[] []                                                                                               அங்கும் இங்கும்                                                      நெ. து. சுந்தரவடிவேலு, எம்.ஏ., எல்.டி.                                               முன்னாள் துணைவேந்தர்,                                          சென்னைப் பல்கலைக் கழகம் நூல் : அங்கும் இங்கும்  ஆசிரியர் : நெ. து. சுந்தரவடிவேலு, எம்.ஏ., எல்.டி.    மின்னூலாக்கம் : த . தனசேகர் மின்னஞ்சல் : tkdhanasekar@gmail.com வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை: உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம். பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை. *** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம். Universal (CC0 1.0) Public Domain Dedication This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode No Copyright The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission. This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.    நூல் மூலம – https://ta.wikisource.org/s/2v0q நன்றி – விக்கி மூலம குழு – https://ta.wikisource.org பொருளடக்கம் முன்னுரை 6  பதிப்புரை 7  1. விஞ்ஞான விவசாயம் 8  2. சமுதாய ஒருமைப்பாடு 13  3. யார் காக்கிறார்கள்? 18  4. ஒரு படிப்பினை 22  5. லெனின் நூலகம் 24  6. லெனினும் காந்தியும் 28  7. பேச்சுரிமையில் பெருமிதம் 34  8. லெனின்கிராடில் 39  9. மெய்யான செல்வம் 43  10. இலண்டனில் 49  11. ஊக்கும் கல்வி 52  12. முதிய இளைஞர் இருவர் 55  13. புதுயுகத் தலைவர் 59  14. படி, படி, படி! 62  15. ஒளி பரப்ப வாரீர் 65  16. கலையின் விளக்கம் 69  17. ஈர உள்ளம் 73    முன்னுரை   வெளிநாட்டுப் பயணம், அரிய நல்வாய்ப்பு. அது எனக்குக் கிட்டிற்று. சோவியத் ஒன்றியத்துக்கு இரு முறையும். பிரிட்டனுக்கு இரு முறையும், அமெரிக்காவிற்கு ஒரு முறையும் சென்று வரும் வாய்ப்பினைப் பெற்றேன். அந்நாடுகளில் என்னைக் கவர்ந்தவை பல.   நான் கண்ட, கேட்டவற்றில் சிலவற்தையாவது எழுதி வைக்க, 'சத்திய கங்கை'யின் ஆசிரியரும் என் நண்பருமான திரு பகிரதன் அவர்களின் அன்பு அழைப்புத் தூண்டிற்று. 'அங்கும் இங்கும்' என்ற தலைப்பில் அவற்றை அவர் 'சத்திய கங்கை'யில் வெளியிட்டார். ஆகவே அவருக்கு என் முதல் நன்றி.   இக்கட்டுரைத் தொகுப்பை நூல் வடிவில் வெளியிட முன்வந்த நியூ செஞ்சுசி நூலகத்தாருக்கு என் உளமார்ந்த நன்றி.   இந்நூலை வெளியிட அனுமதி தந்த இந்திய ஆட்சிக்கும் நன்றியுடையேன். இதில் வரும் கருத்துக்கள் என்னுடையவை. அரசினருடையவை அல்ல. அவற்றிற்கு நானே பொறுப்பு. அவை எவ்விதத்திலும் இந்திய ஆட்சியைச் சாரா. சென்னைப் பல்கலைக் கழகத்தில் கல்லூரிக் கல்வி நிலையில் தமிழுக்கு முதன் முதலாக இடம் தேடித் தந்தவரும், சென்னை நகரில் எல்லா சமயத்தாரும் சேர்ந்து கொண்டாடும் தமிழ்த் திருநாளாகப் பொங்கல் விழாவை நடத்திக் காட்டியவரும், எனக்கு நல்லாசிரியராயிருந்து தமிழ்ப் பற்றை ஊட்டியவருமான கா.நமசிவாய முதலியார் அவர்களின் நினைவுக்கு இதை என் நன்றியின் அறிகுறியாகக் காணிக்கையாக்குகிறேன்.   புது தில்லி,                                                                                                    நெ. து. சுந்தரவடிவேலு   19-3-1968 பதிப்புரை   திரு. நெ. து. சுந்தரவடிவேலு அவர்கள் சோவியத் ரஷ்யாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் சுற்றுப் பயணம் செய்த போது தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை இந்நூலில் விவரித்துள்ளார். சிறந்த கல்வி அதிகாரியான அன்னார், சோவியத்து ஒன்றியத்தின் முன்னேற்றங்களையும். அம்மக்களின் வாழ்க்கை முறைகளையும் வியந்து பாராட்டுகின்றார். மேலும் சோவியத் மக்களுக்கு அந்நாட்டில் எவ்வாறு கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது; விஞ்ஞான, தொழில் நுட்பக் கல்வியை எவ்வாறு சாதாரண மக்களும் பயின்று பட்டம் பெற்று முன்னேற முடிகிறது ; உலகின் பெரும் நூலகங்களுள் ஒன்றான லெனின் நூலகத்தின் நடைமுறைச் சிறப்புகள் எவ்வாறு வியத்தகு முறையில் அமைந்துள்ளன என்பன போன்ற விவரங்களை இந்நூலில் ஆசிரியர் தமக்கே உரிய தமிழ் தடையில் விவரித்துள்ளார். தமிழில், பயண நூல் வரிசையோடு இடம் பெறக் கூடிய இந்நூலை வெளியிட அனுமதியளித்த ஆசிரியர்க்கு எமது நன்றி உரியது.                                                                                                                                          -பதிப்பகத்தார். 1. விஞ்ஞான விவசாயம்   நான் மாணவனாக இருந்த போது பாரதியாரின் "புதிய ருஷியா" என்னும் கவிதை என்னைக் கவர்ந்தது.   "குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு மேன்மையுறக் குடிமை நீதி கதியொன்றி லெழுந்தது பார்; குடியரசென் றுலகறியக் கூறி விட்டார் ; அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போ தடிமையில்லை அறிக என்றார்;"    என்னும் அடிகள் எப்போதும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டேயிருந்தன. பின்னர், லெனின் எழுதிய நூல்களைக் கற்றபோது, என்றைக்காவது ஒரு நாள், அடிமைத்தளைகளை அறித்தெறிந்து, புரட்சி நடைபோடும், சோவியத் ஒன்றியத்தைக் காண வேண்டுமென்னும் அவா பிறந்தது. 1961 ஆம் ஆண்டின் இந்திய-சோவியத் கலாசார பரிமாற்றத்திட்டம், என் அவா நிறைவேற வழி வகுத்தது.  1961 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் சோவியத் ஒன்றியம் செல்லும் பேறு பெற்றேன். சோவியத் ஒன்றியத்தில் நான் பார்த்த முதல் நகரம் தாஷ்கண்ட். உஸ்பெக்கிஸ்தான் குடியரசின் தலைநகராகிய இந்நகரையும் இதைச் சுற்றி யுள்ள சில இடங்களையும் எனக்கும் என்னுடன் வந்த கல்வியாளர் இருவர்க்கும் காட்டினர்.  அரசினருக்குச் சொந்தமான கூட்டுப்பண்ணை ஒன்றை நாங்கள் பார்த்தோம். அது நகருக்கு வெளியே சில கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. அப்பண்ணை பல ஆயிரம் ஏக்கர் பரப்பை உடையது. ஒரு பக்கத்தில் கண்ணுக்கெட்டும் தூரம் பருத்தி நிலம்; மற்றொரு பக்கம் தானியம் விளைந்த பூமி, வேறொரு பக்கம் பார்த்தால், காய்கறித் தோட்டம் நீண்டு அகன்று கிடந்தது. பழத்தோட்டமும் பரந்து கிடந்தது ஒருபுறம்.  தொலைவிலே மலையொன்று தென்பட்டது. அதன் மேலிருந்து ஓடிக்கொண்டிருந்த காட்டாறுகளை அணைகட்டி, தேக்கமாக்கி. (வாய்க்கால்கள் வெட்டி, இப்பண்ணையைப் போல்) நூற்றுக்கணக்கான பண்ணைகளுக்குப்-பெரும் பண்ணைகளுக்குப் பாசன வசதி செய்யப்பட்டிருப்பதாக எங்கள் வழிகாட்டி விளக்கினார். இரஷியப் புரட்சிக்கு முன்பு, இப்பண்ணைகளிலே பல, வானம் பார்த்த பூமியாக இருந்தனவாம். விளைச்சல் ’பட்டா பாக்கிய’ மாக இருந்தது மாறி இன்று நிச்சயமானதாகிவிட்டது; நிறைந்ததுமாகிவிட்டது.  ஆண்டுக்கு ஒரு முறை, ஊர்கள் பலவற்றை மூழ்கடித்து விட்டு, புரண்டோடும் இந்தியப் பேராறுகளையும் பல இடங்களில் அணையிட்டுத் தேக்கினால், வறண்ட பகுதிகளையும் வளமான பகுதிகளாக்க முடியாதா ? மின்சார உற்பத்தியை பல மடங்கு பெருக்கிச், சிற்றுார் தோறும் இப்புத்தொளியையும் புத்தாற்றலையும் கொடுத்து, மக்களைச் சிறு தொழில்களில் (குடிசைத்தொழில் என்ற வழக்கை விட்டுவிடுவது நல்லது) ஈடுபடுத்தி விட்டால், திட்டங்களின் பலன் பரவலாகி விடாதா ? இப்படி எண்ணி ஏங்கின எங்கள் உள்ளங்கள்.  பங்குச் சண்டையால் குடும்பப் பங்காளிகள் பாழாவதை போல், இராச்சியங்களுக்கிடையில் நிலவும் தண்ணிர் பங்குத் தகராறினால், நாட்டின் நீர்வளத்தில் பெரும் பகுதி வீணாக ஒடி, கடலில் கலப்பதா ? இன்னும் எத்தனை காலத்திற்கு "வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அழும்" போக்கு என்று பதறினோம். இந்தியர்களாகிய நாங்கள் மூவரும் கோழி கூவி பொழுது விடியுமா ?’ என்பது பழ மொழி. அரசினர், ஊழியர் ஏங்கிப், பதறிப் பயன் என்ன ? அரசியல் பெரியவர்கள், பெரிய விவகாரங்களைத் தீர்த்து வைக்க வேண்டும்.  சோவியத் ஒன்றியம் அமைந்த பிறகு, அங்குப் பெரும் அளவில் அணைகட்டுதலும், தேக்கம் அமைத்தலும், நீர் மின்சார உற்பததி செய்தலும் நடந்திருப்பதாகப் பின்னர் படித்தறிந்தோம், கூட்டுப் பண்ணைகளில் இயந்திரக் கலப்பைகளைக்கொண்டு உழுகிறார்கள். இயந்திர உதவியால் தூற்றித் தானியங்களைப் பிரித்து எடுக்கிறார்கள். இப்படிப்பட்ட நவீன விஞ்ஞான விவசாயப் பன்னையைக் கண்ட நாங்கள் வியந்தோம். நீங்கள் கண்டாலும் வியப்படைவீர்கள்.  சில நாள்களுக்குப் பின், தாஷ்கண்டிலிருந்து மாஸ்கோ போய்ச் சேர்ந்தோம். தாஷ்கண்டில் நாங்கள் கவனிக்காத ஒன்றை மாஸ்கோவில் கவனிக்தோம். மாஸ்கோவில் கல்விக் கூடம் ஒவ்வொன்றிற்கும் தனித் தனியாக பரந்த விளையாட்டு மைதானம் கிடையாது. பெரு நகரமாகையால் இட நெருக்கடி அதிகம். ஆகவே அநேகமாக, கல்விக்கூடத்தோடு இணைந்த விளையாடுமிடம் சிறிதாக இருக்கும். இந்நிலைக்கு என்ன மாற்று ? பல கல்விக்கூடங்களுக்கும் பொதுவாக, இங்கும் அங்கும், பரந்த விளையாட்டு மைதானங்களை வைத்திருக்கிறார்கள். இம்முறையை விளக்கியபோது, இடநெருக்கடியின் வலிமையைத் தெளிவாக உணர்ந்தோம்.  இத்தகைய இட நெருக்கடியிலும் தொடக்க நிலைப் பள்ளியில் கூட, ஒரு பக்கம் மலர்ப் பூங்காவும், வேறொரு பக்கம் காய்கறித் தோட்டமும் காட்சியளித்தன. பள்ளிக் கூடம் கவர்ச்சிக் கூடமாகவும் விளங்க வேண்டுமென்பது சோவியத் மக்களின் கொள்கை. எனவே, அழகிய மலர்கள் திறைந்த தோட்டம் பள்ளிக்கூடத்தின் ஒரு பகுதி.  இடநெருக்கடியான நகரங்களில் இருக்கும் கல்விக்கூடங்களில் காய்கறித் தோட்டத்திற்கு இடம் ஒதுக்கியிருப்பது சரியா ? வேறு வகையாக அவ்விடங்களைப் பயன்படுத்துவது நல்லதல்லவா? காய்கறிகளைக் கூட்டுப் பண்ணைகளில் எளிதாகவும் ஏராளமாகவும் பயிரிட்டுக் கொள்ளலாமே. நகரப் பள்ளிகளில் கொஞ்சம் கொஞ்சம் பயிரிட்டா பசியாறப் போகிறது ? இத்தகைய ஐயங்கள் எழுந்தன எங்களுக்கு. இரண்டொரு நாள்களுக்குப்பின் பல பள்ளிகளிலும் இந்நிலையைக் கண்ட பின், மெல்ல எங்கள் ஐயங்களை வெளியிட்டோம். அவர்களிடமிருந்து நாங்கள் பெற்ற விளக்கத்தின் சாரம் வருமாறு :-  படிப்பாளி பாட்டாளியாகவும் வளரவேண்டும் ; தொடக்கப்பள்ளிச் சிறுவர் சிறுமிகளுக்கும், உயர்நிலைப்பள்ளி இளைஞர்களுக்கும் காளையர்களுக்கும் ஆக்கப் பணியும் கொடுக்கவேண்டும். அவர்களுக்குப் படிக்க நூல்களையும், கேட்கப் பாடங்களையும், போடக் கணக்குகளையும் மட்டும்; கொடுப்பது முழுமை பெற்ற கல்வியாகாது. நல்ல முழுக் கல்வியானது. வளரும் பருவத்தினர், ஏற்ற கைத்தொழில்களில், செயல் திட்டங்களில், முறையாக ஈடுபடவும் வாய்ப்பளிக்கி வேண்டும்.  தோட்டப் பயிர், பிற கை வேலைகளைவிட அதி திருப்தியைக் கொடுக்கக்கூடியது ; சிறுபிள்ளைகள்கூட எளிதாக ஈடுபடக்கூடியது; எளிதாக வெற்றி காணக்கூடியது. ஆகவே, தொடக்கநிலை வகுப்பு மாணவர்களுக்குக்கூட இது ஏற்றது. எனவே, பரவலாக ஊக்கக்கூடியது. மேல் வகுப்புகளுக்குச் சென்ற பிறகு, புதுப் புது வேலைகளி அக்கறையேற்படும் . அந்நிலைகளில், மாணவர்களுக்குப் பல்வேறு வேலைகளைக் கற்க வாய்ப்பளிக்கலாம். எல்லா நிலைகளிலும் முதல் செயல் திட்டமாக, கட்டாயமாகத் தோட்டப் பயிர் இருப்பது ஏற்றது.  காய்கறித் தோட்டம் போடுவதில் வகுப்புக்கு வகுப்பு போட்டியும், சில இடங்களில் பிரிவிற்குப் பிரிவு போட்டியும் வைத்து, கண்டுமுதலை அதிகப்படுத்த ஊக்குவிக்கின்றன. சோவியத் நாட்டுப் பள்ளிகள் பதினாயிரக்கணக்கான ஏக்கர் பரப்புள்ள பெருங்கூட்டுப் பண்னைகளில் உணவுப் பொருள்களைப் பயிரிடுவே காடு நின்று விடாமல், பள்ளிக்கூடத் தோட்டங்களிலும் காய்கறிகளைப் பயிரிடும் சோவியத்மக்களின் தொலை நோக்கைப் பாராட்டாமலிருக்க முடியுமா ? இம்முறையால் உழைப்பின் உயர்வை எல்லோரும் உணர்வதோடு, செயலின் பயனைக் கண்ணாரக் கண்டு நிறைவு கொள்வதோடு. இலட்சாதி இலட்சம் கல்விக்கூடங்களில் கல்வியோடுகூட, கோடிகோடி கூடை காய்கறிகனைப் பெற்று மகிழும் வாய்ப்பும் கிடைக்கிறது.  சில நாள்கள் சென்றன. தாங்கள் கீவ் என்னும் நகரைச் சேர்ந்தோம். அது உக்ரைன் குடியரசின் தலைநகரம். இயந்திரத் தொழிற் கூடங்களுக்குப் பெயர் போனது கீவ். அந்நகரிலும், இடம் பொன்னினும் மணியினும் விலை யுயர்ந்தது. அத்தகைய நகரின் நகரின் நடுவில் - ஒரத்தில் அல்ல-ஐம்பது ஏக்கர் நிலத்தை ஆராய்ச்சிப் பண்ணைக்கு ஒதுக்கியிருக்கிறார்கள்.  அங்கு ஆராய்ச்சி செய்பவர்கள் யார்? விஞ்ஞான விற்பன்னர்களா? அல்லர். உழவுத்துறை மேதைகளா ? அல்லர். பின் யார், அந்த ஆராய்ச்சியாளர்கள் ?  உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் அங்கு ஆராய்ச்சி நடத்தினர். இன்றும் நடத்துவர். அந்த 'இரண்டுங்கெட் டான்கள்’, சிறுபிள்ளைகளிட்ட வெள்ளாமை வீடு வந்து சேர்ந்ததா?  தொட்டால் தங்கமாகக் கொட்டக்கூடிய தொழிற்கூடங் களுக்கு ஒதுக்க வேண்டிய விலையுயர்ந்த நிலத்தை, பள்ளிக் கூட இளைஞர்களுக்கே ஒதுக்கியிருப்பது அறிவுடைமையா என்ற ஐயத்தோடு அப்பண்ணைக்குச் சென்றோம். பண்ணை முழுவதையும் சுற்றிக் காட்டினார்கள். மெதுவாகவே, மிகக் கவனமாகவே பார்த்து வந்தோம்.  ஒருபுறம் தானியப் பயிர் தரமாக இருந்தது. மற்றொரு புறம் காய்கறிகள் நன்றாகப் பயிராகியிருந்தன. இன்னொரு புறம் பழத்தோட்டத்தைப் பார்த்தோம். ஆப்பிளும், 'பீச்' பழங்களும் கணக்கின்றிக் காய்த்துக் குலுங்கின.  ஆராய்ச்சிப் பண்ணையின் உயர்ந்த விளைச்சலை வியத்துகொண்டே, பண்ணை இயக்குநரின் அறைக்கு வந்து சேர்ந்தோம். அங்கே கண்டது என்ன ?  இரண்டொரு தட்டுகளில் பலகாரங்கள் இருந்தன. காப்பி ஒரு பக்கம் மணம் வீசிக் கொண்டிருந்தது. பல தட்டுகளில் ஆப்பிள்கள் கண்ணைச் சிமிட்டிக் கொண்டி ருந்தன. காப்பி சாப்பிட, நாங்களும் இயக்குநரும் உட்கார்ந்தோம்.  "நாங்கள், எங்கள் இடைவிடாத ஆராய்ச்சியால் பயிரிட்டுள்ள பத்துப் புதுவகை ஆப்பிள்கள் உங்கள் முன் உள்ளன. ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு வகை ஆப்பிள் இவ்வகைகளில் எவ்வகையையும் நீங்கள் வெளியில் சந்தையில் வாங்கமுடியாது. தயவு செய்து பத்துவகை ஆப்பிள் களையும் சாப்பிட்டுப் பாருங்கள். எப்படி இருக்கிறதென்று கூறுங்கள்’’ என்று வேண்டினார்கள், பண்ணையைக் காட்டி விட்டு அழைத்து வந்த மாணவிகள். பத்திலே சிறந்த இரண்டொரு வகை ஆப்பிள்களை மட்டும் நறுக்கிப் பரிமாறும்படி வேண்டினோம். அவர்கள் ஒப்பவில்லை. பத்தும் புதுவகை மட்டுமல்ல, சிறந்த வகையுமாகும் என்று அழுத்திக் கூறினார்கள். பத்துவகையிலும் ஒவ்வொன்று எடுத்து, துண்டு போட்டு, நால்வர்க்கும் மிகுந்த உற்சாகத்துடன் பரிமாறினார்கள்.  அத்தனையையும் உண்டோம். அத்தனையும் இனிப்பாக இருந்தன, மெதுவாக இருந்தன. அது வரையில் உணராத சுவையோடு இருந்தன. ஆராய்ச்சியாளர்கள் கூற்று முற்றிலும் உண்மை.    2. சமுதாய ஒருமைப்பாடு   கீவ் நகரத்து ஆராய்ச்சிப் பண்ணையில் எங்களுக்குப் பத்துப் புதுவகை ஆப்பிள்களைக் கொடுத்த அம்மாணவிகள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்? அம்மாணவிகள், ஆராய்ச்சியாளர்கள், கட்டாயத்தால் ஆராய்ச்சியில் ஆழ்ந்தவர்கள் அல்லர் அவர்கள். கசப்போடு ஆராய்ச்சி செய்பவர்களும் அல்லர். பணத்திற்காகப் பண்ணைக்கு வந்தவர்களும் அல்லர். விருப்போடு புதுப் பயிர் இடுபவர்கள்.  அந்நகரத்திலுள்ள பல உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் அங்கு வருவார்கள். ஒவ்வொரு பள்ளியும், பயிர்த்தொழிலில் தனி அக்கறை உடையவர்களை மட்டும் பொறுக்கி, அங்கு அனுப்பி வைக்கும். அவர்கள் தனித்தனியாகவும், குழுக்களாகவும் இருந்து, பயிர்த்தொழில், தோட்டத் தொழில் ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறார்கள். அவற்றிகான வசதிகளெல்லாம் அப்பண்னையில் உள்ளன செலவு முழுவதும் அரசினருடையது. ஆர்வமுடையவர்கள் மட்டும், சாதனமுடையில்லாமல், துணிந்து ஆராய்வதால் புதுப் புதுச் சாதனைகளை எட்டிப் பிடிக்கிறார்கள்.  எங்களுக்குக் கொடுத்தது போன்ற, புதுப் பழவகைகளைப் பயிராக்கிக் காட்டுகிறார்கள், இத்தகைய சாதனைகளைக் காட்டி, வேளாண்மைக் கல்லூரிகளில் சேர்கிறார்கள் நம்மைப்போல, எதிலோ பெற்ற மார்க்குகளைக் காட்டியல்ல. 'வாய்ச்சாங் கொள்ளிதனத்திற்காக'வுமல்ல. ஆகவே, சோவியத் நாட்டில் சாதித்துக் காட்டும் செயல் விஞ்ஞானிகளைக் காண்கிறோம். மதிப்பெண்களையே கடவுளாக்கி விட்ட நாமோ, பட்டத்தின் மேல். பட்டத்தை அடுக்கிக் காட்டும் சொல் - விஞ்ஞானிகளையே பெறுகிறோம்.  சமதர்மத்தில் மேதைகளை வளர்ப்பதற்கு வழியேது என்ற ஐயம், 'மேதைகள்’ என்று தமக்குத் தாமே பட்டம் சூட்டிக்கொண்டுள்ள பலருக்கும் எழுவதுண்டு. எனக்கும் எழுந்ததுண்டு. எல்லாரும்-எல்லாருமென்றால் எல்லாருமே, சமாளிக்கும் நிலைக்கும் இறங்கி வந்து கல்வித் திட்டம் அமைத்து, பொதுக்கல்வியை எல்லாருக்கும் அளித்துவிட்டு தனித்திறமை உடையவர்களை அந்தந்தத் துறையில், அதிகம் கற்க. மேலும் மேலும் கற்க அவரவர் வேகத்திற்கு ஊக்குவதும், அதற்கான எல்லா வாய்ப்புகளையும் வசதிகளையும் தாராளமாகச் செய்து தருவதுமே, மேதைகளையும் அறிவு மலைகளையும் சாதனைப் பெரியவர்களையும் பெருக்குவதற்கு வழி என்பதை உணர்ந்தோம்; எங்கள் ஐயம் அகன்றது.  வாய்ப்புகள் என்றதும் அமெரிக்கக் கல்வி முறையில் கண்டது நினைவிற்கு வருகிறது. அந்நாட்டில், ஆதியில் அரசினால், உள்ளாட்சி மன்றங்களால். ஊராட்சிகளால் கல்விக்கூடங்கள் தொடங்கப்படவில்லை. இங்கும் அங்கும் தொடங்கப்பட்ட கல்விக்கூடங்கள்-லெளகீகக் கல்விக் கூடங்கள்-மதச்சபைகளின் சார்பில் தொடங்கப்பட்டன. பின்னர் தனியார் பலர், முடிந்தால் தனித்தனியாகவும், முடியாத போது பலர் சேர்ந்தும், கல்விக்கூடங்களை அமைத்தனர் : நடத்தினர். இன்றும் நடத்துகின்றனர். நாளையும் நடத்துவர். தனியார் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் அரசினரின் உதவி கிடையாது. அரசின் கல்வி உதவி, அரசினர் கல்விக்கூடங்களுக்கே விஞ்ஞான வளர்ச்சிக்கென்று மட்டும் சில ஆண்டு களாக, ஏதோ ஒரளவு தனியார் பள்ளிகளுக்கு உதவுகிறார்கள்.  தனியார் கல்விக்கூடங்களையே நம்பியிருப்பது, எதிர் வீட்டுக் கதவை, நம் வீட்டுக் காவலுக்கு நம்பியிருப்பது போன்றது. இந்நிலையும் உணர்ச்சியும் அந்நாட்டில் உருவாயின. எனவே பொதுத் துறையில் (உள்ளாட்சிக் கழகங்களின் சார்பில்) கல்விக்கூடங்கள் எழுந்தன. தொடக்க நிலை கல்விக்கூடங்களோடு நிற்கவில்லை. அவர்களது அந்தக்கால நினைப்புகூட தொடக்கப்பள்ளி நிலையில் நின்று விடவில்லை. ஆகவே, உயர்நிலைப் பள்ளிகளையும் நிறுவினர். தோன்றிய கல்விக்கூடங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக இருந்துவிடவில்லை, எண்ணிக்கையற்ற கல்விக் கூடங்கள் எழுந்தன. உள்ளாட்சி மன்றங்கள் பள்ளிக்கூடம் நடத்தினால், இராச்சிய அரசுகள் கல்லூரிகளையும் பல்கலைக் கழகங்களையும்-பெரிய பெரிய பல்கலைக் கழகங்களையும் - நடத்துகின்றன.  