[] 1. Cover 2. Table of contents அச்சம் என்பது மடமையா அச்சம் என்பது மடமையா   நிர்மலா ராகவன்   nirurag@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-NC-ND-BY-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/acham_enbathu_madamaiya மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/acham_enbathu_madamaiya This Book was produced using LaTeX + Pandoc அச்சம் என்பது மடமையா? ‘உனக்கு எவ்வளவு தைரியம்!’ என்று சிலரைப் பாராட்டுகிறோம். ‘இவர்களுக்கெல்லாம் பயம் என்பதே கிடையாதா!’ என்ற பிரமிப்பு எழுகிறது. ஏன் இல்லாமல்? பயம் என்பதும் ஓர் உணர்வுதான். எந்த மனிதருக்கும் இயற்கையாகவே அமைந்திருப்பது. “அச்சமும் தைரியமும் சகோதரர்கள்” (பழமொழி). சாதாரணமாக, பழக்கமில்லாத ஒரு காரியத்தில் இறங்க நேரிட்டால் எவருக்கும் அச்சம் எழத்தான் செய்யும். அதற்காக எதுவும் செய்யத் துணிவில்லாமல் சும்மா இருக்கமாட்டார்கள் இவர்கள். அந்த பயத்தை எதிர்த்து நிற்பார்கள். எதற்கெல்லாம் பயப்படக்கூடாது என்று புரிந்துவிட்டால், அநாவசியமாக எல்லாவற்றிற்கும் பயப்பட வேண்டியதில்லை. தானே துணிச்சல் பெருகும். ‘சிலருக்குத்தான் வாழ்க்கை நன்றாக அமைகிறது!’ என்று ஏக்கப் பெருமூச்சு விடுவார்கள் பலர். சிறப்பான வாழ்க்கை தற்செயலாக அமைவதில்லை. அது நம் கனவுகளை நனவாக்க நாமே மாறுவதைப் பொறுத்தது. வீண் பயம் கனவுகளைத் தகர்த்துவிடும். அச்சத்தை எதிர்கொள்ளும் ஒவ்வொரு முறையும் தைரியமும், அதன் விளைவாக தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது. பயந்துகொண்டே இருந்தால், மகிழ்ச்சி ஏது! அனுதினமும் செத்துச் செத்துப் பிழைக்கவேண்டுமா? எதற்குப் பயப்படலாம்? பயமே கூடாது என்பதல்ல. ‘தீய பழக்கங்களில் ஈடுபட பயம்’ என்பது சரி. சட்டத்திற்கு விரோதமான காரியங்களைச் செய்யத் துணிவதும் முட்டாள்தனம். உலகமே ஒரு சின்ன நோய்க்கிருமியால் ஆடிப்போயிருக்கிற தற்போதைய நிலையில், ‘வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பதாவது!’ என்று பலர் கோலாலம்பூரில் உள்ள ஒரு குளத்தில் மீன்பிடிக்கப் போயிருக்கிறார்கள். பதினைந்து கார்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனவாம். ஆக, ‘உணவுப்பொருட்கள் வாங்க காசில்லை’ என்ற ரகமில்லை. இவர்களது இந்த ‘துணிச்சலான’ செய்கையால் பலருக்கும் நோய் பரவக்கூடும். அதற்கான தண்டனை: தலா 1,000 ரிங்கிட் (20,000 ரூபாய்) அபராதம். பயமுறுத்தி காரியத்தைச் சாதிப்பவர்கள் கதை எங்கள் பள்ளியில், ஈராண்டுகள் தலைமை ஆசிரியை இருக்கவில்லை. அந்த இடம் மூத்த உதவியாளராக இருந்த நபீசாவின் கையில். அதிகாரத் திமிருடன் எல்லாரையும் ஆட்டிவைத்தாள், உணர்வு ரீதியாக வதைத்தாள். தனக்கு மேலே வேறு ஒருவர் வரப்போகிறார் என்ற செய்தி கேட்டு, பயம் எழுந்தது நபீசாவுக்கு. “இப்போது வரவிருக்கும் தலைமை ஆசிரியை புலிமாதிரி!” என்று அச்சுறுத்திவிட்டு, “எனக்கும்தான் உத்தியோக உயர்வு தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது,” என்று நம்பத்தகுந்த சில அப்பாவிகளிடம் நைச்சியமாகக் கூறினாள். அவர்களும் பரிதாபப்பட்டு, எல்லா ஆசிரியர்களையும் அழைத்து, “நபீசா இங்கேயே தலைமை ஆசிரியையாக நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருக்கிறோம். ‘எஸ்’ என்று எழுதுங்கள்,” என்றுவிட்டு, ஒரு காகிதத்தைக் கொடுத்தார்கள். எல்லாரும் பயந்து, அதன்படி எழுதிக்கொடுத்தார்கள். ஒருத்தி மட்டும் ‘நோ’ என்று பெரிதாக எழுதினாள். எரிச்சலுடன், “அவள்தான் நம்மைப் படாதபாடு படுத்துகிறாளே! எதற்காக ஒத்துக்கொண்டீர்கள்?” என்று சிலரைக் கேட்டாள் அவள். (யார் என்று புரிகிறதா?) “நாளைக்கே அவள் உயர்பதவி ஏற்று, இங்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம்தான்!” என்ற பதில் கிடைத்தது. “அச்சம் ஒரு கரடியை அது இருப்பதைவிடப் பெரிதாகக் காட்டும்” என்று சரியாகத்தான் சொல்லி வைத்திருக்கிறார்கள். நல்லவேளையாக, நபீசாவின் திட்டம் பலிக்கவில்லை. அவளை வேறு பள்ளிக்கு அனுப்பினார்கள். அங்கிருந்த ஆசிரியர்கள் ஆரம்பத்திலேயே, ’உன்னைப்பற்றி நிறையக் கேட்டிருக்கிறோம். உன் அதிகாரத்தை எங்களிடம் காட்டலாம் என்று நினைக்காதே,” என்று மிரட்ட, அவள் அடங்கிப்போனாளாம். நம்மை அச்சுறுத்த நினைப்பவர்களின் எண்ணம் பலிக்காவிட்டால் அந்த பயம் அவர்களையே போய்ச்சேரும். எங்கள் பள்ளியில் பயத்தால் எல்லாரும் பணிந்துபோனார்கள் – என்னைத்தவிர. அதனால் மேலும் குறுகிப்போனார்கள். குழந்தைமாதிரி ‘சிறுவர்களுடனேயே பழக நேர்வதால் பெரும்பாலான ஆசிரியைகள் குழந்தைத்தன்மையுடன் நடக்கிறார்கள்!’ என்று ஒரு தோழி என்னிடம் கூறிச் சிரித்தாள். வயதில் பெரியவர்களைக் கண்டு குழந்தைகள் பயப்பட்டு, அவர்கள் சொன்னபடி நடக்கலாம். எத்தனை வயதானாலும், உயர் அதிகாரிகளைக் கண்டு பயந்து நடந்தால் என்ன ஆகும்? கதை அரசாங்கத்தின் ஓராண்டு கால மேற்பயிற்சி அது – விடுமுறைக்காலங்களுடன். முழுமையாகக் கலந்துகொண்டவர்களுக்கு மாத வருமானத்தைத் தவிர கூடுதலான பணமும் உண்டு, ஆனால் விடுமுறையின்போது அவர்களுக்கு அளிக்கப்படும் வீட்டுப்பாடங்களை முதலிலேயே முடித்துக் கொடுத்துவிட வேண்டும். நான் பாடத்தை முடித்து சமர்ப்பித்துவிட்டு, ‘வெளிநாடு போகப்போகிறேன்,’ என்று எழுதியும் கொடுத்தேன். ‘வெளிநாடு போனவர்களுக்குப் பணம் கிடைக்காது,’ என்று பயிற்சி ஒருங்கிணைப்பாளர் நவாவி முரட்டுத்தனமாக அறிவித்தார். நான் தனிமையில் அவரைச் சந்தித்து, “விதிப்படி நான் எல்லாம் சரியாகச் செய்திருக்கிறேனே!” என்று விவாதித்தேன். உடலை இறுக்கிக்கொண்டு, “நான் இந்த விதிகளை எழுதவில்லை,” என்றார் நவாவி. பயிற்சி முடிவடையும் தறுவாயில், மேலிடத்திலிருந்து ஒருவர் வந்து அதில் கலந்துகொண்ட 450 பேருக்கு உரை நிகழ்த்தினார். “உங்களுக்கு எதிலாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்,” என்றார். நான் சும்மா இருப்பேனா? என் வழக்கைச் சொன்னேன். “இதுபற்றி பிறகு பேசலாம்,” என்று சமாளிக்கப் பார்த்தார். “இல்லை. எனக்கு இப்போதே தெரியவேண்டும்,” என்றேன், பிடிவாதமாக. “நான் எல்லாம் முறைப்படி செய்திருக்கிறேன். பணத்துக்காகக் கேட்கவில்லை. என்னைத் தண்டிப்பதுபோல் பணம் கொடுக்க மறுப்பது என்ன நியாயம்?” அவர் பயந்தார். “நீங்கள் சொல்வது சரிதான். எங்கள் தவற்றுக்கு மன்னியுங்கள்,” என்று பின்வாங்கினார். “நீங்கள் என்னிடம் சொன்னதை