் பேசினார் அண்ணா. நான் பாரதத்திலிருந்து ஒர் உதாரணம் எழுதினேன் :-அர்ச்சுனனுக்குத் தேரோட்டிய கண்ணன், கர்ண் னுடைய அம்பு பறந்து வந்தபோது, “மார்பைக் காட்டி, உன் வீரத்தை நிலைநாட்டுவாய் அர்ச்சுனா! என்று சொல்லவில்லை! மாறாதத், தேரைச் சிறிது கீழே அழுத்தி, அந்த அம்பின் இலக்கிலிருந்து அர்ச்சுனனைக் காப்பாற்றினான், அதேபோல அண்ணனும், இப்போதைக்குப் பிரிவினைக் கொள்கையைக் கைவிட்டுக், கழகத்தைக் காப்பாற்றினார்-என்பதாக ஒர் கவிதை எழுதியிருக்கிறேன். நான் பாடிய பாடல் மூன்றாவது திராவிட மாணவர் பயிற்சிப் பாசறையை ஈரோட்டில் நடத்தி முடித்த நோம். பெரியார் ஏற்காட்டில் தங்கச் சென்றுவிட்டார். நான் ஈரோட்டில் குடி அரசு அலுவலகத்தில் இருக்கிறேன். அண்ணா வந்தால் சண்டை போடவேண்டும் என்று, துணையாசிரியர் மாணிக்கவாசகத்திடம் சொல்விக் கொண்டிருக்கிறேன். இவர் என்னிடம் கேட்டு, திருச்சி திராவிடமணி’ பத்திரி கைக்கு, அதன் ஆசிரியர் T. M. முத்து விரும்பியதாக, என் கவிதை ஒன்று வாங்கி அனுப்பினார். அதிலிருந்து முதல் இரண்டு பாடல்களை எடுத்து, யாரோ பி. முனுசாமி என்பார், “திராவிடநாடு” இதழுக்கு அனுப்பி, அது ‘திராவிடரின் சபதம்’ என்ற தலைப்பில் 15.4.1945 இதழின் முதல் பக்கத்தில் பிரசுரமாகியிருக்கிறது. இப்படியா எழுத்தைத் திருடுவார்கள்? அண்ணா வந்தபொழுது படபடவென ஆரம்பித்தேன். அவர் நிதானமாக எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, “எங்கே சொல்லுய்யா கேட்போம். உன் பாட்டாயிருந்தா, இப்ப பாக்காமெ சொல்,” என்று என்னைச் சீண்டினார். “பொறுத்திருந்த காலமெல்லாம் போதும்; இன்று புவியெங்கும் கமையறியப் பொங்கிச் செல்வோம்! வெறுத்தொதுக்க வேண்டிய வீண் நூற்களையும், வேறுபடும் மக்களையும் விலக்கித் தள்ளி அறுத்தெறிந்து தளைகளெல்லாம் அகன்று நீங்க ஆண்மையுடன் பொருதெழுந்து நமது தொண்டை மறுத்தெதிர்க்கும் மதியிலிகள் மயங்கும் வண்ணம் மானமுடன் வாழ்வதற்கே வழிகள் செய்வோம் …… இதைச் சொல்லிவிட்டு “அடுத்ததைச் சொல்லட்டுமா? இன்னும் ஏழெட்டு Stanza இருக்குது அண்ணா!” என்றேன். “வேண்டாம், ஒன்னெ நம்பறேன். ஏதோ தவறு நடந்துபோச்சு. பரவாயில்லய்யா ஒன் கருத்து இன்னொருத்தர் மூலமாவும் பரவுறது நல்லதில்லியா?” என்றார்-மேலும் தொடர்ந்தார் அண்ணா. முன்னே கூடச் சொன்னியே-திராவிட நாட்டுலே நீ எழுதிய ஒரு பாட்டை, யாரோ நம்ம அய்யா பேசிய கூட்டத்திலே, மேடையிலே பாடினாங்கண்ணு,” “ஆமாண்ணா, இங்கேதான் பொத்தனூர்லெ பாடினாங்க!” “சரி. அங்கே அவரு, இந்தப் பாட்டை எழுதினது இன்னார்; அது இன்ன பத்திரிகையிலே வந்தது அப்படின்னு (announce) அன்னவுன்ஸ் பண்ணிட்டா பாடுனார்?” “ஒண்ணுமே சொல்லலியே எழுதின எனக்கு மட்டும் கேட்கச் சந்தோஷமாயிருந்தது!” “இருந்ததா? அப்ப அதை அனுமதிச்ச நீ, இப்ப இது மட்டும் எழுத்துத் திருட்டுன்னு ஏன் பதைக்கிறே? சரி, போகட்டும் விடு. அது என்ன பாட்டு, கொஞ்சம் சொல்லேன். பாட முடிஞ்சாலும் பாடு, கேட்கலாம்.” “ரொம்ப கிண்டல் பண்ணாதீங்க அண்ணா, ஒங்க லாஜிக்கை ஒத்துக்கறேன்! இதான் அந்தப் பாட்டு, போன ஆண்டு எழுதியது!” இந்தத் திராவிடம் என்னுடைய நாடு என்று தினக்தொறும் கீயிதைப் பாடு முந்தித் திராவிடர் முறையுடன் ஆண்டார்; மூடத்தனத்தாலே முழுமோசம் பூண்டார்! வந்து புகுந்திட்ட மறையோரை நம்பி! வகையின்றி வாடினது இனிப்போதும் தம்பி! சொந்தத் தமிழரின் சுதந்திரம் நீங்க, சூழ்ச்சிகள் செய்தோரைச் சூறைசெய் ஏங்க! இது நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையோட பாடலுக்கு ள்திர்க்கருத்து. அவர் ‘இந்திய நாடு’ என்னுடைய நாடு: என்று பாடியிருந்தார். இதேபோல, ‘சூரியன் வருவது யாராலே’ என்று தொடங்கும் பாடல் ஒன்று அவருடையது. அதை மாற்றி நான் எழுதினேன் :- சூத்திரன் ஆனது யாராலே சுதந்திரம் போனது எவராலே? சாத்திரம் வேதம் இதிகாசம் சமயநூல் புராணம் இவையேது தோத்திரம் குலம்மதம் சாதியென்றே கூட்டம்பிரித்தது யார்வேலை? ஆத்திரம் இன்றி அடிமைசெய்தே ஆட்சி புரிபவர் யாரிங்கே?!! இதையும் அண்ணா கேட்டார்கள். “நீ அப்பப்ப கொஞ்சம் இதுமாதிரி இசைப்பாடலும் எழுதலாமய்யா” என்று சொல்லிப் புறப்பட்டார்கள். கலைஞர் கல்லக்குடிப் போராட்டத்திற்குப் புறப்படு முன் ஒருநாள், சேலத்தில் கோயம்புத்ததூர் லாட்ஜில், அவரோடு கே.ஆர். செல்லமுத்துவும், நானும் தங்கியிருந்தோம். அப்போது சென்னையிலிருந்து புரட்சி நடிகர் எம். ஜி. ஆர். வந்து கலைஞரைப் பார்த்து, தான் தனியே எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் என ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்க விருப்பதால், மேகலா பிக்சர்சிலிருந்து விலகிக் கொள்ள அனுமதி கேட்டார். செல்லமுத்துவும் நானும் அவர்கள் இருவரும் தனியே பேசட்டும் என எண்ணி வெளியே போய் உட்கார்ந்தோம். “நாம், திரைப்படத்தில் வரும் ‘மாரி மகமாயி’ மெட்டில் ஒரு பாட்டு எழுதுங்க அண்ணே! நான் பாடறேன்” என்றார் செல்லமுத்து. உடனே நான் எழுதித் தந்தேன். 1953ல் நிறைய மேடைகளில் முழங்கினார் இந்தப் பாடலைச் செல்லமுத்து. சேர வருவீரே! சேர வருவீரே! வீர ரெல்லாம் வேகமாகச் ⁠(சேர) சேர சோழத் தென் பாண்டி நாட்டார் தீர காவியம் தீட்டிடும் போரில் ⁠(சேர) சரணம், டால்மியாபுரம் பெயர் மாற்றங்குறித்து 5 அடிகள். இந்தப் பல்லவி, அனுபல்லவியை நினைவில் வைத் திருந்து, பிறகு ஒருநாள், அண்ணா முன்பு சொல்வி யிருந்ததை மறவாமல் 4 சரணங்கள் சேர்த்து, ஒரு பாடல் எழுதினேன். அதைத் “திராவிடநாடு” ஏட்டின் முதல் பக்கத்தில் 17.7.1960ல் வெளியிட்டுச் சிறப்பித்தார் அண்ணா. வாழும் வடக்கின் வஞ்சகச் செயலால் தாழும் தெற்கினைச் சமன்செயும் போரில் ⁠(சேர) செந்தமிழ்த் தாயின் சிறப்பினை அழிக்கும் இந்தித் திணிப்பினை எதிர்த்திடும் போரில்⁠ (சேர) நாட்டை மீட்டிடும் நற்பணி புரிய வீட்டுக் கொருவர் விரைந்திடும் போரில்⁠ (சேர) உறுதியோடும் நம் உரிமையைக் காக்கக் குருதி சிந்திடும் ஒருபெரும் போரில் ⁠(சேர) இன்று இருக்கும் சூழ்நிலையில், அண்ணா இருந்தால், இந்தப் பாடலையே பாடச் சொல்வார் அல்லவா நமது கழக மேடைகளில்? அத்தோடு அண்ணா அடிக்கடி ஆசைப் பட்டதுபோல, கைதேர்ந்த நாட்டியப் பேராசிரியர் ஒருவரைக் கொண்டு பயிற்சி கொடுத்து, ஆசான் அவர்களே நட்டுவாங்கம் செய்து, ஜதி சொல்லிப் பதம்பாட்டி அலாரிப்பு, ஜதீஸ்வரம், தில்லானா, வர்ணம்-எல்லாம் முடித்து, அபிநயம், முத்திரைகளுடன் நாட்டியமாகச் சில பெண்மணிகள் இப்பாடல்களுக்கு வடிவம் தந்தால் எவ்வளவு பிரமாதமாக இருக்கும்! உயிர் பறிக்கும் துப்பாக்கி வேண்டாம்! இன்று மாநிலங்களவை உறுப்பினராயிருக்கும் ஆலடி அருணா அவர்கள் எழுதிய “இந்தி ஏகாதிபத்தியம்” என்ற நூலும், வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றும் அ. இராமசாமி அவர்கள் எழுதிய “இரத்தத்தில் 50 நாட்கள்” என்ற நூலும், 1965-ஆம் ஆண்டில் தமிழகத்தில் நிகழ்ந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் கலிங்கத்துப் பரணிகளாகும். உலக வரலாற்றிலேயே, மாணவர்கள் தாமே சினந்தெழுந்து, பட்டிதொட்டி முதல் பட்டினங்கள் வரை அனைத்து ஊர்களிலும் கிளர்ச்சிகள் செய்ததும், தொடர்ந்து மூன்று நாட்கள் தமிழகத்தில் ரயில்களே ஓடாமல் செய்ததும், பள்ளிச் சிறார்களும் பங்கேற்று நின்றதும் கிடைத்தற்கரிய செய்தியாகும். அதேபோல, எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும், ஒரு முதல்வர், தம்மிடமுள்ள போலீஸ் படை போதாமல், ராணுவத்தையும் வரவழைத்து, மாணாக்கர்களைக் காக்கை குருவிகளைப் போலச் சுட்டுக் கொன்றதாகவும் தகவலில்லை. நமது பெரியவர் பக்தவத்சலம் என்ற மகானுபாவர் அந்த அருஞ் செயல் புரிந்து, தான் பதவியில் அமர்வதற்குக் காரணமான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி தமிழகத்தில் அற்றுப் போக உறுதுணையாய் விளங்கியவர்-இன்னும் வாழ்கிறார்-வாழிய! 1965 ஜனவரி 26-முதல் இந்தி அரியணை ஏறும் என அன்றையப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அறிவித்தார். திராவிட முன்னேற்றக் கழகம் தனது எதிர்ப்பினை அமைதியாகத் தெரிவிக்கும் என்றார் அண்ணா. குடிஅரசு நாளில் ஏதும் செய்தல் நாகரிகமாகாது என்ற பெருங்குணத்தால், ஜனவரி 25-ஆம் நாள், கழகத் தோழர்கள் தம் சொந்த வீடுகளிலும், சொந்த அலுவலகம் அல்லது பணிமனைகளிலும் கருப்புக் கொடி ஏற்றி வைத்தால் போதும் என்பது தான் அண்ணாவின் ஆணை ! ராஜதந்திரம் தெரிந்த முதல்வராயிருந்தால், இதை அலட்சியம் செய்திருக்கலாம். ஆனால், காமராஜர் பதவி விலகியதால் இடைக்கால முதல்வரான பக்தவத்சலனார் என்ன கருதினார் தெரியுமா? இது என்ன சுண்டைக்காய் கட்சி. 1957-இல் 15 பேர். 1962-இல் 50 பேர்தானே சட்டமன்ற உறுப்பினர் என்று உதாசீனம் செய்து, “தி.மு. கழகத்தார் கருப்புக் கொடி ஏற்றினால், அரசு ஒன்றும் செய்யாது? மக்களே பார்த்துக் கொள்வார்கள்” -என்று சொன்னதன் மூலம், குண்டர்களை உசுப்பி விட்டார். G. உமாபதி போன்ற அடையாளம் தெரியக்கூடிய காங்கிரஸ் பிரமுகர்களே முன்னின்று, நமது கழகத்தார் வீடுகளையும், ‘முரசொவி’ ‘நம் நாடு’ அலுவலகங்களையும் ஆட்களையும் வெறித்தனமாகத் தாக்கியது கண்டோம். தேன்கூட்டைக் கலைத்ததுபோல் மாணவர் விடுதிகளில் புகுந்து தாக்கினர். எட்டுப்பேர் இந்தியை எதிர்த்துத் தீக்குளித்தும், நஞ்சுண்டும் தம் இன்னுயிர் ஈந்தனர். மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டில் மாண்டனர். புரட்சி அடங்கவில்லை. ஆணவ தர்பார் கொடிகட்டிப் பறந்ததால் மாணவ உலகம் மடையுடைத்த வெள்ளமாய்ப் பாய்ந்தது. அண்ணா, மாணவர் உலகத்தின் மீது அரசின் காட்டு மிராண்டித் தாக்குதலைக் கண்டித்து அறிக்கை விட்டார். இது மாணவர்கள் தாமே நடத்தும் போராட்டம் என்பதை அரசு உணர வேண்டும் என்பதையும் வற்புறுத்தினார். ஆயினும், அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. மாணவர்கள் போராட்டத் திட்டங்களை அறிவித்து - மறியல், ரயில் நிறுத்தம், பொது வேலை நிறுத்தமெனத் தேதிகள் குறித்தனர்; பிப்ரவரி இரண்டாம் வாரம். அண்ணா, காலையில் எழுந்தவர், மேலே சட்டையில்லாமல் படுக்கையிலேயே உட்கார்ந்திருக்கிறார். செய்தித் தாள்களிலும், வானொலியிலும், தொலைபேசியிலும் வெளியூர்களின் போராட்டச் செய்திகள் வந்தவண்ணமுள்ளன - கோவை, திருப்பூர், குமாரபாளையம், பொள்ளாச்சி இங்கெல்லாம் மாணவர் மீது ராணுவம் சுடுகிறது ஆணவமாய் என்று! நேரம் செல்லச் செல்ல அண்ணா அப்படியே சுருண்டு படுக்கிறார். எதிரிலிருந்த கலைஞரும் நானும் “அண்ணா பல் விளக்கிவிட்டு ஏதாவது சாப்பிடுங்கள்” என்று கெஞ்சுகிறோம். முகம் பொலிவும் களையும் இழந்து, கண்கள் ஒளி குன்றிக் காணப்படுகின்றன. எழவே மறுக்கிறார். “இவ்வளவு பேர் சாகிறான். சாப்பாடு ஒரு கேடா? போலீசார் சுட்டாலும் காரணம் கேட்கலாம். ராணுவம் சுடும்போது ஒன்றும் கேட்கக்கூட முடியாதே!” என்கிறார். “நாம் என்னண்ணா செய்ய முடியும்? மாணவர்களைப் போராடச் சொல்லி நாமா வேண்டினோம்?” என்கிறார் கலைஞர். “பிறகு இதற்கு என்னதான் முடிவு? எப்படி நிறுத்துவது?” -இது அண்ணா விடுத்த வினா? “நாமே ஓர் அறிக்கை விட்டு மாணவர்களைக் கேட்டுக் கொள்வோம், நிறுத்தும்படி”-கலைஞர். “அப்படியானால், இந்தப் போராட்டத்தை ஆரம்பிக்கச் சொன்னதே நாம்தான் என்ற எண்ணம் வராதா?” -அணனா. “ஆமாம், அண்ணா! கட்டாயம் வரும்! இரண்டுங் கெட்டான் நிலையில், நாம் வருத்தப்படுவது தவிர வேறென்ன செய்வது?”