இன்று வளமிக்க அமெரிக்க நாட்டில் மொத்தத்தில், கல்வித் துறையில்-எல்லா நிலைக் கல்வியிலும் - தனியார் துறையைவிடப் பொதுத் துறையில்தான் அதிக இடம் உண்டு; அதிக வசதிகள் உண்டு ; அதிக வாய்ப்புகளும் உண்டு. எனவே, கல்வி ஒடையில் உயர்கல்வி ஒடையில்கூட ஏழை எளியவர்கள், பொதுமக்கள் (பெருமக்கள் மட்டுமல்ல) நேராகப் பருக முடிகிறது. பொதுத்துறைக் கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் அவற்றின் முதல்வர்கள், வேண்டுமென்றே, தெரிந்தே, மார்க்குக் குறைந்த பலரை, வாட்டி வதைக்கும் வறுமைச் சூழ்நிலையிலிருந்து வரும் பலரை, எழுத்தறியாக் குடும்பங்களிலிருந்து கல்லூரியை எட்டிப் பார்க்கும் பலரைச் சேர்த்துக் கொள்வதாக அமெரிக்காவில் கேள்விப்பட்டபோது திடுக்கிட்டேன்.  தேவைக்கு மேல் இடம் இருப்பதால் காலியாக விடுவதற்குப் பதில், கண்டவர்களைச் சேர்த்துக் கொள்கிறார்களோ என்ற ஐயம் எழுந்தது. அங்கும் கல்விக்கூட இட நெருக்கடி இருப்பதைப் புள்ளி விவரங்களோடு விளக்கினார்கள். இட நெருக்கடியிலும் மார்க்கில் உயர்ந்தவர்களோடு நிற்காமல, மார்க்கில் குறைந்தவர்களையும் தேடிப் பிடித்துச் சேர்த்துக் கொண்டால், பிந்தியவர்களுக்குப் பலன் உண்டா ? அவர்கள் பாஸ் ஆவார்களா ? அவர்களாலே கல்லூரிக்குக் கெட்ட பெயர் வராதா ? நல்ல மணிகளாகச் சேர்த்தால் அத்தனையும் தேறின என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாமே ! இப்படியெல்லாம் என் அறிவைக் கலக்கிக் கொண்டேன். அக்கலக்கத்தை அறிவித்தும் விட்டேன். விளக்கம் தந்தனர். விளகக்கத்தின் சுருக்கம் இதோ:  மனிதன் மாறும் இயல்பினன். அவன் வளர்வதும் உண்டு; தேய்வதும் உண்டு. வளர்வானோ தேய்வானோ என்பது அவன் அவன், முன்பின் சூழ்நிலையையும் அவன் அவன் பெறும் வசதிகளையும் ஊக்கத்தையும் பொறுத்தது. சமுதாயத்தின் கீழ்மட்டத்திலிருந்து, வேண்டுமென்றே மார்க்குக் குறைந்தவர்களைச் சேர்த்ததால், நல்ல பலனே விளைகிறது. அவர்கள் மார்க்குக் குறைந்தவர்கள் என்பது சேர்க்கிறபோதே தெரிகிறது. ஆபத்தான நிலையிலுள்ள நோயாளியை அடிக்கடி கவனிக்கும் மருத்துவர்போல், மார்க்குக் குறைந்தவர்களை அடிக்கடி கவனிக்கிறோம். அப்போதைக்கப்போது ஆலோசனை கூறி வழிக் காட்டுகிறோம். நம்பிக்கை ஊட்டுகிறோம். ஊக்குவிக்கிறோம். மற்றவர்களை விட அதிகம் படிக்க வைக்கிறோம். அறிவு வளர்ச்சி என்பது பெருமளவு முயற்சியின் விளைவே. எனவே, மார்க்குக் குறைந்தவர்களும் கல்லூரிகளில் கொடுக்கும் தனிக் கவனத்தால், வசதிகளால், தூண்டுதல்களால், தோழமையால் மற்றவர்களைப்போல் தேறிவிடுகிறார்கள்.  அவர்களில் தோற்பவர்களே இல்லையா ? கல்விக்கு முழுக்குப் போட்டுவிட்டுப் போய் விடுவோர் இல்லையா ? உண்டு. ஒரு சிலர் உண்டு. பள்ளிப் படிப்பின் இறுதியில் இலாயக்கற்றவர்களாக இருந்தவர்களின் எண்ணிக்கையில் சிறு விழுக்காடே கல்லூரியை விட்டுவிடுவோர் எண்ணிக்கை. அப்படி விலகுவோர், மனக்குறையோடு, கசப்போடு வெறுப்போடு. வஞ்சம் தீர்க்கும் போக்கோடு வெளியேறுகிறார்களா ? இல்லை. நம் சமுதாயத்திடம் வஞ்சம் இல்லை. எவ்வளவு வாய்ப்புகள் கொடுக்க முடியுமோ அவ்வளவும் கொடுத்தார்கள். வசதிகளையும் வழங்கினார்கள். கொடுத்த ஊக்கமும் கொஞ்ச நஞ்சமல்ல. மட்டந்தட்ட முயலவில்லை. மீண்டும் மீண்டும் தட்டிக் கொடுத்தும், நாமே தவறி விட்டோம். அவர்களைக் குறைசொல்ல என்ன இருக்கிறது ? சமுதாயத்தை வெறுப்பதற்கும் என்ன இருக்கிறது ? நம்மை நாமே நொந்து கொள்வானேன் ? முதல் முயற்சி முன்பின் தான் இருக்கும். மூன்று தலைமுறை கல்லூரிக்குச் சென்று வந்தபின், நாங்களும் நன்னிலைக்கு உயர்ந்துவிடுவோம். இப்படி எண்ணுகிறார்கள் பாதியிலே வெளியேறியவர்களும்.  சமுதாய ஒருமைப்பாட்டிற்குக் கொடுக்க வேண்டிய விலை, பின்னணியில் தயங்குகிறவர்களையும் தேடிப்பிடித்து, வாய்ப்பைக் கொடுத்து, வசதியைப் பெருக்கி, தட்டிக்கொடுத்து வளரவிடுவதே. அதற்காகும் செலவைக், கவனத்தை, உழைப்பைத் தாராளமாகக் கொடுப்பதால், ’பல நாட்டு நாடோடிகளின் சமுதாயமாக இருந்தும், அமெரிக்க சமுதாயத்தில் துரோகிகள் குறைவாக உள்ளனர். ’அமெரிக்கர்’ மிகமிக அதிகமாக உள்ளனர். நிறைய "மார்க்கு’ வாங்கியவர்கள் இடத்தை மற்றவர்கள் பறித்துக் கொள்ளலாமா ? இதையும் கேட்கத் தவறவில்லை நான். நோய் இல்லாத ஒருவருக்கு, உடம்பு நன்றாக இருக்கிறதா என்று மட்டும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒருவருக்கு, எதற்கு ஆஸ்பத்திரி படுக்கை ? அவர் அப்போதைக்கப்போது வந்து போனாலே போதுமே. நோய்வாய்ப்பட்டிருப்பவரையல்லவா ஆஸ்பத்திரியிலே வைத்திருந்து வேளைக்கு வேளை பார்த்துக் குணப்படுத்த வேண்டும். 'மார்க்குப் பெரியவர்கள், எங்கிருந்தும் படித்துக் கொள்ளலாம் என்ற பதில், கிண்டலான அல்லது புரட்சிகரமானதொரு எதிர்காலக் கல்வித் திட்டத்தின் முளையா ? எதிர்காலமே காட்டட்டும்.  நம் கல்வி வாய்ப்பினையும் வசதிகளையும் மேலும் பெருக்க விரும்புகிறீர்களா ? பொதுத் துறைக் கல்விக் கூடங்களை ஏராளமாக்க ஆசையா? பரிந்துரை கூற ஆள் இல்லாத அவைகளிலும் முதல் தரமான வசதிகளைக் கொடுக்க வேண்டுமென்று விரும்புகிறிர்களா ?  கங்கை, யமுனை. கோதாவரி, கிருஷ்ணா ஆகிய ஆறுகளில் நீர்ப்பெருக்கை முழுக்க முழுக்கப் பாசனத்திற்கும் மின்சார உற்பத்திக்கும் பயன்படுத்தும் பெரும் பணியில் பெரும் கவனத்தைத் திருப்ப வேண்டுமென்று விரும்புகிறீர்களா ? நல்லது. பெரியவர்களிடம் சொல்லத் தவறாதீர்கள். ஆளை மாற்றுவதைப் பற்றிப் பரிந்துரை கூறுவதோடு, ஆற்று நீரை மாற்றுவதைப் பற்றியும் கூறுங்கள்.  கல்விக்கூடம்தோறும் பயிர்த்தொழிலுக்கு ஏற்பாடு செய்யக்கூடாதா ? இப்படி கேட்கிறதா உங்கள் அறிவு ? செய்யக்கூடும். செய்ய வேண்டும். மனம் உண்டானால் இடம் உண்டு.  பஞ்சாயத்து ஆட்சி வந்த பிறகு, ஊர்தோறும் உள்ள புறம்போக்கு ஊருக்குச் சொந்தம். அதிலே ஒரு பங்கை பள்ளிக்கூடத் தோட்டத்திற்கு ஒதுக்கி வைத்துப் பயன்படுத்தச் செய்தால் எவ்வளவு விளையும் ? உழைப்பிற்கு உயர்வளிக்கும் மனப்போக்கு மட்டுமல்ல விளையப் போவது; மலைமலையாக நெல்லும் கோதுமையும், வண்டி வண்டியாக வாழையும் கிழங்கும், காய்களும், கனிகளும் பயிரிட்டுக் குவிக்கலாம். ஆமாம், மலைக்காதீர்கள் !  இன்று கல்விக்கூடங்களின் எண்ணிக்கை சிலவல்ல, சில நூறுகள் மட்டுமல்ல, இலட்சோப இலட்சம். தமிழ்நாட்டில் மட்டும் முப்பத்து மூவாயிரம்-இவற்றில் உள்ளவர்களோ கோடான கோடி, கோடி கோடி கைகள் கூடிக்கூடி உழைத் தால், கோடி கோடி பொருள்கள், நாடி நாடி வருமே.    3. யார் காக்கிறார்கள்?   நாடு வளர, மக்கள் முன்னேற, உழைப்பு, பெரும் உழைப்புத் தேவை. பாரதப் பெரு நாடு வளர, கோடி கோடி கைளின் உழைப்புத் தேவை. கோடி கோடி கைகள், கூடிக் கூடி உழைத்தால் கோடி, கோடி நன்மை, தேடித்தேடி வரும் ; உண்மை.  ஆளை ஆள் தள்ளும் பணியிலும், கோடி, கோடி கைகள் ஈடுபடலாம். ஆளுக்கு ஆள் கைக்கொடுக்கும் தொண்டிலும் ஈடுபடலாம். இந்தியாவிற்கு எது தேவை ? தள்ளல் தொழில் புரியும் கைகளல்ல; தாங்கல் தொழில் புரியும் கைகள். கூடித் தொழில் புரியும் கைகள். அத்தகைய கைகளும் சிலபல போதா. கோடி, கோடி, கைகள் தேவை.  கோடி கோடி கைகளை உழைக்க வைப்பதெப்படி ? ஒன்றுபட்டு உழைக்க வைப்பதெப்படி ? ஒரு கையாயின் ஒருவர் உணர்ச்சி போதும். சில கைகளாயினும் வல்லான் ஒருவன் இயக்கிவிட முடியும். பல கைகளுக்கோ, வல்லார் சிலராவது வேண்டும். கோடி, கோடி கைகளை-இயந்திரக் கைகளையல்ல - மனிதக் கைகளை - இயக்க, ஒரு சேர இயக்கச் சிலரும் போதா : பலரும் போதா ; கோடி கோடி. மக்கள் விழிப்புப் பெற வேண்டும் ; எழுச்சியுற வேண்டும். ஆக்க உணர்ச்சி பெற வேண்டும் வளரத் துடிக்க வேண்டும். முன்னேற உழைக்க வேண்டும். அறிவிலும் வளரத் துடிக்க வேண்டும் ; உழைக்க வேண்டும்.  விழிப்பும் எழுச்சியும் தாமே விளைபவையல்ல. பயிரிடப்படுபவை. அவை சில நாள் பயிரல்ல ; பல நாள் பயிர்; அடுத்தடுத்துப் பயிரிடப்படுபவை ; பல நூறாயிரவரால் பயிரிடப்படுபவை.  நாட்டுப் பற்றும் உரிமை உணர்வும், காந்தியடிகளார் தலைமையில் பல்லாயிரவர் பாடுபட்டுப் பயிரிட்டவை , பல்லாண்டு பயிரிட்டவை அப்பயிரைத் தலைமுறைக்குத் தலைமுறை பயிரிட வேண்டும்.  காந்தியடிகளார் தீட்டிய திட்டங்களில் ஒன்று முதியோர் கல்வி. அதை மறக்கலாமா நாம் ? முதியோர் கல்வி, தானே வளருமா ? தலைமுறை தலைமுறையாக அறியாமை. நோயிலே உழலும் நம் மக்களிடையே, (அது நோயென்று உணராத நம் மக்களிடையே) முதியோர் கல்வி, தானே வளராது. அது வளர்க்கப்பட வேண்டும். இரண்டொருவரால் அல்ல, பல்லாயிரவரால்.  பன்னிர் தெளித்துச் சேடை கூட்ட முடியாது வெந்நீர் பெய்து காடு எரியாது. முதியோர் கல்விப் பயிருக்கும் சிறு சிறு தெளிப்புப் போதாது. பல்லாயிரவர் தொண்டு தேவை. அறியாமையைச் சுட்டெரிக்கவும் பல்லாயிரவர் பாடும், ஆதரவும், ஊக்கமும் தேவை.  பல்லாயிரவர்-நாட்டுப் பற்றுடைய பல்லாயிரவர் - தொண்டர் பல்லாயிரவர்-தொண்டை. பெரியவர்களிடம் ஒட்டிக் கொள்வதற்கு வழியாக அல்லாமல், தொண்டிற்காகவே மேற்கொள்ளும் பல்லாயிரவர்-கல்லாத முதியோரிடம் விழிப்பையும் எழுச்சியையும். 'கற்றுக் கொள்ளாமல் ஓய்வதில்லை, தலை சாய்வதில்லை', என்ற பேருணர்ச்சியையும் தூண்டவல்ல, பல்லாயிரவர் பாடுபட்டால், நம் நாட்டிலும், அறிவு, வெள்ளம்போல் பெருகும். அறிவு வெள்ளமே பள்ளத்தில் கிடக்கும் பலரையும் தூக்கிவிடும் : உயர்த்தி விடும். முதியோர் கல்வித் தொண்டருக்கு ஏனோ பஞ்சம் ? இவ்வளவு விரைவிலா காந்தியத் திட்டத்தை மறந்து விட்டோம் ; இவ்வெண்ணங்களை எழுப்பிய காட்சிக்கு வாருங்கள்.  தாஷ்கண்ட் நகரம். முன் இரவு நேரம். ஒன்பது மணி. இலையுதிர் காலத்தின் தொடக்கம் பூங்காக்களில், பசும் புல் தரை மாறவில்லை. இங்கும் அங்கும் போடப்பட்டிருந்த இருக்கைகள் சில்லிட்டு விடவில்லை. காற்று மெல்ல வீசிக் கொண்டிருந்தது, அதிலே குளுமையும் இனிமையும் இருந்தன. அஞ்சுமளவு கடுங்குளிரும் சீறலும் இல்லை. வானத்திலே விண்மீன்கள் மின்னின. திங்களும் தவழ்ந்தது. இவ்வினிய சூழ்நிலையில் அந்நகரப் பூங்காக்கள் திறந்து கிடந்தன. அவை எங்களை வா, வா’ என்று அழைத்தன. எங்களை மட்டுமா, யாரையுமே, வெளியே வந்து, இருந்து, மகிழ அழைக்கும் காலமும் சூழலும் அப்போது. பல்லைக் கடித்துக்கொண்டு அவற்றை விட்டு விலகிப்போனோம். நெடுஞ்சாலையொன்றில், வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தோம். கண்ட காட்சியும், கேட்டு அறிந்த தகவலும், எழுந்த எண்ணங்களும் இதோ உங்கள் முன்னே.  ஒரு மாடிக் கட்டிடத்தின் தெருவோர அறையொன்றில், முப்பது நாற்பது பேர் அமர்ந்திருந்தனர். அத்தனை பேரும் பெண்கள். இளங்கன்னியரல்லர். தள்ளாதவர்களா ? அல்லர். நாற்பது, ஐம்பது வயது மதிக்கத்தக்க மாதர்கள். அம்மாதர்களுக்கு எதிரே ஒரு மாது வீற்றிருந்தார். அவர் பக்கத்திலே கரும்பலகை ஒன்றிருத்தது. அது மெய்யாகவே பெயருக்கேற்ப கருப்பாயிருந்தது. அதிலே ஏதோ எழுதிப் போடப்பட்டிருந்தது. மாதர்களெல்லாரும் எதையோ பார்த்துப் படித்துக் கொண்டிருந்தார்கள். இக்காட்சியைக் கண்டோம். இக்கூட்டத்தைப் பற்றிக் கேட்டறிந்தோம். அப்போதே கேட்டறிந்தோம். இக்கூட்டம் அரசியல் கூட்டமல்ல கருத்தரங்கல்ல. இலக்கியச் சொற்பொழிவுமல்ல. இலக்கிய நோட்டம் என்ற திரை மறைவு அரசியல் ஊடுருவலுமல்ல. சமயச் சொற்பொழிவின் பேரால் நடக்கும் ஆட்சி எதிர்ப்பு முயற்சியும் அல்ல. பின் என்ன ? கல்வி வகுப்பு. பாலர் கல்வி வகுப்பல்ல. தாய்மொழிக் கல்வி வகுப்பல்ல. தாய்மொழிப் புலமை வகுப்பல்ல ; பிற மொழிக் கல்வி வகுப்பு. உஸ்பெக் மாதர்கள்-முதியோர்-படிக்கும் ஜெர்மன் வகுப்பே நாங்கள் கண்டது. அம்மாதர்கள், ஏற்கெனவே தாய்மொழியாகிய உஸ்பெக்கையும் சகோதர மொழியாகிய இரஷிய மொழியையும் கற்றுத் தேறியவர்கள். அலுவலகங்களிலும் தொழிற் கூடங்களிலும் பணிபுரிகிறவர்கள்.  ’படியுங்கள், படியுங்கள். மேலும் படியுங்கள்’ என்ற நல்லுரையைப் பின்பற்றி மேலும் மேலும் புதிது புதிதாகக் கற்றுக்கொள்பவர்கள், அம்மாதர்கள். தங்கள் அன்றாட அலுவல் தீர்ந்த பின், அக்கடா என்று வீட்டிலே விழ்ந்து கிடக்காமல் அல்லது இன்றே நன்று ; எனவே இன்றே களித்திரு என்று பூங்காக்களில் பூரித்துக் கிடக்காமல், ’அறிவின் அளவே வாழ்வும்’ என்பதை உணர்ந்து, இரவு நேரங்களில், வேளைக் கல்லூரியில் : சேர்ந்து, புது மொழி யொன்றைக் கற்கும் முதிய மாணவிகள் அவர்கள். அவர்களிலே பலருக்குக் குடும்பப் பொறுப்பும் உண்டு. இத்தனைக்குமிடையிலேதான், அவர்கள் தொடர்ந்து கற்கிறார்கள்; முதுமையிலும் கற்கிறார்கள். இரவுதோறும் கல்லூரியில் கற்கிறார்கள் பிற மொழிகளைக் கற்கிறார்கள்- மொழித் தீண்டாமையை நினைவிலும் கொள்ளாது கற்கிறார்கள்.  நாங்கள் கண்டது காட்சிக்காக நடக்கும் கல்லூரியா ? இங்கும் அங்கும் பெருநகர்களின் நெடுஞ்சாலைகளில் வெளி நாட்டவர்களுக்குக் காட்ட நடத்தப்படும் கல்லூரியா ? இல்லவே இல்லை. வேளைக் கல்லூரிகளும், வேளைப் பள்ளிகளும் எங்குமுண்டு, சோவியத் ஒன்றியத்தில்; ஏராளமாக உண்டு. அவற்றில் சேர்ந்து, தொடர் கல்விப் பயன்பெறும் தொழிலாளர்கள். அலுவலர்கள், பட்டதாரிகள் இலட்சக்கணக்கினர். இந்த ஈடுபாட்டில் ஆண்களுக்கு குறைந்தவர்கள் அல்லர் பெண்கள். முதியோர் கல்வி பெறும் -எழுத்தறிவல்ல-தொடர் கல்வி பெறும், எண்ணற்ற மாதர்களில் நாற்பது பேரையே நாங்கள் தாஷ்கண்ட் இரவுக் கல்லூரியில் கண்டோம்; ஜெர்மானிய மொழி கற்கும்போது கண்டோம்.  மூன்று வாரங்களுக்குப் பின் சென்னைக்கு வந்து சேர்ந்தேன். தமிழ்நாட்டில் பொறுப்புள்ள பணியொன்றில் இருந்த இரஷியர் ஒருவரைக் கண்டேன். அவருக்கு வயது அறுபதுக்கு அருகில். அவர் பொருளாதாரத் துறையில் டாக்டர் நிலைக்குப் பட்டம் பெற்றவர். அவர் கௌரவ டாக்டர் அல்லர். படித்துத் தேறிப் பட்டம் பெற்றவர். அவர் ஆதியில்-அதாவது இளமைப் பருவத்தில்-படித்து முடித்தது எவ்வளவு ? நான்காம் வகுப்பு வரையில், ஜார் ஆட்சிக் காலத்தில், ஏழ்மை காரணமாக, நான்காவதோடு நின்றுவிட்ட அவர் சோவியத் ஆட்சிக் காலத்தில், மீண்டும் வேளைப் பள்ளியில் சேர்ந்தார். பள்ளியிறுதி தேறியதும் வேளைக் கல்லூரியில் சேர்ந்து முதற் பட்டம் பெற்றார். ஊக்கம் அதிகமாயிற்று. 'டாக்டர்’ பட்டத்திற்கும் வேளைக் கல்லூரியிலேயே படித்தார். பொருளியல் மேதையாகத் தமிழ்நாட்டிற்கு வந்தார்.  'கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு!' இது நான் கற்ற தமிழ்ப் பாடம் ; நாட்டு மக்களிடமிருந்து ஒளிக்கும் பார்க்கும் பாடம்.  'யாதானும் நாடாமால் ஊராமால், என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு’- இது தமிழ் மறை; நம் மறை; இதை ஒத யாருக்கு உரிமையுண்டு? 'இளமையிலும் இதோ( தில் தேர்ச்சிச் சீட்டுப் பெற்ற பின்னும் கண்விழித்துப் படிப்பானேன்? படிக்காத மேதை பார்த்ததில்லையா ? என்கிற போக்கிலே, நடக்கிற நமக்கா? அப்போக்கினையே வளர்க்கிற நமக்கா ? அல்லது இரவு பகல் பாராதே, முடிந்த போதெல்தாம் படி, தாய் மொழியையும் படி, அறிவு எங்கிருந்தாலும் அதைத் தேடிக்கொண்டு வா என்று சொல்லுவதோடு நில்லாமல், அவ்வழி வளர்கிற, சாந்துணையும் கற்கிற, சோவியத் மக்களுக்கா ? யாருக்குச் சொந்தம குறள் ? யார் காக்கிறார் குறள் நெறியை ?    4. ஒரு படிப்பினை   தாஷ்கண்ட் மகளிர் கல்வி ஆர்வத்தைக் கண்டேன் உங்களுக்கும் காட்டினேன். முதிய மகளிர், வெறும் வீட்டாட்சியர் அல்லர்; பகலெல்லாம் தொழில் புரிந்த மாதர், இரவுக் கல்லூரியில் சேர்ந்து, புதுமொழி ஒன்றைக் கற்கும் காட்சியினைக் கண்டேன். யான் பெற்ற அறிவு இன்பத்தை உங்களுக்கும் அளித்தேன்.  இன்று தாஷ்கண்ட் நகரிலிருந்து, மாஸ்கோவிற்கு இட்டு செல்லுகிறேன், வாரீர். உலகப் பெருநகரங்களில் ஒன்றாகிய அங்கு நடந்த நிகழ்ச்சிகள், வரலாற்றுப் புகழ் பெற்ற நிகழ்ச்சிகள் எத்தனை, எத்தனையோ! நான் கண்ட நிகழ்ச்சியோ, எளிய நிகழ்ச்சி. ஆனால் அறிவுடையோர் அறிய வேண்டிய நிகழ்ச்சி. இரஷியர் ஆட்டும் சுண்டு விரல் கண்டு வையம் ஆடப் போகிறதோ என்று அஞ்சுவோர் அனைவரும் உணர வேண்டிய நிகழ்ச்சி.  மாஸ்கோ நகரில் பள்ளிக்கூடம் ஒன்றைக் காணச் சென்றோம். பார்ப்பதற்கும் கேட்பதற்கும் அங்கு நிறைய இருந்தன. எனவே மூன்று மணிகள் ஒடிவிட்டன.  பின்னர், வெளியே வந்தோம். குளிர்காற்று சீறிக் கொண்டிருந்தது. மாலை வெயில் விலகிவிட்டது. எங்களை அழைத்து வந்த வாடகைக் கார், பள்ளியின் எதிரே. தெருவோரம் காத்துக்கொண்டிருந்தது. தெருவில், மக்கள் கூட்டம் அதிகம்; வாகனப் போக்கு வரத்து நிறைய.  இந்நிலையில், நான் முதலில் காரை நெருங்கினேன், கதவைத் திறக்க முயன்றேன் ; முடியவில்லை. அது பூட்டிக் கிடந்தது. கண்ணாடிகளும் உயர்த்தப்பட்டிருந்தன. காரோட்டி தம்மிடத்தில் உட்கார்த்திருக்கக் கண்டேன். எனவே, கதவை மெல்லத் தட்டினேன். அது, அவர் செவியில் விழவில்லை. அவர் மெய்மறந்து எதையோ படித்துக் கொண்டிருந்தார். சில நொடிகளில் எங்கள் குழுவைச் சேர்ந்த மற்றவர்களும் வந்துவிட்டனர். எங்களோடு பயணஞ் செய்யும் இரஷிய மொழிபெயர்ப்பாளர். கதவைத் தடதடவென்று ஓங்கித் தட்டினர். கரோட்டியின் காதும் கேட்டது. சட்டென்று, கையிலிருந்த நூலை மூடி வைத்தார். கதவுகளைத் திறந்தார்.  நாங்கள், உரிய இடங்களில் அமர்ந்தோம். கதவுகள் மூடப்பட்டன. கார் எங்கள் ஒட்டலை நோக்கிப் பிறந்து சென்றது.  காரோட்டி மெய்மறந்து படிப்பதைக் கண்டதும், எனக்கு ஓர் ஐயம் மின்னிற்று. சந்தடி மிகுந்த இச்சாலையில். மக்கள் நடமாட்ட வேடிக்கை நிறைத்த இந்தச் சாலையில், இவ்வளவு ஈடுபாட்டோடு படித்த நூல் எதுவாக இருக்கும் ; எது பற்றி இருக்கும்? காதல் கதையோ? போர்ப் பரணியோ ? இதுவே என் ஐயம். இந்த ஐயத்தைப் போக்கிக் கொள்ளத் துணிந்தேன். அந்நூல் என்ன நூல் என்று, கேட்டுச் சொல்ல முடியுமா என்று, மொழி பெயர்ப்பாளரை ஆங்கிலத்தில் வினவினேன். அவர் காரோட்டியை இரஷ்ய மொழியில் வினவினார். அது விஞ்ஞான நூல் என்று பதில் வந்தது. "அதைப் பார்க்கலாமா?" என்றேன். "'ஆகா'வென்று நூலைக் கொடுத்துவிட்டார். புரட்டிப் பார்த்தோம். நிறையப் படங்கள். என்ன படங்கள்? கவர்ச்சிப் படங்களா ? இல்லை. கவர்ச்சிப் படங்களால் பிழைக்கத்தான் நாம் பிறந்திருக்கிறோமே ! பின் என்ன படங்கள் ? விஞ்ஞானச் சோதனைப் படங்கள். கண்ட தாளிலா? இல்லை. நல்ல தாளில் அழகான அச்சு தெளிவான விளக்கப் படங்கள் தென்பட்டன. விஞ்ஞான நூலென்று புரிந்துகொண்டோம். பாட்டாளி படிக்கும் அவ் விஞ்ஞான நூல் எத்தகையது? விளையாட்டு விஞ்ஞானமா ? தொடக்க நிலை விஞ்ஞானமா? இந்தக் கேள்விகளைக் கிளப்பினேன்.  மொழிபெயர்ப்பாளர் என் கையிலிருந்த நூலை வாங்கினார். சில வினாடிகள் புரட்டினார். "இது கல்லூரி மட்ட விஞ்ஞானம்" என்று பதில் உரைத்தார். காரோட்டி கல்லூரி விஞ்ஞானத்தைக் கற்பதா? கல்லுாரிக்குள் அல்லாது தெருவில் தொழிலுக்காகக் காத்துக் கொண்டிருக்கும்போது கற்பதா என்று வியந்தேன். அவர் கல்லூரி மாணவரா என்று எல்லையற்ற வியப்போடு கேட்டேன்.  "ஆம்; இப்போது கல்லூரிகளுக்கு விடுமுறை கல்லூரிகள் திறந்ததும். மாலைக் கல்லூரி ஒன்றில் சேர்ந்து விஞ்ஞானம் கற்கப் போகிறேன். ஆகவே, கல்லூரிக் கல்விக்கு முன் கூட்டியே, ஆயத்தஞ் செய்து கொள்கிறேன்" என்று காரோட்டி பதில் கூறினார். வருமுன் கற்போர், இரஷிய மாணவர்; பாட்டாளி மாணவர்கூட என்பதை அறிந்து உண்மையில் மகிழ்ந்தேன்.  