ஒரு கடிதத்தில் எழுதிக்கொடுங்கள்,” என்று சமரசத்துக்கு வந்தார். ஒரு கேலிப் புன்னகையுடன், நான் மேடையைவிட்டு இறங்குமுன், நவாவி அடைத்த குரலில், “எனக்கு முதலிலேயே தெரியாது,” என்றார். அவரது மன்னிப்பை ஏற்கும் வண்ணமாக, நான் தலையை ஒருமுறை லேசாக மேலும் கீழும் ஆட்டிவிட்டு நடந்தேன். அன்று நான் கதாநாயகியாக உயர்ந்துவிட்டது பிறகுதான் புரிந்தது. நான் பழகியிராத சில பெண்கள், “உங்கள் விலாசத்தைக் கொடுங்கள்,” என்று உறவாடினர்! என் நிலையிலிருந்த சிலர், “என்ன எழுதவேண்டும்? சொல்லிக்கொடுங்கள்,” என்று என்னைப் பிடித்துக்கொள்ள, அலுப்பாக இருந்தது. நான் ஒரு பள்ளியிலிருந்து மாற்றல் கேட்டுப்போகையில், “ஐயோ! எங்களுக்காக சண்டை போடுகிறவர் நீங்கள் மட்டும்தான். நீங்களும் போய்விட்டால் நாங்கள் என்ன செய்வது!” என்று ஆசிரியை ஒருத்தி அரற்ற, “Fight your own battles (நீங்களே போடுங்கள்),” என்றேன் எரிச்சலுடன். சண்டை போடுவதால் நிறைய சக்தி விரயமாகிறது. சில சமயம் பலனளிக்கும். விரோதிகள் பெருகுவர். ஆனால், உரிய காலத்தில் தகுந்த நடவடிக்கை எடுத்தோம் என்ற திருப்தி நிலைக்கும். நீங்கள் ஆமையா, முயலா? ஒரு சிறுவன் தன் பொம்மைக்காரில் பேட்டரியைப் பொருத்தப் படாத பாடுபட்டான். முதலில் முடியவில்லை. அழுதபடியே மீண்டும் முயன்றான். இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? ‘பாவம், குழந்தை! அழுகிறானே!’ என்று அவன் கையிலிருப்பதைப் பிடுங்கி, நீங்களே உதவ நினைக்கிறீர்களா? அது அன்பான செயல் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அவனுடைய அழுகை பலக்கிறது. ஏனெனில் அவன் கையாலாகாதவன் என்று பிறர் நினைக்கிறார்கள். அது அவனுடைய தன்னம்பிக்கைக்குச் சவால். நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும்போதே அவன் எடுத்த காரியத்தில் வெற்றி அடைகிறான். பேட்டரி சரியான இடத்தில் அமர, கார் ஓட ஆரம்பிக்கிறது. ‘நான் கெட்டிக்காரன்!’ என்ற பெருமிதம் எழுகிறது. அப்போது சிறுவன் முகத்தில் தோன்றும் களிப்பே தனிதான். “தவறுகள் நிகழ்வது தவிர்க்க முடியாத ஒன்று. அதனால் பயந்து, பாதியில் நிறுத்திவிடுவதுதான் தவறு” (உளவியலாளர் ஸ்கின்னர்). பொதுவாகவே, குழந்தைகள் பாடும்போதோ, வாய்ப்பாடு ஒப்பிக்கும்போதோ கடைசி ஓரிரு வார்த்தைகளை அல்லது எண்களை அதிவேகமாகச் சொல்லி முடிப்பார்கள். அவர்களுக்கு எப்படியாவது முடிவை அடையவேண்டும் என்ற வெறி. வாழ்க்கையில் வெற்றி பெற அப்படி அவசரப்படுவது தகாது. பொறுமையும் நிதானமும் அவசியம். குறுகிய காலத்தில் சாதிக்க நினைத்தால் எந்தக் காரியமும் அரைகுறையாகத்தான் முடியும். மேரி க்யூரி (MARIE CURIE) தனக்கு அளிக்கப்பட்ட சிறந்த அறிவுரையாகக் கருதுவது: “முன்னேறுவது என்பது எளிதானதோ, விரைவாகக் கிடைப்பதோ அல்ல”. இந்த உண்மை புரிந்துதான் இருமுறை நோபல் பரிசு வாங்கியிருக்கிறார் – பௌதிகத்திலும், ரசாயனத்திலும். இதைத்தான் ‘ஆமையும் முயலும்’ கதைவழி சிறுவர்களுக்குப் போதிக்கிறோம். எந்தக் காரியமும் செய்வதற்குமுன் கடினமாக, நம்மை அயர்ச்சி அடையவைப்பதாகத்தான் இருக்கும். அதற்காக, கனவுடனேயே திருப்தி அடைந்துவிடலாமா? கதை ராஷ்டிரகூட அரசனாகிய முதலாம் கிருஷ்ணனுக்கு ஒரு கனவு இருந்தது. ஔரங்காபாத் அருகிலிருக்கும் எல்லோராவில் ஒரே கல்லில் கைலாசநாதர் கோயில் கட்டவேண்டும் என்பதுதான் அது. அதனைக் கட்டி முடிக்க இருபத்தாறு ஆண்டுகள் ஆயிற்று. நல்ல வேளை, ஆரம்பித்தபின்னர் மனம் தளர்ந்து, ‘இது நடக்கிற காரியமா!’ என்று அரசன் யோசிக்கவில்லை. பாதியிலேயே முயற்சியைக் கைவிட்டிருந்தால், அசாதாரணமான சின்னமாக எல்லோரா குகைக்கோயில் ஆகியிருக்காது – அயல்நாட்டவர்கள் ஆற்றாமையுடன், ‘ஒரே கல்லைக் குடைந்து, இவ்வளவு பிரம்மாண்டமாகக் கட்டுவது மனிதனால் முடிகிற காரியமே இல்லை. வேற்று கிரகவாசிகள் செய்ததாக இருக்கும்,’ என்று ஒரு வதந்தியைக் கிளப்பிவிட்டிருக்கிற அளவுக்கு. கஜினி முகமது ஒரு காரியத்தில் நாம் வெற்றி பெறாவிட்டால் என்ன! அதிலும் ஒரு சௌகரியம். மீண்டும் செய்யும்போது முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டியதில்லை. ஒரு மாணவன் பல முறை பரீட்சையில் தோல்வியுற்று, மீண்டும் மீண்டும் முயற்சி செய்தால் அவனை கஜினி முகமது என்று கேலியாகக் குறிப்பிடுவார்கள். உண்மையில், அவன் பாராட்டுக்கு உரியவன். மனம் தளராது எடுத்த காரியத்தை முடிப்பது என்று உறுதியாக இருக்கிறான், அல்லவா? ‘இது என்ன பிடிவாதம்? முடியவில்லை என்றால் விட்டுவிடேன்!’ என்று பிறர் அவநம்பிக்கை அளிக்க முயலலாம். அவனுக்கென ஓர் இலக்கு இருக்கிறது. அதை நோக்கிப் போகும்போது எவ்வகையான தடங்கல் வந்தாலும் அதைப் பொருட்படுத்துவதில்லை. புகழ் பெற்ற விளையாட்டு வீரர்களும் இத்தகையவர்கள்தாம். கால் வலிக்கிறதே, உடல் களைத்துப்போகிறதே, வேறு எதற்குமே நேரம் கிடைப்பதில்லையே என்றெல்லாம் யோசித்துப் பின்வாங்கியிருந்தால், முதல்தர விளையாட்டு வீரர்களாக ஆகியிருக்க முடியுமா? ‘இறுதிச்சுற்றின்போது, கண்டிப்பாக வெற்றி நமக்குத்தான்!’ என்று சற்றே அயரவும் மாட்டார்கள் இவர்கள். அறிவும் பலமும் இருந்தால் மட்டும் போதாது, வெல்லவேண்டும் என்ற உறுதியுடன் விடாமுயற்சியும் அவசியம் என்று இவர்களுக்குத் தெரியும். உடலும் மனமும் களைத்தபின்னரும் தொடர்ந்து செய்வதுதான் விடாமுயற்சி. இதைத் தவறாகப் புரிந்துகொண்டு, என் மாணவி ஒருத்தி இரவு பகலாக, தகுந்த ஆகாரமுமின்றி படித்ததில், பரீட்சைக்கு ஒரு மாதம் முன்னர் ‘மண்டை வலி’ என்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். கோமா நிலைக்குப்போய், பரீட்சை எழுத முடியாமல் போயிற்று. பாடங்களைப் படிப்பதானாலும் அவ்வப்போது ஓய்வும், உணவும் அவசியம்தானே? நான் முன்பெல்லாம், ஒரு ஆப்பிள், குடிநீர், பால் எல்லாவற்றையும் எனக்கு முன்னால் வைத்துக்கொண்டு, சாப்பாட்டு மேசைமுன் அமர்ந்து கதை எழுத ஆரம்பிப்பேன். ‘பசிக்கிறதே!’ என்று பாதியில் எழுந்துபோனால் கற்பனை தடைப்பட்டுவிடும். இப்போதும், எங்கள் வீட்டுக் குழந்தைகள் நாள்முழுவதும் படிக்கும்போது பழம், பிஸ்கோத்து என்று ஏதாவது சாப்பிடக் கொடுத்துக்கொண்டே இருப்பேன். முனைந்து படிக்கையில், பசி தெரியாது. ஆனால் களைப்பு அதிகரிக்க, வேகம் குறைந்துவிடும். காலை, மாலை இருவேளையும் காற்றாட நடக்கவும் வேண்டும். இல்லையேல், ரத்த சோகை, மங்கலான கண் பார்வை என்று ஏதேதோ அவதிகள் வந்துவிடும்). கேள்வியும் பதிலும் பதின்ம வயது மாணவர்களுக்கான புத்தகத்தில் ஒரு கேள்வி: ‘பெரியவன் ஆனதும் என்ன தொழில் செய்ய ஆசைப்படுகிறீர்கள்?’ படிப்பில் அக்கறையில்லாத மாணவர்கள் எழுதியது: டாக்டர், வக்கீல், துப்புறவுத் தொழிலாளி. பெரிய இலக்கு. ஆனால் அதை அடைவதற்காக எந்த முயற்சியும் கிடையாது. எதுவானாலும், செய்து முடித்தபின்தான், ‘இதற்கா இவ்வளவு தயங்கினோம்!’ என்ற ஆச்சரியம் எழும். என் மாணவிகள் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கணக்கைப் போடத் திணறினால், நான் அதை கரும்பலகையில் போட்டுக்காட்டுவேன். ‘எத்தனை சுலபம்!’ என்று ஒரு குரல் எப்போதும் எழும். ‘அதை நீங்களே போடுவதுதானே!’ என்று நினைத்துக்கொள்வேன். மேடும் பள்ளமும் கடுமையாக உழைத்து, உச்சத்திற்குப் போனபின் பலர் அங்கேயே நிலைப்பதில்லை. கர்வம் கொண்டால் விழுவது நிச்சயம். உச்சத்திலிருந்தபோது கொண்டாடியவர்கள் அப்போது காணாமல் போய்விடுவார்கள். தம் தவறு என்னவென்று கீழே விழுந்தவர்களுக்குப் புரிவதில்லை. ‘நன்றிகெட்ட மனிதர்கள்!’ என்று பிறரைப் பழிப்பார்கள்! எல்லை கடந்தது இசை, நாட்டியம் போன்ற நுண்கலைகளுக்கு எல்லையே கிடையாது. சில வருடங்கள் கற்றபின் மலைப்பாக இருக்கும். மெள்ள மெள்ளச் சென்றாலே போதும். கரையைக் காண முடியாவிட்டாலும் அறிவு சிறந்திருக்கும். ‘நீயும்தான் இத்தனை வருடங்களாக ஒரே காரியத்தைச் செய்கிறாய்! என்ன கிழித்தாய்!’ –- இப்படிப் பலவாறாகச் சிலர் ஏன் நம்மை அவநம்பிக்கைக்கு ஆளாக்க முயல்கிறார்கள்? அவர்களைப் பொறாமை ஆட்டிவைக்கிறது. இதைப் புரிந்துகொண்டால், அவர்கள் சொல்வதை அலட்சியம் செய்ய முடியும். நம் மன உறுதியும் தளராது. விடாமுயற்சியுடன் செயல்படுகிறவர்களை வீழ்த்துவது கடினம். எல்லோரையும் எப்போதும் மகிழ்விக்க நினைத்தால் நம் மகிழ்ச்சிதான் கெடும். அழகு எதில்? ‘நான் பார்த்ததிலேயே அவள்தான் பேரழகி!’ தாய்லாந்துக்கு வந்தபோது அந்நாட்டுப் பெண் ஒருத்தியைக் கண்டபோது, ஓர் அயல்நாட்டுக்காரருக்கு இப்படித் தோன்றியதாம். பெருமுயற்சியுடன் அவளை மணந்துகொண்டார். இதைப் படித்த நான் பேராவலுடன் பக்கங்களைப் புரட்டினேன், அவள் புகைப்படம் இருக்கிறதா என்று பார்க்க. ‘இவளையா அழகி என்றார்!’ என்ற வியப்புதான் எழுந்தது. நான் அவளது தோற்றத்தை வைத்து எடைபோட்டேன். அவரோ, அழகு என்பது வெளித்தோற்றத்தில் இல்லை என்பதைப் புரிந்துகொண்டவர். உடலழகு எத்தனை காலம் நீடிக்கும்? முன்பெல்லாம் யாராவது ஒரு கல்யாணத்திற்குப் போய்வந்தால், பிற பெண்கள் அக்கறையாக விசாரிப்பார்கள்: ‘பொண்ணு அழகா இருக்காளா?’ (அழகாக இல்லாவிட்டால் கல்யாணம் பண்ணிக்கொள்ளக்கூடாதா?) ஒரு பிள்ளை பெற்றதுமே சிலர் பருமனாகி விடுகிறார்கள். ‘அழகு!’ என்று அவளை மணந்தவன் ஏமாற்றத்துக்கு ஆளாகலாம். ஒரு சிலர், அவள் எல்லா உயிர்களிடத்தும் அன்பும் பரிவும் காட்டுவதைக் கண்டு சமாதானம் அடைவதும் உண்டு. கதை மிஸ். ஹோ தன் வாயிலிருந்து உதிரும் ஒவ்வொரு வார்த்தையையும் பிறரது கவனத்தை ஈர்க்கும் வண்ணம் உச்சரிப்பாள். அதிநாகரீகமாக வெட்டப்பட்ட தலைமுடி, முக ஒப்பனை, உடற்கட்டு ஆகியவைகளில் அவள் எடுத்துக்கொள்ளும் பிரயாசை பிற இளம்பெண்கள் பொறாமையுடன் வெறிப்பதிலிருந்து புரியும். அதனால் அவளுடைய கர்வம் ஓங்க, தோற்றத்தில் இன்னும் அதிக கவனம் செலுத்துவாள். தன் புற அழகில் மிகுந்த அக்கறை செலுத்தியவளுக்கு தன்னைவிடச் சிறந்த யாரையாவது பார்க்க நேர்ந்தால் பொறாமை கிளர்ந்துவிடும். அந்தப் பெண் வேறு ஏதாவது துறையில் இருப்பாள். ஆனாலும், அழகில் தன்னைவிட மிகச் சுமார் என்று மதிப்பிட்டுவிட்டு, ‘அவளுக்கு இவ்வளவு கௌரவம் கிடைக்கிறதே!’ என்று மாய்ந்துபோவாள். பொறாமை அழகைக் கெடுக்கும். ‘சின்ன வயசில பன்னிக்குட்டிகூட அழகாத்தான் இருக்கும்!’ என்று கூறக் கேட்டிருப்பீர்கள். அந்த வயதில் மனதில் களங்கமிருக்காது. அதுவே அழகாகத் தோன்றும். வயது ஏற ஏற, எதற்கெடுத்தாலும் போட்டி, பொறாமை என்று பல குணங்கள் எழுந்துவிடுகின்றனவே! அவற்றை அடக்காதவர்களின் கண்களில் அழகு குறைந்து காணப்படும். அழகிற்கும் வயதிற்கும் சம்பந்தமில்லை. சில முதியவர்களைக் கண்டு, ‘இந்த வயதிலும் இவ்வளவு அழகாக இருக்கிறார்களே!’ என்று ஆச்சரியப்படுகிறோம். அவர்களுடைய அழகின் ரகசியம் என்ன? அன்பும் நேர்மையும் கொண்டவர்கள் என்றும் அழகாகத் தோற்றமளிப்பார்கள். அவர்கள் பல தோல்விகளை, துயரங்களைத் தாண்டி வந்திருப்பார்கள். அவைகளால் ஒரேயடியாக இடிந்துபோகாது, ‘பிறரும் நம்மைப்போல் இதையெல்லாம் அனுபவிக்கவில்லையே!’ என்று எண்ணி வருத்தமோ, ஆத்திரமோ கொள்ளாது எல்லோரிடமும் கருணை காட்டுவார்கள். இயற்கையை ரசிப்பதற்கும் இத்தகைய நுண்ணிய உணர்வு வேண்டும். பரபரப்பான உலகில் வாழ்கிறவர்களின் எண்ணப்போக்கு இப்படி இருக்கும்: ‘சூரியன் தினமும்தான் உதிக்கிறது, மறைகிறது. சூரியோதயத்திலும், அஸ்தமனத்திலும் அப்படி ரசித்துப் பார்க்க என்ன இருக்கிறது?’ கோலாலம்பூர் ஜனசந்தடியில் வாழ்ந்து பழக்கப்பட்ட இரு இளம்பெண்கள் அண்டைநாடான தாய்லாந்திலுள்ள ஒரு தீவிற்குப் போனார்கள். ‘இங்கு கார் சத்தமே கேட்கவில்லையே! எதையோ இழந்தது போலிருக்கிறது,’ என்று ஒருத்தி அங்கலாய்க்க, அவள் தோழியும் ஒத்துக்கொண்டாள். கடலும், அதைச் சுற்றியிருந்த அழகும் இவர்கள் கண்களில் தென்படவில்லை. பிறர் பார்த்து ரசிக்காததால் இயற்கைக் காட்சிகள் அழகற்றவை என்றாகிவிடுமா? நம்மைப் பிறர் ‘அழகு’ என்று புகழ்ந்தால்தான் அழகானவர்களா? தன் குஞ்சு பொன்குஞ்சு என்று காக்கை நினைக்குமாம். மனிதத் தாய்மார்கள் அனைவரும் அப்படி இருப்பதில்லை. கதை என் சக ஆசிரியை மிஸஸ் சாங் நீண்ட விடுமுறை நாட்களிலும் வேலையை இழுத்துப் போட்டுக்கொள்வாள் – பிற பள்ளிகளில் நடக்கும் தேர்வுக்கூட கண்காணிப்பு என்ற பெயரில். மற்ற ஆசிரியைகளோ, அத்தொல்லையிலிருந்து எப்படித் தப்பலாம் என்று வழிகளைத் தேடுவார்கள். அதனால் நான் ஆச்சரியப்பட்டு கேட்டபோது, “என் தந்தை தன்னைப் பார்க்க வரும்படி அழைப்பார். அதைத் தவிர்க்கத்தான்!” என்றாள் மிஸஸ் சாங். அவளுடைய பெற்றோர் வேறு ஒரு ஊரில் வசித்தார்கள். “என் அம்மாவுக்கு என்னைப் பிடிக்காது. சிறுவயதிலிருந்தே என்னை, ‘அவலட்சணமாக இருக்கிறாய்!’ என்று கரித்துக்கொட்டுவாள். என் தங்கை அழகு என்று அவளைத்தான் பிடிக்கும்,” என்று உணர்ச்சியற்ற குரலில் தொடர்ந்தவளுக்கு நாற்பது வயதுக்கு மேலிருக்கும். “இன்றும், என் மகளைவிட தங்கையின் மகளைத்தான் பிடிக்கும். என்னைத் திட்டுவதையும், ‘அழகில்லை’ என்று பழிப்பதையும் நிறுத்தவில்லை. அதனால் எனக்கு அங்கு போகப் பிடிப்பதில்லை. இதையெல்லாம் அப்பாவிடம் சொல்ல முடியுமா? ‘வேலை வந்துவிட்டது’ என்று சொல்லி தப்பித்துக்கொள்வேன்”. சராசரி சீனாக்காரிகளைப்போல் மூக்கு சப்பையாக, சிறிய கண்களுடன் இருப்பாள் மிஸஸ் சாங். ஆனால், தாயின் பழிப்பு மனதில் தேங்கிவிட, ‘இவள் விகாரமாக இருக்கிறாள்’ என்று ஒரே பார்வையில் பிறர் எடைபோடுவதைக் கேட்டிருக்கிறேன். தாய் ஏற்காததால் அவளுக்குத் தன்னைத்தானே ஏற்க முடியவில்லை. நிறையப் படித்திருந்தும், தன்னம்பிக்கை குறைந்துபோயிற்று. பார்ப்பவர்கள் அனைவரைப்பற்றியும் இளக்காரமாக எண்ணிப் பேசுவாள். இதற்கு நேர் எதிரானவள் குழந்தை சமந்தா. அவளுக்கு நான்கு வயதானபோது, ‘நீ ரொம்ப அழகு!’ என்று எல்லாரும் புகழ, ‘நான் ரொம்ப அழகு. இல்லே?’ என்று திரும்பத் திரும்பச் சொல்ல ஆரம்பித்தாள். இது கர்வமில்லை. நல்லதோ, கெட்டதோ, தன்னைப்பற்றி பிறர் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே ஏற்பது குழந்தைகளின் வழக்கம். அழகிற்கு அவ்வளவாக முக்கியத்துவம் அளிக்காது, புத்திசாலி! சமத்து!’ என்று நற்குணங்களைப் பாராட்டிப் பாருங்கள், அப்படியே நடப்பார்கள். புற அழகைப் பாராட்டிக்கொண்டே இருந்தால், அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கத் தோன்றும். ‘அழகு’ என்று பலரிடமிருந்தும் பாராட்டு கிடைத்துவிட்டால், அதிலேயே திருப்தி ஏற்பட்டுவிடுகிறது. ‘கஷ்டப்பட்டு அறிவை வளர்த்துக்கொள்வானேன்!’ என்று தோன்றிவிட, இப்படிப்பட்ட மாணவிகள் படிப்பில் சோடையாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். ஒரு துணுக்கு அவள் அழகு அவளுடைய தந்தையிடமிருந்து வந்தது. அடேயப்பா! அவ்வளவு அழகா அவர்? இல்லை, பிளாஸ்டிக் சர்ஜரி செய்பவர். வயதாகிவிட்டதால் காணாமல் போய்விட்ட புறஅழகை அறுவைச்சிகிச்சைமூலம் திரும்பக் கொண்டுவர முயற்சி செய்கிறார்கள் நடிகையர். “பணக்காரராகப் பிறந்து, ஏழையாகப் போவதுபோல்தான் அழகும்!” என்று அழகின் நிலையாமையை அலசுகிறார் அமெரிக்க நடிகை ஜோன் காலின்ஸ். அறிவுதான் எந்த வயதிலும் அழியாதது. இது புரிந்து, ‘மூக்கும் கண்ணும் இயற்கையில் அமைந்தது. இதில் நான் பெருமைப்பட என்ன இருக்கிறது!’ என்ற மனப்பாங்கை வளர்த்துக்கொண்டால் அகமும் அழகாகும். ஹைட்ரஜனும் முட்டாள்தனமும் “முட்டாள்தனமாக நடப்பவர்களுக்கு மரண தண்டனை என்று ஒரு சட்டம் கொண்டுவந்தால், உலகத்தில் மக்கள்தொகை வெகுவாகக் குறைந்துவிடும்,” என்று அபிப்ராயப்படுகிறார் ஒரு புத்திசாலி. ஒரு துணுக்கு மாணவன்: நான் அரசியல்வாதியாகப் போகிறேன். ஆசிரியர்: பின்னே ஏண்டா பள்ளிக்கூடத்துக்கு வருகிறாய்? ஓயாமல் பேசும் ஒரு பெண்ணைக் கேட்டேன், “ஏன் இப்படிப் பேசிண்டே இருக்கே?” “அப்போதான் மூளை வளரும்!” அறிவார்த்தமாகப் பேசுவதும், முப்பது வயதாகியும், தன் குரலைக் கேட்பதே ஆனந்தம் என்பதுபோல் அர்த்தமில்லாமல் பேசுவதும் ஒன்றாகிவிடுமா? பலர் கூடியிருக்கும் இடத்தில் நிறையபேர் இப்படித்தான் பேசுகிறார்கள். பிறர் சொல்வதைச் சரியாகக்கூடக் காதில் வாங்காவிட்டாலும், ஒன்று சேர்வதாலேயே பலம் கிடைக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட புத்திசாலிகள் இவர்கள். “உலகில் அதிகமாகக் காணப்படுவது ஹைட்ரஜனும் முட்டாள்களும்தான்,” என்று சொல்லி வைத்திருப்பது இதற்காகத்தானோ? தம்மைப்போல் இல்லாதவர்கள் முட்டாள் என்று நம்புகிறவர்கள் ஆபத்தானவர்கள். எங்கள் பள்ளிக்கூடத்திற்குப் புதிதாக வந்த ஆசிரியை நோரய்னியின் கதையைக் கேட்போமா? தினம் தவறாது, ஏதோ ஒருவித மலாய் கேக் வாங்கிவந்து, பிற ஆசிரியைகளுக்கு விநியோகம் செய்வாள். ‘இவளுக்கு எதற்காக நன்றிக்கடன் படவேண்டும்!’ என்று நான்மட்டும் வாங்க மறுத்துவிடுவேன். தன் தாராள சிந்தனையையும், பிறரிடம் தனக்கு எவ்வளவு அன்பு என்றும் காட்டிக்கொள்ள வேண்டுமாம்! அவள் திட்டம் பலித்தது. மற்றவர்கள் எல்லாரும் அவளை உயர்ந்த இடத்தில் வைத்து, அவளுக்குக் கட்டுப்பட்டார்கள். போகப் போக, அவள் குணம் புரிந்தது. யாராவது அவள் கூறிய கருத்தை ஏற்காவிட்டால் அவர்களுடன் பேச மறுத்து, முறுக்கிக்கொள்வாள். தான் சொல்வது தவறு என்று தெரிந்தும், அதை ஏற்க மறுப்பாள். வீண்விவாதம் செய்வது இவளைப் போன்றவர்களுக்குப் பிடித்த வேலை. (உண்மையைவிட அதிகமாகத் தன்னை நேசிப்பதாலோ?) என்னிடம் முறையிட்டாள் ஒருத்தி. “நீங்கள்தான் அவளைப் புரிந்துகொள்ளாது, ஒரேயடியாகக் அவளைக் கொண்டாடினீர்கள்!” என்று சுட்டிக்காட்டினேன். நோரய்னியின் பெயருக்குப்பின் தந்தையின் பெயர் ‘வெள்ளை’ என்று மலாயில் குறிப்பிடப்பட்டிருக்கும். அவளுடைய தந்தை ஜப்பானியர் என்று என்னிடம் கூறியிருந்தாள். ஆச்சரியப்பட்டு, “இந்நாட்டில் மலாய்ப்பெண்கள் ஜப்பானியரை மணந்தார்களா?” என்று மூத்த சரித்திர ஆசிரியை ஒருத்தியிடம் ரகசியமாகக் கேட்டேன். “இல்லை. ஆசைநாயகியாகத்தான் இருந்தார்கள்!” என்ற பதில் கிடைத்தது. முறை தவறிப் பிறந்திருக்கிறோமே என்ற வருத்தமோ என்னவோ நோரய்னிக்கு. ‘சக ஆசிரியைகளின் மகிழ்ச்சியை எப்படிக் குலைப்பது?’ என்று யோசனை போக, அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்தாள். பள்ளியில் அடிக்கடி மாறும் ஒவ்வொரு தலைமை ஆசிரியையும் வலியப்போய் நட்புகொள்வாள். அப்போதுதானே பிறரைப்பற்றிய வம்பு மேலதிகாரிக்குப் போகும்? ஒரு முறை, நான் ஏதோ பேசும்போது, அவள் பக்கம் கண்ணைக் காட்டினார்கள், ‘பத்திரம்!’ என்று எச்சரிக்கை செய்வதுபோல். நான் உரக்கவே, “கிடக்கிறாள்! பயந்தாங்கொள்ளி!” என்று அலட்சியமாகக் கூற, பக்கத்தில் உட்கார்ந்திருந்த நோரய்னி குறுகிப்போனாள். அவளுக்கு ஐம்பது வயதிருக்கும். வயதானால் அழகு குறையலாம், ஆனால் முட்டாள்தனம் என்னவோ மாறுவதில்லை. நோரய்னி முட்டாளா, தீயகுணம் படைத்தவளா, பரிதாபத்துக்கு உரியவளா? எல்லாரும், எப்போதும் தான் சொன்னபடியே நடக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பில், உண்மையான அன்பைத் தேடத் தெரியாத முட்டாள். தன்னை ஏன் எல்லாரும் ஒதுக்குகிறார்கள் என்று புரிந்துகொள்ளும் அறிவற்றவள். புறம் பேசி, பிறரைப் பிரச்னையில் மாட்டிவிட்டபோதோ..! முட்டாள்தனமும் மூடநம்பிக்கைகளும் ‘ராகு காலத்தில் விமானம் புறப்படுகிறது. கண்டிப்பாக, ஏதாவது அசம்பாவிதம் நடக்கும்!’ என்று எண்ணிக் கலங்கியபடியே பயணிக்கிறார் ஒருவர். அவர் போகுமிடத்தில் பத்திரமாகக் கொண்டு சேர்த்துவிடுகிறது விமானம். கெட்டது நடக்கும் என்று எதிர்பார்த்து, அவர் கொண்ட கலக்கம்தான் அவர் எதிர்பார்த்த விளைவு. கருமை நிறம் கருமை நிறம்கொண்டு பிறந்துவிட்ட மனிதர்கள் மட்டும் ஒதுக்கப்படுவதில்லை. கறுப்புப் பூனைகளும்தான். கடந்த பதின்மூன்று வருடங்களில், ஆறு கறுப்புப் பூனைக்குட்டிகளை யார் யாரோ கொண்டு வந்து எங்கள் வீட்டருகே விட்டிருக்கிறார்கள். நாங்கள் அவற்றை அன்புடன் பராமரிக்க, எங்கள் குடும்பத்தில் ஓர் அங்கத்தினராக வளையவரும். சின்னா என்ற பெண்பூனை என் மடியில் உட்காரும், நான் சொன்னதைக் கேட்கும். நான் பேசுவதிலிருந்து தானும் கொஞ்சம் பேசக் கற்றுவிட்டது. சற்றுப் பெரிதாகி, சறுக்கி விழுந்துவிட்டதால், “மடியில ஒக்கார்றியா?” என்று நான் கேட்டபோது, “ஏனாம் (வேண்டாம்)” என்று முனகியது. அன்பும் கட்டுப்பாடும் கதை ராகினி படிப்பில் சோடையில்லை. அது போதாதா? பதினாறு வயதான தன்னை ஏன் இன்னும் கட்டுப்படுத்துகிறாள் தாய் என்ற ஆத்திரம் எழுந்தது அவளுக்குள். பள்ளித்தோழிகளுடன் சேர்ந்துகொண்டு, ‘சுதந்திரம்’ என்ற பெயரில் மனம்போன போக்கில் நடந்தாள். இருபது வயதானபோது, டிஸ்கோவிற்குப் போவது, மது அருந்துவது, ஆண்களுடன் தகாத முறையில் பழகுவது என்று அவளுடைய சுதந்திரப்போக்கு விரிந்தது. இதையெல்லாம் விதவைத் தாய் கடுமையாகக் கண்டிக்க, வீட்டைவிட்டு வெளியேறினாள். அவளுடைய பள்ளித்தோழி, ஈ லெங், வேலை நிமித்தம் தனியாக கோலாலம்பூரிலேயே தங்க நேரிட்டது. (அவளுடைய பெற்றோர் வேறு ஊரில் இருந்தார்கள்). இத்தோழியுடன் தங்கி, இருவருக்கும் சேர்த்துச் சமைக்கையில், சுதந்திரமாக உணர்ந்தாள் ராகினி. பல வருடங்களுக்குப்பின், அவளுடைய மகளுக்கும் பதின்ம வயதானபோதுதான் அவளுக்குத் தன் தாய் காட்டிய கண்டிப்பின் காரணம் தெளிவாகியது. தான் இப்போது மகளின் பாதுகாப்புக்காக கவலைப்படுவதுபோல்தானே அன்று அம்மாவும் கவலைப்பட்டிருப்பாள்! ‘முட்டாள்தனமாக, வயதான அம்மாவைத் தனியாகத் தவிக்க விட்டுவிட்டு, எங்கோ போய் சமைத்துப் போட்டுக் கொண்டிருந்துவிட்டேனே!’ என்று மிகவும் வருந்தினாள். ஆனால், அவளது மன்னிப்பை ஏற்க அம்மா உயிருடன் இல்லை. கடைசிவரை, மகளுடன் வந்து தங்க விரும்பாது, தனியாகவே வாழ்ந்தாள். பலருக்கு வாழ்க்கையில் எது முக்கியம் என்று புரிவதில்லை. கதை படிப்பில் அக்கறையே காட்டாது இருந்த ஒரு மாணவனிடம், “நீ படிக்காவிட்டால் நல்ல வேலை கிடைக்காதே! பணத்துக்கு என்ன செய்வாய்?” என்று நான் கேட்டபோது, “அப்பா கொடுப்பார்!” என்றான். “உனக்குக் கல்யாணமாகி, குடும்பம் பெருகிவிட்டால்?” “அப்போதும் அப்பா கொடுப்பார்”. இந்த இருவரில் யார் முட்டாள்? அப்பாவா, மகனா? மகன் எந்தக் காலத்திலாவது தன் சொந்தக்காலில் நின்றாகவேண்டும் என்று புரிந்துகொள்ள விரும்பாது, அவன் தன்னையே சார்ந்திருக்கும்படி செய்யும் அப்பாதான். சுயநலமான சுதந்திரம் ஃப்ளூ காய்ச்சல் பரவாதிருக்க எல்லாரும் முகமூடி அணியவேண்டும் என்ற அதிகாரபூர்வமான ஆணை பிறந்தது. இன்றல்ல. 1918-ல்! ஸான் ஃபிரான்சிஸ்கோவில். ‘எங்களுடைய தனிப்பட்ட உரிமையைப் பறிக்கிறீர்கள்!’ என்று 4,500 பேர் ஒன்றுகூடி எதிர்ப்பு தெரிவித்தார்களாம். தங்களுடன் பிறரையும் ஆபத்துக்கு ஆளாக்குகிறோம் என்று புரிந்து நடக்காதவர்களை என்னவென்று சொல்ல! தற்போது, இப்படிப்பட்ட ரகளையெல்லாம் இல்லை. மனிதர்கள் புத்திசாலியாகிவிட்டார்களோ? நல்லதையே நினைக்கலாமே! ‘நான் சரியாகவே படிக்கவில்லை. பரீட்சையில் பாஸாகப் போவதில்லை,’ என்று சொன்னால், தேவதைகள் ‘ததாஸ்து!’ என்று வாழ்த்தி, அது பலிக்கும்படிச் செய்துவிடுமாம். அதனால் என்ன பேசுவது என்பதில் கவனமாக இருக்கவேண்டும். நம் எண்ணம்போல் எதுவும் நடக்கும் என்றால், நல்லதையே நினைப்போமே! மனமும் அமைதியாக இருக்கும். எப்போதுமே மகிழ்ச்சியாகவோ அமைதியாகவோ காணப்பட வேண்டும் என்பதும் நடக்கிற காரியமல்ல. அவ்வப்போது கோபம், வருத்தம், ஏமாற்றம் எல்லாம் எழத்தான் செய்யும். ஆனால், இந்த உணர்ச்சிகள் ஒருவரை எப்போதுமே அலைக்கழித்துக் கொண்டிருப்பதுதான் தவறு. ஓய்வுபெற்ற ஒருவர், “போன மாதம் விளக்குக்காசுக்கான ரசீது முதலிலேயே வந்துவிட்டதே! இந்த மாதம் இன்னும் வரவில்லையே! மின்சாரத்தை வெட்டி விடப்போகிறான்!” என்று வீட்டிலுள்ளவர்களை நச்சரிப்பார். உடன் இருப்பவர்களையெல்லாம் தொல்லைப்படுத்துகிறார். விளக்கிச்சொன்னாலும் புரிந்துகொள்ள மறுப்பார். ஓரிரு நாட்கள் தாமதமாகும் என்று அவருக்குத் தெரியாதா, என்ன! பொழுது போயாக வேண்டுமே! தனது அதிகாரத்தை வேறு எப்படித்தான் காட்டிக்கொள்வது! அவரைப் போன்றவர்களுக்கு எதிர்மறை எண்ணங்களால்தான் பலம். யோசித்துச் செயல்படுவது நாம் எதையாவது பேசுமுன்னரோ, எழுதுமுன்னரோ, நம் கருத்தால் பிறருக்கு ஏதாவது பயன் இருக்கிறதா, யாரையாவது நோகடிக்கிறோமா, அவசியமானதா என்றெல்லாம் சற்றே யோசிக்க வேண்டுவது அவசியம். கதை ஓர் ஆங்கில தினசரியில் இந்தியப் பாரம்பரியக் கலைகளின் விமரிசகராக நான் பணிபுரிந்தேன். நான் அப்பொறுப்பை ஏற்கத் தயங்கியபோது, “நீங்கள் நேர்மையானவர்!” என்றாள் அப்பகுதியின் ஆசிரியை. நான் எவ்வளவு கடுமையாக எழுதினாலும் அதை அப்படியே பிரசுரிப்பாள். ஒரு முறை, புகழ்பெற்ற ஒரு நடனக்கலைஞர் நாட்டியம் ஆடிக்கொண்டிருந்தபோதே, மேடையில் மல்லாக்க விழுந்துவிட்டார். சமாளித்து எழுந்தபோது, அவர் முகம் வெளிறியிருந்தது. உண்மையாகவே இருந்தாலும், இதைப்பற்றி நான் எழுதியிருந்தால் ஆயிரக்கணக்கானோர் அதைப் படித்துவிட்டு, அவரைப்பற்றி ஏளனமாகப் பேசிச் சிரிக்க வழி வகுத்தவளாவேன். பரதக்கலை நாட்டில் பரவ எவ்வளவோ முயற்சிகள் எடுத்திருந்தவரின் மனம் நோகும். விமரிசனம் தினசரியில் வெளியாகும் நாள்வரை அவர் மனம் என்ன பாடுபட்டிருக்கும்! அவருடைய நிலை குலைந்ததைப்பற்றி நான் மூச்சு விடவில்லை. அவர் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார். குறை கூறினால் கோபம் முன்னுக்கு வருபவர்கள் மாறத் தயாராக இருப்பவர்கள். தம் குறைகளைப் பிறர் எடுத்துச்சொல்லும்போது, அதிலிருக்கும் உண்மையை ஆராய்ந்து பார்த்துவிட்டுத் தம்மைத் திருத்திக்கொள்வார்கள். ஆனால், இத்தகையவர்களை அபூர்வமாகத்தான் காணமுடிகிறது. நாம் யார்மீதாவது குற்றம் கண்டுபிடித்தால், அது சரியானதாகவே இருந்தாலும், விரோதம் பாராட்டுகிறவர்கள்தாம் அதிகம். கதை சமீபத்தில் ஒரு தொகுப்பிலுள்ள கதைகளுக்கு விமரிசனம் எழுதவேண்டிய பொறுப்பு எனக்கு ஏற்பட்டது. “உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்த்தேன். இப்படிப் பட்டும்படாததுமாக எழுதுகிறீர்களே!” என்று தொகுப்பாசிரியை என்னிடம் குறைப்பட்டார். சிறுவர்களைக் கண்டித்தால் மாறலாம். ஆனால், நாற்பது வயதுக்குமேல் ஆனவர்களை மாற்றுவது கடினம். அவரவர் வாழ்க்கைப் பின்னணி, அனுபவம் இவற்றைக்கொண்டுதான் எழுதுகிறார்கள். அவர்கள் கதை தற்காலத்திற்கு ஒவ்வாத கருவைக் கொண்டிருக்கலாம். அதை லேசாகச் சுட்டிவிட்டுப் போகவேண்டியதுதான். இல்லாவிட்டால், ‘தாறுமாறாக எழுதியிருக்கிறாளே! தான் ரொம்ப நன்றாக எழுதுவதாக எண்ணமோ?’ என்று குமைவார்கள். சிந்தனையை மாற்று ‘உன்னால் முடியாது!’ என்று பிறர் சொல்வது நம் காதில் ஒலித்துக்கொண்டே இருக்க, செய்ய ஆரம்பித்த காரியத்தில் கவனம் குறைந்துவிடும். பிறகு என்ன! தோல்விதான். எதிர்மறைச் சிந்தனைகள் எழுகையில், அவற்றை நேர்மறையாக மாற்றுவது ஒரு நல்ல உத்தி. பிறரது பயமுறுத்தலை நம்பி, ‘என்னால் முடியாது!’ என்று பயந்து விலகுவதைவிட, அவர்கள் சொல்வதை அலட்சியப்படுத்தலாமே! நம் திறமை நம்மைவிடப் பிறருக்கு அதிகம் தெரியுமா? அதையே சவாலாக ஏற்று, ‘என்னால் முடியும். எங்கு ஆரம்பிக்கலாம்?’ என்று கேட்டுக்கொண்டால், அச்சத்தை விளைவிக்கும் காரியத்தை ஆரம்பிக்கும் துணிவு பிறக்கிறது. எதிர்மறையான ஆசிரியர்கள் பல சிறுவர்கள் தம் முன் உட்கார்ந்து, தாம் சொல்வதைக் கேட்கும் நிலையில் இருப்பதால் ஆசிரியர்களுக்குப் பெருமிதம் ஏற்படும். கதை கடந்த ஜூன் மாதம் சீனாவில் நடந்த சம்பவம் இது. பள்ளி முடிந்ததும் ‘விசேட வகுப்பு’ என்று நடத்தி, அதற்காகப் பணமும் வசூலித்திருக்கிறாள் ஓர் ஆசிரியை. அப்போது, பத்து வயதுச்சிறுமி ஒருத்தி எழுதிய கட்டுரையில் பல பகுதிகளை அடித்துவிட்டு, கண்டபடி திட்டியிருக்கிறாள். எப்படி எழுதவேண்டும், திருத்த வேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொடுக்கவில்லை. மனமுடைந்த அம்மாணவி பள்ளிக்கூடத்தின் நான்காவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டாள். ‘ஒரே குழந்தை’ என்று அருமையாக வளர்த்திருப்பார்கள். ஆசிரியையின் கடுமையான வார்த்தைகளை அச்சிறுமியால் ஏற்கமுடியாமல் போய்விட்டது. அறிவுக்கூர்மை இல்லாதவர்களை மட்டம் தட்டி, அதனால் தாம் உயர்ந்துவிட்டதாக எண்ணுகிறவர்கள் இத்தொழிலுக்கு வரலாமா? ஆசிரியர்களை விடுங்கள். சில பெற்றோரே குழந்தைகளை இப்படித்தானே நடத்துகிறார்கள்! கதை முன்கோபியான சந்தானம் ஐம்பது வயதுக்குள் அலுவலகத்தில் மேலதிகாரியுடன் சண்டை போட்டுவிட்டு, பதவியிலிருந்து விலகினார். ஓரிரு வருடங்கள் கழிந்தது. ‘நான் எதற்கும் லாயக்கில்லாதவன்!’ என்று தோன்றிப்போக, அச்சிறுமை உணர்ச்சி பதின்மவயதான முரளியிடம் திரும்பியது. “நீயும் என்னைமாதிரி உருப்படாதவனாக ஆகப்போகிறாய்!” என்று மந்திரம்போல் தினமும் சொல்ல ஆரம்பித்தார். ‘என்னைப்போல் ஆகிவிடாதே!’ என்று கூறியிருந்தாலும் பிரயோசனமில்லை. எதிர்மறையான அறிவுரைகளால் பயனிருக்காது. அத்தந்தை தன்னைப்பற்றியே நினைத்து மருகாது, மகனுடைய படிப்பில் அக்கறை காட்டி இருக்கலாம். மகன் நல்ல நண்பர்களுடன் பழகுகிறானா, விளையாட்டுகளில் ஈடுபட்டு, உடலை ஆரோக்கியமாகவும், மனதைத் தெளிவாகவும் வைத்திருக்கிறானா என்று கண்காணித்திருக்கலாம். தன் முன்மாதிரியான தந்தை சொல்வதை அப்படியே நம்பினான் முரளி. சுயநம்பிக்கையை இழந்ததால், பிறருடன் சரிசமமாகப் பழகவேமுடியாது போயிற்று. அவன் எல்லாவற்றிலும் தோல்வியே அடைந்தபோது, “நான்தான் அப்போதே சொன்னேனே!” என்று பெருமைப்பட்டுக்கொண்டார் சந்தானம். முரளிக்கு நேர் எதிர் என் மாணவன் அமீர். “போன வருடம் எங்கள் வகுப்பிற்கு எல்லா இன ஆசிரியைகளும் வந்தார்கள். இப்போது நீங்கள் மட்டும்தான்!” என்று குறையுடன் சொல்வான். அமீர் மட்டும் பிற மலாய் மாணவர்களிடமிருந்து வித்தியாசமாக – அறிவுடன் பணிவுமாக – இருந்தான். அதிசயப்பட்டு விசாரித்தபோது, “என் தந்தை தினமும் கேட்பார், பள்ளிக்கூடம் எப்படி இருந்தது, மகிழ்ச்சியாக இருந்தாயா என்று. எல்லாரையும் மதித்து நடந்துகொள் என்று கூறுவார்,” என்றான். அமீரின் தந்தைக்கு வாழ்க்கையில் இடர்களே இருந்திருக்காதா? அவற்றையே எண்ணி, தன்னுடையது மட்டுமின்றி தன்னை நம்பியவர்களின் வாழ்க்கையையும் பாழடிக்காத நல்ல மனிதர் அவர். வாய் எதற்கு? “அம்மா! ஆத்திலே நீ பேசக்கூடாதுங்கறே. ஸ்கூல்லே பேசினா டீச்சர் திட்டறா. வாய் எதுக்கு வேஸ்ட்?” வாய்கிழியக் கேட்டது என் நான்கு வயது மகள். அவள் ஒன்றரை வயதிலிருந்தே ஏதேதோ பேசுவாள். கேட்பவருக்கு ஒன்றும் புரியாது. அது நிராசையில் கொண்டுவிட, சுவற்றில் முட்டிக்கொள்வாள். அவளை எப்படி அடக்குவது என்றே புரியாமல், ஒரு புத்தகத்தைப் படித்துக் காட்டினேன். ‘இன்னொரு தடவை, இன்னொரு தடவை,’ என்று அவள் கெஞ்ச, ஒரே கதையை பதினான்கு முறை இடைவிடாது படித்தேன். அதனால் அவளுடைய ஞாபகசக்தி அதிகரிக்கிறது என்பது பிறகுதான் புரிந்தது. அதிகமாக எழுதவோ படிக்கவோ தெரியாத வயதில் மொழிவளத்தைப் பெருக்கிக்கொள்ள ஒரே வழி பேசுவதுதான். எட்டு வயதுப் பெண்குழந்தைகள் வாய் ஓயாமல் பேசுவார்கள். அந்தப் பிராயத்தில் சற்று கண்டிக்காவிட்டால், ‘மௌனத்தின் எதிரி நான்!’ என்பதுபோல் ஆகிவிடுவார்கள். பதினைந்து வயதில், நான் வகுப்பில் நிறைய பேசியதற்காக, நான் மட்டுமின்றி, எங்கள் வகுப்பு மாணவிகள் அனைவரும் ஒரு மணி நேரம் திறந்தவெளியில் நிற்கவேண்டும் என்ற தண்டனை அனுபவித்தோம். என்னை ஊக்குவித்து, என் பேச்சை ரசித்துக் கேட்டதற்காக அவர்களுக்கும் சேர்த்துத் தண்டனை. படிப்பதில் எனது ஆர்வம் பெருகப் பெருக, எதையும் கூர்ந்து கவனிக்கும் பழக்கம் வந்தது., பேச்சு குறைந்துபோயிற்று. எப்போது பேசலாம்? ஒருவர் நமக்குத் தீமை இழைக்கிறார். அதைப் பொறுத்துப்போகலாமா? அவரை எதிர்க்க வேண்டும். எவ்வளவு வதையை அனுபவித்தாலும், தமக்கே உதவி செய்துகொள்ள இயலாதவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு நம்மால் முடிந்தவரை பரிந்து பேசலாம். உதாரணமாக, ஒரு மாணவியிடம் ஆசிரியர் முறைதவறி நடந்துகொள்வதைப் பார்த்தபின்னரும், ‘நமக்கேன் வம்பு?’ என்று ஒதுங்காது, அவரைப்பற்றி மேலிடத்தில் புகார் செய்வது. கணவனிடம் பல ஆண்டுகள் உடல் ரீதியிலும், மன ரீதியிலும் வதைபட்டு, சாகும்வரை பொறுத்துப்போக வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் சில பெண்கள். அவர்களிடமிருந்து மாறுபட்டிருக்கும் பெண்கள்தாம் அவர்களுக்காக குரலெழுப்ப முடியும். இப்படிப்பட்ட செய்கைகளால் பல துன்பங்கள் வரலாம். ஆனால், ஒவ்வொருவரும் சுயநலத்தையே பெரிதாகக் கருதி ஒதுங்கினால், இவ்வுலகில் தவறுகள் மலிந்துவிடாதா! மௌனத்தைக் கடைப்பிடி நமக்குச் சம்பந்தம் இல்லாத ஒருவரைப்பற்றியோ, அல்லது தெரியாத ஒரு சமாசாரத்தைப்பற்றியோ பேசாது இருப்பது நல்லது. நாமே நம் முட்டாள்தனத்தை வெளிக்காட்டிக்கொள்வானேன்! ஒரு முட்டாள் தலைவராக இருந்தால், அவரை எதிர்த்துப் பேசாமல் இருப்பது நமக்கே நாம் செய்துகொள்ளும் நன்மை. சில சமயங்களில், நேர்மையைவிட மௌனமே சிறந்தது. கதை ஒருவன், ‘என்னைக் காட்டிக்கொடுத்துவிடாதீர்கள்,’ என்று ஒரு முனிவரிடம் கெஞ்சிவிட்டு ஒளிந்துகொள்கிறான். அவனுடைய எதிரிகள், ‘இப்படி ஒருவனைப் பார்த்தீர்களா?’ என்றபோது மௌனம் சாதிக்கிறார். அவர் பொய்யுரைக்கவில்லை. உண்மையை மறைக்கவே வாய்பேசாது இருந்துவிடுகிறார். நாம் பேசுவதால் பிறரை நோகடிப்போம் என்றால், எதற்காகப் பேசுவது? பிறர் சொல்வதைக் கேட்பவர்களில் பெரும்பாலோர் புரிந்துகொள்வதைவிட தாம் அதையடுத்து என்ன கூறலாம் என்றே யோசிப்பார்கள். பிறர் பேசுவதைக் கேட்கப் பொறுமை இராது. உரத்த குரலில் ஏதாவது பேசிக்கொண்டே இருந்தால்தான் அறிவாளியா? அறிவாளிகள் தம் அறிவைப் பறைசாற்றிக் கொள்வதில்லை. ‘நீங்கள் பேசுவதேயில்லையே!’ என்று குற்றம் சாட்டுவார்கள் பலர். மௌனமாக இருப்பவர்களுக்குப் பழகத் தெரியாது, அல்லது கர்வம் கொண்டவர்கள் என்பதில்லை. இவர்கள் சாதிப்பவர்கள். அவசியம் வந்தால் பேசலாம் என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பவர்கள். அதனாலேயே அமைதியாக இருப்பார்கள். பிறருக்கும் அவரிடம் தம் துன்பங்களைப் பகிர்ந்துகொள்ளத் தோன்றும். கவுன்சிலர்களுக்கு இருக்கவேண்டிய முக்கியமான குணம்: ஒருவர் தம் அந்தரங்கத்தைப் பகிர்ந்துகொள்கையில், குறுக்கே பேசாது, மௌனமாக கேட்டுக்கொள்வது. அவசியம் என்றால், தெளிவு ஏற்பட சில கேள்விகளைக் கேட்கலாம். நாம் மௌனமாக இருந்தாலும் நம்மைப் புரிந்துகொள்கிறவரே உற்ற துணை. ஏன் தனிமை? தனிமையில்தான் நம்மைப்பற்றி நிறைய யோசிக்கமுடிகிறது – நாம் செய்த தவறுகளை, பொறுத்த அவமதிப்புகளை, நம் எதிர்காலத்தை எப்படி அமைத்துக்கொள்வது போன்ற பல விஷயங்களை. அப்போதுதான் நம்மை நாமே புரிந்துகொள்ள இயலும். “ஒரு முட்டாளை அவன் பேசுவதிலிருந்து அறியலாம். புத்திசாலியை அவனுடைய மௌனத்திலிருந்து அறியலாம்” (ஒரு தத்துவ ஞானி). புரிதலால் அமைதி நமக்குப் புரியாதது ஆத்திரத்தை உண்டாக்கும். புரிந்துவிட்டாலோ அமைதியாக இருக்க முடிகிறது. கதை வீடுகள் நிறைந்த தெருவில் முன்னாலிருக்கும் கார் மிக மெதுவாகப் போய்க்கொண்டிருந்தது. பின்னால் இருக்கும் காரோட்டிக்கு ஆத்திரம் எழ, திட்ட ஆரம்பித்தார். முன்னால் இருப்பவருக்குக் காது கேட்கப்போவதில்லை என்றாலும், தனக்கே அமைதி ஏற்படுத்திக்கொள்ள அவருக்குத் தெரிந்த வழி இதுதான். (பெண்கள் இப்படி ஆத்திரப்படுவதில்லை). “ஏன் இப்படி கெட்ட வார்த்தைகளைக் கொட்டுகிறீர்கள்?” என்று நான் அவரைக் கேட்க, “எனக்கு நிம்மதி கிடைக்கிறது,” என்றார். பிறரது மனநிலை புரியும்போது ஆத்திரம் எழாது. இப்படியும் யோசிக்கலாமே! காரோட்டி அந்த இடத்திற்குப் புதிது. யார் வீட்டையோ தேடுகிறார். தனிமையும் கற்பனையும் கற்பனைத்திறனை வளர்த்துக்கொள்ள தனிமையைப்போல் வேறில்லை. “நான் 99 தடவை யோசித்தேன். எதுவும் பிடிபடவில்லை. யோசிப்பதை விடுத்து, அமைதியாக இருந்தபோது, உண்மை தானே என்னிடம் வந்தது” (ஐன்ஸ்டீன்). அமெரிக்க விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனைப்பற்றி அறிவோம். பன்னிரண்டு வயதிலேயே அவர் காது செவிடாகிவிட்டதாம். தனிமைதான் துணை என்ற நிதரிசனத்தில், நிறைய பரிசோதனைகளை மேற்கொள்ள முடிந்தது. பல ஆராய்ச்சிகளில் வெற்றிபெற்றார். எழுதுவதும் ஒரு தனிமையான செயல்தான். தனிமையை ரசிக்கத் தெரியாதவர்களுக்கோ அது ஒரு தண்டனை. கோயிலுக்குப் போய் கடவுளை வேண்டினால் அமைதி கிடைக்கும் என்பார்கள். அங்கும் வீண்வம்பு பேசுகிறவர்கள் இல்லாமலில்லை. அதனாலேயே, சில கோயில்களில் ‘இங்கு அநாவசியமாகப் பேசக்கூடாது’ என்ற எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்களோ! பிரார்த்தனை, தியானம் – இதெல்லாம் மனதை அமைதிப்படுத்துவது. பூஜை அறையில் கண்ணை மூடி அமர்ந்துகொண்டு, வெளியில் என்ன நடக்கிறது என்று காதைத் தீட்டியபடி இருந்தால், அவ்வப்போது குரலை எழுப்பி, வெளியில் உள்ளவர்களுக்கு ‘ஆலோசனை’ கூறத்தான் தோன்றும். அப்புறம் மௌனமாவது, அமைதியாவது! மௌனமாக இருந்தால்தான் பிறரை மட்டுமின்றி, நம்மையும் நாமே புரிந்துகொள்ள முடியும். வாழ்வில் வெற்றிபெற்றவர்களிடம் எப்போதும் இருப்பது: புன்னகை, மௌனம். பேசாமலிருப்பதும் ஒரு மொழிதான் என்று புரிந்தவர்கள் அவர்கள். “மௌனம் என்கின்ற மரத்தின் பழம்தான் அமைதி” என்று சரியாகத்தான் சொல்லிவைத்திருக்கிறார்கள். கேள்விகள் ஏன்? எப்போது? பொதுக்கூட்டங்களில், சொற்பொழிவாளர், “ஏதாவது கேட்பதானால் கேளுங்கள்,” என்பார். பலர் மௌனம் சாதிப்பார்கள். தம் ஐயம் மடத்தனமாக இருந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சமே காரணம். பள்ளி வகுப்புகளிலும் இதே கதிதான். பலரும் படிப்பில் சோடை போவது ஏன் தெரியுமா? கேள்வி கேட்டு மாட்டிக்கொள்ள விரும்பாது, அதற்கான பதிலையும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் தன்மை இல்லாததால்தான். குழந்தைகள் மூன்று வயதிலிருந்து கேள்விகள் கேட்க ஆரம்பிக்கிறார்கள். வீட்டிலிருக்கும் தாய்மார்கள் வேலை மும்முரத்தில், ‘தொணதொணப்பு’ என்று திட்டி குழந்தைகளை அடக்கிவிடுவார்கள். ‘கேள்வி கேட்பதே தவறு’ என்று அக்குழந்தைகள் மனதில் படிந்துவிட, புதிய சமாசாரங்களை அறிவதில் நாட்டமில்லாமல் வளர்கிறார்கள். ‘அவள் கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்தேன். ஏனோ இப்படி இருக்கிறாள்!’ என்று சில பெற்றோர் குறைப்படுகிறார்கள். குழந்தைகளுக்காகச் செலவிடும் பணம் முக்கியமில்லை. அவர்கள் எதையாவது அறிய ஆர்வம் காட்டுவார்கள். அப்போது மேலெழும் ஆர்வத்திற்குத் தடைவிதிக்காது, அவர்களுடைய சந்தேகங்களை அவ்வப்போது தீர்த்துவைக்க நேரத்தையும் ஒதுக்கவேண்டும். கதைகள் 1. மூன்று வயதுச் சிறுமி தன் தாயின் மார்பகத்தைச் சுட்டிக் கேட்டாள், “ஏன் ஒனக்கு மட்டும் இது பெரிசா இருக்கு? நான் அப்படி இல்லியே!” வயதுக்கு மீறிய கேள்வி என்று கருதி, தாய் கோபிக்கவில்லை. புரியாத விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேறு என்ன வழி? “நீயும் பெரியவளா ஆனா, என்னைப்போல இருப்பே!” என்று சமாதானப்படுத்தினாள். 