-கலைஞர். கடைசியில், மாலையில்தான் அண்ணா பல் விளக்கினார். பின்பு, ஓர் அறிக்கை வெளியிட்டார். பயன்? அடுத்து, கலைஞர் கைது செய்யப்பட்டுப், பாளையங் கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார், தனியே! தாம் எதிர்க்கட்சியாயிருந்தபோது, ஆளுங்கட்சியினரின் துப்பாக்கிச் சூடுகளினால் மாணவர்கள் மடிந்தார்களே என்று மட்டும் அண்ணா மனங்கலங்கினாரா? தாம் ஆட்சிக் கட்டில் ஏறிய பின்னர், ஒரு துப்பாக்கிப் பிரயோகமும் அவரை மிகவும் வருத்திவிட்டது! ஒருநாள் முன் காலை நேரம். நான்மட்டும் நுங்கம் பாக்கம் சென்றேன். தனிமையிலிருந்த அண்ணா மாடிக் கூடத்தில் பரபரப்போடு அங்குமிங்கும் உலவிக் கொண்டிருந்தார்; திகில் படர்ந்த முகத்தோடு! என்னைப் பார்த்ததும், “கருணாநிதி வந்திருக்கிறதா?” என ஆவலுடன் வினவினார். இல்லை யண்ணா! நான் மட்டுந்தான் வந்தேன். ஏன்?” - “என்னய்யா! கொடுமை ஒண்ணு நடந்து போச்சு! திருவொற்றியூர்லெ போலீஸ் Firing நடந்து, ரெண்டு பேர் செத்துட்டாங்களாம். தொழிலாளர் போராட்டம் ! எங்கேய்யா, லேபர் மினிஸ்டரா ஒரு ஆளைப் போட்டோமில்ல? ஆளையே காணோமே! வரச் சொல்லுய்யா அந்த மாதவனை! அப்புறம், நீ உடனே போயி, கருணாநிதியைக் கூட்டிகிட்டுவா!” -அண்ணன் ஆணை. “நான் இப்போ அங்கேயிருந்துதான் வர்றேன் அவருக்கு இந்தச் சேதி தெரியாதண்ணா! இதோ போயி அழைச்சிகிட்டு வாறேன். நீங்க பதறாமெ இருங்க!” என்று இறங்கி ஓடினேன். மென்மையான அந்த உள்ளத்தின் தன்மை-மனித உயிர்கள் அநியாயமாய்ப் பறிக்கப்படக் கூடாது என்பது தான்! விருந்தினிடையே வருந்தினார் தம்பி பரமசிவம் என்னிடம் ஒரு வேண்டுகோளைச் சமர்ப்பித்தான். “அண்ணாவை என் வீட்டில் சாப்பிடக் கூப்பிட வேண்டும். நீங்கள் கேளுங்கள். எனக்குப் பயமாயிருக்கிறது” என்றான். “ஆட்சிப் பொறுப்பேற்றுச் சில வாரங்களே ஆகின்றன. நான் ஏற்கனவே இரண்டு தடவை அழைத்து, இதே சென்னையில் விருந்து நடத்தி விட்டேன். நீ இப்போது வந்து கேட்கச் சொல்கிறாயே? எனக்குக் கூடத் தயக்கமாயிருக்கிறதே! சரி தக்க நேரம் பார்த்துக் கேட்டு உனக்கு Phone செய்கிறேன். நீ இருக்கும்போது தான் நான் அவரை அழைக்க வேண்டும் என்பது அவசியமில்லை, நீ போ!” என்றேன். பரமசிவம் அப்போது சமையல் கேஸ் ஏஜன்சி வைத்திருந்தான். சென்னையிலுள்ள நம் இயக்கத் தலைவர் களின் வீடுகளில் எரிவாயு அடுப்புகளை அறிமுகம் செய்தவன் அவனே, எல்லாருக்கும் அவன் என் தம்பி. எனவே அறிமுகம். தஞ்சையில் என் எதிர்விட்டுப் பையன். பால்யத்திலேயே பெற்றோர் மறைந்தனர். என் தம்பியுடன் படித்தவன். என்னை அண்ணனென அழைத்தவன். அங்கிருக்க இயலாமல், படிப்பைத் துறந்து, பிரகதி ஸ்டுடியோவில் ஸ்டோர் கீப்பராகச் சென்னை வந்தடைந் தவன், நீண்ட காலத்துக்கு முன்பே சிவாஜிகணேசன், நாடகக் கம்பெனியிலிருந்த நாட்களில், தன்னைச் சினிமா வில் சேர்த்து விடுமாறு பரமசிவத்துக்குக் கடிதம் எழுதியது உண்டு. ராஜசுலோசனாவைப் பரமசிவம் காதலித்துத் திருமணம் செய்தபோது, நானும் கரந்தை சண்முக வடிவேலுவும் சென்னை வந்திருந்து, 1951-ல் செயிண்ட் மேரிஸ் ஹாலில் திருமணத்தைப் பதிவு செய்து, கலைஞர், மதியழகன் ஆகியோர் வாழ்த்துரைக்கச் செய்தோம். முதலாவது தி.மு.க. மாநில மாநாட்டில், ராஜசுலோசனா வின் பரதநாட்டியம் ஒரு நிகழ்ச்சியாக நடத்தியிருக்கிறோம். இருவரும் ஒரு மகனுக்குப் பெற்றோரான பின்னர், ஒத்துப் போக முடியாமல், மணவிலக்குப் பெற்றனர். 1965-இல் மந்தைவெளியில் தனியே வீடு கட்டினான். பின்னர், மலேசியாவிலிருந்து பத்மா என்னும் பெண்ணை மணந்திருந்த நேரம்; அண்ணாவும் கலைஞரும் விருந்துக்கு வந்தால் தனக்குப் பெருமையாயிருக்கும் என விழைந்தான் பரமசிவம். நான் அண்ணாவிடம் கேட்டபொழுது, “என்னய்யா, இது. நீ கேட்பதைத் தயங்காமல் ஒத்துக் கொள்கிறவன் நான்! ஆனால் பரமசிவம் வீட்டுக்கெல்லாம் என்னை ஏன் அழைக்கிறாய்? நான் மறுக்க வேண்டியிருக்கிறதே!” என்றார்கள் சற்றுச் சங்கடத்துடன். கலைஞர் உதவிக்கு வந்தார். “அப்படியில்லை அண்ணா! கருணானந்தம் ஏதாவது விருந்து சாப்பிட வேண்டும். அதற்கு நம்மைப் பயன்படுத்துகிறார்” எனக் கூறினார். நான் தொடர்ந்து “தவறில்லை அண்ணா. இது நான் நடத்தும் விருந்தாகவே கருதலாம். என் தம்பிதானே அவன். மேலும் இந்த விருந்து சைவம். வேறு யாரையும் அழைக்க மாட்டேன். என் நெருங்கிய சொந்தக்காரர்கள்தான் இருப்பாங்க” என்று சில பல விளக்கங்கள் தந்த பின்னர் அண்ணாவின் ஒத்துழைப்பைப் பெற்றேன். நண்பர் டார்ப்பிடோ ஏ. பி. சனார்த்தனம் என்னை அப்பூதியடிகள் என்று கேலி செய்வார். அந்த அளவு இயக்க நண்பர்களை உபசரிப்பதில் எனக்கு மகிழ்வு. மதியம் அந்த விருந்து. அண்ணாவுடன் கலைஞரும் மன்னை மாமாவும் வந்தார்கள். முதலில் ஏதோ எண்ணி அண்ணா தயக்கம் காட்டியிருக்கிறார்கள், இங்கு வந்தபின் அந்தத் தயக்கம் காணப்படவில்லை. இயல்பாகப் பழகினார்கள். என் ஒரே தங்கையின் கணவர் பழநிவேலு, அவரது அக்காளின் கணவர் டி. ஆர். பாலசுப்ரமணியம், இவர்கள் எல்லாரையும் மற்றும் குடும்பத்தினரையும் அண்ணாவுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். அப்போது பரமசிவம் எடுத்த புகைப்படங்கள் நன்றாக இருக்கின்றன, அவன் வீட்டு மாடியிலேயே எடுக்கப்பட்டவை. அன்று அண்ணா அவர்களிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட என் தங்கை கணவர் பழநிவேலு, ஏற்கனவே கலைஞருக்குத் தெரிந்தவர். தாம்பரம் ரயில்வே காலனி யில் பல ஆண்டுகள் வசித்தவர். முனு ஆதி தாம்பரத்தில் பால் வியாபாரம் செய்து வந்தபோதே தெரியும். அவர் அன்று மிகவும் களிப்புக்கடலில் மிதந்து கொண்டிருந்தார். சென்னை பெசண்ட் நகர் அமைக்கப்பட்ட போது, வீட்டுவசதி வாரியத்தின் முதல் தொகுதி வீட்டிலேயே குடியேறியவர். மஞ்சட்காமாலை நோய்க்குப் பலியாகி 1969-சனவரி 29 அன்று சென்னை பொது மருத்துவமனையில் இயற்கை எய்திவிட்டார். என் வாழ்வில் இதனினும் பெரிய சோகம் இதுவரை ஏற்படவில்லை. அண்ணா அவர்கள், நோயின் கடுமையான பிடியில் சிக்கி அவதிப்பட்டு, அடையாறு மருத்துவமனையில் இருந்த அதே காலகட்டத்தில், இவர் G. H-ல் இருந்தார். இரண்டு ஆடுகளில் ஊட்ட நினைத்த குட்டியைப்போல நான் பரிதவித்தேன். ஓரிடத்தில் வீட்டுத் தலைவர். ஓரிடத்தில் நாட்டுத் தலைவர். இருவர் நலிவும் நான் வருந்திக் குமைந்து நைந்துருகச் செய்தவையாகும். டாக்சியில், ஒருநாளில் பலமுறை, இரு இடங்களுக்கும் விரைவேன். ஆயினும், அண்ணா நம்மை ஏமாற்றிச் செல்வதற்கு நான்கு நாள் முன்னரே, என் வீட்டு மாப்பிள்ளை தனது நாற்பத்து அய்ந்தாவது வயதிலேயே எங்களைப் பிரிந்தார். துயரச் சிறுபொறி பெருந்தீயாக மாறிச் சுட்டெரித்ததில், என் உள்ளம் சாம்பலாகிப் பறந்தது அடுத்த சில நாட்களில்! பரமசிவம் வீட்டில் அண்ணாவுடன் நாங்களெல்லாம் அமர்ந்து உணவருந்தியதையும், நின்றதையும் புகைப் படத்தில் காணுந்தொறும் என் மனம் அலைபாய்கிறது. இதற்குப்பிறகு அண்ணா அவர்களை எங்கும் விருந்துக்கு அழைத்துச் சென்றதாக நினைவில்லை எனக்கு! ஆனால் முதலமைச்சர் அண்ணா, செங்கற்பட்டு மாவட்டத்தின் தலைநகராகக் காஞ்சிபுரத்தைத் தேர்ந்தெடுத்துப் புதிய வரலாறு படைத்தாரல்லவா? பல்லவர் புகழை மீட்டாரல்லவா? அதே மாவட்டத்தைச் சார்ந்த பக்தவத்சலம் முதலமைச்சராகியும் செய்யாத ஒன்றை அண்ணா சாதித்தாரல்லவா? அன்றைய தினம் காஞ்சி மாநகர் விழாக்கோலம் பூண்டிருந்தது. வாதாபியை வென்று திரும்பியபோது பல்லவ மன்னனுக்கு வரவேற்பளித்தது போல! அரசு அதிகாரிகள் அனைவருக்கும், அன்று மதியம், அண்ணா ஒரு பெரிய விருந்தளித்தார்கள். ஏதோ ஒரு கல்யாண மண்டபத்தில் என்று நினைவு. நூற்றுக்கணக் கான அலுவலர்கள் உள்ள பந்தியில் ஒரு ஓரத்தில் தரையில் அமர்ந்து நான் சாப்பிடத் தொடங்கினேன். அண்ணா என்னைத் தேடிக் கண்டுபிடித்துக் குனிந்து என் அருகில் வந்து, “அடடே sorry கருணானந்தம்! இது சைவ சாப்பா டல்லவா? சாப்பிட உட்கார்ந்துட்டியே! கொஞ்சம் இரு! ஒனக்கு மட்டும் பிரியாணி வாங்கிவரச் சொல்றேன். வெய்ட் எ மினிட்” என்கிறார், தமிழகத்தின் முதலமைச்சர்! நான் “வேண்டாம் அண்ணா பரவாயில்லை; இதுவே நன்றாயிருக்கிறது!” என்று பதில் உரைப்பதற்குள் என் கண்களில் நீர் கசிந்து, உள்ளம் உருகிக் கரைகிறது. அன்பினை நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து மகிழ்ந்து திக்கு முக்காடிப் போகிறேன். “அண்ணா, அண்ணா! உனை எண்ணாத மனமே யில்லை-நீதானே அன்பின் எல்லை! அண்ணா, அண்ணா! “காய்ச்சலோடு ஏன் வந்தீர்கள்?” இந்தி எதிர்ப்புப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்ததால் 1965-ஆம் ஆண்டில் நடத்தமுடியாமல் போன RMS ஊழியர்களின் 9.