இந்நிகழ்ச்சி என் சிந்தனையைத் தூண்டிற்று. நமக்கு ஓர் அரிய படிப்பினையன்றோ ? ஏழ்மையுற்ற நம் நாட்டிலே நாளெல்லாம் பாடுபட்டாலும் கிடைப்பது அரை வயிற்றுக் கஞ்சியே. அறிவாற்றலும் சேர்த்தால்தானே உழைப்பின் பயன் பெருகும் ? இவ்வறிவாற்றலைப் பெறுவது எவ்வாறு ? பகலெல்லாம் உழைப்பவர்களும் இரவில் பள்ளி யில் தொழில் பயின்றால் அறிவு வளரும் ; ஆற்றல் மிகும். உழவர்களும் ஆலைத் தொழிலாளிகளும் தொழில் பற்றிய அறிவைப் பெருக்க, ஒய்வு நேரத்தைப் பயன்படுத்த வேண்டும். அத்தகைய பகுதிநேரப் படிப்பால் அறிவு வளர, ஆற்றல் பெருகும். ஆற்றல் பெருக, தொழில் சிறக்கும். தொழில் சிறக்க, நாடு வளம்பெறும். நமக்கு வேண்டியதும் அது தானே ?    5. லெனின் நூலகம்   மாஸ்கோ நகரத்துக் காரோட்டியின் கல்வி ஆர்வத்தை வியந்தவாறே, எங்களுடன் வந்த மொழி பெயர்ப்பாளரைப் பார்த்து. " இந்த விஞ்ஞான நூல், கரோட்டியே சொந்தமாக வாங்கியதா ? அல்லது இரவலாகப் பெற்றதா ?" என்று வினவினேன். அதை அவர் காரோட்டியின் இரஷிய மொழியில் கேட்டார். காரோட்டியின் பதிலை ஆங்கிலத்தில் கூறினார். பதில் என்ன ?  "நான் படிக்கும் இவ்விஞ்ஞான நூல் நூலகத்திலிருந்து இரவலாகப் பெற்றதல்ல. விலைபோட்டு வாங்கியது. இதோ பாருங்கள் எவ்வளவு உறுதியான கட்டு, விளக்கமான படங்கள், உயர்ந்த படங்கள் அத்தனையும் அழகான அச்சிலே; உயர்ந்த தாளிலே. இவ்வளவு உயர்ந்த நூலுக்குப் போட்டிருக்கும் விலையோ மிகக் குறைவு" எந்த நாட்டிலும் இவ்வளவு மலிவாக உயர் விஞ்ஞான நூல்கள் கிடைக்கா. எல்லோரும் வாங்கக்கூடிய அளவுக்கு குறைந்த விலையிலேதான் எங்கள் நாட்டு நூல்கள் வெளியாகின்றன.  இந்த பதில் இட்டுக் கட்டிப் பேசிதல்ல; உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை. நம் நாட்டில் பதினைந்து ரூபாய்க்கும் வாங்க முடியாத நூல்களை அங்கு மூன்று நான்கு ரூபாய்களுக்கு வாங்கிவிடலாம் என்பதை விசாரித்து அறிந்து கொண்டோம். நூல்களை மிக மலிவாக வெளியிட எப்படி முடிகிறது? அரசினர், ஆசிரியர்களைக் கட்டாயப்படுத்தி இலவசமாக எழுதி வாங்கிக் கொள்வதாலா? அல்லது பெயரளவில் ஏதோ சொற்பத் தொகை கொடுத்து மலிவாக கையேடுகளைப் பெறுவதாலா? அல்லது நூல் வெளியீட்டுத் தொழிலாளிகளுக்கு குறைந்த சம்பளம் கொடுப்பதாலா? எந்த உபாயங்களைக் கைக்கொண்டு விஞ்ஞான நூற்களைக்கூட மலிவாக விற்கிறார்கள் என்று கேட்டோம்.  காரோட்டி பதில் கூறுவதற்கு முன், மொழிபெயர்ப்பாளர் பதில் கூறினார்.  " இந்நாட்டில் நூலாசிரியர்களுக்கு நல்ல ஊதியம். உயர்ந்த 'இராயல்டி,' வெளியீட்டு வேலைக்காரர்களுக்கும், மற்ற வேலைகளில் உள்ளது போன்றே நல்ல சம்பளமே"  பதில் முடியவில்லை. இதற்குள் எங்களில் ஒருவர்- நானல்ல - குறுக்கிட்டார்.  "அப்படியானால் எப்படித்தான் இந்த அற்புதம் நிகழ்கிறது?" என்று வியப்புடன் வினவினார்.  " இதில் அற்புதம் ஒன்றுமில்லை. நூல் வெளியீடு இங்கு ஒரு வாணிபமல்ல; மக்களது படிப்புப் பசியைப் பயன்படுத்தி தனியார் யாரும் நூல் வெளியிட்டு, வாணிகம் செய்து குவிக்க முடியாது. நூல் வெளியீட்டுப்பணி, பொதுத்துறையில் உள்ளது நூல் வெளியீட்டிற்காக, ஒவ்வொரு குடியரசிலும் பொதுத்துறை அமைப்பு உண்டு. அவை அரசினரால் அமைக்கப்பட்டாலும் தன்னுரிமை பெற்றவை. பல்துறை மேதைகளைக் கொண்டவை. இலாபக் கண்ணொட்டம் அற்றவை.  " ஆகவே ஒவ்வொரு நூல் வெளியீடும் கட்டுபடியாக வேண்டுமென்ற குறியோடு விலை போடவேண்டிய நிர்ப்பந்தம் அற்றவை. வெளியிட்ட பல நூல்களுக்கும் சேர்த்து, ஒட்டு மொத்தத்தில், போட்ட முதல் வந்தால் போதும் என்ற அடிப்படையில் சிறப்பாகப் பணிபுரிகின்றன, இவ்வெளியிட்டுக் கழகங்கள்.  "மேலும், நூல்களை ஐந்நூறு ஆயிரம் படிகள் என்ற குறைந்த எண்ணிக்கையில் அச்சிடுவதில்லை. பொதுமக்களும் 'ஆளுக்கொரு நூல் நிலையம்' என்ற கருத்தோடு சொந்தமாக நூல்களை வாங்கச் சுணங்காது சுடச்சுட வாங்குவதால் நூல்களை முதல் பதிப்பிலேயே பதினாயிரக்கணக்கில் அச்சிடுகிறார்கள். பதிப்பிற்குப் பதிப்பு ஏராளமான படிகள். விரைவான விற்பனை, 'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும்’ சுரண்டல் கண்ணோட்டம் அற்ற நிலை. இவையே விலைக் குறைவிற்கு உள்ள முக்கிய காரணம். நாங்கள் பெற்ற பதிலின் சாரம் இது.  பதினாயிரக்கணக்கில் வாங்கிப் படிக்கப்படும் நூல்கள் எவை ? அக ஆயிரமா? புற ஆயிரமா? காதற் கதைகளா? போராட்ட நவீனங்களா ? பொழுது போக்குக் கதம்பங்களா ? விகடச் செண்டுகளா ?  இத்தகைய ஐயங்கள் எழுந்தன எங்களுக்கு. அவற்றை வெளியிட்டோம்.  "இரஷிய நூல் வெளியிட்டுக் கழகத்திற்குச் செல்லும் போது நினைவு படுத்துங்கள். அங்குள்ளவர்களிடம் இதைப் பற்றி வினவுவோம்" என்றார் மொழி பெயர்ப்பாளர்.  நாள்கள் சில சென்றன. இரஷிய நூல் வெளியீட்டுக் கழகத்திற்குச் சென்றோம். அதன் நடைமுறையைப் பற்றிப் பலப்பல தெரிந்து கொண்டோம். எங்கள் முந்தைய ஐயங்களை, மொழி பெயர்ப்பாளரே வெளியிட்டார்.  "பொழுது போக்கு நூல்களும், நகைச்சுவை நறுக்குகளும் படிக்காதவர்கள் அல்லர் சோவியத் மக்கள், போராட்டக் காவியங்களைக் கற்று, வீறு கொள்ளாதவர்கள் அல்லர் அவர்கள். காதற் கதையென்று, பச்சை பச்சையாக, பாலுணர்ச்சி யூட்டுப வையல்ல, சோவியத் நூல்கள் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.  "ஒட்டப் படிப்பு நூல்களாகிய இவற்றை ஒதுக்கிவிடவில்லை சோவியத் மக்கள். ஆயினும் இவற்றையே சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருக்கும் செக்கு மாடுகளாகவுமில்லை அவர்கள் அவர்கள் படிக்கிற நூல்களிலே நூற்றுக்கு எண்பது விழுக்காடு 'சீரியஸ்' நூல்கள். அதாவது ஊன்றிப் படிக்க வேண்டியவை' என்று அவ்வெளியீட்டுக் கழக அதிகாரி ஒருவரிடமிருந்து தெரிந்து கொண்டோம்.  விகடத்துக்கு அப்பால் விரியாத நம் படிப்பும் கிளு கிளுப்பிற்கு மேல் தெரியாத நம் காவியமும் என்றைக்கு மாறுமோ என்று ஏங்குகிறீர்களா ? ஏங்கிப் பயன் என்ன ? விழுங்குணவை விழுங்குவதற்கும் உணர்ச்சியற்ற சுகவாசிகளாயிற்றே நாம். துரங்கி முன்னேற முடியாது ஐயா, முடியாது !  மாஸ்கோ நகரத்திலே ஒரு பெரிய நூலகம் உள்ளது, அதன் பெயர் லெனின் நூலகம். உலகப் புகழ் பெற்ற, உலகத்தின் மிகப்பெரிய நூலகங்கள் மூன்று அவையாவன : இலண்டனிலுள்ள பிரிட்டிஷ் மியூசிய நூலகம், வாஷிங்டனிலுள்ன காங்கிரஸ் நூலகம், மாஸ்கோவிலுள்ள லெனின் நூலகம், முதல் இடத்திற்காக இம்மூன்றிற்கும் பலத்த போட்டி என்று கேள்விப்பட்டோம். ஆகவே, மாஸ்கோ லெனின் நூலகத்தைக் காண விழைந்தோம். அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு நாள் முற்பகல் முழுவதும் அங்கு இருந்தோம்.  லெனின் நூலகம் பல அடுக்குக் சட்டிடத்தில் உள்ளது. இது பொது நூலகம். பொது மக்கள் அனைவரும் இதை பயன்படுத்தலாம். நூல்களை மட்டுமா படிக்கலாம் ? நூல் களோடு பத்திரிகைகளையும் சஞ்சிகைகளையும் படிக்கலாம். வீட்டிற்கும் நூல்களை எடுத்துக்கொண்டு போய்ப் படிக்கலாம்.  நூல்கள், பல மாடிகளில், பல பகுதிகளில், ஒழுங்குபடுக்தி, அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நூல் ஒன்றை வேண்டுவோர், தாமோ, துலகப் பணியாளரோ, அதைத் தேடிச் சென்று எடுத்து வருவதென்றால், காலதாமதமாகும். அதற்குப் பரிகாரம் கண்டுள்ளனர்; நூல் விரும்பி, தாம் விரும்பும் நூலைப் பற்றிய தகவலை மைய இடத்திலுள்ள பணியாளர்களில் ஒருவரிடம் அறிவிப்பார். அப்பணியாளர் அதற்கான குறிப்பை எழுதி, சுழலும் தொட்டில் ஒன்றில் வைப்பார். அத்தொட்டில் கீத் மாடத்திலிருந்து, உச்சி மாடம் வரை சுழன்று கொண்டே இருக்கும். ஒவ்வொரு மாடத்திலும் தொட்டில் நிற்க இடமொன்று இருக்கிறது. தொட்டில் சில வினாடி நிற்கும் அங்கே ஒரு பணியாளர் இருப்பார். அப்பணியாள், வருகிற குறிப்புகளில் தன் மாடிக் குறிப்புகளை எடுத்துக் கொள்வார்.  தொட்டில் அடுத்த மாடிக்குச் சென்றுவிடும், உச்சிவரை சென்று திரும்பும் ; திரும்பும்போது ஒவ்வொரு மாடத்திலும் நிற்கும். மேற்சென்று திரும்புவதற்கு இடையில் குறிப்புகளின்படி கிடைத்த நூல்களைத் தொட்டிலில் இடுவார்கள், அலை கீழ் மாடத்திற்குச் செல்லும் ; அங்கு அவற்றை எடுத்துக் கேட்பவர்களுக்குக் கொடுப்பார்கள்.  அங்கு வரும் படிப்போர் கூட்டத்தையும் பல மாடிகளில் எத்தனையோ பெரும் பரப்புகளில் பல இலட்சக்கணக்கான நூல்கள் பகுத்து, ஒழுங்குபடுத்தப்பட்டு வைக்கப்பட்டிருப்பதையும் நேரில் கண்டோரே, லெனின் நூலகத்தில் அன்றாடம் நடக்கும் நூல் வழங்கு வேலையை, இயந்திர இயக்கமின்றிச் சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.  லெனின் நூலகத்தில், எத்தனை மொழிகளில் நூல்களும் வெளியீடுகளும் உள்ளனவென்று வினவினோம், நூற்று அறுபது மொழிகளில் உள்ளனவென்றார் நூலகத்தைச் சேர்ந்தவர். பளிச்சென்று கொடுக்கும் இப்பதிலில், உண்மை எவ்வளவோ, 'திறமை' எவ்வளவோ என்ற ஐயப்பாடு மின்னிற்று. எனவே என்னென்ன மொழிகளில் என்று மேலும் சோதித்தோம். அந்த நூற்று அறுபது மொழிகளின் பட்டியலையே எடுத்துக் கொடுத்துவிட்டார்.  தமிழ் மொழி இடம் பெற்றுள்ளதா என்று துழாவினேன்; நம் தமிழ் மொழியும் பட்டியலில் இருந்தது. அங்குள்ள தமிழ் நூல்களும் சஞ்சிகைகளும் நம்முடைய அன்பளிப்பல்ல. விலை கொடுத்து வாங்கியவை என்று அறிந்து மகிழ்ந்தேன்.  லெனின் நூலகம், வெறும் நூலகமாக மட்டும் பணியாற்ற வில்லை. பத்திரிகைப் படிப்பகமாகவும் பணியாற்றுகிறது என்று தெரிந்து கொண்டோம்.  அங்குப் பல மொழிச் செய்தித்தாள்களும், வார இதழ்களும், மாத மலர்களும் இருந்தன. பொது நூலகத்தில் பத்திரிகைப் படிப்பகமும் இருக்க வேண்டுமா என்ற என் கேள்விக்கு, 'பொது நூலகத்திலிருந்து விரட்டப்பட வேண்டியவை அல்ல, செய்தித்தாள்களும் சஞ்சிகைகளும்' என்று பதில் கிடைத்தது இத்தகைய பொது நூலக வசதி, மாஸ்கோவில் மட்டுமா ? பிற பகுதிகளில் உண்டா ? பொதுநூலக வசதி, நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் உண்டு. நான்கு இலட்சம் பொது நூலகங்கள் அன்று இருந்தன.  லெனின் நூலகத்தில் தமிழ் சஞ்சிசைகள் இருக்கும் பகுதியைக் காண விழைந்தேன். அங்கு அழைத்துச் சென்றார்: மேசைகளின் மேல், சில தமிழ்ச் சஞ்சிகைகள் இருந்தன. அவை ஏற்கனவே, அறிமுகமானவை. அவை, பொது உடைமைக் கொள்கைச் சார்புடையனவல்ல. என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. நம் நாட்டு முதலாளித்துவ சஞ்சிகைகளே அவை.    6. லெனினும் காந்தியும்   'மாகடல் மடை திறந்தால் போன்று, கல்வி வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறதே, சோவியத் ஒன்றியத்தில் இளமையில் மட்டுமல்லாமல் முதுமையிலும் ஆழ்ந்து கற்கின்றனரே ! பாட்டிகளும் பாட்டாளிகளும் படிப்பாளியாக விளங்குகின்றனரே. எங்கெங்கு நோக்கினும் எல்லார்க்கும் கல்வி, நல்ல கல்வி, ஒன்றான கல்வி என்ற அறிவொளி வீசுகிறதே ! எப்படித்தான் விளைந்ததோ இந்நிலை?' என்று வியந்தோம். அந்த 'அற்புத'த்தைக் கண்டு திகைத்தோம். யார் சென்று கண்டாலும், இப்படியே வியக்கத்தான் வேண்டும் ; திகைக்காமல் இருக்க முடியாது.  மெய்யாக இது 'அற்புத'மா? 'அற்புத'மாயின், அதற்காகக் காலமெல்லாம் காத்திருப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் ? இப்படிப் பல முறை குழம்பினோம். சில நாள் களுக்குப் பின், தெளிவு பிறந்தது.  சோவியத் ஒன்றியத்தில், கல்விக்கூடந்தோறும், லெனின் படமே அங்குச் செல்வோரை, முதன் முதல் வரவேற்கும், அப்படமும் பெரிய அளவில் இருக்கும். அதைக் கண்ட பிறகே, உள்ளே செல்ல இயலும். நாங்களும், ஒவ்வொரு கல்விக் கூடத்திலும் அப் பெரியாரின் படத்தைப் பார்த்துவிட்டே உள்ளே சென்றோம். அப்படத்தின் அடியில் அவர்கள் மொழியில் பளிச்சென்று எழுதியிருப்பதைப் பார்த்தோம். ஒரு முறையன்று. பலமுறை பார்த்தோம். எழுதியிருப்பது என்ன என்று கேட்கவில்லை. லெனினது பெயரையோ, அவரது சிறப்புப் பெயரையோ எழுதியிருப்பார்கள் என்று நினைத்தோம். அது என்ன என்று கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற எண்ணமே எழவில்லை. 'கடா கன்று போட்டது என்று கேட்டதும், கட்டி விடுகிறேன' என்று பணிவிலே பழக்கப்படுத்தப்பட்ட அரசினர். ஊழியர்கள் அல்லவா. நாங்கள் ? நாள்கள் சில சென்றன.  ஒருபோது, எங்கள் குழுவில் ஒருவராகிய அம்மையார் லெனின் படத்தைக் காட்டி, அதன் அடியில் எழுதியிருப்பது என்ன என்று திடீரெனக் கேட்டுவிட்டார். பதில் வந்தது. ஆங்கிலத்தில் எழுதியிருந்தது என்ன தெரியுமா? படியுங்கள்! படியுங்கள்! மேலும் மேலும் படியுங்கள் லெனின் படத்தின் அடியில் எழுதியிருந்தது இதுவே.  சோவியத் புரட்சி வீரர் லெனின் எத்தனையோ பேசியிருப்பார்! எத்தனையோ எழுதியிருப்பார்! பொதுஉடமைக் கொள்கைகளைப் பலமுறை விளக்கியிருப்பார்! அவற்றிலே ஒன்றை-ஒரு மந்திரத்தை-ஒரு முழக்கத்தை-ஒர் ஊக்க ஒலியைப் போடாமல்-இதை எழுதிப் போட்டிருப்பது ஏன் ? கல்விக்கூடங்களுக்கு இதுவே பொருத்தம் என்பதாலா? பொது உடைமைப் பால் ஊட்டுவதற்கு பதில், பொறுப்புள்ள தொடக்கநிலை ஆசிரியர் கொடுக்க வேண்டிய தண்ணிரையா கொடுப்பது? இவ்வையங்களையெல்லாம் கொட்டிவிட்டோம். அது நல்லதாக முடிந்தது. சோவியத் ஒன்றியத்தில் கண்ட கல்வி 'அற்புதத்தின் ஆணிவேரை, கப்பை, கிளையைக் காணும் வாய்ப்புக் கிட்டிற்று.  எங்களுக்கு அன்று கிடைத்த, பதிலின், விளக்கத்தின் சாரம் இதோ .  'இம்மென்றால் சிறைவாசம்; ஏனென்றால் வனவாசம்' என்ற முறையிலே ஜார் ஆட்சி இரஷியாவில் நடந்து வந்தது. அக்காலத்தில், உழுது விதைத்து, அறுப்பார்க்கு உணவில்லை. உணவில்லாவிட்டால், என்ன ? பிணிகள் உண்டு. குளிருக்கு உடையில்லை. ஆயினும் என்ன ? உறைந்து விறைத்துப் போனால், பிறவித் துன்பம் அன்றோடே அகன்றது. இந்நிலையைக் கண்டு பொங்கி எழுந்தனர் பலர்; திட்டம் தீட்டினர் தலைவர்கள்; மன்னராட்சியைக் கவிழ்க்க வழி வகை ஆய்ந்தனர்; சோவியத் ஆட்சியை நிறுவ முயன்றனர்; அத்தகைய முயற்சி, எடுத்ததும் வெற்றி பெறவில்லை. முதன் முறை தோல்வி, பலருக்குத் தண்டனை அடுத்தடுத்து இப்படியே, போராட்டம், தோல்வி, தண்டனை, தலை மறைவு. ஆகவே, நாடு முழுவதும் இதைப் பற்றிய எண்ணம், குசுகுசுப் பேச்சு.  'வல்லமை பொருந்திய பேரரசைப் படிப்பாளிகள் சிலரது தலைமையில் பாமரர் பலர் எதிர்த்துக் கவிழ்ப்பது எளிதான செயலா ? இப்போராட்டத் திட்டங்களுல் பல இரகசியமாகத் தீட்டப்பட்டன. இரகசியத் திட்டங்களைத் தீட்டியவர்களில் லெனினுக்கே தலைமை இடம்.  "மன்னராட்சியைக் கவிழ்க்கும் புரட்சியில் மக்கள் பங்கு என்ன ? பலதுறைப் பாட்டாளிகளும், பலவூர்ப் பொது மக்களும். இரகசியமாக லெனினோடும் அவரது சகாக்களோடும் தொடர்பு கொண்டனர். இரகசியக் கட்டளைகளைப் பெற்றனர். மற்றவர்களைப் போல, மாணவ சமுதாயமும் இரகசியத் தொடர்பு கொண்டது; புரட்சிப் பணியில் தங்களுக்கும் பங்கு கேட்டது. எங்கெங்கே, என்னென்ன வேலைகளை எவ்வப்போது செய்து முடிக்க வேண்டுமென்று, ஆணை கேட்டது. பொது மக்களில், பல பிரிவினருக்குப் பல வகையான போராட்டங்களைக் கிளர்ச்சிப் பணிகளை, உயிர் கொடுக்கும் பணிகளைக் கொடுத்த லெனின், மாணவர்களுக்கு விறுவிறுப்பில்லாத் பணியையே கொடுத்தார். என்ன பணி அது ?  "படியுங்கள்: படியுங்கள் ! மேலும் மேலும் படியுங்கள்!" வகுப்பாசிரியரிடம் எதிர்பார்க்க வேண்டிய இவ்வறவுரையை வீரர் லெனினிடம் எதிர்பார்க்கவில்லை. இது மாணவர்களுக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.  புரட்சி என்ன எளிதான முயற்சியா ? ஒரு முறைக்குப் பல முறை தோற்ற வினையல்லவா ? பல்லாயிரக்கணக்கானவர்களைப் பலி கொண்டும் தோற்றதல்லவா ? புரட்சி. வலிமை மிக்க ஜாராட்சியைக் கவிழ்க்க, எல்லாரையும் எல்லாவற்றையும், கிடைத்தவர்களையெல்லாம், கிடைத்தவற்றையெல்லாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டாவா ? இக்கேள்விகள், புரட்சித் தலைவர் லெனினுக்கு எட்டின.  "புரட்சி மிகக் கடுமையானதே ! அது வெற்றி பெறப் பல ஒத்திகைகள் தேவைப்படலாம். அவற்றில், பெரும் உயிர்ச் சேதமும், பொருட்சேதமும் விளையலாம். எத்தனை விலையானாலும், அதைக் கொடுத்து, ஒரு நாள் வெற்றி பெறுவோம். அப்புறம் ? புதிய சமதர்ம ஆட்சியை நிலைபெறச் செய்ய, கட்டிக்காக்க, வளப்படுத்த. வலுப்படுத்த, பல்லாண்டுகள் ஆகுமே! சோவியத் ஆட்சித் தந்தைகளான முதியவர்களே, காலமெல்லாம், உயிரோடிருந்து, காக்க முடியுமா ? இளைய பரம்பரையன்றோ முன்வந்து பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்? ஜார் ஆட்சிக்கு உள்ள எதிர்ப்பைவிடச் சோவியத் ஆட்சிக்கு உள்ள எதிர்ப்பு, தொடக்க நிலையிலாவது அதிகமாக இருக்கும்; பல ஆண்டுகளுக்கு இருக்கும். உலக எதிர்ப்புக்கிடையில் சோவியத் ஆட்சி முறையைக் காத்து, வளர்க்க வேண்டிய இளைஞர்களை-மாணவர்களைப் புரட்சி நெருக்கடியில் இழுத்து விட்டால், நாளை சமதர்ம ஆட்சியைத் திறம்பட நடத்தப் போதிய அறிஞர்கள். விஞ்ஞானிகள், விற்பன்னர்கள், மேதைகள் பஞ்சம் வந்துவிடுமே. ஆகவே மாணவர்களை மாணவர்களாகவே விட்டுவைப்போம்.  படிப்பிலேயே ஊக்குவோம் முதியவர்களாகிய நாம் மற்றவற்றைப் பார்த்துக்கொள்வோம். இரஷியாவின் நீண்ட எதிர்காலத்தின் நன்மைக்காக, இளைஞர்களை இப்படிக்காத்து ஆகவேண்டும். மேலும் மேலும் கற்க வைத்தாக வேண்டும் என்று லெனின் கண்டிப்பாக இருந்தார்.  "கற்பதே, மேலும் மேலும் கற்பதே. மாணவர்கள் ஆற்ற வேண்டிய நாட்டுத் தொண்டு ; புரட்சிப் பணி' என்று லெனின் அறவுரையும் அறிவுரையும் கூறியதோடு நில்லாமல், தாமும் தம் கட்சியும் அன்றும் பின்னும் அக் கொள்கையை வழுவாமல் காத் திராவிட்டால், சோவியத்தின் ஒன்றியத்தின் அறிவியல். பொறி இயல், தொழில் இயல் வெற்றிகளை-இந்த அளவிற்குப் பெற்றிருக்க முடியாது. தலைவர் லெனினது நல்லுரைகளில், இவ்வுரையே. அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் இளைஞர்களுக்குத் தேவையானது. ஆகவே இதை லெனினது படத்தின் கீழ் எழுதி வைத்திருக்கிறோம்.’’ இப்படி எங்களுக்கு விளக்கிக் கூறினார்கள்.  "அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன், என்பதைப்போல் இப்போதைக்கு-சமதர்ம ஆட்சிக் காலத்திற்கானதை அப்போதே-ஜார் ஆட்சிக் காலத்தின்போதே அறிவுறுத்தி, விதை நெல்களான மாணவர்களைக் கட்டிக் காத்ததால் அன்றோ, உலகம் வியக்கத்தக்க, முன்னறியாப் பெரும் செயல்களையெல்லாம் அருஞ் சித்துக்களையெல்லாம் செய்ய முடிகிறது சோவியத் ஒன்றியத்தால். வான வெளியிலே உலகத்தைச் சுற்றிய கருவிகளையும், நிலா உலகிற்குச்சென்று இறங்கிய கருவிகளையும் செய்து தந்த தொழில் மேதைகளும்; வழி வகைகளை வகுத்துத் தந்த விஞ்ஞானிகளும், கணித மேதைகளும் எங்கிருந்தோ குதித்து விட்டார்களா ? நிலம் வெடிக்க மேதைகளாக வெளி வந்தவர்களா ? லெனின் காலத்து மானவர்கள் அல்லவா படித்துப் படித்து, மேலும் மேலும் படித்து, உலகத் தலைமை நிலையை எட்டிப் பிடித்து விட்டார்கள். வளர வேண்டிய நாமும், நம் மாணவர்களை மாணவர்களாக வளரும்படி பார்த்துக் கொள்ளவேண்டாமா ? இதோ என் கல்லூரி மாணவப் பருவம் நினைவிற்கு வருகிறது. ஆண்டு. ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்து எட்டு. நான் படித்தது சென்னை மாநிலக் கல்லூரியில். படித்த வகுப்பு இண்டர் மீடியட் அப்போது மாநிலக் கல்லூரியிலும் இண்டர் மீடியட் வகுப்பு உண்டு. அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் அரசினர் ஒரு குழுவை இந்தியாவிறகு அனுப்பி வைத்தனர். இந்தியாவில் பல நகரங்களுக்குச் சென்று, இந்தியாவிலுள்ள பல பெரியவர்களையும் கலந்தாலோசிக்க வேண்டும். பின்னர், இந்தியர்களுக்கு எந்த அளவு தன்னாட்சி உரிமை கொடுக்கலாம் என்பதை அக்குழு பரிந்துரைக்க வேண்டும். இந்த ஆணையோடு வந்த குழுவிற்குப் பெயர் சைமன் குழு.  