2. ஆறு வயதுச் சிறுவன் ஒருவன் தன் வீட்டுக்கு வந்திருந்த பெண்ணைப் பார்த்து, “ஒங்க கைக்கு அடியிலே ஏன் இப்படி வளர்ந்திருக்கு?” என்று கேட்டான். (அவள் கையில்லாத ரவிக்கை அணிந்திருந்தாள்). தாய்க்குத் தர்மசங்கடமாகப் போய்விட்டது. அதை மறைக்க, ‘ரொம்ப அசடாப் போயிட்டே!’ என்று மகனைப் பார்த்துக் கத்தினாள். “குழந்தைகளுக்குத்தான் அப்படி இருக்காது. பெரியவர்களுக்கு..,” என்று அவனுக்குப் புரியும் விதத்தில் விளக்கியிருக்கலாம். ஆனால், அவளைப் பொறுத்தவரை, இதெல்லாம் கெட்ட சமாசாரம். (இயற்கை வளர்ச்சியை இப்படி மறைத்தே குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டிவிடுகிறோம்). 3. ஏழு வயதுச் சிறுவன் தன் தாயைக் கேட்டான், “அம்மா! ஏன் சில பேர் பிரஷர் குக்கரைப் பயன்படுத்துகிறார்கள்?” அவர்கள் வீட்டில் குடியிருந்த நான் சமையலுக்கு அதைப் பயன்படுத்துவதைப் பார்த்துக் கேட்டிருக்கிறான். தனக்குத் தெரியாது என்பதை ஒத்துக்கொள்ள விரும்பாத தாய், அறியும் ஆர்வம் இருந்த மகனைக் கண்டித்தாள்: “நீ கேக்கறதுக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருந்தா விடிஞ்சுடும், போ!” நான்தான் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் ஆசிரியை ஆயிற்றே! “விரைவாக வேகும்,” என்று இரண்டே வார்த்தைகளில் விளக்கினேன். பையனது முகம் சுண்டிப்போயிற்று. தன் அம்மாவுக்குத் தெரியாதது வேறொரு அம்மாவுக்குத் தெரிந்திருக்கிறதே என்ற வருத்தம்தான். ‘எங்கள் அம்மாக்கள் முட்டாள்கள். அதனால்தான் நாங்கள் இப்படி இருக்கிறோம்!’ என்று என் மாணவிகளில் சிலர் தன்னிரக்கத்துடன் கூறியிருப்பது நினைவில் எழுந்தது. தற்காலத்தில், நாம் அறிய வேண்டுவன எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள கணினி வழிவகுக்கிறது. அது மட்டும் போதுமா? முதன்முறையாக வெளியூருக்கோ, வெளிநாட்டுக்கோ செல்லுமுன் பயண ஏடுகளைப் புரட்டிப் பார்ப்போம். சென்றபின், அங்கு பார்க்கவேண்டியவை வேறு ஏதாவது உள்ளதா என்று அங்குள்ளவர்களைக் கேட்டும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், சகபயணிகளின் உயிரை வாங்கி தம் அறிவைப் பெருக்கிக்கொள்ள நினைப்பவர்கள் பிறரது அமைதியைக் குலைப்பவர்கள். கதை நானும் என் மகளும் கிழக்கு மலேசியா (போர்னியோ) சென்றிருந்தோம். அங்கிருந்து கடலில் படகுப் பயணம் – ஒரு காட்டுப் பகுதியில் தங்குவதற்கு. எங்களுடன் ஒரு வெளிநாட்டுப் பெண்ணும் படகில் இருந்தாள். அறிமுகம் முடிந்ததும், ஓயாது ஏதேதோ கேட்டபடி இருந்தாள். அநாவசியமாக எதையாவது கேட்டு வைப்பவர்களுக்குப் பதிலில் அக்கறை கிடையாது. அது பொழுதைப் போக்க ஒரு வழி. அவ்வளவுதான். “இந்துப் பெண்கள் கல்யாணமானதும்தான் சிவப்பு நிறப் பொட்டு அணியலாம் என்று கேள்விப்பட்டேன். அப்படியா?” “தைப்பூசம் எதற்காகக் கொண்டாடுகிறார்கள்?” என்று விசாரித்தபடி இருந்தாள். எனக்கோ, ரம்மியமான சூழ்நிலையைப் பார்த்து ரசிக்க முடியாது போகிறதே என்ற எரிச்சல். இறுதியில், பொறுக்க முடியாது போக, “Not now!” என்றேன் கறாராக. அதன்பின் அவள் வாயைத் திறக்கவில்லை. அப்படியில்லாது, ஒரு விஷயத்தில் உண்மையான ஆர்வத்துடன் கேட்பவருக்கோ பெரும்பாலும் தக்க பதில் கிடைக்கும். ஆனால், நம் கேள்வியால் அவரது அறிவை எடைபோடுகிறோமோ என்று தவறாக எண்ணிவிடுபவர்களும் உண்டு. கதை நான் ஒரு காமெரா வாங்கி வைத்து, புத்தகங்களிலிருந்து புகைப்படக்கலையைக் கற்க முயன்று கொண்டிருந்தேன். காதரின் என்ற அமெரிக்க மாது தன் குழுவுடன் சேர ஒரு காமெரா இருந்தால் போதும், புகைப்படக்கலையைக் கற்கலாம் என்று தினசரியில் விளம்பரப்படுத்தி இருந்தாள். விடுவேனா! வாரத்தில் சில நாட்கள் அவர்களுடன் நான் கோலாலம்பூரில் பல இடங்களையும் சுற்றிப்பார்த்தேன். மற்றவர்கள் அனைவரும் சிறு வயதிலிருந்தே ஓரிரு முறை உபயோகப்படுத்திவிட்டு எறியும் புகைப்படக் கருவியைப் பயன்படுத்தி இருந்தவர்கள். எனக்கோ எதுவும் புரியவில்லை. புத்தகங்களில் பயிலாததைப்பற்றி கேள்விமேல் கேள்வி கேட்டபடி இருந்தேன். குழுத் தலைவி காதரின் விளையாட்டாக, “எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை. நீ நிறைய கேள்விகள் கேட்கிறாய்!” என்று குற்றம் சாட்டினாள். “எனக்கு எதுவுமே தெரியாது. அதனால்தான்,” என்று ஒத்துக்கொண்டேன், பரிதாபகரமாக. ஒரு நாள் இந்துக்கோயில் ஒன்றில் படம் பிடிக்கச் சென்றபோது, எங்களுடன் இணைந்து வந்த அயல்நாட்டுக்காரர்களுக்கு – அவர்கள் கேளாமலேயே – பார்த்ததையெல்லாம் விளக்கினேன். மகிழ்ந்த காதரின் என்னை அழைத்து, போட்டிகளில் பரிசுகள் வாங்கும் அளவிற்கு நிறைய கற்றுக்கொடுத்தாள். அவள் தன் நாட்டிற்குத் திரும்பிய பின்னரும் எங்கள் நட்பு நீடித்தது. என்னதான் நடந்துவிடப்போகிறது? நமக்குள் இக்கேள்வியைக் கேட்டுக்கொண்டால், இக்கட்டான சூழ்நிலைகளில் மனம் குழம்பும்போது உடனே நிம்மதி கிடைக்கும். கதை ஒரு பெண் ‘நல்ல கலராக’ இல்லாவிட்டால் அவளைப் பெண்பார்த்துவிட்டு, நிராகரிக்கும் ஆண்களைத்தான் அந்த பாட்டி பார்த்திருக்கிறாள். அதனால், தன் மகளுடைய சிறு குழந்தைகளைப் பார்த்ததும் அவளுக்குத் துக்கம் பெருகியது. ‘ரெண்டும் கறுப்பாப் பொறந்திருக்கே! இந்தப் பொண்களுக்கு எப்படித்தான் கல்யாணம் பண்ணிவைக்கப் போகிறாளோ!’ என்று அவர்களைப் பெற்ற மகளுக்காக வருந்தினாள். எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அவர்களைவிட நிறம் மட்டமான ஆண் கிடைக்கலாம். புற அழகைவிட அவர்களுடைய அறிவாற்றலைப் பெரிதாக எண்ணும் மாப்பிள்ளைகள் கிடைக்கலாம். அவ்வளவு ஏன், பெரிய படிப்புப் படித்து, உத்தியோகமே வாழ்க்கை என்று வாழக்கூட நினைக்கலாம் அப்பெண்கள். எப்போதோ நடக்கலாம் என்பதை எண்ணி இப்போதே வருந்துவானேன்! ‘பரீட்சையில் சரியாக எழுதவில்லையே, பாசாகித் தொலைக்காமல் இருந்தால் என்ன செய்வது!’ பரீட்சை முடிவு வருவதற்குள் அநாவசியமாக அதைப்பற்றி எண்ணிக் குழம்புவானேன்! அப்படியே தேர்ச்சி பெறாவிட்டால், இன்னொரு முறை எழுதிவிட்டுப் போகிறது!. என்ன நான் சொல்வது? FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.