வது மாநில மாநாட்டைச் சென்னையில் 4.1.66 முதல் 5.1.66 முடிய நடத்தினோம். அதனால், இதே ஆண்டின் இறுதியிலேயே பத்தாவது மாநில மாநாட்டைச் சோலையார் பேட்டையில் நடத்த நேரிட்டது. அங்கிருந்த லோகநாதன் போன்ற தோழர்கள் எல்லா ஏற்பாடுகளும் செய்தனர் ஆர்வத்துடன். துணைச் செயலாளர் கோவை ஞானப்பிரகாசம் ஒத்துழைத்தார். மலைகள் சூழ்ந்த இயற்கை கொலு வீற்றிருக்கும் எழில் மிகு ரயில்வே சந்திப்பு அருகே ரயில்வே இன்ஸ்டிட்யூட் கட்டடத்தில் மாநிலப் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்று வந்தது. இரண்டாம் நாள் இறுதிக் கட்டமாகச் சிறப்புப் பொதுக் கூட்டம்; 20.11.1966 அன்று மாலை. இதில் பங்கேற்று எங்கள் பிரச்சினைகளை மக்களுக்குத் தக்கவாறு எடுத்துரைக்கப் பேரறிஞர் அண்ணா, சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம் ஆகியோரை அழைத்திருந்தோம். ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டராக நீண்ட நாள் அனுபவம் பெற்று, முன்பு பெரியார் ஆதரவுடன் தென் பகுதி ரயில்வேத் தொழிலாளர் சங்கம் தொடங்கிப் பின், அதிலிருந்தும் விலகி, இப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தில் புதிதாக இணைந்ததன் பயனாய்ச் சென்னையில் சில தொழிற்சங்கங்களின் தலைவராக விளங்கிய நண்பர் இராகவானந்தம் ஒரு சொற்பொழிவாளர். மற்றும் திருப்பத்தூர் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், திருப்பத்தூர் நகரமன்றத் தலைவருமாகிய நண்பர் சி. கே. சின்னராஜூ இன்னொரு பேச்சாளர். எங்கள் வரவேற்புக்குழுத் தலைவரோ நாடாளுமன்ற உறுப்பினரான அரூர் முத்து அவர்கள். ஜோலார்பேட்டைக்குச் சென்னையிலிருந்து எங்கள் மாநிலச் சங்க நிர்வாகிகள் 19.11.66 அதிகாலை பிருந்தாவனம் எக்ஸ்பிரசில் செல்லத் திட்டமிட்டிருந் தோம். இவ்வாறு புறப்படுவதற்கு முதல் நாள், நுங்கம்பாக்கம் சென்று, அண்ணா அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு, அவர்கள் எப்படி, எப்போது ஜோலார் பேட்டை வந்து சேருவார்கள் என்பதனை அறிந்து வரலாமென, மாநிலச்செயலாளர் நம்மாழ்வாரும் நானும் சென்றோம். ராணி அண்ணியார் மிக்க வருத்தத்துடன், “ஏம்ப்பா ஒங்களுக்குத் தெரியாதா? ஒங்க அண்ணனுக்கு ரொம்ப ஜூரம் வந்து, வீட்லெ ரெஸ்ட்டா இருக்க முடியாதுண்ணு, இசபெல்லா ஆசுபத்திரியிலே சேர்ந்திருக்காங்களே” என்றார்கள். இடி விழுந்தாற்போலிருந்தது எனக்கு மாநாட்டுக்கு அண்ணா வரமுடியாமற் போய்விட்டதே என்ற ஏமாற்றம் ஒர்புறம்! அண்ணா செயிண்ட் இசபெல் நர்சிங் ஹோமில் சேரவேண்டிய அளவுக்குச் சுரம் வந்துவிட்டதே என்ற கவலை மறுபுறம்! உடனே மயிலாப்பூர் விரைந்தோம். அண்ணா தனியே படுத்திருக்க, அருகே நிழல் நின்றிருந்தது? (நண்பர் சி. வி. ராசகோபால்) சென்னையில் இச் செய்தி அதிகம் பரவாததால், மருத்துவமனையில் மக்கள் கூட்டம் திரளவில்லை. அண்ணாவைத் தொட்டுப் பார்த்தேன். உடல் அனலாய்க் கொதித்தது. “எப்படியண்ணா சுரம் வந்தது? என்ன சுரமாம்?” என்று கேட்டேன். ஃபுளுமாதிரித் தெரிகிறது. 104 டிகிரி ஏறிவிட்டது. சரி போகட்டும். நீ எப்போ ஜோலார்பேட்டை போகிறாய்? என்று வினவிய போது, அண்ணாவின் நினைவு அந்த நிலையிலும் குன்றா திருந்ததை எண்ணி வியந்தவனாய் நாளைக் காலை புறப்படுகிறோம். அதற்கும் மறுநாள்தான் பொதுக் கூட்டம். அதைப்பத்தி நீங்க நினைக்கவே வேண்டாம் அண்ணா! சமாளிச்சிக்கிறோம்!” என்றேன். “ஒண்ணு செய்யேன். இந்த மாதிரி நான் வரமுடியலேங்கிறதை எடுத்துச் சொல்லி, மனோகரனை அழைச்சிகிட்டுப் போயிடேன்“ என்ற ஆலோசனையை அன்புடன் வழங்கினார்கள். 1957-ல் மாயூரம் தொகுதியில் நாடாளுமன்றத்துக்கு நாஞ்சில் மனோகரனைப் போட்டியிடச் செய்து, அவரை அரசியல் பிரவேசம் செய்யவைத்தோம். அங்கே தோல்வி யுற்றார். எனினும், என் ஆருயிர் நண்பர் சம்பத் செய்த தவற்றால், தென் சென்னையில் 1962-ல் போட்டியிட்டு, அமோக வெற்றி கண்டார். அண்ணாவுக்குப் பதிலாக அவரை அழைப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை என்றாலும், அண்ணாவே சொல்லிவிட்டதால் உடனே வெளியில் சென்று, அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அனைத்தும் விளக்கினேன். தனக்கு வேறு வேலையிருப்பதாகச் சொல்லி, வர மறுத்து விட்டார் மனோகரன் M.P. திரும்ப அண்ணாவிடம் இதைத் தெரிவித்து, “பரவாயில்லை அண்ணா! ராகவானந்தம் வருவார். அவரை வைத்துக் கூட்டத்தை நடத்தி விடுகிறேன். 21-ந் தேதி காலையில் நேரே இங்கே வந்து உங்களைப் பார்க்கிறேன். நீங்க ஒடம்பைக் கவனிச்சிக்கீங்க-” என்று கூறியவாறே புறப்பட்டேன். சிந்தனை ரேகை படர்ந்த சோகமுகத்துடன் அண்ணா தலையசைத்தார்கள். அண்ணாவின் உடல் காய்ச்சலால் அவதியுறுவதை எண்ணியபடியே, எங்கள் மாநாட்டு நடவடிக்கைகளில் மூழ்கினேன். அண்ணா வருவதாக ஏற்கனவே செய்யப்பட்ட விளம்பரத்தால் ரயில்வே சந்திப்பு எல்லை. முழுதும் திரளாக மக்கள் குழுமி நின்றனர், என் தலைமையில் பொது நிகழ்ச்சி துவங்கிற்று. அரூர்முத்து, சி.கே.சி., இராகவானந்தம், ம.பொ.சி. ஆகியோர் பேசியதும், நான் அண்ணாவின் உடல் 104டிகிரி சுரத்தினால் துன்பமுறுவதை எடுத்துச் சொல்லி, கூட்டம் அத்தோடு முடிவுறுவதாக அறிவித்தேன். மக்கள் கூட்டமும் கரையத் தொடங்கியது. அந்த நேரத்தில்…… “அண்ணா வாழ்க! அறிஞர் அண்ணா வாழ்க!” என்று வெளியே இடைவிடாத முழக்கம் செவிகளில் நிறைந்தது. பரபரப்புடன் வாயிற்புரம் நாங்கள் வருவதற்குள் ஒரு fiat காரிலிருந்து அண்ணா இறங்குகிறார். உடன் சி. வி. ராசகோபால் மாத்திரம்! ஒரு வார இளைப்பும் களைப்பும், சுமார் 150 மைல் கார் பயண அலுப்பும், முகத்தில் தாடி மீசையும், வாரப்படாத கலைந்த தலையும், மேலே கம்பளிச் சால்வையுமாய் அண்ணாவைப் பார்த்ததும், கண்கள் கலங்கிவிட்டன. வாருங்கள் அண்ணா என மகிழ்வோடு வரவேற்பதற்கு மாறாக, அனைவரும் ஒரே குரலில் ஏன் அண்ணா வந்தீர்கள்?’ என்று அச்சத்துடன் கேட்டோம். திரும்பிப் போய்க்கொண்டிருந்த மக்கள் மீண்டும் விரைந்து ஓடோடியும் வந்து அமர்ந்தனர். முடிவுற்ற கூட்டம் மீண்டும் துவங்கியது. “நான் எந்த வேலையை எப்போது சொன்னாலும் தட்டாமல் செய்பவர் என் தம்பி கருணானந்தம். அவர் அழைத்து இதுவரை நான் வரத் தவறியதே இல்லை. அதனால்தான், இப்போதும், என் காய்ச்சலுக்கிடையிலும் வந்தேன்” எனத் தொடங்கி, “இவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்கப் புரட்சி செய்ய வேண்டும் என்று முந்திய மாநாட்டிலேயே யோசனை சொன்னேன். எத்தகைய புரட்சி என்பதை அப்போது சொல்லவில்லை. அதை இப்போது சொல்கிறேன். அந்தப் புரட்சி, நாம் கோரு வதைத் தராத ஆட்சியை மாற்றுவதாக இருக்கட்டும்!” என்று முடித்தார் அண்ணா. அண்ணா பேசி அமர்ந்ததும் வலது காதில் நான் இவ்வாறு கிசுகிசுத்தேன். ஏண்ணா நீங்க இந்த நெலை மையிலே, இவ்வளவு தூரம் Risk எடுத்து Car travel பண்ணி வந்தீங்க? உள்ளதைச் சொல்லுங்கண்ணா!” என்று. “வேற ஒண்ணுமில்லே அய்யா. ஒரு ஆள் வரமாட்டேன் என்றது. இன்னொரு ஆள் வந்திருக்கிறது. இது இரண்டுக்கும் பயந்துதான் வந்தேன்” என, உள்ளத்தின் எரிச்சலை அடக்கமாக உணர்த்தினார் அண்ணா. நான் புரிந்து கொண்டேன்! “என்னங்க சி. வி. ஆர்! நீங்க அண்ணா வர்றதைத் தடுத்திருக்க வேணா மா? காய்ச்சலோட இவ்வளதூரம் அழைச்சி வந்துட்டீங்களே?” என நான் அவரைக்கடிந்து கொண்டபோது, “அட, நீ ஒண்ணுய்யா! திடீருண்ணு கார்ல ஏறுண்ணார். சிட்டியிலேதான் எங்கேயோ போகக் கூப்பிடறார்ணு ஏறினா, கார் நேர இங்கே வந்துதான் நிக்குது” என்றார் அவர்! பிரிந்ததும், சேர்ந்ததும் 1949-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது. அந்த நேரத்தில் பெரியாரைத் துறந்து அண்ணா தன்னுடன் இணைந்தவர்களைக் “கண்ணிர்த்துளிகள்” என்று தலைப்பிட்டு “திராவிட நாடு” இதழில் வாரந் தோறும் பட்டியல் வெளியிட்டார். மணியம்மையாரை மணம் புரிந்தபின், பெரியார் இரண்டு முறை மாயூரம் வந்து ஒய்வாக என் வீட்டில் சில நாள் தங்கினார்கள், அம்மையாருடன். நான் இந்தக் கால கட்டத்தில் அண்ணாவையும் சந்திப்பேன். “அய்யாவைப் பார்த்தாயா? வந்திருந்தாரா? என்ன சொன்னார்?” என்று பெருந்தன்மையுடன் அண்ணா என்னிடம் விசாரிப்பார். ஆயினும், நான் “கண்ணிர்த் துளிகள்” பட்டியலில் சேரவில்லை. 1932.ம் ஆண்டுக்குப் பிறகுதான் தி. மு. க. வளர்ச்சியில் பங்கேற்றேன். என்னைப் பொறுத்தவரையில், திராவிடர் கழகத்தி விருந்து பகைமையால் பிறந்தது திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை. காலத்தின் கட்டாயத்தினால், அண்ணா ஒர் அரசியல் பிரிவை ஏற் படுத்தியுள்ளார் என்றே கருதினேன். இதற்குச் சான்று பகரும் சில எடுத்துக்காட்டுகள், என்னால் இருதரப் பினின்றும் காண்பிக்க இயலும், தி. மு. க. தோன்றிய இரண்டொரு ஆண்டுகட்குப்பின் ஒருநாள் அண்ணா, சம்பத், நான் மூவரும் இருக்கிறோம். அப்போது வெளியாகிய ஒர் திரைப்படத்தில் இசைச் சித்தர் சிதம்பரம் ஜெயராமன் ‘எதுவேண்டும் சொல் மனமே’ என்று ஒருபாடலை அற்புதமாகப் பாடியிருந்தார். அது எப்போதும் என் செவிப்புலனை நிறைத்திருந்தது. நான் தனியே உட்கார்ந்து ஒரு சிறு தாளில் எழுதத் தொடங்கினேன்:– எது வேண்டும் எம் தலைவன்-தலைவா (எது!) மதி வேண்டும் என்ற உம் கொள்கையா-இல்லை மணம்வேண்டி கின்ற உம் வேட்கையா (எது) பணிசெய்வோர் விசுவாசமா-இல்லை மணியம்மை சகவாசமா? (எது) இதை எழுதும் போதே படித்துப் பார்த்த சம்பத், சட்டென்று அந்தத் தாளை உருவி, அண்ணாவிடம் தந்தார். அண்ணாவின் முகம் மாறியது! “செச்சே! இது மாதிரி எழுதாதேய்யா! அய்யா ரொம்ப வருத்தப் படுவார். அதிலேயும் நீ இப்படி எழுதுனேண்ணு தெரிஞ்சிதோ-அப்புறம் அவருக்குத் தூக்கமே வராது!” என்று சொல்லிக் கொண்டே, அந்தத் தாளைக் கிழித்து எறிந்து விட்டார். சம்பத்தும் அண்ணாவையே ஆதரித்தார்! “அண்ணா! சும்மாதான் கிறுக்கினேன்; மன்னிச்சுடுங்க. இந்த மெட்டு எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்ததாலே எழுதிப் பார்த்தேன். நான் intensional ஆக அய்யாவைப் பற்றி எழுதுவேனா?” என்று சொன்னேன். அண்ணாவின் அரும்பெரும் பண்பினை எண்ணி எண் ணி வியந்தேன். இவரா அய்யாவை விட்டு விலகி வந்தவர்? 