சைமன் குழு அமைக்கப்பட்டதும் பொங்கி யெழுந்தார் நாட்டின் தந்தை. உரிமைப் போராட்டத்தின் ஒப்பற்ற தலைவர், மகாத்மா காந்தி. 'எங்கள் உரிமையைப் பறித்தது அநீதி, எவ்வளவு உரிமை கொடுக்கலாமென்று விசாரிக்க வருவது அவமானப்படுத்துவதாகும். ஆகவே சைமன் குழுவை பகிஷ்கரியுங்கள்' என்று கட்டளையிட்டார் காந்தியார். கட்டளையை நிறைவேற்ற துடித்தனர் நாட்டுப்பற்றுடையோர். பகிஷ்காரக் கூட்டங்களுக்கும் ஊர்வலங்களுக்கும் நாடு முழுவதிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்நிய அரசு சும்மா இருக்குமா ? கட்டவிழ்த்துவிட்டது அடக்குமுறையை. கூட்டங்களுக்கும் ஊர்வலங்களுக்கும் தடைகள், அலைமேல் அலையாக வந்தன. கடல் பொங்கினும் கலங்காத ஜவகர்லால் நேரு, அலகாபாத்தில், சைமன் குழுவே திரும்பிப் போ என்று முழங்கிக்கொண்டு, தலைமை தாங்கிப் பகிஷ்கார ஊர்வலத்தை நடத்தினார். வேடிக்கையா பார்க்கும், ஞாயிறு மறையாத சாம்ராஜ்யம் ? நேரு கைது செய்யப்பட்டார்.  இச் செய்தி நாடு முழுவதும் பரவிற்று; விரைந்து பரவிற்று. சென்னைக்கும் வந்தது. மக்கள் கொதித்தனர்; மாணவர்கள் கிளர்ந்து எழுந்தனர். வேலை நிறுத்த ஏற்பாடு செய்தன; கல்லூரிகளுக்குச் செல்லாமல், வேலை நிறுத்தமும் செய்தனர் எல்லாரும் அல்ல ; ஏராளமானவர்கள்.  வேலை நிறுத்தத் தலைவர்கள்-மாணவர்களே-தந்தி கொடுத்தனர் மகாத்மா காந்திக்கு. கல்லூரி மாணவர்கள் வெற்றிகரமாக வேலை நிறுத்தம் செய்துவிட்டோம். நேருவை நிபந்தனையின்றி விடுதலை செய்யும்வரை மாணவர் வேலை நிறுத்தம் தொடரும். அதற்குத் தங்கள் ஆசி தேவை.' இதுவே தந்தி.  பதில் தந்தி வந்தது. 'தேசத் தொண்டர்கள் ஆகும் பொருட்டுக் கல்விக்கூடங்களை விட்டு வெளியேறி விடுங்கள். இல்லையேல் மாணவர்களாக இருந்து கல்லூரிக் கட்டுப்பாட்டிற்கு அடங்கி படியுங்கள்.' ஆசிச் செய்தியா இது ? ஆதரவா இது ? பதிலைப் பார்த்ததும், துடித்தனர். திட்டினர் சிலர் ஆனாலும் அடுத்த நாளே திரும்பிவிட்டனர் கல்லூரிகளுக்கு.  "ஆங்கில ஆட்சியினர் நடத்தும் கல்விக்கூடங்களை விட்டு வந்துவிடுங்கள். ஆங்கிலக் கல்வி நமக்குத் தேவையில்லை" என்று உபதேசம் செய்யும் காந்தியார், இப் பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தியிருக்கக் கூடாதா ? இதை சாக்காக வைத்தாவது ஆங்கிலக் கல்வியை ஒட்டையாக்கி யிருக்கலாமே!" இப்படி அங்கலாய்த்தனர், மாணவ மணிகள்.  மாதங்கள் பல சென்றன. மகாத்மா காந்தி தென்னகம் வந்தார். பல இடங்களுக்குச் சென்றார். பொதுக் கூட்டங்களில் பேசினார். மக்களுக்கு உணர்ச்சியூட்டினார். அந்த சுற்றுப் பயணத்தில், வேலூரில், மாணவர் கூட்டமொன்றிற்கு அறிவுரை வழங்கினார். கேள்விச் சீட்டொன்று அவரிடம் சேர்ந்தது. ஆங்கிலக் கல்விக் கூடங்களை வெறுத்து ஒதுக்கச் சொல்லும் தாங்கள். நேரு கைதானதைக் கண்டிக்கும் பொருட்டு, சென்னைக் கல்லூரி மாணவர்கள் வேலை நிறுத்தஞ் செய்ததை, ஆதரிக்க வில்லையே, ஏன்?. 'ஆம்; ஆங்கிலக் கல்வி ஆகாது. அதை ஒதுக்கித் தள்ளிவிட்டு வந்து, நாட்டுத் தொண்டு செய்வது நல்லது. ஆனால், இக்கொள்கையில் நம்பிக்கையில்லாதவர்கள். ஆங்கிலக் கல்வி பெற விரும்பும் மாணவர்கள். அக்கல்விக் கூடங்களின் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் மதித்து, அவற்றிற்கு அடங்கி நடப்பதே முறை ஒரே நேரத்தில், அரசியல் ஊழியராகவும். மாணவராகவும் இருப்பது முடியாது'-இதுவே மகாத்மாவின் பதில். ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வைக்கலாமா ?  ஆகவே, சிறிது நேரத்திற்குப் பிறகு மற்றொரு கேள்விச்சீட்டு சென்றது. அக்கேள்வியென்ன ? 'மாணவர்களில் பலருக்கு நாட்டுப் பற்று உண்டு. இப்போதே நாட்டுத் தொண்டில் ஈடுபடாவிட்டால், அப்பற்று அடியோடு பட்டுப் போகுமே ! மாணவப் பருவம் முடியும்வரை நாட்டுப்பற்றைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தால், அவர்கள் தேசத் தொண்டர்களாவது எப்படி ?'  இக்கேள்விக்குக் காந்தியார் பதில் கூறினார். சாரம் இதோ :  ஆங்கிலக் கல்வி கற்பதனால் நாட்டை மறக்க வேண்டா ; வெறுக்க வேண்டா. நாட்டுப்பற்றைப் பசுமையாக வைத்துக்கொள்ளுங்கள். படிப்புக்குப் பங்கம் இல்லாமல் பணியாற்றுங்கள். வார. பருவ விடுமுறைகளின்போது, சிற்றுர்களுக்குச் செல்லுங்கள். தீண்டாமை ஒழிப்பு, மது விலக்கு, கதர் உடுத்தல், சமூகத் துப்புரவு ஆகிய ஆக்கப் பணிகளைச் செய்யுங்கள். இவை, சிறந்த நாட்டுத் தொண்டு’ என்றார்.  'எதைப் பெறவேண்டுமானாலும் அதற்குரிய வழியிலே, அதற்குரிய வகையிலே பெற வேண்டும், ஆங்கிலக் கல்வி ஆகாதென்று தாம் கருதினாலும், அதைப் பெற விரும்பு கிறவர்கள், அதற்குரிய இடத்திலே, அதற்குரிய ஒழுங்கிலே கட்டுப்பாட்டிலே, ஒருமை ஈடுபாட்டிலே, பெறவேண்டும் என்று தெளிவுபடுத்தினார் மகாத்மா காந்தி.  ஆயுதப் புரட்சி வீரர் லெனின் மந்திரம், 'மாணவர்கள் மாணவர்களாயிருக்கட்டும்.'  அமைதிப் புரட்சி வீரர், சாந்தத்தின் திருவுருவம் காந்தியடிகளாரின் மூல மந்திரம், 'மாணவர்கள், மாணவர்களாயிருக்கட்டும்.  இரு வேறு வகையான உலக வழிகாட்டிகளின் மாணவர்களுக்கான மந்திரம் ஒன்றே. மாணவர்கள், மாணவர்களாயிருக்கட்டும் என்பதே. இந்த ஞானம் வந்தாற்பின் வேறென்ன வேண்டும் ? வருமா? வரவிடுவோமா ? வந்தால் கல்வி நம்மோடு நின்று விடாதே எல்லோருக்கும் சென்று விடுமே !  மகாத்மாவையே சுட்டுக் கொன்றுவிட்டோமே ! அவர் அறிவுரையை இருட்டடிக்கவா முடியாது ? மாணவர்களை திசை திருப்பவா தெரியாது ? இப்படிக் கனவு காண்போர் கணக்கற்றோர்.    7. பேச்சுரிமையில் பெருமிதம்   இலண்டன் மாநகரம், உலகப் பெருநகரங்களில் ஒன்று. பிரிட்டிஷ் பேரரசின் தலைநகரம் அது. வரலாற்றுச் சிறப்புடைய ஒன்று அது. பாராளுமன்றங்களின் தாயாக விளங்கும் பிரிட்டிஷ் பாராளுமன்றம் அமைந்திருப்பது அங்கேதான். உலக வாணிக மையங்களில் ஒன்று இலண்டன். அதன் சிறப்புக்கள் எத்தனையோ! எத்தனையோ சிறப்புக்களுடைய இலண்டன் நகருக்கு, நான் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அங்குப் பல நாள் தங்கவும் வாய்ப்புக் கிட்டிற்று ஒரு முறை யன்று; இருமுறை.  முதன் முறை அங்குச் சென்று தங்கியது ; ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தொன்றில், பிரிட்டனின் கல்வி முறைகளை நேரில் கண்டு அறிந்து வருமாறு, அப்போதைய , சென்னை கல்வி அமைச்சர், கனம் மாதவமேனன், என்னை அனுப்பியிருந்தார். அந்நாட்டில், நான்கு மாதங்களிருந்து கண்டு கற்று வந்தேன். அப்போது நான் தனியே செல்லவில்லை. என் மனைவியையும் அழைத்துச் சென்றேன். அந்நியச் செலாவணி முடை இல்லாத காலம் அது. ஆகவே, மனைவியையும் அழைத்துப் போவது எளிதாக இருந்தது.  இலண்டனில் காணத் தக்கவை பல. எவை எவை என்பது, அவரவர் ஈடுபாட்டை, சார்பை, சுவையைப் பொருத்தது. அங்கு நாங்கள் கண்டவை சில. அவற்றில் ஒன்று ‘ஹைட் பார்க்’ என்ற பூங்கா. அது இலண்டனுக்கு, வெளியிலோ, அடுத்தோ இருக்கும் பூங்கா அல்ல. நகருக்கு உள்ளே இருக்கும் பூங்கா. பரவலான பூங்கா. மெய்யாகவே மிகப் பரவலான பூங்கா.  எட்டுக்கு எட்டு மீட்டரில். எங்கோ ஒரு மூலையில், கட்டப்படாமலிருக்கும் பொட்டலுக்கு, நாம் ‘பூங்கா’ என்று அருமையாகப் பெயரிட்டு விடுகிறோமே. அப்படிப்பட்ட பூங்கா ‘ஹைட் பார்க்.’ பல கிலோ மீட்டர் நீளமும் பல கிலோ மீட்டர் அகலமும் உடையது. புல் தரைகளும் பெரு மரங்களும் அடர்ந்தது. நெடுங் காலமாக அழிக்கப்படாமல், சிதைக்கப்படாமல் காப்பாற்றப்படுகின்றது. உலாவ ஏற்ற இடம் ; நிழலிலே ஒய்ந்திருக்க ஏற்ற இடம் இத்தனையும் எங்களைக் கவர்ந்தன. இம்முறைகளிலும் அதைப் பயன்படுத்தினோம் நாங்கள்.  இவற்றிற்கு மேலான சிறப்பொன்றும் உண்டு அப் பூங்காவிற்கு. அதுவென்ன ? பேச்சுரிமையைப் பெற்ற களம் அது. பேச்சுரிமையைக் காக்கும் களம் அது.  பிரிட்டன் கோனாட்சி நாடு. கோனாட்சி பெயரளவில் தான், மெய்யாக நடப்பது மக்களாட்சி.  அந்நாட்டை முற்காலத்தில் ஆண்ட மன்னர்களில் சிலர், கோனாட்சியைக் கோலாட்சியாக, கொடுங்கோல் ஆட்சியாக ஆக்கிவிட்டனர். அவர்கள் நினைத்தற்கு மாறாக, யாரும் மூச்சுவிடக்கூடாது. 'கப்சிப்' தர்பார் நடத்த முயன்றனர் பலித்ததா ? இல்லை.  அடக்குமுறை, கடுமையான அடக்குமுறை நேர்மாறான விளைவையே கொடுக்கும். ஆங்கிலேயப் பொதுமக்களும் கொதித்து எழுந்தனர் : எதிர்த்து முழங்கினர்; அரசின் அநீதிகளைக் கண்டித்தனர். அடி உதை பட்டனர். சிறையிலே அடைபட்டு, வாடி மடிந்தனர். தலையையும் கொடுத்தனர். இறுதியில் வெற்றியும் பெற்றனர். பொது மக்களுடைய பேச்சுரிமையை ஆழமாக நிலைநாட்டினர்.  இன்று அந்நாட்டில் முழுப் பேச்சுரிமை நிலவுகிறது. சட்ட நூல்களில் கிடக்கும் உரிமையல்ல, அங்கு நிலவுவது. எல்லாரும் அன்றாடம் பயன்படுத்தும் பேச்சுரிமையை அங்கே பளிச்சென்று காணலாம்.  பேச்சுரிமைப் போராட்டத்தில் சிறப்பு இடம் பெற்ற ஓரிடம், அந்த ‘ஹைட் பார்க்கி’ன் மூலையொன்று. அங்குத்தான் சில நூற்றாண்டுகளுக்கு முன், பேச்சுரிமைத் தலைவர்களும் தொண்டர்களும், அவ்வுரிமையை நிலைநாட்ட, அக்கால நடைமுறையில் இருந்த அரசியல் தவறுகளையும் பிறவற்றையும் கண்டிக்கும் களம் அமைத்து, போராடி வந்தனர்.  அக் களத்திலே பேச்சு மேடையில்லை. அன்றும் இல்லை; இன்றும் இல்லை. அன்றைய அரசியலில், சமுதாயத்தில், வாழ்க்கை முறையில் கண்ட தீங்குகளைப் பற்றிக் கொதிப்படைந்தவர்கள் அம் மூலைக்குச் சென்று, கருத்து முழக்கம் செய்வார்கள். பூங்காவிற்கு வந்தவர்களில் துணிந்தவர்கள் பேச்சாளரைச் சுற்றி நின்று கேட்பார்கள்.  பேச்சு, தானாகவே முடியுமென்று சொல்ல முடியாது. அரசின் அடக்குமுறையாளர்களால், பேச்சாளர், பேசத் தொடங்கியதும், கைது செய்யப்படுவதும் உண்டு. விட்டுப் பிடிப்பதும் உண்டு. சிறிது நேரம் பேசியதும், தண்டிப்பதற்குப் போதிய ஆதாரம கிடைத்துவிட்டது என்று தெரிந்ததும் கைது செய்யப்படுவதும் உண்டு. கைது செய்யப்படாமல் ஒருவர் பேச்சு முழுவதும் பேசி முடித்தால், அநேகமாக அப்பேச்சில் உயிரோ கருத்தோ இல்லை என்றே பொருள். இப்படிப்பட்ட அடக்குமுறையை எதிர்த்துப் பல்லாண்டு, பலர், பேசிப் பேசி, அனுபவித்த சிறைத் தண்டனையாக, அடி உதையாகச் சொல்லவொண்ணாக் கொடுமைகளாகப் பெருவிலை கொடுத்து, பேச்சுரிமையைப் பெற்ற ‘குருகேஷத்திரம்’ ‘ஹைட் பார்க்கின் மூலையொன்று’  அக்காலம் முதல், அம் மூலையில், ஒரே நேரத்தில் பல பேச்சாளர்கள் பேசுவர்; விடுமுறை நாள்களில், ஒரே வேளை, பத்துப் பதினைந்து ‘கூட்டங்கள்’ அடுத்தடுத்து நடக்கும்; மற்ற நாள்களில் ஏக காலத்தில் ஐந்தாறு கூட்டங்கள் நடக்கும்.  அங்குப் பேச, யாருடைய அனுமதியும் தேவையில்லை. அங்கு, மேடை அமைக்கக் கூடாது. ஆகவே, பேச்சாளரே! அவரது தோழரோ, காலி சாதிக்காய்ப் பெட்டி ஒன்றைக் கொண்டுபோய், அங்கோர் இடத்தில் போட்டு அதன்மேல் நின்று பேசுவார். நிலத்தின் மேல் நின்றே பேசுவோர் பலர். உரிமையை நிலைநிறுத்தும் அவர்களுக்கும் மற்றொரு கட்டுப்பாடு உள்ளது.  அது என்ன ?  அங்கு யாரும் ‘மைக்’ அமைக்கக்கூடாது. ஒருவர், ஒலி பெருக்கி அமைத்துக் கொண்டு பேசினால், அருகில் நடக்கும் மற்றக் கூட்டங்களுக்கு, அது இடையூறாக இருக்கும். மற்றப் பேச்சாளர்களின் உரிமையை ஒலி பெருக்கி பறிக்கும். எனவே, அந்த இடத்தில், யாரும் ஒலி பெருக்கி வைத்துப் பேசக் கூடா தென்ற தடையுண்டு.  நானும் என் மனைவியும் இலண்டனிலிருந்தபோது, ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை, பேச்சுரிமைப் புனித பூமிக்குச் சென்றோம். கூட்டங்கள் நடக்கும் வகையைக் காணவே சென்றோம். பூங்காவிற்குள் நுழைந்ததும், ஒரு சிறு கூட்டத்தைக் கண்டோம். பதினைந்து இருபது பேர்களுக்கு மேல் இல்லை அங்கு. அதில் ஒருவர், ஆர்வத்தோடு பேசிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் அவர் பேச்சைக் கேட்டோம். அவர் ஒரு யூதர். யூத சமயத்தைப் பற்றிப் பேசினார். தங்கள் 'கர்த்தர்' இனித் தான் வரப்போகிறார் என்றார். அவரை வரவேற்பதற்காக ஆயத்தஞ் செய்துகொள்ளச் சொன்னார். அத்தனை பேச்சுக் களையும் பதம் பார்க்க எங்களுக்கு ஆசை. ஆகவே, சில அடி துரத்தில் நடந்து கொண்டிருந்த அடுத்த கூட்டத்திற்கு நகர்ந்தோம். அங்கும் ஒருவர் ஆர்வத்தோடு பேசிக்கொண் டிருந்தார். அவர் கத்தோலிக்க கிருத்துவர். 'கர்த்தர்' ஏசுவாக, வந்ததைப் பற்றிப் பேசினார். அவரது கொள்கைகளைப் போப்பாண்டவர் விளக்கிக் கூறுவது போலவே ஏற்றுக் கொள்ளவேண்டும். அதுவே விசுவாசத்திற்கு அடையாளம் என்றும் பேசிக்கொண்டிருந்தார். அப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களும் சிலரே.  அடுத்த கூட்டத்தில் பிராடெஸ்டண்ட் கிருத்துவர் ஒருவர், தம் சமயப் பிரிவின் சிறப்புக்களைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்தார். அவரது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த சிலரோடு நாங்களும் சேர்ந்து சிறிது கேட்டோம். மெல்ல நழுவினோம்.  சில அடி துரத்தில் வேறொருவர் பேசிக்கொண்டிருந்தார். அங்கும் முப்பது நாற்பது பேருக்குமேல் கூடவில்லை; அவர்களோடு கலந்து நாங்களும் பேச்சைக் கேட்டோம்.  சமயச் சொற்பொழிவுகளையும், சமயங்களையும் கண்டித்துக் கொண்டிருந்தார். உழைத்துப் பிழைக்க முடியாதவர்கள், ஆண்டவனைப் பற்றிப் பேசிப் பிழைக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டினார் ; பெரியார் பாணியில், சமயங்களை யெல்லாம் சாடினார். அங்கிருந்து அடுத்ததற்கு விரைந்தோம். ஏதோ உள்ளுர் விவகாரம் பற்றி ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். பேச்சு காரமாகவே இருந்தது. இப்படி உள்ளுர், பிராந்தியச் சிக்கல்கள் பற்றிய கருத்துரைகள், இரண்டொன்றையும், சிறிது சிறிது கேட்டுவிட்டு, ஒரு பெருங்கூட்டத்திற்கு வந்து சேர்ந்தோம் அன்று நாங்கள் கண்ட அத்தனைக் கூட்டங்களிலும் பெரியது அது. கூடியிருந்தார், அதிகம் இருந்தால், இருநூறு பேராக இருக்கலாம். பத்தும் பதினைந்தும், முப்பதும் முப்பத்தைந்துமே கண்ட யாருக்குமே இருநூறு பேர் கொண்ட கூட்டம் பெரிதாகத்தானே இருக்கும். அக் கூட்டத்தின் பேச்சாளர், ஒரு நீக்ரோ. அவர் ஆத்திரத்தோடு பேசிக்கொண்டிருந்தார். நின்று கேட்டோம்.  வெள்ளையர்கள் ஆப்பிரிக்காவிற்கு வந்து நீக்ரோக்களை அடிமைப்படுத்தி வருவதை வன்மையாகக் கண்டித்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு இனி வெள்ளையர் எவரும் ஆப்பிரிக்காவில் காலடி வைத்தால், அவ்வெள்ளையரின் கழுத்தை அறுத்து இரத்தத்தை உறிஞ்சப் போவதாக ஆர்ப்பரித்தார். இதைக் கேட்ட நாங்கள் பதறிப்போனோம். ‘கலாட்டா’ ஆகி விடுமென்று அஞ்சினோம், மெல்ல நழுவி விடலாமாவென்று கருதினோம். சுற்றுமுற்றும் பார்த்தோம். வெள்ளையர் யாரும் வெகுளவில்லை, துடிக்கவில்லை, அஞ்சவில்லை.  அப்போது அங்கிருந்த இளந்தம்பதிகள் எங்கள் கண்களில் பட்டனர். கணவன் மனைவியிடம் கூறினார் ; “கண்ணே! இவர் ஏதோ உணர்ச்சி வயப்பட்டிருக்கிறார். அதற்குக் காரணமும் இருக்க வேண்டும். நாம் பொறுமையாக இருந்து, காரணத்தைக் கேட்போம். இதைக் கேட்ட மனைவியும் புன் முறுவலோடு கவனமாகக் கேட்டார். பேச்சு நீண்டது. ஆனால், சூடு சிறிது தணிந்தது. நாங்களும் மெதுவாக நழுவிவிட்டோம். மேலும் சில சிறு கூட்டங்களைக் கடந்த பின், ஐம்பது பேருடைய கூட்டம் ஒன்றை அடைந்தோம். அது, அராஜகக் கூட்டம். “ஆட்சிகள் அத்தனையும் மக்கள் உரிமையைப் பறிக்கின்றன. உரிமையை இட்லர் பறித்தாலும் ஒன்றே, சர்ச்சில் எடுத்துக் கொண்டாலும் ஒன்றே, அட்லி அடக்கினாலும் ஒன்றே. ஆகவே ஆட்சிமுறை வேண்டா. தேர்தலில்நாள் குறித்திருந்தார்கள்-யாருக்கும் ஒட்டுப் போடாதீர்கள். இதைக் கேளாமல் சிலர் ஒட்டுப் போட்டால் பெருங்கெடுதி இல்லை. யார் வெற்றி பெற்றாலும், இலட்சம் வாக்குகளுக்குப் பதில் ஆயிரம் ஒட்டுகளே பெற்று, வென்றால். தலை கொழுத்துத் திரியமாட்டார். வாக்கினைப் பயன்படுத்தியவர்களைவிட, பயன்படுத்தாதவர் பல பேர் என்ற தெளிவு நிதானத்தைக் கொடுக்கும்”-இப்படிப்பட்ட போக்கிலே ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்.  அவர்கள் தேர்தலைப் பற்றியோ, இக்கருத்தைப் பற்றியோ கவலைப்படாமல், விரைவில் விலகிப் போனோம். வீடு திரும்ப, மீண்டும் வந்த வழியே சென்றோம். முன்னர் பார்த்த கூட்டங்களில் சில முடிந்துவிட்டன. நீக்ரோவர் பேசிய கூட்டம் நடந்து கொண்டிருந்தது. மறுபடியும் அங்குச் சில நிமிடங்கள் நின்றோம். கூட்டத்தினரைக் கவனித்தோம் பலர் ஏற்கெனவே இருந்தவர்களே. யாரும் துடிப்போ, கிளர்ச்சியோ கொள்ளவில்லை. கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.  வெளிநாட்டார் ஒருவர், இலண்டனுக்கு வந்து அங்குள்ள வசதிகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொண்டு, அவ் வெள்ளையரையே அவ்வளவு மிரட்ட விடலாமா ? ஏன் அப்படி விட்டு வைக்கிறார்கள் ?’ என்று எங்களுக்கு ஐயம். அதைப் பல ஆசிரியர்களிடமும் மற்றவர்களிடமும் வெளியிட்டோம் .  அவ்வளவு பேச்சுரிமை இருப்பதைப் பற்றிப் பெருமிதம் கொண்டனர் ; புன்முறுவல் பூத்தனர். அதற்குச் சிறிதளவும் தடை விதிக்கக்கூடாதென்று அழுத்தந்திருத்தமாகக் கூறினர். ‘அதைக் கட்டுப்படுத்துகிறோம் ; இதைக் கட்டுப்படுத்துகிறோம்’ என்று நல்லெண்ணத்தோடு, தொடங்கி, நம்மை அறியாமலேயே எல்லார்க்கும் பல விதத் தளைகளை மாட்டி விடுவோம். ஆகவே இருக்கிற உரிமையிலே சிறிதும் கை வைக்கக்கூடாது !’ என்ற போக்கிலே இருந்தது அவர்கள் பதில்.  நினைக்க நினைக்கச் சுவைக்கும் அக்காட்சியையும் கருத்தையும் சில அறிஞர்களிடம் கூறும் வாய்ப்பு அவ்வப்போது கிட்டிற்று. எதெதற்கோ படபடக்கும், துடிதுடிக்கும், குமுறும், அனிச்ச மலர்களாகிய நம்மவர்க்குச் சொல்லலாமா?    8. லெனின்கிராடில்   ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தோராம் ஆண்டு, செப்டம்பர் திங்கள், நானும் என்னுடன் வந்த புகழ்பெற்ற இரு இந்தியக் கல்வியாளர்களும் லெனின் கிராட் நகரத்திற்குச் சென்றோம்.  அங்குள்ள பல்கலைக் கழகத்தில், தமிழ் மொழியைக் கற்றுக்கொடுக்கிறார்கள் என்று அறிந்து மகிழ்ந்தோம். தென்னாடுடைய தமிழ் மொழியை, எந்நாடும் கவனிக்கும் இரஷியாவில், வடபால் உள்ள இரஷியாவில், வடக்கே உள்ள லெனின் கிராட் பல்கலைக் கழகத்தில் கற்றுக் கொடுக்கிறார்கள் என்று கேட்டபோது, காதும் இனித்தது: கருத்தும் இனித்தது ஊனும் உயிரும் இனித்தன.  முதல் நாள் ; நடுப்பகல் உணவு வேளை. நாங்கள் மூவரும், தங்கியிருந்த ஒட்டலுக்குள் நுழைந்தோம். தனியே, யாருக்கோ காத்துக் கொண்டிருந்த அந்த வாலிபர் ஒருவர் எங்களை அணுகினார்.  “நீங்கள் தானா வேலு என்பது ?” என்று தூய தமிழ் உச்சரிப்பில், என்னை வினவினார். என்னோடு வந்த இந்தியர் இருவருக்கும் தமிழ் தெரியாது. இவர்கள் தவறாக நினைத்து விடக் கூடாதே என்பதற்காக, “ஆம்” என்று ஆங்கிலத்தில் பதில் அளித்தேன்.  “நான் தமிழில் பேசலாமா ?” என்றார், அவ்வாலிபர். உடன் வந்தவர்களிடம் அனுமதி பெற்றுக்கொண்டு. “நன்றாகப் பேசலாம். தங்கள் பெயர் என்னவோ ?” என்றேன்.  ‘ என் பெயர் ரூதின் என்பது ; இது இரஷ்யச் சொல்.தமிழில் ‘செம்பியன்’ என்று பெயர் என்றார்.  “தாங்கள் என்னை எப்படி அறிவீர்கள் ? தாங்கள் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ?”  “தாங்களும் வேறு இந்தியக் கல்வியாளர்கள் இருவரும் இங்கு வருவதாகப் பத்திரிகையில் படித்தேன். தாங்கள் தமிழர் என்பதை, என்னுடன் லெனின் கிராட் பல்கலைக் கழகத்தில் தமிழ் கற்றுக்கொடுக்கும் திருமதி ஆதிலட்சுமி அம்மாள் சொன்னார்கள். அவர்களுக்கு இப்போது வகுப்ப வேலை இருப்பதால் நான் மட்டும் வந்தேன்” என்பது செம்பியன் பதில்.  செம்பியன், பல்கலைக் கழகத் தமிழ்த் துறையில் ஆசிரியர் என்பதை அறிந்தேன். தமிழ் ஆசிரியர் மட்டு மல்ல ; தமிழில் ஆர்வம் உடையவர் என்று அறிந்து மகிழ்ந்தேன். அங்குத் தமிழ் துறையில் சில மாணவர்கள், நம் தாய் மொழியைப் பற்றுதலோடு கற்கிகிறார்கள் என்று கேட்டுப் பூரித்தேன். தெருவெல்லாம் தமிழ் முழக்கஞ் செழிக்கச் செய்வீர்” என்ற கட்டளையைப் பிற நாட்டவராவது பின்பற்ற முனைந்துள்ளதை எண்ணித் திருப்தி கொண்டேன். உலகமெல்லாம் தமிழ் கேட்கும் நாளும் வருமோ என்று எண்ண வானில் உயரப் பறந்தேன்.  தம் பல்கலைக் கழகத்திற்கு வந்து, தமிழ் துறையைக் கண்டு, அங்குள்ள மாணவர்களோடு பேசும்படி கேட்டார் செம்பியன். ஒப்புக்கொள்ள கொள்ளை ஆசை. பயண ஆணையரைக் கேட்டேன். நிகழ்ச்சிகள் நெருக்கமாகச் செறிந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். நீக்குப் போக்கிற்கு இடமின்மையை விளக்கினார். உடன் இருந்து கவனித்த செம்பியன், நிலைமையை உணர்ந்து கொண்டார். பிறிதொரு முறை அத்தகைய நல்வாய்ப்பினை எதிர்பார்ப்பதாகக் கூறினார். வகுப்பிற்கு நேரமாகி விட்டதால் வணக்கம் கூறி விடை பெற்றுக் கொண்டார்.  இதே செம்பியன்தான் - ரூதின்தன் - பின்னர், சென்னைக்கு வந்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்றவர். கர்ம வீரர் காமராசரோடு, அவரது இரஷியப் பயணத்தில், மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிவரும் இவரே.  நாங்கள் உணவருந்தச் சென்றோம். மனிதர்களிலே சிலரைத் தீண்டாதவர்களாகக் கருதி வந்த நம் மக்கள், பழக்கக் கொடுமையால், இக்காலத்தில் மொழிகள் சிலவற்றின் மேல் அத்திண்டாமைப் போக்கைத் திருப்புகிறார்களே என்று ஏங்கினோம். தீண்டாமை மக்கள் இடையே கூடாது, என்று கருத்தைத் தெளிந்தோம். கற்ற மொழிகளெல்லாம் நம் சொந்த மொழிகளாகி விடும். அவை பிறந்த நிலத்தார், தனி உரிமையோ கொண்டாட முடியாது. புதிதாகக் கற்ற அந்நியரை, அம் மொழியைப் பயன்படுத்துவதிலிருந்து தடுக்க முடியாது.  இப்படிச் சென்றுகொண்டிருந்தது எங்கள் சிந்தனை. பின்னர், அவ்வூரிலேயே தாங்கள் பெற்ற பட்டறிவு எங்கள் சிந்தனைக்குச் சிறகுகள் பல தந்தது. உயர்நிலைப்பள்ளி யொன்றில் ஆங்கிலத்தின் மூலம் பல பாடங்களையும் கற்றுக் கொண்டிருந்தார்கள். அதை நாங்கள் கண்டோம். பள்ளிகள், ஆங்கிலத்தை அந்நிய மொழியாகக் கற்றுக் கொடுப்பதை முன்னர் கண்டது. உண்டு. இங்குத்தான் அந்த அத்திய மொழியைப் பாட மொழியாகவும் பயன்படுத்துவதைக் கண் டோம். இம்முறை பல பள்ளிகளில் உண்டா ? இல்லை சோதனையாக இரண்டொரு பள்ளிகளில் கையாண்டு பார்க் கிறார்கள். விளைவை, சிக்கல்களை, விழிப்பாகக் குறித்துக் கொள்கிறார்கள். மொழிப் பகையை நீக்கி, துணிந்து, புது முறையைச் சோதிப்பது எங்களைக் கவர்ந்தது. அதிகாரம் இருக்கிறதென்று ‘இட்டது சட்டமென்று, எடுத்த எடுப்பிலே பல பள்ளிகளுக்கும் ஆணையிடாமல் சோதனைக்காகச் சில பள்ளிகளை மட்டும் அனுமதித்திருப்பது எங்களுக்குத் தெளிவைக் கொடுத்தது. கல்விமுறை மாற்றம் காலத்தோடு விளையாட்டு. அது வினையாக-தீவினையாக-மாறாதிருக்க வேண்டுமென்றால் கல்விச் சோதனையும் தேவை . அதே நேரத்தில் அது குறுகிய அளவிற்குட்பட்ட சோதனையாகவும் இருக்கவேண்டும்’ என்று உணர்ந்தோம். கட்டுக்குட்பட்ட முன்னோட்டமே கலவி மாற்றத்திற்கு வழி என்று உங்கள் நெஞ்சமும் கூறுகிறதா?  லெனின் கிராட் நகரில், ஜார் மன்னனது மாளிகை இருக்கிறது. இப்போது யாரும் குடியிருக்கும் மாளிகையாக இல்லை. கலைக்கூடமாக இருக்கிறது. ஜார் ஆட்சியைக் கவிழ்க்கச் செய்து புரட்சியில் மக்கள் சிந்திய இரத்தம், ஆறேயாகும். இழந்த உயிர்களும் எத்தனை - எத்தனையோ கொண்ட பலிகளும் கொடுத்த பலிகளும் ஏராளம். அழிந்த பொருள்களுக்கும் அளவில்லை. ஆயினும் இங்கும் பிறவூர்களிலும் மாளிகைகளையும் பிற கட்டிடங்களையும அவர்கள் அப்படியே காப்பாற்றியிருப்பதுபோல வேறெந்த நாட்டினரும் காப்பாற்றியிருப்பார்களா என்பது ஐயமே.  லெனின் கிராடிலுள்ள ஜார் மாளிகை பெரியது அழகியது. அதை அன்றிருந்தபடியே அருமையாகக் காத்து வருகிறார்கள். தொல்பொருள் காட்சிக்காக அல்ல பயனுக்காகக் காத்து வருகிறார்கள். சிறந்த பல ஒவியங்களும் சிற்பங்களும், வேறு கலைப் பொருள்களும் அங்குக் காட்சிக்காக வைக்கப்பட் டுள்ளன. அவை அலங்கரிக்கும் மண்டபங்களும் ஒன்றிரண்டு அல்ல ; பல அவற்றில் சிலவற்றைச் சுற்றிப் பார்க்கவே எங்க தக்குப் பிற்பகல் முழுவதும் சரியாகிவிட்டது.  ஏராளமானவர்கள், ஆணும் பெண்ணும், பெரியவர்களும் சிறியவர்களும்-வயதில்-வந்து, கண்டு மகிழ்ந்து, அறிந்து, தெளிந்து செல்கிறார்கள். கால் கடுக்கும்போது ஆங்காங்கே, இளைப்பாறவும் நல்ல பெஞ்சுகள் அமைத்து இருக்கிறார்கள். இப்படியே பல ஊர்களில் பிரபுக்கள் மாளிகைகள் கலைக் கூடங்களாகி விட்டன.  இம்முறை இல்லையென்றால் மறுமுறை வெல்வது உறுதி. அன்றைக்குப் பயன்படக்கூடிய இம்மாடமாளிகைகளைப் பிற கட்டிடங்களைப் பாழாக்க வேண்டா. அப்போதைக்கப்போதே குறித்து வைத்து, பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற போக்கை அங்குக் கண்டோம். இப்போதைக்குத் தனக்கு ஆகாத பாலைக் கொட்டிக் கவிழ்க்கும் போக்கு இல்லை.  சிலரிடத்திலே முடங்கிக்கிடந்த பொருட்செல்வத்தை எல்லாருக்கும் பயன்படும்படி செய்ததைப் போல், சில மாளிகைகளுக்குள் மறைந்து கிடந்த கலைப்பொருட்களையும் மக்கள் அனைவரும் கண்டு களிக்கச் செய்து விட்டது சோவியத் ஆட்சி என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள் ரஷியர்கள்.  வரலாற்றுச் சிறப்புடைய லெனின்கிராடை இரண்டாவது உலகப்போரின் போது, ஜெர்மானியர் முற்றுகை இட்டனர். முற்றுகை சில நாட்களா ? இல்லை. சில மாதங்களா ? இல்லை. மொத்தம் 900 நாள்கள் முற்றுகையாம். ஜெர்மானியர் சுற்றி வளைத்துக்கொண்டால் போர் விளையாட்டாகவா இருக்கும் ? மிகக் கடும்போர் நடத்ததாம். அன்றாடம் ஆயிரக்கணக்கில் சாவாம். உண்ண உண வில்லை. குடிக்க நீரில்லை, பட்டினியாலும் தாகத்தாலும் இறந்தவர் இலட்சக்கணக்கில். போராடி மடிந்தவரும். இலட்சக்கணக்கில். ஆயினும் சரணடையவில்லை லெனின் கிராட். வெந்நீரில் தோல் வாரைப் போட்டுக் காய்ச்சி: குடிக்கும் நிலைக்கு வந்தபோதும், கலங்காது. தாக்குப்பிடித்து கூடி நின்று, போராடி, கடைசியில் வெற்றியும் கண்டது லெனின் கிராடு. பதினைந்து இலட்சம் மக்களை இழந்து சரணடையாது நின்று வென்றது என்று லெனின் கிராட் வாசிகள் பலர் பெருமிதத்தோடு எங்களிடம் கூறினர்.  ‘விதந்தரு கோடி யின்னல் விளைந்தெனை அழித்திட்டாலும் சுதந்திரதேவி நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே என்ற சுதந்திர கீதத்திற்கு இலக்கணமாக விளங்கிய அந்நகரவாசிகள் தலைநிமிர்த்து நிற்க உரிமை பெறாவிட்டால் வேறு எவரே உரிமை உடையவர்கள் !  ‘சொந்த அரசியலும் புவிச்சுகங்களும் மாண்புகளும் அந்தகர்க்குண்டாமோ கிளியே, அலிகளுக்கின்ப முண்டோ! ஆம் அதோ பாரதியாரின் குரல் கேட்கிறது, கேளுங்கள்: உற்றுக் கேளுங்கள் உணர்வு பெறுங்கள்.    9. மெய்யான செல்வம்   சோவியத் பயனத்தின்போது, நாங்கள் யால்டா என்ற நகருக்குச் சென்றோம். அந்நகரம் அண்மை வரலாற்றில் சிறந்த இடம் பெற்றது, அது கருங்கடல் கரையில் உள்ள அழகிய நகரம்.  அந்நகரில்தான், இரண்டாம் உலகப் போரின் பிற்பகுதியில் முப்பெருந் தலைவர்களின் மகாநாடு நடந்தது. அம் மும்மூர்த்திகள் யார் ?  சர்ச்சில், ரூஸ்வெல்ட் ஸ்டாலின் ஆகிய மூவர். அவர்கள் அங்குக் கூடினர். உலகப் போரை வெற்றிகரமாக முடிப்பதைப் பற்றித் திட்டமிட்டனர். வெற்றிக்குப் பிறகு, உலக அமைதிக்கு என்னென்ன செய்யவேண்டுமென்றும் கலந்து ஆலோசித்தனர். விரிவாகத் திட்டமிட்டனர்.  தலைவர்கள் கூடிய அந்நகருக்கு, தொண்டர்களாம், கல்வித் தொண்டர்களாம், நாங்கள் மூவரும் போய்ச் சேர்ந்தோம்.  அந்நகருக்குப் பல கிலோமீட்டர் துரத்திலிருந்தே, கருங்கடலை அடுத்து, பலப்பல பெரிய அழகிய மாளிகைகளையும் கட்டிடங்களையும் கண்டோம். அதோ அந்த மேட்டிலே தெரிகிறதே அம்மாளிகை....கோமகனுடையது. அது அந்தக் காலம் பிரபுத்துவம் போய்விட்ட காலம் இது. இப்போது, அம்மாளிகை.......நெம்பர் தொழிற்சாலைத் தொழிலாளர்களுடைய நலவிடுதி”  “இதோ கடலை யொட்டியுள்ள கடலகம், முன்பு ஒரு கோடீசுவரனுடைய மாளிகை.இன்று ஆசிரியர்கள் நலவிடுதி,” இப்படிப் பல பெரிய கட்டிடங்களை சுட்டிக் காட்டினார். எங்களைச் சிம்பராபல் விமான நிலையத்திலிருந்து அழைத்துக் கொண்டு போனவர் ஒவ்வொரு சாராருக்கும் ‘நலவிடுதி’ என்று குறிப்பிட்டு வந்தார்.  “ நலவிடுதி என்றால் என்ன?” எனும் ஐயத்தைக் கிளப்பினோம்  “உடல் நலத்திற்கேற்ற தட்ட வெப்பநிலையும், நற்காற்றும், இயற்கைச் சூழ்நிலையும் உடைய பல மலையூர்களையும் கடற்கரைப் பட்டினங்களையும் ஆரோக்கிய ஆஸ்ரமங்களாகக் காத்து வருகிறார்கள். பலதுறைகளிலும் பாடுபடும் பாட்டானிகளும், அலுவலர்களும் ஊழியர்களும் ஆண்டுக்கு ஒருமுறை விடுமுறையில் அத்தகைய இடங்களுக்குச் சென்று தங்கி ஒய்வு பெறுவார்கள். உடல் நலத்தோடும் உள்ள ஊக்கத்தோடும் வேலைக்குத் திரும்புவார்கள். இதற்கு வசதியாக இருக்கும் பொருட்டு ஒவ்வொரு ஆரோக்கியபுரியிலும் வெவ்வேறு பிரிவுத் தொழிலாளருக்கென்றும் தனித்தனி விடுதி உண்டு.  “எடுத்துக்காட்டாக இரயில்வே தொழிலாளிகளுக்கென்று அவர்கள் தொழிற்சங்கத்தின் பராமரிப்பில் விடுதி அமைத்திருப்பார்கள். அதேபோல மோட்டார் வாகனத் தொழிலாளர்கள் விடுதி அமைத்திருப்பார்கள். ஆலை தொழிலாளர்களுக்கென்று ஒரு விடுதி இருக்கும் ஆசிரியர்களுக்கென்று, அவர்கள் சங்கம் ஒரு விடுதியை நடத்தும்.   “இப்படி நாடு முழுவதும், பல ஊர்களில், பல பிரிவினருக்கும் விடுதிகன் இருப்பதால், எளிதாக அதிகச் செலவில்லாமல், விடுமுறை விடுதிகளால் நலம் பெறுகின்றனர் எங்கள் மக்கள்” - இது தோழரின் பதில்.  கருங்கடலைச் சுற்றி இத்தஃகைய நலவிடுதிகள் ஏராளம். இங்கு, அச்சமின்றி கடல் நீராட ஏராளமான இடங்கள் இயற்கையாக அமைந்துள்ளனவாம். கருங்கடலும் அதிக கொந்தளிப்பு இல்லாதது. நாங்கள் சென்றபோது பெரிய ஏரிகளில் வீசுகிற அளவு அலைகூட இல்லை. பல இடங்களில் கரையிலிருந்து நெடுந்தூரத்திற்கு ஆழம் மிகக் குறைவு. எனவே ஆபத்தின்றி கடல் நீராடலாம்.  இதை அறிந்து, நாங்கள் அதற்கேற்ற உடையோடும். மனப்போக்கோடும் யால்டா பேய்ச் சேர்த்தோம். அங்குப்போ ய்ச் சேர பிற்பகல் ஆகிவிட்டது. ஆகவே, உண்டு, சிறிது இளைப்பாறி விட்டு, ஊர் கற்றிப் பார்த்தோம்.  பின்னர் துறையொன்றிற்குச் சென்றோம்; வழியிலே வயோதிகர் ஒருவர் எங்களைக் கண்டார்; வழிமறித்தார்.  அவர் பழுத்த பழமாக இருந்தார்; எங்களுடன் வந்த அம்மையாரை - இந்தியப் பெண்மணியை - உற்றுப் பார்த்தார். கண்ணிர் பொலபொலவென்று உதிர்ந்தது. “பல ஆண்டுகளுக்கு முன் இறந்து போன ஒரே மகளைப் போலவே நீர் இருக்கிறாய் அம்மா ! நீ வாழ்க!” என்று தலைமேல் கையை வைத்து வாழ்த்தினார். தம்மோடு ஒட்டலுக்கு வந்து தேநீர் அருந்தும்படி வேண்டினார். இவற்றை எங்களுக்கு ஆங்கிலத்தில் சொன்ன மொழிபெயர்ப்பாளர் எங்கள் பணிவான மறுப்பை அப்பெரியவருக்குச் சொல்லி அமைதிப்படுத்தி அனுப்பினார்.  பெரியவரின் கண்ணி, என் துக்கத்தை எனக்கு நினைவு படுத்திவிட்டது. பல்லைக் கடித்துக்கொண்டு, மற்றவர் காணாவண்ணம் சமாளித்துக் கொண்டேன். படகுத் துறையைச் சேர்ந்தோம். மோட்டார் படகொன்றில் ஏறி,கருங்கடலில் பல மணிநேரம் பயணஞ் செய்து திரும்பினோம். இனிய, அதிகக் குளிரில்லாத நற்காற்று எங்களை உற்சாகப்படுத்தியது  மொழிபெயர்ப்பாளரும் வழிகாட்டியும். ஏதேதோ சொல்லிக்கொண்டு வந்தார்கள். என்னுடன் வந்த இந்திய நண்பர்கள் இருவரும் அதைக் கேட்பதும், நோட்டம் பார்ப்பதும், கேள்வி கேட்பதுமாக இருந்தார்கள். பெரியவரின் கண்ணீரால் சென்னைக்குத் திருப்பப்பட்ட என் சிந்தனை,தமிழ் நாட்டிலேயே சுற்றிக் கொண்டிருந்தது.  காலஞ்சென்ற அழகப்ப செட்டியார் தமது கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கோடை விடுமுறையில் சென்று தங்கி மகிழ்வதற்காக, கோடைக்கானலில் பங்களா ஏற்பாடு செய்திருந்தது கண் முன்னே நின்றது. அதை ஆசிரியர்கள் பயன்படுத்தாது என் நினைவிற்கு வந்தது. நம் கல்லூரிப் பேராசிரியர்களிடம்கூட, விடுமுறைகளை ஆரோக்கிய புரிகளில் கழிக்கும் மனப்போக்கோ அதற்கான பொருள் நிலையோ இல்லையே என்று ஏங்கிற்று உள்ளம். நம் பிஞ்சுகளையாவது வறுமையின்றி, வாட்டமின்றி துள்ளி வளர வழிசெய் என்றது மனசாட்சி. பள்ளிப்பகலுணவும் சீருடையும் மின்னின. அதற்கும் குறுக்குச்சால் ஓட்டிய நல்லவர்களெல்லாரும் மின்னி நகைத்தனர்.  'அப்பா ! கவலைப்படாதீர்களப்பா ! இங்கு நல்லது செய்யவும் மாட்டார்கள் ; செய்கிறவர்களை சும்மா விடவும்மாட்டார்கள். இதற்கெல்லாம் கவலைப்படாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்யுங்கள் என்று, என் மறைந்த மகன் வள்ளுவன் சொன்னதும் மின்னி, உறுதியை வளர்த்தது.  தமிழ்நாட்டின் அரைத்த மாவுப் பேச்சாளர்கள் சிலர், பகலுணவுத் திட்டத்தை அரசியல் கண்ணோட்டத்தோடு, 'பஞ்சர்' செய்ய முயன்றபோது, அவன் எனக்குக் கொடுத்த ஊக்க ஒலி அது.  இன்னும் தமிழ்நாட்டில் எங்கெங்கோ பாய்ந்தது. என் சிந்தனை, எத்தனையோ நிகழ்ச்சிகளையும், ஆள்களையும் பிடித்து, விட்டுத்தாவி, மீண்டும் 'யால்டா' வர நெடுநேரமாகிவிட்டது. இதற்குள் படகு திரும்பி வந்து துறையில் நின்றது. வழிகாட்டி ஆண்மகன்-படகிலிருந்து கரைக்குத் தாண்டிக் குதித்தார். நாங்கள் பத்திரமாக இறங்கி வந்தோம்.  அடுத்த நாள் காலை கடலில் குளிக்கத் திட்டமிட்டோம். எங்களோடு சேர்ந்து குளிக்கும்படி வேண்டினோம், வழி காட்டியை. தாம் வந்து எங்களைக் குளிக்க அழைத்துப் போவதாகவும், ஆனால் தாம் எங்களோடு குளிப்பதற்கு இல்லை என்றும் மறுத்தார். நாங்கள் இரண்டொரு முறை வற்புறுத்தினோம். உறுதியாக உணர்ச்சி ஏதும் காட்டாமல் மீண்டும் மீண்டும் மறுத்தார்.  அடுத்த நாள் கலை கடல் நீராட , எங்களை அழைத்துப் போக வந்தார் வழிகாட்டி. அவரை எங்களோடு சேர்ந்து நீராடும்படி மீண்டும் வேண்டினோம். அப்போது கூறின பதில் எங்களைத் திடுக்கிடச் செய்தது. நம்ப முடியவில்லை அச்செய்தியை ஏன் ? அப்போதும் சரி, அதற்கு முன்பும், துக்கத்தின் சாயலை அவரிடம் காணவில்லை. அச்சத்தின் நிழல் படரவில்லை அவர் அழகு முகத்தில்.  தமது கால்களில் ஒன்று பொய்க்கால், என்று அவர் கூறிய போது அதிர்ச்சி ஏற்பட்டது. அப்படியாவென்று வியந்தோம். சென்ற உலகப் போரில், ஈடுபட்டு, காலை இழந்துவிட்டதாக விளக்கம் கூறினார். பின்னர் பொய்க்கால் பெற்றார். அதனோடு வாழ்கிறார். அவரது நடையில் பொய்க்கால் நடையென்று சந்தேகப்படுவதற்கு இல்லாமல் சாமர்த்தியமாக நடந்துகொண்டு வந்தார், அவ்விளைஞர்-அல்ல. முப்பத்தைந்து நாற்பது வயதுடைய-அவர்.  “போரிலே ஈடுபட்டு ஊனப்பட்ட யாரும் சுமையாக உட்கார்ந்ததில்லை. பரிகாரம் தேடிக்கொண்டு, ஏதாவது ஒரு வேலைக்குப் பயிற்சி பெற்றுத் தாமே உழைப்பதைக்காணலாம். அத்தனை பேருடைய உழைப்பும் நாட்டின் வளத்திற்குத் தேவை. பலரும், சென்ற காலத் தியாகத்தைக் காட்டி, வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தால், நாட்டில் வளர்ச்சியும் வளமும் எப்படி ஏற்படும் ?” இது, அவரது படப்பிடிப்பு  எங்களிலே ஒருவருக்குக் காய்ச்சல் வருவதுபோல் இருந்தது. அதைச் சாக்காகக் காட்டி, நாங்களும் குழாய் நீராடி, உண்டுவிட்டு, ‘ஆர்டெக்’ மாணவர் நலவிடுதிக்குச் சென்றோம்.  ஆர்டெக் மாணவர் இல்லத்தைக் காணும் பொருட்டே நாங்கள் இவ்வளவு நெடுந்தூரம் வந்தோம். நாங்கள் சென்ற போது உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் பலர், நீராடிவிட்டு தங்கள் அறைகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர் எங்களைக் கண்டதும் வணக்கம் கூறிவிட்டுச் சென்றனர்.  இல்லப் பொறுப்பாளர், எங்களை அழைத்துக் கொண்டு போய் பல இடங்களையும் காட்டினார்; இந்த இல்லம் கருங்கடல் கரையோரத்தில் கட்டப்பட்டிருக்கிறது. அறுநூறு பேர் ஏககாலத்தில் தங்கக்கூடிய அளவில் விடுதி ஒவ்வொன்றும் இருந்தது. இப்படி மூன்று விடுதிகள்.தனித்தனியே அவை வளைவுக்குள் இருந்தன. நான்காவது விடுதியொன்றை கட்டிக் கொண்டிருந்தனர். அது முடிந்தால் 2400 பேர் ஒரே நேரத்தில் தங்கலாம்.  இவை, உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்காக தனித் தனியே ஒதுக்கப்பட்டவை. இருபாலரும் அங்கு தங்கியிருக்கக் கண்டோம். இது, நாடு முழுவதற்குமான, மாணவர் இல்லம். ஆகவே பல இராச்சியங்களிலிருந்தும் இங்கு வந்து தங்குகிறார்கள். பதினைந்து நாள்களுக்கு மட்டுமே இங்குத் தங்கலாம். ஆண்டு முழுவதும் இல்லம் திறந்திருக்கும். ஆண்டு முழுவதும், இல்லம், விடு முறையின்றி நிறைந்திருக்கும்.  மாணவர் இங்கு வருவது தங்கள் விருப்பப்படியல்ல. பள்ளிப் படிப்பிலோ, விளையாட்டிலோ சிறப்பிடம் பெறும் மாணவ, மாணவியரே இங்கு வரலாம். அந்நிலை பெற்றவர்களுக்கு, முறைப்படி இடம் கிடைக்கும். எந்த மாதத்தில் என்று சொல்லமுடியாது. விடுமுறைக் காலத்தில் இல்லாமல் பள்ளிக்கூட காலத்திலும் முறை வரலாம்.  “பள்ளிக்கூட காலத்தில் பதினைத்து நாள் அங்கு வந்து விடுவதால் படிப்புக் கெட்டுப் போகாதா?” இக்கேள்வியைக் கேட்டோம்.  அங்குள்ள முழு உயர்நிலைப்பள்ளியைக் காட்டினர். எல்லா வசதிகளும் உள்ள பள்ளி அது. போதிய ஆசிரியர்களும் கருவிகளும் உள்ள பள்ளி அது. பாடம் நடந்துகொண்டிருக்கும் பள்ளி அது. சிறப்பிடம் பெறாதவர்களுக்கு அங்குத் தங்க வாய்ப்பு இல்லையா ? உண்டு நூற்றுக்கு இருபது இடத்தை அப்படிப்பட்டவர்களுக்கு ஒதுக்கியிருக்கிறார்கள். இதில் வருகிறவர்கள் செலவிற்குப் பணம் கொடுக்க வேண்டும். சிறப்பிடம் பெற்றவர்களுக்கு இலவசத் தங்கல், உணவு.  கடற்கரைக்குச் சென்றோம். மாணவ. மாணவியர் பலர் நீந்தக் கற்றுக்கொண்டிருந்தார்கள். அதற்கென்று நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் உடன் இருந்து கற்றுக் கொடுத்தார்கள். அங்கு ஆழமும் இல்லை; அலையும் இல்லை. அரை கிலோ மீட்டர் துரங்கூட அப்படியே இருக்குமாம். ஆகவே, மூழ்கிப் போவோமோ என்ற அச்சமின்றி மகிழ்ச்சியோடு அவர்கள் நீந்தப் பழகிக் கொண்டிருந்தனர்.  இல்ல வளைவில் ஒருபால், பலர் பாடல்கள் பயின்று கொண்டிருந்தனர்; மற்றொருபால், பந்து விளையாடிக் கொண்டிருந்தனர்; சிலர் ஓடி வந்து எங்களைப் படமெடுத்தனர்.  இதைப் போன்ற மாணவர் இல்லம் சில, இராச்சியம் தோறும் உண்டாம். வளரும் மாணவர், மகிழ்ச்சியோடும், உடல் நலத்தோடும், உள்ள ஊக்கத்தோடும் வளர வேண்டும் என்பதில் தான் எத்தனை அக்கறை! எத்தனை கவனம் !  அடுத்த நாள், 'யால்டா' விலிருந்து கீவ் நகரத்திற்குப் புறப்பட்டோம். 'சிம்பராபல்' நகர விமான நிலையம் வரை வந்தார் வழிகாட்டி. பேச்சு பலவற்றின் மேல் பறந்தது.  “மெய்யான செல்வம் மக்கட் செல்வமே. குழந்தைகள் குழந்தைகளாக மகிழ்ந்தாட வேண்டும், சிறுவர் சிறுமியர் சுமையேதுமின்றிச் சிரிப்போடும் துடிப்போடும் துள்ளி வளர வேண்டும். இளைஞர் இணையற்ற ஊக்கத்தோடும் அறிவோடும் ஆர்வத்தோடும் வளரவேண்டும். வாலிபர் வலிமை மிக்கவர்களாக, ஆற்றல் மிகுந்தவர்களாக, கூடித் தொழில் புரிபவர்களாக, பொறுப்புள்ளவர்களாக வாழ வேண்டும். இந்நிலையை உருவாக்குவதற்கு வேண்டியதை யெல்லாம் செய்து வருகிறார்கள். எங்கள் நாட்டில்...”