1947-ல் ஆகஸ்ட் 15 மகிழ்ச்சிநாள் என்று அறிவித்த அண்ணா, பெரியார் துக்கநாள் என்று கூறிய கருத்துக்கு முரண்பட்டாரல்லவா? அப்போது கூட அண்ணா வெளியிட்ட முக்கியமான அறிக்கையை எப்படி முடிக்கிறார் தெரியுமா? :– “தலைவரும் கட்சியும் என் போக்கு தவறு என்று கருதி, என்னைக் கட்சியை விட்டு நீக்கினாலும், நான், சமூக சீர்திருத்தம், பொருளாதார சமத்துவம், திராவிடத் தனியரசு எனும் அடிப்படைக் கொள்கைகளைக் கட்சிக்கு வெளியே இருந்தாகிலும் செய்து வருவேன் என்பதைக் கூறி இந்த அறிக்கையை முடிக்கிறேன்! அன்பன்⁠ சி. என். அண்ணாதுரை ⁠ (“திராவிடநாடு” 10.8.1947)⁠ 1951-ல் மாயூரத்தில் தி. மு. க. தஞ்சைமாவட்ட முதல் மாநாடு நடந்தது. அங்கு தமது உரையினிடையே அண்ணா குறிப்பிட்ட ஒர் கருத்து மறக்க வொண்ணாதது. அண்ணா சொன்னார்: “தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகளில் எல்லாம், பட்டினக்கரைகளில் எல்லாம், மூலை முடுக்குகளிலெல்லாம், தெருத்தெருவாகக் கருப்பு சிவப்பு இரு வண்ணக்கொடி பறக்க வேண்டும். அது திராவிட முன்னேற்றக் கழகக் கொடியாகத்தான் இருக்கவேண்டும் என்பதல்ல! திராவிடர் கழகக் கொடியாகவும் இருக்கலாம். ஆனால் இந்த இரண்டில் ஏதாவது ஒரு கொடி-கருப்பு சிவப்புக்கொடி கட்டாயம் பறந்தாக வேண்டும்!” என்றார் பெருந்தன்மையுடன், எதிரிகள் தாக்கும்போது திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக்குழல் துப்பாக்கியாகப் (double barrel gun) பயன்படும் என்றாரே. திராவிடர் கழகத்துக்கும், தானே அதிகாரி போன்ற உரிமையுடன்! வேறு யாரால் இங்கனம் பேச இயலும்? அண்ணா இப்படியெல்லாம் பேசியபோது, நான் மட்டும் ஆச்சரியப்படுவதில்லை. அண்ணா என்றாவது ஒரு நாள் வந்து அய்யாவைச் சந்திப்பார் என்றே நான் நம்பி வந்தவன். சென்னையில் நடைபெற்ற முதல் மாநில மாநாட்டில் தலைமையுரையாற்ற எழுந்த அண்ணா “இந்த நேரத்தில் நம்மையெல்லாம் ஆளாக்கி, உருவாக்கிய பெரியார்……” என்று அதற்கு மேல் தொடர இயலாமல் கண்ணிர் சிந்த வில்லையா? இதே போன்றுதான், குழித்தலையில் கலைஞர் போட்டியிட்ட 1957-ல் இரண்டு முறை, பெரியார் காங்கிரஸ் காரர்களின் அழைப்பினை ஏற்று வந்து கூட்டங்களில் பேசினார்; நான் கலைஞரின் தலைமைத் தேர்தல் அலுவலக நிர்வாகியாதலால், வெளியில் செல்வதில்லை; இரண்டு பொதுக்கூட்டங்களையும் கேட்டேன்; அய்யா கலைஞரை எதிர்த்து அங்கே ஒரு சொல் கூட உதிர்க்க வில்லை! இது இருக்கட்டும்; 1950-ல் ‘பெரியார் பொன்மொழிகள்’ வழக்கில் அய்யாவும், ஆரியமாயை வழக்கில் அண்ணாவும் தண்டிக்கப்பட்டுத் திருச்சி சிறையிலிருந்த போது, அய்யா, அண்ணாவுக்கு பிஸ்கட், பழங்கள் அனுப்பியதும் 28.9.1950-ல் விடுதலையானபோது அண்ணாவுக்குக் கார் வராததால், அய்யாவே தம் வேனில் அழைத்துச் சென்று அண்ணாவைச் சங்கரன் பங்களாவில் விடச் சொன்னதும், தி. மு. க. பிரிந்த பிறகுதானே? 1956-ல் திருச்சி மாநில மாநாட்டில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் கலைவாணர் என். எஸ். கே. அவர்கள் பாடும் போது புத்தர் சொன்னதும் அய்யா சொல்வதும் ஒன்று அய்யா சொல்வதும் அண்ணா சொல்வதும் ஒன்று இந்த இருவரும் இணைந்தால் மிகவும் நன்று என்று குறிப்பிட்டார். பிறகு அண்ணா இதுபற்றிப் பேசிய பொழுது “நாங்களிருவரும் இணையவேண்டும் என்ற கலைவாணர் பாடினார். இணைவோமா என்னும் கேள்வியைக் கேட்டால், பதிலாக ஒரு பெருமூச்சுதான் வருகிறது” என்று அண்ணா தனது ஏக்கத்தை வெளிப் படுத்தினார். இணைய வேண்டும் என்பது அவரது நோக்கம் என்பதைத்தானே அந்தப் பெருமூச்சு உணர்த்தியது. உலக முழுதும் தெரிந்துள்ள Prodigal son என்ற கதை கூடத், தந்தையிடமிருந்து பிரிந்து சென்ற மகனொருவன் சீர்கெட்டு, வறுமையில் வாடி, வாழ வழியின்றி மீண்டும் தந்தையை நாடித் திரும்பியவனைத், தந்தை அரவணைத்து ஏற்றார் என்பதுதானே! ஆனால், இங்கு நடந்தது என்ன? பிரிந்து சென்ற மகன் ஆட்சியைக் கைப்பற்றி, முதலமைச்ச ராகவும் ஆனபின்னர், தந்தையைக் காணத் தானே சென்ற செய்தி வரலாற்றில் கிடையாதே! கேட்டதுண்டா? கண்டதுண்டா? திருச்சியிலிருந்த தந்தை பெரியாரைக் காணவேண்டும் என்று விரும்பிய அண்ணா, தம்முடன் நாவலர், கலைஞர், ஆகிய இருவரை மட்டும் அழைத்துக் கொண்டு திடுமெனப் புறப்பட்டுத் திருச்சி சென்று அன்பிலையும் அழைத்துக் கொண்டு அய்யாவைச் சந்தித்தாரே இரா. செழியன் போன்றோர் தடுத்தும் கேளாமல! இந்தச் சமயத்தில் நான் சென்னையிலோ, திருச்சியிலோ இல்லை. ஆனால் அய்யாவைச் சந்தித்துத் திரும்பியவுடன், அண்ணாவை வீட்டில் பார்த்தபோது, “என்னண்ணா! அய்யாவை விட்டுப் பிரிஞ்சப்ப ஊரையே கூட்டிகிட்டு வந்திங்க, ஒங்களோட! இப்ப திரும்பப்போயி அவரோட சேரும்போது, தனியே போயிட்டீங்களே?” என்று கேட்டேன். என்னைத் தம் அருகில் அழைத்துக், காதோடு, “கல்யாணந்தாய்யா எல்லாருக்கும் எதிரிலே நடக்கும். அடுத்தது?” என்றார். குபிரென்று சிரித்தேன். இப்போது நினைத்தாலும் என்னால் சிரிப்பை அடக்க முடிவதில்லை. வியப்பு-வியப்பிலும் வியப்பு! நடுவண் அரசின் ஊழியனாய், மாயூரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு, நான் அலுவல் புரிந்து வந்த போதிலும், நான் அதிக நாள் சென்னை வாசியாகத்தான் வாழ்ந்தேன். இங்கெனக்குச் சோற்றுக் கவலையில்லை, கலைஞர் வீடு என் வீடாயிருந்ததால்! அதிலும், தி. மு. க. ஆட்சி அமைந்த பிறகு, நான் சென்னை மாநகரில் தங்கும் நாள் அதிகரித்துவிட்டது. அரசு அலுவலராயிருந்தால் ஒய்வு பெற்றிருக்க வேண்டிய வயதில் அண்ணா முதலமைச்சரானார். வழக்கத்திற்கு மாறாக அதிகாலை எழுந்திருத்தல், மன உளைச்சல், புதிய பொறுப்புக்கள், கோப்புகள் பார்த்தல் இப்படியாக இயல்புக்கு மீறி உழைத்ததால் அண்ணா உடல் நலம் சீர்கெட்டது வெகு விரைவிலேயே! அண்ணா அமெரிக்காவில் அறுவை சிகிச்சை பெற்றுத் திரும்பிய பின்னரும் அரசுப்பணிகளைக் கவனித்து வந்தார். ஒரு நாள் “விடுதலை” ஆசிரியர் என் நண்பர் வீரமணியும், நாகரசம்பட்டி நண்பர் என். எஸ். சம்பந்தமும் அண்ணாவைக் காண வீட்டுக்கு வந்தனர். “உக்காருப்பா!” என்றார் அண்ணா. வீரமணி உட்கார்ந்தார். சம்பந்தம் உட்காராமல் ஏதோ சொல்ல முயன்றார். “என்ன சம்பந்தம்?” எனஅண்ணா கேட்கவும், ஆத்திரம் மேலிட்ட வராய், “என்னங்கண்ணா! எங்க நாகரசம்பட்டி பள்ளிக் கூடத்துக்கு அய்யா பெயரை வைக்கிறதுக்கு நாவலர் அனு மதி குடுக்க மறுத்து file ஐத் தூக்கி மூஞ்சியிலே விட்டெறிஞ் சிட்டாருங்க!” என்றார் சம்பந்தம். அவரது சினத்தை ஆற்ற எண்ணி, “நெஜம்மா மூஞ்சியிலேவா விட்டெறிஞ் சார்?” எனக் கேட்டார் அண்ணா. உடனே புன்சிரிப்புடன் “இல்லிங்க; டேபிள் மேலேதான் போட்டார்.” என்று கூறிய சம்பந்தத்தைப் பார்த்து “சரி உட்காருங்க. அங்கே நம்ம சொக்கலிங்கம் (தனிச் செயலாளர்) இருப்பார்; பாருங்க!” என அண்ணா சொல்லவும், சம்பந்தமே சென்று அவரை அழைத்து வந்தார். அவரிடம் அண்ணா சொல்கிறார். “என்னங்க - நாகரசம்பட்டி - அதாவது தர்மபுரி டிஸ்ட்ரிக்ட்லெ - இவுங்க ஊர்ல. ஒரு ஹைஸ்கூல் இருக்குது. அதுக்குப் பெரியார் ராமசாமி உயர்நிலைப் பள்ளி அப்படிண்ணு பெயர் வைக்கிறதுக்காக ஒரு லட்சத்து இருபத்து அஞ்சாயிரம் ரூபாய்லெ கட்டடம் கட்டித் தந்திருக்காங்க. எழுபத்து அஞ்சாயிரம் ரூபாய் கொடுத்தாலே டோனர் (நன் கொடையாளர்) சொல்ற பெயரை வைக்கலாம்னு நாம G. O. போட்டிருக்கோமே. அதை நாமே மீறலாமா! அந்த எஜுகேஷன் மினிஸ்டர் பீ. ஏ. நம்ம பண்டரிநாதன் இருப்பார். அந்த ஃபைலைக் கொண்டு வரச் சொல்லி, இந்த G. O. வையும் quote பண்ணி, இதன் பிரகாரம், பெரியார் பெயரைச் சூட்ட அனுமதிக்கப்படுகிறதுண்ணு order போடச் சொல்லுங்க உடனே” என்று ஒரே மூச்சில் இவ்வளவும் சொல்லி முடித்தார் முதலமைச்சர் அண்ணா. பிறகு அவர்கள் இருவரிடமும் பேச்சை மாற்றினார். “என்னா வீரமணி! அய்யா எப்படியிருக்கார்? இந்த டுர் (tour) போடும் போது கொஞ்சம் பாத்துப் போடுங்கப்பா! மொதல் நாள் திருநெல்வேலி, மறுநாள் தர்மபுரிண்ணு எவ்வளவு distance! அதிலேயும், எங்கே போனாலும் அங்கங்கே நம்ம தோழர்கள் இருக்காங்க, அவுங்க வீடுகளிலேயே சூடா, பத்தியமா சாப்பிடணும். இப்ப தர்மபுரி மாவட்டத்திலே எங்கே கூட்டம்னாலும், நம்ம சம்பந்தம் வீட்லெதான் சாப்பாடுண்ணு வச்சிக்கணும். நான் அய்யாவோட சேர்ந்தப்போ, இப்ப எனக்கு என்ன வயசோ(60) அந்த வயசு அய்யாவுக்கு. அப்பவே வயிற்றுக் கோளாறு; பேதியாகும்; பொருட்படுத்தமாட்டாரு. அப்ப நல்ல சாப்பாட்டுக்கு வழியில்லே! அப்பவே அய்யா இறந்து போயிருப்பாரு. ஆனா மணியம்மா வந்த பிறகுதான் அவருக்கு இதிலே ஒரு திருப்பம். அவுங்க, அய்யாவை நல்லா கவனிச்சிக்கிட்டாங்க. அவுங்க இல்லேண்ணா நாம அய்யாவை எப்பவோ பறிகொடுத்துட்டுப் பரிதவிச்சிருப்போம். இவ்வளவு நாள் உயிரோட பாத்திருக்கவே முடியாது. அய்யா எவ்வள்வு நாள் இன்னும் வாழ்றாரோ அவ்வளவுக்கும் நமக்கு நல்லது! பாத்துக்குங்க-” என்று முடிக்கும்போது அவர் குரல் கரகரத்தது. உணர்ச்சி மீதுற, நாக்குழறியது. எதிரிலிருந்த இருவரும் உடனே எழுந்து, மேலும் அண்ணாவுக்குத் தொந்தரவு தர வேண்டாமென எண்ணி, விடைபெற்றனர். ‘புதிய அன்னிபெச்ன்ட் புறப்படுகிறார்’ என்று 1949-ல் மண்ணியம்மையாரை வர்ணித்த அண்ணா இவர்தானா என்று, அவர்கள் இருவரும் கருதி, வியந்துகொண்டே சென்றிருப்பார்கள் என நான் எண்ணிச் சிந்தனையில் மூழ்கினேன். - கல்வெட்டுச் சாசனமாய்ப் பொறித்து வைக்கத்தக்க ஒரு கடிதத்தை அண்ணா நியூயார்க் மருத்துவ மனையி னின்று பெரியாருக்கு எழுதினாரே. அதன் இறுதிப்பகுதியில் என்ன சொன்னார்: “தங்கள் பணி மகத்தான விழிப்புணர்ச்சியைச் சமூகத்தில் கொடுத்திருக்கிறது. புதியதோர் பாதை மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. நான் அறிந்த வரையில் இத்தனை மகத்தான வெற்றி வேறு எந்தச் சமூக சீர்திருத்தவாதிக்கும் கிடைத்த தில்லை; அதுவும் நமது நாட்டில். ஆகவே சலிப்போ கவலையோ துளியும் தாங்கள் கொள்ளத் தேவையில்லை. என் வணக்கத்தினைத் திருமதி மணி அம்மையார் அவர்களுக்குத் தெரிவிக்கவும். அன்பு வணக்கங்கள். தங்கள் அன்புள்ள அண்ணாதுரை. நியூயார்க் 10.10-68.” நம்முடைய இயக்கத்தை வெறும் பயனையும் பதவியையும் எதிர்பார்க்கும் அரசியல் குழுவாக அமைக்காமல், பற்று பாசம் அன்பு அரவணைப்பு-இவற்றினடிப்படையில் அமைத்தார்களே! இயக்கத் தலைவர்களை வேறு யார் அய்யா என்றும் அண்ணா என்றும் வாஞ்சையுடன் அழைக்க முடியும்? அதனால்தானே பதினெட்டாண்டு இடை வெளிக்கும் பின் ஒரு முதலமைச்சர் தானே வலிந்து சென்று தன் தந்தையைக் கண்டார். ராஜாஜி வருத்தப் படுவாரே என்றார் ஒருவர். சென்னை வந்த பின்பு பார்க்கக்கூடாதா, திருச்சிக்குச் சென்று பார்க்க அப்படி என்ன அவசரம் என் றார் வேறொருவர். “என்னை இந்த நாட்டுக்கு அறிமுகப் படுத்தியவரே அவர்தான். முதலமைச்சரானதும் அவரை நான் பார்க்காவிட்டால், அது மனிதப் பண்பே ஆகாது” என்று சொல்லிவிட்டார் அண்ணன். “அவர் என்னுடைய தலைவர். நானும் அவரும் பிரிகிறபோதுகூட நான் அவரையேதான் தலைவராகக் கொண்டேன். இன்றும் அவரையே தலைவராகக் கொண்டு தான் பணியாற்றி வருகிறேன்” என்றார் திருச்சியில். “தமிழ் நாட்டின் முதல் பேராசிரியரே பெரியார்தான். அவருடைய கல்லூரியில் பயின்றுவந்த மாணவர்கள் என்பது ஒன்றுதான் எங்களுக்கு உள்ள பெரிய தகுதி” என்று காஞ்சித் தலைவரே நாகரசம்பட்டியில் கூறினார். “தமிழகத்திற்கும், தமிழ் நாட்டு மக்களின் நல்வாழ்விற்கும், இன்னும் உலகிற்கே என்று கூடச் சொல்லலாம், பெரியார் செய்திருக்கின்ற அரிய பெரிய காரியங்கள், ஆற்றியிருக்கிற அருந்தொண்டுகள், ஏற்படுத்தியிருக்கிற புரட்சி உணர்ச்சிகள், ஓட விட்டிருக்கின்ற அறிவுப்புனல், உலகம் என்றுமே கண்டதில்லை. இனியும் காணப் போவதில்லை. இந்தியாவின் தேசியமொழி இந்திதான் என்று சொன்னவுடன் “தேசியம் என்பது மகா புரட்டு. இந்தியா என்கிறீர்களே அது மிகப்பெரிய கற்பனை. அவையிரண்டையும் உடைத் தெறிவதுதான் என்வேலை” என்றாரே பெரியார்! இரண்டு நூற்றாண்டுகளில் செய்து முடிக்கக்கூடிய காரியங்களை இருபது ஆண்டுகளில் அவர்கள் செய்துமுடித்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் putting centuries into capsules என்பார்களே அதுபோல” என்றார் அண்ணா. பெரியாரின் கருத்துகளுக்கு சட்டவடிவம் தருவதற் காகத்தான் பதவியில் இருப்போம், எனத் திட்டவட்டமாகக் கூறித்தான், சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட சம்மதம் தந்தார் அண்ணா. அண்ணா பெரியாரை விட்டுப் பிரிந்தது, மணியம்மை யாரை அவர் திருமணம் செய்து கொண்டதால்தான் என்ற கருத்தை நான் எப்போதும் மறுப்பவன். இதற்குச் சான்றாக அரூரில் 12. 7. 1968 அன்று அண்ணா பேசியதை நினைவு கூர்வோம்:- “என்னுடைய நண்பர்கள் எல்லாம் நான் பிரிந்து சென்றுவிட்டேன் என்று குறிப்பிட்டார்கள். இருக்க வேண்டிய கடினமான நாளில் இருந்தேன். பிரிந்தேன் என்பது கூடத் தவறு. இந்த நாட்டு அரசியலை, கமக்கு நேர்மாறான கருத்து உடையவர்களிடம் கொடுத் துவிட்டு, அவர்களுக்கு காம் ஆளாகி இருப்பதைப் போக்க வேண்டும் என்பதற்காக, அரசியலில் நுழைந்து, அதனைக் கைப்பற்றியும் இருக்கின்றேன்” 30.8.68 அன்று தர்மபுரியில் பெரியார் சிலைதிறப்பு விழா. இதற்குத் தேதி கேட்பதற்காக முன்பு ஒரு நாள் சம்பந்தம், அண்ணாவிடம் வந்து சென்றார். இப்போது அண்ணாவுக்கும். உடல் நலமில்லை. அய்யாவுக்கும் உடல் நிலை சரியில்லை. அதனால் ஒத்திவைத்திருக்கின்றோம். எனறு சொல்வதற்காக விடுதலை வீரமணியுடன் சம்பந்தம் வந்திருந்தார். அவர்களிடத்தில் அண்ணா அய்யாவும் அடிக்கடி ஹைக்கோர்ட் ஜட்ஜ் நியமனம் சம்பந்தமாநிறைய எழுதறார். ஏதாவது செய்யனும். நீதிபதிகள் யாரார், எப்ப ரிட்டையர் ஆகுறாங்க மற்ற particulars எல்லாம் எனக்கு வேணுமே, வீரமணி?” என்றார் அண்ணா. “இதோ! பத்து நிமிஷத்திலே போயி டைப் அடிச்சி குடுத்தனுப்புறோங்க” எனப் புறப்பட்டார்கள் இருவரும். “என் பெயரைக் கவர்மேல் எழுதி, நேராக என்னிடம் தரச் சொல்லுங்க!” என்றார் அண்ணா. “அதென்னத்துக்குங்க அவ்வளவு பயம்? நாங்களே கொண்டு வருகிறோம்” எனச் சென்றவர்கள் அரைமணியில் உண்மையாகவே கையில் Type செய்த தாளுடன் திரும்பி வந்தார்கள்! “விடுதலையில் இவ்வளவு particularsம் readyயா வச்சிருக்கீங்களா?” “இல்லீங்க! அய்யாவோட டயரியில இருந்து எழுதிக் கிட்டு வந்தேன்!” என்கிறார் சம்பந்தம். “அடெ; அய்யாவோட டயரியிலே இல்லாத விஷயமே ஒண்ணும் இருக்காது போலிருக்கே?” என வியக்கிறார் அண்ணா! வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே- என்ற புறநானூற்று வரிகள் என் நினைவில் நிழலாடின. சாவி இங்கே; பெட்டி அங்கே! 1947 ஆகஸ்ட் 15 துக்கநாள் என்று பெரியாரும், மகிழ்ச்சி நாள் என்று அண்ணாவும் அறிவித்துக் கருத்து வேறுபாட்டினை வெளிப்படையாகக் காட்டியதன் விளைவாக அண்ணா 1948 மே 8, 9 நாட்களில் நடைபெற்ற துரத்துக்குடி மாநாட்டுக்குச் செல்லவில்லை. மேலும், ராஜபார்ட் ரங்கதுரை, மரத்துண்டு, இரும்பாரம் போன்ற பிரச்சினைக்குரிய உருவகக் கட்டுரைகளைத் “திராவிட நாடு” இதழில் தீட்டி வருகிறார். இதையே சாக்காகக் கொண்டு, ஏற்கனவே எரிச்சலடைந்துள்ள பெரியாரிடம், மேலும் கோள் மூட்டிச், சுத்தமாக அண்ணாவைப் பெரியாரிடமிருந்து பிரித்துவிடலாம் என்று சிலர் முயல்கிறார்கள். அண்ணாவோ “நான் விலகவில்லை; ஒதுங்கியிருக்கிறேன்” என்றுதான் சொல்கிறார். எனவே ஒதுங்கி நிற்காமல் மீண்டும் எப்போதும் போல் அண்ணா உள்ளேயே இருக்க வேண்டும் என்று நாங்கள் சிலர் விரும்பினோம். ‘நாங்கள்’ என்ற பட்டியலில் பெரிய பிரமுகர்கள் யாருமில்லை. ‘நாங்கள்’ பெரியாரின் அன்புக்கும் நம்பிக்கைகும் உரியவர்கள். ‘நாங்கள்’ சொல்வதை அய்யா ஏற்பார். அதனால், ஈரோட்டில் ஒருஸ்பெஷல் மாநாடு கூட்டி, அதற்கு அண்ணாவைத் தலைமை தாங்கச் செய்யலாம்,என்ற எங்கள் யோசனையை, அய்யா ஒத்துக்கொண்டார்கள். அதன்படி 1948 அக்டோபர் 23,24 தேதிகளில், ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷனிலுள்ள அய்யாவுக்குச் சொந்தமான திடலில், பந்தல் போட்டு மாநாடு நடத்திடத் திட்டம். ஈரோடு சண்முகவேலாயுதம், தவமணி இராசன், நான் ஆகிய ‘நாங்கள்’ எங்கள் முயற்சியில் வெற்றி பெற்றோம்! “மாநாட்டு நுழைவுச் சீட்டுடன் சேர்த்து உணவுக்கும் டிக்கட் தந்து விடுவோம். கடுமையான ரேஷன் அமுலில் இருப்பதால் வருகிறவர்களின் வசதிக்காக நாமே ஆள் வைத்துச் சமையல் செய்யலாம்”-என்றார் அய்யா. சரி என்றோம். “இப்போதுதான் துரத்துக்குடி மாநாடு நடந்துள்ளதால் ஈரோட்டுக்கு அதிகக் கூட்டம் வராது-” என்னும் அய்யாவின் கருத்தில் மட்டும் நாங்கள் மாறு பட்டோம். இதில் நாங்கள் சொன்னதைக் கேட்காததால், பின்னால் மிகவும் அவதிப்பட்டார் அய்யா அவர்கள். “அண்ணாதுரை இந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்கப் போகிறார் என்றால், இனிமேல் திராவிடர் கழகத் துக்கும் அவர்தான் தலைவரா?” என்று ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், தற்செயலாக என்னைப் பார்த்த தி. பொ. வேதாசலம் அப்பாவித்தனமாகக் கேட்டார். “அதில்லிங்க. திராவிடர்கழகத்துக் குத் தலைவர் நீங்கதான் ! அண்ணா, இந்த மாநாட்டுக்கு மட்டுந்தான் தலைவர்-” என்றேன் நான். அவருக்குத் தன் பதவி பறிபோய்விடுமோ என்கிற பயம். அண்ணாவை இரட்டை மாட்டுச் சாரட்டு வண்டியில் வைத்து, ஈரோட்டு வீதிகளில் ஊர்வலம் நடத்தினோம். அய்யாவுக்கு உண்டான மகிழ்ச்சியின் எல்லையை நாங்கள் அன்று நேரடியாகக் கண்டோம். அவரும் வண்டியில் அமர்ந்து வரலாம். ஆனால் யார் சொல்வியும், கேட்காமல், மேல்துண்டை எடுத்துக் கருப்புச்சட்டைக்கு மேல் இடுப்பில் கட்டிக்கொண்டு, தேர்வடம் பிடிப்பது போல், ரதத்துக்கு முன்பாக நடந்தும் ஒடியும் வருகிறார் அய்யா; அவருக்கு ஈடுகொடுத்து நானும்! அண்ணாவுக்கு ஆச்சரியமான புன்னகை முகம் முழுதும்! சம்பந்தருக்குப் பல்லக்குத் தூக்கிய திருநாவுக்கரசர், அண்ணாவின் நினைவுக்கு வந்திருப்பார் போலும்! அதன் பிறகு அய்யா அவ்வளவு நடந்து நான் பார்க்க வில்லை; அடுத்த 2, 3 ஆண்டுகளில் மேடையில் நின்று கொண்டே பேசுவதுகூட இயலாமல் போயிற்று! அய்யாவே முனைந்து, மும்முரமாய் முயன்று, எஸ். ஆர். சந்தானம் மூலமாக அண்ணாவுக்கும் தமிழ்த்தென்றல் திரு.வி.க.அவர்களுக்கும் ஈரோடு நகரமன்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தார். இந்த மாநாடு பல்வகையானும் சிறப்புப் பெற்ற தல்லவா? திரு. வி. க. திராவிடநாடு படம் திறந்தார். கலைவாணர், “திராவிடமாநாடே” என்று வில்லுப்பாட்டுப் பாடினார். குருசாமி, குஞ்சிதம், அழகிரிசாமி (இவருக்குக் கடைசி மாநாடு) ஆகியோர் பங்கேற்றனர். நடிகவேள் எம். ஆர். ராதா ஒரு இரவிலும், கலைஞர் மு. கருணாநிதி ஒரு இரவிலும், நாடகங்கள் நடத்தினர். அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல், அய்யா தலைவரை வழிமொழியும்போது, கூடியிருந்தோர் இன்ப வெள்ளத்தில் நீந்துமாறு, “எனக்கோ வயதாகிவிட்டது! அதனால், வயது வந்த மூத்த மகனிடம் பொறுப்புகளை ஒப்படைப்ப்துதானே முறை? அண்ணா அவர்களிடம்; உங்கள் அனைவருடைய முன்னிலையிலும், பெட்டிச்சாவியை ஒப்படைக்கிறேன்-” என்றார் பெரியார். அண்ணாவும் விட்டுக் கொடுப்பாரா என்ன? தலைவர் முன்னுரையில், “அய்யாபெட்டிச்சாவியை என்னிடம் தருவதாகக்கூறினார். தந்தையை மீறித் தறுதலையாகத் திரியும் பண்பு எனக் கில்லை. அதை ஜாக்கிரதையாகப் பயன்படுத்துவேன். சாவிதான் என்னிடத்தில் இருக்குமே தவிரப் பெட்டி பெரியாரிடம்தான் இருக்கும்!” என்றார் அறிஞர் அண்ணா! அக்டோபர் மாதம் அல்லவா? மாநாட்டுக்கு முதல்நாள் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல், மக்கள் வெள்ள மாய்த் திரண்டிருந்தனர். அய்யாவின் தவறான கணக்கின் படி, குறைவான அளவிலேயே உணவு சமைக்கப் பட்டிருந்தது. அண்ணாவின் தலைமையுரைக்குப்பின் இடைவேளை விடப்பட்டதும், உணவு டிக்கட் வாங்கியிருந்ததால், எல்லாருமே அடுத்துள்ள நாயக்கர் சத்திரத்துக்குப் படை யெடுத்தனர். பெரியார் நுழைவாயிலில் நின்றுகொண்டார், கூட்டத்தைக் கட்டுப்படுத்த எண்ணி! அவரையும் தள்ளிக் கொண்டு, பசி கொண்ட மக்கள் உள்ளே நுழையப் பார்க்கிறார்கள்! தூத்துக்குடி கே. வி. கே. சாமி தடுக்கப்பார்க்கிறார்! குழித்தலை வையாபுரி சோழகருக்கு ஆளனுப்பி அய்யா லாரியில் அரிசி வரவழைத்துச் சாப்பாடு தயாரித்திருந்தார். ஒழுங்குபடுத்திச் சாப்பாடு பரிமாற முடியவில்லை. நேரமும் போதவில்லை! அண்ணா வெளியில வந்ததும், சம்பத்தும் நானும் சட்டென்று ஒரு காரில் ஏற்றிக்கொண்டு விரைவாகப் புது ரயிலடிக்குப் போனோம். “எங்கே?” என்றார் அண்ணா. “இங்கே நமக்குச் சாப்பாடு கிடைக்காது சம்பத் வீட்டிலே எப்படி