-வழிகாட்டி பேச்சை முடிக்கவில்லை. நான் குறுக்கிட்டேன்.  இவ்வளவு நன்முயற்சிகளுக்கிடையில், போர் என்ற பெயரால், எத்தனை உயிர்களைப் பலியாக்கி விடுகிறோம். எத்தனை காளையர் கால் இழந்து, கையிழந்து, கண் இழந்து அவதிப்படுகிறார்கள். நல் வளர்ச்சி ஒரு பக்கம். பெரும் அழிவு ஒரு பக்கம். என்ன உலகம்” என்று அங்கலாய்த்தேன்.  “ஆம். போர், பெருங்கொடுமை. அது கொள்ளும் பலி, பல இலட்சம். அது விட்டுச் செல்லும் ஊனர்கள் அதைவிட அதிகம். இதைவிடக் கொடுமை-பெருங்கொடுமை-ஒன்று மில்லை. இதை நாங்கள் அண்மையில் அனுபவித்தவர்கள். ஆகவே, அமைதியை, ஆர்வத்தோடு விரும்புவர் ' என்று பரவசத்தோடு பகன்றார்.  சாந்தியால் உலகம் தழைப்பது நன்றா ? சண்டையால் உலகம் உடைவது நன்றா? சண்டையால் நொண்டியாவது நன்றா?    10. இலண்டனில்   ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐமபத்தோரோவது ஆண்டு, ஜூலைத் திங்களில் ஒரு நாள், நான் இலண்டனில், முதியோர் கல்விக்கூடமொன்றைக் கண்டேன்.  குறிப்பிட்ட தெருவை அடைந்ததும், வழிப்போக்கச் ஒருவரிடம் முதியோ கல்விக்கூட முகவரியைக் காட்டி, அடையாளம் காட்ட வேண்டினேன்.  அவர், நான்கு கட்டிடங்களுக்கு அப்பால் இருந்த பெரிய கட்டிடம் ஒன்றைச் சுட்டிக் காட்டினார்.  அங்குச் சென்றேன். கல்விக்கூட முதல்வரைக் கண்டேன். அவர் அன்போடு வரவேற்றார். கனிவோடு பதில் உரைத்தார். எங்கள் உரையாடலின் சாரம் இதோ :  இக்கல்விக் கூடத்தில் அறுபத்து நான்கு வகைப் பாடங்கள், பயிற்சிகள் நடக்கின்றன. இங்கு நடக்கும் முதியோர் கல்வி, முதற்படிப்பு அல்ல; தொடர் படிப்பு ஆகும். எந்த வகுப்பிலும் ஒரு குறிப்பிட்ட பொதுப் பரீட்சைக்கு ஆயத்தஞ் செய்வதில்லை.  ஏற்கெனவே, உயர்நிலை வரையிலோ தொடக்க நிலை வரையிலோ படித்தவர்களுக்கு இக்கல்வி நிலையம். அவர் கஞக்கும் சாதாரண கல்லூரிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும் நடக்கும் பாடத்திட்டத்தை ஒட்டி, பாட முறைகளை அமைப்பதில்லை.  முதியவர்களான பிறகு, புதுப்புதுக் கல்வி ஆசை எழுவதுண்டு. தமது தொழில் முன்னேற்றத்திற்கோ ஏதாவது ஒரு துறையில், படிக்கவோ பயிற்சி பெறவோ ஒருவர் விரும்பலாம். இக்கல்விக் கூடத்தில் சேர்ந்து, விரும்பிய படிப்பில் அல்லது பயிற்சியில் ஈடுபடலாம்.  இங்குச் சேர்த்துக்கொள்ள, நுழைவுச் சோதனை ஏதும் இல்லை. பாடங்களில், ஒரே நிலை வகுப்பும் இல்லை. குறிப்பிட்ட பாடத்திலேயே இரண்டு மூன்று நிலை வகுப்புகள் நடக்கும்.  அப்படியானால், எந்த அடிப்படையில் எந்த வகுப்பில் மாணவர்கள் சேர்ந்து பயில்வது?  மாணவர், தான் எந்த நிலைக்குத் தகுதி என்று நினைக்கிறாரோ, அந்நிலை வகுப்பாசிரியரோடு கலந்து பேசி, அவ்வகுப்பிலேயே சேரலாம்.  இக்கல்விக்கூட சேர்க்கையிலோ, வகுப்பு மாற்றத்திலோ,பாட முறையிலோ கெடுபிடி கிடையாது குறிப்பிட்ட பொதுப் பரிட்சையில் தேற வைப்பதன் மூலமே நற்பெயர் எடுக்க வேண்டிய நெருக்கடியும் இல்லை ! ஆகவே பாடப் போக்கிலே, நெளிவு சுளுவைக் காணலாம். ஏற்ற இறக்கத்தைக் காணலாம். ஒரு பகுதியை வேகமாகக் கடப்பதையும் மற்றொரு பகுதியை மெல்லக் கடப்பதையும் காணலாம்.  கெடுபிடிகள் இன்றி, நம்பி விட்டிருப்பது இக்கல்விக் கூடத்தை. மட்டுமா ? இல்லை. எல்லா முதியோர் கல்விக் கூடங்களும் இத்தகைய சுதந்திரத்தோடு இயங்குகின்றன.  முதியோர் கல்விக்கூடங்கள் அத்தி பூத்தாற்போல் ஒன்றிரண்டல்ல ; புலப் பல நாடு முழுவதிலும் பரவிக் கிடக்கின்றன, இந்நிலை முதியோர் கல்வி நிலையங்கள்.  இவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறார்களா? ஆம் ஏராளமானவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.  அதனால்தான், அம் மாடிக்கட்டிடத்தின் ஆறு மாடிகளும் நூற்றுக்கணக்கான அறைகளும் இக்கல்வி நிலையத்திற்கே சரியாகிவிட்டன. ஆண்களைப் போலவே பெண்களும் முதியோர் கல்விநிலையங்களைப் பயன்படுத்துகின்றார்கள்.  எங்கள் உரையாடல் முடியவில்லை. நடுவில் ஒரு அம்மையார், முதல்வர் அறைக்குள் நுழைந்தார். என் பக்கம் திரும்பினார். " இரண்டு நிமிடம் குறுக்கிடலாமா?" என்று கேட்டார். "சரி" என்றேன். முதல்வரிடம் பேசினார். நாற்காலியில் அமர்ந்து பேசினார்.  " நான் இடைநிலை தத்துவ வகுப்பு மாணவி. இரண்டு மூன்று வாரங்களாக அவ்வகுப்பில் இருக்கிறேன் ஏற்கெனவே, மூன்று, நான்கு, தத்துவ நூல்களைப் படித்திருந்த தைரியத்தில், நேரே இடைநிலை வகுப்பில் சேர்ந்து விட்டேன். இப்போது அது, அதிகப்படி என்று தெரிகிறது அவ்வகுப்புப் பாடங்களை என்னால் சமாளிக்க முடியாது. கீழ்நிலை, தத்துவ வகுப்பில் சேர்ந்தால் சமாளிக்க முடியுமென்று நினைக்கிறேன். இப்போது மாற்றிக்கொள்ள முடியுமா? இல்லையென்றால் நின்று விடுகின்றேன் ; அடுத்த பருவத்தில் வந்து, கீழ் நிலை, தத்துவ வகுப்பில் சேர்ந்து கொள்கிறேன், சரிதானா ? " இது அம்மையாரின் விண்ணப்பம்.  " தயவு செய்து கவலைப்படாதீர்கள். அடுத்த பருவம் வரை காத்திருக்க வேண்டா, இப்போதே வகுப்பு மாற்றம் செய்து கொள்ளுங்கள். தொடர்ந்து படியுங்கள். இதோ, மாற்றச் சீட்டு ;எடுத்துக்கொண்டு போய், வகுப்பு மாறிப் படியுங்கள், மேலும் சிக்கல் வந்தால் என்னிடம் வந்து சொல்லத் தயங்காதீர்கள். இனிமையோடும், உறுதியோடும், ஆர்வத்தோடும் வந்த பதில் இது.  முதல்வர், வகுப்பு மாற்றச் சீட்டை எழுதிக் கொடுத்தார், அந்த அம்மையாரிடம். அவரும் மகிழ்ச்சியோடு அதைப் பெற்றுக் கொண்டு சென்றார். நன்றி கூறி விட்டுச் சென்றார். என் பக்கம் திரும்பி, உரையாடலில் குறுக்கிட்டதற்காக, மன்னிப்புக் கேட்டுவிட்டு வெளியேறினார்.  அவர் கண்களில் நம்பிக்கையொளி வீசிற்று. ஐம்பது வயதிற்குமேல் மதிப்பிடக்கூடிய அந்த அம்மாளின் கண்களிலே நம்பிக்கையொளி. புதுத் துறைக்கல்வி யொன்றைக் கற்றுத் தேறப் போகிறோம் என்கிற நம்பிக்கையொளி.  இங்கோ, இளைஞர்களுக்குக்கூட, நம்பிக்கை இழந்த, வெறுப்பு நிறைந்த கண்கள். எனவே, அழிவு வேலை ஈடுபாடுகள் ! யாரை நோக ?  அந்த அம்மானின், முந்திய, தவறான முடிவைப் பற்றிக் குட்டி உபதேசமொன்று செய்வார். முதல்வர் என்று எதிர்பார்த்தேன். அவரோ அறவுரை நிகழ்த்தவில்லை; அம்மாளின் தவறைக் காட்டுவதன்மூலம், தான் உயர முயலவில்லை. விரைந்து உதவி, உயர்ந்து விட்டார் மாணவியின் ஊக்கத் தளர்வையும் போக்கி விட்டார் ; நம்பிக்கையை வளர்த்துவிட்டார். இவரன்றோ, ஆசிரியர் என்று பாராட்டிற்று என் நெஞ்சம்.  "எவ்வளவு இனிமையாக மாணவிக்கு உதவினீர்கள். அச்சத்தோடும் குழப்பத்தோடும் வந்தவர் ஆண்மையோடும் தெளிவோடும் விடை பெற்றுக் கொண்டாரே" என்று முதியோர் கல்வி நிலைய முதல்வரைப் பாராட்டினேன்.  “முதியவர் பொறுப்புடையவர். தவறு செய்வது மானிட இயல்பு. தவறை மிகைப்படுத்தி, மாணவர்களைக் குட்டுவது, இளைஞர்கள் விஷயத்திலேயே ஆகாது. முதியவர்கள் விஷயத்தில், அம்முறையைக் கொண்டால், சொல்லாமல் நின்று விடுவார்கள் ஒவ்வொருவராக.  " தன்னிச்சையாக, நினைத்த வகுப்பிலே சேரவிட்டால் என்ன கேடு ? அவர்களே, தங்கள் திறமையை அறிந்து, கொள்ள உதவியது, அது. மேல்நிலை முடியாதென்று உணர்ந்தபோது, தானே, கசப்பு ஏதும் இல்லாமல், கீழ் நிலைக்குச் செல்ல விரும்பினார்.  'சோதனை' என்ற பெயரால், தொடக்கத்திலேயே தாங்கள் தரம் பிரித்தால். பலர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். கல்வி நிலையத்தில் சேர்ந்திருக்க மாட்டார்கள். முதியவர்களை 'விட்டுப் பிடிப்பதே' சிறந்தது. யாரும் மனம் நோகாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும். தவறு நேர்ந்தால், சிறுமைப் படுத்தக்கூடாது திருத்த மட்டுமே விரையலாம். இதுவே கல்வியை வளர்க்கும் முறை" இது கல்வி நிலைய முதல்வரின் கருத்துரை. பொருள் செறிந்த உரையல்லவா ?  கல்வி, காட்டு முள் அல்ல. தானே வளரும் தாவரமும் அல்ல. அது வளர்க்கப்படும் பயிர், நுட்பப் பயிர். முதியோர் கல்வியோ மிக நுட்பப் பயிர்.  கல்வியாளருக்குப் புலமை மட்டும். போதாது ? பயிற்சி மட்டும் போதாது ; திறமை மட்டும் போதாது ; மனித்த் தன்மையும் வேண்டும்; தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்ற உணர்வு ஊடுருவியிருக்க வேண்டும். நசுக்காமல், குத்தி மகிழாமல், ஊக்கி உதவுபவரே, வளர உரமிடுவோரே, கல்வியாளர்.  11. ஊக்கும் கல்வி   முதியோர் கல்வி நிலையத் தலைவர் ; மாணவ,மாணவியருடன் பழகும் இனிமையைக் கண்டு மகிழ்ந்தேன். முதியோர் கல்வி பற்றிப் பொதுப்படையாகச் சில மணித்துளிகள் பேசிக் கொண்டிருந்தேன்.  முதியோர் கல்வி-தொடர் கல்வி-நாடு முழுவதும் அளிக்கப்பட்டு வருவதை அறிந்தேன். பல நூறாயிரவர் அதில் ஈடுபட்டு அதனால் பலன் அடைந்து வருவதாகக் கேள்விப்பட்டேன். முதியோர் கல்வி ஈடுபாட்டில், ஆண்களுக்குப் பெண்கள் இளைத்தவர்கள் அல்லர் என்று தெரிந்து இரசித்தேன்.  இக் கல்விக்கூடங்களை (தொடக்கப் பள்ளிகளையும் உயர்நிலைப் பள்ளிகளையும்) உள்ளாட்சிக் கல்வி மன்றங்கள் நடத்துகின்றனவாம்.  முதியோர் வகுப்புகளைக் காண விரும்பினேன். முதல்வரே, என்னை அழைத்துச் சென்றார். அங்கு நடந்து கொண்டிருந்த வகுப்புகள் நூற்றுக்கு மேல், பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்ப்பதுபோல், இரண்டொரு குப்புகளுக்குள் நுழைந்து இருந்து கவனித்தேன், அவற்றிலே ஒன்று. இக்காலத்துக்கு வேண்டிய போட்டோ பிடிக்கக் கற்றுக்கொள்ளும் வகுப்பு.  "என்ன ? கல்வியில் இது எப்படிச் சேரும் ? என்னும் எழுத்துமல்லவா கல்வி" என்று மிரளாதீர்கள்.  ஆத்திசூடியும், கொன்றைவேத்தனும், நாலடியாரும், சுந்தர காண்டமும், வழக்குரை காதையுமே கல்வி என்ற மயக்கப்பட்ட நமக்கு, இது புதுமையாகவே தோன்றும்.  'ஆயகலைகள் அறுபத்து நான்கு' என்னும் வழக்கினை ஆழ்ந்து சிந்தித்தால், மொழிப் பாடங்களுக்கு அப்பாலும் கல்வி விரிவதை உணரலாம். கணக்கோடு, கல்விக் கணக்கு முடிந்துவிடவில்லை என்பதை அறியலாம்.  'அத்தனையும் கல்வியே. ஆகவே எத்தனைப் பாடங்களை, 'பயிற்சிகளை திணிக்க முடியுமோ அத்தனையையும் திணித்து விடுவோம் பள்ளியிறுதிக்குள்' என்ற போக்கு தீங்கானது.  வாழ்வு முழுவதற்குமான கலைகள் பலவற்றையும் பள்ளிப் பருவத்திலேயே புகுத்தி விடாலாமென்ற போக்கு அறிவு அஜீரணத்தையே விளைவிக்கும். அடிப்படைக் கலைகள் சிலவற்றில் ஆழ்ந்த அறிவையும் பயிற்சியையும் கொடுப்பதே பள்ளிக்கூடங்களின் வேலை. விரும்பும் தேவைப்படுகிற சில பல கலைகளைப் பின்னர் வீட்டிலோ ,தொழிற்கூடங்களிலோ, கழகங்களிலோ, முதியோர் கல்வி கூடங்களிலோ பெறவேண்டும். அதற்கு வாய்ப்புகள் அமைத்து வைக்க வேண்டும். இத்தெளிவு பரவினால் கல்விச் சிக்கல்களில் பல தீர்ந்துவிடும்.  சிக்கல்களை விட்டு, நிழற்பட வகுப்பிற்குப் போவவோம். நான் எதைக் கண்டேன் ? அவ் வகுப்பில் இருந்தவர்கள் கற்றுக் குட்டிகள். முந்திய வகுப்பில் கொடுத்த வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு வந்திருந்தனர். அதாவது ஒவ்வொருவரும் தாங்களே சில 'போட்டோ'க்களை எடுத்துவந் ருந்தனர். அவை தேர்ச்சி பெற்றவரால் கழுவப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.  ஒரு மாணவர், தான் எடுத் படமொன்றை குைப்பு முழுவதற்கும் காட்டினார். எல்லோரும் சில விநாடிகள் கவனித்தனர். அது போர்டில் மாட்டப்பட்டிருந்தது. அதை ஆசிரியர் மதிப்பிடவில்லை. சக மாணவர்களை மதிப்பிடச் சொன்னார்.  அதில் 'போகஸ்' சரியாக இல்லை என்று எனக்குத் தோன்றிற்று. என்னைக் கேட்டிருந்தால் அப்படியே சொல்லியிருப்பேன். ஆனால் அதைப் பற்றிக் கூறின மாணவர் என்ன சொன்னார் தெரியுமா? " 'போகஸ்' இன்னும் சிறிது வலப்புறம் வந்திருந்தால் படம் அருமையாக இருக்கும்” என்று மதிப்பிட்டார். இன்னொருவ 'இன்னும் சிறிது நேரம் 'எக்ஸ்போஸ்' செய்திருந்தால் படத்தின் தெளிவு அதிகமாயிருக்கும்" என்று குறிப்பிட்டார். இப்படி, இன்னும் இரண்டொருவர்,' இதை இப்படிச் செய்யலாம்; இன்ன பலன் அதிகமாகும்' என்று மதிப்பிட்டார்கள்.  யாருமே எதிர்மறைவில் பேசவில்லை. குற்றஞ் சாட்டவில்லை. போகஸ் சரியில்லை, 'எக்ஸ்போஸர்' போதாது என்று குறை காட்டிப் பேசாமல் இதை இப்படிச் செய்ய வேண்டும்; இது இன்னும் அதிகம் தேவை" என்று மட்டுமே வழி காட்டினர். தெளிவான வொரு கருத்தை ஆக்க முறையில் சொன்னதால் ஏற்றுக் கொள்வதைப் பற்றி மற்றவர்களும் கருத்துத் தெரிவித்தார்கள். கருத்துப் போர் நிகழவில்லை.கருத்து வளர்ச்சி நிகழ்ந்தது. இம்முறையில், அவர்கள் பயிற்சி வளரக் கண்டேன்.  உள்ளது சிறக்க வழிகூறும் முறையை, இங்கிலாத்தின், மற்ற கல்விக்கூடங்களிலும் கண்டேன். தொடக்கப்பள்ளியிலுஞ்சரி உயர்நிலைப் பள்ளியிலும் சரி. குறை காண்பதை விட| நிறைவுக்கு வழி சொல்வதே அங்கு மரபு, இங்கு ?  அப் படம். நம் வகுப்பில் காட்டப்பட்டு மதிப்பிடப்பட்டிருந்தால்,  " எவன் சார் இதை எடுத்தான்?”  " இவனுக்கு சுட்டுப் போட்டாலும் இக்கலை வராது."  'ஆனைப் பார்க்காமல், தோளைப் பார்க்கிறது நோக்கு'  'அமாவாசையிலே எடுத்த படமா ஐயா' இது?  இப்படிப் பிய்த்துத் தள்ளியிருப்பார்கள், நம் அறிவாளிகள், 'பிய்த்து எடுத்தே' பிழைக்கிற கூட்டம் நாம், இல்லாத வற்றை மட்டுமே பட்டியல் போட்டு, பறைசற்றி, சோர்ந்து போகிற கூட்டம் நாம்.  என்ன செய்ய வேண்டும் ; எப்படிச் செய்ய வேண்டும்; எதை அதிகப்படுத்த வேண்டும்; ; எதை விரைவுபடுத்த வேண்டும்; எதை மெல்லச் செலுத்த வேண்டும் என்று ஆக்க வழியிலே, உள்ளது சிறக்க, சொல்லிப் பழகாத மக்கள் நாம். எனவே சாண் ஏறினால் முழம் சறுக்கி ஒப்பாரி வைத்தோ காட்டுக் கத்தல் கத்தியோ, ஒயும் மக்கள் நாம்.  இங்கிலாந்து கல்விக்கூடங்களில் கண்டமுறை, ஊக்கு வழி, வளர்க்கும் வழி நம் பள்ளிகளுக்கும் வத்திடாதோ ? இந்த ஏக்கத்தோடு அவ் வகுப்பை விட்டு வெளியேறினேன். அச்சிந்தனை இன்னும் நிழலாடிக் கொண்டிருக்கிறது.  கற்க வந்தோமா, கல்லெறிய வந்தோமா என்பதே தெரியாத நிலையில் தம்பிகளை வைத்திருக்கிறோம். தொழில் திறமையைப் பற்றிச் சிந்திப்பதைவிடத் தகுதி என்கிற பொய்மான் வேட்டையிலே விரைகிறது ஆசிரியர் சமுதாயம்.  பெற்றோரோ, பிள்ளையைச் சீராக்குவதைத் தவிர மற்றெல்லா முயற்சிகளிலும் முனைந்து நிற்கின்றனர், சீராக்கக் கூட உரிமையுண்டா என்பதே வழக்கு இனியென்ன குறை?    12. முதிய இளைஞர் இருவர்   ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்திரண்டாம் ஆண்டு, ஸ்காட்லாந்தின் தலைநகரமாகிய எடின்பரோவில் இருந்தேன்.  ஒரிரவு ஏழு மணிக்கு, முதியோர் கல்விக் கூடமொன்றைக் காண ஏற்பாடாகி இருந்தது. அப்போது, மழை துாறிக் கொண்டிருந்தது. குளிர் காற்று சீறிக் கொண்டிருந்தது.  ஒட்டல் அறையிலே தங்கிவிட ஆசை. ஆனாலும் சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டுமென்ற உண்ர்ச்சியால் உந்தப்பட்டு இரவுக் கல்விக்கூடம் போய்ச் சேர்ந்தேன்.  கல்லூரி முதல்வரைக் கண்டேன். அவர் அறையில் மேசையின் மேல் அழகிய விரிப்பொன்று இருந்தது. அது என் கண்ணைக் கவர்ந்தது; கருத்தையும் கவர்ந்தது.  அதிலே, மயிலொன்று பின்னப்பட்டிருந்தது. மயிலின் இயற்கைத் தோற்றம் என்னைத் தொட்டது. அதைப்பாராட்டினேன். முதல்வர் மகிழ்ந்தார். பலரும் பாராட்டினதாகக் கூறினார்.  கல்லூரியின் நடைமுறையைப் பற்றி விளக்கினார், அன்றைய குளிரிலும் மழையிலும்கூட, வழக்கமான வருகை இருப்பதாகக் கூறினார்.   கல்லூரி மாணவ மாணவியார்-முதியோர்-கல்வியின் மீதே கண்ணாயினார் என்பதை அறிந்தேன், மகிழ்ந்தேன்.  இதோ உங்களிடம் உரைத்து விட்டேன். நம் தம்பிகள், தங்கைகள் - மாணவ, மாணவியர்-காதுகளிலும் போட்டு வையுங்கள்.  பின்னர் கல்லூரியின் பல பகுதிகளையும் காட்டிக் கொண்டு வந்தார். சிற்சில வகுப்புகளுக்குள்ளும் நுழைந்தோம். ஒரு வகுப்பில் அம்மையார் ஒருவர் பெயரைச் சொன்னார். பின் வரிசையில் இருந்த ஓர் அம்மாள் கையை உயர்த்தினார்.  "வேலு. நீங்கள் பார்த்துப் பாராட்டிய மயில் விரிப்பை நெய்தவர் இவரே" என்றார் முதல்வர்.  “ஆகா ! உங்கள் வேலைப்பாடு மிக நன்றாயிருக்கிறது. எவ்வளவு காலம் பயிற்சி பெற்றீர்கள். இவ்வளவு நேர்த்தியாகச் செய்திருக்கிறீர்களே !” என்றேன் நான்.  “ஒராண்டு காலம் : இக்கல்லூரியில் கற்றுக் கொண்டேன். பலன், அந்த விரிப்பு” என்று அடக்கமாகக் கூறினார் அந்த அம்மாள்.  “அப்படியா ? முந்தைய பழக்கமின்றி, இந்த வயதில், புதிய கலையைக் கற்றுக்கொண்டு, இவ்வளவு பெரும் வெற்றி பெற்றுள்ள உங்களுக்குப் பரிசு கொடுக்கலாம்” என்றேன்.  "கொடுக்கலாமென்ன ! ஏற்கனவே இதற்குப் பரிசு பெற்று விட்டார்கள். சென்ற ஆண்டு. ஸ்காட்லாண்ட் முழுமைக்கும், கற்றுக்குட்டி நெசவாளர்களுக்கென்று போட்டி நடந்தது. அப்போட்டியில், இவ்விரிப்பிற்காக, இந்த அம்மாளுக்கு முதற் பரிசு கிடைத்தது" என்று பூரிப்போடு உரைத்தார் முதல்வர்.   "ஆர்வங் கலந்த பாராட்டு ! மேலும் பல வெற்றிகள் கிட்டுவதாக" என்று கூறினேன். வாழ்த்துவதற்கு எனக்கு வயது போதாது. என்னைக் காட்டிலும் பல ஆண்டு மூத்தவர், அந்தப் பாட்டி.  சில நிமிடங்களுக்குப் பின், வேறொரு வகுப்பறையில் இருந்தோம். வகுப்பறைச் சுவர் ஒன்றில் அழகிய ஓவியம் ஒன்று காட்சியளித்தது. மலையும் காடும், அருவியும் ஆறும் அழகாகத் திட்டப்பட்டிருந்தன. அப்படத்தைக் கண்டு சொக்கினேன்.  "ஆகா ! எவ்வளவு திறமையாகத் தீட்டப்பட்டிருக்கிறது இவ்வோவியம் !" என்று வியந்தேன்.  "இதைத் திட்டியவரும் இங்கேயே இருக்கிறார்" என்றார் முதல்வர். அதே மூச்சிலே, ஒரு பெயரைச் சொன்னார். பெரியவர் ஒருவர் ஒரு பக்கத்திலிருந்து கையைத் தூக்கினார்.  "இவர்தான், இதன் கர்த்தா. இதுவும் பரிக பெற்ற வேலைப்பாடு. சென்ற ஆண்டு, ஸ்காட்லாண்டு முழுமைக்கும் கற்றுக்குட்டி ஒவியர்களுக்கென்று போட்டி யொன்று வைத்தார்கள். அதற்காகத் தீட்டிய படம் இது. இதற்கு முதற் பரிசு கிடைத்தது" என்று இதன் வரலாற்றை விளக்கிக் கூறினார் முதல்வர்.  "பலே, உங்கள் கல்லூரியில், பல, முதல்தரமான கற்றுக் குட்டிகள் உள்ளனரே ! இவர் எப்போது ஓவியம் வரைவதில் ஈடுபட்டார் ?" இது பக்க உரையாடல்.  "இக் கல்லூரியில் சேர்ந்த பிறகே, ஒவியம் வரையும் பயிற்சி பெற்றேன். ஒராண்டுப் பயிற்சிக்குப் பின் போட்டியிட்டேன்" என்றார் ஓவியக்காரர்.   "அப்ப்டியா? நீறுபூத்த நெருப்புப் போன்றிருந்த உங்கள் திறமையைப் போற்றுவதா ? தள்ளாத வயதிலும் புதுப்புதுத் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் உங்கள் ஊக்கத்தைப் போற்றுவதா? முழு மூச்சு ஈடுபாட்டைப் போற்றுவதா? என்று தெரியாது திகைக்கிறேன். தொடர்ந்து வெல்க நீவிர், மன்னிக்க வேண்டும். உங்கள் வயதை அறிந்து கொள்ளலாமே?" என்று இழுத்தேன்.  "அதற்கென்ன? என் வயது எழுபத்தாறு " என்று கணீரென்று உரைத்தார். ஓவியக்காரத் தாத்தா.  "நீவிர் நூறாண்டு வாழ்க" என்றேன், போகலாமென்று சாடை காட்டினேன் முதல்வருக்கு.  "இரண்டே விநாடி ; சிறு-செய்தி. ஒவியப் போட்டியில் முதற் பரிசு பெற்ற இவரும் நெசவுப் போட்டிலில் முதற் பரிச பெற்ற அந்த அம்மாளும் கணவன் மனைவி' இதை, முதல்வர் கூறி முடிப்பதற்குள், வகுப்பிலிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ந்தனர். முதல்வர் தொடர்ந்தார் பேச்சை. இருவரு இளைய மாணவர்கள். இவர்கள் சேர்ந்து ஈராண்டு ஆகவில்லை. இருவரும், பரிசு பெற்ற இரு பொருட்களையும் தங்களுக்ககன்று வைத்துக் கொள்ளாமல், இக் கலைகளை: கற்றுக் கொடுத்த கல்லூரிக்கே அன்பளிப்பாக்கிவிட்டனர்! இக்கொடையே இவர்கள் சிறப்புக்கெல்லாம் சிகரம்"- இதை முதல்வர், சொல்லி முடித்தது தான் தாமதம், நீண்ட பலமான கைதட்டல் வகுப்பிலே. சில விநாடிகளுக்கு முன் நிகழ்ந்ததைவிட பலமான கைதட்டல்.  மாணவத் தம்பதிகளின் ஆர்வமும் முயற்சியும் ஒரு பக்கம் பரவசப்படுத்தின சிறப்பைப் போற்றும் சக மாணவர்களின் சிறப்பு ஒரு பக்கம் பரவசப்படுத்திற்று. அரும்பொருளையும் பொதுப் பொருளாக்கும் நல்லியல்பு மற்றொரு பக்கமிருந் பரவசப்படுத்திற்று. மேலும் இருந்தால், பரவசத்தில் மூழ்கிப் போவோமென்று அஞ்சி, மெல்ல வெளியேறினோம்.  "நெசவுப் போட்டியில் வெற்றி பெற்ற அம்மாளின் வயது எழுபத்திரண்டு. ஆறு பதிலும் எழுபதிலும் முதியோர் கல்விக் கூடங்களில் சேர்ந்து , புதியன பல கற்போர், ஆணும் பெண்ணும், எண்ணிறந்தோர்!" என்ற கல்லூரி முதல்வர். காதோடு காது சென்னது ஒலித்துக் கொண்டிருக்கிறது. என் காதிலே ஒலித்துப் பயன்?  இந்தியா திரும்பிய பின், பல நண்பர்களிடம் இதைக் கூறி, என் மகிழ்ச்சியைப் பகிர்த்து கொண்டேன். கேட்டவர்கள், பயபக்தியோடு கேட்டார்கள். "ஆமாங்க அவங்க மாதிரி நாம் எப்ப வரப்போகிறோம்" என்று முடித்து விட்டார்கள்.  ஒருவர் மட்டும் ஈடு கொடுத்தார். அந்தக் கிழவனும் கிழவியும் கல்லூரிக்குப் போவதில் போட்டியிட்டார்கள். ஆளுக்கொரு புதுக் கலை கற்று, பரிசு பெறுவதில் போட்டியிட்டார்கள். இருக்கட்டுமே, நாம் மட்டும் என்ன குறைந்து போய்விட்டோம்? சென்ற ஆண்டுதான் என் மனைவிக்கும் எனக்கும் போட்டி. இருவரும் போட்டியை ஏற்றுக்கொண்டோம்.  " சம்பளம் கட்டு படியாகவில்லை. கொஞ்சம் பவுடர் வாங்குவதை......" என்று நீட்டினேன்.  "பளிச்சென்து பதில் சொன்னாள் : 'நீங்கள் மட்டும் காசைப் புகையாக ஊதலாம். நான் அச்செலவிற்கு மேக்கப் பூச்சிற்குச் செலவு செய்தால் கேளுங்கள். இந்த வீட்டில் எனக்கு இதற்குக்கூட வக்கு இல்லையா ?’ என்று கண்ணிர் வடித்தாள், என் இல்லத் தரசி.   “இது சகவாழ்வுக் காலம், சகவிரயக் காலமும் கூட. இதற்கு ஏன் வருந்துகிறாய்” என்று சமாதானப்படுத்தினேன்.  “அன்று முதல் எங்கள் வீட்டில் சிகரெட் செலவுக்கும் பவுடர் செலவுக்கும் போட்டி. ஆனால் இக்கால விளையாட்டுப் போட்டி போல் அடிதடி கிடையாது” என்று திசை திருப்பி விட்டார், நகைச்சுவை நிபுணர்.  நாற்பதானால், நாளைக கணக்குப் பார்க்கும் நாமெங்கே! எழுபதானாலும் ஏங்கி, முடங்கிக் கிடக்காமல், புதுப் புதுக் கலைகளைக் கற்கும் பிறர் எங்கே ? யாரிடத்தில் கேட்க இதை ?  தாம் வளர்ந்து, நாட்டையும் வளர்க்க வேண்டிய காளையரோ, வழியிலே நின்று விடுகின்றனர். அறிவாற்றலைவிட, பிற திறமைகளை வளர்ப்பதிலே மூழ்கி விடுகின்றனர்.  தொன்மையையும் பண்பாட்டையும் பற்றிப் பன்னிப் பன்னிப் பேசும் பெரியவர்களோ, கமக்கு எங்கே ஐயா வரும்’ என்று சபித்து விடுகிறார்கள்.  நாகரிகவாதியோ, ‘காமிக்’கோடு நழுவி விடுகிறார்.  பொதுமக்களே, உங்களுக்கு யார் சொல்வார்? பார் கற்றுக் கொடுப்பார் ?  13. புதுயுகத் தலைவர் 'படி, படி, படி' ; இந்நல்லுரை, அறவுரை, ஊக்க உரை: எளிய அமைப்பும், உயரிய கருத்தும் நிறைந்த இவ்வுரை, சோவியத் நாட்டிலுள்ள எல்லா வயதினரையும் கவர்ந்தது இதுவே அந்நாட்டு மக்களின் தாரக மந்திரமாக இன்றும் இருக்கிறது. கோடாலு கோடி மக்களைத் தொடர்ந்து உந்துகிறது.  இது எங்களுக்கு வியப்பாக இருந்தது. இவ்வெளிய உரைக்கு எங்கிருந்து வந்தது இத்தனைப் பேராற்றல் ? எப்போதோ ஒரு முறை எழுச்சியூட்டினாலும் பல்லாண்டுகளாக ஆற்றல் குறையாது ஊக்குவதன் இரகசியம் என்ன ?  இவ்வையப்பாடுகள் எழுந்தன. இவற்றை மெல்ல வெளியிட்டோம். விளக்கமும் பெற்றோம். அவற்றின் சாரத்தை உங்கள் முன் படைக்கின்றேன். இதோ :  இவ்வுரையை வழங்கியது யார் ? குழந்தையைப் படிக்க வைக்கப் பாடுபடும், சாதாரண தொடக்கப் பள்ளி ஆசிரியரா? இல்லை.  முதல் தலைமுறையாக ஏழை மாணவர்களுக்கு உயர் நிலைக் கல்வியளிக்க முயலும் பட்டதாரி ஆசிரியரா? இல்லை.   ‘கல்லூரிக்கு எப்படியோ வந்துவிட்டார்களே ! நமக்குத் தெரிந்தைச் சொல்லிப் பார்ப்போம்’ என்று நினைக்கும் பேராசிரியரா? அவரும் இல்லை.  கல்வி ஆய்வாளர்களா? கல்வித் துறைப் பெரியவர்களா? இல்லை. கல்வித் துறையினரல்ல, மேற் கூறிய அற, ஊக்க உரையை வழங்கியது. பின் யார் ?  “வறுமைப் பாதாளத்தில் வாடி, அறியாமைக் காரிருளில் நடுங்கி, கொத்தடிமைப் பிழைப்புப் பிழைத்து வந்த கோடானு கோடி மக்களுக்குப் புது வாழ்வு தந்த, புது யுகம் அமைத்த எங்கள் தலைவர் காட்டினார் இந்த இலட்சியத்தை” என்று பக்திப் பரவசத்தோடு கூறினார் சோவியத் கல்வியாளர்.  அத்தலைவர் யாரோ ? என்ன பேரோ ?  “அவர் லெனின் ; தோழர் லெனின்; சோவியத் நாட்டின் தந்தை லெனின் பெரியார் லெனின்” இவ்வகையிலே லெனினைப் பற்றிக் கூறக் கேட்டோரம்.  'படி, படி, படி' என்கிற இலட்சியத்தை யாருக்குக் கொடுத்தார் ? ஒரு பிரிவினருக்கா கொடுத்தார் ? இல்லை ! பலருக்கா கொடுத்தார் ? இல்லை. பல பிரிவினருக்கா கொடுத்தார் ? ஆம் அப்படியே.  மாபெருந் தலைவர் எச்சந்தர்ப்பத்தில் இப்படிக் கூறினார் தெரியுமா ?  பல்லாண்டுகளுக்கு முன், சோவியத் ஆட்சி அமைவதற்கு முன், பாட்டாளி ஆட்சிக்குத் திட்டம் தீட்டும் காலம், அது. இரகசியத் திட்டம் தீட்டும் காலம் பலப்பல குழுவினருக்குப் பலப்பல பொறுப்புகள் ஒதுக்கப்பட்ட மிக தெருக்கடியான காலம்.  அப்போது இளைஞர் சிலர், தோழர் லெனினை இரகசியமாகக் கண்டனர். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடத் துடிக்கும் ஆவலைத் தெரிவித்தனர். அவ்விளைஞர்கள், மாணவர்கள் என்பதைத் தெரிந்து கொண்டார் ; அவர், அவர் களுக்கு ஒதுக்கிய பணி, படிப்பு ; வேறு பொறுப்புகள் அல்ல.  பிற பொறுப்புகளுக்குத் தேவைக்குமேல் ஆட்கள் கிடைத்துவிட்டதாலா ? இல்லையென்று கேள்விப்பட்டோம். பின் என்ன காரணத்தால் ?  லெனின் சிந்தித்தது இரஷ்யாவின் உடனடி எதிர்காலத்தைப் பற்றி மட்டுமல்ல; திட்டமிட்டதும் உடனடித்தேவைக்கு மட்டுமல்ல நீண்ட எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தித்தார். நீண்ட எதிர்கால வளர்ச்சிக்கும் என்னென்ன தேவை என்று சிந்தித்தார், தெரிவித்தார்.  ‘நவீன கல்வியே இரஷிய நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும் வளத்திற்கும் துணை செய்யும். அக் கல்வி எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாக, ஆழமாகப் பரவுகிறதோ, அவ்வளவிற்கே, இரஷிசியாவின் எதிர்காலம் நன்றாக இருக்கும் : உறுதியாக இருக்கும். எத்தகைய நிலையையும் தாங்கக் கூடியதாக இருக்கும்’ என்று உணர்ந்தார்.  ‘மாணவர்களை அப்போதைய கிளர்ச்சிக்கு இழுத்து சிட்டுவிட்டால். புதிய இரஷியாவை, பொதுவுடைமை இரஷியாவை உருவாக்குவதற்கு வேண்டிய அறிவாளிகள், விஞ்ஞானிகள், தொழில் வல்லுநர்கள் பொறுப்பேற்கும், ஆற்றல் உடையவர்கள் ஆகியோருக்குப் பஞ்சம் ஏற்பட்டு விடும். அப்பஞ்சம் எல்லாத் துறைகளையும் பாதிக்கும’ என்று தெரிந்து மாணவர்களைக் கிளர்ச்சிக்காரர்களாக்காமல், ஆயத்தக்காரர்களாக இயங்கச் செய்தார்.  இப்படி அவர் நல்வழியில் நடத்தியதால், அதைப் பின்பற்றி எங்கள் மாணவ சமுதாயம் கற்கும் சமுதாயமாகவே இருந்து வருகிறது. கற்றது போதாது; மேலும் மேலும் கற்க வேண்டும் ; கற்றதைப் பயன்படுத்த வேண்டும் ; சமூக நலனுக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளோடு, பெருநடை போட்டு வருகிறது . எங்கள் இளைய தலைமுறை யினரைப் பற்றி நாங்கள் பூரிப்படைகிறோம்" என்று சோவியத் கல்வியாளர்கள் கூறக் கேட்டோம்.  மாணவர்களை விதைநெல் போன்று கட்டிக் காத்த பெருத் தலைவரைப் பற்றி அவர்கள் பெருமை கொள்வதில் வியப்பில்லை. ஆனால் அவர் காட்டிய அறிவு வழியை, ஆக்க வழியை, பத்திய வழியை அவருக்குப் பின்னரும், பல்லாண்டு களாக, நாடு முழுவதும், கோடானுகோடி மக்களும், தொடர்ந்து பின்பற்றி வருவது எங்களுக்குப் பெரும் வியப்பாக, இருந்தது.  “என்னே ! உங்களுக்குத் தலைவரிடம் உள்ள பற்று” என்று பாராட்டினோம்.  “வாழ்வளித்த பெரியவருக்கு தாங்கள் செய்யக் கூடியது. வேறு என்ன இருக்கிறது ? தம் நன்மைக்காகப் பெருமைக்காக அல்லாது, மக்களின் நீண்ட எதிர்காலத்திற்காக, நாட்டின் நிலையான நல்வாழ்விற்காக வழிகாட்டினால், அதைக்கூடப் பின் பற்ற முடியாத மக்கள் இருந்தென்ன; போயென்ன ?” என்று பரவசத்தோடு ஒருவர் விளக்கக் கேட்டோம். இந்தியர்களாகிய நாங்கள் மூவரும் ஒருவரை ஒருவர் கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டோம். போற்ற மட்டும் கற்றுக்கொண்டு, பின்பற்றுவதற்கு வேண்டிய ஊக்கமும் உள் வலியும் அற்றுக் கிடக்கும் நம்மை எண்ணி நாணியதை அவர் புரிந்து கொண்டாரோ என்னவோ !  “இளைஞர் சமுதாயம், மாணவர் சமுதாயம், பொதுச் சமுதாயத்தின் ஒரு பகுதி ; சிறு பகுதியும் கூட. சமுதாயம் முழுவதும், கல்வியின் தேவையையும், அருமையையும் பெருமையையும் உணர்ந்து, அதற்குத் துணை நின்றால் மட்டுமே, அப்படித் துணை புரியும்போதே, இளைஞர் கல்விப்பயிர் அழிக்கப்படாதிருக்கும்."  “ஆகவே மாணவர் சமுதாயத்தில் மட்டுமின்றி, பொதுச்சமுதாயம் முழுவதிலும் கல்விச் சூழ்நிலையை வளர்த்து விட்டார் லெனின்” என்றார்.    14. படி, படி, படி!   படி; படி ; படி ! இவை சிறிய சொற்கள், எளிய சொற்களும் ஆகும். சிறிய எளிய இம் மூன்று சொற் தொகுப்பின் சாதனை அரியது; பெரியது; அரிதினும் அரியது: பெரிதினும் பெரியது. இது உண்மை ; வெறும் புகழ்ச்சி யில்லை. அப்படியா என்று மலைக்க வேண்டா. இதோ அற்புதமான சான்று.  “எங்கள் மக்களில் மூன்றில் ஒருவர் ஏதாவதொரு கல்வி முறையில் சேர்ந்து கல்வி பெற்று வருகிறார்கள். இக் கூற்றினைக் கேட்டேன் : அடுத்தடுத்துக் கேட்டேன் ; நான்கு வாரங்கள் கேட்டேன். பெருமிதத்தோடு கூறக் கேட்டேன். வெற்றியொளி வீச, மகிழ்ச்சியோடு கூறினர், யாரோ வழிப்போக்கர், காற்று வாக்கிலே கூறவில்லை. விவர மறிந்தோர், பொறுப்புடையோர், ஈடுபாடுடையோர் கூறினர். புள்ளி விவரத்தோடு கூறினர். புள்ளி விவரத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.  ‘எங்கள் நாட்டின் மொத்த மக்கள் எண்ணிக்கை 23 கோடியை நெருங்குகிறது. இந்த இருபத்து மூன்று கோடி பேர்களில் ஏழு கோடியே எழுபது இலட்சம் மக்கள் இன்று கல்வி கற்று வருகிறார்கள்.’ இவை நான் கேட்ட புள்ளி விவரங்கள். இவை நம் நாட்டுப் புள்ளி விவரங்கள் அல்ல நம் மக்கள் எண்ணிக்கை ஐம்பது கோடியை நெருங்குவது யாருக்குத் தெரியாது ! பின், எந்தநாட்டைப் பற்றிய தகவல் இது ? இதோ சொல்லி விடுகிறேன். என் மேல் கோபக் கனல் வீசாதீர்கள். சோவியத் நாட்டைப் பற்றிய தகவல் இது. அந்நாட்டிற்கு 1931 ஆம் ஆண்டில் சென்றிருந்தேன். அப்போது அவர்கள் எண்ணிக்கை இருபது கோடி. 1937 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் மீண்டும் சென்று வர நேர்ந்தது. அம்மக்கள் எண்ணிக்கை இருபத்து மூன்று கோடியை நெருங்குவதைத் தெரிந்து கொண்டேன்.  மக்கள் பெருகப் பெருக, படிப்போர் எண்ணிக்கை வளர்ந்துகொண்டே இருக்கிறது. அந்நாட்டில் கல்வி வாய்ப்புக்களும் பெருக்கெடுத்து ஒடிக் கொண்டேயிருக்கின்றன.  ‘கல்வி கற்பவர்கள்’ என்னும் சொற்றொடர் நம் மனக்கண் முன்னே யாரை நிறுத்தும்? ஐந்து வயதுச் சிறுவனை, சிறுமியை பத்து வயதுப் பையனை பெண்ணை, பதினெட்டு வயது காளையை கன்னியை நிறுத்தும். இருபத்தைந்து வயது இளம் தம்பதிகள் கற்போர்களாகக் காட்சியளியார். நமக்கு முப்பத்தைந்து வயது குடும்பிகள் மாணவ. மாணவிகளாகத் தோன்றுவதில்லை இங்கு. நாற்பத்தைத்து: வயதினரோ மாணவப் பருவத்தை விட்டு நெடுந்துாரம் விலகி விட்டவர் ; நாள்களை எண்ணிக் கொண்டிருப்பவர், நம் சூழ் நிலையில் ; மன நிலையில்.  ‘மூன்றிலொருவர் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்’ என்றதும்,  “உங்கள் நாட்டின் மக்களில், மூன்றில் ஒருவர், பள்ளி வயதினரான பாலர்களும், சிறுவர்களும், இளைஞர்களும், வாலிபர்களும் என்று பொருளா ?” என்னும் ஐயத்தைக் கிளப்பினோம்.  “ ‘பள்ளி வயது’ என்று ஒன்று இல்லை. படிப்பிற்குத் கால வரம்பு கிடையாது. வாய்ப்பு வரம்பு உண்டு பல நாடு களில் ; அதுவும் இங்கு இல்லை ஊக்க வரம்பு உண்டு, பல சமுதாயங்களில்; அதையும் இங்குக் காண முடியாது. இங்குக் கல்வித் தாகம் தணியாத் தாகம். பாடம் ஏற, பரீட்சையில் தேறத் தேற, சான்றிதழ் பெறப் பெற புதுப் புதுக் கல்வியினைக் கற்பதையே காண்பீர்கள். கற்போர் ஏழு கோடி எழுபது இலட்சத்தில் சிறுவர் சிறுமியர் உண்டு : இளைஞர் உண்டு : காளையரும் கன்னியரும் உண்டு; தந்தையரும் தாயாரும் உண்டு...”  விளக்கம் முடிவதற்குள், குறுக்கு வினாக்கள் எழுந்தன. என்ன வினாக்கள் ?  “உங்கள் நாட்டில், எல்லா வயதினரும் கல்வி கற்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள். இளைஞர்கள், வாலிபர்கள் மட்டு மன்றி முதியோரும் கல்வி பெறுகிறார்கள் என்பதை விளக்குகிறீர்கள், நல்லது. இத்தொடர் கல்வி ஈடுபாடு, தொழிலாளர்களிடையே உண்டா ? நகர்ப்புறத் தொழிலாளர்களிடை மட்டுமா ? நாட்டுப்புறத் தொழிலாளர்களிடையிலுமா? ஆலைத் தொழிலாளர்களைப் போல் பண்ணைத் தொழிலாளர் களும் தொடர்கல்வி பெறுகிறார்களா ? கல்வியில் தொடர் வளர்ச்சி ஆண்களோடு நின்று விடுகிறதா ? பெண்களுக்கும் உண்டா ? இவ்வினாக்களுக்கு விடை இதோ :  “முன்பு சொத்தைப் போல் , கல்வியும், ஒரு சிலருடைய தனி உடைமையாக இருந்தது. ஜார் காலத்தில் கல்வி பொது மக்களுக்கு எட்டாததாக இருந்தது. எழுதப் படிக்க கூடத் தெரியாதவர்களே ஜாரின் குடிகளிலே நூற்றுக் எழுபத்து நான்கு பேர். சோவியத் மக்களின் நிலை அடியோடு மாறி விட்டது. ஐம்பது வயதிற்குட்பட்ட ஆண் பெண் அனைவரும் எழுத்தறிவு பெற்றனர் ; அதோடு நின்று விடவில்லை, எங்கள் கல்வி வளர்ச்சி. எழுத்தறிவு பெற்றவர்கள் நான்காவது வகுப்பு நிலையை எட்டிப் பிடித்தனர். அடுத்து எட்டாம் வகுப்பு நிலைக்குக் கற்றனர். நின்றனரா அதோடு ? தொடர்ந்து படித்தனர். பள்ளியிறுதிவரை படித்துத் தேறினர். தொடர்ந்து, மேல் படிப்பும் படித்து வெற்றி பெற்றவர், எண்ணற்றவர்.  சோவியத் ஆட்சியிலேயே, முதல் முதல் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டு தொடர் கல்வியால் வளர்ந்தவர்கள் பாட்டாளிகளும் உழவர்களுமே. நகர்ப்புறப் பாட்டாளிகள் மட்டுமல்ல ; நாட்டுப்புற, சிற்றாள் தொழில் புரியும் பாட்டாளிகளும், பண்ணைகளில் பாடுபடும் உழவர்களும் இவ்வழியில் வளர்ந்துள்ளனர். ஆண்களைப் போலப் பெண்களும் சோவியத் கல்வி வெள்ளத்தின் பலனை நிறையப் பெற்றுள்ளனர் ; பெறுகின்றனர் ; இனியும் பெறுவர். ஏழு கோடியே எழுபது இலட்சம் பேர் இப்போது இங்குக் கல்வி கற்று வருவதாகக் கூறினேன். அவர்களில் நான்கு கோடியே பத்து இலட்சம் மக்கள் தொழில் புரியும் தொழிலாளி மக்களும் பணிபுரியும் பண்ணையாட்களும் ஆவர். மற்றவர்கள் சிறுவர். சிறுமியர், இளைஞர், காளையர் உட்பட, மூன்று கோடியே அறுபது இலட்சம் பேர்களே; இப்போது தெரிகிறதா, இந்நாடு உழைப்பாளிகளுக்கு உணவும் உடையும் உறையுளும் தேடிக் கொடுப்பதோடு நில்லாமல், கல்வி, மேலும் மேலும் கல்வி,, காலமெல்லாம் கல்வி, வாழ்நாள் முழுவதும் கல்வி கொடுக்கிறது என்ற உண்மை ?  “வாழ்க்கைத் தர உயர்விற்குப் பாடுபடுவதைப் போல், பொது மக்களின் கல்வியறிவு நிலையை உயர்த்துவதற்கும் இனிக் கவனஞ் செலுத்தி வருகிறோம் நாங்கள். போதிய கல்வியறிவே-காலத்திற்கேற்ப வளரும், மாறும், கல்வி அறிவே-பிற முன்னேற்றங்களுக்கும் வளர்ச்சிகளுக்கும் ஆணி வேர். அவ்வாணி வேர் இரண்டொருவரிடம் உறுதியாக இருந்தால் போதாது. பரவலாக எல்லாரிடமும் பரவியதாக இருக்க வேண்டும். இது எங்கள் அடிப்படைக் கொள்கை அசைக் முடியாத கொள்கை. சோவியத் ஆட்சி அமைந்த அன்று முதல் இன்றுவரை இடையறாது இக்கொள்கையை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறோம். கல்வியை ஒடுக்கும் எண்னம் எதிர்காலத்திலும் எழாது” என்று விளக்கினார், சோவியத் கல்வியாளர்களில் ஒருவர்.  15. ஒளி பரப்ப வாரீர்   கல்விக்கு ஆதரவான சூழ்நிலையைப் பொது மக்களிடம் எப்படி உருவாக்கினார்கள் ? சோவியத் ஆட்சி, மலர்த்த போது, சோவியத் மக்களில் நான்கில் மூவர், எழுதப் படிக்கத் தெரியாத, தற்குறியாக அல்லவா இருந்தார்கள் ? அத்தகைய சமுதாயத்தில் கல்விப் பசியை எப்படி ஏற்படுத்தினார்கள்? எப்படி அப்பசியை ஆற்றினார்கள் ? மேலும் மேலும் பசி எடுக்கும்படி என்ன செய்தார்கள் ? இந்த வினாக்களைக் கேட்டோம். பதில் கிடைத்தது.  ‘எழுதப் படிக்கத் தெரியாதவன், அரசியல் அப்பாவி. அவன், அரசியலில் பங்குகொள்ள ஆற்றல் அற்றவன். அந்நிலையை மாற்றி, கல்வியறிவு பெற்றவனாகச் செய்தால், குடிமகன், தன் நினைவோடு, அரசியலில் உரிய பங்குகொள்ள முடியும். வேறு பல பெரும் பொறுப்புகள் இருந்தாலும், ‘எழுத்தறியாமையைப் போக்குவதில், தற்குறித்தனத்தைப் போக்குவதில் முதற் கவனம், பெருங் கவனம், விரைவான முயற்சி தேவை’, என்று லெனின் உரைத்தாராம். அதை ஆட்சியும் கட்சியும் ஏற்றுக்கொண்டன. கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டதோடு நிற்கவில்லை ; கொள்கையை நிறை வேற்றக் குதித்தனர். நாடு முழுவதற்கும் எழுத்தறிவிப்பு இயக்தித்திற்குத் திட்டமிட்டனர். பல தரத்தினர் ஆதரவைத் திரட்டினர்.  மேற்கொள்ள வேண்டிய பணி சிறியதா ? இல்லை; பெரியது. நான்கில் மூவர் தற்குறி என்றால், நோயின் விரிவு விளங்காது. அன்றிருந்த பதினாறு கோடி மக்களில் பன்னிரண்டு கோடி மக்கள் தற்குறிகள். பன்னிரண்டு கோடி முதியோருக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுப்பது, சில ஆண்டுகளுக்குள் கற்றுக்கொடுப்பது என்றாலே பலருக்குச் சிரிப்பு வரும். கனவு என்று ஒதுக்கிவிடத் தோன்றும்.  பெருந்தொடர்மலை போல், ஒங்கி உயர்ந்துள்ள தற்குறித் தன்மையைக் கண்டு மலைக்கவில்லை, தயங்கவில்லை, பின்னடையவில்லை சோவியத் மக்கள். அதன் மேல் போர் தொடுத்தனர். பெரும் போர் தொடுத்தனர். இங்கும் அங்கும் சிற்சில நகரங்களில் மட்டுமல்ல, பட்டி தொட்டிகளில் எல்லாம் தற்குறித் தன்மையை அழிக்கும் போர் நடந்ததாம். நாட்டின் எல்லாப் பக்கங்களிலும் மிகத் தீவிரமாக நடந்ததாம்.  இத்தனைக் கோடிப் பேரைப் படிக்க வைக்க எத்தனை இலட்சம் ஆசிரியர்கள்,-முதியோர் கல்வி ஆசிரியர்கள் - தேவைப்படுவர். அத்தனை இலட்சம் ஆசிரியர்கள் இருந்தனரா ? இல்லையாம். பின்னர் என்ன செய்தனர்?  எழுத்தறிவு இயக்கத்தை, ஆட்சியின் திட்டமாக ஏற்றுக் கொண்டதும், பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், இந்தப் பொதுப் பணிக்காகத் தங்கள் நேரத்தையும் உழைப்பையும் உதவ முன் வந்தனர். தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமல்ல, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களும் கல்லூரி ஆசிரியர்களும், இந்த ஞான வேள்வியில் ஈடுபட முன் வந்தனர்.  ஆயினும், மேலும் பலர் தேவைப்பட்டனர். வேண்டுகோள் எழுந்தது. நாட்டாட்சியின் உயர்மட்டத்திலிருந்து வேண்டுகோள் எழுந்தது. பலன் விளைந்தது. ஆசிரியர் அல்லாத பலரும் இவ் வேள்வியில் ஈடுபட முனைந்தனர். படித்தவர்களிலே பல இலட்சம் பேர், அறியாமையை அழிக்கப் போர் தொடுக்க வந்தனர். அலுவலகங்களில் பணி புரிவோர் வந்தனர். தொழிற் கூடங்கிகளிலே பணிபுரிவோர் வந்தனர்.  