நிலைமையோ தெரியாது! பேசாமல் வாருங்கள்” என்று ரஹ்மானியா ஒட்டவில் போய் இறக்கினோம் அண்ணாவை; பிரியாணி சாப்பிட புது ஜங்ஷன். நான் R. M.S. அலுவல் பார்க்கும் area, மேலும், ர கிமானியா ஒட்டலிலும், பக்கத்து உடுப்பி ஒட்டலிலும் எனக்குப் பற்று, வரவு உண்டு அப்போது! ஏறத்தாழ நான் உள்ளுர் வாசி போலத்தானே! மாநாட்டுத் தலைவருக்கு, ஒட்டலில் பிரியாணி உபச்சாரம்! அடுத்திருந்த அய்யர் ஒட்டலில் சொல்லி, நிறையத் தயிர்சாதம் பொட்டலங்கள் வாங்கிக்கொண்டு, திரும்பிப் போகிறவழியில் கலைஞரின் நாடகக்குழுவினர் தங்கியிருந்த விட்டில் இறங்கி, அவர்கள் பசியால் தவிக்காமலிருக்கத் தயிர்சாதம் வழங்கினேன். அரங்கண்ணல், கருணை ஜமால், தஞ்சை ராஜகோபால் எல்லாரும் நாடகக்குழுவில் அப்போது நடிகர்களாக வந்திருந்தனர். பழைய ரயில்வே ஸ்டேஷனில், அய்யா பங்களா, மூலையில் இருக்கிறது. அங்கு போனோம். ஓர் அறையில் சென்னை என். வி. நடராசன் அழுதுகொண்டு உட்கார்ந்திருக்கிறார். அண்ணா திடுக்கிட்டுப் போய், “என்ன நடராஜன்?” என்று விசாரித்தார். “அய்யா இந்த மாநாட்டிலே என்னை ரொம்ப அலட்சியப்படுத்திவிட்டார். எனக்கு முக்கியமான function தரக்கூடாதா?” என்றார். நான் குறுகி கட்டு, “ஏங்க-நீங்க விஷயம் தெரிஞ்சவுங்களே இப்படி அழலாமா? அண்ணாவே தலைமை தாங்கும்போது நமக்கு வேறெ என்ன வேணும்? வாங்க! அய்யா நம்மை யெல்லாம் எப்பவுமே அலட்சியம் செய்யமாட்டார்! உண்மைத் தொண்டுக்குத் தனி மதிப்பு என்றைக்கும் உண்டு!” என்று சமாதானம் செய்தேன். பிறகு அண்ணாவிடம் சாப்பாடு போடுவதில் ஏற்பட்ட குழறுபடியான நிலவரத்தை எடுத்து விளக்கி, “நாம இப்ப உடனே மாநாட்டை ஆரம்பிச்சி நடந்தணும்! இல்லேன்னா, சோத்துப்பிரச்சனை முடிவே ஆகாது!-” என்றேன். அதே போல, அண்ணா பந்தலுக்குள் நுழைந்து, மேடையில் ஏறி, “தோழர்களே” என்று குரல் கொடுத்ததும், சாப்பாட்டுக் காகக் கியூவில் நின்றவர்களெல்லாம் கலைந்து ஒட்டமாக ஒடி வந்தார்கள் உள்ளே! பெட்டிச் சாவியைப் பெற்றுக்கொண்ட பிறகு கூட ஒட்டலுக்குச் சாப்பிடப் போன மாநாட்டுத் தலைவர் அண்ணாவை, அடிக்கடி இதுபற்றிக் கேலி செய்தோம்! வரைந்த ஓவியம் மறைந்ததே! 1969 சனவரித்திங்கள் இரண்டாம் வாரம் ஒரு நாள் இரவு அண்ணா வீட்டிலிருந்தேன். அண்ணியார் அண்ணா வுக்கு ஒரு கிளாஸ் தம்ளரில் அரிசிக்கஞ்சி கொடுத்தார்கள். இரவு உணவு ஒருவாய் உட்செலுத்திய அண்ணா, முகத்தைச் சுளித்தவராய், என்ன ராணி இது! பாத்துத் தரக்கூடாதா? இந்தக் கஞ்சியிலே பார்! ஒரு சாதம் முழுசாக் கிடக்குது!” என்றார் பரிதாபக் குரலில். “ஒரு பருக்கை சோறு கூட இல்லாமெ (liquid) லிக்விடாகத்தான் சாப்பிடச் சொல்லியிருக்காரா டாக்டர்?” என்று கேட்டேன் அண்ணாவிடம் அப்பாவித்தனமாக. “அதில்லய்யா. சோறு தொண்டையிலே உறுத்துது, இறங்கமாட்டேங்குது!” என்று அண்ணா சொல்லிய பிறகே, அந்நோயின் கொடுரத்தன்மை எனக்குப் புரிந்தது! “அது மட்டும் இல்லே. இப்ப வயிற்றுக் கோளாறும் இருக்குது. அடிக்கடி lose motion போகுது” என்றார். “அப்படியானால் இந்த Capsule சாப்பிடலாம் அண்ணா!” என்று சொல்லி, என் சட்டைப் பையில் எப்போதும் வைத்திருக்கும் Chlorostep எடுத்துத் தந்தேன். “இதெல்லாம் இப்ப எடுபடுமா? விஷயமே வேறெ அய்யா!” என்றார்கள் அண்ணா. கலைஞரும், மற்றும் எதிரிலிருந்தவர்களும், அண்ணாவுக்குத் தெரியாமல் எங்கள் கண்ணிரைத் துடைத்துக் கொண்டோம்! அமைச்சர் கோவிந்தசாமி இல்லத்தில் அண்ணாவுக்காகக் குளிர்சாதன வசதி செய்து அங்கு குடியேறச் சொன்ன மருத்துவர்களின் வேண்டுகோளையும் தம்பிமார்களின் கோரிக்கையையும் நிராகரித்து விட்டுக் கடைசிவரை சொந்த வீட்டில் வாழும் கொள்கை யைக் காப்பாற்றினாரே நம் அண்ணா! என் குடும்பத்தில் பொங்கல் விழா மட்டும் கொண்டாடு வோம். 1969-ஆம் ஆண்டு, நான் குடும்பத்தோடு சென்னை யில் இருந்தேன். பூரிப்பும் குதூகலமும் தரும் பொங்கல் விழா, அந்த ஆண்டு எங்களுக்கு அமையவில்லை! காரணம், அண்ணாவின் உடல் நலிவு மாத்திரமன்று; என் தங்கையின் கணவர் பழநிவேலு பொது மருத்துமனையிலிருந்ததால், மகிழ்வு மறைந்து போயிற்று! அண்ணா வீட்டில் அன்று காலையில் இருந்தேன். “பொங்கல் விழாவைக் காஞ்சியில் கொண்டாட வேண்டுமென வீட்டார் பிடிவாதம் செய்கின்றனர். அதனால் போய்விட்டு உடனே திரும்பிவிடுகிறேன்” என்றார் அண்ணா. நாங்களெல்லாரும் வேண்டாம் என்று சொல்விப் பார்த்தோம்; பயனில்லை! “என்னைத் தடுக்காதிங்க! இப்ப கலைவாணர் சிலை திறந்ததும், அங்கிருந்தே நேரே கஞ்சீவரம் போயிட்டு வந்துடறேன்!” என்கிறார் அண்ணா கெஞ்சும் குரலில். அண்ணியாரும் இதை ஆமோதிக்கிறார். பொங்கிவரும் கண்ணிரைத் தங்கள் முன்தானையால் துடைத்தவாறு அங்கே நிற்கிறார்கள் சரோஜாபரிமளமும் விஜயா இளங்கோவனும். இந்த இரண்டு மருமகளும் எங்கள் பகுதியிலிருந்து இங்கு வந்தவர்களல்லவா! இவர்களைப் பெண் பார்க்கவும், 30-6-1963-ல் திருமண உறுதிப் பாடு செய்யவும், அண்ணா எத்தனை தடவை மாயூரம் வந்தார்! தான் தஞ்சாவூரின் மாப்பிள்ளை ஆனதோடு, தன் பிள்ளைகளுக்கும் தஞ்சைமாவட்டத்தில் பெண் தேர்ந்தெடுத்தாரே அண்ணா-எங்களுக்கு எவ்வளவு பெருமை! பரிமளம் சரோஜா, இளங்கோவன் விஜயா திருமணம் காஞ்சியில் 1.9.1963 அன்று. தங்கவேலர் தோட்டத்தில் பெரிய பந்தல். முந்திய நாளிரவு மணமகள் இருவரையும் அழைத்து வரும் நேரத்தில் பெருமழை பெய்து மணப் பந்தலில் சேறு நிரம்பிவிட்டது. அண்ணா மிகவும் வருத்த முற்றார். இந்நிகழ்ச்சிகள் யாவும் என் மனத்திரையில் ஓடுகின்றன. அவசரமாக ஒடிப்போய் என் பிள்ளைகளை அழைத்து வந்து, வாணி மகாலுக்கு எதிர்ப்புறமுள்ள பெட்ரோல் பங்க்கில் நின்றுகொண்டேன். அங்குதான் கலைவாணர் சிலை திறப்புவிழா; கலைஞர் தலைமையில் சுருக்கமாக நடந்தது. எஸ். எஸ். வாசன், ஏவி. எம்., ஏ. எல். எஸ்., புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர், நடிகர் திலீப்குமார் ஆகியோரும் இருந் தனர். இளைத்துக்களைத்து, உருமாறிக் குரல்மாறிப்போன அண்ணா, கலைவாணரின் சிலையைத் திறந்து வைத்துச் சிறியதொரு உரையாற்றினார். “எனக்கு முன் பேசிய திரு எஸ்.எஸ். வாசன் அவர்கள் கலைவாணர் சிலை திறக்க இப்போதுதான் நல்ல நேரம் வந்தது என்றார்கள். அவர்கள் நல்ல நேரம் என்று குறிப்பிட்டது நாங்களெல்லாம் ஆட்சிக்குவந்த இந்த நேரத்தைத்தான் குறிப்பிட்டார்கள் என்று நான் கருதுகிறேன்.” என்றார். அந்தப் பொங்கல் திருநாள் முதற் கொண்டுதான் நமது சென்னை மாகாணம் “தமிழ்நாடு” என்று அழைக்கப் பெறுவதற்கான அரசு ஆணையையும் அண்ணா பிறப்பித்திருந்தார். இதை நல்வாய்ப்பு என்பேனா.கெட்ட வாய்ப்பு என். பேனா-அண்ணாவின் உரை கேட்ட இந்தப் பெரும் பேறு, பிறகு என்றுமே வாய்க்காது போயிற்றே! தலையே நீ வணங்காய்; இந்தத் தலைமகன் அண்ணாவின் கடமைதனை நினைந்து! கண்காள் காண்மின்களோ, இந்தக் கண்ணியத் தலைவனின் வண்ணத் திருக்கோலம்! செவிகாள். கேண்மின்களோ: நம் சிந்தையில் கட்டுப் பாடெனும் அறவுரை ஒதிய முதல்வனின் கம்பீரக் குரல் மொழி! அந்தோ! என் மகன் குலோத்துங்கன் சிறு வயதில் ஒரு கதை எழுதினான், அதைப் படித்துப் பார்த்த கலைஞர், “கதை எழுதும் குலோத்துங்கா முதலில் படிப்பைக்கவனி! பிறகு கதை எழுதலாம்” என்று சொல்லிவிட்டார். அடியோடு விட்டுவிட்டான் அவன்! பென்சிலால் ஒவியங்கள் வரைவான். Caricature எனப்படும் உரு வங்கள் அருமையாகத் தி ட்டு வா ன், யாரிடமும் பயிலாமலேயே! அவன், அண்ணா பட்ஜெட் கூட்டத்துக்குப் பையுடன் நடந்து செல்வது போன்ற ஒரு பெரிய படத்தைப் பென்சிலால் வரைந்து, என்னிடம் கொடுத்து, அதில் அண்ணாவின் கையெழுத்துப் பெற்றுத் தருமாறு வேண்டினான். பொங்கலுக்குப் பிறகு ஊரிலிருந்து அந்தப் படத்தை எடுத்து வந்து, அண்ணாவிடம் காண்பித்துக், கையெழுத் திடுமாறு வேண்டினேன். அப்போது, அண்ணாவின் நோய் முதிர்ச்சியுற்ற நிலையில், வேலூர் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் விரைவாக மேற் கொள்ளப்படும் தருணம். “சண்முகத்திடம் கொடுத்து, என் காரில் வைக்கச் சொல். பார்க்கிறேன்!“ என்றார் அண்ணா. ஒட்டுநராயிருந்த சண்முகம் அதை என்னிடமிருந்து வாங்கி வைத்துக் கொண்டார். “சரியண்ணே! நான் கையொப்பம். வாங்கித் தாரேன்!” என்று. அவ்வளவு தான். அது என்ன ஆயிற்றோ? கடைசி நேரத்தில் அண்ணா வேலூருக்குப் புறப்பட மறுத்துவிட்டார்கள்! கலைஞரும் மற்ற அமைச்சர்களும் பரபரப்பாகக் கலந்து ஆலோசித்தனர். கலைஞர், அடையாறு மருத்துவ மனையில் மடமடவென ஒரே நாளில் அறை முதலிய வசதிகள் தயார் செய்ய முனைந்தார். அண்ணா ஒத்துக் கொண்டார்கள். விரைவாக வந்து காரில் ஏறினார்கள். நான் பின்னால் வந்த கலைஞரின் காரில் உட்கார்ந்து கொண்டேன். முன்னிரவு நேரத்தில் அடையாறு மருத்துவ மனைக்குப் போய்ச் சேர்ந்தோம். முதல்காரில் இருந்த அண்ணா மிடுக்குடன் இறங்கிச், சிங்க ஏறு போல் விறு விறுப்புடன் நடந்து, தமது அறைக்குள் நுழைந்தார்கள். நான்அத்தோடு பின் தொடர்வதை நிறுத்திக்கொண்டேன். விழிகள் நிறையும் வரை அந்த வேந்தனின் பின்னழகை விழுங்கினேன். அண்ணா எனும் அந்த ஒப்புவமை உரைக்க வொண்ணாப் பேருருவின் உயிர்ப்புத் துடிப்புள்ள உடலத்தை மீண்டும் எங்கே தாணமுடிந்தது? பதினொரு மாதம் சுமந்தவர் ஆசிய ஜோதி அணைந்து விட்டது! காந்தியடிகளின் செல்லப்பிள்ளை, ரோஜாவின் ராஜா, இந்தியாவின் முதல் பிரதமர், பண்டித ஜவாகர்லால் நேரு, 27.5.1964 பிற்பகல் 2.30 மணியளவில் திடுமென மறைந்த செய்தி-ஜன நாயகத்தை நேசிப்பவர் நெஞ்சில் வேல் பாய்ச்சியது! நாடே கதறி அழுதது! இம்மாதிரி நேரங்களில் விரைந்து முன் வந்து, தமது இரங்கலைத் தெரிவிக்கத் தயங்காத அண்ணா-அன்று அவ்வாறு உடனே கருத்தை வெளியிட வில்லை! ஏன்? இந்திய அரசியல் சட்டத்தின் மொழிப் பிரிவு நகலைக் கொளுத்திக் கட்டாய இந்திக்கு நம் எதிர்ப்பைத் தெரிவிப் போமென அண்ணா அறிவித்தார். அவருடன் டி. எம். பார்த்தசாரதி, டி. கே. பொன்னுவேலு, தையற்கலை கே. பி. சுந்தரம், வி. வெங்கா ஆகிய நால்வரும் ஒரு குழுவாக இணைந்து, சென்னைக் கடற்கரையில் எரிப்புப் போராட்டம் தொடங்குவதற்கெனக் காஞ்சியினின்று காரில் வரும்போதே, வழிமறித்துக் கைது செய்யப் பட்டனர். 1963 டிசம்பர் 10 ஆம் நாள் இக்குழுவினர்க்கு ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு, ஐவரும் சென்னை மத்திய சிறைச் சாலையில் அடைக்கப் பட்டிருந்தனர். நேருபிரான் இறந்ததால், இவர்களை விடுதலை செய்துவிடக் கூடிய பெருந்தன்மை காங்கிரஸ் அரசுக்கு வருமா? அவ்வளவு ஏன்? காந்தியார் மறைந்தபோது 1948-ல் பெரியாரையும் அண்ணாவையும் அழைத்து வானொலியில் இரங்கலுரை ஆற்றச் சொன்னவ்ர்கள், நேருவின் மறைவுக்கு 1964-ல் அவ்வாறு அழைக்கவில்லை. ஆனால் எதிர்க்கட்சி அமைத்திருந்த ராஜாஜியை மட்டும் வானொலி அழைத்தது! (வாழட்டும் அந்த வர்ணாசிரம வானொலி!) பண்டித நேரு இறந்தார் என்றவுடன் கலைஞருக்கு முதன் முதலில் ஏற்பட்ட எண்ணமே, உடனே மத்திய சிறைக்குச் சென்று, அண்ணாவுக்குச் செய்தியைத் தெரி வித்து, அவரது மேலான இரங்கற் செய்தியினை நாட்டு மக்கள் அறியச் செய்யவேண்டும் என்பதுதான்! வாங்க சார், சென்ட்ரல் ஜெயிலுக்குப் போகலாம். நீங்க வந்ததில்லையே?” என்று கலைஞர் என்னையும் அழைத்தார். நான் போனதில்லைதான்! பிற்பாடு 1976-ல் எதிர்பார்த்தேன். வாய்ப்புத் தரப்படவில்லை? அதே போல், மாலை 4 மணிக்கெல்லாம் சென்றோம். ஐந்து மாதங்கள் சிறைக்குள் வாழ்ந்த அண்ணாவைப்பேட்டி கண்டேன். நான் 1960-ல் இரண்டு நாள்தான் ரிமாண்டி லிருந்தேன். அதற்குள் சாப்பாட்டுக்கும் புகைபிடிக்கவும் எவ்வளவு சிரமப்பட்டேன் என்பது நினைவுக்கு வந்தது. அண்ணா இப்போது மட்டுமல்ல. இதற்கு முந்திய ஆண்டும் விலைவாசிப் போராட்டத்தில் ஈடுபட்டு, வேலூர் சிறையில் வதிந்தார் பத்து வாரங்கள்! சிறையின் சட்டதிட்டங்களின்படி, அண்ணா எழுதிய அறிக்கையை அப்படியே வாங்கி வந்து வெளியிடக் கூடாதாம்! அதனால், கலைஞர் அதைப் படித்து, மனத்தில் வாங்கி வந்தார். நாளேடுகளில் வெளியிட்டார். இந்திய விடுதலைப் போராட்ட வீரரான நேரு எவ்வளவு காலம் சிறைக் கோட்டத்தில் கழித்துள்ளார்! அவர் மறைந்த நாளன்று, நமது இனத் தலைவர் அண்ணா சின்றக் கோட்டத்தில் இருந்தது எவ்வளவு பொருத்தம்! மத்திய சிறையிலிருந்து கலைஞருடன் காரில் திரும்பி வந்து கொண்டிருந்த போது, போன ஆண்டு நடை பெற்ற ஒரு சிறு நிகழ்ச்சி என் மனத்தில் நிழலாடி, அதன் தொடர்பாய் ஒரளவு மகிழ்ச்சியும், உடனே தொடர்ந்து மனத்துள் நெகிழ்ச்சியும் ஏற்பட்டன. 1962-ல் தஞ்சைத் தொகுதி சட்டமன்ற உறுப்பின ரான கலைஞர், விலைவாசி மறியல் போராட்டத்தில் தஞ்சாவூரில் கலந்து கொண்டார். அதனால் மூன்று மாதக்கடுங்காவல் தண்டனை பெற்றார். ஏற்கனவே கல்லக்குடிப் போராட்டத்தில் ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை பெற்று அடைக்கப்பட்டிருந்த அதே திருச்சி சிறைச்சாலைதான் இப்போதும். ஒரு சிறு மாறுதல் என்ன வென்றால், அப்போது, கலைஞர் சட்ட மன்ற உறுப்பினர் ஆகவில்லை. அதனால் நான் ஒரு முறைதான் சென்று பார்க்க இயன்றது. எனக்கு நல்ல வாய்ப்பு இப்போது. திருச்சி சிறையிலிருந்த கலைஞரைப் பல தடவை பேட்டி காணமுடிந்தது! கலைஞர் விடுதலையானவுடன் நேரே தஞ்சை சென்று, மக்கள் அளித்த வரவேற்பினை ஏற்று, மீண்டும் திருச்சி, அடுத்த நாள் திருவாரூரில் பொதுக் கூட்டம் என்று ஊர் ஊராகப் போகவே நேரம் சரியாக இருந்தது. அக். 24 விடுதலையான அண்ணா, காஞ்சிபுரத்தில் அப்போது தங்கியிருந்தார்கள். அதனால் அண்ணாவைக் காணத் திருவாரூரிலிருந்து மறுநாள் காஞ்சி புறப் பட்டோம் fiat காரில், ஒட்டுநராகத் திருவரம்பூர் காமாட்சி. காரில் கலைஞருடன் மதுரைமுத்து, முரசொலி செல்வம், நான். திண்டிவனம் அருகில் வரும்போது, பிரேக் பிடிக்காமல், கார் முன்னும் பின்னும் ஒடுகிறது சுற்றிச் சுழல்கிறது.-Control இல்லாமல்! ‘பயப்படாதீங்க’ என்கிறார் காமாட்சி! கடைசியில், ஒரு மைல்கல் மீது மோதித் தானாகவே நின்று விட்டது! ஒருவாறு சரி செய்து கொண்டு, காஞ்சி சென்று அண்ணாவைக் கண்டோம்! சாப்பிடுங்கள்! நானும் சென்னைவருகிறேன். இன்று நமக்கு வரவேற்புப் பொதுக் கூட்டம் இருக்கிறதே! ஊர்வலமும் உண்டே சேர்ந்து புறப்படுவோம்!” என்றார் அண்ணா, கலைஞர் விடுதலையாகி மூன்று நாட்களாகிவிட்டன. கோபாலபுரத்தில் அன்னை அஞ்சுகம் அம்மையார், தன் அருமந்த செல்வனிடம் அளப்பரிய அன்பினைச் சுமந்து கொண்டு, அவர் வந்து சேராத ஏக்கத்தைச் சிந்தையில் தேக்கிக்கொண்டு, உண்ணாமல் உறங்காமல், உள்ளும் புறமும் அலைந்து திரிகிறார். அண்ணாவுடன் சேர்ந்து நள்ளிரவில் நாங்களனை வரும் போய்க் கலைஞர் இல்லத்தில் இறங்குகிறோம். பொக்கைவாய்ப் புன்சிரிப்புதவழ, அம்மா அண்ணாவைப் பார்த்துக் கேட்கிறார்கள் “அண்ணா தம்பி! ஒங்க அம்மா ஒங்களெப் பெறுவதுக்கு ஒரு நாள்தான் பிரசவ வேதனைப் பட்டிருப்பாங்கபோல இருக்கு. அதனாலெ நீங்க வேலூர் ஜெயிலிலேயிருந்து விடுதலை ஆனதும், நேர ஒங்க அம்மாவைப் பார்க்க ஒடனே காஞ்சிபுரம் போனிங்க. அப்புறம் போயி வேலூர் கூட்டத்திலே கலந்து கிட்டீங்க. ஆனா, என் பிள்ளையை நான் 27 நாள் பிரசவ வேதனை அனுபவித்த பின் பெற்றேன். அதனால்தான், அது என்னைப்பாக்க இவ்வளவு மெதுவா வருது. திருச்சியிலே விடுதலையாகி மூணு நாளாச்சே மெட்ராஸ் வர்றதுக்கு. நீங்க கேக்கக் கூடாதா?” என்ற தும் அண்ணாவுக்கு ஒரளவு வெட்கமும் வருத்தமும் ஏற்பட்டன, அந்தத் தாயுள்ளத்தின் தவிப்பினை உணர்ந்து. “இல்லேம்மா. என்னாலதான் கருணாநிதி வர்றது லேட்டாச்சு. நானும் சேந்து வந்து, ஒங்களெப் பாக்க விரும்பினேன்!” என்று பேசிச் சமாளித்தார் அண்ணா! 1964 மே 27-சென்னை மத்திய சிறையிலிருந்து திரும்புங்கால் 27 நாள் பிரசவவேதனைச் சம்பவம் நினைவுக்கு வந்தது. அதே நேரம் அத்தகைய அன்பின் திருவுருவாம் அஞ்சுகம் அன்னையார் 1964 சனவரியில் இதே 27 ஆம் நாள் தன் செல்வங்களை ஏங்கவிட்டு மறைந்தாரே, அதுவும் என் சிந்தையைக் கலக்கிற்று, அப்போது அண்ணா வரைந்த கண்ணிர்க்காவியத்திலிருந்து சில பகுதிகளை நினைவு கூரலாமே: “குறுநகை காட்டும் கண்கள்! பொக்கை வாயிலே ஒர் புன்னகை மூதாட்டி அஞ்சுகம் அவர்கள், சருகு, தளிர் ஆவது போலாகி விடுவார்கள்-தமது மக்களின் மகிழ்ச்சி கண்டு அல்ல, மாடு மனை கண்டு அல்ல. இயக்கச் செய்திகளை, வெற்றிகளைக் கேட்டதும்…… கண்டவுடன்; “மேயர் நம்ம கட்சிதானே வரும்? அதை விடக்கூடாது! புதுசா சட்டம் வருதாமே, என்ன செய்யப் போரீங்க? விலைவாசி குறைக்க எப்ப நடக்கப் போவுது கிளர்ச்சி? பேப்பர்லே இண்ணக்கி நம்ம கட்சி விஷயம் என்னென்ன வந்திருக்குது? நம்ம கட்சியைக் கேலி பண்ணிப் படம் போட்டாங்களாமே பேப்பர்லே. பார்த்தீங்களா, என்ன செய்யப் போறீங்க?” என்ற இது போன்ற கேள்விகளைக் கேட்டு, ஆர்வத்தைப் பொழிந்த ஒரு அன்னையை நான் கண்டதில்லை. தம்பி கருணாநிதிக்கு, இப்படிப்பட்ட தாய்ச் செல்வம் பெற்றிருந்த காரணத்தால்தான்-“நிதி” என்ற பெயரிட் டார்கள் போலும். வயது 72 தோற்றம், அப்பழுக்கற்ற கிராமிய முறை! அணிகலன் கிடையாது! அந்த வீட்டிலே மூதாட்டி அஞ்சுகம் அம்மையார், கழக மாநாட்டுக்காக வெளியூரிலிருந்து வரும் தாய்மார்களில் ஒருவர் போல, இயக்கப் பேச்சு ஒன்றிலேயே தமக்குச் சுவை தேடிக் கொண்டு உலவிவந்தார்கள். நடமாடிக் கொண்டிருந்த அம்மை இப்போது படமாகிப் போய் விட்டார்கள்… குயில் பறந்து விட்டது. நாதம் நிலைத்திருக்கிறது மலர் உதிர்ந்து விட்டது, மணம் கிரம்பி இருக்கிறது. அஞ்சுகம் மறைந்து விட்டார்கள் அவர்கள் பற்றிய கினைவு கிலைத்திருக்கிறது.” இதே சந்தர்ப்பத்தில் தான் “முரசொலி”யில் எழுதிய கையறு நிலைக் கட்டுரையின் வரிகளிற் சில இங்கு பொருந்தக் கூடுமே. “பெற்ற தாயிடத்தில் மட்டுமே பெறத்தக்க பரிவு, பாசம், அன்பு, அரவணைப்பு-ஆகியவற்றை மற்றொரு தாயிடத்திலும் பெற இயலும் என்பதற்கோர் இலக்கண மாய் வாழ்ந்துகாட்டிய அன்னையார், தன் குலக் கொழுந்துகள் குமுறியழுவதும் கேளாமல், ஒருமுறை பார்த்தோரும் உருகிக் குமையும் காட்சியைக் காணாமல் கண்மூடி விட்டார்கள். பொக்கைவாய் முழுதும் புன்சிரிப்பு நிறைய ‘வாங்க தம்பி!’ என்று வயதில் தன் பேரப் பிள்ளைகளை ஒத்தோரையும் மரியாதைப் பன்மையிலே விளித்து மனங்குளிர அழைத்து, வீட்டிலே குழந்தை குட்டிகள் சவுக்கியமா?’ எனவும் மறவாமல் வினவி, அதற்கும் அடுத்தபடியாகத் தாம் இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்புவதற்குத்தான் என்ற கருத்தில் சாப்பிட வாருங்கள்’ என்ற உபசரிப்பை இனி என்றென் றும் காண ஒண்ணாத அவல நிலைக்கு ஆளானோம். சாப்பிட அமர்ந்ததும் தம் கையால் ஏதாவது பறிமாறினால்தான் திருப்தி ஏற்படும் அளவுக்கு நீர் நிறைந்த ஊருணிபோல் வற்றாத வாத்சல்யம் சுரக்கின்ற அந்த இனிய முகத்தை எப்படி மறக்க இயலுமோ?… இயக்கத்துக்கு முதல்வராம் அண்ணாவோ பிற முன்னணித் தலைவர்களோ வருகை தந்தால் அவர்களை மரியாதையும் ஆசையும் மிளிர வரவேற்று, அரசியல் பேசத் தொடங்கும் அவர்களின் நுண்ணறிவைப் பாராட்டாதார் யார்?…… என்ன துயர் பட்டேனும் அன்னை உயிர் மீட்கலாம் என்ற ஆசை அலைமோதிய நெஞ்சங்கள் அனல் கக்கும் எரிமலைகளாய் உருமாறி, அம்மா என்றும் ஆத்தா என்றும் அத்தை என்றும் அழைத்துக் களித்த அன்புருவங்கள் என்புதோல் போர்த்த கூடுகளாய் ஏங்கிப் பின்னின்று தவிக்கின்ற அவலநிலை, கால ஒட்டத்தில் தெளிவு பெற’ அம்மா! உங்கள் சிந்தனை எங்கள் உளத்திற்கு உரம் ஊட்டுவதாக!” நேரு மறைவிற்கு அண்ணா சிறையிலிருந்து வழங்கிய இரங்கலுரை இது :- “உலகப் பெருந்தலைவர்கள் வரிசையில் சிறப்புமிக்க இடம்பெற்று இந்தியத் துணைக் கண்டத்துக்குத் தனிப் புகழிடம் தேடிக் கொடுத்துப் பூசல்கள் பிளவுகளால் நாடு கேடடையாமல் பாதுகாத்துப் பொருளாதாரச் சீர்குலைவு ஏற்படாமல் தடுத்து வந்த மாபெரும் காவலர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள். நேரு பெருமகனாருக்கு நாம் காட்ட வேண்டிய மரியாதை உணர்வைச் சொல்லாலும் செயலாலும் நேர்மையாலும் நன்னெறியாலும் அனைவரும் எடுத்துக் காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.” தந்தை மகற்காற்றும் நன்றி! “அண்ணாவுக்குப் பெரியாரிடத்தில் அன்பு அதிகமா? பெரியாருக்கு அண்ணாவிடத்தில் அன்பு அதிகமா?” என்று ஒரு பட்டிமண்டபம் நடத்தி, என்னை நடுவராக வைத்தால், தீர்ப்புச் சொல்வதற்கு நான் திண்டாடித் திணறித் திக்குமுக்காடிப் போவேன். இரு தலைவர்களின் அன்பும் சம எடையாயிருக்குமோ? தந்தை மகற்காற்றிய நன்றி பெரிதா? மகன் தந்தைக்காற்றிய உதவி பெரிதா? ஈரோட்டில் அண்ணா வாழ்ந்து வந்த காலம்.