அம்மட்டோ ? மாணவ, மாணவிகள் வந்தனர். உயர் நிலைப்பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றிலுள்ள மாணவ மாணவிகள் பல நூறாயிரவர் எழுத்திதறிவிப்பு இயக்கத்தில் ஈடுபட்டனர்.  இவர்களில் எந்தப் பிரிவினரும், ஏற்கனவே, மேற் கொண்டுள்ள தங்கள் பொறுப்புகளைக் கழித்து விட்டு, புதுப் பொறுப்பிற்கு வரவில்லை. ஆசிரியர்கள் தங்கள் கல்விக் கூடப் பணியோடு, இப் பொதுத் தொண்டைக் கூடுதலாக மேற்கொண்டார்கள். அலுவலகத்தாரும் அப்படியே. மாணவ மாணவிகளும் தங்கள் படிப்பையும் கவனித்துக் கொண்டு, இத் தேசத் தொண்டை மேற்கொண்டார்கள்.  எழுத்தறிவு இயக்கத்தில் ஈடுபட்டோரில் பலர், மேற் கொண்டு ஊதியம் பெறாமல், தியாகிகளாகப் பணிபுரிந்தனர். குடும்பச் சூழ்நிலை காரணமாக, அதிகப் படியான ஊதியம் தேவைப்பட்ட ஓரளவினர் மட்டுமே, முதியோர் கல்விக்காக ஊதியம் பெற்றனர்.  சாதாரண கல்விக்கூட ஆசிரியர் கூட முதியோர் கல்விக்குப் பயிற்சி பெற்றவர் அல்ல அலுவலகத் தோழர் களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்ற நிலை. ஆர்வம் பிடித்துத் தள்ள, எழுத்தறிவிப்பு இயக்கத்தில் குதித்துவிட்ட பல இலட்சம் பேருக்கும் முதியோர் கல்வி கற்பிப்பதற்கான பயிற்சி தேவைப்பட்டது.  பயிற்சிக் கூடங்களைத் தொடங்கி, வேலை செய்து கொண்டிருப்பவர்களை அங்கு இழுத்து வந்து, பயிற்சி கொடுத்து அனுப்புவது ஆகாத காசியம். அதிலே பெருங் கால தாமதம் ஏற்படும். குடும்பத்தை விட்டு நெடுந்துாரம் சென்று பயிற்சி பெறவேண்டிய தொல்லை ஏற்படும். வேகம் தடைப்படும். ஒட்டைச் சட்டியை வைத்துக்கொண்டு கொழுக்கட்டை சுட்டாக வேண்டிய நிலை.  இதற்கு ஒரு வழி கண்டுபிடித்தார்கள். அது என்ன ? முதியோர் கல்விக்கு ஆசிரியர்களாகப் போகிறவர்களுக்கு அஞ்சல் மூலம் பயிற்சி கொடுப்பது.  அத்துறையில் அனுபவமுடைய சிலரைக் கொண்டு, பயிற்சிக் குறிப்புகளை, உபாயங்களை எழுதி அச்சிட்டு அஞ்சல் மூலம் அனுப்பினார்கள். ஆசிரியர்களின் ஐயப் பாடுகள் உரியவர்களுக்கு, அஞ்சல் மூலம் சென்றன. நிபுணர்கள் அவற்றைக் கவனித்து விளக்கமாகப் பதில் எழுதி அனுப்பினர். இப்படி அஞ்சல் மூலம் பயிற்சி கொடுத்ததால் ஏராளமானவர்களுக்கு. விரைவாகப் பயிற்சி கொடுக்க முடிந்தது. எழுத்தறிவிப்பு வேலையையும் பெரும் அளவில் தொடங்க முடிந்தது. இப்புதுத் துறையில் ஒரளவு அனுபவப்பட்ட பிறகு அங்கும் இங்கும் கருத்தரங்குகளில் கூடி, சிக்கல்களை அவிழ்த்து, முறைகளைச் செப்பனிட்டுக்கொண்டு விரைந்து முன்னேறினர். திடீரென வந்த போரைச் சமாளிக்க எத்தனை வேகமாக உள்ளதை வைத்து, ஏற்பாடு செய்வார்களோ அப்படிச் செய்தனர், எந்நாட்டிலோ உள்ள நிலையையும் பயிற்சியையும் மெதுவான போக்கையும் குறிக்கோளாகக் கொண்டு மெல்ல நடக்கிற காரியமா முதியோர் எழுத்தறிவிப்பு ?  படித்தவர்களில் கிடைத்தவர்கள் அனைவரையும் பயன் படுத்தி, ஏதோ ஒரளவு சுருக்கமான பயிற்சி கொடுத்து, முதியோர் வகுப்புகளைத் தொடங்கி விட்டார்கள். முதியோர், அக் கல்விக்கூடங்களுக்குச் சென்று கற்கவேண்டுமே! கல்விக் கூடம் போக என்ன செய்தார்கள் ?  நாடு முழுவதிலும் பிரசாரம் செய்தார்கள் தீவிரமாகப் பிரசாரம் செய்தார்கள் ; அடுத்தடுத்து, நாடு முழுவதிலும், ஊர்தோறும் பிரசாரம் செய்தார்கள். செய்தவர் யார் ?  ‘ஆட்சியாளர் ஆணையை அதிகாரிகளும் ஆசிரியர்களும் நிறைவேற்றட்டும்’, என்று கைகட்டிக் கொண்டிருக்க வில்லை, பொதுமக்கள். பிரசாரப் பொறுப்பை, கற்போரைத் திரட்டும் பொறுப்பை பொதுவுடைமைக் கட்சி ஏற்றுத் கொண்டது. கட்சியினரோ சிலர், மற்றவர்களோ பலர். அப் பலரும் பங்கு கொண்டனர். தொழிற் சங்கங்கள், ஆசிரியச் சங்கங்கள், மாணவர் கழகங்கள். எழுத்தாளர்கள், சொற் பொழிவாளர்கள் இப் புனிதப் பணியில் பெரிதும் ஈடுபட்டார்கள். படிப்பார்வத்தை முதியோரிடம் எழுப்பினர். அவர்களை இட்டுக்கொண்டு போய்க் கல்விக் கூடங்களில் சேர்த்தனர். ஒவ்வொருவரும் அவரவர் வாய்ப்புக்கு, ஆற்றலுக்கு ஏற்றபடி இதற்குத் துணை புரிந்தனர் என்று கேட்டபோது,  “ஆண்மையாளர்கள் உழைப்பினை நல்கீர் ! மதுரத் தேமொழி மாதர்கள் எல்லாம் வாணி பூசைக்கு உரியன பேசிர்!”  என்ற மகாகவி பாரதியின் வேண்டுகோள் நினைவில் வந்தது.  இங்கும் ஊதியமில்லாமல் தொண்டாற்றக்கூடிய படித்த வர்களுக்குப் பஞ்சமில்லையே! ஒய்வு நேரத்தில் சமூகப் பணியாற்றக்கூடிய மாணவ மாணவிகளுக்காவது குறைவா ? எத்தனை கோடி ஆண்மையாளர், நம்மிலே! அவர்கள் ஏற்கக் கூடிய ஆக்கப்பணியல்லவா முதியோர் கல்வி !  திரண்டு வாரீர் தொண்டாற்ற வாரீர் ! எழுத்தறிவிக்க அறிவொளி பரப்ப வாரீர் !     16. கலையின் விளக்கம்   கிடைத்தவர்கள் அத்தனை பேரையும் கொண்டு, எழுத்தறிவிப்பு இயக்கத்தைச் சட்டென்று நாடு முழுவதும் தொடங்கினார்கள். அப்போது அவர்கள் அரசியல் பொருளாதார நிலை எப்படி என்று கேட்டோம். எழுத்தறிவிப்பு இயக்கத்தைத் தொடங்கியபோது அரசியல் அமளி அடங்க வில்லை உள்நாட்டுக் குழப்பம் ஒரு பக்கம் வெளி நாடு களின் எதிர்ப்பு ஒரு பக்கம். பொருளாதார நிலையும் மோசம். இத்தனை இடையூறுகளுக்கு இடையிலேதான் அறிவுப் பேரியக்கம் வளர்ந்தது.  அலை ஒய்ந்து, தலை முழுகுவதென்றால் அது எப்போது முடியுமோ ? இடையூறுகளெல்லாம் நீங்கி, பொருள் குவிந்த பிறகே, பொது மக்களுக்குக் கல்வி என்றால் அது என்றைக்கு நடக்கும்?  சோவியத் ஆட்சித் தலைவர், தோழர் காலினின் அவர் களையே தலைவராகக் கொண்ட, எழுத்தறியாமை ஒழிப்புக் கழகத்தை அமைத்தனர். அக்கழகத்தில் ஐம்பது இலட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தனர். ஆகவே ஐம்பதினாயிரம் கிளை கள் தோன்றின. ‘அறியாமை அழிக’ என்ற முழக்கத்தை நாடு முழுவதும், ஊர்தோறும், வீடுதோறும் கலையின் விளக்கம் கண்டனர். எப்படி ?  உள்ளுர்க் கல்விக்கூடம், ‘கிளப்’, பொதுவிடம், எது கிடைத்ததோ, அங்கே, முதியோர் கல்விக்கூடங்களைத் தொடங்கினர் முதியோரைக் கொண்டுவந்து சேர்த்தனர்.  இம் முயற்சியில் பெரும் முட்டுக்கட்டை இருந்தது. தொடக்கத்தில் ஆண்களையே கல்விக் கூடங்களுக்கு இழுக்க முடிந்தது. வழிவழி வந்த பழக்கக் கொடுமையால் ‘கோஷா’ முறையால், குடும்பப் பொறுப்புச் சுமையால், பெண்கள் முதியோர் கல்விக்கூடங்களுக்கு அவ்வளவாகச் செல்ல வில்லை.  இதற்கு என்ன பரிகாரம் ? பெண்களின் வீடு தேடி, கல்வித் தொண்டர்கள் சென்றனர். அவரவர் வீட்டிலேயே. பாடங்கற்றுக் கொடுத்தனர். இரண்டொருவரே படிக்க வந்த போதிலும், அவர்களையும் ஒதுக்கிவிடாது பாடங்கற்றுக் கொடுத்தனர். எழுதப்படிக்க மட்டுமா கற்றுக் கொடுத்தனர்? இல்லை.  தாய்மார்களின் சிந்தையெல்லாம் குழந்தைகளைப் பற்றி யல்லவா ? குழந்தை வளர்ப்பைப் பற்றியும் குடும்ப நலனைப் பற்றியும் சொல்லிக் கொடுத்தனர் அன்றாட வேலைக்குப் பயனுள்ள, தையல், பின்னல் வேலைகளும் கற்றுக் கொடுத்தனர்.  முதியோர் கல்வி, குடும்பத்திற்குத் தேவையான அறிவை யும் திறமையையும் சேர்த்துக் கற்றுக் கொடுப்பதை உணர்ந்த பெண் இனம், மெல்ல மெல்ல அக்கல்வியின் பால் இழுக்கப்பட்டது. காலப்போக்கில் ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாகக் கல்வி பெற்றனர். இன்று ஆணும் பெண்ணும் ஒரு நிறை.  நாடு முழுவதும் விழித்தெழுந்து, பெருந் தலைவர்களே, பெரும் பாடுபட்டுப் பல்லாண்டு தொடர்ந்து அறியாமையை அழிக்கப் பணிபுரிந்ததால், இன்று அந்நாட்டு மக்கள் ‘எங்கள் நாட்டில் எல்லாரும் எழுத்தறிவு பெற்றவர்கள்’ என்று பெருமிதம் கொள்கின்றனர். உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ என்பதற்குச் சிறந்த எடுத்துக் காட்டல்லவா? இது மனமுண்டானால் இடமுண்டு என்பதையும் காட்டுகிறது இது.  “எய்தற் கரியது இயைந்தக்கால் அங்நிலையே செய்தற் கரிய செயல்”  என்ற குறள் இலக்கணத்திற்கு இக்கால இலக்கியமாக விளங்குவது, சோவியத் நாட்டின் எழுத்தறிவிப்பு இயக்கமாகும்.  ‘பசி நோக்காது, கண் துஞ்சாது, செவ்வி அருமையும் பாராது, கருமமே கண்ணாயிருந்து’ முதியோர்க் கெல்லாம் எழுத்தறிவு ஊட்டினார்களே. அது எவ்வளவு தூரம் பச்சென்றிருக்கிறது ? அறிவுப்பயிர் பச்சென்றிருப்பதற்கு அடையாளங்கள் எவை ? இருது அடையாளங்களை நாம் அறிந்தோம்.  முதல் அடையாளம் அம்முதியோர்களின் தொடர் கல்வி. கனவுகூட காணாத எழுத்தறிவு எப்படியோ கிட்டிவிட்டது. இது போதுமே’, என்று அங்குள்ள முதியோர் இல்லை. ஆணாயினும் சரி, பெண்ணயினும் சரி, மூன்று நான்கு திங்களில் பெற்ற எழுத்தறிவின் துணை கொண்டு மேலும் படித்தனர். ஏழெட்டு மாதங்களில் நன்றாகப் படிக்கக் கற்று கொண்டனர். பின்னரும் தொடர்ந்து படித்து எட்டாவது, பத்தாவது தேறிய முதியோர்களை ஏராளமாகக் காணலாம்.  “பாட்டாளிக்கு எழுதப் படிக்கத் தெரிந்தால் போதாதா? என்று கருதுவதில்லை. வெறும் பாட்டாளியாகத் தொடங்கிய முதியோர், நுட்பத் தொழிலாளியாக, நிபுணராகத் தகுதி தேடிக் கொண்டு உயர்வது அந் நாட்டில் சாதாரணமாகக் காணக் கூடியது.  உயர் தொடக்கக் கல்வி ; உயர்நிலைக் கல்வி, கல்லுரரிக் கல்வி ஆகிய பொதுக் கல்வி தவிர, ஏறத்தாழ முந்நூற்று இருபது, ‘தனிக் கல்வி’ வகைகள் சோவியத் நாட்டில் இருக்கின்றன.  இக்கல்லி வகைகளைப் பெறுவோர் அனைவரும் படிப்பைத் தவிர வேறு வேலை செய்யாத முழு நேர மாணவ மாணவியரா ? இல்லை.  முழு நேர மாணவரை விட, அலுவலிலோ தொழிலிலோ இருந்துகொண்டே, பகுதி நேரக் கல்விக்கூடத்திலோ, அஞ்சல் கல்விக்கூடத்திலோ சேர்த்து படிப்போரே அதிகம் பேர்.  பகுதி நேரக் கல்வி முறையும் அஞ்சல் கல்வி முறையும் மிகப் பரவலாக இருப்பதனால் மட்டுமே, இத்தனை ஏராள மானவர்களுக்கு, மூன்றில் ஒருவருக்கு ‘ஏழு கோடியே எழுபது இலட்சம் மக்களுக்கு, கல்வி வசதி செய்து கொடுக்கும் சுமையைத் தாங்க முடிகிறது. முதியோர் கல்வி பளிச்சென்று வளர்வதற்கு இரண்டாம் அடையாளம் ‘தனிக்கல்வி’ ஈடுபாடு ஆகும்.  பகுதி நேரக் கல்வியும், அஞ்சல் முறைக் கல்வியும் குறிப்பிட்ட நோக்கத்தைக் கொண்டவை-பயிற்சி அளிப்பதையோ, சான்றிதழ் வழங்குவதையோ, நோக்கமாகக் கொண்டவை. பகுதி நேரக் கல்வியும், அஞ்சல் முறைக் கல்வியும்-அமைப்பு முறைக் கல்வி குறிப்பிட்ட பயிற்சியையோ, சான்று இதழையோ நினைவில் கொண் டது. அமைப்பு முறைகளுக்கு அப்பால், தன்னிச்சையாக நடக்கும் கல்வி ஒன்றுண்டு. அது எது ?  அது நூல் படிப்பு. தாமே விரும்பி நூலை விலை போட்டு வாங்கிப் படிப்பதும், நூலகத்திலிருந்து நூலைக் கடன் வாங்கிப் படிப்பதும் அமைப்பில் அடங்காக் கல்வி. இத்தகைய கல்வியும் பெருமளவில் நடக்கிறது.  சோவியத் நாட்டில் நூல்கள் வெளியீடு மிக அதிகம். நூல்கள் வெளியானதும் விரைவிலே விற்று விடுகின்றனர். மக்கள் ஆர்வத்தோடு நூல்களை வாங்குகின்றனர். ஆட்சி யாளரும் ஆர்வத்தோடு ஊக்குவிக்கின்றனர். எப்படி ? நூல்களின் விலை மலிவாக இருக்கும்படி பார்த்துக் கொள்வதால்.  சோவியத் மக்களின் படிப்பார்வம் எத்தகையது ?  வெளியாகும் நூல்களில் நூற்றுக்கு இருபதையே சாதாரண மாகப் புரட்டிக்கொண்டே படித்துவிடலாம், மற்ற எண்பதும் கவனித்துக் கற்க வேண்டிய 'சீரியஸ்' பொருள் உடையவை என்பதை விளக்கினார்கள்.  சோவியத் மக்கள், மிகப் பெரும் அளவில் பொருள் உடைய நூல்களையே வாங்கியோ, எடுத்தோ படிக்கிறார்கள்; மக்கள் கல்வி வீண் போகவில்லையென்பதற்கு, இது மற்றோர் அடையாளம்.        17. ஈர உள்ளம்   ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தோராம் ஆண்டு, ஒரு நாள் காலை, நானும் என் மனைவியும் தொடக்க நிலைப் பள்ளியொன்றைப் பார்த்தோம் ; நம் நாட்டில் அல்ல. பிரிட்டனில். அப் பள்ளியில் படித்தோர் சாதாரண குடும்பத் தினர். தலைமை ஆசிரியை எங்களைப் பல பகுதிகளுக்கும் அழைத்துக்கொண்டு போனார். மூன்றாம் வகுப்பில், கூட்டம் முடியும் வரை அங்கேயே இருந்தோம். நடவடிக்கைகளைக் கவனித்தோம் என்ன கூட்டம் தெரியுமா ? இளைஞர் செஞ்சிலுவைச் சங்கக் கூட்டம் அது, கூட்ட நடவடிக்கைகளில் புதுமை ஒன்றுமில்லை. நம் நாட்டில், நல்ல பள்ளிகளில் நடக்கும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கக் கூட்டம் போலவே இருந்தது : வழக்கமான நிகழ்ச்சிகளுக்குப் பின் மாணவிகள் சார்பில் வேண்டுகோள் வந்தது. யாருக்கு வேண்டுகோள் ? என்ன வேண்டுகோள் ?  எங்களுக்கு வேண்டுகோள். இந்தியாவைப் பற்றிப் பேச வேண்டுமென்று வேண்டுகோள். அதை நாங்கள் எதிர் பார்க்கவில்லை. ‘நாடுகளுக்கிடையே நல்லெண்ணத்தை’ வளர்ப்பதும், இளைஞச் செஞ்சிலுவைச் சங்கத்தின் குறிக் கோள்களில் ஒன்று. எனவே, வேண்டுகோள் பொருத்தமானதே.  அந்த வேண்டுகோளை என் மனைவியைக் கைகாட்டி விட்டேன். “இந்தியாவைப்பற்றி நீங்கள் வினாக்களைக் கேளுங்கள். என் மனேவி பதில் சொல்லுவார்” என்று பொறுப்பை வேறு பக்கம் திருப்பி விட்டேன்.  மாணவிகள் பலர், ஒருவர் பின் ஒருவராகப் பல வினாக்களை எழுப்பினர். அத்தனைக்கும் பதில் கிடைத்தது. வினாக்களில் ஒன்றுகூட நம் நாட்டுப் பெரியவர்களைப் பற்றி இல்லை கேட்டது அனைத்தும் குழந்தைகளைப் பற்றியும் பள்ளிக்கூடம் பற்றியும் சிறுவர் சிறுமியர் வாழ்க்கையைச் சுற்றியுமே இருந்தன. இதோ சில எடுத்துக்கட்டு :  குழந்தைகளுக்குப் பிறந்தநாள் கொண்டாடுவீர்களா ? அப்போது என்னென்ன செய்வீர்கள் ?”  “நர்சரி பள்ளி நிறைய உண்டா ?"  “எந்த வயதில் தொடக்கப் பள்ளியில் சேர்ப்பீர்கள் ? ”  “வாரத்திற்கு எத்தனை நாள் பள்ளிக்கூடம் ?”  “நாளைக்கு எத்தனை மணி நேரம் பள்ளிக்கூடம் ?”  இவ்வகையில் சிறுவர் சிறுமியரைப் பற்றியே கேள்விகள் ஓடின.  “உங்கள் மாணவ மாணவிகள் எதில் எழுதுவார்கள் ?” இப்படியொரு கேள்வியைக் கேட்டு வைத்தாள், ஒரு மாணவி.  “தொடகத்தில் சில ஆண்டுகள் பலகையிலும் பின்னர் நோட்டிலும் எழுதுவார்கள்” - இது பதில்,  “ஏன் முதலிலேயே நோட்டில் எழுதி படிக்கக் கூடாது?” இக் கேள்வியை வேறு ஒருத்தி வீசினாள்.  “பலகையென்றால், ஒரு முறை எழுதி முடித்ததும், அதை அழித்துவிட்டு வேறொரு பாடத்தை எழுதிப் பழக லாம். ஒரே பலகை இரண்டொரு ஆண்டுக்கு வரலாம் நோட்டில் எழுதுவதென்றால் ஆண்டுக்குப் பல நோட்டுகள் வாங்கவேண்டியிருக்கும். அதற்கு நிறைய செலவல்லவா?" இப்படிப் பதில் கூறினார் என் மனைவி. உண்மையான பதில், ஆனாலும் நம் ஏழ்மையை இப்படி வெளிப்படுத்தலாமா என்று என் நெஞ்சம் வாடிற்று. சுதந்திரம் பெற்ற அண்மை காலமல்லவா அது.  மேற்கொண்டு சில வினாக்கள் பதில்களோடு நிகழ்ச்சி முடிந்தது. மாணவியொருத்தி நன்றி கூறி முடித்தாள். நாங்கள் எழுத்து, வெளியே செல்ல, ஓரடி எடுத்து வைத் தோம். அவ்வமயம் ஒரு மாணவி தலைதெறிக்க ஓடி வந்தாள். எங்களைத் தாண்டி முன்னேயிருந்த தலைமை ஆசிரியையிடஞ் சென்று நின்றாள்.  “விருத்தினர்களுக்கு ஒரேவொரு வேண்டுகோள் விடட்டுமா?” என்று அந்த அம்மாளின் அணுமதியைக் கோரினாள்.  “இவ்வளவு நேரம் கேட்டிருக்கக்கூடாதா” என்றார் அந்த அம்மாள்.  “பரவாயில்லை. கேட்கட்டும்” என்று சமாதானப்படுத்தி அனுமதி பெற்றேன். மாணவிக்கு சொல்ல முடியாத மகிழ்ச்சி.  “அம்மா, நான் ‘பேப்பர்’ கொடுக்கிறேன். கொண்டு போகிறீர்களா ?” என்று என் மனைவியைப் பார்த்து வேண்டினாள். என் மனைவி திகைத்தார். பளிச்சென்று நான் குறுக்கிட்டேன்.  “எங்கள் தாய்மொழியில் பேசுவதற்கு மன்னியுங்கள்” என்று தலைமை ஆசிரியையிடம் கூறிவிட்டு, என் மனைவி யிடம் தமிழில் பேசினேன். சிரிப்பை வலிய வரவழைத்துக் கொண்டு பேசினேன்.  “இது உன்னால் வந்த வம்பு, ‘நோட்’ வாங்க நிறையப் பணம் வேண்டுமே என்றதால் நமக்குப் பிச்சை கொடுக்க வந்திருக்கிறது, இப்பெண். நீ சும்மா இரு. நான் சமாளித்துக் கொள்கிறேன்,” இப்படிச் சொல்லிவிட்டு அந்த மாணவியோடு பேசினேன்.  “பலகையில் எழுதுவதா ; நோட்டில் எழுதுவதா ? என்பது பணத்தை மட்டும் பொருத்தது அல்ல, பழக்கத்தையும் சேர்ந்தது. எங்கள் நாட்டுப் பழக்கம், சில ஆண்டுகள் பலகையில் எழுதிய பிறகே, காகிதத்தில் எழுதுவது. இப் பழக்கத்தை மாற்ற எங்கள் நாட்டில், ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அதுனால் பேப்பர் வேண்டா. உன் நல்லெண்ணத்தித்து நன்றி என்று சமாளிக்க முயன்றேன்.  அக் குழந்தை என் பேச்சை நம்பினதாகத் தெரியவில்லை.  நான் நிறைய ‘பேப்பர்’ கொடுந்தனுப்புகிறேன், கொண்டு போய்க் கொடுங்கள்” என்று கெஞ்சிற்று. என்ன சொல் வதென்று தெரியாமல் இரண்டொரு வினாடி திகைத்தேன். இதற்கிடையில் மற்றொரு மாணவி என் உதவிக்கு வந்தாள்.  ‘எலிசபெத், நீ மாலை வீடு திரும்பும்போது, என் வீட்டிற்குள் வந்து போ, என் தாத்தா வைத்திருந்து, எழுதிய பலகை எங்கள் விட்டில் பத்திரமாக இருக்கிறது. அதை உனக்குக் காட்டுகிறேன். நம் நாட்டிலும் முற்காலத்தில் பலகையில்தான் எழுதுவார்கள்’ என்றாள் அம்மாணவி. இன்னும் இரண்டொரு மாணவிகளும் தங்கள் வீட்டில் அத்தகைய பலகைகள் காட்சியில் இருப்பதாகக் கூறினார்கள். அதற்கப்புறமே விட்டாள், நன்கொடை கொடுக்க முனைந்த மாணவி.  பல ஆண்டுகளுக்குப் பின், கோவை நகரிற்குச் சென்றேன். தனியாகவே சென்றேன். கல்வி இயக்குநராகச் சென்றேன்.  நகரத் தொடக்க நிலைப் பள்ளி மாணவ மாணவிகளின் அணிவகுப்பும் விளையாட்டு விழாவும் சிதம்பரம் பூங்காவில் நடந்தன, அவற்றைக் காணச் சென்றேன். ஒவ்வொரு பள்ளிக் குழுவும் ஒவ்வொரு வகையில் வரவேற்றது. நகர சபைப் பள்ளி ஒன்று புதுமுறையில் வரவேற்றது. மற்றவர்கள் போல் மாலையிட்டு வரவேற்கவில்லை. முடிப்புக் கொடுத்து வரவேற்றது. என்ன முடிப்பு ? பண முடிப்பு ! எனக்கா ? இல்லை. என் கையில் கொடுத்தது, அவ்வளவே. எதற்கு அம் முடிப்பு ? தஞ்சை புயல் நிவாரண நிதிக்கு அது. அந்நிகழ்ச்சிக்கு முன், புயல், தஞ்சை மாவட்டத்தில், கோர விளையாட்டு விளையாடியது.  அந் நகரசபைப் பள்ளியில் படிக்கும் அனைவரும் ஏழைகள் பாட்டாளிகளின் மக்கள். ஆயினும், தஞ்சையில், புயலால் சேதப்பட்டு வாடுவோருக்கு உதவி செய்யத் துடித்தனர். அத்தனை பேரும்-ஒருவர் தவறாது - குறிப்பிட்ட தொகையைக் கொண்டுவந்து கொடுத்தனர். அதைப் பண முடிப்பாக்கி, என் கையில் கொடுத்துப் புயல் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் ஒருவரும் எதற்காகவும் என்னிடம் அதுவரை வரவில்லை. பின்னரும் வரவில்லை.  எலிசபெத், எதையும் எதிர்பார்த்து, என் மனைவியிடம் பேப்பர் கொடுத்தனுப்ப முன் வரவில்லை. இந்தியக், குழந்தைகளின் குறையைக் கேட்டதும் குறைபோக்க முன் வந்தது அவள் உள்ளம். முன்பின் அறியாதவர்களுக்குச் செய்யும் உதவியன்றோ மெய்யான அறம்,  கோவை நகரப் பாட்டாளிகளின் குழந்தைகள், தஞ்சை மாவட்டத்தில் வாடுவோருக்காகத் தியாகஞ் செய்ததும் பெயருக்கல்ல; புகழுக்கல்ல. ஒன்று போட்டு பின்னர் ஒன்பது எடுக்கும் அகவிலை வாணிகமல்ல, அவர்கள் செய்தது. அரசியல் சூதாட்டத்தின் பயிற்சியுமல்ல அது.  பிறர் துன்பம் கண்டு துடித்தல் இயற்கை. அம்மானிட இயல்பின் மலர்கள். மேற்கண்ட இரு செயல்களும். இம்மலர்களை வாடாமல் வதங்காமல் காக்க வேண்டாவா ? மானிட இனத்திற்கு எங்கே அல்லல் வந்தாலும் மற்றவர் விரைந்து சென்று துயர்துடைக்க வேண்டாவா ? இயற்கையுணர்ச்சி களெல்லாம் - நல்லுணர்ச்சிகளெல்லாம்- வறண்டே போயினவா ? மானுடம், சொத்து காக்கும், வெறும் இரும்புப் பெட்டியாக மாறி விட்டதா ?  இல்லையென்றால், பஞ்சைகள் பக்கம் பார்வை திரும் பட்டும். கை நீளட்டும், நன்கொடை பெருகட்டும், பட்டினி ஒடட்டும், வாழ்வு தழைக்கட்டும் என்று உங்கள் உள்ளம் உரைக்கிறதா ? நல்லது, பகுத்துண்டு வாழ்வோம் வாரீர்.