எங்களில் யாருக்குமே தெரியாது. சங்கரய்யா சில கதைகள் சொல்வார். E. W. R. செல்வம் சில விவரங்கள் கூறுவார். 1942-ல் அய்யா கொஞ்சம் (Types) எழுத்துகள் Cases முதலியன கொடுத்து, அதைக் கொண்டு, அண்ணா காஞ்சிபுரத்தில் “திராவிட நாடு” இதழும் அச்சகமும் தொடங்கினார் என்று கேள்வி. ஆனால் நான் நேரடி யாகப் பார்த்தது, 1967.க்கும் 1969-க்கும் இடையில் பற்பல சந்தர்ப்பங்களில் அய்யாவும் அண்ணாவும் சந்தித்த பல சூழ்நிலைகள்! அப்போதெல்லாம் வீரமணி, நாகரசம்பட்டி சம்பந்தம் இவர்களும் இருந்திருக்கிறார்கள். மணி யம்மையார் இருந்தார்கள் என்பதைச் சொல்லத் தேவை யில்லை! “வெற்றிபெற்றதும் அண்ணாதுரை என் முன் வந்து தைரியமாக உட்கார்ந்து விட்டார். எனக்குத் தான் ஒரே வெட்கம். இந்த ஆட்சி நிலைக்க எந்தவித மனஒதுக்கலும் (without any reservation) இல்லாமல் மனதாரப் பாராட்டுவேன்” என்றார் அய்யா. சென்னை இம்பீரியல் ஒட்டலில் பிரியாணி விருந்தளித்துச் சிறப்பித்தார் அய்யா. இது வரையில் இந்தவூர் எனக்குச் சொந்தமாயிருந்தது. இனி இதை உங்களுக்கு அன்பளிப்பாக வழங்குகிறேன் என்று சொல்லி, நாகரசம்பட்டியில் நடந்த பாராட்டுக் கூட்டத்தில் அண்ணாவுக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார். தமிழக அரசு தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தில், அண்ணாவின் உருவப்படத்தினைப் பெரியார் திறந்து வைத்தார். “ஒட்டுக் கேட்கும் நேரத்தில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசாவிட்டாலும், தயதய என்று ஒட்டுகள் பெற்றுப் பதவியில் அமர்ந்தபின், அண்ணா பழைய “தீ பரவட்டும்” நூலின் ஆசிரியராகவே-மீண்டும் காத்திகராகவே-தன்னைக் காட்டிக்கொள்கிறார்” என்று புகழ்ந்தார்; “தமிழர்களின் நல்வாய்ப்பாக அண்ணாவின் ஆட்சி வந்துள்ளது. இதைக் காப்பாற்றவேண்டும். இதை அழிக்க நினைத்தால் கொள்ளிக் கட்டையை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்வது போலாகும்” என்றார் பெரியார், அண்ணாவுக்கு உடல்நலங்குன்றி, முதன்முறையாகச் சென்னை பொது மருத்துவமனையில், அவருக்கு உணவுக் குழாயில் புற்று நோய் தோன்றியிருப்பதைக் கண்டு பிடித்தார்கள். இது 6.9.1968. உடனே அமெரிக்கா அழைத்துச் செல்லத் திட்டமிடப்பட்டது. அப்போது அண்ணாவின் வயது 59 முடியும் சமயம் . 15.9.68 அன்று 60 தொடக்கமல்லவா? அண்ணாவுக்கு அறுவை சிகிச்சை செய்தார்கள். எனக்கும் அதே 59 வயதில், தொண்டையில், அதே நோய் வந்தது. அறுவை சிகிச்சையின்றி, வேறு முறைகளைக் கையாண்டனர். எனக்குக் கோபால்ட் தெரபி எனப்படும் ஒளிச் சிகிச்சை முறையிலும், கீமோதெரபி எனப்படும் ஊசி மருந்துகள் செலுத்தும் வகையிலும் இப்போது நோயைக் குணப்படுத்த முயல்கின்றனர். இது மருத்துவத் துறையின் 16 ஆண்டுகால முன்னேற்றமோ? அடுத்த நாள் திருச்சியிலிருந்து விரைந்த பெரியார், இரவு சுமார் 11.30 மணியளவில் வந்து அண்ணாவைப் பார்த்தார். அங்குள்ள மருத்துவ நிபுணர்களை நோக்கி “அய்யா! தமிழ்நாட்டின் நிதி போன்றவரை உங்களை எல்லாம் நம்பி ஒப்படைக்கிறோம்” என்றார் பெரியார், கண்கலங்க! 10.ந் தேதியே அண்ணா அமெரிக்கா புறப்பட வேண்டும் என மருத்துவர்களால் நாள் நிர்ணயிக்கப் பட்டது. இதைக் கேள்விப் பட்டதும் சுற்றுப் பயணத்திலிருந்த பெரியார் உடனே சென்னை திரும்பி, Wheel chair-ல் அமர்ந்து G, H. வந்து சேர்ந்தார். அவரோடு தவத்திரு குன்றக்குடி அடிகளார், மணியம்மையார், வீரமணி, சம்பந்தம், புலவர் இமயவரம்பன் இருந்தனர். குன்றக்குடி அடிகளார் கொண்டு வந்திருந்த பொன்னாடையை வாங்கி, அண்ணாவுக்குப் போர்த்தினார் அய்யா. பெரியார் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே, அண்ணாவின் வலது காதருகே குனிந்து, தம் வாயைக் காதில் வைத்து, ஏதோ சொன்னார். பிறகு தம் மடியை அவிழ்த்து எதையோ எடுக்க முனைந்தார். அண்ணா, கையைக் கலைஞர் இருந்த திசையில் காட்டி, முகத்தில் புன்சிரிப்பைத் தவழவிட்டு, “கருணாநிதி கிட்டெ சொல்லுங்க அய்யா” என்றார் மெல்லிய குரலில். மறுபுறம் நாற்காலியைத் திருப்பி, அய்யா கலைஞரின் கழுத்தில் தன் கையை வைத்து, அவர் தலையை வளைத்து, அருகே இழுத்து, இதிலெ இருவத்தஞ்சாயிரம் (ரூ. 25,000) பணம் இருக்குது. அண்ணாவுக்கு வைத்திய செலவுக்கு வச்சிக்குங்க!” என்றார். “இப்பப் பணம் இருக்குங்க அய்யா! அப்புறம் பாத்துக்கலாம்! நன்றி!” எனக் கூறினார் கலைஞர். சுற்றிலும் மக்கள் வெள்ளம். ஈயாதவர், கொடாதவர், கஞ்சத்தனமுள்ளவர், செட்டானவர், கருமி, உலோபி என்றெல்லாம் விவரமறியாத மக்களால் எண்ணப்பட்ட தந்தை பெரியார்-என்னதான் சிக்கனக் கொள்கையை ஒம்பிக் காப்பவரெனினும்-தேவைப்பட்ட நேரத்தில் கருணை வள்ளலாகவும் திகழ்வார் என்பதற்கும் அண்ணாவின் உயிரைக் காப்பாற்ற அவர் எதற்கும் தயார் என்பதை மெய்ப்பிக்கவும்-இந்நிகழ்ச்சிக்கு இணையாக எதையேனும் எடுத்துரைக்க ஒல்லுமா? அந்தத் தடவை அண்ணாவுக்கு மருத்துவத்திற்காக ஆன மொத்தச் செலவே சுமார் 90,000 ரூபாய். இதில் பெரியார் தர முன்வந்த ரூ. 25,000 பெரும் பங்கல்லவா? நான் நண்பர் சம்பந்தம் அருகில் சென்று விசாரித்தேன் அய்யா, திடலில் இருந்து இங்கு வருவதற்காகப் புறப்பட்ட போதே, 25,000 ரூபாயை எடுத்து மடியில் கட்டிக் கொண்டு, “அம்மா, நான் மறந்துடப் போறேன். ஆசுபத்திரிக்குப் போனதும், நீ மெதுவா மடியிலே கை வைத்து, ஒரு சாடை காட்டு. நான் புரிஞ்சிக்குவேன்” என்றாராம் அய்யா. “இல்லெயில்லெ, நீங்க மறக்க மாட்டீங்க, சும்மா வாங்க என்றார்களாம் மணியம்மை யார். அவ்வாறேதான், எந்தச் சாடையும் காண்பிக்காமல், அய்யா அண்ணாவிடம் பணம் தருவதாகச் சொன்னார்கள் மறக்காமல். மருத்துவமனையிலேயே காலையில் பார்த்து விட்டதால், அன்று மதியம் 2 மணிக்கு விமான நிலையத்துக்கு அய்யா போகமாட்டார் என்று கருதி, வீரமணியும் சம்பந்தமும் சாப்பிட உட்கார்ந்தார்களாம். உடனே :அய்யா கூப்பிடுகிறார். வேனில் ஏறிவிட்டார்” என்று சேதி வரவே, அப்படியே கையலம்பிக் கொண்டு இருவரும் புறப்பட்டனராம். விமான நிலையத்தில் அய்யா சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார். அண்ணாவின் கார் விமானத்துக்கு அருகில் கொண்டு செல்லப்பட்டது. காசி விருந்தவாறே அண்ணா, தன் மக்கள் திரளை நோக்கிக் கையசைக்கிறார். பெரியாரைப் பார்த்ததும், சட்டென்று காரை நிறுத்தச் சொல்லவும் தோன்றாமல், ஒடும்போதே இறங்கிவிடும் எண்ணத்தில் கதவைக் கூடச் சிறிது திறந்து விட்டார். பெரியார், இறங்க வேண்டாமெனச் சைகை செய்து, “போய் வாருங்கள்” என்று கைகுவித்து வணக்கம் சொல்லிப் பிறகு, கையசைத்து வாழ்த்தி விடை தந்தார். ‘அண்ணாவின் அறுபதாம் ஆண்டு பிறந்த திருநாள்’ என்ற தலைப்பில், “அறிஞர் அண்ணா என்று பாராட்டுவது அவரதுஅறிவின் திறம்தான் காரணம். தனதுஅமைச்சரவை யில் பார்ப்பனர் ஒருவரையும் சேர்க்கவில்லை என்பதோடு, தி. மு. க. வுக்கு மாறான கொள்கையுடைய தமிழரையும் போடவில்லை” என்று பெரியார் பாராட்டி எழுதினார் “விடுதலை” யில். அறுவை சிகிச்சைக்குப் பின் சிலவாரம் ஒய்வெடுத்த அண்ணா 6.11.68 சென்னை திருப்பினார். மறுநாள் தமது அருமை அன்னையாரைக் காணக் காஞ்சி சென்றார். நலம் பெற்றுவிட்டார் என்று நம்பிய தமிழகம் சென்னையில் திரண்டு அண்ணாவை வரவேற்று மகிழ்ந்தது. அப்போது சென்னை மாநகரில் இல்லாத பெரியார், 11-ஆம் நாள் வந்து, நேரே நுங்கம்பாக்கம் இல்லத்திற்கு விரைந்தார். உடன் மணியம்மையார், வீரமணி, என். எஸ். சம்பந்தம் வந்திருந்தனர். அண்ணா மிகவும் சங்கடத்துடன், “நான் வந்து அய்யாவைப் பார்க்க வேணும்னு இருந்தேன். அதுக்குள்ள நீங்க முந்திக் கொண்டிங்களே” என்று கூறிக் கொண்டே எல்லாருடைய முகத்தையும் நோக்கினார். அண்ணாவின் உடல் இளைத் திருந்த போதிலும், அகன்ற நெற்றிப் பரப்பின் அடிபீடத் தில் சுடர்விடும் பெரிய விழிகளின் ஒளி எப்போதும் போல் பிரகாசித்தது. ஒரு ஆப்பிள் பழத்தை எடுத்து அண்ணா பெரியாரின் கையில் அளித்தார். அய்யா அதைப் பெற்றுக் கொண்டு, மணியம்மையின் கையில் கொடுத்தார். பிறகு அண்ணாவின் பக்கமாகச் சிறிது குனிந்து, அவருடைய இரு கன்னங்களிலும் தமது இரு கரங்களின் விரல்களாலும் தடவிக் கொடுத்து-“ஒண்ணுமில்லிங்க! நீங்க நல்லா இருக்கீங்க! நல்லா இருக்கீங்க!” என்றார் தழுதழுத்த குரலில், ஆனால் கம்பீரங் குன்றாமல்! காணற்கரிய இந்தக் கண்கொள்ளாக் காட்சியினைஇதன் மாட்சியினை-எவ்வாறு உரைப்பது! எங்கள் அனைவர்க்கும் கண்கள் கலங்கி, நீர் முத்துகள் உருண்டன கன்னங்களில்! வீரமணியும், நானும், எங்கள் மேல் துண்டுகளால் கண்களைத் துடைத்துக் கொண்டோம். மணியம்மையார், புடைவைத் தலைப்பால் முகத்தினைத் துடைத்தார்கள். நாகரசம்பட்டி சம்பந்தம் அழுத்தமான திடசித்தம் உடையவராயினும், அவருக்கே நெகிழ்ச்சி மிகுந்துவிட்டதென்பதை, மகிழ்ச்சியற்ற முகம் தெரிவித்தது. பிறகு, அண்ணா அடையாறு மருத்துவமனையிலிருந்த போது, அருகிலுள்ள வீரமணியின் இல்லத்தில் தங்கிக் கொண்டு, பெரியார் அடிக்கடி வந்து பார்த்துக் கவலை தேங்கிய முகத்துடன் திரும் பிச் செல்வார் தினந்தோறும்! 2.2.1969 நள்ளிரவில் தேவைப்பட்டால் உடனே புறப்பட்டுச் செல்ல வசதியாக வீரமணி வீட்டு மாடியில் படுக்காமல் கார் ஷெட்டிலேயே படுத்து உற்ங்கிக்கொண்டிருந்த பெரியாரை எழுப்பிய என். எஸ். சம்பந்தம், அண்ணாவின் சேதியைச் சொல்ல, அருகிலிருந்த சுவரில் கையை ஓங்கி அறைந்து, “எல்லாம் போச்சு, எல்லாம் போச்சு” என்று புலம்பிய பெரியார், உடனே மணியம்மை யாரையும், வீரமணியையும், சம்பந்தத்தையும் அழைததுக் கொண்டு அடையாறு மருத்துவமனைக்கு வேனில் வந்து சேர்ந்தார். அண்ணாவின் சடலம், துங்கம்பாக்கம் இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட,வெளியில் ஸ்ட்ரெச்சரில் வந்தபோது, வெறித்து நோக்கிய தந்தை பெரியாரைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கலைஞர். “அய்யா, நாங்க அநாதைகளாயிட்டோமே அய்யா!” என்று கதறிக் கதறி அழுததும்- (இனி எழுத என்னாலாகாது) FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.